Archive for the ‘ஸ்ரீ மஹாபாரதம்’ Category

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ ஸ்வர்க்காரோஹணிக பர்வம்-

October 19, 2025

யுதிஷ்டிரனின் பகைமை! – ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 1-சொர்க்கத்தில் துரியோதனனைக் கண்ட யுதிஷ்டிரன்; அவனோடு வசிக்க விரும்பாமல் தன் தம்பிகள் இருக்குமிடத்தைக் காட்டுமாறு இந்திரனிடம் வேண்டியது; நாரதர் சொர்க்கத்தில் பகைமை பாராட்டக்கூடாதென்றது; யுதிஷ்டிரனின் மறுமொழி…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “சொர்க்கத்தை அடைந்த பிறகு, முற்காலத்தில் பாண்டவர்கள் மற்றும் திருதராஷ்டிரன் மகன்களான என் பாட்டன்மாரால் முறையாக அடையப்பட்ட உலகங்கள் என்னென்ன?(1) நான் இதைக் கேட்க விரும்புகிறேன். அற்புதச் செயல்களைச் செய்யும் பெரும் முனிவர் வியாசரின் மூலம் கற்பிக்கப்பட்ட நீர் அனைத்தையும் அறிந்திருப்பீர் என நான் நினைக்கிறேன்” என்றான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யுதிஷ்டிரன் முதலிய உன் பாட்டன்மார்கள், தேவர்களின் இடமான சொர்க்கத்தை அடைந்த பின்னர் என்ன செய்தனர் என்பதை இப்போது கேட்பாயாக.(8) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், சொர்க்கத்திற்கு வந்ததும், பெருஞ்செழிப்புடன் கூடிய துரியோதனன், ஒரு சிறந்த இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டான்.(4) சூரியனைப் போன்ற பிரகாசமிக்க அவன், வீரர்களுக்குரிய புகழ் சின்னங்கள் அனைத்தையும் தரித்திருந்தான். அவன், சுடர்மிக்கப் பிரகாசத்துடன் கூடிய தேவர்கள் பலர் மற்றும் அறச்செயல்களைச் செய்யும் சாத்யர்கள் ஆகியோரின் துணையுடன் இருந்தான்.(5) யுதிஷ்டிரன், துரியோதனனையும், அவனது செழிப்பையும் கண்டு, திடீரெனச் சினத்தால் நிறைந்தவனாகப் பார்க்காமல் திரும்பினான்.(6)

அவன் தன் துணைவர்களை உரக்க அழைத்து, “பேராசை மற்றும் சிறுமதியால் களங்கப்பட்ட துரியோதனனுடன் இன்பலோகங்களைப் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை.(7) ஆழ்ந்த காட்டில் பெரிதும் பீடிக்கப்பட்டவர்களான எங்களால் மொத்த உலகிலும் உள்ள நண்பர்களும் உற்றார் உறவினரும்  இவனுக்காகவே கொல்லப்பட்டனர்.(8) அறம் சார்ந்தவளும், களங்கமற்ற குணங்களைக் கொண்டவளும், எங்கள் மனைவியுமான பாஞ்சால இளவரசி திரௌபதி, எங்கள் பெரியோர் அனைவரின் முன்னிலையில் இவனுக்காகவே சபைக்கு மத்தியில் இழுத்துவரப்பட்டாள்.(9) தேவர்களே, நான் சுயோதனனைக் காணவும் விரும்பவில்லை. என்னுடன் பிறந்தோர் எங்கிருக்கின்றனரோ அங்கேயே நான் செல்ல விரும்புகிறேன்” என்றான்.(10)

நாரதர், சிரித்துக் கொண்டே, “ஓ! மன்னர்களின் மன்னா, இஃது இவ்வாறே இருக்கவேண்டும். சொர்க்கத்தில் வசிக்கும்போது பகைமைகள் அனைத்தும் இல்லாமல் போகின்றன.(11) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, மன்னன் துரியோதனனைக் குறித்து இவ்வாறு சொல்லாதே. என் சொற்களைக் கேட்பாயாக.(12) மன்னன் துரியோதனன் இதோ இருக்கிறான். அறவோர், மற்றும் இப்போது சொர்க்கவாசிகளாக இருக்கும் மன்னர்களில் முதன்மையானோர் ஆகியோரால் தேவர்களுடன் சேர்த்து இவனும் வழிபடப்படுகிறான்.(13) போரெனும் தீயில் தன்னுடலையே ஆகுதியாக ஊற்றிய இவன், வீரர்கள் அடையும் கதியை அடைந்திருக்கிறான்.(13) பூமியில் உண்மையில் தேவர்களைப் போலவே இருந்த நீயும், உன்னுடன் பிறந்தோரும் இவனால் எப்போதும் துன்புறுத்தப்பட்டீர்கள்.(14) இருப்பினும் க்ஷத்திரிய நடைமுறைகளை நோற்றதன் மூலம் இவன் {துரியோதனன்} இந்த உலகத்தை அடைந்திருக்கிறான். அச்சம் நிறைந்த சூழ்நிலையில் பூமியின் தலைவனான இவன் அச்சமடையவில்லை.(15) ஓ! மகனே, பகடையாட்டத்தில் உனக்கு இழைக்கப்பட்ட துன்பங்களை நீ மனத்தில் கொள்ளாதே. திரௌபதியின் துன்பங்களை நினைவுகூர்வது உனக்குத் தகுந்ததல்ல.(16) உன் உற்றார் உறவினரால் போர் மற்றும் பிற சூழ்நிலைகளில் உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளையும் நினைவுகூர்வது உனக்குத் தகுந்ததல்ல.(17) கண்ணியமான தொடர்பு விதிகளின்படி இப்போது நீ துரியோதனனைச் சந்திக்க வேண்டும். ஓ! மனிதர்களின் தலைவா, இது சொர்க்கமாகும். இங்கே பகைமைகள் இருக்க முடியாது” என்றார் {நாரதர்}.(18)

இவ்வாறு நாரதரால் சொல்லப்பட்டாலும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், குரு மன்னனுமான யுதிஷ்டிரன், தன்னுடன் பிறந்தோரைக் குறித்து விசாரிக்கும் வகையில், “வீரர்களுக்காக ஒதுக்கப்படும் இந்த நித்திய உலகங்கள், அறமற்றவனும், பாவம் நிறைந்தவனும், இழிந்தவனும், நண்பர்களுக்கும், மொத்த உலகத்திற்கும் அழிவேற்படுத்தியவனுமான துரியோதனனுடையதென்றால்,(20) மொத்த பூமியில் இருந்தும் குதிரைகள், யானைகள் உள்ளிட்டவையும், மனிதர்களும் எவனுக்காக அழிக்கப்பட்டனரோ, எந்த இழிந்தவனுக்காக எங்கள் தவறுக்குளுக்குச் சிறந்த முறையில் தீர்வு காண நினைத்து கோபத்தால் எரிந்து கொண்டிருந்தோமோ அவனுக்குரியதென்றால்,(21) உயர்ந்த நோன்புகளைக் கொண்டவர்களும், உறுதிமொழிகளை நிலையாக நிறைவேற்றியவர்களும், பேச்சில் வாய்மை நிறைந்தவர்களும், துணிவுக்காப் புகழ்பெற்றவர்களும், என்னுடன் பிறந்தோருமான அந்த உயர் ஆன்ம வீரர்களால் அடையப்பட்ட உலகங்களை நான் காண விரும்புகிறேன். குந்தியின் மகனும், போரில் கலங்கப்பட முடியாதவருமான உயர் ஆன்மக் கர்ணர்,(22,23) ஓ! பிராமணரே {நாரதரே}, திருஷ்டத்யும்னன், சாத்யகி, திருஷ்டத்யும்னன் மகன்கள், க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றும்போது மரணமடைந்த பிற க்ஷத்திரியர்கள் ஆகியோர் எங்கே இருக்கின்றனர்? ஓ! நாரதரே, அவர்களை இங்கே நான் காணவில்லை. ஓ! நாரதரே, விராடர், துருபதர், திருஷ்டகேதுவின் தலைமையிலான பிற க்ஷத்திரியர்கள்,(24,25) பாஞ்சால இளவரசன் சிகண்டி, திரௌபதியின் மகன்கள், போரில் தடுக்கப்பட முடியாத அபிமன்யு ஆகியோரை நான் காண விரும்புகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(26)

நரகம்! – ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 2-தன்னைச் சேர்ந்தவர்களுடன் வசிக்க விரும்பிய யுதிஷ்டிரன்; உறவினர்களைக் காட்ட யுதிஷ்டிரனை நரகத்திற்கு அழைத்துச் சென்ற தேவதூதன்; காணப் பொறாமல் திரும்பிய யுதிஷ்டிரன்; அவர்கள் தன்னைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து தூதனிடம் வர மறுத்தது; தூதன் இந்திரனுக்குச் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், (யுதிஷ்டிரன் தேவர்களிடம்} “தேவர்களே, அளவற்ற ஆற்றலைக் கொண்ட ராதையின் மகன் {கிருஷ்ணன்}, என்னுடன் பிறந்த உயர் ஆன்மாக்கள், யுதாமன்யு, உத்தமௌஜஸ்,(1) போர் நெருப்பில் (ஆகுதிகளாகத்) தங்கள் உடல்களை ஊற்றிய பெரும் வீரர்கள், எனக்காகப் போரில் மரணமடைந்த மன்னர்கள் மற்றும் இளவரசர்களை நான் இங்கே காணவில்லை.(2) புலிகளின் ஆற்றலைக் கொண்ட அந்தப் பெருந்தேர்வீரர்கள் எங்கே? அந்த முதன்மையான மனிதர்கள் இந்த உலகத்தை அடைந்தனரா?(3) தேவர்களே, அந்தப் பெருந்தேர்வீரர்கள் இந்த உலகத்தை அடைந்திருந்தால் மட்டுமே நான் அந்த உயர் ஆன்மாக்களோடு இங்கே வசிப்பேன் என்பதை அறிவீராக.(4)

தேவர்களே, மங்கலமான இந்த நித்திய உலகம் அந்த மன்னர்களால் அடையப்படவில்லையெனில், என் உடன்பிறந்தவர்களும், என் உற்றார் உறவினர்களும் இல்லாத இந்த இடத்தில் நான் வாழ மாட்டேன்.(5) (போருக்குப் பிறகு) நீர்ச்சடங்குகள் செய்த போது, என் தாய் {குந்தி}“கர்ணனுக்கும் நீர்க்காணிக்கைகளைச் செலுத்துவாயாக” என்று சொன்னதைக் கேட்டேன். என் தாயின் அந்தச் சொற்களைக் கேட்டதிலிருந்து நான் துன்பத்தால் எரிந்து வருகிறேன்.(6) தேவர்களே, என் தாயின் பாதங்கள், அளவிட முடியாத ஆன்மாவைக் கொண்ட கர்ணருடைய பாதங்களுக்கிடையிலான ஒற்றுமையை நான் கண்டபோதே, பகையணிகளைப் பீடிப்பவரான அவரின் கீழ் என்னை நான் நிறுத்திக் கொள்ளவில்லையே என நான் அடிக்கடி வருந்தினேன். நாங்களும் கர்ணரும் சேர்ந்திருந்தால், சக்ரனாலும் போரில் எங்களை வீழ்த்த இயலாது[1].(7,8)சூரியனின் பிள்ளையான அவர் {கர்ணர்} எங்கிருக்கிறாரோ அங்கே அவரை நான் காண விரும்புகிறேன். ஐயோ அவருடனான உறவை நாங்கள் அறியாதிருந்தோம். அவரைக் {கர்ணரைக்} கொல்லும்படி அர்ஜுனனை நானே ஏவினேன்.(9) பயங்கர ஆற்றலைக் கொண்டவனும், என் உயிர் மூச்சைவிட எனதன்புக்குரியவனுமான பீமனையும், இந்திரனுக்கு ஒப்பான அர்ஜுனனையும், ஆற்றலில் அந்தகனுக்கு ஒப்பான இரட்டையர்களையும் {நகுல சகாதேவர்களையும்},(10) நான் பார்க்க விரும்புகிறேன். எப்போதும் அறம் ஒழுகிய பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} நான் காண விரும்புகிறேன். நான் இங்கே இருக்க விரும்பவில்லை. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்.(11) தேவர்களில் முதன்மையானவர்களே, என்னுடன் பிறந்தோரிடம் இருந்து நான் துண்டிக்கப்பட்டால் சொர்க்கத்திற்கும் எனக்கும் என்ன இருக்கிறது? என்னுடன் பிறந்தவர்கள் எங்கிருக்கிறார்களோ அதுவே என் சொர்க்கம். என் கருத்தின்படி இது சொர்க்கமல்ல” என்றான்.(12)

தேவர்கள் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, நீ அங்கே செல்ல ஏங்குகிறாயெனில் தாமதமில்லாமல் அங்கே செல்வாயாக. தேவர்கள் தலைவனின் ஆணையின்படி நாங்கள் உனக்கு ஏற்புடையதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்றனர்”.(13)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பகைவரை எரிப்பவனே, இவ்வாறு சொன்ன தேவர்கள், ஒரு தேவ தூதனை அழைத்து அவனிடம்,(14) “யுதிஷ்டிரனுக்கு அவனுடைய நண்பர்களையும், உற்றார் உறவினர்களையும் காட்டுவாயாக” என்றனர்.(14)

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அப்போது குந்தியின் அரச மகனும் {யுதிஷ்டிரனும்}, அந்தத் தேவ தூதனும் சேர்ந்து (யுதிஷ்டிரன் பார்க்க விரும்பிய) அந்த மனிதர்களின் தலைவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.(15) தேவதூதன் முதலில் சென்றான், மன்னன் அவனுக்குப் பின்னால் அவனைப் பின்தொடர்ந்து சென்றான். அந்தப் பாதை மங்கலமற்றதாகவும், கடினமானதாகவும், பாவச் செயல்களைச் செய்யும் மனிதர்களால் நடக்கப்படுவதாகவும் இருந்தது.(16) அடர்த்தியான இருளில் மூழ்கியிருந்த அது, மயிர் மற்றும் பாசி ஆகியவற்றால் மூடப்பட்ட புல்வெளியைப்போல அமைந்தது. பாவிகளின் துர்நாற்றத்தால் மாசடைந்து, தசை மற்றும் குருதிச் சேறுடன் கூடியதாக,(17) காட்டு ஈக்கள் நிறைந்ததாக, கொட்டும் வண்டுகள் மற்றும் கொசுக்களுடன் கூடியதாகப் பயங்கரக் கரடிகளின் அத்துமீறல்களுடன் கூடியதாக அஃது {அந்தப் பாதை} இருந்தது. அழுகும் சடலங்கள் ஆங்காங்கே கிடந்தன.(18)

எலும்புகளும், மயிர்களும் நிறைந்திருந்த அது புழு பூச்சிகளின் கேடு விளைவிக்கக்கூடிய வாடையுடன் கூடியதாக இருந்தது. சுடர்மிக்க நெருப்பால் வழிநெடுகிலும் சூழ்ந்திருந்தது.(19) இரும்பு அலகுகளைக் கொண்ட காக்கைகள், வேறு பறவைகள் மற்றும் கழுகுகளும், ஊசிகள் போன்ற நீண்ட கூரிய வாய்களைக் கொண்ட தீய பிரேதங்களும் அங்கே மொய்த்தன. மேலும் அது விந்திய மலையைப் போல அடைதற்கரி காடுகளால் நிறைந்திருந்தது.(20) கொழுப்பு மற்றும் குருதி பூசப்பட்டவையும், கரங்கள் மற்றும் தொடைகள் வெட்டப்பட்டவையும், கால் துண்டிக்கப்பட்டவையும், குடல்கள் வெளியே வந்தவையுமான மனித சடலங்கள் அங்கே விரவிக் கிடந்தன.(21) ஏற்பற்ற சடலங்களின் கடுநெடி நிறைந்ததும், பயங்கரமான வேறு நிகழ்வுகள் நிகழ்வதுமான அந்தப் பாதையில் பல்வேறு எண்ணங்களுடன் மன்னன் சென்று கொண்டிருந்தான்.(22)

கொதிக்கும் நீர் நிறைந்ததும், கடப்பதற்கரிதானதுமான ஓர் ஆற்றையும், கூரிய வாள்கள் மற்றும் கத்திகளை இலைகளாகக் கொண்ட மரங்கள் நிறைந்த காடுகளையும் {அஸிபத்ரவனத்தையும்} அங்கே அவன் கண்டான்.(23) அங்கே பெரும் வெப்பத்துடன் கூடிய மென்மையான வெண்மணல்களும், இரும்பினால் செய்யயப்பட்ட பாறைகளும் கற்களும் நிறைந்திருந்தன. அங்கே சுற்றிலும் இரும்பினால் செய்யப்பட்ட பல குடுவைகள் கொதிக்கும் எண்ணையுடன் {எண்ணெயக்குடங்கள்} இருந்தன.(24) அங்கே முட்களுடன் கூடிய குடசால்மலிகங்கள் {முள்ளிலவமரங்கள்} பல இருந்தன, எனவே தீண்டுவதற்குத் துன்பம் நிறைந்ததாக இருந்தது. குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} அங்கே பாவிகளுக்குக் கொடுக்கப்படும் சித்திரவதைகளைக் கண்டான்.(25)

அனைத்து வகைக் குற்றங்களுடன் கூடிய அந்த மங்கலமற்ற உலகத்தைக் கண்ட யுதிஷ்டிரன், அந்தத் தேவதூதனிடம், “இது போன்ற பாதையில் இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும்?(26) என்னுடன் பிறந்தோர் எங்கே இருக்கின்றனர் என்பதைச் சொல்வதே உனக்குத் தகும். தேவர்களுக்குரிய எந்த உலகம் இஃது என்பதையும் நான் அறிய விரும்புகிறேன்” என்றான்.(27)

நீதிமானான யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்ட தேவ தூதன், தன் நடையை நிறுத்தி, “இவ்வளவு தொலைவே உமது வழியாகும்.(28) சொர்க்கவாசிகள் உம்மை இவ்வளவு தொலைவே அழைத்துச் சென்று நிற்குமாறே எனக்கு ஆணையிட்டனர். ஓ! மன்னர்களின் மன்னா, உமக்குக் களைப்பாயிருந்தால் நீர் என்னுடன் திரும்பலாம்” என்றான்.(29) எனினும், யுதிஷ்டிரன் தாள முடியாத பெருஞ்சோகத்துடனும், கடும் நெடியால் கலங்கடிக்கப்பட்டவனாகவும் இருந்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, திரும்பத் தீர்மானித்து அவன் தன் பாதச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கினான்.(30) கவலையாலும், துயரத்தாலும் பீடிக்கப்பட்டு அந்த அற ஆன்ம ஏகாதிபதி திரும்பினான். சரியாக அதே நேரத்தில் சுற்றிலும் பரிதாபகரமான ஒப்பாரியை அவன் கேட்டான்.(31)

“ஓ! தர்மனின் மகனே, ஓ! அரசமுனியே, ஓ! புனிதத் தோற்றம் கொண்டவனே, ஓ! பாண்டுவின் மகனே, எங்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு கணம் நிற்பாயாக.(32) ஓ! வெல்லப்பட முடியாதவனே, நீ வந்த போது, உன் மேனியின் இனிய நறுமணத்தைச் சுமந்தபடி, இனிமையான தென்றால் வீசத் தொடங்கியது. இதனால் எங்களது துயர் பெரிதும் துடைக்கப்பட்டது.(33) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ஓ! மனிதர்களில் முதல்வனே, உன்னைக் கண்டதும் எங்கள் மகிழ்ச்சி பெருகியது. ஓ! பிருதையின் மகனே, மேலும் சில கணங்கள் நீ இங்கே தங்குவதன் மூலம் அந்த மகிழ்ச்சி இன்னும் நீடிக்கட்டும்.(34) ஓ! பாரதா, கொஞ்ச நேரமாவது நீ இங்கே இருப்பாயாக. ஓ! குரு குலத்தோனே, நீ இங்கிருக்கும் வரை கடுநோவு எங்களைப் பீடிப்பதை நிறுத்திக் கொள்ளும்” என்றனர்.(35)

வலியில் துடித்த மனிதர்களின் பரிதாபகரமான குரல்களில் இவையும், இவைபோன்ற இன்னும் வேறு சொற்களும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன் காதுகளுக்கு மிதந்து வருவதை அந்த உலகத்தில் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} கேட்டான். கருணைமிக்க இதயம் கொண்ட யுதிஷ்டிரன், துன்பத்தில் இருந்தவர்களின் அந்தச் சொற்களைக் கேட்டு ” ஐயோ, எவ்வளவு துன்பம்” என்று உரக்கச் சொன்னான். பிறகு அந்த மன்னன் அசையாமல் நின்றான்.(37) துயரத்தைத் தூண்டியவையும், துன்புறுத்தப்பட்ட மனிதர்களுக்கு உரியவையுமான பேச்சுகள், ஏற்கனவே கேட்கப்பட்ட குரல்களைக் கொண்டவையாகத் தோன்றினாலும் அந்தப் பாண்டுவின் மகனால் அந்தச் சந்தர்ப்பத்தில் அவற்றை அடையாளம் காண முடியவில்லை.(38) குரல்களை அடையாளம் காண முடியாத தர்மனின் மகன் யுதிஷ்டிரன், “நீங்கள் யார்? ஏன் இங்கே இருக்கிறீர்கள்?” என்று விசாரித்தான்.(39)

இவ்வாறு சொல்லப்பட்டதும் அவர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும், “நான் கர்ணன்”, “நான் பீமசேனன்”, “நான் அர்ஜுனன்”,(40) “நான் நகுலன்”, “நான் சகாதேவன்”, “நான் திருஷ்டத்யும்னன்”, “நான் திரௌபதி”, “நாங்கள் திரௌபதியின் மகன்கள்” என்று பதிலளித்தனர். ஓ! மன்னா, இவ்வாறே அந்தக் குரல்கள் பேசின.(41)

ஓ! மன்னா, அந்த இடத்திற்குத் தகுந்த துன்பக் குரல்களில் வெளிவந்த அந்தக் கதறல்களைக் கேட்ட அரசன் யுதிஷ்டிரன், தனக்குள்ளேயே, “என்ன முரண்பட்ட விதியிது?(42) கடும் நெடியும், பெருந்துன்பமும் கொண்ட இந்த உலகத்தில் வசிப்பிடம் ஒதுக்கப்படுவதற்கு, உயர் ஆன்மாக்களான கர்ணர், திரௌபதியின் மகன்கள், கொடியிடையாளான பாஞ்சால இளவரசி {திரௌபதி} ஆகியோரால் இழைக்கப்பட்ட பாவச் செயல்கள் என்னென்ன? அறச்செயல்களைச் செய்த இவர்களால் செய்யப்பட்ட எந்த விதிமீறலையும் நான் உணரவில்லை.(43,44) திருதராஷ்டிரர் மகனான மன்னன் சுயோதனனும் {துரியோதனனும்}, பாவம் நிறைந்த அவனது தொண்டர்களும், இத்தகைய செழிப்பை அடைவதற்கு அவர்கள் செய்த செயலென்ன?(45) பெரும் இந்திரனைப் போலச் செழிப்புடன் கூடிய அவன் இங்கே உயர்வாகத் துதிக்கப்படுகிறான். எந்தச் செயல்களின் விளைவால் இவர்கள் (இந்த உயர் ஆன்மாக்கள்) நரகத்திற்குள் வீழ்ந்தனர்?(46) இவர்கள் அனைவரும், ஒவ்வொரு கடமையையும் அறிந்தவர்களாகவும், வாய்மைக்கும், வேதங்களுக்கும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றியவர்களாகவும், தங்கள் செயல்பாடுகளில் நீதிமிக்கவர்களாகவும், வேள்விகளைச் செய்பவர்களாகவும், பிராமணர்களுக்குப் பெருங்கொடை அளிப்பவர்களாகவும் இருந்தனர்.(47) நான் உறங்குகிறேனா? விழித்திருக்கிறேனா? நான் சுயநினைவுடன் இருக்கிறானா இல்லையா? அல்லது என் மூளை கலங்கி இவையாவும் என் மன மயக்கத்தால் தெரிகிறதா?” என்று {தனக்குள்ளேயே} கேட்டுக் கொண்டான்.(48)

கவலை மற்றும் துன்பத்தில் மூழ்கி, துயரால் கலங்கிய புலன்களுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன் இத்தகைய சிந்தனைகளிலேயே நீண்ட காலம் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(49) பிறகு தர்மனின் அரசமகன் கடுங்கோபத்தை அடைந்தான். உண்மையில், யுதிஷ்டிரன் தேவர்களையும், தர்மனையும் நிந்தித்தான்.(50) கடும் நெடியால் பீடிக்கப்பட்ட அவன் தேவதூதனிடம், “நீ எவர்களுடைய தூதனோ அவர்களிடம் நீ திரும்பிச் செல்வாயாக.(51) அவர்கள் இருக்கும் இடத்திற்கு நான் வர மாட்டேன் என்றும் இங்கே துன்பத்தில் இருக்கும் என்னுடன் பிறந்தோர் என் துணையின் விளைவால் ஆறுதலடைவதால் நான் இங்கேயே தங்கப் போகிறேன் என்று அவர்களிடம் சொல்வீராக” என்றான்.(52)

நுண்ணறிவுமிக்கப் பாண்டுவின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்ட தேவதூதன், நூறு வேள்விகளைச் செய்த தேவர்களின் தலைவன் {இந்திரன்} இருக்கும் இடத்திற்குத் திரும்பிச் சென்றான்.(53) அங்கே அவனிடம் யுதிஷ்டிரனின் செயல்களை விளக்கிச் சொன்னான். உண்மையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, அவன் {தேவதூதன்} தர்மனின் மகன் சொன்ன அனைத்தையும் இந்திரனிடம் தெரிவித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(54)

மூன்றாம் சோதனை! – ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 3-யுதிஷ்டிரனின் உறுதியைக் கண்டு வந்த இந்திரன்; யுதிஷ்டிரனைப் புகழ்ந்த யமன்; தெய்வீக உடல் பெற்று தெய்வீக முனிவர்கள் துதிக்கத் தம்பியரிடம் சென்ற யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! குரு குலத்தோனே பிருதையின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன்அங்கே ஒரு கணம் நிற்பதற்குள் இந்திரனின் தலைமையிலான தேவர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு வந்தனர்.(1) அறத் தேவன் {தர்மதேவன்}, அந்த ஏகாதிபதியைக் காணத் தன் உடல் கொண்ட வடிவத்துடன் அந்த இடத்திற்கு வந்தான்.(2) ஒளியுடல் பெற்றவர்களும், புனிதமானவர்களும், உன்னதச் செயல்களைச் செய்பவர்களுமான தேவர்கள் அந்த இடத்திற்கு வந்ததும், அந்தப் பகுதியை மூழ்கடித்த இருள் உடனே விலகியது.(3) பாவச் செயல்களைச் செய்தோர் அப்போது மேலும் துன்புறுத்தப்படவில்லை. வைதரணீ ஆறு, முள்ளிலவமரம்,(4) இரும்புக் குடுவைகள், பார்ப்பதற்குப் பயங்கரமான பாறைகளாலான இரும்புத் திரள்களும் காட்சியில் இருந்து மறைந்து போயின. வெறுத்தொதுக்கப்படுவதும், குரு மன்னனால் {யுதிஷ்டிரனால்} பார்க்கப்பட்டதுமான பல்வேறு சடலங்கள் ஒரே நேரத்தில் மறைந்து போயின.(5) ஓ! பாரதா, இனிமையானதும், முற்றிலும் தூய்மையானதும், குளுமையானதும், இனிய நறுமணமிக்கதுமான தென்றல் தேவர்கள் இருப்பதன் விளைவால் அந்த இடத்தில் வீசத் தொடங்கியது.(6) மருத்துகள், இந்திரன், அசுவினி இரட்டையர்களுடன் கூடிய வசுக்கள், சாத்யர்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், சொர்க்கவாசிகள் பிறர்,(7) சித்தர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர் அனைவரும் பெருஞ்சக்தி கொண்ட தர்மனின் அரசமகன் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.(8)

அப்போது தேவர்களின் தலைவனும், சுடர்மிக்கச் செழிப்புடன் கூடியவனுமான சக்ரன், யுதிஷ்டிரனிடம் அவனுக்கு ஆறுதலளிக்கும் வகையில்,(9) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, வா, ஓ! மனிதர்களின் தலைவா, வருவாயாக. ஓ! பலமிக்கவனே, இந்தத் தோற்ற மயக்கங்கள் முடிந்தன.(10) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன்னால் வெற்றி அடையப்பட்டது, (இன்பம் நிறைந்த) நித்திய உலகங்களும் உனதாகின. நீ கோபவசப்படாதே. என்னுடைய இந்தச் சொற்களைக் கேட்பாயாக.(11) ஓ! மகனே, ஒவ்வொரு மன்னனாலும் நரகம் நிச்சயம் பார்க்கப்பட வேண்டும். ஓ! மனிதர்களின் தலைவா, நல்லவையும் அல்லவையும் இங்கே அதிகமாக இருக்கின்றன.(12)

முதலில் தன் நற்செயல்களுக்கான கனியை அனுபவிப்பவன் அதற்கடுத்து நரகத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும். மறுபுறம், முதலில் நரகத்தைத் தாங்கிக் கொண்டவன் அதன் பிறகு சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டும்.(13) எவன் பாவச் செயல்களை அதிகம் செய்திருக்கிறானோ அவன் சொர்க்கத்தை முதலில் அனுபவிப்பான். ஓ! மன்னா, இதன் காரணமாகவே, உனக்கு நல்லதைச் செய்ய விரும்பிய நான், உன்னை முதலில் நரகத்தைக் காணச் செய்தேன்.(14) நீ பாசாங்கு செய்து துரோணரை அவரது மகன் {அஸ்வத்தாமன்} காரியத்தில் வஞ்சித்தாய். அதன் விளைவாகவே, ஒரு வஞ்சகச் செயலின் மூலம் உனக்கு நரகம் காட்டப்பட்டது.(15) உனக்கு ஏற்பட்டதைப் போலவே, பீமன், அர்ஜுனன், திரௌபதி ஆகிய அனைவருக்கும் ஒரு வஞ்சகச் செயல் மூலம் பாவிகளின் இடம் {நரகம்} காட்டப்பட்டது.(16)

ஓ! மனிதர்களின் தலைவா, வா, அவர்கள் அனைவரும் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தனர்.(17) உன் தரப்பில் இருந்து போரில் கொல்லப்பட்ட மன்னர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர். ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, வா, வந்து அவர்களைக் காண்பாயாக.(18) யாருக்காக நீ வருந்திக் கொண்டிருந்தாயோ அந்த வலிமைமிக்க வில்லாளியும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணனும், உயர்ந்த வெற்றியை அடைந்திருக்கிறான்.(19) ஓ! பலமிக்கவனே, மனிதர்களில் முதன்மையான சூரியனின் மகனை {கர்ணனை} இதோ பார். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவன் தனக்குரிய இடத்தில் இருக்கிறான். ஓ! மனிதர்களின் தலைவா, உன்னுடைய இந்தக் கவலையைக் கொல்வாயாக.(20) உன்னுடன் பிறந்தோரையும், பிறரையும், உன் தரப்பில் இருந்த மன்னர்களையும் இதோ பார். இவர்கள் அனைவரும் தங்களுக்குரிய (இன்ப) உலகங்களை அடைந்திருக்கின்றனர்.(21)

முதலில் கொஞ்சம் துன்பத்தை அனுபவித்த நீ, ஓ! குரு குலத்தின் மகனே, இந்நேரத்தில் இருந்து துயரங்களற்றவனாக, நோய்கள் அனைத்தும் விலகியவனாக என்னுடன் இன்பமாக விளையாடிக் கொண்டிருப்பாய்.(22) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! மன்னா, உன் அறச்செயல்கள் அனைத்தின் மூலம் வென்ற வெகுமதிகளையும், உன் தவங்கள் மற்றும் உன் கொடைகள் அனைத்தின் மூலமாக நீ அடைந்த உலகங்களையும் இனி நீ அனுபவிப்பாயாக.(23) தேவர்கள், கந்தர்வர்கள், தூய உடைகள் மற்றும் சிறந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெய்வீக அப்சரஸ்கள் உனக்காகக் காத்திருந்து, உன் மகிழ்ச்சிக்காகத் தொண்டாற்றட்டும்.(24) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன்னால் பயன்படுத்தப்பட்ட வேள்வி வாளால் மேம்படுத்தப்பட்ட சிறப்புகளுடன் நீ செய்த ராஜசூய வேள்வியின் மூலம் உனதாகியிருக்கும் இந்த உலகங்களை இனி நீ அனுபவிப்பாயாக. உன் தவங்களின் உயர்ந்த கனிகளை நீ அனுபவிப்பாயாக.(25)

ஓ! யுதிஷ்டிரா, உன் உலகங்கள் அந்த மன்னர்களின் உலகங்களை விட மிக உயரத்தில் இருக்கின்றன. ஓ! பிருதையின் மகனே, அவை ஹரிச்சந்திரனின் உலகங்களுக்கு இணையானவை. வா, அங்கே அருள்நிலையில் நீ விளையாடிக் கொண்டிருப்பாயாக.(26) அரசமுனியான மாந்தாத்ரி {மாந்தாதா} எங்கே இருக்கிறானோ, மன்னன் பகீரதன் எங்கே இருக்கிறானோ, துஷ்மந்தன் {துஷ்யந்தன்} மகனான பரதன் எங்கிருக்கிறானோ அங்கே நீயும் அருள்நிலையில் விளையாடிக் கொண்டிருப்பாய்.(27) புனிதமானவளும், மூவுலகங்களையும் புனிதப்படுத்துபவளுமான தெய்வீக கங்கை {ஆகாயக் கங்கை} இதோ இருக்கிறாள். இவள் தெய்வீக கங்கை என்றழைக்கப்படுகிறாள். இதில் மூழ்கி நீ உன் சொந்த உலகத்திற்குச் செல்வாயாக[1].(28) இந்த ஓடையில் {கங்கையில்} நீராடும் நீ உன் மனித இயல்பை இழப்பாய். உண்மையில் உன் துயரம் அகன்று, நோய்கள் வெல்லப்பட்டு, பகைமைகள் அனைத்தில் இருந்தும் நீ விடுபடுவாய்” என்றான் {இந்திரன்}.(29)ஓ! குரு மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களின் தலைவன் இவ்வாறு யுதிஷ்டிரனிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, உடல் கொண்ட வடிவத்துடன் கூடிய அற தேவன் {தர்மதேவன் யமன்}, தன் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்},(30) “ஓ! மன்னா, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, ஓ! மகனே, என்னிடம் நீ கொண்டுள்ள அர்ப்பணிப்பிலும், வாக்கில் நீ கொண்டிருக்கும் வாய்மையிலும், நீ கொண்டிருக்கும் பொறுமை மற்றும் தற்கட்டுப்பாட்டிலும் நான் பெரும் நிறைவடைகிறேன்.(31) ஓ! மன்னா, இது நான் உனக்கு வைத்த மூன்றாவது சோதனையாகும். ஓ! பிருதையின் மகனே, நீ உன் இயல்பில் இருந்தோ, அறிவில் இருந்தோ பிறழாதவன்.(32) முன்பு துவைத வனத்தில் அணிக்கட்டைகளை மீட்பதற்காகத் தடாகத்திற்கு வந்தபோது என் கேள்விகளால் நான் உன்னைச் சோதித்தேன். நீ அதை நன்றாகத் தாக்குப்பிடித்தாய்.(33) ஓ! மகனே அதன் பிறகு நாயின் வடிவை ஏற்று, உன்னுடன் பிறந்தோரும், திரௌபதியும் வீழ்ந்தபோது நான் மீண்டும் உன்னைச் சோதித்தேன்.(34)

இஃது உனக்கான மூன்றாவது சோதனையாகும்; உன்னுடன் பிறந்தோருக்காக நீ நரகத்திலேயே வசிப்பதற்கான உன் விருப்பத்தைத் தெரிவித்தாய். ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, நீ தூய்மையடைந்தாய். பாவத்தில் இருந்து தூய்மையடைந்து நீ மகிழ்ச்சியாக இருப்பாயாக.(35) ஓ! பிருதையின் மகனே, ஓ! மன்னா, உன்னுடன் பிறந்தோரும் நரகத்திற்குத் தகுந்தவர்களல்ல. இவையனைத்தும் தேவர்களின் தலைவனால் உண்டாக்கப்பட்ட தோற்ற மயக்கங்களாகும்.(36) ஓ! மகனே, மன்னர்கள் அனைவரும் நிச்சயம் ஒருமுறை நரகத்தைப் பார்க்க வேண்டும். எனவே, நீ சிறிது நேரம் இந்தப் பெருந்துன்பத்திற்கு உட்படுத்தப்பட்டாய்.(37) ஓ! மன்னா, பேச்சில் எப்போதும் வாய்மை நிறைந்தவர்களும், பெருந்துணிவைக் கொண்டவர்களுமான அர்ஜுனனோ, பீமனோ, முதன்மையான மனிதர்களான இரட்டையர்களோ {நகுல சகாதேவர்களோ}, கர்ணனோ நீண்ட கால நரகத்திற்குத் தகுந்தவர்களல்ல.(38) ஓ! யுதிஷ்டிரா, இளவரசி கிருஷ்ணையும் {திரௌபதியும்} கூடப் பாவிகளின் இடத்திற்குத் தகுந்தவளல்ல. வா, ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, வந்து மூவுலகங்களிலும் தன் ஓடையை விரித்திருக்கும் கங்கையைக் காண்பாயாக” என்றான் {யமன்}.(39)

இவ்வாறு சொல்லப்பட்டவனும், அரசமுனியுமான உன் பாட்டன் {யுதிஷ்டிரன்}, தர்மனுடனும், வேறு தேவர்களுடனும் சென்றான்.(40) புனிதமானதும், புனிதப்படுத்துவதும், முனிவர்களால் எப்போதும் துதிக்கப்படுவதுமான தெய்வீக ஆறான கங்கையில் நீராடி அவன் {யுதிஷ்டிரன்} தன் மனித உடலைக் கைவிட்டான்.(41) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தெய்வீக வடிவை ஏற்றதன் விளைவால், தன் பகைமைகள் மற்றும் துன்பங்கள் அனைத்தும் களைந்தவனானான்.(42) பிறகு, தேவர்களால் சூழப்பட்ட குரு மன்னன் யுதிஷ்டிரன், அந்த இடத்தில் இருந்து சென்றான். தர்மனின் துணையுடன் கூடிய அவன், பெரும் முனிவர்களால் புகழப்பட்டான்.(43) உண்மையில் அவன் {யுதிஷ்டிரன்}, (மனித) கோபத்தில் இருந்து விடுபட்டுத் தங்கள் தங்களுக்குரிய நிலைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களும், வீரர்களுமான பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் இருந்த இடத்தை அடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(44)

அடையாள பவனி! – ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 4-கிருஷ்ணன், கர்ணன் முதலியோரைக் கண்ட யுதிஷ்டிரன்; தங்கள் தங்களுக்குரிய கதியை அடைந்தவர்களை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டிய இந்திரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தேவர்கள், மருத்துகள் மற்றும் முனிவர்களால் இவ்வாறு புகழப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், குரு குலத்தின் முதன்மையானோர் இருந்த இடத்திற்குச் சென்றான்.(1) அவன் கோவிந்தனை {கிருஷ்ணனை} அவனது பிரம்ம வடிவில் கண்டான். ஏற்கனவே தான் கண்டிருந்த வடிவத்திற்கு ஒப்பானதாக இருந்தது அடையாளம் காண துணை புரிந்தது.(2) தன்னுடைய அந்த வடிவில் அவன், பயங்கரமான சக்கரம் போன்ற தெய்வீக ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒளிபொருந்தியவனாக இருந்தான். மற்ற ஆயுதங்கள் தங்களுக்குரிய உடல் வடிவங்களைப் பெற்று இருந்தன.(3)

அவன் {கிருஷ்ணன்} சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட வீரப் பல்குனனால் {அர்ஜுனனால்} துதிக்கப்பட்டான். குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, மதுசூதனனை அவனுடைய சொந்த வடிவில் கண்டான்.(4) தேவர்களால் துதிக்கப்பட்ட அவ்விருவரும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} யுதிஷ்டிரனைக் கண்டு, அவனை உரிய மதிப்புடன் வரவேற்றனர்.(5) மற்றோரிடத்தில், அந்தக் குருக்களைத் திளைக்கச் செய்பவன் {யுதிஷ்டிரன்}, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், காந்தியில் பனிரெண்டு சூரியர்களுக்கு ஒப்பானவனுமான கர்ணனைக் கண்டான்.(6)

மற்றொரு பகுதியில், மருத்துகளுக்கு மத்தியில் சுடர்மிக்க வடிவில் அமர்ந்திருக்கும் பெரும்பலம் கொண்ட பீமசேனனைக் கண்டான்[1].(7) அவன் {பீமன்} உடல் வடிவத்துடன் கூடிய வாயு தேவனின் அருகில் அமர்ந்திருந்தான். உண்மையில், அப்போது தெய்வீக வடிவில் பேரெழிலுடன் திகழ்ந்த அவன் உயர்ந்த வெற்றியை அடைந்திருந்தான்.(8) அந்தக் குருக்களைத் திளைக்கச் செய்பவன் {யுதிஷ்டிரன்}, அஸ்வினிகளுக்குரிய இடத்தில் சுயப் பிரகாசத்தில் சுடர்விடும் நகுலனையும், சகாதேவனையும் கண்டன்.(9)மேலும் அவன், தாமரை மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பாஞ்சால இளவரசியையும் {திரௌபதியையும்} கண்டான். சொர்க்கத்தை அடைந்த அவள், சூரியப்பிரகாசத்துடன் கூடிய வடிவில் அங்கே அமர்ந்து கொண்டிருந்தாள்.(10) மன்னன் யுதிஷ்டிரன் திடீரென அவளைக் {திரௌபதியைக்} கேள்வி கேட்க விரும்பினான். அப்போது தேவர்களின் தலைவனான இந்திரன், அவனிடம் {யுதிஷ்டிரனிடம்},(11) “இவள் ஸ்ரீ {திருமகள்} ஆவாள். ஓ! யுதிஷ்டிரா, மனிதர்களுக்கு மத்தியில் ஏற்புடைய நறுமணத்துடனும், மொத்த உலகத்தையும் மகிழ்ச்சியடையச் செய்யும் வல்லமையுடனும், எந்தத் தாயின் கருவறையில் இருந்தும் வெளிப்படாமல் துருபதன் மகளாக இவள் {திரௌபதி} உனக்காகவே பிறந்தாள்.(12) திரிசூலபாணியால் உன் இன்பத்திற்காகவே இவள் படைக்கப்பட்டாள். துருபதன் குலத்தில் பிறந்த இவள் உங்கள் அனைவராலும் அனுபவிக்கப்பட்டாள்.(13)

ஓ! மன்னா, நெருப்பின் பிரகாசத்தையும் பெருஞ்சக்தியையும், உயர்ந்த அருளையும் கொண்ட இந்த ஐந்து கந்தர்வர்களும், திரௌபதிக்கும் உனக்கும் மகன்களாக இருந்தனர்.(14) பெரும் ஞானம் கொண்டவனும், கந்தர்வர்களின் மன்னனுமான திருதராஷ்டிரனைப் பார். இவனே உன் தந்தையின் {பாண்டுவின்} அண்ணன் என்பதை அறிவாயாக.(15)

நெருப்பின் பிரகாசம் கொண்டவனும், குந்தியின் மகனுமான இவன் {கர்ணன்} உன் அண்ணனாவான். சூரியனின் மகனும், உன் அண்ணனும், மனிதர்களில் முதன்மையானவனுமான இவனே ராதையின் மகனாக {கர்ணனாக} அறியப்பட்டான்.(16) இவன் சூரியனின் துணையுடன் திரிகிறான். இந்த முதன்மையானவனைப் பார். சாத்யர்கள், தேவர்கள், விஷ்வேதேவர்கள், மருத்துகளின் இனக்குழுக்களுக்கு மத்தியில்,(17) ஓ! மன்னர்களின் மன்னா, சாத்யகியைத் தங்களில் முதல்வனாகக் கொண்ட வீரர்களும், போஜர்களில் வலிமைமிக்கவர்களுமான விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரர்களைப் பார்.(18) போரில் வெல்லப்பட முடியாதவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு} இப்போது சோமனுடன் இருப்பதைப் பார். இரவின் பேரொளிக் கோளின் மென்மையான பிரகாசத்துடன் கூடியவனாக இருக்கும் இவனே வலிமைமிக்க வில்லாளியான அபிமன்யு ஆவான்.(19)

குந்தி மற்றும் மாத்ரியுடன் இப்போது சேர்ந்திருக்கும் வலிமைமிக்க வில்லாளியான பாண்டு இதோ இருக்கிறான். உன் தந்தை {பாண்டு} தன் சிறந்த தேரில் அடிக்கடி என்னிடம் வருவான்.(20) இப்போது வசுக்களின் மத்தியில் இருக்கும் சந்தனுவின் மகனான அரசன் பீஷ்மரைப் பார். இதோ பிருஹஸ்பதியின் அருகில் இருக்கும் இவர் உன் ஆசானான துரோணர் என்பதை அறிவாயாக.(21) ஓ! பாண்டுவின் மகனே, இவர்களும், உன் தரப்பில் இருந்து போரிட்ட பிற வீரர்களும், இப்போது கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் வேறு புனிதர்களுடன் நடமாடுகிறார்கள்.(22) ஓ! மன்னா, சிலர் குஹ்யர்களின் நிலையை அடைந்திருக்கின்றனர். தங்கள் உடல்களைக் கைவிட்ட அவர்கள், சொல், எண்ணம் மற்றம் செயலின் மூலம் அடைந்த தகுதியைக் கொண்டு சொர்க்கத்தை வென்றனர்” என்றான் {இந்திரன்}”.(23)

பாரத மகிமை! – ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 5-பீஷ்மர் முதலியோர் ஸ்வர்க்கத்தை அனுபவித்துத் தங்கள் தங்கள் தேவ வடிவில் கலந்ததை ஜனமேஜயனுக்குச் சொன்ன வைசம்பாயனர்; ஆஸ்தீகர் முதலியோரை வழிபட்டு, யாகத்தை முடித்து, ஹஸ்தினாபுரம் வந்து அரசாட்சி செய்த ஜனமேஜயன்; பாரதக் கதையை முடித்து அதன் மகிமையைக் கூறிய சௌதி…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “உயர் ஆன்மாக்களான பீஷ்மர் மற்றும் துரோணர் இருவரும், மன்னன் திருதராஷ்டிரன், விராடன், துருபதன், சங்கன், உத்தரன்,(1) திருஷ்டகேது, ஜயத்சேனன், மன்னன் சத்யஜித், துரியோதனனின் மகன், சுபலனின் மகனான சகுனி,(2) பேராற்றல் கொண்ட கர்ணனின் மகன்கள், மன்னன் ஜெயத்ரதன், கடோத்கசன், நீர் குறிப்பிடாத வேறு சிலர்,(3) சுடர்மிக்க வடிவங்களைக் கொண்ட வேறு வீர மன்னர்கள் ஆகியோர் சொர்க்கத்தில் எவ்வளவு காலம் இருந்தனர்.(4) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அவர்களுடைய இடம் சொர்க்கத்தில் நித்தியமானதா? அவர்களுடைய செயல்கள் {கர்ம பலன்கள்} தீர்ந்ததும் அந்த முதன்மையானவர்கள் அடைந்த கதியென்ன?(5) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் இதைக் கேட்க விரும்புவதால் உம்மைக் கேட்கிறேன். உமது ஒளிபொருந்திய தவத்தின் மூலம் நீர் அனைத்தையும் காண்பவராவீர்” என்றான் {ஜனமேஜயன்}”.(6)

சௌதி {சௌனகர் தலைமையில் இருந்த முனிவர் கூட்டத்திடம்|} சொன்னார், “இவ்வாறு கேட்கப்பட்ட அந்த மறுபிறப்பாள முனிவர் {வைசம்பாயனர்}, உயர் ஆன்ம வியாசரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, அந்த மன்னனின் கேள்விக்குப் பதிலளிப்பதில் தம்மை நிறுவிக் கொண்டார்.(7)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மனிதர்களின் மன்னா, ஒவ்வொருவனும் தன் செயல்களின் இறுதியில் தன் சொந்த இயல்புக்குத் திரும்ப இயன்றவனல்ல. உண்மையில் இஃது இவ்வாறு இருந்தாலும், இல்லாவிட்டாலும் உன்னால் கேட்கப்பட்டது நல்ல கேள்வியே.(8) ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இந்தத் தெய்வீகப் புதிரை {தேவரகசியத்தைக்} கேட்பாயாக. ஓ! கௌரவ்யா, வலிமையும், சக்தியும், தெய்வீகப் பார்வையும், பேராற்றலையும் கொண்டவரும், புராதன தவசியும், பராசரர் மகனும், உயர்ந்த நோன்புகளை எப்போதும் நோற்பவரும், செயல்கள் அனைத்துடன் இணைந்த கதியை அறிந்தவருமான வியாசரால் (எங்களுக்கு) இது விளக்கப்பட்டது.(9,10)

வலிமையும், சக்தியும், பெரும்பிரகாசமும் கொண்ட பீஷ்மர், வசுக்களின் நிலையை அடைந்தார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அஷ்ட வசுக்கள் இப்போது காணப்படுகின்றனர்.(11) துரோணர், அங்கீரஸ வழித்தோன்றல்களில் முதன்மையான பிருஹஸ்பதிக்குள் நுழைந்தார். ஹிருதிகன் மகனான கிருதவர்மன் மருத்துகளுக்குள் நுழைந்தான்.(12) பிரத்யும்னன் சனத்குமாரருக்குள் நுழைந்தான். திருதராஷ்டிரன், அடைதற்கரிதானதும், கருவூலத் தலைவனுக்குரியதுமான உலகத்தை {குபேரலோகத்தை / யக்ஷர்களின் உலகத்தை} அடைந்தான்.(13) புகழ்பெற்றவளான காந்தாரி தன் கணவன் திருதராஷ்டிரன் அடைந்த அதே உலகத்தை அடைந்தாள். பாண்டு தன் இரு மனைவியருடன் பெரும் இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்றான்.(14) விராடன், துருபதன், மன்னன் திருஷ்டகேது, நிசடன், அக்ரூரர், சாம்பன், பானுகம்பன், விதூரதன்,(15) பூரிஸ்ரவஸ், சலன், மன்னன் பூரி, கம்ஸன், உக்ரஸேனன், வசுதேவர்,(16) மனிதர்களில் முதன்மையான உத்தரன், சங்கன் ஆகிய முதன்மையான மனிதர்கள் அனைவரும் தேவர்களிடம் நுழைந்தார்கள்.(17)

பேராற்றல் கொண்டவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனும், வர்ச்சஸ் என்ற பெயரைக் கொண்டவனுமான சோமனின் மகன், மனிதர்களில் சிங்கமான பல்குனன் {அர்ஜுனன்} மகனான அபிமன்யுவானான்.(18) க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு இணக்கமான முறையில் வேறு எவராலும் வெளிப்படுத்த முடியாத துணிச்சலுடன் போரிட்ட அந்த வலிய கரங்களைக் கொண்ட அற ஆன்மாவானாவன் சோமனுக்குள் நுழைந்தான்.(19) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, போரில் கொல்லப்பட்ட கர்ணன் சூரியனுக்குள் நுழைந்தான். சகுனி துவாரனுக்குள்ளும், திருஷ்டத்யும்னன் நெருப்பின் தேவனுக்குள்ளும் ஈர்க்கப்பட்டனர்.(20) திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும் கடும் சக்தி கொண்ட ராட்சசர்களாவர். ஆயுதங்களால் அடைந்த மரணத்தால் புனிதமடைந்தவர்களும், பெருஞ்செழிப்பைக் கொண்டவர்களுமான அந்த உயர் ஆன்மாக்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர்.(21) க்ஷத்ரி {விதுரர்}, மன்னன் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும் அற தேவனுக்குள் நுழைந்தனர். புனிதமானவனும், சிறப்புமிக்கவனுமான அனந்தன் (பலராமனாகப் பிறந்தவன்) பூமிக்குக் கீழுள்ள உலகத்திற்குச் சென்றான்.(22) பெரும்பாட்டனின் {பிரம்மனின்} ஆணையின் பேரிலும், யோகசக்தியின் துணையுடனும் அவன் பூமியை ஆதரித்தான்.

வாசுதேவன் {கிருஷ்ணன்}, நாராயணன் என்றழைக்கப்படும் தேவர்களின் நித்திய தேவனுடைய ஒரு பகுதியாவான். அதன்படியே அவன் நாராயணனுக்குள் நுழைந்தான்.(23) பதினாராயிரம் {16,000} பெண்கள் வாசுதேவனுக்கு மனைவியராக மணந்து கொடுக்கப்பட்டனர். ஓ! ஜனமேஜயா, வேளை வந்தபோது அவர்கள் சரஸ்வதிக்குள் மூழ்கினர்.(24) அங்கே அவர்களது (மனித) உடலைக் கைவிட்ட அவர்கள் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர். பிறகு அவர்கள் அப்சரஸ்களாக மாறி, வாசுதேவனின் முன்னிலையை அடைந்தனர்.(25) வீரர்களும், கடோத்கசன் மற்றும் பெரும் போரில் கொல்லப்பட்ட பிறரைப் போன்ற வலிமைமிக்கத் தேர்வீரர்களில் சிலர் தேவர்கள் மற்றும் சிலர் யக்ஷர்கள் என்ற நிலையை அடைந்தனர்.(26) துரியோதனனின் தரப்பில் போரிட்டவர்கள் ராட்சசர்கள் என்று சொல்லப்படுகின்றனர். ஓ! மன்னா, அவர்கள் அனைவரும் படிப்படியாகச் சிறந்த இன்பலோகங்களை அடைந்தனர்.(27) அந்த மனிதர்களில் முதன்மையான சிலர் இந்திரனின் வசிப்பிடத்திற்கும், வேறு சிலர் பெரும் நுண்ணறிவைக் கொண்ட குபேரனின் வசிப்பிடதிற்கும், இன்னும் சிலர் வருணனின் வசிப்பிடத்திற்கும் சென்றனர்.(28) ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, ஓ! பாரதா, குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரின் செயல்கள் குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்” {என்றார் வைசம்பாயனர்}”.(29)

சௌதி {சௌனகர் தலைமையில் இருந்த முனிவர் கூட்டத்திடம்|}  சொன்னார், “மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, இதை வேள்விச் சடங்குகளின் இடைவெளிகளில் கேட்ட மன்னன் ஜனமேஜயன் ஆச்சரியத்தில் நிறைந்தான்.(30) பிறகு வேள்விப் புரோகிதர்கள், இன்னும் எஞ்சியிருந்த சடங்குகளை நிறைவடையச் செய்தனர். பாம்புகளை (கொடிய மரணத்தில் இருந்து) காத்த ஆஸ்தீகர் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தார்.(31) மன்னன் ஜனமேஜயன் பிராமணர்கள் அனைவருக்கும் அபரிமிதமான கொடைகளைக் கொடுத்து நிறைவடையச் செய்தான். இவ்வாறு மன்னனால் வழிபடப்பட்ட அவர்கள் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(32) கல்விமான்களான அந்தப் பிராமணர்களுக்கு விடைகொடுத்து அனுப்பிய மன்னன் ஜனமேஜயன், தக்ஷசீலத்தில் இருந்து யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினான்.(33) மன்னனின் {ஜனமேஜயனின்} பாம்பு வேள்வியில், வியாசரின் ஆணையின் பேரில் வைசம்பாயனர் சொன்ன அனைத்தையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன்.(34)

வரலாறு {இதிஹாஸம்} என்றழைக்கப்படும் இது புனிதமானதும், புனிதப்படுத்துவதும், சிறந்ததுமாகும். ஓ! பிராமணரே {சௌனகரே}, வாய்மைநிறைந்த பேச்சைக் கொண்ட தவசி கிருஷ்ணரால் {வியாசரால்} இது தொகுக்கப்பட்டது.(35) அவர், அனைத்தையும் அறிந்தவரும், விதிகள் அனைத்தையும், அறிந்தவரும், அனைத்துக் கடமைகளின் அறிவைக் கொண்டவரும், பக்தியுடையவரும், புலன்களுக்கு அப்பாற்பட்டவற்றை உணரக்கூடியவரும் {அதீந்திரியரும்}, தூயவரும், தவங்களால் தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவரும்,(36) ஆறு உயர்ந்த குணங்களைக் கொண்டவரும், சாங்கிய யோகத்திற்குத் தம்மை அர்ப்பணித்தவரும் ஆவார். அவர் {வியாசர்}, பல்வேறு கதைகளால் தூய்மையடைந்த தெய்வீகப் பார்வையில் அனைத்தையும் கண்டு இதைத் தொகுத்தார்.(37) அவர் பாண்டவர்கள் மற்றும் சக்தி எனும் அபரிமித செல்வத்தைக் கொண்ட பிற க்ஷத்திரியர்களின் புகழை உலகம் முழுவதும் பரப்ப விரும்பி இதைச் செய்தார்.(38)

எந்தக் கல்விமான், செவிப்புலம் கேட்பதற்கு மத்தியில் புனித நாட்களில் இந்த வரலாற்றை உரைப்பானோ அவன், அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தவனாகச் சொர்க்கத்தை வென்று, பிரம்ம நிலையை அடைவான்.(39) எந்த மனிதன், (தீவில் பிறந்தவரான) கிருஷ்ணரால் {வியாசரால்} தொகுக்கப்பட்ட இந்த வேதத்தை முழுமையாக உரைக்கும்போது, குவிந்த கவனத்துடன் கேட்பானோ, பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} போன்ற கொடும்பாவங்களின் வரிசையில் வரும் அவனுடைய லட்சக்கணக்கான பாவங்களையும் அது கழுவிவிடும்.(40) ஒரு சிராத்தத்தில் இந்த வரலாற்றின் சிறு பகுதியையாவது உரைக்கும் மனிதனின் பித்ருக்கள், வற்றாத உணவு மற்றும் பானத்தை அடைகிறார்கள்[1].(41) ஒருவன் தன் புலன்களைக் கொண்டோ, மனத்தைக் கொண்டோ பகலில் செய்யும் பாவங்கள், மாலையில் மஹாபாரதத்தின் ஒரே ஒரு பகுதியை உரைப்பதன்மூலம் கழுவப்படுகின்றன.(42) ஒரு பிராமணன் இரவில் பெண்களுக்கு மத்தியில் எத்தகைய பாவங்கள் புரிந்தாலும், விடியலில் மஹாபாரதத்தின் ஒரே ஒரு பகுதியை உரைப்பதன் மூலம் கழுப்படுகின்றன.(43) உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பாரதர்களே {பரதனின் வாரிசுகளே} இதன் தலைப்பாகிறார்கள். எனவே இது பாரதம் என்றழைக்கப்படுகிறது. பாரதர்களையே தலைப்பாகக் கொண்டதும், மேலும் மிக முக்கியமானவற்றைக் கொண்டதுமாக இருப்பதால் இது மஹாபாரதம் என்றழைக்கப்படுகிறது[2].(44) இந்தப் பெரும் ஆய்வின் பொருள் விளக்கங்களை நன்கறிந்த ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அத்தகைய மனிதன் அறம், பொருள் மற்றும் இன்பத்துடன் வாழ்ந்து, வீட்டையும் {மோட்சத்தையும்} அடைகிறான்[3].(45) எது இங்கே தோன்றுமோ அஃது எங்கும் தோன்றும். எது இங்கே தோன்றாதோ அஃது எங்கும் தோன்றாது. இந்த வரலாறு ஜயம் என்ற பெயரில் அறியப்படுகிறது. முக்தியில் {மோட்சத்தில்} விருப்பமுள்ள அனைவராலும் இது கேட்கப்பட வேண்டும்[4].(46)

பிராமணர்கள், மன்னர்கள், கருத்தரித்த பெண்கள் ஆகியோரால் இது படிக்கப்பட வேண்டும். சொர்க்கத்தை அடைய விரும்புபவன் சொர்க்கத்தை அடைவான்; வெற்றியை விரும்புபவன் வெற்றியை அடைவான்.(47) கருத்தரித்த பெண்கள் உயர்ந்த அருளைக் கொண்ட மகனையோ, மகளையோ ஈன்றெடுப்பார்கள். பலமிக்கவரும், திரும்பி வராதவரும், முக்தியின் அவதாரமும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்}, அற விளைவுகளுக்குத் துணை புரிய விரும்பி பாரதத்தின் சுருக்கத்தைப் படைத்தார்.(48) அறுபது லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட மற்றொரு தொகுப்பையும் அவர் படைத்தார்.(49) இவற்றில் முப்பது லட்சம் ஸ்லோகங்கள் தேவலோகத்தில் வைக்கப்பட்டது. பித்ருக்களின் லோகத்தில் பதினைந்து லட்சம் ஸ்லோகங்கள் இப்போது இருக்கின்றன. அதே வேளையில் பதினைந்து லட்சம் யக்ஷர்களின் உலகில் நடப்பிலுள்ளன.(50) மனிதர்களுக்கு மத்தியில் ஒரு லட்சம் தற்போதிருக்கின்றன. நாரதர் தேவர்களுக்கு மஹாபாரதத்தை உரைத்தார்; அசித தேவலர் பித்ருக்களுக்கும்,(51) சுகர் ராட்சசர்கள் மற்றும் யக்ஷர்களுக்கும், வைசம்பாயனர் மனிதர்களுக்கு மஹாபாரதத்தை உரைத்தனர். இந்த வரலாறு புனிதமானதாகவும், ஆழ்ந்த கருத்துகளை உடையதாகவும், வேதங்களுக்கு நிகரானதாகவும் கருதப்படுகிறது.(52) ஓ! சௌனகரே, ஒரு பிராமணனைத் தன் முன்னிலையில் கொண்டு இந்த வரலாற்றைக் கேட்கும் மனிதன், புகழ் மற்றும் தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையையும் அடைகிறான்.(53) நல்லர்ப்பணிப்புடன் மஹாபாரத உரையைக் கேட்பவன், அதன் மிகச் சிறிய பகுதியைப் புரிந்து கொள்வதன் மூலம் கிட்டும் தகுதியின் விளைவால் உயர்ந்த வெற்றியை அடைகிறான். இந்த வரலாற்றைச் சொல்லும் மனிதனும், அர்ப்பணிப்புடன் கேட்கும் மனிதனும் தங்கள் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றனர்.(54,55)

பழங்காலத்தில் பெரும் முனிவரான வியாசர் இந்த ஆய்வைத் தொகுத்து, இந்த நான்கு ஸ்லோகங்களுடன் சேர்த்து தம்முடன் தமது மகன் சுகரையும்  படிக்கச் செய்தார்[5].(56) “ஆயிரக்கணக்கான தாய்மாரும், தந்தைமாரும், நூற்றுக்கணக்கான மகன்களும், மனைவியரும் உலகில் எழுவார்கள், அதிலிருந்து செல்வார்கள். வேறு சிலரும் (எழுந்து) அதே போலச் செல்வார்கள்.(57) இன்பந்தரும் ஆயிரக்கணக்கான தருணங்களும், அச்சந்தரும் நூற்றுக்கணக்கான தருணங்களும் நேரலாம். இவை அறியாமையில் இருப்பவனைப் பாதிக்குமேயன்றி ஞானியையல்ல.(58) உயர்த்தப்பட்ட கரங்களுடன் நான் உரக்கக் கதறுகிறேன், கேட்பாரெவரும் இல்லை. அறத்தில் இருந்து செல்வமும், செல்வத்திலிருந்து இன்பமும் நேர்கின்றன. எனவே, அறத்தை ஏன் கடைப்பிடிக்கக்கூடாது?(59) இன்பத்திற்காகவோ, அச்சத்திற்காகவோ, பேராசைக்காகவோ ஒருபோதும் ஒருவன் அறத்தைக் கைவிடக்கூடாது. உண்மையில் உயிரின் நிமித்தமாகவும் ஒருவன் அறத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது. அறமே நிலையானது. இன்பதுன்பங்கள் நிலையானவையல்ல. ஜீவன் நிலையானவன். எனினும், உடலில் ஜீவன் பொதியப்படுவதற்கான காரணம் {உடலுடன் கூடிய ஜீவன்} அவ்வாறானதல்ல” {என்ற ஸ்லோகங்களை வியாசர் தம்முடன் சேர்ந்து சுகரையும் படிக்கச் செய்தார்}.(60)அந்த மனிதன் விடியலில் எழுந்ததும், {மேற்கண்ட} இந்தப் பாரதச் சாவித்ரியைப் படிப்பானோ[6] அவன் இந்த வரலாற்றை உரைப்பதுடன் தொடர்புடைய வெகுமதிகளை அனைத்தையும் அடைந்து இறுதியாக உயர்ந்த பிரம்மத்தை அடைவான்.(61) புனிதமான பெருங்கடல், இமய மலை ஆகிய இரண்டும் விலைமதிப்புமிக்க ரத்தினங்களின் சுரங்கங்களாகக் கருதப்படுவதைப் போலவே பாரதமும் (விலைமதிப்புமிக்க ரத்தினங்களைக் கொண்ட சுரங்கமாகவே) கருதப்படுகிறது.(62) கல்விமானான மனிதன், (தீவில் பிறந்த) கிருஷ்ணரால் {வியாசரால்} தொகுக்கப்பட்ட இந்த வேதத்தையோ, ஆகமத்தையோ பிறருக்கு உரைப்பதன் மூலம் செல்வத்தை ஈட்டுவான். குவிந்த கவனத்துடன் பாரதம் என்ற இந்த வரலாற்றை உரைக்கும் மனிதன் நிச்சயம் உயர்ந்த வெற்றியை அடைவான்.(63) எனில், புஷ்கரையில் நீர் தெளித்துக் கொண்டு, பாரதம் உரைக்கப்படும் போது கவனமாகக் கேட்கும் மனிதனைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இது தீவில் பிறந்தவரின் உதடுகளில் இருந்து சிந்திய அமுதத்திற்கு ஒப்பானது. இஃது அளக்க முடியாததாகவும், புனிதமானதாகவும், புனிதப்படுத்துவதாகவும், பாவம் போக்குவதாகவும், மங்கலமானதாகவும் இருக்கிறது” {என்றார் சௌதி}.(64)

மஹாபாரத ஸ்ரவணவிதி! – ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 6-மஹாபாரதம் உரைக்கும்போது கேட்பதற்குரிய விதி முறைகள்; மஹாபாரதம் கேட்ட பிறகு கொடுக்கப்பட வேண்டிய சிராத்த காணிக்கைகள்; மஹாபாரதப் பாராயணத்தைக் கேட்ட பிறகு பொதுவாகக் கொடுக்கப்பட வேண்டிய கொடைகள்; பாராயணம் செய்பவருக்குரிய தகுதிகள்; பாராயணம் செய்ய வேண்டிய முறை; ஒவ்வொரு பாராயணத்தின் முடிவிலும் கிட்டும் பலன்கள்; ஒவ்வொரு பர்வத்தின் நிறைவிலும் கொடுக்கப்பட வேண்டிய கொடைகள்; மஹாபாரதத்தின் புண்ணியங்கள்; மஹாபாரதத்தைக் கேட்பதன் மூலம் கொடும்பாவங்களில் இருந்தும் தூய்மையடையலாம் என்பது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! புனிதமானவரே, கல்விமான்கள் எந்தச் சடங்குகளின்படி பாரதத்தைக் கேட்க வேண்டும். (பாரதத்தைக் கேட்பதன் மூலம் அடையப்படும்) கனிகள் பலன்கள் என்னென்ன? பல்வேறு பாரணங்களின் {உண்ணா நோன்பிருந்து உண்ணும்} போது வழிபடப்பட வேண்டிய தேவர்கள் யாவர்?(1) ஓ! புனிதமானவரே, ஒவ்வொரு பர்வத்தின் போதும், அல்லது (பாராயணம் தொடர்கையில் வரும்) புனித நாளின் போதும் ஒருவன் கொடுக்க வேண்டிய கொடைகள் என்னென்ன? பாராயணம் செய்பவரின் தகுதிகள் என்ன? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக[1]” என்றான்.(2)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பாரதா, அதன் நடைமுறை என்ன என்பதையும், (பாரதம் உரைக்கப்படும்போது) கேட்பவனுக்குக் கிடைக்கும் கனிகள் {பலன்கள்} என்னென்ன என்பதையும் கேட்பாயாக. ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, இதையே நீ என்னிடம் கேட்டாய்.(3) ஓ! பூமியின் ஆட்சியாளா, சொர்க்கத்தின் தேவர்கள் விளையாடுவதற்காக {தெய்வசெயல் புரிவதற்காக} இந்த உலகத்திற்கு வந்தனர். தங்கள் பணியை முடித்துக் கொண்டு அவர்கள் மீண்டும் சொர்க்கத்திற்குச் சென்றனர்.(4) நான் உனக்குச் சுருக்கமாகச் சொல்லப் போவதைக் கேட்பாயாக. மஹாபாரதத்தில் முனிவர்களின் பிறப்பு மற்றும் பூமியில் வந்த தேவர்களின் பிறப்பு ஆகியவை காணக்கிடைக்கின்றன.(5) ஓ! பாரதக் குலத்தோனே, பாரதம் என்றழைக்கப்படும் இந்த ஆய்வில் நித்தியமான ருத்திரர்கள், சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், ஆதித்யர்கள், அஸ்வினிகள் என்றழைக்கப்படும் இரு தேவர்கள், லோகபாலர்கள், பெரும் முனிவர்கள், குஹ்யர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், வித்யாதரர்கள், சித்தர்கள், பல்வேறு தேவர்கள், உடலில் புலப்படும் சுயம்பு, தவசிகள் பலர், மலைகள், குன்றுகள், பெருங்கடல்கள், கடல்கள், ஆறுகள், பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த அப்சரஸ்கள், கோள்கள், வருடங்கள், அயனங்கள் {அரை வருடங்கள்}, பருவ காலங்கள், அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடியதும், தேவர்கள் மற்றும் அசுரர்களுடன் கூடியதுமான மொத்த அண்டமும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன.(6-9)

ஒரு மனிதன் பயங்கரப் பாவங்களைச் செய்தவனாக இருந்தாலும், இதில் சொல்லப்படும் அவர்களின் {மேற்கண்டவர்களின்} பெயர்கள், சாதனைகள், புகழ் ஆகியவற்றைக் கேட்பதன் மூலம், அவற்றில் இருந்து தூய்மையடைகிறான்.(10) ஓ! பாரதா {ஜனமேஜயா}, குவிந்த ஆன்மாவுடனும், தூய உடலுடனும் இந்த வரலாற்றைத் தொடக்கம் முதல் முடிவு வரை முறையாகக் கேட்ட ஒருவன், (அதில் குறிப்பிடப்படும் முதன்மையான மனிதர்களுக்கு) சிராத்தக் காணிக்கைகளை அளிக்க வேண்டும். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தன் சக்திக்கு தகுந்த படி பிராமணர்களுக்கும் பிராமணர்களுக்கும் அர்ப்பணிப்புடன் கொடைகளை அளிக்க வேண்டும்.(11,12) பல்வேறு வகை ரத்தினங்கள், பசுக்கள், பசுக்களில் பால் கறப்பதற்கான வெண்கலப் பாத்திரங்கள், அனுபவிக்கத்தகுந்த அனைத்து வகைச் சாதனைகளையும் கொண்டவர்களும், அனைத்து வகை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான கன்னிகைள், பல்வேறு வகையான வாகனங்கள், அழகிய மாளிகைகள், நிலங்கள் மற்றும் துணிகள் ஆகியனவும் காணிக்கை அளிக்கப்பட வேண்டும்.(13,14) குதிரைகள், மதப்பெருக்குள்ள யானைகள் உள்ளிட்ட விலங்குகளும், படுக்கைகள், மனிதர்களின் தோள்களில் சுமக்கப்படும் பல்லக்குகள், நன்கு அலங்கரிக்கப்பட்ட தேர்கள் ஆகியவையும் கொடை அளிக்கப்பட வேண்டும்.(15) வீட்டிற்குரிய எந்தப் பொருளிலும் முதன்மையானவையும், பெரும் மதிப்புமிக்கச் செல்வமும் பிராமணர்களுக்குக் கொடையளிக்கப்பட வேண்டும். உண்மையில், ஒருவன் தன்னையும், மனைவிகளையும், பிள்ளைகளையும் கொடையளிக்க வேண்டும்.(16)

பாரதத்தைக் கேட்க விரும்பும் ஒருவன், ஐயுணர்வு இல்லாத இதயத்துடனும், உற்சாகத்துடனும், இன்பமாகவும் அதைக் கேட்க வேண்டும்; உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அவன் தன் சக்திக்குத் தகுந்த வகையில் பெரும் அர்ப்பணிப்புடன் கொடைகளைக் கொடுக்க வேண்டும்[2].(17) வாய்மை மற்றும் நேர்மையில் அர்ப்பணிப்புள்ளவனும், தற்கட்டுப்பாடுடையவனும், (மனம்) தூய்மையானவனும், நம்பிக்கையுடன் கூடியவனும், கோபத்தை அடக்கியவனுமான ஒரு மனிதன், (பாரதம் உரைக்கும் காரியத்தின் மூலம்) வெற்றியை எவ்வாறு அடைகிறான் என்பதைக் கேட்பாயாக.(18) அவன் (உடல் அளவில்) தூய்மையானவனும், நல்லொழுக்கம் ஒழுகுபவனும், வெள்ளுடை உடுத்தியவனும், தன் ஆசைகளை முழுமையாக ஆள்பவனும், குற்றங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனும், கல்வியின் பிரிவுகள் அனைத்தையும் அறிந்தவனும், நம்பிக்கையுடன் கூடியவனும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனும்,(19) நல்ல குணங்களைக் கொண்டவனும், அருள் நிறைந்தவனும், தற்கட்டுப்பாடுடையவனும், வாய்மைநிறைந்தவனும், ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பவனும், கொடையளிப்பதால் அனைவராலும் விரும்பப்படுபவனும், கௌரவம் கொண்டவனுமான ஒருவனை உரைப்பவனாக {பாராயணம் செய்பவனாக} நியமிக்க வேண்டும்.(20){பாரதம்} உரைப்பவன் {பாராயணம் செய்பவன்}, உடல் கோளாறுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, சுகமாக அமர்ந்து கொண்டு, குவிந்த கவனத்துடனும், போதுமான சக்தியுடனும், எழுத்துகள், சொற்களுக்குள் குழப்பிக் கொள்ளாமல், இனிய பேச்சுடனும், சொற்களுடனும் கூடியவனாக, உணர்வைக் குறிக்கும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உரையை மெதுவாகவோ, வேகமாகவோ சொல்லாமல் எழுத்துகள் அமையும் எட்டு இடங்களில் இருந்து அறுபத்துமூன்று எழுத்துகளையும் முழுமையாகச் சொல்ல வேண்டும்.(21,22) நாராயணனையும், மனிதர்களில் முதன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும்.(23) ஓ! மன்னா, பாரதம் உரைக்கப்படும்போது, கேட்கும் இவ்வகையானவன், நோன்புகளை நோற்று, தொடக்கச் சடங்குகளால் தூய்மையடைந்து மதிப்புமிக்கப் பலன்களை அடைகிறான்.(24)

{உண்ணா நோன்பிருந்து உண்ணும்} முதல் பாரணத்தை எட்டும்போது, கேட்பவன், விரும்பத்தக்க பொருட்களைக் கொடுத்துப் பிராமணர்களை நிறைவடையச் செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம் ஒருவன் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்[3].(25) அவன் தனக்குப் பணிவிடை செய்யக்கூடிய பல்வேறு வகை அப்சரஸ்கள் நிறைந்த ஒரு பெரிய (தெய்வீகத்) தேரை அடைகிறான். மகிழ்ச்சியான இதயத்துடனும், தேவர்களின் துணையுடனும் அவன் (இன்பத்தில்) திளைத்த இதயத்துடன் சொர்க்கத்திற்குச் செல்கிறான்.(26) இரண்டாம் பாரணத்தை எட்டும்போது, கேட்டுக் கொண்டிருப்பவன் அதிராத்ர நோன்பை நோற்றதற்கான பலன்களை அடைகிறான். உண்மையில் அவன் முற்றிலும் விலைமதிப்புமிக்க ரத்தினங்களாலான ஒரு தெய்வீகத் தேரில் உயர்கிறான்.(27) தெய்வீக மலர்மாலைகளையும், ஆடைகளையும் அணிந்து கண்டு, தெய்வீகக் களிம்புளைப் பூசிக் கொண்டு, எப்போதும் தெய்வீக நறுமணத்தைப் பொழிந்தபடியே அவன் சொர்க்கத்தில் உயர்ந்த கௌரவங்களை அடைகிறான்.(28) மூன்றாவது பாரணத்தை எட்டும்போது, அவன் துவாதசாஹ நோன்றை நோற்றதற்கான பலன்களை அடைகிறான். உண்மையில் அவன், ஒரு தேவனைப் போலப் பல வருடங்கள் சொர்க்கத்தில் வசிக்கிறான்.(29)நான்காவது பாரணத்தில் அவன் வாஜபேய வேள்வி செய்ததன் பலன்களை அடைகிறான். ஐந்தாவதில் இதற்கும் இரு மடங்கு பலன்களை அடைகிறான். உதயச் சூரியனையோ, சுடர்மிக்க நெருப்பையோ போன்ற ஒரு தெய்வீகத் தேரில் ஏறி, தேவர்களின் துணையுடன் சொர்க்கத்திற்குச் செல்லும் அவன், இந்திரனின் வசிப்பிடத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் இன்பநிலையில் திளைக்கிறான்.(30,31) ஆறாவது பாரணத்தில் இதனிலும் இரு மடங்கையும், ஏழாவது மும்மடங்கு பலன்களையும் அடைகிறான். (அழகில்) கைலாச மலையின் சிகரத்திற்கு ஒப்பானதும், வைடூரியத்தாலும், வேறு ரத்தினங்களாலும் அமைக்கப்பட்ட பீடங்களைக் கொண்டதும், பல்வேறு வகை அழகிய பொருட்களால் சூழப்பட்டதும், ரத்தினங்கள் மற்றும் பவழங்கள் நிறைந்ததும், செலுத்துபவனின் விருப்பத்திற்கேற்ப நகர்வதும், பணிவிடை செய்வதற்கான அப்சரஸ்கள் நிறைந்ததும், ஒரு தெய்வீவக் தேரில் ஏறும் அவன், இரண்டாவது சூரிய தேவனைப் போல இன்பலோகங்கள் எங்கும் பவனி வருகிறான்.

எட்டாவது பாரணத்தில் அவன் ராஜசூய வேள்வியின் பலன்களை அடைகிறான்.(32-34) உதயச் சந்திரனைப் போன்றதும், சந்திரக்கதிர்களைப் போன்று வெண்மையான குதிரைகள் பூட்டப்பட்டதும், எண்ணத்தின் வேகம் கொண்டதுமான அழகிய தேரில் அவன் ஏறுகிறான்.(35) முதன்மையான அழகைக் கொண்டவர்களும், சந்திரன் போன்ற அழகிய முகங்களைக் கொண்டவர்களுமான பெண்களால் அவன் பணிவிடை செய்யப்படுகிறான். அவர்கள் இடுப்புகளில் வளைந்திருக்கும் மாலைகள் மற்றும் கணுக்கால்களில் வளைந்திருக்கும் நுபுரங்களின் இசையை அவன் கேட்கிறான்.(36) அழகில் விஞ்சிய பெண்களின் மடியில் தலை வைத்து உறங்கி பெரும் புத்துணர்ச்சியுடன் அவன் விழித்தெழுகிறான். ஒன்பதாவது பாரணத்தில், ஓ! பாரதா, அவன் வேள்விகளில் முதன்மையான குதிரை வேள்வியைச் செய்த பலன்களை அடைகிறான்.(37) தங்கத் தூண்களால் ஆதரிக்கப்படும் கூடுகளுடன் கூடியதும், வைடூரியக் கற்களால் அமைக்கப்பட்ட இருக்கையுடன் கூடியதும், அனைத்துப் பக்கங்களில் பசும்பொன்னாலான ஜன்னல்களைக் கொண்டதும், அப்சரஸ்கள், கந்தர்வர்கள் மற்றும் வேறு தேவர்களால் நிறைந்ததுமான தேரில் ஏறி காந்தியில் சுடர்விடுகிறான்.(38) தெய்வீக மாலைகள் மற்றும் ஆடைகள் அணிந்து, தெய்வீகக் களிம்புகள் தரித்துக் கொள்ளும் அவன், தேவர்களைத் துணையாகக் கொண்ட இரண்டாவது தேவனைப் போல அருள்நிலையில் விளையாடுகிறான்.(39,40)

பத்தாவது பாரணத்தை அடைந்து, பிராமணர்களை நிறைவடையச் செய்யும் அவன் எண்ணற்ற கிங்கிணி மணிகளுடன் கூடியதும், கொடிகள் மற்றும் பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டதும், விலைமதிப்புமிக்க ரத்தினங்களாலான இருக்கையைக் கொண்டதும், வைடூரியத்தாலான வளைவுகளைக் கொண்டதும், தங்க வலைப் பின்னல் கொண்டதும், பவளத்தாலான கோபுரங்களைக் கொண்டதும், நன்றாகப் பாடும் கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களால் அலங்கரிக்கப்பட்டதும், அறவோர் வசிக்கத் தகுந்ததுமான தேரை அடைகிறான்.(41-43) நெருப்பின் நிறம் கொண்ட கிரீடத்தால் மகுடந்தரித்து, தங்க ஆபரணத்தால் அலங்கரித்துக் கொள்ளும் அவன், தெய்வீக சந்தனக் குழம்பைத் தன் மேனியில் பூசிக்கொண்டு, தெய்வீக மலர்மாலைகள் அணிந்து கொண்டு, பெருங்காந்தியுடன் கூடியவனாக, தேவர்களின் அருளின் மூலம், தெய்வீக உலகங்கள் அனைத்திலும் திரிந்து, தெய்வீகமான இன்ப நுகர் பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான்.(44,45)

இவ்வாறாக இருக்கும் அவன் சொர்க்கத்தில் மிக நீண்ட வருடங்கள் உயர்ந்த கௌரவங்களை அடைகிறான். கந்தர்வர்களின் துணையுடன் கூடிய அவன் முழுமையாக இருபத்தோரு வருடங்கள் இந்திரனின் வசிப்பிடத்தில் இந்திரனின் அருளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் ஒவ்வொருநாளும் பேரழகு படைத்த தெய்வீகக் காரிகையருடன் தெய்வீகத் தேர்களையும், வாகனங்களையும் செலுத்திக் கொண்டு தேவர்களின் பல்வேறு உலகங்களின் பவனி வருகிறான். ஓ! மன்னா, அவன் சூரிய தேவன் மற்றும் சந்திரதேவன், சிவன் ஆகியோரின் வசிப்பிடங்களுக்குச் செல்ல இயன்றவனாகிறான். உண்மையில் அவன் விஷ்ணு லோகத்தில் வாழ்வதிலும் வெற்றியடைகிறான். ஓ! ஏகாதிபதி, இஃது இவ்வாறே இருக்கிறது. இதில் எந்த ஐயமும் இல்லை.(46-49) நம்பிக்கையுடன் கேட்கும் மனிதனும் அவ்வாறே ஆகிறான். இதை என் ஆசான் {வியாசர்} சொல்லியிருக்கிறார். இதை உரைப்பவன் விரும்பும் அனைத்துப் பொருட்களும் அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(50) யானைகள், குதிரைகள், தேர்கள், வாகனங்கள், குறிப்பாக விலங்குகள் மற்றும் அவை இழுக்கும் வண்டிகள், தங்கக் கைவளை, காது வளையங்கள், புனித நூல்கள்,(51) அழகிய ஆடைகள், சிறந்த நறுமணப் பொருட்கள் ஆகியன கொடுக்கப்பட வேண்டும். அவனைத் தேவனாக வழிபடும் ஒருவன் விஷ்ணுலோகத்தை அடைகிறான்.(52)

பாரதம் உரைக்கப்படுகையில், ஒவ்வொரு பர்வத்தையும் அடையும்போது, பிராமணர்களின் பிறப்பு, நாடு, வாய்மை, மகிமை மற்றும் பக்தி ஆகியவற்றை அறிந்து அவர்களுக்கும், அதே போன்றவற்றை அறிந்து கொண்டு க்ஷத்திரியர்களுக்கும் என்னென்ன கொடுக்கப்பட வேண்டும் என்பதை நான் இனி அறிவிக்கப் போகிறேன்[4].(53,54) பிராமணர்களை ஆசி கூறச் செய்து பிறகு உரைக்கும் தொழில் {பாராயணம்} தொடங்கப்பட வேண்டும். ஒரு பர்வம் முடிவடைந்ததும், ஒருவனுடைய சக்திக்குத் தகுந்த வகையில் பிராமணர்கள் வழிபடப்பட வேண்டும்.(55) முதலில் உரைப்பவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, வெள்ளாடை அணிந்து, சந்தனக் குழம்பைப் பூசிக் கொண்டு, தேன் மற்றும் பாயஸம்[5] உண்டிருக்க வேண்டும்.(56)

ஆஸ்தீக பர்வம்
<1> உரைக்கப்படும்போது, பிராமணர்களுக்குக் கனிகளும், கிழங்குகளும், பாயஸமும், தேனும், தெளிந்த நெய்யும், பாயஸமும் கொடுக்கப்பட வேண்டும்.(57)

சபா பர்வம்
<2> உரைக்கப்படும்போது, ஓ! மன்னா, பிராமணர்கள் உண்பதற்கு அபூபங்கள், பூபங்கள் மற்றும் மோதகங்களுடன் கூடிய ஹவிஷ்யம் கொடுக்கப்பட வேண்டும்[6].(58)ஆரண்யக பர்வம்<3> உரைக்கப்படும்போது, மேன்மையான பிராமணர்கள் உண்பதற்குக் கனிகளும், கிழங்குகளும் கொடுக்கப்பட வேண்டும்.

ஆரண்யப் பர்வத்தை
<4> அடையும்போது, நீர் நிறைந்த நீர்க்குடங்களைக் கொடையளிக்க வேண்டும்.(59) அரிசி, கனிகள், கிழங்குகள், ஏற்புடைய குணம் கொண்ட உணவுகளும் பல மேன்மையான வகைகளைச் சேர்ந்த இனிய உணவும் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(60)

விராட பர்வம்
<5> உரைக்கப்படும்போது, பல்வேறு வகை ஆடைகள் கொடையளிக்கப்பட வேண்டும். ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா},

உத்யோக பர்வத்தின்
<6> போது, இரு பிறப்பாளர்களை {பிராமணர்களை} நறுமணப் பொருட்களாலும், மாலைகளாலும் அலங்கரித்து ஏற்புடைய குணம் கொண்ட அனைத்து வகை உணவுகளையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

பீஷ்ம பர்வம்
<7> உரைக்கப்படும்போது,  ஓ! மன்னர்களின் மன்னா, அவர்களுக்குச் |{பிராமணர்களுக்குச்} சிறந்த தேர்களையும், வாகனங்களையும் கொடுத்துவிட்டு,(61,62) தூய்மையானதும், நன்கு சமைக்கப்பட்டதும், விரும்பத்தக்க ஒவ்வொரு குணமும் கொண்ட உணவைக் கொடுக்க வேண்டும்.

துரோண பர்வத்தின்
<8> போது, கல்விமான்களான பிராமணர்களுக்கு,(63) ஓ! ஏகாதிபதி மேன்மையான வகை உணவையும், படுக்கைகளையும், வில் மற்றும் நல்ல வாள்களையும் கொடுக்க வேண்டும்.

கர்ண பர்வம்
<9> உரைக்கப்படும்போது, முதன்மையான வகையைச் சார்ந்ததும்,(64) தூய்மையானதும், இல்லறத்தானால் குவிந்த மனத்துடன் நன்கு சமைக்கப்பட்டதுமான உணவை பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

சல்லிய பர்வம்
<10> உரைக்கப்படும்போது, ஓ! மன்னர்களின் மன்னா, பண்டங்களையும், பாயஸத்தையும், கோதுமையால் செய்யப்பட்ட பிண்டங்களையும், இனிய சத்தான உணவு மற்றும் பானங்களையும் கொடுக்க வேண்டும்.

கதா {கதாயுத்த} பர்வத்தின்
<11> போது, முத்கம்[7] கலந்த உணவைக் கொடுத்துப் பிராமணர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.(65,66)ஸ்திரீ பர்வம்<12> உரைக்கப்படும்போது, முதன்மையான பிராமணர்களுக்கு ரத்தினங்களும், விலைமதிப்புமிக்கக் கற்களும் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.

ஐஷீக பர்வம்[8]
<13> உரைக்கப்படும்போது, நெய்யில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசி முதலில் கொடுக்கப்பட வேண்டும்(67), அதன் பிறகு தூய்மையானதும், நன்கு சமைக்கப்பட்டதும், விரும்பத்தக்க குணங்கள் அனைத்தையும் கொண்டதுமான உணவைக் கொடுக்க வேண்டும்.

சாந்தி பர்வம்
<14> உரைக்கப்படும்போது, பிராமணர்கள் உண்பதற்கு ஹவிஷ்யம் கொடுக்கப்பட வேண்டும்.(68)

அஸ்வமேதிக பர்வத்தை
<15> அடையும்போது, ஏற்புடைய அனைத்து குணங்களையும் கொண்ட உணவு கொடுக்கப்படவேண்டும்,

ஆஸ்ரமவாஸிக பர்வத்தை
<16> அடையும்போது, பிராமணர்களுக்கு ஹவிஷ்யம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.(69)

மௌஸலம்
<17> அடையும்போது, நறுமணப் பொருட்களையும், ஏற்புடைய குணங்களைக் கொண்ட மலர்மாலைகளையும் கொடையளிக்க வேண்டும்.

மஹாப்ரஸ்தானிகத்தின்
<18> போதும், ஏற்புடைய குணங்களைக் கொண்ட அதே வகைக் கொடைகளை அளிக்க வேண்டும்.(70)

ஸ்வர்க்க பர்வத்தை
<19> அடையும்போது, பிராமணர்கள் உண்பதற்கு ஹவிஷ்யம் கொடுக்கப்பட வேண்டும்.

ஹரிவம்சத்தின்
<20> முடிவில் ஓராயிரம் பிராமணர்களுக்கு உணவளிக்கப்பட வேண்டும்.(71) அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பசுவையும், சிறிதளவு பொன்னும் கொடுக்கப்பட வேண்டும். ஓ! மன்னா, இவற்றில் பாதியளவை ஒவ்வொரு ஏழைக்கும் கொடுக்கப்பட வேண்டும்.(72)அனைத்துப் பர்வங்களின் முடிவில் ஞானம் கொண்ட ஓர் இல்லறத்தான், சிறிதளவு பொன்னுடன் ஒரு மஹாபாரதப் பிரதியை அதை உரைத்தவனுக்குக் கொடுக்க வேண்டும்.(73) ஓ! மன்னா, ஹரிவம்ச பர்வம் உரைக்கப்படும்போது, அடுத்தடுத்த பாரணங்களின் போது பிராமணர்கள் பருகுவதற்குப் பாயஸம் கொடுக்கப்பட வேண்டும்.(74) சாத்திரங்களை அறிந்த ஒருவன், அனைத்துப் பர்வங்களையும் முடித்துவிட்டு, தன்னை முறையாகத் தூய்மைப்படுத்தி, வெள்ளுடை உடுத்தி, மலர்மாலைகள் சூடி, ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, ஒரு மங்கலமான இடத்தில் மஹாபாரதப் பிரதியை வைத்து, அதைப் பட்டுத் துணியால் மூடி, நறுமணப் பொருட்கள், மற்றும் மலர் மாலைகளைக் கொண்டு உரிய சடங்குகளின் படி அதை வழிபட வேண்டும்.(75,76) உண்மையில், இந்த ஆய்வின் பல்வேறு பகுதிகளும் ஒருவனால் அர்ப்பணிப்புடனும், குவிந்த மனத்துடனும் வழிபடப்பட வேண்டும். பல்வேறு வகை உணவுகள், மலர்மாலைகள், பானங்கள் மற்றும் அனுபவிக்கத்தகுந்த பல்வேறு மங்கலப் பொருட்கள் ஆகியவற்றையும் காணிக்கையளிக்க வேண்டும்.(77) பொன்னும், வேறு விலைமதிப்புமிக்க உலோகங்களும் தக்ஷிணையாகக் கொடுக்கப்பட வேண்டும். தேவர்கள் அனைவரின் பெயர்களும், நரன் மற்றும் நாராயணனின் பெயர்களும் சொல்லப்பட வேண்டும்.(78) பிறகு, சில முதன்மையான பிராமணர்களின் மேனியை நறுமணப் பொருட்களாலும், மலர்மாலைகளாலும் அலங்கரித்து, அவர்களுக்கு அனுபவிக்கத்தகுந்த பல்வேறு பொருட்களையும், மேன்மையான விலைமதிப்புமிக்கப் பொருட்களையும் கொடுத்து நிறைவடையச் செய்ய வேண்டும்.(79) இதைச் செய்வதன் மூலம் ஒருவன் அதிராத்ர வேள்வி செய்த பலன்களை அடைகிறான் உண்மையில், அடுத்தடுத்த ஒவ்வொரு பர்வத்தின் போதும், வேள்வி செய்வதால் உண்டாகும் புண்ணியங்களை அவன் அடைகிறான்.(80)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, உரைப்பவர், கல்விமானாகவும், நல்ல குரல் கொண்டவராகவும், எழுத்துகள், சொற்கள் ஆகிய இரண்டையும் தெளிவாக உச்சரிப்பவராகவும் இருக்க வேண்டும். ஓ! பாரதர்களின் தலைவா, அத்தகைய மனிதன் ஒவ்வொருவனும் பாரதம் உரைக்க வேண்டும்.(81) பெரும் எண்ணிக்கையிலான முதன்மையான பிராமணர்களை மகிழ்ச்சியடையச் செய்து, விதிப்படியான கொடைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். ஓ! பாரதர்களின் தலைவா, உரைப்பவரும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு முழுமையாக உண்ணக் கொடுக்கப்பட வேண்டும்.(82) உரைப்பவர் நிறைவடைந்தால், அந்த இல்லறத்தான், சிறந்த மங்கலமான மனநிறைவை அடைகிறான். பிராமணர்கள் நிறைவடையச் செய்யப்பட்டால், தேவர்கள் அனைவரும் நிறைவடைகின்றனர்.(83) அதன்பிறகு, ஓ! பாரதர்களின் தலைவா, அனுபவிக்கத்தகுந்த பல்வேறு மேன்மையான பொருட்களால் பிராமணர்கள் முறையாக மகிழ்ச்சியடையச் செய்யப்பட வேண்டும்.(84)

இவ்வாறே, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, உன் கேள்விகளுக்குப் பதிலாக (இந்தச் சாத்திரங்களை உரைக்கும் வழிமுறைக்கு) உரிய விதிமுறைகளைக் குறிப்பிட்டேன். நீ இவற்றை நம்பிக்கையுடன் கடைப்பிடிக்க வேண்டும்.(85) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பாரதம் உரைக்கப்படுவதைக் கேட்கும்போது, ஒவ்வொரு பாரணத்திலும் ஒருவன் உயர்ந்த நன்மையை அடைய விரும்பி பெருங் கவனத்துடன் கேட்க வேண்டும்.(86) ஒருவன் ஒவ்வொரு நாளும் பாரதத்தைக் கேட்க வேண்டும். ஒருவன் ஒவ்வொரு நாளும் பாரதத்தின் புண்ணியங்களை அறிவிக்க வேண்டும். எவனுடைய வீட்டில் பாரதம் உரைக்கப்படுகிறதோ, அவன் தன்னுடைய கரங்களில் ஜெயம் என்ற பெயரில் அறியப்படும் சாத்திரங்கள் அனைத்தையும் கொண்டிருப்பான்[9].(87) பாரதம் பாவம் போக்குவதும், புனிதமானதுமாகும். பாரதத்தில் பல்வேறு தத்துவங்கள் இருக்கின்றன. பாரதம் தேவர்களாலேயே வழிபடப்படுகிறது. பாரதம் உயர்ந்த இலக்காகும்.(88) ஓ! பாரதர்களின் தலைவா, பாரதம் சாத்திரங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். ஒருவன் பாரதத்தின் மூலம் முக்தியை {மோட்சத்தை} அடைகிறான். நான் உனக்குச் சொல்லும் இது முற்றான உண்மையாகும்.(89) மஹாபாரதம் என்றழைக்கப்படும் இந்த வரலாற்றின் புண்ணியங்களையும், பூமி, பசு, {வாக்கின் தேவியான} சரஸ்வதி, பிராமணர், கேசவன் ஆகியோரின் புண்ணியங்களையும் அறிவிக்கும் ஒருவன், ஒருபோதும் சோர்வடைய மாட்டான்.(90)ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, வேதம், இராமாயணம், புனித பாரதம் ஆகியவற்றில் தொடக்கம், நடு மற்றும் இறுதியில் ஹரியே பாடப்படுகிறான்.(91) விஷ்ணு மற்றும் நித்திய ஸ்ருதிகள் தொடர்புடைய சிறந்த வாக்கியங்கள் எதில் நேர்கின்றனவோ, {அவை} உயர்ந்த இலக்கை அடைய விரும்பும் மனிதர்களால் கேட்கப்பட வேண்டும்.(92) புனிதப்படுத்துவதான இது, கடமைகள் குறித்த அடையாளங்காட்டும் உயர்ந்த ஆய்வாகும். இஃது அனைத்துப் புண்ணியங்களையும் கொண்டதாகும். செழிப்பை விரும்பும் ஒருவன் இதைக் கேட்க வேண்டும்.(93) உடலால் இழைக்கப்பட்ட பாவங்களும், சொல் மற்றும் மனத்தால் இழைக்கப்பட்ட பாவங்கள் அனைத்தும் சூரிய உதயத்தின் போது இருளைப் போல (பாரதம் கேட்பதன் மூலம்) அழிவை அடைகின்றன.(94) விஷ்ணுவிடம் பக்தி கொண்ட ஒருவன், இந்தப் பதினெட்டுப் புராணங்களைக் கேட்பதன் மூலம் அடையப்படும் புண்ணியத்தை (இதன் மூலம்) அடைகிறான். இதில் ஐயமேதும் இல்லை.(95) (இதைக் கேட்பதன் மூலம்) ஆண்களும் பெண்களும் விஷ்ணுவின் நிலையை நிச்சயம் அடைவார்கள். பிள்ளைகளை விரும்பும் பெண்கள், விஷ்ணுவின் புகழை அறிவிக்கும் இதை நிச்சயம் கேட்க வேண்டும்.(96)

பாரதம் உரைப்பதால் உண்டாகும் பலனை அடைய விரும்பும் ஒருவன், உரைப்பவருக்குத் தன் சக்திக்கேற்றபடி பொன்னாலான வெகுமானத்தைத் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்.(97) தன் நன்மையை விரும்பும் ஒருவன், உரைப்பவருக்குத் தங்கக்கவசம் பூண்ட ஒரு கபிலை பசுவையும், துணியால் மறைக்கப்பட்ட அவளது கன்றையும் கொடையளிக்க வேண்டும்.(98) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தோள்களுக்கும், காதுகளுக்கும் ஆபரணங்கள் கொடுக்கப்பட வேண்டும். இதையும் தவிர, வேறு வகையான செல்வங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.(99) ஓ! மனிதர்களின் மன்னா, உரைப்பவருக்கு நிலக் கொடை அளிக்க வேண்டும். வேறெந்த கொடையும் ஒருபோதும் நிலக் கொடை போல் ஆகாது, அல்லது இருக்காது.(100) (பாரதத்தைக்) கேட்பவன் அல்லது பிறருக்கு உரைக்கும் மனிதன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, விஷ்ணுவின் நிலையை அடைகிறான்.(101) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அத்தகைய மனிதன் ஏழு தலைமுறை மூதாதையரையும், தன்னையும், தன் மனைவி மற்றும் மகன்களையும் மீட்கிறான்.(102) ஓ! மன்னா, பாரதம் உரைப்பதை நிறைவு செய்ததும் ஒருவன் பத்துப் பாகங்களுடன் கூடிய ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்வாறே, ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, உன் முன்னிலையில் நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன்.(103) இந்தப் பாரதத்தைத் தொடக்கம் முதல் அர்ப்பணிப்புடன் கேட்டு வரும் ஒருவன், பிராமணக் கொலைக் குற்றம் புரிந்தவனாகவோ, ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியவனாகவோ, மது பருகுபவனாகவோ, அடுத்தவர் உடைமைகளைக் களவு செய்பவனாகவோ, சூத்திர வகையில் பிறந்தவனாகவோ இருப்பினும் அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(104) இருளை அழிக்கும் நாள் சமைப்பவனைப் போலத் தன் பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் அத்தகைய மனிதன், விஷ்ணுவைப் போலவே, விஷ்ணுவின் உலகில் இன்பத்தில் திளைப்பான்[10]” {என்றார் வைசம்பாயனர்}.(105)

ஸ்வர்க்காரோஹணிக பர்வம் முற்றும்

முழு மஹாபாரதம் முற்றிற்று

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  மஹாப்ரஸ்தானிக பர்வம்-

October 19, 2025

நெடும்பயணம்! – மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 1-பரிக்ஷித்துக்கு முடிசூட்டி, யுயுத்சுவிடம் நாட்டை ஒப்படைத்த யுதிஷ்டிரன்; நகரவாசிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தம்பியருடனும், திரௌபதியுடனும் புறப்பட்டது; அக்னியின் சொற்படி காண்டீவத்தையும், அம்பறாதூணியையும் கடலில் போட்ட அர்ஜுனன்…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “விருஷ்ணி மற்றும் அந்தகக் குல வீரர்களுக்கிடையில் இரும்பு உலக்கைகளை {முசலங்களைக்} கொண்டு நடந்த மோதலைக் கேட்டும், கிருஷ்ணன் சொர்க்கத்திற்கு உயர்ந்ததை அறிந்து கொண்டும் பாண்டவர்கள் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விருஷ்ணிகளின் பெரும் படுகொலையைக் குறித்துக் கேட்ட கௌரவ மன்னன் {யுதிஷ்டிரன்} உலகை விட்டுச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். அவன் அர்ஜுனனிடம்,(2) “ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, காலன் (தன் கொதிகலனில்) அனைத்து உயிரினங்களையும் சமைக்கிறான். (எது நம் அனைவரையும் கட்டுகிறதோ அந்தக்) காலப் பாசத்தினாலேயே {கயிறுகளாலேயே} இது நடந்திருக்கிறது என நான் நினைக்கிறேன். இதைக் காண்பதே உனக்கும் தகும்” என்றான்.(3)

அண்ணனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, “காலன், காலன்” என்ற சொல்லை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லி, பெரும் நுண்ணறிவைக் கொண்ட தன் அண்ணனின் கருத்தை முழுமையாக ஏற்றான்.(4) அர்ஜுனனின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பீமசேனனும், இரட்டையர்களும் {நகுல சகாதேவர்களும்}, அர்ஜுனன் சொன்ன சொற்களை முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.(5) தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதற்காக இவ்வுலகில் இருந்து ஓயத் தீர்மானித்த அவர்கள் யுயுத்சுவைத் தங்கள் முன் கொண்டு வந்தனர். யுதிஷ்டிரன் தன் பெரியதந்தைக்கு {திருதராஷ்டிரனுக்கு} அவரது வைசிய மனைவியின் மூலம் பிறந்த மகனிடம் {யுயுத்சுவிடம்} நாட்டை ஒப்படைத்தான்.(6)

பரிக்ஷித்தை அரியணையில் நிறுவியவனும், பாண்டவர்களில் மூத்த சகோதரனுமான மன்னன் {யுதிஷ்டிரன்}, கவலையால் நிறைந்தவனாக, சுபத்திரையிடம்,(7) “உன்னுடைய மகனின் மகனான இவனே குருக்களின் மன்னனாக இருப்பான்.(8) பரிக்ஷித் ஹஸ்தினாபுரத்தை ஆள்வான், அதே வேளையில் யாதவ இளவரசனான வஜ்ரன் சக்ரப்ரஸ்தத்தை ஆள்வான். இவன் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருபோதும் அநீதியில் உன் இதயத்தை நிலைக்கச் செய்துவிடாதே {அதர்மத்தில் மனத்தைச் செலுத்தாதே}” என்றான்.(9)

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, தன் சகோதரர்களுடன் சேர்ந்து, பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, முதியவரான தங்கள் தாய்மாமனுக்கும் {வசுதேவருக்கும்}, ராமருக்கும் {பலராமருக்கும்}, பிறருக்கும் முறையாக ஆகுதிகளைக் காணிக்கையாக்கினான். பிறகு அவன் இறந்து போன தன் உற்றார் உறவினர் அனைவருக்கும் முறையாகச் சிராத்தங்களைச் செய்தான்.(10,11)

மன்னன், ஹரியைக் கௌரவிப்பதற்காக அவனுடைய பெயரை மீண்டும் மீண்டும் சொல்லி, தீவில் பிறந்தவரான வியாசர், நாரதர், தவச் செல்வத்தைக் கொண்ட மார்க்கண்டேயர், பரத்வாஜ குலத்தின் யாஜ்ஞவல்கியர் ஆகியோருக்கு இனிய உணவு வகைகளைப் படைத்தான்.(12) கிருஷ்ணனைக் கௌரவிப்பதற்காக அவன் பல ரத்தினங்களையும், ஆடைகளையும், துணிமணிகளையும், கிராமங்களையும், குதிரைகளையும், தேர்களையும்,(13) பெண் பணியாட்களையும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பிராமணர்களில் முதன்மையானோருக்குக் கொடையளித்தான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, குடிமக்களை அழைத்து, கிருபரை ஆசானாக நிறுவி, பரிக்ஷித் அவரது சீடனாக்கப்பட்டான். பிறகு மீண்டும் யுதிஷ்டிரன் தன் குடிமக்களை அழைத்தான்.(14,15) அந்த அரசமுனி தன் நோக்கங்களை அவர்களுக்குத் தெரிவித்தான். குடிமக்களும், மாகாணவாசிகளும் மன்னனின் சொற்களைக் கேட்டு,(16) கவலையால் நிறைந்தவர்களாக அவற்றை அங்கீகரிக்காமல் இருந்தனர். “ஒருபோதும் இது நடக்காது” என்று அவர்கள் மன்னனிடம் சொன்னார்கள்.(17)

காலம் கொண்டுவரும் மாற்றங்களை நன்கறிந்தவனான அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்கவில்லை. அற ஆன்மா கொண்ட அவன் தன் கருத்துகளை அங்கீகரிக்குமாறு மக்களை ஏற்கச் செய்தான்.(18) பிறகு அவன் உலகத்தைவிட்டுச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். அவனது சகோதரர்களும் அதே தீர்மானத்தையே எடுத்திருந்தனர். பிறகு, தர்மனின் மகனும், குருக்களின் மன்னனுமான யுதிஷ்டிரன்,(19) தன் ஆபரணங்களை அகற்றி, மரவுரிகளைத் தரித்தான். பீமன், அர்ஜுனன், இரட்டையர் மற்றும் பெரும்புகழைக் கொண்ட திரௌபதி ஆகியோரும்,(20) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதே போலவே மரவுரிகளையே உடுத்திக் கொண்டனர்.

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அருளை வழங்கவல்ல தொடக்க அறச் சடங்குகளைச் செய்த அந்த முதன்மையான மனிதர்கள் தங்கள் புனித நெருப்புகளை நீருக்குள் விட்டனர். அந்த இளவரசர்களை அந்தத் தோற்றத்தில் கண்ட பெண்கள் உரக்க அழுதனர்.(21,22) முற்காலத்தில் திரௌபதியுடன் சேர்ந்து அறுவராகி, பகடையாட்டத்தில் வீழ்த்தப்பட்டுத் தலைநகரைவிட்டுப் புறப்பட்ட கோலத்திலேயே இப்போதும் அவர்கள் தெரிந்தனர். எனினும், அந்தச் சகோதரர்கள் அனைவரும் ஓய்வில் பெரும் உற்சாகம் கொண்டனர்.(23) யுதிஷ்டிரனின் நோக்கங்களை உறுதி செய்து கொண்டவர்களும், விருஷ்ணிகளின் அழிவைக் கண்டவர்களுமான அவர்களை வேறு எந்தச் செயல்பாட்டாலும் நிறைவடையச் செய்ய இயலாது. ஐந்து சகோதரர்களும், ஆறாவதாகத் திரௌபதியும், ஏழாவதாக ஒரு நாயும் சேர்ந்து(24) தங்கள் பயணத்திற்குப் புறப்பட்டனர். உண்மையில், இவ்வாறே, ஏழு பேர் அடங்கிய அந்தத் தரப்புக்குத் தலைமை தாங்கிய மன்னன் யுதிஷ்டிரன், யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தில் இருந்து சென்றான். குடிமக்களும், அரச குடும்பத்துப் பெண்களும் சிறிது தொலைவுக்கு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(25) எனினும், அவர்களில் எவருக்கும், மன்னனை அவனுடைய கருத்தில் இருந்து பின்வாங்கும்படி கேட்கும் துணிவில்லை. அந்த நகரவாசிகள் திரும்பிவந்தனர்.(26)

கிருபரும், பிறரும் தங்களுக்கு நடுவில் இருந்து யுயுத்சுவைச் சூழ்ந்து நின்றனர். ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயனே}, நாகத் தலைவனின் மகளான உலூபி, கங்கையின் நீருக்குள் நுழைந்தாள்[1].(27) இளவரசி சித்திராங்கதை மணிப்புரத்தின் தலைநகருக்குப் புறப்பட்டுச் சென்றாள். பரிக்ஷித்தின் பாட்டிகளான வேறு பெண்கள் அவனைச் சூழ்ந்திருந்தனர்.(28) அதே வேளையில், ஓ! குரு குலத்தோனே அந்த உயர் ஆன்ம பாண்டவர்களும், பெரும்புகழைக் கொண்ட திரௌபதியும், தொடக்க உண்ணாநோன்பை நோற்று, கிழக்கு நோக்கிய முகங்களைக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.(29) யோகத்தில் தங்களை நிறுவி கொண்ட அந்த உயர் ஆன்மாக்கள் துறவறம் நோற்கத் தீர்மானித்து, பல்வேறு நாடுகளைக் கடந்து பல்வேறு ஆறுகளையும், கடல்களையும் அடைந்தனர்.(30) யுதிஷ்டிரன் முன்னே சென்றான், அவனுக்குப் பின்னால் பீமன்; அடுத்து அர்ஜுனன்; அவனுக்கு அடுத்துப் பிறப்பின் வரிசையில் இரட்டையர்கள்;(31) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, அவர்கள் அனைவருக்கும் பின்னால் பெண்களில் முதன்மையானவளும், பேரழகைக் கொண்டவளும், கரிய நிறத்தவளும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவளுமான திரௌபதி சென்றாள்.(32)பாண்டவர்கள் காட்டுக்குப் புறப்பட்ட போது, ஒரு நாயும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றது. தொடர்ந்து சென்ற அவ்வீரர்கள் செந்நீர் கொண்ட கடலை அடைந்தனர்.(33) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, பெரும் மதிப்பு மிக்கப் பொருட்களில் ஒருவனுக்குள்ள பேராசையின் மூலம் இயக்கப்பட்டவனாகத் தன்னுடைய தெய்வீக வில்லான காண்டீவத்தையும், வற்றாதவையான தன்னிரு அம்பறாத்தூணிகளையும் கைவிடாமல் இருந்தான்.(34) நெருப்பின் தேவன் தங்களுக்கு முன்னால் ஒரு மலையென நிற்பதைப் பாண்டவர்கள் கண்டனர். அவர்களுடைய வழியை அடைத்த அந்தத் தேவன் உடல் கொண்ட வடிவத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தான். ஏழு தழல்களைக் கொண்ட அந்தத் தேவன் {நெருப்பின் தேவன்} பாண்டவர்களிடம், “பாண்டுவின் வீர மகன்களே, என்னை நெருப்பின் தேவனாக {அக்னி தேவனாக} அறிவீராக.(36) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, ஓ! பகைவரை எரிப்பவனான பீமசேனா, ஓ! அர்ஜுனா, ஓ! பெருந்துணிவுமிக்க இரட்டையர்களே, நான் சொல்வதைக் கேட்பீராக.(37) குரு குலத்தின் முதன்மையானவர்களே, நானே நெருப்பின் தேவன். அர்ஜுனன் மற்றும் நாராயணனின் பலத்தாலும், என்னாலும் காண்டவக் காடு எரிக்கப்பட்டது.(38) உன் தம்பியான பல்குனன் {அர்ஜுனன்}, உயர்ந்த ஆயுதமான காண்டீவத்தைக் கைவிட்ட பிறகு காட்டுக்குச் செல்லட்டும். இவனுக்கு இனியும் இதற்கான தேவை ஏதும் இல்லை.(39) உயர் ஆன்மக் கிருஷ்ணனுடைய மதிப்புமிக்கச் சக்கரம் (உலகில் இருந்து) மறைந்து போனது. மீண்டும் வேளை வரும்போது அஃது அவனது கைகளுக்குத் திரும்பும்.(40) விற்களில் முதன்மையான இந்தக் காண்டீவம், பார்த்தனின் பயன்பாட்டுக்காக வருணனிடம் இருந்து என்னால் அடையப்பட்டதாகும். அதை நான் வருணனுக்கே கொடுக்க வேண்டும்” என்றான் {அக்னி தேவன்}.(41)

இதன்பேரில், அந்தத் தேவன் சொல்வதைச் செய்யுமாறு சகோதரர்கள் அனைவரும் அர்ஜுனனைத் தூண்டினர். அப்போது அவன் {அர்ஜுனன்} வில்லையும் {காண்டீவத்தையும்}, வற்றாதவையான இரு அம்பறாத்தூணிகளையும் (கடலின்) நீருக்குள் வீசினான்.(42) அதன் பிறகு, ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, நெருப்பின் தேவன் அங்கேயே அப்போதே மறைந்து போனான். பாண்டுவின் வீர மகன்கள் அதன் பிறகு, தெற்கு நோக்கித் தங்கள் முகங்களைத் திருப்பியவர்களாகச் சென்றனர்.(43) அதன் பிறகு, அந்தப் பாரத இளவரசர்கள் உப்புக் கடலின் வடக்குக் கரையில் தென் மேற்காகச் சென்றனர்.(44) பிறகு மேற்கு நோக்கித் திரும்பிய அவர்கள், பெருங்கடலால் மறைக்கப்பட்ட துவாரகா நகரத்தைக் கண்டனர்.(45) அடுத்ததாக அந்த முதன்மையானவர்கள் வடக்கு நோக்கிச் சென்றனர். யோகம் நோற்றுக் கொண்டிருந்த அவர்கள், மொத்த பூமியையும் வலம் வர விரும்பினர்” {என்றார் வைசம்பாயனர்}.(46)

ஒவ்வொருவராக விழுந்தனர்! – மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 2-வரிசையாகச் செல்லும்போது திரௌபதியும் பாண்டவர்களும் ஒவ்வொருவராக விழுவது; அவர்கள் விழக் காரணம் கேட்ட பீமனுக்குப் பதில் சொல்லி வந்த யுதிஷ்டிரன்; நாய் மட்டும் தொடர்ந்து சென்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்டவர்களும், யோகத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களுமான அந்த இளவரசர்கள் {பாண்டவர்கள்} வடக்கு நோக்கிச் சென்று மிகப் பெரும் மலையான ஹிமவானை {இமயத்தைக்} கண்டனர்.(1) ஹிமவானைக் கடந்த அவர்கள், மணல் நிறைந்த ஒரு பெரிய பாலைவனத்தைக் கண்டனர். பிறகு அவர்கள், உயர்ந்த சிகரங்கள் கொண்ட மலைகளில் முதன்மையான மேரு மலையைக் கண்டனர்.(2) யோகத்தில் குவிந்திருந்த அந்த வலிமைமிக்கவர்கள் அனைவரும் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, யாஜ்ஞசேனி {திரௌபதி} யோகத்தில் இருந்து வீழ்ந்து பூமியில் விழுந்தாள்.(3)

பெரும்பலம் கொண்ட பீமசேனன் அவளது வீழ்ச்சியைக் கண்டு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(4) “ஓ! பகைவரை எரிப்பவரே, இந்த இளவரசி எந்தப் பாவச் செயலையும் செய்யவில்லை. இந்தக் கிருஷ்ணை பூமியில் விழுந்ததற்கான காரணத்தை எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்குத்} தனிச்சிறப்பளிக்கும் பெரும்பாகுபாடு இவளிடம் {திரௌபதியிடம்} உண்டு. ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அவ்வொழுக்கத்தின் கனியை {பலனை} அவள் இன்று அடைந்திருக்கிறாள்” என்றான்”.(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பாரதக் குலத்தில் முதன்மையான அவன், இதைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து சென்றான். அற ஆன்மாவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன், மனத்தில் மனத்தையே கொண்டு தொடர்ந்து சென்றான்.(7) அப்போது, பெரும் கல்வி கற்றவனான சகாதேவன் பூமியில் விழுந்தான். அவன் கீழே விழுவதைக் கண்ட பீமன் மன்னனிடம்,(8) “ஐயோ, பெரும் பணிவுடன் நம் அனைவருக்கும் தொண்டு செய்துவந்த மாத்ராவதியின் மகன் {சகாதேவன்}, ஏன் பூமியில் விழுந்தான்?” என்று கேட்டான்.(9)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “அவன் {சகாதேவன்}, ஒருபோதும் ஞானத்தில் தனக்கு இணையானவரென ஒருவரையும் கருதவில்லை. அந்தக் குற்றத்தின் காரணமாகவே இந்த இளவரசன் {சகாதேவன்} விழுந்தான்” என்றான்”.(10)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன மன்னன், சகாதேவனை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றான். உண்மையில், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தன் சகோதரர்களுடனும், நாயுடனும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.(11) உற்றார் உறவினரிடம் பேரன்பு கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான நகுலன், கிருஷ்ணை {திரௌபதி} மற்றும் பாண்டவனான சகாதேவன் ஆகிய இருவரும் விழுவதைக் கண்டு கீழே விழுந்தான்.(12) பெரும் மேனியெழில் கொண்ட வீர நகுலன் விழுந்ததும், பீமன் மீண்டும் மன்னனிடம்,(13) “முழுமையான அறவோனும், நம் ஆணைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவனும், அழகில் ஒப்பற்றவனுமான இந்த நகுலன் கீழே விழுந்துவிட்டான்” என்றான்.(14)

பீமசேனனால் இவ்வாறு கேட்கப்பட்ட யுதிஷ்டிரன், நகுலனைக் குறித்து இந்தச் சொற்களைச் சொன்னான்: “அவன் அற ஆன்மா கொண்டவனாகவும், நுண்ணறிவு மிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகவும் இருந்தான்.(15) எனினும், மேனியெழில் தனக்கு நிகராக எவரும் இல்லையென அவன் {நகுலன்} நினைத்தான். உண்மையில், அந்த வகையில் அவன் தன்னை அனைவரிலும் மேன்மையானவனாகக் கருதினான்.(16) அதன் காரணமாகவே நகுலன் விழுந்தான். ஓ! விருகோதரா {பீமா}, இதை அறிவாயாக. ஓ! வீரா, ஒரு மனிதனுக்காக விதிக்கப்பட்டதை அவன் அனுபவிக்கவே வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.(17)

வெண்குதிரைகளைக் கொண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், பாண்டுவின் மகனுமான அர்ஜுனன், நகுலனும், பிறரும் விழுவதைக் கொண்டு, இதயத்தில் பெரும் துயருடன் கீழே விழுந்தான்.(18) மனிதர்களில் முதன்மையானவனும், சக்ரனின் சக்தியைக் கொண்டவனுமான அவன் {அர்ஜுனன்} கீழே விழுந்தபோது, உண்மையில், வெல்லப்பட முடியாதவனான அந்த வீரன் மரணத் தருவாயில் இருந்தபோது, பீமன் மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்},(19) “இந்த உயர் ஆன்மா எந்தப் பொய்யையும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. உண்மையில், கேலிக்காகக் கூட இவன் பொய்யேதும் பேசியவனல்ல. எந்தத் தீய விளைவின் காரணமாக இவன் பூமியில் விழுந்தான்?” என்று கேட்டான்.(20)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “அர்ஜுனன், நம் பகைவர்கள் அனைவரையும் ஒரே நாளில் எரித்துவிடுவேன் என்று சொன்னான். தன் வீரத்தில் செருக்குக் கொண்டவனாக இருப்பினும், அதை அவன் {அர்ஜுனன்} நிறைவேற்றவில்லை. அதனால் அவன் வீழ்ந்தான்.(21) இந்தப் பல்குனன், வில்லாளிகள் அனைவரையும் அலட்சியமாகக் கருதினான். செழிப்பில் விருப்பம் இருக்கும் ஒருவன் ஒருபோதும் இத்தகைய மிகையுணர்வுகளில் ஈடுபடக்கூடாது” என்றான்”.(22)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச்சொல்லிவிட்டு மன்னன் தொடர்ந்து சென்றான். பிறகு பீமன் விழுந்தான். கீழே விழுந்த பீமன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(23) “ஓ! மன்னா, பார்ப்பீராக. உமக்கு அன்பான நான் விழுந்துவிட்டேன். என்ன காரணத்தினால் நான் விழுந்தேன்? அதை நீர் அறிந்தால் எனக்குச் சொல்வீராக” என்றான்.(24)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “நீ அதிகம் உண்டாய், உன் பலம் குறித்துத் தற்பெருமை பேசினாய். ஓ! பார்த்தா {பீமா}, உண்ணும்போது, நீ பிறரின் தேவையை ஒருபோதும் கவனிக்கவில்லை. ஓ! பீமா, அதற்காகவே நீ விழுந்தாய்” என்றான்.(25)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரன், இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தொடர்ந்து சென்றான். அவன், நான் மீண்டும் மீண்டும் உன்னிடம் சொன்ன அந்த நாய் மட்டுமே ஒரே துணையாக அவனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து சென்றது” {என்றார் வைசம்பாயனர்}.(26)

ஆரியன் யுதிஷ்டிரன்! – மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 3-சொர்க்கம் செல்வதற்கு யுதிஷ்டிரனைத் தன் தேரில் ஏறச் சொன்ன இந்திரன்; நாயை விட மறுத்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனைப் புகழ்ந்த யமன்; சகோதரர்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல விரும்பிய யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது, ஆகாயத்தையும், பூமியையும் உரத்த ஒலியால் நிறைந்தபடி ஒரு தேரில் பிருதையின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} வந்த சக்ரன், அவனை அதில் ஏறச் சொன்னான்.(1) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் பூமியில் விழுந்ததைக் கண்டு, அந்த ஆயிரங்கண் தேவனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(2) “என் தம்பிகள் அனைவரும் கீழே விழுந்து விட்டனர். அவர்களும் என்னுடன் வர வேண்டும். ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, அவர்கள் அனைவரும் என்னுடன் இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை.(3) ஓ! புரந்தரா, அனைத்து ஆடம்பரங்களுக்கும் தகுந்தவளும், மென்மையானவளுமான இளவரசியும் (திரௌபதியும்) எங்களோடு வர வேண்டும். இதை அனுமதிப்பதே உனக்குத் தகும்” என்றான்.(4)

சக்ரன் {யுதிஷ்டிரனிடம்}“உன் தம்பிகளை நீ சொர்க்கத்தில் காண்பாய். அவர்கள் உனக்கு முன்பே அங்கே சென்றுவிட்டனர். உண்மையில், கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்த்தே அவர்கள் அனைவரையும் அங்கே காண்பாய். ஓ! பாரதர்களின் தலைவா, நீ துயரடையாதே.(5) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அவர்கள் தங்கள் மனித உடல்களைக் களைந்துவிட்டு அங்கே சென்றிருக்கின்றனர். உன்னைப் பொறுத்தவரையில், நீ உன்னுடைய உடலுடனேயே அங்கே செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது” என்றான்.(6)

யுதிஷ்டிரன் {சக்ரனிடம்}, “ஓ! கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் தலைவா, இந்த நாய் என்னிடம் மிகுந்த அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} இருக்கிறது. இதுவும் என்னுடன் வர வேண்டும். இதனிடம் நான் இதயம் நிறைந்த கருணை கொண்டிருக்கிறேன்” என்றான்.(7)

சக்ரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இறவாமை, எனக்கு நிகரான நிலை, அனைத்துத் திசைகளிலும் பரந்திருக்கும் செழிப்பு, உயர்ந்த வெற்றி, சொர்க்கத்தின் இன்பங்கள் அனைத்தும் இன்று உன்னால் வெல்லப்பட்டன. இந்த நாயை நீ கைவிடுவாயாக. இதில் எந்தக் கொடுமையும் கிடையாது” என்றான்.(8)

யுதிஷ்டிரன் {சக்ரனிடம்}, “ஓ! ஆயிரங்கண் கொண்டவனே, ஓ! அறவொழுக்கம் கொண்டவனே, அறவொழுக்கம் கொண்ட ஒருவனால் நீதியற்ற ஒரு செயலைச் செய்வது மிகவும் கடினமாகும். என்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட ஒன்றைக் கைவிட்டுச் செழிப்பை அடைய நான் விரும்பவில்லை[1]” என்றான்.(9)இந்திரன் {யுதிஷ்டிரனிடம்}, “நாய்களுடன் இருக்கும் மனிதர்களுக்குச் சொர்க்கத்தில் எவ்விடமும் கிடையாது. தவிர, குரோதவாசர்கள் (என்றழைக்கப்படும் தேவர்கள்) அத்தகைய மனிதர்களின் புண்ணியங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்கின்றனர். ஓ! நீதிமானான மன்னன் யுதிஷ்டிரா, இதைச் சிந்தித்துச் செயல்படுவாயாக. நீ இந்த நாயைக் கைவிடுவாயாக. இதில் கொடுமையேதும் இல்லை” என்றான்.(10)

யுதிஷ்டிரன் {சக்ரனிடம்}, “அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒருவனைக் கைவிடுவது முடிவிலா பாவத்திற்கு வழிவகுக்கும் எனச் சொல்லப்படுகிறது. இஃது ஒரு பிராமணனைக் கொல்லும் பாவத்திற்கு நிகரானது. எனவே, ஓ! பெரும் இந்திரா, என் மகிழ்ச்சியை விரும்பி நான் இன்று இந்த நாயைக் கைவிட மாட்டேன்.(11) அச்சமடைந்தவனையோ, என்னிடம் அர்ப்பணிப்புள்ளவனையோ, என் பாதுகாப்பை நாடுபவனையோ, ஆதரவற்றவனையோ, துன்பத்தால் பீடிக்கப்பட்டவனையோ, என்னிடம் வந்தவனையோ, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதில் பலவீனனையோ, உயிரை வேண்டுபவனையோ ஒருபோதும் கைவிடமாட்டேன் என்பது என் உறுதியான நோன்பாகும். இத்தகைய ஒருவனை என் உயிர் போகும் வரை ஒருபோதும் நான் கைவிட மாட்டேன்” என்றான்.(12)

இந்திரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு நாயால் பார்க்கப்படும் வகையில் கொடுக்கப்படும் எந்தக் கொடையும், பரப்பப்படும் எந்த வேள்வியும், வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள் எதுவும் குரோதவாசர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எனவே, நீ இந்த நாயைக் கைவிடுவாயாக. இந்த நாயைக் கைவிடுவதன் மூலம் நீ தேவர்களின் உலகை அடைவாய்.(13) ஓ! வீரா {யுதிஷ்டிரா}, உன் தம்பிகள், கிருஷ்ணை {திரௌபதி} ஆகியோரைக் கைவிட்ட நீ உன் சொந்த செயல்களால் இன்பலோகத்தை அடைந்திருக்கிறாய். ஏன் கலக்கமடைகிறாய்? நீ அனைத்தையும் துறந்துவிட்டாய். ஏன் இந்த நாயையைத் துறக்காமலிருக்கிறாய்?” என்று கேட்டான்.(14)

யுதிஷ்டிரன், “இறந்தோருடன் நட்போ, பகையோ கிடையாது என்பது உலகங்கள் அனைத்திலும் நன்கறியப்பட்டது. என் தம்பிகளும், கிருஷ்ணையும் இறந்த போது, என்னால் அவர்களை மீட்க முடியவில்லை. எனவே, நான் அவர்களைக் கைவிட்டேன். எனினும், அவர்கள் உயிரோடு இருந்தவரை அவர்களை நான் ஒருபோதும் கைவிடவில்லை.(15) ஓ! சக்ரா, பாதுகாப்பு நாடி வந்தவனை அச்சுறுத்துவது, பெண்ணைக் கொல்வது, பிராமணனுக்குரியதைக் களவாடுவது, நண்பனுக்குத் தீங்கிழைப்பது என்ற இந்த நான்கும் செயல்களும், அர்ப்பணிப்புடன் இருப்பவனைக் கைவிடுவதற்கு நிகரானவையென நான் நினைக்கிறேன்” என்றான்”.(16)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்டு (நாயாக இருந்த) அறத் தேவன் மிகவும் நிறைவடைந்தவனாகப் புகழால் நிறைந்த இனிய குரலில் இந்தச் சொற்களைச் சொன்னான்.(17)

தர்மன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னர்களின் மன்னா, நீ நற்குடியில் பிறந்தவனாகவும், நுண்ணறிவையும், பாண்டுவின் நல்லொழுக்கத்தையும் கொண்டவனாக இருக்கிறாய். ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொள்வது இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.(18) ஓ! மகனே, முன்பு துவைத வனத்தில் பேராற்றல் கொண்டவர்களான உன் உடன்பிறந்தோர் இறந்தபோது என்னால் நீ சோதிக்கப்பட்டாய்.(19) உன்னுடன் பிறந்தவர்களான பீமனையும், அர்ஜுனனையும் அலட்சியம் செய்து உன் (மாற்றாந்) தாய்க்கு நன்மை செய்யுஃம விருப்பத்தில் நகுலனின் உயிரை மீட்க நீ விரும்பினாய்[2].(20) தற்போதைய நிகழ்வில் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக நினைத்து, இவனை {நாயைத்} துறப்பதற்குப் பதில் தேவர்களின் தேரையே நீ துறந்துவிட்டாய். எனவே, ஓ! மன்னா, சொர்க்கமேதும் உனக்கு நிகரானதல்ல.(21) எனவே, ஓ! பாரதா, வற்றாத இன்பங்களைக் கொண்ட உலகங்கள் உனதாகின. ஓ! பாரதர்களின் தலைவா, நீ அவற்றை வென்றுவிட்டாய், உன்னுடைய கதி உயர்ந்ததும், தெய்வீகமானதுமாகும்” என்றான் {யமன்}”.(22)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அப்போது தர்மன், சக்ரன், மருத்துகள், அஸ்வினிகள், வேறு தேவர்கள், தெய்வீக முனிவர்கள் ஆகியோர் யுதிஷ்டிரனைத் தேரில் ஏறச் செய்து சொர்க்கத்திற்குச் சென்றனர். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், தங்கள் விருப்பத்தின் பேரில் எந்த இடத்திற்கும் செல்ல வல்லவர்களுமான அவர்கள் தங்கள் தங்களுக்குரிய தேர்களைச் செலுத்தினார்கள்.(23,24) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனான மன்னன் யுதிஷ்டிரன், தன் பிரகாசத்தால் மொத்த ஆகாயத்தையும் ஒளிபெறச் செய்து, விரைவாக ஏறி அந்தத் தேரைச் செலுத்தினான்.(25)

பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானரும், தவம் கொண்டவரும், உலகங்கள் அனைத்தையும் அறிந்தவருமான நாரதர், அப்போது தேவ கூட்டத்திற்கு மத்தியில் இந்தச் சொற்களைச் சொன்னார்:(26)”இங்கே இருக்கும் அரசமுனிகள் அனைவரும், யுதிஷ்டிரனுடைய சாதனைகளால் கடக்கப்பட்ட சாதனைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.(27) இவன் தன் புகழாலும், காந்தியாலும், ஒழுக்கமெனும் செல்வத்தாலும் உலகங்கள் அனைத்தையும் மறைத்து, தன் சொந்த (மனித) உடலுடன் சொர்க்கத்தை அடைந்தான். பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரைத்} தவிர வேறு எவரும் இதை அடைந்ததாக நாம் கேள்விப்பட்டதில்லை[3]” என்றார்.(28)அறம் சார்ந்தவனான அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, நாரதரின் இந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்களையும், அங்கே இருந்த அரசமுனிகள் யாவரையும் வணங்கி,(29) “மகிழ்ச்சி நிறைந்ததோ, துன்பகரமானதோ, என் தம்பிகள் எந்த உலகத்தை இப்போது அடைந்திருக்கிறார்களோ அங்கேயே நான் செல்ல விரும்புகிறேன். நான் வேறெங்கும் செல்ல விரும்பவில்லை” என்றான்.(30)

மன்னனின் இந்தப் பேச்சைக் கேட்ட தேவர்களின் தலைவன் புரந்தரன், உன்னத அறிவால் நிறைந்த இந்தச் சொற்களைச் சொன்னான்,(31) “ஓ! மன்னர்களின் மன்னா, உன் புண்ணியச் செயல்களால் வெல்லப்பட்ட இந்த இடத்தில் நீ வாழ்வாயாக. நீ ஏன் இன்னும் மனிதப் பற்றுகளைப் பேணி வளர்க்கிறாய்?(32) எந்த மனிதனாலும் ஒருபோதும் அடைய முடியாத பெரும் வெற்றியை நீ அடைந்திருக்கிறாய். ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, உன்னுடன் பிறந்தோரும் இன்பலோகங்களையே வென்றிருக்கின்றனர்.(33) மனிதப் பற்றுகள் இன்னும் உன்னைத் தீண்டிக் கொண்டிருக்கின்றன. இது சொர்க்கம். தேவர்களின் உலகை அடைந்திருக்கும் தெய்வீக முனிவர்களையும், சித்தர்களையும் இதோ பார்” என்றான்.(34)

பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்ட யுதிஷ்டிரன் மீண்டும் தேவர்களின் தலைவனுக்குப் பதிலளிக்கும் வகையில்,(35) “ஓ! தைத்தியர்களை வென்றவனே, அவர்களிடமிருந்து பிரிந்திருக்கும் எங்கும் நான் வசிக்கத் துணியேன். என்னுடன் பிறந்தோர் எங்கே சென்றனரோ அங்கேயே நான் செல்ல விரும்புகிறேன்.(36) பெண்களில் முதன்மையானவளும், போதுமான விகிதங்களில் அங்கங்களைக் கொண்டவளும், கரிய நிறத்தவளும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவளும், அறவொழுக்கம் ஒழுகுபவளுமான திரௌபதி எங்கே சென்றாளோ, அங்கேயே நானும் செல்ல விரும்புகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(37)

மஹாப்ரஸ்தானிக பர்வம் முற்றும்

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ மௌஸல பர்வம்-

October 19, 2025

இரும்பு உலக்கை! – மௌஸலபர்வம் பகுதி – 1-தீய சகுனங்களைக் கண்ட யுதிஷ்டிரன்; பலராமன், கிருஷ்ணன் ஆகியோரின் முக்தியையும், யாதவர்களின் அழிவையும் கேட்டது; துவாரகைக்கு வந்த விஸ்வாமித்ரர், கண்வர் மற்றும் நாரதர்; யது குலத்தை அழிக்கும் இரும்பு உலக்கை; உலக்கையைப் பொடியாக்கிக் கடலில் கொட்டிய யாதவர்கள்…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(போருக்குப் பிறகு) முப்பத்தாறு ஆண்டுகள் {36} ஆனபோது, குருக்களைத் திளைக்கச் செய்பவனான யுதிஷ்டிரன் வழக்கத்திற்கு மாறான தீய சகுனங்கள் பலவற்றைக் கண்டான்.(1) காற்று, உலர்ந்ததாகவும் {வெப்பமாகவும்}, வலுவானதாகவும், பருக்கைக் கற்களைப் பொழிந்து கொண்டிருப்பதாகவும் அனைத்துப் பக்கங்களில் வீசிக் கொண்டிருந்தது. பறவைகள் இடமிருந்து வலமாக வட்ட கதியில் சுழலத் தொடங்கின.(2) பேராறுகள் எதிர் திசைகளில் ஓடின. அனைத்துப் பக்கங்களிலும் அடிவானமானது எப்போதும் மூடுபனியால் மறைக்கப்பட்டிருந்தது. (சுடர்மிக்க) கரிகளைப் பொழிந்தபடியே எரிகொள்ளிகள் வானத்தில் இருந்து பூமியில் விழுந்தன.(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, சூரிய வட்டில் எப்போதும் புழுதியால் மறைக்கப்பட்டதாகவே தெரிந்தது. அஃது உதிக்கும்போது, நாள் சமைக்கும் அந்தப் பெரும் ஒளிக்கோள் காந்தியை இழந்ததாகவும், (மனிதர்களின்) தலையற்ற உடல்களால் கடக்கப்படுவது போலவும் தெரிந்தது.(4) ஒவ்வொரு நாளும் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டை சுற்றிலும் கடுமையான ஒளி வளையங்கள் தென்பட்டன. அந்த வளைகளில் மூன்று நிறங்கள் தெரிந்தன. அவற்றின் முனைகள் கருப்பாகவும், முரடாகவும், நிறத்தில் செஞ்சாம்பல் நிறத்திலும் இருந்தன. ஓ! மன்னா, அச்சத்தையும், ஆபத்தையும் முன்குறிப்பிடுபவையான இவையும், இன்னும் பல தீச்சகுனங்களும் காணப்பட்டு, மனிதர்களின் இதயங்களைக் கவலையால் நிறைத்தன.(6)சிறிது காலத்திற்குப் பிறகு, குரு மன்னன் யுதிஷ்டிரன், இரும்பு உலக்கையின் விளைவால் விருஷ்ணிகளுக்கு ஏற்பட்ட பேரழிவைக் குறித்துக் கேள்விப்பட்டான்.(7) பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, ராமனும் மட்டுமே உயிருடன் தப்பினர் என்பதைக் கேட்டு, தன் தம்பிகளை அழைத்து, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களோடு ஆலோசித்தான்.(8) ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அவர்கள், பிரம்மதண்டத்தின் தண்டனையால் {பிராமணச் சாபத்தால்} விருஷ்ணிகள் அழிவைச் சந்தித்தனர் என்பதைக் கேட்டுப் பெரிதும் துயரடைந்தனர்.(9) கடல் வற்றிப் போவதைப் போல வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மரணத்தை அந்த வீரர்களால் நம்ப முடியவில்லை. உண்மையில் அந்தச் சாரங்கபாணியின் அழிவு அவர்களுக்கு நம்ப முடியாததாக இருந்தது.(10) இரும்பு உலக்கை குறித்து அறிந்த பாண்டவர்கள், துன்பம் மற்றும் கவலையால் நிறைந்தனர். உண்மையில், அவர்கள் முற்றிலும் உற்சாகமற்றவர்களாக, வெறுமையான துன்பத்தில் துளைக்கப்பட்டவர்களாகக் கீழே அமர்ந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(11)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “உண்மையில், ஓ! புனிதமானவரே, அந்தகர்களும், விருஷ்ணிகளும், பெருந்தேர்வீரர்களான போஜர்களும், வாசுதேவன் {கிருஷ்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே எவ்வாறு அழிவை அடைந்தனர்?” என்று கேட்டான்.(12)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “(பெரும்போர் முடிந்து) முப்பத்தாறு ஆண்டுகளை {36} அடைந்த போது, விருஷ்ணிகளை ஒரு பேரிடர் மூழ்கடித்தது. காலத்தால் தூண்டப்பட்ட அவர்கள் அனைவரும் இரும்பு உலக்கையின் விளைவால் அழிவைச் சந்தித்தனர்”.(13)

ஜனமேஜயன், “விருஷ்ணிகள், அந்தகர்கள் மற்றும் போஜர்கள் உள்ளிட்ட அந்த வீரர்கள் யாரால் சபிக்கப்பட்டு அழிவை அடைந்தனர்? ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இதை நீர் எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(14)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஒருநாள், சாம்பனையும் எண்ணிக்கையில் ஒருவனாய் தங்களுக்கு மத்தியில் வைத்திருந்த விருஷ்ணி வீரர்கள், விஷ்வாமித்ரரும், கண்வரும், நாரதரும் துவாரகைக்கு வருவதைக் கண்டனர்.(15) தேவர்களால் தரிக்கப்படும் தண்டக்கோலால் பீடிக்கப்பட்ட அந்த வீரர்கள், சாம்பனைப் பெண் போல வேடமிட வைத்து அந்தத் தவசிகளை அணுகி, அவர்களிடம்,(16) “இவள் அளவிலா சக்தி கொண்டவனும், ஒரு மகனை விரும்புபவனுமான பப்ருவின் மனைவியாவாள். முனிவர்களே, இவள் என்ன பெறுவாள் என்பதை நீங்கள் உறுதியாக அறிவீர்களா?” என்று கேட்டனர்.(17)

இவ்வாறான வஞ்சனை முயற்சிக்கு அந்தத் தவசிகள் என்ன செய்தனர் என்பதைக் கேட்பாயாக,(18) “சாம்பன் என்ற பெயரைக் கொண்டவனும், வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வாரிசுமான இவன், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவுக்கான ஓர் இரும்பு உலக்கையைப் பெறுவான்.(19) தீயவர்களே, கொடூரர்களே, செருக்கால் போதையுண்டிருக்கும் நீங்கள், உங்கள் குலத்தில் ராமனையும் {பலராமனையும்}, ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} தவிர அனைவரையும் இந்த இரும்பு உலக்கையால் அழிப்பீர்கள்.(20) கலப்பையைத் தரிக்கும் அருளப்பட்ட வீரன் {பலராமன்}, தன் உடலைக் கைவிட்டுப் பெருங்காட்டில் நுழைவான், அதே வேளையில் ஜரன் என்ற பெயரைக் கொண்ட ஒரு வேடன் தரையில் கிடக்கும் உயர் ஆன்மக் கிருஷ்ணனைத் துளைப்பான்” என்றனர்.(21)

அந்தத் தீயவர்களால் வஞ்சிக்க முயற்சி செய்யப்பட்ட அந்தத் தவசிகள், கண்கள் சிவந்த கோபத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, இந்தச் சொற்களைச் சொன்னார்கள். இவ்வாறு சொல்லிவிட்டு அவர்கள் கேசவனை {கிருஷ்ணனைக்} காணச் சென்றனர்.(22) நடந்ததை அறிந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, விருஷ்ணிகள் அனைவரையும் அழைத்து, அது குறித்து அவர்களுக்குச் சொன்னான். பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், தன் குலத்தின் முடிவை முழுமையாக அறிந்தவனுமான அவன் {கிருஷ்ணன்}, விதிக்கப்பட்டதெதுவோ அது நிச்சயம் நடக்கும் என்று சொன்னான்.(23) ரிஷிகேசன் இவ்வாறு சொல்லிவிட்டு தன் மாளிகைக்குள் நுழைந்தான். அண்டத்தின் தலைவன் வேறுவகையில் விதிக்க விரும்பவில்லை.(24)

அடுத்த நாளில் சாம்பன் உண்மையில் எதன் மூலம் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் குலத்தில் ஒவ்வொருவரும் சாம்பலாக எரிக்கப்படுவார்களோ அதுவேயான ஓர் இரும்பு உலக்கையைப் பெற்றான்.(25) உண்மையில் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவுக்கான அந்தச் சாபத்தின் மூலம் பெரும் யமதூதன் போலத் தெரிந்ததும், கடுமையானதும் ஓர் இரும்பு உலக்கையைச் சாம்பன் பெற்றான். மன்னனுக்கு இந்தச் செய்தி முறையாகத் தெரிவிக்கப்பட்டது.(26) மனத்தில் உள்ள பெரும் துயரத்துடன் மன்னர் (உக்ரசேனர்) அந்த இரும்பு உலக்கையைப் பொடியாக {மாவு போலக்} குறைக்கச் செய்தான். ஓ! மன்னா, அந்தப் பொடியை கடலுக்கள் வீசுவதில் மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.(27) ஆஹுகன், ஜனார்த்தனன், ராமன், உயர் ஆன்ம பப்ரு ஆகியோரின் ஆணையின் பேரில், அந்த நாள் முதல் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களுக்கு மத்தியில் எவரும் மதுவும், போதையூட்டும் எவ்வகைச் சாரயமும் உற்பத்தி செய்யக்கூடாது, கமுக்கமாக மதுவையும், சாராயத்தையும் உற்பத்தி செய்பவர்கள், தங்கள் உற்றார் உறவினர் அனைவருடன் சேர்த்து உயிரோடு கழுவேற்றப்படுவார்கள் என்று அந்த நகரம் முழுவதும் அறிவிக்கப்பட்டது.(28-30) மன்னனுக்கு அஞ்சியும், களங்கம் கற்பிக்க முடியாத செயல்களைச் செய்யும் ராமனின் {பலராமனின்} ஆணை என்பதை அறிந்தும், குடிமக்கள் அனைவரும் அந்த விதிக்ககுக் கட்டுப்பட்டு, மது மற்றும் சாராய உற்பத்தியைத் தவிர்த்தனர்[1]” {என்றார் வைசம்பாயனர்}.(31)

காந்தாரியின் சொல்! – மௌஸலபர்வம் பகுதி – 2-துவாரகையில் தீய சகுனங்களைக் கண்ட கிருஷ்ணன்; காந்தாரியின் சாபத்தை நினைத்து அதை உண்மையாக்க விரும்பியது; யாதவர்களைத் தீர்த்தயாத்திரை செல்லக் கட்டளையிட்டது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விருஷ்ணிகளும், அந்தகர்களும் (எக்கணமும் நிகழுமென அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பேரிடரைத் தவிர்க்க) இவ்வாறு முயற்சித்தபோது, உடல் வடிவம் கொண்ட காலன் ஒவ்வொருநாளும் அவர்களுடைய இல்லங்களில் திரிந்து கொண்டிருந்தான்.(1) பயங்கரமும், கடுமையும் நிறைந்த மனிதனாக அவன் தெரிந்தான். வழுக்கைத் தலை கொண்ட அவன், நிறத்தில் கறுப்பும் பழுப்பும் கொண்டவனாக இருந்தான். சில வேளைகளில் விருஷ்ணிகள் அவனைத் தங்கள் இல்லங்களுக்குள் உற்று நோக்குபவனாகக் கண்டார்கள்.(2) விருஷ்ணிகளுள் வலிமைமிக்க வில்லாளி அவன் மீது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினாலும், அவன் உயிரினங்கள் அனைத்தின் அந்தகனின்றி வேறில்லை என்பதால் எக்கணையும் அவனைத் துளைப்பதில் வெல்லவில்லை.(3)

நாளுக்கு நாள் காற்று பலமாக வீசியது, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவை முன்னறிவிக்கும் பயங்கரமான பல்வேறு தீய சகுனங்கள் எழுந்தன.(4) வீதிகளில் எலிகளும், சுண்டெலிகளும் மொய்த்துக் கொண்டிருந்தன. எந்த வெளிப்படை காரணமும் இன்றி மண்குடங்கள் பிளவுபட்டவையாக, உடைந்தவையாகத் தெரிந்தன. இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் முடி மற்றும் நகங்களை எலிகளும், சுண்டெலிகளும் தின்றன.(5) சாரிகைகள் {நாகணவாய்ப் பட்சிகள் / பூவைப் பறவைகள்} விருஷ்ணிகளின் வீடுகளுக்குள் அமர்ந்து கொண்டே {சீசீ கூசீ என்ற} குற்றொலிகளை எழுப்பிக் கொண்டிருந்தன. அந்தப் பறவைகளால் உண்டான ஒலி இரவும், பகலும் குறுகிய நேரமும் நிற்கவில்லை.(6)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஸாரஸங்கள், ஆந்தையின் கூவலைப் பின்பற்றுவதும், ஆடுகள் குள்ளநரிகளின் ஊளையைப் பின்பற்றுவதும் கேட்கப்பட்டன.(7) மங்கிய நிறம் கொண்டவையும், சிவந்த நிறக் கால்களைக் கொண்டவையுமான {கபோதங்களெனும்} பறவைகள் பலவும் காலனால் தூண்டப்பட்டு அங்கே தோன்றின. புறாக்கள் எப்போதும் விருஷ்ணிகளின் வீடுகளில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தன.(8) பசுக்களுக்குக் கழுதைகளும், கோவேறு கழுதைகளுக்கு யானைகளும் பிறந்தன. நாய்களுக்குப் பூனைகளும், கீரிப்பிள்ளைக்கு எலியும் பிறந்தன.(9)

பாவச்செயல்களைச் செய்யும் விருஷ்ணிகள் வெக்கமெதையும் உணர்வதாகக் காணப்படவில்லை. அவர்கள் பிராமணர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்களிடம் அலட்சியம் காட்டினர்.(10) அவர்கள் தங்கள் ஆசான்களையும், பெரியோர்களையும் அவமதித்துத் தாழ்த்தினர். ராமனும் {பலராமனும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்} மட்டும் வேறு வகையில் செயல்பட்டனர். மனைவியர் கணவர்களை வஞ்சித்தனர், கணவர்கள் மனைவியரை வஞ்சித்தனர்.(11) நெருப்பு மூட்டப்பட்ட போது அதன் தழல்கள் இடப்புறம் நோக்கி எரிந்தன. சில வேளைகளில் அவை நீல மற்றும் சிவப்பு நிற காந்தியுடன் தழல்களைச் செலுத்தின.(12)

சூரியன் அந்த நகரத்தில் எழும்போதோ, மறையும்போது, மனித வடிவிலான தலைற்ற முண்டங்களால் அது சூழப்பட்டதாகக் காணப்பட்டது.(13) சமையலறைகளில் நன்கு சமைக்கப்பட்ட தூய்மையான உணவை உண்பதற்காகப் படைக்கும்போது அதில் பல்வேறு வகையான எண்ணற்ற புழுக்கள் காணப்பட்டன.(14) கொடைகளைப் பெறும் பிராமணர்கள் அந்த நாளுக்கு அல்லது (அந்த நிகழ்வு நடக்கும்) அந்த நேரத்திற்கு ஆசி கூறும்போது, அல்லது உயர் ஆன்ம மனிதர்கள் அமைதியான ஜபத்தில் ஈடுபடும்போது, எண்ணற்ற மனிதர்கள் ஓடும் ஒலி கேட்கப்படுகிறது.(15) நட்சத்திரக்கூட்டங்கள் மீண்டும் மீண்டும் கோள்களால் தாக்கப்பட்டன. எனினும் யாதவர்களில் ஒருவரும் தன் பிறவிக்கான நட்சத்திரக்கூட்டத்தின் காட்சியைப் பெற முடியவில்லை[1].(16) அவர்களுடைய வீடுகளில் பாஞ்சஜன்யம் முழக்கப்படும்போது, கழுதைகளின் முரண்பட்ட பயங்கரக் குரல் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உரக்கக் கனைத்தது[2].(17)காலத்தின் விபரீதப் போக்கைக் குறிக்கும் அடையாளங்களைக் கண்டு, புதுநிலவு நாள் {அமாவாசை} பதிமூன்றாவது (மற்றும் பதினான்காவது) சந்திர நாளுடன் இணங்குவதைக் கண்டும் யாதவர்களை அழைத்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்} அவர்களிடம்,(18) “பதினான்காவது சந்திர நாள் {திதி} மீண்டும் ஒருமுறை ராஹுவினால் பதினைந்தாவதாகச் செய்யப்பட்டது. அத்தகைய ஒரு நாள் பாரதர்களின் பெரும்போர் நடந்த காலத்தில் தோன்றியது. அது மீண்டும் நமது அழிவுக்காகத் தோன்றுகிறது” என்றான்.(19). கேசியைக் கொன்றவனான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, காலம் காட்டும் நிமித்தங்களை நினைத்து முப்பத்தாறாம் ஆண்டு வந்ததெனவும், காந்தாரி தன் பிள்ளைகளின் மரணத்திலும், தன் உற்றார் உறவினர் அனைவரையும் இழந்ததிலும் ஏற்பட்ட துயரில் எரிந்து சொன்னது நடக்கப் போகிறது என்பதையும் புரிந்து கொண்டான்.(20,21)

{கிருஷ்ணன், தனக்குள்ளேயே}, ‘போருக்காக இருபடைகளும் அணிவகுக்கப்பட்ட காலத்தில், யுதிஷ்டிரர் கண்ட மிகக் கொடிய தீச்சகுனங்களைப் போலவே தற்போதும் நேர்கிறது’ {என்று நினைத்தான்}. இவ்வாறு சொன்ன வாசுதேவன் {கிருஷ்ணன்}, காந்தாரியின் சொற்களை உண்மையாக்கக் கூடிய நிகழ்வுகளை உண்டாக்க முயற்சி செய்தான். பகைவரைத் தண்டிப்பவனான அவன் ஏதாவது புனித நீர்நிலைக்குப் புனிதப் பயணம் {தீர்த்தயாத்திரை} மேற்கொள்ளுமாறு விருஷ்ணிகளுக்கு ஆணையிட்டான்.(23) பெருங்கடலின் புனித நீரில் நீராட விருஷ்ணிகள் கடற்கரைக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கேசவனின் ஆணையைத் தூதர்கள் அறிவித்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

யாதவர்களின் அழிவு! – மௌஸலபர்வம் பகுதி – 3-துவாரகை மக்கள் கண்ட தீய கனவுகள்; கிருஷ்ணனின் ஆணைப்படி பிரபாஸம் சென்றது; கிருதவர்மனைக் கொன்ற ஸாத்யகி; பலரால் கொல்லப்பட்ட சாத்யகியும், பிரத்யும்னனும்; கிருஷ்ணன் செய்த படுகொலை; உலக்கைப் பொடிகளால் உண்டான புற்களால் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கொன்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்தக் காலத்தில், விருஷ்ணி பெண்கள், கரிய நிறத்தவளும், வெண்பற்கள் கொண்டவளுமான ஒரு மங்கை, தங்கள் வசிப்பிடத்திற்குள் நுழைந்து, உரக்க நகைத்து, தங்கள் மணிக்கட்டுகளிலிருந்து மங்கலக் கயிறுகளைப் பறித்துக் கொண்டு துவாரகை முழுவதும் ஓடுவதைப் போல ஒவ்வொரு நாள் இரவும் கனவு கண்டனர்.(1) ஆண்களோ, பயங்கரக் கழுகுகள் தங்கள் இல்லங்களுக்கும், நெருப்பறைகளுக்குள்ளும் நுழைந்து தங்களை எடுத்து அவற்றின் கழுத்தில் அணிந்து கொள்வதைப் போலக் கனவு கண்டனர்.(2) ஆபரணங்கள், குடைகள், கொடிமரங்கள், கவசங்கள் ஆகியவற்றைக் கொடிய ராட்சசர்கள் எடுத்துக் கொள்வதும் காணப்பட்டது.(3) அக்னியால் கொடுக்கப்பட்டதும், இரும்பாலானதும், கடினமான வஜ்ரத்தால் அமைந்த குழிசியை {நடு குழியைக்} கொண்டதுமான கிருஷ்ணனின் சக்கரமானது, விருஷ்ணிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆகாயத்தில் உயர்ந்தது.(4)

சூரியப் பிரகாசம் கொண்டதும், முறையாக ஆயத்தம் செய்யப்பட்டதுமான வாசுதேவனின் சிறந்த தேரானது, தாருகன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன்னுடன் பூட்டப்பட்டிருந்த குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டது. (சைப்யம், சுக்ரீவம், மேகபுஷ்பம், வலாகம் என்ற பெயர்களையுடையவையும்) எண்ணிக்கையில் நான்கானவையும், எண்ணத்தின் வேகம் கொண்டவையுமான அந்த முதன்மையான குதிரைகள், பெருங்கடலின் பரப்பின் வழியே தேரை இழுத்துச் சென்று தப்பி ஓடின[1].(5) கருட சின்னத்தையும், பனைமரச் சின்னத்தையும் கொண்டவையான கிருஷ்ணன் மற்றும் பலதேவனுடைய தேர்களில் உள்ளவையும், அவ்விரு வீரர்களால் மதிப்புடன் வழிபடப்படுவையுமான இரு பெரும் கொடிமரங்களும், புனித நீர்நிலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ள இருந்த விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் இரவும் பகலும் அழைத்துக் கொண்டிருந்த அப்சரஸ்களால் இழுத்துச் செல்லப்பட்டன.(6) இந்தச் சகுனங்கள் காணப்படவும், கேட்கப்படவும் நேரிட்டப்போது, மனிதர்களில் முதன்மையானவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான விருஷ்ணிகளும், அந்தகர்களும் தங்கள் மொத்த குடும்பங்களுடன் ஏதோவொரு நீர்நிலைக்குப் புனிதப் பயணம் புறப்பட விரும்பினர்.(7) அவர்கள் பல்வேறு வகை உணவுவகைகளையும், பானவகைகளையும், பல்வேறு வகை மது மற்றும் இறைச்சிகளையும் தயாரித்தனர்.(8) அழகில் சுடர்விட்டவையும், கடுஞ்சக்தி கொண்டவையுமான விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் துருப்புகள், அந்த நகரத்திலிருந்து தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளில் வெளியே புறப்பட்டன.(9) அப்போது தங்கள் மனைவியருடன் பிரபாஸத்திற்குச் சென்ற யாதவர்களில் ஒவ்வொருவரும், தங்களுக்கென ஒதுக்கப்பட்டதும், உணவு மற்றும் பான வகைகள் அபரிமிதமாக இருந்ததுமான (தற்காலிக) வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(10)கடற்கரையில் அவர்கள் தங்கள் வசிப்பிடத்தை அமைத்திருப்பதைக் கேள்விப்பட்டவரும், யோகத்தை நன்கறிந்தவரும், மனிதர்களில் ஞானியுமான உத்தவர், அங்கே சென்று அவர்களிடம் (புறப்படுவதற்கான) அனுமதியை பெற்றுக் கொண்டார்.(11) உத்தவர் (உலகில் இருந்து) செல்ல விரும்புவதைக் கண்டும், விருஷ்ணிகளின் அழிவு மிக நெருக்கத்தில் இருப்பதை அறிந்தும் கிருஷ்ணன், அவரைத் தடுக்கும் மனநிலை கொள்ளாமல் அவரை வணங்கினான்.(12) அப்போது விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் வலிமைமிக்கவர்களும், தங்களுக்கான வேளை வந்தவர்களுமான அந்தத் தேர்வீரர்கள், மொத்த ஆகாயத்தையும் தன் காந்தியால் நிறைத்தபடி பெரும்பயணம் செல்லும் உத்தவரைக் கண்டனர்.(13) விருஷ்ணிகள், உயர் ஆன்ம பிராமணர்களுக்காகச் சமைக்கப்பட்ட உணவை மதுவுடன் கலந்து குரங்குகளுக்குக் கொடுத்தனர்.(14) கடுஞ்சக்தி கொண்ட அந்த வீரர்கள், குடிப்பதையே முக்கிய அம்சமாகக் கொண்ட தங்கள் உயர்ந்த விழாவை பிரபாஸத்தில் தொடங்கினர். நூற்றுக்கணக்கான எக்காளங்களின் முழக்கம் மொத்த களத்திலும் எதிரொலித்தது, தங்கள் தொழிலைச் செய்வதற்காக வந்திருந்தவர்களான நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களால் அது நிறைந்திருந்தது.(15)

கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ராமன் {பலராமன்} கிருதவர்மனுடன் சேர்ந்து குடிக்கத் தொடங்கினான், யுயுதானன் {சாத்யகி}, கதன், பப்ரு ஆகியோரும் அதையே செய்தனர்.(16) அப்போது மதுவால் ஊக்கமடைந்திருந்த யுயுதானன், அந்தச் சபையின் நடுவில் வைத்துக் கிருதவர்மனை கேலி செய்யும் வகையில் அவமதித்து,(17) “ஆயுதந்தரித்த எந்த க்ஷத்திரியன், உறக்கத்தின் அரவணைப்பில் கட்டுண்டவர்களும், அதனால் ஏற்கனவே இறந்தவர்களைப் போன்றவர்களுமான மனிதர்களைக் கொல்வான்? எனவே, ஓ! ஹிருதிகன் மகனே {கிருதவர்மனே}, நீ செய்ததை யாதவர்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” என்றான்.(18) யுயுதானன் {சாத்யகி} இந்தச் சொற்களைச் சொன்னதும், தேர்வீரர்களில் முதன்மையான பிரத்யும்னன், ஹிருதிகன் மகனிடம் {கிருதவர்மனிடம்} தான் கொண்ட மதிப்பின்மையை வெளிப்படுத்தும் வகையில் அவற்றை {சாத்யகியின் சொற்களை} மெச்சினான்.(19) இதனால் கோபம் மூண்ட கிருதவர்மன், இடது கையால் சாத்யகியைச் சுட்டிக் காட்டியதன் மூலம் அவனை வன்மையாக அவமதித்துச் செய்து, இந்தச் சொற்களைச் சொன்னான்.(20)

{கிருதவர்மன்}, “தன்னைத் தானே வீரன் என்று சொல்லிக் கொள்பவனான நீ, போர்க்களத்தில் (பகை எண்ணங்கள் அனைத்தையும் கைவிட்டு) பிராயத்தில் அமர்ந்திருந்தவனும், கரங்களற்றவனுமான பூரிஸ்ரவஸை கொடூரமாகக் கொன்றதெவ்வாறு?” என்று கேட்டான்.(21)

பகைவீரர்களைக் கொல்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, அவனுடைய சொற்களைக் கேட்டு, கோபவசப்பட்டவனாக, கிருதவர்மன் மீது தன் கோபப்பார்வையைச் செலுத்தினான்.(22) அப்போது சாத்யகி, மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்}, கொண்டாடப்படும் சியமந்தகம் என்ற ரத்தினத்தை {சியமந்தக மணியை} சத்ரஜித்திடம் இருந்து அபகரிப்பதற்காக, கிருதவர்மன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதைத் தெரிவித்தான்.(23) இந்தக் கதையைக் கேட்ட சத்தியபாமை, கோபவசப்பட்டவளாகக் கேசவனை அணுகி, அவனது மடியில் அமர்ந்து கொண்டு கண்ணீர் சிந்தியபடியே (கிருதவர்மன் மீது) அவனது கோபத்தை அதிகரித்தாள்.(24)

அப்போது சினத்துடன் எழுந்த சாத்யகி, “உறங்கிக் கொண்டிருந்தவர்களான திரௌபதியின் ஐந்து மகன்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோரைத் துரோணரின் மகனுடைய {அஸ்வத்தாமனின்} துணையுடன் கொன்ற இவனை {கிருதவர்மனை}}அவர்களைப் பின்பற்றிச் செல்லச் செய்வேன் என வாய்மையின் பேரில் நான் ஆணையிடுகிறேன். ஓ! கொடியிடையாளே {சத்யபாமையே}, கிருதவர்மனின் வாழ்வு மற்றும் புகழுக்கான காலம் முடிவுக்கு வந்துவிட்டது” என்றான்.(25-27)இந்தச் சொற்களைச் சொன்ன சாத்யகி, கிருதவர்மனை நோக்கி விரைந்து, கேசவன் {கிருஷ்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே வாளால் அவனது தலையைத் துண்டித்தான்.(28) அந்த அருஞ்செயலைச் செய்த யுயுதானன் {சாத்யகி}, அங்கே இருந்த பிறரையும் தாக்கத் தொடங்கினான். மேலும் தீங்கு செய்வதில் இருந்து அவனைத் தடுப்பதற்காக ரிஷிகேசன் {கிருஷ்ணன்} ஓடினான்.(29) எனினும், ஓ! ஏகாதிபதி, அந்த நேரத்தில் வந்திருந்த கால முரணால் தூண்டப்பட்ட போஜர்கள், அந்தகர்களில் அனைவரும் கூடி சிநியின் மகனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர்.(30) வலிமையும், சக்தியும் கொண்ட ஜனார்த்தனன், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கோபத்துடன் சாத்யகியை நோக்கி விரையும் வீரர்களைக் கண்டும், காலத்தின் தன்மையை அறிந்தும் கோபவசப்படாமல் அசையாமல் அப்படியே நின்றான்.(31) விதியால் தூண்டப்பட்டவர்களும், மதுவால் ஊக்கமடைந்தவர்களுமான அவர்கள், தாங்கள் உண்டு கொண்டிருந்த பானைகளால், யுயுதானனை {சாத்யகியைத்} தாக்கத் தொடங்கினர்.(32)

சிநியின் மகன் {சாத்யகி} இவ்வாறு தாக்கப்பட்ட போது, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்} பெருஞ்சினம் கொண்டான். போஜர்களுடனும், அந்தகர்களுடனும் போரிட்டுக் கொண்டிருந்த சாத்யகியை மீட்பதற்காக அவன் விரைந்து ஓடினான்.(33) வலிமைமிக்கக் கரங்களையும், செல்வசக்தியையும் கொண்ட அந்த வீரர்கள் இருவரும் பெருந்துணிவுடன் போரிட்டனர். ஆனால் முரண்பட்டவர்கள் அதிகம் பெருகியிருந்ததால் கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.(34) யதுக்களைத் திளைக்கச் செய்பவன் {கிருஷ்ணன்}, தன் மகனும் {பிரத்யும்னனும்}, சிநியின் மகனும் {சாத்யகியும்} கொல்லப்பட்டதைக் கண்டு கோபமடைந்தவனாக அங்கே வளர்ந்திருந்த ஏரகப்புற்களை[2] கைநிறையப் பிடுங்கி எடுத்தான்.(35) கைநிறைந்தவையாக இருந்த அந்தப் புற்கள், வஜ்ரத்தின் சக்தியோடு கூடியதும், பயங்கரமானதுமான ஓர் இரும்பு உலக்கையாக {முசலமாக} மாறியது. கிருஷ்ணன் அதைக் கொண்டு தன் முன் வந்த அனைவரையும் கொன்றான்.(36)அப்போது, அந்தகர்கள், போஜர்கள், சைனேயர்கள், விருஷ்ணிகள் ஆகியோர் காலத்தால் தூண்டப்பட்டவர்களாக அந்தப் பயங்கரக் கைக்கலப்பில் ஒருவரையொருவர் தாக்கினர்.(37) உண்மையில், ஓ! மன்னா, ஓ! பலமிக்கவனே, அவர்களில் எவர் அந்த ஏரகப் புற்களைக் கோபத்துடன் பிடுங்கி எடுத்தாலும், உடனே அவை அவன் கரங்களில் ஒரு வஜ்ரமாக மாறின.(38) அங்கே காணப்பட்ட ஒவ்வொரு புல்லும் பயங்கரமான இரும்பு உலக்கையாக {முசலங்களாக} மாறின. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவை அனைத்தும் பிராமணர்கள் கொடுத்தச் சாபத்தினால் உண்டானவை என்பதை அறிவாயாக.(39) புல்லை ஏவிய எவனும், முற்றிலும் துளைக்கப்பட முடியாத பொருட்களை அஃது எளிதாகத் துளைத்துச் செல்வதைக் கண்டான். உண்மையில் அங்கே இருந்த ஒவ்வொரு புல்லும் வஜ்ரத்தின், சக்தியைக் கொண்ட ஒரு பயங்கரமான உலக்கையானது {முசலமானது}.(40)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, மகன் தந்தையைக் கொன்றான், தந்தை மகனைக் கொன்றான். மதுவினால் ஊக்கமடைந்திருந்த அவர்கள் விரைந்து சென்று ஒருவர்மீது ஒருவர் பாய்ந்தனர்.(41) குகுரர்களும், அந்தகர்களும், சுடர்மிக்க நெருப்பிடம் விரைந்து செல்லும் விட்டில்பூச்சிகளைப் போல அழிவை அடைந்தனர். இவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களில் எவனும் தப்பிச்செல்ல நினைத்தானில்லை.(42) அழிவுக்கான காலம் வந்துவிட்டதை அறிந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, அனைத்தையும் கண்டபடியே அங்கே நின்றான். உண்மையில் அந்த மதுசூதனன், புல்லாலான ஓர் இரும்பு உலக்கையை உயர்த்தியபடியே அங்கே நின்றான்.(43) ஸாம்பன், சாருதேஷ்ணன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோர் கொல்லப்பட்டதைக் கண்ட மாதவன் {கிருஷ்ணன்} சினத்தால் நிறைந்தான்.(44)

கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் கதனைக் கண்டதும், அவனது கோபம் பெருகுகிறது, சாரங்கம், சக்கரம் மற்றும் கதாயுதத்தைத் தரிப்பவனான அவன் அப்போது விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் முற்றாக அழித்தான்.(45) ஓ! மன்னா, அப்போது, பகை நகரங்களை வெல்பவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான பப்ருவும், தாருகனும் கிருஷ்ணனிடம் சொன்னதைக் கேட்பாயாக.(46) {பப்ருவும், தாருகனும்}, “ஓ! புனிதமானவரே, உம்மால் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் கொல்லப்பட்டனர். ராமர் {பலராமர்} இருக்கும் இடத்திற்குத் திரும்புவீராக. அவர் எங்கே சென்றாரோ அங்கேயே நாங்கள் செல்ல விரும்புகிறோம்” என்றனர்”.(47)

பரமெய்திய நாயகன்! – மௌஸலபர்வம் பகுதி – 4-பலராமனைக் கண்டடைந்த கிருஷ்ணன்; தாருகனைப் பாண்டவரிடம் அனுப்பியது; சேஷனாகிக் கடலிற் சென்ற பலராமன்; உடலைக் கைவிட யோகத்தில் கிடந்த கிருஷ்ணன்; கிருஷ்ணனின் பாதங்களைத் தாக்கிய ஜரன்; அவனுக்கு முக்தியளித்துப் பரம்பதமெய்திய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தாருகன், கேசவன், பப்ரு ஆகியோர் அந்த இடத்தைவிட்டு அகன்று, ராமன் {பலராமன்} இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றனர். அளவற்ற சக்தி கொண்ட அந்த வீரன், பூமியில் தனிமையான ஓர் இடத்தில் மரமொன்றில் சாய்ந்தவாறு சிந்தனையுடன் அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டனர்.(1) பேரான்மா கொண்ட ராமனைக் கொண்ட கிருஷ்ணன், தாருகனுக்கு ஆணையிடும் வகையில், “குருக்களிடம் சென்று யாதவர்களுடைய படுகொலையைப் பார்த்தனுக்கு அறிவிப்பாயாக. பிராமணர்களின் சாபத்தின் மூலம் யாதவர்களுக்கு நேர்ந்த இந்த முடிவைக் கேட்டு அர்ஜுனன் இங்கே விரைவாக வரட்டும்” என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட தாருகன், துயரில் புலனுணர்வை இழந்தவனாகக் குருக்களின் (தலைநகரை நோக்கி) தேரில் சென்றான்.(3)

தாருகன் சென்ற பிறகு, தன்னிடம் காத்திருக்கும் பப்ருவைக் கண்ட கேசவன் {கிருஷ்ணன்} அவனிடம் இந்தச் சொற்களில், “பெண்களைப் பாதுகாப்பதற்கு நீ விரைந்து செல்வாயாக. (அவர்களிடம் உள்ள) செல்வத்தால் ஈர்க்கப்படும் கள்வர்கள் அவர்களுக்குத் தீங்கேதும் செய்யாதிருக்கட்டும்” என்றான்.(4)

கேசவனால் இவ்வாறு சொல்லப்பட்ட பப்ரு, மதுவால் இன்னும் கதியற்றவனாகவும், தன் உற்றார் உறவினர்கள் கொல்லப்பட்டதால் மகிழ்ச்சியற்றவனாகவும் அங்கிருந்து சென்றான். அவன் கேசவனின் அருகில் சிறிது நேரம் ஓய்ந்திருந்து, அங்கிருந்து புறப்பட்டபோது, வேடனின் கைகளின் மூலம் ஒரு மரச்சம்மட்டியில் இணைக்கப்பட்டிருந்த இரும்பு உலக்கையானது {முசலமானது}, யாதவக் குலத்தில் எஞ்சியிருந்த ஒரேயொருவனும், பிராமணர்களால் சபிக்கப்பட்டவனுமான அவன் {பப்ரு} மீது திடீரெனப் பாய்ந்து அவனைக் கொன்றது[1].(5) பெருஞ்சக்தி கொண்ட கேசவன், பப்ரு கொல்லப்பட்டதைக் கண்டு தன் அண்ணனிடம், “ஓ! ராமரே {பலராமரே}, பெண்களை உற்றார் உறவினர்களிடம் ஒப்படைக்கும் வரை எனக்காக இங்கே காத்திருப்பீராக” என்றான்.(6)துவாராவதி நகரத்திற்குள் நுழைந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் தந்தையிடம் {வசுதேவரிடம்}, “தனஞ்சயன் {அர்ஜுனன்} வரும்வரை நம் வீட்டுப் பெண்கள் அனைவரையும் பாதுகாப்பீராக.(7) காட்டின் எல்லைப்புறத்தில் ராமர் {பரசுராமர்} எனக்காகக் காத்திருக்கிறார். நான் அவரை இன்று சந்திக்கப் போகிறேன். குரு குலத்தில் முதன்மையான க்ஷத்ரியர்களுக்கு நேர்ந்த பேரழிவை நான் ஏற்கனவே கண்டதைப் போலவே யதுக்களின் பேரழிவையும் கண்டேன்.(8) என்னருகில் யதுக்கள் இல்லாமல் யாதவர்களின் நகரத்தை என்னால் காண இயலாது[2]. காட்டுக்குச் சென்று, ராமரின் {பலராமரின்} துணையுடன் நான் தவம்பயிலப் போகிறேன் என்பதை அறிவீராக” என்றான் {கிருஷ்ணன்}.(9)இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, தன் தந்தையின் பாதத்தைத் தலையால் தீண்டி, விரைவாக அவரது முன்னிலையைவிட்டு அகன்றான். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் பிள்ளைகளிடம் இருந்து கவலையால் உரத்த ஓலம் எழுந்தது.(10) உரக்க ஓலமிட்டு அழுத அந்தப் பெண்மணிகளின் ஒலியைக் கேட்டு, தன் பாதச் சுவடுகளை மீண்டும் பின்பற்றிச் சென்று, அவர்களிடம், “அர்ஜுனன் இங்கே வருவான். மனிதர்களில் முதன்மையான அவன் உங்களைத் துயரில் இருந்து விடுவிப்பான்” என்றான்.(11)பிறகு, காட்டுக்குச் சென்ற கேசவன் {கிருஷ்ணன்}, அங்கே தனிமையான இடத்தில் அமர்ந்திருக்கும் ராமனைக் கண்டான். ராமன் யோகத்தில் நிலைத்திருப்பதையும், அவன் வாயில் இருந்து ஒரு பெரும்பாம்பு வெளியே வந்ததையும் அவன் கண்டான்.(12) அந்தப் பாம்பு வெண் நிறத்தில் இருந்தது. ஆயிரம் தலைகளைக் கொண்டவனும், மலையைப் போன்ற பெருவடிவம் கொண்டவனும், சிவந்த கண்களைக் கொண்டவனுமான அந்த உயர் ஆன்ம நாகன் {பலராமன்}, (இவ்வளவு காலம் தான் வசித்த அந்த) மனித உடலை விட்டகன்று கடலுக்கு வழிவகுக்கும் பாதையில் சென்றான்.(13) சமுத்திரனும், தெய்வீகப் பாம்புகள் பலரும், புனித ஆறுகள் பலவும் அவனைக் கௌரவமாக வரவேற்பதற்காக அங்கே இருந்தனர். அங்கே கார்க்கோடகன், வாசுகி, தக்ஷகன், பிருதுசிரவஸ், வருணன் {அருணன்}, குஞ்சரன்,(14) மிச்ரி, சங்கன், குமுதன், புண்டரீகன், உயர் ஆன்ம திருதராஷ்டிரன், ஹிராதன், கிராதன், கடுஞ்சக்தி கொண்ட சிதிகந்தன் {சிதிப்ருஷ்டன்}, {நிகேது}, சக்ரமந்தன், அதிஷண்டன்,(15) முதன்மையான நாகர்களாக அழைக்கப்படும் துர்முகன், அம்பரீஷன், மற்றும் மன்னன் வருணன் ஆகியோர் அங்கே இருந்தனர். முன் சென்று வரவேற்று, அவனுக்கு அர்க்கியமும், கால் கழுவ நீரும் பல்வேறு சடங்குகளுடன் அளித்து, அந்த வலிமைமிக்க நாகனை வழிபட்டு வணங்கிய அவர்கள் அனைவரும் அவனிடம் வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர்.(16)அண்ணன் {பலதேவன்/ பலராமன்} இவ்வாறு (மனிதர்களின்) உலகில் இருந்து சென்றதும், தெய்வீகப் பார்வையைக் கொண்டவனும், அனைத்தின் கதியையும் முழுமையாக அறிந்தவனுமான வாசுதேவன் சிந்தனையிலேயே சில காலம் காட்டில் தனியாகத் திரிந்து கொண்டிருந்தான். பெருஞ்சக்தி கொண்ட அவன் வெறும் பூமியில் அமர்ந்தான்.(17) அதற்கு முன்பு, முற்காலத்தில் காந்தாரி முன்னறிவிக்கும் வகையில் சொன்ன சொற்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தான். (கிருஷ்ணனின் வீட்டில் விருந்தினராக வந்திருந்த) துர்வாசர் உண்டு எஞ்சிய பாயஸத்தை அவனுடைய உடலில் பூசிய போது சொன்ன சொற்களையும் அவன் நினைவுகூர்ந்தான்.(18) விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவையும், அதற்கு முன்பு நடந்த குருக்களின் படுகொலையையும் நினைத்துப் பார்த்த அந்த உயர் ஆன்மா {கிருஷ்ணன்}, (உலகை விட்டு தான் செல்ல வேண்டிய) நேரம் வந்துவிட்டதெனத் தீர்மானித்தான். அப்போது அவன் தன் புலன்களை (யோகத்தில்) அடக்கினான்.(19) அனைத்தையும் குறித்த உண்மையை அறிந்தவனான வாசுதேவனே, பரம தேவனென்றாலும், அனைத்து ஐயங்களையும் விலக்குவதற்காகவும், (மனித இருப்பின் காரியத்தில்) குறிப்பிட்ட விளைவுகளை நிறுவுவதற்காகவும், மூவுலகங்களை ஆதரித்து அத்ரி மகனின் {துர்வாசரின்} சொற்களை உண்மையாக்குவதற்காகவும் அவன் இறக்க விரும்பினான்[3].(20)கிருஷ்ணன், தன்னுடைய புலன்கள், வாக்கு, மனம் ஆகியவை அனைத்தையும் கட்டுப்படுத்தி உயர்ந்த யோகத்தில் {படுத்துக்} கிடந்தான். ஜரன் என்ற பெயரைக் கொண்ட ஒரு கடும் வேடன், மான்களை விரும்பி அங்கே வந்தான்.(21) உயர்ந்த யோகத்தில் பூமியில் நீண்டு கிடந்த கேசவனை மானாக நினைத்து, ஒரு கணையைக் கொண்டு அவனது குதிங்காலில் துளைத்து, தன் இரையைக் கைப்பற்றுவதற்காக அந்த இடத்திற்கு விரைந்து வந்தான்.(22) அங்கே வந்த {வேடன்} ஜரன், யோகத்தில் குவிந்தவனும், பல கைகளைக் கொண்டவனும், மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியிருந்தவனுமான ஒரு மனிதனைக் கண்டான். தன்னைக் குற்றவாளியாக நினைத்து அச்சத்தில் நிறைந்த அவன் கேசவனின் பாதங்களைப் பற்றினான்.(23) அந்த உயர் ஆன்மா அவனுக்கு {ஜரனுக்கு} ஆறுதலளித்த பிறகு, தன் காந்தியால் மொத்த ஆகாயத்தையும் நிறைத்தபடியே மேல்நோக்கி உயர்ந்தான்.(24)

அவன் {கிருஷ்ணன்} சொர்க்கத்தை அடைந்தபோது, வாசவன், அஸ்வினி இரட்டையர்கள், ருத்ரன், ஆதித்யர்கள், வசுக்கள், விஸ்வேதேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், முதன்மையான கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்கள் ஆகியோர் முன் வந்து அவனை வரவேற்றனர்.(25) அப்போது, ஓ! மன்னா, சிறப்புமிக்கவனும், கடுஞ்சக்தி கொண்டவனும், அனைத்தையும் படைத்து அழிப்பவனும், யோக ஆசானுமான நாராயனன், தன் காந்தியால் சொர்க்கத்தை நிறைத்தபடியே, நினைத்தற்கரியதான தன்னுலகை {வைகுண்டத்தை} அடைந்தான்.(26) அப்போது, தேவர்கள், (தெய்வீக) முனிவர்கள், சாரணர்கள், கந்தர்வர்களில் முதன்மையானவர்கள், அழகிய அப்சரஸ்கள், சித்தர்கள் மற்றும் சாத்யர்கள் பலரையும் கிருஷ்ணன் சந்தித்தான். அவர்கள் அனைவரும் பணிவுடன் குனிந்து அவனை வழிபட்டனர்.(27) ஓ! ஏகாதிபதி, தேவர்கள் அனைவரும் அவனை வணங்கினர், முனிவர்களில் முதன்மையானோர் பலரும், அனைவரின் தலைவனான அவனை வழிபட்டனர். கந்தவர்கள் அவனது புகழைப் பாடிக் கொண்டிருந்தனர், இந்திரனும் இன்பமாக அவனைத் துதித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(28)

துவாரகையில் அர்ஜுனன்! – மௌஸலபர்வம் பகுதி – 5-ஹஸ்தினாபுரம் சென்ற தாருகன்; யாதவர்கள் அழிந்ததை பாண்டவர்களுக்குத் தெரிவித்தது; துவாரகை சென்று கிருஷ்ணனின் மனைவியரைத் தேற்றி வசுதேவரிடம் சென்ற அர்ஜுனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதேவேளையில் தாருகன், குருக்களிடம் சென்று, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பிருதையின் {குந்தியின்} மகன்களைக் கண்டு, இரும்பு உலக்கைகளைக் கொண்டு விருஷ்ணிகள் எவ்வாறு ஒருவரையொருவர் கொன்றனர் என்பதைச் சொன்னான்.(1) போஜர்கள், அந்தகர்கள் மற்றும் குகுரர்களுடன் சேர்ந்து விருஷ்ணிகள் அனைவரும் கொல்லப்பட்டதைக் கேட்ட பாண்டவர்கள், துயரால் எரிந்து பெருங்கலக்கமடைந்தனர்.(2) கேசவனின் அன்பு நண்பனான அர்ஜுனன், அவர்களிடம் {பாண்டவர்களிடம்} விடைபெற்றுக் கொண்டு, தன் தாய்மானை {வசுதேவரைக்} காணப் புறப்பட்டுச் சென்றான். அவன் அனைத்திற்கும் அழிவு ஏற்படும் என்று சொன்னான்[1].(3)ஓ! பலமிக்க மன்னா {ஜனமேஜயா}, தாருகனோடு சேர்ந்து விருஷ்ணிகளின் நகரத்திற்குச் சென்ற அந்த வீரன், கணவனை இழந்த ஒரு பெண்ணைப் போலத் தெரிந்த துவாரகை நகரத்தைக் கண்டான்.(4) முன்னர், அண்டத்தின் தலைவனையே {கிருஷ்ணனையே} தங்கள் பாதுகாவலனாகக் கொண்டிருந்த அந்தப் பெண்கள், இப்போது தலைவனற்றவர்களாக இருந்தனர். தங்களைப் பாதுகாக்க பார்த்தன் {அர்ஜுனன்} வந்திருப்பதைக் கண்ட அவர்கள் அனைவரும் உரக்க ஓலமிட்டனர்.(5) பதினாறாயிரம் பெண்கள் {16,000} வாசுதேவனை {கிருஷ்ணனைத்} திருமணம் செய்திருந்தனர். உண்மையில், அர்ஜுனன் வருவதைக் கண்ட அவர்கள் அனைவரும் கவலையால் உரக்கக் கதறினர்.(6)

கிருஷ்ணனின் பாதுகாப்பை இழந்த அந்த அழகிகளையும், அவர்களது மகன்களையும் குரு இளவரசன் சந்தித்ததும், பார்வையைத் தடுக்கும் கண்ணீரினால் அவனால் அவர்களைப் பார்க்க முடியவில்லை.(7) துவாரகையெனும் ஆறானது, விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் அதன் நீராகவும், குதிரைகளை மீன்களாகவும், தேர்களைத் தெப்பங்களாகவும், இசைக்கருவிகளின் ஒலிகளையும், தேர்களின் சடசடப்பொலியையும் அதன் அலைகளாகவும், வீடுகள், மாளிகைகள் மற்றும் பொதுச் சதுக்கங்கள் ஆகியவற்றைத் தடாகங்களாகவும் கொண்டிருந்தது. ரத்தினங்களும், விலைமதிப்புமிக்கக் கற்களும் அதன் பாசிகளாக இருந்தன. வஜ்ரதாலான சுவர்களை {பிரகாரங்களை} அதில் மிதக்கும் மலர் மாலைகளாகக் கொண்டிருந்தது. வீதிகளும், சாலைகளும், பரப்பில் சுழிகளுடன் கூடிய பெரும் நீரோட்டமாக இருந்தன. பெரிய திறந்த வெளிகள் பெரும் ஏரிகளாக இருந்தன. ராமனும் {பலராமனும்}, கிருஷ்ணனும் அதன் இரு பெரும் முதலைகளாக இருந்தனர். இனிமையான அந்த ஆறு இப்போது காலனின் வலைக்குள் கட்டப்பட்ட கடும் வைதரணீ ஆற்றைப் போல அர்ஜுனனுக்குத் தெரிந்தது.(8-10)

உண்மையில், பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசவன் மகன் {அர்ஜுனன்}, விருஷ்ணி வீரர்களை இழந்திருந்த அந்த நகரத்தை இவ்வாறே கண்டான்.(11) அழகை இழந்து, முற்றிலும் மகிழ்ச்சியற்றதாக இருந்த அது, குளிர் காலத் தாமரையைப் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தியது. துவாரகை அளிக்கும் காட்சியைக் கண்டும், கிருஷ்ணனின் எண்ணற்ற மனைவியரைக் கண்டும், கண்ணீரால் குளித்த கண்களுடன் கூடிய அர்ஜுனன் உரக்க ஓலமிட்டபடியே பூமியில் விழுந்தான்.(12) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சத்ரஜித்தின் மகளான சத்யை {சத்தியபாமா}, ருக்மிணி ஆகியோரும் தனஞ்சயனுக்கு அருகில் கீழே விழுந்து துன்பத்துடன் உரக்க ஓலமிட்டனர்.(13) அவனை எழச் செய்து ஒரு பொன் இருக்கையில் அவனை அமரச் செய்தனர். பெண்கள், அந்த உயர் ஆன்மாவைச் சூழ்ந்து அமர்ந்து, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.(14) கோவிந்தனைப் புகழ்ந்து, அந்தப் பெண்களிடம் பேசிக் கொண்டிருந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அவர்களுக்கு ஆறுதலளித்து, தன் தாய்மானை {வசுதேவரைக்} காணச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(15)

கிருஷ்ணனின் சொற்கள்! – மௌஸலபர்வம் பகுதி – 6-யாதவ அழிவுக்கான காரணத்தை அர்ஜுனனிடம் சொல்லிப் புலம்பிய வசுதேவர்; கிருஷ்ணன் சொன்னதை அர்ஜுனனிடம் சொன்னது; நாட்டையும் ஒப்படைத்துவிட்டு உயிர்விட நிச்சயித்த வசுதேவர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தமது மகன்கள் குறித்த சோகத்தினால் எரிந்து தரையில் கிடந்தவரும், வீரரும், உயர் ஆன்மாவுமான அனகதுந்துபியை {வசுதேவரை} அந்தக் குரு இளவரசன் {அர்ஜுனன்} கண்டான்.(1) ஓ! பாரதா {ஜனமேஜயா}, அகன்ற மார்பையும், வலி கரங்களையும் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தன் மாமனைவிட அதிகம் பீடிக்கப்பட்டுக் கண்ணீரில் குளித்த கண்களுடன், தன் மாமனின் பாதங்களைத் தீண்டினான்.(2) ஓ! பகைவரைக் கொல்பவனே {ஜனமேஜயனே}, வலிய கரங்களைக் கொண்ட அனகதுந்துபி, தமது தங்கை மகனின் தலையை முகர விரும்பினாலும் அதைச் செய்யத் தவறினார்.(3) வலிய கரங்களைக் கொண்டவரும், ஆழமாகப் பீடிக்கப்பட்டவருமான அந்த முதிய மனிதன் {வசுதேவர்}, தமது கரங்களால் பார்த்தனை {அர்ஜுனனை} ஆரத்தழுவிக் கொண்டு, தமது மகன்கள், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள், மகள்களின் மகன்கள் மற்றும் நண்பர்களை நினைத்து உரக்க அழுதார்.(4)

வசுதேவர், “ஓ! அர்ஜுனா, பூமியின் மன்னர்கள் அனைவரையும், தைத்தியர்களை நூறுமுறையும் அடிபணியச்செய்த அந்த வீரர்களைக் காணாமல் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். நான் இறப்பது கடினம் என்பதை நான் காண்கிறேன்.(5) ஐயோ, ஓ! பார்த்தா, அர்ஜுனனின் அன்புக்குரிய சீடர்களும், அவனால் பெரிதும் மதிக்கப்பட்டவர்களுமான அந்த இரு வீரர்களின் {சாத்யகி மற்றும் பிருத்யும்னன் ஆகியோரின்} குற்றத்தால் விருஷ்ணிகள் அழிந்தனர்.(6) விருஷ்ணிகளில் முதன்மையான அதிரதர்களாக எந்த இருவர் கருதப்பட்டனரோ, உரையாடல்களின் போது யாவரின் பெயரைக் குறிப்பிட்டால் நீ பெருமைப்படுவாயோ,(7) ஓ! குரு குலத்தின் தலைவா, கிருஷ்ணனின் அன்புக்குரியவர்களாக யாவர் இருந்தனரோ, ஓ! தனஞ்சயா, அந்த இருவரே {சாத்யகி மற்றும் கிருதவர்மன் ஆகியோரே} விருஷ்ணிகளின் அழிவுக்கு முக்கியக் காரணங்களாக இருந்தனர்.(8)

ஓ! அர்ஜுனா நான் சிநியின் மகனையோ {சாத்யகியையோ}, ஹிருதிகளின் மகனையோ {கிருதவர்மனையோ} நான் நிந்திக்கவில்லை. அக்ரூரனையோ, ருக்மிணியின் மகனையோ {பிரத்யும்னனையோ} நான் நிந்திக்கவில்லை. (முனிவர்களின்) சாபமே ஒரே காரணம் என்பதில் ஐயமில்லை.(9) கேசி, கம்சன், செருக்கில் பெருகிய சைத்யன் {சேதி நாட்டு சிசுபாலன்}, நிஷாதர்களின் ஆட்சியாளனுடைய மகனான ஏகலவ்யன், கலிங்கர்கள், மகதர்கள், கந்தாரர்கள், காசியின் மன்னன், பாலைவனத்திற்கு மத்தியில் ஒன்று கூடியிருந்த பல ஆட்சியாளர்கள், கிழக்குக்கும், தெற்குக்கும் உரிய பல வீரர்கள், மலைசார்ந்த பகுதிகளைச் சேர்ந்த பல மன்னர்கள் ஆகியோரை அழிப்பதற்குத் தன் ஆற்றலை வெளிப்படுத்திய அண்டத்தின் தலைவனான மதுசூதனன், ஐயோ, முனிவர்கள் இட்ட சாபத்தின் மூலம் எழும் பேரிடரில் எவ்வாறு அலட்சியமாக இருந்தான்?(10-12)நீயும், நாரதரும், முனிவர்களும், அவனை மங்கா மகிமை கொண்ட, பாவமற்ற நித்திய தேவன் கோவிந்தனாக அறிவீர்கள்.(13) ஐயோ, பலமிக்க விஷ்ணுவேயான அவன், எதிலும் தலையிடாமல், தன் உற்றார் உறவினரின் அழிவைக் கண்டிருக்கிறான். என் மகனே {கிருஷ்ணனே} இவையனைத்தையும் நடக்க அனுமதித்திருக்க வேண்டும்.(14) அவனே அண்டத்தின் தலைவனாக இருந்தான். எனினும், ஓ! பகைவரை எரிப்பவனே, காந்தாரி மற்றும் முனிவர்களின் சொற்களை அவன் பொய்யாக்க விரும்பவில்லை.(15) ஓ! வீரா, அஸ்வத்தாமனால் கொல்லப்பட்ட உன் பேரனை நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் சக்தியின் மூலம் அவன் உயிர்மீட்டான்.(16) எனினும், உன்னுடைய நண்பனான அவன் {கிருஷ்ணன்}, தன் உற்றார் உறவினரைக் காக்க விரும்பவில்லை.

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கண்டு, அவன் என்னிடம் இந்தச் சொற்களைச் சொன்னான், “இறுதியில் நம் குலத்திற்கும் அழிவு வந்தது.(17,18) துவாராவதி நகருக்கு பீபத்சு {அர்ஜுனன்} வருவான். விருஷ்ணிகளுக்கு நேரிட்ட பேரழிவை அவனுக்குச் சொல்வீராக.(19) யதுக்களின் அழிவைக் கேட்ட உடனேயே, வலிமையும், சக்தியுமிக்க அந்த வீரன் நிச்சயம் காலந்தாழ்த்தாமல் இங்கே வருவான்.(20) ஓ! தந்தையே, நானே அர்ஜுனன், அர்ஜுனனே நான் என்பதை அறிவீராக. நீர் செய்ய வேண்டியதை அவன் சொல்வான்.(21) பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் எது சிறந்ததோ அதைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} செய்வான். அவனே உமது ஈமச் சடங்குகளையும் செய்வான்.(22) அர்ஜுனன் சென்றதும், எந்தத் தாமதமும் இல்லாமல், சுவர்கள் {பிரகாரங்கள்}, மாடமாளிகைகளுடன் கூடிய இந்தத் துவாராவதி நகரம், பெருங்கடலால் விழுங்கப்படும்.(23) என்னைப் பொறுத்தவரையில், புனிதமான ஏதோவோரிடத்தில் ஓய்ந்திருந்து, நுண்ணறிவுமிக்க ராமரின் {பலராமரின்} துணையுடன், கடும் நோன்புகளை நோற்றுக் கொண்டு என் காலத்திற்காகக் காத்திருக்கப் போகிறேன்” என்றான்.(24)

நினைத்துப் பார்க்கமுடியாத ஆற்றலைக் கொண்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, பிள்ளைகளுடன் என்னை விட்டுவிட்டு, நான் அறியாத ஏதோவோரிடத்திற்குச் சென்றுவிட்டான்.(25) உன்னுடைய மைத்துனர்களான அந்த உயர் ஆன்மாக்கள் {பலராமன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய} இருவரையும், என் உற்றார் உறவினருக்கு நேர்ந்திருக்கும் இந்தப் பயங்கரப் பேரழிவையும் நினைத்து உணவனைத்தையும் கைவிட்டு, துன்பத்தால் மெலிந்திருக்கிறேன்.(26) நான் உண்ணவும் மாட்டேன், வாழவும் மாட்டேன். ஓ! பாண்டுவின் மகனே நீ என்னைச் சந்தித்தது நற்பேற்றாலேயே. ஓ! பார்த்தா, கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் நீ நிறைவேற்றுவாயாக.(27) ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இந்தப் பெண்கள் அனைவருடனும், இங்கே இருக்கும் இந்தச் செல்வம் அனைத்துடனும் கூடிய இந்த நாடு இப்போது உனதாகும். என்னைப் பொறுத்தவரையில், ஓ! பகைவரைக் கொல்பவனே, எனது அன்புக்குரியதாக இருந்தாலும் என் உயிர்மூச்சைக் கைவிடுவேன்” என்றார் {வசுதேவர்}.(28)

துவாரகை மூழ்கியது! – மௌஸலபர்வம் பகுதி – 7-வசுதேவரைத் தேற்றி யாவரையும் இந்திரப்ரஸ்தம் செல்லச் சொன்ன அர்ஜுனன்; யோகத்தால் உடலை விட்ட வசுதேவர்; வசுதேவர், கிருஷ்ணன் ஆகியோரைத் தகனஞ்செய்த அர்ஜுனன்; கள்வர்களால் கொள்ளையிடப்பட்டது; வஜ்ரனுக்கு முடிசூட்டியது; ருக்மிணி தீக்குளித்தது; ஸத்யபாமை தவம் செய்யச் சென்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பகைவரை எரிப்பவனான பீபத்சு {அர்ஜுனன்} இவ்வாறு தன்னுடைய தாய்மாமனால் {வசுதேவரால்} சொல்லப்பட்டதும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடியவனாக, அதேபோல உற்சாகமற்றிருந்த வசுதேவரிடம்,(1) “ஓ! மாமா, விருஷ்ணி குலதைச் சேர்ந்த அந்த வீரனையும் {கிருஷ்ணனையும்}, என்னுடைய உற்றார் உறவினரான வேறு சிலரையும் இழந்திருக்கும் இந்தப் பூமியை என்னால் பார்க்க முடியவில்லை.(2) மன்னர் {யுதிஷ்டிரன்}, பீமசேனர், சகாதேவன், நகுலன், எண்ணிக்கையில் ஆறாவதாக யாஜ்ஞசேனி ஆகியோரும் இக்காரியத்தில் என்னைப் போலவே மனம் கொண்டுள்ளனர்.(3) மன்னர் புறப்படுவதற்கான காலமும் வந்துவிட்டது. நாங்கள் புறப்படுவதற்கான நேரமும் மிக அருகில் இருக்கிறது. காலப்போக்கை நன்கு அறிந்தோரில் நீர் முதன்மையானவராக இருக்கிறீர்.(4) எனினும், ஓ! பகைவரைத் தண்டிப்பவரே, விருஷ்ணி குலத்தின் பெண்கள், பிள்ளைகள் மற்றும் முதியோரை முதலில் இந்திரப்ரஸ்தத்திற்கு அனுப்புவீராக” என்றான்.(5)

தன் மாமனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, அடுத்ததாகத் தாருகனிடம் அர்ஜுனன், “தாமதமேதும் இல்லாமல் விருஷ்ணி வீரர்களில் முக்கியத் தலைவர்களை நான் காண விரும்புகிறேன்” என்றான்.(6) இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு (கொல்லப்பட்ட) பெருந்தேர்வீரர்களுக்காக வருந்தி, சுதர்மம் என்றழைக்கப்படும் யாதவர்களின் பெருஞ்சபைக்குள் நுழைந்தான்.(7) அவன் அமர்ந்ததும், பிராமணர்கள் உள்ளிட்ட குடிமக்கள் அனைவரும், நாட்டின் அமைச்சர்கள் அனைவரும் வந்து அங்கே அவனைச் சூழ்ந்து அமர்ந்தனர்.(8)

அப்போது அவர்கள் வருந்தியதைவிட அதிகம் வருந்திய பார்த்தன் {அர்ஜுனன்}, வருத்தத்திலிருந்தவர்களும், உற்சாகமற்றவர்களாக இருந்தவர்களும், உயிரில்லாத இறந்தவர்களைப் போல இருந்தவர்களுமான குடிமக்கள் மற்றும் அதிகாரிகளிடம், அந்தச் சந்தர்ப்பத்திற்குப் பொருந்திய இந்தச் சொற்களைச் சொன்னான்:(9) “விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் எஞ்சியிருப்போரை நான் என்னுடன் அழைத்துச் செல்லப் போகிறேன். விரைவில் பெருங்கடல் இந்நகரத்தை {துவாரகையை} விழுங்கப் போகிறது.(10) உங்கள் தேர்களை ஆயத்தம் செய்து, அவற்றில் உங்கள் செல்வங்கள் அனைத்தையும் வைத்துக் கொள்வீராக. (கிருஷ்ணனின் பேரனான {கொள்ளுப்பேரனான}) இந்த வஜ்ரன்[1] சக்ரப்ரஸ்தத்தில் {இந்திரப்ரஸ்தத்தில்} உங்கள் மன்னனாக இருப்பான்.(11) இன்றிலிருந்து ஏழாவது நாள் சூரிய உதயத்தில் நாம் புறப்படுவோம். தாமதமில்லாமல் ஆயத்தமாவீராக” என்றான் {அர்ஜுனன்}.(12)தூய செயல்களைக் கொண்ட பிருதையின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், பாதுகாப்பை அடையும் ஆவலில் இருந்த அவர்கள் அனைவரும் தங்கள் ஆயத்தங்களை விரைவாகச் செய்தனர்.(13) அர்ஜுனன் அந்த இரவைக் கேசவனின் மாளிகையில் கழித்தான். அவன், திடீரெனப் பெருந்து துன்பத்தில் மூழ்கிக் கலக்கமடைந்தான்.(14) காலை விடிந்ததும், பெருஞ்சக்தியையும், ஆற்றலையும் கொண்ட வசுதேவர் யோகத்தின் துணையுடன் உயர்ந்த கதியை அடைந்தார்.(15) அப்போது வசுதேவரின் மாளிகையில் இருந்து இதயம் பிளக்கும்படி உரக்க அழுது கொண்டிருந்த பெண்களின் ஒலி கேட்கப்பட்டது.(16) அவர்கள் கலைந்த கேசம் கொண்டவர்களாகவும், ஆபரணங்களோ, மலர்மாலைகளோ அற்றவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் கைகளால் மார்பில் அடித்துக் கொண்டு இதயத்தைப் பிளக்கும் ஒப்பாரியில் ஈடுபட்டனர்.(17) பெண்களில் முதன்மையானவர்களான தேவகி, பத்ரை, ரோஹினி, மதிரை ஆகியோர் தங்கள் தலைவனின் உடல் மீது விழுந்தார்கள்.(18) அப்போது பார்த்தன் தன் மாமனின் உடலை, மனிதர்களால் சுமக்கப்படும் ஒரு விலைமதிப்புமிக்க வாகனத்தில் சுமந்து வரச் செய்தான்.(19) அப்போது துன்பத்தால் ஆழமாகப் பீடிக்கப்பட்டவர்களும், இறந்து போன வீரரிடம் பேரன்பு கொண்டவர்களுமான துவாரகையின் குடிமக்களும், மாகாணத்து மக்கள் அனைவரும் அதை {அந்த வாகனத்தைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(20)

அந்த வாகனத்திற்கு முன்பு, அவர் {வசுதேவர்} வாழ்ந்த போது நிறைவு செய்த குதிரை வேள்வியின் முடிவில் தலைக்கு மேல் பிடிக்கப்பட்ட குடைகளும், அவர் தினமும் வழிபட்ட சுடர்மிக்க நெருப்புகளும் சுமந்து செல்லப்பட்டன; அவற்றைக் கவனித்துக் கொண்ட புரோகிதர்களும் முன்சென்றனர்.(21) அந்த வீரரின் உடலானது, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்களது மனைவிகளாலும், அவர்களைச் சூழ்ந்த ஆயிரக்கணக்கான பெண்களாலும், ஆயிரக்கணக்கான மருமகள்களாலும் பின்தொடரப்பட்டது.(22) இறுதிச் சடங்குகள், அவர் வாழ்ந்த போது அவருக்கு ஏற்புடையதாக இருந்த இடத்திலேயே செய்யப்பட்டது.(23) வீரரான அந்தச் சூரன் மகனின் {வசுதேவரின்} நான்கு மனைவிகளும் ஈமச் சிதையில் ஏறித் தங்கள் தலைவனின் உடலுடன் எரிந்தனர். அவர்கள் அனைவரும் அவருக்கு உரிய இன்பலோகங்களையே அவருடன் அடைந்தனர்.(24) பாண்டுவின் மகன் தன் மாமனையும், அவரது நான்கு மனைவியரின் உடல்களையும், நறுமணமிக்கப் பல்வேறு வகை நறுமணப் பொருட்கள் மற்றும் கட்டைகளைப் பயன்படுத்தி எரித்தான்.(25) ஈமச் சிதை எரிந்தபோது, சாமங்கள் ஓதும் தெளிவான ஒலி மற்றும் குடிமக்கள் மற்றும் அந்தச் சடங்கைப் பார்த்துக் கொண்டிருந்தோரின் ஓலம் ஆகியவற்றுடன் மரமும், வேறு எரியும் பொருட்களும் எரியும் உரத்த ஒலியும் எழுந்தது.(26)

அது முடிந்ததும், வஜ்ரனின் தலைமையிலான விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தின் சிறுவர்கள், அந்த உயர் ஆன்ம வீரருக்கு நீர்க்காணிக்கைகளைச் செலுத்தினர்.(27) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஒவ்வொரு கடமையையும் கவனமாகச் செய்த பல்குனன் {அர்ஜுனன்}, இந்தக் கடமையைச் செய்துவிட்டு, அந்த இடத்திற்கு அருகிலேயே இருந்த விருஷ்ணிகள் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்றான்.(28) சுற்றிலும் கொல்லப்பட்டுக் கிடக்கும் அவர்களைக் கண்ட குரு இளவரசன் பெரிதும் மகிழ்ச்சியற்றவனானான். எனினும், நடந்ததைக் கருத்தில் கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதை அவன் செய்தான்.(29) ஏரகப் புற்களாலானவையும், பிராமணர்களிட்ட சாபத்தின் குணத்தில் பிறந்தவையுமான இரும்பு உலக்கைகளால் {முசலங்களால்} கொல்லப்பட்ட அந்த வீரர்களின் உடல்களுக்கு வயது முதிர்வின் அடிப்படையிலான வரிசையில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.(30)

ராமர் {பலராமர்} மற்றும் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} உடல்களைத் தேடச் செய்த அர்ஜுனன், அச்செயலில் திறம்பெற்ற மனிதர்களைக் கொண்டு அவற்றை எரிக்கச் செய்தான்.(31) அடுத்து இறந்தோருக்குச் செய்யப்படும் சடங்குக்களை முறையாகச் செய்த அந்தப் பாண்டுவின் மகன், ஏழாம் நாளில் தன் தேரில் ஏறி விரைவாகப் புறப்பட்டான்.(32) விருஷ்ணி வீரர்களின் விதவைகள், காளைகள், கோவேறுகழுதைகள் மற்றும் ஓட்டகங்களால் இழுக்கப்பட்ட தேர்களில் அந்த உயர் ஆன்ம பாண்டுவின் மகனை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(33) அவர்கள் அனைவரும் பெருந்துன்பத்தில் இருந்தனர். விருஷ்ணிகளின் பணியாட்களும், குதிரைவீரர்களும், தேர்வீரர்களும் கூட அந்த ஊர்வலத்தைப் பின்தொடர்ந்தனர். அந்த நாட்டின் குடிமக்களும் அங்கே வசித்தவர்களும், பிருதை மகனின் ஆணையின் பேரில், வீரர்களற்றதும், பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்களை மட்டுமே கொண்டதுமான அந்தக் குதிரைப்படை அணிவகுப்பைச் சூழ்ந்து கொண்டு ஒரே நேரத்தில் புறப்பட்டுச் சென்றனர்.(35)யானைகளின் முதுகுகளில் இருந்து போரிட்ட போர்வீரர்கள் மலைகளைப் போன்று பெரியவையாக இருந்த யானைகளில் சென்றனர். காலாட்படை வீரர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.(36) அந்தக, விருஷ்ணி குலங்களின் பிள்ளைகள் அனைவரும் அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்றனர். பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், செல்வந்தர்களாக இருந்த சூத்திரர்கள் ஆகியோரும், வாசுதேவனின் அந்தப்புரத்தில் அமைந்தவர்களான பதினாறாயிரம் {1600} பெண்களையும், கிருஷ்ணனின் நுண்ணறிவுமிக்கப் பேரனான {கொள்ளுப்பேரனான} வஜ்ரனையும் முன்னிட்டுக் கொண்டு சென்றனர்.(38) போஜ, விருஷ்ணி, அந்தகக் குலத்தைச் சேர்ந்த பிற வீரர்களின் மனைவிகளும், இப்போது தலைவனற்றவர்களாக இருந்தவர்களுமான பெண்கள் லட்சக்கணக்கில் அர்ஜுனனுடன் புறப்பட்டுச் சென்றனர்.(39) தேர்வீரர்களில் முதன்மையானவனும், பகை நகரங்களை வெல்பவனுமான அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, செல்வம் நிறைந்ததும், பெருங்கடலைப் போலத் தெரிந்ததுமான விருஷ்ணிகளின் இந்தப் பெரும் ஊர்வலத்தின் வழியைப் பாதுகாத்துச் சென்றான்.(40) மக்கள் அனைவரும் புறப்பட்டதும், சுறாக்கள் மற்றும் முதலைகளின் இல்லமான பெருங்கடலானது, இன்னும் அனைத்து வகைச் செல்வங்களுடன் நிறைந்திருந்த துவாரகையைத் தன் நீரில் மூழ்கச் செய்தது[2].(41) எந்த நிலப்பகுதி கடக்கப்பட்டதோ அஃது உடனடியாகப் பெருங்கடலின் நீரில் மூழ்கியது.(42) அற்புதம் நிறைந்த இந்தக் காட்சியைக் கண்ட துவாரகாவாசிகள், வேக வேகமாக நடந்து, “விதியின் போக்கு அற்புதம் நிறைந்தது” என்றனர்[3].(43)தனஞ்சயன் {அர்ஜுனன்}, துவாரகையைக் கைவிட்ட பிறகு, இனிமையான காடுகள், மலைகள் மற்றும் இனிமை நிறைந்த ஓடைகளின் ஓரத்தில் விருஷ்ணி பெண்களை ஓய்ந்திருக்கச் செய்து மெதுமெதுவாக அணிவகுத்துச் சென்றான்.(44) ஐந்து நீர்நிலைகளைக் கொண்ட நாட்டை {பஞ்சநதம் / பஞ்சாப்} அடைந்த பலமிக்கத் தனஞ்சயன், அந்நிலத்தின் மத்தியில் தானியங்கள், பசுக்கள் மற்றும் பல விலங்குகள் நிறைந்த ஒரு பெரிய முகாமை அமைத்தான்.(45) ஓ! பாரதா {ஜனமேஜயா}, தலைவர்களற்ற அந்த விதவைகளின் பாதை பிருதையின் மகனால் {அர்ஜுனனால்} மட்டுமே பாதுகாக்கப்படுவதைக் கண்ட கள்வர்கள், (கொள்ளையிடுவதற்காகப்) பேராசை கொண்டனர்.(46) அப்போது, பேராசையில் மூழ்கிய இதயங்களைக் கொண்டவர்களும், இழிந்த பாவிகளும், மங்கலமற்றவர்களாகத் தோன்றுபவர்களுமான ஆபிரர்கள், ஒன்று கூடி தங்களுக்கு ஆலோசனை நடத்தினார்கள்.(47) அவர்கள், “இங்கே ஒரேயொரு வில்லாளியான அர்ஜுனன் மட்டுமே இருக்கிறான். இந்தக் குதிரைப்படை அணிவகுப்பில் பிள்ளைகளும், முதியவர்களும் இருக்கிறார்கள். நம்மை மீறி அவன் அவர்களின் வழியைப் பாதுகாத்து வருகிறான். (விருஷ்ணி) போர்வீரர்கள் சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்” என்றனர்.(48)

ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தவர்களும், தண்டங்கள் தரித்தவர்களுமான அந்தக் கள்வர்கள் கொள்ளையிட விரும்பி விருஷ்ணிகளை நோக்கி முன்னேறினர்.(49) முரண்பட்ட காலப்போக்கால் தூண்டப்பட்ட அவர்கள், உரத்த சிங்க முழக்கங்களுடனும், கொல்லும் விருப்பத்துடனும் அச்சுறுத்தியவாறு அந்தப் பெருங்கூட்டத்தின் மீது பாய்ந்தனர்.(50) குந்தியின் மகன் {அர்ஜுனன்} பாதையின் வழியே முன்னேறாமல் திடீரென நின்று தன் தொண்டர்களுன் திரும்பி, ஊர்வலத்தைத் தாக்கும் கள்வர்கள் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான்.(51)

அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரன் {அர்ஜுனன்}, தாக்கிக் கொண்டிருப்பவர்களிடம் சிரித்தவாறே, “இழிந்த பாவிகளே, உங்கள் உயிர்கள் மீது உங்களுக்கு ஆசையிருந்தால் இதைத் தவிர்ப்பீராக. நான் என் கணைகளால் உங்கள் உடல்களைத் துளைத்து உயிரை எடுக்கும்போது இதற்காக வருந்துவீர்கள்” என்றான்.(52)

அந்த வீரனால் இவ்வாறு சொல்லப்பட்டும் அவற்றை அலட்சியம் செய்த அவர்கள், மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டாலும் அர்ஜுனன் மீது பாய்ந்தனர்.(53) அப்போது அர்ஜுனன், பெரியதும், அழிவற்றதுமான தன் தெய்வீக வில்லுக்கு நாண்பூட்ட முயற்சித்தான்.(54) போர் கடுமையாக இருந்தபோது, பெரும் சிரமத்துடன் அதில் நாண்பூட்டுவதில் வென்றான். அப்போது அவன் தன் தெய்வீக ஆயுதங்களை நினைக்கத் தொடங்கினாலும் அவை மனத்தில் தோன்றவில்லை.(55) போரின் கடுமையையும், தன் ஆயுத வலிமையின் இழப்பையும், தெய்வீக ஆயுதங்கள் தோன்றாமையையும் கண்ட அர்ஜுனன் பெரிதும் வெட்கமடைந்தான்.(56) காலாட்படை, யானை வீரர்கள், தேர்வீரர்கள் உள்ளிட்ட விருஷ்ணி வீரர்களுடன் சேர்ந்து கள்வர்களால் அபகரிக்கப்பட்ட விருஷ்ணி பெண்களையும் மீட்பதில் அவன் தவறினான்.(57) அந்தக் கூட்டம் மிகப் பெரியதாக இருந்தது. கள்வர்கள் அதைப் பல்வேறு முனைகளில் தாக்கினர். அர்ஜுனன் தன்னால் முடிந்த அளவு அதைப் பாதுகாக்க முயன்றாலும், அவனால் வெல்ல முடியவில்லை.(58) போர்வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பெண்களில் முதன்மையான பலர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர், அதேவேளையில் வேறு சிலர் தாங்களே விரும்பி அந்தக் கள்வர்களுடன் சென்றனர்[4].(59)பலமிக்க அர்ஜுனன், விருஷ்ணிகளின் பணியாட்களால் ஆதரிக்கப்பட்டவனாகக் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் கள்வர்களைத் தாக்கினான்.(60) ஓ! மன்னா {ஜனமேஜயா}, எனினும் விரைவில் அவனது கணைகள் தீர்ந்தன. முற்காலங்களில் அவனது கணைகள் வற்றாதவையாக இருந்தன. எனினும் இப்போது அவை வேறுவகையில் ஆகின.(61) தன் கணைகள் தீர்ந்ததைக் கண்ட அவன் பெருந்துன்பத்தில் ஆழமாகப் பீடிக்கப்பட்டான். அப்போது அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்} தன் வில்லின் முனைகளினால் அந்தக் கள்வர்களைத் தாக்கத் தொடங்கினான்.(62) எனினும், ஓ! ஜனமேஜயா, அந்த மிலேச்சர்கள், பார்த்தன் {அர்ஜுனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே விருஷ்ணிகள் மற்றும் அந்தகப் பெண்களில் முதன்மையானோர் பலரை அபகரித்துப் பின்வாங்கினர்.(63) பலமிக்கத் தனஞ்சயன் இவை யாவற்றையும் விதியின் பணியெனக் கருதினான். கவலையால் நிறைந்த அவன், (தெய்வீக) ஆயுதங்கள் தோன்றாமை, தன் கர வலிமையின் இழப்பு, தன் வில் தனக்குக் கீழ்ப்படியாமை ஆகியவற்றை நினைத்து பெருமூச்சுவிட்டான்.(64,65) அவன், இவை அனைத்தும் விதியின் பணியெனக் கருதியவனாகப் பெரிதும் உற்சாகத்தை இழந்தான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, முன்பு கொண்டிருந்த பலத்தை இப்போது தான் கொண்டிருக்கவில்லை என்று சொல்லி அவன் மேலும் முயற்சி செய்வதை நிறுத்தினான்[5].(66) அந்த உயர் ஆன்மா {அர்ஜுனன்}, இன்னும் அவர்களிடம் எஞ்சி இருந்த செல்வத்தையும் மிச்சமிருந்த விருஷ்ணி பெண்களையும் அழைத்துக் கொண்டு குருக்ஷேத்திரம் வந்து சேர்ந்தான்.(67)இவ்வாறு எஞ்சியிருந்த விருஷ்ணிகளைக் கொண்டு வந்து சேர்த்த அவன் {அர்ஜுனன்}, அவர்களைப் பல்வேறு இடங்களில் நிறுவினான்.(68) கிருதவர்மனின் மகனை, எஞ்சியிருந்த போஜ மன்னனின் பெண்களுடன் சேர்த்து, மார்த்திகாவதம் என்றழைக்கப்படும் நகரத்தில் நிறுவினான்.(69) சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் ஆகியோருடன் எஞ்சியிருந்தவர்களின் வழியைப் பாதுகாத்த அந்தப் பாண்டுவின் மகன், குதிரைகளற்றவர்களாக இருந்த அவர்களை இந்திரப்ரஸ்த நகரத்தில் நிறுவினான்.(70) அற ஆன்மா கொண்ட அர்ஜுனன், யுயுதானனின் {சாத்யகியின்} அன்பு மகனை, முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்களுடன், சரஸ்வதி ஆற்றங்கரையில் நிறுவினான்.(71) இந்திரப்ரஸ்தத்தின் ஆட்சி {கிருஷ்ணனின் கொள்ளுப்பேரனான} வஜ்ரனுக்குக் கொடுக்கப்பட்டது. அக்ரூரின் விதவைகள் காட்டுக்குள் ஓய்ந்து செல்ல விரும்பினார்கள். வஜ்ரன் மீண்டும் மீண்டும் அவர்களைத் தடுத்தாலும் அவர்கள் அவன் சொல்வதைக் கேட்கவில்லை.(72) ருக்மிணி, காந்தார இளவரசி, சைப்யை, ஹைமவதி, ஜாம்பவதி ஆகியோர் ஈமச் சிதையில் ஏறினர்.(73) சத்யபாமை, மற்றும் கிருஷ்ணனின் மனைவிகளான பிறர், காட்டுக்குச் சென்று தவம் பயில்வதில் தங்களை நிலைக்கச் செய்யத் தீர்மானித்தனர்.(74) அவர்கள் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, ஹரியை தியானித்துக் கொண்ட தங்கள் காலத்தைக் கழித்து வாழத் தொடங்கினர். அவர்கள் இமயத்தைக் கடந்து சென்று கலாபம் என்ற இடத்தில் தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்[6].(75) துவாராவதியில் இருந்து அர்ஜுனனைப் பின்பற்றி வந்த மனிதர்கள், குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வஜ்ரனிடம் ஒப்படைக்கப்பட்டனர்.(76) அந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற செயல்கள் அனைத்தையும் செய்த அர்ஜுனன், கண்ணீரால் குளித்த கண்களுடன், வியாசரின் ஆசிரமத்திற்குள் நுழைந்தான். அங்கே தீவில் பிறந்தவரான அந்த முனிவர் சுகமாக அமர்ந்திருப்பதை அவன் கண்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(77)

வியாசர் சொன்ன கதி! – மௌஸலபர்வம் பகுதி – 8-வியாசரைக் கண்டு துவாரகையின் அழிவைக் கூறிய அர்ஜுனன்; பாண்டவர்களும் சொர்க்கமடைவர் என்று சொன்ன வியாசர்; துவாரகையின் செய்தியை யுதிஷ்டிரனிடம் சொன்ன அர்ஜுனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வாய்மை நிறைந்த முனிவரின் {வியாசரின்} ஆசிரமத்திற்குள் நுழைந்த அர்ஜுனன், ஒரு தனிப்பட்ட இடத்தில் சத்யவதியின் மகன் {வியாசர்} அமர்ந்திருப்பதைக் கண்டான்.(1) உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரும், கடமைகள் அனைத்தின் அறிவைக் கொண்டவருமான அந்த முனிவரை அணுகிய அவன், “நான் அர்ஜுனன் வந்திருக்கிறேன்” என்று சொல்லி அவருக்காகக் காத்திருந்தான்.(2)

உயர்ந்த தவங்களுடன் கூடிய சத்யவதியின் மகன் {வியாசர்} “நல்வரவு” என்று பதிலளித்தார். அமைதியான ஆன்மாவைக் கொண்ட அந்தப் பெருமுனிவர், மேலும், “இருக்கையில் அமர்வாயாக” என்று சொன்னார்.(3) பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, பெரிதும் உற்சாசகம் இழந்தவனாகவும், மீண்டும் மீண்டும் பெருமூச்சுகளை விடுபவனாகவும், கவலை நிறைந்தவனாகவும் இருப்பதைக் கண்ட வியாசர், அவனிடம்,(4) “வேறு எவரின் நகங்கள் அல்லது முடியிலிருந்தோ, வேறு எவரின் துணியின் முனையில் இருந்தோ, குடுவையின் {குடத்தின்} வாயிலிருந்தோ உன் மீது நீர் தெளிக்கப்பட்டதா? மாதவிடாய் காலம் முடிவடைவதற்கு முன்பே எந்தப் பெண்ணுடனும் கலவியில் ஈடுபட்டாயா? பிராமணனைக் கொன்றாயா?(5) போரில் வெல்லப்பட்டாயா? நீ செழிப்பை இழந்தவனைப் போலக் காணப்படுகிறாய். நீ எவராலும் வீழ்த்தப்பட்டாயா என்பதை நான் அறியேன். ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, நீ ஏன் பெரிதும் நொந்து போன தன்மையுடன் இருக்கிறாய்? ஓ! பிருதையின் மகனே, இவற்றைச் சொல்வதில் உண்மையில் எத்தீங்கும் இல்லையெனில் அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்” என்றார் {வியாசர்}.(6)

அர்ஜுனன் {வியாசரிடம்}, “(புதிதாய் எழுந்த) மேகம் போன்ற நிறத்தைக் கொண்டவனும், இரு தாமரை இதழ்களைப் போன்ற அகன்ற விழிகளைக் கொண்டவனுமான கிருஷ்ணன், ராமருடன் {பலராமருடன்} சேர்ந்து தன் உடலைக் கைவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(7) பிரபாஸத்தில், பிராமணர்களால் இடப்பட்ட சாபத்தில் உண்டான இரும்பு உலக்கைகளின் {முசலங்களின்} மூலம் விருஷ்ணி வீரர்களுக்கு அழிவேற்பட்டது. அந்தப் பேரழிவு பயங்கரமானதாக இருந்தது, ஒரேயொரு வீரன் கூட அதில் தப்பவில்லை.(8) ஓ! பிராமணரே, உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், சிங்கம் போன்ற செருக்குடையவர்களுமான போஜ, அந்தக, விருஷ்ணி குலத்து வீரர்கள் போரில் ஒருவரையொருவர் கொன்றனர்.(9) இரும்பு கதாயுதங்கள் போலத் தெரியும் கரங்களைக் கொண்டவர்களும், கனத்த தண்டங்கள், ஈட்டிகளின் தாக்குதலையும் தாங்கவல்லவர்களுமான அவர்கள் அனைவரும், ஐயோ, ஏரகப் புற்களினால் கொல்லப்பட்டனர். காலவோட்டத்தின் முரணைக் காண்பீராக.(10)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரர்கள் ஐநூறாயிரம் {ஐந்து லட்சம் 5.00.000} பேர் இவ்வாறு வீழ்த்தப்பட்டனர். ஒருவரோடொருவர் மோதி அவர்கள் அழிவை அடைந்தனர்.(11) அளவிலா சக்தி கொண்ட யாதவ வீரர்களுக்கு நேர்ந்த இந்தப் பேரழிவையும், சிறப்புமிக்கக் கிருஷ்ணனுக்கு நேர்ந்த அழிவையும் மீண்டும் மீண்டும் நினைத்து மனத்தில் அமைதியைப் பெறத் தவறுகிறேன்.(12) சாரங்கபாணியின் {கிருஷ்ணனின்} மரணம், பெருங்கடல் வற்றியதைப் போல, மலை நகர்ந்ததைப் போல, சொர்க்கம் விழுந்ததைப் போல, நெருப்பு குளிர்ந்ததைப் போல நம்ப முடியாததாக இருக்கிறது.(13) விருஷ்ணி வீரர்களின் துணையை இழந்த நான் இவ்வுலகில் வாழ விரும்பவில்லை.(14)

ஓ! தவங்களையே செல்வமாகக் கொண்டவரே, இதைவிட அதிகத் துன்பம் நிறைந்த மற்றொரு நிகழ்ச்சி நடந்தது. அதை மீண்டும் மீண்டும் நினைத்தே என் இதயம் பிளக்கிறது.(15) ஓ! பிராமணரே, ஐந்து நீர்நிலைகள் உள்ள நாட்டில் {பஞ்சநதத்தில் / பஞ்சாபில்} நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆயிரக்கணக்கான விருஷ்ணி பெண்கள் ஆபிரர்களால் அபகரிக்கப்பட்டனர்.(16) என் வில்லை நான் எடுத்தபோது அதில் நாண்பூட்டவதற்கு இணையானவனாக நான் இல்லை. என் கரங்களில் இருந்த வலிமை அந்தச் சந்தர்ப்பத்தில் மறைந்தவிட்டதாகத் தெரிந்தது.(17) ஓ! பெரும் தவசியே {வியாசரே}, என்னுடைய பல்வேறு வகை ஆயுதங்கள் வெளிப்படத் தவறின. மேலும் என் கணைகள் விரைவில் தீர்ந்த போயின.(18)

அளவிலா ஆன்மா கொண்டவனும், நான்கு கரங்களைக் கொண்டவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் தரித்தவனும், மஞ்சள் ஆடை உடுத்தியவனும், கரிய நிறத்தவனும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களையும் கொண்டவனை இப்போது என்னால் காணமுடியவில்லை. ஐயோ, கோவிந்தன் {கிருஷ்ணன்} இல்லாமல் என் வாழ்வை துயரில் இழுத்துக் கொண்டு நான் எதற்காக வாழ வேண்டும்?(19) என் தேருக்கு முன் செல்பவனும், பெருங்காந்தியும் மங்காத பலமும் கொண்டவனும், செல்லும் போதே பகை போர்வீரர்களை எரிப்பவனுமான அந்தத் தெய்வீக வடிவத்தை இப்போது என்னால் காண முடியவில்லை.(20) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, முதலில் எவனுடைய சக்தியால் பகை துருப்புகள் அனைத்தையும் எரித்து, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் அதன்பிறகு அவர்களைக் கொன்றேனோ அவனை இப்போது என்னால் காணமுடியாமல் நான் துயரால் நிறைகிறேன் என் தலை கிறுகிறுக்கிறது. உற்சாகமின்மை மற்றும் கவலையால் துளைக்கப்பட்டிருக்கும் நான் என் மனத்தில் அமைதியை அடையத் தவறுகிறேன்.(21,22) வீர ஜனார்த்தனன் இல்லாமல் நான் வாழத் துணியேன். எப்போது விஷ்ணு இந்தப் பூமியை விட்டுச் சென்று விட்டான் என்பதைக் கேட்டேனோ அப்போது என் கண்கள் மங்கின, அனைத்தும் என் பார்வையில் இருந்து மறைந்தன.(23) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உற்றார், உறவினரும், ஆற்றலும் கொள்ளைபோனவனான எனக்கு இப்போது நன்மையெது என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான் {அர்ஜுனன்}.(24)

வியாசர் {அர்ஜுனனிடம்}, “விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் பிராமணர்களின் சாபத்தால் எரிக்கப்பட்டனர். ஓ! குருகுலத்தின் தலைவா, அவர்களின் அழிவுக்காக நீ வருந்துவது தகாது.(25) விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. அந்த உயர் ஆன்மப் போர்வீரர்களின் விதி இதுவே. கிருஷ்ணன் இதைக் கலங்கடிக்க முழுவதும் தகுந்தவெனினும், அது நடைபெற வேண்டுமென்றே அவன் அதை அனுபவித்தான்.(26) கோவிந்தன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்துடன் கூடிய அண்டத்தின் போக்கையே மாற்ற இயன்றவனாக இருந்தான். உயர் ஆன்ம பிராமணர்களின் சாபத்தைக் குறித்துச் சொல்ல வேறென்ன இருக்கிறது?(27) எவன் உன் மீது கொண்ட அன்பின் மூலம் சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்துக் கொண்டு உன் முன்பு செல்வானோ, அவன் நான்கு கரம் கொண்ட புராதன முனிவனான வாசுதேவன் ஆவான்.(28) அகன்ற விழிகளைக் கொண்ட கிருஷ்ணன், பூமியின் கனத்தைக் குறைத்து, தன்னுடைய (மனித) உடலைக் கைவிட்டு, தன்னுடைய உயர்ந்த இருக்கையை {கதியை} அடைந்திருக்கிறான்.(29) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, பீமனையும், இரட்டையர்களையும் {நகுல் சகாதேவனையும்} உதவியாகக் கொண்ட உன்னாலும் தேவர்களின் பெரும்பணி நிறைவேறியிருக்கிறது.(30)

ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {அர்ஜுனனே}, நீயும், உன் சகோதரர்களும் உங்களுடைய வாழ்வின் பெரும் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டதால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களென நான் உங்களைக் கருதுகிறேன். நீங்கள் இவ்வுலகத்தில் இருந்து செல்வதற்கான வேளை வந்துவிட்டது. ஓ! பலமிக்கவனே, இதுவே இப்போது உங்களுக்கு நன்மையானது.(31) ஓ! பாரதா, செழிப்பின் நாட்கள் மீறாமல் இருக்கும்போது, புத்தியும், ஆற்றலும், தொலைநோக்குப் பார்வையும் இவ்வாறே எழுகிறது. எதிர்மறையான காலம் வரும்போது இதே உடைமைகள் மறைந்துபோகும்[1].(32) இவை அனைத்தும் காலத்தையே தங்கள் வேராகக் கொண்டுள்ளன. ஓ! தனஞ்சயா, உண்மையில், காலமே அண்டத்தின் வித்தாகும். மேலும், காலமே தன் விருப்பபடி அனைத்தையும் ஈர்க்கிறது[2].(33) ஒருவன் வலிமையடைகிறான், மேலும் வலிமையை இழுந்து பலவீனமாகிறான். ஒருவன் தேர்ந்தவனாகி பிறரை ஆட்சி செய்கிறான், பிறகு அந்நிலையை இழந்து, பிறரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியும் ஒரு பணியாளனாகிறான்.(34) உன் ஆயுதங்கள் வெற்றியை அடைந்து தாம் வந்த இடத்திற்கே சென்றுவிட்டன. மேலும் அவற்றுக்கான காலம் வரும்போது அவை மீண்டும் உன் கரங்களில் வரும்.(35) ஓ! பாரதா, நீங்கள் அனைவரும் உயர்ந்த கதியை அடைவதற்கான காலம் வந்துவிட்டது. ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, இதுவே உங்கள் அனைவருக்குமான உயர்ந்த நன்மையென நான் கருதுகிறேன்” என்றார் {வியாசர்}”.(36)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அளவிலா சக்தி கொண்ட வியாசரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினான்.(37) அதற்குள் நுழைந்த அந்த வீரன் {அர்ஜுனன்} யுதிஷ்டிரனை அணுகி அவனிடம் விருஷ்ணிகள் குறித்து நடந்தது அனைத்தையும் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

மௌஸல பர்வம் முற்றும்

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ ஆஸ்ரமவாஸிக பர்வம்-ஸ்ரீ நாரதாகமன உப பர்வம்-

October 19, 2025

மூவரின் மறைவு! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 37-காட்டில் இருந்த திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் சொர்க்கமடைந்ததை ஹஸ்தினாபுரம் வந்து சொன்ன நாரதர்; திருதராஷ்டிரன் ஆணைப்படி சஞ்சயன் இமயமலைக்குச் சென்றதையும் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, பாண்டவர்கள் (தங்கள் தந்தையின் {திருதராஷ்டிரனின்} ஆசிரமத்திலிருந்து) திரும்பிய நாளிலிருந்து இரண்டு வருடம் கழிந்த பிறகு, தெய்வீக முனிவரான நாரதர் யுதிஷ்டிரனிடம் வந்தார்.(1) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குரு மன்னனும், பேசுபவர்களில் முதன்மையானவனுமான யுதிஷ்டிரன், அவரை முழுமையாக வழிபட்டபிறகு, இருக்கையில் அமரச் செய்தான். முனிவர் சற்று ஓய்ந்திருந்த பிறகு, மன்னன் {யுதிஷ்டிரன்}, அவரிடம்,(2) “நீண்ட காலத்திற்குப் பிறகு புனிதரான நீர் என் சபைக்கு வருவதை நான் காண்கிறேன். ஓ! கல்விமானான பிராமணரே {நாரதரே}, நீர் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறீரா?(3) நீர் சென்று வந்த நாடுகள் என்னென்ன? நான் உமக்குச் செய்ய வேண்டியதென்ன? எனக்கு நீர் சொல்வீராக. மறுபிறப்பாளர்களில் முதன்மையானவராகவும், எங்களது உயர்ந்த புகலிடமாகவும் நீரே இருக்கிறீர்” என்றான்.(4)

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “நான் நீண்ட காலம் உன்னைக் காணவில்லை. எனவே, அதன் காரணமாகவே நான் என் துறவு ஆசிரமத்தில் இருந்து உன்னிடம் வந்தேன். ஓ! மன்னா, நான் புனித நீர்நிலைகள் பலவற்றையும், புனித ஓடையான கங்கையையும் கண்டு வந்தேன்” என்றார்.(5)

யுதிஷ்டிரன் {நாரதரிடம்}, “கங்கைக் கரையில் வசிக்கும் மக்கள், உயர் ஆன்ம திருதராஷ்டிரர் கடுந்தவங்களைப் பயின்று வருகிறார் என்று சொல்கின்றனர்.(6) நீர் அங்கே அவரைக் கண்டீரா? குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரான அவர் அமைதியாக இருக்கிறாரா? காந்தாரி, பிருதை {குந்தி} மற்றும் சூதனின் மகனான சஞ்சயன் ஆகியோர் அமைதியுடன் இருக்கின்றனரா?(7) உண்மையில், என்னுடைய அரசத் தந்தை எப்படி இருக்கிறார்? ஓ! புனிதமானவரே, நீர் மன்னரைக் கண்டிருந்தால் (அவரது நிலையையும் அறிந்திருந்தால்) அதைக் கேட்க நான் விரும்புகிறேன்” என்றான்.(8)

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, நான் கேட்டதையும், அந்தத் துறவாசிரமத்தில் நான் கண்டதையும் சொல்கிறேன், அமைதியாகக் கேட்பாயாக.(9) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! மன்னா, நீ குருக்ஷேத்திரத்தில் இருந்து திரும்பியதும் உன் தந்தை கங்காத்வாரத்தை நோக்கிச் சென்றார்.(10) நுண்ணறிவுமிக்க அந்த ஏகாதிபதி, தனது (புனித) நெருப்பையும், காந்தாரியையும், தன் மருமகளான குந்தியையும், சூதனான சஞ்சயனையும், யாஜகர்கள் அனைவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.(11) தவங்களையே செல்வமாகக் கொண்ட உன் தந்தை கடுந்தவப்பயிற்சியில் தன்னை நிறுவிக் கொண்டான். அவன் தன் வாயில் சரளைக் கற்களைக் கொண்டு, பேச்சை மொத்தமாகத் தவிர்த்து வாழ்வாதாரத்திற்காகக் காற்றை மட்டுமே உண்டு வந்தான்.(12)

கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்த அவன், காட்டில் உள்ள தவசிகள் அனைவராலும் வழிபடப்பட்டான். ஆறு மாத காலத்தில் அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} வெறும் எலும்புக்கூடாகத் தன்னைக் குறைத்துக் கொண்டான்.(13) காந்தாரி நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தாள், குந்தி ஒரு மாத இடைவெளியில் சிறிதளவு உணவை உண்டாள். ஓ! பாரதா, சஞ்சயன், ஒவ்வொரு ஆறாம் நாளிலும் சிறிது உண்டு வாழ்ந்து வந்தான்.(14) ஓ! ஏகாதிபதி, (குரு மன்னனுக்குரிய) புனித நெருப்பானது, அவனுடன் இருந்த வேள்வித் துணைவர்கள் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஊற்றி முறையாக வழிபடப்பட்டது. மன்னன் இந்தச் சடங்கைக் கண்டாலும், காணாவிட்டாலும், இதை அவர்கள் செய்து வந்தனர்.(15) மன்னனுக்கு நிலையான வசிப்பிடம் ஏதும் இருக்கவில்லை. அவன் காட்டிற்குள் திரிபவனாக இருந்தான். ராணிகள் இருவரும், சஞ்சயனும் அவனைப் பின்தொடர்ந்தனர்.(16)

சமமான மற்றும் சமமற்ற நிலத்திலும் சஞ்சயன் வழிகாட்டியாகச் செயல்பட்டான். ஓ! மன்னா, களங்கமற்ற பிருதை {குந்தி}, காந்தாரியின் கண்ணானாள்.(17) ஒரு நாள், அந்த மன்னர்களில் சிறந்தவன், கங்கையின் விளிம்பில் உள்ள ஓரிடத்திற்குச் சென்றான். அப்போது அந்தப் புனித ஓடையில் நீராடி, தன் ஆசிரமத்தை நோக்கி முகத்தைத் திருப்பித் தன் தூய்மைச் சடங்குகளை நிறைவடையச் செய்தான்.(18) காற்று உயர எழுந்தது. கடுமையான காட்டுத்தீ உண்டானது. அது சுற்றிலும் அந்தக் காடு முழுவதையும் எரிக்கத் தொடங்கியது.(19) விலங்குக் கூட்டங்கள் சுற்றிலும் எரிக்கப்பட்ட போது, அந்தப் பகுதியில் வசித்த பாம்புகளும் எரிக்கப்பட்ட போது, காட்டுப் பன்றிகள் அருகில் உள்ள புதர்களுக்கும், நீர்நிலைகளுக்குச் செல்லத் தொடங்கின.(20)

அந்தக் காடு இவ்வாறு அனைத்துப் பக்கங்களிலும் பீடிக்கப்பட்டபோது, அங்கே வசித்த உயிரினங்கள் அனைத்தும் இத்தகைய துன்பத்தை அடைந்தபோது, உணவேதும் உண்ணாத மன்னன் {திருதராஷ்டிரன்}, அசைவதற்கோ, முயற்சி செய்தற்கோ இயலாதவனாக இருந்தான்.(21) மெலிந்து போயிருந்த உன்னுடைய தாய்மார்கள் இருவரும் அசைய முடியாத நிலையில் இருந்தனர். மன்னன் {திருதராஷ்டிரன்}, அனைத்துப் புறங்களில் இருந்தும் தீ தன்னை நோக்கி வருவதைக் கண்டு,(22) திறம்மிக்கத் தேரோட்டிகளில் முதன்மையான சூதன் சஞ்சயனிடம், “ஓ! சஞ்சயா, தீ உன்னை எரிக்காத இடத்திற்குச் செல்வாயாக.(23) எங்களைப் பொறுத்தவரையில், இந்த நெருப்பால் எங்கள் உடல்கள் துன்புற்று அழிவடைந்து உயர்ந்த கதியை அடையப் போகிறோம்” என்றான்.

அவனிடம் {திருதராஷ்டிரனிடம்}, பேசுபவர்களில் முதன்மையான சஞ்சயன்,(24) “ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, புனிதமற்றதாக இருக்கும் இந்தத் தீயால் கொண்டுவரப்படும் மரணம் உமக்குத் துன்பத்தையே தரும். எனினும், இந்தத் தீயில் இருந்து தப்பிக்கும் வழிமுறை எதையும் நான் அறியவில்லை.(25) அடைத்ததாக என்ன செய்யப்பட வேண்டும் என்பதை நீர் குறிப்பிட வேண்டும். இவ்வாறு சஞ்சயனால் சொல்லப்பட்ட மன்னன் மீண்டும்,(26) “நாம் சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டைவிட்டு வெளியேறியதால் இந்த மரணம் நமக்குத் துன்பத்தைத் தராது. (மரணத்திற்கான வழிமுறையாக) நீர், நிலம், காற்று மற்றும் உணவைத் தவிர்த்தல் ஆகியவை மெச்சப்படுகின்றன. எனவே, ஓ! சஞ்சயா நீ தாமதமில்லாமல் எங்களைவிட்டுச் செல்வயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

குவிந்த மனம் கொண்ட அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, சஞ்சயனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்.(28) அவன் காந்தாரியுடனும், குந்தியுடனும் கிழக்கு நோக்கி அமர்ந்தான். அவனது இந்த மனோநிலையைக் கண்ட சஞ்சயன், அவனை வலம் வந்தான்.(29) நுண்ணறிவைக் கொண்ட சஞ்சயன், “ஓ! பலமிக்கவரே, உமது ஆன்மாவைக் குவிப்பீராக” என்றான். ஒரு முனிவரின் {வியாசரின்} மகனும், பெரும் ஞானம் கொண்டவனுமான மன்னன் {திருதராஷ்டிரன்} தனக்குச் சொல்லப்பட்டவாறே செயல்பட்டான் {சஞ்சயன்}. உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரியும், தாயான பிருதையும் கூட அதே மனநிலையில் நீடித்தனர்.(31) அப்போது உன்னுடைய அரசத் தந்தை {திருதராஷ்டிரன்} அந்தக் காட்டு நெரிப்பில் மூழ்கினான். அவனது அமைச்சனான சஞ்சயன், அந்தத் தீயில் இருந்து தப்பிப்பதில் வென்றான்.(32)

கங்கைக் கரையில், தவசிகளுக்கு மத்தியில் நான் அவனைக் கண்டேன். பெரும் சக்தியும், பெரும் நுண்ணறிவும் கொண்ட அவன் {சஞ்சயன்}, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு இமய மலைக்குச் சென்றான்.(33) ஓ! ஏகாதிபதி, இவ்வாறே உயர் ஆன்ம குரு மன்னன் மரணத்தை அடைந்தான். உன்னுடைய இரு தாய்மார்களான காந்தாரியும், குந்தியும் இவ்வாறே மரணத்தைச் சந்தித்தனர்.(34) நான் விருப்பம்போலத் திரிந்து கொண்டிருந்தபோது, ஓ! பாரதா, அந்த மன்னன் மற்றும் அந்த இரு ராணிகளின் உடல்களை நான் கண்டேன்.(35) அந்த ஆசிரமத்திற்கு மன்னன் திருதராஷ்டிரனின் கதியைக் கேட்டு பல தவசிகள் வந்தனர். அவர்கள் தங்களுடைய கதிக்காக ஒருபோதும் வருந்தவில்லை.(36) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஓ! பாண்டுவின் மகனே, மன்னனும், இரு ராணிகளும் அங்கே எவ்வாறு எரிந்தனர் என்ற விபரங்களை அனைத்தையும் நான் கேட்டேன்.(37) ஓ! மன்னர்களின் மன்னா, நீ அவர்களுக்காக வருந்தலாகாது. அந்த ஏகாதிபதியும் {திருதராஷ்டிரனும்}, காந்தாரியும், உன் தாயும் தங்கள் விருப்பத்தின் பேரிலையே நெருப்போடான தொடர்பை அடைந்தனர்” என்றார் {நாரதர்}”.(38)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “திருதராஷ்டிரன் இவ்வுலகில் இருந்து சென்றுவிட்டதைக் கேட்ட உயர் ஆன்மப் பாண்டவர்கள் அனைவரும் பெருந்துயரமடைந்தனர்.(39) அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் ஓலமிடும் பேரொலி கேட்டது. குடிமக்களும், அந்த முதிய மன்னனின் கதியைக் கேட்டு உரக்க ஒப்பாரி செய்தனர்.(40) “ஓ!, ஐயோ” என்று பெருங்கவலையில் தன் கரங்களை உயரத் தூக்கி கதறி அழுதான் மன்னன் யுதிஷ்டிரன். அவன் தன் அன்னையை நினைத்து ஒரு குழந்தையைப் போல அழுதான். பீமசேனன் தலைமையிலான அவனது தம்பிகள் அனைவரும் அதையே செய்தனர்.(41) பிருதை {குந்தி} இத்தகைய விதியைச் சந்தித்தால் என்பதைக் கேள்விப்பட்ட அரசக் குடும்பத்துப் பெண்கள், துயரத்தில் உரக்க ஒப்பாரியிட்டனர்.(42) பிள்ளையற்றவனாக இருந்த அந்த முதிய மன்னனும், அவனுடைய விதியைப் பகிர்ந்து கொண்ட ஆதரவற்றவளான காந்தாரியும் எரிந்து இறந்ததைக் கேட்டு மக்கள் அனைவரும் வருந்தினர்.(43) ஓலமிடும் ஒலி சற்று நின்றபோது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் பொறுமையனைத்தையும் அழைத்து, கண்ணீரை நிறுத்திக் கொண்டு இந்தச் சொற்களைச் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(44)

யுதிஷ்டிரன் புலம்பல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 38-திருதராஷ்டிரன் காந்தாரி மற்றும் குந்தியின் மரணத்தைக் கேட்டுப் புலம்பிய யுதிஷ்டிரன்; காட்டுத் தீயில் எரிய நேர்ந்ததற்கு வருந்தியது…

யுதிஷ்டிரன் {நாரதரிடம்}, “உயர் ஆன்மா கொண்டவரும், கடுந்தவங்களில் ஈடுபட்டவருமான அந்த ஏகாதிபதியின் {திருதராஷ்டிரரின்} உற்றாரான நாம் அனைவரும் உயிரோடு இருக்கையில்,(1) ஓ! மறுபிறப்பாளரே {நாரதரே}, விதி இவ்வாறு நேர்ந்திருப்பதால், மனிதர்களின் கதியை ஊகிப்பது அரிதே. ஐயோ, விசித்திரவீரியரின் மகன் {திருதராஷ்டிரன்} இவ்வாறு எரிந்து இறப்பார் என்று யார் நினைத்தது?(2) அவர் வலிமைமிக்கக் கரங்களையும், பெருஞ்செழிப்பையும் கொண்ட நூறு மகன்களை உடையவராக இருந்தார். அந்த மன்னரே பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவராக இருந்தார். ஐயோ, அவரே காட்டுத்தியில் எரிந்து இறந்தாரே.(3) ஐயோ, அழகிய மங்கையரின் நற்கரங்களில் உள்ள பனையோலைகளால் முன்பு வீசப்பட்டவர் {திருதராஷ்டிரர்}, இப்போது, காட்டுத்தீயில் எரிந்து மரணமடைந்து கழுகுகளின் சிறகுகளால் வீசப்படுகிறார்.(4)

சூதர்கள் மற்றும் மாகதர்களின் கூட்டத்தால் ஒவ்வொரு காலையிலும் துயிலில் இருந்து எழுப்பப்பட்ட அவர் {திருதராஷ்டிரர்}, என்னுடைய பாவம் நிறைந்த செயல்களால் வெறுந்தரையில் உறங்க வேண்டியிருந்தது.(5) புகழ்பெற்றவளும், பிள்ளைகளை இழந்தவளுமான காந்தாரிக்காக நான் வருந்தவில்லை. தன் கணவனைப் போன்ற அதே நோன்புகளை நோற்று, அவனுடையதாகியிருக்கும் உலகங்களையே தானும் அடைந்திருக்கிறாள்.(6) எனினும், தன் மகன்களின் சுடர்மிக்கப் பெருஞ்செழிப்பைக் கைவிட்டுக் காட்டில் வசிக்க விரும்பிய பிருதைக்காக {குந்திக்காக} நான் வருந்துகிறேன்.(7) நமது அரசுரிமைக்கு ஐயா, நமது ஆற்றலுக்கு ஐயோ!, க்ஷத்திரிய நடைமுறைகளுகு ஐயோ!, உயிரிரோடு இருந்தாலும் உண்மையில் நாம் இறந்தவர்களே.(8)

ஓ! மேன்மையான பிராமணர்களில் முதன்மையானவரே {நாரதரே}, அரசுரிமையைக் கைவிட்டு தன் வசிப்பிடத்தைக் காட்டில் அமைத்துக் கொள்ள விரும்பிய குந்தியின் காலப் போக்கு மிக நுட்பமானது.(9) மற்றும் புரிந்து கொள்ள மிகக் கடினமானது. யுதிஷ்டிரன், பீமன், விஜயன் ஆகியோரின் தாய் ஓர் ஆதரவுமற்ற உயிரினமாவாள். இதை நினைத்து நான் கலக்கமடைந்தேன்.(10), காண்டவத்தில் அர்ஜுனன், நெருப்பின் தேவனை நிறைவடையச் செய்தது வீணே. நன்றி மறந்தவனான அவன் {அக்னி தேவன்} தனக்குச் செய்யப்பட்ட தொண்டை மறந்து தனக்குக்கு நன்மை செய்தவனின் தாயை எரித்துக் கொன்றிருக்கிறான்.(11) ஐயோ, அர்ஜுனனின் தாயை அந்தத் தேவனால் எவ்வாறு எரிக்க முடியும்? பிராமண வேடத்தைப் பூண்டு, முன்பு அர்ஜுனனிடம் உதவி வேண்டி அவன் {அக்னி தேவன்} வந்தான். நெருப்பின் தேவனுக்கு ஐயோ. பார்த்தனுடைய கணைகளின் கொண்டாடத்தக்க வெற்றிக்கு ஐயோ.(12)

ஓ! புனிதமானவரே {நாரதரே}, அந்தப் பூமியின் தலைவன் {திருதராஷ்டிரன்} புனிதமற்றதான நெருப்புடன் கலந்ததன் மூலம் மரணமடைந்தான் என்பது பெரும் துன்பத்தை உண்டாக்கவல்ல மற்றுமொரு நிகழ்வாகத் தோன்றுகிறது. மொத்த பூமியையும் ஆண்டு, தவப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிந்தவரும், குரு குலத்தவருமான அரசமுனியை {திருதராஷ்டிரரை} மரணம் எவ்வாறு ஆட்கொள்ளும்? அந்தப் பெருங்காட்டில் புனித மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட நெருப்புகள் இருக்கின்றன. ஐயோ, புனிதமற்ற நெருப்பின் துணையை அடைந்த என் தந்தை {திருதராஷ்டிரர்} இந்த உலகில் இருந்து சென்றுவிட்டார். அந்தப் பெருங்காட்டில் மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட நெருப்புகள் இருந்தன. ஐயோ, என் தந்தை புனிதமற்ற நெருப்பின் தொடர்பைப் பெற்று இவ்வுலகில் இருந்து சென்றார்.(13,14) பிருதை {குந்தி}, வடிவம் குறைந்து, மெலிந்தவளாக மேனியெங்கும் நரம்புகள் தெரிய, அச்சத்தால் நடுங்கி, உரக்கக் கதறி அழுது, “ஓ! மகனே யுதிஷ்டிரா” என்று சொல்லி, தன்னை அந்தப் பயங்கரத் தீ அணுகுவதற்காகக் காத்திருந்திருப்பாள்.(15) மேலும் என் தாயான அவள் சுற்றிலும் பயங்கரத் தீயால் சூழப்பட்டிருந்தபோது,, “ஓ! பீமா, இந்த ஆபத்தில் இருந்து என்னைக் காப்பாற்றுவாயாக” என்று சொல்லியிருக்க வேண்டும்.(16) அவளுடைய மகன்களுக்கு மத்தியில், சகாதேவனே அவளது அன்புக்குரியவனாவான். ஐயோ, மாத்ரவதியின் அந்த வீரமகன் அவளைக் காப்பாற்றவில்லை[1]” என்றான் {யுதிஷ்டிரன்}.(17)மன்னனின் {யுதிஷ்டிரனின்} இந்தப் புலம்பல்களைக் கேட்டு அங்கே இருந்த அனைவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டு அழத் தொடங்கினர். உண்மையில், அண்ட அழிவுக்காலத்தில் உள்ள உயிரினங்களுக்கு ஒப்பான அளவுக்குப் பாண்டுவின் மகன்கள் ஐவரும் துயரால் பீடிக்கப்பட்டிருந்தனர்.(18) அழுது கொண்டிருந்த அந்த வீரர்களின் புலம்பல் ஒலிகள் அந்த அரண்மனையின் அகன்ற அறைகளை நிறைத்து அங்கிருந்து தப்பித்து ஆகாயத்தையே துளைத்தன” {என்றார் வைசம்பாயனர்}.(19)

தாயாரின் சிராத்தம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 39-திருதராஷ்டிரனை எரித்தது மந்திராக்னி என்பதை விளக்கிய நாரதர்; திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் யுயுத்சுவும், குந்திக்கு யுதிஷ்டிரனும் தர்ப்பணம் ஸ்ராத்தம் முதலியவற்றைச் செய்தது; அதன் பிறகு நகரம் திரும்பி ஆட்சிபுரிந்தது…

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னன் {திருதராஷ்டிரன்} புனிதமற்ற நெருப்பால் எரித்துக் கொல்லப்படவில்லை. இதை நான் அங்கேயே கேட்டேன். ஓ! பாரதா, விசித்திரவீரியனின் {விசித்திரவீரியனின் மகனான திருதராஷ்டிரனின்} விதி அவ்வாறானதாக இல்லை.(1) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தவனுமான அந்த முதிய மன்னன் {திருதராஷ்டிரன்}, (கங்காத்வாரத்தில் இருந்து திரும்பிய பிறகு) காட்டுக்குள் தனியாக நுழைந்து, முறையாக வேள்வி நெருப்புகளைத் தூண்டச் செய்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். தனது புனிதச் சடங்குகள் அனைத்தையும் செய்துவிட்டு அவைகள் அனைத்தையும் அவன் புறக்கணித்தான்.(2) பிறகு, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, அவன் தன்னோடு வைத்திருந்த யாஜக பிராமணர்கள், அந்த நெருப்புகளைக் காட்டின் தனிமையான இடத்தில் வீசிவிட்டு, வேறு குற்றேவல்களை விரும்பி அங்கிருந்து சென்று விட்டனர்.(3)

இவ்வாறு காட்டில் வீசப்பட்ட நெருப்பு வளர்ந்தது. பிறகு அஃது ஒரு பெரிய காட்டுத்தீயானது. கங்கைக் கரையில் வசிக்கும் தவசிகளிடம் நான் கேட்டது இதுவே.(4) ஓ! பாரதர்களின் தலைவா, தன்னுடைய (புனித) நெருப்புடன் சேர்ந்தே, நான் ஏற்கனவே சொன்னது போல அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} கங்கைக் கரையில் மரணமடைந்தான்.(5) ஓ! பாவமற்றவனே, ஓ! யுதிஷ்டிரா, பாகீரதியின் புனிதக் கரைகளில் நான் கண்ட தவசிகள் சொன்னது இதுவே.(6)

ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வாறு மன்னன் திருதராஷ்டிரன், தன்னுடைய சொந்த புனித நெருப்புடன் கலந்து இவ்வுலகில் இருந்து சென்று தனதாகியிருக்கும் அந்த உயர்ந்த கதியை அடைந்தான்.(7) ஓ! மனிதர்களின் தலைவா, உன் தாயார் {குந்தி}, பெரியோருக்கு ஆற்றிய தொண்டின் மூலம் பெரும் வெற்றியை அடைந்தாள். இதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.(8) ஓ! மன்னர்களின் மன்னா, அவர்களைக் கௌரவிக்கும் வகையில் உன் தம்பிகளுடன் சேர்ந்து நீர்க்கடன்களைச் செய்வதே இப்போது உனக்குத் தகும். எனவே, இறுதியில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படட்டும்” என்றார் {நாரதர்}”.(9)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அப்போது மனிதர்களில் முதன்மையானவனும், பாண்டவர்களின் சுமைகளைத் தாங்குபவனுமான அந்தப் பூமியின் தலைவன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகள் மற்றும் குடும்பத்துப் பெண்கள் அனைவரின் துணையுடன் வெளியே சென்றான்.(10) நகர மற்றும் மாகாணவாசிகளும், தங்கள் பற்றுறுதியினால் {விசுவாசத்தினால்} தூண்டப்பட்டவர்களாக வெளியே சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒன்றையாடையை மட்டுமே உடுத்திக் கொண்டு கங்கைக் கரையை நோக்கிச் சென்றனர்.(11) பிறகு யுயுத்சுவைத் தங்கள் தலைமையில் கொண்ட மனிதர்களில் முதன்மையானவர்கள் அந்த ஓடைக்குள் மூழ்கி, அந்த உயர் ஆன்ம மன்னனுக்கு நீர்க்காணிக்கைகளைக் கொடுக்கத் தொடங்கினர். மேலும் அவர்கள் அதே போன்ற காணிக்கைகளைக் காந்தாரி மற்றும் பிருதையின் {குந்தியின்} பெயர்களைத் தனித்தனியே சொல்லி அவர்களின் குடும்பங்களையும் குறிப்பிட்டுச் சொல்லி கொடுத்தனர்.(12)

வாழ்வைத் தூய்மையாக்கும் அந்தச் சடங்குகளைச் செய்த பிறகு அவர்கள் திரும்பினாலும் தங்கள் தலைநகருக்குள் திரும்பாமல், அதற்கு வெளியே தங்கள் வசிப்பிடத்தை அமைத்தனர். இறந்தோரைத் தகனம் செய்வது தொடர்பான விதிகளை நன்கறிந்தவர்களும், நம்பிக்கைக்குரியவர்களுமான எண்ணற்ற மக்களை அந்த முதிய மன்னன் {திருதராஷ்டிரன்} எரிந்து இறந்த இடமான கங்கா துவாரத்திற்கு அனுப்பினான்.(13) முன்பே அந்த மனிதர்களுக்கு  வெகுமதிகளை அளித்த மன்னன் {யுதிஷ்டிரன்}, இன்னும் எஞ்சியிருந்த திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தியின் உடல்களுக்குத் தகனச் சடங்குகளைச் செய்யுமாறு அவர்களுக்கு ஆணையிட்டான்.(14) பனிரெண்டாம் நாளில் முறையாகத் தூய்மை செய்து கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இறந்து போன தன் உறவினர்களுக்கு அபரிமிதமான கொடைகள் அடங்கிய சிராத்தங்களை முறையாகச் செய்தான்.(15)

திருதராஷ்டிரனைக் குறிப்பிட்டு பொன்னாலான, வெள்ளியாலான பல கொடைகளையும், பசுக்கள் மற்றும் விலைமதிப்புமிக்கப் படுக்கை உள்ளிட்ட கொடைகளையும் கொடுத்தான்.(16) பெரும் சக்தி கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, காந்தாரி மற்றும் பிருதையின் பெயர்களைச் சொல்லி பல சிறந்த கொடைகளை அளித்தான்.(17) ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பியதையும், விரும்பியதற்கு அதிகமானவற்றையும் பெற்றான். படுக்கைகள், உணவு, தேர்கள், வாகனங்கள், ரத்தினங்கள், செல்வம் ஆகியவனவும் அபரிமிதமாகக் கொடையளிக்கப்பட்டன.(18)

உண்மையில் மன்னன் {யுதிஷ்டிரன்}, தன்னிரு தாய்மாரையும் குறிப்பிட்டுத் தேர்களையும், வாகனங்களையும், ஆடைகளையும் மறைப்புகளையும், பல்வேறு வகை உணவுகளையும், பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பெண் பணியாட்களையும் கொடையளித்தான்.(19) இவ்வாறு பல்வேறு வகையான கொடைகளை அபரிமிதமாக அளித்த அந்தப் பூமியின் தலைவன், அதன் பிறகு, யானையின் பெயரால் அழைக்கப்படும் தன் தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்.(20) மன்னனின் ஆணையின் பேரில் கங்கைக் கரைக்குச் சென்றிருந்த மனிதர்கள் அனைவரும், மன்னன் மற்றும் இரு ராணியரின் உடல்களில் எஞ்சியவற்றை {எலும்புகளைத்} (தகனம் மூலம்) முறையாக அப்புறப்படுத்தினர்.(21)

உடல்களில் எஞ்சியிருந்த அவற்றை {எலும்புகளை} மாலைகள் மற்றும் பல்வேறு வகை நறுமணப்பொருட்களுடன் உரிய முறையில் கௌரவித்து, அவற்றை அப்புறப்படுத்தி {தகனம் செய்து}, தங்கள் பணியை முடித்துவிட்டதை அவர்கள் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தனர்.(22) பெரும் முனிவரான நாரதர், அற ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனுக்கு ஆறுதலளித்துவிட்டு, தான் விரும்பிய இடத்திற்குச் சென்றுவிட்டார்.(23) இவ்வாறே மன்னன் திருதராஷ்டிரன் நகரத்தில் பதினைந்து வருடங்களையும், காட்டில் மூன்று வருடங்களையும் கழித்து இவ்வுலகில் இருந்து விடைபெற்றுச் சென்றான்.(24)

போரில் தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்த அவன் {யுதிஷ்டிரன்}, தன் உற்றார் உறவினர், நண்பர்கள், பங்காளிகள் மற்றும் தன் சொந்த மக்களைக் கௌரவிக்கும் வகையில் பல கொடைகளை அளித்தான்.(25) மன்னன் யுதிஷ்டிரன், தன் பெரிய தந்தையின் {திருதராஷ்டிரனின்} இறப்புக்குப் பிறகு மிகவும் உற்சாகமற்றவனானான். தன் உற்றார் உறவினரை இழந்த அவன் ஏதோவொருவாறு அரசெனும் சுமையைச் சுமந்தான்.(26) ஒருவன் ஆஸ்ரமவாஸிக பர்வத்தைக் குவிந்த கவனத்துடன் கேட்க வேண்டும், சொல்லப்படுவதைக் கேட்ட பிறகு அவன் பிராமணர்களுக்கு ஹவிஸ்யம் உண்ணக் கொடுத்து, நறுமணப் பொருட்கள் மற்றும் மலர்மாலைகளால் அவர்களைக் கௌரவிக்க வேண்டும்” {என்றார் வைசம்பாயனர்}.(27)

நாரதாகமன உபபர்வம் முற்றும்

ஆஸ்ரமவாஸிக பர்வம் முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ ஆஸ்ரமவாஸிக பர்வம்-ஸ்ரீ புத்ர தர்சன உப பர்வம்-

October 19, 2025

காந்தாரியின் வேண்டுதல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 29-திருதராஷ்டிரனுடைய ஆசிரமத்தில் ஒரு மாதம் வசித்த பாண்டவர்கள்; மகன்களை நேரில் காண திருதராஷ்டிரனுக்கு விருப்பமிருப்பதை வியாசரிடம் சொன்ன காந்தாரி; குந்தியின் விருப்பத்தைக் கேட்ட வியாசர்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! கல்விமானான பிராமணரே, குரு குலத்தில் முதன்மையானவனும், பூமியின் தலைவனுமான திருதராஷ்டிரன், தன் மனைவியுடனும் {காந்தாரியுடனும்}, தன் மருமகளான குந்தியுடனும் காட்டில் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட போது, உண்மையில் விதுரன் தன் உடலைவிட்டு யுதிஷ்டிரனுக்குள் நுழைந்த பிறகு, தவம் செய்யும் ஆசிரமத்தில் பாண்டவர்கள் அனைவரும் வசித்து வந்தபோது, உயர்ந்த சக்தியைக் கொண்ட பெருமுனிவர் வியாசர் அந்த முதிர்ந்த மன்னனுக்கு உறுதிமொழி அளித்த பிறகு, அவர் {வியாசர்} சாதித்த அருஞ்செயலென்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(1-3) மங்கா மகிமை கொண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன் தன் மக்களுக்களுடன் அந்தக் காட்டில் எத்தனை நாட்கள் தங்கினான்?(4) ஓ! பலமிக்கவரே, தங்கள் மக்கள் மற்றும் மனைவியருடன் கூடிய உயர் ஆன்மப் பாண்டவர்கள் அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தபோது எந்த உணவை உட்கொண்டு வாழ்ந்து வந்தனர்? ஓ! பாவமற்றவரே இதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான் {ஜனமேஜயன்}”.(5)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஏகாதிபதி, பாண்டவர்கள் தங்கள் துருப்புகள் மற்றும் தங்கள் குடும்பத்துப் பெண்மணிகள் ஆகியோருடன் சேர்ந்து குரு மன்னனின் அனுமதியுடன் பல்வேறு வகை உணவுகள் மற்றும் பானங்களைக் கொண்டு தங்களைத் தாங்கிக் கொண்டு அந்தக் காட்டில் பெரும் மகிழ்ச்சியுடன் ஒரு மாத காலத்தைக் கடத்தினர். ஓ! பாவமற்றவனே, அந்தக் காலம் முடியும் தருணத்தில் வியாசர் அங்கே வந்தார்.(6,7) அந்த இளவரசர்கள் வியாசரைச் சுற்றிலும் அமர்ந்து பல்வேறு காரியங்களை விவாதித்துக் கொண்டிருந்தபோது வேறு முனிவர்களும் அந்த இடத்திற்கு வந்தனர்.(8) ஓ! பாரதா, நாரதர், பர்வதர், கடுந்தவங்களைக் கொண்ட தேவலர், விஸ்வாவசு, தும்புரு, சித்திரசேனன் அங்கே இருந்தனர்.(9) கடுந்தவங்களுடன் கூடிய குரு மன்னன் யுதிஷ்டிரன், திருதராஷ்டிரனின் அனுமதியுடன் உரிய சடங்குகளின் படி அவர்களை வழிபட்டான்.(10)

யுதிஷ்டிரனின் அந்த வழிபாட்டை ஏற்றுக் கொண்ட அவர்கள் அனைவரும் (குசப் புற்களாலான) புனித இருக்கைகளிலும், மயிலிறகுகளாலான சிறந்த இருக்கைகளிலும் அமர்ந்தனர்.(11) அவர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, பெரும் நுண்ணறிவைக் கொண்ட குரு மன்னன் {திருதராஷ்டிரன்} பாண்டு மகன்கள் சூழ தன் இருக்கையில் அமர்ந்தான்.(12) காந்தாரி, குந்தி, திரௌபதி, சாத்வத குலத்தவள், அரச குடும்பத்தைச் சார்ந்த வேறு பெண்கள் ஆகியோரும் அமர்ந்தனர்.(13) அப்போது எழுந்த உரையாடல், சிறந்ததாகவும், பக்தி, பழங்கால முனிவர்கள், தேவர்கள் மற்றும் அசுரர்கள் தொடர்புடைய காரியங்களைக் குறிப்பிடுவதாகவும் இருந்தது.(14)

அந்த உரையாடல் நிறைவை எட்டிய போது, நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரும், வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான வியாசர், உயர்வான நிறைவை அடைந்து, அந்தக் குருட்டு மன்னனிடம் மீண்டும், “ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரா}, பிள்ளைகளின் நிமித்தமான துயரில் எரிந்து கொண்டிருக்கும் உன் இதயத்தில் உன்னால் பேணி வளர்க்கப்படும் காரியம் என்ன என்பதை நான் அறிவேன். எந்தக் கவலை காந்தாரியின் இதயத்தில் எப்போதும் இருக்கிறதோ,(15-17) எது குந்தியின் இதயத்தில் இருக்கிறதோ, எது திரௌபதியின் இதயத்ததில் பேணி வளர்க்கப்படுகிறதோ, தன் மகனின் இறப்பின் நிமித்தமாகக் கிருஷ்ணனின் தங்கையான சுபத்திரையாலும் எது பேணி வளர்க்கப்படுகிறதோ அந்த எரியும் துயர் அனைத்தையும் நான் அறிவேன். ஓ! மன்னா, உன் வீட்டைச் சார்ந்தவர்களான இந்த இளவரசர்கள் மற்றும் இளவரசிகளுடன் உன் சந்திப்பை கேள்விப்பட்டே,(18,19) ஓ! கௌரவர்களைத் திளைக்கச் செய்பவனே, உன் ஐயங்களை விலக்கும் பொருட்டு நான் இங்கே வந்தேன். தேவர்கள், கந்தர்வர்கள், மற்றும் இந்தப் பெரும் முனிவர்கள் அனைவரும்,(20) நான் இத்தனை வருடங்கள் நீண்டிருக்கும் காலத்தில் அடைந்திருக்கும் தவத்தின் சக்தியை இன்று காணட்டும். எனவே, ஓ! மன்னா, நான் இன்று நிறைவேற்ற வேண்டிய உன் விருப்பமென்ன என்பதை எனக்குச் சொல்வாயாக.(21) நான் உனக்கு ஒரு வரத்தைத் தருமளவு பலம் கொண்டவன். என் தவங்களின் கனியை {பயனைக்} காண்பாயாக” என்றார்.

அளவற்ற புத்தியைக் கொண்ட வியாசரால் இவ்வாறு சொல்லப்பபட்டதும், மன்னன் திருதராஷ்டிரன்,(22) ஒரு கணம் சிந்தத்தவனாகப் பேச ஆயத்தமானான். அவன் {திருதராஷ்டிரன்}, “நான் பெரும் நற்பேறு பெற்றவனாவேன். உன் உதவியைப் பெறும் நல்வாய்ப்பையும் நான் பெற்றிருக்கிறேன். இன்று என் வாழ்வு வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டது.(23) பெரும் பக்திமான்களான உங்கள் அனைவருக்கும், எனக்கும் இடையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறதே. எனக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உயர்ந்த இன்ப கதியை நான் இன்று அடையப் போகிறேன்.(24) தவங்களைச் செல்வமாகக் கொண்ட தவசிகளும், பிரம்மனுக்கு இணையானவர்களுமான உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் வென்றேனே. உங்கள் அனைவரையும் கண்டதே பாவங்கள் அனைத்தில் இருந்தும் என்னைத் தூய்மையடையச் செய்யும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.(25) பாவமற்றவர்களே, மறுமையில் என் கதி குறித்த எந்த அச்சமும் இனி எனக்கில்லை. என் பிள்ளைகளின் அன்பு நிறைந்தவனாக இருப்பதால் நான் எப்போதும் அவர்களது நினைவுகளையே பேணி வளர்க்கிறேன். எனினும், மிகத் தீய புத்தி கொண்ட தீயவனான என் மகன்{துரியோதனன்} இழைத்த பல்வேறு குற்றச் செயல்களை நினைப்பதால் எப்போதும் என் மனம் வதைக்கப்படுகிறது. பாவம் நிறைந்த புத்தியைக் கொண்ட அவன் அப்பாவிகளான பாண்டவர்களை எப்போதும் துன்புறுத்தினான்.(26,27)

ஐயோ, குதிரைகள், யானைகள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மொத்த பூமியும் அவனால் அழிக்கப்பட்டது. உயர் ஆன்ம மன்னர்கள், பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்கள் பலரும்,(28) என் மகனின் தரப்பை அடைந்து மரணத்திற்கு இரையாகினர். ஐயோ, அன்புக்குரிய தந்தைமார், மனைவியர் மற்றும் தங்கள் உயிர் மூச்சையே கைவிட்ட(29) அந்த வீரர்கள் அனைவரும் இறந்தோரின் மன்னனுடைய {யமனின்} விருந்தினர்களாகிவிட்டனர். ஓ! மறுபிறப்பாளரே, போரில் தங்கள் நண்பனுக்காகக் கொல்லப்பட்ட அந்த மனிதர்கள் அடைந்த கதியென்ன?(30) களத்தில் விழுந்த என் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் அடைந்த கதியென்ன? வலிமைமிக்கவரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர், பிராமணர்களில் முதன்மையானவரான துரோணர் ஆகியோர் என் மூடத்தனம் மற்றும், நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவனான பாவம் நிறைந்த என் மகனின் மூலம் படுகொலைக்கு உள்ளானதை நினைத்து என் இதயம் எப்போதும் துன்புறுகிறது.(31,32) பூமியின் அரசுரிமையை அடைய விரும்பிய அவன் செழிப்பில் சுடர்விட்ட குரு குலத்தின் அழிவுக்குக் காரணனானான். இவை யாவற்றையும் நினைத்துப் பார்க்கும் நான் துன்பத்தில் பகலும், இரவும் எரிந்து கொண்டிருக்கிறேன்.(33) துன்பம் மற்றும் துயரத்தால் ஆழமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் என்னால் மன அமைதியை அடைய முடியவில்லை. உண்மையில், ஓ! தந்தையே, இவை யாவற்றையும் நினைத்துப் பார்க்கும் என் மனத்தில் ஒருபோதும் அமைதி ஏற்படுவதில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}”.(34)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஜனமேஜயா, அந்த அரசமுனியால் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்ட இந்தப் புலம்பல்களைக் கேட்ட காந்தாரிக்குத் துன்பம் புதுப்பிக்கப்பட்டது.(35) குந்தி, துருபதன் மகள் {திரௌபதி}, சுபத்திரை மற்றும் குரு குலத்தைச் சேர்ந்த வேறு ஆண்களும், பெண்களும், மருமகள்களும் அதே போலத் துன்பம் புதுப்பிக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.(36) கட்டப்பட்ட கண்களுடன் கூடிய ராணி காந்தாரி, தன் மாமனாரிடம் {வியாசரிடம்} பேசினாள். தன் மகன்களின் படுகொலையால் ஆழமான துயரில் பீடிக்கப்பட்டிருந்த அவள்,(37) “ஓ! தவசிகளில் முதன்மையானவரே, இந்த மன்னர் {திருதராஷ்டிரர்} தமது மகன்களின் மரணத்திற்கு வருந்தி, மன அமைதியை இழந்து பதினாறு வருடங்கள் கடந்துவிட்டன.(38) ஓ! பெரும் முனிவரே {வியாசரே}, தமது பிள்ளைகளின் படுகொலையின் நிமித்தமான துயரால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்த மன்னர் எப்போதும் பெருமூச்சு விட்டபடியே இரவில் உறங்காமலிருக்கிறார்.(39) உமது தவ சக்தியின் மூலம் நீர் புதிய உலகங்களையே படைக்கவல்லவராயிருக்கிறீர். இப்போது மறுமையில் இருக்கும் இந்த மன்னரின் பிள்ளைகளை இவருக்குக் காட்டுவதைக் குறித்து வேறென்ன நான் சொல்ல முடியும்?(40)

துருபதன் மகளான இந்தக் கிருஷ்ணையும் {திரௌபதியும்} தன் உற்றார் உறவினர் மற்றும் பிள்ளைகள் அனைவரையும் இழந்திருக்கிறாள். என் மருமகள்களில் எனக்கு மிகவும் அன்புக்குரியவள் இதன் காரணமாக மிகவும் துன்புறுகிறாள்(41) இனிய வாக்கைக் கொண்டவளும், கிருஷ்ணனின் தங்கையுமான சுபத்திரை, தன் மகனை இழந்து ஆழமான துன்பத்தில் எரிந்து கொண்டிருக்கிறாள்.(42) அனைவராலும் மதிக்கப்படுபவளும், பூரிஸ்ரவசின் மனைவியுமான இந்தப் பெண், தன் கணவனை விதி வென்றதால் துன்பத்தில் பீடிக்கப்பட்டு எப்போதும் இதயம் பிளக்கும் அழுகையில் ஈடுபட்டு வருகிறாள்.(43) குரு குலத்தவரும், நுண்ணறிவுமிக்கவருமான பாஹ்லீகர் இவளது மாமனார் ஆவார். ஐயோ, இந்தப் போரில் சோமதத்தரும் தன் தந்தையுடன் சேர்ந்து கொல்லப்பட்டார்[1].(44)ஐயோ, பெரும் நுண்ணறிவையும் பெருஞ்செழிப்பைக் கொண்ட உமது மகனான இந்த மன்னரின் {திருதராஷ்டிரனின்} மகன்களும், போரில் ஒருபோதும் பின்வாங்காத வீரர்களுமான அந்த நூறு பேரும் போரில் கொல்லப்பட்டனர்.(45) அந்த மகன்களின் நூறு மனைவியரும் துன்புறுபவர்களாக, மன்னன் மற்றும் எனது துயரத்தை அதிகரிக்கச் செய்கிறார்கள். ஓ! பெரும் தவசியே {வியாசரே}, அந்தப் பெரும்படுகொலையால் தாக்கப்பட்ட இவர்கள் அனைவரும் என்னைச் சூழ்ந்து திரண்டிருக்கின்றனர்.(46) ஐயோ, ஓ! பலமிக்கவரே, ஐயோ, அந்த உயர் ஆன்ம வீரர்கள், பெருந்தேர் வீரர்கள், என் மாமனார், சோமதத்தர் மற்றும் பிறரின் கதி என்னவானது?(47) ஓ! புனிதமானவரே, எதனால் இந்தப் பூமியின் தலைவரும், நானும், என்னுடைய மருமகளான இந்தக் குந்தியும், எங்கள் துயரில் இருந்து விடுபடுவோமோ அஃது உமது அருளின் மூலம் நடக்கட்டும்” என்றாள் {காந்தாரி}.(48)

காந்தாரி இவ்வாறு சொன்னதும், கடும் நோன்புகள் பலவற்றால் முகம் வற்றியிருந்த குந்தி, சூரியப் பிரகாசத்துடன் கூடியவனும், கமுக்கமாகப் {இரகசியமாகப்} பிறந்தவனுமான தன் மகனை {கர்ணனை} நினைக்கத் தொடங்கினாள்.(49) வரமளிக்கும் முனிவரும், தொலைவில் நடப்பதைக் காணவும், கேட்கவும் இயன்றவருமான வியாசர், அர்ஜுனனின் அரசத் தாய் துன்பத்தால் பீடிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.(50) அவளிடம் வியாசர், “ஓ! அருளப்பட்டவளே, உன் மனத்தில் என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வாயாக. நீ சொல்ல விரும்புவதை எனக்குச் சொல்வாயாக” என்றார்.(51) இதன் பேரில் தன் மாமனாருக்குத் தலைவணங்கிய குந்தி, நாணத்துடன் கடந்த கால நிகழ்வுகள் தொடர்பான சொற்களைச் சொன்னாள்” {என்றார் வைசம்பாயனர்}.(52)

குந்தியின் கவலை! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 30-கர்ணனின் பிறப்பைக் கூறிய குந்தி; கர்ணனைப் பார்க்க விரும்புவதாக வியாசரிடம் சொன்னது; குந்தியின் ஐயத்தைக் காரணத்துடன் போக்கிய வியாஸர்…

குந்தி, “ஓ! புனிதமானவரே {வியாசரே}நீர் என் மாமனாராக இருப்பதால் என்னுடைய தேவர்களுக்குத் தேவராகவும் இருக்கிறீர். உண்மையில், நீர் தெய்வங்களுக்கு தெய்வமாக இருக்கிறீர். நீர் என்னுடைய உண்மையான சொற்களைக் கேட்பீராக.(1) மறுபிறப்பாள வகையைச் சார்ந்தவரும், கோபம் நிறைந்தவரும், துர்வாசர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு தவசி பிச்சை கேட்டு உண்பதற்காக என் தந்தையின் வீட்டிற்கு வந்தார்[1]. புறம் மற்றும் அக ஒழுக்கத்தின் தூய்மையினாலும், அவர் {துர்வாசர்} செய்த பல பிழைகளைக் காண மறுத்ததாலும் நான் அவரை நிறைவடையச் செய்தேன். கோபத்தைத் தூண்டும் வகையில் அவரது நடத்தை இருந்தாலும் நான் அவரிடம் கோபங்கொள்ளவில்லை.(3) கவனத்துடன் தொண்டாற்றப்பட்ட அந்தப் பெருந்தவசி என்னிடம் உயர்வான நிறைவை அடைந்து எனக்கு ஒரு வரம் அருளும் மனநிலையை எட்டினார். அவர் {துர்வாசர்}, “நான் கொடுக்கும் வரத்தை நீ ஏற்க வேண்டும்” என்பதே அவருடைய சொற்களாகும்.(4)அவருடைய {துர்வாசருடைய} சாபத்திற்கு அஞ்சிய நான், “அவ்வாறே ஆகட்டும்” என்றேன். அந்த மறுபிறப்பாள முனிவர், மீண்டும் என்னிடம்,(5) ஓ! அருளப்பட்ட காரிகையே, ஓ! அழகிய முகம் படைத்தவளே, நீ தர்மனுக்கு அன்னையாவாய். நீ அழைக்கும் தேவர்கள் உனக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருப்பார்கள்” என்றார்.(6)

அந்த மறுபிறப்பாளர் {துர்வாசர்} இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு என் பார்வையில் இருந்து மறைந்தார். நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன். எனினும், அந்த முனிவர் கொடுத்த மந்திரம், எப்போதும் என் மனத்தில் வசித்து வந்தது.(7) ஒரு நாள் நான் என் அறையில் அமர்ந்து கொண்டு உதிக்கும் சூரியனைக் கண்டேன். நாள் சமைப்பவனை என் முன்னே கொண்டு வர விரும்பிய நான் அந்த முனிவர் சொன்ன சொற்களை நினைவுகூர்ந்தேன்.(8) நான் குற்றத்தை உணராமல், சிறுமிக்குரிய தன்மையினால் அந்தத் தேவனை {சூரியனை} அழைத்தேன். எனினும், (என்னால் அழைக்கப்பட்ட) அந்த ஆயிரங்கதிர் தேவன் என் முன்னிலைக்கு வந்தார்.(9) அவர் தம்மை இரண்டாகப் பிரித்துக் கொண்டார். ஒரு பகுதியைக் கொண்டு ஆகாயத்திலும், மற்றொன்றினால் என் முன்னே பூமியிலும் அவர் நின்று கொண்டிருந்தார்.(10)

அவரைக் கண்டு நடுங்கிக் கொண்டிருந்த என்னிடம் அவர் இந்தச் சொற்களில், “என்னிடம் இருந்து ஒரு வரத்தைக் கேட்பாயாக” என்றார். அவருக்குத் தலைவணங்கிய நான், என்னைவிட்டுச் சென்றுவிடுமாறு அவரிடம் கேட்டேன்.(11)

அவர் {சூரிய தேவன்}, “பயனற்ற வருகை என்ற கருத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. உன்னையும், உனக்கு வரமாக இந்த மந்திரத்தை அளித்த பிராமணரையும் {துர்வாசரையும்} நான் எரிக்கப் போகிறேன்” என்றார்.(12)

ஒரு தீமையும் செய்யாத அந்தப் பிராமணரை சூரியனின் சாபத்தில் இருந்து பாதுகாக்க நான் விரும்பினேன். எனவே நான், “ஓ! தேவா, உம்மைப் போன்ற ஒரு மகனை நான் பெறுவேனாக” என்றேன்.(13) அந்த ஆயிரங்கதிர் தேவன் தன் சக்தியால் என்னுள் ஊடுருவி, என்னை முழுமையாகக் கலங்கடித்தார். பிறகு அவர், “நீ ஒரு மகனைப் பெறுவாய்” என்று சொல்லிவிட்டு ஆகாயத்திற்கே திரும்பிச் சென்றார்.(14) நான் என் தந்தையின் கௌரவத்தைக் காக்க விரும்பி, இவ்வாறு உலகிற்குக் கமுக்கமாக {இரகசியமாக} வந்தவனும், கர்ணன் என்ற பெயரைக் கொண்டவனுமான குழந்தையைத் தண்ணீரில் விட்டுவிட்டு அந்தப்புரத்திலேயே தொடர்ந்து வாழ்ந்தேன்.(15) ஓ! மறுபிறப்பாளரே, முனிவர் துர்வாசர் என்னிடம் சொல்லி இருந்ததைப் போலவே, அந்தத் தேவனுடைய அருளின் மூலம் ஐயமில்லாமல் நான் மீண்டும் கன்னிகையானேன்.(16)

அவன் வளர்ந்து வந்தபோது நானே அவனது அன்னை என்பதை அவன் அறிந்திருந்தாலும், மடமை கொண்ட நான் அவனை அங்கீகரிக்க எந்த முயற்சியையும் செய்யவில்லை. ஓ! மறுபிறப்பாள முனிவரே, உமக்கு நன்றாகத் தெரிந்த இஃது என்னை எரித்துக் கொண்டிருக்கிறது.(17) இது பாவம் நிறைந்ததாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் உம்மிடம் உண்மையைச் சொன்னேன். ஓ! புனிதமானவரே, என்னுடைய மகனான அவனைக் {கர்ணனைக்} காண்பதற்கான என் ஏக்கத்தை நிறைவடையச் செய்வதே உமக்குத் தகும்.(18) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, ஓ! பாவமற்றவரே, இந்த மன்னரின் நெஞ்சில் இருப்பதும், நீர் அறிந்ததுமான அந்த விருப்பம் இன்று கனியட்டும்” என்றாள் {குந்தி}.(19)

குந்தியால் இவ்வாறு சொல்லப்பட்டவரும் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான வியாசர் அவளுக்கு மறுமொழியாக, “நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ என்னிடம் சொன்ன அனைத்தும் நடக்கக் கூடியவையே.(20) (கர்ணனின் பிறப்பைப் பொறுத்தவரையில்) எக்குற்றமும் உன்னைச் சாராது. நீ கன்னித்தன்மையை அடைந்தாய். தேவர்கள் (யோக) பலம் பொருந்தியவர்களாவர். அவர்களால் மனித உடல்களில் ஊடுருவ முடியும்[2].(21) தேவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களால் எண்ணத்தை மட்டுமே கொண்டு (சந்ததியைப்) பெற இயலும். சொல், பார்வை, தீண்டல், பாலியல் கலவி ஆகியற்றின் மூலமும் அவர்கள் பிள்ளைகளைப் பெறுகின்றனர்.(22) நீ மனித வகையைச் சார்ந்தவளாவாய். (நடந்தவற்றில்) உன்னிடம் குற்றமேதும் இல்லை. ஓ! குந்தி, இதையறிவாயாக. உன் இதயத்தில் உள்ள நோய் அகலட்டும்.(23) வலிமையானவர்களுக்கு அனைத்தும் இனிமையானவை, வலிமையானவர்களுக்கு அனைத்தும் தூய்மையானவை, வலிமையானவர்களுக்கு அனைத்தும் புண்ணியமிக்கவை. வலிமையானவர்களுக்கே அனைத்தும் உரியவை” என்றார் {வியாசர்}.(24)

தேவ அம்சங்கள்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 31-போரில் மாண்டவர்களைக் காட்டப் போவதாகச் சொன்ன வியாசர்; ஒவ்வொருவரும் எவரெவருடைய அம்சமென்பதையும் சொன்னது; அனைவரும் கங்கைக் கரைக்குச் சென்றது…

வியாசர், “ஓ! காந்தாரி, நீ அருளப்பட்டிருப்பாயாக, நீ உன் மகன்கள், சகோதரர்கள், நண்பர்கள், உற்றார், உறவினர் மற்றும் உன் தந்தைமார் ஆகியோரை உறக்கத்தில் இருந்து எழுந்த மனிதர்களைப் போல இவ்விரவில் காணப் போகிறாய்.(1) குந்தி கர்ணனைக் காண்பாள், யது குலத்தவள் {சுபத்திரை} தன் மகன் அபிமன்யுவைக் காண்பாள். திரௌபதி தன் ஐந்து மகன்களையும், தன் தந்தைமாரையும், தன் சகோதரர்களையும் காண்பாள். நீ கேட்பதற்கு முன்பே என் மனத்தில் இருந்த எண்ணமிது. ஓ! காந்தாரி, மன்னனாலும், உன்னாலும், குந்தியாலும் தூண்டபட்டபோது நான் இந்த நோக்கத்தை ஊக்குவித்தேன்.(3) அந்த மனிதர்களில் முதன்மையானவர்களுக்காக நீ வருந்தக்கூடாது. க்ஷத்திரிய நடைமுறைகளில் நிறுவப்பட்ட தங்கள் அர்ப்பணிப்பின் விளைவால் அவர்கள் மரணமடைந்தனர்.(4)

ஓ! குற்றமற்றவளே, தேவர்களின் பணியைச் செய்வதைத் தவிர வேறேதும் முடியாது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அந்த வீரர்கள் பூமிக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தேவர்களின் பகுதிகளாவர் {அம்சங்களாவர்}.(5) கந்தர்வர்கள், அப்சரஸ்கள், பிசாசங்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள், பெரும் புனிதர்கள், (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், தெய்வீக முனிவர்கள்,(6) தேவர்கள், தானவர்கள், களங்கமற்ற குணம் கொண்ட தெய்வீக முனிவர்கள் ஆகியோர் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மரணமடைந்தனர்[1].(7)நுண்ணறிவுமிக்கவனும், திருதராஷ்டிரன் என்ற பெயரைக் கொண்டவனுமான கந்தர்வர்களின் மன்னனே, மனிதர்களின் உலகில் உன் தலைவனான திருதராஷ்டிரனாகப் பிறப்பெடுத்தான் {அவதரித்தான்} எனக் கேள்விப் படுகிறோம்.(8) மங்கா மகிமை கொண்டவனும், அனைவரைக் காட்டிலும் புகழ்மிக்கவனுமான பாண்டு, மருத்துக்களிலிருந்து உதித்தான் என்பதை அறிவாயாக. க்ஷத்ரி {விதுரன்} மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும் அறத் தேவனின் {தர்ம தேவனின்} இரு பகுதிகளாவர் {அவதாரங்களாவர்}.(9) துரியோதனனைக் கலியென்றும், சகுனியை துவாபரனென்றும் அறிவாயாக. ஓ! நற்குணங்களைக் கொண்டவளே, துச்சாசனனும், {அவனைச் சார்ந்த} பிறர் அனைவரும் ராட்சசர்கள் என்பதை அறிவாயாக.(10)

பெரும் வலிமைமிக்கவனும், பகைவரைத் தண்டிப்பவனுமான பீமசேனன் மருத்துக்களில் இருந்து வந்தவனாவான். பிருதையின் மகனான இந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} புராதன முனிவனான நரன் என்பதை அறிவாயாக.(11) ரிஷிகேசன் {கிருஷ்ணன்} நாராயணனாவான், இரட்டையர்கள் அஸ்வினிகளாவர். வெப்பங்கொடுப்பவர்களில் முதன்மையான சூரியன், தன்னுடலை இரண்டாக வகுத்து, ஒரு பகுதியைக் கொண்டு உலகங்களுக்கு வெப்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான், மற்றொரு பகுதியைக் கொண்டு (பூமியில்) கர்ணனாக வாழ்ந்தான். அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்தவனும், பாண்டவர்களின் உடைமைகளுக்கு வாரிசும், (ஒன்று கூடி போரிட்ட) ஆறு பெரும் தேர்வீரர்களால் கொல்லப்பட்டவனுமான அர்ஜுனன் மகனாக {அபிமன்யுவாக} சோமன் பிறந்தான். அவன் சுபத்திரையிடம் பிறந்தான். யோக பலத்தின் மூலம் அவன் தன்னைத் தானே இரண்டாக வகுத்துக் கொண்டான்.(12-14) வேள்வித் தீயில் இருந்து திரௌபதியுடன் சேர்ந்து உதித்த திருதஷ்டத்யும்னன், நெருப்பு {அக்னி} தேவனின் மங்கப் பகுதியாவான் {அவதாரமாவான்}. சிகண்டி ஒரு ராட்சசனாவான்.(15)

துரோணர் பிருஹஸ்பதியின் பகுதி என்றும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ருத்தரனின் பகுதியாகப் பிறந்தவன் என்றும் அறிவாயாக. கங்கையின் மைந்தனான பீஷ்மர், மனிதனாகப் பிறந்த வசுக்களில் ஒருவராவார்.(16) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இவ்வாறே தேவர்கள் மனிதர்களாகப் பிறந்து, தங்கள் பணியை நிறைவற்றிய பின்னர்ச் சொர்க்கத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(17) மறுமைக்குத் திரும்பிச் சென்ற அவர்கள் அனைவரைக் குறித்தும் உங்கள் இதயங்களில் உள்ள கவலையை நான் இன்று விலக்குவேன்.(18) நீங்கள் அனைவரும் பாகீரதியை {கங்கையை} நோக்கிச் செல்வீராக. அப்போது, போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் காண்பீர்கள்” என்றார் {வியாசர்}”.(19)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அங்கே இருந்தோர் அனைவரும் வியாசரின் சொற்களைக் கேட்டு, சிங்க முழக்கம் செய்து கொண்டே பாகீரதியை நோக்கிச் சென்றனர்.(20) தன் அமைச்சர்களுடன் கூடிய திருதராஷ்டிரனும், பாண்டவர்களும், அங்கே வந்திருந்த முதன்மையான முனிவர்களும் கந்தர்வர்களும், சொல்லப்பட்டது போலவே புறப்பட்டனர்.(21) கங்கைக் கரையை அடைந்த அந்த மனிதக் கடல், தான் விரும்பியவாறு தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டது.(22) பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, பாண்டவர்களுடனும், குடும்பத்தின் பெண்கள் மற்றும் முதியவர்களுடனும் ஓர் இனிமையான இடத்தில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(23) இறந்து போன இளவரசர்களைக் காணப் போகும் இரவின் வருகைக்காக அவர்கள் ஒரு முழு வருடத்தைப் போல அந்த நாளைக் கழித்தனர்.(24) சூரியன் மேற்கின் புனித மலையை அடைந்தபோது, அவர்கள் அனைவரும் அந்தப் புனித ஓடையில் நீராடி தங்கள் மாலை சடங்குகளை முடித்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(25)

ஞானக்கண்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 32-இரவில் கங்கையில் இறங்கிப் போரில் இறந்தவர்களை அழைத்த வியாசர்; தங்கள் தங்கள் ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்களுடன் கங்கையில் தோன்றி கரைக்கு வந்த இரு தரப்பினர்; வியாசர் கொடுத்த ஞானக் கண்ணால் அனைவரையும் நேரில் கண்ட திருதராஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இரவு வந்ததும், அவர்கள் அனைவரும் தங்கள் மாலைச் சடங்குகளை முடித்துக் கொண்டு வியாசரை அணுகினர். அற ஆன்மா கொண்டவனும், தூய்மையான உடலுடனும், ஆன்மாவை நோக்கிச் செலுத்தப்படும் மனத்துடனும் கூடியவனுமான திருதராஷ்டிரன், பாண்டவர்களுடனும், தனக்குத் துணையாக இருந்த முனிவர்களுடனும் சேர்ந்து அங்கே அமர்ந்தான்.(2) அரசக் குடும்பத்தின் பெண்மணிகள் காந்தாரியுடன் சேர்ந்து ஒரு தனிப்பட்ட இடத்தில் அமர்ந்தனர். குடிமக்கள் மற்றும் மாகாணவாசிகள் அனைவரும் தங்கள் வயதின்படியாக வரிசையாக அமர்ந்திருந்தனர்.(3)

அப்போது வலிமையும், சக்தியும் கொண்டவனும், பெரும் தவசியுமான வியாசர் பாகீரதியின் புனித நீரில் நீராடி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், பாண்டவர் தரப்பில் போரிட்டவர்களும், கௌரவர் தரப்பில் போரிட்டவர்களுமான இறந்து போன வீரர்கள் அனைவரையும் அழைத்தார்.(4,5) இதன் பேரில், ஓ! ஜனமேஜயா, செவிடாக்கக்கூடியதும், முன்பு குருக்கள் மற்றும் பாண்டவர்களின் படைகளில் கேட்கப்பட்டதற்கு ஒப்பானதுமான ஆரவாரம் நீருக்குள் இருந்து எழுவது கேட்கப்பட்டது.(6)

அப்போது பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான மன்னர்கள், தங்கள் துருப்பினர் அனைவருடன் பாகீரதியின் நீரில் இருந்து ஆயிரக்கணக்கில் எழுந்தனர்.(7) அங்கே விராடனும், துருபதனும் தங்கள் மகன்கள் மற்றும் படைகளுடன் இருந்தனர். திரௌபதியின் மகன்கள், சுபத்திரையின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன் ஆகியோரும் இருந்தனர்.(8) கர்ணன், துரியோதனன், வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனி, பெரும் பலம் கொண்டவர்களும், துச்சாசனன் தலைமையிலானவர்களுமான திருதராஷ்டிரனின் வேறு பிள்ளைகளும் அங்கே இருந்தனர்.(9)

ஜராசந்தனின் மகன், பகதத்தன், பெருஞ்சக்தி கொண்ட ஜலசந்தன், பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன், மற்றும் தம்பியுடன் கூடிய விருஷசேனன் {கர்ணனின் மகன்கள்} ஆகியோரும் அங்கே இருந்தனர்.(10) (துரியோதனன் மகனான) லக்ஷ்மணன், திருஷ்டத்யும்னனின் மகன், சிகண்டியின் பிள்ளைகள் அனைவரும், தம்பியுடன் கூடிய திருஷ்டகேது ஆகியோரும் அங்கே இருந்தனர்.(11) அசலன், விருஷகன், ராட்சசன் அலாயுதன், பாஹ்லீகர், ஸோமதத்தன், மன்னன் சேகிதானன் ஆகியோரும் அங்கே இருந்தனர்.(12)

இவர்களும், எண்ணிக்கையைக் கொண்டு வசதியாகப் பெயர் கூற முடியாத இன்னும் பலரும் அந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றினர். அவர்கள் அனைவரும் பாகீரதியின் நீரில் இருந்து ஒளியுடல்களுடன் எழுந்தனர்.(13) அந்த மன்னர்கள், போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டிருந்தபோது உடுத்தியிருந்த உடை, தரித்திருந்த கொடிக்கம்பம் மற்றும் வாகனத்துடன் தோன்றினர்.(14) அவர்கள் அனைவரும் தெய்வீக ஆடை உடுத்தியவர்களாகவும், பிரகாசமான காதுகுண்டலங்களுடன் கூடியவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பகை, செருக்கு, கோபம் மற்றும் பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுபட்டவர்களாக இருந்தனர்.(15)

அவர்களது செயல்களைச் சொன்னவாறே கந்தர்வர்கள் அவர்களது புகழைப் பாடினர், வந்திகள் அவர்களுக்குப் பணிவிடை செய்தனர். தெய்வீக உடுப்புகளை உடுத்தியவர்களும், தெய்வீக மலர்மாலைகளைச் சூடியவர்களுமான அவர்கள் ஒவ்வொருவரும் அப்சரஸ் கூட்டங்களால் பணிவிடை செய்யப்பட்டனர்.(16) அந்த நேரத்தில், சத்யவதியின் மகனாகிய அந்தப் பெருந்தவசி தன் தவங்களின் பலத்தால், திருதராஷ்டிரனுக்கு தெய்வீகப் பார்வையைக் கொடுத்து அவனை நிறைவடையச் செய்தார்.(17) தெய்வீக அறிவும் பலமும் கொண்டவளும், பெரும் புகழைக் கொண்டவளுமான காந்தாரி, தன் பிள்ளைகள் அனைவருடன், போரில் கொல்லப்பட்ட அனைவரையும் கண்டாள்.(18)

அங்கே கூடியிருந்தோர் அனைவரும், நிலைத்த பார்வையுடனும், இதயம் நிறைந்த ஆச்சரியத்துடனும், தங்களுக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியதும், நம்பமுடியாததுமான அந்த ஆச்சரியமான நிகழ்வைக் கண்டனர்.(19) அஃது இன்புற்றிருந்த ஆடவர் மற்றும் பெண்களுக்கான உயர்ந்த விழாவாக {உத்ஸவமாகத்} தெரிந்தது. அந்த அற்புதக் காட்சி, திரையில் வரையப்பட்ட படத்தைப் போலத் தெரிந்தது.(20) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அந்தத் தவசியின் அருளால் பெற்ற தெய்வீகப் பார்வையுடன் கூடிய திருதராஷ்டிரன், அந்த வீரர்கள் அனைவரையும் கண்டு இன்பத்தால் நிறைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(21)

சமரசம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 33-போரில் இறந்தவர்களும், உயிரோடு இருந்தவர்களும் ஒருவரையொருவர் சந்தித்து அந்த இரவு முழுவதையும் விளையாட்டாகக் கழித்தது; இந்தப் பர்வத்தைக் கேட்பதாலும், சொல்வதாலும் உண்டாகும் பலன்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது மனிதர்களில் முதன்மையானவர்களும், கோபமும், பொறாமையும் அற்றவர்களும், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களுமான அவர்கள், மறுபிறப்பாள முனிவர்களால் விதிக்கப்பட்ட உயர்ந்த, மங்கல விதிகளுக்கு இணக்கமான வகையில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் இருந்த அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் திரியும் தேவர்களைப் போலத் தெரிந்தனர்.(1,2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, மகன் தன் தந்தையையோ, தாயையோ சந்தித்தான், மனைவிமார் தங்கள் கணவர்களையும், சகோதரன், தன் சகோதரனையும், நண்பன் தன் நண்பனையும் சந்தித்தனர்.(3) மகிழ்ச்சியில் நிறைந்திருந்த பாண்டவர்கள், பெரும் வில்லாளியான கர்ணனையும், சுபத்திரையின் மகனையும் {அபிமன்யுவையும்}, திரௌபதியின் மகன்களையும் சந்தித்தனர்.(4) ஓ! ஏகாதிபதி, பாண்டுவின் மகன்கள் மகிழ்ச்சிமிக்க இதயங்களுடன் கர்ணனை அணுகி, அவனோடு இணக்கம் கொண்டனர் {சமரசமாகினர்}.(5)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, அந்தப் போர்வீரர்கள் அனைவரும் அந்தப் பெருந்தவசியின் அருளால் ஒருவரையொருவர் சந்தித்துத் தங்களுக்குள் இணக்கமாகினர்.(6) பகைமை அனைத்தையும் கைவிட்ட அவர்கள் நட்பு மற்றும் அமைதியை நிறுவினர். இவ்வாறே மனிதர்களில் முதன்மையானவர்களான அந்தக் கௌரவர்கள் அனைவரும், பிற மன்னர்களும், குருக்களுடனும், பிள்ளைகளுடன் கூடிய தங்கள் உற்றார் உறவினருடனும் சேர்ந்தனர். அந்த இரவு முழுவதையும் பெரும் மகிழ்ச்சியில் கடத்தினர்.(7,8) உண்மையில், அந்த க்ஷத்திரிய வீரர்கள் தாங்கள் உணர்ந்த மகிழ்ச்சியின் விளைவால் அந்த இடத்தைச் சொர்க்கமாகவே கருதினர். ஓ! ஏகாதிபதி, அந்தப் போர் வீரர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அந்த இரவில் துன்பமோ, அச்சமோ, ஐயவுணர்வோ, நிறைவின்மையோ அங்கே இல்லை. தந்தைமார், சகோதரர்கள், கணவர்கள், மகன்கள் ஆகியோரைச் சந்தித்த(9,10) பெண்கள் தங்கள் துயர் அனைத்தையும் கைவிட்டு, மகிழ்ச்சியாரவாரத்தை அடைந்தனர்.

இவ்வாறு ஓரிரவு ஒருவரோடு ஒருவர் விளையாடிய அந்த வீரர்கள், பெண்கள்,(11) ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டு, ஒருவரிடமொருவர் விடைபெற்றுக் கொண்டு தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். உண்மையில் அந்த முதன்மையான தவசி {வியாசர்} போர்வீரர்களின் அந்தக் கூட்டத்திற்கு விடைகொடுத்தனுப்பினார்.(12) (உயிரோடு இருந்த) அவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணிமைக்கும் காலத்திற்குள் அந்தப் பெருங்கூட்டம் மறைந்து போனது. அந்த உயர் ஆன்ம மனிதர்கள், தங்கள் தேர்களுடனும், கொடிமரங்களுடனும் புனித ஆறான பாகீரதிக்குள் மூழ்கி, தங்கள் தங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குச் சென்றனர். சிலர் தேவலோகத்திற்கும், சிலர் பிரம்மலோகத்திற்கும்,(13,14) சிலர் வருண லோகத்திற்கும், சிலர் குபேரலோகத்திற்கும் சென்றனர். அந்த மன்னர்களில் சிலர் சூரியலோகத்திற்குச் சென்றனர்.(15)

ராட்சசர்கள் மற்றும் பிசாசங்களுக்கு மத்தியில் சிலர் உத்தரக் குருக்களின் நாட்டுக்குச் சென்றனர். இனிமை நிறைந்த மனத்துடன் திரிந்த வேறு சிலர் தேவர்களின் தோழமையை அடைந்தனர்.(16) இவ்வாறே அந்த உயர் ஆன்ம மனிதர்கள் அனைவரும் தங்கள் வாகனங்கள், விலங்குகள் மற்றும் தங்கள் தொண்டர்களுடன் மறைந்தனர். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, அந்தப் புனித ஓடையின் நீருக்குள் நின்றிருந்தவரும், பேரறமும், சக்தியும் கொண்டவரும், குருக்களுக்கு நன்மை செய்பவரும், பெருந்தவசியுமான வியாசர், விதவைகளாக இருந்த க்ஷத்திரியப் பெண்மணிகளிடம் இந்தச் சொற்களில்,(17,18) “இந்த முதன்மையான பெண்களில், தங்கள் கணவர்கள் அடைந்த உலகத்தை அடைய விரும்புகிறவர்கள், சோம்பலனைத்தையும் கைவிட்டு, புனிதமான பாகீரதிக்குள் விரைவாக மூழ்குவீராக” என்றார்.(19)

அவருடைய இந்தச் சொற்களைக் கேட்ட முதன்மையான பெண்கள், அவற்றில் நம்பிக்கை கொண்டு, தங்கள் மாமனாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு பாகீரதியின் நீருக்குள் மூழ்கினர்.(20) மனித உடல்களில் இருந்து விடுபட்ட அந்தக் கற்புடைய பெண்கள், ஓ! மன்னா, தங்கள் கணவர்களால் அடையப்பட்ட உலகங்களுக்குத் தங்கள் கணவர்களுடன் சென்றனர்.(21) இவ்வாறே அறவொழுக்கம் கொண்டவர்களும், கணவர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களுமான பெண்கள், பாகீரதியின் நீருக்குள் நுழைந்து, மனிதக்குடியிருப்பில் இருந்து விடுபட்டு, தங்கள் கணவர்களால் அடையப்பட்ட உலகங்களுக்குச் சென்று தங்கள் கணவர்களின் துணையை அடைந்தனர்.(22) தெய்வீக வடிவங்களுடன் கூடியவர்களாக, தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாக, தெய்வீக உடுப்புகளையும், மலர்மாலைகளையும் அணிந்து கொண்டு, தங்கள் கணவர்கள் அடைந்த வசிப்பிடங்களான அந்த உலகங்களுக்குச் சென்றனர்.(23) சிறந்த ஒழுக்கத்தையும், பல நற்குணங்களையும் கொண்ட அவர்களது கவலைகள் அனைத்தும் களையப்பட்டு, தங்களுக்கு உரிமையானவையும், அனைத்தையும் கொண்டவையுமான அந்த இன்பலோகங்களுக்குச் சிறந்த தேர்களில் செல்பவர்களாக அவர்கள் காணப்பட்டனர்.(24) பக்திக்கடமைகளில் அர்ப்பணிப்புடைய வியாசர், அந்நேரத்தில் வரங்களை அளிப்பவராக மாறி, அங்கே கூடியிருந்த மனிதர்கள் அனைவரின் விருப்பங்களும் கனியும் வரத்தை அளித்தார்.(25) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், இறந்தவர்களான புனிதர்களுக்கும், உயிருடன் கூடிய மனிதர்களுக்கும் இடையில் நடந்த இந்தச் சந்திப்பைக் கேள்விப் பட்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(26)

இந்தக் கதையை முறையாகக் கேட்கும் மனிதன், தனக்குப் பிடித்தமான அனைத்தையும் அடைவான். உண்மையில், இம்மையிலும், மறுமையிலும் உள்ள ஏற்புடைய பொருட்கள் அனைத்தையும் அவன் அடைவான்.(27) கல்வி கற்றவனும், அறிவியல் அறிந்தவனும், அறவோரில் முதன்மையானவனுமான எந்த மனிதன், பிறர் கேட்கும்படி இந்தக் கதையைச் சொல்வானோ அவன் இம்மையில் பெரும்புகழையும், மறுமையில் மங்கல கதியையும், உற்றார் உறவினர் சேர்க்கையையும், விரும்பத்தக்க பொருட்கள் அனைத்தையும் அடைவான். அத்தகைய மனிதன் தன் வாழ்வாதாரத்திற்காகத் துன்பம் நிறைந்த செயல்களில் ஈடுபடாமல், வாழ்வில் அனைத்து வகை மங்கலப் பொருட்களையும் அடைவான். வேத கல்வி மற்றும் தவங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், பிறர் கேட்க இந்தக் கதையைச் சொல்பவனுமான மனிதன், அறுவடை செய்யப்போகும் வெகுமதிகள் இவையே.(28,29) நல்லொழுக்கம் கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டில் அர்ப்பணிப்புள்ளவர்களும், தாங்கள் அளிக்கும் கொடைகளின் மூலம் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைந்தவர்களும், நேர்மை கொண்டவர்களும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவர்களும், பொய்மையில் இருந்தும், பிறருக்கும் தீங்கிழைக்கும் விருப்பத்தில் இருந்தும் விடுபட்டவர்களும், நம்பிக்கையுடன் கூடியவர்களும், சாத்திரங்களையும், நுண்ணறிவையும் நம்புகிறவர்களுமான மனிதர்கள், அற்புதம் நிறைந்த இந்தப் பர்வத்தைக் கேட்டு மறுமையில் நிச்சயம் உயர்ந்த கதியை அடைவார்கள்” {என்றார் வைசம்பாயனர்}”.(30,31)

மாண்டோர் மீள்வரோ! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 34-மாண்டோர் மீள்வதெப்படி என்று கேட்ட ஜனமேஜயன்; காரணத்துடன் விடையளித்த வைசம்பாயனர்…

சௌதி சொன்னார், “பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் ஜனமேஜயன், தன் மூதாதையர்கள் மீண்டும் தோன்றி மறைந்த கதையைக் கேட்டு உயர்வான நிறைவையடைந்தான்.(1) இன்பத்தால் நிறைந்த அவன், மீண்டும் வைசம்பாயனரிடம், இறந்தோர் மீண்டும் தோன்றும் காரியத்தைக் குறித்துக் கேட்கும் வகையில், “உடல் அழிந்தவர்கள் அதே வடிவில் மீண்டும் தோன்றுவது எவ்வாறு சாத்தியம்?” என்று கேட்டான்.(2) இவ்வாறு கேட்கப்பட்டவரும், பேசுபவர்களில் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான அந்த வியாசரின் சீடர் {வைசம்பாயனர்}, ஜனமேஜயனிடம் இவ்வாறு பதிலளித்தார்.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “செயல்கள் (அதன் விளைவுகளை அனுபவிக்காமல், அல்லது தாங்கிக் கொள்ளாமல்) ஒருபோதும் அழிவடைவதில்லை என்பது நிச்சயமானது. ஓ! மன்னா, செயல்களின் மூலமே உடல்கள் பிறக்கின்றன; குணங்களும் பிறக்கின்றன.(4) அடிப்படையான பெரும்பூதங்களுக்கும், அனைத்தின் தலைவனுக்கு உள்ள உறவின் விளைவால் அவை நித்தியமானவையாக இருக்கின்றன. அவை நித்தியமானவற்றுடனே இருக்கின்றன. அதே போலவே, நித்தியமற்றவை அழியும்போது அவை அழிவடைவதில்லை.(5) முயற்சியின்றிச் செய்யப்படும் செயல்கள் உண்மையானவையும், முதன்மையானவையும், உண்மை பயனைக் கொடுப்பவையுமாகும். எனினும், சாதிப்பதற்கு முயற்சி தேவைப்படும் செயல்களுடன் தொடர்புடைய ஆன்மா இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.(6)

அவ்வாறு (இன்ப துன்பத்துடன்) இணைந்திருந்தாலும், ஒரு கண்ணாடியில் உயிரினங்கள் பிரதிபலிக்கப்படுவதைப் போலவே அவற்றால் அஃது ஒருபோதும் மாற்றமடைவதில்லை என்பது ஒரு குறிப்பிட்ட உள்ளுணர்வாகும். அஃது ஒருபோதும் அழிவடைவதில்லை[1].(7) (நல்ல அல்லது தீய கனிகளை {பலன்களைத்} தாங்கிக் கொள்வதன் மூலமோ, அனுபவிப்பதன் மூலமோ) ஒருவனுடைய செயல்கள் தீராதவரை, அவன் உடலையே சுயமென {ஆத்மாவெனக்} கருதுகிறான். எனினும், செயல்கள் தீர்ந்த மனிதன், உடலை சுயமெனக் கருதமால் சுயத்தை வேறொன்றாக ஏற்றுக் கொள்கிறான்.(8) (அடிப்படை பூதங்கள், புலன்கள் முதலியன உள்ளிட்ட) இருப்பிலுள்ள பல்வேறு பொருட்கள் ஓர் உடலை அடைந்து ஒன்று கலக்கின்றன. (உடலுக்கும், சுயத்திற்கும் இடையில் உள்ள) வேறுபாட்டைப் புரிந்த ஞானம் கொண்ட மனிதர்களுக்கு அந்தப் பொருட்களே நித்தியமானவையாகின்றன[2].(9)குதிரை வேள்வியில், குதிரையைக் கொல்லும் காரியத்தில் இந்த ஸ்ருதி கேட்கப்படுகிறது. உடல்படைத்த உயிரினங்களின் நிச்சய உடைமைகளான உயிர்மூச்சுகள் (மற்றும் புலன்கள் முதலியவை), அவை மறுமைக்குச் செல்லும்போதும் நித்தியமாக நீடித்திருக்கின்றன.(10) ஓ! மன்னா {ஜனமேஜயா}, உனக்கு ஏற்புடையதாக இருந்தால், நான் உனக்கான நன்மையைச் சொல்வேன். நீ வேள்வி செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தேவ பாதைகள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பாய்.(11) உன்னுடைய எந்த வேள்விக்குமான ஆயத்தங்கள் செய்யப்பட்ட போது, தேவர்கள் உனக்கு நன்மை செய்ய விரும்பினர். உண்மையில், தேவர்கள் இவ்வாறான மனோநிலையை அடைந்து உன் வேள்விக்கு வந்த போது, கொல்லபட்ட விலங்குகளை (இம்மையில் இருந்து மறுமைக்கு இட்டுச் செல்லும்) பாதையின் தலைவர்களாக அவர்களே இருந்தனர்[3].(12)இந்தக் காரணத்தினாலேயே, நித்தியமானவர்கள் (ஜீவர்கள்), வேள்விகளில் தேவர்களைத் துதிப்பதன் மூலம் சிறந்த கதிகளை அடைவதில் வெல்கிறார்கள். அடிப்படையான ஐந்து பூதங்கள் நித்தியமானவையெனும்போது, ஆன்மாவும் நித்தியமெனும்போது, (உறையில் பொதிந்த ஆன்மாவான) புருஷன் என்றழைக்கப்படுபவனும் அவ்வாறே ஆகிறான்.(13) இஃது இவ்வாறிருக்கும்போது, ஓர் உயிரினம் பல்வேறு வடிவங்களை ஏற்கும் எனக் காண்பவன், பிழையான புரிதலைக் கொண்டவன் என்று கருதப்படுகிறான். பிரிவில் அதீத துயரில் ஈடுபடுபவன் முட்டாளென நான் நினைக்கிறேன்.(14) பிரிவில் தீமையைக் காணும் ஒருவன், சேர்க்கையைக் கைவிட வேண்டும். தனியாக நிற்பதன் மூலம் சேர்க்கைகள் அமையாமல், பிரிவிலேயே உலகத் துன்பங்கள் பிறக்கின்றன என்பதால் கவலைகள் கைவிடப்படுகின்றன[4].(15)உடலுக்கும், சுயத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்பவன் மட்டுமே, பிழையான தீர்மானத்தில் {தவறான நம்பிக்கையில்} இருந்து விடுபடுகிறான், வேறு எவரும் விடுபடுவதில்லை. மற்றொன்றை (சுயத்தை) அறிந்தவன் உயர்ந்த புத்தியை அடைந்து, பிழையில் இருந்து விடுபடுகிறான்[5].(16) உயிரினங்களைப் பொறுத்தவரையில், அவை புலப்படாத நிலையில் இருந்து தோன்றி, மீண்டும் புலப்படாத நிலைக்குள்ளேயே மறைந்து போகின்றன. நான் அவனை அறிவதில்லை. அவனும் என்னை அறிவதில்லை. என்னைப் பொறுத்தவரையில், துறவு இன்னும் எனதாகவில்லை[6].(17) பலமற்றவன் எந்த உடலில் இருந்து தன் செயல்கள் அனைத்தையும் செய்கிறானோ அவன் தன் செயல்களுக்கான கனிகளை இன்புறவோ, பொறுத்துக் கொள்ளவோ செய்கிறான்.(18) அந்தச் செயல் மனச்செயலாக இருந்தால் அதன் விளைவுகளும் மனத்தால் தாங்கவோ, இன்புறவோ கூடியதாக இருக்கும், அஃது உடலைக் கொண்டு செய்யப்படுவதாக இருந்தால், அதன் விளைவுகளும் உடலால் தாங்கவோ, இன்புறவோ கூடியதாக இருக்கும்” {என்றார் வைசம்பாயனர்}.(19)

அவப்ருதஸ்நானம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 35-பரிக்ஷித்தைக் காட்ட வேண்டிய ஜனமேஜயன்; பரிக்ஷித், சமீகர் மற்றும் சிருங்கி ஆகியோரை காட்டிய வியாசர்; வேள்வி முடிவில் நீராடி ஆஸ்தீகரை வணங்கிய ஜனமேஜயன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் திருதராஷ்டிரன் ஒருபோதும் தன் மகன்களைக் கண்டதில்லை. ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, அந்த முனிவரின் {வியாசரின்} அருள் மூலம் கண் பார்வையை அடைந்த அவன், தன்னைப் போலவே இருந்த தன் பிள்ளைகளை முதல் முறையாகக் கண்டான்.(1) மனிதர்களில் முதன்மையானவனான அந்தக் குரு ஏகாதிபதி, மன்னர்களின் கடமைகள், வேதங்கள், உபநிஷத்துகள் அனைத்தையும் கற்று, (அவற்றிலிருந்தே) நிச்சய புத்தியையும் அடைந்தான்.(2) பெரும் ஞானம் கொண்ட விதுரன்தன் தவச் சக்தியின் மூலம் உயர்ந்த வெற்றியை அடைந்தான். திருதராஷ்டிரனும், தவசியான வியாசரைச் சந்தித்தன் விளைவால் பெரும் வெற்றியை அடைந்தான்”.(3)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “வியாசர் எனக்கொரு வரம் தர மனம் கொண்டு, என் தந்தை {பரீக்ஷித்} இவ்வுலகில் இருந்து செல்லும்போது எவ்வளவு வயதுடன் இருந்தாரோ, அவர் என்ன உடையை உடுத்துவது வழக்கமோ அதே வடிவத்தில், அதே உடையுடன் அன்பு கூர்ந்து அவரை {பரீக்ஷித்தை} எனக்குக் காட்டினால், நீர் சொன்ன அனைத்தையும் நான் நம்புவேன்.(4) அத்தகைய காட்சி எனக்கு மிக ஏற்புடையதே. உண்மையில், நான் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக என்னைக் கருதிக் கொள்வேன். நான் ஒரு குறிபிட்ட தீர்மானத்தை அடைந்திருக்கிறேன். ஓ!, இந்த முதன்மையான முனிவரின் {வியாசரின்} அருளின் மூலம் என் விருப்பம் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்படட்டும்” என்று கேட்டான்”.(5)

சௌதி {லோமஹர்சனரின் முனிக்கூட்டத்திடம்} சொன்னார், “மன்னன் ஜனமேஜயன் இந்தச் சொற்களைச் சொன்ன பிறகு, பெரும் சக்தியும், நுண்ணறிவும் கொண்ட வியாசர், தன் அருளைக் காட்டும் வகையில், (வேறு உலகில் {மறுமையில்} இருந்து) பரிக்ஷித்தைக் கொண்டு வந்தார்.(6) மன்னன் ஜனமேஜயன், பேரழகுடன் கூடியவனும், சொர்க்கத்தில் இருந்து வந்தவனுமான தன் அரசத் தந்தை (இவ்வுலகில் இருந்து செல்லும் காலத்தில்) இருந்த அதே வயது மற்றும் அதே வடிவத்துடன் அவனைக் கண்டான்.(7) உயர் ஆன்ம சமீகர், அவரது மகனான சிருங்கின் ஆகியோரும் அதே போல அங்குக் கொண்டு வரப்பட்டனர். மன்னனின் ஆலோசகர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அவர்களைக் கண்டனர்.(8) மன்னன் ஜனமேஜயன், தன் வேள்வியில் இறுதி நீராடலைச் செய்து பெரிதும் மகிழ்ந்தான். அவன் புனித நீரைத் தன் மீது ஊற்றிக் கொண்டதைப் போலவே தன் தந்தையின் மீதும் ஊற்றினான்.(9)

இறுதி நீராடலைச் செய்த மன்னன், யாயாவரர்களின் குலத்தில் பிறந்தவரும், ஜரத்காருவின் மகனுமான மறுபிறப்பாளர் ஆஸ்தீகரிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(10) “ஓ! ஆஸ்தீகரே, என் கவலைகள் அனைத்தையும் அகற்றியவரும், என்னுடைய தந்தையுமான இவர் {பரிக்ஷித்}, என்னால் காணப்பட்டதால், என்னுடைய இந்த வேள்வி பல அற்புதம் நிறைந்த நிகழ்வுகள் நிறைந்ததாயிற்று” என்றான்.(11)ஆஸ்தீகர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, தவங்களின் பெரிய கொள்ளிடமும், புராதன முனிவரும், தீவில் பிறந்தவருமான வியாசர் எந்த வேள்வியில் இருக்கிறாரோ, அந்த வேள்வியைச் செய்தவன் நிச்சயம் ஈருலகங்களையும் {இம்மையையும், மறுமையையும்} வெல்வான்.(12) ஓ! பாண்டவர்களின் மகனே, நீ அற்புதம் நிறைந்த ஒரு வரலாற்றைக் கேட்டிருக்கிறாய். பாம்புகள் எரிக்கப்பட்டுச் சாம்பலாகி, உன் தந்தையின் பாதச்சுவடுகளைப் பின்பற்றிச் சென்றன.(13) ஓ! ஏகாதிபதி, தக்ஷகன், உன்னுடைய நேர்மையின் காரணமாகத் துன்பம் நிறைந்த விதியில் இருந்து பெருஞ்சிரமத்துடன் தப்பித்துவிட்டான். முனிவர்கள் அனைவரும் வழிபடப்பட்டனர். உன்னுடைய உயர் ஆன்ம தந்தையால் அடையப்பட்ட கதியையும் நீ கண்டாய்.(14) பாவத்தைத் தூய்மையாக்கும் இந்த வரலாற்றைக் கேட்டதன் மூலம் நீ அபரிமிதமான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டியிருக்கிறாய். இந்த மனிதர்களில் முதன்மையானவனைக் கண்டதன் மூலம் உன் இதயத்தில் உள்ள முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன.(15) அறச் சிறகுகளை ஆதரிப்பவர்கள் எவரோ, நல்லொழுக்கமும், சிறந்த மனநிலையும் கொண்டவர்கள் எவரோ, எவரைக் கண்டால் பாவங்கள் பொடிபடுமோ அவர்களை நாம் அனைவரும் வணங்க வேண்டும்” என்றார் {ஆஸ்தீகர்}”.(16)

சௌதி தொடர்ந்தார், “மறுபிறப்பாளர்களில் முதன்மையான அவரிடம் {ஆஸ்தீகரிடம்} இருந்து இதைக் கேட்ட மன்னன் ஜனமேஜயன், அனைத்து வழியிலும் அந்த முனிவரை மீண்டும் மீண்டும் கௌரவித்து வழிபட்டான்.(17) கடமைகள் அனைத்தையும் அறிந்த அவன், அதன் பிறகு, மங்கா மகிமை கொண்ட முனிவர் வைசம்பாயனரிடம், மன்னன் திருதராஷ்டிரனனுடைய காட்டு வாசத்தின் தொடர்ச்சியைக் கேட்டான்” {என்றார் சௌதி}.(18)

நகரந்திரும்பல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 36-ஆசிரமம் திரும்பியது; வியாசரின் ஆணைப்படி யுதிஷ்டிரனை நகரம் திரும்ப வற்புறுத்திய திருதராஷ்டிரன்; பாண்டவர்கள் சென்றது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}“நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருடன் கூடிய தன் மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரைக் கண்ட பிறகு மனிதர்களின் ஆட்சியாளனான திருதராஷ்டிரனும், மன்னன் யுதிஷ்டிரனும் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் பிள்ளைகள் மீண்டும் தோன்றி மிக அற்புதமான காட்சியைக் கண்ட அந்த அரசமுனி திருதராஷ்டிரன் துன்பமற்றவனாகி, (பாகீரதியின் கரைகளில் இருந்து) தன் ஆசிரமத்திற்குத் திரும்பினான்.(2) பொதுமக்களும், பெரும் முனிவர்கள் அனைவரும், திருதராஷ்டிரனால் விடை கொடுத்து அனுப்பப்பட்டுத் தாங்கள் விரும்பிய இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(3) மனைவியருடன் கூடிய உயர் ஆன்ம பாண்டவர்கள், ஒரு சிறிய பரிவாரத்துடன், அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.(4)

அப்போது மறுபிறப்பாள முனிவர்களாலும், பிற மக்களாலும் கௌரவிக்கப்படுபவரான சத்தியவதியின் மகன் {வியாசர்} அந்த ஆசிரமத்திற்கு வந்து திருதராஷ்டிரனிடம்,(5) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரா, ஓ! குரு குலத்தின் மகனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. பெரும் ஞானம், புனிதச் செயல்கள், தவச் செல்வம், சிறந்த குருதி, வேதங்கள் மற்றும் அதன் அங்கங்களில் அறிவு, பக்தி, வயது, பெரும் நாநயம் ஆகியவற்றைக் குறித்த பல்வேறு உரையாடல்களை நீ கேட்டிருக்கிறாய்.(6,7) மீண்டும் நீ கவலையில் உன் மனத்தை நிலைக்கச் செய்யாதே. ஞானம் கொண்ட ஒருவன் ஒருபோதும் தீயூழால் கலங்கமாட்டான். தெய்வீக வடிவைக் கொண்ட நாரதரிடமிருந்து தேவ புதிர்கள் {ரகசியங்களை} நீ கேட்டிருக்கிறாய்.(8) உன் பிள்ளைகள் அனைவரும், க்ஷத்திரிய நடைமுறைகளை நோற்றதன் மூலம் ஆயுதங்களால் புனிதப்படுத்தப்பட்ட மங்கல கதியை அடைந்தனர்.(9) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான இந்த யுதிஷ்டிரன், தன் தம்பிகள், மனைவிகள் மற்றும் உற்றார் உறவினருடன் உன் அனுமதிக்காகக் காத்திருக்கிறான்.(10) நீ இவனை அனுப்புவாயாக. அவன் தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்று அதை ஆளட்டும். இவ்வாறு காட்டில் வசித்தவாறே இவர்கள் ஒரு மாதத்தைக் கடத்திவிட்டனர்.(11) ஓ! மன்னா, அரசுரிமையெனும் நிலை எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். ஓ! குரு குலத்தோனே, ஒரு நாடு பல பகைவர்களைக் கொண்டதாகும்” என்றார் {வியாசர்}.(12)

ஒப்பற்ற சக்தி கொண்ட வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், வாக்கை நன்கு அறிந்தவனுமான குரு மன்னன் {திருதராஷ்டிரன்}, யுதிஷ்டிரனை அழைத்து, அவனிடம்,(13) “ஓ! அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ உன் தம்பிகளுடன் சேர்ந்து நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, உன் கருணையின் மூலம் என்வழியில் இனியும் எந்தத் துன்பமும் நிற்கவில்லை.(14) ஓ! மகனே, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} இருக்கையில் நான் உன்னோடு இருந்ததைப் போலவே இங்கேயும் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். ஓ! கல்விமானே, உன்னை என் பாதுகாவலனாகக் கொண்டு நான் ஏற்புடைய பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கிறேன்.(15) ஒரு தந்தை தன் மகனிடம் இருந்து பெறும் தொண்டுகளனைத்தையும் நான் உன்னிடம் இருந்து பெற்றுவிட்டேன். நான் உன்னிடம் நிறைவுடன் இருக்கிறேன். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன்னிடம் எனக்குச் சிறு நிறைவின்மையும் இல்லை. ஓ! மகனே, இனியும் எந்தத் தாமதமும் செய்யாமல் நீ செல்வாயாக.(16)

உன்னைச் சந்தித்ததில் இருந்து நான் என் தவங்களை விட்டுவிட்டேன். உன்னைச் சந்தித்தன் விளைவால் மட்டுமே தவங்களுடன் கூடிய என்னுடைய உடலை என்னால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது[1].(17) மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகளை உண்டு, நான் நோற்கும் நோன்புகளுக்கு இணையானவற்றை நோற்று வரும் உன்னுடைய தாய்மாரான இவர்கள் இருவரும் நீண்ட காலம் உயிரோடு இருக்க மாட்டார்கள்.(18) உன்னை நான் சந்தித்தன் (பலன்) மூலமும், வியாசரின் தவப் பலத்தின் மூலமும் மறுமையில் வசித்தவர்களான என் பிள்ளைகளும், பிறரும் எங்களால் காணப்பட்டனர்.(19) ஓ! பாவமற்றவனே, என் வாழ்வின் நோக்கத்தை நான் எட்டிவிட்டேன். நான் இப்போது கடுந்தவங்களைப் பயில்வதில் என்ன நிறுவிக்கொள்ள நான் விரும்புகிறேன். எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்.(20) ஈமப்பிண்டம், புகழ், சாதனைகள் மற்றும் நமது மூதாதையரின் குலம் ஆகியவை இப்போதும் உன்னையே சார்ந்திருக்கின்றன. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்றோ, நாளையோ நீ புறப்படுவாயாக. ஓ! மகனே {யுதிஷ்டிரா}, தாமதிக்காதே.(21) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மன்னர்களின் கடமைகள் என்னென்ன என்பதை நீ மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறாய். இன்னும் நான் வேறு என்ன உனக்குச் சொல்ல முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஓ! பெரும்பலம் கொண்டவனே, இனியும், உன்னிடம் இருந்து எந்தத் தேவையும் எனக்கில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}”.(22)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொன்ன அந்த (முதிய) ஏகாதிபதியிடம், மன்னன் யுதிஷ்டிரன், “ஓ! அறத்தின் ஒவ்வொரு விதியையும் அறிந்தவரே, இவ்வழியில் என்னை நீர் கைவிடுதல் உமக்குத் தகாது. நான் எந்தக் குற்றத்தையும் செய்த குற்றவாளியில்லை.(23) என் சகோதரர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அவர்கள் விருப்பபடி செல்லட்டும். உறுதியான நோன்புகளுடன் நான் உமக்கும், என்னிரு தாய்மாருக்கும் பணிவிடை செய்வேன்” என்று மறுமொழி கூறினான்.(24)

அப்போது காந்தாரி {யுதிஷ்டிரனிடம்} அவனிடம், “ஓ! மகனே, இவ்வாறு வேண்டாம். கேட்பாயாக, குரு குலம் இப்போது உன்னையே சார்ந்திருக்கிறது. என்னுடைய மாமனாரின் ஈமப் பிண்டமும் உன்னையே சார்ந்திருக்கிறது. ஓ! மகனே, நீ செல்வாயாக.(25) நாங்கள் உன்னால் போதுமான அளவுக்குத் தொண்டாற்றப்பட்டு, கௌரவிக்கப்பட்டிருக்கிறோம். மன்னர் {திருதராஷ்டிரர்} சொல்வதையே நீ செய்ய வேண்டும். உண்மையில், ஓ! மகனே, நீ உன் தந்தையின் {திருதராஷ்டிரரின்} ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்றாள்”.(26)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “காந்தாரியால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், அன்புக்கண்ணீரால் குளித்த கண்களைத் துடைத்துக் கொண்டு, புலம்பியபடியே இந்தச் சொற்களைச் சொன்னான்,(27) “மன்னரும், பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும் என்னைக் கைவிடுகின்றனர். துயரில் நிறைந்திருக்கும் என்னால் எவ்வாறு உங்களை விட்டுச் செல்ல முடியும்?(28) எனினும், ஓ! நீதிமிக்கப் பெண்ணே, அதே வேளையில் நான் உன் தவங்களை ஒருபோதும் தடுக்கத் துணிய மாட்டேன். தவங்களைவிட உயர்ந்தன வேறேதும் இல்லை. தவங்களின் மூலமே ஒருவன் பரமனை அடைகிறான்.(29) ஓ! ராணி, என் இதயம் இனியும் முன்பைப் போல நாட்டை நோக்கித் திரும்பவில்லை. இப்போது என் மனம் முழுமையாகத் தவங்களிலேயே நிலைத்திருக்கிறது.(30) மொத்த பூமியும் இப்போது வெறுமையாக இருக்கிறது. ஓ! மங்கலப் பெண்மணியே, அவள் {பூமாதேவி} இனியும் என்னை நிறைவடையச் செய்யவில்லை. நம் உற்றார் உறவனரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. நமது பலம் முன்பைப்போல இல்லை.(31) பாஞ்சாலர்கள் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றனர். பெயரளவில் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள். ஓ! மங்கலப் பெண்மணியே, அவற்றை மறுசீரமைப்பதிலும், வளர்ச்சியிலும் துணை செய்யக்கூடிய எவரையும் நான் காணவில்லை.(32) அவர்கள் அனைவரும் போர்க்களத்தில் துரோணரால் எரிக்கப்பட்டுச் சாம்பலாகிவிட்டனர். எஞ்சியிருந்தவர்களும் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமரால்} இரவில் கொல்லப்பட்டனர்.(33) எங்கள் நண்பர்களாக இருந்த சேதிகளும், மத்ஸ்யர்களும் இப்போது {உயிருடன்} இல்லை. வாசுவதேவன் {கிருஷ்ணன்} காத்ததால் விருஷ்ணி இனக்குழு மட்டுமே எஞ்சியிருக்கிறது.(34) விருஷ்ணிகளைக் கண்டு மட்டுமே நான் வாழ விரும்புகிறேன். எனினும், அறம், செல்வம் மற்றும் இன்பத்தை ஈட்டுவதில் எனக்குரிய விருப்பத்தின் காரணமாகவே நான் உயிர்வாழ விரும்புகிறேன். நீ எங்கள் அனைவரின் மீதும் மங்கலப் பார்வையைச் செலுத்துவாயாக. உன்னைப் பார்ப்பதே எங்களுக்குக் கடினமாகும்.(35) மன்னர், மிகக் கடுமையானவையும், தாங்கிக் கொள்ள முடியாதவையுமான தவப்பயிற்சியைத் தொடங்கப் போகிறார்” என்றான் {யுதிஷ்டிரன்}.

இந்தச் சொற்களைக் கேட்டவனும், போரின் தலைவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சகாதேவன்,(36) கண்ணீரில் குளித்த கண்களுடன் யுதிஷ்டிரனிடம், “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் என் தாயை விட்டுச் செல்லத் துணியேன்.(37) நீர் விரைவாகத் தலைநகரம் திரும்புவீராக. ஓ! பலமிக்கவரே, நான் தவங்களைப் பயில்வேன். இங்கேயே தவங்களின் மூலம் நான் என் உடலை மெலியச் செய்து,(38) மன்னர் மற்றும் என்னுடைய தாய்மார்களான இவர்களின் பாதங்களுக்குத் தொண்டாற்றுவதில் ஈடுபடுவேன்” என்றான்.

அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரனைத் {சகாதேவனைத்} தழுவிய பிறகு குந்தி, “ஓ! மகனே, செல்வாயாக. இவ்வாறு பேசாதே.(39) நான் சொல்வதைச் செய்வாயாக. நீங்கள் அனைவரும் இங்கிருந்து செல்வீராக. அமைதி உங்களுடையதாகட்டும். மகன்களே, மகிழ்ச்சி உங்களுடையதாகட்டும்.(40) நீங்கள் இங்கே தங்கினால் எங்கள் தவங்கள் தடைபடும். நான் உன்னிடம் கொண்டுள்ள பற்றின் காரணமாக உயர்வான என் தவங்களில் இருந்து நான் வீழ்ந்துவிடுவேன்.(41) எனவே, ஓ! மகனே, எங்களை விட்டுச் செல்வாயாக. ஓ! பெரும்பலம் கொண்டவனே, எங்களுக்கிருக்கும் வாழ்நாள் காலம் சிறிதே” என்றாள்.(42) இவற்றாலும், குந்தியின் இன்னும் பல்வேறு பேச்சுகளாலும், சகாதேவன் மற்றும் மன்னன் யுதிஷ்டிரனின் மனங்கள் நன்கு நிலைநிறுத்தப்பட்டன. குருகுலத்தில் முதன்மையான அவர்கள், தங்கள் தாயிடமும், (முதிய) ஏகாதிபதியிடமும் அனுமதியைப பெற்றுக் கொண்டு, பின்னவர்களை வணங்கி, விடைபெற்றுக் கொள்ளத் தொடங்கினர்.(43)

யுதிஷ்டிரன், “மங்கல ஆசிகளால் மகிழ்ச்சியடைந்த நாங்கள் தலைநகரத்திற்குத் திரும்பப் போகிறோம். உண்மையில், ஓ! மன்னா, உமது அனுமதியைப் பெற்றுக் கொண்டு எங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நாங்கள் இந்த ஆசிரமத்தை விட்டகல்வோம்” என்றான்.(44)

உயர் ஆன்மா கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்ட அரச முனி திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனை ஆசீர்வதித்து, அவனுக்கு அனுமதி அளித்தான்.(45) பெரும்பலம் கொண்டோர் அனைவரிலும் முதன்மையான பீமனை மன்னன் {திருதராஷ்டிரன்} தேற்றினான். பெருஞ்சக்தி கொண்டவனும், பெரும் நுண்ணறிவுமிக்கவனுமான பீமன், மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} தன் பணிவைக் காட்டினான்.(46) அர்ஜுனனைத் தழுவிக் கொண்டு, மனிதர்களில் முதன்மையானவர்களான இரட்டையர்களையும் கட்டிப் பிடித்து, மீண்டும் மீண்டும் அவர்களுக்கு ஆசிகூறிய குரு மன்னன் அவர்கள் புறப்படுவதற்கான அனுமதியையும் கொடுத்தான்.(47)

அவர்கள் காந்தாரியின் பாதத்தையும் வழிபட்டு அவளிடமும் ஆசிகளைப் பெற்றனர். அப்போது அவர்களுடைய அன்னனையான குந்தி, அவர்களுடைய தலையை முகர்ந்து பார்த்து அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினாள். பிறகு தாயிடம் பால் குடிக்கத் தடை செய்யப்பட்ட கன்றுகளைப் போல அவர்கள் மன்னனை {திருதராஷ்டிரனை} வலம்வந்தனர். உண்மையில் அவர்கள் அவனை நிலைத்த பார்வையுடன் கண்டு மீண்டும் மீண்டும் அவனை வலம் வந்தனர்.(48,49) அப்போது திரௌபதியின் தலைமையிலான அந்தக் கௌரவக் குடும்பத்துப் பெண்கள் அனைவரும், சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி மாமனாரை வழிபட்டு. அவனிடம் அனுமதி பெற்றுக் கொண்டனர்.(50) காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் ஒவ்வொருவரையும் தழுவி அவர்களுக்கு ஆசிகூறி, விடை கொடுத்து அனுப்பினர். அவர்களுடைய மாமியார் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொன்னாள். விடைபெற்றுக் கொண்ட அவர்கள் தங்கள் கணவர்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.(51)

அப்போது அங்கிருந்த தேர்வீரர்கள், “பூட்டுங்கள், பூட்டுங்கள்” என்று சொன்ன உரத்த ஒலியும், ஓட்டகங்கள் மற்றும் குதிரைகளின் ஒலிகளும் கேட்டன.(52) மன்னன் யுதிஷ்டிரன், தன் மனைவிகளோடும், துருப்புகளுடனும், உற்றார் அனைவருடனும் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(53)

புத்ரதர்சன உப பர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ ஆஸ்ரமவாஸிக பர்வம்-ஸ்ரீ ஆஸ்ரமவாஸ உப பர்வம்-ஸ்ரீ திருதராஷ்டிர நீதி உப பர்வம்-

October 19, 2025

யுதிஷ்டிரனின் அரசாட்சி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 01-யுதிஷ்டிரன் அரசாட்சி; காந்தாரியிடம் குந்தி கொண்ட மதிப்பு; பீமனைத் தவிர ஏனையோர் யுதிஷ்டிரனின் கட்டளையை ஏற்றுத் திருதராஷ்டிரனை மதித்தது…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “என் பாட்டன்மார்களான பாண்டவர்கள், தங்கள் நாட்டை அடைந்த பிறகு, உயர் ஆன்ம மன்னனான திருதராஷ்டிரனிடம் எவ்வாறு நடந்து கொண்டனர்?(1) உண்மையில், மகன்களும், அமைச்சர்களும் கொல்லப்பட்டவனும், புகலிடமேதும் அற்றவனும், செல்வாக்கை இழந்தவனுமான அந்த மன்னன் எவ்வாறு நடந்து கொண்டான்? பெரும்புகழைக் கொண்டவளான காந்தாரி எவ்வாறு நடந்து கொண்டாள்?(2) உயர் ஆன்மாக்களான என் பாட்டன்மார்கள் எத்தனை வருடங்கள் நாட்டை ஆண்டனர்? இவையனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தங்கள் பகைவர்கள் அனைவரையும் கொன்று, தங்கள் நாட்டைத் திரும்பப் பெற்ற அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள், திருதராஷ்டிரனைத் தலைமையாகக் கொண்டு பூமியை ஆண்டனர்.(4) விதுரன், சஞ்சயன், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், திருதராஷ்டிரனின் வைசிய மனைவிக்குப் பிறந்த மகனுமான யுயுத்சு ஆகியோர் திருதராஷ்டிரனுக்குப் பணிவிடை செய்தனர்.(5) அனைத்துக் காரியங்களிலும், பாண்டவர்கள் அந்த மன்னனின் {திருதராஷ்டிரனின்} கருத்தைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். உண்மையில், பதினைந்து வருட காலம் அவர்கள் அந்த முதிர்ந்த மன்னனின் ஆலோசனையின் பேரிலேயே அனைத்துக் காரியங்களையும் செய்தனர்.(6) அந்த வீரர்கள், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் விருப்பங்களுக்கு ஏற்புடைய வகையில், அந்த ஏகாதிபதியிடம் {திருதராஷ்டிரனிடம்} அடிக்கடி சென்று, அவனது பாதங்களை வழிப்பட்டு, அவன் அருகில் அமர்ந்தனர்.(7) தங்கள் தலைகளை அன்புடன் முகர்ந்து பார்க்கும் திருதராஷ்டிரனின் ஆணையின் பேரிலேயே அவர்கள் அனைத்தையும் செய்தனர்.

குந்திபோஜனின் மகளும் {குந்தியும்} அனைத்துக் காரியங்களிலும் காந்தாரிக்குக் கீழ்படிந்தாள்.(8) திரௌபதி, சுபத்திரை மற்றும் பாண்டவப் பெண்கள் பிறரும், அந்த முதிர்ந்த மன்னனும், ராணியும் தங்கள் மாமனாரும், மாமியாருமாக இருப்பதைப் போல அவர்களிடம் நடந்து கொண்டனர்.(9) அரச பயன்பாட்டுக்குத் தகுந்த மேன்மையான வகையைச் சேர்ந்தவையும், விலைமதிப்புமிக்கவையும், படுக்கைகள், ஆடைகள், ஆபரணங்கள், உணவு, பானங்கள் மற்றும் அனுபவிக்கத்தகுந்த பிற பொருட்கள்(10) மன்னன் யுதிஷ்டிரனால் திருதராஷ்டிரனுக்குக் கொடுக்கப்பட்டன. அதே போலக் குந்தியும் மூத்தோரிடம் நடந்து கொள்வதைப் போலக் காந்தாரியிடம் நடந்து கொண்டாள்.(11) ஓ! குரு குலத்தோனே, மகன்கள் கொல்லப்பட்டவனான அந்த முதிர்ந்த மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} விதுரன், சஞ்சயன், யுயுத்சு ஆகியோர் பணிவிடை செய்தனர்.(12) மிக மேன்மையான பிராமணரான துரோணரின் அன்புக்குரிய மைத்துனரும், வலிமைமிக்க வில்லாளியுமான கிருபரும் மன்னனைக் கவனித்துக் கொண்டார்.(13) புனித வியாசரும் அந்த முதிர்ந்த மன்னனை {திருதராஷ்டிரனை} அடிக்கடிச் சந்தித்து, பழங்கால முனிவர்கள், தெய்வீகத் தவசிகள், பித்ருக்கள் மற்றும் ராட்சசர்களின் வரலாறுகளை அவனுக்குச் சொல்லி வந்தார்.(14)

திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில் விதுரன், அறத்தகுதிகளுக்குரிய செயல்கள் அனைத்தையும், நீதி நிர்வாகம் தொடர்புடைய அனைத்தையும் கண்காணித்துவந்தான்.(15) விதுரனுடைய சிறந்த கொள்கையின் மூலமாக {நல்ல நீதியினால்}, நிலப்பிரப்புகள் மற்றும் தொண்டர்களிடம் {ஸாமந்தர்களிடம் / பக்கத்து நாட்டரசர்களிடம்} இருந்து ஏற்புடைய எண்ணற்ற தொண்டுகளைச் சொற்ப செல்வத்தைச் செலவாகக் கொண்டே பாண்டவர்கள் பெற்றனர்.(16) மன்னன் திருதராஷ்டிரன், கைதிகளை விடுவித்து, மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை மன்னித்தான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இதில் ஒருபோதும் எதனையும் சொல்லாமல் இருந்தான்.(17) அம்பிகையின் மகன் {திருதராஷ்டிர்ன} இன்பச் சுற்றுலாக்களுக்குச் சென்ற சந்தர்ப்பங்களில், பெரும் சக்தி கொண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன் அனுபவிக்கத் தகுந்த இன்பொருட்கள் அனைத்தையும் அவனுக்குக் கொடுத்தனுப்பினான்.(18) ஆராலிகர்கள், பழச்சாறு செய்பவர்கள் {ஸூபகாரர்கள்}, ராககாண்டவர்கள் {ராகஷாடவிகர்கள்} ஆகியோர் முன்பு போலவே மன்னன் திருதராஷ்டிரனுக்குப் பணிவிடைகளைச் செய்தனர்[1].(19)பாண்டுவின் மகன்கள், விலைமதிப்புமிக்க ஆடைகளையும், பல்வேறு வகை மாலைகளையும் திரட்டி அவற்றை முறையாகத் திருதராஷ்டிரனுக்கு அளித்தனர்.(20) அந்த முதிர்ந்த மன்னன் செழிப்புடன் இருந்த காலத்தைப் போலவே, மைரேய மது வகைகளையும்[2], பல்வேறு வகை மீன்களையும், நறும்பானங்கள் மற்றும் தேனையும், (பல்வேறு பொருட்களைக்) கலந்து பல்வேறு இனிய வகை உணவுகளையும் செய்து அவனுக்குக் கொடுக்கச் செய்தனர்.(21) அங்கே அடுத்தடுத்து வந்த பூமியின் மன்னர்களும், முன்பு போலவே முதிர்ந்த குரு ஏகாதிபதிக்குக் காத்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.(22)குந்தி, திரௌபதி, பெரும்புகழைக் கொண்ட சாத்வதக் குலத்தவள் {சுபத்திரை}, பாம்புத் தலைவனின் மகளான உலூபி, ராணி சித்ராங்கதை,(23) ஓ! மனிதர்களின் தலைவா, திருஷ்டகேதுவின் தங்கை, ஜராசந்தனின் மகள் ஆகியோரும், இன்னும் பல பெண்களும்,(24) அனைத்துப் பணிகளையும் செய்யும் பணிப் பெண்களைப் போலச் சுபலனின் மகளிடம் {காந்தாரியிடம்} காத்திருந்தனர் {பணிவிடை செய்து கொண்டிருந்தனர்}. தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்த திருதராஷ்டிரன் எக்காரியத்தினாலும் வருத்தமடையக் கூடாது,(25) என்பதையே யுதிஷ்டிரன் தன் தம்பிகளிடம் எப்போதும் கவனிக்கச் சொல்வான். அவர்களும் தங்கள் பங்குக்கு, மன்னன் யுதிஷ்டிரனிடம் இருந்து பெறும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆணைகளைக் கேட்டு, அந்த முதிர்ந்த மன்னனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருந்தனர்.(26) எனினும், ஒரேயொரு விதிவிலக்கு இருந்தது. {அந்த விதிவிலக்கு} அது பீமசேனனைத் தழுவியது. திருதராஷ்டிரனின் தீய புத்தியின் மூலம் நடந்த பகடையாட்டத்தைப் பின்தொடர்ந்து நடந்த அனைத்தும் அந்த வீரனின் இதயத்தில் இருந்து மறையவில்லை. (அவன் இன்னும் அந்த நிகழ்வுகளைத் தன் நினைவில் கொண்டிருந்தான்)” என்றார் {வைசம்பாயனர்}.(27)

திருதராஷ்டிரன் ப்ரீதி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 02-அபரிமிதமாகக் கொடையளித்த திருதராஷ்டிரனும், காந்தாரியும்; தன் பிள்ளைகளிடம் போலவே பாண்டவர்களிடம் நடந்து கொண்ட காந்தாரி; துரியோதனின் தீய நடத்தையை முற்றிலும் மறந்த யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரனை மேம்போக்காக வணங்கிய பீமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டவர்களால் இவ்வாறு வழிபடப்பட்ட அம்பிகையின் மகன் {திருதராஷ்டிரன்} முனிவர்களால் மதிக்கப்பட்டு முன்பு போலவே மகிழ்ச்சியாகத் தன் காலத்தைக் கழித்தான்.(1) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனான அவன் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முதன்மையான காணிக்கைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான். குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்} அப்பொருட்களை எப்போதும் திருதராஷ்டிரனின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.(2) வன்மமற்றவனான மன்னன் யுதிஷ்டிரன் எப்போதும் தன் பெரிய தந்தையிடம் அன்புடன் நடந்து கொண்டான். தன் தம்பிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசிய அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, “மன்னர் திருதராஷ்டிரர் என்னாலும், உங்கள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர். உண்மையில், எவன் திருதராஷ்டிரரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவானோ அவன் என் நலன் விரும்பியாவான்.(4) மறுபுறம், எவன் அவரிடம் வேறுவகையில் நடந்து கொள்கிறானோ அவன் என் பகைவனாவான். அத்தகைய மனிதன் நிச்சயம் என்னால் தண்டிக்கப்படுவான்” என்றான். பித்ருக்களுக்கென விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்யும் நாட்களிலும், தன் மகன்கள் மற்றும் தன் நலன்விரும்பிகள் அனைவருக்குமான சிராத்தங்களைச் செய்யும் போதிலும், உயர் ஆன்ம குரு மன்னனான திருதராஷ்டிரன், பிராமணர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தகுந்த வகையிலும், தான் விரும்பியவாறும் பெருமளவு செல்வத்தைக் கொடையாக அளித்தான்.(5,6)

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகியோர் அந்த முதிர்ந்த மன்னனுக்கு ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தில் அவனுடைய ஆணைகள் அனைத்தையும் நிறைவேற்றினர்.(7) மகன்கள் மற்றும் பேரன்கள் கொல்லப்பட்டதால் பீடிக்கப்பட்டிருந்த அந்த முதிய மன்னன், பாண்டவர்களாகிய தங்களால் ஏற்பட்ட அந்தத் துயரத்தால் இறந்துவிடாத வகையில் அவர்கள் எப்போதும் அவனைக் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்.(8) உண்மையில், அந்தக் குரு வீரன், தன் மகன்கள் வாழ்ந்த போது அனுபவித்த அனைத்துப் பொருட்களையும், அந்த மகிழ்ச்சியையும் அவன் இழந்துவிடாத வகையில் பாண்டவர்கள் அவனைப் பார்த்துக் கொண்டனர்.(9) பாண்டுவின் மகன்களான அந்த ஐந்து சகோதரர்களும், திருதராஷ்டிரனின் ஆணையின் கீழ் வாழ்ந்து இவ்வாறே அவனிடம் நடந்து கொண்டனர்.(10) அவர்கள் பணிவாக இருப்பதையும், தன் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதையும், ஆசானிடம் சீடர்கள் நடந்து கொள்வதைப் போலத் தன்னிடம் நடந்து கொள்வதையும் கண்ட திருதராஷ்டிரன், ஓர் ஆசான் அன்புடன் நடந்து கொள்ளும் நடத்தையைப் பதிலுக்கு அவர்களிடம் கடைப்பிடித்தான்.(11) காந்தாரி, கொல்லப்பட்ட தன் பிள்ளைகளுக்குப் பல்வேறு சிராத்தச் சடங்குகளைச் செய்வதன் மூலமும், பிராமணர்களுக்குப் பல்வேறு இன்பொருட்களைக் கொடையளிப்பதன் மூலமும் அவர்களுக்குப் பட்ட கடனில் இருந்து விடுபட்டாள்.(12) இவ்வாறே அறவோரில் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் தன் தம்பிகளுடன் சேர்ந்து மன்னன் திருதராஷ்டிரனை வழிபட்டான்”.(13)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெருஞ்சக்தி கொண்டவனும், குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனும், முதிர்ந்த மன்னனுமான திருதராஷ்டிரனால், யுதிஷ்டிரனிடம் எந்தத் தீய எண்ணத்தையும் காண முடியவில்லை.(14) ஞானிகளாகவும், அறவொழுக்கம் ஒழுகுபவர்களாகவும் உயர் ஆன்மப் பாண்டவர்கள் இருப்பதைக் கண்டவனும், அம்பிகையின் மகனுமான மன்னன் திருதராஷ்டிரன் அவர்களிடம் நிறைவடைந்தான்.(15) சுபலனின் மகளான காந்தாரி, (கொல்லப்பட்ட) தன் பிள்ளைகளைக் குறித்த கவலையனைத்தையும் கைவிட்டு, பாண்டவர்களையே தன் பிள்ளைகளாகக் கருதி அவர்கள் மீது பேரன்பைக் காட்டத் தொடங்கினாள்.(16) பெருஞ்சக்தி கொண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன், விசித்ரவீரியனின் அரச மகனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஏற்பில்லாத எதையும் ஒருபோதும் செய்தானில்லை. மறுபுறம், அவன் எப்போதும் அவனுக்கு மிக ஏற்புடைய வழியிலேயே நடந்து கொண்டான்.(17) மன்னன் திருதராஷ்டிரனாலோ, ஆதரவற்றவளான காந்தாரியினாலோ சொல்லப்படும் கடினமான அல்லது கடினமற்ற செயல்கள் எதுவாக இருந்தாலும்(18) அவை அனைத்தையும், பகைவீரர்களைக் கொல்பவனான பாண்டவ மன்னன் பெரும் மதிப்புடன் நிறைவேற்றினான்.(19)

யுதிஷ்டிரனின் இத்தகைய ஒழுக்கத்தால் அந்த முதிர்ந்த மன்னன் உயர்வான நிறைவை அடைந்தான். உண்மையில், அவன் தன் தீய மகனை {துரியோதனனை} நினைத்து வருந்தினான்.(20) ஒவ்வொரு விடியலிலும் எழுந்து தன்னைத் தூய்மை செய்து கொண்டு, ஜபங்களைச் செய்து, பாண்டவர்கள் போரில் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி ஆசி கூறினான்.(21) பிராமணர்களுக்குரிய வழக்கமான கொடைகளைக் கொடுத்துவிட்டு, அவர்களை ஆசி கூறச் செய்யும் அந்த முதிய மன்னன், பாண்டவர்களின் நீண்ட வாழ்நாளை வேண்டி புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினான்.(22) உண்மையில் அந்த மன்னன், பாண்டவர்களிடம் எப்போதும் தனக்குக் கிட்டும் மகிழ்ச்சியைத் தன் மகன்களிடம் இருந்து ஒருபோதும் பெற்றதில்லை.(23) அந்தக் காலத்தில் மன்னன் யுதிஷ்டிரன், தன் நாட்டினில் வாழ்ந்த பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களும், பல்வேறு கூட்டங்களாக இருந்த வைசிய மற்றும் சூத்திரர்களுக்கும் மிக ஏற்புடையவனாக இருந்தான்.(24) திருதராஷ்டிரன் மகன்களால் அவனுக்கு செய்யப்பட்ட குற்றங்கள் அனைத்தையும் மன்னன் யுதிஷ்டிரன் மறந்து தன் பெரிய தந்தையை வணங்கினான்.(25)

எந்த மனிதனாவது அம்பிகையின் மகனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஏற்பில்லாத எதையும் செய்தால் குந்தியின் புத்திசாலி மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அவன் வெறுப்புக்கான பொருளாக ஆனான்.(26) உண்மையில் யுதிஷ்டிரனிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் துரியோதனன் அல்லது திருதராஷ்டிரனின் தீச்செயல்களை எவராலும் பேச முடியவில்லை.(27) குற்றங்களைப் பொறுத்து, மன்னன் அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} காட்டிய பெருந்தன்மையில் காந்தாரி மற்றும் விதுரன் ஆகிய இருவரும் பெரும் நிறைவுடன் இருந்தனர். எனினும், ஓ! பகைவரைக் கொல்பவனே, அவர்கள் பீமனிடம் அவ்வளவு மகிழ்ச்சியடையவில்லை.(28) தர்மனின் மகனான யுதிஷ்டிரன் உண்மையில் தன் பெரிய தந்தைக்குக் கீழ்ப்படிந்தவனாக இருந்தான். எனினும், பீமனோ திருதராஷ்டிரனைப் பார்த்தவுடனேயே உற்சாகத்தை இழந்தான்.(29) பகைவரைக் கொல்பவனான தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} அந்த முதிய மன்னனை {திருதராஷ்டிரனை} வணங்குவதைக் கண்டு, விருப்பமில்லாத இதயத்துடன் அவன் {பீமன்} மேம்போக்காகவே அவனை  {திருதராஷ்டிரனை} வணங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(30)

திருதராஷ்டிரன் தீர்மானம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 03-பீமனின் நிந்தனை; காந்தாரியுடன் காட்டுக்குச் செல்லத் துணிந்த திருதராஷ்டிரன்; நண்பர்களையும், யுதிஷ்டிரனையும் அழைத்துத் தன் தீர்மானத்தைத் தெரிவித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குரு நாட்டில் வாழ்ந்த மக்கள், மன்னன் யுதிஷ்டிரனுக்கும் மற்றும் துரியோதனனின் தந்தை {திருதராஷ்டிரன்} ஆகியோருக்கிடையில் இருந்த நல்லுறவில் எந்த மாறுபாட்டையும் கவனிக்கத் தவறினர்.(1) குரு மன்னன் (திருதராஷ்டிரன்) தன் தீய மகனை நினைவுகூர்ந்த போதெல்லாம் தன் இதயத்தில் அவனால் பீமனிடம் நட்புணர்வற்ற நிலையை உணராமல் இருக்க முடியவில்லை.(2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தீயதாகத் தோன்றிய இதயத்தால் தூண்டப்பட்டவனான பீமசேனனாலும் மன்னன் திருதராஷ்டிரனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(3) விருகோதரன் {பீமன்} கமுக்கமாக அந்த முதிர்ந்த மன்னனுக்குப் {திருதராஷ்டிரனுக்குப்} பிடிக்காத செயல்கள் பலவற்றைச் செய்தான். வஞ்சகமான பணியாட்களைக் கொண்டு அவன் தன் பெரிய தந்தையின் கட்டளைகளை மீறச் செய்தான்.(4) பீமன், ஒரு நாள், தன் நண்பர்களுக்கு மத்தியில் கக்கங்களின் அறைந்துகொண்டு, திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரி கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அந்த முதிர்ந்த மன்னனின் தீய ஆலோசனைகளையும், அவனுடைய செயல்கள் சிலவற்றையும் நினைவுகூர்ந்தான்.

கோபம் நிறைந்தவனான விருகோதரன் {பீமன்}, தன் பகைவர்களான துரியோதனன், கர்ணன் மற்றும் துச்சாசனனை நினைவுகூர்ந்து,(5,6) தன்னாவலுக்கு வழி கொடுத்து, இந்தக் கடுஞ்சொற்களைச் சொன்னாள்: {பீமன்}, “பல்வேறு வகை ஆயுதங்களுடன் போரிடவல்லவர்களான அந்தக் குருட்டு மன்னின் மகன்கள் அனைவரையும், இரும்பு தண்டங்களுக்கு ஒப்பான என்னுடைய இந்த இரு கைகளாலேயே மறு உலகத்திற்கு அனுப்பி வைத்தேன்.(7) உண்மையில், இரும்பு கதாயுதங்களைப் போலத் தெரிபவையும், பகைவர்களால் வெல்லப்பட முடியாதவையுமான என்னுடைய இந்த இரு கைகளின் அணைப்புக்குள்ளேயே திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரும் அழிவை அடைந்தனர். யானையின் துதிக்கைக்கு ஒப்பானவையும், உருண்டு நன்கு திரண்டவையுமான என் இரு கைகள் இவையே. இவற்றின் அணைப்புக்குள்ளேயே திருதராஷ்டிரரிடன் மூட மகன்கள் அனைவரும் அழிவைச் சந்தித்தனர்.(9) சந்தனக் குழம்பு பூசப்பட்டவையும், அந்த அலங்காரத்திற்குத் தகுந்தவையுமான என்னுடைய இந்த இரு கைகளாலேயே துரியோதனனும், அவனுடைய மகன்களும், உற்றார் உறவினரும் மறுஉலகத்திற்கு அனுப்பப்பட்டனர்” {என்றான்}.(10)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, விருகோதரன் சொன்ன இவற்றையும், உண்மையில் ஈட்டிகளுக்கு ஒப்பான இன்னும் வேறு சொற்களையும் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் உற்சாகத்தை இழந்து, கவலையடைந்தான்.(11) எனினும், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவளும், காலம் தன் போக்கில் கொண்டு வருபவற்றை அறிந்தவளுமா ராணி காந்தாரி அவற்றைப் பொய்யெனக் கருதினாள்[1].(12) ஓ! ஏகாதிபதி, பதினைந்து வருடங்கள் கடந்திருந்தபோது, பீமனின் சொல்லீட்டிகளால் (தொடர்ந்து) பீடிக்கப்பட்ட மன்னன் திருதராஷ்டிரன், மனந்தளர்ச்சியினாலும், துன்பத்தாலும் துளைக்கப்பட்டான்.(13) எனினும், குந்தியின் மகனான யுதிஷ்டிரனோ, வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனோ, குந்தியோ, பெரும்புகழைக் கொண்ட திரௌபதியோ, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களும், திருதராஷ்டிரனின் விருப்பங்களைக் கேட்ட பிறகே எப்போதும் செயல்படுபவர்களுமான மாத்ரியின் இரு மகன்களோ {நகுல சகாதேவர்களோ} இதை அறிந்தார்களில்லை.(14) மன்னன் சொல்வதைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரட்டையர்கள் ஒருபோதும் அந்த முதிர்ந்த மன்னனுக்கு ஏற்பில்லாத எதையும் சொல்வார்களில்லை. அப்போது திருதராஷ்டிரன் ஒருநாள் நம்பிக்கையுடன் தன் நண்பர்களைக் கௌரவித்தான். கண்ணீர் நிறைந்த கண்களுடன் பேசிய அவன், அவர்களிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்.(15)திருதராஷ்டிரன், “குருக்களுக்கு {கௌரவர்களுக்கு} எவ்வாறு அழிவு ஏற்பட்டது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். என் ஆலோசனைகள் அனைத்தையும் கௌரவர்கள் அங்கீகரித்திருந்தாலும், நான் செய்த குற்றத்தாலேயே அவை அனைத்தும் நடந்தன.(16) மூடனான நான், தீய மனம் கொண்டவனும், உற்றாரின் அச்சத்தைப் பெருக்குபவனுமான துரியோதனனை குருக்களின் ஆட்சியாளனாக நிறுவினேன்.(17) வாசுதேவன் {கிருஷ்ணன்}, “தீய புத்தி கொண்ட இந்த இழிந்தவனும், அவனுடைய நண்பர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும்” என்று என்னிடம் சொன்னான்[2]. பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சொற்களுக்கு நான் செவிமடுக்கவில்லை. ஞானிகள் அனைவரும் அதே நல்லாலோசனையையே எனக்குச் சொன்னார்கள். விதுரன், பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரும் அதையே சொன்னார்கள். புனிதரும், உயர் ஆன்மா கொண்டவருமான வியாசரும், சஞ்சயனும், காந்தாரியும் அதையே சொன்னார்கள். எனினும், பெற்ற பாசத்தில் மூழ்கிய நான் அந்த ஆலோசனையைப் பின்பற்றவில்லை. அப்போது அதைப் புறக்கணித்ததற்காக இப்போது நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.(18-20)தந்தைமார், பாட்டன்மாரிடம் இருந்து அடைந்த சுடர்மிக்கச் செல்வத்தை, அனைத்துத் தகுதிகளும்வாய்ந்த உயர் ஆன்ம பாண்டவர்களிடம் கொடுக்காததற்கும் நான் மனம் வருந்துகிறேன்.(21) கதனின் அண்ணன் மன்னர்களின் அழிவை முன்பே கண்டான் {உணர்ந்தறிந்தான்}; எனினும் அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அந்த அழிவே உயர்ந்த நன்மையெனக் கருதினான்[3].(22) என்னுடைய துருப்புகளின் பல அனீகங்கள் {அனீகினிகள்} அழிவையடைந்தன. ஐயோ, இந்த விளைவுகள் அனைத்தாலும் என் இதயம் ஆயிரம் ஈட்டிகளால் பிளக்கப்படுகிறது.(23) தீய புத்தி கொண்டவனான நான், பதினைந்து வருடங்கள் கழிந்த பிறகு என் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யப் போகிறேன்.(24)இப்போது, நாளின் நான்காம் காலத்திலோ, சில வேளைகளில் எட்டாம் காலத்திலோ முறையான நோன்புடன் தாகத்தை {பசியைத்} தணித்துக் கொள்வதற்காக மட்டுமே சிறிதளவு உணவை உண்கிறேன். காந்தாரி இதையறிவாள்.(25) என் பணியாட்கள் அனைவரும் நான் உண்கிறேன் என்று கருதுவார்கள். யுதிஷ்டிரனிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக மட்டுமே நான் என் செயல்களை மறைத்தேன். ஏனெனில், பாண்டுவின் மூத்தமகன் என் நோன்பை அறிய நேர்ந்தால், பெருந்துன்பத்தை அடைவான்.(26) தோலாடை உடுத்திக் கொண்டு, தரையில் சிறிதளவு குசப் புற்களைப் பரப்பி, அதில் கிடந்து அமைதியான ஜபங்களில் நான் என் காலத்தைக் கழிக்கிறேன் பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும் இதே போன்ற நோன்புகளில் தன் காலத்தைக் கழிக்கிறாள்.(27) போரில் புறமுதுகிடாதவர்களான நூறு மகன்களை இழந்த நாங்கள் இவ்வாறே நடந்து வருகிறோம். எனினும், என் பிள்ளைகளுக்காக நான் வருந்தவில்லை. க்ஷத்திரியக் கடமைகளை நோற்றே அவர்கள் அனைவரும் இறந்திருக்கின்றனர்” என்றான் {திருதராஷ்டிரன்}.(28)

இந்தச் சொற்களைச் சொன்ன அந்த முதிர்ந்த மன்னன், மீண்டும் குறிப்பாக யுதிஷ்டிரனிடம், “யதுகுல இளவரசியின் மகனே {குந்தியின் மகனே}, நீ அருளப்பட்டிருப்பாயாக. நான் சொல்வதைக் கேட்பாயாக.(29) ஓ! மகனே, இவ்வளவு வருடங்களும் உன்னால் பேணி வளர்க்கப்பட்டு நான் வாழ்ந்திருக்கிறேன். (உன் உதவியைக் கொண்டு) நான் பெரும் அளவு கொடைகளைக் கொடுத்திருகிகறேன், மீண்டும் மீண்டும் சிராத்தங்களைச் செய்திருக்கிறேன்[4].(30)ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, என்னால் முடிந்த அளவுக்குப் பெரிதான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டியிருக்கிறேன். இந்தக் காந்தாரி, மகன்களை இழந்தவளாக இருப்பினும், என்னைப் பார்த்துக் கொண்டே பெரும் கௌரவத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறாள்.(31) திரௌபதியிடம் பெருங்குற்றமிழைத்தவர்களும், உன் செழிப்பைக் களவாடியவர்களுமான அந்தக் கொடிய பாவிகள் அனைவரும் தங்கள் வகைக்கான நடைமுறைக்கு ஏற்புடைய வகையிலேயே போரில் கொல்லப்பட்டு இவ்வுலகைவிட்டுச் சென்றுவிட்டனர்.(32) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நான் அவர்களுக்காக எதையும் செய்ய வேண்டியதில்லை. போரை நோக்கிய முகங்களுடன் கொல்லப்பட்ட அவர்கள் ஆயுததாரிகளுக்கான உலகங்களை அடைந்துவிட்டனர்.(33) நான் இப்போது எனக்கும், காந்தாரிக்குமான நன்மை மற்றும் புண்ணியங்களை அடைய வேண்டும். ஓ! பெரும் மன்னா, எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்.(34) அறவோர் அனைவரிலும் முதன்மையானவன் நீ. மன்னனே உயிரினங்கள் அனைத்திற்கும் ஆசானாவான். அதற்காகவே நான் இவ்வாறு சொல்கிறேன்.(35)

ஓ! வீரா {யுதிஷ்டிரா}, ஓ! மன்னா, உன் அனுமதியுடன், கந்தலையும், மரவுரியையும் தரித்துக் கொண்டு, காந்தாரியுடன் சேர்ந்து காட்டுக்குச் செல்லப் போகிறேன்.(36) நான் காட்டில் வாழ்ந்தவாறு உனக்கு எப்போதும் ஆசிகூறிக் கொண்டு இருப்பேன். ஓ! மகனே, முதுமை நேரும் போது அரசுரிமையைத் தங்கள் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு, காட்டு வாழ்வுமுறையைப் பின்பற்றிச் செல்வது நம் குலத்தவரின் வழக்கம். ஓ! வீரா, அங்கே காற்றை மட்டுமே உண்டு, உணவனைத்தையும் கைவிட்டு, என் மனைவியுடன் சேர்ந்து நான் கடுந்தவங்களைச் செய்வேன்.(37,38) ஓ! மகனே, நீ மன்னனாக இருப்பதால் அந்தத் தவங்களில் உனக்கும் பங்குண்டு. மன்னர்களுக்குத் தங்கள் நாட்டில் நடைபெறும் மங்கல மற்றும் மங்கலமற்ற செய்லகளில் பங்குண்டு[5]” என்றான் {திருதராஷ்டிர்ன}.(39)யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, நீர் இவ்வாறு துயருறுகையின் அரசுரிமை எனக்கு உவப்பாகவே இல்லை. தீய புத்தி கொண்டவனும், ஆட்சி இன்பங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், உண்மையான காரியங்களில் கவனமற்றவனுமான எனக்கு ஐயோ.(40) ஐயோ, நீர் இவ்வளவு காலம் துன்பத்தில் பீடிக்கப்பட்டவராக, உணவைத் தவிர்த்து உண்ணா நோன்புகளினால் மெலிந்து வெறுந்தரையில் படுத்துக் கிடப்பதை நானும் என் தம்பிகளும் அறியாமல் இருந்தோம்.(41) ஐயோ, எனக்கு நம்பிக்கையை அளித்துப் பின்பு இவ்வளவு துயரத்தை அடைந்திருக்கும் ஆழ்ந்த புத்தியுடைய உம்மால் மூடனான நான் வஞ்சிக்கப்பட்டேன்.(42) ஓ! மன்னா, நீர் இவ்வளவு பீடிக்கப்பட்டிருக்கும்போது, எனக்கு நாட்டினாலோ, அனுபவிக்கத் தகுந்த பொருட்களினாலோ பயனென்ன? வேள்விகளினாலும், மகிழ்ச்சியினாலும் பயனென்ன?(43) நான் என் நாட்டைப் பிணியாகவும், என்னைப் பீடிக்கப்பட்டவனாகவும் கருதுகிறேன். நான் துயரில் மூழ்கியிருந்தாலும், நான் உம்மிடம் சொல்லும் இந்தச் சொற்களால் பயனென்ன?(44) எங்கள் தந்தை நீர், எங்கள் தாயும் நீர்; எங்கள் பெரியோரில் முதன்மையானவர் நீர். நீர் இல்லாமல் நாங்கள் எவ்வாறு வாழப் போகிறோம்?(45)

ஓ! மன்னர்களில் சிறந்தவரே, உம் மடியில் பிறந்த யுயுத்சுவோ, நீர் விரும்பும் வேறு எவரோ மன்னனாகட்டும்.(46) நான் காட்டுக்குச் செல்கிறேன். நீர் நாட்டை ஆள்வீராக. புகழ்க்கேட்டினால் ஏற்கனவே எரிந்திருக்கும் என்னை மேலும் எரிப்பது உமக்குத் தகாது.(47) நான் மன்னனல்ல. நீரே மன்னன். நான் உமது விருப்பத்தைச் சார்ந்தே இருக்கிறேன். என் ஆசானான உமக்கு நான் அனுமதியளிக்க எவ்வாறு துணிவேன்?(48) ஓ! பாவமற்றவரே, சுயோதனனால் {துரியோதனனால்} எங்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக நான் என் இதயத்தில் எவ்வித மனக்கசப்பையும் வளர்த்ததில்லை. இவ்வாறு நடக்க வேண்டுமென விதிக்கப்பட்டிருக்கிறது. நாங்களும், பிறரும் (விதியால்) திகைப்படையச் செய்யப்பட்டோம்.(49) துரியோதனனையும், பிறரையும் போலவே நாங்களும் உமது பிள்ளைகளே. குந்தியைப் போலவே காந்தாரியும் எங்கள் தாய் என்பதே என் நம்பிக்கை.(50)

ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரா}, நீர் எங்களை விட்டுக் காட்டுக்குச் சென்றால், நானும் உம்மைப் பின்தொடர்ந்து வருவேன். என் ஆன்மாவின் மீது ஆணையாகச் சொல்கிறேன்.(51) கடல்களைக் கச்சையாகக் கொண்டதும், இவ்வளவு செல்வம் நிறைந்ததுமான பூமியானது {திருதராஷ்டிரராகிய} நீரில்லாமல் எனக்கு இன்பமளிக்காது.(52) இவை யாவும் உமக்குரியவை. நான் தலைவணங்கி உம்மை நிறைவடையச் செய்கிறேன். ஓ! மன்னர்களின் மன்னா, நாங்கள் அனைவரும் உம்மைச் சார்ந்திருப்பவர்கள். உமது இதயத்தில் இருக்கும் நோய் விலகட்டும்.(53) ஓ! பூமியின் தலைவா, உமக்கு நேர்ந்த இவையாவும் விதியால் நேர்ந்தவையே. நற்பேற்றினால் உமக்குப் பணிவிடை செய்வதாலும், உமது ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து அவற்றைச் செயற்படுத்துவதாலும் உமது இதயத்தில் இருக்கும் நோயில் இருந்து உம்மை விடுவித்து விடலாம் என நான் எண்ணினேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(54)

திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! மகனே, என் மனம் தவத்தில் நிலைத்திருக்கிறது. ஓ! பலமிக்கவனே, நான் காட்டுக்கு ஓயச் செல்வது நம் குல வழக்கமாகும்.(55) ஓ! மகனே, நான் உன் பாதுகாப்பின் கீழ் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். நான் பல வருடங்கள் மதிப்புடன் உன்னால் தொண்டாற்றப்பட்டேன். இப்போது நான் வயது முதிர்ந்தவன். ஓ! மன்னா (காட்டை வசிப்பிடமாகக் கொள்ள) எனக்கு அனுமதியளிப்பதே உனக்குத் தகும்” என்றான்”.(56)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இச்சொற்களைச் சொன்னவனும், அம்பிகையின் மகனுமான மன்னன் திருதராஷ்டிரன், நடுங்கிக் கொண்டே தன் கைகளைக் கூப்பி, உயர் ஆன்ம சஞ்சயனிடமும், பெருந்தேர்வீரரான கிருபரிடமும், மேலும் இந்தச் சொற்களைச் சொன்னான்: {திருதராஷ்டிரன்}, “நான் உங்கள் மூலமாக மன்னனை வேண்ட விரும்புகிறேன்.(57,58) என் வயதின் பலவீனத்தாலும், களைத்துப் பேசிக் கொண்டிருப்பதாலும், என் மனம் உற்சாகமிழக்கிறது, என் வாய் உலர்கிறது” என்றான்.(59) இவ்வாறு சொன்னவனும், செழிப்பால் அருளப்பட்டவனும், குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனும், அற ஆன்மா கொண்டவனுமான அந்த முதிர்ந்த மன்னன், காந்தாரியின் மீது சாய்ந்து, திடீரென உயிரையிழந்தவனைப் போலத் தெரிந்தான்.(60) பகைவீரர்களைக் கொல்பவனுமான குந்தியின் அரச மகன்{யுதிஷ்டிரன்}, நினைவிழந்த ஒருவனைப் போல இவ்வாறு அமர்ந்திருக்கும் அவனை {திருதராஷ்டிரனைக்} கண்டு கடுங்கவலையடைந்தான்.(61)யுதிஷ்டிரன் , “ஐயோ, நூறாயிரம் யானைகளுக்கு இணையான பலத்தைக் கொண்ட மன்னர், ஐயோ இன்று பெண் மீது சாய்ந்து அமர்ந்திருக்கிறார்.(62) ஐயோ, முன்பொரு சந்தர்ப்பத்தில் பீமனின் இரும்புச் சிலையைத் துண்டுகளாகக் குறைத்த ஒருவர் இன்று பலவீனமான பெண்ணின் மீது சாய்ந்திருக்கிறார்[6].(63) அறமற்ற எனக்கு ஐயோ. என் புத்திக்கு ஐயோ. என் சாத்திர அறிவுக்கு ஐயோ. இந்தப் பூமியின் அதிபதி இந்நிலையில் கிடக்கக் காரணமான எனக்கு ஐயோ.(64) நானும் என் ஆசானைப் போல உண்ணா நோன்பிருக்கப் போகிறேன். உண்மையில், இந்த மன்னரும், பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும் உணவைத் தவிர்த்தால் நான் உண்ணா நோன்பிருப்பேன்” என்றான்”.(65)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அனைத்துக் கடமைகளையும் அறிந்த பாண்டவ மன்னன், அப்போது தன் கையாலேயே குளிர்ந்த நீரை எடுத்து அந்த முதிர்ந்த ஏகாதிபதியின் மார்பிலும், முகத்திலும் மென்மையாகத் தேய்த்தான்.(66) மங்கலமானதும், நறுமணமிக்கதும், நகைகளையும் {ரத்தினங்களையும்}, மருத்துவ மூலிகைகளையும் {ஔஷதிகளையும்} கொண்டதுமான அந்த மன்னனுடைய கைகளின் தீண்டலால் {அந்த பாணிஸ்பரிசத்தால்} திருதராஷ்டிரன் தன்னுணர்வுகள் {பிரஜ்ஞை} மீண்டான்[7].(67)திருதராஷ்டிரன், “ஓ! பாண்டுவின் மகனே, உன் கையால் மீண்டும் என்னைத் தீண்டுவாயா, நீ என்னைத் தழுவுவாயாக. ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, உன் கையின் மங்கலத் தீண்டலால் என்னுணர்வுகள் மீண்டன.(68) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நான் உன் தலையை முகர விரும்புகிறேன். உன் கைகளின் அரவணைப்பு எனக்கு உயர்ந்த நிறைவை அளிக்கின்றன.(69) இது நாளின் எட்டாம் காலமாகும், நான் உணவு உண்ணும் காலமாகும். ஓ! குரு குலத்தின் குழந்தாய், நான என் உணவை உண்ணாததால் நகர முடியாத அளவுக்குப் பலவீனமாக இருக்கிறேன்.(70) உன்னிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டிருந்ததில் நான் மிகவும் களைத்திருக்கிறேன். ஓ! மகனே, அதனால் உற்சாகமிழந்தவனாகி மயக்கமடைந்தேன்.(71) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, உயிர்ப்பூட்டும் விளைவுகளில் அமுதத்துக்கு ஒப்பான உன் கைகளின் தீண்டலைப் பெற்றவுடன் நான் என் உணர்வுகளை மீண்டும் பெற்றேன்” என்றான் {திருதராஷ்டிரன்}”.(72)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா, தன் தந்தையின் அண்ணனால் {திருதராஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அன்பினால் அவனது உடலெங்கும் மென்மையாகத் தீண்டினான்.(73) உயிர் மூச்சுகள் மீண்ட மன்னன் திருதராஷ்டிரன் தன் கைகளால் பாண்டுவின் மகனை ஆரத் தழுவி கொண்டு அவனது தலையை முகர்ந்தான்.(74) விதுரனும், பிறரும் பெருந்துயரால் உரக்க அழுதனர். எனினும், கடுங்கவலையின் விளைவால் அவர்கள் அந்த முதிர்ந்த மன்னனிடமோ, பாண்டுவின் மகனிடமோ ஏதும் சொல்லாதிருந்தனர்.(75) அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளான காந்தாரி, மனவுரத்தால் நிறைந்த தன் இதயத்தில் கவலையைப் பொறுத்துக் கொண்டு ஒன்றும் பேசாதிருந்தாள்.(76) வேறு பெண்களும், அவர்களுக்கு மத்தியில் இருந்த குந்தியும் பெரிதும் துன்புற்றனர். அவர்கள் அந்த முதிர்ந்த மன்னனைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டு அதிகமான கண்ணீரைச் சொரிந்து அழுதனர்.(77)

அப்போது திருதராஷ்டிரன், மீண்டும் யுதிஷ்டிரனிடம் இந்தச் சொற்களில், “ஓ! மன்னா, தவம் பயில எனக்கு நீ அனுமதியளிப்பாயாக.(78) ஓ! மகனே, தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதால் என் மனம் பலவீனமடைகிறது. ஓ! மகனே, இதற்குப் பிறகும் எனைத் துன்புறுத்துவது உனக்குத் தகாது” என்றான்.(79)

குரு குலத்தில் முதன்மையான அவன் {திருதராஷ்டிரன்}, யுதிஷ்டிரனிடம் இவ்வாறு சொன்னபோது, அங்கிருந்த போர்வீரர்கள் அனைவரிடம் இருந்தும் உரத்த ஓலம் எழுந்தது[8].(80) பெருங்காந்தியைக் கொண்டவனான தன் அரசத் தந்தை மெலிந்து மங்கியவனாக இருப்பதையும், விரும்பத்தகாத நிலைக்குக் குறைக்கப்பட்டிருப்பதையும், உண்ணா நோன்புகளால் சிதைந்திருப்பதையும், தோலால் போர்த்தப்பட்ட எலும்புக்கூட்டைப் போலத் தெரிவதையும் கண்டு, தர்மனின் மகனான யுதிஷ்டிரன் துயரால் கண்ணீர் சிந்தி, மீண்டும் இந்தச் சொற்களைச் சொன்னான்.(81,82) {யுதிஷ்டிரன்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, வாழ்வையும், பூமியையும் நான் விரும்பவில்லை. ஓ! பகைவரை எரிப்பவரே, உமக்கு ஏற்புடையதைச் செய்வதில் நான் என்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறேன்.(83) நான் உமது ஆதரவுக்குத் தகுந்தவனென்றால், நான் உமக்கன்பானவன் என்றால் ஏதாவது உண்பீராக. அப்போதே நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவேன்” என்றான்.(84)பெரும் சக்தி கொண்ட திருதராஷ்டிரன் அப்போது யுதிஷ்டிரனிடம், “ஓ! மகனே, நான் உன் அனுமதியுடன் கொஞ்சம் உணவை உண்ண விரும்புகிறேன்” என்றான்.(85) திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனிடம் இந்தச் சொற்களைச் சொன்னபோது, சத்யவதியின் மகனான வியாசர் அங்கே வந்து பின்வருமாறு சொன்னார்” {என்றார் வைசம்பாயனர்}.(86)

வியாசரின் வலியுறுத்தல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 04-திருதராஷ்டிரன் தீர்மானத்தை ஏற்கும்படி யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; யுதிஷ்டிரன் ஏற்றுக் கொண்டது…

வியாஸர், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, குரு குலத்தின் திருதராஷ்டிரன் சொல்வதைத் தயங்காமல் செய்வாயாக.(1) இந்த மன்னன் முதியவன். மேலும் அவன் மகனற்றவனாக ஆக்கப்பட்டவன். அவனால் தன் துயரை அதிகக் காலம் தாங்க இயலும் என நான் நினைக்கவில்லை.(2) பெரும் ஞானம், அன்பான பேச்சு மற்றும் உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரி, தன் மகன்களின் இழப்பால் உண்டான அதீத துயரத்தை தன் மனவுரத்தால் பொறுத்துக் கொள்கிறாள்.(3) (முதிர்ந்த மன்னன் சொல்வதையே) நானும் சொல்கிறேன். என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. முதிய மன்னன் உன் அனுமதியைப் பெறட்டும். அவன் வீட்டில் மகிமையற்ற முறையில் இறக்க வேண்டாம்.(4) பழங்கால அரச முனிகள் அனைவரும் சென்ற பாதையையே இம்மன்னனும் பின்பற்றட்டும். உண்மையில் அரச முனிகள் அனைவரும் இறுதியாகக் காடுகளுக்குள்ளே தான் ஓய்வார்கள்” என்றார் {வியாசர்}”.(5)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அற்புதச் செயல்களைச் செய்யும் வியாசரால் அந்நேரத்தில் இவ்வாறு சொல்லப்பட்ட போது, வலிமையும், சக்தியும் படைத்தவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் பெருந்தவசியிடம் இச்சொற்களில்,(6) “புனிதரான உம்மிடம் நாங்கள் உயர்ந்த மதிப்பைக் கொண்டிருக்கிறோம். நீர் மட்டுமே எங்கள் ஆசானாயிருக்கிறீர். நீர் மட்டுமே எங்கள் நாட்டுக்கும், எங்கள் குலத்திற்கும் புகலிடமாக இருக்கிறீர்.(7) நான் உமது மகன். ஓ! புனிதமானவரே, நீர் என் தந்தை. நீர் எங்கள் மன்னன், நீர் எங்கள் ஆசான். கடமைகள் அனைத்திற்கும் ஏற்புடைய வகையில் ஒரு மகன் எப்போதும் தன் தந்தையின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(8)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், வேதங்களை அறிந்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், புலவர்களில் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான வியாசர், யுதிஷ்டிரனிடம் இச்சொற்களைச் சொன்னார்,(9) {வியாசர்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இஃது இவ்வாறே இருக்கிறது. ஓ! பாரதா, இது நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. இந்த மன்னன் முதிய வயதை எட்டியிருக்கிறான். மேலும் இப்போது இவன் தன் வாழ்வின் இறுதி நிலையில் இருக்கிறான்.(10) பூமியின் தலைவனான இவன், என்னாலும், உன்னாலும் அனுமதிக்கப்பட்டுத் தன் காரியங்களைச் செய்து கொள்ளட்டும். அவனது வழியில் நீ தடையாக நிற்காதே.(11) ஓ! யுதிஷ்டிரா, அரச முனிகளின் உயர்ந்த கடமை இதுவேயாகும். அவர்கள் போர்க்களத்தில் மரணம் அடைய வேண்டும், அல்லது சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் காடுகளில் மரணம் அடைய வேண்டும்.(12)

ஓ! மன்னர்களின் மன்னா, உன்னுடைய அரசத் தந்தை பாண்டு, தன் ஆசானை மதிக்கும் ஒரு சீடனைப் போல இந்த முதிர்ந்த மன்னனை மதித்தான்.(13) (அந்தக் காலத்தில்) இவன் செல்வங்கள் மற்றும், ரத்தினங்களின் மலைகளுடன் கூடிய அபரிமிதமான கொடைகளுடன் பெரும் வேள்விகள் பலவற்றில் தேவர்களைத் துதித்து, தன் குடிமக்களை நல்ல முறையில் பாதுகாத்துப் பூமியை ஆண்டு வந்தான்.(14) பெரும் சந்ததியையும், பெருகும் நாட்டையும் அடைந்த இவன் {திருதராஷ்டிரன்}, நீங்கள் நாடுகடத்தப்பட்டிருந்த பதிமூன்று வருடங்கள் பெருஞ்செல்வாக்கை அனுபவித்து, பெருஞ்செல்வத்தைக் கொடையாக அளித்தான்.(15) ஓ! மனிதர்களின் தலைவா, ஓ! பாவமற்றவனே, நீயும், உன் பணியாட்களும், ஆசானிடம் சீடன் தயாராகக் கீழ்ப்படிவதைப் போலவே இந்த மன்னன் மற்றும் புகழ்பெற்ற காந்தாரியைத் துதித்துக் கொண்டிருந்தீர்கள்.(16) நீ உன் தந்தைக்கு அனுமதி கொடுப்பாயாக. அவன் தவம் பயில்வதற்கான காலம் வந்துவிட்டது. ஓ! யுதிஷ்டிரா, அவன் உனக்கெதிரான சிறு கோபத்தையும் வளர்த்தவனில்லை” என்றார் {வியாசர்}”.(17)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இச்சொற்களைச் சொல்லி அந்த முதிர்ந்த மன்னனை வியாசர் தேற்றினார். அப்போது யுதிஷ்டிரன், “அப்படியே ஆகட்டும்” என்று பதிலளித்தான். பிறகு அந்தப் பெருந்தவசி அந்த அரண்மனையை விட்டுக் காட்டை நோக்கிச் சென்றார்.(18)

புனிதரான வியாசர் சென்ற பிறகு, பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, முதியவனான தன் தந்தையைப் பணிந்து வணங்கி,(19) “புனித வியாசர் சொன்னதையும், உமது காரியத்தையும் பெரும் வில்லாளியான கிருபர் சொன்னதையும், விதுரர் வெளிப்படுத்தியதையும்,(20) யுயுத்சு மற்றும் சஞ்சயர் ஆகியோர் கேட்டுக் கொண்டதையும் விரைவாக நான் நிறைவேற்றுவேன். இவர்கள் அனைவரும் நம் குலத்தின் நலம்விரும்பிகள் என்பதால் என் மதிப்புக்குத் தகுந்தவர்களாக இருக்கின்றனர்.(21) எனினும், ஓ!மன்னா, நான் தலைவணங்கி உம்மிடம் இதை இரந்து கேட்கிறேன். முதலில் உண்பீராக. பின்பு உமது காட்டு ஆசிரமத்திற்குச் செல்வீராக” என்றான்{யுதிஷ்டிரன்}.(22)

திருதராஷ்டிர நீதி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 05-யுதிஷ்டிரனுக்கு ராஜநீதிகளை உரைத்த திருதராஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னனின் {யுதிஷ்டிரனின்} அனுமதியைப் பெற்றவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான திருதராஷ்டிரன் அப்போது காந்தாரியால் பின்தொடரப்பட்டுத் தன் அரண்மனைக்குச் சென்றான்.(1) பலம் குறைந்தவனும், மெதுவாக நகர்பவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, ஒரு யானைக் கூட்டத்தின் வயது முதிர்ந்த தலைவனைப் போலப் பெருஞ்சிரமத்துடன் நடந்தான்.(2) பெரும் கல்விமானான விதுரன், தேரோட்டியான சஞ்சயன்சரத்வானின் மகனும், பெரும் வில்லாளியுமான கிருபர் ஆகியோரால் அவன் பின்தொடரப்பட்டான்.(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தன் மாளிகைக்குள் நுழைந்த அவன் காலைச் சடங்குகளைச் செய்து, முதன்மையான பிராமணர்கள் பலரை நிறைவடையச் செய்த பிறகு, சிறிது உணவு உண்டான்.(4) ஓ! பாரதா, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளான காந்தாரியும், பெரும் நுண்ணறிவு கொண்ட குந்தியும், பல்வேறு பொருட்களைக் கொண்டு தங்கள் மருமகள்களால் வழிபடப்பட்ட பிறகு, சிறிதளவு உணவை உண்டனர்.(5) திருதராஷ்டிரன் உண்ட பிறகு, விதுரனும், பிறரும் அதையே செய்தனர், பாண்டவர்களும் தங்கள் உணவை முடித்துக் கொண்டு அங்கே வந்து அந்த முதிய மன்னனைச் சூழ்ந்து அமர்ந்தனர்.(6)

அப்போது, ஓ! ஏகாதிபதி, அம்பிகையின் மகன் {திருதராஷ்டிரன்}, தன் அருகில் அமர்ந்திருந்த குந்தியின் மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} முதுகைத் தன் கையால் தொட்டு,(7) “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, எட்டு அங்கங்களைக் கொண்ட உன் நாட்டுடன் தொடர்புடைய அனைத்திலும், நீதிமான்களின் கேள்விகளை {அறத்தை / தர்மத்தை} முதன்மையானவையாகக் கொண்டு, எப்போதும் கவனக்குறைவின்றி நீ செயல்பட வேண்டும்[1].(8) ஓ! குந்தியின் மகனே, நீ புத்திமானாகவும், கல்விமானகவும் இருக்கிறாய். ஓ! மன்னா, ஓ! பாண்டுவின் மகனே, நாட்டை நீதியுடன் பாதுகாக்கக்கூடிய வழிமுறைகளை நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(9) ஓ! யுதிஷ்டிரா, கல்வியில் முதிர்ந்தவர்களாக இருப்போரை {கற்றறிந்த பெரியோரை} நீ எப்போதும் கௌரவிக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்டு, எந்த ஐயுணர்வுமின்றி அதன்படியே நீ செயல்பட வேண்டும்.(10) ஓ! மன்னா, விடியலில் எழுந்து முறையான சடங்குகளுடன் அவர்களை வழிபட்டு, செயற்பாட்டுக்குரிய காலம் வரும்போது உன் செயல்களை (நீ நினைத்திருக்கும் செயல்களைக்) குறித்து அவர்களோடு ஆலோசிக்க வேண்டும்.(11) ஓ! மகனே, ஓ! பாரதா, உன் நடவடிக்கைகளால் உனக்கு என்ன நன்மை கிட்டும் என்பதை நீ அறிய விரும்பும்போது நீ அவர்களைக் கௌரவித்தால், அவர்கள் எப்போதும் உனக்கான நன்மையை அறிவிப்பார்கள்.(12)நீ உன் குதிரைகளைப் பாதுகாப்பதைப் போலவே உன் புலன்களையும் எப்போதும் பாதுகாப்பாயாக. அப்போது வீணாகாத செல்வம் போல அவை உனக்கு நன்மைபயக்கும்.(13) நேர்மைக்கான சோதனைகளில் தேர்ச்சியடைந்தவர்களையும் (பற்றுறுதி {விசுவாசம்}, அக்கறையின்மை, தன்னடக்கம், துணிவு ஆகியவற்றைக் கொண்டவர்களும்) பரம்பரை பரம்பரையாக நாட்டின் அதிகாரிகளாக இருப்பவர்களும், தூய ஒழுக்கம் கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், தொழிலில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துபவர்களும், அறவொழுக்கம் கொண்டவர்களுமான மனிதர்களையே நீ அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்.(14) பல்வேறு வேடங்களில் இருப்பவர்களும், நம்பிக்கை சோதனைக்கு உட்பட்டவர்களும், உன் நாட்டைச் சேர்ந்தவர்களும், பகைவரால் அறியப்படாதவர்களுமான ஒற்றர்கள் மூலம் நீ எப்போதும் தகவல்களைத் திரட்ட வேண்டும்.(15) உன் கோட்டையானது, வலுவான சுவர்கள், வளைவுகளைக் கொண்ட வாயில்கள் மூலம் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். சுவர்களின் அனைத்துப் பக்கங்களிலும், ஒன்றுக்கொன்று நெருக்கமாக உள்ள கண்காணிப்புக் கோபுரங்களின் மேல் பக்கத்துக்குப் பக்கம் நடந்து கொண்டிருக்கும் அறுவரை நீ நியமிக்க வேண்டும்[2].(16) வாயில்கள் போதுமான அளவுக்குப் பெரியதாகவும், வலிமையானதாகவும் இருக்க வேண்டும். சரியான இடங்களில் நிறுவப்படும் அந்த வாயில்களை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்[3].(17) எந்த மனிதர்களின் குடும்பங்கள் மற்றும் ஒழுக்கம் நன்கறியப்பட்டிருக்கிறதோ, அவர்களையே நீ உன் காரியங்களில் நியமிப்பாயாக. ஓ! பாரதா, உண்ணும் உணவு, அணியும் மாலைகள், கிடக்கும் படுக்கைகள் தொடர்பான காரியங்களிலும், விளையாடும் மற்றும் உண்ணும் நேரங்களிலும் நீ எப்போதும் மிகக் கவனமாக உன் மேனியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.ஓ! யுதிஷ்டிரா, உன் குடும்பத்துப் பெண்மணிகள், நன்னடத்தைக் கொண்டவர்களும், நற்குடியில் பிறந்தவர்களும், கல்விமான்களும், முதியவர்களும், நம்பிக்கைகுரியவர்களுமான ஊழியர்களால் கவனிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும்.(18,19) கல்விமான்களும், பணிவுள்ளவர்களும், நற்குடியில் பிறந்தவர்களும், அறம்பொருள் அறிந்தவர்களும், எளிமையான நடத்தையால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான பிராமணர்களை நீ அமைச்சர்களாக்கிக் கொள்ள வேண்டும்.(20) நீ அவர்களுடன் ஆலோசனைகளைச் செய்ய வேண்டும். எனினும், நீ பலருடன் ஆலோசிக்கக்கூடாது. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், உன் மொத்த அவையினரோடோ, பகுதி பேருடனோ ஆலோசிக்கலாம். (ஊடுருவல்காரர்களிடம் இருந்து) நன்கு பாதுகாக்கப்பட்ட ஓர் அறை அல்லது இடத்திற்குள் {மந்திரகிரஹத்தில்} நீ உன் ஆலோசனைக்கூட்டங்களை நடத்த வேண்டும். புல்லற்ற காட்டிலும் நீ ஆலோசனைக்கூட்டம் நடத்தலாம். நீ ஒருபோதும் இரவு வேளையில் ஆலோசிக்கக்கூடாது[4].(22) மனிதர்கள் செய்வதைச் செய்து காட்டும் {சொல்வதைச் சொல்லிக் காட்டும்} குரங்குகள், பறவைகள் மற்றும் பிற விலங்குகள் ஆகியனவும், மூடர்கள் முடவர்கள் மற்றும் வாத நோயாளிகள் ஆகியோரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் அறையில் விலக்கப்பட வேண்டும்.(23) மன்னர்களின் ஆலோசனைகள் வெளிப்படுவதால் உண்டாகும் தீமைககள் தீர்க்கப்பட முடியாதவை என்று நான் நினைக்கிறேன்.(24) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, ஆலோசனைகள் வெளிப்படுவதால் எழும் தீமைகளையும், அவற்றை முறையாகப் பாதுகாப்பதால் உண்டாகும் நன்மைகளையும் உன் அமைச்சர்களுக்கு மத்தியில் நீ மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டும்.(25)ஓ! யுதிஷ்டிரா, உன்னுடைய நகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போரின் நற்செயல்களையும், குற்றங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் நீ செயல்பட வேண்டும்.(26) ஓ! மன்னா, உன் சட்டங்கள் அதற்கான பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளவர்களும், மனநிறைவுடையவர்களும், நன்னடத்தைக் கொண்டவர்களுமான நம்பிக்கைக்குரிய நீதிபதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டும். அவர்களுடைய செயல்களும் ஒற்றர்கள் மூலம் உன்னால் கண்டறியப்பட வேண்டும்.(27) ஓ! யுதிஷ்டிரா, நீதித்துறையைச் சார்ந்த உன்னுடைய அதிகாரிகள், குற்றங்களின் ஆழத்தைக் கவனமாக உறுதி செய்த பிறகு, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனைகளை வழங்க வேண்டும்[5].[28) கையூட்டு {பரிதானம் / லஞ்சம்} பெறும் மனநிலை கொண்டவர்கள், பிறர் மனைவியரின் கற்புக்குக் களங்கம் விளைவிப்பவர்கள், கடுந்தண்டனைகளைக் கொடுப்பவர்கள், பொய் {போலிநியாயம்} பேசுவபவர்கள், தூற்றுபவர்கள் {வைபவர்கள்}, பேராசையால் களங்கமடைந்தவர்கள் {களவு செய்பவர்கள்}, கொலைகாரர்கள், முரட்டுச் செயல்களைச் செய்பவர்கள்,(29) சபைகளுக்கும், பிறரின் விளையாட்டுகளுக்கும் {இன்பத் தேடல்களுக்குத்} தொந்தரவு கொடுப்பவர்கள், வர்ணக் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் ஆகியோரை இடம் மற்றும் காலத்தைக் கருத்தில் கொண்டு அபராதங்களாலோ, மரணத்தாலோ தண்டிக்க வேண்டும்[6][7].(30)காலையில், நீ வழங்க வேண்டியவற்றைக் கொடுப்பதில் {உனக்குப் பிரியமானதைச் செய்வதில்} ஈடுபடுபவர்களை நீ காண வேண்டும். அதன்பிறகே நீ காலைக் கடன்களையும், அதற்கும்பிறகு உன் உணவையும் பார்க்க வேண்டும்.(31) அதன்பிறகு நீ உன் படைகளை மேற்பார்வையிட்டு ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அவர்களை மகிழ்விக்க வேண்டும். உன்னுடைய மாலைப் பொழுதுகள் தூதர்களுக்காகவும், ஒற்றர்களுக்காகவும் ஒதுக்கப்பட வேண்டும்.(32) பகலில் செய்யப்பட வேண்டிய செயல்களைத் தீர்மானிக்கப் பின்னிரவை நீ அர்ப்பணிக்க வேண்டும். நள்ளிரவுகளும், நடுப்பகல்களும் உனது கேளிக்கைகளுக்கும், விளையாட்டுகளுக்கும் அர்ப்பணிக்கப்பட வேண்டும். எனினும், அனைத்துக் காலங்களிலும் நீ உன் காரியங்களை நிறைவேற்றக்கூடிய வழிமுறைகளேயே நினைக்க வேண்டும்.(33) உரிய காலத்தில் உன் மேனியை அலங்கரித்துக் கொண்டு, அபரிமிதமாகக் கொடையளிப்பதற்காக நீ அமர வேண்டும். ஓ! மகனே, பல்வேறு செயல்களின் சுழற்சி, சக்கரங்களைப் போல நிற்காமல் சுழன்று கொண்டிருக்கிறது.(34) நீ நியாயமான வழிமுறைகளின் மூலம் பல்வேறு வகைச் செல்வங்களைக் கொண்டு உன் கருவூலத்தை நிறைக்க எப்போதும் முயற்சிக்க வேண்டும். முடிவில் நியாயமற்ற வழிமுறைகள் அனைத்தையும் நீ புறக்கணிக்க வேண்டும்.(35)

உன்னுடைய தாமதங்களைக் காண விரும்பும் உன் பகைவர்களை உன் ஒற்றர்கள் மூலம் கண்டறிந்து, நம்பிக்கைக்குரிய நபர்களைக் கொண்டு தொலைவில் இருந்தே அவர்களை அழிக்க வேண்டும்.(36) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஒழுக்கத்தை ஆய்வு செய்த பிறகே உன் பணியாட்கள் நியமிக்கப்பட வேண்டும். உரிய காரியத்திற்கு நியமிக்கப்பட்ட பணியாட்களைக் கொண்டோ, அவற்றுக்காக நியமிக்கப்படாத பணியாட்களைக் கொண்டோ நீ உன் செயல்கள் அனைத்தையும் செய்வாயாக[8].(37) உன் படைத்தலைவன், ஒழுக்கத்தில் உறுதியுள்ளவனாகவும், துணிவுமிக்கவனாகவும், கடினமான சூழ்நிலைகளைப் பொறுத்துக் கொள்ளக்கூடியவனாகவும், பற்றுறுதி {விசுவாசம்} கொண்டவனாகவும், உன் நன்மையில் அர்ப்பணிப்பு உள்ளவனாகவும் இருக்க வேண்டும்.(38) ஓ! பாண்டுவின் மகனே, உன் மாகாணங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் பசுக்களையும், கழுதைகளையும் போல உன் செயல்களை எப்போதும் செய்ய வேண்டும்[9].(39) ஓ! யுதிஷ்டிரா, உன்னுடைய காரிய தாமதங்களையும் {ரந்திரங்கள் / பலவீனங்களையும்}, பகைவர்களின் காரிய தாமதங்களையும் நீ கவனமாக உறுதி செய்து கொள்ள வேண்டும். உன்னுடையவர்களின் காரிய தாமதங்களையும், பகைவருடையவர்களின் காரிய தாமதங்களையும் நீ உறுதி செய்து கொள்ள வேண்டும்.(4) தங்கள் தங்கள் தொழில்களில் திறம்பெற்றவர்களும், உனது நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களுமான உன் நாட்டைச் சேர்ந்தவர்கள், போதுமான வாழ்வாதாரங்களின் மூலம் உன்னால் ஆதரிக்கப்பட வேண்டும்.(41) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, ஞானமுள்ள மன்னன் ஒருவன், சாதித்திருக்கும் தன் குடிமக்களின் சாதனைகள் பாதுகாக்கப்படுவதை எப்போதும் கண்காணிக்க வேண்டும். அப்போது அவர்கள், தங்கள் திறனில் இருந்து வீழாதிருப்பதைக் கண்டு உன்னிடம் உறுதியான அர்ப்பணிப்புடன் திகழ்வார்கள்[10]” {என்றான் திருதராஷ்டிரன்}.(42)

கொடியோர் – ஆததாயிகள்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 06-யுதிஷ்டிரனுக்கு ராஜநீதிகளை உரைத்த திருதராஷ்டிரன்; எழுபத்திரண்டு மண்டலங்கள் குறித்துச் சொன்னது; எந்தெந்த பகைவரை எவ்வாறு கையாள வேண்டுமெனச் சொன்னது…

திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, உனக்குரிய மண்டலங்களையும், உன் பகைவர்கள், நடுநிலையாளர்கள், உன்னிடமும், பகைவரிடமும் ஒரே மனநிலையைக் கொண்டவர்கள் ஆகியோரின் மண்டலங்களையும் நீ எப்போதும் உறுதி செய்து கொள்ள வேண்டும்[1].(1) ஓ!பகைவரை நொறுக்குபவனே, பகைவர், ஆததாயிகள் {கொலையிற்கொடியார்} என்றழைக்கப்படுபவர்கள், கூட்டாளிகள், பகைவரின் கூட்டாளிகள் ஆகிய நால்வகைப் பகைவரின் மண்டலங்களையும் நீ வெவ்வேறாக அறிந்து கொள்ள வேண்டும்[2].(2) ஓ!குருகுலத்தில் முதன்மையானவனே, நாட்டின் அமைச்சர்கள், மாகாணங்களின் மக்கள், கோட்டைகளின் காவல்படையினர், படைவீரர்கள் ஆகியோர் {பகைவரால்} கெட்டோ, கெடாமலோ இருக்கலாம். (எனவே, அவர்கள் உன் எதிரிகளின் மூலம் கெடாமல் இருக்கும் வகையில் நீ நடந்து கொள்வாயாக).(3) (மேலே பட்டியலிடப்பட்ட) பன்னிருவரே[3] மன்னனின் முதன்மையான அமைப்பினராக இருக்கின்றனர். இந்தப் பன்னிருவரும், அமைச்சர்களை முதன்மையானவர்களாகக் கொண்ட அறுபதுபேரும் {ஆக மொத்தம் 72 பேரும்} மன்னனால் கவனிக்கப்பட வேண்டும்[4].(4)அரசியல் அறிந்த ஆசிரியர்கள் {நீதிசாஸ்திரமறிந்த ஆசார்யர்கள்} இவற்றை {இந்த எழுபத்திரண்டையே} மண்டலங்கள் என்ற பெயரில் அழைக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரா, (அமைதி, போர், அணிவகுப்பு, நிறுத்தம், வேற்றுமை விதைத்தல், சமாதானம் ஆகிய) ஆறு நிகழ்வுகள் இவற்றையே {இந்த எழுபத்திரண்டையே} சார்ந்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வாயாக[5].(5) வளர்ச்சியும், சிதைவும், நிலையாக நிற்கும் நிலையும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஆறு வகை நிகழ்வுகளின் குணங்கள், (ஏற்கனவே பட்டியலிடப்பட்ட) எழுபத்திரண்டைச் சார்ந்திருக்கின்ற என்பதையும் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.(6) ஓ! குந்தியின் மகனே, ஒருவன் சார்ந்திருக்கும் தரப்பு பலமானதாகவும், பகைவனின் தரப்பு பலவீனமானதாகவும் இருக்கும் போதுதான் அவன் பகைவனை எதிர்த்து போரிட்டு வெற்றியடைவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும்.(7) பகைவன் வலுவாகவும், தன் தரப்பு பலவீனமாகவும் இருக்கும்போது, அந்தப் பலவீனமான மன்னன் புத்திசாலியாக இருந்தால் அந்தப் பகைவனுடன் சமாதானம் செய்து கொள்ள முனைவான்.(8)ஒரு மன்னன் (படையின் உணவுத்துறைக்கு வேண்டிய) பொருட்களைப் பெரிய அளவில் திரட்ட வேண்டும். ஓ! பாரதா, படையெடுக்க இயன்றவனாகும்போது, அவன் ஒருபோதும் தாமதிக்கக்கூடாது.(9) அதைத்தவிர, அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் வேறு எந்தக் கருத்தினாலும் அசைக்கப்படாமல், தன்னுடையவர்களை அவர்களுக்குத் தகுந்த அலுவல்களில் நியமிக்க வேண்டும். (தன் ஆட்சிப்பகுதிகளைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது) அவன் அதிகம் பயிர் விளையாத நிலங்களை மட்டுமே தன் எதிரிக்குக் கொடுக்க வேண்டும்.(10) (செல்வத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது) அவன் அற்ப உலோகம் கலக்கப்பட்ட தங்கத்தையே கொடுக்க வேண்டும். (தன் படையில் ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது) பலமற்ற மனிதர்களையே அவன் கொடுக்க வேண்டும். உடன்பாடுகள் செய்வதில் திறம் பெற்றவன், நிலத்தையோ, தங்கத்தையோ, மனிதர்களையோ தன் எதிரியிடம் இருந்து பெறும்போது, இதற்கு நேர்மாறான குணங்களை உடையவற்றையே பெற வேண்டும்[6].(11) ஓ! பாரதர்களின் தலைவா, அமைதி உடன்பாடுகள் செய்யப்படும்போது, (வீழ்த்தப்பட்ட) மன்னனின் மகனைப் பிணையாகக் கேட்க வேண்டும். ஓ! மகனே, இதற்கு முரணான நடத்தை நன்மை பயக்காது.ஒரு மன்னனுக்குப் பேரிடர் நேர்தால்,(12) வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளில் உள்ள தன் அறிவை அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்[7]. ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, ஒரு மன்னன், தன் மக்களில் உற்சாகமற்றவர்கள், (பார்வையற்றோர், காது கேளாதோர், ஊமைகள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட) ஆதரவற்றவர்களைப் பராமரிக்கவேண்டும்.(13) தன் நாட்டைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வலிமைமிக்க மன்னன், ஒன்றன்பின் ஒன்றாகவோ, ஒரே நேரத்திலோ பகைவரை எதிர்க்கும் தன் முயற்சிகள் அனைத்தையும் செய்து கொண்டே வேண்டும். அவன் அவர்களைப் பீடித்துத் தடுத்து, அவர்களது கருவூலத்தை வற்றச் செய்ய வேண்டும்.(14) தன் வளர்ச்சியை விரும்பும் மன்னன், தன் ஆளுகையின் கீழ் உள்ள துணை நிலைத் தலைவர்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்கக்கூடாது. ஓ! குந்தியின் மகனே, மொத்த பூமியையும் வெல்ல விரும்பும் மன்னனிடம் நீ ஒருபோதும் {நேரடியாகப்} போரிட முயலாதே.(15) உன் அமைச்சர்களின் துணையுடன் அவனது உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் துணைநிலைத் தலைவர்களுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்கி அதன் மூலம் நீ {உன் நாட்டுக்கு} நன்மை பெற முயல வேண்டும்.(16)பலமிக்க மன்னன் ஒருவன், பலவீனமான மன்னர்களை அழிக்க முற்படக்கூடாது. ஏனெனில் அவர்களே {உன் ஆளுகைக்குட்பட்டு} நல்லோரைப் பேணி பாதுகாத்து, தீயோரைத் தண்டித்து உலகத்திற்கு நன்மை செய்வார்கள். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, நீ ஒரு பிரம்பின் {நாணல் / நீர்நொச்சியின்} நடத்தையைப் பின்பற்ற வேண்டும்[8].(17) பலமிக்க மன்னன் ஒருவன் பலவீனமானவனை எதிர்த்து முன்னேறினால், பின்னவன், சமாதானம் மற்றும் பிற வழிமுறைகளைப் பின்பற்றி அவனைத் தடுக்க வேண்டும்.(18) படையெடுத்து வருபவனை இவ்வழியில் தடுக்க முடியவில்லையெனில், அவனும், அவனுக்கு நன்மை செய்யும் மனநிலை கொண்டவர்களும், பகைவனை எதிர்த்துப் போரிட வேண்டும். உண்மையில், அவன் {தன்னை எதிர்த்துப்} படையெடுத்து வருபவனுக்கு எதிராக, {தனது} அமைச்சர்கள், குடிமக்கள் ஆகியோருடனும், கருவூலத்துடனும் சேர்ந்து பலத்தைப் பயன்படுத்த {போரிட} வேண்டும்.(19) பகைவனோடு போரிடுவது நம்பிக்கையளிக்கவில்லையெனில் அவன் தனது ஆதாரங்களை ஒவ்வொன்றாகத் துறந்து வீழ்ச்சியடைய வேண்டும். இவ்வகையில் உயிரைக் கைவிடும் அவன் கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுதலை பெறுவான்” என்றான் {திருதராஷ்டிரன்}.(20)

அறத்தின் ஆட்சி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 07-போரும் அமைதியும்; செல்வம், கூட்டாளிகள் ஆகியவற்றின் பலங்கள்; இயந்திர மற்றும் வணிக வர்க்கத்தினரின் பலம்; மன்னர்களின் பேரிடர்கள்; நூறு குதிரை வேள்விகளும் அறம்சார்ந்த ஆட்சியும் ஒரே பயனை உண்டாக்கும் என்பது…

திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னர்களில் சிறந்தவனே, ஓ! யுதிஷ்டிரா, போர் மற்றும் அமைதி குறித்தும் நீ முறையாகச் சிந்திக்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் இருவகைகளைக் கொண்டவை. பல்வேறு வழிமுறைகள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளின் மூலம் போரும், அமைதியும் உண்டாகின்றன[1].(1) ஓ! குரு குலத்தோனே, நீ உன்னைப் பொறுத்தவரையில் (பலம் மற்றும் பலவீனம் என்ற) இரண்டையும் குறித்து நீ அமைதியாகச் சிந்திக்க வேண்டும். நிறைவடைந்தவர்களும், உடல்நலமிக்கவர்களும், புத்திசாலிகளுமான படைவீரர்களைக் கொண்ட பகைவனை எதிர்த்து நீ திடீரெனப் படையெடுக்கக்கூடாது. மறுபுறம், அவனை வெல்லும் வழிமுறைகளைக் குறித்து நீ கவனமாகச் சிந்திக்க வேண்டும்[2].(2) நிறைவடைந்தவர்களும், உடல்நலம் சிறந்திருப்பவர்களுமான போராளிகள் இல்லாத பகைவனை எதிர்த்தே நீ படையெடுக்க வேண்டும். அனைத்தும் சாதகமாக இருக்கும்போதுதான் பகைவனை வீழ்த்த முடியும். எனினும், அதன்பிறகு வெற்றியாளன் ஓய்ந்து (பலமான நிலையில் நீடித்து) இருக்க வேண்டும்.(3) அடுத்ததாக அவன் தன் பகைவனைப் பல்வேறு துன்பங்களில் மூழ்கடித்து, அவனுடைய கூட்டாளிகளுக்கு மத்தியில் வேற்றுமையை விதைக்க வேண்டும். அவன், பகைவனைப் பீடித்து, அவனது இதயத்திற்கு அச்சமூட்டி, அவனைத் தாக்கி அவனது படைகளைப் பலவீனப்படுத்த வேண்டும்.(4)சாத்திரங்களை அறிந்த மன்னன், பகைவனை எதிர்த்துப் படையெடுக்கும்போது, மூன்று வகைப் பலங்களைக் குறித்துச் சிந்திக்க வேண்டும், உண்மையில் தன் பலத்தையும், பகைவனின் பலத்தையும் அவன் சிந்திக்க வேண்டும்[3].(5) ஓ! பாரதா, எந்த மன்னன், சுறுசுறுப்பு {உத்ஸாகசக்தியுடனும்}, ஒழுக்கம் {பிரபுசக்தியுடனும்}, ஆலோசனைகள் {மந்திரசக்தி} ஆகிய சக்திகளுடன் இருக்கிறானோ, அவனே பகைவரை எதிர்த்துப் படையெடுக்கலாம். அவனுடைய நிலை வேறு வகையில் இருந்தால், அவன் தாக்குதலைத் தவிர்க்க வேண்டும்[4].(6) மன்னனானவன், செல்வத்தின் பலம் {மௌலபலம்}, கூட்டாளிகளின் பலம் {மித்ரபலம்}, காட்டுவாசிகளின் பலம் {அடவீபலம்}, ஊதியம் பெறும் படைவீரர்களின் பலம் {பிருதபலம்}, இயந்திர மற்றும் வணிக வர்க்கங்களின் பலம் {ஸ்ரேணீபலம்} ஆகியவற்றுடன் இருக்க வேண்டும்[5].(7) இவையனைத்திலும் கூட்டாளிகள் பலமும், செல்வபலமும் எஞ்சியவற்றைவிட மேன்மையானவை. வர்க்கங்களின் பலமும் {ஸ்ரேணீபலமும்}, நிலையான படையின் பலமும் {பிருதபலமும்} நிகரானவையாகும்.(8)மேற்கண்ட இரண்டு பலங்களையும் பயன்படுத்த வேண்டிய வேளைவரும் பல சந்தர்ப்பங்களில், அவை இரண்டிற்கும் இணையாக ஒற்றர்களின் பலமே செயல்திறன் கொண்ட பலமாக மன்னனால் கருதப்படும்.(9) ஓ! மன்னா, ஆட்சியாளர்களை மூழ்கடிக்கும் பேரிடர் {ஆபத்து} என்பது, பல வடிவங்களைக் கொண்டதாகக் கருதப்பட வேண்டும். ஓ! குரு குலத்தோனே, அந்தப் பல்வேறு வடிவங்கள் யாவை என்பதைக் கேட்பாயாக.(10) உண்மையில், ஓ! பாண்டுவின் மகனே, பேரிடர் {ஆபத்துகள்} பல்வேறு வகைகளைச் சார்ந்தவையே. ஓ! மன்னா, அவற்றின் வடிவங்களைத் தனித்தனியாகக் கண்டு, (சோம்பலில் அவற்றை மறைக்காமல்) சமரசம் மற்றும் நன்கறியப்பட்ட பிற வழிமுறைகளைப் பயன்படுத்தி அவற்றைச் சந்திக்க வேண்டும்.(11) ஓ! பகைவரை எரிப்பவனே, மன்னன் நல்ல படையைக் கொண்டிருக்கும்போது (பகைவனை எதிர்த்து) படையெடுக்க வேண்டும். படையெடுக்கத் தயாராகும்போது, காலம், இடம், தான் திரட்டியிருக்கும் படை, (பிற காரியங்களில்) தன்னுடைய சாதகங்கள் ஆகியவற்றை அவன் கருத்தில் கொள்ள வேண்டும்.(12)

தன் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் கவனமுள்ள மன்னன், உற்சாகமிக்கவர்களும், உடல்நலமிக்கவர்களுமான போர்வீரர்களுடன் ஆயத்தமான பிறகே படையெடுக்க வேண்டும். ஓ! பாண்டுவின் மகனே, அவன் பலமடையும்போது, பருவகாலம் சாதகமற்றிருந்தாலும் கூட, அவன் படையெடுக்கலாம்.(13) அம்பறாத்தூணிகளையே கற்களாகக் கொண்டதும், குதிரைகளையும், தேர்களையும் ஓடையாகக் கொண்டதும், கொடிமரங்களைக் கரைகளில் நிற்கும் மரங்களாகக் கொண்டதும் காலாட்படைவீரர்களையும், யானைகளையும் சகதியாகக் கொண்டதுமான ஓர் ஆற்றை மன்னன் உண்டாக்க வேண்டும். அத்தகைய ஆற்றையே {படையையே} மன்னன் தன் பகைவனை அழிக்கப் பயன்படுத்த வேண்டும்.(14) உசானஸ் {சுக்ராச்சாரியர்} அறிந்த அறிவியலுக்கு ஏற்புடைய வகையில், பகைவரோடு போரிட சகடம், பத்மம் மற்றும் வஜ்ரம் என்றழைக்கப்படும் வியூகங்களை அமைக்க வேண்டும்[6].(15) பகைவனின் பலம் குறித்த அனைத்தையும் ஒற்றர்களின் மூலம் அறிந்து, தன் பலத்தையும் ஆய்வு செய்து கொண்டு, ஒரு மன்னன் தன் ஆட்சிப்பகுதிக்குள்ளோ, பகைவரின் ஆட்சிப்பகுதிக்குள்ளோ போரைத் தொடங்க வேண்டும்[7].(16)மன்னன் எப்போதும் தன் படையை நிறைவடையச் செய்து, (பகைவனை எதிர்த்து) தன்னுடைய பலமிக்கப் போர்வீரர்களை ஏவ வேண்டும். முதலில் தன்னுடைய நாட்டின் நிலையை உறுதி செய்து கொண்டு, சமரசத்தையோ, நன்கறியப்பட்ட வேறு வழிமுறைகளையோ ஒருவன் பயன்படுத்த வேண்டும்.(17) ஓ! மன்னா, ஒருவன் அனைத்து வழிமுறைகளின் மூலமும் தன் உடலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இம்மையிலும், மறுமையிலும் பெறப்போகும் உயர்ந்த நன்மைக்காக அவன் அதைச் செய்ய வேண்டும்.(18) ஓ! ஏகாதிபதி, மன்னன் இவ்வழிமுறைகளில் முறையாக நடந்து கொள்வதன் மூலம், இவ்வுலகில் அறம்சார்ந்த தன் குடிமக்களை ஆண்டபிறகு, மறுமையில் சொர்க்கத்தை அடைகிறான்.(19) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, ஈருலகங்களையும் அடைவதற்காக இவ்வாறே நீ உன் குடிமக்களின் நன்மையை எப்போதும் நாட வேண்டும்[8].(20)ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பீஷ்மர், கிருஷ்ணன், விதுரன் ஆகியோர் மூலம் ஏற்கனேவே கடமைகள் அனைத்தம் உனக்குக் கற்பிக்கப்பட்டிருந்தாலும், நான் உன் மீது கொண்டிருக்கும் அன்பின் காரணமாக இந்த நெறிமுறைகளை உனக்குச் சொன்னேன்.(21) வேள்விகளில் அபரிமிதமான கொடைகளை அளிப்பவனே, இவை யாவற்றையும் நீ முறையாகச் செய்ய வேண்டும். இவ்வழியில் உன்னை நடத்திக் கொண்டு உன் குடிமக்களின் அன்புக்குரியவனாகி சொர்க்கத்தின் இன்பநிலையை அடைவாயாக.(22) நூறு குதிரை வேள்விகளில் தேவர்களைத் துதித்தவனும், அறம்சார்ந்து தன் குடிமக்களை ஆண்ட மன்னனும் நிகரான தகுதியையே அடைகிறார்கள்” என்றான் {திருதராஷ்டிரன்}.(23)

குடிமக்களிடம் வேண்டிய திருதராஷ்டிரன்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 08-ருதராஷ்டிரனைத் தூண்டிய காந்தாரி; நாட்டு மக்களை அழைத்துத் தான் காட்டுக்குச் செல்ல அனுமதி வேண்டிய திருதராஷ்டிரன்…

யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, நீர் சொன்னதை நான் செய்வேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, எனக்கு நீர் மேலும் கற்பிக்க வேண்டும்.(1) பீஷ்மர் சொர்க்கத்திற்கு உயர்ந்துவிட்டார். மதுசூதனன் (துவாரகைக்குச்) சென்றுவிட்டான். விதுரரும், சஞ்சயரும் (உம்மோடு காட்டுக்குச்) சென்று விடுவார்கள். எனவே, உம்மைத் தவிர வேறு யார் எனக்குக் கற்பிக்க முடியும்?(2) ஓ! பூமியின் தலைவா, நீர் என் நன்மையை விரும்பி இன்று சொன்ன அனைத்தையும் நான் நிச்சயம் பின்பற்றுவேன். ஓ! மன்னா, இது குறித்து நீர் உறுதி கொள்வீராக[1]” என்றான்”.(3)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதர்களின் தலைவா, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்ட அரசமுனி திருதராஷ்டிரன், (காட்டுக்கு ஓய்ந்து செல்ல) மன்னனின் அனுமதியைப் பெற விரும்பினான்.(4) அவன், “ஓ! மகனே, நிற்பாயாக {இரு}. நான் அதிகமாக உழன்றிருக்கிறேன்” என்றான்[2]. இதைச் சொன்ன அந்த முதிய மன்னன் காந்தாரியின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தான்.(5)அறவொழுக்கம் கொண்டவளும், காரிய சாதனைகள் அனைத்தையும் அறிந்தவளுமான காந்தாரி, உயிரினங்களின் இரண்டாவது தலைவனைப் போலிருந்த தன் கணவனிடம், அந்தக் காலத்திற்குப் பொருத்தமான சொற்களில்,(6) “பெரும் முனிவரான வியாசரிடமே நீர் அனுமதியைப் பெற்றுவிட்டீர். எனினும், யுதிஷ்டிரனின் அனுமதியுடன் நீர் எப்போது காட்டுக்குச் செல்லப் போகிறீர்?” என்று கேட்டாள்.(7)

திருதராஷ்டிரன், “ஓ! காந்தாரி, உயர் ஆன்மா கொண்ட என் தந்தையிடம்  {வியாசரிடம்} நான் அனுமதியைப் பெற்றுவிட்டேன். (அடுத்துப் பெறப்போகும்) யுதிஷ்டிரனின் அனுமதியுடனும் நான் விரைவில் காட்டுக்கு ஓயப்போகிறேன்.(8) எனினும், கொடிய பகடைக்கு அடிமையாக இருந்த என் மகன்கள் அனைவருக்காகப் பிரேத நிலையைப் பின்பற்றிச் செல்லவல்ல கொஞ்சம் செல்வத்தை நான் கொடையளிக்க விரும்புகிறேன். உண்மையில், என் மாளிகைக்கு மக்கள் அனைவரையும் அழைத்து அக்கொடைகளை அளிக்க நான் விரும்புகிறேன்” என்றான்“[3].(9)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “(காந்தாரியிடம்) இவ்வாறு சொன்ன திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனுக்கும் சொல்லி அனுப்பினான். பின்னவன் {யுதிஷ்டிரன்}, தன் பெரியப்பாவின் ஆணையின் பேரில் தேவையான பொருட்கள் அனைத்தையும் கொண்டு வந்தான்.(10) குருஜங்காலத்தில் வசித்த பிராமணர்கள் பலரும், க்ஷத்திரியர்கள் பலரும், வைசியர்கள் பலரும், சூத்திரர்கள் பலரும், நிறைவடைந்த இதயங்களுடன் திருதராஷ்டிரனின் மாளிகைக்கு வந்தனர்.(11) அந்தப்புரத்தில் இருந்து வெளியே வந்த முதிய மன்னன் {திருதராஷ்டிரன்}, அவர்கள் அனைவரையும், அங்கே கூடியிருந்த தன் குடிமக்களை அனைவரையும் கண்டான்.(12) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், அங்கே திரண்டிருந்த குடிமக்கள், மாகாணத்துவாசிகள், தன் நலம் விரும்பிகள், பல்வேறு நாடுகளில் இருந்து பெரும் எண்ணிக்கையில் வந்திருந்த பிராமணர்கள் ஆகியோரைக் கண்டு இந்தச் சொற்களைச் சொன்னான்.(13,14)

{திருதராஷ்டிரன்}, “நீங்களும் குருக்களும் {கௌரவர்களும்} நீண்ட பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து, ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும், ஒருவருக்கொருவர் நன்மை செய்வதில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறீர்கள்.(15) இப்போது வந்திருக்கும் வாய்ப்பைக் கருத்தில் கொண்டு நான் சொல்வதை ஆசான்களின் சொற்களை நிறைவேற்றும் சீடர்களைப் போல நீங்கள் அனைவரும் நிறைவேற்ற வேண்டும்.(16) காந்தாரியைத் துணையாகக் கொண்டு காட்டுக்குள் ஓய்ந்து செல்வதில் நான் என் இதயத்தை நிலைநிறுத்தியிருக்கிறேன். வியாசரும், குந்தியின் மகனும் {யுதிஷ்டிரனும்} இதை ஏற்றிருக்கின்றனர்.(17) உங்கள் அனுமதியும் எனக்குக் கிடைக்கட்டும். இதில் தயக்கமேதும் கொள்ளாதீர். உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் எப்போதும் நீடித்திருக்கும் நல்லெண்ணத்தை,(18) வேறு நாடுகளை ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும் இடையில் காண முடிவதில்லை. இவ்வளவு காலம் என் தலையில் இருக்கும் இந்தச் சுமையால் நான் களைத்திருக்கிறேன். நான் பிள்ளைகளை இழந்தவனாகவும் இருக்கிறேன்.(19) பாவமற்றவர்களே, காந்தாரியுடன் சேர்ந்து நோற்கும் உண்ணாநோன்புகளால் நான் மெலிந்திருக்கிறேன். அரசாட்சி யுதிஷ்டிரனுக்குச் சென்ற பிறகும், நான் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்தேன்.(20) மனிதர்களில் முதன்மையானவர்களே, துரியோதனனின் அரசில் நான் எதிர்பார்க்கக்கூடிய மகிழ்ச்சியைவிட அது பெரிதாக இருந்ததாக நான் நினைக்கிறேன். முதிர்ந்தவனும், பிள்ளைகளை இழந்தவனும்மான எனக்குக் காடுகளை விடச் சிறந்த புகலிடம் வேறு எது இருக்க முடியும்? உயர்வாக அருளப்பட்டவர்களே, நான் வேண்டும் அனுமதியை எனக்குக் கொடுப்பதே உங்களுக்குத் தகும்” என்றான் {திருதராஷ்டிரன்}.(21)

ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அவன் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட குருஜங்காலவாசிகள் அனைவரும், கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன் உரத்த ஒப்பாரியில் ஈடுபட்டனர்.(22) பெருஞ்சக்தி கொண்ட திருதராஷ்டிரன், துயரில் பீடிக்கப்பட்ட அந்த மக்களுக்கும் மேலும் சிலவற்றைச் சொல்ல விரும்பி, மீண்டும் அவர்களிடம் பேசத்தொடங்கிப் பின்வருமாறு சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(23)

அடைக்கலம் ஒப்படைப்பு! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 09-தான் செய்த தவறுகளைப் பொறுக்கும்படி மக்களிடம் வேண்டிய திருதராஷ்டிரன்; யுதிஷ்டிரனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் காட்டுக்குச் செல்வதற்கு அனுமதி கேட்டது…

திருதராஷ்டிரன், “சந்தனு இந்தப் பூமியை முறையாக ஆண்டார். அதே போல, பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட விசித்திரவீரியரும் உங்களை ஆண்டார். நிச்சயம் இவை யாவும் நீங்கள் அறிந்தது.(1) என் தம்பி பாண்டு, எனக்கும், உங்களுக்கும் எவ்வளவு அன்புக்குரியவனாக இருந்தான் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவனும் உங்களை முறையாகவே ஆண்டான்.(2) பாவமற்றவர்களே, நானும் உங்களுக்குத் தொண்டாற்றியிருக்கிறேன். அத்தொண்டுகள் தேவையான அளவுக்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும், கவனக்குறைவின்றி நான் என் கடமைகளைச் செய்திருப்பதால் என்னை மன்னிப்பதே உங்களுக்குத் தகும்.(3)

துரியோதனனும் தன் தரப்பில் ஒரு முள்ளுமின்றி {பகைவரெவருமின்றி} இந்நாட்டை அனுபவித்தான். அவன் தீய புத்தி கொண்டவனாகவும், மூடனாகவும் இருந்தாலும், உங்களுக்கு எத்தீங்கையும் செய்ததில்லை.(4) எனினும், தீய புத்தி கொண்ட அந்த இளவரசனின் குற்றத்தாலும், அவனது செருக்காலும், என்னுடைய அநீதியினாலும் அரச வகையைச் சேர்ந்த மனிதர்களுக்குப் பேரழிவு ஏற்பட்டது.(5) அக்காரியத்தில் நான் சரியாகச் செயல்பட்டிருந்தாலும், தவறாகச் செயல்பட்டிருந்தாலும், அது குறித்து உங்கள் இதயங்களில் இருக்கும் நினைவுகளை அகற்றிவிடுமாறு கூப்பிய கரங்களுடன் நான் உங்களை வேண்டுகிறேன்.(6)

“இவன் முதியவன்; இவன் தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தவன்; இவன் துன்பத்தால் பீடிக்கப்பட்டவன்; இவன் நம் மன்னன்; இவன் முந்தைய மன்னர்களின் வழித்தோன்றல்” என்பன போன்ற கருத்துகள் என்னை மன்னிக்கும்படி உங்களைத் தூண்ட வேண்டும்.(7) காந்தாரியும் உற்சாகமற்றவளாகவும், முதியவளாகவும் இருக்கிறாள். அவளும் தன் பிள்ளைகளை இழந்து ஆதரவற்றவளாக இருக்கிறாள். மகன்களை இழந்த துக்கத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் அவளும் என்னுடன் சேர்ந்து உங்களை வேண்டுகிறாள்.(8) எங்கள் இருவரையும் முதியவர்களாகவும், பீடிக்கப்பட்டவர்களாகவும், பிள்ளைகளை இழந்தவர்களாகவும் அறிந்து கொண்டு நாங்கள் வேண்டும் அனுமதியை எங்களுக்குக் கொடுப்பீராக.(9)

குரு {குருஜங்காலத்தின்} மன்னனும், குந்தியின் மகனுமான இந்த யுதிஷ்டிரன், செழிப்பிலும், வறுமையிலும் உங்கள் அனைவராலும் கவனித்துக் கொள்ளப்பட வேண்டும்.(10) அளவில்லா ஆற்றல் கொண்ட நான்கு சகோதரர்களைத் தன் ஆலோசகர்களாகக் கொண்ட அவன் ஒருபோதும் துன்பத்தில் வீழமாட்டான். அறம், பொருள் இரண்டையும் அறிந்தவர்களான அவர்கள் அனைவரும், லோகபாலர்களுக்கு ஒப்பானவர்களாவர்.(11) வலிமையும், சக்தியும் கொண்ட இந்த யுதிஷ்டிரன், அண்டத்தின் உயிரினங்களுடைய தலைவனான சிறப்புமிக்கப் பிரம்மனைப் போலவே உங்களை ஆள்வான்.(12)

நிச்சயம் சொல்லப்பட வேண்டியதையே நான் இப்போது சொன்னேன். நான் உங்களிடம் இந்த யுதிஷ்டிரனை அடைக்கலமாக ஒப்படைக்கிறேன். இந்த வீரனிடம் உங்களையும் அடைக்கலமாக ஒப்படைக்கிறேன்.(13) இப்போது உயிரோடு இல்லாத என் மகன்களாலோ, உண்மையில் என்னைச் சார்ந்தவர்கள் எவராலோ உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கெதனையும் மன்னித்து மறப்பதே உங்கள் அனைவருக்கும் தகும்.(14) முன்னர் எச்சந்தர்ப்பத்திலும் நீங்கள் எனக்கு எதிரான கோபத்தை ஒருபோதும் வளர்த்ததில்லை. மாறாப்பற்றிற்கு {விசுவாசத்திற்கு} புகழ்பெற்ற உங்கள் முன் நான் என் கைகளைக் கூப்புகிறேன். இதோ நான் உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்.(15) பாவமற்றவர்களே, சஞ்சல புத்தி கொண்டவர்களும், பேராசையெனும் களங்கமுடையவர்களும், ஆசைகளுடைய தூண்டலின்படியே எப்போதும் செயல்பட்டவர்களுமான என் மகன்களால் செய்யப்பட்ட எதற்காகவும் நானும், என் அருகில் இருக்கும் காந்தாரியும் உங்களிடம் மன்னிப்பை வேண்டுகிறோம்” என்றான் {திருதராஷ்டிரன்}.(16)

அந்த முதிய ஏகாதிபதியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், குடிமக்கள் மற்றும் மாகாணத்துவாசிகள் அனைவரும், கண்ணீரால் நிறைந்தவர்களாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே ஒன்றும் பேசாதிருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

குடிமக்களின் ஒப்புதல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 10- ஒரு பிராமணர் மூலம் திருதராஷ்டிரனைத் தேற்றி, காட்டுக்குச் செல்வதற்குப் பெரும் வருத்தத்துடன் அனுமதி கொடுத்த குருஜாங்கலத்தார்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! குரு குலத்தோனே, முதிய மன்னனால் {திருதராஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட குடிமக்களும், மாகாணவாசிகளும், நினைவிழந்த மனிதர்களைப் போலச் சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.(1) அவர்கள் துயரால் அடைக்கப்பட்ட தொண்டைகளுடன், அமைதியாக இருப்பதைக் கண்ட மன்னன் திருதராஷ்டிரன், மீண்டும் அவர்களிடம்,(2) “மனிதர்களில் சிறந்தவர்களே, இந்நாட்டில் அறம் சார்ந்து வசிப்போரே, முதிர்ந்தவனும், மகனற்றவனும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடியவனுமான நான், என் மனைவியுடன் {காந்தாரியுடன்} சேர்ந்து பல்வேறு வகை புலம்பல்களில் ஈடுபட்டு(3) காட்டுக்கு ஓய்ந்து செல்லும் காரியத்தில், என் தந்தையும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்} மற்றும் அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனான யுதிஷ்டிரன் ஆகியோரின் அனுமதியைப் பெற்றேன்.(4) பாவமற்றவர்களே, நானும், காந்தாரியும் தலை வணங்கி உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். எங்களுக்கு அனுமதி அளிப்பதே உங்கள் அனைவருக்கும் தகும்” என்றான் {திருதராஷ்டிரன்}”.(5)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, குரு மன்னன் சொன்ன இந்தப் பரிதாபத்திற்குரிய சொற்களைக் கேட்டு, அங்கே கூடியிருந்த குருஜாங்கலவாசிகள் அனைவரும் அழத் தொடங்கினர்.(6) தங்கள் கரங்களாலும், மேலாடைகளாலும் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்ட அம்மனிதர்கள் அனைவரும், (தங்களை விட்டு நிரந்தரமாகச் செல்லப்போகும் அன்புக்குரிய மகனைக் காணும்) தந்தைமாரையும், தாய்மாரையும் போல எரியும் துயருடன் நெடுநேரம் அழுதனர்.(7) திருதராஷ்டிரன் இவ்வுலகைவிட்டு செல்ல விரும்புகிறான் என்ற கவலையை எண்ணங்கள் ஏதுமற்ற தங்கள் இதயங்களில் சுமந்திருந்த அவர்கள், நினைவை இழந்து நிற்கும் மனிதர்களைப் போலத் தெரிந்தனர்.(8)

காட்டுக்குச் செல்லும் விருப்பத்தைத் திருதராஷ்டிரன் அறிவித்ததன் மூலம் உண்டான இதயக்கலக்கத்தைத் தடுத்து, படிப்படியாகத் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நிலையை அவர்கள் அடைந்தனர்.(9) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கள் சொற்களைச் சுருக்கமாக்கி, அவற்றை ஒரு பிராமணரிடம் சொல்லி, அவரை அந்த முதிர்ந்த ஏகாதிபதிக்கு மறுமொழி கூறச் செய்தனர்.(10) கல்விமானும், நன்னடத்தைக் கொண்டவரும், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், அனைத்துக் காரியங்களையும் அறிந்தவரும், ரிக்குகள் {ரிக் வேத மந்திரங்கள்} அனைத்திலும் திறம்பெற்றவரும், சாம்பன் என்ற பெயரைக் கொண்டவருமான அந்தப் பிராமணர் அப்போது பேச முனைந்தார்.(11)

பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தன் திறன்களை நன்கறிந்தவரும், கல்விமானுமான அந்தப் பிராமணர் {சாம்பன்}, மொத்த சபையின் முழுச் சம்மதத்தையும், அனுமதியையும் பெற்றுக் கொண்டு, இச்சொற்களை அந்த மன்னனிடம் சொன்னார்:(12) {பிராமணர் சாம்பன்}, “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்தச் சபை உரைக்க வேண்டிய பதில் என் பொறுப்பில் விடப்பட்டிருக்கிறது. ஓ! வீரரே, அதற்கே நான் குரல் கொடுக்கப் போகிறேன். ஓ! மன்னா, நீர் கேட்பீராக.(13) ஓ! மன்னர்களின் மன்னா, ஓ! பலமிக்கவரே, நீர் சொல்வதனைத்தும் உண்மையே. இதில் பொய் சிறிதளவும் கிடையாது. நாங்கள் உமது நலன் விரும்பிகளாக இருப்பதைப் போலவே, நீரும் எங்கள் நலவிரும்பியாக இருக்கிறீர்.(14) உண்மையில், இந்தக் குலத்தைச் சேர்ந்த மன்னர்களில், தன் குடிமக்களிடம் செல்வாக்கில்லாமல் ஆண்டவன் எவனும் இல்லை.(15) நீர் தந்தைமாரைப் போலவோ, சகோதரன்மாரைப் போலவோ எங்களை ஆண்டீர். மன்னன் துரியோதனனும் எங்களுக்கு எதிராக எக்குற்றத்தையும் இழைத்ததில்லை.(16)

ஓ! மன்னா, சத்தியவதியின் மகனும், அற ஆன்மா கொண்டவருமான அந்தத் தவசியின் {வியாசரின்} சொற்களின்படியே செயல்படுவீராக உண்மையில் அவரே எங்களுக்கு முதன்மையான குரு ஆவார்.(17) ஓ! ஏகாதிபதி, உம்மால் விடப்படும் நாங்கள், உமது நூற்றுக்கணக்கான நற்குணங்களின் நினைவுகளால் நிறைந்து, எங்கள் நாட்களைத் துன்பத்திலும், கவலையிலும் கழிக்கப் போகிறோம்.(18) ஓ! ஏகாதிபதி, மன்னர் சந்தனு, சித்திராங்கதன், பீஷ்மரின் ஆற்றலால் பாதுகாக்கப்பட்ட உமது தந்தை {விசித்திரவீரியன்} ஆகியோரையோ, உமது ஆலோசனையின்படியே தன் செயல்கள் அனைத்தையும் செய்தவனும், பூமியின் ஆட்சியாளனுமான பாண்டுவையோ போலவே, மன்னன் துரியோதனனும் எங்களை நன்கு பாதுகாத்து ஆட்சி செய்தான்.(19,20)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, ஒருபோதும் சிறு குற்றத்தையும் எங்களுக்கெதிராக இழைத்ததில்லை. நாங்கள் எங்கள் தந்தையை நம்புவதைப் போலவே, அந்த மன்னனைச் சார்ந்து வாழ்ந்தோம்.(21) (அந்த ஆட்சியாளனின் கீழ்) நாங்கள் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதை நீர் அறிவீர். ஓ! ஏகாதிபதி, அதே போலவே பெரும் நுண்ணறிவும், ஞானமும் கொண்ட குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} ஆட்சியின் கீழும் ஆயிரம் ஆண்டுகளாக நாங்கள் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்துவருகிறோம்[1].(22) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்யும் இந்த அறம் சார்ந்த மன்னன், உமது குலத்தைச் சேர்ந்தவர்களும், புண்ணியச் செயல்களைச் செய்தவர்களும், குரு, சம்பரன் {சம்வர்ணன்}[2], பெரும் நுண்ணறிவைக் கொண்ட பரதன் உள்ளிட்ட பழங்கால அரசமுனிகளின் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறான்.(23,24)ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்த யுதிஷ்டிரனின் ஆட்சியில், நிந்திக்கத்தக்க காரியமென்று எதுவும் சிறிதளவுமில்லை. உம்மால் பாதுகாக்கப்பட்டும், ஆளப்பட்டும் நாங்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் வாழ்கிறோம்.(25) உமக்கும் உமது மகனுக்கும் எதிராகச் சிறு குறையையும் சொல்ல இயலாது. உற்றார் உறவினருக்குப் பேரழிவை ஏற்படுத்திய காரியத்தில் துரியோதனனைக் குறித்து நீர் சொன்னதைப் பொறுத்தவரையில், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்வபரே, (நான் சொல்வதை நீர் கேட்க வேண்டுமென) நான் இரந்து கேட்கிறேன்” என்றார் {பிராமணர் சாம்பன்}.(26,27)

பிராமணர் {சாம்பன்} தொடர்ந்தார், “குருக்களுக்கு நேர்ந்த அழிவு துரியோதனனால் கொண்டுவரப்பட்டதல்ல. உம்மாலும் அது கொண்டுவரப்படவில்லை. கர்ணன் மற்றும் சுபலனின் மகனாலும் {சகுனியாலும்} அது கொண்டுவரப்படவில்லை.(28) எதிர்க்கப்பட இயலாத விதியால் அது கொண்டுவரப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம். உண்மையில், மனித முயற்சியால் ஒருபோதும் விதியைத் தடுக்க முடியாது.(29) ஓ! ஏகாதிபதி, பதினெட்டு அக்ஷௌஹிணி துருப்புகள் ஒன்றாகத் திரட்டப்பட்டன. பதினெட்டு நாட்களில் அந்தக் கூட்டமானது, குருவீரர்களில் முதன்மையான பீஷ்மர், துரோணர், கிருபர், உயர் ஆன்மக் கர்ணன், வீரனான யுயுதானன் {சாத்யகி}, திருஷ்டத்யும்னன்,(30,31) பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் உள்ளிட்ட பாண்டுவின் நான்கு மகன்கள் ஆகியோரால் அழிக்கப்பட்டது. ஓ! மன்னா, விதியின் ஆதிக்கமின்றி (பயங்கரமான) இந்தப் பேரழிவு நடந்திருக்க முடியாது.(32) குறிப்பாக க்ஷத்திரியர்களால் பகைவர்கள் போரில் கொல்லப்பட வேண்டும், மரணம் ஏற்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை[3].(33)ஆயுத அறிவியலும், வலிமையும் கொண்டவர்களான அந்த மனிதர்களில் முதன்மையானவர்களால், பூமியானவள் தன் குதிரைகளையும், தேர்களையும், யானைகளையும் இழந்தாள்.(34) அந்த உயர் ஆன்ம மன்னர்களின் பேரழிவுக்கு உமது மகன் காரணமல்ல. நீரோ, உமது பணியாட்களோ, கர்ணனோ, சுபலனின் மகனோ {சகுனியோ} காரணமல்ல.(35) குருகுலத்தின் முதன்மையானவர்கள், மற்றும் ஆயிரக்கணக்கான மன்னர்களின் அழிவானது விதியாலேயே கொண்டுவரப்பட்டது என்பதை அறிவீராக. இதில் எவனாலும் வேறென்ன சொல்ல முடியும்?(36) நீரே குருவாகவும், மொத்த உலகத்தின் உரிமையாளராகவும் கருதப்படுகிறீர். எனவே, உமது முன்னிலையிலேயே நாங்கள் உமது மகன் அற ஆன்மா கொண்டவன் எனக் கொள்கிறோம்.(37) அந்த மன்னன் {துரியோதனன்}, தன் தோழர்களுடன் சேர்ந்து, வீரர்களுக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அடையட்டும். அவன், முதன்மையான பிராமணர்களால் அனுமதிக்கப்பட்டுச் சொர்க்கத்தில் அருள்நிறைந்தவனாக விளையாடட்டும்.(38) நீரும் அறம்பிறழாத உறுதியுள்ளவராகப் பெரும் புண்ணியத்தை ஈட்டப் போகிறீர். ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, வேதங்களில் குறிப்பிடப்படும் கடமைகளை முழுமையாகப் பின்பற்றுவீராக.(39) நீரோ, நாங்களோ பாண்டவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சொர்க்கங்களையே ஆள இயன்றவர்கள் எனும்போது, பூமியைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?(40)

ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே, ஒழுக்கத்தையே தங்கள் ஆபரணமாகக் கொண்ட பாண்டவர்களுக்கு நாங்கள் செழிப்பிலும், வறுமையிலும் கீழ்ப்படிந்திருப்போம்.(41) வேள்விகளிலும், ஈமச் சடங்குகளிலும் மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களுக்கு எப்போதும் கொடுக்கப்பட வேண்டிய மதிப்பு மிக்கக் கொடைகளைப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, பழங்காலத்தின் பெரும் மன்னர்கள் வழியிலேயே அளித்து வருகிறான்.(42) உயர்ந்த மனம் கொண்ட இந்தக் குந்தியின் மகன், மென்மையானவனாகவும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனாகவும், இரண்டாம் வைஸ்ரவணனை {குபேரனைப்} போலவே எப்போதும் செலவு செய்யும் மனநிலையிலும் இருக்கிறான். அவனைக் கவனித்துக் கொள்ளப் பெரும் அமைச்சர்களும் இருக்கின்றனர்.(43) அவன் தன் பகைவர்களிடமும் கருணை கொண்டவனாக இருக்கிறான். உண்மையில், அந்த முதன்மையான பாரதக் குலத்தோன், தூய ஒழுக்கம் கொண்டவனாக இருக்கிறான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன், தன் காரியங்களில் முற்றிலும் வெளிப்படையாக இருந்து, ஒரு தந்தை தன் பிள்ளைகளைக் காப்பது போல எங்களைக் காத்து ஆட்சி செய்கிறான்.(44) ஓ! அரச முனியே, தர்மனின் மகனுடன் ஏற்படும் தொடர்பால் பீமனும், அர்ஜுனனும், பிறரும் எங்களுக்கு ஒரு போதும் சிறு குற்றத்தையும் இழைத்ததில்லை.(45)

ஓ! குரு குலத்தைச் சேர்ந்தவரே, மென்மையானவர்களிடம் மென்மையாகவும், கடுமையானவர்களிடம் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்று கடுமையானவர்களாகவும் அவர்கள் நடந்து கொள்கின்றனர். பெருஞ்சக்தி கொண்ட அந்த உயர் ஆன்மாக்கள் எப்போதும் மக்களின் நன்மையிலேயே அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர்.(46) குந்தியோ, (உமது மருமகள்) பாஞ்சாலியோ, உலூபியோ, சாத்வதகுல இளவரசியோ {சுபத்திரையோ}, இந்த மக்களுக்குச் சிறு குற்றத்தையும் செய்யமாட்டார்கள்[4].(47) எங்களிடம் நீர் காட்டிய பரிவும், யுதிஷ்டிரன் கொண்டிருக்கும் அன்பும், இந்த நகரத்து மற்றும் மாகாணத்து மக்களால் ஒருபோதும் மறக்கமுடியாத அளவுக்குப் பெரிய அளவில் இன்னும் நீடித்திருக்கின்றன.(48) குந்தியின் மகன்களும், அறக்கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், இந்த மக்கள் அறமற்றவர்களாக இருப்பினும் அவர்கள் பாதுகாத்துப் பேணி வளர்ப்பார்கள்.(49) எனவே, ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, யுதிஷ்டிரன் குறித்து உமது இதயத்தில் இருக்கும் கவலைகள் அனைத்தையும் விலக்கி, புண்ணியச் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் உம்மை நிறுவிக் கொள்வீராக” என்றார் {பிராமணர் சாம்பன்}”.(50)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்தச் சபையில் இருந்தோர் ஒவ்வொருவரும், அறமும், தகுதியும் நிறைந்த அந்தப் பிராமணரின் சொற்களைக் கேட்டு, அங்கீகரித்து, “நன்று, நன்று” என்று சொல்லி அவற்றைத் தன்னுடைய சொற்களாகவே ஏற்றனர்.(51) திருதராஷ்டிரனும், அந்தச் சொற்களை மீண்டும் மீண்டும் புகழ்ந்து, தன் குடிமக்களுக்கு மெதுவாக விடை கொடுத்தனுப்பினான்.(52) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, அவர்களால் இவ்வாறு கௌரவிக்கப்பட்டு, அவர்களது மங்கலப் பார்வைகளைப் பெற்ற அந்த முதிர்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் கைகளைக் கூப்பி அவர்கள் அனைவரையும் பதிலுக்குக் கௌரவித்தான்.(53) அதன் பிறகு அவன் காந்தாரியுடன் தன் மாளிகைக்குள் நுழைந்தான். அந்த இரவு கழிந்ததும் அவன் என்ன செய்தான் என்பதை இனி கேட்பாயாக” {என்றார் வைசம்பாயனர்}.(54)

பீமனின் கோபம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 11-பீஷ்மர் முதலியோருக்குச் சிராத்தஞ்செய்யப் பொருள் வேண்டிய திருதராஷ்டிரன்; கொடுக்க மறுத்த பீமன்; அர்ஜுனன் கொடுக்க வேண்டும் என்று சொன்னது; அர்ஜுனனை மெச்சிய யுதிஷ்டிரன்; அர்ஜுனனிடம் கோபமாகப் பேசிய பீமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்த இரவு கடந்ததும், அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனின் மாளிகைக்கு விதுரனை அனுப்பினான்.(1) பெருஞ்சக்தி கொண்டவனும், நுண்ணறிவு பெற்ற மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான விதுரன், யுதிஷ்டிரனின் மாளிகைக்கு வந்து, மனிதர்களில் முதன்மையானவனும், மங்கா மகிமை கொண்டவனுமான அந்த மன்னனிடம், இந்தச் சொற்களில்,(2) “மன்னர் திருதராஷ்டிரர், காட்டுக்கு ஓய்ந்து செல்லும் காரியத்தை நிறைவேற்றுவதற்குரிய தொடக்கச் சடங்குகளைச் செய்ய வேண்டும். ஓ! மன்னா, கார்த்திகை மாதம் முழு நிலவு {பௌர்ணமி} நாளில் அவர் {திருதராஷ்டிரர்} காட்டுக்குப் புறப்பட இருக்கிறார்[1].(3) ஓ! குருக்களில் முதன்மையானவனே, அவர் உன்னிடம் இருந்து சிறிது செல்வத்தை வேண்டுகிறார். உயர் ஆன்ம கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, துரோணர், சோமதத்தன், பெரும் நுண்ணறிவைக் கொண்ட பாஹ்லீகர், கொல்லப்பட்ட அவருடைய அனைத்து மகன்கள் மற்றும் நலன்விரும்பிகள், தீய ஆன்மா கொண்டவனும், இழிந்தவனுமான சிந்துக்களின் ஆட்சியாளனுக்கும் {ஜெயத்ரதனுக்கும்} சிராத்தம் செய்ய விரும்புகிறார்” என்றான்.(5)விதுரனின் இந்தச் சொற்களைக் கேட்ட யுதிஷ்டிரன் மற்றும் சுருள்முடி கொண்டவனான அர்ஜுனன் ஆகிய இருவரும் அவற்றை உயர்வாக மெச்சினர்.(6) எனினும், பெருஞ்சக்தி கொண்டவனும், தணிக்க இயலாத கோபத்தைக் கொண்டவனுமான பீமன், துரியோதனனின் செயல்களை நினைவுகூர்ந்தவனாக விதுரனின் அந்தச் சொற்களை நல்லூக்கத்துடன் ஏற்றுக் கொள்ளவில்லை. கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, பீமசேனனின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு, சற்றே தன் தலையைக் கீழே தொங்கப்போட்டவாறு, மனிதர்களில் முதன்மையானவனான அவனிடம் இந்தச் சொற்களில் பேசினான்: “ஓ! பீமரே, வயதில் முதிர்ந்தவரான நமது அரசத் தந்தை காட்டுக்கு ஓய்ந்து செல்லத் தீர்மானித்திருக்கிறார்.(7-9) கொல்லப்பட்டவர்களான தமது உற்றார் உறவினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் மறுமையில் அடையும் மகிழ்ச்சியை அதிகரிப்பதற்காக அவர் கொடையளிக்க விரும்புகிறார். ஓ! குருகுலத்தைச் சார்ந்தவரே, உம்மால் வெல்லப்பட்டு உமக்குரியதாக இருக்கும் செல்வதை அவர் கொடையளிக்க விரும்புகிறார்.(10)

உண்மையில், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, அந்த முதிர்ந்த மன்னர் பீஷ்மர் மற்றும் பிறரின் நிமித்தமாக இந்தக் கொடைகளை அளிக்க விரும்புகிறார். அதற்கு அனுமதி அளிப்பதே உமக்குத் தகும். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, முன்பு நம்மால் இரந்து கேட்கப்பட்டவர், இப்போது நம்மிடம் இரந்து கேட்பது நற்பேற்றினாலேயே நேர்கிறது. காலம் கொண்டு வந்த மாற்றத்தைப் பாரும். எந்த மன்னன் முன்பு மொத்த பூமியின் தலைவனாகவும், பாதுகாவலனாகவும் இருந்தோரோ,(11,12) எவருடைய உற்றார் உறவினர் மற்றும் துணைவர்கள் பகைவர்களால் கொல்லப்பட்டனரோ, அவர் இப்போது காடுகளுக்குச் செல்ல விரும்புகிறார். ஓ! மனிதர்களின் தலைவா, கேட்கப்படும் அனுமதியைக் கொடுப்பதிலிருந்து உமது கருத்து விலக வேண்டாம்.(13) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, மறுப்பது புகழ்க்கேட்டையும், பாவத்தையும் கொண்டுவரும். இக்காரியத்தில் நீர், அனைவருக்கும் தலைவரும், நமது அண்ணனுமான மன்னனிடமிருந்து கற்பீராக.(14) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மறுப்பதைவிடக் கொடுப்பதே உமக்குத் தகும்” என்றான் {அர்ஜுனன்}. இவ்வாறு சொன்ன பீபத்சுவை {அர்ஜுனனை} நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மெச்சினான்.(15)

கோபவசப்பட்ட பீமசேனன், இந்தச் சொற்களில், “ஓ! பல்குனா {அர்ஜுனா}, பீஷ்மர், மன்னர் சோமதத்தர், பூரிஸ்ரவஸ், அரசமுனியான பாஹ்லீகர், உயர் ஆன்ம துரோணர் மற்றும் பிறர் அனைவரின் ஈமச்சடங்குகளுக்காக நாம் கொடையளிக்கலாம்.(16,17) நம் அன்னை குந்தி, கர்ணனுக்கான ஈமக்காணிக்கைகளை அளிப்பாள். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அந்தச் சிராத்தங்களைத் திருதராஷ்டிரர் செய்ய வேண்டாம்.(18) இதையே நான் நினைக்கிறேன். நமது பகைவர்கள் மகிழ வேண்டாம். துரியோதனனும், பிறரும் மேலும் மேலும் படு பயங்கர நிலைக்குள் மூழ்கட்டும்.(19) ஐயோ, குலத்தில் இழிந்தவர்களான அவர்களே மொத்த பூமியையும் அழித்தவர்கள். பனிரெண்டு வருடங்கள் நீண்ட கடுங்கவலையையையும்,(20) திரௌபதிக்குத் துன்பம் நிறைந்ததாக அமைந்த ஒருவருட தலைமறைவு வாழ்வையும் உன்னால் எவ்வாறு மறக்க முடிந்தது? திருதராஷ்டிரர் நம்மிடம் கொள்ளும் இந்த அன்பு அப்போது எங்கிருந்தது?(21)

கருப்பு மான்தோலை உடுத்தி, உன் ஆபரணங்கள் அனைத்தையும் அகற்றி, பாஞ்சால இளவரசியையும் {திரௌபதியையும்} அழைத்துக் கொண்டு நீ இந்த மன்னனை {யுதிஷ்திரரைப்} பின் தொடர்ந்து செல்லவில்லையா?(22) அப்போது பீஷ்மரும், துரோணரும் எங்கிருந்தனர்? சோமதத்தர் எங்கிருந்தார்? நீ பதிமூன்று வருடங்கள் காட்டு விளைச்சலை உண்டு வாழ வேண்டிருந்ததே.(23) உன்னுடைய பெரிய தந்தை, அப்போது தந்தைக்குரிய அன்புக்கண்களுடன் உன்னைப் பார்க்கவில்லையே. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பகடையாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, விதுரரிடம், “வெல்லப்பட்டதென்ன?” என்று நம் குலத்தில் இழிந்தவரும், தீய புத்தி கொண்டவருமான இவர்தான் கேட்டுக் கொண்டிருந்தார் என்பதை நீ மறந்துவிட்டாயா?” என்றான் {பீமன்}. இவ்வளவு வரை கேட்டுக் கொண்டிருந்தவனும், குந்தியின் மகனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் யுதிஷ்டிரன், அவனை {பீமனை} அதட்டி, அமைதியாக இருக்கும்படி சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(24,25)

யுதிஷ்டிரனின் ஒப்புதல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 12-சிராதத்தத்துக்குப் பொருள் கொடுக்க மறுத்த பீமன்; தன் கருவூலத்தில் இருந்து எடுத்துக்கொள்ளுமாறு திருதராஷ்டிரனுக்குச சொல்லி அனுப்பிய யுதிஷ்டிரன்…

அர்ஜுனன், “ஓ! பீமரே, நீர் என் அண்ணனாகவும், எனக்குப் பெரியவராகவும், ஆசானாகவும் இருக்கிறீர். நான் ஏற்கனவே சொன்னதைவிட அதிகம் சொல்லத் துணியேன். அரசமுனியான திருதராஷ்டிரர் அனைத்து வகையிலும் நம் மதிப்புக்குத் தகுந்தவர்.(1) நல்லோரும், பொதுவான மட்டத்திற்கு மேலே புகழடைந்தவர்களும், நல்லதைக் குறிக்கும் வேறுபாடுகளை உடைக்காதவர்களும், தங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளை மட்டுமே நினைப்பதில்லை, தாங்கள் அடைந்த நன்மைகளையும் நினைப்பர்” என்றான்.(2)

உயர் ஆன்ம பல்குனனின் இந்தச் சொற்களைக் கேட்டவனும், அற ஆன்மா கொண்டவனும், குந்தியின் மகனமான யுதிஷ்டிரன், விதுரனிடம் இந்தச் சொற்களில்,(3) “ஓ! க்ஷத்ரி, குரு மன்னரின் மகன்கள், பீஷ்மர், அவரது நலன் விரும்பிகள், அவருக்கு நன்மை செய்தவர்கள் மற்றும் பிறருக்கான ஈமச்சடங்குகளுக்குத் தேவையான செல்வத்தை என் கருவூலத்தில் இருந்து நான் கொடுப்பேனென நான் சொன்னதாக அவரிடம் {திருதராஷ்டிரரிடம்} சொல்வீராக. இதில் பீமன் உற்சாகமிழக்க வேண்டியதில்லை” என்றான்”.(4,5)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்தச் சொற்களைச் சொன்னவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அர்ஜுனனை உயர்வாக மெச்சினான். அதே வேளையில் பீமசேனன் தனஞ்சயன் மீது தன் கோபப்பார்வைகளை வீசத் தொடங்கினான்.(6) அப்போது, பெரும் நுண்ணறிவைக் கொண்ட யுதிஷ்டிரன், மீண்டும் விதுரனிடம், “மன்னர் திருதராஷ்டிரர் பீமசேனனிடம் கோபம் கொள்வது அவருக்குத் தகாது.(7) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான இந்தப் பீமன், காட்டில் வசித்தபோது, குளிர், மழை, வெப்பம் ஆகியவற்றால் பெரிதும் பீடிக்கப்பட்டவனாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான துன்பங்களை அடைந்தவனாகவும் இருக்கிறான். இவை யாவும் நீர் அறியாதனவல்ல.(8) எனினும், ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே, என் வீட்டில் இருந்து மன்னர் விரும்பும் பொருட்களை, அவர் விரும்பும் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று நான் சொன்னதாக அவரிடம் சொல்வீராக.(9)

பெரிதும் துன்பமடைந்த பீமன் வெளிப்படுத்தும் செருக்கை அவரது இதயத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் நீர் அம்மன்னருக்குச் சொல்ல வேண்டும்.(10) நான் கொண்டிருக்கும் செல்வமெதற்கும், அர்ஜுனன் வீட்டில் இருக்கும் எதற்கும் மன்னர் திருதராஷ்டிரரே உரிமையாளராவார். இதையும் நீர் அவருக்குச் சொல்ல வேண்டும்.(11) மன்னர், பிராமணர்களுக்குக் கொடைகளை அளிக்கட்டும். அவர் விரும்பிய அளவில் பெரிதாகச் செலவு செய்யட்டும். அவர் தமது மகன்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடட்டும்.(12)

அதையும் தவிர, ‘ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, என்னுடைய இந்த உடலும், நான் கொண்டிருக்கும் செல்வம் அனைத்தும் உமதே. இதை அறிவீராக. இதில் ஐயமேதும் கொள்ள வேண்டும்’ என்றும் அவரிடம் சொல்வீராக” என்றான் {யுதிஷ்டிரன்}”.(13)

நிறைவடைந்த திருதராஷ்டிரன்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 13-பொருள் கொடுப்பதற்கு யுதிஷ்டிரன் சம்மதித்ததைத் திருதராஷ்டிரனிடம் தெரிவித்த விதுரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இவ்வாறு மன்னன் யுதிஷ்டிரனால் சொல்லப்பட்டவனும், நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான விதுரன், திருதராஷ்டிரனிடம் சென்று, சிறந்த பொருள்ள இந்தச் சொற்களை அவனிடம் சொன்னான்.(1) {விதுரன்}, “முதலில் நான் மன்னன் யுதிஷ்டிரனிடம் உமது செய்தியைச் சொன்னேன். உமது சொற்களைக் குறித்துச் சிந்தித்து, அவற்றை உயர்வாக மெச்சினான்.(2) பெருஞ்சக்தி கொண்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, தன் மாளிகைகள், தன் உயிர் மூச்சு உட்பட அவற்றிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் உமது வசம் வைத்திருக்கிறான்.(3) ஓ! அரச முனியே {திருதராஷ்டிரரே}, உமது மகனான மன்னன் யுதிஷ்டிரனும், தன் நாட்டையும், உயிர் மூச்சையும், செல்வத்தையும், தனக்குரிய அனைத்தையும் உமக்குக் கொடுக்க முன் வருகிறான்.(4)

எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், எண்ணற்றவையான தன் கவலைகள் அனைத்தையும் நினைவுகூர்ந்து, பெருமூச்சுகள் பலவற்றை விட்டபடியே பெருஞ்சிரமத்துடன் தன் சம்மதத்தை அளித்தான்.(5) ஓ! ஏகாதிபதி, அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {பீமன்}, உம்மிடம் நல்லுறவைப் பேணும்படி அறமன்னனாலும் {யுதிஷ்டிரனாலும்}, பீபத்சுவாலும் {அர்ஜுனனாலும்} வேண்டவும், தூண்டவும்பட்டான்.(6) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பழைய பகைமைகளை நினைவுகூர்ந்து பீமன் வெளிப்படுத்தும் முறையற்ற நடத்தையினால் சோர்வடைய வேண்டாம் என உம்மை வேண்டிக் கேட்டுக் கொண்டான்.(7)

{யுதிஷ்டிரன்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே, இதுவே போரில் பொதுவாக க்ஷத்திரியர்களின் நடத்தையாகும், இந்த விருகோதரன் {பீமன்}, போரிலும், க்ஷத்திரிய நடைமுறைகளிலும் அர்ப்பணிப்புள்ளவன் ஆவான்.(8) ஓ! மன்னா, நானும், அர்ஜுனனும் சேர்ந்து விருகோதரனை மன்னிக்குமாறு உம்மை மீண்டும் மீண்டும் இரந்து கேட்கிறோம். எங்களுக்கு அருள் புரிவீராக. நீரே எங்கள் தலைவராவீர். ஓ! பூமியின் ஆட்சியாளரே நாங்கள் கொண்டுள்ள செல்வத்தில் நீர் விரும்புவனவற்றை நீர் கொடையளிக்கலாம். ஓ! பாரதரே, இந்த நாட்டிற்கும், இதில் வாழும் அனைவருக்கும் நீரே தலைவராவீர்” {என்று உம்மை வேண்டிக் கொண்டான்}.(9,10)

{பிறகு என்னை நோக்கி}, குரு குலத்தில் முதன்மையான அவர் {திருதராஷ்டிரர்}, தமது மகன்களின் ஈமச் சடங்குகளுக்காகப் பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டிய முதன்மையான கொடைகள் அனைத்தையும் கொடுக்கட்டும். உண்மையில், எங்கள் மாளிகைகளில் இருந்து ரத்தினங்கள், பசுக்கள், ஆண் மற்றும் பெண் பணியாட்கள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை எடுத்துக் கொண்டு அந்த மறுபிறப்பாள வகையினருக்குக் கொடைகளை அளிக்கட்டும். அவர் ஈகைக்கெனத் தான் விரும்பும் பொருட்களைத் தேர்ந்தெடுத்து, ஏழைகள், பார்வையற்றோர், பெருந்துயரில் இருப்போர் ஆகியோருக்குக் கொடையளிக்கட்டும்.(11,12)

ஓ! விதுரரே, அபரிமிதமாகத் திரட்டப்பட்ட உணவு, பல்வேறு சுவைகளைக் கொண்ட பானங்கள் ஆகியவற்றுடன் கூடிய பெரிய அரங்கங்கள் கட்டப்படட்டும். பசுக்கள் குடிப்பதற்கான தொட்டிகளும் கட்டப்பட வேண்டும், புண்ணியம் தரும் பிற வேலைகளும் செய்யப்பட வேண்டும் {என்று யுதிஷ்டிரன் என்னிடம் சொன்னான்}. இவையே மன்னனாலும், பிருதையின் மகனான தனஞ்சயனாலும் எனக்குச் சொல்ல்லப்பட்ட சொற்களாகும். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான் {விதுரன்}.(14)

ஓ! ஜனமேஜயா, விதுரன் இச்சொற்களைச் சொன்ன பிறகு, அவற்றில் தன் நிறைவை வெளிப்படுத்திய திருதராஷ்டிரன், கார்த்திகை மாத முழு நிலவு நாளில் பெருங்கொடைகளை அளிப்பதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(15)

தானயஜ்ஞம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 14-சிராத்தம் செய்து, உணவு மற்றும் பானத்தால் பிராமணர்களை நிறைவடையச் செய்த திருதராஷ்டிரன்; திருதராஷ்டிரன் கேட்டதைவிடப் பத்து மடங்கு கொடுத்த யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஏகாதிபதி, இவ்வாறு விதுரனால் சொல்லப்பட்ட மன்னன் திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன் மற்றும் ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்}  செயல்களால் உயர்வான நிறைவையடைந்தான்.(1) பீஷ்மருக்காகவும், தன் மகன்கள் மற்றும் நண்பர்களுக்காகவும், உரிய சோதனைகளுக்குப் பிறகு தகுந்த பிராமணர்களை அழைத்து, மேன்மையான முனிவர்களையும் அழைத்து,(2) பெரும் அளவிலான உணவையும், பானத்தையும் தயாரிக்கச் செய்து, தேர்கள், வாகனங்கள், துணிமணிகள், தங்கம், ஆபரணங்கள், ரத்தினங்கள், ஆண் மற்றும் பெண் பணியாட்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், விரிப்புகள் மற்றும் விலைமதிப்புமிக்கப் பொருட்களைத் திரட்டி,(3) கிராமங்கள், வயல்கள் மற்றும் பிறவகைச் செல்வங்களைத் தயாராக வைத்துக் கொண்டு, யானைகள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் ஆகியவற்றையும், பெண்களில் சிறந்த அழகிய கன்னிகைகளையும்,(4) இறந்து போனோரின் பெயர்களைச் சொல்லி அவர்களின் முன்னேற்றத்திற்காக அந்த மன்னர்களில் முதன்மையானவன் {திருதராஷ்டிரன்} கொடையளித்தான். துரோணர், பீஷ்மர், சோமதத்தன், பாஹ்லீகர்,(5) மன்னன் துரியோதனன் மற்றும் தன்னுடைய வேறு மகன்கள் ஒவ்வொருவரின் பெயரையும், ஜெயத்ரதன் முதலிய தன் நலன்விரும்பிகள் அனைவரின் பெயர்களையும் சொல்லி உரிய முறையில் அந்தக் கொடைகள் அளிக்கப்பட்டன.(6)

யுதிஷ்டிரனின் அனுமதியின் பேரில் நடந்த அந்தச் சிராத்தவேள்வியில், பெருமளவிலான செல்வங்கள் மற்றும் அபரிமிதமான ரத்தினங்கள், ஆபரணங்கள் மற்றும் வேறு வகைச் செல்வங்கள் கொடையளிக்கப்பட்டன.(7) அந்தச் சந்தர்ப்பத்தில் யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில் கணக்கர்கள் மற்றும் எழுத்தர்கள் ஆகியோர், அந்த முதிர்ந்த மன்னனிடம் இடையறாமல்,(8) “ஓ! ஏகாதிபதி, இவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கொடைகள் என்னென்ன என்று ஆணையிடுவீராக. அனைத்துப் பொருட்களும் இங்கே தயாராக இருக்கின்றன” என்று கேட்டுக் கொண்டிருந்தனர். மன்னன் சொன்னதும், அவனால் சொல்லப்பட்டதை அவர்கள் கொடுத்தார்கள்[1].(9) குந்தியின் அரச மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} ஆணையின் பேரில், நூறு பெற இருந்தவன் ஆயிரம்பெற்றான், ஆயிரம் பெற இருந்தவன், பத்தாயிரம் பெற்றான்[2].(10)மேகங்கள் தாங்கள் பொழியும் மழையால் பயிர்களை விளையச் செய்வதைப் போல அந்த அரச மேகமும், செல்வமெனும் மழையைப் பொழிந்ததன் மூலம் பிராமணர்களை நிறைவடையச் செய்தது.(11) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, அந்தக் கொடைகள் அனைத்தும் கொடுக்கப்பட்ட பிறகு, நான்கு வகையைச் சேர்ந்தவர்களும், அங்கே கூடியிருந்தவர்களுமான விருந்தினர்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் உணவையும், பல்வேறு சுவைகளுடன் கூடிய பானங்களெனும் பெரும் வெள்ளத்தில் அவர்களை மூழ்கும்படி செய்தான்.(12)

உண்மையில், அந்தத் திருதராஷ்டிரப் பெருங்கடலானது, ரத்தினங்களை உயர்ந்து பெருகும் நீராகக் கொண்டும், கிராமங்கள் மற்றும் விளைநிலங்களை வளமாகவும், வேறு முதன்மையான கொடைகளைத் தன் முன்னணித் தீவுகளாகவும், விலைமதிப்புமிக்கப் பல்வேறு வகைப் பொருட்களின் குவியல்களை வளமிக்கக் குகைளாகவும், யானைகளையும், குதிரைகளையும் தன் முதலைகளாகவும், சுழிகளாகவும், மிருதங்க ஒலிகளைத் தன் ஆழ்ந்த முழக்கமாகவும், துணிமணிகள், செல்வம் மற்றும் விலைமதிப்பு மிக்கக் கற்களைத் தன் அலைகளாகவும் கொண்டு பூமியை மூழ்கடித்தது.(13,14) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவ்வழியிலேயே அந்த ஏகாதிபதி, மறுமையில் உள்ள தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், பித்ருக்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காகவும், தனக்காகவும் காந்தாரிக்காகவும் கொடைகளை அளித்தான்.(15)

இறுதியாக, இவ்வளவு அபரிமிதமான கொடைகளை அளிக்கும் பணியில் அவன் களைப்படைந்தபோது, அந்தப் பெரும் கொடை வேள்வி ஒரு முடிவுக்கு வந்தது.(16) இவ்வாறே அந்தக் குருகுலத்தின் மன்னன் தன் கொடை வேள்வியை {தானயஜ்ஞத்தைச்} செய்தான். அந்தச் சந்தர்ப்பத்தில் நடிகர்களும், நடனக்கலைஞர்களும் தொடர்ந்து ஆடிப்பாடி அங்கே இருந்த விருந்தினர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தனர்.(17) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இவ்வாறு பத்து நாட்கள் கொடையளித்த அம்பிகையின் அரச மகன் {திருதராஷ்டிரன்}, தன் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்குத் தான் பட்ட கடன்களில் இருந்து விடுபட்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(18)

திருதராஷ்டிரன் புறப்பாடு! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 15-திருதராஷ்டிரன் காந்தாரியின் தோளையும், காந்தாரி குந்தியின் தோளையும் பற்றிக் கொண்டு காடு நோக்கிப் புறப்பட்டது; அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மக்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “காடுகளுக்குத் தான் புறப்பட வேண்டிய நேரத்தைத் தீர்மானித்த அம்பிகையின் அரச மகன் திருதராஷ்டிரன், வீரர்களான பாண்டவர்களை அழைத்தான்.(1) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முதிர்ந்த ஏகாதிபதி, காந்தாரியுடன் சேர்ந்து அந்த இளவரசர்களை அழைத்தான். கார்த்திகை மாதத்தின் முழுநிலவு நாளான அன்று வேதங்கள் அறிந்த பிராமணர்களைச் சிறு சடங்குகளைச் செய்ய வைத்த அவன்,(2) தான் தினமும் வழிபடும் நெருப்பை எடுத்து வரச் செய்தான். தன் வழக்கமான ஆடைகளைக் கைவிட்டு மான்தோலையும், மரவுரியையும் அணிந்து கொண்டு, தன் மருமகள்கள் துணையுடன் அந்த மாளிகையைவிட்டுப் புறப்பட்டான்.(3)

விசித்திரவீரியனின் அரச மகன் {திருதராஷ்டிரன்} இவ்வாறு புறப்பட்ட போது, பாண்டவ மற்றும் கௌரவப் பெண்மணிகளும், கௌரவக் குலத்தைச் சேர்ந்த வேறு பெண்மணிகளும் உரக்க ஓலமிட்டனர்.(4) மன்னன், தான் வாழ்ந்த அந்த மாளிகையைப் பொரி மற்றும் பல்வேறு வகைகளிலான சிறந்த மலர்களைக் கொண்டு வழிபட்டான். மேலும் அவன் செல்வக்கொடைகளால் தன் பணியாட்கள் அனைவரையும் கௌரவித்து, அந்த வசிப்பிடத்தைவிட்டு வெளியே வந்து பயணத்தில் புறப்பட்டான்.(5)

அப்போது, ஓ! மகனே, மன்னன் யுதிஷ்டிரன், மேனியங்கும் நடுங்கியவாறு, கண்ணீரால் தடை பட்ட உரத்த குரலுடன் இந்தச் சொற்களைச் சொன்னான், “ஓ! அறம்சார்ந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீர் எங்கே செல்லபோகிறீர்?” என்று சொல்லி மயக்கமடைந்து கீழே விழுந்தான்.(6)

பெருந்துன்பத்தில் எரிந்து கொண்டிருந்த அர்ஜுனன் மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தான். பாரதக் குல இளவரசர்களில் முதன்மையான அவன் {அர்ஜுனன்}, இவ்வாறான முறையில் நடந்து கொள்ளக்கூடாது என்று யுதிஷ்டிரனிடம் சொல்லி உற்சாகமற்றவனாகவும், துன்பத்தில் மூழ்கிய இதயம் கொண்டவனாகவும் நின்று கொண்டிருந்தான்.(7) விருகோதரன் {பீமன்}, வீரப் பல்குனன் {அர்ஜுனன்}, மாத்ரியின் இரு மகன்கள் {நகுல சகாதேவன்}, விதுரன், சஞ்சயன், வைசிய மனைவி மூலம் திருதராஷ்டிரனுக்குப் பிறந்த மகன் {யுயுத்சு}, கிருபர், தௌமியர் மற்றும் பிற பிராமணர்கள் அனைவரும், துயரால் தடைபட்ட குரல்களுடன் அந்த முதிர்ந்த ஏகாதிபதியைப் பின்தொடர்ந்து சென்றனர்.(8) கண்களைக் கட்டிக் கொண்டு நடந்த காந்தாரியின் கைகளைத் தன் தோள்களில் சுமந்து கொண்டு குந்தி முன் சென்றாள். மன்னன் திருதராஷ்டிரன், தன் கைகளைக் காந்தாரியின் தோள்களில் வைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் நடந்தான்[1].(9) துருபதன் மகள் கிருஷ்ணை {திரௌபதி}, சாத்வதக் குலத்தவள் {சுபத்திரை}, சமீபத்தில் தாயான கௌரவர்களின் மருமகள் உத்தரை[2]சித்திராங்கதை மற்றும் அரச குடும்பத்தின் மற்ற பெண்கள் ஆகியோர் அனைவரும் அந்த முதிர்ந்த ஏகாதிபதியுடன் {திருதராஷ்டிரனுடன்} சென்றனர்.(10)ஓ! மன்னா, அந்தச் சந்தர்ப்பத்தில் துன்பத்தால் ஏற்பட்ட அவர்களது ஓலம், பெண் அன்றில் {குரரி பறவை} கூட்டத்தின் உரத்த கதறல்களுக்கு ஒப்பானதாக இருந்தது. அப்போது, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் அடங்கிய குடிமக்களின் மனைவிமாரும் அனைத்துப் புறங்களில் இருந்தும் தெருவுக்கு வந்தனர்.(11) ஓ! மன்னா, ஹஸ்தினாபுரத்தின் குடிமக்கள அனைவரும், பழங்காலத்தில், பகடையாட்டத்தில் தோற்றுப் பாண்டவர்கள் புறப்பட்ட போது துயரடைந்ததைப் போலவே திருதராஷ்டிரன் புறப்பட்ட போதும் துயரடைந்தனர்.(12) சூரியனையோ, சந்திரனையோ ஒருபோதும் கண்டிராத பெண்களும், மன்னன் திருதராஷ்டிரன் பெருங்காட்டை நோக்கிச் சென்ற போது, அந்தச் சந்தர்ப்பத்தில் பெருந்துயரத்துடன் தெருவுக்கு வந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(13)

பின்தொடர்ந்த குந்தி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 16-திருதராஷ்டிரன் காட்டுக்குப் புறப்படும்போது, விதுரனும், சஞ்சயனும் உடன் புறப்பட்டது, யுதிஷ்டிரனும், பீமனும் தடுத்தும் குந்தியும் அவர்களுடன் சென்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, அந்த நேரத்தில் பூமியிலோ, மாளிகைகளின் மாடியிலோ {உப்பரிகைகளிலோ} நின்று கொண்டிருந்த ஆண்களும் பெண்களும் செய்த முழக்கம் பெரிதாக இருந்தது.(1) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முதிர்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, கைகளைக் கூப்பி, பலவீனத்தால் நடுங்கி, இரு பாலினத்தாராலும் நிறைந்திருந்த முக்கிய வீதியின் {ராஜமார்க்கத்தின்} வழியே சிரமத்துடன் நடந்து சென்றான்.(2) யானையின் பெயரால் அழைக்கப்பட்ட {ஹஸ்தினாபுரம்} நகரத்தின் முக்கிய வாயில் வழியே வெளியேறி, மக்கள் கூட்டத்தினரிடம் தங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறு மீண்டும் மீண்டும் சொன்னான்.(3) மன்னனுடன் {திருதராஷ்டிரனுடன்} செல்வதில் விதுரன் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். கவல்கணன் மகனும், திருதராஷ்டிரனின் முதல் அமைச்சருமான சூதன் சஞ்சயனும் அதே இதயம் கொண்டவனாகவே இருந்தான்![1].(4)மன்னன் திருதராஷ்டிரன், தன்னைப் பின்தொடர்வதிலிருந்து கிருபரையும், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுத்சுவையும் தடுத்தான். அவர்களை யுதிஷ்டிரனின் கைகளில் ஒப்படைத்தான்.(5) திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில் குடிமக்கள் அந்த ஏகாதிபதியைப் பின்தொடர்வதை நிறுத்திய பிறகு, மன்னன் யுதிஷ்டிரனும், தன் குடும்பத்துப் பெண்களுடன் சேர்ந்து நிற்கத் தயாரானான்.(6)

தன் தாயான குந்தியும் காட்டுக்கு ஓய்ந்து செல்வதற்கு விரும்புவதைக் கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அவளிடம், “முதிய ஏகாதிபதியை நான் பின்தொடர்ந்து செல்வேன். நீ நிற்பாயாக.(7) ஓ! ராணி, உன் மருமகள்களான இவர்கள் துணையுடன் நீ நகரத்திற்குத் திரும்புவதே உனக்குத் தகும். இந்த ஏகாதிபதி, தவம்பயில்வதென உறுதியாகத் தீர்மானித்துக் காட்டுக்குச் செல்கிறார்” என்றான்.(8) மன்னன் யுதிஷ்டிரன் கண்ணீரில் குளித்த கண்களுடன் அவளிடம் இந்தச் சொற்களைச் சொன்னாலும், அவனுக்குப் பதிலேதும் சொல்லாமல், காந்தாரியைப் பற்றிக் கொண்டு தொடர்ந்து முன்னேறினாள் குந்தி.(9)

{சிறிது நேரத்திற்குப் பிறகு}, குந்தி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, சகாதேவனிடம் ஒருபோதும் அலட்சியம் காட்டாதே. ஓ! ஏகாதிபதி, அவன் எப்போதும் என்னிடமும், உன்னிடமும் மிகுந்த பற்று கொண்டவன்.(10) போரில் ஒருபோதும் புறமுதுகிடாதவனான கர்ணனை நீ எப்போதும் மனத்தில் கொள்ள வேண்டும். என் அறிவின்மையால் அந்த வீரன் போர்க்களத்தில் கொல்லப்பட்டான்.(11) என் மகனே, சூரியனுக்குப் பிறந்த அந்தப் பிள்ளையைக் காணாமல் இருந்தும் நூறு துண்டுகளாகச் சிதறாத என் இதயம் நிச்சயம் இரும்பாலானது.(12) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, இவ்வாறிருக்கையில் நான் என்ன செய்வது? சூரியனின் பிள்ளை பிறந்ததைக் குறித்த உண்மையை அறிவிக்காததால் பழி முழுவதும் என்னையே சாரும்.(13) ஓ! பகைவரை நொறுக்குபவனே, நீ உன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து சூரியனின் மகனுக்காகச் சிறந்த கொடைகளை அளிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.(14) ஓ! பகைவரை வெட்டுபவனே, நீ எப்போதும் திரௌபதிக்கு ஏற்புடையதையே செய்ய வேண்டும். பீமசேனன், அர்ஜுனன், நகுலன் மற்றும் சகாதேவனையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓ! மன்னா, குரு குலத்தின் சுமை இப்போது உன் மேல் இருக்கிறது.(15) நான் என் மாமனாருக்கும், மாமியாருக்கும் செய்யும் தொண்டில் என்னை அர்ப்பணித்துக் கொண்டும், உடலில் புழுதி பூசப்பட்டவளாகக் கடுந்தவங்களில் ஈடுபட்டுக் கொண்டும், காந்தாரியுடன் சேர்ந்து காட்டில் நான் வாழப் போகிறேன்[2]” என்றாள் {குந்தி}”.(16)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவளால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், அற ஆன்மா கொண்டவனும், ஆசைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தியவனுமான யுதிஷ்டிரன், தன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து பெருந்துயரில் மூழ்கியவனானான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த மன்னன் ஒரு சொல்லும் சொல்லாதிருந்தான்.(17) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், சிறிது நேரம் சிந்தித்து, உற்சாகமற்றவனாக, கவலையிலும், துன்பத்திலும் மூழ்கியவனாகத் தன் அன்னையிடம் {குந்தியிடம்},(18) “உண்மையில், இதில் உன் நோக்கமென்ன? இதை நீ செய்வது உனக்குத் தகாது. என்னால் ஒருபோதும் உனக்கு அனுமதியளிக்க முடியாது. நீ எங்களிடம் கருணை காட்டுவதே உனக்குத் தகும்.(19) ஓ! இனிய குணங்களைக் கொண்டவளே, முன்பு நாங்கள் ஹஸ்தினாபுரத்திலிருந்து காடுகளுக்குச் செல்லப் புறப்பட்ட போது, விதுலை தன் மகனுக்கு அறிவரை சொன்ன கதையைச்[3] சொல்லி எங்களை முயற்சியில் ஈடுபடத் தூண்டியவள் நீயே. இப்போது எங்களைக் கைவிடுவது உனக்குத் தகாது.(20) வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன உன்னுடைய ஞானச் சொற்களால் வழிநடத்தப்பட்டுப் பூமியின் மன்னர்களைக் கொன்று இந்த அரசுரிமையை வென்றிருக்கிறேன்.(21) வாசுதவேனிடம் இருந்து நான் கேள்விப்பட்ட உன்னுடைய புத்தி இப்போது எங்கே? நீ எங்களுக்குக் கற்பித்த க்ஷத்திரிய நடைமுறைகளில் இருந்து நீ வீழ விரும்புகிறாயா?(22) எங்களையும், இந்த நாட்டையும், பெரும்புகழைக் கொண்டவளும், உன்னுடைய மருமகளுமான இவளையும் கைவிட்டு, அடைதற்கரிதான காடுகளில் நீ எவ்வாறு வாழ்வாய்? மனம் இரங்குவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.(23)கண்களில் கண்ணீருடன் குந்தி தன் மகனின் இந்தச் சொற்களைக் கேட்டாலும் தன் வழியில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது பீமன் அவளிடம்,(24) “ஓ! குந்தியே, அரசுரிமை வெல்லப்பட்டு, உன் பிள்ளைகளால் அடையப்பட்ட அந்த அரசுரிமையை நீ அனுபவிக்கும் காலத்தில், நீ செய்ய வேண்டிய அரச கடமைகள் காத்திருக்கும்போது, உன் மனத்தைப் பற்றியிருக்கும் இந்த ஆசை எங்கிருந்து வந்தது?(25) பின் ஏன் எங்களைப் பூமியை அழிக்க ஏவினாய்? அனைவரையும் விட்டுவிட்டு  காடுகளையே உன் வசிப்பிடமாக்கிக் கொள்ள நீ விரும்புவதற்கான காரணமென்ன?(26) நாங்கள் காடுகளில்தானே பிறந்தோம். நாங்கள் பிள்ளைகளாக இருந்தபோது காடுகளில் இருந்து எங்களை நீ ஏன் {இங்குக்} கொண்டுவந்தாய்? கவலையிலும், துன்பத்திலும் மூழ்கியிருக்கும் மாத்ரியின் இரு மகன்களைப் பார்.(27) ஓ! தாயே, மனம் இரங்குவாயாக. ஓ! பெரும்புகழைக் கொண்டவளே {குந்தியே}, இப்போது நீ காட்டுக்குச் செல்லாதே. வலிமையால் அடையப்பட்டு, இன்று யுதிஷ்டிரருடையதாக இருக்கும் செழிப்பை நீ அனுபவிப்பாயாக” என்றான் {பீமன்}.(28)

காட்டுக்குள் ஓய்வதை உறுதியாகத் தீர்மானித்திருந்த குந்தி, தன் மகன்களின் இந்தப் புலம்பல்களை அலட்சியம் செய்தாள்.(29) சுபத்திரையுடன் கூடியவளும், உற்சாகமற்ற முகத்தைக் கொண்டவளுமான திரௌபதி, காட்டுக்குச் செல்லும் விருப்பத்துடன் பயணப்பட்டுக் கொண்டிருந்த தன் மாமியாரை அழுதுகொண்டே பின்தொடர்ந்து சென்றாள்.(30) பெரும் ஞானம் கொண்டவளும், உலகத்தில் இருந்து ஓயும் உறுதியான தீர்மானம் கொண்டவளுமான அந்த அருளப்பட்ட மங்கை {குந்தி}, அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளை அடிக்கடி பார்த்துக் கொண்டே நடந்து சென்றாள்.(31) பாண்டவர்கள், தங்கள் மனைவியர் மற்றும் பணியாட்கள் அனைவருடனும் அவளைப் பின்தொடர்வதைத் தொடர்ந்தனர். அப்போது அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, தன் பிள்ளைகளிடம் இந்தச் சொற்களைச் சொன்னாள்” {என்றார் வைசம்பாயனர்}.(32)

குந்தியின் சமாதானம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 17-பாண்டவர்களுக்குச் சமாதானம் கூறிய குந்தி…

குந்தி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிமைக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, நீ சொல்வது உண்மைதான். மன்னர்களே, நீங்கள் உற்சாகமற்றிருந்தபோது, அவ்வாறே நான் உங்கள் அனைவரையும் தூண்டினேன்.(1) பகடையாட்டத்தில் உங்கள் நாடு உங்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டதைக் கண்டும், நீங்கள் மகிழ்ச்சியை இழந்ததைக் கண்டும், உங்கள் உற்றார் உறவினரின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டவர்களாக உங்களைக் கண்டும், துணிவையும், உயர்ந்த எண்ணங்களையும் நான் உங்கள் மனத்தில் செலுத்தினேன்.(2) மனிதர்களில் முதன்மையானவர்களே, பாண்டுவின் மகன்கள் வீழ்ந்துவிடக்கூடாது என்ற வகையிலும், அவர்கள் புகழை இழந்துவிடக்கூடாது என்ற வகையிலும் நான் உங்களுக்கு ஊக்கமளித்தேன்.(3)

நீங்கள் அனைவரும் இந்திரனுக்கு இணையானவர்கள். நீங்கள் தேவர்களுக்கு ஒப்பான ஆற்றலைக் கொண்டவர்கள். பிறரின் முகங்களை எதிர்பார்த்து நீங்கள் வாழக்கூடாது என்பதற்காகவே நான் அவ்வழியில் செயல்பட்டேன்[1].(4) அறவோர் அனைவரிலும் முதன்மையானவனும், வாசவனுக்கு நிகரானவனுமான நீ மீண்டும் காட்டுக்குச் சென்று துன்பத்தில் வாழக்கூடாது என்பதற்காகவே நான் உன் இதயத்தில் துணிவைச் செலுத்தினேன்.(5) பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவனும், ஆற்றலுக்காகவும், ஆண்மைக்காகவும் பரந்து அறியப்பட்டவனுமான இந்தப் பீமன், சிறப்பின்மை மற்றும் அழிவுக்குள் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காகவே நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(6)பீமசேனனுக்கு அடுத்துப் பிறந்தவனும், வாசவனுக்கு இணையானவனுமான இந்த விஜயன் {அர்ஜுனன்} உற்சாகமிழந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(7) பெரியோரிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களான நகுலனும் சகாதேவனும் பலவீனமடைந்து, பசியால் உற்சாகமற்றவர்களாகிவிடக் கூடாது என்பதற்காக நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(8) வாளிப்பானவளும், அகன்ற விழிகளைக் கொண்டவளுமான இந்தப் பெண் {திரௌபதி}, பொதுச் சபையில் தனக்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்குப் பழிவாங்காமல் இருந்து, அதைப்பொறுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(9)

ஓ! பீமா, பகடையில் வெல்லப்பட்டதும், தன் மாதவிடாய் காலத்தில் வாழை மரத்தைப் போல நடுங்கிக் கொண்டிருந்த இவளை {திரௌபதியை} நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே(10) ஓர் அடிமையை {இழுத்துச் செல்வதைப்} போலத் தன் மடமையின் மூலம் இழுத்துச் சென்றான் துச்சாசனன். இவை யாவற்றையும் நான் அறிவேன். உண்மையில், பாண்டுவின் குலம் (பகைவர்களால்) அடக்கப்பட்டது.(11) பாதுகாப்பை விரும்பும் பெண் அன்றிலைப் போல அவள் உரக்கக் கதறியபோது, என் மாமனார் {பீஷ்மர்} மற்றும் பிறர் உள்ளிட்ட குருக்கள் உற்சாகமற்றவர்களாக இருந்தனர்.(12)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அற்ப புத்தி கொண்ட பாவியான துச்சாசனனால் கூந்தல் பற்றப்பட்டு இவள் {திரௌபதி} இழுத்துச் செல்லப்பட்ட போது, நான் என் புலனுணர்வுகளை இழந்தேன் {மூர்ச்சையடைந்தேன்}.(13) ஓ! என் மகன்களே, உங்கள் சக்தியைப் பெருக்கவே விதுலையின் சொற்களைச் சொல்லி உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(14) ஓ! என் மகன்களே, என் பிள்ளைகளால் பிரதிபலிக்கப்படும் பாண்டுவின் குலம் அழிந்துபோகக்கூடாது என்பதற்காகவே நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(15)

ஒரு குலத்திற்குப் புகழ்க்கேட்டைக் கொண்டுவரும் மனிதனின் மகன்களும், பேரர்களும் ஒருபோதும் நல்லுலகங்களை அடைவதில் வெல்லமாட்டார்கள். உண்மையில், கௌரவக் குலத்தின் மூதாதையர்கள், தங்களுடையவையாக இருந்த இன்பலோகங்களை இழக்கும் ஆபத்தில் இருந்தனர்.(16) ஓ! என் மகன்களே, என்னைப் பொறுத்தவரையில், இதற்கு முன்பே நான் என் கணவரால் அடையப்பட்ட அரசுரிமையின் பெருங்கனிகளை அனுபவித்திருக்கிறேன். நான் பெருங்கொடைகளை அளித்திருக்கிறேன். நான் வேள்வியில் முறையாகச் சோமச்சாற்றைப் பருகியிருக்கிறேன்[2].(17) நான் எனக்காக வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} கிளர்ந்தெழச் செய்யும் விதுலையின் சொற்களைச் சொல்லித் தூண்டவில்லை. அந்த ஆலோசனையைப் பின்பற்றுமாறு உங்களுக்காகவே நான் உங்களை தூண்டினேன்.(18)ஓ! என் மகன்களே, என் பிள்ளைகளால் வெல்லப்பட்ட அரசுரிமையின் கனிகளில் எனக்கு விருப்பமில்லை. ஓ! பெரும்பலம் கொண்டவனே. என் கணவரால் அடையப்பட்ட இன்பலோகங்களை நான் என் தவங்களின் மூலம் அடைய விரும்புகிறேன்.(19) ஓ! யுதிஷ்டிரா, காடுகளையே தங்கள் வசிப்பிடமாக்கிக் கொள்ள விரும்பும் என் மாமனார் மற்றும் மாமியார் ஆகிய இருவருக்கும் கீழ்ப்படிந்து தொண்டாற்றுவதன் மூலமும், எனத் தவங்களின் மூலமும் நான் என் உடலை உலர்த்த {உடலைவிட்டு விடுபட} விரும்புகிறேன்.(20) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, நீயும், பீமனும், பிறரும் என்னைப் பின்தொடர்வதை நிறுத்துவீராக. உன் புத்தி எப்போதும் அறத்திலேயே அர்ப்பணிப்புடன் இருக்கட்டும். உன் மனம் எப்போதும் பெரியதாகவே இருக்கட்டும்” என்றாள் {குந்தி}”.(21)

குந்தியைத் தடுத்த திருதராஷ்டிரன்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 18-பாண்டவர்கள் வருத்தத்துடன் திரும்பியது; திருதராஷ்டிரன் முதலியோர் கங்கைக் கரையில் மாலைக் கடன்களைச் செய்து இரவைக் கழித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பாவமற்ற பாண்டவர்கள், குந்தியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு வெட்கமடைந்தனர். எனவே, அவர்களும், பாஞ்சால இளவரசியும் {திரௌபதியும்} அவளைப் பின்தொடர்வதை நிறுத்தினர்[1].(1) குந்தி காட்டுக்குச் செல்வதில் உறுதியாக இருப்பதைக் கண்ட பாண்டவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உரக்கக் கதறினர்.(2) பிறகு, பாண்டவர்கள் மன்னனை {திருதராஷ்டிரனை} வலம் வந்து அவனை முறையாக வணங்கினர். அதன்பிறகு, திரும்பி வருவதற்குப் பிருதையை {குந்தியைச்} சம்மதிக்க வைக்கத் தவறிய அவர்கள் மேலும் பின்தொடர்வதை நிறுத்திக் கொண்டனர்.(3)அப்போது, பெரும் சக்தி கொண்டவனும், அம்பிகையின் மகனும், காந்தாரி மற்றும் விதுரனால் தாங்கப்பட்டவனுமான திருதராஷ்டிரன், அவர்களிடம்,(4) “யுதிஷ்டிரனின் அரசத்தாய் நம்மோடு வர வேண்டாம். யுதிஷ்டிரன் சொன்ன அனைத்தும் உண்மையே.(5) மகன்களின் பெருஞ்செழிப்பைக் கைவிட்டு, தன்னுடையவையாகக்கூடிய உயர்ந்த பயன்களையும் கைவிட்டு, புத்தியற்ற ஒருத்தியைப் போலத் தன் பிள்ளைகளை விட்டுவிட்டு அடைதற்கரிதான காட்டுக்குள் இவள் ஏன் செல்ல வேண்டும்?(6) இவள் அரசுரிமையை அனுபவித்துக் கொண்டே, தவங்களைப் பயின்று, கொடைகளின் உயர்ந்த நோன்புகளை நோற்று வாழ இயன்றவளே.(7) ஓ! காந்தாரி, என்னுடைய மருமகளான இவளுடைய {குந்தியினுடைய} தொண்டில் நான் மிகவும் நிறைவடைந்திருக்கிறேன். கடமைகள் அனைத்தையும் அறிந்தவளான உனக்கு அவளைத் திரும்பிச் செல்லுமாறு ஆணையிடுவதே தகும்” என்றான்.(8)

இவ்வாறு தன் தலைவனால் சொல்லப்பட்ட சுபலனின் மகள் {காந்தாரி}, ஆழ்ந்த பொருளுள்ள தன் சொற்களையும் சேர்த்து முதிர்ந்த மன்னனின் அந்தச் சொற்கள் அனைத்தையும் குந்தியிடம் மீண்டும் சொன்னாள்.(9) எனினும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவளும், கற்புடைய பெண்ணுமான குந்தி காட்டைத் தன் வசிப்பிடமாகக் கொள்வதில் உறுதியாகத் தன் இதயத்தை நிலைக்கச் செய்திருந்ததால் அவளைத் தடுப்பதில் அவள் தவறினாள்.(10) காட்டுக்கு ஓய்ந்து செல்வதில் உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருந்த அவளைப் புரிந்து கொண்ட குரு பெண்மணிகள், குரு குலத்தின் முதன்மையானவர்கள் (தங்கள் கணவர்கள்) அவளைப் பின்தொடர்ந்து செல்வதை நிறுத்திவிட்டதைக் கண்டு, உரக்க ஓலமிட்டு அழுதனர்.(11) பிருதையின் {குந்தியின்} மகன்கள் அனைவரும், பெண்மணிகள் அனைவரும் தங்கள் சுவடுகளைப் பின்பற்றிச் சென்ற பிறகும் பெரும் ஞானம் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன் காடுகளை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.(12)

பெரிதும் உற்சாகமற்றிருந்த பாண்டவர்கள், துயரிலும், கவலையிலும் பீடிக்கப்பட்டவர்களாகத் தங்கள் மனைவியருடன் தங்கள் தேர்களில் நகரத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(13) முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட மொத்த மக்களுடன் கூடிய ஹஸ்தினாபுர நகரம் அந்நேரத்தில் உற்சாகமற்றதாகவும், கவலையில் மூழ்கியதாகவும் இருந்தது.(14) துயரால் பீடிக்கப்பட்டிருந்த பாண்டவர்கள் சக்தியேதுமற்றவர்களாக இருந்தனர். குந்தியால் கைவிடப்பட்ட அவர்கள் தாயற்ற கன்றுகளைப் போல ஆழ்ந்த துயரில் பீடிக்கப்பட்டிருந்தனர்.(15)

அதே நாளில் திருதராஷ்டிரன் அந்நகரத்தில் இருந்து அகன்று ஓரிடத்தை அடைந்தான். பலமிக்கவனான அந்த ஏகாதிபதி இறுதியாகப் பாகீரதி ஆற்றின் கரையை அடைந்து இரவில் அங்கேயே ஓய்ந்திருந்தான்.(16) வேதங்களை அறிந்த பிராமணர்கள், அந்தத் தவசிகளின் ஆசிரமத்தில் புனித நெருப்புகளை மூட்டினர். அந்த முதன்மையான பிராமணர்களால் சூழப்பட்டிருந்த அந்தப் புனித நெருப்புகள் அழகில் சுடர்விட்டெரிந்தன. அந்த முதிய மன்னனின் {திருதராஷ்டிரனின்} புனித நெருப்பும் மூட்டப்பட்டது.(17) தன்னுடைய நெருப்பின் அருகில் அமர்ந்த அவன், உரிய சடங்குகளின் படி அதில் ஆகுதிகளை ஊற்றி, ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியன் மறையும் வேளையில் அவனை வழிபட்டான்.(18)

விதுரனும், சஞ்சயனும் குசப்புற்கள் சிலவற்றைப் பரப்பி மன்னனுக்குப் படுக்கையை அமைத்தனர். அந்தக் குரு வீரனின் படுக்கைக்கு அருகிலேயே காந்தாரிக்கும் மற்றொன்றை அமைத்தனர்.(19) சிறந்த நோன்புகளை நோற்பவளும், யுதிஷ்டிரனின் தாயுமான குந்தி, காந்தாரிக்கு மிக அருகிலேயே மகிழ்ச்சியாகப் படுத்துக் கொண்டாள்.(20) கேட்கும் தொலைவில் விதுரனும், பிறரும் உறங்கினர். யாஜக பிராமணர்களும், மன்னனைப் பின்தொடர்ந்து வந்த பிறரும், தங்கள் தங்களுக்குரிய படுக்கைகளில் தங்களைக் கிடத்திக் கொண்டனர்.(21)

அங்கே இருந்த முதன்மையான பிராமணர்கள் பலர் புனித மந்திரங்களை உரக்கச் சொன்னார்கள். வேள்வி நெருப்புகள் சுற்றிலும் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. எனவே, அந்த இரவு பிராம்மீ இரவைப் போல அவர்களுக்கு இனிமையாகத் தெரிந்தது[2].(22) அந்த இரவு கடந்ததும், அவர்கள் அனைவரும் தங்கள் படுக்கைகளில் இருந்து எழுந்து, தங்களுக்குரிய காலைச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். அதன் பிறகு புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.(23) குரு நாட்டின் மாகாணங்களிலும், நகரங்களிலும் வசிப்பவர்களால் வருத்தமடைந்தவர்களும், துக்கமடைந்த இதயங்களைக் கொண்டவர்களுமான அவர்களுக்கு, காட்டில் முதல் நாள் அனுபவம் துன்பம் நிறைந்ததாக இருந்தது” {என்றார் வைசம்பாயனர்}.(24)

சதயூபாஸ்ரமம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 19-திருதராஷ்டிரனும், விதுரனும் குருக்ஷேத்திரம் சென்று சதயூபனுடைய ஆஸ்ரமத்திற்குச் சென்றது; வியாசரின் முன்னிலையில் வானப்ரஸ்தாஸ்மரத்திற்கு தீக்ஷை பெற்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விதுரனின் ஆலோசனையைப் பின்பற்றி மன்னன் {திருதராஷ்டிரன்}, புனிதமானதும், அறவோருக்காக ஒதுக்கப்பட்டதுமான பாகீரதியின் கரைகளில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(1) அங்கே காடுகளில் தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட பிராமணர்கள் பலரும், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் பலரும் அந்த முதிர்ந்த ஏகாதிபதியைக் காண அங்கே வந்தனர்.(2) அவன் அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து, தன் சொற்களின் மூலம் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தான். சீடர்களுடன் கூடிய பிராமணர்களை முறையாக வழிபட்ட அவன், பிறகு அவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பினான்.(3)

மாலை வேளை வந்ததும், மன்னனும் {திருதராஷ்டிரனும்}, பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும், பாகீரதியின் ஓடைக்குள் இறங்கித் தங்களைத் தூய்மை செய்து கொள்வதற்கான சடங்குகளை முறையாகச் செய்தனர்.(4) ஓ! பாரதா, அரசன், அரசி, விதுரன் மற்றும் பிறரும் அந்தப் புனித ஓடையில் நீராடி வழக்கமான தங்கள் அறச்சடங்குகளைச் செய்தனர்.(5) மன்னன் நீராடலின் மூலம் தன்னைத் தூய்மை செய்து கொண்ட பிறகு, குந்திபோஜனின் மகள் {குந்தி}, தன் மாமனாரான அவனுக்கு வழிகாட்டியவாறே, அவனையும், காந்தாரியையும் நீரிலிருந்து உலர்ந்த கரைக்கு இட்டுச் சென்றாள்.(6)

யாஜகர்கள் அங்கே மன்னனுக்காக ஒரு வேள்விப்பீடத்தை அமைத்திருந்தனர். வாய்மைக்கு அர்ப்பணித்திருந்த பின்னவன் {திருதராஷ்டிரன்}, அப்போது நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினான்.(7) அந்த முதிர்ந்த மன்னன் பாகீரதியின் கரையில் இருந்து தன் தொண்டர்களுடன் சேர்ந்து நோன்புகளை நோற்றபடியே, கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் குருக்ஷேத்திரத்தை நோக்கி முன்னேறினான்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, பெரும் ஞானியும், அரச முனியுமான சதயூபனின் ஆசிரமத்தை அடைந்து, அவனுடன் உரையாடினான்.(9)

ஓ! பகைவரை எரிப்பவனே, சதயூபன் கேகயர்களின் பெரும் மன்னனாக இருந்தவனாவான். அவன் தன் நாட்டின் அரசுரிமையைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டுக் காட்டுக்கு வந்திருந்தான்.(10) அந்தச் சதயூபன், மன்னன் திருதராஷ்டிரனை உரிய சடங்குகளுடன் வரவேற்றான். அவனுடன் {சதயூபனுடன்} சேர்ந்து பின்னவன் {திருதராஷ்டிரன்} வியாசரின் ஆசிரமத்திற்குச் சென்றான்.(11) வியாசரின் ஆசிரமத்தை அடைந்த அவன், காட்டு வாழ்வுமுறைக்கான {வானப்ரஸ்தாஸ்ரமத்திற்கான} தொடக்கத்தை {தீக்ஷையைப்} பெற்றான். அங்கிருந்து திரும்பிய அவன் சதயூபனின் ஆசிரமத்தில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(12)

உயர் ஆன்ம சதயூபன், வியாசரின் ஆணையின் பேரில் திருதராஷ்டிரனுக்கு காட்டு வாழ்வுமுறையின் சடங்குகள் அனைத்தையும் கற்பித்தான்.(13) இவ்வாறு உயர் ஆன்ம திருதராஷ்டிரன் தவப் பயிற்சியில் தன்னை நிறுவிக் கொண்டு, தன் தொண்டர்கள் {தன்னைப் பின்பற்றியவர்கள்} அனைவரையும் அதே ஒழுக்கத்தைப் பின்பற்றச் செய்தான்.(14) ஓ! ஏகாதிபதி, குந்தியுடன் கூடிய ராணி காந்தாரியும், மரவுரியையும், மான்தோலையும் அடையாகக் கொண்டு, தன் தலைவன் நோற்கும் அதே நோன்புகளையே தானும் நோற்றாள்.(15)

அவர்கள் எண்ணம், சொற்கள், செயல்கள் மற்றும் கண்களில் இருந்து தங்கள் புலன்களை விலக்கிக் கடுந்தவங்களைப் பயிலத் தொடங்கினர்[1].(16) மனத்தில் குழப்பமேதுமற்றவனான மன்னன் திருதராஷ்டிரன், ஒரு பெரும் முனிவனைப் போலத் தலையில் சடாமுடி தரித்து, மேனியில் மரவுரியும், தோலும் தரித்து, நோன்புகளையும், தவங்களையும் பயிலத் தொடங்கி, தசையை வற்றச் செய்து எலும்பும் தோலுமாகத் தன் உடலைச் சுருக்கினான்.(17) அறத்திற்கான உண்மை விளக்கங்களை அறிந்தவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான விதுரனும், சஞ்சயனும், அந்த முதிர்ந்த மன்னனுக்கும், அவனுடைய மனைவிக்கும் காத்திருந்தனர் {பணி செய்தனர்}. ஆன்மக்கட்டுப்பாடுடையவர்களான விதுரன் மற்றும் சஞ்சயன் ஆகிய இருவரும் மரவுரியையும், கந்தலையும் உடுத்தித் தங்களைச் சுருக்கிக் கொண்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(18)

குபேரலோகம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 20-திருதராஷ்டிரனைக் காண வந்த நாரதர்; அந்த வனம் ராஜரிஷிகளுக்கு ஸ்வர்க்கம் தந்ததையும், அவர்களுக்கும் அது ஸித்தியைத் தரும் என்பதையும், திருதராஷ்டிரன் அடையப்போகும் கதியையும் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தவசிகளில் முதன்மையான நாரதர், பர்வதர் மற்றும் கடுந்தவங்களைக் கொண்ட தேவலர் ஆகியோர் மன்னன் திருதராஷ்டிரனைக் காண அங்கே வந்தனர்.(1) சீடர்களுடன் கூடியவரும், தீவில் பிறந்தவருமான வியாசரும், பெரும் ஞானம் கொண்டவர்களும், தவவெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களான பிறரும், முதிர்ந்த வயதையும், பெரும் புண்ணியங்களையும் கொண்ட அரச முனி சதயூபனும் அங்கே வந்தனர்.(2) ஓ! மன்னா, குந்தி அவர்களை உரிய சடங்குகளுடன் வழிபட்டாள். அந்தத் தவசிகள் அனைவரும் தங்களுக்குச் செய்யப்பட்ட வழிபாட்டில் பெரும் நிறைவை அடைந்தனர்.(3) அந்தப் பெரும் முனிவர்கள், உயர் ஆன்மா கொண்ட திருதராஷ்டிரனிடம் அறம் மற்றும் நீதி குறித்து உரையாடி அவனை மகிழ்வித்தனர்.(4) அவர்களுடைய உரையாடலின் முடிவில் தெய்வீக முனிவரான நாரதர், அனைத்துப் பொருட்களையும் நேரடியாகக் கண்களில் கண்டு, பின்வரும் சொற்களைச் சொன்னார்.(5)

நாரதர், “பெருஞ்செழிப்பைக் கொண்டவனும், முற்றிலும் அச்சமற்றவனுமாகக் கேகயர்களில் ஓர் ஆட்சியாளன் இருந்தான். இந்தச் சதயூபனின் பாட்டனான அவனது பெயர் சஹஸ்ரசித்யன் என்பதாகும்.(6) அந்தச் சஹஸ்ரசித்யன் பேரளவு அறம் கொண்ட தன் மூத்த மகனிடம் தன் நாட்டை ஒப்படைத்துவிட்டு, காட்டிற்கு ஓய்ந்து சென்றான்.(7) பெருங்காந்தியைக் கொண்ட அந்தப் பூமியின் தலைவன் {சஹஸ்ரசித்யன்} சுடர்மிக்கத் தவத்தின் எல்லையைக் கடந்து புரந்தலோகத்தை அடைந்து அங்கே அவனுடைய {புரந்தரனின்} தோழமையில் தொடர்ந்து வாழ்ந்தான்.(8) ஓ! மன்னா, இந்திரலோகத்திற்கு நான் சென்ற பல சந்தர்ப்பங்களில், தவங்களின் மூலம் பாவங்களனைத்தையும் எரித்து இந்திரனின் வசிப்பிடத்தில் வசித்துக் கொண்டிருக்கும் அந்த ஏகாதிபதியை {சஹஸ்ரசித்யனைக்} கண்டிருக்கிறேன்.(9)

அதே போலவே, பகதத்தனின் பாட்டனான மன்னன் சைலாலயனும் தன் தவங்களின் சக்தியை மட்டுமே கொண்டு இந்திரலோகத்தை அடைந்திருக்கிறான்.(10) ஓ! ஏகாதிபதி, அங்கே வஜ்ரதாரிக்கே ஒப்பானவனும், பிருஷத்ரன் என்ற பெயரைக் கொண்டவனுமான மற்றொரு மன்னனும் இருந்தான். அந்த மன்னனும் தன் தவங்களின் மூலம் பூமியில் இருந்து சொர்க்கத்திற்குச் சென்றான்.(11) ஓ! மன்னா, இதே காட்டில், பூமியின் தலைவனும், மாந்தாத்ரியின் {மாந்தாதாவின்} மகனுமான புருகுத்ஸன் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(12) ஆறுகளில் முதன்மையான நர்மதை இம்மன்னனின் மனைவியானாள். பூமியின் ஆட்சியாளனான அவன், இதே காட்டில் கடுந்தவங்களைச் செய்து, சொர்க்கத்திற்குச் சென்றான்.(13) உயர்ந்த அறவோனும், சசலோமன் என்ற பெயரைக் கொண்டவனுமான மற்றொரு மன்னனும் இருந்தான். அவனும் இதே காட்டில் கடுந்தவங்களைச் செய்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(14)

ஓ! ஏகாதிபதி, இந்தக் காட்டிற்கு வந்திருக்கும் நீயும், தீவில் பிறந்தவரின் {வியாசரின்} அருளால், உயர்ந்ததும், அடைதற்கரிதானதுமான ஓர் இலக்கை அடைவாயாக.(15) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, காந்தாரியின் துணையுடன் கூடிய நீயும் உன் தவங்களின் முடிவில், பெருஞ்செழிப்பை அடைந்து, அந்த உயர் ஆன்மாக்கள் அடைந்த இலக்கை அடைவாயாக.(16) பகனைக் கொன்றவனின் முன்னிலையில் வசிக்கும் பாண்டு எப்போதும் உன்னைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். ஓ! ஏகாதிபதி, நீ செழிப்பை அடைவதற்கு அவன் நிச்சயம் உனக்குத் துணை புரிவான்.(17) பெரும் புகழைக் கொண்டவளும், உன் மருமகளுமான இவள் {குந்தி}, உனக்கும், காந்தாரிக்கும் தொண்டு செய்வதன் மூலம் மறுமையில் தன் கணவனுடன் வசிக்கும் இடத்தை அடைவாள்.(18) இவள் நித்திய தர்மமான யுதிஷ்டிரனின் தாயாவாள். ஓ! மன்னா, இவை யாவற்றையும் நாங்கள் எங்கள் ஆன்மப் பார்வையில் கண்டோம்.(19) விதுரன் உயர் ஆன்ம யுதிஷ்டிரனுக்குள் நுழைவான். சஞ்சயனும் தியானத்தின் மூலம் இந்த உலகத்தில் இருந்து சொர்க்கத்திற்கு உயர்வான்” என்றார் {நாரதர்}”.(20)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்மா கொண்டவனும், கல்வி கற்றவனுமான அந்தக் குருகுலத் தலைவன் {திருதராஷ்டிரன்}, தன் மனைவியுடன் சேர்ந்து நாரதரின் சொற்களைக் கேட்டு, அவற்றைப் புகழ்ந்து, இதற்கு முன் இல்லாத கௌரவங்களால் நாரதரை வழிபட்டான்.(21) ஓ! ஏகாதிபதி, அங்கே இருந்த பிராமணர்களின் கூட்டம் பெரும் மகிழ்ச்சியால் நிறைந்து மன்னன் திருதராஷ்டிரனை மகிழ்வடையச் செய்ய விரும்பி அளவிடற்கரிய வெகுமதிகளால் நாரதரை வழிபட்டனர்.(22) மறுபிறப்பாளர்களில் முதன்மையான அவர்கள் நாரதரின் சொற்களையும் புகழ்ந்தனர்.

அப்போது அரசமுனியான சதயூபன் நாரதரிடம்,(23) “ஓ! பெரும் காந்தியைக் கொண்டவரே {நாரதரே}, புனிதமானவரான நீர் இந்தக் குரு மன்னன் மற்றும் இங்கிருக்கும் மக்கள் மற்றும் நான் என அனைவரின் பக்தியையும் அதிகரித்திருக்கிறீர்.(24) எனினும், நான் உம்மை ஒன்று கேட்க விரும்புகிறேன். நான் கேட்கிறேன் நீர் சொல்வீராக. ஓ! தெய்வீக முனிவரே, அஃது உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்படும் மன்னன் திருதராஷ்டிரன் தொடர்புடையது.(25) நீர் அனைத்துக் காரியங்களின் உண்மையையும் அறிந்தவராவீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே, தெய்வீகப் பார்வையுடன் நீர் மனிதர்கள் அடையும் பல்வேறு கதிகளைக் காண்கிறீர்.(26) நீர் சொன்னவர்களும், தேவர்களுடைய தலைவனின் தோழமையைக் கொண்டவர்களுமான மன்னர்களின் கதி என்னவென்பதை நீர் சொன்னீர். எனினும், ஓ! பெரும் முனிவரே, இந்த மன்னனால் எந்தந்தெந்த உலகங்கள் அடையப்படும் என்பதை நீர் சொல்லவில்லை.(27) ஓ! பலமிக்கவரே, அரசன் திருதராஷ்டிரனால் எந்த உலகம் அடையப்படும் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான் சதயூபன்.(28)

அவனால் இவ்வாறு கேட்கப்பட்டதும், தெய்வீகப் பார்வையையும், கடுந்தவங்களையும் கொண்ட நாரதர், அந்தச் சபைக்கு மத்தியில் அனைவரின் மனங்களுக்கும் உயர்வானவையும், ஏற்புடையவையுமான இந்தச் சொற்களைச் சொன்னார்.(29) நாரதர், “நான் என் விருப்பத்தின் பேரில் சக்ரனின் மாளிகைக்குச் சென்று, ஓ! அரசமுனியே, அங்கே சச்சியின் தலைவனான சக்ரனைக் கண்டேன், மேலும் அங்கே நான் மன்னன் பாண்டுவையும் கண்டேன்.(30) ஓ! ஏகாதிபதி, இந்தத் திருதராஷ்டிரனையும், இவன் செய்து வரும் கடுந்தவங்களையும் குறித்த பேச்சு அங்கே எழுந்தது.(31) அங்கே சக்ரனின் உதடுகளின் மூலமே நான் இந்த மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஒதுக்கப்பட்டிருக்கும் வாழ்நாள் காலம் இன்னும் மூன்று வருடங்கள் என்பதைக் கேட்டறிந்தேன்.(32) அதன் பிறகு, மன்னன் திருதராஷ்டிரன், தன் மனைவி காந்தாரியின் துணையுடன் குபேரலோகத்திற்குச் சென்று அங்கே அந்த மன்னர்களின் மன்னனால் {குபேரனால்} உயர்வாகக் கௌரவிக்கப்படுவான். இவன் தன் மேனியெங்கும் தெய்வீக ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு தன் விருப்பத்தின் பேரில் நகரும் தேரில் அங்கே செல்வான்.(33) இவன் ஒரு முனிவரின் மகனாவான்; இவன் உயர்வான அருளைக் கொண்டவனாவான்; இவன் தன் தவங்களின் மூலம் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்திருக்கிறான். அற ஆன்மா கொண்ட இவன் தான் விரும்பியவாறு தேவ, கந்தர்வ, ராட்சச உலகங்களில் திரிந்து வருவான். நீ எதைக் குறித்துக் கேட்டாயோ அது தேவர்களிடம் உள்ள ஒரு புதிராகும் {ரகசியமாகும்}. உங்களிடம் கொண்ட அன்பினால் நான் இந்த உயர்ந்த உண்மையை {உங்களுக்கு} அறிவித்தேன்.(34,35) நீங்கள் அனைவரும் ஸ்ருதிகளைச் செல்வமாகக் கொண்டவர்களாகவும், தவங்களின் மூலம் உங்கள் பாவங்கள் அனைத்தையும் எரித்தவர்களாகவும் இருக்கிறீர்கள்” என்றார் {நாரதர்}”.(36)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அங்கே கூடியிருந்த அனைவரும், மன்னன் திருதராஷ்டிரனும், அந்தத் தெய்வீக முனிவரின் இந்த இனிய சொற்களைக் கேட்டு, பெரிதும் உற்சாகமடைந்தவர்களாகவும், உயர்ந்த நிறைவை அடைந்தவர்களாகவும் இருந்தனர்.(37) பெரும் ஞானம் கொண்ட திருதராஷ்டிரனை இத்தகைய பேச்சின் மூலம் உற்சாகமடையச் செய்த அவர்கள், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டோருக்கு உரிய பாதையின் வழியே அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

பாண்டவர்கள் துயரம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 21-குந்தியின் பிரிவினாலும், அபிமன்யுவின் மரணத்தினால் உண்டான துக்கத்தினாலும் பாண்டவர்கள் தங்கள் வேலைகளை நன்கு பாராமலிருந்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, குருக்களின் தலைவன் {திருதராஷ்டிரன்} காட்டுக்குள் ஓய்ந்து சென்ற பிறகு, பாண்டவர்கள் தங்கள் தாயின் {குந்தியின்} நிமித்தம் துன்பத்தால் பீடிக்கப்பட்டு மிகவும் உற்சாகமற்றவர்களானார்கள்.(1) ஹஸ்தினாபுரக் குடிமக்களும் ஆழ்ந்த கவலையில் இருந்தனர். பிராமணர்கள் எப்போதும் அந்த முதிர்ந்த மன்னனை {திருதராஷ்டிரனைக்} குறித்துப் பேசினர்.(2)

{அவர்கள்}, “முதிர் வயதினனான மன்னன் {திருதராஷ்டிரன்}, {ஆளரவமற்ற} தனிமையான காட்டுக்குள் எவ்வாறு வாழ்வான்? உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரியும், குந்திபோஜனின் மகளான பிருதையும் {குந்தியும்} அங்கே எவ்வாறு வாழ்வார்கள்?(3) அந்த அரசமுனி {திருதராஷ்டிரன்} எப்போதும் அனைத்து வசதிகளையும் அனுபவித்து வாழ்ந்து வந்தவன். அவனுடைய நிலை நிச்சயம் பரிதாபகரமானது. காட்டுக்குள் சென்றவனும், பார்வையற்றவனுமான அந்த அரசகுல வழித்தோன்றலின் இப்போதைய நிலையென்ன?(4) மகன்களிடம் இருந்து பிரிந்ததன் மூலம் குந்தி செய்யற்கரிதான அருஞ்செயலைச் செய்திருக்கிறாள். ஐயோ, அவள் அரச செழிப்பைக் கைவிட்டு காட்டு வாழ்வைத் தேர்ந்தெடுத்தாளே.(5) மேலும், தன் அண்ணனுக்குத் தொண்டு செய்வதில் எப்போதும் அரப்பணிப்புள்ள விதுரனின் நிலையென்ன? தன் தலைவனால் தனக்குக் கொடுக்கப்பட்ட உணவுக்கு நன்றியுணர்வுமிக்கவனும், நுண்ணறிவுமிக்கவனுமான கவல்கணன் மகன் {சஞ்சயன்} எவ்வாறு இருக்கிறான்?” {என்று பேசிக் கொண்டனர்}.(6) உண்மையில், உரிய வயதை எட்டாதவர்கள் உள்ளிட்ட குடிமக்களும், ஒருவரையொருவர் சந்திக்கும்போது இதே கேள்விகளையே கேட்டுக் கொண்டனர்.(7)

துன்பத்தால் பீடிக்கப்பட்டவர்களான பாண்டவர்களும், தங்கள் முதிய தாய்க்காக வருந்தி தங்கள் நகரத்தில் வாழ இயலாதவர்களாக இருந்தனர்.(8) முதிய தந்தையும், தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தவனுமான மன்னனையும், உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரியையும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட விதுரனையும் நினைத்துக் கொண்டிருந்த அவர்கள் மன அமைதியை அனுபவிக்கத் தவறினார்கள்.(9) அரசுரிமையிலோ, பெண்களிலோ, வேத கல்வியிலோ அவர்களுக்கு இன்பமேதும் இருக்கவில்லை.(10) ஆன்மாவைத் துளைத்த துன்பத்தோடு அவர்கள் முதிய மன்னனையும், தங்கள் உற்றார் உறவினரின் பயங்கரப் படுகொலைகளையும் நினைத்தனர்.(11) உண்மையில் இளைஞனான அபிமன்யு, போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான கர்ணன், திரௌபதியின் மகன்கள், மற்றும் பிற நண்பர்கள் ஆகியோரின் படுகொலைகளைக் குறித்து நினைத்த அந்த வீரர்கள் பெரிதும் உற்சாகத்தை இழந்தனர்.(12,13)

பூமியானவள், தன் வீரர்கள் மற்றும் செல்வம் ஆகிய இரண்டையும் இழந்தால் என்பதை மீண்டும் மீண்டும் நினைத்த அவர்கள் மனத்தில் அமைதியை அடைய தவறினார்கள்.(14) திரௌபதி தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தாள், அழகிய சுபத்திரையும் பிள்ளைகளற்றவளாக இருந்தாள். அவர்களும் உற்சாகமற்ற இதயங்களுடனும், பெரிய துன்பத்துடனும் இருந்தனர்.(15) எனினும், விராடன் மகளின் {உத்தரையின்} மகனான உமது தந்தை பரிக்ஷித்தைக் கண்ட உமது பாட்டன்கள் ஏதோ ஒருவாறு தங்கள் உயிர்மூச்சுகளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(16)

சகாதேவன் புலம்பல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 22-குந்தியைக் காண்பதற்காகப் புலம்பிய சகாதேவன் மற்றும் திரௌபதி; திருதராஷ்டிரன் முதலியோரைக் காண தம்பிமாருடனும், நகரமக்களுடனும் காட்டுக்குச் சென்ற யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மனிதர்களில் முதன்மையானவர்களும், தங்கள் தாயை மகிழ்ச்சியடையச் செய்பவர்களுமான வீரப் பாண்டவர்கள் துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்தனர்.(1) முன்பு எப்போதும் அரச அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்கள், அந்நேரத்தில் தங்கள் தலைநகரத்தில் எந்தச் செயல்களையும் கவனிக்காமல் இருந்தனர்.(2) துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள், எதனிலிருந்தும் இன்பத்தை ஈட்டத் தவறினார்கள். அவர்களிடம் யாரும் எதுவும் கேட்டாலும் எந்தப் பதிலையும் அவர்கள் சொல்லவில்லை.(3) தடுக்கப்பட முடியாதவர்களான அந்த வீரர்கள் பெருங்கடலைப் போன்ற ஆழமான ஈர்ப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும், துன்பத்தால் தாங்கள் தங்கள் ஞானத்தையும், புலன் உணர்வுகளையும் இழந்துவிட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள்.(4)

பாண்டுவின் மகன்கள், தங்கள் தாய் அந்த முதிர்ந்த தம்பதியருக்குத் தொண்டாற்றி எவ்வளவு மெலிந்திருப்பாள் என்பதை நினைத்துக் கவலையில் நிறைந்தார்கள்.(5) {அவர்கள்}, “உண்மையில், மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டவரும், எந்தப் புகலிடமும் இல்லாதவருமான அந்த மன்னர் {திருதராஷ்டிரர்}, இரைதேடும் விலங்குகள் நடமாடும் காட்டுக்குள், தமது மனைவியுடன் மட்டும் எவ்வாறு தனியாக வாழ்கிறார்?(6) ஐயோ, உயர்வாக அருளப்பட்டவளும், தன் அன்புக்குரிய அனைவரும் கொல்லப்பட்டவளுமான ராணி காந்தாரி அந்தத் தனிமையான காட்டில் எவ்வாறு தன் குருட்டுத் தலைவனைப் பின்தொடர்ந்து செல்வாள்?” {என்று கேட்டனர்}.(7) பாண்டவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது வெளிப்பட்ட கவலைகள் இவ்வாறே இருந்தன. பிறகு அவர்கள், மன்னனை {திருதராஷ்டிரனை} அவனுடைய காட்டு ஆசிரமத்தில் காண்பதில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்தனர்.(8)

அப்போது, சகாதேவன் மன்னனை {யுதிஷ்டிரனை} வணங்கி, “நம் தந்தையை {பெரியப்பாவான திருதராஷ்டிரரைக்} காண்பதில் உமது இதயம் நிலைத்திருக்கிறது என்பதை நான் அறிவேன்.(9) எனினும், நான் உம்மீது கொண்டிருக்கும் மதிப்பின் காரணமாக, நாம் காட்டுக்குப் புறப்படும் காரியத்தில் என்னால் விரைவாக வாயைத் திறக்க முடியவில்லை. அந்தப் பயணத்திற்கான காலம் இப்போது வந்துவிட்டது.(10) குச {தர்ப்பை} மற்றும் காச {நாணல்} புற்களில் உறங்கி மெலிந்தவளும், கடுந்தவங்களைப் பயில்பவளும், தலையில் சடாமுடி தரித்தவளும், தவங்களை நோற்று வாழ்பவளுமான குந்தியை நற்பேற்றினால் நான் காணப் போகிறேன்.(11) அரண்மனைகளிலும், மாளிகைகளிலும் வளர்க்கப்பட்ட அவள், அனைத்து வகை வசதிகள் மற்றும் ஆடம்பரத்துடன் பராமரிக்கப்பட்டவளாவாள். ஐயோ, களைத்தவளும், பெரும் துயரில் மூழ்கியவளுமான என் அன்னையை நான் எப்போது காணப் போகிறேன்?(12) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரரே}, பிறப்பால் இளவரசியான குந்தி, இப்போது காட்டில் துன்பத்தில் வாழ்ந்து வருவதால், மனிதர்களில் கதி பெரிதும் நிலையற்றதென்பதில் ஐயமில்லை” என்றான் {சகாதேவன்}.(13)

சகாதேவனின் இந்தச் சொற்களைக் கேட்டவளும், பெண்கள் அனைவரிலும் முதன்மையானவளுமான ராணி திரௌபதி, உரிய முறையில் மன்னனை வணங்கி மதித்து,(14) “ஐயோ, ராணி பிருதையை {குந்தியை} நான் எப்போது காணப் போகிறேன்? உண்மையில், அவள் இன்னும் உயிரோடு இருப்பாளா? ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இன்னும் ஒருமுறை அவளைக் காண்பதில் நான் வென்றால் என் வாழ்வு வீணாகக் கழிக்கப்படவில்லை என்று நான் கருதிக் கொள்வேன்.(15) இந்த வகையிலான புத்தி எப்போதும் உம்மில் நிலைத்திருக்கட்டும். ஓ! மன்னர்களின் மன்னா, எங்களுக்கு உயர்ந்த வரத்தை அளிக்க விரும்பும் இத்தகைய அறம் செய்வதில் உம்முடைய மனம் எப்போதும் இன்புறட்டும்.(16) ஓ! மன்னா, உமது இல்லத்துப் பெண்மணிகளான இவர்கள் அனைவரும், குந்தி, காந்தாரி மற்றும் என் மாமனாரை {திருதராஷ்டிரரைக்} காண விரும்பி செல்லும் பயணத்திற்காகத் தங்கள் பாதங்களை உயர்த்திக் காத்திருக்கின்றனர் என்று அறிவீராக” என்றாள்.(17)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, “ராணியான திரௌபதியால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {யுதிஷ்சிரன்}, தன் படைத்தலைவர்கள் அனைவரையும் தன் முன்னிலைக்கு அழைத்து அவர்களிடம்,(18) “தேர்களும், யானைகளும் நிறைந்த என் படையை அணிவகுக்கச் செய்யுங்கள். இப்போது காட்டில் வாழ்ந்துவரும் மன்னர் திருதராஷ்டிரரை நான் காணப் போகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(19)

மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, பெண்களின் காரியங்களைக் கண்காணிப்போரிடம் {அந்தப்புரக் காவலர்களிடம்}, “பல்வேறு வகை வாகனங்களும், ஆயிரக்கணக்கில் இருக்கும் என்னுடைய பல்லக்குகளும் ஆயதம் செய்யப்படட்டும்.(20) வண்டிகள், பொருள் களஞ்சியங்கள், உடையலமாரிகள், கருவூலங்கள் ஆகியவையும், கைவினைசர்களும் ஆயத்தமாகி, வெளியே வரட்டும், கைவினைஞர்களும் வெளியே வரட்டும். கருவூல அதிகாரிகள், குருக்ஷேத்திரத்தில் உள்ள தவசியின் {சதயூபனின்} ஆசிரமத்திற்குச் செல்லும் பாதையில் செல்லட்டும்.(21) குடிமக்களில் மன்னனைக் காண விரும்பும் எவரும் எத்தடையும் இன்றி அனுமதிக்கப்படுவார்கள். அவன் {அத்தகையவன்} முறையான பாதுகாப்புடன் செல்லட்டும்.(22) சமையற்காரர்கள், சமையலறை கண்காணிப்பாளர்கள் {பௌரோகவர்கள்} ஆகியோரும், சமையலுக்கான மொத்த அமைப்பு, பல்வேறு வகை உணவு மற்றும் பான வகைகள் ஆகியவையும் வண்டிகள் மற்றும் வாகனங்களில் கொண்டு செல்லப்படட்டும்.(23) நாம் நாளை புறப்படுகிறோம் என்பது அறிவிக்கப்படட்டும். உண்மையில், (இந்த ஏற்பாடுகளைச் செய்வதில்) காலதாமதமேதும் நேரவேண்டாம். வழியில் பல்வேறு வகை அரங்குகளும், ஓய்வில்லங்களும் அமைக்கப்படட்டும்” என்று ஆணையிட்டான் {யுதிஷ்டிரன்}.(24)

தம்பிகளுடன் கூடியவனான பாண்டுவின் மூத்த மகன் இட்ட ஆணைகள் இவையே. ஓ! ஏகாதிபதி, காலை வந்ததும், மன்னன் {யுதிஷ்டிரன்} பெண்கள் மற்றும் முதியவர்கள் அடங்கிய பெரிய பரிவாரத்துடன் புறப்பட்டான்.(25) தன் நகரைவிட்டு வெளியே வந்த மன்னன் யுதிஷ்டிரன், குடிமக்கள் தன்னோடு வருவதற்கு ஏதுவாக ஐந்து நாட்கள் காத்திருந்து, அதன் பிறகு காட்டை நோக்கிச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(26)

யுயுத்சுவின் பாதுகாப்பில் ஹஸ்தினாபுரம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 23-ஹஸ்தினாபுரத்தைப் பாதுகாக்க யுயுத்சுவும், தௌமியரும்; திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி மற்றும் விதுரனைக் காணப் புறப்பட்ட பாண்டவக்கூட்டம் சென்ற வகை; காட்டுக்குள் நுழைந்து சதயூபனின் ஆசிரமத்தைத் தொலைவிலேயே அவர்கள் கண்டது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாரதக் குலத்தில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, அர்ஜுனன் தலைமையிலானவர்களும், அண்டத்தைக் காப்பவர்களுக்கு {லோகபாலர்களுக்கு} ஒப்பானவர்களுமான வீரர்களால் பாதுகாக்கப்பட்டவையுமான தன் துருப்புகளைப் புறப்படுமாறு ஆணையிட்டான்.(1) உடனடியாக, குதிரைகளை ஆயத்தம் செய்து அணிவகுக்கச் செய்வதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குதிரை வீரர்களுக்கு மத்தியில், “ஆயத்தமாவீர், ஆயத்தமாவீர்” என்ற சொற்கள் அடங்கிய பேராரவாரம் எழுந்தது.(2) சிலர் பல்லக்குகளிலும் {யானங்களிலும்}, சிலர் வாகனங்களிலும், சிலர் பெருவேகம் கொண்ட குதிரைகளிலும், சிலர் சுடர்மிக்க நெருப்பின் காந்தியுடன் கூடியவையும் தங்கத்தாலமைந்தவையுமான தேர்களிலும் சென்றனர்.(3) சிலர் பெரும் யானைகளிலும், ஓ! மன்னா, சிலர் ஒட்டகங்களிலும் சென்றனர். சிலர் புலிநகங்களோடு கூடிய போராளி வகையினுக்குரிய முறையில் கால்நடையாகவே சென்றனர்[1].(4)திருதராஷ்டிரனைக் காண விரும்பிய குடிமக்கள், மாகாணவாசிகள் ஆகியோர் பல்வேறு வகை வண்டிவாகனங்களில் மன்னனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(5) கோதம {கௌதமர்} குலத்தைச் சார்ந்தவரும், படைகளின் பெருந்தலைவரும், ஆசானுமான கிருபரும், மன்னனின் ஆணையின் பேரில் படைகளை அழைத்துக் கொண்டு அந்த முதிய ஏகாதிபதியின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றார்.(6) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனான குரு மன்னன் யுதிஷ்டிரன், பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்கள் சூழ, சூதர்கள், மாகாதர்கள் மற்றும் வந்திகளின் பெருங்கூட்டம் அவனுடைய புகழைப் பாடிக் கொண்டுவர, தலைக்கு மேல் வெண்குடையுடனும், தன்னைச் சுற்றிலும் பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடனும் பயணம் புறப்பட்டான்.(7,8)

காற்று தேவனின் மகனான விருகோதரன் {பீமன்}, நாண்பூட்டப்பட்ட வில்லுடனும், இயந்திரங்களுடனும், தாக்குதல் மற்றும் தடுத்தலுக்குரிய ஆயுதங்களுடனும் மலைபோன்ற ஒரு பெரிய யானையில் சென்று கொண்டிருந்தான்.(9) மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுல சகாதேவன்}, கவசம்பூண்டு, நன்கு பாதுகாக்கப்பட்டவர்களாகவும், பதாகைகள் தரித்தவர்களாகவும் வேகமாகச் செல்லும் இரு குதிரைகளில் சென்றனர்.(10) வலிமையும், சக்தியும் கொண்டவனும், புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டவனுமான அர்ஜுனன், சிறந்த வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், சூரியப் பிரகாசத்துடன் கூடியதுமான ஒரு சிறந்த தேரில் சென்றான்.(11) திரௌபதியின் தலைமையிலான அரச குடும்பத்துப் பெண்கள், பெண்களைக் கண்காணிப்பவர்களால் பாதுகாக்கப்பட்டவர்களாக, மூடப்பட்ட பல்லக்குகளில் சென்றனர். அவ்வாறு அவர்கள் சென்ற போது அபரிமிதமான செல்வமாரியைப் பொழிந்தனர்.(12)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்ததும், எக்காள முழக்கம் மற்றும் வீணைகளின் இசையை எதிரொலித்ததுமான அந்தப் பாண்டவக் கூட்டம் பேரழகுடன் சுடர்விட்டது.(13) ஓ! ஏகாதிபதி, அந்தக் குருகுலத் தலைவர்கள், இனிமைமிக்க ஆறுகள் மற்றும் தடாகங்களின் கரைகளில் ஓய்ந்திருந்து, மெதுவாகச் சென்றனர்.(14) வலிமையும், சக்தியும் கொண்ட யுயுத்சுவும், புரோகிதரான தௌமியரும், யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில் நகரத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.(15)

மெதுவாக அணிவகுத்துச் சென்ற மன்னன் யுதிஷ்டிரன், குருக்ஷேத்திரத்தை அடைந்த பிறகு, உயர்ந்ததும், புனிதமானதுமான யமுனையாற்றைக் கடந்து,(16) ஓ! குரு குலத்தோனே, பெரும் ஞானம் கொண்ட அரச முனி {சதயூபன்} மற்றும் திருதராஷ்டிரன் ஆகியோருடைய ஆசிரமத்தைத் தொலைவிலிருந்தே கண்டான்.(17) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மகிழ்ச்சியில் நிறைந்த மனிதர்கள் அனைவரும், தங்கள் மகிழ்வொலிகளால் காட்டை நிறைத்தபடியே அதனுள் விரைவாக நுழைந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(18)

அன்னையைக் கண்ட சகாதேவன்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 24-சதயூபாஸ்ரமத்தை அடைந்த பாண்டவர்கள்; அங்கே திருதராஷ்டிரனைக் காணாமை; யமுனைக்குச் சென்றிருந்த அவர்களைக் கண்ட பாண்டவர்கள்; தாயைக் கண்டு அழுத சகாதேவன்; ஆசிரமம் திரும்பிய திருதராஷ்டிரனும், பாண்டவர்களும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தொலைவிலேயே தங்கள் தேர்களில் இருந்து இறங்கிய பாண்டவர்கள், மன்னனின் ஆசிரமத்திற்குப் பணிவுடன் கால்நடையாக நடந்து சென்றார்கள்.(1) போராளிகள் அனைவரும், நாட்டின் குடிமக்கள் மற்றும் குரு தலைவர்களின் மனைவிமார் அனைவரும், கால்நடையாகவே அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(2) பிறகு பாண்டவர்கள், மான்கூட்டங்கள் நிறைந்ததும், வாழைமரங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான திருதராஷ்டிரனின் புனித ஆசிரமத்தை அடைந்தனர்.(3) கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள் பலர், ஆவலால் நிறைந்தவர்களாக, அந்த ஆசிரமத்திற்கு வந்திருக்கும் பாண்டவர்களைக் காண அங்கே வந்தனர்.(4)

மன்னன் {யுதிஷ்டிரன்}, தன் கண்களில் கண்ணீருடன், அவர்களிடம், “குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரான என் பெரிய தந்தை {திருதராஷ்டிரர்} எங்கே?” என்று கேட்டான்.(5)ஓ! ஏகாதிபதி, அவன் தூய்மைச் சடங்குகளைச் செய்வதற்காகவும், மலர்களும், நீரும் கொணர்வதற்காகவும் யமுனைக்குச் சென்றிருப்பதாக அவர்கள் அவனிடம் சொன்னார்கள்.(6) அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பாதையின் வழியே நடந்து சென்ற பாண்டவர்கள் சற்றுத் தொலைவிலேயே அவர்கள் அனைவரையும் கண்டனர்.(7) தங்கள் தந்தையைச் சந்திக்க விரும்பிய அவர்கள் வேகமாக நடையுடன் நடந்து சென்றனர். அப்போது சகாதேவன், பிருதை {குந்தி} வந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி வேகமாகச் சென்றான்.(8) அவன், அவளது பாதத்தைத் தீண்டி உரக்க அழத் தொடங்கினான். கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீருடன் அவள் தன் அன்புக்குரிய பிள்ளையைக் கண்டாள்.(9) தன் மகனை எழச் செய்து, அவனைத் தன் கரங்களால் ஆரத்தழுவி கொண்ட அவள், காந்தாரியிடம் சகாதேவனின் வரவைச் சொன்னாள்.(10)

பிறகு, மன்னன் {யுதிஷ்டிரன்}, பீமசேனன், அர்ஜுனன் மற்றும் நகுலன் ஆகியோரையும் கண்ட பிருதை {குந்தி} அவர்களை நோக்கி வேகமாகச் செல்ல முயற்சித்தாள்.(11) பிள்ளைகளற்ற அந்த முதிர்ந்த தம்பதியருடன் நடந்து கொண்டிருந்த அவள் அவர்களைத் தன்னோடு இழுத்துச் சென்றாள். பாண்டவர்கள், அவளைக் கண்டதும் பூமியில் விழுந்தார்கள்.(12) பலமிக்கவனும், உயர் ஆன்மாவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, அவர்களுடைய குரல்கள் மற்றும் தீண்டலின் மூலம் அவர்களை அடையாளம் கண்டு, ஒருவர் பின் ஒருவராக அவர்களுக்கு ஆறுதல் கூறினான்.(13) கண்ணீர் சிந்திய அந்த உயர் ஆன்ம இளவரசர்கள், அந்த முதிர்ந்த மன்னனையும் {திருதராஷ்டிரனையும்}, காந்தாரியையும் உரிய நடைமுறையின்படி அணுகினர்.(14) உண்மையில், தங்கள் புலன் உணர்வுகளை இழந்திருந்த பாண்டவர்கள், தங்கள் தாயின் மூலம் மீண்டும் ஆறுதலை அடைந்து, மன்னனும், பெரியன்னையும், தங்கள் தாயும் சுமந்துவந்த நீர் நிறைந்த குடங்களை வாங்கிக் கொண்டு தாங்களே சுமந்து சென்றனர்.(15)

மனிதர்களில் சிங்கங்களான அவர்களது பெண்களும், அரச குடும்பத்தின் பெண்கள் அனைவரும், நகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போர் அனைவரும் அப்போது அந்த முதிர்ந்த மன்னனைக் கண்டனர்.(16) மன்னன் யுதிஷ்டிரன் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒருவர் பின் ஒருவராக மன்னனுக்கு அடையாளங்காட்டி அவர்களது பெயர்களையும், குலங்களையும் மீண்டும் மீண்டும் சொன்ன பிறகு, தன் பெரிய தந்தையை மதிப்புடன் வழிபட்டான்.(17) அவர்கள் அனைவராலும் சூழப்பட்ட அந்த முதிர்ந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, மகிழ்ச்சிக்கண்ணீரில் குளித்த கண்களுடன், மீண்டும் தான் யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரில் {ஹஸ்தினாபுரத்தில்} வசித்துக் கொண்டிருப்பதாகக் கருதினான்.(18) கிருஷ்ணையின் {திரௌபதியின்} தலைமையிலான தன் மருமகள் அனைவராலும் மதிப்புடன் வணங்கப்பட்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் திருதராஷ்டிரன், காந்தாரியுடனும், குந்தியுடனும் சேர்ந்து இன்பத்தில் நிறைந்தான்.(19) பிறகு அவன், சித்தர்களாலும், சாரணர்களாலும் மெச்சப்பட்டதும், எண்ணற்ற நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தைப் போல அவனைக் காணவிரும்பிய மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்ததுமான அந்தக் காட்டு ஆசிரமத்தை அடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(20)

அடையாளங்காட்டிய சஞ்சயன்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 25- யுதிஷ்டிரன் முதலியோரைக் காட்டி அவர்களுடைய பெயர்களையும் சொல்லி அவர்களைத் தவசிகளுக்கு அறிமுகம் செய்த சஞ்சயன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான தன் தம்பிகள் அனைவருடன் கூடிய மன்னன் {யுதிஷ்டிரன்} தன் பெரிய தந்தையின் {திருதராஷ்டிரனின்} ஆசிரமத்தில் அமர்ந்தான்.(1) அங்கே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்களும், உயர்ந்த அருளைக் கொண்டவர்களுமான தவசிகள் பலர் பரந்த மார்பைக் கொண்டவர்களும், குருகுலத் தலைவர்களுமான பாண்டவர்களைக் காணும் விருப்பத்தில் அவனைச் சுற்றி அமர்ந்தனர்.(2)

அவர்கள், “இவர்களில் யுதிஷ்டிரன் யார்? பீமனும், அர்ஜுனனும் யார் யார்? இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} யார்? பெரும்புகழைக் கொண்ட திரௌபதி யார்?” என்று கேட்டனர்.(3)

அப்போது சூதன் சஞ்சயன், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலாகப் பாண்டவர்கள், திரௌபதி, குரு குடும்பத்துப் பெண்கள் பிறர் ஆகியோரின் பெயர்களைச் சொல்லி அவர்களை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினான்.(4)

சஞ்சயன், “பசும்பொன்னைப் போன்ற நல்ல நிறம் கொண்டவனும், முழுதும் வளர்ந்த ஒரு சிங்கத்தைப் போலத் தெரியும் உடலைக் கொண்டவனும், மீன் போன்ற நீண்ட மூக்கைக் கொண்டவனும், அகலமான பெரிய தாமிர நிறக் கண்களைக் கொண்டவனுமான இவனே குரு மன்னனாவான் {யுதிஷ்டிரனாவான்}.(5) மதங்கொண்ட யானைக்கு ஒப்பான நடை கொண்டவனும், புடம்போட்ட தங்கம்போன்ற நிறம் கொண்டவனும், அகன்ற பெரிய உடல்வடிவம் கொண்டவனும், நீண்டு பருத்திருக்கும் கைகளைக் கொண்டவனுமான இவன் விருகோதரனாவான் {பீமனாவான்}. இவனை நன்றாகப் பாருங்கள்.(6) இவனுக்கு அருகில் அமர்ந்திருப்பவனும், கரிய நிறம் மற்றும் இளமை வடிவத்துடன் கூடியவனும், யானை மந்தையின் தலைவனுக்கு ஒப்பானவனும், சிங்கத்தைப் போன்ற உயர்ந்த தோள்களுடையவனும், விளையாடிக் கொண்டிருக்கும் யானையைப் போல நடப்பவனும், தாமரை இதழ்களைப் போன்ற அகன்ற விழிகளைக் கொண்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான இவன் அர்ஜுனன் என்று அழைக்கப்படும் வீரனாவான்.(7) குந்தியின் அருகில் அமர்ந்திருக்கும் முதன்மையான மனிதர்களான இவர்கள் இருவரும் விஷ்ணுவுக்கும், மஹேந்திரனுக்கும் ஒப்பான இரட்டையர்களாவர்.(8)தாமரை இதழ்களைப் போன்ற அகன்ற விழிகளைக் கொண்டவளும், வாழ்வின் நடு வயதை நெருங்கியவளாகத் தெரிபவளும், நீலோத்பலத்துக்கு {கருங்குவளை மலருக்கு} ஒப்பான நிறம் கொண்டவளும், சொர்க்கத்தின் தேவியைப் போலத் தெரிபவளுமான இந்தப் பெண்மணி, செழிப்பின் தேவியுடைய {லக்ஷ்மியின்} உடல்வடிவமாகத் திகழும் கிருஷ்ணை {திரௌபதி} ஆவாள்.(9) மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, இவளுக்கு அருகில் அமர்ந்திருப்பவளும், பசும்பொன் நிறத்தவளும், வேறு பெண்களுக்கு மத்தியில் சந்திரக் கதிர்களின் உடல்வடிவமாகத் தெரிபவளுமான இவள் ஒப்பற்ற வீரனான சக்கரபாணியின் {கிருஷ்ணனின்} தங்கையாவாள் {சுபத்திரையாவாள்}.(10) பசும்பொன் நிறத்தில் இருக்கும் மற்றொருத்தி, பாம்புத் தலைவனின் மகளும், அர்ஜுனனின் மனைவியுமாவாள் {உலூபியாவாள்}. பசும்பொன், அல்லது மதுக {இலுப்பை} மலர்களின் நிறத்தைக் கொண்டிருக்கும் இவள்[1] இளவரசி சித்ராங்கதையாவாள்.(11)

நீலோத்பல மலர்க்கூட்டத்தின் நிறத்தைக் கொண்ட இவள், கிருஷ்ணனை எப்போதும் அறைகூவி அழைக்கும் வழக்கத்தைக் கொண்டவனும், படைத்தலைவனுமான ஏகாதிபதியின் {சல்லியன் / திருஷ்டத்யும்னன் / சிசுபாலனின்} தங்கையாவாள். இவள் விருகோதரனின் {பீமனின்} முதன்மையான மனைவியாவாள்[2].(12)சம்பக மலர்க்கூட்டத்தின் {சம்பக மலர்மாலையின் மஞ்சள்} நிறத்தைக் கொண்ட இவள் ஜராசந்தன் என்ற பெயரில் அறியப்பட்ட மகதமன்னனின் மகளாவாள். இவள் மத்ராவதியின் இளைய மகனுடைய {சகாதேவனின்} மனைவியாவாள்.(13)நீலோத்பல மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவளும், இதோ பூமியில் அமர்ந்திருப்பவளும், தாமரை இதழ்களைப் போன்ற நீண்ட வழிகளைக் கொண்டவளுமான இவள் மத்ராவதியின் மூத்த மகனுடைய {நகுலனின்} மனைவியாவாள் {சிசுபாலனின் மகள் கரேணுமதியாவாள்}.(14) புடம்போட்ட தங்கத்தைப்போன்ற நல்ல நிறம் கொண்டவளும், மடியில் பிள்ளையுடன் அமர்ந்திருப்பவளுமான இந்தப் பெண்மணி மன்னன் விராடனின் மகளாவாள் {உத்தரையாவாள்}. இவள், தேரற்றவனாக இருந்தபோது தேரில் இருந்து போரிட்ட போர்வீரர்களாலும் துரோணராலும் கொல்லப்பட்ட அபிமன்யுவின் மனைவியாவாள்[3].(15)வகிடற்ற தலைமுடி கொண்டவர்களும், வெள்ளுடை உடுத்தியவர்களுமான இவர்கள் கொல்லப்பட்ட திருதராஷ்டிர மகன்களின் {மனைவிகளான} விதவைகளாவர். இந்த முதிய மன்னனின் மருமகள்களும், இவருடைய நூறு மகன்களின் மனைவிமாருமான இவர்கள், தற்போது வீரப் பகைவர்களால் கொல்லப்பட்ட கணவர்களையும், பிள்ளைகளையும் இழந்தவர்களாக இருக்கிறார்கள்.(16) நான் இவர்களை முன்னுரிமை வரிசையின்படி சுட்டிக்காட்டினேன். பிராமணர்களிடம் இவர்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பின் விளைவால், இவர்களது புத்தியும், இதயமும் அனைத்து வகைக் கபடங்களும் அற்றவையாக இருக்கின்றன. தூய ஆன்மாவைக் கொண்ட இந்தக் கௌரவக் குடும்பத்து இளவரசிகள் அனைவரும் உங்கள் கேள்விக்கான பதிலாக என்னால் சுட்டிக்காட்டப்பட்டனர்” என்றான் {சஞ்சயன்}”.(17)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறே குரு குலத்தைச் சேர்ந்தவனும், வயதால் முதிர்ந்தவனுமான அந்த மன்னன், மனிதர்களில் தேவர்களான தன் மகன்களைச் சந்தித்து, தவசிகள் அனைவரும் சென்ற பிறகு அவர்களுடைய நலத்தை விசாரித்தான்.(18) பாண்டவர்களுடன் வந்த போர்வீரர்கள், அந்த ஆசிரமத்தை விட்டகன்று, தங்கள் தேர்களில் இருந்தும், தாங்கள் செலுத்திய விலங்குகளில் இருந்தும் இறங்கி சற்றுத் தொலைவில் அமர்ந்தனர். உண்மையில், பெண்கள், முதியவர்கள், பிள்ளைகள் உள்ளிட்ட அந்தக் கூட்டமனைத்தும் அமர்ந்த பிறகு, அவர்களிடம் பேசிய முதிர்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, வழக்கமான மென் விசாரிப்புகளைச் செய்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(19)

விதுரப்பிரவேசம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 26-ஒருவரையொருவர் நலம் விசாரித்த திருதராஷ்டிரனும், யுதிஷ்டிரனும்; கூட்டத்தைக் கண்டு விதுரன் விலகிச் செல்வதைக் கண்ட யுதிஷ்டிரன்; விரைந்து சென்ற யுதிஷ்டிரனுக்குள் யோகத்தால் பிரவேசித்த விதுரன்; இந்த அதிசயத்தைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன யுதிஷ்டிரன்…

திருதராஷ்டிரன், “ஓ! யுதிஷ்டிரா, நீ உன் தம்பிகளுடனும், நகர மற்றும் மாகாணவாசிகளுடனும் அமைதியாகவும், இன்பமாகவும் இருக்கிறாயா?(1) உன்னைச் சார்ந்திருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? உன் அமைச்சர்கள், பணியாட்கள், பெரியோர், ஆசான்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?(2) உன் ஆட்சிப்பகுதிகளில் வாழ்வோர் அச்சமின்றி இருக்கிறார்களா? மனிதர்களின் ஆட்சியாளர்கள் பின்பற்றும் பழைமையானதும், மரபுசார்ந்ததுமான ஒழுக்கத்தை நீ பின்பற்றுகிறாயா?(3) நீதி மற்றும் நேர்மையால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை அலட்சியம் செய்யாமல் நீ உன் கருவூலத்தை நிரப்புகிறாயா? பகைவர்கள், நடுநிலையாளர்கள், கூட்டாளிகள் ஆகியோரிடம் உரிய முறையில் நடந்து கொள்கிறாயா?(4)

(வேள்விகளுக்காகவும், அறச் சடங்குகளுக்காகவும் விதிக்கப்படும்) முதற்கொடைகளை அளித்துப் பிராமணர்களை முறையாகக் கவனித்துக் கொள்கிறாயா? ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, உன் பகைவரே உன் நடத்தையால் நிறைவடைந்திருக்கும்போது குடிமக்கள், உன் பணியாட்கள் மற்றும் உற்றார் உறவினரைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஓ! மன்னர்களின் மன்னா, பித்ருக்களையும், தேவர்களையும் அர்ப்பணிப்புடன் நீ துதிக்கிறாயா?(5,6) ஓ! பாரதா, விருந்தினர்களுக்கு உணவும், பானமும் கொடுத்து நீ அவர்களை வழிபடுகிறாயா? உன் ஆட்சிப்பகுதிகளில் உள்ள பிராமணர்கள், தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்புடன் அறப்பாதையில் நடக்கிறார்களா?(7) உன் நாட்டுக்குள் இருக்கும் க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், மற்றும் உன் உறவினர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளை நோற்கிறார்களா? உன் குடிமக்களில் பெண்கள், பிள்ளைகள், முதியவர்கள் ஆகியோர் (துன்பமான சூழ்நிலையில்) வருந்தாமல், (வாழ்வின் தேவைகளுக்காக) பிச்சை எடுக்காமல் இருப்பார்கள் என நான் நம்புகிறேன். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, உன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், உன் வீட்டில் முறையாகக் கௌரவிக்கப்படுகிறார்களா? ஏகாதிபதி, அரசமுனிகளுக்குரிய இந்தக் குலமானது உன்னைத் தங்கள் மன்னனாக அடைந்து, புகழ் மற்றும் மகிமையில் இருந்து வீழாதிருக்கிறது என நான் நம்புகிறேன்” என்றான் {திருதராஷ்டிரன்}”.(9)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொன்ன அந்த முதிர்ந்த மன்னனிடம் அறநெறியையும், நீதியையும் நன்கறிந்தவனும், செயல்கள் மற்றும் வாக்கில் நன்கு திறம்பெற்றவனுமான யுதிஷ்டிரன், தன் நலம் குறித்த சில கேள்விகளை முன்வைத்துப் பினவருமாறு பேசினான்.(10)

யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, உமது அமைதியும், தற்கட்டுப்பாடும், இதய அமைதியும் வளர்கின்றனவா? என் தாயான இவள் களைப்பும், தொல்லையுமின்றி உமக்குத் தொண்டாற்ற இயன்றவளாக இருக்கிறாளா?(11) ஓ! மன்னா, இவளது காட்டுவாசம் கனியை {பயனை} விளைவிக்குமா? குளிர் மற்றும் காற்று ஆகியவற்றாலும் {ஆகியவற்றுக்கு வெளிப்பட்டும்}, நடப்பதனால் உண்டாகும் களைப்பாலும் மெலிந்திருப்பவளும், இப்போது கடுந்தவப்பயிற்சிகளில் அர்ப்பணிப்பு மிக்கவளாக இருப்பவளும், என் பெரியன்னையுமான இந்த ராணி {காந்தாரி} வலிமையும், சக்தியும் மிக்கவர்களும், க்ஷத்திரிய வகைக் கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருந்தவர்களும், போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்களுமான இவளது பிள்ளைகளை எண்ணி இன்னும் வருந்தாமல் இருக்கிறாளா?(12,13) இந்தப் படுகொலைக்குப் பொறுப்பான இழிந்த பாவிகளான எங்களை இவள் குற்றஞ்சாட்டுகிறாளா? ஓ! மன்னா, விதுரர் எங்கே? எங்களால் அவரை இங்குக் காண முடியவில்லையே. நோன்புகளை நோற்பவரான சஞ்சயர் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார் என நான் நம்புகிறேன்” என்றான்”.(14)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட திருதராஷ்டிரன், மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பதிலளிக்கும் வகையில், “ஓ! மகனே, விதுரன் நன்றாக இருக்கிறான். அவன் உணவனைத்தையும் கைவிட்டு, காற்றை மட்டுமே உண்டு, கடுந்தவங்களைச் செய்து வருகிறான். அவன் மெலிந்திருக்கிறான், அவனது தமனிகளும், நரம்புகளும் புலப்படுகின்றன. இந்த வெறுங்காட்டில் சில வேளைகளில் பிராமணர்களால் அவன் பார்க்கப்படுகிறான்” என்றான்.(16)

திருதராஷ்டிரன் இதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, தொலைவில் விதுரன் தென்பட்டான். அவன் தன் தலையில் சடாமுடி தரித்து, வாயில் சரளைக் கற்களை வைத்துக் கொண்டு, மிக மிக மெலிந்தவனாகக் காணப்பட்டான். அவன் {விதுரன்} முற்றிலும் நிர்வாணமாக இருந்தான். அவனது உடல் முழுவதும் புழுதியும், காட்டு மலர்களின் சாறும் படிந்திருந்தன.(17) க்ஷத்ரி {விதுரன்} தொலைவில் தென்பட்ட போது, அந்தச் செய்தி யுதிஷ்டிரனுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஓ! மன்னா, திடீரென நின்ற விதுரன், (பல மனிதர்கள் நிறைந்திருந்த) ஆசிரமத்தை நோக்கித் தன் கண்களைச் செலுத்தினான் (அவர்களைக் கண்டான்).(18) மன்னன் யுதிஷ்டிரன் தனியனாக அவனைப் பின்தொடர்ந்து சென்றபோது, ஆழ்ந்த காட்டுக்குள் நுழைந்த அவன் {விதுரன்}, பின்தொடர்ந்து வருபவனுக்குச் சிலவேளைகளில் தென்படுபவனாகவும், சில வேளைகளில் தென்படாதவனாகவும் ஓடினான்.(19)

அவன் {யுதிஷ்டிரன்}, “ஓ! விதுரரே, ஓ! விதுரரே, நான் உமக்குப் பிடித்தவனான மன்னன் யுதிஷ்டிரன் வந்திருக்கிறேன்” என்று உரக்கச் சொன்னான். யுதிஷ்டிரன், இவ்வாறு கூச்சலிட்டவாறே பெரும் முயற்சியுடன் விதுரனைப் பின்தொடர்ந்தான்.(20)

நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையான விதுரன், அந்தக் காட்டில் தனிமையான ஓரிடத்தை அடைந்து, மரமொன்றில் சாய்ந்து கொண்டு அசையாமல் நின்றான்.(21) அவன் மிக மிக மெலிந்திருந்தான். (சிறப்பியல்புகள் அனைத்தும் மொத்தமாக மறைந்த நிலையில்) அவன் {விதுரன்} மனிதன் என்ற வடிவத்தை மட்டுமே தக்க வைத்திருந்தான். எனினும் (இத்தகைய மாற்றங்கள் இருந்தாலும்), பெரும் நுண்ணறிவைக் கொண்ட யுதிஷ்டிரன் அவனை அடையாளம் கண்டு கொண்டான்.(22)யுதிஷ்டிரன், அவனுக்கு எதிரில் நின்று கொண்டு, “நான் யுதிஷ்டிரன் வந்திருகிறேன்” என்றான். உண்மையில், விதுரனை முறையாக வழிபட்டு, விதுரன் கேட்கும் வகையில் யுதிஷ்டிரன் இந்தச் சொற்களைச் சொன்னான்.(23) அதே வேளையில் விதுரன் நிலைத்த கண்களுடன் மன்னனைப் பார்த்தான். மன்னன் மீது இவ்வாறு பார்வையைச் செலுத்திய அவன் யோகத்தில் அசைவற்றவனாக நின்று கொண்டிருந்தான்.(24) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன் {விதுரன்} அப்போது (தன் யோக சக்தியின் மூலம்) அங்கங்களுடன் அங்கங்களை இணைத்து யுதிஷ்டிரனின் உடலுக்குள் நுழைந்தான். அவன் தன் உயிர் மூச்சை மன்னனுடைய உயிர் மூச்சுடனும், தன் புலன்களை மன்னனின் புலன்களுடனும் கலந்தான்.(25) உண்மையில், சுடர்மிக்க சக்தியுடன் கூடிய விதுரன், யோக சக்தியின் துணையுடன் இவ்வாறு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் உடலுக்குள் நுழைந்தான்.(26)

அப்போது விதுரனின் உடல், நிலைத்த பார்வை கொண்ட கண்களுடன் மரத்திலேயே சாய்ந்திருந்தது. அதிலிருந்து உயிர் தப்பிவிட்டது என்பதை மன்னன் விரைவில் கண்டான்.(27) அதே வேளையில் அவன் {யுதிஷடிரன்} தான் முன்பைவிடப் பலசாலியாகவும், முன்பைவிடக் கூடுதலான நற்பண்புகள் மற்றும் சிறப்புகளுடன் இருப்பதாகவும் உணர்ந்தான். ஓ! ஏகாதிபதி, பெருங்கல்வியும், சக்தியும் கொண்டவனும், பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், தான் மனிதர்களின் மத்தியில் பிறப்பதற்கு முன்பு இருந்த நிலையை நினைத்துப் பார்த்தான்[1]. வலிமையும், சக்தியும் நிறைந்த அவன் {யுதிஷ்டிரன்}, வியாசரின் மூலம் யோகப் பயிற்சி குறித்துக் கேள்விப்பட்டிருந்தான்.(28, 29)பெருங்கல்வி கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், விதுரனின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்யவும், அதை முறையாக எரிக்கவும் {தகனம் செய்யவும்} விரும்பினான். அப்போது காட்சிக்குப் புலப்படாத குரல் ஒன்று,(30) “ஓ! மன்னா, விதுரன் என்றழைக்கப்படுபவனுக்குரிய இவ்வுலடல் எரிக்கப்படக்கூடாது. இவனில் உன்னுடலும் இருக்கிறது. இவன் அறத்தின் நித்திய தேவனாவான்.(31) ஓ! பாரதா, ஸாந்தானிகம் என்ற பெயரால் அறியப்படும் இன்பலோகம் இவனுடையதாகும்[2]. இவன் யதிகளின் கடமைகளை நோற்றவனாவான். ஓ! பகைவரை எரிப்பவனே, இவனுக்காக நீ வருந்தலாகாது” என்றது.(32)இவ்வாறு சொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அந்த இடத்தில் இருந்து திரும்பி நடந்தது அனைத்தையும் விசித்திரவீரியனின் {திருதராஷ்டிரனிடம்} அரசமகனிடம் தெரிவித்தான்.(33) பெருங்காந்தி கொண்ட அந்த மன்னனும் {திருதராஷ்டிரனும்}, அங்கே இருந்த மனிதர்கள் அனைவரும், பீமசேனனும் பிறரும் இதைக் கேட்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(34)

நடந்ததைக் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் நிறைவடைந்தவனாகத் தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “நீர், கிழங்குகள் மற்றும் கனிகள் உள்ளிட்ட இந்தக் கொடைகளை நீ என்னிடம் இருந்து பெறுவாயாக. ஓ! மன்னா, ஒருவனுடைய விருந்தினன் அவன் உண்பதையே தானும் உண்ண வேண்டும் என்று சொல்லப்படுகிறது” என்றான்.(35) இவ்வாறு சொல்லப்பட்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, “அவ்வாறே ஆகட்டும்” என்று மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்குப்} பதிலளித்தான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} கொடுத்த கனிகளையும், கிழங்குகளையும் உண்டான்.(36) பிறகு அவர்கள், அந்த முதிர்ந்த மன்னனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, நீரைப் பருகிய பிறகு ஒரு மரத்தினடியில் தங்கள் படுக்கைகளை விரித்து அந்த இரவைக் கழித்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(37)

வியாசரின் வருகை! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 27-திருதராஷ்டிரனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு பெரும் முனிவர்களின் ஆசிரமங்களைப் பார்த்த யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரன் இருந்த ஆசிரமத்திற்கு வந்த சதயூபனும், வியாசரும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, அறம்சார்ந்தவர்களான அந்தத்தவசிகளின் ஆசிரமத்தில், மங்கல நட்சத்திரக்கூட்டத்தின் சிறப்பியல்பைக் கொண்ட அந்த இரவை இவ்வாறே அவர்கள் கழித்தனர்.(1) அப்போது அங்கே நிகழ்ந்த உரையாடல் அறநெறி மற்றும் செல்வம் குறித்த பல சிந்தனைகளைக் கொண்டதாக இருந்தது. ஸ்ருதிகளில் இருந்து பல்வேறு குறிப்புகளையும், இனிமை நிறைந்த சொற்களையும் கொண்டதாக அஃது இருந்தது.(2) ஓ! மன்னா, பாண்டவர்கள் விலைமதிப்புமிக்கப் படுக்கைகளைவிட்டு, வெறும் தரையில் தங்கள் தாயின் அருகில் தங்களைக் கிடத்திக் கொண்டனர்.(3)

உண்மையில், அந்த வீரர்கள், உயர் ஆன்ம மன்னன் திருதராஷ்டிரனுடைய உணவை உண்டு அந்த இரவைக் கழித்தனர்.(4) அந்த இரவு கடந்ததும், தன் காலைச் செயல்கள் அனைத்தையும் செய்த மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகளின் துணையுடன் அந்த ஆசிரமத்தை ஆய்வு செய்தான்.(5) அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில், தன் குடும்பத்துப் பெண்கள், பணியாட்கள் மற்றும் புரோகிதருடன், அந்த ஆசிரமத்திற்குள் தான் விரும்பிய அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தான்.(6)

சுடர்மிக்க நெருப்புகளுடன் கூடிய வேள்விப் பீடங்கள் பலவற்றையும், அவற்றில் அமர்ந்திருந்தவர்களும், தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆகுதிகளை ஊற்றித் தங்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்பவர்களான பல தவசிகளையும் அங்கே கண்டான்.(7) அந்தப் பீடங்கள் காட்டின் கனிகள் மற்றும் கிழங்குகளாலும், மலர்க்குவியல்களாலும் நிறைந்திருந்தன. தெளிந்த நெய்யின் புகை அவற்றில் இருந்து சுருண்டு மேலெழுந்தது. அதுதவிர, அவை வேதங்களின் உடல்வடிவங்களைப் போலத் தெரிந்த உடல்களைக் கண்ட தவசிகள் பலரும், சகோதரத்துவம் கொண்ட பலரும் அங்கே நிறைந்திருந்தனர்.(8)

மான்கூட்டங்கள் அனைத்து வகை அச்சத்தில் இருந்தும் விடுபட்டு அங்கேயும் இங்கேயும் ஓய்ந்து, மேய்ந்து கொண்டிருந்தன. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அங்கே இனிய இசையொலிகளை எழுப்புவதில் ஈடுபடும் எண்ணற்ற பறவைகளும் இருந்தன.(9) மயில்கள், தாத்யூகங்கள், கோகிலங்களின் {குயில்களின்} இசையொலி மற்றும் வேறு குருவிகளின் இனிய பாடல்களும் மொத்த காட்டிலும் எதிரொலித்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(10) சில இடங்களில் கல்விமான்களான பிராமணர்களால் ஓதப்படும் வேத மந்திரங்களை எதிரொலித்துக் கொண்டிருந்தன. சில இடங்கள், காட்டில் திரட்டப்பட்ட கனிகள் மற்றும் கிழங்குகளின் பெருங்குவியல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(11)

அப்போது மன்னன் யுதிஷ்டிரன், அந்தத் தவசிகளுக்காகத் தான் கொண்டு வந்திருந்த தங்கத்தாலான அல்லது தாமிரத்தாலான குடுவைகளையும்,(12) ஓ! பாரதா {ஜனமேஜயா}, மான்தோல்கள், விரிப்புகள் {கம்பளங்கள்}, மரத்தாலான வேள்விக்கரண்டிகள் {ஸ்ருக்குகள், ஸுர்வங்கள்}, கமண்டலங்கள், மரத்தாலான தட்டுகள் {ஸ்தாலிகள்}, குடங்கள் மற்றும் பாத்திரங்களை அவர்களுக்குக் கொடுத்தான்.(13) இரும்பாலான பல்வேறு வகைப் பாத்திரங்கள், சிறு பாத்திரங்கள், வெவ்வேறு அளவிலான குடுவைகள் ஆகியனவும், தவசிகளில் ஒவ்வொருவரும் எவ்வளவு விரும்பினார்களோ அவ்வளவும் மன்னனால் கொடுக்கப்பட்டன.(14) அற ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், காட்டுக்குள் இவ்வாறு உலவி, தவசிகளின் பல்வேறு ஆசிரமங்களைக் கண்டு, பல கொடைகளைக் கொடுத்து, தன் பெரிய தந்தை {திருதராஷ்டிரன்} இருந்த இடத்திற்கே திரும்பி வந்தான்.(15)

அவன் {யுதிஷ்டிரன்} பூமியின் தலைவனான மன்னன் திருதராஷ்டிரன், தன் காலைச் சடங்குகளைச் செய்து முடித்து, தன்னருகில் காந்தாரியுடன் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்டான்.(16) அற ஆன்மா கொண்ட ஏகாதிபதி, பணிவுடன் தலைகுனிந்திருக்கும் ஒரு சீடரைப் போல அந்த இடத்தின் அருகில் அமர்ந்திருக்கும் தன் தாயான குந்தியையும் கண்டான்.(17) அவன் தன் பெயரை அறிவித்துக் கொண்டு அந்த முதிர்ந்த மன்னனை {திருதராஷ்டிரனை} வணங்கினான். அந்த முதிய மன்னன், “அமர்வாயாக” என்ற சொற்களைச் சொன்னான். திருதராஷ்டிரனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, குசப்புல்லாலான ஒரு பாயில் யுதிஷ்டிரன் அமர்ந்தான்.(18) ஓ! பாரதக் குலத்தோனே {ஜனமேஜயனே}, பீமனும், பாண்டுவின் பிற மகன்களும், அந்த மன்னனை வணங்கி, அவனது பாதத்தைத் தீண்டி, அவனது அனுமதியைப் பெற்றுக் கொண்டு கீழே அமர்ந்தனர்.(19) அவர்களால் சூழப்பட்ட அந்த முதிர்ந்த குரு மன்னன் மிக அழகானவனாகத் தெரிந்தான். உண்மையில் அவன் தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் பிருஹஸ்பதியைப் {Vrihaspati} போன்ற வேத காந்தியில் ஒளிவீசினான்.(20)

அவர்கள் அமர்ந்ததும், குருக்ஷேத்திரவாசிகளான சதயூபன் உள்ளிட்ட பெரும் முனிவர்கள் பலரும் அங்கே வந்தனர்.(21) சிறப்புமிக்கவரும், கல்விமானும், பெருஞ்சக்தி கொண்டவரும், தெய்வீக முனிவர்களாலேயே கூட மதிக்கப்படுபவருமான வியாசர், தம்முடைய எண்ணற்ற சீடர்களுக்குத் தலைமை தாங்கியவராக யுதிஷ்டிரனுக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.(22) குரு மன்னன் திருதராஷ்டிரன், பெருஞ்சக்தி கொண்ட குந்தியின் மகன் யுதிஷ்டிரன், பீமசேனன் மற்றும் பிறரும் எழுந்து நின்று, சில அடிகள் முன்னோக்கி நகர்ந்து அந்த விருந்தினர்களை வணங்கினார்கள்.(23)

சதயூபன் மற்றும் பிறரால் சூழப்பட்டிருந்தவரும், அருகில் நெருங்கி வந்தவருமான வியாசர் திருதராஷ்டிரனிடம், “அமர்வாயாக” என்றார்.(24) அதன்பிறகு சிறப்புமிக்க வியாசர் கருப்பு மான்தோலில் வைக்கப்பட்ட குசப்புற்களாலானதும், பட்டுத் துணியால் மூடப்பட்டதுமான ஒரு சிறந்த இருக்கையில் அம்ரந்தார். அவர்கள் அவருக்காக அந்த இருக்கையை ஒதுக்கியிருந்தனர்.(25) வியாசர் அமர்ந்ததும், தீவில் பிறந்தவரான அந்தத் தவசியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, பெருஞ்சக்தி கொண்ட அந்த முதன்மையான மறுபிறப்பாளர்கள் அனைவரும் அமர்ந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(26)

வியாசரின் உறுதிமொழி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 28-திருதராஷ்டிரனின் நலம் விசாரித்த வியாசர்; விதுரனின் உண்மை வடிவம் முதலியவற்றைக் கூறியது; மற்ற முனிவர்களால் செய்ய முடியாத திருதராஷ்டிரனுடைய விருப்பத்தைச் செய்வதாக உறுதிமொழி அளித்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “உயர் ஆன்ம பாண்டவர்கள் அனைவரும் அமர்ந்ததும், சத்தியவதியின் மைந்தனான வியாசர்,(1) “ஓ! வலிய கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரா, உன்னால் தவங்கள் செய்ய முடிந்ததா? ஓ! மன்னா, காட்டில் வசிப்பதில் உன் மனம் நிறைவடைகிறதா?(2) போரில் உன் மகன்கள் கொல்லப்பட்டதில் பிறந்த உன் துயரம் உன் இதயத்தில் இருந்து மறைந்ததா? ஓ! பாவமற்றவனே, உன் கருத்துகள் அனைத்தும் இப்போது தெளிவடைந்துள்ளனவா?(3) உன் இதயத்தை உறுதியாகச் செய்து கொண்டு காட்டு வாழ்வுக்கான விதிமுறைகளை நீ பின்பற்றுகிறாயா? என் மருமகளான காந்தாரி, துயரில் மூழ்கத் தன்னை அனுமதித்துக் கொள்கிறாளா?(4) அவள் பெரும் ஞானம் கொண்டவளாவாள். புத்தியுள்ள அந்த ராணி {காந்தாரி}, அறம், பொருள் ஆகிய இரண்டையும் புரிந்து கொண்டவளாவாள். செழிப்பு மற்றும் வறுமை ஆகிய இரண்டுக்கும் தொடர்புடைய உண்மைகளை அவள் நன்கறிந்தவளாவாள். அவள் இன்னும் வருந்துகிறாளா?(5)

ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, பெரியோருக்குத் தொண்டாற்றுவதில் உள்ள அர்ப்பணிப்பின் விளைவால் தன் பிள்ளைகளை விட்டகன்ற குந்தி, உன் தேவைகளைக் கவனித்துப் பணிவுடன் உனக்குத் தொண்டாற்றுகிறாளா?(6) உயர்ந்த மனம் கொண்டவனும், உயர் ஆன்மாவும், தர்மனின் மகனுமான மன்னன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்கள் போதுமான அளவுக்குத் தேற்றப்பட்டனரா?(7) இவர்களைக் கண்டதில் நீ மகிழ்ச்சியடைகிறாயா? அனைத்துக் களங்கங்களில் இருந்தும் உன் மனம் விடுபட்டிருக்கிறதா? ஓ! மன்னா, ஞானம் பெருகியதன் விளைவால் உன் மனோநிலை தூய்மையடைந்ததா?(8) ஓ! மன்னா, ஓ! பாரதா, எந்த உயிரினத்திற்கும் தீங்கிழையாமை, வாய்மை மற்றும் கோபத்தில் இருந்து விடுதலை என்ற இந்த முத்தொகை காரியங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(9) உன்னுடைய இந்தக் காட்டு வாழ்க்கை இன்னும் உனக்குத் துன்பத்தைத் தருகிறதா? காட்டின் விளைச்சலில் இருந்து உன் சொந்த முயற்சியின் மூலமே உனக்கான உணவை உன்னால் ஈட்டிக் கொள்ள முடிகிறதா? உண்ணா நோன்புகள் இப்போது உனக்குத் துன்பத்தைத் தருகின்றனவா?(10)

ஓ! மன்னா, தர்மனின் சுயமாக இருந்த உயர் ஆன்ம விதுரன் எவ்வாறு இவ்வுலகிவிட்டு அகன்றான் என்பதை நீ அறிந்தாயா?(11) மாண்டவ்யரின் {ஆணிமாண்டவ்யரின்} சாபத்தின் மூலம் அறத்தேவன் விதுரனாகப் பிறந்திருந்தான். அவன் {விதுரன்} பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாக இருந்தான். உயர்ந்த தவங்களையும், உயர்ந்த ஆன்மாவையும், உயர்ந்த மனத்தையும் கொண்டவனாக அவன் இருந்தான்.(12) தேவர்களுக்கு மத்தியில் பிருஹஸ்பதியும், அசுரர்களுக்கு மத்தியில் சுக்ரனும் கூட இந்த முதன்மையான மனிதனைப் போல இத்தகைய நுண்ணறிவைக் கொண்டிருந்ததில்லை.(13) முனிவர் மாண்டவ்யர் நெடுங்காலம் ஈட்டிய தன் தவச் சக்தியை அழித்து அறத்தின் நித்திய தேவனை {தர்மதேவனை} கலங்கடித்தார் {சபித்தார்}[1].(14) பெரும்பாட்டனின் ஆணையின் பேரிலும், என் சொந்த சக்தியின் மூலமும், விசித்ரவீரியனுக்கு உரிய நிலத்தில் பெரும் நுண்ணறிவுமிக்க விதுரன் என்னால் உண்டாக்கப்பட்டான்.(15)ஓ! மன்னா, நித்தியமான தேவர்களுக்குத் தேவன் {தர்மன்} உன் தம்பியாக இருந்தான். அவனுடைய {விதுரனின்} தாரணை மற்றும் தியான பயிற்சிகளின் விளைவால் கல்விமான்கள் அவனைத் தர்மனாக அறிந்தனர்[2].(16) வாய்மை, தற்கட்டுப்பாடு, இதய அமைதி, கருணை மற்றும் கொடைகளுடன் சேர்ந்து அவன் {தர்மன்} வளர்கிறான். எப்போதும் தவங்களில் ஈடுபடும் அவன் நித்தியமானவனாவான்.(17) அந்த அறத் தேவனின் யோக பலத்தின் மூலமே குரு மன்னன் யுதிஷ்டிரனும் தன் பிறப்பை எடுத்தான். எனவே, யுதிஷ்டிரன், பெரும் ஞானமும், அளவிலா நுண்ணறிவும் கொண்ட தர்மனாக இருக்கிறான்.(18) தர்மன் இம்மையிலும், மறுமையிலும் இருக்கும் நெருப்பையோ, காற்றையோ, நீரையோ, நிலத்தையோ, வெளியையோ போன்றவனாவான்.(19) ஓ!மன்னர்களின் மன்னா, அவன் எங்கும் செல்ல வல்லவனாகவும் மொத்த அண்டத்திலும் நீக்கமற நிறைந்தவனாகவும் இருக்கிறான். முதன்மையான தேவர்கள், அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தவர்கள் மற்றும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் ஆகியோரால் மட்டுமே காணப்படக்கூடியவனாக அவன் இருக்கிறான்.(20)தர்மனே விதுரனாவான்; விதுரனே பாண்டுவின் (மூத்த) மகனாவான் {யுதிஷ்டிரனாவான்}. ஓ! மன்னா, அந்தப் பாண்டுவின் மகனை உன்னால் காண முடியும். அவன் உன் முன்னிலையில் ஒரு பணியாளாக இருக்கிறான்.(21) பெரும் யோக பலம் கொண்டவனும், நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையாவனும், உயர் ஆன்மாகக் கொண்டவனுமான உன் தம்பி {விதுரன்}, குந்தியின் மகனான உயர் ஆன்ம யுதிஷ்டிரனைக் கண்டு அவனது மேனிக்குள் புகுந்துவிட்டான்.(22) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, உனக்கும் நான் பெரும் நன்மையைச் செய்வேன். ஓ! மகனே, நான் உன் ஐயங்களை விலக்கவே இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக.(23) வேறு எந்தப் பெரும் முனிவராலும் இதற்கு முன்பு செய்யப்படாத அருஞ்செயலையும், என் தவங்களின் விளைவால் ஏற்படும் சில ஆச்சரியங்களையும் நான் உனக்குக் காட்டப் போகிறேன்.(24) ஓ! மன்னா, என்னிடம் இருந்து எதை நீ அடைய விரும்புகிறாய்? எதைப் பார்க்கவோ, தீண்டவோ, கேட்கவோ விரும்புகிறாய் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! பாவமற்றவனே, நான் அதை நிறைவேற்றுவேன்” என்றார் {வியாசர்}.(25)

ஆஸ்ரமவாஸ உபபர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அஸ்வமேத பர்வம்-ஸ்ரீ அநு கீதை உப பர்வம்–

October 19, 2025

துவாராவதிக்குத் திரும்பிய கிருஷ்ணன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 52-ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்ட கிருஷ்ணார்ஜுனர்கள்; கிருஷ்ணனைப் புகழ்ந்து துதித்த அர்ஜுனன்; ஹஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் முதலியோரை வணங்கிய கிருஷ்ணன்; யுதிஷ்டிரன் முதலியோரிடம் விடைபெற்றுக் கொண்டு சுபத்திரையை அழைத்துக் கொண்டு துவாரகைக்குப் புறப்பட்ட கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதன்பிறகு கிருஷ்ணன் தாருகனை அழைத்து, “என் தேர் பூட்டப்படட்டும்” என்று ஆணையிட்டான். மிகக் குறுகிய காலத்திற்குள் தாருகன் (தன் தலைவனிடம்), “பூட்டப்பட்டது” என்று சொன்னான்.(1) அப்போது தன் பணியாட்கள் அனைவரையும் அழைத்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, “ஆயத்தமாகி தயாராக இருப்பீராக. நான் யானையின் பெயர் கொண்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்படப் போகிறோம்” என்றான்.(2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவ்வாறு சொல்லப்பட்ட துருப்பினர், கவங்களைப் பூட்டியவர்களாக, அளவற்ற சக்தி கொண்ட அந்தப் பிருதையின் மைந்தனிடம் {அர்ஜுனனிடம்}, “அனைத்தும் ஆயத்தமாக இருக்கிறது” என்று சொன்னார்கள்.(3) அப்போது, கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய அன்பிற்கினிய நண்பர்கள் இருவரும் தங்கள் தேரில் ஏறி, இனிமை நிறைந்த உரையாடல்களில் ஈடுபட்டபடியே பயணம் செய்தனர்.(4)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தேரில் அமர்ந்திருந்த வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, பெருஞ்சக்தி கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(5) “ஓ! விருஷ்ணி குலத்தைத் தழைக்கச் செய்பவனே, உன் அருளின் மூலமே மன்னர் {யுதிஷ்டிரர்} வெற்றியை அடைந்தார். அவரது பகைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர், மேலும் அவர் ஒரு முள்ளுமின்றித் தன் நாட்டை மீட்டார்.(6) ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, பாண்டவர்கள் உன் மூலம் ஒரு பலமிக்கப் பாதுகாவலனை அடைந்தார்கள். உன்னை எங்கள் படகாகக் கொண்டே நாங்கள் குருக்களெனும் {கௌரவப்}பெருங்கடலைக் கடந்தோம்.(7) ஓ! அண்டத்தையே உன் கைவண்ணமாகக் கொண்டவனே {விஷ்வகர்மாவே}, ஓ! அண்டத்தின் ஆன்மாவே {விஷ்வாத்மாவே}, ஓ! அண்டத்தில் உள்ள அனைத்துள்ளும் சிறந்தவனே {விஷ்வஸத்தமனே}, நான் உன்னை வணங்குகிறேன். உன்னால் அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு நான் உன்னை அறிவேன்[1].ஓ! மதுசூதனா, ஒவ்வொரு உயிரினத்தின் ஆன்மாவும் எப்போதும் உன் சக்தியில் இருந்தே பிறக்கின்றன. (படைத்தல், காத்தல், அழித்தல் என்ற வடிவிலான) விளையாட்டு {லீலை} உன்னுடையதே. ஓ! தலைவா, பூமி, வானம் ஆகியவை உன் மாயையே .(9) அசையும் மற்றும் அசையாத பொருட்களை உள்ளடக்கிய இந்த மொத்த அண்டமும் உன்னிலேயே நிறுவப்பட்டுள்ளது. {ஈன்று பிறப்பவை, முட்டையிட்டுப் பிறப்பவை, கழிவில் இருந்து பிறப்பவை, காய்கறிகள் என்ற) நான்கு வகை உயிரினங்களையும், மாற்றத்தின் மூலம் நீயே படைக்கிறாய்.(10) ஓ! மதுசூதனா, பூமி, ஆகாயம், சொர்க்கம் ஆகியவற்றை நீயே படைத்தாய். களங்கமற்ற சந்திர ஒளி உன் புன்னகையாகும். பருவகாலங்கள் உன் புலன்களாகும்.(11) எப்போதும் வீசும் காற்று உன் மூச்சாகும், நித்தியமானதாக இருக்கும் மரணம் உன் கோபமாகும். உன் அருளிலேயே செழிப்பின் தேவி இருக்கிறாள். உண்மையில், ஓ! உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனே, ஸ்ரீ உன்னிலேயே எப்போதும் நிறுவப்பட்டிருக்கிறாள்.(12)

(உயிரினங்கள் ஈடுபடும்) விளையாட்டு நீயே; அவற்றின் மனநிறைவு நீயே; அவற்றின் புத்தி நீயே; அவற்றின் பொறுமை நீயே; அவற்றின் விருப்பங்கள் நீயே; அவற்றின் அழகும் நீயே. அசையும், மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட அண்டம் நீயே. ஓ! பாவமற்றவனே, யுக முடிவில் அழிவு என்றழைக்கப்படுபவன் நீயே.(13) நீண்ட காலம் எடுத்துக் கொண்டாலும் உன் குணங்கள் அனைத்தையும் சொல்லவல்லவனாக நான் இல்லை. ஆத்மாவும், பரமாத்மாவும் நீயே. ஓ! தாமரையை (தாமரை இதழ்களைப்) போன்ற கண்களைக் கொண்டவனே, நான் உன்னை வணங்குகிறேன்.(14)

ஓ! தடுக்கப்பட முடியாதவனே, நாரதர், தேவலர், தீவில் பிறந்தவர் (வியாசர்) மற்றும் குருக்களின் பாட்டன் {பீஷ்மர்} ஆகியோரிடம் இருந்து, இவை அனைத்தும் (இந்த அண்டம் அனைத்தும்)(15) உன்னையே சார்ந்திருக்கின்றன என்பதை நான் அறிந்திருக்கிறேன். உயிரினங்கள் அனைத்தின் ஒரே தலைவன் நீயே. ஓ! பாவமற்றவனே, ஓ! ஜனார்த்தனா, எனக்கு உன் அருளைக் கொடுக்கும் நிமித்தமாக நீ அறிவித்ததை,(16) ஓ! ஜனார்த்தனா, நான் முழுமையாக நிறைவேற்றுவேன். எங்களுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி பேரற்புதத்தைச் செய்திருக்கிறாய்;(17) போரில் திருதராஷ்டிரர் மகனான கௌரவனுக்கு (இளவரசனுக்கு) {துரியோதனனுக்கு} அழிவை ஏற்படுத்தினாய். (அடுத்தடுத்து) போரில் நான் வீழ்த்திய அந்தப் படை ஏற்கனவே உன்னால் எரிக்கப்பட்டதாகும்.(18) நீ செய்த சாதனையின் விளைவால் வெற்றி எனதானது. உன் புத்தியின் சக்தி மூலமே, போரில் துரியோதனன், கர்ணன், சிந்துக்களின் பாவம் நிறைந்த ஆட்சியாளன் {ஸைந்தவன் / ஜெயத்ரதன்} மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகியோர் முறையாக அழிக்கப்பட்டனர்.(19,20)

ஓ! தேவகியின் மைந்தா {கிருஷ்ணா}, என்னிடம் நிறைவடைந்து எனக்கு அறிவித்த அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன். இதில் எந்த ஐயத்திற்கும் நான் இடமளிக்க மாட்டேன்.(21) ஓ! பாவமற்றவனே, ஓ! அனைத்துக் கடைமைகளையும் அறிந்தவனே, நீதிமிக்க ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரரிடம் சென்று, உனக்கு விடையளிக்குமாறு அவரைத் தூண்டுவேன்.(22) ஓ! தலைவா, நீ துவாரகைக்குப் புறப்படுவதை நானும் ஏற்கிறேன். ஓ! ஜனார்த்தனா, நீ விரைவில் என் தாய் மாமனை {வசுதேவரைக்} காண்பாய்.(23) தடுக்கப்பட முடியாதவரான பலதேவரையும் {பலராமரையும்}, விருஷ்ணி குலத்தின் வேறு தலைவர்களையும் நீ காண்பாய்” என்றான் {அர்ஜுனன்}. இவ்வாறு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே அவ்விருவரும் யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} அடைந்தனர்.(24)

அப்போது அவர்கள் உற்சாகமிக்க இதயங்களுடன், எந்தக் கவலையுமின்றி, சக்ரனின் மாளிகைக்கு ஒப்பாக இருந்த திருதராஷ்டிரனின் அரண்மனைக்குள் நுழைந்தனர்.(25) பிறகு, ஓ! ஏகாதிபதி, அவன் மன்னன் திருதராஷ்டிரனையும், பெரும் நுண்ணறிவுமிக்க விதுரனையும், மன்னன் யுதிஷ்டிரனையும்,(26) தடுக்கப்பட முடியாதவனான பீமசேனனையும், பாண்டுவின் மூலம் மாத்ரிக்குப் பிறந்த இரு மகன்களையும் {நகுல சகாதேவர்களையும்} கண்டனர். அமர்ந்திருந்த மன்னன் திருதராஷ்டிரன்; வெல்லப்படாத யுயுத்சு {27); பெரும் ஞானியான காந்தாரி, பிருதை {குந்தி}, அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, மேலும் சுபத்திரை முதலான பாரதப் பெண்மணிகள் பிறரையும் அவர்கள் கண்டனர்.(28)

காந்தாரிக்குப் பணிவிடை செய்யும் பெண்கள் அனைவரையும்கூட அவர்கள் கண்டார்கள். பிறகு, பகைவர்களைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், மன்னன் திருதராஷ்டிரனிடம் சென்று(29) தங்கள் பெயர்களை அறிவித்து, அவனது பாதங்களைத் தீண்டினர். உண்மையில் அந்த உயர் ஆன்மாக்கள் இருவரும், காந்தாரி மற்றும் பிருதையின் பாதங்களையும்,(30) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் பீமனின் பாதங்களையும் தீண்டினர். விதுரனைத் தழுவி கொண்ட அவர்கள், அவனது நலத்தைக் குறித்து விசாரித்தனர்.(31) அந்த மனிதர்கள் அனைவரின் துணையுடன் கூடிய அர்ஜுனனும், கிருஷ்ணனும் (மீண்டும்) மன்னன் திருதராஷ்டிரனை அணுகினர். இரவு வந்ததும், பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் திருதராஷ்டிரன் அவரவர் தங்கள் தங்கள் அறைகளில் ஓய்வெடுக்கும் வகையில் குரு குலத்தைத் தழைக்கச் செய்யும் அனைவருக்கும், ஜனார்த்தனனுக்கும் விடைகொடுத்து அனுப்பினான். மன்னனால் அனுமதிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் தங்களுக்குரிய அறைகளுக்குள் நுழைந்தனர்.(32,33)

பெருஞ்சக்தி கொண்ட கிருஷ்ணன், தனஞ்சனின் {அர்ஜுனனின்} அறைக்குச் சென்றான். முறையாக வழிபடப்பட்டவனாக, அனைத்து வகை வசதி மற்றும் இன்பங்களுடன் கூடியவனாக,(34) பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணன், தனஞ்சயனின் துணையுடன் மகிழ்ச்சியாக உறங்கி அந்த இரவைக் கழித்தான். இரவு கடந்து காலை விடிந்ததும் அவ்விரு வீரர்களும்,(35) தங்கள் காலைச் சடங்குகளை முடித்துக் கொண்டு, முறையாகத் தங்கள் மேனிகளை அலங்கரித்துக் கொண்டு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் மாளிகைக்குச் சென்றனர். அங்கே பெரும் வலிமை கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் தன் அமைச்சர்களுடன் அமர்ந்திருந்தான்.(36)

நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அறைக்குள் நுழைந்த அந்த உயர் ஆன்மாக்கள் இருவரும், தேவர்கள் தலைவனை {இந்திரனைக்} காணும் அஸ்வினி இரட்டையர்களைப் போல நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டனர்.(37) அம்மன்னனைச் சந்தித்த அந்த விருஷ்ணி குலத்தோனும் {கிருஷ்ணனும்}, குரு குல வீரர்களில் முதன்மையானவனும் {அர்ஜுனனும்}, தங்களிடம் பெரும் நிறைவை அடைந்திருந்த யுதிஷ்டிரனின் அனுமதியைப் பெற்று கீழே அமர்ந்தனர்.(38) அப்போது, பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த நண்பர்கள் இருவருரையும் கண்டு, அவர்களிடம் பேச விருப்பம் கொண்டான். பேசுபவர்களில் முதன்மையான அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், விரைவில் பின்வரும் சொற்களில் அவர்களிடம் பேசினான்.(39)

யுதிஷ்டிரன், “வீரர்களே, யது மற்றும் குரு குலத்தில் முதன்மையானவர்களே, நீங்கள் இருவரும் என்னிடம் ஏதோ சொல்ல விரும்புவதாகத் தெரிகிறது. உங்கள் மனத்தில் இருப்பதைச் சொல்வீராக. நான் அதை விரைவில் நிறைவேற்றுவேன். தயங்காதீர்” என்றான்.(40)

இவ்வாறு சொல்லப்பட்டதும், வாக்கை நன்கறிந்தவனான பல்குனன் {அர்ஜுனன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பணிவுடன் அணுகி, இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(41) அவன் {அர்ஜுனன்}, “ஓ! மன்னா, பேராற்றலைக் கொண்ட இந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, நீண்ட நாட்களாக வீட்டில் இல்லாமல் இருக்கிறான். இவன் உமது அனுமதியுடன் தன் தந்தையைக் காண விரும்புகிறான்.(42) உமக்கு விருப்பமிருந்தால் இவனை ஆனர்த்தர்களின் நகரத்திற்குச் செல்ல அனுமதிப்பீராக. ஓ! வீரரே, இவனுக்கு அனுமதி கொடுப்பதே உமக்குத் தகும்” என்றான்.(43)

யுதிஷ்டிரன், “ஓ! தாமரைக் கண்ணா, நீ அருளப்பட்டிருப்பாயாக. ஓ! மதுசூதனா, ஓ! பலமிக்கவனே, சூர குலத்தில் முதன்மையானவரை {வசுதேவரைக்} காண இன்றே நீ துவாராவதி நகரத்திற்குச் செல்வாயாக.(44) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கேசவா, உன் புறப்பாடு என்னால் அனுமதிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக என் தாய் மாமனையும் {வசுதேவரையும்}, தேவகி தேவியையும் காணாமல் இருக்கிறாய்.(45) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, ஓ! பெரும் ஞானியே, என் தாய்மாமனைச் சந்தித்து, பலதேவரிடமும் சென்று, அவர்களுக்குத் தகுந்தவாறு என் வார்த்தைகளால் அவ்விருவரையும் வழிபடுவாயாக[2].(46) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, என்னையும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான பீமனையும், பல்குனனையும் {அர்ஜுனனையும்}, நகுலனையும், சகாதேவனையும் நாள்தோறும் நீ நினைப்பாயாக.(47) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! பாவமற்றவனே, ஆனர்த்தர்களையும், உன் தந்தையையும், விருஷ்ணிகளையும் கண்ட பிறகு என் குதிரை வேள்விக்கு மீண்டும் திரும்பி வருவாயாக.(48) பிறகு பல்வேறு வகை ரத்தினங்களையும், பல்வேறு வகைச் செல்வங்களையும் எடுத்துக் கொண்டு நீ செல்வாயாக. ஓ! சாத்வத குல வீரா, நீ விரும்பும் எதையும் நீ எடுத்துச் செல்வாயாக.(49) ஓ! கேசவா, மொத்த பூமியும் எங்கள் ஆட்சிப்பகுதியானதும், எங்கள் பகைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதும் உன் அருளாலேயே நடந்தன” என்றான் {யுதிஷ்டிரன்}.(50)குருகுலத்தின் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இவ்வாறு சொன்னபோது, மனிதர்களில் முதன்மையான வாசுதேவன் {கிருஷ்ணன்} (மறுமொழியாக) இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(51)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, பொன், ரத்தினங்கள் அனைத்தும், செல்வமனைத்தும், மொத்த பூமியும் உம்முடையவையே, அவை உம்முடையவை மட்டுமே ஆகும். ஓ! தலைவா, என் இல்லத்தில் இருக்கும் செல்வம் எதனுக்கும் நீரே உரிமையாளர் ஆவீர்” என்றான்.(52)

தர்மனின் மகனான யுதிஷ்டிரன், அவனிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி, பெருஞ்சக்தியுடன் கூடியவனான கதனின் அண்ணனை (கிருஷ்ணனை) முறையாக வழிபட்டான். வாசுதேவன் அப்போது தன் அத்தையிடம் ({தன் தந்தையின் சகோதரியான குந்தியிடம்) சென்றான். முறையாக அவளைக் கௌரவித்த அவன் அவளை வலம் வந்தான்.(53) பிறகு அவளால் பதிலுக்கு முறையாக அணுகப்பட்டான்; பிறகு விதுரனை முதலாகக் கொண்ட பிறர் அனைவரும் அவனை அணுகினர். நான்கு கரங்களைக் கொண்டவனும், கதனின் அண்ணனுமான அவன், அப்போது தன் சிறந்த தேரில் நாகபுரத்தை {ஹஸ்தினாபுரத்தை} விட்டுப் புறப்பாட்டான்[3].(54)வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான ஜனார்த்தனன், யுதிஷ்டிரன் மற்றும் தன் அத்தை (குந்தி) ஆகியோரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தன் சகோதரியான பெண்மணி சுபத்திரையைத் தன் தேரில் அமர்த்திக் கொண்டு, பெரும் எண்ணிக்கையிலான குடிமக்களின் துணையுடன் புறப்பட்டுச் சென்றான். முதன்மையான குரங்கைத் தன் கொடியில் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, சாத்யகி, மாத்ராவதியின் இரு மகன்கள், அளவிலா நுண்ணறிவைக் கொண்ட விதுரன், யானைகளின் இளவரசனுக்கு ஒப்பான நடையைக் கொண்ட பீமன் ஆகியோர் அனைவரும் மாதவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(56) வலிமையும் சக்தியும் கொண்ட ஜனார்த்தனன், குரு நாட்டை விரிவுபடுத்து அவர்களை அனைவரையும், விதுரனையும் திரும்பச் செய்து, தாருகன் மற்றும் சாத்யகியிடம், “குதிரைகளை விரைவாகத் தூண்டுவீராக” என்று சொன்னான்.(57) பிறகு, பகைக்கூட்டங்களைக் கலங்கடிப்பவனும், பேராற்றல் கொண்டவனுமான ஜனார்த்தனன், சினி குலத்தின் முதன்மையான சாத்யகியின் துணையுடன் தன் பகைவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, சொர்க்கத்திற்குச் செல்லும் நூறு வேளைவியைச் செய்தவனை {இந்திரனைப்} போல ஆனர்த்தர்களின் நகரத்திற்குச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(58)

உதங்கர்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 53-துவாரகைக்குச் செல்லும் வழியில் உதங்கரைக் கண்ட கிருஷ்ணன்; கௌரவர்கள் அழிக்கப்பட்டதற்காகச் சபிக்கப் போவதாகச் சொன்ன உதங்கர்; உதங்ருக்கு உண்மையைச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} துவாரகைக்குப் புறப்படும்போது, பகைவர்களைத் தண்டிப்பவனும், பாரதக் குல இளவரசர்களில் முதன்மையானவனும் ஆனவன் {அர்ஜுனன்} அவனைத் தழுவி கொண்டு, தன் பணியாட்களுடன் சேர்ந்து திரும்பினான்.(1) விருஷ்ணி வீரனை மீண்டும் மீண்டும் தழுவிய பல்குனன் {அர்ஜுனன்}, அவன் தன் பார்வையின் வரம்புக்குள் உள்ள வரை மீண்டும் மீண்டும் தன் கண்களை அவனை நோக்கிச் செலுத்தினான்.(2) கோவிந்தன் மேல் விழுந்த தன் பார்வையைப் பெருங்கடினத்துடன் பிருதையின் மகன் {அர்ஜுனன்} விலக்கினான். வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணனும் அவ்வாறே செய்தான் (அதையே செய்தான்).(3) அந்த உயர் ஆன்மா புறப்படும்போது வெளிப்பட்ட அறிகுறிகளை {சகுனங்களை} நான் உனக்கு விரிவாகச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(4)

தேருக்கு முன் பெருவேகத்துடன் வீசிய காற்றானது, பாதையில் இருந்து மணற்துகள்கள், புழுதி மற்றும் முட்களை அகற்றியது.(5) வாசவன் {இந்திரன்}, அந்தச் சாரங்கதாரிக்கு {கிருஷ்ணனுக்கு} முன்பு நறுமணமிக்க தெய்வீக மலர்மாரியைப் பொழிந்தான்.(6) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்} இவ்வாறு சென்று கொண்டிருந்தபோது, நீரில்லாத பாலைவனத்தை அடைந்தான். அங்கே அளவற்ற சக்தி கொண்டவரும், உதங்கர் என்ற பெயரைக் கொண்டவருமான முதன்மையான தவசியைக்[1] கண்டான்.(7) பெரிய கண்களையும், பெருஞ்சக்தியையும் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்} அந்தத் தவசியை வணங்கினான். பதிலுக்கு அந்தத் தவசியாலும் வணங்கப்பட்டான். அப்போது வாசுதேவன் அவரது நலத்தை விசாரித்தான்.(8)பிராமணர்களில் முதன்மையானவரானவரும், மாதவனால் மென்மையாக விசாரிக்கப்பட்டவருமான உதங்கர், முறையாக {பதிலுக்கு} அவனைக் கௌரவித்து, இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(9) அவர் {உதங்கர்}, “ஓ! சௌரியே, குருக்கள் மற்றும் பாண்டவர்களின் மாளிகைகளுக்குச் சென்று சகோதரர்களுக்கிடையில் நீடிக்க வேண்டிய நீடித்த புத்தியை நிறுவுவதில் வெற்றி கண்டாயா? அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்.(10) ஓ! கேசவா, ஓ! விருஷ்ணி குலத்தில் முதன்மையானவனே, உன் உறவினர்களும், உனக்கு எப்போதும் அன்பானவர்களுமான அவர்களை அமைதியடையவும், ஒற்றுமையடையவும் செய்தாயா?(11) ஓ! பகைவர்களை எரிப்பவனே, பாண்டு மகன்கள் ஐவரும், திருதராஷ்டிரன் பிள்ளைகளும் இவ்வுலகில் இன்பமாக உன்னுடன் விளையாடினார்களா?(12) கௌரவர்கள் உன்னால் தணிக்கப்பட்டதன் விளைவால் மன்னர்கள் அனைவரும் தங்கள் தங்கள் நாடுகளில் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்களா?(13) ஓ! மகனே, நான் உன்னிடம் கொண்ட நம்பிக்கை கௌரவர்களைப் பொறுத்தவரையில் கனி கொடுத்ததா {பயனளித்ததா}?” என்று கேட்டார்.(14)

அருளப்பட்ட அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “கௌரவர்களைப் பொறுத்தவரையில் {அவர்களுக்கு} நல்ல புத்தியைக் கொண்டு வருவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு முதலில் நான் முயன்றேன். எவ்வழிமுறையினாலும் அவர்களில் அமைதியை நிறுவச் செய்ய முடியாதபோது,(15) உற்றார் உறவினருடன் கூடிய அவர்கள் அனைவரும் மரணமடைய நேர்ந்தது. புத்தியாலோ, பலத்தாலோ விதியைக் கடப்பது சாத்தியமல்ல.(16) ஓ! பெரும் முனிவரே, ஓ! பாவமற்றவரே, இதுவும் நீர் அறியாததல்ல. என்னைக் குறிப்பிட்டு பீஷ்மர் மற்றும் விதுரர் செய்த ஆலோசனைகள் அனைத்தையும் அவர்கள் (கௌரவர்கள்) மீறினர்[2].(17) ஒருவரோடொருவர் மோதிக் கொண்ட அவர்கள் யமனுடைய வசிப்பிடத்திற்கு விருந்தினர்களாகச் சென்றனர். நண்பர்கள் அனைவரும், பிள்ளைகள் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில் கொல்லப்படாமல் எஞ்சியவர்கள் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே. பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் கூடிய திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்” என்றான் {கிருஷ்ணன்}.(18)கிருஷ்ணன் இந்தச் சொற்களைச் சொன்ன போது, உதங்கர் கோபத்தில் நிறைந்தவராக, சினத்தில் கண்களை அகல விரித்தவராக இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(19)

உதங்கர், “ஓ! கிருஷ்ணா, உன் உறவினர்களும், உனக்கன்பானவர்களுமான குரு குலத்தின் முதன்மையானவர்களைக் காக்க இயன்றவனாக இருந்தும் நீ மீட்கவில்லை என்பதால் நான் நிச்சயம் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(20) ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, வலுக்கட்டாயமாகப் பொறுத்துச் செல்லுமாறு அவர்களை நீ வற்புறுத்தாததால் கோபத்தில் நிறைந்திருக்கும் நான் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(21) ஓ! மாதவா, குருக்களில் முதன்மையான அவர்களைக் காக்க முழுமையாக இயன்றவனாக இருந்தும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, கபடத்தில் மூழ்கி, அவர்களிடம் நீ அக்கறையற்றவனாக இருந்ததால்தான் அவர்கள் அனைவரும் அழிவை அடைந்திருப்பதாகத் தெரிகிறது” என்றார்.(22)

வாசுதேவன் {கிருஷ்ணன் உதங்கரிடம்}, “ஓ! பிருகு குலக் கொழுந்தே, நான் விரிவாகச் சொல்வதைக் கேட்பீராக. நான் சொல்லும் சமாதானங்களையும் நீர் ஏற்பீராக. ஓ! பிருகு குலத்தவரே {பார்க்கவரே} நீர் ஒரு தவசியாவீர்.(23) ஆன்மா தொடர்புடைய என் சொற்களைக் கேட்ட பிறகு நீர் என்னைச் சபிக்கலாம். அற்பமான தவத்தகுதியைக் கொண்டு எந்த மனிதனாலும் என்னை அவமதிக்க முடியாது.(24) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, உமது தவங்கள் அனைத்தும் அழிவடைவதைக் காண நான் விரும்பவில்லை. நீர் பெருமளவில் சுடர்மிக்கத் தவங்களைச் செய்தவராவீர். நீர் உமது ஆசான்களையும், பெரியோர்களையும் நிறைவடையச் செய்துள்ளீர்[3].(25) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நீர் குழந்தைப் பருவத்திலிருந்தே பிரம்மச்சரிய விதிகளை நோற்று வருவதை நான் அறிவேன். எனவே, பெரும் துன்பத்துடன் தவங்களின் மூலம் நீர் அடைந்தவற்றுக்குக் குறைவு ஏற்படவோ, உமது தவங்கள் அழிவடையவோ நான் விரும்பவில்லை” என்றான் {கிருஷ்ணன்}.(26)

பரிதாப முறையீடு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 54-தன் மகிமையை உதங்கருக்கு உணர்த்திய கிருஷ்ணன்; தன்னுடைய சொல்லைக் கேட்காததால் கௌரவர்கள் அழிந்தனர் என்று சொன்ன கிருஷ்ணன்…

உதங்கர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கேசவா, களங்கமற்ற அத்யாத்மத்தை எனக்குச் சொல்வாயாக. உன் உரையைக் கேட்டப் பிறகு, ஓ! ஜனார்த்தனா உனக்கு நன்மையானதை விதிப்பேன், அல்லது உன்னைச் சபிப்பேன்” என்றார்.(1)

வாசுதேவன் {கிருஷ்ணன் உதங்கரிடம்}, “இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்} மற்றும் நல்லியல்பின் {சத்வ} குணங்கள் மூன்றும் என்னையே தங்கள் புகலிடமாகக் கொண்டு என்னையே சார்ந்திருக்கின்றன என்பதை அறிவீராக. ஓ! மறுபிறப்பாளரே, ருத்திரர்களும், வசுக்களும் என்னிலிருந்தே உண்டாகினர் என்பதை அறிவீராக.(2) என்னில் அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன; அனைத்து உயிரினங்களிலும் நான் இருக்கிறேன்; இதையும் அறிவீராக. இது குறித்து உமது மனத்தில் ஐயமேதும் எழவேண்டாம்.(3) ஓ! மறுபிறப்பாளரே, தைத்தியர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள், நாகர்கள், அப்சரஸ் கூட்டங்கள் அனைவரும் என்னில் இருந்தே உண்டாகினர் என்பதையும் அறிவீராக.(4)

இருப்பு, இல்லாமை, வெளிப்பட்டவை, வெளிப்படாதவை, அழியத்தக்கவை, அழிவில்லாதவை என்று எவையெல்லாம் அழைக்கப்படுகின்றனவோ அவை அனைத்தும் என்னையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(5) ஓ! தவசியே, (நான்கு) வாழ்வுமுறைகளுடன் தொடர்புடையதாக அறியப்படும் நான்கு வகைக் கடமைகளும், வேதக் கடமைகள் அனைத்தும் என்னையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(6) அண்டமாக அமைந்திருக்கும் இல்லாதவை, இருந்தும் இல்லாதவை, இருப்பு இல்லாமையைக் கடந்தவை ஆகிய அனைத்தும் என்னில் இருந்தே உண்டானவையாகும். தேவர்களுக்கும் நித்திய தேவனான என்னையும் விட உயர்ந்தது (என்னைக் கடந்திருப்பது) வேறு எதுவும் கிடையாது[1].(7)ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, ஓம்! (என்ற மூல எழுத்துடன்) தொடங்கும் வேதங்கள் அனைத்தும் என்னுடன் அடையாளங்காணப் படுபவை என்பதை அறிவீராக. ஓ! பிருகு குல மைந்தரே, வேள்வித்தம்பம் நானே; (வேள்விகளில் பருகப்படும்) சோமம் நானே; (தேவர்களுக்குக் காணிக்கை அளிப்பதற்கு வேள்விகளில் சமைக்கப்படும்) சாரு நானே; (செய்யப்படும்) ஹோமம் நானே; தேவர்களை நிறைவடையச் செய்ய வேள்வி செய்பவர்கள் செய்யும் செயல்கள் நானே; வேள்விக் காணிக்கைகளை ஊற்றுபவன் {ஹோதா} நானே; ஊற்றப்படும் ஹவி அல்லது ஆகுதியும் {ஹவ்யம்} நானே என்பதை அறிவீராக. அத்யர்யு நானே. கல்பகன் நானே; புனிதம் நிறைந்த வேள்வி ஹவியும் நானே. பெரும் வேள்விகளில் உத்காத்ரி {உத்காதா} தன் பாடலொலிகளில் என்னையே பாடுகிறார். ஓ! பிராமணரே, ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, பரிகாரச் சடங்குகள் அனைத்திலும் மங்கல மந்திரங்களையும், அமைதி நிறைந்த ஆசிகளையும் சொல்பவர்கள், அண்டத்தின் கைவினைஞனான என் புகழையே பாடுகின்றனர்.(8-10)

ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, ஓ! கல்விமானான பிராமணரே, அனைத்து உயிரினங்களிடமும் கொள்ளும் கருணையையே தன் சாரமாகக் கொண்டவனும், என் மனத்தில் இருந்து உதித்தவனுமான தர்மன் என்னுடைய மூத்த மகன் என்பதை அறிவீராக.(11) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் மகனை ஆதரிப்பதற்காக இடையறாமல் என்னை மாற்றிக் கொண்டு, இவ்வுலகில் உள்ள அல்லது இவ்வுலகை விட்டுச்சென்ற மனிதர்களின் துணையுடன் பல்வேறு கருவறைகளில் நான் பிறக்கிறேன் {அவதரிக்கிறேன்}. உண்மையில், அறத்தைப் பாதுகாக்கவும், அதை நிறுவுவதற்காகவுமே நான் இவற்றைச் செய்கிறேன்.(12) ஓ! பிருகு குல மைந்தரே, இந்த நோக்கத்திற்காக நான் ஏற்கும் வடிவங்களில் விஷ்ணு, பிரம்மன் மற்றும் சக்ரன் {இந்திரன்} என்று மூவுலகங்களிலும் அறியப்படுகிறேன்.(13)

இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் நானே, அவற்றை அழிப்பவனும் நானே. மாற்றமடையாதவனான நானே பாவம் நிறைந்த தன்மையுடன் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கிறேன்.(14) ஒவ்வொரு யுகத்திலும், என் உயிரினங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில் பல்வேறு வகைக் கருவறைகளில் நுழைந்து அறத்தின் பாலத்தைச் செப்பனிடுகிறேன்.(15) ஓ! பிருகு குல மைந்தரே, தேவ வகையில் வாழும்போது உண்மையில் நான் ஒரு தேவனுக்குரிய அனைத்து வழிமுறைகளிலும் செயல்படுவேன்.(16)

ஓ! பிருகு குல மைந்தரே, கந்தர்வ வகையில் வாழும்போது கந்தர்வனுக்குரிய அனைத்து வழிமுறைகளிலும் நான் செயல்படுவேன்.(17) நாகர்களின் வகையில் வாழும்போது நாகனாகச் செயல்படுவேன், யக்ஷர்கள் அல்லது ராட்சசர்களின் வகையில் வாழும்போது அந்தந்த வகைக்குரிய வழியிலேயே நான் செயல்படுவேன்.(18) இப்போது மனித வகையில் பிறந்திருக்கும் நான் மனிதருக்குரிய வழிமுறையிலேயே செயல்பட வேண்டும். நான் அவர்களிடம் (கௌரவர்களிடம்) மிகப் பரிதாபகரமான வகையில் முறையிட்டேன். ஆனால், மூடர்களான அவர்கள் மதி கலங்கியவர்களாக என் சொற்களை ஏற்க மறுத்தனர்.(19)

கோபத்தில் நிறைந்த நான், (என் செய்தியைப் புறக்கணிப்பதன் விளைவால் ஏற்படப்போகும்) பெரும் பயங்கரத்தைச் சொல்லி அவர்களை அச்சுறுத்தினேன். ஆனால் மீண்டும் அவர்களுக்கு என் வழக்கமான (மனித) வடிவையே காட்டினேன்.(20) மறத்திற்கு {அதர்மத்திற்கு} வசப்பட்டவர்களும், காலமெனும் அறத்தால் {தர்மத்தால்} தாக்கப்பட்டவர்களும், போர்க்களத்தில் நியாயமாகக் கொல்லப்பட்டவர்களுமான அவர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தார்கள் என்பதில் ஐயமில்லை.(21) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, பாண்டவர்களும் பெரும்புகழை அடைந்திருக்கிறார்கள். நீர் கேட்ட அனைத்தையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன்” என்றான் {கிருஷ்ணன்}.(22)

பாலைவன நீர்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 55-உதங்கருக்கு விஷ்வரூப தரிசனம் அளித்த கிருஷ்ணன்; உதங்கர் பெற்ற வரம்; சண்டாள வடிவில் வந்த இந்திரன் கொடுத்த அமிர்தத்தை மறுத்த உதங்கர்; பாலைவனத்திலும் நீர்கிடைக்கும் வரத்தை உதங்கருக்கு அளித்த கிருஷ்ணன்…

உதங்கர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! ஜனார்த்தனா, அண்டத்தைப் படைத்தவன் நீ என்பதை நான் அறிவேன். நீ என்னிடம் கொண்ட கருணையின் விளைவே இந்த ஞானம் என்பதில் ஐயமில்லை.(1) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, என் மனம் உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டிருப்பதால் உற்சாகம் நிறைந்து அமைதியின் வசப்பட்டதாக இருக்கிறது. ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, இதற்கு மேலும் என் இதயம் உன்னைச் சபிக்க விரும்பவில்லை என்பதை அறிவாயாக.(2) ஓ! ஜனார்த்தனா, அற்பக் கருணையையாவது உன்னிடம் அடையத்தகுந்தவனாக நான் இருந்தால், உன் இறை வடிவை {விஷ்ணு ரூபத்தை} எனக்கு ஒருமுறை காட்டுவாயாக” என்று கேட்டார்”.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவரிடம் நிறைவடைந்த அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, பெரும் நுண்ணறிவைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} கண்ட நித்தியமான வைஷ்ணவ வடிவை உதங்கருக்குக் காண்பித்தான்.(4) உதங்கர், உயர் ஆன்ம வாசுதேவனை வலிமைமிக்கக் கரங்களுடன் கூடியவனாக அண்ட வடிவில் கண்டார். அந்த வடிவின் பிரகாசம் சுடர்மிக்க நெருப்பைப் போன்றோ, ஆயிரம் சூரியர்களைப் போன்றோ இருந்தது. அது {அவ்வடிவம்} வெளிமுழுவதையும் நிறைத்தபடி அவரது முன்பு நின்றது. அனைத்துப் பக்கங்களிலும் முகங்களைக் கொண்டிருந்தது.(5) அந்தப் பிராமணர் உதங்கர், உயர்ந்ததும், அற்புதம் நிறைந்ததுமான விஷ்ணுவின் அந்த வைஷ்ணவ வடிவைக் கண்டு, உண்மையில் (அத்தோற்றத்தில்) பரமனையே கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தார்.(6)

உதங்கர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! அண்டத்தையே கைவினையாய் கொண்டவனே, ஓ! அண்டத்தின் ஆன்மாவே, ஓ! அனைத்துப் பொருட்களின் பிறப்பிடமே நான் உன்னை வணங்குகிறேன். உன் பாதத்தால் மொத்த பூமியையும் மறைத்தும், தலையால் ஆகாயத்தை நிறைத்தும் இருக்கிறாய்.(7) பூமிக்கும், ஆகாயத்திற்கும் இடையில் இருப்பதை உன் வயிறு நிறைத்திருக்கிறது. திசைப்புள்ளிகள் அனைத்தும் உன் கைகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஓ! மங்கா மகிமை கொண்டவனே, இவை யாவும் நீயே.(8) சிறப்பானதும், அழிவற்றதுமான இந்த வடிவை விலக்குவாயாக. நான் இப்போது உன்னை நித்தியமான (மனித) வடிவில் காண விரும்புகிறேன்” என்றார்”.(9)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஜனமேஜயா, நிறைவடைந்த ஆன்மாவைக் கொண்ட கோவிந்தன், அவரிடம் {உதங்கரிடம்}, “வரம் ஏதும் கேட்பீராக” என்ற இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

எனினும் உதங்கர்,(10) “ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, ஓ! கிருஷ்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னுடைய இந்த வடிவைக் கண்டதே எனக்குப் போதுமான வரமாகும்” என்றார்.(11)

எனினும், கிருஷ்ணன் மீண்டும் அவரிடம், “இக்காரியத்தில் தயங்காதீர். இது செய்யப்பட வேண்டும். என் வடிவைக் கண்டது கனியற்றதாகக் கூடாது” என்றான்.(12)

உதங்கர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! தலைவா, எது செய்யப்பட வேண்டுமென நீ நினைக்கிறாயோ, அதை நான் நிறைவேற்ற வேண்டும். நான் எங்கெல்லாம் நீரை விரும்புவேனோ அங்கெல்லாம் அஃதை அடைய விரும்புகிறேன். இத்தகைய பாலைவனங்களில் நீர் கிடைப்பது அரிதாகும்” என்றார்.(13)

அந்தச் சக்தியை விலக்கிக் கொண்ட பரமன், அப்போது உதங்கரிடம், “எங்கெல்லாம் உமக்கு நீர் தேவைப்படுகிறதோ, அங்கே என்னை நினைப்பீராக” என்று சொன்னான். இவ்வாறு சொல்லிவிட்டு அவன் துவாரகையை நோக்கிச் சென்றான்.(14)

அதன் பிறகு ஒரு நாள் சிறப்புமிக்கவரான உதங்கர், பாலைவனத்தில் மிகுந்த தாகத்துடன் நீர் வேண்டித் திரிந்தார். அவ்வாறு திரியும்போது, மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணனை நினைத்தார்.(15) அப்போது, அந்த நுண்ணறிவுமிக்க முனிவர் {உதங்கர்}, அந்தப் பாலைவனத்தில், உடல்முழுவதும் புழுதி படர்ந்தவனும், நாய்க்கூட்டத்தால் சூழப்பட்டவனுமான, (சண்டாள வகையைச் சேர்ந்த) ஒரு நிர்வாண வேடனை {புலையனைக்}[1] கண்டார்.(16) மிகக் கடுந்தோற்றத்தில் இருந்த அவன், ஒரு வாளையும், வில்லையும், கணைகளையும் தரித்திருந்தான். அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர், அந்த வேடனின் சிறுநீர் உறுப்பில் இருந்து {காலருகில் உள்ள தோற்பையில்} அபரிமிதமான நீர் வருவதை {இருப்பதைக்} கண்டார்[2].(17)உதங்கர் கிருஷ்ணனை நினைத்ததும், அந்த வேடன் சிரித்துக் கொண்டே அவரிடம், “ஓ! உதங்கரே, ஓ! பிருகு குலத்தவரே, இந்த நீரை என்னிடம் இருந்து நீர் பெறுவீராக.(18) தாகத்தால் பீடிக்கப்பட்ட உம்மிடம் பெருங்கருணை கொள்கிறேன்” என்றான்.

வேடனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த நீரை ஏற்கும் விருப்பம் எதையும் அந்தத் தவசி வெளிக்காட்டவில்லை.(19) நுண்ணறிவுமிக்க உதங்கர், மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணனை நிந்திக்கவும் தொடங்கினார். எனினும் அந்த வேடன் மீண்டும் மீண்டும் அம்முனிவரிடம் “பருகுவீராக” என்றான்.(20) அந்தத் தவசி, இவ்வாறு அளிக்கப்பட்ட நீரைப் பருக மறுத்தார். மறுபுறம், பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்ட அவர் கோபவசப்பட்டார். ஓ! மன்னா, அந்த உயர் ஆன்மா முனிவரின் தீர்மானத்தால் அவமதிக்கப்பட்ட அந்த வேடன், தன் நாய் கூட்டத்துடன் அங்கேயே அப்போதே மறைந்து போனான். (அற்புதம் நிறைந்த) அந்த மறைதலைக் கண்ட உதங்கர் நாணத்தால் நிறைந்தார்.(22) அவர், பகைவர்களைக் கொல்பவனான கிருஷ்ணனால் (அவன் கொடுத்த வரத்தால்) தாம் வஞ்சிக்கப்பட்டதாகவும் நினைத்தார்.

மிக விரைவில், சங்கு சக்கரக் கதாதாரி {கிருஷ்ணன்} அந்த (வேடன் வந்த) வழியிலேயே உதங்கரிடம் வந்தான். கிருஷ்ணனிடம் பேசிய அந்தப் பிராமணர் {உதங்கர்}, “ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, ஓ! தலைவா, பிராமணர்களில் முதன்மையான ஒருவனுக்கு ஒரு வேடனின் சிறுநீர் வடிவில் {தோற்பையிலுள்ள} நீரை அளிப்பது முற்றிலும் தகாததாகும்” என்றார்[3].பெரும் நுண்ணறிவுமிக்க ஜனார்த்தனன், இச்சொற்களைச் சொன்ன உதங்கருக்கு ஆறுதலளிக்கும் வகையில் மென்மையான சொற்கள் பலவற்றைச் சொல்லி, “எந்த வடிவில் நீரை உமக்கு அளிப்பது முறையோ அந்த வடிவிலேயே உமக்கு நீர் அளிக்கப்பட்டது. ஐயோ, ஆனால் நீர் அதைப் புரிந்து கொள்ளவில்லை. உமக்காக வஜ்ரதாரியான புரந்தரன் என்னால் வேண்டிக்கொள்ளப்பட்டான்.(23-27)

பலமிக்க அந்தத் தேவனிடம், “நீரின் வடிவில் உதங்கருக்கு அமுதத்தை அளிப்பாயாக” என்பதே நான் சொன்ன சொற்களாகும். அப்போது தேவர்களின் தலைவன் என்னிடம், “இறக்கக்கூடிய ஒருவன் இறவாதவன் {அமரன்} ஆவது முறையாகாது.(28) உதங்கருக்கு வேறேதும் வரத்தைக் கொடுப்பாயாக” என்றான்.

ஓ! பிருகுவின் மகனே, இச்சொற்களே மீண்டும் மீண்டும் எனக்குச் சொல்லப்பட்டன. எனினும், “உதங்கருக்கு அமுதம் கொடுக்கப்பட வேண்டும்” என்ற இந்தச் சொற்களால் மீண்டும் சச்சியின் தலைவன் {இந்திரன்} என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டான்.(29)

தேவர்களின் தலைவன், எனக்கு ஆறுதலளிக்கும் வகையில், “ஓ! பெரும் நுண்ணறிவு மிக்கவனே, அவருக்கு அமுதம் கொடுக்கப்பட வேண்டுமெனில்,(30) நான் ஒரு வேடனின் வடிவை ஏற்று உயர் ஆன்மா கொண்ட அந்தப் பிருகு குலக் கொழுந்துக்கு அதைக் கொடுப்பேன். அவ்வாறே அந்தப் பிருகுவின் மைந்தர் அதை ஏற்றுக் கொள்வாரெனில்,(31) ஓ! தலைவா, நான் அவருக்கு அதைக் கொடுக்கச் செல்வேன். எனினும், அவர் அலட்சியத்தால் என்னைத் திருப்பி அனுப்பினால் எக்காரணத்தினாலும் நான் அவருக்கு அதைக் கொடுக்க மாட்டேன்” என்றான்[4].(32)என்னிடம் இந்த உடன்பாட்டைச் செய்து கொண்ட வாசவன் {இந்திரன்}, அமுதத்தைக் கொடுப்பதற்காகவே அந்தத் தோற்றத்தில் உம் முன் தோன்றினான். எனினும், அந்தச் சிறப்புமிக்கவன் சண்டாளத் தோற்றத்தில் இருப்பதைக் கொண்டு நீர் அவனை அலட்சியம் செய்து அனுப்பிவிட்டீர். உமது பிழை பெரியதாகும். உமது விருப்பத்தைப் பொறுத்தவரையில் என் அதிகாரத்திற்கு உட்பட்டு என்னால் செய்ய முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உண்மையில், துன்பம் நிறைந்த உமது தாகத்தைத் தணிக்க நான் ஏற்பாடு செய்கிறேன். ஓ! மறுபிறப்பாளரே, நீர் நீரை விரும்பும் நாட்களில்,(33-35) நீருண்ட மேங்கங்கள் இந்தப் பாலைவனத்தில் எழும். ஓ! பிருகு குல மைந்தரே, அந்த மேகங்கள் உமக்குச் சுவைமிக்க நீரை அளிக்கும். உண்மையில், அம்மேகங்கள் உதங்க மேகங்கள் என்று உலகில் அறியப்படும்” என்றான் {கிருஷ்ணன்}.(36)

கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர், மகிழ்ச்சியால் நிறைந்தார். ஓ! பாரதா {ஜனமேஜயா}, இந்த நாள் வரையிலும் வறண்ட பாலைவனங்களில் உதங்க மேகங்கள் (தோன்றி) மழையைப் பொழிகின்றன” {என்றார் வைசம்பாயனர்}.(37)

குருதக்ஷிணை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 56-முதுமையைக் கண்டு வருந்திய உதங்கர்; உதங்கருக்கு இளமையைக் கொடுத்துத் தமது மகளைத் திருமணம் செய்து கொடுத்த கௌதமர்; உதங்கரிடம் அஹல்யை கேட்ட குருதக்ஷிணை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “வலிமைகள் அனைத்திற்கும் பிறப்பிடமான விஷ்ணுவையே சபிக்க விரும்பும் அளவுக்கு உயர் ஆன்ம உதங்கர் செய்த தவங்கள் என்ன?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா, உதங்கர் கடுந்தவங்களைச் செய்தவராவார். அவர் தமது ஆசானிடம் அர்ப்பணிப்பு கொண்டவராக இருந்தார். பெரும் சக்தி கொண்ட அவர், வேறு எவரையும் வழிபடுவதைத் தவிர்த்தார்.(2) ஓ! பாரதா {ஜனமேஜயா}, உதங்கரின் அர்ப்பணிப்பைப் போலத் தாங்கள் ஆசானிடம் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் பெரியதாக இருக்க வேண்டுமென முனிவர்களின் பிள்ளைகள் அனைவரும் விரும்பினர்.(3) ஓ! ஜனமேஜயா, கௌதமர், தமது எண்ணற்ற சீடர்களுக்கு மத்தியில் உதங்கரிடம் நிறைவும் அன்பும் கொண்டிருந்தார்.(4) உண்மையில், உதங்கரின் தற்கட்டுப்பாடு, தூய ஒழுக்கம், மற்றும் ஆற்றலுக்கேற்ப அவர் ஆற்றிய தொண்டு ஆகியவற்றில் கௌதமர் உயர்வான நிறைவை அடைந்திருந்தார்.(5)

ஒருவர்பின் ஒருவராக ஆயிரக்கணக்கான சீடர்கள், தங்கள் (கல்வியின் காலம் முடிவடைந்து) ஆசானின் அனுமதியைப் பெற்றுத் தங்கள் தங்களுக்குரிய வீடுகளுக்குத் திரும்பினர். எனினும், உதங்கரிடம் கொண்ட பேரன்பால் கௌதமரால் அவரைத் தமது ஆசிரமத்தை விட்டு அனுப்ப இயலவில்லை.(6) ஓ! மகனே, காலப்போக்கில் பெருந்தவசியான உதங்கர் முதுமையை அடைந்தார். எனினும், தமது ஆசானிடம் கொண்ட அர்ப்பணிப்பின் விளைவால் அத்தவசி அதனை உணரவில்லை.(7) ஓ! ஏகாதிபதி, ஒருநாள் அவர் தமது ஆசானுக்காக விறகு கொண்டு வரச் சென்றார். விரைவில் பெருஞ்சுமை கொண்ட விறகை உதங்கர் கொண்டு வந்தார்.(8)

ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, உழைப்பால் களைத்தவரும், பசித்தவரும், தன் தலையில் சுமந்த சுமையால் பீடிக்கப்பட்டவருமான அவர், ஓ! மன்னா, அந்தச் சுமையைப் பூமியில் போட்டார்.(9) அவரது சடாமுடியில் வெள்ளிக்கு ஒப்பாக இருந்த ஒரு மயிர் {சடை} அந்தச் சுமையுடன் சிக்கியிருந்தது. அந்தச் சுமை வீசப்பட்ட போது, அதனுடன் சேர்ந்து அந்தச் சடாமுடியும் பூமியில் விழுந்தது.(10) ஓ! பாரதா, அந்தச் சுமையால் ஒடுக்கப்பட்டவரும், பசியில் மூழ்கியவருமான உதங்கர், முதிய வயதுக்கான அந்த அறிகுறியைக் கண்டு பெரும் துன்பத்துடன் உரக்க அழத் தொடங்கினார்.(11)

அப்போது, கடமைகள் அனைத்தையும் அறிந்தவளும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், உருண்டு திரண்ட இடை கொண்டவளும், கீழ் நோக்கும் முகத்துடன் கூடியவளுமான அவரது ஆசானின் {கௌதமரின்} மகள், தன் தந்தையின் ஆணையின் பேரில் உதங்கரின் கண்ணீரைத் தன் கைகளில் ஏந்தினாள். அவள் ஏந்திய கண்ணீர்த்துளிகள் அவளது கைகளில் எரிவதாகத் தெரிந்தது. அதற்கு மேலும் அதைத் தாங்க முடியாததால் அவள் அதைப் பூமியில் போடும்படி நேர்ந்தது.(12,13) உதங்கரின் கண்ணீர் துளிகளைப் பூமாதேவியாலேயே தாங்க முடியவில்லை.

நிறைவடைந்த இதயத்துடன் கூடிய கௌதமர், மறுபிறப்பாளரான உதங்கரிடம்,(14) “ஓ! மகனே, உன் மனம் ஏன் இன்று துயரத்தால் இவ்வளவு பீடிக்கப்பட்டிருக்கிறது? ஓ! கல்விமானான முனிவா, நான் விரிவாகக் கேட்க விரும்புவதால் என்னிடம் மென்மையாகவும், அமைதியாகவும் சொல்வாயாக” என்றார்.(15)

உதங்கர் {கௌதமரிடம்}, “உம்மிடம் முழுமையான அர்ப்பணிப்புக் கொண்ட மனத்துடன், உமக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்யும் விருப்பத்தில், என் இதயப் பக்தியை உம்மிடம் திருப்பி, என் எண்ணங்களை முழுமையாக உம்மில் வசிக்கச் செய்து,(16) முதுமை எனக்கு நேர்வதை (அது நேரும்வரை) முற்றிலும் அறியாது இருந்திருக்கிறேன். இன்பமெதையும் நான் அறிந்தவனில்லை. உம்முடன் நூறு வருட காலம் வசித்திருப்பினும் நான் செல்வதற்கான அனுமதியை நீர் தரவில்லை.(17) எனினும், எனக்கு இளையவர்களான உமது சீடர்கள் பலர் உமது அனுமதியைப் பெற்றுத் திரும்பிவிட்டனர். உண்மையில், ஞானத்துடன் கூடிய நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான முதன்மையான பிராமணர்கள் (உமது ஆசிரமத்தை விட்டுச் செல்வதற்கும், தாங்கள் ஆசானாவதற்கும்) உமது அனுமதியைப் பெற்றனர்” என்றார்.(18)

கௌதமர் {உதங்கரிடம்}, “ஓ! பிராமணர்களில் முதன்மையானவனே, உன்னிடம் கொண்ட அன்பு மற்றும் பாசத்தாலும், கடமையுணர்வுடன் நீ எனக்குச் செய்த தொண்டின் விளைவாலும் நான் இதை அறிந்து கொள்ளாமலே நீண்ட காலம் கடந்துவிட்டது.(19) எனினும், ஓ! பிருகு குலத்தவனே, இந்த இடத்தைவிட்டுச் செல்ல நீ விரும்பினால், எந்தத் தாமதமுமின்றி என் அனுமதியுடன் செல்வாயாக” என்றார்.(20)

உதங்கர் {கௌதமரிடம்}, “நான் என் ஆசானுக்கு என்ன தர வேண்டும்? ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, இதை எனக்குச் சொல்வீராக. ஓ! தலைவரே, அதைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, உமது அனுமதியுடன் நான் இங்கிருந்து செல்வேன்” என்றார்.(21)

கௌதமர் {உதங்கரிடம்}, “ஆசானின் மனநிறைவே இறுதிக் கட்டணம் என நல்லோர் சொல்கின்றனர்[1]. ஓ! மறுபிறப்பாளனே, உன் ஒழுக்கத்தில் நான் நிச்சயம் உயர்வான நிறைவை அடைந்திருக்கிறேன்.(22) ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, இதன் காரணமாக நான் மிகவும் மனம் நிறைந்தவனாக இருக்கிறேன். ஓ! மறுபிறப்பாளனே, நீ இன்று பதினாறு வயது இளைஞனானால்,(23) என் மகளையே உனக்கு மனைவியாகத் தருவேன். உன் சக்தியைப் பொறுக்கும் வல்லமை இவளைத் தவிர வேறு எந்தப் பெண்ணுக்கும் கிடையாது” என்றார்.(24)கௌதமரின் இந்தச் சொற்களால் உடனடியாக இளைஞனாக மாறிய உதங்கர், அந்தப் புகழ்பெற்ற கன்னிகையைத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டார். தமது ஆசானின் அனுமதியைப் பெற்ற அவர், தம் ஆசானின் மனைவியிடம் {குருபத்னியிடம்},(25) “என் ஆசிரியையான உமக்கு இறுதிக் கட்டணமாக {குருதக்ஷிணையாக} நான் என்ன கொடுக்க வேண்டும்? எனக்கு ஆணையிடுவீராக. உமக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் செல்வத்தைக் கொண்டோ என் உயிரைக் கொண்டோ நிறைவேற்ற விரும்புகிறேன்.(26) இவ்வுலகில் பெரும் மதிப்பிற்குரியதும், அற்புதம் நிறைந்ததும் எந்த ரத்தினத்தையும் என் தவத்தின் உதவியால் உமக்கு நான் கொண்டு வருவேன். இதில் எனக்கு ஐயமேதுமில்லை” என்றார் {உதங்கர்}.(27)

அஹல்யை, “ஓ! கல்விமானான பிராமணா, ஓ! பாவமற்றவனே, உன் தடங்கலற்ற அர்ப்பணிப்பில் நான் உயர்வான நிறைவை அடைந்திருக்கிறேன். இதுவே போதுமானதாகும். நீ அருளப்பட்டிருப்பாயாக. விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக” என்றாள்”.(28)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “எனினும், ஓ! ஏகாதிபதி, உதங்கர் மீண்டும் அவளிடம், “ஓ! தாயே, எனக்கு ஆணையிடுவீராக. உமக்கு ஏற்புடைய ஏதாவதொன்றை நான் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும்” என்றார்.(29)

அஹல்யை, “நீ அருளப்பட்டிருப்பாயாக, சௌதாஸனின் மனைவி அணிந்திருக்கும் தெய்வீகக் காது குண்டலங்களை எனக்குக் கொண்டு வருவாயாக. அப்போது, நீ உன் ஆசானுக்குரியதை நன்கு கொடுத்ததாகும்” என்றாள்.(30)

ஓ! ஜனமேஜயா, “அவ்வாறே ஆகட்டும்” என்று அவளிடம் சொன்ன உதங்கர், தமது ஆசானின் மனைவிக்கு ஏற்புடையதைச் செய்வதற்கு அந்தக் காது குண்டலங்களைக் கொண்டுவரத் தீர்மானித்தார்.(31) பிராமணர்களில் முதன்மையானவரான உதங்கர், (வசிஷ்டரின் சாபத்தால்) மனிதவூனுண்ணியாக மாறி இருந்த சௌதாஸனிடம் அந்தக் காதுகுண்டலங்களை வேண்டிப் பெற எந்தத் தாமதமுமின்றிச் சென்றார்[2].(32)அதேவேளையில் கௌதமர், தமது மனைவியிடம், “இன்று உதங்கனைக் காணவில்லையே” என்று கேட்டார். இவ்வாறு கேட்கப்பட்ட அவள் (சௌதாஸனுடைய ராணியின்) காதுகுண்டலங்களைப் பெற அவர் சென்றிருப்பதைக் குறித்து அவரிடம் சொன்னாள்.(33)

இதன்பேரில் கௌதமர், “நீ விவேகத்துடன் செயல்படவில்லை. (வசிஷ்டரால்) சபிக்கப்பட்ட (மனித ஊனுண்ணியாக மாறியுள்ள) அந்த மன்னன் {சௌதாஸன்} நிச்சயம் உதங்கனைக் கொல்லப் போகிறான்” என்றார்.(34)

அஹல்யை, “ஓ! புனிதமானவரே, இதை அறியாமல் நான் இப்பணியில் உதங்கனை ஈடுபடுத்தினேன். எனினும், உமது அருளால் அவன் எந்த ஆபத்துக்கும் உள்ளாக மாட்டான்” என்றாள்.(35)

அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட கௌதமர், “அப்படியே ஆகட்டும்” என்றார். அதே வேளையில் உதங்கர், ஓர் ஆளரவமற்ற காட்டில் மன்னன் ஸௌதாஸனைச் சந்தித்தார்” {என்றார் வைசம்பாயனர்}.(36)

காதுகுண்டலங்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 57- உதங்கரை உண்ண முயன்ற ஸௌதாஸன்; குருதக்ஷிணை அளித்துவிட்டுத் திரும்ப வருவதாகச் சொல்லி அவனது மனைவியின் குண்டலங்களை வேண்டிய உதங்கர்; குண்டலத்தின் சிறப்பைச் சொல்லி சௌதாசனின் அனுமதியை வேண்டிய ராணி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! மன்னா, பிராமணரான உதங்கர், பயங்கரம் நிறைந்த முகத்தோற்றத்துடனும், மனிதக் குருதியால் நனைந்திருந்த நீண்ட தாடியுடனும் கூடிய மன்னனைக் {ஸௌதாஸனை} கண்டும் கலக்கமடையவில்லை.(1) ஒவ்வொருவரின் நெஞ்சிலும் அச்சத்தைத் தூண்டுபவனும் இரண்டாவது யமனைப் போலத் தெரிந்தவனும், பெருஞ்சக்தியைக் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி, எழுந்திருந்து உதங்கரிடம்,(2) “ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நாளின் ஆறாம் காலத்தில் நான் உணவு தேடிக் கொண்டிருக்கும்போது நற்பேற்றினாலேயே நீ என்னிடம் வந்தாய்” என்றான்.(3)

உதங்கர் {ஸௌதாஸனிடம்}, “ஓ! மன்னா, நான் என் ஆசானின் நிமித்தமாகத் திரிந்து கொண்டிருக்கும்போது இங்கே வந்தேன் என்பதை அறிவாயாக. ஒருவன் தன் ஆசானின் நிமித்தமான வேலையில் ஈடுபட்டிருக்கும்போது அவனுக்குத் தீங்கிழைக்கக்கூடாது என்று ஞானிகள் சொல்கின்றனர்” என்றார்.(4)

மன்னன் {ஸௌதாஸன்}, “ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நாளின் ஆறாம் காலத்தில் எனக்கான உணவு விதிக்கப்பட்டிருக்கிறது. நான் பசித்திருக்கிறேன். எனவே, இன்று நான் உன்னைத் தப்பவிட இயலாது” என்றான்.(5)

உதங்கர், “ஓ! மன்னா, அவ்வாறே ஆகட்டும். என்னுடன் இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வாயாக. என் ஆசானுக்காகத் திரிவதை நான் நிறுத்திய பிறகு, நான் மீண்டும் உன்னிடம் வந்து, என்னை உன் ஆளுகையில் வைப்பேன்.(6) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, என் ஆசானுக்காக நான் வேண்டும் பொருள் உன் கட்டுப்பாட்டில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். எனவே, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நான் அதை உன்னிடம் வேண்டுகிறேன்.(7) நீ மேன்மையான பிராமணர்களுக்கு நாள்தோறும் முதன்மையான ரத்தினங்களைக் கொடையளிக்கிறாய். ஓ! மனிதர்களின் தலைவா, கொடைகளை எவரிடம் இருந்து ஏற்கலாமோ அந்தக் கொடையாளியாக நீ இருக்கிறாய். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உன் முன் இருக்கும் நானும் ஈகைக்குத் தகுந்தவனே என்பதை அறிவாயாக.(8) ஓ! மன்னா, உன் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பொருளை என் ஆசானுக்கான கொடையாக ஏற்றுச் சென்று,(9) என் உடன்பாட்டின் விளைவால் மீண்டும் உன்னிடமே வந்து என்னை நான் உன் ஆதிக்கத்தின் கீழ் நிறுத்திக் கொள்வேன். இதை நான் உண்மையாகவே உனக்கு உறுதி கூறுகிறேன். இதில் பொய்ம்மையேதுமில்லை. கேலிக்காகக் கூட நான் இதற்கு முன் எப்போதும் பொய்யேதும் பேசியவனில்லை. அவ்வாறிருக்கையில் பிறந்த சந்தர்ப்பங்களைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?” என்றார் {உதங்கர்}.(10)

ஸௌதாஸன், “உன் ஆசானுக்காக நீ வேண்டும் பொருளை என்னால் உன் கரத்தில் வைக்க முடியுமென்றால், கொடையேற்கத் தகுந்தவனாக நீ கருதப்படுகிறாய் என்றால், அந்தப் பொருள் என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(11)

உதங்கர், “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஓ! சௌதாஸா, கொடைகளை எவரிடம் இருந்து பெறலாமோ என் கணிப்பின்படி அதற்கு மிகத் தகுந்தவன் நீ. எனவே, நான் (உனது ராணி அணிந்திருக்கும்) காது குண்டலங்களை இரந்து பெற உன்னிடம் வந்திருக்கிறேன்” என்றார்.(12)

ஸௌதாஸன், “ஓ! கல்விமானும், மறுபிறப்பாளனுமான முனிவா, அந்தக் காது குண்டலங்கள் என் மனைவிக்கு உரியவை. அவற்றை அவளிடமே கேட்க வேண்டும். எனவே, நீ என்னிடம் இருந்து வேறு ஏதாவது கேட்பாயாக. ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவனே, நான் உனக்கு அதைக் கொடுப்பேன்” என்றான்.(13)

உதங்கர், “நமக்கு ஏதும் அதிகாரம் இருக்குமெனக் கருதப்பட்டால், இந்தச் சாக்குபோக்கு சொல்வதை நிறுத்துவாயாக. அந்தக் காது குண்டலங்களை எனக்குக் கொடுப்பாயாக. ஓ! மன்னா, வாக்கில் வாய்மை நிறைந்தவனாக இருப்பாயாக” என்றார்”.(14)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன், மீண்டும் உதங்கரிடம், “ஓ! மனிதர்களில் சிறந்தவனே, என் சொல்லின் அடிப்படையில் மதிப்புமிக்க என் ராணியிடம் சென்று,(15) “கொடுப்பாயாக” என அவளிடம் கேட்பாயாக. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, தூய நோன்புகளைக் கொண்டவளான அவள் இவ்வாறு உன்னால் கேட்கப்பட்டால், என் ஆணையின் பேரில் அந்தக் காதுகுண்டலங்களை நிச்சயம் உனக்குக் கொடுப்பாள்” என்றான்.(16)

உதங்கர், “ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நான் உன் ராணியை எங்கே சந்திக்க இயலும்? ஏன் நீயே அவளிடம் செல்லாமல் இருக்கிறாய்?” என்று கேட்டார்.(17)

ஸௌதாஸன், “நீ இப்போது அவளை ஒரு காட்டாற்றின் அருகில் காணலாம். நாளின் ஆறாவது காலமாகையால் என்னால் இன்று அவளைக் காண முடியாது” என்றான்”.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர் அந்த இடத்தை விட்ட அகன்றார். மதயந்தியைக் கண்டு, இக்காரியம் குறித்து அவளுக்குச் சொன்னார்.(19)

சௌதாஸனின் ஆணையைக் கேட்டவளும், அகன்ற கண்களைக் கொண்டவளுமான அந்தப் பெண்மணி, ஓ! ஜனமேஜயா, உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட உதங்கரிடம் இந்தச் சொற்களைச் சொன்னாள்,(20) “ஓ! மறுபிறப்பாளரே, இஃது இவ்வாறே இருக்கிறது. எனினும், ஓ! பாவமற்றவரே, நீர் பொய் சொல்வதில்லை என்று எனக்கு உறுதிகூற வேண்டும். என் கணவரிடம் இருந்து ஏதாவதொரு அடையாளத்தை எனக்குக் கொண்டு வருவதே உமக்குத் தகும்.(21) மதிப்புமிக்க ரத்தினங்களால் செய்யப்பட்ட இந்தத் தெய்வீகக் காது குண்டலங்கள், அபகரித்துச் செல்லும் வாய்ப்புக்காகத் தேவர்கள், யக்ஷர்கள் மற்றும் பெரும் முனிவர்களாலும் எப்போதும் கண்காணிக்கப்படுவையாக இருக்கின்றன.(22) இந்த மதிப்புமிக்கப் பொருளை எந்தக் காலத்திலும் கீழே வைத்தால் நாகர்களால் இது களவாடப்படும். உண்பதன் விளைவால் தூய்மையற்றிருக்கும் ஒருவரால் அணியப்பட்டால் அது யக்ஷர்களால் எடுத்துக் கொள்ளப்படும். (இந்த மதிப்புமிக்கக் காதுகுண்டலங்களில் கவனம் இல்லாமல்) இவற்றை அணிந்திருப்பவர் உறங்கினால் தேவர்கள் அபகரித்துச் செல்வர்.(23) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, அத்தகைய வாய்ப்புகள் அமையும்போது, விழிப்புணர்வற்றவர்களால் அணியப்பட்டால் தேவர்கள், ராட்சசர்கள் மற்றும் நாகர்களாலும் களவாடப்படக்கூடியவையா இந்தக் காது குண்டலங்கள் இருக்கின்றன.(24)

ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, இந்தக் காதுகுண்டலங்கள், இரவும் பகலும் தங்கத்தை உற்பத்தி செய்கின்றன. இறவில் நட்சத்திர மற்றும் விண்மீன் கூட்டங்களின் கதிர்களை ஈர்க்கும் வகையில் அவை பிரகாசமாக ஒளிர்கின்றன.(25) ஓ! புனிதமானவரே, இவற்றை அணிபவர் எவரும், பசி, தாகம் மற்றும் அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுவர். இந்தக் காது குண்டலங்களை அணிபவர், நஞ்சு, நெருப்பு மற்றும் அனைத்து வகை ஆபத்துகளில் எழும் அச்சங்களில் இருந்தும் விடுபடுவர்.(26) குட்டையான ஒருவர் அணிந்தால் இவை சிறியனவாகும். நெட்டையான ஒருவன் அணிந்தால் இவை அளவில் வளரும்.(27) என்னுடைய இந்தக் காது குண்டலங்கள் இத்தகைய குணங்களைக் கொண்டவையாகும். இவை எங்கும் புகழவும், மதிக்கவும் படுகின்றன. உண்மையில், இவை மூவுலகங்களில் அறியப்பட்டிருக்கின்றன. எனவே, (என் கணவரிடமிருந்து) ஏதாவதொரு அடையாளத்தை எனக்குக் கொண்டு வருவீராக” என்றாள் {மதயந்தி}.(28)

நாகலோகம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 5-அடையாளம் பெற்று வந்து ராணியிடம் கொடுத்துக் குண்டலங்களைப் பெற்ற உதங்கர்; குண்டலங்களைக் கவர்ந்து சென்ற நாகன்; இந்திரனின் துணையால் நாகலோகம் சென்று அவற்றைப் பெற்றது; அஹல்யையிடம் குண்டலங்களைக் கொடுத்த உதங்கர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}“உதங்கர், தன் நண்பர்களிடம் எப்போதும் நல்ல மனநிலையில் உள்ள மன்னன் சௌதாஸனிடம் திரும்பி, (தாம் உண்மையில் மன்னனிடம் இருந்தே வந்தார் என்று மதயந்தியை நம்பச் செய்ய) ஏதாவதொரு அடையாளத்தைத் தருமாறு வேண்டினார். இக்ஷாகு குலத்தில் முதன்மையான அவன் ஓர் அடையாளத்தை அவரிடம் கொடுத்தான்.(1)

ஸௌதாஸன், “என்னுடைய தற்போதைய நிலை பொறுக்கமுடியாததாகும். வேறெந்த புகலிடத்தையும் நான் காணவில்லை. என் விருப்பம் இதுவென அறிந்து காதுகுண்டலங்களை நீ கொடுப்பாயாக[1]” என்றான்.(2)மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர் ராணியிடம் சென்று, அவளுடைய தலைவனின் சொற்களைச் சொன்னார். இந்தச் சொற்களைக் கேட்ட ராணி உதங்கரிடம் தன் காது குண்டலங்களைக் கொடுத்தாள்.(3) காது குண்டலங்களைப் பெற்றுக் கொண்ட உதங்கர் மன்னனிடம் {ஸௌதாஸனிடம்} திரும்ப வந்து அவனிடம், “ஓ! ஏகாதிபதி, ராணிக்கு அடையாளமாக நீ சொல்லி அனுப்பிய அந்தப் புதிரான சொற்களின் பொருளை நான் கேட்க விரும்புகிறேன்” என்றார்.(4)

ஸௌதாஸன் {உதங்கரிடம்}, “படைப்பின் தொடக்கத்திலிருந்தே க்ஷத்திரியர்கள் பிராமணர்களை மதிப்பது காணப்படுகிறது. எனினும், (க்ஷத்திரியர்களின் பங்கிற்கு) பிராமணர்களிடம் பல குற்றங்களும் எழுகின்றன.(5) என்னைப் பொறுத்தவரையில் நான் எப்போதும் அவர்கள் முன்பு பணிவுடன் இருந்தேன். நான் ஒரு பிராமணரின் மூலமே துன்பத்தில் மூழ்கினேன். மதயந்தியைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் நான் காணவில்லை.(6) உண்மையில், ஓ! உயர்ந்த இலக்கைக் கொண்டவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, சொர்க்கத்தின் வாயில்களை அடைவதற்கோ, இங்கே தொடர்வதற்கோ வேறு எந்தப் புகலிடத்தையும் நான் காணவில்லை.(7) பிராமணர்களுடன் பகைமை பாராட்டும் மன்னன் இம்மையில் தொடர்ந்து வாழ்வதும், மறுமையில் இன்பத்தை அடைவதும் சாத்தியமற்றதாகும்.(8) எனவே நான் உன்னால் விரும்பப்படும் காதுகுண்டலங்களை உனக்குக் கொடுத்தேன்[2]. நீ இன்று என்னுடன் செய்து கொண்ட உடன்பாட்டைக் காப்பாயாக” என்றான் {சௌதாசன்}.(9)உதங்கர் {சௌதாசனிடம்}, “ஓ! மன்னா, நான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியின்படியே நிச்சயம் நடப்பேன். நான் உண்மையில் திரும்பி வந்து என்னை உன் ஆளுகையின் கீழ் நிறுத்திக் கொள்வேன். எனினும், ஓ! பகைவரை எரிப்பவனே, நான் உன்னிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி உண்டு” என்றார்.(10)

ஸௌதாஸன் {உதங்கரிடம்}, “ஓ! கல்விமானான பிராமணா, உன் மனத்தில் இருப்பதைச் சொல்வாயாக. உன் சொற்களுக்கு நிச்சயம் நான் மறுமொழி கூறுவேன். உன் மனத்தில் இருக்கும் ஐயம் எதையும் நான் விலக்குவேன். இதில் எனக்குத் தயக்கமேதும் இல்லை” என்றான்.(11)

உதங்கர் {சௌதாசனிடம்}, “கடமைகளின் விதிகளில் திறம்பெற்றோர், பிராமணர்கள் கட்டுப்பாடுடைய வாக்கைக் கொண்டவர்கள் என்று சொல்கிறார்கள். நண்பர்களிடம் தவறாக நடந்து கொள்பவன் கள்வனைப் போன்ற ஒரு தீயவனாகக் கருதப்படுகிறான்[3].(12) ஓ! மன்னா, நீ இன்று என் நண்பனானாய். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனையை எனக்குச் சொல்வாயாக.(13) என்னைப் பொறுத்தவரையில் நான் என் விருப்பங்கள் கனிந்த நிலையை அடைந்துவிட்டேன். நீயோ மனித ஊனுண்ணியாக இருக்கிறாய். நான் உன்னிடம் திரும்பி வருவது முறையா? திரும்பி வராமல் போவது முறையா?” என்று கேட்டார்.(14)ஸௌதாஸன் {உதங்கரிடம்}, “ஓ! மேன்மையான பிராமணர்களில் முதன்மையானவனே, நீ கேட்டதை (நான்) முறையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, நீ என்னிடம் ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்று உனக்குச் சொல்வேன்.(15) ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, இவ்வாறு செயல்படுவதன் மூலம், நீ உனக்கு நன்மையானதை அடைவாய். ஓ! கல்விமானான பிராமணா, நீ திரும்பி வந்தால் நிச்சயம் மரணத்தையே அடைவாய்” என்றான்”.(16)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நுண்ணறிவுமிக்க மன்னனால் இவ்வாறு தமக்கு நன்மையானது சொல்லப்பட்ட உதங்கர், அந்த ஏகாதிபதியிடம் இருந்து அகன்று அஹல்யையிடம் செல்லப் புறப்பட்டார்.(17) தமது ஆசானின் மனைவிக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பிய அவர் தம்முடன் காதுகுண்டலங்களை எடுத்துக் கொண்டு கௌதமரின் ஆசிரமத்தை அடைவதற்காகப் பெரும் வேகத்துடன் சென்றார்.(18) மதயந்தி சொன்ன முறையிலேயே அவற்றைக் கருப்பு மான்தோலில் {கிருஷ்ணாஜினத்தில்} மடித்துக் கட்டி {முடிந்துக்} கொண்டு பாதுகாப்புடன் தன் வழியில் சென்றார்.(19) சிறிது தொலைவு சென்றதும் அவர் பசியால் பீடிக்கப்பட்டார். அங்கே (கனிந்த) கனிகளின் எடையால் வளைந்திருந்த ஒரு வில்வ மரத்தை அவர் கண்டார். அவர் அந்த மரத்தில் ஏறினார்.

ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர், தன்னுடைய மான்தொலை ஒரு கிளையில் தொங்கவிட்டு, சில கனிகளைப் பறிக்கத் தொடங்கினார்.(21) கனிகளில் கண்களைச் செலுத்தி அவற்றைப் பறிப்பதில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஓ! மன்னா, அவற்றில் சில அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் கவனமாகக் கட்டி வைக்கப்பட்டதும், காது குண்டலங்களோடு கூடியதுமான அந்த மான்தோல் மீதும் விழுந்தன. அந்தக் கனிகளால் அடிக்கப்பட்டு அதன் முடி தளர்ந்தது.(22,23) திடீரெனக் காதுகுண்டலங்களோடு கூடிய அந்த மான்தோல் கீழே விழுந்தது. முடி அவிழ்ந்து மான்தோல் கீழே விழுந்தபோது, அங்கே இருந்த ஒரு பாம்பு அந்தக் காது குண்டலங்களைக் கண்டது.(24) அந்தப் பாம்பு ஐராவதன் குலத்தைச் சேர்ந்ததாகும். பேராவலுடன் தன் வாயில் காது குண்டலங்களைக் கவ்வி கொண்டு அஃது {பாம்பு}  ஓர் எறும்புப்புற்றுக்குள் நுழைந்தது.

அந்தப் பாம்பால் காது குண்டலங்கள் அபகரிக்கப்பட்டதைக் கண்ட உதங்கர்,(25,26) கோபத்தில் நிறைந்து, மனத்தில் பெருங்கவலையுடன் மரத்தில் இருந்து கீழே இறங்கினார். தன் தடியை எடுத்துக் கொண்டு அந்த எறும்புப்புற்றை அவர் துளைக்கத் தொடங்கினார்.(27) கோபத்திலும், பழிவாங்கும் விருப்பத்திலும் எரிந்து கொண்டிருந்த அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், முப்பத்தைந்து நாட்கள் தம்மை அந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.(28) உதங்கருடைய கைத்தடியின் சக்தியைப் பொறுக்க முடியாத பூமாதேவி அதனால் உடல்கிழிந்தவளாக மிகவும் துன்புற்றாள்.(29) நாகர்கள் வசிக்கும் பாதாள லோகத்திற்குப் பாதையை அமைக்கும் விருப்பத்தில் பூமியைத் தொடர்ந்து தோண்டிக் கொண்டிருந்த அந்த மறுபிறப்பாள முனிவர் இருந்த இடத்திற்கு,(30) வஜ்ரதாரியான தேவர்களின் தலைவன் {இந்திரன்} பச்சைக் குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் வந்தான். பெரும் சக்தியுடன் கூடிய அவன் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரைக் கண்டு அங்கே அமர்ந்தான்”.(31)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உதங்கரின் துன்பத்தால் பீடிக்கப்பட்ட ஒரு பிராமணராக வேடம் தரித்துக் கொண்டு தேவர்களின் தலைவன் அவரிடம், “இது (உமது காரியம்) நிறைவேற்றப்பட இயலாதது.(32) நாகர்களின் உலகம் இவ்விடத்தில் இருந்து ஆயிரம் யோஜனைகளுக்கு அப்பால் இருக்கிறது. உமது கைத்தடியைக் கொண்டு இக்காரியத்தைச் சாதிக்க இயலாதென நான் நினைக்கிறேன்” என்றான்.(33)

உதங்கர், “ஓ! பிராமணரே, ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நாகலோகத்தில் இருந்து என்னால் அந்தக் காதுகுண்டலங்களை மீட்க முடியாமல் போனால் உமது கண்களுக்கு முன்னிலையிலேயே நான் என் உயிர் மூச்சுகளைக் கைவிடுவேன்” என்றார்”.(34)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “வஜ்ரதாரியான இந்திரன், உதங்கரைத் தமது நோக்கத்தில் இருந்து திசைத்திருப்பத்தவறி போது, அவரது கைத்தடியில் வஜ்ரத்தின் சக்தியை இணைத்தான்.(35) அப்போது, ஓ! ஜனமேஜயா, வஜ்ரத்தின் சக்தியுடன் கூடிய அந்தத் தாக்குதலால் திறந்த பூமி, நாகர்கள் வசிக்கும் (பாதாள) உலகங்களுக்குச் செல்ல வழிகொடுத்தது.(36) அந்தப் பாதையின் மூலம் உதங்கர் நாகலோகத்திற்குச் சென்றார். அந்த உலகம் அனைத்துப் பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான யோஜனைகள் விரிந்திருப்பதை அவர் கண்டார்.(37) உண்மையில், ஓ! அருளப்பட்டவனே, உண்மையில் அது பசும்பொன்னால் அமைக்கப்பட்டவையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான பல சுவர்களுடன் கூடியதாக இருந்தது.(38)

தூய ஸ்படிகத்தால் அமைக்கப்பட்ட படிகளுடன் கூடிய பல சிறந்த தடாகங்களும், தூய, தெளிந்த நீரைக் கொண்ட பல ஆறுகளும் அங்கே இருந்தன. பல்வேறு வகைப் பறவைகள் அமர்ந்திருக்கும் பல மரங்களையும் அவர் அங்கே கண்டார்.(39) பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவரான அவர், முழுமையாக ஐந்து யோஜனைகள் உயரமும், நூறு யோஜனைகள் அகலமும் கொண்ட அந்த உலகத்தின் வாயிலைக் கண்டார்.(40) நாகர்களின் உலகத்தைக் கண்ட உதங்கர் உற்சாகமிழந்தவரானார். உண்மையில், காதுகுண்டலங்களைத் திரும்பப் பெறும் எண்ணத்தில் அவர் மனத்தளர்ச்சியடைந்தார்.(41) அப்போது வெள்ளை வால் கொண்ட ஒரு கருப்புக் குதிரை அவர் முன்பு தோன்றியது. ஓ! குரு குலத்தவனே {ஜனமேஜயா}, அதன் முகமும் கண்களும் தாமிர வண்ணத்தில் இருந்தன. அது சக்தியால் சுடர்விடுவதாகத் தெரிந்தது.(42)உதங்கரிடம் பேசிய அஃது, “என்னுடலின் அபானக் குழாயில் {குதத்தில்} ஊதுவாயாக. ஓ! கல்விமானான பிராமணா, அப்போது ஐராவத குலத்தின் வழித்தோன்றலால் அபகரிக்கப்பட்ட உன் காதுகுண்டலங்களை நீ மீண்டும் பெறுவாய்.(43) ஓ! மகனே, நான் சொல்வதைச் செய்வதில் வெறுப்படைய வேண்டாம். முற்காலத்தில், கௌதமரின் ஆசிரமத்தில் நீ இதையே அடிக்கடி செய்துவந்தாய்” என்றது.(44)

உதங்கர், “என் ஆசானின் ஆசிரமத்தில் நான் எவ்வாறு உன்னை அறிந்தேன்? உண்மையில், நீ இப்போது செய்யச் சொன்னதை அந்தக் காலத்தில் நான் எவ்வாறு செய்தேன் என்பதைக் கேட்க விரும்புகிறேன்” என்றார்.(45)

அந்தக் குதிரை, “ஓ! கல்விமானான பிராமணா, நானே ஜாதவேதஸ் (நெருப்பின் தேவன் {அக்னி}) என்பதால், உன் ஆசானின் ஆசான் நானே என்பதை அறிவாயாக. உன் ஆசானின் நிமித்தமாக நீ அடிக்கடி என்னை வழிபட்டாய்.(46) ஓ! பிருகு குலத்தின் குழந்தாய், தூய இதயம் மற்றும் உடலுடன் முறையாக நீ அதைச் செய்தாய். அந்தக் காரணத்தினாலேயே நான் உனக்கான நன்மையைச் செய்யப் போகிறேன். தாமதமில்லாமல் நான் சொன்னதைச் செய்வாயாக” என்றது.(47)

நெருப்பின் தேவனால் இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர், அவன் சொன்னவாறே செய்தார். அவரிடம் நிறைவடைந்த அந்தத் தேவன் அனைத்தையும் விழுங்குவதற்குச் சுடர்விட்டு எரிந்தான்.(48) ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவனது உடலின் துளைகளில் இருந்து, அவனது இயல்பின் விளைவால், நாகலோகத்தையே அச்சுறுத்தும் அடர்த்தியான புகை எழுந்தது.(49) ஓ! பாரதா, பரந்துவிரியும் அந்தப் பெரும் புகையால் அனைத்தும் இருளுக்குள் மூழ்கின. ஓ! மன்னா, நாகலோகத்தில் அதற்கு மேல் எதையும் காணமுடியவில்லை.(50) ஓ! ஜனமேஜயா, ஐராவதர்களின் மாளிகைகள் முழுவதிலும் வாசுகியின் தலைமையிலான நாகர்களின் துன்ப ஓலம் கேட்டது.(51)

ஓ! பாரதா, அந்தப் புகையால் சூழப்பட்ட மாளிகைகளை அதற்கு மேலும் காண முடியவில்லை. அவை அடர்பனியில் மூழ்கியிருந்த காடுகளுக்கும், மலைகளுக்கு ஒப்பாக இருந்தன.(52) நெருப்பின் தேவனுடைய சக்தியால் பீடிக்கப்பட்டவர்களும், அந்தப் புகையின் விளைவால் கண்கள் சிவந்தவர்களுமான நாகர்கள், என்ன காரியம் என்பதை உறுதி செய்வதற்காகப் பிருகு குலத்தைச் சேர்ந்த அந்த உயர் ஆன்ம மைந்தரிடம் வந்தனர்.(53) அளவற்ற சக்தி கொண்ட அந்தத் தவசியிடம் இருந்து காரியத்தைக் கேட்ட நாகர்கள் அனைவரும் தங்கள் கண்களில் அச்சம் தெரிய, உரிய வடிவில் தங்கள் வழிபாட்டை அவருக்குக் காணிக்கையாக்கினர்.(54) உண்மையில், முதியவர்களையும், குழந்தைகளையும் தங்கள் முன் நிறுத்திக் கொண்ட நாகர்கள் அனைவரும் அவருக்குத் தலைவணங்கிக் கூப்பிய கைகளுடன், அவரிடம், “ஓ! புனிதமானவரே, எங்களிடம் நிறைவடைவீராக” என்றனர்.(55) அந்தப் பிராமணரை நிறைவடையச் செய்து, அவரது பாதங்களைக் கழுவி கொள்ள நீர் கொடுத்து, (அவரைக் கௌரவிக்க) அர்க்கிய உட்பொருட்களையும் கொடுத்து, தெய்வீகமானவையும், உயர்ந்த புகழைக் கொண்டதுமான அந்தக் காதுகுண்டலங்களையும் நாகர்கள் அவரிடம் கொடுத்தனர்.(56)பேராற்றல் கொண்ட உதங்கர், அவர்களால் இவ்வாறு கௌரவிக்கப்பட்டு, நெருப்பின் தேவனை வலம் வந்து, தமது ஆசானின் ஆசிரமத்திற்குப் புறப்பட்டார்.(57) உண்மையில், ஓ! மன்னா, கௌதமரின் ஆசிரமத்திற்கு விரைவாகத் திரும்பிய அவர், ஓ! பாவமற்றவனே, தமது ஆசானின் மனைவியிடம் அந்தக் காதுகுண்டலங்களைக் கொடுத்தார்.(58) அந்தப் பிராமணர்களில் சிறந்தவர் வாசுகி மற்றும் பிற நாகர்கள் குறித்தும், முன் நேர்ந்தவை குறித்தும் தமது ஆசானிடம் தெரிவித்தார்.(59) ஓ! ஜனமேஜயா, இவ்வாறே உயர் ஆன்ம உதங்கர் மூவுலகங்களிலும் திரிந்து (தமது ஆசானின் மனைவிக்காக) அந்தக் காது குண்டலங்களைக் கொண்டு வந்தார்.(60) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தவசியான உதங்கர் இத்தகைய ஆற்றலைக் கொண்டவராவார். அவ்வளவு கடுமையான தவங்களை அவர் செய்தவராவார். நீ கேட்டதை நான் உனக்குச் சொல்லிவிட்டேன்” {என்றார் வைசம்பாயனர்}[4].(61)

ரைவதகத் திருவிழா! – அஸ்வமேதபர்வம் பகுதி – 59-ரைவதக மலைக்குச் சென்ற கிருஷ்ணன்; அங்கு நடந்த விளையாட்டுகள்; துவாரகைக்கு வந்து பெற்றோரை வணங்கிய கிருஷ்ணன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உதங்கருக்கு வரமளித்த பிறகு வலிமைமிக்கக் கரங்களையும், பெரும்புகழையும் கொண்ட கோவிந்தன் அடுத்து என்ன செய்தான்?” என்று கேட்டான்.(1)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}“உதங்கருக்கு வரமளித்த கோவிந்தன், சாத்யகியின் துணையுடன், பெரும் வேகம் கொண்ட பெரிய குதிரைகளால் இழுக்கப்பட்ட தன் தேரில் துவாரகைக்குச் சென்றான்.(2) தடாகங்கள், ஆறுகள், காடுகள் மற்றும் மலைகளைக் கடந்து சென்ற அவன், இறுதியாக இனிமை நிறைந்த துவாராவதி நகரத்தை அடைந்தான்.(3) ஓ! மன்னா, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்} தன் தோழனான சாத்யகியுடன் ரைவதகத்திற்கு வந்த நேரத்தில் அங்கே திருவிழா {ரைவதக உற்சவம்} தொடங்கியிருந்தது.(4) ஓ! மன்னா, அந்த ரைவதக மலை பல அழகிய பொருட்களால் அலங்கரிக்கப்பட்டும், ரத்தினங்களால் செய்யப்பட்ட பல்வேறு கோஷங்களால் {கவசங்களால்} மறைக்கப்பட்டும் பெருங்காந்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(5)

அந்த உயர்ந்த மலை, சிறந்த தங்க மாலைகளாலும், அழகிய மலர்த்தோரணங்களாலும், இந்திரனின் தோட்டத்தில் உள்ள கல்ப மரங்களைப் போலத் தெரிந்த பெரும் மரங்கள் பலவற்றாலும்,(6) பகலும் இரவும் அழகுடன் ஒளிரும் வகையில் விளக்குகள் பொருத்தப்பட்ட தங்கத் தூண்கள் பலவற்றாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குகைகள் மற்றும் அருவிகள் இருந்த இடங்கள் பகல் நேரத்தைப் போல எப்போதும் பேரொளியுடன் திகழ்ந்தன.(7) அனைத்துப் பக்கங்களிலும் சிறு மணிகளுடன் கூடிய அழகிய கொடிகள் தொடர்ந்து கிங்கிணி ஒலியுடன் காற்றில் பறந்து கொண்டிருந்தன. மொத்த மலையும் ஆண்கள் மற்றும் பெண்களின் மெல்லிசைப் பாடல்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(8) ரைவதகம் அனைத்து ரத்தினங்களுடன் மேரு போன்று மிகக் கவர்ச்சியாகக் காட்சியளித்தது. ஓ! பாரதா, மகிழ்ச்சியில் நிறைந்தத் திளைப்பில் இருந்த ஆண்களும், பெண்கள் உரக்கப் பாடினார்கள்.(9) 

அந்த முதன்மையான மலையில் இவ்வாறு எழுந்த இசைப் பெருக்கம் சொர்க்கங்களையே எட்டுவதாகத் தோன்றியது. உற்சாகத்தின் அனைத்து நிலைகளிலும் இருந்த மனிதர்களின் ஒலிகளும், உரத்த குரல்களும் எங்கும் கேட்டுக் கொண்டிருந்தன.(10) ஆயிரக்கணக்கான குரல்களின் கொக்கரிப்பு அந்த மலையை இனிமை நிறைந்ததாகவும், அழகானதாகவும் ஆக்கியது. பல்வேறு உணவுப் பொருட்களும், அனுபவிக்கத்தகுந்த பொருட்களும் நிறைந்த பல கடைகள் மற்றும் நிலையங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(11) துணிகள் மற்றும் மாலைகளின் குவியல்களும் ஆங்காங்கே கிடந்தன, வீணைகள், புல்லாங்குழல்கள், மிருதங்கங்கள் ஆகியவற்றின் இசை எங்கும் கேட்கப்பட்டன. பல்வேறு வகை மதுபானங்கள் {கள் மற்றும் சாராயம்} கலந்த உணவு ஆங்காங்கே தேக்கப்பட்டிருந்தன.(12) 

துன்பமடைந்தவர்கள், குருடர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இடைவிடாமல் கொடைகள் வழங்கப்பட்டன. இவையாவற்றின் விளைவால் அந்த மலையின் திருவிழா மங்கலம் நிறைந்ததாக இருந்தது.(13) ஓ! வீரா, அறச்செயல்கள் செய்யும் மனிதர்கள் பலர் வசிப்பதற்குரிய புனித வசிப்பிடங்கள் பலவும் அந்த மலையின் சாரலில் கட்டப்பட்டிருந்தன. இவ்வாறே ரைவதகத் திருவிழாவில் விருஷ்ணி குல வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.(14) அந்த மாளிகைகளுடன் கூடிய அந்த மலை இரண்டாவது சொர்க்கத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் வந்ததும், ஓ! பாரதக் குலத்தின் தலைவா,(15) அந்த மலைகளின் இளவரசன் இந்திரனின் அருளப்பட்ட வசிப்பிடத்திற்கு ஒப்பானது.

(தன் உறவினர்களால்) வழிபடப்பட்டவனான கிருஷ்ணன் ஓர் அழகிய மாளிகைக்குள் நுழைந்தான். சாத்யகியும் திளைத்த ஆன்மாவுடன் தன் பகுதிக்குள் நுழைந்தான். தானவப் படைக்கு மத்தியில் வாசவனைப் போலப் பெருங்கடின சாதனைகளை நிறைவேற்றிய கோவிந்தன், நீண்ட காலம் இல்லாத பிறகு தன் வசிப்பிடத்திற்குள் நுழைந்தான். போஜ, விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் வீரர்கள் அனைவரும், நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனை} வரவேற்க முன்னேறும் தேவர்களைப் போல அந்த உயர் ஆன்மாவை {கிருஷ்ணனை} வரவேற்க முன்வந்தனர்.(16-18) 

பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான அவன், பதிலுக்கு அவர்களைக் கௌரவித்து, அவர்களுடைய நலம் குறித்து விசாரித்தான். நிறைவடைந்த இதயத்துடன் கூடிய அவன் {கிருஷ்ணன்} தன் தாயையும் தந்தையையும் வணங்கினான்.(19) வலிய கரங்களைக் கொண்ட அந்த வீரன் அவர்கள் இருவரையும் தழுவிக் கொண்டு (எண்ணற்ற அன்புச் சான்றுகளின் மூலம்) அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் செய்தான். பிறகு அவன், தன்னைச் சூழ்ந்து அமர்ந்திருந்த விருஷ்ணிகளுடன் சேர்ந்து அமர்ந்தான்.(20) தன் கால்களைக் கழுவி களைப்பை விலக்கியவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான கிருஷ்ணன் அங்கே அமர்ந்த போது, தன் தந்தையால் {வசுதேவரால்} தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அந்தப் பெரும்போரின் முக்கிய நிகழ்வுகளை நினைவுகூர்ந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(21)

போர்ச்சுருக்கம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 60- போர் குறித்த விபரம் கேட்ட வசுதேவர்; பதினெட்டு நாட்கள் நடந்த குருக்ஷேத்திரப் போரை மிகச் சுருக்கமாகச் சொன்ன கிருஷ்ணன்; வருத்தமடைந்த விருஷ்ணிகள்.

வசுதேவர் {கிருஷ்ணனின் தந்தை}, “ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, (குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற) அற்புதம் நிறைந்த போரைக் குறித்து மனிதர்கள் பேசுவதை நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.(1) எனினும், ஓ! வலிமைநிறைந்த கரங்களைக் கொண்டவனே, நீ உன் கண்களாலேயே அதைக் கண்டிருக்கிறாய். எனவே, ஓ! பாவமற்றவனே, அந்தப் போரைக் குறித்து விரிவாக நீ விளக்குவாயாக.(2) உண்மையில், (ஒரு தரப்பில் இருந்த) உயர் ஆன்ம பாண்டவர்களுக்கும், (மறுதரப்பில் இருந்த) பீஷ்மர், கர்ணன், கிருபர், துரோணர், சல்லியன் மற்றும் பிறர் ஆகியோருக்கிடையிலும்,(3) உண்மையில் முகத்தோற்றம் மற்றும் ஆடைகளில் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களும், ஆயுதங்களில் திறன்மிக்கவர்களும், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து வந்தவர்களுமான எண்ணற்ற வெவ்வேறு க்ஷத்திரியர்களுக்கிடையிலும் அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார் {வசுதேவர்}”.(4)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, தன் தாயாரின் {தேவகியின்} முன்னிலையில், தன் தந்தையால் {வசுதேவரால்} இவ்வாறு கேட்கப்பட்டதும், போரில் கௌரவ வீரர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை உரைத்தான்.(5)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “அந்த உயர் ஆன்ம க்ஷத்திரியர்களால் அடையப்பட்ட சாதனைகள் உயர்ந்த அற்புதம் நிறைந்தவையாகும். பெரும் எண்ணிக்கையில் இருந்ததன் விளைவால், நூறு வருடங்களானாலும் அவர்களைப் பட்டியலிட இயலாது.(6) எனினும், நான் அவர்களில் முதன்மையானோரைக் குறித்து மட்டுமே சொல்லப் போகிறேன். எனவே, ஓ! தேவரைப் போன்ற காந்தியைக் கொண்டவரே, பூமியின் மன்னர்களால் அடையப்பட்ட அந்தச் சாதனைகளைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக.(7)

தேவர்ப்படையில் வாசவனைப் போல, குரு குலத்தின் பீஷ்மர், பதினோரு பிரிவுகளாக {அக்ஷௌஹிணிகளாக}[1] இருந்த கௌரவ இளவரசர்களைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்ட படைத்தலைவரானார்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட சிகண்டி, அருள்நிறைந்த அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்டவனாகப் பாண்டு மகன்களின் ஏழு பிரிவுகளுக்கு {அக்ஷௌஹிணிகளுக்குத்} தலைவனானான்.(9) (இந்தத் தலைவர்களின் கீழ்) குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற போரானது பத்து நாட்கள் நீடித்தது. அது மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வண்ணம் கடுமையானதாக இருந்தது.(10) பிறகு, பெரும்போரில் காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} துணையைக் கொண்ட சிகண்டி, துணிவுடன் போரிட்டுக் கொண்டிருந்த கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எண்ணற்ற கணைகளைக் கொண்டு வீழ்த்தினான்.(11) வீரரான பீஷ்மர், தெற்கு நோக்கிய பாதையில் இருந்து சூரியன் வடக்குப் போக்கில் நுழையும் வரை ஒரு தவசியைப் போலக் கணைப்படுக்கையில் காத்திருந்து தன் உயிர் மூச்சுகளைக் கைவிட்டார்.(12)பிறகு, ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரும், தைத்தியர்களின் தலைவனுக்குக் காவியரை {சுக்கிராச்சாரியரைப்} போன்றவரும், துரியோதனனின் கீழ் இருந்த மனிதர்களில் பெரியவருமான துரோணர் படைத்தலைவரானார்.(13) போரில் தமதாற்றல் மீது எப்போதும் செருக்கு கொண்ட அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர், கௌரவப்படையில் எஞ்சியிருந்த ஒன்பது அக்ஷௌஹிணிகளாலும் ஆதரிக்கப்பட்டு, கிருபர், விருஷன் {கர்ணன்} மற்றும் பிறரால் பாதுகாக்கப்பட்டார்.(14) வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றை அறிந்தவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன், பாண்டவர்களின் தலைவனானான். மித்ரனால் பாதுகாக்கப்பட்ட வருணனைப் போல அவன் பீமரால் பாதுகாக்கப்பட்டான்.(15) தன் பலத்தை எப்போதும் துரோணருடன் அளவிட விரும்பும் அந்த உயர் ஆன்ம வீரன் {திருஷ்டத்யும்னன்}, (எஞ்சியிருந்த) பாண்டவப் படையால் ஆதரிக்கப்பட்டு, தன் தந்தைக்கு (பாஞ்சாலர்களின் மன்னனான துருபதனுக்குத் துரோணரால்) இழைக்கப்பட்ட குற்றங்களை நிறைவு கூர்ந்து, போரில் பெரும் சாதனைகளைச் செய்தான்.(16) துரோணருக்கும், பிருஷதன் மகனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலில் பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து அங்கு திரண்டிருந்த மன்னர்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டனர்.(17) அந்தக் கடும்போர் ஐந்து நாட்கள் நீடித்தது. அந்தக் காலத்தின் இறுதியில் திருஷ்டத்யும்னனிடம் துரோணர் வீழ்ந்தார்.(18)

அதன்பிறகு, துரியோதனனின் படைக்குக் கர்ணன் படைத்தலைவனானான். கௌரவப் படையில் எஞ்சியிருந்த ஐந்து அக்ஷௌஹிணிகளால் போரில் அவன் ஆதரிக்கப்பட்டான்.(19) பாண்டவர்களிடம் அப்போது மூன்று அக்ஷௌஹிணிகள் இருந்தன. எண்ணற்ற வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு, அர்ஜுனனால் பாதுகாப்பட்ட அவர்கள் போரிட வந்தனர்.(20) சூதனின் மகனான கர்ணன், சீற்றமிகு போர்வீரனாக இருப்பினும், சுடர்மிக்க நெருப்புடன் மோதும் ஒரு பூச்சியைப் போல இரண்டாம் நாளில் தன் முடிவை அடைந்தான்.(21)

கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு உற்சாகத்தை இழந்த கௌரவர்கள் தங்கள் சக்தி அனைத்தையும் இழந்தனர். எண்ணிக்கையில் மூன்று அக்ஷௌஹிணிகளாக இருந்த அவர்கள், மத்ர ஆட்சியாளனை {சல்லியனைச்} சூழ்ந்து திரண்டனர்.(22) தேர்வீரர்கள் பலரையும், யானைகளையும், குதிரைவீரர்களையும் இழந்து எண்ணிக்கையில் ஓர் அக்ஷௌஹிணியாக எஞ்சியிருந்த பாண்டவப் படை உற்சாகத்தை இழந்தவர்களாக (தங்கள் தலைவரான) யுதிஷ்டிரரை ஆதரித்தனர்.(23) குரு மன்னனான யுதிஷ்டிரர், தொடர்ந்து நடந்த போரில் செயற்கரிய சாதனைகளைச் செய்து, அரை நாளுக்கு முன்பே மத்ரர்களின் மன்னனை {சல்லியனைக்} கொன்றார்.(24)

சல்லியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அளவிலா ஆற்றலைக் கொண்ட உயர் ஆன்ம சகாதேவன், (பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில்) சச்சரவை உண்டாக்கிய சகுனியைக் கொன்றான்.(25)

சகுனியின் வீழ்ச்சிக்குப் பிறகு, பேரிழப்பை அனுபவித்த படையைக் கொண்டவனும், அதன் காரணமாக உற்சாகத்தை இழந்தவனும், கதாயுதம் தரித்தவனுமான திருதராஷ்டிரரின் அரச மகன் {துரியோதனன்} களத்தைவிட்டுத் தப்பி ஓடினான்.(26) அப்போது பேராற்றலைக் கொண்ட பீமசேனர், கோபத்தால் நிறைந்து அவனைத் தொடர்ந்து சென்று துவைபாயனத் தடாகத்தின் நீருக்கடியில் அவனைக் கண்டுபிடித்தார்.(27) எஞ்சியிருந்த தங்கள் படையுடன் கூடிய பாண்டவர்கள் அந்தத் தடாகத்தைச் சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக நீருக்குள் மறைந்திருந்த துரியோதனனிடன் போரிட்டனர்.(28) அவர்களுடைய சொற்கணைகள் நீருக்குள் ஊடுருவிச் சென்று துரியோதனனைத் துளைத்தன. அந்தத் தடாகத்தில் இருந்து எழுந்த அவன் {துரியோதனன்}, போரிட விரும்பியவனாகக் கதாயுதம் தரித்துப் பாண்டவர்களை அணுகினான்.(29) அப்போது தொடர்ந்து நடந்த பெரும்போரில் பல மன்னர்களின் முன்னிலையில் பேராற்றலை வெளிப்படுத்திய பீமசேனரால் திருதராஷ்டிரரின் அரச மகன் கொல்லப்பட்டான்.(30)

அதன்பிறகு எஞ்சியிருந்த பாண்டவப் படையினர் முகாமில் உறங்கிக் கொண்டிருந்தபோது, (திருஷ்டத்யும்னன் கைகளால்) தன் தந்தை கொல்லப்பட்டதைப் பொறுத்துக் கொள்ளப்பட முடியாத துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} அந்த இரவு நேரத்தில் கொல்லப்பட்டனர்.(31) மகன்கள் கொல்லப்பட்டவர்களும், படைகள் கொல்லப்பட்டவர்கள், நண்பர்கள் கொல்லப்பட்டவர்களுமான பாண்டவர்கள் ஐவரும், நானும், யுயுதானனும் {சாத்யகியும்} மட்டுமே உயிருடன் இருக்கிறோம்.(32) கௌரவப்படையில் கொல்லப்படாமல் எஞ்சியிருப்பவர்கள், கிருபர், போஜ இளவரசனான கிருதவர்மன்மற்றும்துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}ஆகியோராவர். திருதராஷ்டிரரின் மகனான யுயுத்சுவும் பாண்டவர்களின் தரப்பை ஏற்றதால் கொல்லப்படாமல் தப்பினான்.(33)

கௌரவ மன்னன் (சுயோதனன்) தன் தொண்டர்கள் மற்றும் கூட்டாளிகள் அனைவருடன் சேர்த்துக் கொல்லப்பட்ட பிறகு, விதுரரும், சஞ்சயனும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் முன்னிலைக்கு வந்தனர்.(34) இவ்வாறே, ஓ! தலைவரே, அந்தப் போர் பதினெட்டு நாட்கள் நீடித்தது. பூமியின் மன்னர்கள் பலர் அங்கே கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்” என்றான் {கிருஷ்ணன்}”.(35)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பயங்கரக் கதையைக் கேட்ட விருஷ்ணிகள், துயரம், சோகம் மற்றும் வருத்தத்தால் நிறைந்தனர்”.(36)

சுபத்திரையின் ஒப்பாரி! – அஸ்வமேதபர்வம் பகுதி – 61-அபிமன்யு கொல்லப்பட்டதைச் சொல்லுமாறு கிருஷ்ணனிடம் கேட்ட சுபத்திரை; அபிமன்யு வதத்தைக் கேட்டு மயக்கமடைந்த வசுதேவர்; வசுதேவரைத் தேற்றிய கிருஷ்ணன்..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பேராற்றல் கொண்ட உயர் ஆன்மாவான வாசுதேவன் {கிருஷ்ணன்}, தன் தந்தையின் {வசுதேவரின்} முன்னிலையில் பாரதர்களின் பெரும்போரைச் சொல்லி முடித்த பிறகு, அபிமன்யு கொல்லப்பட்டதை அந்த வீரன் {கிருஷ்ணன்} சொல்லாமல் கடந்து செல்வது வெளிப்படையாகத் தெரிந்தது. இனிமையற்ற எதையும் தன் தந்தை கேட்க வேண்டாம் என்பதே அந்த உயர் ஆன்மாவின் நோக்கமாக இருந்தது.(1,2) உண்மையில், தன் தந்தையான வசுதேவர், தமது மகளின் {சுபத்திரையின்} மகனுடைய மரணத்தைச் சொல்லும் பயங்கரச் செய்தியைக் கேட்டு கவலையாலும், துயரத்தாலும் பீடிக்கப்படுவதை நுண்ணறிவுமிக்கக் கிருஷ்ணன் விரும்பவில்லை.(3)

(அவனது தங்கையான) சுபத்திரை, தன் மகன் {அபிமன்யு} கொல்லப்பட்டது சொல்லப்படாததைக் கண்டு தன் அண்ணனிடம், “ஓ! கிருஷ்ணா {அண்ணா}, என் மகன் இறந்ததைச் சொல்” என்று சொல்லி விட்டு (மயங்கி) பூமியில் விழுந்தாள்.(4) வசுதேவர், தம் மகள் பூமியில் விழுவதைக் கண்டார். அதைக் கண்டதும் அவரும், துயரத்தில் மதி மயங்கியவராகக் கீழே விழுந்தார்.(5)

(உணர்வுகள் மீண்ட) வசுதேவர், தமது மகளின் மகனுடைய {தம் பேரனுடைய} இறப்பால் உண்டான துயரத்தால் பீடிக்கப்பட்டவராகக் கிருஷ்ணனிடம்,(6) “ஓ! தாமரைக்கண்ணா, வாக்கில் வாய்மை வாய்ந்தவனாக நீ பூமியில் புகழ்பெற்றிருக்கிறாய். எனினும், ஓ! பகைவரைக் கொல்பவனே, என் மகளின் மகனுடைய மரணத்தைக் குறித்து நீ ஏன் இன்று எனக்குச் சொல்லவில்லை?(7) ஓ! பலமிக்கவனே, உன் தங்கையின் மகன் கொல்லப்பட்டதைக் குறித்து விரிவாக எனக்குச் சொல்வாயாக. ஐயோ, உன்னைப் போலவே கண்களைக் கொண்ட அவன் போரில் பகைவர்களால் எவ்வாறு கொல்லப்பட்டான்?(8) ஓ! விருஷ்ணி குலத்தோனே, நூறு துண்டுகளாய்ப் பிளக்காமல் இருப்பதால், வேளை வராத போது மனிதர்களுடன் சேர்ந்து இதயமும் அழிவதில்லை என்று தெரிகிறது.(9) ஓ!… வீழ்ந்த நேரத்தில், தன் தாயைக் குறிப்பிட்டு அவன் சொன்ன சொற்கள் என்னென்ன? ஓ! தாமரைக்கண்ணா, ஓய்வற்ற கண்களைக் கொண்டவனும், என் அன்புக்குரியவனுமான அவன் எனக்குச் சொன்னது என்ன?(10) போரில் புறமுதுகிட்டு ஓடும்போது அவன் பகைவர்களால் கொல்லப்படவில்லை என நான் நம்புகிறேன் {அவன் புறமுதுகிடவில்லையல்லவா?}. ஓ! கோவிந்தா, போரிடும்போது அவனது முகம் உற்சாகத்தை இழக்கவில்லை என நான் நம்புகிறேன் {அவன் உற்சாகம் இழக்கவில்லையல்லவா?}.(11) ஓ! கிருஷ்ணா, வலிமையும், சக்தியும் நிறைந்தவனாக அவன் இருந்தான். பலமிக்க அந்த வீரன், தன் சிறுபிள்ளைத்தனத்தால், என் முன்னிலையில் (தன் ஆற்றலைத்) தற்புகழ்ந்து, (போரில்) தன் திறனைக் குறித்து என்னிடம் பேசுவானே.(12) அந்தப் பிள்ளை, துரோணர், கர்ணன், கிருபர் மற்றும் பிறரால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டுப் பூமியில் கிடக்கவில்லை என நான் நம்புகிறேன் {அவர்களால் வஞ்சகமாகக் கொல்லப்படவில்லையல்லவா?}. இவை யாவற்றையும் எனக்குச் சொல்வாயாக.(13) என் மகளுடைய மகன் {என் பேரனான அபிமன்யு}, போரில் பீஷ்மரையும், வலிமைமிக்கப் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான கர்ணனையும் எப்போதும் அறைகூவி அழைப்பானே” என்றார் {வசுதேவர்}.(14)

துயரம் மேலிட இத்தகைய புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தன் தந்தையிடம், அவரைவிட அதிகம் பீடிக்கப்பட்டவனான கோவிந்தன் {கிருஷ்ணன்} இந்தச் சொற்களால் பதிலளித்தான்,(15) “போரின் முன்னணியின் நின்று போரிட்ட அவனது முகம் ஒருபோதும் உற்சாகத்தை இழக்கவில்லை. அந்தப் போர் கடுமையானதாக இருந்தாலும் அவன் ஒருபோதும் புறமுதுகிடவில்லை.(16) பூமியின் மன்னர்களில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பேரைக் கொன்று துரோணருக்கும், கர்ணனுக்கும் துயரைக் கொண்டு வந்த அவன் இறுதியில் துச்சாசனன் மகனிடம் வீழ்ந்தான்.(17) ஓ! தலைவா, ஒற்றைக்கு ஒற்றையாக இடைவெளியே இல்லாமல் அவனுடன் போரிட்டிருந்தாலும் வஜ்ரதாரியாலும் {இந்திரனாலும்} போரில் அவனைக் கொல்ல முடியாது.(18)அவனுடைய தந்தையான அர்ஜுனன் (தன்னுடன் தனியாகப் போரிட அறைகூவியழைத்த) சம்சப்தகர்களால் மையப்பகுதியில் இருந்து விலகிச் சென்ற போது, போரில் துரோணரின் தலைமையிலானவர்களும், சீற்றத்துடன் கூடியவர்களுமான கௌரவவீரர்களால் அபிமன்யு சூழப்பட்டான்.(19) ஓ! தந்தையே, பெரும் எண்ணிக்கையிலான பகைவர்களைக் கொன்ற பிறகே உமது மகளின் மகன் {பேரன் அபிமன்யு} இறுதியாகத் துச்சாசனன் மகனிடம் வீழ்ந்தான்[1].(20)அவன் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறான் என்பதில் ஐயமில்லை. ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவரே, உம்முடைய இந்தத் துயரத்தைக் கொல்லும். தெளிவான புத்தி கொண்டவர்கள் துயரமேதும் அடையும்போது ஒருபோதும் அவர்கள் நலிவடைவதில்லை.(21) வலிமையில் இந்திரனுக்கு நிகரான வீரர்களான துரோணரையும், கர்ணனையும், பிற வீரர்களையும் எதிர்த்தவனான அவன், ஏன் சொர்க்கத்திற்கு உயராமல் இருக்கப் போகிறான்?(22) ஓ! தடுக்கப்பட முடியாதவரே, நீர் உம்முடைய இந்தத் துயரத்தைக் கொல்வீராக. கோபத்தின் ஆளுகைக்குள் கிடந்து துன்புறாதீர். பகை நகரங்களை வெல்பவனான அவன், ஆயுத முனையில் அடையும் மரணத்தைச் சார்ந்த புனித இலக்கை அவன் அடைந்துவிட்டான்.(23)

அந்த வீரன் {அபிமன்யு} வீழ்ந்த பிறகு துயரால் பீடிக்கப்பட்ட என்னுடைய தங்கையான இந்தச் சுபத்திரை, குந்தியைக் கண்டபோது பெண் அன்றிலை {குரரிபக்ஷியைப்} போல உரத்த ஒப்பாரியில் ஈடுபட்டாள்.(24)

துயரத்தில் இருந்த அவள் திரௌபதியிடம், “ஓ! மதிப்புக்குரிய பெண்ணே {அம்மா}, நம் மகன்கள் அனைவரும் எங்கே? நான் அவர்களைக் காண விரும்புகிறேன்” என்றாள்.(25)

அவளுடைய ஒப்பாரியைக் கேட்ட கௌரவப் பெண்மணிகள் அனைவரும் அவளைத் தழுவிக்கொண்டு அவளைச் சூழ்ந்து அமர்ந்து அழுதனர்.(26)

(தன் மருமகளான) உத்தரையைக் கண்ட அவள், “ஓ! அருளப்பட்ட பெண்ணே, உன் கணவன் எங்கே சென்றுவிட்டான்? அவன் திரும்பி வரும்போது, ஒருக்கணமும் தாமதிக்காமல் அது குறித்து எனக்குத் தெரிவிப்பாயாக.(27) ஐயோ, ஓ! விராடன் மகளே {உத்தரையே}, என் குரலைக் கேட்ட உடனேயே ஒரு கணமும் தாமதிக்காமல் தன் அறையில் இருந்து அவன் வெளி வருவான். உன் கணவன் இன்று ஏன் வரவில்லை?(28) ஐயோ, ஓ! அபிமன்யு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான உன் தாய்மாமன்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள். போருக்கு ஆயத்தமாக இங்கே நீ வருவதைக் காணும்போதெல்லாம் அவர்கள் உன்னை வாழ்த்தினார்கள்.(29) ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, முன்பு போலவே இன்று போரில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் எனக்குச் சொல்வாயாக. ஓ! இவ்வாறு அழுது புலம்பும் எனக்ககு நீ ஏன் பதிலளிக்காமல் இருக்கிறாய்” என்று சொல்லி அழுதாள் {சுபத்திரை}.(30)

விருஷ்ணி குலமகளின் இந்த ஒப்பாரியைக் கேட்ட பிருதை {குந்தி}, ஆழ்ந்த துயரத்தில் பீடிக்கப்பட்டவளாக அவளிடம் மெதுவாக,(31) “ஓ! சுபத்திரா, வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி மற்றும் தன் தந்தை {அர்ஜுனன்} ஆகியோரால் பாதுகாக்கப்பட்டாலும், இளைஞனான உன் மகன் கொல்லப்பட்டிருக்கிறான். இந்தக் கொலை காலத்தின் ஆதிக்கத்தால் நேர்ந்திருக்கிறது.(32) ஓ! யதுகுல மகளே, உன் மகன் இறவாதவனாக {அமரனாக} இருந்தான். வருந்தாதே. போரில் தடுக்கப்பட முடியாதவனான உன் மகன் உயர்ந்த இலக்கை அடைந்துவிட்டான் என்பதில் ஐயமில்லை.(33) உயர் ஆன்ம க்ஷத்திரியர்களின் உயர் குலத்தில் பிறந்தவள் நீ. ஓ! ஓய்வற்றபார்வை கொண்டவளே, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட பெண்ணே, வருந்தாதே.(34) குழந்தையைக் கருவில் சுமக்கும் உத்தரையின் மேல் உன் விழிகளைச் செலுத்துவாயாக. ஓ! அருளப்பட்ட மங்கையே, துயரத்தின் வசப்படாதே. இந்த மங்கலப் பெண் {உத்தரை}, விரைவில் அந்த வீரனுக்கு {அபிமன்யுவுக்கு} ஒரு மகனை ஈன்றெடுப்பாள்” என்றாள் {குந்தி}.(35)

ஓ! யது குலத்தைத் தழைக்கச் செய்பவரே {வசுதேவரே}, ஓ! தடுக்கப்பட முடியாதவரே, கடமைகள் அனைத்தையும் அறிந்தவளான குந்தி, இவ்வழியில் அவளுக்கு ஆறுதலளித்து, தன் துயரத்தைக் கைவிட்டு, ஆற்றலில் யமனுக்கு ஒப்பானவர்களான மன்னர் யுதிஷ்டிரர், பீமர், இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்) ஆகியோரின் ஏற்புடன் அபிமன்யுவின் ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தாள். பிராமணர்களுக்குக் கொடையளித்த அவள்,(36,37) ஓ! யது குலத்தைத் தழைக்கச் செய்பவரே, அவர்களுக்குப் பல பசுக்களையும் கொடுத்தாள்.

பிறகு அந்த விருஷ்ணி வீரமகள் (குந்தி), சிறு ஆறுதல் அளிக்கும் வகையில் விராடன் மகளிடம் {உத்தரையிடம்},(38) “ஓ! விராடனின் குற்றமற்ற மகளே, நீ வருந்தலாகாது. ஓ! உருண்ட இடைகளைக் கொண்டவளே, உன் கணவனுக்காக உன் கருவறையில் உள்ள பிள்ளையைப் பாதுகாப்பாயாக” என்றாள்.(39)

ஓ! பெருங்காந்தி கொண்டவரே, இச்சொற்களைச் சொன்னதுடன் குந்தி நிறுத்திக் கொண்டாள். அவளுடைய {குந்தியின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு, சுபத்திரையை இங்கே நான் அழைத்து வந்தேன்.(40) ஓ! கௌரவங்களை அளிப்பவரே, இவ்வாறே, உமது மகளின்{சுபத்திரையின்} மகன்{அபிமன்யு} தன் மரணத்தை அடைந்தான். ஓ! தடுக்கப்பட முடியாதவரே, எரியும் துயரைக் களைவீராக. உண்மையில், கவலையில் உமது இதயத்தை நிறுவாதீர்” என்றான் {கிருஷ்ணன்}”.(41)

அஸ்வமேதயாகம் செய்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 62-அபிமன்யுவுக்கு ஸ்ராத்தஞ்செய்த வசுதேவர்; ஹஸ்தினாபுரம் வந்து உத்தரையைத் தேற்றிய வியாசர்; யுதிஷ்டிரனை அஸ்வமேத வேள்வி செய்யத் தூண்டியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தம்மகன் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} சொற்களைக் கேட்டவரும், நீதிமிக்க ஆன்மா கொண்டவருமான அந்தச் சூர குல வழித்தோன்றல் {வசுதேவர்}, தமது துயரத்தைக் கைவிட்டு (அபிமன்யுவுக்குச்) சிறந்த ஈமக் காணிக்கைகளை அளித்தார் {ஸ்ராத்தஞ்செய்தார்}.(1) வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தன் தந்தையின் அன்புக்குரியவனும், தன் மருமகனுமான அவன் {அபிமன்யு} (சொர்க்கத்திற்கு) உயர்வதற்கான அந்தச் சடங்குகளைச் செய்தான்.(2) பெருஞ்சக்தி கொண்டவனான அவன் {கிருஷ்ணன்}, அறுபது லட்சம் பிராமணர்களுக்கு ஏற்புடைய அனைத்துக் குணங்களுடன் கூடிய உணவைப் படைத்தான்.(3) அவர்களுக்குத் துணிமணிகள் பலவற்றைக் கொடுத்த கிருஷ்ணன், அந்தப் பிராமணர்களின் செல்வ தாகத்தைத் தணித்தான். கொடையளிக்கப்பட்ட பொற்குவியல்களும், பசுக்கள், படுக்கைகள், துணிமணிகளின் எண்ணிக்கையும் ஆச்சரியகரமானவையாக இருந்தன. அந்தப் பிராமணர்கள், “(கிருஷ்ணனின் செல்வம்) பெருகட்டும்” என்று உரக்க அறிவித்தார்கள்.(4,5)

பிறகு, தசார்ஹ குலத்தோனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, பலதேவன் {பலராமன்}, சாத்யகி, சத்யகன் ஆகியோர் ஒவ்வொருவரும் அபிமன்யுவுக்கான ஈமச் சடங்குகளை {சிராத்தம்} செய்தனர்.(6) துயரால் மிகவும் பீடிக்கப்பட்ட அவர்கள் ஆறுதலேதும் அடையத் தவறினர். யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} பாண்டு மகன்களின் நிலையும் இவ்வாறே இருந்தது.(7) ஓ! ஏகாதிபதி, விராடனின் மகள் {உத்தரை}, தன் கணவனின் இறந்த துயரத்தால் மிகவும் பீடிக்கப்பட்டவளாக மொத்தமாக உணவனைத்தையும் தவிர்த்தாள். இதனால் அவளது உறவினர்கள் அனைவரும் பெருந்துயரத்தில் மூழ்கினர்.(9)

அப்போது தமது ஆன்மப் பார்வையால் அனைவரின் நிலைகளையும் அறிந்த வியாசர் அங்கே வந்தார். உயர்ந்த நுண்ணறிவையும், பெருஞ்சக்தியையும் கொண்ட அந்த முனிவர், (அரண்மனைக்கு வந்து), நீண்ட கண்களைக் கொண்ட பிருதையிடம் {குந்தியிடம்} பேசிவிட்டு,(10) உத்தரையிடம், “இத்துயரைக் கைவிடுவாயாக. ஓ! புகழ்பெற்ற பெண்ணே, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பலத்தாலும், என் சொல்லாலும் பெருஞ்சக்தி கொண்ட மகன் ஒருவன் {பரீக்ஷித்} உனக்குப் பிறப்பான். அந்த மகனே பாண்டவர்களுக்குப் பிறகு (அவர்கள் பூமியை விட்டுச் சென்ற பிறகு} பூமியை ஆள்வான்” என்றார்.(12)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்ட அவர் {வியாசர்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் கேட்டுக் கொண்டிருக்கையில், தன் சொற்களால் அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில்,(13) “ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, உன் பேரன் ஓர் உயர் ஆன்ம இளவரசனாவான். கடலின் விளிம்பு வரையுள்ள மொத்த பூமியையும் அவன் நீதியுடன் ஆட்சி செய்வான்.(14) எனவே, ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, ஓ! பகைவரை வெட்டுபவனே, இத்துயரைக் களைவாயாக. இதில் ஐயங்கொள்ளாதே. உண்மையில் இது நடக்கும்.(15) முன்பு விருஷ்ணி வீரனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்டது நிச்சயம் நடக்கும். வேறு வகையில் நினைக்காதே.(16) அபிமன்யுவைப் பொறுத்தவரையில், அவன் தன் செயல்களால் வென்ற தேவ லோகங்களுக்குச் சென்றிருக்கிறான். அந்த வீரனுக்காக நீயோ, குருக்களில் பிறரோ வருந்தலாகாது” என்றார் {வியாசர்}.(17)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவ்வாறு தன் பாட்டனால் {வியாசரால்} சொல்லப்பட்டவனும், நீதிமிக்க ஆன்மா கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் துயரைக் கைவிட்டு, உற்சாகம் நிறைந்தனவாக ஆனான்.(18) ஓ! இளவரசே, ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, கடமைகள் அனைத்தையும் அறிந்தவனான உன் தந்தை {பரீக்ஷித்}, வளர்பிறைச் சந்திரனைப் போல {உத்தரையின்} அந்தக் கருவறையில் வளர்ந்தான்.(19) பிறகு வியாசர், தர்மனின் அரச மகனிடம் குதிரை வேள்வி செய்வதற்குத் தூண்டினார்[1]. இவ்வாறு சொன்ன அவர் அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(20) நுண்ணறிவுமிக்கவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், வியாசரின் சொற்களைக் கேட்டு, (வேள்விக்கான) செல்வத்தைக் கொண்டு வரும் பயணத்தில் தன் மனத்தை நிலைநிறுத்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(21)

இமயப்பயணம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 63-வியாசரின் ஆணைப்படி தம்பிமாருடன் ஆலோச்சித்த யுதிஷ்டிரன்; வேள்விக்குத் தேவையான செல்வத்தைக் கொண்டு வர இமய மலைக்குச் சென்றது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, குதிரை வேள்வி குறித்து உயர் ஆன்ம வியாசரால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்டு யுதிஷ்டிரனால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?(1) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, மருத்தன் பூமிக்கடியில் புதைத்து வைத்த செல்வத்தை அடைவதில் மன்னன் வென்றது எவ்வாறு?” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தீவில் பிறந்த தவசியின் {வியாசரின்} சொற்களைக் கேட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகளான அர்ஜுனன், பீமசேனன் மற்றும் மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகிய அனைவரையும் உரிய நேரதில் அழைத்து, அவர்களிடம் (பின்வரும் சொற்களில்),(3) “வீரர்களே, உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவரும், உயர் ஆன்மாவுமான கிருஷ்ணர் {வியாசர்}[1]குருக்களிடம் கொண்ட நட்பின் நிமித்தமும், அவர்களுக்கு நன்மை செய்ய விரும்பியும் சொன்ன சொற்களைக் கேட்டீர்கள். உண்மையில், அபரிமிதமான தவங்களைச் செய்தவரும், நண்பர்களுக்குச் செழிப்பை வழங்கவல்லவரும்,(4,5) நேர்மையான ஒழுக்கம் கொண்ட ஆசானும், அற்புதச் செயல்களைச் செய்தவருமான அந்தப் பெருந்தவசியால் {வியாசரால்} சொல்லப்பட்ட அந்தச் சொற்களைக் கேட்டீர்கள்.பீஷ்மர் சொன்னதையும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட கோவிந்தன் {கிருஷ்ணன்} சொன்னதையும் நீங்கள் கேட்டீர்கள்.(6) பாண்டுவின் மகன்களே, அச்சொற்களை நினைவுகூரும் நான் அவற்றுக்கு முறையாகக் கீழ்ப்படிய விரும்புகிறேன். அவர்களுடைய சொற்களுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் உங்கள் அனைவருக்கும் பேரருள் கிட்டும்.(7) பிரம்மத்தை ஓதுபவர்களால் சொல்லப்படும் சொற்கள் (அந்தச் சொற்களுக்குக் கீழ்ப்படிவது) குறிப்பிடத்தக்க நன்மையை நிச்சயம் கொண்டு வரும். குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்களே, பூமாதேவி செல்வத்தை இழந்தவளாக இருக்கிறாள்.(8) எனவே மன்னர்களே, (பூமிக்குள் புதைந்து கிடக்கும்) மருத்தனின் செல்வத்தைக் குறித்து வியாசர் நமக்குச் சொன்னார். அந்தச் செல்வம் அதிகமானது, அல்லது போதுமானது என நீங்கள் நினைத்தால்,(9) அதை நாம் (நமது தலைநகருக்குக்) கொண்டு வருவது எவ்வாறு? ஓ! பீமா, இது குறித்து நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.

ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, மன்னன் இச்சொற்களைச் சொன்ன போது,(10) பீமசேனன் தன் கரங்களைக் குவித்து, மறுமொழியாக இந்தச் சொற்களில், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, வியாசரால் குறிப்பிடப்பட்டச் செல்வத்தைக் கொண்டு வருவது குறித்து நீர் சொன்ன சொற்களை நான் ஏற்கிறேன். ஓ! பலமிக்கவரே, அவிக்ஷித்தின் மகனால் {மருத்தனால்} அங்கே வைக்கப்பட்ட செல்வத்தை அடைவதில் நாம் வென்றால்,(11,12) ஓ! மன்னா, அப்போது நம்மால் கருதப்படும் இந்த வேள்வியை எளிதாக நடத்தலாம். இதையே நான் நினைக்கிறேன். எனவே, நாம் உயர் ஆன்ம கிரீசனுக்கு {சிவனுக்கு} தலைவணங்கி,(13) அந்தத் தேவனுக்கு உரிய காணிக்கையளித்து, அந்தச் செல்வத்தைக் கொண்டுவருவோம். நீர் அருளப்பட்டிருப்பீராக. தேவர்களுக்குத் தேவனையும் {சிவனையும்}, அவனது தோழர்கள் மற்றும் தொண்டர்களையும் {பூதகணங்களையும்}, சொல்லாலும், எண்ணத்தாலும், செயலாலும் நிறைவடையச் செய்து, நிச்சயம் நாம் அந்தச் செல்வத்தை அடையப் போகிறோம். காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தப் பெருந்தேவன் {சிவன்} நம்மிடம் நிறைவடைந்தால், அந்தப் புதையலைப் பாதுகாக்கும் பயங்கர முகத்தோற்றம் கொண்ட கின்னரர்களும் நிச்சயம் நம் வசப்படுவார்கள்” என்றான்.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, பீமனால் சொல்லப்பட்ட இந்தச் சொற்களைக் கேட்டவனும்,(14-16) தர்மனின் மகனுமான மன்னன் யுதிஷ்டிரன் உயர்வான நிறைவை அடைந்தான். அதே நேரத்தில், அர்ஜுனனின் தலைமையிலான பிறரும் {மற்ற தம்பிகளும்}, “அப்படியே ஆகட்டும்” என்றனர்.(17)

அந்தச் செல்வத்தைக் கொண்டு வருவது எனத் தீர்மானித்த பாண்டவர்கள், துருவ நட்சத்திரம் மற்றும் அதே பெயரால் {துருவம் என்ற பெயரால்} அழைக்கப்படும் நாளில் தங்கள் படைகளை அணிவகுக்க ஆணையிட்டனர்[2].(18) அந்தப் பாண்டுவின் மகன்கள், பிராமணர்களைத் தங்களுக்கு ஆசிகூற {ஸ்வஸ்திவாசனம் செய்யும்படிச்} செய்து, பெருந்தேவனான மஹேஸ்வரனை முறையாக வழிபட்டு (தங்கள் காரியத்திற்குப்) புறப்பட்டுச் சென்றனர்.(19) மோதகங்கள், பாயஸம், இறைச்சியால் செய்யப்பட்ட பிண்டங்கள் {மாம்ஸம், ஆபூபங்கள்} ஆகியவற்றைக் கொண்டு அந்த உயர் ஆன்ம தேவனை நிறைவடையச் செய்த பாண்டுவின் மகன்கள், உற்சாகமிக்க இதயங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.(20)அவர்கள் அவ்வாறு புறப்பட்டுச் சென்றபோது, குடிமக்களும், பிராமணர்களில் முதன்மையானோர் பலரும், உற்சாகமிக்க இதயங்களுடன் (அவர்களுடைய தலைகளில் {கைவைத்து}) மங்கல ஆசிகளைக் கூறினர்.(21) பாண்டவர்கள், தங்கள் தங்கள் நெருப்புகளை நாள்தோறும் வழிபடும் பிராமணர்கள் பலரை வலம் வந்து, அவர்களுக்குத் தலைவணங்கி தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.(22) மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருந்த மன்னன் திருதராஷ்டிரன், அவனது ராணி (காந்தாரி) மற்றும் நீண்ட கண்களைக் கொண்ட பிருதை {குந்தி} ஆகியோரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு,(23) திருதராஷ்டிரன் மகனான கௌரவ இளவரசன் யுயுத்சுவை தலைநகரில் {ஹஸ்தினாபுரத்தில்} நிறுவிய அவர்கள், குடிமக்களாலும், பெரும் ஞானம் கொண்ட பிராமணர்கள் பலராலும் வழிபடப்பட்டுப் புறப்பட்டுச் சென்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

இமய முகாம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 64-இமயம் நோக்கிப் புறப்பட்ட பாண்டவர்கள்; இடத்தை அடைந்து முகாமை அமைத்தது; பிராமணர்களின் தொடக்கச் சடங்குகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது அவர்கள் உற்சாகம் நிறைந்த இதயங்களுடனும், இணையான உற்சாகம் நிறைந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளின் துணையுடனும் {இமயத்தை நோக்கி} புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் தங்கள் சக்கரங்களின் சடசடப்பொலியால் மொத்த பூமியையும் நிறைத்தனர்.(1) துதிபாடிகள், சூதர்கள், மாகதர்கள் மற்றும் வந்திகளால் புகழ்பாடப்படவும், தங்கள் படையின் ஆதரவுடனும் சென்ற அவர்கள் கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பல ஆதித்தியர்களைப் போலத் தெரிந்தனர்.(2) தலைக்கு மேல் பிடிக்கப்பட்ட வெண்குடையுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், இரவில் நட்சத்திரங்களின் தலைவன் முழுமையாக இருப்பதை {இரவில் முழுநிலவைப்} போன்ற அழகுடன் ஒளிர்ந்தான்.(3)

மனிதர்களில் முதன்மையானவனும், பாண்டு மகன்களில் மூத்தவனுமான அவன் {யுதிஷ்டிரன்}, தன் வழியில் செல்லும்போது மகிழ்ச்சி நிறைந்தவர்களான தன் குடிமக்களின் ஆசிகளையும், வாழ்த்துகளையும் உரிய வடிவில் ஏற்றுக் கொண்டான்.(4) மன்னனைப் பின்தொடர்ந்த படைவீரர்களைப் பொறுத்தவரையில், குழப்பமான அவர்களது முணுமுணுப்புகள் மொத்த ஆகாயத்தையும் நிறைப்பதாகத் தெரிந்தது. அந்தப் படை பல தடாகங்கள், ஆறுகள், காடுகள் மற்றும் இன்பத்தோட்டங்களைக் கடந்து சென்றது. இறுதியாக அவர்கள் அந்த மலையை {இமய மலையை} அடைந்தனர்.(6)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தச் செல்வம் புதைக்கப்பட்ட பகுதியை அடைந்த அரசன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் அனைவருடன் கூடிய துருப்புகளுடன் தன் முகாமை அமைத்தான்.(7) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அக்காரியத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி முற்றிலும் சமமானதாகவும், மங்கலமானதாகவும் இருந்தது. ஓ! குரு குலத்தோனே, அங்கே, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தவம், கல்வி மற்றும் தற்கட்டுப்பாட்டுடன் கூடிய பிராமணர்களையும்,(8) வேதங்கள் மற்றும் அதன் கிளைகளை நன்கறிந்தவரான தன் புரோகிதர் ஆக்நிவேஷ்யரையும் {தௌமியரையும்} முன்னிலையில் கொண்டு தன் முகாமை அமைத்தான்[1]. அதன் பிறகு, பாண்டுவின் அரச மகன்களும், (அந்தப் பயணத்தில் உடன் சென்ற) பிற மன்னர்களும், வேள்விச் சடங்குகளில் நன்கு திறம்பெற்றவர்களான பிராமணர்களும், புரோகிதர்களும் முறையாகத் தொடக்கச் சடங்குகளைச் செய்து அந்த இடமெங்கும் பரவியிருந்தார்கள். மன்னனையும், அவனது அமைச்சர்களையும் நடுவில் கொண்டு,(9,10) ஆறு சாலைகள் மற்றும் ஒன்பது பிரிவுகளையும் {கண்டங்களையும்} அமைத்து அங்கே அந்தப் பிராமணர்கள் முகாமை அமைத்தனர்[2]. மன்னன் யுதிஷ்டிரன், தன் படையுடன் கூடிய மதங்கொண்ட யானைகளுக்கென ஒரு தனி முகாமை அமைக்கச் செய்தான்.அனைத்தும் நிறைவடைந்தபோது, அவன் {யுதிஷ்டிரன்}, பிராமணர்களிடம், “முதன்மையான பிராமணர்களே, “நடக்க இருக்கும் காரியத்தைக் கருத்தில் கொண்டு செய்யப்படவேண்டியவை என்று நீங்கள் நினைப்பவற்றைச் செய்வீராக. உண்மையில், ஒரு மங்கல நாளையும், நட்சத்திரத்தையும் அதற்காகத் தேர்ந்தெடுப்பீராக. நாம் இங்கே ஆவலில் தவித்துக் காத்திருக்கும்போது, நீண்ட காலம் கழிந்துவிடக்கூடாது. கல்விமானான பிராமணர்களில் முதன்மையானவர்களே, இந்தத் தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, இதன் பிறகு என்ன செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்யுங்கள்” என்றான்.(11-13)

மன்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவர்களும், அங்கிருந்தவர்களில் அறச்சடங்குகள் செய்வதில் திறம்பெற்றவர்களுமான பிராமணர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி,(14) “இன்றே நட்சத்திரமும், நாளும் மங்கலமானவையாக இருக்கின்றன. எனவே, நாங்கள் கருதும் அந்த உயர்ந்த சடங்குகளை நிறைவேற்ற {இன்றே} முனைவோம். ஓ! மன்னா, இன்று நாங்கள் நீரை மட்டுமே பருகி வாழ்வோம். நீங்களும் இன்று உண்ணாநோன்பைக் கடைப்பிடிப்பீராக” என்றனர்.(15)

அந்த முதன்மையான பிராமணர்களின் சொற்களைக் கேட்ட பாண்டுவின் அரச மகன்கள், உணவனைத்தையும் தவிர்த்து, வேள்வியில் சுடர்விடும் நெருப்பைப் போலக் குசப்புல் படுக்கைகளில் நம்பிக்கையுடன் கிடந்து அவ்விரவைக் கழித்தனர்.(16) கல்விமான்களான (பல்வேறு காரியங்கள் குறித்துப் பேசிய) பிராமணர்களின் உரையாடல்களை அவர்கள் கேட்டுக் கொண்டு இருந்தபோதே இரவு கழிந்தது. மேகமற்ற காலைவேளை உதித்த போது, பிராமணர்களில் முதன்மையான அவர்கள் தர்மனின் அரச மகனிடம் (பின்வருமாறு) பேசினர்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

அகழப்பட்ட புதையல்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 65- பூதகணங்களுடன் கூடிய சிவனைக் காணிக்கைகளால் நிறைவடையச் செய்த யுதிஷ்டிரன்;.இமயத்தில் இருந்து செல்வத்தை எடுத்துக் கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்பியது…

பிராமணர்கள், “உயர் ஆன்மாவான முக்கண் மஹாதேவனுக்குக் காணிக்கைகள் அளிக்கப்படட்டும். ஓ! மன்னா, அந்தக் காணிக்கைகளை முறையாக அர்ப்பணித்த பின்னர் நாம் நமது நோக்கத்தை ஈட்ட முனைவோம்” என்றனர்.(1)

அந்தப் பிராமணர்களின் சொற்களைக் கேட்ட யுதிஷ்டிரன், மலைச்சாரலில் கிடக்க விரும்பும் அந்தத் தேவனுக்கு {சிவனுக்கு} காணிக்கைகளை முறையாக அளிக்கச் செய்தான்.(2) விதிப்படி (ஆகுதியான) புனித நெய்யால் (வேள்வி) நெருப்பை நிறைவடையச் செய்த புரோகிதர் (தௌமியர்) மந்திரங்களின் உதவியால் சருவைச் சமைத்து தேவையான சடங்குகளைச் செய்தார்.(3) ஓ! மன்னா, அவர் மலர்கள் பலவற்றை எடுத்து மந்திரங்களால் அவற்றைப் புனிதப்படுத்தினார். மோதகங்கங்கள், பாயஸம் மற்றும் இறைச்சியை அவர் அந்தத் தேவனுக்குக் காணிக்கையளித்தார்.(4) வேதங்களில் நன்கு திறம்பெற்ற தௌமியர், பல்வேறு வகை மலர்கள், மிக மேன்மையான வகைச் சார்ந்த பொரிகள் ஆகியவற்றைக் கொண்டு எஞ்சிய சடங்குகளை {ஸ்விஷ்டகிருத் என்னும் ஹோமத்தை முழுதும் விதிப்படி} செய்தார்.(5)

அடுத்ததாக அவர் மஹாதேவனின் அணிவகுப்பில் அமையும் கிங்கரர்களுக்கு விதிப்படியான காணிக்கைகளை அளித்தார். அடுத்ததாக யக்ஷர்களின் தலைவனான குபேரனுக்கும், மாணிபத்ரனுக்கும் காணிக்கைகள் வழங்கப்பட்டன.(6) அந்தப் புரோஹிதர் {தௌமியர்}, உணவு, கிருஸரம், இறைச்சி மற்றும் எள்ளுடன் கலந்த நிவாபங்கள் {தர்ப்பண நீர்} ஆகியவற்றைப் பல குடங்களில் நிறைத்து, வேறு யக்ஷர்களுக்கும், மஹாதேவனின் தோழர்களான பூதங்களில் முதன்மையாவர்களுக்கும் {பூதபதிகளுக்கும்} முறையான வழிபாட்டைக் காணிக்கையாக்கினார். மன்னன் {யுதிஷ்டிரன்} பிராமணர்களுக்கு ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையளித்தான்.(7,8)

அதன் பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, (மஹாதேவனுடன் வாழும்) இரவுலாவிகளுக்கு {கணங்களுக்கு} உரிய சடங்குகளின்படி காணிக்கைகளை அளிக்கச் செய்தான். தூப மணத்தால் பரவியிருந்ததும், மலர்களின் நறுமணத்தால் நிறைந்திருந்ததும்,(9) தேவர்களின் தேவனுக்குப் புனிதமானதுமான அந்தப் பகுதி இனிமை நிறைந்ததாக ஆனது. ருத்திர வழிபாடு மற்றும் கணங்கள் அனைத்திற்குமான வழிபாடுகளைச் செய்த பிறகு,(10) வியாசரை முன்னிலையில் நிறுத்திய மன்னன் {யுதிஷ்டிரன்}, புதையல் புதைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றான். பல்வேறு வகை மலர்கள், பிண்டங்கள் மற்றும் கிருஸரம்[1] ஆகியவற்றைக் கொண்ட மதிப்புடனும் அவனை வணங்கி, மீண்டும் கருவூலங்களின் தலைவனை முறையாக வழிபட்டு, சங்கம் மற்றும் நிதி என்ற முதன்மையான ரத்தினங்களையும், ரத்தினங்களின் தலைவர்களான அந்த யக்ஷர்களையும் வழிபட்டு[2],(11,12) பிராமணர்களில் முதன்மையானோர் பலரை வழிபட்டு, அவர்களை ஆசி கூற {ஸ்வஸ்திவாசனம் செய்யச்} செய்த பெரும் பலம் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணர்களின் சக்தி மற்றும் மங்கல ஆசிகளின் மூலம் வலுவடைந்து,(13) அந்த இடத்தை அகழ {தோண்டச்} செய்தான்.பல்வேறு இனிய வடிவங்களிலான எண்ணற்ற  பாத்திரங்கள்,(14) பிருங்காரங்கள், கடாஹங்கள், கலசங்கள், வர்தமானகங்கள், அழகிய வடிவிலான எண்ணற்ற பாஜனங்கள் {அன்னப்பாத்திரங்கள், சிறிய குடங்கள், கரண்டிகள், குடங்கள், அண்டாக்கள்,  பானைகள்} ஆகியவை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் அகழ்ந்து {தோண்டி} எடுக்கப்பட்டன. இவ்வாறு அகழப்பட்ட செல்வங்கள், பாதுகாப்புக்காகப் பெரிய கரபூதங்களில் {மடக்குகளில்} வைக்கப்பட்டன[3].(15,16) அந்தச் செல்வத்தின் ஒரு பகுதி, தராசின் இருமுனைகளைப் போன்ற மரக்கூடைகளுடன் கூடிய தடித்த மர நிலுவைகளில் மனிதர்களின் தோள்களில் சுமக்கச் செய்யப்பட்டன. உண்மையில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, பாண்டு மகனின் அந்தச் செல்வத்தைச் சுமந்து செல்வதற்கு வேறு வழிமுறைகளிலான செல்கலன்களும் {விலங்குகள் பூட்டப்பட்ட வண்டிகளும்} இருந்தன[4].(17) ஓ! ஏகாதிபதி, அங்கே அறுபதாயிரம் ஒட்டகங்களும், ஒருலட்சத்து இருபதாயிரம் குதிரைகளும், ஒரு லட்சம் யானைகளும் இருந்தன.(18) அதே அளவு {ஒரு லட்சம்} தேர்களும், அதே அளவு வண்டிகளும், அதே அளவு பெண் யானைகளும் இருந்தன. கோவேறு கழுதைகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை சொல்ல {எண்ண} முடியாததாக இருந்தது.(19)யுதிஷ்டிரனால் அகழ்ந்தெடுக்கப்பட்ட அந்தச் செல்வம் அவ்வளவு அதிகமானதாக இருந்தது. ஒவ்வொரு ஒட்டகத்தின் முதுகிலும் பதினாறாயிரம்; ஒவ்வொரு தேரிலும் எட்டாயிரம்; ஒவ்வொரு யானையிலும் இருபத்து நான்காயிரம்; (அதேவேளையில், குதிரைகள், கழுதைகளின் முதுகுகளிலும், மனிதர்களின் முதுகுகள், தோள்கள் மற்றும் தலைகளிலும் மேற்கண்ட எண்ணிக்கையின் விகிதாச்சார அளவில்) {பொன்} நாணயங்கள் வைக்கப்பட்டன[5].(20) இந்த வாகனங்களை அந்தச் செல்வத்தால் நிறைத்த பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் பெருந்தேவனான சிவனை வழிபட்ட பிறகு, தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} அனுமதியுடனும், தன் புரோகிதரான தௌமியரை முன்னணியில் விட்டும், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டுச் சென்றான். மனிதர்களில் முதன்மையானவனும், பாண்டுவின் அரச மகனுமான அவன், ஒரு கோயுதத்தால் (4 மைல்கள் {6.5 கி.மீ.}) அளக்கப்படும் குறுகிய பயணங்களையே ஒவ்வொரு நாளும் மேற்கொண்டான்[6].(21,22) ஓ! மன்னா, சுமந்த சுமையால் பீடிக்கப்பட்ட அந்தப் பெரும்படை, குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்கள் அனைவரின் இதயங்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் வகையில், அந்தச் செல்வத்தைச் சுமந்து கொண்டு, தலைநகரம் {ஹஸ்தினாபுரம்} நோக்கித் திரும்பியது” என்றார் {வைசம்பாயனர்}.(23)

கிருஷ்ணனிடம் வேண்டிய குந்தி! – அஸ்வமேதபர்வம் பகுதி – 66-சுபத்திரை, பலராமன் முதலியோருடன் ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்; இறந்த குழந்தையை உத்தரை ஈன்றது; குழந்தையை உயிர்ப்பிக்குமாறு கிருஷ்ணனை வேண்டிய குந்தி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதேவேளையில், விருஷ்ணிகளுடன் கூடிய பெருஞ்சக்தி கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தான்.(1) தன் சொந்த நகரமான துவாரகை திரும்புவதற்காக அந்த நகரத்தைவிட்டுச் சென்ற போது, மீண்டும் திரும்பி வருமாறு தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} அவன் வேண்டப்பட்டான். எனவே, குதிரை வேள்விக்கெனக் குறிக்கப்பட்ட வேளை வருவதை அறிந்த அந்த மனிதர்களில் முதன்மையானவன் (குரு தலைநகரத்திற்குத்) திரும்பி வந்தான்.(2) ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, யுயுதானன் {சாத்யகி}, சாருதேஷ்ணன், சாம்பன், கதன், கிருதவர்மன், சாரணன், நிசடன், உன்முகன் ஆகியோருடனும், சுபத்திரையுடனும், அணிவகுப்பின் தலைமையில் பலதேவனுடனும் வாசுதேவன் {கிருஷ்ணன்} வந்தான்.(4)

உண்மையில் திரௌபதி, உத்தரை, பிருதை {குந்தி} மற்றும் தங்கள் பாதுகாவலர்களை இழந்த புகழ்பெற்ற க்ஷத்திரியப் பெண்மணிகளுக்கு ஆறுதலளிப்பதற்காக அந்த வீரன் {கிருஷ்ணன்} வந்தான்.(5) அந்த வீரர்கள் வருவதைக் கண்ட மன்னன் திருதராஷ்டிரனும், உயர் ஆன்ம விதுரனும் அவர்களை உரிய கௌரவத்துடன் வரவேற்றனர்.(6) மனிதர்களில் முதன்மையானவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான கிருஷ்ணன், விதுரன் மற்றும் யுயுத்சுவால் நன்கு துதிக்கப்பட்டு, குருவின் தலைநகரில் வசித்து வந்தான்.(7) ஓ! ஜனமேஜயா, ஓ! மன்னா, அவ்வாறு விருஷ்ணி வீரர்கள் குருவின் நகரில் வசித்துக் கொண்டிருந்தபோதுதான் உன் தந்தை {பரிக்ஷித்} பிறந்தான்.(8)

ஓ! ஏகாதிபதி (அஸ்வத்தாமனின்) பிரம்ம ஆயுதத்தால் பீடிக்கப்பட்ட அரசன் பரிக்ஷித், கருவறையை விட்டு வெளியே வந்தபோது, உயிரற்றவனாக இருந்த காரணத்தால் அசைவற்றுக் கிடந்தான். தனது பிறப்பால் குடிமக்கள் அனைவருக்கும் அவன் மகிழ்ச்சியூட்டியிருந்தாலும் மிகவிரைவில் அவர்களைத் துயரில் ஆழச் செய்தான்.(9) இளவரசன் பிறந்ததைக் கேட்ட குடிமக்கள் சிங்க முழக்கம் செய்தனர். கிட்டத்தட்ட திசைப்புள்ளிகள் ஒவ்வொன்றின் விளிம்புகளையும் அவ்வொலி அடைந்தது. எனினும் விரைவில் (இளவரசன் உயிரற்றவனாக இருப்பதை அறிந்தபோது) அவ்வொலி அடங்கியது.(10) கணிசமான அளவுக்கு உணர்வுகளும், மனமும் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன், யுயுதானனுடன் {சாத்யகியுடன்} கூடியவனாக, அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் விரைவாக நுழைந்தான்.(11) தன் அத்தை (குந்தி) உரக்க அழுதுகொண்ட மீண்டும் மீண்டும் தன்னை {கிருஷ்ணா ஓடிவா என்று} அழைத்துக் கொண்டே வருவதை அவன் கண்டான்.(12) அவளுக்குப் பின்னால், திரௌபதி, புகழ்பெற்ற சுபத்திரை, பாண்டவர்களுடைய உறவினர்களின் மனைவிமார் ஆகியோர் பரிதாபகரமாக அழுது கொண்டிருந்தனர்.(13)

ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, போஜ குல மகளான குந்தி கிருஷ்ணனைச் சந்தித்து, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவனிடம் இந்தச் சொற்களில்,(14) “ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, உன்னை {கருவறையில்} சுமந்ததன் மூலம் தேவகி சிறந்த தாயாகக் கருதப்படுகிறாள். எங்கள் புகலிடமும், எங்கள் மகிமையும் நீயே. (பாண்டுவின்) இந்தக் குலம் தன் பாதுகாவலனாகக் கொண்ட உன்னையே சார்ந்திருக்கிறது.(15) ஓ! யாதவ வீரா, ஓ! பலமிக்கவனே, உன் தங்கை {சுபத்திரை} மகனுடைய இந்தக் குழந்தை கருவறையில் இருந்து அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டு வெளியே வந்திருக்கிறான்.(16) ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! பலமிக்கவனே, அஸ்வத்தாமன், வலிமைமிக்க சக்தி கொண்ட பிரம்மாயுதத்தைப் புல்லில் ஈர்த்தபோது, நீ ஏற்ற உறுதி மொழி இதுவே. ஓ! கேசவா, நீ சொன்ன சொற்கள் இவையே. இந்தக் குழந்தை கருவறையில் இருந்து இறந்து பிறந்தால், நான் அவனை உயிர்ப்பிப்பேன் என்று நீ சொன்னாய்.(17)

ஓ! மகனே, அந்தக் குழந்தை இறந்து பிறந்திருக்கிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அவனைப் பார். ஓ! மாதவா, உத்தரை, சுபத்திரை, திரௌபதி ஆகியோரையும், என்னையும், தர்மனின் மகனையும் (யுதிஷ்டிரனையும்), பீமன், பல்குனன் {அர்ஜுனன்}, நகுலன், தடுக்கப்பட முடியாதவனான சகாதேவன் ஆகியோரையும் நீயே காக்க வேண்டும்.(18,19) பாண்டவர்களின் உயிர்மூசும் மற்றும் என் உயிமூச்சும் இந்தக் குழந்தையிலேயே பிணைந்திருக்கின்றன. ஓ! தாசார்ஹ குலத்தோனே, நீ அருளப்பட்டிருப்பாயாக, {என் கணவரான} பாண்டு, என் மாமனார் {விசித்திரவீரியன்} ஆகியோரின் ஈமப்பிண்டமும்,(20) உனக்கு மிகப் பிடித்தவனான உன் அன்புக்குரிய மருமகன் அபிமன்யுவின் ஈமப்பிண்டமும் இவனையே சார்ந்திருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் நன்மையானதை நீ இன்று செய்வாயாக. ஓ! ஜனார்த்தனா, நான் உன்னை உள்ளார்வத்துடன் தூண்டுகிறேன்.(21)

ஓ! பகைவரைக் கொல்பவனே, உத்தரை தன்னிடம் அபிமன்யு சொன்ன சொற்களையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஓ! கிருஷ்ணா, அந்தச் சொற்கள் அவளுக்கு நிச்சயம் மிக இனிமையானவை.(22) ஓ! தாசார்ஹ குலத்தோனே {கிருஷ்ணா}, அர்ஜுனனின் மகன் {அபிமன்யு}, விராடனின் மகளிடம் {உத்தரையிடம்}, “ஓ! அருளப்பட்ட பெண்ணே {கல்யாணி}, உன் மகன், என் தாய்மாமன்களிடம் செல்லப் போகிறான்.(23) விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் வசிப்பிடத்திற்குச் செல்லும் அவன், அங்கே ஆயுத அறிவியலையும் {தனுர் வேதத்தையும்}, உண்மையில் அற்புதம் நிறைந்த ஆயுதங்களையும் {விசித்திரமான அஸ்திரங்களையும்}, அரசியல் மற்றும் அறநெறிகள் குறித்த மொத்த அறிவியலையும் {நீதி சாஸ்திரங்களையும்} அடைவான்” என்று சொல்லியிருக்கிறான்.(24)

ஓ! மகனே, பகைவீரர்களைக் கொல்பவனும், தடுக்கப்பட முடியாத வீரனுமான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, உத்தரையிடம் கொண்ட அன்பினால் இந்தச் சொற்களை அவளிடம் சொல்லியிருக்கிறான்.(25) ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, அபிமன்யுவின் அந்தச் சொற்கள் உண்மையாக நாங்கள் உன்னை வேண்டி வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். காலத்தைக் கருத்தில் கொண்டு உயர்ந்த நன்மையை நீ செய்வாயாக” என்றாள் {குந்தி}.(26)

அகன்ற கண்களைக் கொண்ட குந்தி, விருஷ்ணி குல வீரனிடம் {கிருஷ்ணனிடம்} இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, மற்ற பெண்களுடன் சேர்ந்து தன் இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தியவாறு பூமியில் விழுந்தாள்.(27)

கண்ணீரால் கலங்கிய கண்களுடன் கூடிய அவர்கள் {அந்தப் பெண்கள்} அனைவரும், “ஐயோ, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மருமகன் இறந்தே பிறந்தான்” என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.(28)

குந்தி இவ்வாறு சொன்னதும், அவளைத் தன் கரங்களில் பற்றி, பூமியில் இருந்து மெல்ல உயர்த்தி, பின்வருமாறு அவளைத் தேற்றினான்” {என்றார் வைசம்பாயனர்}.(29)

கிருஷ்ணனிடம் வேண்டிய சுபத்திரை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 67-குழந்தையை உயிர்ப்பிக்குமாறு கிருஷ்ணனிடம் வேண்டிய சுபத்திரை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குந்தி அமர்ந்த பிறகு, தன் தமையனைக் {கிருஷ்ணனைக்} கண்ட சுபத்திரை பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டு உரக்க அழத் தொடங்கி,(1) “ஓ! தாமரைக் கண்ணா, பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான அர்ஜுனரின் பேரனைப் பார். ஐயோ, இளைத்தவனும், இறந்தவனுமான ஒரு குழந்தையால் குரு குலம் நசிந்திருக்கிறது.(2) பீமசேனருக்கு அழிவை ஏற்படுத்த துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} உயர்த்தப்பட்ட (பெருந்திறன் கொண்ட ஆயுதத்தால் ஈர்க்கப்பட்டிருந்த) புல் {இஷீகாஸ்திரம்}உத்தரையின் மீதும், விஜயர் {அர்ஜுனர்} மீதும், என் மீதும் விழுந்தது[1].(3) ஐயோ, ஓ! கேசவா, அந்தப் புல் என் இதயத்தைத் துளைத்த பிறகும், ஓ! தடுக்கப்பட முடியாத வீரா, என் மகனுடன் சேர்த்து இந்தப் பிள்ளையையும் நான் காணாமல் இருப்பதால், அஃது (இன்னும் பிடுங்கப்படாமல்) என்னிலேயே இருக்கிறது.(4)நீதிமானும், அற ஆன்மாவுமான மன்னர் யுதிஷ்டிரர் என்ன சொல்வார்? பீமசேனர், அர்ஜுனர் மற்றும் மத்ராவதியின் இரு மகன்களும் என்ன சொல்வார்கள்?(5) ஓ! விருஷ்ணி குலத்தோனே, அபிமன்யுவின் மகன் பிறந்து இறந்தான் என்பதைப் பாண்டவர்கள் கேட்டால், அஸ்வத்தாமனால் வஞ்சிக்கப்பட்டவர்களாகத் தங்களைக் கருதுவார்கள்.(6) ஓ! கிருஷ்ணா, அபிமன்யு நிச்சயம் பாண்டவச் சகோதர்கள் அனைவருக்கும் பிடித்தமானவன். துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} ஆயுதத்தால் வெல்லப்பட்டோம் என்ற செய்தியை அறிந்தால் அந்த வீரர்கள் என்ன சொல்வார்கள்?(7) ஓ! ஜனார்த்தனா, அபிமன்யுவின் மகன் பிறந்து, இறந்தான் என்பதைவிடப் பெரிய துயரம் வேறென்ன இருக்க முடியும்?(8)

ஓ! கிருஷ்ணா, உன்னை நிறைவடையச் செய்ய நான் இன்று உனக்குத் தலை வணங்குகிறேன். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இங்கே நிற்கும் பிருதை {குந்தி}, திரௌபதி ஆகிய இருவரையும் பார்.(9) ஓ மாதவா, ஓ பகைவரைக் கலங்கடிப்பவனே, பாண்டவர்களுடைய பெண்களின் கருவறைகளில் உள்ள கருக்களையும் அழிக்கத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} முயன்றபோது, நீ கோபத்துடன் அந்தத் துரோணர் மகனிடம் (இந்தச் சொற்களில்),(10) “ஓ! பிராமணர்களில் இழிந்தவரே, ஓ! மனிதர்களில் தீயவரே, உமது விருப்பத்தை நான் நிறைவேறாமல் செய்வேன். நான் கிரீடியின் {அர்ஜுனனின்} மகனுடைய மகனைக் காப்பேன்” என்று சொன்னாய்[2].(11)ஓ! தடுக்கப்பட முடியாத வீரா, உன்னுடைய இந்தச் சொற்களைக் கேட்டவளும், உன் பலத்தை நன்கறிந்தவளுமான நான் உன்னை நிறைவடையச் செய்ய முனைகிறேன். அபிமன்யுவின் மகன் உயிர் மீளட்டும்.(12) ஏற்கனவே உறுதிமொழி ஏற்ற நீ மங்கலமான இந்நோன்பை நிறைவேற்றாமல் போனால், ஓ! விருஷ்ணி குலத் தலைவா, நிச்சயம் என் உயிரை நான் விடுவேன் என்பதை அறிவாயாக.(13) ஓ! வீரா, ஓ! தடுக்கப்பட முடியாதவனே, நீ உயிரோடு அருகில் இருக்கும்போது, அபிமன்யுவின் மகனான இவன் {பரிக்ஷித்} உயிர் மீளாமல் போனால், உன்னால் எனக்கு வேறு என்ன பயன் இருக்க முடியும்?(14) எனவே, ஓ! தடுக்கப்பட முடியாதவனே, (களத்தில் உள்ள) உயிரற்ற பயிருக்கு உயிரூட்டும் மழை நிறைந்த மேகத்தைப் போலவே அபிமன்யுவைப் போன்றே கண்களைக் கொண்டவனும், அவனது மகனுமான இவனை நீ மீட்பாயாக.(15) ஓ! கேசவா, அற ஆன்மா கொண்ட நீ, வாய்மை நிறைந்தவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமாவாய். ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, உன் சொற்களை உண்மையாக்குவதே உனக்குத் தகும்.(16)

மூவுலகங்கள் (மூவுலகங்களில் இருப்போர்) இறந்தாலும், நீ விரும்பினால் உன்னால் உயிர்மீட்க முடியும். எனில், பிறந்தும் இறந்த உன் தங்கை மகனின் அன்புக்குரிய இந்தக் குழந்தையைக் குறித்துச் சொல்லவும் வேண்டுமா?(17) ஓ! கிருஷ்ணா, நான் உன் பலத்தை அறிந்தே உன்னை வேண்டுகிறேன். பாண்டவர்களுக்கு நீ இந்தப் பெருஞ்சலுகையைச் செய்து காட்டுவாயாக.(18) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, தன் மகனை இழந்த ஒரு தாய் என்றோ, உன் பாதுகாப்பில் தன்னை நிறுத்திக் கொண்டவள் என்றோ நினைத்து உத்தரைக்கோ, உன் தங்கையான எனக்கோ இரக்கம் காட்டுவதே உனக்குத் தகும்” என்றாள் {சுபத்திரை}”.(17)

கிருஷ்ணனிடம் வேண்டிய உத்தரை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 68-குழந்தையை உயிர்ப்பிக்குமாறு கிருஷ்ணனிடம் வேண்டிய உத்தரை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, (தங்கையாலும், பிறராலும்) இவ்வாறு சொல்லப்பட்டதும், கேசியைக் கொன்றவனான அவன் {கிருஷ்ணன்}, பெருந்துயரில் பீடிக்கப்பட்டவனாக, “அப்படியே ஆகட்டும்” என்றான். போதுமான உரப்புடன் சொல்லப்பட்ட இந்தச் சொற்கள், அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்தோர் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது.(1) பலமிக்கவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், வியர்வையால் பீடிக்கப்பட்டவன் மீது குளிர்ந்த நீரை ஊற்றுவதைப் போல இந்தச் சொற்களைச் சொன்னதன் மூலம், அங்கே இருந்தோர் அனைவரையும் மகிழ்ச்சியடைச் செய்தான்.(2) பிறகு அவன் {கிருஷ்ணன்}, உன் தந்தை {பரிக்ஷித்} பிறந்த அந்தப் பேற்றறைக்குள் {பிரசவ அறைக்குள்} விரைவாக நுழைந்தான். ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, வெண்மலர் மாலைகள் பலவற்றால்;(3) அனைத்துப் பக்கங்களிலும் முழுவதும் நிறைந்த பல நீர்க்குடங்கள்; ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நெய்யில் ஊறிய திந்துக மரக்கரி மற்றும் கடுகு;(4) அனைத்துப் பக்கங்களிலும் உரிய முறையில் அடுக்கப்பட்ட ஒளிரும் ஆயுதங்கள் மற்றும் பல நெருப்புகள் ஆகியவற்றால் அது {அந்தப் பிரசவ அறை} புனிதப்பட்டிருந்தது. (உன் பாட்டிக்கு {உத்தரைக்குப்} பணிவிடை செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்த இனிய மூதன்னைகள் பலர் அங்கே இருந்தனர்.(5)

ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவனே, நன்கு திறம்பெற்ற புத்திசாலி மருத்துவர்களால் அது சூழப்பட்டிருந்தது. பெருஞ்சக்தியுடன் கூடிய அவன், ராட்சசர்களை அறிந்த மனிதர்களால் அவர்களுக்கு அழிவை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். உன் தந்தை பிறந்த பேற்றறை இவ்வாறு ஆயத்தமாக இருப்பதைக் கண்ட ரிஷிகேசன், மிகவும் மகிழ்ச்சியடைந்து, “நன்று, நன்று” என்று சொன்னான்.(6,7)

விருஷ்ணிகுலத்தோன் இவ்வாறு சொல்லி, மகிழ்ச்சிநிறைந்த தன் முகத்தைக் காட்டிய போது, அங்கே பெரும் வேகத்துடன் வந்த திரௌபதி, விராடன் மகளிடம் {உத்தரையிடம்},(8) “ஓ! அருளப்பட்ட பெண்ணே, உன் கணவனின் தாய்மாமனும், சிந்தனைக்கு எட்டாத ஆன்மா கொண்ட புராதன முனிவனும், வெல்லப்பட முடியாதவனுமான மதுசூதனன் {கிருஷ்ணன்} வந்திருக்கிறான்” என்றாள்.(9)

தன் கண்ணீரை அடக்கிக் கொண்ட விராடன் மகள் {உத்தரை}, துயரால் அடைபட்ட குரலில் இந்தச் சொற்களைச் சொன்னாள். அந்த இளவரசி, முறையாகத் தன்னை மறைத்துக் கொண்டு, கிருஷ்ணனுக்காக மதிப்புடன் காத்திருக்கும் தேவர்களைப் போலவே காத்திருந்தாள்.(10) துயரில் கலங்கிய இதயத்துடன் இருந்த ஆதரவற்றவளான அந்தப் பெண், கோவிந்தன் வருவதைக் கொண்டு இவ்வாறு ஒப்பாரி வைத்தாள்.(11) அவள், “ஓ! தாமரைக் கண்ணரே, பிள்ளையை இழந்த எங்கள் இருவரையும் பாரும். ஓ! ஜனார்த்தனரே, {என் கணவர்} அபிமன்யுவும், நானும் ஒன்றாகக் கொல்லப்பட்டோம்.(12) ஓ! விருஷ்ணிகுலத்தவரே, ஓ! மதுசூதனரே, ஓ! வீரரே, உமக்குத் தலைவணங்கி உம்மை நிறைவடையச் செய்ய முனைகிறேன். துரோணர் மகனின் ஆயுதத்தால் எரிக்கப்பட்ட என்னுடைய இந்தக் குழந்தையை மீட்பீராக.(13)

ஓ! தாமரைக் கண்ணரே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரோ, பீமசேனரோ, நீரோ அந்தச் சந்தர்ப்பத்தில்,(14) “(அஸ்வத்தாமனால் பிரம்ம ஆயுதமாக ஈர்க்கப்பட்ட) இந்தப் புல், தன்னினைவற்ற தாயை அழிக்கட்டும்” என்று சொல்லியிருந்தால், ஓ! பலமிக்கவரே, நான் அழிந்திருப்பேன், இந்த (துயர நிகழ்வும்) நடந்திருக்காது.(15)

ஐயோ, துரோணரின் மகன், தன் பிரம்மாயுதத்தால், கருவறையில் உள்ள குழந்தையை அழிக்கும் இந்தக் கொடுஞ்செயலைச் செய்ததன் மூலம் அறுவடை செய்த நன்மையென்ன?(16) ஓ! பகைவரைக் கொல்பவரே, அதே தாயான நான் இப்போது தலைவணங்குவதன் மூலம் உம்மை நிறைவடையச் செய்ய முனைகிறேன். ஓ! கோவிந்தரே, இந்தக் குழந்தையை மீட்க முடியாமல் போனால் நிச்சயம் நான் என் உயிர்மூச்சைக் கைவிடுவேன்.(17) ஓ! அறம் சார்ந்தவரே, பல எதிர்பார்ப்புகளை நான் அவனில் வைத்திருந்தேன். ஐயோ, ஓ! கேசவரே, துரோணர் மகனால் அவை கெடுக்கப்பட்ட போது, எனக்கு உயிரின் சுமையைச் சுமக்கும் தேவையென்ன இருக்கிறது?(18)

ஓ! கிருஷ்ணரே, ஓ! ஜனார்த்தனரே, மடியில் குழந்தையுடன் நான் உம்மை மதிப்புடன் வணங்குவேன் என்ற நம்பிக்கையை நான் வளர்த்திருந்தேன். ஐயோ, ஓ! கேசவரே, அந்த நம்பிக்கை அழிந்தது.(19) ஓ! அனைத்திலும் முதன்மையானவரே, ஓய்வற்ற கண்களைக் கொண்ட அபிமன்யுவின் வாரிசான இவன் இறந்ததும், என் நெஞ்சில் இருந்த நம்பிக்கைகள் அனைத்தும் அழிந்தன.(20) ஓ! மதுசூதனரே, ஓய்வற்ற கண்களைக் கொண்ட அபிமன்யும் உமது பெரும் அன்புக்குரியவராக இருந்தார். அவருடைய {அபிமன்யுவினுடைய} மகனான இவன் பிரம்மாயுதத்தால் கொல்லப்பட்டதைப் பாரும்.(21)

பாண்டவர்களின் செழிப்பையும், செல்வாக்கையும் அலட்சியம் செய்து யமலோகம் சென்றதன் மூலம் இந்தக் குழந்தையும் அவனது தந்தையைப் போலவே நன்றியற்றவனாகவும், இதயமற்றவனாகவும் இருக்கிறான்.(22) ஓ! கேசவரே, ஓ! வீரரே, போர்க்களத்தில் அபிமன்யு வீழ்ந்தால், தாமதமில்லாமல் நானும் அவரைப் பின்தொடர்வேன் என்று நான் உறுதிமொழியேற்றிருந்தேன்.(23) எனினும், உயிர் மீது அன்பு கொண்ட கொடுமைக்காரியான நான், என் உறுதிமொழியைக் காக்கவில்லை. இப்போது நான் அந்தப் பல்குனர் மகனிடம் {அர்ஜுனர் மகனான அபிமன்யுவிடம்} சென்றால், உண்மையில் அவர் என்ன சொல்வாரோ?” என்று கேட்டாள் {உத்தரை}”.(24)

குழந்தையை உயிர்ப்பித்த கிருஷ்ணன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 69-குழந்தையைப் பார்த்து ஒப்பாரியிட்ட உத்தரை; குழந்தையின் உயிர் மீட்ட கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஆதரவற்றவளான உத்தரை, தன் குழந்தையைத் திரும்பப் பெற விரும்பி, இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டு அறிவற்ற ஓர் உயிரினத்தை {பயித்தியம் பிடித்தவளைப்} போலத் துன்பத்துடன் பூமியில் விழுந்தாள்.(1) தன் மகனை இழந்த அந்த இளவரசி {உத்தரை}, மறைக்கப்படாத உடலுடன் பூமியில் கிடப்பதைக் கண்ட குந்தியும், பாரதப் பெண்மணிகள் (பிறர்) அனைவரும் ஆழ்ந்த துயரத்தில் உரக்க அழத் தொடங்கினர்.(2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒப்பாரிக் குரலை எதிரொலித்துக் கொண்டிருந்த பாண்டவர்களின் மாளிகை, விரையில் எவரும் இருக்க முடியாத துக்கமாளிகையானது[1].(3)ஓ! மன்னா {ஜனமேஜயா}, மகனின் இழப்பால் துன்பத்தில் மிகவும் பீடிக்கப்பட்ட விராடனின் மகள் {உத்தரை}, துக்கத்தாலும், மனவாட்டத்தினாலும் மூர்ச்சையடைந்தவளாகத் தெரிந்தாள்.(4) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, நனவு மீண்ட உத்தரை தன் குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு, இந்த வார்த்தைகளில்,(5) “அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரின் {அபிமன்யுவின்} குழந்தை நீ. விருஷ்ணி குலத்தில் முதன்மையானவரான இவரைக் கண்டும் நீ வணங்காமல் இருப்பதால் பாவத்தை இழைக்கிறாய் என்ற உணர்வு உனக்கில்லையா?(6)

ஓ! மகனே {பரீக்ஷிதே}, உன் தந்தையிடம் {அபிமன்யுவிடம்} சென்று, “என் கணவரான உம்மை இழந்தும், இப்போது என் குழந்தையை இழந்தும், மங்கலமான மற்றும் மதிப்புமிக்க ஏதும் இல்லாத நான் சாகாமல் வாழ்ந்திருப்பதால், உயிரினங்கள் தங்கள் வேளை வருவதற்கு முன் இறப்பது கடினமானதே.(7,8) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் அனுமதியுடன் நான் ஏதேனும் கடும்நஞ்சை விழுங்கப் போகிறேன், அல்லது சுடர்மிக்க நெருப்பில் என்னை விடப்போகிறேன்.(9) ஓ! ஐயா, கணவரையும், குழந்தையையும் இழந்திருந்தாலும் என் இதயம் ஆயிரம் துண்டுகளாகப் பிளக்காமல் இருப்பதால் என் இதயம் அழிவடைவது கடினமே” என்று நான் சொன்னதாக அவரிடம் சொல்வாயாக.(10)

ஓ! மகனே, எழுவாயாக, உன் பூட்டி {உன் தந்தையின் பாட்டியான குந்தி} துயருறுவதைக் காண்பாயாக. கண்ணீரில் குளித்து ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவள், பெரும் மனவாட்டம் கொண்டவளாகச் சோகக் கடலில் மூழ்கியிருக்கிறாள்.(11) மதிப்புக்குரிய பாஞ்சால இளவரசியையும் {திரௌபதியையும்}, ஆதரவற்ற சாத்வத குல இளவரசியையும் {சுபத்திரையையும்} காண்பாயாக. வேடனால் துளைக்கப்பட்ட மானுக்கு ஒப்பாகத் துன்பத்தில் மிகவும் பீடிக்கப்பட்டிருக்கும் என்னைக் காண்பாயாக.(12) ஓ! குழந்தாய், எழுவாயாக, பெரும் ஞானம் கொண்டவரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவரும், ஓய்வற்ற பார்வை கொண்ட உன் தந்தைக்கு {அபிமன்யுவுக்கு} ஒப்பானவருமான இந்த உலகங்களின் தலைவருடைய {கிருஷ்ணரின்} முகத்தைக் காண்பாயாக” என்றாள் {உத்தரை}.(13)

இவ்வாறு ஒப்பாரியில் ஈடுபட்டுப் பூமியில் விழுந்த உத்தரையைக் கண்ட அந்தப் பெண்கள் அனைவரும் அவளை உயர்த்தி அமரச் செய்தனர்.(14) மத்யர்களின் மன்னனுடைய {விராடனின்} மகளான அவள், எழுந்து அமர்ந்ததும், பொறுமையை வரவழைத்துக் கொண்டு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட கேசவனை {கிருஷ்ணனை} வணங்குவதற்காக, மதிப்புடன் கரங்களைக் கூப்பிக் கொண்டு, தன் தலையால் பூமியைத் தீண்டினாள்.(15) இதயம் பிளக்கும் அவளுடைய ஒப்பாரிகளைக் கேட்ட அந்த முதன்மையானவன் {கிருஷ்ணன்}, நீரைத் தீண்டி {ஆஸமனஞ்செய்து}, அந்தப் பிரம்மாயுதத்தை (அதன் சக்தியை} திரும்பப் பெற்றான் {விலக்கினான் / உபஸம்ஹாரம் செய்தான்}[2].(16)தசார்ஹ குலத்தைச் சேர்ந்த மங்கா மகிமை கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்}, அந்தக் குழந்தைக்குத் தன் உயிரைக் கொடுப்பதாக உறுதியளித்தான். அதன் பிறகு, தூய ஆன்மா கொண்ட அவன் மொத்த அண்டமே கேட்கும் வகையில் இந்தச் சொற்களைச் சொன்னான்.(17) {கிருஷ்ணன்}, “ஓ! உத்தரா, ஒருபோதும் நான் பொய் சொல்லேன். என் சொற்கள் உண்மையாகும். அனைத்து உயிரினங்களின் முன்னிலையிலும் நான் இக்குழந்தையின் உயிரை மீட்பேன்.(18) இதற்கு முன் எப்போதும் கேலிக்காகக் கூடப் பொய் பேசியவனல்லன். போரில் ஒருபோதும் புறமுதுகிட்டவனல்லன். (அந்தச் செயல்களின் தகுதியின் {புண்ணியத்தின்} மூலம்) இந்தக் குழந்தையின் உயிர் மீளட்டும்.(19) அறம் எனதன்புக்குரியதாக இருப்பதைப் போல {இருப்பது உண்மையானால்}, பிராமணர்கள் பேரன்புக்குரியவர்களாக இருப்பதைப் போல {இருப்பது உண்மையானால்}, இறந்தே பிறந்த இந்த அபிமன்யு மகனின் உயிர் (என்னுடைய அந்த மனநிலையின் தகுதியால் {புண்ணியத்தால்}) மீளட்டும்.(20)

எனக்கும், என் நண்பனான விஜயனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் ஒருபோதும் கருத்துவேறுபாடு எழுந்ததில்லை. இறந்த இக்குழந்தையின் உயிர் அந்த உண்மையின் மூலம் மீளட்டும்.(21) வாய்மையும், அறமும் எப்போதும் என்னில் நிறுவப்பட்டிருப்பதைப் போல {நிறுவப்பட்டிருப்பது உண்மையானால்} அபிமன்யுவின் இந்த இறந்த குழந்தையுடைய உயிர் (அந்தத் தகுதிகளால் {புண்ணியங்களால்}) மீளட்டும்.(22) கம்சனும், கேசியும்  என்னால் அறம்சார்ந்து கொல்லப்பட்டதைப் போல {அறம் சார்ந்து கொல்லப்பட்டது உண்மையானால்}, அந்த உண்மையினால் இன்று இந்தக் குழந்தையின் உயிர் மீளட்டும்” என்றான் {கிருஷ்ணன்}.(23)

ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இந்தச் சொற்கள் சொல்லப்பட்ட பிறகு, அந்தக் குழந்தை {பரீக்ஷித்} உயிரூட்டம் பெற்றுப் படிப்படியாக {மெல்ல மெல்ல} அசையத் தொடங்கினான்” என்றார் {வைசம்பாயனர்}[3].(24)

அபிமன்யுவின் வாரிசு – பரிக்ஷித்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 70-: காரணத்துடன் குழந்தைக்குப் பெயர் சூட்டிய கிருஷ்ணன்; பொற்சுமையுடன் பாண்டவர்கள் வந்து கொண்டிருப்பதைக் கேட்டு வரவேற்கச் சென்ற கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருஷ்ணனால் பிரம்மாயுதம் விலக்கப்பட்ட {உபஸம்ஹாரம் செய்யப்பட்ட} அந்த நேரத்தில், உன் தந்தையின் {பரிக்ஷித்தின்} சக்தியால் அந்தப் பேற்றறை {பிரசவ அறை} ஒளி பொருந்திற்று.(1) (அங்கே வந்திருந்த) ராட்சசர்கள் அனைவரும் அந்த அறையைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் {ராட்சசர்களில்} பலர் அழிவையும் அடைந்தனர். ஆகாயத்தில் ஒரு குரல், “நன்று, ஓ! கேசவா, நன்று” என்று சொல்வது கேட்டது.(2) சுடர்மிக்க அந்தப் பிரம்மாயுதம் (உலகங்கள் அனைத்தின்) பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} திரும்பிச் சென்றது. ஓ! மன்னா, உன் தந்தை தன் உயிர்மூச்சைத் திரும்பப் பெற்றான்.(3)

அந்தக் குழந்தை தன் சக்தி மற்றும் வலிமைக்குத் தகுந்தபடி அசைந்தது. பாரதப் பெண்மணிகள் அனைவரும் இன்பத்தால் நிறைந்தனர்.(4) கோவிந்தனுடைய ஆணையின் பேரில், பிராமணர்கள் ஆசிகள் கூறினர் {ஸ்வஸ்திவாசனம் செய்தார்கள்}. இன்பத்தில் நிறைந்திருந்த பெண்கள் அனைவரும் ஜனார்த்தனனைப் புகழ்ந்தனர்.(5) உண்மையில், பாரதச் சிங்கங்களின் மனைவியரான குந்தி, துருபதன் மகள் {திரௌபதி}, சுபத்திரை, உத்தரை ஆகியோரும் மற்றும் மனிதர்களில் சிங்கங்களாகத் திழ்ந்தவர்களின் மனைவிமாரும், (உடைந்த கப்பலிலிருந்து) படகை அடைந்து, கரையை எட்டியவர்களைப் போலப் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(6)

அப்போது மல்லர்கள் {மற்போர்புரிபவர்கள்}, நடிகர்கள் {நடர்கள்}, கணிகர்கள் {சோதிடர்கள்}, (இளவரசர்களின்) உறக்கத்தைக் குறித்து விசாரிப்பவர்கள்,(7) சூதர்கள், மாகதர்கள், துதிபாடிகள் ஆகியோர் அனைவரும், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, குரு குலத்தின் புகழால் நிறைந்த நல்லாசிகளைக் கூறியபடியே ஜனார்த்தனனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்தனர்.(8) தன் கைகளில் தன் குழந்தையைச் சுமந்தபடி தகுந்த காலத்தில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எழுந்த உத்தரை, யதுகுலத்தைத் திளைக்கச் செய்பவனை {கிருஷ்ணனை} மதிப்புடன் வணங்கினாள்.(9)

பெரிதும் மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணன், மதிப்புமிக்க ரத்தினங்கள் பலவற்றைக் குழந்தைக்குப் பரிசாக வழங்கினான். விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த வேறு தலைவர்களும் அதையே செய்தனர். அப்போது, ஓ! ஏகாதிபதி, பலமிக்கவனும், வாய்மையை உறுதியாகக் கடைப்பிடிப்பவனுமான ஜனார்த்தனன், உன் தந்தையான அந்தக் குழந்தைக்கு ஒரு பெயரைச் சூட்டினான். {கிருஷ்ணன்}, “அபிமன்யுவின் குழந்தையான இவன், தன் குலம் கிட்டத்தட்ட அழிந்து போகும் நேரத்தில் பிறந்ததால்,(10,11) இவனது பெயர் பரிக்ஷித் என்றிருக்கட்டும்” என்றான்[1]. இதையே அவன் சொன்னான். பிறகு, ஓ! மன்னா, ஓ! பாரதா, உன் தந்தை வளரத் தொடங்கி,(12) மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தான்.ஓ! வீரா {ஜனமேஜயா}, உன் தந்தை {பரிக்ஷித்} ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோது, அபரிமிதமான செல்வத்துடன் பாண்டவர்கள் தங்கள் தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பி வந்தனர். பாண்டவர்கள் அருகில் வந்துவிட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட விருஷ்ணி குலத்தில் முதன்மையானவர்கள் வெளியே புறப்பட்டுச் சென்றனர்.(14) குடிமக்கள், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்தை {ஹஸ்தினாபுரத்தைப்} பெரும் எண்ணிக்கையிலான மலர்மாலைகளாலும், அழகிய கொடிகளாலும், பல்வேறு வகையான கொடிக்கம்பங்களாலும் அலங்கரித்தனர்.(15)

ஓ! மன்னா, அந்தக் குடிமக்கள் தங்கள்தங்களுக்குரிய மாளிகைகளையும் அலங்கரித்தனர். பாண்டு மகன்களுக்கு நன்மையைச் செய்ய விரும்பிய விதுரன், கோவில்களில் நிறுவப்பட்டிருந்த அந்தந்த {கோவில்} தெய்வங்களுக்குப் பல்வேறு வகையான வழிபாடுகளைச் செய்யும்படி ஆணையிட்டான். நகரத்தின் முக்கிய வீதிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன.(16,17) உண்மையில், தொலைவில் உள்ள கடல் அலைகளின் மென்முழக்கங்களுக்கு ஒப்பான ஆயிரங்குரல்களின் ஹுங்காரத்தால் அந்த நகரம் {ஹஸ்தினாபுரம்} நிறைந்திருந்தது. தங்கள் தங்கள் தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆடற்கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் குரலுடன் கூடியதாக இருந்த அந்த (குரு) நகரம்},(18) அப்போது வைஸ்ரவணனின் {குபேரனின்} மாளிகைக்கு ஒப்பானதாக இருந்தது[2].ஓ! மன்னா {ஜனமேஜயா}, அழகிய பெண்களுடன் கூடிய வந்திகள் மற்றும் துதிபாடிகள்,(19) அந்த நகரத்தின் பல்வேறு இடங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்த கொடிகள், அடிவானத்தின் தெற்கு மற்றும் வடக்குத் திசைப்புள்ளிகளைக் காண்பிப்பதைப் போல, காற்றால் இனிமையான மிதக்கச் செய்யப்பட்டன. அரசு அலுவலர்கள் அனைவரும், ரத்தினர்கள் மற்றும் பிற மதிப்பு மிக்கப் பொருட்களைக் கொண்டு வரும் பணியில் வெற்றியடைந்ததன் குறியீடாக மொத்த நாட்டுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய நாளாக அது விளங்குவதாக உரக்க அறிவித்தனர் {பறையறிவித்தனர்}” {என்றார் வைசம்பாயனர்}.(20,21)

குரு நீயே! – அஸ்வமேதபர்வம் பகுதி – 71-யுதிஷ்டிரனை எதிர்கொண்டழைத்த கிருஷ்ணன்; அஸ்வமேத யாகம் செய்ய அனுமதித்த வியாசர்; கிருஷ்ணன் செய்யட்டும் என்று சொன்ன யுதிஷ்டிரன்; மறுத்து யுதிஷ்டிரனைச் செய்யச் சொன்ன கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பகைவரை அழிப்பவனான வாசுதேவன், பாண்டவர்கள் அருகில் வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டு, அவர்களைக் காணத் தன் அமைச்சர்களுடன் புறப்பட்டுச் சென்றான்.(1) அப்போது, ஓ! மன்னா, வழக்கமான நடைமுறைகளின்படி விருஷ்ணிகளுடன் சேர்ந்து யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} பாண்டவர்கள் நுழைந்தனர்.(2) குரல்களின் ஹுங்காரம், பெரும்படையின் தேர்களுடைய சடசடப்பொலி ஆகியவற்றுடன் கூடிய பூமி மற்றும் ஆகாயம் என்ற மொத்த வெளியே அவற்றால் {அவ்வொலிகளால்} மொத்தமாக நிறைந்தது.(3) மகிழ்ச்சிகரமான இதயங்களுடன் கூடிய பாண்டவர்கள், தங்கள் அதிகாரிகள் மற்றும் நண்பர்களின் துணையுடன், செல்வக்கருவூலத்தைத் தங்கள் முன்னணியில் வைத்துக் கொண்டு தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தனர்.(4)

வழக்கத்திற்கு ஏற்புடைய வகையில் அவர்கள் முதலில் மன்னன் திருதராஷ்டிரனிடம் சென்று, தங்களுடைய பெயர்களை அறிவித்துக் கொண்டு, அவனது பாதங்களை வழிபட்டனர்.(5) பிறகு, ஓ! மன்னர்களின் தலைவா, பாரதக் குலத்தில் முதன்மையான அவர்கள், சுபலனின் மகளான காந்தாரிக்கும், குந்திக்கும் தங்கள் மதிப்புமிக்க வணக்கங்களைச் செலுத்தினர்.(6) அடுத்ததாக (தங்கள் சிறிய தந்தையான) விதுரரை வழிபட்டு, திருதராஷ்டிரனுடைய வைசிய மனைவியின் மகனான யுயுத்சுவைச் சந்தித்தனர். அப்போது, ஓ! மன்னா, அவர்கள் பிறரால் வழிபடப்பட்டு அழகுடன் பிரகாசித்தனர்.(7) அதன்பிறகு, ஓ! பாரதா, அந்த வீரர்கள், அற்புதம் நிறைந்தவையும், ஆச்சரிகரமானவையும், மகிழ்ச்சியைக் கொண்டு வந்தவையுமான உன் தந்தை {பரிக்ஷித்} குறித்த செய்திகளைக் கேட்டனர்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனின் சாதனையைக் கேட்ட அவர்கள் அனைவரும், தேவகியை மகிழ்ச்சியடையச் செய்பவனும், அனைத்து வகை வழிபாட்டிற்கும் தகுந்தவனுமான கிருஷ்ணனை வழிபட்டனர்.(9)

அதன்பிறகு, சிறிது நாள் கழித்து, பெருஞ்சக்தி கொண்டவரும், சத்தியவதியின் மகனுமான வியாசர், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தார்.(10) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்கள், வழக்கமான நடைமுறையின்படி அந்தப் பெரும் முனிவரை வழிபட்டனர். உண்மையில், விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் முதன்மையான இளவரசர்களான அந்த வீரர்கள், தங்கள் துதிகளை அத்தவசிக்குச் செலுத்தினர்.(11) பல்வேறு காரியங்கள் குறித்துப் பேசிய பிறகு, தர்மனின் மகனான யுதிஷ்டிரன், வியாசரிடம்,(12) “ஓ! புனிதமானவரே, உம் அருளால் இங்கே கொண்டுவரப்பட்ட இந்தப் பொக்கிஷத்தைக் குதிரை வேள்வி {அஸ்வமேதயாகம்} என்ற பெயரால் அழைக்கப்படும் பெரும் வேள்விக்கு அர்ப்பணிக்க நான் விரும்புகிறேன்.(13) ஓ! தவசிகளில் சிறந்தவரே, உமது அனுமதியைப் பெற நான் விரும்புகிறேன். ஓ! முனிவரே, உமக்கும், உயர் ஆன்ம கிருஷ்ணனுக்கும் நாங்கள் அனைவரும் வசப்பட்டவர்கள்” என்றான்.(14)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, நான் உனக்கு அனுமதியளிக்கிறேன். எது முதலில் செய்யப்பட வேண்டுமோ, அதைச் செய்வாயாக. அபரிமிதமான கொடைகளுடன் கூடிய குதிரைவேள்வியைச் செய்வதன் மூலம் நீ முறையாகத் தேவர்களை வழிபடுவாயாக.(15) ஓ! மன்னா, குதிரை வேள்வி அனைத்துப் பாவங்களையும் தூய்மைப்படுத்தும். அந்த வேள்வியின் மூலம்தேவர்களை வழிபடுவதால் அனைத்துப் பாவங்களும் நிச்சயம் தூய்மையடையும் என்பதில் ஐயமில்லை” என்றார்”.(16)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிட} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, இவ்வாறு சொல்லப்பட்டவனும், நீதிமிக்க ஆன்மா கொண்டவனுமான குரு மன்னன் யுதிஷ்டிரன், குதிரை வேள்விக்கு {அஸ்வமேத யாகத்துக்குத்} தேவையான ஆயத்தங்களைச் செய்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(17) பெரும் நாநயமிக்க அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, இவை யாவற்றையும் தீவில் பிறந்த கிருஷ்ணரிடம் {வியாசரிடம்} சொல்லிவிட்டு, வாசுதேவனை {கிருஷ்ணனை} அணுகி,(18) “ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னால் தேவகிதேவி, தாய்மார்களில் பெரும் பேறு பெற்றவளெனக் கருதப்படுகிறாள். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நான் உனக்குச் சொல்லப் போவதைச் செய்வாயாக.(19) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நாங்கள் அனுபவிக்கும் பல்வேறு இன்பங்கள் யாவும் உன் பலத்தின் மூலமே அடையப்பட்டன. உன் ஆற்றல் மற்றும் புத்தியின் மூலமே மொத்த பூமியும் வெல்லப்பட்டது.(20) எனவே, தொடக்கச் சடங்குகளை நீயே செய்வாயாக {உன்னை தீக்ஷையுள்ளவனாகச் செய்வாயாக}. எங்களது உயர்ந்த ஆசானும், குருவும் நீயே. ஓ! தசார்ஹ குலத்தோனே, இவ்வேள்வியை நீ செய்தால், நான் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவேன்.(21) வேள்வியானவன் நீயே. அழிவற்றவன் நீயே. இவை யாவுமாக இருப்பவன் நீயே. அறம் நீயே. பிரஜாபதி நீயே. அனைத்து உயிரினங்களின் இலக்கும் {கதியும்} நீயே. இதுவே என் நிச்சயத் தீர்மானமாகும்” என்றான்.(22)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! பகைவரைத் தண்டிப்பவரே, இவ்வாறு சொல்ல {செய்ய} நீரே தகுந்தவர். நீரே அனைத்து உயிரினங்களின் இலக்காயிருக்கிறீர் {அறமெனும் கதியாயிருக்கிறீர்}. இதுவே என் நிச்சயத் தீர்மானமாகும்.(23) குரு குல வீரர்களுக்கு மத்தியில், உமது அறத்தின் விளைவால் நீர் இன்று பெரும் மகிமையில் ஒளிர்கிறீர். ஓ! மன்னா, அவர்கள் யாவரின் மீதும் நீர் உமது நிழலை விழச் செய்தீர். நீரே எங்கள் மன்னன், நீரே எங்களுக்குப் பெரியவர்.(24) தாராளமாக வழங்கப்படும் என் அனுமதியுடன், இவ்வேள்வி பரிந்துரைக்கும் தேவர்களைத் வணங்குவீராக. ஓ! பாரதரே, நீர் விரும்பும் பணிகளில் எங்களை நியமிப்பீராக. உண்மையில், ஓ! பாவமற்றவரே, நிறைவேற்றச் சொல்லி நீர் இடும் ஆணைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என நான் உறுதியளிக்கிறேன்.(25) இவ்வேள்வியை நீர் செய்யும்போதே, பீமசேனர், அர்ஜுனன் மற்றும் மாத்ரியின் மகன்கள் {நகுல சகாதேவன்} இருவரும் செய்தவர்களாவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}”.(26)

யாகக் குதிரை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 72-யாகக் குதிரையைச் சுற்றவிடும்படி யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; குதிரையைக் காக்க அர்ஜுனனை நியமித்த யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பெரும் நுண்ணறிவுமிக்கவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், வியாசரை வணங்கி இச்சொற்களைச் சொன்னான்:(1) “நீர் உண்மையில் அறிந்தவாறு சடங்குக்கு உரிய நேரத்தில் என்னைத் தொடங்கச் செய்வீராக. என்னுடைய இவ்வேள்வி முழுமையாக உம்மைச் சார்ந்தது” {என்றான்}.(2)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குந்தியின் மகனே, நான், பைலன், யாஜ்ஞவல்கியன் ஆகியோர் ஒவ்வொரு சடங்கையும் அதனதனுக்குரிய நேரத்தில் நிச்சயம் செய்வோம்.(3) {வேள்வியைச் செய்வதற்குரிய} உனக்கான தொடக்கச் சடங்கு, சைத்ர மாதத்தின் முழுநிலவு நாளில் {சித்ராபௌர்ணமியில்} செய்யப்படும்[1]. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, வேள்விக்குத் தேவையான அனைத்தையும் தயாராக இருக்கட்டும்.(4) குதிரை அறிவியலை நன்கறிந்த சூதர்கள், அதை அறிந்த பிராமணர்கள் ஆகியோர், ஆய்வு செய்த பிறகு, உன் வேள்வி நிறைவடைவதற்குரிய தகுந்த குதிரையைத் தேர்வு செய்யட்டும்.(5) ஓ! மன்னா, சாத்திரத் தீர்மானங்களின்படி அவிழ்த்துவிடப்படும் அவ்விலங்கு, சுடர்மிக்க உன் மகிமையை வெளிப்படுத்தும் வகையில் கடல்களையே கச்சையாகக் கொண்ட மொத்த பூமியில் அது சுற்றித் திரியட்டும்” என்றார் {வியாசர்}”.(7)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “(அம்முனிவரால்) இவ்வாறு சொல்லப்பட்டவனும், பாண்டுவின் மகனும், பூமியின் தலைவனுமான யுதிஷ்டிரன், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பிரம்மம் ஓதுபவர் சொன்ன அனைத்தையும் செய்தான்.(7) ஓ! மன்னா, வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் முறையாகத் திரட்டப்பட்டன.(8) அளவற்ற ஆன்மா கொண்ட தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, தேவையானவை அனைத்தையும் திரட்டிவிட்டு, தீவில் பிறந்த கிருஷ்ணரிடம் {வியாசரிடம்} அது குறித்துச்ச ஒன்னான்.(9)

அப்போது பெரும் சக்தி கொண்டவரான வியாசர், தர்மனின் அரச மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “எங்களைப் பொறுத்தவரையில், வேள்வியின் நோக்கில் உன்னைத் தொடங்கச் செய்ய நாங்கள் அனைவரும் ஆயத்தமாகவுள்ளோம். ஓ! குரு குலத்தோனே, ஸ்பியம் {கத்தி}, கூர்ச்சம் ஆகியனவும், உன் வேள்விக்குத் தேவையான வேறு பொருட்கள் அனைத்தும் பொன்னால் செயப்படட்டும்[2].(11) சாத்திர விதிகளுக்கு ஏற்ப இன்று அந்தக் குதிரை பூமியில் சுற்றித்திரிய அவிழ்த்து விடப்படட்டும். அந்த விலங்கு, முறையாகப் பாதுகாக்கப்பட்டுப் பூமியில் திரியட்டும்” என்றார் {வியாசர்}.(12)யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, இந்தக் குதிரையை அதன் விருப்பப்படி பூமியின் மீது அலைந்து திரிவதற்கு ஏதுவாக இதை அவிழ்த்துவிடுவதற்குரிய ஏற்பாடுகள் உம்மால் செய்யப்படட்டும்.(13) ஓ! தவசியே, இந்தக் குதிரை பூமியில் தன் விருப்பப்படி சுதந்திரமாகத் திரியும்போது அதை எவன் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்”.(14)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, (மன்னன் யுதிஷ்டிரனால்) இவ்வாறு சொல்லப்பட்ட தீவில் பிறந்த கிருஷ்ணர் {வியாசர்}, “பீமசேனனுக்குப் பின் பிறந்தவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும்,(15) ஜிஷ்ணு என்றழைக்கப்படுபவனும், பெரும்பொறுமை கொண்டவனும், தடைகள் அனைத்தையும் கடக்கவல்லவனும் எவனோ, அவனே இந்தக் குதிரையைப் பாதுகாப்பான். நிவாதகவசர்களை அழிந்தவனான அவனே மொத்த பூமியையும் வெல்லத்தகுந்தவன் ஆவான்.(16) தெய்வீக ஆயுதங்கள் அனைத்தும் அவனிடம் உள்ளன. அவனுடைய உடல், தாங்கும் சக்தியில் ஒரு தேவனுடைய உடலைப் போன்றதாகும். அவனுடைய வில்லும், அம்பறாதூணியும் தெய்வீகமானவை. அவனே இந்தக் குதிரையைப் பின்தொடரட்டும்.(17) அறம், பொருள் ஆகிய இரண்டையும் அவன் நன்கறிந்தவன். அறிவியல்கள் அனைத்திலும் அவன் தேர்ச்சிபெற்றவன். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அவன் சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில், அந்தக் குதிரையைச் சுதந்திரமாக மேயவும், திரியவும் வைக்கட்டும்.(18) 

கரிய நிறம் மற்றும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட இந்த இளவரசன் {அர்ஜுனன்}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனாக இருக்கிறான். அபிமன்யுவின் தந்தையான இந்த வீரன் குதிரையைப் பாதுகாப்பான்.(19) பீமசேனனும் பெருஞ்சக்தி கொண்டவனே. குந்தியின் மைந்தனான அவன் அளவற்ற வலிமையைக் கொண்டவனாவான். ஓ! ஏகாதிபதி, நகுலனின் துணையுடன் அவன் {பீமன்} நாட்டைப் பாதுகாக்கத் தகுந்தவனாவான்.(20) ஓ! குரு குலத்தோனே, பெரும் நுண்ணறிவையும், புகழையும் கொண்ட சகாதேவன், உன் தலைநகருக்கு அழைக்கப்பட்டிருக்கும் உறவினர்கள் அனைவரையும் முறையாகக் கவனிப்பான்” என்றார் {வியாசர்}.(21) அந்த முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனுமான யுதிஷ்டிரன், ஒவ்வொரு ஆணையையும் முறையாக நிறைவேற்றி, குதிரையைக் கவனிக்கப் பல்குனனை {அர்ஜுனனை} நியமித்தான்.(22)

யுதிஷ்டிரன், “ஓ! அர்ஜுனா, ஓ! வீரா, வருவாயாக, இந்தக் குதிரை உன்னால் பாதுகாக்கப்படட்டும். இதைப் பாதுகாக்க நீ மட்டுமே தகுந்தவன்; வேறு எவனும் அல்ல.(23) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, ஓ! பாவமற்றவனே, உன்னுடன் மோத முன் வரும் மன்னர்களிடம் போரைத் தவிர்க்க உன்னால் முடிந்தவரை முயற்சிப்பாயாக.(24) மேலும் நீ அவர்களை என்னுடைய வேள்விக்கு அழைக்கவும் வேண்டும். உண்மையில், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவர்களுடன் நட்புறவை நிறுவ முயற்சிப்பாயாக[3]” என்றான்”.(25)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமிக்க ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பியான சவ்யசாச்சினிடம் {அர்ஜுனனிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு, பீமன் மற்றும் நகுலனிடம் நகரத்தைப் பாதுகாக்க ஆணையிட்டான்.(26) மன்னன் திருதராஷ்டிரனின் அனுமதியுடன் அவன், போர்வீரர்களில் முதன்மையான சகாதேவனை, அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரையும் கவனிக்கும் காரியத்தில் நிறுவினான்” {என்றார் வைசம்பாயனர்}.(27)

வடக்கிலிருந்து கிழக்கே திரும்பிய குதிரை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 73-யாகக் குதிரையைப் பின்தொடர்ந்து வடக்குத் திசைக்குச் சென்று, கிழக்கில் திரும்பிய அர்ஜுனன்; அங்கே எதிர்த்த மன்னர்களை வென்றது..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “{அவ்வேள்வித்} தொடக்கத்திற்கான வேளை வந்தபோது, குதிரை வேள்வியைக் கருத்தில் கொண்ட பெரும் ரித்விஜர்கள் அனைவரும், மன்னனை {யுதிஷ்டிரனை} முறையாக அதைத் தொடங்கச் செய்தனர் {யுதிஷ்டிரனுக்கு அஸ்வமேத யாகத்திற்கான தீக்ஷையை விதிப்படி செய்வித்தனர்}.(1) பாண்டுவின் மகனும், பெருஞ்சக்தி கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், வேள்வி விலங்குகளைக் கட்டும் சடங்குகளை நிறைவேற்றி {வேள்வியின்} தொடக்கம் {தொடக்கச் சடங்கு} முடிந்தவுடன் ரித்விஜர்களுடன் சேர்ந்து பெரும் காந்தியுடன் ஒளிர்ந்தான்.(2) குதிரை வேள்விக்காகக் கொண்டுவரப்பட்ட குதிரை சாத்திர விதிகளுக்கு ஏற்புடைய வகையில் அளவிலா சக்தி கொண்டவரும், பிரம்மதை ஓதுபவருமான வியாசரால் அவிழ்த்துவிடப்பட்டது.(3) ஓ! ஏகாதிபதி, கழுத்தைச் சுற்றிலும் தங்க மாலையால் அலங்கரிக்கப்பட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், {வேள்விக்கான} தன் தொடக்கத்திற்குப் பிறகு சுடர்மிக்க நெருப்பைப் போல அழகில் ஒளிர்ந்தான்.(4) கருப்பு மான்தோலை {கிருஷ்ணாஜினத்தை} மேலாடையாகக் கொண்டவனும், கையில் தண்டத்தைக் கொண்டவனும், வெண்பட்டு உடுத்தியவனுமான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, வேள்விப்பீடத்தில் அமர்ந்திருக்கும் இரண்டாவது பிரஜாபதியைப் போல ஒளிர்ந்தான்.(5)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவனது ரித்விஜர்கள் அனைவரும் அதே போன்ற ஆடைகளையே உடுத்தியிருந்தனர். அர்ஜுனன் சுடர்மிக்க நெருப்பைப் போல ஒளிர்ந்தான்.(6) ஓ! மன்னா, வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில், கருப்பு மானின் நிறத்தில் இருந்த அந்தக் குதிரையைப் பின்தொடர்வதற்கு முறையாகத் தயாரானான்.(7) ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, காண்டீவம் என்ற பெயரைக் கொண்ட தன் வில்லை மீண்டும் மீண்டும் இழுத்து, உடும்புத் தோலாலான தன் கையுறையைப் பூட்டி, உற்சாகமிக்க இதயத்துடன் அந்தக் குதிரையைப் பின்தொடர ஆயத்தமானான்.(8) ஓ! மன்னா, குழந்தைகள் உள்ளிட்ட ஹஸ்தினாபுரத்தோர் அனைவரும், குருக்களில் முதன்மையான தனஞ்சயனின் பயணத்தின் தொடக்கத்தில் அவனைக் காண விரும்பி அந்த இடத்திற்கு வந்தனர்.(9) குதிரையையும், அதைப் பின்தொடர்ந்து செல்லப்போகும் இளவரசனையும் {அர்ஜுனனையும்} காண வந்த பார்வையாளர்களின் உடல்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவால் நெருப்புண்டாகிவிடும் எனத் தோன்றும் அளவுக்கு அக்கூட்டம் அடர்த்தியாக இருந்தது.(10)

குந்தியின் மகனான தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} காண அங்கே கூடியிருந்த மனிதக் கூட்டத்திலிருந்து எழுந்த உரத்தவொலி, திசைப்புள்ளிகள் அனைத்தையும், மொத்த ஆகாயத்தையும் நிறைப்பதாக இருந்தது.(11) அவர்கள், “குந்தியின் மகன் அதோ போகிறான், சுடர்மிக்க அழகுடன் கூடிய குதிரை அதோ இருக்கிறது. உண்மையில் அந்த வலிமைமிக்க வீரன் தன் சிறந்த வில்லைத் தரித்துக் கொண்டு அந்தக் குதிரையைப் பின்தொடர்ந்து செல்கிறான்” என்றனர்.(12) உன்னதமான நுண்ணறிவுடன் கூடிய ஜிஷ்ணு கேட்ட சொற்கள் இவையே. மேலும் அந்தக் குடிமக்கள், “அருள் உனதாகட்டும். ஓ! பாரதா, பாதுகாப்புடன் சென்று திரும்புவாயாக” என்று ஆசி கூறினர்.(13) ஓ! மனிதர்களின் தலைவா, வேறு சிலர், “அர்ஜுனனைக் காண முடியாத அளவுக்கு {கூட்ட} நெருக்கடி அதிகமாக இருக்கிறது. எனினும், அவனது வில் நமக்குத் தெரிகிறது.(14) பயங்கர நாணொலியைக் கொண்டதும் கொண்டாடப்படும் வில்லுமான காண்டீவம் அதுவே. {என்று சொல்லிவிட்டு, அர்ஜுனன் கேட்கும் வகையில்} நீ அருளப்பட்டிருப்பாயாக. உன் பாதையில் உள்ள ஆபத்துகள் அனைத்தும் தப்பி ஓடட்டும் {விலகிச் செல்லட்டும்}. எங்கும் உனக்கு அச்சம் ஏற்பட வேண்டாம் {என்று உரக்கச் சொல்லி, மீண்டும் தங்களுக்குள்}.(15) இவன் நிச்சயம் திரும்பிவருவான், அவ்வாறு திரும்பும்போது நான் இவனைக் காணலாம்” என்றனர்.

ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, உயர் ஆன்ம அர்ஜுனன், ஆண்களும், பெண்களும் சொல்லும் இதே போன்ற சொற்களையே மீண்டும் மீண்டும் கேட்டான். வேள்விச் சடங்குகள் அனைத்தையும் நன்கறிந்தவனும், வேதங்களில் முழுத் தேர்ச்சி பெற்றவனுமான யாஜ்ஞவல்கியரின் சீடன் ஒருவன், பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குச்} சாதகமாக மங்கலச் சடங்குகளைச் செய்து கொண்டே அந்த வீரனுடன் {அர்ஜுனனுடன்} சென்றான். ஓ! மன்னா, நீதிமானான யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில், வேதங்களை நன்கறிந்த பிராமணர்கள் பலரும், க்ஷத்திரியர்கள் பலரும் அந்த உயர் ஆன்ம வீரனை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(16-19) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களின் சக்தி மூலம் ஏற்கனவே வென்ற பூமியில் தான் விரும்பிய இடமெல்லாம் அந்தக் குதிரைச் சுற்றித் திரிந்தது.(20)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் குதிரை அவ்வாறு திரிந்து சென்ற போது, அர்ஜுனனுக்கும், மன்னர்கள் பலருக்கும் இடையில் அற்புதம் நிறைந்த பெரிய போர்கள் பல நேரிட்டன. அவற்றை நான் உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன்.(21) ஓ! மன்னா, அந்தக் குதிரை பூமி முழுவதும் சுற்றித் திரிந்தது. ஓ! ஏகாதிபதி, வடக்கிலிருந்து அது கிழக்கி நோக்கித் திரும்பியது என்பதை அறிவாயாக.(22) ஏகாதிபதிகள் பலரின் நாடுகளைக் கலங்கடித்தபடியே அந்தச் சிறந்த குதிரை திரிந்து கொண்டிருந்தது. வெண்குதிரைகளைக் கொண்ட பெருந்தேர்வீரனான அர்ஜுனனால் அது மெதுவாகப் பின்தொடரப்பட்டது.(23) ஓ! ஏகாதிபதி, குருக்ஷேத்திரக் களத்தில் தங்கள் உற்றார் உறவினரை இழந்திருந்தவர்களும், அந்தச் சந்தர்ப்பத்தில் அர்ஜுனனிடம் போரிட்ட {பதினாயிரக்கணக்கில் இருந்த} மன்னர் கூட்டமும், கணக்கற்றவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள் தங்கள் விதியைச் சந்தித்தனர்.(24)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, எண்ணற்ற கிராதர்களும், சிறந்த வில்லாளிகளான யவனர்களும், (குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் ஏற்கனவே பாண்டவர்களால்) வீழ்த்தப்பட்டவர்களான மிலேச்சர்களின் பல்வேறு இனக்குழுக்களும்,(25) பெரும் வேகம் கொண்ட படைவீரர்களையும், விலங்குகளையும் கொண்டவர்களும், போரில் தடுக்கப்பட முடியாதவர்களான ஆரிய {உன்னதமான} மன்னர்கள் பலரும், அந்தப் பாண்டு மகனுடன் போரிட்டனர்.(26) ஓ! ஏகாதிபதி, இவ்வாறு அர்ஜுனனுக்கும், அவனோடு மோத வந்த பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் இடையில் பல்வேறு நாடுகளில் எண்ணற்ற போர்கள் நிகழ்ந்தன.(27) ஓ! பாவமற்ற மன்னா, அவன் போரிட்டவற்றுள் பெருஞ்சீற்றத்துடன் நடந்தவையும், முக்கியமான போர்களையும் மட்டுமே நான் உனக்குச் சொல்லப் போகிறேன்” {என்றார் வைசம்பாயனர்}.(28)

காண்டீவம் நழுவியது! – அஸ்வமேதபர்வம் பகுதி – 74-திரிகர்த்தர்களுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் மூண்ட போர்; இளைஞனான திருதவர்மனின் போர்த்திறனைக் கண்டு வியந்த அர்ஜுனன்; காண்டீவம் நுழுவியது; மூர்க்கத்துடன் போரிட்ட அர்ஜுனன்; அடிபணிந்த திரிகர்த்தர்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஏற்கனவே பாண்டவர்களுடன் பகை பூண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாக நன்கறியப்பட்டவர்களுமான திரிகர்த்தர்களின் மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கும் கிரீடம் தரித்தவனுக்கும் (அர்ஜுனனுக்கும்) இடையில் ஒரு போர் நடந்தது.(1) வேள்விக்காக அனுப்பப்பட்ட முதன்மையான குதிரை தங்கள் ஆட்சிப்பகுதிக்குள் வந்ததை அறிந்த அவ்வீரர்கள் {திரிகர்த்தர்கள்}, கவசம்பூண்டவர்களாக அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டனர்.(2) ஓ! மன்னா, நன்கு அலங்கரிக்கப்பட்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களில் ஏறி, தங்கள் முதுகுகளில் அம்பறாத்தூணியுடன் கூடிய அவர்கள் அந்தக் குதிரையைச் சூழ்ந்து கொண்டு, அதைக் கைப்பற்ற முயற்சித்தனர்.(3) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, கிரீடம் தரித்தவனான அர்ஜுனன், அவர்களுடைய முயற்சிகளை எண்ணிப் பார்த்து, சமாதானப் பேச்சுகளின் மூலம் அந்த வீரர்களைத் தடுத்தான்.(4) அர்ஜுனனின் செய்தியை அலட்சியம் செய்த அவர்கள் தங்கள் கணைகளைக் கொண்டு அவனைத் தாக்கினர். கிரீடம் தரித்தவனான அர்ஜுனன், இருள் மற்றும் ஆசையின் {தமஸ் மற்றும் ரஜஸ் குணங்களின்) ஆதிக்கத்தில் இருந்த அந்தப் போர்வீரர்களைத் தடுத்தான்.(5)

ஜிஷ்ணு {அர்ஜுனன்} புன்னகைத்தபடியே, “அறமற்றவர்களே, விலகுவீராக. உயிரானது (வீசியெறியப்படக்கூடாத) நன்மையான ஒன்றாகும்” என்றான். அவன் புறப்பட்ட வேளையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் ஏற்கனவே உறவினர்கள் கொல்லப்பட்டவர்களான க்ஷத்திரியர்களைக் கொல்ல வேண்டாம் எனத் தடையாணை விதித்திருந்தான்.(7) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனுடைய இந்த ஆணைகளை நினைவுகூர்ந்த அர்ஜுனன், திரிகர்த்தர்களைத் திரும்புமாறு கேட்டான். ஆனால் அவர்கள் அர்ஜுனனின் தடையாணையை அலட்சியம் செய்தனர்.(8) அதன்பிறகு அர்ஜுனன், அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே திரிகர்த்த மன்னன் சூரியவர்மன் மீது எண்ணற்ற கணைகளை ஏவி அவனை வென்றான்.(9) எனினும், தேர்கள் மற்றும் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பத்து புள்ளிகளையும் நிறைத்தபடியே தனஞ்சயனை நோக்கித் திரிகர்த்தப் போர்வீரர்கள் விரைந்தனர்.(10)

அப்போது, பெரும் கரநளினத்தை வெளிப்படுத்திய சூரியவர்மன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, நூற்றுக்கணக்கான நேரான கணைகளால் தனஞ்சயனைத் துளைத்தான்.(11) மன்னனைப் பின்தொடர்ந்து வந்தவர்களும், தனஞ்சயனுக்கு அழிவை ஏற்படுத்த விரும்பியவர்களுமான பிற பெரிய வில்லாளிகள் அனைவரும் அவன் மீது கணைமாரியைப் பொழிந்தனர்.(12) ஓ! மன்னா, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் வில்லின் நாணிலிருந்து எண்ணற்ற கணைகளை ஏவி அந்தக் கணைமேகத்தை வெட்டி வீழ்த்தினான்.(13) சூரியவர்மனின் தம்பியும், இளமையின் சீற்றத்தைக் கொண்டவனும், பெரும் சக்தி கொண்டவனுமான கேதுவர்மன், பெரும் புகழ் கொண்ட பாண்டு மகனை {அர்ஜுனனைத்} தன் அண்ணனுக்காக எதிர்த்தான்.(14) போரில் தன்னை நோக்கி வரும் கேதுவர்மனைக் கண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, கூர்முனை கொண்ட கணைகள் பலவற்றால் அவனைக் {கேதுவர்மனைக்} கொன்றான்.(15)

கேதுவர்மன் வீழ்ந்தபிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான திருதவர்மன், தன் தேரில் ஏறி அர்ஜுனனை நோக்கி வரைந்து சென்று, அவன் மீது சரியாகக் கணைமாரியைப் பொழிந்தான்.(16) இளைஞனான திருதவர்மனின் கரநளினத்தைக் கண்டவனும், வலிமை, சக்தி மற்றும் பேராற்றலைக் கொண்டவனுமான குடாகேசன் {அர்ஜுனன்}, அவனிடம் பெரும் நிறைவையடைந்தான்.(17) அந்த இளம் போர்வீரன் எப்போது தன் கணைகளை எடுத்தான், எப்போது வில்லின் நாணில் அவற்றைப் பொருத்தித் தன் மீது குறி பார்த்தான் என்பதை இந்திரனின் மகனால் {அர்ஜுனனால்} காண முடியவில்லை. அவன் காற்றில் பறந்து வரும் கணைமாரியை மட்டுமே கண்டான்.(18) குறுகிய காலம் வரை {ஒரு முகூர்த்த காலம்} அர்ஜுனன் தன் எதிரிக்கு மகிழ்ச்சியை அளித்து, அவனுடைய வீரத்தையும் திறனையும் கண்டு வியந்தான்.(19) சிரித்துக் கொண்டே இருந்த அந்தக் குருவீரன் {அர்ஜுனன்}, கோபம்நிறைந்த பாம்புக்கு ஒப்பான அந்த இளைஞனுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} திருதவர்மனின் வீரத்தைக் கண்டு மகிழ்ந்ததால் அவனது உயிரை எடுக்காதிருந்தான்.(20)

எனினும், அளவற்ற சக்தியைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, திருதவர்மனின் உயிரை எடுக்க விரும்பாது அவனுடன் மென்மையாகப் போரிட்டுக் கொண்டிருக்கும்போதே அவன் சுடர் மிக்கக் கணையொன்றை அவன் மீது ஏவினான்.(21) அக்கணையால் ஆழத்துளைக்கப்பட்ட விஜயன் {அர்ஜுனன்} திகைப்படைந்தான், அவனது வில்லான காண்டீவம் திடமான பிடியில் இருந்து நழுவி பூமியில் விழுந்தது.(22) ஓ! மன்னா, அர்ஜுனனின் பிடியில் இருந்து விழுந்த போது அந்த வில்லின் வடிவம் (மழைக்குப் பின் ஆகாயத்தில் தோன்றும்} இந்திரனின் வில்லுக்கு {வானவில்லுக்கு} ஒப்பானதாகத் தெரிந்தது.(23) ஓ! ஏகாதிபதி, தெய்வீகமானதும், பெரியதுமான அந்த வீல் போரில் கீழே விழுந்தபோது திருதவர்மன் உரக்க நகைத்தான்.(24) இதனால் சினம் தூண்டப்பட்டவனான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, தன் கரத்தில் இருந்த குருதியைத் துடைத்துவிட்டு, மீண்டும் தன் வில்லை எடுத்துக் கொண்டு சரியான கணைமாரியைப் பொழிந்தான்.(25)

அப்போது, தனஞ்சயனின் அந்தச் சாதனையை மெச்சிய பல்வேறு உயிரினங்களின் குழப்பான {கல கலவென்ற} உரத்த ஒலி, ஆகாயத்தை நிறைத்து, சொர்க்கங்களையே தொட்டது.(26) சினத்தில் தூண்டப்பட்டு, யுகத்தின் முடிவில் தோன்றும் யமனைப் போலத் தெரிந்த ஜிஷ்ணுவைக் கண்ட திரிகர்த்த போர்வீரர்கள், திருதவர்மனைக் காக்கும் விருப்பத்தில் தங்கள் நிலைகளில் இருந்து விரைந்த வந்து வேகமாக அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். தன் பகைவர்களால் சூழப்பட்டவனாகத் தன்னைக் கண்ட அர்ஜுனன் முன்பைவிட அதிகக் கோபம் கொண்டான்.(27,28) அவன் விரைவில், பெரும் இந்திரனின் கணைகளுக்கு ஒப்பானவையும், வாரப்பிரும்பாலானவையுமான கணைகள் பலவற்றால் அவர்களில் முதன்மையான போர்வீரர்களான பதினெட்டு பேரை விரைவாகக் கொன்றான்.(29) அப்போது திரிகர்த்தப் போர்வீரர்கள் தப்பி ஓடத் தொடங்கினர். அவர்கள் பின்வாங்குவதைக் கண்ட தனஞ்சயன், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றைப் பெரு வேகத்துடன் அவர்கள் மீது ஏவி உரக்கச் சிரித்தான்.(30)

தனஞ்சயனின் கணைகளால் பெரிதும் பீடிக்கப்பட்ட திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், உற்சாகமிழந்த இதயத்துடன் திசைகள் அனைத்திலும் தப்பி ஓடினர்.(31) அப்போது அவர்கள், (குருக்ஷேத்ரப் போர்க்களத்தில்) சம்சப்தகக் கூட்டத்தைக் கொன்ற அந்த மனிதர்களில் புலியிடம் {அர்ஜுனனிடம்}, “நாங்கள் உமது அடிமைகள். நாங்கள் உமது வசப்படுகிறோம்[1].(32) ஓ! பார்த்தரே, எங்களுக்கு ஆணையிடுவீராக. மிக அடக்கமான உமது பணியாட்களைப் போல நாங்கள் இங்கே காத்திருக்கிறோம் பாரும். ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, நாங்கள் உமது ஆணைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்” என்றனர்.(33) அடிபணிவதை வெளிப்படுத்தும் இச்சொற்களைக் கேட்ட தனஞ்சயன், அவர்களிடம், “ஓ! மன்னர்களே, உங்கள் உயிரைக் காத்துக் கொண்டு, என் ஆட்சிப்பகுதியை ஏற்றுக் கொள்வீராக” என்றான்”.(34)

பகதத்தத்தன் வாரிசு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 75-பிராக்ஜோதிஷ நாட்டுக்குச் சென்ற குதிரை; குதிரையைக் கைப்பற்றிய வஜ்ரதத்தன்; அர்ஜுனனுக்கும், வஜ்ரதத்தனுக்கும் இடையில் நடந்த போர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்த முதன்மையான குதிரை பிராக்ஜோதிஷ நாட்டுக்குள் சென்று அங்கே திரியத் தொடங்கியது. போரில் வீரமிக்கவனான பகதத்தனின் மகன் இதைக் கண்டு (அர்ஜுனனுடன் மோதுவதற்காக) வெளியே வந்தான்.(1) ஓ! பாரதர்களில் தலைவா, மன்னன் வஜ்ரதத்தன் {யஜ்ஞதத்தன்}, தன் நாட்டுக்குள் வந்த (வேள்விக்) குதிரையைக் கண்டு, (அதைப் பிடிப்பதற்காகப்) போரிட்டான்.(2) பகதத்தனின் அரசமகன், தன் நகரத்தைவிட்டு வெளியே வந்து, அங்கே வந்த குதிரையைப் பீடித்து (அதைக் கைப்பற்றி) தன் இடத்தை {பட்டணத்தை} நோக்கித் திரும்பிச் சென்றான்.(3) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குருகுலத் தலைவன் {அர்ஜுனன்} இதைக் கண்டு, விரைவாகத் தன் காண்டீவத்தை வளைத்துத் திடீரெனத் தன் பகைவனை நோக்கி விரைந்தான்.(4) காண்டீவத்திலிருந்து வெளிப்பட்ட கணைகளால் திகைப்படைந்த பகதத்தனின் வீர மகன் {வஜ்ரதத்தன்}, குதிரையை விட்டுவிட்டுப் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து தப்பி ஓடினான்[1].(5)போரில் தடுக்கப்பட முடியாதவனான அந்த முதன்மையான மன்னன் {வஜ்ரதத்தன்}, மீண்டும் தன் தலைநகருக்குள் நுழைந்து, கவசம் பூண்டு, யானைகளின் இளவரசனான தன் யானையில் ஏறி வெளி வந்தான்.(6) அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், தன் தலைக்கு மேல் வெண்குடையைக் கொண்டிருந்தான், அவனுக்குப் பால்போன்ற நிறத்தில் இருந்த வெண்சாமரம் வீசப்பட்டது.(7) சிறுபிள்ளைத்தனம் மற்றும் மூடத்தனத்தால் அவன், பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும், போர்க்களத்தில் பயங்கரச் செயல்களுக்காகப் புகழ்பெற்றவனுமான பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} போர்புரிய அவனை அறைகூவியழைத்தான்.(8) சினம் தூண்டப்பட்ட அந்த இளவரசன், முழு மலைக்கு ஒப்பானதும், மதப்பெருக்குள்ள கன்னப்பொட்டுகளும், வாயும் கொண்டதுமான தன் யானையை அர்ஜுனனை நோக்கித் தூண்டினான்.(9) உண்மையில் அந்த யானை, மழைபொழியும் பெரும் மேகத்திரளைப் போலத் தன் மதத்தைப் பெருக்கியது. தன் இனத்தைச் சேர்ந்த படையின் சாதனைகளைத் தடுக்க வல்ல அது, (போர் யானைக்குரிய) உடன்பாட்டுவிதிகளுக்கு ஏற்புடைய வகையில் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது. போரில் தடுக்கப்படமுடியாததான அது, கட்டுப்பாட்டைக் கடந்த மதங்கொண்டிருந்தது.(10)

இரும்பு அங்குசத்தைக் கொண்டு அந்த இளவரசனால் தூண்டப்பட்ட அந்தப் பெரும் யானை, (பறந்து வரும் மலையைப் போல) ஆகாயத்தையே பிளப்பது போல (முன்னேறிச் செல்வதாகத்) தெரிந்தது. ஓ! மன்னா, ஓ! பாரதா, தன்னை நோக்கி முன்னேறிவரும் அதனைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, சினத்தில் நிறைந்தவனாகப் பூமியில் நின்றபடியே, அதன் முதுகில் இருந்த இளவரசனோடு மோதினான்.(12) கோபத்தில் நிறைந்திருந்த வஜ்ரதத்தன், நெருப்பின் சக்தியைக் கொண்டவையும், (காற்றில் செல்லும்போது) வேகமாகப் பறக்கும் வெட்டுக்கிளிகளுக்கு ஒப்பானவையுமான பெரும் எண்ணிக்கையிலான தோமரங்களை அர்ஜுனனை நோக்கி ஏவினான்.(13) எனினும், அர்ஜுனன், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு அந்தத் தோமரங்களில் சிலவற்றை இரண்டாகவும், சிலவற்றை மூன்றாகவும் வெட்டினான். ஆகாயத்தில் பறக்கும் தன் கணைகளைக் கொண்டே அவன் அவற்றை ஆகாயத்திலேயே வெட்டினான்.(14) இவ்வாறு தன் தோமரங்கள் வெட்டப்பட்டதைக் கண்ட பகதத்தன் மகன் {வஜ்ரதத்தன்}, எண்ணற்ற பிற கணைகளைத் தொடர்ச்சரமாக அர்ஜுனனை நோக்கி ஏவினான்.(15)

இதனால் சினம் கொண்ட அர்ஜுனன், தங்கச் சிறகுகளுடன் கூடிய நேராகச் செல்லும் எண்ணற்ற கணைகளைப் பகதத்தன் மகன் {வஜ்ரதத்தன்} மீது முன்னைவிட வேகமாக ஏவினான்.(16) பெருஞ்சக்தி கொண்ட வஜ்ரதத்தன், சீற்றமிக்க மோதலில் பெரும் பலத்துடன் தாக்கப்பட்டு, அந்தக் கணைகளால் துளைக்கப்பட்டுப் பூமியில் விழுந்தான். எனினும், நனைவுநிலை அவனைக் கைவிடவில்லை {அவனுக்கு நினைவு தவறவில்லை}.(17) வெற்றியை விரும்பும் பகதத்தன் மகன் {வஜ்ரதத்தன்}, அந்தப் போருக்கு மத்தியில் மீண்டும் யானைகளின் இளவரசனான தன் யானையின் மீது ஏறி, மிக நிதானமாக எண்ணற்ற கணைகளை அர்ஜுனன் மீது ஏவினான்.(18) கோபத்தால் நிறைந்த ஜிஷ்ணு, நெருப்பின் சுடர்மிக்கத் தழல்களைப் போலத் தெரிந்தவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகள் பலவற்றைப் போலத் தெரிந்தவையுமான எண்ணற்ற கணைகளை அந்த இளவரசன் மீது ஏவினான்.(19) அவற்றால் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்க யானை, பெருமளவிலான குருதியைச் சிந்தி, செஞ்சுண்ண நிறத்தில் நீரை வெளியிடும் சிற்றோடைகள் பலவற்றைக் கொண்ட ஒரு மலையைப் போலத் தெரிந்தது[2]” {என்றார் வைசம்பாயனர்}.(20)

வீழ்ந்தான் வஜ்ரதத்தன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 76-பகதத்தன் மகனான வஜ்ரதத்தனை வென்ற அர்ஜுனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதர்களின் தலைவா, நூறு வேள்வி செய்தவனுக்கும் {இந்திரனுக்கும்}, விருத்திரனுக்கும் இடையில் நடந்த போரைப் போல அர்ஜுனனுக்கும், அந்த இளவரசனுக்கும் {வஜ்ரதத்தனுக்கும்} இடையில் நடந்த போர் இவ்வாறே மூன்று நாள் நீடித்தது.(1)

நான்காம் நாளில், பெரும் வலிமை கொண்ட வஜ்ரதத்தன் உரக்கச் சிரித்துக் கொண்டே அர்ஜுனனிடம், “ஓ! அர்ஜுனா, நில், நிற்பாயாக. உன்னால் உயிருடன் தப்ப இயலாது. உன்னைக் கொன்று என் தந்தைக்கு {பகதத்தருக்குச்} செய்ய வேண்டிய நீர்ச்சடங்கை {தர்ப்பணத்தை} முறையாக நான் செய்யப் போகிறேன்.(3) உன் தந்தையின் நண்பரும், வயது முதிர்ந்தவருமான என் தந்தை பகதத்தர், அவருடைய முதுமையின் விளைவால் உன்னால் கொல்லப்பட்டார். எனினும், சிறுவனான என்னுடன் நீ போரிடுவாயாக[1]” என்றான்.(4)ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயனே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன மன்னன் வஜ்ரதத்தன், சினத்தில் நிறைந்தவனாகப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} நோக்கித் தன் யானையைத் தூண்டினான்.(5) பெரும் நுண்ணறிவுமிக்க வஜ்ரதத்தனால் தூண்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், ஆகாயத்தையே வெட்ட விரும்பி செல்வதைப் போலத் தனஞ்சயனை நோக்கி விரைந்தது.(6) அந்த யானைகளின் இளவரசன், மழையால் ஒரு மலையை நனைக்கும் நீல மேகத் திரளைப் போலத் தன் துதிக்கையின் முனையில் வெளிப்பட்ட நீரைப் பொழிந்து {ஜலத்திவலையால்} அர்ஜுனனை நனைத்தது.(7) உண்மையில் அம்மன்னனால் தூண்டப்பட்ட அந்த யானை, ஒரு மேகத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டே, தன் வாயில் வெளிப்பட்ட ஆழ்ந்த ஒலியுடன் பல்குனனை நோக்கி விரைந்தது.(8)

உண்மையில் வஜ்ரதத்தனால் தூண்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், வலிமைமிக்கக் குருக்களின் தேர்வீரனை நோக்கி விரைவாக நகர்ந்து, தன் நடையால் மகிழ்ச்சியில் ஆடுவதைப் போலத் தெரிந்தது.(9) வஜ்ரதத்தனின் அந்த விலங்கு தன்னை நோக்கி வருவதைக் கண்டவனும், பகைவர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கவனுமான தனஞ்சயன், தன் காண்டீவத்தைச் சார்ந்து, அச்சத்தால் நடுங்காமல் தன் நிலையில் நின்றான்.(10) தன் பணியை நிறைவேற்றத் தடையாக இருக்கும் வஜ்ரதத்தனை நினைத்து, (பாண்டவர்களிடம் பிராக்ஜோதிஷ) வீடு கொண்ட பழைய பகையையும் நினைத்துப் பார்த்த பாண்டுவின் மகன், கோபத்தால் பெரிதும் தூண்டப்பட்டவனாக அந்த மன்னனை எதிர்த்தான்.(11) சினத்தால் நிறைந்தவனான தனஞ்சயன், பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலத் தன் கணைப்பொழிவின் மூலம் அந்த விலங்கின் முன்னேற்றத்தைத் தடுத்தான்.(12)

அழுகுடன் கூடிய (வடிவம் கொண்ட) அந்த யானைகளின் இளவரசன், அர்ஜுனனால் இவ்வாறு தடுக்கப்பட்டு, முள் சிலிர்த்த முள்ளம்பன்றியைப் போலப் பல கணைகளால் உடல் துளைக்கப்பட்டுத் தன் முன்னேற்றத்தை நிறுத்தியது.(13) தன் யானையின் முன்னேற்றம் தடைபட்டதைக் கண்ட பகதத்தனின் அரச மகன் {வஜ்ரதத்தன்}, சினத்தால் மதியிழந்தவனாகக் கூர் முனை கணைகள் பலவற்றை அர்ஜுனன் மீது ஏவினான்.(14) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், பகைவரைக் கொல்லும் தன் கணைகள் பலவற்றால் அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான். இந்த அருஞ்செயல் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.(15)

கடுஞ்சினத்தால் தூண்டப்பட்ட பிராக்ஜோதிஷர்களின் மன்னன் {வஜ்ரதத்தன்}, ஒரு மலைக்கு ஒப்பான தன் யானையை மீண்டும் அர்ஜுனனுக்கு எதிராக வலுக்கட்டாயமாகத் தூண்டினான்.(16) மீண்டும் தன்னை நோக்கி முன்னேறிவரும் அவ்விலங்கைக் கண்ட அர்ஜுனன், நெருப்பின் தழலுக்கு ஒப்பானதும், பெருஞ்சக்தி கொண்டதுமான ஒரு கணையைப் பெரும்பலத்துடன் ஏவினான்.(17) ஓ! மன்னா, பாண்டுவின் மகனால் முக்கிய அங்கங்கள் ஆழமாகத் தாக்கப்பட்ட அந்த விலங்கு, வஜ்ரத்தால் தளர்ந்த மலைச் சிகரத்தைப் போலத் திடீரெனப் பூமியில் விழுந்தது.(18) தனஞ்சயனின் கணையால் தாக்கப்பட்ட அந்த யானை பூமியில் கிடந்த போது, இந்தரின் வஜ்ரத்தால் {இடியால்} தளர்ந்து பூமியில் விழுந்து கிடக்கும் ஒரு பெரும் மலைப் பாறையைப் போலத் தெரிந்தது.(19)

வஜ்ரதத்தனின் யானை பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்த போது, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, யானையுடன் சேர்ந்து விழுந்து கிடந்த அந்த மன்னனிடம், “அஞ்சாதே.(20) உண்மையில், வலிமையும், சக்தியும் கொண்ட யுதிஷ்டிரர், என்னை இந்தப் பணியில் நிறுவும்போது இந்தச் சொற்களையே சொன்னார், “ஓ! தனஞ்சயா, (உன்னுடன் போரில் ஈடுபடும்) மன்னர்களை நீ கொல்லாதே.(21) ஓ! மனிதர்களில் புலியே, பகை மன்னர்களை முடக்கிவிட்டாலே உன் பணி நிறைவடைந்ததாக நீ கருத வேண்டும். ஓ! தனஞ்சயா, உன்னுடன் போரிட வரும் அந்த மன்னர்களின் போர்வீரர்களையும் நீ கொல்லாதே.(22) உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருடன் யுதிஷ்டிரனின் குதிரை வேள்விக்கு வருமாறு அவர்களை அழைப்பாயாக” {என்றார்}.(23)

ஓ! மன்னா, என் அண்ணனின் இந்த ஆணைகளைக் கேட்டிருக்கும் நான் உன்னைக் கொல்ல மாட்டேன். எழுவாயாக; அச்சம் உனதாக வேண்டாம்; ஓ! பூமியின் தலைவா, பாதுகாப்பாகவும், நலமாகவும் உன் நகரத்திற்குத் திரும்புவாயாக.(24) ஓ! பெரும் மன்னா, சைத்ர மாதத்தின் முழு நிலவு நாளில் {சித்ரா பௌர்ணமியில்} நடைபெறும் நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் அவ்வேள்விக்கு நீ வருவாயாக” என்றான்.(25)

இவ்வாறு அர்ஜுனனால் சொல்லப்பட்டவனும், பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டவனுமான அந்தப் பகதத்தனின் அரச மகன் {வஜ்ரதத்தன்}, “அவ்வாறே ஆகட்டும்” என்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(26)

மீண்டும் நழுவிய காண்டீவம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 77-சைந்தவர்களுடன் போர்புரிகையில் மீண்டும் காண்டீவம் நழுவியது; தெய்வீக முனிவர்களின் ஜபத்தால் புதிய பலம் பெற்றுக் கடும் போர்புரிந்த அர்ஜுனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(குருக்ஷேத்திரப் போர்க்களத்தில்) தங்கள் குலம் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கில் எஞ்சி வாழ்ந்த சைந்தவர்களுக்கும், கிரீடம் தரித்தவனான அர்ஜுனனுக்கும் இடையில் ஒரு பெரும்போர் நேர்ந்தது[1]. வெண்குதிரைகளைக் கொண்டவன் தங்கள் ஆட்சிப்பகுதிக்குள் நுழைந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள் {சைந்தவர்கள்}, பாண்டுகுலத்தின் முதன்மையான அவனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவனை எதிர்த்து வெளியே வந்தனர்.(2) கடும் நஞ்சைப் போன்ற அந்தப் பயங்கரப் போர்வீரர்கள், அந்தக் குதிரையைத் தங்கள் நாட்டுக்குள் கண்டு, பீமசேனனின் தம்பியான பார்த்தனிடம் எந்த அச்சமும் கொள்ளாமல் அதைக் கைப்பற்றினர்.(3) கையில் வில்லுடன் தரையில் நின்று குதிரையைக் காத்துக் கொண்டிருந்த பீபத்சுவை {அர்ஜுனனை} எதிர்த்த அவர்கள் அருகில் சென்று அவனைத் தாக்கினர்.(4)ஏற்கனவே போரில் வீழ்த்தப்பட்டவர்களும், வலிமையும், சக்தியும் கொண்டவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள், வெற்றியடையும் ஆசையால் உந்தப்பட்டு, அந்த மனிதர்களில் முதன்மையானவனைச் சூழ்ந்து கொண்டனர்.(5) தங்கள் பெயர்கள், குடும்பங்களின் பெயர்கள் மற்றும் பல்வேறு சாதனைகளை அறிவித்துக் கொண்ட அவர்கள், பார்த்தன் மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(6) பகை யானைகளையும் தடுக்கவல்ல கடுஞ்சக்தி கொண்ட கணைமாரியைப் பொழிந்த அந்த வீரர்கள், குந்தியின் மகனைப் போரில் வெல்ல விரும்பி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(7) கடுஞ்சாதனைகளைச் செய்த அர்ஜுனன் தரையில் நிற்க, தேரில் அமர்ந்திருந்த அவர்கள் அவனோடு போரிட்டனர்.(8)

நிவாதகவசர்களைக் கொன்றவனும், சம்சப்தகர்களை அழித்தவனும், சிந்துக்களின் மன்னனை {ஜெயத்ரதனைக்} கொன்றவனுமான அந்த வீரனை {அர்ஜுனனை} அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்கள் தாக்கத் தொடங்கினர்.(9) ஆயிரம் தேர்கள் மற்றும் பத்தாயிரம் குதிரைகளுடன் கூட்டுக்குள் அடைத்ததைப் போல அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்ட அந்தத் துணிவுமிக்க வீரர்கள், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.(10) ஓ! குரு குலத்தவனே, போரில் தனஞ்சயனால் ஜெயத்ரதன் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்த அவர்கள், கடும் மழை பொழியும் மேகத் திரளைப் போல அந்த வீரன் மீது கடும் கணை மாரியைப் பொழிந்தனர். அந்தக் கணைமாரியில் மறைந்த அர்ஜுனன், மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனைப் போலத் தெரிந்தான்.(11,12)

ஓ! பாரதா, இரும்புக்கூட்டுக்கு மத்தியில் இருக்கும் ஒரு பறவைக்கு ஒப்பாக அந்தப் பாண்டுவின் முதன்மையான மகன் {அர்ஜுனன்}, கணை மேகங்களுக்கு மத்தியில் இருந்தான்.(13) குந்தியின் மகன் இவ்வாறு கணைகளால் பீடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு, ஓ! என்றும் ஐயோ என்றும் கதறல்கள் மூவுலகங்களிலும் கேட்டன, சூரியன் தன் காந்தியை இழந்தான்.(14) அப்போது, ஓ! மன்னா, கடுங்காற்று வீசத் தொடங்கியது, அதே வேளையில் சூரியன், சந்திரன் இருவரையும் ராஹு விழுங்கினான்.(15) எரிகொள்ளிகள் பல சூரிய வட்டிலைத் தாக்கி பல்வேறு திசைகளில் விழுந்தன. மலைகளின் இளவரசனான கைலாஸம் நடுங்கத் தொடங்கிற்று.(16)

ஏழு (தெய்வீக) முனிவர்களும், சொர்க்கத்தின் வேறு முனிவர்களும், அச்சமடைந்தவர்களாக, துன்பம் மற்றும் கவலையால் பீடிக்கப்பட்டு வெப்பப் பெருமூச்சுகளை விட்டனர்.(17) அந்த எரிகொள்ளிகள் ஆகாயத்தைத் துளைத்துக் கொண்டு சந்திர வட்டிலிலும் விழுந்தன. திசைப்புள்ளிகள் அனைத்தும் புகையால் நிறைந்து விசித்திரமான தன்மையை ஏற்றன.(18) தங்களுக்கு மத்தியில் விளையாடிக் கொண்டிருந்த மின்னல் கீற்றுகளுடன் கூடியவையும், பக்கத்துக்குப் பக்கம் எல்லையாக இந்திரவில்லைக் கொண்டவையுமான சிவந்த மேகங்கள், திடீரென ஆகாயத்தை மறைத்துக் கொண்டு, பூமியில் இறைச்சியையும், குருதியையும் பொழிந்தன.(19) அந்த வீரன் {அர்ஜுனன்}, கணைமாரியில் மூழ்கிய போது இயற்கை இத்தன்மையையே அடைந்தது. உண்மையில், பாரதர்களில் முதன்மையான பல்குனன் {அர்ஜுனன்}, இவ்வாறு பீடிக்கப்பட்ட போது இந்த அதிசயங்கள் தோன்றின.(20)

அடர்த்தியான கணை மேகத்தில் மூழ்கிய அர்ஜுனன் திகைப்படைந்தான். அவனது வில்லான காண்டீவம், அவனது உறுதியான பிடியில் இருந்து தளர்ந்து விழுந்தது, அவனது தோலுறையும் நழுவியது.(21) தனஞ்சயன் மயக்கமடைந்தபோது, சைந்தவ வீரர்கள் சற்றும் தாமதிக்காமல், உணர்வற்ற அந்தப் போர்வீரன் மீது எண்ணற்ற வேறு கணைகளை மீண்டும் ஏவினர்.(22) பிருதையின் மகன் {அர்ஜுனன்} நினைவிழந்ததை அறிந்த தேவர்களின் இதயமும் அச்சத்தால் பீடிக்கப்பட்டதால், அவர்கள் பல்வேறு ஆசிகளைக் கூறி அவனது நலத்தை நாடத் தொடங்கினர்.(23) அப்போது தெய்வீகமான ஏழு முனிவர்களும், மறுபிறப்பாள முனிவர்களும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட பிருதையின் மகனுக்கு வெற்றியைக் கொடுக்க விரும்பி அமைதியான ஜபத்தில் ஈடுபட்டனர்.(24)

இறுதியாக, சொர்க்கவாசிகளின் அந்தச் செயல்களின் மூலம் பார்த்தனின் சக்தி சுடர்ந்தெழுந்தபோது, உயர்திறன் தெய்வீக ஆயுதங்களை அறிந்த அந்த வீரன் {அர்ஜுனன்} ஒரு மலையைப் போல அசையாமல் நின்றான்.(25) பிறகு, குருக்களைத் திளைக்கச் செய்பவனான அவன் தன் தெய்வீக வில்லை இழுத்தான். அவன் மீண்டும் மீண்டும் நாண்கயிற்றை இழுத்த போது, அதனைப் பின்தொடர்ந்து எழுந்தவொலி ஏதோவொரு பெரும் இயந்திரத்தின் உரத்த ஒலிக்கு ஒப்பானதாக இருந்தது[2].(26) மழையைப் பொழியும் புரந்தரனைப் போல அந்தப் பலமிக்க அர்ஜுனன் தன் வில்லில் இருந்து இடையறாத கணைமாரியைத் தன் பகைவரின் மீது பொழிந்தான்.(27) அக்கணைகளால் துளைக்கப்பட்ட சைந்தவப் போர்வீரர்கள், வெட்டுக்கிளிகளால் மறைக்கப்பட்ட மரங்களைப் போல மறைந்துபோனார்கள்.(28)அவர்கள் காண்டீவத்தின் ஒலியினாலேயே அச்சமடைந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதயத் துயரினால் அவர்க்ள கண்ணீர் உதிர்த்து, பேரொலியுடன் புலம்பினார்கள்.(29) வலிமைமிக்கவனான அந்தப் போர்வீரன், ஒரு நெருப்புச் சக்கரத்தைப் போன்ற வேகத்துடன் பகைவரின் கூட்டத்திற்கு மத்தியில் திரிந்து, எப்போதும் தன் கணைகளால் அந்தப் போர்வீரர்களைத் துளைத்தான்.(30) வஜ்ரதாரியான பெரும் இந்திரனைப் போலப் பகைவர்களைக் கொல்பவனான அர்ஜுனன், தன் வில்லில் இருந்து அனைத்துத் திசைகளிலும் ஏவிய கணைமாரியானது (மனித வகையைச் சாராத) மாயக் காட்சிக்கு ஒப்பாக இருந்தது.(31) அந்தக் கௌரவ வீரன், பலமிக்கக் கதிர்களால் மேகங்களை விலக்கும் கூதிர் காலச் சூரியனைப் போல, பிரகாசமாகத் தெரிந்த கணை மாரியால், பகைவரின் கூட்டத்தைத் துளைத்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(32)

ஜெயத்ரதன் வாரிசு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 78-மீண்டும் திரண்டு அர்ஜுனனைத தாக்கிய சைந்தவர்கள்; அர்ஜுனன் செய்த பெரும்போர்; அர்ஜுனனைச் சந்தித்த துச்சலை; சமாதானத்துக்கு மன்றாடியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “போரிட்டுக் கொண்டிருந்தவனும், தடுக்கப்பட முடியாதவனுமான அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, போர்க்களத்தில் இமயத்தைப் போல அசைக்க முடியாதவனாக நின்றான்.(1) மீண்டும் அணிதிரண்ட சைந்தவப் போர்வீரர்கள், பெரும் கோபத்துடன் மீண்டும் மீண்டும் அவன் மீது கணைமாரியைப் பொழிந்தனர்.(2) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன், மீண்டும் அணிதிரண்டு வந்திருப்பவர்களும், மரணத்தின் விளிம்பில் நிற்பவர்களுமான தன் பகைவர்களைக் கண்டு சிரித்து, அவர்களிடம் மென்மையான சொற்களில்,(3) “உங்கள் சக்திக்கு முடிந்த அளவில் என்னுடன் போரிட்டு என்னை வெல்ல முயற்சிப்பீர். எனினும், உங்கள் அனைவருக்கும் பேராபத்துக் காத்திருப்பதால், அவசியமான செயல்கள் அனைத்தையும் செய்துவிடுவீராக.(4) உங்கள் கணை மேகங்கள் அனைத்தையும் கலங்கடித்து நான் உங்கள் அனைவருடன் போரிடுவதைக் காண்பீர். போரில் விருப்பம் உள்ள நீங்கள் சற்றே பொறுப்பீராக. நான் விரைவில் உங்கள் செருக்கைத் தணிப்பேன்” என்றான்.(5)

காண்டீவதாரி {அர்ஜுனன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, கோபத்தில் இச்சொற்களைச் சொன்னாலும், தன் அண்ணனின் {யுதிஷ்டிரனின்} சொற்களை நினைவுகூர்ந்தான்.(6) அச்சொற்கள், “ஓ! குழந்தாய் {அர்ஜுனா}, போரில் உன்னை எதிர்த்து வரும் க்ஷத்திரியர்களை நீ கொல்லாதே. எனினும் அவர்கள் உன்னால் வெல்லப்பட வேண்டும்” என்பனவாகும். மனிதர்களில் முதன்மையான பல்குனன் {அர்ஜுனன்}, பேரான்மாவும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறே சொல்லி அனுப்பப்பட்டான். எனவே அவன் தனக்குள், “என் அண்ணனால் இவ்வாறே நான் சொல்லி அனுப்பப்பட்டேன். என்னை எதிர்த்து வரும் போர்வீரர்களைக் கொல்லக்கூடாது.(7,8) நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் சொற்களைப் பொய்யாக்கும் வகையில் நான் செயல்படக்கூடாது” எனச் சிந்திக்கத் தொடங்கினான்.(9)

இத்தீர்மானத்திற்கு வந்தவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான பல்குனன் {அர்ஜுனன்}, போரில் சீற்றத்துடன் இருந்த சைந்தவர்கள் அனைவரிடமும், இந்தச் சொற்களில்,(10) “நான் உங்களுக்கு நன்மையானதைச் சொல்லப் போகிறேன். நீங்கள் எனக்கு எதிரில் நின்றாலும், நான் உங்களைக் கொல்ல விரும்பவில்லை. உங்களில் எவன் என்னிடம் என்னால் வெல்லப்பட்டதாகவும், அவன் என்னுடையவன் என்றும் சொல்கிறானோ, அவன் என்னால் விடப்படுவான்.(11) என்னுடைய இந்தச் சொற்களைக் கேட்டு, உங்கள் நன்மைக்கு எது சிறந்ததோ அவ்வகையில் என்னிடம் செயல்படுவீராக. வேறு வகையில் செயல்படுவதன் மூலம் நீங்கள் உங்களைப் பேராபத்தான நிலையில் நிறுத்திக் கொள்வீர்[1]” என்றான்.(12)அந்தக் குருக்களின் தலைவன் {அர்ஜுனன்}, வீரமிக்கப் போர்வீரர்களிடம் இச்சொற்களைச் சொல்லிவிட்டு, அவர்களுடன் போரிடத் தொடங்கினான். அர்ஜுனன் கோபத்தால் தூண்டப்பட்டான். வெற்றியை விரும்பிய அவனது பகைவர்களும் இணையாகச் சினமூண்டிருந்தார்கள்.(13) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சைந்தவர்கள் காண்டீவதாரியின் மீது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நேர்க்கணைகளைத் தொடுத்தனர்.(14) தனஞ்சயன், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், பயங்கரமான கூர்முனைகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகள் தன்னிடம் வருவதற்கு முன்பே கூர்த்தீட்டப்பட்ட தன் கணைகளைக் கொண்டு அவற்றை வெட்டி வீழ்த்தினான்.(15) கங்க இறகுகளைக் கொண்ட அந்தக் கூரிய கணைகளை வெட்டி வீழ்த்திய அர்ஜுனன், தன்னை எதிர்த்த ஒவ்வொரு வீரனையும் கூர்த்தீட்டப்பட்ட ஒரு கணையால் துளைத்தான்.(16) தனஞ்சயனே {அர்ஜுனனே} தங்கள் மன்னன் ஜயத்ரதனைக் கொன்றான் என்பதை நினைவுகூர்ந்த அந்தச் சைந்தவ க்ஷத்திரியர்கள், அவன் மீது பராஸங்களையும், ஈட்டிகளையும் பெரும் சக்தியுடன் ஏவினர்.(17)

கிரீடம் தரித்தவனும், பெரும் வலிமை கொண்டவனுமான தனஞ்சயன், அந்த ஆயுதங்கள் எவையும் தன்னை அடைவதற்கு முன்பே அவை அனைத்தையும் துண்டித்து அவர்களது நோக்கத்தைக் கலங்கடித்தான். இப்படியே நீண்ட காலமானதில் பாண்டுவின் மகன் பெருங்கோபம் கொண்டான்.(18) வெற்றியடையும் விருப்பத்தில் தன்னை நோக்கி விரைந்து வரும் போர்வீரர்களின் தலைகளை அவன் நாராசங்களாலும், பல்லங்களாலும் வீழ்த்தினான்.(19) பலர் தப்பி ஓடினர், பலர் அர்ஜுனனை நோக்கி விரைந்தனர்; பலர் அசையாமல் இருந்தனர்; எனினும் அவர்கள் அனைவரும் பெருங்கடலின் முழக்கத்திற்கு ஒப்பான பேரொலியுடன் கதறினர்.(20) அளவிலா வலிமைகொண்ட பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} தங்கள் பலத்திற்கும், ஆற்றலுக்கும் தகுந்தபடி போரிட்டுக் கொண்டிருந்த அவர்கள் அவனால் கொல்லப்பட்டனர்.(21) அந்தப் போரில் களைத்துப் போன  விலங்குகள் மேலிருந்த போர்வீரர்களைத் தன் கூரிய கணைகளின் மூலம் உணர்விழக்கச் செய்வதில் பார்த்தன் {அர்ஜுனன்} வென்றான்.(22)

அப்போது, அவர்களுடைய {சைந்தவர்களின்} ராணியும், திருதராஷ்டிரன் மகளுமான துச்சலை, அர்ஜுனனால் அவர்கள் உற்சாகமிழப்பதை அறிந்து, தன் கரங்களில் தன் பேரனை எடுத்துக் கொண்டு அர்ஜுனனிடம் வந்தாள்.(23) அந்தக் குழந்தை (ஜெயத்ரதனின் மகனான) சுரதனின் {ஸுரதனின்} மகனாவான். அந்தத் துணிச்சல்மிக்க இளவரசன் {சுரதன்}, சைந்தவப் போர்வீரர்கள் அனைவரின் பாதுகாப்புக்காக, தன் தேரில் தன் தாய்மாமனிடம் {அர்ஜுனனிடம்} சென்றான்.(24) தனஞ்சயனிடம் வந்த ராணி {துச்சலை}, கவலையால் அழத் தொடங்கினாள் பலமிக்கவனான தனஞ்சயன் அவளைக் {துச்சலையைக்} கண்டதும் தன் வில்லைக் கீழே போட்டான்[2].(25) தன் வில்லைக் கைவிட்ட பார்த்தன், தன் தங்கையை {துச்சலையை} முறையாக வரவேற்று, தன்னால் அவளுக்கு என்ன செய்ய முடியும் என்பதை விசாரித்தான். அந்த ராணி {துச்சலை} அவனிடம், (26) “ஓ!பாரதர்களின் தலைவா, இந்தக் குழந்தை உன் தங்கை மகனின் மகனாவான். ஓ! பார்த்தா, இவன் உன்னை வணங்குகிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவனைப் பார்ப்பாயாக” என்றாள்.(27)அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட பார்த்தன், தன் மருமகனை {சுரதனைக்} குறித்து விசாரிக்கும் வகையில் “அவன் எங்கே?” என்று கேட்டான்.(28) துச்சலை, “தன் தந்தையின் படுகொலையால் துயரில் எரிந்து கொண்டிருந்தவனும், இந்தக் குழந்தையின் வீரத்தந்தையுமான அவன் {சுரதன்} பெரும் இதயத் துயரில் இறந்தான். அவன் எவ்வாறு மரணமடைந்தான் என்பதைக் கேட்பாயாக.(29) ஓ! தனஞ்சயா, ஓ! பாவமற்றவனே, அவனுடைய தந்தையான ஜெயத்ரதர் உன்னால் கொல்லப்பட்டார் என்பதை அவன் ஏற்கனவே கேட்டிருந்தான். இதனால் பெரும் துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்த அவன், வேள்விக் குதிரையைப் பின்தொடர்ந்து, அதைப் பாதுகாப்பவனாக நீ வந்திருப்பதைக் கேட்ட உடனேயே கீழே விழுந்து தன் உயிர்மூச்சை விட்டான். உண்மையில், பெருந்துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்த அவன், உன் வருகையைக் கேட்டவுடனேயே தன் உயிரை விட்டான். ஓ தலைவா, அவன் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைக் கண்டு, உன்னிடம் பாதுகாப்பை விரும்பிய நான், அவனுடைய குழந்தையை {சுரதனின் மகனை} அழைத்துக் கொண்டு உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தாள் {துச்சலை}. இந்தச் சொற்களைச் சொன்ன திருதராஷ்டிரன் மகள் பெரும் துன்பத்தால் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.(30-33)

அர்ஜுனன், பெரிதும் உற்சாகமிழந்த இதயத்துடன் அவள் முன்பு நின்றான். உற்சாகமிழந்திருந்த அந்தத் தங்கை {துச்சலை}, உற்சமிழந்திருந்த தன் அண்ணனிடம் {அர்ஜுனனிடம்}, இந்தச் சொற்களில், “உன் தங்கையைப் பார். உன் தங்கை மகனின் குழந்தைப் பார்.(34) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஒவ்வொரு கடமையையும் முழுமையாக அறிந்தவனே, குரு இளவரசனையும் (துரியோதனனையும்), தீயவரான ஜெயத்ரதரையும் மறந்து, இந்தக் குழந்தைக்குக் கருணை காட்டுவதே உனக்குத் தகும்.(35) பகைவீரர்களைக் கொல்பவனான பரிக்ஷித் அபிமன்யுவுக்குப் பிறந்திருப்பதைப் போலவே, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், என் பேரனுமான இந்தக் குழந்தையும் சுரதனில் இருந்து பிறந்திருக்கிறான்.(36) ஓ! மனிதர்களின் தலைவா, போர்வீரர்கள் அனைவரின் பாதுகாப்பை விரும்பியே இவனை அழைத்துக் கொண்டு நான் உன்னிடம் வந்திருக்கிறேன். நான் சொல்லும் இந்தச் சொற்களைக் கேட்பாயாக.(37)

ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா {அர்ஜுனரே}, தீயவரான உன்னுடைய பகைவருடைய இந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு நான் இப்போது வந்திருக்கிறேன். எனவே, இந்தக் குழந்தையிடம் இரக்கம் காட்டுவதே உனக்குத் தகும்.(38) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, இந்தக் குழந்தை உனக்குத் தலைவணங்குவதன் மூலம் உன்னை நிறைவடையச் செய்ய விரும்புகிறான். இவன் உன்னிடம் அமைதியை {சமாதானத்தை} வேண்டுகிறான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, அமைதியை ஏற்படுத்துவாயாக.(39) ஓ! ஒவ்வொரு கடமையையும் அறிந்தவனே, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களை இழந்தவனும், என்ன நடந்தது என்ற எதையும் அறியாதவனுமான இந்தக் குழந்தையிடம் நிறைவடைவாயாக. கோபவசப்படாதே.(40) உன்னை மிகவும் புண்படுத்தியவரும், அவமதித்தவரும், கொடூரமானவரும், உங்களுக்குப் பெரும் குற்றத்தை இழைத்தவருமான இவனுடைய பாட்டாவை {ஜெயத்ரதரை} மறந்து, இந்தக் குழந்தைக்கு இரக்கம் காட்டுவதே உனக்குத் தகும்” என்றாள் {துச்சலை}.(41)

ராணி காந்தாரியையும், மன்னன் திருதராஷ்டிரனையும் நினைத்துப் பார்த்துத் துயரில் பீடிக்கப்பட்ட தனஞ்சயன், தன்னிடம் இவ்வாறு சொன்ன துச்சலையிடம் க்ஷத்திரிய நடைமுறைகளை நிந்தித்துக் கொண்டே,(42) “அற்பனும், நாட்டாசை கொண்டவனும், பகட்டு நிறைந்தவனுமான துரியோதனனுக்கு ஐயோ. ஐயோ, அவனுக்காகவே உன் உற்றார் உறவினர் அனைவரும் என்னால் யமனுலகுக்கு அனுப்பப்பட்டனர்” என்றான்.(43) இவ்வாறு சொல்லி தன் தங்கைக்கு ஆறுதலளித்த தனஞ்சயன், அமைதியை ஏற்படுத்திக் கொள்ள இணங்கினான். உற்சாகத்துடன் அவளைத் தழுவி கொண்டு, அவளிடம் அரண்மனைக்குத் திரும்பிச் செல்லுமாறு சொல்லி அவளுக்கு விடை கொடுத்தான்.(44) துச்சலைத் தன் போர்வீரர்கள் அனைவரையும் பெரும்போரில் இருந்து விலக்கி, பார்த்தனை வழிபடச் செய்தாள். அழகிய முகம் கொண்ட அவள், தன் சுவடுகளைப் பின்பற்றித் தன் வசிப்பிடத்திற்குச் சென்றாள்.(45)

இவ்வாறு அந்தச் சைந்தவ வீரர்களை வென்ற தனஞ்சயன், விரும்பியவாறு திரியத் தொடங்கிய குதிரையைப் பின்தொடர்ந்து சென்றான்.(46) ஆகாயத்தில் மானை {மானின் வடிவில் தப்பிச் சென்ற வேள்வியைப்} பின்தொடர்ந்த தெய்வீக பினாகபாணியை {சிவனைப்} போலவே வீர அர்ஜுனனும் அந்தக் குதிரையை முறையாகப் பின்தொடர்ந்தான்.(47) அந்தக் குதிரை, அர்ஜுனனின் அருஞ்செயல்களைப் பெருக்கிய வண்ணம், தன் விருப்பப்படி ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு நாடுகளில் திரிந்தது.(48) விருப்பப்படி திரிந்த அந்தக் குதிரை, ஓ! மனிதர்களின் தலைவா, பாண்டு மகனால் பின்தொடரப்பட்டுக் காலப்போக்கில் மணிப்புரத்தின் ஆட்சியாளனுடைய {பப்ருவாஹனனின்} ஆட்சிப்பகுதியை அடைந்தது” {என்றார் வைசம்பாயனர்}.(49)

வீழ்ந்தான் அர்ஜுனன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 79-மணிபுரம் வந்த அர்ஜுனன்; மதிப்புடன் வரவேற்ற பப்ருவாஹனன்; கோபித்துக் கொண்ட அர்ஜுனன்; உலூபியின் தூண்டலால் கணை ஏவிய பப்ருவாஹனன்; அர்ஜுனன் வீழ்ந்தது; மயங்கி விழுந்த பப்ருவாஹனன்; நடுங்கியவாறு போர்க்களம் வந்த சித்திராங்கதை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மணிப்புரத்தின் ஆட்சியாளனான பப்ருவாஹனன், தன் தந்தையான அர்ஜுனன் தன் நாட்டுக்குள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு, பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்கள் மற்றும் செல்வத்தை முன்னணியில் கொண்டு பணிவுடன் {அர்ஜுனனை வரவேற்பதற்காக} வெளியே புறப்பட்டுச் சென்றான்.(1) எனினும், க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்தவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, இவ்வாறு வந்த மணிப்புர ஆட்சியாளனைக் கண்டு, அதை அங்கீகரிக்காமல் இருந்தான்.(2) நீதிமிக்க ஆன்மா கொண்ட பல்குனன் {அர்ஜுனன்}, கோபத்துடன், “இவ்வொழுக்கம் உனக்குத் தகாது. நீ நிச்சயம் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து விழுந்துவிட்டாய்.(3) யுதிஷ்டிரருடைய வேள்விக் குதிரையின் பாதுகாவலனாக நான் இங்கே வந்துள்ளேன். ஓ! மகனே, உன் நாட்டுக்குள் நான் வந்திருப்பதைக் கண்டும் என்னுடன் ஏன் நீ போரிடாமல் இருக்கிறாய்?(4) ஓ! மூடப் புத்தி கொண்டவனே, உனக்கு ஐயோ!, க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்ட உனக்கு ஐயோ!. உன்னுடன் போர்புரிவதற்காக நான் இங்கு வந்திருந்தாலும், அமைதிநிறைந்தவனாக என்னை வரவேற்கும் உனக்கு ஐயோ!(5) இவ்வாறு அமைதிநிறைந்தவனாக வரவேற்பதன் மூலம் நீ ஒரு பெண்ணைப் போலச் செயல்படுகிறாய். ஓ! இழிந்த புத்தி கொண்டவனே, நான் என் ஆயுதங்களைக் கைவிட்டு வந்திருந்தால்,(6) ஓ! மனிதர்களில் இழிந்தவனே, அப்போது உன்னுடைய இந்த நடத்தை தகுந்ததாக இருந்திருக்கும்” என்றான்.

பாம்பு மன்னனின் மகளான உலூபி, தன் கணவனால் {அர்ஜுனனால்} இவ்வாறு சொல்லப்பட்ட சொற்களை அறிந்து, அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், பூமியைத் துளைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தாள்.[1] அவள், தலையைத் தொங்கப்போட்டவாறு, முற்றிலும் உற்சாகம் இழந்தவனாக அங்கே நின்று கொண்டிருக்கும் தன் மகனைக் {பப்ருவாஹனனைக்} கண்டாள்.(7,8) ஓ! ஏகாதிபதி, உண்மையில் அந்த இளவரசன், தன்னுடன் போரிட விரும்பும் தன் தந்தையால் மீண்டும் மீண்டும் நிந்திக்கப்பட்டான். அழகான அங்கங்களைக் கொண்டவளும்,(9) பாம்பின் மகளுமான உலூபி, அறம் மற்றும் கடமையை அறிந்த அந்த இளவரசனிடம், அறம் மற்றும் கடமைகளுக்கு இணக்கமான இச்சொற்களில், “பாம்பின் மகளான நான் உனது அன்னையான உலூபி என்பதை அறிவாயாக.(10) ஓ! மகனே, நான் சொல்வதைச் செய்தால், நீ பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவாய். குரு குலத்தில் முதன்மையானவரும், போரில் தடுக்கப்பட முடியாத வீரருமான உன் தந்தையுடன் போரிடுவாயாக.(11) அப்போது அவன் நிச்சயம் உன்னிடம் நிறைவடைவார்” என்றாள்.-இவ்வாறு மன்னன் பப்ருவாஹனன், தன் (மாற்றந்) தாயால் {உலூபியால்}, தன் தந்தைக்கு எதிராகத் தூண்டப்பட்டான்.(12) இறுதியாக, ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, பெருஞ்சக்தி கொண்ட அவன், தனஞ்சயனுடன் போரிடுவதற்குத் தன் மனத்தைத் தயார் செய்து கொண்டான். பிரகாசமான தன் கவசத்தையும், ஒளிமிக்கத் தன் தலைக்கவசத்தையும் பூட்டிக் கொண்ட அவன்,(13) நூற்றுக்கணக்கான அம்பறாத்தூணிகள் ஆயத்தமாக இருந்த ஒரு சிறந்த தேரில் ஏறினான். அந்தத் தேரானது, போருக்குத் தேவையானவற்றுடனும், மனோவேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டும் இருந்தது.(14) அது சிறந்த சக்கரங்களுடனும், பலமிக்க உபஷ்கரங்களுடனும் இருந்தது. அனைத்து வகைப் பொன்னாபரணங்களாலும் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அழகிய இளவரசனான பப்ருவாஹனன், பொன்னாலான தங்கச் சின்னம் பொறிக்கப்பட்டதும்[2], மிக அழகிய வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான தன் கொடிக்கம்பத்தை உயத்திக் கொண்டு, தன் தந்தையை எதிர்த்துப் போரிடச் சென்றான்.(15)அந்த வீர இளவரசன் {பப்ருவாஹனன்}, பார்த்தனால் பாதுகாக்கப்படும் வேள்விக் குதிரையிடம் வந்து, குதிரை சாத்திரத்தை நன்கறிந்த மனிதர்களால் அதைக் கைப்பற்றச் செய்தான்.(16) குதிரை கைப்பற்றப்பட்டதைக் கண்ட தனஞ்சயன் மகிழ்ச்சியால் நிறைந்தான். பூமியில் நின்று கொண்டிருந்த அந்த வீரன், தேரில் முன்னேறி வரும் தன் மகனைத் தடுக்கத் தொடங்கினான்.(17) அந்த மன்னன் {பப்ருவாகனன்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், கூர்த்தீட்டப்பட்ட முனைகளைக் கொண்டவையுமான கணைகளை அந்த வீரன் {அர்ஜுனன்} மீது மீண்டும் மீண்டும் மழையாகப் பொழிந்தான்.(18) தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்த போர் ஒப்பற்றதாக இருந்தது. பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக அஃது இருந்தது. அவர்களில் ஒவ்வொருவனும், மற்றவனை எதிராளியாக அடைந்ததில் நிறைவடைந்தான்.(19) பப்ருவாஹனன், சிரித்துக் கொண்டே, மனிதர்களில் முதன்மையானவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனனின் தோளை {தோள்பூட்டில்} நேரான ஒரு கணையால் {பதிவான கணுக்களுள்ள பாணத்தால்} துளைத்தான்.(20)

இறகுகளுடன் கூடிய அந்தக் கணை, எறும்புப்புற்றுக்குள் ஊடுருவும் பாம்பைப் போல அர்ஜுனனின் உடலுக்குள் ஊடுருவியது. குந்தியின் மகனைத் {அர்ஜுனனைத்} துளைத்துச் சென்ற அக்கணை பூமிக்குள் ஆழமாகச் சென்றது.(21) கடும் வலியை உணர்ந்த நுண்ணறிவுமிக்கத் தனஞ்சயன், தன் சிறந்த வில்லால் தன்னைத் தாங்கிக் கொண்டு சற்றே ஓய்வெடுத்தான். தன் தெய்வீக சக்தியைப் பயன்படுத்தி நின்று கொண்டிருந்த அவன், வெளிப்புறத் தோற்றத்தில் உயிரிழந்த ஒருவனைப் போலத் தெரிந்தான்[3].(22) நினைவு மீண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன், தன் மகனை உயர்வாகப் புகழ்ந்தான். பெருங்காந்தி கொண்டவனான அந்தச் சக்ரனின் மகன் {அர்ஜுனன்},(23) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நன்று, ஓ! சித்ராங்கதையின் மைந்தனே, நன்று. ஓ! மகனே, உனக்குத் தகுந்த இந்த அருஞ்செயலைக் கண்டு நான் உயர்வான நிறைவடைகிறேன்.(24) ஓ! மகனே, நான் இப்போது உன் மீது இக்கணைகளை ஏவப் போகிறேன். (ஓடாமல்) போரிட நிற்பாயாக” என்றான். பகைவரைக் கொல்பவனான அவன், இச்சொற்களைச் சொல்லிவிட்டு, அந்த இளவரசன் மீது கணைமாரியைப் பொழிந்தான்.(25)எனினும், மன்னன் பப்ருவாகனன், {அர்ஜுனனின்} காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையும், காந்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானவையுமான அந்த நாராசங்கள் அனைத்தையும் தன் பல்லங்களைக் கொண்டு இரண்டாகவும், மூன்றாகவும் வெட்டி வீழ்த்தினான்.(26) அப்போது தங்கப் பனை மரத்திற்கு ஒப்பாகவும் பொன்மயமாகவும் அந்த மன்னனின் தேரில் இருந்த கொடிமரமானது, சிறந்த கணைகள் சிலவற்றைக் கொண்டு பார்த்தனால் வெட்டி வீழ்த்தப்பட்டது.(27) சிரித்துக் கொண்டே இருந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அடுத்ததாக, பெரிய அளவைக் கொண்டவையும், பெரும் வேகம் கொண்டவையுமான மன்னனின் {பப்ருவாகனனின்} குதிரைகளை கொன்றான்.(28) இதனால் சினத்தால் தூண்டப்பட்ட மன்னன், தன் தேரில் இருந்து இறங்கி, தன் தந்தையுடன் தரையில் நின்று போரிட்டான்.(29) பிருதையின் மகன்களில் முதன்மையானவனும், வஜ்ரதாரியின் மகனுமான அவன் {அர்ஜுனன்}, தன் மகனின் ஆற்றலில் நிறைவடைந்தவனாக அவனைப் பெரிதும் பீடிக்கத் தொடங்கினான்[4].(30)வலிமைமிக்கப் பப்ருவாஹனன், தன் தந்தையால் இதற்கு மேலும் தன்னை எதிர் கொள்ள முடியாது என்று நினைத்துக் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றால் அவனை மீண்டும் பீடித்தான்[5].(31) மேலும் அவன், தன் சிறுபிள்ளைத்தனத்தால் கூராக்கப்பட்டதும், சிறந்த சிறகுகளைக் கொண்டதுமான ஒரு கணையைக் கொண்டு தனது தந்தையின் மார்பில் மிகத் திடமாகத் துளைத்தான்.(32) ஓ! மன்னா, பாண்டு மகனின் உடலுக்குள் ஊடுருவிய அந்தக் கணை, அவனது உயிர்நிலையை அடைந்து அவனுக்குப் பெரும் வலியை உண்டாக்கியது. குருக்களைத் திளைக்கச் செய்பவனான தனஞ்சயன், தன் மகனால் ஆழத் துளைக்கப்பட்டு,(33) ஓ மன்னா {ஜனமேஜயா}, மயக்கமடைந்து பூமியில் விழுந்தான்.குருக்களின் சுமைகளைச் சுமப்பவனான அந்த வீரன் {அர்ஜுனன்} விழுந்தபோது, சித்ராங்கதையின் மகனும் {பப்ருவாஹனனும்} தன் உணர்வுகளை இழந்தான். போரில் பெரும் முயற்சிகளைச் செய்ததாலும், தன் தந்தை கொல்லப்பட்டதைக் கண்ட துயரத்தாலும் அவன் மயங்கி விழுந்தான்.(34,35) அவனும் அர்ஜுனனின் கணை மேகங்களால் ஆழத் துளைக்கப்பட்டிருந்தான். எனவே, அவன் போரின் முன்னணியில் பூமியைத் தழுவியபடி கீழே விழுந்து கிடந்தான்.(36) கணவன் கொல்லப்பட்டான் என்றும் தன் மகன் பூமியில் விழுந்து கிடக்கிறான் என்பதையும் கேள்விப்பட்ட சித்ராங்கதை, மனத்தில் பெருங்கலக்கத்துடன் போர்க்களத்திற்கு வந்தாள்.(37) கவலையில் எரியும் இதயத்துடன் மிகப் பரிதாபகரமாக அழுது கொண்டும், நடுங்கியவாறும் வந்த மணிப்புர ஆட்சியாளனின் {பப்ருவாகனனின்} அன்னை {சித்ராங்கதை}, தன் கணவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டாள்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

எழுந்தான் அர்ஜுனன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 80-கணவனும், தனயனும் விழுந்து கிடப்பதைக் கண்டு புலம்பி, மயங்கி விழுந்து, தெளிந்து உலூபியை நிந்தித்த சித்ராங்கதை; நினைவு திரும்பி நொந்து பிராயோபவேசம் செய்த பப்ருவாஹனன்; ஸஞ்சீவன மணியைக் கொண்டு அர்ஜுனனை எழுப்பிய உலூபி; சித்ராங்கதை களத்திற்கு வந்த காரணத்தைக் கேட்ட அர்ஜுனன்; உலூபியைக் கேட்கச் சொன்ன பப்ருவாகனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண் {சித்ராங்கதை}, துயரில் எரிபவளாக ஒப்பாரியில் ஈடுபட்டு, இறுதியாகத் தன் உணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தாள்.(1)

தெய்வீக அழகுடைய ராணி சித்ராங்கதை, தன் நினைவு திரும்பியதும், பாம்புத் தலைவனின் மகளான உலூபியைக் கண்டு, அவளிடம் இந்தச் சொற்களில்,(2) “ஓ! உலூபி, எப்போதும் வெற்றியடைபவரான நம் கணவர் {அர்ஜுனர்}, இளம் வயதைக் கொண்ட என் மகனால் {பப்ருவாஹனனால்} உன் மூலம் போரில் கொல்லப்பட்டதைப் பார்.(3) நீ {பெரியோரின தர்மத்தை,} மதிக்கத்தக்க நடைமுறைகளை அறிந்தவளில்லையா? நீ உன் தலைவருக்கு அர்ப்பணிப்புள்ள மனைவியில்லையா {பதிவிரதையில்லையா}? உன் கணவர் {அர்ஜுனர்} உன் செயலாலேயே போரில் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்.(4) தனஞ்சயர் {அர்ஜுனர்} எவ்வகையிலாவது உனக்குக் குற்றமிழைத்திருந்தால் இவரை மன்னிப்பாயாக {இவர் உனக்கு என்ன தீங்கு செய்தார்? அப்படி இருந்தால் இவரை மன்னிப்பாயாக}. இந்த வீரரின் உயிரை மீட்குமாறு {ஜீவிக்கும்படி செய் என} நான் உன்னிடம் வேண்டுகிறேன்.(5) ஓ! அறம் சார்ந்த பெண்ணே {தர்மத்தை அறிந்தவளே}, நீ பக்தியை அறிந்தவள். ஓ! அருளப்பட்டவளே, (உன் நற்குணங்களுக்காக) நீ மூவுலகங்களிலும் அறியப்பட்டவள். உன் மகனைக் கொண்டு உன் கணவரைக் கொல்லச் செய்தும் நீ துயரில் ஈடுபடாமல் இருப்பது எவ்வாறு?(6) ஓ! பாம்புத் தலைவனின் மகளே {உலூபியே}, நான் கொல்லப்பட்ட என் கணவனுக்காக வருந்தவில்லை. என் மகனால் இவ்வாறான விருந்தோம்பலுடன் வரவேற்கப்பட்ட என் கணவருக்காகவே துன்புறுகிறேன்” என்றாள் {சித்ராங்கதை}.(7)

சிறப்புமிக்கவளான சித்ராங்கதை, பாம்புத் தலைவனின் மகளும், ராணியைப் போன்றவளுமான {தேவியுமான} உலூபியிடம் இச்சொற்களைச் சொல்லிவிட்டு, பூமியில் கிடக்கும் தன் கணவனிடம் {அர்ஜுனனிடம்} சென்று, அவனிடம்,(8) “ஓ! அன்புத் தலைவா, எழுவீராக. குரு மன்னரின் (யுதிஷ்டிரரின்) அன்புக்குரியவர்களில் முதன்மையான இடத்தில் நீரே இருக்கிறீர். உமது குதிரை இங்கே இருக்கிறது. அஃது என்னால் சுதந்திரமாக விடப்படுகிறது.(9) உண்மையில், ஓ! பலமிக்கவரே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் இந்த வேள்விக் குதிரை உம்மால் பின்தொடரப்பட வேண்டுமே. நீர் ஏன் இன்னும் பூமியில் கிடக்கிறீர்?(10) குருக்களைத் திளைக்கச் செய்பவரே, என் உயிர் மூச்சு உம்மையே சார்ந்திருக்கிறது. மற்றவர்களுக்கு உயிரைக் கொடுப்பரான நீர் இன்று என்ன காரணத்தால் உயிரை விட்டீர்?(11)ஓ! உலூபி, தரையில் நெடுஞ்சாண் கிடையாக உன் கணவர் கிடக்கும் காட்சியை நன்றாகப் பார். சொற்களால் தூண்டி உன் மகன் மூலமாக அவரைக் {அர்ஜுனரைக்} கொல்லச் செய்தும் நீ துயருறாமல் இருப்பது எவ்வாறு?(12) இந்தச் சிறுவன் மரணத்தின் ஆதிக்கத்திற்கு அடங்கித் தன் தந்தையின் அருகில் தரையில் கிடப்பது தகும். ஓ…! சிவந்த கண்களைக் கொண்ட வீரரும், குடாகேசர் என்று அழைக்கப்படுபவருமான இந்த விஜயர் {அர்ஜுனர்} உயிர் திரும்பட்டும்.(13) ஓ!அருளப்பட்ட பெண்ணே, பல மனைவிகளைக் கொள்வது ஆடவரின் குற்றமில்லை. ஒரு கணவருக்கு மேல் கொள்ளும் பெண்களே குற்றமிழைப்பவர்களாவர். எனவே, (பழி வாங்கும்) இத்தகைய எண்ணங்களுக்கு இடமளிக்காதே.(14) இந்த உறவு {இந்தக் காதல்} விதிசமைக்கும் பரமனால் விதிக்கப்பட்டதாகும். அதைத் தவிர, அது நித்தியமானதும், மாற்றமில்லாததுமாகும். அந்த உறவைக் கவனிப்பாயாக. (தனஞ்சயருடனான) உன் உறவு உண்மையானதாகட்டும்[1].(15) உன் மகனைக் கொண்டு, உன் கணவரைக் கொல்லச் செய்த நீ, இன்று என் கண்களுக்கு முன்பாக இவரைப் பிழைக்கச் செய்யவில்லையெனில், நான் இப்போதே என் உயிர் மூச்சைக் கைவிடுவேன்.(16) ஓ! மதிப்புக்குரிய பெண்ணே {தேவி}, கணவர் மற்றும் மகன் ஆகிய இருவரையும் இழந்து துயரடைந்திருக்கும் நான், இன்று நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே இங்கேயே பிராயத்தில் அமர்வேன் {பிராயோபவேசம் செய்யப் போகிறேன்}. இதில் ஐயமில்லை” என்றாள் {சித்ராங்கதை}.(17) {சித்ரவாஹனனின் மகளான} இளவரசி சைத்ரவாஹினி {சித்ராங்கதை}, அர்ஜுனனுடனான {அர்ஜுனனின் மனைவியான} தனக்குச் சக்களத்தியான {ஸபத்னியான} பாம்புத் தலைவனின் மகளிடம் {உலூபியிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு, பேச்சை அடக்கிப் பிராயத்தில் அமர்ந்தாள்[2]“.(18)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உற்சாகமிழந்த அந்த ராணி {சித்ராங்கதை}, புலம்புவதை நிறுத்தி, தன் கணவனை மடியில் கிடத்திக் கொண்டு, பெருமூச்சு விட்டபடியும், தன் மகனின் உயிரை மீட்க விரும்பியும் அங்கே அமர்ந்திருந்தாள்[3].(19)நினைவு மீண்ட மன்னன் பப்ருவாஹனன், போர்க்களத்தில் அக்கோலத்தில் அமர்ந்திருக்கும் தன் தாயை {சித்ராங்காதையைக்} கண்டு, அவளிடம்,(20) “ஆடம்பரமாக வளர்க்கப்பட்ட என் அன்னை, தரையில் நெடுஞ்சாண் கிடைகாயாகக் கிடக்கும் தன் வீரக் கணவரின் அருகில் வெறுந்தரையில் அமர்ந்திருப்பதைக் காண்பதைவிடத் துன்பம் தரக்கூடிய காட்சி வேறென்ன இருக்க முடியும்?(21) ஐயோ, பகைவர் அனைவரையும் கொல்பவரும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான இவர் போரில் என்னால் கொல்லப்பட்டார். மனிதர்கள் தங்கள் வேளை வரும் வரை இறப்பதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது[4].(22) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரும், அகன்ற மார்பைக் கொண்டவருமான தன் கணவர் இறந்து தரையில் கிடப்பதைக் கண்டும், இந்த இளவரசியின் இதயம் பிளக்காமல் இருப்பதால் அது மிகக் கடினமானதாகத் தெரிகிறது.(23) நானோ, என் தாயோ (இத்தகைய காட்சியைக் கண்ட பிறகும்) உயிரை இழக்காமல் இருப்பதால், ஒருவனுக்கு வேளை வரும் வரை அவன் இறப்பதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.(24)ஐயோ, ஐயோ, மகனான என்னால் தெரிந்தே கொல்லப்பட்டுக் கிடக்கும் இந்த முதன்மையான வீரரின் பொற்கவசம், அவரது உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுத் தரையில் கிடக்கிறதே[5].(25) ஐயோ, பிராமணர்களே, மகனால் கொல்லப்பட்டு, வீரர்களின் படுக்கையில் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் என் வீரத்தந்தையைப் பார்ப்பீராக.(26) குரு குலத்தில் முதன்மையானவரும், போரில் என்னால் கொல்லப்பட்டவருமான இவர் குதிரையைப் பின்தொடர்வதில் ஈடுபடுத்தப்பட்ட போது, இந்த வீரரைக் கவனிக்க நியமிக்கப்பட்ட பிராமணர்களால் இவருக்கு என்ன நன்மை நேர்ந்தது?(27) போரில் தன் தந்தையையே கொன்ற இழிந்தவனும், பாவம் நிறைந்தவனும், கொடூரனுமான என்னால் செய்யப்பட வேண்டிய பரிகாரச் சடங்குகளைப் பிராமணர்கள் சொல்லட்டும்.(28) என் தந்தையைக் கொன்ற கொடூரனான நான், அவருடைய தோலால் {அர்ஜுனனின் தோலால்} என்னை மறைத்துக் கொண்டு, அனைத்து வகைத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இந்தப் பூமியில் திரிய வேண்டும்.(29) தந்தையைக் கொன்றதற்கு எனக்குப் பரிகாரமேதும் கிடையாது என்பதால் இன்று என்னிடம் என் தந்தையுடைய தலையின் இரு பகுதிகளைக் கொடுங்கள் (அந்தக் காலம் {பனிரெண்டு ஆண்டுகள்} வரை அதைக் கொண்டு {பிச்சையெடுத்த உணவை அதில் கொண்டு உண்டு} இந்த உலகில் திரிவேன்)[6].(30)ஓ! பாம்புகளில் முதன்மையானவரின் மகளே {உலூபியே}, என்னால் கொல்லப்பட்டுக் கிடக்கும் உன் கணவரைப் பார். உண்மையில், போரில் அர்ஜுனரைக் கொன்றதன் மூலம் உனக்கு ஏற்புடையதையே நான் நிறைவேற்றியிருக்கிறேன்.(31) நான் இன்று என் தந்தை சென்ற பாதையைப் பின்பற்றப் போகிறேன். ஓ! அருளப்பட்டவளே {கல்யாணி}, என்னால் என்னைத் தேற்றிக் கொள்ள முடியவில்லை.(32) ஓ! தாயே, நானும், காண்டீவதாரியும் என இருவரும் இன்று மரணத்தைத் தழுவுவதைக் கண்டு நீ மகிழ்ச்சியடைவாயாக. (என் உயிர்மூச்சைக் கைவிடுவேன் என்று) வாய்மையின் மீது ஆணையாக நான் உறுதியேற்கிறேன்” என்றான் {பப்ருவாஹனன்}.(33)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இச்சொற்களைச் சொன்ன மன்னன் {பப்ருவாஹனன்}, துன்பத்தால் ஆழமாகப் பீடிக்கப்பட்டு, நீரைத் தொட்டுக் கவலையுடன்,(34) “அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் நான் சொல்வதைக் கேட்கட்டும். ஓ! தாயே, நீயும் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! பாம்புகளின் மகள்கள் அனைவரிலும் சிறந்தவளே {உலூபியே}, நான் உண்மையைச் சொல்கிறேன்.(35) மனிதர்களில் சிறந்தவரும், என் தந்தையுமான இந்த ஜயர் {அர்ஜுனன்} எழவில்லையெனில், போர்க்களத்தில் அமர்ந்தவாறே நான் என் உடலை மெலியச் செய்வேன்.(36) தந்தையைக் கொன்றவனான எனக்கு (அந்தக் கொடும் பாவத்தில் இருந்து) தப்பிக்கும் வழியேதும் கிடையாது. தந்தையைக் கொன்ற பாவத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் நான், நிச்சயம் நரகத்திலேயே மூழ்குவேன்.(37) வீர க்ஷத்திரியனைக் கொன்ற ஒருவன், நூறு பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் தூய்மையடைவான். எனினும் தந்தையைக் கொன்றதன் மூலம் உண்டான கொடும்பாவத்தில் இருந்து நான் தப்பித்தல் சாத்தியமேயில்லை.(38) பாண்டுவின் மகனான இந்தத் தனஞ்சயர், வலிமையும், சக்தியும் நிறைந்த ஒரே வீரராவார். அற ஆன்மாவைக் கொண்ட அவரே, என் ஆசிரியருமாவார். அவரைக் கொன்ற என்னை எவ்வாறு காத்துக் கொள்ள இயலும்?” என்றான் {பப்ருவாஹனன்}.(39) இவ்வாறு புலம்பியவனும், தனஞ்சயனின் உயர் ஆன்ம மகனுமான மன்னன் பப்ருவாஹனன், நீரைத் தீண்டி, மரணம் வரை பட்டினி கிடப்பதாக உறுதியேற்று அமைதியடைந்தான்”.(40)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பகைவரைத் தண்டிப்பவனான மணிப்புர மன்னன் {பப்ருவாகனன்}, துன்பத்தால் பீடிக்கப்பட்டவனாகத் தன் தாயுடன் சேர்ந்து மரணம் வரை பட்டினி இருக்க அமர்ந்த போது,(41) இறந்த மனிதனின் உயிரை மீட்கும் திறன் கொண்ட ஒரு ரத்தினத்தை {ஸஞ்சீவனம் எனும் மணியைக்} குறித்து உலூபி நினைத்தாள். பாம்புகளின பெரும்புகலிடமான அந்த ரத்தினம், இவ்வாறு நினைக்கப்பட்ட உடனேயே அங்கே வந்தது.(42) பாம்புகளின் இளவரசனுடைய மகள் {உலூபி} அதை எடுத்துக் கொண்டு, போர்க்களத்தில் நின்ற போராளிகளுக்கு உயர்ந்த மகிழ்ச்சியை அளிக்கும் இச்சொற்களைச் சொன்னாள்.(43)

{உலூபி}, “ஓ! மகனே {பப்ருவாஹனா}, எழுவாயாக. வருந்தாதே. ஜிஷ்ணு உன்னால் வீழ்த்தப்படவில்லை {கொல்லப்படவில்லை}. இந்த வீரர், மனிதர்களாலும், வாசவனைத் தலைமையில் கொண்ட தேவரகளாலும் வீழ்த்தப்பட முடியாதவராவார்.(44) மனிதர்களில் முதன்மையானவரும், சிறப்புமிக்கவருமான உன் தந்தையின் நன்மைக்காக, உன் புலன்களை வஞ்சிக்கும் {மோஹினி எனும்} இந்த மாயையை நான் வெளிக்காட்டினேன்.(45) ஓ! குரு குலத்தோனே, ஓ! மன்னா, பகைவீரர்களைக் கொல்பவரான இவர், தன் மகனான உன்னுடைய ஆற்றலை உறுதிசெய்து கொள்ள விரும்பியே உன்னுடன் போரிட இங்கே வந்தார்.(46) ஓ! மகனே, அதன் காரணமாகவே போரிடும்படி என்னால் நீ தூண்டப்பட்டாய். ஓ! பலமிக்க மன்னா, ஓ! மகனே, இந்த அறைகூவலை ஏற்றதன் மூலம், அணுவளவு பாவத்தையேனும் இழைத்துவிட்டாய் என ஐயுறாதே.(47) அவர் நித்தியமான, அழிவற்ற பெரும் ஆன்மாவைக் கொண்ட ஒரு முனிவராவார். ஓ! அன்பு மகனே, போரில் இவரை வீழ்த்த சக்ரனாலேயே முடியாது.(48) ஓ! மன்னா, இந்தத் தெய்வீக ரத்தினத்தை நான் வரவழைத்திருக்கிறேன். இஃது எப்போதும் பாம்புகள் இறக்க, இறக்கப் பிழைக்கச் செய்கிறது.(49) ஓ! பலமிக்க மன்னா, {ஸஞ்சீவனம் என்ற} இந்த ரத்தினத்தை உன் தந்தையின் மார்பில் வைப்பாயாக. பாண்டுவின் மகன் உயிர்பெறுவதை நீ காண்பாய்” என்றாள் {உலூபி}.(50)

இவ்வாறு சொல்லப்பட்டவனும், பாவமேதும் இழைக்காதவனுமான அந்த இளவரசன், தன் தந்தையின் மீது கொண்ட அன்பினால், அளவிலா சக்தி கொண்ட பிருதையின் மைந்தனுடைய மார்பில் அந்த {ஸஞ்சீவன} ரத்தினத்தை வைத்தான்.(51) மார்பில் ரத்தினம் வைக்கப்பட்டதும், வீரனும், பலமிக்கவனுமான ஜிஷ்ணு உயிர்பெற்றான். நீண்ட காலம் உறங்கிய ஒருவனைப் போலச் சிவந்திருந்த கண்களைத் திறந்து அவன் எழுந்தான்.(52) பெருஞ்சக்தி கொண்ட வீரனான தன் தந்தை நினைவு திரும்பி சுகமாக இருப்பதைக் கண்ட பப்ருவாஹனன் அவனை மதிப்புடன் வழிபட்டான்.(53) ஓ! பலமிக்கவனே, அந்த மனிதர்களில் புலி, வாழ்வின் மங்கலக் குறிகளுடன், மரண உறக்கத்தில் இருந்து எழுந்தபோது, பகனைத் தண்டித்தவன் {இந்திரன்} தெய்வீக மலர்களைப் பொழிந்தான்.(54) யாராலும் அடிக்கப்படாமலேயே, துந்துபிகள், மேகங்களைப் போன்ற முழக்கத்துடன் கூடிய ஆழ்ந்த இசையை உண்டாக்கின. “நல்லது, நல்லது” என்ற சொற்கள் அடங்கிய ஒரு பெருமுழக்கம் ஆகாயத்தில் கேட்டது.(55)

நல்ல சுகத்துடன் எழுந்திருந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான தனஞ்சயன், பப்ருவாகஹனனைத் தழுவிக் கொண்டு, அவனது தலையை முகர்ந்தான்.(56) துயரால் பீடிக்கப்பட்டிருந்த தன் மகனின் அன்னை {சித்ராங்கதை}, தன் மகனிடம் இருந்து தொலைவாக உலூபியுடன் அமர்ந்திருப்பதை அவன் கண்டான். தனஞ்சயன்,(57) “போர்க்களத்தில் உள்ள யாவரும், ஏன் துயரம், ஆச்சரியம் மற்றும் இன்பத்தின் குறியீடுகளைச் சுமந்தபடி இருக்கின்றனர்? ஓ! பகைவரைக் கொல்பவனே, காரணத்தை நீ அறிந்திருந்தால், அதை எனக்குச் சொல்வாயாக.(58) போர்க்களத்திற்கு உன் அன்னை ஏன் வந்தாள்? பாம்புகளின் இளவரசருடைய மகளான உலூபியும் ஏன் இங்கே வந்தாள்?(59) என் ஆணையின் பேரில் நீ என்னுடன் போரிட்டாய் என்பதை நான் அறிவேன். பெண்கள இங்கே வந்த காரணம் யாது என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(60)

மணிப்புரத்தின் நுண்ணறிவுமிக்க மன்னன் {பப்ருவாஹனன்}, தனஞ்சயனால் இவ்வாறு கேட்கப்பட்ட போது, மதிப்புடன் தலைவணங்கி அவனை நிறைவடையச் செய்த பிறகு, “உலூபியிடம் கேட்பீராக” என்றான் {பப்ருவாஹனன்}.(61)

அர்ஜுனன் சாபவிமோசனம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 81-சித்ராங்கதை போர்க்களத்திற்கு வந்ததற்கும், அர்ஜுனன் தன் மகனிடம் தோற்றதற்கும் காரணம் கூறிய உலூபி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! குரு குலத்தின் (மரு)மகளே, உன்னை இங்கே கொண்டு வந்த காரியம் என்ன? மணிப்புரத்தின் ஆட்சியாளனுடைய {பப்ருவாகனனுடைய} அன்னை {சித்ராங்கதை} போர்க்களத்திற்கு வருவதற்கான காரணம் என்ன?(1) ஓ! பாம்பின் மகளே {உலூபியே, பன்னக கன்னிகையே}, இந்த மன்னனின் நட்பு நாடி வந்தாயா? ஓ! ஓய்வற்ற பார்வைகளைக் கொண்டவளே, எனது நன்மையை விரும்பி வந்தாயா?(2) ஓ! பருத்த இடை கொண்டவளே {உலூபியே}, ஓ! அழகிய பெண்ணே, நானோ, இங்கே இருக்கும் இந்தப் பப்ருவாஹனனோ தெரியாமல் உனக்கு எத்தீங்கையும் இழைக்கவில்லை என நம்புகிறேன்.(3) சித்திரவாஹன குலத்தின் வழித்தோன்றலும், களங்கமற்ற அங்கங்களைக் கொண்டவளுமான சித்ராங்கதை உனக்கு எத்தீங்கையும் இழைத்தாளா?” என்று கேட்டான்.(4)

பாம்புகளுடைய இளவரசனின் மகள் {உலூபி}, அவனிடம் சிரித்துக் கொண்டே, “நீரும் எனக்குக் குற்றம் ஏதும் இழைக்கவில்லை, பப்ருவாஹனனும் எனக்குத் தீங்கேதும் செய்யவில்லை.(5) பணிப்பெண் போல எப்போதும் எனக்குக் கீழ்ப்படிந்திருக்கும் இந்த இளவரசனின் தாயும் {சித்ராங்கதையும்} எத்தீங்கையும் செய்யவில்லை. இவை யாவற்றையும் எவ்வாறு செய்தேன் என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக.(6) நீர் என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது. உண்மையில், மதிப்புடன் தலைவணங்கி நான் உம்மை நிறைவடையச் செய்வதை நாடுகிறேன். ஓ! குரு குலத்தவரே, ஓ! பலமிக்கவரே, இவை அனைத்தையும் உமது நன்மைக்காகவே என்னால் செய்யப்பட்டன.(7) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தனஞ்சயரே, நான் செய்தவை அனைத்தையும் கேட்பீராக. பாரத இளவரசர்களின் பெரும்போரில் சந்தனுவின் அரச மகனை {பீஷ்மரை} நீதியற்ற வழிகளில் நீர் கொன்றீர். நான் என்ன செய்தேனோ, அஃது உமது பாவத்துக்குப் பரிகாரமாகிறது. பீஷ்மர் உம்முடன் போரிடும்போது நீர் அவரை வீழ்த்தவில்லை[1].(8-10)அவர் {பீஷ்மர்} சிகண்டியுடன் போரிட்டுக் கொண்டிருந்தார். உமக்கு உதவியாக இருந்த அவனைச் சார்ந்தே நீர் சந்தனுவின் மகனை {பீஷ்மரை} வீழச் செய்தீர். உமது பாவத்திற்குப் பரிகாரம் செய்யாமல் நீர் இறந்திருந்தால்,(11) நீர் செய்த அந்தப் பாவம் நிறைந்த செயலின் விளைவால் நிச்சயம் நரகத்தில் விழுந்திருப்பீர். உமது மகனிடம் இருந்து அடைந்த நிலை அந்தப் பாவத்திற்கான பரிகாரமாகும்.(12) ஓ! பூமியின் ஆட்சியாளரே, ஓ !பெரும் நுண்ணறிவுமிக்கவரே, கங்கையுடன் வசுக்கள் இருந்தபோது இதைக் கேட்டேன்.(13) சந்தனுவின் மகன் {பீஷ்மர்} வீழ்ந்த பிறகு, தேவர்களான வசுக்கள், கங்கைக் கரைக்கு வந்து, அந்த நீரில் நீராடி, அந்த ஓடையின் தேவியை அழைத்து, அந்தப் பாகீரதியின் அனுமதியுடன் கூடிய இந்தப் பயங்கரச் சொற்களைச் சொன்னார்கள்.

{வசுக்கள்}, “சந்தனுவின் மைந்தன் பீஷ்மன், தனஞ்சயனால் கொல்லப்பட்டான்.(14,15) உண்மையில் ஓ! தேவி, அப்போது பீஷ்மன் {இவனுடன்} போரிடுவதை நிறுத்தி, வேறொருடவனுடனை போரிட்டுக் கொண்டிருந்தான். இந்தக் குற்றத்தின் காரணமாக நாங்கள் இன்று தனஞ்சயனைச் சபிக்கப் போகிறோம்” என்றனர்.(16)

இதைக் கேட்ட கங்கா தேவியும், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி உடனே சம்மதித்தாள். இச்சொற்களைக் கேட்டுப் பெரிதும் துன்பமடைந்த நான், பாதாள லோகத்திற்கு ஊடுருவிச் சென்று என் தந்தையிடம் அனைத்தையும் சொன்னேன்.(17) அவர் வசுக்களிடம் சென்று உமக்காக வேண்டினார்,(18) தன் சக்திக்கு வாய்த்த அனைத்து வழிகளிலும் அவர்களை மீண்டும் மீண்டும் நிறைவடையச் செய்ய முயன்றார். அப்போது அவர்கள் அவரிடம், “உயர்ந்த அருளைக் கொண்டவனும், மணிப்புரத்தின் ஆட்சியாளனாகவும், இளமையுடன் கூடியவனாகவும் தனஞ்சயனுக்கு ஒரு மகன் இருக்கிறான்.(19) அவன் {பப்ருவாகனன்} போர்க்களத்தில் நின்று தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பூமியில் சாய்ப்பான். ஓ! பாம்புகளின் இளவரசே, இது நடக்கும்போது, அர்ஜுனன் எங்கள் சாபத்திலிருந்து விடுபடுவான்.(20) நீ செல்லலாம்” என்றனர்.

வசுக்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அவர் திரும்பி வந்து நடந்தவற்றை எனக்குச் சொன்னார். ஓ! வீரரே, இவை யாவற்றையும் அறிந்த நான், இவ்வழியில் வசுக்களின் சாபத்தில் இருந்து உம்மை விடுவித்தேன்.(21) தேவர்களின் தலைவனாலும் உம்மைப் போரில் வீழ்த்த இயலாது. மகன் என்பவன் உமது சுயமே {தானே மகனாகிறான் என்று கருதப்பட்டிருக்கிறது}. இதன் காரணமாகவே நீர் அவனால் வீழ்த்தப்பட்டீர்.(22) ஓ! பலமிக்கவரே, என் மீது எக்குற்றத்தையும் சுமத்த முடியாது. உண்மையில், என்னை நிந்திக்கத்தகுந்தவளாக எவ்வாறு நீர் கொள்வீர்?” என்று கேட்டாள்.(23)

(உலூபியால்) இவ்வாறு சொல்லப்பட்டதும், உற்சாகம் நிறைந்த இதயத்துடன் கூடிய விஜயன் {அர்ஜுனன்}, அவளிடம், “ஓ! தேவி {உலூபியே}, நீ செய்த இவை யாவும் எனக்கு மிக இனியவையாகும்” என்றான்.(24) அதன் பிறகு, மணிப்புர ஆட்சியாளனான தன் மகனிடம் பேசிய ஜயன் {அர்ஜுனன்}, குரு குடும்பத்தின் (மரு) மகளான சித்ராங்கதை கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவனிடம்,(25) “வருகின்ற சைத்ர மாதத்தின் முழு நிலவு நாளில் {சித்ராபௌர்ணமியில்} யுதிஷ்டிரரின் குதிரை வேள்வி நடக்க இருக்கிறது. ஓ! மன்னா {பப்ருவாகனா}, உன் அன்னை, உன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அங்கே வருவாயாக” என்றான்[2].(26)பார்த்தனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் பப்ருவாஹனன், கண்ணீர் நிறைந்த கண்களுடன் தன் தந்தையிடம் இச்சொற்களில்,(27) “ஓ! அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரே, உமது ஆணையின் பேரில் நிச்சயம் நான் அந்தப் பெரும் குதிரை வேள்விக்கு வந்து, மறுபிறப்பாளர்களுக்கு உணவு வழங்கும் பணியை ஏற்றுக் கொள்வேன்.(28) எனினும், என்னிடம் இரக்கம் காட்டும் வகையில் உமது மனைவியர் இருவருடனும் நீர் உமது நகருக்குள் {பப்ருவாகனனான எனது தலைநகருக்குள்} வரவேண்டும். ஓ! அனைத்துக் கடமைகளையும் முழுமையாக அறிந்தவரே, இதைப் பொறுத்தவரையில் ஐயுணர்வேதும் உமக்கு வேண்டாம்.(29) ஓ! தலைவா, ஓ! வெற்றி பெறும் போர்வீரர்களில் முதன்மையானவரே, உமது மாளிகையில் மகிழ்ச்சியுடன் ஓரிரவு வாழ்ந்துவிட்டு, அதன் பிறகு குதிரையைப் பின்தொடர்ந்து செல்வீராக” என்றான்.(30)

தன் மகனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், குரங்குக் கொடியோனுமான குந்தியின் மைந்தன், சித்திராங்கதையின் பிள்ளையிடம்,(31) “ஓ! வலிமைமிக்கக் கரத்தோனே, நான் என்ன நோன்பை நோற்கிறேன் என்பதை அறிவாயாக. ஓ! அகன்ற கண்களைக் கொண்டவனே, நான் நோற்கும் இந்த நோன்பு முடிவடையும் வரை என்னால் உன் நகருக்குள் நுழைய முடியாது.(32) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இந்த வேள்விக் குதிரை தன் விருப்பப்படி சுற்றித் திரியும். (நான் எப்போதும் அதைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும்). அருள் உனதாகட்டும். நான் செல்ல வேண்டும். சிறிது காலம் கூட ஓய்ந்திருக்கக்கூடிய இடம் எனக்கு ஒன்றுமில்லை” என்றான் {அர்ஜுனன்}.(33)

பாகனைத் தண்டிப்பவனின் மகன் {அர்ஜுனன்}, தன் மகனால் முறையாக வழிபடப்பட்டு, தன் மனைவியரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று தன் வழியில் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(34)

ஜராசந்தன் வாரிசு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 82-ஜராசந்தன் பேரனும், சகாதேவன் மகனுமான மேகசந்தியை அர்ஜுனன் வென்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெருங்கடலால் சூழப்பட்ட மொத்த பூமியிலும் திரிந்த அந்த (வேள்விக்) குதிரை, நின்று, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} நோக்கித் தன் முகத்தைத் திருப்பியது. அந்தக் குதிரையைப் பின்தொடர்ந்து சென்ற கிரீடம் தரித்த அர்ஜுனனும், குரு தலைநகரத்தை நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான். விருப்பப்படி திரும்பிய அந்தக் குதிரை ராஜகிருஹ நகருக்கு வந்தது.(2) ஓ! ஏகாதிபதி, அவன் தன் நாட்டுக்குள் வந்திருப்பதைக் கண்டவனும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனுமான சகாதேவன் மகன் {ஜராசந்தனின் பேரனான மேகசந்தி}அவனைப் போருக்கு அறைகூவி அழைத்தான்.(3) தன் தேரில் ஏறி, வில் மற்றும் கணைகளையும், தோலாலான கையுறையும் தரித்துக் கொண்டு தன் நகரத்தைவிட்டு வெளியே வந்த மேகசந்தி, தரையில் நின்று கொண்டிருந்த தனஞ்சயனை நோக்கி விரைந்தான்.(4)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெருஞ்சக்தி கொண்ட மேகசந்தி, தனஞ்சயனை அணுகி, எந்தத் திறனும் இல்லாத சிறுபிள்ளைத்தனத்தின் மூலம் இந்தச் சொற்களைச் சொன்னான்.(5) {மேகசந்தி அர்ஜுனனிடம்}, “ஓ! பாரதா, உம்முடைய குதிரை பெண்களால் மட்டுமே பாதுகாக்கப்பட்டுச் செல்வதைப் போலத் தெரிகிறது. நான் இந்தக் குதிரையை அபகரித்துச் செல்வேன். அதை விடுவிக்க நீர் முனைவீராக.(6) என் தந்தைமார் உமக்குப் போரில் விருந்தோம்பல் கடமைகளைப் போதிக்க வில்லையெனினும் நான் அவற்றை உமக்குக் கற்பிப்பேன். நான் உம்மைத் தாக்குவேன், நீர் என்னைத் தாக்குவீராக” என்றான்.(7)

இவ்வாறு சொல்லப்பட்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே அவனிடம், “எனக்கு இடையூறு செய்பவனைத் தடுக்க வேண்டும் என்ற நோன்பை என் அண்ணன் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறார். ஓ! மன்னா, இதை நீ நிச்சயம் அறிவாய். உன் சக்திக்குச் சிறந்த வகையில் என்னைத் தாக்குவாயாக. எனக்குக் கோபமேதும் இல்லை” என்றான்.(8,9)

இவ்வாறு சொல்லப்பட்ட மகத ஆட்சியாளன் {மேகசந்தி}, ஆயிரங்கண் இந்திரன் கனத்த மழையைப் பொழிவதைப் போலத் தன் கணைகளைப் பொழிந்து பாண்டுவின் மகனை முதலில் தாக்கினான்.(10) ஓ! பாரதக் குலத் தலைவா {ஜனமேஜயா}, அப்போது வீரனான காண்டீவதாரி, தன் சிறந்த வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு, தன் எதிராளியால் கவனமாக ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான்.(11) இவ்வாறு அந்தக் கணை மேகங்களைக் கலங்கடித்தவனும், குரங்குக் கொடியைக் கொண்டவனுமான அந்த வீரன், நெருப்பு வாயுடன் கூடிய பாம்புகளுக்கு ஒப்பான சுடமிக்கக் கணைகள் எண்ணற்றவற்றைத் தன் எதிரியின் மீது ஏவினான்.(12) அவன் {அர்ஜுனன்} தன் எதிரி மற்றும் அவனது தேரோட்டியின் உடலை மட்டும் விட்டுவிட்டு அவனுடைய கொடி, கொடிக்கம்பம், தேர், துருவங்கள், நுகம் மற்றும் குதிரைகளின் மீது இந்தக் கணைகளை ஏவினான்.(13) இடது கையாலும் (வலது கையாலும்) வில்லைப் பயன்படுத்தவல்ல பார்த்தன், மகத இளவரசனின் உடலைத் துளைக்காமல் விட்டதால், அவன் தன் ஆற்றலின் மூலமே தன் உடல் பாதுகாக்கப்படுவதாகக் கருதி, பார்த்தன் மீது கணைகள் பலவற்றை ஏவினான்.(14)

மகத இளவரசனால் ஆழத் துளைக்கப்பட்ட காண்டீவதாரி, வசந்த காலத்தில் மலரும் பலாசத்தை {புரசு மரத்தைப்} போல ஒளிர்ந்தான்.(15) அர்ஜுனனுக்கு மகத இளவரசனைக் கொல்லும் விருப்பமேதும் இல்லை. அவன் பாண்டுவின் மகனைத் தாக்கினாலும், இதன் காரணமாகவே அந்த முதன்மையான வீரனின் முன்னால் எஞ்சியிருப்பதில் அவனால் வெல்ல முடிந்தது.(16) கோபமடைந்த தனஞ்சயன் பெரும் பலத்துடன் தன் வில்லை வளைத்துத் தன் எதிராளியின் குதிரைகளைக் கொன்று அவனுடைய தேரோட்டியின் தலையையும் கொய்தான்.(17) அவன் ஒரு க்ஷுரத்தைக் கொண்டு, அழகானதும், பெரியதுமான மேகசந்தியின் வில்லையும், அவனுடைய தோல் கையுறையையும் வெட்டி வீழ்த்தினான். அதன் பிறகு அவனது கொடியையும், கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தி, அவற்றை விழச்செய்தான்.(18) பெரிதும் பீடிக்கப்பட்ட அந்த மகத இளவரசன், தன் குதிரைகள், வில் மற்றும் சாரதியை இழந்து, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, குந்தியின் மகனை நோக்கிப் பெரும் வேகத்துடன் விரைந்தான்.(19) அப்போது அர்ஜுனன், பிரகாசமான பொன்னலானதும், முன்னேறிவரும் தன் பகைவனுக்குரியதுமான அந்தக் கதாயுதத்தைக் கழுகின் இறகுகளுடன் கூடிய கணைகள் பலவற்றைக் கொண்டு துண்டுகளாக வெட்டினான்.(20) இவ்வாறு துண்டுகளாக வெட்டப்பட்டதும், ரத்தினப்பூட்டுகள் சிதறியதுமான அந்தக் கதாயுதம், யாரோ ஒருவனால் வீசியெறியப்பட்ட ஆதரவற்ற பெண் பாம்பைப் போலப் பூமியில் விழுந்தது.(21)

தன் பகைவன், தனது தேர், வில், கதாயுதம் ஆகியவற்றை இழந்தபோது, நுண்ணறிவுமிக்கவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன் அவனைத் தாக்க விரும்பவில்லை.(22) குரங்குக் கொடி கொண்ட அந்த வீரன், உற்சாகமிழந்திருந்தவனும், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றியவனுமான தன் பகைவனிடம், இந்தச் சொற்களில்,(23) “ஓ! மகனே, க்ஷத்திரியக் கடமைகளில் போதுமான பற்றை நீ வெளிப்படுத்தினாய். இப்போது செல்வாயாக. ஓ! மன்னா, வயதால் மிக இளையவனாக இருப்பினும் போரில் நீ சாதித்த அருஞ்செயல்கள் பெரியனவாகும்.(24) என்னை எதிர்க்கும் மன்னர்கள் கொல்லப்படக்கூடாது என்பது நான் யுதிஷ்டிரரிடம் இருந்து பெற்ற ஆணையாகும். ஓ! ஏகாதிபதி, போரில் நீ எனக்குக் குற்றமிழைத்திருந்தாலும் அதன் காரணமாகவே நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய்” என்றான்.(25)

இவ்வாறு சொல்லப்பட்ட மகத ஆட்சியாளன் {மேகசந்தி}, வெல்லப்பட்டவானகவும், தப்பவிடப்பட்டவனாகவும் தன்னைக் கருதினான். அர்ஜுனனை வழிபடுவது கடமையென நினைத்த அவன், கூப்பிய கரங்களுடன் முறையாக அவனை அணுகி வழிபட்டான். மேலும் அவன், “நான் உன்னால் வெல்லப்பட்டேன். நீ அருளப்பட்டிருப்பாயாக. நான் போரைத் தொடரத் துணியேன். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக. நீ கேட்பது ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகக் கருதுவாயாக” என்றான்.(27)

அவனை மீண்டும் தேற்றி அர்ஜுனன், மீண்டும் அவனிடம், “சைத்ரமாத முழு நிலவில் நடைபெற இருக்கும் எங்கள் மன்னனின் குதிரை வேள்விக்கு நீ வர வேண்டும்” என்றான்.(28) அவனால் இவ்வாறு சொல்லப்பட்ட சகாதேவன் மகன் {ஜராசந்தன் பேரனான மேகசந்தி}, “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி, அந்தக் குதிரையையும், போர்வீரர்களில் முதன்மையான பல்குனனையும் முறையாக வழிபட்டான்.(29) அழகிய பிடரியுடன் கூடிய அந்த வேள்விக் குதிரை, கடற்கரையோரமாகவே சென்று, வங்கர்கள், புண்ட்ரர்கள் மற்றும் கோசலர்களின் நாட்டுகளுக்குச் சென்றது.(30) அந்த நாடுகளில், தனஞ்சயன் தன் காண்டீவத்தைக் கொண்டு எண்ணற்ற மிலேச்ச படைகளை ஒன்றன்பின் ஒன்றாக வீழ்த்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(31)

சிசுபாலன் மற்றும் ஏகலவ்யனின் வாரிசுகள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 83-அர்ஜுனனை வரவேற்ற சிசுபாலனின் மகன் சரபன்; காசி, அந்தகம், கோசலம், கிராதம், தங்கணம் ஆகிய நாடுகளில் வரவேற்பைப் பெற்ற அர்ஜுனன்; தசார்ண மன்னன் சித்ராங்கதனை, நிஷாத மன்னனான ஏகலவ்யன் மகனை வென்றது; திராவிடம், ஆந்திரம், மாஹிஷம் மற்றும் கோல்வ மலை ஆகியவற்றில் அர்ஜுனன் பெற்ற வெற்றி; துவாரகையில் வசுதேவர் மற்றும் உக்ரசேனரால் வரவேற்கப்பட்ட அர்ஜுனன்; பஞ்சநதம் சென்று அங்கிருந்து காந்தாரம் சென்றது…

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} சொன்னார், “மகத ஆட்சியாளனால் {மேகசந்தியால்} வழிபடப்பட்டவனும், தேரில் வெண்குதிரைகளைப் பூட்டியவனுமான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்த (வேள்விக்) குதிரையைப் பின்தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றான்.(1) விருப்பப்படி திரிந்து கொண்டிருந்த அது {வேள்விக் குதிரை}, கிளிஞ்சல்களின் {சிப்பியின்} பெயரால் அழைக்கப்படுவதும், சேதிகளுக்கு உரியதுமான அழகிய நகரத்தை {சுக்திமதியை}[1] நோக்கித் திரும்பி வந்தது. பெரும்பலம் கொண்டவனும், சிசுபாலனின் மகனுமான சரபன், முதலில் அர்ஜுனனுடன் போரிட்டு அதன் பிறகு, உரிய மதிப்புடன் அவனை வழிபட்டான்.(3) ஓ! மன்னா, அவனால் வழிபடப்பட்டு அந்தச் சிறந்த குதிரை, அதன் பிறகு, காசிகள், அங்கர்கள், கோசலர்கள், கிராதர்கள் மற்றும் தங்கணர்களின் நாடுகளுக்குச் சென்றது.(4)அந்த நாடுகள் அனைத்திலும் உரிய மதிப்புடன் வரவேற்கப்பட்ட தனஞ்சயன் தன் வழியில் சென்று கொண்டிருந்தான். உண்மையில் அந்தக் குந்தியின் மகன், அடுத்ததாகத் தசார்ணர்களின் நாட்டுக்குச் சென்றான்.(5) பெரும் பலம் கொண்டவனும், பகைவரை நொறுக்குபவனுமான சித்ராங்கதன் அம்மக்களின் ஆட்சியாளனாக இருந்தான். அவனுக்கும், விஜயனுக்கும் இடையில் மிகப் பயங்கரமான போர் ஒன்று நேர்ந்தது.(6) அவனைத் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தவனும், மனிதர்களில் முதன்மையானவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், ஏகலவ்யனின் மகனான நிஷாத மன்னனின் நாட்டிற்குச் சென்றான்.(7) ஏகலவ்யன் மகன் போரில் அர்ஜுனனை வரவேற்றான். அந்தக் குரு வீரனுக்கும், நிஷாதர்களுக்கும் இடையில் நடந்த மோதல் மயிர்ச் சிலிர்க்கும் வகையில் சீற்றமிக்கதாக இருந்தது.(8)

போரில் வெல்லப்பட இயலாதவனான குந்தியின் வீரமிக்க மகன், வேள்விக்குத் தடையாக இருந்த அந்த நிஷாத மன்னனை வீழ்த்தினான் ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஏகலவ்யனின் மகனை அடக்கி இந்திரனின் மகன், நிஷாதர்களால் முறையாக வழிபடப்பட்டு, தெற்குக் கடலை நோக்கி முன்னேறிச் சென்றான்.(10) அந்தப் பகுதிகளில் திராவிடர்கள், ஆந்திரர்கள், மாஹிஷகர்கள், கோல்வ மலையில் {கோல்லகிரியில்} உள்ள மனிதர்கள் ஆகியோருக்கும் கிரீடம் தரித்த வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் போர்கள் நடைபெற்றன.(11) அருஞ்செயல் ஏதும் செய்யாமல் அந்த இனக்குழுக்களை அடக்கிய அர்ஜுனன், குதிரையால் வழிநடத்தப்பட்டுக் கால்நடையாகவே ஸுராஷ்ட்டிரர்களின் {சௌராஷ்டிரர்களின்} நாட்டுக்குச் சென்றான்.(12)கோகர்ணத்தை அடைந்த அவன், அங்கிருந்து பிரபாஸத்திற்குச் சென்றான். அடுத்ததாக விருஷ்ணிகுல வீரர்களால் பாதுகாக்கப்படும் அழகிய துவாராவதி நகரத்திற்குச் சென்றான்.(13) குரு மன்னனின் அழகிய வேள்விக் குதிரை துவாராவதியை அடைந்தபோது, யாதவ இளைஞர்கள் அந்தக் குதிரைக்கு எதிராகத் தங்கள் பலத்தைப் பயன்படுத்தினர்.(14) எனினும், மன்னர் உக்ரசேனர் புறப்பட்டுச் சென்று அக்காரியத்தைச் செய்வதில் இருந்து அந்த இளைஞர்களைத் தடுத்தான். அதன்பிறகு, அந்த விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் ஆட்சியாளர் {உக்ரசேனர்}, தன் அரண்மனையில் இருந்து வெளியே வந்து,(15) அர்ஜுனனின் தாய்மாமனான வசுதேவரின் துணையுடன் உற்சாகமாக அந்தக் குரு வீரனைச் சந்தித்து, உரிய சடங்குகளுடன் அவனை வரவேற்றார்.(16)

வயது முதிர்ந்தவர்களான அந்தத் தலைவர்கள் இருவரும், அர்ஜுனனை முறையாகக் கௌரவித்தனர். அந்தக் குரு இளவரசன் அவர்களின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தான் பின்பற்றிச் சென்ற குதிரை வகுத்த வழியில் சென்றான்.(17) அந்த வேள்விக் குதிரை மேற்குக் கடலின் கரையோரமாகச் சென்று இறுதியாக ஐந்து நீர்நிலைகளைக் கொண்டதும், மக்கள் தொகையிலும், செழிப்பிலும் பெருகி இருந்ததுமான நாட்டை அடைந்தது.(18) அங்கிருந்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் குதிரை காந்தாரர்களின் நாட்டுக்குச் சென்றது. அங்கே சென்று அது, குந்தியின் மகனால் பின்தொடரப்பட்டு விருப்பப்படி சுற்றித் திரிந்தது.(19) சகுனியின் மகனும், பாண்டவர்களிடம் தன் தந்தை கொண்டிருந்த கடும் வெறுப்பை நினைவில் கொண்டிருந்தவனுமான காந்தார ஆட்சியாளனுக்கும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்}  இடையில் கடும்போர் ஒன்று நேர்ந்தது” {என்றார் வைசம்பாயனர்}.(20)

சகுனியின் வாரிசு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 84-அர்ஜுனனுடன் போரிட்ட சகுனியின் மகன்; அவனைத் தடுத்து அறிவுறுத்திய அர்ஜுனன்; தன் மகனைக் காக்க வந்த சகுனியின் மனைவி; சகுனியின் மகனைக் கொல்லாமல் விட்ட அர்ஜுனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “காந்தாரர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனியின் வீர மகன்[1], ஒரு பெரும்படையின் துணையுடன் சுருள் முடி கொண்ட குரு வீரனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றான். அந்தப் படையில் யானைகளும், குதிரைகளும், தேர்களும் முறையாக ஆயத்தம் செய்யப்பட்டிருந்தன. மேலும் அப்படை கொடிகள் மற்றும் பதாகைகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(1) தங்கள் மன்னனான சகுனி கொல்லப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களும், அதற்குப் பழிதீர்க்கும் வஞ்சத்தில் எரிந்து கொண்டிருந்தவர்களும், விற்களுடன் கூடியவர்களுமான அந்தப் போர்வீரர்கள் ஒன்றுசேர்ந்தவர்களாகப் பார்த்தனை நோக்கி விரைந்தனர்.(2) அற ஆன்மா கொண்டவனும், வெல்லப்பட முடியாதவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, அவர்களிடம் அமைதியாகப் பேசினாலும், (அர்ஜுனன் மூலமாகச் சொல்லப்பட்ட) யுதிஷ்டிரனின் நல்ல வார்த்தைகளை அவர்கள் ஏற்க விரும்பவில்லை.(3) இனிய சொற்களைக் கொண்டு பார்த்தனால் தடுக்கப்பட்டாலும், அவர்கள் கோபவசப்பட்டவர்களாக அந்த வேள்விக் குதிரையைச் சூழ்ந்தனர். இதனால் பாண்டுவின் மகன் கோபத்தில் நிறைந்தான்.(4)அப்போது அர்ஜுனன், காந்தியில் சுடர்விடுபவையும், காண்டீவத்தில் இருந்து அலட்சியமாக {அதிக முயற்சியின்றி} ஏவப்பட்டவையும், கத்தியைப் போன்ற தலைகளைக் கொண்டவையுமான கணைகளால் {க்ஷுரங்களால்} காந்தாரப் போர்வீரர்கள் பலரின் தலைகளைக் கொய்தான்.(5) ஓ! மன்னா, பார்த்தனால் இவ்வாறு காந்தாரர்கள் கொல்லப்பட்ட போது, பெரிதும் துன்பமடைந்த அவர்கள் குதிரையை விடுவித்து விட்டு, அச்சத்தால் போரை விட்டு விலகிச் சென்றனர்.(6) எனினும், அதற்கு மேலும் அனைத்துப் பக்கங்களிலும் தன்னைச் சூழ்ந்திருந்த காந்தாரப் போராளிகளால் தடுக்கப்பட்டாலும், பெரும் சக்தி கொண்டவனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அவர்களில் பலரின் பெயர்களை முன்பே சொல்லிவிட்டு அவர்களின் தலைகளைக் கொய்தான்.(7) அந்தப் போரில் அவனைச் சுற்றிலும் இருந்த காந்தாரப் போர் வீரர்கள் இவ்வாறு கொல்லப்பட்ட போது, சகுனியின் அரசமகன், அந்தப் பாண்டுவின் மகனைத் தடுக்க முன்வந்தான்.(8)

க்ஷத்திரியக் கடமையால் உந்தப்பட்ட அர்ஜுனன், தன்னுடன் போரிட்டுக் கொண்டிருந்த காந்தார மன்னனிடம், “யுதிஷ்டிரரின் ஆணைகளின் விளைவாக, நான் என்னுடன் போரிடும் மன்னர்களைக் கொல்ல நினைப்பதில்லை. ஓ! வீரா, என்னுடன் போரிடுவதை நிறுத்துவாயாக. தோல்வி உனதாக வேண்டாம்” என்றான்.(9,10) இவ்வாறு சொல்லப்பட்ட சகுனியின் மகன், அறியாமையில் மதிமயங்கி, அந்த ஆலோசனையை அலட்சியம் செய்து, போர்ச்சாதனைகளில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவனான அந்தக் குரு வீரனை வேகமாகச் செல்லும் கணைகள் பலவற்றால் மறைத்தான்.(11) அப்போது பார்த்தன், பிறைவடிவக் கணையொன்றால் {ஒரு அர்த்தச்சந்திர பாணத்தால்} தன் பகைவனின் தலைப்பாகையை வெட்டி வீழ்த்தினான். அளவிலா ஆன்மாகக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, (குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் தான் வெட்டி வீழ்த்திய) ஜெயத்ரதன் தலையைப் போலவே அந்தத் தலைப்பாகையையும் நெடுந்தொலைவு தள்ளி விழச் செய்தான்.(12)

இந்த அருஞ்செயலைக் கண்ட காந்தாரப் போர்வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அர்ஜுனன் தானாகவே தங்கள் மன்னனை உயிருடன் விட்டான் என்பதை அவர்கள் நன்கு புரிந்து கொண்டனர்.(13) அப்போது, அந்தக் காந்தாரர்களின் இளவரசன், அச்சமடைந்த மான் கூட்டத்திற்கு ஒப்பான தன் போர்வீரர்கள் அனைவருடன் சேர்ந்து களத்தைவிட்டுத் தப்பி ஓடத் தொடங்கினான்.(14) அச்சத்தால் உணர்விழந்த காந்தாரர்கள், தப்ப இயலாதவர்களாகக் களத்திலேயே திரிந்து கொண்டிருந்தனர். அர்ஜுனன், அகன்ற தலைக் கணைகளை {பல்லங்களைக்} கொண்டு அவர்களில் பலரின் தலைகளை வெட்டி வீழ்த்தினான்.(15) அர்ஜுனனுடைய கணைகளின் விளைவால் பலர் தங்கள் கைகளை இழந்திருந்தாலும், அந்த உறுப்பை இழந்ததைக் கூட அறியாத வண்ணம் அவர்கள் அச்சத்தால் திகைத்திருந்தனர். உண்மையில், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட பார்த்தனின் நெடுங்கணைகளால் அந்தக் காந்தாரப் படை பெரிதும் பீடிக்கப்பட்டது.(16)

அச்சமடைந்த மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளைக் கொண்டதும், போர்வீரர்கள் பலரையும் விலங்குகள் பலவற்றையும் இழந்திருந்ததும், கற்கட்டாகக் குறைக்கப்பட்டதும், முறியடிக்கப்பட்டதுமான அந்தப் படை, மீண்டும் மீண்டும் களத்திற்குள்ளேயே சுழன்று திரியத் தொடங்கியது.(17) இவ்வாறு கொல்லப்பட்ட அந்தப் பகைவருக்கு மத்தியில், அருஞ்சாதனைகளுக்காப் புகழ்பெற்றவனான அந்தக் குருவீரனுக்கு எதிரில் எவனும் நிற்பது காணப்படவில்லை. தனஞ்சயனின் ஆற்றலையைத் தாங்கக்கூடிய எவரும் அங்கே காணப்படவில்லை.(18) அப்போது, காந்தாரர்களின் ஆட்சியாளனுடைய தாயானாவள் {சகுனியின் மனைவி}, அச்சத்தால் நிறைந்தவளாக, தன் நாட்டின் முதிர்ந்த அமைச்சருகளுடன் சேர்ந்து, அர்ஜுனனுக்காகச் சிறந்த அர்க்கியத்துடன் தன் நகரத்தைவிட்டு வெளியே வந்தாள்.(19) உறுதியான இதயம் கொண்டவனும், துணிவுமிக்கவனுமான தன் மகனை மேலும் போரிடுவதில் இருந்து தடுத்து, உழைப்பால் ஒருபோதும் களைப்படையாதவனான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} நிறைவடையச் செய்தாள்.(20)

பலமிக்கவனான பீபத்சு {அர்ஜுனன்}, காந்தாரர்களுக்குக் கருணை காட்ட விரும்பி அவளை வழிபட்டான். சகுனியின் மகனைத் தேற்றும் வகையில் அவன்,(21) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, உன் இதயத்தில் இவ்வளவு வெறுப்பை நிறுவியிருப்பதன் மூலம் நீ எனக்கு ஏற்புடையதைச் செய்யவில்லை. ஓ! வீரர்களைக் கொல்பவனே, ஓ! பாவமற்றவனே, நீ என் மைத்துனனாவாய்[2].(22) என் தாயான காந்தாரியை நினைத்தும், திருதராஷ்டிரரின் நிமித்தமாகவும் நான் உன் உயிரை எடுக்கவில்லை. ஓ! மன்னா {சகுனியின் மகனே}, அதன் காரணமாகவே நீ இன்னும் உயிருடன் வாழ்கிறாய். எனினும், உன் தொண்டர்கள் பலர் என்னால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.(23) இனிமேலும் இவ்வாறு நிகழ வேண்டாம். பகைமைகள் தொடர வேண்டாம். உன் புத்தி மீண்டும் இவ்விதமாகச் செல்ல வேண்டாம். சைத்ர மாதத்தின் முழுநிலவு நாளில் நடைபெற இருக்கும் எங்கள் மன்னரின் குதிரை வேள்விக்கு நீ நிச்சயம் வர வேண்டும்” என்றான் {அர்ஜுனன்}”.(24)

யாகசாலை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 85-அர்ஜுனன் ஹஸ்தினாபுரத்திற்கு வந்து கொண்டிருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்த யுதிஷ்டிரன்; பிராமணர்களை வரச்செய்து பீமனை யாகசாலை அமைக்கச் செய்தது; பல நாடுகளில் இருந்து வந்த மன்னர்களும், மக்களும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்தச் சொற்களைச் சொன்ன பார்த்தன் {அர்ஜுனன்}, விருப்பப்படி திரியும் அந்தக் குதிரையைப் பின்தொடர்ந்து சென்றான். அந்த வேள்விக் குதிரை, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} நோக்கிச் செல்லும் சாலையில் திரும்பியது.(1) குதிரை திரும்பியதைச் செய்தி சுமப்பவர்களின் {தன் சாரர்களின் / ஒற்றர்களின்} மூலம் யுதிஷ்டிரன் கேள்விப்பட்டான். அர்ஜுனன் நலமாகவும், உற்சாகத்துடனும் இருப்பதையும் கேட்டு அவன் மகிழ்ச்சியால் நிறைந்தான்[1].(2) காந்தாரர்களின் நாட்டிலும், பிற நாடுகளிலும் விஜயனால் செய்யப்பட்ட அருஞ்செயல்களைக் கேட்ட மன்னன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தான்.(3) அதே வேளையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், மாக மாதத்தின் வளர்பிறை பனிரெண்டாம் நாள் வந்ததைக் கண்டு, சாதகமான நட்சத்திரமும் {மாகமாஸத்திய [மாசி மாதத்து] துவாதசியும், புஷ்ய [பூசம்] நக்ஷத்திரமும் கூடிய தினம்} இருப்பதைக் கண்டு,(4) பீமன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய தன் சகோதர்கள் அனைவரையும் அழைத்தான்.ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயா}, பெருஞ்சக்தி கொண்டவனும், கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான மன்னன் {யுதிஷ்டிரன்} இந்தச் சொற்களை உரிய காலத்தில் சொன்னான். உண்மையில், பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, தாக்குபவர்கள் அனைவரிலும் முதல்வனான பீமனிடம்,(5,6) “ஓ! பீமசேனா, உன் தம்பி (அர்ஜுனன்) குதிரையுடன் திரும்பி வருகிறான். அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்ற மனிதர்களிடம் இருந்து இதை நான் அறிந்தேன்.(7) (வேள்விக்கான) காலம் வந்துவிட்டது. வேள்விக் குதிரையும் அருகில் வந்துவிட்டது. மாக மாதத்து முழு நிலவு நாள் நடந்து கொண்டிருக்கிறது. ஓ! விருகோதரா, இம்மாதம் கடக்க இருக்கிறது {இன்னும் ஒரு மாதகாலம்தான் இருக்கிறது}.(8) எனவே, கல்விமான்களும், வேதங்களை அறிந்தவர்களுமான பிராமணர்கள், குதிரை வேள்வியை வெற்றிகரமாக நிறைவேற்ற தகுந்த இடத்தைப் பார்க்கட்டும்” என்றான்.(9)

இவ்வாறு சொல்லப்பட்ட பீமன் அந்த அரச ஆணைக்குக் கீழ்ப்படிந்தான். சுருள் முடி கொண்ட அர்ஜுனன் திரும்பி வருவதைக் கேட்டு அகமகிழ்ந்தான்.(10) பிறகு பீமன், வேள்விச்சாலைகள் வகுப்பதற்கும், கட்டடங்கள் கட்டுவதற்கும் உரிய விதிகளை நன்கறிந்த எண்ணற்ற மனிதர்களுடன் வெளியே புறப்பட்டுச் சென்றான். அவன் தன்னுடன், வேள்விச் சடங்குகள் அனைத்தையும் நன்கறிந்த பிராமணர்கள் பலரை உடன் அழைத்துச் சென்றான்.(11) ஓர் அழகிய இடத்தைத் தேர்ந்தெடுத்த பீமன், வேள்விச்சாலைக்கான மதில்களை அமைப்பதற்காக அதை முறையாக அளந்தான். அதில் எண்ணற்ற வீடுகளும், மாளிகைகளும் கட்டப்பட்டன, அகலமான நெடுஞ்சாலைகளும் அதில் அமைக்கப்பட்டன.(12) அந்தக் கௌரவ வீரன் மிக விரைவில் அந்தச் சாலையை நுற்றுக்கணக்கான சிறந்த மாளிகைகளால் நிரம்பியதாக்கினான். அதன் பரப்பு சமன்படுத்தப்பட்டு, தங்கம் மற்றும் ரத்தினங்களால் பளபளப்பாக்கப்பட்டு, பொன்னாலான பல்வேறு அமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டது.(13)

பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், உயர்ந்தவையுமான தூண்களும், அகலமான வெற்றி வளைவுகளும் அந்த வேள்விச்சாலைக்குள் கட்டப்பட்டன. இவையாவும் பசும்பொன்னால் செய்யப்பட்டன.(14) அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனான அந்த இளவரசன் {பீமன்}, பெண்கள் தங்குவதற்கும், பல்வேறு நாடுகளில் இருந்து வருபவர்களும், தங்கள் இருப்பால் வேள்வியைச் சிறப்பிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களுமான எண்ணற்ற மன்னர்கள் தங்குவதற்கும், உரிய அறைகளைச் செய்தான்.(15) அந்தக் குந்தியின் மகன், பல்வேறு நாடுகளில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் பிராமணர்களுக்கும் உரிய மாளிகைகள் பலவற்றையும் கட்டினான்.(16)

பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனன், மன்னனின் ஆணையின் பேரில், பூமியின் பெரும் மன்னர்களிடம் தூதர்களை அனுப்பினான்.(17) அந்தச் சிறப்புமிக்க மன்னர்களும், குரு ஏகாதிபதிக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக அவனுடைய குதிரை வேள்விக்கு {அஸ்வமேத யாகத்துக்கு} வந்தனர். மேலும் அவர்கள் தங்களுடன் ரத்தினங்களையும், பெண் பணியாட்கள் பலரையும், குதிரைகள் மற்றும் ஆயுதங்கள் பலவற்றையும் கொண்டு வந்திருந்தனர்.(18) அந்த அரங்கிற்குள் வசித்த உயர் ஆன்ம மன்னர்கள் எழுப்பியச் சொர்க்கத்தையே எட்டிய ஒலிகள், முழங்கும் பெருங்கடலால் உண்டாக்கப்படும் ஒலிக்கு ஒப்பானதாக இருந்தன.(19) குருக்களைத் திளைக்கச் செய்பவனான மன்னன் யுதிஷ்டிரன், தன் வேள்விக்கு வந்திருந்த ஏகாதிபதிகளுக்கு உரிய பல்வேறு உணவு மற்றும் பான வகைகளையும், தெய்வீக அழகுடைய படுக்கைகளையும் ஒதுக்கினான்.(20)

பாரதர்களின் தலைவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், பல்வேறு வகைப் பயிர்கள், கரும்பு மற்றும் பால் ஆகியவற்றுடன் நன்கு நிரம்பிய பல்வேறு கொட்டகைகளை (விருந்தினர்களுடன் வரும்) விலங்குகளுக்கென ஒதுக்கினான்.(21) உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனுடைய அந்தப் பெரும் வேள்விக்குப் பிரம்மத்தை ஓதுபவர்களான முனிவர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்திருந்தனர்.(22) உண்மையில், ஓ! பூமியின் தலைவா, அப்போது வாழ்ந்து வந்தவர்களில் மறுபிறப்பாள வகையைச் சார்ந்தவர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் தங்கள் சீடர்களுடன் அந்த வேள்விக்கு வந்தனர். குரு மன்னன் {யுதிஷ்டிரன்} அவர்கள் அனைவரையும் வரவேற்றான்.(23) பெரும் சக்தி கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், செருக்கனைத்தையும் கைவிட்டு, தன் விருந்தினர்கள் அனைவரையும் பின்தொடர்ந்து அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அரங்குகளுக்குச் சென்றான்.(24) அப்போது வேள்விக்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் நிறைவேற்றிய கைவினைஞர்களும் {ஸ்தபதிகளும்}, பொறியாளர்களும் {சிற்பிகளும்} அது குறித்து மன்னன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தனர்.(25) அனைத்தும் ஆயத்தமாக இருப்பதைக் கேட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், விழிப்பும், கவனமும் நிறைந்தவனாகத் தன்னை முறையாக மத்திக்கும் தன் தம்பிகள் அனைவருடன் பெரும் மகிழ்ச்சியடைந்தான்”.(26)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “யுதிஷ்டிரனுடைய அந்தப் பெரும் வேள்வி தொடங்கிய போது, நாநயமிக்கச் சொல்லேர் உழவர்கள் {வித்வான்கள்} பலர், ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, பல்வேறு முன்மொழிவுகளைத் தொடங்கி வைத்து, அவற்றில் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர்[2].(27) ஓ! பாரதா, (அங்கே அழைக்கப்பட்டிருந்த) மன்னர்கள், தேவர்களுடைய தலைவனின் {இந்திரனின்} வேள்விக்கே ஒப்பானதும், பீமனால் செய்யப்பட்டதுமான அந்த வேள்விக்கான சிறந்த ஏற்பாடுகளைக் கண்டனர்.(28)அவர்கள், பொன்னாலான வெற்றி வளைவுகள் {வாயில்கள்} பலவற்றையும், அனுபவிக்கத்தகுந்த ஆடம்பரப் படுக்கைகள், இருக்கைகள் மற்றும் பிற பொருட்கள் பலவற்றையும், பல்வேறு இடங்களில் இருந்து அங்கே திரண்டிருந்த மனிதக்கூட்டத்தையும் அங்கே கண்டனர்.(29) அங்கே அவர்கள், கொள்கலன்கள், பாத்திரங்கள், கொப்பரைகள், நீர்க்கலன்கள், மூடிகள் மற்றும் விரிப்புகள் {குடங்கள், பாத்திரங்கள், கடாஹங்கள், கலசங்கள், வர்த்தமானங்கள்} ஆகியவற்றைக் கண்டனர். அங்கே அழைக்கப்பட்டிருந்த மன்னர்கள் பொன்னாலாகாத எதையும் அங்கே காணவில்லை.(30) சாத்திர வழிகாட்டுதலின் படி மரத்தாலும், பொன்னாலும் அலங்கரிக்கப்பட்ட வேள்வித்தம்பங்கள் {யூபங்கள்} பலவும் அமைக்கப்பட்டன. பெரும் பிரகாசத்துடன் கூடிய அவை, (சாத்திர மந்திரங்களால்) அர்ப்பணிக்கப்பட்டு முறையாக நிறுவப்பட்டன.(31) மண்ணுக்குரிய விலங்குகள் அனைத்தும், நீருக்குரியவை அனைத்தும் அச்சந்தர்ப்பத்தில் அங்கே திரட்டப்பட்டிருப்பதை அம்மன்னர்கள் கண்டனர்.(32)

பசுக்கள் பலவும், எருமைகள் பலவும், வயது முதிர்ந்த பெண்கள் பலரும், நீர்வாழ் விலங்குகள் பலவும், இரை தேடும் விலங்குகள் பலவும், பறவை இனங்கள் பலவும். ஈன்று பெறும் உயிரினங்கள், முட்டையிட்டு குஞ்சு பெறும் உயிரினங்கள், அழுக்கு மற்றும் கழிவில் இருந்து உண்டாகும் உயிரினங்கள் பலவும், தாவர வகைப் பலவும் மலைகளில் வளரும் விலங்குகள் மற்றும் செடிகள் பலவும் அங்கே இருப்பதை அவர்கள் கண்டனர்.(33,34) பாகிலிடப்பட்ட விலைமதிப்புமிக்க இன்பண்டங்கள் பிராமணர்கள் மற்றும் வைசியர்கள் ஆகிய இருவருக்காகவும் குவியல் குவியல்களாக அங்கே தயாராக வைக்கப்பட்டிருந்தன. நூறாயிரம் {ஒரு லட்சம்} பிராமணர்கள் உண்டதும், துந்துபிகளும், கைத்தாளங்களும் ஒலிக்கப்பட்டன.(36) துந்துபிகள் மற்றும் கைத்தாளங்களின் ஒலிகள் அடிக்கடி கேட்கும் வண்ணம் அங்கே உணவு உண்டவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் இருந்தது. உண்மையில், நாளுக்கு, நாள் அவ்வொலிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.(37)

பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் யுதிஷ்டிரனின் வேள்வி இவ்வாறே நடந்து கொண்டிருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அச்சந்தர்ப்பத்தில் உணவு மலைகள் அர்ப்பணிக்கப்பட்டன. தயிர் மற்றும் நெய்யாலான பெரிய குளங்களும், தடாகங்களும் அங்கே காணப்பட்டன.(38) ஓ! ஏகாதிபதி, ஜம்புத்வீபத்தில் உள்ள நாடுகள் மற்றும் மாகாணங்களில் இருந்த மொத்த மக்கள் தொகையும் ஒன்றுதிரண்டு வந்த அந்தப் பெரும் வேள்வியில் இருப்பதாகத் தெரிந்தது.(39) ஆயிரக்கணக்கான நாட்டைச் சேர்ந்தவர்களும், இனங்களைச் சேர்ந்தவர்களும் அங்கே இருந்தனர். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பொன்னாலான பிரகாசமான காது வளையங்களை அணிந்தவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் தங்கள் கரங்களின் எண்ணற்ற பாத்திரங்களை ஏந்தி, மறுபிறப்பாள வகையைச் சார்ந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவைப் பரிமாறினர்.(40,41) மன்னர்கள் உண்பதற்கும், பருகுவதற்கும் உகந்த மிக மதிப்புமிக்கப் பல்வேறு வகை உணவு மற்றும் பானங்களைப் பாண்டவர்களின் பணியாட்கள் பிராமணர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(42)

அர்ஜுனனின் சொல்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 86-பலராமன் முதலியோருடன் ஹஸ்தினாபுரம் வந்த கிருஷ்ணன்; அர்ஜுனனின் சொற்களை யுதிஷ்டிரனிடம் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பூமியின் தலைவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான மன்னர்கள் வந்ததைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், பீமனிடம்,(1) “ஓ! மனிதர்களின் தலைவா, மனிதர்களில் முதன்மையானவர்களான இந்த மன்னர்கள் அனைவரும் உயர்ந்த மதிப்புக்குரியவர்கள் என்பதால் அவர்களுக்கு உரிய முறையான கௌரவங்கள் அளிக்கப்படட்டும்” என்றான்.(2) பெரும் புகழைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், வலிமையும், சக்தியும் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான பீமசேனன், இரட்டையர்களின் {நகுல சகாதேவனின்} துணையுடன் அவ்வாறே செயல்பட்டான்.(3)

மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான கோவிந்தன் {கிருஷ்ணன்}, தன் முன்னணியில் பலதேவனுடனும், விருஷ்ணிகள் துணையுடனும் அங்கே வந்தான்.(4) அவனுடன் யுயுதானன் {சாத்யகி}, பிரத்யும்னன், கதன், நிசடன், ஸாம்பன், கிருதவர்மன் ஆகியோரும் வந்தனர்.(5) வலிமைமிக்கத் தேர்வீரனான பீமன் அவர்களுக்கு மதிப்புமிக்க வழிபாட்டைக் காணிக்கையாக்கினான். அதன் பிறகு அந்த இளவரசர்கள், தங்களுக்கென ஒதுக்கப்பட்டவையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான அரண்மனைகளுக்குள் நுழைந்தனர்.(6)

மதுசூதனன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனுடனான உரையாடலின் இறுதியில், பல போர்களின் விளைவால் அர்ஜுனன் மெலிந்திருப்பதைக் குறிப்பிட்டான்.(7) குந்தியின் மைந்தன் {யுதிஷ்டிரன்}, அர்ஜுனனைக் குறித்துப் பகைவரைத் தண்டிப்பவனான கிருஷ்ணனிடம் மீண்டும் மீண்டும் கேட்டான். அண்டத்தின் தலைவன் {கிருஷ்ணன்}, தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, சக்ரனின் மகனான ஜிஷ்ணு குறித்துப் பேசத் தொடங்கினான்.(8) {கிருஷ்ணன்}, “ஓ! மன்னா, துவாரகையில் வசிப்பவனும், நம்பிக்கைக்குரியவனுமான என்னுடைய மனிதன் {ஒற்றனாக இருக்கலாம்} ஒருவன், என்னிடம் வந்தான். அவன் பாண்டு மகன்களில் முதன்மையான அர்ஜுனனைக் கண்டு வந்திருந்தான். உண்மையில், பல போர்களினால் களைத்திருக்கும் பின்னவன் {அர்ஜுனன்} மிகவும் மெலிந்திருக்கிறான் {என்றும்}.(9) ஓ! பலமிக்க ஏகாதிபதி, அந்த வலிமைமிக்கவன் {அர்ஜுனன்} நமக்கு மிக அருகில் இருக்கிறான் என்றும் என்னுடைய மனிதன் எனக்குத் தெரிவித்தான். உமது குதிரை வேள்வியை நிறைவேற்றுவதில் உம்மை நிறுவிக் கொள்வீராக” என்றான் {கிருஷ்ணன்}.(10)

அவ்வாறு சொல்லப்பட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா, நற்பேற்றினாலேயே அர்ஜுனன் பாதுகாப்பாகத் திரும்பி வருகிறான்.(11) ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, பாண்டு மகன்களில் வலிமைமிக்க வீரனான அவன் இக்காரியம் குறித்து என்ன சொல்லி அனுப்பியிருக்கிறான் என்பதை உன்னிடம் உறுதி செய்து கொள்ள விரும்புகிறேன்” என்றான்.(12)

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நாநயமிக்க மனிதர்களில் முதன்மையாவனும், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் தலைவனுமான அவன் {கிருஷ்ணன்}, அற ஆன்மா கொண்ட அந்த ஏகாதிபதியிடம் இச்சொற்களைச் சொன்னான்,(13) {கிருஷ்ணன்}, “ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, என்னுடையவனான அந்த மனிதன், பார்த்தனின் சொற்களை நினைவுகூர்ந்து, “ஓ! கிருஷ்ணா, வேளை வரும்போது என்னுடைய இந்தச் சொற்களை யுதிஷ்டிரரிடம் சொல்வாயாக” என்று சொன்னான்.(14) {யுதிஷ்டிரிடம்} ஓ! கௌரவர்களின் தலைவா, (உமது வேள்விக்கு) மன்னர்கள் பலர் வருவார்கள். அவர்கள் வரும்போது அவர்கள் உயர்வாகக் கௌரவிக்கப்பட வேண்டும். உண்மையில், அதுவே நமக்குத் தகும் {என்ற தன் சொற்களைச் சொல்லுமாறு அர்ஜுனன் சொல்லி அனுப்பியிருக்கிறான்}.(15)

{மேலும், என்னுடைய [கிருஷ்ணனின்] மனிதனிடம் அர்ஜுனன்}, “ஓ!கௌரவங்களை அளிப்பவனே, (ராஜசூய வேள்வி நடந்தபோது) அர்க்கியம் அளிக்கும் நேரத்தில் நடந்ததற்கு ஒப்பான இடரேதும் நிகழாமல் தவிர்ப்பதற்குரிய தகுந்த செயல்களைச் செய்ய வேண்டும் என்ற என் வேண்டுகோளையும் மன்னரிடம் {யுதிஷ்டிரரிடம்} தெரிவிப்பாயாக. கிருஷ்ணனும் இஃதை அங்கீகரிக்கட்டும்” {என்றும் அர்ஜுனன் சொல்லி அனுப்பியிருக்கிறான்}. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} மன்னர்களின் பகையுணர்வுகளால் மக்கள் கொல்லப்படாதிருக்கட்டும்.(16,17) என்னுடையவனான அந்த மனிதன், தனஞ்சயனின் சொற்களை மேலும் சொன்னான். அவற்றை நான் மீண்டும் சொல்கிறேன் கேட்பீராக.(18)

{அர்ஜுனனின் சொற்களில்}, “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, மணிப்புர ஆட்சியாளனான என் அன்புக்குரிய மகன் பப்ருவாஹனன், வேள்விக்கு வருவான்.(19) எனக்காக நீர் அவனைக் கௌரவிப்பீராக. ஓ! பலமிக்கவரே, அவன் எப்போதும் என்னிடம் பற்று கொண்டவனாகவும், ஆழமான அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் இருக்கிறான்” {என்று அர்ஜுனன் தன் மனிதனிடம் சொல்லியனுப்பி இருப்பதாகக் கிருஷ்ணன் சொன்னான்}.(20) இச்சொற்களைக் கேட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் அவற்றை அங்கீகரித்துப் பின்வருமாறு சொன்னான்”.(21)

லக்ஷணக் குறை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 87-பாண்டவர்களில் மற்ற நால்வரைவிட அர்ஜுனனுக்குப் பெரும் அலைச்சல் நேரிடும் வகையில் அவன் உடலில் உள்ள லக்ஷணக் குறை எதுவெனக் கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அதைக் கூறிய கிருஷ்ணன்; குதிரையுடன் திரும்பி வந்த அர்ஜுனன்…

யுதிஷ்டிரன், “ஓ! கிருஷ்ணா, உன்னுடைய இனிமையான சொற்களை நான் கேட்டேன். அவை உன்னால் பேசத் தகுந்தனவாக இருந்தன. அவை மகிழ்ச்சி நிறைந்தவையாகவும், அமுதத்தைப் போல இனிமையாகவும் இருந்தன. உண்மையில், ஓ! பலமிக்கவனே, அவை என் இதயத்தைப் பேரின்பத்தால் நிறைத்தன.(1) ஓ! ரிஷிகேசா, பூமியின் மன்னர்களுடன் விஜயனுக்கு நேர்ந்திருக்கும் போர்கள் எண்ணற்றவையென நான் கேட்டிருக்கிறேன்.(2) சுகத்தில் {வசதி வாய்ப்புகளில்} இருந்து எப்போதும் தொடர்பறுந்தவனாகப் பார்த்தன் இருப்பதன் காரணம் யாது? விஜயன் பெரும் நுண்ணறிவு பெற்றவனாக இருக்கிறான். எனவே, இஃது என் இதயத்திற்குப் பெரும் துன்பத்தைத் தருகிறது.(3) ஓ! ஜனார்த்தனா, தொழிலில் இருந்து விலகியிருக்கும்போதெல்லாம் நான் குந்தியின் மகனான ஜிஷ்ணுவையே {அர்ஜுனனையே} நினைக்கிறேன். பாண்டுக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிப்பவனான அவன் பெரும் துன்பத்தை அனுபவித்திருக்கிறான்.(4) அவனுடைய உடலில் அனைத்து மங்கலக் குறிகளும் இருக்கின்றன. எனினும், ஓ! கிருஷ்ணா, அவன் {அர்ஜுனன்} எப்போதும் துன்பத்தையும், வசதியின்மையையும் அனுபவிக்கக் காரணமான அந்தக் குறியீடு யாது?(5) குந்தியின் மகனான அவனே, துன்பத்தில் பெரும்பகுதியைச் சுமக்கிறான். அவன் உடலில் நிந்திக்கத்தக்க குறியீடு {கெட்ட லக்ஷணம்} எதையும் நான் காணவில்லை. இதைக் கேட்க நான் தகுந்தவனெனில் எனக்கு அதை விளக்கிச் சொல்வாயாக” என்று கேட்டான்.(6)

இவ்வாறு சொல்லப்பட்டவனும், போஜ இளவரசர்களின் மகிமையை அதிகரிப்பவனுமான ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, பின்வருமாறு பதிலளித்தான்:(7) “மனிதர்களில் சிங்கமான இவனது தாடையெலும்புகள் சற்றே உயர்ந்திருப்பதைத் தவிர நிந்திக்கத்தக்க இயல்பு வேறு எதையும் நான் காணவில்லை.(8) இதன் விளைவாகவே மனிதர்களில் முதன்மையான இவன் எப்போதும் சாலைகளிலேயே இருக்கிறான். இவன் மகிழ்ச்சியற்றவனாக இருப்பதற்கு வேறு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை[1]” என்றான்.(9)பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மனிதர்களில் முதன்மையான மன்னன் யுதிஷ்டிரன், அந்த விருஷ்ணிகளின் தலைவனிடம் அவ்வாறே இருப்பதாகச் சொன்னான்.(10) எனினும், (அர்ஜுனனுக்கு களங்கமேதும் கற்பிக்கப்படுதைப் பொறுத்துக் கொள்ள முடியாத) இளவரசி திரௌபதி, கிருஷ்ணனை நோக்கி கோபத்துடன் சாய்வாகப் பார்த்தாள். கேசியைக் கொன்றவனான ரிஷிகேசன், தன் நண்பரான பாஞ்சால இளவரசி (தன் நண்பனிடம் {அர்ஜுனனிடம்}) வெளிப்படுத்திய அன்பின் {காதலின்} குறியீட்டை அங்கீகரித்தான்[2].(11)குதிரையைப் பின்தொடர்ந்து சென்ற அர்ஜுனனின் இனிமையான வெற்றிகளைக் கேட்ட பீமசேனனும், வேள்விப் புரோகிதர்கள் உள்ளிட்ட பிற குருக்களும் {கௌரவர்களும்} உயர்வான மகிழ்ச்சியை அடைந்தனர்.(12) அவர்கள் அர்ஜுனனைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த உயர்ஆன்ம வீரனிடம் இருந்து ஒரு தூதன் செய்தியைச் சுமந்து வந்தான்.(13) அந்தப் புத்திசாலியான தூதன், குரு மன்னனின் முன்னிலைக்கு வந்து, மதிப்புடன் தலை வணங்கி, மனிதர்களில் முதன்மையான பல்குனனின் வரவைத் தெரிவித்தான்.(14) அந்தச் செய்தியைப் பெற்றதும், மகிழ்ச்சிக் கண்ணீர் மன்னனின் கண்களை மறைந்தது. தூதன் கொண்டு வந்த இனிய செய்திக்காக அவனுக்குப் பெருங்கொடைகள் வழங்கப்பட்டன.(15)

அன்றிலிருந்து இரண்டாவது நாள், மனிதர்களில் முதன்மையான அந்தக் குருக்களின் தலைவன் வந்த போது பேராரவாரம் கேட்டது.(16) அர்ஜுனனுக்கு அருகில் நடந்து வந்த அந்தக் குதிரையின் குளம்படிகளில் இருந்து எழுந்த புழுதியானது, தெய்வீகக் குதிரையான உச்சைஸ்ரவத்தால் எழுப்பட்டதைப் போல அழகாகத் தெரிந்தது.(17)

அர்ஜுனன் முன்னேறி வந்தபோது, குடிமக்களால் சொல்லப்படும் மகிழ்ச்சி நிறைந்த சொற்கள் பலவற்றைக் கேட்டான். {அவர்கள்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நற்பேற்றினாலேயே நீ ஆபத்துகளில் இருந்து விடுபட்டாய். மன்னன் யுதிஷ்டிரனுக்குப் புகழுண்டாகட்டும்.(18) உலகம் முழுவதும் குதிரையைச் சுற்றித் திரியவிட்டு, போரில் மன்னர்க்ள அனைவரையும் வென்று திரும்ப அர்ஜுனனைத் தவிர வேறு எவனால் முடியும்?(19) சகரனாலும், பழங்காலத்தின் உயர் ஆன்ம மன்னர்களாலும் இத்தகைய அருஞ்செயல் செய்யப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(20) ஓ! குருத்தில் முதன்மையானவனே, நீ அடைந்த இந்தச் சாதனையை எதிர்கால மன்னர்களாலும் ஒருபோதும் அடைய முடியாது” {என்றனர்}.(21)

குடிமக்கள் சொன்ன காதுக்கினிய இத்தகைய சொற்களைக் கேட்டபடியே உயர் ஆன்ம பல்குனன் {அர்ஜுனன்}, வேள்விச்சாலைக்குள் நுழைந்தான்.(22) அப்போது மன்னன் யுதிஷ்டிரனும், அவனுடைய அமைச்சர்கள் அனைவரும், யதுக்களைத் திளைக்கச் செய்பவனான கிருஷ்ணனும், திருதராஷ்டிரனைத் தங்கள் முன்னணியில் கொண்டு, தனஞ்சயனை வரவேற்க வெளியே சென்றனர்.(23) அவன், தன் தந்தையின் (திருதராஷ்டிரனின்) பாதங்களையும், பெரும் ஞானியும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் பாதங்களையும் வணங்கி விட்டு, பீமனையும், பிறரையும் வழிபட்டு, கேசவனை {கிருஷ்ணனை} ஆரத் தழுவிக் கொண்டான்.(24)

அவர்கள் அனைவரால் வழிபடப்பட்டு, உரிய சடங்குகளின்படி அவர்களை வழிபட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, உடைந்த கப்பலில் இருந்த மனிதன் அலைகளால் அலைக்களிக்கப்பட்டுக் கரையை அடைந்து ஓய்ந்ததைப் போல அந்த இளவரசர்களின் துணையுடன் ஓய்ந்திருந்தான்.(25) அதே வேளையில் பெரும் ஞானம் கொண்ட பப்ருவாஹனன், தன் அன்னையரின் (சித்ராங்கதை மற்றும் உலூபியின்} துணையுடன் குருவின் தலை நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தான்.(26) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த இளவரசன், குரு குலத்தின் பெரியோர் அனைவரையும், அங்கே இருந்த பிற மன்னர்களையும் முறையாக வணங்கி அவர்கள் அனைவராலும் பதிலுக்குக் கௌரவிக்கப்பட்டான். அதன் பிறகு அவன், தன் பாட்டியான {பிதாமஹியான} குந்தியின் சிறந்த வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(27)

பஹுஸுவர்ணகம்-அஸ்வமேதயாகம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 88-வியாசரின் ஆணையின் பேரில் அஸ்வமேத யாகத்தைத் தொடங்கிய யுதிஷ்டிரன்; யாகத்தில் செய்யப்பட்ட சில சடங்குள்; யூபங்களில் கட்டப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை; யாகத்தை ஒட்டிய அழகிய சூழ்நிலை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டவர்களின் அரண்மனைக்குள் நுழைந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட இளவரசன் {பப்ருவாஹனன்}, ஆறுதல் தரும் இனிய சொற்களால் தன் பாட்டியை {பிதாமஹியை} வணங்கினான்.(1) அப்போது, ராணி சித்ராங்கதை, கௌரவ்யன் (என்ற பாம்பின்) மகள் (உலூபி) ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து பிருதையையும் {குந்தியையும்}, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} பணிவோடு அணுகினர். அதன் பிறகு அவர்கள் உரிய வழக்கத்தின்படி சுபத்திரையையும், குரு குலத்தின் பிற பெண்மணிகளையும் சந்தித்தனர்.(2) குந்தி அவர்களுக்கு ரத்தினங்கள் பலவற்றையும், விலைமதிப்புமிக்கப் பொருட்களையும் கொடுத்தாள். திரௌபதி, சுபத்திரை மற்றும் குரு குலத்தின் பிற பெண்மணிகள் ஆகியோர் அனைவரும் அவர்களுக்குப் பரிசுகளை அளித்தனர்.(3) பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} ஏற்புடையதைச செய்யும் விருப்பத்துடன் கூடிய குந்தியால் அன்புடனும், மதிப்புடனும் நடத்தப்பட்ட அந்தப் பெண்கள் இருவரும், மதிப்புமிக்கப் படுக்கைகளுடனும், இருக்கைகளுடனும் அங்கேயே வசித்தனர்.(4)

(குந்தியால்) முறையாகக் கௌரவிக்கப்பட்டவனும், பெரும் சக்திமிக்கவனுமான மன்னன் பப்ருவாஹனன், உரிய சடங்குகளின்படி திருதராஷ்டிரனைச் சந்தித்தான்.(5) அதன் பிறகு மன்னன் யுதிஷ்டிரன், பீமன் மற்றுப் பிற பாண்டவர்களிடம் சென்றவனும், வலிமைமிக்கவனுமான அந்த மணிப்புர இளவரசன் அவர்கள் அனைவரையும் பணிவுடன் வணங்கினான்.(6) அவர்கள் அனைவரும் அவனைப் பேரன்புடன் தழுவிக் கொண்டு முறையான மதிப்பை அளித்தனர். அவனிடம் பெரும் நிறைவடைந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அவனுக்குப் பெருஞ்செல்வக் கொடைகளை அளித்தனர்.(7) அதன் பிறகு, அந்த மணிப்புர மன்னன், தந்தையை அணுகும் இரண்டாம் பிரத்யும்னனைப் போலச் சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்த வீரனான கிருஷ்ணனைப் பணிவுடன் அணுகினான்.(8) கிருஷ்ணன் அந்த மன்னனுக்கு {பப்ருவாஹனனுக்குப்} பெரும் மதிப்புமிக்கதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதுமான சிறந்த தேரைக் கொடுத்தான்.(9) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பீமன், பல்குனன், இரட்டையர்கள் ஆகியோரும் தனித்தனியாக அவனைக் கௌரவித்து விலைமதிப்புமிக்கப் பரிசுப்பொருட்களை அளித்தனர்.(10)

மூன்றாம் நாளில், நாநயமிக்கவர்களில் முதன்மையானவரும், சத்யவதியின் மகனுமான வியாசர், யுதிஷ்டிரனை அணுகி,(11) “ஓ! குந்தியின் மகனே, இந்நாளில் இருந்து உன் வேள்வி தொடங்கட்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. தொடங்குவதற்கான கணம் அருகில் இருக்கிறது. புரோஹிதர்கள் உன்னைத் தூண்டுகிறார்கள்.(12) எந்த அங்கமும் பழுதுபடாதவண்ணம் இந்த வேள்வி செய்யப்படட்டும். இந்த வேள்விக்குப் பெரும் அளவிலான தங்கம் தேவைப்படுவதன் விளைவால், அபரிமிதமான தங்க வேள்வி {பஹுஸுவர்ணகம்} என்று இஃது அழைக்கப்படுகிறது[1].(13) ஓ! பெரும் மன்னா, இந்த வேள்விக்கு ஆணையிட்ட தக்ஷிணையைவிட மூன்று மடங்கு கொடுப்பாயாக. பிராமணர்கள் இக்காரியத்தில் திறம்பெற்றவர்களாவர்[2].(14) ஓ! மன்னா, அபரிமிதமான கொடைகளுடன் கூடிய மூன்று குதிரை வேள்விகளைச் செய்த பலன்களை அடைவதன் மூலம் நீ உன் உற்றார் உறவினரைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபடுவாய்.(15) ஓ! ஏகாதிபதி, குதிரைவேள்வியின் நிறைவில் ஒருவன் செய்யும் நீராடல் உயர்ந்த தூய்மையை அளிப்பதும், உயர்ந்த புண்ணியத்தை உண்டாக்குவதுமாகும். ஓ! குரு குலத்து மன்னா, அந்தப் பலன் {புண்ணியம்} உன்னுடையதாகும்” என்றார் {வியாசர்}.(16)அளவிலா நுண்ணறிவைக் கொண்ட வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நீதி மிக்க ஆன்மாவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்ட யுதிஷ்டிரன், குதிரைவேள்வி செய்வதற்கான தீக்ஷைக்கு உட்பட்டான்[3].(17) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, அபரிமிதமான கொடைகளுடனும், உணவுக் கொடையுடனும் கூடியதும், அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை எட்டச் செய்வதும், அனைத்துப் புண்ணியங்களையும் உண்டாக்கக்கூடியதுமான பெரும் குதிரை வேள்வியைச் செய்தான்.(18) வேதங்களை நன்கறிந்தவர்களான புரோகிதர்கள், முறையாக அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டே அனைத்து சடங்குகளைச் செய்தனர். அவர்கள் அனைவரும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவும், அனைத்தையும் அறிந்தவர்களாகவும் இருந்தனர்.(19) அங்கே விதிப்பிறழ்வுகள் ஏதும் நடக்கவில்லை, முறையற்ற வகையில் ஏதும் செய்யப்படவில்லை. மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களான அவர்கள், (சாத்திரங்களில்) விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, எந்த {சாத்திரப்} பரிந்துரையும் இல்லாத இடங்களில் எவ்வாறு செய்ய வேண்டுமோ அவ்வாறே செய்தனர்[4].(20)ஓ! மன்னா {ஜனமேஜயா}, மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களான அவர்கள், தர்மம் என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுவதும், பிரவர்க்யம் என்றும் அழைக்கப்படுவதுமான சடங்கை முதலில் செய்து, அதன் பிறகு அபிஷவம் எனும் சடங்கையும் முறையாகச் செய்தனர்[5].(21) சோமத்தைப் பருகுபவர்களின் முதன்மையான அவர்கள், ஓ! ஏகாதிபதி, சோமச்சாற்றைப் பிரித்தெடுத்த பிறகு, சாத்திரங்களின் ஆணைகளைப் பின்பற்றி ஸவனச் சடங்கைச்[6] செய்தனர்.(22) அந்த வேள்விக்கு வந்தோரின் மத்தியில் உற்சாகமற்ற எவரையும், வறுமையில் உள்ள எவரையும், பசியில் உள்ள எவரையும், துயரில் மூழ்கிய எவரையும், மோசமாகத் தெரிபவர் எவரையும் காணமுடியவில்லை.(23) மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆணையின் பேரில், வலிமையும், சக்தியுமிக்கப் பீமசேனன், உண்ண விரும்புவோருக்கு மத்தியில் இடையறாமல் உணவைப் பரிமாறச் செய்தான்.(24) சாத்திர விதிகளைப் பின்பற்றியவர்களும், அனைத்து வகை வேள்விச் சடங்குகளையும் நன்கறிந்தவர்களுமான புரோஹிதர்கள், ஒவ்வொரு நாளும் அந்தப் பெரும் வேள்வி நிறைவடைவதற்குத் தேவையான செயல்களை அனைத்தையும் செய்தனர்.(25)பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனுடைய சத்யஸ்களுக்கு மத்தியில், (வேத) கல்வியின் ஆறு கிளைகளை நன்கறியாத எவரும் இல்லை. அவர்களுக்கு மத்தியில், நோன்புகளை நோற்காத எவரும், உபாத்யாயராக இல்லாத எவரும், இயங்கியல் சர்ச்சைகளை நன்கறியாத எவரும் இல்லை.(26) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, வேள்வித் தூணை {யூபத்தை} நிறுவதற்கான வேளை வந்தபோது, வில்வத்தாலான {பில்வத்தாலான} ஆறு வேள்வித் தூண்களும், காதிரத்தாலான {செங்கருங்காலியாலான} ஆறும், சர்வவர்ணினாலான {பலாசத்தாலான / புரசாலான} ஆறும் அமைக்கப்பட்டன.(27) குரு மன்னனின் {யுதிஷ்டிரனின்} அந்த வேள்வியில் தேவதாருவாலான இரண்டு வேள்வித்தூண்களும் {யூபங்களும்}, சிலேஷ்மாதகத்தாலான {இலுப்பையாலான} ஒன்றும் புரோகிதர்களால் அமைக்கப்பட்டன.(28) மன்னனின் ஆணையின் பேரில், தங்கத்தாலான வேள்வித்தூண்கள் சில அழகின் நிமித்தமாக மட்டுமே பீமனால் அமைக்கப்பட்டன.(29) அந்த அரசமுனியால் கொடுக்கப்பட்ட அழகிய துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த வேள்வித் தூண்கள் ஒவ்வொன்றும், தேவர்களும், தெய்வீக முனிவர்கள் எழுவரும் சூழ்ந்த நிற்க சொர்க்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்திரனைப் போலிருந்தன.(30)

அங்கே சயனத்தைக் கட்டுவதற்காக எண்ணற்ற தங்கக் கற்கள் உண்டாக்கப்பட்டன. அந்தச் சயனமும் உயிரினங்களின் தலைவனான தக்ஷனுக்காக (அவன் தன் பெரு வேள்வியைச் செய்து கொண்டிருந்த போது) அமைக்கப்பட்ட சயனத்திற்கு ஒப்பான அழகுடன் திகழ்ந்தது.(31) பதினெட்டு முழம் அளவு கொண்ட அந்தச் சயனம் நான்கு அறைகள் அல்லது குகைகளைக் கொண்டிருந்தது. அப்போது {அந்த அறைகளில்} முக்கோணங்களில் கருடனின் வடிவிலான தங்கப் பறவை ஒன்று அமைக்கப்பட்டது[7].(32) சாத்திர விதிகளைப் பின்பற்றியவர்களும், பெரும் கல்வியாளர்களுமான புரோகிதர்கள், அந்த {இருபத்தோரு} வேள்வித்தூண்களில் {யூபங்களில்} விலங்குகள் மற்றும் பறவைகளைக் கட்டி அவற்றில் ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட தேவனுக்கென ஒதுக்கினர்[8].(33) வேள்வி நெருப்புத் தொடர்பான சடங்குகள் செய்யப்பட்ட பிறகு, சாத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட காளைகளும், நீர்வாழ் விலங்கினங்களும் அந்த வேள்வித்தூண்களில் {யூபங்களில்} முறையாகக் கட்டப்பட்டன.(34) உயர் ஆன்மக் குந்தியின் மகனுடைய {யுதிஷ்டிரனின்} வேள்வியில், அந்த முதன்மையான குதிரை {வேள்விக் குதிரை} உட்பட முன்னூறு விலங்குகள் அந்த வேள்வித்தூண்களில் கட்டப்பட்டன[9].(35)தெய்வீக முனிவர்களுடனும், பாடிக்கொண்டிருக்கும் கந்தர்வர்கள் மற்றும் இன்பத்தில் ஆடிக் கொண்டிக்கும் அப்ரசரஸ்களின் பல்வேறு இனக்குழுவினருடனும் இருப்பது போல அந்த வேள்வி மிக அழகானதாகத் தெரிந்தது.(36) அங்கே கிம்புருஷர்களும் நிறைந்திருந்தனர், கின்னரர்களாலும் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதை {அந்த வேள்விச் சாலையைச்} சுற்றிலும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிராமணர்களின் வசிப்பிடங்கள் இருந்தன.(37) மறுபிறப்பார்களில் முதன்மையானவர்களும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் தொகுப்பவர்களும், வேள்விச் சடங்குகளை நன்கு அறிந்தவர்களுமான வியாசரின் சீடர்கள் அங்கே தினமும் காணப்பட்டனர்.(38) அங்கே நாரதரும், பெருங்காந்தி கொண்ட தும்புருவும் இருந்தனர். இசையில் திறம்பெற்றவர்களான விஸ்வாவசு, சித்திரசேனன் மற்றும் பிறரும் அங்கே இருந்தனர்.(39) வேள்விச் சடங்குகளின் இடைவேளைகளில், இசையில் திறம் பெற்றவர்களும், நடனத்தை நன்கறிந்தவரகளுமான அந்தக் கந்தர்வர்கள், வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிராமணர்களுக்கு மகிழ்வூட்டினர்” {என்றார் வைசம்பாயனர்}.(40)

செல்வப்பகிர்வு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 89-யாகம் முடிந்த பின் மன்னர்களைக் கௌரவித்து ஊருக்கனுப்பிய யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “முறையான சடங்குகளின் படி பலிகொடுக்கப்பட்ட வேறு சிறந்த விலங்குகளைச் சமைத்தபிறகு {பசனம் [சமையல் வழிபாடு] செய்த பிறகு}, (உலகம் முழுவதும் திரிந்து வந்த) அந்தக் குதிரையைப் புரோகிதர்கள் பலி கொடுத்தனர்.(1) அவர்கள், சாத்திர வழிகாட்டலுக்கு இணக்கமாக அந்தக் குதிரையைத் துண்டுகளாக வெட்டிய பிறகு, பெரும் நுண்ணறிவைக் கொண்டவளும், மந்திரங்கள், பொருட்கள், அர்ப்பணிப்பு என்ற மூன்று கலைகளைக் கொண்டவளுமான திரௌபதியைப் பகுக்கப்பட்ட அந்த விலங்கின் அருகில் அமரச் செய்தனர்,(2) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தண்மனங்களைக் கொண்ட பிராமணர்கள், அந்தக் குதிரையின் மஜ்ஜையை {வபையை} எடுத்து, அதை முறையாகச் சமைத்தனர்.(3) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் இவ்வாறு சமைக்கப்பட்ட மஜ்ஜையிலிருந்து எழுவதும், பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்கவல்லதுமான அந்தப் புகையை முகர்ந்தான்.(4) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் குதிரையின் எஞ்சிய உறுப்புகள், பெரும் ஞானத்தைக் கொண்ட பதினாறு வேள்விப் புரோகிதர்களால் நெருப்பில் ஊற்றப்பட்டன {அவற்றை அவர்கள் அக்னியில் ஹோமம் செய்தார்கள்}[1].(5)சக்ரனின் சக்தியுடன் கூடிய அந்த ஏகாதிபதியின் {யுதிஷ்டிரனின்} வேள்வியை இவ்வாறு நிறைவடையச் செய்தவரும், சிறப்புமிக்கவருமான வியாசர், தமது சீடர்களுடன் சேர்ந்து அந்த மன்னனைப் பெரிதும் புகழ்ந்தார்.(6) அப்போது யுதிஷ்டிரன், பிராமணர்களுக்கு {ஸதஸ்யர்களுக்கு} ஆயிரங்கோடி பொன் நிஷ்கங்களையும், வியாசருக்கு மொத்த பூமியையும் கொடையாக அளித்தான்[2].(7) சத்யவதியின் மகனான வியாசர், பூமியை ஏற்றுக் கொண்ட பிறகு, பாரதக் குலத்தவரில் முதன்மையானவனும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(8) “ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நீ எனக்குக் கொடுத்த பூமியை, நான் உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன். (பூமியால் பயனில்லாதவர்களும்) செல்வத்தை விரும்புபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடுப்பதற்காக, இதை {இந்தப் பூமியை} வாங்குவதற்குரிய விலையை எனக்குக் கொடுப்பாயாக” என்று கேட்டார்.(9)பெரும் நுண்ணறிவைக் கொண்டனும் உயர் ஆன்மாவுமான யுதிஷ்டிரன், வேள்விக்கு அழைக்கப்பட்ட மன்னர்களுக்கு மத்தியில் தன் தம்பிகளுடன் இருந்து கொண்டு, அந்தப் பிராமணர்களிடம்,(10) “பெரும் குதிரை வேள்வியைச் செய்வதற்குச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தக்ஷிணை பூமியே ஆகும். எனவே, இந்த வேள்விப்புரோகிதர்களுக்கு அர்ஜுனனால் வெல்லப்பட்ட பூமியை நான் கொடுத்தேன்.(11) பிராமணர்களில் முதன்மையானவர்களே, நான் காட்டுக்குச் செல்லப் போகிறேன். நீங்கள் இந்தப் பூமியை உங்களுக்குள் பகிர்ந்து கொள்வீர்களாக. உண்மையில், சதுர்ஹோத்ர வேள்வியில் செய்வது போலப் பூமியை உங்களுக்குள் நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொள்வீராக.(12) மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களே, இப்போது பிராமணர்களுக்கு உரியவையாக இருப்பவற்றை நான் அபகரிக்க விரும்பவில்லை.(13) கல்விமான்களான பிராமணர்களே, என்னாலும், என் தம்பிகளாலும் எப்போதும் பேணி வளர்க்கப்படும் கருத்து இதுவேயாகும்” என்றான். மன்னன் இச்சொற்களைச் சொன்னபோது, அவனுடைய தம்பிகளும், திரௌபதியும், “ஆம். இதுவேதான்” என்றனர். இந்த அறிவிப்பால் உண்டான உணர்வுக் கிளர்ச்சி பெரியதாக இருந்தது.(14)

அப்போது, ஓ! பாரதா, ஆகாயத்தில் வடிவமற்ற ஒரு குரல், “நன்று, நன்று” என்று சொல்வது கேட்டது. பேசிக்கொண்டிருந்த பிராமணக் கூட்டத்தில் அவ்வாறே முணுமுணுப்புகளும் எழுந்தன.(15) தீவில் பிறந்தவரான கிருஷ்ணர் {வியாசர்}, அவனை உயர்வாகப் புகழ்ந்து, பிராமணர்களின் முன்னிலையில் யுதிஷ்டிரனிடம் மீண்டும்,(16) “பூமியானவள் உன்னால் என்னிடம் கொடுக்கப்பட்டாள். எனினும், நான் உன்னிடம் அவளைத் திருப்பித் தருகிறேன். நீ இந்தப் பிராமணர்களுக்குப் பொன்னைக் கொடுப்பாயாக. பூமி உனதாகட்டும்” என்றார்.(17)

அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம், “சிறப்புமிக்க வியாசர் சொல்வது போலச் செய்வதே உமக்குத் தகும்” என்றான்.(18)

இவ்வாறு சொல்லப்பட்டவனும், குரு குலத்தில் முதன்மையானவனுமான அவன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகள் அனைவருடனும் சேர்ந்து ஆன்ம மகிழ்ச்சியடைந்து, குதிரை வேள்விக்கென விதிக்கப்பட்ட தக்ஷிணையில் மூன்று மடங்கான கோடிக்கணக்கான பொன் நாணயங்களைக் கொடையளித்தான்.(19) மருத்தனுக்குப் பிறகு அந்த சந்தர்ப்பத்தில் குரு மன்னனால் நிறைவேற்றப்பட்டதை வேறு எந்த மன்னனாலும் நிறைவேற்ற முடியாது.(20) தீவில் பிறந்த தவசியும், பெரும் கல்விமானுமான கிருஷ்ணர் {வியாசர்}, அந்தச் செல்வத்தை ஏற்றுக் கொண்டு, அதை நான்கு பகுதிகளாக்கி, வேள்விப் புரோகிதர்களுக்குக் கொடுத்தார்.(21) பூமிக்கான விலையாக அந்தச் செல்வத்தைக் கொடுத்தவனும், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனும், சொர்க்கத்தை உறுதி செய்து கொண்டவனுமான யுதிஷ்டிரன் தன் தம்பிகளுடன் மகிழ்ந்திருந்தான்.(22) அளவற்ற செல்வத்தை அடைந்த அந்த வேள்விப் புரோகிதர்கள், பெறுபவரின் விருப்பத்திற்கேற்ப அதைப் பிராமணர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியாகப் பகிர்ந்தளித்தனர்.(23) அந்தப் பிராமணர்கள், வேள்விச்சாலைக்குள் இருந்த வெற்றி வளைவுகள், வேள்வித் தண்டுகள், குடுவைகள் மற்றும் பல்வேறு வகைப் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தங்க ஆபரணங்களையும் யுதிஷ்டிரனுக்கு ஏற்புடைய வகையில் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர்.(24)

பிராமணர்கள் தாங்கள் விரும்பிய அளவுக்குச் செல்வத்தை எடுத்துக் கொண்ட பிறகு எஞ்சிய செல்வமானது, க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் மிலேச்சர்களில் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரால் எடுத்துக் கொள்ளப்பட்டது.(25) இவ்வாறு பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் யுதிஷ்டிரனால் கொடுக்கப்பட்ட கொடையால் நிறைவடைந்த பிராமணர்கள், மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாகத் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பி சென்றனர்.(26) புனிதமானவரும், சிறப்புமிக்கவருமான வியாசர், தனக்குரிய பெரிய அளவிலான பங்காக வந்த தங்கத்தைக் குந்தியிடம் மதிப்புடன் கொடுத்தார்.(27) தன் மாமனாரிடம் {வியாசரிடம்} இருந்து அந்தக் கொடையை அன்புடன் பெற்றுக் கொண்ட பிருதை, இதய மகிழ்ச்சி கொண்டவளாகப் பல்வேறு புனிதச் செயல்களைச் செய்வதற்கு அதை அர்ப்பணித்தாள்.(28)

மன்னன் யுதிஷ்டிரன், தன் வேள்வியின் நிறைவில் நீராடிவிட்டு, தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாக, அனைவராலும் மதிக்கப்படுபவனாகச் சொர்க்கவாசிகளுக்கு மத்தியில் உள்ள தேவர்களின் தலைவனைப் போலத் தன் தம்பிகளுக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(29) அங்கே கூடியிருந்த மன்னர்களால் சூழப்பட்ட பாண்டுவின் மகன்கள், ஓ! மன்னா, நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள கோள்களைப் போல அழகாகத் தெரிந்தனர்.(30) அவர்கள் அந்த மன்னர்களுக்குப் பல்வேறு ரத்தினங்கள், தங்கங்கள், யானைகள், குதிரைகள், தங்க ஆபரணங்கள், பெண் பணியாட்கள், துணிகள், பெருமளவிலான தங்கம் ஆகியவற்றைப் பரிசாக அளித்தனர்.(31) உண்மையில், ஓ! மன்னா, அங்கே அழைக்கப்பட்டிருந்த மன்னர்களுக்குச் சொல்ல முடியாத அளவுக்குச் செல்வத்தைப் பகிர்ந்தளித்த பிருதையின் மகன், கருவூலத் தலைவனான வைஸ்ரவணனை {குபேரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(32) அடுத்ததாக வீர மன்னன் பப்ருவாஹனனை அழைத்த யுதிஷ்டிரன், பல்வேறு வகையான அபரிமிதமான செல்வத்தைக் கொடுத்து, அவன் தன் இல்லம் திரும்பிச் செல்வதற்கு அனுமதி அளித்தான்.(33)

அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் தங்கையான துச்சலையை நிறைவடையச் செய்வதற்காக, அவளுடைய பேரனை, அவனுடைய தந்தை வழி நாட்டில் {மன்னனாக} நிறுவினான்.(34) தன் புலன்களில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டவனான குரு மன்னன் யுதிஷ்டிரன், அங்கே கூடியிருந்தவர்களும், முறையாக வகுக்கப்பட்டவர்களும்[3], தன்னால் கௌரவிக்கப்பட்டவர்களுமான மன்னர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினான்.(35) பகைவரைத் தண்டிப்பவனும், சிறப்புமிக்கவனுமான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, உயர் ஆன்ம கோவிந்தனையும் {கிருஷ்ணனையும்}, பெரும் வலிமை கொண்ட பலதேவனையும் {பலராமனையும்}, பிரத்யும்னனை முதல்வனாகக் கொண்ட வேறு விருஷ்ணி வீரர்கள் ஆயிரக்கணக்காணோரையும் முறையாக வழிபட்டான். தன் தம்பிகளிடன் துணையுட்ன கூடிய அவன் அவர்கள் துவாரகை திரும்புவதற்கு விடை கொடுத்தனுப்பினான்.(36,37)அபரிமிதமான உணவு, செல்வம், ரத்தினங்கள், மற்றும் பல்வேறு வகையான {ஸுரை [கள்] மற்றும் [மரத்தில் இருந்து உண்டாகும்] மைரேயம் போன்ற} மது வகைகளின் பெருங்கடல்கள் ஆகியற்றுடன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் அந்த வேள்வி இவ்வாறே கொண்டாடப்பட்டது.(38) நெய்யையே சகதியாகவும், உணவையே மலைகளாகவும் கொண்ட தடாகங்கள் அங்கிருந்தன. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஆறு வகைச் சுவைகளைக் கொண்ட பானங்களெனும் சேறுகளுடைய ஆறுகளும் அங்கிருந்தன.(39) காண்டவராகங்கள் என்றழைக்கப்படும் பாகிலிடப்பட்ட இன்பண்டங்களைச் செய்வதிலும் உண்பதிலும் ஈடுபட்ட மனிதர்கள் முடிவற்றவர்களாகவும், உணவுக்காகக் கொல்லப்பட்ட விலங்குகள் முடிவற்றவையாகவும் இருந்தன[4].(40) மதுவெறி கொண்ட மனிதர்களால் நிறைந்ததும், இன்பத்தில் நிறைந்த இளம்பெண்களுடன் கூடியதுமான அந்தப் பரந்த வெளி இருந்தது. மிருதங்க ஒலிகள் மற்றும் சங்குகளின் முழக்கங்கள் ஆகியவற்றை அந்தப் பரந்த சாலை எதிரொலித்துக் கொண்டிருந்தது. இவை யாவற்றுடன் அந்த வேள்வி மிக மகிழ்ச்சிகரமானதாக இருந்தது.(41)‘இனிய பொருட்கள் கொடுக்கப்படட்டும்”, ’இனிய உணவு உண்ணப்படட்டும்’ என்ற ஒலிகளே அந்த வேள்வியில் பகலும், இரவும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தன. மகிழ்ச்சி நிறைந்தவர்களும், மன நிறைவு கொண்டவர்களுமான மனிதர்கள் நிறைந்த ஒரு பெரும் விழாவாக அது தெரிந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அந்த வேள்வியைக் குறித்து இந்த நாள் வரை {பாண்டவர்களுக்குப் பின் மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு வந்த ஜனமேஜயனின் காலம் வரை} பேசிக் கொண்டிருக்கின்றனர்.(42) செல்வத்தையும், ஆசைக்குரிய பல்வேறு பொருட்களையும், ரத்தினங்களையும், பல்வேறு வகைப் பானங்களையும் தாரைகளாகப் பொழிந்த பிறகு, பாரதக் குலத்தில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாக, தன் நோக்கம் நிறைவேறியவனாகத் தன் தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(43)

பொன்மயமான கீரி! – அஸ்வமேதபர்வம் பகுதி – 90-உடலின் ஒரு பக்கத்தை பொன் நிறமாகக் கொண்ட ஒரு கீரி வந்தது; வேள்வியை அவமதித்து உஞ்சவ்ருத்தி பிராமணர் ஒருவர் தர்மதேவதைக்கு ஒரு படி மாவைக் கொடுத்த மகிமையைச் சொல்லி மறைந்த கீரி …

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}“என் பாட்டன்களின் வேள்வியில் நடந்த அற்புத நிகழ்ச்சி எதனையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னர்களின் தலைவா, ஓ! பலமிக்க ஏகாதிபதி, அந்தப் பெரும் குதிரை வேள்வியின் {அஸ்வமேத யாகத்தின்} நிறைவில் நேர்ந்த அற்புதமிக்க நிகழ்வொன்றைக் கேட்பாயாக.(2) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பிராமணர்களில் முதன்மையானோரும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும், ஏழைகள், குருடர்கள், ஆதரவற்றோர் அனைவரும் நிறைவடைந்த பின்னர்,(3) அபரிமிதமாகக் கொடுக்கப்பட்ட கொடைகளைக் குறித்து அனைத்துப் பக்கங்களிலும் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது, உண்மையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் தலையில் மலர்மாரி பொழிந்து கொண்டிருந்தபோது,(4) ஓ! பாவமற்றவனே, உடலின் ஒரு பக்கம் தங்கமாக மாறியிருந்த நீலக்கண் கீரியொன்று அங்கே வந்து, இடியைப் போன்ற ஆழமான உரத்த குரலில் பேசியது.(5)

மீண்டும் மீண்டும் இத்தகைய ஆழ்ந்த ஒலிகளால் விலங்குகள் மற்றும் பறவைகளை அச்சுறுத்தியதும், பொந்துக்குள் வசிப்பதும், செருக்குடன் கூடியதும், பேருடல் படைத்ததுமான அது {கீரி}, மனிதக் குரலில்,(6) “மன்னர்களே, இந்தப் பெரும் வேள்வியானது, குருக்ஷேத்திரத்தைச் சேர்ந்தவரும், உஞ்ச நோன்பை நோற்றுக் கொண்டிருந்தவரும், தாராளமானவருமான பிராமணர் கொடையாக அளித்த ஒரு பிரஸ்த {ஒரு படி} வாற்கோதுமை {யவம்} மாவுக்கு ஈடாகாது” என்றது.(7)

ஓ! மன்னா, அந்தக் கீரியின் சொற்களைக் கேட்ட முதன்மையான பிராமணர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(8) அந்தக் கீரியை அணுகி, அதனிடம் அவர்கள், “நல்லோரும் பக்திமான்களும் நிரம்பிய இந்த வேள்விச் சாலைக்கு நீ எங்கிருந்து வந்தாய்?(9) உன் வலிமையின் அளவென்ன? உன் கல்வி என்ன? உன் புகலிடமெது? எங்கள் வேள்வியை இவ்வாறு நிந்திக்கும் உன்னை நாங்கள் எவ்வாறு அறிந்து கொள்வது?(10) சாத்திரங்களின் எந்தப் பகுதியையும் அலட்சியம் செய்யாமல், சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையிலும், அறிவுக்கு ஏற்புடைய வகையிலும் பல்வேறு வேள்விச் சடங்குகளின் துணையுடன் செய்யப்பட வேண்டிய அனைத்தும் இங்கே செய்யப்பட்டன.(11) சாத்திரங்கள் சுட்டிக்காட்டும் வழியில் வழிபடத்தகுந்தவர்கள் இங்கே முறையாக வழிபடப்பட்டனர். உரிய மந்திரங்களின் துணையுடன் புனித நெருப்புக்குள் ஆகுதிகள் ஊற்றப்பட்டன. எது கொடுக்கப்பட வேண்டுமோ அதுவும் செருக்கில்லாமல் கொடுக்கப்பட்டது.(12) மறுபிறப்பாள வகையினர் பல்வேறு வகைக் கொடைகளின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். க்ஷத்திரியர்கள் நியாயமான முறைகளில் செய்யப்பட்ட போர்களின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். பாட்டன்கள், சிராத்தங்களின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர்.(13)

வைசியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். முதன்மையான பெண்டிர் பலர், அவர்களது ஆசைகளை நிறைவேற்றியதன் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். சூத்திரர்கள், அன்பான பேச்சுகளின் மூலமும், பிறர் இங்கே திரட்டப்பட்ட அபரிமிதமான செல்வத்தில் எஞ்சியவற்றின் மூலமும் நிறைவடையச் செய்யப்பட்டனர்[1].(14) உற்றார் உறவினர், எங்கள் மன்னன் வெளிப்படுத்திய தூய நடத்தையின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். தேவர்கள், தெளிந்த நெய்யாலான ஆகுதிகளின் மூலமும், புண்ணியச் செயல்களின் மூலமும், சார்ந்திருப்பவர்கள் மூலமும், பாதுகாப்பைப் பின்தொடர்பவர்கள் மூலமும் நிறைவடையச் செய்யப்பட்டனர்.(15) எனவே, எது உண்மையோ அதை இந்தப் பிராமணர்களுக்கு உண்மையாக அறிவிப்பாயாக. உண்மையில், அறிந்து கொள்வதில் ஆவலாக இருக்கும் இந்தப் பிராமணர்களால் கேட்கப்பட்டு, சாத்திரங்களுக்கும், உண்மை அனுபவத்திற்கும் ஏற்புடைய வகையில் நீ அறிவிப்பாயாக.(16) உன் சொற்கள் நம்பத்தகுந்தவையாகத் தெரிகின்றன. நீ ஞானியாக இருக்கிறாய். நீ தெய்வீக வடிவத்தைக் கொண்டிருக்கிறாய். நீ கல்விமான்களான பிராமணர்களுக்கு மத்தியில் வந்திருக்கிறாய். நீ சொல்வதை விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்” என்றனர் {பிராமணர்கள்}.(17)அந்த மறுபிறப்பாள மனிதர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட கீரியானது, சிரித்தபடியே பின்வருமாறு பதிலளித்தது. அது {கீரி}, “மறுபிறப்பாளர்களே, நான் சொன்ன வார்த்தைகள் பொய்யல்ல. மேலும் நான் செருக்கிலும் பேசவில்லை.(18) நான் சொன்னதை நீங்கள் அனைவரும் கேட்டிருக்கக்கூடும். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, ஒரு பிரஸ்த {ஒரு படி} வாற்கோதுமை மாவைக் கொடையளித்த புண்ணியத்திற்கு இந்த வேள்வி ஈடாகாது.(19) பிராமணர்களில் முதன்மையானவர்களே, இதை நான் ஐயமறச் சொல்ல வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதை நான் சொல்கிறேன், சிதறாத கவனத்துடன் கேட்பீராக.(20) அற்புதம் நிறைந்த சிறந்த நிகழ்வாக அது நேர்ந்தது. அந்த நிகழ்வு, குருக்ஷேத்திரத்தில் வசிப்பவரும், உஞ்ச நோன்பு நோற்பவரும், தாராளமானவருமான ஒரு பிராமணரின் தொடர்புடையதாகும்.(21) மறுபிறப்பாளர்களே, அந்நிகழ்வின் விளைவால் அவர், தமது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் சொர்க்கத்தை அடைந்தார். அப்போது நடந்த நிகழ்வின் விளைவாக என் உடலின் பாதி அளவு பகுதி பொன்னாக மாறியது”.(22)

கீரி தொடர்ந்தது, “மறுபிறப்பாளர்களே, நான் இப்போது நியாயமான முறையில் அடையப்பட்டதும், மிகக் குறைந்த அளவைக் கொண்டதும், அந்தப் பிராமணரால் வழங்கப்பட்டதுமான அந்தக் கொடையின் {கொடையாக வழங்கப்பட்ட மாவின்} சிறந்த கனியை {பலன் என்ன என்பதை} உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(23) அறம் சார்ந்தோர் பலர் வசிப்பதும், குருக்ஷேத்திரம் என்ற பெயரில் அறியப்படுவதுமான அறம்சார்ந்த இடத்தில், உஞ்சம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்கும் பிராமணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த வாழ்வுமுறையானது ஒரு புறாவைப் போன்றதாகும்[2].(24) அவர் அங்கே தன் மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் வாழ்ந்து தவம் செய்து வந்தார். அற ஆன்மாவும், முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் கூடியவருமான அவர் ஒரு கிளியால் பின்பற்றப்படும் வாழ்வுமுறையைப் பின்பற்றினார்.(25) அற்புத நோன்புகளைக் கொண்ட அவர், ஒவ்வொரு நாளும் ஆறாம் காலத்தில் உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்[3]. நாளின் ஆறாம் காலத்தில் உண்பதற்கு ஏதும் கிடைக்கவில்லையெனில் அந்தச் சிறந்த பிராமணர், அந்த நாளில் உண்ணா நோன்பிருந்து அடுத்த நாளின் ஆறாம் காலத்தில் உண்பார். பிராமணர்களே ஒரு சந்தர்ப்பத்தில், அந்த நிலத்தில் பயங்கரமான பஞ்சம் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் அறம்சார்ந்த அந்தப் பிராமணரின் வசிப்பிடத்தில் எதுவும் சேமித்து வைக்கப்படவில்லை. செடிகொடிகள் அனைத்தும் காய்ந்து மொத்த நாடும் உணவுப் பொருட்கள் ஏதுமற்றதாக இருந்தது.(26-28)உண்பதற்கான வழக்கமான காலம் வந்தபோது, அந்தப் பிராமணர் உண்பதற்கு ஏதுமில்லை. நாளுக்கு நாள் இதுவே நேர்ந்தது. அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பசியால் பீடிக்கப்பட்டனர், ஆனால் தங்களால் முடிந்தவரை நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர்.(29) ஜெய்ஷ்ட மாதத்தில் {ஆனி மாதத்தில்} ஒரு நாள், சூரியன் உச்சிப் பொழுதை அடைந்திருந்தபோது, அந்தப் பிராமணர் தானியங்களைப் பொறுக்கச் சென்றார். சூட்டாலும், பசியாலும் பீடிக்கப்பட்ட அவர் இந்தத் தவத்தையே செய்து கொண்டிருந்தார்.(30) தானியங்களை அடைய முடியாத அவர், பசியாலும், உழைப்பாலும் களைத்தார். உண்மையில், அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் உண்ண உணவேதும் கிட்டவில்லை.(31) அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், தன் நாட்களைப் பெரும் துன்பத்தில் கழித்தார். ஒருநாள், ஆறாம் காலம் வந்த பிறகு, அவர் ஒரு பிரஸ்தம் வாற்கோதுமையை {ஒரு படி யவதான்யத்தை} அடைவதில் வென்றார்.(32) ஸக்து என்றழைக்கப்படும் ஒன்றைச் செய்வதற்காக அந்த வாற்கோதுமையானது {யவதானியமானது} அந்தத் தவசிகளால் {பிராமணர் மற்றும் அவரது குடும்பத்தாரால்} மாவாகப் பொடி செய்யப்பட்டிருந்தது. அந்தத் தவசிகள், அமைதியான ஜபங்களையும், நாள்தோறும் செய்யும் பிற சடங்குகளையும் செய்த பிறகு, புனித நெருப்புக்கு முறையாக ஆகுதிகளை ஊற்றிய பிறகு,(33) சிறிதளவே இருந்த அந்த வாற்கோதுமை மாவை ஒரு குடவம் அளவுக்குத் தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பிரித்துக் கொண்டனர்[4]. அவர்கள் உண்பதற்காக அமரப் போகும்போது, அங்கே அவர்களது வசிப்பிடத்திற்கு ஒரு விருந்தினர் வந்தார்.(34)விருந்தினராக வந்த மனிதரைக் கண்ட அவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையில், அவரை வணங்கிய அவர்கள், அவரது உடல்நலம் குறித்த வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர்.(35) அவர்கள் தூய மனங்களையும், தற்கட்டுப்பாட்டையும், நம்பிக்கையையும் கொண்டவர்களாகவும், ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களாகவும் இருந்தனர். வன்மத்தில் இருந்து விடுபட்டவர்களான அவர்கள், கோபத்தை வென்றவர்களாக இருந்தனர். பக்தி நிறைந்த அவர்கள், அடுத்தவரின் மகிழ்ச்சியைக் கண்டு ஒருபோதும் துன்புறாதவர்களாக இருந்தனர்.(36) அவர்கள் செருக்கையும், அகந்தையையும், கோபத்தையும் கைவிட்டவர்களாக இருந்தனர். மறுபிறப்பாளர்களே, உண்மையில் அவர்கள், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் விருந்தினரிடம் தங்கள் தவங்கள், தாங்கள் சேர்ந்த குலம் மற்றும் குடும்பத்தைச் சொல்லி, பதிலுக்கு அவரிடம் இருந்தும் குறிப்புகளைப் பெற்று, பசித்து வந்த தங்கள் விருந்தினரைத் தங்கள் குடிலுக்குள் அழைத்துச் சென்றனர்.அவர்கள் அவரிடம், “இதுவே உமக்கான அர்க்கியம். இந்த நீர் உமது கால்களைக் கழுவிக் கொள்வதற்கானது. ஓ! பாவமற்றவரே, நீர் அமர்வதற்கான இருக்கையாகக் குச {தர்ப்பைப்} புற்கள் இருக்கின்றன.(37,38) ஓ! பலமிக்கவரே, நியாயமான முறையில் அடையப்பட்டதும், தூய்மையானதுமான ஸக்து {வாற்கோதுமை மாவு} இங்கே சிறிதளவு இருக்கிறது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, எங்களால் கொடுக்கப்படும் இஃதை ஏற்றுக் கொள்வீராக” என்றனர்.(39)

அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணர், தனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு குடவம் வாற்கோதுமை மாவை முழுமையாக உண்டார். ஆனால், ஓ! மன்னா, அவர் உண்டதைக் கொண்டு அவரால் தன் பசியைத் தணித்துக் கொள்ள முடியவில்லை.(40) தன் விருந்தினரின் பசி தணியாததைக் கண்டவரும், உஞ்ச நோன்பை நோற்பவருமான அந்தப் பிராமணர், அவரை நிறைவடையச் செய்வதற்கு வேறு எந்த உணவைக் கொடுக்கலாம் என நினைக்கத் தொடங்கினார்.(41)

அப்போது அவரது மனைவி, “என் பங்கு அவருக்குக் கொடுக்கப்படட்டும். மறுபிறப்பாளர்களில் முதன்மையான இவர் நிறைவடைந்து, தான் விரும்பிய இடத்திற்குச் செல்லட்டும்” என்றாள்.(42)

கற்புடையவளான தன் மனைவியும் பசியால் பீடிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்த அந்தப் பிராமணர்களில் சிறந்தவரால், அவளுடைய பங்கான வாற்கோதுமை மாவை விருந்தினருக்குக் கொடுப்பதை ஏற்க முடியவில்லை.(43) உண்மையில், கல்விமானான அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், வயது முதிர்ந்த, உழைப்பால் களைத்த, உற்சாகமற்ற தன் நிலையில் இருந்து(44) ஆதரவற்ற தன் மனைவியின் பசிப்பிணியை அறிந்து கொண்டு, எலும்பும் தோலுமாக மெலிந்து நடுங்கிக் கொண்டிருந்த அவளிடம், “ஓ! அழகியவளே, விலங்குகள், புழுக்கள் மற்றும் பூச்சிகளில் கூட,(45) மனைவிகள் உணவூட்டப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றனர். எனவே, நீ இவ்வாறு சொல்வது உனக்குத் தகாது. ஒரு மனைவி தன் கணவனை அன்புடன் நடத்தி, அவனுக்கு உணவூட்டி, அவனைப் பாதுகாக்கிறாள்.(46) அறம், இன்பம் மற்றும் பொருள் தொடர்புடைய அனைத்தும், குலத்தைத் தழைக்கச் செய்யச் சந்ததியை உண்டாக்கிக் கவனமாக வளர்ப்பதும் என அனைத்தும் மனைவியைச் சார்ந்ததே. உண்மையில், ஒரு மனிதனின் புண்ணியங்களும், இறந்து போன அவனுடைய மூதாதையர்களும் அவளையே சார்ந்திருக்கின்றனர்.(47) ஒரு மனைவி தன் தலைவனை, அவனது செயல்களால் அறிந்து கொள்ள வேண்டும். உண்மையில், தன் மனைவியைப் பாதுகாக்கத் தவறும் மனிதன், இம்மையில் பெரும் புகழ்க்கேட்டை ஈட்டி, மறுமையில் நரகிற்குச் செல்கிறான். அத்தகைய மனிதன் பெரும் புகழ்பெற்ற நிலையில் இருந்தாலும், மறுமையில் இன்பலோகங்களை அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்” என்றார்.(48)

இவ்வாறு சொல்லப்பட்ட அவள், அவருக்குப் பதிலளிக்கும் வகையில், “ஓ! மறுபிறப்பாளரே, நமது {நம்மிருவரின்} அறச்செயல்களும், செல்வமும் ஒன்றே. இந்த வாற்கோதுமையில் நான்கில் ஒரு பங்கை நீர் எடுத்துக் கொள்வீராக. உண்மையில், என்னிடம் நிறைவடைவீராக.(49) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நற்குணங்களின் மூலம் பெண்களால் அடையத்தக்க வாய்மை, இன்பம், அறச் செயல், சொர்க்கம் முதலியவையும், அவர்களுடைய ஆசைக்குரிய பொருட்கள் அனைத்தும் கணவரையே சார்ந்திருக்கின்றன.(50) சந்ததியை உண்டாக்குவதில் தாயானவள் தன் குருதியைக் காணிக்கையாக்குகிறாள். தந்தையானவர் தன் வித்தைக் காணிக்கையாக்குகிறார். கணவரே மனைவியின் உயர்ந்த தேவனாவார் {கணவனே கண்கண்ட தெய்வம்}[5]. கணவரின் அருளின் மூலம் பெண்கள் இன்பம் மற்றும் சந்ததி ஆகிய இரண்டையும் வெகுமதிகளாக அடைகின்றனர்.(51) நீர் எனக்கு அளிக்கும் பாதுகாப்பால், எனது பதி {தலைவர்} ஆகிறீர். நீர் எனக்கு அளிக்கும் வாழ்வாதாரத்தால் எனது பர்த்ரி {பர்த்தாவாக} ஆகிறீர். மேலும் எனக்கு மகனை அளிப்பதன் விளைவால் வரமளிப்பவரும் ஆகிறீர். எனவே, (இவ்வளவு உதவிகளுக்குச் செய்யும் பதில் உதவியாக} இந்த வாற்கோதுமையில் என் பங்கை எடுத்து இந்த விருந்தினருக்குக் கொடுப்பீராக.(52) முதுமையில் மூழ்கியிருக்கும் நீர் வயதில் முதிர்ந்தவராக இருக்கிறீர். பசியால் பீடிக்கப்பட்டு மிகப் பலவீனமாகவும் இருக்கிறீர். உண்ணாநோன்புகளால் அயர்ந்து மிக மெலிந்திருக்கிறீர். (நீரே உமது பங்கைக் கொடுக்கும்போது, நான் ஏன் என் பங்கைக் கொடுக்கக்கூடாது?)” என்று கேட்டாள்.(53)இவ்வாறு சொல்லப்பட்ட அவர், அவளுடைய பங்கான வாற்கோதுமை மாவை எடுத்து, தன் விருந்தினரிடம், “ஓ! மறுபிறப்பாளரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, இந்த வாற்கோதுமை மாவையும் ஏற்பீராக” என்றார்.(54)

அந்த அளவு மாவை ஏற்றுக் கொண்டு உடனே அதை உண்டாலும், அவரது பசி தணியவில்லை. உஞ்ச நோன்பு நோற்று வந்த அந்தப் பிராமணர் அவர் நிறைவடையாததைக் கண்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.(55)

அப்போது அவருடைய மகன், “ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் பங்கான வாற்கோதுமை மாவை விருந்தினருக்குக் கொடுப்பீராக. என்னுடைய இந்தச் செயல் பெரும் புண்ணியம் கொண்டது என்று கருதுகிறேன். எனவே, இதை நான் செய்கிறேன்.(56) உம்மை நான் பெருங்கவனத்துடன் பராமரித்துக் கொள்ள வேண்டும். தந்தையைப் பராமரிப்பதே நல்லோரால் விரும்பப்படும் கடமையாகும்.(57) தந்தையை அவரது முதுமையில் பராமரிப்பது மகனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமையாகும். ஓ! கல்விமானான முனிவரே, மூவுலகிலும் நடைமுறையில் உள்ள நித்திய ஸ்ருதி (திறன்காணல்) இதுவே ஆகும்.(58) வெறுமனே உயிர்வாழ்வதன் மூலமே நீர் தவம் செய்ய வல்லவராவீர். உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தின் உடல்களிலும் வசிக்கும் பெருந்தேவன் உயிர் மூச்சே ஆகும்[6]” என்றான்.(59)அதற்கு அந்தத் தந்தை, “நீ ஆயிரம் வருட வயதை எட்டினாலும், எனக்குச் சிறு பிள்ளையாக மட்டுமே தெரிவாய். ஒரு மகனைப் பெற்றதன் மூலம் அந்தத் தந்தை அவன் மூலம் வெற்றியை அடைகிறான் {கிருதகிருத்யனாகிறான்}.(60) ஓ! பலமிக்கவனே, குழந்தைகளுக்குப் பசி மிக அதிகம் என்பது எனக்குத் தெரியும். நான் வயது முதிர்ந்தவன். நான் எவ்வாறேனும் என் உயிர் மூச்சைப் பிடித்துக் கொள்வேன். ஓ! மகனே, (உன் பங்கான உணவை உண்டு) பலமடைவாயாக.(61) ஓ! மகனே, வயதும், முதுமையும் அடைந்த என்னைப் பசி அரிதாகவே பீடிக்கும். மேலும் நான் பல வருடங்களாகத் தவம் பயில்கிறேன். எனக்கு மரணத்தில் அச்சமில்லை” என்றார்.(62)

மகன், “நான் உமது குழந்தையாவேன். ஒருவனுடைய குழந்தை, அவனைக் காப்பதனால் புத்ரன் என்று அழைக்கப்படுகிறான் என ஸ்ருதி அறிவிக்கிறது. மேலும், ஒருவனுடைய சுயமே, அவனுடைய மகனாகப் பிறப்பெடுக்கிறது {ஒருவன் தானே மகனாகப் பிறப்பதாகக் கருதப்படுகிறான்}. எனவே, (உமது மகனின் வடிவில் இருக்கும்) உம்மைக் கொண்டு உம்மைப் பாதுகாத்துக் கொள்வீராக” என்றான்.(63)

தந்தையானவர், “வடிவத்தில் நீ என்னைப் போன்றவனே. ஒழுக்கத்திலும், தற்கட்டுப்பாட்டிலும் நீ என்னைப் போன்றவனே. பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் உன்னைச் சோதித்திருக்கிறேன். எனவே, ஓ! மகனே, நான் உன் பங்கான இந்த வாற்கோதுமையை ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.(64)

மறுபிறப்பாளர்களில் முதன்மையான அவர் இதைச் சொல்லிவிட்டு, மிக உற்சாகமாகத் தன் மகனின் பங்கான வாற்கோதுமையை எடுத்துக் கொண்டு, புன்னகையுடன் அதைத் தன் மறுபிறப்பாள விருந்தினருக்கு அளித்தார்.(65) அந்த வாற்கோதுமையை உண்டும், அந்த விருந்தினரின் பசி அடங்கவில்லை. உஞ்ச நோன்பை நோற்பவரும், அற ஆன்மா கொண்டவரும், விருந்தோம்பல் செய்பவருமான அவர் (மேலும் கொடுக்கத் தன்னிடம் ஒன்றுமில்லை என்ற எண்ணத்தால்) வெட்கமடைந்தார்.(66)

அவருக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பிய அவருடைய மருமகள், அப்போது தன் பங்கான வாற்கோதுமையைக் கொண்டு வந்து அவரை அணுகி,(67) “ஓ! கல்விமானான பிராமணரே, உமது மகனின் மூலம் நான் ஒரு மகனைப் பெறுவேன். எனவே, என் பங்கான இந்த வாற்கோதுமையை எடுத்து இந்த விருந்தினருக்குக் கொடுப்பீராக.(68) உமது அருளால், எண்ணற்ற இன்பலோகங்கள் நித்தியமாக எனதாகும். ஒரு பேரனின் மூலம் ஒருவன் எவ்வகைத் துன்பமும் இல்லாத உலகங்களை அடைகிறான்.(69) அறம் முதலிய முத்தொகை, அல்லது புனித நெருப்பின் முத்தொகையைப் போல எப்போதுமிருக்கும் சொர்க்கங்களின் முத்தொகையானது, மகன், பேரன் மற்றும் கொள்ளுப்பேரன் ஆகியோரைச் சார்ந்திருக்கிறது.(70) மகன், தன் தந்தையைக் கடனிலிருந்து விடுவிப்பதால் புத்ரன் என்றழைக்கப்படுகிறான். ஒருவன், தன் மகன்கள் மற்றும் பேரன்களின் மூலம், பக்திமான்கள் மற்றும் நல்லோருக்கு ஒதுக்கப்படும் உலகங்களின் இன்பத்தை எப்போதும் அனுபவிக்கிறான்” என்றாள்.(71)

{அதற்கு அவளது} மாமனார், “ஓ! சிறந்த நோன்புகளையும், ஒழுக்கத்தையும் கொண்டவளே, காற்றாலும், சூரியனாலும் சிதைக்கப்பட்டு, நிறத்தை இழந்தவளாக, மெலிந்தவளாக, பசியின் மூலம் கிட்டத்தட்ட நினைவிழந்தவளாகக் காணப்படும் உன்னைக் கண்டும், உன் பங்கான வாற்கோதுமையை எடுத்துக் கொண்டு, அற விதிகளை மீறுபவனாக நான் எவ்வாறு நடந்து கொள்வேன்? ஓ! மங்கலக் காரிகையே {கல்யாணி}, ஒவ்வொரு குடும்பமும் எட்ட வேண்டிய மங்கல விளைவுகளுக்காக இவ்வாறு நீ சொல்வது தகாது[7].(72,73) ஓ! மங்கலக் காரிகையே {கல்யாணி}, நாளின் இந்த ஆறாம் காலத்திலும் உணவைத் தவிர்த்து நோன்பு நோற்கும் உன்னை நான் எவ்வாறு காண்பேன்? தூய்மையும், நல்லொழுக்கமும், தவங்களும் கொண்டவள் நீ. ஐயோ, நீயும் இவ்வளவு துன்பங்களுடன் உன் நாட்களைக் கடத்த வேண்டி வந்ததே. பசியால் பீடிக்கப்பட்டவளும், மென்மையான பாலினத்தைச் சேர்ந்தவளுமான நீ ஒரு சிறுமி ஆவாய். நீ எப்போதும் என்னால் பாதுகாக்கப்பட வேண்டும். ஐயோ, ஓ! உன் உற்றாரைத் திளைக்கச் செய்பவளே, உண்ணாமல் களைத்துப் போனவளாக நான் உன்னைக் காண வேண்டியுள்ளதே” என்றார்.(75)மருமகள், “நீர் என் தெய்வத்துக்கு தெய்வமாகவும், மூத்தவர்களுக்கும் மூத்தவராகவுமிருக்கிறீர். நீர் நிச்சயம் என் தேவருக்கும் தேவராவீர். எனவே, ஓ! பலமிக்கவரே, என் பங்கான இந்த வாற்கோதுமையை எடுத்துக் கொள்வீராக.(76) என் உடல், உயிர்மூச்சுகள், அறச் சடங்குகள் ஆகிய அனைத்தும் எனக்கு மூத்தோருக்குத் தொண்டாற்றும் ஒரு காரியத்திலேயே அடங்கியிருக்கிறது. ஓ! கல்விமானான பிராமணரே, உமது அருளால் நான் மறுமையில் இன்பலோகங்கள் பலவற்றை அடைவேன்.(77) நான் உம்மால் பார்த்துக் கொள்ளப்படத் தகுந்தவள். ஓ! மறுபிறப்பாளரே, நான் உம்மிடம் முழுமையான அர்ப்பணிப்பு கொண்டவள் என்பதை அறிவீராக. என் மகிழ்ச்சியே உமது கவலை என்ற இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, என் பங்கான இந்த வாற்கோதுமையை எடுத்துக் கொள்வதே உமக்குத் தகும்” என்றாள்.(78)

மாமனார், “ஓ! கற்புடைய பெண்ணே, நோன்புகள் நோற்பவளாகவும், அறச் சடங்குகளில் உறுதியுள்ளவளாகவும், பெரியோரிடம் நோற்கப்பட வேண்டிய ஒழுக்கத்திலேயே எப்போதும் கண்கள் கொண்டவளாகவும் இருக்கும் உன்னுடைய இத்தகைய ஒழுக்கத்தின் விளைவால் நீ எப்போதும் மகிமையில் ஒளிர்ந்து கொண்டிருப்பாய்.(79) எனவே, ஓ! மருமகளே, நான் உன் பங்கான வாற்கோதுமையை எடுத்துக் கொள்கிறேன். உன்னுடைய நற்குணங்கள் அனைத்தையும் சொல்லி என்னால் வஞ்சிக்கத்தகாதவள் நீ. ஓ! அருளப்பட்ட காரிகையே, உண்மையில், அறக்கடமைகளை நோற்கும் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவள் நீயே” என்றார்.(80)

அவளிடம் இவ்வாறு சொன்ன அந்தப் பிராமணர் அவளுடைய பங்கான வாற்கோதுமையை எடுத்து தன் விருந்தினருக்குக் கொடுத்தார். இப்போது அந்த விருந்தினர், பெரும் பக்தி கொண்ட அந்த உயர் ஆன்ம பிராமணரிடம் நிறைவடைந்தார்.(81) பெரும் நாநயம் மிக்கவரும், மனித வடிவில் வந்த அறத்தெய்வமுமான {தர்மதேவனுமான} அந்த முதன்மையான மறுபிறப்பாளர், நிறைவடைந்த ஆன்மாவுடன், அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரிடம்,(82) “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நியாயமான வழிமுறைகளின் மூலம் அடையப்பட்டதும், அறவிதிகளுக்கு ஏற்புடைய வகையில் கொடுக்கப்பட்டதும், தூய்மையானதுமான உம்முடைய இந்தக் கொடையால் நான் பெரிதும் நிறைவடைந்திருக்கிறேன்.(83) உண்மையில், உம்முடைய இந்தக் கொடை சொர்க்கத்தின் இன்பலோகவாசிகளால் உரக்கப் புகழப்படுகிறது. ஆகாயத்தில் இருந்து பூமியில் பொழியப்படும் மலர்களைக் காண்பீராக.(84) தெய்வீக முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், தேவர்களுக்கு முன் நடப்பவர்கள், தேவதூதர்கள் ஆகியோர் அனைவரும் உமது கொடையால் ஆச்சரியமடைந்து உம்மைப் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.(85)

பிரம்மலோகத்தில் வசிக்கும் மறுபிறப்பாள முனிவர்கள், தங்கள் தேர்களில் அமர்ந்தவாறு உமது காட்சி கிட்டுவதற்காக வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, சொர்க்கத்திற்குச் செல்வீராக.(86) பித்ரு லோகத்தில் வசிக்கும் உமது பித்ருக்கள் அனைவரும் அவர்களால் காக்கப்பட்டனர். பித்ருக்கள் என்ற நிலையை அடையாத பிறரும் எண்ணற்ற யுகங்களுக்கு உம்மால் காக்கப்பட்டிருக்கின்றனர்.(87) உமது பிரம்மச்சரியம், உமது கொடைகள், உமது வேள்விகள், உமது தவங்கள், தூய இதயத்துடன் உம்மால் செய்யப்பட்ட நற்செயல்கள் ஆகியவற்றின் மூலம் நீர் சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறீர்.(88) ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, நீர் பேரர்ப்பணிப்புடன் தவங்களைப் பயின்றீர். எனவே, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, உமது கொடைகளால் தேவர்கள் பெரிதும் நிறைவடைந்திருக்கின்றனர்.(89) பெருங்கடின காலத்தில், தூய இதயத்துடன் இந்தக் கொடையை அளித்திருக்கும் உம்முடைய இந்தச் செயலின் மூலம் நீர் சொர்க்கத்தை வென்றுவிட்டீர்.(90)

பசியானது, ஒருவனுடைய ஞானத்தை அழித்து, அவனது அறம்சார்ந்த புத்தியைப் பிறழச் செய்யும். பசியால் வெல்லப்பட்ட புத்தியைக் கொண்டவன் தன் மனவுரம் அனைத்தையும் கைவிடுகிறான்.(91) எனவே, எவன் பசியை வெல்வானோ அவன் நிச்சயம் சொர்க்கத்தை வெல்வான். ஒருவன் கொடைகளை அளிக்கும் விருப்பத்தை வளர்க்கும் வரை, அவனது அறம் ஒருபோதும் அழிவடையாது.(92) மகனிடம் கொண்ட அன்பை அலட்சியம் செய்து, தன் மனைவியிடம் கொண்ட அன்பை அலட்சியம் செய்து, அறத்தையே முதன்மையானதாக அறிந்த நீர் இயற்கையான ஏக்கங்களில் {ஆசைகளில்} ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை.(93) செல்வத்தை அடைவது அற்ப தகுதியை {புண்ணியத்தைக்} கொண்ட ஒரு செயலாகும். தகுந்த மனிதனுக்கு அளிக்கும் கொடையே பெருந்தகுதியை {பெரும் புண்ணியத்தைக்} கொண்டதாகும். (உரிய சரியான) காலத்தில் கொடையளிப்பது இன்னும் பெரிய தகுதியைக் கொண்டதாகும். இறுதியாக (கொடையளிப்பதில்) அர்ப்பணிப்புக் கொள்வது மிக உயர்ந்த தகுதியாகும்.(94) சொர்க்கத்தின் வாயிலைக் காண்பது மிக அரிது. அக்கறையின்மையால் மனிதர்கள் அதைக் காணத் தவறுகின்றனர். சொர்க்கத்தின் வாயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தடையானது, பேராசையைத் தன் வித்தாகக் கொண்டதாகும். அந்தத் தடையானது, ஆசை மற்றும் பற்றால் கட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் சொர்க்கத்தின் வாயில் அணுகப்பட முடியாததாகும்.(95)

கோபத்தை அடக்கி, தங்கள் ஆசையை வென்ற மனிதர்களும், தவங்களுடன் கூடிய பிராமணர்களும், தங்களால் இயன்ற அளவு கொடை அளிப்பவர்களும் அதைக் காண்பதில் வெல்கிறார்கள்.(96) ஆயிரம் இருந்து நூறு கொடுப்பவனும், நூறு இருந்து பத்து கொடுப்பவனும், செல்வம் ஏதும் இல்லாதிருந்தும் கைநிறைய நீரைக் கொடுப்பவனும் என இவர்கள் அனைவரும் நிகரான தகுதியை ஈட்டுகின்றனர்.(97) மன்னன் ரந்திதேவன், தன் செல்வம் அனைத்தையும் இழந்திருந்தபோதும், தூய இதயத்துடன் சிறிதளவு நீரைக் கொடையளித்தான். ஓ! கல்விமானான பிராமணரே, இந்தக் கொடையின் மூலம் அவன் சொர்க்கத்திற்குச் சென்றான்.(98) அறத்தேவன், மதிப்பற்றதும், நியாயமான முறையில் அடையப்பட்டதும், அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையுடன் அளிக்கப்பட்டதுமான கொடைகளில் நிறைவடைவதைப் போல, விலை மதிப்புமிக்கப் பெரிய கொடைகளாலும் நிறைவடைவதில்லை.(99) மன்னன் நிருகன் மறுபிறப்பாள வகையினருக்கு ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையாக அளித்தான். தனக்கு உரிமையில்லாத ஒரே ஒரு பசுவைக் கொடுத்ததன் மூலம் அவன் நரகில் வீழ்ந்தான்.(100)

சிறந்த நோன்புகளைக் கொண்டவனும், உசீநரன் மகனுமான சிபி, தன் உடலின் தசையைக் கொடையளித்ததன் மூலம் அறலோகங்களை அடைந்து சொர்க்கத்தில் இன்புற்றிருக்கிறான்.(101) செல்வம் மட்டுமே தகுதியாகி {புண்ணியமாகி} விடாது. நல்ல மனிதர்கள், தங்கள் சிறந்த சக்தியைப் பயன்படுத்தி நல்ல வழிமுறைகளின் துணையுடன் முயன்று, தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகின்றனர். நியாயமாக ஈட்டப்பட்ட சொற்ப அளவு செல்வத்தைக் கொண்டு ஈட்டப்படும் தகுதியைப் போல ஒருவனால் பல்வேறு வேள்விகளைச் செய்வதன் மூலம் கூட ஈட்ட முடியாது.(102) கொடைகளின் கனிகள் {பயன்கள்} கோபத்தின் மூலம் அழிவடைகின்றன. ஒருவன் பேராசையின் மூலம் சொர்க்கத்திற்குச் செல்வதில் தவறுகிறான். கொடையின் தகுதிகளை அறிந்தவனும், நியாயமான ஒழுக்க நடைமுறையைப் பின்பற்றுபவனுமான ஒருவன், தவங்களின் மூலம் சொர்க்கத்தை அனுபவிப்பதில் வெல்கிறான்.(103) ஓ! பிராமணரே, உம்மால் அளிக்கப்பட்ட இந்தக் கொடையின் (ஒரு பிரஸ்தம் வாற்கோதுமை மாவின்) கனியானது {பயனானது}, அபரிமிதமான கொடைகளுடன் ராஜசூய வேள்விகள் பலவற்றையோ, குதிரை வேள்விகள் பலவற்றையோ செய்ததன் மூலம் ஒருவன் ஈட்டுவதை {ஈட்டும் பலனை} விட மிகப் பெரியதாகும்.(104)

வாற்கோதுமை மாவின் இந்த ஒரு பிரஸ்தத்தை {ஒரு படியைக்} கொண்டு நீர் நித்தியமான பிரம்மலோகத்தை வென்றுவிட்டீர். ஓ! கல்விமானான பிராமணரே, இருளின் களங்கமற்ற பிரம்மலோகத்திற்கு நீர் மகிழ்ச்சியுடன் செல்வீராக.(105) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உங்கள் அனைவருக்காக ஒரு தெய்வீகத் தேர் {விமானம்} இங்கே வந்திருக்கிறது. உங்கள் விருப்பப்படி அதில் ஏறுவீராக. ஓ! பிராமணரே, நானே அறத்தேவனாவேன் {தர்மதேவனாவேன்}. என்னைப் பார்ப்பீராக.(106) நீர் உமது உடலைப் பாதுகாத்தீர். உமது சாதனையின் புகழ் இந்த உலகம் உள்ள வரை நீடித்திருக்கும். உமது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் சேர்ந்து நீர் சொர்க்கத்திற்குச் செல்வீராக” என்றார் {பிராமண விருந்தினராகத் தர்ம தேவன்}. அறத்தேவன் இந்தச் சொற்களைச் சொன்னதும், அந்தப் பிராமணர், தன் மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் சொர்க்கத்திற்குச் சென்றார்.(108)

கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், கல்விமானுமான அந்தப் பிராமணர் இவ்வாறு தன் மகன், மருமகள் மற்றும் நான்காவதாகத் தன் மனைவியுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்த பிறகு, நான் என் பொந்துக்குள் இருந்து வெளியே வந்தேன்.(109) அங்கே அந்த வாற்கோதுமை மாவின் மணத்துடன், (அந்தப் பிராமணர் தன் விருந்தினருக்குக் கொடுத்த) நீரினால் உண்டான சகதியுடன், அங்கே பொழிந்திருந்த தெய்வீக மலர்களுடன், அந்த நல்ல மனிதன் கொடுத்த வாற்கோதுமை மாவின் துகள்களுடன் (என் உடல்) கொண்ட தொடர்பாலும்,(110) அந்தப் பிராமணரின் தவத்தாலும் என் தலை பொன்னாக மாறியது. வாய்மையிலும், தவங்களிலும் உறுதியாக இருந்த அந்தப் பிராமணருடைய கொடையின் விளைவால் என்னுடைய உடலில் பாதிக்கும் அதிகமான பகுதி பொன்மயமானதைக் காண்பீராக.(111,112)

மறுபிறப்பாளர்களே, அப்போது முதல் என் உடலில் எஞ்சியிருக்கும் பகுதியையும் பொன்னாக மாற்றிக் கொள்வதற்காக, தவசிகளின் ஆசிரமங்களுக்கும், மன்னர்களால் செய்யப்படும் வேள்விகளுக்கும் உற்சாகமிக்க இதயத்துடன் நான் மீண்டும் மீண்டும் செல்கிறேன்.(113) பெரும் ஞானியான குரு மன்னனின் {யுதிஷ்டிரனின்} இந்த வேள்வியைக் குறித்துக் கேள்விப்பட்டு, பெரும் நம்பிக்கையுடன் நான் இங்கே வந்தேன். எனினும் நான் பொன்மயமாகவில்லை.(114) பிராமணர்களில் முதன்மையானவர்களே, அந்த ஒரு பிரஸ்த வாற்கோதுமை மாவோடு {கொடையாகக் கொடுக்கப்பட்ட அந்த ஒருபடி மாவோடு} இந்த வேள்வியை எவ்வழியிலும் ஒப்பிடமுடியாது என்ற சொற்களை இதற்காகவே சொன்னேன்.(115) ஒரு பிரஸ்தம் வாற்கோதுமை மாவின் தூளால் அந்தச் சந்தர்ப்பத்தில் நான் பொன்மயமாக மாற்றப்பட்டேன். எனினும், இந்தப் பெரும் வேள்வி அந்தத் தூளுக்கு நிகராகாது. இதுவே என் கருத்தாகும்” என்றது {அந்தக் கீரி}.(116)

பிராமணர்களில் முதன்மையான அவர்கள் அனைவரிடமும் அந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு அந்தக் கீரி அவர்களின் பார்வையில் இருந்து மறைந்து போனது. பிறகு அந்தப் பிராமணர்கள் தங்கள் தங்களுக்குரிய இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர்”.(117)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பகை நகரங்களை வெல்பவனே, அந்தப் பெரும் வேள்வியில் நிகழ்ந்த அற்புத நிகழ்வு குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(118) ஓ! மன்னா, நீ வேள்வி குறித்து உயர்வாக நினைக்கக்கூடாது. கோடிக்கணக்கான முனிவர்கள் தங்கள் தவங்களின் துணையால் மட்டுமே சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(119) அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமை, மனநிறைவு, ஒழுக்கம், நேர்மை, தவம், தற்கட்டுப்பாடு, வாய்மை, கொடை ஆகியன ஒவ்வொன்றும் வேள்வித்தகுதிக்கு நிகரானவையாகும்” {என்றார் வைசம்பாயனர்}.(120)

யாகம், தானம், தவம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 91-தானம் மற்றும் தவங்களால் ஸ்வர்க்கம் முதலியன கிட்டுமென்றும், ஜீவ ஹிம்ஸைக்குக் காரணமான யாகம் சிறந்ததல்ல என்றும் சொன்ன வைசம்பாயனர்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பலமிக்க முனிவரே, மன்னர்கள் வேள்விகளில் பற்றுள்ளவர்கள். பெரும் முனிவர்கள் தவங்களில் பற்றுள்ளவர்கள். கல்விமான்களான பிராமணர்கள், மன அமைதி, அமைதியான நடத்தை மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியவற்றைப் பயில்கின்றனர்.(1) எனவே, வேள்விகளின் கனிகளுடன் ஒப்பிடத்தக்க வகையில் இவ்வுலகில் வேறு எதுவும் காணக்கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இதுவே என் தீர்மானமாகும். மேலும் அந்தத் தீர்மானமும், ஐயமின்றிச் சரியானதாகத் தெரிகிறது.(2) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, எண்ணற்ற மன்னர்கள், வேள்விகளில் தேவர்களை வழிபட்டு இம்மையில் உயர்ந்த புகழையும், மறுமையில் சொர்க்கத்தையும் அடைந்தனர்.(3) பெரும் சக்தியையும், ஆயிரம் கண்களையும் கொண்டவனும், தேவர்களின் பலமிக்கத் தலைவனுமான இந்திரன், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றைச் செய்தே தேவர்களின் மீதான அரசுரிமையை அடைந்து, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையையும் அடைந்தான்.(4) மன்னன் யுதிஷ்டிரன், பீமன் மற்றும் அர்ஜுனனுடன் கூடியவராக, செழிப்பிலும், ஆற்றலிலும் தேவர்களின் தலைவனுக்கு ஒப்பானவனாக இருக்கும்போது,(5) அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியின் பெரும் குதிரை வேள்வியை அந்தக் கீரி ஏன் சிறுமைப்படுத்தியது?” என்று கேட்டான்.(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, ஓ! பாரதா, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, வேள்வி தொடர்பான சிறந்த விதிகளையும், வேள்வி விளைவிக்கும் கனிகளையும் {பலன்களையும்} நான் உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(7) முன்பொரு காலத்தில் சக்ரன் {இந்திரன்} ஒரு குறிப்பிட்ட வேள்வியைச் செய்தான். அந்த வேள்வியின் அங்கங்கள் திரட்டப்பட்ட போது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு சடங்குகளைச் செய்வதில் {விஸ்தாரமான யாககர்மாவில்} ரித்விஜர்கள் மும்முரமடைந்தனர்.(8) அனைத்துத் தகுதிகளையும் கொண்டவரான ஆகுதிகளை ஊறுப்பவர் {ஹோதா}, தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஊற்றுவதில் ஈடுபட்டார். பெரும் முனிவர்கள் சுற்றிலும் அமர்ந்திருந்தனர். பெரும் கல்விமான்களும், மனநிறைவடைந்தவர்களுமான பிராமணர்கள், சாத்திர மந்திரங்களை இனி குரல்களில் சொல்லி தேவர்களை ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தனர். தாங்கள் செய்து கொண்டிருந்த காரியத்தில் களைப்படையாதவர்களான அத்வர்யுக்களில் முதன்மையானவர்கள், யஜுர் வேத மந்திரங்களை மெல்லிய குரல்களில் ஓதிக் கொண்டிருந்தனர்.(9,10)

விலங்குகளைக் கொல்வதற்கான காலம் வந்தது. ஓ! மன்னா, வேள்விக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விலங்குகள் பிடிக்கப்பட்ட போது, அவற்றிடம் பெரும் முனிவர்கள் கருணை கொண்டனர்.(11) அந்த விலங்குகள் அனைத்தும் உற்சாகமிழந்ததைக் கண்டவர்களும், தவங்களையே செல்வமாகக் கொண்டவர்களுமான அந்த முனிவர்கள், சக்ரனை அணுகி, அவனிடம், “வேள்வியின் இந்த நடைமுறை மலங்கமானதல்ல.(12) பெருந்தகுதிகளை அடைய விரும்பும் உனக்கு வேள்வியுடன் எந்த அறிமுகமுமில்லை என்பதற்கான குறியீடு இது[1]. ஓ! புரந்தரா, வேள்விகளில் கொல்லப்படுவதற்காக விலங்குகள் விதிக்கப்படவில்லை.(13) ஓ! பலமிக்கவனே, நீ செய்யும் இந்த ஆயத்தங்கள் தகுதியை {புண்ணியத்தை} அழிப்பதற்குரியவை ஆகும். இந்த வேள்வி அறத்திற்கு இணக்கமானதல்ல. உயிரினங்களை அழிப்பதை ஒருபோதும் அறச்செயலெனச் சொல்ல முடியாது.(14) நீ இதை விரும்பினால், உன் புரோகிதர்கள், ஆகமத்தின்படி உன் வேள்வியைச் செய்யட்டும். ஒரு வேள்வியைச் சாத்திர விதிகளின் (உண்மையான கருத்தின்) படி செய்வதன் மூலம் உன்னால் அடையப்படும் தகுதி பெரியதாக இருக்கும்.(15) ஓ! நூறு கண்களைக் கொண்டவனே, மூன்று வருடங்களாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தானிய வித்துகளைக் கொண்டு வேள்வியைச் செய்வாயாக. ஓ! சக்ரா, இதுவே பேரறம் நிறைந்ததாகவும், உயர்ந்த செயல்திறனைக் கொண்ட கனிகளை விளைவிப்பதாகவும் இருக்கும்” என்றனர்.(16)எனினும், செருக்கின் ஆதிக்கத்தில் இருந்தவனும், மூடத்தனத்தில் மூழ்கியவனுமான நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, அந்த முனிவர்களின் இந்தச் சொற்களை ஏற்கவில்லை.(17) ஓ! பாரதா, அப்போது, சக்ரனின் அந்த வேள்வியில், அசையும் உயிரினங்களைக் கொண்டு வேள்விகள் செய்யப்பட வேண்டுமா? அசையாத பொருட்களைக் கொண்டு அவை செய்யப்பட வேண்டுமா? அவை எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது குறித்துத் தவசிகளுக்கிடையில் ஒரு பெருஞ்சர்ச்சை எழுந்தது.(18) அந்தச் சர்ச்சையில் அவர்கள் அனைவரும் களைப்பை அடைந்தனர். அப்போது, உண்மையைக் காண்பவர்களான முனிவர்கள், (நடுவராக இருக்கும் காரியத்தைக் குறித்து) சக்ரனுடன் ஒரு புரிந்துணர்வைச் செய்து கொண்டு மன்னன் வசுவிடம்,(19) “ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, வேள்விகள் குறித்த வேத தீர்மானமென்ன? விலங்குகளைக் கொண்டு வேள்விகளைச் செய்வது விரும்பத்தக்கதா? வித்துகள் மற்றும் சாறுகளைக் கொண்டு செய்வது விரும்பத்தக்கதா?” என்று கேட்டனர்[2].(20)அந்தக் கேள்வியைக் கேட்ட மன்னன் வசு, இரு தரப்பின் வாதங்களில் உள்ள பலம் மற்றும் பலவீனங்களைத் தீர்மானிக்காமலேயே, “இருவகைகளில் எது ஆயத்தமாக இருக்கிறதோ அதைக் கொண்டு வேள்விகள் செய்யப்படலாம்” என்றான்.(21) அந்தக் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துவிட்டு அவன் பாதாள லோகத்திற்குச் சென்றான். உண்மையில் பலமிக்கவனான அந்தச் சேதிகளின் ஆட்சியாளன் {உபரிசர வசு}, பொய் சொன்னதன் காரணமாகத் துன்பத்தை அனுபவிக்க வேண்டி இருந்தது.(22) எனவே, ஓர் ஐயம் எழும்போது, எந்த மனிதனும், அவன் எவ்வளவு ஞானம் கொண்டவனாக இருப்பினும், பலமிக்கவனும், சுயம்புவுமான உயிரினங்களின் தலைவனாக அவன் இல்லாவிட்டால், அக்காரியத்தில் எதையும் தனியாகத் தீர்மானிக்கக்கூடாது.(23) தூய்மையற்ற புத்தியைக் கொண்ட ஒரு பாவியால் அளிக்கப்படும் கொடைகள் எவ்வளவு பெரியனவாக இருப்பினும் தொலைந்தே போகும். அத்தகைய கொடைகளால் ஆவதொன்றும் இல்லை.(24)

நியாயமற்ற ஒழுக்கம் கொண்டவனும், பாவம் நிறைந்த ஆன்மாவைக் கொண்டவனும், அழிவைச் செய்பவனுமான ஒரு மனிதனால் அளிக்கப்படும் கொடைகளின் மூலம் இம்மையிலோ, மறுமையிலோ நியாயமான புகழை ஒருபோதும் அடைய முடியாது.(25) தகுதியை ஈட்டும் விருப்பத்தின் மூலம், நியாயமற்ற வழிகளில் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு வேள்விகளைச் செய்யும் அற்ப புத்தி கொண்ட மனிதன், தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் ஒருபோதும் வெல்வதில்லை.(26) பாவம் நிறைந்த ஆன்மாவைக் கொண்ட அந்த இழிந்த பாவி, பாசாங்குத்தனத்துடன் அறவோனின் வேடத்தை ஏற்றுப் பிராமணர்களுக்குக் கொடைகளை அளிப்பதன் மூலம் (உண்மையில் தகுதி எதனையும் ஈட்டாமல்) தன் சொந்த அறத்தைக் குறித்து மனிதர்களின் மத்தியில் ஒரு நம்பிக்கையை மட்டுமே உண்டாக்குவான்.(27) ஆசை மற்றும் அறியாமையில் மூழ்கி பாவம் நிறைந்த செயல்களின் மூலம் செல்வத்தை ஈட்டும் கட்டுப்பாடற்ற ஒழுக்கம் கொண்ட பிராமணன், இறுதியில் பாவம் நிறைந்தவர்களின் இலக்கையே {கதியையே} அடைகிறான்.(28)

பேராசை மற்றும் மூடத்தனத்தில் மூழ்கும் ஒருவன், செல்வத்தைச் சேமிக்க விரும்புகிறான். பாவம் நிறைந்த, தூய்மையற்ற புத்தியினால் தூண்டப்பட்ட அவன் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்கிறான்.(29) அத்தகைய வழிமுறைகளின் {தீங்கிழைப்பதன்} மூலம் செல்வமீட்டிய ஒருவன், அதைக் கொண்டு கொடைகளை அளித்தாலோ, வேள்விகளைச் செய்தாலோ, நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் அச்செல்வத்தினை ஈட்டியதன் விளைவால் அவன் மறுமையில் அந்தக் கொடைகள், அல்லது வேள்விகளின் கனிகளை ஒருபோதும் அனுபவிக்க மாட்டான்.(30) தவங்கள் எனும் செல்வத்துடன் கூடிய மனிதர்கள், தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, களங்களில் {வயல்களில்} இருந்து திரட்டப்பட்ட தானியங்கள், அல்லது கிழங்குகள், அல்லது கனிகள், அல்லது கீரைகள், அல்லது நீர், அல்லது இலைகள் ஆகியவற்றைக் கொடையளிப்பதன் மூலம் பெரும் தகுதியை ஈட்டி, சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள்.(31) இத்தகைய கொடைகளே அறம் நிறைந்தவையாகவும், உயர்ந்த தவங்களுக்கு நிகரானவையாகவும் ஆகின்றன. அத்தகைய கொடைகளும், உயிரினங்கள் அனைத்திடம் கொள்ளும் கருணையும், பிரம்மச்சரியமும், பேச்சில் வாய்மையும், அன்புடைமையும், உளவலிமையும், மன்னிக்கும் தன்மையும் {பொறுமையும்},(32) அழிவற்ற அறத்தின் நித்திய அடித்தளங்களாக அமைகின்றன.

விஷ்வாமித்ரர் மற்றும் பழங்கால மன்னர்கள் பிறரைக் குறித்தும் நாம் கேள்விப்படுகிறோம்.(33) விஷ்வாமித்ரர், அசிதர், மன்னர் ஜனகர், கக்ஷஸேநர், ஆர்ஷ்டிஷேணர், மன்னர் ஸிந்துத்வீபர் ஆகிய இவர்களும்,(34) தவங்களையே செல்வமாகக் கொண்ட இன்னும் பல மன்னர்களும், நியாயமாக ஈட்டிய பொருட்களைக் கொடையாகக் கொடுத்து உயர்ந்த வெற்றியை அடைந்தனர்.(35) ஓ! பாரதா, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களில் தவங்களைச் செய்பவர்களும், கொடைகள் மற்றும் பிற அறச் செயல்களின் மூலம் தங்களைத் தூய்மை செய்து கொள்பவர்களும் சொர்க்கத்தை அடைகிறார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(36)

கீரியின் வரலாறு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 92-தியானம் மற்றும் தவம் மூலம் யாக பலன் கிட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அகஸ்தியர் யாகம் செய்த கதையைச் சொன்னது; கீரியின் வரலாறு…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, சொர்க்கமானது நியாயமான வழிமுறைகளில் அடையப்பட்ட செல்வத்தின் கனியெனில் அது குறித்து முழுமையாக எனக்குச் சொல்வீராக. இக்காரியத்தை நீர் நன்கறிந்தவரெனவே, அதை விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்.(1) ஓ! மறுபிறப்பாளரே, உஞ்ச வாழ்வுமுறையின்படி வாழ்ந்து வந்த அந்தப் பிராமணர் வாற்கோதுமை மாவைக் கொடையளித்ததன் மூலம் அடைந்த உயர்ந்த கனியென்ன என்பதை எனக்குச் சொல்லியிருக்கிறீர். நிச்சயம் நீர் சொன்னவை அனைத்தும் உண்மையே.(2) எனினும், வேள்விகள் அனைத்தையும் காட்டிலும் அந்தக் கதியை அடைந்தது உயர்ந்ததென எவ்வகையில் கொள்ளப்படுகிறது? ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, விளக்கங்கள் அனைத்துடன் இதை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, முற்காலத்தில் அகஸ்தியரின் பெரும் வேள்வியில் என்ன நடந்தது என்பது குறித்த இந்தப் பழங்கதையில் இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(4) ஓ! மன்னா, பழங்காலத்தில், பெருஞ்சக்தி கொண்டவரும், உயிரினங்கள் அனைத்தின் நன்மையில் அர்ப்பணிப்பு கொண்டவருமான அகஸ்தியர், பனிரெண்டு வருடங்கள் நீண்ட தீக்ஷைக்குள் நுழைந்தார்[1].(5) உயர் ஆன்ம முனிவருடைய அந்த வேள்வியில் சுடர்மிக்க நெருப்புகளுக்கு ஒப்பான காந்தியைத் தங்கள் உடல்களில் கொண்ட ஹோத்ரிகள் {ஹோதாக்கள்} பலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் கிழங்குகளையோ, கனிகளையோ உண்டு வாழ்பவர்களும், தங்கள் தானியங்களை இரண்டு கற்களை மட்டுமே நசுக்கி உண்பவர்களும் {அஸ்மகுட்டர்களும்}, (சந்திரக்) கதிர்களை மட்டுமே உண்டு வாழ்பவர்களும் {மரீசிபர்களும்} இருந்தனர்.(6) அவர்களில், உண்ணுமாறு பிறரால் வேண்டப்பட்டுத் தங்கள் முன் வைக்கப்படுவதைத் தவிர வேறு உணவேதும் உண்ணாதவர்களும் {பரிப்ருஷ்டிகர்களும்}, தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள் ஆகியோருக்கு முதலில் படைக்காமல் எதையும் உண்ணாதவர்களும் {வைகஸிகர்களும்}, தாங்கள் உண்ட உணவைக் கழுவாதவர்களும் {வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்பவர்களான ப்ரஸங்கியனர்களும்} இருந்தனர். ஓ! மன்னா, அவர்களுக்கு மத்தியில் யதிகளும், பிக்ஷுக்களும் கூட இருந்தனர்[2].(7)அவர்கள் அனைவரும் அறத் தேவனின் உடல் வடிவத்தைக் கண்டவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் கோபத்தை அடக்கியவர்களாகவும், தங்கள் புலன்களின் மீது முழுக் கட்டுப்பாட்டை அடைந்தவர்களாகவும் இருந்தனர். தற்கட்டுப்பாட்டைப் பயின்று வாழ்ந்த அவர்கள், செருக்கில் இருந்தும், பிறருக்கும் தீங்கிழைக்கும் விருப்பத்தில் இருந்தும் விடுபட்டவர்களாக இருந்தனர்.(8) அவர்கள் எப்போதும் தூய ஒழுக்கத்தைப் பின்பற்றுபவர்களாகவும், (தங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதில்) தங்கள் புலன்களால் ஒருபோதும் தடுக்கப்பட முடியாதவர்களாகவும் இருந்தனர். அந்த வேள்விக்கு வந்திருந்த அந்தப் பெரும் முனிவர்கள் அதற்குரிய பல்வேறு சடங்குகளை நிறைவேற்றினர்.(9) அந்தச் சிறப்புமிக்க முனிவர் (அகஸ்தியர்), அந்த வேள்விக்குத் திரட்டப்பட வேண்டிய உணவைத் தன் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, நியாயமான முறையில் போதுமான அளவுக்கு அடைந்தார்.(10) அதே காலத்தில் வேறு எண்ணற்ற முனிவர்களும் பெரும் வேள்விகளைச் செய்து கொண்டிருந்தனர். எனினும், அகஸ்தியர் தமது வேள்வியில் ஈடுபட்ட போது,(11) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, ஆயிரங்கண் இந்திரன், (பூமியில்) மழை பொழிவதை நிறுத்தினான்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேள்விச் சடங்குகளின் இடைவேளைகளில், தூய ஆன்மாக்களைக் கொண்ட அந்த முனிவர்களுக்கு மத்தியில் உயர் ஆன்ம அகஸ்தியர் குறித்த இந்தப் பேச்சு எழுந்தது, {அவர்கள்}, “வேள்வியில் ஈடுபடும் இந்த அகஸ்தியர், செருக்கும், பகட்டும் இன்றி {மாத்ஸர்யமின்றி} உணவுக் கொடைகளை அளித்து வருகிறார்.(12,13) எனினும், மேகங்களின் தேவன் {பர்ஜன்யன் / இந்திரன்}, மழை பொழிவதை நிறுத்திவிட்டான். உண்மையில் உணவு எவ்வாறு வளரும்? பிராமணர்களே, அந்த முனிவரின் இவ்வேள்வி பனிரெண்டு வருடங்கள் நீளும் பெரிய வேள்வியாகும்.(14) அந்தத் தேவன் இந்தப் பனிரெண்டு வருடங்களும் மழை பொழிய மாட்டான். இதைச் சிந்தித்துப் பார்த்து, கடுந்தவங்களுடன் கூடியவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான இந்த முனிவருக்கு ஏதாவது உதவியைச் செய்வதே உங்களுக்குத் தகும்” என்றனர்.

இச்சொற்கள் சொல்லப்பட்ட போது, பேராற்றல் கொண்ட அகஸ்தியர்,(15,16) தலைவணங்கியவராக அந்தத் தவசிகள் அனைவரையும் நிறைவடையச் செய்து, “வாசவன் அந்தப் பனிரெண்டு வருடங்களும் மழை பொழியவில்லையெனில்,(17) நான் மனோ வேள்வியைச் செய்வேன். இதுவே நித்ய விதியாகும். வாசவன் இந்தப் பனிரெண்டு வருடங்களும் மழைபொழியவில்லையெனில்,(18) நான் ஊறு வேள்வியைச் செய்வேன். இதுவே நித்திய வேள்வியாகும். வாசவன் இந்தப் பனிரெண்டு வருடங்களும் மழையைப் பொழிவில்லையெனில்,(19) நான் என் உழைப்பனைத்தையும் செலுத்தி, மிகக் கடுமையானவையும், கடும் நோன்புகளைக் கொண்டவையுமான வேறு வேள்விகளைச் செய்வதற்கு ஆயத்தமாவேன். வித்துகளை {விதைகளைக்} கொண்டு செய்யப்படும் என்னுடைய இந்த வேள்வி, பல வருடங்கள் நீளும் உழைப்புடன் கூடியதாக என்னால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது[3].(20) வித்துகளைக் கொண்டே நான் அதிக நன்மையைச் செய்வேன். இடையூறேதும் எழாது. என்னுடைய இந்த வேள்வி கலங்கடிக்கப்பட முடியாததாகும்.(21)அந்தத் தேவன் {இந்திரன்} மழையைப் பொழிவதோ, பொழியாமல் இருப்பதோ இதில் அதிக முக்கியமற்றதாகும். உண்மையில், இந்திரன் தன் விருப்பப்படியே எனக்கு மதிப்பேதும் அளிக்கவில்லையெனில்,(22) நானே இந்திரனாக மாறி அனைத்து உயிரினங்களையும் வாழச் செய்வேன். ஒவ்வொரு உயிரினமும், முன்பு போலவே தான் எப்போதும் உண்டு வளரும் உணவையே உண்டு வளரும்.(23) பல்வேறு வகைப் பொருட்களையும் நான் மீண்டும் மீண்டும் உண்டாக்குவேன். தங்கமும், இன்னும் என்னவெல்லாம் செல்வமுண்டோ அவை அனைத்தும் இந்த இடத்திற்கு இன்று வந்து சேரட்டும்.(24) மூன்று உலகங்களிலும் உள்ள செல்வம் அனைத்தும் இன்று தாமே இங்கு வந்து சேரட்டும். அப்சரஸ்களின் தெய்வீக இனக்குழுக்கள், கின்னரர்களோடு கூடிய கந்தர்வர்கள்,(25) விஸ்வாவசு மற்றும (அவ்வகையைச்) சார்ந்த பிறரும் என்னுடைய இந்த வேள்விக்கு வந்து சேரட்டும். வட குருக்களுக்கு மத்தியில் இருக்கும் செல்வமனைத்தும்,(26) இந்த வேள்விகளுக்குத் தாமே வந்து சேரட்டும். சொர்க்கமும், சொர்க்கத்தைத் தங்கள் இல்லமாகக் கொண்ட அனைவரும், தர்மனும் இங்கே வந்து சேரட்டும்” என்றார் {அகஸ்தியர்}.(27)

சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பான மனத்தைக் கொண்டவரும், இயல்புக்கு மீறிய சக்தியைக் கொண்ட தவசியுமான அகஸ்தியர் இந்தச் சொற்களைச் சொன்னதும், அவரது தவங்களின் விளைவால் அவர் விரும்பியது அனைத்தும் நடந்தன.(28) அங்கே இருந்த முனிவர்கள், தவத்தின் சக்தியைக் கண்டு இதயம் மகிழ்ந்தனர். ஆச்சரியத்தில் நிறைந்த அவர்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சொற்களைச் சொன்னார்கள்.(29) அந்த முனிவர்கள், “நீர் சொன்ன சொற்களால் நாங்கள் பெரிதும் நிறைவடைந்தோம். எனினும், உமது தவத்திற்கு எந்தக் குறையும் நேரக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம். நியாயமான வழிமுறைகளின் மூலம் செய்யப்படும் இந்த வேள்விகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம்[4].(30) நியாயமான வழிமுறைகளில் எங்கள் உணவை ஈட்டி, எங்களுக்குரிய கடமைகளை நோற்று வேள்விக்கான தொடக்கங்களில் ஈடுபட்டு, நாங்கள் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி பிற அறச்சடங்குகளையும் செய்யப் போகிறோம்.(31) நியாயமான வழிமுறைகளின் மூலம் பிரம்மச்சரியம் பயின்று நாங்கள் தேவர்களைத் துதிக்கப் போகிறோம். பிரம்மச்சரிய காலத்தை நிறைவேற்றி, நியாயமான வழிமுறைகளை நோற்று எங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியே வரப் போகிறோம். பிறருக்கு எவ்வகையிலும் தீங்கிழைக்கும் விருப்பத்தில் இருந்து விடுபட்ட புத்தியையே நாங்கள் அங்கீகரிக்கிறோம்.(32,33) ஓ! பலமிக்கவரே, வேள்விகள் அனைத்திலும் தீங்கிழையாமையை நீர் எப்போதும் பாராட்ட வேண்டும். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அப்போது நாங்கள் உயர்வான நிறைவை அடைவோம். உமது வேள்வி நிறைவடைந்த பின்னர், உம்மால் விடைகொடுத்து அனுப்பப்படும்போது நாங்கள் {இந்த ஸத்ரத்திலிருந்து} இந்த இடத்தை விட்டுச் செல்வோம்” என்றானர்.(34)அவர்கள் இந்தச் சொற்களைச் சொல்லிக் கொண்டிஉரக்கும்போது, தேவர்களின் தலைவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான புரந்தரன், அகஸ்தியருடைய தவங்களின் சக்தியைக் கண்டு மழையைப் பொழிந்தான்.(35) உண்மையில், ஓ! ஜனமேஜயா, அளவிலா ஆற்றல் கொண்ட அந்த முனிவரின் வேள்வி முடியும் வரை, மழையின் தேவனான அவன் மழையைப் பொழிந்து, அளவிலும், காலத்திலும் மனிதர்களின் விரும்பங்களை நிறைவேற்றினான்.(36) ஓ! அரச முனியே, தேவர்களின் தலைவன் {இந்திரன்}, பிருஹஸ்பதியைத் தன் முன் கொண்டு அங்கே வந்து, அகஸ்திய முனிவரை நிறைவடையச் செய்தான்.(37) அகஸ்தியர் அந்த வேள்வியின் முடிவில் மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக அந்தப் பெரும் முனிவர்கள் அனைவரையும் முறையாக வழிபட்டு, அவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பினார்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பொன் தலை கொண்டதும், மனிதக் குரலில் அந்தச் சொற்கள் அனைத்தையும் பேசியதுமான அந்தக் கீரி {கீரியின் வடிவில் இருந்தது} யார்? என்னால் கேட்கப்படும் இதை எனக்கு நீர் சொல்வீராக” என்றான்.(39)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நீ முன்பே என்னைக் கேட்காததால் நான் அதை உனக்குச் சொல்லவில்லை. அந்தக் கீரி யார் என்பதையும், அதனால் மனிதக் குரலை எவ்வாறு ஏற்க முடிந்தது என்பதையும் சொல்கிறேன் நீ கேட்பாயாக.(40) முன்பொரு காலத்தில், ஜமதக்னி முனிவர் ஒரு சிராத்தத்தைச் செய்யக் கருதினார். அவரது ஹோமப் பசு அவரிடம் வந்தாள், அந்த முனிவர் அவளிடம் பாலைக் கறந்தார்.(41) அவர் புதியதும், உறுதியானதும், தூய்மையானதுமான ஒரு பாத்திரத்தில் அந்தப் பாலை வைத்தார். தர்மதேவன், கோபத்தின் வடிவை ஏற்று அந்தப் பால் பாத்திரத்திற்குள் நுழைந்தான்.(42) உண்மையில் தர்மன், அந்த முனிவர்களில் முதன்மையானவர் தமக்குத் தீங்கு நேர்வதைக கண்டு என்ன செய்வார் என்பதைக் காண விரும்பினான்.(43) தமது பாலைக் கெடுத்தது கோபமே என்பதை அறிந்த தவசி, அவனிடம் சினமேதும் அடையவில்லை. பிறகு கோபமானவன், ஒரு பிராமணப் பெண்ணின் வடிவத்தை ஏற்றுத் தன்னை அந்த முனிவரிடம் வெளிப்படுத்திக் கொண்டான்.(44)

உண்மையில் கோபமானவன், பிருகு குலத்தில் முதன்மையான அவர் {ஜமதக்னி} தன்னை வென்றுவிட்டதைக் கண்டு, அவரிடம், “ஓ! பிருகு குலத் தலைவரே, நான் உம்மால் வெல்லப்பட்டேன். பிருகுக்கள் பெரும் கோபக்காரர்கள் என்ற சொல் மனிதர்களுக்கு மத்தியில் உண்டு. நான் உம்மால் அடக்கப்பட்டதால், அச்சொல் பொய்யென்பதை நான் இப்போது கண்டுகொண்டேன்.(45) பேரான்மா கொண்டவர் நீர். மன்னிக்கும் தன்மையுடன் {பொறுமையுடன்} கூடிவர் நீர். நான் இன்று உமது ஆளுகையின் கீழ் இங்கே நிற்கிறேன். ஓ! அறம் சார்ந்தவரே, நாம் உமது தவங்களுக்கு அஞ்சுகிறேன். ஓ! பலமிக்க முனிவரே, நீர் எனக்குக் கருணை காட்டுவீராக” என்றான் {பிராமணப் பெண் வடிவில் வந்த கோபமான தர்மன்}.(46)

ஜமதக்னி, “ஓ! கோபமே, உடல் வடிவத்துடன் கூடிய உன்னை நான் கண்டிருக்கிறேன். எந்தக் கவலையுமின்றி நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக. நீ எனக்கு இன்று எந்தத் தீங்கையும் இழைக்கவில்லை. உனக்கெதிரான மனவெறுப்பு ஏதும் என்னிடம் இல்லை.(47) யாருக்கு நான் இந்தப் பாலை வைத்திருந்தேனோ அந்தப் பித்ருக்கள் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாவர். நீ அவர்களிடம் சென்று {உன் கருத்தை அவர்களிடம் சொல்லி} அவர்களது கருத்துகளை {அச்சம் என்றால் என்ன என்பதை} உறுதி செய்து கொள்வாயாக[5]” என்றார்.(48)இவ்வாறு சொல்லப்பட்டதும், அச்சமடைந்த கோபமானவன் {தர்மன்}, அந்த முனிவரின் பார்வையில் இருந்து மறைந்து போனான். அந்தப் பித்ருக்களின் சாபம் மூலம் அவன் {தர்மன்} ஒரு கீரியானான்.(49) பிறகு அவன், தனக்கேற்பட்ட சாபத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வர பித்ருக்களை நிறைவடையச் செய்யத் தொடங்கினான். அவனிடம் அவர்கள், “தர்மத்தை {தர்மனை} அவமதித்துப் பேசுவதன் மூலம் நீ அடைந்திருக்கும் சாபத்தின் முடிவை அடைவாய்” என்றனர்.(50)

அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அது, பெரும் வேள்விகளை நிந்தித்தவாறு, வேள்விகளைச் செய்யும் இடங்களிலும், புனித இடங்களிலும் திரிந்து கொண்டிருந்தது. அந்தக் கீரியே மன்னன் யுதிஷ்டிரனின் பெரும் வேள்விக்கு வந்தது.(51) ஒரு பிரஸ்தம் வாற்கோதுமை மாவைக் குறிப்பிட்டதன் மூலம் தர்மனின் மகனை இகழ்ந்த அந்தக் கோபமானது {கீரியானது}, யுதிஷ்டிரன் தர்மனின் சுயம் (தர்மனின் மகன்) என்பதால் தன் சாபத்தில் இருந்து விடுபட்டது.(52) அந்த உயர் ஆன்ம மன்னனின் வேள்வியில் நடந்தது இதுவே. அந்தக் கீரி நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கேயே அப்போதே மறைந்து போனது” {என்றார் வைசம்பாயனர்}.(53)

 அநுகீதா உப பர்வம் முற்றும்

அஸ்வமேத பர்வம் முற்றிற்று 

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அநுசாஸன பர்வம்-ஸ்ரீ ஸ்வர்க்காரோஹணிக  உப பர்வம்–

October 18, 2025

உத்தராயணம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 167-உத்தராயணம் வந்ததும் பீஷ்மரிடம் சென்ற யுதிஷ்டிரன்; பீஷ்மர் இவ்வுலகை விட்டுச் சென்று வசுக்களை அடைய அனுமதித்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, தன் குடிமக்களையும், தன் மாகாணத்தில் வசிப்போரையும் முறையாகக் கௌரவித்து, அவர்களுக்குரிய இல்லங்களுக்கு அனுப்பி வைத்தான்.(1) பிறகு, போரில் தங்கள் வீரக் கணவர்களையும், மகன்களையும் இழந்த பெண்களுக்குப் பெருஞ்செல்வக் கொடைகளை அளித்து அவர்களுக்கு ஆறுதலளித்தான்.(2) பெரும் ஞானியான யுதிஷ்டிரன், தன் நாட்டை மீட்டு, அரியணையில் முறையாகத் தன்னை நிறுவிக் கொண்டான். பிறகு அந்த மனிதர்களில் முதன்மையானவன், நல்விருப்பத்தின் படியான பல்வேறு செயல்களைச் செய்வதாகத் தன் குடிமக்கள் அனைவருக்கும் உறுதியளித்தான்.(3) அப்போது அறவோரில் முதன்மையான அவன், பிராமணர்கள், படை அதிகாரிகளில் முதன்மையானோர், முன்னணி குடிமக்கள் ஆகியோரின் பெருவாரியான ஆசிகளை ஈட்டுவதில் தன்னை நிறுவிக் கொண்டான்.(4)அருள் நிறைந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தலைநகரில் {ஹஸ்தினாபுரத்தில்} ஐம்பது இரவுகளைக் கழித்த பிறகு, தன் பாட்டன் {பீஷ்மர்} இவ்வுலகில் இருந்து செல்வதற்கான காலமெனக் குறிப்பிட்ட நேரத்தை நினைவுகூர்ந்தான்.(5) சூரியன் தெற்கு நோக்கிச் செல்வதை நிறுத்தி, வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதைக் கண்ட அவன், பெரும் எண்ணிக்கையிலான புரோகிதர்களின் துணையுடன், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரில் இருந்து புறப்பட்டுச் சென்றான்.(6) குந்தியின் மகனான யுதிஷ்டிரன், பீஷ்மரின் உடலுக்கு எரியூட்ட தன்னுடன் பெரும் அளவிலான தெளிந்த நெய், மலர் மாலைகள், நறுமணப் பொருட்கள், பட்டுத் துணிகள், சிறந்த சந்தனம், கறுப்பும், வெளுப்புமான அகிற்கட்டைகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றான். விலைமதிப்புமிக்கப் பல்வேறு வகை மாலைகளும், ரத்தினங்களும் அந்தச் சேகரிப்பில் இருந்தன.(7,8)திருதராஷ்டிரன், நற்பண்புகளுக்காகக் கொண்டாடப்படும் ராணி காந்தாரி, தன் தாயான குந்தி, தன் தம்பிகள் அனைவரையும் முன்னணியில் நிறுத்திய பெரும் நுண்ணறிவுமிக்க யுதிஷ்டிரன்,(9) கிருஷ்ணன் மற்றும் பெரும் ஞானியான விதுரன் ஆகியோர் துணையுடனும், யுயுத்சு மற்றும் யுயுதானனுடனும்,(10) வேறு உறவினர்கள் மற்றும் தொண்டர்களுடனும் கூடிய ஒரு பெரிய வரிசையில், வந்திகளும், பாணர்களும் தன்னைத் துதிக்கப் பின் சென்றான். பீஷ்மரின் வேள்வி நெருப்புகளும் ஊர்வலத்தில் சுமந்து செல்லப்பட்டன.(11) இவ்வாறான துணையுடன் மன்னன் தன் நகரத்தில் இருந்து தேவர்களின் இரண்டாவது தலைவனைப் போலப் புறப்பட்டுச் சென்றான். விரைவில் அவன் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} தமது கணைப்படுக்கையில் கிடந்த இடத்தை அடைந்தான்.(12)

பெரும் நுண்ணறிவுமிக்கவரும், பராசரரின் மகனுமான வியாசர், நாரதர், தேவலர், அசிதர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து திரண்டவர்களும், கொல்லப்படாமல் எஞ்சியவர்களுமான மன்னர்கள் ஆகியோர் தம் பாட்டனுக்கு மதிப்புடன் பணிவிடை செய்து கொண்டிருப்பதை அவன் கண்டான். உண்மையில் அந்த மன்னன், பாதுகாக்கும் கடமையில் நியமிக்கப்பட்ட போர்வீரர்களால் அனைத்துப் புறங்களிலும் நன்கு பாதுகாக்கப்பட்ட வீரர்களின் படுக்கையில் கிடக்கும் தன் உயர் ஆன்ம பாட்டனைக் கண்டான். தன் தேரில் இருந்து இறங்கிய மன்னன் யுதிஷ்டிரன், பகைவர்கள் அனைவரையும் தண்டிப்பவரான தன் பாட்டனைத் தன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து வணங்கினான். தீவில் பிறந்தவரான வியாசரைத் தலைமையாகக் கொண்ட முனிவர்களையும் அவர்கள் வணங்கினார்கள். தாங்களும் அவர்களால் பதிலுக்கு வணங்கப்பட்டனர்.(13-16) மங்கா புகழ் கொண்டவனான யுதிஷ்டிரன், பெரும் பாட்டன் பிரம்மனுக்கே ஒப்பானவர்களான தன் புரோகிதர்கள் துணையுடனும், தன் தம்பிகளுடனும் சேர்ந்து, இந்த மதிப்புமிக்க முனிவர்கள் சூழ கணைப்படுக்கையில் பீஷ்மர் கிடக்கும் இடத்திற்குச் சென்றான்.(17)

அப்போது தன் தம்பிகளுக்குத் தலைமையில் நின்றிருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அப்படுக்கையில் கிடந்தவரும், கங்கையாற்றின் மைந்தருமான அந்தக் குருகுலத்தில் முதன்மையானவரிடம் {பீஷ்மரிடம்},(18) “ஓ! மன்னா, நான் யுதிஷ்டிரன். ஓ! ஜானவி ஆற்றின் மைந்தரே, உம்மை வணங்குகிறேன். ஓ! நீர் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால், நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வீராக.(19) ஓ! மன்னா, உமது வேள்வி நெருப்புகளைச் சுமந்து கொண்டு, நீர் குறிப்பிட்ட காலம் வரை உமக்குப் பணிவிடை செய்யவே நான் இங்கே வந்திருக்கிறேன். கல்வியின் அனைத்துக் கிளைகளையும் சார்ந்த ஆசான்கள், பிராமணர்கள், ரித்விஜர்கள் ஆகியோரும், என் தம்பிகள் அனைவரும்,(20) உமது மகனான பெருஞ்சக்தி கொண்ட மன்னன் திருதராஷ்டிரரும், என் அமைச்சர்களும், பேராற்றல் கொண்ட வாசுதேவன் ஆகியோரும் இங்கிருக்கின்றனர்.(21) கொல்லப்படாமல் எஞ்சிய போர்வீரர்களும், குருஜாங்கலத்தில் வசிப்போர் அனைவரும் இங்கே இருக்கின்றனர். ஓ! குரு குலத்தின் தலைவா, உமது கண்களைத் திறந்து அவர்களைக் காண்பீராக.(22) இந்தச் சந்தர்ப்பத்திற்குத் தேவையான அனைத்தையும் நான் ஏற்பாடு செய்திருக்கிறேன். உண்மையில், நீர் குறிப்பிட்ட இந்தக் காலத்திற்கான அனைத்துப் பொருட்களும் ஆயத்தமாக இருக்கின்றன” என்றான் {யுதிஷ்டிரன்}”.(23)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெரும் நுண்ணறிவைக் கொண்ட குந்தியின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்ட கங்கையின் மைந்தர், தன் கண்களைத் திறந்து, அங்கே தன்னைச் சுற்றிலும் கூடியிருந்த பாரதர்கள் அனைவரையும் கண்டார்.(24) அப்போது வலிமைமிக்கப் பீஷ்மர், யுதிஷ்டிரனின் வலிய கரங்களைப் பிடித்துக் கொண்டு, மேகங்களைப் போன்ற ஆழமான குரலில் அவனிடம் பேசினார்.(25)

சொற்களை முற்றிலும் ஆள்பவரான அவர், “ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, நற்பேற்றின் மூலமே, நீ உன் அமைச்சர்கள் அனைவருடனும் இங்கே வந்திருக்கிறாய். நாள் சமைக்கும் ஆயிரங்கதிரோனான புனிதமான சூரியன், தன் வடக்கு நோக்கிய போக்கைத் தொடங்கிவிட்டான்.(26) நான் என் படுக்கையில் எண்பத்தைந்து நாட்கள் கிடந்திருக்கிறேன். இந்தக் கூர்முனைக் கணைகளில் நீட்டிக் கிடந்த நான், இந்தக் காலத்தை நூறு ஆண்டுகளாக உணர்ந்தேன்.(27) ஓ! யுதிஷ்டிரா, மாகச் சந்திர மாதம் {மாசி மாதம்} தொடங்கிவிட்டது. மேலும் இது வளர்பிறைக் காலமாகும், (என் கணக்கீடுகளின்படி) இதில் நான்கில் ஒருபகுதி முடிந்திருக்க வேண்டும்[1]” என்றார்.(28)தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் இவ்வாறு சொன்ன கங்கையின் மகன் பீஷ்மர், திருதராஷ்டிரனை வணங்கி, அவனிடம் பின்வருமாறு சொன்னார்.(29)

பீஷ்மர் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, நீ கடமைகளை நன்கறிந்தவனாக இருக்கிறாய். பொருளியல் தொடர்பான உன் ஐயங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டன. பெருங்கல்வி கொண்ட பல பிராமணர்களுக்கு நீ பணிவிடை செய்திருக்கிறாய்.(30) வேதங்களுடன் தொடர்புடை நுண்ணறிவியல்களையும், அறக்கடமைகள் அனைத்தையும், முழுமையாக நான்கு வேதங்களையும் நீ நன்கறிந்திருக்கிறாய்.(31) எனவே, ஓ! குருவின் மகனே {திருதராஷ்டிரனே}, நீ வருந்தாதே. ஏற்கனவே விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. இது வேறு வகையில் ஆகாது. தேவர்கள் தொடர்பான புதிர்களை {ரகசியங்களை} தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} உதடுகளில் இருந்து நீ கேட்டிருக்கிறாய்.(32) யுதிஷ்டிரனும், அவனுடைய தம்பிமாரும், பாண்டுவின் மகன்களாவதைப் போலவே நியாயமாக உனக்கும் மகன்களாவர். அறக்கடமைகளை நோற்கும் நீ அவர்களைப் பேணி வளர்த்துப் பாதுகாப்பாயாக. அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் பெரியோருக்குத் தொண்டாற்றுவதில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களாவர்.(33) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தூய ஆன்மா கொண்டவனாவான். அவன் எப்போதும் உனக்குக் கீழ்ப்படிந்திருப்பான். கருணையறம் {கொல்லாமை} அல்லது தீங்கிழையாமையில் அவன் அர்ப்பணிப்புடன் இருப்பதை நான் அறிவேன். பெரியோர்கள் மற்றும் ஆசான்களின் அவன் அர்ப்பணிப்புமிக்கவனாவான்.(34) உன் மகன்கள் அனைவரும் தீய ஆன்மாக்களைக் கொண்டோராவர். அவர்கள் கோபமும், பேராசையும் கொண்டவர்களாக இருந்தனர். பொறாமையில் மூழ்கிய அவர்கள் அனைவரும் தீய நடத்தை கொண்டிருந்தனர். அவர்களுக்காக வருந்துவது உனக்குத் தகாது” என்றார் {பீஷ்மர்}”.(35)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெரும் ஞானியான திருதராஷ்டிரனிடம் இவ்வளவும் சொன்ன அந்தக் குரு வீரர் {பீஷ்மர்}, பிறகு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினார்.(36)

பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! புனிதமானவனே, ஓ! தேவர்கள் அனைவருக்கும் தேவா, ஓ! தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவராலும் வழிபடப்படுபவனே, ஓ! மூன்று அடியால் மூவுலகங்களையும் மறைத்தவனே, ஓ! சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்தவனே உன்னை வணங்குகிறேன்.(37) வாசுதேவன் நீயே, பொன்னுடல் நீயே, ஒரே புருஷன் (அல்லது ஒரே செயல்படும் இயக்கம்) நீயே, (அண்டத்தைப்) படைத்தவன் நீயே, பேரளவு கொண்டவன் நீயே. ஜீவன் நீயே. நுட்பமானவன் நீயே. நித்தியமான பரமாத்மா நீயே.(38) ஓ! தாமரைக் கண்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே என்னைக் காப்பாயாக.(39) ஓ! கிருஷ்ணா, ஓ! பரமானந்தமே, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே இவ்வுலுகில் இருந்து செல்வதற்கு எனக்கு அனுமதி அளிப்பாயாக. பாண்டுவின் மகன்களை எப்போதும் நீ பாதுகாக்க வேண்டும். உண்மையில், ஏற்கனவே ஒரே புகலிடமாக அவர்களுக்கு இருப்பவன் நீயே.(40)

முன்பொரு சமயம், தீய புத்தி கொண்ட மூடனான துரியோதனனிடம்எங்கே அறம் இருக்குமோ அங்கே கிருஷ்ணன் இருப்பான், எங்கே அறம் இருக்குமோ அங்கேயே வெற்றியும் இருக்கும் என்று சொன்னேன்.(41) மேலும் நான் அவனிடம் வாசுதேவனையே புகலிடமாகக் கொண்டு அவனைச் சார்ந்திருந்து பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளவும் ஆலோசனை கூறினேன். உண்மையில் நான் அவனிடம் மீண்டும் மீண்டும், “அமைதியை ஏற்படுத்திக் கொள்ள உனக்கு இதுவே தகுந்த நேரம்” என்று சொன்னேன்.(42) எனினும், தீய புத்தி கொண்ட மூடனான துரியோதனன், நான் சொன்னதைக் கேட்டானில்லை. அவன் {துரியோதனன்}, பூமியில் ஒரு பெரும் அழிவை ஏற்படுத்திவிட்டு தன் உயிரையும் விட்டுவிட்டான்.(43) ஓ! சிறப்புமிக்கவனே, பதரி ஆசிரமத்தில் நரனின் துணையுடன் பல ஆண்டுகள் வசித்த பழைமையான சிறந்த முனிவன் நீ என்பதை நான் அறிவேன்.(44) தெய்வீக முனிவர் நாரதரும், கடுந்தவங்களைச் செய்த வியாசரும் இதை எனக்குச் சொல்லியிருக்கின்றனர். அவர்களே இதை எனக்குச் சொன்னார்கள். நீயும், அர்ஜுனனும், பழங்காலத்தில் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்திருந்த நாராயணன் மற்றும் நரன் என்ற முனிவர்களாவீர்.(45) ஓ! கிருஷ்ணா, நான் என் உடலைக் கைவிடப் போகிறேன் எனக்கு விடை அருள்வாயாக. உன்னால் அனுமதிக்கப்பட்டு நான் உயர்ந்த கதியை அடையப் போகிறேன்” என்றார் {பீஷ்மர்}.(46)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பீஷ்மரே, நான் உமக்கு விடைகொடுக்கிறேன். ஓ! மன்னா, நீர் வசுக்களின் நிலையை அடைவீராக. ஓ !பெரும் காந்தி கொண்டவரே, இவ்வுலகில் ஒரே ஒரு மீறலையும் செய்த குற்றமுள்ளவரில்லை.(47) ஓ! அரசமுனியே, நீர் உமது தந்தையிடம் பக்தி கொண்டவராவீர். எனவே, நீர் இரண்டாவது மார்க்கண்டேயனைப் போன்றவராவீர். இதன் காரணமாகவே உம் விருப்பப்படியே யமன், உமது விருப்பத்தைப் படிக்க எதிர்பார்த்து உமது அடிமையாகக் காத்திருக்கிறான்” என்றான் {கிருஷ்ணன்}”.(48)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைச் சொன்ன கங்கையின் மைந்தர், திருதராஷ்டிரன் தலைமையிலான பாண்டவர்களிடமும், வேறு நண்பர்களிடமும், தன் நலம் விரும்பிகளிடமும் மீண்டும் பேசினார்.(49) {அவர்}, “நான் என் உயிர்மூச்சைக் கைவிட விரும்புகிறேன். நீங்கள் எனக்கு விடை கொடுப்பதே தகும். வாய்மையை அடைய நீங்கள் முயல வேண்டும். வாய்மையே உயர்ந்த பலமாக இருக்கிறது.(50) தவங்களில் அர்ப்பணிப்புடனும், எப்போதும் கொடூர நடத்தைகளைக் கைவிட்டும், ஆன்மாக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டும் அறமொழுகும் பிராமணர்களுடனே நீங்கள் எப்போதும் வாழ வேண்டும்” என்றார்.(51)

தன் நண்பர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன நுண்ணறிவுமிக்கப் பீஷ்மர் மீண்டும் யுதிஷ்டிரனிடம்,(52) “ஓ! மன்னா, பிராமணர்கள் அனைவரும், குறிப்பாக ஞானம் கொண்டோரும், ஆசான்களும், வேள்விகளில் துணைபுரியவல்ல புரோகிதர்களும் உன் மதிப்பீட்டின்படி துதிக்கத்தக்கவர்களாகவே இருக்கட்டும்” என்றார் {பீஷ்மர்}”.(53)

கங்கையின் துயரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 168-யோகத்தில் நிலைத்து தமது உயிரைப் பிரித்த பீஷ்மர்; பீஷ்மரின் ஈமச் சடங்குகள்; கங்கையின் துயரம்; கங்கையைத் தேற்றிய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, குருக்கள் அனைவரிடமும் இவ்வாறு சொன்ன சந்தனுவின் மகன் {பீஷ்மர்} சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.(1) அவர் யோகத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அடுத்தடுத்து தன் உடற்பாகங்களில் இருந்து உயிர் மூச்சுகளை நிறுத்தினார். அந்த உயர் ஆன்மாவின் உயிர் மூச்சுகள் முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, மேல் நோக்கி எழுப்பப்பட்டது.(2) யோகத்தை ஏற்றிருந்ததன் விளைவால் உயிர்மூச்சுகள் மேல்நோக்கிச் செல்லும்போது, சந்தனு மகனின் {பீஷ்மரின்} உடற்பாகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வலியற்றவையாகின.(3) ஓ! மன்னா, வியாசரைத் தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்கள் உள்ளிட்ட உயர் ஆன்ம மனிதர்களுக்கு மத்தியில் இந்தக் காட்சி வியப்பான ஒன்றாகப் பார்க்கப்பட்டது.(4) குறுகிய காலத்திற்குள் பீஷ்மரின் மொத்த உடலும் கணையற்றதாகவும், வலியற்றதாகவும் ஆனது. வாசுதேவனின் தலைமையிலான புகழ்பெற்ற மனிதர்களும், வியாசருடன் கூடிய தவசிகள் அனைவரும் இதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(5) கட்டுப்படுத்தப்பட்டவை, எந்த வழியிலும் வெளியேற இயலாதவையுமான உயிர்மூச்சுகள், இறுதியாக உச்சந்தலையைத் துளைத்துக் கொண்டு சொர்க்கத்தை நோக்கிச் சென்றது.(6)

தேவதுந்துபிகள் முழங்கத் தொடங்கின, மலர்மாரி பொழிந்தது. சித்தர்களும், மறுபிறப்பாள முனிவர்களும் மகிழ்ச்சியால் நிறைந்து, “நன்று, நன்று” என்று சொன்னார்கள்.(7) உச்சந்தலையைப் பிளந்து சென்ற பீஷ்மரின் உயிர்மூச்சுகள் பெரும் எரிகல்லைப் போல ஆகாயத்தில் சென்று விரைவில் புலப்படாமல் போனது.(8) ஓ! பெரும் மன்னா, பாரதக் குலத்தின் தூணாகத் திகழ்ந்த சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, இவ்வாறு தம்மை நித்தியத்தோடு கலந்தார்.(9)

பிறகு, உயர் ஆன்ம பாண்டவர்களும், விதுரரும் பெரும் அளவிலான விறகுகளையும், பல்வேறு வகை நறுமணப் பொருட்களையும் கொண்டு ஈமச்சிதையை அமைத்தனர்.(10) யுயுத்சுவும் பிறரும் அந்த ஆயத்தங்களைக் கண்காணிதனர். அப்போது யுதிஷ்டிரனும், உயர் ஆன்ம விதுரரும்,(11) பீஷ்மரின் உடலை, பட்டுத் துணியாலும், மலர் மாலைகளாலும் போர்த்தினர். யுயுத்சு ஒரு சிறந்த குடையை அதன் மேல் ஏந்தினான்.(12) பீமசேனன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் தங்கள் கரங்களில் தூய வெண்ணிறத்திலான சாமரங்களை ஏந்தினர். மாத்ரியின் மகன்கள் {நகுலன், சகாதேவன்} இருவரும் தங்கள் கரங்களில் இரண்டு கிரீடங்களைக் கொண்டிருந்தனர்.(13) யுதிஷ்டிரனும், திருதராஷ்டிரனும் உடலின் {பீஷ்மருடைய சடலத்தின்} கால்மாட்டில் நின்றனர். குருக்களின் தலைவனுடைய மனைவிமார், பனையோலை விசிறிகளை எடுத்து, உடலைச் சுற்றிலும் நின்று மெதுவாக விசிறத் தொடங்கினர்.(14) உயர் ஆன்ம பீஷ்மரின் பித்ரு வேள்வி முறையாகச் செய்யப்பட்டது. புனித நெருப்பில் ஆகுதிகள் பல ஊற்றப்பட்டன. சாமங்களைப் பாடுவோர் பல சாமங்களைப் பாடினர்.(15)

கங்கையின் மகனுடைய உடலை சந்தனம், மரமஞ்சள் மற்றும் காரகில் கட்டைகளாலும், நறுமணமிக்க வேறு விறகுகளாலும் மறைத்து, அதற்கு நெருப்பிட்டு, அச்சிதைக்கு வலப்புறத்தில் திருதராஷ்டிரனுடன் கூடிய குருக்கள் நின்று கொண்டிருந்தனர்.(16,17) குரு குலத்தில் முதன்மையானோரான அவர்கள், இவ்வாறு கங்கையின் மகனுடைய உடலை எரித்து, முனிவர்கள் துணையுடன் புனித பாகீரதிக்கு {கங்கைக்குச்} சென்றனர்.(18) அந்த இடத்திற்கு வியாசர், நாரதர், அசிதர், கிருஷ்ணன், பாதர குலத்தின் பெண்கள், ஹஸ்தினாபுரவாசிகள் ஆகியோர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(19) அந்தப் புனித ஆற்றுக்கு வந்தடைந்த அனைவரும், உயர் ஆன்ம கங்கைமைந்தருக்கு நீர்க்காணிக்கைகளை முறையாகச் செலுத்தினர்.(20)

பாகீரதி தேவி, தன் மகனுக்கான நீர்க்காணிக்கைகள் செலுத்தப்பட்ட பிறகு, கவலையால் உடைந்தவளாக அழுது கொண்டே அந்த ஓடையில் இருந்து எழுந்தாள்.(21) அவளது புலம்பல்களுக்கு மத்தியில் குருக்களிடம் அவள், “பாவமற்றவர்களே, (என் மகனுக்கு) நேர்ந்ததனைத்தையும் உங்களுக்குச் சொல்கிறேன்; கேட்பீராக.(22) அறவொழுக்கம் மற்றும் இயல்புகளைக் கொண்டவனும், உயர்ந்த பிறவியையும், ஞானத்தைக் கொண்டவனுமான என் மகன், தன் குலத்துப் பெரியவர்கள் அனைவருக்கும் நன்மை செய்பவனாக இருந்தான். அவன் தன் தந்தையிடம் பக்தி கொண்டவனாகவும், உயர்ந்த நோன்புகளைக் கொண்டவனாகவும் இருந்தான்.(23) பெருஞ்சக்தியுடன் கூடிய தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட ஜமதக்னி குல ராமரால் {பரசுராமராலும்} வெல்லப்பட முடியாதவனாக அவன் இருந்தான். ஐயோ, அந்த வீரன் சிகண்டியால் கொல்லப்பட்டானே.(24) மன்னர்களே, என் மகன் போனதைக் கண்டும் பிளாக்காமல் இருக்கும் என் இதயம் இரும்பாலானது என்பதில் ஐயமில்லை.(25) காசியில் நடந்த சுயம்வரத்திற்குத் தனியாக ஒற்றைத் தேரில் சென்று, அங்கே கூடியிருந்த க்ஷத்திரியர்களை வீழ்த்தி, (தன் சகோதரனுக்காக) மூன்று இளவரசிகளை அபகரித்து வந்தான்.(26) அவனது வலிமைக்கு இணையாக இந்தப் பூமியில் எவனும் இல்லை. ஐயோ, அவ்வாறு இருந்த என் மகன் சிகண்டியால் கொல்லப்பட்டான் என்று கேட்டும் என் இதயம் பிளக்காமல் இருக்கிறதே” என்று சொல்லி புலம்பினாள்.(27)

பலமிக்கக் கிருஷ்ணன், பேராறாக ஓடும் அந்தத் தேவியின் புலம்பல்களைக் கேட்டு, ஆறுதலான பல சொற்களைச் சொல்லி அவளைத் தேற்றினான். கிருஷ்ணன், “ஓ! இனியவளே, ஆறுதலடைவாயாக. ஓ அழகிய பண்புகளைக் கொண்டவளே, வருந்தாதே. உன் மகன் இன்பம்நிறைந்த உயர்ந்த உலகத்திற்குச் சென்றிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.(28-30) அவர் வசுக்களில் பெருஞ்சக்தி கொண்டவராக இருந்தார். ஓ! அழகிய பண்புகளைக் கொண்டவளே, ஒரு சாபத்தின் மூலம் அவர் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்தார். அவருக்காக வருந்துவது உனக்குத் தகாது.(31) க்ஷத்திரியக் கடமைகளுக்கு ஏற்புடைய வகையில், போர்க்களத்தில் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே அவர் தனஞ்செயனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டார். ஓ! தேவி, அவர் சிகண்டியால் கொல்லப்படவில்லை.(32) பீஷ்மர் தம் கரத்தில் வில் வளைத்து நின்றால், தேவர்களின் தலைவனாலும் அவரைக் கொல்ல முடியாது.(33) ஓ! அழகிய முகம் கொண்டவளே உன் மகன் இன்பமாகச் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறார். தேவர்கள் அனைவரும் கூடியிருந்தாலும் அவரைப் போரில் கொல்ல முடியாது.(34) எனவே, ஓ! கங்கா தேவி, குரு குலத்தின் மகனுக்காக நீ வருந்தாதே. ஓ! தேவி, அவர் வசுக்களில் ஒருவராவார். உன் மகன் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறார். உன் இதய நோய் அகலட்டும்” என்றான் {கிருஷ்ணன்}”.(35)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஆறுகள் அனைத்திலும் முதன்மையானவளான அவள் {கங்கை}, ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, கிருஷ்ணனாலும், வியாசராலும் இவ்வாறு சொல்லப்பட்டதும், தன் துயரைக் கைவிட்டு உள்ளச் சமநிலையை அடைந்தாள்.(36) ஓ! ஏகாதிபதி, அங்குக் கிருஷ்ணனின் தலைமையில் இருந்த மன்னர்கள் அனைவரும், முறையாக அந்தத் தேவியைக் கௌரவித்து, அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவளது கரையில் இருந்து அகன்று சென்றனர்”.(37)

ஸ்வர்க்காரோஹணிக உப பர்வம் முற்றும்

அநுசாஸன பர்வம் முற்றிற்று 

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அநுசாஸன பர்வம்-ஸ்ரீ தான தர்ம உப பர்வம்-பகுதி -2-ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்-ஸ்ரீ சாவித்ரி -ஸ்ரீ காயத்ரி-மந்திரம்!-

October 18, 2025

க்ஷத்ரபந்துவும், சண்டாளனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 101-பிராமணர்களின் பொருளைக் கவர்வதனால் உண்டாகும் பாவத்தைக் குறித்து க்ஷத்ரபந்துவுக்கும் ஒரு சண்டாளனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மனிதர்களின் தலைவரே, பிராமணர்களுக்குச் சொந்தமான பொருட்களைக் களவாடவோ, அபகரிக்கவோ செய்யும் மூடர்களும், அற்பர்களும், பாவம் நிறைந்தவர்களுமான மானிடர்கள் எங்கே செல்கிறார்கள்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாக ஒரு சண்டாளனுக்கும், ஓர் இழிந்த க்ஷத்திரியனுக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் குறிப்பிடப்படுகிறது[1].(2)அரச வகையைச் சார்ந்த அம்மனிதன் {க்ஷத்ரபந்து}, “ஓ! சண்டாளா, நீ வயதில் முதிர்ந்தவனாகத் தெரிந்தாலும், நடத்தையில் சிறுவனாகவே தெரிகிறாய். நாய்கள் மற்றும் கழுதைகளால் எழுப்பப்பட்ட புழுதியால் உன் உடல் பூசப்பட்டிருந்தாலும், அப்புழுதியைக் கவனத்தில் கொள்ளாமல், உன் உடலில் விழுந்த நோய்தடுக்கும் பாலின் சிறு துளிகளைக் குறித்துக் கவலைப் படுகிறாய்.(3) சண்டாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இத்தகைய செயல்கள் அறவோரால் நிந்திக்கப்படுக்கின்றன என்பது வெளிப்படை. உண்மையில், உன் உடலில் இருந்து பால்துளிகளை நீ ஏன் கழுவ முயல்கிறாய்?” என்று கேட்டான்[2].(4)சண்டாளன் {க்ஷத்ரபந்துவிடம்}, “ஓ! மன்னா, முன்பொரு காலத்தில் ஒரு பிராமணருடைய குறிப்பிட்ட பசுக்கள் களவாடப்பட்டன. அவ்வாறு அவை அபகரிக்கப்படும் போது, அவற்றின் மடியில் இருந்து சிந்திய பால் சாலையோரத்தில் வளர்ந்த சில சோமக் கொடிகளில் விழுந்தது. பால்படிந்த அந்தச் செடிகளின் சாற்றைக் குடித்த பிராமணர்களும்,(5) அந்தச் சோமம் பருகப்பட்ட வேள்வியைச் செய்த மன்னனும் நரகில் மூழ்கினார்கள். உண்மையில், ஒரு பிராமணனுக்கு உரிய ஏதோவொன்றை அபகரித்தால் மன்னனும், அவனுக்குத் துணைபுரிந்த பிராமணர்கள் அனைவரும் நரகிற்குச் செல்ல வேண்டும்.(6) பிராமணனின் பசுக்களைக் களவு செய்த அரண்மனையில் உள்ள பால், நெய், தயிர் ஆகியவற்றைப் பருகிய மனிதர்க்ள அனைவரும், நரகத்தில் வீழ்வார்கள்.(7) களவு செய்யப்பட்ட பசுக்களும், தாங்கள் பெருங்கவனத்துடன் கவனிக்கப்பட்டாலும் தங்கள் உடல்களை அசைத்து, தங்களைக் களவு செய்தோரின் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளையும், மன்னன் மற்றும் ராணியையும் தங்கள் பாலால் கொன்றுவிடுகின்றன.(8) ஓ! மன்னா, என்னைப் பொறுத்தவரையில் நான் அவ்வாறு களவு செய்யப்பட்ட பசுக்களை வைத்திருந்த இடத்தில் பிரம்மச்சரிய நோன்பை நோன்று வாழ்ந்து வந்தேன். நான் இரந்து பெற்ற உணவில் அந்தப் பசுக்களின் பால் தெளிக்கப்பட்டது.(9) ஓ! அரச வகையைச் சார்ந்தவனே, அந்த உணவை உண்டதால் நான் இப்பிறவியில் சண்டாளனானேன். ஒரு பிராமணனின் பசுக்களைக் களவு செய்த மன்னனும் புகழ்க்கேட்டுக்குரிய கதியையே அடைந்தான்.(10)

எனவே, எவனும் பிராமணனுக்குச் சொந்தமான எதையும் களவிடவோ, அபகரிக்கவோ கூடாது. ஒரு பிராமணனுக்குச் சொந்தமான பால் தெளிக்கப்பட்ட உணவை உண்டதன் விளைவால் நான் என்ன நிலையை அடைந்திருக்கிறேன் என்பதைக் காண்பாயாக.(11) இதன் காரணமாகவே ஞானம் கொண்ட மனிதனால் சோமக் கொடிகள் {சோமலதை} விற்கப்படக்கூடாது. சோமச்செடியை {சோமலதை} விற்பவனை ஞானிகள் நிந்திக்கிறார்கள்.(12) உண்மையில், ஓ! மகனே, சோமத்தை விற்பனை செய்பவன், வாங்குபவன் ஆகிய இருவரும் இவ்வுலகத்தில் இருந்து அகன்று யமலோகம் செல்லும்போது, ரௌரவன் என்றழைக்கப்படும் நரகில் மூழ்குகிறார்கள்.(13) வேதஞானம் கொண்ட மனிதன், சோமத்தை முறையாக விற்றால் தன் அடுத்தப் பிறவியில் வட்டிக்கு விடுபவனாகப் பிறந்து விரைவில் அழிவைச் சந்திக்கிறான்.(14) முன்னூறு முறை நரகில் மூழ்கும் அவன், மனிதக் கழிவை உண்டு வாழும் ஒரு விலங்காகிறான். தாழ்ந்த, இழிந்த மனிதருக்குத் தொண்டாற்றுபவன், செருக்குடையவன், நண்பனின் மனைவியைக் கற்பழிப்பவன் ஆகியோர்(15) ஒரே தராசில் எதிரெதிராக எடை பார்க்கப்பட்டால், அது கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடந்த செருக்கே கனமானதாக இருப்பதைக் காட்டும். பாவம் நிறைந்ததும், ஏற்பில்லாத நிறமும் கொண்டதும், மெலிந்திருப்பதுமான இந்த நாயைப் பார்ப்பாயாக.(16) (இது முந்தைய வாழ்வில் மனிதனாக இருந்தது). செருக்கின் மூலமே உயிரினங்கள் இத்தகைய பரிதாபகரமான கதியை அடைகின்றன. என்னைப் பொறுத்தவரையில், எனது முற்பிறவி ஒன்றில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து,(17) அறிவின் அனைத்துக் கிளைகளிலும், அறிவியல்கள் அனைத்திலும் தேர்ச்சியடைந்தவனாக இருந்தேன். இக்குற்றங்களின் ஆழத்தை அறிந்தவனாக இருந்தாலும், செருக்கின் வசப்பட்ட நான்,(18) குருட்டுத் தன்மையை அடைந்து, விலங்குகளின் முதுகெலும்பைப் பற்றியிருக்கும் இறைச்சியை உண்டேன். அத்தகைய நடத்தை மற்றும் அத்தகைய உணவின் விளைவால்,(19) நான் இந்நிலையை அடைந்தேன். காலம் கொண்டு வரும் நேர்மாறு நிலைகளைக் காண்பாயாக. ஆடையின் ஒரு முனையில் நெருப்புப் பற்றப்பட்ட மனிதனைப் போலவோ, வண்டுகளால் தொடரப்படுபவனைப் போலவோ,(20) புழுதி பூசப்பட்டு அச்சத்தால் நான் ஓடுவதைப் பார்.

இல்லற வாழ்வுமுறையை நோற்பவர்கள், வேத கல்வியின் மூலமும், ஞானிகளால் அறிவிக்கப்பட்ட பிற வகைக் கொடைகளின் மூலமும் பாவங்கள் அனைத்தில் இருந்தும் மீட்கப்படுகிறார்கள். ஓ! அரச வகையைச் சார்ந்தவனே {க்ஷத்ரபந்துவே}, பாவம் நிறைந்த நடத்தை கொண்ட ஒரு பிராமணன், அனைத்து வகைப் பற்றுகளையும் துறந்து, காட்டு வாழ்வுமுறையை {வானப்பிரஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றினால் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் மீட்கப்படுவான். ஓ க்ஷத்திரியர்களின் தலைவா, நான் இப்பிறவியில் பாவம் நிறைந்த வகையில் பிறந்திருக்கிறேன்.(21-23) அனைத்துப் பாவங்களில் இருந்தும் என்னைத் தூய்மையாக்கிக் கொள்வதில் எவ்வாறு வெல்லப்போகிறேன் என்பதை நான் தெளிவாகக் காணத் தவறுகிறேன். முற்பிறவியில் செய்த ஏதோவொரு தகுதிமிக்கச் செயலின் விளைவால், முற்பிறவிகளின் நினைவை நான் இழக்காமல் இருக்கிறேன்.(24) ஓ! மன்னா, உன் கருணைக்கே நான் என்னை விடுகிறேன். நான் உன்னைக் கேட்கிறேன். என் ஐயத்தை நீ தீர்ப்பாயாக. எந்த மங்கல ஒழுக்க வழிமுறையின் மூலம் நான் என் விடுதலையை {முக்தியை} அடைய விரும்ப வேண்டும்? ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, எந்த வழிமுறைகளின் மூலம் நான் சண்டாளன் என்ற என் நிலையைக் கைவிடுவதில் வெல்வேன்?” என்று கேட்டான்.(25)

அதற்கு அந்த அரச வகையினன், “ஓ! சண்டாளா, நீ விடுதலையை {முக்தியை} அடையக்கூடிய வழிமுறையை அறிவாயாக. ஒரு பிராமணனுக்காக உன் உயிர்மூச்சைக் கைவிடுவதன் மூலம் நீ விரும்பத்தக்க கதியை அடையலாம்.(26) ஒரு பிராமணனின் நிமித்தமாகப் போரெனும் நெருப்பில் ஆகுதியாக, விலங்குகள் மற்றும் பறவைகளின் இரையாக உன் உடலை வீசுவதன் மூலம், உண்மையில் இவ்வாறு உயிர் மூச்சைக் கைவிடுவதன் மூலம் நீ விடுதலையை {முக்தியை} அடையலாம். வேறு எந்த வழிமுறையின் மூலமும் உன்னால் அதை அடைவதில் வெல்லமுடியாது” என்றான்”.(27)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பகைவர்களைச் சுடுபவனே {யுதிஷ்டிரனே}, இவ்வாறு சொல்லப்பட்ட அந்தச் சண்டாளன், ஒரு பிராமணனின் செல்வத்தைக் காக்கும் நிமித்தமாகப் போரெனும் நெருப்பில் தன் உயிர் மூச்சை ஆகுதியாக ஊற்றியதன் விளைவாக மிக விரும்பத்தக்க கதியை அடைந்தான்.(28) எனவே, ஓ! மகனே, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ நித்திய இன்பத்தையே கதியா அடைய விரும்பினால் பிராமணர்களின் உடைமைகளை நீ எப்போதும் பாதுகாக்க வேண்டும்” {என்றார் பீஷ்மர்}.(29)

புண்யலோகங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 102-புண்ணிய உலகங்கள் அனைத்தையும் குறித்து கௌதமருக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, அறவோர் அனைவரும் மரணத்திற்குப் பிறகு ஒரே உலகத்தையே அடைவதாகச் சொல்லப்படுகிறது. ஓ! பாரதரே, அவர்களுக்கிடையிலான நிலையில் உண்மையில் வேறு இருக்கிறதா?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனுக்கு}, “ஓ! பிருதையின் மகனே, பல்வேறு செயல்களின் மூலம் மனிதர்கள் பல்வேறு உலகங்களை அடைகின்றனர். அறவொழுக்கம் கொண்டவர்கள் இன்பலோகங்களை அடைகின்றனர், அதே வேளையில் பாவம் நிறைந்தவர்கள், துன்பம் நிறைந்த உலகங்களை அடைகின்றனர்.(2) ஓ! மகனே, இதுதொடர்பாகத் தவசியான கௌதமருக்கும், வாசவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(3) கௌதமர் என்ற பெயரையுடையவரும், மென்மையானவனும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவரும், புலன்கள் அனைத்தையும் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டவருமான குறிப்பிட்ட பிராமணர், தாயை இழந்து உற்சாகமற்ற நிலையில் இருந்த ஒரு யானைக்குட்டியைக் கண்டார்.(4) கருணை நிறைந்தவரும், நோன்புகள் நோற்பதில் உறுதியானவருமான அந்தத் தவசி அந்த யானைக் குட்டியை வளர்த்தார். நீண்ட காலம் கழித்து அந்தச் சிறு விலங்கு பெரிய, வலிமைமிக்க யானையாக வளர்ந்தது.(5)

ஒருநாள், இந்திரன், மன்னன் திருதராஷ்டிரனின் வடிவை ஏற்றுக் கொண்டு, மலையைப் போன்று பெரிதாக இருந்ததும், மதநீர் பெருகி வழிந்ததுமான அந்த வலிமைமிக்க யானையை அபகரித்தான்.(6) இழுத்துச் செல்லப்படும் யானைக் கண்டவரும், கடும் நோன்புகள் நோற்பவருமான பெரும்பதவசி கௌதமர், மன்னன் திருதராஷ்டிரனிடம்,(7) “ஓ! நன்றிகெட்ட திருதராஷ்டிரா, என் யானைக் களவாடாதே. பெரும் துன்பத்துடன் நான் அஃதை என் மகனைப் போலவே வளர்த்து வந்தேன். அறவோருக்கிடையில் ஏழு சொற்கள் பரிமாறப்படுவதிலேயே நட்பு உதிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, ஒரு நண்பனுக்குத் தீங்கிழைக்கும் பாவம் உன்னை அண்டாது பார்த்துக் கொள்வாயாக.(8) ஓ! மன்னா, எனக்காக விறகும், நீரும் கொண்டு வருவதும், நான் வெளியே சென்றிருக்கும்போது ஆசிரமத்தைப் பாதுகாப்பதும், கற்றுக் கொடுப்பவருக்குக் கீழ்ப்படிவதும், அடக்கமானதும், ஆசானின் ஆணைகளைச் செய்வதில் கவனமுள்ளதும், மென்மையானதும், நன்கு பயிற்சி பெற்றதும், நன்றிநிறைந்ததும், எனக்கு மிகவும் அன்பானதுமான இந்த யானையைக் கொண்டு போகாதே. என்னுடைய எதிர்ப்பையும், கதறல்களையும் அலட்சியம் செய்து அதைக் கொண்டுபோகாதே” என்றார்.(9,10)

திருதராஷ்டிரன் {கௌதமரிடம்}, “நான் உமக்கு ஓராயிரம் பசுக்களையும், நூறு பணிப்பெண்களையும், ஐநூறு தங்க நாணயங்களையும் தருகிறேன். மேலும், ஓ! பெரும் முனிவரே, பல்வேறு வகைச் செல்வங்களையும் உமக்குத் தருகிறேன். யானைகளைக் கொண்டு பிராமணர்களுக்கு என்ன பயன் ஏற்படப்போகிறது?” என்று கேட்டான்.(11)

கௌதமர் {திருதராஷ்டிரனான இந்திரனிடம்}, “ஓ! மன்னா, உன் பசுக்கள், பணிப்பெண்கள், தங்கநாணயங்கள், பல்வேறு ரத்தினங்கள் மற்றும் பல்வேறு வகைச் செல்வங்களையும் நீயே வைத்துக் கொள்வாயாக. ஓ! ஏகாதிபதி, செல்வத்தைக் கொண்டு பிராமணர்களுக்கு ஆவதென்ன?” என்று கேட்டார்.(12)

திருதராஷ்டிரன், “யானைகளைக் கொண்டு பிராமணர்களுக்குப் பயனேதுமில்லை. ஓ! கல்விமானான பிராமணரே உண்மையில் யானைகள் அரச வகையினருக்கானவையே. யானைகளில் முதன்மையான இந்த விலங்கை என் வாகனப் பயன்பாட்டுக்காகக் கொண்டு செல்வதால் நான் எந்தப் பாவத்தையும் இழைத்ததாகக் கருதமுடியாது. ஓ! கௌதமரே, நீர் இவ்வாறு என்னைத் தடுக்காதீர்” என்றான்.(13)

கௌதமர், “ஓ! சிறப்புமிக்க மன்னா, அறவோர் இன்பமாகவும், பாவிகள் துன்பத்துடனும் வாழும் யமலோகத்திற்குச் சென்றாவது நான் என் யானையை உன்னிடம் இருந்து பெறுவேன்” என்றார்.(14)

திருதராஷ்டிரன், “(அறச்) செயலேதும் செய்யாதவர்கள், நம்பிக்கையற்றவர்கள், நாத்திகர்கள், பாவம் நிறைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்கள், எப்போதும் புலன்களை நிறைவடையச் செய்பவர்கள் ஆகியோர் மட்டுமே யமலோகம் சென்று துன்பத்தை அனுபவிப்பார்கள். திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான், உயர்ந்த உலகத்திற்கே செல்வான்” என்றான்.(15)

கௌதமர், “யமலோகத்தில் மனிதர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். அங்கே பொய்யேதும் சொல்ல முடியாது. அவ்விடத்தில் உண்மை மட்டுமே நிலைத்திருக்கும். அங்கே வலியோரை பலவீனர் தண்டிக்கிறார்கள். அங்கே {ஸம்யமினி எனும் அந்த யமபட்டணத்திற்குச்} சென்று நான் உன்னிடம் இருந்து இந்த யானையைப் பலவந்தமாகப் பெறுவேன்” என்றார்.(16)

திருதராஷ்டிரன், “ஓ! பெருந்தவசியே செருக்கால் போதையுண்டிருக்கும் மனிதர்களும், தமக்கை, தந்தை, தாய் ஆகியோரிடம், பகைவரிடம் நடந்து கொள்வது போல நடப்பவர்களும்தான் அத்தகைய உலகத்திற்குச் செல்வார்கள். உண்மையில், நான் அங்கே செல்லப் போவதில்லை உயர்ந்த உலகத்திற்கே செல்வேன்” என்றான்.(17)

கௌதமர், “அனைத்து வகை இன்பங்களுக்கும், வசதிகளுக்கும் தகுந்த உயர்ந்த அருளைக் கொண்ட மனிதர்கள், மந்தாகினி என்றழைக்கப்படும் மன்னன் வைஸ்வரணனுடைய {குபேரனுடைய} உலகத்தை அடைகிறார்கள். (அங்கே வசிப்பவர்களுக்குத் தங்கள் ஆடல் பாடல்களால் மகிழ்வூட்டிக் கொண்டு) கந்தர்வர்களும், யக்ஷர்களும், அப்சரஸ்களும் அங்கே வாழ்கிறார்கள். ஓ! மன்னா, அங்கேயும் சென்று என் யானையைத் தருவதற்கு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(18)

திருதராஷ்டிரன், “விருந்தினருக்கான விருந்தோம்பலை நோன்பாகக் கருதுவோரும், (வேறு நோக்கங்களைக் கொண்ட) நல்ல நோன்புகளை நோற்போரும், பிராமணர்களுக்கு உறைவிடமளிப்பவர்களும், தங்களைச் சார்ந்திருப்போர் அனைவருக்கும் பகிர்ந்தளித்தபிறகு எஞ்சியிருப்பதை உண்பவர்களும், குபேரனின் மந்தாகினி என்றழைக்கப்படும் உலகத்தை அலங்கரிப்பார்கள். (எனக்கு) ஓர் உயர்ந்த உலகம் ஒதுக்கப்பட்டிருப்பதால் நான் அங்கே செல்ல மாட்டேன்” என்றான்.(19)

கௌதமர், “கின்னரர்களின் இனிய குரலை எதிரொலிப்பதும், பரந்து விரிந்த கிளைகளைக் கொண்ட {ஸுதர்சனை என்றழைக்கப்படும்} அழகிய ஜம்பு {நாவல்} மரங்களால் அருளப்பட்டதும், மலர்கள் நிறைந்ததுமான மேருவின் {மேரு மலையில்} சிகரத்திலுள்ள இனிமைநிறைந்த காடுகளுக்கு நீ சென்றால், நான் அங்கேயும் வந்து இந்த யானையை என்னிடம் தருவதற்கு உன்னைக் கட்டாயப்படுத்துவேன் ” என்றார்.(20)

திருதராஷ்டிரன், “ஓ! பெரும் முனிவரே, மென்மையான இயல்புகளைக் கொண்டவர்களும், வாய்மைக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களும், சாத்திரப் பெருங்கல்வி கற்றவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களும், வரலாறுகள் அனைத்துடன் கூடிய புராணங்களைப் படிப்பவர்களும், புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவர்களும், பிராமணர்களுக்குத் தேனைக் கொடையளிப்பவர்களுமான பிராமணர்களே அத்தகை உலகங்களுக்குச் செல்வார்கள். நான் உயர்ந்த உலகத்திற்கே செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்ல மாட்டான். வேறு இன்பலோகம் எதையும் நீர் நன்கறிந்திருந்தால் அது குறித்து எனக்குச் சொல்வீராக, {இவ்வளவு வேகமாகச் செல்லும்} நான் அங்கேயும் செல்லலாம்” என்றான்.(21,22)

கௌதமர், “நாரதருக்குரியதும், அவரால் மிகவும் விரும்பப்படுவதும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டதும், கின்னர இளவரசனின் மெல்லிசைப் பாடல்களின் எதிரொலியுடன் கூடியதும், கந்தர்வர்களுக்கும் அப்சரஸ்களுக்கும் நித்திய வசிப்பிடமாக இருப்பதுமான காட்டுக்கு நீ சென்றால், நான் அங்கேயும் உன்னைப் பின்தொடர்ந்து வந்து இந்த யானையை என்னிடம் தருவதற்குக் கட்டாயப்படுத்துவேன் ” என்றார்.(23)

திருதராஷ்டிரன், “ஒருபோதும் பிச்சை கேட்காதவர்களும், இசையையும், நடனத்தையும் விளைவிப்பவர்களும், இன்பமாகத் திரிபவர்களுமாக இருப்பவர்கள் அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். ஓ! பெரும் முனிவரே, நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில், திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(24)

கௌதமர், “ஓ! மன்னா, எங்கே உத்தரக் குருக்கள் அழகுடன் சுடர்விட்ட படியே தேவர்களின் துணையுடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்துகிறார்களோ, எங்கே நெருப்பில் பிறந்தவர்களும், நீரில் பிறந்தவர்களும், மலைகளில் பிறந்தவர்களும் மகிழ்ச்சியாக வசிக்கிறார்களோ,(25) எங்கே அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையைச் சக்ரன் பொழிகிறானோ, எங்கே பெண்கள் போக்குவரத்து மற்றும் ஒழுக்கத்தைக் கட்டுப்படுத்தும் எவ்வகை விதிகளாலும் கட்டுப்படுத்தப்படாமல் முற்றான சுதந்தரத்துடன் வாழ்கிறார்களோ, எங்கே இரு பாலினத்தவர்களிடமும் பொறாமையுணர்வு இல்லையோ அங்கே நீ சென்றால், நான் அங்கேயும் வந்து இந்த யானையை என்னிடம் தருவதற்கு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(26)

திருதராஷ்டிரன், “ஓ! பெரும் முனிவரே, இன்பநுகர் பொருட்கள் அனைத்திலும் உள்ள ஆசைகளில் இருந்து விடுபட்டவர்களும், இறைச்சியைத் தவிர்த்தவர்களும், தண்டக்கோலை ஒருபோதும் எடுக்காதவர்களும் {தண்டிப்பதைக் கைவிட்டவர்களும்}, அசைவன மற்றும் அசையாதனவற்றுக்கும் ஒருபோதும் துன்பம் செய்யாதவர்களும், உயிரினங்கள் அனைத்தின் ஆன்மாவாகத் தம்மை நினைப்பவர்களும்,(27) ஓ! பெரும் முனிவரே, எவருக்கும் ஆசி கூறுவதன் மூலம் பிறரை ஒருபோதும் அழைக்காதவர்களும், ஆணவம் என்ற கருத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவர்களும், அனைத்து வகைப் பற்றுகளையும் கைவிட்டவர்களும், ஈட்டல் இழப்புகளையும், இகழ்ச்சி புகழ்ச்சிகளையும் இணையாக நினைப்பவர்களுமான மனிதர்களால் மட்டுமே அத்தகைய உலகங்களுக்குச் செல்ல முடியும். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(28)

கௌதமர், “இவற்றுக்கு அடுத்ததாக, சிறந்த நறுமணங்களால் மணங்கமழ்பவையும், அனைத்து வகை ஆசைகள் மற்றும் கவலையிகளில் இருந்து விடுபட்டவையும், அழகியவையுமான நித்திய உலகங்கள் இருக்கின்றன. அவை உயர்ஆன்ம மன்னன் சோமனின் வசிப்பிடங்களாக இருக்கின்றன. நீ அங்கே சென்றால், அங்கேயும் நான் வந்து இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(29)

திருதராஷ்டிரன், “எக்கொடையும் பெறாமல் எப்போதும் கொடையளிப்பவர்களும், பிறரிடம் இருந்து எத்தொண்டையும் ஒருபோதும் ஏற்காதவர்களும், தகுந்த மனிதருக்குக் கொடுக்க முடியாத எந்தப் பொருளையும் கொள்ளாதவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்பவர்களும், அனைவருக்கும் கருணை காட்டுபவர்களும்,(30) மன்னிக்கும் இயல்புகளைக் கொண்டவர்களும், பிறரைக் குறித்துத் தீங்கு பேசாதவர்களும், கருணை காப்புறை வீசி அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பவர்களும், எப்போதும் நடத்தையில் அறம்சார்ந்தவர்களுமான மனிதர்களால் மட்டுமே அத்தகைய உலகங்களுக்குச் செல்ல முடியும். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(31)

கௌதமர், “இவற்றுக்கு அடுத்ததாக, ஆசை, இருள் மற்றும் கவலையில் இருந்து விடுபட்டவையும், உயர் ஆன்ம சூரிய தேவனின் காலடியில் கிடப்பவையும், அழகில் சுடர்விடுபவையும், நித்திமானவையுமான வேறு உலகங்கள் இருக்கின்றன. நீங்க அங்கே சென்றால், அங்கேயும் நான் வந்து, இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(32)

திருதராஷ்டிரன், “ஓ! பெரும் முனிவரே, வேத கல்வியில் கவனமாக இருப்பவர்கள், ஆசான்களின் தொண்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், தவங்கள் மற்றும் சிறந்த நோன்புகளை நோற்பவர்கள், வாய்மையில் உறுதியானவர்கள், கீழ்ப்படியாமை, அல்லது ஆசான்களிடம் பகை என்ற மணம் கொண்ட எதையும் ஒருபோதும் சொல்லாதவர்கள், எப்போதும் விழிப்புடன் இருப்பவர்கள், பெரியோர்கள் மற்றும் ஆசான்களுக்குத் தொண்டு செய்ய எப்போதும் ஆயத்தமாக இருப்பவர்கள், (மனத்திலும், உடலிலும்) தூய்மையாக இருப்பவர்கள், ஆன்மத் தூய்மை கொண்டவர்கள், வாக்கை அடக்கியவர்கள், வாய்மையில் உறுதியாக இருப்பவர்கள், வேதங்களை நன்கறிந்தவர்கள் ஆகியோர் அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(33,34)

கௌதமர், “அதற்குமடுத்து, அழகில் சுடர்விடுபவையும், சிறந்த நறுமணங்களால் மணங்கமழ்பவையும், ஆசையில் இருந்து விடுபட்டவையும், கவலைகள் ஏதும் அற்றவையுமான நித்திய உலகங்கள் இருக்கின்றன. அவை உயர் ஆன்ம மன்னன் வருணனின் வசிப்பிடமாக இருக்கின்றன. நீ அங்கே சென்றால், அங்கேயும் வந்து, இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(35)

திருதராஷ்டிரன், “சாதுர்மாஸ்யம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்றுத் தேவர்களை வழிபடுபவர்களும், நூற்றுப்பத்து வேள்விகளைச் செய்பவர்களும், வேதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு ஏற்புடைய வகையில் மூன்று வருடங்கள் நாள்தோறும் அர்ப்பணிப்புடனும், நம்பிக்கையுடனும், புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவர்களும்,(36) அனைத்துக் கடமைகளின் சுமையைவிட்டு விலகாமல் சுமப்பவர்களும், அறவோரால் நடக்கப்பட்ட பாதையில் உறுதியாக நடப்பவர்களும், அற ஆன்மா கொண்டோரால் பின்பற்றபட்ட ஒழுக்க நடைமுறைகளை உறுதியாகப் பின்பற்றுபவர்களுமான மனிதர்கள் மட்டுமே அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(37)

கௌதமர், “அவற்றுக்கும் மேல், ஆசை மற்றும் கவலையில் இருந்து விடுபட்டவையும், அடைதற்கரியவையும், அனைத்து மனிதர்களாலும் விரும்பப்படுபவையுமான இந்திரனின் உலகங்கள் இருக்கின்றன. ஓ! மன்னா, வலிமையும், சக்தியும் கொண்ட இந்திரனின் வசிப்பிடத்திற்கே சென்றாவது எனக்கு இந்த யானையைத் தருமாறு உன்னைக் கட்டையாப்படுத்துவேன்” என்றார்.(38)

திருதராஷ்டிரன், “நூறு வருடங்கள் வாழ்பவர்களும், வீரம் நிறைந்தவர்களும், வேதங்கற்றவர்களும், பக்தியுடன் வேள்விகளைச் செய்பவர்களுமான மனிதர்களே சக்ரனின் உலகத்திற்குச் செல்வார்கள். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில், திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(39)

கௌதமர், “சொர்க்கங்களுக்கு மேலே, மேன்மையான இன்பத்தைக் கொண்டவையும், அனைத்து வகை மகிழ்ச்சியாலும் நிறைந்தவையும், கவலை இல்லாதவையுமான பிரஜாபதிகளின் உலகங்கள் இருக்கின்றன. எவரிடம் இருந்து படைப்பு உண்டானதோ அந்தப் பலமிக்கவர்களுக்குச் சொந்தமான அவை அனைத்து மனிதர்களாலும் விரும்பப்படுகின்றன. நீ அங்கே சென்றால், அங்கேயும் வந்து இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்” என்றார்.(40)

திருதராஷ்டிரன், “ராஜசூய வேள்வியின் நிறைவில் நீராடியவர்களும், அற ஆன்மா கொண்டவர்களும், தங்கள் குடிமக்களை உரிய முறையில் பாதுகாத்தவர்களும், குதிரை வேள்வியின் நிறைவில் புனித நீரால் தங்கள் அங்கங்களைக் கழுவியவர்களுமான மன்னர்களே அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(41)

கௌதமர், “அவற்றுக்கு அடுத்து, இனிய நறுமணங்களால் மணங்கமழ்பவையும், ஆசையிலிருந்து விடுபட்டவையும், கவலைகள் அனைத்தையும் கடந்தவையும், அழகில் சுடர்விடுபவையுமான நித்திய உலகங்கள் இருக்கின்றன. ஒடுக்குமுறைகளே ஒருபோதும் இல்லாதவையும், அடைவதற்கரியவையுமான அவை கோலோகங்களாகும் {கோ=பசு_க்களின் உலகம்}. நீ அங்கே சென்றால், அங்கேயும் வந்து இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னை நான் வற்புறுத்துவேன்” என்றார்.(42)

திருதராஷ்டிரன், “ஆயிரம் பசுக்களைக் கொண்டவனும், ஒவ்வொரு வருடமும் நூறு பசுக்களைக் கொடையளிப்பவனும், அல்லது நூறு பசுக்களைச் சொந்தமாகக் கொண்டு தன் சக்திக்குத் தக்கபடி வருடத்திற்குப் பத்துப் பசுக்களைக் கொடையளிப்பவனும், அல்லது பத்தோ, ஐந்தோ பசுக்களை மட்டுமே சொந்தமாகக்கொண்டு, அவற்றில் இருந்து ஒன்றைக் கொடையளிப்பவனும்,(43) நாள்தோறும் பிரம்மச்சரிய நோன்புகளைப் பயின்று முதிய வயதை அடைந்தவர்களும், வேத அறிவிப்புகளுக்குக் கீழ்ப்படிபவர்களும், மனோசக்தி கொண்டவர்களும், புனித நீர்நிலைகள் மற்றும் புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்பவர்களும் இன்பத்துடன் கோலோகத்தில் வசிக்கிறார்கள்.(44) பிரபாஸம், மானஸம் {மானஸஸரோவரம்}, புஷ்கரத் தடாகங்கள், மகாஸரஸ் என்றழைக்கப்படும் பெருந்தடாகம், நைமிசமெனும் புனிதக்காடுகள், பாஹுதை, கரதோயை,(45) கங்கை, கயசிரஸ், விபாசை, ஸ்தூலபாலுகை, கிருஷ்ணா, (பஞ்சாபின்) ஐந்து ஆறுகள், {தூஷ்ணீங்கங்கை, சனைர்க்கங்கை}, மஹாஹ்ரதம் என்றழைக்கப்படும் பெரிய தடாகம்,(46) கோமதி, கௌசிகி, சம்பை, ஸரஸ்வதி, திரஷத்வதி, யமுனை ஆகியவற்றுக்குச் செல்லும் சிறப்புமிக்கவர்களும், நோன்புகளை உறுதியாக நோற்பவர்களும், இந்தப் புனித நீர்நிலைகளுக்குப் பயணிப்பவர்களுமான பிராமணர்கள் நீர் சொன்ன உலகங்களுக்குச் செல்வார்கள். தெய்வீக உடல்களுடன் கூடியவர்களும், தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அவர்கள் எப்போதும் இனிய நறுமணங்களை வெளிப்படுத்தியபடியே இன்பத்திலும், மகிழ்ச்சியிலும் அவ்வுலகங்களுக்குச் செல்வார்கள். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்” என்றான்.(47,48)

கௌதமர், “அவற்றுக்கு அடுத்ததாக, குளிருக்கோ சிறிதும் அச்சமில்லாதவையும், வெப்பமோ, பசியோ, தாகமோ, துன்பமோ, கவலையோ, இன்பமோ இல்லாதவையும்,(49) ஏற்புடைய, ஏற்பில்லாத எவரும் இல்லாதவையும், நண்பனோ, பகைவனோ அற்றவையும், முதுமையோ, மரணமோ இல்லாதவையும், அறமோ, பாவமோ இல்லாதவையுமான உலகங்கள் இருக்கின்றன. ஆசையில் இருந்து விடுபட்டதும், ஒரே மாதிரியான மகிழ்ச்சி நிறைந்ததும், ஞானம் உள்ளதும், சத்வ குணம் கொண்டதுமான சுயம்புபிரம்மனின் புனித வசிப்பிடத்திற்கே சென்றாலும், இந்த யானையை எனக்குத் தருமாறு நான் உன்னை வலியுறுத்துவேன்” என்றார்.(50,51)

திருதாரஷ்டிரன், “பற்றுகளில் இருந்து விடுபட்டோரும், தூய ஆன்மாக்களைக் கொண்டோரும், முதன்மையான நோன்புகளை நோற்பதில் உறுதியானவர்களும், மன அமைதி சார்ந்த யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களும், (இப்பிறவியிலேயே) சொர்க்கத்தின் மகிழ்ச்சியை அடைந்தவர்களும், சத்வ குணம் கொண்டவர்களுமான மனிதர்கள் புனிதமான பிரம்மலோகத்தை அடைகிறார்கள். ஓ! பெருந்தவசியே, உம்மால் திருதராஷ்டிரனை அங்கே காண இயலாது” என்றான்.(52,53)

கௌதமர், “எங்கே முதன்மையான ரதந்தரங்கள் பாடப்படுகின்றவோ, எங்கே பௌண்டரீக வேள்விகளைச் செய்வதற்காகப் புனிதக் குசப் புற்கள் விரவிய பீடங்கள் இருக்கின்றனவோ, சோமம் பருகும் பிராமணர்கள் எங்கே சிறந்த வாகனங்களில் பயணிக்கிறார்களோ, அங்கே சென்றாலும், இந்த யானையைத் தருமாறு நான் உன்னை வற்புறுத்துவேன்.(54) அண்டத்திலுள்ள உலகங்கள் அனைத்தின் ஊடாக உலவும் நீ, நூறு வேள்விகளைச் செய்தவனும், விருத்திரனைக் கொன்றவனுமான தேவன் {இந்திரன்} என்று நினைக்கிறேன். நான் மனோபலவீனத்துடன் உன்னிடம் பேசிய சொற்களினால் எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை என நம்புகிறேன்” என்றார்.(55)

நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, “ஆம், நான் மகவத்தே {மகவானே}. நான் இந்த யானையைப் பிடிப்பதற்காக மனிதர்களின் உலகத்திற்கு வந்தேன். நான் உம்மை வணங்குகிறேன். எனக்கு ஆணையிடுவீராக. நீர், சொல்ல விரும்புபவை அனைத்தையும் நான் நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்” என்றான்.(56)

கௌதமர், “ஓ! தேவர்களின் தலைவா, வெண்ணிறம் கொண்டதும், பத்து வயதே கொண்ட குட்டியுமான இந்த யானையை எனக்குக் கொடுப்பாயாக. நான் இஃதை என் பிள்ளையாகவே வளர்த்தேன். இந்தக் காடுகளில் வசித்து என் கண் முன்னே வளர்ந்த இஃது என் அன்புக்குரிய தோழனாயிருக்கிறது. நீ பிடித்து இழுத்துச் செல்ல விரும்பும் என் பிள்ளையை விடுவிப்பாயாக” என்றார்.(57)

நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, “ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, உமது மகனாக இருக்கும் இந்த யானை, விருப்பத்துடன் உம்மைக் கண்டு உம்மிடம் வருகிறது. தன் துதிக்கையினால் உமது பாதத்தை நுகர்கிறது பார்ப்பீராக. உமக்கு என் வணக்கம். என் நன்மைக்கு வேண்டுவீராக” என்றான்.(58)

கௌதமர், “ஓ! தேவர்களின் தலைவா, நான் எப்போதும் உன் நன்மையையே நினைக்கிறேன். நான் எப்போதும் உன்னை வழிபடுகிறேன். ஓ! சக்ரா, நீயும் எனக்கு உன் அருளை வழங்குவாயாக. உன்னால் கொடுக்கப்படும் இந்த யானையை நான் ஏற்கிறேன்” என்றார்.(59)

நூறு வேள்விகளைச் செய்த தேவன், “உயர் ஆன்மாவைக் கொண்டவர்களும், வாய்மையைப் பின்பற்றுவதில் உறுதியாக இருப்பவர்களும், தங்கள் இதயங்களில் வேதங்கள் நடப்பட்டவர்களுமான முதன்மையான முனிவர்கள் அனைவருக்கும் மத்தியில் உம்மால் மட்டுமே என்னை அடையாளம் காண முடிந்தது. இந்தக் காரணத்திற்காக நான் உம்மிடம் பெரும் நிறைவுடன் இருக்கிறேன்.(60) எனவே, ஓ! பிராமணரே, உமது மகனின் துணையுடன் நீர் விரைவில் என்னிடம் வருவீராக. பேரின்பம் கொண்ட பல்வேறு உலகங்களை எந்தத் தாமதமும் இல்லாமல் ஒரே நாளில் அடைவதற்கு நீர் தகுந்தவராவீர்” என்றான்”.(61)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்தச் சொற்களைச் சொன்ன வஜ்ரதாரி {இந்திரன்}, கௌதமரையும், அவருடன் அவரது மகனான யானையையும் முன்னிட்டு அழைத்துக் கொண்டு தன்னுடன் அறவோராலும் அடைதற்கரிதான சொர்க்கத்திற்குச் சென்றான்.(62) இந்த வரலாற்றை ஒவ்வொரு நாளும் புலனடக்கத்துடன் கேட்பவன், அல்லது உரைப்பவன், (தன் மரணத்திற்குப் பிறகு) கௌதமரைப் போலவே பிரம்மலோகத்தை அடைவான்” {என்றார் பீஷ்மர்}.(63)

உபவாஸ மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 103-உபவாஸத்தின் சிறப்பு மற்றும் பிராமண வாக்கின் சிறப்பு ஆகியவற்றைக் குறித்துப் பிரம்மனுக்கும் பகீரதனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பல்வேறு வகைக் கொடைகள், ஆன்ம அமைதி, வாய்மை, கருணை, ஒருவன் மணந்து கொண்ட மனைவியிடம் நிறைவடைவது, கொடையின் பலன்கள் ஆகியவற்றைக் குறித்து நீர் எங்களுக்குச் சொன்னீர்.(1) ஓ! பாட்டா, தவங்களைவிட யாருடைய பலமும் மேன்மையானதல்ல என்பதை நீர் அறிவீர். உயர்ந்த தவமாக அமைவது எது என்பதைக் குறித்து எங்களுக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் நோற்கும் தவ வகையானது அவன் அடையும் இன்பலோகத்திற்குத் தொடர்புடையதாக இருக்கிறது. ஓ! குந்தியின் மகனே, உணவைத் தவிர்ப்பதைவிட மேன்மையான தவம் வேறேதும் இல்லை என்றே நான் கொள்கிறேன்.(3) இது தொடர்பாகப் பகீரதனுக்கும், சிறப்புமிக்க (படைப்பின் பெரும்பாட்டனான) பிரம்மனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை சொல்லப்படுகிறது.(4) ஓ! பாரதா, பகீரதன், தேவலோகம், கோலோகம், முனிவர்களின் உலகம் {ரிஷிலோகம்} ஆகியவற்றையும் கடந்த உலகத்தை அடைந்ததாக நாம் கேள்விப்படுகிறோம்.(5)

ஓ! ஏகாதிபதி, இதைக் கண்ட பெரும்பாட்டன் பிரம்மன், பகீரதனிடம், “ஓ! பகீரதா, அடைவதற்கரிதான இந்த லோகத்தை நீ எவ்வாறு அடைந்தாய்?(6) ஓ !பகீரதா, கடுந்தவங்களைப் பயிலாமல் தேவர்களோ, கந்தர்வர்களோ, மனிதர்களோ இங்கே வருவதில் வெல்வதில்லை. உண்மையில் இவ்வுலகத்தை நீ எவ்வாறு அடைந்தாய்?” என்று கேட்டான்.(7)

பகீரதன் {பிரம்மனிடம்}, “எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்கும் பிராமணர்களுக்கு நான் நூறாயிரம் பொற்காசுகளைக் கொடையாக அளித்தேன். ஓ! கல்விமானே, அந்தக் கொடைகளின் பலனாக நான் இவ்வுலகை அடையவில்லை.(8) நான் ஏகராத்ரி வேள்வியைப் பத்துமுறையும், பஞ்சராத்ரி வேள்வியைப் பல முறையும் செய்திருக்கிறேன். ஏகாதசராத்ரி வேள்வியைப் பதினோரு முறை செய்திருக்கிறேன். ஜோதிஷ்டோமம் என்னால் நூறு முறை செய்யப்பட்டிருக்கிறது. எனினும், அவ்வேள்விகளின் பலன்களால் நான் இந்த இன்பலோகத்தை அடையவில்லை[1].(9) கடுந்தவங்களைப் பயின்றவாறு புனிதமான ஜானவியின் {கங்கையின்} அருகில் நூறு ஆண்டுக் காலம் தொடர்ந்து வாழ்ந்து வந்தேன். அங்கே ஆயிரம் ஆண்களையும் மற்றும் எண்ணற்ற பெண் அடிமைகளையும் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன்[2].(10) புஷ்கரத் தடாகத்தின் அருகில் நூறாயிரம் முறை நூறாயிரம் குதிரைகளையும், இருநூறாயிரம் பசுக்களையும் பிராமணர்களுக்குக் கொடையளித்திருக்கிறேன்.(11) பேரழகுடையவர்களும், தங்க நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஆயிரம் காரிகையரையும், பசும்பொன்னாலாய ஆபரணங்களுடன் கூடிய இன்னும் அறுபதாயிரம் பேரையும் நான் கொடையளித்திருக்கிறேன். எனினும், இந்தச் செயல்களின் பலன்களால் நான் இவ்வுலகத்தை அடைவதில் வெல்லவில்லை[3].(12)ஓ! அண்டத்தில் தலைவா, கோஸவம் என்ற பெயரில் அறியப்படும் வேள்விகளைச் செய்து, தங்கள் கன்றுடன் கூடியவையும், காலத்தில் பால் தரவல்லவையும், தங்கப்பாத்திரத்துடன் கூடியவையும், பால் கறப்பதற்கான வெண்கலப்பாத்திரம் ஒன்றுடன் கூடியவையுமான பத்துப் பசுக்களை ஒவ்வொரு பிராமணருக்கும் கொடுப்பது என்ற வீதத்தில் பத்து அற்புதங்கள் அளவுக்குப் பசுக்களைக் கொடையளித்தேன்.(13) சோமவேள்விகள் பலவற்றைச் செய்து, பால் தரவல்லவையும், முதல்கன்றை ஈன்றவையுமான பத்துப் பசுக்களை ஒவ்வொரு பிராமணர்களுக்கும் கொடுத்து, ரோஹிணி என்ற பெயரில் அறியப்படும் வகையைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பசுக்களையும் அவர்களுக்குக் கொடையளித்தேன்.(14) மேலும் பால் தரும் பசுக்களை இருபது பிரயுதங்கள் அளவுக்குப் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன். ஓ! பிரம்மா, அந்தக் கொடைகளின் பலனால் நான் இந்த இன்பலோகத்தை அடைவதில் வெல்லவில்லை.(15) வெண்ணிறம் கொண்டவையும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பால்ஹீக இனத்தைச் சேர்ந்தவையுமான நூறாயிரம் குதிரைகளையும் நான் கொடையளித்தேன். எனினும், அச்செயல்களுக்கான பலன்களின் மூலம் நான் இந்த உலகத்தை அடையவல்லை.(16) ஓ! பிரம்மா, எட்டு கோடி தங்கநாணயங்களை மேலும் மற்றொரு பத்து கோடியையும் நான் செய்த ஒவ்வொரு வேள்வியிலும் கொடுத்திருக்கிறேன். எனினும், அந்தக் கொடைகளின் பலனால் நான் இந்த இன்பலோகத்தை அடையவில்லை.(17)

ஓ! பெரும்பாட்டனே, மேலும் நான் பச்சை நிறம் கொண்டவையும், கருப்பு காதுகளைக் கொண்டவையும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான பதினேழு கோடி {17,00,00,000} குதிரைகளைக் கொடையளித்திருக்கிறேன்.(18) மேலும், பேரளவு கொண்டவையும், உழுமுனையை {கொழுவைப்} போன்ற பெரும்பற்களைக் கொண்டவையும், பத்மங்கள் என்றழைக்கப்படும் சுழிகளைத் தன் உடலில் கொண்டவையும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான பதினேழாயிரம் {17,000} யானைகளையும் கொடையளித்திருக்கிறேன்.(19) ஓ! பெரும்பாட்டா, தங்கத்தாலான அங்கங்களைக் கொண்டவையும், பல்வேறு தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான பத்தாயிரம் {10,000} தேர்களையும் நான் கொடையளித்திருக்கிறேன்.(20) குதிரைகள் பூட்டப்பட்ட வேறு தேர்கள் ஏழாயிரமும் {7,000} நான் கொடையளித்திருக்கிறேன். அவற்றில் பூட்டப்பட்ட குதிரைகள் யாவும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்கள் வேள்வி தக்ஷிணைகளாகவும், வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதே வகையைச் சார்ந்தவையாகவும் இருந்தன.(21) ஆற்றல் மற்றும் செய்த வேள்விகளால் தீர்மானிக்கப்படுபவர்களும், இந்திரனின் பலத்தைக் கொண்டவர்களுமான ஓராயிரம் வீரர்களை நான் செய்த பத்து பெரும் வாஜபேய வேள்விகளில் கொடையளித்திருக்கிறேன்.(22) ஓ! பெரும்பாட்டனே, பெருமளவில் பணத்தைச் செலவு செய்து எட்டு ராஜசூய வேள்விகளைச் செய்து, (அவற்றைச் செய்து கொடுத்த பிராமணர்களுக்கு) போரில் வெல்லப்பட்டவர்களும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தைக் கொண்டவர்களுமான ஆயிரம் மன்னர்களைக் கொடையளித்தேன்[4]. எனினும், அச்செயல்களால் கிட்டிய பலன்களின் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(23,24)ஓ! அண்டத்தின் தலைவா, அந்த வேள்விகளில் நான் கொடுத்த கொடைகள் கங்கையின் ஓடையைப் போல அபரிமிதமாக இருந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இரண்டாயிரம் யானைகளையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அதே அளவு குதிரைகளையும், சிறந்த வகையிலான நூறு கிராமங்களையும் நான் ஒவ்வொரு பிராமணருக்கும் கொடுத்தேன்.(25) உண்மையில், நான் இவற்றை அடுத்தடுத்து மூன்று முறை ஒவ்வொரு பிராமணருக்கும் கொடுத்தேன். இமயச் சாரலில் தடுக்கப்பட முடியாத ஓடையாக (சொர்க்கத்தில் இருந்து பாய்ந்து) மஹாதேவனின் தலையில் தாங்கப்பட்ட கங்கையின் அருகில் தவம் செய்து கொண்டும், அமைதியான ஆன்மாவைப் பின்பற்றியும், பேச்சைக் கட்டுப்படுத்தியவாறும், முறைப்படுத்தப்பட்ட உணவுமுறையில் நீண்ட காலம் வாழ்ந்து வந்தேன். ஓ! பெரும்பாட்டனே, இந்தச் செயல்களின் பலன் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(27) சமியை {சமியென்று சொல்லப்படும் வன்னிமரக் கட்டைகளை வீசி), பௌண்டரீகம் தவிர, ஒரே நாளில் நிறைவடையக்கூடிய, பனிரெண்டு நாட்களில் மற்றும் பதிமூன்று நாட்களில் முடிவடைக்கூடிய {திரயோதசாஹம், துவாதசாஹாம்} வேள்விக்கூட்டங்களைச் செய்து நான் தேவர்களைத் துதித்தேன். அந்த வேள்விகளில் எவற்றின் பலனினாலும் நான் இவ்வுகலை அடையவில்லை[5].(28)வெண்ணிறம் கொண்டவையும், அழகிய திமில்களைக் கொண்டவையும், தங்கத்தால் மறைக்கப்பட்ட கொம்புகளைக் கொண்டவையுமான எட்டாயிரம் {8,000} காளைகளை நான் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன். அவற்றும் கழுத்து நிறையத் தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மனைவிகளையும் {பசுக்களைக்} கொடுத்தேன்[6].(29) மேலும் நான் பொற்குவியல்களையும், பிறவகைச் செல்வங்களையும் கொடையளித்தேன். உண்மையில், நான் ரத்தினங்கள் மற்றும் விலைமதிப்புமிக்கக் கற்களின் மலைகளைக் கொடையளித்தேன். செல்வங்களும், தானியங்களும் நிறைந்தவையான ஆயிரக்கணக்கான கிராமங்கள் என்னால் கொடையளிக்கப்பட்டன.(30) நான் செய்த பெரும் வேள்விகள் பலவற்றில், முதல் கன்றை ஈன்றவையான நூறாயிரம் பசுக்களை என் தன்நினைவுடன் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன். எனினும், அச்செயல்களினால் கிட்டிய பலன்களின் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(31) பதினோரு நாட்களில் நிறைவடையும் வேள்வி {ஏகாதசாஹம்} ஒன்றில் நான் தேவர்களைத் துதித்தேன். பனிரெண்டு நாட்களில் முடிவடையும் வேள்விகளில் {த்விர்த்வாதசாஹம்} இருமுறை நான் அவர்களைத் துதித்திருக்கிறேன். பல முறை நடைபெற்ற குதிரைவேள்விகளிலும் நான் அவர்களைத் துதித்திருக்கிறேன். ஆர்காயண வேள்வியை நான் பதினாறு முறை செய்திருக்கிறேன். அச்செயல்களின் பலன்கள் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(32)ஒரு யோஜனை நீள அகலம் கொண்டதும், ரத்தினங்களாலும் பொன்னாலும் அலங்கரிக்கப்பட்ட காஞ்சன மரங்களைக் கொண்டதுமான காட்டை ஒவ்வொரு பிராமணருக்கும் கொடையளித்தேன். அந்தச் செயலின் பலனால் நான் இவ்வுலகை அடையவில்லை.(33) மேன்மையான தகுதியைக் கொண்ட துராயண நோன்பை முப்பது வருடங்கள் நோற்றுக் கோபத்தில் இருந்து முற்றிலும் விடுபட்ட நான், ஒவ்வொரு நாளும் தொள்ளாயிரம் பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன்.(34) உண்மையில், ஓ! அண்டத்தின் தலைவா, நான் கொடுத்த அந்தப் பசுக்கள் ஒவ்வொன்றும் ரோகிணி இனத்தைச் சார்ந்தவையும், அந்த நேரத்தில் பால் தருபவையாகவும் இருந்தன. ஓ! தேவர்களின் தலைவா, அந்தச் செயல்களின் பலன்கள் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(35) ஓ! பிரம்மாவே, நான் ஒவ்வொரு நாளும் முப்பது நெருப்புகளை வழிபட்டேன். விலங்குகள் அனைத்தின் கொழுப்பும் நெருப்பில் ஊற்றப்பட்ட எட்டு வேள்விகளில் {ஸர்வமேதயாகங்களில்} நான் தேவர்களைத் துதித்திருக்கிறேன். மனிதக்கொழுப்பை நெருப்பில் ஊற்றிச் செய்யப்பட்ட ஏழு வேள்விகளில் {நரமேதயாகங்களில்} நான் அவர்களைத் துதித்திருக்கிறேன்.(36) ஆயிரத்து இருபத்தெட்டு விஸ்வஜித் வேள்விகளிலும் நான் அவர்களைத் துதித்திருக்கிறேன். ஓ! தேவர்கள் அனைவரின் தலைவரே, அந்த வேள்விகளின் பலன்களின் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(37) சரயூ, பாஹுதை, கங்கை ஆகியவற்றின் கரைகளிலும், நைமிசக் காடுகளிலும் நான் கோடிக்கணக்கான பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளித்திருக்கிறேன்.(38)

உண்ணா நோன்பெனும் விரதம் இந்திரனால் அறியப்பட்டிருந்தது. எனினும் அவன் அதை ரகசியமாக வைத்திருந்தான். பிருகுவின் வழித்தோன்றலான சுகரன், தவங்களினால் அடைந்த ஆன்மப் பார்வையின் மூலம் அந்த அறிவை அடைந்தார். சுடர்மிக்க சக்தியைக் கொண்ட உசானஸே இது குறித்து அண்டத்திற்கு அறிவித்தார். ஓ! வரமளிக்கும் தேவா, நான் அந்நோன்பை நோற்றிருக்கிறேன்.(39) நான் மிக மேன்மையான அந்நோன்பை நிறைவேற்றிய போது பிராமணர்கள் அனைவரும் என்னிடம் நிறைவடைந்தார்கள். ஓராயிரம் முனிவர்கள் அங்கே வந்தனர்.(40) ஓ! பலமிக்கத் தலைவா, அந்தப் பிராமணர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் என்னிடம் நிறைவடைந்தவர்களாக, “நீ பிரம்ம லோகத்திற்குச் செல்வாயாக” என்றனர். அந்நோன்பு பலனின் விளைவாலேயே நான் மிக மேன்மையான இன்பத்தைக் கொண்ட இந்த உலகை அடைவதில் வென்றேன். இதில் எந்த ஐயமும் இல்லை.(41) அனைத்துப் பொருட்களின் பரம ஆணையாளனால் காட்கப்பட்டு உண்ணாவிரதத்தின் பலன்களை முறையாக நான் விளக்கிச் சொன்னேன். என் கருத்தின்படி, உண்ணா நோன்பை {உபவாஸத்தை} விட உயர்ந்த தவம் ஏதும் கிடையாது. ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, நான் உம்மை வணங்குகிறேன். என்னிடம் நிறைவடைவீராக” என்றான் {பகீரதன்}”.(42)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், இவ்வாறு சொன்னவனும், மதிப்பனைத்திற்கும் தகுந்தவனுமான மன்னன் பகீரதன் தன் பேச்சை முடித்த போது அக்காரியத்திற்காக விதிக்கப்பட்ட சடங்குகளின் படி பிரம்மனால் அவன் கௌரவிக்கப்பட்டான்.(43) எனவே, ஓ! யுதிஷ்டிரா, உண்ணாநோன்பை நோற்று ஒவ்வொரு நாளும் பிராமணர்களை வழிபடுவாயாக. பிராமணர்களால் சொல்லப்படும் வார்த்தைகள் இம்மையிலும், மறுமையிலும் அனைத்தையும் நிறைவேற்றும்.(44) உண்மையில், ஆடைகள், உணவு, வெண்ணிற பசுக்கள், வசிப்பதற்கு நல்ல வீடுகள் மற்றும் மாளிகைகளைக் கொடையளிப்பதன் மூலம் பிராமணர்கள் நிறைவடையச் செய்யப்பட வேண்டும். பேராசையில் இருந்து விடுபட்டு, அனைவராலும் அறியப்பட்ட மிக மேன்மையான இந்த நோன்பை நீ பயில்வாயாக” {என்றார் பீஷ்மர்}.(45)

ஆசாரங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 104-ஆயுள் குறைபாடு அல்லது நீண்ட ஆயுளுக்கான காரணங்கள்; செய்யப்பட வேண்டிய, தவிர்க்கப்பட வேண்டிய செயல்கள்; நன்மைகளுக்குக் காரணமான ஆசாரங்கள், அதாவது ஒழுக்கவிதிகள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மனிதன் நூறு வருடங்கள் நீளும் வாழ்வுக்காலத்தையும், சக்தியையும், கருத்தில் கொள்ளத்தக்க அளவு வலிமையும் கொண்டவன் என்று சொல்லப்படுகிறது. ஓ! பாட்டா, அப்படியிருக்கையில் ஏன் மனிதர்கள் மிக இளமைக் காலத்திலேயே {சிறு வயதிலேயே} இறக்கிறார்கள்?(1) எதன் மூலம் ஒரு மனிதன் நீண்ட வாழ்நாளை {ஆயுளைப்} பெறுகிறான்? எதன் மூலம் குறைந்த வாழ்நாளைப் பெறுகிறான்? எதன் மூலம் ஒரு மனிதன் பெருஞ்சாதனைகளைச் சார்ந்திருக்கும் புகழை அடைகிறான். எதன் மூலம் அவன் செல்வத்தையும், செழிப்பையும் அடைகிறான்?(2) தவங்கள், பிரம்மச்சரியம், அமைதியாகப் புனித மந்திரங்களை உரைத்தல், மருந்து ஆகியவற்றில் எதன் மூலம் இது நேர்கிறது? செயல்கள், மனம், அல்லது வாக்கில் எது அதற்குக் காரமாகிறது ஓ! பாட்டா இதை எனக்கு விளக்குவீராக” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நீ கேட்பதை நான் சொல்லப் போகிறேன். உண்மையில், ஒருவன் குறுகிய காலம் வாழ்வதற்கும், நெடுங்காலம் வாழ்வதற்கும் உரிய காரணத்தைச் சொல்லப் போகிறேன்.(4) பெருஞ்சாதனைகளினால் உண்டாகும் புகழை அடைவதில் ஒருவன் வெல்லும் காரணத்தையும், செல்வத்தையும், செழிப்பையும் அடையும் காரணத்தையும் சொல்லப் போகிறேன். உண்மையில், ஒருவன் நன்மையை அடைய வேண்டி வாழ வேண்டிய வழிமுறைகள் குறித்தும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(5) ஒழுக்கத்தின் மூலமே ஒருவன் நீண்ட வாழ்நாளை அடைகிறான், மேலும் ஒழுக்கத்தின் மூலமே அவன் செல்வத்தையும், செழிப்பையும் அடைகிறான். உண்மையில், ஒழுக்கத்தின் மூலமே அவன் பெருஞ்சாதனைகளைச் சார்ந்திருக்கும் புகழை இம்மையிலும், மறுமையிலும் அடைகிறான்.(6) முறையற்ற, அல்லது தீய ஒழுக்கத்தைக்கொண்ட மனிதன் ஒருபோதும் நீண்ட வாழ்நாளை அடைவதில்லை. அத்தகைய மனிதனை அனைத்து உயிரினங்களும் அஞ்சுகின்றன, அவனால் ஒடுக்கப்படுகின்றன.(7) எனவே, ஒருவன் முன்னேற்றத்தையும், செழிப்பையும் விரும்பினால், அவன் முறையான நல்ல ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மங்கலமற்ற நிலையையும், பாவம் நிறைந்த ஒருவனின் துன்பத்தையும் அகற்ற வல்லது நல்லொழுக்கம்[1].(8)அறமானது தன் குறியீடாக ஒழுக்கத்தையே கொண்டிருக்கிறது {ஒழுக்கத்தினால் அறியப்படுவது அறம்}. நல்லவர்களாகவும், அறம்சார்ந்தவர்களாகவும் இருப்பவர்கள், தாங்கள் பின்பற்றும் ஒழுக்கதின் விளைவாலேயே அவ்வாறிருக்கிறார்கள். மேலும், நல்லொழுக்கத்தின் குறியீடுகள் நல்லோர் அல்லது அறவோரின் செயல்களின் மூலமே விளைகின்றன.(9) நியாயமாகச் செயல்படுபவனும், நற்செயல்களைச் செய்பவனுமான மனிதனை மக்கள் காணவில்லையென்றாலும், {அவனைக் குறித்துக்} கேள்விப்படுவதால் மட்டுமே கூட அவனை மதிப்பார்கள்.(10)

நாத்திகர்களாக இருப்பவர்கள், செயல்கள் ஏதும் அற்றவர்கள், ஆசான்களுக்குக் கீழ்ப்படியாதவர்கள், சாத்திர ஆணைகளை மீறுபவர்கள், கடமைகளைக் குறித்து அறியாதவர்கள், அவற்றை நோற்காதவர்கள், தீய ஒழுக்கம் கொண்டவர்கள் ஆகியோர் குறுகிய வாழ்நாளை வாழ்வார்கள்.(11) முறையற்ற நடத்தை கொண்டவர்கள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுபவர்கள், பாலினக் கலவியில் பழிபாவத்திற்கு அஞ்சாதவர்கள் ஆகியோர் குறுகிய வாழ்நாளே வாழ்ந்து மறுமையில் நரகிற்குச் செல்வார்கள்.(12) எந்தச் சாதனையுமற்றவர்களாக இருந்தாலும் நம்பிக்கையுள்ளவர்களாகவும், வன்மத்திலிருந்து விடுபட்டவர்களுமாகி ஒழுங்குமுறையையும், அறவொழுக்கத்தையும் பின்பற்றும் மனிதர்கள் நூறு வருடங்கள் வாழ்வார்கள்.(13) கோபத்தில் இருந்து விடுபட்டவனும், வாக்கில் வாய்மை நிறைந்தவனும், அண்டத்திலுள்ள எந்த உயிரினத்திற்கும் ஒருபோதும் தீங்கிழைக்காதவனும், வன்மமற்றவனும், நெறியுள்ளவனும், நேர்மையாளனுமான ஒருவன் நூறு வருடங்கள் வாழ்வதில் வெல்கிறான்.(14) எப்போதும் மண் ஓடுகளை உடைப்பவன், காலுக்கடியில் வளரும் துரும்பைக் கிள்ளுபவன், நகங்களைக் கடிப்பவன், எப்போதும் தூய்மையற்றிருப்பவன், மனத்தடுமாற்றம் கொண்டவன் ஆகியோர் ஒருபோதும் நீண்ட வாழ்நாளை அடைவதில் வெல்லமாட்டார்கள்.(15)

ஒருவன், பிரம்மமுகூர்த்தம் என்றறியப்படும் நேரத்தில் உறக்கத்தில் இருந்து விழித்து, அறம் மற்றும் பொருள் குறித்துச் சிந்திக்க வேண்டும். படுக்கையில் இருந்து எழுந்ததும் அவன் தன் முகத்தையும், வாயையும் கழுவிய பிறகு, மதிப்புமிக்க மனநிலையுடன் தனது கரங்களைக்கூப்பிக் காலை வேண்டுதல்களை {துதிகளைச்} சொல்ல வேண்டும்[2].(16) இதே வழியில் மாலைவேளை வரும்போதும் அவன் (வேறு மக்களிடம்) பேச்சைத் தவிர்த்து மாலை வேண்டுதல்களைச் சொல்ல வேண்டும். ஒருவன் உதிக்கும் சூரியனையோ, மறையும் சூரியனையோ பார்க்கக்கூடாது[3].(17) கிரகணக் காலத்திலோ, நீரின் பிம்பத்திலோ, நடுப்பகலில் நடுவானிலோ உள்ள சூரியனையும் அவன் ஒருபோதும் பார்க்கக்கூடாது. முனிவர்கள், பெரும் முறைமையுடன் இரு சந்திப்பொழுதுகளிலும் துதிப்பதன் விளைவால் அவர்கள் நீண்ட வாழ்நாளை அடைவதில் வெல்கிறார்கள்.(18) எனவே, ஒருவன் பேச்சைத் தவிர்த்து, இரு சந்திப்பொழுதுகளிலும் முறையாகத் தன் வேண்டுதல்களைச் சொல்ல வேண்டும் {துதிக்க வேண்டும்}. இரு சந்திப்பொழுதுகளிலும் தங்கள் வேண்டுதல்களைச் சொல்லாத பிராமணர்களைப் பொறுத்தவரையில், ஓர் அறம்சார்ந்த மன்னன் சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்வதில் அவர்களை நிறுவ வேண்டும். அனைத்து வகையை {வர்ணங்களைச்} சார்ந்த மனிதர்களும் அடுத்தவர் மனைவிகளுடன் ஒருபோதும் பாலினக் கலவி கொள்ளக்கூடாது.(19,20)அடுத்தவர் மனைவிகளுடன் பாலினக்கலவி புரிவதைவிட வாழ்நாளை மிகத் தீவிரமாகக் குறைப்பது வேறேதும் இல்லை.(21) பிறன்மனைநயப்பவன், தான் குற்றமிழைத்த பெண்களின் உடல்களில் உள்ள வியர்வைத்துளைகளின் எண்ணிக்கை அளவுக்குப் பல்லாயிரம் வருடங்கள் நரகில் வாழ்வான்.(22) ஒருவன் பிற்பகலில், தன் மயிரைச் சீர்படுத்தி, தன் கண்களுக்கு அஞ்சனந்தீட்டி, பற்களைக் கழுவியபிறகு தேவர்களை வழிபடவும் வேண்டும்.(23) ஒருவன் சிறுநீரையோ, மலத்தையோ பார்த்துக்கொண்டே இருக்கக்கூடாது, அல்லது அதில் நடக்கக்கூடாது, அல்லது தன் பாதத்தால் தீண்டக்கூடாது. ஒருவன் விடியற்காலையிலோ, நடுப்பகலிலோ, மாலை சந்தி காலத்திலோ,(24) அறியாத தோழனுடனோ, ஒரு சூத்திரனுடனோ, தனியாகவோ பயணம் புறப்படக்கூடாது. ஒருவன் சாலையில் நடந்து செல்லும்போது, {எதிர்ப்படும்} பிராமணன், பசுக்கள், மன்னர்கள்,(25) முதியவர், சுமை தூக்கி வருபவர், கருவுற்றிருக்கும், பெண் மற்றும் பலவீனர் ஆகியோருக்கு எப்போதும் வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும்.

ஒருவன் அறியப்பட்ட ஒரு பெரிய மரத்தைக் காணும்போது அதை வலம் வர வேண்டும். ஒருவன் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்திற்கு வரும்போது, தனது பயணத்தைத் தொடரும் முன்பு அதை வலம் வர வேண்டும். நடுப்பகலிலோ, நள்ளிரவிலோ, பொதுவாக இரவிலோ,(26) இரு சந்திப் பொழுதுகளிலோ நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களுக்கு ஒருவன் செல்லக்கூடாது. ஒருவன் மற்றொருவரால் அணியப்பட்ட காலணிகளையோ, ஆடைகளையோ ஒருபோதும் அணியக்கூடாது.(27) ஒருவன் எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்க வேண்டும், தன் கால்களை ஒருபோதும் பின்னிக் கொள்ளக்கூடாது. ஒருவன் புது நிலவு {அமாவாசை} நாளிலும், முழு நிலவு {பௌர்ணமி} நாளிலும், இரு பிறை அரைமாதங்களிலும் {வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில்} வரும் எட்டாவது சந்திர நாளிலும் {அஷ்டமியிலும்} பிரம்மச்சரிய நோன்பை நோற்கவேண்டும். ஒருவன் வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் உண்ணக்கூடாது. ஒருவன் ஒரு விலங்கின் முதுகில் உள்ள இறைச்சியை ஒருபோதும் உண்ணக்கூடாது. ஒருவன் பிறரை நிந்திப்பதையும், பிறரைக் குறித்து அவதூறு பேசுவதையும், அனைத்து வகை வஞ்சக நடத்தைகளையும் தவிர்க்க வேண்டும்[4].(28-30)ஒருவன் மற்றொருவரை சொற்கணைகளால் துளைக்கக்கூடாது. உண்மையில், ஒருவன் எந்தவிதமான கொடூரப் பேச்சையும் பேசக்கூடாது. தாழ்ந்த மற்றும் இழிந்த மனிதனிடம் இருந்து ஒருபோதும் கொடைபெறக்கூடாது. வேறு மக்களுக்குத் தொல்லையைக் கொடுக்கத் தகுந்தவையோ, மங்கலமற்றவையோ, பாவம்நிறைந்தவையோவான சொற்களை ஒருபோதும் பேசக்கூடாது.(31) சொற்கணைகள் வாயில் இருந்து பாய்கின்றன. அவற்றால் துளைக்கப்பட்டவன் பகலும், இரவும் வருந்துகிறான். ஞானமுள்ள மனிதன், வேறு மக்களின் முக்கிய அங்கங்களைத் துளைப்பதற்காக ஒருபோதும் அவற்றை ஏவக்கூடாது.(32) கணைகளால் துளைக்கப்பட்ட, அல்லது கோடரியால் வெட்டப்பட்ட காடு மீண்டும்வளரும். எனினும், விவேகமில்லாமல் பேசப்படும் சொற்களால் துளைக்கப்பட்ட மனிதன், மரணத்திற்கு வழிவகுக்கும் சீழ் பிடித்த புண்ணுக்குப் பலியாகிறான்.(33) கர்ணிகள், நாளீகங்கள், நாராசங்கள் ஆகியவற்றை உடலில் இருந்து பிடுங்கிவிட வல்லவையாகும். எனினும், சொற்கணைகள் இதயத்திலேயே பதிந்து கிடப்பதால் அவற்றை ஒருபோதும் பிரித்தெடுக்க முடியாது.(34) அங்க குறையுள்ளவனையோ, அங்கம் அதிகமுள்ளவனையோ, கல்வியற்றவனையோ, துன்பத்திலிருப்பவனையோ, கோரமானவனையோ {அழகற்றவனையோ}, பலமற்றவனையோ ஒருவன் குற்றங்கூற {பரிகசிக்கக்} கூடாது.(35)

நாத்திகம், வேதங்களை அவதூறு செய்வது, தேவர்களை நிந்திப்பது, வன்மம், செருக்கு, ஆணவம், கடுமை ஆகியவற்றை ஒருவன் தவிர்க்க வேண்டும்.(36) ஒருவன் கோபத்தினால் பிறரைத் தாக்க தண்டக்கோலை {தடியை} எடுக்கக்கூடாது. கற்பித்தல் நோக்கத்தில் மகன், அல்லது சீடனை மட்டுமே மென்மையாகத் தண்டிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.(37) ஒருவன் பிராமணர்களைக் குறித்துத் தவறாகப் பேசக்கூடாது; அதேபோல நட்சத்திரங்களை விரல் நீட்டிச் சுட்டிக் காட்டக்கூடாது. கேட்கப்பட்டாலும் குறிப்பிட்ட நாளின் சந்திர நாளை {பக்ஷத்தின் திதியை} ஒருவன் சொல்லக் கூடாது. அதைச் சொல்வதன் மூலம் ஒருவனுடைய வாழ்நாள் குறுகுகிறது.(38) இயற்கை அழைப்புகளுக்குப் பதிலளித்த பிறகோ, சாலையில் நடந்து வந்த பிறகோ ஒருவன் தன் பாதங்களைக் கழுவ {அலம்ப} வேண்டும். வேதங்கள் உரைக்க அமர்வதற்கோ, உணவை உண்பதற்கோ முன்பு ஒருவன் தன் பாதங்களைக் கழுவ வேண்டும்.(39) அறியப்படாததும் {பிறரால் பார்க்கப்படாததும்}, நீரினால் கழுவப்பட்டதும், நன்றாகப் பேசப்பட்டதுமான {வாக்கினால் புகழப்பட்டதுமான} இம்மூன்று மாசுகளும் தூய்மையானவை, புனிதமானவை, பிராமணர்களின் பயன்பாட்டுக்குத் தகுந்தவை எனத் தேவர்கள் கருதுகின்றனர்.(40)

ஸம்யாவம் {அரிசிச் சோறு}, கிருஸரம், இறைச்சி, சஸ்குலீ {முறுக்கு}, பாயஸம் ஆகியவற்றை ஒருவன் ஒருபோதும் தனக்காகச் சமைத்துக் கொள்ளக்கூடாது. இவை எப்போது சமைக்கப்பட்டாலும், தேவர்களுக்கே காணிக்கை அளிக்கப்பட வேண்டும்[5].(41) ஒருவன் ஒவ்வொரு நாளும் தன் நெருப்பைக் கவனிக்க {அக்னிஹோத்ரம் செய்ய} வேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் பிச்சையிட வேண்டும். அவன், பேச்சைக் கட்டுப்படுத்திப் பற்குச்சியினால் பற்களைத் தூய்மை செய்ய வேண்டும்.(42) ஒருவன் சூரியன் எழுந்த பிறகும் ஒருபோதும் படுக்கையில் கிடக்கக்கூடாது. எந்த நாளிலாவது அவன் சூரியனுக்கு முன் எழத் தவறினால், அவன் பாவக்கழிப்பைச் செய்ய வேண்டும். படுக்கையில் இருந்து எழுந்ததும் அவன் முதலில் தன் பெற்றோரையும், ஆசான்களையும், மதிக்கத்தகுந்த பெரியோரையும் வணங்க வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் நீண்ட வாழ்நாளை {ஆயுளைப்} பெறுகிறான். பற்குச்சியின் வேலை முடிந்ததும் அதைக் கைவிட்டு ஒவ்வொரு நாளும் புதியதையே பயன்படுத்த வேண்டும்.(43,44) ஒருவன் புதுநிலவு {அமாவாசை} மற்றும் முழு நிலவு {பௌர்ணமி} நாட்களில் அனைத்து வகை உணவையும் கைவிட்டு, {மற்ற நாட்களில்} சாத்திரங்களால் விலக்கப்படாத உணவையே உண்ண வேண்டும். அவன் தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, இயற்கையின் அழைப்புகளுக்கு வடக்கு நோக்கிப் பதிலளிக்க {சிறுநீர், மலம் கழிக்க} வேண்டும்[6].(45)ஒருவன் முதலில் தன் பற்களைக் கழுவாமல் தேவர்களை வழிபடக்கூடாது. மேலும் முதலில் தேவர்களை வழிபடாமல், தன் ஆசானையோ, வயதில் முதிர்ந்த ஒருவரையோ, ஓர் அறவோரையோ, ஞானம் கொண்டவரையோ தவிர்த்து வேறு யாரிடமும் செல்லக்கூடாது. ஞானமுள்ளவர்கள், பளபளப்பாக்கப்படாத, மாசுள்ள கண்ணாடியில் ஒருபோதும் தங்களைக் காணமாட்டார்கள்.(46,47) ஒருவன் தான் அறியாத பெண்ணுடனோ, கருவுற்றிருக்கும் பெண்ணுடனோ பாலினக் கலவியில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.(48) ஒருவன் வடக்கிலோ, மேற்கிலோ தலைவைத்து ஒருபோதும் உறங்கக்கூடாது. அவன் உடைந்ததும், தளர்ந்ததுமான படுக்கையில் படுக்கக்கூடாது.(49) ஒருவன் விளக்கின் உதவியுடன் முதலில் படுக்கையைச் சோதிக்காமல் அதில் படுக்கக்கூடாது. மேலும் தன் அருகில் (மனைவி போன்ற) மற்றொருவருடன் சேர்ந்து படுக்கக்கூடாது. அவன் ஒருபோதும் குறுக்குத் திசையில் படுக்கக்கூடாது. அவன் ஒருபோதும் நாத்திகர்களுக்கு அடங்கியிருக்கக்கூடாது, அல்லது அவர்களுக்கு இணக்கமான எதையும் செய்யக்கூடாது[7].(50)ஒருவன் ஓர் இருக்கையைத் தன் காலால் இழுத்து அதில் அமரக்கூடாது. ஒருவன் நிர்வாண நிலையிலோ, இரவிலோ ஒருபோதும் நீராடக்கூடாது.(51) புத்தியுள்ள ஒருவன் நீராடிய பிறகு தன் உறுப்புகளைத் தேய்க்கவோ, அழுத்தவோ கூடாது. முதலில் நீராடாமல் ஒருபோதும் {சந்தனம் போன்ற} களிம்புகளைத் தன் உடலில் பூசக்கூடாது. நீராடிய பிறகு அவன் ஒருபோதும் தன் ஆடையை (காய வைக்கும் நோக்கில்) காற்றில் அசைக்கக்கூடாது.(52) ஒருவன் ஒவ்வொரு நாளும் ஈரமான ஆடைகளை உடுத்தக்கூடாது. அவன் தான் அணியும் மலர்மாலைகளை எடுக்கக்கூடாது. அதேபோல வெளிப்புற ஆடைகளுக்கு மேல் அத்தகைய மாலைகளை ஒருபோதும் அணியக்கூடாது.(53) ஒருவன் பெண்ணுக்கான இயக்க மாறுபாட்டு {வீட்டுக்கு விலக்கான} காலத்தில் அவளுடன் பேசவும் கூடாது. அவன் இயற்கையின் அழைப்புகளுக்கு (பயிர் விளையும்) களத்திலோ {வயலிலோ}, மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு அருகிலோ பதிலளிக்கக்கூடாது {சிறுநீர் மற்றும் மலம் கழிக்கக்கூடாது}[8].(54) ஒருவன் நீர்வெளியில் ஒருபோதும் இயற்கையின் அழைப்புக்குப் பதிலளிக்கக்கூடாது. ஒருவன் எந்த உணவையும் உண்ணும் முன்பு மூன்று முறைகள் தன் வாயைக் கழுவ வேண்டும்.(55)உணவு உண்டு முடித்த பிறகு அவன் மூன்று முறையும், மீண்டும் இரண்டு முறையும் {ஆக மொத்தம் ஐந்து முறைகள்} தன் வாயையைக் கழுவ வேண்டும். ஒருவன் பேச்சைக்கட்டுப்படுத்திக் கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ணும் உணவை நிந்திக்காமல் உண்ண வேண்டும்.(56) ஒருவன் தான் உண்பதற்காகத் தனக்கு முன்பு வைக்கப்பட்டிருக்கும் உணவில் எப்போதும் மிச்சம் வைக்க வேண்டும். தன் உணவை உண்டு முடித்ததும் ஒருவன் நெருப்பை மனத்தால் தீண்ட வேண்டும்[9]. ஒருவன் கிழக்குத் திசை நோக்கி உண்டால் அவன் நீண்ட வாழ்நாளைக் கொண்டவனாவான். தெற்கு நோக்கி உண்பதன் மூலம் ஒருவன் பெரும் புகழை அடைவான்.(57) மேற்கு நோக்கி உண்பதன் மூலம் ஒருவன் பெருஞ்செல்வத்தை அடைகிறான். வடக்கு நோக்கி உண்பதன் மூலம் ஒருவன் பேச்சில் வாய்மை நிறைந்தவனாகிறான். ஒருவன் தன் உணவை உண்ட பிறகு மேலுடலின் துளைகள் அனைத்தையும் நீரால் துடைக்க வேண்டும்.(58) அதே போல அனைத்து அங்கங்களையும், உந்தியையும், உள்ளங்கைகளையும் நீரால் கழுவ வேண்டும். ஒருவன் உமியின் மீதோ, மயிரின் மீதோ, சாம்பலின் மீதோ, எலும்புகளின் மீதோ ஒருபோதும் அமரக்கூடாது.(59) ஒருவன், மற்றொருவன் நீராடிய, பயன்படுத்தி நீரை எக்காரணத்தினாலும் பயன்படுத்தக்கூடாது. ஒருவன் தேவர்களைத் தணிவைடையச் செய்வதற்கு ஹோமத்தை எப்போதும் செய்து, சாவித்திரி மந்திரங்களையும் உரைக்க வேண்டும்.(60)ஒருவன் எப்போதும் அமர்ந்தே உண்ண வேண்டும். ஒருபோதும் நடந்து கொண்டே உண்ணக்கூடாது. ஒருவன் நின்ற நிலையில் ஒருபோதும் இயற்கையின் அழைப்புக்குப் பதிலளிக்கக்கூடாது. சாம்பலிலோ, மாட்டுக் கொட்டிலிலோ அவன் ஒருபோதும் இயற்கையின் அழைப்புக்குப் பதிலளிக்கக்கூடாது.(61) ஒருவன் உண்ண அமர்வதன் முன்னர்த் தன் பாதங்களைக் கழுவ வேண்டும். ஒருவன் ஈரக்கால்களுடன் ஒருபோதும் அமரவோ, உறங்குவதற்காகப் படுக்கவோ கூடாது. கால் கழுவிய பிறகு அமர்ந்து உண்ணும் ஒருவன் நூறு வருடங்கள் வாழ்கிறான்.(62) ஒருவன் தூய்மையற்ற நிலையில் இருக்கும்போது, பெருஞ்சக்தி கொண்ட நெருப்பு, பசு மற்றும் பிராமணன் என்ற மூவரையும் ஒருபோதும் தீண்டக்கூடாது. இந்த விதியைக் கடைப்பிடிப்பதால் ஒருவன் நீண்ட வாழ்நாளை அடைகிறான்.(63) மாசுள்ள நிலையில் இருக்கும்போது பெருஞ்சக்தி கொண்ட சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் மூன்றிலும் கண்களைச் செலுத்தக்கூடாது.(64) ஓர் இளைஞனின் வீட்டிற்கு, மதிக்கத்தகுந்த ஒரு முதியவர் வந்தால், அவனுடைய {அந்த இளைஞனின்} உயர் மூச்சுகள் மேல்நோக்கிச் செல்கின்றன. அவன் எழுந்து நின்று, தன் விருந்தினரை முறையாக வணங்கும்போதே அதைத் திரும்பப் பெறுகிறான்.(65)

முதியவர்கள் எப்போதும் வணங்கப்பட வேண்டும். ஒருவன் அவர்களைக் கண்டதும் தன் கரத்தால் இருக்கை அளிக்க வேண்டும். அந்த முதியவர் அமர்ந்த பிறகு, தானும் அமர்ந்து கூப்பிய கரங்களுடன் இருக்க வேண்டும். ஒரு பெரியவர் சாலையில் செல்லும்போது அவன் அவரைப் பின்தொடர வேண்டுமேயன்றி அவருக்கு முன் நடக்கக்கூடாது.(66) ஒருவன் கிழிந்த, அல்லது உடைந்த இருக்கையில் அமரக்கூடாது. அவன் உடைந்த வெண்கலப் பாத்திரத்தை மீண்டும் பயன்படுத்தாமல் அதைக் கைவிட வேண்டும். ஒருவன் மேலாடை அணிந்து தன் உடலை மூடாமல் ஒருபோதும் உண்ணக்கூடாது. அவன் நிர்வாண நிலையில் ஒருபோதும் நீராடக் கூடாது. நிர்வாண நிலையில் ஒருபோதும் உறங்கக்கூடாது[10].(67) அடுத்தவர் உணவில் எஞ்சியவற்றையும், தட்டுகளையும் ஒருவன் ஒருபோதும் தீண்டக்கூடாது. உயிர் மூச்சுகள் அனைத்தும் தலையிலியே குவிந்திருப்பதாகச் சாத்திரங்களில் சொல்லப்படுவதால், ஒருவன் தான் தூய்மையற்ற {மாசுள்ள} நிலையில் இருக்கும்போது ஒருபோதும் மற்றொருவனின் தலையைத் தீண்டக்கூடாது.(68) ஒருவன் ஒருபோதும் மற்றொருவரின் தலையைத் தாக்கவோ, மற்றொருவனின் மயிரைப் பற்றவோ கூடாது. இரண்டு கைகளையும் சேர்த்து ஒருவன் தன் தலையைச் சொறியக்கூடாது.(69) ஒருவன் நீராடும்போது, மீண்டும் மீண்டும் தன் தலையை நீரில் மூழ்கச் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வது ஒருவனுடைய வாழ்நாளைக் குறைக்கும். நீரில் தலை மூழ்கி நீராடியவன் அதன் பிறகு தன்னுடலின் எந்தப் பகுதியிலும் எண்ணெய் பூசக் கூடாது.(70)ஒருவன் சிறிதளவு எள்ளை உண்ணாமல் ஒருபோதும் உணவு உண்ணக்கூடாது[11]. ஒருவன் தூய்மையற்றிருக்கும் காலத்தில் ஒருபோதும் (வேதங்களையோ, வேறு சாத்திரங்களையோ) கற்பிக்கக்கூடாது. அதேபோலத் தூய்மையற்றிருக்கும்போது ஒருவன் கற்கவும் கூடாது.(71) புயல் எழும்போது, சுற்றுச்சூழலில் கெட்ட வாடை ஊட்புகும்போதோ ஒருவன் வேதங்களைக் குறித்து நினைக்கக்கூடாது. பழைய வரலாற்றை அறிந்தவர்கள் பழங்காலத்தில் யமனால் பாடப்பட்ட காதையை உரைக்கிறார்கள். தூய்மையற்றவனாயிருக்கையில் ஓடுபவனோ, அத்தகைய சூழ்நிலையில் வேதங்கற்பவனோ, உண்மையில் மறுபிறப்பாள பிராமணனே ஆனாலும் தகாத காலங்களில் வேதம்படிப்பவன் தன் வேதத்தை இழந்து தன் வாழ்நாளையும் குறைத்துக் கொள்கிறான்.(72-74) எனவே, தடைசெய்யப்பட்ட காலங்களில் குவிந்த கவனத்துடன் ஒருவன் ஒருபோதும் வேதங்கற்கக்கூடாது.சூரியனை நோக்கியோ, சுடர்மிக்க நெருப்பை நோக்கியோ, பசுவை நோக்கியோ, ஒரு மறுபிறப்பாள மனிதனை நோக்கியோ, சாலையிலோ இயற்கையில் அழைப்புக்குப் பதில் சொல்பவன் குறைந்த காலமே வாழ்கிறான். பகல் வேளையில் இயற்கையின் அழைப்புகள் இரண்டுக்கும் வடக்கு நோக்கி பதிலளிக்க வேண்டும் {சிறுநீர் மற்றும் மலம் கழிக்க வேண்டும்}.(75,76) இரவில் அவ்வழைப்புகளுக்குத் தெற்கு நோக்கி பதிலளிக்கலாம். இவ்வாறு செய்வதால் ஒருவன் தன் வாழ்நாளைக் குறைத்துக் கொள்வதில்லை. நீண்ட நாள் வாழ விரும்பும் ஒருவன், பிராமணன், க்ஷத்திரியன் மற்றும் பாம்பு ஆகிய மூன்றும் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் ஒருபோதும் அலட்சியம் செய்யவோ, அவமதிக்கவோ கூடாது. இம்மூன்றும் கடும் நஞ்சுமிக்கவையாகும். பாம்பு கோபமடைந்தால் தனக்குக் குற்றமிழைத்தவனைத் தன்னுடைய ஒரே ஒரு பார்வையால் மட்டுமே கூட எரித்துவிடும்.(77,78) க்ஷத்திரியன் கோபப்பட்டாலும் தன் கோபத்துக்குத் தகுந்த பொருளாக இருப்பவனைக் கண்டவுடன் தன் சக்தியால் எரித்துவிடுவான். இவ்விருவரை விடப் பலவானான பிராமணன், தன் கோபத்திற்குரிய பொருளாக இருப்பவனை மட்டுமல்லாமல் அவனுடைய மொத்த குலத்தையும், பார்வையால் மட்டுமல்லாமல் எண்ணத்தாலேயே அழித்து விடுவான்.(79) எனவே, ஞானம் கொண்ட ஒருவன், இம்மூவரிடமும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஒருவன் தன் ஆசானிடம் ஒருபோதும் எந்தச் சச்சரவிலும் ஈடுபடக்கூடாது. ஓ! யுதிஷ்டிரா, ஆசான் கோபமடைந்தால் உரிய கௌரவங்களுடன் அவர் தணிவடையச் செய்யப்பட வேண்டும். ஆசான் சொல்வது மொத்தமும் தவறாக இருந்தாலும், ஒருவன் அவரைப் பின்பற்றிக் கௌரவிக்கவே வேண்டும்.(81) ஆசானுக்கு எதிராக அவதூறு பரப்புவது அவ்வாறு செய்பவர்களின் வாழ்வை ஐயமில்லாமல் எரிக்கும். ஒருவன் தன் வசிப்பிடத்தில் இருந்து தொலைவாகச் சென்று இயற்கையின் அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டும். ஒருவன் தன் வசிப்பிடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிலேயே தன் கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும்.(82) ஒருவன் தன் உணவில் எஞ்சியவற்றையும், பாத்திரங்களையும் {இலைகளையும்} தன் வசிப்பிடத்தில் இருந்து கொஞ்சம் தொலைவில் வீச வேண்டும். உண்மையில் தன் நன்மையில் விருப்பம் உள்ளவன் இவை யாவற்றையும் செய்ய வேண்டும். ஒருவன் சிவப்பு மலர்களாலான மாலைகளை அணியக்கூடாது. உண்மையில் ஞானம் கொண்ட வருவன் வெள்ளை நிற மலர்களாலான மாலைகளையே அணிய வேண்டும்.(83) ஓ! பெரும் வலிமையுள்ளவனே, தாமரையையும், அல்லியையும் புறக்கணித்தாலும், நீரியில் விளைவதாக இருந்தால் ஒருவன் தன் தலையில் சிவப்பு மலரையும் சூடலாம்[12].(84) தங்கத்தாலான மாலை எந்தச் சூழ்நிலையிலும் தூய்மையற்றதாகாது. ஓ! மன்னா, ஒருவன் நீராடிய பிறகு நீரில் கலந்த நறுமணப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.(85)ஒருவன் அடி உறுப்புகளை மறைப்பதற்கு மேலாடையையும், மேல் உறுப்புகளை மறைப்பதற்குக் கீழாடைகளையும் ஒருபோதும் அணியக்கூடாது. அதே போலப் பிறர் உடுத்திய ஆடைகளையும் ஒருபோதும் அவன் அணியக்கூடாது. மேலும், பக்கவாட்டில் இரு விளிம்புகள் இல்லாத ஆடைகளை ஒருவன் உடுத்தக்கூடாது.(86) ஓ! மன்னா, ஒருவன் படுக்கைக்குச் செல்லும்போது வேறு உடையை உடுத்த வேண்டும். சாலையில் பயணிக்கும்போது அவன் வேறு உடையை உடுத்த வேண்டும். அதே போலத் தேவர்களை வழிபடும்போது அவன் வேறு உடையை உடுத்த வேண்டும்.(87) புத்தியுள்ள மனிதன் தன் அங்கங்களில் பிரியங்கு {தினை}, சந்தனம், வில்வம் {வில்வக்காய்}, தகரம் {ஒரு நறுமணப்பொருள் / நந்தியார்வட்டை}, கேஸரம் {கரிசலாங்கண்ணி} ஆகியவற்றாலான களிம்புகளைப் பூச வேண்டும்.(88) உண்ணாவிரதம் நோற்கும் ஒருவன், நீராடுவதன் மூலம் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, ஆபரணங்கள் மற்றும் களிம்புகளால் தன் மேனியை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். ஒருவன் முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவு {அமாவாசை} நாட்களில் எப்போதும் பாலினக்கலவியைத் தவிர்க்க வேண்டும்.(89) ஓ! ஏகாதிபதி, ஒருவன் தன் சொந்தக்காரனாகவே இருந்தாலும், ஒரே பதவி கொண்டவனாகவே இருந்தாலும் ஒரே தட்டில் ஒருபோதும் உண்ணக்கூடாது. விலக்கப்பட்ட காலத்தில் உள்ள பெண்ணால் தயாரிக்கப்பட்ட உணவையும் ஒருபோதும் உண்ணக்கூடாது.(90)

ஒருவன் சாறு எடுக்கப்பட்ட எந்த உணவையும் உண்ணவோ, அப்படிப்பட்ட பானத்தைப் பருகவோ கூடாது. அதே போல, ஒருவன் உண்ணும் உணவை விருப்பத்துடன் பார்க்கும் மனிதர்களுக்கு ஒரு பகுதியைக் கொடுக்காமல் ஒருபோதும் உண்ணக்கூடாது. புத்தியுள்ள மனிதன் தூய்மையற்ற ஒருவனுடைய அருகில் அமரக்கூடாது. அதே போல அறத்தில் முதன்மையானவர்கள் அருகிலும் அவன் அமரக்கூடாது.(91) அறச்செயல்களில் தடை செய்யப்பட்டிருக்கும் உணவுகள் அனைத்தையும் வேறு சந்தர்ப்பங்களிலும் ஒருபோதும் உண்ணக்கூடாது. தன் நன்மையில் விருப்பமுள்ள ஒருவன், அரசமரக் கனி மற்றும் ஆலங்கனிகளையும், சணல் இலைகளையும் மற்றும் அத்திக்கனிகளையும் ஒருபோதும் உண்ணக்கூடாது. வெள்ளாடுகள், பசுக்கள் மற்றும் மயிலின் இறைச்சியை ஒருபோதும் உண்ணக்கூடாது.(92,93) உலர்ந்த இறைச்சியையும், பழைய இறைச்சியையும் ஒருவன் உண்ணக்கூடாது. புத்தியுள்ள மனிதன் எவனும் உப்பைத் தன் கையில் எடுத்து ஒருபோதும் உண்ணக்கூடாது. அதே போல, இரவில் தயிர் மற்றும் கரைத்தமாவு ஆகியவற்றை உண்ணக்கூடாது. வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருவன் தவிர்க்க வேண்டும். ஒருவன் காலையில் ஒரு முறையும், மாலையில் ஒருமுறையும் தவிர உள்ள இடைவெளியில் உணவனைத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.(94,95)

மயிர் காணப்படும் எந்த உணவையும் ஒருவன் ஒருபோதும் உண்ணக்கூடாது. அதே போலப் பகைவனின் சிராத்தத்திலும் ஒருவன் உண்ணக்கூடாது. ஒருவன் அமைதியாக உண்ண வேண்டும்; மேலாடையால் தன் மேனியை மறைத்துக் கொள்ளாமல், அமராமல் ஒருபோதும் உண்ணக்கூடாது.(96) எந்த உணவையும் வெறுந்தரையில் இட்டு உண்ணக்கூடாது. அமர்ந்த நிலை தவிர வேறு எந்த நிலையிலும் ஒருபோது உண்ணக்கூடாது. ஒருவன் உண்ணும்போது எந்த ஒலியையும் உண்டாக்கக்கூடாது. புத்தியுள்ள மனிதன் தன் வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு முதலில் நீரையும், உணவையும் காணிக்கை அளித்து, இவ்வாறு விருந்தினருக்குத் தொண்டாற்றிய பிறகே தான் உண்ண அமர வேண்டும். நண்பர்களுடன் வரிசையில் அமர்ந்து, நண்பர்களுக்குக் கொடுக்காமல் எந்த உணவையும் உண்பவன் கடும் நஞ்சை உண்பதாகச் சொல்லப்படுகிறது. நீர், பாயஸம், மாவு, தயிர், நெய், தேன் ஆகியவற்றைப் பொறுத்தவரையில்,(97-99) ஒருவன் பருகிய பிறகு, அல்லது உண்டபிறகு எஞ்சியவற்றை ஒருபோதும் பிறருக்குக் கொடுக்கக்கூடாது. ஓ! மனிதர்களின் தலைவா, ஒருவன் எந்த உணவையும் ஐயத்துடனே உண்ணக்கூடாது[13].(100)நன்மையை விரும்பும் ஒருவன், உணவை நிறைவு செய்த பிறகு ஒருபோதும் தயிரைக் குடிக்கக்கூடாது. உணவு உண்ட பிறகு ஒருவன் தன் வாயையும் முகத்தையும் தன் (வலக்) கரத்தால் மட்டுமே கழுவிக் கொண்டு, சிறிதளவு நீரை எடுத்து வலக்காலின் பெருவிரலை அதில் மூழ்கச் செய்ய வேண்டும்.(101) கழுவிய பிறகு, உச்சந்தலையைத் தன் (வலக்) கரத்தால் தீண்ட வேண்டும். அடுத்ததாகக் குவிந்த கவனத்துடன் நெருப்பைத் தீண்ட வேண்டும்.(102) இந்த விதிமுறைகள் அனைத்தையும் நோற்பது எவ்வாறு என்பதை அறிந்த மனிதன், தன் உற்றார் உறவினரில் முதன்மையான இடத்தை அடைவதில் வெல்கிறான். உணவை உண்டு முடித்த ஒருவன், தன் மூக்கு, கண்கள், காதுகள், உந்தி மற்றும் தன் இரு கரங்களையும் நீரால் கழுவ வேண்டும்.(103) எனினும், அவன் தன் கரங்களை ஈரமாக வைத்துக் கொள்ளக்கூடாது. கட்டைவிரலின் நுனியில் இருக்கு அடிவரை உள்ள இடத்தில் பிரம்மம் என்றறியப்படும் புனிதமான தீர்த்தம் இருக்கிறது.(104) சுண்டு விரலின் {கட்டைவிரலில் இருந்து ஐந்தாம் விரலின்} பின்பகுதியில் தேவ தீர்த்தம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! பாரதா, கட்டைவிரல் மற்றும் சுட்டுவிரல் {ஆட்காட்டி விரல்}ஆகியவற்றுக்கிடையில் உள்ள இடைவெளியானது, விதிப்படி நீரைத் தீண்டிய பிறகு பித்ரு சடங்குகளைச் செய்வதில் பயன்படுத்தப்பட வேண்டும்[14]. ஒருவன் பிறரை அவதூறு செய்வதில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. அதேபோல ஏற்பில்லா {இனிமையற்ற} எதையும் சொல்லக் கூடாது.(105, 106)தன் நன்மையில் விருப்பமுள்ள ஒருவன், பிறரின் கோபத்தைத் தூண்ட ஒருபோதும் முனையக்கூடாது. ஒருவன், தன் வகையில் {வர்ணத்தில்} இருந்து வீழ்ந்துவிட்ட ஒருவனிடம் உரையாட முனையக்கூடாது. அத்தகைய மனிதனைப் பார்ப்பதே தவிர்க்கப்பட வேண்டும்.(107) ஒருவன் வீழ்ந்துவிட்ட மனிதனிடம் ஒருபோதும் தொடர்பு கொள்ளக்கூடாது. அத்தகைய தொடர்பைத் தவிர்ப்பதன் மூலம் அவன் நீண்ட வாழ்நாளை அடைவதில் வெல்கிறான். ஒருவன் பகல் வேளையில் பாலினக் கலவியில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. கன்னிகை, வேசி அல்லது மலடியுடன் ஒருபோதும் கலவி கொள்ளக்கூடாது.(108) விலக்குக் காலம் முடிந்து நீராடாத ஒரு பெண்ணுடன் ஒருபோதும் கலவியில் ஈடுபடக்கூடாது. அறச்செயல்களின் நோக்கில் பல்வேறு அங்கங்களைக் கழுவிய பின்னர் ஒருவன் தன் உதடுகளை மும்முறையும், மீண்டும் இருமுறையும் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் அவன் தூய்மையடைந்து அறச்சடங்குகளுக்குத் தகுந்தவனாகிறான். பல்வேறு புலனுறுப்புகளையும் ஒருமுறை கழுவி விட்டு, மொத்த உடலிலும் நீர் தெளிக்கப்பட வேண்டும்.(110) இதைச் செய்த பிறகு ஒருவன் வேத விதிகளுக்கு ஏற்புடைய வகையில் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட வேண்டும்.

ஓ! குரு குலத்தவனே, ஒரு பிராமணனுக்குரிய நன்மைக்கும், தூய்மைக்குமான துப்புரவு செயல்கள் எவை என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்பதற்கு முன்பும், பின்பும், தூய்மை தேவைப்படும் அனைத்துச் செயல்களிலும் ஒரு பிராமணன், பிரம்ம தீர்த்தம் என்றைழைக்கப்படும் பகுதியில் நீரை வைத்து ஆசமனம் செய வேண்டும்[15].(112) தொண்டையில் இருந்து ஒரு துகளை வெளியேற்றினாலோ, உமிழ்ந்தாலோ ஒருவன் வாயைக் கழுவினால்தான் தூய்மையடைவான். ஒருவன் முதிர்ந்தவராக உள்ள உறவினரையோ, ஏழையாக உள்ள நண்பனையோ தன் வீட்டில் நிறுவி, அவரும் தன் குடும்பத்தில் ஒருவர் என்ற அளவுக்கு அவரை ஆதரிக்க வேண்டும்[16]. இதைச் செய்வதன் மூலம் ஒருவன் புகழையும், நீண்ட வாழ்நாளையும் பெறுவதில் வெல்கிறான். ஒருவனுடைய வீட்டில் புறாக்கள் {பாராவதங்கள் / மாடப்புறாக்கள்} மற்றும் ஆண், பெண் கிளிகள்  நிறுவப்படும்போது அஃது {அவ்வீடு} அருள் நிலையால் நிறையும்.(114) ஒருவனுடைய வீட்டில் இருந்தால், துயரை விலக்குவதில் இவை வெல்லும். கரப்பான்பூச்சிகளும் அதையே செய்யும். மின்மினிப்பூச்சிகள், பினந்தின்னிக் கழுகுகள், காட்டுப்புறாக்கள் {கபோதங்கள்}, வண்டுகள் ஆகியன(115) ஒருவனுடைய வீட்டுக்குள் நுழையவோ அங்கு வசிக்கவோ முனைந்தால், தேவர்களைத் தணிவடையச் செய்யும் செயல்கள் செய்யப்பட வேண்டும். அவையும், மீன்கொத்திகளும் தீய சகுனங்களைக் காட்டும் உயிரினங்களாகும்.(116)ஒருவன் உயர் ஆன்ம மனிதர்களின் ரகசியங்களை வெளியிடக்கூடாது; அவன் தடைசெய்யப்பட்ட பெண்களுடன் ஒருபோதும் பாலினக் கலவியில் ஈடுபடக்கூடாது. மேலும் மன்னனின் மனைவியிடமோ, ராணியின் நண்பர்களுடனோ அத்தகைய கலவியில் ஈடுபடக்கூடாது.(117) ஓ! யுதிஷ்டிரா, மருத்துவர்கள், பிள்ளைகள், முதிர்ந்தவர்கள், பணியாட்கள் ஆகியோரிடம் ஒருபோதும் நெருக்கம் பாராட்டக்கூடாது. நண்பர்கள், பிராமணர்கள் மற்றும் தன்னிடம் பாதுகாப்பு நாடுபவர்கள் ஆகியோரை எப்போதும்அவன் ஆதரிக்க வேண்டும். ஓ! மன்னா, இதைச் செய்வதால் அவன் நீண்ட வாழ்நாளைப் பெறுவான். ஞானம் கொண்ட ஒருவன் தன் நன்மையில் விருப்பம் கொண்டவனாக இருந்தால், ஒரு பிராமணர்கள் மற்றும் தொழிலில் திறன்மிக்க ஒரு பொறியாளர் {சிற்பி} ஆகியோரின் துணையுடன் கட்டப்பட்ட வீட்டில் வசிக்க வேண்டும்[17]. ஓ! மன்னா, மாலை சந்திப் பொழுதில் ஒருவன் உறங்கக்கூடாது. அத்தகைய காலத்தில் ஒருவன் எத்துறையின் ஞானத்தையும் அடையப் படிப்பதிலும் ஈடுபடக்கூடாது.(118-120) புத்திமானான ஒருவன் அத்தகைய நேரத்தில் ஒருபோதும் உண்ணக்கூடாது. இவ்வழியில் செயல்படுவதால் ஒருவன் நீண்ட வாழ்நாளைப் பெறுவான். ஒருவன் பித்ருக்களைக் கௌரவிக்கும் எந்தச் சடங்கையும் ஒருபோதும் இரவில் செய்யக்கூடாது. ஒருவன் உணவு உண்ட பிறகு தன்னை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.(121) தன் முன்னேற்றத்தில் விருப்பமுள்ள ஒருவன் இரவில் நீராடக்கூடாது. ஓ! பாரதா, இரவில் மாவை உண்பதையும் எப்போதும் தவிர்க்க வேண்டும்.(122)உணவு மற்றும் பானங்களில் எஞ்சியவையும், தேவர்களுக்கு வழிபாடு செய்யப் பயன்படுத்திய மலர்களையும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. இரவில் விருந்தினரை அழைத்து, நிறைவடையும் அளவுக்கு உண்ணச் சொல்லி அதீத மதிப்புடன் அவரைக் கட்டாயப்படுத்தக்கூடாது. அதே போல, தானும் நிறைவடையும் அளவுக்கு இரவில் உண்ணக்கூடாது.(123) ஒருவன் ஒரு பறவைக்கு உணவூட்டிய பிறகு (அதை உண்பதற்காகக்) கொல்லக்கூடாது. ஞானம் கொண்ட ஒருவன், ஓ! பாரதா, உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவளும், மங்கலக் குறியீடுகளைக் கொண்டவளும், சரியான வயதைக் கொண்டவளுமான ஒரு கன்னிகையை மணந்து கொள்ள வேண்டும். அவளிடம் பிள்ளைகளைப் பெற்று, அந்த வழிமுறையின் மூலம் தன் குலத்தைத் தழைக்கச் செய்து,(124,125) ஓ! ஏகாதிபதி, தன் மகன்கள் பொது அறிவையும், குடும்பப் பழக்க வழக்கங்களின் அறிவையும் அடைவதற்காக அவர்களை ஒரு நல்ல ஆசானிடம் அனுப்பி வைக்க வேண்டும். ஒருவன் பெறும் மகள்களை, மதிப்பிற்குரிய குடும்பங்களைச் சார்ந்தவர்களும், புத்தி கொண்டவர்களுமான இளைஞர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்.(126) ஓ! பாரதா, குடும்ப மரபுரிமைகளில் ஒரு பகுதியை மகன்களுக்கான வாழ்வாதாரமாகக் கொடுத்து அவர்களை அவற்றில் நிறுவ வேண்டும். பித்ருக்கள் அல்லது தேவர்களைக் கௌரவிக்கும் எந்தச் செயலில் ஈடுபடும் முன்பும் ஒருவன் தன் தலையை நீரில் மூழ்கச் செய்து நீராட வேண்டும்.(127)

ஒருவன் தன் சொந்த திதியில் {தான் பிறந்த அதே திதியில்} ஒருபோதும் சிராத்தம் செய்யக்கூடாது. ஓ! பாரதா, (முந்தைய அல்லது பிந்தைய) பாத்ரபதங்கள் {பூரட்டாதி, உத்தரட்டாதி ஆகிய} இரண்டிலும், கிருத்திகை நட்சத்திரத்திலும் சிராத்தம் ஏதும் செய்யப்படக்கூடாது.(128) கடுமையானவையாகக் கருதத்தக்க (அஷ்லேஷம் {ஆயில்யம்} முதலிய) நட்சத்திரங்களிலும், கணக்கீட்டில் பகையாகத் தெரிபவை எதனிலும் ஒருபோதும் சிராத்தம் ஏதும் செய்யப்படக்கூடாது. உண்மையில் இவ்வகையில் கணிய {ஜோதிட} சாத்திரங்களில் தடை செய்யப்பட்ட இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் {சிராத்தம் செய்வதற்குத்} தவிர்க்கப்பட வேண்டும்.(129) ஒருவன் நாவிதர் முடி மழிக்கும்போது கிழக்கையோ, வடக்கையோ நோக்கி இருக்க வேண்டும். ஓ! பெரும் மன்னா, அவ்வாறு செய்வதால் நீண்ட வாழ்நாளை அடைவதில் அவன் வெல்கிறான்.(130) ஓ! பாரதர்களின் தலைவா, ஒருவன், பிறரைக் குறித்த அவதூறு பேசுவது, தன்வெறுப்பில் தன்னைத் தானே கடிந்து கொள்வது ஆகியவற்றில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. பிறரை அவதூறு செய்வதும், தன்னையே தூற்றிக் கொள்வதும் பாவம் நிறைந்த செயல்களாகும்.(131) அங்கக் குறைபாடு உள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஒரு கன்னிகையே இருந்தாலும் அதுவும் தவிர்க்கப்பட வேண்டும். ஒரே பிரவரங்களைக் கொண்ட {ஒரே கோத்திரத்தில் பிறந்த} பெண் தவிர்க்கப்பட வேண்டும்; ஒழுங்கற்ற உறுப்புகளைக் கொண்ட பெண்ணும், தன் தாய் சார்ந்த குலத்தில் பிறந்த பெண்ணும் தவிர்க்கப்பட வேண்டும்.(132)

ஞானம் கொண்ட ஒருவன், முதிய பெண், காட்டு வாழ்க்கை வாழ இல்லற வாழ்வுமுறையைக் கைவிட்டவள், கணவனுக்கு உண்மையுள்ள பெண், நலமற்ற பிறப்புறுப்புகளைக் கொண்டவள் ஆகியோரிடம் ஒருபோதும் பாலினக் கலவியில் ஈடுபடக்கூடாது.(133) மஞ்சள் நிறம் கொண்டவள், தொழுநோயால் பீடிக்கப்பட்டவள், வலிப்புநோய் உள்ள குடும்பத்தில் பிறந்தவள், பிறப்பு மற்றும் பழக்க வழக்கங்களில் தாழ்ந்தவள்,(134) சிவித்ரி (தொழுநோய்} என்றழைக்கப்படும் நோய் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவள், விரைவில் மரணம் நேரும் குலத்தில் பிறந்தவள் ஆகியோரையும் திருமணம் செய்து கொள்வது தகாது. மங்கலக் குறியீடுகளைக் கொண்டவளும், பல்வேறு வகைத் தகுதிகளை நிறைவு செய்பவளும்,(135) ஏற்புடையவளும் {இனிமையானவளும்}, அழகானவளுமான ஒரு கன்னிகையே திருமணம் செய்து கொள்ளப்பட வேண்டும். ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் தன்னை விட உயர்ந்த குடும்பம் அல்லது குறைந்தது சமமான குடும்பத்திலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.(136) தன் செழிப்பை விரும்பும் ஒருவன், தாழ்ந்த வகை {வர்ணப்} பெண்ணையோ, தான் பிறந்த வகையில் {வர்ணத்தில்} இருந்து வீழ்ந்துவிட்ட பெண்ணையோ ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. கவனமாக நெருப்பை மூட்டும் ஒருவன், வேதங்கள் அறிவித்திருக்கும், அல்லது பிராமணங்கள் {வேதசடங்குகள்} விதித்திருக்கும் அனைத்துச் செயல்களையும் நிறைவேற்ற வேண்டும். ஒருவன் ஒருபோதும் பெண்களுக்குத் தீங்கிழைக்க முனையக்கூடாது. மனைவிகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்.(137,138)

வன்மம் எப்போதும் வாழ்வைக் குறுக்கும். எனவே, ஒருவன் வன்மம் வளர்ப்பதை எப்போதும் தவிர்க்க வேண்டும். பகல் பொழுதில் உறக்கம் வாழ்வைக் குறுக்குகிறது. சூரியன் எழுந்த பிறகும் உறங்குவது வாழ்வை குறுக்குகிறது.(139) சந்திப் பொழுதுகள், இரவின் தொடக்கத்திலும் உறங்குபவன், தூய்மையற்ற நிலையில் உறங்கச் செல்பவன் ஆகியோர் தங்கள் வாழ்வைக் குறைத்துக் கொள்கின்றனர். பிறன்மனைநயத்தல் எப்போதும் வாழ்வைக் குறுக்குகிறது. ஒருவன் சவரம் செய்த பிறகு தூய்மையற்ற நிலையில் இருக்கக்கூடாது[18].(140) ஓ! பாரதா, மாலைப்பொழுதில் ஒருவன் படிப்பதையோ, வேதம் உரைப்பதையோ, உண்பதையோ, நீராடுவதையோ கவனமாகத் தவிர்க்க வேண்டும்.(141) மாலை சந்தி வரும்போது ஒருவன் எச்செயலையும் செய்யாமல் தியானத்திற்காகத் தனது புலன்கள் அனைத்தையும் திரட்ட வேண்டும். ஓ! மன்னா, ஒருவன் நீராடிய பிறகு பிராமணர்களை வணங்க வேண்டும்.(142)உண்மையில் ஒருவன் தேவர்களை வழிபடுவதற்கு முன்னரும், ஆசானை மரியாதையாக வணங்குவதற்கு முன்னரும் நீராட வேண்டும். ஒருவன் அழைக்கப்படாமல் ஒருபோதும் வேள்விக்குச் செல்லக்கூடாது. உண்மையில், ஒருவன் வேள்வி எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் காண்பதற்கு மட்டுமே விரும்பினால் அவன் அழைப்பில்லாமலேயே அங்கே செல்லலாம். ஒருவன் (ஏதோ ஓர் காரணத்திற்காக) அழைப்பில்லாமல் ஒரு வேள்விக்குச் சென்றாலும், அவ்வகையில் வேள்வி செய்பவனிடம் இருந்து அவன் உரிய வழிபாட்டைப் பெறவில்லையெனில் அவனுடைய வாழ்வுக் காலம் குறைகிறது. அந்நியர் பகுதிகளுக்கு ஒருவன் தனித்துப் பயணம் செல்லக்கூடாது. அதே போல இரவில் எந்த இடத்திற்கும் தனித்துச் செல்லக்கூடாது.(143,144) மாலை வருவதற்கு முன்பே ஒருவன் தன் வீட்டிற்குத் திரும்பி அதற்குள்ளேயே இருக்க வேண்டும். ஒருவன் தனது தாய், தந்தை மற்றும் ஆசானின் ஆணைகள் நன்மை விளைவிக்குமா, இல்லையா என்று தீர்மானிக்காமலேயே அவற்றுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும். ஓ! மன்னா, ஒருவன் பெருங்கவனத்துடன் வேதங்களையும், ஆயுத அறிவியலையும் கவனிக்க வேண்டும்.(145,146) ஓ! மன்னா, யானை, குதிரை மற்றும் தேர் ஏற்றப் பயிற்சிகளைக் கவனமாகச் செய்ய வேண்டும். இவற்றைக் கவனமாகக் கவனிக்கும் மனிதன் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான்.(147)

அத்தகைய மன்னன் பகைவர்களால் வெல்லப்படமுடியாதவனாகி தன் பணியாட்கள் மற்றும் உற்றார் உறவினரில் தன்னைவிடச் சிறந்தவன் யாருமின்றி அவர்களை ஆள்வதில் வெல்கிறான். அத்தகைய நிலைய அடைபவனும், குடிமக்களைக் காக்கும் கடமையைக் கவனமாகச் செய்பவனுமான மன்னன் ஒருபோதும் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டான்.(148) ஓ! மன்னா, காரண அறிவியல், சொல்லறிவியல், கந்தர்வர்களின் அறிவியல், கலை என்ற பெயரில் அறியப்படும் அறிவின் அறுபத்துநான்கு கிளைகளையும் {கலைகளையும்} நீ அடைய வேண்டும்.(149) ஒருவன் நாள்தோறும் புராணங்கள், இதிகாசங்கள், மற்றும் உயர் ஆன்மா மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள் ஆகியவற்றை மனத்தில் கொள்ள வேண்டும்.(150) ஒருவனுடைய மனைவி விலக்கப்பட்ட காலத்தைக் கடக்கும்போது ஒருவன் அவளுடன் ஒருபோதும் கலவியில் ஈடுபடாமல், உரையாடுவதற்கு அவளை அழைக்காமலும் இருக்க வேண்டும். ஞானம் கொண்ட மனிதன், நான்காம் நாளில் தூய்மைக்காக நீராடிய பிறகே அவளுடைய தோழமையை ஏற்க வேண்டும்.(151) விலக்குக் காலம் முதலில் தோன்றியதில் இருந்து ஐந்தாம் நாளில் ஒருவன் கலவியில் ஈடுபட்டால் அவன் மகளைப் பெறுகிறான். ஆறாம் நாளில் கலவியில் ஈடுபடுவதன் மூலம் ஒருவன் மகனை அடைகிறான். ஞானம் கொண்ட மனிதன், கலவி காரியத்தில் (ஒற்றைப்படை, இரட்டைப்படை என்ற) இவ்விதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.(152)

திருமணத்தின் மூலமாக உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும். ஒருவன் தன் சிறந்த சக்தியின்படி வேள்விகளில் தேவர்களைத் துதித்து, பல்வேறு வகைப் பொருட்களை வேள்வி தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்.(153) ஓ! மன்னா, இல்லற வாழ்வுமுறைக்காக {கிருஹஸ்தாஸ்ரமத்திற்காக} விதிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு ஒருவன் காட்டுத்துறவியின் {வானப்ரஸ்தாஸ்ரம} வாழ்வு முறைக்குள் நுழைய வேண்டும். நீண்ட காலம் வாழ்வதில் வெல்லும் மனிதர்களின் குறியீடுக்ள அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன்.(154) ஓ! யுதிஷ்டிரா, என்னிடம் இருந்து கேட்கப்படாமல் எஞ்சியிருப்பதை நீ மூன்றுவேதங்களையும் நன்கறிந்த மனிதர்களின் வாய்களில் இருந்து கேட்க வேண்டும். ஒழுக்கமே செழிப்பின் வேர் என்பதை நீ அறிய வேண்டும். ஒழுக்கமே புகழை அதிகரிக்கிறது.(155) ஒழுக்கமே வாழ்நாளையும் நீட்டிக்கிறது. ஒழுக்கமே தீமைகள் மற்றும் துன்பங்கள் அனைத்தையும் அழிக்கிறது. ஒழுக்கமே அனைத்து வகை ஞானங்களுக்கும் மேன்மையானது எனச் சொல்லப்படுகிறது.(156) ஒழுக்கமே அறத்தை உண்டாக்குகிறது, அறமே வாழ்வை நீட்டிக்கிறது. ஒழுக்கமே புகழையும், நீண்ட வாழ்நாளையும், சொர்க்கத்தையும் விளைவிக்கிறது. ஒழுக்கமே (அனைத்து வகை நன்மைகளையும் கொண்டு வருவதற்குத்) தேவர்களைத் தணிவடையச் செய்யும் பெருந் திறன்மிக்கச் சடங்காகும். சுயம்புவான பிரம்மனே ஒருவன் அனைத்து வகை மனிதரிடமும் கருணை காட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(157)

ஜியேஷ்டகனிஷ்டர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 105-அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் நடந்து கொள்ளும் முறை; தந்தைக்குரிய மதிப்பு; தாயின் மகிமை ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓர் அண்ணன் தன் தம்பியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், தம்பிகள் தங்கள் அண்ணனிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, நீ எப்போதும் உன் தம்பிகளிடம் அண்ணனுக்குரிய முறையில் நடந்து கொள்வாயாக. இந்தச் சகோதரர்களுக்கிடையில் நீயே எப்போதும் மூத்தவனாக இருக்கிறாய். ஓர் ஆசான் தன் சீடர்களிடம் எப்போதும் பின்பற்ற வேண்டிய உயர்ந்த ஒழுக்கத்தையே நீ உன் தம்பிகளிடம் பின்பற்றுவாயாக.(2) ஓர் ஆசான் ஞானமில்லாதவராக இருந்தால், சீடன் மதிப்புமிக்க வகையிலோ, முறையான வழியிலோ அவரிடம் நடந்து கொள்ள மாட்டான். ஓ! பாரதா, அந்த ஆசான் தூய்மையையும், உயர்ந்த ஒழுக்கத்தையும் கொண்டவராக இருந்தால், அந்தச் சீடனும் அதே வகை ஒழுக்கத்தை அடைவதில் வெல்வான்.(3) மூத்த சகோதரன் சில வேளைகளில் தன் தம்பிகள் செய்யும் செயல்களைக் கண்டு குருடனாகவும், தான் ஞானம் கொண்டவனாக இருப்பினும் சில வேளைகளில் அவர்கள் செய்யும் செயல்களைப் புரிந்து கொள்ளாதவன் போலவும் இருக்க வேண்டும். தம்பிகள் வரம்புமீறி குற்றம் புரிந்தால் அண்ணன் மறைமுக வழிமுறைகளில் அவர்களைத் திருத்த வேண்டும்.(4) சகோதரர்களுக்கிடையில் நல்ல புரிந்துணர்வு இருந்து, அண்ணன் நேரடியாகவோ, வெளிப்படையான வழிமுறைகளிலோ தன் தம்பியைத் திருத்தினால், ஓ! குந்தியின் மகனே, அத்தகைய நல்ல புரிந்துணர்வைக் காண்பதால் கவலையில் பீடிக்கப்படும் பகைவர்கள், அவர்களுக்குள் வேற்றுமையை விளைவித்து, சகோதரர்களைப் பிரிப்பதில் தங்களை நிறுவிக் கொண்டு, அவர்களுக்கு ஒற்றுமையின்மை உண்டாக்க எப்போதும் முனைவார்கள்.(5)

ஓர் அண்ணனே, குடும்பத்தின் செழிப்பை அதிகரிக்கவோ, முற்றிலும் அழிக்கவோ செய்வான். அண்ணன் அறிவில்லாதவனாகவும், தீய நடத்தை கொண்டவனாகவும் இருந்தால், அவன் மொத்த குடும்பத்திற்கும் அழிவைக் கொண்டு வருவான்.(6) தம்பிகளுக்குத் தீங்கு செய்யும் அண்ணன் மூத்தவனாகக் கருதப்படாமல், தன் குடும்ப உடைமையில் உள்ள தன் பங்கை இழந்து, மன்னனால் அடக்கப்படத் தகுந்தவனாகிறான்.(7) வஞ்சகமாகச் செயல்படும் மனிதன், துன்பமும், அனைத்து வகைத் தீமைகளும் நிறைந்த உலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய மனிதனின் பிறப்பு, பிரம்பு மலர்களைப் போலவே எந்தப் பயனுமில்லாததாகும்[1].(8) பாவம் நிறைந்த மனிதன் பிறக்கும் குடும்பமானது அனைத்து வகைத் தீமைகளுக்கும் ஆட்படுகிறது. அத்தகைய மனிதன் புகழ்க்கேட்டைக் கொண்டு வருகிறான், மேலும் அந்தக் குடும்பத்தின் நற்செயல்கள் அனைத்தும் மறைந்து போகும்.(9) தீச்செயல்களில் ஈடுபடும் சகோதரர்கள் குடும்ப உடைமையில் உள்ள தங்கள் பங்குகளை இழக்கிறார்கள். அத்தகைய வழக்கில், அண்ணனானவன் யௌதுக {தன் மனைவி குடும்பத்தின் மூலம் வந்த சீதன} உடைமையில் எந்தப் பங்கையும் தன் தம்பிகளுக்குக் கொடுக்காமல் மொத்தத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.(10)தந்தைவழி உடைமைகளைப் பயன்படுத்தாமல் ஓர் அண்ணன் தொலைவான இடத்திற்குச் செல்வதன் மூலம் எந்த உடைமையையும் ஈட்டினால் அவன் அத்தகைய உடைமைகளில் தன் தம்பிகளுக்கு எந்தப் பங்கையும் கொடுக்காமல் அவற்றைத் தன் சொந்த பயன்பாட்டுக்கே கொள்ளலாம்.(11) பிரியாத சகோதரர்கள், (தங்கள் தந்தையின் வாழ்நாள் காலத்திலேயே) குடும்ப உடைமைகளைப் பிரித்துக் கொள்ள விரும்பினால், தந்தையானவன் தன் மகன்கள் அனைவருக்கும் அவற்றைச் சமப் பங்குகளாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.(12) அண்ணன், பாவச்செயல்களைச் செய்பவனாகவும், எந்தச் சாதனைக்காகவும் பிரித்தறியப்பட முடியாதவனாகவும் இருந்தால் அவன் தன் தம்பிகளால் அவமதிக்கப்படுவான். மனைவியோ, தம்பியோ பாவம் நிறைந்தவர்களாக இருந்தாலும் அப்போதும் அவள் அல்லது அவனின் நலம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.(13) அறத்தின் உச்சவினையை {பலாபலன்களை} அறிந்த மனிதர்கள் அறமே உயர்ந்த நன்மை என்று சொல்கிறார்கள். ஓர் உபாத்யாயர் {தலைமை ஆசிரியர்} பத்து ஆச்சார்யர்களைவிட {ஆசிரியர்களைவிட} உயர்ந்தவர். தந்தையானவர் பத்து உபாத்யாயர்களுக்கு இணையானவர்.(14) ஒரு தாயானவள், பத்து தந்தைக்கோ, மொத்த பூமிக்கோ இணையானவள். தாயினும் பெரியோர் யாருமில்லை. உண்மையில் அவள் தனக்கு உரிய மதிப்புகள் அனைத்தையும் கடந்திருப்பவள்[2].(15)இதன் காரணமாகவே மக்கள் ஒரு தாயை அதிக மதிப்புக்குத் தகுந்தவளாகக் கருதுகிறார்கள். ஓ! பாரதா, தந்தை மூச்சை நிறுத்தியதும் அண்ணனே தந்தையாகக் கருதப்பட வேண்டும்.(16) அண்ணனே அவர்களின் வாழ்வாதாரமாக இருந்து, அவர்களைப் பாதுகாக்கவும், பேணி வளர்க்கவும் வேண்டும். தம்பிகள் அனைவரும் அவனை வணங்கி அவனது அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்.(17) உண்மையில் அவர்கள், தங்கள் தந்தை உயிரோடு இருந்தபோது எப்படி இருந்தார்களோ அப்படியே அவனை {அண்ணனைச்} சார்ந்து வாழ வேண்டும். ஓ! பாரதா, தந்தையும், தாயுமே உடலைப் படைக்கின்றனர்.(18) எனினும், ஆச்சாரியார் விதிக்கும் பிறவியே உண்மையில் மங்காததாகவும், அழிவில்லாததாகவும், உண்மையான பிறவியாகவும் கருதப்படுகிறது. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓர் அக்காள் {தமக்கை} ஒரு தாயைப் போன்றவளாவாள். குழந்தைப் பருவத்தில் பாலூட்ட {உணவூட்டக்} கூடியவளானதால் அண்ணனின் மனைவியும் {அண்ணியும்} ஒரு தம்பிக்குத் தாயைப் போன்றவளே ஆவாள்[3]” என்றார் {பீஷ்மர்}.(19)

உபவாஸ பலன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 106-உபவாஸங்கள் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்து அங்கிரஸ் சொன்னது; வேள்விகளுக்கு இணையான பலன்களை அளிக்கக்கூடிய குறிப்பிட்ட உபவாஸங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, அனைத்து வகை {வர்ண} மனிதர்களும், மிலேச்சர்களும் நோன்புகள் நோற்கும் இயல்பினராகத் தெரிகிறார்கள். எனினும், இதன் காரணத்தை நாம் அறிந்ததில்லை.(1) பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் மட்டுமே நோன்புகள் {விரதங்கள்} நோற்க வேண்டும் என்று நாம் கேள்விப்படுகிறோம். ஓ! பாட்டா, உண்ணாநோன்புகளை {உபவாஸங்களை{ நோன்பதன் மூலம் பிற வகை {வர்ண} மக்கள் எவ்வாறு பலனை ஈட்டுவார்கள்?(2) ஓ! மன்னா, நோன்புகளும் {விரதங்களும்}, உண்ணாநோன்புகளும் {உபவாஸங்களும்} அனைத்து வகை {வர்ண} மக்களும் எவ்வாறு நோற்கிறார்கள்? உண்ணாநோன்பு நோற்பதில் அர்ப்பணிப்புள்ள ஒருவன் அடையும் கதி என்ன?(3) உண்ணாவிரதங்கள் பெரும்புகலிடங்களாக இருப்பவை, உயர்ந்த பலன்களைத் தரவல்லவை என்று சொல்லப்படுகிறது. ஓ! மனிதர்களின் இளவரசே, நோன்புகள் நோற்கும் மனிதனால் இவ்வுலகில் ஈட்டப்படும் கனியென்ன? ஒருவன் அறமீட்டும் வழிமுறைகள் என்னென்ன? ஓ! பாரதர்களில் சிறந்தவரே, ஒருவன் சொர்க்கத்தையும், பலன்களையும் அடைவதில் வெல்லும் வழிமுறைகள் என்னென்ன?(5) ஓ! மன்னா, உண்ணாநோன்பு நோற்ற பிறகு ஒருவன் ஏன் கொடையளிக்க வேண்டும்? இன்பத்துக்கு வழிவகுக்கும் நோக்கங்களை அடைவதில் வெல்ல ஒருவன் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன?” என்று கேட்டான்”.(6)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “தர்மதேவனால் உண்டானவனும் {யுதிஷ்டிரன்}, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனும், தம்மிடம் இவ்வாறு சொன்னவனுமான குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரும், சாந்தனுவின் மகனுமான பீஷ்மர் பின்வரும் சொற்களில் பதிலளித்தார்.(7)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, விதிப்படி நோன்புகள் {விரதங்கள்} நோற்பதால் உண்டாகும் உயர்ந்த பலன்களை நான் பழங்காலத்தில் கேட்டிருக்கிறேன்.(8) ஓ! பாரதா, நீ இன்று கேட்ட இதே கேள்விகளை நான் உயர்ந்த தவத் தகுதியைக் கொண்ட முனிவர் அங்கிரசிடம் கேட்டிருக்கிறேன்.(9) இவ்வாறு என்னால் கேட்கப்பட்டவரும், வேள்வித்தீயில் உண்டானவருமான அந்தச் சிறப்புமிக்க முனிவர், விதிப்படி செய்யும் உண்ணாநோன்புகளை நோற்பது குறித்து இவ்வாறு என்னிடம் சொன்னார்.(10)

அங்கிரஸ் {பீஷ்மரிடம்}, “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும் பொறுத்தவரையில் ஒரே சீராக மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருப்பது {உபவாஸம் இருப்பது} அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், ஓ! மனிதர்களின் தலைவா, ஓரிரவு உண்ணா நோன்பு {உபவாஸம்}, ஈரிரவு, மூவிரவு உண்ணா நோன்புகளே அவர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கின்றன. (மூன்று இரவுகளைக் கடந்து அவர்கள் {பிராமணர்களும், க்ஷத்திரியகளும்} உண்ணாவிரதமிருக்கக்கூடாது).(11) வைசியர்களையும், சூத்திரர்களையும் பொறுத்தவரையில் உண்ணாநோன்புக்கான அவர்களது கால அளவு ஓரிரவே ஆகும். மடமையினால் {அறியாமையினால்} அவர்கள் ஈரிரவு அல்லது மூவிரவு உண்ணாநோன்புகளை நோற்றால், அத்தகைய உண்ணா நோன்புகள் அவர்களது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது.(12) உண்மையில், (குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில்) அவர்களுக்கு ஈரிரவு உண்ணாநோன்புகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. எனினும், கடமைகளை அறிந்தவர்களும், அவற்றை நோற்பவர்களுமான மனிதர்களால் அவர்களுக்கு மூவிரவு உண்ணாநோன்புகள் விதிக்கப்படவில்லை[1].(13) ஓ! பாரதா, ஞானம் கொண்ட மனிதன், தன் புலன்களையும், ஆன்மாவையும் அடக்கி, ஐந்தாம் சந்திர நாள் {பஞ்சமி}, ஆறாம் சந்திரநாள் {சஷ்டி} மற்றும் முழு நிலவு {பௌர்ணமி} நாள் ஆகியவற்றில் இரண்டு வேளை உணவில் ஒன்றைத் தவிர்த்து உண்ணா நோன்பிருந்தால் அவன் மன்னிக்கும் தன்மை கொண்டவனாகவும் {பொறுமையுள்ளவனாகவும்}, மேனியழகு கொண்டவனாகவும், சாத்திரங்களை அறிந்தவனாகவும் ஆகிறான். அத்தகைய மனிதன் ஒருபோதும் பிள்ளையற்றவனாகவோ, ஏழையாகவோ ஆவதில்லை.(14,15)

ஐந்து மற்றும் ஆறாம் சந்திர நாட்களில் {பஞ்சமி, சஷ்டிகளில்} தேவர்களைத் துதித்து வேள்விகளைச் செய்பவன், தன் குடும்பத்தினர் அனைவரையும் கடந்து, பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு உணவூட்டுவதில் வெல்கிறான். தேய்பிறையின் எட்டாம் மற்றும் பதினான்காம் சந்திரநாட்களில் {அஷ்டமி மற்றும் சதுர்த்தசியில்} உண்ணாநோன்புகளை {உபவாசம்}[2] நோற்பவன் அனைத்து வகைப் பிணிகளில் இருந்தும் விடுபட்டுப் பெரும் சக்தியை அடைகிறான். மார்கசீரிஷம் என்றழைக்கப்படும் மாதம் {மார்கழி மாதம்} முழுவதையும் ஒவ்வொரு நாளும் ஒரு வேளை உணவைத்தவிர்த்துக் கழிப்பவன்,(16,17) மதிப்புடனும், அர்ப்பணிப்புடனும் பிராமணர்களுக்கு உணவூட்ட வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். அத்தகைய மனிதன் செழிப்புடன் கூடியவனாகிறான், அனைத்து வகைத் தானியங்களும் அவனுடையதாகின்றன.(18) அவன் சக்தியுடன் கூடியவனாகிறான். உண்மையில், அத்தகைய மனிதன், தன் களங்களில் {வயல்களில்} இருந்து அபரிமிதமான விளைச்சலை அறுவடை செய்து, பெருஞ்செல்வத்தையும், அதிகத் தானியங்களையும் அடைகிறான்.(19) ஓ! குந்தியின் மகனே, ஒவ்வொரு நாளும் இரு வேளை உணவுகளில் ஒன்றைத் தவிர்த்து பௌஷ மாதம் {தை மாதம்} முழுவதையும் கழிக்கும் மனிதன், பெரும் நற்பேற்றுடன் கூடியவனாகி, ஏற்புடைய பண்புகளையும், பெரும்புகழையும் அடைகிறான்.(20)ஒவ்வொரு நாளும் இரு வேளை உணவில் ஒன்றைத் தவிர்த்து மாக மாதம் {மாசி மாதம்} முழுவதையும் கழிப்பவன், உயர்ந்த குடும்பத்தில் பிறப்பை அடைந்து, தன் சுற்றத்தாருக்கு மத்தியில் திறன்மிக்க நிலையை அடைகிறான்.(21) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு பகதைவத மாதம் {பங்குனி மாதம்} முழுவதையும் கழிப்பவன், பெண்களுக்குப் பிடித்தமானவனாகி, அவர்களை உடனடியாகத் தன் வசப்படுத்துவான்.(22) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு சைத்ர மாதம் {சித்திரை மாதம்} முழுவதையும் கழிப்பவன், உயர்ந்த குடும்பத்தில் பிறப்பை அடைந்து, பொன், ரத்தினங்கள் மற்றும் முத்துக்களின் வளம்பெறுபவனாகிறான்.(23) புலனடக்கத்துடன் ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு வைசாக மாதம் {வைகாசி மாதம்} முழுவதையும் கழிப்பது, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தன் சுற்றத்தாருக்கு மத்தியில் உயர்ந்த நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(24) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு ஜய்ஷ்ட மாதம் {ஆனி மாதம்} முழுவதையும் கழிப்பவன், உயர்ந்த நிலையையும், பெருஞ்செல்வத்தையும் அடைவதில் வெல்கிறான். அது {இவ்வாறு நோற்பது ஒரு} பெண்ணாக இருந்தால், அவளும் அதே வெகுமதியையே அறுவடை செய்கிறாள்.(25)

ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு ஆஷாத மாதம் {ஆடி மாதம்} முழுவதையும் கழிப்பவன், அதிகத் தானியங்களையும், பெருஞ்செல்வத்தையும், பெரும் சந்ததியையும் அடைகிறான்.(26) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு சிரவண மாதம் {ஆவணி மாதம்} முழுவதையும் கழிப்பவன், எங்கே வசிக்க நேர்ந்தாலும் அபிஷேக கௌரவங்களைப் பெற்று, தான் ஆதரிக்கும் உற்றார் உறவினருக்கு மத்தியில் உயர்ந்த நிலையை அடைவான்.(27) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு பிரோஷ்தபத மாதம் {புரட்டாசி மாதம்} முழுவதையும் கழிக்கும் மனிதன், பெரும் செல்வத்துடன் கூடியவனாகி, நிலைத்துப் பெருகும் செல்வாக்கையும் அடைவான்.(28) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு அஷ்வின் மாதம் {ஐப்பசி மாதம்} முழுவதையும் கழிக்கும் மனிதன், ஆன்ம மற்றும் உடல் தூய்மையை அடைந்து, விலங்குகளையும், அபரிமிதமான வாகனவகைகளையும், பெரிய சந்ததியையும் பெறுவான்.(29) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு கார்த்திகா மாதம் {கார்த்திகை மாதம்} முழுவதையும் கழிப்பவன், பெரும் வீரத்தையும், பல மனைவிகளையும், பெரும்புகழையும் அடைவான்.(30)

ஓ! மனிதர்களின் தலைவா, நான் இப்போது பனிரெண்டு மாதங்களில் நோன்புகள் நோன்பதன் மூலம் மனிதர்கள் என்னென்ன பலன்களை அடைவார்கள் என்பதை விவரமாகச் சொன்னேன். ஓ! மன்னா, இனி, ஒவ்வொரு சந்திர நாளுக்கும் உரிய விதிகள் என்ன என்பதைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(31) ஒவ்வொரு நாளும் அரிசியைத் தவிர்த்து, ஒவ்வொரு அரைத்திங்களின் {பக்ஷத்தின்} முடிவிலும் அதை {அரிசியை} உட்கொண்டால் அவன் பெரும் எண்ணிக்கையிலான பசுக்களையும், பெரும் சந்ததியையும், நீண்ட வாழ்நாளையும் அடைவான்.(32) ஒவ்வொரு மாதமும் மூன்று இரவுகள் எனப் பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து உண்ணாநோன்பை நோற்பவன், போட்டிக்கு எதிரி இல்லாமல், ஒரே உயரத்திற்கு வளர முயற்சிக்கும் வேறு எவராலும் எந்தக் கவலையும் உண்டாகாமல் தன் உற்றார் உறவினர் மற்றும் துணைவர்களுக்கு மத்தியில் மேன்மையான நிலையை அடைவான்.(33) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் சொல்லும் இந்த விதிகள் பனிரெண்டு வருடங்களுக்குப் பின்பற்றப்பட வேண்டியவையாகும். உன் சார்பு அதை நோக்கி வெளிப்படட்டும்.(34)

முற்பகலில் ஒரு முறையும், மாலைக்குப் பிறகு ஒருமுறையும் உண்டு, இடைவெளியில் பருகுவதை (அல்லது எதையும் உண்பதைத்) தவிர்த்து, அனைத்து உயிரினங்களிடமும் கருணையை நோற்று, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் தெளிந்த நெய்யை ஆகுதியாக ஊற்றும் மனிதன்(35) ஆறுவருடங்களில் நிச்சயமான வெற்றியை அடைகிறான். இதில் ஐயமேதும் கிடையாது. அத்தகைய மனிதன் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை ஈட்டுகிறான்.(36) பலன்களுடன் கூடியவனாக அனைத்துக் களங்கங்களிலிருந்தும் விடுபடும் அவன், ஆடல் மற்றும் பாடல் ஒலிகளை எதிரொலிக்கும் அப்ஸரஸ்களின் உலகத்தை அடைந்து, பேரழகுடன் கூடிய ஆயிரம் காரிகையரின் துணையுடன் தன் நாட்களைக் கடத்துவான்.(37) உருக்கப்பட்ட பொன்னின் நிறத்தாலான தேரைச் செலுத்திச் செல்லும் அவன் பிரம்மலோகத்தில் உயர்ந்த கௌரவங்களை அடைகிறான். அந்தப் பலன் தீர்ந்ததும் பூமிக்குத் திரும்பும் அத்தகைய மனிதன் மேன்மையான நிலையை அடைகிறான்.

ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு வேளை உணவுக்கு மட்டும் தன்னை அடக்கிக் கொண்டு {அவ்வாறே} தொடர்ந்து ஒரு வருடத்தைக் கழிக்கும் மனிதன்(39) அதிராத்ர வேள்வி செய்த பலனை அடைகிறான். இறந்த பிறகு சொர்க்கத்திற்கு உயரும் அவன் அங்கே பெரும் கௌரவங்களைப் பெறுகிறான்.(40) அந்தப் பலன் {புண்ணியம்} தீர்ந்ததும் பூமிக்கும் திரும்பு அவன் மேன்மையான நிலையை அடைகிறான்.

தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாநோன்பு நோற்று ஒவ்வொரு நான்காம் நாளிலும் உணவை உண்டு மொத்த வருடத்தையும் கடத்தி,(41) அனைத்து வகையிலும் தீங்கிழைக்காதவனாக இருந்து, பேச்சில் வாய்மையில் பற்றுக் கொண்டு, தன் புலன்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான்.(42) இறப்புக்குப் பிறகு சொர்க்கத்திற்கு உயரும் அத்தகைய மனிதன் அங்கே உயர்ந்த வெகுமதிகளை அடைகிறான்.

ஓ! குந்தியின் மகனே, தொடர்ந்து ஐந்து நாட்கள் உண்ணாநோன்பு நோற்று ஆறாம் நாளில் மட்டுமே உணவை உண்டு மொத்த வருடத்தையும் கடத்தும் மனிதன்,(43) குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். அவன் செலுத்தும் தேரானது சக்கரவாகங்கால் இழுக்கப்படும்.(44) அத்தகைய மனிதன் முழுமையாக நாற்பதாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புற்றிருப்பான்.

தொடர்ந்து ஏழு நாட்கள் உண்ணாநோன்பு நோற்று ஒவ்வொரு எட்டாம் நாளிலும் உணவை உண்டு மொத்த வருடத்தையும் கடத்தும் ஒருவன்,(45) கவாமய வேள்வி செய்த பலனை அடைகிறான். அவன் செலுத்தும் தேரானது, அன்னங்களாலும், நாரைகளாலும் இழுக்கப்படும்.(46) அத்தகைய மனிதன் ஐம்பதாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புற்றிருப்பான்.

ஓ! மன்னா, ஒவ்வொரு அரைத்திங்கள் {பக்ஷகாலம்} இடைவெளிகளில் மட்டுமே உண்டு ஒரு வருடத்தைக் கடத்தும் ஒருவன்,(47) ஆறு மாதங்கள் தொடர்ந்து உண்ணா நோன்பிருந்ததன் பலனை அடைகிறான். இது சிறப்பு மிக்க அங்கிரஸால் சொல்லப்பட்டதாகும். அத்தகைய மனிதன் அறுபதாயிரம் வருட காலம் சொர்க்கத்தில் வசிப்பான்.(48) ஓ! மன்னா அவன் ஒவ்வொரு காலையிலும் வீணைகள், வல்லகிகள் மற்றும் புல்லாங்குழல்களின் {வேணுவின்} இனிய இசையால் படுக்கையில் இருந்து எழுப்பப்படுவான்.(49)

ஓ! ஏகாதிபதி, ஒவ்வொரு மாதம் முடியும்போதும் சிறிதளவு நீரை மட்டுமே பருகி ஒரு வருடத்தைக் கடத்தும் ஒருவன் விஷ்வஜித் வேள்வி செய்ததன் பலனை அடைவான்.(50) அத்தகைய மனிதன் சிங்கங்கள் மற்றும் புலிகளால் இழுக்கப்படும் தேரைச் செலுத்துவான். அவன் எழுபதாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் வசித்து அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புற்றிருப்பான்.(51) ஓ! மனிதர்களின் தலைவா, ஒரு மாதத்திற்கும் அதிகமாக எந்த உண்ணாநோன்பும் விதிக்கப்படவில்லை. ஓ! பிருதையின் மகனே, கடமைகளை அறிந்தவர்களான தவசிகளால் அறிவிக்கப்பட்ட உண்ணாநோன்பின் விதி இதுவே ஆகும்.(52) ஒவ்வொரு பிணியில் இருந்தும் விடுபட்டு நோயால் பீடிக்கப்படாமல் ஓர் உண்ணாநோன்பை நோற்கும் மனிதன், உண்மையில் ஒவ்வொரு நோன்பினாலும் வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.(53) அத்தகைய மனிதன் அன்னங்களால் இழுக்கப்படும் தேரில் சொர்க்கத்திற்கு உயர்கிறான். பலத்துடன் கூடிய அவன், நூறாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புறுகிறான்.(54) அழகிய குணங்களைக் கொண்ட நூறு அப்சரஸ்கள் அவனுக்குப் பணிவிடை செய்து அவனோடு விளையாடுவார்கள்.(55) அந்தக் காரிகையரின் காஞ்சிகள் {மேகலைகள்} மற்றும் நுபுரங்களின் {சிலம்புகளின்} ஒலியால் அவன் ஒவ்வொரு காலையிலும் படுக்கையில் இருந்து எழுப்பப்படுவான்.(56) அத்தகைய மனிதன் ஆயிரம் அன்னங்களால் இழுக்கப்படும் தேரைச் செலுத்திச் செல்வான். நூற்றுக்கணக்கான அழகிய காரிகைகள் நிறைந்த உலகத்தில் வசித்துப் பெரும் மகிழ்ச்சியில் அவன் நேரத்தைக் கடத்துவான்.(57)

சொர்க்கத்தை விரும்பும் மனிதன், பலவீனத்தை அடையும்போது பலமடையவோ, காயம்படும்போதும், காயம் ஆறவோ, நோய்வாய்ப்படும்போது குணப்படுத்தும் மருந்துகளையோ, கோபத்திலிருக்கும் போது பிறரின் ஆறுதல்களையோ, செல்வம் செலவழிந்ததன் மூலம் வறுமையால் உண்டாகும் கவலைகளைத் தணிக்கவோ விரும்புவதில்லை.(58,59) அனைத்து வகைப் பண்புகளை இழந்து இவ்வுலகை விட்டுச் செல்லும் அவன், சொர்க்கத்திற்குச் சென்று, அனைத்து வகை ஆபரணங்களாலும் தன் மேனி பளபளக்க, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேர்களைச் செலுத்துகிறான். அங்கே, அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்து, நூற்றுக்கணக்கான அழகிய காரிகையருக்கு மத்தியில் அனைத்து வகை இன்பங்களையும் அனுபவிக்கிறான்(60)

உண்மையில், உணவையும் இவ்வுலக இன்பங்களையும் தவிர்க்கும் அவன் இவ்வுடலைவிட்டு அங்கன்று, தவங்களின் கனியாகச் சொர்க்கத்திற்கு உயர்கிறான். அங்கே தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நலமும், மகிழ்ச்சியும் அடைந்து, தன் மனத்தில் எழும் விருப்பம் எதுவும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்படுகிறான்.(61) அத்தகைய மனிதன் தங்கநிறம் கொண்டதும், காலை சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதும் முத்துக்கள் மற்றும் வைடூரியங்கள் பதிக்கப்பட்டதும், வீணைகள் மற்றும் முரஜங்களின {முரசுகளின்} இசையை எதிரொலிப்பதும், கொடிகள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக மணிகளின் கிங்கிணிகளை எதிரொலிப்பதுமான ஒரு தெய்வீகத் தேரைச் செலுத்திச் செல்வான்.(62,63) அத்தகைய மனிதன், தன் உடலில் உள்ள வியர்வைத் துளைகளின் எண்ணிக்கை அளவு வருட காலம் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளையும் பெற்று இன்புற்றிருப்பான்.(64)

வேதத்தைவிட மேன்மையான சாத்திரமேதும் இல்லை. தாயைவிட மதிக்கத் தகுந்த மனிதர் வேறு யாரும் இல்லை. அறத்தைவிட மேன்மையான உடைமை {லாபம்} வேறேதும் இல்லை. உண்ணாநோன்பை விட மேன்மையான தவம் ஏதும் இல்லை.(65) பிராமணர்களை விடப் புனிதமானதெனச் சொர்க்கத்திலோ, பூமியிலோ வேறேதும் இல்லை. அதே வகையில் உண்ணாநோன்புகள் நோற்பதைவிட மேன்மையான வேறு தவம் ஏதுமில்லை.(66) உண்ணாநோன்புகளின் மூலமே தேவர்கள் சொர்க்கவாசிகளாவதில் வென்றனர். உண்ணா நோன்புகளின் மூலமே முனிவர்கள் உயர்ந்த வெற்றியை அடைந்தனர்.(67)

விஷ்வாமித்திரர், ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு முறை உணவில் மட்டும் தன்னை அடக்கிக் கொண்டு ஆயிரம் தேவ வருடங்களைக் கழித்ததன் விளைவாகவே அவர் பிராமண நிலையை அடைந்தார்.(68) மன்னிக்கும் பண்பைக் கொண்ட சியவனர், ஜமதக்னி, வசிஷ்டர், கௌதமர், பிருகு ஆகிய பெரும் முனிவர்கள் அனைவரும் உண்ணாநோன்புகள் நோற்றன் மூலமே சொர்க்கத்தை அடைந்தனர்.(69) பழங்காலத்தில் அங்கிரஸ் இவ்வாறே பெரும் முனிவர்களுகுக அறிவித்தார். உண்ணாநோன்புகளின் பலனை மற்றொருவனுக்குக் கற்பிக்கும் மனிதன் எந்தத் துன்பத்தையும் அனுபவிக்க மாட்டான்.(70) ஓ! குந்தியின் மகனே, உண்ணா நோன்புகள் குறித்த விதிகள் பெரும் முனிவரான அங்கிரசிடம் இருந்தே முறையான வரிசையில் உண்டாகின. இவ்விதிகளை நாள் தோறும் படிப்பவன் அல்லது அவற்றைப் படிக்கக் கேட்பவன் அனைத்து வகைப் பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.(71) அத்தகைய மனிதன் ஒவ்வொரு துன்பத்தில் இருந்து மட்டும் விடுபடுவதோடல்லாமல் அவனுடைய மனமானது எவ்வகைக் களங்கத்தாலும் தீண்டப்பட முடியாததாகிறது. அத்தகைய மனிதன், மனிதர்களையும் தவிர அனைத்து உயிரினங்களின் ஒலிகளையும் புரிந்து கொள்வதில்வென்று, நித்திய புகழை அடைந்து, தன் வகையில் முதன்மையானவனாகிறான்” என்றார் {பீஷ்மர்}.(72)

உபவாஸ யாக பலன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 107-யாகம் செய்ய இயலாதவர்கள் உபவாஸங்களின் மூலமே யாக பலனை அடைவது குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! உயர் ஆன்ம பாட்டா, வேள்விகள் குறித்தும், இம்மையிலும், மறுமையிலும் அவை அளிக்கும் பலன்கள் குறித்தும் விவரமாக எங்களுக்குச் சொன்னீர்.(1) ஓ! பாட்டா, வேள்விகளில் பல்வேறு வகையான பொருட்களைப் பெரிய அளவில் பயன்படுத்த வேண்டியிருப்பதால் அவற்றை ஏழை மக்களால் செய்ய முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.(2) ஓ! பாட்டா, வேள்விகளால் உண்டாகும் பலன்களை மன்னர்கள் மற்றும் இளவரசர்களால் மட்டுமே அடைய முடியும். செல்வமும், திறனுமற்றுத் தனியாக, ஆதரவற்றவர்களாக வாழும் மக்களால் அந்தப் பலன்களை அடைய இயலாது.(3) ஓ! பாட்டா, வேள்விகள் செய்வதால் உண்டாகும் பலன்களைக் கொண்டவையும், வழிமுறையற்றவர்களாலும் செய்யக்கூடியவையுமான செயல்களைப் பொறுத்தவரையில் விதிகள் என்ன என்பதை எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, கேட்பாயாக. முனிவர் அங்கிரஸால் முதலில் வெளியிடப்பட்டதும், ஆன்மாவுக்குப் பலன்மிக்க உண்ணாநோன்புகள் தொடர்புடையதுமான நான் சொன்ன விதிமுறைகள் (இம்மையிலும், மறுமையிலும் அவை கொண்டு வரும் கனிகளைப் பொறுத்தவரையில்) வேள்விக்குச் சமமானதாகவே கருதப்படுகின்றன.(5) முற்பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் உணவுண்டு, அதன் இடைவெளியில் எந்த உணவையோ, பானத்தையோ உட்கொள்ளாமல், தொடர்ந்து ஆறு வருடங்கள் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல், ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் முறையாக ஆகுதிகளை ஊற்றும் மனிதன் ஐயமில்லாமல் வெற்றியை அடைகிறான். அத்தகைய மனிதன், மறுமையில் உருக்கிய தங்கத்தின் நிறத்திலான தேரையும், ஒரு வசிப்பிடத்தையும் அடைந்து, பிரஜாபதியின் உலகத்தில் பத்து லட்சம் வருடங்கள் தெய்வீக காரிகையரின் துணையுடனும், ஆடல் மற்றும் பாடலொலிகள் எதிரொலிக்க, நெருப்பைப் போலச் சுடர்விட்டுப் பிரகாசிப்பான்.(6-8)

ஒவ்வொரு நாளும் ஒரேயொரு வேளை உணவில் தன்னை அடக்கிக் கொண்டு, தான் மணந்த மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் கலவியை எப்போதும் தவிர்த்து மூன்று வருடங்களைக் கடத்துபவன், அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்.(9) அத்தகைய மனிதன், வாசவனுக்கு {இந்திரனுக்குப்} பிடித்தமானதும், அபரிமிதமான பொற்கொடை அளிக்கப்பட்டதுமான ஒரு வேள்வியைச் செய்தவனாகக் கருதப்படுகிறான். வாக்கில் வாய்மை பயின்று, கொடைகள் அளித்து, பிராமணர்களை மதித்து, வன்மத்தைத் தவிர்த்து,(10) மன்னிக்கும் குணத்தை அடைந்து, தற்கட்டுப்பாட்டுடன் கோபத்தை வெல்லும் மனிதன் உயர்ந்த கதியை அடைகிறான். மேகம் போன்ற வெண்ணிறம் கொண்டதும், அன்னங்களால் இழுக்கப்படுவதுமான தேரைச் செலுத்திக் கொண்டு, அப்சரஸ்களின் துணையுடன் லட்சோபலட்சம் ஆண்டுகள் வாழ்கிறான்.ஒரு முழு நாள் உண்ணாநோன்பிருந்து, இரண்டாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு,(11,12) மொத்த வருட காலமும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன், உண்மையில், அத்தகைய நோன்பை நோற்று, ஒவ்வொரு நாளும் சூரியன் எழுவதற்கு முன்பு படுக்கையில் இருந்து எழுந்து, ஒவ்வொரு நாளும் தன் நெருப்பைக் கவனித்துக் கொள்பவன்(13) அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான். அத்தகைய மனிதன் அன்னங்கள் மற்றும் நாரைகளால் இழுக்கப்பட்ட தேரை அடைகிறான்.(14) அவன், மிக அழகிய காரிகைகள் சூழ இந்திரலோகத்தில் வசிக்கிறான்.

{இரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து,} மூன்று நாளைக்கொரு முறை மட்டுமே உணவை உண்டு,(15) மொத்த வருடமும் ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன், உண்மையில் இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காலையிலும் சூரியன் எழுவதற்கு முன்பு எழுந்து தன் நெருப்பைக் கவனித்துக் கொள்பவன்,(16) அதிராத்ர வேள்வி செய்த உயர்ந்த பலனை அடைகிறான். அவன் மயில்கள், அன்னங்கள் மற்றும் நாரைகளால் இழுக்கப்படும் தேரை அடைகிறான்.(17) (தெய்வீக) முனிவர்கள் எழுவரின் உலகங்களுக்குச் செல்லும் அவன், பேரழகுடைய அப்சரஸ்கள் சூழ அங்கேயே தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொள்கிறான். அத்தகைய வாசம் முழுமையாக மூன்று பத்ம வருடங்கள் நீடித்திருப்பதாக நன்கு அறியப்பட்டுள்ளது[1].(18)தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாநோன்பிருந்து, நான்காம் நாளில் ஒரே ஒரு வேளை உணவை உண்டு, தன் புனித நெருப்பில் ஒவ்வொரு நாளும் ஆகுதிகளை ஊற்றுபவன்,(19) வாஜபேய வேள்வி செய்த உயர்ந்த பலனை அடைகிறான். அவன் அடையும் தேரானது, இந்திரனைத் தங்கள் தந்தையாகக் கொண்டவர்களும், பேரழகுடன் கூடியவர்களுமான தெய்வீக காரிகையரால் நிறைந்திருக்கும்.(20) அவன் லட்சோபலட்சம் ஆண்டுகள் இந்திரலோகத்தில் வசித்திருந்து, தேவர்களின் தலைவனுடைய விளையாட்டுகளைக் கண்டு பெரும் மகிழ்ச்சியை அனுபவிப்பான்.(21)

தொடர்ந்து நான்கு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, ஐந்தாம் நாளில் ஒரே ஒரு வேளை உணவை உண்டு, மொத்த வருடமும் ஒவ்வொரு நாளும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(22) பேராசையின்றி, வாய்மை பேசி, பிராமணர்களை மதித்து, அனைத்து வகைத் தீங்குகளை விட்டும் விலகி, பாவம் மற்றும் வன்மத்தைத் தவிர்த்து வாழ்பவன், வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான்.(23) அவன், தங்கத்தால் அமைக்கப்பட்டதும், அன்னங்களால் இழுக்கப்படுவதும், பல சூரியன்கள் ஒன்றாக எழுந்தால் உண்டாகும் பிரகாசத்துடன் கூடியதுமான தேரைச் செலுத்துகிறான். அதுதவிர, தூய வெண்ணிறத்தாலான மாடமாளிகை ஒன்றையும் அடைகிறான். அங்கே அவன் முழுமையாக ஐம்பத்தோரு பத்ம வருடங்கள் பெரும் மகிழ்ச்சியோடு வாழ்கிறான்[2].(25)ஐந்து நாட்கள் உண்ணாநோன்பிருந்து, ஆறாம் நாளில் மட்டுமே உணவு உண்டு, மொத்த வருடமும் ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(26) தன்னைத் தூய்மை செய்து கொள்ள ஒரு நாளைக்கு மூன்று முறை தூய்மைச் சடங்குகளைச் செய்து, தன் வேண்டுதல்களைச் சொல்லி வழிபட்டு, தன்னொழுக்கத்தில் வன்மம் இல்லாமல் பிரம்மச்சரிய வாழ்வை வாழும் ஒருவன் கோமேத வேள்வி செய்த பலனை அடைகிறான்.(27) பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், சுடர்மிக்க நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டதும், அன்னங்கள் மற்றும் மயில்களால் இழுக்கப்பட்டதுமான ஒரு சிறந்த தேரை அவன் அடைகிறான்.(28) அப்சரஸ்களின் மடியில் உறங்கும் அவன் ஒவ்வொரு நாள் காலையிலும் காஞ்சிகள் {மேகலைகள்} மற்றும் நுபுரங்களின் {சிலம்புகளின்} இனிய கிங்கிணியால் விழிப்படையச் செய்யப்படுகிறான்.(29) அவன் பதினெட்டுப் பத்மங்கள் மற்றும் இரண்டு பதாகங்கள் தவிர ஆயிரத்து முன்னேறு கோடி வருடங்கள் அத்தகைய மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வான்.(30) அத்தகைய மனிதன் ஐயாயிரம் கரடிகளின் உடல்களில் உள்ள மயிர்களின் எண்ணிகை அளவுக்கான வருடங்கள் பிரம்மலோகத்தில் அனைவராலும் கௌரவிக்கப்பட்டு வசித்து வருவான்[3].(31)ஆறு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, ஒவ்வொரு ஏழாம் நாளிலும் ஒரு வேளை மட்டுமே உண்டு, முழுமையாக ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு நாளும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(32) பேச்சை அடக்கி, பிரம்மச்சரிய நோன்பை நோற்று, மலர்கள், களிம்புகள், தேன் மற்றும் இறைச்சிப் பயன்பாட்டைத் தவிர்த்து இருப்பவன்,(33) மருத்துகள் மற்றும் இந்திரனின் உலகங்களை அடைகிறான். அவன் தன் மனத்தில் எழும் ஒவ்வொரு விருப்பமும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டு, தெய்வீகக் காரிகையரால் பணிசெய்யப்பட்டு, துதிக்கப்படுகிறான்.(34) அபரிமிதமான தங்கத்தைக் கொடையளிக்கும் ஒரு வேள்வி செய்த பலனை அவன் அடைகிறான். மேற்சொன்ன உலகங்களுக்குச் செல்லும் அவன் அங்கே எண்ணற்ற வருடங்கள் பெரும் மகிழ்ச்சியில் வாழ்கிறான்.(35)

அனைவரிடமும் பொறுமை காத்து, ஏழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து, மொத்த வருடதில் ஒவ்வொரு எட்டு நாளும் உண்டு, புனித நெருப்பில் ஒவ்வொரு நாளும் ஆகுதிகளை ஊற்றி, தேவர்களை முறையாக வழிபடுபவன்,(36) பௌண்டரீக வேள்வி செய்த உயர்ந்த பலன்களை அடைகிறான். அவன் தாமரையின் நிறம் கொண்ட தேரைச் செலுத்துவான்.(37) அத்தகைய மனிதன், இளமையும் அழகும் கொண்டவர்களும், மிக ஏற்கத்தக்க வகையிலான குணங்களையும், பார்வைகளையும் கொண்டவர்களும் கரிய நிறம் கொண்ட சிலரும், தங்க போன்ற நிறம் கொண்ட சிறரும், சியாமைகள் சிலரும் எனப் பெரும் எண்ணிக்கையிலான காரிகையரை அடைகிறான்[4].(38)எட்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, மொத்த வருடத்தில் ஒவ்வொரு ஒன்பதாம் நாளிலும் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு, நாள்தோறும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன்,(39) ஆயிரம் குதிரைவேள்விகள் செய்த உயர்ந்த பலனை அடைகிறான். அவன் சொர்க்கத்தில் செலுத்தும் தேரானது ஒரு தாமரையைப் போன்ற அழகுடையதாக இருக்கும்.(40) எப்போதும் அவன், தெய்வீக மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களும், நடுப்பகல் சூரியன் அல்லது சுடர்மிக்க நெருப்பின் தழல்களுடைய பிரகாசத்துடன் கூடியவர்களுமான ருத்ரனுடைய பெண்களின் துணையுடன் தேர்களில் பயணம் செய்வான்.(41) ருத்ரனின் உலகங்களை அடைந்து அங்கே அவன் எண்ணற்ற வருடங்கள் பெரும் மகழ்ச்சியில் வாழ்வான்.(42)

ஒன்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து, மொத்த வருடத்தில் ஒவ்வொரு பத்தாவது நாளும் ஒரேயொரு வேளை உணவை உண்டு, நாள்தோறும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன்,(43) ஆயிரம் குதிரை வேள்விகள் செய்த உயர்ந்த பலனைப் பெற்று, அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் கவரவல்ல அழகுடன் கூடிய பிரம்மனின் மகன்களுடைய துணையையும் அடைகிறான்.(44) இத்தகைய அழகுடன் கூடிய இந்தக் காரிகையரில் தாமரையைப் போன்ற நிறத்தைக் கொண்ட சிலரும், அதே மலரின் நீல வகையிலான நிறத்தைக் கொண்ட சிலரும் எப்போதும் அவனை இன்பத்துடன் வைத்திருக்கிறார்கள்.(45) அழகாக வலம் வருவதும், ஆவர்த்தம் என்றழைக்கப்படும் அடர்த்தியான மேகம் போலத் தெரிவதும், பெருங்கடலின் அலைக்கு ஒப்பாகச் சொல்லப்படுவதுமான ஓர் அழகிய தேரை அவன் அடைவான்.(46) முத்து மற்றும் ரத்தினச்சரங்களின் கிங்கிணியையும், சங்கின் இனிய முழக்கங்களையும் எப்போதும் எதிரொலிக்கும் அந்த வாகனம், படிகம் மற்றும், வைரங்களால் அமைக்கப்பட்ட தூண்களாலும், அதே பொருட்களால் கட்டப்பட்ட பீடத்துடனும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.(47) அன்னங்கள் மற்றும் நாரைகளால் இழுக்கப்படும் அத்தகைய தேரில் பயணம் செய்யும் அவன் சொர்க்கத்தில் கோடானகோடி வருடங்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான்.(48)

பத்து நாட்கள் உண்ணாநோன்பிருந்து, மொத்த வருடத்தில் ஒவ்வொரு பதினோராம் நாளிலும் நெய்யை மட்டுமே உண்டு, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(49) சொல்லாலோ, எண்ணத்தாலோ அடுத்தவரின் மனைவிகளின் மேல் ஒருபோதும் ஆசை கொள்ளாதவனும், தன் தாய்க்காகவும், தந்தைக்காகவும் கூட ஒருபோதும் பொய் பேசாதவனுமான ஒருவன்,(50) பெரும்பலம் கொண்ட மஹாதேவன் தன் தேரில் அமர்ந்திருப்பதைக் காண்பதில் வெல்வான். அத்தகைய மனிதன் ஓராயிரம் குதிரை வேள்விகள் செய்த உயர்ந்த பலனை அடைகிறான்.(51) அவன் சுயம்புவான பிரம்மனின் தேர் தன்னை அழைத்துச் செல்ல வருவதைக் காண்பான். பசும்பொன் மோன்ற பிரகாசத்துடனும், பேரழகுடனும் கூடிய தெய்வீகக் காரிகையரின் துணையுடன் அவன் அதை {அந்தத் தேரைச்} செலுத்துவான்.(52) யுகநெருப்பின் காந்தியுடன் சுடர்விடும் அவன் சொர்க்கத்தின் தெய்வீக மாளிகையில் முழுமையான மகிழ்ச்சியுடன் எண்ணற்ற வருடங்கள் வாழ்வான்.(53) அந்த எண்ணற்ற வருடங்களும் அவன், தேவர்களாலும், தானவர்களாலும் துதிக்கப்படும் ருத்திரனுக்குத் தலைவணங்கி இன்பமாக வாழ்வான்.(54) அத்தகைய மனிதன் ஒவ்வொரு நாளும் அந்தத் தேவனைக் காண்பான்.

பதினோரு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பனிரெண்டாம் நாளில் மட்டும் சிறிதளவு நெய்யை மட்டுமே உண்டு,(55) மொத்த வருடமும் இவ்வொழுக்கத்தை நோற்கும் மனிதன், அனைத்து வேள்விகளையும் செய்த பலன்களை அடைவதில் வெல்வான். அவன் செலுத்தும் தேர் பனிரெண்டு சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டதாக இருக்கும்.(56) பெரும் மதிப்புமிக்க ரத்தினங்கள், முத்துகள் மற்றும் பவளங்களால் அலங்கரிக்கப்பட்டதும், இன்னிசை முழங்கும் அன்னங்கள், பாம்புகள், மயில்கள் மற்றும் சக்கரவாகங்களால் செறிவூட்டப்பட்டதும், பெரிய குவிமுக மாடங்களால் அழகூட்டப்பட்டதுமான பிரம்மலோகத்தை அடைந்து அங்கே வசிக்கிறான்.(57,58) ஓ! மன்னா, அந்த வசிப்பிடம் (பணிவிடை செய்யக் காத்திருக்கும்) ஆண்கள் மற்றும் பெண்களால் எப்போதும் நிறைந்திருப்பதாகும். அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான முனிவர் அங்கிரஸ் (இத்தகைய நோன்பிற்கான கனிகளாக) இதையே சொல்லியிருக்கிறார்.(59)

பனிரெண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பதிமூன்றாம் நாளில் சிறிதளவு நெய்யுண்டு, மொத்த வருடமும் இவ்வழியிலேயே தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், தெய்வீக வேள்வி {தேவஸத்ர வேள்வி} செய்த பலனை அடைவதில் வெல்கிறான்.(60) அத்தகைய மனிதன், புதிதாய் மலர்ந்த தாமரையின் நிறத்தைக் கொண்டதும், பசும்பொன்னாலும், ரத்தினக்குவியல்களாலும் அலங்கரிக்கப்பட்ட {ரக்தபத்மோதயம் என்றழைக்கப்படும்} ஒரு தேரை அடைகிறான்.(61) அவன், தெய்வீகக் காரியர்களால் நிறைந்ததும், அனைத்து வகைத் தேவ ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக நறுமணங்கள் கமழ்வதும், அனைத்து வகை இன்பங்களையும் கொண்டதான மருத்துகளின் உலகத்தை அடைகிறான்.(62) அவன் அந்த மகிழ்ச்சிகரமான உலகத்தில் வசிக்கும் வருடங்களின் எண்ணிக்கை எண்ணற்றதாகும்[5].(63) கந்தர்வர்களின் இனிய குரல், இசையொலி, பணவங்கள் ஆகியவற்றால் ஆறுதலடையும் அவன் பேரழகுடன் கூடிய காரிகைகளால் தொடர்ந்து மகிழ்ச்சியூட்டப்படுவான்.(64)பதிமூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து பதினான்காம் நாளில் சிறிதளவு நெய்யும் உண்டு, முழு வருடமும் இவ்வாறு தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன் மஹாமேத வேள்வி செய்த பலனை அடைகிறான்[6].(65) விவரிக்கமுடியாத அழகைக் கொண்டவர்களும், தோற்றத்தில் இளமையாகவே இருப்பதால் வயதை ஊகித்தறிய முடியாதவர்களும், அனைத்து ஆபரணங்கள் மற்றும் சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான தெய்வீகக் காரிகையர், அவனது பயணங்களில் அவனைப் பின் தொடரத் தேர்கள் பலவற்றில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்.(66) ஒவ்வொரு காலையிலும், அன்னங்களின் மெல்லிய குரல், நுபுரங்களின் {சிலம்புகளின்} கிங்கிணி, காஞ்சிகளின் {மேகலைகளின்} இனிய ஒலி ஆகியவற்றால் படுக்கையில் இருந்து அவன் எழுப்பப்படுவான். உண்மையில், கங்கையின் கரைகளில் உள்ள மணலின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்கள் அத்தக தெய்வீகக் காரிகையர் பணிவிடை செய்யும் மேன்மையான வசிப்பிடத்தில் அவன் வசித்திருப்பான்.(67)புலன்களை அடக்கி, ஓர் அரைத்திங்கள் {ஒரு பக்ஷ காலம்} உண்ணா நோன்பிருந்து, பதினாறாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உட்கொண்டு, இவ்வழியில் மொத்த வருடமும் தன்னைத் தாங்கிக் கொண்டு, நாள்தோறும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(68,69) ஓராயிரம் ராஜசூய வேள்விகள் செய்த உயர்ந்த பலன்களை அடைகிறான். அவன் செலுத்தும் தேரானது பேரழகுடன் கூடியதாகவும், அன்னங்கள் மற்றும் மயில்களால் இழுக்கபடுவதாகவும் இருக்கும். முத்துமாலை மற்றும் பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், அனைத்து வகை ஆபரணங்களும் பூண்ட தெய்வீகக் காரிகையரின் கூட்டத்தால் நிறைந்ததும்,(71) ஒற்றைத் தூணையும், நான்கு வளைவுகளையும், மிக மங்கலமான ஏழு பீடங்களையும் கொண்டதும், ஆயிரம் கொடிகளுடன் கூடியதும், இசையொலியை எதிரொலிப்பதும்,(72) தெய்வீக குணங்களையும், தேவர்களின் குணங்களையும் கொண்டதும், ரத்தினங்கள், முத்துகள், பவளங்கள் ஆகியவை நிறைந்ததும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டதுமான ஒரு தேரைச் செலுத்தும் அத்தகைய மனிதன், அவ்வாகனத்தை இழுக்க யானைகளையும், காண்டாமிருகங்களையும் கொண்டு ஆயிரம் யுகங்கள் சொர்க்கத்தில் வாழ்ந்திருப்பான்.(73)

பதினைந்து நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பதினாறாம் நாளில் ஒரு வேளை உணவை உண்டு, இவழியில் மொத்த ஆண்டும் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், சோம வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.(74) சொர்க்கத்திற்குச் செல்லும் அவன் சோமனுடைய மகள்களின் துணையுடன் வாழ்கிறான். சோமனைப் போலவே இனிய நறுமணக் களிம்புகளால் அவனது உடலில் நறுமணம் கமழும் அவன் தான் விரும்பும் இடத்திற்கு உடனே செல்லும் சக்தியையும் அடைகிறான்.(75) மிக அழகிய குணங்களையும், ஏற்புடைய நடத்தையுயும் கொண்ட காரிகையர் பணிசெய்ய, அனைத்து வகை இன்பங்களுடன் கூடியவனாகத் தேரில் அமர்ந்திருப்பான்.(76) அவன் இத்தகைய இன்பங்களைக் கணக்கில்லாத ஆண்டுகள் அனுபவிப்பான்[7].(77)பதினாறு நாட்கள் உண்ணா நோன்பிருந்து, பதினேழாம் நாளில் சிறிதளவு நெய்யை உண்டு, ஒரு முழு வருடம் தன்னைத் தாங்கிக் கொண்டு. ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(78) வருண, இந்திர, ருத்திர, மருத்து, உசானஸ, பிரம்ம லோகங்களுக்குச் செல்கிறான்.(79) அங்கே அவன் தெய்வீகக் காரிகையரால் பணிவிடை செய்யப்பட்டு, புர்புவன் என்றழைக்கப்படும் தெய்வீக முனிவரின் காட்சியைப் பெற்று மொத்த அண்டத்தையும் தன் உற்றறியும் திறனுக்குள் {அறிவுக்கு எட்டிய தொலைவில்) அடக்குகிறான்.(80) தேவர்களின் தேவனுடைய {பிரம்மனின்} மகள்கள் அங்கே அவனுக்கு மகிழ்ச்சியூட்டுகிறார்கள். ஏற்புடைய {இனிய} நடத்தை கொண்டவர்களும், அனைத்து ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அந்தக் காரிகையர் முப்பத்திரண்டு வடிவங்களை ஏற்கவல்லவர்களாவர்.(81) ஆகாயத்தில் சூரியனும், சந்திரனும் நகரும் வரை, ஞானம் கொண்ட அந்த மனிதனும் அமுதத்தைப் பருகியபடியே அந்த இன்ப உலகத்தில் வசித்திருப்பான்[8].(82)பதினேழு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பதினெட்டாம் நாளில் ஒரேயொரு வேளை மட்டும் உணவை உண்டு, அவ்வழியிலேயே மொத்த ஆண்டும் தன்னைத் தாங்கிக் கொள்பவன் அண்டத்திலுள்ள ஏழு உலகங்களையும் தன் உற்றறியும் திறனுக்குள் {அறிவுக்கு எட்டிய தொலைவிற்குள்} அடக்கிவிடுவான்.(83) அவன் தன் தேரில் பயணங்கள் மேற்கொள்ளும்போது, ஏற்புடைய சடசடப்பொலியைக் கொண்டவையும், ஆபரணங்களாலும், அழகாலும் சுடர்விடும் தெய்வீகக் காரிகைகளால் செலுத்தப்படுபவையுமான தேர்க்கூட்டங்களால் எப்போதும் பின்தொடரப்படுவான்.(84) தெய்வீகமானதும், பேரழகுடன் கூடியதுமான தன் வாகனத்தைப் பெரும் மகிழ்ச்சியில் இன்புற்றவாறே அவன் செலுத்திக் கொண்டிருப்பான். அது சிங்கங்களாலும், புலிகளாலும் இழுக்கப்பட்டு மேகவொலியைப் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியை உண்டாக்கும்.(85) அவன் அத்தகைய இன்ப உலகத்தில், அமுதம் போன்ற இனிய சுவையுள்ளவற்றை உண்டு ஆயிரம் கல்பங்கள் வாழ்வான்.(86)

பதினெட்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பத்தொன்பதாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு ஒரு முழுமையான வருடம் இதே வழியில் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், இந்த அண்டத்திலுள்ள ஏழு உலகங்களையும் தன் உற்றறியும் திறனுக்குள் {அறிவுக்கு எட்டிய தொலைவிற்குள்} அடக்கிவிடுவான்.(87) அவன் அடையும் உலகத்தில் அப்சரஸ்களின் எண்ணற்ற இனக்குழுக்கள் வசிக்கின்றன, அது கந்தர்வர்களின் இனிய குரலை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அவன் செலுத்தும் தேர், சூரியப் பிரகாசத்தைக் கொண்டதாகும்.(88) அனைத்துக் கவலையில் இருந்தும் விடுபட்ட இதயத்துடன் கூடிய அவனிடம் தெய்வீகக் காரிகையரில் முதன்மையானோர் பணி செய்வார்கள். தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனாகவும், அழகிய வடிவைக் கொண்டவனாகவும் அவன் கோடானுகோடி ஆண்டுகள் அத்தகைய இன்பத்தில் வாழ்ந்திருப்பான்.(89)

பத்தொன்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து ஒவ்வொரு இருபதாம் நாளில் மட்டும் ஒரேயொரு வேளை உணவை உண்டு, ஒரு முழு வருடமும் இவ்வழியிலேயே தன்னைத் தாங்கிக் கொண்டு, எப்போதும் பேச்சில் வாய்மையைப் பின்பற்றி, வேறு (சிறந்த) சடங்குகளையும் பின்பற்றி,(90) இறைச்சியைத் தவிர்த்து, பிரம்மச்சரிய வாழ்வை நோற்று, அனைத்து உயிரினங்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்து வாழும் மனிதன், பரந்து விரிந்தவையும், பெரும் மகிழ்ச்சியைக் கொண்டவையுமான ஆதித்தியர்களின் உலகங்களை அடைகிறார்கள்.(91) அவன் தன் தேரில் பயணம் மேற்கொள்ளும்போது, தெய்வீக மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரிக்கப்பட்ட கந்தர்வகள் மற்றும் அப்சரஸ்களால் செலுத்தப்படும் தேர்க்கூட்டங்கள் அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.(92)

இருபது நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தோராம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வழியிலேயே ஒரு முழு வருடம் தன்னைத் தாங்கிக் கொண்டு, தன் புனித நெருப்பில் ஒவ்வொரு நாளும் ஆகுதிகளை ஊற்றுபவன்,(93) உசானஸ், சக்ரன், அஸ்வினிகள் மற்றும் மருத்துகளின் உலகங்களை அடைந்து, பெருமளவிலான தடங்கலில்லா மகிழ்ச்சியுடன் அங்கே வாழ்கிறான்.(94) எந்த வகைக் கவலையையும் அறியாத அவன், தன் பயணங்களில் முதன்மையான தேரைச் செலுத்திக் கொண்டு, தெய்வீகக் காரிகையரில் முதன்மையானோரால் பணிவிடை செய்யப்பட்டு, பலத்துடன் கூடியவனாக ஒரு தேவனைப் போலவே அங்கே விளையாடிக் கொண்டிருப்பான்.(95)

இருபத்தோரு நாட்கள் உண்ணாநோன்பிருந்து இருபத்திரண்டாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வழியிலேயே ஒரு முழு வருடம் தன்னைத் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை உற்றி,(96) எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்வதைத் தவிர்த்து, பேச்சில் வாய்மையில் பற்றுக் கொண்டு, வன்மத்தில் இருந்து விடுபட்டு வாழும் மனிதன் வசுக்களின் உலகை அடைந்து, சூரியப் பிரகாசம் கொண்டவனாகிறான்.(97) விரும்பிய இடம் எங்கும் செல்லும் சக்தியைக் கொண்டவனாக அமுதத்தைப் பருகி, முதன்மையான தேரைச் செலுத்திக் கொண்டு, தெய்வீக ஆபரணங்களை அணிந்து கொண்டு, தெய்வீகக் காரிகையரின் துணையுடன் இன்பத்தில் அவன் விளையாடிக் கொண்டிருப்பான்.(98)

இருபத்திரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்துமூன்றாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, ஒரு முழு வருடம் இவ்வழியில் தன்னைத் தாங்கிக் கொண்டு, இவ்வாறே தன் உணவுமுறையை வகைமை செய்து கொண்டு, தன் புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் மனிதன்,(99) காற்றுதேவன் {வாயு}, உசானஸ் மற்றும் ருத்திரனின் உலகங்களை அடைகிறான். விரும்பிய எந்த இடத்திற்கும் செல்லவல்லவனாகத் திரியும் அவன் அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்களால் வழிபடப்படுகிறான்.(100) முதன்மையான தேரைச் செலுத்திக் கொண்டு, தன் மேனியை தெய்வீக ஆபரணங்களால் அலங்கரித்துக் கொள்ளும் அவன், அந்தப் பேரின்ப நிலையில் தெய்வீகக் காரிகையரின் துணையுடன் எண்ணற்ற வருடங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(101)

இருபத்துமூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து, இருபத்துநான்காம் நாளில் சிறிதளவு நெய்யையுண்டு, இவ்வழியில் ஒரு முழு வருடத்திற்குத் தன்னைத் தாங்கிக் கொண்டு, தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(102) மேனியில் தெய்வீக ஆடைகளையும், மாலைகளையும் பூண்டு, தெய்வீக நறுமணங்களையும், களிம்புகளையும் பூசிக் கொண்டு, பெரும் மகிழ்ச்சியுடன் ஆதித்தியர்களின் உலகங்களில் எண்ணற வருடங்கள் வசிக்கிறான்.(103) தங்கத்தால் அமைந்ததும், பேரழகுடன் கூடியதும், அன்னங்களால் இழுக்கப்படுவதுமான சிறந்த தேரைச் செலுத்தும் அவன், ஆயிரமாயிரம் தெய்வீகக் காரியரின் துணையுடன் இன்பத்தில் திளைத்திருக்கிறான்.(104)

இருபத்து நான்கு நாட்கள் உண்ணா நோன்பிருந்து, இருபத்தைந்தாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வாறு ஒரு முழுவருடத்திற்குத் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், முதன்மையான வகையைச் சார்ந்ததும், அனைத்து வகை இன்பங்கள் நிறைந்ததுமான ஒரு தேரை அடைவதில் வெல்கிறான்.(105) அவனுடைய பயணங்களில், சிங்கங்கள் மற்றும் புலிகளால் இழுக்கப்படுபவையும், மேகமுழக்கம் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியை உண்டாக்குபவையும், தெய்வீகக் காரிகையரால் செலுத்தப்படுபவையும், பசும்பொன்னால் ஆனவையும், பேரழகுடன் கூடியவையுமான தேர்க்கூட்டங்களால் அவன் பின் தொடரப்படுவான். பேரழகுடன் கூடிய ஒரு சிறந்த தெய்வீகத் தேரைச் செலுத்தும் அவன்,(106,107) நூற்றக்கணக்கான தெய்வீகக் கன்னிகையரின் துணையுடன், அமுதம் போன்ற இனிமையான சுவைமிக்கவற்றை உண்டு ஓராயிரம் கல்பங்கள் அவ்வுலகங்களில் வசித்திருப்பான்.(108)

இருபத்தைந்து நாட்கள் உண்ணா நோன்பிருந்து இருபத்தாறாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு, இத்தகைய உணவு நடைமுறையை நோற்று ஒரு முழு வருடமும் இவ்வாறு தன்னைத் தாங்கிக் கொண்டு,(109) (உலகப் பொருட்களின்) பற்றுகளில் இருந்து விடுபட்டு, தன் புலன்களைக் கட்டுக்குள் வைத்து, நாள்தோறும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் அருள்நிறைந்த மனிதன், அப்சரஸ்களால் வழிபடப்பட்டு, ஏழு மருத்துகள் மற்றும் வசுக்களின் உலகங்களை அடைவான்.(110) அவன் பயணம் மேற்கொள்ளும்போது, சிறந்த படிகங்களால் ஆனவையும், அனைத்து வகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், அவனுக்கு அனைத்து வகை மதிப்புகளை அளிக்கும் கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களால் செலுத்தப்படும் தேர்க்கூட்டங்கள் அவனைப் பின்தொடர்ந்து செல்லும். இத்தகைய இன்பநிலையில், தெய்வீக சக்தியுடன் கூடியவனாக இரண்டாயிரம் யுகங்கள் அந்த உலகங்களில் வசிக்கிறான்.(111,112)

இருபத்தாறு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தேழாம் நாள் ஒரேயொரு வேளை உணவுண்டு, இவ்வழியில் ஒரு முழு வருடத்திற்குத் தன்னைத் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(113) பெரும் பலனை ஈட்டி, தேவர்களிடம் இருந்து பெரும் கௌரவங்களைப் பெற்றுச் சொர்க்கத்திற்குச் செல்கிறான். அங்கே வசிக்கும் அவன் அமுதம் உண்டு, அனைத்து வகைத் தாகங்களில் இருந்தும் விடுபட்டு, அனைத்து வகை இன்பங்களை அனுபவிப்பான்.(114) ஓ! மன்னா, அனைத்துக் களங்கங்களில் இருந்து தூய்மையடைந்த ஆன்மாவுடன், பேரழகுடன் கூடிய தெய்வீகத் தேரில் பயணம் மேற்கொள்ளும் அவன், தெய்வீக முனிவர்கள் மற்றும் அரச முனிகளின் வகையில் அங்கே தன்னைத் தாங்கிக் கொள்வான்.(115) பெருஞ்சக்தியுடன் கூடிய அவன், உயர்ந்த ஏற்புடைய நடத்தையுடன் கூடிய தெய்வீகக் காரிகையரின் துணையுடன் மூவாயிரம் யுகங்கள் மற்றும் கல்பங்களுக்கு அங்கே பெரும் மகிழ்ச்சியுடன் வசித்திருக்கிறான்.(116)

இருபத்தேழு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தெட்டாம் நாள் ஒரே ஒரு வேளை உணவை உண்டு, இவ்வழியில் ஒரு வருடம் முழுவதும் புலன்கள் மற்றும் ஆன்மாவை நன்கு கட்டுப்படுத்தித் தன்னைத் தாங்கிக் கொள்பவன்,(117) தெய்வீக முனிவர்கள் அடைவதற்கு இணையான மிகப்பெரும் பலனை அடைவான். இன்பத்திற்குரிய அனைத்து வகைப் பொருட்களுடன் பெரும் சக்தியையும் கொண்டு அவன் நடுப்பகல் சூரியனைப் போலப் பிரகாசிக்கிறான்.(118) மிக மென்மையான குணங்களைக் கொண்டவர்களும், பிரகாசமான நிறத்தையும், பருத்த கொங்கைகளையும், சிறுத்த இடையையும், {வாழைபோன்ற} வழவழப்பான தொடைகளையும் கொண்டவர்களும், தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான விளையாட்டுக் காரிகைகள்,(119) அனைத்து வகை இன்பப் பொருட்களுடன் கூடியதும், சூரியப் பிரகாசம் கொண்டதும், இனிமை நிறைந்ததுமான சிறந்த தேரை அவன் செலுத்திக் கொண்டிருக்கும்போது, ஆயிரமாயிரம் கல்பங்கள் அவனுக்கு மகிழ்வூட்டுகின்றனர்.(120)

இருபத்தெட்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தொன்பதாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, ஒரு முழு வருடமும் இவ்வழியில் தன்னைத் தாங்கிக் கொண்டு, பேச்சில் வாய்மையுடன் இருக்கும் மனிதன்,(121) தெய்வீக முனிவர்களாலும், அரசமுனிகளாலும் வழிபடப்படுபவையும், பெரும் மகிழ்ச்சி நிறைந்தவையுமான மங்கல உலகங்களை அடைகிறான். சூரியன் மற்றும் சந்திரனின் பிரகாசத்துடன் கூடியதும், பசும்பொன்னாலானதும், அனைத்து வகை ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், மெல்லிசை பாடும் அப்சரஸ்கள் மற்றும் கந்தர்வர்களால் செலுத்தப்படுவதுமான தேரை அடைகிறான்.(122,123) அங்கே அவன் அனைத்து வகைத் தெய்வீக ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மங்கலக் காரிகைகளால் பணிவிடை செய்யப்படுகிறான். இனிய இயல்புகளையும், ஏற்புடைய குணங்களையும் கொண்டவர்களும், பெரும் சக்தியுடன் கூடியவர்களுமான இவர்கள் தங்கள் துணையால் அவனுக்கு மகிழ்வூட்டுகிறார்கள்.(124) இன்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும், பெரும்சக்தியையும், சுடர்மிக்க நெருப்பின் காந்தியையும் கொண்ட அவன், தேவனைப் போல ஒளிர்ந்து, சிறப்புகள் அனைத்தையும் கொண்ட தேவ வடிவை அடைகிறான்.(125) அவன் வசுக்கள், மருத்துகள், சாத்யஸ்கள், அஸ்வினிகள், ருத்திரர்கள் மற்றும் பிரம்மலோகங்களை அடைகிறான்.(126)

ஒரு முழு மாதம் உண்ணாநோன்பிருந்து, பின்தொடரும் மாதத்தின் முதல்நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வழியிலேயே ஒரு வருடம் முழுவதும் தன்னைத் தாங்கிக் கொண்டு, அனைத்தையும் சம பார்வையுடன் பார்த்து வரும் மனிதன், பிரம்மலோகத்தையே அடைகிறான்.(127) அங்கே அவன் அமுதம் பருகி வாழ்கிறான். பேரழகுடன் கூடியவனாகவும், அனைவருக்கும் ஏற்புடையவனாகவும் இருக்கும் அவன், ஆயிரங்கதிர் கொண்ட சூரியனைப் போலவே சக்தியிலும், செழிப்பிலும் ஒளிர்கிறான்.(128) யோகத்தில் அர்ப்பணிப்புடன், தெய்வீக ஆடைகள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தெய்வீக நறுமணப் பொருட்கைளயும், களிம்புகளையும் பூசிக் கொண்டு, சிறு துன்பத்தையும் அறியாமல் தன் நேரத்தைப் பெரும் மகிழ்ச்சியுடன் கடத்துகிறான். பிரகாசத்தில் சுடர்விடும் காரிகையரின் பணியை ஏற்றுத் தன்னுடைய தேரில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(129) தெய்வீக முனிவர்கள் மற்றும் ருத்திரர்களின் மகள்களான அந்தக் காரிகையர், மதிப்புடன் அவனைத் துதிப்பார்கள்.(130) மிக இனிமையான, மிக ஏற்புடைய பல்வேறு வடிவங்களை ஏற்கவல்லவர்களும், பல்வேறு வகை இனிய பேச்சுகளைக் கொண்டவர்களுமான அவர்கள், பல்வேறு வகைகளிலும், வழிகளிலும் பணிவிடை செய்து மகிழ்வூட்டுவார்கள்.(131) அவன் பயணங்கள் மேற்கொள்ளும்போது, (நுட்பமாக அமைந்திருக்கும் பொருட்களால்) ஆகாயத்தின் நிறத்தில் தெரியும் தேரைச் செலுத்திச் செல்கிறான். அவனுக்குப் பின்னால், சந்திரனைப் போலத் தெரியும்தேர்களும், அவனுக்கு முன்னால் மேகங்களுக்கு ஒப்பான தேர்களும்ம், வலப்புறத்தில் சிவப்பு வண்ணத் தேர்களும், அவனுக்குக் கீழே நீல நிறத் தேர்களும், அவனுக்கு மேலே பல்வேறு வண்ணங்களிலான தேர்களும் பின்தொடர்கின்றன[9]. அவன் எப்போதும் தனக்குப் பணிவிடை செய்பவர்களால் துதிக்கப்படுகிறான்.(132,133). பெரும் ஞானம் கொண்ட அவன், பூமியில் ஜம்புத்வீபம் என்றழைக்கப்படும் பகுதியில் ஆயிரம் ஆண்டுக் காலத்தில் பொழியும் மழைத்துளிகளின் அளவுக்கான வருடங்கள் பிரம்மலோகத்தில் வாழ்வான்.(134) உண்மையில், ஒரு தேவனின் பிரகாசத்தைக் கொண்ட அவன், மழைக்காலங்களில் பூமியில் விழும் மழைத்துளிகளின் அளவுக்கான வருடங்கள் கலப்பற்ற இன்ப நிலையைக் கொண்ட அந்த உலகத்தில் வாழ்வான்.(135)ஒரு மாதம் முழுவதும் உண்ணாநோன்பிருந்து, பின்வரும் மாதத்தின் முதல்நாளில் உண்டு, இவ்வழியில் பத்து வருடங்கள் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன் பெரும் முனிவன் என்ற தகுதியை அடைகிறான். அவன் இப்பிறவியில் செய்த செயல்களின் வெகுமதியாகச் சொர்க்கத்திற்குச் செல்லும்போது வடிவத்தில் எந்த மாற்றத்திற்கும் உட்பட வேண்டியதில்லை.(136) உண்மையில், பேச்சைத் தவிர்த்து, தன்மறுப்பைப் பயின்று, கோபத்தையும், பாலியல் பசியையும், உண்ணும் ஆசையையும் அடக்கி, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்று, இரு சந்திப் பொழுதுகளிலும் முறையாகத் துதிப்பதன் மூலம் ஒருவன் இந்நிலையை அடைகிறான்.(137) இவற்றையும், இதுபோன்ற நோன்புகளையும் நோற்று இவ்வழியில் உண்பதன் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் மனிதன், ஆகாயம் போன்ற களங்கமற்றவனாகி, சூரியனைப் போலப் பிரகாசிக்கிறான்.(138) ஓ! மன்னா, அத்தகைய மனிதன், தன் சொந்த உடல் வடிவத்துடனேயே சொர்க்கத்திற்குச் சென்று, தேவனைப் போல விரும்பிய இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான்.(139)

ஓ! பாரதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வாறே நான் உண்ணாநோன்புகளின் கனிகளை {பயன்களைச்} சார்ந்த வேள்விகளின் சிறந்த விதிகளை ஒன்றன்பின் ஒன்றாக உனக்குச் சொன்னேன்[10].(140) ஓ! பிருதையின் மகனே, (வேள்விகளைச் செய்ய இயலாத) ஏழை மக்கள், இவற்றின் மூலம் (உண்ணா நோன்புகளை நோற்பதன் மூலம்) {வேள்வி செய்த} கனிகளை அடைவார்கள். உண்மையில், ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓர் ஏழை மனிதனும் தேவர்களையும், பிராமணர்களையும் வழிபட்டுவரும் அதே வேளையில், இந்த உண்ணா நோன்புகளை நோற்பதன் மூலம் உயர்ந்த கதியை அடைகின்றனர். இவ்வாறே உண்ணாநோன்புகள் குறித்த விதிகளை விரிவாக நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(141,142) நோன்புகளை நோற்பவர்கள், விழிப்புணர்வு நிறைந்தவர்கள், தூயவர்கள், உயர் ஆன்மாக்கள், செருக்கில் இருந்தும், அனைத்து வகைக் கருத்து முடிவுகளில் இருந்தும் விடுபட்டவர்கள், அர்ப்பணிப்புள்ள புத்திமான்கள், பாதையில் இருந்து வழுவாமல் நோக்கத்தில் நிலைத்திருந்து தங்கள் முடிவை உறுதியுடன் பின்பற்றுபவர்கள் ஆகியோரிடம் ஒருபோதும் ஐயங்கொள்ளலாகாது” என்றார் {பீஷ்மர்}.(143)

சரீரத்தீர்த்தங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 108-தீர்த்தங்களும், தூய்மைகளும் எவை என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தீர்த்தங்கள் அனைத்திலும் எது முதன்மையானதாகக் கருதப்படுகிறது என்பதை எனக்குச் சொல்வீராக. உண்மையில், எந்தத் தீர்த்தத்தால் பெருந்தூய்மை உண்டாகிறது என்பதையும் எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அனைத்துத் தீர்த்தங்களும் பலன்கொண்டவையே என்பதில் ஐயமில்லை. எனினும், ஞானம் கொண்ட மனிதர்களுக்குத் தீர்த்தமும், தூய்மையும் எது என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) நித்திய வாய்மையைப் பின்பற்றும் ஒருவன், ஆழங்காண முடியாததும், களங்கமற்றதும், தூய்மையானதும், வாய்மையையே நீராகக் கொண்டதும், புத்தியையே தடாகமாகக் கொண்டதுமான மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராட வேண்டும்[2].(3) ஒருவன் இத்தீர்த்தத்தில் நீராடுவதன் மூலம் தூய்மையின் வடிவில் அடையப்படும் கனிகளே {பயன்களே}, பேராசையிலிருந்து விடுதலை, நேர்மை, வாய்மை, (நடத்தையில்) மென்மை, கருணை, எந்த உயிரினத்துக்கும் தீங்கிழையாமை, தற்கட்டுப்பாடு மற்றும் அமைதி {மன அடக்கம்} ஆகியவையாகும்.(4) பற்றுகளில் இருந்து விடுபட்டவர்கள், செருக்கற்றவர்கள், (இன்பதுன்பம், புகழ்பழி, வெப்பம்குளிர் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவர்கள், மனைவி, பிள்ளைகள், வீடுகள், தோட்டங்கள் முதலியவை இல்லாதவர்கள், தூய்மையுடன் கூடியவர்கள், பிறரால் கொடுக்கப்படும் பிச்சையில் மட்டுமே வாழ்பவர்கள் ஆகியோர் தீர்த்தங்களாகக் கருதப்படுகிறார்கள்.(5)அனைத்துப் பொருட்களின் உண்மையை அறிந்தவனும், நான், எனது என்ற {அகங்காரக்} கருத்தில் இருந்து விடுபட்டவனுமான ஒருவன் உயர்ந்த தீர்த்தமாகச் சொல்லப்படுகிறான்[3]. தூய்மைக்கான குறியீடுகளைத் தேடும்போது உன் பார்வை இந்தக் குணங்களில் (அஃதாவது இந்தக் குணங்கள் இருக்கும் இடத்தில் தூய்மை இருக்கும், இல்லாத இடத்தில் தூய்மை இல்லை என்று கொள்வதற்காக) எப்போதும் செலுத்தப்பட வேண்டும்.(6) சத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்கள் கழுவப்பட்ட ஆன்மாவைக் கொண்டோர், (புறத்) தூய்மை மற்றும் தூய்மையின்மைகளைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுக்கு முன்மொழிந்து கொண்ட முடிவுகளைப் பின்தொடர்பவர்கள்,(7) அனைத்தையும் துறந்தவர்கள், அனைத்தையும் அறிந்தவர்கள், அண்டப் பார்வை கொண்டவர்கள், தூய ஒழுக்கம் கொண்டவர்கள் ஆகியோர் தூய்மை செய்யும் சக்தி படைத்த தீர்த்தங்களாகக் கருதப்படுகின்றனர்.(8) அங்கங்கள் நீரில் நனைந்ததால் மட்டுமே ஒரு மனிதன் கழுவப்பட்டவனாகக் கருதப்படமாட்டான். மறுபறம் அவன் தன்மறுப்பால் தன்னைக் கழுவிக் கொண்டால் அவன் கழுவப்பட்டவனாகக் கருதப்படுவான். அத்தகைய மனிதனே அகத்தூய்மையையும், புறத்தூய்மையையும் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்.(9) கடந்த காலத்தைக் குறித்து ஒருபோதும் கவலை கொள்ளாதவர்கள், உண்மையில், ஆசையில் இருந்து விடுபட்டவர்கள் ஆகியோர் உயர்ந்த தூய்மையைக் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(10)அறிவே தனிச்சிறப்புள்ள உடல்தூய்மையாக அமைவதாகச் சொல்லப்படுகிறது. அதே போல ஆசையில் இருந்து விடுதலையும் மன உற்சாகமும் அவ்வாறே சொல்லப்படுகிறது.(11) ஒழுக்கத்தூய்மையானது, மனத்தூய்மையில் அடங்கியிருக்கிறது. புனித நீர்நிலைகளில் செய்யப்படும் தூய்மைச் சடங்குகளால் ஒருவன் அடையும் தூய்மை தாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.(12) சுடர்மிக்க மனத்துடன், பிரம்ம அறிவு என்ற நீரில், மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் ஒருவனால் செய்யப்படும் தூய்மைச்சடங்குகளே வாய்மையறிந்தோருக்கு உண்மையான தூய்மைச்சடங்குகளாகும்.(13) உண்மையான ஒழுக்கத்தூய்மை கொண்டவனும், அனைவரிடமும் முறையான அணுகுமைறையைப் பாதுகாப்பதில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவுனும், உண்மையில் (தூய) குணங்களும் தகுதியும் கொண்டவனுமான மனிதனே உண்மையில் தூய்மையானவனாகக் கருதப்படுகிறான்.(14) நான் சொன்ன இவையே உடலில் உள்ள தீர்த்தங்களாகச் சொல்லப்படுகின்றன. பூமியில் அமைந்திருக்கும் புனிதத் தீர்த்தங்களையும் சொல்கிறேன் கேட்பாயாக.(15)

உடலின் தனிச்சிறப்புள்ள குணங்கள் புனிதமானவையாகச் சொல்லப்படுவதைப் போலவே, பூமியில் உள்ள குறிப்பிட்ட இடங்களும், குறிப்பிட்ட நீர்நிலைகளும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.(16) தீர்த்தங்களின் பெயர்களைச் சொல்வதன் மூலமும், அங்கே தூய்மைச் சடங்குகளைச் செய்வதன் மூலமும், அவ்விடங்களில் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளிப்பதன் மூலமும் ஒருவனுடைய பாவங்கள் கழுவப்படுகின்றன.. உண்மையில், இவ்வாறு பாவங்கள் கழுவப்பட்ட மனிதன், இவ்வுலகை விட்டுச் செல்லும்போது சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(17) அறவோரின் தொடர்புடையதன் விளைவாகவும், அந்த இடங்கள் மற்றும் குறிப்பிட்ட நீர்நிலைகளில் உள்ள பூமியின் சிறப்புத்திறன்களின் மூலமும், பூமியில் குறிப்பிட்ட பகுதிகள் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.(18) மனோதீர்த்தங்கள் பூமியில் உள்ளவற்றைக் காட்டிலும் தனியானவையும், வேறுபட்டவையுமாகும். இரண்டிலும் நீராடும் மனிதன் தாமதமில்லாமல் வெற்றியை அடைகிறான்.(19) முயற்சியில்லாத பலம், அல்லது பலமில்லாத முயற்சி ஆகியவற்றால் தனியாக எதையும் நிறைவேற்ற முடியாமல், இவை சேர்ந்திருக்கும்போதே அனைத்தையும் நிறைவேற்ற முடிவதைப் போலவே,(20) உடலில் உள்ள தீர்த்தங்களால் அளிக்கப்படுவதும், பூமியில் உள்ள தீர்த்தங்களால் அளிக்கப்படுவதுமான தூய்மையுடன் கூடிய ஒருவன் உண்மையில் தூய்மையடைந்து வெற்றியை அடைகிறான். இரண்டு மூலங்களில் இருந்தும் பெறப்படும் தூய்மையே சிறந்ததாகும்” என்றார் {பீஷ்மர்}.(21)

விஷ்ணுவும், உபவாஸமும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 109-பனிரெண்டு மாதங்களில், பனிரெண்டு பெயர்களால் விஷ்ணுவைத் துதிப்பதன் பலனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, இவ்வுலகில் அனைத்து வகை உண்ணா நோன்புகளிலும் உயர்ந்ததும், நன்மையானதும், குறிப்பிடத்தக்கதுமான பலன் என்ன என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஒருவன் எதைச் செய்வதன் மூலம் ஐயமில்லாமல் உயர்ந்த மகிழ்ச்சியை அடைகிறான் என்பதைச் சுயம்புவே பாடியிருக்கிறான் கேட்பாயாக.(2)

மார்கசீரிஷம் {மார்கழி} என்றழைக்கப்படும் மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனைக், கேசவனாக {கேசவன் என்று சொல்லி} வழிபடும் மனிதன், தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து கழுவப்பட்டு, ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.(3)

அதே வகையில், பௌஷ {தை} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை நாராயணனாக வழிபடும் மனிதன், உயர்ந்த வெற்றியை அடைந்து, வாஜபேய வேள்வியைச் செயத பலனை அடைகிறான்.(4)

மாக {மாசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை மாதவனாக வழிபடும் மனிதன், தன் குலத்தை (துன்பத்தில் இருந்து) மீட்டு, ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான்[1].(5)பால்குன {பங்குனி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை கோவிந்தனாக வழிபடும் மனிதன், சோமனின் உலகத்திற்குச் சென்று அதிராத்ர வேள்வி செய்த பலனை அடைகிறான்.(6)

சைத்ர {சித்திரை} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை விஷ்ணுவாக வழிபடும் மனிதன், தேவர்களின் உலகிற்குச் சென்று, பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைகிறான்.(7)

வைசாக {வைகாசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} அதேபோன்ற உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை மதுசூதனனாக வழிபடும் மனிதன், சோமனின் உலகிற்குச் சென்று அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்.(8)

ஜய்ஷ்ட (ஆனி) மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை (பலியின் வேள்வியில்) அண்டத்தையே தன் மூன்று அடிகளால் மறைத்தவனாக {திரிவிக்கிரமனாக} வழிபடும் மனிதன், பெரும் மகிழ்ச்சியுடன் அப்சரஸ்களுடன் விளையாடிக் கொண்டு கோமேத வேள்வி செய்த பலனை அடைகிறான்.(9)

ஆஷாத {ஆடி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை (அசுர மன்னன் பலியியை வஞ்சித்த) வாமனனாக வழிபடும் ஒருவன், அப்சரஸ்களுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டே, நரமேத வேள்வியின் பலன்களை அடைகிறான்[2].(10)சிரவண {ஆவணி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை ஸ்ரீதரனாக வழிபடும் ஒருவன், தான் இன்பத்தில் விளையாடும் சொர்க்கத்தில் ஓர் அழகிய தேரை அடைந்து, பாஞ்சஜன்யம் என்றழைக்கப்படும் வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.(11)

பாத்ரபத {புரட்டாசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை ரிஷிகேசனாக {ஹ்ருஷீகேசனாக} வழிபடும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்து தூய்மையடைந்து, சௌத்ராமணி வேள்வி செய்த பலன்களை அடைவான்.(12)

அஸ்வினி {ஐப்பசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, கிருஷ்ணனைப் பத்மநாபனாக வழிபடும் ஒருவன், ஆயிரம் பசுக்கள் கொடையளிக்கப்பட்டும் செய்யப்பட்ட வேள்வியின் பலன்களை ஐயமில்லாமல் கொடுக்கும்.(13)

கார்த்திகா {கார்த்திகை} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, கிருஷ்ணனை தாமோதரனாக வழிபடும் ஒருவன், அனைத்து வேள்விகளையும் செய்த மொத்த பலன்களையும் ஐயமில்லாமல் அடைகிறான்.(14)

இவ்வழியில் மொத்த வருடமும் கிருஷ்ணனை புண்டரீகாக்ஷனாகத் துதிப்பவன் பெரும் அளவினால தங்கத்தை அடைந்து, தன் முற்பிறவிகளின் சம்பவங்களை நினைவுகூரும் சக்தியை அடைகிறான்.(15)

அதேபோல, ஒவ்வொரு நாளும் கிருஷ்ணனை உபேந்திரனாக வழிபடும் ஒருவன் அவனோடு அடையாளம் காணப்படும் நிலையை அடைகிறான். இவ்வழியில் கிருஷ்ணனை வழிபட்ட பிறகு, ஒருவன் தன் நோன்பை முடிவுக்குக் கொண்டு வந்து, எண்ணற்ற பிராமணர்களுக்கு உணவூட்டி, நெய்யாலான கொடைகளையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.(16)

புராதனமானவனும், சிறப்புமிக்கவனுமான விஷ்ணுவே, இவ்வகை உண்ணாநோன்புடன் தொடர்புடைய மேன்மையான பலன்களைக் கொண்ட  வேறு உண்ணாநோன்பு ஏதுமில்லை என்று சொல்லியிருக்கிறான்” என்றார் {பீஷ்மர்}”.(17

சந்திரவிரதம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 110-ழகு செல்வம் முதலியவற்றை அடைவதற்குச் செய்ய வேண்டிய சந்திர நோன்பு குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருகுலப் பாட்டனும், வயதில் முதிர்ந்தவரும், அப்போது கணைப்படுக்கையில் கிடந்தவருமான பீஷ்மரிடம் சென்ற பெரும் ஞானம் கொண்ட யுதிஷ்டிரன் பின்வரும் கேள்வியைக் கேட்டான்.(1)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, வடிவ அழகு, செழிப்பு, ஏற்புடைய இயல்பு ஆகியவற்றை ஒருவன் எவ்வாறு அடைகிறான்? உண்மையில், அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றை ஒருவன் எவ்வாறு ஈட்டுகிறான்? ஒருவன் எவ்வாறு மகிழ்ச்சியுடன் கூடியவனாகிறான்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மார்கசீரிஷ {மார்கழி} மாதத்தில் சந்திரன் மூல நட்சத்திரத்தில் கூடியிருக்கும் நாளில் அதே நட்சத்திரத்தை {மூல நட்சத்திரத்தையே} பாதங்களாகவும், ரோகிணியைக் கணுக்கால்களாகவும்,(3) அசுவினியை முழங்கால்களாகவும், இரண்டு ஆஷாதங்களை {பூராட உத்தராடங்களைத்} தொடைகளாகவும், பால்குனிகள் {பூரம் உத்தரங்களைக்} குதமாகவும், கிருத்திகையை இடுப்பாகவும்,(4) பாத்ரபதங்களை {பூரட்டாதி உத்தரட்டாதிகளை} உந்தியாகவும், ரேவதியை வயிற்றுப் பகுதியாகவும், தனிஷ்டையை {அவிட்டத்தை} முதுகாகவும், அனுராதாவை {அனுஷத்தை} வயிறாகவும்,(5) விசாகத்தை இரு தோள்களாகவும், ஹஸ்தத்தை இரு கைகளாகவும், புனர்வசுவை {புனர்பூசத்தை} விரல்களாகவும், அஸ்லேஷத்தை {ஆயில்யத்தை} நகங்களாகவும்,(6) ஜியேஷ்டையை {கேட்டையைக்} கழுத்தாகவும், சிரவணத்தை {திருவோணத்தைக்} காதுகளாகவும், புஷ்யத்தை {பூசத்தை} வாயாகவும், ஸ்வாதியைப் பற்கள் மற்றும் உதடுகளாகவும்,(7) சதாபிஷத்தை {சதயத்தைச்} புன்னகையாகவும், மகத்தை மூக்காகவும், மிருகசீர்ஷத்தைக் கண்களாகவும், சித்திரையை நெற்றியாகவும்,(8) பரணியைத் தலையாகவும், ஆர்த்திராவை {திருவாதிரையை} மயிராகவும் {கேசமாகவும்} கொண்டிருக்கும் {நிலவுக்கான} சந்திர விரதம் தொடங்கப்பட வேண்டும் {தியானம் செய்ய வேண்டும்}. அந்த நோன்பின் முடிவில், வேதமறிந்த பிராமணர்களுக்கு நெய்க்கொடை அளிக்கப்பட வேண்டும்.(9)

அந்நோன்பின் கனியாக ஒருவன், செழிப்பு, மேனி அழகு, அறிவைத் தரும் நற்பேறு ஆகியவற்றைக் கொண்டவனாகிறான். உண்மையில், அத்தகைய நோன்பின் விளைவாக முழு நிலவைப் போலவே அவன் (அனைத்து வகை நற்குணங்களும்) நிறைந்தவனாகிறான்” என்றார் {பீஷ்மர்}.(10)

பாவப்பிறவிகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 111-அறம் எவ்வாறு ஒருவனைப் பின்தொடர்கிறது; உயிர்வித்து எவ்வாறு உண்டாகிறது; ஜீவன் எவ்வாறு பிறந்து வளர்கிறது; உடலைக் கைவிடும்போது, ஜீவன் எவ்வாறு இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது; பல்வேறு செயல்களின் விளைவால் ஜீவன் அடையும் பல்வேறு வடிவங்களிலான பிறவிகள் குறித்து யுதிஷ்டிரனுக்கும் பிருஹஸ்பதிக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்து பெரும் ஞானம் கொண்டவரே, எவற்றின் விளைவாக மனித உயிரினங்கள் மறுபிறவி எனும் பயணத்தில் சுழல்கின்றனவோ அந்தச் சிறந்த விதிகளை நான் அறிய விரும்புகிறேன்.(1) ஓ! மன்னா, எந்த ஒழுக்கத்தைப் பின்பற்றுவதால் மனிதர்கள் உயர்ந்த சொர்க்கத்தை அடைகின்றனர்? எவ்வொழுக்கத்தைப் பின்பற்றினால் ஒருவன் நரகில் மூழ்குகிறான்?(2) மரத்துண்டையோ, மண்ணாங்கட்டியையோ போன்ற செயலற்ற இறந்த உடலைக் கைவிட்டு, மக்கள் மறுஉலகத்திற்குச் செல்லும்போது, அவர்களைப் பின்தொடர்பவை எவை?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும் சிறப்புமிக்கவருமான பிருஹஸ்பதி அதோ வருகிறார். நீ அவரிடமே இதைக் கேட்பாயாக. இக்காரியம் ஒரு நித்திய புதிராகும்.(4) இக்காரியத்தை வேறு யாராலும் விளக்க முடியாது. பிருஹஸ்பதியைப் போன்ற பேச்சாளர் வேறு எவரும் இல்லை” என்றார்”.(5)வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} சொன்னார், “பிருதையின் மகனும் {யுதிஷ்டிரனும்}, கங்கையின் மகனும் {பீஷ்மரும்} இவ்வாறு ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்தபோது, தூய்மையான ஆன்மா கொண்டவரும், சிறப்புமிக்கவருமான பிருஹஸ்பதி ஆகாய வழியில் அவ்விடத்திற்கு வந்தார்.(6) திருதராஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனும், வேறு அனைவரும் எழுந்து நின்று, உரிய கௌரவங்களுடன் பிருஹஸ்பதியை வரவேற்றனர். உண்மையில், அவர்கள் தேவர்களின் ஆசானுக்கு {பிருஹஸ்பதிக்கு} அளித்த வழிபாடு சிறப்புமிக்கதாக இருந்தது.(7) பிறகு தர்மனின் அரசமகனான யுதிஷ்டிரன், சிறப்புமிக்கவரான பிருஹஸ்பதியை அணுகி, உண்மையை அறிய விரும்பி உரிய வடிவில் கேள்வியைக் கேட்டான்.(8)

யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, நீர் கடமைகளை மற்றும் சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவராவீர். உண்மையில மனித உயிரினங்களின் நண்பன் யார் என்பதை எனக்குச் சொல்வீராக.(9) தந்தை, தாய், மகன், ஆசான், உற்றார் உறவினர், நண்பர்கள் என்றழைக்கப்படுபவர்கள் ஆகியோருக்கு மத்தியில் உண்மையில் ஒரு மனித உயிரினத்தின் நண்பனாக {துணையாக} இருப்பது யார்? ஒருவன் மரக்கட்டையையோ, மண்ணாங்கட்டியையோ போன்ற தன் இறந்த உடலைக் கைவிட்டு அடுத்த உலகிற்குச் செல்கிறான். அங்கே அவனைப் பின்தொடர்ந்து செல்வது யார்?” என்று கேட்டான்.(10)

பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஒருவன் தனியாகவே பிறக்கிறான்; தனியாகவே இறக்கிறான்; தான் சந்திக்கும் சிரமங்கள் அனைத்தையும் அவன் தனியாகவே கடக்கிறான்; தனக்கு ஏற்படும் எந்தத் துன்பத்தையும் அவன் தனியாகவே அனுபவிக்கிறான்.(11) இச்செயல்களில் உண்மையில் ஒருவனுக்கு எவனும் துணைவனல்ல. தந்தை, தாய், சகோதரன், மகன், ஆசான், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்,(12) ஒரு கணம் மட்டுமே துக்கமடைந்து, இறந்த உடலை மரத்துண்டையோ, மண்ணாங்கட்டியையோ போன்று கைவிட்டு, தங்கள் சொந்த காரியங்களைப் பார்க்க வேறு முகமாகச் செல்வார்கள்.(13) அவர்கள் அனைவராலும் இவ்வாறு கைவிடப்பட்ட உடலை அறம் மட்டுமே பின்தொடர்கிறது. எனவே, அறம் மட்டுமே ஒருவனுடைய நண்பன், அறம் மட்டுமே அனைவராலும் நாடப்பட வேண்டும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.(14) அறத்துடன் கூடியவன் சொர்க்கத்தால் அமைந்த உயர்ந்த கதியை அடைகிறான். அவன் அறமற்றவனாக இருந்தால் நரகை அடைகிறான்.(15) எனவே, புத்தியுள்ள மனிதன் நீதிமிக்க வழிமுறைகளில் வெல்லப்பட்ட செல்வத்தைக் கொண்டு அறமீட்டுவதற்கு எப்போதும் முயல வேண்டும். மறுமையில் உயிரினங்களுக்கு ஒரே உற்ற நண்பன் அறம் மட்டுமே ஆகும்.(16) அதிக அறிவில்லாதவனும், ஆசையால் மதிமயங்கியவனுமான ஒரு மனிதன், பேராசை, மயக்கம் {அறியாமை}, கருணை, அச்சம் ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டு வேறொருவருக்காகவாவது முறையற்ற செயல்களில் ஈடுபடுவது காணப்படுகிறது.(17) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய இம்மூன்றுமே வாழ்வின் கனியாகின்றன. ஒருவன் ஒழுங்கற்றவற்றிலும், பாவத்திலிம் இருந்து விடுபடுவதன் மூலம் இம்மூன்றையும் அடைய வேண்டும்” என்றார்.(18)

யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “சிறப்புமிக்க உம்மால் பேசப்பட்டதும், உயர்ந்த நன்மையைத் தருவதும், அறம் நிறைந்ததுமான சொற்களைக் கவனமாகக் கேட்டேன். நான் இப்போது (மரணத்திற்குப் பிறகான) உடலின் இருப்பு குறித்து அறிய விரும்புகிறேன்.(19) ஒரு மனிதனின் சடலம் நுட்பமானதாகவும், வெளிப்படா {புலப்படாத்} தன்மை கொண்டதாகவும் ஆகிறது. அறத்தால் எவ்வாறு அதைப் பின்தொடர முடியும்?” என்று கேட்டான்.(20)

பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “பூமி {நிலம்}, காற்று, ஆகாயம், நீர், ஒளி, மனம், யமன் (இறந்தோரின் மன்னன்), புத்தி, ஆன்மா, பகல், இரவு ஆகிய அனைத்தும் சேர்ந்து வாழும் உயிரினங்கள் செய்யும் நன்மைகள் (மற்றும் தீமைகளை) சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. (இறக்கும்போது) இவற்றைக் கொண்ட அறமானது அந்த உயிரினத்தைப் பின்தொடர்கிறது.(21,22) ஓ! பெரும் நுண்ணறிவு மிக்கவனே, உயிர், தோல், எலும்புகள், இறைச்சி, உயிர்வித்து, குருதி ஆகியவற்றை உடல் இழக்கும் அதே நேரத்தில் அவையும் அதை விட்டு அகல்கின்றன.(23) தகுதியுடன் (மற்றும் குறையுடனும்) கூடிய ஜீவன், (இந்த உடல் அழிந்த பிறகு) மற்றொன்றை அடைகிறது. ஜீவன் அந்த உடலை அடைந்ததும், ஐம்பூதங்களின் தலைமைத் தேவர்கள் அவனது நற்செயல்களையும், தீச்செயல்களையும் சாட்சியாகக் காண்கின்றனர்.(24) நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்? அறத்துடன் கூடியதாக இருந்தால் ஜீவன் மகிழ்ச்சியாக இருக்கிறது. இம்மை மற்றும் மறுமை குறித்து வேறென்ன நான் உரையாட வேண்டும்?” என்று கேட்டார்.(25)

யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “சிறப்புமிக்க நீர் அறம் எவ்வாறு ஜீவனைத் தொடர்கிறது என்று சொன்னீர். உயிர்வித்து எவ்வாறு தோன்றுகிறது என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றான்.(26)

பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, உடலில் வசிக்கும், பூமி, காற்று, ஆகாயம், நீர், ஒளி, மனம் ஆகிய தேவர்கள் உண்ணும் உணவு அவர்களை நிறைவடையச் செய்கிறது. ஓ! ஏகாதிபதி, ஓ! தூய ஆன்மாவே, ஆறாவதாக மனத்தைக் கொண்ட ஐம்பூதங்களும் நிறைவடையும்போது, அவர்களுடைய உயிர்வித்து உண்டாகிறது.(28) ஆண் மற்றும் பெண்ணுக்கிடையில் ஒரு கலவிச் செயல் நடைபெறும்போது, வெளியே பாயும் உயிர்வித்துக் கருவை உண்டாக்குகிறது. இவ்வாறு நீ கேட்டதற்கு நான் விளக்கமளித்தேன். நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” என்று கேட்டார்.(29)

யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, கருத்தரித்தல் எவ்வாறு நடைபெறுகிறது. பிறவி எடுக்கும் ஜீவன் (உடலைப் பெறுவதன் மூலம்) எவ்வாறு வளர்கிறது என்பதை எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(30)

பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “ஜீவன் உயிர்வித்துக்குள் நுழைந்த உடனேயே, அவன் ஏற்கனவே சொல்லப்பட்ட பூதங்களால் நிறைகிறான். ஜீவன் அவற்றில் இருந்து பிரியும் போது மறுகதி (மரணம்) அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(31) அந்தப் பூதங்கள் அனைத்துடன் சேரும் ஜீவன் அதன் விளைவாக உடலைப் பெறுகிறான். அந்தப் பூதங்களின் தலைமைத் தேவர்கள், அவனுடைய நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் சாட்சியாகக் காண்கிறார்கள். நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” என்று கேட்டார்.(32)

யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, தோல், எலும்பு, மற்றும் இறைச்சியைக் கைவிட்டு அந்தப் பூதங்கள் அனைத்துமற்ற ஜீவன், இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கவும், பொறுத்துக் கொள்ளவும் எதில் வசிக்கிறது?” என்று கேட்டான்.(33)

பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, தன் செயல்கள் {கர்மங்கள்} அனைத்துடன் கூடிய ஜீவன் விரைவாக உயிர்வித்துக்குள் நுழைந்து, பெண்களின் பருவநீரைப் பெற்றுக் காலத்தில் பிறப்பை அடைகிறான்.(34) பிறந்த பிறகு, ஜீவனானவன் யமனின் தூதுவர்களிடம் இருந்து துன்பத்தையும் மரணத்தையும் பெறுகிறான். உண்மையில், துன்பதுயரம் நிறைந்த மறுபிறவிச் சுழல் அவனுடைய மரபுரிமையாகும்.(35) ஓ! மன்னா, உயிருடன் கூடிய ஜீவன் இவ்வுலகில் தான் பிறந்த கணம் முதல் (முற்பிறவி சார்ந்த) தன் சொந்த செயல்களின் அறம் (மற்றும் அதற்கு முரணானவற்றைச்) சார்ந்து இன்புறவும், துன்புறவும் செய்கிறான்.(36) ஒரு ஜீவன், தான் பிறந்த நாள் முதல் தன் சக்திக்குத் தகுந்தபடி அறத்தையே பின்பற்றினால், அவன் மறுபிறவி எடுக்கும்போது தடங்கலில்லாத மகிழ்ச்சியை அனுபவிப்பதில் வெல்கிறான்.(37) மறுபுறம், தடங்கலில்லாமல் அறத்தைப் பின்பற்றாமல் அவன் பாவம்நிறைந்து செயல்பட்டால், மறுபிறவியில் அவன் முதலில் தன் அறத்தின் வெகுமதியாக மகிழ்ச்சியை அறுவடை செய்து, அதன் பிறகு துன்பத்தைத் தாங்கிக் கொள்கிறான்.(38) மறத்துடன் கூடிய ஜீவன், யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குச் சென்று அங்கே பெருந்துன்பத்தை அனுபவித்து, பிறகு இடைநிலை உயிரின வகையில் தன் பிறப்பை எடுக்கிறான்.(39) ஜீவன் மடமையில் மயக்கமடைந்து செய்யும் பல்வேறு செயல்களால் எவ்வாறு பல்வேறு வகை உயிரினங்களாகப் பிறப்பை அடைகின்றனர் என்று வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் (புனித) வரலாறுகளில் அறிவிக்கப்பட்டுள்ளதைச் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(40)

மானிடர்கள் பயங்கரமான யமலோகத்தை அடைகின்றனர். ஓ! மன்னா, அவ்வுலகத்தில் அனைத்துத் தகுதிகள் நிறைந்வையும், தேவர்களின் வசிப்பிடமாக இருப்பதற்குத் தகுந்தவையுமான இடங்கள் இருக்கின்றன.(41) மேலும் அவ்வுலகத்தில், விலங்குகள் மற்றும் பறவைகள் வசிக்கும் பகுதிகளைவிட இழிந்த இடங்களும் இருக்கின்றன. உண்மையில், (மகிழ்ச்சியைப் பொறுத்தவரையில்) பிரம்மலோகத்திற்கு இணையான தகுதிகளைக் கொண்ட இடங்களும் யமலோகத்தில் இருக்கின்றன.(42) உயிரினங்கள், தங்கள் செயல்களால் கட்டப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றன. இதன் பிறகு, பெரும் துன்பமும், பயங்கரமும் நிறைந்த கதியை ஒரு மனிதன் எவற்றின் விளைவால் அடைவானோ அந்தச் செயல்களையும், இயல்புகளைம் நான் உனக்குச் சொல்லப்போகிறேன்.(43,44)

நான்கு வேதங்களையும் கற்ற ஒரு மறுபிறப்பாளன், அறியாமையில் மயக்கமடைந்து, வீழ்ந்துவிட்ட மனிதனிடம் இருந்து கொடையை ஏற்றால் அவன் கழுதையாகப் பிறப்பை அடைகிறான்.(45) அவன் ஒரு கழுதையாகப் பதினைந்து வருடங்கள் வாழ்வான். பிறகு அந்தக் கழுதை வடிவத்தைக் கைவிட்டு, அவன் ஓர் எருதாகப் பிறந்து ஏழு வருடங்கள் வாழ்வான்.(46) பிறகு மாட்டு வடிவத்தையும் கைவிட்டு அவன் மறுபிறப்பாள வகையைச் சார்ந்த ராட்சசனாக {பிரம்மராட்சசனாகப்} பிறப்பை எடுக்கிறான். மறுபிறப்பாள வகையைச் சார்ந்த ராட்சசனாக {பிரம்ம ராட்சசனாக} மூன்று மாதங்கள் வாழும் அவன் (தன் அடுத்தப் பிறவியில்) தன் பிராமண நிலையை மீட்கிறான்.(47)

வீழ்ந்துவிட்ட மனிதனின் வேள்வியைச் செய்து கொடுக்கும் ஒரு பிராமணன், இழிந்த புழுவாகப் பிறப்பான். ஓ! பாரதா, அவன் இவ்வடிவில் பதினைந்து வருடங்கள் வாழ்வான்.(48) புழுவின் நிலையில் இருந்து விடுபடும் அவன் அடுத்ததாக ஒரு கழுதையாகப் பிறக்கிறான். கழுதையாகப் பதினைந்து வருடங்கள் வாழும் அவன், அடுத்ததாக அதே அளவு காலம் ஒரு காட்டுப்பன்றியாக வாழ்கிறான்.(49) அதன் பிறகு ஒரு சேவலாகப் பிறந்து, அவ்வடிவிலேயே ஐந்து வருடங்கள் வாழ்ந்த பிறகு அதே அளவு வாழ்நாள் காலம் கொண்ட ஓநாயின் பிறப்பை அடைக்கிறான். அடுத்ததாக ஒரு நாயாகப் பிறந்து, ஒரு வருட காலம் அவ்வாறு வாழ்ந்த பிறகு அவன் மனித நிலையை மீட்டெடுக்கிறான்.(50)

ஆசானுக்குத் தீங்கிழைக்கும் குற்றம்புரிந்த மூடச் சீடன், இவ்வுலகில் மூன்று மாற்றங்களுக்கு நிச்சயம் உட்பட வேண்டும்.(51) ஓ! ஏகாதிபதி, அத்தகையவன் முதலில் ஒரு நாயாகிறான். அதன் பிறகு இரைதேடும் விலங்காகி அதன் பிறகு அவன் ஒரு கழுதையாகிறான். கழுதை வடிவில் வாழும்போது அவன் ஒரு பிசாசைப் போலப் பெருந்துன்பத்துடன் சில காலம் திரிய வேண்டும். அந்தக் காலம் முடிந்ததும் அவன் ஒரு பிராமணனாகப் பிறப்பை அடைவான்.(52)

ஆசானின் மனைவியுடன் கூடா உறவுகொள்ள நினைக்கும் பாவம் நிறைந்த சீடன், அத்தகைய பாவம் நிறைந்த இதயத்தின் விளைவாக இவ்வுலகில் பல கடும் வடிவங்களை எடுக்க வேண்டும்.(53) முதலில் நாயாகப் பிறந்து மூன்று வருடம் வாழ வேண்டும். பிறகு மரணம் வரும்போது நாயின் வடிவத்தைத் கைவிட்டு ஓர் இழிந்த புழுவாகப் பிறக்க வேண்டும்.(54) இவ்வடிவில் ஒருவன் ஒரு வருடம் வாழ வேண்டும். அந்த வடிவத்தை விட்டதும் அவன் மறுபிறப்பாள மனிதனாகத் தன் நிலையை மீட்பதில் வெல்வான்.(55)

ஓர் ஆசான், தன் மகனைக் போன்றவனான சீடனைக் காரணமே இல்லாமல் கொன்றுவிட்டால், தன் பங்குக்கான வேண்டுமென்றே செய்யப்பட்ட அத்தகைய பாவச் செயலால் அவர் இரை தேடும் விலங்காகப் பிறக்க வேண்டும்.(56)

ஓ! மன்னா, தந்தை மற்றும் தாயை அவமதிக்கும் மகன், தன் மனித வடிவை விட்டகலும்போது, கழுதை வகையிலான ஒரு விலங்கின் வடிவில் பிறக்கிறான்.(57) அந்தக் கழுதை வடிவில் அவன் பத்து வருட காலம் வாழ வேண்டும். அதன் பிறகு அவன் முதலையாகப் பிறந்து ஒரு வருடம் வாழ வேண்டும். அதன் பிறகு அவன் மனித வடிவை அடைவான்.(58)

எந்த மகனிடம் பெற்றோர் கோபமடைவார்களோ, அவன் அவர்களிடம் தான் கொண்டுள்ள தீய எண்ணங்களின் விளைவால் ஒரு கழுதையாகப் பிறப்பான்.(59) அவன் கழுதையாகப் பத்து மாதங்கள் வாழ வேண்டும். அதன் பிறகு அவன் நாயாகப் பிறந்து பதினான்கு மாதங்கள் அவ்வாறு வாழ வேண்டும். அதன் பிறகு ஒரு பூனையாகப் பிறந்த அவ்வடிவில் ஏழுமாதங்கள் வாழ்ந்து அதன் பிறகு தன் மனித நிலையை அவன் மீட்பான்.(60)

பெற்றோரைப் பழித்துப் பேசுபவன் ஒரு சாரிகமாக {ஆமையாகப்} பிறக்க வேண்டும். ஓ! மன்னா அவர்களை அடிக்கும் ஒருவன் ஓர் ஆமையாகப் பிறப்பான்.(61) ஆமையாகப் பத்து வருடம் வாழும் அவன் அதன் பிறகு ஒரு முள்ளம்பன்றியாகப் பிறப்பான். அதன்பிறகு ஒரு பாம்பாகப் பிறந்து அவ்வடிவிலேயே ஆறு மாதங்கள் வாழ்ந்து பிறகு தன் மனித நிலையை அவன் மீட்பான்.(62)

அரசத் தலைவன் தரும் உணவை உண்டு, தன் தலைவனின் விருப்பங்களுக்குத் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்யும் மனிதன் இவ்வாறான மடமையில் {அறியாமையில்} மயங்கி தன் மரணத்திற்குப் பிறகு ஒரு குரங்காகப் பிறக்கிறான்.(63) பத்து வருடங்கள் குரங்காக வாழ்ந்து அதன் பிறகு ஐந்து வருடங்கள் எலியாக வாழ்கிறான். அதன் பிறகு ஒரு நாயாகி அவ்வடிவத்தில் ஆறுமாத காலம் வாழ்ந்த பிறகே அவன் தன் மனித நிலையை மீட்பதில் வெல்கிறான்.(64)

தன்னிடம் நம்பிக்கையுடன் கொடுக்கப்பட்டவற்றைக் கையாடல் செய்யும் மனிதன், நூறு வடிவமாற்றங்களுக்கு {நூறு பிறவிகளுக்கு} உட்பட வேண்டும். இறுதியாக அவன் ஓர் இழிந்த புழுவாகப் பிறப்பான்.(65) ஓ! பாரதா, அவ்வகையில் {புழுவாகவே} அவன் பதினைந்து வருடங்கள் வாழ வேண்டும். இவ்வழியில் தன் பெரும்பாவம் தீர்ந்ததும் அவன் தன் மனித நிலையை மீட்பதில் வெல்வான்.(66)

பிறருக்கு எதிராக வன்மத்துடன் இருக்கும் மனிதன் தன் மரணத்திற்குப் பிறகு சார்ங்ககனாகப் பிறக்கிறான்[1]. நம்பிக்கை துரோகம் செய்த தீய புத்தி கொண்ட மனிதன் ஒரு மீனாகப் பிறக்கிறான்.(67) ஓ! பாரதா, எட்டு வருடங்கள் மீனாக வாழ்ந்த பிறகு மானாகப் பிறவி எடுக்கிறான். மானாக நான்கு மாதங்கள் வாழ்ந்த பிறகு அவன் வெள்ளாடாகப் பிறவி எடுக்கிறான்.(68) ஒரு முழு வருடம் கழிந்ததும் அவன் தன் ஆட்டுடலைக் கைவிட்டு ஒரு புழுவாகப் பிறக்கிறான். அதன் பிறகு அவன் மனித நிலையை அடைவதில் வெல்கிறான்.(69)நெல், யவம், எள், உழுந்து, கொள்ளு, கடுகு, கடலை, கலாயம், பச்சைப்பயறு, கோதுமை, அதசி (காயா) மற்றும் வேறு வகைத் தானியங்களையும் ஆசையினால் களவாடும் அறிவுகெட்ட, வெட்கங்கெட்ட மனிதன் பெருச்சாளியாகப் பிறக்கிறான்.(70,71) சில காலம் அப்பிறவியில் வாழ்ந்து பிறகு ஒரு காட்டுப் பன்றியாகப் பிறவியடைகிறான். காட்டுப்பன்றியாகப் பிறவியெடுக்கும் அவன் உடனடியாக நோயால் இறக்கிறான்.(72) ஓ! மன்னா, தன் பாவத்தின் விளைவால் அந்த மூட மனிதன் அடுத்ததாக ஒரு நாயாகப் பிறக்கிறான். ஐந்து வருடங்கள் நாயாக வாழும் அவன் மனித நிலையை மீண்டும் அடைகிறான்.(73)

மற்றொரு மனிதனின் மனைவியுடன் கூடாவுறவு கொண்ட ஒருவன் ஓநாயாகப் பிறவிஎடுக்கிறான். அடுத்தடுத்து அவன் நாய், நரி மற்றும் கழுகின் வடிவங்களை ஏற்கிறான். அடுத்ததாகப் பாம்பு, கங்கம் மற்றும் நாரையின் வடிவை ஏற்கிறான்.(74) ஓ! மன்னா, அறியாமையால் மயக்கப்பட்டு, சகோதரனுடைய மனைவியுடன் பாலினக் கலவி புரிந்த பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட மனிதன், ஆண் குயிலாகப் பிறந்து அவ்வடிவத்திலேயே ஓர் ஆண்டு முழுவதும் வாழ வேண்டும்.(75) காமத்தினால் நண்பனின் மனைவி, அல்லது ஆசானின் மனைவி, அல்லது மன்னனின் மனைவியுடன் பாலினக் கலவி புரிபவன், தனது மரணத்திற்குப் பிறகு காட்டுப்பன்றியாகப் பிறக்கிறான்.(76) அதன்பிறகு அவன் ஐந்து வருடங்கள் முள்ளம்பன்றியாகவும், பத்து வருடங்கள் ஓநாயாகவும் வடிவங்களை ஏற்கிறான். அடைத்த ஐந்து வருடங்கள் பூனையாகவும், அடுத்தப் பத்து வருடங்கள் சேவலாகவும் பிறக்கிறான். மூன்று மாதங்கள் எறும்பாகவும், ஒரு மாதம் புழுவாகவும் பிறந்து வாழ்கிறான். இந்த வடிவமாற்றங்களை அடைந்து அடுத்ததாக அவன் பதினான்கு வருடங்கள் இழிந்த புழுவாக வாழ்கிறான்.(78) அத்தகைய தண்டனையின் மூலம் அவனது பாவம் தீர்ந்ததும் மீண்டும் அவன் மனித நிலையை அடைகிறான்.(79)

ஓ! பெரும்பலம் கொண்டவனே, ஒரு திருமணமோ, ஒரு வேள்வியோ, கொடைச்செயல்களோ நடைபெறும்போது அதற்குத் தடையேதும் ஏற்படுத்தும் மனிதன் தன் அடுத்தப் பிறவியில் இழிந்த புழுவாகப் பிறக்கிறான்.(80) ஓ! பாரதா, அவ்வடிவத்திலேயே அவன் பதினைந்து வருடங்கள் வாழ்கிறான். அத்தகைய துன்பத்தின் மூலம் அவனது பாவம் கழிந்ததும் அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(81)

ஓ! மன்னா, முதலில் ஒருவனுக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து விட்டு, பிறகு இரண்டாம் கணவனுக்கும் கொடுப்பவன் இழிந்த புழுக்களுக்கு மத்தியில் பிறப்பான்.(82) ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய வடிவத்தை ஏற்று அவன் பதிமூன்று வருட காலம் வாழ்கிறான். அத்தகைய துன்பத்தின் மூலம் தன் பாவம் தீரும் அவன், மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(83)

தேவர்களைக் கௌரவிக்கும் வகையிலோ, பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையிலோ சடங்குகளைச் செய்யாமல் அல்லது முனிவர்களுக்கும், பித்ருக்களுக்கும் நீர்க்காணிக்கையளிக்காமல் உண்ணும் மனிதன் ஒரு காகமாகப் பிறக்கிறான்.(84) நூறு வருடங்கள் காகமாக வாழும் அவன் அடுத்ததாகச் சேவலின் வடிவை ஏற்கிறான். அதற்குப் பிறகு ஒரு மாதம் அவன் பாம்பாக வடிவ மாற்றம் கொள்கிறான். அதன் பிறகே அவன் மனித நிலையை மீண்டும் அடைகிறான்.(85)

தந்தையைப் போன்றவனான அண்ணனை அவமதிப்பவன், தன் மரணத்திற்குப் பிறகு நாரை வகைகளில் பிறக்கிறான்.(86) அவ்வடிவத்தில் அவன் இரண்டு வருடங்கள் வாழ்கிறான். காலத்தின் முடிவில் அந்த வடிவத்தைக் கைவிடும் அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(87)

ஒரு பிராமணிப் பெண்ணுடன் பாலினக் கலவி வைத்துக் கொள்ளும் சூத்திரன், தன் மரணத்திற்குப் பிறகு ஒரு காட்டுப் பன்றியாகப் பிறப்பை அடைகிறான்.(88) ஓ! மன்னா, அப்பிறவியை அடைந்தவுடனேயே அவன் நோயால் இறக்கிறான். அந்த இழிந்தவன் அடுத்ததாகத் தன் கொடும்பாவத்தின் விளைவால் ஒரு நாயாகப் பிறக்கிறான்.(89) தன் பாவம் தீர்ந்தமும் நாயின் வடிவைக் கைவிடும் அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான். பிராமணிப் பெண்ணிடம் சந்ததியை உண்டாக்கும் சூத்திரன் தன் மனித வடிவை விட்டதும் பெருச்சாளியாக மறுபிறவியை அடைகிறான்.(90)

ஓ! மன்னா, செய் நன்றி மறந்த குற்றவாளியான மனிதன், யமலோகத்திற்குச் சென்று, இறந்தோரின் கடும் மன்னனின் {யமனின்} சீற்றத்தால் தூண்டப்படும் {யம}தூதுவர்களின் கைகளில் வலிநிறைந்த கடும் தாக்குதலுக்கு உள்ளாகிறான்.(91) கனமான சுத்தியல்களுடன் கூடிய தடிகள், உலக்கைகள், கூர்முனை சூலங்கள், கொடிய தீக்குடம், கத்திகளை இலைகளாகக் கொண்ட பயங்கரக் காடு, கொதிக்கும் மணல், இரும்பு முட்கள்(92) ஆகியவையும், ஓ! பாரதா, இன்னும் அதிகமான கருவிகளையும் அத்தகைய மனிதன் யமலோகத்தில் தாங்க வேண்டியிருக்கும்.(93) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இறந்தோரின் கொடும் மன்னனின் உலகத்தில் இத்தகைய பயங்கரத் தண்டனைகளை அடையும் நன்றிகெட்ட மனிதன் இழிந்த ஒட்டுண்ணியாக மீண்டும் இவ்வுலகத்திற்கு வருகிறான். ஓ! பாரதா, அதன்பிறகு அவன் அருவருக்கத்தக்க ஒட்டுண்ணியாக ஐந்து வருடங்கள் வாழ்கிறான். அதன் பிறகு கருவறைக்குள் நுழைந்து பிறப்பிற்கு முன்பே முன்முதிர்ந்து இறக்கிறான்.(95) அதன் பிறகு அவன் நூறு முறை அடுத்தடுத்து கருவறைக்குள் நுழைகிறான். உண்மையில் நூறு மறுபிறவிகளுக்குப் பிறகு அவன் மனிதனுக்கும், உயிரற்ற இயற்கைக்கும் இடைப்பட்ட இடைநிலை வகை உயிரினமாகப் பிறக்கிறான்.(96) பல வருடங்கள் பெருந்து துன்பத்தை அனுபவிக்கும் அவன் பிறகு முடியற்ற ஆமையாகப் பிறக்கிறான்.(97)

தயிரைத் திருடும் மனிதன் நாரையாகப் பிறக்கிறான். மீனைக் களவு செய்பவன் குரங்காகப் பிறக்கிறான். தேனைக் களவு செய்யும் புத்தியுள்ள மனிதன் ஒரு பூச்சியாகப் பிறக்கிறான்.(98) கனிகள், கிழங்குகள் மற்றும் பண்டங்களைக் களவு செய்பவன் எறும்பாகிறான். மொச்சைக் கொட்டையைக் களவு செய்பவன் ஹலகோலகமாக {நீண்ட வாலுள்ள புழுவாக} மாறுகிறான்.(99) பாயஸம் களவும் செய்தவன் அடுத்தப் பிறவியில் தித்திரி பறவையாக {ஊர்க்குருவியாகப்} பிறக்கிறான். மாவுப் பண்டத்தைக் களவு செய்பவன் {கும்போலூகம் என்றழைக்கப்படும்} மலைக்கோட்டானாகப் பிறக்கிறான்.(100) இரும்பைக் களவு செய்யும் சிறுமதி கொண்ட மனிதன் ஒரு பசுவாகப் பிறக்கிறான். வெண்கலத்தைக் களவு செய்யும் சிறு மதிகொண்ட மனிதன் ஹாரீத இனப் பறவையாக {பச்சைக் குருவியாகப்} பிறக்கிறான்.(101) வெள்ளிப்பாத்திரம் களவு செய்தவன் புறாவாகப் பிறக்கிறான். பொற்பாத்திரம் களவு செய்வதன் மூலம் அவன் இழிந்த புழுவாகப் பிறக்கிறான்.(102) பட்டுத்துணியைக் களவு செய்தவன் கிருகரமாக {கிருகலமெனும் உயிரினமாகப்} பிறக்கிறான். சிவப்புப்பட்டாலான துணியைக் களவு செய்தவன் வர்த்தகையாக {வர்த்திகை எனும் பறவையாக} மாறுகிறான்.(103)

நூலாடைகளைக் களவு செய்பவன் கிளியாகப் பிறக்கிறான். நுண்ணிழைத்துணியைக் களவு செய்பவன் தன் உடலைக் கைவிட்டதும் ஒரு வாத்தாகப் பிறக்கிறான்.(104) பஞ்சுத் துணியைக் களவு செய்பவன் நாரையாகப் பிறக்கிறான். சணலாலான ஆடைகளைக் களவு செய்பவன் தன் அடுத்தப் பிறவியில் செம்மறியாடாகப் பிறக்கிறான்.(105) நார்மடித்துணியைக் களவு செய்பவன் முயலாகப் பிறக்கிறான். பல்வேறு வகை வண்ணப் பொருட்களைக் களவு செய்பவன் மயிலாகப் பிறக்கிறான்.(106) சிவப்பு ஆடைகளைக் களவு செய்பவன் ஜீவஜிவக {சகோரப்} பறவையாகப் பிறக்கிறான். இவ்வுலகில் உள்ள (சந்தனம் முதலிய) களிம்புகளையும், நறுமணப் பொருட்களையும் பேராசையால் களவு செய்யும் மனிதன் மூஞ்சூறாகப் பிறக்கிறான். மூஞ்சூறின் வடிவை ஏற்றுப் பதினைந்து வருடங்கள் வாழ்கிறான்.(107,108) அதன் பிறகு தன் பாவத்தைக் கழித்த பிறகு அவன் மனிதனாகப் பிறக்கிறான். பாலைக் களவு செய்பவன் நாரையாகப் பிறக்கிறான்.(109) ஓ! மன்னா, மதிகெட்டுப்போய் எண்ணெயைக் களவும் செய்யும் மனிதன் எண்ணெயை உண்டு வாழும் விலங்கின் வடிவில் {தைலபாயி எனும் உயிரினமாக [வௌவாலாக / கறப்பான்பூச்சியாகப்]} பிறக்கிறான்.(110)

தான் நன்கு ஆயுதம் தரித்தவனாக, ஆயுதந்தரிக்காதவனான மற்றொருவனை, அவனுடைய செல்வத்தை அடைவதற்காகவோ, அவனிடம் கொண்ட பகையுணர்ச்சியாலோ கொல்லும் இழிந்தவன், தன் மனித உடலைக் கைவிட்ட பிறகு ஒரு கழுதையாகப் பிறக்கிறான்.(111) கழுதை வடிவை ஏற்று இரண்டு வருட காலம் வாழ்ந்து ஆயுத முனையால் அவன் இறப்பைச் சந்திக்கிறான். இவ்வழியில் தன் கழுதை உடலைக் கைவிடும் அவன் அடுத்தப் பிறவியில் (பகைவர்கள் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்ற எண்ணம் கொண்ட) கவலை நிறைந்த மானாகப் பிறக்கிறான்.(112) மானாகப் பிறந்து ஒரு வருடம் கழிந்ததும் அவன் ஆயுத முனையில் தன் உயிரை விடுவான். இவ்வாறு மானின் வடிவைக் கைவிடும் அவன் அடுத்ததாக மீனாகப் பிறந்து, நான்கு மாதம் கழிந்ததும் வலையால் இழுக்கப்படுவதன் விளைவால் இறப்பான். அடுத்தப் பிறவியில் இரைதேடும் விலங்காக அவன் பிறப்பான். பத்து வருடங்கள் அவ்வடிவில் வாழும் அவன், பிறகு சிறுத்தையாகப் பிறந்து ஐந்து வருடகாலம் வாழ்கிறான்.(114) காலம் கொண்டுவரும் மாற்றத்தால் தூண்டப்படும் அவன் அந்த வடிவத்தையும் கைவிட்டு, பாவம் தீர்ந்ததும், மீண்டும் மனித வடிவைப் பெறுகிறான்.(115)

பெண்ணைக் கொல்லும் சிறுமதி கொண்ட மனிதன் யமலோகத்திற்குச் சென்று பல்வேறு வகைத் துன்ப துயரங்களை அனுபவிப்பான். பிறகு முழுமையாக அவன் இருபத்தோரு வடிவ மாற்றங்களைப் பெறுவான்.(116) ஓ! ஏகாதிபதி, அதன் பிறகு அவன் அருவருக்கத்தக்க ஓர் ஓட்டுண்ணியாகப் பிறப்பான். ஒட்டுண்ணியாக இருபது வருடங்கள் வாழ்ந்த பிறகு அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(117)

உணவைக் களவு செய்வதன் மூலம் ஒருவன் வண்டாகப் பிறப்படைகிறான். வேறு வண்டுகளின் துணையுடன் பல மாதங்கள் வாழும் அவன் தன் பாவம் தீர்ந்ததும் மீண்டும் மனித நிலையை அடைகிறான். நெல்லைத் திருடுவதன் மூலம் ஒருவன் பூனையாகிறான்.(118,119) எள் கலந்த உணவைத் திருடும் மனிதன் தான் திருடிய உணவின் அளவுக்குத் தகுந்தபடி பெரிய அல்லது சிறிய எலியாகிறான்.(120) அவன் தினமும் மனிதர்களைக் கடிக்கிறான், அதன் விளைவாக அவன் பாவம் நிறைந்தவனாகப் பல்வேறு மறுபிறவிகளின் சுழலில் பயணிக்கிறான். நெய்யைத் திருடும் மதிகெட்ட மூடன் ஈயாகப் பிறக்கிறான்.(121) மீனைக் களவு செய்யும் இழிந்தவன், காக்கையாகப் பிறக்கிறான். உப்பைக் களவு செய்யும் ஒருவன், பேசும் கிளியாகப் பிறக்கிறான்.(122) நம்பிக்கையுடன் கொடுக்கப்பட்டவற்றை அபகரிக்கும் மினதன், வாழ்வுக்காலம் குறைந்தவனாக இறந்து மீன்களுக்கு மத்தியில் பிறக்கிறான்.(123) சில காலம் மீனாக வாழும் அவன் இறந்ததும் மீண்டும் மனித வடிவை அடைகிறான். மனித நிலையை அடைந்தாலும் அவன் குறுகிய வாழ்நாளையே பெறுகிறான்.(124) ஓ! பாரதா, உண்மையில் பாவங்களை இழைக்கும் ஒருவன், மனிதர்களுக்கும், காய்கறிகளுக்கும் இடைப்பட்ட நிலையான இடைநிலை வகையில் தன் பிறப்பை அடைகிறான். தங்கள் இதயத்தையே அதிகாரமாகக் கொண்ட மக்கள் முற்றாக அறமறியாதவர்களாக இருக்கிறார்கள்(125)

பல்வேறு பாவச்செயல்களைச் செய்து தொடர்ந்த நோன்புகள் மற்றும் பக்திச் செயல்பாடுகள் மூலம் அவற்றைத் தணிக்க முயலும் மனிதர்கள், இன்பதுன்பங்களை அடைந்து இதயத்தில் பெரும் கவலையுடன் வாழ்கிறார்கள்.(126) பாவம் நிறைந்த ஒழுக்கம் கொண்டவர்களும், பேராசை மற்றும் அறியாமைக்கு வசப்படுகிறவர்களும், தொடர்பு கொள்ளத்தகாத மிலேச்சர்களாகப் பிறக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(127) மறுபுறம், தங்கள் பிறவிகள் தோறும் பாவங்களைத் தவிர்க்கும் மனிதர்கள், அனைத்து வகைப் பிணியில் இருந்து விடுபட்டு, வடிவ அழகுடன் கூடியவர்களாகச் செல்வத்தை அடைகிறார்கள்.(128)

மேற்குறிப்பிட்ட வழியில் செயல்படும் பெண்களும் அதே வகையிலேயே பிறப்பை அடைவார்கள். உண்மையில் அவர்கள் நான் குறிப்பிட்ட விலங்குகளின் துணைகளாகப் பிறப்பை அடைகின்றனர்.(129)

ஓ! பாவமற்றவனே, பிறரின உடைமைகளை அபகரிப்பதில் தொடர்புடைய குற்றங்கள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். இக்காரியம் குறித்து நான் உனக்கு மிகச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.(130) ஓ! பாரதா, வேறு காரியம் குறித்த குற்றங்களைக் குறித்து மற்றொருமுறை கேட்பாயாக. ஓ! மன்னா, நான் இவற்றைப் பிரம்மனிடம் இருந்து கேட்டிருக்கிறேன்.(131) அவர் தேவர்களுக்கு மத்தியில் இது குறித்து உரையாடியபோது இவையனைத்தையும் மகிழ்வூட்டும் வகையில் கேட்டேன். உண்மையில் நீ கேட்டது அனைத்தையும் விரிவாகச் சொல்லிவிட்டேன்.(132) ஓ! ஏகாதிபதி, இவை யாவற்றையும் கேட்டு நீ உன் இதயத்தை எப்போதும் அறத்தில் நிலைநிறுத்துவாயாக” என்றார் {பிருஹஸ்பதி}.(133)

அன்னதானம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 112-பாவத்தைப் போக்கும் வழிமுறைகள்; அறத்தின் துணையுடன் அடையப்படும் கதிகள்; அன்னதானத்தின் சிறப்பு; அறத்தின் ஆறு வாயில்கள் குறித்துப் பிருஹஸ்பதிக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்..

யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, மறம் அல்லது பாவத்தின் கதியென்ன? என எனக்குச் சொன்னீர். ஓ! பேசுபவர்களின் முதன்மையானவரே, அறத்தின் கதியென்ன? என இப்போது கேட்க விரும்புகிறேன்.(1) பல்வேறு பாவச் செயல்களைச் செய்தபின் எந்தச் செயல்களின் மூலம் மக்கள் இவ்வுலகில் {இம்மையில்} மங்கல கதியை அடைகிறார்கள்? எந்தச் செயல்களின் மூலம் மக்கள் சொர்க்கத்திலும் {மறுமையிலும்} மங்கல கதியை அடைகிறார்கள்?” என்று கேட்டான்.(2)

பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, “பிறழ்மனத்துடன் பாவம்நிறைந்த செயல்களைச் செய்த ஒருவன் மறத்தின் ஆளுகைக்கு வசப்பட்டு அதன் விளைவாக நரகத்திற்குச் செல்கிறான்.(3) மனத்தின் அறியாமையால் பாவச்செயல்களைச் செய்த மனிதன், மனந்திருந்தி வேதனையடைந்து தன் இதயத்தை (தேவர்களை) தியானிப்பதில் நிறுவினால், அவன் தன் பாவங்களின் விளைவுகளை அனுபவிக்க வேண்டியதில்லை.(4) ஒருவன் எந்த அளவுக்கு {தான் செய்த பாவத்தைக் குறித்து நினைத்து} வருந்துகிறானோ, அந்த அளவுக்கு அவனுடைய பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.(5) ஓ! மன்னா, பாவத்தை இழைத்த மனிதன், கடமைகளை அறிந்த பிராமணர்களின் முன்னால் அவற்றை அறிவித்தால் அந்தப் பாவங்களில் இருந்து எழும் அவதூறுகளிலிருந்து உடனே அவன் தூய்மையடைகிறான்.(6) இதன்படி ஒருவன் முழுமையாகவோ, வேறு வகையிலோ தன் பாவங்களைக் குவிந்த மனத்துடன் அறிக்கையிட்டால் அவன் பழைய சட்டையில் இருந்து விடுபெறும் பாம்பைப் போல அந்தப் பாவத்தில் இருந்து முழுமையாகவோ, வேறுவகையிலோ விடுபடுகிறான்.(7) குவிந்த மனத்துடன் ஒரு பிராமணனுக்குப் பல்வேறு வகைக் கொடைகளை அளித்து, (தேவனிடம்) மனதைக் குவிப்பதன் மூலம் ஒருவன் மங்கல கதியை அடைகிறான்.(8)

ஓ! யுதிஷ்டிரா, பாவச்செயல்களை இழைத்த குற்றவாளியாகவே இருந்தாலும் எக்கொடைகளை அளித்தால் அவன் பலன் கொண்டவனாகிறான் என்பதைச் சொல்லப் போகிறேன்.(9) கொடைகள் அனைத்திலும் உணவுக்கொடையே {அன்னதானமே} சிறந்ததெனக் கருதப்படுகிறது. பலனை அடைய விரும்பும் ஒருவன் நேர்மையான இதயத்துடன் உணவுக்கொடையளிக்க வேண்டும்.(10) உணவே மனிதர்களுக்கு உயிர் மூச்சுகளை அளிக்கிறது. அதிலிருந்துதான் உயிரினங்கள் பிறக்கின்றன. உயிரினங்களைக் கொண்ட உலகங்கள் அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன. எனவே உணவு மெச்சப்படுகிறது.(11) தேவர்கள், முனிவர்கள், பித்ருகள் மற்றும் மனிதர்கள் அனைவரும் உணவைப் புகழ்கின்றனர். பழங்காலத்தில் மன்னன் ரந்திதேவன் உணவுக்கொடை அளித்ததற்காகச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(12)

நியாயமாக அடையப்பட்ட நல்ல உணவை வேத ஞானம் கொண்ட பிராமணர்களுக்கு உற்சாகம் நிறைந்த இதயத்துடன் கொடுக்க வேண்டும்.(13) ஓராயிரம் பிராமணர்களுக்கு உற்சாகம் நிறைந்த இதயத்துடன் உணவைக் கொடையளித்த மனிதன் இடைநிலை வகையில் {விலங்கு, பறவை, பூச்சிகளாக} ஒருபோதும் பிறக்க மாட்டான்.(14) ஓ! மனிதர்களின் தலைவா, பத்தாயிரம் பிராமணர்களுக்கு உணவூட்டிய ஒருவன், மறத்தில் {அதர்மத்தில்} இருந்து தூய்மையடைந்து யோக நடைமுறைகளில் அர்ப்பணிப்புள்ளவன் ஆகிறான்.(15)

வேதங்களை அறிந்த ஒரு பிராமணன், பிச்சையில் தனக்குக் கிடைத்த உணவை வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள ஒரு பிராமணனுக்குக் கொடையளித்தால் இம்மையில் {இவ்வுலகில்} மகிழ்ச்சியடைவதில் வெல்கிறான்.(16)

ஒரு க்ஷத்திரியன், எந்தப் பிராமணனின் உடைமைகளையும் அபகரிக்காமல், தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்து, பலத்தைப் பயன்படுத்தி அடைந்த உணவை வேத அறிவு கொண்ட முதன்மையான பிராமணர்களுக்குக் கொடையளித்தால், ஓ! பாண்டுவின் மகனே, ஓ! அற ஆன்மாவே, அத்தகைய ஒழுக்கத்தின் மூலம் அவன் தான் செய்த பாவச் செயல்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(17,18)

ஒரு வைசியன், தன் களத்தின் {வயலின்} விளைச்சலை ஆறு சமமான பங்குகளாகப் பிரித்து, அதில் ஒரு பங்கை பிராமணர்களுக்குக் கொடுத்தால், அவன் அத்தகைய ஒழுக்கத்தின் மூலம் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(19)

ஒரு சூத்திரன், கடும் உழைப்பாலும், உயிரைப் பணயம் வைத்தும் ஈட்டப்பட்ட உணவைப் பிராமணர்களுக்குக் கொடையளித்தால் அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(20)

உடல் பலத்தைப் பயன்படுத்தி, எந்த உயிரினத்திற்கும் எத்தீங்கையும் செய்யாமல் ஈட்டிய உணவை பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன் தனக்கு வரும் துன்பங்கள் அனைத்தையும் தவிர்ப்பதில் வெல்கிறான்.(21) நியாயமான வழிமுறைகளில் அடையப்பட்ட உணவை வேத ஞானம் கொண்ட பிராமணர்களுக்கு உற்சாகமாகக் கொடையளிப்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(22) அறத்தின் பாதையில் நடப்பதன் மூலம் ஒருவன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். பெருஞ்சக்தியைக் கொடுக்க வல்ல உணவைக் கொடையளிப்பவன் பெருஞ்சக்தி கொண்டவனாகிறான்.(23) ஈகையாளர்களால் அமைக்கப்பட்ட பாதையிலேயே ஞானம் கொண்டவர்கள் எப்போதும் நடக்கிறார்கள். உணவு கொடையளிப்பவர்கள் உயிரைக் கொடையளிப்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். அத்தகைய கொடையின் மூலம் அவர்கள் அடையும் பலன் நித்தியமானதாகும்.(24) எனவே ஒருவன் அனைத்துச் சூழ்நிலைகளிலும், நியாயமான முறைகளில் உணவை ஈட்ட முனைந்து, அவ்வாறு ஈட்டப்பட்டவற்றைத் தகுந்த மனிதர்களுக்கு எப்போதும் கொடையளிக்க வேண்டும். உயிரினங்களின் உலகிற்கு உணவே பெரும்புகலிடமாகும்.(25)

உணவுக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் ஒருபோதும் நரகத்திற்குப் போக மாட்டான். எனவே, ஒருவன் நியாயமான வழிமுறைகளில் ஈட்டப்பட்ட உணவை எப்போதும் கொடையளிக்க வேண்டும்.(26) ஓர் இல்லறத்தான் ஒரு பிராமணனுக்கு உணவுக் கொடையளித்தபிறகே எப்போதும் உண்ண வேண்டும். ஒவ்வொரு மனிதனும் உணவுக் கொடையளிப்பதன் மூலம் அந்த நாளை கனிநிறைந்ததாக்க வேண்டும்.(27) ஓ! மன்னா, கடமைகள் {தர்மங்கள்}, சாத்திரங்கள் மற்றும் புனித வரலாறுகளை அறிந்தவர்களான ஆயிரம் பிராமணர்களுக்கு உணவூட்டும் மனிதன்,(28) நரகத்திற்கும் செல்ல வேண்டியதில்லை, இவ்வுலகில் மீண்டும் திரும்பும் வகையில் மறுபிறவியை அடைவதுமில்லை. அனைத்து விருப்பமும் கனியும் நிலையை அடையும் அவன் மறுமையில் பேரின்பத்தை அனுபவிக்கிறான்.(29) அக்கதைய பலனை அடையும் அவன், கவலையில் இருந்து விடுபட்டு, வடிவ அழகு, பெரும்புகழ் மற்றும் செல்வத்தை அடைந்து மகிழ்ச்சியில் திளைக்கிறான்.(30) இவ்வாறு உணவுக் கொடையின் உயர்ந்த பலன்கள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். {வேற எந்த} அறம், பலன்கள் மற்றும் கொடைகள் அனைத்தின் வேராகவும் இதுவே இருக்கிறது” என்றார் {பிருஹஸ்பதி}.(31)

அஹிம்ஸை! – அநுசாஸனபர்வம் பகுதி – 113-அறத்தின் ஆறு வாயில்கள் மற்றும் அஹிம்ஸை குறித்து பிருஹஸ்பதிக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}“தீங்கிழையாமை {கொல்லாமை}, வேத சடங்குகளைச் செய்தல், தியானம், புலனடக்கம், தவங்கள், ஆசான்களுக்குக் கீழ்ப்படிந்து தொண்டாற்றல் ஆகியவற்றில் ஒருவனுக்குப் பெரும் பலனைத் தரக்கூடியது எது?” எனக் கேட்டான்.

பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}“இந்த ஆறும் பலன்நிறைந்தவையே ஆகும். இவை அறத்தின் வெவ்வேறு வாயில்களாகும். நான் அது குறித்து இப்போது சொல்லப் போகிறேன். ஓ! பாரதர்களின் தலைவா, அவற்றைக் கேட்பாயாக.(2) மனிதர்களுக்கான உயர்ந்த நன்மை எது என்பதையும் நான் உனக்குச் சொல்கிறேன். அண்டம் சார்ந்த கருணை அறத்தை {கொல்லாமையைப்} பயிலும் மனிதன் உயர்ந்த நன்மையை அடைகிறான்.(3) காமம், கோபம், பேராசை ஆகிய மூன்று குற்றங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் மனிதன் (கருணை அறத்தைப் பயின்று) வெற்றியை அடைகிறான்[1].(4)தன் மகிழ்ச்சிக்கான நோக்கில் தீங்கற்ற பிற உயிரினங்களைத் தண்டக் கோல் கொண்டு கொல்பவன், ஒருபோதும் மறுமையில் மகிழ்ச்சியை அடைய மாட்டான்.(5) அனைத்து உயிரினங்களையும் தானாகவே கருதி, தன்னைப் போலவே அவற்றிடம் நடந்து கொள்ளும் மனிதன், தண்டக்கோலை வைத்து, முற்றிலும் தன் கோபத்தை அடக்கி மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான்.(6) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொண்டு, அவை அனைத்தையும் தானாகவே பார்ப்பவன், தன் பின்னே சுவடுகளை விடாததால் நிலையான வசிப்பிடத்தை விரும்பும் தேவர்களும் அவனது பாதையை உறுதி செய்வதில் மயக்கமடைகிறார்கள்[2].(7) ஒருவன் தனக்குத் தீங்கு எனக் கருதுவதை மற்றவனுக்கு ஒருபோதும் செய்யக்கூடாது. இதுவே அறத்தின் சுருக்கமான விதியாகும். வேறு வழியில் செயல்படும் ஒருவன் ஆசைக்கு வசப்படுவதன் மூலம் அறமற்ற {அதர்மம் செய்யும்} குற்றவாளியாகிறான்.(8)கொடை மறுத்தல் மற்றும் பெறல், இன்பம் மற்றும் துன்பம், ஏற்புடைமை மற்றும் ஏற்பில்லாமை ஆகியவற்றில் ஒருவன் தன்னையே உவமையாகக் கொண்டு அவற்றின் விளைவுகளைத் தீர்மானிக்க வேண்டும்.(9) ஒருவன் மற்றொருவனுக்குத் தீங்கிழைக்கும்போது, தீங்குக்குள்ளானவன் திரும்பி தீங்கிழைத்துவனுக்குத் தீங்கிழைக்கிறான். அதே போலவே, ஒருவன் மற்றொருவனைப் பேணி வளர்க்கும்போது, அவ்வாறு வளர்ப்பவனைப் பிறர் பேணி வளர்ப்பார்கள். ஒருவன் தனக்கான ஒழுக்க விதியை இதன்படியே கட்டமைத்துக் கொள்ள வேண்டும். இந்த நுட்பமான வழியில் நான் அறம் என்றால் என்ன என்பதை உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்றார் {பிருஹஸ்பதி}”.(10)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான அந்தத் தேவர்களின் ஆசான் {பிருஹஸ்பதி}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இதைச் சொல்லிவிட்டு, எங்கள் கண் முன்பே சொர்க்கத்திற்குச் செல்ல மேல்நோக்கி உயர்ந்தார்”.(11)

புலால்மறுத்தல்! – அநுசாஸனபர்வம் பகுதி – 114-நான்கு வகை அஹிம்ஸை; புலால் மறுத்தல் ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இதன்பிறகு, பெரும் சக்தி கொண்டவனும், நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான மன்னன் யுதிஷ்டிரன், கணைப்படுக்கையில் கிடக்கும் பெரும்பாட்டனிடம் {பீஷ்மரிடம்} பின்வரும் சொற்களைச் சொன்னான்.(1)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவரே, வேதங்களின் அதிகாரத்தினால் வழிநடத்தப்படும் முனிவர்கள், பிராமணர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோர் அனைவரும் கருணையையே தன் குறியீடாகக் கொண்ட அறத்தை மெச்சுகிறார்கள்.(2) ஆனால், ஓ! மன்னா, நாம் உம்மிடம் கேட்பது என்னவென்றால்: சொல், எண்ணம், செயல் ஆகியவற்றில் பிறருக்குத் தீங்கிழைத்த மனிதன், துன்பத்தில் இருந்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் எவ்வாறு வெல்கிறான்?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிரம்மத்தை ஓதுபவர்கள், கருணை, அல்லது தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்ஸை} நான்கு வகையானது என்று சொல்லியிருக்கின்றனர். இந்த நான்கு வகைகளில் ஒன்று நோற்கப்படாவிட்டாலும் கருணையறம் {அஹிம்ஸை} நோற்கப்பட்டதாகாது என்று சொல்லப்படுகிறது.(4) நான்கு கால்களைக் கொண்ட விலங்குகள் யாவும் மூன்று கால்களில் நிற்க இயலாததைப் போலவே கருணையறத்தாலும் நான்கு வகைகளில் ஒன்றில்லாவிட்டாலும் நிற்க இயலாது.(5) பிற உயிரினங்களின் காலடித்தடங்கள் அனைத்தையும் யானையின் காலடித்தடம் விழுங்கிவிடுவதைப் போலவே வேறு அறங்கள் அனைத்தும் கருணையறத்தில் {அஹிம்ஸையில்} உள்ளடங்கிவிடுகிறது என்று சொல்லப்படுகிறது. செயல்கள், சொற்கள் மற்றும் எண்ணங்களின் மூலமாக ஒருவன் தீங்கிழைக்கும் குற்றவாளியாகிறான்[1].(6,7)தொடக்கத்திலேயே அதை மனத்தில் இருந்து அகற்றும் ஒருவன் அடுத்ததாக அதைச் சொல் மற்றும் எண்ணத்தில் இருந்தும் விலக்க வேண்டும். இவ்விதியின்படி இறைச்சியுண்பதைத் தவிர்க்கும் ஒருவன் மூன்று வழிகளில் {எண்ணம், சொல் மற்றும் செயல் வழிகளில்} தூய்மையடைந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(8) பிரம்மம் ஓதுபவர்கள் (இறைச்சியுண்ணும் பாவத்திற்கான) மூன்று காரணங்களைக் குறிப்பிடுவதாகக் கேள்விப்படுகிறோம். அந்தப் பாவம் மனம், சொற்கள் மற்றும் செயல்களில் பற்றியிருக்கலாம்.(9) இந்தக் காரணத்தினாலேயே தவங்களுடன் கூடிய ஞானம் கொண்ட மனிதர்கள் இறைச்சி உண்பதைத் தவிர்க்கிறார்கள். ஓ! மன்னா, இறைச்சியுண்பதால் ஏற்படும் குற்றங்களை {தோஷங்களை} உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(10)

பிற விலங்குகளின் இறைச்சியானது ஒருவனுடைய மகனின் சதையைப் போன்றதாகும். அறியாமையில் மயங்கி இறைச்சியுண்ணும் மூடன், மனிதர்களில் இழிந்தவனாகக் கருதப்படுகிறான்.(11) தந்தையும், தாயும் இணைவதால் சந்ததி உண்டாகிறது. அதே வகையிலேயே ஓர் ஆதரவற்ற, பாவம் நிறைந்த இழிந்தவன் இழைக்கும் கொடுமையே, பெரும் துன்பம் நிறைந்த மறுபிறவிகளைக் கொண்ட சந்ததியை மீண்டும் மீண்டும் உண்டாக்குகிறது.(12) சுவையுணர்வு அல்லது சுவையின் அறிவுக்குக் காரணமாக நாக்கு இருப்பதைப் போலவே, பற்றானது சுவையிலிருந்தே உண்டாகிறது எனச் சாத்திரங்கள் அறிவிக்கின்றன[2].(13) நன்கு தோல்நீக்கப்பட்டு, உப்புடனோ, உப்பில்லாமலோ சமைக்கப்படும் இறைச்சியை ஒருவன் எவ்வடிவில் உண்டாலும், அது படிப்படியாக மனத்தை ஈர்த்து, அதற்கு அவனை அடிமையாக்குகிறது.(14)இறைச்சியுண்டு வாழும் மூட மனிதர்களால் (தெய்வீகப்) பேரிகைகள், மிருதங்கங்கள், யாழ் மற்றும் தந்திக்கருவிகளின் இனிய இசையைக் கேட்பதில் எவ்வாறு வெல்ல முடியும்?(15) உணரப்பட முடியாதது, விவரிக்க முடியாதது, கற்பனை செய்ய முடியாதது என இறைச்சி குறித்து {இல்லாததைச்} சொல்லும் ஊனுண்பவர்கள் அதன் சுவையில் மயக்கமடைந்து அதை உயர்வாக மெச்சுகிறார்கள்.(16) இவ்வாறு இறைச்சியைப் புகழ்வதும் பாவம் நிறைந்ததாகும். பழங்காலத்தில், அறவோர் பலர், தங்கள் உடலின் சதையைக் கொடுத்து, பிற உயிரினங்களின் சதையைக் காத்தார்கள். பலன்தரும் அத்தகைய செயல்களின் விளைவாக அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றார்கள்.(17) ஓ! ஏகாதிபதி, இவ்வழியில் கருணையறமானது, நான்கு கருத்துகளால் சூழப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்ட கருணையறத்தைச் சொன்னேன்” என்றார் {பீஷ்மர்}[3].(18)

கொல்லாமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 116-இறைச்சி உண்பதால் கிட்டும் பலன்கள்; உயிரின் மதிப்பு; இறைச்சியுண்பதால் நேரும் பாவம்; கொல்லாமையின் சிறப்புகள் ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஐயோ, பல்வேறு வகை உணவுகளைக் கைவிட்டு இறைச்சியை மட்டுமே உண்ணும் கொடூர மனிதர்கள், உண்மையில் பெரும் ராட்சசர்களைப் போன்றோரே.(1) ஐயோ, அவர்கள் இறைச்சியை {துய்த்து மகிழ்வதைப்} போலப் பல்வேறு வகைப் பண்டங்களையும், பல்வேறு வகைக் கீரைகளையும், சுவைமிக்கச் சாறுகளுடன் கூடிய பல்வேறு வகைக் கண்டங்களையும் துய்த்து மகிழ்வதில்லை.(2) இந்தக் காரணத்தினால் இக்காரியத்தில் என் புத்தி மயங்குகிறது. சுவையைப் பொறுத்தவரையில் இறைச்சியோடு ஒப்பிடத்தக்கது வேறேதும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.(3) எனவே, ஓ! பலமிக்கவரே, ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, இறைச்சியைத் தவிர்ப்பதால் உண்டாகும் பலன்கள் என்ன, இறைச்சியை உண்பதால் உண்டாகும் குற்றங்கள் என்ன என்பதைக் கேட்க விரும்புகிறேன்.(4) நீர் அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர். கடமைகளின் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் இது குறித்து நீர் எனக்கு முழுமையாகச் சொல்வீராக. உண்மையில், எது உண்ணத்தக்கது, எது உண்ணத்தக்கதல்ல என்பதை எனக்குச் சொல்வீராக.(5) ஓ! பாட்டா, இறைச்சி என்பது என்ன, அஃது என்ன சாரத்தாலானது, அதைத் தவிர்ப்பதால் உண்டாகும் பலன்கள் மற்றும் இறைச்சியை உண்பதால் ஏற்படும் குற்றங்கள் ஆகியவற்றை எனக்குச் சொல்வீராக” என்றான்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. சுவையின் நோக்கில் இறைச்சிக்கு மேன்மையானது இந்தப் பூமியில் ஏதும் கிடையாது. மெலிந்தவருக்கோ, பலவீனருக்கோ, நோயால் பீடிக்கப்பட்டவருக்கோ, பாலினக்கலவிக்கு அடிமையாயிருப்பவருக்கோ, பயணத்தால் களைப்படைந்தவருக்கோ இறைச்சியைவிட மிக நன்மையானது வேறேதும் இல்லை.(8) இறைச்சி மிக விரைவாகப் பலத்தை அதிகரிக்கச் செய்கிறது. அது பெரும் வளர்ச்சியை விதிக்கிறது. ஓ! பகைவர்களை எரிப்பவனே, இறைச்சியைவிட மேன்மையான உணவேதும் கிடையாது.(9) ஆனால், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அதைத் தவிர்க்கும் மனிதர்களுக்குக் கிட்டும் பலன்கள் பெரியனவாகும். நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(10)

மற்றொரு உயிரினத்தின் இறைச்சியைக் கொண்டு தன் சதையைப் பெருக்க விரும்பும் மனிதனைவிட அற்பனும், கொடூரனும் வேறெவனும் இல்லை.(11) இவ்வுலகில் தன் உயிரைவிட அன்புக்குரியது ஓர் உயிரினத்திற்கு வேறேதும் இல்லை. எனவே, (மதிப்புமிக்க அந்த உடைமையை எடுக்காமல்) ஒருவன் தன் உயிரைப் போலவே பிறரின் உயிர்களுக்கும் கருணை காட்ட வேண்டும்.(12) ஓ! மகனே, சதையே உயிர்வித்தின் தோற்றுவாய் என்பதில் ஐயமேதும் இல்லை. அதை உண்பதில் பெரும் குற்றமும், அதைத் தவிர்ப்பதில் நன்மையும் இருக்கின்றன.(13) எனினும், வேத விதிகளின் படி புனிதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதன் மூலம் எக்குற்றமும் இழைக்கப்படுவதில்லை. வேள்விகளுக்காகவே விலங்குகள் உண்டாக்கப்பட்டன என்று கேள்விப்படுகிறோம். வேறு எந்த வழியிலும் இறைச்சியை உண்பவர்கள் ராட்சச நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.(14) க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஆற்றலைப் பயன்படுத்தி அடையப்பட்ட இறைச்சியை உண்பதில் அவர்கள் எக்குற்றத்தையும் இழைப்பதில்லை.(15)

ஓ! மன்னா, பழங்காலத்தில் காட்டின் மான்கள் அனைத்தும் அகஸ்தியரால் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டன. எனவே, மானை வேட்டையாடுவது நிந்திக்கப்படுவதில்லை.(16) ஒருவன் தன் உயிரைப் பணயம் வைக்காமல் எந்த வேட்டையையும் செய்ய முடியாது. அங்கே விலங்கு கொல்லப்படுகிறது, அல்லது வேட்டைக்காரன் கொல்லப்படுகிறான்.(17) எனவே, ஓ! பாரதா, அரசமுனிகளே கூட வேட்டையாடினர். அத்தகைய ஒழுக்கத்தால் அவர்கள் பாவமேதும் இழைப்பதில்லை. உண்மையில் அந்த நடைமுறை பாவம் நிறைந்ததாகக் கருதப்படுவதில்லை.(18) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்டும் நடைமுறையில் உண்டாகும் பலனுக்கு இணையாக இம்மையிலோ, மறுமையிலோ வேறேதும் இல்லை.(19) கருணைகொண்ட மனிதனுக்கு எந்த அச்சமும் கிடையாது. கருணையுடன் கூடிய தீங்கற்ற மனிதர்களே இம்மையையும், மறுமையையும் அடைகிறார்கள்.(20)

கடமைகளை அறிந்த மனிதர்கள், கொடூரம் தவிர்ப்பதைக் குறியீடாகக் கொண்ட அறமே அறமென அழைக்கத்தகுந்தது எனச் சொல்கிறார்கள். தூய ஆன்மா கொண்ட மனிதன், தன் ஆன்மா கருணை கொள்ளும் செயல்களை மட்டுமே செய்வான்.(21) தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகளில் அர்ப்பணிக்கப்படும் இறைச்சி ஹவி {ஹவிஸ்} (உண்ணத்தக்கது) என்று அழைக்கப்படுகிறது. கருணையில் அர்ப்பணிப்புள்ளவனும், பிறரிடம் கருணையாக நடந்து கொள்பவனுமான மனிதனுக்கு எவ்வுயிரினத்திடமிருந்தும் அச்சமேதும் கிடையாது {உண்டாகாது}.(22) உயிரினங்கள் அனைத்தும் {பின்வரும்} இத்தகைய ஓர் உயிரினத்திற்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்துவதைத் தவிர்க்கின்றன என்று நான் கேள்விப்படுகிறோம். ஒருவன் காயமடைந்தாலோ, வீழ்ந்துவிட்டாலோ, நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தாலோ, பலவீனமடைந்திருந்தாலோ, அடிபட்டிருந்தாலோ அவன் எந்நிலையில் இருந்தாலும், அனைத்து உயிரினங்களும் அவனைப் பாதுகாக்கவே செய்யும். உண்மையில், அவன் சமமான தரையில் இருந்தாலும், சமமற்றதரையில் திருந்தாலும் அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவை இவ்வாறே செயல்படுகின்றன. பாம்புகளோ, காட்டு விலங்குகளோ, பிசாசங்களோ, ராட்சசர்களோ அவனை ஒருபோதும் கொல்வதில்லை[1].(23,24) பிறரை அச்சத்தில் இருந்து விடுவித்தவன் அஞ்சுவதற்கான சூழ்நிலைகள் எழும்போது அவன் அச்சத்தில் இருந்து விடுபடுகிறான். உயிர்க்கொடையைவிட மேன்மையான எக்கொடையும் இதற்கும் முன்பும் இருந்ததில்லை, இனியும் இருக்கப்போவதுமில்லை.(25)ஒருவனுக்குத் தன் உயிரைவிட அன்புக்குரியது வேறேதும் இல்லை என்பது நிச்சயமான ஒன்றாகும். ஓ! பாரதா, மரணமானது அனைத்து உயிரினங்களுக்கும் துன்பமாகவோ, தீமையாகவோ ஆகிறது.(26) மரணத்திற்கான காலம் வரும்போது, அனைத்து உயிரினங்களின் மொத்த சட்டகமும் நடுங்குவதே காணப்படுகிறது. இந்த உலகப்பெருங்கடலில், கருப்பையில் பிறக்கும் போதும், மூப்பின்போதும் பல்வேறு வகைப் பிணிகளைத் தாங்கிக் கொண்டு,(27) உயிரினங்கள் தொடர்ந்து போவதும் வருவதும் காணப்படுகிறது. ஒவ்வொரு உயிரினமும் மரணத்தால் பீடிக்கப்படுகிறது. கருப்பையில் வசித்திருக்கும்போது அனைத்து உயிரினங்களும் சிறுநீர், சளி {வியர்வை}, மலம் ஆகியவற்றின் காரமான, புளிப்பான, கசப்பான, வலிநிறைந்த உணர்வுகளை உண்டாக்கக்கூடிய, தாங்கிக் கொள்வதற்குக் கடினமான நீர்மச்சாறுகளில் {ரசங்களில்} சமைக்கப்படுகின்றன {வேகின்றன}. அங்கே அவை கருப்பையில் ஆதரவற்ற நிலையில் வசித்து, மீண்டும் மீண்டும் கிழிக்கப்படவும், துளைக்கப்படவும் செய்கின்றன(28,29). இறைச்சியில் பேராசை கொண்டவர்கள், அத்தகைய ஆதரவற்ற நிலையில் மீண்டும் மீண்டும் கருப்பையில் சமைக்கப்படுவது காணப்படுகிறது. பல்வேறு வகைப் பிறவிகளை அடையும் அவை, கும்பீபாகம் என்றழைக்கப்படும் நரகத்தில் சமைக்கப்படுகின்றன.(30)

அவை அடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு இவ்வழியில் மீண்டும் மீண்டும் பயணம் செய்கின்றன. ஒருவன் இவ்வுலகத்திற்கு வரும்போது அவனுடைய உயிரைவிட மிக அன்புக்குரியது வேறேதும் இல்லை.(31) எனவே தூய ஆன்மா கொண்ட ஒருவன் அனைத்து உயிரினங்களிடமும் கருணையுள்ளவனாக இருக்க வேண்டும். ஓ! மன்னா, தான் பிறந்ததிலிருந்து அனைத்து வகை இறைச்சியையும் தவிர்க்கும் மனிதன்,(32) சொர்க்கதில் பெரும் அளவிலான இடத்தை அடைவான் என்பதில் ஐயமில்லை. உயிரில் விருப்பமுள்ளவர்களாக இருந்தாலும், விலங்குகளின் இறைச்சியை உண்பவர்கள்,(33) தாங்கள் உண்ணும் விலங்குகளாலேயே உண்ணப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. இதுவே என் கருத்தாகும். ஓ! பாரதா, “என்னை உண்டவனை நான் பதிலுக்கு உண்ணப்போகிறேன்” என்பதே மாம்ஸம் என்ற குணமாகிறது[2]கொலைகாரன் எப்போதும் கொல்லப்படுவான். அவனுக்குப் பிறகு {கொல்லப்பட்டதை} உண்பவனும் அதே விதியைச் சந்திக்கிறான்.(35)(இப்பிறவியில்) மற்றொருவனிடம் பகையுடன் செயல்படுபவன், மற்றொருவனால் செய்யப்படும் அதே போன்ற செயல்களுக்குப் பலியாகிறான். எந்த உடலிலும் ஒருவன் செய்யும் எந்தச் செயல்களினாலும்(36) அவன் அவ்வுடல்களில் எழும் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்[3]. கொடூரந்தவிர்த்தலே {கொல்லாமையே} உயர்ந்த அறமாகும்.(37) கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த கொடையாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த தவமாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த வேள்வியாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த பலமாகும்.(38) கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த நண்பனாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த மகிழ்ச்சியாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த உண்மையாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த ஸ்ருதியாகும்.(39)அனைத்து வேள்விகளிலும் அளிக்கப்படும் கொடைகள், புனித நீர்நிலைகள் அனைத்திலும் செய்யப்படும் தூய்மைச் சடங்குகள், சாத்திரங்களில் குறிப்பிடப்பட்ட அனைத்து வகைக் கொடைகள் ஆகிய இவை அனைத்தையும் செய்வதனால் ஒருவன் அடையும் பலனையும் கொடூரந்தவிர்த்தல் {கொல்லாமை} (மேற்சொன்ன அனைத்தின் பலன்களையும்) அளிக்கிறது.(40) கொடூரந்தவிர்க்கும் மனிதன் செய்யும் தவங்கள் வற்றாதனவாகின்றன. கொடூரந்தவிர்க்கும் மனிதன் எப்போதும் வேள்விகளைச் செய்பவனாகக் கருதப்படுகிறான். கொடூரந்தவிர்க்கும் மனிதன் அனைத்து உயிருக்கும் தந்தையும், தாயும் போன்றவனாவான்.(41) ஓ! குரு குலத்தின் தலைவா, இவையே கொடூரந்தவிர்ப்பதால் {அஹிம்ஸையால்} உண்டாகும் சில பலன்களாகும். ஒருவன் நூறுவருடங்கள் சேர்ந்தாற்போலப் பேசினாலும் அதைச் செய்வதால் உண்டாகும் பலன்கள் அனைத்தையும் சொல்லிவிட முடியாது” என்றார் {பீஷ்மர்}.(42)

சூத்திரச் செல்வந்தன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 117-ஒரு புழுவைக் கண்ட வியாசர்; புழுவின் முற்பிறவிக் கதை; முற்பிறவியில் பெருந்தனம் படைத்த சூத்திரனாய் இருந்தது; அந்தப் புழுவுக்கும் வியாசருக்கும் இடையில் நடந்த உரையாடல் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இறக்க விரும்பியோ, வாழ விரும்பியோ பல மனிதர்கள் தங்கள் உயிர்களை (போர் எனும்) பெரும் வேள்வியில் விடுகின்றனர். ஓ! பாட்டா, அவர்கள் அடையும் கதியென்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(1) போரில் உயிரை விடுவது மனிதர்களுக்குக் கவலை நிறைந்த ஒன்றாகும். ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, செழிப்பாக இருந்தாலும், வறுமையில் இருந்தாலும், இன்பமாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும் உயிரை விடுவது மனிதர்களுக்குக் கடினமானது என்பதை நீர் அறிவீர். நீர் அனைத்தையும் அறிந்தவர் என்பது என் கருத்தாகும். இதற்கான காரணத்தை எனக்குச் சொல்வீராக” என்றான்.(2,3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, செழிப்பிலோ, வறுமையிலோ, மகிழ்ச்சியிலோ, துக்கத்திலோ இவ்வுலகிற்கு வரும் உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட நடைமுறைக்கேற்றபடியே வாழ்கின்றன[1].(4) அதன் காரணத்தைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! யுதிஷ்டிரா நீ என்னிடம் கேட்ட இந்தக் கேள்வி சிறப்பானதாகும்.(5) ஓ! மன்னா, இது தொடர்பாகத் தீவில் பிறந்த முனிவருக்கும் {வியாசருக்கும்}, தவழும் புழுவுக்கும் இடையில் முற்காலத்தில் நடந்த ஒரு பழைய உரையாடலை நான் உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன்.(6) பழங்காலத்தில் கல்விமானான பிராமணரும், தீவில் பிறந்தவரும், பிரம்மத்தோடு அடையாளம் காணப்படுபவருமான கிருஷ்ணர் {வியாசர்} உலகில் திரிந்து கொண்டிருந்த போது, தேர்கள் கடந்து செல்லும் சாலையில் ஒரு புழு வேகமாகச் செல்வதைக் கண்டார்.(7) அந்த முனிவர் ஒவ்வொரு உயிரினத்தின் நடைமுறையையும், ஒவ்வொரு விலங்கின் மொழியையும் அறிந்தவராவார். அனைத்தையும் அறிந்த அவர் அந்தப் புழுவின் இச்சொற்களைச் சொன்னார்.(8)வியாசர், “ஓ! புழுவே, பேரச்சத்துடன் நீ மிக விரைவாகச் செல்வதாகத் தெரிகிறது. நீ எங்கே ஓடுகிறாய், எதைக் கண்டு அஞ்சுகிறாய் என்பதை எனக்குச் சொல்” என்றார்.(9)

அந்தப் புழு {வியாசரிடம்}, “பெருந்தேர் ஒன்றின் சடசடப்பொலியைக் கேட்டு நான் அச்சத்தால் நிறைந்திருக்கிறேன். ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, அதன் முழக்கம் கடுமையாக இருக்கிறது. அது கிட்டத்தட்ட {அருகில்} வந்துவிட்டது. ஒலி கேட்கிறது. அஃது என்னைக் கொல்லாதா? இதற்காகவே நான் தப்பி ஓடுகிறேன். காளைகளின் ஒலியை மிக அருகில் கேட்கிறேன். அவை சாரதியின் சாட்டையின் கீழ் கடும் மூச்சு விட்டுக் கொண்டே கடும் சுமையைச் சுமந்து வருகின்றன. அந்தக் காளைகளைச் செலுத்தும் மனிதர்கள் வெளியிடும் பல்வேறு ஒலிகளையும் நான் கேட்கிறேன்.(12) புழு வகையில் பிறந்திருக்கும் எங்களைப் போன்ற உயிரினங்களால் அவ்வொலிகள் கேட்கத்தகாதனவாகும். இதன் காரணமாகவே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் இந்தச் சூழ்நிலையில் இருந்து நான் தப்பிச் செல்கிறேன்.(13) அனைத்து உயிரினங்களும் வலிநிறைந்த மரணத்தை உணர்கின்றன. வாழ்வு என்பது அடைதற்கரிய உடைமையாகும். எனவே, மகிழ்ச்சியான நிலையில் இருந்து துன்ப நிலைக்குச் செல்ல நான் விரும்பவில்லை. எனவே நான் அச்சத்தால் தப்பி ஓடுகிறேன்” என்றது”.(14)

பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டதும், தீவில் பிறந்தவரான வியாசர், “ஓ! புழுவே, நீ எங்கே மகிழ்ச்சியாக இருப்பாய்? நீ இடைநிலை வகையைச் சார்ந்த உயிரினமாக இருக்கிறாய். மரணம் உனக்கு மகிழ்ச்சி நிறைந்தது என்றே நான் நினைக்கிறேன்.(15) ஓ! புழுவே, ஒலி, தீண்டல், சுவை, மணம், மற்றும் பல்வேறு வகையான சிறந்த இன்பங்களை நீ அறியமாட்டாய். மரணம் உனக்கு நன்மையானது என்றே நான் நினைக்கிறேன்” என்றார்.(16)

புழு {வியாசரிடம்}, “ஓர் உயிரினம் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் அதில் பற்றுக் கொள்கிறது. ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, இந்த வகைப் பிறப்பிலும் நான் மகிழ்ச்சியாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அதற்காகவே நான் வாழ விரும்புகிறேன்.(17) இந்தச் சூழ்நிலையிலும் என் உடல் தேவைகளுக்கு ஏற்ற இன்பங்கள் இருக்கின்றன. மனிதர்களும், அசைவற்ற {உயிரற்ற} பொருட்களில் இருந்து உண்டாகும் உயிரினங்கள் வெவ்வேறு இன்பங்களைக் கொண்டிருக்கின்றனர்.(18) என் முந்தைய பிறவியில் நான் மனிதனாக இருந்தேன். ஓ! பலமிக்கவரே, நான் செல்வம் நிறைந்த ஒரு சூத்திரனாக இருந்தேன். நான் பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாக இல்லை. நான் கொடூரனாகவும், ஒழுக்கத்தில் இழிந்தவனாகவும், அநியாய வட்டிக்குப் பணம் தருபவனாகவும் இருந்தேன்.(19) நான் பேச்சில் கடுமை மிகுந்தவனாகவும் இருந்தேன். வஞ்சிப்பதையே ஞானமாகக் கருதினேன். அனைத்து உயிரினங்களையும் நான் வெறுத்தேன். எனக்கும் பிறருக்கும் இடையில் உண்டான உடன்படிக்கைகளில் உள்ள சாக்குபோக்குகளைப் பயன்படுத்திப் பிறருக்குச் சொந்தமானவற்றை எப்போதும் அபகரித்து வந்தேன்.(20)

கொடியவனான நான், பசித்ததும் என் வயிற்றை நிறைத்துக் கொண்டு, பணியாட்களுக்கும், என் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் உணவளிக்காமல் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.(21) தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உணவை அர்ப்பணிக்க வேண்டிய கடமை இருந்தாலும், நம்பிக்கையுடனும், மதிப்புடனும் அவர்களுக்கு எந்த உணவையும் ஒருபோதும் அர்ப்பணிக்காத பேராசைக்காரனாக நான் இருந்தேன்.(22) பாதுகாப்பை நாடி அச்சத்துடன் என்னிடம் வந்த மனிதர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் அளிக்காமல் திசைமாற்றிச் செல்ல வைத்தேன். தங்கள் அச்சத்தை விலக்க வேண்டி என்னிடம் வந்தவர்களுக்கு நான் எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை.(23) வேறு மக்களுக்குச் சொந்தமான செல்வம், தானியங்கள், மனைவிகள், அவர்களது அன்புக்குரியவை, பருகும் பானங்கள், நல்ல மாளிகைகள் ஆகியவற்றைக் கண்டு காரணமேயில்லாமல் அவர்களிடம் பொறாமை கொள்வேன்.(24) அவர்களுக்கு வறுமையையே நான் விரும்பினேன். என் ஆசைகளைக் கனியும் நிலையால் மகுடம் சூட்ட உறுதி அளித்த அந்த ஒழுக்கத்தையே பின்பற்றி, மற்றவர்களின் அறம், பொருள் மற்றும் இன்பங்களை அழிக்க முனைந்தேன்.(25)

என்னுடைய அந்த முற்பிறவியில் பெரிய கொடுமைகளையும், அதே போன்ற ஆசைகளை நிறைவேற்றும் செயல்களையும் செய்தேன். அந்தச் செயல்களை நினைவுகூரும் நான் அன்புக்குரிய மகனை இழந்து துயரப்படும் ஒருவனைப் போல வருத்தத்திற்கும் துன்பத்திலும் நிறைகிறேன்.(26) என்னுடைய இந்தச் செயல்பாடுகளின் விளைவால் நற்செயல்கள் என்ன கனிகளைத் தரும் என்பதை அறிந்தவனாக நான் இல்லை. எனினும், நான் வயது முதிர்ந்த என் தாயை வழிபட்டு வந்தேன், ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பிராமணரையும் வழிபட்டேன்.(27) {நல்ல} பிறவியையும், சாதனைகளையும் கொண்ட அந்தப் பிராமணர், ஒருமுறை தமது பயணங்களின் போது என் வீட்டிற்கு விருந்தினராக வந்தார். நான் அவரை மதிப்புடனும், விருந்தோம்பலுடனும் வரவேற்றேன். அந்தச் செயலுக்கான பலனின் விளைவால் என் நினைவு என்னைக் கைவிடாதிருக்கிறது.(28) என்னுடைய அந்தச் செயலின் விளைவால் மீண்டும் நான் மகிழ்ச்சியை மீட்டெடுப்பேன் என நினைக்கிறேன். ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, நீர் அனைத்தையும் அறிந்தவர். என் நன்மைக்கானது என்ன என்பதை அன்புடன் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டது.(29)

ஜென்மங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 118-புழுவானது அடுத்தடுத்து வெவ்வேறு பிறவிகள் அடைந்ததைக் கண்ட வியாசர்…

வியாசர், “ஓ! புழுவே, ஒரு புண்ணியச் செயலின் விளைவாலேயே இடைநிலை உயிரின வகையில் பிறந்திருந்தாலும் நீ மதிமயங்காமலிருக்கிறாய். ஓ! புழுவே, நான் செய்த அந்தச் செயலின் விளைவாலேயே நீ மதிமயங்காமலிருக்கிறாய்[1].(1) என் தவ வலிமையின் விளைவாலேயே நானும் குற்றமுள்ள ஓர் உயிரினத்திற்கு என்னைக் காணச் செய்து அதைக் காக்க இயன்றவனாயிருக்கிறேன். தவ வலிமையைவிடப் பலமிக்க வலிமை வேறேதும் இல்லை.(2) ஓ! புழுவே, நீ உன் முற்பிறவியில் செய்த தீச்செயல்களின் மூலமே புழுக்களின் வகையில் பிறப்பெடுத்திருக்கிறாய் என்பதை அறிவேன். எனினும், நீ அறத்தையும், தகுதியையும் ஈட்ட நினைத்தால் உன்னால் அவற்றை அடைய முடியும்.(3) தேவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், இந்தச் செயற்களத்தில் தங்களால் செய்யப்பட்ட செயல்களின் விளைவாகவே இன்பத்தையும், துன்பத்தையும் அடைகிறார்கள். மனிதர்களுக்கு மத்தியிலும் அறச்செயல்கள் செய்யப்படும்போது கனியின் மேல் உள்ள விருப்பத்தாலேயே அவை செய்யப்படுகின்றன (கனியை விரும்பாமலல்ல). ஒருவன் அடைய நினைக்கும் சாதனையானது மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்ற விருப்பத்தாலேயே வேண்டப்படுகிறது.(4)(முற்பிறவியில்) கல்விமானாகவோ, அறியாமையுடன் கூடிய உயிரினமாகவோ, பேச்சும், புத்தியும், கைகளும், கால்களும் அற்றிருப்பது உண்மையில் அனைத்துமற்றிருப்பதே ஆகும்.(5) ஒரு மேன்மையான பிராமணன் ஆகிறவன், வாழும்போது புனித மந்திரங்களைச் சொல்லி சூரியன் மற்றும் சந்திர தேவர்களைத் துதிக்கிறான். ஓ! புழுவே, நீ அந்த நிலையை அடைவாய்.(6) அந்த நிலையை அடைந்ததும் நீ இன்ப நுகர்பொருட்களாக மாற்றப்பட்ட பூதங்கள் அனைத்தையும் அனுபவிப்பாய். நீ அந்த நிலையை அடையும்போது நான் உனக்குப் பிரம்மத்தைப் போதிப்பேன். அல்லது, நீ விரும்பினால் உனக்கு வேறெந்த நிலையையும்  நான் அளிப்பேன்” என்றார் {வியாசர்}.(7)

வியாசரின் சொற்களை ஏற்றுக் கொண்ட அந்தப் புழு சாலையை விட்டு அகலாமல் அங்கேயே இருந்தது. அதே வேளையில், அந்தத் திசையில் வந்து கொண்டிருந்த பெரிய வாகனம் அந்த இடத்திற்கு வந்தது.(8) அந்தப் புழு, சக்கரங்களின் தாக்குதலில் துண்டுகளாகக் கிழிந்து தன் உயிர்மூச்சை விட்டது. இறுதியாக அளவிலா பலம் கொண்ட வியாசரின் அருள் மூலம் க்ஷத்திரிய வகையில் பிறந்த அது {அந்தப் புழு}(9) அந்தப் பெரும் முனிவரைக் காணச் சென்றது. அது க்ஷத்திரியனாவதற்கு முன், முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, மான், பறவை,(10) சண்டாளன், சூத்திரன் மற்றும் வைசியன் என்ற பல்வேறு வகைகளில் பிறந்திருந்தது. உண்மையைச் சொல்லும் முனிவரிடம் தன் பல்வேறு வடிவமாற்றங்களைக் குறித்துச் சொல்லி, முனிவர் தன்னிடம் காட்டிய கருணையை நினைவுகூர்ந்த அந்தப் புழு (இப்போது க்ஷத்திரியனாக மாறியிருப்பது) தன் கரங்களைக் கூப்பி அந்த முனிவரின் கால்களில் விழுந்து தன் தலையால் அவற்றைத் தீண்டியது {அந்த க்ஷத்திரியன் தன் தலையால் அம்முனிவரின் பாதங்களைத் தீண்டினான்}.(11)

அந்தப் புழு, “அனைவராலும் விரும்பப்படுவதும், நன்கறியப்பட்ட பத்துக் குணங்களைக் கொண்டிருந்தால் அடையக்கூடியதுமான உயர்ந்த நிலையில் இப்போது நான் இருக்கிறேன்[2]உண்மையில், முன்பு ஒரு புழுவாக இருந்த நான் இவ்வாறே ஒரு இளவரசனின் நிலையை அடைந்திருக்கிறேன்.(12) பெரும்பலம் கொண்டவையும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான யானைகள் என்னைத் தங்கள் முதுகுகளில் சுமந்து செல்கின்றன. என் தேர்களில் உயர்ந்த வகையைச் சார்ந்த காம்போஜ குதிரைகள் பூட்டப்படுகின்றன.(13) ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட எண்ணற்ற வாகனங்களும் என்னைச் சுமக்கின்றன. நான் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் இறைச்சியுடன் கூடிய உணவை உண்கிறேன்.(14) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, அனைவராலும் வழிபடப்படும் நான் இனிமையற்ற காற்று வீச முடியாத இனிமை நிறைந்த அறைகளில் விலைமதிப்புமிக்கப் படுக்கைகளில் நான் உறங்குகிறேன்.(15) ஒவ்வொரு இரவிலும் கொஞ்ச நேரம், சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியோர் தேவர்கள் தங்கள் தலைவனான இந்திரனை இனிமையாகப் புகழ்வதைப் போலவே என்னைப் புகழ்கிறார்கள்.(16) முன்பு புழுவாக இருந்த நான், வாய்மையில் உறுதியுள்ளவரும், அளவிலா சக்தி கொண்டவருமான உமது அருளின் மூலம் இப்போது அரச வகையில் பிறந்திருக்கிறேன்.(17) ஓ! பெரும் ஞானியே, நான் உமக்குத் தலைவணங்குகிறேன். நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு ஆணையிடுவீராக. உமது தவப் பலத்தின் மூலம் விதிக்கப்பட்டே இந்த மகிழ்ச்சியான நிலை இப்போது எனதாகியிருக்கிறது” என்றது {க்ஷத்திரியனாக மாறியிருந்த அந்தப் புழு}.(18)வியாசர், “ஓ! மன்னா, மதிப்பை வெளிப்படுத்தும் பல்வேறு சொற்களால் நீ இன்று என்னை வழிபட்டாய். புழுவாக மாறியிருந்த உன் நினைவு மறைக்கப்பட்டிருந்தது. அந்த நினைவே இப்போது தோன்றியிருக்கிறது[2].(19) நீ முற்பிறவியில் ஈட்டிய பாவம் இன்னும் அழிக்கப்படவில்லை. முற்பிறவியில் சூத்திரனாக இருந்தபோது செல்வத்தில் பேராசை கொண்டவனும், நடத்தையில் கொடூரனும், பிராமணர்களுக்குப் பகைவனுமாக இருந்து அந்தப் பாவங்களை ஈட்டினாய்.(20) உன்னால் என்னைப் பார்க்க முடிந்தது. அது நீ புழுவாக இருந்தபோது செய்த செயலுக்கான பலனே ஆகும். என்னை வணங்கி வழிபட்டதன் விளைவாக, பசுக்களுக்காகவும், பிராமணர்களுக்காகவும் போர்க்களத்தில் உன் உயிர்மூச்சைவிட்டு, நீ மேலும் உயர்ந்தெழுந்து க்ஷத்ததிரிய வகையில் இருந்து பிராமண நிலையை அடைவாய்.(21,22) ஓ! இளவரசே, அதிக இன்பத்தை அனுபவித்தும், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றைச் செய்தும் சொர்க்கத்தை அடைந்து, நித்திய பிரம்மம் ஆவாய். அந்த முற்றான இன்ப நிலையே உனதாகும்.(23) இடைநிலை வகைகளில் (விலங்குகளாகப்) பிறப்பவர்கள் (எழும்போது) சூத்திரர்களாகிறார்கள். சூத்திரன் வைசியன் என்ற நிலைக்கு உயர்ந்தெழுகிறான்; வைசிய் க்ஷத்திரியனாகிறான். தன் வகைக்கான கடமைகளை வெளிப்படுத்துவதில் செருக்கு கொள்ளும் க்ஷத்திரியன், பிராமண நிலையை அடைவதில் வெல்கிறான். அறவொழுக்கத்தைப் பின்பற்றும் பிராமணன், பேரின்பம் நிறைந்த சொர்க்கத்தை அடைகிறான்” என்றார் {வியாசர்}”.(24)

நற்கதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 119-வியாசரால் நற்கதியடைந்த புழுவைப் போலவே, குருக்ஷேத்திரத்தில் மடிந்த க்ஷத்திரியர்க்ள அனைவரும் நற்கதியையே அடைந்ததாக யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, புழு நிலையைக் கைவிட்டு பெருஞ்சக்தியைக் கொண்ட க்ஷத்திரியனாகப் பிறந்த மனிதன், தன் முந்தைய வடிவ மாற்றங்களை நினைவு கூர்ந்து, கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினான்.(1) அறம் மற்றும் செல்வத்தை நன்கறிந்த க்ஷத்திரியன் செய்த கடுந்தவங்களைக் கண்டவரும், தீவில் பிறந்தவரும், பிராமணர்களில் முதன்மையானவருமான கிருஷ்ணர் {வியாசர்} அவனிடம் சென்றார்.(2)

வியாசர், “ஓ! புழுவே, க்ஷத்திரிய வகைக்கான தவம் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதாகும். க்ஷத்திரிய வகையின் இந்தக் கடமைகளையே உனக்கு விதிக்கப்பட்ட தவமாக நீ கருதுவாயாக. அதன்பிறகு நீ பிராமண நிலையை அடைவாய்.(3) எது சரி, எது தவறு என்பதை உறுதி செய்து, உன் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டு, அனைத்து உயிரினங்களையும் முறையாகப் பேணி வளர்த்துப் பாதுகாத்து, நல்ல ஆசைகள் அனைத்தையும் நியாயமாக நிறைவேற்றி, புனிதமற்ற அனைத்தையும் திருத்துவாயாக.(4) தூய்மையடைந்த ஆன்மாவாகவும், மனநிறைவுள்ளவனாகவும் இருந்து கொண்டு அறப் பயிற்சியில் அர்ப்பணிப்புடன் இருப்பாயாக. இவ்வழியில் உன் ஒழுக்கத்தை அமைத்துக் கொண்டால் நீ உன் உயிர் மூச்சை விடும்போது ஒரு பிராமணனாவாய்” என்றார்”.(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, அவன் காடுகளுக்குச் சென்று ஓய்ந்திருந்தாலும், பெரும் முனிவரின் சொற்களைக் கேட்ட பிறகு தன் குடிமக்களை அறம்சார்ந்து பேணி வளர்க்கவும், பாதுகாக்கவும் தொடங்கினான்.(6) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பிறகு அந்தப் புழுவானவன், தன் குடிமக்களைப் பாதுகாத்தக் கடமையின் விளைவாக க்ஷத்திரிய உடலைக் கைவிட்டு ஒரு பிராமணனானான்.(7) அவன் பிராமணனானதைக் கண்டவரும், கொண்டாடப்பட்ட முனிவரும், பெரும் ஞானம் கொண்டவரும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்} அவனிடம் வந்தார்.(8)

வியாசர் {புழுவானவனிடம்}, “ஓ! பிராமணர்களின் தலைவா, ஓ! அருளப்பட்டவனே, (மரணத்தில் உள்ள அச்சத்தால்) வருந்தாதே. அறம்சார்ந்து செயல்படுபவன் மதிப்புமிக்கப் பிறவியை அடைகிறான். மறுபுறம் நியாயமில்லாமல் செயல்படுபவன் தாழ்ந்த மற்றும் இழிந்த பிறவியை அடைகிறான். ஓ! அறமறிந்தவனே, ஒருவன் செய்யும் பாவத்தின் அளவுக்குத் தகுந்த துன்பத்தையே ஒருவன் அடைகிறான்.(9) எனவே, ஓ! புழுவானவனே, மரணத்தில் உள்ள அச்சத்தினால் வருந்தாதே. அறம் இழப்பு குறித்தது மட்டுமே நீ அஞ்ச வேண்டிய ஒன்றாகும். எனவே நீ அறம் பயில்வதைத் தொடர்வாயாக” என்றார்.(10)

புழுவானவன் {வியாசரிடம்}, “ஓ! புனிதமானவரே, உமது அருளால் நான் மகிழ்ச்சிக்கு மேலான இன்பநிலைகளை அடைந்தேன். அறத்தில் தன் வேர்களைக் கொண்ட செழிப்பை நான் அடைந்திருப்பதால் என் பாவங்கள் ஒழிந்து விட்டதாக நினைக்கிறேன்” என்றான்”.(11)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தப் புனித முனிவரின் ஆணையின் பேரில் அடைதற்கரிய பிராமண நிலையை அடைந்த அந்தப் புழுவானவன், ஆயிரம் வேள்வித்தூண்களால் {யாகஸ்தம்பங்களால்} பூமியில் சுவடுகளை உண்டாக்கினான்(12) பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அவன், பிரம்மலோகத்திலேயே தன் வசிப்பிடத்தை அடைந்தான். உண்மையில், ஓ! பிருதையின் மகனே, அந்தப் புழுவானவன், வியாசரின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து, தன் செயல்களின் விளைவால் உயர்ந்த நிலையான நித்திய பிரம்மத்தையே அடைந்தான்.(13) சக்தியுடன் முயன்று, (குருக்ஷேத்திரக் களத்தில்) தங்கள் உயிர்மூச்சுகளை விட்ட க்ஷத்திரியக் காளைகள் அனைவரும் பலன்மிக்க {புண்ணியமான} கதிகளையே அடைந்தனர். எனவே, ஓ! மன்னா, நீ அவர்களுக்காக வருந்தாதே” என்றார் {பீஷ்மர்}.(14)

தானத்தின் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 120-ஞானம், தவம், தானம் ஆகியவற்றின் சிறப்பைக் குறித்து மைத்ரேயருக்கும் வியாசருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“ஞானம், தவங்கள் மற்றும் கொடைகள் என்ற மூன்றில் எது மேன்மையானது? ஓ! அறவோரில் முதன்மையானவரே, நான் உம்மைக் கேட்கிறேன். ஓ! பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக மைத்ரேயருக்கும், தீவில் பிறந்தவரான கிருஷ்ணருக்கும் {வியாசருக்கும்} இடையில் நடந்த உரையால் குறிப்பிடப்படுகிறது.(2) ஓ! மன்னா, ஒரு காலத்தில் தீவில் பிறந்தவரான கிருஷ்ணன் {வியாசர்}, யாருக்கும் தெரியாமல் உலகில் திரிந்து கொண்டிருந்த போது, வாராணசிக்கு {காசிக்குச்} சென்று முனிவர்களின் குலத்தில் பிறந்தவரான மைத்ரேயரிடம் பணி செய்தார்.(3) முனிவர்களில் முதன்மையான மைத்ரேயர், வியாசர் வருவதைக் கண்டு, அவரை முறையான சடங்குகளுடன் வழிபட்டபிறகு, அவருக்கு ஓர் இருக்கையை அளித்து, சிறந்த உணவையும் அவருக்கு உண்ணக் கொடுத்தார்.(4) உயர் ஆன்மக் கிருஷ்ணர் {வியாசர்}, உடலுக்கு நலந்தருவதும், அனைத்து வகை நிறைவையும் உண்டாக்குவதுமான அந்த நல்ல உணவை உண்ட பிறகு அங்கே அமர்ந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தவராக உரக்கச் சிரித்தார்.(5)

கிருஷ்ணர் {வியாசர்} சிரிப்பதைக் கண்ட மைத்ரேயர், “ஓ! அற ஆன்மாவே, உமது சிரிப்புக்கான காரணம் என்ன? நீர் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளக்கூடிய தவசியாவீர். நீர் பெருமகிழ்ச்சியில் இருப்பவராகத் தெரிகிறீர்.(6) உம்மைத் தலைவணங்கி வழிபட்டுக் கேட்கிறேன் என் தவ வலிமை என்ன? உமது உயர்ந்த அருள் என்ன?(7) நான் செய்யும் செயல்கள் நீர் செய்வதில் இருந்து வேறுபட்டனவாகும். நீர் உயிர் மூச்சைக் கொண்டிருந்தாலும் ஏற்கனவே முக்தியடைந்தவராவீர். எனினும், நான் இன்னும் விடுதலை அடையவில்லை. இவ்வளவு இருந்தாலும் எனக்கும் உமக்கும் பெரும் வேறுபாடு இல்லை என்று நான் நினைக்கிறேன். மேலும் நான் பிறப்பாலும் வேறுபடுகிறேன்” என்றார்[1].(8)வியாசர் {மைத்ரேயரிடம்}, “என்னை நிறைத்திருக்கும் இந்த ஆச்சரியம், மிகைப்படச் சொல்வது போலத் தெரியும் ஒரு விதியில் இருந்தும், மக்கள் புரிந்து கொள்ளும் முரண்பட்ட கூற்றிலிருந்தும் எழுகிறது. வேதங்களின் அறிக்கை உண்மையில்லை என்பது போலத் தெரிகிறது. ஆனால் வேதங்கள் ஏன் ஒரு பொய்யைச் சொல்ல வேண்டும்?[2](9) மனிதனுக்கான சிறந்த நோன்புகளாக அமையும் மூன்று தடங்கள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஒருவன் ஒருபோதும் தீங்கிழைக்கக்கூடாது; அவன் எப்போதும் வாய்மையே பேச வேண்டும்; அவன் கொடையளிக்க வேண்டும்.(10) வேத அறிவிப்புகளைப் பின்பற்றிப் பழங்காலத்து முனிவர்கள் இதை அறிவித்தனர். பழங்காலத்தில் இருந்தது போலவே இந்தத் தடையாணைகளைக் கேட்டு நம் காலத்திலும் அவற்றை நிச்சயம் நாம் பின்பற்ற வேண்டும்.(11) விதிக்கப்பட்ட சூழ்நிலைகளில் செய்யப்படும் சிறு கொடையும் பெரும் கனிகளை விளைவிக்கும். தாகம் நிறைந்த மனிதனுக்கு நேர்மையான இதயத்துடன் நீ சிறிதளவு நீரைக் கொடுத்திருக்கிறாய்.(12) ஓ! பலமிக்கவனே, தாகத்திலும், பசியிலும் இருந்த நீ இத்தகைய உணவை எனக்குக் கொடுத்ததன் மூலம் பல வேள்விகளைச் செய்த ஒருவனைப் போல உயர்ந்த இன்ப லோகங்களை வென்றிருக்கிறாய்.(13) உனது புனிதக் கொடையாலும், உனது தவங்களாலும் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அறமே உனது பலம். அறமே உனது தோற்றம்.(14) அறமே நீ வெளியிடும் நறுமணமாக இருக்கிறது. உனது செயல்கள் அனைத்தும் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் செய்யப்படுவதாக நான் நினைக்கிறேன். ஓ! மகனே, கொடையானது, புனித நீர்நிலைகளில் தூய்மைச் சடங்குகளைச் செய்வதையும், அனைத்து வேத நோன்புகளை நிறைவேற்றுவதையும் விட மேன்மையானதாகும்.(15)உண்மையில், ஓ! பிராமணா {மைத்ரேயா}, கொடையானது, புனிதச் செயல்கள் அனைத்திலும் மங்கலமிக்கதாகும். அனைத்துப் புனிதச் செயல்களையும் விட அது பலன்மிக்கதாக இல்லாதிருந்தால், அதன் மேன்மை குறித்த கேள்வியே இருந்திருக்க முடியாது.(16) நீ மெச்சும் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் அனைத்தும் கொடைக்கருகில் நிற்காது. கொடையானது ஐயமில்லாமல் உயர்ந்த பலன் நிறைந்தது என நான் கருதுகிறேன்.(17) கொடையளிக்கும் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட பாதையே ஞானிகள் நடக்கும் பாதையாக இருக்கிறது. கொடையளிப்பவர்கள் உயிர்மூச்சையே கொடையளித்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அறமாக அமையும் கடமைகள் அவற்றிலேயே {கொடைகளிலேயே} நிறுவப்பட்டுள்ளன.(18) வேதங்களை நன்கு கற்பதும், புலன்களை அடக்குவதும், அண்டந்தழுவிய துறவறம் கொள்வதும் போலவே கொடையும் மிக மேன்மையான பலனைக் கொண்டதாகும்.(19) ஓ! மகனே, கொடையளிக்கும் கடமையை நீ செய்ததன் விளைவால் மகிழ்ச்சியில் இருந்து பெரும் மகிழ்ச்சியை அடைவாய். (இந்தக் கடமையைப் பயிலும்) புத்தியுள்ள மனிதன் நிச்சயம் மகிழ்ச்சியில் இருந்து உயர்ந்து பெரும் மகிழ்ச்சியை அடைவான்.(20)

நாம் இது போன்ற நேரடி நிகழ்வுகள் பலவற்றைச் சந்தித்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. செழிப்புடன் கூடிய மனிதர்கள் செல்வத்தை அடைவதிலும், கொடைகளை அளிப்பதிலும், வேள்விகளைச் செய்வதிலும் அதன் மூலம் விளையும் மகிழ்ச்சியை ஈட்டுவதிலும் வெல்கின்றனர்.(21) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இன்பத்தைத் தொடர்ந்து துன்பமும், துன்பத்தைத் தொடர்ந்து இன்பமும் இயற்கையாக நடைபெறுவதே எப்போதும் காணப்படுகிறது[3].(22) ஞானம் கொண்ட மனிதர்கள், இவ்வுலகில் மனிதர்களுக்கு மூன்றுவகை ஒழுக்கங்கள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கின்றனர். சிலர் அறவோராகவும்; சிலர் பாவம் நிறைந்தவர்களாகவும்; சிலர் அறவோராகவும் அல்லாமல், பாவிகளாகவும் அல்லாமல் இருக்கின்றனர்.(23) பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ள மனிதனின் ஒழுக்கம் இரண்டாகவும் கருதப்படுவதில்லை. அவனது பாவங்கள் பாவங்களாகவே கருதப்படுவதில்லை. தனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதனும் (அந்தக் கடமைகளை நோற்பதால்) அறவோனாகவோ, பாவியாகவோ கருதப்படுவதில்லை.(24)வேள்விகள், கொடைகள், தவங்கள் ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களே அறவோராகக் கருதப்படுகின்றனர். எனினும், இவர்களில் பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பவர்களும், அவற்றுடன் நட்பற்றவர்களும் பாவிகளாகவே கருதப்படுகின்றனர்.(25) சில மனிதர்கள் பிறர் உடைமைகளை அபகரிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் நிச்சயம் நரகில் விழுந்து, துன்பத்தைச் சந்திப்பார்கள். ஈடுபாடில்லாமல் {அக்கறையில்லாமல்} மனிதர்கள் செய்யும் பிற செயல்கள் அனைத்தும் அறமாகவோ, பாவமாகவோ கருதப்படுவதில்லை.(26) நீ விளையாடுவாயாக, வளர்வாயாக, உற்சாகமாயிருப்பாயாக, கொடையளிப்பாயாக, வேள்விகளைச் செய்வாயாக. ஞானிகளோ, தவசிகளோ உன்னைவிடச் சிறந்தவராகமாட்டார்” என்றார் {வியாசர்}.(27)

பெறுபவர் அடையும் பலன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 121-பிராமணர்களின் பெருமை; தகாதோருக்குக் கொடுக்கப்படும் உணவுக் கொடை கொடுத்தவனையும், பெறுபவனையும், உணவையும் கெடுப்பது ஆகியவற்றை வியாசருக்குச் சொன்ன மைத்ரேயர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், செயல்களை வழிபடுபவரும், பெருஞ்செழிப்புடைய குலத்தில் பிறந்தவரும், பெருங்கல்வி கொண்டவரும், ஞானியுமான மைத்ரேயர் இந்தச் சொற்களை அவரிடம் சொன்னார்.(1)

மைத்ரேயர் {வியாசரிடம்}, “ஓ! பெரும் ஞானியே, நீர் சொன்னதில் எந்த ஐயமுமில்லை. ஓ! பலமிக்கவரே, உமது அனுமதியுடன் நான் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.(2)

வியாசர் {மைத்ரேயரிடம்}, “ஓ! மைத்ரேயா, ஓ! பெரும் ஞானியே, நீ என்ன சொல்ல வேண்டுமோ, என்ன வழியில் சொல்ல வேண்டுமோ அதைச் சொல், நான் அதைக் கேட்க விரும்புகிறேன்” என்றார்.(3)

மைத்ரேயர் {வியாசரிடம்}, “கொடை குறித்து நீர் சொன்ன சொற்கள் குற்றமில்லாதவையும், தூய்மையுடையவையுமாகும். உமது ஆன்மா ஞானத்தாலும், தவத்தாலும் தூய்மையடைந்தது என்பதில் ஐயமில்லை.(4) உமது ஆன்மா தூய்மை அடைந்ததன் விளைவால் நான் அறுவடை செய்யும் பெரும் நன்மை இதுவே. என் புத்தியின் துணையால் உயர்ந்த தவங்களுடன் கூடியவராகவே நான் உம்மைக் காண்கிறேன்.(5) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் உம்மைப் போன்ற மனிதர்களைக் காண்பதன் மூலம் மட்டுமே செழிப்பை அடைகிறோம். உமது அருளாலும், நான் செய்த செயல்களின் இயல்பாலும் அது {செழிப்பு} உண்டாகிறது என்று நான் நினைக்கிறேன்.(6) தவங்கள், வேதஞானம், தூய குலத்தில் பிறப்பு ஆகிய காரணங்களாலேயே ஒருவன் பிராமணனாகிறான். ஒருவன் இந்த மூன்று குணங்களையும் வெளிப்படுத்தும்போதே அவன் மறுபிறப்பாளனாக அழைக்கப்படுகிறான்.(7)

பிராமணர்கள் நிறைவடைந்தால், பித்ருக்களும், தேவர்களும் நிறைவடைகின்றனர். வேதமறிந்த பிராமணனை விட உயர்ந்தது வேறேதும் இல்லை.(8) பிராமணன் இல்லாவிட்டால் மொத்தமும் இருளாகவே இருக்கும். எதையும் அறிய முடியாது. நான்கு வகையும் {வர்ணங்களும்} நீடித்திருக்காது. அறம் மறம், வாய்மை பொய்மை, ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு மறைந்து போகும்.(9) நன்கு உழப்பட்ட நிலத்தை {பண்பட்ட நிலத்தை} மனிதர்கள் காணும்போது அவர்கள் அபரிமிதமான விளைச்சலை அறுவடை செய்கிறார்கள். அதேபோல, பெருங்கல்வி படைத்த பிராமணனுக்குக் கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் பெரும்பலனை அறுவடை செய்கிறான்.(10) கொடைகளை ஏற்க வேத அறிவும், நல்லொழுக்கமும் கொண்ட பிராமணன் இல்லாவிட்டால் செல்வந்தர்கள் கொண்ட செல்வத்திற்குப் பயனேதும் இல்லை.(11)

அறியாமை கொண்ட பிராமணன், தனக்கு அளிக்கப்பட்ட உணவை உண்பதன் மூலம், (கொடுத்தவனுக்கு எந்தப் பலனையும் உண்டாக்காததால்) தான் உண்டதை அழிக்கிறான். உண்ணப்பட்ட உணவானது (உண்பவன் தனக்கு அளிக்கப்பட்டதை உண்டதன் மூலம் பாவத்தை ஈட்டுவதால்) உண்டவனை அழிக்கிறது. தகுந்த மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதே உண்ணத்தகுந்தது என்று முறையாக அழைக்கப்படும், மற்ற வழக்குகள் அனைத்திலும், அதைப் பெறுபவன் கொடையாளியின் கொடையைக் கெடுத்து, முறையில்லாமல் உண்பதன் மூலம் தானே அழிவையும் அடைகிறான்[1].(12)கல்விமானான பிராமணன் தான் உண்ணும் உணவை வசப்படுத்துபவன் ஆகிறான் {செரிக்கிறான்}. அதை உண்ட பிறகு அவனே வேறு உணவைத் தோற்றுவிக்கிறான் {உணவைப் பெருகச் செய்கிறான்}. எவனுடைய உணவு, பிள்ளைகளின் பெற்றோர்களை அவர்களை ஈன்றெடுக்க இயன்றவர்களாக்கியதோ அவனே அவர்களுக்குரியவன் {அந்தப் பிள்ளைகளுக்குரியவன்} என்பதால் அறியாமை கொண்டவன் தனக்கு அளிக்கப்படும் உணவை உண்பதன் மூலம் தான் ஈன்றெடுக்கும் பிள்ளைகளிடம் உள்ள தன் உரிமையை இழக்கிறான். அடுத்தவரின் உணவை உண்பவர்கள், அந்த உணவை வெல்லும் பலமற்றவர்களாகும்போது இந்த நுட்பமான களங்கம் ஏற்படுகிறது[2].(13) கொடையளிப்பதன் மூலம் ஒரு கொடையாளி அடையும் பலனானது, உணவை ஏற்பதன் மூலம் அதைப் பெற்றுக் கொள்பவன் அடையும் பலனுக்கு ஈடானதாகும். கொடையாளியும், ஏற்பவனும் இணையான அளவில் ஒருவரையொருவர் சாந்தவர்களாக இருக்கிறார்கள். இதையே முனிவர்களும் சொல்லியிருக்கின்றனர்.(14)வேத அறிவும், ஒழுக்கமும் கொண்ட பிராமணர்கள் எங்கே இருக்கிறார்களோ, அங்கே இருக்கும் மக்கள் கொடைகளின் புனிதக் கனிகளை ஈட்ட இயன்றவர்களாகவும், இம்மையிலும், மறுமையிலும் அவற்றை அனுபவிக்கத் தகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(15) தூய குலத்தில் பிறந்தவர்களும், தவங்களில் பேரர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், கொடையளிப்பவர்களும், வேதங்கற்பவர்களுமான மனிதர்கள் பெரும் மதிப்புக்கும் வழிபாட்டுக்கும் தகுந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.(16) அந்த நல்லோரே ஒருவன் மயங்காமல் நடக்கக்கூடிய பாதையை அமைத்தவர்கள் ஆவர். அந்த மனிதர்களே பிறரைச் சொர்க்கத்திற்கு வழிநடத்தக்கூடியவர்களாவர். வேள்விச் சுமைகளைத் தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு நித்தியமாக வாழ்ந்து வருபவர்கள் அம்மனிதர்களே” என்றார் {மைத்ரேயர்}”.(17)

தவத்தின் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 122-வத்தின் சிறப்பு மற்றும் இல்லறக் கடமைகளை நோற்பதன் அவசியம் ஆகியவற்றை மைத்ரேயருக்குச் சொன்ன வியாசர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு சொல்லப்பட்டதும் அந்தப் புனிதமானவர் {வியாசர்}, மைத்ரேயருக்குப் பதிலளிக்கும் வகையில், “நீ ஞானத்துடன் இருப்பது நற்பேறே. உன் புத்தி இவ்வகையில் இருப்பதும் நற்பேறே.(1) நல்லோர் எப்போதும் அறம் சார்ந்த குணங்கள் அனைத்தையும் உயர்வாகவே மெச்சுகின்றனர். தனிப்பட்ட அழகு, இளமை மற்றும் செழிப்பு ஆகியவை உன் நற்பேறின் காரணமாகவே உன்னை மூழ்கடிக்காமல் இருக்கின்றன.(2) தேவர்கள் உன் மீது கொண்ட அன்பின் காரணமாக இதை உனக்குச் செய்திருக்கின்றனர். கொடையை விட (திறனில்) மேன்மையானதைக் குறித்து உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(3) இருக்கும் சாத்திரங்கள் மற்றும் அறம் சார்ந்த உடன்படிக்கைகள் எதுவும், உலகில் காணப்படும் (அற) நாட்டங்கள் எதுவும் வேதங்களின் வழிகாட்டலுக்கு இணங்க முறையான வரிசைப்படி உண்டாகின்றன.(4)

அவற்றைப் பின்பற்றியே நான் கொடையை {தானத்தை} மெச்சுகிறேன். நீயோ தவங்களையும், வேத ஞானத்தையும் புகழ்கிறாய். தவங்கள் புனிதமானவையே. ஒருவன் வேதங்களையும், சொர்க்கத்தையும் அடையும் வழிமுறைகளாகத் தவங்கள் இருக்கின்றன.(5) தவம் மற்றும் அறிவின் துணையுடன் ஒருவன் நாம் கேள்விப்பட்டிருக்கும் உயர்ந்த கனிகளை அடைகிறான். தவங்களின் மூலமே ஒருவன் தன் பாவங்களையும், தீமைகள் அனைத்தையும் அழிக்கிறான்.(6) எந்த நோக்கத்துடன் ஒருவன் தவம் செய்தாலும் அவன் தவங்களின் விளைவால் அதற்கான கனியை அடைகிறான் என நாம் கேள்விப்படுகிறோம்.(7) நிறைவேற்றக் கடினமான எதையும், வெல்லக் கடினமான எதையும், அடைவதற்கு அரிதான எதையும், கடப்பதற்கு அரிதான எதையும் தவங்களின் உதவியுடன் அடையலாம். அனைத்திலும் தவங்களே மிக மேன்மையான வலிமையைக் கொண்டிருக்கின்றன.(8)

மது அருந்துபவனோ, பிறரின் உடைமைகளை வலுக்கட்டாயமாக அபகரிப்பவனோ, கருவைக் கொன்ற குற்றவாளியோ, ஆசானின் படுக்கைக்குக் களங்கம் விளைவித்தவனோ எவனும் தவத்தின் உதவியால் அவற்றைக் கடப்பதில் வெல்கிறான். உண்மையில் ஒருவன் தவங்களின் மூலம் இந்தப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(9) ஞானங்கள் அனைத்துடன் கூடிய உண்மையான பார்வையைக் கொண்டவன் ஒருவனும், எவ்வகையைச் சார்ந்த தவசி ஒருவரும் நிகரானவரே. ஒருவன் இவர்கள் இருவரையும் எப்போதும் வணங்க வேண்டும்.(10) வேதங்களையே தங்கள் செல்வமாகக் கொண்ட மனிதர்கள் அனைவரும் வழிபடப்பட வேண்டும். அதே போலத் தவங்களுடன் கூடிய மனிதர்கள் அனைவரும் வழிபாட்டுக்குத் தகுந்தவர்களே. கொடையாளிப்பவர்கள் மறுமையில் மகிழ்ச்சியையும், இம்மையில் பெருஞ்செழிப்பையும் அடைகின்றனர்.(11) இவ்வுலகின் அறவோர், உணவுக் கொடை அளிப்பதன் மூலம் இவ்வுலகையும், மேன்மையான இன்ப நிலைகளைக் கொண்ட பிரம்மலோகம் முதலிய பிற உலகங்களையும் அடைகிறான்.(12)

அனைவராலும் துதிக்கப்படும் மனிதர்களும் கொடையாளிகளைத் துதிக்கின்றனர். எங்கும் கௌரவிக்கப்படும் மனிதர்களும் கொடையாளிகளைக் கௌரவிக்கின்றனர். கொடையாளி எங்குச் சென்றாலும் புகழப்படுகிறான்.(13) செயல்களைச் செய்பவனும், அவற்றைத் தவிர்ப்பவனும், செய்யும் செயல்களுக்கும், செய்யாதவற்றுக்கும் தகுந்த அளவில் பலனை அடைகிறார்கள். ஒருவன் மேலுலகத்தில் வசித்தாலும், பாதாள லோகத்தில் வசித்தாலும் அவன் எப்போதும் தன் செயல்களுக்குத் தகுந்த இடங்களையே அடைகிறான்.(14) உன்னைப் பொறுத்தவரையில், நீ புத்தி, நற்பிறப்பு, வேத ஞானம் மற்றும் கருணை கொண்டவனாக இருப்பதால் நீ விரும்பும் உணவு மற்றும் பானம் எதையும் நிச்சயம் அடைவாய்.(15) ஓ! மைத்ரேயா, நீ இளைஞனாக இருக்கிறாய். நோன்புகளை நோற்கிறாய். அறத்தில் அர்ப்பணிப்புள்ளவனாக இருக்கிறாய். நீ முதலில் இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய கடமைகளை என்னிடம் இருந்து அறிந்து கொள்வாயாக.(16)

தான் மணந்து கொண்ட மனைவியிடம் நிறைவாக இருக்கும் கணவனைக் கொண்டதும், தன் கணவனிடம் நிறைவாக உள்ள மனைவியைக் கொண்டதுமான வீட்டில் எல்லா மங்கல விளைவுகளும் உண்டாகும்.(17) உடலில் உள்ள புழுதி நீரால் கழுவப்படுவதைப் போலவே நெருப்பின் காந்தியால் இருள் விலகுவதைப் போலவே, கொடைகள் மற்றும் தவங்களால் பாவம் கழுவப்படுகிறது.(18) ஓ! மைத்ரேயா, நீ அருளப்பட்டிருப்பாயாக. இங்கிருந்து அமைதியுடன் செல்வாயாக. நான் சொன்னதை உன் மனத்தில் கொள்வாயாக. அப்போது நீ பலன்கள் பலவற்றை அறுவடை செய்வாய்” என்றார் {வியாசர்}.(19)

அப்போது மைத்ரேயர் சிறப்புமிக்கவரான தமது விருந்தினரை {வியாசரை} வலம் வந்து, அவருக்குத் தலைவணங்கி, தன் கரங்களை மதிப்புடன் கூப்பி, “ஓ! புனிதமானவரே, நீரும் அருளப்பட்டிருப்பீராக” என்றார்”.(20)

ஸ்திரீ தர்மம் – சுமனையும் சாண்டிலியும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 123-கற்புடைய நல்ல பெண்களின் நடத்தை மற்றும் பெண்கள் பின்பற்ற வேண்டிய அறம் குறித்து ஸுமனை மற்றும் சாண்டிலிக்கிடையில் நடைபெற்ற உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! கடமைகள் அனைத்தையும் அறிந்தவரே, கற்புடைய நல்ல பெண்களுக்குரிய சிறந்த நடத்தை எது என்பதை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். ஓ! பாட்டா, இது குறித்து நீர் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு காலத்தில், தேவலோகத்தில் கேகய குலத்தைச் சாரந்தவளும், சுமனை {ஸுமனை} என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு பெண், பெரும் சக்தி கொண்டளும், அனைத்தையும், அனைத்தின் உண்மைகளையும் அறிந்தவளுமான சாண்டிலியிடம்,(2) “ஓ!மங்கலமான பெண்ணே, எந்த ஒழுக்கத்தின் மூலம், என்ன வகையான செயல்முறையின் மூலம் அனைத்துப் பாவங்களையும் அழித்துச் சொர்க்கம் அடைவதில் நீ வென்றாய்?(3) நீ நெருப்பின் தழலைப் போலத் தன்சக்தியில் சுடர்விடுகிறாய். தன்பிரகாசத்துடன் சொர்க்கத்திற்கு வந்திருக்கும் நட்சத்திரங்களின் தலைவனுடைய {சந்திரனுடைய} மகளைப் போலத் தெரிகிறாய்.(4) தூய வெள்ளுடை உடுத்தியிருக்கும் நீ உற்சாகம் நிறைந்தவளாகவும், சுகமாகவும் இருக்கிறாய். ஓ! மங்கலச் சீமாட்டியே, தெய்வீகத் தேரில் அமர்ந்திருக்கும் நீ பல்லாயிரம் மடங்கு சக்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய்.(5) சிறிய அளவிலான தவங்கள், கொடைகள் மற்றும் நோன்புகளின் மூலம் நீ இந்த இன்பலோகத்தை அடைந்திருப்பதாக நான் கருதவில்லை. நீ உண்மையைச் சொல்வாயாக” என்று கேட்டாள்.(6)

இவ்வாறு சுமனையால் இனிமையாகக் கேட்கப்பட்டவளும், இனிய புன்னகையைக் கொண்டவளுமான சாண்டிலி, தன்னிடம் கேள்வி கேட்ட அழகியிடம், பிறரும் கேட்கும் வகையில்,(7) “நான் மஞ்சள் ஆடை {காஷாயம்} உடுத்தவில்லை; மரவுரியும் தரிக்கவில்லை. என் தலையை மழிக்கவில்லை; தலையில் சடாமுடியுந்தரிக்கவில்லை. இந்தச் செயல்களின் விளைவால் நான் தெய்வீக நிலையை அடையவில்லை.(8) நான் ஒருபோதும் விழிப்புணர்வின்றி ஏற்பில்லாத, தீய பேச்சு எதையும் என் கணவரிடம் பேசியதில்லை.(9) நான் எப்போதும் தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிராமணர்களின் வழிபாட்டில் அர்ப்பணிப்புடன் இருந்தேன். எப்போதும் விழிப்புடன் நான் என் மாமியார் மற்றும் மாமனாருக்குத் தொண்டாற்றினேன்.(10) வஞ்சகமாக ஒருபோதும் நடக்கக்கூடாது என்பது என் தீர்மானமாக இருந்தது. நான் ஒருபோதும் வீட்டைவிட்டு வெளியே தங்கியதோ, வேறு எவருடனும் நீண்ட நேரம் பேசியதோ கிடையாது {நிற்கத்தகாத இடங்களில் நிற்பதுமில்லை. வெகுநேரம் பேசுவதுமில்லை}.(11) நான் ஒருபோதும் தீச்செயலேதும் செய்ததில்லை; நான் ஒருபோதும் உரக்கச் சிரித்ததில்லை; நான் ஒருபோதும் தீங்கேதும் செய்ததில்லை. நான் ரகசியம் எதையும் ஒருபோதும் வெளியிட்டதில்லை. இவ்வாறே நான் என்னைத் தாங்கிக் கொண்டேன்.(12)

எந்தக் காரியத்திற்காகவும் கணவர் வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பும்போது, நான் எப்போதும் அவருக்கு இருக்கையளித்துத் தொண்டாற்றி மதிப்புடன் வழிபட்டேன்.(13) என் கணவர் அறியாத, என் கணவருக்குப் பிடிக்காத எவ்வகை உணவையும் நான் ஒருபோதும் உண்டதில்லை.(14) விடியும் முன்பு எழுந்து, உற்றார் உறவினர்களுக்காகச் செய்ய வேண்டியதை, செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதை நிறைவேற்றினேன்.(15) என் கணவர் ஏதோ ஒரு காரியத்திற்காக வீட்டைவிட்டுத் தொலைவான இடத்திற்குச் சென்றால், நான் வீட்டில் இருந்து அவரது காரியம் நிறைவேற பல்வேறு மங்கலச் செயல்களைச் செய்வதில் ஈடுபடுவேன்.(16) உண்மையில் என் கணவர் இல்லாத போது நான் மையையோ, ஆபரணங்களையோ பயன்படுத்துவதில்லை; நான் என்னை முறையாகக் கழுவிக் கொள்வதில்லை; மாலைகளையும், நறுமணப்பொருட்களையும் பயன்படுத்துவதில்லை; என்பாதத்தை அரக்கு சாயத்தாலோ, என் மேனியை ஆபரணங்களாலோ அலங்கரித்துக் கொள்வதில்லை.(17)

என் கணவர் அமைதியாக உறங்கும்போது, முக்கியமான காரியத்தில் அவரது கவனம் தேவைப்பட்டாலும் நான் ஒருபோதும் அவரை எழுப்பியதில்லை. உறங்கிக் கிடக்கும் அவருக்கு அருகில் அமர்ந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.(18) என் கணவர் தன் குடும்பத்தையும் உறவினர்களையும் தாங்கிக் கொள்வதற்காக இன்னும் அதிகச் சக்தியோடு செல்வம் ஈட்ட வேண்டும் என்று ஒருபோதும் நான் அவரைத் தூண்டியதில்லை. நான் எப்போதும் ரகசியங்களைப் பிறருக்கு வெளியிடாமல் இருந்தேன். நான் எங்கள் வளாகத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருந்தேன்.(19) கடமையின் இந்தப் பாதையைக் குவிந்த கவனத்துடன் பின்பற்றும் ஒரு பெண்மணி, சொர்க்கத்தில் போதுமான கௌரவங்களைப் பெற்று இரண்டாவது அருந்ததியாகிறாள்” என்றாள் {சாண்டிலி}”.(20)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சிறப்புமிக்கவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளும் அறவொழுக்கம் ஒழுகுபவளுமான சாண்டிலி, தன் கணவனுக்குப் பெண்கள் செய்ய வேண்டிய கடமைகள் குறித்துச் சுமனையிடம் இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, அங்கேயே அப்போதே மறைந்து போனாள்.(21) ஓ! பாண்டுவின் மகனே, ஒவ்வொரு முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவுகள் {அமாவாசைகள்} அன்றும் இதைப் படிக்கும் மனிதன், சொர்க்கத்தை அடைவதில் வென்று நந்தனக் காடுகளில் பேரின்பத்தை அனுபவிப்பான்” {என்றார் பீஷ்மர்}.(22)

சாமச்சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 124-இன்சொல்லின் சிறப்புக் குறித்து ஒரு ராட்சசனுக்கும் ஒரு பிராமணருக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“இன்சொல் {சாமம்}, அல்லது கொடை {தானம்} ஆகியவற்றில் எது மேன்மையான திறனைக் கொண்டது? ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, இவை இரண்டில் மேன்மையான திறன் கொண்டது எது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “சிலர் இன்சொல்லில் {சாமத்தில்} நிறைவடைகின்றனர், வேறு சிலர் கொடைகளால் நிறைவடைகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன் இயல்பின்படி இவை ஒன்றாலோ, அடுத்ததாலோ நிறைவடைகிறான்.(2) ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மிகக் கொடூரமான உயிரினங்களும் தணிவை அடையும் இன்சொல்லின் {சாமத்தின்} பலன்களை உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(3) இது தொடர்பாகக் காட்டில் ஒரு ராட்சசனால் கைப்பற்றப்பட்ட ஒரு பிராமணன், (இன்சொல்லின் உதவியால்) விடுதலையடைந்த பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(4)

நாநயமும், புத்தியும் கொண்ட ஒரு குறிப்பிட்ட பிராமணன், தனியாகக் காட்டில் சென்ற போது, அவனை உண்ண நினைத்த ஒரு ராட்சசனால் பிடிக்கப்பட்டுத் துன்பத்தில் விழுந்தான்.(5) புத்தியும், கல்வியும் கொண்ட அந்தப் பிராமணன் கலக்கமடையாமல் இருந்தான். பயங்கரமான அந்த மனிதவூனுண்ணியைக் கண்டதும் கலங்காமல், இன்சொல்லைப் பயன்படுத்தி அதன் விளைவுகளை அந்த ராட்சசனிடம் காணத் தீர்மானித்தான்.(6)

அது வரை சொல்லப்பட்ட {இனிய}சொற்களுக்காக அந்தப் பிராமணனை மதிப்புடன் வணங்கிய அந்த ராட்சசன் இந்தக் கேள்வியை அவனிடம் கேட்டான்: “நீர் தப்பிக்கலாம், ஆனால் நான் ஏன் வெளுத்தும், இளைத்தும் இருக்கிறேன் என்பதற்கான காரணத்தை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(7) சிறிது நேரம் இது குறித்துச் சிந்தித்த அந்தப் பிராமணன், அந்த ராட்சசனின் கேள்வியை ஏற்று, நன்கு பேசப்பட்ட பின்வரும் சொற்களால் பதில் கூறினான்.(8)

அந்தப் பிராமணன் {ராட்சசனிடம்}, “உன் வசிப்பிடத்தில் இருந்து தொலைவான ஓரிடத்தில் வசித்து, உனக்குச் சொந்தமில்லாத பகுதியில் திரிந்து, உன் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் தோழமை இல்லாமல் நீ பெரும் செல்வத்தை அனுபவித்து வருகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(9) ஓ! ராட்சசா, உண்மையில் உன் நண்பர்கள் உன்னால் நன்றாக நடத்தப்பட்டாலும், உன் தீய இயல்பின் விளைவால் உன்னிடம் நல்ல மனம் கொண்டவர்களாக இல்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(10) நீ பலனும் {புண்ணியமும்}, ஞானமும் நன்கு அமைக்கப்பட்ட ஆன்மாவும் கொண்டவனாக இருக்கிறாய். இருப்பினும், பலனும், ஞானமும் இல்லாதவர்கள் உன்னைவிட அதிக முன்னுரிமை பெற்று கௌரவிக்கப்படுவதை நீ பார்க்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(11) உன்னைவிட மிக அதிகமான செல்வமும் செல்வாக்கும் கொண்டிருந்தாலும், சாதனைகளில் உன்னைவிடத் தாழ்ந்தவர்களாக இருக்கும் மனிதர்களால் நீ அவமதிக்கப்பட்டிருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(12)

வாழ்வாதாரங்கள் இல்லாமல் துன்புற்றிருந்தாலும், உயர்ந்த நிலையில் இருக்கும் உன் ஆன்மாவால் வழிநடத்தப்பட்டு, உன் வாழ்வாதாரங்களை ஈர்ப்பதில் வெளிப்படையாகத் தெரியும் வழிமுறைகளை அலட்சியம் செய்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(13) அறத்தின் விளைவால் பிறருக்கு நன்மை செய்து உன்னை நீயே களங்கம் செய்திருக்கிறாய். ஓ! அறம் சார்ந்த ராட்சசா, இருப்பினும் மற்றவன் நீ அவனை வஞ்சித்துவிட்டதாகவும், அடக்கிவிட்டதாகவும் நினைக்கிறான். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(14) காமம் மற்றும் கோபத்தில் நிறைந்த ஆன்மாக்களைக் கொண்டோர் இவ்வுலகில் படும் துன்பத்திற்காக நீ வருந்துகிறாய் என நினைக்கிறேன். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(15) ஞானம் கொண்டவனாக இருந்தாலும், அது முற்றிலும் இல்லாதவனைப் போல நீ பிறரால் கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் தீய ஒழுக்கம் கொண்ட மனிதர்கள் உன்னை நிந்திக்கிறார்கள். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(16)

நட்பின் நாவைக் கொண்ட உன் பகைவன் எவனோ ஒருவன், முதலில் அறம்சார்ந்த ஒருவனைப் போல உன்னிடம் நடந்து கொண்டு, பிறகு கபடன் போல உன்னை வசிந்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(17) உலக நடைமுறைகளை நீ நன்கறிந்திருக்கிறாய். புதிர்கள் அனைத்திலும் நீ நல்ல திறம்பெற்றவனாக இருக்கிறாய். நீ தகுதியுடன் கூடியவனாக இருக்கிறாய். இத்தகையவனாக உன்னை அறிந்தவர்கள் உன்னை மதிப்பதும், புகழ்வதும் இல்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(18) ஏதோ காரியத்தில் ஈடுபட்டிருக்கும் தீய மனிதர்களுக்கு மத்தியில் உள்ள நீ அவர்களுடன் பேசி அவர்களுடைய ஐயங்களைக் களைந்திருப்பாய். இவை யாவும் செய்தாலும் அவர்கள் உன் மேன்மையான தகுதிகளை ஏற்றுக் கொள்ளதிருக்கிறார்கள். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(19) உண்மையில், செல்வமும், புத்தியும், வேத ஞானமும் இல்லாதிருந்தாலும் நீ உன் சக்தியால் மட்டுமே ஏதோ பெரிதான ஒன்றைச் சாதிக்க விரும்புகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(20)

காட்டுச் சென்று கடுந்தவம் செய்யத் தீர்மானத்திருந்தாலும், உன் திட்டத்தை உற்றார் உறவினர் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(21) பெருஞ்செல்வமும், இளமையும், அழகிய குணங்களும் கொண்ட உன் அண்டைவீட்டுக்காரன் உன் அன்புக்குரிய மனைவியின் மேலம் ஆசை கொண்டிருக்க வேண்டும். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(22) செல்வந்தர்களுக்கு முன் உன்னால் சொல்லப்பட்ட சொற்கள் சிறப்புடையவையாக இருப்பினும், ஞானமுள்ளவையாகவோ, சரியான நேரத்தில் சொல்லப்பட்டவையாகவோ கருதப்படவில்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(23) உன் அன்புக்குரிய உறவினனும், புத்தியற்றவனுமான ஒருவன், சாத்திரக் கல்வியை மீண்டும் மீண்டும் புகட்டினாலும், கோபக்காரனாகவே இருக்கிறான். நீ அவனைத் தணிப்பதில் வெல்லவில்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(24)

உண்மையில், ஏதோ ஒரு விரும்பத்தக்க காரியத்தில் உன்னை நிறுவிய ஒருவர் இப்போது அதன் கனியை உன்னிடம் இருந்து இப்போது பறிக்க முயலக்கூடும். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(25) சிறந்த சாதனைகளைக் கொண்டவனாகவும், அதன் காரணமாக அனைவராலும் வழிபடப்படுபவனாகவும் இருந்தாலும், உன் உறவினர்கள் உனக்காக அல்லாமல் தங்களுக்காகவே நீ வழிபடப்படுவதாகக் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(26) உண்மையில், தவிர்க்க முடியாத தாமதத்தால் உன் இதயத்தில் உள்ள ஏதோ ஒரு நோக்கத்தை நிறைவேற்ற முடியாததால் வெட்கத்தினால் நீ அதைக் கைவிட முடியாதவனாக இருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(27) உண்மையில், பல்வேறு வகைப் புத்தி மற்றும் விருப்பங்களுடன் உள்ள மனிதர்களை உன் புத்தியின் துணையுடன் உன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நீ விரும்புகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்[1].(28)கல்வியற்றவனும், துணிவில்லாதவனும், அதிகச் செல்வமில்லாதவனுமான நீ, அறிவு, ஆற்றல் மற்றும் கொடைகளால் வெல்லப்பட்ட புகழைப் பெற முனைகிறாய். உண்மையில், இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(29) உன் இதயத்தில் நீண்ட காலம் உள்ள ஏதோ ஒன்றை அடைய முடியாமல் இருக்கிறாய். அல்லது, நீ அடைய முனையும் ஒன்று வேறு எவராலோ தடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(30) உண்மையில், உன் தரப்பில் எந்தக் களங்கமும் இன்றி நீ வேறு எவராலோ சபிக்கப்பட்டிருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்[2].(31) செல்வமும், சாதனைகளும் இல்லாத நீ, உன் நண்பர்களின் துயரத்தையும், கவலையில் இருக்கும் மனிதர்களின் கவலையையும் விலக்க வீணாக முயல்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(32) அறவோர் இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} நோற்பதையும், அறமற்றோர் காட்டு வாழ்வுமுறைப்படி {வானப்ரஸ்தாஸ்ரமப்படி} வாழ்வதையும், துறவிகள் இல்லத்தாராகவும், நிலைத்த வசிப்பிடங்களில் வாழ்வதையும் கண்டதால் நீ வெளுத்தும், இளைத்துமிருக்கிறாய்.(33)அறம், பொருள் மற்றும் இன்பத்தோடு தொடர்புடைய உன் செயல்களும், சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சொற்களும் உனக்குக் கனி {பலன்} கொடுக்கவில்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(34)

ஞானம் கொண்டவனாக இருந்தாலும், வாழும் விருப்பத்தினால் உந்தப்பட்டு, தீய நடத்தை கொண்ட ஒருவனால் கொடுக்கப்பட்ட கொடையைப் பெற்றுக் கொண்டு செல்வத்துடன் வாழ்கிறான். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(35)

அனைத்துப்புறங்களிலும் மறம் {அறமற்ற நிலை} பெருகுவதையும், அறம் நலிவுறுவதையும் கண்டு நீ துன்பத்தில் நிறைந்திருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(36)

ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு அனைத்துப் புறங்களிலும் சச்சரவு செய்து கொண்டிருந்தாலும், நண்பர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்ய அவர்களால் தூண்டப்படுகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(37) வேத ஞானம் கொண்டோர் முறையற்றச் செயல்களில் ஈடுபடுவதையும், கல்விமான்கள் தங்கள் புலன்களை அடக்காததையும் கண்டு நீ துயரத்தில் நிறைந்திருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்” என்றான்.(38)

இவ்வாறு புகழப்பட்ட அந்த ராட்சசன், கல்விமனான அந்தப் பிராமணனைப் பதிலுக்கு வழிபட்டு, அவனைத் தன் நண்பனாக்கிக் கொண்டு, போதுமான செல்வத்தையும் அவனுக்குக் கொடையாகக் கொடுத்து (அவனை விழுங்காமல்) விடுவித்தான்” என்றார் {பீஷ்மர்}.(39)

சாத்திர விதிகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 125-உயர்ந்த கதியை அடைவதற்குப் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம்; சிராத்தங்கள்; உயிர்க்கொலையில் உள்ள பாவம் ஆகியவற்றைக் குறித்து தேவதேதூதன், இந்திரன், முனிவர்கள், பித்ருக்கள் மற்றும் பிருஹஸ்பதி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தனக்கான நன்மையை அடைய விரும்பும் ஒரு வறிய மனிதன், அடைதற்கரிதான செயல்களின் உலகத்திற்குள் மனித நிலையை அடைந்து {கர்மங்கள் பலிக்கும் பூமியில், கிடைத்தற்கரிதான மானிட ஜன்மத்தை அடைந்து} எவ்வாறு தன்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக.(1) கொடைகள் அனைத்திலும் சிறந்தது எது? எந்தெந்தச் சூழ்நிலைகளில் எவையெவை கொடுக்கப்பட வேண்டும் என்பன குறித்தும் எனக்குச் சொல்வீராக. ஓ! கங்கையின் மகனே, கௌரவிப்பதற்கும், வழிபாட்டுக்கும் தகுந்தவர்கள் யார் என்பதை எனக்குச் சொல்வீராக. இந்தப் புதிர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்”.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “புகழ்பெற்ற ஏகாதிபதியான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} இவ்வாறு கேள்வி கேட்டதும், கடமை தொடர்புடைய இந்த உயர்ந்த புதிர்களைப் பீஷ்மர் (இந்தச் சொற்களில்) விளக்கிச் சொன்னார்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பாரதா, பழங்காலத்தில் புனிதமான வியாசர் சொன்னது போலவே கடமைகள் தொடர்பான இந்தப் புதிர்களை உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(4) ஓ! ஏகாதிபதி, இது தேவர்களுக்கும் புதிரானதாகும். களங்கமற்ற செயல்களைக் கொண்ட யமன், நன்கு நோற்கப்பட்ட நோன்புகள் மற்றும் தியான யோகத்தின் உதவியுடனும், தன் தவங்களின் உயர்ந்த கனிகளாகவும் இந்தப் புதிர்களின் ஞானத்தை அடைந்தான்.(5) எந்தெந்த தேவர்களுக்கு எவையெவை நிறைவைத் தரும், பித்ருக்கள், முனிவர்கள், (மஹாதேவனின் துணைவர்களான) பிரமாதர்கள், ஸ்ரீதேவி, (யமனின் உதவியாளரான) சித்திரகுப்தன், திசைகளின் முக்கியப்புள்ளிகளை ஆளும் வலிமைமிக்க யானைகள் ஆகியோருக்கு எது நிறைவைத் தரும்.(6) பல புதிர்களைக் கொண்டதும், பெருங்கொடைகள் என்றழைக்கப்படும் பலன்களான உயர்ந்த கனிகளை உண்டாக்கவல்லதும், வேள்விகள் அனைத்துக்குமான பலனைக் கொண்டதுமான முனிவர்களின் அறமாக எது அமைகிறது?(7) ஓ! பாவமற்றவனே, இவற்றை அறிந்தவனும், தன் அறிவின் படி செயல்களை அறிந்து கொண்டவனுமான ஒருவன், களங்கம் கொண்டவனாக இருந்தால் அக்களங்களில் இருந்து விடுபட்டுக் குறிப்பிடப்பட்ட பலன்களை அடைவான்.(8)

எண்ணை உற்பத்தியாளன் ஒருவன் பத்து கசாப்புக்காரர்களுக்கு இணையானவன். மது அருந்தும் ஒருவன் பத்து எண்ணைக்காரர்களுக்கு இணையானவன். ஒரு விலைமகள் பத்து குடிகாரர்களுக்கு இணையானவள். (ஆட்சி எல்லைக்குட்பட்ட) ஒரு தலைவன் பத்து விலைமகள்களுக்கு இணையானவன்[1].(9) ஒரு பெரும் மன்னன் இவர்களில் பாதி என்று சொல்லப்படுகிறான். மறுபுறம் ஒருவன், புனிதமானதும், அறத்தையே தன் குறியீடாகக் கொண்டதுமான (அறம், பொருள் மற்றும் இன்பம் அடங்கிய) முத்தொகை அறிவியலைக் கவனத்தில் கொள்ள {கவனிக்க} வேண்டும். இவற்றில் செல்வமும், இன்பமும் இயல்பான ஈர்ப்பைக் கொண்டவையாகும். அறப்புதிர்களைக் குறித்துக் கேட்பது பெருங்கனிகளை {பெரும்பலன்களைக்} கொண்டது என்பதால், ஒருவன் (குறிப்பாக) அறம் தொடர்பான புனிதமான விரிவுரைகளைக் குவிந்த கவனத்துடன் கேட்க வேண்டும். அவன் தேவர்களால் விதிக்கப்பட்ட அறம் தொடர்பான அனைத்தையும் கேட்க வேண்டும்.(10,11) அவற்றிலேயே பித்ருக்கள் தொடர்பான புதிர்கள் அடங்கிய சிராத்தச் சடங்கு அறவிக்கப்பட்டிருக்கிறது. தேவர்கள் அனைவர் தொடர்பான புதிர்களும் அவற்றில் விளக்கப்பட்டுள்ளன.(12) முனிவர்கள் தொடர்பான புதிர்களுடன் சேர்த்து, பெரும் பலன்களை உண்டாக்கவல்ல கடமைகள், நடைமுறைகள் ஆகியனவும் அவற்றிலேயே அறியப்படுகின்றன. பெரும் வேள்விகள் மற்றும் அனைத்து வகையான கொடைகள் தொடர்பான பலன்களையும் அவையே கொண்டிருக்கின்றன.(13)

இவை குறித்த சாத்திரங்களை எப்போதும் படிப்பவர்களும், தங்கள் மனங்களில் அவற்றை முறையாகத் தாங்கிக் கொள்வோரும், அவற்றைக் கேட்ட பிறகு நடைமுறையில் பின்பற்றுபவர்களுமான மனிதர்கள் அனைவரும் பலமிக்க நாராயணனையே போன்ற புனிதமானவர்களாகவும், பாவமற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.(14) பசுக்கொடை அளிப்பது, நீர்நிலைகளில் நீராடுவது, வேள்விகளைச் செய்வது ஆகியவற்றால் உண்டாகும் பலன்கள் அனைத்தையும், வீட்டுக்கு வரும் விருந்தினரை மதிப்புடன் நடத்தும் மனிதன் அடைகிறான்.(15) இந்தச் சாத்திரங்களைக் கேட்பவர்களும், நம்பிக்கையுடன் இருப்பவர்களும், தூய இதயம் படைத்தவர்களும் மகிழ்ச்சியான உலகங்களை வெல்வதாக நன்கு அறியப்பட்டிருக்கிறது. நம்பிக்கையுடன் கூடிய அறவோர்,(16) அனைத்துக் களங்கங்களிலிருந்து விடுபட்டு, பாவம் அண்டமுடியாதவர்களாக ஆகிறார்கள். அத்தகைய மனிதர்கள் எப்போதும் அறத்தைப் பெருக்கி, சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(17)

ஒரு காலத்தில் இந்திரனின் அவைக்கு வந்தும் புலப்படாமல் தொடர்ந்த தேவதூதன் ஒருவன் தேவர்களின் தலைவனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(18) “மருத்துவர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களும், இனிய குணங்கள் அனைத்தையும் கொண்டவர்களுமான தேவர்கள் இருவரின் {அஸ்வினி இரட்டையரின்} ஆணையின் பேரில் இந்த இடத்திற்கு வந்த நான், இங்கே மனிதர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்கள் கூடியிருப்பதைக் காண்கிறேன்.(19) உண்மையில், சிராத்தம் செய்தவன் மற்றும் (குறிப்பிட்ட நாளில்) சிராத்தத்தில் உண்டவன் ஆகியோருக்கு பாலினக் கலவி ஏன் தடைசெய்யப்பட்டிருக்கிறது? சிராத்தங்களில் ஏன் மூன்று அரிசிப்பிண்டங்கள் காணிக்கையளிக்கப்படுகின்றன?(20) அவற்றில் முதற்பிண்டத்தை யாருக்குக் கொடுக்க வேண்டும்? இரண்டாவதை யாருக்குக் கொடுக்க வேண்டும்? எஞ்சியிருக்கும் மூன்றாவதை யாருக்குக் கொடுக்க வேண்டும்? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன்” {என்றான் தேவ தூதன்}.(21)

அறம் மற்றும் கடமை தொடர்புடைய இந்தச் சொற்களைத் தேவ தூதன் சொன்னதும், கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த தேவர்களும், பித்ருக்கும் அந்த வானுலாவியைப் பின்வருமாறு மெச்சத் தொடங்கினர்.(22)

பித்ருக்கள், “உனக்கு நல்வரவு, அருளப்பட்டிருப்பாயாக. ஓ! வானுலாவிகளில் சிறந்தவனே, கேட்பாயாக. நீ கேட்டது ஆழம் நிறந்த பொருளைக் கொண்ட உயர்ந்த கேள்வியாகும்.(23) தான் செய்யும் சிராத்த நாளன்று, அல்லது தான் உண்ட சிராத்த நாளன்று பாலியல்கலவியில் ஈடுபடும் மனிதனுடைய பித்ருக்கள், ஒரு மாதகாலம் முழுவதும் அவனது உயிர் வித்திலேயே கிடப்பார்கள்.(24) சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படும் அரிசிப்பிண்டங்களைக் கொண்டு என்ன செய்யப்பட வேண்டும் என்பதை ஒன்றன்பின் ஒன்றாக நாங்கள் விளக்கிச் சொல்லப் போகிறோம். முதல் அரசிப்பிண்டம் நீரில் வீசப்பட வேண்டும்.(25) இரண்டாவது பிண்டம் ஒருவனுடைய மனைவியருக்கு உண்ணக் கொடுக்க வேண்டும். மூன்றாவது பிண்டம் சுடர்மிக்க நெருப்பில் வீசப்பட வேண்டும்.(26) சிராத்தத்தைப் பொறுத்தவரையில் அறிவிக்கப்பட்டிருக்கும் விதி இதுவே. அறச்சடங்குகளின் படி நடைமுறையில் பின்பற்றப்படும் விதியும் இதுவேதான். இந்த விதிப்படி செயல்படும் மனிதனின் பித்ருக்கள் நிறைவடைந்து, எப்போதும் உற்சாகமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.(27) அத்தகைய மனிதனின் சந்ததி பெரும், வற்றாத செல்வம் எப்போதும் அவனது ஆணையின் கீழ் எஞ்சியிருக்கும்” என்றர்.(28)

தேவ தூதன், “அரிசிப் பிண்டங்கள் பகுக்கப்படுவதையும், ஒன்றன் பின் ஒன்றாக அவை மூன்று நிலைகளுக்கு (நீர், மனைவி மற்றும் சுடர்மிக்க நெருப்பு ஆகிய நிலைகளுக்கு) அனுப்பப்படுவதையும் அதன் காரணங்களுடன் விளக்கினீர்கள்[2].(29) நீரில் அனுப்பப்படும் அரிசிப்பிண்டம் யாரை அடைகிறது? தேவர்களை நிறைவடையச் செய்ய எப்படி இவ்வாறு அனுப்பப்படுகிறது? அஃது எவ்வாறு பித்ருக்களைக் காக்கிறது?(30) இரண்டாம் பிண்டம் மனைவியால் உண்ணப்படுகிறது. அது விதியில் விதிக்கப்பட்டிருக்கிறது. (எவனுடைய மனைவி அந்தப் பிண்டத்தை உண்பாளோ) அந்த மனிதனின் பித்ருக்கள் எவ்வாறு அதை உண்டவர்களாகிறார்கள்?(31) இறுதிப் பிண்டம் சுடர்மிக்க நெருப்புக்குள் செல்கிறது. இந்தப் பிண்டம் உங்களிடம் வருவதற்கான வழியைக் கண்டடைவதில் எவ்வாறு வெல்கிறது? அல்லது யாரிடம் அது செல்கிறது?(32) சிராத்தங்களில் நீரில் விடப்பட்டும், மனைவிக்குக் கொடுக்கப்பட்டும், சுடர்மிக்க நெருப்பில் வீசப்பட்டும் காணிக்கையளிக்கப்படும் அரிசிப் பண்டங்கள் அடையும் கதியைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(33)

பித்ருக்கள் {தேவதூதனிடம்}, “நீ கேட்டிருக்கும் இந்தக் கேள்வி மிகப் பெரியதாகும். இது புதிரும், ஆச்சரியமும் நிறைந்ததாகும். ஓ! வானுலாவியே, நாங்கள் உன்னிடம் பெரும் நிறைவை அடைகிறோம்.(34) தேவர்களும், முனிவர்களும் பித்ருக்களுக்காகச் செய்யப்படும் செயல்களை மெச்சுகிறார்கள். பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் செயல்களுக்குண்டான விதிகளின் நிச்சயத் தீர்மானத்தை அவர்களே அறிய மாட்டார்கள்.(35) உயர் ஆன்மா கொண்டவரும், இறப்பற்றவரும், சிறந்தவரும், பெரும் புகழைக் கொண்ட கல்விமானும், பித்ருக்களிடம் எப்போதும் அர்ப்பணிப்புமிக்கவருமான மார்க்கண்டேயரைத் தவிரப் பித்ருக்களின் விதிகளில் அமைந்துள்ள புதிர்களை அறிந்தவர்கள் வேறு யாருமில்லை” என்றனர்.(36)

{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படும் மூன்று அரிசிப்பிண்டங்களின் கதியைக் குறித்துப் புனிதரான வியாசரிடம் கேட்டதையும், தேவ தூதன் கேள்விக்கு மறுமொழியாகப் பித்ருக்கள் சொன்னதையும், நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன். ஓ! ஏகாதிபதி, சிராத்தவிதிகளைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட தீர்மானங்கள் என்ன என்பதைக் கேட்பாயாக.(37) ஓ! பாரதா, மூன்று அரிசிப்பிண்டங்களின் கதி என்ன என்பதை விளக்கிச் சொல்கிறேன், கவனமாகக் கேட்பாயாக. {பித்ருக்கள் தேவதூதனிடம் சொன்னார்கள்}, “நீருக்குள் செல்லும் அரிசிப்பிண்டம் சந்திர தேவனை நிறைவடையச் செய்வதாகக் கருதப்பட வேண்டும்.(38) ஓ! பெரும் நுண்ணறிவு கொண்டவனே, அந்தத் தேவன் நிறைவடைந்ததும், அவன் பிற தேவர்களையும், அவர்களோடு சேர்த்து பித்ருக்களையும் நிறைவடையச் செய்கிறான். இரண்டாவது அரிசிப்பிண்டம் (சிராத்தம் செய்யும் மனிதனின்) மனைவியால் உணப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(39) சந்ததியை எப்போதும் விரும்பும் பித்ருக்கள் அந்த வீட்டின் பெண்ணுக்கு பிள்ளைகளைக் கொடுப்பார்கள். சுடர்மிக்க நெருப்புக்குள் வீசப்படும் அரிசிப்பிண்டம் என்ன ஆகிறது என்பதைக் குறித்து இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.(40)

அந்தப் பிண்டத்தால் நிறைவடையும் பித்ருக்கள், அதன் விளைவாக அதைக் காணிக்கையளித்த மனிதனின் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அவனுக்கு அருள்வார்கள். இவ்வாறு சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படும் மூன்று அரிசிப்பிண்டங்களின் கதியையும், அவை செல்லும் (நீர், மனைவி மற்றும் நெருப்பு என்ற) மூன்றையும் குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன்.(41) சிராத்தத்தில் ரித்விக்காகும் பிராமணனே அந்தச் செயலின் மூலம் அந்தச் சிராத்தத்தைச் செய்பவனின் பித்ருவாக அமைகிறான். எனவே, அவன் தன் சொந்த மனைவியுடன் கூட அந்த நாளில் பாலியல் கலவியைத் தவிர்க்க வேண்டும்[3].(42) ஓ! வானுலாவிகள் அனைவரிலும் சிறந்தவனே, சிராத்தத்தில் உண்ணும் மனிதன் அந்த நாள் முழுவதும் தன்னைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வேறு வகையில் செயல்படுவதால் அவன் நிச்சயம் மேற்குறிப்பிட்ட களங்கங்களை இழைத்தவனாகிறான். இது வேறு வகையிலாகாது.(43) எனவே, காணிக்கைகளை உண்ண சிராத்தத்திற்கு அழைக்கப்பட்ட பிராமணன், நீராடல் மூலம் தன்னைத் தூய்மை செய்த பிறகு அதை உண்டு, அந்த நாள் முழுவதும் அனைத்து வாகை தீங்கு அல்லது தீமைகளையும் தவிர்த்து அறம் சார்ந்தவனாக இருக்க வேண்டும். அத்தகைய மனிதனின் சந்ததி பெருகுகிறது, அவனுக்கு உணவைக் கொடுப்பவனும் அதே வெகுமதியை அறுவடை செய்கிறான்” என்றனர் {பித்ருக்கள்}”.(44)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பித்ருக்கள் இவ்வாறு சொன்ன பிறகு, கடுந்தவங்களைக் கொண்டவரும், சூரியனைப் போன்ற காந்தியுடன் ஒளிர்ந்தவருமான வித்யுத்பிரபர் என்ற முனிவர் பேசினார்.(45) பித்ருக்களால் விளக்கப்பட்ட அறப்புதிர்களைக் கேட்ட அவர் சக்ரனிடம், “மடமையில் {அறியாமையில்} மயங்கி மனிதர்கள் இடைநிலை வகையில் பிறந்த எண்ணற்ற உயிரினங்களைக் கொல்கின்றனர்.(46) அவை புழுக்கள், எறும்புகள், பாம்புகள், செம்மறியாடு, மான்கள் மற்றும் பறவைகள் போன்ற உயிரினங்களாகும். இச்செயல்களால் அவர்கள் அளவிலும், கனத்திலும் மிகப் பெரிய பாவத்தை இழைக்கின்றனர். எனினும் இதற்குத் தீர்வு என்ன?” என்று கேட்டார்.(47) இந்தக் கேள்வி கேட்கப்பட்ட போது, தேவர்கள், தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்கள் மற்றும் உயர்ந்த அருளைக் கொண்ட பித்ருக்கள் ஆகியோர் அனைவரும் அந்தத் தவசியை மெச்சினார்கள்.(48)

சக்ரன் {இந்திரன்}, “குருக்ஷேத்திரம், கயை, கங்கை, பிராபாஸம், புஷ்கரத்தடாகங்கள் ஆகியவற்றை மனத்தில் நினைத்துக் கொண்டு வருவன் நீரில் தன் தலையை மூழ்கச் செய்ய வேண்டும்.(49) இவ்வாறு செய்வதால் ஒருவன் ராகுவிடம் இருந்து விடுபடும் சந்திரமாஸை {சந்திரனைப்} போலத் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். இவ்வாறு அடுத்தடுத்து மூன்று நாட்கள் நீராடும் ஒருவன், அதன் பிறகு ஒவ்வொரு நாளும் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(50) அதையும் தவிர அவன் (நீராடிய பிறகு) பசுவின் குதத்தைத் தீண்டி, அவளது வாலுக்குத் தலைவணங்க வேண்டும்” என்றான்.

வித்யுத்பிரபர் மீண்டும் வாசவனிடம் {இந்திரனிடம்}, “நான் மிக நுட்பமான ஒரு சடங்கை அறிவிக்கப் போகிறேன். ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக.(51) ஆலமரத்தில் தொங்கும் விழுதுகளின் துவர்ப்பான பொடியால் {கஷாயத்தால்} உடம்பைத் தேய்த்து கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து நீராடிய பிறகு, சாஷ்டிக {அறுபதாம் குறுவை} நெல்லுடன் பாலைக் கலந்து உண்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுவான்[4].(52) பலர் அறியாததும், முனிவர்களால் தியானத்தின் உதவியுடன் கண்டடையப்பட்டதுமான மற்றொரு புதிரை இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக. மஹாதேவனின் முன்னிலையில் பிருஹஸ்பதி சொல்லிக் கொண்டிருந்தபோது இதை நான் கேட்டேன்.(53) ஓ! தேவர்களின் தலைவா, ஓ! சச்சியின் தலைவா, நீயும் ருத்ரனின் துணையுடன் இதைக் கேட்பாயாக. ஒரு மனிதன் மலையில் ஏறி கரங்களை உயர்த்திக் கூப்பியபடி அங்கே ஒற்றைக் காலில் நின்று, உணவனைத்தையும் தவிர்த்து சுடர்மிக்க நெருப்பைக் கண்டால் அவன் கடுந்தவங்கள் செய்த பலன்களை அடைந்து, உண்ணா நோன்பு தொடர்பான வெகுமதிகளையும் அடைகிறான்.(54,55) சூரியனின் கதிர்களால் சுடப்படும் அவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். கோடைக் காலத்திலும், குளிர் காலத்திலும் இவ்வழியில் செயல்படும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்.(56) அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடையும் ஒருவன், எப்போதும் காந்தி மிக்கத் தோல் நிறத்தை அடைவான். அத்தகைய மனிதன் சூரியனைப் போன்ற சக்தியுடன் சுடர்விடவோ, சந்திரனின் அழகுடன் ஒளிரவோ செய்கிறான்” என்றார் {வித்யுத்பிரபர்}.(57)

தேவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தவனும், நூறு வேள்விகளைச் செய்த தேவர்களின் தலைவன், இதன் பிறகு பிருஹஸ்பதியிடம் இந்தச் சிறந்த சொற்களைச் சொல்லிப் பேசினான்:(58) “ஓ! புனிதமானவரே, மனிதர்களுக்கு நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய அறப்புதிர்கள் குறித்தும், அவர்கள் செய்யும் குற்றங்களுடன் தொடர்புடைய புதிர்கள் குறித்தும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(59)

பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “சூரியனைப் பார்த்து சிறுநீர் கழிப்பவர்கள், காற்றை {வாயுவை} மதிக்காதவர்கள், சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளை ஊற்றாதவர்கள்,(60) மிக இளவயது கன்றைக் கொண்ட பசுவிடம் இருந்து அதிக அளவு பாலை அடைவதற்காகக் கறப்பவர்கள் ஆகியோர் பல களங்கங்களை {பாவங்களை} இழைக்கின்றனர். ஓ! சச்சியின் தலைவா, அந்தக் குற்றங்கள் என்ன என்பதை நான் இப்போது அறிவிக்கப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(61) ஓ! வாசவா, ஓ! சக்ரா, சூரியன், காற்று, வேள்வி ஆகுதிகளைச் சுமப்பவன் {நெருப்பு / அக்னி}, அனைத்து உயிரினங்களின் தாய்மாரான பசுக்கள் ஆகியோர் உலகங்களைப் பாதுகாப்பதற்காகச் சுயம்புவால் படைக்கப்பட்டனர். இவர்களே மனிதர்களின் தேவர்களாவர். அறத் தீர்மானங்களை நீங்கள் அனைவரும் கேட்பிராக.(62,63) சூரியனைப் பார்த்துக் கொண்டு சிறுநீர் கழிக்கும் தீய ஆண்களும், தீய பெண்களும் எண்பத்தாறு ஆண்டுகள் பெரும் புகழ்க்கேட்டில் வாழ்வார்கள்.(64) ஓ! சக்ரா, காற்றிடம் எந்த மதிப்பையம் வளர்க்காதவன், தன் மனைவியின் கருப்பையிலிருந்து காலம் கனிவதற்கு முன்பே விழும் பிள்ளைகளைப் பெறுகிறான். சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளை ஊற்றாத மனிதர்கள், அத்தகைய சடங்குகளைச் செய்ய நெருப்பை மூட்டும்போது அது தங்கள் ஆகுதிகளை உண்ண மறுப்பதைக் காண்பார்கள்.(65) மிக இளவயது கன்றைக் கொண்ட பசுவின் பாலைக் குடிப்பவர்கள், தங்கள் குலத்தைத் தழைக்கச் செய்ய ஒருபோதும் பிள்ளைகளைப் பெற மாட்டார்கள்.(66) அத்தகைய மனிதர்கள் தங்கள் பிள்ளைகள் இறப்பதையும், தங்கள் குலம் சுருங்குவதையும் காண்பார்கள். மதிப்பிற்குரிய குலங்களில் உள்ள வயதில் முதிர்ந்த மறுபிறப்பாளர்களால் காணப்படும் குறிப்பிடப்பட்ட செயல்களின் விளைவுகள் இவையே.(67) எனவே, ஒருவன் செழிப்படைய விரும்பினால் அவன் தடைசெய்யப்பட்டதை எப்போதும் தவிர்த்து, அறிவுறுத்தப்பட்டதை மட்டுமே எப்போதும் செய்ய வேண்டும். நான் உனக்குச் சொன்ன இது பெரும் உண்மையாகும்” என்றார் {பிருஹஸ்பதி}.(68)

தேவ ஆசான் இவ்வாறு சொன்ன பிறகு உயர்ந்த அருளைக் கொண்ட தேவர்கள், மருத்துகள் மற்றும் உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்கள் ஆகியோர் பித்ருக்களிடம் கேள்வி கேட்கும் வகையில்,(69) “பித்ருக்களே, பொதுவாகவே சிறுமதி கொண்ட மனிதர்கள் செய்யும் எந்தச் செயல்களால் நீங்கள் நிறைவடைகிறீர்கள்? அத்தகைய சடங்குகளில் அளிக்கப்படும் எந்தக் கொடைகளால், இவ்வுலகில் இறந்து போன மனிதர்களின் நிலையை உயர்த்தி, அவர்களை வற்றாத திறன் கொண்டவர்களாக்கும்?(70) எந்தச் செயல்களைச் செய்வதால் மனிதர்கள் பித்ருக்களுக்குத் தாங்கள் பட்ட கடனில் இருந்து விடுபடுவார்கள்? இதை நாங்கள் கேட்க விரும்புகிறோம். நாங்கள் உணரும் ஆவல் பெரிதாக இருக்கிறது” என்றனர்.(71)

பித்ருக்கள், “உயர்ந்த அருளைக் கொண்டவர்களே, உங்கள் மனங்களில் உள்ள ஐயங்கள் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. அறவோர் செய்யும் எந்தச் செயல்களால் நாங்கள் நிறைவடைகிறோம் என்பதை அறிவிக்கப் போகிறோம் கேட்பீராக.(72) நீல நிறத்துடன் {கரிய நிறத்துடன்} கூடிய காளைகள் விடுதலை செய்யப்பட வேண்டும். புது நிலவு {அமாவாசை} நாளில் எங்களுக்கு எள்ளையும், நீரையும் கொடையளிக்க வேண்டும். மழைக்காலங்களில் விளக்குகள் கொடையளிக்கப்பட வேண்டும். மனிதர்கள் செய்யும் இந்தச் செயல்களால் அவர்கள் பித்ருக்களுக்குத் தாங்கள் பட்ட கடனில் இருந்து விடுபடுகிறார்கள்.(73) அத்தகைய கொடைகள் ஒருபோதும் வீண்போவதில்லை. மறுபுறம், அவை வற்றாதவையாகி உயர்ந்த கனிகளை விளைவிக்கின்றன. அவற்றில் இருந்து நாங்கள் அடையும் நிறைவு வற்றாததாகக் கருதப்பட வேண்டும்.(74) நம்பிக்கையுடன் கூடிய மனிதர்கள் சந்ததியைப் பெற்று இறந்து போன தங்கள் மூதாதையரைத் துன்பகரமான நரகில் இருந்து மீட்கிறார்கள்” என்றனர் {பித்ருக்கள்}.(75)

பித்ருக்களின் இச்சொற்களைக் கேட்டவரும், தவச் செல்வத்தையும், உயர்ந்த சக்தியையும் கொண்ட விருத்தகார்க்கியர், உடலில் மயிர்ச்சிலிர்ப்புடன் ஆச்சரியத்தால் நிறைந்தார். அவர்களிடம் பேசிய அவர்,(76) “தவச் செல்வத்தைக் கொண்டவர்களே, நீல நிறக் காளைகளை விடுதலை செய்வதால் உண்டாகும் பலன்களை எங்களுக்குச் சொல்லுங்கள். மேலும், மழைக்காலங்களில் விளக்கு கொடையும், எள்ளுடன் சேர்ந்து நீரையும் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்கள் என்னென்ன?” என்று கேட்டார்.(77)

பித்ருக்கள், “நீல {கருப்பு} நிறம் கொண்ட ஒரு காளையை விடுதலை செய்யும்போது அதன் வாலைக் கொண்டு (சிறிதளவு) நீரை எடுத்து இறைத்தால், (காளையை விடுவித்த மனிதனின்) பித்ருக்கள் முழுமையாக அறுபதாயிரம் வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றனர்.(78) அத்தகைய காளை, (ஆறு, அல்லது தடாகக்) கரையில் இருந்து தன் கொம்புகளால் எழுப்பும் மணலானது, பித்ருக்களைச் சோமலோகத்திற்கு அனுப்புவதில் வெல்கிறது.(79) மழைக்காலங்களில் விளக்குகளைக் கொடையளிப்பதால் ஒருவன் சோமனைப் போலவே பிரகாசமாக ஒளிர்கிறான். விளக்குகளைக் கொடையளிக்கும் மனிதன் ஒருபோதும் இருள் குணத்திற்கு {தமோ குணத்திற்கு) ஆட்படுவதில்லை.(80) புது நிலவு {அமாவாசை} நாளில், தாமிரப் பாத்திரத்தைப் பயன்படுத்தித் தேனில் கலந்த எள்ளும் நீரும் கொடையளிக்கும் மனிதர்கள்,(81) ஓ! தவச் செல்வத்தைக் கொண்டவனே, புதிர்கள் அனைத்துடன் கூடிய சிராத்தத்தை முறையாகச் செய்ததாகக் கருதப்படுகிறார்கள். இந்த மனிதர்கள் நல்ல உடல்நலத்தையும், உற்சாகமிக்க மனங்களையும் பெறுகின்றனர்” {என்றனர் பித்ருக்கள்}.(82)

{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, (பித்ருக்களுக்கு) பிண்டம் கொடுப்பவன் அடையும் பலன், அவனது குலத்தின் வளர்ச்சி என்ற வடிவத்தை எடுக்கும். உண்மையில், இச்செயல்களை நம்பிக்கையுடன் செய்பவன், பித்ருக்களுக்குத் தான் பட்ட கடனிலிருந்தும் விடுபடுகிறான்.(83) இவ்வாறு சிராத்தம் செய்வதற்குரிய முறையான காலம், நோற்கப்பட வேண்டிய சடங்குகளின் விதிகள், சிராத்தத்தில் உணவூட்டபட வேண்டிய முறையான மனிதன், அவற்றோடு தொடர்புடைய பலன்கள் ஆகியன விதிக்கப்பட்டிருக்கின்றன. நான் அனைத்தையும் உரிய வரிசையில் உனக்குச் சொல்லியிருக்கிறேன்” {என்றார் பீஷ்மர்}”.(84)

பரமரகசியங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 126-ஸ்ரீ ஹரியை நிறைவடையச் செய்யும் செயல்கள்; ஏழைகளும் வேள்வி செய்த பலன்களை அடைய செய்ய வேண்டிய செயல்கள்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பித்ருக்கள் பேசுவதை நிறுத்தியதும், தேவர்களின் தலைவனான இந்திரன், பலமிக்க ஹரியிடம், “ஓ! தலைவா, எந்தச் செயல்களின் மூலம் நீ நிறைவடைகிறாய். உண்மையில், மனிதர்கள் உன்னை நிறைவடையச் செய்வதில் எவ்வாறு வெல்கிறார்கள்” என்று கேட்டான்.(1)

விஷ்ணு {இந்திரனிடம்}, “பிராமணர்களை இழிவு செய்வது, நான் பெரிதும் வெறுக்கும் ஒன்றாகும். பிராமணர்களை வழிபட்டால் என்னை வழிபட்டதாகவே நான் கருதுகிறேன். இதில் ஐயமில்லை.(2) மேன்மையான பிராமணர்கள் அனைவருக்கும் விருந்தோம்பலுடன் உணவு அளித்த பிறகு, அவர்கள் மதிப்புடன் எப்போதும் வணங்கப்பட வேண்டும். ஒருவன் (மாலை வேளையில்) தன் {என்} பாதத்தை வணங்க வேண்டும். இவ்வழியில் செயல்படுபவர்கள், (பசுவில் இருந்து முதலில் விழும்) பசுஞ்சாணத்தில் தெரியும் சுழியை {என்னுடைய சக்கராயுதத்தை} வணங்கி அவற்றுக்குக் காணிக்கை அளிப்பவர்கள் ஆகிய மனிதர்களிடம் நான் நிறைவடைகிறேன்[1].(3) குள்ள வடிவில் இருக்கும் ஒரு பிராமணனைக் காண்பவர்கள், அல்லது கரையில் இருந்து சிறிதளவு மண்ணைத் தலையில் சுமந்து நீரில் இருந்து எழும் பன்றியைக் காண்பவர்கள் ஒருபோதும் எந்தத் தீமையையும் சந்திக்கமாட்டார்கள். அவர்கள் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவார்கள். ஒவ்வொரு நாளும், அஸ்வதம் {அரசமரம்}, கோரோசனை என்றழைக்கப்படும் பண்டம், பசு ஆகியவற்றை வழிபடும் மனிதன்,(5) தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் வழிபடுபவனாகக் கருதப்படுகிறான். இவற்றுக்குள் இருந்து, இவற்றுக்கு அளிக்கப்படும் வழிபாட்டை என் சொந்த வடிவில் நான் ஏற்றுக் கொள்கிறேன்.(6) இவற்றுக்கு அளிக்கப்படும் வழிபாடு எனக்கே அழிக்கப்பட்ட வழிபாடாகும். இஃது உலகம் தொடங்கிய காலம் முதல் இருக்கிறது. வேறு வகை வழிபாட்டை நான் ஏற்பதில்லை என்பதால் அற்ப புத்தி கொண்ட மனிதர்கள் வீணாகவே அவ்வழியில் என்னை வழிபடுகிறார்கள். உண்மையில், வேறு வகையில் என்னை வழிபடுவது என்னை நிறைவடையச் செய்வதில்லை” என்றான் {விஷ்ணு}.(7)

இந்திரன் {விஷ்ணுவிடம்}, “பசுஞ்சாணத்தில் உள்ள சுழிகளையும், பாதத்தையும், பன்றியையும், குள்ள பிராமணனையும், நிலத்தில் இருந்து உயர்த்தப்பட்ட மண்ணையும் நீ ஏன் மெச்சுகிறாய்?(8) நீயே அனைத்து உயிரினங்களையும் படைத்தாய், நீயே அவற்றை அழிக்கவும் செய்கிறாய். அழியக்கூடிய அல்லது நிலையற்ற பொருட்கள் அனைத்தின் நித்திய இயற்கையாக நீயே இருக்கிறாய்” என்றான்”.(9)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்திரனின் இச்சொற்களைக் கேட்ட விஷ்ணு, சற்றே புன்னகைத்து, “என்னுடைய சக்கரத்தின் மூலம் தான் தைத்தியர்கள் கொல்லப்பட்டனர். என் பாதங்கள் இரண்டினால் இவ்வுலகம் மறைக்கப்பட்டது.(10) பன்றியின் வடிவத்தை ஏற்றே நான் ஹிரண்யாக்ஷனைக் கொன்றேன். குள்ளனின் வடிவை ஏற்றே நான் (அசுர) மன்னன் பலியை வென்றேன்.(11) இவற்றை வழிபடும் உயர் ஆன்ம மனிதர்கள் என்னை நிறைவடையச் செய்கின்றனர். உண்மையில், என்னை இவ்வடிவங்களில் வழிபடுபவர்கள் ஒருபோதும் ஏமாற்றம் அடைவதில்லை.(12) ஒருவன் பிரம்மச்சரிய வாழ்வு முறையை நோற்கும் ஒரு பிராமணர் தன் வீட்டுக்கு வருவதைக் கண்டு, பிராமணனுக்கு உரிமையுள்ள தன் உணவின் முதல் பகுதியை அவனுக்குக் கொடுத்து, அதன் பிறகு எஞ்சியிருப்பதை உண்பவர் அமுதத்தை உண்டதாகக் கருதப்படுகிறான்.(13) காலை சந்தி வேளையைத் துதித்து, சூரியனை நோக்கிய முகத்துடன் நின்று கொண்டிருப்பவன், தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய பலனை அறுவடை செய்து அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(14) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களே, ஒரு பெரும்புதிரை நான் உங்களுக்கு விளக்கியிருக்கிறேன். நான் உங்களுக்கு வேறென்ன சொல்ல வேண்டும்? உங்கள் ஐயங்களை எனக்குச் சொல்வீராக” என்றான் {விஷ்ணு}.(15)

பலதேவன், “மனிதர்களை மகிழ்ச்சியில் நிறைக்கும் மற்றொரு பெரும்புதிரைக் கேட்பாயாக. இதை அறியாத அறிவற்ற மக்களே பிற உயிரினங்களின் கரங்களில் பெருந்துன்பத்தைச் சந்திக்கிறார்கள்.(16) விடிவதற்கு முன்பு எழுந்து, பசு, நெய், தயிர், கடுகு, தினை ஆகியவற்றைத் தீண்டும் மனிதன், தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(17) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்கள், சிராத்தம் செய்யும்போது, முன்பும் பின்பும் அனைத்து உயிரினங்களையும், தூய்மையற்ற அனைத்தையும் எப்போதும் தவிர்க்கிறார்கள்” என்றான்[2].(18)தேவர்கள், “ஒரு தாமிரப் பாத்திரத்தை எடுத்து, அதை நீரால் நிறைத்து, கிழக்கு நோக்கி உண்ணா நோன்பையோ, ஒரு குறிப்பிட்ட நோன்பையோ நோற்கும் மனிதனிடம்,(19) தேவர்கள் அனைவரும் நிறைவடைந்து, அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் வெற்றியால் மகுடம் சூட்ட வைக்கின்றனர். வேறு வழியில் உண்ணா நோன்பையோ, வேறு எந்த நோன்பையோ நோற்கும் அற்ப புத்தி கொண்ட மனிதர்கள் எதையும் ஈட்டுவதில்லை[3].(20) உண்ணா நோன்புகள் நோற்பது குறித்தும், தேவர்களுக்குக் காணிக்கை அளிப்பதும் குறித்தும் தீர்மானங்களைச் சொல்லும்போது தாமிரப்பாத்திரமே பயன்படுத்த உகந்ததாகும். தேவர்களுக்குக் காணிக்கை அளிக்கும் காரியத்தில், பிச்சை (இடும் அல்லது ஏற்கும்) காரியத்தில், அர்க்கியத்திற்குத் தேவையான உட்பொருட்களை அளிப்பதில், பித்ருக்களுக்கு எள்ளுடன் கலந்த நீரைக் காணிக்கையளிக்கும் காரியத்தில்,(21) தாமிரப்பாத்திரங்களே பயன்படுத்தப்பட வேண்டும்[4]. வேறு வகையில் இச்செயல்களைச் செய்வதன் மூலம் சிறிதளவே பலன் கிட்டும். தேவர்கள் எவ்வாறு நிறைவடைகிறார்கள் என்பது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள புதிர்கள் இவையே” என்றனர் {தேவர்கள்}.(22)ர்மன், “மன்னனிடம் பணி செய்பவனாகவோ, {காலத்தைத் தெரிவிக்கும்} மணி அடிப்பவனாகவோ, வழிபாடுகள், அல்லது சிராத்தங்களில் உடனுதவி கடமைகளைக் கவனிப்பவனாகவோ {பரிசாரகனாகவோ}, பசு வளர்ப்பவனாகவோ {ஆ மேய்ப்பவனாகவோ}, வணிகம் செய்பவனாகவோ {வர்த்தகனாகவோ}, ஏதோ ஒரு கலையைத் தொழிலாகச் செய்பவனாகவோ, நடிகனாகவோ, நண்பர்களுடன் சச்சரவு செய்பவனாகவோ, வேத கல்வி இல்லாதவனாகவோ, ஒரு சூத்திரப் பெண்ணை மணந்து கொண்டவனாகவோ இருக்கும் பிராமணனுக்குத் தேவர்களைக் கௌரவிக்கும் வகையிலோ, பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையிலோ செய்யப்படும் சடங்குகள் அனைத்திலும் அளிக்கப்படும் காணிக்கைகளை ஒரு போதும் கொடுக்கக்கூடாது.(23,24) சிராத்தம் செய்பவன் அத்தகைய காணிக்கைகளை இத்தகைய பிராமணனுக்கு அளித்தால் அவன் தன் குலத்தைப் பெருகச் செய்யாமல் செழிப்பில் இருந்து வீழ்ச்சியடைகிறான். மேலும் அவன் செய்யும் அத்தகைய செயலால் பித்ருக்களை நிறைவடையச் செய்வதிலும் தவறுகிறான்.(25) எந்த வீட்டில் இருந்து ஒரு விருந்தினன் நிறைவடையாமல் திரும்புகிறானோ, அந்த வீட்டில் இருந்து பித்ருக்கள், தேவர்கள், புனித நெருப்புகள் ஆகியோர் அனைவரும் ஒரு விருந்தினர் இவ்வாறு நடத்தப்பட்டதன் விளைவால் ஏமாற்றம் அடைந்து வெளியேறுகின்றனர்.(26) தன் வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினரிடம் விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்தாத மனிதன், பெண்களையும், பசுக்களையும் கொன்றவர்கள், நன்மை செய்தவர்களிடம் நன்றி மறந்தவர்கள், பிராமணக் கொலை செய்தவர்கள், தங்கள் ஆசான்களின் படுக்கைகளைக் களங்கப்படுத்தியவர்கள் ஆகியோருக்கு இணையான பாவம் நிறைந்தவனாகக் கருதப்படுகிறான்” என்றான்.(27)

அக்னி, “குவிந்த கவனத்துடன் கேளுங்கள். பசுவையோ, உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணனையோ, சுடர்மிக்க நெருப்பையோ மிதிப்பதற்காகக் காலை உயர்த்தும் தீய புத்தி கொண்ட மனிதன் அடையும் கெடுபலன்களைச் சொல்லப் போகிறேன். அத்தகைய மனிதனின் புகழ்க்கேடு உலகம் முழுவதும் பரவி, சொர்க்கத்தின் எல்லைகளையே தொடுகிறது. அவனுடைய பித்ருக்கள் அச்சத்தால் நிறைகிறார்கள். அவன் காரியத்தில் தேவர்களும் பெரிதும் நிறைவற்றவர்களாகிறார்கள். பெரும் சக்தியுடன் கூடிய நெருப்பு, அவனால் ஊற்றப்படும் ஆகுதிகளை ஏற்க மறுக்கும்.(28-30) நூறு பிறவிகள் அவன் நரகில் கிடந்து அழுகுவான். அவன் ஒருபோதும் எக்காலத்திலும் மீட்கப்படுவதில்லை.(31) எனவே, தன் நன்மையை விரும்பி நம்பிக்கையோடு இருக்கும் ஒருவன், ஒரு பசுவையோ, உயர்ந்த சக்தியுடன் கூடிய பிராமணனையோ, சுடர்மிக்க நெருப்பையோ தன் காலால் ஒருபோதும் தீண்டக்கூடாது. இவையே இவை மூன்றுக்கு எதிராகக் கால்களை உயர்த்துபவன் அடையும் கெடுபலன்களென நான் அறிவிக்கிறேன்” என்றான்.(32,33)

விஷ்வாமித்திரர், “அறம் தொடர்பாகப் பொதுவாக மனிதர்களுக்கு மத்தியில் அறியப்படாத உயர்ந்த புதிரைக் கேட்பீராக. இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசியை {பாயஸான்னத்தைப்} பித்ருக்களுக்குக் கொடுப்பதற்கு,(34) பாத்ரபத {புரட்டாசி} மாத {கிருஷ்ண பக்ஷ / தேய்பிறை} மக நட்சத்திரத்தின், நடுப்பகலில் தெற்குத் திசை நோக்கி ஒரு யானையினால் உடலால் உண்டான நிழலில் {கஜசாயையில்} அமர்ந்து காணிக்கையளிப்பவன்,(35) பெரும் பலன்கள் அடைகிறான். அந்தப் பலன்கள் என்னென்ன என்பதைக் கேட்பீராக[5]. இத்தகைய சூழ்நிலைகளில் பித்ருக்களுக்கு இத்தகைய காணிக்கையளிக்கும் மனிதன், அடுத்தடுத்து பதிமூன்று வருடங்களில் ஒவ்வொரு வருடமும் பெரும் சிராத்தத்தைச் செய்தவனாகக் கருதப்படுவான்” என்றார்.(36)பசுக்கள், “எந்த மனிதன், “ஓ! வாகுலையே {அனைத்தும் நிறைந்தவளே}, ஓ! சமங்கையே {பருத்த அங்கங்களைக் கொண்டவளே}, ஓ! எங்கும் அச்சமற்றவளே, ஓ! எப்போதும் பொறுமையாகவும், மங்கலம் நிரம்பியும் இருப்பவளே {நலமாயிருப்பவளே}, ஓ! நட்பே, ஓ! எண் போல் பெருகுபவளே, பழங்காலத்தில் பிரம்ம லோகத்தில் வஜ்ரதாரியான இந்திரனின் வேள்வியில் கன்றுடன் இருந்தவள் நீயே. ஆகாயத்திலும், அக்னியின் பாதையிலும் உன் நிலையைக் கொண்டவள் நீயே. தேவர்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள நாரதருடன் சேர்ந்து சர்வம்ஸஹை {ஸர்வஸஹை / அனைத்தையும் பொறுப்பவள்} என்று உன்னை அழைத்துத் துதிக்கின்றனர்” என்ற இந்த மந்திரங்களைச் சொல்லி ஒரு பசுவைத் துதிப்பானோ, அவன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அத்தகைய மனிதன், புரந்தரனின் உலகை அடைகிறான். அதையும் தவிர அவன், பசுக்கள் மற்றும் சந்திரமாஸுடன் {சந்திரனுடன்} தொடர்புடைய பலன்களையும் அடைகிறான்.(37-39) அத்தகைய மனிதன், தான் செய்த ஒவ்வொரு பாவத்தில் இருந்தும், தான் கொண்ட ஒவ்வொரு அச்சத்தில் இருந்தும், ஒவ்வொரு துன்பத்தில் இருந்தும் விடுபடுகிறான். இறுதியாக அவன் ஆயிரங்கண் இந்திரனின் மகிழ்ச்சி மிக்க உலகத்தில் வசிப்பிடத்தை அடைகிறான்” என்றன”.(40)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இதன்பிறகு உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், கொண்டாடப்பட்டவர்களுமான ஏழு முனிவர்கள், வசிஷ்டரைத் தங்கள் தலைமையில் கொண்டு எழுந்து தாமரையில் பிறந்த பிரம்மனை வலம்வந்து, மதிப்புடன் கரங்களைக் கூப்பி அவனைச் சூழ்ந்து நின்றனர்.(41) பிரம்மத்தை அறிந்த மனிதர்களில் முதன்மையான வசிஷ்டர் அவர்களுடைய பேச்சாளராகி, ஒவ்வொரு உயிரினத்திற்கும் நன்மையைத் தருவதும், குறிப்பாகப் பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும் நன்மையைத் தருவதுமான இந்தக் கேள்வியைக் கேட்டனர்.(42)

{வசிஷ்டரின் தலைமையிலான சப்தரிஷிகள்}, “அறவொழுக்கம் கொண்டவர்களாக இருந்தாலும், இவ்வுலக நன்மைகள் இல்லாதவர்களான மனிதர்கள் எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் வேள்விகள் தொடர்பான பலன்களை அடைவதில் வெல்கிறார்கள்?” என்று கேட்டனர்.(43) அவர்களது இந்தக் கேள்வியைக் கேட்ட பெரும்பாட்டன் பிரம்மன் பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்.(44)

பிரம்மன், “உயர்வாக அருளப்பட்டவர்களே, இது சிறப்பான கேள்வியாகும். இது மங்கலமானதும், உயர்ந்ததும், புதிர் நிறைந்ததுமாகும். நீங்கள் முன்வைக்கும் கேள்வியானது நுட்பமானதும், மனித குலத்திற்குப் பெரும் நன்மை நிறைந்ததும் ஆகும்.(45) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களே, நான் அனைத்தையும் விரிவாக உங்களுக்குச் சொல்கிறேன். (வறுமையின் மூலம் வேள்விகளைச் செய்ய இயலாதவர்களாக இருப்பினும்) வேள்விகளுக்கான பலன்களை மனிதர்கள் எவ்வாறு அடைகிறார்கள் என்பதைச் சொல்கிறேன் கவனமாகக் கேட்பீராக.(46) பௌச {தை} மாதத்தின் வளர்பிறை ரோகிணி நட்சத்திரத்தில் நீராடி தன்னைத் தூய்மை செய்து கொண்டு, வானத்தையே கூரையாகக் கொண்டு {மேலே மூடாத இடத்தில்}, ஒற்றையாடை உடுத்தி,(47) நம்பிக்கையுடனும், குவிந்த கவனத்துடனும், நிலவின் கதிர்களைப் பருகும் {நிலவின் ஒளியில் படுத்து உறங்கும்} ஒருவன், பெரும் வேள்விகள் செய்த பலன்களை அடைகிறான்.(48) மறுபிறப்பாளர்களில் முதன்மையாவர்களே, அனைத்துக் காரியங்களின் நுட்பமான உண்மைகளில் உட்பார்வை கொண்டவர்களே, உங்கள் கேள்விக்கான பதிலாக நான் பெரும்புதிரை {பெரும் ரகசியத்தை} அறிவித்திருக்கிறேன்” என்றான் {பிரம்மன்}.(49)

ஹிருதயத்தூய்மை! – அநுசாஸனபர்வம் பகுதி – 127-சூரியன், ஸ்ரீதேவி, கார்க்யர், தௌம்யர் மற்றும் ஜமதக்னி ஆகியோர் வெளியிட்ட பரமரகசியங்கள்…

{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்},
“விபாவசு (சூரியன் என்றும் அழைக்கப்படுபவன்), “இரு காணிக்கைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று கைநிறைய நீரையும், மற்றொன்று நெய் கலந்த அரிசி தானியங்கள் அடங்கிய அக்ஷதையையும் கொண்டவையாகும். ஒருவன் ஒரு முழு நிலவு {பௌர்ணமி} நாளில், அந்தப் பிரகாசமான கோளத்தை {சந்திரனை} நோக்கி நின்று கொண்டு கை நிறைய நீர் மற்றும் அக்ஷதை என்றழைக்கக்கூடிய நெய்கலந்த அரசிதானியங்கள் என்ற குறிப்பிட்ட இரு காணிக்கைகளையும் அளிக்க வேண்டும். இந்தக் காணிக்கைகளை அளிக்கும் மனிதன் தன்னுடைய புனித நெருப்பைத் துதிப்பவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில், அவன் (அடிப்படையான) மூன்று நெருப்புகளில் ஆகுதிகளை ஊற்றியவனாகக் கருதப்படுகிறான்.(1,2) ஒரு புது நிலவு {அமாவாசை} நாளில் பெரும் மரத்தை வெட்டும் அற்ப புத்தி கொண்டவன், பிராமணக் கொலை செய்த பாவத்தால் {பிரம்மஹத்தி தோஷத்தால்} களங்கப்படுகிறான்.(3) புது நிலவு {அமாவாசை} நாளில் பற்குச்சியை மெல்லும் மூட மனிதன் அத்தகைய செயலின் மூலம் சந்திர தேவனுக்குத் தீங்கிழைத்தவனாகக் கருதப்படுகிறான்.(4) முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவு {அமாவாசை} நாட்களில் அத்தகைய மனிதனால் ஊற்றப்படும் ஆகுதிகளைத் தேவர்கள் ஏற்பதில்லை. அவனது பித்ருக்கள் அவனிடம் சினம் கொள்கின்றனர், அவனது குலமும், குடும்பமும் ஒழிந்து போகின்றன” என்றான் {சூரியன்}.(5)

ஸ்ரீ {லட்சுமி}, “எந்த வீட்டில் உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய பாத்திரங்கள், இருக்கைகள், படுக்கைகள் ஆகியன சிதறிக் கிடக்கின்றனவோ, எங்கே பெண் அடிக்கப்படுகிறாளோ,(6) அந்த வீட்டில் இருந்து தேவர்களும், பித்ருக்களும் அருவருப்புடன் வெளியேறுகின்றனர். உண்மையில், அத்தகை வீடுகளின் உரிமையாளர்களால் அளிக்கப்படும் காணிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் தேவர்களும், பித்ருக்களும் அத்தகைய பாவம் நிறைந்த வசிப்பிடத்தில் இருந்து விலகி ஓடுகின்றனர்” என்றாள்.(7)

அங்கிரஸ், “ஓர் ஆண்டு முழுவதும், ஒவ்வொரு இரவிலும் ஏற்றுவதற்கு ஒரு விளக்குடன் கரஞ்சக {புங்கை} மரத்தின் அடியில் நின்று கொண்டும், தன் கைகளில் ஸுவர்ச்சலைக் கொடியின் வேரை வைத்துக் கொண்டும் இருப்பவனுடைய சந்ததி பெருகும்” என்றார்[1].(8)

கார்க்யர், “ஒருவன் தன் விருந்தினர்களுக்கான விருந்தோம்பல் கடமைகளை எப்போதும் செய்ய வேண்டும். வேள்வி நடைபெறும் கூடம், அல்லது கொட்டகையில் அவன் விளக்குகளை அளிக்க வேண்டும். பகலில் உறங்குவதை அவன் தவிர்க்க வேண்டும். அனைத்து வகை இறைச்சியை, அல்லது இறைச்சியுணவைத் தவிர்க்க வேண்டும்.(9) அவன் பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் ஒருபோதும் தீங்கைச் செய்யக்கூடாது. அவன் எப்போதும் புஷ்கரை தடாகங்கள் மற்றும் பிற புனித நீர்நிலைகளின் பெயர்களைச் சொல்ல வேண்டும். அத்தகைய கடமை நடைமுறையே முதன்மையானதாகும். இதுவே புதிர்களுடன் கூடிய உயர்ந்த அறமாகும். நடைமுறையில் பின்பற்றப்பட்டால் அது நிச்சயம் பெரும் விளைவுகளை உண்டாக்கும்.(10) ஒருவன் நூறு வேள்விகளைச் செய்தாலும், அவற்றில் ஊற்றப்பட்ட ஆகுதிகளால் உண்டான பலன் தீர்ந்து போவதை காணும் நிலையை அடைகிறான். எனினும் நான் சொன்ன கடமைகளை நம்பிக்கையுடன் செய்வதால் அவற்றின் பலன் வற்றாதனவாகின்றன.(11)

பலரின் பார்வையில் இருந்து மறைக்கப்படும் மற்றொருமொரு உயர்ந்த புதிரை {பெரும் ரகசியத்தைக்} கேட்பீராக. சிராத்தங்கள், தேவர்களைக் கௌரவிக்கும் சடங்குகள், சாதாரண நாடகளில் செய்யப்படும் சடங்குகள், குறிப்பாகப் புனிதமான முழு நிலவு {பௌர்ணமி}, புது நிலவு {அமாவாசை} நாட்களில் செய்யப்படும் சடங்குகள் ஆகியவற்றின் போது, மாதவிலக்கான பெண்ணையோ, தொழுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளையோ தேவர்கள் பார்த்துவிட்டால் அச்சந்தர்ப்பங்களில் (நெருப்பில் ஊற்றப்படும்) ஆகுதிகளை அவர்கள் உண்பதில்லை.(12,13) தன்னால் செய்யப்பட்ட சிராத்தம் நடைபெறும் இடத்தின் அருகில் இத்தகைய பெண்ணை அனுமதித்த மனிதனுடைய பித்ருக்கள், பதிமூன்று வருடங்கள் அவனிடம் நிறைவடையாமல் இருப்பார்கள்.(14) ஒருவன், வெள்ளுடை உடுத்தி, மனமும், உடலும் தூய்மையடைந்து, பிராமணர்களை அழைத்து, (தான் செய்யும் சிராத்தத்தின் போது) அவர்களை ஆசி கூறச் செய்ய வேண்டும். அத்தகைய தருணங்களில் ஒருவன் பாரதத்தைப் படிக்க வேண்டும். சிராத்தங்களில் இவை அனைத்தையும் பின்பற்றினால் அங்கே அளிக்கப்படும் காணிக்கைகள் அனைத்தும் வற்றாதனவாகின்றன” என்றார் {கார்க்யர்}.(15)

தௌம்யர், “உடைந்த பாத்திரங்கள், உடைந்த கட்டில்கள், சேவல்கள், நாய்கள், வசிக்கும் வீட்டிற்குள் வளரும் மரங்கள் ஆகியவை அனைத்தும் மங்கலமற்ற பொருட்களாகும். உடைந்த பாத்திரத்தில் கலியே இருக்கிறான் {எனவே, கலகம் உண்டாகும்}, அதே வேளையில், உடைந்த கட்டிலால் செல்வத்தின் இழப்பு ஏற்படும். சேவலோ, நாயோ காணப்படும்போது, தேவர்கள் அவர்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை உண்ணமாட்டர்கள். மரத்தின் வேருக்கடியில் தேள்களும், பாம்புகளும் நிச்சயம் உறைவிடத்தைக் காண்கின்றன. எனவே, ஒருவன் தன் வசிப்பிடத்திற்குள் மரத்தை ஒருபோதும் நடக்கூடாது” என்றார்.(17)

ஜனதக்னி, “தூய்மையற்ற இதயத்தைக் கொண்ட மனிதன், குதிரை வேள்வியிலோ, நூறு வாஜபேய வேள்விகளிலோ, தலைவணங்கிக் கடுந்தவம் இருந்தோ தேவர்களைத் துதித்திருந்தாலும் நிச்சயம் நரகத்திற்குச் செல்வான். இதயத் தூய்மை வேள்விகளுக்கும், வாய்மைக்கும் இணையானதாகக் கருதப்படுகிறது.(18,19) ஓர் ஏழை பிராமணன், மற்றொரு பிராமணனுக்கு மாவாலான பிரசாதத்தை {ஒரு படி மாவை} மட்டுமே கொடுப்பதன் மூலம் பிரம்ம லோகத்தை அடைகிறான். (இதயத் தூய்மையின் முக்கியத்துவத்திற்கு) இது போதுமான சான்றாகும்” என்றார்.(20)

வாயு சொன்ன பரமரகசியம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 128-வாயுதேவன் வெளியிட்ட பரமரகசியம்; விதிமீறல்களைச் சமன் செய்யும் பரிகாரங்கள்…

வாயு, “நோற்றால் மனித குலத்தை மகிழ்ச்சியில் நிறைக்கும் சில கடமைகளை நான் சொல்லப் போகிறேன். சில ரகசிய காரணங்களைச் சார்ந்திருக்கும் குறிப்பிட்ட விதிமீறல்களைக் குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(1)

மழைக்காலத்தின் நான்கு மாதங்களில் (பித்ருக்களுக்கு) எள்ளையும் நீரையும், கடமைகளை அறிந்த பிராமணர்களுக்குத் தன் சக்திக்குத்தகுந்தபடி உணவையும் காணிக்கையளித்து,(2) புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி, இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசியைக் காணிக்கையளித்து, பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் எள் மற்றும் நீருடன் சேர்த்து விளக்குகளையும் கொடையளிப்பவனும்,(3) உண்மையில் இவை அனைத்தையும் நம்பிக்கையுடனும், குவிந்த கவனத்துடனும் செய்பவனுமான மனிதன், தேவர்களுக்கு விலங்குகளைக் காணிக்கையளிக்கும் நூறு வேள்விகள் செய்வதால் உண்டாகும் பலன்கள் அனைத்தையும் அடைகிறான்.(4)

அனைவரும் அறியாத மற்றொரு உயர்ந்த புதிரைக் கேட்பீராக. தான் ஆகுதிகளை ஊற்றும் நெருப்பை ஒரு சூத்திரன் மூட்டும்போது அனைத்தும் சரி என்று நினைப்பவனும், சிராத்தங்களிலும், வேறு சடங்குகளிலும் துணை செய்யத் தகாத பெண்கள் அவற்றில் உதவி செய்ய அனுமதிக்கப்படும்போது எந்தக் குற்றத்தையும் காணாதவனுமான மனிதன் நிச்சயம் பாவத்தால் களங்கமடைகிறான்.(5) வேள்வி நெருப்புகள் மூன்றும் அத்தகைய மனிதனிடம் சினம் கொள்கின்றன. அவன் அடுத்தப் பிறவியில் ஒரு சூத்திரனாகப் பிறப்பான். அவனுடைய பித்ருக்களும் தேவர்களும் அவனிடம் ஒருபோதும் நிறைவடைய மாட்டார்கள்.(6)

அத்தகைய பாவங்களில் இருந்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள ஒருவன் செய்ய வேண்டிய பாவக்கழிப்புகளை {பரிகாரங்களை} இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பீராக. அந்தப் பரிகாரச் செயல்களைச் செய்வதன் மூலம் ஒருவன் பிணியில இருந்து விடுபட்டு, மகிழ்ச்சியை அடைகிறான்.(7) அவன் தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து குவிந்த கவனத்துடன் பசுவின் சிறுநீர், சாணம், பால், நெய் ஆகியவற்றைப் புனித நெருப்பில் ஆகுதிகளாக ஊற்ற வேண்டும்.(8)

ஒரு வருடம் முழுமையாகத் தீர்ந்ததும் அத்தகைய மனிதனின் காணிக்கைகளைத் தேவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அவனுடைய பித்ருக்களும் சிராத்தம் செய்ய வேண்டிய நேரம் வரும்போது, அவனிடம் நிறைவை அடைகின்றனர்.(9)

சொர்க்கத்தை அடைய விரும்பும் மனிதர்களைப் பொறுத்தவரையில் எது அறம், எது மறம் {அறமற்றது} என்பனவற்றை அறியப்படாத விபரங்களுடன் நான் உரைத்திருகிறேன். உண்மையில் இந்த விதிமீறல்களைத் தவிர்ப்பவர்களும், அவற்றை இழைத்தாலும் குறிப்பிட்ட பரிகாரச் சடங்குகளைச் செய்பவர்களுமான மனிதர்கள், இவ்வுலகத்தைவிட்டு அகலும்போது சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்” என்றான் {வாயு}.(10)

லோமசர் சொன்ன ரகசியங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 129-லோமசர் வெளியிட்ட சொன்ன பரமரகசியங்கள்…

லோமசர், “தனக்காக மனைவிகளைத் திருமணம் செய்து கொள்ளாமல், அடுத்தவர் மனைவிகளை வசப்படுத்தும் மனிதர்களின் பித்ருக்கள் சிராத்தத்திற்கான நேரம் வரும் போது ஏமாற்றம் அடைகின்றனர்.(1) அடுத்தவர் மனைவிகளை வசப்படுத்துபவன், மலட்டுப் பெண்ணிடம் பாலியல் கலவியில் ஈடுபடுபவன், ஒரு பிராமணனுக்குச் சொந்தமானவற்றை அபகரிப்பவன் ஆகியோர் இணையான பாவம் நிறைந்தவர்களே.(2)

அத்தகையோரின் பித்ருக்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பாமல் அவர்களிடம் இருந்து தங்களை அறுத்துக் கொள்கின்றனர். அவர்கள் அளிக்கும் காணிக்கைகள் தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவடையச் செய்வதில் தவறுகின்றன.(3) எனவே, பிறர் மணந்து கொண்ட பெண்களுடனும், மலட்டுப் பெண்களுடனும் ஒருவன் எப்போதும் பாலியல் கலவியைத் தவிர்க்க வேண்டும். தன் நன்மையை விரும்பும் மனிதன் ஒரு பிராமணனுக்குச் சொந்தமானவற்றை அபகரிக்க மாட்டான்.(4)

அறத்தைப் பொறுத்தவரையில் அனைவராலும் அறியப்படாத மற்றொரு புதிரை இப்போது சொல்கிறேன் கேட்பீராக. நம்பிக்கையுடன் கூடிய ஒருவன் எப்போதும் தனது ஆசான் மற்றும் வேறு பெரியோர்களின் ஆணைகளைச் செய்ய வேண்டும்.(5) ஒவ்வொரு மாதமும், பனிரெண்டாம் சந்திர நாளிலும் {துவாதசியிலும்}, முழு நிலவு {அமாவாசை} நாளிலும் ஒருவன் நெய்யையும், அக்ஷதையால் அமைந்த காணிக்கைகளையும் பிராமணர்களுக்குக் கொடையாக அளிக்க வேண்டும். அத்தகைய மனிதன் அடையும் பலனின் அளவை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(6)

அத்தகைய செயலால் ஒருவன் சோமத்தையும், பெருங்கடலையும் பெருகச் செய்வதாகச் சொல்லப்படுகிறது. தேவர்களின் தலைவனான வாசவன் {இந்திரன்}, அவனுக்குக் குதிரை வேள்வி செய்த பலன்களில் நான்கில் ஒரு பகுதியை அளிக்கிறான்.(7) அத்தகைய கொடைகளைக் கொடுப்பதன் மூலம் ஒரு மனிதன் பெரும் சக்தியையும், ஆற்றலையும் அடைகிறான். தெய்வீகமான சோமன் அவனிடம் நன்கு நிறைவடைந்து, அவனுடைய விருப்பங்கள் கனியும் நிலையை அருள்கிறான்.(8)

பெரும் பலனை உண்டாக்கவல்லதும், கடமை நிலைத்திருக்கும் அடித்தளமுமான மற்றுமொரு கடமை குறித்து இப்போது சொல்கிறேன் கேட்பாயாக. கலியுகத்தில் அந்தக் கடமை செய்யப்பட்டால் மனிதர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும்.(9) விடிவதற்கு முன்பு எழுந்து, நீராடல் மூலம் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, வெள்ளுடைகளை உடுத்திக் கொண்டு, குவிந்த கவனத்துடன் பாத்திரங்கள் நிறைந்த எள்ளைப் பிராமணர்களுக்குக் கொடையளிப்பவனும்,(10) பித்ருக்களுக்கு எள்ளும் தேனும், நீரும் கொடுப்பவனும், கிருச்ரம் என்றழைக்கப்படும் உணவையும், விளக்குகளையும் கொடுப்பவனுமான மனிதன், அடுத்தடுத்து நல்ல பலன்களையே அடைகிறான். அந்தப் பலன்கள் யாவை எனச் சொல்கிறேன் கேட்பீராக(11)

தெய்வீக தண்டனை அளிப்பவனான பாகன் {இந்திரன், தாமிரப் பாத்திரங்களையும், எள் நிறைந்த வெண்கலப் பாத்திரங்களையும் கொடையளிப்பதன் பலன்களைக் குறிப்பிட்டிருக்கிறான். பசுக்கொடை, நித்திய பலனை விளைவிக்கவல்ல நிலக்கொடை ஆகியவற்றை அளிப்பவன்,(12) தக்ஷிணையின் வடிவில் பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளை அளிக்கும் அக்னிஷ்டோம வேள்வியைச் செய்தவன் ஆகியோர் அனைவரும் எள் நிறைந்த பாத்திரங்களைக் கொடையளிப்பதன் மூலம் அடைவதற்கு இணையான பலன்களை அடைந்தவனாகத் தேவர்கள் அனைவராலும் கருதப்படுகிறான்.(13)

நீருடன் சேர்த்து எள் காணிக்கையளிக்கப்படும் கொடைகள் நித்தியமான நிறைவை அளிப்பவையாகப் பித்ருக்களால் கருதப்படுகின்றன. விளக்குக் கொடை மற்றும் கிருசரக் கொடைகளில் பாட்டன்கள் {மூதாதையர்} அனைவரும் உயர்ந்த நிறைவை அடைகிறார்கள்.(14) இவ்வாறு பித்ருக்கள் மற்றும் தேவர்களால் தங்கள் தங்களுக்குரிய உலகங்களில் உயர்வாக மெச்சப்பட்டதும், முனிவர்களால் விதிக்கப்பட்டதுமான பழைமையான விதியைச் சொன்னேன்” என்றார் {லோமசர்}”.(15)

புறக்கணிக்கத்தக்க ஐவர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 130- அருந்ததி, சூரியன் மற்றும் யமன் ஆகியோர் சொன்ன பரமரகசியங்கள்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது, அங்கே கூடியிருந்த பல்வேறு முனிவர்களும், பித்ருக்களும், தேவர்களும், பெரும் தவத்தகுதியைக் கொண்டிருந்த (வசிஷ்டரின் மனைவியான) அருந்ததியிடம் குவிந்த கவனத்தோடு கேள்வி கேட்டனர்.(1) தவச் செல்வத்தை அபரிமிதமாகக் கொண்டவளும், நோன்புகள் மற்றும் ஒழுக்கத்தில் தன் கணவரும், உயர் ஆன்ம கொண்டவருமான வசிஷ்டருக்கு இணையானவளாதலால் சக்தியிலும் அவள் அவருக்கு இணையானவளாக இருந்தாள்.(2) அவர்கள் அவளிடம், “அறம் மற்றும் கடமை குறித்த புதிர்களை நாங்கள் உன்னிடம் கேட்க விரும்புகிறோம். ஓ! இனிமை நிறைந்த பெண்மணியே, உயர்ந்த புதிராக {ரகசியமாக} நீ எதைக் கருதுகிறாய் என்பதை எங்களுக்குச் சொல்வாயாக” என்று கேட்டனர்.(3)

அருந்ததி, “ஏழையான என்னை இவ்வாறு நீங்கள் கருத்துடன் நினைவுகூர்வதாலேயே என்னால் தவங்களில் பெரும் முன்னேற்றத்தை அடைய முடிந்தது. அருள் நிறைந்த உங்கள் அனுமதியுடன் நான் இப்போது நித்தியமான கடமைகள் மற்றும் உயர்ந்த புதிர்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன். அவை சார்ந்திருக்கும் காரணங்களுடன் சேர்த்து நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். விரிவாகச் சொல்கிறேன் கேட்பீராக. நம்பிக்கையும், தூய இதயத்தையும் கொண்டவருக்கு மட்டுமே இந்த ஞானம் சொல்லப்பட வேண்டும்.(4,5) நம்பிக்கையற்றவன், செருக்கு நிறைந்தவன், பிராமணக்கொலை செய்த {பிரம்மஹத்தி தோஷம் கொண்ட} குற்றவாளி, ஆசானின் படுக்கைக்குக் களங்கம் விளைவித்தவன் ஆகியோருடன் ஒருபோதும் இது குறித்துப் பேசக் கூடாது. அவர்களுக்கு ஒருபோதும் அறமும், கடமையும் சொல்லப்படக்கூடாது.(6) பனிரெண்டு வருட காலம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிக்கும் மனிதன், அல்லது, ஒவ்வொரு மாதமும் ஒரு வேள்வியில் தேவர்களைத் துதிப்பவன், அல்லது பெரும் புஷ்கரையில், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையளிப்பவன் ஆகியோர் அடையும் பலன்கள் விருந்தினரை நிறைவடையச் செய்வதன் மூலம் கிட்டும் பலன்களுக்கு ஒருபோதும் ஈடாகாது.(7,8)

மனித குலத்தை மகிழ்ச்சியால் நிறைக்கும் மற்றொரு கடமையைச் சொல்லப் போகிறேன் கேட்பீராக. அது நம்பிக்கையுடன் கூடிய மனிதனால் ரகசிய சடங்காகச் செய்யப்பட வேண்டும். அதன் பலன்கள் நிச்சயம் உயர்ந்தவையாகும். அவை என்னென்ன என்பதைக் கேட்பீராக. விடிவதற்கு முன் எழுந்து, குறிப்பிட்ட அளவு நீரையும், சில குசப் புற்களையும் {தர்ப்பைகளையும்} எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டகைக்குச் சென்று, கொண்டு சென்ற நீரைக் குசப்புற்களைக் கொண்டு தெளிப்பதன் மூலம் மாடுகளின் கொம்புகளைக் கழுவியபிறகு தன் தலையில் நீரை வடியச் செய்பவன், அத்தகைய நீராடலின் விளைவால் சித்தர்களும், சாரணர்களும் அடிக்கடி செல்பவையும், மதிப்புமிக்கவையும், மூவுலகங்களிலும் உள்ளவையுமான அனைத்து நீர்நிலைகளிலும் நீராடியவனாகக் கருதப்படுகிறான்” என்று சொன்னாள்.(10-12) அருந்ததி இந்தச் சொற்களைச் சொன்னதும் தேவர்கள் மற்றும் பித்ருக்கள் அனைவரும் “நன்று, நன்று” என்று சொல்லி அவர்களை மெச்சினார்கள். உண்மையில், அங்கே இருந்த உயிரினங்கள் அனைத்தும் உயர்வான நிறைவை அடைந்து அருந்ததியை வழிபட்டன.(13)

பிரம்மன், “ஓ! உயர்வாக அருளப்பட்டவளே, ரகசிய சடங்குடன் சேர்த்து நீ சொன்ன கடமை சிறப்பானதாகும். புகழ் உனதாகட்டும். உன் தவங்கள் தொடர்ந்து பெருகும் வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன்” என்றான்.(14)

யமன், “நான் உங்களிடம் இருந்து இனிமையான, சிறப்பான உரையைக் கேட்டேன். எனக்கு ஏற்புடைய வகையில் சித்திரகுப்தன் சொன்னதை இப்போது கேட்பீராக.(15) அச்சொற்கள் ரகசிய சடங்குடன் கூடிய கடமை தொடர்பானதாகவும், பெரும் முனிவர்களாலும், நம்பிக்கையுடன் கூடியவர்களாலும், தன் நன்மையை விரும்புபவர்களாலும் கேட்கத்தகுந்ததாகவும் இருக்கின்றன.(16) உயிரினங்களால் இழைக்கப்படும் அறமோ, பாவமோ ஏதும் அழிவதில்லை. முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவு {அமாவாசை} நாட்களில் அச்செயல்கள் அவை சார்ந்திருக்கும் சூரியனிடம் அறிவிக்கப்படுகின்றன.(17) ஒரு மனிதன் இறந்தோரின் உலகத்திற்குள் செல்லும்போது, சூரிய தேவன் அவனுடைய செயல்கள் அனைத்துக்குமான சாட்சியாக இருக்கிறான். அறவோனாகிருப்பவன் அங்கே தன் அறத்திற்கான கனிகளை அடைகிறான்.(18) சித்திரகுப்தனால் அங்கீகரிக்கப்பட்ட சில மங்கலக் கடமைகளை இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். குடிப்பதற்கான நீர், இருளை அகற்றும் விளக்குகள் ஆகியவை எப்போதும் கொடையளிக்கப்பட வேண்டும்.(19) காலணிகள், கொடைகள், கபிலைப்பசுக்கள் ஆகியவையும் உரிய சடங்குகளுடன் கொடையளிக்கப்பட வேண்டும். புஷ்கரையில் குறிப்பாக ஒருவன் வேதமறிந்த ஒரு பிராமணனுக்கு ஒரு கபிலைப் பசுவைக் கொடையாக அளிக்க வேண்டும்.(20)

அவன் எப்போதும் தன் அக்னிஹோத்ரத்தைப் பெருங்கவனத்துடன் பராமரிக்க வேண்டும். இங்கே சித்திரகுப்தனால் மற்றொரு கடமையும் அறிவிக்கப்படுகிறது.(21) உயிரினங்களில் சிறந்தவை, அந்தக் கடமையின் பலன்களைத் தனித்தனியாகக் கேட்பது தகுந்தது. காலப்போக்கில் ஒவ்வொரு உயிரினமும் அழிவடையவே விதிக்கப்பட்டிருக்கிறது.(22) அற்ப புத்தி கொண்டோர், பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்டு இறந்தோரின் உலகில் பெரும் துன்பத்தைச் சந்திக்கின்றனர். அத்தகைய துன்பத்தில் இருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.(23) அவர்கள் காரிருளுக்குள் நுழைய வேண்டும். அத்தகைய துன்பத்தைக் கடப்பதில் வெல்ல ஒருவன் செய்ய வேண்டிய கடமைகளை இப்போது சொல்லப் போகிறேன்.(24) அந்தக் கடமைகளைச் செய்வதற்கு ஆகும் செலவு குறைவே ஆனால் அவை பெரும் பலன் நிறைந்தவையா இருக்கின்றன. உண்மையில் அத்தகைய செயல்பாடு மறுமையில் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும். குடிப்பதற்கான நீரைக் கொடையாக அளிப்பதில் உண்டாகும் பலன்கள் சிறந்தவையாகும். குறிப்பாக மறுமையில் உயர்ந்த பலன்களை அளிக்கும்.(25)

குடிப்பதற்கான நீரைக் கொடையளிப்பவர்களுக்காக மறுமையில் சிறந்த நீர் நிறைந்த ஒரு பேராறு விதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அந்த ஆற்றில் உள்ள நீர் வற்றாததாகவும், குளுமையானதாகவும், அமுதம் போன்ற இனிமை கொண்டதாகவும் இருக்கிறது.(26) இவ்வுலகில் நீர்க்கொடை அளிப்பவன் இவ்வுலகில் இருந்து சென்ற பிறகு, மறுமையில் அந்த ஆற்றில் இருந்தே நீரைக் குடிக்கிறான். விளக்குகளை {தீபங்களைக்} கொடையளிப்பதால் கிட்டும் அபரிமிதமான பலன்களை இப்போது கேட்பீராக.(27) இவ்வுலகில் விளக்குகளைக் கொடையளிக்கும் மனிதன் ஒருபோதும் (நரகத்தின்) காரிருளைக் காண வேண்டியதில்லை. அவன் வேறு உலகத்திற்குச் செல்லும்போது, சோமன், சூரியன், நெருப்பு தேவன் ஆகியோர் தங்கள் ஒளியை அவனுக்கு அளிக்கின்றனர்.(28) அத்தகைய மனிதனின் அனைத்துப் பக்கங்களிலும் சுடர்மிக்க ஒளி இருக்கத் தேவர்கள் விதிக்கின்றனர். உண்மையில், விளக்குகளை {தீபங்களைக்} கொடையளிப்பவன் இறந்தோரின் உலகத்திற்குச் செல்லும்போது அவன் இரண்டாவது சூரியனைப் போலத் தூயப் பிரகாசத்துடன் சுடர்விடுகிறான்.(29) எனவே ஒருவன் இம்மையில் குறிப்பாக விளக்குகளையும், குறிப்பாக நீர்க்கொடையையும் அளிக்க வேண்டும். வேதங்களை அறிந்த ஒரு பிராமணனுக்குக் கபிலைப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம், குறிப்பாகப் புஷ்கரையில் அக்கொடை அளிக்கப்படும்போது ஒருவன் அடையும் பலன்களைச் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(30)

அத்தகைய மனிதன் நித்திய பலனை உண்டாக்கவல்ல கொடையான காளையுடன் சேர்த்து நூறு பசுக்களைக் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(31) ஒரேயொரு கபிலைப் பசுவைக் கொடையளிப்பது நூறு பசுக்களைக் கொடையளித்த பலனைக் கொடுக்கவல்லதாகக் கருதப்படுவதால் கொடையாளி எந்தப் பாவத்தைச் செய்த குற்றவாளியாக இருந்தாலும், அதிலும் பாவங்களில் பெரிய பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக இருந்தாலும் {பிரம்மஹத்தி தோஷம் கொண்டவனாக இருந்தாலும்} அவன் கொடையளிக்கும் ஒரேயொரு கபிலைப்பசு அவற்றைத் தூய்மைப்படுத்தவல்லதாகும்.(32) எனவே, ஒருவன் கார்த்திகை மாத முழு நிலவு {பௌர்ணமி} நாளில் (புஷ்கரை என்ற பெயரில் அறியப்பட்ட இரு தீர்த்தங்களில்) பெரியதாகக் கருதப்படும் புஷ்கரையில் ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிக்க வேண்டும். அத்தகைய கொடையை அளிப்பதில் வெல்லும் மனிதர்கள் எவ்வகைத் துன்பத்தையும், கவலையையும், வலிதரும் முட்களையும் சந்திக்க வேண்டியதில்லை.(33) கொடைக்குத் தகுந்த ஒரு மேன்மையான பிராமணனுக்கு ஒரு ஜோடிக் காலணிகளைக் கொடையளிக்கும் மனிதன் அதே போன்ற பலன்களை அடைகிறான். ஒரு குடையைக் கொடையளிப்பதன் மூலம் அம்மனிதன் மறுமையில் வசதியான நிழலை அடைகிறான் (அவன் சூரியனுக்கு வெளிப்பட்டிருக்க மாட்டான்).(34) தகுந்தவர்களுக்கு அளிக்கப்படும் கொடை ஒருபோதும் வீணாவதில்லை. அது நிச்சயம் கொடையாளிக்கு ஏற்புடைய விளைவுகளை உண்டாக்கும்” என்று {சித்திரகுப்தன் சொன்னதாக யமன்} சொன்னான். சித்திரகுப்தனின் இந்தக் கருத்துகளைக் கேட்ட சூரியனுக்கு மயிர்ச்சிலிர்ப்பு உண்டானது.(35)

பெருங்காந்தியுடன் கூடிய அவன் {சூரியன்}, “உயர் ஆன்ம சித்திரகுப்தனால் எடுத்துரைக்கப்பட்ட கடமை தொடர்பான புதிர்களைக் கேட்டீர்கள்.(36) நம்பிக்கையுடன் கூடிய மனிதர்கள் உயர் ஆன்ம பிராமணர்களுக்கு இக்கொடைகளை அளிப்பதன் மூலம் அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.(37) தீச்செயல்களால் களங்கமடைந்த இந்த ஐவகை மனிதர்களால் ஒருபோதும் தப்பிக்க முடியாது. உண்மையில் பாவம் நிறைந்த நடத்தை கொண்டவர்களும், மனிதர்களில் இழிந்தவர்களாகக் கருதப்படுபவர்களுமான அவர்களிடம் ஒருபோதும் பேசக்கூடாது. உண்மையில் அவர்கள் எப்போதும் தவிர்க்கப்பட வேண்டும்.(38) பிராமணனைக் கொன்றவன் {பிரம்மஹத்தி செய்தவன்}, பசுவைக் கொன்றவன் {கோஹத்தி செய்தவன்}, பிறர் மனைவிகளுடன் சேரும் பாலியல் கலவிக்கு அடிமையானவன், (வேதங்களில்) நம்பிக்கையில்லாதவன், மனைவியைக் கொண்டு பிழைப்பவன் ஆகியோரே அந்த ஐவராவர்.(39) பாவம் நிறைந்த நடத்தை கொண்ட இந்த மனிதர்கள், இறந்தோரின் உலகத்திற்குச் செல்லும்போது, சீழ் மற்றும் குருதியில் வாழும் புழுக்களைப் போல நரகத்தில் அழுகுகின்றனர்.(40) பித்ருக்கள், தேவர்கள், ஸ்நாதகப் பிராமணர்கள் மற்றும் தவப்பயிற்சிகளுக்குத் தங்களை அர்ப்பணித்த வேறு மறுபிறப்பாளர்கள் ஆகியோரால் இந்த ஐவரும் புறக்கணிக்கப்படுகின்றனர்” என்றான் {சூரியன்}”.(41)

பிரமதர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 131-பிரமதர்கள் யாரைப் பீடிப்பார்கள் என்று தேவர்களிடம் சொன்னது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது உயர்வாக அருளப்பட்டவர்களான தேவர்கள், பித்ருக்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் பிரமதர்களிடம்[1],(1) “நீங்கள் அனைவரும் உயர்வாக அருளப்பட்டவர்கள். நீங்கள் இரவில் புலப்படா வகையில் திரிபவர்கள். இழிந்தவர்களும், தூய்மையற்றவர்களும், களங்கமுள்ளவர்களுமான மனிதர்களை நீங்கள் ஏன் பீடிக்கிறீர்கள்?(2) உங்கள் அதிகாரத்திற்குத் தடையாக எச்செயல்கள் கருதப்படுகின்றன? உண்மையில் எந்தச் செயல்களைச் செய்வதன் விளைவால் நீங்கள் மனிதர்களைப் பீடிக்க முடியாதவர்கள் ஆகிறீர்கள்? ராட்சசர்களை அழித்து, மனிதர்களின் வசிப்பிடங்களில் உங்கள் அதிகாரத்தை உறுதிபடுத்துவைத் தடுக்கும் செயல்கள் எவை? இரவுலாவிகளே, இவை அனைத்தையும் நாங்கள் உங்களிடம் இருந்து கேட்க விரும்புகிறோம்” என்றனர்.(4)பிரமதர்கள், “பாலியல் கலவிச் செயல்களால் மனிதர்கள் தூய்மையற்றவர்களாகக் கொள்ளப்படுகிறார்கள். அத்தகைய செயல்களுக்குப் பின்பு தங்களைத் தூய்மை படுத்திக் கொள்ளாதவர்கள், பெரியோர்களை அவமதிப்பவர்கள், அறியாமையால் பல்வேறு வகை இறைச்சிகளை உண்பவர்கள், மரத்தினடியில் உறங்கும் மனிதன்,(5) உறங்கப் சென்று தன் படுக்கையின் தலையணைக்கடியில் இறைச்சியை வைத்திருப்பவன், கால் வைக்க வேண்டிய இடத்தில் தலையையோ, தலை வைக்க வேண்டிய இடத்தில் காலையோ வைத்து படுப்பவன் ஆகியோர் தூய்மையற்ற மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். உண்மையில் இம்மனிதர்கள் {நாங்கள் நுழையத்தக்க} பல துளைகளைகளைக் கொண்டிருக்கின்றனர்.(6)

நீருக்குள் சளி மற்றும் தூய்மையற்ற {சிறுநீர், மலம் போன்ற} கழிவுகளை வீசுபவர்களும் அதே வகையில் எண்ணப்படுகின்றனர். இந்த மனிதர்கள் எங்களால் கொல்லப்படவும், உண்ணப்படவும் தகுந்தவர்களாவர் என்பதில் ஐயமில்லை.(7) உண்மையில், இத்தகைய ஒழுக்கம் கொண்ட மனிதர்களையே நாங்கள் பீடிக்கிறோம். மாற்று மருந்தாகக் கருதப்படுபவையும், மனிதர்களுக்கு எத்தீங்கையும் விளைவிப்பதில் எங்களைத் தவறச் செய்பவையுமான செயல்களை இப்போது கேட்பீராக.(8)

கோரோசனையை மேனியில் பூசிக்கொண்டவர்களையோ, கரங்களில் வசம்பை வைத்திருப்பவர்களையோ, அக்ஷதை என்ற பெயரில் உள்ள உட்பொருட்களுடன் நெய்யைக் கொடையளிப்பவர்களையோ, நெய்யையும், அக்ஷதையையும் தங்கள் தலைகளில் வைத்துக் கொள்பவர்களையோ,(9) இறைச்சியைத் தவிர்ப்பவர்களையோ எங்களால் பீடிக்க இயலாது. எந்த மனிதனின் வீட்டில் அணையாமல் பகலும் இரவும் புனித நெருப்பு எரிகின்றதோ,(10) எவன் தன் வசிப்பிடத்தில் ஓநாயின் தோலையோ, பற்களையோ, மலை ஆமையையோ வைத்துக் கொள்வானோ, எவனுடைய வீட்டில் இருந்து வேள்விப்புகை மேல்நோக்கிச் சுழன்று செல்கிறது, பழுப்பு, அல்லது எவன் கருப்பு வண்ணத்திலான பூனை அல்லது ஆட்டை வளர்ப்பானோ அவன் எங்கள் அதிகாரத்தில் இருந்து விடுபட்டவன் ஆவான்[2].(11)உண்மையில், இவற்றைத் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ளும் இல்லறத்தார் அழுகிய பிணங்களை உண்டு வாழும் கடும் பூதங்களாலும் ஊடுருவ இயலாதவையாக அவை {தங்கள் வீடுகள்} இருப்பதைக் காண்பார்கள்.(12) இன்பங்களைத் தேடி பல்வேறு உலகங்களில் திரியும் எங்களைப் போன்றவையாலும் {பூதங்களாலும்} இத்தகைய வீடுகளுக்கு எந்தத் தீங்கையும் செய்ய முடியாது. எனவே, தேவர்களே, ராட்சசர்களுக்கு (ராட்சசர்களுக்கும் வேறு வகையைச் சார்ந்த பிசாசுகளுக்கும்) அழிவைத் தரும் இத்தகைய பொருட்கள் மனிதர்கள் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ள வேண்டும். தேவர்களான நீங்கள் கொண்டிருந்த பெரும் ஐயங்கள் குறித்த அனைத்தையும் நாங்கள் சொல்லிவிட்டோம்” என்றனர் {பிரமதர்கள்}.(13)

நாக பலி காணிக்கை! – அநுசாஸனபர்வம் பகுதி – 132-நாகபலி காணிக்கையளிக்கும் முறைகளை ரேணுகன் என்ற யானைக்குச் சொன்ன திக்கஜங்கள்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஆதி தாமரையில் உதித்தவனும், (இனிமையிலும், நறுமணத்திலும்) தாமரைக்கே ஒப்பானவனுமான பெரும்பாட்டன் பிரம்மன், சச்சியின் தலைவனான வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களிடம்,(1) “அதோ பாதாள லோகத்தில் வசிப்பவனான வலிமைமிக்க {யானையான} நாகன் அமர்ந்திருக்கிறான். பெரும் பலத்தையும், சக்தியையும், ஆற்றலையும் கொண்ட அவனது பெயர் ரேணுகன் ஆகும். நிச்சயம் அவன் பெரியவன் ஆவான்.(2) பெரும் சக்தியும், பலமும் கொண்டவையும், மலைகள், நீர்நிலைகள் மற்றும் தடாகங்களுடன் கூடிய மொத்த பூமியையும் தாங்கிக் கொண்டிருப்பவையும் வலிமைமிக்க யானைகளை {திக்கஜங்களை} உங்கள் வேண்டுகோளுக்கிணங்க இந்த ரேணுகன் பேட்டி காணட்டும். ரேணுகன் அவற்றிடம் சென்று அறம் அல்லது கடமையின் புதிர்களைக் குறித்து அவற்றிடம் கேட்கட்டும்” என்றான்.(3,4) பெரும்பாட்டனின் இச்சொற்களைக் கேட்ட தேவர்கள், தங்கள் மனங்களில் நிறைவடைந்தவர்களாக (யானையான) ரேணுகனை, அந்த உலகைத் தாங்கிப் பிடிப்பவையிடம் {திக் கஜங்களிடம்} அனுப்பினர்.(5)

அந்த யானைகள் இருந்த இடத்திற்குச் சென்ற ரேணுகன் அவற்றிடம் {யானைகளிடம்}, “வலிமைமிக்க உயிரினங்களே, அறம் மற்றும் கடமையின் புதிர்களைக் குறித்து உங்களிடம் கேட்குமாறு தேவர்கள் மற்றும் பித்ருகள் எனக்கு ஆணையிட்டுள்ளனர். நீங்கள் அவை குறித்து விரிவாகப் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன். உயர்வாக அருளப்பட்டவர்களே, உங்கள் ஞானத்தின் ஆணைப்படி இக்காரியத்தைக் குறித்து நீங்கள் பேசுவீராக” என்றான் {நாகனான ரேணுகன் என்ற யானை}.(6)

எட்டுத் திக்குகளில் நிற்கும் (எட்டு) யானைகள், “கார்த்திகை மாதத் தேய்பிறையின் மங்கலமான எட்டாம் நாளில் {அஷ்டமியில்} அஸ்லேஷ {ஆயில்யம்} நட்சத்திரத்தில் ஒருவன் பாகு மற்றும் அரிசி கொடைகளை அளிக்க வேண்டும்.(7) கோபத்தை அடக்கி, முறையான உணவுத்திட்டத்திற்கு ஒழுங்கமைந்து வாழும் ஒருவன் ஒரு சிராத்தத்தில் பின்வரும் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே இந்தக் காணிக்கைகளை அளிக்க வேண்டும். “பெரும் பலத்தைக் கொண்ட பலதேவனும் பிற நாகர்களும்,(8) அழிவற்ற, நித்தியமான பேருடல்படைத்த வலிமைமிக்கப் பாம்புகள் பிறவும், குலங்களில் பிறந்திருக்கும் வேறு பெரும் பாம்புகள் அனைத்தும்,(9) என் பலமும், சக்தியும் பெருகுவதற்காக எனக்குப் பலி காணிக்கைகளை அளிக்கட்டும். உண்மையில், என் பலமானது, மூழ்கிய பூமியை உயர்த்திய அருளப்பட்ட நாராயணனைப் போலப் பெரும்பலமாக அமையட்டும்” {என்ற மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே பாகு மற்றும் அரசிக் கொடைகளை அளிக்க வேண்டும்}.(10)

இந்த மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே அவன் ஓர் எறும்புப்புற்றில் பலி காணிக்கைகளை இட வேண்டும். நாள் சமைப்பவன் {சூரியன்}, மேற்கில் உள்ள தன் அறைகளுக்குள் ஓயச் செல்லும்போது அரிசி மற்றும் கச்சா சர்க்கரை {வெல்லமாக இருக்க வேண்டும்} ஆகியவற்றாலான காணிக்கைகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட எறும்புப் புற்றுகளில் வைக்க வேண்டும்.(11) அதற்கு முன்பே அந்த எறும்புப்புற்றில் கஜேந்திர மலர்களைத் தூவ வேண்டும். நீலத் துணிகள் மற்றும் நறுமணக் களிம்புகளும் காணிக்கையளிக்கப்பட வேண்டும்.(12) இவ்வகையில் காணிக்கைகள் அளிக்கப்பட்டால் பாதாள லோகத்தில் வாழ்வோரும் {நாகர்களும்}[1], மேலுலகங்களின் கனத்தைத் தங்கள் தலைகளிலும், தோள்களிலும் தாங்கி நன்கு நிறைவடைகின்றனர். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இத்தகைய காணிக்கைகள் எங்களுக்கு அளிக்கப்பட்டதன் விளைவால் நாங்கள் பூமியைத் தாங்குவதில் எந்தக் களைப்பையும் அடையவில்லை.(13)சுமக்கும் சுமையால் பீடிக்கப்படும் நாங்கள், தன்னல நோக்கங்கள் கிஞ்சிற்றும் இன்றி (மனிதர்களின் நன்மைக்காக) இதையே சிந்திக்கிறோம். இந்த விதியை நோற்று ஒரு முழு வருடம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உண்ணா நோன்பிருக்கும் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள், அத்தகைய கொடைகளின் மூலம் பெரும்பலன்களை அடைகிறார்கள்.(14) எறும்புப் புற்றில் இத்தகைய பலி காணிக்கைகளை அளிப்பது உண்மையில் மேன்மையான பலன்கள் நிறைந்தது என்று நாங்கள் நினைக்கிறோம்.(15) இத்தகைய காணிக்கைகளை அளிப்பதன் மூலம் ஒருவன், மூவுலகங்களில் உள்ள வலிமைமிக்க யானைகள் அனைத்திற்கும் நூறு வருடகாலம் விருந்தோம்பல் கடமைகளைச் செய்தவனாகக் கருதப்படுவான்” என்றன {திக்கஜங்கள்}.(16)

அந்த வலிமைமிக்க யானைகள் {திக்கஜங்கள்} சொன்ன இந்தச் சொற்களைக் கேட்ட தேவர்களும், பித்ருக்களும், உயர்வாக அருளப்பட்டவர்களான முனிவர்கள் அனைவரும் ரேணுகனை மெச்சினார்கள்” {என்றார் பீஷமர்}.(17)

பசுக்களின் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 133-பசுக்களுக்கு உணவளிப்பதன் சிறப்பைச் சொன்ன மஹேஸ்வரன்…

மஹேஸ்வரன், “உங்கள் நினைவுகளைத் தேடி நீங்கள் அனைவரும் சொன்ன கடமைகள் யாவும் சிறப்பானவையாகும். அறம் மற்றும் கடமை தொடர்பான சில புதிர்களை நான் அறிவிக்கப் போகிறேன். நான் சொல்வதை நீங்கள் அனைவரும் கேட்பீராக.(1) அறத்தில் நிறுவப்பட்ட புத்தியைக் கொண்டவர்களும், நம்பிக்கையுடன் கூடியவர்களுமான மனிதர்களுக்கு மட்டுமே உயர்ந்த பலன்கள் நிறைந்த அறம் மற்றும் கடமைப் புதிர்கள் போதிக்கப்பட வேண்டும்.(2)

கவலையில் இருந்து விடுதலை அடைந்த இதயத்துடன் ஒரு மாத காலம் ஒவ்வொரு நாளும் பசுக்களுக்கு உணவைக் கொடுத்து, அத்தகைய காலம் முழுவதும் ஒரே ஒரு வேளை உணவை மட்டுமே உண்பவன் அடையும் பலன்களைக் கேட்பீராக.(3) பசுக்கள் உயர்வாக அருளப்பட்டவையாகும். புனிதங்கள் அனைத்திலும் மிகப் புனிதமானவையாக அவை கருதப்படுகின்றன. உண்மையில், அவையே தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மூவுலங்கங்களையும் தாங்கிப் பிடிப்பவையாகும்.(4)

அவற்றுக்கு அளிக்கப்படும் மதிப்புமிக்கத் தொண்டுகள் உயர்ந்த பலன்கள் மற்றும் முக்கிய விளைவுகள் நிறைந்தவையாகும். ஒவ்வொரு நாளும் பசுக்களுக்கு உணவை அளிக்கும் மனிதன் ஒவ்வொரு நாளும் அறத்தகுதியில் முன்னேறுகிறான்.(5) முற்காலத்தில், கிருத யுகத்தில் இந்த விலங்குகளிடம் என் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினேன். அதன் பிறகே, ஆதி தாமரையில் பிறந்த பிரம்மன் (பசுக்களிடம் கருணை காட்டுமாறு) என்னிடம் வேண்டினான்[1].(6)இந்தக் காரணத்தினாலேயே ஒரு காளையானது இந்த நாள் வரை என் தலைக்கு மேலே என் கொடிக்கம்பத்தில் சின்னமாக அமைந்து நிற்கிறது. நான் எப்போதும் பசுக்களுடன் விளையாடுகிறேன். எனவே அனைவராலும் பசுக்கள் வழிபடப்பட வேண்டும்.(7) பசுக்கள் பெரும் சக்தியைக் கொண்டவையாகும். அவை வரங்களையும் அளிக்கவல்லவையாகும். வழிபடப்பட்டால் அவை வரங்களை அளிக்கும். பசுக்களுக்கு ஒரேயொரு நாள் உணவைக் கொடுத்தாலும், அம்மனிதன், வாழ்வில் தன் நற்செயல்கள் அனைத்திற்கும் கிட்டும் பலன்களில் நான்கில் ஒரு பகுதியை அந்த நல்ல உயிரினங்களிடம் இருந்து பெறுகிறான்” என்றான் {மஹேஸ்வரன்}.(8)

ரகசிய தர்மங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 134-ஸ்கந்தன்; அறங்கள் அனைத்தையும் புகழ்ந்த விஷ்ணு…

ஸ்கந்தன், “என்னால்அங்கீகரிக்கப்பட்ட கடமையை இப்போது அறிவிக்கப் போகிறேன். குவிந்த கவனத்துடன் கேட்பீராக. நீல {கறுப்பு} நிறக் காளையின் கொம்புகளில் இருந்து சிறிதளவு மண்ணை எடுத்து தன் மேனியில் மூன்று நாட்கள் பூசிக்கொண்டு அதன் பிறகு நீராடும் ஒருவன் பெரும் பலன்களை அடைகிறான். அந்தப் பலன்கள் எவை என்பதைக் கேட்பீராக. அத்தகைய செயலின் மூலம் ஒருவன் ஒவ்வொரு களங்கத்தையும், தீமையையும் கழுவிக் கொண்டு, மறுமையில் அரசுரிமையை அடைந்து ஆள்கிறான்.(2) எத்தனை முறை அவன் இவ்வுலகில் பிறக்கிறானோ, அவ்வளவு முறை அவன் தனது வீரத்திற்காகக் கொண்டாடப்படுகிறான். யாரும் அறியாத மற்றொரு புதிரை இப்போது கேட்பீராக.(3)

ஒரு தாமிரப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, சமைக்கப்பட்ட உணவை தேன் கலந்து அதிலிட்டு, நிலவு முழுமையாக இருக்கும் {அமாவாசை} நாளின் மாலை வேளையில், உதிக்கும் சந்திரனுக்கு அதைப் பலியாகக் கொடுக்க வேண்டும்.(4) இவ்வழியில் செயல்படும் மனிதன் அடையும் பலன்களை நம்பிக்கையுடன் அறிவீராக. சாத்தியர்கள், ருத்திரர்கள், ஆதித்யர்கள், விஷ்வேதேவர்கள், அசுவின இரட்டையர்கள்,(5) மருத்துகள், வசுக்கள் ஆகியோர் அனைவரும் அந்தக் காணிக்கையை ஏற்கின்றனர். அத்தகைய காணிக்கையின் மூலம் சோமமும், நீர்க்கொள்ளிடமான பெருங்கடலும் வளர்கின்றன. என்னால் அறிவிக்கப்பட்டதும், பெரும்பாலும் யாராலும் அறியப்படாததுமான இக்கடமையானது செய்யப்பட்டால் நிச்சயம் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றான் {ஸ்கந்தன்{.(6)

விஷ்ணு, “உயர் ஆன்ம தேவர்களாலும், முனிவர்களாலும் பாதுகாக்கப்படும் அறம் மற்றும் கடமை சார்ந்த புதிர்களைக் குவிந்த கவனத்துடனும், வன்மத்தில் இருந்து விடுபட்டு நம்பிக்கையுடனும் ஒவ்வொரு நாளும் கேட்கும் மனிதன், ஒரு போதும் தீமைக்கு அடிபணியவேண்டியதில்லை. அத்தகைய மனிதன் அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(7,8) புலன்களை முழுமையாக அடக்கி, (முன்பு பேசிய அனைவராலும்) அறிவிக்கப்பட்ட மங்கலமான பலன்மிக்கக் கடமைகள் அடங்கிய இந்தப் பகுதிகளை அவற்றின் புதிர்களுடன் சேர்த்துப் படிப்பவன், அவர்களுடைய செல்பாட்டுக்குரிய அனைத்துப் பலன்களையும் அடைகிறான்.(9) பாவத்தால் ஒருபோதும் அவனை வெல்லமுடியாது. உண்மையில் அத்தகைய மனிதன் எவ்வகைக் களங்கங்களாலும் கறைபடமாட்டான். உண்மையில், அவன் இந்தப் புதிர்களைப் படிப்பதன் மூலமோ, பிறருக்கு அறிவிப்பதன் மூலமோ, அவற்றைக் கேட்பதன் மூலமோ (அறிவிக்கப்பட்டிருக்கும்) பலன்களை அபரிமிதமாக வெல்கிறான்.(10)

அத்தகைய உயிரினத்தால் அளிக்கப்படும் ஹவ்யகவ்யங்களைத் தேவர்களும், பித்ருக்களும் எப்போதும் உண்கின்றனர். காணிக்கை அளிப்பவனின் ஒழுக்கத்தின் விளைவால் இவை இரண்டும் வற்றாதனவாகின்றன. முழு நிலவு நாளிலோ, புது நிலவு நாளிலோ முதன்மையான பிராமணர்களுக்கு இந்தப் புதிர்களைக் குவிந்த கவனத்துடன் உரைப்பவனும் இத்தகைய பலன்களையே அடைகிறான்.(11) இத்தகைய மனிதன், அத்தகைய செயலின் விளைவால், அனைத்துக் கடமைகளையும் உறுதியாக நோற்பவனாகிறான். அதையுந்தவிர, அவன் முனிவர்கள், தேவர்கள் மற்றும் பித்ருக்களுக்கு எப்போதும் பிடித்தமானவன் ஆகிறான்.(12) கொடூரமானவையாக வகைப்படுத்தப்படும் பயங்கரப் பாவங்களைச் செய்த மனிதனும், அறம் மற்றும் கடமை குறித்த இந்தப் புதிர்கள் சொல்லப்படும்போது கேட்பதால் மட்டுமே அவை அனைத்திலும் இருந்து தூய்மையடைந்துவிடுகிறான்” என்றான்”.(13)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மனிதர்களின் மன்னா, தேவர்களின் நெஞ்சகங்களில் அறம் மற்றும் கடமை குறித்த இந்தப் புதிர்களே வசிக்கின்றன. தேவர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டவையும், வியாசரால் அறிவிக்கப்பட்டவையுமான அவற்றை உன்நன்மைக்காக நான் இப்போது அறிவித்திருக்கிறேன். அறம் மற்றும் கடமையை அறிந்த ஒருவன், மொத்த பூமியில் நிறைந்திருக்கும் வளங்கள் மற்றும் செல்வங்களை விட இந்தச் சிறந்த ஞானம் (மதிப்பின் அளவில்) மேன்மையானது என்று நினைக்கிறான்.(14,15) நம்பிக்கையற்ற ஒருவனுக்கோ, நாத்திகனுக்கோ, தன் வகைக்கான கடமைகளில் இருந்து வீழ்த்துவிட்டவனுக்கோ, கருணையற்றவனுக்கோ, வெற்று சச்சரவுகளைக் கொண்ட அறிவியலில் அர்ப்பணிப்புள்ளவனுக்கோ, தன் ஆசானிடம் பகைமை கொண்டிருப்பவனுக்கோ, அனைத்து உயிரினங்களும் தன்னில் இருந்து வேறுபட்டவை என்று கருதுபவனுக்கோ இந்த ஞானத்தை ஒருபோதும் போதிக்கக்கூடாது” {என்றார் பீஷ்மர்}.(16)

உணவு ஏற்றலும் தவிர்த்தலும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 135-உணவை எவரிடம் இருந்து ஏற்கலாம், எவரிடம் இருந்து ஏற்கக்கூடாது என்பன உள்ளிட்டவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதா, இவ்வுலகில் ஒரு பிராமணன் தான் உண்ணும் உணவை யாரிடம் இருந்து ஏற்கலாம்? க்ஷத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகியோரும் முறையே யாரிடம் இருந்து தங்கள் உணவை ஏற்கலாம்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“ஒரு பிராமணன், மற்றொரு பிராமணனிடமிருந்தோ, க்ஷத்திரியன் அல்லது வைசியனிடமிருந்தோ தன் உணவை ஏற்கலாமேயன்றி ஒருபோதும் ஒரு சூத்திரனிடமிருந்து உணவை ஏற்கக்கூடாது.(2)

ஒரு க்ஷத்திரியன் தன் உணவை, பிராமணன், க்ஷத்திரியன் மற்றும் வைசியரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். எனினும், அவன் தீய வழிகளுக்கு அடிமையாக இருப்பவர்களும், எந்த ஐயமுமின்றி அனைத்துவகை உணவுகளை உண்பவர்களுமான சூத்திரர்களால் கொடுக்கப்படும் உணவைத் தவிர்க்க வேண்டும்.(3)

ஒவ்வொரு நாளும் தங்கள் புனித நெருப்பை மூட்டுபவர்களும், குணத்தில் களங்கமில்லாதவர்களும், சாதுர்மாஸ்ய நோன்பைச் செய்பவர்களுமான வைசியர்களால் கொடுக்கப்படும் உணவைப் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் உண்ணலாம்.(4) ஆனால், ஒரு சூத்திரனிடம் இருந்து உணவை உண்ணும் மனிதன், பூமியின் மலத்தை உண்கிறான், மனித உடலின் கழிவுகளைப் பருகுகிறான், உலகம் அனைத்தின் மாசுகளை உண்கிறான்.(5)

ஒரு சூத்திரனிடம் இருந்து பெற்ற உணவை உண்பவன் பூமியின் மாசுகளையே உண்கிறான். உண்மையில், சூத்திரனிடம் இருந்து தங்கள் உணவைப் பெறும் பிராமணர்கள் பூமியின்அழுக்கையே உண்கிறார்கள்.(6)

ஒருவன் சூத்திரனுக்குத் தொண்டு செய்பவனாக இருப்பானேயானால், தன் வகைக்கான அனைத்துச் சடங்குகளையும் முறையாகச் செய்பவனாக இருந்தாலும், அவன் நரகத்தில் விழுவான். பிராமணனோ, க்ஷத்திரியனோ, வைசியனோ இவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் அறச் சடங்களுகளை முறையாகச் செய்பவர்களாக இருந்தாலும் இழிவடைவார்கள்.(7)

வேதங்களைக் கற்பது, மனித குலத்தின் நன்மையை நாடுவது ஆகியன பிராமணனின் கடமை; மனிதர்களைப் பாதுகாப்பது க்ஷத்திரியனின் கடமை; தங்கள் பொருள் செழிப்பை ஊக்கப்படுத்துவதாகும் எனச் சொல்லப்படுகிறது.(8) ஒரு வைசியன், தன் செயல்கள் மற்றும் உழவின் கனிகளைப் பகிர்ந்து கொடுப்பதன் மூலம் வாழ்கிறான். பசுக்களை வளர்த்தல் மற்றும் வணிகமும் நிந்தனையில்லாமல் ஒரு வைசியன் செய்யக்கூடிய நியாயமான பணிகளாகும்.(9)

தனக்குரிய தொழிலைக் கைவிட்டு, சூத்திரனின் தொழிலை எடுத்துக் கொள்ளும் மனிதன், சூத்திரனாகவே கருதப்பட்டு, அவனிடம் இருந்து ஒருபோதும் உணவை ஏற்கக்கூடாது.(10) மருத்துவன், கூலிப்படையினர், வீட்டைப் பாதுகாப்பவனாகச் செயல்படும் புரோகிதன், முழுமையாக ஒரு வருடம் வேதம் ஓதியும் பயன்படாதவன் ஆகியோர் அனைவரும் சூத்திரர்களாகக் கருதப்பட வேண்டும்.(11) சூத்திரனின் வீட்டில் நடைபெறும் விழாக்களில் அளிக்கப்படும் உணவை ஆணவமாக உண்பவன் பயங்கரத் துன்பத்தால் பீடிக்கப்படுவான். தடைசெய்யப்பட்ட உணவை உண்பதன் விளைவால் அவன் தன் குடும்பத்தையும், பலத்தையும், சக்தியையும் இழந்து, இழிந்த விலங்குகளின் நிலையை அடைந்து, அறந்தவறி, அற நோன்புகள் அனைத்தும் அற்றவனாக நாயின் நிலைக்கு இழிந்தவனாகிறான்.(12,13)

ஒரு மருத்துவனிடம் உண்ணும் உணவு மலத்தைப் போன்றதாகும்; விலைமகளிடம் உண்ணும் உணவு சிறுநீரைப் போன்றதாகும்; திறம்பெற்ற இயந்திரக் கைவினைஞரின் {சிற்பிகளின்} உணவு குருதியைப் போன்றதாகும்.(14)

நல்லோரால் அங்கீகரிக்கப்பட்ட பிராமணன் ஒருவன், கல்வியின் மூலம் வாழும் ஒருவனிடம் உணவு உண்டால் அவன் சூத்திரனிடம் இருந்து உணவைப் பெற்றவனாகக் கருதப்படுகிறான். நல்லோர் அனைவரும் அத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.(15) அனைவராலும் நிந்திக்கப்படும் மனிதனின் உணவானது, குருதிக்குளத்தில் இருந்து பெறப்பட்ட உணவாகச் சொல்லப்படுகிறது. தீய மனிதனிடம் இருந்து உணவை ஏற்பவன், பிராமணனைக் கொன்றவனைப் போல நிந்திக்கத்தகுந்தவனாகக் கருதப்படுகிறான்.(16)

ஒருவன் கொடையாளியால் முறையாக வரவேற்கப்படாமல் ஆதரிக்கப்படாமல் இருந்தால் அவனுடைய உணவை ஏற்கக்கூடாது. இவ்வாறு செய்யும் பிராமணன் நோயால் பீடிக்கப்படுகிறான், அவனது குலம் அழிகிறது.(17) நகரக் காவலாளியிடம் இருந்து உணவை ஏற்பதன் மூலம் ஒருவன் தள்ளிவைக்கப்பட்ட இழிந்தி நிலைக்குத் தாழ்கிறான்.(18)

பசு அல்லது பிராமணனைக் கொன்ற குற்றம் புரிந்தவன், ஆசானின் மனைவியுடன் கூடாவுறவு கொண்டவன், குடிகாரன் ஆகியோரிடம் இருந்து உணவை ஏற்கும் பிராமணன், ராட்சசர்களின் குலத்தை ஊக்குவிக்கிறான்.(19) ஓர் அலியிடம் இருந்தும், நன்றிமறந்த மனிதனிடமிருந்தும், தன்னிடம்கொடுக்கப்பட்ட செல்வத்தை அபகரித்தவனிடம் இருந்தும் உணவை ஏற்பவன், நடு நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் அமைந்திருக்கும் சவரர்களின் நாட்டில் பிறப்பான்.(20) எவரிடம் இருந்து உணவை ஏற்கலாம், எவரிடம் இருந்து ஏற்கக்கூடாது என்பதை நான் முறையாகச் சொல்லிவிட்டேன். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இன்று இன்னமும் நீ கேட்க விரும்புவதென்ன?” என்று கேட்டார் {பீஷ்மர்}.(21)

பரிகாரங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 136-கொடை பெறுவதாலும், உணவை உண்பதாலும் அடையும் பாவத்தைக் கழிப்பதற்குரிய பரிகாரணங்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “யாரிடம் உணவை ஏற்கலாம், யாரிடம் கூடாது என்பதை எனக்கு நீர் முழுமையாகச் சொன்னீர்.(1) ஆனால் எனக்கு ஒன்றில் பெரும் ஐயம் நிலவுகிறது. ஓ! ஐயா, ஒரு பிராமணன் பல்வேறு வகை உணவுகளை, அதிலும் குறிப்பாகத் தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் படைக்கப்படும்போதும், இறந்து போன மூதாதையருக்குப் பலியுணவு படைக்கப்படும்போதும் ஏற்றுக் கொள்ளும்போது, (அவன் ஈட்டும் பாவத்திற்கு) என்ன பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்லி தெளிவுபடுத்துவீராக” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! இளவரசே, உயர் ஆன்ம பிராமணர்கள், பிறரிடம் இருந்து உணவை ஏற்பதால் இழைக்கப்படும் பாவத்தை எவ்வாறு கழிப்பது என்பதை உனக்குச் சொல்வேன்.(3) தெளிந்த நெய்யை ஏற்கும்போது, சாவித்திரி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவது பரிகாரமாகிறது. ஓ! யுதிஷ்டிரா, எள்ளை ஏற்கும்போதும் அதே பரிகாரம் செய்யப்பட வேண்டும்.(4) இறைச்சியையோ, தேனையோ, உப்பையோ ஏற்றுக் கொள்ளும் பிராமணன், சூரியன் எழும்வரை நின்று கொண்டிருப்பதன் மூலம் தூய்மையடைகிறான்.(5) ஒரு பிராமணன் எவரிடம் இருந்தாவது தங்கத்தை ஏற்றுக் கொண்டால், பொதுமக்கள் முன்னிலையில் தன் கரத்தில் இரும்புத் துண்டை {இரும்புப் பாத்திரத்தைப்} பிடித்துக் கொண்டு வேத (காயத்ரி) துதியை அமைதியாகச் சொல்வதன் மூலம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான். பணம், துணிமணிகள், பெண்கள் அல்லது தங்கத்தை ஏற்கும்போது முன்சொன்னது போலவே செய்து தூய்மையடைய வேண்டும்.(6,7)

உணவு, அல்லது பால் மற்றும் சர்க்கரையுடன் கொதிக்க வைக்கப்பட்ட அரிசி {பாயஸம்}, {வெல்லம், சர்க்கரை}, கரும்பு, எண்ணெய், வேறு புனித பொருட்களை ஏற்கும் ஒருவன், காலை, நடுப்பகல் மற்றும் மாலை ஆகிய மூன்று வேளைகளில் நீராடுவதன் மூலம் தூய்மையடைகிறான்.(8) நெல், மலர்கள், கனிகள், நீர், மாப்பண்டம், பால், தயிர், அல்லது வேறு உணவையோ, மாவுகளையோ ஏற்றக் கொண்டால், நூறு முறை காயத்ரி துதியைச் சொல்வதே பரிகாரமாகும்.(9) ஈமச்சடங்குகளில் கொடுக்கப்படும் காலணிகள் மற்றும் உடைகளை ஏற்றால், அதே {காயத்திரி} மந்திரத்தை பக்தியுடன் நூறு முறை சொல்வது பாவத்தை அழிக்கும்.(10) கிரகணக் காலத்திலோ, தூய்மையற்ற காலத்திலோ நிலக்கொடை பெற்றால், அடுத்தடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து உண்ணா நோன்பிருத்தல் பரிகாரமாகும்.(11) இறந்து போன மூதாதையருக்குக் காணிக்கையளிக்கப்படும் பலியுணவுகளை உண்ணும் பிராமணன், தேய்பிறை காலம் முழுவதும் பகலும், இரவும் முழுமையாக உண்ணா நோன்பு இருப்பதன் மூலம் தூய்மையடைகிறான்.(12)

ஒரு பிராமணன், தூய்மைச் சடங்குகளைச் செய்யாமல் மாலை வேளை துதிகளைச் சொல்லவோ, அறம் சார்ந்த தியானத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ, இரண்டாம் முறை உணவை உண்ணவோ கூடாது. அவ்வாறு செயல்படுவதால் அவன் தூய்மையடைகிறான்.(13) இந்தக் காரணத்திற்காகவே, சிராத்தமானது பிற்பகல்வேளையில் விதிக்கப்படுகிறது, இதன் காரணமாகவே சிராத்தத்திற்கு அழைக்கப்படும் பிராமணனும் முன் கூட்டியே உணவருந்தச் செய்யப்படுகிறான்.(14) மரணம் நேர்ந்ததற்கு மூன்றாம் நாளில் இறந்த மனிதனின் வீட்டில் உணவை உண்ணும் பிராமணன், பனிரெண்டு நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மூன்று முறை நீராடுவதால் தூய்மையடைகிறான்.(15) பனிரெண்டு நாட்கள் முடிவடைந்ததும், முறையான தூய்மைச் சடங்குகளைச் செய்து கொண்டு, பிராமணர்களுக்குத் தெளிந்த நெய்யைக் கொடுப்பதன் மூலம் அந்தப் பாவம் அழிவை அடைகிறது.(16)

ஒரு மனிதன் இறந்து பத்து நாட்களுக்குப் பிறகு அவனது வீட்டில் எந்த உணவையும் உண்டால், அவன் முன்பு சொல்லப்பட்டுள்ள அனைத்துப் பரிகாரங்களையும் செய்து, சாவித்திரி மந்திரத்தைச் சொல்லி பாவத்தை அழிக்கும் இஷ்டி மற்றும் கஷ்மாண்ட தவங்களைச் செய்ய வேண்டும்[1].(17) இறந்தவனின் வீட்டில் மூன்று இரவுகள் உணவை உண்ணும் பிராமணன், ஏழு நாட்கள் ஒவ்வொரு நாளும் மும்மூன்று முறை தூய்மைச் சடங்குகளைச் செய்து தூய்மையடைந்து, அதன் மூலம் தன் விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைந்து, ஒரு போதும் ஆபத்துகளில் சிக்காதவனாக இருப்பான்.(18,19) சூத்திரர்களின் துணையுடன் தன் உணவை உண்ணும் பிராமணன், முறையாகத் தூய்மைச் சடங்குகளை நோற்பதன் மூலம் மாசுகள் அனைத்தையும் அழிக்கிறான்.(20) வைசியர்களின் துணையுடன் தன் உணவை உண்ணும் பிராமணன், அடுத்தடுத்து மூன்று இரவுகள் பிச்சையெடுத்து வாழ்வதன் மூலம் தன் பாவத்தைக் கழிக்கிறான்.(21) க்ஷத்திரியர்களுடன் சேர்ந்து தன் உணவை உண்ணும் பிராமணன், தான் உடுத்திய உடையுடனே நீராடுவதன் மூலம் பரிகாரத்தைச் செய்தவனாவான்.(22){தகாதவனான} ஒரு சூத்திரனுடன் ஒரே தட்டில் உண்பதன் மூலம் ஒரு சூத்திரன் தன் குடும்ப மதிப்பை இழக்கிறான்; {தகாதவனான} ஒரு வைசியனுடன் ஒரே தட்டில் உண்பதன் மூலம் ஒரு வைசியன் தன் கால்நடைகளையும் {பசுக்களையும்}, நண்பர்களையும் இழக்கிறான். ஒரு க்ஷத்திரியன் தன் செழிப்பையும், ஒரு பிராமணன் தன் காந்தி மற்றும் சக்தியையும் {பிரம்மதேஜஸை} இழக்கின்றனர்.(23) இத்தகைய வழக்குகளில், பரிகாரங்களும் தணிவடையச் செய்யும் சடங்குகளும் செய்யப்பட்டு, தேவர்களுக்குப் பலியுணவுகள் காணிக்கையளிக்கப்பட வேண்டும். பாவத்தை அழிக்கும் நோக்கில் சாவித்திரி மந்திரம் உரைக்கப்பட வேண்டும், ரேவதி சடங்குகளும், கஷ்மாண்ட தவங்களும் செய்யப்பட வேண்டும்.(24) மேற்கண்ட நான்கு வகையினரில் எவரும், வேறு வகை மனிதனால் உண்ணப்பட்ட உணவை உண்டால், நிச்சயம் கோரோசனை, அறுகம்புல், மஞ்சள், சந்தனம் முதலிய மங்கலப் பொருட்களை உடல் முழுவதும் பூசிக் கொள்வதே பரிகாரம்” என்றார் {பீஷ்மர்}.(25)

மேலகம் அடைந்தவர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 137-தவங்கள், கொடைகள், வேள்விகள் மற்றும் பிற அறச்செயல்களின் மூலம் சொர்க்கத்தையும், பிற மேன்மையான உலகங்களையும் அடைந்தவர்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, இவ்வுலகில் ஈகை {தானம்} மற்றும் அர்ப்பணிப்பு {தவம்} ஆகிய இரண்டில் எது சிறந்தது என்பதை எனக்குச் சொல்ல வேண்டும். இதன் மூலம் என் மனத்தில் உள்ள பெரும் ஐயத்தை நீர் நீக்க வேண்டும்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறத்திற்கு அர்ப்பணிப்புடன், தவங்களால் தங்கள் இதயங்களைத் தூய்மை செய்து கொண்டு, கொடைகளையும் பிற அறச் செயல்களையும் செய்து, வெவ்வேறு தெய்வீக உலகங்களை அடைந்த இளவரசர்களின் பெயர்களைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) ஓ! ஏகாதிபதி, அனைவராலும் கொண்டாடப்படும் முனிவர் ஆத்ரேயர், தமது சீடர்களுக்குத் தடையற்ற பரம்பொருளின் {நிர்க்குண பிரம்மத்தின்} அறிவைப் போதித்துச் சிறந்த தெய்வீக உலகங்களை அடைந்தார்.(3) உசீனரனின் மகனான மன்னன் சிபி, ஒரு பிராமணனின் நன்மைக்காகத் தன் அன்புக்குரிய மகனின் உயிரைக் காணிக்கையளித்து இவ்வுலகில் இருந்து மறுவுலகதிதற்குச் சென்றான்.(4) காசியின் மன்னனான பிரதர்த்தனன் ஒரு பிராமணருக்குத் தன் மகனைக் கொடுத்ததன் மூலம் இவ்வுலகிலும், மறுவுலகிலும் தனக்கெனத் தனிப்பட்ட இறவாப்புகழை அடைந்தான்.(5) சங்கிருதியின் மகனான ரந்திதேவன், உயர் ஆன்ம வசிஷ்டருக்கு முறையாகக் கொடைகளை அளித்து உயர்ந்த சொர்க்கத்தை அடைந்தான்.(6) தேவவிரதன், ஒரு வேள்வியில் நூறு விலாக்கள் கொண்ட சிறந்த தங்கக் குடை ஒன்றை ஒரு பிராமணனுக்குக் கொடுத்துச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(7) வழிபடத்தகுந்த அம்பரீஷனும், பெருஞ்சக்தியைக் கொண்ட ஒரு பிராமணனுக்குத் தன் நாடு முழுவதையும் கொடையாக அளித்துத் தேவர்களின் உலகை அடைந்தான்.(8)

சூரிய குலத்தைச் சேர்ந்த மன்னன் ஜனமேஜயன் பிராமணர்களுக்குக் காது குண்டலங்களையும், சிறந்த வாகனங்களையும், பசுக்களையும் கொடையளித்துச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(9) அரச முனியான விருஷாதர்ப்பி, பிராமணர்களுக்குப் பல்வேறு நகை ஆபரணங்களையும், அழகிய வீடுகளையும் கொடையளித்துச் சொர்க்கதிதற்குச் சென்றான்.(10) விதர்ப்பத்தைச் சேர்ந்த மன்னன் நிமி, உயர் ஆன்ம அகஸ்தியருக்குத் தன் மகளையும், நாட்டையும் கொடையாள அளித்துத் தன் மகன்கள், நண்பர்கள் மற்றும் பசுக்களுடன் சொர்க்கத்தை அடைந்தான்.(11) பெரும்புகழைக் கொண்டவரும், ஜமதக்னியின் மகனுமான ராமர், பிராமணர்களுக்கு நிலக்கொடைகளை அளித்து, எதிர்பார்ப்பைக் கடந்த நித்திய உலகங்களை அடைந்தார்.(12)

பிராமணர்களின் இளவரசரான வசிஷ்டர், பர்ஜன்ய தேவன் பூமியில் தன் அருள் மழையைப் பொழியாமல் இருந்த போது நேர்ந்த பெரும்பஞ்சத்தில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாத்து, அந்தச் செயலின் மூலம் நித்திய அருளை தாமே அடைந்தார்.(13) இவ்வுலகில் மிக உயர்ந்த புகழைக் கொண்டவனும், தசரதனின் மகனுமான ராமன், வேள்விகளில் பெருஞ்செல்வத்தைக் கொடையளித்து நித்திய உலகங்களை அடைந்தான்.(14) பெரும் புகழைக் கொண்டவனும், அரசமுனியுமான கக்ஷஸேனன், முறையாக உயர் ஆன்ம வசிஷ்டருக்குச் செல்வத்தைக் கொடுத்துச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(15) அவிக்ஷித்தின் மகனும், கரந்தமனின் பேரனுமான மருத்தன்அங்கிரசுக்குத் தன் மகளைக் கொடுத்ததன் மூலம் உடனே சொர்க்கத்திற்குச் சென்றான்.(16)

உயர்ந்த பக்தியைக் கொண்ட பாஞ்சால மன்னன் பிரம்மதத்தன், விலைமதிப்புமிக்கச் சங்கு ஒன்றைக் கொடையளித்ததன் மூலம் அருள்வழியை அடைந்தான்.(17) மன்னன் மித்ரஸஹன்தனக்குப் பிடித்த மனைவியான மதயந்தியை உயர் ஆன்ம வசிஷ்டருக்குக் கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(18)

மனுவின் மகனான ஸுத்யும்னன், உயர் ஆன்ம லிகிதருக்கு உரிய தண்டையைக் கொடுத்ததன் மூலம் பேரருள் நிறைந்த உலகங்களை அடைந்தான்.(19) கொண்டாடப்பட்ட அரசமுனியான சஹஸ்ரசித்தன், ஒரு பிராமணனுக்காகத் தன் அன்புக்குரிய உயிரையே தியாகம் செய்ததன் மூலம் அருள் உலகங்களுக்குச் சென்றான்.(20)

மன்னன் சதத்யும்னன், பெரும் அளவிலான இன்பப் பொருட்கள் அனைத்துடன் கூடிய ஒரு பொன்மாளிகையை மௌத்கலருக்கு {மொத்கல்யருக்குக்} கொடுத்ததன் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றான்.(21) பழங்காலத்தில் மன்னன் சுமன்யு, மலை போல் தெரிந்த உணவுக் குவியல்களைச் சாண்டில்யருக்குக் கொடுத்ததன் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றான்.(22) பெருங்காந்தியைக் கொண்ட சால்வ இளவரசன் தியுமத் {தியுமான்} தன் நாட்டை ரிசீகருக்குக் கொடுத்து உயர்ந்த உலகங்களை அடைந்தான்.(23)

அரச முனியான மதிராஸ்வன், கொடியிடையாளான தன் மகளை ஹிரண்யஹஸ்தருக்குக் கொடுத்ததன் மூலம் தேவர்களின் உலகத்திற்குச் சென்றார்.(24)

தலைமைத்துவம் கொண்ட லோமபாதன், தன் மகளான சாந்தையை ரிஷ்யசிருங்கருக்குத் திருமணம் செய்து கொடுத்து, தன் ஆசைக்குகந்த அனைத்துப் பொருட்களையும் பெருமளவில் பெற்றான்.(25)

அரச முனியான பகீரதன், ஹம்ஸி என்ற தன் புகழ்பெற்ற மகளைக் கௌஸ்தருக்குக் கொடுத்து நித்திய உலகங்களுக்குச் சென்றான்.(26) மன்னன் பகீரதன், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பசுக்களைக் கன்றுகளுடன் சேர்த்துக் கோகலருக்குக் கொடுத்து அருள்மிகுந்த உலகங்களை அடைந்தான்.(27)

ஓ! யுதிஷ்டிரா, இவர்களும், இன்னும் பல மனிதர்களும் தாங்கள் செய்த ஈகை, தவங்கள் ஆகியவற்றால் சொர்க்கத்தை அடைந்து, அங்கிருந்து மீண்டும் மீண்டும் திரும்புகின்றனர்.(28) அவர்களுடைய புகழ் இந்த உலகங்கள் உள்ளளவும் நீடித்திருக்கும். ஓ! யுதிஷ்டிரா, ஈகை மற்று தவங்களின் மூலம் நித்திய உலகங்களை அடைந்த நல்ல இல்லறத்தோரின் கதையை நான் உனக்குச் சொன்னேன்.(29) தங்கள் ஈகையின் மூலமும், தாங்கள் செய்த வேள்விகளின் மூலமும், சந்ததியை உண்டாக்கியதன் மூலமும் இந்த மக்கள் சொர்க்கலோகங்களை அடைந்தனர்.(30) ஓ! குரு குலக்கொழுந்துகளில் முதன்மையானவனே, ஈகைச்செயல்களை எப்போதும் செய்வதன் மூலம் இம்மனிதர்கள் தங்கள் அறம் சார்ந்த புத்தியை வேள்விகள் செய்வதிலும், கொடையளிப்பதிலும் செலுத்தினர்.(31) ஓ வலிமைமிக்க இளவரசே, இரவு வருகிறது, உன் மனத்தில் எழும் எந்த ஐயத்திற்கும் காலையில் நான் விளக்கமளிப்பேன்” என்றார் {பீஷ்மர்}.(32)

ஐவகை தானங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 138-ஐந்து வகை தானங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, ஓ! கொடையறத்தைப் பின்பற்றி வாய்மை நோன்பை நோற்பதில் பெரும் சக்தி கொண்டவரே, சொர்க்கத்திற்கு உயர்ந்த மன்னர்களின் பெயர்களை நான் உம்மிடம் இருந்து கேட்டேன்.(1) கொடைக்களிக்கப்பட வேண்டிய கொடைகளில் எத்தனை வகை உள்ளன? பல்வேறு வகையான அந்தக் கொடைகளின் கனிகள் முறையே என்னென்ன?(2) என்ன காரணங்களுக்காக, எந்த மனிதர்களுக்குக் கொடுக்கப்படும், என்ன வகைக் கொடைகள் பலன்களை உண்டாக்குகின்றன? என்ன காரணங்களுக்காக எத்தனை வகைக் கொடைகள் அளிக்கப்படுகின்றன? இவை யாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குந்தியின் மகனே, ஓ! பாவமற்றவனே, கொடைகள் குறித்துச் சொல்கிறேன் விரிவாகக் கேட்பாயாக. உண்மையில், ஓ! பாரதா, அனைத்து வகை மனிதர்களுக்கும் கொடைகள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதை உனக்குச் சொல்லப் போகிறேன்.(4) ஓ! பாரதா, பலன் {அறம்} விரும்பியும், லாபம் {பொருள்} விரும்பியும், அச்சத்தின் மூலமும், சுதந்திரத் தேர்வு {ஆசை} மூலமும், கருணை மூலமும் கொடைகள் அளிக்கப்படுகின்றன. எனவே, கொடைகள் ஐவகையானவை என்று அறியப்பட வேண்டும். கொடைகள் இவ்வாறு ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுவதற்கான காரணங்களை இப்போது கேட்பாயாக.(5)

ஒருவன் பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் இம்மையில் புகழையும், மறுமையிலும் பேரின்பத்தையும் அடைவான் என்பதால் வன்மத்தில் இருந்து விடுபட்ட மனத்துடன் அவன் அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும். (அத்தகைய கொடைகள் பலன் விரும்பி அளிக்கப்படுபவையாகக் கருதப்படுகின்றன).(6)

அவன் கொடையளிப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறான்; அல்லது அவன் கொடையளிப்பான்; அல்லது அவன் ஏற்கனவே எனக்குக் கொடையளித்திருக்கிறான். வேண்டுபவர்களின் இத்தகைய வார்த்தைகளைக் கேட்டு, வேண்டுவோரில் குறிப்பிட்டவனுக்கு ஒருவன் அனைத்து வகைச் செல்வங்களையும் கொடுக்கிறான். (இத்தகைய கொடைகள் லாபம் விரும்பி அளிக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன).(7)

நான் அவனுடையவனல்ல; அதேபோல அவனும் என்னுடையவனல்ல. அலட்சியப்படுத்தப்பட்டால் அவன் எனக்குத் தீங்கிழைக்கக்கூடும். இத்தகைய அச்ச நோக்கங்களில் கல்வியும், ஞானமும் கொண்ட ஒரு மனிதன் கூட, ஓர் இழிந்த மூடனுக்குக் கொடைகளை அளிக்கக்கூடும். (இத்தகைய கொடைகள் அச்சத்தால் கொடுக்கப்படுபவை எனக் கருதப்படுகின்றன).(8)

இவன் எனது அன்புக்குரியவன். நானும் அவனது அன்புக்குரியவன். இத்தகைய கருத்துகளின் ஆதிக்கத்தில் புத்தியுள்ள ஒருவன், சுதந்திரமாகவும், சுறுசுறுப்புடனும் ஒரு நண்பனுக்குக் கொடையளிக்கிறான். (இத்தகைய கொடைகள் சுதந்திரத் தேர்வின் மூலம் கொடுக்கப்படுபவையாகக் கருதப்படுகின்றன).(9)

என்னை வேண்டிக் கேட்பவன் ஓர் ஏழை. மேலும் அவன் சிறிதளவிலேயே நிறைவடைகிறான். இத்தகைய கருத்துகளின் மூலம் ஒருவன் எப்போதும் கருணையால் உந்தப்பட்டு ஓர் ஏழைக்குக் கொடைகளை அளிக்க வேண்டும். (இத்தகைய கருத்துகளின் மூலம் கொடுக்கப்படும் கொடைகள் கருணையால் கொடுக்கப்படுபவையாகக் கருதப்படுகின்றன).(10)

இவையே ஐவகைக் கொடைகளாகும். இவை கொடையாளின் பலனையும், புகழையும் பெருக்குகின்றன. அனைத்து உயிரினங்களின் தலைவனை (பிரம்மனே), ஒருவன் தன் சக்திக்கேற்றபடி எப்போதும் கொடைகளையளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(11)

வாசுதேவதவம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 139-முகத்திலுண்டான நெருப்பால் மலையை எரித்த கிருஷ்ணன்; அம்மலையைச் செழிக்கச் செய்தது; அதன் காரணத்தை முனிவர்களுக்குச் சொன்னது; தவசிகளை நல்லுரை வழங்கும்படி கேட்டுக் கொண்ட கிருஷ்ணன்; தவசிகள் அப்பணிக்கு நாரதரைத் தேர்ந்தெடுத்தது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நீர் பெரும் ஞானத்தைக் கொண்டிருக்கிறீர். உண்மையில், கல்வியின் அனைத்து வகைகளையும் நீர் முழுமையாக அறிந்திருக்கிறீர். நமது பெருங்குலத்தில் நீர் மட்டுமே அனைத்து அறிவியல்களுடனும் பெருகியிருக்கிறீர்.(1) அறம் மற்றும் பொருள் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்ததும், மறுமையில் இன்பத்திற்கு வழிவகுப்பதும், அனைத்து உயிரினங்களுக்கும் ஆச்சரியம் நிறைந்ததுமான உரையை உம்மிடம் இருந்து நான் கேட்க விரும்புகிறேன்.(2) வந்திருக்கும் காலமானது துன்பம் நிறைந்ததாகும். நமக்குச் சுற்றத்தாரும், நண்பரும் இருப்பதை அது விரும்பவில்லை. உண்மையில், ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, நம்மிடம் உம்மைத் தவிரப் போதகராக இருக்கத்தகுந்த வேறு எவரும் இல்லை.(3) ஓ! பாவமற்றவரே, நானும், என் தம்பிகளும் உமது உதவியைப் பெறத் தகுந்தவர்களாக இருந்தால், நான் உம்மைக் கேட்க விரும்பும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதே உமக்குத் தகும்.(4) இவன் அனைத்து வகைச் செழிப்பைக் கொண்டவனும், மன்னர்கள் அனைவராலும் கௌரவிக்கப்படுபவனுமான நாராயணன் ஆவான். இவனும் உம்மைப் பெரிதும் மதித்து, உமக்காகக் காத்திருக்கிறான்.(5) வாசுதேவன் மற்றும் இந்த மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும் எனக்கும் என் தம்பிகளுக்குமான நன்மைக்காக நீர் அன்புடன் என்னோடு உரையாடுவதே உமக்குத் தகும்” என்றான்”.(6)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “மன்னன் யுதிஷ்டிரனின் இச்சொற்களைக் கேட்டவரும், பகீரதனின் பெயரால் அழைக்கப்பட்ட ஆற்றின் மகனுமான பீஷ்மர், அந்த ஏகாதிபதியிடமும், அவனது தம்பிகளிடமும் கொண்ட அன்பின் விளைவால் மகிழ்ச்சியால் நிறைந்து பின் வருவனவற்றைச் சொன்னார்[1].(7)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இனிமை நிறைந்ததும், பழங்காலத்தில் வெளிப்படுத்தப்பட்டதுமான இந்த விஷ்ணுவின் மகிமை குறித்து (நான் என் ஆசான்களிடம் இருந்து) கேட்டவாறு நிச்சயம் உனக்குச் சொல்வேன். மேலும், காளைமாட்டைத் தன் அடையாளமாகக் கொண்ட பெருந்தேவனின் பலத்தையும் {மகிமையையும்} நான் விளக்கிச் சொல்வேன் கேட்பாயாக. ருத்திரன் மற்றும் ருத்திரனுடைய மனைவியின் மனங்களில் நிறைந்திருந்த ஐயத்தையும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(9)

அற ஆன்மா கொண்டவனான கிருஷ்ணன், ஒரு காலத்தில் பனிரெண்டு வருடங்கள் நீண்ட ஒரு நோன்பை நோற்றுக் கொண்டிருந்தான். அந்தப் பெரும் நோன்பை நோற்பதற்கான தொடக்கச் சடங்குகளைச் செய்திருந்த அவனைக் காண[2] நாரதர், பர்வதர், தீவில் பிறந்தவரான கிருஷ்ணர் {வியாசர்}, அமைதியாகப் பேசுபவர்களில் முதன்மையான தௌம்யர், தேவலர், காஸ்யபர், ஹஸ்திகாஸ்யபர் ஆகியோர் அந்த இடத்திற்கு வந்தனர்.(10,11) தீக்ஷையுடன் கூடியவர்களும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களுமான பிற முனிவர்கள், தங்கள் சீடர்களால் பின்தொடரப்பட்டும், பல சித்தர்கள் மற்றும் பெருந்தகுதியைக் கொண்ட தவசிகள் பலரின் துணையுடனும் அங்கே வந்தனர்.(12) தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, உயர்ந்த புகழுக்குத் தகுந்ததும், தேவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவதுமான விருந்தோம்பல் கௌரவங்களை அவர்களுக்கு அளித்தான்.(13) பச்சை நிறத்தில் இருந்தவையும், தங்க நிறத்தில் இருந்தவையும், மயிலின் தோக வண்ணத்தில் இருந்தவையும், முற்றிலும் புதியவையாக இருந்தவையுமான இருக்கைகளில் அந்தப் பெரும் முனிவர்கள் அமர்ந்தனர்.(14) இவ்வாறு அமர்ந்த அவர்கள் அறம் மற்றும் கடமை தொடர்பான காரியங்களைக் குறித்து அரச முனிகள் பலருடனும், தேவர்களுடனும் சேர்ந்து இனிமையாக உரையாடத் தொடங்கினர்.(15)அந்நேரத்தில், கடும் நோன்புகளெனும் விறகில் எழுந்த நெருப்பின் வடிவிலான நாராயணனின் சக்தியானது, அற்புதச் சாதனைகள் கொண்ட கிருஷ்ணனின் வாயிலிருந்து வெளிப்பட்டது.(16) மரங்கள், செடிகொடிகள், பறவைகள், மான்கள், இரைதேடும் விலங்குகள், ஊர்வன ஆகியவற்றுடன் கூடிய மலைகளை அந்நெருப்பு எரிக்கத் தொடங்கியது.(17) விரைவிலேயே அந்த மலையின் சிகரம் துன்பம் நிறைந்த பரிதாபகரமான தோற்றத்தை அளித்தது. அந்தச் சிகரத்தில் வசித்து வந்த பல்வேறு வகை விலங்குகள் துன்பத்தால் அலறி ஓலமிட்டன. விரைவில் அச்சிகரம் அனைத்து உயிரினங்களும் இல்லாததானது.(18) வலிமைமிக்கத் தழல்களைக் கொண்ட அந்நெருப்பு எஞ்ச ஏதுமில்லாமல் அனைத்தையும் எரித்துவிட்டு இறுதியாகப் பணிவான சீடனைப் போல விஷ்ணுவிடம் திரும்பி வந்து, அவனது பாதங்களைத தீண்டியது.(19) பகைவர்களை நொறுக்குபவனான கிருஷ்ணன், அம்மலை எரிந்ததைக் கண்டு நலம்பயக்கும் அருள்பார்வையை அதில் செலுத்தி, மீண்டும் அதைப் பழைய நிலைக்கே கொண்டு வந்தான்.(20) அதன் பேரில், அந்த மலையானது, மலர்ந்திருக்கும் மரஞ்செடிகொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, மீண்டும் பறவைகள், மான்கள், இரைதேடும் விலங்குகள் மற்றும் ஊர்வனவற்றின் இனிய ஒலிகள் மற்றும் முழக்கங்களை எதிரொலித்தது.(21) நினைத்தற்கரிய, அற்புதம் நிறைந்த அந்தக் காட்சியைக் கண்ட தவசிகள் அனைவரும் வியப்படைந்தனர். பார்வை கண்ணீரால் தடைபட்டு, மயிர்ச்சிலிர்ப்புடன் கூடியவர்களாக அவர்கள் இருந்தனர்.(22)

பேசுபவர்களில் முதன்மையான நாராயணன், இவ்வாறு ஆச்சரியத்தில் நிறைந்த முனிவர்களைக் கண்டு புத்துணர்ச்சியை அளிக்கும் இந்த இனிய சொற்களைச் சொன்னான்:(23) “உண்மையில், அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவர்களும், மமதையற்றவர்களும், புனித அறிவியல் அனைத்தையும் முழுமையாக அறிந்தவர்களுமான இந்தத் தவசிகளும், முனிவர்க்கூட்டங்களும் ஏன் இதயம் நிறைந்த ஆச்சரியத்துடன் இருக்கிறார்கள்?(24) தவங்களைச் செல்வமாகக் கொண்டவர்களும், அனைத்து வகைக் களங்கங்களிருந்தும் விடுபட்டவர்களுமான இந்த முனிவர்கள், என் மனத்தில் எழுந்திருக்கும் இந்த ஐயத்திற்கு உண்மையில் விளக்கம் அளிப்பதே தகும்” என்றான்.(25)

முனிவர்கள், “உலகங்கள் அனைத்தையும் படைப்பவனும், அழிப்பவனும் நீயே. குளிர் காலமாகவும், கோடைக்காலமாகவும், மழைக்காலமாகவும் இருப்பவன் நீயே.(26) உலகில் தோன்றும் அசைவன, அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்திற்கும், தந்தையும், தாயும், ஆசானும், தோற்றமும் நீயே.(27) ஓ! மதுசூதனா, எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதும், ஐயங்கொள்ள வைப்பதும் இதுவே. ஓ! மங்கலங்கள் அனைத்தின் பிறப்பிடமே, உன் வாயில் வெளிப்பட்ட நெருப்பு குறித்த எங்கள் ஐயத்தை விலகச் செய்வதே உனக்குத் தகும்.(28) ஓ! ஹரியே, எங்கள் அச்சம் விலகியதும் நாங்கள் கேட்டதையும் கண்டதையும் உனக்கு உரைக்கின்றோம்” என்றனர்.(29)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “காந்தியில் அனைத்தையும் எரிக்கும் யுகநெருப்புக்கு ஒப்பானதும், இந்த மலையை நொறுக்கி, எரித்ததும், என் வாயில் இருந்து வெளிப்பட்டதுமான அந்த நெருப்பு விஷ்ணுவின் சக்தியேயன்றி வேறேதுமில்லை.(30) முனிவர்களே, நீங்கள் கோபத்தை அடக்கியவர்களும், புலன்களை முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவந்தவர்களும், தவமென்ற செல்வத்துடன் கூடியவர்களும், தேவ பலம் கொண்டவர்களாக இருப்பவர்களாவீர். இருப்பினும் நீங்கள் கலக்கத்தையும், துன்பத்தையும் அனுபவத்திருக்கிறீர்கள்.(31) நான் இப்போது ஒரு கடும் நோன்பு தொடர்பான நியமங்களில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறேன். உண்மையில் ஒரு தவசியின் நோன்புகளை நான் நோற்பதன் விளைவாலேயே நெருப்பானது என் வாயில் இருந்து வெளிப்பட்டது. இதற்காக நீங்கள் கலங்குவது உங்களுக்குத் தகாது.(32) கடும் நோன்பை நோற்கவே இனிமைநிறைந்த இந்த மங்கலமான மலைக்கு நான் வந்தேன். தவத்தின் உதவியால் சக்தியில் எனக்கு இணையான ஒரு மகனைப் பெறும் நோக்கமே என்னை இங்கே கொண்டு வந்தது.(33) என் தவங்களின் விளைவால், என் உடலில் உள்ள ஆன்மாவானது நெருப்பாக மாறி என் வாயில் வெளிப்பட்டது. அந்த நெருப்பானது, வரமளிப்பவரான அண்டமனைத்திற்கும் பெரும்பாட்டனை {பிரம்மனைக்} காணச் சென்றது.(34)

தவசிகளில் முதன்மையானவர்களே, பெரும்பாட்டன் என் ஆன்மாவிடம், காளையைக் கொடியில் கொண்ட பெருந்தேவனின் சக்தியில் பாதியைக் கொண்ட மகன் எனக்குப் பிறப்பான என்று சொன்னார்[3].(35) தன் காரியத்தை முடித்துத் திரும்பிய அந்த நெருப்பானது, என்னிடம் வந்து, கடமையுணர்வுமிக்க ஒரு சீடனைப் போல என் பாதங்களை அணுகியிருக்கிறது. உண்மையில் தன் சீற்றத்தைக் கைவிட்டு தனக்குரிய இயல்புடனேயே அது திரும்பியிருக்கிறது.(36) தாமரையையே தன் பிறப்பிடமாகவும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவர் தொடர்பான ஒரு புதிரை உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களே, நீங்கள் அச்சத்தின் வசப்படக்கூடாது.(37) தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் நீங்கள். எத்தடையுமின்றி எந்த இடத்திற்கும் செல்பவர்கள் நீங்கள். தவசிகளால் நோற்கப்படும் நோன்புகளால் சுடர்விடும் நீங்கள் ஞானத்தாலும், அறிவியலாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறீர்கள்.(38) பூமியிலோ, சொர்க்கத்திலோ நீங்கள் கேட்ட அல்லது கண்ட அற்புதம் நிறைந்த காரியங்களை எனக்குச் சொல்ல வேண்டுமென உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.(39) உங்கள் உதடுகள் சிந்தும் உரையெனும் தேன்துளியைச் சுவைக்க ஆவலுடன் இருக்கிறேன். அமுதத் தாரை போல அந்தத் தேன் நிச்சயம் இனிமையாகவே இருக்கும்.(40)தேவர்களைப் போலத் தெரியும் முனிவர்களே, நீங்கள் அறியாததும், இனிமை நிறைந்ததும், அற்புதம் நிறைந்ததுமான தன்மை எதையும் பூமியிலோ, சொர்க்கத்திலோ நான் கண்டிருந்தால், எதனாலும் தடுக்கப்பட இயலாத என் உயர்ந்த இயல்பின் விளைவாக அஃது இருக்கும் என நான் சொல்லிக் கொள்கிறேன். அற்புதம் நிறைந்த ஞானம் ஏதும் என்னிடம் இருந்தாலோ, என் மனவெழுச்சியினால் அடையப்பட்டிருந்தாலோ அஃது எனக்கு அற்புதம் நிறைந்ததாகவே தெரிவதில்லை.(41,42) எனினும், பக்திமான்களால் உரைக்கப்படுவதும், நல்லோரிடம் கேட்கப்படுவதுமான எதுவும் மதிப்புடனும், நம்பிக்கையுடனும் ஏற்றக்கொள்ளத் தகுந்ததாகும். பூமியில் அத்தகைய உரைகள் கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துகளாக நீண்ட காலம் நீடித்து நிலைத்து இருக்கின்றன.(43) எனவே, நம்முடைய இந்தச் சந்திப்பில், நல்லோரும், நல்லோரை உண்டாக்கத் தவறாதவர்களுமான மனிதர்களின் உதடுகள் சிந்தும் எதையும் நான் கேட்க விரும்புகிறேன்” என்றான் வாசுதேவன் {கிருஷ்ணன்}.(44)

கிருஷ்ணனின் இந்தச் சொற்களைக் கேட்ட தவசிகள் அனைவரும் வியப்பால் நிறைந்தனர். அவர்கள், தாமரை இதழ்களைப் போன்ற நீண்டவையும், அழகியவையுமான தங்கள் கண்களைக் கொண்டு ஜனார்த்தனனைப் பார்க்கத் தொடங்கினர்[4].(45) சிலர் அவனைப் புகழத் தொடங்கினர், சிலர் அவனை மதிப்புடன் வழிபடத் தொடங்கினர். உண்மையில் அவர்கள் அனைவரும் நித்தியமான ரிக்குகளில் அலங்கரிக்கப்பட்ட பொருள்களைக் கொண்ட சொற்களால் மதுசூதனனைப் புகழ்ந்து பாடினர்.(46) பிறகு அந்தத் தவசிகள் அனைவரும் பேச்சை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான நாரதரை, வாசுதேவனின் வேண்டுகோளை நிறைவடையச் செய்ய நியமித்தனர்.(47)தவசிகள், “ஓ! நாரதரே, ஓ! பலமிக்கவரே, ஓ! தவசியே, நாம் புனித நீர்நிலைகளுக்குப் புனிதப்பயணம் {தீர்த்தயாத்திரை} செல்லும்போது இமய மலைகளில் நாம் கண்ட ஆச்சரியம் நிறைந்த, நினைத்தற்கரிய நிகழ்வை, ரிஷிகேசனுக்குத் தொடக்கம் முதல் விரிவாக முழுமையாகச் சொல்வதே உமக்குத் தகும். உண்மையில், இங்கே கூடியிருக்கும் முனிவர்கள் அனைவரின் நன்மைக்காகவும் அந்த நிகழ்வை உரைப்பதே உமக்குத் தகும்” என்றனர்.(48,49) இவ்வாறு அத்தவசிகளால் சொல்லப்பட்டதும், தேவ முனிவரான தெய்வீக நாரதர், சில காலத்திற்கு முன் நிகழ்ந்த பின் வரும் கதையை உரைத்தார்” என்றார் {பீஷ்மர்}.(50)

ஐயனின் கண்மறைத்த அம்மை! – அநுசாஸனபர்வம் பகுதி – 140-மஹேஸ்வரனின் கண்களை உமாதேவி மூடியதால் உண்டான மூன்றாவது கண்; இமய மலை எரிக்கப்பட்டு மீட்கப்பட்டது; காரணங்களைச் சொன்ன மஹேஸ்வரன்; நான்கு தலைகளின் தன்மைகளைக் குறித்துக் கேட்ட உமாதேவி…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது, புனிதமான முனிவரும், நாராயணனின் நண்பருமான நாரதர், சங்கரனுக்கும், அவனது மனைவியான உமைக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட பின்வரும் கதையைச் சொன்னார்.(1)

நாரதர், “ஒரு காலத்தில், தேவர்கள் அனைவரிலும் அற ஆன்மா கொண்டவனும், காளையைத் தன் கொடியில் கொண்டவனுமான மஹாதேவன், சித்தர்களும், சாரணர்களும் அடிக்கடி சென்று வரும் புனிதமான இமய மலைகளில் கடுந்தவம் செய்து வந்தான்.(2) இனிமை நிறைந்த அம்மலைகள், பல்வேறு வகை மூலிகைகள் அதிகமாக வளர்ந்திருப்பவையும், பல்வேறு வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையுமாக இருந்தன. இந்த நேரத்தில் அவை பல்வேறு இனக்கூட்டங்களைச் சேர்ந்த அப்சரஸ்களாலும், பூத கணங்களாலும் நிறைந்திருந்தன.(3) மகிழ்ச்சியால் நிறைந்தவனாக, பார்ப்பவர்களின் கண்களுக்குப் பல்வேறு தன்மைகளை வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான பூதகணங்களால் சூழப்பட்டவனாக அங்கே அந்தப் பெருந்தேவன் அமர்ந்திருந்தான். அவர்களில் சிலர் கோரமாகவும், அருவருக்கத்தகுந்தவர்களாகவும் இருந்தனர், சிலர் மிக அழகிய குணங்களைப் பெற்றிருந்தனர், வேறு சிலர் மிக அற்புதமான தோற்றங்களில் இருந்தன.(4) அவர்களில் சிலருடைய முகங்கள் சிங்கம் போன்றவையாகவும், சிலருக்கு புலியைப் போன்றவையாகவும், சிலருக்கு யானையைப் போன்றவையாகவும் இருந்தன. உண்மையில், அந்தப் பூத கணங்களின் முகங்கள் பல்வேறு வகை விலங்குகளின் முகங்களைப் போல இருந்தன. சிலருக்கு நரிக்கு ஒப்பான முகமும், சிலருக்கு சிறுத்தையின் முகமும், சிலருக்கு குரங்கின் முகமும், சிலருக்கு காளையின் முகமும் இருந்தன.(5) சிலருடைய முகங்கள் ஆந்தைகளைப் போலவும், சிலருக்கு பருந்துகளைப் போலவும், சிலருக்கு பல்வேறு வகை மான்களின் முகங்களைப் போலவும் இருந்தன.(6)

அந்தப் பெருந்தேவன், கின்னரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் மற்றும் பல்வேறு வகைப் பூதங்கள் சூழ இருந்தான். மஹாதேவன் இருந்த வனம், தெய்வீக மலர்கள் நிறைந்ததாகவும், தெய்வீக ஒளிக்கதிர்களால் சுடர்விடுவதாகவும் இருந்தது.(7) அது தெய்வீக சந்தனத்தின் நறுமணத்துடன் இருந்தது, அனைத்துப் புறங்களிலும் தெய்வீக சாம்பிராணி எரிக்கப்பட்டது. மேலும் அது தெய்வீக இசைக்கருவிகளின் ஒலிகளை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(8) உண்மையில், மிருதங்கங்கள், பணவங்கள் {முரசுகள்}, சங்கங்கள், மற்றும் பேரிகைகளின் ஒலிகள் அங்கே எதிரொலித்துக் கொண்டிருந்தன. அங்கே பல்வேறு வகைப் பூதகணங்கள், தோகை விரிந்த மயில்களுடன் மகிழ்ச்சிக்கூத்து ஆடிக்கொண்டிருந்தனர்.(9) இவ்வாறு அமைந்திருந்த தெய்வீக முனிவர்களுடைய அந்த வனத்தில், அப்சரஸ்கள் மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்தனர். அந்த இடமானது பார்வைக்கு இனிமை நிறைந்ததாக இருந்தது. சொர்க்கத்திற்கு ஒப்பான அது பேரழகுடன் திகழ்ந்தது. உண்மையில் அங்கே மொத்த சூழலும் அற்புதம் நிறைந்ததாகவும், விவரிக்க இயலாத அழகும், இனிமையும் கொண்டதாவும் இருந்தது.(10)

மலைச்சாரல்களில் உறங்கும் அந்தப் பெருந்தேவனின் தவங்களால் அந்த மலைகளின் இளவரசன் {இமவான் / இமய மலை} பேரெழிலுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். வேதமோதுவதில் அர்ப்பணிப்புமிக்கவர்களும், கல்விமான்களுமான பிராமணர்களால் ஓதப்படும் வேதங்கள் அங்கே முழங்கிக் கொண்டிருந்தன. ஓ! மாதவா, வண்டுகளின் ரீங்காரத்தை எதிரொலித்துக் கொண்டிருந்த அம்மலை ஒப்பற்ற அழகுடையதாகத் திகழ்ந்தது.(11) ஓ! ஜனார்த்தனா, பெருவிழாவைப் போலத் தெரிந்தவனும் கடும் வடிவம் கொண்டவனுமான அந்தப் பெருந்தேவனைக் கண்ட தவசிகள் பேரின்பத்தால் நிறைந்தனர்.(12) உயர்வாக அருளப்பட்ட தவசிகள், உயிர்வித்தை உள்ளிழுத்தவர்களான சித்தர்கள், மருத்துகள், வசுக்கள், சாத்யர்கள், விஸ்வேதேவர்கள், வாசவன் {இந்திரன்},(13) யக்ஷர்கள், நாகர்கள், பிசாசங்கள், லோகபாலர்கள், பல்வேறு புனித நெருப்புகள், காற்றுகள் மற்றும் பெரும்பூதங்கள் அனைவரும் யோகத்தில் குவிந்த மனங்களுடன் அந்த மலையில் வசித்து வந்தனர்.(14) பருவ காலங்கள் அனைத்தும் அங்கே இருந்தன, அவை அங்கே பல்வேறு வகைச் சிறந்த மலர்களைச் சிதறிக் கிடக்கச் செய்தன. பல்வேறு வகைச் சுடர்மிக்க மூலிகைகள் {ஜோதிலதைகள்} அந்த மலையில் இருந்த வனங்களுக்கும், காடுகளுக்கும் ஒளியூட்டிக் கொண்டிருந்தன.(15)

மகிழ்ச்சியில் நிறைந்திருந்த பல்வேறு வகைப் பறவைகள், இனிமைநிறைந்த அந்த மலைச்சாரலில் தத்தி நடந்த படியே இன்பமாகப் பாடிக் கொண்டிருந்தன. அவை வெளியிட்டுக் கொண்டிருந்த இசையொலியின் விளைவால் அந்தப் பறவைகள் மிகவும் விரும்பத்தக்கனவாக இருந்தன.(16)  சிறந்த படுக்கையாகச் செயல்படுவதைப் போன்றிருந்ததும், சிறந்த தாதுக்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சிகரங்களில் ஒன்றில் உயர் ஆன்ம மஹாதேவன் அமர்ந்திருந்தான்.(17) இடையைச் சுற்றிலும் புலித்தோலையும், மேலாடையாகச் சிங்கத் தோலையும் அவன் உடுத்தியிருந்தான். ஒரு பாம்பு அவனது புனித நூலாக {பூணூலாக} இருந்தது. அவனுடைய தோள்கள் சிவப்பு அங்கதங்கள் இரண்டால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(18) அவனுடைய தாடி பச்சை நிறத்தில் இருந்தது. அவன் தலையில் சடாமுடி தரித்திருந்தான்[1]. பயங்கரமானவனாக இருந்த அவன், தேவர்களின் பகைவர்கள் அனைவரின் இதயங்களையும் அச்சத்தால் பீடிக்கச் செய்தான். அவனே அனைத்து உயிரினங்களின் அச்சங்களைப் போக்குபவனாகவும் இருக்கிறான். காளைமாட்டைக் கொடியில் கொண்ட தேவனாக அவனை வழிபடுபவர்கள் துதிக்கிறார்கள்.(19) மஹாதேவனைக் கண்ட பெரும் முனிவர்கள், தங்கள் தலைகளால் தரையைத் தொட்டு அவனை வணங்கினார்கள். மன்னிக்கும் ஆன்மாக்களைக் கொண்ட அவர்கள் அனைவரும் (அந்தப் பெருந்தேவனைக் கண்டதன் விளைவால்) பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு முற்றிலும் தூய்மையடைந்தார்கள்.(20)அனைத்து உயிரினங்களின் தலைவனுடைய {சிவனின்} வனம், பயங்கர வடிவங்கள் பலவற்றால் நிறைந்து வினோதமான அழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பெரும்பாம்புகள் பலவற்றால் நிறைந்திருந்த அஃது அணுகத்தகாததாகவும், (சாதாரண உயிரினங்களால்) தாங்கிக் கொள்ள முடியாததாகவும் இருந்தது.(21) ஓ! மதுசூதனா, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்த அனைத்தும் அற்புதம் நிறைந்தவையாகின. உண்மையில், காளைமாட்டைத் தன் கொடியாகக் கொண்ட பெருந்தேவன் பயங்கர அழகுடன் சுடர்விடத் தொடங்கினான்.(22) அங்கே அமர்ந்திருந்த மஹாதேவனிடம், அவனது மனைவியான இமவானின் மகள் {உமை}, அந்தப் பெருந்தேவனின் துணைவர்களான பூதகணங்களுடைய மனைவிமார் சூழ வந்தாள். அவளது ஆடைகள் அவளுடைய தலைவனுடையவை போலவே இருந்தன, அவள் நோற்ற நோன்புகளும் அவனுடையவை போலவே இருந்தன.(23) அவள், அனைத்து தீர்த்தங்களின் நீரால் நிறைந்திருந்த ஒரு குடத்தை தன் இடையில் வைத்திருந்தாள், அவளுடன் மலையோடைகளுக்குத் தலைமை தாங்கும் தேவியரும் வந்தனர். அந்த மங்கலப் பெண்கள் அவளுக்குப் பின்னால் அணிவகுத்தனர்.(24) அந்தத் தேவி, அனைத்துப் புறங்களிலும் மலர் மாரி பொழிய, பல்வேறு வகை இனிய நறுமணங்களுடன் கூடியவளாக  நடந்து வந்தாள். இமயச் சாரலில் வசிக்கப் பிடித்த அவள், இந்தக் கோலத்தில் அந்தப் பெருந்தேவனிடம் சென்றாள்.(25)அழகிய உமை, இதழ்களில் புன்னகையுடனும், கேலி செய்து விளையாடும் விருப்பத்துடனும், தன் அழகிய கரங்கள் இரண்டாலும் மஹாதேவனின் கண்களைப் பின்னால் இருந்து மறைத்தாள்.(26) மஹாதேவனின் கண்கள் இவ்வாறு மறைக்கப்பட்ட உடனேயே, அனைத்து உலகங்களிலும் இருள் சூழ்ந்தது, அண்டத்தில் எங்கும் உயிரற்றுப் போனதாகத் தெரிந்தது. ஹோமச் சடங்குகள் நின்றுபோயின. புனித வஷத்துகள் திடீரென இல்லாமல் ஆகின.(27) உயிரினங்கள் அனைத்தும் உற்சாகம் இழந்து, அச்சத்தால் நிறைந்தன. உண்மையில், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுடைய கண்கள் இவ்வாறு மூடப்பட்ட போது, மொத்த அண்டமும் சூரியனற்றுப் போனதாகத் தெரிந்தது.(28) எனினும், அதிகம் பரவியிருந்த இருள் விரைவில் மறைந்து போனது. வலிமைமிக்கச் சுடர்மிக்க நெருப்புத் தழல் மஹாதேவனின் நெற்றியில் இருந்து வெளிப்பட்டது.(29) மற்றொரு சூரியனைப் போலத் தெரிந்த மூன்றாம் கண் (அதில் {நெற்றியில்}) தோன்றியது. அந்தக் கண் யுக நெருப்பைப் போலச் சுடர்விட்டு எரிந்து அந்த மலையை எரிக்கத் தொடங்கியது.(30)

நீண்ட கண்களைக் கொண்ட இமவானின் மகள் {உமை} நேர்ந்ததைக் கண்டு, சுடர்விட்டெரியும் நெருப்புக்கு ஒப்பான மூன்றாவது கண்ணுடன் கூடிய மஹாதேவனுக்குத் தலைவணங்கினாள். அவள் தன் தலைவனின் மீது நிலைத்த பார்வையுடன் அங்கே நின்றாள்.(31) சாலமரங்கள் மற்றும் நீண்ட தண்டுகளுடன் கூறிய பிற மரங்கள், இனிமைமிக்கச் சந்தன மரங்கள், பல்வேறு வகையிலான சிறந்த மூலிகைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து அனைத்துப் புறங்களிலும் மலைக்காடுகள் எரிந்த போது,(32) அச்சத்தால் நிறைந்த மான் கூட்டங்களும், பிற விலங்குகளும் ஹரன் அமர்ந்திருந்த இடத்திற்குப் பெருவேகத்துடன் வந்து, அவனது பாதுகாப்பை நாடின. அவ்விலங்களால் கிட்டத்தட்ட நிறைந்திருந்த அந்தப் பெருந்தேவனின் வனம், ஒருவகை வினோதமான அழகுடன் சுடர்விட்டது.(33) அதே வேளையில், மூர்க்கமாகப் பெருகி சொர்க்கத்தையே எட்டியதும், நிலையற்ற மின்னலைப் போன்ற காந்தியுடன் கூடியதும், வலிமையும், பிரகாசமும் மிக்கப் பனிரெண்டு சூரியர்களைப் போலத் தெரிந்ததுமான அந்தத் தீ, அனைத்தையும் அழிக்கும் யுகநெருப்பைப் போல அனைத்துப் புறங்களையும் மறைத்தது.(34) ஒரு கணத்தில், தாதுகள், சிகரங்கள் மற்றும் சுடர்மிக்க மூலிகைகளுடன் கூடிய அந்த இமய மலைகள் எரிந்தன.(35)

இமவான் நொறுக்கப்பட்டு, எரிக்கப்பட்டதைக் கண்ட மலை இளவரசனின் {இமவானின்} மகள், அந்தப் பெருந்தேவனின் முன்பு மதிப்புடன் கரங்களைக் கூப்பி நின்று அவனது பாதுகாப்பை நாடினாள்.(36) அப்போது சர்வன் {சிவன்}, பெண்மையின் மென்மையால் வெல்லப்பட்ட உமை, தன் தந்தையான இமவான் அத்தகைய பரிதாபகரமான நிலைக்குக் குறைக்கப்பட்டதைக் காண விரும்பாமல் இருப்பதைக் கண்டு, அந்த மலையின் மீது தன் அருள் பார்வையைச் செலுத்தினான்.(37) ஒரு கணத்தில் மொத்த இமயமும் முந்தைய நிலைக்கு மீட்கப்பட்டு, எப்போதும் போன்ற அழகை அடைந்தது. உண்மையில் அந்த மலை உற்சாகம் நிறைந்த தன்மையை வெளிப்படுத்தியது. அதன் மரங்கள் அனைத்தும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(38) இமவான் மீண்டும் தன் இயல்பான நிலையை அடைந்ததைக் கண்டவளும், களங்கமேதும் இல்லாதவளுமான உமா தேவி, உயிரினங்கள் அனைத்தின் ஆசானான தன் தலைவனிடம், இச்சொற்களைச் சொன்னாள்.(39)

உமை {மஹாதேவனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்துயிரினங்களின் தலைவா, ஓ! திரிசூலந்தரிக்கும் தேவா, ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே, என் மனத்தைப் பெரும் ஐயம் ஒன்று நிறைக்கிறது. என் ஐயத்தைத் தீர்ப்பதே உமக்குத் தகும்.(40) உமது நெற்றியில் இந்த மூன்றாம் கண் தோன்றியதற்கான காரணங்கள் என்ன? காடுகளும், உரிய அனைத்தும் சேர்ந்து அந்த மலை எரிக்கப்பட்டது ஏன்?(41) ஓ! சிறப்புமிக்கத் தேவா, இந்த மலை மீண்டும் தன் பழைய நிலையை அடைந்தது ஏன்? உண்மையில், ஒரு முறை அஃதை எரித்தபிறகு, மீண்டும் ஏன் மரங்களால் அதை மறைத்தீர்?” என்று கேட்டாள்.(42)

மஹேஸ்வரன் {உமையிடம்}, “ஓ! களங்கமற்ற தேவி, ஆராயாமல் நீ செய்த செயலின் மூலம் நீ என் கண்களை மறைத்தன் விளைவால் ஒரு கணத்தில் அண்டம் ஒளியற்றுப் போனது.(43) ஓ! மலைகளின் இளவரசனுடைய மகளே, அண்டமே சூரியனற்று அனைத்தும் இருளாகிப் போனதால், அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க விரும்பி நான் என் மூன்றாவது கண்ணை உண்டாக்கினேன்.(44) இந்தக் கண்ணின் உயர்ந்த சக்தியானது அந்த மலையை நொறுக்கி எரித்தது. எனினும், ஓ! தேவி, உன்னை நிறைவடையச் செய்யவே இமவானின் பழுதை நீக்கி மீண்டும் முன்பு போல அமைத்தேன்” என்றான்.(45)

உமை {மஹாதேவனிடம்}, “ஓ! புனிதமானவரே, கிழக்கு, வடக்கு, மேற்கு ஆகியவற்றில் உள்ள உமது முகங்கள் சந்திரனைப் போன்ற இனிமையுடனும், அழகாகவும் இருப்பது ஏன்?(46) தெற்கில் இருக்கும் உமது முகம் பயங்கரமாக இருப்பது ஏன்? உமது சடா முடி பழுப்பாக, செங்குத்தாக நிமிர்ந்தும் நிற்பது ஏன்?[2] உமது தொண்டை மயில்தோகை போல நீலமாக இருப்பது ஏன்?(47) ஓ! சிறப்புமிக்கத் தேவா, உமது கரங்களில் எப்போதும் பினாகை இருப்பது ஏன்? எப்போதும் சடைமுடி தரித்த பிரம்மச்சாரியாக நீர் இருப்பது ஏன்?(48) ஓ!தலைவா, இவை அனைத்தையும் எனக்கு விளக்குவதே உமக்குத் தகும். உம்முடன் சேர்ந்து ஒரே கடமைகளைப் பின்பற்ற முயலும் உமது மனைவி நான். மேலும், ஓ! காளையை உமது அடையாளமாகக் கொண்ட தேவா, நான் பக்தியுடன் உம்மை வழிபடுபவளும் ஆவேன்” என்றாள்”.(49)நாரதர் தொடர்ந்தார் “மலைகளின் இளவரசனுடைய மகள் இவ்வாறு சொன்னதும், சிறப்புமிக்கப் பினாகைதாரியான அந்தப் பலமிக்க மஹாதேவன், அவளிடம் உயர்வான நிறைவையடைந்தான்.(50)

அந்தப் பெருந்தேவன் அவளிடம், “ஓ! அருளப்பட்ட மங்கையே, என் வடிவங்கள் அப்படி இருப்பதற்கான காரணங்களை நான் விளக்கிச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக” என்றான்.(51)

வர்ணாசிரம தர்மங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 141-நான்கு முகங்களைக் கொண்ட காரணம்; காளைமாட்டு வாகனம் அடைந்த வகை; சுடலையில் வசிக்கும் காரணம்; அறம் அல்லது கடமையின் குறியீடுகள்; வர்ணதர்மங்கள்; ஆசிரம தர்மங்கள்; முனி தர்மங்கள் ஆகியவற்றைக் குறித்து உமையிடம் உரையாடிய மஹேஸ்வரன்…

அருள் நிறைந்த புனிதமானவன் {மஹேஸ்வரன் உமையிடம்}, “பழங்காலத்தில், அண்டத்திலுள்ள ஒவ்வொரு அழகிய பொருளிலிருந்தும் அழகு தானியங்களை வெட்டியெடுத்து அருள் நிறைந்தவளான திலோத்தமை என்றழைக்கப்படும் பெண்களில் முதன்மையானவளை பிரம்மன் படைத்தான்.(1) ஒரு நாள், அழகிய முகம் கொண்டவளும், வடிவ அழகில் அண்டத்தில் ஒப்பற்றவளுமான அந்தப் பெண், என்னை மயக்கும் விருப்பத்தால் தூண்டப்பட்டு என்னை வலம் வந்தாள்.(2) அழகிய பற்களைக் கொண்ட அந்தப் பெண் சென்ற திசையங்கும் (நான் அவளைக் காணும் ஆவல் கொண்டிருந்ததால்) உடனுக்குடனே எனக்கொரு புதிய முகம் தோன்றியது. அந்த முகங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு இனிமையாக இருந்தன.(3) இவ்வாறு அவளைக் காணும் விருப்பத்தின் விளைவாலும், யோகபலத்தின் மூலமும் நான் நான்கு முகம் படைத்தவனானேன். இவ்வாறு நான்கு முகம் கொண்டதில் நான் என் உயர்ந்த யோக சக்தியை வெளிப்படுத்தினேன்.(4)

கிழக்கு நோக்கித் திரும்பிய முகத்தைக் கொண்டு நான் அண்டத்தை ஆள்கிறேன். ஓ! களங்கமற்ற குணங்களைக் கொண்டவளே {உமையே}, வடக்கு நோக்கித் திரும்பிய முகத்தைக் கொண்டு நான் உன்னோடு விளையாடுகிறேன்.(5) மேற்கு நோக்கித் திரும்பிய என் முகம் ஏற்புடையதாகவும், மங்கலமானதாகவும் இருக்கிறது. நான் அதைக் கொண்டு அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை விதிக்கிறேன். தெற்கு நோக்கித் திரும்பியிருக்கும் என் முகம் பயங்கரமானதாகும். நான் அதைக் கொண்டு அனைத்து உயிரினங்களையும் அழிக்கிறேன்.(6) அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டு நான் தலையில் சடாமுடி தரித்த பிரம்மச்சாரியாக வாழ்கிறேன். தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பினாகை வில் எப்போதும் என் கரங்களில் இருக்கிறது.(7) பழங்காலத்தில் என் செழிப்பை அடைய விரும்பிய இந்திரன், தன் வஜ்ராயுதத்தை என் மீது ஏவினான். அந்த ஆயுதத்தால் என் தொண்டை எரிக்கப்பட்டது. அந்தக் காரணத்தினாலேயே என் தொண்டை நீலமானது[1]” என்றான்.(8)உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவரே, பேரழகுடன் கூடிய சிறந்த வாகனங்கள் பலவிருக்க, ஒரு காளைமாட்டை உமது வாகனமாக நீர் தேர்ந்தெடுத்தது ஏன்?” என்று கேட்டாள்.(9)

மஹேஸ்வரன் {உமையிடம்}, “பழங்காலத்தில் பெரும்பாட்டனான பிரம்மன், அபரிமிதமான பாலைத் தரும் தெய்வீகப் பசுவான சுரபியைப் படைத்தான். அவள் படைக்கப்பட்ட பிறகு, அமுதம் போன்று இனிமையான பாலை அபரிமிதமான அளவுகளில் தரும் பெரும் எண்ணிக்கையிலான பசுக்கள் உண்டாகின.(10) ஒரு காலத்தில் அவளது கன்றுகளின் வாயிலிருந்து ஓரளவு நுரையானது என் உடலில் விழுந்தது. இதனால் நான் கோபமடைந்தேன், என் கோபத்தால் எரிக்கப்பட்ட பசுக்கள் அனைத்தும் பல்வேறு நிறங்களைக் கொண்டவையாகின.(11) பிறகு, அனைத்தையும் அறிந்தவனும், உலங்கள் அனைத்தின் ஆசானுமான பிரம்மன் என்னைத் தணிவடையச் செய்தான். அவனே என்னைச் சுமக்கும் வாகனமாகவும், என் கொடியிலுள்ள சின்னமாகவும் இந்தக் காளையை எனக்குக் கொடுத்தான்[2]” என்றான்.(12)உமை {மஹேஸ்வரனிடம்}, “பல்வேறு வடிவங்களையும், அனைத்து வசதிகளையும், ஆடம்பரங்களையும் கொண்ட பல வசிப்பிடங்கள் உமக்குச் சொர்க்கத்தில் இருக்கின்றன. ஓ! புனிதமானவரே, அந்த இனிமை நிறைந்த மாளிகைகள் அனைத்தையும் கைவிட்டு நீர் சுடலையில் வசிப்பது ஏன்? சுடலையானது, (இறந்தோரின்) மயிரும், எலும்புகளும் நிறைந்ததாகவும், கழுகுகளும், நரிகளும் நிறைந்ததாகவும், நூற்றுக்கணக்கான ஈமச்சிதைகள் விரவிக்கிடப்பதாகவும் இருக்கிறது.(14) அழுகும் பிணங்கள் நிறைந்ததும், கொழுப்பு மற்றும் குருதியால் சேறாக இருப்பதும், அதன் மேல் குடல்களும் எலும்புகளும் விரவிக் கிடப்பதும், நரிகளின் ஊளைகளை எப்போதும் எதிரொலிப்பதுமான அது நிச்சயம் ஒரு தூய்மையற்ற இடமாகும்” என்றாள்.(15)

மஹேஸ்வரன் {உமையிடம்}, “நான் எப்போதும் புனித இடத்தைத் தேடி பூமி முழுவதும் சுற்றித் திரிகிறேன். எனினும், சுடலையைவிடப் புனிதமிக்க வேறு இடமெதையும் என்னால் காண முடியவில்லை.(16) எனவே, அனைத்து வசிப்பிடங்களைக் காட்டிலும், ஆலமரக்கிளைகளின் நிழலைக் கொண்டதும், கிழிந்த மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான சுடலையே என் இதயத்திற்கு அதிக விருப்பமுள்ளதாக இருக்கிறது.(17) ஓ! இனிய புன்னகை கொண்டவளே, என் துணைவர்களான பூதகணங்கள் இத்தகைய இடங்களில் வசிக்கவே விரும்புகின்றனர். ஓ! தேவி, அந்தப் பூதகணங்கள் என்னுடன் இல்லாமல் நான் எங்கும் வசிக்க விரும்புவதில்லை.(18) எனவே, சுடலையே என் புனித வசிப்பிடமாகும். உண்மையில், ஓ! மங்கலப் பெண்ணே, அதுவே எனக்குச் சொர்க்கமாகத் தெரிகிறது. உயர்ந்த புனிதம் நிறந்ததும், பெரும் பலனைத் தரவல்லதுமான சுடலையே, புனித வசிப்பிடங்களை விரும்பும் மனிதர்களால் அதிகம் மெச்சப்படுகிறது” என்றான்.(19)

உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, ஓ! கடமைகள் மற்றும் அறச்சடங்குகள் அனைத்தையும் நோற்பவர்களில் முதன்மையானவரே, ஓ! பினாகைபாணியே, ஓ! வரங்களை அளிப்பவரே, எனக்கு ஒரு பெரும் ஐயம் உள்ளது. இவ்வுலகில் பல்வேறு வடிவங்களிலும், பல்வேறுவகை உடைகளை உடுத்திக் கொண்டும் எங்கும் திரியும் தவசிகள் காணப்படுகிறார்கள்.(21) ஓ! பகைவர் அனைவரையும் தண்டிப்பவரே, இந்தப் பெரும் முனிவர் கூட்டத்திற்கு நன்மை செய்வதற்காக என்னுடைய இந்த ஐயத்தை அன்புகூர்ந்து தீர்ப்பீராக.(22) அறம் அல்லது கடமையானது என்னென்ன குறியீடுகளைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது? உண்மையில், அறம் அல்லது கடமையின் விவரங்களை அறியாத மனிதர்கள் அவற்றை நோற்பதில் எவ்வாறு வெல்கிறார்கள்? ஓ! பலமிக்கத் தலைவா, ஓ! அறமறிந்தவரே, இதை எனக்குச் சொல்வீராக” என்றாள்”.(23)

நாரதர் தொடர்ந்தார், “இமவானின் மகள் இந்தக் கேள்வியைக் கேட்ட போது, அங்கே இருந்த முனிவர்களின் கூட்டம் அந்தத் தேவியை வழிபட்டு ரிக்குகளாலும், ஆழ்ந்த பொருள் கொண்ட மந்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு அவளைத் துதித்தனர்.(24)

மஹேஸ்வரன் {உமையிடம்}, “தீங்கிழையாமை, வாக்கில் வாய்மை, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, ஆன்ம அமைதி, சக்திக்குத்தக்க கொடை ஆகியவை இல்லறத்தானின் முதன்மையான கடமைகளாகும்.(25) பிறர் மனைவியுடன் பாலியல் கலவி தவிர்த்தல், தன் பொறுப்பில் உள்ள செல்வத்தையும், பெண்களையும் பாதுகாத்தல், தனக்குக் கொடுக்கப்படாததை அபகரிக்க விரும்பாமை, தேன் மற்றும் இறைச்சி தவிர்த்தல் ஆகிய இவையே ஐந்து தலைமையான கடமைகளாகும்.(26) உண்மையில், அறம், அல்லது கடமையானது மகிழ்ச்சி நிறைந்த பல கிளைகளைக் கொண்டதாகும். கடமையையே மேன்மையானதாகக் கருதும் உடல் படைத்த உயிரினங்கள் பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டிய கடமைகள் இவையே. தகுதியின் ஆதாரங்கள் இவையே” என்றான்.(27)

உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! புனிதமானவரே, பெரும் ஐயங்கள் கொண்ட மற்றொரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். அதற்குப் பதிலளித்து என் ஐயங்களை விலக்குவதே உமக்குத் தகும். நான்கு வகையினர் செய்யக்கூடிய பலன்மிக்கக் கடமைகள் என்னென்ன? பிராமணன் தொடர்புடைய கடமைகள் என்னென்ன? க்ஷத்திரியனுக்கு என்னென்ன? வைசியன் தொடர்பான கடமைகளின் குறியீடுகள் என்னென்ன? சூத்திரன் தொடர்புடைய கடமைவகைகள் என்னென்ன?” என்று கேட்டாள்.(29)

அந்தப் புனிதமானவன், “ஓ! உயர்வாக அருளப்பட்ட பெண்ணே, நீ கேட்ட கேள்வி மிகச்சரியானதாகும். உண்மையில், மறுபிறப்பாள வகையைச் சார்ந்தவர்கள் உயர்வாக அருளப்பட்டவர்களாகவும், பூமியில் தேவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.(30) உண்ணா நோன்புகள் நோற்பதே (புலனடக்கமே) எப்போதும் பிராமணனின் கடமையாகும். ஒரு பிராமணன் தன் கடமைகள் அனைத்தையும் முறையாகச் செய்வதில் வெல்லும்போது அவன் பிராமணன் என்ற அடையாளத்தைப் பெறுகிறான்[3].(31) ஓ! தேவி, பிரம்மச்சரிய கடமைகளை முறையாக நோற்பது அவன் செய்ய வேண்டிய சடங்காகும். நோன்புகள் நோற்பதும், புனித நூல் {பூணூல்} தரித்தல் ஆகியவை அவனது பிற கடமைகளாகும். இவற்றின் மூலமே அவன் மறுபிறப்பாளனாகிறான்.(3) அவன் தன் ஆசான்களையும், பெரியோர்களையும், தேவர்களையும் வழிபடுவதால் ஒரு பிராமணனாகிறான். வேத கல்வியை ஆன்மாவாகக் கொண்ட அறமே நீதியின் ஆதாரமாகும். நீதி மற்றும் கடமைக்கு அர்ப்பணிப்புடன் உள்ள உடல் படைத்த உயிரினங்களுக்கு அதுவே பின்பற்றவேண்டிய, நடைமுறைப்படுத்த வேண்டிய அறமாகும்” என்றான்.(33)உமை, “ஓ புனிதமானவரே, என் ஐயங்கள் விலகவில்லை. மனிதர்களில் நான்கு வகையினரின் கடமைகளை விரிவாக விளக்குவதே உமக்குத் தகும்” என்றாள்.(34)

மஹேஸ்வரன், “அறம் மற்றும் கடமை குறித்த புதிர்களைக் கேட்டு, வேதங்களில் குறிப்பிடப்படும் நோன்புகளை நோற்று, புனித நெருப்பில் கவனத்துடன், ஆசானின் காரியத்தை நிறைவேற்றி,(35) ஒரு துறவியின் வாழ்வை வாழ்ந்து, எப்போதும் புனித நூலை {பூணூலைத்} தரித்து, தொடர்ந்து வேதமோதி, பிரம்மச்சரியக்கடமைகளைக் கடுமையாகப் பின்பற்றுவதே பிராமணனின் கடமைகளாகும்.(36) கல்விக்கான காலம் நிறைவடைந்ததும், ஒரு பிராமணன் தன் ஆசானிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தன் ஆசானின் வசிப்பிடத்தை விட்டகன்று தன் தந்தையின் இல்லத்திற்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பியதும் அவன் தனக்குத் தகுந்த மனைவியை முறைப்படி மணந்து கொள்ள வேண்டும்.(37) சூத்திரனால் செய்யப்பட்ட உணவைத் தவிர்ப்பதும் பிராமணனின் கடமையாகும். அறத்தின் பாதையில் நடந்தவாறே, உண்ணா நோன்புகளை எப்போதும் நோற்று, பிரம்மச்சரியத்தைப் பயில்வது அவனது பிற கடமைகளாகும்[4].(38) ஓர் இல்லறத்தான் நாளுக்கு நாள் செய்யும் வழிபாட்டிற்காகத் தன் இல்லத்தில் இல்லற நெருப்பைப் பராமரிக்க வேண்டும். அவன் தன் புலன்களை உரிய முறையில் கட்டுப்படுத்த வேண்டும். அவன், தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் தன்னைச் சார்ந்திருக்கும் அனைவரையும் கவனித்தபிறகு எஞ்சியிருப்பதையே உண்ண வேண்டும். அவள் எளிய உணவை உண்பவனாக, வாக்கில் வாய்மையுள்ளவனாக, அகத்திலும் புறத்திலும் தூய்மை கொண்டவனாக இருக்க வேண்டும்.(39) விருந்தினர்களைக் கவனிப்பதும், மூன்று வேள்வி நெருப்புகளைப்[5] பராமரிப்பதும் அவனுடைய வேறு கடமைகளாகும். இஷ்டி என்ற பெயரில் சொல்லப்படும் சாதாரண வேள்விகளையும் அவன் கவனிக்க வேண்டும். மேலும் விதிப்படி தேவர்களுக்கு விலங்குகளை அர்ப்பணிக்கவும் {பசுபந்தனங்கள் செய்யவும்} வேண்டும்.(40)உண்மையில், வேள்விகளைச் செய்வதும், அனைத்து உயிரினங்களுக்கும் முழுமையாகத் தீங்கிழைக்காமல் இருப்பதும் அவனுக்கான உயர்ந்த கடமைகளாகும். தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்கள் உண்ணும் முன்பு ஒருபோதும் தான் உண்ணாமல் இருப்பதும் ஓர் இல்லறத்தானின் கடமையாகும். தேவர்கள், விருந்தினர்கள், சார்ந்திருப்பவர்கள் ஆகியோரைக் கவனித்த பிறகு எஞ்சியிருக்கும் உணவு விகஸம் என்றழைக்கப்படுகிறது. ஓர் இல்லறத்தான் விகஸம் உண்ண வேண்டும்.(41) உண்மையில், ஒரு மறுபிறப்பாள வகையைச் சார்ந்த இல்லறத்தான் ஒருவன், வேதங்களை அறிந்து கொள்வதைத் தவிர்த்து, பணியாட்கள் மற்றும் சார்ந்திருப்போர் பிறர் உள்ளிட்ட தனது குடும்ப உறுப்பினர்களுக்குப் பிறகு உண்பது அவனுக்கான சிறப்புக் கடமையாகக் கருதப்படுகிறது.(42) இல்லறவாசிகளின் வழக்கில் கணவன் மற்றும் மனைவியின் ஒழுக்கம் நிகராக இருக்க வேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் வீட்டின் தலைமை தேவர்களுக்கு மலர்களையும், பிற பொருட்களையும் காணிக்கை அளிக்க வேண்டும்.(43) ஓர் இல்லறத்தான் ஒவ்வொரு நாளும் தன் வீடு (பசுஞ்சாணம் மற்றும் நீர் கொண்டு) முறையாகக் கழுவப்படுவதைக் கவனத்துடன் செய்ய வேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் உண்ணோநோன்புகளை நோற்க வேண்டும். நன்கு கழுவப்பட்டு, தூய்மைப்படுத்தப்படும் அவனது வீட்டில் ஒவ்வொரு நாளும் தேவர்களையும், பித்ருக்களையும் கௌரவித்து வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யால் உண்டாகும் புகையால் தூமமூட்ட வேண்டும்.(44) ஒரு மறுப்பிறப்பாளன் வாழும் இல்லற வாழ்வு தொடர்புடைய கடமைகள் இவையே ஆகும். இந்தக் கடமைகளே உண்மையில் உலகத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன. உண்மையில், இந்தக் கடமைகள் இல்லற வாழ்வை வாழும் பிராமணர்களுக்கு மத்தியில் உள்ள அறம் சார்ந்த மனிதர்களிடம் இருந்து எப்போதும், நித்தியமாக உண்டாகிறது.(45)

ஓ! தேவி, நீ என்னிடம் கேட்ட க்ஷத்திரியக் கடமைகளைச் சொல்லப் போகிறேன் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(46) ஒரு க்ஷத்திரியனின் கடமை அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதே என்பது தொடக்கம் முதல் சொல்லப்படுகிறது. ஒரு மன்னன் தன் குடிமக்கள் ஈட்டும் பலன்களில் ஒரு நிலையான பங்கைப் பெறுபவனாவான். அந்த வழிமுறையின் மூலம் அம்மன்னன் அறவோனாகிறான்.(47) தன் குடிமக்களை நீதியுடன் ஆண்டுப் பாதுகாக்கும் மனிதர்களின் ஆட்சியாளன், பிறருக்குப் பாதுகாப்பளிக்கும் நல்லியல்பின் மூலம் மறுமையில் பல இன்ப உலகங்களை அடைகிறான்.(48) தற்கட்டுப்பாடு, வேத கல்வி, புனி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவது, கொடையளிப்பது, கல்வி,(49) புனித நூல் {பூணூல்} தரிப்பது, அறச்சடங்குகளைச் செய்வது, பணியாட்களையும், சார்ந்திருப்போரையும் ஆதரிப்பது, தொடங்கப்பட்ட செயல்களில் விடாமுயற்சியுடன் செயல்படுவது ஆகியவை அரச வகையினரின் வேறு கடமைகளாகும்.(50)

இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஏற்புடைய தண்டனைகளை அளிப்பதும் அவனுடைய மற்றொரு கடமையாகும். வேள்விகளைச் செய்வது, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின் படியான அறச்சடங்குகளைச் செய்வது ஆகியவையும் அவனது கடமைகளே. தன் முன்பு வழக்காடுபவர்களின் சச்சரவுகளைச் சரியாகத் தீர்க்கும் நடைமுறையைப் பின்பற்றுவது, வாக்கில் வாய்மை நிறைந்திருப்பதில் அர்ப்பணிப்பு,(51) துன்பத்தில் இருப்போருக்கு உதவி செய்வது ஆகியவற்றையும் மற்றும் வேறு கடமைகளையும் வெளிப்படுத்தும் மன்னன் இம்மையிலும் மறுமையிலும் பெரும் மகிமையை அடைகிறான். பசுக்கள் மற்றும் பிராமணர்களின் சார்பில் பெரும் ஆற்றலை வெளிப்படுத்தி, போர்க்களத்தில் அவன் {மன்னன்} உயிரை விட வேண்டும்.(52) அத்தகைய மன்னன், குதிரை வேள்விகளைச் செய்வதால் வெல்லப்படும் இன்ப உலகங்களைச் சொர்க்கதில் அடைவான்.(53)

கால்நடைகளைப் பராமரித்தல், உழவு, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுதல், கொடையளித்தல், கல்வி ஆகியன வைசியனின் கடமைகளாகும்.(54) வணிகம், அறப்பாதையில் நடத்தல், விருந்தோம்பல், அமைதி, தற்கட்டுப்பாடு, பிராமணர்களை வரவேற்றல், (பிராமணர்களுக்காக) பொருட்களைத் துறத்தல் ஆகியனவும் வைசியனின் நித்திய கடமைகளாகும்.(55) வணிகத்தில் ஈடுபட்டு, அறப்பாதையில் நடக்கும் வைசியன், எள், நறுமணப் பொருட்கள், சாறுகள் அல்லது நீர்மை சார்ந்த பொருட்களை ஒருபோதும் விற்பனை செய்யக் கூடாது. அவன் அனவருக்கும் விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்த வேண்டும்.(56) அவன் தன் வழிமுறைகளின் படியும், நீதியின் படியும் சுதந்திரமாக அறம், பொருள் மற்றும் இன்பத்தை அடைய வேண்டும்.

மூன்று மறுபிறப்பாள வகையினருக்கும் தொண்டாற்றுவதே ஒரு சூத்திரனின் உயர்ந்த கடமையாகிறது[6].(57) வாக்கில் வாய்மை நிறைந்தவனும், புலனடக்கம் கொண்டவனுமான சூத்திரன் தவங்களின் பலன்களை அடைந்தவனாகக் கருதப்படுகிறான். உண்மையில், வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்தும் சூத்திரன், உயர்ந்த தவங்களின் பலனை அடைந்ததாகக் கருதப்படுகிறான்.(58) அறம் சார்ந்த ஒழுக்கம் கொண்டவனும், தேவர்களையும், பிராமணர்களையும் வழிபடுபவனும், புத்திமானுமான சூத்திரன், விரும்பத்தகுந்த அற வெகுமதிகளை அடைந்தவனாகிறான்.(59) ஓ! அழகிய மங்கையே, நான் நான்கு வகையினருக்கான கடமைகளை உனக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், ஓ! அருள்நிறந்த மங்கையே, அவர்களுக்குரிய கடமைகளை உனக்குச் சொல்லிவிட்டேன். நீ இன்னும் வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” என்று கேட்டான் {சிவன்}.(60)உமை, “நான்கு வகையினருக்குரியவையும், அவர்களுக்கு நன்மை தரக்கூடியவையும், மங்கலமானவையுமான கடமைகளைச் சொன்னீர். ஓ! புனிதமானவரே, அனைத்து வகையினருக்குமான பொதுக்கடமைகளை இப்போது சொல்வீராக” என்று கேட்டாள்.(61)

மஹேஸ்வரன், “அண்டத்தில் உள்ள அனைத்திலும் முதன்மையானவனும், எப்போதும் அற சாதனைகளை விரும்புபவனும், படைப்பாளனுமான பிரம்மன், உலகங்கள் அனைத்தையும் காக்கும்பொருட்டுப் பிராமணர்களைப் படைத்தான். படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்திலும் அவர்களே பூமிதேவர்களாவர் {பூமியில் உள்ள தேவர்கள் என்று சொல்லப்படுகின்றனர்}.(62) அவர்கள் செய்ய வேண்டிய அறச்சடங்குகள் என்ன என்றும், அவற்றின் மூலம் அவர்கள் அடையும் வெகுமதிகளையும் தொடக்கத்தில் சொல்கிறேன். பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அறமே அறங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(63) உலகத்தில் நீதி நிலவ, சுயம்புவால் மூன்று அறங்கள் உண்டாக்கப்பட்டன. உலகம் படைக்கப்படும்போதெல்லாம் அவ்வறங்கள் பெரும்பாட்டனால் படைக்கப்படுகின்றன. அதைக் கேட்பாயாக. அவையே மூன்று நித்தியமான அறங்களாகும். அதைக் கேட்பாயாக.(64) அந்த மூன்று அறங்கள் இவையே. வேதங்களில் விளக்கப்படும் அறமே உயர்ந்தது; முக்கியத்துவம் வாய்ந்ததில் அடுத்ததாக ஸ்மிருதிகளில் விளக்கப்படுவது {விளகப்படும் அறம்} இருக்கிறது; மூன்றாவதாக முக்கியத்துவம் வாய்ந்தது அறவோராகக் கருதப்படுவோரால் நடைமுறையில் செய்யப்படும் செயல்கள் சொல்லப்படுகின்றன.(65)

கல்விமானான பிராமணன், மூன்று வேதங்களைக் கொண்டிருக்க வேண்டும். அவன் வேத கல்வியை (அல்லது சாத்தங்களை உரைப்பதை) தான் வாழ்வதற்கான வழிமுறையாக ஒருபோதும் கொள்ளக்கூடாது[7]. அவன் நன்கறியப்பட்ட மூன்று செயல்களுக்கு (கொடையளிப்பது, வேதங்கற்பது மற்றும் வேள்விகள் செய்வது ஆகியவற்றுக்குத்) தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவன் (காமம், கோபம் மற்றும் பேராசையை என்ற) மூன்றைக் கடக்க வேண்டும். அவன் அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருக்க வேண்டும். இந்தக்குணங்களைக் கொண்டவனே பிராமணன் என்றழைக்கப்படுகிறான்.(66) அண்டத்தின் தலைவன் பிராமணர்கள் நோற்பதற்கென இந்த ஆறு செயல்களை அறிவித்திருக்கிறான். அந்த நித்திய கடமைகளைக் கேட்பாயாக.(67) வேள்விகளைச் செய்வது, பிறரின் வேள்விகளை நடத்தித் தருவது, கொடைகள் அளிப்பது, கொடைகள் ஏற்பது, கற்பிப்பது, கற்பது ஆகிய ஆறு செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு பிராமணன் அறத்தகுதியை வெல்கிறான்[8].(68) உண்மையில் ஒவ்வொரு நாளும் வேதங்களைக் கற்பது ஒரு கடமையாகும். வேள்வியானது (மற்றொரு) நித்திய கடமையாகும். தன் சக்திக்குத் தக்கபடியும், விதிக்கு ஏற்புள்ளபடியும் கொடைகளை அளிப்பது அவனுடைய வழக்கில் அதிகம் மெச்சப்படுகிறது.(69) மனோ அமைதியானது அறவோருக்கு மத்தியில் எப்போதும் உயர்ந்த கடமையாகவே நிலவுகிறது. தூய மனம் கொண்ட இல்லறத்தார் மிகப்பெரும் பலன்களை ஈட்டவல்லவர்களாவர்.(70)உண்மையில், ஐந்து வேள்விகளைச் செய்வதன் மூலம் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துபவன், வாக்கில் வாய்மை நிறைந்தவன், வன்மத்தில் இருந்து விடுபட்டவன், கொடைகளை அளிப்பவன், மறுபிறப்பாள விருந்தினர்கள் அனைவரையும் மதித்து விருந்தோம்பலுடன் நடத்துபவன், நன்கு தூய்மைப்படுத்தப்பட்ட வசிப்பிடங்களில் வாழ்பவன்,(71) செருக்கற்றவன், தன் காரியங்களில் எப்போதும் நேர்மையாக இருப்பவன், பிறரிடம் இனிமையான நம்பிக்கை தரும் சொற்களைப் பயன்படுத்துபவன், விருந்தினர்களுக்கும், தன் வசிப்பிடத்திற்கு வருவோருக்கும் தொண்டாற்றுவதில் இன்பமடைபவன், குடும்ப உறுப்பினர்கள், தன்னைச் சார்ந்திருப்பவர்கள் ஆகியோரின் தேவைகள் நிறைவடைந்த பின்னர் எஞ்சியிருக்கும் உணவை உண்பவன் ஆகியோர் பெரும் பலன்களை வெல்கிறார்கள்.(72) தன் விருந்தினர்கள் கைகால்களைக் கழுவிக் கொள்ள நீர் தருபவனும், பெறுபவரைக் கௌரவிக்கும் வகையில் அர்க்கியம் கொடுப்பவனும், தன் வசிப்பிடத்திற்கு வருவோருக்கு இருக்கைகள், படுக்கைகள், இருளை விலக்கும் விளக்குகள், உறைவிடம் ஆகியவற்றை முறையாகக் கொடுப்பவனுமான மனிதன் உயர்ந்த அறவோனாகக் கருதப்படுகிறான்.(73) விடியலில் எழுந்து, தன் வாயையும், முகத்தையும் கழுவிக் கொண்டு, தன் விருந்தினர்களுக்கு உணவளித்து, அவர்களைக் கௌரவித்து முறையாகத் தன் வசிப்பிடத்தில் இருந்து அனுப்பி, (மதிப்பின் வெளிப்பாடாக) சிறிது தொலைவுக்கு அவர்களைப் பின்தொடர்ந்து செல்லும் இல்லறத்தான் நித்திய தகுதியை அடைகிறான்.(74) அனைவருக்கும் விருந்தோம்பலும், {அறம், பொருள், இன்பம் என்ற} முத்தொகை தேடலும் இல்லறத்தானின் கடமைகளாகும்.(75)

ஓர் இல்லறத்தானுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அறம் தன் முக்கியக் குறியீடாகப் பிரவிருத்தியைக் கொண்டதாகும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அனைத்து உயிரினங்களுக்கும் மங்கலமானதையும், நன்மை மிகுந்ததையும் உனக்கு நான் விளக்கிச் சொல்கிறேன்.(76) ஓர் இல்லறத்தான் தன் சக்திக்குத் தகுந்த வகையில் கொடைகளை அளிக்க வேண்டும். அவன் அதே வகையிலேயே அடிக்கடி வேள்விகளையும் செய்ய வேண்டும். உண்மையில், தனக்கான நன்மையை அடைய விரும்பும் ஒருவன் எப்போதும் பலன்மிக்கச் செயல்களைச் செய்ய வேண்டும்.(77) ஓர் இல்லறத்தான் நியாயமான வழிமுறைகளின் மூலம் செல்வத்தை ஈட்ட வேண்டும். இவ்வாறு அடையப்பபட்ட செல்வத்தை அற நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, மூன்று பங்குகளாகக் கவனமாகப் பிரிக்க வேண்டும். அந்தப் பகுதிகளில் ஒன்றைக் கொண்டு அவன் அறச் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மற்றொன்றைக் கொண்டு இன்பத்திற்கான தன் ஏக்கங்களை நிறைவடையச் செய்ய முயல வேண்டும். மூன்றாவது பங்கைக் கொண்டு அதை {செல்வத்தை} மேலும் பெருக்க வேண்டும்.(79) நிவிருத்தி அறம் வேறுவகையானதாகும். அது (மறுபிறவியில் இருந்து பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படும்) விடுதலை நிலைக்காக {முக்திக்காக} இருக்கிறது. அஃதை அமைக்கும் ஒழுக்கம் குறித்துச் சொல்லப் போகிறேன். ஓ! தேவி, விரிவாக என்னிடம் இருந்து கேட்டுக் கொள்வாயாக.(80)

அவ்வறத்தால் மனத்தில் ஆழப்பதிய வைக்கப்படும் கடமைகளில் ஒன்று, அனைத்து உயிரினங்களிடமும் கொள்ளும் கருணையாகும். அதைப் பின்பற்றும் மனிதன், ஒரு நாளைக்கும் அதிகமாக ஓர் இடத்தில் வசிக்கக்கூடாது. இவ்வறத்தைப் பின்பற்றுபவர்கள், விடுதலையை {முக்தியை} அடைய விரும்பி நம்பிக்கையுடன் (அல்லது ஆசையுடன்) கூடிய பற்றுகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்.(81) தங்கள் வசிப்பிடம், நீருக்காகத் தாங்கள் சுமக்கும் கமண்டலம், தங்கள் மடியை மறைக்கும் ஆடைகள், அவர்கள் அமரும் இருக்கை, தங்கள் கரங்களில் சுமக்கும் திரிதண்டம், தாங்கள் படுக்கும் படுக்கை, தங்களுக்கு வேண்டிய நெருப்பு, தாங்கள் தங்கும் அறை ஆகியவற்றில் அவர்கள் பற்றேதும் கொள்ளக்கூடாது.(82) இவ்வறத்தைப் பின்பற்றுபவன் தன் இதயத்தைத் தன் ஆன்மாவின் இயக்கத்தில் நிறுவுகிறான். அவனது மனம் பரப்பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறது. அவன் பிரம்மத்தை அடையும் கருத்தால் நிறைந்திருக்கிறான். அவன் யோகம் மற்றும் சாங்கிய தத்துவத்தில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறான்.(83) அவன் மரத்தடியைத் தவிர வேறு உறைவிடமெதையும் விரும்புவதில்லை. மனிதர்களின் வெற்று வசிப்பிடங்களிலேயே அவன் தங்குகிறான். அவன் ஆற்றங்கரைகளில் உறங்குகிறான். அவன் அத்தகைய கரைகளில் தங்குவதை இன்பமாகக் கருதுகிறான்.(84) அவன் பற்றுகள் அனைத்தில் இருந்தும், பிணைப்புகள் அனைத்தில் இருந்து விடுபடுகிறான். அவன் தன் சொந்த ஆன்மாவின் இருப்பைப் பரமாத்மாவுடன் கலக்கிறான்.(85)

மரக்கட்டையைப் போல நின்று, உணவனைத்தையும் தவிர்க்கும் அவன் விடுதலைக்கான {முக்திக்கான} செயல்களில் மட்டுமே ஈடுபடுகிறான். அல்லது அவன் யோகத்தில் அர்ப்பணிப்புடன் திரிந்து கொண்டிருப்பான். நிவிருத்தி அறத்தைப் பின்பற்றுபவரின் நித்திய கடமைகள் இவையே.(86) அவன் தன் இனத்தில் இருந்து பிரிந்து தனியே வாழ்கிறான். அவன் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். அவன் ஒரே இடத்தில் ஒரு நாளைக்கு மேல் வசிப்பதில்லை. அனைத்துக் கட்டுகளில் இருந்தும் விடுபட்டு அவன் உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருக்கிறான். பந்தங்கள் அனைத்தில் இருந்தும் விடுதலையடைந்த அவன் ஒரே ஆற்றங்கரையில் கூட ஒரு நாளைக்கு மேல் ஒருபோதும் உறங்க மாட்டான்.(87) வேதங்களில் அறிவித்துள்ள படி விடுதலையை {முக்தியை} அறிந்த மனிதர்களின் அறம் இதுவே ஆகும். இதுவே அறவோரால் நடத்தப்படும் அறப்பாதையாகும். இந்தப் பாதையைப் பின்பற்றுபவன், எந்த அடிச்சுவட்டையும் விட்டுச் செல்வதில்லை.(88)

பிக்ஷுக்கள் (விடுதலை அறத்தைப் பின்பற்றுபவர்கள்) நான்கு வகையினராவர். அவர்கள், குடீசகர்கள், பஹூதகர்கள் ஹம்ஸர்கள், பரமஹம்ஸர்கள் ஆவர். இரண்டாமவர் முதலாமவரைவிடவும் மேன்மையானவர் ஆவார், மூன்றாமவர் இரண்டாமவரை விடவும், நான்காமவர் மூன்றாவரைவிடவும் மேன்மையானவர்கள் ஆவர்.(89) பரமஹம்ஸ நிலையைவிடப் மேன்மையானது ஏதுமில்லை; அதைவிடத் தாழ்ந்தது ஏதுமில்லை, அதைவிட முன்போ பின்போ ஏதுமில்லை. அது மகிழ்ச்சியும் துக்கமுமற்ற ஒரு நிலையாகும்; அது மங்கலமானதும், முதுமை மற்றும் மரணத்தில்இருந்து விடுபட்டதும், மாற்றமேதும் அடையாததுமான நிலையாகும்” என்றான் {மஹேஸ்வரன்}.(90)

உமை {மஹேஸ்வரனிடம்}, “இல்லறத்தார் மற்றும் முக்தி அறத்தைக்குறித்தும், அறவோரால் பின்பற்றப்படும் அறங்கள் குறித்தும் சொன்னீர். இவை உலகில் வாழும் உயிரினங்களுக்கு மிகுந்த நன்மையைப் பயக்கும் உயர்ந்த பாதைகளாகும்.(91) ஓ! அறங்கள் அனைத்தையும் அறிந்தவரே, நான் முனிவர்களின் உயர்ந்த அறத்தைக் குறித்துக் கேட்க விரும்புகிறேன். ஆசிரமங்களில் வசிக்கும் தவசிகளை நான் எப்போதும் விரும்புகிறேன்.(92) புனித நெருப்பில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளின் புகை வெளியிடும் நறுமணம் மொத்த ஆசிரமங்களிலும் நீக்கமற நிறைந்து அவற்றை இனிமைநிறைந்தவைகளாக ஆக்குகிறது. ஓ! பெரும் தேவா, இதைக் கண்டு என் இதயம் எப்போதும் மகிழ்ச்சியில் நிறைகிறது.(93) ஓ! பலமிக்கத் தேவா, தவசிகள் அறம் குறித்து எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. அனைத்து அறங்களையும் அறிந்தவர் நீரே. ஓ தேவர்களின் தேவா, ஓ! பெரும் தேவா, நான் உம்மிடம் கேட்ட இக்காரியங்கள் குறித்து உண்மையில் விரிவாகச் சொல்லி என்னைத் தெளிவடையச் செய்வீராக” என்று கேட்டாள்.(94,95)

அருள் நிறைந்த அந்தப் புனிதமானவன் {மஹேஸ்வரன் உமையிடம்}, “சரி. உயர்ந்ததும், சிறந்ததுமான தவசிகளின் அறம் குறித்து உனக்கு நான் சொல்லப் போகிறேன். ஓ! மங்கலப் பெண்ணே, இந்த அறத்தின் ஆணைகளைப் பின்பற்றும் தவசிகள், தாங்கள் பயிலும் கடுந்தவங்களின் மூலம் வெற்றியை அடைகின்றனர்.(96) ஓ! உயர்வாக அருளப்பட்டவளே, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களும், பேநபர்கள் {நுரையை உண்பவர்கள்} என்ற பெயரில் அறியப்பட்டவர்களுமான அறம்சார்ந்த முனிவர்களின் கடமைகள் என்னென்ன என்பதைத் தொடக்கம் முதல் நீ கேட்பாயாக.(97) பெரும்பாட்டனான பிரம்மன் (தவங்களைப் பயிலும் நாட்களின் போது நீரின் வடிவிலான) அமுதத்தைப் பருகினான். அந்த நீரானது ஒரு பெரும் வேள்வியில் இருந்து சொர்க்கத்தில் பாய்ந்து கொண்டிருந்தது.(98) அந்த நீரின் நுரை (பிரம்மன் குடித்ததன் விளைவால்) தன் இயல்பின்படியே உயர்ந்த மங்கலத்தைக் கொண்டதாக இருந்தது. (குறிப்பிடப்பட்ட அந்த நீரில் இருந்து) இவ்வாறு வெளி வந்த நுரையை உண்டு வாழ்ந்த அந்த முனிவர்கள் பேநபர்கள் (நுரையை உண்பவர்கள்) என்றழைக்கப்பட்டார்கள். ஓ! தவங்களையே செல்வமாகக் கொண்ட மங்கையே, தூய ஆன்மா கொண்ட முனிவர்களின் ஒழுக்கம் இதுவே. வாலகில்யர்களைக் குறித்து நான் விளக்கப் போகிறேன் கேட்பாயாக.(99) வாலகில்யர்கள் தங்கள் தவங்களால் வெற்றியை அடைந்த தவசிகளாவர். அவர்கள் சூரிய வட்டிலில் வசிக்கிறார்கள். பறவைகளால் பின்பற்றப்படும் வாழ்வியல் முறைகளைச் சார்ந்திருப்பவர்களும், அறக் கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான அந்த முனிவர்கள், உஞ்ச முறையின்படி வாழ்கிறார்கள்.(100)

அவர்கள் மான் தோல்களையோ, மரப்பட்டைகளையோ {மரவுரிகளையோ} உடுத்துகிறார்கள். முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்து விடுபட்டவர்களும், தவங்களையே செல்வமாகக் கொண்டவர்களுமான இந்த வாலகில்யர்கள் இந்த அறப்பாதையிலேயே நடக்கிறார்கள்.(101) அவர்கள் {வாலகில்யர்கள்} கட்டைவிரல் அளவுள்ளவர்களே. வகைகளாப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வகையும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடமைகளைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் தவங்களை மட்டுமே பயில்கிறார்கள். அவர்க்ள தங்கள் அறவொழுக்கத்தால் வெல்லும் பலன்கள் மிக உயர்ந்தவையாகும்.(102) அவர்கள் தேவர்களுக்குச் சரிநிகர் நிலையை அடைந்தவர்கள் என்றும், தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றவே இருப்பவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். கடுந்தவங்களால் தங்கள் பாவங்கள் அனைத்தையும் அழித்த அவர்கள், பிராகசத்தில் சுடர்விட்ட படியே திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டுகிறார்கள்.(103)

தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், கருணையைப் பயில்வதில் தங்களை அர்ப்பணித்தவர்களுமான வேறு சிலர் சக்ரசரர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். அறவொழுக்கம் ஒழுகுபவர்களும், பெரும் புனித நிலையைக் கொண்டவர்களுமான அவர்கள் சோமனின் உலகத்தில் வாழ்கிறார்கள்.(104) இவ்வாறு பித்ருக்களின் உலகதிற்கு மிக அருகில் வசிக்கும் அவர்கள் சோமனின் கதிர்களைப் பருகி வாழ்கிறார்கள்ஸம்ப்ரக்ஷாலர்கள், ஆஷ்மகுட்டர்கள் மற்றும் தந்தோலூகலர்கள் என்றழைக்கப்படும் வேறு சிலரும் இருக்கிறார்கள்[9].(105)இவர்கள் சோமம் பருகும் தேவர்கள் மற்றும் நெருப்பின் தழல்களைப் பருகும் வேறு சிலருக்கு அருகில் வாழ்கிறார்கள். தாங்கள் மணந்து கொண்ட மனைவிகளுடன், தங்கள் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு, சோமனின் கதிர்களைப் பருகி அவர்கள் வாழ்கிறார்கள்.(106) அவர்கள் புனித நெருப்பில் தெளிந்த நெய் ஆகுதிகளை ஊற்றி பித்ருக்களை உரிய வடிவங்களில் துதிக்கிறார்கள். மேலும் அவர்கள் நன்கறியப்பட்ட வேள்விகளையும் செய்கிறார்கள். இதுவே அவர்களது அறமெனச் சொல்லப்படுகிறது.(107) ஓ! தேவி, இந்த முனிவர்களின் அறமானது, வீடற்றோர் மற்றும் தேவலோகம் உட்பட எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக உலவுபவர்கள் ஆகியோரால் எப்போதும் நோற்கப்படுகிறது. மேலும் உள்ள வேறு வகையினர் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன். நீ கேட்பாயாக.(108) முனிவர்களின் வெவ்வேறு அறங்களைப் பின்பற்றுவோர் தங்கள் ஆசைகளை அடக்கித் தங்கள் ஆன்மாவை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உண்மையில், காமம், கோபம் ஆகியவற்றில் முற்றிலும் வெல்ல வேண்டும் என்பது என் கருத்தாகும்.(109) உஞ்ச வாழ்வு முறை மூலம் அடையப்பட்ட (செல்வம்) தானியத்தைக் கொண்டு அவர்கள், புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுதல், தர்மராத்ரி என்றழைக்கப்படும் வேள்வியின் நிலையான இருக்கையில் எப்போதும் அமர்வது, சோம வேள்வியைச் செய்வது, சிறப்பறிவை அடைவது, பட்டியலில் ஐந்தாவதாக வேள்விக் கொடைகளை அளிப்பது, நாள்தோறும் செய்யும் வேள்விகள், பித்ரு மற்றும் தேவ வழிபாட்டில் அர்ப்பணிப்பு மற்றும் அனைவரிடமும் விருந்தோம்பலுடன் நடத்தல் உள்ளிட்ட கடமைகளை வெளிப்படுத்த வேண்டும்.(110,111)

பசுவின் பாலில் தயாரிக்கப்படும் ஆடம்பர உணவுப் பொருட்கள் அனைத்தையும் தவிர்த்தல், இதய அமைதியில் இன்பங்கொள்ளல், வெறும்பாறைகள் அல்லது வெறும் நிலத்தில் கிடத்தல், யோகத்தில் அர்ப்பணிப்பு, கீரைகள் மற்றும் மரங்களின் இலைகளை உண்பது,(112) கனிகள், கிழங்குகள், காற்று, நீர், பாசி ஆகியவற்றை உண்டு வாழ்தல் உள்ளிட்டவை, (உலகத்தால்) வெல்லப்பட முடியாத மனிதர்களுக்குடைய கதியை அடைவதற்கு முனிவர்களால் பயிலப்படும் சில நடைமுறைகளாகும்.(113) ஒரு வீட்டில் இருந்து மேல்நோக்கி செல்லும் புகை {சமையலறை புகை} இல்லாமல் போகும்போது, உமி நீக்கும்கருவி இயங்காமல் நிற்கும்போது, இதய நெருப்பு அணைந்த போது, வீட்டில் இருப்பவர்க்ள அனைவரும் தங்கள் உணவை உண்ட பிறகு, உணவு வகைகள் அறைக்கு அறை எடுத்துச் செல்லப்படாதபோது, பிச்சைக்காரர்கள் சாலைகில் நடக்காத போது,(114) வாய்மை அறம் மற்றும் மனோ அமைதியில் அர்ப்பணிப்புடைய மனிதன், ஒரு விருந்தினரை அடைய விரும்பி (தன் ஆசை நிறைவடையாமல்) இருந்தால், அப்போது அவன் தன் வீட்டில் எஞ்சியிருக்கும் உணவை உண்ணலாம். இவ்வழியில் செயல்படுவதால் அவன் முனிவர்களின் அறத்தைப் பயில்பவனாகிறான்.(115) ஒருவன் ஆணவம் கொள்ளக்கூடாது; செருக்கடையக்கூடாது; உற்சாகமில்லாதவனாக, நிறைவில்லாதவனாக, எதற்கும் வியப்படைபவனாக இருக்கக்கூடாது. ஒருவன் நண்பர்களுக்கும், பகைவர்களுக்கும் இடையில் சரிநிகராகவே நடந்து கொள்ள வேண்டும். உண்மையில், மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவனுமான மனிதன் அனைத்து உயிரினங்களுடனும் நட்புடன் பழக வேண்டும்” என்றான் {சிவன்}.(116)

வானப்பிரஸ்தம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 142-வானப்பிரஸ்தர்களின் கடமைகள்; வானப்பிரஸ்தர்களில் இருவகையினரின் கடமைகள்; துறவிகளின் கடமைகள் ஆகியவற்றை உமைக்குச் சொன்ன சிவன்…

உமை {மஹேஸ்வரனிடம்}“காட்டுத்துறவிகள் {வானப்பிரஸ்தர்கள்}, இனிமை நிறைந்த பகுதிகளிலும், ஆறுகளின் ஓடைகள் மற்றும் நீரூற்றுகளின் மத்தியிலும், ஓடைகள் மற்றும் மற்றும் சிற்றோடைகள், குன்றுகள், மலைகள், வனங்கள் மற்றும் காடுகளில் அருகில் உள்ள கொடிப்பந்தல்களிலும், கனிகள் மற்றும் கிழங்குகள் நிறைந்த புனிதத்தலங்களிலும் வசிக்கிறார்கள்.(1) குவிந்த கவனத்துடனும், நோன்புகள் மற்றும் விதிகளைப் பின்பற்றியபடியும் அவர்கள் அத்தகைய இடங்களில் வசிக்கிறார்கள்.(2) ஓ! சங்கரரே, அவர்கள் பின்பற்றக்கூடிய புனித விதிகளைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ! தேவர்கள் அனைவரின் தேவா, இந்தத் துறவிகள் தங்கள் உடல்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தங்களைத் தாங்களே சார்ந்திருக்கிறார்கள்” என்றாள்.(3)

மஹேஸ்வரன் {உமையிடம்}, “காட்டுத்துறவிகளின் {வானப்பிரஸ்தர்களின்} கடமைகளைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. ஓ! தேவி, ஒரு மனத்துடன் அதைக் கேட்டு, அறத்தை உன் இதயத்தில் நிலைநிறுத்துவாயாக.(4) கடும் நோன்புகளையும், விதிகளையும் பின்பற்றி, வனங்களிலும், காடுகளிலும் வசிக்கும் அறம் சார்ந்த துறவிகளால் செய்யப்பட்டும் எந்தச் செயல்களால் அவர்கள் வெற்றியை அடைகிறார்கள் என்பதைக் கேட்பாயாக.(5) ஒரு நாளைக்கு மூன்று முறை நீராடி, பித்ருகள் மற்றும் தேவர்களை வழிபட்டு, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி, இஷ்டி ஹோமம் என்ற பெயரிலான சடங்குகளைச் செய்து,(6) நீவார நெல்லை எடுத்து வந்து, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, இங்குதை மற்றும் ஆமணக்கு வித்துகளை நசுக்குச் செய்யப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துவது அவர்களது கடமைகளாகும்.(7) யோக நடைமுறைகளைச் செய்வதன் மூலம் (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டு, காமம் மற்றும் கோபத்தில் இருந்து விடுபடும் அவர்கள் வீராசனம்[1] என்றழைக்கப்படும் மனோநிலையில் தங்களை அமர்த்திக் கொள்ள வேண்டும். உண்மையில், கோழைகளால் அடைய முடியாத இடங்களில் அவர்கள் வசிக்க வேண்டும்.(8)யோகம் தொடர்பான சிறந்த விதிகளைப் பின்பற்றி, கோடைக்காலத்தில் நான்கு புறமும் நான்கு நெருப்புகளுக்கு மத்தியிலும், தலைக்கு மேலே சூரியனுடனும் மண்டூகம் என்றழைக்கப்படும் யோகத்தை முறையாகப் பயின்று,(9) வீராசனம் என்றழைக்கப்படும் மனோநிலையில் எப்போதும் அமர்ந்து, வெறும் பாறைகள் அல்லது வெறுந்தரையில் கிடந்து, அறத்தில் இதயத்தை நிலைநிறுத்தி, குளிர், நீர், நெருப்பு ஆகியனவற்றுக்கு அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.(10) அவர்கள் நீர், அல்லது காற்று, அல்லது பாசி ஆகியவற்றை உண்டு வாழ வேண்டும். அவர்கள் தங்கள் தானியங்களின் உமி நீக்க இரு கற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்களில் சிலர் அக்காரியத்திற்குத் தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். (வருங்காலத்திற்கு எதையும் சேமிக்காமல் இருப்பதற்காக) அவர்கள் எவ்வகைப் பாத்திரங்களையும் வைத்துக் கொள்வதில்லை.(11) சிலர் கந்தலாடைகளையோ, மரவுரிகளையோ, மான் தோல்களையோ உடுத்துகின்றனர். இவ்வாறே அவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கால அளவில் (சாத்திரங்களால் நிறுவப்பட்ட) விதிகளின் படி தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர்.(12) காடுகளில் இருக்கும் அவர்கள், காடுகளுக்குள்ளேயே திரிந்து, அவற்றுக்குள்ளேயே வாழ்ந்து, அவற்றுக்குள்ளேயே காணப்பட வேண்டும். உண்மையில் இந்தக் காட்டுத் துறவிகள் ஓர் ஆசானை அடைந்து அவர்களுடனே சீடனாக வாழ்கிறார்கள்.(13)

ஹோமச் சடங்குகளைச் செய்வதும், ஐந்து வேள்விகளைச் செய்வதும் அவர்களது கடமையாகும். வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி ஐந்து வேள்விகளை (குறித்த நேரத்தில்) பிரித்து முறையாகச் செய்து,(14) வேறு வேள்விகளிலும் அர்ப்பணிப்புடன், எட்டாவதாகச் சாதுர்மாஸ்யத்தைப் பின்பற்றி, பௌர்ணமாஸ்யம் மற்றும் பிற வேள்விகளையும் செய்து, நாள்தோறும் செய்ய வேண்டிய வேள்விகளைச் செய்து வாழ்வதே(15) மனைவிகளிடம் இருந்து பிரிந்து, அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டு, அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்த மனிதர்களின் கடமையாகும். உண்மையில் அவர்கள் இவ்வாறு காட்டில் வாழ வேண்டும்.(16) வேள்விக்கரண்டியும், நீர்க்கலனும் அவர்களுடைய முக்கியச் செல்வங்களாகும். அவர்கள் எப்போதும் மூன்று நெருப்புகளுக்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அறவொழுக்கம் ஒழுகி, அறப்பாத்தையைப் பின்பற்றும் அவர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(17) (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், வாய்மை அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களுமான இம்முனிவர்கள், புனிதம் நிறைந்த பிரம்மலோகத்தையோ, நித்தியமான சோமலோகத்தையோ அடைகின்றனர்.(18) ஓ! மங்கலமான தேவி, காட்டுத் துறவிகளால் {வானப்பிரஸ்தர்களால்} பின்பற்றபடும் அறத்தின் வரையறைகளைச் சுருக்கமாகவும், அவற்றின் பல்வேறு நடைமுறைகளை விரிவாகவும் சொன்னேன்” என்றான்.(19)

உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, ஓ! அனைவராலும் வழிபடப்படுபவரே, தவ வெற்றியை அடைய சாத்திரங்களைப் பின்பற்றும் முனிவர்க்கூட்டங்களின் அறம் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். அதை எனக்குச் சொல்வீராக.(20) காடுகளில் வசித்து, வெற்றியைத் தரும் சாத்திரங்களை நல்ல திறனுள்ளவர்களாக இருக்கும் அவர்களில் சிலர் தாங்கள் விரும்பியபடி வாழ்ந்து, குறிப்பிட்ட நடைமுறைகளில் சுருங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர்; வேறு சிலர் மனைவிகளையும் கொள்கின்றனர். உண்மையில் அவர்களுக்கான நடைமுறைகள் எவ்வாறு விதிக்கப்பட்டிருக்கின்றன?” என்று கேட்டாள்.(21)

மஹாதேவன் {உமையிடம்}, “ஓ! தேவி, தலையை மழித்து, பழுப்பு {காவி} உடை தரித்தல் சுதந்திரமாகத் திரியும் துறவிகளின் குறியீடுகளாகும்; மணந்து கொண்ட மனைவிகளுடன் விளையாடுவோரின் குறியீடுகள் தங்கள் இரவுகளை இல்லங்களில் கழிப்பதில் அடங்குகின்றன.(22) ஒரு நாளைக்கு மூன்று முறை நீராடுவது இருவகையினருக்கும் கடமையாகும். பொதுவாக முனிவர்களால் செய்யப்படுவதைப் போலவே நீர் மற்றும் காட்டில் கிடைக்கும் கனிகள் ஆகியவற்றுடன் ஹோமம் செய்வது, திருமணம் செய்து கொண்ட துறவிகளுக்குப் பொருந்தும். தியான யோகத்திற்குள் ஈர்க்கப்படுவது, அறக்கடமைகளையும் (சாத்திரங்கள் மற்றும் வேதங்களில்) விதிக்கப்பட்டுள்ளவற்றையும் கடைப்பிடிப்பது, அவர்களுக்கெனப் பரிந்துரைக்கப்பட்ட வேறு சில கடமைகளாகும்.(23) காட்டில் வசிக்கும் துறவிகள் தொடர்பாக முன்பு நான் சொன்ன கடமைகள் அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும். உண்மையில், அந்தக் கடமைகளைச் செய்தால், அவற்றைச் செய்பவர்கள் கடுந்தவங்களுக்குரிய வெகுமதிகளை அடைவார்கள்.(24) திருமண வாழ்வை வாழும் காட்டுத் துறவிகள் தங்கள் புலன்களின் நிறைவைத் தாங்கள் மணந்து கொண்ட மனைவியருடன் அடக்கிக் கொள்ள வேண்டும். மனைவிகளுக்குரிய பருவ காலங்களில் மட்டுமே அவர்களுடன் கலவியில் ஈடுபட்டு அவர்களுக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும்.(25)

இந்த அறவோர் பின்பற்றும் அறமானது, முனிவர்களால் விதிக்கப்பட்டு அவர்களாலேயே பின்பற்றப்படுகிறது. அறம் ஈட்டுவதில் தங்கள் கண்களை நிலைக்கச் செய்யும் அவர்கள், கட்டுப்பாடற்ற பேராசையில் இன்ப நுகர் பொருட்கள் எதனையும் பின்தொடரக்கூடாது.(26) முற்றிலும் தீங்கற்ற தன்மையை உறுதிகூறும் கொடையை அனைத்து உயிரினங்களுக்குக் கொடுக்கும் மனிதனின் ஆன்மாவானது வன்மத்தில் இருந்தும் தீங்கிலிருந்தும் விடுபடுவதால் அவன் அறவோனாகிறான்.(27) உண்மையில், அனைத்து உயிரினங்களுக்கும் கருணை காட்டுபவனும், அனைத்து உயிரினங்களிடமும் முற்றிலும் நேர்மையாக நடந்து கொள்ளும் நோன்பைப் பின்பற்றுபவனும், அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்பவனுமான மனிதன் அறவோனாகிறான்.(28) வேதங்கள் அனைத்திலும் நீராடுபவன், அனைத்து உயிரினங்களுடனும் நேர்மையாக நடந்து கொள்பவன் ஆகிய இருவரும் பலனின் அளவில் சரிநிகராகவே பார்க்கப்படுகிறார்கள். ஒருவேளை பின்னவன் பலனின் அளவில் சிறிதளவு மேம்பட்டிருக்கக்கூடும்.(29)

நேர்மை அறமெனச் சொல்லப்படுகிறது; நேன்மையின்மை அல்லது கோணல்புத்தி மாறாக {மறமாகச்} சொல்லப்படுகிறது. நேர்மையாக நடந்து கொள்ளும் மனிதன் அறத்துடன் கூடியவனாகிறான் {அறவோனாகிறான்}.(30) நேர்மையான நடத்தையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதன், தேவர்களுக்கு மத்தியில் வசிப்பிடத்தை அடைவதில் வெற்றியடைகிறான். எனவே, அறப்பலனை அடைய விரும்பும் மனிதன் நேர்மையுள்ளவனாக இருக்க வேண்டும்.(31) மன்னிக்கும் இயல்பு, தற்கட்டுப்பாடு, முற்றாக அடக்கப்பட்ட கோபம் ஆகியவற்றுடன் கூடிய ஒருவன் வன்மத்தில் இருந்து விடுபட்டவனாகத் தன்னை அறத்தின் உடல்வடிவமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அத்தகைய மனிதன், அறக்கடமைகளை வெளிப்படுத்துவதைத் தவிர அறப்பலனையும் கொண்டவனாகிறான்.(32) தூக்கக்கலக்கம், தாமதம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவனும், தன் சக்திக்குத் தக்க அறப்பாதையைப் பின்பற்றுபவனுமான அற ஆன்மா கொண்ட மனிதன், ஒழுக்கத்தூய்மை அடைந்து, வயதில் முதிர்ந்ததும் பிரம்மத்திற்கு இணையானவனாகக் கருதப்படுகிறான்” என்றான்.(33)

உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! தேவா, தங்கள் ஆசிரமங்களில் பற்றுடையவர்களும், தவத்தையே செல்வமாகக் கொண்டவர்களுமான தவசிகள் கடமைகளின் எந்த நடைமுறைகளைப் பின்பற்றினால் பெருங்காந்தியை அடைவதில் வெல்கிறார்கள்?(34) மேலும் பெருஞ்செல்வத்தைக் கொண்ட மன்னர்களும், இளவரசர்களும், செல்வமில்லாத பிறரும் என்ன செயல்களைச் செய்வதன் மூலம் உயர்ந்த வெகுமதிகளை அடைவதில் வெல்கிறார்கள்?(35) ஓ! தேவா, காட்டில் வசிப்பவர்கள் என்ன செயல்களைச் செய்வதன் மூலம் நித்தியமான இடத்தை அடைவதிலும், தங்கள் மேனியில் தெய்வீக சந்தனத்தைப் பூசி அலங்கரித்துக் கொள்வதிலும் வெல்கிறார்கள்?(36) ஓ! முக்கண்களைக் கொண்ட சிறப்புமிக்கத் தேவா, ஓ! முந்நகரங்களை அழித்தவரே, தவங்களைச் செய்வது குறித்த மங்கல காரியம் குறித்த அனைத்தையும் விரிவாகச் சொல்வதன் மூலம் என் ஐயத்தை விலக்குவீராக” என்று கேட்டாள்.(37)

அந்தச் சிறப்புமிக்கத் தேவன், “புலனடக்கத்துடன் உண்ணாநோன்புகள் தொடர்பான நோன்புகளை நோற்பவர்கள், எந்த உயிரினத்திற்கு எவ்வகைத் தீங்கையும் இழைக்காதவர்கள், வாக்கில் வாய்மை பயில்பவர்கள் ஆகியோர் வெற்றியை அடைந்து, சொர்க்கத்திற்கு உயர்ந்து, அனைத்து வகைத் தீமையில் இருந்தும் விடுபட்டு, கந்தர்வர்களின் துணையுடன் இன்பத்தில் திளைப்பார்கள்.(38) மண்டூக யோகம் தொடர்புடைய மனோநிலையுடன் கிடப்பவனும், முறையான விதிகளின்படி பலன்மிக்கச் செயல்களைச் செய்து தீக்ஷை எடுத்தவனுமான அறவோன், மறுமையில் நாகர்களின் துணையுடன் இன்பத்தில் திளைப்பார்கள்.(39) மான்களின் துணையுடன், அவற்றின் வாய்களில் இருந்து விழும் புற்களையும், காய்கறிகளையும் உண்டு தீக்ஷை எடுத்துக் கொண்டு அவை தொடர்பான கடமைகளைக் கவனிப்பவர்கள் அமராவதியை (இந்திரனின் மாளிகைகளை) அடைவதில் வெல்கிறார்கள்.(40)

பாசிகளைத் திரட்டி, மரங்களின் உதிர்ந்த இலைகளை எடுத்து அவற்றை உண்டு வாழ்ந்து, குளிரின் கடுமைகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும் மனிதன் மிக உயர்ந்த இடத்தை அடைவான்.(41) காற்றையோ, நீரையோ, கனிகளையோ, கிழங்குகளையோ உண்டு வாழும் மனிதன், மறுமையில் யக்ஷர்களின் செழிப்பை அடைந்து, பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த அப்சரஸ்களின் துணையுடன் இன்பத்தில் திளைப்பான்.(42) விதிகளில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி பனிரெண்டு ஆண்டுகள் கோடைக்காலத்தில் ஐந்து நெருப்புகளைத் தாங்கும் நோன்பைப் பயிலும் ஒருவன் தன் மறுபிறவியில் ஒரு மன்னனாகப் பிறக்கிறான்.(43) உணவு குறித்த நோன்புகளை நோற்று, பனிரெண்டு வருடங்கள் தவம்பயின்று, தடையெச்சப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, தவிர்க்கப்பட வேண்டிய நேரங்களையும் முறையாகக் கடைபிடித்து வாழ்பவன் தன் மறுபிறவியில் பூமியின் ஆட்சியாளனாவான்.(44) ஆகாயத்தையே மேற்கூரையாகக் கொண்ட உறைவிடத்தில் வெறுந்தரையில் அமர்ந்து, கிடப்பவன், அனைத்து உணவையும் தவிர்த்து தன் உடலைக் கைவிடும்போது சொர்க்கத்தின் பேரின்பத்தை அடைகிறான்.(45)

ஓ! மங்கையே, (வானத்தை {மேற்கூரையாகக் கொண்ட இடத்தை} மட்டுமே தன் உறைவிடமாகக் கொண்டு) வெறுந்தரையில் அமர்ந்து, கிடப்பவன், சிறந்த வாகனங்கள், படுக்கைகள், சந்திரப்பிரகாசத்துடன் கூடிய விலைமதிப்புமிக்க மாளிகைகள் ஆகியவற்றை வெகுமதிகளாக அடைகிறான் என்று சொல்லப்படுகிறது. எளிய உணவை உண்டு, பல்வேறு சிறந்த நோன்புகளை நோற்று தன்னைச் சார்ந்தே வாழும் மனிதன், உணவனைத்தையும் கைவிட்டு தன் உடலைக் கைவிடும்போது, சொர்க்கத்திற்கு உயர்வதில் வென்று, அதன் இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான். தன்னை மட்டுமே முழுமையாகச் சார்ந்து வாழ்ந்த மனிதன், தீக்ஷையுடன் தொடர்புடைய கடமைகளைப் பனிரெண்டு வருடங்கள் பயின்று, இறுதியாகப் பெருங்கடலில் தன்னுடலைக் கைவிட்டால், அவன் தன் மரணத்திற்குப் பிறகு வருணலோகத்தை அடைகிறான். முற்றிலும் தன்னை மட்டுமே சார்ந்து வாழ்ந்து, பனிரெண்டு வருட தீக்ஷையுடன் தொடர்புடைய கடமைகளைச் செய்து,(46-49) கூரிய கல்லால் தன் பாதத்தையே துளைத்துக் கொள்ளும் மனிதன் குஹ்யலோகத்தின் இன்பத்தை அடைவதில் வெல்கிறான். சுயத்தின் துணையுடன் சுயத்தை விளைவிப்பவனும், (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவனும், அனைத்து வகைப் பற்றுகளில் இருந்து விடுபட்டவனும்,(50) தீக்ஷைக்குப் பிறகு பனிரெண்டு ஆண்டு ஒழுக்கமாக மனத்தில் இவற்றை நோற்பவன், சொர்க்கத்தை அடைந்து, தேவர்களைத் துணையாக அடைந்து இன்பங்கள் அனைத்தையும் அனுபவிப்பான்.(51)

முற்றிலும் தன்னையே சார்ந்திருந்து, தீக்ஷையுடன் தொடர்புடைய கடமைகளைப் பனிரெண்டு ஆண்டுகள் பின்பற்றி, இறுதியாகத் தேவர்களுக்குக் காணிக்கையாகத் தன்னுடலை நெருப்பில் கைவிடுபவன், பிரம்மலோகத்தை அடைந்து அங்கே உயர்வாக மதிக்கப்படுகிறான்.(52) ஓ! தேவி, பனிரெண்டு வருடங்கள் தீக்ஷை கடமைகளைப் பின்பற்றி, தன் புனித நெருப்பை ஒரு மரத்தில் வைத்துவிட்டு, உரிய தீக்ஷை பெற்றவனும், புலனடக்கத்துடன் கூடியவனுமான ஒரு மறுபிறப்பாளன், சுயத்தைச் சுயத்தில் வைத்து மமதையில் இருந்து விடுபட்டு, அறம் ஈட்ட விரும்பி, தன் உடலை மறைக்காமல் புறப்பட்டு, வீரர்கள் செல்லும் பாதையில் நடந்து (கிடப்பதற்குரிய காலம் வரும்போது) வீரர்களின் இயல்புக்கேற்றபடி கிடந்து, வீரர்களின் ஒழுக்கப்படியே வாழ்ந்தால், அவன் நிச்சயம் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட கதியை அடைவான்[2].(53-55) அத்தகைய மனிதன் சக்ரனின் {இந்திரனின்} நித்திய உலகத்திற்குச் சென்று தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையைப் பெற்று, தெய்வீக மலர்மாலைகளையும், தெய்வீக நறுமணப்பொருட்களையும் தரித்துக் கொண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.(56)உண்மையில், அறம் சார்ந்த ஆன்மா கொண்ட மனிதன், தேவர்களைத் தன் துணைவர்களாக அடைந்து, சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்கிறான். வீரர்களின் நடைமுறைகளைப் பின்பற்றும் வீரனும், வீரர்களுக்குரிய யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவனும்,(57) அனைத்தையும் துறந்து, நல்லியல்பின் நடைமுறைகளைப் பயின்று வாழ்பவனும், புலனடக்கத்துடன் கூடியவனாகத் தீக்ஷை பெற்று உடலிலும், மனத்திலும் தூய்மையை அடைந்தவனுமான ஒருவன், வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையை நிச்சயம் அடைவான். நித்தியமான இன்பலோகங்கள் அவனுடையவையாகும்.(58) சாரதியின் விருப்பப்படி செல்லும் தேரைச் செலுத்திக் கொண்டு இன்பலோகங்கள் அனைத்திலும் அவன் தன் விருப்பப்படி திரிந்து வருவான். உண்மையில் அருளப்பட்ட மனிதன், சக்ரனின் உலகங்களில் வசித்து, துன்பங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு எப்போதும் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருப்பான்” என்றான் {சிவன்}.(59)

பிராமணத்தன்மை கொண்ட சூத்திரன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 143-ஒருவன் தன் நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு மேன்மையுறவோ, தாழ்ந்த நிலைக்கு வீழ்வதோ நேரும் சூழ்நிலைகளை உமைக்குச் சொன்ன சிவன்…

உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! பகனின் கண்களையும், பூஷனின் பற்களையும் கிழித்தெறிந்தவரே, ஓ! தக்ஷனின் வேள்வியை அழித்தவரே, ஓ! முக்கண் தேவா, எனக்கோர் ஐயம் இருக்கிறது.(1) பழங்காலத்தில் சிறப்புமிக்கச் சுயம்புவே நான்கு வகைகளை {வர்ணங்களைப்} படைத்தார். ஒரு வைசியன் செய்யும் எந்தச் செயல்களின் தீய விளைவால் அவன் ஒரு சூத்திரனாகிறான்?(2) எந்தச் செயல்களினால் ஒரு க்ஷத்திரியன் வைசியானாகவும், ஒரு மறுபிறப்பாளன் (பிராமணன்) க்ஷத்திரியனாகவும் ஆகின்றனர்? வகைகளின் தரம் குறைவதை எவ்வழிமுறைகளினால் தடுக்க வேண்டும்?(3) எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு பிராமணன் தன் மறுபிறவியில் சூத்திர வகையில் பிறக்கிறான்? ஓ! பலமிக்கத் தேவா, எந்தச் செயல்களைச் செய்தன் மூலம் ஒரு க்ஷத்திரியன் சூத்திர நிலையை அடைகிறான்?(4) ஓ! பாவமற்றவரே, ஓ! அனைத்து உயிரினங்களில் தலைவரே, ஓ! சிறப்புமிக்கவரே, எனக்கிருக்கும் இந்த ஐயத்தை விலக்குவீராக. மேலும் மற்ற மூன்று வகையினரும் இயல்பாகவே பிராமணத்தன்மையை அடைவது எவ்வாறு என்பதையும் சொல்வீராக?” என்று கேட்டாள்.(5)அந்தச் சிறப்புமிக்கவன், “ஓ! தேவி, பிராமணத்தன்மை அடைவதற்கு மிக அரிதானதாகும். ஓ! மங்கலமங்கையே, ஒருவன் அசல் படைப்பின் மூலமோ, பிறப்பின் மூலமோ பிராமணனாகிறான். அதே போலவே, க்ஷத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகியோர் அனைவரும் மூலப்படைப்பின் மூலமே அவ்வாறாகிறார்கள். இதுவே என் கருத்தாகும்[1].(6) எனினும், பிராமணனாகப் பிறந்த ஒருவன் தன் தீச்செயல்களின் மூலம் தன் நிலையில் இருந்து வீழ்கிறான். எனவே, முதல் வகை நிலையை அடைந்த பிராமணன், (தன் செயல்களின் மூலம்) அதை எப்போதும் பாதுகாக்க வேண்டும்.(7) ஒரு க்ஷத்திரியனோ, வைசியனோ ஒரு பிராமணனைப் போலவே பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளைப் பயின்று வாழ்ந்தால், அவன் (தன் அடுத்தப் பிறவியில்) ஒரு பிராமணனாகிறான்.(8) ஒரு பிராமணன் தன் வகைக்கான கடமைகளைக் கைவிட்டு, க்ஷத்திரியனுக்குரிய கடமைகளைப் பின்பற்றினால் அவன் தன் பிராமணன நிலையில் இருந்து விழுந்து க்ஷத்திரியனாகிவிட்டதாகக் கருதப்பட வேண்டும்.(9)
அற்ப புத்தி கொண்ட எந்தப் பிராமணன், அடைதற்கு மிக அரிய தன் பிராமண நிலையை மறந்து, பேராசை மற்றும் மடமையால் தூண்டப்பட்டு, வைசியர்களுக்குரிய நடைமுறைகளைப் பின்பற்றுவானோ,(10) அவன் வைசியனாகவே கருதப்படுகிறான். அதே போல வைசியனாகப் பிறந்த ஒருவன், சூத்திரர்களின் நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு சூத்திரனாகிறான். உண்மையில், தன் வகைக்கான கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்ட பிராமணன், சூத்திரனின் நிலைக்கும் தாழக்கூடும்.(11) தன் பிறப்பின் வகையில் இருந்து வீழ்ந்த அத்தகைய பிராமணன், (அவன் முறையாகத் தன் கடமைகளை நோற்றால் எது அவனுடைய இலக்காக இருக்குமோ அந்த) பிரம்ம லோகத்தை அடையாமல், நரகத்தில் மூழ்கி, தன் மறுபிறவியில் ஒரு சூத்திரனாகப் பிறக்கிறான்.(12) உயர்வாக அருளப்பட்ட க்ஷத்திரியனோ, வைசியனோ தன் வகைக்காக விதிக்கப்பட்ட கடமைகளுக்கு இணக்கமான நடைமுறைகளைக் கைவிட்டு ஒரு சூத்திரனுக்கு விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றினால்,(13) அவன் தன் வகையில் இருந்து வீழ்ந்து கலப்பு வர்ண மனிதனாகிறான். இவ்வகையிலேயே பிராமணனோ, க்ஷத்திரியனோ, வைசியனோ சூத்திர நிலைக்குள் மூழ்குகிறார்கள்.(14) தன் வகைக்கான கடமைகளைப் பயின்று தெளிவான பார்வையை அடைந்தவனும், அறிவு மற்றும் அறிவியலுடன் கூடியவனும், (உடலிலும், மனத்திலும்) தூய்மை கொண்டவனும், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனும், தன் கடமைகள் அனைத்தையும் பயில்வதில் அர்ப்பணிப்புமிக்கவனுமான மனிதன், நிச்சயம் அறவெகுமதிகளை அனுபவிப்பான்.(15)
 
ஓ! தேவி, இது குறித்து (சுயம்புவான) பிரம்மனால் சொல்லப்பட்டவற்றை உனக்குச் சொல்லப் போகிறேன். பலனடைய விரும்பும் அறவோர் எப்போதும் உறுதியுடன் ஆன்மப் பண்பாட்டைத் தொடர்வார்கள்.(16) கடுமைநிறைந்த கொடூர மனிதர்களில் இருந்து வரும் உணவு நிந்திக்கத்தகுந்ததாகும். பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களுக்குக் கொடுக்கச் சமைக்கப்பட்ட உணவும் அத்தகையதே. இறந்து போன மனிதனின் முதல் சிராத்தத்திற்காகச் சமைக்கப்பட்ட உணவும் அத்தகையதே. ஒரு சூத்திரனால் கொடுக்கப்பட்டதும், வழக்கமான களங்கங்களின் விளைவால் களங்கப்பட்டதுமான உணவும் அவ்வாறானதே. இவற்றை ஒரு பிராமணன் ஒருபோதும் உண்ணக்கூடாது.(17) ஓ! தேவி, ஒரு சூத்திரனின் உணவு உயர் ஆன்ம தேவர்களால் எப்போதும் அங்கீகரிக்கப்படுவதில்லை. இதைப் பெரும்பாட்டன் தன் வாயால் அதிகாரத்துடன் சொன்னதாகவே நான் நினைக்கிறேன்.(18) புனித நெருப்பை நிறுவுபவனும், வேள்விகளைச் செய்பவனுமான ஒரு பிராமணன், ஒரு சூத்திரன் கொடுத்த உணவின் எந்தப் பகுதியும் செரிக்காமல் இறந்தால் அவன் நிச்சயம் அடுத்தப் பிறவியில் ஒரு சூத்திரனாகவே பிறப்பான்.(19) சூத்திரனின் உணவு தன் குடலில் எஞ்சியிருப்பதன் விளைவால் அவன் பிராமண நிலையில் இருந்து வீழ்கிறான். அத்தகைய பிராமணன் சூத்திர நிலையை அடைகிறான். இதில் ஐயமேதும் கிடையாது.(20)
 
ஒரு பிராமணன், எந்த மனிதனின் உணவை வாழ்நாள் முழுவதும் உண்டு வாழ்ந்தானோ, அல்லது தன் இறுதி மூச்சில் தன் வயிற்றில் எந்த மனிதன் கொடுத்த உணவு செரிக்காமல் இருக்கிறதோ அந்த மனிதனின் நிலையிலேயே அடுத்தப் பிறவியில் அவன் பிறக்கிறான்.(21) அடைவதற்கு மிக அரிதான பிராமணன் என்ற மங்கல நிலையை அடைந்தவன், அதை அலட்சியம் செய்து, தடை செய்யப்பட்ட உணவை உண்டால் அவன் தனது உயர்ந்த நிலையில் இருந்து வீழ்கிறான்.(22) மதுவைப் பருகுபவனும், பிராமணக் கொலை செய்த குற்றவாளியும், நடத்தையில் வஞ்சகம் நிறைந்தவனும், கள்வனும், நோன்புகளை உடைத்தவனும், தூய்மையற்றவனும், வேத கல்வியில் கவனமில்லாதவனும், பாவியும், பேராசை கொண்டவனும், வஞ்சகனும்,(23) நோன்புகளை நோற்காதவனும், சூத்திரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவனும், பிறரின் காமத்திற்குத் தரகு வேலை பார்த்து வாழ்வாதாரத்தை அடைபவனும், சோமலதையை விற்பனை செய்பவனும், தன்னிலும் தாழ்ந்த வகை மனிதனுக்குத் தொண்டாற்றுபவனுமான மனிதன் பிராமணத்தன்மை என்ற தன் நிலையில் இருந்து வீழ்கிறான்.(24) ஆசானின் படுக்கைக்குக் களங்கம் செய்பவனும், அவரிடம் வன்மத்தை வளர்த்துக் கொள்பவனும், அவரைக் குறித்துத் தவறாகப் பேசுவதில் இன்பங்காணுபவனுமான பிராமணன், பிரம்மத்தை அறிந்தவனாகவே இருப்பினும் தன் பிராமணத்தன்மையை இழக்கிறான்.(25)
 
ஓ! தேவி, இந்த நற்செயல்களைச் செய்வதால் ஒரு சூத்திரன், பிராமணனாகவும், வைசியன் க்ஷத்திரியனாகவும் மாறலாம். ஒரு சூத்திரன் தனக்கென விதிக்கப்பட்ட கடமைகளை யாவற்றையும் முறையாக விதிப்படி செய்ய வேண்டும். அவன் மூவகை மக்களிடமும் பணிவுடன் கீழ்ப்படிந்து பணி செய்து, கவனத்துடன் அவர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். எப்போதும் அறப்பாதையைப் பின்பற்றும் சூத்திரன் இவை யாவற்றையும் உற்சாகமாகச் செய்ய வேண்டும். அவன் தேவர்களையும், மறுபிறப்பாள வகையினரையும் மதிக்க வேண்டும். அவன் அனைத்து மனிதர்களிடமும் விருந்தோம்பல் நோன்பைப் பின்பற்ற வேண்டும்.(28) புலனடக்கத்துடன் எளிய உணவை உண்ணும் அவன் தன் மனைவியை அவளுக்குரிய காலத்தைத் தவிர ஒருபோதும் அணுகக்கூடாது. அவன் எப்போதும் புனிதமான, தூய்மையான மனிதர்களைத் தேட வேண்டும். உணவைப் பொறுத்தவரையில் அவன் அனைத்து மனிதர்களின் தேவைகளும் நிறைவடைந்த பின்னர் எஞ்சியதை உண்ண வேண்டும்.(29) உண்மையில், ஒரு சூத்திரன் (தனது மறுபிறவியில்) ஒரு வைசியனாக விரும்பினால், அவன் வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். ஒரு வைசியன் (தன் அடுத்தப் பிறவியில்) ஒரு பிராமணனாக விரும்பினால் அவன் இக்கடமைகளைப் பின்பற்ற வேண்டும். அவன் வாக்கில் வாய்மை பயில வேண்டும், செருக்கு மற்றும் ஆணவத்தில் இருந்து விடுபட வேண்டும். அவன் முரண்பட்ட இரட்டைகள் அனைத்திற்கும் மேலாக எழ வேண்டும். அவன் அமைதியாகத் தன் கடமைகளைச் செய்ய வேண்டும்.(30)
 
அவன் வேள்விகளில் தேவர்களைத் துதித்து, வேத கல்வியையும், வேதம் ஓதுவதையும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். அவன் புலனடக்கத்துடன் பிராமணர்களை மதித்து அனைத்து வகையினரின் நலத்தை நாட வேண்டும். அவன் இல்லறவாழ்வுமுறையைப் பின்பற்றி, பரிந்துரைக்கப்பட்ட வேளைகளில் ஒரு நாளைக்கு இரு முறை மட்டுமே உண்டு, தன் குடும்ப உறுப்பினர்கள், தன்னைச் சார்ந்திருப்பவர்கள், விருந்தினர்கள் ஆகியோர் அனைவரும் நிறைவடைந்த பின்னர் எஞ்சியிருக்கும் உணவைக் கொண்டு மட்டுமே தன் பசியை ஆற்றிக் கொள்ள வேண்டும். எளிய உணவை உண்பவனாக இருக்கும் அவன், வெகுமதி பெறும் ஆசையின் உந்துதலில்லாமல் செயல்பட வேண்டும். அவன தற்பெறுமை பேசுவதில் இருந்து விடுபட வேண்டும். அவன் அக்னிஹோத்திரத்தில் தேவர்களை வழிபட்டு விதிப்படி ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அனைத்து மனிதர்களுக்கு விருந்தோம்பல் கடமைகளைப் பின்பற்றும் அவன், சமைக்கப்பட்ட உணவை முன் சொன்ன அனைவருக்கும் கொடுத்த பிறகு எஞ்சியிருப்பதையே உண்ண வேண்டும். அவன் விதிப்படி மூன்று நெருப்புகளை வழிபட வேண்டும். அத்தகைய தூய ஒழுக்கம் கொண்ட வைசியன், அடுத்தப் பிறவியில் உயர்ந்த க்ஷத்திரியக் குடும்பத்தில் பிறப்பான்[2].(31-34) ஒரு வைசியன் க்ஷத்திரியனாகப் பிறந்த பிறகு, வழக்கமான தூய்மைச் சடங்குகளின் மூலம் புனித நூல் {பூணூல்} தரித்தவனாகி, நோன்புகளை நோற்று வந்தால் அவன் தனது அடுத்தப் பிறவியில் மதிப்புமிக்கப் பிராமணனாகிறான்.(35)
உண்மையில், ஒரு க்ஷத்திரியனாகப் பிறந்த பிறகு அவன் கொடைகளை அளித்து, அபரிமிதமான தக்ஷிணைகளுடன் பெரும் வேள்விகளில் தேவர்களைத் துதித்து, வேதங்கற்று, சொர்க்கத்தை அடையும் விருப்பத்துடன் மூன்று நெருப்புகளை வழிபட வேண்டும்.(36) அவன் துன்பத்தில் இருப்போரின் கவலைகளை அகற்றி அறவோரை வளர்த்து, தன் ஆட்சியின் கீழுள்ள குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். அவன் வாய்மை நிறைந்தவனாக, உண்மையிலுள்ள செயல்கள் அனைத்தையும் செய்து, இவ்வொழுக்கத்திலேயே இன்பத்தை அடைய வேண்டும்.(37) நல்லோரிடம் தண்டக்கோலைப் புறந்தள்ளி நியாயமான தண்டனைகளை அளிக்க வேண்டும். அவன் மனிதர்களை அறச்செயல்கள் செய்யுமாறு தூண்ட வேண்டும். (தன் மக்களை ஆளும் காரியத்தில்) கொள்கை கருத்துகளால் வழிநடத்தப்பட்டு, வயல்களில் விளைவதில் ஆறில் ஒரு பங்கை {வரியாக} எடுத்துக் கொள்ள வேண்டும்.(38) அவன் எப்போதும் பாலியல் இன்பத்தில் ஈடுபடாமல், பொருளியல் அறிந்தவனாக உற்சாகமாக, சுதந்திரமானவனாக வாழ வேண்டும். அற ஆன்மா கொண்ட அவன் தான் மணந்து கொண்ட மனைவியை அவளுடைய பருவகாலத்திலேயே அணுக வேண்டும்.(39) அவன் உண்ணா நோன்புகளை நோற்க வேண்டும், ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்து, வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்து, மனத்திலும், உடலிலும் தூய்மையுள்ளவனாக இருக்க வேண்டும். அவன் நெருப்பறையில் விரிக்கப்பட்ட குசப் புற்களில் {தர்ப்பைகளில்} உறங்க வேண்டும்.(40)
 
அவன் (அறம், பொருள் மற்றும் இன்பம் என்ற) முத்தொகையைத் தேடி எப்போதும் உற்சாகத்துடன் இருக்க வேண்டும். உணவை விரும்பும் சூத்திரர்களிடம் அவன் எப்போதும் தயாராக இருக்கிறது என்ற பதிலையே சொல்ல வேண்டும்.(41) அவன் லாப அல்லது இன்ப நோக்கத்தில் எதையும் ஒருபோதும் விரும்பக்கூடாது. அவன் பித்ருக்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர்களை வழிபட வேண்டும்.(42) அவன் தன் இல்லத்திலேயே துறவியின் வாழ்வை வாழ வேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் விதிப்படி ஆகுதிகளை ஊற்றி காலையும், நடுப்பகலிலும், மாலையிலும் தன் அக்னிஹோத்திரத்தில் தேவர்களை முறையாகத் துதிக்க வேண்டும்.(43) அவன் {க்ஷத்திரியன்} பகைவனுக்கு எதிராகத் தன் முகத்தைத் திருப்பி, பசுக்கள் மற்றும் பிராமணர்களின் நன்மைக்காகப் போர்க்களத்தில் தன் உயிர்மூச்சை விட வேண்டும். அல்லது அவன் மந்திரங்களால் புனிதப்படுப்பட்ட மூன்று நெருப்புகளுக்குள் நுழைந்து தன் உடலைக் கைவிட வேண்டும். இந்த ஒழுக்க முறையை அவன் பின்பற்றினால் அடுத்தப் பிறவியில் அவன் ஒரு பிராமணனாவான்.(44) ஞானம் கொண்டவனும், அறிவியல் அறிந்தவனும், கழிவுகள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனும், வேதங்களை முழுமையாக அறிந்தவனும், அறம்சார்ந்த ஆன்மாவைக் கொண்டவனுமான ஒரு க்ஷத்திரியன் தன் செயல்களின் மூலமே பிராமணனாக ஆவான்.(45)
 
ஓ! தேவி, தாழ்ந்த வகையில் சூத்திரனாகப் பிறந்த ஒரு மனிதன் இந்தச் செயல்களின் துணையால் களங்கங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து, வேத அறிவையும் அடைந்து ஒரு பிராமணனாகலாம்.(46) தீய ஒழுக்கம் கொண்டவனாகும்போதும், உணவில் எந்த வேறுபாட்டையும் காணாதபோதும் ஒரு பிராமணன் தன் பிராமணத்தன்மை என்ற நிலையில் இருந்து வீழ்ந்து சூத்திரனாகிறான்.(47) ஓ! தேவி, தூய செயல்களால் தன் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டவனும், தன் புலன்கள் அனைத்தையும் அடக்கியவனும்மான சூத்திரனும், ஒரு பிராமணனைப் போன்ற மதிப்புடன் பணிவிடை செய்யப்படவும், தொண்டாற்றப்படவும் தகுந்தவனே ஆவான்.(48) இறையுணர்வுமிக்க இயல்பும், செயல்களும் ஒரு சூத்திரனிடம் தென்படும்போது, அவன் மூன்று மறுபிறப்பாள வகையினரை விடவும் மேன்மையாகக் கருதப்பட வேண்டும் என்பது என் கருத்தாகும்.(49) பிறப்போ, தூய்மைச் சடங்குகளோ, கல்வியோ, சந்ததியோ மறுபிறப்பாளர் என்ற நிலையை அளிக்கக்கூடிய தளங்களாக ஒருபோதும் கருத முடியாதவை ஆகும். உண்மையில் ஒழுக்கம் மட்டுமே அதற்கான ஒரே தளமாகும்.(50)
 
இவ்வுலகில் உள்ள பிராமணர்கள் அனைவரும், ஒழுக்கத்தின் விளைவாலேயே பிராமணர்களாக இருக்கிறார்கள். ஒரு சூத்திரன் நல்லொழுக்கத்தைத் தன்னில் நிறுவிக்கொண்டால் அவன் பிராமணத்தன்மையைக் கொண்டவனாகக் கருதப்படுவான்.(51) ஓ! மங்கல மங்கையே, பிரம்ம நிலை என்பது எங்கும் சமமாகவே இருக்கிறது. இதுவே என் கருத்தாகும். உண்மையில், குணங்களற்றதும், ஒரு களங்கமும் இல்லாததுமான பிரம்ம நிலையைக் கொண்டவன் எவனும் பிராமணனே ஆவான்.(52) வரமளிக்கும் பிரம்மன், உயிரினங்கள் அனைத்தையும் படைத்தபோது, மனிதர்களை நான்கு வகையாகப் பிறவி சார்ந்து பிரித்தது அவர்கள் வகைப்படுத்தும் காரியத்திற்காக மட்டுமே ஆகும்.(53) ஒரு பிராமணன் இவ்வுலகில் பெருங்களமாவான். அவன் இடத்திற்கு இடம் நகர்ந்து செல்வதால் அவன் பாதங்களைக் கொண்ட ஒரு களமாக இருக்கிறான். ஓ! அழகிய மங்கையே, அந்தக் களத்தில் விதைகளை நடும் ஒருவன், மறுமையில் பயிரை அறுவடை செய்வான்.(54) தனக்கான நன்மையை அடைய விரும்பும் பிராமணன், தன் வீட்டில் உள்ள அனைவரின் தேவைகளும் நிறைவடைந்த பின்னர் எஞ்சும் உணவையே எப்போதும் உண்டு வாழ வேண்டும். அவன் எப்போதும் அறப்பாதையைப் பின்பற்றுபவனாக இருக்க வேண்டும். உண்மையில் அவன் பிரம்மத்தின் பாதையிலேயே பயணிக்க வேண்டும்.(55)
 
ஸம்ஹிதைகளைக் கற்பதில் ஈடுபட்டு, இல்லறவாசியின் கடமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தியபடி அவன் வீட்டில் இருக்க வேண்டும். அவன் வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்தாலும், ஒருபோதும் அத்தகைய கல்வியைக் கொண்ட வாழ்வாதாரங்களைப் பெறக் கூடாது.(56) அறப்பாதையைப் பின்பற்றி, தன் புனித நெருப்பை வழிபட்டு, வேத கல்வியில் ஈடுபட்டு, எப்போதும் இவ்வாறு தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளும் பிராமணன், பிரம்மமாகவே கருதப்படுகிறான்.(57) ஓ! இனிய புன்னகை கொண்டவளே, பிராமண நிலையை அடைந்த பிறகு, தாழ்ந்த வகை மனிதர்களின் தொடர்பால் ஏற்படும் களங்கங்களைத் தவிர்ப்பதன் மூலமும், கொடைகளைப் பெறுவதைத் தவிர்ப்பதன் மூலமும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வேறு செயல்களைச் செய்வதன் மூலமும் எப்போதும் அதை {தான் அடைந்த பிராமண நிலையைக்} கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.(58) ஒரு சூத்திரன் பிராமணனாகும் முறையையும், ஒரு பிராமணன் தன் தூய நிலையில் இருந்து வீழ்ந்து சூத்திரனாகும் முறையையும்கொண்ட புதிரை உனக்குச் சொன்னேன்” என்றான் {சிவன்}.(59)

கர்மபலன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 144-கர்மபலன்கள் வெளிப்படும் போக்கு மற்றும் மனிதர்கள் சொர்க்கத்தை அடைவதற்கான வழிகள் ஆகியவற்றைக் குறித்து உமைக்குச் சொன்ன சிவன்…

உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்துயிரினங்களின் தலைவா, ஓ! தேவர்கள் மற்றும் அசுரர்களாக இணையாக வழிபடப்படுபவரே, மனிதர்களின் கடமைகள் மற்றும் கடமை தவறுதல்களையும் எனக்குச் சொல்வீராக. உண்மையில், ஓ! பலமிக்கவரே என் ஐயங்களைத் தீர்ப்பீராக.(1) எண்ணம், சொல், செயல் ஆகிய இம்மூன்றாலேயே மனிதர்கள் பந்தங்களால் கட்டப்படுகின்றனர். இவை மூன்றினாலேயே அவர்கள் அக்கட்டுகளில் இருந்து விடுபெறவும் செய்கிறார்கள்.(2) ஓ! தேவா, எந்த ஒழுக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், உண்மையில், எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம், எந்த நடத்தை, குணம் மற்றும் சொற்களின் மூலம் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்” என்று கேட்டாள்?(3)
 



தேவர்களுக்குத் தேவன், “ஓ! தேவி, கடமைகளின் உண்மைகளை நீ நன்கறிந்தவளாவாய். நீ அறம் மற்றும் தற்கட்டுப்பாட்டில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவளாவாய். நீ என்னைக் கேட்டிருப்பது உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை நிறைந்ததாகும். அது மனிதர்கள் அனைவரின் புத்தியையும் மேம்படுத்துகிறது. எனவே, அதற்குண்டான பதிலைக் கேட்பாயாக.(4) வாய்மை அறத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அறவோராகவும், பல்வேறு வாழ்வுமுறைகளின் குறியீடுகள் ஏதுமற்றவர்களாகவும் உள்ளவர்களும், அறவழிமுறைகளில் ஈட்டப்பட்ட செல்வத்தை அனுபவிப்பவர்களும் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(5) அனைத்து ஐயங்களில் இருந்தும் விடுபட்டவர்களும், அனைத்தையும் அறிந்தவர்களும், அனைத்துப் பொருட்களையும் காணும் கண்களைக் கொண்டவர்களுமான மனிதர்கள் ஒருபோதும், புண்ணியம் அல்லது பாவம் ஆகியவற்றில் கட்டப்படுவதில்லை. பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்ட மனிதர்கள் ஒருபோதும் செயல் சங்கிலிகளால் கட்டப்படுவதில்லை.(6) எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஒருபோதும் எவருக்கும் தீங்கிழைக்காதவர்கள், எதனிடமும் ஒருபோதும் பற்று கொள்ளாதவர்கள் ஆகியோர் செயல்களால் ஒருபோதும் கட்டப்படுவதில்லை.(7)
 
எந்த உயிரினத்தின் உயிரையும் எடுப்பதைத் தவிர்ப்பவர்கள், அறவொழுக்கம் கொண்டவர்கள், கருணை கொண்டவர்கள், நண்பர்களையும், பகைவர்களையும் சரிநிகரான ஒளியில் காண்பவர்கள், தற்கட்டுப்பாடுடையவர்கள் ஆகியோர் ஒருபோதும் செயல்களால் கட்டப்பட மாட்டார்கள்.(8) அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்கள், அனைத்து உயிரினங்களின் நம்பிக்கையையும் பெறக்கூடியவர்கள் ஆகியோர் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெற்றியடைகிறார்கள்.(9) பிறருக்குச் சொந்தமானத்தை அபகரிக்க விருப்பமில்லாதவர்கள், பிறரின் மனைவிகளைவிட்டு ஒதுங்கியிருப்பவர்கள், அறவழிமுறைகளில் ஈடப்பட்ட செல்வத்தை மட்டுமே அனுபவிப்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(10) பிறரின் மனைவிகளிடம் தங்கள் தாய்மார், சகோதரிமார், மகள்களிடம் பழகுவது போல நடந்து கொள்ளும் மனிதர்கள் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(11) பிறருக்குச் சொந்தமானவற்றை அபகரிப்பதைத் தவிர்ப்பவர்கள், தாங்கள் கொண்டுள்ளவற்றில் முற்றிலும் நிறைவுடன் இருப்பவர்கள், தங்கள் விதியைச் சார்ந்து மட்டுமே வாழ்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(12)
 
அடுத்தவர் மனைவிகளை எப்போதும் பார்க்காமல் கண்களை மூடிக் கொள்பவர்கள், தங்கள் புலன்களை ஆள்பவர்கள், அற ஒழுக்கத்திற்கு அர்ப்பணிப்புடன் உள்ளவர்கள் ஆகியோர் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(13) அறவோர் பின்பற்றுவதற்காகத் தேவர்களால் உண்டாக்கப்பட்ட பாதை இதுவே ஆகும். விருப்பு வெறுப்பில் இருந்து விடுபட்ட இந்தப் பாதை அறவோர் பின்பற்றுவதற்குரியதாகும்.(14) தங்கள் மனைவிகளிடம் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், அவர்களுக்குரிய காலங்களில் மட்டுமே அவர்களை நாடுபவர்களும், பாலின இன்பத்தில் ஈடுபடுவதில் இருந்து விலகுபவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(15) பலன் பெறவோ, வாழ்வாதாரங்களை ஈட்டுவோ விரும்பும் ஞானிகள், ஈகை, தவங்கள், அறச்செயல்கள், உடல் மற்றும் இதயத் தூய்மை ஆகியவற்றால் குறிக்கப்பட்ட ஒழுக்கத்தைப் பின்பற்றப்பட வேண்டும்.(16) சொர்க்கத்திற்கு உயர விருப்பம் கொண்டோர் இப்பாதையைப் பின்பற்ற வேண்டுமேயன்றி வேறெதையும் அல்ல” என்றான் {சிவன்}.(17)
 
உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! சிறப்புமிக்கத் தேவா, ஓ! அனைத்துயிரினங்களின் பாவமற்ற தலைவா, எந்தச் சொற்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் கட்டப்படுகிறான். மேலும் எந்தச் சொற்களைப் பேசுவதன் மூலம் ஒருவன் தன் கட்டுகளில் இருந்து விடுபடுகிறான்” என்று கேட்டாள்.(18)
 
மஹேஸ்வரன் {உமையிடம்}, “தங்களுக்காகவோ, பிறருக்காகவோ, கேலிக்காகவோ, சிரிக்கத் தூண்டவோ ஒருபோதும் பொய் சொல்லாதவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(19) தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டவோ, தகுதியை ஈட்டவோ, வெறும் கற்பனைக்காகவோ ஒருபோதும் பொய் சொல்லாதவர்க்ள சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(20) மென்மையான, இனிமையான, களங்கமற்ற சொற்களைச் சொல்பவர்கள், சந்திக்க நேர்பவர்கள் அனைவரையும் நேர்மையுடன் வரவேற்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(21) கடுமையான, கசப்பான, கொடுமையான சொற்களை ஒருபோதும் சொல்லாதவர்கள், வஞ்சகம் மற்றும் அனைத்து வகைத் தீமைகளில் இருந்தும் விடுபட்டவர்கள் ஆகியோர் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(22) வஞ்சம் நிறைந்த அல்லது நண்பர்களுக்கிடையில் உள்ள புரிந்துணர்வை மீறச் செய்யும் சொற்களை ஒருபோதும் சொல்லாதவர்களும், உண்மையானதையே பேசி, நல்ல உணர்வுகளை வளர்ப்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(23) கடுமை நிறைந்த பேச்சுகளைத் தவிர்ப்பவர்களும், பிறரிடம் சச்சரவுகளைத் தவிர்ப்பவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் சரிநிகராக நடந்து கொள்பவர்களும், தங்கள் ஆன்மாவை அடக்கியவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(24) தீமையான பேச்சையோ, பாவம் நிறைந்த உரையாடலையோ தவிர்ப்பவர்கள், ஏற்பில்லாத இனிமையற்ற பேச்சுகளைத் தவிர்ப்பவர்கள், ஏற்புடைய மங்கல சொற்களை மட்டுமே பேசுபவர்கள் ஆகியோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(25) கோபவசப்பட்டுப் பிறரின் இதயங்களைக் கிழிக்கும் சொற்களைப் பேசாதவர்கள், கடும்கோபத்தில் இருக்கும்போதும் அமைதி நிறைந்த ஏற்புடைய சொற்களைப் பேசுபவர்கள் ஆகியோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(26) ஓ! தேவி, வாக்கு தொடர்புடைய இவ்வறமும் மனிதர்களால் எப்போதும் பின்பற்றப்பட வேண்டும். அது மங்கலம் நிறைந்தமும், வாய்மையின் பண்பைக் கொண்டதுமாகும். ஞானம் கொண்ட மனிதர்கள் எப்போதும் பொய்யைத் தவிர்க்க வேண்டும்” என்றான்.(27)
 
உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! தேவர்களுக்குத் தேவா, ஓ! பினாகைபாணியே, ஓ! உயர்வாக அருளப்பட்டவரே, ஒரு மனிதன் கட்டப்படும் நிலையை அடையும் மனச்செயல்கள் அல்லது எண்ணங்கள் என்னென்ன?” என்று கேட்டாள்.(28)
 
மஹேஸ்வரன் {உமையிடம்}, “ஓ! தேவி, மனச் செயல்களில் இருந்து எழும் புண்ணியத்துடன் கூடிய ஒருவன் சொர்க்கத்திற்கு உயர்கிறான். ஓ! மங்கலமானவளே, அச்செயல்களைச் சொல்லப் போகிறேன்.(29) ஓ! இனிய முகம் கொண்டவளே, தீய பண்புகளால் ஒழுங்கமைக்கப்பட்ட மனம் எவ்வாறு தவறாக வழிநடத்தப்பட்ட, அல்லது தீய எண்ணங்களால் கட்டப்படுகிறது என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(30)
 
தனிமையான காட்டில் கிடக்கும் பிறருக்குச் சொந்தமான உடைமைகளைக்கூட அபகரிக்க வேண்டுமென மனத்தாலும் நினைக்காத மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(31) வீட்டிலோ, கிராமத்திலோ கைவிடப்பட்டுத் தனியாகக் கிடக்கும் பிறருடைய உடைமைகளை அபகரிக்க நினைக்காத மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(32) பிறருடைய மனைவிகளை வெறிச்சோடிய இடங்களில் கண்டாலும் ஆசையின் ஆதிக்கத்தில் அவர்களுடன் தொடர்புகொள்ள மனத்தாலும் நினையாத மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(33) நண்பர்களையோ, பகைவர்களையோ சந்தித்தாலும் அனைவரிடமும் ஒரே நட்பு வழியிலேயே பழகும் மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(34) கல்வியும், கருணையும் கொண்டவர்களும், உடலிலும், மனத்திலும் தூய்மை கொண்டவர்களும், வாய்மையைப் பின்பற்றுவதில் உறுதி கொண்டவர்களும், தாங்கள் கொண்டுள்ளவற்றில் நிறைவுடன் இருப்பவர்களுமான மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(35)
 
எந்த உயிரினத்திற்கும் கெடுதி நினைக்காதவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் இதயப்பூர்வமான நட்பைக் கொண்டவர்களும், அனைத்திடமும் கருணை கொண்டவர்களுமான மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(36) நம்பிக்கை கொண்டவர்களும், புனிதமானவர்களும், புனிமான மனிதர்களின் துணையை நாடுபவர்களும், சரி தவறு ஆகியவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை அறிதவர்களுமான மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(37) ஓ! தேவி, நல்ல மற்றும் தீய செயல்களின் விளைவுகளை அறிந்த மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(38) செய்யும் காரியங்கள் அனைத்திலும் நீதியுடன் செயல்படுபவர்களும், விரும்பத்தக்க சாதனைகள் அனைத்தையும் கொண்டவர்களும், தேவர்களுக்கும், பிராமணர்களுக்கும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், அனைத்து நற்செயல்களிலும் விடாமுயற்சியுடன் இருப்பவர்களுமான மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(39) ஓ! தேவி, இந்த மனிதர்கள் அனைவரும் தாங்கள் செய்யும் செயல்களின் பலன்மிக்க விளைவுகளால் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள். நீ வேறு என்ன கேட்க விரும்புகிறாய்?” என்றான்.(40)
 
உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! மஹேஸ்வரரே, மனிதர்கள் தொடர்புடைய ஒரு காரியத்தில் எனக்குப் பெரும் ஐயம் இருக்கிறது. அதைக் கவனமாக எனக்கு விளக்குவதே உமக்குத் தகும்.(41) ஓ! பலமிக்கத் தேவா, எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு மனிதன் நீண்ட வாழ்நாளை அடைகிறான்? எந்தத் தவங்களைச் செய்வதன் மூலம் அவன் நீண்ட வாழ்நாளை அடைகிறான்?(42) எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் அவன் பூமியில் குறைந்த காலமே வாழ்கிறான்? ஓ! முற்றிலும் களங்கமற்றவரே, (செயல்படுபவனுக்கு நீண்ட மற்றும் குறுகிய வாழ்நாளை அளிப்பதில்) செயல்கள் உண்டாக்கும் விளைவுகளைக் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(43) சிலர் நற்பேற்றைப் பெறுவதும், சிலர் கெடுபேற்றைப் பெறுவதும் காணப்படுகிறது. சிலர் உன்னதப் பிறப்பைக் கொண்டவர்களாகவும், சிலர் உன்னதமற்ற பிறப்பைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.(44) சிலர் மரக்கட்டைகளால் ஆனவர்களைப் போல வெறுப்பூட்டும் குணம் கொண்டவர்களாகவும், அதே வேளையில் வேறு சிலர் முதல் பார்வையிலேயே இனிமையான குணங்களைக் கொண்டவர்களாகவும் தெரிகிறார்கள்.(45) சிலர் ஞானமற்றவர்களாகவும், சிலர் ஞானமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் சிலர் உயர்ந்த புத்தியையும் ஞானத்தையும் கொண்டனவர்களாக, அறிவு மற்றும் அறிவியலால் தெளிவடைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(46) சிலர் சிறு துன்பத்தை அனுபவிக்கிறார்கள், வேறு சிலர் மிகக் கனமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள். இத்தகைய பல்வேறு காட்சிகள் மனிதர்களுக்கு மத்தியில் காணப்படுகின்றன. ஓ! சிறப்புமிக்கவரே, இவை யாவற்றுக்கும் காரணம் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டாள்.(47)
 
தேவர்களின் தேவன் {மஹேஸ்வரன்}, “ஓ! தேவி, செயல்களின் கனிகள் வெளிப்பாட்டைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன். அந்த வெளிப்பாட்டு விதிகளின்படியே மனிதர்கள் இவ்வுலகில் தங்கள் செயல்களின் விளைவால் இன்புறவும் துன்புறவும் செய்கிறார்கள்.(48) ஓ! தேவி, பிற உயிரினங்களின் உயிர்களை எடுக்கும் நோக்கில் கடும் தன்மையை ஏற்பவனும், பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைக்கத் தடிகளைக் கைகளில் ஏந்துபவனும், ஆயுதங்களை உயர்த்துபவனும், உயிரினங்களைக் கொல்பவனும்,(49) கருணையற்றவனும், உயிரினங்களுக்கு எப்போதும் கலக்கத்தை ஏற்படுத்துபவனும், எறும்பு மற்றும் புழுக்களுக்கும் பாதுகாப்பை வழங்க மறுப்பவனும், கொடூரம் நிறைந்தவனுமான ஒருவன்,(50) நரகில் மூழ்குகிறான். ஓ! தேவி, இதற்கு எதிர் மனநிலையில் இருந்து அறச்செயல்கள் செய்யும் ஒருவன் ஓர் அழகான மனிதனாகப் பிறக்கிறான்.(51) கொடூரமிக்க மனிதன் நரகத்திற்குச் செல்லும் அதே வேளையில் கருணை கொண்ட மனிதன் சொர்க்கத்திற்கு உயர்கிறான். நரகத்திற்குச் செல்லும் மனிதன் கடும் துன்பங்களை அனுபவிக்கிறான்.(52) நரகத்தில் மூழ்கும் ஒருவன், அதில் இருந்து எழுந்து குறைந்த வாழ்நாளைக் கொண்ட மனிதனாகப் பிறப்பெடுக்கிறான்.(53) ஓ! தேவி, தீங்கிழைக்கும், கொலை செய்யும் காரியங்களில் அடிமையாக இருக்கும் மனிதன் தன் பாவம் நிறைந்த செயல்களால் அழியத்தகுந்தவனாகிறான். அத்தகைய மனிதன் அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்பிலாதவனாகி, குறைந்த வாழ்நாளைப் பெறுகிறான்.(54)
 
வெள்ளை என்றழைக்கப்படும் வகைக்குரியவனும், உயிரினங்களைக் கொல்வதைத் தவிர்ப்பவனும், ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட்டவனும், ஒருவரையும் ஒருபோதும் தண்டிக்காதவனும், எவ்வுயிருக்கும் தீங்கிழைக்காதவனும்,(55) தனக்காக எவரையும் உயிரினங்களைக் கொல்லச் செய்யாதவனும், தானே தாக்கப்படும்போதும், தன்னைக் கொல்ல முயற்சி நடக்கும்போதும்கூட ஒருபோதும் தாக்காமல் அல்லது கொல்லாமல் இருப்பவனும், கொலைச்செயலை ஒருபோதும் அங்கீகரிக்காதவனும், அல்லது அனுமதிக்காதவனும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவனும், தன்னைப் போலவே பிறரிடமும் நடந்து கொள்பவனுமான(56) மேன்மையான மனிதன், ஓ! தேவி, தேவர்களின் நிலையை அடைவதில் வெல்கிறான். அத்தகைய மனிதன் மகிழ்ச்சி நிறைந்தவனாகப் பல்வேறு வகை ஆடம்பரப் பொருட்களை அனுபவிப்பவனாகிறான்.(57) அத்தகையவன், மனிதர்களின் உலகில் பிறக்க நேர்ந்தால் அவன் நெரும் வாழ்நாளை அடைந்து, பெரும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்.(58) உயிரினங்களைக் கொல்வதைத் தவிர்க்கும் பண்பைக் குறியீடாகக் கொண்ட இந்த வழியை அறவொழுக்கம் ஒழுகுபவர்களுக்கும், நெடும் வாழ்நாளால் அருளப்பட்டவர்களுக்கும் உரிய வழியாகச் சுயம்புவான பிரம்மனே குறிப்பிட்டிருக்கிறான்” என்றான் {சிவன்}.(59)

தர்மப் பாதை! – அநுசாஸனபர்வம் பகுதி – 145-சொர்க்கத்தை வெல்லும் மனோநிலை, ஒழுக்கம், செயல்கள் மற்றும் கொடைகள்; ஞானத்தை அடையச் செய்யும் செயல்கள்; நன்மைக்கு வழிவகுக்கும் செயல்கள்; பல்வேறு இயல்புகளை உண்டாக்கும் செயல்கள் ஆகியவை குறித்த உமையின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிவன்…

உமை {மஹேஸ்வரனிடம்}, “ஒரு மனிதன், எந்த இயல்பு {மனோநிலை}, ஒழுக்கம், செயல்கள், கொடைகள் ஆகியவற்றால் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான்?” என்று கேட்டாள்.(1)
 



மஹேஸ்வரன் {உமையிடம்}, “தாராள மனநிலை கொண்டவனும், பிராமணர்களை மதிப்பவனும், அவர்களை விருந்தோம்பலுடன் நடத்துபவனும், இல்லாதவர்கள், குருடர்கள் மற்றும் துன்புறுவோருக்கு உணவு, பானம், ஆடைகள் மற்றும் வேறு இன்பநுகர் பொருட்களைக் கொடையளிப்பவனும்,(2) வீடுகளைக் கொடையளிப்பவனும், (பொதுப் பயன்பாட்டுக்காக) மண்டபங்கள் கட்டுபவனும், கிணறுகளைத் தோண்டுபவனும், (வெப்பமான மாதங்களின் பயணிகளின் தாகம் தணிக்க) உறைவிடங்களைக் கட்டி, குளிர்ந்த தூய நீரை விநியோகிப்பவனும், குளங்களை வெட்டுபவனும், ஒவ்வொருநாளும் இலவசக் கொடைகள் அளிக்க ஏற்பாடு செய்பவனும், வந்து வேண்டுவோர் அனைவருக்கும் கொடையளிப்பவனும்,(3) இருக்கைகள், படுக்கைகள், வாகனங்கள், செல்வம், ரத்தினங்கள், வீடுகள், அனைத்து வகைத் தானியங்கள், பசுக்கள், வயல்கள் மற்றும் பெண்களை உற்சாகமிக்க இதயத்துடன் கொடையளிப்பவனுமான ஒருவன், ஓ! தேவி, சொர்க்கவாசியாகிறான்.(4,5)
 
அவன் அங்கே {சொர்க்கத்தில்} நீண்ட காலம் வசித்திருந்து பல்வேறு வகை மேன்மையான பொருட்களை அனுபவிப்பான். தன் காலத்தை அப்சரஸ்கள் துணையுடன் இன்பமாகக் கழிக்கும் அவன், நந்தவனத்திலும், இன்னும் பிற இனிமையான பகுதிகளிலும் விளையாடித் திளைத்திருப்பான்.(6) ஓ! தேவி, அவன் தன் பலன்கள் தீர்ந்ததும் சொர்க்கத்தில் இருந்து விழுந்து, இன்பத்திற்குரிய பொருட்கள் நிறைந்த, பெரும் அதிகராம் மிக்க, அபரிமிதமான செல்வம் கொண்ட மனிதனாகப் பிறக்கிறான்.(7) அப்பிறவியில் அவன் பசியிலும், உணவிலும் நிறைவடையும் பொருட்கள் அனைத்துடன் கூடியவனாகிறான். உண்மையில் அத்தகைய பொருட்களுடன் அருளப்படும் அவன் செல்வாக்கு நிறைந்தவனாகவும், கருவூலம் நிறைந்தவனாகவும் இருப்பான்.(8) ஓ! தேவி, சுயம்புவான பிரம்மன், இத்தகைய மனிதர்கள், தாராள மனத்தையும் இனிமையான குணங்களையும், உயர்வான அருளையும் பெறுவர் எனப் பழங்காலத்தில் சொல்லியிருக்கிறான்.(9) ஓ! தேவி, கொடைகள் அளிக்க இயலாத வேறு சிலரும் இருக்கிறார்கள். அற்ப புத்தி கொண்டவர்களான சிலர், அபரிமிதமான சொல்வத்தைக் கொண்டிருந்தாலும், பிராமணர்களால் கேட்கப்படும்போதுகூடக் கொடையளிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.(10)
 
இல்லாதவர்கள், குருடர்கள், துன்பத்திலிருப்போர், துறவிகள், தங்கள் வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினர்கள் ஆகியோரைக் கண்டும், அவர்களால் வலிய கேட்கப்பட்டும்கூடச் சுவைப்புலனை {நாவை} நிறைவடையச் செய்யும் விருப்பத்தால் எப்போதும் நிறைந்த அம்மனிதர்கள் திரும்பிக் கொள்வார்கள்.(11) அவர்கள் செல்வக்கொடையோ, ஆடைகள், உணவுகள், பொன், பசுக்கள் மற்றும் எவ்வகை உணவுக் கொடையோ ஒருபோதும் கொடுப்பதில்லை.(12) ஓ! தேவி, துன்பத்தில் உள்ளோரை விடுவிக்க மனமில்லாதவர்களும், பேராசை நிறைந்தவர்களும், சாத்திரங்களில் நம்பிக்கையற்றவர்களும், கொடையளிக்காதவர்களுமான இந்த அற்ப மனிதர்கள் நரகத்தில் மூழ்குவார்கள்.(13) நரகத்தில் துன்பத்தை அனுபவிக்க வேண்டிய காலம் முடிந்ததும் அவர்கள் முற்றிலும் செல்வமற்ற குடும்பங்களில் மனிதனாகப் பிறப்பார்கள்.(14) எப்போதும் பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்பட்டு, பண்பட்ட சமூகத்திலிருந்து விலக்கபட்டு, நல்ல பொருட்கள் எதையும் அனுபவிக்கும் நம்பிக்கையற்று, மிக இழிந்த வகை வாழ்வையே அவர்கள் வாழ்வார்கள்.(15)
 
அனுபவிக்கத்தகுந்த பொருட்கள் ஏதும் இல்லாத குடும்பங்களில் பிறக்கும் இந்த மனிதர்கள், பூமியில் உள்ள நல்ல பொருட்கள் எதையும் அனுபவிப்பதில் வெல்ல மாட்டார்கள். உண்மையில், ஓ! தேவி, அந்த மனிதர்கள் தங்கள் செயல்களின் மூலமே இழிந்த, வறிய நிலையை அடைவார்கள்.(16) செல்வ வளங்களால் உண்டான ஆணவமும், செருக்கும் நிறைந்த வேறு சிலரும் இருக்கிறார்கள். உணர்வற்ற அந்த இழிந்தவர்கள், தகுந்தோருக்கும் ஒருபோதும் இருக்கை அளிக்க மாட்டார்கள்.(17) அற்ப புத்தியைக் கொண்ட அவர்கள் அவ்வாறு மதிக்கத் தகுந்தோருக்கும் வழிகொடுக்க மாட்டார்கள். கொடுக்கப்பட வேண்டியவர்களுக்கும் கால்களைக் கழுவிக்கொள்ள நீரும் கொடுக்க மாட்டார்கள்.(18) உண்மையில், விதிக்கேற்புடைய வகையில், அர்க்கிய கொடைகளுடன் கௌரவிக்கத்தகுந்த மனிதர்களை அவர்கள் கௌரவிப்பதில்லை, அவர்கள் மதிக்கத்தகுந்தவர்களுக்கும் வாய் கழுவ நீர் கொடுப்பதில்லை.(19)
 
தங்கள் ஆசான்கள் தங்கள் வீடுகளுக்கு வரும்போது, அவர்கள் ஆசான்களை நடத்தும் வகையில் அவர்களை நடத்துவதில்லை. பேராசை மற்றும் ஆணவத்துடன் வாழும் அவர்கள் பெரியோரையும், வயது முதிர்ந்தோரையும், அன்புடனும், பாசத்துடனும் நடத்த மறுக்கின்றனர். மதிக்கத் தகுந்தோரையும் அவமதித்து, மதிப்பையோ, பணிவையோ வெளிப்படுத்தாமல் தங்கள் மேன்மையை உறுதி செய்கின்றனர். ஓ! தேவி, அத்தகைய மனிதர்கள் நரகில் மூழ்குவார்கள்.(20,21) நீண்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் துன்பகாலம் முடிவடைந்து நரகத்தில் இருந்து எழுந்து, மனித வகையில் இழிந்த குடும்பங்களில் பிறக்கின்றனர்.(22) உண்மையில், தங்கள் ஆசான்களையும், பெரியோர்களையும் அவமதிப்பவர்கள், மிக இழிந்தவர்களும், புத்தியற்றவர்களுமான ஸ்வபாகர்கள் மற்றும் புல்கஸர்களின் சாதிகளில் பிறவி எடுக்கின்றனர்.(23)
 
ஆணவமற்றவன், அல்லது செருக்கற்றவன், தேவர்கள் மற்றும் பிராமணர்களை வழிபடுபவன், உலகத்தால் மதிக்கப்படுபவன், தனது மதிப்புக்குரிய அனைவரையும் வணங்குபவன், மென்மையான, இனிமையான சொற்களைப் பேசுபவன்,(24) அனைத்து வகை {வர்ண} மனிதர்களுக்கு நன்மையைச் செய்பவன், அனைத்து உயிரினங்களின் நன்மையிலும் அர்ப்பணிப்பு கொண்டவன், எவரிடமும் வெறுப்புணர்வு கொள்ளாதவன், இனிய நாவைப் படைத்தவன், இனிய குளுமையான சொற்களைச் சொல்பவன்,(25) வழிவிடத்தகுந்தோருக்கு வழிவிடுபவன், ஆசான்கள் துதிக்கப்படத்தகுந்த வகையிலேயே தன் ஆசான்களைத் துதிப்பவன், எந்த உயிரினத்திடமும் குறை காணாதவன், பெரியோரையும், விருந்தினரையும் தகுந்த முறையில் வழிபடுபவன்,(26) இயன்ற அளவுக்கு விருந்தினர்களைப் பெற விரும்புபவன், தன் வீட்டுக்கு வந்து மதிப்பவர்கள் அனைவரையும் வழிபடுபவனுமான ஒருவன்,(27) ஓ! தேவி, சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறான். அவன் தன் புண்ணியம் தீர்ந்ததும் மனித வகையில் உயர்ந்த மதிக்கத்தகுந்த குடும்பத்தில் பிறக்கிறான்.(28) அந்த வாழ்விலும் அவன் மகிழ்ச்சிக்குரிய அனைத்து வகைப் பொருட்களையும், ரத்தினங்கள் மற்றும் அனைத்து வகைச் செல்வத்தையும் அபரிமிதமாகப் பெற்றவனாக இருப்பான். அவன் தகுந்த மனிதர்களுக்கு அவர்களுக்குத் தகுந்தவற்றைக் கொடுக்கிறான். அவன் அனைத்து வகைக் கடமைகளையும், அறச்செயல்கள் அனைத்தையும் நோற்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கிறான்.(29) அனைத்து உயிரினங்களாலும் கௌரவிக்கப்பட்டு, அவற்றின் மதிப்பைப் பெற்று தன் செயல்களுக்கான கனிகளை அவன் அடைகிறான். அத்தகைய மனிதன் இவ்வுலகில் உயர்ந்த குலத்தில் பிறக்கிறான். நான் உனக்குச் சொன்ன இவற்றைப் பழங்காலத்தில் விதி சமைத்தவனே (பிரம்மனே) சொல்லியிருக்கிறான்.(31)
 
நடத்தையில் கடுமையாக இருப்பவனும், அனைத்து உயிரினங்களையும் அச்சத்தில் பீடிப்பவனும், கைகள், கால்கள், கயிறுகள், தடிகள், கல்துண்டுகள், மண்ணாங்கட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு பிற உயிரினங்களுக்குக் காயமேற்படுத்தித் துன்புறுத்துபவன், உயிரினங்களைக் கொல்வதற்காகப் பல்வேறு வகை வஞ்சங்களைப் பயில்பவன், விலங்குகளை விரட்டி அவற்றை அச்சுறுத்துபவன் என இவ்வழியில் தன்னை நடத்திக் கொள்ளும் ஒரு மனிதன் நிச்சயம் நரகத்தில் மூழ்குவான்.(32-34) காலப்போக்கில் அவன் மனித குலத்தில் பிறந்தால், அனைத்து வகைத் தடைகளாலும் அனைத்துப் புறங்களிலும் பீடிக்கப்படும் இழிந்த குலம், அல்லது குடும்பத்தில் பிறப்பை அடைவான்.(35) அவன் உலகமெங்கும் வெறுப்புக்குகந்த ஒரு பொருளாகிறான். மனிதர்களில் இழிந்தவனான அவன் தான் செய்யும் செயல்களின் விளைவாலேயே அவ்வாறு ஆகிறான்.(36)
 
கருணை கொண்ட மற்றொருவன், தன் கண்களை அனைத்து உயிரினங்களிலும் செலுத்துகிறான். நட்புப் பார்வையுடன் கொண்ட அவன், அனைத்து உயிரினங்களிடமும் அவற்றின் தந்தையைப் போல நடந்து கொண்டு, எந்த வகைப் பகை உணர்வும் இல்லாமல், தன் விருப்பங்களை முழுக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அவன்,(37) எந்த உயிரினத்திற்கும் வெறுப்பூட்டாமல், எப்போதும் கட்டுக்குள் உள்ள தன் கரங்கள் மற்றும் கால்கள் மூலமாக அவற்றை ஒருபோதும் அச்சுறுத்தாமல் இருக்கிறான். அவன் அனைத்து உயிரினங்களின் நம்பிக்கையை ஈர்க்கிறான்.(38) அவன் கயிறுகள், தடிகள், கற்கள், மண்ணாங்கட்டிகள் அல்லது எவ்வகை ஆயுதத்தாலும் ஒருபோதும் எந்த உயிரினத்தையும் பீடிப்பதில்லை. அவனுடைய செயல்கள் ஒருபோதும் கடுமையாகவோ, கொடூரமாகவோ இருப்பத்தில்லை, அவன் அன்பு நிறைந்தவனாவான்.(39) இத்தகைய நடைமுறைகளையும், ஒழுக்கத்தையும் கொண்ட ஒருவன் நிச்சயம் சொர்க்கத்திற்கு உயர்கிறான். அங்கே அவன் அனைத்து வசதிகளும் நிறைந்த தெய்வீக மாளிகையில் ஒரு தேவனைப் போல வாழ்கிறான்.(40) அவன் செய்த புண்ணியங்கள் தீர்ந்து போனால், அவன் எவ்வகைச் சிரமங்களுடனும் போராடாத, எவ்வக அச்சத்தையும் சந்திக்காத ஒரு மனிதனாகப் பிறப்பை அடைகிறான். உண்மையில், அவன் பெரும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்.(41) இன்பத்துடன் கூடிய அவன், தன் வாழ்வாதாரத்திற்காகத் துன்பமிக்க உழைப்பைச் செலுத்தவேண்டிய கடப்பாடு இல்லாமல், அனைத்து வகைக் கவலைகளில் இருந்தும் விடுபட்டவனாக வாழ்கறான். ஓ! தேவி, இதுவே அறவோரின் பாதையாகும். இதில் எந்தத் தடைகளோ, துன்பங்களோ கிடையாது” என்றான் {சிவன்}.(42)
 
உமை {மஹேஸ்வரனிடம்}, “இவ்வுலகில் சில மனிதர்கள், அவற்றுக்கு {அறப்பாதைக்கு} வழிவகுக்கும் உய்த்துணர்வு மற்றும் முதற்கோள்களை நன்கறிந்தவர்களாக இருக்கிறார்கள். உண்மையில் அறிவியலையும், அறிவையும் கொண்ட அவர்கள் கல்வி மற்றும் ஞானம் கொண்ட பெரும் சந்ததியைப் பெற்றிருக்கிறார்கள்.(43) ஓ! தேவா, ஞானம், அறிவியல், அறிவு ஆகியவை அற்ற வேறு சிலர் மடமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். எந்தக்குறிப்பிட்ட செயலைச் செய்வதன் மூலம் ஒரு மனிதன் ஞானத்தை அடையலாம்? எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் சிறு ஞானத்தையும், தெளிவற்ற பார்வையையும் ஒருவன் அடைகிறான்? ஓ! கடமைகளை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரே என்னுடைய இந்த ஐயத்தை நீர் விலக்குவீராக.(45) ஓ! தேவா, பிறந்ததிலிருந்தே குருடாக இருக்கும் வேறு சிலரும் இருக்கிறார்கள். மேலும், நோய்வாய்ப்பட்டவர்கள், பீடிக்கப்பட்டவர்கள், ஆண்மையற்றவர்கள் எனவேறு சிலரும் இருக்கிறார்கள். ஓ! தேவா, இதற்கான காரணத்தை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டாள்.(46)
 
மஹேஸ்வரன் {உமையிடம்}, “தங்கள் நன்மைக்கானது எது, தங்கள் கேட்டுக்கானது எது என வேதங்கற்ற பிராமணர்களிடம் எப்போதும் விசாரிக்கும் மனிதர்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டு, அனைத்துக் கடமைகளையும் அறிந்து,(47) அனைத்து வகைத் தீச்செயல்களையும் தவிர்த்து, நற்செயல்களை மட்டுமே செய்து, இங்குள்ள வரை பெரும் மகிழ்ச்சியில் திளைத்து, இவ்வுலகில் இருந்து செல்லும்போது, சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(48) உண்மையில், அவர்கள் தங்கள் புண்ணியங்கள் தீர்ந்துவிடும்போது, மானிட லோகத்தில் பெரும் நுண்ணறிவுமிக்க மனிதனாகப் பிறக்கிறார்கள். அவர்களுடன் பிறந்த புத்தியின் விளைவால் அனைத்து வகை இன்பங்களும், மங்கலங்களும், அவர்களுடையதாகிறது.(49) பிற மனிதர்கள் மணந்து கொண்ட மனைவிகள் மீது தனது தீய கண்களைச் செலுத்துபவன், அந்தப் பாவச் செயலின் விளைவால் பிறவிக் குருடாகச் சபிக்கப்படுகிறான்.(50) தங்கள் இதயத்தில் உள்ள விருப்பத்தால் தூண்டப்பட்டு, நிர்வாணப் பெண்கள் மீது தங்கள் கண்களைச் செலுத்துபவர்களும், தீச்செயல் செய்பவர்களுமான மனிதர்கள் இவ்வுலகில் பிறந்து, தொடர்நோயில் அவதிப்பட்டு, தங்கள் மொத்த வாழ்வையும் கடத்துகிறார்கள்.(51) மூடர்களும், தீச்செயல்களைச் செய்பவர்களும், தங்கள் வகையில் இருந்து வேறுபட்ட வகையைச் சார்ந்த பெண்களுடன் பாலியல் கலவியில் ஈடுபடுபவர்களுமான அற்ப ஞானம் கொண்ட மனிதர்கள், தங்கள் அடுத்தப் பிறவியில் ஆண்மையற்றவர்களாகப் பிறக்கிறார்கள்.(52) விலங்குகளைக் கொல்லச் செய்தவர்கள், தங்கள் ஆசான்களின் படுக்கையைக் களங்கம் செய்தவர்கள், கண்டபடி பாலியல் கலவிகளில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் தாங்கள் பிறக்கபோகும் அடுத்தப் பிறவியில் ஆண்மையற்ற மனிதர்களாகப் பிறப்பார்கள்” என்றான் {சிவன்}.(53)
 
உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! தேவர்களில் முதன்மையானவரே, எந்தச் செயல்கள் களங்கமுள்ளவை, எந்தச் செயல்கள் களங்கமற்றவை? உண்மையில், எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் மனிதன் தனக்கான உயர்ந்த நன்மையை அடைவதில் வெல்கிறான்?” என்று கேட்டாள்.(54)
 
மஹேஸ்வரன் {உமையிடம்}, “எது அறமென உறுதிசெய்ய விரும்புபவன், முக்கிய அறங்கள் மற்றும் சாதனைகளை அடைய விரும்புபவன், தனக்கான உயர்ந்த நன்மைக்கு வழிவகுக்கும் பாதையைக் கண்டடையும் நோக்கில் பிராமணர்களிடம் எப்போதும் கேள்வி கேட்பவனுமான மனிதன், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறான்.(55) (தன் பலன் தீர்ந்ததும்) அவன் மானிடப் பிறவியாய் பிறந்தால் அவன் புத்தியும், நினைவும், பெரும் ஞானமும் கொண்டவனாக இருப்பான்.(56) ஓ! தேவி, இதுவே அறவோர் பின்பற்ற வேண்டிய பெரும் நன்மை நிறைந்த ஒழுக்கக்கோடாகும். நான் மனிதர்களின் நன்மைக்கானதை உனக்குச் சொன்னேன்” என்றான்.(57)
 
உமை {மஹேஸ்வரனிடம்}, “அறத்தை வெறுப்பவர்களும், அற்ப புத்தி கொண்டவர்களுமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வேதங்களை அறிந்த பிராமணர்கள் ஒருபோதும் அணுக விரும்புவதில்லை.(58) சிராத்தம் செய்யும் கடமையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், நோன்புகளை நோற்பவர்களுமான வேறு சிலர் இருக்கின்றனர். மேலும், நோன்புகள் ஏதும் அற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் நோன்புகளைக் குறித்து மனத்தில் கொள்ளாதவர்களாகவும், ஒழுக்கத்தில் ராட்சசர்களைப் போலவும் இருக்கிறார்கள்.(59) வேள்வி செய்வதில் அர்ப்பணிப்புள்ளவர்களும், ஹோமம் செய்வதில் மனம் கொள்ளாதவர்களாகவும் சிலர் இருக்கிறார்கள். எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் மனிதர்கள் இவ்வாறு பல்வேறு வகை இயல்புகளைக் கொண்டவர்களாகிறார்கள்?” என்று கேட்டாள்.(60)
 
மஹேஸ்வரன் {உமையிடம்}, “வேதங்களின் மூலம் மனிதர்களுக்கான அனைத்து செயல்களுக்கும் எல்லைகள் வரையறைசெய்யப்பட்டுள்ளன. வேத அதிகாரத்தின்படி தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளும் மனிதர்கள் (தங்கள் மறுபிறவிகளில்) நோன்புகள் நோற்பதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.(61) எனினும், மடமையின் ஆதிக்கத்திற்கு ஆட்படும் மனிதர்கள் அதற்கு முரணான மறத்தை {அறமற்ற தன்மையை} ஏற்றுக் கொண்டு, நோன்புகளற்றவர்களாகவும், கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுபவர்களாகவும், இறுதியில் பிரம்மராட்சசர்களாகவும் கருதப்பட நேர்கிறார்கள். உண்மையில், இந்த மனிதர்களே ஹோமத்தை மனத்தில் கொள்ளாமல் ஒருபோதும் வஷத்தையும், வேறு புனித மந்திரங்களையும் சொல்லாமல், மனிதர்களில் இழிந்தவராகக் கருதப்படுகிறார்கள்.(62,63) ஓ! தேவி, உன் ஐயங்களை விலக்குவதற்காக, மனிதர்கள் தொடர்புடைய கடமைப் பெருங்கடலில் உள்ள பாவங்கள் எதையும தவிர்க்காமல் மொத்தமாக உனக்கு விளக்கியிருக்கிறேன்” என்றான் {சிவன்}”[1].(64)

ஸ்திரீ தர்மம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 146-உமையிடம் பெண்களின் அறம் குறித்துக் கேட்ட சிவன்; ஆறுகளிடம் ஆலோசனை கேட்ட உமை; உமையை உரைக்கும்படி கங்கை கோரியது; பெண்களின் அறம் குறித்து சிவனுக்குச் சொன்ன உமை…

நாரதர், “இந்தச் சொற்களைச் சொன்ன பலமிக்க மஹாதேவன், (தானே பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாகக்) கேட்க விரும்பி, தன் அருகில் அமர்ந்திருந்தவளும், தன் விருப்பத்தையே செய்ய விருப்பம் கொண்டவளுமான அன்புக்குரிய தன் மனைவியிடம் {உமையிடம்} கேள்வி கேட்டான்.(1)
 



மஹாதேவன் {உமையிடம்}, “ஓ! தேவி, எது பரம், எது அல்ல {பரமல்ல} என்பதை அறிந்தவள் நீ. ஓ! தவசிகளின் ஆசிரமங்களில் வசிக்க விரும்புபவளே, கடமைகள் அனைத்தையும் அறிந்தவள் நீ. ஓ! மலைகளின் மன்னனான இமவான் மகளே, நற்குணமனைத்தையும், அழகிய புருவங்களையும், அழகான சுருள் நுனி மயிரைக் கொண்டவள் நீ.(2) அனைத்துக் காரியத்திலும் திறம்பெற்றவள் நீ. தற்கட்டுப்பாட்டையும், அனைத்து உயிரினங்களிடமும் சரிநிகரான பார்வையும் கொண்டவள் நீ. மமதை அற்று அனைத்துக் கடமைகளையும் செய்பவள் நீ.(3)
பிரம்மனின் பத்தினி {கற்புடை மனைவி} சாவித்திரி ஆவாள்.
இந்திரனின் பத்தினி சச்சி ஆவாள்.
மார்க்கண்டேயரின் மனைவி தூமோர்ணை ஆவாள்.
(மன்னன்) வைஸ்ரவணனின் {குபேரனின்} மனைவி ருத்தி ஆவாள்.(4)
வருணனின் மனைவி கௌரி ஆவாள்.
சூரியனின் மனைவி ஸுவர்ச்சலை ஆவாள்.
சசியின் {சந்திரனின்} மனைவி ரோஹிணி ஆவாள்.
விபாவசுவின் {அக்னியின்} மனைவி ஸ்வாஹாதேவி ஆவாள்.(5)
கசியபரின் மனைவி அதிதி ஆவாள்.

இவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் கணவர்களையே தங்கள் தேவர்களாகக் கருதுகிறார்கள். ஓ! தேவி, நீ நாள்தோறும் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறாய்.(6)
 
ஓ! அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளே, ஓ! எப்போதும் அறத்திற்கிணக்கமான சொற்களைச் சொல்பவளே, இந்தக் காரணத்திற்காகவே நான் பெண்களின் கடமைகள் குறித்து உன்னிடம் கேட்க விரும்புகிறேன். இக்காரியம் குறித்து நீ தொடக்கத்தில் இருந்தே உரையாடுவதைக் கேட்க விரும்புகிறேன்.(7) நீ என்னோடு சேர்ந்து அனைத்துக் கடமைகளையும் செய்கிறாய். உன் ஒழுக்கம் சரியாக என்னுடையதைப் போன்றது, நான் நோற்கும் நோன்புகளையே நீயும் நோற்கிறாய். உன் பலமும், சக்தியும் எனக்கிணையானவை, நீ கடுந்தவங்களைச் செய்திருக்கிறாய். உன்னால் பேசப்படும் காரியம் பெரும் பலன் மிக்கதாகும். உண்மையில், அந்த உரை உலகில் அதிகாரமிக்கதாகும்.(9) பெண்களே, பெண்களின் உயர்ந்த புகலிடமாவர் {பெண்களுக்குப் பெண்களே கதி}. ஓ! அழகிய இடையைக் கொண்டவளே, மனிதர்களுக்கு மத்தியில் நீ விதிக்கும் ஒழுக்க நடைமுறைகள் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும்.(10) என்னுடைய பாதி உடல் உன்னுடைய பாதி உடலாலானதாகும். நீ எப்போதும் தேவர்களின் காரியங்களைச் செய்வதில் ஈடுபடுகிறாய். பூமியில் மக்கள் பெருகுவதற்குக் காரணமாகவும் இருக்கிறாய்.(11) ஓ! மங்கல மங்கையே, பெண்களின் நித்திய கடமைகள் அனைத்தையும் நீ நன்கு அறிவாய். எனவே, உன் பாலினத்திற்கான {பெண்ணினத்திற்கான} கடமைகளை எனக்கு விரிவாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(12)
 
உமை {மஹேஸ்வரனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தலைவா, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய அனைத்திற்கும் மூலமானவரே, உமது அருளின் மூலம் என் மனத்தில் எழும் சொற்களைப் பேசப் போகிறேன்.(13) ஓ! தேவர்களின் தேவா, (என் பாலினத்தைச் சேர்ந்தவையும்) தீர்த்தங்கள் அனைத்தின் நீரையும் கொண்ட இந்த ஆறுகள் அனைத்தும், அவற்றில் உமது தூய்மைச்சடங்குகளை நீ செய்து கொள்வதற்கேதுவாக உம்மை அணுகுகின்றன[1].(14) அவற்றிடம் ஆலோசித்துவிட்டு நீர் சொன்ன காரியத்தை முறையாகச் சொல்கிறேன். தகுதிவாய்ந்தவனாக இருப்பினும், தற்பெருமை பேசுவதில் இருந்து விடுபட்டிருக்கும் மனிதனே ஒரு புருஷன் என்று அழைக்கப்படுகிறான்[2].(15) ஓ! அனைத்துயிரினங்களின் தலைவா, பெண்களைப் பொறுத்தவரையில் அவள் தன் பாலினம் கொண்டவர்களையே பின்பற்றுகிறாள். இந்த முதன்மையான ஆறுகளிடம் ஆலோசிப்பதன் மூலம் அவை என்னால் கௌரவிக்கப்பட்டவையாக இருக்கும்.(16) புனிதமான சரஸ்வதி ஆறுகள் அனைத்திலும் முதன்மையானவள் ஆவாள். பெருங்கடலை நோக்கிச் செல்லும் அவள் உண்மையில் ஓடைகள் அனைத்திலும் முதல்வியாவாள்.(17) விபாசை, விதஸ்த்யை, சந்திரபாகை, ஐராவதி, சதத்ரு, தேவிகையாறு, {சிந்து, கௌதமி}, கௌசிகி, கோமதி[3],(18) {யமுனை, நர்மதை, காவேரி மற்றும்} தன்னுள் அனைத்து தீர்த்தங்களையும் கொண்டவளும், ஓடைகள் அனைத்திலும் முதன்மையாகக் கருதப்படுபவளும், சொர்க்கத்தில் எழுந்து, பூயியில் இறங்கி வந்த தெய்வீக ஆறுமான கங்கா தேவி ஆகியோர் இங்கே இருக்கின்றனர்” என்றாள்.(19)
அறவோர் அனைவரிலும் முதன்மையான தேவர்களுக்குத் தேவனின் மனைவி இதைச் சொல்லிவிட்டுத் தன் பாலினத்தைச் சேர்ந்தவர்களான அந்த ஆறுகள் அனைத்திடமும் புன்னகைத்தவாறே பேசினாள்.(20) உண்மையில், அனைத்துக் கடமைகளையும் செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அந்தப் பெருந்தேவனின் மனைவி, தன் பாலினத்தைச் சேர்ந்த அவர்கள் ஒவ்வொருவரிடமும் பெண்களின் கடமைகளைக் குறித்துக் கேட்டாள். உண்மையில், கங்கையை முதல்வியாகக் கொண்ட அந்த முதன்மையான ஆறுகள் பெண்களின் கடமைகள் அனைத்தையும் அறிந்தவையாகும்.(21)
 
உமை, “சிறப்புமிக்கத் தேவன் {மஹேஸ்வரன்} பெண்களின் கடமைகள் தொடர்பான கேள்வியைக் கேட்டுள்ளார். நான் உங்களுடன் ஆலோசித்த பிறகு சங்கரருக்குப் பதிலளிக்க விரும்புகிறேன்.(22) துணையற்ற எந்தத் தனி மனிதராலும் சொர்க்கத்திலோ பூமியிலோ உள்ள எந்த ஞானக்கிளையையும் அறிந்து கொள்ள இயன்றதாக நான் காணவில்லை. பெருங்கடலை நோக்கிப் பாயும் ஆறுகளே, இதற்காகவே நான் உங்கள் கருத்துகளை நாடுகிறேன்” என்றாள்.(23)
 
மங்கலமானவையும், உயர்ந்த புனிதம் கொண்டவையுமான அந்த முதன்மையான ஆறுகள் அனைத்தும் சிவனின் மனைவியால் இவ்வழியிலேயே கேள்வி கேட்கப்பட்டன. அப்போது பதிலுக்கு மலைகளின் இளவரசனுடைய மகளை {உமையை} வழிபட்ட தெய்வீக ஆறான கங்கை அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.(24) உண்மையில், இனிய புன்னகை கொண்ட அவள் {கங்கை}, பல்வேறு வகைப் புத்திகளில் பெருகுபவளாகவும், பெண்களின் கடமைகள் அனைத்தும் நன்கறிந்தவளாகவும் கொள்ளப்படுகிறாள். பாவத்தால் உண்டாகும் அனைத்து அச்சங்களையும் விலக்கவல்லவளும், புத்தியின் காரணமாகப் பணிவைக் கொண்டவளும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவளும், மிக விரிவான நுண்ணறிவு எனும் வளம் கொண்டவளுமான அந்தப் புனிதமான தேவி {கங்கை}, இனிமையாகப் புன்னகைத்தபடியே இந்தச் சொற்களைச் சொன்னாள்,(25,26) “ஓ! தேவி, அனைத்துக் கடமைகளையும் முறையாகச் செய்வதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவள் நீ. என்னைக் கேள்வி கேட்டதன் மூலம் நீ எனக்கு உயர்ந்த உதவியைச் செய்திருக்கிறாய். ஓ! பாவமற்றவளே, மொத்த அண்டத்தாலும் மதிக்கப்படுபவளாக நீ இருந்தாலும், ஓர் ஆறான என்னிடம் நீ கேட்டிருக்கிறாய்.(27) ஒருவன் தானே (ஒரு காரியத்தைக் குறித்து உரையாடத்) திறன்மிக்கவனாக இருந்தாலும், மற்றொருவனைக் கேட்பவன், அல்லது அருள்நிறைந்த கொடையை அளிப்பவன் நிச்சயம் அற ஆன்மாவாகக் கருதத்தக்கவன் என்று நான் நினைக்கிறேன். உண்மையில், அத்தகைய மனிதன் கல்விமான் என்றும் ஞானி என்றும் அழைக்கப்படத் தகுந்தவனாவான்.(28) அறிவைக் கொண்டவர்களும், அறிவியில் அறிந்தவர்களும், முன்தீர்மானங்கள் மற்றும் அனுமானங்களை அறிந்தவர்களுமான பேச்சாளர்களைக் கேட்கும் மனிதர்கள் ஒருபோதும் அவமானமடைய மாட்டார்கள்.(29) செருக்குமிக்க மனிதன், நுண்ணறிவுமிக்க மனிதனாக இருந்தாலும், வேறுவகையில் (பிறரின் ஆலோசனைகளை ஏற்காமல் தன்னை மட்டுமே சார்ந்து) ஒரு கூட்டத்தின் மத்தியில் பேசுவதன் மூலம் பலமற்ற, முக்கியத்துவமற்ற சொற்களைப் பேசுபவனாகவே தன்னைக் காண்பான்.(30) ஆன்ம அகப்பார்வைக் கொண்டவள் நீ. சொர்க்கவாசிகள் அனைவரிலும் முதன்மையானவள் நீ. பல்வேறு வகைச் சிறந்த தகுதிகளின் துணையுடன் எழுந்தவள் நீ. ஓ! தேவி, பெண்களின் கடமைகள் குறித்து உரையாட முற்றிலும் தகுந்தவள் நீ” என்றாள் {கங்கா தேவி}.(31) இவ்வழியில் கங்கையால் வழிபடப்பட்ட உமாதேவி, உயர்ந்த தகுதிகள் பலவற்றைச் சார்ந்தவளாக மதிக்கப்பட்டாள். இவ்வாறு புகழப்பட்ட அந்த அழகிய தேவி, பெண்களின் கடமைகளைக் குறித்து முழுமையாக உரையாடத் தொடங்கினாள்.(32)
 
உமை, “நான் அறிந்தவரையில் பெண்களின் கடமைகளைக் குறித்து விதிப்படி உரையாடுவேன். குவிந்த கவனத்துடன் நீங்கள் அனைவரும் கேட்பீராக.(33) உறவினர்களால் திருமணச் சடங்குகள் தொடங்கப்படும் போதே பெண்களின் கடமைகள் உண்டாகி எழுகின்றன. உண்மையில், திருமண நெருப்பின் முன்னிலையில் ஒரு பெண்ணானவள் தன் தலைவன் செய்யும் அறச் சடங்குகள் அனைத்தையும் செய்வதில் துணைவியாகிறாள்.(34) நல்லியல்பும், இனிய பேச்சும், இனிய ஒழுக்கமும், இனிமையான குணங்களும் கொண்டு, எப்போதும் தன் கணவனின் முகத்தைத் தன் பிள்ளையின் முகம் போலப் பார்த்து இன்பம் அடைபவளும்,(35) பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இருப்பவளுமான ஒரு பத்தினி உண்மையில் அறம் சார்ந்த தன் ஒழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள். (சாத்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள படி) திருமண வாழ்வின் கடமைகளை (மதிப்புடன்) கேட்டு, அந்த மங்கலக் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவளும்,(36) தேடும் பொருட்கள் அனைத்திலும் முதன்மையாக அறத்தைக் கருதுபவளும், தன் தலைவன் நோற்கும் நோன்புகளைத் தானும் நோற்பவளும், கற்பால் அலங்கரிக்கப்பட்டவளும், தன் கணவனைத் தேவனாகக் காண்பவளும்,(37) ஒரு தேவனைப் போலவே அவனுக்குப் பணிவிடை செய்து தொண்டாற்றுபவளும், உற்சாகம் நிறைந்தவளும், சிறந்த நோன்புகளை நோற்பவளும், நல்ல குணங்களைக் கொண்டவளும்,(38) வேறு எந்த மனிதனையும் மனத்தாலும் நினையாமல் முற்றிலும் தன் கணவனுக்கு அர்ப்பணித்த இதயத்தைக் கொண்டவளுமான பெண், உண்மையில் அறவொழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள். தன் கணவனின் கோபக் கண்களால் பார்க்கப்பட்டு, அவனது கடுமொழியை எதிர்கொண்டாலும்(39) அவனிடம் உற்சாகமாக நடந்து கொள்பவள், தன் கணவனுக்கு உண்மையில் அர்ப்பணிப்புள்ளவளாகச் சொல்லப்படுகிறாள். சூரியன், சந்திரன், ஆண்பெயர் கொண்ட மரம் ஆகியவற்றில் தன் கண்களைச் செலுத்தாதவளும்,(40) தன் கணவனால் துதிக்கப்படுபவளும், அழகிய குணங்களைக் கொண்டவளுமான பெண் உண்மையில் அறம் சார்ந்தவளாகக் கருதப்படுகிறாள். தன் கணவன் ஏழையாகவோ, நோய்வாய்ப்பட்டவனாகவோ, பலவீனனாகவோ, பயணக் களைப்புக் கொண்டவனாகவோ இருந்தாலும், தன் பிள்ளையிடம் அன்பு காட்டுவதைப் போலவே அவனை அன்புடன் நடத்தும் பெண் உண்மையில் அறவொழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள்.(41)
 
தற்கட்டுப்பாடுடையவளும், பிள்ளைகளை ஈன்றவளும், தன் கணவனுக்கு அர்ப்பணிப்புடன் தொண்டாற்றுபவளும், அர்ப்பணிப்புள்ள மொத்த இதயத்தையும் அவனிடம் கொண்டவளுமான பெண் உண்மையில் அறவொழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள். தன் தலைவனுக்குக் காத்திருந்து பணிவிடை செய்து, உற்சாகமிக்க இதயத்துடன் தொண்டாற்றுபவளும்,(42,43) எப்போதும் உற்சாகமிக்க இதயத்துடன் இருப்பவளும், பணிவுடையவளுமான பெண் உண்மையில் அறவொழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள். தன் உற்றார் உறவினருக்கு உணவளித்து எப்போதும் ஆதரிப்பவளும்,(44) விருப்பங்களையோ, இன்ப நுகர் பொருட்களையோ, தான் கொண்ட செல்வத்தையோ, தான் சூழ்ந்திருக்கும் மகிழ்ச்சியையோ நிறைவடையச் செய்வதைவிடத் தன் கணவனுடன் அடையும் மகிழ்ச்சியைப் பெரிதாகக் கருதம் பெண் உண்மையில் அறவொழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள்.(45) விடிவதற்கு முன்பு எழுவதில் எப்போதும் இன்பங்கொள்பவளும், இல்லம் சார்ந்த கடமைகளை வெளிப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் உள்ளவளும், எப்போதும் தன் வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்பவளும், ஒவ்வொரு நாளும் பசுஞ்சாணத்தால் தன் வீட்டை மெழுகுபவளும்,(46) (ஆகுதிகளை ஊற்றுவதற்கான) இல்லற நெருப்பை எப்போதும் கவனிப்பவளும், தேவர்களுக்கு மலர்களையும், பிற பொருட்களையும் காணிக்கையளிப்பதை எப்போதும் புறக்கணிக்காதவளும், கணவனுடன் சேர்ந்து, விதிப்படி கொடுக்க வேண்டிய உணவுப் பங்குடன் தேவர்கள், விருந்தினர்கள், பணியாட்கள் மற்றும் குடும்பத்தில் தங்களைச் சார்ந்திருப்போரை எப்போதும் நிறைவடையச் செய்பவளும்,(47) தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் பணியாட்களின் தேவைக்குக் கொடுத்தது போக வீட்டில் எஞ்சி இருக்கும் உணவை உண்பவளும், தங்கள் குடும்பத்தோடு தொடர்புடைய அனைத்து மக்களையும் நிறைவடையச் செய்து அவர்களுக்கு நிறைவான உணவை அளிப்பவளுமான பெண் பெரும் பலனை அடைவதில் வெல்கிறாள்.(48)
 
சாதனைகள் அனைத்துடன் கூடியவளும், தன் மாமனார், மாமியாரின் பாதங்களுக்கு நிறைவைத் தருபவளும், தன் தந்தை மற்றும் தாய்க்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவளுமான பெண் தவச் செல்வத்தை உடையவளாகக் கருதப்படுகிறாள்.(49) பலவீனர்களும், ஆதரவற்றவர்களுமான பிராமணர்களுக்கும், துன்புற்றவர்களுக்கும், குருடர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உணவளித்து ஆதரிக்கும் பெண் தன் கணவன் அடையும் பலன்களின் பங்குக்குரியவள் என்று கருதப்படுவாள்.(50) கடும் நோன்புகளை இலகுவான இதயத்துடன் எப்போதும் நோற்பவளும், தன் தலைவனிடம் அர்ப்பணிப்புள்ள இதயத்தைக் கொண்டவளும், தன் தலைவனின் நன்மையையே எப்போதும் நாடுப்பவளுமான பெண், தன் கணவன் அடையும் பலன்களின் பங்குக்குரியவள் என்று கருதப்படுவாள்.(51) தலைவனிடம் கொள்ளும் அர்ப்பணிப்பு {பக்தி} பெண்ணுக்குப் பலனைத் தருவதாகும்; அதுவே அவளது தவமாகும், அதுவே அவளது நித்திய சொர்க்கமாகும். தன் கணவனையே எல்லாமாகப் பார்ப்பவளும், கற்புடன் கூடியவளும், அனைத்திலும் தன் தலைவனுக்குத் தன்னை அர்ப்பணிப்பதையே நாடுபவளுமான பெண்ணுக்கு, பலன் {புண்ணியம்}, தவங்கள், சொர்க்கம் ஆகியன அவளுடையதாகின்றன.(52)
 
கணவனே பெண்களுக்கு தேவனாவான். கணவனே அவர்களுடைய நண்பனாவான். கணவனே அவர்களுடைய உயர்ந்த புகலிடமுமாவான். கணவனோடு ஒப்பிடத்தக்க புகலிடம் எதுவும், அவனோடு ஒப்பிடத்தக்க தேவன் எவனும் கிடையாது.(53) பெண்களின் கணிப்பில் கணவனின் அருளும், சொர்க்கமும் சரிநிகரானவை; அல்லது சரிநிகராக இல்லையென்றாலும், அந்த ஏற்றத்தாழ்வு மிக அற்பமான அளவிலேயே இருக்கும். ஓ! மஹேஸ்வரரே, நீர் என்னிடம் நிறைவகொள்ளவில்லையெனில் நான் சொர்க்கத்தையும் விரும்ப மாட்டேன்(54) ஏழையாகவோ, நோய்வாய்ப்பட்டவனாகவோ, துன்பமடைந்தவனாகவோ, பகைவர்களிடம் வீழ்ந்துவிட்டவனாகவோ, பிராமணச் சாபத்தால் பீடிக்கப்பட்டவனாகவோ இருக்கும் கணவன், முறையற்ற அல்லது அறமற்ற அல்லது உயிரின் அழிவுக்கே வழிவகுக்ககூடிய எதையும் நிறைவேற்றச் சொல்லி மனைவிக்கு ஆணையிட்டால், அந்த மனைவியானவள், துன்பச்சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட தனியுரிமை குறியீட்டினால் வழிநடத்தப்பட்டு எந்தத் தயக்கமுமின்றி அதை நிறைவேற்ற வேண்டும்.(55,56) ஓ! தேவா, உமது ஆணையின் பேரில் பெண்களின் கடமைகள் என்னென்ன என்பதைச் சொன்னேன். உண்மையில், இவ்வழியில் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளும் பெண் தன் கணவனால் வெல்லப்பட்ட பலன்களின் பங்கைப் பெறும் உரிமைபெறுகிறாள்” என்றாள் {உமை}”.(57)
 
நாரதர் தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பெருந்தேவன், மலைகளின் இளவரசனுடைய மகளை {உமையை} மெச்சி, அங்கே கூடியிருந்தோர் அனைவருக்கும், உடன் இருந்த தன் பணியாளர்களுக்கும் விடை கொடுத்து அனுப்பினான்.(58) பல்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த பூதகணங்களும், உடல்படைத்த ஆறுகள் அனைத்தும், கந்தர்வர்களும், அப்சரஸ்கள் அனைவரும் மஹாதேவனுக்குத் தலைவணங்கியவர்களாகத் தாங்கள் வந்த இடம் நோக்கி அங்கிருந்து சென்றார்கள்”.(59)

வாசுதேவ மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 147-வாசுதேவனின் மகிமையையும், பலராமனின் பெருமையையும் முனிவர்களுக்குச் சொன்ன சிவன்…

முனிவர்கள் {மஹேஸ்வரனிடம்}, “ஓ! பிநாகம் தரிப்பவனே, ஓ! பகனின் கண்களைக் கிழித்தவனே, ஓ! அண்டமனைத்தாலும் வழிபடப்படுபவனே, நாங்கள் வாசுதேவனின் மகிமையைக் கேட்க விரும்புகிறோம்” என்றனர்.(1)
 



மஹேஸ்வரன், “ஹரியானவன் பெரும்பாட்டனுக்கே {பிரம்மனுக்கே} மேற்பட்டவனாவான். அவனே நித்திய புருஷனாவான். கிருஷ்ணன் என்றும் அழைக்கப்படும் அவன் தங்கத்தின் காந்தியைக் கொண்டவனாகவும், இரண்டாவது சூரியனைப் போலப் பிரகாசத்தில் ஒளிர்பவனாகவும் இருக்கிறான்.(2) பத்துக் கரங்களைக் கொண்டவனான அவன் பெருஞ்சக்தி கொண்டவனாகவும், தேவர்களின் பகைவர்களைக் கொல்பவனாகவும் இருக்கிறான். அவன் தன் மார்பில் ஒரு சுழியை {ஸ்ரீவத்சம் என்ற மச்சத்தைக்} கொண்டிருக்கிறான், தன் தலையில் சுருள் முடியைக் கொண்டிருக்கிறான். அவன் தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுகிறான்.(3) பிரம்மன் அவனுடைய வயிற்றுப் பகுதியில் இருந்து எழுந்தான். நான் அவனுடைய தலையில் இருந்து உண்டானேன். ஆகாயத்தில் உள்ள ஒளிக்கோள்கள் அனைத்தும் அவனுடைய தலைமயிரிலிருந்து உண்டானவை. அவனது உடல் மயிரிலிருந்து தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரும் உண்டாகினர்.(4) அவனுடைய உடலிலிருந்தே முனிவர்களும், நித்திய உலகங்கள் அனைத்தும் உண்டாகின. அவனே பெரும்பாட்டனின் முழுவசிப்பிடமாகவும், தேவர்களின் வசிப்பிடமாகவும் இருக்கிறான்.(5)
 
மொத்த பூமியின் படைப்பாளன் அவனே, மேலும் மூன்று உலகங்களின் தலைவனும் அவனே. அசையும், அசையாத உயிரினங்கள் அனைத்தையும் அழிப்பவன் அவனே.(6) உண்மையில் தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் அவனே. அவர்களின் ஆசானும் அவனே. பகைவர்கள் அனைவரையும் தண்டிப்பவன் அவனே. அனைத்தையும் அறிந்தவன் அவனே. அனைத்திலும் இருப்பவன் அவனே. எங்கும் செல்ல வல்லவன் அவனே. அண்டத்தின் எல்லையாக (அனைத்திலும் நீக்கமற) நிறைந்திருப்பவன் அவனே.(7) பரமாத்மா அவனே. புலன்கள் அனைத்தையும் தூண்டுபவன் அவனே. அண்டத்தை மறைப்பவன் அவனே. பரமத்தலைவன் அவனே. மூவுலகிலும் தனக்கு மேன்மையானவன் எவனும் இல்லாதவன் அவனே.(8) நித்தியமானவன் அவனே. கோவிந்தன் என்றும் அழைக்கப்படும் மதுசூதனன் அவனே. கௌரவங்களை அளிப்பவனான அவனே, மனித வடிவில் பிறந்து தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரையும் போரில் கொல்லச் செய்கிறான். அவனால் கைவிடப்பட்ட தேவர்கள், பூமியில் உள்ள தங்கள் காரியங்களை நிறைவேற்ற இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவனைத் தலைவனாக அடையாமல் அவர்களால் எதையும் செய்ய முடியாது. உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், தேவர்கள் அனைவராலும் துதிக்கப்படுபவனும் அவனே.(10,11)
 
தேவர்களின் காரியங்களை நிறைவேற்றுவதில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், பிரம்மத்தோடு அடையளங்காணப் படுபவனும், மறுபிறப்பாளர்களான முனிவர்களின் புகலிடமாக எப்போதும் இருப்பவனுமான தேவர்களுடைய இந்த ஆசானின் வயிற்றுக்குள்ளே (பெரும்பாட்டன்) பிரம்மன் வசிக்கிறான். உண்மையில் பிரம்மன், ஹரியின் உடலான தன் வசிப்பிடத்திற்குள் மகிழ்ச்சியாக வசிக்கிறான். சர்வன் {சர்வேஸ்வரன்} என்றழைக்கப்படும் நானும் என்னுடைய வசிப்பிடமாக இருக்கும் அதனுள் மகிழ்ச்சியாக வசிக்கிறேன்.(12,13) அவனுடைய உடலில் தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வசிக்கின்றனர். பெரும் பிரகாசம் கொண்ட அவனது கண்கள் தாமரை இதழ்களுக்கு ஒப்பானவையாகும். ஸ்ரீதேவி அவனுக்குள்ளேயே வசிக்கிறாள். அவனும் அவளுடனேயே எப்போதும வசிக்கிறான்.(14) வாளுடன் சேர்த்துச் சாரங்கம் என்றழைக்கப்படும் வில்லும் (சுதர்சனம் என்றழைக்கப்படும்) சக்கரமும் அவனது ஆயுதங்களாகும். அவன் பாம்புகள் அனைத்தின் தலைவனை (கருடனைத்) தன் கொடிமரத்தில் அமரச் செய்திருக்கிறான். அவன் சிறந்த ஒழுக்கத்தால், (உடல் மற்றும் மனத்) தூய்மையால், தற்கட்டுப்பாட்டால், ஆற்றலால், சக்தியால், அழகிய வடிவத்தால், நெடும் உயரத்தால், நல்ல அளவுகளில் உள்ள அங்கங்களால், வடிவச்சிறப்பால், வலிமையால் தனித்துவமாக {புகழ்பெற்றவனாக} இருக்கிறான். அற்புத வடிவம் மற்றும் தயாரிப்பாலான தெய்வீக ஆயுதங்களுடன் கூடியவனாக அவன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(15-17)
 
யோகத்தைத் தன் மாயையாகக் கொண்டவன் அவனே. ஆயிரம் கண்களைக் கொண்டவன் அவனே. அனைத்துக் களங்கங்கள் அல்லது குற்றங்களில் இருந்து விடுபட்டவன் அவனே. உயர்ந்த மனம் படைத்தவன் அவனே. வீரமிக்கவன் அவனே. தன் நண்பர்கள் அனைவரின் மத்தியில் செருக்கிற்குத் தகுந்த பொருளாக இருப்பவன் அவனே. உற்றார் உறவினர் மற்றும் தன்னிடம் அன்புடை அனைவரிடமும் அன்பாயிருப்பவன் அவனே.(18) மன்னிக்கும் தன்மையுடன் கூடியவன் அவனே. செருக்கு மற்றும் தற்பெருமையில் இருந்து விடுபட்டவன் அவனே. பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அவர்களுக்குத் தலைவனும் அவனே. அச்சத்தால் பீடிக்கப்பட்ட மனிதர்கள் அனைவரின் அச்சங்களை விலக்குபவன் அவனே. தன் நண்பர்கள் அனைவரின் இன்பத்தைப் பெருக்குபவன் அவனே.(19) அனைத்து உயிரினங்களின் புகலிடம் அவனே. துன்பமடைந்தோரைப் பாதுகாப்பதிலும், பேணி வளர்ப்பதிலும் எப்போதும் ஈடுபடுபவன் அவனே. சாத்திரங்கள் அனைத்தையும், அனைத்து வகைச் செல்வத்தையும் கொண்டிருப்பதன் மூலம் அனைவராலும் வழிபடப்படுபவன் அவனே.(20)
 
அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனான அவன், தன் பாதுகாப்பை நாடும்போது எதிரிகளுக்கும் பெரும் நண்மைகளைச் செய்பவனாவான். கொள்கையை அறிந்து, கொள்கையுடன் கூடிய அவன் பிரம்மத்தைச் சொல்பவனாகவும், தன் புலன்களை முற்றிலும் கட்டுப்படுத்தியவனாகவும் இருக்கிறான்.(21) தேவர்களுக்கு நன்மை செய்வதற்காகக் கோவிந்தன் உயர் ஆன்ம மனு குலத்தில் பிறப்பெட்டுப்பான். உண்மையில் உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட அவன் மங்கலமிக்க, அறம் சார்ந்த பிரஜாபதியின் குலத்தில் தன் பிறப்பை எடுப்பான். மனு, அங்கன் என்ற பெயரில் ஒரு மகனைக் கொள்வான். அதன் பிறகு அங்கனுக்கு அந்தர்த்தாமன் வருவான்.(22,23) அந்தர்த்தாமனிலிருந்து அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனும், அனைத்துக் களங்கங்களில் இருந்து விடுபட்டவனுமான ஹவிர்த்தாமன் உண்டாவான். ஹவிர்த்தாமன் பழைய-பர்ஹி {பிராசீனபர்ஹி} என்ற பெயரில் ஒரு சிறப்புமிக்க மகனைப் பெறுவான்.(24) அவனுக்குப் பிரசேதஸ் முதலான பத்து மகன்கள் உண்டாவார்கள். பிரசேதஸ், தக்ஷன் என்ற பெயரில் பிரஜாபதியாகக் கருதத்தகுந்த ஒரு மகனைப் பெறுவன். தக்ஷன் தாக்ஷாயிணி என்ற பெயரில் ஒரு மகளைப் பெறுவான்.(25) தாக்ஷாயினியிடம் ஆதித்தன் உண்டாவான், அதித்தனுக்கு {வைவஸ்வத} மனு உண்டாவான். மனுவுக்கு ஸுத்யும்னன் என்ற பெயரில் மகனாகப் போகும் இளை என்ற பெயரில் ஒரு மகள் பிறந்தாள்.(26) இளை புதனைத் தன் கணவனாகக் கொள்வாள், புதனிடம் இருந்து புரூரவன் உண்டாவான். புரூரவஸிலிருந்து ஆயு எழுவான். ஆயுவிடம் இருந்து நஹுஷனும் உண்டாவான், அந்தம நஹுஷன் யயாதி என்ற பெயரில் ஒரு மகனைப் பெறுவான்.(27)
 
யயாதி யது என்ற பெயரில் ஒரு வலிமைமிக்க மகனைப் பெறுவான். யது க்ரோஷ்டிரியை {கிரோஷ்டாவைப்} பெறுவான். கிரோஷ்டிரி விருஜினீவான் என்ற பெயரில் ஒரு வலிமைமிக்க மகனைப் பெறுவான்.(28) விருஜினீவானிடமிருந்து வெல்லப்பட முடியாதவனான உஷத்கு {உஷங்கு} பிறப்பான். உஷத்கு சித்திரரதன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெறுவான்.(29) சித்திரரதன், சூரன் என்ற பெயரில் ஓர் இளைய மகளைப் பெறுவான். உண்மையில், உலகம் அனைத்திலும் கொண்டாடப்படும் சக்தியைக் கொண்டவர்களும், சிறந்த ஒழுக்கம் மற்றும் பல்வேறு சாதனைகளைக் கொண்டவர்களும்,(30) வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவர்களும், தூய நடத்தை கொண்டவர்களுமான இந்த வலிமைமிக்க மனிதர்கள் பிறந்த குலத்தில் பிராமணர்களால் கௌரவிக்கப்படும் அந்தத் தூய குலத்தில், சூரன் தன் பிறப்பை எடுப்பான். அவன் {சூரன்} க்ஷத்திரியரில் முதன்மையானவனாகவும், பெருஞ்சக்தி கொண்டவனாகவும், பெரும்புகழைக்கொண்டவனாகவும் இருப்பான்.(31) கௌரங்களை அளிப்பவனான சூரன், தன் குலத்தைப் பெருகச் செய்பவனும், ஆனகதுந்துபி என்றும் அழைக்கப்படுபவனான வசுதேவன் என்ற பெயரைக் கொண்ட ஒரு மகனைப் பெறுவான்.(32) வசுதேவன், வாசுதேவன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெறுவான். அவன் நான்கு கரங்களைக் கொண்டிருப்பான். அவன் அதீத தயாளனாகவும், பிராமணர்களைப் பெரிதும் மதிப்பவனாகவும் இருப்பான். பிரம்மத்துடன் அடையாளங்காணப்படும் அவன் பிராமணர்களிடம் அன்பு கொண்டவனாக அவர்களை விரும்புகிறான், பிராமணர்களும் அவனை விரும்பி அன்பு செலுத்துகின்றனர்.(33)
 
அந்த யதுகுலக் கொழுந்து {கிருஷ்ணன்}, மலைகளுக்கு மத்தியில் புதைந்திருக்கும் தலைநகரைக் கொண்டவனும், ஜராசந்தன் என்ற பெயருடையவனுமான ஆட்சியாளனை வென்ற பிறகு, அந்த மகதர்களின் ஆட்சியாளனுடைய சிறையில் அடைபட்டிருக்கும் மன்னர்கள் பலரை விடுவிப்பான்.(34) பெருஞ்சக்தி கொண்ட அவன் தங்கம், ரத்தினங்கள் கொண்ட பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரிலும் வளமிக்கவனாக இருப்பான்.(35) பேராற்றலைக் கொண்ட அவன் பூமியில் மன்னர்களுக்கு மன்னனாக இருப்பான். சூரசேனர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக இருக்கும் அந்தப் பலமிக்கவன், துவாரகையில் வசித்துக் கொண்டு,(36) அரசியல் அறிந்தவனாக மொத்த பூமியின் ஆட்சியாளர்களையும் வென்று அவளைப் {பூமியைப்} பாதுகாத்து ஆள்வான். நீங்கள் அனைவரும் ஒன்று கூடி, நித்திய பிரம்மனைத் துதிப்பது போல, வாக்கு, மலர்மாலைகள், நறுமணப் பொருட்கள் மற்றும் சிறந்த தூபங்களுடன் அவனைத் துதிப்பீராக.
 
என்னையோ, பெரும்பாட்டன் பிரம்மனையோ காண விரும்பும் ஒருவன்,(37,38) பெரும்பலமிக்கவனும், சிறப்புமிக்கவனுமான வாசுதேவனை முதலில் காண வேண்டும். அவன் காணப்பட்டால், நானும், தேவர்கள் அனைவரிலும் முதன்மையான பிரம்மனும் காணப்பட்டோம்.(39) இதில் எந்த வேறுபாடும் இருப்பதாக நான் கருதவில்லை. தவச் செல்வத்தைக் கொண்ட முனிவர்களே இதை அறிவீராக. தாமரைக் கண்ணனான வாசுதேவன் எவனிடம் நிறைவடைவானோ,(40) அவனிடம் பிரம்மனும், தேவர்கள் அனைவரும் நிறைவடைகிறார்கள். கேசவனின் பாதுகாப்பை நாடும் மனிதன்,(41) பெருஞ்சாதனைகளையும், வெற்றியையும், சொர்க்கத்தையும் ஈட்டுவதில் வெல்வான். அறம் மற்றும் கடமைகளைப் பயிற்றுவிப்பவனாக இருக்கும் அவன் பெரும் அறப்பலன்களை ஈட்டுவான்.(42) அறம் மற்றும் கடமைகளை அறிந்த மனிதர்கள அனைவரும், பெரும் சுறுசுறுப்புடன் தேவர்கள் அனைவரின் தலைவனான அவனுக்குத் தலைவணங்க வேண்டும்.(43)
 
பெருஞ்சக்தியைக் கொண்ட அந்தத் தேவன், உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்ய விரும்பி அறநோக்கத்தில் கோடிக்கணக்கான முனிவர்களைப் படைத்தான்.(44) அந்தப் பேராணையாளனால் இவ்வாறு உண்டாக்கப்பட்ட கோடிக்கணக்கான முனிவர்கள், சனத்குமாரர் தலைமையில் கந்தமாதன மலைகளில் வசித்துக் கொண்டு இப்போது தவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.(45) எனவே, மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, நாநயமிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், அறவோனுமான வாசுதேவன் அனைவராலும் துதிக்கப்பட வேண்டும். அந்தச் சிறப்புமிக்க ஹரி, பலமிக்க நாராயணன், உண்மையில் சொர்க்கத்தில் உள்ள அனைவரிலும் முதன்மையானவன் ஆவான்.(46) அவன், தன்னைத் துதிப்பவனைத் துதிப்பான், கௌரவித்தவனைக் கௌரவிப்பான், காணிக்கையளிப்பவர்களுக்குப் பதில்காணிக்கைகள் அளிப்பான். அவன் தன்னை வழிபடுபவனைப் பதிலுக்கு வழிபடுவான்.(47) எப்போதும் தன்னைக் காண்போரை, எப்போதும் தானும் காண்பான். அவனது புகலிடத்தையும், பாதுகாப்பையும் நாடும் ஒருவனைத் தானே புகலிடமாகக் கொள்வான். அறவோர் அனைவரிலும் முதன்மையானவர்களே, துதிக்கப்பட்டு, வழிபடப்பட்டால், அவன் பதிலுக்குத் துதித்து வழிபடுவான்.(48)
 
இதுவே குற்றமற்ற விஷ்ணுவின் உயர்ந்த நடைமுறை. இதுவே தேவர்கள் அனைவரிலும் முதல்வனும், உயிரினங்கள் அனைத்தின் பலமிக்கத் தலைவனுமான அவனுக்காக அறவோர் அனைவராலும் பின்பற்றப்படும் நோன்பாகும்.(49) அவன் எப்போதும் உலகத்தால் வழிபடப்படுகிறான். உண்மையில் அந்த நித்தியமானவன் தேவர்களாலும் வழிபடப்படுகிறான். அவனிடம் நிலையான பக்தி கொண்ட மனிதர்கள் தங்கள் பக்திக்குத் தக்க வகையில் துன்பங்களில் இருந்தும், அச்சங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள்.(50) மறுபிறப்பாளர்கள் எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றில் எப்போதும் அவனை வழிபட வேண்டும். தேவகியின் மகன் அவர்களால் மதிப்புடன் காணப்பட வேண்டும். அவனை மதிப்புடன் காண அவர்கள் தவங்களைச் செய்ய வேண்டும்.(51) தவசிகளில் முதன்மையானோரே, இதுவே நான் உங்களுக்குக் காட்டும் பாதையாகும். அவனைக் காண்பதன் மூலம், நீங்கள் தேவர்களில் முதன்மையானோர் அனைவரையும் காண்பீர்கள்.(52) அண்டத்தின் தலைவனும், வலிமைமிக்கப் பெரும்பன்றியும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனுமான அவனுக்கு நானும் தலைவணங்குகிறேன்.(53)
 
அவனைக் காண்பதன் மூலம் ஒருவன் மும்மூர்த்திகளையும் காண்கிறான். தேவர்களான நாங்கள் அனைவரும் அவனுக்குள் வசிக்கிறோம்.(54) உலகம் முழுவதிலும் பலன் {பலராமன்} என்ற பெயரில் அறியப்பட்ட ஓர் அண்ணனை அவன் பெற்றிருப்பான். கலப்பையையே ஆயுதமாகக் கொள்ளும் அவன் வடிவத்தில் ஒரு வெண்மலையைப் போல இருப்பான். உண்மையில் அவன் மொத்த பூமியையும் உயர்த்தவல்ல வலிமையைப் பெற்றிருப்பான்.(55) அந்தத் தெய்வீகமானவனின் தேரில், மூன்று தலை கொண்டதும், தங்கத்தாலானதுமான நெடும் பனைமரம் செருக்குடன் அவனது {பலராமனது} கொடிமரமாக அமைந்திருக்கும்.(56) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், உலகங்கள் அனைத்தின் தலைவனுமான அவனுடைய தலையானது உயர் ஆன்மப் பாம்புகள் பலவற்றின் பேருடல்களின் நிழலால் மறைக்கப்பட்டிருக்கும். தாக்குவதற்கும், தற்காப்பதற்கும் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் நினைத்த மாத்திரத்தில் அவனிடம் வந்து சேரும்.(78) அவன் அனந்தன் (முடிவற்றவன்) என்றழைக்கப்படுகிறான். உண்மையில், அந்தச் சிறப்புமிக்கவன், மாற்றமற்றவனான ஹரியோடு அடையாளங்காணப் படக்கூடியவனாவான்.
 
ஒரு காலத்தில் கசியபரின் மகனான வலிமைமிக்கக் கருடனிடம் தேவர்கள் இந்தச் சொற்களைச் சொன்னார்கள், “ஓ! பலமிக்கவனே, இவனுக்கு எல்லையேதும் இருக்கிறதா என்பதைப் பார்ப்பாயாக” என்றனர். கருடன் பெரும் சக்தி கொண்டவனாகவும், வலிமைமிக்கவனாகவும் இருப்பினும், பரமாத்மாவுடன் அடையாளங்காணப்படும் இந்தச் சிறப்புமிக்கவனின் எல்லையைக் காணத் தவறினான்.(58,59) மொத்த உலகத்தையும் தன் தலையில் தாங்கும் இவன், பாதாள லோகங்களில் வசிக்கிறான். அவன் பெரும் மகிழ்ச்சியால் நிறைந்த சேஷனாக அண்டம் முழுவதும் உலவித் திரிகிறான்.(60) விஷ்ணு அவனே, சிறப்புமிக்க அனந்தன் அவனே, பூதியை ஆதரிப்பவனும் அவனே. ரிஷிகேசனே {கிருஷ்ணனே} ராமன் {பலராமன்}. அச்யுதனே {கிருஷ்ணனே} உலகத்தைத் தாங்கும் அனந்தன் {பலராமன்}.(61) உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான அவ்விருவரும் தெய்வீகமானவர்களும், தெய்வீக ஆற்றலுடன் கூடியவர்களும் ஆவர். அவர்களில் ஒருவன் சக்கரத்தையும், மற்றொருவன் கலப்பையையும் தரித்திருக்கிறான். அனைத்து கௌரவங்களுக்கும் தகுந்தவர்களாகவே அவர்கள் காணப்பட வேண்டும்.(61) நான் உங்களிடம் கொண்ட அன்பினால், வாசுதேவனின் இயல்பை உங்களுக்கு இவ்வாறு அறிவித்தேன். தவங்களையே செல்வமாகக் கொண்ட தவசிகளே, அறம் இதுவே.(62) நீங்கள் யது குலத்தில் முதன்மையான கிருஷ்ணனை மதித்துக் கவனத்துடன் வழிபட வேண்டும் என்பதற்காகவே நான் இவையனைத்தையும் உங்களுக்குச் சொன்னேன்” என்றான் {சிவன்}.(63)

நரநாராயணர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 148-கிருஷ்ணனின் மகிமையையும், அர்ஜுனனின் திறமையையும் சொல்லி துரியோதனனுக்காக வருந்திய பீஷ்மர்…

நாரதர், “மஹாதேவனின் பேச்சு நிறைவடைந்ததும் ஆகாயத்தில் பெருமுழக்கங்கள் கேட்டன. மின்னல் கீற்றுகளுடன் கூடிய இடிகள் பெரு முழக்கம் செய்தன. ஆகாயம் அடர்த்தியான கருமேகங்களால் மூடப்பட்டது.(1) மேகங்களின் தேவன் மழைக்காலங்களில் செய்வதைப் போலவே தூய நீரைப் பொழிந்தான். அடர்த்தியான இருள் கவ்வியது. திசைப்புள்ளிகளை அதற்கு மேலும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(2) பிறகு அந்த இனிமை நிறைந்த, புனிதமான தெய்வீக மலையின் நித்திச் சாரலில் கூடியிருந்த முனிவர்களால் மஹாதேவனுடன் இருந்த அவனது துணைவர்களான பூத கணக் கூட்டங்களைப் பார்க்க முடியவில்லை.(2) எனினும், விரைவில் ஆகாயம் தெளிவடைந்தது. முனிவர்களில் சிலர், புனித நீர்நிலைகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர். வேறு சிலர் தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர்.(4)
 



உண்மையில், காண்பதற்கரிய அந்த அற்புதக் காட்சியைக் கண்ட அவர்கள் வியப்பில் நிறைந்தனர். சங்கரனுக்கும், உமைக்கும் இடையில் நடந்த உரையாடலும் அதே உணர்வுடனே கேட்கப்பட்டது.(5) அனைத்திலும் முதன்மையானவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான சங்கரன் அந்த மலையில் வைத்து எங்களிடம் சொன்னது உன்னைத் தான். உண்மையில், நீ நித்திய பிரம்மமாவாய் {பரப்பிரம்மமாவாய்}.(6) சில காலத்திற்கு முன்பு மஹாதேவன் தன் சக்தியால் இமயத்தை எரித்தான். நீயும் அதே போன்ற அற்புதக் காட்சியை எங்களுக்குக் காட்டினாய். உண்மையில், நாங்கள் இன்று கண்டதை வைத்து அந்தப் பழங்கால நிகழ்வு நினைவுகூர்ந்தோம்.(7) ஓ! வலிய கரங்களைக் கொண்ட ஜனார்த்தனா, ஓ! பலமிக்கவனே, இவ்வாறே கபர்தின், அல்லது கிரீசன் என்றழைக்கப்படும் அந்தத் தேவர்களுக்குத் தேவனின் மகிமையை நான் உனக்கு உரைத்தேன்[1]” என்றார் {நாரதர்}.(8)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்தத் தபோவனத்தில் வசித்தவர்களால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், தேவகியை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவனுமான கிருஷ்ணன், அந்த முனிவர்கள் அனைவருக்கும் உரிய கௌரவத்தைச் செலுத்தினான்.(9) மகிழ்ச்சியில் நிறைந்த அந்த முனிவர்கள் மீண்டும் கிருஷ்ணனிடம், “ஓ! மதுசூதனா, அடிக்கடி எங்களுக்குக் காட்சியளிப்பாயாக.(10) ஓ! பலமிக்கவனே, உன்னைக் காண்பதைவிட மகிழ்ச்சியான சொர்க்கம் எங்களுக்கு வேறேதும் இல்லை. சிறப்புமிக்கப் பவனால் (உன்னைக் குறித்துச்) சொல்லப்பட்டது அனைத்தும் உண்மையே.(11) ஓ! பகைவர்களை நொறுக்குபவனே, அந்தப் புதிர் குறித்த அனைத்தையும் நாங்கள் உனக்குச் சொன்னோம். நீயே அனைத்து உண்மைகளையும் அறிந்தவனாவாய். எனினும், எங்களால் கேட்கப்பட்டு, பதிலுக்கு உன்னால் நாங்கள் கேட்கப்பட்ட காரணத்தால் (பவனுக்கும் உமைக்கும் இடையில் நடந்த உரையாடல் குறித்த) அனைத்தையும் உங்களுக்குச் சொன்னோம். மூவுலகங்களிலும் நீ அறியாதது ஏதுமில்லை.(12,13)
 
அனைத்துப்பொருட்களின் பிறப்பு மற்றும் தோற்றம் குறித்த அனைத்தையும், உண்மையில் (வேறு பொருட்களை உண்டாக்குவதற்குக்) காரணமாக இயங்கும் அனைத்தையும் முழுமையாக நீ அறிவாய். எங்கள் மென்மையான குணத்தின் விளைவால், எந்தப் புதிரையும் தாங்கிக் கொள்ள இயலாதவர்களாக இருக்கிறோம் (எந்த ரகசியத்தையும் வெளிப்படுத்தமால் எங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ள இயலாதவர்களாக இருக்கிறோம்)[2].(14) உண்மையில், ஓ! பலமிக்கவனே, எங்கள் இதய மென்மையிலிருந்து தொடர்பில்லாதவற்றில் ஈடுபடுகிறோம். நீ அறியாத அற்புதப் பொருள் ஏதும் கிடையாது.(15) பூமியில் உள்ள யாவையும், சொர்க்கத்தில் உள்ள யாவும் நீ அறிந்தவையே. ஓ! கிருஷ்ணா, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்புகிறோம் எங்களுக்கு விடைகொடுப்பாயாக. புத்தியிலும், செழிப்பிலும் நீ பெருகுவாயாக. ஓ! ஐயா, உன்னைப் போன்றவனும், உன்னைவிடப் புகழ்மிக்கவனுமான மகன் ஒருவனை நீ விரைவில் பெறுவாய்.(16) அவன் சக்தியும், காந்தியும் கொண்டவனாக இருப்பான். பெரும் சாதனைகளைச் செய்யும் அவன், உன்னைப் போன்றே பெரும்பலம் கொண்டவனாக இருப்பான்” என்றனர் {முனிவர்கள்}”.(17)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அதன்பிறகு, தேவர்களுக்குத் தேவனும், அனைத்திலும் முதன்மையானவனுமான அந்த யது குலக் கொழுந்துக்கு அந்தப் பெரும் முனிவர்கள் தலைவணங்கினர். பிறகு அவனை வலம் வந்த அவர்கள், அவனது அனுமதியைப் பெற்றுக் கொண்டு சென்றனர்.(18) செழிப்பையும், சுடர்மிக்கப் பிரகாசத்தையும் கொண்ட நாராயணன், தன் நோன்பை முறையாக நோற்று துவாரகைக்குத் திரும்பினான்.(19) கருவுற்ற அவனுடைய மனைவி ருக்மிணிக்கு, பத்தாம் மாதம் முடிந்ததும், பெரும் வீரத்தையும், அற்பத சாதனைகளுக்காக அனைவரும் தரும் மதிப்பையும் கொண்ட ஒரு மகன் பிறந்தான்.(20) அவன், ஒவ்வொரு உயிரினத்திலும் இருப்பதும், இருப்பிலுள்ள ஒவ்வொரு நிலையையும் ஊடுருவவல்லதுமான காமத்துடன் (ஆசையுடன் / காமனுடன் / மன்மதனுடன்) அடையாளம் காணப்படுபவனாக இருந்தான். உண்மையில் அவன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதயங்களில் உலவிக் கொண்டிருக்கிறான்.(21)

இந்தக் கிருஷ்ணனே அனைவரிலும் முதன்மையானவன். மேகவண்ணம் கொண்ட இவனே நான்கு கரங்களைக் கொண்ட வாசுதேவனாவான். அன்பின் மூலம் அவன் பாண்டவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டான். பாண்டவர்களான நீங்களும் அவ்வாறே அவனுடன் இணைந்தீர்கள்.(22) சாதனைகள், செழிப்பு, புத்தி, சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் பாதை ஆகிய அனைத்தும், மூன்று அடிகளை வைத்த சிறப்புமிக்க விஷ்ணுவான இவன் இருக்கும் இடங்களில் இருக்கும்.(23) இந்திரனைத் தலைமையில் கொண்ட முப்பத்துமூன்று தேவர்கள் இவனே. இதில் ஐயமேதும் இல்லை. இவன் ஒரு புராதன தேவனாவான். இவன் தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான். இவன் அனைத்து உயிரினங்களுக்கும் புகலிடமாவான்.(24) இவன் தொடக்கமும், அழிவும் இல்லாதவனாவான். இவன் வெளிப்படாதவனாவான் {அறிவுக்கு எட்டாதவன் ஆவான்}. இவனே உயர் ஆன்ம மதுசூதனனாவான். வலிமையும், சக்தியும் கொண்ட இவன், தேவர்களின் காரியங்களை நிறைவேற்றுவதற்காக (மனிதர்களின் மத்தியில்) பிறந்திருக்கிறான்.(25)

உண்மையில் இந்த மாதவன், செல்வம் தொடர்புடைய மிகக் கடினமான உண்மைகளை விளக்குபவனும், அஃதை அடைபவனுமாவான். ஓ!பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரனே}, நீ உன் பகைவர்களிடம் அடைந்திருக்கும் வெற்றி, ஒப்பற்றவையாக இருக்கும் உன் சாதனைகள்,(26) மொத்த பூமியிலும் நீ அடைந்திருக்கும் ஆட்சிப் பகுதிகள் ஆகிய அனைத்தும் நாராயணன் உன் தரப்பை அடைந்ததாலேயே கிடைத்தன.(27) எண்ணிப்பார்க்கமுடியாத நாராயணனையே உன் பாதுகாவலனாகவும், புகலிடமாகவும் அடைந்தாயே, போரெனும் சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளாகப் பெரும் மன்னர்கள் கூட்டத்தை ஊற்றும் அதர்யுவாக உன்னால் இயன்றது. இந்தக் கிருஷ்ணனே, யுகத்தின் முடிவில் தோற்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்புக்கு ஒப்பான பெரும் வேள்விக் கரண்டியானான்.(28) கோபத்தால் தூண்டப்பட்டு ஹரியுடனும், காண்டீவதாரியுடனும் போர் செய்த துரியோதனன், அவனுடைய மகன்கள், அவனது சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர் ஆகியோர் பரிதாபத்திற்குரியவர்களே.(29) பேருடல் படைத்தவர்களும், பெரும்பலம் கொண்டவர்களுமான திதியின் மகன்கள் பலரும், தானவர்களில் முதன்மையானோர் பலரும், காட்டு நெருப்பில் பூச்சிகளைப் போலக் கிருஷ்ணனின் சக்கர {சக்ராயுத} நெருப்பில் அழிந்து போனார்கள்.(30) ஓ! மனிதர்களில் புலியே, பலமும், வலிமையுமற்ற மனிதர்கள் கிருஷ்ணனை எதிர்த்துப் போரிட எவ்வளவு இயதாவர்களாக இருந்திருக்க வேண்டும்.(31)

ஜெயனை {அர்ஜுனனைப்} பொறுத்தவரையில் அவன் சக்தியில் அனைத்தையும் அழிக்கும் யுக நெருப்புக்கு ஒப்பான விலிமைமிக்க யோகியாவான். இரு கரத்தாலும் வில்லை இழுக்க வல்ல அவன் படையின் முன்னணியிலேயே எப்போதும் இருந்தான். ஓ! மன்னா, அவனது சக்தியாலேயே, சுயோதனனின் துருப்பினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.(32) கொடி மரச் சின்னத்தில் காளைமாட்டைக் கொண்ட மஹாதேவன் {விருஷபத்வஜன்} இமயச் சாரலில் உள்ள தவசிகளுக்குச் சொன்னதை நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. அவன் சொன்னதே ஒரு புராணமாகும்.(33) அர்ஜுனனில் உள்ள முன்னேற்றம், பெருமை, சக்தி, பலம், ஆற்றல், வலிமை, பணிவு, குலம் ஆகியன கிருஷ்ணனிடம் வசிக்கும் அக்குணங்களில் மூன்றில் ஒரு பகுதியின் அளவை எட்டும்.(34) கிருஷ்ணனின் இக்குணங்களைக் கடக்க யாரால் முடியும்? அது சாத்தியமா இல்லையா என்பதைக் கேட்பாயாக (கேட்ட பிறகு தீர்மானிப்பாயாக). எங்கே கிருஷ்ணன் இருப்பானோ அங்கே ஒப்பற்ற சிறப்புகள் {பெருமைகள்} இருக்கும்.(35)

எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அற்ப புத்தி கொண்ட மனிதர்களாக இருந்தோம். பிறரின் விருப்பங்களைச் சார்ந்திருந்த நாங்கள் பெருங்கெடுபேற்றைப் பெற்றிருந்தோம். அறிந்தே நாங்கள் நித்தியமான மரணப் பாதையில் நடந்தோம்.(36) எனினும் நீ நேர்மையான ஒழுக்கத்தில் அர்ப்பணிப்புடன் இருந்தாய். உன் நாட்டை ஏற்பதற்கு எதிராக உறுமொழியேற்ற நீ உன் உறுதிமொழியைக் காக்க விரும்பி அதை எடுக்காமலேயே இருந்தாய்[3].(37) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ போர்க்களத்தில் உன் உற்றார் உறவினரையும், நண்பர்களையும் அதிகமாகக் கொன்றுவிட்டாய் என நினைக்கிறாய் (அவ்வாறு நீ நம்புகிறாய்). எனினும், ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, உறுதிமொழியை மீறுவது தகாதது என்பதை நீ நினைவுகூர வேண்டும்[4].(38) போர்க்களத்தில் வீழ்ந்தவர் அனைவரும் காலத்தாலேயே உண்மையில் கொல்லப்பட்டனர். காலமே உண்மையில் அனைத்திலும் பலமிக்கதாகும்.(39) காலத்தின் வலிமையை நீ முழுமையாக அறிவாய். காலத்தினால் பீடிக்கப்பட்டிருப்பதால் வருந்துவது உனக்குத் தகாது. ஹரி என்று வேறு பெயரிலும் அழைக்கப்படும் இந்தக் கிருஷ்ணனே, குருதிச் சிவப்பான கண்களுடனும், கையில் தண்டத்துடனும் கூடிய காலமாக இருக்கிறான் என்பதை அறிவாயாக.(40)

ஓ! குந்தியின் மகனே, இந்தக் காரணங்களினால் நீ உன் (உன்னால் கொல்லப்பட்ட) உறவினர்களுக்காக வருந்துதல் தகாது. ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நீ எப்போதும் துன்பத்தில் இருந்து விடுபட்டிருப்பாயாக.(41) நீ மாதவனின் மகிமையையும், பெருமையையும் என்னால் உரைக்கப்பட்டபடியே கேட்டாய். ஒரு நல்ல மனிதன் அவனைப் புரிந்து கொள்ள இயல இது போதுமானதாகும்.(42) வியாசர் மற்றும் பெரும் நுண்ணறிவைக் கொண்ட நாரதரின் சொற்களையும் கேட்டு கிருஷ்ணனின் துதிக்கத்தக்க தன்மையை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். நானும் என் ஞானத்திலிருந்து சிலவற்றை அந்த உரையில் சேர்த்திருக்கிறேன்.(43) உண்மையில் நான் (இமயச் சாரலில்) முனிவர்களின் கூட்டத்திடம் மஹாதேவன் உரைத்த கிருஷ்ணனின் அளவு கடந்த மகிமையையும் உனக்குச் சொல்லியிருக்கிறேன். ஓ! பாரதா, மஹேஸ்வரனுக்கும், இமயவான் மகளுக்கும் இடையில் நடந்த உரையாடலும் என்னால் உனக்குச் சொல்லப்பட்டது.(44)

ஒரு முதன்மையான மனிதனிடம் இருந்து வெளிவரும் அந்த உரையாடலை மனத்தில் தாங்கிக் கொள்பவனும், அதைக் கேட்பவனும், (வேறு மக்கள் கேட்பதற்கு) அதை மீண்டும் உரைப்பவனும், உயர்ந்த நன்மைகளை வெல்வது உறுதி.(45) அம்மனிதன் தன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவடைவதைக் காண்பான். இந்த உலகத்தில் இருந்து செல்லும் அவன் சொர்க்கத்திற்கு உயர்வான். இதில் ஐயமேதும் இல்லை.(46) தனக்கான நன்மையை அடைய விரும்பும் மனிதன் தன்னை ஜனார்த்தனனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.(47) ஓ! குருக்களின் மன்னா, கடமை மற்றும் அறம் குறித்து மஹேஸ்வரனால் அறிவிக்கப்பட்ட நிகழ்வுகளை நீ எப்போதும் மனத்தில் கொள்வாயாக.(48) இந்தப் பணிப்பாணைகளின் படி நீ உன்னை ஒழுங்கமைத்துக் கொண்டால், நீ முறையாகத் தண்டக் கோலைத் தாங்கினால், முறையாக உன் குடிமக்களைப் பாதுகாத்தால் நிச்சயம் நீ சொர்க்கத்தை அடைவாய்.(49) ஓ! மன்னா, அறத்தின் அணைகளின் படி எப்போதும் குடிமக்களைப் பாதுகாப்பதே உனக்குத் தகும். மன்னன் தாங்கும் தண்டனைக்குரிய பருத்த கோல் {தண்டக்கோல்} அறம் அல்லது பலனின் உடல்வடிவமாகச் சொல்லப்படுகிறது[5].(50)சங்கரன் மற்றும் உமைக்கிடையிலான அறம் நிறைந்ததும், அறம்சார்ந்த கூட்டத்திற்கு முன்பு நான் உரைத்ததுமான இந்த உரையாடலைக் கேட்கும் ஒருவன், கொடியில் காளைமாட்டைத் தன் சின்னமாகக் கொண்ட தேவனை மதிப்புடன் வணங்க வேண்டும்.(51) அந்த உரையாடலைக் கேட்க விரும்பும் ஒருவனும் மதிப்புடன் மஹாதேவனை வணங்க வேண்டும். உண்மையில், தனக்கான நன்மையை அடைய விரும்பும் மனிதன், தூய இதயத்துடன் மஹாதேவனைத் துதிக்க வேண்டும்.(52) இதுவே களங்கமற்றவரும், உயர் ஆன்மா கொண்டவருமான நாரதரின் ஆணையாகும். அவரும் பெருந்தேவனை வழிபடுவது குறித்து ஆணையிட்டிருக்கிறார். ஓ! பாண்டுவின் மகனே, நாரதரின் ஆணைக்குக் கீழ்ப்படிவாயாக.(53) ஓ!பலமிக்க மன்னா, ஓ! குந்தியின் மகனே, புனிதமான இமயச் சாரலில் வாசுதேவனுக்கும், ஸ்தாணுவுக்கும் இடையில் நடந்த அற்புதம் நிறைந்த நிகழ்வுகள் இவையே ஆகும். அந்த நிகழ்வுகள் அந்த உயர் ஆன்ம தேவர்களின் இயல்பிலிருந்தே உண்டாகின.(54) காண்டீவதாரியுடன் கூடிய வாசுதேவன் பதரி ஆசிரமத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் நித்திய தவங்களைப் பயின்று வந்தான்[6].(55)உண்மையில், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட வாசுதேவன் மற்றும் தனஞ்செயன் ஆகிய இருவரும் மொத்தமாக மூன்று யுகங்கள் கடுந்தவமிருந்தனர். ஓ! மன்னா, நான் இதை நாரதர் மற்றும் வியாசரிடம் இருந்து அறிந்து கொண்டேன்.(56) தாமரைக் கண்ணனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான வாசுதேவன், (மனித வடிவில்) பிள்ளையாக இருக்கும்போதே தன் உறவினர்களின் விடுதலைக்காகக் கம்சனைக் கொன்ற பெருஞ்சாதனையைச் செய்திருக்கிறான்.(57) ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, புராதனமானவனும், நித்தியமானவனுமான இவனது சாதனைகளைப் பட்டியலிட நான் துணியேன்.(58) ஓ! மகனே, அனைவரிலும் முதன்மையான வாசுதேவனை உற்ற நண்பனாகக் கொண்டிருக்கும் நீ, நிச்சயம் உயர்ந்த பெரிய நன்மைகளை அறுவடை செய்வாய்.(59) தீயவனான துரியோதனன் சென்றிருக்கும் அடுத்த உலகத்தைப் பொறுத்தவரையிலும் கூட (அவன் அடைந்த மறுமையிலும்) அவனுக்காக நான் வருத்தமே அடைகிறேன். அவனுக்காகவே இந்த மொத்த பூமியும், குதிரைகளும், யானைகளுமற்றதானது.(60) உண்மையில், துரியோதனன், கர்ணன், சகுனி, நான்காவதாகத் துச்சாசனன் ஆகியோரின் குற்றத்தாலேயே குருக்கள் அழிந்தனர்” {என்றார் பீஷ்மர்}”.(61)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மனிதர்களில் முதன்மையானவரான கங்கையின் மைந்தர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, (பீஷ்மரின் உரையாடல்களைக் கேட்பதற்காகக் கூடியிருந்த) உயர் ஆன்ம மனிதர்களின் மத்தியில் குரு மன்னன் (யுதிஷ்டிரன்) முற்றான அமைதியுடன் இருந்தான்.(62) திருதராஷ்டிரனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டிருந்த மன்னர்கள் அனைவரும், குரு பாட்டனின் {பீஷ்மரின்} சொற்களைக் கேட்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் தங்கள் மனங்களில் கிருஷ்ணனை வழிபட்டு, மதிப்புடன் கரங்களைக் கூப்பியபடி அவனை நோக்கித் திரும்பினர்.(63) நாரதரைத் தங்கள் தலைமையில் கொண்டிருந்த முனிவர்களும் பீஷ்மரின் சொற்களை ஏற்று, மெச்சி, மகிழ்ச்சியுடன் அவற்றை அங்கீகரித்தனர்.(64) பாண்டுவின் மகனும் (யுதிஷ்டிரனும்), அவனுடைய தம்பிகள் அனைவரும் இன்பமாகக் கேட்ட பீஷ்மரின் அற்புத உரையாடல்கள் இவையே.(65) சிறிது நேரம் கழித்து, தாம் செய்த வேள்விகளில் பிராமணர்களுக்கு அபரிமிதமான செல்வக் கொடைகளை அளித்த கங்கையின் மைந்தன் ஓய்வெடுத்து, புத்துணர்ச்சி அடைந்திருப்பதை மன்னன் யுதிஷ்டிரன் கண்டபோது, அந்தப் புத்திசாலி மன்னன் மீண்டும் அவரிடம் பின்வருவனவற்றைக் கேட்டான்”.(66)

ஸ்ரீ விஷ்ணுஸஹஸ்ரநாமம் – விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 149-விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்{ அந்தப் பெயர்களைச் சொல்வதாலோ, கேட்பதாலோ கிட்டும் பலன்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கடமைகள் அனைத்தையும், புனிதச் செயல்கள் அனைத்தையும், மனிதர்களின் பாவங்களைத் தூய்மையாக்கும் பொருட்களையும் முழுமையாகக் கேட்ட யுதிஷ்டிரன், சந்தனுவின் மகனிடம் {பீஷ்மரிடம்} மீண்டும் பின்வரும் சொற்களைச் சொன்னான்.(1)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“உலகில் ஒரே தேவன் என்று யாரைக் கூறலாம்? நமது ஆன்மப் புகலிடமான ஒரே பொருளாக யாரைக் கூறலாம்? எவனை வழிபடுவதன் மூலம், அல்லது எவனுடைய புகழைப் பாடுவதன் மூலம் மனிதர்கள் நன்மையை அடைவார்கள்?(2) உமது தீர்மானத்தின்படி அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறம் எது? எந்த மந்திரங்களை உரைப்பதன் மூலம் பிறவி மற்றும் வாழ்வின் கட்டுகளில் இருந்து ஓர் உயிரினத்தால் விடுபட முடியும்?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் தளர்வனைத்தையும் வீசியெறிந்துவிட்டு, அண்டத்தின் தலைவனும், எல்லையற்றவனும், அனைத்திலும் முதன்மையானவனுமான தேவதேவனின் (வாசுதேவனின்) ஆயிரம் பெயர்களைச் சொல்லி அவனுடைய புகழை உற்சாகமாகப் பாட வேண்டும்.(3) மாற்றமில்லாதனான அவனை மதிப்புடனும், பக்தியுடனும் எப்போதும் வழிபடுவதன் மூலமும், அவனைத் தியானிப்பதன் மூலமும், அவனது புகழைப் பாடி, அவனுக்குத் தலைவணங்குவதன் மூலமும், அவனுக்காக வேள்வி செய்வதன் மூலமும், தொடக்கமும், முடிவும், அழிவும் இல்லாதவனும், உலகங்கள் அனைத்தின் பரமத் தலைவனும், அண்டத்தைக் கட்டுப்படுத்தி ஆள்பவனுமான அந்த விஷ்ணுவைப் புகழ்வதன் மூலமும் ஒருவன் கவலைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்லலாம்.(6) உண்மையில், பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் அறிந்தவனாகவும், அனைவரின் புகழ் மற்றும் சாதனைகளைப் பெருக்குபவனாகவும், அனைத்து உலகங்களையும் ஆள்பவனாகவும், பேரற்புதம் நிறைந்தவனாகவும், அனைத்து உயிரினங்களின் தோற்றத்துக்கான அடிப்படைக் காரணமாகவும் அவனே இருக்கிறான்.(7) என் தீர்மானத்தின்படி, தாமரைக்கண்ணனான வாசுதேவனிடம் பக்தியுடன் அவனது புகழைப் பாடி எப்போதும் அவனை வழிபடுவதே ஒருவன் செய்யும் அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறமாகும்.(8)

உயர்ந்த சக்தி அவனே. உயர்ந்த தவம் அவனே. உயர்ந்த பிரம்மம் அவனே. உயர்ந்த புகலிடம் அவனே.(9) புனிதங்கள் அனைத்திலும் மிகப் புனிதமானவன் அவனே. மங்கலப் பொருட்கள் அனைத்திலும் புனிதமிக்கவன் அவனே. தேவர்கள் அனைவருக்கும் தேவன் அவனே, உயிரினங்கள் அனைத்திற்கும் மாற்றமில்லா நிலையான தந்தை அவனே.(10) தொடக்க யுகம் தொடங்கியபோது உயிரினங்கள் அனைத்தும் அவனிடம் இருந்தே உண்டாகின. யுகம் தீர்ந்ததும் அனைத்துப் பொருட்களும் அவனிலேயே மறைகின்றன[1].(11) ஓ! மன்னா, உலகங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அண்டத்தை ஆள்பவனுமான விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைக் கேட்பாயாக, அவை பாவங்களை அழிப்பதில் பெருந்திறன் கொண்டவையாகும்.(12) முனிவர்களால் பாடப்பட்ட உயரான்ம வாசுதேவனின் ரகசியமான மற்றும் நன்கறியப்பட்ட குணங்களில் இருந்து எடுக்கப்பட்ட அவனுடைய பெயர்கள் அனைத்தையும் அனைவருடைய நன்மைக்காவும் உனக்குச் சொல்லப் போகிறேன்[2][3].(13)

அவை, ஓம்! தன்னையும் தவிர அனைத்துப் பொருட்களிலும் நுழைந்திருப்பவன் {விஸ்வம்}, அனைத்துப் பொருட்களையும் மறைப்பவன் {விஷ்ணு}, வேள்வி ஆகுதிகள் அனைத்தும் ஊற்றப்படும் இடமாக இருப்பவன் {வஷட்காரன்}, கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் தலைவன் {பூதபவ்யபவத்ப்ரபு}, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்து அழிப்பவன் {பூதக்ருத், பூதப்ருத்},  அனைத்துப் பொருட்களையும் நிலைநிறுத்துபவன் {பாவன்},  அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக இருப்பவன் {பூதாத்மா},  அனைத்துப் பொருட்களையும் தோற்றுவித்தவன்{பூதபாவநன்}<1-9>;(14)

தூய ஆன்மா கொண்டவன் {பூதாத்மா}, உச்சமான உயர்ந்த ஆன்மா {பரமாத்மா}, விடுதலையடைந்த {முக்தியடைந்த} மனிதர்கள் அனைவரின் உயர்ந்த புகலிடமாக இருப்பவன் {முக்தாநாம்பரமாகதி}, மாற்றமற்றவன் {அவ்யயன்}, உறைக்குள் மறைந்து கிடப்பவன் {புருஷன்}, சான்றாளன் {ஸாக்ஷீ}, தான் வசிக்கும் உடல் உறையை அறிந்தவன் {க்ஷேத்ரஜ்ஞன்}, அழிவற்றவன் {அக்ஷரன்}<10-17>;(15)

யோக தியானத்தின் போது மனம் ஓயும் இடமாக இருப்பவன் {யோகன்}, யோகம் அறிந்தோர் அனைவருக்குமான வழிகாட்டி அல்லது தலைவன் {யோகவிதாம்நேதா}, பிரதானம் (அல்லது பிரகிருதி) மற்றும் புருஷன் ஆகிய இரண்டின் தலைவன் {ப்ரதாநபுருஷேஸ்வரன்}, சிங்கத்தலையுடன் கூடிய மனித வடிவினன் {நாரஸிம்மவபு}, அழகிய சிறப்புக்கூறுகளையும், செய்கருவிகளையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, அழகுமயிர் படைத்தவன்{கேசவன்}, புருஷர்களில் முதன்மையானவன் {புருஷோத்தமன்}<18-24>;(16)

அனைத்துப் பொருட்களின் உடல் வடிவமாக இருப்பவன் {ஸர்வன்}, அனைத்தையும் அழிப்பவன் {சர்வன்}, சத்வம், ரஜஸ் மற்றும் தமோ குணங்கள் மூன்றையும் கடந்திருப்பவன் {சிவன்}, அசைவற்றவன் {ஸ்தாணு}, அனைத்தின் தொடக்கமாக இருப்பவன் {பூதாதி}, அண்ட அழிவின்போது அனைத்தும் மூழ்கும் கொள்ளிடமாக இருப்பவன் {நிதிரவ்யயன்}, மாற்றமில்லாதவன் {ஸம்பவன்}, விரும்பியது போலப் பிறப்பவன் {பாவநன்}, உயிரினங்கள் அனைத்தின் செயல்களையும் (மகிழ்ச்சி அல்லது துன்பத்தின் வடிவில்) கனியச் செய்பவன் {பர்த்தா}, அனைத்துப் பொருட்களையும் தாங்கிப் பிடிப்பவன் {ப்ரபவன்}, அடிப்படை பூதங்கள் அனைத்தும் உண்டாகும் மூலமாக இருப்பவன், பலமிக்கவன் {ப்ரபு/பிரபு}, அனைத்தின் மீதும் கட்டற்ற தலைமையைக் கொண்டவன் {ஈஸ்வரன்}<25-37>;(17)

தானாகத் தோன்றியவன் {ஸ்வயம்பூ}, தன்னை வழிபடுபவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {சம்பு}, சூரிய வட்டிலுக்கு மத்தியில் (பொன்வடிவில் உள்ள) தலைமை மேதை {ஆதித்யன்}, தாமரைக்கண்ணன் {புஷ்கராக்ஷன்}, உரத்த குரல் கொண்டவன் {மஹஸ்வநன்}, தொடக்கமும் முடிவுமற்றவன் {அநாதிநிதநன்}, (அனந்தன் மற்றும் பிறரின் வடிவில்) அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவன் {தாதா}, செயல்கள் மற்றும் அவற்றின் கனிகள் அனைத்தையும் விதிப்பவன் {விதாதா}, பெரும்பாட்டனான பிரம்மனையும் விட மேன்மையானவன் {தாதுருத்தமன்}<38-46>;(18)

அளவற்றவன் {அப்ரமேயன்}, புலன்களின் தலைவன் (அல்லது சுருள் மயிர்க் கொண்டவன்) {ஹ்ருஷீகேசன்}, தொடக்கக் காலத் தாமரை உதித்த உந்தி கொண்டவன் {பத்மநாபன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {அமரப்ரபு}, அண்டத் தச்சன் {விஸ்வகர்மா}, மந்திரமாக இருப்பவன் {மநு}, அனைத்துப் பொருட்களையும் பலவீனப்படுத்துபவன், அல்லது மெலியச் செய்பவன் {த்வஷ்டா}, மிகப் பெரியவன் {ஸ்தவிஷ்டன்}, புராதனமானவன் {ஸ்தவிரன்}, தாங்கி நிலைத்திருப்பவன் {த்ருவன்/துருவன்} <47-56>;(19)

(புலன்களாலோ, மனத்தாலோ) பற்றப்பட முடியாதவன் {அக்ராஹ்யன்}, நித்தியமானவன் {சாஸ்வதன்}, கிருஷ்ணன், சிவந்த கண்களைக் கொண்டவன் {லோஹிதாக்ஷன்}, அண்ட அழிவின் போது அனைத்து உயிரினங்களையும் கொல்பவன் {ப்ரதர்த்தநன்}, அறிவு, வலிமை மற்றும் பிறவகைக் குணங்களில் பெரியவன் {பரப்பூதன்}, ஒவ்வொரு உயிரினத்தின் (மேல், நடு மற்றும் கீழ் என) மூன்று பகுதிகளில் வசிப்பவன் {த்ரிககுப்தாமா}, தூய்மைப்படுத்துபவன் {பவித்ரம்}, மங்கலம் நிறைந்த உயர்ந்தவன் {மங்களம்பரம்}<57-64>;(20)

அனைத்து உயிரினங்களையும் அனைத்துச் செயல்களையும் செய்யத் தூண்டுபவன் {ஈசாநன்}, செயல்படுவதற்கான உயிர்மூச்சை உண்டாக்குபவன் {{ப்ராணதப்ராணன்}, அனைத்து உயிரினங்களையும் வாழச் செய்பவன் {ஜ்யேஷ்டன்}, மூத்தவன் {ஸ்ரேஷ்டன்}, உயிரினங்களின் தலைவர்களாகக் கருதப்படுவோர் அனைவரிலும் முதன்மையானவன் {ப்ரஜாபதி}, பொன்னையே தன் வயிறாகக் கொண்டவன் {ஹிரண்யகர்ப்பன்}, பூமியை வயிறாக் கொண்டவன் {பூகர்ப்பன்}, ஸ்ரீ அல்லது லட்சுமியின் தலைவன் {மாதவன்}, மதுவைக் கொன்றவன் {மதுஸூதநன்}<65-73>;(21)

எல்லாம் வல்லவன்{ஈஸ்வரன்}, பேராற்றல் கொண்டவன் {விக்ரமீ}, வில் தரித்தவன் {தந்வீ}, ஆய்வுகள் அனைத்தின் உள்ளடக்கத்தையும் மனத்தில் கொள்ளவல்லவன் {மேதாவீ}, கருடனைச் செலுத்திக் கொண்டு அண்டத்தில் திரிபவன் {விக்ரமன்}, தனக்கு அளிக்கப்படும் காணிக்கைகளுக்குத் தகுந்தவனாகவும் அவற்றை முறையாக அனுபவிக்கும் சக்தி கொண்டவனாகவும் இருப்பவன் {க்ரமன்}, ஒப்பற்றவன் {அநுத்தமன்}, குழப்பமடையாதவன் {துராதர்ஷன்}, செய்யப்படும் அனைத்துச் செயல்களையும் அறிந்தவன் {க்ருதஜ்ஞன்}, அனைத்துச் செயல்களுடன் அடையாளங்காணப் படுபவன் {க்ருதி}, தன் உண்மையான சுயத்தையே சார்ந்திருப்பவன் {ஆத்மவாந்}<74-84>;(22)

தேவர்கள் அனைவரின் தலைவன் {ஸுரேசன்}, அனைத்தின் புகலிடமாக இருப்பவன் {சரணன்}, உயர்ந்த இன்பத்தின் உடல் வடிவம் {சர்ம}, அண்டத்தின் வித்தாக இருப்பவன் {விஸ்வரேதஸ்}, அனைத்துப் பொருட்களின் பிறப்பிடமாக இருப்பவன் {ப்ரஜாபவன்}, (அறியாமை உறக்கத்தில் மூழ்கியிருக்கும் ஜீவனை விழிப்படையச் செய்பவனாக இருக்கும் விளைவால்) பகலாக இருப்பவன் {அஹஸ்}, ஆண்டாக இருப்பவன் {ஸவம்த்ஸரன்}, (பிடிக்கப்பட முடியாதவனாக இருப்பதால்) பாம்பாக இருப்பவன் {வியாளன்}, திட நம்பிக்கையின் உடல்வடிவமாக இருப்பவன் {ப்ரத்யயன்}, அனைத்தையும் காண்பவன் {ஸர்வதர்சநன்}<85-94>;(23)

பிறப்பற்றவன் {அஜன்}, அனைத்து உயிரினங்களின் தலைவன் {ஸர்வேஸ்வரன்}, வெற்றி அடைந்தவன் {ஸித்தன்}, வெற்றி {ஸித்தி}, (அனைத்துப் பொருட்களுக்கும் காரணமாக இருப்பதன் விளைவால்) அனைத்துப் பொருட்களின் தொடக்கமாக இருப்பவன் {ஸர்வாதி}, சிதைவைக் கடந்தவன் {அச்யுதன்}, மூழ்கிய பூமியை உயர்த்திய பெரும்பன்றி மற்றும் காளைமாட்டின் வடிவில் அறமாக இருப்பவன் {வ்ருஷாகபி}, அளவற்ற ஆன்மா கொண்டவன் {அமேயாத்மா}, அனைத்து வகைக் கலவிகளில் இருந்தும் தனித்து நிற்பவன்{ஸர்வயோகவிநிஸ்ருதன்}<95-103>;(24)

வசுக்கள் என்றழைக்கப்படும் தேவர்களுக்கு மத்தியில் பாவகனாக இருப்பவன் (அல்லது தன்னை வழிபடுபவர்களிடம் வசிப்பவன்) {வஸு}, கோபம், வெறுப்பு, செருக்கு மற்றும் பிற தீய உணர்வுகளில் இருந்து விடுபட்டிருக்கும் தயாள ஆன்மா கொண்டவன் {வஸுமநஸ்}, வாய்மையாக இருப்பவன் {ஸத்யன்}, தன்னை வழிபடுபவர்களால் அளக்கப்படுபவன் {ஸமாத்மா}, தன் நடுநிலையின் விளைவால் ஒரே தன்மையிலான ஆன்மாவைக் கொண்டவன் {ஸம்மிதன்}, மாற்றம் அல்லது சீர்திருத்தங்கள் அனைத்தையும் கடந்து எப்போதும் சமமாக இருப்பவன் {ஸமன்}, தன்னை வழிபடுபவர்களின் விருப்பங்களை அருள ஒருபோதும் மறுக்காதவன் {அமோகன்}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் {புண்டரீகாக்ஷன்}, அறத்தின் மூலம் எப்போதும் தனிச்சிறப்புடன் கூடிய செயல்களைச் செய்பவன் {விருஷகர்மா}, அறத்தின் வடிவமாக இருப்பவன் {வ்ருஷாக்ருதி}<104-113>;(25)

அனைத்து உயிரினங்களையும் (அல்லது அவற்றின் துன்பங்களை) அழிப்பவன் {ருத்ரன்}, பல தலைகளைக் கொண்டவன் {பஹுசிரஸ்}, அண்டத்தைத் தாங்குபவன் {பப்ரு}, அண்டத்தின் பிறப்பிடமாக இருப்பவன் {விஸ்வயோநி}, தூய அல்லது களங்கமற்ற புகழைக் கொண்டவன் {சுசிஸ்ரவஸ்}, அழிவற்றவன் {அம்ருதன்}, நித்யமாக நிலைத்திருப்பவன் {சாஸ்வதஸ்தாணு}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் (அல்லது சிறந்த செயல்களைச் செய்பவர்களுக்கு எழுச்சி தருபவன்) {வராரோஹன்}, அண்டத்தில் உண்டாகி வெளிவரும் பிருக்ருதியைக் கலங்கடிக்க இயன்ற குறியீடுகளைக் கொண்ட தவங்களின் அறிவைக் கொண்டவன் {மஹாதபஸ்}<114-122>;(26)

எங்கும் செல்பவன் (அனைத்துப் பொருட்களின் காரணியாக அவற்றில் நீக்கமற நிறைந்திருப்பவன்) {ஸர்வகன்}, அனைத்தும் அறிந்தவன் {ஸர்வவித்}, மாற்றமற்ற ஒளியாகச் சுடர்விடுபவன் {பாநு}, (பக்தர்களின் வடிவில்) எங்கும் தன் துருப்பினரைக் கொண்டவன் (அல்லது எவனைக் கண்டால் தானவத் துருப்புகள் அனைத்துத் திசைகளிலும் சிதறுமோ அவன்) {விஷ்வக்ஸேநன்}, அனைவராலும் விரும்பப்படுபவன் (அல்லது வேண்டப்படுபவன்) (அல்லது தன் பகைவர்கள் அனைவரையும் கலங்கடிப்பவன்) {ஜநார்த்தநன்}, வேதமாக இருப்பவன் {வேதன்}, வேதங்களை அறிந்தவன் {வேதவித்}, வேதங்களின் அங்கங்கள் (அல்லது கிளைகள்) அனைத்தையும் அறிந்தவன் {அவ்யங்கன்}, வேதங்களின் அங்கங்களை (துணை அறிவியல்கள் அனைத்தையும்) பிரதிபலிப்பவன் {வேதாங்கன்}, வேத விளக்கங்களைத் தீர்மானிப்பவன் {வேதவித்}, ஞானத்தில் தனக்கு மேம்பட்ட எவனும் இல்லாதவன் {கவி}<123-133>;(27)

உலகங்கள் அனைத்திலும் ஆளுமை கொண்டவன் {லோகாத்யக்ஷன்}, தேவர்களிடம் ஆளுமை கொண்டவன் {ஸுராத்யக்ஷன்}, (ஒன்றையோ, மற்றொன்றையோ நாடுபவர்களுக்கான கனிகளைக் கொடுப்பதற்கு) அறம் மற்றும் மறம் ஆகிய இரண்டையும் கண்காணிப்பவன் {தர்மாத்யக்ஷன்}, விளைவாகவும் {காரியமாகவும்}, காரணமாகவும் இருப்பவன் (அல்லது பிரகிருதியைக் கடந்திருக்கும் விளைவால் முன்நிகழ்வுகளில் செய்யப்பட்ட எந்தச் செயல்களாலும் தன் வாழ்வு தீர்மானிக்கப்படாதவன்) {க்ருதாக்ருதன்}, (அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன், வாசுதேவன் என்ற நான்கு வடிவங்களைக் கொண்டதன் விளைவால்) நான்கு ஆன்மாக்களைக் கொண்டவன் {சதுராத்மா}, (மேற்கண்ட) நான்கு வடிவங்களில் அறியப்படுபவன் {சதுர்வ்யூஹன்}, (அசுரத் தலைவன் ஹிரண்யகசிபுவைக் கொல்வதற்காகச் சிங்கத் தலையுடன் கூடிய மனித வடிவத்தை அவன் ஏற்ற போது தோன்றிய) நான்கு கொம்புகளைக் கொண்டவன் {சதுர்த்தம்ஷ்ட்ரன்}, (சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றைப் பிடித்துக் கொள்வதற்கான) நான்கு கரங்களைக் கொண்டவன் {சதுர்ப்புஜன்}<134-141>;(28)

பிரகாசத்தால் சுடர்விடுபவன் {ப்ராஜிஷ்ணு}, உணவுக்கொடையாளி {போஜநன்}, நல்லோரைப் பேணிவளர்ப்பவன் {போக்தா}, தீயோரைப் பொறுத்துக் கொள்ளாதவன் (அல்லது தன் பக்தர்கள் அவ்வப்போது செய்யும் மீறல்களைப் பொறுத்துக் கொள்பவன்) {ஸஹிஷ்ணு}, அண்டம் உயிர் பெறும் முன்பே இருப்பவன் {ஜகதாதிஜன்},  எப்போதும் வெற்றி பெறுபவன்{அனகோவிஜயன்}, தேவர்களையே வெற்றி கொள்பவன் {ஜேதா}, அண்டத்தின் பொருட்காரணமாக இருப்பவன் {விஸ்வயோநி}, பொருட் காரணங்களில் மீண்டும் மீண்டும் {உடல்களை எடுத்து அவற்றில்} வசிப்பவன் {புநர்வஸு}<142-150>;(29)

இந்திரனின் தம்பி (அல்லது சாதனைகளிலும், குணங்களிலும் இந்திரனைக் கடந்தவன்) {உபேந்த்ரன்}, (மூவுலகங்களின் ஆட்சி உரிமையில் இருந்து அசுர மன்னன் பலியை வஞ்சித்து, அதையே இந்திரனுக்குக் கொடுப்பதற்காகக் கசியபரின் மனைவியான அதிதியிடம்) குள்ளனாகப் பிறந்தவன் {வாமநன்}, நெடியவன் (பலியின் வேள்வியில் மூன்று அடிகளால் சொர்க்கம் பூமி மற்றும் பாதாள லோகங்களை மறைப்பதற்குப் பெரும் அண்ட வடிவம்) {ப்ராம்சு}, வீணாகும் {பயனற்ற} செயலேதும் செய்யாதவன் {அமோகன்}, (தன்னை வழிபடுபவர்கள், தன்னைக் கேட்பவர்கள், தன்னை நினைப்பவர்கள் ஆகியோரைத்) தூய்மை செய்பவன் {சுசி}, புகழ்வாய்ந்த சக்தியும் பலமும் கொண்டவன் {ஊர்ஜிதன்}, குணங்கள் அனைத்திலும் இந்திரனைக் கடந்தவன் {அதீந்த்ரன்}, தன்னை வழிபடுபவர்க்ள அனைவரையும் ஏற்பவன் {ஸங்க்ரஹன்}, படைப்பின் காரணனாக இருப்பதன் விளைவால் அந்தப் படைப்பாகவே இருப்பவன் {ஸர்க்கன்}, பிறவி, வளர்ச்சி, மரணம் ஆகியவற்றுக்கு ஆட்படாமல் ஒரே வடிவில் எப்போதும் தன்னைத் தாங்கிக் கொள்பவன் {த்ருதாத்மா}, அண்டத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அதனதன் செயல்பாடுகளில் நிறுவுபவன் {நியமன்}, அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் கட்டுப்படுத்துபவன் {யமன்}<151-162>;(30)

தங்கள் உயர்ந்த நன்மையை அடைய விரும்பவர்களால் அறியத்தகுந்தவன் {வேத்யன்}, தன்வந்திரியின் வடிவில் தெய்வீக மருத்துவனாக இருப்பவன் (அல்லது, உலகில் ஒருவனைக் கட்டிப்போடும் பந்தங்களெனும் முன்மையான நோயைக் குணப்படுத்துபவன்) {வைத்யன்}, எப்போதும் யோகத்தில் ஈடுபடுபவன் {ஸதாயோகீ}, அறத்தை நிறுவ பேரசுரர்களைக் கொல்பவன் {வீரஹா}, தேவாசுரர்களால் கடையப்பட்டபோது பெருங்கடலில் இருந்து உதித்த லக்ஷ்மியின் தலைவன் (அல்லது, செழிப்பு மற்றும் கல்விக்குரிய தேவிகள் இருவரையும் பேணி வளர்ப்பவன்) {மாதவன்}, (தன்னைச் சுவைப்பதில் வெல்பவர்களுக்கு அவன் கொடுக்கும் இன்பத்தின் விளைவால்) தேனாக இருப்பவன் {மது}, புலன்களைக் கடந்தவன் (அல்லது, தன்னை நோக்கித் திரும்பாதவர்களுக்குத் தெரியாதவன்) {அதீந்த்ரியன்}, (மஹாதேவனையும், தேவர்களையும் பல நிகழ்வுகளில் வஞ்சித்ததன் விளைவால்) பெரும் மாய சக்திகளைக் கொண்டவன் {மஹாமாயன்}, (வலிமைமிக்கச் சாதனைகளைச் செய்வதில்) பெரும் சக்தியை வெளிப்படுத்துபவன் {மஹோத்ஸாஹன்}, பலத்தில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாபலன்}<163-172>;(31)

புத்தியில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாபுத்தி}, வலிமையில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாவீர்யன்}, திறனில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாசக்தி}, தன் உடலில் இருந்து வெளிப்படும் பிரகாசத்தின் மூலம் அண்டத்தைக் காண்பவன் {மஹாத்யுதி}, கண்களால் (அல்லது வேறு எந்தப் புலனாலோ, அறிவுப்புலனாலோ) உறுதிப்படுத்த இயலாத உடலைக் கொண்டவன்{அநிர்த்தேஸ்யவபு}, அழகுகள் அனைத்தையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, தேவர்களாலோ, மனிதர்களாலோ புரிந்து கொள்ள முடியாத ஆத்மாவைக் கொண்டவன் {அமேயாத்மா}, பெருங்கடலில் மறைந்திருக்கும் மதிப்புமிக்கப் பொருட்களை அடைவதற்காகத் தேவர்களும், அசுரர்களும் பெருங்கடலைக் கடைவதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தபோது, பெரும் ஆமையின் வடிவில் பெரும் மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கியவன் (அல்லது, அனைத்தையும் மூழ்கடித்துவிடும் நோக்கத்துடன் பல நாட்கள் இடையறாமல் மழையைப் பொழிந்த இந்திரனின் கோபத்தில் இருந்து பிருந்தாவனம் என்ற இனிய இடத்தில் வசித்தோரைப் பாதுகாக்க கோவர்த்தன மலையை உயரத் தூக்கியவன்) {மஹாத்ரித்ருத்}<173-180>;(32)

அனைத்து வகைத் தடைகளையும் துளைக்கும் வகையில் பெரும் தொலைவுக்குத் தன் கணைகளை ஏவவல்லவன் {மஹேஷ்வாஸன்}, மூழ்கியிருந்த பூமியை வலிமைமிக்கப் பன்றியின் வடிவத்தை ஏற்று உயர்த்தியவன் {மஹீபர்த்தா}, செழிப்பின் தேவியைத் தன் மார்பில் வசிக்கச் செய்தவன் (ரதியின் கணவனான காமனோடு அடையாளங்காணத் தக்கவன்) {ஸ்ரீநிவாஸன்}, அறவோரின் புகலிடமாக இருப்பவன் {ஸதாம்கதி}, முழு அர்ப்பணிப்பில்லாமல் வெல்லப்பட முடியாதவன் (அல்லது, சக்திகளைப் பயன்படுத்தும் எவனையும் தடுக்க வல்லவன்) {அநிருத்தன்}, தேவர்களை மகிழ்ச்சியடையச் செய்பவன் (அல்லது, நிறைவான இன்பத்தின் உடல்வடிவமாக இருப்பவன்) {ஸுராநந்தன்}, மூழ்கிய பூமியை மீட்டவன் (அல்லது, தன்னை நோக்கி பக்தர்களால் பாடப்படும் மந்திரங்களைப் புரிந்து கொள்பவன்) {கோவிந்தன்}, நாநயமிக்க மனிதர்கள் அனைவரையும்விடத் திறம்பெற்றவன் (தன்னை அறிந்தவர்கள் அனைவரின் துன்பங்களையும் போக்குபவன்) {கோவிதாம்பதி}<181-188>;(33)

சுடர்மிக்கப் பிரகாசம் நிறைந்தவன் {மரீசி}, தன்னைத் துதிப்போரின் துன்பங்களை அடக்குபவன் (அல்லது, தங்கள் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்ட மனிதர்கள் அனைவரையும் தண்டிப்பதற்காக அண்டத்தை அழிக்கும் யமனின் வடிவத்தை ஏற்பவன்) {தமநன்}, பெரும்பாட்டனான பிரம்மனுக்கு வேதங்களைச்சொல்வதற்காக அன்னப்பறவையின் வடிவை ஏற்றவன் (அல்லது, அனைவரின் உடல்களுக்குள்ளும் நுழைபவன்) {ஹம்ஸன்}, இறகு படைத்த ஆகாயவாசிகளின் இளரவசனான கருடனையே தன் வாகனமாகக் கொண்டவன் {ஸுபர்ணன்}, பரந்த பூமியைத் தலையில் தாங்கும் சேஷன் அல்லது அனந்தனுடன் அடையாளங்காணப் படுவதன் விளைவால் பாம்புகளில் முதன்மையானவனாக இருப்பவன் (அல்லது, அண்ட அழிவுக்குப் பிறகு பரந்த நீர்ப்பரப்பில் உறங்குவதற்காகப் பாம்புகளின் இளவரசனுடைய தலையைப் படுக்கையாகக் கொள்பவன்) {புஜகோத்தமன்}, தங்கம் போன்ற அழகிய உந்தியைக் கொண்டவன் {ஹிரண்யநாபன்}, இமயமலைச் சாரலில் உள்ள பதரியில் நாராயணனின் வடிவில் கடுந்தவங்களைப் பயின்றவன் {ஸுதபஸ்}, தாமரைக்கு ஒப்பான உந்தியைக் கொண்டவன் (அல்லது பெரும்பாட்டனான பிரம்மன் பிறந்த ஆதி தாமரையைத் தன் உந்தியில் கொண்டவன்) {பத்மநாபன்}, அனைத்து உயிரினங்களின் தலைவனாக இருப்பவன் {ப்ரஜாபதி}<189-197>;(34)

மரணத்தைக் கடந்தவன் (அல்லது, தன்னிடம் பக்தி கொண்டோரின் மரணத்தை விலக்குபவன்) {அம்ருத்யு}, தன்னை வழிபடுபவர்களிடம் எப்போதும் கருணைக் கண்களைச் செலுத்துபவன் (அல்லது, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பார்ப்பவன்) {ஸர்வத்ருக்}, அனைத்துப் பொருட்களையும் அழிப்பவன் (அல்லது, பக்தியுடன் ஒருமனத்தோடு தன்னை வழிபடுவோர் அனைவரையும் அமுதத்தால் நனைப்பவன்) {ஸிம்மன்}, விதிப்பவர்கள் அனைவருக்கும் விதியாக இருப்பவன் (அல்லது, மனிதர்கள் செய்யும் செயல்களால் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பவன்) {ஸந்தாதா}, செயல்கள் அனைத்தின் கனிகளைத் தானே இன்புறவும், பொறுக்கவும் செய்பவன் (அல்லது, தன் தந்தையின் ஆணையின் பேரில் நாடு கடந்து சென்று, இலங்கையில் உள்ள தன் தீவுக்கு ராட்சசன் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை மீட்டுத் தருவதாக உறுதியளித்திருந்தவனும், குரங்குகளின் தலைவனுமான சுக்ரீவனுக்கு உதவி செய்து அவனது அண்ணனின் பிடியில் இருந்து அவனது நாட்டை மீட்டுத் தருமாறு ஒப்பந்தமிட்டவனும், தசரதனின் மகனுமான ராமன்) {ஸந்திமாந்}, எப்போதும் ஒரே வடிவில் இருப்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களிடம் பேரன்புடன் இருப்பவன்) {ஸ்திரன்}, எப்போதும் இயங்குபவன் (அல்லது, அனைத்து உயிரினங்களின் இதயத்துக்குள்ளும் உதிக்கும் காமனின் வடிவை ஏற்பவன்) {அஜன்}, தானவர்களாலோ, அசுரர்களாலோ தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் (ராவணனைக் கொன்று, தன் மனைவியான சீதையை மீட்டவன், அல்லது சிருங்கவேரபுரம் என்ற பெயரில் அறியப்படும் நாட்டில் வசிக்கும் சண்டாளர்களின் தலைவன் குஹகனிடம் நட்பைக் கொண்ட ராமனின் வடிவத்தைக் குறிப்பிடும் வகையில் தாழ்ந்த வகுப்பனிடமும், சண்டாளர்களிடமும் கருணை காட்டுபவன்) {துர்மர்ஷணன்}, தீயோரைத் தண்டிபவன் (அல்லது, (அல்லது, ஸ்ருதி மற்றும் ஸ்மிருதிகளின் படி அனைத்து மனிதர்களின் ஒழுங்கையும் முறைப்படுத்துபவன்) {சாஸ்தா}, உண்மை ஞானத்தையே தன் அடையாளமாகக் கொண்ட ஆன்மா (அல்லது கருணையும், பிற இனிய குணங்களையும் கொண்ட ராமனின் வடிவை ஏற்றுத் தேவர்களின் பகைவனான ராவணனை அழித்தவன்) {விஸ்ருதாத்மா}, தேவர்களின் பகைவர்களை அழிப்பவன் (அல்லது, தகாத மனிதர்களுக்குக் கொடையளிப்பவர்களைத் தவிர்ப்பவனோ, கொடை கொடுப்பதைத் தடுப்பவனைக் கொல்பவனோ) {ஸுராரிஹா}<198-208);(35)

அறிவியல்கள் அனைத்தையும் போதிப்பவனும், அனைத்துக்கும் தந்தையுமானவன் {குரு}, பெரும்பாட்டனான பிரம்மனுக்குப் போதிப்பவன் {குருதமன்}, அனைத்து உயிரினங்களுக்கும் வசிப்பிடமாகவோ, ஓய்விடமாகவோ இருப்பவன் {தாம}, பொய்மை எனும் களங்கத்திலிருந்து விடுபட்ட நல்லவர்களுக்கு நன்மை செய்பவன் {ஸத்யன்}, கலங்கடிக்கப்பட முடியா ஆற்றலைக் கொண்டவன் {ஸத்யபராக்ரமன்}, சாத்திரங்களினால் அங்கீகரிக்கப்படாத, அல்லது அனுமதிக்கப்படாத செயல்களில் தன் கண்களை ஒருபோதும் செலுத்தாதவன் {நிமிஷன்}, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்பட்ட, அல்லது அனுமதிக்கப்பட்ட செயல்களில் தன் கண்களைச் செலுத்துபவன்{அநிமிஷன்},  வைஜயந்தி என்ற பெயரில் அழைக்கப்படும் மங்காத வெற்றி மாலையைச் சூடுபவன் {ஸ்ரக்வீ}, வாக்கின் தலைவன் {வாசஸ்பதி}, தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவருக்கும், இழிந்தவர்களிலும் இழிந்தவர்களுக்கும் தன் அருளை வழங்கி மீட்ட பெரும் தயாளனுமான ஒருவன் {உதாரதீ}<209-218>;(36)

முக்தியடைய விரும்பும் மனிதர்களை முதன்மையான நிலையான முக்தி நிலைக்கு வழிநடத்துபவன் (அல்லது, வலிமைமிக்கப் பெரிய மீனின் வடிவை ஏற்று, அண்ட அழிவின் போது, பூமியை மறைத்த நீர் வெளியில் நீந்தி, தன் கொம்புகளில் கட்டப்பட்ட படகில் மநுவையும், பிறரையும் பாதுகாப்பாக வழிநடத்தியவன்) {அக்ரணீ}, அனைத்து உயிரினங்களின் தலைவன் (அல்லது, அண்ட அழிவின் போது அனைத்தையும் மூழ்கடிக்கும் நீர்வெளியில் விளையாடுபவன்) {க்ராமணீ}, வேதங்களையே வார்த்தைகளாகக் கொண்டவன் {ஸ்ரீமாந்}, அண்ட அழிவின் போது நீருக்குள் மூழ்கிய வேதங்களை மீட்டவன் {ந்யாயன்}, அண்டத்தின் இயக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {நேதா}, உயிரினங்கள் அனைத்தையும் செயல்படச் செய்ய, அல்லது முயற்சிக்கச் செய்யக் காற்றின் {வாயுவின்} வடிவை ஏற்றவன் (அல்லது, எப்போதும் அழகிய அசைவுகளைக் கொண்டவன், அல்லது தான் உண்டாக்கிய உயிரினங்கள் தன்னைத் துதிக்க வேண்டும் என விரும்புபவன்) {ஸமீரணன்}, ஆயிரம் தலைகளைக் கொண்டவன் {ஸஹஸ்ரமூர்த்தா}, அண்டத்தின் ஆத்மாவாக இருந்து அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {விஸ்வாத்மா}, ஆயிரம் கண்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராக்ஷன்}<219-226>;(37)

ஆயிரம் கால்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரபாத்}, அண்டச் சக்கரத்தைத் தன் விருப்பப்படி சுழலச் செய்பவன் {ஆவர்த்தநன்}, ஆசையில் இருந்து விடுபட்டவனும், ஜீவனையும், ஜீவன் சார்ந்தவற்றையும் நிறுவும் சூழ்நிலைகளைக் கடந்தவனுமான ஒருவன் {நிவ்ருத்தாத்மா}, உலகப் பந்தம் கொண்ட மனிதர்கள் அனைவரின் பார்வையில் இருந்து மறைந்திருப்பவன் (அல்லது அறியாமை எனும் கட்டைக் கொண்டு மனிதர்கள் அனைவரின் கண்களையும் மறைத்தவன்) {ஸம்வ்ருதன்}, தன்னிடம் இருந்து விலகியவர்களக் கலங்கடிப்பவன் {ஸம்ப்ரமர்த்தநன்}, சூரியனோடு அடையாளங்காணப்படுபவனாக இருப்பதன் விளைவால் நாளைத் தொடங்கி வைப்பவனும், அனைத்தையும் அழிக்கும் காலனையே அழிப்பவனுமாக இருப்பவன் {அஹஸ்ஸம்வர்த்தகன்},, தொடக்கமில்லாதவன் (அல்லது நிலையான வசிப்பிடம் இல்லாதவன்) {வஹ்நி}, புனித நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகளைக் குறிப்பிட்டோருக்கு அளிப்பவன் (அல்லது, தன்னுடைய உடலின் சிறு பகுதியில் மட்டுமே வைத்து அண்டத்தைத் தாங்குபவன்) {அநிலன்}, (சேஷனின் வடிவிலோ, பூமியைக் காத்த பெரும் பன்றியின் வடிவத்திலோ, பூமியை ஆதரித்து நுட்பமாக ஊடுருபவனாகவோ)ஆகாயத்தில் பூமியைத் தாங்கிப் பிடிப்பவன் {தரணீதரன்}<227-235>;(38)

சிசுபாலனைப் போலப் பகைவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துப் பேரருள் புரிபவன் {ஸுப்ரஸாதன்}, ரஜஸ் (ஆசை) மற்றும் தமோ (இருள்) குணங்களிலிருந்து விடுபட்டு களங்கமற்ற சத்வ குணத்துடன் தூய நிலையில் இருப்பவன் (அல்லது, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்தவன்) {ப்ரஸந்நாத்மா}, அண்டத்தை ஆதரிப்பவன் {விஸ்வஸ்ருக்}, அண்டத்திற்கு உணவளிப்பவன் (அல்லது அஃதை அனுபவிப்பவன்) {விஸ்வபுக்விபு}, எல்லையில்லா பலத்தை வெளிப்படுத்துபவன் {ஸத்கர்த்தா}, தேவர்கள், பித்ருக்கள் மற்றும் தன்ன வழிபடுபவர்களைக் கௌரவிப்பவன் {ஸத்க்ருதன்}, பிறரால் கௌரவிக்கப்பட்ட, அல்லது துதிக்கப்பட்டவர்களால் கௌரவிக்கப்படவோ, துதிக்கப்படவோ நேர்பவன் (நீடித்த சகிப்புடன் கூடிய அழகிய செயல்களைக் கொண்டவன்) {ஸாது}, பிறரின் காரியங்களை நிறைவேற்றுபவன் (அல்லது பிறருக்கு நன்மை செய்பவன்) {ஜஹ்நு}, அண்ட அழிவின் போது தனக்குள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்பவன் (அல்லது, தேவர்களுக்கோ, தன்னை வழிபடுபவர்களுக்கோ எதிராக இருப்பவர்களை அழிப்பவன்) {நாராயணன்}, நீரையே தன் இல்லமாகக் கொண்டவன் (அல்லது, அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே புகலிடமாக இருப்பவன், அல்லது அனைத்து உயிரினங்களின் அறியாமையை அழிப்பவன்) {நரன்}<236-246>;(39)

வேறுபாடுகளைக் களைந்தவன் {அஸங்க்யேயன்}, அளவற்ற பொருட்களின் உள்ளும் புறமும் நிறைந்திருப்பவன் {அப்ரமேயாத்மா},  அனைவருக்கும் மேலான புகழைப் பெற்றவன், அறவோரைப் பேணி வளர்ப்பவன் {சிஷ்டக்ருத்}, உலகங்கள் அனைத்தையும் தூய்மையாக்குபவன் {சுசி}, அனைத்து உயிரினங்களின் விருப்பங்களையும் கனியும் நிலையால் மகுடம் சூட்டச் செய்பவன் {ஸித்தார்த்தன்}, தன் விருப்பங்கள் எப்போதும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தஸங்கல்பன்}, அனைவருக்கும் வெற்றியை அளிப்பவன் {ஸித்திதன்}, வேண்டுவோருக்கு வெற்றியை அளிப்பவன் {ஸித்திஸாதநன்}<247-256>;(40)

புனிதநாட்கள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவன் (அல்லது, தன் சிறந்த குணங்களால் இந்திரனையே மறைப்பவன்) {வ்ருஷாஹீ}, விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் தன்னை வழிபடுபவர்களுக்குப் பொழிபவன் {வ்ருஷபன்}, அண்டம் முழுவதும் நடப்பவன் {விஷ்ணு}, (உயர்ந்த இடத்திற்கு ஏற விரும்புகிறவர்களுக்கு) அறத்தால் அமைந்த சிறந்த படிக்கட்டுகளை அளிப்பவன் {வ்ருஷபர்வா}, வயிற்றில் அறத்தைக் கொண்டவன் (அல்லது, கருவரையில் பிள்ளையைப் பாதுகாக்கம் தாயைப் போல இந்திரனைப் பாதுகாப்பவன்) {வ்ருஷோதரன்}, (தன்னை வழிபடுபவர்களைப்) பெருக்குபவன் {வர்த்தநன்}, பெரும் அண்டமாகப் பரவத் தன்னைப் பரப்பிக் கொள்பவன் {வர்த்தமாநன்}, அனைத்திலிருந்தும் (அவற்றில் ஊடுருவாமல்) தனித்து இருப்பவன் {விவிக்தன்}, ஸ்ருதிகளெனும் பெருங்கடலின் கொள்ளிடமாக இருப்பவன் {ஸ்ருதிஸாகரன்}<257-264>;(41)

(அண்டத்தையே தாங்க வல்ல) சிறந்த கரங்களைக் கொண்டவன் {ஸுபுஜன்}, எந்த உயிரினத்தாலும் சுமக்கப்பட முடியாதவன் {துர்த்தரன்}, பிரம்மன் என்றழைக்கப்படும் ஒலிகள் பாய்ந்த இடமாக இருப்பவன் (அல்லது வேதமாக இருப்பவன்) {வாக்மீ}, அண்டத்தலைவர்கள் அனைவரின் தலைவன் {மஹேந்த்ரன்}, செல்வத்தைக் கொடுப்பவன் {வஸுதன்}, தன் பலத்தில் தானே வசிப்பவன் {வஸு}, பல்வேறு வடிவங்களைக் கொண்டவன் {நைகரூபன்}, பெரும் வடிவம் படைத்தவன் {ப்ருஹத்ரூபன்}, விலங்குகள் அனைத்திலும் வேள்வியின் வடிவில் வசிப்பவன் {சிபிவிஷ்டன்}, அனைத்துப் பொருளும் வெளிப்படும் காரணன் {ப்ரகாசநன்}<265-274>;(42)

பெரும் வலிமை, சக்தி மற்றும் காந்தியுடன் கூடியவன் {ஓஜஸ்தேஜோத்யுதிதரன்}, தன்னை வழிபடுபவர்களுக்குக் காணத்தக்க வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவன் {ப்ரகாசாத்மா}, எரியும் சக்தியால் அறமற்றவர்களை எரிப்பவன் {ப்ரதாபநன்}, (வளம் முதலிய) ஆறு வகைக் குணங்களின் வளம் கொண்டவன் {ருத்தன்}, பெரும்பாட்டனான பிரம்மனுக்கு வேதங்களைச் சொன்னவன் {ஸ்பஷ்டாக்ஷரன்}, சாம, ரிக் மற்றும் யஜூஸ் (வேதங்களின்) வடிவில் இருப்பவன் {மந்த்ரன்}, உலகின் உயிரினங்கள் அனைத்தையும் குளுமைப்படுத்தும் சந்திரனின் கதிர்களைப் போல உலகத் துன்பங்களில் எரிந்து கொண்டிருக்கும் தன் வழிபாட்டாளர்களுக்கு ஆறுதலளிப்பவன் {சந்த்ராம்சு}, சூரியனைப்போன்ற சுடர்மிக்கப் பிரகாசத்துடன் கூடியவன் {பாஸ்கரத்யுதி}<275-282>;(43)

எவன் மனத்திலிருந்து சந்திரன் உதித்தானோ அவன் {அம்ருதாம்சூத்பவன்}, தன்னொளியில் தானே சுடர்விடுபவன் {பாநு}, முயலால் குறிப்பிடப்படும் ஒளிக்கோளைப் போல அனைத்து உயிரினங்களுக்கும் உணவு ஊட்டுபவன் {சசபிந்து}, தேவர்களில் திறம் பெற்றவன் {ஸுரேஸ்வரன்}, உலகப்பற்றெனும் நோய்க்குப் பெரும் மருந்தாக இருப்பவன் {ஒளஷதம்}, அண்டத்தின் பெரும் பாலமாக இருப்பவன் {ஜகதஸ்ஸேது}, வீண்போகாத அறிவும் மற்றும் பிற குணங்களுடனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலுடனும் இருப்பவன் {ஸத்யதர்மபராக்ரமன்}<283-289>;(44)

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலமென அனைத்துக் காலங்களிலும் உயிரினங்கள் அனைத்தாலும் வேண்டப்படுபவன் {பூதபவ்யபவந்நாதன்}, தன்னை வழிபடுபவர்களிடம் கருணைப் பார்வையைச் செலுத்தி அவர்களை மீட்பவன் {பவன்}, புனிதமானவர்களை மேலும் புனிதப்படுத்துபவன் {பாவநன்}, ஆன்மாவில் உயிர் மூச்சைக் கலக்கச் செய்பவன் (அல்லது, விடுதலையடைந்தவர்களையும் {முக்தி பெற்றவர்களையும்}, விடுதலையடையாதவர்களையும் பல்வேறு வடிவங்களை ஏற்றுக் காப்பவன்) {அநலன்}, விடுதலையடைந்தோரின் {முக்தி அடைந்தோரின்} ஆசைகளைக் கொல்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின் மனங்களில் தீய ஆசைகள் எழாமல் தடுப்பவன்) {காமஹா}, காமனின் தந்தை (ஆசை அல்லது காமத்தின் கோட்பாடு) {காமக்ருத்}, மிக இனிமையானவன் {காந்தன்}, அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்படுபவன் {காமன்}, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருள்பவன் {காமப்ரதன்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறன் கொண்டவன் {ப்ரபு}<290-299>;(45)

நான்கு யுகங்களையும் நடைமுறையில் தொடங்கச் செய்பவன் {யுகாதிக்ருத்}, யுகங்களைத் தொடர்ச்சியாகச் சக்கரமாகச் சுழலச் செய்பவன் {யுகாவர்த்தன்}, பல்வேறு வகை மாயைகளுடன் கூடியவன் (அதன் மூலம், பல்வேறு யுகங்களைப் பல்வேறு வகைச் செயல்களின் மூலம் வேறுபடுத்திக் காட்டும் காரணமாக இருப்பவன்) {நைகமாயன்}, (ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் அனைத்தையும் விழுங்குவதன் விளைவால்) உண்பவர்களில் பெரியவன் {மஹாசநன்}, (பக்தர்கள் அல்லாதோருக்குப்) பிடிபட இயலாதவன் {அத்ருஸ்யன்}, (மிகப்பெரிய) வெளிப்படு வடிவத்துடன் கூடியவன் {வ்யக்தரூபன்}, (தேவர்களின்) ஆயிரம் பகைவர்களை அடக்கியவன் {ஸஹஸ்ரஜித்}, எண்ணற்ற பகைவர்களை அடக்கியவன் {அநந்தஜித்}<300-308>;(46)

(பெரும்பாட்டன் மற்றும் ருத்திரனாலும்) விரும்பப்படுபவன் (அல்லது வேள்விகளில் துதிக்கப்படுபவன்) {இஷ்டோவிசிஷ்டன்}, அனைத்திற்கும் மேலான புகழ்பெற்றவன், ஞானிகள் மற்றும் அறவோரால் விரும்பப்படுபவன் {சிஷ்டேஷ்டன்}, தலைப்பாகையில் (மயில்) இறகுகளுடன் கூடிய ஆபரணத்தைக் கொண்டவன் {சிகண்டீ}, அனைத்து உயிரினங்களையும் தன் மாயையால் கலங்கடிப்பவன் {நஹுஷன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரிடமும் தன் அருளைப் பொழிபவன் {வ்ருஷன்}, அறவோரின் கோபத்தைக் கொல்பவன் {க்ரோதஹா}, அறமற்றவர்களைக் கோபத்தால் நிறைப்பவன் {க்ரோதக்ருத்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுபவன் {கர்த்தா}, அண்டத்தையே தன் கரங்களில் தாங்குபவன் {விஸ்வபாஹு}, பூமியை நிலைநிறுத்துபவன் {மஹீதரன்}<309-318>;(47)

(தொடக்கம், பிறவி அல்லது தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி, வீழ்ச்சி, அழிவு என்ற) நன்கு அறியப்பட்ட ஆறு மாறுபாடுகளைக் கடந்தவன் {அச்யுதன்}, (தன் சாதனைகளின் விளைவால்) பெரும் புகழைக் கொண்டவன் {ப்ரதிதன்}, (நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால்) உயிரினங்கள் அனைத்தையும் {உயிரோடு} வாழச் செய்பவன் {ப்ராணன்}, உயிரைக் கொடுப்பவன் {ப்ராணதன்}, (உபேந்திரனின் வடிவத்தில் அல்லது குள்ள வடிவத்தில் உள்ள) வாசவனின் தம்பி {வாஸவாநுஜன்}, அண்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம் {அபாம்நிதி}, (அனைத்திலும் பொருள் காரணமாக இருப்பதன் விளைவால்) அனைத்து உயிரினங்களையும் மறைப்பவன் {அதிஷ்டாநன்}, (எப்போதும் பிழை கடந்தவனாகவும்) எப்போதும் விழிப்புடன் இருப்பவன் {அப்ரமத்தன்}, தன் மகிமையில் நிறுவப்பட்டவன் {ப்ரதிஷ்டிதன்}<319-327>;(48)

அமுத வடிவில் பாய்பவன் (அல்லது, அனைத்தையும் வற்றச் செய்பவன்) {ஸ்கந்தன்}, அறப்பாதையை நிலைநிறுத்துபவன் {ஸ்கந்ததரன்}, அண்டத்தின் சுமையைச் சுமப்பவன் {துர்யன்}, வேண்டுவோர் விரும்பும் வரங்களைக் கொடுப்பவன் {வரதன்}, காற்றை வீசச் செய்பவன் {வாயுவாஹநன்}, வசுதேவரின் மகன் (அல்லது, அண்டத்தைத் தன் மாயைகளில் மறைத்து, அதன் மத்தியில் விளையாடிக் கொண்டிருப்பவன்) {வாஸுதேவன்}, இயல்புக்குமீறிய வகையில் ஒளிர்பவன் {ப்ருஹத்பாநு}, தேவர்கள் தோன்றக் காரணமானாவன் {ஆதிதேவன்}, பகைவரின் நகரங்கள் அனைத்தையும் துளைப்பவன் {புரந்தரன்}<328-336>;(49)

துன்பங்கள் மற்றும் கவலைகள் அனைத்தையும் கடந்தவன் {அசோகன்}, உலக வாழ்வெனும் பெருங்கடலைப் பாதுகாப்பாகக் கடக்க நம்மை வழிநடத்துபவன் {தாரணன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரின் இதயங்களில் இருந்தும் மறுபிறவி குறித்த அச்சத்தை விலக்குபவன் {தாரன்}, எல்லையற்ற துணிவும் ஆற்றலும் கொண்டவன் {சூரன்}, சூர குலத்தில் பிறந்தவன் {செளரி}, அனைத்து உயிரினங்களையும் ஆள்பவன் {ஜநேஸ்வரன்}, அனைவருக்கும் அருள்தரவிரும்புபவன் {அநுகூலன்}, (நல்லோரைக் காத்து, தீயோரை அழித்து, அறத்தை நிறுவுவதற்காகப்) பூமிக்கு நூறு முறை வருபவன் {சதாவர்த்தன்}, தன் கரங்களில் ஒன்றில் தாமரையைக் கொண்டவன் {பத்மீ}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {பத்மநிபேஷணன்}<337-346>;(50)

உந்தியில் தொடக்ககாலத் தாமரையைக் கொண்டவன் (அல்லது, தாமரையில் அமர்ந்திருப்பவன்) {பத்மநாபன்}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {அரவிந்தாக்ஷன்}, தன்னை வழிபடுபவர்களால் இதயத்தாமரையில் அமர்ந்திருப்பவனாகத் துதிக்கப்படுபவன் {பத்மகர்ப்பன்}, (தன் மாயையின் மூலம்) ஜீவனின் உடல்வடிவத்தை ஏற்பவன் {சரீரப்ருத்}, அனைத்து வகைப் பலங்களையும் கொண்டவன் {மஹர்த்தி}, ஐந்து அடிப்படை பூதங்களின் வடிவில் வளர்பவன் {ருத்தன்}, புராதன ஆன்மா {வ்ருத்தாத்மா}, பெரிய கண்களைக் கொண்டவன் {மஹாக்ஷன்}, தேரின் கொடிக்கம்பத்தில் கருடன் அமர்ந்திருக்கப் பெற்றவன் {கருடத்வஜன்}<347-355>;(51)

ஒப்பற்றவன் {அதுலன்}, (சிங்கத்தைக் கொல்லும் விலங்கான} சரபன், தீயோரைப் பயங்கரமாகத் தாக்குபவன் {பீமன்}, காலத்தில் நேர்ந்தவை அனைத்தையும் அறிந்தவன் {ஸமயஜ்ஞன்}, வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் நெய்யாக இருப்பவன் {ஹவிஸ்}, அவ்வாறு ஊற்றப்படும் நெய்யை தேவர்களின் வடிவில் ஏற்பவன் {ஹரி}, அனைத்து வகைச் சான்றுகளாலும் அறியப்படுபவன் {ஸர்வலக்ஷணலக்ஷண்யன்}, எப்போதும் செழிப்பு அமர்ந்திருக்கும் மார்பைக் கொண்டவன் {லக்ஷமீவாந்}, போர்கள் அனைத்திலும் வெல்பவன் {ஸமிதிஞ்சயன்}<356-364>;(52)

அழிவைக் கடந்தவன் {விக்ஷரன்}, செவ்வண்ணம் ஏற்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின் எதிரிகளிடம் கோபம் நிறைந்தவன்) {ரோஹிதன்}, அறவோர் தேடும் பொருளாக இருப்பவன் {மார்க்கன்}, அனைத்துக்கும் வேராக இருப்பவன் {ஹேது}, (குழந்தையாக இருக்கும்போது யசோதனையால் கட்டப்பட்டதால்) வயிற்றைச் சுற்றிலும் கயிற்றின் தடத்தைக் கொண்டவன் {தாமோதரன்}, தீங்குகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவன் அல்லது தாங்கிக் கொள்பவன் {ஸஹன்}, மலைகளின் வடிவில் பூமியைத் தாங்குபவன் {மஹீதரன்}, வழிபடத்தகுந்தவை அனைத்திலும் முதன்மையானவன் {மஹாபாகன்}, பெரும் வேகம் கொண்டவன் {வேகவாந்}, பெரும் அளவிலான உணவை விழுங்குபவன் {அமிதாசநன்}<365-374>;(53)

படைப்பை உண்டாக்கி இயங்கச் செய்தவன் {உத்பவன்}, பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் எப்போதும் கலங்கடிப்பவன் {க்ஷோபணன்}, பிரகாசமாக ஒளிர்பவன் (அல்லது, இன்பத்தில் திளைப்பவன்) {தேவன்}, வயிற்றில் பலம் கொண்டவன் {ஸ்ரீகர்ப்பன்}, அனைத்தையும் ஆளும் பரமன் {பரமேஸ்வரன்}, அண்டம் உண்டான பொருளாக இருப்பவன் {கரணம்}, அண்டத்தை உண்டாக்கிய காரணப்பொருளானவன் {காரணன்}, அனைத்துப் பொருள்களையும் சாராதிருப்பவன் {கர்த்தா}, அண்டத்தில் பன்முகத்தன்மையை விதிப்பவன் {விகர்த்தா}, புரிந்து கொள்ளப்பட முடியாதவன் {கஹநன்}, மாயத்திரை மூலம் தன்னை மறைத்துக் கொள்பவன்{குஹன்}<375-385>;(54)

குணங்கள் ஏதும் அற்ற சித் ஆக இருப்பவன் {வ்யவஸாயன்}, அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் இடமாக இருப்பவன் {வ்யவஸ்தாநன்}, அண்டப் பேரழிவின் போது அனைத்துப் பொருட்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸம்ஸ்தாநன்}, தன்னை வழிபடுபவனுக்கு முதன்மையான இடத்தை ஒதுக்குபவன் {ஸ்தாநதன்}, நீடித்து நிலைத்திருப்பவன் {த்ருவன்}, உயர்ந்த பலத்தைக் கொண்டவன் {பரர்த்தி}, வேதங்களில் மகிமைப்படுத்தப்படுபவன் {பரமஸ்பஷ்டன்}, நிறைவுடன் இருப்பவன் {துஷ்டன்}, எப்போதும் முழுமையாக இருப்பவன்{புஷ்டன்}, மங்கலப் பார்வை கொண்டவன் {சுபேக்ஷணன்}<386-395>;(55)

யோகிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் நிறைப்பவன் {ராமன்}, (அண்ட அழிவின் போது அனைத்தும் அவனிடமே கலப்பதால்) அனைத்து உயிரினங்களின் கதியாக இருப்பவன் {விராமன்}, {விரதன்}, குறையற்ற பாதையாக இருப்பவன் {மார்க்கன்}, ஜீவனின் வடிவில் இருந்து கொண்டு முக்திக்கு வழிநடத்துபவன் {நேயன்}, (ஜீவனிலிருந்து முக்திக்கு) வழிநடத்துபவன் {நயன்}, வழிநடத்த எவனும் இல்லாதவன் {அநயன்}, பெரும் வலிமை கொண்டவன் {வீரன்}, வலிமை நிறைந்த அனைத்திலும் முதன்மையானவன் {சக்திமதாம்ஸ்ரேஷ்டன்}, நிலைநிறுத்துபவன் {தர்மம்}, கடமை மற்றும் அறம் அறிந்த அனைவரிலும் முதன்மையானவன் {தர்மவிதுத்தமன்}<396-404>;(56)

படைப்புக் காலத்தில் பொருட்கள் அனைத்தையும் அமைப்பதற்காகப் பிரிந்து கிடக்கும் பூதங்களை ஒன்றாகச் சேர்ப்பவன் {வைகுண்டன்}, அனைத்து உடல்களிலும் வசிப்பவன் {புருஷன்}, க்ஷேத்ரஜ்ஞனின் வடிவில் இருந்து கொண்டு அனைத்து உயிரினங்களையும் செயல்படச் செய்பவன் {ப்ராணன்}, அண்டப் பேரழிவின் போது அழித்த உயிரினங்கள் அனைத்தையும் படைப்பவன் {ப்ராணதன்}, அனைவராலும் மதிப்புடன் வணங்கப்படுபவன் {ப்ரணமன்}, மொத்த அண்டத்திலும் விரிந்திருப்பவன் {ப்ருது}, ஆதி பொன்முட்டையைத் தன் வயிறாகக் கொண்டு அனைத்தையும் உண்டாக்குபவன் {ஹிரண்யகர்ப்பன்}, தேவர்களின் பகைவர்களை அழிப்பவன் {சத்ருக்நன்}, (பொருள் காரணமாக இருக்கும் தன்னில் இருந்து உதித்த) அனைத்திலும் படர்ந்திருப்பவன் {வ்யாப்தன்}, இனிய நறுமணங்களைப் பரவச் செய்பவன் {வாயு}, புலன் இன்பங்களை அலட்சியம் செய்பவன் {அதோக்ஷஜன்}<405-415>;(57)

பருவ காலங்களுடன் அடையாளம் காணப்படுபவன் {ருது}, தன்னை வழிபடுபவர்கள் தன்னைக் காண்பதால் மட்டுமே அவர்கள் விரும்பும் நோக்கத்தை அவர்களை அடையச் செய்பவன் {ஸுதர்சநன்}, அனைத்து உயிரினங்களையும் பலவீனப்படுத்துபவன் {காலன்}, தன் மகிமையையும், பலத்தையும் சார்ந்து இதய வெளியில் வசிப்பவன் {பரமேஷ்டீ}, (எங்கும் நிறைந்திருப்பதன் விளைவால்) எங்கும் அறியப்படவல்லவன் {பரிக்ரஹன்}, அனைவரையும் அச்சங்கொள்ளச் செய்பவன் {உக்ரன்}, அனைத்து உயிரினங்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸம்வத்ஸரன்}, {தக்ஷன்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறமை கொண்டவன் {விஸ்ராமன்}, பிறரைவிட அதிகத் திறன் கொண்டவன் {விஸ்வதக்ஷிணன்}<416-425>;(58)

மொத்த அண்டமும் படர்ந்திருக்கும் இடமாக இருப்பவன் {விஸ்தாரன்}, அனைத்துப் பொருட்களும் எப்போதும் சார்ந்திருப்பவனாகவும், அசைவில்லாதவனாகவும் இருப்பவன் {ஸ்தாவரஸ்தாணு}, சான்றுப் பொருளாக இருப்பவன் {ப்ரமாணன்}, அழிவில்லாத, மாற்றமில்லாத வித்தாக இருப்பவன் {பீஜமவ்யயம்}, (மகிழ்ச்சியாக இருப்பதன் விளைவால்) அனைவராலும் வேண்டப்படுபவன் {அர்த்தன்}, (விருப்பங்கள் அனைத்தும் நிறைவடைந்ததன் விளைவால்) ஆசையற்றவன் {அநர்த்தன்}, (அண்டத்தை மறைக்கும்) பெரும் உறையாக இருப்பவன் {மஹாகோசன்}, அனுபவிக்கத்தகுந்த அனைத்து வகைப் பொருட்களையும் கொண்டவன் {மஹாபோகன்}, (விருப்பத்திற்குரிய பொருட்களனைத்தையும் அடையவதற்குரிய) பெருஞ்செல்வம் கொண்டவன் {மஹாதனன்}<426-434>;(59)

மனத்தளர்ச்சிக்கு அப்பாற்பட்டவன் {அநிர்விண்ணன்}, துறவின் வடிவில் இருப்பவன் {ஸ்தவிஷ்டன்}, பிறப்பற்றவன் {பூ}, அறம் கட்டப்படும் தூணாக இருப்பவன் {தர்மயூபன்}, வேள்வியின் பெரும் உடல்வடிவம் {மஹாமகன்}, ஆகாயத்தில் சுழலும் நட்சத்திர சக்கரத்தின் நடுப்பகுதியாக {மையமாக} இருப்பவன் {நக்ஷத்ரநேமி}, நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் நிலவாக இருப்பவன் {நக்ஷத்ரீ}, அனைத்துச் சாதனைகளையும் செய்யவல்லவன் {க்ஷமன்}, அனைத்துப் பொருட்களும் மறையும்போது தன் ஆன்மாவில் இருப்பவன் {க்ஷாமன்}, படைக்கும் விருப்பத்தைப் பேணி வளர்ப்பவன் {ஸமீஹநன்}<435-444>;(60)

அனைத்து வேள்விகளின் உடல்வடிவமாக இருப்பவன் {யஜ்ஞன்}, வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளில் துதிக்கப்படுபவன் {இஜ்யன்}, மனிதர்கள் செய்யும் வேள்விகளில் இருக்கும் தேவர்கள் அனைவரிலும் மிகவும் துதிக்கப்படத்தகுந்தவன் {மஹேஜ்யன்}, விதிப்படி விலங்குகள் காணிக்கையளிக்கப்படும் வேள்விகள் அனைத்தின் உடல்வடிவமாக இருப்பவன் {க்ரது}, எந்த உணவையும் உட்கொள்ளும் முன்னர் மனிதர்களால் துதிக்கப்படுபவன் {ஸத்ரம்}, முக்தி நாடுபவர்களின் புகலிடமாக இருப்பவன் {ஸதாம்கதி}, அனைத்து உயிரினங்களும் செய்யும் மற்றும் செய்யத்தவறும் செயல்களைக் காண்பவன் {ஸர்வதர்சீ}, குணங்கள் அனைத்தையும் கடந்த ஆன்மாவைக் கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்}, அடையப்பட முடியாததும், எல்லையற்றதும், அனைத்தையும் நிறைவேற்றவல்லதுமான ஞானத்திற்கு ஒப்பானவன் {ஜ்ஞானமுத்தமம்}<445-454>;(61)

(வேண்டுபவனுக்குத் தூய இதயத்துடன் அருள்வழங்க வல்ல) சிறந்த நோன்புகளை நோற்பவன் {ஸுவ்ரதன்}, எப்போதும் மகிழ்ச்சி நிறைந்த முகத்தைக் கொண்டவன் {ஸுமுகன்}, நுட்பமிக்கவன் {ஸூக்ஷ்மன்}, (வேதத்தின் வடிவிலோ, குழல் இசைக்கும் கிருஷ்ணனாகவோ) இனிமைமிக்க ஒலிகளை வெளியிடுபவன் {ஸுகோஷன்}, (தன்னை வழிபடுபவர்கள் அனைவருக்கும்) மகிழ்ச்சியைக் கொடுப்பவன் {ஸுகதன்}, மறுவுதவியேதும் எதிர்பாராமல் பிறருக்கு நன்மை செய்பவன் {ஸுஹ்ருத்}, அனைத்து உயிரினங்களையும் மகிழ்ச்சியில் நிறைப்பவன் {மனோஹரன்}, கோபத்தை வென்றவன் {ஜிதக்ரோதன்}, (பெரும் வலிமைமிக்க அசுரர்களைக் கொல்லும் வகையிலான) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் {வீரபாஹு}, அறமற்றோரைக் கிழித்தெறிபவன் {விதாரணன்}<455-464>;(62)

ஆன்ம அறிவற்றவர்களைத் தன் மாயையால் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கச் செய்பவன் {ஸ்வாபநன்}, (அனைத்து மனிதர்கள் மற்றும் பொருட்களிலிருந்து முற்றிலும் விடுபட்டவனாகத்) தன்னைத்தானே சார்ந்திருப்பவன் {ஸ்வவசன்}, மொத்த அண்டத்திலும் முற்றாகப் பரவியிருப்பவன் {வ்யாபீ}, முடிவிலா வடிவங்களில் இருப்பவன் {நைகாத்மா}, முடிவிலா எண்ணிக்கையிலான தொழில்களில் ஈடுபடுபவன் {நைககர்மக்ருத்}, அனைத்திலும் வாழ்பவன் {வத்ஸரன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரிடமும் முழு அன்பைக் கொண்டவன் {வத்ஸலன்}, (அனைத்து உயிரினங்களும் அவனிடம் இருந்து உண்டான கன்றுகளாக இருப்பதன் விளைவால்) அண்டத்தின் தந்தையாக இருப்பவன் {வத்ஸீ}, பரந்திருக்கும் பெருங்கடலின் வடிவில் தன் வயிற்றில் ரத்தினங்கள் அனைத்தையும் கொண்டிருப்பவன் {ரத்நகர்ப்பன்}, கருவூலங்கள் அனைத்தின் தலைவன் {தநேஸ்வரன்}<465-474>;(63)

அறத்தைப் பாதுகாப்பவன் {தர்மகுப்}, அறக்கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {தர்மக்ருத்}, அறத்தின் ஆதாரமாக இருப்பவன் {தர்மீ}, எப்போதும் இருப்பவன் {ஸத்}, (வெளிப்படும் அண்டம் மாயையின் விளைவாக இருப்பதால் அண்டத்தின் வடிவில்) இல்லாதவன் {அஸத்}, (வெளிப்படும் அண்டத்தின் வடிவில்) அழியத்தக்கவன் {க்ஷரம்}, அழிவற்ற சித் ஆக இருப்பவன் {அக்ஷரன்}, உண்மை அறிவற்ற ஜீவனின் வடிவில் இருப்பவன் {அவிஜ்ஞாதா}, சூரியனின் வடிவில் ஆயிரங்கதிர்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராம்சு}, (சேஷன், கருடன் முதலிய வலிமைமிக்கப் பெரும் உயிரினங்களை) விதிப்பவன் {விதாதா}, சாத்திரங்கள் அனைத்தையும் படைத்தவன் {க்ருதலக்ஷணன்}<475-485>;(64)

எண்ணற்ற ஒளிக்கதிர்களின் நடுவில் சூரியனின் வடிவில் இருப்பவன் {கபஸ்திநேமி}, அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவன் {ஸத்வஸ்தன்}, பேராற்றல் கொண்டவன் {ஸிம்மன்}, யமன் மற்றும் அதே பலத்தைக் கொண்ட பிறரை ஆள்பவன் {பூதமஹேஸ்வரன்}, (தொடக்கத்தில் இருந்தே இருப்பனாதலால்) தேவர்களில் பழைமையானவன் {ஆதிதேவன்}, அனைத்து நிலைகளையும் கைவிட்டு தன் மகிமையில் தானே இருப்பவன் {மஹாதேவன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {தேவேசன்}, தேவர்களை நிலைநிறுத்தபவனையும் (இந்திரனையும்) ஆள்பவன் {தேவப்ருத்குரு}<486-493>;(65)

பிறப்பையும், அழிவையும் கடந்தவன் {உத்தரன்}, (கிருஷ்ணனின் வடிவில்) பசுக்களைப் பாதுகாத்து வளர்ப்பவன் {கோபதி}, அனைத்து உயிரினங்களையும் ஊட்டி வளர்ப்பவன் {கோப்தா}, அறிவால் மட்டுமே அணுகப்படக்கூடியவன் {ஜ்ஞானகம்யன்}, பழைமையானவன் {புராதநன்}, உடலாக அமையும் பூதங்களை நிலைநிறுத்துபவன் {சரீரபூதப்ருத்}, (ஜீவனின் வடிவில் இன்ப துன்பங்களை) அனுபவிப்பவன் {போக்தா}, பெரும்பன்றியின் வடிவை ஏற்றவன் (அல்லது, ராமனின் வடிவில் இருந்த போது பெரும் குரங்குக்கூட்டத்தின் தலைவனாக இருந்தவன்) {கபீந்த்ரன்}, தன்னால் செய்யப்பட்ட மகத்தான வேள்வியில் அபரிமிதமான கொடைகளை அனைவருக்கும் வழங்கியவன் {பூரிதக்ஷிணன்}<494-502>;(66)

ஒவ்வொரு வேள்வியிலும் சோமத்தைப் பருகுபவன் {ஸோமபன்}, அமுதம் பருகுபவன் {அம்ருதபன்}, சோமனின் (சந்திரமாஸின்) வடிவில் மூலிகை, செடி, கொடிகளை ஊட்டி வளர்ப்பவன் {ஸோமன்}, முடிவிலா எண்ணிக்கையில் பகைவர்கள் இருந்தாலும் ஒரு கணப்பொழுதில் அவர்களை வெல்பவன் {புருஜித்}, இருப்பிலுள்ளவை அனைத்திலும் முதன்மையான அண்ட வடிவைக் கொண்டவன் {புருஸத்தமன்}, தண்டிப்பவன் {விநயன்}, அனைவரையும் வெல்பவன் {ஜயன்}, கலங்கடிக்க இயலாத நோக்கங்களைக் கொண்டவன் {ஸத்யஸந்தன்}, கொடைகளுக்குத் தகுந்தவன் {தாசார்ஹன்}, உயிரினங்களிடம் இல்லாதவற்றைக் கொடுப்பவனும், அவற்றைப் பாதுகாப்பவனுமாக இருப்பவன் {ஸாத்வதாம்பதி}<503-512>;(67)

உயிர்மூச்சைத் தாங்குபவன் {ஜீவன்}, தன் உயிரினங்கள் அனைத்தையும் நேரடி பார்வையில் உள்ள பொருட்களாகக் காண்பவன் {விநயிதா}, சுயத்தைத்தவிர வேறெதையும் ஒருபோதும் காணாதவன் {ஸாக்ஷீ}, முக்தியை அளிப்பவன் {முகுந்தன்}, சொர்க்கம், பூமி, பாதாளம்  ஆகியவற்றை தன் காலடிகளால் (எண்ணிக்கையில் மூன்று) மறைத்தவன் {அமிதவிக்ரமன்}, நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம் {அம்போநிதி}, வெளி, காலம் மற்றும் அனைத்திலும் நிறைந்திருப்பவன் {அநந்தாத்மா}, அண்டப் பேரழிவின் போது, பெரும் நீர்ப்பரப்பில் கிடப்பவன் {மஹோததிசயன்}, அனைத்தையும் அழிப்பவன் {அந்தகன்}<513-521>;(68)

பிறப்பற்றவன் {அஜன்}, அதிகம் துதிக்கப்படுபவன் {மஹார்ஹன்}, தன் இயல்பில் தோன்றுபவன் {ஸ்வாபாவ்யன்}, (கோபம் மற்றும் தீய ஆசைகளின் வடிவில் உள்ள) பகைவர்கள் அனைவரையும் வெல்பவன் {ஜிதாமித்ரன்}, தன்னைத் தியானிப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {ப்ரமோதன்}, இன்ப வடிவம் {ஆநந்தன்}, பிறரை மகிழ்ச்சியில் நிறைப்பவன் {நந்தநன்}, மகிழ்க்கான காரணங்கள் அனைத்துடன் பெருகுபவன் {நந்தன்}, வாய்மையையும், பிற அறங்களையும் தன் குறியீடுகளாகக் கொண்டவன் {ஸத்யதர்மா}, மூவுலகங்களையும் தன் காலடிகளில் கொண்டவன் {த்ரிவிக்ரமன்}<522-530>;(69)

(வேதங்களை மொத்தமாக அறிந்து வைத்திருக்கும்) முனிவர்களில் முதல்வன் {மஹர்ஷி}, ஆசான் கபிலராக இருப்பவன் {கபிலாசார்யன்}, அண்டத்தை அறிந்தவன் {க்ருதஜ்ஞன்}, பூமியை ஆள்பவன் {மேதிநீபதி}, மூன்று பாதங்களைக் கொண்டவன் {த்ரிபதன்}, தேவர்களைப் பாதுகாப்பவன் {த்ரிதசாத்யக்ஷன்}, (அண்டப் பேரழிவின் போது, மனுவின் படகைத் தன் கொம்புகளில் கட்டி இழுத்துச்சென்ற மீன் வடிவில் இருந்த போது) பெரும் கொம்புகளைக் கொண்டவன் {மஹாஸ்ருங்கன்}, செயல்பட்டவர்களை இன்பத்தை அனுபவிக்கவோ, துன்பத்தைத் தாங்கிக் கொள்ளவோ செய்து செயல்களைத் தீர்ப்பவன் {க்ருதாந்தக்ருத்}<531-538>;(70)

பெரும்பன்றியானவன் {மஹாவராஹன்}, வேதாந்தத்தின் துணையுடன் புரிந்துகொள்ளப்படுபவன் {கோவிந்தன்}, (தன்னை வழிபடுபவர்களின் வடிவில்) அழகிய துருப்புகளைக் கொண்டவன் {ஸுஷேணன்}, பொன்கங்கணங்கள் கொண்டவன் {கநகாங்கதீ}, (உபநிஷத்துகளின் துணையுடன் மட்டுமே அறியப்படும் வகையில்) மறைந்திருப்பவன் {குஹ்யன்}, (அறிவு மற்றும் பலத்தில்) ஆழம் நிறைந்தவன் {கபீரன்}, அடைதற்கரியவன் {கஹநன்}, சொல்லையும், எண்ணத்தையும் கடந்தவன் {குப்தன்}, சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்தவன் {சக்ரகதாதரன்}<539-547>;(71)

விதி விதிப்பவன் {வேதஸ்}, (உதவியாளன் வடிவில் இருக்கும்) அண்டத்தின் காரணன் {ஸ்வாங்கன்}, ஒருபோதும் வெல்லப்பட முடியாதவன் {அஜிதன்}, தீவில் பிறந்த கிருஷ்ணராக {வியாசராக} இருப்பவன் {க்ருஷ்ணன்}, (சிதைவைக் கடந்திருப்பதன் விளைவால்) நீடித்திருப்பவன் {த்ருடன்}, அனைத்தையும் செதுக்குபவன்  {ஸங்கர்ஷணன்}, சிதைவுக்கு அப்பாற்பட்டவன் {அச்யுதன்}, வருணன், (வசிஷ்டர் அல்லது அகஸ்தியரின் வடிவில்) வருணனின் மகனாக இருப்பவன் {வாருணன்}, அசையாத மரமாக இருப்பவன் {வ்ருக்ஷன்}, இதயத்தாமரையில் தன் உண்மை வடிவத்தை வெளிப்படுத்துபவன் {புஷ்கராக்ஷன்}, மனச்சாதனையின் மூலமே படைத்து, காத்து, அழிப்பவன் {மஹாமநஸ்}<548-558>;(72)

(அரசுரிமை முதலிய) ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந்}, (அண்டப் பேரழிவின் போது) ஆறு குணங்களையும் அழிப்பவன் {பகஹா}, (அனைத்து வகைச் செழிப்பிலும் பெருகுபவனாக இருக்கும் விளைவால்) இன்பநிலையாக இருப்பவன் {நந்தீ}, {வைஜயந்தம் என்றழைக்கப்படும்) வெற்றிமாலையால் அலங்கரிக்கப்படுபவன் {வநமாலி}, (பலதேவன் அவதாரத்தில்) கலப்பையை ஆயுதமாகக் கொண்டவன் {ஹலாயுதன்}, (பலியை வஞ்சித்த குள்ளனின் வடிவில்) அதிதியின் கருவறையில் பிறந்தவன் {ஆதித்யன்}, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவன் {ஜ்யோதிராதித்யன்}, (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகளைத் தாங்கிக் கொள்பவன் {ஸஹிஷ்ணு}, அனைத்துப் பொருட்களின் முதன்மையான புகலிடமாக இருப்பவன் {கதிஸத்தமன்}<559-567>;(73)

(சாரங்கம் என்றழைக்கப்படும்) முதன்மையான வில்லை ஆயுதமாகக் கொண்டவன் {ஸுதந்வா}, (பிருகு குல ராமராய் {பரசுராமராய்} இருந்து) தன் கோடரியை இழந்தவன் {கண்டபரசு}, கடுமைமிக்கவன் {தாருணன்}, விரும்பும் பொருட்கள் அனைத்தையும் கொடுப்பவன் {த்ரவிணப்ரதன்}, சொர்க்கத்தையே (பலியின் வேள்வியில் தான் ஏற்று வந்த வடிவத்துடன்) தன் தலையால் தொட்டுவிடக் கூடிய அளவுக்கு நெடிதுயர்ந்தவன் {திவிஸ்ப்ருக்}, அண்டம் முழுவதும் பார்வை கொண்டவன் {ஸர்வத்ருக்}, (வேதங்களைப் பகுத்தவன்) வியாசன் {வ்யாஸன்}, வாக்கு அல்லது கல்வியை ஆள்பவன் {வாசஸ்பதி}, பிறப்புறுப்புகளின் தலையீடின்றி இருப்புக்குள் எழுந்தவன் {அயோநிஜன்}<568-576>;(74)

மூன்று (முதன்மையான) சாமங்களில் பாடப்படுபவன் {த்ரிஸாமா}, சாமங்களைப் பாடுபவன் {ஸாமகன்}, சாமங்களாக இருப்பவன் {ஸாம}, (துறவின் உடல்வடிவமாக இருப்பதன் விளைவால்) உலகபந்தங்களுக்கு அழிவைத் தருபவன் {நிர்வாணம்}, (நோயைச் சீராக்கப் பயன்படும்) மருந்தாக இருப்பவன் {பேஷஜம்}, (மருந்தைப் பயன்படுத்தும்) மருத்துவன் {பிஷக்}, (உயிரினங்கள் முக்தி அடைவதற்குத் தகுந்தவையாக) துறவறம் என்றழைக்கப்படும் நான்காவது வாழ்வு முறையை விதித்தவன் {ஸந்யாஸக்ருத்}, தன்னை வழிபடுபவர்களைப் பொறுத்தவரையில் (ஆன்ம அமைதியைக் கொடுக்கும் நோக்கில்) அவர்களின் ஆசைகளைத் தணிவடையச் செய்பவன் {சமன்}, (உலகப் பொருட்கள் அனைத்திலும் முற்றிலும் தொடர்பறுத்ததன் விளைவால்) நிறைவாய் இருப்பவன் {சாந்தன்}, பக்தி மற்றும் ஆன்ம அமைதிக்கான புகலிடமாக இருப்பவன் {நிஷ்டாசாந்திபராயணன்}<577-585>;(75)

அழகிய அங்கங்களைப் பெற்றவன் {சுபாங்கன்}, ஆன்ம அமைதியைத் தருபவன் {சாந்திதன்}, படைத்தவன் {ஸ்ரஷ்டா}, பூமியின் மார்பில் இன்பத்தில் திளைப்பவன் {குமுதன்}, அண்டப் பேரழிவுக்குப் பின்னர்ப் பாம்புகளின் இளவரசனான சேஷனின் உடலில் (யோக) உறக்கத்தில் கிடப்பவன் {குவலேசயன்}, பசுக்களுக்கு நன்மை செய்பவன் (அல்லது, மக்கள் தொகையில் அவதியுறும் பூமியின் கனத்தைக் குறைக்க மனிதனின் வடிவில் பிறந்தவன்) {கோஹிதன்}, அண்டத்தை ஆள்பவன் {கோபதி}, அண்டத்தைப் பாதுகாப்பவன் {கோப்தா}, காளையைப் போன்ற கண்களைக் கொண்டவன் {வ்ருஷபாக்ஷன்}, அன்புடன் அறத்தைப் பேணி வளர்ப்பவன் {வ்ருஷப்ரியன்}<586-595>;(76)

புறமுதுகிடாத வீரன் {அநிவர்த்தீ}, பற்றுகள் அனைத்தில் இருந்தும் விலகிய ஆன்மா கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, அண்டப் பேரழிவின் காலத்தில் அண்டத்தை நுட்பமான வடிவில் குறைப்பவன் {ஸம்க்ஷேப்தா}, துன்புறும் தன் வழிபாட்டாளர்களுக்கு நன்மை செய்பவன் {க்ஷேமக்ருத்}, கேட்டதும் கேட்டவனின் பாவம் அனைத்தும் தூய்மையடையும் பெயரைக் கொண்டவன் {சிவன்}, தன் மார்பில் மங்கலச் சுழியைக் கொண்டவன் {ஸ்ரீவத்ஸவக்ஷஸ்}, செழிப்பின் தேவி எப்போதும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸ்ரீவாஸன்}, (செழிப்பின் தேவியான) லட்சுமியால் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவள் {ஸ்ரீபதி}, செழிப்புடன் கூடியவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸ்ரீமதாம்வரன்}<596-604>;(77)

தன்னை வழிபடுபவர்களுக்குச் செழிப்பைத் தருபவன் {ஸ்ரீதர்}, செழிப்பை ஆள்பவன் {ஸ்ரீசன்}, செழிப்புடையவர்களுடன் எப்போதும் வாழ்பவன் {ஸ்ரீநிவாஸன்}, அனைத்து வகைச் செல்வங்களின் கொள்ளிடம் {ஸ்ரீநிதி}, அறத்தை அளவாகக் கொள்ளும் அடிப்படையில் அறச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் அனைவருக்கும் செழிப்பைக் கொடுப்பவன் {ஸ்ரீவிபாவநன்}, செழிப்பின் தேவியைத் தன் மார்பில் கொண்டவன் {ஸ்ரீதரன்}, தன்னைக் குறித்துக் கேட்பவர்கள், தன்னைப் புகழ்பவர்கள், தன்னைத் தியானிப்பவர்கள் ஆகியோருக்குச் செழிப்பை அளிப்பவன் {ஸ்ரீகரன்}, அடைதற்கரிய மகிழ்ச்சியை அடையும் நிலையின் உடல்வடிவமாக இருப்பவன் {ஸ்ரேயஸ்}, அனைத்து வகை அழகையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, மூவுலகங்களின் புகலிடமாக இருப்பவன் {லோகத்ரயாஸ்ரயன்}<605-614>;(78)

அழகிய கண்களைக் கொண்டவன் {ஸ்வக்ஷன்}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் {ஸ்வங்கன்}, மகிழ்ச்சிக்கான நூறு தோற்றுவாய்களைக் கொண்டவன் {சதாநந்தன்}, உயர்ந்த மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பவன் {நந்தி}, (ஆகாயத்து ஒளிக்கோள்களின் இடங்களையும், பாதைகளையும் பராமரிப்பவனாக இருப்பதால்) ஆகாயத்து ஒளிக்கோள்கள் அனைத்தையும் ஆள்பவன் {ஜ்யோதிர்க்கணேஸ்வரன்}, ஆன்மாவை வென்றவன் {விஜிதாத்மா}, மேன்மையான வேறு எவனாலும் ஆளப்படாத ஆன்மா கொண்டவன் {விதேயாத்மா}, எப்போதும் அழகிய செயல்களைச் செய்பவன் {ஸத்கீர்த்தி}, (உள்ளங்கை நெல்லிக்கனி போல மொத்த அண்டத்தையும் காண்பவனாக அவன் சொல்லப்படுகிறான், எனவே) ஐயங்கள் அனைத்தும் விலகப் பெற்றவன் {சிந்நஸம்சயன்}<615-623>;(79)

அனைத்து உயிரினங்களையும் கடந்தவன் {உதீர்ணன்}, திசைகள் அனைத்திலும் பரந்த பார்வை கொண்டவன் {ஸர்வதர்க்ஷு}, தலைவனற்றவன் {அநீசன்}, எக்காலத்திலும் நேரும் மாற்றங்கள் அனைத்தையும் கடந்திருப்பவன் {சாஸ்வதஸ்திரன்}, (ராமனின் வடிவில்) வெறுந்தரையில் கிடந்தவன் {பூசயன்}, (தன் அவதாரங்களின் மூலம்) பூமியை அலங்கரிப்பவன் {பூஷணன்}, பலத்தின் சுயமாக இருப்பவன் {பூதி}, துன்பங்கள் அனைத்தையும் கடந்தவன் {விசோகன்)}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரும் தன்னை நினைத்ததும் அவர்களின் துன்பங்களைக் களைபவன் {சோகநாசநன்}<624-632>;(80)

பிரகாசம் கொண்டவன் {அர்ச்சிஷ்மாந்}, அனைவராலும் வழிபடப்படுபவன் {அர்ச்சிதன்}, (அனைத்தும் தன்னுள் வசிப்பதைப் போன்ற) நீர்க்குடமாக இருப்பவன் {கும்பன்}, தூய ஆன்மா கொண்டவன் {விசுத்தாத்மா}, தன்னைக் குறித்துக் கேட்பவர் அனைவரையும் தூய்மையடையச் செய்பவன் {விசோதநன்}, கட்டற்ற சுதந்திரம் கொண்டவன் {அநிருத்தன்}, போர்க்களங்களில் இருந்து ஒருபோதும் திரும்பாத தேரைக் கொண்டவன் {அப்ரதிரதன்}, பெருஞ்செல்வம் கொண்டவன் {ப்ரத்யும்நன்}, அளவற்ற ஆற்றல் கொண்டவன் {அமிதவிக்ரமன்}<633-641>;(81)

காலநேமி என்ற பெயரைக் கொண்ட அசுரனைக் கொன்றவன் {காலநேமிநிஹா}, சூரன் குலத்தில் பிறந்தவன் {செளரி}, வீரன் {சூரன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {சூரஜநேஸ்வரன்}, மூவுலகங்களின் ஆன்மாவாக இருப்பவன் {த்ரிலோகாத்மா}, மூவுலகங்களையும் ஆள்பவன் {த்ரிலோகேசன்}, சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்களையே தன் மயிராகக் கொண்டவன் {கேசவன்}, கேசியைக் கொன்றவன் {கேசிஹா}, (அண்டப் பேரழிவின் போது) அனைத்தையும் அழிப்பவன் {ஹரி}<642-650>;(82)

வேண்டப்படும் விருப்பங்கள் அனைத்தையும் கனியச் செய்யும் தேவன் {காமதேவன்}, அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் {காமபாலன்}, விரும்புபவன் {காமீ}, அழகிய வடிவம் கொண்டவன் {காந்தன்}, ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் முற்றான ஞானம் கொண்டவன் {க்ருதாகமன்}, குணங்களின் மூலம் விவரிக்க இயலாத வடிவம் கொண்டவன் {அநிர்த்தேஸ்யவபு}, பிரகாசக் கதிர்களால் சொர்க்கத்தை நிறையச் செய்பவன் {விஷ்ணு}, {வீரன்}, எல்லையற்றவன் {அநந்தன்}, (அர்ஜுனன் அல்லது நரனின் வடிவில்) படையெடுப்பின் மூலம் திரண்ட செல்வத்தை அடைந்தவன் {தநஞ்சயன்}<651-660>;(83)

மந்திரங்கள், வேள்விகள், வேதங்கள் மற்றும் அறச்சடங்குகள் அனைத்திலும் முதன்மையானவன் {ப்ரம்மண்யன்}, தவங்களைப் படைத்தவனும், தவமுமாக இருப்பவன் {ப்ரம்மக்ருத்ப்ரம்மா}, (பெரும்பாட்டன்) பிரம்மனின் வடிவத்தில் இருப்பவன் {ப்ரம்ம}, தவங்களைப் பெருகச் செய்பவன் {ப்ரம்மவிவர்த்தநன்}, பிரம்மத்தை அறிந்தவன் {ப்ரம்மவித்}, பிராமண வடிவத்தில் இருப்பவன் {ப்ராம்மணன்}, பிரம்மம் என்றழைக்கப்படுபவன் {ப்ரம்மீ}, வேதங்கள் அனைத்தையும், அண்டத்தில் உள்ள அனைத்தையும் அறிந்தவன் {ப்ரம்மஜ்ஞன்}, பிராமணர்களைப் பிடித்தவனாகவும் பிராமணர்களுக்குப் பிடித்தமானவனாகவும் எப்போதும் இருப்பவன் {ப்ராம்மணப்ரியன்}<661-670>;(84)

பெரும்பகுதிகளை மறைக்கவல்ல காலடித்தடங்களைக் கொண்டவன் {மஹாக்ரமன்}, பெருஞ்செயல்களைச் செய்பவன் {மஹாகர்மா}, பெருஞ்சக்தி கொண்டவன் {மஹாதேஜஸ்}, பாம்புகளின் மன்னான வாசுகியுடன் அடையாளங்காணப்படுபவன் {மஹோரகன்}, வேள்விகள் அனைத்திலும் முதன்மையானவன் {மஹாக்ரது}, வேள்வி செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {மஹாயஜ்வா}, வேள்விகளில் முதன்மையான ஜபமாக இருப்பவன்{மஹாயஜ்ஞன்}, வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகள் அனைத்திலும் முதன்மையானவன் {மஹாஹவிஸ்}<671-678>;(85)

அனைவராலும் பாடப்படுபவன் {ஸ்தவ்யன்}, (தன்னை வழிபடுபவர்களால்) பாடப்பட விரும்புபவன் {ஸ்தவப்ரியன்}, தன்னை வழிபடுபவர்களால் சொல்லப்படும் துதிகளாக இருப்பவன் {ஸ்தோத்ரம்}, துதிக்கும் செயலே ஆனவன்{ஸ்துதன்}, துதிகளைப் பாடுபவன் {ஸ்தோதா}, (தீமையான அனைத்துடனும்) போரிட விரும்புபவன் {ரணப்ரியன்}, அனைத்து வகையிலும் முழுமையானவன் {பூர்ணன்}, அனைத்து வகைச் செழிப்பாலும் பிறரை நிறைப்பவன் {பூரயிதா}, நினைவுகூரப்பட்ட உடனேயே பாவங்கள் அனைத்தையும் அழிப்பவன் {புண்யன்}, செய்யும் அனைத்தையும் அறச்செயல்களாகச் செய்பவன் {புண்யகீர்த்தி}, அனைத்து வகை நோய்களையும் கடந்தவன் {அநாமயன்}<679-689>;(86)

மனோ வேகம் கொண்டவன் {மநோஜவன்}, அனைத்து வகைக் கல்விகளையும் படைத்து அவற்றை அறிவிப்பவன் {தீர்த்தகரன்}, பொன்னையே உயிர்வித்தாகக் கொண்டவன் {வஸுரேதஸ்}, (கருவூலத் தலைவனான குபேரனாக) செல்வத்தை வழங்குபவன் {வஸுப்ரதன்}, அசுரர்களின் செல்வத்தை அழிப்பவன் {வஸுப்ரதன்}, வசுதேவரின் மகன் {வாஸுதேவன்}, அனைத்துயிரினங்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {வஸு}, அனைத்துப் பொருட்களிலும் வசிக்கும் மனத்தைக் கொண்டவன் {வஸுமநஸ்}, தன்னிடம் புகலிடம் நாடுவோர் அனைவரின் பாவங்களையும் எடுப்பவன் {ஹவிஸ்}<690-698>;(87)

அறவோரால் அடையப்படுபவன் {ஸத்கதி}, எப்போதும் நற்செயல்களைச் செய்பவன் {ஸத்க்ருதி}, அண்டத்தின் ஒரே உட்பொருளாக இருப்பவன் {ஸத்தா}, பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துபவன் {ஸத்பூதி}, உண்மை அறிந்தோர் அனைவரின் புகலிடமாக இருப்பவன் {ஸத்பராயணன்}, பெரும் வீரர்களைத் தன் துருப்பினராகக் கொண்டவன் {சூரஸேநன்}, யாதவர்களில் முதன்மையானவன் {யதுரேஷ்டன்}, அறவோரின் வசிப்பிடமாக இருப்பவன் {ஸந்நிவாஸன்}, யமுனையின் கரைகளில் (பிருந்தாவனத்தில்) இன்பமாக விளையாடுபவன் {ஸுயாமுநன்}<699-707>;(88)

படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் {பூதாவாஸன்}, அண்டத்தைத் தன் மாயையால் நிறைக்கும் தேவன் {வாஸுதேவன்}, முதன்மையானவை அனைத்தும் (முக்தியடையும்போது அவற்றோடு) கலந்திருப்பவன் {ஸர்வாஸுநிலயன்}, ஒருபோதும் நிறைவடையாத பசி கொண்டவன் {அநலன்}, அனைவரின் செருக்கையும் அடக்குபவன் {தர்ப்பஹா}, நியாயமான செருக்குடன் அறவோரை நிறைப்பவன் {தர்ப்பதன்}, மகிழ்ச்சியில் பெருகுபவன் {அத்ருப்தன்}, பிடிக்கப்பட முடியாதவன் {துர்த்தரன்}, ஒருபோதும் வெல்லப்படமுடியாதவன் {அபராஜிதன்}<708-716>;(89)

அண்டவடிவம் கொண்டவன் {விஸ்வமூர்த்தி}, பெருவடிவம் கொண்டவன் {மஹாமூர்த்தி}, சக்தியிலும், பிராகசத்திலும் சுடர்விடும் வடிவம் கொண்டவன் {தீப்தமூர்த்தி}, (செயல்களால் தீர்மானிக்கப்படுவது போன்ற) வடிவமற்றவன் {அமூர்த்திமாந்}, பல்வேறு வடிவங்களைக் கொண்டவன் {அநேகமூர்த்தி}, வெளிப்படாதவன் {அவ்யக்தன்}, நூறு வடிவங்கள் கொண்டவன் {சதமூர்த்தி}, நூறு முகங்களைக் கொண்டவன் {சதாநநன்}<717-724>;(90)

தனியொருவன் {ஏகன்}, (மாயையால்) பலராகத் தெரிபவன் {நைகன்}, {அனைத்தையும் தன்னுள் கொண்டவன்} {ஸவ}, இன்பம் நிறைந்தவன் {க}, விசாரிக்கத்தகுந்த மகத்தான காரிய வடிவம் கொண்டவன் {கிம்}, இவை அனைத்துமானவன் {யத்}, அஃது என்றழைக்கப்படுபவன் {தத்}, உயர்ந்த புகலிடம் {பதமநுத்தமம்}, பொருட்காரணங்களுக்குள் ஜீவனை அடைப்பவன் {லோகபந்து}, அனைவராலும் விரும்பப்படுபவன் {லோகநாதன்}, மது குலத்தில் பிறந்தவன் {மாதவன்}, தன்னை வழிபடுபவர்களிடம் அதிக அன்பு கொண்டவன் {பக்தவத்ஸலன்}<725-735>;(91)

பொன்வண்ணன் {ஸுவர்ணவர்ணன்}, பொன் போன்ற (வண்ணத்தில்) அங்கங்கள் கொண்டவன் {ஹேமாங்கன்}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் {வராங்கன்}, சந்தனத்தாலான அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {சந்தநாங்கதீ}, வீரர்களைக் கொல்பவன் {வீரஹா}, இணையற்றவன் {விஷமன்}, (குணமற்ற விளைவால்) சுழியத்தைப் போன்றவன் {சூந்யன்}, (தான் கொண்ட முழுமையின் விளைவால்) எந்த அருளும் தேவைப்படாதவன் {க்ருதாசிஸ்}, சொந்த இயல்பு, பலம் மற்றும் ஞானத்தில் ஒருபோதும் பிறழாதவன் {அசலன்}, காற்றின் வடிவில் அசைபவன் {சலன்}<736-745>;(92)

ஆன்மா இல்லாத எதனுடனும் தன்னை ஒருபோதும் அடையாளம் காணாதவன் {அமாநீ}, தன்னை வழிபடுபவர்களுக்குக் கௌரவங்களை அளிப்பவன் {மாந்தன்}, அனைவராலும் மதிக்கப்படுபவன் {மாந்யன்}, மூவுலகங்களின் தலைவன் {லோகஸ்வாமீ}, மூன்று உலகங்களையும் நிலைநிறுத்துபவன் {த்ரிலோகக்ருக்}, உடன்படிக்கைகளின் உள்ளடக்கங்கள் அனைத்தையும் தன் மனத்தில் தாங்க வல்ல நினைவுடன் கூடிய புத்தி கொண்டவன் {ஸுமேதஸ்}, வேள்வியில் பிறந்தவன் {மேதஜன்}, பெரும்புகழுக்குத் தகுந்தவன் {தந்யன்}, புத்தியும் நினைவும் ஒருபோதும் தவறாதவன் {ஸத்யமேதஸ்}, பூமியை நிறைநிறுத்துபவன் {தராதரன்}<746-755>;(93)

சூரியனின் வடிவில் வெப்பத்தை வெளியிடுபவன் {தேஜோவ்ருஷன்}, அழகிய அங்கங்களைச் சுமப்பவன் {த்யுதிதரன்}, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸர்வசஸ்த்ரப்ருதாம்வரன்}, தன்னை வழிபடுபவர்களால் அளிக்கப்படும் மலர் மற்றும் இலை காணிக்கைகளை ஏற்பவன் {ப்ரக்ரஹன்}, ஆசைகள் அனைத்தையும் அடக்கி தன் பகைவர்கள் அனைவரையும் கலங்கடிப்பவன் {நிக்ரஹன்}, தனக்கு முன்பு நடக்க யாருமில்லாதவன் {வ்யக்ரன்}, நான்கு கொம்புகளைக் கொண்டவன் {நைகஸ்ருங்கன்}, கதனின் அண்ணன் {கதாக்ரஜன்}<756-764>;(94)

நான்கு வடிவங்களைக் கொண்டவன் {சதுர்மூர்த்தி}, நான்கு கரங்களைக் கொண்டவன் {சதுர்ப்பாஹு}, தன்னில் இருந்து நான்கு புருஷர்களை உதிக்கச் செய்தவன் {சதுர்வ்யூஹன்}, நான்கு வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்}, நான்கு வகைகளையும் {வர்ணங்களையும்} சார்ந்த மனிதர்களுக்குப் புகலிடமாக இருப்பவன் {சதுர்க்கதி}, (மனம், புத்தி, நனவுநிலை {அஹங்காரம்}, நினைவு ஆகிய) நான்கு ஆன்மாக்களைக் கொண்டவன் {சதுராத்மா}, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நான்கு நோக்ககளின் பிறப்பிடமாக இருப்பவன் {சதுர்ப்பாவன்}, நான்கு வேதங்களை அறிந்தவன் {சதுர்வேதவித்}, தன் பலத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியவன் {ஏகபாத்}<765-772>;(95)

உலகச் சக்கரத்தை வட்டமாகச் சுழலச் செய்பவன் {ஸமாவர்த்தன்}, உலகப் பற்றுகள் அனைத்திலும் இருந்து தொடர்பறுந்த ஆன்மா கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, வெல்லப்பட இயலாதவன் {துர்ஜயன்}, கடக்கப்பட இயலாதவன் {துரதிக்ரமன்}, அடைதற்கு மிக அரியவன் {துர்லபன்}, அணுகுதற்கரியவன் {துர்க்கமன்}, நுழைவதற்கு அரிதானவன் {துர்க்கன்}, (யோகியராலும்) இதயத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கு அரியவன் {துராவாஸன்}, (தானவர்களுக்கு மத்தியில் உள்ள) பெரும்பலமிக்கப் பகைவர்களைக் கொல்பவன் {துராரிஹா}<773-781>;(96)

அழகிய அங்கங்களைக் கொண்டவன் {சுபாங்கன்}, அண்டத்தில் உள்ள அனைத்தின் சாரமாக இருப்பவன் {லோகஸாரங்கன்}, (அண்டமெனும் துணியை நெய்வதற்குரிய) மிக அழகிய கயிறுகள் மற்றும் இழைகளைக் கொண்டவன் {ஸுதந்து}, எப்போதும் நீண்டு கொண்டிருக்கும் கயிறுகளையும், இழைகளையும் கொண்டவன் {தந்துவர்த்தகன்}, இந்திரனால் செய்யப்படும் செயல்களைச் செய்பவன் {இந்த்ரகர்மா}, பெருஞ்செயல் புரிபவன் {மஹாகர்மா}, செய்யத்தவறிய செயல்களற்றவன் {க்ருதகர்மா}, வேதங்கள் மற்றும் சாத்திரங்கள் அனைத்தையும் தொகுத்தவன் {க்ருதாகமன்}<782-789>;(97)

உயர்ந்த பிறப்பைக் கொண்டவன் {உத்பவன்}, பேரழகன் {ஸுந்தரன்}, இதயம் முழுவதும் பரிவிரக்கத்தால் நிறைந்தவன் {ஸுந்தர்}, உந்தியில் விலைமதிப்புமிக்க ரத்தினங்களைக் கொண்டவன் {ரத்நநாபன்}, சிறந்த ஞானத்தையே கண்ணாகக் கொண்டவன் {ஸுலோசநன்}, பிரம்மனாலும், அண்டத்தில் உள்ள முதன்மையானோர் பிறராலும் வழிபடத்தகுந்தவன் {அர்க்கன்}, உணவுக் கொடையாளி {வாஜஸநி}, அண்டப் பேரழிவின் போது கொம்புகளை ஏற்றவன் {ஸ்ருங்கீ}, தன் பகைவர்களை எப்போதும் மிக அற்புதமாக வெல்பவன் {ஜயந்தன்}, அனைத்தையும் அறிந்தவன், தடுக்கப்பட முடியாத ஆற்றலுடன் கூடியோரை எப்போதும் வெல்பவன் {ஸர்வவிஜ்ஜயீ}<790-799>;(98)

பொன் போன்ற அங்கங்களைக் கொண்டவன் {ஸுவர்ணபிந்து}, (கோபம், வெறுப்பு, அல்லது வேறு ஆசைகளால்) கலங்கடிக்கப்பட முடியாதவன் {அக்ஷோப்யன்}, வாக்குகள் அனைத்தையும் ஆள்வர்கள் அனைவரையும் ஆள்பவன் {ஸர்வவாகீஸ்வரேஸ்வரன்}, ஆழமான தடாகமாக இருப்பவன் {மஹாஹ்ரதன்}, ஆழ்ந்த படுகுழியாக இருப்பவன் {மஹாகர்த்தன்}, காலத்தின் ஆதிக்கத்தைக் கடந்தவன் {மஹாபூதன்}, அடிப்படை பூதங்கள் அனைத்தையும் தனக்குள் நிறுவிக் கொண்டவன் {மஹாநிதி}<800-806>;(99)

பூமியை மகிழச் செய்பவன் {குமுதன்}, குந்த மலர்களைப் போன்ற ஏற்புடைய கனிகளை அருள்பவன் {குந்தரன்}, (ராம அவதாரத்தில்) கசியபருக்கு பூமியைக் கொடையாக அளித்தவன் {குந்தன்}, பூமியின் வெப்பத்தைத் தன் மழைப்பொழிவால் தணிக்கும் மழை நிறைந்த மேகத்தைப் போல (சாங்கிய தத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) மூன்றுவகைத் துன்பங்களை அழிப்பவன் {பர்ஜந்யன்}, அனைத்து உயிரினங்களையும் தூய்மையடையச் செய்பவன் {பவநன்}, தன்னைத் தூண்ட எவரும் இல்லாதவன் {அநிலன்}, அமுதம் பருகியவன் {அமிதாசன்}, சாகாவுடல் படைத்தவன் {அம்ருதவபு}, அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்}, ஒவ்வொரு திசையிலும் முகமும் கண்களும் திரும்பப்பெற்றவன் {ஸர்வதோமுகன்}<807-816>;(100)

(மலர்கள் மற்றும் இலைகள் போன்ற காணிக்கைகளுடன்) எளிதில் வெல்லபடக்கூடியவன் {ஸுலபன்}, சிறந்த நோன்புகளைச் செய்தவன் {ஸுவ்ரதன்}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தன்}, பகைவர் அனைவரையும் வெல்பவன் {சத்ருஜித்}, பகைவர் அனைவரையும் எரிப்பவன் {சத்ருதாபநன்}, பிற மரங்களுக்கு மேலாக எப்போதும் வளரும் நெடிய ஆல மரமாக இருப்பவன் {ந்யக்ரோதன்}, புனிதமான அத்திமரமாக இருப்பவன் {உதும்பரன்}, அரச மரமாக இருப்பவன் (அல்லது, அழியாத வடிவங்களில் இருப்பது போலவே அண்டத்தில் அழியும் வடிவங்களிலும் இருப்பதன் விளைவால் நீடித்து நிற்காதவன்) {அஸ்வத்தன்}ஆந்திர நாட்டின் சாணூரனைக் கொன்றவன் {சாணூராந்த்ரநிஷூதநன்}<817-825>;(101)

ஆயிரங்கதிர்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரார்ச்சிஸ்}, (காளி, கராளி முதலிய வடிவங்களில்) ஏழு நாவுகளைக் கொண்டவன் {ஸப்தஜிஹ்வன்}, (நெருப்பின் தேவனுடன் அடையாளம் காணப்படும் விளைவால்) ஏழு தழல்களைக் கொண்டவன் {ஸப்தைதஸ்}, தன் வாகனத்தை இழுக்க ஏழு குதிரைகளைக் கொண்டவன் (அல்லது, சப்தம் என்றழைக்கப்படும் குதிரையைக் கொண்டவன்) {ஸப்தவாஹநன்}, வடிவமற்றவன் {அமூர்த்தி}, பாவமற்றவன் {அநகன்}, நினைத்தற்கரியவன் {அசிந்த்யன்}, அச்சங்கள் அனைத்தையும் விலக்குபவன் {பயக்ருத்}, அச்சங்கள் அனைத்தையும் அழிப்பவன் {பயநாசநன்}<826-834>;(102)

மிகச் சிறியவன் {அணு}, மிகப் பெரியவன் {ப்ருஹத்}, மெலிந்தவன் {க்ருசன்}, பருத்தவன் {ஸ்தூலன்}, குணங்களுடன் கூடியவன் {குணப்ருத்}, குணங்களைக் கடந்தவன் {நிர்க்குணன்}, மிகச்சிறந்தவன் {மஹாந்}, கைப்பற்றப்பட முடியாதவன் {அத்ருதன்}, (தன்னை வழிபடுபவர்களால்) எளிதில் கைப்பற்றப்படுபவன் {ஸ்வத்ருதன்}, சிறந்த முகத்தைக் கொண்டவன் {ஸ்வாஸ்யன்}, தற்செயலான உலகங்களைச் சார்ந்த மக்களைத் தன் வழித்தோன்றல்களாகக் கொண்டவன் {ப்ராக்வம்சன்}, ஐந்து அடிப்படை பூதங்கள் உள்ளடங்கிய படைப்பைச் செய்பவன் {வம்சவர்த்தநன்}<835-846>;(103)

(ஆனந்தனின் வடிவில்) கனமான சுமைகளைச் சுமப்பவன் {பாரப்ருத்}, வேதங்களில் அறிவிக்கப்பட்டவன் {கதிதன்}, யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவன் {யோகீ}, யோகியர் அனைவரின் தலைவன் {யோகீசன்}, அனைத்து ஆசைகளையும் கொடுப்பவன் {ஸர்வகாமதன்}, நாடுவோருக்கு ஆசிரமம் அளிப்பவன் {ஆஸ்ரமன்}, சொர்க்கத்தின் இன்ப வாழ்வு நிறைவடைந்து மீண்டும் இவ்வாழ்வுக்குத் திரும்பும் யோகியரை புதிதாக யோகத்தைச் செய்யச் செய்பவன் {ஸ்ரமணன்}, யோகியரின் பலன்கள் தீர்ந்தும் கூட அவர்களில் பலத்தை நிறுவுபவன் {க்ஷாமன்}, (உலக மரமாக இருந்து வேதங்களில் சந்தங்களின் வடிவில்) நல்ல இலைகளாக இருப்பவன் {ஸுபர்ணன்}, காற்றை வீசச் செய்பவன் {வாயுவாஹநன்}<847-856>;(104)

(ராமனின் வடிவில்) வில் தரித்தவன் {தநுர்த்தரன்}, ஆயுத அறிவியல் அறிந்தவன் {தநுர்வேதன்}, தண்டக் கோலாக இருப்பவன் {தண்டன்}, தண்டிப்பவன் {தமயிதா}, தண்டனைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {அதமன்}, வெல்லப்பட முடியாதவன் {அபராஜிதன்}, அனைத்துச் செயல்களையும் செய்யத்தகுந்தவன் {ஸர்வஸஹன்}, மனிதர்கள் அனைவரையும் அவரவர் கடமைகளில் நிறுவுபவன் {நியந்தா}, தன்னைப் பணியில் நிறுவ எவரும் இல்லாதவன் {நியமன்}, தன்னைக் கொல்ல யமன் எவனும் இல்லாதவன் {யமன்}<857-866>;(105)

வீரமும் ஆற்றலும் கொண்டவன் {ஸத்வவாந்}, சத்வ (நல்லியல்பின்) குணம் கொண்டவன் {ஸாத்விகன்}, வாய்மையுடன் அடையாளங்காணப் படுபவன் {ஸத்யன்}, வாய்மையிலும், அறத்திலும் அர்ப்பணிப்புள்ளவன் {ஸத்யதர்மபராயணன்}, முக்தி அடையத் தீர்மானித்தவர்களால் விரும்பப்படுபவன் (அல்லது, பேரழிவு நேரும்போது இந்த அண்டம் எவனிடம் செல்லுமோ அவன்) {அபிப்ராயன்}, தன்னை வழிபடுபவர்கள் அளிக்கும் அனைத்து வகைப் பொருட்களுக்கும் தகுந்தவன் {ப்ரியார்ஹன்}, (மந்திரங்கள், மலர்கள் மற்றும் வேறு மதிப்புமிக்கக் காணிக்கைகளால்) துதிக்கத்தகுந்தவன் {அர்ஹன்}, அனைவருக்கும் நல்லது செய்பவன் {ப்ரியக்ருத்}, அனைவரின் மகிழ்ச்சியையும் பெருக்குபவன் {ப்ரீதிவர்த்தநன்}<867-875>;(106)

ஆகாயப்பாதை கொண்டவன் {விஹாயஸகதி}, சுயப்பிரகாசத்தில் ஒளிர்பவன் {ஜ்யோதி}, பேரழகுடன் கூடியவன் {ஸுருசி}, வேள்வி நெருப்பில் இடப்படும் காணிக்கைகளை உண்பவன் {ஹுதபுக்விபு}, எங்கும் வசிப்பவன் {ரவி}, பெரும்பலம் கொண்டவன் {விரோசநன்}, சூரியனின் வடிவில் பூமியின் ஈரத்தை உறிஞ்சுபவன் {ஸூர்யன்}, பல்வேறு ஆசைகளைக் கொண்டவன், அனைத்தையும் பெறுவபன், அண்டத்தைப் பெற்றவன் {ஸவிதா}, சூரியனை கண்ணாகக் கொண்டவன் {ரவிலோசநன்}<876-885>;(107)

எல்லையற்றவன் {அநந்த}, வேள்விக் காணிக்கைகள் அனைத்தையும் ஏற்பவன் {ஹுதபுக்}, மனத்தின் வடிவில் பிரகிருதியை அனுபவிப்பவன் {போக்தா}, இன்பத்தை அளிப்பவன் {ஸுகதன்}, (அறத்திற்காகவும், அறத்தைப் பாதுகாக்கவும்) மீண்டும் மீண்டும் பிறப்பவன் {நைகதன்}, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் முதலில் பிறந்தவன் {அக்ரஜன்}, (விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதன் விளைவால்) மனத்தளர்வைக் கடந்தவன் {அநிர்விண்ணன்}, அறவோர் வழுவும்போது மன்னிப்பவன் {ஸதாமர்ஷீ}, அண்டம் நிலைக்கும் அடித்தளமாக இருப்பவன் {லோகாதிஷ்டாநன்}, மிக அற்புதமானவன் {அத்புதன்}<886-895>;(108)

தொடக்கக் காலம் முதல் இருப்பவன் {ஸநாத்}, பெரும்பாட்டன் முதலியோர் பிறப்பதற்கு முன்பே இருப்பவன் {ஸநாதந்தமன்}, பழுப்பு நிறம் கொண்டவன் (அல்லது கண்டடைபவன், அல்லது இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் தன் கதிர்களால் ஒளியூட்டுபவன்) {கபிலன்}, பெரும் பன்றியின் வடிவமேற்றவன், அனைத்தும் அழிந்த பிறகும் இருப்பவன் {கபிரவ்யயன்}, அனைத்து அருள்களையும் வழங்குபவன் {ஸ்வஸ்திதன்}, அருள்களைப் படைப்பவன் {ஸ்வஸ்திக்ருத்}, அருள்கள் அனைத்துடன் அடையாளம் காணப்படுபவன் {ஸ்வஸ்தி}, அருள்களை அனுபவிப்பவன் {ஸ்வஸ்திபுக்}, அருள்களைப் பொழிபவன் {ஸ்வஸ்திதக்ஷிணன்}<896-905>;(109)

கோபமற்றவன் {அரெளத்ரன்}, பாம்பான சேஷனின் வடிவில் மடங்கிச் சுருண்டு கிடப்பவன் {குண்டலீ}, சக்கரந்தரித்தவன் {சக்ரீ}, பேராற்றல் கொண்டவன் {விக்ரமீ}, ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் உயர்ந்த ஆணைகளால் முறைப்படுத்தப்பட்ட ஆட்சியைக் கொண்டவன் {ஊர்ஜிதசாஸநன்}, வாக்கின் துணையால் விவரிக்கப்பட இயலாதவன் {சப்தாதிகன்}, வாக்கின் உதவியால் வேதாங்கங்களில் சொல்லப்பட்டவன் {சப்தஸ்ஹன்}, மூவகைத் துன்பங்களால் பீடிக்கப்பட்டவர்களைக் குளிர்விக்கும் பனித்துளியாய் இருப்பவன் {சிசிரன்}, இருளை விலக்கும் வல்லமுடையுடன் அனைத்து உடல்களிலும் வாழ்பவன் {சர்வரீகரன்}<906-914>;(110)

கோபமற்றவன் {அக்ரூரன்}, எண்ணம், சொல் மற்றும் செயலின் மூலம் அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுவதில் திறன் படைத்தவன் {பேசலன்}, குறுகிய காலத்திற்குள் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றவல்லவன் {தக்ஷன்}, தீயோரை அழிப்பவன் {தக்ஷிணன்}, மன்னிக்கும் தன்மை கொண்ட மனிதர்களில் முதன்மையானவன் {க்ஷமிணாம்வரன்}, ஞானியர் அனைவரிலும் முதன்மையானவன் {வித்வத்தமன்}, அச்சமனைத்தையும் கடந்தவன் {வீதபயன்}, எவனுடைய பெயர்களும், சாதனைகளும் கேட்கப்படுமோ, உரைக்கப்படுமோ, அறத்திற்கு வழிவகுக்குமோ அவன் {புண்யஸ்ரவணகீர்த்தநர்}<915-922>;(111)

மயக்கம் நிறைந்த உலகப் பெருங்கடலில் இருந்து அறத்தைப் பாதகாப்பவன் {உத்தாரணன்}, தீயோரை அழிப்பவன் {துஷ்க்ருதிஹா}, அறமே ஆனவன் {புண்யன்}, தீய கனவுகள் அனைத்தையும் விலக்குபவன் {துஸ்வப்நநாசநன்}, தன்னை வழிபடுபவர்களை விடுதலைக்கான {முக்திக்கான} நல்ல பாதையில் செலுத்துவதற்காகத் தீய பாதைகள் அனைத்தையும் அழிப்பவன் {வீரஹா}, சத்வ குணத்தில் இருந்து அண்டத்தைப் பாதுகாப்பவன் {ரக்ஷணன்}, நற்பாதையில் நடப்பவன் {ஸந்தன்}, வாழ்வே ஆனவன் {ஜீவநன்}, அண்டம் முழுவதும் பரவியிருப்பவன் {பர்யவஸ்திதன்}<923-931>;(112)

எல்லையற்ற வடிவங்களைக் கொண்டவன் {அநந்தரூபன்}, எல்லையற்ற செல்வத்தைக் கொண்டவன் {அநந்தஸ்ரீ}, கோபத்தை அடக்கியவன் {ஜிதமந்யு}, அறவோரின் அச்சங்களை அழிப்பவன் {பயாபஹன்}, எண்ணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் தன்னுணர்வு உள்ளவர்களுக்கு அனைத்துப் புறங்களிலும் நீதிக்கனிகளைக் கொடுப்பவன் {சதுரஸ்ரன்}, அளவிலா ஆன்மா கொண்டவன் {கபீராத்மா}, பல்வேறு வகையில் தகுந்த செயல்களைச் செய்தோருக்கு பல்வேறு வகையான கனிகளை அளிப்பவன் {விதிசன்}, (தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு) பல்வேறு வகையில் ஆணைகளை நிறுவுபவன் {வ்யாதிசன்}, சரியான கனியுடன் கூடிய ஒவ்வொரு செயலிலும் பற்று கொண்டவன் {திசன்}<932-940>;(113)

தொடக்கமற்றவன் {அநாதி}, பூமி மற்றும் காரணங்கள் அனைத்தின் கொள்ளிடம் {பூர்ப்புவன்}, செழிப்பின் தேவியை எப்போதும் தன் புறத்தில் கொண்டவன் {லக்ஷ்மீ}, வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸுவீரன்}, அழகிய கங்கணங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {ருசிராங்கதன்}, உயிரினங்கள் அனைத்தையும் உண்டாக்குபவன் {ஜநநன்}, உயிரினங்கள் அனைத்தும் பிறப்பதற்கான மூலக் காரணன் {ஜநஜந்மாதி}, தீய அசுரர்கள் அனைவரையும் அச்சுறுத்துபவன் {பீமன்}, பயங்கர ஆற்றலைக் கொண்டவன் {பீமபராக்ரமன்}<941-949>;(114)

அடிப்படையான ஐந்து பூதங்களின் வசிப்பிடமாகவும் கொள்ளிடமாகவும் இருப்பவன் {ஆதாரநிலயன்}, அண்டப் பேரழிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் தன் தொண்டையில் விழுங்குபவன் {தாதா}, மலரைக் காண்பதைப் போல ஏற்புடைய இனிய புன்னகை கொண்டவன் (அல்லது, மலர்களின் வடிவில் புன்னகைப்பவன்) {புஷ்பஹாஸன்}, எப்போதும் விழிப்புநிறைந்தவனாக இருப்பவன் {ப்ரஜாகரன்}, உயிரினங்கள் அனைத்துக்கும் தலைமையாக நிற்பவன் {ஊர்த்வகன்}, அறவோர் செய்யும் செயல்களுடன் கூடிய ஒழுக்கம் கொண்டவன் {ஸத்பதாசாரன்}, [பரீக்ஷித் மற்றும் பிறரின் வழக்கில் நேர்ந்தது போல்] இறந்தோரை மீட்பவன்{ப்ராணதன்}, தொடக்க அசையான ஓம் ஆக இருப்பவன் {ப்ரணவன்}, அறச்செயல்கள் அனைத்தையும் விதித்தவன் {பணன்}<950-958>;(115)

பரமாத்மாவைக் குறித்த உண்மையை வெளிப்படுத்துபவன் {ப்ரமாணன்}, ஐந்து மூச்சுக்காற்றுகள் மற்றும் ஐம்புலன்களின் வசிப்பிடமாக இருப்பவன் {ப்ராணநிலயன்}, உயிரினங்களின் வாழ்வை ஆதரிக்கும் உணவாக இருப்பவன் {ப்ராணத்ருத்}, பிராணன் என்றழைக்கப்படும் உயிர் மூச்சின் துணையுடன் உயிரினங்கள் அனைத்தையும் வாழச் செய்பவன் {ப்ராணஜீவநன்},  தத்துவ அமைப்புகள் அனைத்திலும் சிறந்த தத்துவமாக இருப்பவன் {தத்வம்தத்வவித்}, அண்டத்தின் ஒரே ஆன்மாவாக இருப்பவன் {ஏகாத்மா}, பிறப்பு, முதுமை மற்றும் மரணத்தைக் கடந்தவன் {ஜந்மம்ருத்யுஜராதிகன்}<959-965>;(116)

பூ, புவ, ஸ்வ மற்றும் செய்யப்படும் பிற ஹோம காணிக்கைகளின் புனித அசைகளின் விளைவால் அண்டத்தைக் காப்பவன் {பூர்ப்புவஸ்வஸ்தரு}, பெரும்பாதுகாவலன் {தாரன்}, அனைவரின் தந்தையாக இருப்பவன் {ஸவிதா}, பெரும்பாட்டனுக்கே (பிரம்மனுக்கே) தந்தையாக இருப்பவன் {ப்ரபிதாமஹன்}, வேள்வியின் வடிவில் இருப்பவன் {யஜ்ஞன்}, (வேள்விகளில் துதிக்கப்படும் பெருந்தேவனாக அவனே இருப்பதால்) வேள்விகள் அனைத்தின் தலைவன் {யஜ்ஞபதி}, வேள்வி செய்பவன் {யஜ்வா}, வேள்விகளையே தன் அங்கங்களாகக் கொண்டவன் {யஜ்ஞாங்கன்}, வேள்விகள் அனைத்தையும் நிலைநிறுத்துபவன் {யஜ்ஞவாஹநன்}<966-975>;(117)

வேள்விகளைப் பாதுகாப்பவன் {யஜ்ஞப்ருத்}, வேள்விகளைப் படைத்தவன் {யஜ்ஞக்ருத்}, வேள்விகள் செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {யஜ்ஞீ}, வேள்விகள் அனைத்தின் வெகுமதிகளையும் அனுமதிப்பவன் {யஜ்ஞபுக்}, வேள்விகள் அனைத்தையும் நிறைவேறச் செய்பவன் {யஜ்ஞஸாதநன்}, வேள்விகளின் இறுதியில் ஆகுதிகள் முழுமையையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவை அனைத்தையும் நிறைவடையச் செய்பவன் {யஜ்ஞாந்தக்ருத்}, பலனில் விருப்பமின்றிச் செய்யப்படும் வேள்விகளோடு அடையாளங்காணப் படுபவன் {யஜ்ஞகுஹ்யன்}, அனைத்து உயிரினங்களையும் நீடிக்கச் செய்யும் உணவாக இருப்பவன் {அந்நம்}, அந்த உணவை உண்பவன் {அந்நாதன்}<976-984>;(118)

இருப்பின் காரணன் {ஆத்மயோநி}, தானாகத் தோன்றியவன் {ஸ்வயஞ்சாதன்}, திடமான பூமியைத் துளைத்துச் சென்றவன் (சென்று பாதாள லோகத்தில் ஹிரண்யாக்ஷன் மற்றும் பிறரைக் கொன்றவன்) {வைகாநன்}, சாமங்கள் பாடுபவன் {ஸாமகாயநன்}, தேவகியை மகிழ்ச்சியடையச் செய்பவன் {தேவகீநந்தநன்}, அனைத்தையும் படைப்பவன் {ஸ்ரஷ்டா}, பூமியின் தலைவன் {க்ஷிதீசன்}, தன்னை வழிபடுபவர்களின் பாவங்களை அழிப்பவன் {பாபநாசநன்}<985-992>;(119)

(பாஞ்சஜன்யம் என்ற) சங்கைத் தன் கையில் சுமப்பவன் {சங்கப்ருத்}, ஞானம் மற்றும் மாயையாலான வாளைச் சுமப்பவன் {நந்தகீ}, இடையறாமல் யுகச்சக்கரத்தைச் சுழலச் செய்பவன் {சக்ரீ}, நனவுநிலை {அகங்காரம்} மற்றும் புலன்களில் தன்னைச் செலுத்திக் கொள்பவன் {சார்ங்கதந்வா}, மிகத்திடமான புத்தியுடன் கூடிய கதாயுதத்தைக் கொண்டவன் {கதாதரன்}, தேர்ச்சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவன் {ரஇவ்வாறே எப்போதும் பாடப்பட வேண்டிய, மகிமை பொருந்திய உயர் ஆன்ம கேசவனின் சிறப்பான ஆயிரம் பெயர்களை எந்த எதிர்பார்ப்புமின்றி உனக்கு உரைத்தேன்.(121) ஒவ்வொரு நாளும் இந்தப் பெயர்களைக் கேட்பவனோ, உரைப்பவனோ இம்மையிலும், மறுமையிலும் ஒருபோதும் எந்தத் தீங்கையும் சந்திக்க மாட்டான்.(122) இஃதை ஒரு பிராமணன் செய்தால் அவன் வேதாந்தத் திறன் பெறுவதில் வெல்வான்; ஒரு க்ஷத்திரியன் செய்தால் அவன் எப்போதும் போர்க்களத்தில் வெற்றியாளனாக இருப்பான். ஒரு வைசியன் செய்தால் அவன் செழிப்படைவான். அதே வேளையில் ஒரு சூத்திரன் பெரும் மகிழ்ச்சியை அடைவான்.(123) ஒருவன் அறத்தகுதியீட்ட விரும்பினால் (இந்தப் பெயர்களைக் கேட்பதாலோ, உரைப்பதாலோ) அஃதை ஈட்டுவதில் வெல்கிறான். ஒருவன் செல்வத்தை விரும்பினால், அவன் (இவ்வழியில் செயல்பட்டு) செல்வத்தை ஈட்டுவதில் வெல்வான். புலனின்பங்களில் ஆசை கொண்ட மனிதனும் கூட, ஆனைத்து வகை இன்பங்களையும் அனுபவிப்பதில் வெல்கிறான். சந்ததியை விரும்பும் மனிதன் (இவ்வொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம்) சந்ததியை அடைகிறான்.(124)

எந்த மனிதன், அவனிடம் முழுமையாகத் திருப்பப்பட்ட இதயத்துடன் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, பக்தியுடனும், விடாமுயற்சியுடனும், ஒவ்வொரு நாளும் வாசுதேவனின் இந்த ஆயிரம் பெயர்களையும் சொல்வானோ(125) அவன் பெரும்புகழ், உற்றார் உறவினருக்கு மத்தியில் திறன்மிக்க நிலை, நீடித்த செழிப்பு ஆகியவற்றையும், இறுதியாக அவனுக்கான உயர்ந்த நன்மையை (அவனுக்கான உயர்ந்த நன்மையான முக்தியையே) அடைவதிலும் வெல்கிறான்.(126) அத்தகைய மனிதன் எந்நேரத்திலும் அச்சமடையாதவனாகப் பேராற்றலையும் பெரும் சக்தியையும் கொண்டிருப்பான். நோய் ஒருபோதும் அவனைப் பீடிக்காது; நிறத்தில் காந்தி, பலம், அழகு, சாதனைகள் ஆகியன அவனுடையவையாகின்றன.(127) நோயாளி சுகம்பெறுவான்; துன்பங்களில் பீடிக்கப்படுபவன் அவற்றில் இருந்து விடுபடுவான், பேரிடரில் மூழ்கியவன் அதனிலிருந்து விடுபடுவான்.(128) அந்த முதன்மையானவனின் ஆயிரம் பெயர்களை உரைப்பதன் மூலம், அவனது புகழை பக்தியுடன் பாடும் மனிதன், சிரமங்கள் அனைத்தையும் விரைவாகக் கடப்பதில் வெல்கிறான்.(129) வாசுதேவனைப் புகலிடமாகக் கொண்டவனும், அவனிடம் பக்தி கொண்டவனுமான மனிதன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நித்திய பிரம்மத்தை அடைகிறான்.(130)

வாசுதேவனிடம் பக்தி கொண்டோர் ஒருபோதும் எத்தீங்கையும் அடைய மாட்டார்கள். அவர்கள், பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் ஆகிய அச்சங்களில் இருந்து விடுபடுகிறார்கள்.(131) பக்தியுடனும், நம்பிக்கையுடனும் (வாசுதேவனின் ஆயிரம் பெயர்கள் அடங்கிய) இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் ஒரு மனிதன் ஆன்ம இன்பம், மன்னிக்கும் இயல்பு, செழிப்பு, புத்தி, நினைவு மற்றும் புகழ் ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(132) அறம் சார்ந்த முதன்மையான மனிதர்களான அவர்களிடம் கோபமோ, பொறாமையோ, பேராசையோ, தீய புத்தியோ ஒருபோதும் தோன்றாது.(133)

சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் வானம், திசைப்புள்ளிகள், பூமி, பெருங்கடல் ஆகியவற்றுடன் கூடிய வெளியானது உயர் ஆன்ம வாசுதேவனின் ஆற்றலாலேயே ஆதரவடைந்து நிலைநிறுத்தப்படுகிறது.(134) தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடனும் கூடிய மொத்த அண்டமும் கிருஷ்ணனின் ஆளுகையின் கீழே இருக்கிறது.(135) புலன்கள், மனம், புத்தி, உயிர் {சத்வ குணம்}, சக்தி {வன்மை}, பலம் மற்றும் நினைவு ஆகியன வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன. உண்மையில், க்ஷேத்திரம் என்றழைக்கப்படும் இவ்வுடலும், க்ஷேத்திரத்தை அறிபவன் என்றழைக்கப்படும் புத்தியுடன் கூடிய ஆன்மா ஆகியவையும் வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(136) சாத்திரங்களில் உள்ள காரியங்கள் அனைத்திலும் (நடைமுறைகள் உள்ளடங்கிய) ஒழுக்கமே முதன்மையானது எனச் சொல்லப்படுகிறது. அறம் ஒழுக்கத்தையே தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மங்கா புகழ் கொண்ட வாசுதேவன் அறத்தின் தலைவனாகச் சொல்லப்படுகிறான்.(137)

முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள், (அடிப்படை) பெரும்பூதங்கள், உலோகங்கள், உண்மையில், அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டம் முழுவதும் நாராயணனிலிருந்தே உதித்தது.(138) யோகம், சாங்கிய தத்துவம், ஞானம், அனைத்து வகை இயந்திரக் கலைகள், வேதங்கள், பல்வேறு வகைச் சாத்திரங்கள் என அனைத்தும் ஜனார்த்தனனிலிருந்தே உண்டாகின.(139) விஷ்ணு, பல்வேறு வடிவங்களில் பரவியிருக்கும் ஒரே பெரும்பொருளாக இருக்கிறான். மூவுலகங்களையும் மறைப்பவனும், அனைத்துப் பொருட்களின் ஆன்மாவுமான அவன் அவை அனைத்தையும் அனுபவிக்கிறான். அவனது மகிமை குறைவறியாதது, அவன் (அண்டத்தின் உயர்ந்த தலைவனாக) அதை அனுபவிக்கிறான்.(140) சிறப்புமிக்க விஷ்ணுவைப் புகழ்வதும், வியாசரால் தொகுக்கப்பட்டதுமான இந்தப் பாடல், உயர்ந்த மகிழ்ச்சியையும், உயர்ந்த நன்மையையும் (முக்தியையும்) அடைய விரும்பும் மனிதனால் பாடப்பட வேண்டும்.(141) பிறப்பற்ற தேவனும், சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவனும், அண்டத்திற்கு மூலமாகவோ, காரணமாகவோ இருப்பவனும், சிதைவறியாதவனும், பெரியவையும், தாமரை இதழ்களைப் போன்றவையுமான கண்களைக் கொண்டவனுமான அந்த அண்டத் தலைவனை வழிபட்டுத் துதிப்பவர்கள் எந்த ஏமாற்றத்தையும் ஒருபோதும் சந்திப்பதில்லை” என்றார் {பீஷ்மர்}.(142)தாங்கபாணி}, கலங்கடிக்கப்பட முடியாதவன் {அஷோப்யன்}, அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவன் {ஸர்வப்ரஹரணாயுதன்}<993-1000>[1].(120) ஓம், அவனை வணங்குகிறேன்[2].

சாவித்ரி மந்திரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 150-தேவர்கள், முனிவர்கள், மன்னர்கள் மற்றும் பலரின் பெயர்கள் அடங்கிய சாவித்திரி மந்திரத்தை {காயத்ரியை} யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும்ஞானியே, ஓ! ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரே, ஒவ்வொரு நாளும் சொல்வதன் மூலம் ஒருவன் பெருமளவு அறத்தகுதிக்குரிய பலன்களை ஈட்டச் செய்யும் மந்திரம் எது?(1) பயணம் புறப்படும்போதோ, புதிய கட்டடத்திற்குள் நுழையும்போதோ, எந்தச் செயலையும் செய்யும்போதோ, தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகளின் போதோ சொன்னால் வெற்றியை உண்டாகும் மந்திரம் எது?(2) உண்மையில் வேதங்களுக்கு இணக்கமாக, தீய ஆதிக்கங்கள் அனைத்தையும் தணிக்கவோ, செழிப்பு, அல்லது வளர்ச்சிக்கு வழிவகுக்கவோ, தீமையிலிருந்து பாதுகாக்கவோ, பகைவர்களை அழிக்கவோ, அச்சங்களை விலக்கவோ உரிய மந்திரம் எது?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, வியாசரால் அறிவிக்கப்பட்ட அந்த மந்திரத்தைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. சாவித்ரியால் {சூரியனால்} விதிக்கப்பட்டிருக்கும் அது பெருஞ்சிறப்பு வாய்ந்ததாகும். அஃது ஒரு மனிதனிடம் இருக்கும் பாவங்கள் அனைத்தையும் உடனே தூய்மையாக்கவல்லதாகும்.(4) ஓ! பாவமற்றவனே, அந்த மந்திரத்தின் விதிகளைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்மையில், ஓ! பாண்டு மகன்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்த விதிகளைக் கேட்பதன் மூலம் ஒருவன் தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைகிறான்.(5) அம்மந்திரத்தைப் பகலும், இரவும் உரைப்பவன் பாவத்தால் ஒருபோதும் களங்கமடையமாட்டான். அந்த மந்திரத்தை உனக்கு இப்போது உரைக்கப்போகிறேன். குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(6) உண்மையில், ஓ! இளவரசே, இதைக் கேட்கும் மனிதன் நீண்ட வாழ்நாளை அடைந்து, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்து, இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தில் திளைப்பான்.(7) ஓ! மன்னா, க்ஷத்திரியக் கடமைகளின் நடைமுறையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வாய்மை நோன்பை {சத்திய விரதத்தை} நிலையாக நோற்றவர்களுமான அரசமுனிகளில் முதன்மையானவர்களால் ஒவ்வொரு நாளும் இம்மந்திரம் உரைக்கப்பட்டது.(8) உண்மையில், ஓ! மன்னர்களில் புலியே, புலனடக்கத்துடனும், ஆன்ம அமைதியுடனும் ஒவ்வொரு நாளும் இந்த மந்திரத்தைச் சொல்லும் ஏகாதிபதிகள் ஒப்பற்ற செழிப்பை அடைவதில் வெல்வார்கள்.(9)

உயர்ந்த நோன்புகளைக் கொண்ட வசிஷ்டரையும், வேதப்பெருங்கடலான பராசரரையும் மதிப்புடன் வணங்குகிறேன். பெரும் நாகனான அனந்தனை வணங்குகிறேன். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் மற்றும் மங்கா மகிமை கொண்ட அனைவரையும் வணங்குகிறேன்.(10) முனிவர்களையும், உயர்ந்தவற்றில் உயர்ந்தவனும், முதன்மையானோர் அனைவருக்கும் வரங்களை அளிப்பவனுமான தேவதேவனை வணங்குகிறேன். ஆயிரந்தலைகளைக் கொண்டவனும், மங்கலமிக்கவனும், ஆயிரம் பெயர்களைக் கொண்டவனுமான ஜனார்த்தனனை வணங்குகிறேன்.(11)

அஜன் ஏகபாத் {அஜைகபாத்}, அஹிர்ப்புத்நியன், வெல்லப்பட இயலாத பிநாகி, ருதன், பித்ருரூபன், திரியம்பகன், மஹேஸ்வரன்,(12) விருஷாகபி, சம்பு, ஹவனன், ஈஸ்வரன் என எண்ணிக்கையில் பதினொருவராக {11} உள்ள இவர்கள் உலகங்கள் அனைத்தின் தலைவர்களாகக் கொண்டாடப்படும் ருத்திரர்களாவர்.(13) இந்தப் பதினோரு உயர் ஆன்மாக்களே (வேதங்களின்) சதருத்ரத்தில் நூற்றுவராகக் குறிப்பிடப்படுகின்றனர்.

அம்சன், பகன், மித்ரன், வருணன், தாதா, அர்யமா, ஜயந்தன், பாஸ்கரன்,(14) த்வஷ்டா, பூஷா, இந்திரன், விஷ்ணு ஆகியோர் பன்னிருவராவர். ஸ்ருதி அறிவிப்பது போலக் கசியபரின் மகன்களான இந்தப் பன்னிருவரும் {12} ஆதித்யர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.(15)

தரன், துருவன், ஸோமன், ஸாவித்ரன், அநிலன், அநலன், பிரத்யூஷன், பிரபாஸன் ஆகியோர் சாத்திரங்களில் சொல்லப்படும் எட்டு {8} வசுக்களாவர் {அஷ்டவசுக்களாவர்}.(16)

நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அசுவினி இரட்டையராகச் {2} சொல்லப்படுகின்றனர். இவ்விருவரும் மார்த்தாண்டனின் {சூரியனின்} மகன்களாவர், அவனது மனைவியான ஸம்ஜ்ஞாதேவியின் மூக்கில் இருந்து இவர்கள் வெளிவந்தனர்.(17)

இனி இவ்வுலகில் செய்யும் அனைத்து செயல்களுக்கும் சாட்சிகளாக இருப்போரின் பெயர்களை நான் சொல்லப் போகிறேன்.(18) தேவர்களில் தலைவர்களான அவர்கள் புலப்படாத நிலையில் இருந்தாலும் அனைத்தையும் காண்கின்றனர். உண்மையில், அவர்கள் அனைத்து உயிரினங்களும் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் காண்கின்றனர். அவர்கள் மிருத்யு, காலன்,(19) விஷ்வேதேவர்கள், வடிவங்களுடன் கூடிய பித்ருக்கள், தவங்களையே செல்வமாகக் கொண்ட பெரும் முனிவர்கள், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவர்கள், மற்றும் தவங்கள், முக்தி ஆகியவற்றில் அர்ப்பணிப்பு கொண்டோர் ஆகியோராவர்.(20) இவர்கள் தங்கள் பெயர்களைச் சொல்லும் மனிதர்களுக்குப் பல்வேறு வகை நன்மைகளைச் செய்கின்றனர். உண்மையில் தெய்வீக சக்தி கொண்ட அவர்கள், பெரும்பாட்டனால் உண்டாக்கப்பட்ட பல்வேறு இன்ப உலகங்களை அத்தகைய மனிதர்களுக்கு அளிக்கிறார்கள்.(21) அனைத்து உலகங்களிலும் வசித்திருக்கும் அவர்கள், அங்கு நடைபெறும் செயல்களைக் கவனமாகக் குறித்துக் கொள்கின்றனர். உயிரினங்கள் அனைத்தின் தலைவர்களான அவர்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் எப்போதும் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அபரிமிதமான அளவில் ஈட்டுபவனாகிறான்.(22) அவன் மறுமையில் அண்டத்தின் தலைவனால் உண்டாக்கப்பட்ட பல்வேறு மங்கல, இன்ப உலகங்களை அடைகிறான்.(23)

அனைத்து உயிரினங்களின் தலைவர்களான இந்த முப்பத்துமூவர்[1], பேருடல் படைத்த நந்தீஸ்வரன், காளையைத் தன் கொடிச் சின்னமாகக் கொண்ட உயர்ந்தவன், கணேஸ்வரன் என்றழைக்கப்படுபவனின் தொண்டர்கள் மற்றும் துணைவர்களாக இருக்கும் உலக ஆட்சியாளர்கள் அனைவர், சௌமியர்கள், ரௌத்திரர்கள், யோகிகள் என்றழைக்கப்படுபவர்கள், பூதங்கள் என்றறியப்படுபவர்கள்,(24,25) ஆகாயத்து ஒளிக்கோள்கள், ஆறுகள், வானம், பறவைகளின் இளவரசன் (கருடன்), தவங்களின் விளைவால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அசையும் மற்றும் அசையாத வடிவம் கொண்டிருப்பவர்கள்,(26) இமவான் {இமய மலை}, அனைத்து மலைகள், நான்கு பெருங்கடல்கள், பவனின் ஆற்றலுக்கு இணையான ஆற்றலைக் கொண்ட அவனது தொண்டர்கள்,(27) எப்போதும் வெற்றியாளனாக இருக்கும் சிறப்புமிக்க விஷ்ணு, ஸ்கந்தன், அம்பிகை ஆகிய இந்தப் பெரும் ஆன்மாக்களின் பெயர்களைப் புலனடக்கத்துடன் சொல்லும் ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(28)இனி மானவர்கள் என்றறியப்படும் முதன்மையான முனிவர்களின் பெயர்களை நான் சொல்லப் போகிறேன். அவர்கள் யவக்ரீதர், ரைப்யர், அர்வாவஸு, பராவஸு;(29) ஔஷிஜர், கக்ஷீவான், அங்கிரஸின் மகனான பலர் {பலன்} ஆகியோராவர். பிறகு, மேதாதியின் மகனான கண்வரும், பரிஷதரும் வருகின்றனர்.(30) பிரம்ம சக்தி கொண்ட இவர்கள் அனைவரும் அண்டத்தைப் படைத்தவர்களாக (சாத்திரங்களில்) சொல்லப்படுகின்றனர். ருத்திரன், அநலன் மற்றும் வசுக்களில் இருந்து இவர்கள் உண்டானார்கள். இவர்களின் பெயர்களைச் சொல்வதால் மக்கள் பெரும் நன்மைகளை அடைகிறார்கள்.(31) உண்மையில், பூமியில் நற்செயல்களைச் செய்யும் மக்கள், தேவர்களுடன் சொர்க்கத்தில் இன்புற்றுத் திளைக்கிறார்கள். இம்முனிவர்களே இந்திரனின் புரோகிதர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிழக்கில் வாழ்கிறார்கள்.(32) குவிந்த கவனத்துடன் இம்முனிவர்களின் பெயர்களைச் சொல்லும் மனிதன், இந்திரலோகத்திற்கு உயர்வதிலும், அங்கே பெரும் கௌரவங்களை அடைவதிலும் வெல்கிறான்.(33)

உன்முசு, பிரமுசு, பெருஞ்சக்தி கொண்ட ஸ்வஸ்தியாத்ரேயர், திருடவ்யர், ஊர்த்தவபாஹு, திரணஸோமாங்கிரஸ்,(34) மித்ராவருணனின் மகனும், பெருஞ்சக்தி கொண்டவருமான அகஸ்தியர் ஆகிய எழுவரும் இறந்தோரின் மன்னனான யமனின் ரித்விஜர்களாகத் தென் பகுதியில் வசிக்கின்றனர்.(35)

திருடேயு, ருதேயு, பெரும்புகழ் கொண்ட பரிவ்யாதர், சூரியனின் காந்தியுடன் கூடியவர்களான ஏகதர், திவிதர், திரிதர் ஆகியோர்,(36) அறம் சார்ந்த அத்ரியின் மகனான ஸாரஸ்வதர் ஆகிய எழுவரும் வருணனின் பெரும் வேள்வியில் ரித்விஜர்களாகச் செயல்பட்டனர். இவர்கள் அனைவரும் மேற்குப் பகுதியில் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டுள்ளனர்.(37)

அத்ரி, சிறப்புமிக்க வசிஷ்டர், பெரும் முனிவர் கசியபர், கோதமர், பரத்வாஜர், குசிகனின் மகனான விஷ்வாமித்திரர்,(38) பெரும் சக்தி கொண்டவரும், கடுமை நிறைந்தவரும், ரிசீகரின் மகனுமான ஜமதக்னி ஆகிய இவர்கள் எழுவரும், கருவூலத்தலைவனின் {குபேரனின்} ரித்விஜர்களாக வடக்குப்பகுதியில் வசிக்கின்றனர்.(39)

எத்திசையிலும் அடைபடாமல் அனைத்துத் திசைகளிலும் வாழும் வேறு முனிவர்கள் எழுவர் இருக்கின்றனர். மனிதர்களுக்குப் புகழையும் அவர்களுக்கான நன்மைகள் யாவையும் கொடுக்கும் அவர்கள், உலகங்களைப் படைத்தவர்களாகப் பாடப்படுகின்றனர்.(40)

தர்மன், காமன், காலன், வஸு, வாஸுகி, அனந்தன், கபிலன் ஆகிய இவ்வேழு பேரும் {நாகர்களும்} உலகத்தைத் தாங்குபவர்களாக இருக்கின்றனர்.(41) ராமர் {பரசுராமர்}, வியாசர், துரோணரின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோரே (முதன்மையானவர்களாகக் கருதப்படும்) வேறு முனிவர்களாவர். இந்தப் பெரும் முனிவர்களே ஒவ்வொன்றிலும் ஏழேழு பேரைக் கொண்ட ஏழு கூட்டங்களாகப் பிரிந்திருக்கின்றனர்[2].(42) மனிதர்கள் அனுபவிக்கும் அமைதியையும் நன்மையையும் உண்டாக்குபவர்கள் பல்வேறு திசைப்புள்ளிகளின் ஆட்சியாளர்களாக {திக்பாலர்களாகச்} சொல்லப்படுகின்றனர். இம்முனிவர்கள் எந்தெந்தெந்த திசையில் இருக்கின்றனரோ அந்த அந்தத் திசையை நோக்கி ஒருவன் வழிபட வேண்டும்.(43)உயிரினங்களைப் படைத்தவர்களான அம்முனிவர்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்துபவர்களாகக் கருதப்படுகிறார்கள். கடுந்தவங்களைச் செய்தவர்களும், பெரும் தற்கட்டுப்பாடுடையவர்களுமான ஸம்வர்த்தர், மேருஸாவர்ணர், அறம்சார்ந்தவரான மார்க்கண்டேயர், ஸாங்கியர், யோகர், நாரதர், துர்வாஸர் ஆகியோர் மூவுலகங்களிலும் கொண்டாடப்படுபவர்களாக இருக்கிறார்கள்.(45) ருத்திரனுக்கு இணையான வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்கள் பிரம்ம லோகத்தில் வாழ்கின்றனர். அவர்களின் பெயர்களை மதிப்புடன் சொல்லும் மகனற்ற மனிதன் மகனை அடைகிறான், ஓர் ஏழை செல்வத்தை அடைகிறான்.(46) உண்மையில் அவர்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(47)

பூமி முழுவதும் ஆட்சி செய்த பேரரசனும், ஏகாதிபதிகளில் முதன்மையான பிராஜபதிக்கு இணையானவனும், வேனனின் மகனும், கொண்டாடப்பட்ட மன்னனுமான பிருவின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். (அன்பினாலும், பாசத்தினாலும்) பூமி {பூமாதேவி} அவனது மகளானாள் {எனவே, அவள் பிருத்வி என்றழைக்கப்பட்டாள்}. சூரிய குலத்தைச் சேர்ந்தவனும், ஆற்றலில் மஹேந்திரனுக்கு இணையானவனுமான புரூரவனின் பெயரும் ஒருவனால் சொல்லப்பட வேண்டும்.(48) இளையின் மகனான அவன் மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டவனாக இருந்தான். உண்மையில், புதனின் அன்புக்குரிய மகனான அவனின் {புரூரவனின்} பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(49) மூவுலகங்களில் கொண்டாடப்படும் வீரனான பரதனின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். கிருத யுகத்தில் மகத்தான கோமேத வேள்வியில் {கவாமயனயாகம்} தேவர்களைத் துதித்து, மஹாதேவனுக்கு இணையானவனாக இருந்த பெரும் காந்தி கொண்ட ரந்திதேவனின் பெயரும் சொல்லப்பட வேண்டும். தவங்களுடன் கூடியவனும், மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்டவனும், உலகின் அனைத்து வகை நன்மைகளுக்கும் தோற்றுவாயாக இருந்தவனுமான அவன் அண்டத்தை வென்றவனாக இருந்தான்.(51)

பெரும்புகழைக் கொண்ட அரச முனி ஸ்வேதனின்[3] பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். மஹாதேவனை நிறைவடையச் செய்த அவனுக்காகவே அந்தகன் கொல்லப்பட்டான்.(52) சொர்க்கத்தில் பாய்ந்த புனித ஆற்றை {கங்கை ஆற்றை} மஹாதேவனுடைய அருளின் மூலம் (மனிதர்களின் பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்க பூமியில் பாயச்செய்ய {அவ்வாற்றைப்}) கீழே கொண்டு வந்தவனும், பெரும்புகழுடைய அரசமுனியுமான பகீரதனின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(53) பகீரதனே, சகரனின் அறுபதாயிரம் மகன்களின் சாம்பலைக் கங்கையின் புனித நீரில் நனையச் செய்து, அவர்களைப் பாவத்தில் இருந்து மீட்டவனாவான். உண்மையில், நெருப்பைப் போன்ற சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவர்களும், பேரெழில்வாய்ந்தவர்களும், உயர்ந்த சக்தியைக் கொண்டவர்களுமான இவர்கள் அனைவரின் பெயர்களையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(54) அவர்களில் சிலர் அச்சந்தரும் வடிவங்களைக் கொண்டவர்களாகவும், பெரும்வலிமை கொண்டவர்களாகவும் இருந்தனர். உண்மையில், ஒருவன் புகழைப் பெருக்கவல்லவர்களான தேவர்கள், முனிவர்கள், மற்றும் அண்டத்தின் தலைவர்களான மன்னர்கள் ஆகியோரின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(55) சாங்கியம், உயர்ந்ததில் உயர்வான யோகம், ஹவ்யம், கவ்யம், ஸ்ருதிகள் அனைத்தின் புகலிடமான பரப்பிரம்மம் ஆகியவை,(56) அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் நன்மைகளைச் செய்யவல்ல ஊற்றுக்கண்களாகச் சொல்லப்பட்டுள்ளன. புனிதமானவையும், பாவத்தைத் தூய்மை செய்பவையுமான இவை மிக உயர்வாகச் சொல்லப்பட்டுள்ளன. நோய்கள் அனைத்தையும் சீராக்கும் மருந்துகளாகவும், அனைத்துச் செயல்களிலும் வெற்றியைத் தருபவையாகவும் இவையே இருக்கின்றன[4].(57)ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒருவன் புலனடக்கத்துடன் காலையும், மாலையும் இப்பெயர்களைச் சொல்ல வேண்டும். இவர்களே பாதுகாப்பவர்கள். இவர்களே மழையைப் பொழியச் செய்கிறார்கள். இவர்களே ஒளிர்ந்து ஒளியையும், வெப்பத்தையும் தருகிறார்கள். இவர்களே {காற்றை} வீசச் செய்கிறார்கள் . இவர்களே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறார்கள்.(58) இவர்களே அண்டத்தின் தலைவர்களாகவும், அனைத்தையும் சாதிப்பதில் உயர்ந்த புத்தியைக் கொண்டவர்களாகவும், மன்னிக்கும் தன்மை கொண்டவர்களாகவும், புலன்களை முற்றாக ஆள்பவர்களாகவும் கருதப்படுகிறார்கள். உண்மையில் இவர்களே மனிதர்களுக்கு நேரும் தீமைகள் அனைத்தையும் அகற்றுபவர்கள் என்று சொல்லப்படுகிறது.(59) நல்ல மற்ற தீய செயல்கள் அனைத்தின் சாட்சிகளாக இருப்பவர்கள் இந்த உயர் ஆன்மாக்களே. ஒருவன் தனக்கான நன்மைகள் அனைத்தையும் நிச்சயம் அடைய முடியும் என்பதால் அவன் காலையில் எழுந்ததும் இவர்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(60)

இவர்களின் பெயர்களைச் சொல்பவன் நெருப்பு மற்றும் கள்வர்களிடம் உள்ள அச்சங்களில் இருந்து விடுபடுவான். அத்தகைய மனிதன் எத்தடையாலும் தடுக்கப்படமாட்டான். இந்த உயர் ஆன்மாக்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் அனைத்து வகைத் தீய கனவுகளில் இருந்தும் விடுபடுவான்.(61) அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடும் அத்தகைய மனிதர்கள் மங்கலமான குடும்பங்களில் பிறக்கிறார்கள். புலனடக்கத்துடன் கூடிய மறுபிறப்பாளன், வேள்விகளின் தொடக்கச் சடங்குகள் செய்யப்படும்போது இந்தப் பெயர்களைச் சொல்வதன் விளைவால்,(62) அறவோனாகவும், ஆன்ம கல்வியில் அர்ப்பணிப்புள்ளவனாகவும், மன்னிக்கும் தன்மை {பொறுமை}}, தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டவனாகவும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனாகவும் ஆகிறான். நோயால் பீடிக்கப்பட்ட மனிதன் இவற்றைச் சொன்னால், நோயின் வடிவத்தில் இருக்கும் தன் பாவத்தில் இருந்து அவன் விடுபடுகிறான்.(63) ஒரு வீட்டிற்குள் இவற்றைச் சொல்வதன் மூலம், அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைத்து வகைத் தீமைகளில் இருந்தும் விடுபடுவார்கள். வயலில் இவற்றைச் சொல்வதன் மூலம், அனைத்து வகைப் பயிர்களும் செழித்து வளரும்.(64)

பயணத்திற்குப் புறப்படும் சமயத்திலோ, ஒருவன் தன் வீட்டில் இருந்து வெளியே இருக்கும் போதோ அவற்றை உரைத்தால் அவன் நற்பேற்றை அடைவான். இந்தப் பெயர்கள் ஒருவனுடைய சுயத்திற்கும், தன் பிள்ளைகள் மனைவிகள், செல்வம்,(65) அவனுடைய வித்துகள் மற்றும் செடிகளுக்கும் பாதுகாப்பைத் தரும். போரிடும் சமயத்தில் இப்பெயர்களை உரைக்கும் க்ஷத்திரியன் தன் பகைவர்கள் அழிவடைவதையும், தானும், தன் தரப்பும் நற்பேற்றால் மகுடம் சூடப்படுவதையும் காண்பான். தேவர்கள் மற்றும் பித்ருக்களை மதிக்கும் வகையில் சடங்குகளைச் செய்யும்போது இந்தப் பெயர்களை உரைக்கும் மனிதன், வேள்வியின் ஹவ்யம் மற்றும் கவ்யத்தைப் பித்ருக்களும், தேவர்களும் உண்பதற்கு உதவி செய்தவனாவான். இவற்றை உரைக்கும் மனிதன், நோய்கள், இரைதேடும் விலங்குகள், யானைகள் மற்றும் கள்வர்களிடம் கொண்ட அச்சத்தில் இருந்து விடுபடுவான்.(66-68) அவனுடைய துன்பச் சுமை குறைந்து அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுதலையடைகிறான்.

சிறப்புவாய்ந்த இந்த சாவித்ரி மந்திரத்தை {காயத்ரி மந்திரத்தை} ஓடத்திலோ, வாகனத்திலோ, மன்னர்களின் சபைகளிலோ சொல்வதன் மூலம் ஒருவன் உயர்ந்த வெற்றியை அடைகிறான். எங்கே இந்த மந்திரஙகள் உரைக்கபடுகின்றனவோ, அங்கே நெருப்பும் மரத்தை எரிக்காது.(69,70) அங்கே பிள்ளைகள் இறக்கமாட்டார்கள், பாம்புகள் வசிக்காது. உண்மையில், அத்தகைய இடங்களில் மன்னன், பிசாசங்கள், அல்லது ராட்சசர்களிடம் இருந்து எந்த அச்சமும் நேராது[5].(71) உண்மையில் இந்த மந்திரங்களைச் சொல்லும் மனிதனுக்கு, நெருப்பிடமோ, நீரிடமோ, காற்றிடமோ, இரைதேடும் விலங்குகளிடமோ எந்த அச்சமும் நேராது.(72) முறையாக உரைக்கப்படும் இந்த சாவித்திரி மந்திரங்கள் அமைதியை அளித்து, நான்கு வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} நன்மையைச் செய்யும். மதிப்புடன் அவற்றை உரைக்கும் மனிதர்கள் அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபட்டு, இறுதியாக உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(73) பிரம்மத்தின் வடிவிலான இந்த சாவித்திரி மந்திரங்களை உரைப்பதன் மூலம் அடையப்படும் விளைவுகள் இவையே. பசுக்களின் மத்தியில் வைத்து இந்த மந்திரங்களை உரைக்கும் மனிதன், அந்தப் பசுக்கள் கனிநிறைந்தவையாக இருப்பதைக் காண்பான்.(74) பயணம் புறப்பட்டாலோ, பயணத்தில் இருந்து வீடு திரும்பினாலோ ஒருவன் ஒவ்வொரு தருணத்திலும் இந்த மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.(75)முனிவர்கள் கொண்டுள்ள பெரும் புதிரை {ரகசியத்தை} உள்ளடக்கிய இந்த மந்திரங்கள், அமைதியாக உரைக்கப்படும்போது மிக உயர்ந்தவையாகின்றன. வேள்வித்தீயில் ஆகுதி ஊற்றி முறையாக உரைப்போருக்கு இந்த மந்திரங்கள் இவ்வாறே அமைகின்றன[6].(76) நான் உனக்குச் சொன்னவை பராசரருடைய சிறந்த கருத்துகளாகும். இவை முற்காலத்தில் சக்ரனிடம் சொல்லப்பட்டன. வாய்மை, அல்லது நித்திய பிரம்மத்தைப் பிரதிபலிக்கும் அதனை நான் உனக்கு முழுமையாக உரைத்திருக்கிறேன்.(77) அனைத்து உயிரினங்களின் இதயமாக அமைந்திருக்கும் இஃது உயர்ந்த ஸ்ருதியாக இருக்கிறது. சோம குல, சூரிய குல இளவரசர்களான ராகவர்கள் மற்றும் குரவர்கள் {குரு வம்சத்துக் கௌரவர்கள்} அனைவரும்,(78) தங்களைத் தூய்மை செய்து கொண்டு ஒவ்வொரு நாளும் இந்த மந்திரங்களைச் சொல்கிறார்கள்.இவையே மனித இனத்தின் உயர்ந்த கதியாக அமைகிறது. தேவர்கள், ஏழு முனிவர்கள் மற்றும் துருவனின் பெயர்களை ஒவ்வொரு நாளும் உரைப்பதால் அனைத்து தொல்லைகளிலிருந்தும், துன்பங்களில் இருந்தும் தப்பிக்கும் வழி ஏற்படுகிறது. உண்மையில், இவ்வாறு உரைப்பது ஒருவனைத் துன்பத்தில் இருந்து விரைவாக மீட்கிறது.(79)பழங்காலத்து தவசிகளான கசியபர், கோதமர், பிருகு, அங்கிரஸ், அத்ரி, சுக்ரர், அகஸ்தியர், பிருஹஸ்பதி ஆகியோரும், மறுபிறப்பாள முனிவர்கள் அனைவரும் இந்த மந்திரங்களைத் துதித்தனர். பரத்வாஜரின் மகனால் அங்கீகரிக்கப்பட்ட இம்மந்திரங்கள் ரிசீகரின் மகன்களால் அடையப்பட்டன. உண்மையில் அவற்றை வசிஷ்டரிடம் இருந்து மீண்டும் அடைந்த சக்ரனும், வசுக்களும் தானவர்களிடம் போரிடச் சென்று அவர்களை அடக்கினர்.(80) பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடிய நூறு பசுக்களைக் கல்விமானும், வேதங்களை நன்கறிந்தவனுமான ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதனும், ஒவ்வொரு நாளும் பாரதக் கதையைத் தன் வீட்டில் உரைக்கச் செய்யும் மனிதனும் ஒரே பலன்களை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(81) பிருகுவின் பெயரைச் சொல்வதன் மூலம் ஒருவனிடம் அறம் பெருகுகிறது. வசிஷ்டரை வணங்குவதன் மூலம் அவனது சக்தி பெருகுகிறது. ரகுவை வணங்குவதன் மூலம் அவன் போர்க்களங்களில் வெற்றிவாகை சூடுகிறான். அசுவினிகளின் புகழைச் சொல்வதன் மூலம் ஒருவன் நோய்களில் இருந்து விடுபடுகிறான்.(82) ஓ! மன்னா, இவ்வாறு நித்திய பிரம்மத்திற்கு ஒப்பான சாவித்திரி மந்திரங்களை நான் உனக்குச் சொன்னேன். வேறேதும் என்னிடம் கேட்ட விரும்பினால், நீ அவ்வாறே செய்வாயாக. ஓ! பாரதா நான் உனக்குப் பதிலளிப்பேன்” என்றார் {பீஷ்மர்}.(83)

பிராமண மேன்மை! – அநுசாஸனபர்வம் பகுதி – 151-பிராமணர்களின் மேன்மையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“வழிபடத்தகுந்தவர் எவர்? நாம் வணங்க வேண்டியவர் எவர்? உண்மையில், எவரிடமும் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? ஓ! பாட்டா, எந்தெந்த வகையினரிடம் எந்தெந்த ஒழுங்கு நடைமுறை களங்கமற்றதாகக் கருதப்படுகிறது?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“பிராமணர்களை அவமதிப்பது, தேவர்களையே அவமதிப்பதாகும். ஓ! யுதிஷ்டிரா, பிராமணர்களை வணங்குவதன் மூலம் ஒருவன் எந்தக் களங்கத்தையும் இழைப்பதில்லை.(2) உண்மையில் அவர்கள் வழிபடத்தகுந்தவர்களாவர். அவர்கள் நாம் வணங்கத்தகுந்தவர்கள் ஆவர். உன் மகன்களிடம் நடந்து கொள்வதைப் போல நீ அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். உண்மையில், பெரும் ஞானம் கொண்ட அம்மனிதர்களே உலகங்கள் அனைத்தையும் தாங்குகிறார்கள்.(3) அனைத்து உலகங்களிலும் அறத்தின் பெரும்பாலங்களாக இருப்போர் பிராமணர்களே. அனைத்து வகைச் செல்வங்களையும் துறப்பதிலேயே அவர்களின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. வாக்கைக் கட்டுப்படுத்தும் நோன்புக்கு அவர்கள் அர்ப்பணிப்புள்ளவர்கள் ஆவர்.(4) உயிரினங்கள் அனைத்திற்கும் இனிமையான அவர்கள் பல்வேறு சிறந்த நோன்புகளை நோற்பவர்களாவர். அவர்கள் இந்த அண்டத்தின் உயிரினங்கள் அனைத்திற்கும் புகலிடமாக இருப்பவர்கள். உலகங்களை ஆளும் விதிமுறைகள் அனைத்தின் ஆசிரியர்கள் அவர்கள். பெரும் புகழைக் கொண்டவர்கள் அவர்கள்.(5)

தவங்களே எப்போதும் அவர்களின் பெருஞ்செல்வமாக இருக்கின்றன. வாக்கே அவர்களது பலமாக இருக்கிறது. அவர்கள் நோற்கும் கடமைகளிலிருந்தே அவர்களது சக்தி பாய்கிறது. அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களான அவர்கள், நுட்பமான கருத்துகளையும் அறியும் நுண்பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(6) அவர்கள் நியாயமான ஆசைகளைக் கொண்டவர்கள். கடமைகளை நன்கு செய்து வாழ்பவர்கள் அவர்கள். அறத்தின் பெரும்பாலங்கள் அவர்கள். இருப்பில் இருக்கும் நால்வகை உயிரினங்களும் அவர்களையே தங்கள் புகலிடங்களாகச் சார்ந்திருக்கின்றன.(7) அவர்களே அனைவரும் செல்ல வேண்டிய பாதையாகவோ, சாலையாகவோ இருக்கின்றனர். அவர்களே அனைவரின் வழிகாட்டிகளாக இருக்கின்றனர். அவர்களே வேள்விகள் அனைத்தையும் எப்போதும் தாங்குபவர்கள். அவர்கள் தங்கள் தந்தைமார் மற்றும் பாட்டன்களின் கனமான சுமைகளை எப்போதும் சுமப்பவர்கள்.(8) வலிமைமிக்க மாடுகளைப் போலக் கடினமான சாலைகளைக் கடக்கும்போதும் தங்கள் கனமான சுமைகளால் அவர்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை. பித்ருக்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர்களின் தேவைகளில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். ஹவ்யம் மற்றும் கவ்யத்தின் முதல் பங்கை உண்ணும் உரிமை அவர்களுக்கு உண்டு.(9) அவர்கள் உண்ணும் உணவின்மூலமே மூன்று உலகங்களையும் பேரச்சத்தில் இருந்து விடுவிக்கிறார்கள். அனைத்து உலகங்களுக்குமான தீவாக (புகலிடமாக) அவர்கள் இருக்கிறார்கள். பார்வை கொண்ட மனிதர்கள் அனைவரின் கண்களாக அவர்களே இருக்கின்றனர்.(10)

சிக்ஷை என்ற பெயரில் அறியப்படும் ஞானத்தின் அனைத்துக் கிளைகளும், ஸ்ருதிகள் அனைத்தும் அவர்களின் செல்வமாகின்றன. பெருந்திறனுடன் கூடிய அவர்கள் பொருட்களின் மிகநுட்பமான உறவுகளை அறிந்தவர்களாக இருக்கின்றனர். அனைத்துப் பொருட்களின் கதியை நன்கறிந்தவர்களாக இருக்கும் அவர்களது எண்ணங்கள் எப்போதும் ஆன்ம அறிவியலிலேயே ஈடுபட்டிருக்கின்றன.(11) அனைத்துப் பொருட்களின் தொடக்கம், நடு மற்றும் முடிவு ஆகியவற்றின் அறிவுடன் கூடியவர்களாகவும், தாங்கள் கொண்ட ஞானத்தில் உள்ள உறுதியுணர்வின் விளைவால் எந்த ஐயமும் இல்லாதவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். உயர்ந்தது எது, தாழ்ந்தது எது என்பதற்கிடையிலான வேறுபாடுகளில் முழு விழிப்புணர்வுடன் இருக்கும் அவர்களே உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(12) அவர்கள் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்து, உலகப் பொருட்கள் யாவற்றிலும் தொடர்பறுந்தவர்களாக இருக்கிறார்கள். மதிக்கத்தகுந்த அவர்கள், ஞானமும், உயர்ந்த ஆன்மாக்களையும் கொண்ட மனிதர்களால் எப்போதும் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள்.(13) சந்தனம், அழுக்கான சேறு ஆகியவற்றிலும், எது உணவு, எது உணவில்லை என்பதிலும் அவர்கள் சமமான பார்வையைச் செலுத்துவார்கள். மெல்லிய காவி ஆடைகள், நார்மடி பட்டாடைகள், விலங்கின் தோல் ஆகியவற்றில் தங்கள் கண்களைச் சமமாகச் செலுத்துகிறார்கள்.(14) அவர்கள், எந்த உணவையும் பல நாட்கள் உண்ணாமல், வாழ்வதாரங்களை விலக்குவதன் மூலம் தங்கள் அங்கங்களை வற்ற செய்து வாழ்பவர்கள். வேத கல்வி மற்றும் புலனடக்கத்தில் அவர்கள் உள்ளார்வத்துடன் தங்களை அர்ப்பணிக்கிறார்கள்.(15)

அவர்கள் தேவர்களல்லாதவர்களை தேவர்களாகவும், தேவர்களை தேவர்களல்லாதவர்களாகவும் ஆக்குபவர்கள். சினமடைந்தால் அவர்களால் வேறு உலகங்களையும், இருப்பவர்களைத் தவிர்த்து வேறு லோகபாலர்களையும் உண்டாக்க முடியும்.(16) அந்த உயர் ஆன்மாக்களுடைய சாபத்தின் மூலமே பெருங்கடலானது குடிக்க முடியாத வகையில் உப்பானது. அவர்களுடைய கோபமெனும் நெருப்பு காலத்தால் தணிவடையாமல் இன்னும் தண்டகக் காட்டில் எரிந்து கொண்டிருக்கிறது.(17) அவர்கள் தேவர்களின் தேவர்களாகவும், காரணங்கள் அனைத்தின் காரணங்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் அதிகாரங்கள் அனைத்தின் அதிகாரமாக இருக்கின்றனர். புத்தியும் ஞானமும் கொண்ட எந்த மனிதன் அவர்களை அவமதிக்க முயல்வான்?(18) அவர்களில் இளையோரும், முதியோரும் கௌரவங்களுக்குத் தகுந்தவர்களே. அவர்கள் தங்கள் (வயதின் விளைவால் அல்லாமல்) தவங்கள் மற்றும் ஞானத்தில் உள்ள தனிச்சிறப்புகளின் விளைவால் ஒருவரையொருவர் மதிக்கிறார்கள்.(19)

ஞானமற்ற பிராமணனும் தேவனாவான், பிறரைத் தூய்மைப்படுத்தும் உயர்ந்த கருவியாவான். அவர்களுக்கு மத்தியில் அறிவைப் படைத்தவன் உயர்ந்த தேவனும், முற்றாக நிறைந்த பெருங்கடலைப் போன்றவனும் ஆவான்.(20) கல்விமானாகவோ, கல்லாதவனாகவோ இருந்தாலும் பிராமணன் எப்போதும் உயர்ந்த தேவனே. (மந்திரங்களின் துணையால்) புனிதமாகவோ, புனிதமற்றோ இருந்தாலும் நெருப்பு {அக்னி} எப்போதும் பெருந்தேவனே.(21) சுடர்மிக்க நெருப்பானது சுடலையில் எரிந்தபோதும், அஃது எரியும் இடத்தினுடைய தன்மையின் விளைவால் களங்கமடைந்ததாக ஒருபோதும் கருதப்படுவதில்லை. வேள்விப்பீடத்தில் இருந்தாலும், அறையில் இருந்தாலும் தெளிந்த நெய் எப்போதும் அழகாகவே தெரியும்.(22) எனவே, ஒரு பிராமணன் எப்போதும் தீச்செயல்களில் ஈடுபடுபவனாக இருப்பினும் அவன் மதிக்கத்தகுந்தவனாகவே கருதப்பட வேண்டும். உண்மையில், பிராமணனே எப்போதும் உயர்ந்த தேவன் என்பதை அறிவாயாக” என்றார் {பீஷ்மர்}.(23)

எவ்வகை உயிரினம்? – அநுசாஸனபர்வம் பகுதி – 152-தத்தாத்ரேயரிடம் இருந்து நான்கு வரங்களை அடைந்த கார்த்தவீரியார்ஜுனன்; பிராமண மகிமை குறித்து வாயு தேவனுக்கும் கார்த்தவீரியார்ஜுனனுக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா, ஓ! மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவரே, பிராமணர்களை வழிபடுவதில் கிட்டும் எந்த வெகுமதியைக் கண்டு நீர் அவர்களை வழிபடுகிறீர்? உண்மையில், பிராமணர்களை வழிபடுவதில் கிட்டும் எந்த வெற்றியால் வழிநடத்தப்பட்டு நீர் அவர்களை வழிபடுகிறீர்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாகப் பவனனுக்கும், அர்ஜுனனுக்கும் {கார்த்தவீரியார்ஜுனகுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2) ஆயிரங்கரங்களைக் கொண்டவனும், பேரெழில்வாய்ந்தவனுமான வலிமைமிக்கக் கார்த்தவீரியன் பழங்கலாத்தில் உலகம் அனைத்திற்குமான தலைவனானான். மாஹிஷ்மதி நகரம் அவனுடைய தலைநகரமாக இருந்தது.(3) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அந்த க்ஷத்திரிய குல ஹைஹய {ஹேஹயத்} தலைவன், கடல்களைத் தன் கச்சையாகக் கொண்டவளும், தீவுகள், தங்கச்சுரங்கங்கள் மற்றும் மதிப்புமிக்க ரத்தினச் சுரங்கங்கள் அனைத்துடன் கூடியவளுமான மொத்த பூமியையும் ஆண்டு வந்தான்.(4) க்ஷத்திரிய வகைக்கான கடமைகளைத் தன் முன் கொண்டவனும், பணிவுடனும், வேத அறிவுடனும் கூடிய அம்மன்னன், தத்தாத்ரேய முனிவருக்குப் பெரும் செல்வக்கொடையை அளித்தான்.(5) உண்மையில், கிருதவீரியனின் மகனால் இவ்வாறு துதிக்கப்பட்ட அந்தப் பெருந்தவசி, அவனிடம் நிறைவடைந்தவராக, தம்மிடம் மூன்று வரங்களைக் கேட்குமாறு அவனைக் கேட்டுக் கொண்டார்.(6)

வரங்கள் குறித்து அம்முனிவரால் இவ்வாறு வேண்டப்பட்ட அம்மன்னன், அவரிடம், “நான் என் துருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் போது ஆயிரம் கரங்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும். எனினும், வீட்டில் இருக்கும் போது, வழக்கம் போலவே இரு கரங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.(7) உண்மையில் போரில் ஈடுபடும்போது, ஆயிரம் கரங்களைப் படைத்தவனாகப் போராளிகள் என்னைக் காண வேண்டும். உயர்ந்த நோன்புகளை நோற்றவனான நான், என் ஆற்றலின் துணையுடன் மொத்த பூமியையும் அடக்குவதில் வெல்ல வேண்டும்.(8) அறம் சார்ந்து பூமியை அடைந்த பிறகு அவளை நான் விழிப்புடன் ஆள வேண்டும். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான்காவது வரத்தையும் நீர் அருள நான் வேண்டுகிறேன்.(9) ஓ! களங்கமற்றவரே, எனக்கு உதவும் மனோநிலையில் நீர் இருப்பதன் விளைவால், எனக்கு அஃதை அருள்வதே உமக்குத் தகும். நான் உம்மையே சார்ந்திருக்கிறேன். தான் தவற நேரும்போதெல்லாம் அறவோர் என்னைத் திருத்தி நிலைபெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டான்.(10)இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணர், அந்த மன்னனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார். சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட அந்த மன்னனால் அந்த வரங்கள் இவ்வாறே அடையப்பட்டன.(11) நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியுடன் கூடிய தன் தேரைச் செலுத்திக் கொண்டிருந்த அந்த ஏகாதிபதி, தன்னுடைய பேராற்றலால் குருடாகி, “பொறுமை, சக்தி, புகழ், வீரம், ஆற்றல் மற்றும் பலம் ஆகியவற்றில் எனக்கு நிகராகக் கருதத்தகுந்தவன் எவன்?” என்றான். அவன் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், ஆகாயத்தில் இருந்து ஒரு புலப்படாத குரல்,(13) “ஓ! இழிந்த மூடா, க்ஷத்திரியனைவிடப் பிராமணன் உயர்ந்தவன் என்பதை நீ அறியமாட்டாயா? பிராமணனால் உதவப்படும் க்ஷத்திரியனே அனைத்து உயிரினங்களையும் ஆள்கிறான்” என்றது.(14)

{கார்த்தவீரிய} அர்ஜுனன், “நான் நிறைவடையும்போது, உயிரினங்களைப் படைக்கவல்லவனாக இருக்கிறேன். நான் கோபமாக இருக்கும்போது, அனைத்தையும் அழிக்கவல்லவனாக இருக்கிறேன். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் நானே முதன்மையானவனாக இருக்கிறேன். நிச்சயம் பிராமணன் என்னைவிட உயர்ந்தவனல்ல.(15) பிராமணன் க்ஷத்திரியனைவிட மேன்மையானவன் என்பது முதல் கருத்து. க்ஷத்திரியனே மேன்மையானவன் என்பது எதிர் கருத்து. (ஓ! புலப்படாதவளே, அடிப்படையில் க்ஷத்திரிய மேன்மை வேண்டப்படும் செயலில்) இருவரும் ஒன்று சேர்வதாக நீ சொல்கிறாய். எனினும், இதில் ஒரு வேறுபாடு காணக்கிடைக்கிறது.(16) பிராமணர்கள், க்ஷத்திரியர்களைப் புகலிடமாகக் கொள்வது காணப்படுகிறது. உண்மையில், பூமி முழுவதிலும், வேதங்களைக் கற்பிக்கும் தோரணையில் அத்தகைய புகலிடத்தை ஏற்கும் அவர்கள் {பிராமணர்கள்}, க்ஷத்திரியர்களிடம் இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈர்க்கிறார்கள்.(17) உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் கடமை க்ஷத்திரியர்களுக்குரியது. க்ஷத்திரியர்களிடம் இருந்தே பிராமணர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அடைகின்றனர்[1]. அவ்வாறிருக்கையில் பிராமணன் எவ்வாறு க்ஷத்திரியர்களைவிட மேன்மையானவனாக இருக்க முடியும்?(18) நன்று, உயிரினங்கள் அனைத்தையும் விட மேன்மையாக இருந்தாலும் பிச்சையெடுப்பதைத் தொழிலாகக் கொண்டவர்களும், தற்பெருமை கொண்டவர்களுமான உங்கள் பிராமணர்களை இன்று முதல் என் ஆளுகைக்குள் கொண்டு வருகிறேன்.(19) ஆகாயத்தில் இருந்து கன்னி காயத்ரி சொல்வது உண்மையல்ல. தோலாடை உடுத்திய பிராமணர்கள் சுதந்திரமாகத் திரிகின்றனர். சுதந்திரமாக இருக்கும் அவர்களை என் ஆளுகைக்குள் கொண்டவரப் போகிறேன்.(20) தேவனோ, மனிதனோ, நான் அனுபவிக்கும் இந்த அரசுரிமையில் இருந்து என்னைத் தூக்கி வீச மூவுலகங்களிலும் யாருமில்லை. எனவே, நான் நிச்சயம் பிராமணர்களைவிட மேன்மையானவனே.(21) பிராமணர்களையே முதன்மைவாசிகளாகக் கருதப்படும் இவ்வுலகில், க்ஷத்திரியர்களே முதன்மையானவர்கள் என்பது நிறுவப்படும். போரில் என் வலிமையைப் பொறுத்துக்கொள்ளவல்லவன் எவனுமில்லை” என்றான்[2].(22)அப்போது, வானத்தில் இருந்து அம்மன்னனிடம் பேசிய காற்றின் தேவன் {வாயு}, “பாவம் நிறைந்த இந்த மனோநிலையைக் கைவிடுவாயாக. பிராமணர்களை வணங்குவாயாக. அவர்களுக்குத் தீங்கிழைப்பதன் மூலம் நீ உன் நாட்டுக்குத் தொல்லைகளைக் கொண்டு வரப் போகிறாய்.(24) மன்னனாக இருக்கும் உன்னைப் பிராமணர்கள் கொன்றுவிடுவார்கள், அல்லது பெரும் வலிமை கொண்ட அவர்கள் உன் சக்தியைக் கெடுத்து உன்னை உன் நாட்டில் இருந்து விரட்டிவிடுவார்கள்” என்றான்.(25)

இந்தப் பேச்சைக் கேட்ட மன்னன், அவ்வாறு பேசியவனிடம், “உண்மையில், நீ யார்?” என்று கேட்டான். காற்றின் தேவன், “நான் காற்றின் தேவன் மற்றும் தேவர்களின் தூதுவன். உனக்கான நன்மையே நான் உனக்குச் சொன்னேன்” என்றான்.(26)

{கார்த்தவீரிய} அர்ஜுனன், “ஓ! நீ இன்று பிராமணர்களிடம் கொண்ட உன் பக்தியையும், பற்றையும் காட்டிவிட்டாய். பிராமணன் பூமி சார்ந்த என்ன வகை உயிரினம் என்பதை இப்போது எனக்குச் சொல்வாயாக.(27) ஒரு மேன்மையான பிராமணன் எந்த வகையிலாவது காற்றுக்கு ஒப்பானவனா என்பதை எனக்குச் சொல்வாயாக. அல்லது, அவன் நீரையோ, நெருப்பையோ, சூரியனையோ, ஆகாயத்தையோ போன்றவனா?” என்று கேட்டான்.(28)

வெட்டவெளிமெய்! – அநுசாஸனபர்வம் பகுதி – 153-பிராமணர்களின் மேன்மையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்…

காற்றின் தேவன் {வாயு தேவன் கார்த்தவீரியனிடம்}, “ஓ! மூடா, உயர் ஆன்மாக்களைக் கொண்டவர்களான பிராமணர்கள் அனைவரின் குணங்கள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, நீ சொன்ன அனைத்தையும்விடப் பிராமணன் மேன்மையானவன்.(1) பழங்காலத்தில் பூமாதேவியானவள், அங்கர்களின் மன்னனிடம் பகை பாராட்டி பூமியென்ற தன் தன்மையைக் கைவிட்டாள். மறுபிறப்பாளரான கஸ்யபர், அவளை {பூமா தேவியை} முடக்கி, அழிவடையச் செய்தார்[1].(2) ஓ! மன்னா, பிராமணர்களைப் பூமியில் உள்ளதைப் போலவே எப்போதும் சொர்க்கத்திலும் வெல்லப்படமுடியாதவர்கள். பழங்காலத்தில், பெரும் முனிவரான அங்கிரஸ், தன் சக்தியின் மூலம் நீரனைத்தையும் பருகினார்.(3) அந்த உயர் ஆன்ம முனிவர், பாலைக் குடிப்பது போல நீரனைத்தையும் குடித்தும், தன் தாகம் தணிந்தவராக உணரவில்லை. எனவே, அவர் பேரலைகள் எழும்பும் நீர் நிறைந்ததாகப் பூமியை மீண்டும் செய்தார்.(4) மற்றொரு சந்தர்ப்பத்தில், அங்கிரஸ் என்னிடம் கோபமடைந்த போது, நான் உலகத்தைவிட்டுத் தப்பிச் சென்று, அந்த முனிவரிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக, ஒரு பிராமணரின் {உதத்தியரின் / உசத்தியரின்} அக்னிஹோத்ரத்தில் நெடுங்காலம் ஒளிந்திருந்தேன்.(5)சிறப்புமிக்கப் புரந்தரன், அஹல்யையின் உடலில் ஆசை கொண்டதன் விளைவால், கௌதமரால் சபிக்கப்பட்டாலும், அறம் மற்றும் செல்வத்தின் நிமித்தமாக அந்தத் தேவர்களின் தலைவனை அம்முனிவர் முற்றாக அழிக்கவில்லை.(6) ஓ! மன்னா, முற்காலத்தில் தெளிந்த நீரால் நிறைந்திருந்த பெருங்கடல், பிராமணர்களால் சபிக்கப்பட்டு உப்பு நீரின் சுவையை அடைந்தது.(7) பொன்னிறம் கொண்டவனும், புகையற்றிருக்கும்போது, பிரகாசமாகச் சுடர்விடுபவனும், ஒன்றுசேர்ந்து மேலெழும் தழல்களைக் கொண்டவனுமான அக்னியும் கூட, கோபமடைந்த அங்கிரஸால் சபிக்கப்பட்ட போது, இந்தக் குணங்கள் அனைத்தையும் இழந்தான்[2].(8) பெருங்கடலைத் துதிக்க வந்தவர்களும், சகரனின் மகன்களுமான அறுபதினாயிரம் பேரும் பொன்னிறம் கொண்ட பிராமணரான கபிலரின் மூலம் பொடியாக்கப்பட்டதைப் பார்.(9) நீ பிராமணர்களுக்கு நிகரானவனில்லை. ஓ! மன்னா, உன் நன்மையை நாடுவாயாக. பெரும் பலம் கொண்ட க்ஷத்திரியனும், தாயின் கருவறையில் உள்ள பிராமணப் பிள்ளைகளைக்கூட வணங்குகிறான்.(10)தண்டகர்களின் பெரும் நாடு ஒரு பிராமணனால் அழிக்கப்பட்டது. வலிமைமிக்க க்ஷத்திரியனான தாலஜங்கன்ஔர்வர் என்ற ஒற்றைப் பிராமணரால் அழிக்கப்பட்டான்.(11) நீயும் கூட, தத்தாத்ரேயரின் அருளின் மூலம், பெரும் நாட்டையும், அடைதற்கரிதானவையான பெரும் வலிமை, அறத்தகுதி, கல்வி ஆகியவற்றை அடைந்திருக்கிறாய்.(12) ஓ! அர்ஜுனா, பிராமணனான அக்னியை நீ ஏன் ஒவ்வொரு நாளும் வணங்குகிறாய்? அண்டத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வேள்விக் காணிக்கைகளைச் சுமந்து செல்பவன் அவனே. இதை நீ அறிந்தாயில்லையா?(13) உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் ஒரு மேன்மையான பிராமணனே உண்மையில், வாழும் உலகைப் படைத்தவன் என்பதை நீ அறியாமலில்லை எனும்போது, ஏன் இந்த மூடத்தனத்தில் அவதியுறுகிறாய்?(14) புலப்படாதவனும், பலங்கொண்டவனும், மங்கா மகிமை கொண்டவனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடன் கூடிய எல்லையற்ற அண்டத்தையும் படைத்தவன் அனைத்து உயிரினங்களின் தலைவனான பிரம்மனாவான் (அவனும் ஒரு பிராமணனாவான்).(15)

ஞானமற்ற சிலர், பிரம்மன் ஒரு முட்டையில் இருந்து பிறந்தான் என்று சொல்கின்றனர். மூலமுட்டை வெடித்தபோது, மலைகளும், திசைப்புள்ளிகளும், நீரும், பூமியும், சொர்க்கங்கள் அனைத்தும் இருப்புக்குள் எழுந்தன.(16) அந்தப் படைப்பின் பிறப்பை யாரும் காணவில்லை. அவ்வாறிருக்கையில் பிறப்பில்லாதவனாக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரம்மன், மூல முட்டையில் இருந்து பிறந்தான் என்று எவ்வாறு சொல்லப்படுகிறது? படைக்கப்படாத வெளியே மூல முட்டையெனச் சொல்லப்படுகிறது. படைக்கப்படாத வெளியில் (அல்லது பரமாத்மாவில்) இருந்தே பெரும்பாட்டான் {பிரம்மன்} பிறந்தான்[3].(17) “படைக்கப்படாத வெளியில் இருந்து பெரும்பாட்டன் பிறந்த பிறகு, வேறொன்றும் இருந்திருக்காதே அவன் எங்கே நின்றான்?” என்று நீ கேட்டால், பின்வரும் சொற்களில் பதில் அமையக் கூடும். நினைவு {அகங்காரம்} என்ற பெயரில் ஓர் இருப்பு உள்ளது. வலிமைமிக்க அந்த இருப்பு பெருஞ்சக்தி கொண்டதாகும்.(18) {அப்போது} முட்டை என்று ஏதுமில்லை. எனினும், பிரம்மன் இருந்தான். அவன் அண்டத்தைப் படைத்தவன், அவனே அதன் மன்னன்[4]” என்றான் {வாயு தேவன்}.காற்றின் தேவனால் {வாயுவால்} இவ்வாறு சொல்லப்பட்டதும் மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான்”.(19)

உதத்தியரும் வருணனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 154-பிராமணர்களின் மேன்மையை விவரிக்க கசியபர் மற்றும் உதத்தியரின் கதையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்…

காற்றின் தேவன் {வாயு கார்த்தவீரியார்ஜுனனிடம்}, “ஓ! மன்னா, ஒரு காலத்தில், அங்கன் என்ற பெயரைக் கொண்ட ஓர் ஆட்சியாளன், மொத்த பூமியையும் பிராமணர்களுக்கு வேள்விக் கொடையாக அளிக்க விரும்பினான். இதனால் பூமி கவலையில் நிறைந்தாள்.(1)

அவள் {பூமி}, “நான் பிரம்மனின் மகளாவேன். அனைத்து உயிரினங்களையும் நான் தாங்குகிறேன். ஐயோ, என்னை அடைந்த பிறகும் மன்னர்களில் முதன்மையான இவன் ஏன் பிராமணர்களுக்கு என்னைக் கொடுக்க விரும்புகிறான்?(2) இந்த நிலத் தன்மையைக் கைவிட்டு நான் என் தந்தையிடம் செல்லப் போகிறேன். இந்த மன்னன் தன் நாடு மற்றும் அனைத்துடன் அழிவையடையட்டும்” என்று நினைத்தாள். இந்தத் தீர்மானத்தை அடைந்ததும் அவள் பிரம்மலோகத்திற்குச் சென்றாள்.(3) இவ்வாறு {தன் உடல்வடிவமான பூமியைவிட்டுச்} செல்லும் பூமாதேவியைக் கண்ட முனிவர் கசியபர், யோகத்தின் உதவியால் தன் உடலைக் கைவிட்டு அந்தத் தேவியின் புலப்படத்தக்க உடல்வடிவத்திற்குள் {பூமிக்குள்} உடனே நுழைந்தார்.(4) கசியபரின் ஆன்மாவால் ஊடுருவப்பட்ட பூமியானது, செழிப்பில் வளர்ந்து அனைத்து வகைப் பயிர்களின் விளைச்சலும் நிறைந்ததாக இருந்தது. உண்மையில், ஓ! மன்னா, பூமிக்குள் கசியபர் நுழைந்த நேரத்தில் இருந்து, எங்கும் அறமே முதன்மையானது, அனைத்து அச்சங்களும் இல்லாமற்போயின.(5)

இவ்வழியில், ஓ! மன்னா, பூமியானது, முப்பதாயிரம் தேவ வருடங்கள் கசியபரின் ஆன்மாவால் ஊடுருவப்பட்ட நிலையிலேயே இருந்தது. பிரம்மனின் மகளுடைய ஆன்மா ஊடுருவியிருந்தபோது இருந்த செயல்பாடுகள் அனைத்துடனும் சேர்ந்து முழுமையான உயிர்ப்புடன் இருந்தது.(6) இந்தக் காலம் முடிந்ததும் அந்தத் தேவி {பூமா தேவி} பிரம்மலோகத்தில் இருந்து திரும்பி வந்து, கசியபரை வணங்கி நின்று, அதுமுதல் அந்த முனிவரின் மகளானாள் {காசியபி ஆனாள்}.(7) கசியபர் ஒரு பிராமணராவார். ஓ! மன்னா, இஃது அவர் செய்த சாதனையாகும். அந்தக் கசியபரை விட மேன்மையானவன் என்று சொல்லத்தக்க ஒரு க்ஷத்திரியனின் பெயரை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(8)

இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். அவனிடம் மீண்டும் காற்றின் தேவன் {வாயு}, “ஓ! மன்னா, அங்கிரஸ் குலத்தில் பிறந்த உதத்தியரின் {உசத்தியரின்} கதையை இப்போது கேட்பாயாக.(9) பத்ரை என்ற பெயரைக் கொண்ட சோமனின் மகள் ஒப்பற்ற அழகுடன் கூடியவளாகக் கருதப்பட்டாள். அவளது தந்தையான சோமன் உதத்தியரை அவளுக்குத் தகுந்த கணவனாகக் கருதினான்.(10) புகழ்பெற்றவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளும், குற்றமில்லா அங்கங்களைக் கொண்டவளுமான அந்தக் கன்னிகை, பல்வேறு நோன்புகளை நோற்றபடியே, உதத்தியரைத் தன் தலைவனாக அடைய விரும்பிக் கடுந்தவங்களைச் செய்தாள்.(11) சிறிது காலம் கழித்து, சோமனின் தந்தையான அத்ரி, உதத்தியரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் புகழ்பெற்ற அந்தக் கன்னிகையை அவருக்கு அளித்தார். அபரிமிதமான அளவில் வேள்விக் கொடைகளைக் கொடுப்பவரான உதத்தியர், அந்தப் பெண்ணைத் தம் மனைவியாக முறைப்படி ஏற்றுக் கொண்டார்.(12)

எனினும், அழகிய வருணன் நீண்ட நாட்களாக அந்தப் பெண்ணின் மீது ஆசை கொண்டிருந்தான். உதத்தியர் வசித்து வந்த வனத்திற்கு வந்த அவன், நீராடுவதற்காக யமுனையில் மூழ்கிய அந்தப் பெண்ணை அபகரித்துச் சென்றான்.(13) அந்த நீர்நிலைகளின் தலைவன், இவ்வாறு அவளை அபகரித்துத் தன் வசிப்பிடத்திற்குக் கொண்டு சென்றான். அந்த மாளிகை அற்புதம் நிறைந்த தன்மையுடன் இருந்தது. அஃது அறுநூறாயிரம் தடாகங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(14) வருணனின் அரண்மனையைவிட மிக அழகானதாக வேறு எந்த மாளிகையும் கருதப்பட்டதில்லை. பல்வேறு அரண்மனைகளாலும், அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்கள் மற்றும் இன்பத்திற்கான பல்வேறு பொருட்களின் இருப்பாலும் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(15) அங்கே, ஓ! மன்னா, நீர்நிலைகளின் தலைவன் அந்த அரண்மனைக்குள் அந்தக் காரிகையுடன் விளையாடினான். சிறிது காலம் கழித்து உதத்தியரிடம் அவரது மனைவி கெடுக்கப்பட்டது சொல்லப்பட்டது.

உண்மையில், செய்திகள் அனைத்தையும் நாரதரிடம் இருந்து கேட்ட உதத்தியர், அந்தத் தெய்வீக முனிவரிடம்,(16) “ஓ! நாரதரே, வருணனிடம் சென்று கடுமையாக நீர் பேச வேண்டும். அவன் ஏன் என் மனைவியை அபகரித்தான் என்றும், என் பெயரை அவனிடம் சொல்லி அவளைத் தர வேண்டும் என்றும் கேட்பீராக.(17) மேலும் அவனிடம், “ஓ! வருணா, நீ உலகங்களைக் காப்பவனன்றி அழிப்பவனல்ல. அவ்வாறிருக்கையில், சோமனால் எனக்கு அளிக்கப்பட்ட என் மனைவியை நீ ஏன் அபகரித்தாய்?” என்றும் கேட்பீராக” என்று சொன்னார் {உதத்தியர்}.(18)

தெய்வீக முனிவரான நாரதர், உதத்தியரால் இவ்வாறு வேண்டப்பட்டதும், வருணன் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவனிடம், “உதத்தியரின் மனைவியை விடுவிப்பாயாக. உண்மையில் நீ ஏன் அவளை அபகரித்தாய்?” என்று கேட்டார்.(19)

நாரதரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வருணன், அவரிடம், “மருட்சியுடைய இந்தப் பெண் எனது பேரன்புக்குரியவள். நான் அவளை அனுப்பத் துணியேன்” என்றான்.(20)

இந்த மறுமொழியைக் கேட்ட நாரதர், உதத்தியரிடம் சென்று, உற்சாகமில்லாமல் அவரிடம்,(21) “ஓ! பெருந்தவசியே, வருணன் என் தொண்டையைப் பிடித்து {கழுத்தைப் பிடித்து} அவனது வீட்டில் இருந்து என்னை விரட்டிவிட்டான். அவன் உமது மனைவியைத் திருப்பி அனுப்ப விரும்பவில்லை. நீர் விரும்பியவண்ணம் செயல்படுவீராக” என்றார்[1].(22)நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அங்கிரஸ் {உதத்தியர்}, கோபத்தில் எரிந்தார். தவச் செல்வம் கொண்ட அவர், நீர் நிலைகளைத் திடமாக்கி, தன் சக்தியால் அவற்றைக் குடித்தார்.(23) இவ்வாறு நீரனைத்துப் பருகப்பட்டதும் நீரின் தேவன், தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து உற்சாகமிழந்தான். இவ்வளவு நடந்தும் அவன் உதத்தியரின் மனைவியைக் கொடுத்தானில்லை.(24)

பிறகு மறுபிறப்பாளர்களில் முதன்மையான உதத்தியர், கோபத்தில் நிறைந்தவராகப் பூமியிடம், “ஓ! இனியவளே, அறுநூறாயிரம் தடாகங்கள் உள்ள நிலத்தை எனக்குக் காட்டுவாயாக” என்றார்.(25)

முனிவரின் இந்த வார்த்தைகளில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து பெருங்கடல் பின்வாங்கியதும், விளைச்சலே இல்லாத நிலம் தோன்றியது. அந்தப் பகுதியின் வழியாகப் பாய்ந்த ஆற்றிடம், உதத்தியர்,(26) “ஓ! சரஸ்வதி, இங்கே புலப்படாதவளாவாயாக. உண்மையில், ஓ! மருண்ட மங்கையே, இந்தப்பகுதியை விட்டுப் பாலைவனத்திற்குச் செல்வாயாக. ஓ! மங்கல தேவி, நீ இல்லாமல் இந்தப் பகுதி புனிதமற்றதாகட்டும்” என்றார்.(27)

(நீரின் தலைவன் வசித்த) அந்தப் பகுதி வறண்டதும், அவன் உதத்தியரின் மனைவியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு அங்கிரஸிடம் சென்று அவளை அவரிடம் கொடுத்தான்.(28) தம் மனைவியைத் திரும்பப் பெற்ற உதத்தியர் உற்சாகம் நிறைந்தவரானார். ஓ! ஹைஹய குலத் தலைவா, அப்போது அந்தப் பெரும்பிராமணர், இந்த அண்டத்தையும், நீரின் தேவனையும் {வாயுவையும்} தாம் கொடுத்துவந்த துன்பத்தில் இருந்து மீட்டார்.(29) ஓ! மன்னா, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான முனிவர் உதத்யர், தம் மனைவியைத் திரும்பப் பெற்றதும், வருணனிடம்,(30) “நீரின் தலைவா {ஜலாதிபதியே}, என் தவங்களின் துணையுடன் உனக்குப் பெரும் துன்பத்தைக் கொடுத்து வேதனையில் உரக்க அழ வைத்த பிறகே நான் என் மனைவியை மீட்டுக் கொண்டேன்” என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு, தம் மனைவியுடன் அவர் தமதில்லத்திற்குச் சென்றார்.(31) ஓ! மன்னா, பிராமணர்களில் முதன்மையான உதத்தியர் இவ்வாறே இருந்தார். நான் இன்னும் சொல்லட்டுமா? அல்லது, நீ உன் கருத்தில் இன்னும் பிடிவாதமாக இருக்கப் போகிறாயா? உதத்தியருக்கும் மேன்மையான எந்த க்ஷத்திரியன் இருக்கிறான்?” என்று கேட்டான் {வாயு}”.(32)

அகத்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 155- பிராமணர்களான அகஸ்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம் பேசினான், “ஓ! மன்னா, பிராமணரான அகஸ்தியரின் பெருமையைக் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில் தேவர்கள் அசுரர்களால் அடக்கப்பட்டதால் அவர்கள் உற்சாகமிழந்தவர்களாக இருந்தனர். தேவர்களுக்கான வேள்விகள் அனைத்தும் கொள்ளையடிக்கபட்டன, பித்ருக்களின் ஸ்வதாவும் அபகரிக்கப்பட்டது.(2) உண்மையில், ஓ! ஹைஹயர்களின் தலைவா, மனிதர்கள் செய்யும் அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்தும் தானவர்களால் தடுக்கப்பட்டன. தேவர்கள் செழிப்பிழந்து பூமியில் திரிந்தனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) ஒரு நாள் அவ்வாறு அவர்கள் திரிந்து வருகையில் உயர்ந்த நோன்புகளையும் பெருஞ்சக்தியையும், சூரியனைப் போன்ற சுடர்மிக்கக் காந்தியையும் கொண்ட பிராமணரான அகஸ்தியரைக் கண்டனர்.(4)

அவரை முறையாக வணங்கிய தேவர்கள், மதிப்புக்குரிய வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர். பிறகு, ஓ! மன்னா, அந்த உயர் ஆன்மாவிடம் {அகஸ்தியரிடம்},(5) “நாங்கள் போரில் தானவர்களால் வீழ்த்ததால் செழிப்பையும், செல்வாக்கையும் இழந்தவர்களாக இருக்கிறோம். எனவே, ஓ! தவசிகளில் முதன்மையானவரே, பேரச்சந்தரும் இந்நிலையில் இருந்து நீர் எங்களை மீட்பீராக” என்று வேண்டினர்.(6)

தேவர்களின் அவலநிலையை இவ்வாறு அறிந்த அகஸ்தியர் (தானவர்களிடம்) பெருங்கோபம் கொண்டார். பெருஞ்சக்தி கொண்ட அவர், அண்டப் பேரழிவின் போது தோன்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போல உடனே சுடர்விடத் தொடங்கினார்.(7) அம்முனிவரிடம் இருந்து வெளிப்பட்ட சுடர்மிக்கக் கதிர்களில் தானவர்கள் எரியத் தொடங்கினர். உண்மையில், ஓ! மன்னா, அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஆகாயத்திலிருந்து விழத் தொடங்கினர்.(8) அகஸ்தியரின் சக்தியில் எரிந்த தானவர்கள், சொர்க்கத்தையும், பூமியையும் கைவிட்டு, தெற்குத் திசை நோக்கித் தப்பி ஓடினர்.(9)

அந்நேரத்தில் தானவ மன்னன் பலி, பாதாளலோகத்தில் ஒரு குதிரை வேள்வியைச் செய்து கொண்டிருந்தான். பூமியின் குடல்களுக்குள் இருந்த அந்தப் பகுதியில் அவனோடு வசித்து வந்த பேரசுரர்கள் எரியாமல் இருந்தனர்.(10) தேவர்கள், தங்கள் பகைவர்கள் அழிந்ததும், முற்றிலும் அச்சம் விலகியவர்களாகத் தங்கள் உலகங்களை மீட்டனர். அவர்களுக்காக அவர் சாதித்த காரியத்தின் மூலம் ஊக்கமடைந்த அவர்கள், பூமியின் குடல்களுக்குள் பாதாள லோகத்தில் தஞ்சம் அடைந்த அசுரர்களை அழிக்குமாறு அம்முனிவரை வேண்டினர்.(11)

தேவர்களால் இவ்வாறு வேண்டப்பட்ட அகஸ்தியர், அவர்களிடம், “ஆம், பூமிக்கடியில் வசிக்கும் அசுரர்களையும் எரிக்க நான் முழுத் தகுதி கொண்டவனாக இருந்தாலும், அக்காரியத்தைச் செய்தால் என் தவங்கள் பழுதடையும். எனவே, நான் என் சக்தியைப் பயன்படுத்தமாட்டேன்” என்றார்.(12)

ஓ! மன்னா, இவ்வாறே அந்தச் சிறப்புமிக்க முனிவரின் சக்தியால் தானவர்கள் எரிக்கப்பட்டனர். ஓ! ஏகாதிபதி, இவ்வாறே தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அகஸ்தியர், தம் தவங்களின் துணையுடன் அக்காரியத்தைச் சாதித்தார்.(13) ஓ! பாவமற்றவனே, என்னால் விவரிக்கப்பட்டவாறே அகஸ்தியர் இருந்தார். நான் தொடரலாமா? அல்லது, நீ மறுமொழியேதும் கூறப் போகிறாயா? அகஸ்தியரைவிடப் பெரியவனாக எந்த க்ஷத்திரியனும் இருக்கிறானா?” என்று கேட்டான் {வாயு}”.(14)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன், அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் {வாயு} மீண்டும், “ஓ! மன்னா, சிறப்புமிக்க வசிஷ்டரின் பெருஞ்சாதனைகளைக் கேட்பாயாக.(15) ஒரு காலத்தில் தேவர்கள், {கங்கையில்} வைகானஸத் தடாகக் கரைகளில் ஒரு வேள்வி செய்வதில் ஈடுப்பட்டிருந்தனர். வேள்வி செய்து வந்த தேவர்கள், வசிஷ்டரின் பலத்தை அறிந்து அவரையே தங்கள் புரோகிதராகத் தங்கள் மனத்தில் நிறுவினர்.(16) அதேவேளையில், மலைகளுக்கொப்பான வடிவங்களைக் கொண்டவர்களும் கலினர்கள் {பலிகள்} என்ற பெயர்படைத்தவர்களுமான தானவ குலத்தினர், தேவர்கள் தங்களின் தீக்ஷையின் விளைவால், மெலிந்து குறைந்திருப்பதைக் கண்டு அவர்களைக் கொல்ல விரும்பினர்.(17)

அந்தப் போரில் தானவர்களில் அங்கம் பழுதுபட்டவர்களும், கொல்லப்பட்டவர்களும் மானஸத் தடாக நீரில் மூழ்கச் செய்யப்பட்டு, பெரும்பாட்டனின் வரத்தின் விளைவால் உடனே உயிரையும், வன்மையையும் பெற்றனர்.(18) பெரியவையும், பயங்கரமானவையுமான மலைச்சிகரங்களையும், பரிகங்களையும், மரங்களையும் எடுத்துக் கொண்டு தடாகத்தின் நீரைக் கலக்கி, நூறு யோஜனை உயரத்திற்கு அவற்றைப் பெருகச் செய்தனர்.(19) பிறகு அவர்கள் எண்ணிக்கையில் பத்தாயிரமான இருந்த தேவர்களை எதிர்த்து ஓடினர். தானவர்களால் பீடிக்கப்பட்ட தேவர்கள், தங்கள் தலைவனான வாசவனின் பாதுகாப்பை நாடினார்கள்.(20) எனினும், சக்ரனும் அவர்களால் விரைவில் பீடிக்கப்பட்டான். அவன் மனத்தளர்வுடன் வசிஷ்டரின் பாதுகாப்பை நாடினான். இதன்பேரில் புனித முனிவரான வசிஷ்டர் தேவர்களின் அச்சங்களை விலக்குவதாக உறுதியளித்தார்.(21)

தேவர்கள் பெரிதும் உற்சாகமிழந்திருப்பதைப் புரிந்து கொண்ட அந்தத் தவசி {வசிஷ்டர்}, தமது கருணையின் மூலம் இதைச் செய்தார். அவர் தமது சக்தியை வெளிப்படுத்தி, கலினர்கள் {பலிகள்} என்றழைக்கப்பட்ட அந்தத் தானவர்களை எந்த முயற்சியுமின்றி எரித்தார்.(22) தவங்களையே செல்வமாகக் கொண்ட அம்முனிவர், கைலாசத்திற்குச் சென்றிருந்த கங்கையை அந்த இடத்திற்கு வரச் செய்தார். உண்மையில் கங்கையானவள், அந்தத் தடாகத்தின் நீரைத் துளைத்தபடி தோன்றினாள்.(23) தடாகமானது அந்த ஆற்றால் துளைக்கப்பட்டது {உடைக்கப்பட்டது}. அந்தத் தெய்வீக ஓடையானவள், அத்தடாகத்தின் நீரைத் துளைத்துத் தோன்றி, சரயு என்ற பெயரில் பாய்ந்தாள். அந்தத் தானவர்கள் வீழ்ந்த இடம் அவர்களின் பெயராலேயே  {கலினம் / பலினம் என்று} அழைக்கப்படலாயிற்று.(24)

இவ்வாறே, இந்திரனின் தலைமையிலான சொர்க்கவாசிகள், வசிஷ்டரின் மூலம் பெரும் துன்பத்தில் இருந்து மீட்கப்பட்டனர். இவ்வாறே, பிரம்மனிடம் வரம்பெற்றவர்களான அந்தத் தானவர்கள், அந்த உயர் ஆன்ம முனிவரால் கொல்லப்பட்டனர்.(25) ஓ! பாவமற்றவனே, வசிஷ்டர் செய்த சாதனையை நான் சொன்னேன். நான் தொடரட்டுமா? அல்லது, நீ ஏதாவது சொல்லப் போகிறாயா? பிராமணரான வசிஷ்டரை விஞ்சியவன் என்று எந்த க்ஷத்திரியனையாவது சொல்ல முடியுமா?” என்று கேட்டான் {வாயு}”.(26)

அத்ரி மற்றும் சியவனர் பெருமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 156-பிராமணர்களான அத்ரி மற்றும் சியவனரின் பெருமையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு சொல்லப்பட்ட {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், “ஓ! ஹைஹயர்களில் முதன்மையானவனே, உயர் ஆன்ம அத்ரியின் சாதனையைச் சொல்கிறேன் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில், இருளில் தேவர்களும், தானவர்களும் ஒருவருக்கொருவர் போரிட்டபோது, சூரியன் மற்றும் சோமன் {சந்திரன்} ஆகிய இருவரையும் ராகு {ஸ்வர்ப்பானு} தன் கணைகளால் துளைத்தான்.(2) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இருளில் மூழ்கிய தேவர்கள் வலிமைமிக்கத் தானவர்களின் முன்பு வீழத் தொடங்கினர்.(3) அசுரர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட சொர்க்கவாசிகள், தங்கள் பலத்தை இழக்கத் தொடங்கினர். அப்போது அவர்கள் தவங்களைச் செல்வமாகக் கொண்டவரும் கல்விமானுமான பிராமணர் அத்ரி கடுந்தவத்தில் இருப்பதைக் கண்டனர்.(4)

புலன்கள் அனைத்தையும் வென்றவரும், கோபமில்லாதவருமான அந்த முனிவரிடம் {அத்ரியிடம்} அவர்கள், “ஓ! முனிவரே, அசுரர்களின் கணைகாளல் துளைக்கப்பட்டிருக்கும் இந்தச் சோமன் மற்றும் சூரியன் ஆகிய இருவரையும் காண்பீராக.(5) இதன் விளைவால் நாங்கள் இருளில் மூழ்கியிருக்கிறோம், பகைவர்களால் நாங்கள் வீழ்த்தப்படுகிறோம். எங்கள் தொல்லைகளுக்கான ஒரு முடிவை நாங்கள் காணவில்லை. ஓ! பெரும்பலத்தில் தலைவரே, இந்தப் பேரச்சத்தில் இருந்து எங்களை மீட்பீராக” என்றனர்.(6)

அதற்கு முனிவர், “உண்மையில், எவ்வாறு நான் உங்களைப் பாதுகாக்க வேண்டும்?” என்றார். அவர்கள், “நீரே சந்திரமாஸாவீராக. நீரே சூரியனாகி, இந்தக் கள்வர்களைக் கொல்வீராக” என்றனர்.(7)

அவர்களால் இவ்வாறு வேண்டப்பட்ட அத்ரி, இருளை அழிக்கும் சோமனின் வடிவை ஏற்றார். உண்மையில் தமது ஏற்புடைய இயல்பின் விளைவால் அவர் சோமனைப் போன்றே அழகானவராகவும் ஒளி நிறைந்தவராகவும் காணப்படத் தொடங்கினார்.(8) இதைக் கண்டவர்களான உண்மையான சோமனும், உண்மையான சூரியனும் பகைவரின் கணைகளால் இருளடைந்தனர். இந்த ஒளிக்கோள்களின் வடிவங்களை ஏற்ற அத்ரி, தமது தவப் பலத்தின் துணையுடன் போர்க்களத்தின் மீது காந்தியுடன் ஒளிரத் தொடங்கினார்.(9) உண்மையில் அத்ரி, இருள் அனைத்தையும் விலக்கி அண்டத்தை ஒளியில் சுடர்விடச் செய்தார். மேலும் தம் பலத்தை வெளிப்படுத்திய அவர், தேவர்களுடைய பகைவர்களின் கூட்டத்தையும் அடக்கினார்.(10)

அத்ரியினால் எரிக்கப்படும் அந்தப் பேரசுரர்களைக் கண்ட தேவர்களும், அத்ரியின் சக்தியால் பாதுகாக்கப்பட்டவர்களாக, அவர்களை {தானவர்களை} விரைவில் அகற்றத் தொடங்கினர்.(11) தமது சக்தி அனைத்தையும் திரட்டி, தம் ஆற்றலை வெளிப்படுத்திய அத்ரி இவ்வழியிலேயே நாளின் தேவனுக்கு ஒளியூட்டி, தேவர்களை மீட்டு, அசுரர்களைக் கொன்றார்.(12) புனித நெருப்பைத் துணையாகக் கொண்டவரும், அமைதியாக மந்திரங்களை ஓதுபவரும், மான் தோல் உடுத்தியவருமான அந்த மறுபிறப்பாளரால் செய்யப்பட்ட சாதனை இதுவே. ஓ! அரசமுனியே, கனிகளைமட்டுமே உண்டு வாழ்ந்த அந்த முனிவர் செய்த சாதனையைக் காண்பாயாக.(13) உயர் ஆன்ம அத்ரியின் சாதனையை நான் விரிவாக உனக்கு உரைத்தேன். நான் தொடரலாமா? அல்லது, நீ ஏதாவது சொல்லப் போகிறாயா? இந்த மறுபிறப்பாள முனிவரைவிட மேன்மையான க்ஷத்திரியன் யாரேனும் உண்டா?” என்று கேட்டான் {வாயு}.(14)

இவ்வாறு சொல்லப்பட்ட {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், “ஓ! மன்னா, (பழங்காலத்தில்) உயர் ஆன்ம சியவனரால் செய்யப்பட்ட சாதனையைக் கேட்பாயாக.(15) அஸ்வினி இரட்டையர்களுக்கு உறுதி மொழி அளித்த சியவனர், பாகனைத் தண்டித்தவனிடம் {இந்திரனிடம்}, “வேறு தேவர்கள் அனைவருடன் சேர்ந்து அஸ்வினிகளையும் சோமம் பருகுபவர்களாகச் செய்வாயாக” என்றார்.(16)

இந்திரன் {சியவனரிடம்}, “அஸ்வினிகள் எங்களால் கைவிடப்பட்டவர்கள். அவர்களைப் பிறரோடு சேர்ந்து சோமம் பருக வேள்வி வட்டத்திற்குள் எவ்வாறு அனுமதிக்க முடியும்? அவர்கள் தேவர்களோடு கணக்கிடப்படுவதில்லை. எனவே, எங்களிடம் அவ்வாறு சொல்லாதீர்.(17) ஓ! பெரும் நோன்புகளைக் கொண்டவரே, அஸ்வினிகளுடன் சேர்ந்து நாங்கள் சோமம் பருக விரும்பவில்லை. ஓ! கல்விமானான பிராமணரே, நீர் சொல்லும் வேறு எதையும் நாங்கள் நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம்” என்றான்.(18)

சியவனர், “அஸ்வினி இரட்டையர்களும் உங்கள் அனைவருடன் சேர்ந்து சோமம் பருக வேண்டும். ஓ! தேவர்களின் தலைவா, அவ்விருவரும் சூரியனுடைய மகன்களாக இருப்பதால் அவர்களும் தேவர்களே.(19) நான் சொன்னதைத் தேவர்கள் செய்ய வேண்டும். அந்த வார்த்தைகளின்படி செயல்படும்போது, தேவர்கள் பெரும் நன்மையை அறுவடை செய்வார்கள். வேறு வகையில் செய்பட்டால் தீமையே அவர்களை மூழ்கடிக்கும்” என்றார்.(20)

இந்திரன், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் அஸ்வினிகளுடன் சேர்ந்து சோமம் பருக மாட்டேன். மற்றவர்கள் விரும்பினால் அவர்களோடு பருகட்டும். என்னைப் பொறுத்தவரையில், நான் அதைச் செய்யத் துணியேன்” என்றான்.(21)

சியவனர், “ஓ! பலனைக் கொன்றவனே, என் வார்த்தைகளுக்கு நீ கீழ்ப்படியாவிட்டால், இந்த நாளிலேயே என்னால் வற்புறுத்தப்பட்டு வேள்வியில் அவர்களோடு சோமம் பருகுவாய்” என்றார்”.(22)

காற்றின் தேவன் {தொடர்ந்தான்}, “பிறகு, தம்மோடு அஸ்வினிகளை அழைத்துச் சென்ற சியவனர், அவர்களின் நன்மைக்காக ஒரு பேரறச் சடங்கைத் தொடங்கினார். மந்திரங்களின் துணையுடன் சியவனரால் தேவர்கள் அனைவரும் கலங்கடிக்கப்பட்டனர்.(23) சியவனரால் தொடங்கப்பட்ட காரியத்தைக் கண்ட இந்திரன், கோபத்தால் தூண்டப்பட்டான். ஒரு பெரும் மலையைத் தூக்கிக் கொண்டு அவன் {இந்திரன்} அந்த முனிவரை எதிர்த்து ஓடினான்.(24) தேவர்களின் தலைவன் வஜ்ரமும் தரித்திருந்தான். அப்போது, தவங்களுடன் கூடிய சியவனர், அவ்வாறு முன்னேறி வரும் இந்திரனின் மீதும் தம் கோபப் பார்வையைச் செலுத்தினார்.(25) சிறிதளவு நீரைத் தெளித்த அவர் தேவர்களின் தலைவனை அவனது வஜ்ரத்தோடும் மலையோடும் சேர்த்து முடக்கினார். அவரால் தொடங்கப்பட்ட அந்த அறச்சடங்கின் விளைவால் அவர் இந்திரனுக்குப் பகையான ஒரு பயங்கர அசுரனை உண்டாக்கினார்.(26) வேள்வித் தீயில் ஊற்றப்பட்ட ஆகுதிகளால் அமைந்தவனும், அகன்று விரிந்த வாயைக் கொண்டவனுமான அந்த அசுரன் மதன் என்றழைக்கப்பட்டான். மந்திரங்களின் துணையுடன் அந்தப் பெருந்தவசியால் உண்டாக்கப்பட்ட அந்த அசுரன் இவ்வாறே இருந்தான். அவனது வாயில் நூறு யோஜனைகள் தொலைவுக்கு நீளும் ஆயிரம் பற்கள் இருந்தன.(27) பயங்கர முகத் தோற்றத்தைக் கொண்டிருந்த அவனுடைய கோரப் பற்கள் இருநூறு யோஜனைகள் நீளம் இருந்தன. அவனுடைய கன்னங்களில் ஒன்று பூமியில் இருந்தது, மற்றொன்று சொர்க்கங்களைத் தொட்டுக் கொண்டிருந்தது.(28) உண்மையில், வாசவனுடன் கூடிய தேவர்கள் அனைவரும், லேவியாதனத்தின் {பெரிய மீன் ஒன்றின்} அகன்று திறந்திருக்கும் வாய்க்குள் நுழையப் போகும் மீன்களைப் போல அந்தப் பேரசுரனின் நாவின் அடிப்பாகத்தில் {தொண்டையில்} நின்று கொண்டிருந்தனர்.(29)

தேவர்கள், மதனின் வாய்க்குள் நின்று கொண்டிருந்தபோது, அவர்களுள் அவசர ஆசலோசனை செய்து இந்திரனிடம், “இந்த மறுபிறப்பாளரிடம் மதிப்புடன் தலைவணங்குவாயாக.(30) அனைத்து ஐயங்களில் இருந்து விடுபட்டு, அஸ்வினிகளின் துணையுடன் நாங்கள் சோமத்தைப் பருகுவோம்” என்றனர். அதன் பிறகு, சக்ரன் சியவனரிடம் தலைவணங்கி அவரது ஆணைக்குக் கீழ்ப்படிந்தான்.(31) இவ்வாறே சியவனர், அஸ்வினிகளைப் பிற தேவர்களுடன் சேர்ந்து சோமம் பருகுபவர்களாக்கினார். மதனைத் திருப்பி அழைத்துக் கொண்ட அந்த முனிவர், அவன் செய்ய வேண்டிய செயல்களை அவனுக்கு ஒதுக்கினார்.(32) அந்த மதன், பகடையிலும், வேட்டையிலும், குடியிலும், பெண்களிடத்திலும் வசிக்குமாறு பணிக்கப்பட்டான். எனவே, ஓ! மன்னா, இவற்றில் ஈடுபடும் மனிதர்கள் ஐயமில்லாமல் அழிவையே அடைவார்கள்.(33) எனவே, ஒருவன் இந்தக் களங்கங்களை எப்போதும் நெடுந்தொலைவுக்குக் களைய வேண்டும். இவ்வாறே, ஓ! மன்னா, சியவனர் செய்த சாதனையை நான் உனக்குச் சொன்னேன். நான் தொடரட்டுமா? அல்லது, நீ மறுமொழியேதும் சொல்லப் போகிறாயா? பிராமணரான சியவனரைவிட உயர்ந்த க்ஷத்திரியன் எவனும் இருக்கிறானா?” என்று கேட்டான் {வாயு}[1]“.(34,35)

கபர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 157-பூமியும், சொர்க்கமும் கபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது; தேவர்கள் பிராமணர்களால் அவற்றைத் திரும்பப் பெற்றது; கார்த்தவீரியார்ஜுனனுக்குப் பிராமணர்களால் ஏற்படப்போகும் அச்சம் ஆகியவற்றைக் குறித்து கார்த்தவீரியார்ஜுனனுக்குச் சொன்ன வாயு தேவன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “காற்றின் தேவனுடைய இவ்வார்த்தைகளைக் கேட்ட {கார்த்தவீரிய} ஆர்ஜுனன் அமைதியாக இருந்தான். இதன்பேரில் காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், “இந்திரனின் தலைமையிலான சொர்க்கவாசிகள் அசுரன் மதனின் வாய்க்குள் தங்களைக் கண்டபோது, சியவனர் அவர்களிடம் இருந்து பூமியை அடைந்தார்.(1,2) ஏற்கனவே சொர்க்கத்தை இழந்தவர்களும், இப்போது பூமியை இழந்தவர்களுமான தேவர்க்ள உற்சாகமிழந்தனர். உண்மையில், அந்த உயர் ஆன்மாக்கள் துன்பத்தால் பீடிக்கப்பட்டு, பெரும்பாட்டனின் பாதுகாப்பின் கீழ் தங்களை நிறுத்திக் கொண்டனர் {பிரம்மனைத் தஞ்சமடைந்தனர்}.(3)

தேவர்கள் {பிரம்மனிடம்}, “ஓ! அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவரே, பூமியானது எங்களிடமிருந்து சியவனரால் எடுத்துக் கொள்ளப்பட்டது, ஓ! பலமிக்கவனே, அதே வேளையில் சொர்க்கமும் கபர்களால் அபகரிக்கப்பட்டது.(4)

பிரம்மன், “சொர்க்கவாசிகளே, இந்திரனின் தலைமையில் விரைவாகச் சென்று பிராமணர்களின் பாதுகாப்பை நாடுவீராக. அவர்களை நிறைவடையச் செய்வதன் மூலம் நீங்கள் முன்பு போலவே இரண்டு உலகங்களையும் பெறுவீர்கள்” என்றான்.(5)

பெரும்பாட்டனால் இவ்வாறு சொல்லப்பட்ட தேவர்கள், பிராமணர்களிடம் சென்று, அவர்களது பாதுகாப்பை அடைய வேண்டினார்கள். பிராமணர்கள் மறுமொழியாக, “நாங்கள் யாரை வசப்படுத்த வேண்டும்?” என்று கேட்டனர். இவ்வாறு கேட்கப்பட்ட தேவர்கள், அவர்களிடம், “கபர்களை அடக்குவீராக” என்றனர்.(6)

பிராமணர்கள், “முதலில் அவர்களைப் பூமிக்குக் கொண்டு வந்து, அதன் பிறகு அவர்களை விரைவில் அடக்குகிறோம்” என்றனர். அதன் பிறகு, கபர்களின் அழிவை நோக்கமாகக் கொண்ட ஒரு சடங்கை அந்தப் பிராமணர்கள் தொடங்கினர். இதைக் கேட்ட உடனேயே கபர்கள், தனி என்ற பெயர் கொண்டவனைத் தங்கள் தூதுவனாக அந்தப் பிராமணர்களிடம் அனுப்பி வைத்தனர்.(7)

தனி, அவர்களிடம் வந்து பூமியில் அமர்ந்து, கபர்களால் சொல்லப்பட்ட செய்தியை இவ்வாறு சொன்னான், “கபர்களும் உங்கள் அனைவரையும் போன்றோரே. (அவர்கள் உங்களில் எவரையும் காட்டிலும் தாழ்ந்தவர்களல்ல). எனவே, நீங்கள் நிறைவேற்றப் பார்க்கும் சடங்குகள் என்ன விளைவை ஏற்படுத்தப் போகின்றன?(8) அவர்கள் அனைவரும் வேதங்களை அறிந்தவர்களாகவும், ஞானம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் வேள்விகளில் கவனம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வாய்மையைத் தங்கள் நோன்பாகவும் கொண்டிருப்பதால் பெரும் முனிவர்களுக்கு இணையானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(9) செழிப்பின் தேவி அவர்களுக்கு மத்தியில் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவர்களும் பதிலுக்கு அவளை மதிப்புடன் ஆதரிக்கின்றனர். அவர்கள் கனியற்ற கலவிகளுக்காகத் தங்கள் மனைவியரை நாடுவதில்லை, மேலும், அவர்கள் வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் உண்பதில்லை.(10) அவர்கள் (ஒவ்வொருநாளும்) சுடர்மிக்க வேள்வித்தீயில் ஆகுதிகள் ஊற்றி, தங்கள் ஆசான்கள் மற்றும் பெரியோரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் ஆன்மாக்களை முற்றிலும் கட்டுப்படுத்தியவர்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முறையாகப் பகர்ந்து கொடுக்காமல் ஒருபோதும் எந்த உணவையும் உட்கொள்வதில்லை.(11) அவர்கள் எப்போதும் தேர்களிலும், பிற வாகனங்களிலும் ஒன்றாகச் சேர்ந்தே செல்கிறார்கள் (அவர்களில் எவரும், பிறர் கால்நடையாகச் செல்லும்போது வாகனம் செலுத்திச் செல்வதில்லை). அவர்கள் தங்கள் மனைவியர் மாத விலக்குக் காலத்தில் இருக்கும்போது அவர்களிடம் ஒருபோதும் கலவியில் ஈடுபடுவதில்லை. மறுமையில் இன்பலோகங்களை அடையும் வழியிலேயே அவர்கள் அனைவரும் செயல்படுகின்றனர்.(12) பெண்கள் கருவுற்றிருக்கும்போதோ, முதியோர் உண்ணாதிருக்கும்போதோ, அவர்கள் ஒருபோதும் உண்பதில்லை. அவர்கள் முற்பகலில் எவ்வகை விளையாட்டுகளிலும் ஈடுபடுவதில்லை. ஒருபோதும் அவர்கள் பகலில் உறங்குவதில்லை.(13) கபர்களிடம் இவையும், இன்னும் பிற நல்லொழுக்கங்ளும், சாதனைகளும் இருக்கும்போது, ஏன் நீங்கள் அவர்களை அடக்க முயல்கிறீர்கள்? இம்முயற்சியை நீங்கள் தவிர்க்க வேண்டும். உண்மையில், அவ்வாறு தவிர்ப்பதன் மூலம் நீங்கள் நன்மையை அடைவீர்கள்” என்றான்.(14)

பிராமணர்கள், “ஓ, நாங்கள் கபர்களை அடக்கவே போகிறோம். இக்காரியத்தில் நாங்களும் தேவரும் ஒருவரே. எனவே, கபர்கள் எங்கள் கரங்களால் கொல்லப்படுவார்கள். தனியைப் பொறுத்தவரையில் {தனி என்ற உன்னைப் பொறுத்தவரையில்} அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயே திரும்ப வேண்டும்” என்றனர்.(15)

இதன் பிறகு, கபர்களிடம் திரும்பிய தனி, அவர்களிடம், “பிராமணர்கள் உங்களுக்கு எந்த நன்மையும் செய்பவர்களாக இல்லை” என்றான். இதைக் கேட்ட கபர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, பிராமணர்களை நோக்கிச் சென்றனர்.(16) தேரின் கொடிமரங்கள் உயர்த்தப்பட்டு, தங்களை எதிர்த்து வரும் கபர்களைக் கண்ட பிராமணர்கள், கபர்களின் உயிர் மூச்சுகளுக்கு அழிவை உண்டாக்குவதற்காகக் குறிப்பிட்ட சுடர்மிக்க நெருப்புகளை உண்டாக்கினர்.(17) வேத மந்திரங்களின் துணையுடன் உண்டாக்கப்பட்ட அந்த நித்திய நெருப்புகள், கபர்களை அழித்து, (பொன்) மேகங்கள் பலவற்றைப் போல ஆகாயத்தில் ஒளிரத் தொடங்கின.(18) போரில் ஒன்றுகூடிய தேவர்கள், பல தானவர்களைக் கொன்றனர். பிராமணர்களே அவர்களுக்கு அழிவை உண்டாக்குகிறார்கள் என்பதை அந்நேரத்தில் அவர்கள் அறியவில்லை.(19)

ஓ! மன்னா, பெரும் சக்தி கொண்ட நாரதர் அங்கே வந்து, (தேவர்களால் அல்லாமல்) பிராமணர்களின் வலிய சக்தியின் மூலம் தங்கள் பகைவர்களான கபர்கள் எவ்வாறு உண்மையில் கொல்லப்பட்டனர் என்பதைத் தேவர்களுக்குச் சொன்னார்.(20) தேவர்களின் சொற்களைக் கேட்ட சொர்க்கவாசிகள் பெரும் நிறைவை அடைந்தனர். அவர்கள் பெரும்புகழைக் கொண்ட தங்கள் மறுபிறப்பாளக் கூட்டாளிகளை மெச்சினார்கள்.(21) பிறகு, தேவர்களின் சக்தியும் ஆற்றலும் பெருகத் தொடங்கின, அவர்கள் உலகங்கள் அனைத்திலும் வழிபடப்பட்டார்கள், அழிவின்மை என்ற வரத்தையும் அவர்கள் அடைந்தார்கள்” என்றான் {வாயு}.(22)

காற்றின் தேவன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, அவனை முறையாக வழிபட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன், அவனிடம் இந்த வார்த்தைகளில் பதிலளித்தான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஏகாதிபதி, {கார்த்தவீரிய} அர்ஜுனன் என்ன சொன்னான் என்பதைக் கேட்பாயாக.(23)

{கார்த்தவீரிய} அர்ஜுனன் {வாயு தேவனிடம்}, “ஓ! பலமிக்கத் தேவா {வாயுவே}, எப்போதும், அனைத்து வழிமுறைகளிலும் நான் பிராமணர்களுக்காகவே வாழ்கிறேன். அவர்களிடம் அர்ப்பணிப்புள்ள நான் எப்போதும் அவர்களை வழிபட்டு வருகிறேன்.(24) தத்தாத்ரேயரின் அருளின் மூலம் நான் என்னுடைய இந்த வலிமையை அடைந்திருக்கிறேன். அவருடைய அருளின் மூலமே உலகில் பெருஞ்சாதனைகளைச் செய்தேன், உயர்ந்த பலன்களையும் அடைந்தேன்.(25) ஓ! காற்றின் தேவா, உன்னால் விரிவாகவும், கவனத்தைக் கவரும் வகையிலும் சொல்லப்பட்ட பிராமணர்களின் சாதனைகளை நான் கவனத்துடன் கேட்டேன்” என்றான்.(26)

காற்றின் தேவன், “பிறப்பால் உனதான க்ஷத்திரியக் கடமைகளை நீ செய்யும்போது, பிராமணர்களைப் பாதுகாத்து, அவர்களைப் பேணி வளர்ப்பாயாக. உன் புலன்களைக் காப்பது போலவே நீ அவர்களைக் காப்பாயாக. பிருகுவின் குலத்தில் இருந்து உனக்கு ஆபத்து இருக்கிறது. எனினும், நெடுங்காலம் கழித்தே அவை அனைத்தும் நடந்தேறும்” என்றான் {வாயு}”.(27)

கிருஷ்ணன் மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 158-கிருஷ்ணனின் மகிமையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா புகழத்தக்க நோன்புகளைக் கொண்ட பிராமணர்களை எப்போதும் நீர் வழிபடுகிறீர். எனினும், ஓ! மன்னா, அவர்களை வழிபடுவதால் நீர் காணும் கனியென்ன?(1) ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே, பிராமணர்களை வழிபடுவதில் கிடைக்கும் எந்தச் செழிப்பால் நீர் அவர்களை வழிபடுகிறீர்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான கிருஷ்ணன் இங்கே இருக்கிறான். அவன் உனக்கு அனைத்தையும் சொல்வான். உயர்ந்த நோன்புகளையும், செழிப்பையும் கொண்ட அவன், பிராமண வழிபாட்டுடன் தொடர்புடைய செழிப்பைக் குறித்து உனக்குச் சொல்வான்.(3) என் பலம், காதுகள், வாக்கு, மனம், கண்கள், புத்தி ஆகியன (இன்று குழம்புவதால்) தெளிவாக இல்லை. என் உடலைக் கைவிடுவதற்கான நேரம் தொலைவிலில்லை என நினைக்கிறேன். சூரியன் வெகு மெதுவாகச் செல்வதாக எனக்குத் தெரிகிறது[1].(4) ஓ! மன்னா, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களால் பின்பற்றப்படுபவையும், புராணங்களில் குறிப்பிடப்படுபவையுமான உயர்ந்த கடமைகள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, அவ்வகையில் கொஞ்சம் எஞ்சி இருப்பதைக் கிருஷ்ணனிடம் இருந்து அறிவாயாக.(5)நான் கிருஷ்ணனை உண்மையில் அறிவேன். அவன் யார் என்பதையும், அவனது புராதன வலிமை என்ன என்பதையும் நான் அறிவேன். ஓ! கௌரவர்களின் தலைவா, கேசவன் அளக்க இயலாத ஆன்மா கொண்டவன். ஐயங்கள் எழும்போது அறத்தை நிலைநிறுத்துபவன் அவனே.(6) பூமி, ஆகாயம், சொர்க்கம் ஆகியவற்றைப் படைத்தவன் கிருஷ்ணனே. உண்மையில், பூமியானது கிருஷ்ணனின் உடலில் இருந்தே எழுந்தது. பயங்கர ஆற்றலைக் கொண்டவனும், தொடக்கக் காலத்தில் இருந்தே இருப்பவனுமான கிருஷ்ணனே வலிமைமிக்கப் பன்றியாகி மூழ்கிப் போன பூமியை உயர்த்தியவன். திசைப்புள்ளிகளையும், மலைகளையும் படைத்தவன் அவனே.(7) ஆகாயம், சொர்க்கம், திசைப்புள்ளிகள் நான்கு, திசைகளின் துணைப்புள்ளிகள் நான்கு ஆகியன அவனுக்குக் கீழேயே இருக்கின்றன. அவனிடம் இருந்தே மொத்த படைப்பும் உண்டானது. பழைமையான அண்டத்தைப் படைத்தவன் அவனே.(8) அவனது உந்தியில் ஒரு தாமரை தோன்றியது. அந்தத் தாமரைக்குள் அளவிலா சக்தி கொண்ட பிரம்மன் எழுந்தான். ஓ! பிருதையின் மகனே, (ஆழத்திலும், அகலத்திலும்) கடலையே கடந்திருக்கும் {விஞ்சியிருக்கும்} இருளைப் போக்கியவன் பிரம்மனே.(9)

ஓ! பார்த்தா, கிருத யுகத்தில் கிருஷ்ணன் அறத்தின் {தர்மத்தின்} வடிவில் (பூமியில்) இருந்தான். திரேதா யுகத்தில் அறிவின் வடிவில் இருந்தான். துவாபர யுகத்தில் வலிமையின் வடிவில் இருந்தான். கலி யுகத்தில் அவன் மறத்தின் {அதர்மத்தின்} வடிவில் பூமிக்கு வந்தான்[1].(10) பழங்காலத்தில் தைத்தியர்களைக் கொன்றவன் அவனே. புராதன தேவன் அவனே. அசுரப் பேரரசனின் (பலியின்) வடிவில் அசுரர்களை ஆண்டவன் அவனே. அனைத்தையும் படைத்தவன் அவனே. அனைத்து உயிரினங்களின் எதிர்காலமாக இருப்பவனும் அவனே. அழிவின் வித்துகள் நிறைந்த இந்த அண்டத்தைப் பாதுகாப்பவனும் அவனே.(11) அறம் குன்றும்போது, தேவகுலத்திலோ, மனித குலத்திலோ பிறப்பவன் இந்தக் கிருஷ்ணனே. (அத்தகைய சந்தர்ப்பங்களில்) மேல் மற்றும் கீழ் உலகங்கள் இரண்டையும் பாதுகாப்பவன் அறத்தில் நிலைத்திருக்கும் தூய ஆன்மா கொண்ட இந்தக் கிருஷ்ணனே.(12) ஓ! பார்த்தா, அசுரர்களில் விடத் தகுந்தவர்களை விட்டு, அவர்களைக் கொல்வதில் தன்னை நிறுவி கொள்கிறான். முறையான மற்றும் முறையற்ற செயல்கள் அனைத்தாகவும், அவற்றின் காரணமாகவும் இருப்பவன் அவனே. செய்யப்பட்ட செயலும், செய்யப்பட வேண்டிய செயலும், செய்துவரும் செயலும் கிருஷ்ணனே ஆவான். ராகு, சோமன் மற்றும் சக்ரன் ஆகியோரும் இந்தச் சிறப்புமிக்கவனே என்பதை அறிவாயாக.(13) விஷ்வகர்மன் அவனே. அண்டவடிவில் இருப்பவன் அவனே. அண்டத்தை அழிப்பவனும், படைப்பவனும் அவனே. சூலபாணி அவனே, மனித வடிவம் அவனே, பயங்கர வடிவம் அவனே. செயல்களால் அறியப்படுபவனாக இருப்பதால் உயிரினங்கள் அனைத்தும் அவனது புகழையே பாடுகின்றன.(14)நூற்றுக்கணக்கான கந்தர்வர்களும், அப்சரஸ்களும், தேவர்களும் எப்போதும் அவனுடன் இருக்கின்றனர். ராட்சசர்களும் கூட அவனது புகழைப் பாடுகின்றனர். செல்வத்தைப் பெருக்குபவன் அவனே; அண்டத்தின் ஒரே வெற்றியாளன் அவனே.(15) நாநயமிக்க மனிதர்கள் வேள்விகளில் அவனது புகழையே பாடுகிறார்கள். சாமங்களைப் பாடுபவர்கள் ரதந்தரங்களைச் சொல்லி அவனைப் புகழ்கின்றனர். பிராமணர்க்ள வேத மந்திரங்களில் அவனையே புகழ்கின்றனர். வேள்விப் புரோகிதர்கள் அவனிடமே தங்கள் ஆகுதிகளை ஊற்றுகின்றனர்.(16) சினத்தில் இந்திரன் பொழிந்த மழையில் இருந்து பிருந்தாவனத்தின் மாட்டிடையர்களைப் பாதுகாப்பதற்காகக் கோவர்த்தன மலைகளை அவன் {கிருஷ்ணன்} உயர்த்திய போது இந்திரனின் தலைமையிலான தேவர்கள் அவனது புகழைப் பாடினர். ஓ!பாரதா, அனைத்து உயிரினங்களுக்குமான ஒரே பேறு அவனே. ஓ! பாரதா, அவன் பழைய பிரம்மக் குகைக்குள் நுழைந்து, அவ்விடத்தில் இருந்து, உலகத்தை மறைத்த ஆதி தொடக்கத்தைக் கண்டவன்[2].(17)முதன்மையான சாதனைகளைக் கொண்ட இந்தக் கிருஷ்ணனே தானவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரையும் கலங்கடித்து, பூமியை மீட்டான். மக்கள் அவனுக்கே பல்வேறு வகை உணவுகளை அர்ப்பணிக்கிறார்கள். போர் நேரும் சமயத்தில் போர்வீரர்கள் அனைவரும் அவனுக்கே தங்கள் வாகனங்களை அர்ப்பணிக்கிறார்கள்.(18) அவன் நித்தியமானவன், சிறப்புமிக்க அவனுக்குக் கீழ்தான் பூமி, சொர்க்கம் மற்றும் இருப்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் இருக்கின்றன. மித்ரன் மற்றும் வருணன் ஆகிய தேவர்களின் உயிர் வித்துகளைக் குடுவைக்குள் விழச் செய்து, வசிஷ்டர் என்ற பெயரில் அறியப்பட்ட முனிவரை உண்டாக்கியவன் அவனே.(19) கிருஷ்ணனே காற்றின் தேவனாக {வாயுவாக} இருக்கிறான்; அவனே பலமிக்க அஸ்வினிகளாக இருக்கிறான்; அவனே தேவர்களில் முதல்வனும், ஆயிரங்கதிர்களைக் கொண்டவனுமான சூரியனாக இருக்கிறான். அவனாலேயே அசுரர்கள் அடக்கப்பட்டார்கள். அவனே தன் மூன்று அடிகளால் மூவுலகங்களையும் மறைத்தான்.(20) தேவர்கள், மனிதர்கள் மற்றும் பித்ருகளின் ஆன்மாவாக இருப்பவன் அவனே. வேள்விச் சடங்குகளை அறிந்தோரால் செய்யப்படும் வேள்வி அவனே. ஒவ்வொரு நாளும் (சூரியனின் வடிவில்) ஆகாயத்தில் எழுந்து பகல் மற்றும் இரவாகக் காலத்தைப் பகுத்து, அரைவருடம் வடக்கு நோக்கியும், அரைவருடம் தெற்கு நோக்கியும் செல்பவன் அவனே.(21)

மேல்நோக்கியும், கீழ்நோக்கியும், பக்கவாட்டிலும் அவனிடமிருந்து எழும் எண்ணற்ற ஒளிக்கதிர்கள் உலகத்திற்கு ஒளியூட்டுகின்றன. வேதமறிந்த பிராமணர்கள் அவனைத் துதிக்கின்றனர். அவனுடைய கதிர்களில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டே சூரியன் ஆகாயத்தில் ஒளிர்கிறான்.(22) மாதாமாதம் வேள்வி செய்பவன் அவனை வேள்வியாகவே விதிக்கிறான். வேதங்களை அறிந்த மறுபிறப்பாளர்கள் அனைத்து வகை வேள்விகளிலும் அவனது புகழையே பாடுகின்றனர். மூன்று அச்சுகளைக் கொண்டதும், ஏழு குதிரைகள் பூட்டப்பட்டதுமான ஆண்டுச் சக்கரமாக இருப்பவன் அவனே. இவ்வழியில் (பருவகாலங்கள் என்ற) மூன்று மாளிகைகளை ஆதரிப்பவன் அவனே.(23) பெருஞ்சக்தி கொண்டவனும், அனைத்திலும் நிறைந்திருப்பவனும், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனுமான கிருஷ்ணனே உலகங்கள் அனைத்தையும் நிலைநிறுத்துகிறான். இருள் அனைத்தையும் விலக்கும் சூரியன் அவனே. அனைத்தையும் படைத்தவன் அவனே. ஓ! வீரா, நீ கிருஷ்ணனை அணுகுவாயாக.(24)

உயர் ஆன்மாவும் பலமும் கொண்டவனான கிருஷ்ணன் ஒரு காலத்தில் காண்டவ வனத்தின் புல்லில் அக்னியின் வடிவில் வசித்திருந்தான். (அந்தக் காட்டில் இருந்த மூலிகைகள் அனைத்தையும் எரித்ததால்) விரைவில் அவன் நிறைவடைந்தான். விரும்பிய எங்கும் செல்லவல்லவனான கிருஷ்ணன், ராட்சசர்கள் மற்றும் உரகர்களை அடக்கிவிட்டு, சுடர்மிக்க நெருப்புக்குள் ஆகுதிகளை ஊற்றினான்.(25) அர்ஜுனனுக்கு எண்ணற்ற வெண்குதிரைகளைக் கொடுத்தவன் கிருஷ்ணன். குதிரைகள் அனைத்தையும் படைத்தவன் அவனே. இந்த உலகம் (அல்லது மானுட வாழ்வு) அவனது தேராக இருக்கிறது. அந்தத் தேருக்கு (சத்வ, ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களாலான) மூன்று சக்கரங்கள் இருக்கின்றன.(26) அது (செயல்களால் கொண்டுவரப்படும் மேன்மையான, தாழ்ந்த, இடைநிலை பிறவிகளைக் குறிக்கும் மேல்நோக்கு, கீழ்நோக்கு, குறுக்கு என) மூவகை நகர்வியக்கங்களைக் கொண்டிருக்கிறது. அதில் (காலம், முன்வினை, தேவர்கள் விருப்பம் மற்றும் சுய விருப்பம் என்ற) நான்கு குதிரைகளைப் பூட்டப்பட்டுள்ளன. அது (நற்செயல்கள், தீச்செயல்கள் மற்றும் கலப்புத்தன்மையுள்ள செயல்களைக் குறிக்கும் வகையில் வெள்ளை, கருப்பு மற்றம் கலந்த வண்ணங்களில்) மூன்று அச்சுகளைக் கொண்டிருக்கிறது.(27) வானத்துடன் சேர்ந்த ஐம்பூதங்களுக்கும் புகலிடமாக இருப்பவன் இந்தக் கிருஷ்ணனே. பூமியையும், சொர்க்கத்தையும் இடையில் உள்ள வெளியையும் படைத்தவன் அவனே. உண்மையில், காடுகளையும், மலைகளையும் படைத்தவன் அளவிலா சுடர்மிக்க சக்தி கொண்ட இந்தக் கிருஷ்ணனே. தன் மீது வஜ்ரத்தை ஏவ இருந்த சக்ரனைத் தண்டிக்க விரும்பி, ஆறுகளைக் கடந்து அவனை உடனே முடக்கியவன் இந்தக் கிருஷ்ணனே. பழைமையான ஆயிரம் ரிக்குகளின் துணையால் பெரும் வேள்விகளில் பிராமணர்களால் துதிக்கப்படுபவன் இந்தக் கிருஷ்ணனே.(28) ஓ! மன்னா, வீட்டிற்கு விருந்தினராக வந்தவரும், புராதன முனிவர்களில் ஒருவராகச் சொல்லப்படுபவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான முனிவர் துர்வாசரைப் பராமரிக்க இந்தக் கிருஷ்ணனால் மட்டுமே முடிந்தது. அண்டத்தைப் படைத்தவன் அவனே. உண்மையில் அவன் தன் சொந்த இயல்பில் இருந்தே அனைத்தையும் படைக்கிறான்.(29) தேவர்கள் அனைவரையும் விட மேன்மையான அவனே தேவர்கள் அனைவருக்கும் கற்பிக்கிறான். பழைமையான விதிகள் அனைத்தையும் பிழையில்லாமல் பின்பற்றுபவன் அவனே. ஓ! மன்னா, இன்பம் தொடர்புடைய அனைத்துச் செயல்கள், வேதங்களில் காணப்படும் அனைத்துச் செயல்கள், உலகம் தொடர்புடைய அனைத்துச் செயல்களின் கனியாக இருப்பவன் விஷ்வக்ஸேனன் என்றழைக்கப்பபடும் இந்தக் கிருஷ்ணனே. (30)

உலகங்கள் அனைத்திலும் காணப்படும் ஒளியின் வெண்கதிர்கள் அவனே. மூவுலகங்கள் அவனே. உலகங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் மூவர் {மும்மூர்த்திகள்} அவனே. வேள்வி நெருப்புகள் மூன்றிலும் இருப்பவன் அவனே. {பூ: புவ: ஸ்வ: எனும்} வியாஹ்ருதிகள் மூன்றும் அவனே. உண்மையில் அனைத்து தேவர்களும் ஒன்றாகச் சேர்ந்தவன் இந்தத் தேவகியின் மைந்தனே.(31) ஆண்டு அவனே; பருவகாலங்கள் அவனே; பக்ஷங்கள் அவனே, பகலும், இரவும் அவனே; கலைகள், காஷ்டைகள், மாத்திரைகள், முகூர்த்தங்கள், லவங்கள், க்ஷணங்கள் என்றழைக்கப்படும் காலப்பிரிவுகள் அவனே. இவை யாவும் இந்த விஷ்வக்ஸேனனே என்பதை அறிவாயாக.(32) சந்திரன், சூரியன், கோள்கள், நட்சத்திரக்கூட்டங்கள், விண்மீன்கள், முழு நிலவு {பௌர்ணமி} நாள் உள்ளிட்ட பர்வ நாட்கள் அனைத்தும், நட்சத்திரக் கூடுகைகள் மற்றும் பருவகாலங்கள் ஆகியன விஷ்வக்ஸேனனான இந்தக் கிருஷ்ணனிடம் இருந்தே பாய்கின்றன.(33) ருத்திரர்கள், ஆதித்தயர்கள், வசுக்கள், அஸ்வினிகள், சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், பல்வேறு மருத்துக்கள், பிரஜாபதி, தேவர்களின் தாயான அதிதி, முனிவரெழுவர் {சப்தரிஷிகள்} ஆகியோரனைவரும் கிருஷ்ணனில் இருந்தே எழுந்தனர்.(34)

காற்றாகத் தன்னை மாற்றிக் கொண்டு அவன் அண்டத்தைச் சிதறடிக்கிறான். அண்ட வடிவிலான அவன் அனைத்தையும் எரிக்கும் நெருப்பாகிறான். நீராக மாறி அனைத்தையும் நனைத்து மூழ்கடிக்கிறான், பிரம்மனின் வடிவை ஏற்று உயிருள்ள மற்றும் உயிரற்ற பல்வேறு இனங்களைப் படைக்கிறான்.(35) தானே வேதமாக இருந்தாலும், வேதங்கள் அனைத்தையும் கற்கிறான். விதிகள் அனைத்துமாக இருந்தாலும், அறம் தொடர்பாகக் காரியங்களில் விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் அனைத்தையும், வேதங்களையும், அண்டத்தை ஆளும் சக்தியையும் பின்பற்றுகிறான். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, அசையும் மற்றும் அசையாத அண்டமனைத்தும் இந்தக் கேசவனே என்பதை அறிவாயாக. மிகப் பிரகாசமான ஒளியின் வடிவில் இருப்பவன் அவனே. அண்டவடிவம் கொண்ட இந்தக் கிருஷ்ணன், அந்தச் சுடர்மிக்கப் பிரகாசத்தில் வெளிப்படுகிறான். இருப்பிலுள்ள அனைத்து உயிரின ஆன்மாக்களின் உண்மை காரணமாக இருக்கும் அவன் முதலில் நீரையே படைத்தான். அதன் பிறகு இந்த அண்டத்தை அவன் படைத்தான்.(37) இந்தக் கிருஷ்ணனே விஷ்ணு என்பதை அறிவாயாக. அண்டமனைத்தின் ஆன்மா அவனே என்பதை அறிவாயாக. பருவகாலங்கள் அனைத்தும் அவனே என்பதை அறிவாயாக. இயற்கையில் நாம் காணும் பல்வேறு அற்புதங்கள் அவனே. மழைபொழியும் மேகங்களும், வானத்தில் மின்னும் மின்னல்களும் அவனே. யானை ஐராவதன் அவனே. உண்மையில், அசையும், அசையாத அண்டமனைத்தும் அவனே.(38)

அண்டத்தின் வசிப்பிடமாகவும், குணங்கள் அனைத்தையும் கடந்தவனாகவும் இருக்கும் இந்தக் கிருஷ்ணனே வாசுதேவன். அவன் ஜீவன் ஆகும்போது சங்கர்ஷணன் என்றழைக்கப்படுகிறான். அடுத்ததாக அவன் பிரத்யும்னனாகவும், அநிருத்தனாகவும் ஆகிறான். இவ்வழியில் தெய்வப் பிறவியான உயர் ஆன்ம கிருஷ்ணன், நான்கு வகை வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.(39) ஐம்பூதங்களாலான இந்த அண்டத்தை உண்டாக்க விரும்பிய அவன், தன்னை அப்பணியில் நிறுவி கொண்டு, தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்ற உயிருள்ள ஐந்து இருப்புகளில் அண்டத்தை இயங்கச் செய்கிறான். ஓ! பிருதையின் மகனே, பூமி {நிலம்}, காற்று, வானம், ஒளி, நீர் ஆகியற்றைப் படைத்தவன் அவனே. அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய இந்த அண்டத்தைப் படைத்து, அவற்றை (ஈன்றுபெறும் இனம், முட்டையிட்டுப் பெறும் இனம், தாவரங்கள் மற்றும் கழிவில் பிறப்பவை என்ற) நால்வகையாகப் பிரித்த பிறகு, பூமியை {ஆகாயம், நிலம், நெருப்பு, நீர், காற்று என்ற) ஐந்துவகை வித்துகளுடன்[3] கூடியவளாகப் படைத்தான். பிறகு, பூமியில் நீரை அபரிமிதமாகப் பொழிவதற்காக ஆகாயத்தை உண்டாக்கினான்.(41)ஓ! மன்னா, இந்த அண்டத்தை உண்டாக்கியவன் இந்தக் கிருஷ்ணனே என்பதில் ஐயமில்லை. அவன் தானே தோன்றியவன் ஆவான். அவன் தன் பலத்தால் அனைத்துப் பொருட்களையும் இருப்பில் இருக்கச் செய்கிறான். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், உலகங்கள், முனிவர்கள், பித்ருக்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவன் அவனே. அனைத்து உயிரினங்களின் தலைவன், படைக்க விரும்பியவனாக உயிருள்ள மொத்த அண்டத்தையும் முறையாகப் படைத்தான். நன்மை மற்றும் தீமை, அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்தும் விஷ்வக்ஸேனனான இவனிடம் இருந்தே பாய்கின்றன. இருப்பில் உள்ள எதுவும், இருப்பில் உதிக்கும் எதுவும், அனைத்தும் கேசவனே. உயிரினங்களுக்கு முடிவு ஏற்படுகையில் மரணமாக வருபவனும் இந்தக் கிருஷ்ணனே. அவன் நித்தியமானவன், அறக் காரணங்களை நிலைநிறுத்துபவன். கடந்த காலத்தில் இருந்த எதுவும், நாம் அறிந்த எதுவும், உண்மையில் அனைத்தும் இந்த விஷ்வக்ஸேனனே.(42-44) அண்டத்தில் உன்னதமானவையும், பலன்மிக்கவையுமான எவையும், நன்மை, தீமை என்று இருக்கும் எவையும், அனைத்தும் நினைத்தக்கரியவனான இந்தக் கேசவனே. எனவே கேசவனைவிட மேன்மையானது என எதையும் நினைப்பதே பொருளற்றதாகும்.(45) கேசவன் அத்தகையவனே. இதையும்விடப் பெரியவனே. உயர்ந்தவற்றில் உயர்ந்தவனும், மாற்றமில்லாதவனும், மங்காதவனுமான நாராயணன் அவனே. அசைவன மற்றும் அசையாதனவற்றுடன் கூடியதும், தொடக்கம், நடு மற்றும் முடிவுடன் கூடியதுமான மொத்த அண்டத்திற்கும், ஆசைகளைப் பின்தொடர்ந்து பிறக்கும் உயிரினங்கள் அனைத்திற்கும் மாற்றமற்ற நித்திய காரணன் அவனே” என்றார் {பீஷ்மர்}.(46)

துர்வாஸர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 159-பிராமண வழிபாட்டின் சிறப்பையும், துர்வாஸ முனிவரை வழிபட்டதனால் தனக்குக் கிடைத்த மேன்மையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்..

யுதிஷ்டிரன் {கிருஷ்ணரிடம்}, “ஓ! மதுசூதனாபிராமண வழிபாட்டினால் உண்டாகும் செழிப்பென்ன என்பதை எங்களுக்குச் சொல்வாயாக. இக்காரியம் குறித்து நன்கறிந்தவன் நீயே. உண்மையில் நம் பாட்டன் {பீஷ்மர்} உன்னை அறிந்திருக்கிறார்” என்றான்.(1)

வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓ! குருகுலத்தில் முதன்மையானவரே, வாய்மைக்கு இணக்கமனான வகையில் பிராமணர்களை வழிபடுவதால் கிட்டும் பலன்களை உமக்குச் சொல்கிறேன், குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(2) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, ஒரு காலத்தில் நான் துவாராவதியில் அமர்ந்திருந்த போது, குறிப்பிட்ட பிராமணர்களிடம் சினம் அடைந்திருந்த என் மகன் பிரத்யும்னன் என்னிடம் வந்து,(3) “ஓ! மதுசூதனரே, பிராமண வழிப்பாட்டில் கிட்டும் பலனென்ன? இம்மையிலும், மறுமையிலும் அவர்களின் தலைமைத்துவம் எவ்வாறு உண்டானது?(4) ஓ! கௌரவங்களை அளிப்பவரே, பிராமணர்களைத் தொடர்ந்து வழிபடுவதன் மூலம் வெல்லப்படும் வெகுமதிகள் என்ன? இக்காரியத்தில் என் மனம் ஐயங்களால் குழப்பமடைவதால் இஃதை அன்புடன் எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)

பிரத்யும்னனால் என்னிடம் இவ்வார்த்தைகள் சொல்லப்பட்டதும், நான் அவனுக்குப் பின்வருமாறு பதிலளித்தேன். ஓ! மன்னா, அந்த வார்த்தைகளைச் சொல்கிறேன் குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(6) {நான் அவனிடம்}, “ஓ! ருக்மிணியின் பிள்ளாய், பிராமண வழிபாட்டின் மூலம் வெல்லப்படும் செழிப்பென்ன என்பதை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. ஒருவன், (அறம், பொருள், இன்பம் என்று) நன்கறியப்படும் முத்தொகையை அடைவதிலோ, முக்தியை அடைவதிலோ, புகழ் மற்றும் செழிப்பு ஆகியவற்றை அடைவதிலோ, தேவர்கள் மற்றும் பித்ருக்கள் வழிப்பாட்டிலோ தன்னை நிறுவிக் கொள்ளும்போது, அவன் மறுபிறப்பாளர்களை நிறைவடையச் செய்வதில் கவனம் கொள்ள வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் (ஆகாயத்தில் இனிய ஒளியைப் பொழியும்) சோம மன்னன் {சந்திரன்} ஆவர். அவர்கள் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் ஆள்பவர்கள்.(7,8) ஒரு ருக்மிணியின் பிள்ளாய், ஓ! மகனே, இம்மையிலோ, மறுமையிலோ ஏற்புடைய அனைத்தும் பிராமணர்களைத் தோற்றுவாயாகக் கொண்டவையே. இதில் எனக்கு ஐயமேதும் இல்லை.(9) பிராமண வழிபாட்டில் இருந்தே பெருஞ்சாதனைகளும், புகழும், பலமும் பாய்கின்றன. உலகங்கள் அனைத்திலும் வசிப்பவர்களும், லோகபாலர்கள் அனைவரும் பிராமணர்களை வழிபடுபவர்களே.(10) இவ்வாறிருக்கையில், ஓ! மகனே, நாமே பூமியின் தலைவர்கள் என்ற கருத்தால் நிறைந்து எவ்வாறு அவர்களை நாம் அவமதிக்கலாம்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன் கோபம், தனக்கான பொருளாகப் பிராமணர்களைத் தழுவ வேண்டாம்.(11) இம்மையிலும், மறுமையிலும் பிராமணர்கள் பெரியவர்களாகக் கருதப்படுகிறார்கள். அண்டத்தில் உள்ள அனைத்தையும் குறித்த நேரடி அறிவு பெற்றவர்கள் அவர்கள். உண்மையில் அவர்கள் கோபமடைந்தால் அனைத்தையும் சாம்பலாகக் குறைக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.(12)

அவர்கள் (இருப்பில் உள்ளவற்றைத் தவிர) வேறு உலகங்களையும், வேறு லோகபாலர்களையும் படைக்கவல்லவர்கள். அவ்வாறிருக்கையில், சக்தியும், சரியான அறிவும் படைத்த மனிதர்கள் ஏன் அவர்களிடம் மதிப்புடன் நடந்துகொண்டு, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்கக் கூடாது?(13) ஓ! மகனே, பச்சை மற்றும் பழுப்பு {பசும்பொன்} நிறம் கொண்ட பிராமணரான துர்வாசர் முன்பொரு சமயம் என் வீட்டில் வசித்திருந்தார். மரவுரியுடுத்திய அவர், வில்வ மரத்தாலான தண்டத்தைக் கொண்டிருந்தார். நீண்ட தாடியுடன் கூடிய அவர் மிகவும் மெலிந்தவராகவும் இருந்தார்.(14) பூமியில் உள்ள நெடிய மனிதனைவிட உயரத்தில் நெடியவராக இருந்தார். மனிதர்களுக்குரிய உலகங்கள், தேவலோகங்கள் மற்றும் வேறு மேன்மையானோருக்குரிய உலகங்கள் அனைத்திலும் திரிந்து கொண்டிருந்த அவர், சபைகளிலும், பொதுவெளிகளிலும் எப்போதும் இந்த ஸ்லோகங்களைப் பாடிக் கொண்டிருந்தார். {துர்வாஸர்} “பிராமணனான இந்தத் துர்வாசனை, விருந்தோம்பல் கடமைகளுடன் தன் வீட்டில் வசிக்கச் செய்பவன் எவன்?(16) அனைவரிடமும் சிறு மீறலையும் கண்டு கோபங்கொள்பவன் இவன். என் இயல்பைக் கேட்டும் இங்கே எனக்குப் புகலிடமளிப்பவன் எவன்?(17) உண்மையில், ஒரு விருந்தினனாக எனக்கு உறைவிடமளிக்கும் ஒருவன், என்னைக் கோபமடையச் செய்யும் எதையும் செய்யக்கூடாது” {என்ற வரிகளைப் பாடுவார்}.

எவரும் தம் வீட்டில் அவருக்கு உறைவிடமளிக்கத் துணியவில்லை என்பதை நான் கண்டபோது, அவரை அழைத்து என் வசிப்பிடத்தில் வசிக்கச் செய்தேன்.(18) ஆயிரக்கணக்கானோர் உண்ணப் போதுமான உணவை குறிப்பிட்ட நாட்களில் அவர் ஒருவரே உண்பார். வேறு குறிப்பிட்ட நாட்களில் மிகக் குறைவாகவே உண்பார். சில நாட்களில் என் வீட்டை விட்டு வெளியே செல்லும் அவர் திரும்பி வரமாட்டார்.(19) சில வேளைகளில் வெளிப்படையான காரணமேதுமின்றிச் சிரிப்பார். சில வேளைகளில் காரணமில்லாமல் அழுவார். அந்த நேரத்தில் பூமியில் அவருக்கு நிகரான வயதைக் கொண்டவர்கள் எவரும் இல்லை.(20) ஒரு நாள், தமக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்து அங்கே இருந்த படுக்கைகள், விரிப்புகளையும், அவருக்குத் தொண்டாற்றியவர்களும், நன்கு அலங்கரித்துக் கொண்டவர்களுமான காரிகையரையும் எரித்துவிட்டுச் சென்றுவிட்டார்[1].(21)உயர்வாகப் புகழத்தக்க நோன்புகளைக் கொண்ட அவர், இது நடந்த பிறகு என்னிடம், “ஓ! கிருஷ்ணா, தாமதமேதும் இல்லாமல் பாயஸம் உண்ண விரும்புகிறேன்” என்றார்.(22) அவரது மனத்தை முன்பே புரிந்து வைத்திருந்த நான் அனைத்து வகை உணவு மற்றும் பானங்களைத் தயாரிக்கும் வகையில் பணியாட்களை நிறுவியிருந்தேன்.(23) உண்மையில், சிறந்த உணவுப்பொருட்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. என்னிடம் பாயஸம் கேட்கப்பட்ட உடனே, நான் அதைக் கொண்டு வந்து அந்தத் தவசிக்கு அளித்தேன்.(24) சிறிதளவு உண்ட அவர், என்னிடம், “ஓ! கிருஷ்ணா, இந்தப் பாயஸத்தை எடுத்து உன் அங்கமெங்கும் பூசிக் கொள்வயாக” என்றான்.(25) எந்தத் தயக்கமுமின்றி அவர் சொன்னவாறே நான் செய்தேன். உண்மையில் எஞ்சியிருந்த பாயஸத்தை என் உடலிலும், தலையிலும் பூசிக் கொண்டேன்.(26)

அந்த நேரத்தில் அத்தவசி, இனிய முகம் படைத்த உன் அன்னை {ருக்மிணி} அருகில் நிற்பதைக் கண்டார். சிரித்துக் கொண்டே அந்தப் பாயஸத்தை அவள் மீதும் அவர் பூசினார்.(27) பாயஸம் பூசப்பட்ட உடலுடன் கூடிய உன் அன்னையைத் தாமதமேதும் இல்லாமல் ஒரு தேரில் பூட்டினார். அந்தத் தேரில் ஏறி அவர் என் வீட்டில் இருந்து புறப்பட்டார்.(28) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், நெருப்பைப் போன்று சுடர்விட்டுப் பிரகாசிக்கும் அந்தத் தவசி, மனிதர்களின் தேரை இழுக்கும் விலங்கைப் போல இளமையுடன் கூடிய என் ருக்மிணியை என் முன்னிலையிலேயே அடித்தார்.(29) இதைக் கண்டும், வன்மத்தில் பிறந்த சிறு துன்பத்தையும் நான் உணரவில்லை, அந்த முனிவரைக் காயப்படுத்தவும் விரும்பவில்லை. உண்மையில், தேரில் ருக்மிணியைப் பூட்டிய அந்த முனிவர், நகரத்தின் சாலைவழியே செல்ல விரும்பிப் புறப்பட்டார்.(30)

இயல்புக்குமீறிய இக்காட்சியைக் கண்ட தாசார்ஹர்களில் சிலர், கோபத்தால் நிறைந்து, ஒருவருக்கொருவர் இவ்வகையில் பேசத் தொடங்கினர், {அவர்கள் தங்களுக்குள்}{31) “ருக்மிணியைத் தேரில் பூட்டிய பிறகும் மூச்சை இழுக்க {சுவாசிக்கக்} கூடியவன் இந்தப் பூமியில் வேறு எவன் இருக்கிறான்? உண்மையில் இந்த உலகம் பிராமணர்களால் நிறையட்டும். வேறு வகையினர் எவரும் இங்கே பிறக்க வேண்டாம்.(32) நஞ்சுமிக்கப் பாம்பின் நஞ்சானது மிகக் கொடியதாகும். ஒரு பிராமணன் அதைவிடக் கொடிய நஞ்சாவான். நஞ்சுமிக்கப் பாம்பான ஒரு பிராமணனால் கடிபட்ட, அல்லது எரிக்கப்பட்ட ஒரு மனிதருக்கு மருத்துவன் எவனும் இல்லை” என்றனர்.(33)

தடுக்கப்பட முடியாதவரான துர்வாசர் அவ்வாறு தேரில் சென்ற போது, ருக்மிணி சாலையில் நிலைதடுமாறி நடந்து அடிக்கடி விழுந்தாள். இதனால் கோபமடைந்த அந்த மறுபிறப்பாள முனிவர், சாட்டையால் ருக்மிணியை அடித்து ருக்மிணியைத் தூண்டினார்.(34) இறுதியாக, பேரார்வத்தில் நிறைந்திருந்த அவர் தேரில் இருந்து குதித்து, வழியற்ற நிலத்தில் கால்நடையாகவே தென்திசையை நோக்கி ஓடினார்.(35) அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் பாதையற்ற நிலத்தில் ஓடுவதைக் கண்ட நாங்கள், உடலில் பாயஸம் பூசப்பட்டவர்களாக இருந்தாலும், அவரைப் பின்தொடர்ந்து சென்று, “ஓ! புனிதமானவரே, எங்களிடம் நிறைவடைவீராக” என்றோம்.(36)

பெரும் சக்தி கொண்ட அந்தப் பிராமணர் {துர்வாஸர்}, என்னைக் கண்டு, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, உன் இயல்பின் பலத்தால் உன் கோபத்தை அடக்கிக் கொண்டாய். ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவனே, நான் உன்னிடம் சிறு குற்றத்தையும் காணவில்லை. ஓ! கோவிந்தா, நான் உன்னிடம் உயர்ந்த நிறைவையடைகிறேன். நீ விரும்பும் ஆசைகள் கனியும் நிலையை வேண்டுவாயாக.(38) ஓ! மகனே, நான் எவரிடமாவது நிறைவடையும்போது, என்னுடைய பலம் என்ன என்பதைக் காண்பாயாக. தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் உணவை விரும்புவதைத் தொடரும் வரையில் அவர்களில் ஒவ்வொருவரும் உணவில் கொள்வது போலவே உன்னையும் விரும்புவார்கள். பல்வேறு உலகங்களில் அறம் இருக்கும் வரை நீ செய்த சாதனைகளின் புகழ் நீடித்திருக்கும்(39,40) உண்மையில் உன் புகழ் மூவுலகங்கள் உள்ள வரை நீடித்திருக்கும். ஓ! ஜனார்த்தனா, நீ அனைவருக்கும் ஏற்புடையவனாக இருப்பாய்.(41) உன் பொருட்களில் உடைக்கப்பட்டவையோ, எரிக்கப்பட்டவையோ வேறுவகையில் (என்னால்) அழிக்கப்பட்டவையோ, அவை அனைத்தும் முன்போலவே, அல்லது முன்னிலும் சிறந்த வடிவில் மீளும்.(42) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, நீ வாழ விரும்பும் வரை, நான் கொடுத்த பாயஸந்தடவிய உடல் பகுதிகளில் தாக்கப்பட்டு மரணம் நேரும் அச்சமேதும் உனக்கு இருக்காது.(43) ஓ! மகனே, உள்ளங்கால்களிலும் அந்தப் பாயஸத்தை நீ ஏன் பூசவில்லை? அதைச் செய்யாததால், என்னால் அங்கீகரிக்கப்படாத வழியில் நீ செயல்பட்டிருக்கிறாய்” என்றார். அந்தச் சந்தர்ப்பத்தில் என்னிடம் நிறைவடைந்து அவர் சொன்ன வார்த்தைகள் இவையே. அவர் பேசுவதை நிறுத்திய பிறகு, என் உடல் பேரெழிலுடனும், காந்தியுடனும் கூடியதை நான் கண்டேன்.(44)

ருக்மிணியிடமும் நிறைவடைந்த அம்முனிவர் அவளிடம், “ஓ! அழகிய பெண்ணே, புகழடைவதில் பெண்களில் முதன்மையானவளாக இருப்பாய், பெரும் மகிமையும், சாதனைகளும் உனதாகும். முதுமை, நோய் அல்லது மேனிவண்ணம் குறைதல் ஆகியவை உனக்கு எப்போதும் ஏற்படாது.(45) எப்போதும் உன்னுடன் இருக்கும் நறுமணத்துடன் கிருஷ்ணனுக்கு நீ எப்போதும் பணிவிடை செய்வதை அனைவரும் காண்பார்கள்.(46) கேசவனின் பதினாறாயிரம் {16,000} மனைவியரில் நீ முதன்மையானவளாக இருப்பாய். இறுதியாக, இவ்வுலகில் இருந்து செல்லும் காலம் வரும்போது, மறுமையில் கிருஷ்ணனின் பிரியா துணையை அடைவாய்” என்றார்.(47)

உன் அன்னையிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அம்முனிவர் மீண்டும் என்னிடம் பின்வரும் சொற்களைச் சொல்லிவிட்டு இடத்தை விட்டு அகன்றார். உண்மையில், சுடர்மிக்க நெருப்பைப் போன்ற முனிவர் துர்வாசர்,(48) “ஓ! கேசவா, பிராமணர்களிடம் எப்போதும் உன் புத்தி இவ்வாறே இருக்கட்டும்” என்றார். உண்மையில் இச்சொற்களைச் சொன்ன அந்தப் பிராமணர், என் கண் முன்பாகவே அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(49) அவர் மறைந்த பிறகு, யாரும் கேட்காத வகையில் அமைதியாகச் சில மந்திரங்களைச் சொல்லும் நோன்பை நோற்றேன். உண்மையில், அந்த நாளில் இருந்து பிராமணர்களிடம் நான் பெறும் ஆணைகளை நிறைவேற்றத் தீர்மானித்தேன்.(50) ஓ மகனே, நானும் உன் அன்னையும் இந்நோன்பைப் பின்பற்றி இன்பத்தில் நிறைந்த இதயங்களுடன் எங்கள் அரண்மனைக்குள் மீண்டும் நுழைந்தோம்.(51) வீட்டிற்குள் நுழைந்ததும், அம்முனிவரால் உடைக்கப்பட்ட, அல்லது எரிக்கப்பட்ட அனைத்தும் புதிதாக இருப்பதைக் கண்டேன்.(52) மேலும் நீடித்திருக்கும் தன்மையுடன் கூடிய அந்தப் புதிய பொருட்களைக் கண்டு நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன். உண்மையில், ஓ! ருக்மிணியின் மகனே, அந்நாளில் இருந்தே நான் பிராமணர்களை எப்போதும் மனத்தால் வழிபடுகிறேன்” என்றேன்.

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரரே}, “தங்கள் வகையில் {வர்ணத்தில்} முதன்மையானவர்களான பிராமணர்களின் பெருமை குறித்து அந்தச் சந்தர்ப்பத்தில் நான் சொன்னது இதுவே.(54) ஓ! குந்தியின் மகனே, ஓ பலமிக்கவரே, நீரும் செல்வம் மற்றும் பசுக்களைக் கொடைகளாக அளித்து உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணர்களை வழிபடுவீராக.(55) இவ்வழியிலேயே பிராமணர்களின் அருள் மூலம் பிறந்த செழிப்பை நான் அனுபவிக்கிறேன். மேலும், ஓ! பாரதர்களின் தலைவா, பீஷ்மர் என்னைக் குறித்துச் சொன்னது அனைத்தும் உண்மையே” என்றான் {கிருஷ்ணன்}.(56)

சங்கரன் மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 160-சிவனின் பெருமையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மதுசூதனா, துர்வாஸரின் அருள்மூலம் நீ அடைந்த அறிவை எனக்கு விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்.(1) ஓ! நுண்ணறிவுமிக்கவர் அனைவரிலும் முன்மையானவனே, அந்த உயர்ந்த அருள், அந்த உயர் ஆன்மாவின் பெயர்கள் அனைத்தையும் விளக்கமாக நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்[1].(2)வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த உயர் ஆன்மாவின் அருள் மூலம் நான் வென்ற புகழ் மற்றும் அடைந்த நன்மைகளை உமக்குச் சொல்கிறேன். உண்மையில், கபர்தினை வணங்கிய பிறகு இது குறித்து நான் உமக்குச் சொல்கிறேன்.(3) ஓ! மன்னா, ஒவ்வொரு நாள் படுக்கையில் இருந்து எழுந்ததும் நான் சொல்லும் சதருத்ரீயத்தை உமக்குச் சொல்கிறேன் கேட்பீராக.(4) அனைத்து உயிரினங்களின் பெருந்தலைவனும், தவங்களையே செல்வமாகக் கொண்டவனுமான பிரம்மனே, சில காலம் சிறப்புத் தவங்களைச் செய்து இந்த மந்திரங்களைத் தொகுத்தான். ஓ! ஐயா, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்துடன் கூடிய இந்த அண்டத்தைச் சங்கரனே படைத்தான்.(5) ஓ! ஏகாதிபதி, மஹாதேவனை விட உயர்ந்தவன் வேறு எவனும் இல்லை. உண்மையில், மூவுலகங்களில் உள்ள அனைத்திலும் உயர்ந்தவன் அவனே.(6) அந்த உயர் ஆன்மாவின் எதிரே நிற்கவல்லவர்கள் வேறு எவரும் இல்லை. உண்மையில், அவனுக்கு நிகராக மூவுலகங்களிலும் ஒருவனும் இல்லை.(7)

போர்க்களத்தில் சினத்தால் நிறைந்தவனாக அவன் நிற்கும்போது, அவனது மேனி மணமே பகைவர்கள் அனைவரின் நினைவையும் இழக்கச் செய்யும். கொல்லப்படாதவர்கள் நடுங்கிக் கீழே விழுவார்கள்.(8) அவனது முழக்கங்கள் மேகங்களுக்கு ஒப்பான பயங்கரமானவை. போர்க்களத்தில் அவனது முழக்கங்களைக் கேட்கும் தேவர்களின் இதயங்களே கூட இரண்டாகப் பிளக்கும்.(9) பினாகைதாரி கோபமடைந்து பயங்கர வடிவை ஏற்று, தேவர்கள், அசுரர், கந்தர்வர், அல்லது பாம்பின் மீது வெறுமனே தன் பார்வையைச் செலுத்தினாலும், அவனுக்கு மலைக்குகையில் உறைவிடம் அமைந்தாலும் மனோ அமைதியை அடையத் தவறுவான். உயிரினங்கள் அனைத்தின் தலைவனான தக்ஷன் வேள்வி செய்ய விரும்பி, தன் வேள்வியைப் பரப்பியபோது,(10,11) அச்சமற்ற பவன், (தக்ஷனைக் கண்டு) கோபமடைந்து, (உடல்படைத்த) வேள்வியைத் துளைத்தான். தன்னுடைய பயங்கர வில்லில் இருந்து கணையை ஏவி உரக்க முழங்கினான்.(12) உண்மையில் மஹாதேவன் கோபமடைந்து உடல்வடிவம் கொண்ட வேள்வியைத் தன் கணையால் திடீரெனத் துளைத்தபோது, தேவர்கள் மகிழ்ச்சியையும், இதய அமைதியையும் இழந்து துன்பத்தில் நிறைந்தனர்.(13)

அவனது வில்லின் நாண்கயிற்றில் உண்டான நாணொலியின் விளைவால் மொத்த அண்டமும் கலக்கமடைந்தது. ஓ! பிருதையின் மகனே, தேவர்களும், அசுரர்களும், உற்சாகத்தை இழந்து கலக்கமடைந்தனர்.(14) பெருங்கடல் கலங்கியது, பூமியானவள் மையம் வரை நடுங்கினாள். மலைகளும், குன்றுகளும் தங்கள் அடித்தளத்தைவிட்டு நகரத் தொடங்கி, அனைத்துப் புறங்களிலும் ஓடின. ஆகாய வெளி உடைந்தது.(15) உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின. எதையும் காண முடியவில்லை. ஓ! பாரதா, சூரியனுடன் சேர்த்து, ஒளிக்கோள்கள் அனைத்தின் ஒளியும் இருளடைந்தது.(16) அச்சமடைந்த பெரும் முனிவர்கள், தங்களுக்கும், அண்டத்திற்கும் நன்மை செய்ய விரும்பி, அமைதிக்கான வழக்கமான பரிகாரச் சடங்குகளைச் செய்தனர்.(17) அதே வேளையில், பயங்கர ஆற்றலைக்கொண்ட ருத்திரன் தேவர்களை எதிர்த்து விரைந்தான். சினத்தால் நிறைந்த அவன், பகனின் {பக தேவனின்} கண்களைக் கிழித்தெறிந்தான்.(18) சினத்தால் தூண்டப்பட்ட அவன், தன் காலால் பூஷனை {சூரியனைத்} தாக்கினான். (புரோடாசம் என்றழைக்கப்படும்) பெரிய வேள்விப்பிண்டத்தை அமர்ந்து உண்ட போது, அந்தத் தேவனின் {சூரியனின்} பற்கள் அவனால் {ருத்திரனால்} கிழித்தெறியப்பட்டன.(19)

அச்சத்தால் நடுங்கிய தேவர்கள் சங்கரனுக்குத் தலைவணங்கினர். தணிவடையாத ருத்திரன் மீண்டும் தன் வில்லின் நாணில் சுடர்மிக்கக் கூரிய கணையொன்றைப் பொருத்தினான்.(20) அவனது ஆற்றலைக் கண்ட தேவர்களும், முனிவர்கள் அனைவரும் அச்சமடைந்தனர். முதன்மையான தேவர்களான அவர்கள் அவனைத் தணிவடையச் செய்யத் தொடங்கினர்.(21) மதிப்புடன் தங்கள் கரங்களைக் கூப்பிக் கொண்ட அவர்கள், சதருத்ரீய மந்திரங்களைச் சொல்லத் தொடங்கினர். இறுதியாக, இவ்வாறு தேவர்களால் புகழப்பட்ட மஹேஸ்வரன் நிறைவடைந்தான்.(22) பிறகு தேவர்கள் (வேள்விக்காணிக்கைகளில்) ஒரு பெரும் பங்கை அவனுக்கு ஒதுக்கினார்கள். ஓ! மன்னா, அச்சத்தில் நடுங்கிய அவர்கள் அவனது பாதுகாப்பை நாடினார்கள்.(23) இரண்டாகப் பிளக்கப்பட்டிருந்த வேள்வியின் உடல் வடிவமானது ருத்திரன் நிறைவடைந்ததும் மீண்டும் ஒன்று சேர்ந்தது. மஹாதேவனின் கணைகளால் எந்த அங்கங்கள் அழிக்கப்பட்டனவோ அவை மீண்டும் முழுமையாக நலமாகத் திரும்பியது.(24)

பழங்காலத்தில், பெருஞ்சக்தி கொண்ட அசுரர்கள் ஆகாயத்தில் முந்நகரங்களை {திரிபுரத்தைக்} கொண்டிருந்தனர். அவற்றில் ஒன்று இரும்பாலானது; ஒன்று வெள்ளியாலானது; மற்றொன்று பொன்னாலானது.(25) மகவத்தால், தன்னிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தாலும் அந்த நகரங்களைத் துளைக்க இயலவில்லை. அசுரர்களால் பீடிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் அப்போது பெரும் ருத்திரனின் பாதுகாப்பை நாடினார்கள். உயர் ஆன்ம தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவனிடம் {ருத்திரனிடம்}, “ஓ! ருத்ரா, அசுரர்கள் தங்கள் செயல்கள் அனைத்திலும் அழிவாதிக்கத்தைச் செய்ய அச்சுறுத்துகின்றனர்.(27) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, மூவுலகங்களையும் பாதுகாப்பதற்க்காக அந்தத் தைத்தியர்களைக் கொன்று அவர்களது நகரத்தையும் அழிப்பாயாக” என்று கேட்டனர். அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அவன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, விஷ்ணுவைத் தன் கணையின் சிறந்த தலையாக அமைத்தான்.(28) நெருப்பின் தேவனைக் கணை முனையாகவும், சூரியனின் மகனான யமனை அந்தக் கணையின் சிறகுகளாகவும் அமைத்தான். வேதங்களைத் தன் வில்லாகவும், சாவித்ரி தேவியைத் தன் வில்லின் சிறந்த நாணாகவும் கொண்டான்.(29) பெரும்பாட்டன் பிரம்மனையே தன் தேரோட்டி ஆக்கிக் கொண்டான். இவை அனைத்தையும் பயன்படுத்தி, மூன்று பர்வங்கள் மற்றும் மூன்று சல்லியங்களைக் கொண்ட தன் கணையால் அசுரர்களின் முந்நகரத்தைத் துளைத்தான்[2].(30) உண்மையில், ஓ! பாரதா, யுக முடிவில் அனைத்துப் பொருட்களையும் எரிக்கத் தோன்றும் நெருப்பின் சக்தியுடன் கூடியவனும் சூரியனைப் போன்ற வெண்ணிறத்தவனுமான ருத்திரனின் கணையால் அசுரர்களும், அவர்களது நகரங்களும் எரிக்கப்பட்டன.(31)ஐந்து சடைகளைக் கொண்ட ஒரு குழந்தையாக மாறி பார்வதியின் மடியில் கிடக்கும் மஹாதேவனைக் கண்டு, தேவர்களிடம் அவள் {பார்வதி}, {குழந்தையின் வடிவில் இருக்கும்} அவன் யார் என்று கேட்டாள்.(32) அந்தக் குழந்தையைக் கண்ட சக்ரன், திடீரெனப் கோபம் மற்றும் பொறாமையால் நிறைந்து தன் வஜ்ரத்தைக் கொண்டு அவனைக் கொல்லத் தீர்மானித்தான். எனினும், அக்குழந்தை இரும்புத் தடியைப் போன்ற இந்திரனின் கரத்தையும், அதனுடன் கூடிய வஜ்ரத்தையும் சேர்த்து முடக்கினான்.(33) தேவர்கள் அனைவரும் கலக்கமடைந்தனர், அந்தப் பிள்ளைதான் அண்டத்தின் தலைவன் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில், அவர்கள் அனைவரும், லோகபாலர்களும் அந்தக் குழந்தையின் காரியத்தில் மதி கலங்கியவர்களாகினர்.(34)

அப்போது சிறப்புமிக்கப் பெரும்பாட்டன் பிரம்மன், தன் தவங்களின் உதவியால் நினைவுகூர்ந்து, அனைத்திலும் முதன்மையானவனும், உமையின் தலைவனும், அளவிலா ஆற்றல் கொண்டவனுமான மஹாதேவன் அந்தக் குழந்தையே என்பதைக் கண்டறிந்தான். பிறகு அந்தத் தலைவனை அவன் புகழ்ந்தான்.(35) தேவர்களும், உமை மற்றும் ருத்திரன் ஆகிய இருவரின் புகழையும் துதிக்கத் தொடங்கினர். பலனைக் கொன்றவனுடைய {சக்ரனுடைய} (முடக்கப்பட்ட) கரம் மீண்டும் பழைய நிலைமையை அடைந்தது.(36) பெரும் சக்தி கொண்ட பிராமணரான துர்வாசராகப் பிறந்த மஹாதேவன், என் வீட்டில் நெடுங்காலம் வசித்திருந்தான்.(37) என் வசிப்பிடத்தில் வசித்திருந்தபோது அவன் பல்வேறு குறும்புகளைச் செய்தான். பொறுத்துக் கொள்ளக் கடினமாக இருந்தாலும், {அவன் அளித்த} இதயப் பெருந்தன்மையால் அவற்றை நான் பொறுத்துக் கொண்டேன்.(38)

ருத்திரன் அவனே; சிவன் அவனே; அக்னி அவனே; சர்வன் அவனே; அனைவரையும் வெல்பவன் அவனே; இந்திரன் அவனே, வாயுவும், அஸ்வினிகளும், மின்னலின் தேவனும் அவனே.(39) சந்திரமாஸ் அவனே; ஈசானன் அவனே; சூரியன் அவனே; வருணன் அவனே; காலம் அவனே; அழிப்பவன் {மிருத்யு} அவனே; மரணம் {யமன்} அவனே; பகலும், இரவும் அவனே;(40) பக்ஷம் அவனே; பருவகாலங்கள் {ருது} அவனே; {காலை, மாலை என்ற} இரு சந்திப் பொழுதுகள் அவனே; வருடம் அவனே. தாத்ரி அவனே; விதாத்ரி அவனே; விஷ்வகர்மன் அவனே; அனைத்தையும் அறிந்தவன் அவனே.(41) திசைகளின் முக்கிய மற்றும் துணைப்புள்ளிகள் அவனே. அண்ட வடிவில் இருக்கும் அவன் அளவிலா ஆன்மா கொண்டவனாவான். புனிதமானவரும், சிறப்புமிக்கவருமான துர்வாசர் தெய்வீக நிறம் கொண்டவராவார்.(42) சில வேளைகளில் தனியாகவும்; சில வேளைகளில் தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டும்; சில வேளைகளில் பலவாகவும், நூறாகவும், ஆயிரமாகவும், நூறாயிரமாகவும் வெளிப்படுகின்றான்.(43) மஹாதேவன் இவ்வாறானவனே. மேலும், அவன் பிறப்பற்றவன் ஆவான். நூறு வருடங்கள் ஆனாலும் ஒருவனால் அவனது {மஹாதேவனது} குணங்களைச் சொல்லித் தீர்க்க முடியாது” என்றான் {கிருஷ்ணன்}.(44)

ஸதருத்ரீயம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 161-சதருத்ரீயம் மற்றும் சிவலிங்கப் பெருமை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரரே, ருத்திரனின் பல்வேறு பெயர்களையும், அந்த உயர் ஆன்மாவின் உயர்ந்த அருள்நிலையையும் சொல்கிறேன் கேட்பீராக.(1) முனிவர்கள் மஹாதேவனை அக்னி என்றும், ஸ்தாணு என்றும், மஹேஸ்வரன் என்றும், ஒற்றைக் கண்ணன் என்றும், அண்ட வடிவம் கொண்ட முக்கண்ணன் என்றும், சிவன் அல்லது மங்கலமானவன் என்றும் சொல்கிறார்கள்.(2) வேதங்களை அறிந்த பிராமணர்கள் இரு வடிவங்களைக் கொண்டவன் அந்தத் தேவன் என்று சொல்கின்றனர். ஒன்று பயங்கரமானதும், மற்றொன்று மங்கலமான மென்மை நிறைந்ததுமாகும். அவ்விரு வடிவங்களும் இன்னும் பல வடிவங்களாகப் பகுக்கப்படுகின்றன.(3) கடுமையான பயங்கர வடிவம், அக்னி, மின்னல் மற்றும் சூரியனோடு ஒப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. மென்மையான மங்கல வடிவம் அறம், நீர் மற்றும் சந்திரனோடு ஒப்பிடத்தகுந்ததாக இருக்கிறது.(4)

மேலும் அவனது பாதி உடல் நெருப்பெனவும், பாதி உடல் சோமன் (அல்லது சந்திரன்) எனவும் சொல்லப்படுகிறது. மென்மையான மங்கல வடிவம் பிரம்மச்சரிய நோன்பில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது.(5) மிகப் பயங்கரமான மற்றொரு வடிவம் அண்டத்தை அழிக்கும் அனைத்து இயக்கங்களிலும் ஈடுபடுகிறது. அவனே பெரியவன் (மகத்), அனைத்து உயிரினங்களுக்கும் உயர்ந்த தலைவன் (ஈஸ்வரன்) என்பதால் அவன் மஹேஸ்வரன் என்றழைக்கப்படுகிறான்.(6) அவன் எரிக்கிறான், ஒடுக்குகிறான், கடுமையாக இருக்கிறான், பெருஞ்சக்தியுடன் கூடியவனாக இருக்கிறான், சதை, குருதி, மஜ்ஜை ஆகியவற்றை உண்பவனாகவும் இருக்கிறான் என்பதாலேயே அவன் ருத்திரன் என்று சொல்லப்படுகிறான்.(7) தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக இருப்பதாலும், அவனுடைய ஆட்சிப் பகுதியும், செல்வங்களும் மிகப் பெரியவையாக இருப்பதாலும், அவன் பாதுகாக்கும் அண்டம் மிகப் பெரியதாக இருப்பதாலும் அவன் மஹாதேவன் என்றழைக்கப்படுகிறான்.(8)

புகையின் வடிவம் அல்லது நிறத்தில் அவன் இருப்பதன் காரணத்தால் அவன் தூர்ஜடி {தூர்ஜடை} என்றழைக்கப்படுகிறான். தன் செயல்கள் அனைத்தாலும் அனைவருக்குமான வேள்விகளைச் செய்வதாலும்,(9) அனைத்து உயிரினங்களின் நன்மையை நாடுவதாலும் அவன் சிவன் அல்லது மங்கலமானவன் என்றழைக்கப்படுகிறான். (ஆகாயத்தில்) நின்று கொண்டு அனைத்து உயிரினங்களையும் அழிப்பதையும் தவிர அவன் வழுவாத குறிப்பிட்ட ஒரு பாதையில் நிலைத்திருக்கிறான்.(10) அவனுடைய சின்னம் {லிங்கம்} நிலையானது, எக்காலத்திலும் அழிவற்றது. இந்தக் காரணங்களினால் அவன் ஸ்தாணு என்றழைக்கப்படுகிறான். அவன் பல்வேறு வடிவங்களைக் கொண்டவனாக இருக்கிறான். கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அவனே.(11) அசைவனவும், அசையாதனவும் அவனே. இதன் காரணமாக அவன் பஹுரூபன் என்றழைக்கப்படுகிறான். விஷ்வேதேவர்கள் என்றழைக்கப்படும் தேவர்க்ள அவனது உடலில் வசிக்கிறார்கள். இதன் காரணமாக அவன் (அண்ட வடிவம் கொண்ட) விஷ்வரூபன் என்றழைக்கப்படுகிறான்.(12)

ஆயிரம் கண் கொண்டவன்; அல்லது எல்லையற்ற கண்களைக் கொண்டவன்; அல்லது எங்கும், தன் உடலெங்கும் கண் கொண்டவன். அவனது சக்தி அவனது கண்களின் மூலம் வெளிப்படுகிறது. அவனது கண்களுக்கு ஓர் எல்லையில்லை {அவன் ஸர்வதஸ்சக்ஷு என்றழைக்கப்படுகிறான்}.(13) உயிரினங்கள் {பசுக்கள்} அனைத்திற்கும் உணவூட்டி வளர்ப்பவனாகவும், அவற்றுடன் விளையாடுபவனாகவும் இருப்பதாலும், அவற்றின் தலைவனாகவோ, அவற்றை ஆள்பவனாகவோ இருப்பதனால் அவன் பசுபதி (அனைத்து உயிரினங்களின் தலைவன்) என்றழைக்கப்படுகிறான்.(14) அவனுடைய சின்னம் {லிங்கம்} எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்பதால் உலகங்கள் அனைத்தும் அதை முறைப்படி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டுச் செயல் அவனுக்குப் பெரும் நிறைவைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.(15) சிலையை உண்டாக்கி அவனை ஒருவன் வழிபட்டாலும், மற்றொருவன் அவனது சின்னத்தை {லிங்கத்தை} வழிபட்டாலும், பின்னவனே {லிங்கத்தை வழிபட்டவனே} எப்போதும் பெருஞ்செழிப்பை அடைவான்[1].(16)முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் எப்போதும் நிமிர்ந்து உயர்ந்திருக்கும் அவனது சின்னத்தையே {லிங்கத்தையே} வழிபடுகின்றனர்.(17) தன் சின்னம் {லிங்கம்} வழிபடப்பட்டால், அந்த வழிபாட்டைச் செய்பவனிடம் மஹேஸ்வரன் உயர்ந்த நிறைவை அடைகிறான். தன் பக்தர்களிடம் அன்பு கொண்ட அவன், உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறான்.(18) அந்தப் பெருந்தேவன் சுடலையில் வசிக்க விரும்புகிறான், அங்கே அவன் சடலங்கள் அனைத்தையும் எரிக்கிறான். அத்தகைய இடங்களில் {சுடலைகளில்} வேள்விகளைச் செய்யும் மனிதர்கள், வீரர்களுக்கெனத் தனியே ஒதுக்கப்பட்ட உலகங்களை இறுதியில் அடைவார்கள்[2].(19) நியாயமாகச் செயல்படுவதில் ஈடுபடும் அவனே உயிரினங்களின் உடல்களில் வசிக்கும் மரணமாக {மிருத்யுவாகக்} கருதப்படுகிறான். மேலும் அவன், பிராணன், அபானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகளாக உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் இருக்கிறான்.(20)அவன் சுடர்மிக்கப் பல்வேறு பயங்கர வடிவங்களைக் கொண்டவனாவான். இவ்வுலகத்தில் வழிபடப்படும் அந்த வடிவங்கள் அனைத்தையும், ஞானம் கொண்ட பிராமணர்கள் அறிந்திருக்கிறார்கள்.(21) தேவர்களுக்கு மத்தியில் பெரும் முக்கியத்தவம் வாய்ந்த பல பெயர்களை அவன் கொண்டிருக்கிறான். அந்தப் பெயர்களின் பொருள்கள் அவனது பெருமையில் இருந்தோ, சாதனைகளில் இருந்தோ, ஒழுக்கத்தில் இருந்தோ எடுக்கப்படுகின்றன.(22) வியாசரால் தொகுக்கப்பட்ட வேதங்களில் தோன்றும் சிறந்த சதருத்ரீயத்தை அவனைக் கௌரவிக்கும் வகையில் பிராமணர்கள் எப்போதும் உரைக்கிறார்கள்.(23) உண்மையில், பிராமணர்களும், முனிவர்களும் அனைத்து உயிரினங்களுக்கும் மூத்தவன் என்று அவனை அழைக்கின்றனர்.(24)

தேவர்கள் அனைவரிலும் முதல்வன் அவன், அவனது வாயில் இருந்தே அக்னி உண்டானான். அற ஆன்மா கொண்டவனும், எப்போதும் அனைவருக்கும் பாதுகாப்பை வழங்க விரும்புபவனுமான அந்தத் தேவன், தன்னிடம் பணிவோரை ஒருபோதும் கைவிடாதவன்.(25) அதைவிட அவன் தன் உயிர் மூச்சையே கைவிட்டு, சாத்தியப்படும் துன்பங்கள் அனைத்தையும் தானே ஈட்டிக் கொள்வான். நீண்ட வாழ்வுக்காலம், உடல்நலம், நோயிலிருந்து விடுதலை, செல்வாக்கு, செல்வம் பல்வேறு வகை இன்பங்கள் ஆகியனவற்றை(26) அளிப்பவனும், பறிப்பவனும் அவனே[3]. சக்ரன் மற்றும் பிற தேவர்களிடம் ஒருவன் காணும் தலைமைத்துவம் மற்றும் செல்வாக்கு ஆகியவை உண்மையில் அவனுடையவையே.(27)மூவுலகங்களிலும் நேரும் நன்மை, தீமைகள் அனைத்திலும் ஈடுபடுபவன் அவனே. அனுபவிக்கத் தகுந்த பொருட்கள் அனைத்தையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் விளைவால் அவன் ஈஸ்வரன் (உயர்ந்த தலைவன், அல்லது உயர்ந்த பொருள்) என்று அழைக்கப்படுகிறான்.(28) மேலும், பரந்த அண்டத்தை ஆள்பவனாக இருப்பதால் அவன் மஹேஸ்வரன் என்றழைக்கப்படுகிறான். மொத்த அண்டமும் பல்வேறு வடிவங்களின் மூலம் அவனால் நிறைந்திருக்கிறது. பெரும் பெண்குதிரைத்தலையின் வடிவில் கடலின் நீரை {வடவாமுகாக்னியாக} எரிப்பவனும், முழக்கங்களை இடுபவனும் அந்தத் தேவனே ” என்றான் {கிருஷ்ணன்}”.(29)

அறம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 162-அறத்தைத் தீர்மானிப்பதில் ஐயம் நேரும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும், அறப்பலன்களையும், பல அறங்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தேவகியின் மகனான கிருஷ்ணன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, யுதிஷ்டிரன் மீண்டும் சந்தனுவின் மகனான பீஷ்மரிடம்,(1) “ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவரே, ஓ! கடமைகளை அறிந்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கு, நேரடியாகக்கண்டுணர்தல் மற்றும் சாத்திரங்கள் ஆகிய இரண்டில் அதிகாரமிக்கதாகக் கருதப்பட வேண்டியது எது?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இதில் எந்த ஐயமும் கிடையாது என நினைக்கிறேன். ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. நீ என்னிடம் கேட்டிருக்கும் கேள்வி நிச்சயம் சரியானதே. ஐயம் வளர்ப்பது எளிதே. ஆனால், அந்த ஐயத்திற்கான தீர்வை அடைவது கடினம்.(3) நேரடியாகக் கண்டுணர்தல், திறன் தேர்வு (அல்லது சாத்திரங்கள்) ஆகிய இரண்டிலும் ஐயங்கள் எழும் சந்தர்ப்பங்கள் எண்ணற்றவையாகும். தர்க்கவியலாளர் {பண்டிதர்கள்} என்ற பெயரில் திளைக்கும் சில மனிதர்கள், மேன்மையான அறிவைக் கொண்டவர்கள் தாங்கள் என்று கற்பனை செய்து கொண்டு, நேரடி கண்டுணர்தல் மட்டுமே அதிகாரமிக்கது என்று உறுதிகூறுகிறார்கள்.(4) இஃது உண்மையாக இருந்தாலும், நேரடியாகக் கண்டுணர முடியாத ஏதும் இருப்பில் இல்லை என்று அவர்கள் உறுதியடைகிறார்கள்; அல்லது அந்தப் பொருட்களின் இருப்பில் அவர்கள் ஐயுறுகிறார்கள். உண்மையில் அத்தகைய கூற்றுகள் பற்றாக்குறையுடன் கூடியவையாகும்; கல்வியில் எவ்வளவு செருக்குள்ளவர்களாக இருப்பினும் அவற்றைச் சொல்பவர்கள் மூட புத்தி கொண்டவர்களே.(5)

மறுபுறம், ஒன்று (பகுபடா பிரம்மம்) எவ்வாறு காரணமாக இருக்க முடியும் என நீ ஐயுறுகிறாயெனில், நீண்ட வருட காலம், சோம்பலில்லாமல், யோகத்தின் துணையின் மூலமே ஒருவனால் அதைப் புரிந்து கொள்ள முடியும் என்பது என் மறுமொழியாக இருக்கும்.(6) உண்மையில், ஓ! பாரதா, (அந்த அல்லது இந்த நிலையான வாழ்வுமுறைகளில் பற்றுக் கொள்ளாமல்) தனக்கு நேரும் வழிமுறைகளின்படி வாழ்பவன் மற்றும் (கேள்விக்கான விடை தேடுவதில்) அர்ப்பணிப்புள்ள ஒருவனால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள இயலும். உண்மையில் வேறு எவராலும் அதைப் புரிந்து கொள்ள முடியாது.(7) காரணங்களின் எல்லையை (பகுத்தறிவு செயல்முறையை} ஒருவன் அடையும்போது, அவன் சிறந்ததும், அனைத்தையும் புரிந்து கொள்ளக் கூடியதும், (பிரம்மம் என்றழைக்கப்படும்) அண்டத்திற்கு ஒளியூட்டும் பிரகாசப் பெருந்திரளாக இருப்பதுமான அறிவை அடைகிறான்.(8) ஓ! மன்னா, காரணத்தில் (அல்லது அனுமானத்தில்) இருந்து பெறப்படும் அறிவை அறிவென்று சொல்வது அரிதே. அத்தகை அறிவு மறுக்கப்பட வேண்டும். இது சொல்லால் வரையறுக்கப்படவில்லை, அல்லது புரிந்து கொள்ளப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே அது மறுக்கப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}[1].(9)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நேரடியாகக் கண்டுணர்தல், கவனித்து அனுமானம் செய்தல், ஆகம அறிவியல், அல்லது சாத்திரங்கள் மற்றும், நல்லவற்றை வேறுபடுத்திக் காட்டும் பல்வேறுவகை நடைமுறைகள் ஆகிய இவற்றில் (நான்கில்) அதிகாரமிக்கது எது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(10)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும் வலிமை கொண்ட தீய மனிதர்களால் அறம் அழிக்கப்படும்போது, நல்லோர் கவனத்துடனும், ஊக்கத்துடனும் செயல்படுவதன் மூலம் அப்போதைக்கு அதை {அறத்தைப்} பாதுகாக்க முடியும். எனினும், முடிவில் அறம் அழிவடையும் என்பதால் அத்தகைய பாதுகாப்பு நீண்ட காலம் நீடிக்காது.(11) மேலும், ஆழமான குழியைப் பார்வையில் இருந்து மறைத்து, அதன் {அந்தக் குழியின்} வாயை மூடியிருக்கும் புல்லைப் போல, அறமானது சில வேளைகளில் மறத்திற்கான {அதர்மத்திற்கான} முகமூடியாக இருக்கிறது. ஓ! யுதிஷ்டிரா, மேலும் கேட்பாயாக. இதன் விளைவால், நல்லோரின் நடைமுறைகளைத் தீயோர் குறுக்கிட்டு அழிக்கின்றனர்.(12) தீய நடத்தை கொண்டோரும், ஸ்ருதிகளைப் புறக்கணிப்பவர்களும், அறத்தை வெறுப்பவர்களும் தீயோருமான இழிந்தவர்கள், (நிலையாக நிறுவப்பட வேண்டிய) நல்லொழுக்கத்துடன் கூடிய நடைமுறைகளை அழிக்கின்றனர். எனவே, நேரடியாகக் கண்டுணர்வது, அனுமானம் மற்றும் நன்னடத்தை ஆகியவற்றில் ஐயங்கள் தோன்றுகின்றன[2].(13)எனவே, நல்லோருக்கு மத்தியில், சாத்திரங்களில் பிறந்த (அல்லது தூய்மையடைந்த) புத்தியைக் கொண்டவர்களும், எப்போதும் நிறைவான மனம் கொண்டவர்களும் முதன்மையானவர்களாகக் கருதப்பட வேண்டும். கவலைநிறைந்தவர்களாக, ஆன்ம அமைதி இல்லாதவர்களாக இருப்பவர்கள், இவர்களையே அணுகட்டும். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, உன் ஐயங்களுக்கான தீர்மானங்களை அடைய நீ அவர்களையே நாடுவாயாக.[3](14) இன்பத்தையும், பேராசையைத் தொடர்ந்துவரும் செல்வத்தையும் அலட்சியம் செய்து, அறம் மட்டுமே நாடப்பட வேண்டிய ஒன்று என்ற நம்பிக்கையில் விழிப்படைந்த மனிதர்களுக்குப் பணிவிடை செய்து, அவர்களிடம் (உனக்கு ஞானமளிக்குமாறு) கேட்பாயாக.(15) அத்தகைய மனிதர்களின் ஒழுக்கம் ஒருபோதும் தவறவோ, அழியவோ செய்யாது. அதே போல அவர்களது வேள்விகளும், வேத கல்வியும், சடங்குகளும் அழிவடையாது. உண்மையில் வெளிப்படையான செயல்களை உள்ளடக்கிய ஒழுக்கம், (மனத்) தூய்மையுடன் கூடிய நடத்தை, வேதங்கள் ஆகியவை சேர்ந்ததே அறம் ஆகும்” என்றார் {பீஷ்மர்}.(16)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, என் புத்தி மீண்டும் ஐயத்தால் கலங்குகிறது. நான் பெருங்கடலின் இந்தப் பக்கத்தில், அதைக் கடப்பதற்கான வழிமுறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எனினும் அக்கடலின் மறுகரையை என்னால் காண முடியவில்லை.(17) வேதங்கள், நேரடியாகக்கண்டுணர்தல், நடத்தை (அல்லது மனத்தூய்மை) ஆகிய இம்மூன்றும் சேர்ந்ததே அதிகாரமிக்கது எனக் கருதப்படுமானால், அவை ஒவ்வொன்றுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன என்று பிழைகூறலாம். அவ்வாறெனில் அறமானது பகுபடாத ஒன்றாக இருப்பினும், உண்மையில் மூன்று வகையாகிறதே” என்றான்.(18)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “சில வேளைகளில், பெருஞ்சக்தி கொண்ட தீயோரால் அறம் அழிக்கப்படுவது காணப்படுகிறது. அறம் உண்மையில் மூன்றுவகையானது என நீ கருதினால், உன் தீர்மானம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது என்று நான் சொல்வேன்.(19) உண்மையென்னவென்றால், அறமானது மூன்று வெவ்வேறு புள்ளிகளில் இருந்து பார்க்கக்கூடியதாக இருப்பினும், அஃது ஒன்றாகவும், பகுக்கப்பட முடியாததாகவும் இருக்கிறது.(20) அறத்தின் அடித்தளமாக இருக்கும் இம்மூன்று பாதைகள் (குறியீடுகள்) ஒவ்வொன்றுக்கும் விதிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. விதிக்கப்பட்ட அறிவுரைகளின்படி நீ செயல்படுவாயாக. நீ அறம் குறித்து ஒருபோதும் சச்சரவு செய்யாமல், அந்த ஐயங்களைத் தீர்க்க முனைந்தால் நீ அவற்றை அடைவாய்.(21) ஓ! பாரதர்களின் தலைவா, இதுபோன்ற ஐயங்கள் ஒருபோதும் உன் மனத்தைப் பீடிக்காதவாறு செய்வாயாக. எவ்வகைத் தயக்கமுமின்றி நான் சொல்வதற்குக் கீழ்ப்படிவாயாக. ஒரு குருடனைப் போலவோ, வேறொருவனைச் சார்ந்திருக்கும் புலனற்றவனைப் போலவோ என்னைப் பின்பற்றுவாயாக.(22)

ஓ! பகைவர் எவனும் இல்லாத மன்னா, தீங்கிழையாமை, வாய்மை, கோபமின்மை (அல்லது மன்னிக்கும்தன்மை), ஈகை அல்லது கொடைகள் ஆகிய நான்கும் நித்திய அறமாக அமைவதால் இவை நான்கையும் நீ பயில்வாயாக.(23) ஓ! வலிய கரங்கொண்ட இளவரசே, உன் தந்தைமார் மற்றும் பாட்டன்களிடம் நீ நடந்து கொள்வது போலவே, பிராமணர்களிடம் உன் நடத்தை இருக்கட்டும். இவையே அறத்தின் முக்கியக் குறியீடுகளாகும்.(24) எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படும் தரத்தை மறுப்பதன் மூலம் அதிகாரத்தின் கனத்தை அழிக்கும் சிறு மதி கொண்ட மனிதன், மனிதர்களுக்கு மத்தியில் அதிகாரமிக்கவனாவதில் தவறுவான். அத்தகைய மனிதன் உலகத்தில் துன்பம் அதிகரிப்பதற்கான காரணமாவான்.(25) நீ பிராமணர்களை மதித்து, அவர்களை விருந்தோம்பலுடன் கவனிப்பாயாக. நீ எப்போதும் அவர்களுக்கு இவ்வாறே தொண்டாற்றுவாயாக. இந்த அண்டமே அவர்களைச் சார்ந்திருக்கிறது. நீயும் அவ்வாறே அவர்களைப் புரிந்து கொள்வாயாக” என்றார் {பீஷ்மர்}.(26)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, அறத்தை வெறுப்போர் மற்றும் அதைத் துதித்து நோற்போர் ஆகியோர் அடையும் கதிகளை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(27)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறத்தை வெறுக்கும் மனிதர்கள், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களில் மூழ்கிய இதயம் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அத்தகைய மனிதர்கள் எப்போதும் நரகத்திற்கே செல்வார்கள்.(28) மறுபுறம், ஓ! ஏகாதிபதி, அறத்தைத் துதித்து நோற்போரும், வாய்மை மற்றும் நேர்மையில் அர்ப்பணிப்புள்ளோருமான மனிதர்களே, நல்லோர் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் எப்போதும் சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கிறார்கள்.(29) ஆசான்களிடம் மதிப்புடன் காத்திருப்பதன் விளைவால் அவர்களின் இதயங்கள் எப்போதும் அறத்தை நோக்கித் திரும்புகின்றன. உண்மையில் அறத்தைத் துதிப்போர் தேவலோகங்களை அடைகின்றனர்.(30) மனிதர்களாக இருந்தாலும், தேவர்களாக இருந்தாலும், பேராசை மற்றும் வன்மத்தைத் தவிர்த்து, தவங்களைப் பயில்வதன் மூலம் தங்கள் உடல்களை மெலியச் செய்யும் மனிதர்கள், தங்களுடையதாகும் அறத்தின் விளைவால் பேரின்பத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(31) பிரம்மனின் மூத்த மகன்களான பிராமணர்கள் அறத்தைப் பிரதிபலிப்பவர்களாவர் என்று ஞானத்தைக் கொடையாகப் பெற்றவர்கள் சொல்கின்றனர். அறவோர் எப்போதும் அவர்களை வழிபடுகின்றனர், அவர்களது இதயங்கள், பசித்த மனிதனின் வயிறு கனிந்த இனிய கனிகளை விரும்புவதைப் போலவே அவர்களிடம் அன்பும் பாசமும் கொள்ளும்” என்றார் {பீஷ்மர்}.(32)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தீயோர் வெளிப்படுத்தும் தோற்றமென்ன? நல்லோர் என்றழைக்கப்படுவோர் செய்யும் செயல்களென்ன? ஓ! புனிதமானவரே, எனக்கு இதை விளக்குவீராக. உண்மையில், நல்லோர் மற்றும் தீயோருக்குண்டான குறியீடுகள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(33)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீச்செயல் செய்பவர்கள், அடக்க முடியாதவர்கள், அல்லது விதிகளெனும் கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட முடியாதவர்கள், கெட்ட வாக்கு கொண்டோர் ஆகியோர் தீயோராவர். மறுபுறம், எப்போதும் நற்செயல்களைச் செய்பவர்கள் நல்லோராவர். உண்மையில், இந்த மனிதர்களே நல்லொழுக்க நடைமுறையின் குறியீடுகளாகக் கருதப்படுகிறார்கள்.(34) ஓ! ஏகாதிபதி, நல்லோர் அல்லது அறவோர், இயற்கையின் அழைப்புகளுக்குப் பொதுச் சாலையிலோ, மாட்டுக் கொட்டகையின் மத்தியிலோ, நெற்களத்திலோ {வயலிலோ} பதிலளிக்க மாட்டர்கள் {சிறுநீர் மற்றும் மலம் கழிக்கமாட்டார்கள்}.(35) ஐவருக்கு உணவூட்டிய பிறகே தாங்கள் உணவை உண்பார்கள்[4]. உண்ணும் போது அவர்கள் ஒருபோதும் பேச மாட்டார்கள், ஈரக் கரங்களுடன் ஒருபோதும் உறங்கச் செல்லமாட்டார்கள்.(36) சுடர்மிக்க நெருப்பு, காளை, ஒரு தேவனின் வடிவம் {சிலை}, மாட்டுக் கொட்டகை, நாற்சந்திகள், முதிர்ந்தவரும், அறம் சார்ந்தவருமான ஒரு பிராமணர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையோ, ஒருவரையோ கண்டாலும், தங்கள் மதிப்பை வெளிப்படுத்துவதற்காக அவர்கள் அவற்றை வலம் வருவார்கள்.(37) முதியவர்கள், சுமை சுமப்போர், பெண்கள், கிராம மற்றும் நகர நிர்வாகிகள், பிராமணர்கள், பசுக்கள், மன்னர்கள் ஆகியோர் எதிரில் வந்தால் அவர்கள் ஒதுங்கி வழிவிடுவார்கள்.(38)விருந்தினர்கள், பணியாட்கள், தன்னைச் சார்ந்திருப்போர், உறவினர்கள் மற்றும் தன் பாதுகாப்பை நாடுவோர் அனைவரையும் நல்லோர், அல்லது அறவோர் பாதுகாப்பார்கள். அத்தகைய மனிதன் எப்போதும் அவர்களை மதிப்புடன் விசாரிப்பான்.(39) காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகள் மனிதர்கள் தங்கள் உணவை உண்பதற்கான நேரமாகத் தேவர்களால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இடைவேளைகளில் அவன் எதையும் உண்ணக்கூடாது. இந்த விதியைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவன் உண்ணா நோன்பை நோற்பவனாகச் சொல்லப்படுகிறான்.(40) ஆகுதிகள் பெறுவதற்காக ஹோம நேரம் வரும் வரைக் காத்திருக்கும் புனித நெருப்பைப் போலவே, ஒரு பெண்ணானவள், தன் மாதவிலக்குக் காலம் முடிந்ததும், கணவனுடன் கலவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்.(41) மாதவிலக்கு முடிந்த காலத்திற்குப் பிறகு உள்ள காலத்தைத் தவிர வேறு காலத்தில் {மாதவிலக்கு காலத்தில்} தன் மனைவியை ஒருபோதும் அணுகாதவன் பிரம்மச்சரிய நோன்பைப் பின்பற்றுபவனாகச் சொல்லப்படுகிறான். அமிர்தம் (அமுதம்), பிராமணர்கள், பசுக்கள் ஆகிய மூன்றும் நிகரானவையாகக் கருதப்படுகின்றன.(42) எனவே, ஒருவன் பிராமணர்களையும், பசுக்களையும் உரிய சடங்குகளுடன் எப்போதும் வழிபட வேண்டும். யஜுர் வேத மந்திரங்களின் துணையுடன் வேள்விகளில் கொல்லப்படும் விலங்குகளின் இறைச்சியை உண்பதன் மூலம் ஒருவன் எந்தக் குற்றத்தையும், அல்லது களங்கத்தையும் {பாவத்தையும்} ஈட்டுவதில்லை.(43) ஒருவன் தன் மகனின் இறைச்சியைத் தவிர்ப்பதைப் போலவே முதுகெலும்பைச் சேர்ந்தவையும், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளைச் சேர்ந்தவையுமான இறைச்சியும் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவன் தன் நாட்டில் வசித்தாலும், அயல்நாட்டில் வசித்தாலும் தன் விருந்தினருக்கு உணவளிக்காமல் அனுப்பக்கூடாது.(44)

கல்வி நிறைவடைந்ததும் ஒருவன் தன் ஆசானுக்குத் தக்ஷிணை அளிக்க வேண்டும். அவன் தன் ஆசானைக் காணும்போது, அவரை மதிப்புடன் வணங்கி, ஓர் இருக்கையை அளித்து அவரை வழிபட வேண்டும்.(45) தன் ஆசானை வழிபடுவதன் மூலம் ஒருவன் தான் வாழும் காலத்தையும், புகழையும், செழிப்பையும் பெருக்கிக் கொள்கிறான். முதியோரை ஒருபோதும் நிந்திக்கக்கூடாது, மேலும் அவர்களை எக்காரியத்திலும் ஈடுபடுத்தக் கூடாது[5].(46) முதியவர் ஒருவர் நிற்கும்போது ஒருவன் ஒருபோதும் அமரக்கூடாது. இவ்வாறு செயல்படுவதன் மூலம் ஒருவன் தன் வாழ்நாள் காலத்தைப் பாதுகாத்துக் கொள்கிறான். ஒருவன் நிர்வாணமாக இருக்கும் ஒரு பெண், அல்லது ஆணின் மீது தன் கண்களை ஒருபோதும் செலுத்தக்கூடாது.(47) தனிமையிலன்றி வேறு இடங்களில் ஒருவன் பாலியல்கலவியில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. பிறர் பார்க்க ஒருவன் உண்ணக்கூடாது. ஆசான்களே முதன்மையான தீர்த்தங்களாவர்; புனிதமான பொருட்கள் அனைத்திலும் இதயமே முதன்மையானதாகும்;(48) தேடத்தகுந்தவற்றுள் ஞானமே முதன்மையானதாகும்; இன்பங்கள் அனைத்திலும் மனநிறைவே முதன்மையானதாகும். காலையும், மாலையும் ஒருவன் முதியோரின் முக்கிய ஆலோசனைகளைக் கேட்க வேண்டும். வயதால் மதிக்கத் தகுந்தவர்களிடம் தொடர்ந்து காத்திருப்பதன் மூலம் ஒருவன் ஞானத்தை அடைகிறான். வேதங்களைப் படிக்கும்போதும், உண்ணும் போதும் ஒருவன் தன் வலக்கரத்தையே பயன்படுத்த வேண்டும்.(50)ஒருவன் தன் வாக்கு, மனம் மற்றும் புலன்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். நன்கு சமைக்கப்பட்ட பாயஸம், யாவகம், கிருசரம், ஹவி (தெளிந்த நெய்)) ஆகியவற்றுடன்(51) ஒருவன் அஷ்டகை என்றழைக்கப்படும் சிராத்தத்தில் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட வேண்டும். கோள்களை வழிபடுவதிலும் அவற்றையே பயன்படுத்த வேண்டும். ஒருவருடைய ஆசி பெறாமல் சிரைத்துக் கொள்வது {சவரம் செய்தல்} கூடாது. ஒருவன் தும்மினால், அங்கே இருப்பவர்கள் அவனுக்கு ஆசி கூற வேண்டும்[6]. உடல் நலமில்லாதவர்கள், அல்லது நோயால் பீடிக்கப்பட்டவர்களனைவருக்கும் ஆசி கூற வேண்டும். அவர்களுடைய வாழ்நாள் நீட்டிப்பு வேண்டப்பட வேண்டும்.(52) உயர்ந்த மனிதர்களை ஒருபோதும் (நீ என்ற சொல்லைப் பயன்படுத்தி) வழக்கான சொற்களால் அழைக்கக்கூடாது. பெரும் இக்கட்டுகளிலும் ஒருவன் ஒருபோதும் அதைச் செய்யக்கூடாது. அத்தகைய மனிதனை, நீ என்று அழைப்பது அவனைக் கொல்வதற்கு இணையானதாகும். கல்விமான்கள் இவ்வாறு அழைக்கப்படுவதால் இழிவுபடுத்தப்படுகிறார்கள்.(53) தாழ்ந்தவர்கள், இணையானவர்கள், அல்லது சீடர்களிடம் இத்தகைய சொல் பயன்படுத்தப்படலாம். பாவம் நிறைந்த மனிதனின் இதயம் எப்போதும் தான் செய்த பாவங்களை அறிவித்துக் கொண்டே இருக்கும்.(54)வேண்டுமென்றே பாவங்களைச் செய்துவிட்டு, நல்லோரிடம் அவற்றை மறைக்க முயலும் மனிதர்கள் அழிவை அடைவார்கள். உண்மையில், நிச்சயமான பாவிகள் தங்கள் பாவச் செயல்களைப் பிறரிடம் இருந்து மறைக்கவே முனைவார்கள்[7].(55) அத்தகைய மனிதர்கள் தங்கள் பாவங்களை வேறு மனிதர்களோ, தேவர்களோ பார்ப்பதில்லை என்று நினைக்கிறார்கள். பாவங்களில் மூழ்கி பாவியாக இருக்கும் மனிதன், {தன் அடுத்தப் பிறவியில்} அவலம் நிறைந்த உயிரினமாகப் பிறப்பான்.(56) அத்தகைய மனிதனின் பாவங்கள், (கடன் வழங்கும்) ஈட்டிக்காரனின் வட்டியைப் போலவே நாளுக்கு நாள் பெருகுகிறது. ஒரு பாவத்தைச் செய்த மனிதன் அதை அறத்தின் மூலம் மறைக்க முனைந்தால், அந்தப் பாவம் அழிவை அடைந்து, வேறு பாவங்களுக்கு வழிவகுப்பதற்குப் பதில் அறத்திற்கு வழிவகுக்கிறது[8].(57) உப்பின் மீது நீரை ஊற்றினால் அஃது உடனே கரைந்து போகும். அதைப் போலவே, பரிகாரம் செய்யப்படும்போது பாவமும் கரைந்து போகிறது.(58) இந்தக் காரணங்களினால் ஒருவன் ஒருபோதும் பாவத்தை மறைக்கக்கூடாது. மறைக்கப்பட்டால், அது நிச்சயம் வளரும். பாவமிழைக்கப்பட்டால் ஒருவன் அதை நல்லோரின் முன்பு ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது அவை {பாவங்கள்} உடனே அழிந்து போகும்.(59)நம்பிக்கையுடன் சேகரிக்கப்பட்டவற்றை ஒருவன் சரியான நேரத்தில் அனுபவிக்காவிட்டால், சேகரிக்கப்பட்ட அந்தச் செல்வம் அவனது மரணத்திற்குப் பின் வேறோர் உரிமையாளரைக் கண்டடையும்.(60) ஒவ்வொரு உயிரினத்தின் மனமும், உண்மையான அறச்சோதனையைச் செய்யும் என்று ஞானிகள் சொல்கின்றனர். எனவேதான், உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் அறத்தை அடைவதை உள்ளார்ந்த போக்காகக் கொண்டிருக்கின்றன.(61) ஒருவன் அறத்தைத் தனியாகவே அடைய வேண்டும். உண்மையில் அவன் தன்னை அறவோனாக அறிவித்துக் கொள்ளக்கூடாது, மேலும், {தன்னை அறவோனாக} வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக அறக்கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நடக்கவும் கூடாது. அறம் கொண்டுவரும் கனிகளை அனுபவிக்க அதைப் பின்பற்றுபவர்கள் அறவணிகர்களாவர்.(62) செருக்கெண்ணங்களைக் கைவிட்டு ஒருவன் தேவர்களைத் துதிக்க வேண்டும். அதே போல, அவன் தன் ஆசானுக்கு வஞ்சனையில்லாமல் தொண்டாற்ற வேண்டும். இம்மையில் தகுந்த மனிதர்களுக்குக் கொடையளிப்பதால், மறுமையில் கிட்டும் விலைமதிப்புமிக்கச் செல்வத்தை ஈட்டும் ஏற்பாட்டை ஒருவன் செய்து கொள்ள வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(63)

மெய்வருத்தக்கூலி! – அநுசாஸனபர்வம் பகுதி – 163-விதி மற்றும் முயற்சிக்கிடையிலான வேறுபாட்டை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு மனிதன் கெடுபேறு கொண்டவனாக இருந்தால் அவன் எவ்வளவு பலம் கொண்டவனாக இருந்தாலும் செல்வமீட்டத் தவறுவது காணப்படுகிறது. மறுபுறம் நற்பேறு பெற்ற ஒருவன் பலவீனனாகவோ, மூடனாகவோ இருந்தாலும் செல்வத்தை அடைகிறான்.(1) மேலும், அடைவதற்கான காலமாக இல்லாதபோது, ஒருவன் சிறப்பாக முயற்சி செய்தாலும் ஒன்றையும் அவனால் அடைய முடிவதில்லை. எனினும், அடைவதற்கான காலம் வரும்போது, எந்த முயற்சியும் இல்லாமலே ஒருவன் பெருஞ்செல்வத்தை வெல்கிறான்.(2) சிறப்பாக முயற்சி செய்தும் விளைவேதும் அடையாத நூற்றுக்கணக்கான மனிதர்கள் காணப்படுகின்றர். மேலும், எம்முயற்சியுமின்றிச் செல்வீட்டும் பலரும் காணப்படுகின்றனர்.(3)

முயற்சியின் விளைவே செல்வம் என்றால், ஒருவன் முயற்சி செய்த உடனேயே அஃதை அடைய வேண்டும். உண்மையில் அவ்வாறிருந்தால், கல்வி கற்ற எந்த மனிதனும், தன் வாழ்வாதாரத்திற்காகக் கல்லாதவனிடம் பாதுகாப்பை அடைவது காணப்படாது.(4) ஓ! பாரதர்களின் தலைவரே, மனிதர்களுக்கு மத்தியில் அடையக்கூடாது என்பது (என விதிக்கப்பட்ட எதுவும்) ஒருபோதும் அடையப்படுவதில்லை. சிறந்த முயற்சிகளின் துணையுடன் கூட மனிதர்கள் விளைவுகளை அடைவதில் தவறுவது காணப்படுகிறது.(5)

ஒருவன் நூறு வழிமுறைகளின் மூலம் செல்வத்தைத் தேடுவது (தேடினாலும் அஃதை அடையத்தவறுவது) காணப்படுகிறது; அதே வேளையில் மற்றொருவன் தேடவே செய்யாமல் அஃதை {செல்வத்தை} அடைந்து மகிழ்ச்சி அடைகிறான். மனிதர்கள் (செல்வத்துக்காகத்) தொடர்ந்து தீச்செயல்களைச் செய்து, அதை அடையத் தவறுவது காணப்படுகிறது.(6) எந்த வகைத் தீச்செயலும் செய்யாமல் செல்வத்தை அனுபவிக்கும் பிறரும் இருக்கின்றனர். மேலும், சாத்திரங்களில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கடமைகளைச் செய்தும் செல்வமில்லாத பிறரும் இருக்கின்றனர். ஒருவன் நெறிகள் மற்றும் கொள்கை அறிவியலைச் சார்ந்த ஆய்வுகள் அனைத்தையும் கற்றும் அவற்றைக் குறித்த எந்த அறிவும் இல்லாமல் இருப்பது காணப்படுகிறது.(7) மேலும், நெறிகள் மற்றும் கொள்கை அறிவியல் எதையும் கற்காமலேயே ஒருவன் மன்னனின் முதன்மை அமைச்சராக நியமிக்கப்படுவதும் காணப்படுகிறது. கல்விமான் ஒருவன் செல்வம் கொண்டிருப்பதும் காணப்படுகிறது. கல்லாதவன் செல்வம் கொண்டிருப்பதும் காணப்படுகிறது. இரு வகை மனிதர்களும் முற்றிலும் செல்வம் இல்லாதவர்களாக இருப்பதும் காணப்படுகிறது.(8)

ஒருவன் கல்வியை அடைவதன் மூலம் செல்வத்தின் மகிழ்ச்சியை அடையலாம் என்றால், கல்விமான் எவனும், தன் வாழ்வாதாரத்திற்காகக் கல்லாதவனின் பாதுகாப்பில் இருப்பது ஒருபோதும் காணப்படாது.(9) உண்மையில், கல்வியை அடைவதனால் ஒருவன் நீரை அடைந்து தாகம் தணிப்பவனைப் போல விரும்பத்தக்க அனைத்துப் பொருட்களையும் அனுபவிக்கலாம் என்றால், கல்வியை அடைவதில் இவ்வுலகில் எவரும் சோம்பியிருக்க மாட்டார்கள்.(10) ஒருவனுக்கான காலம் வராவிட்டால், அவன் நூறு கணைகளால் துளைக்கப்பட்டாலும் மாளமாட்டான். மறுபுறம், வேளை வந்தவுடனேயே, புல்லால் தாக்கப்பட்டவனும் தன் உயிரைவிடுவான்” என்றான்.(11)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும் முயற்சிகளில் ஈடுபாடு கொள்வதில் ஒருவன் தன்னை நிறுவிக் கொண்டும் செல்வமீட்டத் தவறினால் அவன் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும். விதைகள் விதைக்கப்படாமல் பயிர்கள் தோன்றுவதில்லை.(12) வயதால் மதிப்பிற்குரியோரிடம் பணி செய்வதன் மூலம் ஒருவன் நுண்ணறிவையும், ஞானத்தையும் அடைவதைப் போலவே, (இம்மையில் தகுந்த மனிதர்களுக்குக்) கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் (மறுமையில்) இன்பத்திற்குரிய எண்ணற்ற பொருட்களை அடைகிறான். உயிரினங்கள் அனைத்துக்கும் கொடுமை செய்யாமல் இருக்கும் கடமையைச் செய்வதன் மூலம் ஒருவன் நீண்ட வாழ்நாளைப் பெறுவான் என ஞானிகள் சொல்கின்றனர்.(13) எனவே, ஒருவன் கொடைகளை அளிக்க வேண்டுமேயன்றி வேண்டக் கூடாது (அல்லது பிறரால் கொடுக்கப்படும் போது ஏற்றுக் கொள்ள வேண்டும்). ஒருவன் அறவோரை வழிபட வேண்டும். உண்மையில், அவன் இனிய பேச்சுக் கொண்ட அனைவருக்கும், பிறருக்கும் ஏற்புடையதையே எப்போதும் செய்ய வேண்டும். ஒருவன் (மனம் மற்றும் புறத்) தூய்மையை அடைய முனைய வேண்டும். உண்மையில், அவன் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைப்பதைத் தவிர்க்க வேண்டும்.(14) ஓ! யுதிஷ்டிரா, பூச்சிகளும், எறும்புகளும் கூட, (இப்பிறவி மற்றும் முற்பிறவிகளில் செய்த) தங்கள் செயல்கள் மற்றும் இயல்பின் விளைவாக இன்ப துன்பங்களைச் சந்திக்கின்றன. நீ அமைதியடைவாயாக” என்றார் {பீஷ்மர்}[1].(15)

நடைமுறை அறம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 164-அறத்தைப் பின்பற்றும் முறை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் தானே நல்லது செய்யும்போதும், அல்லது பிறரைச் செய்ய வைக்கும்போதும், அவன் அறத்தகுதிகளை அடைவதை எதிர்பார்க்கலாம். அதேபோல, ஒருவன் தானே தீமை செய்தாலும், பிறரைச் செய்ய வைத்தாலும், அறத்தகுதிகளை அடைவதை அவன் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.(1) எல்லா நேரங்களிலும், காலமே உயிரினங்கள் அனைத்தின் புத்தியிலும் நுழைந்து, அவற்றை அறச்செயல்களையோ, மறச் செயல்களையோ செய்வதில் நிறுவி, அதன் பின் அவற்றுக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ அளிக்கிறது.(2)

ஒரு மனிதன் அறத்தின் கனிகளைக் கண்டு, அறமே மேன்மையானது என்பதைக் காணும்போதுதான், அவன் அறத்தில் நம்பிக்கை கொண்டு அதைப் பின்பற்றுகிறான். எனினும், உறுதியற்ற புரிதல் கொண்டவன் அதில் நம்பிக்கை வைக்கத் தவறுகிறான்.(3) அறத்தில் நம்பிக்கை என்பது இதுதான் (வேறேதுமல்ல). அறத்தில் நம்பிக்கை கொள்தல் என்பது மனிதர்கள் அனைவருக்கும் ஞானத்தின் குறியீடாகும். (எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்ற) இரண்டையும் அறிந்த ஒருவன், வாய்ப்புகளைப் பயன்படுத்தும் நோக்கத்தோடும், கவனம் மற்றும் அர்ப்பணிப்புடனும் சரியானதைச் செய்ய வேண்டும்.(4) இப்பிறவியில் செல்வாக்குடன் அருளப்பட்ட அறவோர், மறுபிறவியில் ஆசை குணம் {ரஜோகுணம்) தலைதூக்கும் பிறவியை அடையாமல் தவிர்க்க தங்கள் இயல்பின்படியே செயல்பட்டு, தங்கள் ஆன்மாக்களில் குறிப்பிட்ட கவனத்தைச் செலுத்த வேண்டும்.(5)

(அனைத்தையும் அகற்றவல்ல) காலத்தால் அறத்தைத் துன்பத்திற்கான காரணமாக ஒருபோதும் மாற்ற முடியாது. எனவே, அறம் சார்ந்த ஆன்மா நிச்சயம் தூய்மையானது (தீமை மற்றும் துயரத்தில் இருந்து விடுபட்டு இருப்பது) என்பதை ஒருவன் அறிய வேண்டும்.(6) மறத்தை {அதர்மத்தைப்} பொறுத்தவரையில், அது பெருமளவில் இருந்தபோதிலும் கூட, காலத்தால் எப்போதும் பாதுகாக்கப்படுவதும், சுடர்மிக்க நெருப்பைப் போல ஒளிர்வதுமான அறத்தைத் தீண்ட முடியாது.(7)

களங்கமில்லா ஆன்மா, மறத்தால் {அதர்மத்தால்} தீண்டப்படாத ஏற்பில்லாமை ஆகிய இரண்டு விளைவுகளும் அறத்தால் அடையப்படுகின்றன. உண்மையில், அறமே வெற்றியைத் தரும். மூவுலகங்களுக்கும் ஒளியூட்டும் அளவிற்கு அது பெரும் பிரகாசம் கொண்டது.(8) ஒரு பாவியைப் பிடித்து அறவோனாக்குதல் ஞானியாலும் முடியாது. அறச்செயல் செய்ய வலுக்கட்டாயமாகத் தூண்டப்படும்போது பாவிகள் அச்சத்தால் தூண்டப்பட்டவர்களாக {உள்ளொன்றும் புறமொன்றாகவும்} கபடமாகவே செயல்படுவார்கள்.(9) சூத்திரர்களில் அறவோர், பரிந்துரைக்கப்பட்ட நான்கு வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} எதையும் பின்பற்றி வாழ சூத்திர வகையினர் அனுமதிக்கப்படவில்லை என்ற முறையீட்டின் மூலம் ஒருபோதும் போலியாக நடந்து கொள்ள மாட்டார்கள்.(10)

நான்கு வகையினருக்கான {வர்ணத்தினருக்கான} உண்மையான கடமைகள் என்னென்ன என்பதை நான் உனக்குக் குறிப்பாகச் சொல்கிறேன். நான்கு வகையை {வர்ணங்களைச்} சேர்ந்த ஒவ்வொருவரும் கொள்ளும் உடல்களைப் பொறுத்தவரையில் ஐம்பூதங்களே அவற்றின் {அவ்வுடல்களின்} உட்பொருட்களாக அமைகின்றன. உண்மையில், அவை அனைத்தும் ஒரே பொருளைச் சார்ந்தவையே.(11) இவ்வாறிருப்பினும் அவற்றுக்கிடையில், வாழ்வு அல்லது உலக நடைமுறைகள் மற்றும் அறக்கடமைகள் ஆகிய இரண்டிலும் வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனைவருக்குள்ளும் ஒரு சமநிலையை எட்டக்கூடிய வகையில் செயல்பாடுகளில் போதுமான சுதந்திரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.(12)

அறத்தின் விளைவுகள் அல்லது வெகுமதிகளாக இருக்கும் இன்ப உலகங்களுக்கும் ஒரு முடிவுண்டு என்பதால் அவை நித்தியமானவையல்ல. எனினும், அறம் நித்தியமானது. காரணம் நித்தியமானதாக இருக்கையில், விளைவு {காரியம்} ஏன் அவ்வாறில்லை?[1] அதற்கான பதில் பின்வருமாறு அமையும். கனி அல்லது வெகுமதியில் உள்ள ஆசையால் தூண்டப்படாமல் செய்யப்படும் அறமே நித்தியமானதாகும். (எனினும், வெகுமதி மீது கொண்ட ஆசையால் செய்யப்படும் அறமானது நித்தியமானதல்ல. எனவே, வெகுமதி விரும்பப்படவில்லை என்றாலும், முதல் வகை அறத்தோடு தொடர்புடைய {வெகுமதியான} பிரம்மத்தை அடைதல் என்பது நித்தியமானதாகும். எனினும், கனியில் உள்ள ஆசையால் தூண்டப்பட்டுச் செய்யப்படும் அறத்துடன் தொடர்புடைய வெகுமதியான சொர்க்கம் நித்தியமானதல்ல)[2].(13)உடலுயிரைப் பொறுத்தவரையில் அனைத்து மனிதர்களும் நிகரானவர்களே. மேலும், அவர்கள் அனைவரும் தங்கள் இயல்பின்படியே நிகரான ஆன்மாக்களைக் கொண்டவர்களே. அண்டம் அழியும்போது அனைத்தும் கரைந்துவிடுகின்றன. அறத்தை அடைவதற்கான செயலற்ற விருப்பம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. உண்மையில் அதுவே (மறுபிறவியில்) மீண்டும் தன்னைத் தோற்றுவித்துக் கொள்ளும்.(14) விளைவு இத்தகையதாயிருக்கையில் (வாழ்வின் இன்பங்களும், துன்பங்களும் முற்பிறவிச் செயல்களின் விளைவுகளாக இருப்பதால்), மனிதர்களுக்கிடையில் காணப்படக்கூடிய சமமின்மைகளை எந்த வகையிலும் முரண்பட்டவையாகக் கருதமுடியாது. அதே போலவே, இருப்பில் உள்ள இடைநிலை உயிரினங்களின் செயல்கள் இந்த உதாரணத்தின்படி சமமாக இருப்பதும் காணப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}”.(15)

நாமாவளி! – அநுசாஸனபர்வம் பகுதி – 165-பாவங்களை அகற்றவல்ல தேவர்கள், முனிவர்கள் மற்றும் அரசமுனிகளின் துதிக்கத்தக்க பெயர்ப்பட்டியலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனும், பாண்டுவின் மகனுமான யுதிஷ்டிரன், பாவங்களை அழிக்கும் நன்மையை அடைய விரும்பி, கணைப்படுக்கையில் கிடக்கும் பீஷ்மரிடம் (பின்வரும் வார்த்தைகளால்) கேள்வி கேட்டான்.(1)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“இவ்வுலகில் ஒரு மனிதனுக்கு நன்மையானதென்ன? எதைச் செய்வதன் மூலம் ஒருவன் மகிழ்ச்சியை ஈட்டுகிறான்? எதன் மூலம் ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்? உண்மையில் பாவங்களை அழிக்கத்தக்கது எது?” என்று கேட்டான்”.(2)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இது தொடர்பாகக் கேட்டுக் கொண்டிருந்த யுதிஷ்டிரனிடம் சந்தனுவின் அரச மகன் {பீஷ்மர்} தேவர்களின் பெயர்களை முறையாக உரைத்தார்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே {யுதிஷ்டிரா}, தேவர்கள் மற்றும் முனிவர்களின் பின்வரும் பெயர்களைக் காலையிலும், நடுப்பகலிலும், மாலையிலும் முறையாக உரைத்தால், அவை அனைத்துப் பாவங்களையும் திறம்படத் தூய்மையாக்குகின்றன.(4) ஒருவன் (அறிவு மற்றும் செயல்) புலன்களின் {ஞானேந்திரியங்கள் மற்றும் கர்மேந்திரியங்களின்} துணையுடன் செயல்படுவதால் பகலிலோ, இரவிலோ, இரு சந்திப் பொழுதுகளிலோ, தெரிந்தோ தெரியாமலோ செய்த எந்தப் பாவமும் இந்தப் பெயர்களை உரைப்பதன் மூலம் தூய்மையடைந்து, அவன் முற்றிலும் தூயவனாகிறான். இந்தப் பெயர்களைச் சொல்லும் ஒருவன் ஒருபோதும் குருடனாகவோ, செவிடனாகவோ ஆவதில்லை; உண்மையில் இப்பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் நன்மையானதை அடைவதில் வெல்கிறான்.(5,6) அத்தகைய மனிதன் ஒருபோதும் இடைநிலை உயிரினங்களாகப் பிறக்காமல், ஒருபோதும் நரகத்திற்குச் செல்லாமல், மனிதர்களில் ஒருபோதும் கலப்புச் சாதியில் பிறக்காமல் இருக்கிறான். எந்தத் துயரையும் அடைவது குறித்த அச்சமேதும் அவனுக்கு ஏற்படாது. மரணம் நேரும் போது அவன் ஒருபோதும் கலங்குவதில்லை.(7)

தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரையும் ஆள்பவனும், பிரகாசத்துடன் ஒளிர்பவனும், அனைத்து உயிரினங்களாலும் வழிபடப்படுபவனும், நினைத்தற்கரியவனும், விவரிக்கப்படமுடியாதவனும், அனைத்து உயிரினங்களுக்கும் உயிரைத் தருபவனும், பிறப்பில்லாதவனும்,(8) அண்டத்தின் தலைவனும், பெரும்பாட்டனுமாக இருப்பவன் பிரம்மன். அவனுடைய பத்தினி சாவித்ரி. அதன் பிறகு வருபவன், வேதங்களின் பிறப்பிடமும், படைப்பாளனும், அளவிலா பலம் கொண்ட நாராயணன் என்று அழைக்கப்படுபவனுமான விஷ்ணு.(9) அதன் பிறகு வருபவன் முக்கண்ணனான உமையின் தலைவன். அதன் பிறகு தேவர்ப்படைத்தலைவன் ஸ்கந்தன்; அதன் பிறகு விசாகன்; பிறகு வேள்வி ஆகுதிகளை உண்பவனான அக்னி: பிறகு காற்றின் தேவனான வாயு; பிறகு சந்திரமாஸ்; பிறகு, பிரகாசத்துடன் கூடிய சூரிய தேவன் ஆதித்யன்.(10)

பிறகு, சச்சியின் தலைவனான சிறப்புமிக்கச் சக்ரன், தூமோர்ணையென்ற மனைவியுடன் கூடிய யமன்; கௌரியுடன் கூடிய வருணன்; ருத்தியெனும் மனைவியுடன் கூடிய கருவூலத் தலைவன் {குபேரன்};(11) இனிமையானவளும், சிறப்பானவளுமான சுரபி எனும் பசு {காமதேனு}, பெரும் முனிவர் விஸ்ரவஸ்; ஸங்கல்பன் {காமன்}; பெருங்கடல் {சமுத்திரன்}; கங்கை; வேறு புனித ஆறுகள்; பல்வேறு {ஏழு} மருத்துகள்;(12) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களான வாலகில்யர்கள்; தீவில் பிறந்த கிருஷ்ணர் {வியாசர்}; நாரதர்; பர்வதர்; விஸ்வாவஸு; ஹாஹாக்கள்; ஹூஹூக்கள்;(13) தும்புரு; சித்ரஸேனன்; பரந்த புகழ் கொண்ட தேவ தூதன் {விஸ்ருதன்}; உயர்ந்த அருளைப் பெற்ற தேவக்கன்னிகையர் மற்றும் தெய்வீக அப்சரஸ்கள்;(14) ஊர்வசி; மேனகை; ரம்பை; மிஸ்ரகேசி; அலம்புஷை; விஸ்வாசி; கிருதாசி; பஞ்சசூடை; திலோத்தமை;(15)

ஆதித்யர்கள்; வஸுக்கள்; {ருத்ரர்கள்;} அஸ்வினிகள்; பித்ருக்கள்; தர்மம் (அறம்); வேதகல்வி; தவங்கள்; தீக்ஷை; (அறச்செயல்களில்) விடாமுயற்சி; பெரும்பாட்டன்;(16) இரவு; பகல்; மரீசியின் மகனான கசியபர்; சுக்ரர்; பிருஹஸ்பதி; பூமியின் மகனா மங்கலன் {செவ்வாய் / குஜன்}; புதன்; ராஹு; சனீஸ்வரன்;(17) நட்சத்திரக் கூட்டங்கள்; பருவகாலங்கள் {ருதுக்கள்}; மாதங்கள்; பக்ஷங்கள்; வருடம்; வினதையின் மகன் கருடன்; பல்வேறு கடல்கள்; கத்ருவின் மகன்களான பாம்புகள்;(18) சதத்ரு; விபாசை; சந்திரபாகை; ஸரஸ்வதி; ஸிந்து; தேவிகை; பிரபாஸம்; புஷ்கரைத் தடாகங்கள்;(19) கங்கை; மகாநதி; வேணை; காவேரி; நர்மதை; குலம்புனை; விசல்யை; கரதோயை; அம்புவாஹினி;(20)

ஸரயு; கண்டகி; பேராறான லோஹிதம்; தாம்ரம்; ஆருணை; {தாமிரபரணி;} வேத்ரவதி; பர்ணாசை; கௌதமி;(21) கோதாவரி; வேணை; கிருஷ்ணவேணை; திவிஜை {அத்ரிஜை}; திருஷத்வதி; காவேரி; பங்கு {சக்ஷு}; மந்தாகினி;(22) பிரயாகை; பிரபாஸம்; புனித நைமிசம் {நைமிசாரண்யம்}; விஷ்வேஸ்வரன் அல்லது மஹாதேவனுக்குப் புனித இடமாகவும், தெளிந்த நீரைக் கொண்ட தடாகமாகவும் திகழும் காசி;(23) புனித நீர்நிலைகள் பலவற்றால் நிறைந்த குருக்ஷேத்திரம்; பெருங்கடல்களில் முதன்மையான கடல் (பாற்கடல்) {ஸிந்தூத்தமம்}; தவங்கள், கொடைகள் {தபோதானம்;} ஜம்புமார்க்கம்;(24) ஹிரண்யவதி; விதஸ்தை; பிலக்ஷவதி ஆறு; வேதஸ்மிருதி; வேதவதி; மாலவை; அஸ்வவதி;(25)

பூமியில் உள்ள புண்ணியத்தலங்கள்; கங்காத்வாரம்; {ஸிந்து ஆற்றைச் சேரும்} புனிதமான ரிஷிகுல்யைகள்; சித்திரபாகை;(26) சர்மண்வதி; புனித ஆறான கௌசிகி; யமுனை; பீமரதி ஆறு; பேராறான பாஹுதை;(27) மாஹேந்திரவாணி; திரிதிவை; நீலிகை; ஸரஸ்வதி; நந்தை; அபரநந்தை; புனிதமான பெருந்தடாகம் {தீர்த்தமகஹ்ரதம்};(28) கயை; பல்குனீ தீர்த்தம்; தேவர்கள் நிறைந்த (புனிதக் காடான) தர்மாரண்யம்; தேவநதி;(29) பெரும்பாட்டன் பிரம்மனால் படைக்கப்பட்டதும், புனிதமானதும், மூவுலகங்களிலும் கொண்டாடப்படுவதும், மங்கலமானதும், பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்க வல்லதுமான தடாகம் {மானஸஸரஸ்};(29) சிறந்த மூலிகைகளுடன் கூடிய இமய மலை;(30)

பல்வேறு வகை உலகங்களும், தீர்த்தங்கள் மற்றும் மருத்துவமூலிகைகள் நிறைந்த விந்திய மலை; மேரு; மஹேந்திரம்; மலயம்; வெள்ளியுடன் கூடிய ஸ்வேதம்;(31) ஸ்ருங்கவான்; மந்தரம்; நீலம்; நிஷதம்; தர்த்துரம்; சித்ரகூடம்; அஞ்சனாபம்; கந்தமாதன மலைகள்;(32) புனிதமான ஸோமகிரி; வேறு பல்வேறு மலைகள்; திசைகள்; மூலைகள்; பூமி; மரங்கள்;(33) விஸ்வேதேவர்கள்; ஆகாயம்; நக்ஷத்திரக் கூட்டங்கள்; கோள்கள் {கிரகங்கள்} மற்றும் தேவர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்பட்ட, குறிப்பிடப்படாத இவை அனைத்தும் நம்மை மீட்டுத் தூய்மையடையச் செய்யட்டும்.(34) இந்தப் பெயர்களைச் சொல்லும் மனிதன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். இவர்களைப் புகழ்ந்து நிறைவடையச் செய்வதன் மூலம் ஒருவன் அனைத்து அச்சங்களில் இருந்தும் விடுபடுகிறான்.(35) உண்மையில், தேவர்களின் புகழைப் பாடுவதில் திளைக்கும் மனிதன், தூய்மையற்ற வகைகளில் பிறப்பதற்கு வழிவகுக்கும் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(36)

தேவர்களின் பெயர்களைச் சொன்ன பிறகு, தவத்தகுதி மற்றும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், ஒருவன் செய்த அனைத்துப் பாவங்களையும் தூய்மையாக்கவல்லவர்களும், கல்விமான்களுமான பிராமணர்களின் பெயர்களைச் சொல்லப் போகிறேன். அவர்கள் யவக்ரீதர், ரைப்யர், {உசிக்கின் மகனான} கக்ஷீவான், ஔஷிஜன்,(37) பிருகு, அங்கிரஸ், கண்வர், பலமிக்க மேதாதி, அனைத்து சாதனைகளையும் கொண்ட பர்ஹி ஆகியோராவர். அவர்கள் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.(38) உயர்ந்த அருளைக் கொண்டவர்களான உன்முசு {உல்முசு}, பிரமுசு, முமுசு ஆகியோர், பெருஞ்சக்தி கொண்ட ஸ்வஸ்த்யாத்ரேயர்;(39) மித்ரனுக்கும், வருணனுக்கும் மகனும், பேராற்றல் கொண்டவருமான அகஸ்தியர்; முனிவர்களில் கொண்டாடப்படும் முதன்மையான இருவரான திருடாயு, ஊர்த்வபாஹு ஆகியோர் அனைவரும் தெற்குப் பகுதியில் வாழ்கின்றனர்.(40) மேற்குப் பகுதியில் வசிக்கும் முனிவர்களின் பெயர்களை இப்போது சொல்லப் போகிறேன். அவர்கள் உடன் பிறந்த சகோதரர்களுடன் கூடிய உஷங்கு, பெருஞ்சக்தி கொண்ட பரிவ்யாதர்,(41) தீர்க்கதமஸ், கௌதமர், காசியபர், ஏகதர், திவிதர், திரிதர்,(42) அத்ரியின் அற ஆன்மா கொண்ட மகன் (துர்வாஸர்), பலமிக்க ஸாரஸ்வதர் ஆகியோராவர். வடக்குப் பகுதியில் வசித்து, வேள்விகளில் தேவர்களை வழிபடும் முனிவர்களின் பெயர்களை இப்போது சொல்லப் போகிறேன்.(43) அவர்கள் அத்ரி, வசிஷ்டர், சக்திரி, பராசரரின் மகனும், பெருஞ்சக்தி கொண்டவருமான வியாசர், விஷ்வாமித்ரர், பரத்வாஜர், ஜமதக்நி,(44) ரிசீகரின் மகன் {பரசுராமர்}, {உத்தாலகர் மகன்} ஔத்தாலகர், ஸ்வேதகேது, கோஹலர், விபுலர், தேவலர்,(45) தேவசர்மன், தௌமியர், ஹஸ்திகாசியபர், லோமசர், நாசிகேதர், லோமஹர்ஷணர்,(46) உக்ரஸ்ரவஸ், பிருகுவின் மகனான சியவனர் ஆகியோராவர். இது வேதகல்வி கொண்ட முனிவர்களின் பட்டியலாகும்.(47) ஓ! மன்னா, பெயர்கள் சொல்லப்பட்டால் ஒவ்வொரு பாவத்தையும் தூய்மையாக்கவல்ல ஆதி முனிவர்கள் இவர்கள்.

இதன் பிறகு நான் முக்கியமான மன்னர்களின் பெயர்களைச் சொல்லப் போகிறேன்.(48) அவர்கள் நிருகன், யயாதி, நகுஷன், யது, பெருஞ்சக்தி கொண்ட பூரு, ஸகரன், துந்துமாரன், பேராற்றல் கொண்ட திலீபன், கிருசாஸ்வன், யௌவனாஸ்வன், சித்ராஸ்வன், ஸத்யவான்,(49) துஷ்மந்தன் {துஷ்யந்தன்}, பல மன்னர்களுக்கும் மேலான சிறப்புமிக்கப் பேரரசனாக இருந்த பரதன், யவனன், ஜநகன், திருஷ்டரதன்,(50) ரகு, மன்னர்களில் முதன்மையான தசரதன், ராட்சசர்களைக் கொன்ற வீரனான ராமன், சசபிந்து, பகீரதன்,(51) ஹரிச்சந்திரன், மருத்தன், திருடரதன், பெரும் நற்பேறு பெற்றவனான அலர்க்கன், ஐலன் {புரூரவன்},(52) கரந்தமன், மனிதர்களில் முதன்மையான காஷ்மீரன், தக்ஷன், அம்பரீஷன், குகுரன், பெரும் புகழைக் கொண்ட ரைவதன், குரு, ஸம்வரணன், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட மாந்தாத்ரி {மாந்தாதா},(53) அரசமுனியான முசுகுந்தன், ஜாந்நவியால் (கங்கையால்) மிகவும் விரும்பப்பட்ட ஜஹ்நு, ஒரு காலத்தில் மன்னர்கள் அனைவரிலும் முதல்வனும், வேனனின் மகனுமான பிருது, மித்ரபானு, பிரியங்கரன்,(54) திரஸத்தஸ்யு, அரசமுனிகளில் முதன்மையான ஸ்வேதன், கொண்டாடப்பட்ட மகாபீஷன், நிமி, அஷ்டகன்,(55) ஆயு, அரச முனியான க்ஷுபன், கக்ஷேயு, பிரதர்த்தனன், திவோதாஸன், ஸுதாஸன், கோசலேஸ்வரன்,(56) ஐலன், அரச முனியான நளன், அனைத்து உயிரினங்களின் தலைவனான மனு, ஹவித்ரன், பிருஷத்ரன், பிரதீபன், சந்தனு,(57) அஜன், மூத்தவனான பர்ஹி {பினராசீபர்ஹி}, பெரும்புகழைக் கொண்ட இக்ஷ்வாகு, அநரண்யன், ஜானுஜங்கன், அரச முனியான கக்ஷஸேனன், மற்றும் (வரலாற்றில் உள்ள) பெயர் சொல்லப்படாத பலர் ஆகியோராவர்.(58)

விடியும் முன்பு எழுந்து, சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் எழும் இரு சந்தி வேளைகளிலும் இந்த மன்னர்களின் பெயர்களைத் தூய்மையான உடல் மற்றும் மனத்துடனும், கவனம் சிதறாமலும் சொல்லும் மனிதன் பெரும் அறத்தகுதியை ஈட்டுகிறான்.(59) ஒருவன், தேவர்கள், தெய்வீக முனிவர்கள் மற்றும் அரச முனிகளின் புகழைப் பாடி, “படைப்பின் தலைவர்களான இவர்கள் எனக்கு வளர்ச்சியையும், நீண்ட வாழ்நாளையும், புகழையும் விதிக்கட்டும். எத்துயரும் எனதாக வேண்டாம், எந்தப் பாவமும் எனதாக வேண்டாம், எதிர்ப்பவர்கள், அல்லது பகைவர்கள் யாரும் எனக்கு வேண்டாம். வெற்றி எப்போதும் எனதாகும், மறுமையில் மங்கல கதியும் எனதாகும். இதில் ஐயமில்லை” என்று சொல்ல வேண்டும்” என்றார் {பீஷ்மர்}”.(60,61)

விடைகொடுத்த பீஷமர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 166-பீஷ்மரிடம் அனுமதி கேட்ட வியாசர்; யுதிஷ்டிரனின் ஐயங்களைத் தீர்த்த மனநிறைவுடன் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பிய பீஷ்மர்…

ஜனமேஜயன் {வைசம்பாயணரிடம்}, “கௌரவர்களில் முதன்மையான மனிதரான பீஷ்மர், வீரர்களால் எப்போதும் விரும்பப்படும் கணைப்படுக்கையில் கிடந்த போது, அவரைச் சுற்றிலும் பாண்டவர்கள் அமர்ந்திருந்தபோது,(1) என் பாட்டனும், பெரும் ஞானியுமான யுதிஷ்டிரன், கடமை குறித்த புதிர்களுக்கு விளக்கங்களைக் கேட்டு தன் ஐயங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொண்டான்.(2) கொடைகளின் காரியத்தில் பயன்படும் விதிகளையும் கேட்ட அவன், அறம் மற்றும் செல்வம் குறித்த காரியங்களில் தன் ஐயங்கள் அனைத்தும் அகலப்பெற்றான். ஓ! கல்விமானான பிராமணரே {வைசம்பாயணரே}, அந்தப் பெரும் பாண்டவ மன்னன் {யுதிஷ்டிரன்} அதன் பிறகு என்ன செய்தான் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்[1].(3)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பீஷ்மர் அமைதியடைந்தபோது, (சுற்றிலும் அமர்ந்திருந்த) மன்னர் குழாம் முற்றிலும் அமைதியடைந்தது. உண்மையில், அவர்கள் அனைவரும் படத்தில் எழுதிய ஓவியத் தோற்றங்களைப் போல அசைவற்றவர்களாக அமர்ந்திருந்தனர்.(4)

அப்போது, சத்தியவதியின் மகனான வியாசர், ஒருகணம் சிந்தித்து, கங்கையின் அரசமகனிடம்,(5) “ஓ! மன்னா, தன் தம்பிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருடன் கூடிய குருக்களின் தலைவனான யுதிஷ்டிரன் தன் சொந்த இயல்பை அடைந்துவிட்டான்.(6) தன்னருகே பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணனுடன் இருக்கும் அவன், உமக்கு மதிப்புடன் தலைவணங்குகிறான். அவன் நகரம் திரும்ப நீர் அவனுக்கு விடைகொடுப்பதே உமக்குத் தகும்” என்றார்.(7)

புனிதரான வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், சந்தனு மற்றும் கங்கையின் அரச மகனுமானவர் {பீஷ்மர்}, யுதிஷ்டிரனுக்கும், அவனது அமைச்சர்களுக்கும் விடைகொடுத்தனுப்பினார்.(8)சந்தனுவின் அரசமகன் {பீஷ்மர்}, இனிய குரலில் தமது பேரனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, நீ நகரம் திரும்புவாயாக. உன் இதயத்தில் உள்ள நோய் அகலட்டும்.(9) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, பக்தியும், தற்கட்டுப்பாடும் கொண்ட யயாதியைப் போலவே, பெரும் அளவிலான உணவு மற்றும் செல்வக் கொடைகளுக்காகப் புகழ்பெறும் பல்வேறு வேள்விகளில் நீ தேவர்களைத் துதிப்பாயாக.(10) ஓ! பிருதையின் மகனே, க்ஷத்திரிய நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் நீ பித்ருக்களையும், தேவர்களையும் நிறைவடையச் செய்வாயாக. அப்போது நீ பெரும் பயன்களை ஈட்டுவாய். உண்மையில், உன் இதய நோய் அகலட்டும்.(11) நீ உன் குடிமக்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்வாயாக. அவர்களுக்கு உறுதியளிக்கும் நீ அனைவருக்கும் மத்தியில் அமைதியை நிறுவுவாயாக. உனது நலத்தை விரும்புபவர்கள் அனைவருக்கும் தகுந்த வெகுமதிகளை அளித்து அவர்களைக் கௌரவிப்பாயாக.(12) புனிதமான ஓர் இடத்தில் நிற்பதும், முற்றும் வளர்ந்து கனிகள் நிறைந்திருப்பதுமான ஒரு மரத்தைத் தங்கள் வாழ்வாதாரத்திற்காகச் சார்ந்திருக்கும் பறவைகளைப் போலவே உன் நண்பர்கள் மற்றும் உனது நலம் விரும்பிகள் அனைவரும், தங்கள் வாழ்வாதாரங்களுக்காக உன்னைச் சார்ந்து வாழட்டும்.(13) ஓ! மன்னா, இவ்வுலகில் இருந்து நான் செல்ல வேண்டிய காலம் வரும்போது நீ இங்கே வருவாயாக. சூரியன் தெற்கு நோக்கிய தன் போக்கை நிறுத்தி, வடக்கு நோக்கித் திரும்பத் தொடங்கும் காலமே நான் என் உடலைவிட்டு விடைபெறும் காலமாகும்” என்றார் {பீஷமர்}.(14)தன் பாட்டனை மதிப்புடன் வணங்கி, அங்கிருந்து தன் உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருடன் யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டுச் சென்றான்.(15) திருதராஷ்டிரனையும், தன் தலைவனிடம் பெரும்பக்தி கொண்ட காந்தாரியையும் தலைமையில் நிறுத்திக் கொண்டும், முனிவர்கள் மற்றும் கேசவனின் துணையுடனும்,(16) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, குரு குலத்தில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, தன் குடிமக்கள், தன் நாட்டில் வசிப்போர் மற்றும் தன் அமைச்சர்களுடனும் சேர்ந்து யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

அநுசாஸனிக உப பர்வம் {தான தர்ம உப பர்வம்} முற்றும்*

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அநுசாஸன பர்வம்-ஸ்ரீ தான தர்ம உப பர்வம்-பகுதி -1-

October 18, 2025

காலனும் கர்மமும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 01-அழிவுக்குத் தானே காரணமாக அமைந்ததை எண்ணி வருந்திய யுதிஷ்டிரன்; கௌதமி என்ற கிழவி, அர்ஜுனகன் என்ற வேடன், மிருத்யு மற்றும் யமன் ஆகியோருக்கிடையில் மரணம் குறித்து நிகழ்ந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா {பிதாமஹரே}, மன அமைதி என்பது நுட்பமானதென்றும், பல்வேறு வடிவங்களைக் கொண்டதென்றும் சொல்லப்படுகிறது. நான் உமது உரையாடல்கள் அனைத்தையும் கேட்டேன், ஆனாலும் மன அமைதி எனதாகவில்லை. ஓ! ஐயா, இக்காரியத்தில் மனத்தை அமைதியடைய {ஆறுதலடையச்} செய்ய உம்மால் பல வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன, இருந்தாலும், இவ்வளவு காரியங்கள் நடப்பதற்கும் காரணமாக அமைந்த என்னால், பல்வேறு வகைகளிலான அமைதிநிலைகளை அறிந்து கொள்வதால் மட்டுமே மனோ அமைதியை எவ்வாறு அடைய முடியும்?(2) ஓ! வீரரே உமது உடல் கணைகளால் மறைக்கப்பட்டிருப்பதையும், கடுங்காயங்களால் அவதியுறுவதையும் கண்டு, நான் ஏற்படுத்தியிருக்கும் தீமைகளைக் குறித்த எண்ணத்தால் நான் மன அமைதியை அடையத் தவறுகிறேன் {எனக்கு ஆறுதல் உண்டாகவில்லை}.(3) ஓ! மனிதர்களில் பெரும் வீரரே, அருவிகளில் நீர் பெருகியிருக்கும் ஒரு மலையைப் போலக் குருதியால் குளித்திருக்கும் உமது உடலைக் கண்டு, மழைகாலத்துத் தாமரையைப் போல நான் துயருறுகிறேன்.(4)

ஓ! பாட்டா {பீஷ்மரே}, போர்க்களத்தில் என் மக்கள் என் நிமித்தமாகத் தங்கள் எதிரிகளுடன் போரிட்டதால் நீர் இந்த அவல நிலையை அடைந்ததைவிட அதிகத் துன்பத்தை வேறு எது அளிக்க முடியும்?(5) என் நிமித்தமாக வேறு இளவரசர்களும், தங்கள் மகன்கள் மற்றும் உற்றார் உறவினருடன் சேர்ந்து அழிவை அடைந்திருக்கின்றனர். ஐயோ, இதைவிடத் துன்பம் தரத்தக்கது வேறு எது?(6) ஓ! இளவரசரே {பீஷ்மரே}, விதி மற்றும் கோபத்தின் வசத்தை அடைந்து இந்த அருவருக்கத்தக்க செயலைச் செய்த எங்களுக்கும், திருதராஷ்டிரர் மகன்களுக்கும் என்ன விதி காத்திருக்கிறது {நாங்கள் என்ன கதியை அடையப் போகிறோம்} என்பது எங்களுக்குச் சொல்வீராக.(7) ஓ! மனிதர்களின் தலைவரே, உம்மை இந்நிலையில் காணாததால், திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} நற்பேறு பெற்றவன் என நான் நினைக்கிறேன்.(8) ஆனால், நமது நண்பர்கள் மற்றும் உமது மரணத்திற்குக் காரணமாக அமைந்த எனக்கு, வெறுந்தரையில் இந்த அவல நிலையில் உம்மைக் காண்பதால் மன அமைதி மறுக்கப்பட்டிருக்கிறது.(9)

தன் குலத்தில் இழிந்தவனான தீய துரியோதனன், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றி தன் துருப்புகள் மற்றும் தன் தம்பியர் அனைவருடன் போர்க்களத்தில் இறந்தான்.(10) தீய ஆன்மா கொண்ட இழிந்தவன் இப்போது வெறுந்தரையில் கிடக்கும் உம்மைக் காணவில்லை. உண்மையில், இந்தக் காரணத்திற்காக, வாழ்வை விட மரணமே {எனக்கு} விரும்பத்தக்கது என நான் கருதுகிறேன்.(11) ஓ! நோன்பு வழுவா வீரரே, நானும் என் தம்பிகளும் போர்க்களத்தில் எங்கள் எதிரியின் கரங்களில் மாண்டிருந்தால்,(12) நீர் கணைகளால் துளைக்கப்பட்டுக் கிடக்கும் இந்த அவல நிலையை நான் கண்டிருக்க மாட்டேன். ஓ! இளவரசரே {பீஷ்மரே}, படைப்பாளன் {பிரம்மன்} தீச்செயல் செய்பவர்களாக எங்களைப் படைத்திருக்கிறான் என்பது திண்ணம்.(13) ஓ! மன்னா, நீர் எனக்கு நன்மை செய்ய விரும்பினால், மறுமையிலும் {மறுமையிலாவது} இந்தப் பாவத்தில் இருந்து நான் தூய்மை அடையும் வழியை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(14)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! நற்பேறு பெற்றவனே, (தெய்வம், விதி மற்றும் காலத்தைச்) சார்ந்திருக்கும் உன் ஆன்மாவே உன் செயல்களுக்கான காரணமென ஏன் நீ நினைக்கிறாய்? அதன் {ஆன்மாவுடைய} செயல்பாடின்மையின் வெளிப்பாடானது, நுட்பமானதும், புலன்களால் உணரப்பட முடியாததுமாகும்.(15) இக்காரியத்தில், மிருத்யு {யமன்}, கௌதமி, காலன், வேடன் மற்றும் ஒரு பாம்பு ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஓ! குந்தியின் மகனே, கௌதமி என்ற பெயரையும், பெரும் பொறுமையையும், மனோ அமைதியையும் கொண்ட ஒரு கிழவி {முதிர்ந்த பெண்மணி} இருந்தாள். ஒரு நாள் அவள், பாம்பால் கடிக்கப்பட்டதன் விளைவால் தன் மகன் மரணமடைந்ததைக் கண்டாள். அர்ஜுனகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு கோபக்கார வேடன், ஓர் இழையில் அந்தப் பாம்பைக் கட்டி அதைக் கௌதமியின் முன் கொண்டு வந்தான்.(16-19)

அவன் அவளிடம், “ஓ! அருளப்பட்ட பெண்மணியே, இந்த இழிந்த பாம்பே உன் மகனின் மரணத்திற்குக் காரணமாகும். இழிவான இஃதை எவ்வகையில் கொல்லலாம் என்பதை எனக்கு விரைந்து சொல்வாயாக. நான் இதை நெருப்பில் வீசவா? அல்லது துண்டுகளாக வெட்டிப் போடவா? குழந்தையைக் கொன்ற இந்த ஈனப்பிறவி இனியும் வாழ்ந்திருப்பது தகாது” என்றான்.(20)

கௌதமி { வேடன் அர்ஜுனகனிடம்}, “ஓ! சிறு புத்தி கொண்ட அர்ஜுனகா, இந்தப் பாம்பை விடு. இஃது உன் கரங்களில் இறப்பது தகாது. தனக்காகக் காத்திருக்கும் தவிர்க்கப்பட முடியாதவற்றை அலட்சியம் செய்து பாவத்தில் மூழ்கும் வகையில் தன்னைக் கனமாக்கிக் கொள்ளும் மூடன் எவன்?(21) நற்செயல்களைச் செய்வதன் மூலம் தங்களைக் கனமற்றவர்களாக்கிக் கொள்வோர் பெருங்கடலைக் கடக்கும் ஓடத்தைப் போல உலகக் கடலைக் கடக்கிறார்கள். ஆனால் பாவத்தால் தங்களைக் கனமாக்கிக் கொள்பவர்கள் நீருக்குள் வீசப்பட்ட கணையைப் போல அடி ஆழத்தில் மூழ்குகிறார்கள்.(22) இந்தப் பாம்பைக் கொல்வதன் மூலம் என் பிள்ளை மீண்டும் உயிர்பெற மாட்டான், மேலும் இதை வாழ விடுவதால் உனக்கும் எந்தத் தீங்கும் நேராது. இந்த உயிரினத்தைக் கொல்வதன் மூலம் முடிவில்லாத யம லோகத்திற்கு எவன் செல்வான்?” என்று கேட்டாள்.(23)

வேடன், “ஓ! சரிதவறுக்கிடையிலான வேறுபாட்டை அறிந்த பெண்ணே, உயிரினங்கள் அனைத்தின் துன்பத்திலும் பெரியோர் பீடிக்கப்படுவார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் நீ சொன்ன இந்த வார்த்தைகள் (துயரத்தில் மூழ்காமல்) தன்னிறைவடைந்த ஒரு மனிதனால் சொல்லப்படும் அறிவுரை நிறைந்தவையாக இருக்கின்றன. எனவே, நான் இந்தப் பாம்பைக் கொல்லத்தான் வேண்டும்.(24) மனோ அமைதியை விரும்புபவர்கள் அனைத்திற்கும் காலத்தின் போக்கையே காரணமாகக் கொள்கின்றனர், ஆனால் நடைமுறை அறிந்த மனிதர்கள் (பழி தீர்த்துக் கொள்வதன் மூலம்) தங்கள் துயரத்தை உடனே தணித்துக் கொள்கின்றனர். நிலையான மாயையில் இருக்கும் மனிதர்கள், (இவ்வாறான செயல்களினால் மறுமையில் கிட்டும்) பேரின்பத்தை இழந்து விடுவோமென அஞ்சுகின்றனர்[1]. எனவே, ஓ! பெண்ணே, (என்னைக் கொண்டு) இந்தப் பாம்பைக் கொல்வதன் மூலம் உன் துயரத்தைத் தணித்துக் கொள்வாயாக” என்றான்.(25)கௌதமி, “நம்மைப் போன்ற மக்கள் (கெடுபேறால்) ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை. நல்ல மனிதர்கள் தங்கள் ஆன்மாக்களில் அறத்தையே எப்போதும் நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பிள்ளையின் மரணம் ஏற்கனவே விதிக்கப்பட்டதாகும். எனவே, இந்தப் பாம்பைக் கொல்வதை அங்கீகரிக்க இயலாதவளாக இருக்கிறேன்.(26) சினம் துன்பத்திற்கே வழிவகுக்கும் என்பதால் பிராமணர்கள் சினங்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! நல்ல மனிதா, இந்தப் பாம்பை மன்னித்து, கருணையோடு அதை விடுவாயாக” என்றாள்.(27)

வேடன், “பீடத்தில் வேள்வி செய்வதன் மூலம் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டும் மனிதன், அதைத் தன் பலிக்கும் {பலியான விலங்குக்கும்} கொடுப்பதைப் போல நாமும் (இந்த உயிரனத்தைக்) கொல்வதன் மூலம் மறுமையில் வற்றாத பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவோம். ஓர் எதிரியைக் கொல்வதன் மூலம் தகுதி அடையப்படுகிறது. வெறுக்கத்தக்க இந்த உயிரினத்தைக் கொல்வதன் மூலம் மறுமையில் நீ உண்மையான பெரும் தகுதியை ஈட்டுவாய்” என்றான்(28).

கௌதமி, “ஓர் எதிரியை வதைப்பதிலும், கொல்வதிலும் என்ன நன்மை இருக்கிறது? நம் அதிகாரத்தில் உள்ள ஓர் எதிரியை விடுவிக்காததன் மூலம் என்ன நன்மை வெல்லப்படுகிறது? எனவே, ஓ! நலமான முகத்தோற்றத்தைக் கொண்டவனே, நாம் ஏன் இந்தப் பாம்பை மன்னித்து விடுவதனால் கிட்டும் தகுதியை {புண்ணியத்தை} அடைய முயற்சிக்கக்கூடாது?” என்று கேட்டாள்.(29)

வேடன், “(பல உயிரினங்களைக் காக்காமல்) இந்த ஒற்றை உயிரினத்தைக் காப்பதற்குப் பதிலாக, இதனிடமிருந்து ({இந்த ஒற்றை உயிரினத்தின்} தீமையில் இருந்து) பெரும் எண்ணிக்கையாலனவை காக்கப்பட வேண்டும். நல்லோர் (அழிந்து போகட்டுமெனவே) தீயோரைக் கைவிடுகிறார்கள். எனவே, இந்தத் தீய உயிரினத்தைக் கொல்வாயாக” என்றான்.(30)

கௌதமி, “ஓ! வேடா, இந்தப் பாம்பைக் கொல்வதன் மூலம் என் மகன் மீண்டும் உயிர் பெற மாட்டான், மேலும், இதன் {இந்தப் பாம்பின்}} மரணத்தால் அடையப்படும் வேறு எந்தக் கதியையும் நான் காணவில்லை. எனவே, ஓ! வேடா, வாழும் உயிரினமான இந்தப் பாம்பை விட்டுவிடுவாயாக” என்றாள்.(31)

வேடன், “விருத்திரனைக் கொன்றதன் மூலம், (வேள்விக் காணிக்கைகளில்) சிறந்த பகுதியை இந்திரன் அடைந்தான். ஒரு வேள்வியை அழித்ததன் மூலம் வேள்விக் காணிக்கைகளில் தன் பங்கை மஹாதேவன் அடைந்தான். எனவே, மனத்தில் எந்த அச்சத்திற்கும் இடம் தராமல், இந்தப் பாம்பை உடனே கொல்வாயாக” என்றான்”.(32)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்த உயர் ஆன்ம கௌதமி, அந்தப் பாம்பைக் கொன்றுவிடுமாறு அந்த வேடனால் மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டாலும், அவள் அந்தப் பாவச்செயலை மனத்தாலும் நினைக்கவில்லை.(33) அப்போது கயிற்றில் கட்டப்பட்டிருந்த அந்தப் பாம்பு, பெருமூச்சு விட்டுப் பெரும் சிரமத்துடன் மனோ அமைதியைத் தக்க வைத்துக் கொண்டு, மெதுவாக மனிதக் குரலில் இந்த வார்த்தைகளைச் சொன்னது.(34)

பாம்பு {வேடனிடம்}, “ஓ! மூட அர்ஜுனகா, என்னுடைய குற்றமென்ன? எனக்குச் சொந்த விருப்பமும் கிடையாது, நான் சுதந்திரமானவனும் {எச்சார்பும் இல்லாதவனும்} கிடையாது. இந்தச் சிறு வேலைக்கு மிருத்யுவே என்னை அனுப்பினான்.(35) அவனது ஆணையின் பேரிலேயே நான் இந்தப் பிள்ளையைக் கடித்தேனேயன்றி என் பங்கில் எந்தக் கோபத்தினாலும் அல்ல. எனவே, ஓ! வேடா, இதில் பாவமேதும் இருந்தால் அந்தப் பாவம் அவனுடையதே {மிருத்யுவினுடையதே}” என்றது.(35)

வேடன், “மற்றொருவரால் வழிநடத்தப்பட்டு நீ இந்தத் தீமையைச் செய்திருந்தால், இச்செயலில் கருவியாக இருந்த பாவமும் உன்னையே சேரும்.(37) ஓ! பாம்பே, மண் பாத்திரம் செய்வதில் குயவனின் சக்கரம், தடி மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் காரணமாக இருப்பதைப் போலத்தான் நீயும் (இவ்விளைவை உண்டாக்கிய காரணங்களின் ஒன்றாக இருக்கிறாய்). குற்றவாளி என் கரங்களால் மரணமடையத் தகுந்தவன். ஓ! பாம்பே, நீ குற்றவாளி. உண்மையில், இக்காரியத்தை நீயே ஏற்றுக் கொண்டாய்” என்றான்.(39)

பாம்பு, “குயவனின் சக்கரம், தடி மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் சார்பற்ற {சுதந்திரமான} காரணங்களாக இல்லாததைப் போலவே நானும் ஒரு சார்பற்ற {தானே காரியம் செய்ய இயலாத} காரணமாக இருக்கிறேன். எனவே, இக்குற்றம் எனதில்லை என்றே நீ கருத வேண்டும்.(40) வேறு வகையில் நீ சிந்தித்தால், இவற்றை ஒன்றோடொன்றாக இயங்கும் காரணங்களாகக் கருத வேண்டும். இவ்வாறு ஒன்றாக இயங்குவதால், காரணம் மற்றும் விளைவில் அவற்றின் தொடர்பு குறித்து ஐயம் எழுகிறது.(41) இஃது இவ்வாறிருக்கையில், குற்றம் எனதில்லை, இக்காரியத்தில் நான் மரணமடையத் தகாதவன், மேலும் நான் எந்தப் பாவத்தையும் செய்த குற்றவாளியுமல்லேன். அல்லது இதில் பாவம் இருக்கிறது என நீ கருதினால், அந்தப் பாவமும் காரணங்களின் தொகுப்பில் இருக்கிறது” என்றது.(42)

வேடன், “நீ இக்காரியத்தில் முக்கியக் காரணமாவோ இயக்கமாகவோ இல்லை என்றாலும் (இந்தப் பிள்ளையின்) மரணத்திற்கு நீயே காரணமாக இருக்கிறாய். எனவே, நீ மரணத்திற்குத் தகுந்தவன் என்பது எனது கருத்து.(43) ஓ! பாம்பே, ஒரு தீயச் செயலைச் செய்தும், அதைச் செய்தவனுக்கு அதில் தொடர்பில்லை என நீ நினைத்தால், இக்காரியத்தில் வேறெந்தக் காரணமும் இல்லை. ஆனால் உண்மையில் இதைச் செய்ததற்கு நீயே உண்மையில் மரணத்திற்குத் தகுந்தவன். இன்னும் நீ வேறென்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.(44)

பாம்பு, “எந்தக் காரணமும் இருக்கிறதோ, இல்லையோ,[2] (இடையில்) {முதுகெலும்பாக இருக்கும்} ஒரு செயலில்லாமல் எந்த விளைவும் உண்டாவதில்லை. எனவே, இவ்விரண்டிலும் {காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்} தூண்டும் காரணத்தின் திறன் எதனையும் கொள்ளாமல், (இக்காரியத்தில்) என் இயக்கம் மட்டுமே காரணம் எனக் கொள்வதில் முறையான நோக்கமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.(45) ஓ! வேடா, உண்மையில் நானே காரணம் என நீ நினைத்தால், ஓர் உயிரினத்தைக் கொன்ற இந்தக் குற்றச்செயல், என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கியவனின் தோள்களில் இருக்கிறது[3]” என்றது.(46)வேடன், “ஓ! மூடா, ஓ! இழிந்த பாம்பே, வாழத்தகாத நீ, ஏன் இவ்வளவு வார்த்தைகளைப் பந்தாக எறிந்து கொண்டிருக்கிறாய். நீ என் கரங்களால் மரணமடையத் தகுந்தவனே. நீ இந்தக் குழந்தையைக் கொன்றதன் மூலம் மிகக் கொடிய செயலொன்றைச் செய்திருக்கிறாய்” என்றான்.(47)

பாம்பு, “ஓ! வேடா, வேள்வியைச் செய்து தரும் புரோஹிதர்கள், நெருப்பில் தெளிந்த நெய்யை ஆகுதியாக ஊற்றும் செயலில் எந்தத் தகுதியையும் {புண்ணியத்தையும்} ஈட்டாததைப் போலவே, நானும் இவ்வகையான விளைவில் தொடர்புடையவனாகவே கருதப்பட வேண்டும்” என்றது”.(48)

பீஷ்மர் தொடர்ந்தார், “மிருத்யுவால் இயக்கப்பட்ட பாம்பு இவ்வாறு சொன்னதும், மிருத்யுவே {யமனே} அங்கே தோன்றி, அந்தப் பாம்பிடம் இவ்வாறு பேசினான்.(49)

மிருத்யு, “ஓ! பாம்பே, காலனால் வழிநடத்தப்பட்டே நானும் நீயும் இந்தக் குற்றேவலைச் செய்தோம். நானோ, நீயோ இந்தப் பிள்ளையின் மரணத்திற்குக் காரணமானவர்களல்ல.(50) ஓ! பாம்பே, காற்றால் அங்கேயும், இங்கேயும் அலைக்கப்படும் மேகங்களைப் போலவே நான் காலனால் இயக்கப்படுகிறேன்.(51) சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் தொடர்புடைய ஆதிக்கங்கள் அனைத்தும் காலனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டு அனைத்து உயிரினங்களிலும் இயங்குகின்றன.(52) சொர்க்கத்திலோ, பூமியிலோ உள்ள அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் காலனின் இதே ஈர்ப்பிலேயே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். ஓ! பாம்பே, மொத்த அண்டமும் காலனின் இதே ஆதிக்கத்திலேயே ஊக்கம்பெறுகிறது.(53) இவ்வுலகில் உள்ள செயல்கள், செயலின்மைகள், அவற்றின் மாற்றங்கள் {விகாரங்கள்} ஆகிய அனைத்தும் காலனின் ஆதிக்கத்திலேயே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(54) சூரியன், சோமன், விஷ்ணு, நீர், காற்று, நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, நெருப்பு {அக்னி}, வானம், பூமி, மித்ரன், பர்ஜன்யன், அதிதி, வசுக்கள், ஆறுகள், பெருங்கடல்கள் என இருப்பில் உள்ள மற்றும் இருப்பில் இல்லாத பொருட்கள் அனைத்தும் காலனாலேயே படைக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றன.(55) ஓ! பாம்பே, இஃதை அறிந்து நீ ஏன் என் மீது பழி சுமத்த நினைக்கிறாய்? இதில் எக்குற்றமும் எனதாகா இருந்தால், நீயும் பழி சுமத்தப்பட வேண்டியவனே” என்றான் {மிருத்யு}.(56,57)

பாம்பு, “ஓ! மிருத்யு, நான் உன்னைப் பழிக்கவில்லை, மேலும் அனைத்துப் பழியில் இருந்தும் உன்னை விடுவிக்கவில்லை. உனது ஆதிக்கத்தில் உன் இயக்கத்தின் பேரிலேயே நான் (என் செயல்களைச்) செய்தேன் என்று மட்டுமே நான் சொல்கிறேன்.(58) காலன் மீது எப்பழியும் இருந்தாலோ, எப்பழியும் இல்லா விட்டாலோ அக்குற்றத்தை ஆராய்வது என் வேலையல்ல. அதற்கான உரிமையும் நமக்கில்லை.(59) இந்தப் பழியில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வது என் பொறுப்பாக இருப்பதைப் போலவே மிருத்யுவிடம் எந்தப் பழியும் இல்லை எனக் காண்பதும் என் கடமையாகும்” என்றது”.(60)

பீஷ்மர் தொடர்ந்தார், “பிறகு அந்தப் பாம்பானது அர்ஜுனகனிடம் {அந்த வேடனிடம்}, “மிருத்யு சொன்னதை நீ கேட்டாய். எனவே, குற்றமற்றவனான என்னை இந்தக் கயிற்றில் கட்டி என்னை வதைப்பது உனக்கு முறையாகாது” என்றது.(61)

ஓ! பாம்பே, “நான் உன் வார்த்தைகளையும், மிருத்யுவின் வார்த்தைகளையும் கேட்டேன். ஆனால், இவை உன் மீதான பழியைத் துடைக்கவில்லை.(62) மிருத்யுவும், நீயும் இந்தப் பிள்ளையின் மரணத்திற்கான காரணங்களாக இருக்கிறீர்கள். நான் உங்கள் இருவரையுமே காரணங்களாகக் கருதுகிறேன், ஆனால் நீங்களே உண்மையான முக்கியக் காரணம் என்று நான் சொல்லவில்லை.(63) நல்லோருக்குத் துன்பத்தை உண்டாக்கும் தீயவனும், பழி நிறைந்தவனுமான மிருத்யு தெறுமொழி பெற்றவனாவான் {சபிக்கப்பட்டவனாவான்}. பாவம் நிறைந்தவனான நீ பாவச் செயல்களில் ஈடுபடுவதால் உன்னை நான் கொல்லப் போகிறேன்” என்றான்.(64)

மிருத்யு, “நாங்கள் இருவரும் சுதந்திரமானவர்களல்ல, ஆனால் காலனைச் சார்ந்தவர்கள்; {அவனால்} நியமிக்கப்பட்ட பணியைச் செய்ய விதிக்கப்பட்டவர்ள். இக்காரியத்தை நீ முழுமையாகக் கருத்தில் கொண்டால் எங்களிடம் எக்குற்றத்தையும் காணமாட்டாய்” என்றான்.(65)

வேடன், “ஓ! பாம்பே, ஓ! மிருத்யுவே, நீங்கள் இருவரும் காலனைச் சார்ந்திருப்பவர்கள் என்றால், (நன்மையில் இருந்து எழும்) இன்பமும், (தீமையில் இருந்து எழும்) கோபமும் எவ்வாறு உண்டாகின்றன என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்” என்றான்.(66)

மிருத்யு, “எது செய்யப்பட்டதோ அது காலனின் ஆதிக்கத்திலேயே செய்யப்பட்டது. ஓ! வேடா, காலனே அனைத்திற்கும் காரணம் என்றும், நாங்கள் இருவரும் காலனால் ஈர்க்கப்பட்ட காரணத்தால் எங்களுக்கு நியமிக்கப்பட்ட பணியைச் செய்தோம் என்றும் ஏற்கனவே சொன்னேன், எனவே, ஓ! வேடா, எங்கள் இருவரையும் நீ எவ்வகையிலும் நிந்திக்கலாகாது” என்றான்”.(67,68)

பீஷ்மர் தொடர்ந்தார், “அப்போது அறநெறி அறிவியல் சார்ந்த அந்தச் சச்சரவுக் காட்சியில் காலன் {காலபுருஷன்} தோன்றி, அங்கே கூடியிருந்த பாம்பு, மிருத்யு மற்றும் வேடனிடம் இவ்வாறு பேசினான்.(69)

காலன், “ஓ! வேடா, மிருத்யுவோ, இந்தப் பாம்போ, நானோ எந்த உயிரினத்தின் மரணத்திலும் குற்றவாளிகளல்ல. நிகழ்வைத் தூண்டும் உடனடி காரணங்களாக மட்டுமே நாங்கள் இருக்கிறோம். ஓ! அர்ஜுனகா, இக்காரியத்தில் இந்தப் பிள்ளையின் கர்மமே எங்கள் செயல்பாட்டைத் தூண்டும் காரணமாக இருந்தது.(70) வேறு எக்காரணத்தாலும் இப்பிள்ளை இறக்கவில்லை. இவன் தன் கர்மத்தின் விளைவாலேயே இறந்திருக்கிறான்.(71) இவன் தன் முற்பிறவியில் செய்த கர்மத்தின் விளைவாலேயே மரணத்தைச் சந்தித்திருக்கிறான். நாங்கள் அனைவரும் எங்கள் ஒவ்வொருவருக்குமுரிய கர்மத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறோம்.(72) மகன்களைப் போலவே கர்மமே விடுதலைக்கான துணையாகும், மேலும் கர்மமே மனிதனின் அறத்தையும், மறத்தையும் குறிப்பிடுகிறது. செயல்கள் ஒன்றையொன்று தூண்டுவதைப் போலவே, நாங்கள் ஒருவரையொருவர் தூண்டுகிறோம்.(73) களிமண் குவியலை மனிதர்கள் தாங்கள் விரும்பிய வண்ணங்களில் அமைத்துக் கொள்வதைப் போல மனிதர்கள் அடையும் பல்வேறு விளைவுகள் கர்மத்தாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.(74) ஒளியும், நிழலும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் போல மனிதர்கள் தங்கள் சொந்த செயல்களின் மூலம் அமையும் கர்மத்தையே சார்ந்திருக்கிறார்கள்.(75) எனவே, நீயோ, நானோ, மிருத்யுவோ, பாம்போ, இந்தப் பிராமணப் பெண்ணோ இந்தப் பிள்ளையின் மரணத்திற்கான காரணங்கள் இல்லை.(76) இங்கே இவனே {இந்தப் பிள்ளையே அவனது மரணத்திற்கான} காரணமாக இருக்கிறான்” என்றான் காலன்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, காலன் இவ்வழியில் இக்காரியத்தை விளக்கியதும், மனிதர்கள் தங்கள் செயல்களாலேயே துன்பத்தை அடைகிறார்கள் என்று தன் மனத்துக்குள் சமாதானமடைந்த கௌதமி, {வேடனான} அர்ஜுனகனிடம் இவ்வாறு பேசினாள்.(77)

கௌதமி {வேடன் அர்ஜுனகனிடம்}, “காலனோ, மிருத்யுவோ {யமனோ}, பாம்போ இக்காரியத்தில் காரணமாக அமையவில்லை. இந்தப் பிள்ளை தன் சொந்த கர்மத்தின் விளைவாலேயே மரணத்தை அடைந்திருக்கிறான்.(78) என் மகனின் இறப்பில் (அதன் காரணமாக அமையும் முற்பிறவி செயலில்) நானும் பங்குபெற்றிருக்கிறேன். காலனும், மிருத்யுவும் இவ்விடத்தில் இருந்து செல்லட்டும். ஓ! அர்ஜுனகா, நீ இந்தப் பாம்பை விடுதலை செய்வாயாக” என்றாள்”.(79)

பீஷ்மர் தொடர்ந்தார், “காலன், மிருத்யு மற்றும் அந்தப் பாம்பு ஆகியோர் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்றதும், கௌதமியும், அந்த வேடனும் தங்கள் மனத்தில் ஆறுதலடைந்தனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவை யாவற்றையும் கேட்டு உன் துன்பவிலகி மனத்தில் அமைதியை அடைவாயாக. மனிதர்கள் தங்கள் சொந்த கர்மத்தின் விளைவாகவே சொர்க்கத்தையோ, நரகத்தையோ அடைகின்றனர்.(81) இந்தத் தீமையை நீயோ, துரியோதனனோ உண்டாக்கவில்லை. (இந்தப் போரில்) பூமியின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டது காலனின் செயல் என்று அறிவாயாக” {என்றார் பீஷ்மர்}”.(82)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பலமிக்கவனும், அறம் சார்ந்தவனுமான யுதிஷ்டிரன் இவை அனைத்தையும் கேட்டு மனத்தில் ஆறுதல் அடைந்து, மீண்டும் பின்வருமாறு விசாரித்தான்”.(83)

சுதர்சனனும், ஓகவதியும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 02-இல்லறத்தின் சிறப்பை விளக்க சுதர்சனன் மற்றும் ஓகவதியின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! மனிதர்களில் விவேகியே, ஓ! சாத்திரங்கள் அனைத்தையும் கற்றவரே, ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, நான் இந்தப் பெருங்கதையைக் கேட்டிருக்கிறேன்.(1) அறபோதனைகள் நிறைந்த வரலாறுகளே மேலும் கேட்க நான் விரும்புகிறேன், என்னை நிறைவுசெய்வதே உமக்குத் தகும்.(2) ஓ! பூமியின் தலைவா, இல்லறத்தான் எவனும் {கிருஹஸ்தன் எவனும்} அறப்பயிற்சியின் மூலம் மிருத்யுவை வென்றிருக்கிறானா என்பதை எனக்குச் சொல்வீராக. விவரங்கள் அனைத்துடன் எனக்கு இதைச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இல்லறத்தான் ஒருவன் அறப்பயிற்சியின் மூலம் மிருத்யுவை வென்ற இந்தப் பழைய வரலாறு சொல்லப்படுகிறது.(4) ஓ! மன்னா, பிரஜாபதியான மனு, இக்ஷ்வாகு என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்தான். சூரியனைப் போன்று ஒளிமிக்கவனான அந்த மன்னனுக்கு {இக்ஷ்வாகுவுக்கு} நூறு மகன்கள் பிறந்தனர்.(5) ஓ! பாரதா, அவனுடைய பத்தாவது மகனுக்குத் தசாஸ்வன் என்ற பெயர் சூட்டப்பட்டது. பிழையற்ற ஆற்றல் கொண்ட இந்த அறம்சார்ந்த இளரவசனே மாஹிஷ்மதியின் மன்னனானான்.(6) ஓ! மன்னா, இந்தத் தசாஸ்வனின் மகன், வாய்மை, ஈகை மற்றும் அர்ப்பணிப்பை நிலையாகப் பயிலும் அறம் சார்ந்த ஓர் இளவரசனாக இருந்தான். மதிராஸ்வன் என்ற பெயரில் அறியப்பட்ட அவன், பூமியின் தலைவனாக அவளை {பூமியை} ஆண்டான். அவன் வேத கல்வி மற்றும் ஆயுத அறிவியல் கல்வி ஆகியவற்றில் தன்னை நிலையாக அர்ப்பணித்திருந்தான்.(8) அந்த மதிராஸ்வனின் மகன், பெரும் நற்பேற்றையும், பலம், சக்தி, அதிகாரம் ஆகியவற்றுடன் கூடியவனாகத் தியுதிமான் என்ற பெயரைக் கொண்டிருந்தான்.(9) தியுதிமானின் மகன், மிகுந்த அர்ப்பணிப்பும், பக்தியும் மிக்க மன்னனாகச் சுவீரன் என்ற பெயரில் உலகங்கள் அனைத்திலும் புகழ்பெற்றிருந்தான். அறநோக்கு ஆன்மாவுடன் கூடிய அவன், தேவர்களின் தலைவனான மற்றொரு இந்திரனைப் போலப் பெருஞ்செல்வம்படைத்தவனாக இருந்தான்.(10)

சுவீரனுக்குப் போரில் வெல்லப்பட முடியாதவனாகவும், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகவும், சுதுர்ஜயன் என்ற பெயரில் அறியப்பட்ட ஒரு மகன் இருந்தான்.(11) இந்திரனைப் போன்ற உடலைக் கொண்ட துர்ஜயனுக்கும், நெருப்பின் காந்தியைக் கொண்ட ஒரு மகன் இருந்தான். துரியோதனன் என்ற பெயரைக் கொண்ட அவன் அரச முனிகளில் முதன்மையான பெரும் ஏகாதிபதியாக இருந்தான்.(12) போர்க்களத்தில் இருந்து ஒருபோதும் தப்பி ஓடாதவனும், இந்திரனைப் போன்ற வீரத்தைக் கொண்டவனுமான இந்த ஏகாதிபதியின் நாட்டில் இந்திரன் அபரிமிதமான மழையைப் பொழிந்தான்.(13) இந்த மன்னனின் நாடு மற்றும் நகரங்கள் ரத்தினங்கள், கால்நடைகள், பல்வேறு வகைத் தானியங்கள் மற்றும் செல்வங்களுடன் நிறைந்திருந்தன.(14) அவனுடைய நாட்டில் கஞ்சர்கள் யாரும் இல்லை, துன்பத்தால் அல்லது வறுமையால் பீடிக்கப்பட்ட எந்த மனிதனும் இல்லை. பலவீனமான அல்லது நோயால் பீடிக்கப்பட்ட உடல் கொண்ட எந்த மனிதனும் அவனுடைய நாட்டில் இல்லை.(15)

அந்த மன்னன் {துரியோதனன்}, மிகுந்த புத்திமானாகவும், பேச்சில் மென்மையானவனாகவும், பொறாமையற்றவனாகவும், தன் ஆசைகளை அடக்கி ஆள்பவனாகவும், அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனாகவும், கருணை நிறைந்தவனாகவும், ஆற்றல் கொண்டவனாகவும், தற்பெருமையில் ஈடுபடாதவனாகவும் இருந்தான்.(16) அவன் வேள்விகளைச் செய்பவனாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவனாகவும், நுண்ணறிவுமிக்கவனாகவும், பிராமணர்கள் மற்றும் வாய்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருந்தான். அவன் ஒருபோதும் பிறரை அவமதிக்காதவனாகவும், ஈகையாளனாகவும், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களைக் கற்றவனாகவும் இருந்தான்.(17) ஓ! பாரதா, மங்கலமானவளும், புனிதமானவளும், குளிர்ந்த நீரைக் கொண்டவளுமான நர்மதையெனும் தெய்வீக ஆறானவள், தன் சொந்த இயல்பினோடு {அந்த தெய்வீக வடிவத்தோடு} அவனிடம் வந்தாள்.(18) அவன் அந்த ஆற்றிடம், தாமரைக் கண்களையும், பேரழகையும் கொண்டவளும், சுதர்சனை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு மகளைப் பெற்றான்.(19) ஓ! யுதிஷ்டிரா, துரியோதனனின் மகளான அந்தச் சிறந்த கன்னிகையைப் போன்று அதற்கு முன் பெண்குலத்தில் எந்த ஓர் உயிரினமும் அழகாக இருந்ததில்லை.(20)

ஓ! ஏகாதிபதி, அக்னி தேவன், ஒரு பிராமண வடிவில் மன்னனிடம் வந்து, அழகுநிறைந்த இளவரசி சுதர்சனையின் கரத்தை வேண்டினான்.(21) அம்மன்னன் {துரியோதனன்}, ஏழையும், தனக்கு ஒப்பான பதவி இல்லாதவனுமான அந்தப் பிராமணனுக்குத் தன் மகளைக் கொடுக்க விரும்பவில்லை.(22) எனவே அக்னி அவனுடைய பெரும் வேள்வியில் இருந்து மறைந்து போனான்[1].இதயத்தில் துயர் கொண்ட அம்மன்னன் பிராமணர்களை அழைத்து அவர்களிடம்,(22) “சிறப்புவாய்ந்த பிராமணர்களே, தீயோருக்குச் செயப்படும் நன்மை அவர்களது கருத்தில் இருந்து மறைந்து போவது போல அக்னி இவ்வேள்வியில் இருந்து மறைந்து போகும் அளவுக்கு நான் என்ன பாவம் செய்தேன், அல்லது நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள்?(24) உண்மையில், அக்னி மறைந்து போகுமளவுக்கு நாம் செய்த பாவம் நிச்சயம் பெரியதாக இருக்கும். இந்தப் பாவம் உங்களுடையதாகவோ, என்னுடையதாகவோ இருக்க வேண்டும். இக்காரியத்தை முழுமையாக விசாரிப்பீராக” என்று சொன்னான்.(25)

ஓ! பாரதகுல இளவரசர்களில் முதன்மையானவனே, மன்னனின் வார்த்தைகளைக் கேட்ட பிராமணர்கள், வாக்கைக் கட்டுப்படுத்தி, அக்னி தேவனின் பாதுகாப்பைக் குவிந்த கவனத்தோடு நாடினார்கள்.(26) கூதிர்காலச் சூரியனைப் போல ஒளிமிக்கவனும், ஆகுதிகளைச் சுமக்கும் தெய்வீக வாகனமுமான அவன், மகிமைபொருந்திய ஒளி சூழ அவர்கள் முன்பு தோன்றினான்.(27)

அப்போது உயர் ஆன்ம அக்னி அந்தச் சிறந்த பிராமணர்களிடம், “நான் எனக்காகவே துரியோதனனின் மகளைக் கேட்டேன்” என்றான்.(28) இதனால் ஆச்சரியமடைந்த பிராமணர்கள் அனைவரும் காலையில் எழுந்து அக்னி தேவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளை மன்னனிடம் சொன்னார்கள்.(29)

ஞானியான அம்மன்னன், பிரம்மத்தைச் சொல்பவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இதயத்தில் மகிழ்ச்சியடைந்து, “அப்படியே ஆகட்டும்” என்றான். மேலும் அம்மன்னன் சிறப்புமிக்கவனான அக்னிதேவனிடம், “ஓ! அக்னியே, நீ எப்போதும் இங்கே எங்களுடன் இருக்க எண்ணுவாயாக” என்று ஒரு வரத்தை வரதட்சணையாக {கன்யாசுக்லமாக} வேண்டிக் கேட்டான்.(30) தெய்வீக அக்னியும், “அப்படியே ஆகட்டும்” என்று அந்தப் பூமியின் தலைவனிடம் {துரியோதனனிடம்} சொன்னான். இந்தக் காரணத்தினாலேயே இந்த நாள்வரை மாஹிஷ்மதி நாட்டில் அக்னி இருக்கிறான்;(31) தென்திசை வெற்றிப் பயணத்தில் {திக்விஜயத்தில்} சகாதேவனாலும் காணப்பட்டான்.(32) பிறகு மன்னன் தன் மகளைப் புதிய ஆடைகளில் நகைகளுடன் அலங்கரித்து, அந்த உயர் ஆன்ம தேவனுக்குக் கொடுத்தான், அக்னியும், வேள்விகள் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஏற்பதைப் போலவே, இளவரசியான சுதர்சனையைத் தன் மனைவியாக வேத சடங்குகளுடன் ஏற்றுக் கொண்டான்.(33,34) அவளது தோற்றம், அழகு, அருள், பண்பு, உன்னதப் பிறப்பு ஆகியவற்றில் நிறைவடைந்த அக்னி, அவளிடம் வாரிசைப் பெற மனம் கொண்டான். சுதர்சனன் என்ற பெயரைக் கொண்ட மகனை விரைவில் அவளிடம் பெற்றான்.(35,36) சுதர்சனனும், தோற்றத்தில் முழுநிலவைப் போன்ற அழகுடன் இருந்தான். பிள்ளைப்பருவத்திலேயே அவன் உயர்ந்ததும், எப்போதும் நீடிப்பதுமான பிரம்ம ஞானத்தை அடைந்தான்[2].(37)நிருகனின் பாட்டனும், ஓகவான் என்ற பெயரைக் கொண்டவனுமான மற்றொரு மன்னன் இருந்தான். ஓகவதி என்ற பெயரில் ஒரு மகளும், ஓகரதன் என்ற பெயரில் ஒரு மகனும் அவனுக்குப் பிறந்தனர்.(38) மன்னன் ஓகவான், தேவியைப் போன்ற அழகுநிறைந்தவளான ஓகவதி என்ற தன் மகளைக் கல்விமானான சுதர்சனனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.(39) ஓ! மன்னா, சுதர்னன், ஓகவதியுடன் ஓர் இல்லறத்தானின் {கிருஹஸ்தனின்} வாழ்வுமுறையை நோற்று, குருக்ஷேத்திரத்தில் அவளுடன் சேர்ந்து வாழ்ந்தான்.(40) புத்திமானும், சுடர்மிக்க சக்தி கொண்டவனுமான அந்த இளவரசன் {சுதர்சனன்}, ஓர் இல்லறத்தானின் வாழ்வுமுறையைப் பின்பற்றியபடியே மரணத்தை {யமனை} வெல்லும் நோன்பை நோற்றான்.(41)

ஓ! மன்னா அந்த அக்னிமகன் {சுதர்சனன்}, {தன் மனைவியான} ஓகவதியிடம், “நமது விருந்தோம்பலை நாடுவோருக்கு (அவர்களது விருப்பங்களுக்கு} எதிரான எந்தச் செயலையும் ஒருபோதும் செய்யாதே.(42) நீ உன்னையே கொடுக்க வேண்டியிருந்தாலும், விருந்தினர்களை வரவேற்கும் வழிமுறைகளில் எந்த ஐயுணர்வும் கொள்ளாதே[3].(43) ஓ! அழகியே, விருந்தினர்களுக்கு இணங்கும் விருந்தோம்பலைவிட இல்லறத்தாருக்கு உயர்ந்த அறம் வேறேதும் கிடையாது என்பதால் இந்நோன்பே எப்போதும் என் மனத்தில் இருக்கிறது.(44) என் வார்த்தைகளுக்கு உன்னிடம் எந்த அதிகாரமாவது இருந்தால், ஐயமில்லாமல் இஃதை உன் மனத்தில் எப்போதும் கொள்வாயாக.(45) ஓ! பாவமற்றவளே, அருளப்பட்டவளே, நீ என்னை நம்பினால், நான் உன் அருகில் இருந்தாலும், உன்னிடம் இருந்து தொலைவாக இருந்தாலும் ஒருபோதும் விருந்தினரை அவமதிக்காதே” என்றான்.(46)அப்போது ஓகவதி, தன் தலைக்கு மேலே கரங்களைக் குவித்து, “நீர் ஆணையிடும் எதனையும் நான் செய்யாமல் விட மாட்டேன்” என்று மறுமொழி கூறினாள்.(47)

அப்போது, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சுதர்சனனை வெல்ல விரும்பிய மிருத்யு {யமன்}, அவனிடம் தாமதங்களை {அவன் செய்யும் தவறுகளைக்} காண அவனைக் கண்காணிக்கத் தொடங்கினான்.(48)

ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், காட்டில் இருந்து விறகைக் கொண்டுவர அக்னிமகன் {சுதர்சனன்} வெளியே சென்றபோது, அருள்நிறைந்த பிராமணர் ஒருவர் ஓகவதியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி விருந்தோம்பலை வேண்டினார்,(49) “ஓ! அழகிய பெண்ணே, இல்லறத்தாருக்குப் பரிந்துரைக்கப்பட்ட விருந்தோம்பலெனும் அறத்தில் உனக்கு நம்பிக்கையேதும் இருந்தால், இன்று நீ என்னை விருந்தோம்பல் சடங்குகளுடன் வரவேற்க வேண்டும் என உன்னை வேண்டுகிறேன்” என்றார்.(50)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் புகழைக் கொண்ட அந்த இளவரசி {ஓகவதி}, அந்தப் பிராமணரால் இவ்வாறு கேட்கப்பட்டதும், வேதங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி அவரை வரவேற்றாள்.(51) அவர் அமர்வதற்கு இருக்கையும், கால் கழுவிக்கொள்ள நீரும் கொடுத்த அவள், “உமது காரியம் என்ன? நான் உமக்கு என்ன தர வேண்டும்?” என்று கேட்டாள்.(52)

அதற்கு அந்தப் பிராமணர், “ஓ! அருளப்பட்டவளே, உன் மேனியில் என் காரியம் இருக்கிறது. மனத்தில் எத்தயக்கமுமின்றி அதன்படியே நீ செயல்படுவாயாக.(53) இல்லறத்தாருக்குப் பரிந்துரைக்கப்பட்ட கடமைகள் உனக்கு ஏற்புடையனவாக இருந்தால், ஓ! இளவரசியே, உன் மேனியை எனக்குக் கொடுப்பதன் மூலம் என்னை நிறைவு செய்வாயாக” என்றார்.(54)

பல்வேறு பொருட்களைக் கொடுப்பதாக அந்த இளவரசியால் ஆசைகாட்டப்பட்டாலும் அந்தப் பிராமணர் வேறு கொடை எதையும் கேட்காமல் அவளது மேனியையே கேட்டுக் கொண்டிருந்தார்.(55) தீர்மானமாக இருக்கும் அவரைக் கண்ட அந்தப் பெண்மணி, முன்பே தன் கணவனால் கொடுக்கப்பட்ட ஆணைகளை நினைவுகூர்ந்து, வெட்கமடைந்து {அவமானமடைந்தவளாக} அந்தச் சிறந்த பிராமணரிடம் “அப்படியே ஆகட்டும்” என்றாள்.(56) இல்லறத்தாரின் அறத்தை ஈட்ட விரும்பிய தன் கணவனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த அவள் உற்சாகத்துடன் அந்த மறுபிறப்பாள முனிவரை அணுகினாள்.(57)

அதே வேளையில் விறகு சேகரித்துக் கொண்டு அக்னிமகன் {சுதர்சனன்} தன் இல்லம் திரும்பினான். கடுமையான, இரக்கமில்லாத இயல்புடன் கூடிய மிருத்யுவானவன், அர்ப்பணிப்புமிக்க ஒரு நண்பனுடன் இருப்பது போலவே அவனது அருகிலேயே எப்போதும் இருந்தான்.(58) அந்தப் பாவகனின் {அக்னியின்} மகன் {சுதர்சனன்} தன் ஆசிரமத்திற்குத் திரும்பியதும், ஓகவதியின் பெயர் சொல்லி அழைத்தும் (எந்தப் பதிலையும் அடையாமல்) மீண்டும் மீண்டும், “நீ எங்கே சென்றுவிட்டாய்?” என்று கேட்டான்.(59)

தன் கணவனிடம் அர்ப்பணிப்புமிக்க அந்தக் கற்புடைய பெண்மணி, அந்தப் பிராமணரின் கரங்களில் அகப்பட்டிருந்ததால் தன் கணவனுக்குப் பதிலேதும் சொல்லவில்லை.(60) உண்மையில் அந்தக் கற்புமிக்கப் பெண், கறைபட்டவளாகத் தன்னைக் கருதி, வெட்கத்தால் {அவமானத்தால்} பேச்சற்றவளானாள்.(61)

சுதர்சனன் மீண்டும் அவளிடம், “கற்புடைய என் மனைவி எங்கே இருக்கக்கூடும்? அவள் எங்கே சென்றுவிட்டாள்? (அவள் மறைந்ததைவிட) எனக்குப் பெரியது வேறு ஏதும் இல்லை.(62) எளிமையும், வாய்மையும் நிறைந்தவளும், கணவனிடம் அர்ப்பணிப்புமிக்கவளுமான அந்தப் பெண்மணி, ஐயோ, இனிய புன்னகையுடன் ஏன் இன்று என் அழைப்புக்குப் பதில் சொல்லாமல் இருக்கிறாள்?” என்றான்.(63)

அப்போது அந்தக் குடிசையில் இருந்த பிராமணர், சுதர்சனனிடம், “ஓ!பாவகனின் மகனே {சுதர்சனா}, ஒரு பிராமணன் வந்திருக்கிறான்,(64) வரவேற்புக்குரிய பல்வேறு பொருட்களைக் கொண்டு உனது மனைவியான இவளால் ஆசை காட்டப்பட்டாலும், அவன் அவளது மேனியை மட்டுமே விரும்பினான்,(65) இப்போது இந்த அழகிய முகம்படைத்த பெண் உரிய சடங்குகளுடன் என்னை வரவேற்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை அறிவாயாக. இத்தருணத்திற்குத் தகுந்தது எனக் கருதும் எதையும் நீ செய்யலாம்” என்றார்.(66)

இரும்பு தண்டத்துடன் கூடிய மிருத்யுவானவன், அந்த முனிவன் {சுதர்சனன்} தன் உறுதிமொழியில் இருந்து பிறழ்வான் என நினைத்து அவனை அழிப்பதற்காக அக்கணத்தில் அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.(67)

சுதர்சனன் அதிர்ச்சியடைந்தாலும், பார்வை, சொல், செயல் அல்லது எண்ணத்தில் உள்ள பொறாமை மற்றும் கோபம் அனைத்தையும் கைவிட்டு,(68) “ஓ! பிராமணரே, நீர் இன்புற்றிருப்பீராக. எனக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஓர் இல்லறத்தான் தன் விருந்தினரைக் கௌரவிப்பதன் மூலம் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(69) இல்லறத்தானைப் பொறுத்தவரையில், தன் விருந்தினருக்குத் தன் இல்லத்தில் இருப்பதை முறையாகக் கொடுத்துக் கௌரவிப்பதில் விளைவதை விடப் பெருந்தகுதி {பெரும்புண்ணியம்} வேறேதும் கிடையாது என்று கல்விமான்கள் சொல்கின்றனர்.(70) என் உயிர், என் மனைவி, மேலும் நான் கொண்டுள்ள உலக உடைமைகள் ஆகிய அனைத்தும் என் விருந்தினர்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டவையே. இதை நான் என் நோன்பாக நோற்கிறேன்.(71) ஓ! பிராமணரே, இம்மொழியை நான் உண்மையில் சொல்வதால், தன்னறிவை {சுயஞானத்தை} நான் அடைவேன்.(72) ஓ! அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவரே, நெருப்பு, காற்று, பூமி, நீர் மற்றும் வானம் என்ற ஐம்பூதங்களும், மனம், புத்தி, ஆன்மா, காலம், வெளி மற்றும் பத்து புலன்கள்(73) ஆகிய அனைத்தும் மனிதர்களின் உடல்களில் இருந்து, அவர்கள் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்களை எப்போதும் சாட்சியாகக் காண்கின்றன.(74) இந்த உண்மை இன்று என்னால் சொல்லப்படுகிறது, இதற்காகத் தேவர்கள் எனக்கு அருள் தரட்டும், அல்லது நான் பொய் பேசினால் என்னை அழிக்கட்டும்” என்றான்.(75)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அப்போது அனைத்துத் திசைகளிலும் எதிரொலிக்கும்படி ஒரு குரல், “இஃது உண்மை, இது பொய்யல்ல” என்று அலறியது.(76)அப்போது அந்தப் பிராமணர், பூமியையும், வானத்தையும் சூழ்ந்து எழும் காற்றைப் போலக் குடிசையில் இருந்து வெளியே வந்து,(77) வேதவொலிகளால் மூவலகங்களையும் எதிரொலிக்கச் செய்து, அறம்சார்ந்த அம்மனிதனின் பெயர் சொல்லி அழைத்து, அவனை வாழ்த்தி,(78) “ஓ! பாவமற்றவனே, நான் தர்மன். மகிமை அனைத்தும் உனக்கே ஆகும். ஓ! வாய்மை விரும்பியே, உன்னைச் சோதிக்கவே நான் இங்கே வந்தேன். நீ அறம் சார்ந்தவன் என்பதை அறிந்து நான் நிறைவடைகிறேன்.(79) உன் தவறுகளைத் தேடி உன்னை எப்போதும் பின்தொடர்ந்து கொண்டிருந்த மிருத்யுவை நீ வென்றுவிட்டாய்.(80) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, தன் கணவனிடம் அர்ப்பணிப்புள்ள இந்தக் கற்புடைய பெண்ணை, பார்வையால் அவமதிக்கும் திறனும் மூவுலகத்தில் ஒருவனுக்கும் இல்லை எனும்போது அவளது மேனியை {எவனாலும்} தொடவும் முடியாது.(81) உன் நற்குணத்தினாலும், தன் சொந்த கற்பினாலும் இவள் பாதுகாக்கப்பட்டிருக்கிறாள். பெருமைமிக்க இந்தப் பெண்மணி சொல்வதற்கு முரணாக ஏதும் இருக்க முடியாது.(82) பிரம்மம் ஓதுபவளும், கடுந்தவங்களுடன் கூடியவளுமான இவள், உலகத்தின் விடுதலைக்காக {விமோசனத்துக்காக} ஒரு பெரிய ஆறாக வடிவ மாற்றம் பெறுவாள்.(83) நீ உனது சொந்த உடலுடன் அனைத்து உலகங்களையும் அடைவாய், மேலும் யோக அறிவியலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இவளது உடலின் ஒரு பாதி உன்னைப் பின்தொடரும், மறுபாதியானது ஓகவதி என்று கொண்டாடப்படும் ஆறாக மாறும்[4].(84) தவங்களின் மூலம் அடையப்படும் அனைத்து உலகங்களையும் நீ இவளுடன் சேர்ந்து அடைவாய்.(85) திரும்பி வராத நித்தியமாக நீடித்திருக்கும் உலகங்களை நீ இந்தத் திரள் உடலுடனே அடைவாய்.(86) நீ மரணத்தை வென்றாய், உயர்ந்த இன்ப நிலைகள் அனைத்தையும் அடைந்தாய், உன் (மனத்தின்) சக்தியால் எண்ணத்தின் வேகத்தை அடைந்து, ஐம்பூதங்களின் சக்திக்கு மேலாக எழுந்திருக்கிறாய்.(87) ஓ! அறம்சார்ந்த மனிதர்களின் இளரவசே, இவ்வாறு ஓர் இல்லறத்தானின் கடமைகளைப் பின்பற்றியதன் மூலம் நீ உன் ஆசைகள், விருப்பங்கள், கோபம் ஆகியவற்றை வென்றிருக்கிறாய், இந்த இளவரசியோ உனக்குத் தொண்டாற்றி, துன்பம், ஆசை, மாயை, பகைமை, மனத்தளர்ச்சி ஆகியவற்றை வென்றிருக்கிறாள்” என்றான் {தர்மன்}”.(88)(ஓகவதி என்பது, சரஸ்வதி ஆற்றின் கிளை ஆறாகும்குருக்ஷேத்திரத்தின் அருகில் தென்படுவதுதான் ஓகவதியாறு தோன்றுமிடம். சரஸ்வதியின் மறைவோடு, இந்தக் கிளையாறும் மறைந்திருக்க வேண்டும்.)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அப்போது (தேவர்களின் தலைவனான) மகிமைபொருந்திய வாசவன், ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட ஓர் அழகிய தேரைச் செலுத்திக் கொண்டு அந்தப் பிராமணனை {சுதர்சனனை} அணுகினான்.(89) மரணம், ஆன்மா, அனைத்து உலகங்கள், அனைத்துப் பூதங்கள், புத்தி, மனம், காலம், வெளி, ஆசை, கோபம் ஆகிய அனைத்தும் வெல்லப்பட்டன.(90) எனவே, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஓர் இல்லறத்தானுக்கு விருந்தினரை விட உயர்ந்த தெய்வீகம் வேறெதுவும் இல்லை என்பதை மனத்தில் தாங்குவாயாக.(91) கௌரவிக்கப்பட்ட ஒரு விருந்தினருடைய அருளானது, ஆயிரம் வேள்விகளின் தகுதியைவிட நன்மைமிக்கது என்று கல்விமான்களால் சொல்லப்படுகிறது.(92) தகுதிவாய்ந்த விருந்தினர் ஒருவன் ஓர் இல்லறத்தானின் விருந்தோம்பலை நாடும்போது, அவனால் கௌரவிக்கப்படவில்லையெனில் அவனது புண்ணியங்கள் அனைத்தையும் (தன்னோடு) எடுத்துக் கொண்டு (பதிலுக்கு) தன் பாவங்கள் அனைத்தையும் அவனுக்குக் கொடுக்கிறான்.(93) என் மகனே {யுதிஷ்டிரனே}, ஓர் இல்லறத்தானால் எவ்வாறு மரணம் வெல்லப்பட்டது என்ற இந்தச் சிறந்த கதையை இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(94) (கேட்போருக்கு) இச்சிறந்த கதையைச் சொல்வது, மகிமை, புகழ் மற்றும் நீண்டவாழ்நாள் {நீண்ட ஆயுள்} ஆகியவற்றைக் கொடுக்கும். உலகம் சார்ந்த செழிப்பை நாடும் மனிதன், அனைத்துத் தீமைகளையும் விலக்குவதில் இது திறன்மிக்கது எனக் கருத வேண்டும்.(95) ஓ! பாரதா, இந்தச் சுதர்சனனின் வாழ்க்கைக் கதையைத் தினமும் உரைக்கும் மனிதன் அருள் உலகங்களை அடைவான்” {என்றார் பீஷ்மர்}.(96)

விஷ்வாமித்ரர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 03-அடைதற்கரிதான பிராமணத் தன்மையானது க்ஷத்திரியரான விஷ்வாமித்ரரால் எவ்வாறு அடையப்பட்டது என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்…

[1]யுதிஷ்டிரன், “ஓ! இளவரசரே {பீஷ்மரே} பிராமணத்தன்மையானது வேறு மூன்று வர்ணங்களால் (க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகியோரால்) அடைவதற்கு மிக அரிதானது என்றால், ஓ! மன்னா, உயர் ஆன்ம விஷ்வாமித்ரர், (பிறவியால்) ஒரு க்ஷத்திரியனாக இருந்தாலும், பிராமணத் தன்மையை அடைந்தது எவ்வாறு? ஓ! ஐயா, இதை நான் அறிய விரும்புகிறேன். எனவே இக்காரியம் குறித்த உண்மையை எனக்குச் சொல்வீராக.(1,2) ஓ! ஐயா, அந்தப் பலமிக்க மனிதர் தன் தவத்தகுதிகளின் மூலம் உயர் ஆன்ம வசிஷ்டரின் நூறு மகன்களை ஒரு கணத்தில் அழித்துவிட்டார்.(3) அவர் கோப வசத்தில் இருந்தபோது, எண்ணற்ற தீய ஆவிகளையும், வலிமையும், வீரமும் கொண்டவர்களையும், காலனுக்கு ஒப்பானவர்களுமான ராட்சர்களையும் படைத்தார்.(4) நூற்றுக்கணக்கான மறுபிறப்பாள தவசிகளைக் கொண்டதும், பெருமையும், கல்வித்தகுதியும் கொண்டதும், பிராமணர்களால் போற்றிப் புகழப்படுவதுமான குசிக குலமானது இந்த மனிதர்களின் உலகில் அவராலேயே உண்டானது.(5)ரிசீகரின் மகனும், கடுந்தவங்களைக் கொண்டவருமான சுனச்சேபர், அம்பரீஷனின் பெரும் வேள்வியில் ஒரு விலங்காகக் கொல்லப்பட்ட வேண்டியவராக இருந்தாலும் விஷ்வாமித்ரரின் மூலம் விடுவிக்கப்பட்டார்.(6) ஹரிஷ்சந்திரன் {ஹரிச்சந்திரன்} வேள்வியில் தேவர்களை நிறைவு செய்ததால், அவர் {சுனச்சேபர்} ஞானியான விஷ்வாமித்ரரின் மகனானார்.(7) அண்ணனான தேவவிரதனை மதிக்காததால், அவனது ஐம்பது தம்பிகளும் சண்டார்களாகப் போகும்படி சபிக்கப்பட்டனர்.(8) இக்ஷ்வாகுவின் மகனான திரிசங்கு, தன் நண்பர்களால் கைவிடப்பட்டு, கீழ் உலகங்களில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தபோது, விஷ்வாமித்ரரின் விருப்பப்படி சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.(9) விஷ்வாமித்ரர், கௌசிகி என்ற பெயரைக் கொண்டதும், தெய்வீக முனிவர்களால் அடிக்கடி நாடப்படுவதுமான ஒரு பெரும் ஆற்றை {தன் தங்கையாகக்} கொண்டிருந்தார். அந்தப் புனிதமான, மங்கலமான ஆறானது, தேவர்களாலும், மறுபிறப்பாள முனிவர்களாலும் அடிக்கடி நாடப்பட்டது.(10)

புகழ்பெற்ற தேவகன்னிகையும், அழகிய கைவளைகளைக் கொண்டவளுமான ரம்பை, அவரது தவங்களுக்கு இடையூறு செய்ததால் சபிக்கப்பட்ட ஒரு பாறையாகச் சமைக்கப்பட்டாள்.(11) மகிமைபொருந்திய வசிஷ்டர், விஷ்வாமித்ரரின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகப் பழங்காலத்தில் தன்னைக் கொடிகளால் சுற்றிக் கொண்டு ஆற்றில் விழுந்து, பிறகு கட்டுகளில் இருந்து விடுபட்டு வெளியே வந்தார்.(12) பெரியதும், புனிதமானதுமான அந்த ஆறு இதன் விளைவால் அதுமுதல் விபாசை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது[2].(13) அவர் {விஷ்வாமித்ரர்} மகிமை பொருந்தியவனும், பலமிக்கவனுமான இந்திரனை வேண்டியதால், அவரிடம் நிறைவடைந்த அவன் அவரைச் சாபத்தில் இருந்து விடுவித்தான்[3]. அவர் ஆகாயத்தின் வட பக்கத்தில் இருந்து கொண்டு, ஏழு மறுபிறப்பாள முனிவர்களுக்கும் {சப்தரிஷிகளுக்கும்} சார்ந்து உத்தானபாதன் மகனான துருவனுக்கும் நடுவில் எப்போதும் ஒளியைப் பொழிந்து கொண்டிருக்கிறார்.(14,15)இவையும், இன்னும் பலவும் அவரது சாதனைகளாக இருக்கின்றன. ஓ! குருகுலத்தின் வழித்தோன்றலே, இவை ஒரு க்ஷத்திரியரால் செய்யப்பட்டிருப்பதால் எனக்கு ஆவல் மேலிடுகிறது.(16) எனவே, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே, இக்காரியத்தை எனக்கு உண்மையாக விளக்குவீராக. தன் உடற்கட்டைக் கைவிட்டு, சதையாலான மற்றொரு வசிப்பிடத்தைக் கொள்ளாமல் அவரால் எவ்வாறு பிராமணராக முடிந்தது?(17) ஓ! ஐயா, மதங்கனின் கதையை எனக்குச் சொன்னதைப் போலவே இக்காரியத்தை உண்மையில் விளக்குவீராக[4].(18) மதங்கன் (தவங்கள் அனைத்தையும் செய்திருந்தாலும்) சண்டாளனாகப் பிறந்தவனாதலால் பிராமணத்தன்மையை அடைய முடியாதபோது, இந்த மனிதனால் {விஷ்வாமித்ரரால்} எவ்வாறு பிராமண நிலையை அடைய முடிந்தது?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(19)

விஷ்வாமித்ர குலம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 04-விஷ்வாமித்ரரின் பிறப்பு; அடைதற்கரிதான பிராமணத் தன்மையை அவர் அடைந்த காரணம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிருதையின் மகனே, பழங்காலத்தில் விஷ்வாமித்ரர் எவ்வாறு பிராமணர் மற்றும் பிராமண முனிவர் என்ற நிலைகளை அடைந்தார் என்பதை விளக்கமாகக் கேட்பாயாக.(1) ஓ! பாரத வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, பாரதக் குலத்தில் பல வேள்விகளைச் செய்தவனும், அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனுமான ஆஜமீடன்[1] என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான்.(2) அவனது மகன் ஜன்னு என்ற பெயர் கொண்ட பெரும் மன்னன் ஆவான். உயர்ந்த மனம் கொண்ட இந்த இளவரசனின் மகளாகக் கங்கை இருந்தாள்.(3) பெரும் புகழ்பெற்றவனும், தந்தைக்கு இணையான அறவோனுமான சிந்துத்வீபன் இந்த இளவரசனின் {ஜன்னுவின்} மகனாக இருந்தான். சிந்துத்வீபனிடமிருந்து பெரும் அரசமுனியான பலாகாஸ்வன் உண்டானான்.(4) வல்லபன் என்ற பெயரைக் கொண்ட அவனுடைய மகன் உடல் படைத்த இரண்டாவது தர்மனைப் போல இருந்தான். அவனது மகனான குசிகன், ஆயிரங்கண் இந்திரனைப் போல மகிமையுடன் பிரகாசித்தான்.(5)(சந்திரன் – புதன் – ப்ரூரவஸ் – அமாவசு – பீமன் – காஞ்சனன் – கதோத்திரன்(ஆஜமீடன்) – ஜன்னு – சுமந்து(சிந்துத்வீபன்) – அசகன் – பலகாஸ்வன் – குசன் (வல்லபன்) – குசநாபன் (குசிகன்) – காதி – கௌசிகன்(விசுவாமித்திரர்))குசிகனின் மகனும், சிறப்புமிக்கவனுமான மன்னன் காதி, பிள்ளையற்றவனாக இருந்ததால், தனக்கு ஒரு மகன் பிறக்க விரும்பி காட்டுக்குச் சென்றான்.(6) அங்கே வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவனுக்கு ஒரு மகள் பிறந்தாள். சத்தியவதி என்ற பெயரால் அழைக்கப்பட்ட அவள் பூமியில் ஒப்பற்ற அழகுடையவளாக இருந்தாள்.(7) பிருகு குலத்தவரும், சியவனரின் சிறப்புமிக்க மகனும், கடுந்தவங்களுடன் கூடியவரும், ரிசீகர் என்ற பெயரில் கொண்டாடப்பட்டவர் இந்தப் பெண்ணின் கரத்தை வேண்டினார்.(8) எதிரிகளை அழிப்பவனான காதி, உயர் ஆன்ம ரிசீகரை ஏழையாக நினைத்து தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்காமல் இருந்தான்.(9) பின்னவர் {ரிசீகர்} இவ்வாறு விடைகொடுத்தனுப்பப்பட்டுத் திரும்பிச் செல்கையில் அந்தச் சிறப்புமிக்க மன்னன் {காதி} அவரிடம் {ரிசீகரிடம்}, “நீர் எனக்கு மணக்கொடையளித்தால் {வரதட்சணை அளித்தால்} என் மகளை உமது மனைவியாக அடையலாம்” என்றான்.(10)

ரிசீகர் {காதியிடம்}, “ஓ! மன்னா, உன் மகளின் கரத்திற்காக நான் என்ன மணக்கொடையை அளிக்க வேண்டும்? தயக்கமேதும் இல்லாமல் இக்காரியத்தை எனக்குச் சொல்வாயாக” என்றார்.(11)

காதி, “ஓ! பிருகுவின் வழித்தோன்றலே, காற்றின் வேகம் கொண்டவையும், சந்திரக்கதிரின் வண்ணத்தைக் கொண்டவையும், ஒரு காதில் கருப்பு நிறம் கொண்டவையுமான ஓராயிரம் குதிரைகளை எனக்குக் கொடுப்பீராக” என்றான்”.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிருகு குலத்தில் முதன்மையானவரான அந்த வலிமைமிக்கச் சியவனரின் மகன் {ரிசீகர்}, அதிதியின் மகனும், நீர்நிலைகள் அனைத்தின் தலைவனுமான வருண தேவனிடம்,(13) “ஓ! தேவர்களில் சிறந்தவனே, காற்றின் வேகம் கொண்டவையும், சந்திரனின் பிரகாசத்தையே நிறமாகக் கொண்டவையும, ஒரு காது கருப்பாக இருப்பவையுமான ஓராயிரம் குதிரைகளைக் கொடுக்க வேண்டுமென உன்னை நான் வேண்டுகிறேன்” என்று வேண்டினார்.(14)அதிதியின் மகனான வருண தேவன், சிறப்பானவரான அந்தப் பிருகு குலக்கொழுந்திடம், “அப்படியே ஆகட்டும். நீர் எங்கே தேடினாலும் (உமது முன்னிலையில்) குதிரைகள் எழும்” என்றான்.(15)

ரிசீகர் அவற்றைக் குறித்து நினைத்த உடனேயே உயர்வகையைச் சேர்ந்தவையும், சந்திரனின் காந்தி மக்கிய நிறத்தையும் கொண்ட ஆயிரம் குதிரைகள் கங்கையின் நீரில் இருந்து எழுந்தன.(16) கான்யகுப்ஜத்திற்கு அருகில் புனிதமான கங்கைக்கரையில் அந்தக் குதிரைகள் தோன்றியதன் விளைவால் இன்றும் மனிதர்களுக்கு மத்தியில் அவ்விடம் அஸ்வதீர்த்தம் என்ற பெயரில் புகழ்பெற்றிருக்கிறது.(17) அப்போது தவசிகளில் சிறந்தவரான ரிசீகர் மனத்தில் நிறைவடைந்து, காதியிடம் மணக்கொடையாக அந்தச் சிறந்த ஆயிரம் குதிரைகளையும் கொடுத்தார்.(18) மன்னன் காதி, ஆச்சரியத்தால் நிறைந்து, சபிக்கப்படுவோமென அஞ்சி தன் மகளை நகைகளால் அலங்கரித்து அந்தப் பிருகு மகனுக்கு {ரிசீகருக்குக்} கொடுத்தான்.(19) அந்த முதன்மையான மறுபிறப்பாள முனிவர், திருமணத்தில் பரிந்துரைக்கப்பட்ட சடங்குகளின் படி அவளது கரத்தை ஏற்றார். அந்த இளவரசியும் தன்னை அந்தப் பிராமணரின் மனைவியாகக் கண்டு பெரும் நிறைவையடைந்தாள்.(20)

ஓ! பாரதா, அவளது ஒழுக்கத்தில் பெரும் நிறைவை அடைந்த அந்த மறுபிறப்பாள முனிவர், அவளுக்கு ஒரு வரத்தை அருளும் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.(21) ஓ! சிறப்புமிக்க மன்னா, அந்த இளவரசி {சத்தியவதி} இக்காரியத்தைத் தன் தாய்க்குச் சொன்னாள். அந்தத் தாய், தன் முன்பு கீழ் நோக்கிய கண்களுடன் {தலை குணிந்து} நின்றிருந்த தன் மகளிடம்,(22) “ஓ! என் மகளே, உன் கணவனிடம் எனக்கும் ஓர் உதிவியைப் பெறுவதே உனக்குத் தகும். கடுந்தவங்களுடன் கூடிய அந்தத் தவசி எனக்கு ஒரு மகன் பிறப்பதற்குரிய வரத்தை அருள வல்லவர்” என்றாள்.(23)

ஓ! மன்னா, அப்போது அந்த இளவரசி {சத்தியவதி} தன் கணவரான ரிசீகரிடம் உடனே திரும்பி தன் தாயின் விருப்பத்தைச் சொன்னாள்.(24) ரிசீகர், “ஓ! அருளப்பட்டவளே, என் உதவியால் அனைத்து நற்குணமும் கொண்ட ஒரு மகனை அவள் விரைவில் பெறுவாள். உன் வேண்டுகோள் நிறைவேறும்.(25) வலிமைமிக்கவனும், மகிமைமிக்கவனும், அனைத்து நற்குணங்களையும் கொண்டவனும், என் குலத்தைத் தழைக்கச் செய்பவனுமான ஒரு மகன் உனக்குப் பிறப்பான். இதை நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன்.(26) நீங்கள் இருவரும் உங்கள் பருவ காலத்தில் நீராடிய {ருது ஸ்நானம் முடிந்த} பிறகு, ஓ! சிறந்த பெண்ணே, அவள் அரச மரத்தையும், நீ அத்தி மரத்தையும் தழுவினால் உங்கள் விரும்பத்திற்குரிய பொருளை நீங்கள் அடைவீர்கள்.(27) ஓ! இனிய புன்னகை கொண்ட பெண்ணே, மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட இந்த வேள்விக் காணிக்கைகள் (சாரு) இரண்டை நீங்கள் இருவரும் உண்டால் (நீங்கள் விரும்பியபடியே) மகன்களை அடைவீர்கள்” என்றார்.(28)

இதனால் இதயத்தில் மகிழ்ச்சியடைந்த சத்தியவதி, ரிசீகரால் சொல்லப்பட்ட அனைத்தையும், சாரு {ஹவிஸ்}[2] உருண்டைகள் இரண்டைக் குறித்தும் தன் தாய்க்குச் சொன்னாள். அந்தத் தாய் தன் மகளான சத்தியவதியிடம், “ஓ! மகளே, உன் கணவனை விட நான் உன்னால் பெரிதும் மதிக்கப்படத் தகுந்தவள் என்பதைக் கருதி என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவாயாக.(30) மந்திரங்களால் புனிதமாக்கப்பட்டு உன் கணவனால் உனக்குக் கொடுக்கப்பட்ட சாருவை {ஹவிஸை} எனக்குக் கொடுப்பாயாக, மேலும் எனக்குப் பரிந்துரைக்கப்பட்டதை நீ எடுத்துக் கொள்வாயாக.(31) ஓ! பழியற்ற குணத்துடன் கூடிய இனிய புன்னகை கொண்டவளே, என் வார்த்தைக்கு உன்னிடம் மதிப்பிருந்தால், நமக்காக நிர்ணயிக்கப்பட்ட மரங்களையும் நாம் மாற்றிக் கொள்வோம்.(32) தனக்குச் சிறந்தவனும், களங்கமற்றவனுமான மகன் வேண்டும் என்றே ஒவ்வொருவரும் விரும்புவார்கள். மகிமை பொருந்திய ரிசீகரும் இக்காரியத்தில் இவ்வாறே செய்திருக்க வேண்டும். அது முடிவில் தெரியப் போகிறது.(33) ஓ! அழகிய பெண்ணே, இக்காரணத்தால் என் இதயம் உன் சாருவையும், உன் மரத்தையும் கொள்ள விரும்புகிறது. நீயும் உனக்குச் சிறந்த தம்பியை அடைவாய் என்பதைக் கருத்தில் கொள்வாயாக” என்றாள்.(34)இவ்வாறு, ஓ! யுதிஷ்டிரா, அந்தத் தாய், மகளான சத்யவதி ஆகிய இருவரும் கருவுற்றனர்.(35) பிருகுவின் சிறந்த வழித்தோன்றலான அந்தப் பெரும் முனிவர் {ரிசீகர்}, தமது மனைவி கருவுற்றதை அறிந்து, இதயத்தில் நிறைவடைந்து, அவளிடம் {சத்யவதியிடம்},(36) “ஓ! சிறந்த பெண்ணே, சாருவை மாற்றிக் கொண்டதில் நீ நல்லது செய்யவில்லை என்பது விரைவில் வெளிப்படையாகும். நீ மரங்களை மாற்றிக் கொண்டாய் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.(37) உன்னுடைய சாருவில் மொத்தமாகச் சேகரிக்கப்பட்ட பிரம்ம சக்தியையும், உன் தாய்க்குரிய சாருவில் க்ஷத்திரிய சக்தியையும் வைத்திருந்தேன்.(38) நீ மூவுலகங்களிலும் புகழத்தக்க நற்குணங்களைக் கொண்ட ஒரு பிராமணனை ஈன்றெடுக்கும்படியும், அவள் (உன் தாய்) ஒரு சிறந்த க்ஷத்திரியனை ஈன்றெடுக்கும்படியும் விதித்திருந்தேன்.(39) ஆனால், ஓ! சிறந்த பெண்ணே, நீ (சாருவை) மாற்றிவிட்டதால் உன் தாய் சிறந்த பிராமணனையும், செய்கையில் கொடூரம் நிறைந்த க்ஷத்திரியனை நீயும் ஈன்றெடுப்பீர்கள். ஓ! பெண்ணே, உன் தாய் மீது கொண்ட பாசத்தால் நீ செய்தது நல்லதல்ல” எனறார்.(41)

ஓ! மன்னா, சிறந்த பெண்மணியான அந்தச் சத்தியவதி இதைக் கேட்டுக் கவலையடைந்து, இரண்டாக ஒடிந்துவிழும் அழகிய கொடியைப் போலத் தரையில் விழுந்தாள்.(42) புலனுணர்வு மீண்டு தன் தலைவனுக்குத் தலைவணங்கிய அந்தக் காதியின் மகள், பிருகு குலத்தில் முதன்மையானவரான தன் கணவரிடம்,(43) “ஓ! மறுபிறப்பாள முனிவரே, பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவரே, உம்மிடம் மன்றாடும் உமது மனைவிடம் கருணை கொண்டு, எனக்கு க்ஷத்திரிய மகன் பிறக்காமல் இருக்க வகைச் செய்வீராக.(44) ஓ! பிராமணரே, உமக்கு விருப்பமிருந்தால் என் மகன் அவ்வாறில்லாமல், என் பேரன் தன் கொடூரச் செயல்களுக்குப் புகழ்பெற்றவனாக இருக்கட்டும். நீர் எனக்கு இந்த உதவியைச் செய்வீராக” என்றாள்.(45)

ஓ! மன்னா, கடுந்தவங்களைக் கொண்ட அந்த மனிதர், தம் மனைவியிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்னார். அதன் பிறகு அவள் ஜமதக்னி என்ற பெயரில் அருள்நிறைந்த ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.(46) காதியின் கொண்டாடப்பட்ட மனைவியும், அந்த முனிவரின் {ரிசீகரின்} அருளால் பிரம்ம ஞானத்தை அறிந்த மறுபிறப்பாள முனி விஷ்வாமித்ரரை ஈனறெடுத்தாள்.(47) பெரும் அர்ப்பணிப்பணிப்பைக் கொண்டிருந்த விஷ்வாமித்ரர் ஒரு க்ஷத்திரியனாக இருந்தாலும், பிராமண நிலையை அடைந்து, ஒரு பிராமணக் குலத்தையே உண்டாக்கியவரானார்.(48) அவரது மகன்கள், கடுந்தவங்களில் அர்ப்பணிப்புமிக்கவர்களும், வேதங்களில் கல்விமான்களும், பல கோத்ரங்களை உண்டாக்கியவர்களுமான பல பிராமணக் குலங்களின் உயர் ஆன்ம மூதாதையர்களாக இருந்தனர்.(49)

புகழத்தக்க மதுச்சந்தர், வலிமைமிக்கத் தேவராதர், அக்ஷீணர், சகுந்தர், பப்ரு, காலபதன்,(50) கொண்டாடப்பட்ட யாஜ்ஞவல்க்யர், உயர்ந்த நோன்புகளைக் கொண்ட ஸ்தூணர், உலூகர், முத்கலர் {யமதூதர்}, தவசி ஸைந்தவயானர்,(51) சிறப்புமிக்கப் பல்குஜங்கர் {பர்ணஜங்கர்}, பெரும் முனிவர் காலவர், ருசி, கொண்டாடப்பட்ட வஜ்ரர், ஸாலங்காயனர்,(52) லீலாத்யர், நாரதர், கூர்ச்சாமுகர் என்ற பெயரில் அறியப்பட்டவர், வாஹுலி {வாதுலி}, முஸலர், வக்ஷோக்ரீவர்,(53) ஆங்க்ரிகர், நைகத்ருக், சிலாயூபர், சிதர் {ஸிதர்}, சுசி, சக்ரகர், மாருதந்தவ்யர், வாதக்னர், அஸ்வலாயனர்,(54) ஸ்யாமாயனர், கார்க்யர், ஜாபாலி, ஸுஸ்ருதர், காரீஷி, ஸம்ச்ருத்யர், பர பௌரவர், தந்து,(55) பெருந்தவசி கபிலர், தாடகாயனர், உபகஹனர், ஆஸுராயணர், மார்கமர் {மார்த்தர்}, ஹிரண்யாக்ஷர், ஜங்காரி, பாப்ரவாயணி, ஸூதி {பூதி}, விபூதி, ஸூதர், ஸூரக்ருத்,(56) ஆராணி {அராலி}, நாசிகர், சாம்பேயர், உஜ்ஜயனர், நவதந்து, பகநகர், ஸேயனர், யதி,(57) அம்போருஹர் {அம்போருதர்}, அமத்யஸின் {சாருமத்ஸ்யர்}, சீரிஷின், கார்த்தபி, ஊர்ஜயோனி, உதாபேக்ஷின், பெரும் முனிவர் நாரதி(58) ஆகிய முனிவர்கள் அனைவரும் விஷ்வாமித்ரரின் மகன்களாகவும், பிரம்மஞானத்தை அறிந்தவர்களாகவும் இருந்தனர்.

ஓ! மன்னன் யுதிஷ்டிரா, ஓ! பாரதக் குல இளவரசர்களில் முதன்மையானவனே, உயர்ந்த தவமும், அர்ப்பணிப்பும் மிக்க விஷ்வாமித்ரர் (பரம்பரை வழியில்) ஒரு க்ஷத்திரியராக இருந்தாலும்,(59) ரிசீகரால் (சாருவில்) உயர்ந்த பிரம்ம சக்தி இடப்பட்டதால் ஒரு பிராமணரானார். சூரியன், சந்திரன், அக்னி தேவன் ஆகியோரின் சக்திகளைக் கொண்ட விஷ்வாமித்ரர் பிறந்த கதையை உனக்கு விளக்கமாகச் சொல்லிவிட்டேன்.(61) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உனக்கு வேறு எந்தக் காரியத்தில் ஐயம் இருந்தாலும், எனக்கு அறியச் செய்வாயாக, நான் அவற்றைப் போக்குவேன்” என்றார் {பீஷ்மர்}.(62)

இந்திரனும் கிளியும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 05-கருணை மற்றும் பக்தியின் சிறப்புகளை விளக்குவதற்காக இந்திரனுக்கும், ஒரு கிளிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! அற உண்மைகளை அறிந்தவரே, கருணையின் தகுதிகளையும் {சிறப்புகளையும்}, பக்திமான்களின் பண்புகளையும் {மேன்மைகளையும்} நான் கேட்க விரும்புகிறேன். ஓ! ஐயா, எனக்கு அவற்றை விளக்குவீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, வாசவன் {இந்திரன்} மற்றும் உயர்ந்த மனம் படைத்த சுகனின் {கிளியின்} கதை அடங்கிய இந்தப் பண்டைய புராணம் மேற்கோளாகக் குறிப்பிடப்படுகிறது.(2) காசி மன்னனின் ஆட்சிப்பகுதிகளில், ஒரு வேடன் நஞ்சு தோய்த்த கணைகளை எடுத்துக் கொண்டு, தன் கிராமத்திலிருந்து மான்களைத் தேடி வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(3) ஒரு பெருங்காட்டில் தேடுதல் வேட்டையில் இருந்தபோது, அருகில் இருக்கும் மான்களைக் கண்ட அவன், இறைச்சியை அடையும் விருப்பத்தில் அவற்றில் ஒன்றின் மீது தன் கணையை ஏவினான்.(4) மானின் அழிவுக்காக ஏவப்பட்ட, தடுக்கப்பட முடியாத கரங்களைக் கொண்ட அந்த வேடனின் கணையானது இலக்கு தவறி அந்தக் காட்டில் ஒரு பெரும் மரத்தைத் துளைத்தது.(5)

கடும் நஞ்சில் தோய்க்கப்பட்ட அந்தக் கணையால் பலமாகத் துளைக்கப்பட்ட அந்த மரம், இலைகளையும், கனிகளையும் உதிர்த்து உலர்ந்து போனது.(6) அந்த மரம் உலர்ந்து போனாலும், அதன் பொந்தில் தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்து வந்த ஒரு கிளி, அந்தக் கானகத் தலைவன் {மரத்தின்} மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் கூட்டை விட்டு அகலாமல் இருந்தது.(7) நன்றியறிந்ததும், அறம்சார்ந்ததுமான அந்தக் கிளி, தானும் அம்மரத்துடன் சேர்ந்து அசைவில்லாமலும் {வெளியே செல்லாமலும்}, உணவில்லாமலும், அமைதியாகவும், துன்பத்துடனும் உலர்ந்து போனது.(8)

பாகனைக் வென்றவன் {இந்திரன்}, உயர் ஆன்மா கொண்டதும், பெரும் இதயம் படைத்ததுமான அந்தப் பறவை இவ்வாறு இன்பதுன்பங்களின் ஆதிக்கத்தில் இயல்புக்கு மீறிய உறுதியுடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.(9) சக்ரனின் {இந்திரனின்} மனத்தில் இந்த எண்ணம் எழுந்தது, “இழிந்த விலங்கு பிறவிக்குச் சாத்தியமில்லாத மானுடத்தன்மை வாய்ந்த இந்தத் தாராள உணர்வு இப்பறவைக்கு எவ்வாறு வாய்த்தது?.(10) உயிரினங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று அன்பையும், தாராள உணர்வையும் வெளிப்படுத்துவதைக் காண முடிவதால் தற்செயலான இக்காரியத்தில் ஆச்சரியமில்லைதான்” {என்று இந்திரன் நினைத்தான்}.(11)

சக்ரன் {இந்திரன்}, ஒரு பிராமணரின் வடிவத்தை ஏற்றுப் பூமிக்கு வந்து அந்தப் பறவையிடம்,(12) “ஓ! சுகா, ஓ! பறவைகளில் சிறந்தவனே, தக்ஷனின் பேத்தி (சுகி), (உன்னைத் தன் வாரிசாகப் பெற்றதால்) அருளடைந்தவளானாள். இந்த உலர்ந்த மரத்தை விட்டு நீ என்ன காரணத்தினால் விலகவில்லை?” என்று கேட்டான்.(13)

இவ்வாறு கேட்கப்பட்ட சுகன், அவனுக்குத் தலைவணங்கி, “ஓ! தேவர்களின் தலைவா, என் கடுந்தவங்களின் தகுதியால் நான் உன்னை அடையாளம் கண்டேன். உனக்கு நல்வரவு” என்று மறுமொழி கூறினான்.(14)

ஆயிரங்கண் தேவன் {இந்திரன்}, “நன்று, நன்று” என்று சொல்லி ஆச்சரியமடைந்து தன் மனத்தினுள், “இவன் பெற்றிருக்கும் அறிவு எவ்வளவு ஆச்சரியகரமானது” என்று புகழ்ந்தான்.(15) அந்தக் கிளியானவன் உயர்ந்த நன்னடத்தையும், செயற்தகுதியும் கொண்டவன் என்பதை அறிந்தும், ’அம்மரத்தை விட்டு அவன் அகலாமல் இருக்கும் பற்றுக்கான காரணமென்ன?’ என்று விசாரித்து,(16) “இந்த மரம் உலர்ந்து விட்டது, இலைகளும், கனிகளுமற்றதாக இருக்கிறது, மேலும் பறவைகளின் புகலிடமாகும் தகுதி இதற்கில்லை. இன்னும் நீ ஏன் இதில் தொற்றிக் கொண்டிருக்கிறாய்? இந்தக் கானகம் பெரியதாகும்,(17) மேலும் இதய நிறைவுடன் நீ விரும்பித் தேர்ந்தெடுக்கும் வகையில் இலைகள் அடர்ந்த பொந்துகளைக் கொண்ட எண்ணற்ற அழகிய மரங்கள் இக்காட்டில் இருக்கின்றன.(18) ஓ! பொறுமைசாலியே, உன் ஞானத்தின் மூலம் பகுத்தறிந்து, இறந்ததும், பயனற்றதும், இலைகள் அனைத்தும் உதிர்ந்ததும், இனியும் எந்நன்மையும் கொடுக்க இயலாததுமான இந்தப் பழைய மரத்தைக் கைவிடுவாயாக” என்றான் {இந்திரன்}”.(19)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறம் சார்ந்த சுகன் {கிளி}, சக்ரனின் {இந்திரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, ஆழமான பெருமூச்சுவிட்டபடியே, கவலையுடன்,(20) “ஓ! சச்சியின் கணவா {இந்திரா}, தேவர்களின் தலைவா, தேவர்களின் விதிகளுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும். நீ கேட்ட கேள்வி தொடர்புடைய பொருளுக்கான காரணத்தைக் கேட்பாயாக.(21) இந்த மரத்திற்குள்தான் நான் பிறந்தேன், என் குணத்தின் நல்லியல்புகள் அனைத்தையும் நான் இங்கேயே அடைந்தேன். குஞ்சாக இருந்த போது, என் பகைவர்களின் தாக்குதலில் இருந்து இந்த மரத்தில்தான் நான் பாதுகாக்கப்பட்டேன்.(22) ஓ! பாவமற்றவனே, அன்புடையவனான நீ, என் வாழ்வொழுக்கக் கோட்பாட்டில் இருந்து என்னை ஏன் வழுவச் செய்கிறாய்? நான் கருணை நிறைந்தவனாகவும், அறநோக்கத்தில் அர்ப்பணிப்புள்ளவனாகவும் {பக்தியுடனும்}, ஒழுக்கத்தில் உறுதியானவனாகவும் இருக்கிறேன்.(23) நல்லோருக்கு மத்தியில் அன்பு மனப்பான்மையே பெரும் அறச்சோதனை, இதே கருணையும், {மனிதாபிமானம் சார்ந்த} இரக்கவுணர்வும்தான் அறவோருக்கான வற்றாத இன்பத்தின் ஊற்றுக்கண்ணாகும்.(24) அறத்தில் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களைத் தேவர்கள் அனைவரும் உன்னிடமே கேட்கின்றனர், ஓ! தலைவா, இந்தக் காரணத்தினாலேயே அவர்கள் அனைவருக்கும் மேலாக அரசுபுரியும் நிலையில் நீ நிறுத்தப்பட்டிருக்கிறாய்.(25) ஓ! ஆயிரங்கண் கொண்டவனே, இம்மரத்தைக் கைவிடுமாறு எனக்கு நீ அறிவுரை கூறுவது உனக்குத் தகாது. நல்லது செய்ய இயன்ற போது, இஃது {இம்மரம்} என் வாழ்வை ஆதரித்தது. இப்போது என்னால் எவ்வாறு இதைக் கைவிட முடியும்?” என்று அவனிடம் {இந்திரனிடம்} மறுமொழி கூறினான்.(26)

பாகனைக் கொன்றவனான அந்த அறம்சார்ந்தவன் {இந்திரன்}, நற்பொருள் கொண்ட அந்தக் கிளியின் வார்த்தைகளில் நிறைவடைந்து, அவனிடம் {அந்தக் கிளியிடம்}, “இரக்கமும், கருணையும் கொண்ட உன் மனோநிலையில் நான் நிறைவடைந்திருக்கிறேன்.(27) என்னிடம் இருந்து ஒரு வரத்தைக் கேட்பாயாக” என்றான்.

கருணைநிறைந்த அந்தக் கிளியானவன், “இந்த மரம் மீண்டும் உயிர் பெறட்டும்” என்ற இந்த வரத்தையே அவனிடம் வேண்டினான்.(28) கிளியானவன், அம்மரத்திடம் கொண்ட பெரும்பற்றையும், அவனது உயர்ந்த பண்பையும் அறிந்து பெரும் நிறைவடைந்த இந்திரன், அம்மரத்தின் மீது விரைவில் அமுதத்தைத் தெளிக்கச் செய்தான்.(29) அப்போது அம்மரம் அந்தக் கிளியின் தவங்களின் மூலம் மீண்டும் நிறைந்து, மிக நேர்த்தியான மகத்தான நிலையை அடைந்தது,(30) ஓ! பெரும் மன்னா, அந்தக் கிளியானவனும் தன் வாழ்வின் நெருக்கத்தில் {முடிவில்}, அந்தக் கருணைச்செயலில் விளைந்த அறத்தின் மூலம் சக்ரனின் தோழமையை அடைந்தான்.(31) ஓ! மனிதர்களின் தலைவா, இவ்வாறு கிளியிடம் தோழமை கொண்ட மரத்தைப் போலவே மக்களும் பக்திமான்களின் சேர்க்கை மற்றும் தோழமையின் மூலம் தங்கள் விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைவார்கள்” என்றார் {பீஷ்மர்}.(32)

முயற்சியின் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 06-முயற்சி மற்றும் விதி ஆகிய இரண்டுக்குமிடையில் எது சக்திமிக்கது என்பதை விளக்க பிரம்மனுக்கும் வசிஷ்டருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! சாத்திரங்கள் அனைத்தையும் கற்ற ஐயா, முயற்சி மற்றும் விதி ஆகியவற்றில் எது சக்திமிக்கது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, வசிஷ்டருக்கும், பிரம்மனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை கருத்தில் கொள்ளத்தக்க விளக்கமாக இருக்கிறது.(3) புகழத்தக்கவரான வசிஷ்டர் பழங்காலத்தில் பிரம்மனிடம், இப்பிறவியில் ஓர் உயிரினத்தால் அடையப்பட்ட கர்மம், அல்லது முற்பிறவிகளில் அடையப்பட்டவை (விதி என்றழைக்கப்படுவது) ஆகிய இரண்டில் அதன் வாழ்வை வடிவமைப்பதில் எது அதிகச் சக்தி கொண்டது என்று கேட்டார்.(3) அப்போது, ஓ! மன்னா, ஆதி தாமரையில் இருந்து உதித்த பெருந்தேவனான பிரம்மன், அறிவுக்குப் பொருத்தமான பொருள் நிறைந்த சீரிய சொற்களால் அவருக்குப் பதிலளித்தான்.(4)

பிரம்மன் {வசிஷ்டரிடம்}, “வித்தில்லாமல் எதுவும் இருப்புக்கு வருவதில்லை. வித்தில்லாமல் கனிகள் வளர்வதில்லை. வித்தில் இருந்து வேறு வித்துகள் முளைக்கின்றன. எனவே, கனிகள் வித்திலிருந்து உண்டாகின்றன என அறியப்படுகிறது[1].(5) உழவன் வயலில் விதைக்கும் நல்ல அல்லது தீய வித்துகளைப் போலவே அவன் நல்ல அல்லது தீய கனிகளை {பலன்களை} அறுவடை செய்கிறான்.(6) உழுதாலும் வித்துகள் விதைக்கப்படாத மண் கனியற்றுப் போவதைப் போலவே, தனிப்பட்ட முயற்சி இல்லாமல் விதியால் எந்தப் பயனையும் அளிக்க முடியாது.(7) ஒருவன் செய்யும் முயற்சி மண் போன்றது, விதியோ (அல்லது முற்பிறவி செயல்களின் தொகையோ) வித்தாக ஒப்பிடப்படுகிறது. மண்ணும் வித்தும் கலப்பதில் இருந்தே அறுவடை விளைகிறது.(8) செயலைச் செய்பவன் தான் செய்த நல்ல மற்றும் தீய செயல்களின் கனிகளை அறுவடை செய்வதும்; நற்செயல்களில் இருந்து மகிழ்ச்சி விளைவதும் மற்றும் தீச்செயல்களில் இருந்து துன்பம் விளைவதும்; செய்யப்படும் செயல்கள் எப்போதும் கனிவதும் {பலன் தருவதும்}; செய்யப்படாத செயல்களில் கனிகள் உண்டாகாததும் {பயனில்லாமல் போவதும்} இவ்வுலகில் தினந்தோறும் காணப்படுகிறது.(9,10)நற்செயல்களைச் செய்யும் மனிதன் நற்பேற்றுடன் கூடிய தகுதிகளை {புண்ணியங்களை} ஈட்டுகிறான், அதே வேளையில், ஒரு சோம்பேறி தன் நிலையில் இருந்து வீழ்ந்து, புண்ணில் உப்புநீர் செலுத்தப்படுவது போன்ற தீமையை அறுவடை செய்கிறான்.(11) அர்ப்பணிப்புமிக்கச் செயல்பாட்டின் மூலம் ஒருவன் அழகு, நற்பேறு மற்றும் பல்வேறு வகை வளங்களை அடைகிறான். முயற்சியின் மூலம் அனைத்தையும் அடையலாம்; ஆனால் முயற்சியற்ற ஒரு மனிதனால் விதியால் மட்டுமே ஒன்றையும் அடைய முடியாது.(12) இவ்வாறே ஒருவன் சொர்க்கத்தையும், இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைந்து, தனிப்பட்ட வகையில் செய்யும் நல்ல முயற்சியின் மூலம் தன் இதய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறான்.(13) ஆகாயத்தில் உள்ள ஒளிக்கோள்கள் அனைத்தும் , தேவர்கள், நாகர்கள், ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும், சூரியன், சந்திரன், காற்று ஆகிய அனைத்தும், தங்கள் சொந்த செயல்பாடு என்ற உழைப்பின் மூலமே மனித நிலையில் இருந்து படிப்படியான பரிணாம வளர்ச்சியில் அந்த உயர்ந்த நிலைகளை அடைந்தனர்.(14) வளங்கள், நண்பர்கள், பரம்பரையாக வழிவழியாகத் தொடரும் செழிப்பு, வாழ்வின் சிறப்புகள் ஆகியற்றை முயற்சியற்றவர்கள் அடைவது மிகக் கடினமாகும்.(15)

பிராமணன் புனித வாழ்வின் மூலமும், க்ஷத்திரியன் ஆற்றலின் மூலமும், வைசியன் உடல் உழைப்பின் மூலமும், சூத்திரன் தொண்டின் மூலமும் செழிப்பை அடைகின்றனர்.(16) வளங்களும், இன்பத்திற்குரிய பிற பொருட்களும், கஞ்சனையோ, திறனற்றவனையோ, சோம்பேறியையோ ஒருபோதும் அடையாது. மேலும், சுறுசுறுப்போ, ஆண்மையோ, அறம்சார்ந்த தவமோ இல்லாத மனிதனால் இவற்றை ஒருபோதும் அடைய முடியாது.(17) தைத்தியர்கள் மற்றும் தேவர்கள் அனைவருடன் கூடிய மூவுலகங்களையும் படைத்தவனும், துதிக்கப்பட வேண்டியவனுமான விஷ்ணுவே கூட, ஆழக்கடலில் தவத்துறவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்.(18) ஒருவனுடைய கர்மம் எக்கனியையும் தரவில்லையெனில், செயல்பாடுகள் அனைத்தும் கனியற்றுப் போகும்; மனிதர்களும் விதியை நம்பி சோம்பேறிகளாக இருப்பார்கள்.(19) மனித செயல்முறைகளைப் பின்பற்றாமல் விதியை மட்டுமே நம்பும் ஒருவன், திறனற்ற கணவனைக் கொண்ட ஒரு பெண்ணைப் போல வீணாவான்.(20)

இம்மையில் முயற்சியில்லாமல் மறுமையின் இன்ப துன்பங்களை ஒருவன் உணர்வதைப் போலச் சாதகமில்லாத விதியுடன் இவ்வுலகில் நன்மை தீமையை உணர்வது பெரிதல்ல[2].(21) சரியாக முயற்சிக்கப்படும் மனித சக்தியை விதி பின்தொடருமே அன்றி முயற்சியில்லாத இடத்தில் விதியால் மட்டுமே எந்த நன்மையையும் செய்துவிட முடியாது.(22) தேவலோகங்களில் தேவர்களின் நிலைகளே நிலையில்லாதவையாகக் காணப்படும்போது, சரியான கர்மமில்லாமல் தேவர்களால் தங்கள் நிலைகளையோ, பிறரின் நிலைகளையோ எவ்வாறு தக்க வைத்துக் கொள்ள முடியும்?[3](23) இவ்வுலகில் பிறரின் நற்செயல்களைத் தேவர்கள் எப்போதும் அங்கீகரிப்பதில்லை. (அந்த நற்செயல்களால்) தாங்கள் வீழ்வோம் என்று உணர்வதால், அவர்கள் பிறரின் செயல்களைத் தடை செய்கின்றனர்.(24) தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இடையில் நிலையான பகை இருக்கிறது, அவர்கள் அனைவரும் தங்கள் கர்மங்களைச் செய்ய வேண்டுமென்றாலும், அனைத்துக் கர்மங்களையும் விதியே தொடங்கி வைப்பதால், விதி என்ற ஏதும் இல்லை என்று ஒருபோதும் கூற முடியாது[4].(25)தொடக்கத்தில் இருந்தே மனித செயல்பாட்டின் மூலம் விதி உண்டாகிறதென்றால், கர்மம் எவ்வாறு உண்டாகிறது? இந்த வழிமுறைகளின் மூலம் தேவலோகங்களிலேயே பல அறங்கள் {நற்செயல்கள்} வளர்கின்றன என்பதே (இதற்கான பதிலாகும்).(26) ஒருவன் தானே தன் நண்பனாகவும், பகைவனாகவும், தன் நல்ல மற்றும் தீச்செயல்களின் சாட்சியாகவும் இருக்கிறான்.(27) நன்மையும் தீமையும் கர்மத்தின் மூலமே தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. நல்ல மற்றும் தீய செயல்கள் போதுமான விளைவுகளைத் தருவதில்லை.(28) அறமே தேவர்களின் புகலிடமாக இருக்கிறது, அறத்தின் மூலமே அனைத்தும் அடையப்படுகின்றன. நல்லொழுக்கம் மற்றும் அறத்தை அடைந்த மனிதனை விதி தடுப்பதில்லை[5].(29)பழங்காலத்தில் யயாதி, சொர்க்கத்தின் உயர்ந்த நிலையில் இருந்து பூமியில் விழுந்தாலும், அறம்சார்ந்த தன் பேரப்பிள்ளைகளின் {தௌஹித்ரர்களால் / மகள் வயிற்றுப் பேரப்பிள்ளைகளின்} நற்செயல்களால் மீண்டும் தேவலோகத்தை அடைந்தான்.(30) ஐலனின் வழித்தோன்றலாகக் கொண்டாடப்படும் அரச முனியான புரூரவஸ், பிராமணர்களின் பரிந்துரையால் சொர்க்கத்தை அடைந்தான்.(31) அஸ்வத்தாமன் மற்றும் ராமர் {பரசுராமர்} ஆகியோர் இருவரும் போர்வீரர்களாகவும், முனிவர்களின் மகன்களாவும் இருந்தாலும், இவ்வுலகில் அவர்கள் செய்த செயல்களின் காரணமாகச் சொர்க்கத்தை அடையத் தவறினர்.(32) கோசல மன்னன் சௌதாசன், அஸ்வமேதம் மற்றும் பிற வேள்விகளைச் செய்த மதிப்பை அடைந்தவனாக இருந்தாலும், ஒரு பெரும் முனிவரின் சாபத்தின் மூலம் மனிதர்களை உண்ணும் ராட்சச நிலையை அடைந்தான்.(33) வசுவானவன், இரண்டாவது வாசவனை {இந்திரனைப்} போல நூறு வேள்விகளைச் செய்திருந்தாலும், ஒரே ஒரு பொய் சொன்னதால் பாதாளத்திற்கு அனுப்பப்பட்டான்.(34) விரோசனன் மகனான பலி, அவனுடைய உறுதிமொழியின் மூலம் விஷ்ணுவின் ஆற்றலால் அறமெனும் கட்டுகளால் கட்டப்பட்டு, பூமிக்கு அடியில் அனுப்பப்பட்டான்.(35)

சக்ரனின் {இந்திரனின்} பாதச்சுவடுகளைப் பின்பற்றியவனான ஜனமேஜயன், ஒரு பிராமணப் பெண்ணைக் கொன்றதற்காகத் தேவர்களால் தடுக்கப்பட்டுக் கைவிடப்படவில்லையா?[6](36) அறியாமையினால் ஒரு பிராமணரைக் கொன்று, ஒரு குழந்தையையும் கொன்றதால் களங்கமடைந்திருந்த மறுபிறப்பாள முனிவர் வைசம்பாயனர் தேவர்களால் கைவிடப்படவில்லையா?[7](37) பழங்காலத்தில் அரச முனியான நிருகன் ஓணானாக மாற்றப்பட்டான். அவன் தனது பெரும் வேள்வியில் பசுக்களைக் கொடையளித்திருந்தாலும் அஃது அவனுக்குப் பயனளிக்கவில்லை[8].(38) அரசமுனியான துந்துமாரன், வேள்விகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே முதுமை அடைந்து, தன் தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் துறந்து கிரிவ்ரஜத்தில் உறங்கிக் கிடந்தான்.(39) பாண்டவர்களும், திருதராஷ்டிரனுடைய பலமிக்க மகன்களால் இழந்த தங்கள் நாட்டை விதியின் பரிந்துரைமூலமல்லாமல் தங்கள் சொந்த வீரத்தின் மூலமே மீண்டும் அடைந்தனர்.(40)கடும் நோன்புகளைக் கொண்டவர்களும், கடுந்தவப்பயிற்சிகளுக்கு அடிமையானவர்களுமான முனிவர்கள், சாபம் கொடுப்பது இயல்புக்கு மீறிய எந்தச் சக்தியின் உதவியினாலா? தனிப்பட்ட தங்கள் செயல்களால் அடைந்த பலத்தைப் பயன்படுத்துவதாலா?(41) இவ்வுலகில் பெருங்கடினத்துடன் அடையப்படும் நன்மைகள் அனைத்தையும், தீயோர் அடைந்தாலும் விரைவில் அவற்றைத் தொலைத்துவிடுவார்கள். ஆன்ம அறியாமை மற்றும் பேராசையில் மூழ்கியிருக்கும் மனிதனுக்கு விதி ஒருபோதும் உதவி செய்வதில்லை.(42) சிறு அளவிலான நெருப்பும், காற்று வீசப்பட்டால் வலிமையடைவதைப் போலவே விதியும் தனிப்பட்ட முயற்சியுடன் கூடும்போது, (திறனளவில்) பெரிதாக அதிகரிக்கிறது.(43) எண்ணெய் குறைவதால் விளக்கின் ஒளி மங்குவதைப் போலவே விதியின் ஆதிக்கமும் ஒருவனுடைய செயல்களால் தணிவடைகிறது.(44) பெருஞ்செல்வத்தையும், மகளிரையும், இவ்வுலகின் இன்பங்கள் அனைத்தையும் அடைந்தாலும், செயலில் விடாமுயற்சியில்லாதிருக்கும் மனிதனால் அவற்றை நீண்டு அனுபவிக்க முடியாது, ஆனால், விடாமுயற்சியுள்ள மனிதன், விதியால் காக்கப்பட்டு, பூமியில் புதைந்திருக்கும் வளங்களையும் கண்டடைபவனாக இருக்கிறான்.(45)

மானிட லோகத்தைவிடத் தேவலோகம் சிறந்ததாக இருப்பினும், (அறக்கொடைகள் மற்றும் வேள்விகளில்) பெரும் செலவு செய்யும் நல்ல மனிதன், அவனது நல்லொழுக்கத்திற்காகத் தேவர்களால் வேண்டப்படுகிறான், ஆனால் கஞ்சனின் வீடு செல்வத்தால் நிறைந்திருந்தாலும், இறந்தவனின் வீடாகவே தேவர்களால் காணப்படுகிறது[9].(46) முயற்சி செய்யாத மனிதன் இவ்வுலகில் ஒருபோதும் நிறைவடைவதுமில்லை, விதியும் தவறாகச் சென்ற மனிதனின் பாதையை மாற்றுவதுமில்லை. விதிக்கு உள்ளார்ந்த சக்தி ஏதும் கிடையாது. ஆசானைப் பின்தொடரும் சீடனைப் போலவே, விதியால் வழிநடத்தப்படும் ஒருவனுடைய செயல்பாடும், அவனது முயற்சியைப் பின்தொடர்ந்து வருகிறது. எங்கே ஒருவன் முயற்சி செய்கிறானோ அங்கே மட்டுமே விதி தன் கரத்தை {செயலைக்} காட்டுகிறது.(47) ஓ! முனிவர்களில் சிறந்தவனே {வசிஷ்டரே}, தனிப்பட்ட முயற்சியை, உண்மையான முக்கியத்துவத்துடன் எப்போதும் அறிந்திருக்கும் நான் அதன் தகுதிகள் அனைத்தையும் விளக்கிச் சொன்னேன்.(48) விதியின் ஆதிக்கத்தின் மூலமும், தனிப்பட்ட முறையில் முயற்சி செய்வதன் மூலமும் மனிதர்கள் சொர்க்கத்தை அடைகின்றனர். விதி மற்றும் முயற்சியின் ஒன்று சேர்ந்த துணை நன்மையைச் செய்கிறது” என்றான் {பிரம்மன்}[10].(49)

செயல்களும், கனிகளும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 07-நல்வினை மற்றும் தீவினைகளின் பயன்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவரே, பெரியோர்களில் முதன்மையானவரே, நற்செயல்களின் கனிகள் என்னென்ன என்பது குறித்து நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். என்னை விழிப்படைச் செய்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நீ கேட்டதற்கு நான் பதில் சொல்கிறேன். ஓ! யுதிஷ்டிரா, முனிவர்களின் இரகசிய ஞானமான இதைக் கேட்பாயாக.(2) வெகு காலம் விரும்பியவையும், இறந்த பிறகு மனிதர்களால் அடையப்படுபவையுமான கதிகளை உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக. எந்தெந்த உடல்களில் அல்லது இருப்பின் வடிவங்களில் உயிரினங்களால் செயல்கள் செய்யப்படுகின்றனவோ,(3) அவற்றின் கனிகள் {பலன்கள்} அதைச் செய்பவர்கள் அதே உடல்களைக் கொண்டிருக்கும்போதே அறுவடை செய்யப்படுகின்றன {அடையப்படுகின்றன}. உயிரினங்கள் எந்த நிலைகளில் நல்ல அல்லது தீய செயல்களைச் செய்கின்றனவோ, அடுத்தடுத்த பிறவிகளில் அதே நிலையில் இருக்கும்போது அவை அவற்றின் கனிகளை அறுவடை செய்கின்றன. ஐம்புலன்களின் உதவியால் செய்யப்படும் எந்தச் செயலும் தொலைந்து போவதில்லை {எந்த செயலுக்கும் பலனில்லாமல் போவதில்லை}.(4)

ஐம்புலன்களும், ஆறாவதாக அழிவில்லாத ஆன்மாவும் சாட்சிகளாக நீடிக்கின்றன. ஒருவன் தன் கண்களை (பிறரின் தொண்டில்) அர்ப்பணிக்க வேண்டும்;(5) அவன் தன் இதயத்தையும் (அதே காரியத்திற்கே) அர்ப்பணிக்க வேண்டும்; அவன் ஏற்புடைய {இனிமையான} சொற்களையே பேச வேண்டும்;(6) மேலும் அவன் (தன் விருந்தினரை) வழிபட்டுப் பின்பற்றவும் வேண்டும். இதுவே ஐங்கொடைகளுடன் கூடிய வேள்வி என்றழைக்கப்படுகிறது. முன்பின் தெரியாதவனும், நீண்ட பயணத்தால் களைப்படைந்தவனும், சோர்வடைந்தவனுமான ஒரு பயணிக்கு நல்ல உணவை அளிப்பவன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான்.(7) வேள்வித் தரைகளை மட்டுமே தங்கள் படுக்கையாகப் பயன்படுத்துபவர்கள், (அடுத்தடுத்த பிறவிகளில்) மாடமாளிகைகளையும், படுக்கைகளையும் அடைகிறார்கள். மரவுரிகளையும், கந்தலாடைகளையும் மட்டுமே உடுத்துபவர்களுக்கு நல்ல ஆடை மற்றும் ஆபரணங்கள் கிடைக்கின்றன.(8)

தவம் செய்து தன் ஆன்மாவை யோகத்தில் நிலைக்கச் செய்தவர்கள், (இம்மையில் தங்கள் துறவின் கனியாக) வாகனங்களையும், விலங்குகளையும் அடைகிறார்கள். வேள்வி நெருப்பின் அருகே படுக்கும் ஏகாதிபதி வீரத்தை அடைகிறான்.(9) சுவை மிக்கவை அனைத்தையும் அனுபவிக்காமல் துறப்பவன் செழிப்பை அடைகிறான், விலங்குணவைத் தவிர்ப்பவன், பிள்ளைகளையும், கால்நடைகளையும் {விலங்குகளையும்} அடைகிறான்.(10) தலைகீழாகத் தொங்கிக் கொண்டு, அல்லது நீரில் வாழ்ந்து, அல்லது தனிமையாக வாழ்ந்து பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவன் விரும்பப்படும் கதிகள் அனைத்தையும் அடைகிறான்.(11) ஒரு விருந்தினருக்கு உறைவிடமளித்து, கால் கழுவிக் கொள்ள நீர் கொடுத்து, உணவு, ஒளி மற்றும் படுக்கையும் அளிப்பவன், ஐங்கொடைகளுடன் கூடிய வேள்வி செய்ததன் தகுதிகளை {புண்ணியங்களை} அடைகிறான்.(12)

போர்க்களத்தில், போர்வீரனின் நிலையை {வீராஸனத்தை} அடைந்து, போர்வீரனின் படுக்கையில் {வீரசயனத்தில்}[1] தன்னைக் கிடத்திக் கொள்ளும் ஒருவன், விருப்பத்திற்குரிய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும் நித்திய உலகங்களை அடைகிறான்.(13) ஓ! மன்னா, ஈகையுடன் கொடையளிக்கும் மனிதன் வளங்களை அடைகிறான். பேசாநோன்பினால் {மௌனமிருப்பதனால்} அதிகாரம் செலுத்தும் தகைமையையும், தவப் பயிற்சியினால் வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும், பிரம்மச்சரியத்தினால் பெருகும் நீண்ட வாழ்நாளையும், பிறருக்குத் தீங்கிழையாமல் இருப்பதன் மூலம் அழகு, செழிப்பு மற்றும் நோயிலிருந்து விடுதலை {உடல்நலம்} ஆகியவற்றை ஒருவன் அடைகிறான்.(14) கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்டு வாழ்பவர்களுக்கு அரசுரிமை கிடைக்கிறது. மரங்களின் இலைகளை மட்டுமே உண்டு வாழ்பவர்கள், சொர்க்கவாசத்தை அடைகின்றனர்.(15) ஓ! மன்னா, உணவைத் தவிர்ப்பதன் மூலம் {உண்ணா நோன்பினால்} ஒரு மனிதன் இன்பத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது. மூலிகைகளை மட்டுமே தன் உணவாகச் சுருக்கிக் கொள்பவன், பசுக்களை அடைகிறான். புற்களை மட்டுமே உண்டு வாழ்பவன் தேவலோகங்களை அடைகிறான்.(16)ஒருவன் தன் மனைவியுடன் கலவியைத் தவிர்ப்பதன் மூலமும், பகலின் மூன்று வேளைகளில் தூய்மைச் சடங்குகளை {நீராடுதலைச்} செய்வதன் மூலமும், வாழ்வுக்காகக் காற்றைமட்டுமே உண்டு வாழ்வதன் மூலமும் ஒருவன் ஒரு வேள்வியின் தகுதியை அடைகிறான். வாய்மை பயில்வதன் மூலம் சொர்க்கமும், வேள்விகளின் மூலம் உன்னதப் பிறவிகளும் அடையப்படுகின்றன.(17) தூய ஒழுக்கத்தைக் கொண்டவனும், நீரை மட்டுமே உண்டு வாழ்பவனும், இடையறாமல் அக்னிஹோத்ரம் செய்பவனும், காயத்ரியை உரைப்பவனுமான பிராமணன் ஒரு நாட்டை அடைகிறான். உணவைத் தவிர்ப்பதன் மூலம் அல்லது அதை ஒழுங்குமுறை செய்வதன் மூலம் ஒருவன் சொர்க்க வாசத்தை அடைகிறான்.(18) ஓ! மன்னா, வேள்விகளில் ஈடுபடும்போது பரிந்துரைக்கப்படும் உணவுகள் அனைத்தையும் தவிர்ப்பதன் மூலமும், பனிரெண்டு வருடங்கள் புனிதப்பயணம் {யாத்திரை} செய்வதன் மூலமும் வீரர்களுக்காக ஒதுக்கப்படும் வசிப்பிடங்களைவிடச் சிறந்த இடத்தை ஒருவன் அடைகிறான்.(19) வேதங்கள் அனைத்தையும் படிப்பதன் மூலம் ஒருவன் உடனடியாகத் துன்பத்தில் இருந்து விடுபடுகிறான், எண்ணத்தால் அறம்பயில்வதன் மூலம் அவன் சொரக்கலோகத்தை அடைகிறான்[2].(20)ஆயிரம் பசுக்களுக்கு மத்தியிலும் தன் தாயைக் கண்டடையும் கன்றைப் போலவே, மனிதனின் முற்பிறவி செயல்களும் (அவன் {வெவ்வேறு பிறவிகளில்} வெவ்வேறு வகையில் மாற்றமடையும்போதும்) அவனைப் பின்தொடர்கின்றன.(22) மரத்தின் மலர்களும், கனிகளும், புலப்படும் ஆதிக்கங்கள் எதன் மூலமும் தூண்டப்படாமல், பருவ காலத்தைத் தவறவிடாததைப் போலவே முற்பிறவியில் செய்த கர்மம், சரியான காலத்தின் தன் கனிகளைக் கொண்டு வருகிறது.(23) வயதானதும் மனிதனின் மயிரில் நரைகூடுகிறது; அவனது பற்கள் தளர்கின்றன; அவனது கண்களும், காதுகளும் செயல்பாட்டில் மங்குகின்றன; ஆனால் இன்பங்களில் அவனுக்குரிய ஆசை மட்டுமே தணிவடையாத ஒரே பொருளாக இருக்கிறது.(24) தந்தையை நிறைவு செய்யும் செயல்களால் பிரஜாபதி நிறைவடைகிறான், தாயை நிறைவு செய்யும் செயல்களால் பூமாதேவி நிறைவடைகிறாள், ஆசானை நிறைவு செய்யும் செயல்களால் பிரம்மனே துதிக்கப்படுகிறான். இம்மூவரை மதிப்பவர்களால் அறமே மதிக்கப்படுகிறது. இம்மூன்றையும் வெறுப்போரின் செயல்கள் அவர்களுக்கு ஒருபோதும் பயனளிக்காது” என்றார் {பீஷ்மர்}”.(25,26)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பீஷ்மரின் இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த குருகுல இளவரசர்கள் ஆச்சரியத்தால் நிறைந்து, மனமத்தில் நிறைவடைந்தவர்களான இன்புற்றார்கள்”.(27) {மேலும் பீஷ்மர் தொடர்ந்தார்},[3] “வெற்றி அடையும் விருப்பத்தில் பயன்படுத்தப்பட்ட மந்திரங்கள், அல்லது உரிய கொடைகள் அளிக்கப்படாமல் செய்யப்படும் சோம வேள்வி, அல்லது உரிய ஸ்லோகங்களைச் சொல்லாமல் நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள் பயனளிக்காமல், தீய விளைவுகளுக்கு வழி வகுப்பதைப் போலவே, பாவமும், தீய விளைவுகளும் பொய்மையில் இருந்து உண்டாகின்றன.(28) ஓ! இளவரசே {ஜனமேஜயா}, நல்ல மற்றும் தீய செயல்களின் கனிகள் குறித்த இந்தக் கோட்பாட்டைப் பழங்கால முனிவர்கள் சொன்னபடியே நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். இன்னும் வேறென்ன நீ கேட்க விரும்புகிறாய்?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(29)

பிராமணர்களின் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 08-பிராமணர்களின் சிறப்புகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “வழிபடத்தகுந்தவர் எவர்? வணங்கத்தகுந்தவர் எவர்? ஓ! பாரதரே, தலைவணங்கத்தகுந்தவர் எவர்? நீர் விரும்புபவர் எவர்? ஓ! இளவரசே {பீஷ்மரே}, இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக.(1) நீர் துன்பத்தின் பீடிப்பில் மூழ்கும்போது உமது மனம் எதில் வசித்திருக்கும்? மனிதர்களின் உலகான இம்மையிலும், இதன்பின் வரும் மறுமையிலும் கிடைக்கும் நன்மை என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிரம்மத்தையே உயர்ந்த செல்வமாகக் கொண்டவர்களும், தளராத ஊக்கத்துடன் கூடிய தங்கள் வேத கல்வியின் மூலம் உண்டாகும் தவங்களைச் செய்பவர்களுமான மறுபிறப்பாளர்களையே {பிராமணர்களையே} நான் விரும்புகிறேன்.(3) எவரின் குலத்தில் சிறுவர்களும், கிழவர்களும், தளராது ஊக்கத்துடன் தங்கள் மூதாதையரின் பணிச்சுமையைச் சோர்வின்றிச் சுமக்கிறார்களோ அவர்களுக்காக என் இதயம் ஏங்குகிறது {அவர்களை என் இதயம் விரும்புகிறது}.(4) அறிவின் பல்வேறு கிளைகளில் நன்கு பயிற்சி பெற்றவர்களும், தற்கட்டுப்பாடு, மென்மையான பேச்சு ஆகியவற்றைக் கொண்டவர்களும், சாத்திரங்களை அறிந்தவர்களும், நன்னடத்தைக் கொண்டவர்களும், பிரம்ம அறிவு, அறவொழுக்கம் கொண்டவர்களுமான பிராமணர்கள்,(5) அன்னக்கூட்டங்களைப் போல மதிப்புமிக்கச் சபைகளில் உரையாற்றுகின்றனர்[1]. ஓ! யுதிஷ்டிரா, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் அவர்கள் சொல்லும் வார்த்தைகள் மங்கலமானைவையும், ஏற்புடையவையும் {இனிமையானவையும்}, சிறப்பானவையும், நன்றாக உச்சரிக்கப்படுபவையுமாக இருக்கின்றன. அவர்கள் ஏகாதிபதிகளின் சபைகளில் சொல்லும் உலகியல் சார்ந்த, ஆன்மிகம் சார்ந்த இரு மகிழ்ச்சிகளும் நிறைந்த வார்த்தைகள், அந்த மனிதர்களின் ஆட்சியாளர்களால் கவனமாகவும், மதிப்புடனும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன[2].(6,7)உண்மையில், ஞானத்தையும், விரும்பத்தக்க குணங்கள் அனைத்தையும் கொண்டவர்களும், பிறரால் மதிக்கப்படுபவர்களுமான அவர்கள் மன்னர்களின் சபைகளில் சொல்லும் இத்தகைய வார்த்தைகளைக் கேட்டு எனது இதயம் அவர்களுக்காக ஏங்குகிறது {அவர்களிடம் விருப்பம் கொள்கிறது}.(8) ஓ! ஏகாதிபதி, பிராமணர்களின் மனம் நிறைவதற்காக நன்கு சமைக்கப்பட்ட தூய உணவை நிறைவாக அர்ப்பணிப்புடன் கொடுப்பவர்களுக்கு என் இதயம் ஏங்குகிறது.(9) போர்க்களத்தில் போரிடுவது எளிது, ஆனால் செருக்கும், தற்பெருமையுமின்றிக் கொடையளிப்பது அவ்வாறானதல்ல.(10) ஓ! யுதிஷ்டிரா, இவ்வுலகில் துணிச்சல்மிக்க நூற்றுக்கணக்கான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கணக்கிடுகையில் கொடைகளில் வீரனாக இருப்பவனே மேன்மையானவனாகக் கருதப்படுகிறான்.(11) ஓ! இனியவனே, நல்ல குலத்தில் பிறந்து, நன்னடத்தைக் கொண்டவனாகத் தவங்களிலும், கல்வியிலும் அர்ப்பணிப்புள்ளவனாக இருப்பதைவிட நான் ஓர் ஈனப் பிராமணனாக இருந்தாலும் என்னைப் பெரியவனாகக் கருதிக் கொள்வேன்.(12) ஓ! பாண்டுவின் மகனே, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இவ்வுலகில் உன்னைவிட எனக்கு அன்புக்குரியவன் வேறெவனும் இல்லையென்றாலும், பிராமணர்கள் உன்னைவிட எனக்கு அன்புக்குரியவர்களாவர்[3].(13)எனக்குப் பிராமணர்கள் உன்னைவிட அன்புக்குரியவர்கள் என்ற உண்மையால், என் தந்தையான சந்தனுவால் அடையப்பட்ட இன்பலோகங்கள் அனைத்திற்கும் செல்வேன் என நான் நம்புகிறேன்.(14) என் தந்தையோ, என் தந்தையின் தந்தையோ, குருதியால் என்னுடன் தொடர்புடைய வேறு எவருமோ பிராமணர்களைவிட எனக்கு அன்புக்குரியவர்கள் இல்லை.(15) (நான் வழிபாட்டுக்குத் தகுந்த பிராமணர்களைத் தேவர்களாக வழிபடுவதால்) என் பிராமண வழிபாட்டின் மூலம் நான் சிறிய அல்லது பெரிய பலன் எதையும் எதிர்பார்க்கவில்லை.(16) எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் பிராமணர்களுக்கு நான் செயல்பட்டிருக்கும் விளைவால் நான் இப்போது (இந்தக் கணைப்படுக்கையில் கிடந்தாலும்) எந்தத் துன்பத்தையும் உணரவில்லை.(17) பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனாக மக்கள் என்னை அழைக்கிறார்கள். இவ்வகை அழைப்பு எப்போதும் என்னை உயர்வான நிறைவை அடையச் செய்கிறது. பிராமணர்களுக்கு நன்மை செய்வது என்பது புனிதச் செயல்கள் அனைத்திலும் புனிதமானதாகும்.(18) பிராமணர்களுக்குப் பின்னால் மதிப்புடன் நடந்து சென்ற எனக்கு அருள்நிறைந்த உலகங்கள் காத்திருப்பது எனக்குத் தெரிகிறது. ஓ! மகனே, காலத்திற்கும் எப்போதும் நீடித்திருக்கும் உலகங்களுக்கு நான் மிக விரைவில் செல்லப் போகிறேன்.(19)

ஓ! யுதிஷ்டிரா, பெண்களின் கடமைகள் அவர்களது கணவர்களின் {கடமைகளுக்குத்} தொடர்புடையதாகவும் அவற்றையே சார்ந்துமிருக்கின்றன. உண்மையில் ஒரு பெண்ணுக்குக் கணவனே தெய்வமாவான், அவள் அடைய விரும்பும் உயர்ந்த கதியும் அவனே ஆவான். மனைவிக்குக் கணவனைப் போலவே, க்ஷத்திரியர்களுக்குப் பிராமணர்கள் இருக்கிறார்கள்[4].(20) முழுமையாக நூறு வயதுடைய ஒரு க்ஷத்திரியனும், பத்து வயதேயுடைய ஒரு நல்ல பிராமணச் சிறுவனும் இருந்தால், பிராமணனே முதன்மையானவன் என்பதால் பின்னவன் {பிராமணச் சிறுவன்} தந்தையாகவும், முன்னவன் {க்ஷத்திரிய முதியவர்} மகனாகவும் கருதப்பட வேண்டும்.(21) {பழங்காலத்தில்} ஒரு பெண், தன் கணவன் இல்லாதபோது, அவனுடைய தம்பியையே தன் கணவனாகக் கொண்டதைப் போலவே பூமியும் பிராமணனை அடையாமல், க்ஷத்திரியனைத் தன் தலைவன் ஆக்கிக் கொண்டாள்.(22) பிராமணர்களை மகன்களைப் போலப் பாதுகாக்கவும், தந்தைமார் அல்லது ஆசான்களைப் போல வழிபடவும் வேண்டும். ஓ! குருக்களில் சிறந்தவனே, உண்மையில், வேள்வி அல்லது ஹோம நெருப்பின் முன்னால் மக்கள் மதிப்புடன் காத்திருப்பதைப் போலவே அவர்கள் {பிராமணர்கள்} முன்பும் காத்திருக்க வேண்டும்.(23) பிராமணர்கள் எளிமையானவர்களாகவும், அறம்சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் வாய்மைக்கு அர்ப்பணிப்புள்ளவர்கள். அனைத்து உயிரினங்களின் நன்மையிலேயே அவர்கள் எப்போதும் ஈடுபடுவார்கள். இருப்பினும், அவர்கள் கோபமடையும்போது, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவர்களாகிறார்கள். இக்காரணங்களால் அவர்கள் மதிப்புடனும், பணிவுடனும் தொண்டாற்றப்பட்டு, எப்போதும் காத்திருக்கப்பட வேண்டும் {அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்க வேண்டும்}.(24)ஓ! யுதிஷ்டிரா, சக்தி {அதிகாரம்} மற்றும் தவங்கள் {சாந்தம்} ஆகிய இரண்டிற்கும் ஒருவன் எப்போதும் அஞ்ச வேண்டும். இவை இரண்டும் தவிர்க்கப்பட வேண்டும், அல்லது தொலைவில் வைக்கப்பட வேண்டும்.(25) இவை இரண்டின் விளைவுகளும் மிக விரைவானவை. எனினும், தவங்களுடன் கூடிய பிராமணர்கள் கோபப்பட்டால், தங்கள் கோபத்திற்குரிய பொருளை (அந்தப் பொருள் எவ்வளவு தான் சக்தியைக் கொண்டிருந்தாலும்) கொன்றுவிடலாம் என்பதால் {சக்தியைக் காட்டிலும்} தவங்களுக்கு மேன்மையுண்டு.(26) கோபத்தை வென்ற ஒரு பிராமணன் மீது பெரும் அளவிலான சக்தியும், தவங்களும் பயன்படுத்தப்பட்டாலும் அவை தணிவையே அடையும். சக்தி மற்றும் தவங்கள் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டால் அழிவு இரண்டுக்கும் ஏற்படும், அதே வேளையில், தவங்களுக்கு எதிராக சக்தி பயன்படுத்தப்பட்டால், அதற்கு {சக்திக்கு} ஒன்றும் எஞ்சாத அழிவு ஏற்படும்; சக்திக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் தவங்களை முழுமையாக அழிக்க முடியாது[5].(27) கையில் தடியுடன் மந்தையைப் பாதுகாக்கும் ஓர் இடையனைப் போலவே க்ஷத்திரியர்களும் வேதங்களையும், பிராமணர்களையும் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.(28) உண்மையில், ஒரு தந்தை தன் மகன்களைப் பாதுகாப்பதைப் போலவே ஒரு க்ஷத்திரியன் பிராமணர்களில் அறவோர் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். பிராமணர்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் கண்காணிக்கும் விதமாக அவனது கண்கள் எப்போதும் அவர்களது இல்லத்தின் மீது இருக்க வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(29)

நரியும், குரங்கும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 09-கொடையளிப்பதாக உறுதியளித்தும் அவற்றைக் கொடாமல் இருப்பவன் கதியை விளக்க நரி மற்றும் குரங்கின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும் காந்தி கொண்டவரே, பிராமணர்களுக்குக் கொடுக்கிறேன் என்று உறுதியளித்த கொடைகளைப் புத்தி மயக்கத்தால் {லோபத்தினால்} கொடுக்காமலிருக்கும் மனிதர்கள் என்ன ஆகிறார்கள்?(1) ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, இவ்வகையில் உள்ள கடமைகள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக. உண்மையில், உறுதியளித்த கொடையைக் கொடுக்காதிருக்கும் தீய ஈனர்களின் கதி என்னவாகிறது?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உறுதிமொழியளித்த கொடை சிறிதாகவோ, பெரிதாவோ இருந்தாலும், அதைக் கொடுக்காத மனிதன், சந்ததியை எதிர்பார்க்கும் அலியைப் போல (அனைத்துத் திசைகளிலும்) தனது நம்பிக்கைகள் கனியற்றுப் போவதைப் பார்க்கும் பேரிழிவை அடைகிறான்.(3) ஓ! பாரதா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அத்தகைய மனிதன் தான் பிறந்த நாள் முதல், தன் மரணம் வரை செய்த நற்செயல்கள் எதுவும்,(4) வேள்வி நெருப்பில் அவன் ஊற்றும் ஆகுதிகள் எதுவும், அவன் அளிக்கும் கொடைகள் எதுவும், அவன் செய்யும் தவங்கள் எதுவும் என அனைத்தும் கனியற்று {பலனற்றுப்} போகின்றன.(5) ஓ! பாரதர்களின் தலைவா, சாத்திரங்களை அறிந்த மனிதர்கள், நன்கு அமைக்கப்பட்ட தங்கள் புத்தியின் துணை கொண்டு இதையே தங்கள் கருத்தாக அறிவிக்கின்றனர்.(6) அத்தகைய மனிதன், கருப்பு நிறக் காதுடைய ஆயிரம் குதிரைகளைக் கொடையளிப்பதன் மூலம் தூய்மையடைவான் என்று சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் கருதுகின்றனர்.(7)

இது தொடர்பாக ஒரு நரிக்கும், ஒரு குரங்குக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(8) ஓ! பகைவர்களைச் சுடுபவனே, அவை இரண்டும் மனிதர்களாக இருந்தபோது அணுக்கமான நண்பர்களாக இருந்தன. மரணத்திற்குப் பிறகு அவர்களில் ஒருவர் நரியாகவும், மற்றவர் குரங்காகவும் ஆகினர்.(9) சுடலைக்கு மத்தியில் ஒரு விலங்கின் சடலத்தை உண்ணும் நரியைக் கண்ட குரங்கு, முற்பிறவியில் மனிதர்களாக இருந்தபோது அது {நரி} தன் நண்பனாக இருந்ததை நினைவு கூர்ந்து அதனிடம்,(10) “உண்மையில், ஒரு விலங்கின் அழுகிய சடலத்தைப் போன்ற வெறுக்கத்தக்க இந்த உணவை இப்பிறவியில் உண்ணும் கடப்பாட்டை அடையும் அளவுக்கு முற்பிறவியில் நீ இழைத்த பயங்கரப் பாவம் என்ன?” என்று கேட்டது.(11)

இவ்வாறு கேட்கப்பட்ட நரியானது, குரங்கிடம், “ஒரு பிராமணருக்குக் கொடுப்பதாக உறுதியளித்துவிட்டு அக்கொடையை நான் அவருக்குக் கொடுக்காதிருந்தேன்.(12) ஓ! குரங்கே, இந்த இழிந்த இருப்பு நிலையில் நான் வீழ்ந்ததற்கு அந்தப் பாவமே காரணம். அந்தக் காரணத்திற்காகவே எனக்குப் பசியேற்படும்போது, இத்தகைய உணவை உண்ணும் கடப்பாட்டை நான் அடைந்தேன்” என்று மறுமொழி சொன்னது”.(13)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மனிதர்களில் சிறந்தவனே, பிறகு அந்த நரியானது குரங்கிடம், “ஒரு குரங்காவதற்கு நீ இழைத்த பாவமென்ன?” என்று கேட்டது.(14)

அந்தக் குரங்கு {நரியிடம்}, “என்னுடைய முற்பிறவியில் பிராமணர்களுக்குச் சொந்தமான கனிகளை நான் அபகரித்து வந்தேன். அதனால் நான் குரங்கானேன். புத்தியும், கல்வியும் கொண்ட ஒருவரும் பிராமணர்களுக்குச் சொந்தமானதை ஒருபோதும் அபகரிக்கக்கூடாது என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. உண்மையில், ஒருவன் இதைத் தவிர்க்கும் அதே வேளையில் பிராமணர்களுடன் எந்தச் சச்சரவையும் தவிர்க்க வேண்டும். ஒருவன் அவர்களுக்கு உறுதியளித்த பிறகு அந்தக் கொடையை அவர்களுக்கு நிச்சயம் அவன் கொடுக்க வேண்டும்” என்றது”.(15)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, நான் என் ஆசானுடன் பிராமணர்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் இருந்தே இதை நான் கேட்டேன். இக்காரியத்தில் புராதனமான, புனிதமான அறிவுக்குள் அந்த அறம் சார்ந்த மனிதர் உரைத்துக் கொண்டிருக்கும்போது, இதை நான் கேட்டேன்.(16) ஓ! மன்னா, ஓ! பாண்டுவின் மகனே, பிராமணர்களைக் குறித்துக் கிருஷ்ணர் {வியாசர்} உரையாடிக் கொண்டிருக்கும்போதும் இதை நான் கேட்டிருக்கிறேன்[1].(17) ஒரு பிராமணனின் உடைமை ஒருபோதும் அபகரிக்கப்படக்கூடாது. அவர்களை ஒருபோதும் தனிமையில் விடக்கூடாது. ஏழையாகவோ, கஞ்சனாகவோ, வயதில் இளையவராகவோ இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் அவமதிக்கப்படக்கூடாது.(18) பிராமணர்கள் இஃதை எனக்குக் கற்பித்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுப்பதாக உறுதியளித்த கொடையை நிச்சயம் கொடுக்க வேண்டும். மேன்மையான ஒரு பிராமணர் தன் எதிர்பார்ப்புகளில் ஏமாற்றமடையக்கூடாது.(19) ஓ! மன்னா, ஒரு பிராமணனுக்குள் எழும் எதிர்பார்ப்பானது சுடர்மிக்க நெருப்பைப் போன்றது எனச் சொல்லப்படுகிறது[2].(20)எதிர்பார்ப்புகள் எழுந்த ஒரு பிராமணர், எந்த மனிதன் மீது தன் கண்களைச் செலுத்துவாரோ அவன், ஓ! ஏகாதிபதி, சுடர்மிக்க நெருப்பால் எரிய வல்ல வைக்கோல் குவியலைப் போலவே எரியத்தகுந்தவனாவான்[3].(21) ஓ! பாரதா, மன்னன் கொடுக்கும் (கௌரவங்கள் மற்றும் கொடைகளில்) ஒரு பிராமணன் நிறைவடைந்து அந்த மன்னனிடம் இனிமையும், அன்பும் நிறைந்த வார்த்தைகளை {ஆசிகளைச்} சொல்லி அவன் அந்த நாட்டிலேயே தொடர்ந்து வாழும்போது, உடலில் உள்ள பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடும் ஒரு மருத்துவனைப் போல அவன் அந்த மன்னனின் பெரும் நன்மைக்கான ஊற்றுக்கண்ணாகிறான்.(22) அத்தகைய ஒரு பிரமாணன், அந்த மன்னனின் மகன்கள், பேரர்கள், உறவினர்கள், அமைச்சர்கள், பிற அதிகாரிகள் ஆகியோரும் விலங்குகள், நகரம் மற்றும் மாகாணங்கள் ஆகியவையும் நன்மையும், அமைதியும் அடையும்படி செய்கிறான்.(23) பூமியில் ஆயிரங்கதிர் சூரியனைப் போல ஒரு பிராமணனின் சக்தி அவ்வளவு பெரியதாகும்.(24)எனவே, ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் தனது அடுத்தப் பிறவியில் மதிப்புமிக்க அல்லது மகிழ்ச்சிமிக்க நிலையை அடைய விரும்பினால், அவன் ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பதாக உறுதியளித்ததை நிச்சயம் கொடுக்க வேண்டும்.(25) ஒரு பிராமணனுக்குக் கொடைகளை அளிப்பதால் அவன் நிச்சயம் உயர்ந்த சொர்க்கத்தை அடைவான். உண்மையில், கொடையளிக்கும் ஈகையே ஒருவன் அடையும் உயர்ந்த காரியம் {கர்மம்} ஆகும்.(26) ஒரு பிராமணனுக்கு ஒருவன் அளிக்கும் கொடைகளால், தேவர்களும், பித்ருக்களும் ஆதரிக்கப்படுகிறார்கள். எனவே, ஞானம் கொண்ட ஒருவன், பிராமணர்களுக்கு எப்போதும் கொடைகளை அளிக்க வேண்டும்.(27) ஓ! பாரதர்களின் தலைவா, கொடைகள் அளிக்கத் தகுந்த பிராமணனே ஒருவனுடைய உயர்ந்த நோக்கம் எனச் சொல்லப்படுகிறான்[4]. எக்காலத்திலும் ஒரு பிராமணனை முறையாக வழிபடாமல் அவன் வரவேற்கப்படக்கூடாது. {எப்போதும் ஒரு பிராமணன் முறையாக வழிபடப்பட்டு வரவேற்கப்பட வேண்டும்}.” {என்றார் பீஷ்மர்}.(28)

சூத்திரனும், பிராமணனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 10-சூத்திரனுக்கு அறிவுரை சொன்ன பிராமணரின் நிலையை எடுத்துக் காட்டி தாழ்ந்தோருக்கு அறிவுரை சொல்லக்கூடாது என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! அரசமுனியே, பிறப்பால் தாழ்ந்த வகையைச் சார்ந்த ஒரு மனிதனுக்கு நட்பின் விருப்பத்தாலோ, இல்லாமலோ {அன்பினாலோ} அறிவுரை சொல்வதால் ஒருவன் களங்கம் {பாவம்} இழைத்தவன் ஆவானா இல்லையா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.(1) ஓ! பாட்டா, எனக்கு இது விரிவாகச் சொல்லப்படுவதைக் கேட்க விரும்புகிறேன். கடமையின் பாதை {அறம்} மிக நுட்பமானதாகும். அவ்வழியில் மனிதர்கள் தடுமாறுவதே அடிக்கடி காணப்படுகிறது” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இது தொடர்பாகப் பழங்காலத்தில் குறிப்பிட்ட முனிவர்களிடம் இருந்து நான் கேட்டவற்றை முறையாக நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(3) தாழ்ந்த அல்லது இழிந்த சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு அறிவுரை வழங்கக்கூடாது[1]. அத்தகையை மனிதனுக்கு அறிவுரையை வழங்கும் ஓராசான் பெரும்பாவத்தை இழைப்பதாகச் சொல்லப்படுகிறது.(4) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓ! யுதிஷ்டிரா, ஓ! ஏகாதிபதி, துன்பத்தில் வீழ்ந்தவனும், தாழ்ந்த பிறவியைக் கொண்டவனுமான ஒரு மனிதனுக்கு அறிவுரை வழங்குவதன் தீய விளைவுகளைப் பழங்காலத்தில் நடந்த இந்நிகழ்வின் மூலம் நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(5)நான் சொல்லப்போகும் இந்நிகழ்வு, மங்கலமான இமயச் சாரத்தில் உள்ள குறிப்பிட்ட மறுபிறப்பாள தவசிகளின் ஆசிரமத்தில் நேர்ந்ததாகும். அங்கே, அந்த மலைகளின் இளவரசனுடைய சாரலில், பல்வேறு வகையான மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு புனிதமான ஆசிரமம் இருந்தது.(6) பல்வேறு வகைச் செடிகொடிகள் நிறைந்த அந்த இடம், விலங்குகள் மற்றும் பறவைகள் பலவற்றின் ஓய்விடமாகவும் இருந்தது. சித்தர்களும், சாரணர்களும் வசித்து வந்த அந்த இடமானது, ஒவ்வொரு பருவகாலத்தில் மலர்ந்திருக்கும் சோலைகளின் விளைவால் மிக இனிமை நிறைந்ததாக இருந்தது.(7) அங்கே பிரம்மச்சாரிகள் பலரும், காட்டு வாழ்வு முறையில் {வானப்ரஸ்தாஸ்ரமத்தில்} வாழ்வோர் பலரும் அங்கே இருந்தனர். உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், சக்தி மற்றும் பிரகாசத்தில் சூரியனையோ, நெருப்பையோ போன்றவர்களுமான பிராமணர்கள் பலரும் அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(8) பல்வேறு நோன்புகளையும், நியமங்களையும் கொண்டவர்களும், தீக்ஷை பெற்றவர்களும், எளிய உணவை உண்பவர்களும், தூய்மையான ஆன்மாவைக் கொண்டவர்களுமான பல்வேறு வகைத் தவசிகள் அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(9) பெரும் எண்ணிக்கையிலான வாலகில்யர்களும், சந்நியாச நோன்பை நோற்கும் பலரும் அங்கே எப்போதும் வசித்து வந்தனர். இவை அனைத்தின் விளைவால் அந்த ஆசிரமம், அங்கே வசிப்பவர்கள் சொல்லும் வேதங்கள் மற்றும் புனித மந்திரங்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(10)

ஒரு காலத்தில், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட ஒரு சூத்திரன் அந்த ஆசிரமத்திற்கு வந்தான். அந்த ஆசிரமத்திற்கு அவன் வந்ததும், தவசிகள் அனைவராலும் அவன் முறையாகக் கௌரவிக்கப்பட்டான்[2].(11) ஓ! பாரதா, பல்வேறு வர்க்கங்களை {வர்ணங்களைச்} சேர்ந்தவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களும், (தூய்மையிலும், சக்தியிலும்) தேவர்களுக்கு ஒப்பானவர்களும், பல்வேறு வகைத் தீக்ஷைகளைப் பெற்றவர்களுமான அந்தத் தவசிகளைக் கண்டு அந்தச் சூத்திரன் இதயத்தில் பெரும் நிறைவை அடைந்தான்.(12) அனைத்தையும் கண்ட அந்தச் சூத்திரன், தவப்பயிற்சிக்குத் தன்னை அர்ப்பணிக்கும் விருப்பத்தை {தன்னுள்} உணர்ந்தான். ஓ! பாரதா, அவன் குலபதியின் பாதங்களைத் தீண்டி[3],(13) “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உமது அருளால் நான் அறக்கடமைகளைக் கற்க (பயிற்சி செய்ய) விரும்புகிறேன். ஓ! சிறப்புமிக்கவரே, அக்கடமைகளைக் குறித்துச் சொல்லி, (தொடக்கச் சடங்குகளைச் செய்வதன் மூலம்) துறவு வாழ்வுக்கு என்னை அறிமுகம் செய்வதே உமக்குத் தகும்.(14) ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, சாதியால் சூத்திரனான நான், நிச்சயம் வர்ணத்தால் தாழ்ந்தவனே. நான் இங்கே உமக்குப் பணிவிடை செய்யவும், தொண்டாற்றவும் விரும்புகிறேன். உமது உறைவிடத்தை எளிமையாக நாடும் என்னிடம் நிறைவு கொள்வீராக” என்றான்.(15)குலபதி, “ஒரு சூத்திரன், துறவு வாழ்வுக்கான குறியீடுகளைப் பின்பற்றி இங்கே வாழ்வது சாத்தியமில்லை. நீ விரும்பினால், எங்களுக்குப் பணிவிடை செய்து கொண்டும், தொண்டாற்றிக் கொண்டும் இங்கேயே இருக்கலாம்.(16) அத்தகைய தொண்டின் மூலம் நீ உயர்ந்த இன்பலோகங்கள் பலவற்றை அடைவாய் என்பதில் ஐயமில்லை” என்றார்”.(17)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, அந்தத் தவசியால் இவ்வாறு சொல்லப்பட்டும், அந்தச் சூத்திரன் தன் மனத்தில் இவ்வாறு சிந்திக்கத் தொடங்கினான், “நான் இப்போது என்ன செய்வது? தகுதிக்கு {புண்ணியத்திற்கு} வழிவகுக்கும் அந்த அறக்கடமைகளில் நான் பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன்.(18) எனினும், எனக்கான நன்மையை நானே செய்து கொள்ளத் தீர்மானிக்கிறேன்” {என்று நினைத்தான்}. அந்த ஆசிரமத்தில் இருந்து தொலைவான ஓர் இடத்தை அடைந்த அவன், மரத்தின் குச்சிகள் மற்றும் இலைகளால் ஒரு குடிசையை அமைத்தான்.(19) ஓ! பாரதர்களின் தலைவா, ஒரு வேள்வி மேடையையும் அமைத்து, தனது உறக்கத்திற்கான சிறு இடத்தையும் ஒதுக்கிக் கொண்ட அவன், தேவர்களுக்காகச் சில மேடைகளை அமைத்து, பேச்சைத் தவிர்த்து, கடும் நோன்புகள், நியமங்கள் மற்றும் தவங்களுக்கான ஒரு வாழ்வைப் பின்பற்றத் தொடங்கினான்.(20) அவன், ஒரு நாளைக்கு மூன்று முறை தூய்மைச் சடங்குகளைச் செய்யவும், (உணவு மற்றும் உறக்கத்தைப் பொறுத்தவரையில்) பிற நோன்புகளை நோற்கவும், தேவர்களுக்கான வேள்விகளைச் செய்யவும், வேள்வி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றவும், இவ்வழியில் தேவர்களைத் துதித்து வழிபடவும் தொடங்கினான்.(21) உடல் சார்ந்த இன்பங்கள் அனைத்தையும் தவித்து, கனிகள் மற்றும் கிழங்குகளைக் குறைவாகவே உண்டு, புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, தன் ஆசிரமத்திற்கு வந்த விருந்தாளிகள் அனைவரையும் வரவேற்று உபசரித்து, சுற்றிலும் அபரிமிதமாக வளர்ந்திருந்த கனிகளையும், கீரைகளையும் அவர்களுக்குக் கொடுத்தான். இவ்வழியில் அவன் தன் ஆசிரமத்திலேயே நெடுங்காலத்தைக் கழித்தான்.(22,23)

ஒரு நாள் ஒரு தவசி தம்மை அறிமுகம் செய்து கொள்ளும் நோக்கில் அந்தச் சூத்திரனின் ஆசிரமத்திற்கு வந்தார். சூத்திரன், முறையாக சடங்குகளுடன் அந்த முனிவரை வரவேற்று வழிபட்டு, அவரை உயர்வான நிறைவைக் கொள்ளச் செய்தான்.(24) பெரும் சக்தியும், அற ஆன்மாவும் கொண்டவரும், கடும் நோன்புகளைக் கொண்டவருமான அந்த முனிவர், தனக்கு விருந்தளிப்பவனிடம் ஏற்புடைய பல்வேறு காரியங்களைக் குறித்துப் பேசி, தாம் எங்கிருந்து வந்தாரோ அந்த இடத்தையும் அவனுக்குச் சொன்னார்.(25) ஓ! பாரதர்களின் தலைவா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இவ்வழியில் அந்த முனிவர், அந்தச் சூத்திரனைக் காண எண்ணற்ற முறை அந்த ஆசிரமத்திற்கு வந்தார்.(26) ஓ! மன்னா, இந்தச் சந்தர்ப்பங்கள் ஒன்றில் சூத்திரன் அம்முனிவரிடம், “நான், பித்ருக்களுக்காக விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்ய விரும்புகிறேன். இக்காரியத்தில் நீர் எனக்கு அன்பைக் காட்டுவீராக {கருணை கொள்வீராக}” என்று கேட்டான்.(27) ஓ! ஏகாதிபதி, “மிக்க நன்று” என அந்தப் பிராமணர் மறுமொழி கூறினார்.(28)

அப்போது அந்தச் சூத்திரன் நீராடி தன்னைத் தூய்மை செய்து கொண்டு, அந்த முனிவர் தமது காலைக் கழுவிக் கொள்ள நீரையும், குச {தர்ப்பைப்} புற்களையும், காட்டின் காய் கனிகளையும், ஒரு புனிதமான இருக்கையையும், விருஷி என்றழைக்கப்பட்ட இருக்கையையும் கொண்டு வந்தான்.(29) மேலும் அவன் தெற்கு நோக்கி நின்று கொண்டு அந்த விருஷியை மேற்கு நோக்கிப் போட்டான். இதைக் கண்டு, இது விதிக்கு எதிரானது என்பதை அறிந்த அந்த முனிவர் அந்தச் சூத்திரனிடம்,(30) “விருஷியின் தலையைக் கிழக்கு நோக்கித் திருப்புவாயாக, நீயும் உன்னைத் தூய்மை செய்து கொண்டு, வடக்கு நோக்கிய முகத்துடன் அமர்வாயாக” என்றார். அம்முனிவர் சொன்னது போலவே அந்தச் சூத்திரன் அனைத்தையும் செய்தான்.(31) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், அறம் நோற்பவனுமான அந்தச் சூத்திரன், தவங்களைக் கொண்ட அந்த முனிவரிடம் இருந்து, குசப் புற்களை {தர்ப்பைகளைப்} பரப்புவது முறை, அர்க்கியம் வைப்பது போன்ற முறைகள், ஆகுதிகளை ஊற்றும் காரியத்தில் செய்யப்பட வேண்டிய சடங்குகள், காணிக்கை அளிக்கப்பட வேண்டிய உணவு ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்து, விதிப்படி விதிக்கப்பட்டுள்ள சிராத்தம் குறித்த அனைத்து கட்டளைகளைப் பெற்றுக் கொண்டான். பித்ருக்களைக் கௌரவிக்கும் சடங்குகள் நிறைவடைந்ததும் சூத்திரன் அந்த முனிவரை அவரது வசிப்பிடத்திற்கே அனுப்பி வைத்தான்[4].(32,33)இத்தகைய தவங்கள் மற்றும் நோன்புகளைச் செய்து கொண்டே நீண்ட காலத்தைக் கழித்த அந்தச் சூத்திரத் தவசி அந்தச் சோலையிலேயே மரணத்தைச் சந்தித்தான். அந்தப் பயிற்சிகளால் அந்தச் சூத்திரன் ஈட்டிய தகுதியின் {புண்ணியத்தின்} விளைவாக மறுபிறவியில் பெரும் மன்னனின் குடும்பத்தில் பிறந்து,(34) காலத்தில் அவன் பெருங்காந்தியைக் கொண்டவனானான். அந்த மறுபிறப்பாள முனிவரும் காலம் வந்தபோது இயற்கைக்குத் தன் கடனைச் செலுத்தினார் {இறந்து போனார்}.(35) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவர் மறுபிறவியில் ஒரு புரோஹிதரின் குடும்பத்தில் பிறந்தார். தவத்தில் வாழ்வைக் கழித்த அந்தச் சூத்திரன், அன்பினால் அவனுக்குப் பித்ரு பூஜையில் செய்யப்படும் சடங்குகளைக் கற்பித்த அந்த மறுபிறப்பாள முனிவர் ஆகிய இருவரில் ஒருவர் அரச குடும்பக் கொழுந்தாகவும், மற்றொருவர் புரோகிதக் குடும்பத்தின் உறுப்பினராகவும் மறுபிறவி அடைந்தனர்.(36) இருவரும் வளரத் தொடங்கினர், இருவரும் வழக்கமான கல்விக் கிளைகளில் பெரும் ஞானத்தை அடைந்தனர்.

அந்தப் பிராமணர் வேதங்களையும், அதர்வணங்களையும் நன்கறிந்தவரானார்[5].(37) மேலும், மறுபிறவி அடைந்த அந்த முனிவர், அறச்சடங்குகள், நோன்புகள், கணியம் {சோதிடம்}, வானவியல் தொடர்பான வேதாங்க சூத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வேள்விகள் அனைத்திலும் பெருந்திறனைப் பெற்றார். சாங்கியத் தத்துவத்திலும் அவர் பெரும் திளைப்பை அடையத் தொடங்கினார்.(38) அதே வேளையில், இளவரசனாக மறுபிறவியடைந்த அந்தச் சூத்திரன், தன் தந்தையான மன்னன் இறந்தபோது, அவனது இறுதிச் சடங்குகளைச் செய்து, ஈமக் காரியங்கள் அனைத்தையும் செய்வதன் மூலம் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்ட பிறகு, குடிமக்கள் அவனது தந்தை வழியில் வந்த அரியணையில் அவனைத் தங்கள் மன்னனாக நிறுவிக் கொண்டனர்.(39) அவன் மன்னனாக நிறுவப்பட்ட உடனேயே அவன், மறுபிறவி எடுத்திருந்த அந்த முனிவரைத் தன் புரோஹிதராக நியமித்தான். உண்மையில், அந்தப் பிராமணரைத் தன் புரோகிதராக்கிக் கொண்ட அந்த மன்னன் பெரும் மகிழ்ச்சியில் தன் நாட்களைக் கடத்தத் தொடங்கினான்.(40)அவன் தன் நாட்டை நீதியுடன் ஆட்சி செய்து, தன் குடிமக்கள் அனைவரையும் பேணி வளர்த்துப் பாதுகாத்தான். எனினும், ஒவ்வொரு நாளும் தன் புரோகிதரிடம் ஆசி பெறும்போதும், அறச்சடங்குகள் அல்லது புனிதமான பிற சடங்குகளைச் செய்யும்போதும் அவரைக் காணும் மன்னன் புன்னகைக்கவோ, உரக்கச் சிரிக்கவோ செய்தான். ஓ! ஏகாதிபதி, இவ்வகையில் மறுபிறவியில் மன்னனான அந்தச் சூத்திரன், எண்ணற்ற சந்தர்ப்பங்களில் தன் புரோகிதரைக் கண்டு சிரித்தான்.(41,42) மன்னன் எப்போதும் சிரிப்பதைக் கவனித்த புரோகிதர், எப்போதெல்லாம் தமது கண்களை அவன் மேல் செலுத்தினாரோ அப்போதெல்லாம் கோபமடைந்தார்.(43) ஒரு தருணத்தில் அவர் யாருமற்ற ஓரிடத்தில் அம்மன்னனைச் சந்தித்தார். அவர் ஏற்புடைய உரையின் மூலம் மன்னனை நிறைவு கொள்ளச் செய்தார்.(44) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அக்கனத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் புரோகிதர் மன்னனிடம், “ஓ! பெரும் காந்தி கொண்டவனே, நீ எனக்கு ஒரு வரமளிக்க வேண்டுகிறேன்” என்றார்.(45)

மன்னன், “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நான் உமக்கு நூறு வரங்களை அளிக்கவும் தயாராக இருக்கிறேன் எனும்போது ஏன் ஒன்று மட்டுமே கேட்கிறீர்? நான் உம்மிடம் கொண்ட அன்புக்கும், மதிப்புக்கும் என்னால் உமக்குக் கொடுக்க முடியாதது எதுவுமில்லை” என்றான்.(46)

புரோஹிதர், “ஓ! மன்னா, நீ என்னிடம் நிறைவுகொண்டிருந்தால் ஒரே ஒரு வரத்தை மட்டுமே விரும்புகிறேன். பொய் சொல்லாமல் எனக்கு உண்மையைச் சொல்வதாக உறுதியளிப்பாயாக” என்றார்”.(47)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, புரோகிதரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மன்னன் அவரிடம், “அவ்வாறே ஆகட்டும். நீர் என்னிடம் கேட்பது நான் அறிந்ததாக இருந்தால் நிச்சயம் நான் உமக்கு உண்மையைச் சொல்வேன். மறுபுறம் அக்காரியத்தை நான் அறியவில்லையென்றால் நான் ஒன்றையும் சொல்லமாட்டேன்” என்றான்.(48)

புரோஹிதர், “ஒவ்வொரு நாளும் என் ஆசிகளைப் பெறும் தருணங்களிலும், உன் சார்பாக நான் அறச்சடங்குகளைச் செய்வதில் ஈடுபடும்போதும், ஹோமம் மற்றும் பிற தணிவுச் சடங்குகளைச் செய்யும் தருணங்களிலும் நீ ஏன் என்னைக் கண்டு சிரிக்கிறாய்?(49) அத்தருணங்கள் அனைத்திலும் நீ சிரிப்பதைக் கண்டு என் மனம் வெட்கத்தால் ஒடுங்குகிறது. ஓ! மன்னா, உண்மையான பதிலைச் சொல்ல வேண்டுமென நான் உன்னை உறுதியளிக்கச் செய்திருக்கிறேன். பொய் சொல்வது உனக்குத் தகாது.(50) உன் நடத்தைக்கு ஏதாவது முக்கியக் காரணம் இருக்க வேண்டும். உன் சிரிப்புக் காரணமற்றதாக இருக்க முடியாது. அக்காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது. நீ எனக்கு உண்மையைச் சொல்வாயாக” என்றார்.(51)

மன்னன், “ஓ! மறுபிறப்பாளரே, நீர் இவ்வாறு கேட்ட பிறகு, நீர் கேட்கத்தகாததாக இருப்பினும் உமக்கு இக்காரியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நான் கட்டுப்பட்டிருக்கிறேன். நான் உமக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். ஓ! மறுபிறப்பாளரே, மிகக் கவனமாகக் கேட்பீராக.(52) ஓ!இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நமது முற்பிறவிகளில் (நமக்கு) என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக. அப்பிறவியை நான் நினைவில் கொண்டுள்ளேன். குவிந்த மனத்தோடு நான் சொல்வதைக் கேட்பீராக.(53) முற்பிறவியில் நான் கடுந்தவங்களில் ஈடுபடும் ஒரு சூத்திரனாக இருந்தேன். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நீரோ கடுந்தவங்களைக் கொண்ட ஒரு முனிவராக இருந்தீர்.(54) ஓ!  பாவமற்றவரே, ஓ! பிராமணரே, (ஒரு சந்தர்ப்பத்தில்) என் பித்ருக்களைக் கௌரவிக்க நான் செய்த சடங்குகளில், எனக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்ட நீர் குறிப்பிட்ட சில அறிவுரைகளைச் சொல்லி என்னை நிறைவு கொள்ளச் செய்தீர்.(55) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, விருஷி மற்றும் குச {தர்ப்பைப்} புற்களைப் பரப்பும் முறை, ஆகுதிகள், இறைச்சி மற்றும் பிற உணவுகளைக் காணிக்கை அளிப்பது குறித்த அறிவுரைகளை நீர் எனக்குச் சொன்னீர். இந்தக் குற்றத்தின் விளைவால் நீர் ஒரு புரோஹிதராகப் பிறந்தீர். ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, நானோ மன்னாகப் பிறந்திருக்கிறேன். காலம் கொண்டு வரும் மாற்றங்களைக் காண்பீராக. (முற்பிறவியில்) நீ எனக்கு அறிவுரை கூறியதன் விளைவால் இக்கனியை அறுவடை செய்திருக்கிறீர் {இந்தப் பலனை அடைந்திருக்கிறீர்}.(57) ஓ! பிராமணரே, இக்காரணத்திற்காகவே நான் உம்மைப் பார்க்கும்போதெல்லாம் சிரிக்கிறேன். உம்மை அவமதிக்கும் விருப்பத்தில் நிச்சயம் நான் சிரிக்கவில்லை. நீர் என் ஆசானாவீர்.(58) இந்நிலை மாறுபாட்டில் நான் உண்மையில் வருத்தமடைகிறேன். இந்த நினைப்பில் என் இதயம் எரிகிறது. நமது முற்பிறவியை நினைவுகூர்ந்தே உம்மைக் காணும்போது நான் சிரிக்கிறேன்.(59) நீர் எனக்குக் கொடுத்த அறிவுரைகளின் மூலம் உமது கடுந்தவங்கள் அனைத்தும் அழிவடைந்தன. புரோஹிதரான உமது தற்போதைய அலுவலைத் துறந்து மீண்டும் மேன்மையான பிறவியை அடைய முயற்சிப்பீராக.(60) இப்பிறவியில் உள்ளதைவிட மறுபிறவியில் இழிந்த நிலையை அடையாமல் இருக்க முயற்சி செய்வீராக. ஓ! கல்விமானான பிராமணரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, விரும்பிய அளவுக்குச் செல்வங்களை எடுத்துக் கொண்டு உமது ஆன்மாவைத் தூய்மையடையச் செய்வீராக” என்றான்”.(61)

பீஷ்மர் தொடர்ந்தார், “(புரோஹித அலுவலில் இருந்து) மன்னனால் விடைகொடுத்து அனுப்பப்பட்ட அந்தப் பிராமணர், தன் வகையைச் சேர்ந்தோருக்குச் செல்வம், நிலம் மற்றும் கிராமங்கள் உள்ளிட்ட பல கொடைகளை அளித்தார்.(62) அவர் பிராமணர்களுக்காக விதிக்கப்பட்ட கடும் தவங்களைச் செய்தார். அவர் புனித நீர்நிலைகள் பலவற்றுக்குச் சென்று அந்த இடங்களில் வைத்துப் பல கொடைகளை அளித்தார்.(63) மறுபிறப்பாள வகையினருக்குப் பசுக்களைக் கொடையளித்து ஆன்மத் தூய்மையை அடைந்து ஞானத்தை ஈட்டுவதில் வென்றார். அவர், முற்பிறவியில் தாம் வாழ்ந்த அதே ஆசிரமத்திற்குச் சென்று கடுந்தவங்களைச் செய்தார்.(64) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இவை அனைத்தின் விளைவால் அந்தப் பிராமணர் உயர்ந்த வெற்றியை அடைவதில் வென்றார். அவர் அந்த ஆசிரமத்தில் வசித்த தவசிகள் அனைவரின் மதிப்பிற்குரிய பொருளாக இருந்தார்.(65) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, இவ்வகையிலேயே அந்த மறுபிறப்பாள முனிவர் பெரும் துயரத்தை அடைந்தார். எனவே ஒரு பிராமணன் சூத்திரர்களுக்கு ஒருபோதும் அறிவுரை சொல்லக்கூடாது.(66)

ஓ! மன்னா, ஒரு பிராமணன் தாழ்ந்த பிறவியைக் கொண்ட ஒரு மனிதனுக்கு அறிவுரை சொல்லி துயரத்தை அடைந்ததால் பிராமணன் (அத்தகைய தாழ்ந்த பிறவியைக் கொண்டோருக்கு) அறிவுரை சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.(67) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, ஒரு பிராமணன் தாழ்ந்த வகையைச் சேர்ந்த ஒரு மனிதனிடமிருந்து அறிவுரை பெறவோ, அறிவுரை சொல்லவோ கூடாது.(68) பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று வகையினர் {வர்ணத்தார்} இருபிறப்பாளர்களாக {த்விஜர்களாகக்} கருதப்படுகிறார்கள். ஒரு பிராமணன் இவர்களுக்கு அறிவுரை சொல்வதால் எந்தப் பாவத்தையும் இழைத்தவனாக மாட்டான்.(69) எனவே, தாழ்ந்த வகையைச் சார்ந்த மனிதர்களின் முன்பு நல்லோர் ஒருபோதும் எந்த அறிவுரையும் சொல்லக்கூடாது. அறத்தின் பாதை மிக நுட்பமானதும், தூய்மையற்ற ஆன்மா கொண்ட மனிதர்களால் புரிந்து கொள்ளப்பட முடியாததும் ஆகும்.(70) இந்தக் காரணத்திற்காகவே தவசிகள் அமைதி நோன்பை நோற்று (மௌன விரதம் இருந்து), பேச்சில் ஈடுபடாமல் தீக்ஷையைக் கடந்து அனைவராலும் மதிக்கப்படுகிறார்கள். சரியற்றது அல்லது வருத்தமளிக்கக்கூடியதைச் சொல்வதற்கு {சொற்குற்றத்துக்கு} அஞ்சியே தவசிகள் பேச்சை துறக்கிறார்கள்[6].(71)அறவோரும், அனைத்துச் சாதனைகளையும் செய்தோரும், உண்மை மற்றும் எளிய நடத்தை கொண்டோரும் கூடச் சரியாகப் பேசாத வார்த்தைகளின் விளைவால் பெருங்களங்கத்தை {பெரும்பாவத்தை} இழைத்ததாக அறியப்படுகிறார்கள்.(72) {அறியாமல்} யாருக்கும் எது குறித்தும் ஒருபோதும் அறிவுரை சொல்லக்கூடாது. சொல்லப்பட்ட அறிவுரையின் காரணமாக, அறிவுரை பெற்றவன் பாவமேதும் செய்தால் அந்தப் பாவம் அறிவுரை சொன்ன பிராமணனையே சாரும்.(73) எனவே, தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட விரும்பும் மனிதன் எப்போதும் ஞானத்துடன் செயல்பட வேண்டும். பணப் பறிமாற்றத்திற்காகச் சொல்லப்படும் அறிவுரை உபதேசிப்பவனைக் களங்கமடையச் செய்யும் {பாவமீட்ட வைக்கும்}.(74) பிறரால் வேண்டப்படும் ஒருவன் தன் நினைவின் துணையுடன் தீர்மானத்தை அடைந்த பிறகு சரியானதை மட்டுமே சொல்ல வேண்டும்.(75) நான் இப்போது அறிவுரை குறித்த காரியங்கள் அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். அறிவுரை சொல்வதன் விளைவால் மனிதர்கள் எப்போதும் பெரும் துன்பத்தில் மூழ்குகிறார்கள். எனவே, ஒருவன் பிறருக்கு அறிவுரைகள் சொல்வதைத் தவிர்ப்பது அவசியமாகிறது” {என்றார் பீஷ்மர்}[7].(76)

திருமகள் வசிப்பிடம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 11-லட்சுமி தான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் ருக்மிணிக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பாரதர்களின் தலைவரே, எந்த வகை ஆண், அல்லது எந்த வகைப் பெண்ணில் செழிப்பின் தேவி {லட்சுமி} எப்போதும் வசிக்கிறாள்?” எனக் கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக உள்ளபடியே நடந்ததையும், நான் கேட்டதையும் உனக்குச் சொல்லப் போகிறேன். ஒரு காலத்தில் இளவரசி ருக்மிணி, தேவகி மகனின் {கிருஷ்ணனின்} முன்பு இந்தக் கேள்வியைக் கேட்டாள்.(2) தன் கொடியில் மகரத்தைக் கொண்டவனான பிரத்யும்னனின் தாயானவள் {ருக்மிணி}, அழகில் சுடர்விடுபவளும், தாமரையின் நிறத்தைக் கொண்டவளுமான செழிப்பின் தேவியை {லட்சுமியைக்} கண்டு, ஆவலால் நிறைந்தவளாக இந்த வார்த்தைகளைச் சொன்னாள்:(3) “நீ யாரின் அருகில் இருக்கிறாய், யாருக்குத் தொண்டாற்றுகிறாய்? மேலும் நீ யாருக்குத் தொண்டாற்றுவதில்லை? ஓ! அனைத்துயிரினங்ளுடைய தலைவனின் அன்புக்குரியவளே, ஓ! தவத்திலும், பலத்திலும் ஒரு பெருமுனிவருக்கு இணையானவளே, இஃதை எனக்கு உண்மையில் சொல்வாயாக” என்று கேட்டாள்.(4) அந்த இளவரசியால் {ருக்மிணியால்} இவ்வாறு கேட்கப்பட்டவளும், சந்திரனைப் போன்ற அழகிய முகத்தைக் கொண்டவளுமான செழிப்பின் தேவி, அருளால் தூண்டப்பட்டு, இனிமையானவையும், அழகானவையுமான இந்த வார்த்தைகளைக் கருடனைத் தன் கொடியில் கொண்டவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து மறுமொழியாகக் கூறினாள்.(5)

ஸ்ரீ {லட்சுமி}, “ஓ! அருளப்பட்ட பெண்ணே {ருக்மிணி}, நாநலம், சுறுசுறுப்பு, காரியத்தில் கவனம் ஆகியவற்றைக் கொண்டவனும், கோபத்தில் இருந்து விடுபட்டவனும், தேவர்களை வழிபடுபவனும், நன்றியுணர்வுமிக்கவனும், தன் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், அனைத்துக் காரியங்களிலும் உயர்ந்த மனத்தைக் கொண்டவனுமாக இருப்பவனிடம் எப்போதும் வசிக்கிறேன்.(6) காரியத்தில் கவனமில்லாதவன், நம்பிக்கையில்லாதவன் {நாத்திகன்}, காமத்தின் விளைவால் இனக்கலப்பு செய்பவன், நன்றிமறந்தவன், தூய்மையற்ற நடைமுறைகளைக் கொண்டவன், கடுமையான மற்றும் கொடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துபவன், கள்வன், தன் ஆசான்கள் மற்றும் பெரியோரிடம் வன்மத்தை வளர்ப்பவன் ஆகியோரிடத்தில் ஒருபோதும் வசிப்பதில்லை.(7) சக்தி, பலம், வாழ்வு, கௌரவம் ஆகியவை குறைந்திருப்போர், அற்ப காரியம் ஒவ்வொன்றிற்கும் துயரமடைபவர்கள், எப்போதும் கோபமடைபவர்கள் ஆகியோரிடத்தில் நான் ஒருபோதும் வசிப்பதில்லை. மேலும், எண்ணத்தில் ஒன்றாகவும், செயலில் மற்றொன்றாகவும் இருப்போரிடம் நான் ஒருபோதும் வசிப்பதில்லை.(8) தனக்காக எந்த உடைமையையும் ஒருபோதும் விரும்பாதவன், அல்லது முயற்சியின்றிக் கிட்டும் பொருளில் நிறைவடைந்து எஞ்சியவற்றில் குருடாயிருப்பவன், அல்லது சொற்ப உடைமைகளிலேயே நிறைவடைபவர்கள் ஆகியோரிடம் நான் ஒருபோதும் வசிப்பதில்லை[1].(9) தங்கள் வகைக்கான {வர்ணத்திற்கான} கடமைகளைச் செய்வோர், அல்லது அறக்கடமைகளை அறிந்தோர், அல்லது, முதியோரின் தொண்டிற்குத் தங்களை அர்ப்பணித்தோர், தங்கள் ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டோர், அல்லது தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டோர், அல்லது மன்னிக்கும் தன்மை என்ற அறத்தை நோற்பவர்கள், அல்லது செயல்படுவதில் திறனும் ஊக்கமும் வாய்ந்தவர்கள், அல்லது மன்னிக்கும் தன்மை மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்ட பெண்களிடம் நான் எப்போதும் வசிப்பேன்.(10)

வாய்மை மற்றும் நேர்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், தேவர்களை வழிபடுபவர்களுமான பெண்களிடமும் நான் வசிக்கிறேன். வீட்டு அறைகலன்கள் மற்றும் பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கவனிக்காதவர்கள், தங்கள் கணவர்களின் விருப்பங்களுக்கு முரணான வார்த்தைகளையே எப்போதும் சொல்பவர்கள் ஆகிய பெண்களிடம் நான் வசிப்பதில்லை.(11) வேறு மனிதர்களின் வீடுகளில் விருப்பமுள்ளவர்கள் மற்றும் பணிவில்லாதவர்களாக இருக்கும் பெண்களை நான் எப்போதும் தவிர்க்கிறேன். மறுபுறம், தங்கள் கணவர்களிடம் அர்ப்பணிப்புடன் இருப்போர், நன்னடத்தையால் அருளப்பட்டவர்கள், எப்போதும் ஆபரணங்களை அணிந்து கொள்பவர்கள், நல்ல ஆடைகளை உடுத்துபவர்கள் ஆகிய பெண்களிடம் எப்போதும் நான் வசிக்கிறேன்.(12) பேச்சில் வாய்மை நிறைந்தோர், அழகிய ஏற்புடைய குணங்களைக் கொண்டோர், அருளப்பட்டோர், அனைத்து சிறப்புகளையும் கொண்டோர் ஆகிய பெண்களில் எப்போதும் நான் வசிக்கிறேன். பாவம் நிறைந்தோர், தூய்மையற்றோர், கடைவாயை நாவால் நனைப்போர், பொறுமையோ, மனோவுறுதியோ இல்லாதோர், சண்டை சச்சரவுகளில் விருப்பமுள்ளோர்;(13) அதிகம் உறங்குவோர் மற்றும் எப்போதும் படுத்தே கிடப்பவர்கள் ஆகிய பெண்களை நான் எப்போதும் தவிர்க்கிறேன். வாகனங்கள், அவற்றை இழுக்கும் விலங்குகள், கன்னிப் பெண்கள், ஆபரணங்கள், நல்ல ஆபரணங்கள், வேள்விகள், மழை நிறைந்த மேகங்கள்,(14) முற்றாக மலர்ந்த தாமரைகள், கூதிர் கால ஆகாயத்தில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்கள் ஆகியவற்றில் எப்போதும் நான் வசிக்கிறேன். யானைகள், மாட்டுக் கொட்டில், நல்ல இருக்கைகள், முற்றாக மலர்ந்த தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட தடாகங்கள் ஆகியவற்றில் நான் வசிக்கிறேன்.(15)

நாரைகளின் இனிய இசையைக் கொண்டவையும், பல்வேறு மர வரிசைகளால் அலங்கரிக்கப்பட்ட கரைகளைக் கொண்டவையும், பிராமணர்கள், தவசிகள் மற்றும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிறரால் அடையப்பட்டவையும், தங்கள் போக்கில் இனிமையான மென் சலசலப்பைக் கொண்டவையுமான ஆறுகளிலும் நான் வாழ்கிறேன்.(16) நீராடவும், தாகம் தணித்துக் கொள்வதற்காகவும் மூழ்கும் சிங்கங்கள் மற்றும் யானைகளால் சேறாகக் கலங்கி பெரும் அளவில் கரைபுரண்டோடும் நீருடன் கூடிய ஆழமான ஆறுகளிலும் நான் எப்போதும் வசிக்கிறேன். மதங்கொண்ட யானைகள், காளை மாடுகள், அரியணை ஆகியவற்றிலும், மன்னர்கள் மற்றும் நல்ல மனிதர்களிடத்திலும் நான் வசிக்கிறேன்.(17) எந்த வீட்டு மக்கள் வேள்வித் தீயில் ஆகுதிகளை ஊற்றி, பசுக்கள், பிராமணர்கள் மற்றும் தேவர்களை வணங்குகிறார்களோ அந்த வீட்டில் எப்போதும் நான் வசிக்கிறேன். தேவர்களின் வழிபாட்டில் சரியான நேரங்களில் மலர்களைக் காணிக்கையளிப்போர் உள்ள வீட்டில் எப்போதும் நான் வசிக்கிறேன்[2].(18)வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள பிராமணர்கள், அறம் நோற்பதில் அர்ப்பணிப்புள்ள க்ஷத்திரியர்கள், உழவில் அர்ப்பணிப்புள்ள வைசியர்கள், மூன்று மேல் வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} (மேனியால் செய்யப்படும்) தொண்டில் அர்ப்பணிப்புள்ள சூத்திரர்கள் ஆகியோரிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(19) நான் நாராயணனில் உறுதிமிக்க மாற்றமில்லாத இதயத்துடன் கூடியவளாக உடல்படைத்த என் சொந்த வடிவில் வசிக்கிறேன். பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு, ஏற்புடைய குணம், முற்று முழுதான அறம் ஆகியவை அவனிலேயே இருக்கின்றன.(20) ஓ! பெண்ணே {ருக்மிணி}, (நாராயணனைத் தவிர, நான் குறிப்பிட்ட எந்த இடத்திலும்) உடல்படைத்த என் சொந்த வடிவில் வசிப்பதில்லை என நான் சொல்ல முடியாதா? எந்த மனிதனிடம் நான் சக்தியாக வசிக்கிறேனோ, அவனிடம் அறமும், புகழும், ஆசைக்குரிய பொருட்களும், செல்வமும் தழைத்துப் பெருகும்” என்றாள் {ஸ்ரீ}” {என்றார் பீஷ்மர்}.(21)

பெண்ணாகவே நீடிக்க விரும்பிய பங்காஸ்வனன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 12-ஆண் பெண் கலவியில் யாருக்கு இன்பம் அதிகமென்பதைச் சொல்ல பங்காஸ்வனன் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் புரியும் கலவிச் செயல்பாட்டில் அவ்விருவரில் அதிக இன்பத்தைப் பெறுபவர் எவர் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். அருள்கூர்ந்து இக்காரியத்தில் எனது ஐயத்தைப் போக்குவீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, பங்காஸ்வனுக்கும், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை இக்கேள்வியை முன்வைக்கும் முன்னோடியாகக் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில் பங்காஸ்வனன் என்ற பெயரில் ஒரு மன்னன் வாழ்ந்தான். அவன் பெரும் அறவோனாகவும், அரசமுனியாகவும் அறியப்பட்டிருந்தான். எனினும், ஓ! மனிதர்களின் தலைவா, அவன் பிள்ளையற்றவனாக இருந்ததால், ஒரு பிள்ளையைப் பெறும் விருப்பத்தில் ஒரு வேள்வியைச் செய்தான்.(3) அந்த வலிமைமிக்க ஏகாதிபதி செய்த அக்னிஸ்டுதம் என்ற அவ்வேள்வியில், நெருப்பின் தேவன் மட்டுமே துதிக்கப்படுவதன் விளைவால் இந்திரன் அஃதை {அவ்வேள்வியை} எப்போதும் விரும்பியதில்லை. எனினும் அது {அவ்வேள்வி}, பிள்ளை பெறும் நோக்கில் தங்கள் பாவங்களைத் தாங்களே தூய்மைப்படுத்திக் கொள்ள முனையும் மனிதர்களால் விரும்பப்படும் வேள்வியாக இருந்தது[1].(4)உயர்வாக அருளப்பட்டவனும், தேவர்களின் தலைவனுமான இந்திரன், அந்த ஏகாதிபதி {பங்காஸ்வனன்} அக்னிஷ்டுத வேள்வியைச் செய்ய விரும்புவதை அறிந்து, (அவனிடம் சில தவறுகளைக் கண்டால் தன்னை அவமதித்தவனை அவனால் தண்டிக்க முடியும் என்பதால்) நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட அந்த அரசமுனியிடம் {பங்காஸ்வனிடம்} அந்தக் கணம் முதல் தவறுகளைத் தேடத் தொடங்கினான்.(5) எனினும், ஓ! மன்னா, எப்போதும் இந்திரனின் கண்காணிப்பு இருந்தபோதிலும், அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியிடம் அவனால் தவறுகளை எதையும் காண முடியவில்லை. சில காலம் கழித்து ஒரு நாள், அந்த மன்னன் வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(6) இந்திரன் தனக்குள்ளேயே, “உண்மையில் இஃது ஒரு வாய்ப்புதான்” எனச் சொல்லிக் கொண்டு அந்த ஏகாதிபதியை புத்திமயங்கச் செய்தான். தேவர்களின் தலைவனால் புலன்கள் திகைத்துக் குழப்பத்தில் இருந்த அம்மன்னன் தன் குதிரையில் தனியாகச் சென்று கொண்டிருந்தான்.(7) பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்பட்ட அம்மன்னனால் திசைப்புள்ளிகளை உறுதி செய்து கொள்ள முடியாத வண்ணம் அவனது மயக்கம் பெரிதாக இருந்தது.(8) அப்போது அவன் தெளிந்த நீர் நிரம்பிய மிக அழகிய தடாகம் ஒன்றைக் கண்டான். தன் குதிரையில் இருந்து இறங்கிய அவன், தடாகத்திற்குள் மூழ்கித், தன் விலங்கையும் {குதிரையையும் நீர்} குடிக்கச் செய்தான்.(9) பிறகு, தாகம் தணிக்கப்பட்ட தன் குதிரையை ஒரு மரத்தில் கட்டிவிட்டு, தன் தூய்மைச் சடங்குகளைச் செய்வதற்காக அம்மன்னன் மீண்டும் தடாகத்திற்கு மூழ்கினான். அந்த நீரின் தன்மையால் அவன் பெண்ணாக மாறிவிட்டதைக் கண்டு அவன் ஆச்சரியமடைந்தான்.(10)இவ்வாறு தான் பாலின மாற்றம் அடைந்ததைக் கண்ட அம்மன்னன் வெட்கமடைந்தான் {அவமானமடைந்தான்}. புலன்களும், மனமும் முற்றிலும் கலங்கிய அவன் முழு இதயத்துடன் இவ்வகையில் நினைக்கத் தொடங்கினான்:(11) “ஐயோ, என் குதிரையை நான் எவ்வாறு செலுத்தப் போகிறேன்? என் தலைநகருக்கு எவ்வாறு திரும்பப் போகிறேன்? அக்னிஷ்டுத வேள்வி செய்ததன் விளைவால், பெரும் வலிமைமிக்கவர்களும், என் மடியில் பிறந்தவர்களுமான நூறு மகன்களைப் பெற்றிருக்கிறேன். ஐயோ, இவ்வாறு மாற்றமடைந்திருக்கும் நான் அவர்களிடம் என்ன சொல்லப் போகிறேன்? என் மனைவியர், உறவினர், நலன்விரும்பிகள், நகரம் மற்றும் மாகாணங்களில் உள்ள என் குடிமக்கள் ஆகியோரிடம் நான் என்ன சொல்லப் போகிறேன்?(12,13) கடமை, அறம் மற்றும் பிற காரியங்களின் உண்மைகளை அறிந்த முனிவர்கள், அமைதியான குணம், மென்மை, பெருங்கலக்கமடையும் தன்மை {பிறருக்கு உட்படுதல், நகை, விளையாட்டு, தேக ஒளி} ஆகியவற்றைப் பெண்களின் குணங்கள் என்றும்,(14) செயல்பாடு {உடல் உழைப்பு}, கடுமை, சக்தி ஆகியவற்றை ஆண்களின் குணங்கள் என்றும் சொல்கிறார்கள். ஐயோ என் ஆண்தன்மை மறைந்துவிட்டதே. என்ன காரணத்திற்காக எனக்குப் பெண்தன்மை உண்டானது? இந்தப் பாலின மாறுபாட்டின் விளைவால், என் குதிரையில் நான் மீண்டும் எவ்வாறு ஏறப் போகிறேன்?” {என்று நினைத்தான்}.(15)

இந்தச் சோகமான எண்ணங்களுடன் கூடிய அந்த ஏகாதிபதி, பெண்ணாக மாறியிருந்தாலும், பெரும் முயற்சிக்குப் பிறகு தன் குதிரையில் ஏறி தலைநகரத்திற்குத் திரும்பினான்.(16) அவனது {மன்னன் பங்காஸ்வனது மகன்கள், மனைவியர், பணியாட்கள், நகரம் மற்றும் மாகாணங்களின் குடிமக்கள் ஆகியோர் இந்த இயல்புக்கு மீறிய மாறுபாட்டைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தனர்.(17) அப்போது நாநலமிக்க மனிதர்களில் முதன்மையானவனான அந்த அரச முனி {பங்காஸ்வனன்}, அவர்கள் அனைவரிடமும், “ஒரு பெரும் படையின் துணையுடன் நான் வேட்டைக்குச் சென்றிருந்தேன். திசைப்புள்ளிகளின் அறிவனைத்தையும் இழந்த நான், விதியின் உந்துதலால் அடர்த்தியானதும், பயங்கரமானதுமான ஒரு காட்டுக்குள் நுழைந்தேன்.(18) அந்தப் பயங்கரக் காட்டில், தாகத்தால் பீடிக்கப்பட்ட நான் என் புலனுணர்வை இழந்தேன். அப்போது, நீர்க்கோழிகள் நிறைந்ததும், அனைத்து வர்ணனைகளுக்கும் தகுந்ததுமான ஓர் அழகி தடாகத்தைக் கண்டேன்.(19) தூய்மைச் சடங்குகளைச் செய்வதற்காக அந்த ஓடைக்குள் மூழ்கிய நான் ஒரு பெண்ணாக மாறிவிட்டேன்” என்றான்.

பெண்ணாக மாறியிருந்த அந்த ஏகாதிபதி {பங்காஸ்வனன்}, பிறகு, தன் மனைவியர் மற்றும் அமைச்சர்களை அழைத்து,(20) தன் மகன்கள் அனைவரையும் பெயர் சொல்லி அழைத்து, இவ்வார்த்தைகளை அவர்களிடம் சொன்னான்: “நீங்கள் இந்நாட்டை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். மகன்களே, நான் காட்டுக்குச் செல்லப் போகிறேன்” என்றான்.(21) அந்த ஏகாதிபதி தன் பிள்ளைகளிடம் இவ்வாறு சொல்லிவிட்டு காட்டுக்குச் சென்றான்.

அங்கே வந்த அவள் {பெண்ணாக மாறியிருக்கும் அந்த ஏகாதிபதி} ஒரு தவசி வசித்து வந்த ஓர் ஆசிமத்தை அடைந்தாள்.(22) {பெண்ணாக} மாற்றமடைந்திருந்த அந்த ஏகாதிபதி {பங்காஸ்வன்}, அந்தத் தவசியின் மூலம் நூறு மகன்களைப் பெற்றாள். அந்தப் பிள்ளைகள் அனைவரையும் கூட்டிக் கொண்டு தன் முந்தைய பிள்ளைகளிடம் சென்ற அவள் அவர்களிடம் {பழைய பிள்ளைகளிடம்},(23) “நான் ஆணாக இருந்த போது என் மடியில் பிறந்த பிள்ளைகள் நீங்கள். மாற்றமடைந்திருக்கும் இந்நிலையில் என்னால் ஈன்றெடுக்கப்பட்ட பிள்ளைகள் இவர்கள். மகன்களே, ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்த சகோதரர்களைப் போலவே நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக என் நாட்டை அனுபவிப்பீராக” என்றாள்.(24)

தங்களைப் பெற்றவரின் இந்த ஆணையின் படி அந்தச் சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அந்த நாட்டை அனுபவிக்கத் தொடங்கினர். அந்த மன்னனின் பிள்ளைகள் அனைவரும் ஒரே தாய் தந்தைக்குப் பிறந்த சகோதரர்களைப் போல ஒற்றுமையாக நாட்டை அனுபவிப்பதைக் கண்டு,(25) கோபத்தில் நிறைந்த தேவர்களின் தலைவன் {இந்திரன்}, “இந்த அரசமுனியைப் பெண்ணாக மாற்றியதன் மூலம் நான் அவனுக்குத் தீங்கிழைப்பதற்குப் பதில் நன்மையையே செய்திருப்பதாகத் தெரிகிறது” என்று சிந்திக்கத் தொடங்கினான்.(26) நூறு வேள்விகளைச் செய்தவனும், தேவர்களின் தலைவனுமான இந்திரன் இவ்வாறு சொல்லி ஒரு பிராமணனின் வடிவை ஏற்று, மன்னனின் தலைநகருக்குச் சென்று அந்தப் பிள்ளைகள் அனைவரையும் சந்தித்து அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்துவதில் வென்றான்.(27) அவன் அவர்களிடம், ” ஒரே தந்தைக்குப் பிறந்த பிள்ளைகளே கூடச் சகோதரர்களாக அமைதியாக ஒரு போதும் நீடித்ததில்லை. தவசி கசியபரின் மகன்களான தேவர்களும், அசுரர்களும் மூவுலகங்களின் அரசுரிமையினிமித்தம் ஒருவரோடொருவர் பிணக்கு கொண்டனர்.(28) இளவரசர்களான உங்களைப் பொறுத்தவரையில், நீங்களே அரச முனியான பங்காஸ்வனனின் பிள்ளைகள் ஆவீர். மற்றும் இவர்களோ ஒரு தவசியின் பிள்ளைகளாவர். தேவர்களும், அசுரர்களும் கூட ஒரே தந்தையின் பிள்ளைகள்தானே (இருப்பினும் அவர்களும் ஒருவருடனொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். எனவே, நீங்கள் சண்டயிடுவதற்கு வேறு என்ன காரணம் வேண்டும்}?(29) உங்கள் தந்தைவழியில் நீங்கள் அடைந்த இந்த நாடு ஒரு தவசியின் பிள்ளைகளால் அனுபவிக்கப்படுகிறது” என்றான்.

இந்த வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்குள் ஒரு பிளவை உண்டாக்குவதில் இந்திரன் வென்றதால், மிக விரைவில் அவர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் கொன்றனர்.(30) ஒரு பெண் தவசியாக வாழ்ந்து வந்த மன்னன் பங்காஸ்வனன், இதைக் கேட்டுத் துயரத்தில் எரிந்து, அழுது புலம்பினான். தேவர்களின் தலைவனான இந்திரன், ஒரு பிராமணனின் வடிவை ஏற்று, அந்தப் பெண் தவசி வாழ்ந்து வந்த இடத்திற்குச் சென்று அவளைச் சந்தித்து,(31) “ஓ! அழகிய முகம் படைத்தவளே, எந்தத் துயரத்தின் எரிச்சலில் நீ இவ்வாறு அழுது கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.

பிராமணனைக் கண்ட அந்தப் பெண், பரிதாபகரமான குரலில்,(32) “ஓ! மறுபிறப்பாளரே, என்னுடைய இருநூறு மகன்கள் காலத்தால் {காலனால்} கொல்லப்பட்டிருக்கின்றனர். ஓ! கல்விமானான பிராமணரே, முன்பு நான் ஒரு மன்னனாக இருந்தேன், அந்நிலையில் எனக்கு நூறு மகன்கள் இருந்தனர்.(33) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, என் சொந்த வடிவத்தில் அவர்கள் என்னால் பெறப்பட்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் நான் வேட்டைக்குச் சென்றேன். மயக்கத்துடன் கூடிய நான் ஓர் அடர்த்தியான காட்டில் திரிந்து கொண்டிருந்தேன்.(34) இறுதியாக ஒரு தடாகத்தைக் கண்டு அதற்குள் மூழ்கினேன். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, எழுந்த போது நான் பெண்ணாக மாறியிருப்பதைக் கண்டேன். என் தலைநகருக்குத் திரும்பி என் ஆட்சிப்பகுதிகளுக்கான அரசுரிமையின் என் மகன்களை நிறுவிவிட்டு நான் காட்டுக்குத் திரும்பினேன்.(35) பெண்ணாக மாறிய நான், என் கணவரான ஓர் உயர் ஆன்ம தவசியின் மூலம் நூறு மகன்களைப் பெற்றேன். அவர்கள் அனைவரும் அந்தத் தவசியின் ஆசிரமத்திலேயே பிறந்தனர். அவர்களைத் தலைநகரத்திற்கு அழைத்துச் சென்றேன்.(36) ஓ! இருபிறப்பாளரே, காலத்தின் ஆதிக்கத்தில் என் பிள்ளைகள் ஒருவரோடொருவர் சச்சரவில் ஈடுபட்டனர். இவ்வாறு காலத்தால் பீடிக்கப்பட்ட நான் துயரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.(37)

அப்போது இந்திரன் அவளிடம் {பங்காஸ்வனிடம்} கடும் வார்த்தைகளில், “ஓ! பெண்ணே, பழங்காலத்தில் இந்திரனுக்குப் பிடிக்காத ஒரு வேள்வியைச் செய்ததால் நீ எனக்குப் பெருந்துன்பத்தைத் தந்தாய்.(38) உண்மையில், நான் அப்போது இருந்தாலும், என்னை நீ மதித்து அழைக்கவில்லை. ஓ! தீய புத்தி கொண்டவளே, நானே அந்த இந்திரன். நீ யாரிடம் வேண்டுமென்றே பகையை நாடினாயோ அவன் நானே” என்றான்.(39)

இந்திரனைக் கண்ட அந்த அரசமுனி, அவனது பாதங்களில் வீழ்ந்து தன் தலையால் அவற்றைத் தீண்டி, “ஓ! தேவர்களில் முதன்மையானவனே, என்னிடம் நிறைவுகொள்வாயாக. நீ சொல்லும் வேள்வியானது வாரிசை விரும்பி செய்யப்பட்டது (செய்யப்பட்டதே அன்றி உனக்குத் தீங்கிழைக்கும் எந்த நோக்கத்திலும் செய்யப்படவில்லை).(40) எனவே, எனக்கு உன் மன்னிப்பை அருள்வதே உனக்குத் தகும்” என்றான்.

{பாலின} மாற்றமடைந்த அந்த ஏகாதிபதி தன்னிடம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடப்பதைக் கண்ட இந்திரன் அவனிடம் நிறைவை அடைந்து, அவனுக்கு ஒரு வரத்தைக் கொடுக்க விரும்பி,(41) “ஓ! மன்னா, பெண்ணாக மாறிய நிலையில் உன்னால் பெறப்பட்டவர்கள், ஆண் பாலினம் கொண்ட மனிதனின் நிலையில் இருந்து உன்னால் பெறப்பட்டவர்கள் ஆகிய உன் மகன்களில் நீ எவரை மீட்க விரும்புகிறாய்? {அவர்களில் எவர் பிழைக்க வேண்டும்?}” என்று கேட்டான்.(42)

அந்தப் பெண் தவசி தன் கரங்களைக் கூப்பிக் கொண்டு இந்திரனிடம், “ஓ! வாசவா, பெண்ணாக இருந்து என்னால் பெறப்பட்ட என் மகன்கள் மீண்டும் உயிர் பெறட்டும்” என்றாள்.(43)

இந்த மறுமொழியால் ஆச்சரியத்தால் நிறைந்த இந்திரன் மீண்டும் அந்தப் பெண்ணிடம், “மனிதரில் ஆண் பாலின வடிவில் இருந்த போது உன்னால் பெறப்பட்ட பிள்ளைகளிடம் ஏன் குறைவான அன்பைக் கொண்டிருக்கிறாய்?(44) {பெண்ணாக} மாற்றமடைந்த இந்த நிலையில் உன்னால் பெறப்பட்ட பிள்ளைகளிடம் ஏன் அதிக அன்பைக் கொண்டிருக்கிறாய்? இவை அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்” என்றான்.(45)

அந்தப் பெண், “ஆண் கொள்ளும் பாசத்தைவிடப் பெண்கொள்ளும் பாசமே பெரிது. ஓ! சக்ரா, ஒரு பெண்ணாக என்னால் பெறப்பட்ட பிள்ளைகள் மீண்டும் உயிர் பெறுவதையே நான் விரும்புகிறேன்” என்றாள்”.(46)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டதும் பெரும் நிறைவடைந்த இந்திரன் அவளிடம், “ஓ! வாய்மை நிறைந்த பெண்ணே, உன் பிள்ளைகள் அனைவரும் உயிர் பெறட்டும்.(47) ஓ! மன்னர்களில் முதன்மையானவனாக இருந்தவளே, நீ மற்றுமொரு வரத்தையும் கொள்வாயாக. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே உண்மையில் நீ எந்த வரத்தை விரும்பினாலும் கேட்பாயாக. பெண், அல்லது ஆண் என நீ தேர்ந்தெடுக்கும் எந்நிலையையும் நீ என்னிடம் இருந்து பெறலாம்” என்றான்.(48)

அதற்கு அந்தப் பெண், “ஓ! சக்ரா, நான் பெண்ணாக நீடிக்கவே விரும்புகிறேன். உண்மையில், ஓ! வாசவா, நான் ஆண் தன்மையை மீண்டும் பெற விரும்பவில்லை” என்றாள்.

இந்தப் பதிலைக் கேட்ட இந்திரன், மீண்டும் அவளிடம்,(49) “ஓ! பலமிக்கவளே, ஆண்மை நிலையைக் கைவிட்டு ஏன் நீ பெண்மையை விரும்புகிறாய்?” என்று கேட்டான்.

ஏகாதிபதிகளில் முதன்மையானவனாக இருந்து பெண்ணாக மாறியிருப்பவள் இவ்வாறு கேட்கப்பட்டதும்,(50) “கலவிச் செயல்பாடுகளில் ஆண்களால் அனுபவிக்கப்படுவதை விடப் பெண்களால் அனுபவிக்கப்படும் இன்பமே பெரியது. ஓ! சக்ரா, இந்தக் காரணத்திற்காக நான் பெண்ணாகவே தொடர விரும்புகிறேன்.(51) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, பெண்ணாக இருக்கும் என்னுடைய தற்போதைய நிலையிலேயே நான் பெரும் இன்பத்தைப் பெற்றேன் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். இப்போது பெண்ணாக இருக்கும் இந்நிலையிலேயே நான் நிறைவாக இருக்கிறேன். ஓ! சொர்க்கத்தின் தலைவா, இப்போது நீ என்னைவிட்டுச் செல்லலாம்” என்றாள்[2].(52)அவளுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்களின் தலைவன், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி அவளிடம் விடைபெற்றுக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றான். ஓ! ஏகாதிபதி, நீ கேட்டதன் அடிப்படையில் பார்த்தால், ஆண்களைவிடப் பெண்களே அதிக இன்பத்தைப் பெறுபவர்களாக அறியப்படுகிறார்கள்” {என்றார் பீஷ்மர்}.(53)

தீய பாதைகள் பத்து! – அநுசாஸனபர்வம் பகுதி – 13-வினைகளைப் புரிவோர், அவற்றின் நல்ல, தீய விளைவுகளை அனுபவிக்கவே வேண்டும் என்பது குறித்தும், தவிர்க்கப்பட வேண்டிய பத்து தீய பாதைகளைக் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இம்மை, மறுமை ஆகியவற்றை இன்பமாகக் கடந்து செல்ல ஒரு மனிதன் செய்ய வேண்டியது என்ன? உண்மையில் ஒருவன் தன் ஒழுக்கத்தை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்? இந்நோக்கில் ஒருவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உடலைக் கொண்டு செய்யப்படும் மூன்று செயல்களையும், பேச்சால் செய்யப்படும் நான்கையும் {நான்கு செயல்களையும்}, மனத்தால் செய்யப்படும் மூன்றையும், செயல்பாட்டின் இந்தப் பத்து பாதைகளையும் ஒருவன் தவிர்க்க வேண்டும்.(2) பிற உயிரினங்களின் உயிர்களுக்கு அழிவை ஏற்படுத்தல், களவு, அல்லது பிறருக்கு உரியவற்றை அபகரித்தல், அடுத்தவர் மனைவிகளை அனுபவித்தல் ஆகிய உடலால் செய்யப்படும் மூன்று {தீய} செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.(3) தீய உரை, கடுஞ்சொற்கள், அடுத்தவரின் குறைகளை அறிக்கையிடல், பொய்மை ஆகிய வாக்கால் செய்யப்படும் நான்கு {தீய} செயல்களை ஒருபோதும் செய்யவோ, நினைக்கவோ கூடக் கூடாது.(4) பிறரின் உடைமைகளில் பேராசை கொள்வது, பிறருக்குத் தீங்கிழைப்பது, வேத விதிகளில் அவநம்பிக்கை ஆகிய மனத்தால் செய்யப்படும் மூன்று {தீய} செயல்களையும் எப்போதும் தவிர்க்க வேண்டும்.(5) எனவே ஒருவன் சொல், உடல் அல்லது மனத்தால் எந்தத் தீய செயலையும் ஒருபோதும் செய்யக்கூடாது. நல்ல மற்றும் தீய செயல்களைச் செய்வதால் ஒருவன் அவற்றின் நியாயமான விளைவுகளை நிச்சயம் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ நேரும். இதைவிட அதிகம் வேறெதுவும் இல்லை” என்றார் {பீஷ்மர்}.(6)

ஜாம்பவதியும் கிருஷ்ணனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 14அ-பீஷ்மர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பரமசிவனின் மகிமையை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்; கிருஷ்ணனிடம் வரம் கேட்ட ஜாம்பவதி; இமயம் சென்ற கிருஷ்ணன்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! கங்கையாற்றின் மைந்தரே, அண்டத்தின் தலைவனுடைய பெயர்கள் அனைத்தையும் நீர் கேட்டிருக்கிறீர். ஓ! பாட்டா, ஓ! பலமிக்கவரே, ஈசன் என்றும் சம்பு என்றும் அழைக்கப்படுபவனின் பெயர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக.(1) அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனும் தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவருக்கும் சிறப்புமிக்க ஆசானும், சங்கரன் என்றழைக்கப்படுபவனும், புலப்படாத தோற்றத்தைக் கொண்டவனும், பப்ரு அல்லது பரந்தவன் {பெரியவன்} என்றும் அழைக்கப்படுபவனுடைய பெயர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக. அந்த மஹாதேவனின் பலத்தையும் எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும் நுண்ணறிவைக் கொண்ட மஹாதேவனின் குணங்களை உரைக்க நான் சக்தியுள்ளவன் அல்லன். அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்தவனாய் இருந்தாலும் எங்கும் காணப்படாதவனாக அவன் இருக்கிறான்.(3) பிரம்மன், விஷ்ணு மற்றும் இந்திரனைப் படைத்தவனும் அவனே {ஈசனே}, அவர்களுடைய ஆசானும் அவனே. பிரம்மன் முதலான தேவர்கள் முதல் பிசாசங்கள் வரை அனைவராலும் துதிக்கப்பட்டு வழிபடப்படுபவன் அவனே.(4) பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் கடந்தவன் அவனே. யோகத்தை அறிந்தவர்களும், கேள்வி சம்பந்தப்பட்ட காரியங்களில் ஞானத்தைக் கொண்டவர்களுமான முனிவர்கள் சிந்திப்பதும், நினைப்பதும் அவனையே.(5) அழிவற்றவனான பரப்பிரம்மம் அவனே. இருப்பு மற்றும் இல்லாமை என்ற இரண்டாகவும் இருப்பவன் அவனே. பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் தன் சக்தியின் மூலம் கலங்கடித்து, அவற்றிலிருந்து உயிரினங்களின் அண்டத்தலைவனான பிரம்மனைப் படைத்தவன் அவனே.(6)

உயர்ந்த நுண்ணறிவுடன் கூடிய அந்தத் தேவ தேவனுடைய குணங்களைச் சொல்லத் தகுந்தவன் எவன்? மனிதன், (தாயின் கருவறையில்) கருவை அடைதல், பிறவி, முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றுக்கு உட்பட்டவனாவான்.(7) அவ்வாறிருக்கையில் பவனைப் புரிந்து கொள்ள என்னைப் போன்ற மனிதனால் முடியுமா? ஓ! மகனே, சங்கு, சக்கரம் கதாயுதம் ஆகியவற்றைத் தாக்கும் நாராயணனால் மட்டுமே மஹாதேவனைப் புரிந்து கொள்ள முடியும்.(8) அவனே ஞானவான். அனைத்துப் பொருட்களின் குணங்களில் முதன்மையானவன் அவனே. அண்டத்தில் நீக்கமற நிறைந்திருப்பதால் விஷ்ணு அவனே. தடுக்கப்பட முடியாதவன் அவனே. ஆன்மப் பார்வையுடன் கூடிய உயர்ந்த சக்தியைக் கொண்டவன் அவனே. அனைத்துப் பொருட்களையும் யோகக் கண்களால் காண்பவன் அவனே.(9) ஓ! பாரதா, பதரி ஆசிரமத்தில் அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} சிறப்புமிக்க ருத்திரனை நிறைவு செய்ததன் விளைவால் இந்த உயரான்மக் கிருஷ்ணன் மொத்த அண்டத்தையும் {தன்னால்} நிறைப்பதில் வென்றான்.(10)

ஓ! மன்னர்களின் மன்னா, செல்வம் என்ற பெயரில் உள்ள பொருட்கள் அனைத்தையும் விட உலகளாவிய அளவில் ஏற்கப்படும் தன்மையை தெய்வீகப் பார்வை கொண்ட மஹேஸ்வரனின் மூலமே இந்த வாசுதேவன் அடைந்தான்[1].(11) இந்த மாதவன், முழுமையாக ஓராயிரம் வருடங்கள் கடுந்தவங்களைச் செய்து, சிறப்புமிக்கவனும், வரமளிப்பவனும், அண்டத்தில் உள்ள அசைவன மற்றும் அசையாதனவற்றின் ஆசானுமான அந்தச் சிவனை நிறைவு செய்வதில் இறுதியாக வென்றான்.(12) ஒவ்வொரு யுகத்திலும் உயர் ஆன்மக் கிருஷ்ணனின் பெரும் அர்ப்பணிப்பால் மஹாதேவன் நிறைவடைகிறான்.(13) சிதைவுகள் அனைத்தையும் கடந்தவனான ஹரி, ஒரு மகனை அடைவதற்காகப் பதரி ஆசிரமத்தில் தவங்களைச் செய்த போது, அண்டத்தின் மூலக் காரணனும், உயர் ஆன்மா கொண்டவனுமான மஹாதேவனின் பலம் என்ன என்பதைத் தன் கண்களாலேயே கண்டான்[2].(14) ஓ! பாரதா, மஹாதேவனைவிட மேன்மையானவன் எவனையும் நான் காணவில்லை. மேலும் கேட்கும் விருப்பத்தை உண்டாக்காமல் அந்தத் தேவ தேவனின் பெயர்களை முழுமையாக விளக்கிச் சொல்ல கிருஷ்ணன் மட்டுமே தகுந்தவனாவான்.(15) யது குலத்தைச் சேர்ந்த இந்த வலிய கரங்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்} மட்டுமே சிறப்புமிக்கச் சிவனின் குணங்களைச் சொல்லத் தகுந்தவனாவான். ஓ! மன்னா, உண்மையில், அந்தப் பரமதேவனின் பலத்தை முழுமையாகச் சொல்ல அவனால் மட்டுமே சொல்ல முடியும்” என்றார் {பீஷ்மர்}”.(16)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “குருக்களின் பாட்டனான சிறப்புமிக்கப் பீஷ்மர் இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, ஓ! ஏகாதிபதி, பவனின் பெருமையைச் சொல்லும் பின் வரும் வார்த்தைகளை வாசுதேவனிடம் சொன்னார்.(17)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசான் நீயே. சிறப்புமிக்கவன் நீயே. மொத்த அண்டத்திலும் நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால் விஷ்ணு நீயே. யுதிஷ்டிரனால் என்னிடம் கேட்கப்பட்டவனும், அண்ட வடிவிலானவனுமான சிவன் தொடர்புடைய காரியங்களைக் குறித்துச் சொல்வதே உனக்குத் தகும்.(18) பழங்காலத்தில் பிரம்மனிடம் இருந்து உதித்த முனிவர் தண்டின் {தண்டி}, பிரம்ம லோகத்தில், பிரம்மனின் முன்னிலையில் வைத்து மஹாதேவனின் ஆயிரம் பெயர்களைச் சொன்னார்.(19) தவத்தைச் செல்வமாகக் கொண்டவர்களும், உயர்ந்த நோன்புகளை நோற்பவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுமான இந்த முனிவர்களும், அவர்களுக்கு மத்தியில் இருக்கும் தீவில் பிறந்த கிருஷ்ணரும்{வியாசரும்} கேட்கும் வகையில் இந்தச் சபையின் முன்னிலையில் அந்த ஆயிரம் பெயர்களையும் நீ சொல்வாயாக.(20) மாற்றமில்லாதவனும், எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாக, மகிழ்ச்சியாக இருப்பவனும், ஹோத்ரியும், அண்டத்தின் பாதுகாவலனும், அண்டத்தின் படைப்பாளனும், முண்டின் {முடிகளற்றவன்} மற்றும் கபர்த்தின் {சடாமுடிதரித்தவன்} என்று அழைக்கப்படுபவனின் உயர்ந்த அருள்நிலையைக் குறித்துச் சொல்வாயாக” என்றார் {பீஷ்மர்}.(21)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “பெரும்பாட்டனான பிரம்மனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டிருக்கும் பெரும் முனிவர்களும் கூட, மஹாதேவனின் செயற்போக்குகளையும், அவற்றின் விபரங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளத் தக்கவர்களல்லர்.(22) மக்களில் அறவோர் அனைவரும் அடையப்போகும் கதி அவனேயாவான். நுண்பார்வை கொண்ட ஆதித்யர்களே கூட அவனது வசிப்பிடத்தைக் காணத் தகுந்தவர்களல்லர். அவ்வாறிருக்கையில், சாதாரண ஒரு மனிதனால் எவ்வாறு அவனைப் புரிந்து கொள்ள முடியும்?(23) எனவே, வேள்விகள் மற்றும் நோன்புகள் அனைத்தின் தலைவனாகக் கருதப்படுபவனும், அசுரர்களைக் கொல்பவனுமான அந்தச் சிறப்புமிக்கவனின் குணங்களில் சிலவற்றை மட்டுமே உண்மையில் நான் உமக்குச் சொல்லப் போகிறேன்” என்றான்”.(24)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சிறப்புமிக்க வாசுதேவன், இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, நீரைத் தீண்டி தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பெரும் நுண்ணறிவையுடைய உயர் ஆன்ம மஹாதேவனின் குணங்களைக் குறித்துச் சொல்லத் தொடங்கினான்.(25)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “பிராமணர்களில் முதன்மையானவர்களே, ஓ!ஐயா யுதிஷ்டிரரே, ஓ! ஆற்றின் மைந்தரே {பீஷ்மரே}, கபர்த்தினுக்கு {கபர்த்திக்கு [மஹாதேவனுக்கு]} உரிய பெயர்களைக் கேட்பீராக.(26) காணக்கிடைக்காத (அந்தப் பெருந்தேவனை) {எனது மகன்} சாம்பனுக்காகப் பழங்காலத்தில் கண்டேன். உண்மையில் அந்த நாட்களில் தியான யோகத்தின் விளைவால் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, என்னால் காணப்பட்டான்[3].(27) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், ருக்மிணியின் மகனுமான பிரத்யும்னன், பழங்காலத்தில் அசுரன் சம்பரனைக் கொன்ற காலத்திலிருந்து பனிரெண்டு வருடங்கள் கடந்ததும், என் மனைவியான ஜாம்பவதி என்னிடம் பேசினாள்.(28)உண்மையில் ஓ! யுதிஷ்டிரரே, ருக்மிணிக்கு பிறந்தவர்களான பிரத்யும்னன், சாருதேஷ்ணன் மற்றும் பிற மகன்களைக் கண்ட ஜாம்பவதி, தானும் ஒரு மகனைப் பெற விரும்பி என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னாள்,(29) “ஓ! மங்கா மகிமை கொண்டவரே, வீரம், மிக ஏற்புடைய குணங்கள், பாவமற்ற ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்டவனாகவும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனாகவும் உள்ள உம்மைப் போன்ற ஒரு மகனை எனக்கு அருள்வீராக. ஓ!, இந்த என் வேண்டுதலை எத்தாமதமுமின்றி அருள்வீராக.(30) மூவுலகங்களிலும் உம்மால் அடையப்பட முடியாது எதுவும் இல்லை. ஓ! யது குலத்தைத் தழைக்கச் செய்பவரே, நீர் விரும்பினால் வேறு உலகங்களையே கூட உண்டாக்க முடியும். பனிரெண்டு வருட நோன்பை நோற்று, உம்மைத் தூய்மை செய்து கொண்டு, உயிரினங்கள் அனைத்தின் தலைவனை (மஹாதேவனைத்) துதித்து, ருக்மிணியின் மகன்களைப் பெற்றீர்.(31,32) சாருதேஷ்ணன், ஸுசாரூ, சாருவேசன், யசோதரன், சாருஸ்ரவன், சாருயசஸ், பிரத்யும்னன், சம்பு என்ற மகன்களை அவள் {ருக்மிணி} உம்மிடம் இருந்து பெற்றாள்.(33) ஓ! மதுசூதனா {மதுவெனும் அரக்கனைக் கொன்றவரே}, ருக்மிணி பெற்றிருக்கும் பேராற்றல் வாய்ந்த மகன்களைப் போல எனக்கும் ஒரு மகனை அருள்வீராக” என்று கேட்டாள்.(34)

அந்த இளவரசியால் இவ்வாறு கேட்கப்பட்டதும், நான் அந்தக் கொடியிடையாளிடம் {ஜாம்பவதியிடம்}, “ஓ! ராணி, (உன்னை விட்டுச் சிலகாலம் பிரிந்து செல்ல) உன் அனுமதி எனக்கு வேண்டும். நிச்சயம் நான் உனதாணைக்குக் கீழ்ப்படிவேன்” என்றேன்.(35)

அவள் என்னிடம், “செல்வீராக, வெற்றியும், செழிப்பும் எப்போதும் உமக்குத் துணை புரியட்டும். பிரம்மன், சிவன், கசியபர், ஆறுகள், மனத்தை ஆளும் தேவர்கள்,(36) மண், இலையுதிர் மூலிகைகள், வேள்விகளில் ஊற்றப்படும் ஆகுதிகளைச் சுமப்பதாகக் கருதப்படும் சந்தங்கள் {த்ரேதாக்னிகள் மற்றும் வேதங்கள்}, முனிவர்கள், பூமி, பெருங்கடல்கள், வேள்விக் கொடைகள், சாமங்களின் {இசையில் உள்ள} ஏற்றத்தாழ்வுகளை நிறைவு செய்யச் சொல்லப்படும் அசைகள், ரிக்ஷங்கள் {நட்சத்திரங்கள்}, பித்ருக்கள்,(37) ஓ! யாதவரே, கோள்கள், தேவர்களின் மனைவிகள் {தேவிகள்}, தேவகன்னிகள், தேவர்களின் தாய்மார், பெரும் யுகங்கள் {மன்வந்தரங்கள்}[4], பசுக்கள், சந்திரமாஸ் {சந்திரன்}, சாவித்ரி {சூரியன்}, அக்னி {விஷ்ணு},(38) காயத்ரி, வேத அறிவு {பிரம்ம வித்தை}, பருவ காலங்கள் {ருதுக்கள்}, ஆண்டுகள், க்ஷணங்கள் {கணங்கள்}, லவங்கள், முகூர்த்தங்கள், நிமிஷங்கள், அடுத்தடுத்த யுகங்கள்,(39) என்ற அனைத்தாலும் பாதுகாக்கப்படுவீராக. நீரெங்கு இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருப்பீராக. ஓ! பாவமற்றவரே உமது வழியில் உம்மை ஆபத்து அணுகாதிருக்கட்டும், விழிப்புணர்வின்மை உமதாக வேண்டாம் {ஜாக்ரதையாக இருப்பீராக}” என்று மறுமொழி கூறினாள்.(40)இவ்வாறு குரங்குகளின் இளவரசனுடைய மகளால் {ஜாம்பவதியால்} ஆசி கூறப்பட்ட {மங்களசாஸனம் செய்யப்பெற்ற} நான் நல்வாழ்த்து கூறி அவளிமிருந்து விடைபெற்றுக் கொண்டேன். மனிதர்களில் முதன்மையானவரான என் தந்தை {வசுதேவர்}, தாய் {தேவகி}, மன்னன் மற்றும் ஆஹுகர் ஆகியோரிடம்(41) சென்று வித்யாதரர்களின் இளவரசனுடைய மகள் {ஜாம்பவதி}[5] பெருந்துன்பத்துடன் என்னிடம் சொன்ன வார்த்தைகளைத் தெரிவித்தேன். கவலை நிறைந்த இதயத்துடன் அவர்களிமிருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு கதன் மற்றும் பெரும் வலிமை கொண்ட ராமர் {பலராமர்} ஆகியோரிடம் சென்றேன்.(42) அவர்கள் இருவரும் உற்சாகம் நிறைந்தவர்களாக, “எத்தடையுமின்றி உன் தவங்கள் பெருகட்டும்” என்று என்னிடம் சொன்னார்கள்.(43) அவர்கள் அனைவரிடமும் அனுமதிபெற்றுக் கொண்ட நான் கருடனை நினைத்தேன். உடனே என்னிடம் வந்த அவன் (என் ஆணையின் பேரில்) என்னை இமயத்துக்குச் சுமந்து சென்றான். இமயத்தை அடைந்ததும் நான் அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினேன்.(44) அந்த முதன்மையான மலையில் நான் அற்புதக் காட்சிகள் பலவற்றைக் கண்டேன். தவம் பயில்வதற்கு ஏற்புடையதும், அற்புதமானதும், சிறந்ததுமான ஓர் ஆசிரமத்தைக் கண்டேன்.(45)

உபமன்யு! – அநுசாஸனபர்வம் பகுதி – 14ஆ-இமயம் சென்ற கிருஷ்ணன்; உபமன்சுவின் ஆசிரமத்தை அடைந்தது; அந்த ஆசிரமம் இருந்த பகுதி குறித்த வர்ணனை; கிருஷ்ணனுக்கும் உபமன்யுவுக்கும் இடையில் நடந்த உரையாடல்; சிவனின் பெருமையைக் கிருஷ்ணனுக்குச் சொன்ன உபமன்யு…

இனிமை நிறைந்த அந்த ஆசிரமம், வியாக்ரபாதரின் வழித்தோன்றலான உயர் ஆன்ம உபமன்யுவினுடையதாகும். தேவர்கள், கந்தர்வர்களால் மதித்து மெச்சபடும் அந்த ஆசிரமமானது வேத அழகில் மறைந்திருப்பதாகத் தெரிந்தது.(46) மலர்கள் மற்றும் கனிகளுடன் கூடியவையான தவங்கள், ககுபங்கள் {மருது}, கடம்பங்கள் {கடம்பு}, தென்னை, குருவாகங்கள் {மருதாணி}, கேதகங்கள் {தாழை}, நாவல், பாடலங்கள் {பாதிரி}, ஆல், வருணகங்கள் {வருணம்}, வத்ஸநாபங்கள், வில்வங்கள், ஸரளங்கள், கபிட்டங்கள் {விளா}, பியாளங்கள் {பரியாளம்}, சாலங்கள் {ஆச்சா}, பனைகள்,(47) பதரிகள் {இலந்தை}, இங்குடிகள் {குருக்கத்தி}, புன்னகங்கள் {புன்னை}, அசோகங்கள், ஆம்ரங்கள் {மா}, {பச்சிலை, இலுப்பை}, கோவிதாரங்கள், சண்பகங்கள், பலா மரங்கள்,(48) ஆகியவற்றாலும் இன்னும் பிற மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த ஆசிரமம் வாழை மரங்களின் நேர்த் தண்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(49) உண்மையில் அவ்வாசிரமம், பல்வேறு வகைப் பறவைகளுக்கு உணவாக அமையும் பல்வேறு வகைக் கனிகளையுடைய பல்வேறு வகை மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் (வேள்வி நெருப்புகளின்) சாம்பற்குவியல்கள் {திருநீற்றுக் குவியல்கள்} உரிய இடங்களில் வீசப்பட்டிருந்தது அக்காட்சிக்கு மேலும் அழகூட்டியது.(50)

மேலும் அது புள்ளிமான்கள், குரங்குகள், புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் பல்வேறு மான்வகைகள், மயில்கள், பூனைகள் மற்றும் பாம்புகளால் நிறைந்திருந்தது.(51) உண்மையில், பெரும் எண்ணிக்கையிலான வேறு விலங்குகளும், எருமைகளும், கரடிகளும் அங்கிருந்தன. தெய்வீக மங்கையரின் இனிய இசையைச் சுமந்தபடியே தொடர்ந்து இனிய தென்றல் அங்கே வீசிக்கொண்டிருந்தது.(52) ஓ! வீரரே, மலையருவிகள் மற்றும் ஊற்றுகளின் பிதற்றல்கள், சிறகு படைத்த இசைக்குழுவின் {பறவைகளின்} இனிய கூவல்கள், யானைகளில் பிளிறல்கள், கின்னரர்களின் இனிய இசை, சாமங்களைப் பாடும் தவசிகளின் மங்கலக் குரல், மற்றும் இனிமை நிறைந்த பல்வேறு இசைகளுடன் கூடிய அந்த ஆசிரமம் மிக அழகானதாக இருந்தது. நான் கண்ட அந்த இனிமை நிறைந்த ஆசிரமத்தைப் போன்று மற்றொன்றைக் கற்பனையிலும் காண முடியாது. அந்த ஆசிரமத்தில் புனித நெருப்பைப் பாதுகாக்கும் நோக்கில் எங்கும் மலர்ந்த கொடிகளால் மறைக்கப்பட்டிருந்த பெரிய வீடுகளும் {அக்னி ஹோத்ர சாலைகளும்} இருந்தன.(53,54) புனிதமான தெளிந்த நீரைக் கொண்ட கங்கை ஆற்றினால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. உண்மையில் அந்த ஜானுவின் மகள் {கங்கை} எப்போதும் அங்கே இருந்தாள்.[6] அறவோர் அனைவரில் முதன்மையானவர்களும், உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், சக்தியில் நெருப்புக்கு ஒப்பானவர்களுமான பல தவசிகளாலும் அது நிறைந்திருந்தது.(55)அந்தத் தவசிகளில் சிலர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தனர், சிலர் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். சிலர் ஜபம் அல்லது புனித மந்திரங்களை அமைதியாகப் பாராயணம் செய்வதில் ஈடுபட்டனர். சிலர் கருணை மற்றும் வேறு சில அறங்களைப் பயில்வதன் மூலம் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்துவதில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் தியான யோகத்தின் தியானத்தில் அர்ப்பணிப்புள்ள யோகியராக இருந்தனர். அவர்களில் சிலர் புகையை மட்டுமே உண்டு வாழ்ந்தனர், வேறு சிலர் நெருப்பையும், வேறு சிலர் பாலையும் உண்டு வாழ்ந்தனர். இவ்வாறே அந்த ஆசிரமம் மறுபிறப்பாளர்களில் முதன்மையான பலரால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(56) அங்கே இருந்த சிலர், கைகளைப் பயன்படுத்துவதைத் துறந்து பசுவைப் போல உண்ணவும், குடிக்கவும் செய்யும் நோன்பை நோற்றுவந்தனர். சிலர் தானியங்களை நசுக்க இரு கற்துண்டுகளை மட்டுமே பயன்படுத்தினர், மேலும் சிலர் அக்காரியத்திற்காகத் தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்தினர். சிலர் சந்திரனின் கதிர்களைப் பருகுவதன் மூலமும், நுரையை மட்டுமே பருகியும் வாழ்ந்து வந்தனர். வேறு சிலர் மானைப் போல வாழும் நோன்பைக் கைக்கொண்டிருந்தனர்[7].(57) சிலர் அரசம்பழங்களை உண்டு வாழ்கின்றனர், சிலர் நீரிலேயே கிடக்கின்றனர். சிலர் கந்தைகளை உடுத்திக் கொள்கின்றனர், சில மான்தோல்களையும், சிலர் மரவுரிகளையும் உடுத்துகின்றனர்.(58) உண்மையில், முதன்மையான வகையைச் சார்ந்த பல்வேறு தவசிகள் இவற்றையும், இன்னும் வலிநிறைந்த பிற நோன்புகளை நோற்பதையும் கண்டேன். பிறகு நான் அந்த ஆசிரமத்திற்குள் நுழைய விரும்பினேன்.(59) உண்மையில் அந்த ஆசிரமம், தேவர்கள், உயர் ஆன்மாக்கள், சிவன், அறச் செயல்களைச் செய்யும் அனைத்து உயிரினங்களாலும் மதித்துத் துதிக்கப்பட்டது. இவ்வாறு சொல்லப்படும் அஃது ஆகாயத்திலுள்ள சந்திர வட்டிலைப் போலவே இமயச் சாரலில் மிக அழகானதாக இருந்தது.(60)சுடர்மிகு தவங்களைச் செய்த உயர் ஆன்ம தவசிகளுடைய அருகாமையின் விளைவாக அங்கே கீரிப்பிள்ளை பாம்புடனும், புலியானது மானுடனும் தங்கள் இயல்பான பகைமையை மறந்து விளையாடிக் கொண்டிருந்தன.(61) அனைத்து உயிரினங்களும் திளைத்திருக்கும் அந்த முதன்மையான ஆசிரமத்தில் வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் முழுமையாக நன்கறிந்த முதன்மையான பிராமணர்கள் பலரும்,(62) கடினமான நோன்புகளை நோற்பதற்காகக் கொண்டாடப்படும் உயர் ஆன்ம முனிவர்கள் பலரும் வசித்திருப்பதை நான் கண்டேன். அந்த ஆசிரமத்தில் நான் நுழைந்தபோது, தலையில் சடாமுடி தரித்தவரும், மரவுரி உடுத்தியவரும்,(63) தவங்கள் மற்றும் சக்தியால் சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்தவரும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவரும், சீடர்களால் பணிவிடை செய்யப்படுபவரும், வயதில் இளமையானவருமான ஒரு முதன்மையான பிராமணரைக் கண்டேன்.(64)

அவரது பெயர் உபமன்யு ஆகும். தலைவணங்கி நின்ற என்னிடம் அவர் {உபமன்யு}, “ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {புண்டரீகாக்ஷா}, உனக்குநல்வரவு. இன்று நீ இங்கு வந்திருப்பதால் எங்கள் தவங்களைக் கனிவதை நாங்கள் காண்கிறோம். துதிக்கத்தக்கவனாக இருப்பினும் எங்களை நீ துதிக்கிறாய். காணத்தகுந்தவனாக இருப்பினும் நீ எங்களைக் காண விரும்புகிறாய்” என்றார்.(65) நான் என் கரங்களைக் கூப்பி அவரது ஆசிரமத்தில் வசிக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் நலத்தையும், அவருடைய சீடர்களின் ஆன்ம முன்னேற்றத்தையும் குறித்து விசாரித்தேன்.(66)

சிறப்புமிக்கவரான அந்த உபமன்யு, அப்போது மிக இனிமையான வார்த்தைகளை எனக்குச் சொன்னார் “ஓ! கிருஷ்ணா, உன்னைப் போன்றே ஒரு மகனை நீ நிச்சயம் அடைவாய்.(67) கடுந்தவங்களைப் பயின்று உயிரினங்கள் அனைத்தின் தலைவனான ஈசானனை நீ நிறைவடையச் செய்வாயாக. அதோக்ஷஜன் {எப்போதும் கீழே வீழாதவன்} என்றும் அழைக்கப்படும் அந்தத் தெய்வீக ஆசான், தன் அருகே இருக்கும் தன் மனைவியுடன் சேர்ந்து இங்கே விளையாடிக் கொண்டிருக்கிறான்.(68) ஓ! ஜனார்த்தனா, பழங்காலத்தில் இங்கேதான் முனிவர்கள் அனைவருடன் கூடிய தேவர்கள், தங்கள் தவங்கள், பிரம்மச்சரியம், வாய்மை மற்றும் தற்கட்டுப்பாட்டின் மூலம் தேவர்களில் முதன்மையானவனை நிறைவடையச் செய்து உயர்ந்த விருப்பங்கள் பலவும் கனியும் தன்மையை அடைவதில் வென்றனர். உண்மையில் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் சக்திகள் மற்றும் தவங்கள் அனைத்தின் பரந்த கொள்ளிடமாக இருக்கிறான்.(69,70) ஓ! எதிரிகளை அழிப்பவனே, நீ யாரைத் தேடுகிறாயோ அந்தச் சிந்தனைக்கெட்டாத தேவன், நன்மை மற்றும் தீமை நிறைந்த அனைத்துப் பொருட்களையும் மீண்டும் தன்னுள் ஈர்த்து இருப்புக்கு வந்து தன் மனைவியுடன் இங்கே வாழ்கிறான்.(71) ஹிரண்யகசிபு என்ற பெயரில் பிறந்தவனும், மேரு மலைகளையே அசைக்கும் பெரும்பலம் கொண்டவனுமான தானவன், மஹாதேவனிடம் இருந்து தேவர்கள் அனைவரின் பலத்தையும் பெற்றுக் கொண்டு ஒரு கோடி வருடங்கள் அதை அனுபவித்தான்.(72)

அவனது மகன்கள் அனைவரிலும் முதன்மையானவனும் {மூத்த மகனும்}, மந்தாரன் என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான ஒருவன், மஹாதேவனிடம் இருந்து பெற்ற வரத்தின் மூலம் சக்ரனோடு பத்து லட்சம் வருடங்கள் போரிடுவதில் வென்றான்.(73) ஓ! கேசவா, அண்டத்தின் துன்பத்திற்குப் பெருங்காரணனாக இருந்த அவனுடைய {அந்த மந்தாரனுடைய} உடலில், விஷ்ணுவின் பயங்கரச் சக்கரத்தாலும், இந்திரனின் வஜ்ரத்தாலும் சிறு தடயத்தையும் ஏற்படுத்த முடியவில்லை[8].(74) ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணா}, நீ கொண்டிருக்கும் சக்கரமானது, நீருக்குள் வாழ்ந்து வந்தவனும், தன் பலத்தில் செருக்குடையவனுமான ஒரு தைத்தியனைக் கொன்ற பிறகு, மஹாதேவனால் உனக்குக் கொடுக்கப்பட்டது.(75) சுடர்மிக்க சக்தியைக் கொண்டதும், நெருப்பைப் போன்றதுமான அந்தச் சக்கரம், காளையைத் தன் சின்னமாகக் கொண்ட பெருந்தேவனால் படைக்கப்பட்டதாகும். அற்புதம் நிறைந்ததும், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டதுமான அஃது அந்தச் சிறப்புமிக்கத் தேவனாலேயே உனக்குக் கொடுக்கப்பட்டது.(76) அஃது அதன் சுடர்மிக்க சக்தியின் விளைவால் பிநாகைபாணியைத் தவிர வேறு எவனாலும் பார்க்க முடியாததாகும். அதன் காரணமாகவே பவன் அதற்குச் சுதர்சனம் என்ற பெயரைச் சூட்டினான்.(77) அந்தக் காலத்தில் இருந்தே உலகம் எங்கும் சுதர்சனம் என்ற பெயர் இருப்புக்கு வந்தது. ஓ! கேசவா, அந்த ஆயுதம் கூட மூவுலகங்களிலும் ஒரு தீய கோளைப் போலத் தோன்றியவனும், ஹிரண்யகசிபுவின் மகனுமான மந்தாரனின் உடலில் சிறு தடத்தையும் ஏற்படுத்த தவறியது.(78) மஹாதேவனிடம் வரத்தைப் பெற்றவனும், பெரும் பலத்துடன் கூடியவனுமான அந்தத் தீய கோளின் உடலில் உன்னுடைய சக்கரத்தைப் போன்ற நாற்றுக்கணக்கான சக்கரங்களாலும், சக்ரனின் வஜ்ராயுதத்தைப் போன்ற நூற்றுக்கணக்கான வஜ்ராயுதங்களாலும் சிறு காயத்தைக்கூட ஏற்படுத்த முடியவில்லை.(79) வலிமைமிக்கவனான மந்தாரனால் பீடிக்கப்பட்ட தேவர்கள், அவனையும், மஹாதேவனிடம் இருந்து வரங்களைப் பெற்ற அவனுடைய துணைவர்களையும் கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர்.(80)வித்யுத்பிரபன் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு தானவனிடம் நிறைவடைந்த மஹாதேவன் அவனுக்கு மூவுலகங்களின் ஆட்சியுரிமையை அருளினான். அந்தத் தானவன் மூவுலகங்களின் ஆட்சியுரிமையில் ஒரு லட்சம் ஆண்டுகள் நீடித்தான்.(81) மஹாதேவன் அவனிடம் {வித்யுத்பிரபனிடம்}, “நீ என்னுடைய பணியாட்களில் ஒருவனாக இருப்பாய்” என்றான். உண்மையில் அந்தப் பலமிக்கத் தலைவன் {சிவன்} அவனுக்குக் கோடிக்கணக்கான பிள்ளைகளை வரமாக அளித்தான். பிறப்பில்லாதவனான அந்த அனைத்து உயிரினங்களின் ஆசான் குசத்வீபம் என்ற பெயருடைய ஒரு நாட்டை மேலும் ஒரு வரமாக அவனுக்கு அளித்தான்.(82)

சதமுகன் என்ற பெயரையுடைய மற்றொரு பேரசுரன் பிரம்மனால் படைக்கப்பட்டான். அவன் தன்னுடலின் சதையையே (மஹாதேவனுக்கான காணிக்கையாக) வேள்வி நெருப்பில் நூறு வருடங்கள் ஊற்றிக் கொண்டிருந்தான்.(83) இத்தகைய தவங்களால் நிறைவையடைந்த சங்கரன் அவனிடம் {சதமுகனிடம்}, “நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டான். அதற்குச் சதமுகன், “ஓ! அற்புதமிக்கவனே, புதிய உயிரினங்களையும், விலங்குகளையும் படைக்கும் சக்தி எனக்கு வேண்டும்.(84) ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நித்திய சக்தியையும் எனக்குக் கொடுப்பாயாக” என்று மறுமொழி கூறினான்[9]. அவன் இவ்வாறு சொன்னதும் அந்தப் பலமிக்கத் தலைவன் அவனிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்றான்.(85)பழங்காலத்தில் சுயம்புவான பிரம்மன், பிள்ளைகளை அடையும் நோக்கில் யோகத்தில் தன் மனத்தைக் குவித்து முன்னூறு ஆண்டுகளாக ஒரு வேள்வியைச் செய்தான்.(86) மஹாதேவன் அந்த வேள்வியின் தகுதிகளுக்கு ஏற்ற திறனைக் கொண்ட ஓராயிரம் மகன்களை அவனுக்கு அளித்தான். ஓ! கிருஷ்ணா, தேவர்களால் பாடப்படும் அந்த யோகத் தலைவனை நீ அறிவாய் என்பதில் ஐயமில்லை.(87) யாஜ்ஞவல்கியர் என்ற பெயரில் அறியப்படும் முனிவர் பெரும் அறவோனாவார். அவர் மஹாதேவனைத் துதித்ததன் மூலம் பெரும் புகழை அடைந்தார்.(88) பராசரரின் மகனும், யோகத்தில் ஆன்மாவை நிலைக்கச் செய்யும் பெருந்தவசியுமான வியாசர் சங்கரனைத் துதித்ததன் மூலம் பெரும்புகழை அடைந்தார்.(89)

முன்பொரு சந்தர்ப்பத்தில் வாலகில்யர்கள் மகவத்தால் {இந்திரனால்} அவமதிக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த அவர் சிறப்புமிக்க ருத்திரனை நிறைவடையச் செய்தனர்.(90) தேவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த அண்டத்தில் தலைவன், வாலகில்யர்களால் இவ்வாறு நிறைவை அடைந்து, அவர்களிடம், “இந்திரனிடம் இருந்து அமுதத்தை அபகரிக்கும் ஒரு பறைவையைப் படைப்பதில் உங்கள் தவத்தின் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள்” என்றான்.(91) முன்பொரு சந்தர்ப்பத்தில் மஹாதேவனின் கோபத்தின் மூலம் நீர்கள் {நீர்நிலைகள் அனைத்திலும் உள்ள நீர்) அனைத்தும் மறைந்தன. தேவர்கள் சப்தகபாலம் என்றழைக்கப்படும் வேள்வியைச் செய்து அவனை நிறைவடையச் செய்து, அவனது அருளின் மூலம் உலகங்களில் வேறு நீர் பாயும்படி செய்தார்கள். உண்மையில், அந்த முக்கண் தேவன் நிறைவடைந்தபோது, மீண்டும் உடனடியாக உலகில் நீர் தோன்றியது.(92)

வேதங்களை அறிந்தவளான அத்ரியின் மனைவி {அனசூயை} ஒரு கோபத்தில் தன் கணவனைக் கைவிட்டு, “அந்தத் தவசியின் ஆதிக்கத்தின் கீழ் இனி ஒருபோதும் வாழ மாட்டேன்” என்றாள்.(93) இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவள் மஹாதேவனின் பாதுகாப்பை நாடினாள். தன் கணவரான அத்ரியிடம் கொண்ட அச்சத்தால் அவள் {மஹாதேவனின் பாதுகாப்பை நாடி} உணவனைத்தையும் துறந்து முன்னூறு வருடங்களைக் கழித்தாள்.(94) அக்காலம் முழுவதும் அவள் பவனை நிறைவடையச் செய்யும் நோக்கத்தால் உலக்கைகளில் மீது உறங்கினாள். பிறகு அந்தப் பெருந்தேவன் அவள் முன்பு தோன்றி புன்னகைத்தவாறே, “நீ ஒரு மகனை அடைவாய்.(95) கணவனின் தேவை இல்லாமல், ருத்திரனின் அருளால் மட்டுமே நீ ஒரு மகனைப் பெறுவாய். தந்தையின் குலத்தில் பிறக்கும் அந்த மகன் தன் தகுதிக்குத்தக்க உன் பெயராலேயே {தத்தாத்ரேயர் என்ற பெயரில்} கொண்டாடப்படுவான்” என்றான்[10].(96ஓ! மதுசூதனா, சிறப்புமிக்க விகர்ணரும் {விகர்ண முனிவரும்} கூட மஹாதேவனிடம் முழுமையான அர்ப்பணிப்புக் கொண்டு, கடுந்தவங்களால் அவனை நிறைவடையச் செய்து, மகிழ்ச்சியையும் உயர்ந்த வெற்றியையும் அடைந்தான்.(97) ஓ! கேசவா, கட்டுப்பாடுடைய ஆன்மாவைக் கொண்ட சாகல்யரும்[11] கூடத் தொள்ளாயிரம் ஆண்டுகள் மனோ வேள்வி செய்து பவனைத் துதித்தார்.(98) அவரிடம் நிறைவை அடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் அவரிடம், “நீ பேராசானாவாய் {கிரந்தகர்த்தாவாவாய்}. ஓ! மகனே, உனது புகழ் மூவுலகங்களிலும் வற்றாமல் இருக்கும்.(99) பெரும் முனிவர்கள் பிறப்பால் உன் குலம் முடிவற்றதாக அவர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். உன் மகன் பிராமணர்களில் முதன்மையானவனாகி, உன் படைப்பில் சூத்திரங்களை உண்டாக்குவான்” என்றான்.(100) கிருத யுகத்தில் சாவர்ணி என்ற பெயரில் கொண்டாடப்பட்ட ஒரு முனிவர் இருந்தார். அவர் இந்த ஆசிரமத்தில் ஆறாயிரம் வருடங்கள் கடுந்தவமிருந்தார்.(101) சிறப்புமிக்க ருத்திரன், “ஓ! பாவமற்றவனே, நான் உன்னிடம் நிறைவடைந்தேன். முதுமை அல்லது மரணத்திற்கு ஆட்படாதவனும், உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுபவனுமான ஓர் ஆசானாக நீ இருப்பாய்” என்றான்.(102)

ஓ! ஜனார்த்தனா, அர்ப்பணிப்பில் நிறைந்த சக்ரனும் {இந்திரனும்} கூடப் பழங்காலத்தில் வாராணசியில் {காசியில்}, வெட்ட வெளியையே தன் ஆடைகளாகக் கொண்டவனும், ஏற்புடைய தைலமாகச் சாம்பலைப் பூசிக் கொள்பவனுமான மஹாதேவனைத் துதித்தான்.(103) இவ்வாறு மஹாதேவனைத் துதித்த அவன் தேவர்களின் அரசுரிமையை அடைந்தான். நாரதரும் கூடப் பழங்காலத்தில் அர்ப்பணிப்புமிக்க இதயத்துடன் பெரும் பவனைத் துதித்தார். தேவகுருவுக்குக் குருவான அந்த மஹாதேவன் அவரிடம் நிறைவடைந்து, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(104) “சக்தியிலும், தவங்களிலும் உனக்கு இணையானவர்களாக யாரும் இருக்க மாட்டார்கள். பாட்டினாலும், இசைக்கருவியினாலும் எப்போதும் நீ எனக்குப் பணிவிடை செய்வாயாக” என்றான்.(105) ஓ! மாதவா, ஓ! தலைவா, பழங்காலத்தில், உயிரினங்கள் அனைத்தின் ஆசானான அந்தத் தேவ தேவனைக் காண்பதில் நான் எவ்வாறு வென்றேன் என்பதைக் கேட்பாயாக.(106) மேலும், ஓ! பெரும்பலம் கொண்டவனே, உயர்ந்த சக்தியுடன் கூடிய அந்தச் சிறப்புமிக்கத் தேவனைக் கட்டுப்படுத்தப்பட்ட புலன்கள் மற்றும் மனத்துடன் எந்த நோக்கத்திற்காக இருப்புக்கு அழைத்தேன் என்பதையும் விபரமாகக் கேட்பாயாக.(107) ஓ! பாவமற்றவனே, தேவதேவனான அந்த மஹேஸ்வரனிடம் பெற்றத்தில் இருந்து நான் அடைந்த வெற்றிகள் அனைத்தையும் முழு விபரங்களுடன் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(108)

சிவ வடிவங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 14இ-உபமன்யு தாம் சிவனைக் கண்ட வகையைக் கிருஷ்ணனுக்குச் சொல்லத் தொடங்கியது; தமது அன்னையிடம் பால் உணவு கேட்ட உபமன்யு; பால் உணவு கொடுக்க முடியாத அவரது அன்னை சிவனை வேண்டச் சொன்னது; சிவனின் இருப்புநிலைகளை உபமன்யுவுக்குச் சொன்ன அவரது அன்னை…

{உபமன்யு தொடர்ந்தார்}, பழங்காலத்தில் கிருத யுகத்தில், ஓ! மகனே, வியாக்ரபாதர் என்ற பெயரில் பெரும் புகழைக் கொண்ட ஒரு முனிவர் இருந்தார். அவர் தனது ஞானத்திற்காகவும், வேதங்கள் மற்றும் அவற்றின் அங்கங்களில் கொண்ட திறனுக்காகவும் கொண்டாடப்பட்டார்.(109) அந்த முனிவரின் மகன்களாக நானும், என் தம்பியாகத் தௌமியனும் பிறந்தோம். ஓ! மாதவா, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட சில முனிவர்களின் ஆசிரமத்தை தௌமியனின் துணையுடன் நான் அடைந்தேன். அங்கே ஒரு பசுவிடம் பால் கறக்கப்படுவதைக் கண்டேன். நான் பாலைக் கண்டேன், அஃது அமுதத்துக்கு ஒப்பான சுவையுடையதாக எனக்குத் தோன்றியது.(111) பிறகு வீடு திரும்பிய நான், குழந்தைத்தனத்தால் உந்தப்பட்டு என் அன்னையிடம், “பாலில் தயாரிக்கப்பட்ட ஏதாவது உணவைத் தருவாயாக” என்று கேட்டேன்.(112) 

அப்போது வீட்டில் பாலில்லை என்பதால், நான் அதைக் கேட்டதும் என் அன்னை மிகவும் வருத்தமடைந்தாள். ஓ! மாதவா, என் அன்னை (அரிசி) மாவைத் தண்ணீரில் கொதிக்கவைத்தாள்.(113) நீரானது வெண்ணிறமானது, என் தாய் அஃதை எங்கள் முன்பு வைத்து, பாலென்று சொல்லி எங்களைக் குடிக்கச் சொன்னாள். அதற்கு முன்பே ஒரு சந்தர்ப்பத்தில் செழிப்புமிக்கவரான எங்கள் உறவினரின் வசிப்பிடத்திற்கு ஒரு வேள்விக்காக என் தந்தை அழைத்துச் சென்ற போது நான் பாலைக் குடித்திருக்கிறேன்.(114) அந்தச் சந்தர்ப்பத்தில் தேவர்களைத் திளைக்கச் செய்யும் ஒரு தெய்வீகப் பசுக் கறக்கப்பட்டது. சுவையில் அமுதத்திற்கு ஒப்பான அவளது பாலைக் குடித்திருந்ததால்,(115) பாலின் தன்மையை நான் அறிந்திருந்தேன். எனவே, பாலென்று சொல்லி என் அன்னை கொடுத்த பொருளின் தோற்றத்தை உடனடியாகப் புரிந்து கொண்டேன். ஓ! மகனே, உண்மையில் அந்த மாவு எனக்கு எந்த இன்பத்தையும் அளிக்கவில்லை.(116)

குழந்தைத்தனத்தால் உந்தப்பட்ட நான் என் தாயாரிடம், “ஓ! தாயே, நீ எனக்குக் கொடுத்தது பாலில் தயாரிக்கப்பட்ட உணவல்ல” என்றேன்.(117)

ஓ! மாதவா, இதனால் துயரத்தில் நிறைந்த என் அன்னை பெற்ற பாசத்தால் என்னைத் தழுவி உச்சி முகர்ந்து, என்னிடம், “ஓ! குழந்தாய், தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட தவசிகளால் பாலில் தயாரிக்கப்பட்ட உணவை எங்கே பெற முடியும்? அத்தகைய மனிதர்கள், எப்போதும் காட்டில் வசித்து, கிழங்குகள், வேர்கள் மற்றும் கனிகளை உண்டு வாழ்கின்றனர்.(119) ஓ! குழந்தாய், மலைகளையும் காடுகளையும் இல்லங்களாகக் கொண்டவர்களும், வாலகில்யர்களின் ஓய்விடங்களான ஆற்றங்கரைகளில் வாழ்பவர்களுமான நம்மால் பாலை எங்குப் பெற முடியும்?(120) ஓ! அன்புக் குழந்தாய், நாம் (சில வேளைகளில்) காற்றையும், சில வேளைகளில் நீரையும் உண்டு வாழ்கிறோம். காடுகள் மற்றும் சோலைகளுக்கு மத்தியில் உள்ள ஆசிரமங்களில் நாம் வாழ்கிறோம். கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழும் மனிதர்கள் உண்ணும் அனைத்து வகை உணவுகளையும் தவிர்ப்பதே நமது வழக்கம். காட்டில் விளையும் உணவை உண்பதே நமது வழக்கம்.(121) ஓ! குழந்தாய், சுரபியின் சந்ததி {பசுக்கள்} ஏதும் இல்லாத காட்டில் பால் கிடைக்காது[12]. ஆற்றங்கரைகள், அல்லது குகைகள், அல்லது மலைச்சாரல்கள், அல்லது தீர்த்தங்கள், அல்லது அதுபோன்ற வேறுவகை இடங்களில் வசித்து,(122) சிவனையே நமது உயர்ந்த புகலிடமாகக் கொண்டு தவங்களிலும், புனித மந்திரங்களை உரைப்பதிலும் நம் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். ஓ! குழந்தாய், வரமளிப்பவனும், முக்கண்களைக் கொண்டவனும், மங்கா மகிமை கொண்டவனுமான அந்த ஸ்தாணுவை நிறைவடையச் செய்யாமல்,(123) பாலில் தயாரிக்கப்பட்ட உணவையும், நல்ல ஆடைகளையும், உலகில் இன்பத்திற்குரிய பிற பொருட்களை ஒருவன் எங்கிருந்து அடைவான்? ஓ! அன்பு மகனே, முழு ஆன்மாவுடன் சங்கரனிடம் உன்னை அர்ப்பணிப்பாயாக {சங்கரனிடம் நீ பக்தி கொள்வாயாக}.(124) ஓ! குழந்தாய், அவனது அருளின் மூலம் உனது விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் நீ நிச்சயம் அடைவாய்” என்றாள்.

ஓ! பகைவர்களைக் கொல்பவனே, அந்நாளில் என் தாயாரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நான்,(125) மதிப்புடன் என் கரங்களைக் கூப்பி அவளை வணங்கி, “ஓ! தாயே, இந்த மஹாதேவன் எவன்? என்ன வகையில் அவனை ஒருவனால் நிறைவடையச் செய்ய இயலும்?(126) அந்தத் தேவன் எங்கே வசிக்கிறான்? அவனை எவ்வாறு காணலாம்? எதனால் அவன் நிறைவை அடைவான்? அந்தச் சர்வனின் வடிவம் எது? அவனைக் குறித்த அறிவை அடைவதில் ஒருவன் எவ்வாறு வெல்லலாம்? ஓ! தாயே, என்னிடம் நிறைவை அடைந்தால், அவனை எனக்குக் காட்டுவாயாக” என்றேன்.(127)

ஓ! கிருஷ்ணா, ஓ! கோவிந்தா, நான் இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு என் தாயார் பெற்ற பாசத்தால் நிறைந்து என் தலையை முகர்ந்த போது அவளது கண்களைக் கண்ணீர் மறைத்தது.(128) ஓ! மதுசூதனா, ஓ! தேவர்களில் சிறந்தவனே, அப்போது என் உடலை மென்மையாகத் தட்டிக் கொடுத்த என் தாயார், பெரும் பணிவுடன் கூடிய தொனியில் பின்வரும் வார்த்தைகளை என்னிடம் சொன்னாள்.(129) என் தாயார், “தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் மஹாதேவனை அறிவது மிகக் கடினமாகும். இந்த மனிதர்கள் அவனைத் தங்கள் இதயங்களில் சுமக்க, அல்லது அவனைப் புரிந்துகொள்ள வல்லவர்களல்ல. அவர்களால் அவனைத் தங்கள் மனங்களில் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அவர்களால் அவனைப் பற்றவும் முடியாது, மேலும் அவர்களால் அவனைக் காணவும் முடியாது,(130) அவனது வடிவங்கள் பலவாகும் என ஞானிகள் உறுதியாகச் சொல்கின்றனர். மேலும் அவன் வசிக்கும் இடங்களும் பலவாகும். அவனது அருளின் வடிவங்கள் பலவாகும்.(131) ஈசனின் சிறந்த செயல்கள் அனைத்தையும், பழங்காலத்தில் அவன் ஏற்ற வடிவங்கள் அனைத்தையும் என அவற்றின் விபரங்களுடன் புரிந்து கொள்ள எவன் இருக்கிறான்?(132) சர்வன் எவ்வாறு விளையாடுவான்?, எவ்வாறு நிறைவை அடைவான் என்ற யாரால் சொல்ல முடியும்? அண்டத்தின் வடிவிலான மஹேஸ்வரன் அனைத்து உயிரினங்களின் இதயங்களிலும் வசிக்கிறான்.(133) ஈசானனின் மங்கலமான அற்புதச் செயல்கள் குறித்து முனிவர்கள் உரையாடும்போது, தன்னை வழிபடுபவர்களிடம் கருணையால் தூண்டப்பட்டு அவன் எவ்வாறு நேரடியாகக் காட்சி கொடுப்பான் என்பதைக் கேட்டிருக்கிறேன்.(134) பழங்காலத்தில் மஹாதேவன் ஏற்ற பல்வேறு வடிவங்கள் குறித்த செய்திகளைப் பிராமணர்களுக்குக் கருணை காட்டும் நோக்கில் சொர்க்கவாசிகள் சொல்லியிருக்கின்றனர். அவற்றைக் குறித்து நீ என்னிடம் கேட்கிறாய். ஓ! மகனே, நான் அவற்றை உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றாள்.(135)

என் அன்னை தொடர்ந்தாள், “பிரம்மன், விஷ்ணு, தேவர்களின் தலைவன், ருத்திர்கள், ஆதித்தியர்கள், அஸ்வினிகள், விஸ்வேதேவர்கள் என்றழைக்கப்படும் தேவர்கள் ஆகிய வடிவங்களைப் பவன் {சிவன்} ஏற்கிறான்.(136) மனிதர்கள், பெண்கள், பிரேதங்கள், பிசாசங்கள், கிராதர்கள், சபரர்கள், நீர்வாழ் உயிரினங்கள் என அனைத்தின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். காடுகள் மற்றும் சோலைகளில் வசிக்கும் சபரர்களின் வடிவங்களையும் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் ஏற்கிறான்.(137) ஆமைகள், மீன்கள், சங்குகள் ஆகிய வடிவங்களையும் அவன் ஏற்கிறான். மனிதர்கள் ஆபரணங்களாகப் பயன்படுத்தும் பவளக் கொடிகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(138) யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள், தைத்தியர்கள், தானவர்கள் ஆகியோரின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். உண்மையில் அந்தச் சிறப்புமிக்கத் தேவன், பொந்துகளில் வாழும் உயிரினங்கள் அனைத்தின் வடிவங்களையும் ஏற்கிறான்.(139) புலிகள், சிங்கங்கள், மான்கள், ஓநாய்கள், கரடிகள், பறவைகள், ஆந்தைகள் மற்றும் நரிகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(140)

அன்னங்கள், காக்கைகள், மயில்கள், ஓணான்கள், பல்லிகள் மற்றும் நாரைகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். கொக்குகள், கழுகுகள், சக்கரவாகங்கள் ஆகிய வடிவங்களையும் அவனே ஏற்கிறான்.(141) உண்மையில் அவன், சாசங்கள் மற்றும் மலைகளின் வடிவங்களையும் ஏற்கிறான். ஓ! மகனே, பசுகள், யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள் ஆகிய வடிவங்களையும் மஹாதேவனே ஏற்கிறான்.(142) ஆடுகள், சிறுத்தைப்புலிகள் மற்றும் பல்வேறு வகை விலங்குகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான். அழகிய தோகைகளைக் கொண்ட பல்வேறு வகைப் பறவைகளின் வடிவங்களையும் பவனே ஏற்கிறான்.(143) பிராமணர்களுக்கு மத்தியில் தண்டங்கள், குடைகள் மற்றும் கமண்டலங்களுடன் இருக்கும் மனிதர்களின் வடிவங்களைத் தரிப்பவன் மஹாதேவனே. சில வேளைகளில் அவன் ஆறு முகம் படைத்தவனாகிறான், சில வேளைகளில் பல முகங்களைத் தரித்தவனாகிறான். சில வேளைகளில் அவன் மூன்று கண்களை உடைய வடிவங்களையும், பல தலைகளையுடைய வடிவங்களையும் ஏற்கிறான்.(144) சில வேளைகளில் பல கோடி கால்களைக் கொண்ட வடிவங்களையும், எண்ணற்ற வயிறுகள் மற்றும் முகங்களைக் கொண்ட வடிவங்களையும், எண்ணற்ற கரங்கள் மற்றும் எண்ணற்ற இடைகளையுடைய வடிவங்களையும் அவன் ஏற்கிறான். சில வேளைகளில் அவன் எண்ணற்ற கணங்கள் மற்றும் பூதங்கள் சூழ இருக்கிறான்.(145) முனிவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் சாரணர்களின் வடிவங்களை அவனே ஏற்கிறான். சில வேளைகளில் அவன் சாம்பற் {திருநீறு} பூசப்பட்ட வெண்ணிறத்துடன், நெற்றியில் அரை மதியால் அலங்கரிக்கப்பட்ட வடிவத்தை ஏற்கிறான்.(146)

பல்வேறு வகைக் குரல்களில் பாடப்படும் பல்வேறு துதிகளால் துதிக்கப்படுபவனும், புகழ்மாலைநிறைந்த பல்வேறு மந்திரங்களால் வழிபடப்படுபவனும், சில வேளைகளில் சர்வன் என்றழைக்கப்படுபவனுமான அவன், அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தையும் அழிப்பவனாக இருக்கிறான், மேலும் அனைத்து உயிரினங்களும் சார்ந்திருக்கும் பொதுவான அடித்தளமாக அவனே இருக்கிறான்.(147) மஹாதேவனே அனைத்து உயிரினங்களின் ஆன்மா ஆவான். அவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான். (கடமைகள் {தர்மங்கள்} மற்றும் சடங்குகள் குறித்த) உரைகள் அனைத்தையும் பேசுபவன் அவனே ஆவான். எங்கும் வசிக்கும் அவன், அண்ட உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வசிப்பவனாக அறியப்பட வேண்டும்.(148) தன்னை வழிபடும் ஒவ்வொருவனாலும் வளர்க்கப்படும் ஆசைகளை அறிந்தவன் அவன். தன்னைத் துதிப்பவனின் நோக்கத்தை அறிபவன் அவன். உனக்கு விருப்பமிருந்தால், அந்தத் தேவர்களுடைய தலைவனின் பாதுகாப்பை நாடுவாயாக.(149) அவன் சில வேளைகளில் மகிழ்வான், சில வேளைகளில் கோபவசப்படுவான், சில வேளைகளில் ஹும் என்ற அசையை மிக உரக்கச் சொல்வான். அவன் சில வேளைகளில் சக்கரத்தைத் தரிக்கிறான், சில வேளைகளில் திரிசூலத்தையும், சில வேளைகளில் கதாயுதத்தையும், சில வேளைகளில் உலக்கைகளையும், சில வேளைகளில் வாள்களையும், சில வேளைகளில் போர்க்கோடரிகளையும் தரிப்பான்.(150)

உலகைத் தலையில் தாங்கும் சேஷனின் வடிவை ஏற்பவன் அவனே. அவன் பாம்புகளைத் தன் கச்சையாகக் கொண்டிருக்கிறான், அவனது காதுகள் பாம்புகளால் செய்யப்பட்ட காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. அவன் சூடும் புனித நூலாகவும் பாம்புகளே அமைகின்றன. யானைத் தோல் அவனது மேலாடையாக அமைகிறது.(151) சில வேளைகளில் அவன் சிரிக்கிறான், சில வேளைகளில் பாடுகிறான், சில வேளைகளில் மிக அழகாக ஆடுகிறான். எண்ணற்ற பூதங்களாலும், கணங்களாலும் சூழப்பட்ட அவன் சில வேளைகளில் இசைக்கருவிகளை இசைக்கிறான். அவன் இசைக்கும் பல்வேறு வகைக் கருவிகள் இனிமையான ஒலிகளை வழங்குகின்றன.(152) அவன் சில வேளைகளில் (சுடலைகளில்) திரிகிறான், சில வேளைகளில் கொட்டாவி விடுகிறான், சில வேளைகளில் அழுகிறான், சில வேளைகளில் பிறரை அழச் செய்கிறான். சில வேளைகளில் அவன் பித்தனின் தோற்றத்தை ஏற்கிறான், சில வேளைகளில் மது மயக்கத்துடன் கூடியவனாகவும், சில வேளைகளில் மிக இனிய சொற்களைச் சொல்பவனாகவும் இருக்கிறான்.(153) அச்சுறுத்தும் கடுமையுடன் கூடிய அவன் சில வேளைகளில், தன் கண்களால் உயிரினங்கள் அனைத்தையும் அச்சுறுத்தும் வகையில் உரக்கச் சிரிக்கிறான். சில வேளைகளில் அவன் உறங்குகிறான், சில வேளைகளில் விழித்திருக்கிறான், சில வேளைகளில் விரும்பியவாறு கொட்டவீ விடுகிறான்.(154) சில வேளைகளில் அவன் புனித மந்திரங்களை ஓதுகிறான், சில வேளைகளில் ஓதப்படும் அந்த மந்திரங்களின் தேவனாகிறான். சில வேளைகளில் அவன் தவங்களைச் செய்கிறான், சில வேளைகளில் செய்யப்படும் அத்தவங்களில் துதிக்கப்படும் தேவனாகிறான். சில வேளைகளில் அவன் கொடைகளை அளிக்கிறான், சில வேளைகளில் கொடைகளை ஏற்கிறான்; சில வேளைகளில் யோகத்தில் ஆழ்கிறான், சில வேளைகளில் பிறருடைய தியான யோகத்தின் பொருளாகிறான்.(155)

வேள்விப் பீடத்திலோ {யாகவேதியின் நடுவிலோ}, வேள்வித் தண்டிலோ {யூபஸ்தம்பத்திலோ} அவன் காணப்படுகிறான்; மாட்டுக் கொட்டில் அல்லது நெருப்பின் மத்தியிலும் அவன் காணப்படுகிறான். மீண்டும் அவனை அங்கே காணமுடியாதும் போகலாம். அவன் சிறுவனாகவோ, முதிர்ந்தவனாகவோ காணப்படுகிறான்.(156) அவன் முனிவர்களின் மகள்கள் மற்றும் மனைவிகளுடன் விளையாடுகிறான். அவனுடைய முடி நீண்டதாகவும் நிமிர்ந்து நிற்பதாகவும் இருக்கிறது. திசைகளையே ஆபரணங்களாகக் கொண்ட அவன் முழு அம்மணமாக இருக்கிறான். அவன் பயங்கரக் கண்களைக் கொண்டவனாக இருக்கிறான்.(157) அவன் வெண்மையாகவும், கருமையாகவும், கருப்பனாகவும், வெளுப்பனாகவும் இருக்கிறான், புகையின் நிறத்தைக் கொண்டவனாகவும், சிவப்பாகவும் அவன் இருக்கிறான். நீண்ட பயங்கரமான கண்களைக் கொண்டவனாக அவன் இருக்கிறான். வெட்ட வெளியையே ஆடையாகக் கொண்டவன் அவன், அனைத்துப் பொருட்களையும் மறைப்பவனும் அவன்.(158) 

வடிவமற்றவனும், மாயையால் அமைந்தவனும், அண்டத்தின் செயல்கள் மற்றும் இயக்கங்கள் அனைத்தின் வடிவைக் கொண்டவனும், ஹிரண்யகர்ப்பனின் வடிவத்தை ஏற்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாதவனுமான அவன் பிறப்பற்றவனாக இருக்கிறான்.(159) அவன் (ஒவ்வொரு உயிரினத்தின்) இதயத்தில் வாழ்கிறான். அவனே உயிர் மூச்சு, அவனே மனம், அவனே (உடற்பொதியில் மறைந்திருக்கும்) ஜீவனும் ஆவான் . அவன் யோகத்தின் ஆன்மாவாக இருக்கிறான், அவனே யோகம் என்றும் அழைக்கப்படுகிறான். யோகியர் நுழையும் தியான யோகமாக அவனே இருக்கிறான். அவனே பரமாத்மா ஆவான். உண்மையில், புலன்களாலல்லாமல், அவனது இருப்பைப் பற்றும் ஆன்மாவால் மட்டுமே அவன் புரிந்து கொள்ளப்படுகிறான்.(160) அவன் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கிறான். அவன் பாடகனாகவும் இருக்கிறான். அவன் ஒரு லட்சம் கண்களைக் கொண்டிருக்கிறான். அவன் ஒரு வாயைக் கொண்டிருக்கிறான், இரண்டு வாய்கள், மூன்று வாய்கள் மற்றும் பல வாய்களையும் கொண்டிருக்கிறான். (161) ஓ! மகனே {உபமன்யு}, உன்னை அவனுக்கு அர்ப்பணித்து, அவனில் உன் இதயத்தை நிலை நிறுத்தி, அவனையே சார்ந்திருந்து, அவனையே ஒரே புகலிடமாக ஏற்று மஹாதேவனைத் துதிப்பாயாக. அவ்வாறு செய்தால் உன் விருப்பங்கள் அனைத்தும் கனியப் பெறுவாய்” என்றாள் {என் தாயார்}.(162)

லிங்கமும், பகமும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 14ஈ-அன்னையின் சொல் கேட்டு, சிவனை நினைத்துத் தவமிருந்த உபமன்யு; உபமன்யுவிடம் நிறைவடைந்த சிவன், அவரைச் சோதிக்க இந்திரனின் வடிவில் வந்தது; வேறு எந்தத் தேவனிடமும் வரம்பெற மாட்டேன் என உபமன்யு சொன்னது; சிவனின் மகிமையைச் சொன்னது; சிவலிங்கச் சின்னத்தின் பொருள் சொன்ன உபமன்யு…

{உபமன்யு தொடர்ந்தார்}, ஓ! எதிரிகளைக் கொல்பவனே என் அன்னையின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, அந்த நாள் முதல் வேறு எந்த நோக்கமும் இல்லாத என் அர்ப்பணிப்பை மஹாதேவனிடம் செலுத்தினேன்.(163) பிறகு நான், சங்கரனை நிறைவடையச் செய்வதற்காகக் கடுந்தவங்கில் ஈடுபட்டேன். ஓராயிரம் வருடங்கள் நான் என் இடக்கால் கட்டைவிரலில் நின்றேன்.(164) அதன் பிறகு ஓராயிரம் வருடங்கள் கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். அதன்பிறகு ஓராயிரம் வருடங்கள் மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகளை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். அடுத்த ஆயிரம் வருடங்கள் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தேன்.(165) அதன் பிறகு எழுநூறு ஆண்டுகள் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். இவ்வகையில் நான் முழுமையாக ஓராயிரம் தேவ வருடங்கள் மஹாதேவனைத் துதித்தேன்.(166) இதன்பிறகு அண்டத்தின் ஆசானான பலமிக்க மஹாதேவன் என்னிடம் நிறைவடைந்தான். நான் அவனிடம் மட்டுமே முற்றான அர்ப்பணிப்புடன் இருக்கிறேனா என்பதை உறுதி செய்து கொள்ள விரும்பிய அவன்,(167) தேவர்கள் அனைவராலும் சூழப்பட்ட சக்ரனின் {இந்திரனின்} வடிவில் என் முன்னிலையில் தோன்றினான்.

மேனியில் ஆயிரம் கண் கொண்டவனும், வஜ்ராயுதம் தரித்தவனும், கொண்டாடப்படுபவனுமான சக்ரனாக அவன் தோன்றினான்.(168) அவன், தூய வெண்ணிறம் கொண்டதும், கண்கள் சிவந்ததும், காதுகள் மடங்கியதும், மதநீர் பெருகுவதும், துதிக்கை மடங்கியதும், காணப் பயங்கரமானதும், நான்கு தந்தங்களுடன் கூடியதுமான ஒரு யானையைச் செலுத்திக் கொண்டு வந்தான். உண்மையில், அத்தகைய யானையைச் செலுத்தி வரும் தேவர்களின் தலைவன் சக்தியால் சுடர்விடுபவனாகத் தெரிந்தான். தலையில் அழகிய மகுடத்துடனும், கழுத்தைச் சுற்றும் மாலைகளுடனும், கரங்களைச் சுற்றும் கங்கணங்களுடனும் அவன் நான் இருந்த இடத்திற்கு வந்தான்.(169,170) அவனது தலைக்கு மேலே வெண்குடை ஏந்தப்பட்டிருந்தது. பல அப்சரஸ்கள் அவனுக்குப் பணிவிடையும், பல கந்தர்வர்கள் அவனது புகழைப் பாடவும் செய்தனர்.(171) அவன் என்னிடம், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் உம்மிடம் நிறைவடைந்தேன். நீர் விரும்பும் வரத்தை என்னிடம் இரந்து பெறலாம்” என்றான்.(172)

சக்ரனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு நான் மகிழவில்லை. உண்மையில், ஓ! கிருஷ்ணா, நான் தேவர்களின் தலைவனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினேன்,(173) “நான் உன்னிடமோ, வேறு பிற தேவர்களிடமோ எந்த வரத்தையும் விரும்பவில்லை. ஓ! இனிய தேவா, மஹாதேவனிடம் மட்டுமே வரங்களைக் கேட்பேன் என நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(174) உண்மை, இஃது உண்மை, நான் உன்னிடம் சொல்லும் இந்த வார்த்தைகள் உண்மையே. மஹேஸ்வரன் தொடர்பானவற்றைத் தவிர வேறு எந்தச் சொற்களும் எனக்கு ஒருபோதும் ஏற்புடையதல்ல.(175) அந்த அனைத்து உயிரினங்களின் தலைவனுடைய ஆணையின் பேரில் நான் புழுவாகவோ, பல கிளைகளையுடைய மரமாகவோ ஆயத்தமாக இருக்கிறேன். மஹாதேவனின் வரங்களின் மூலம் அடையப்படாத அருளானது மூவுலகங்களின் அரசுரிமையே ஆனாலும் அஃது எனக்கு ஏற்புடையதல்ல.(176) நான் ஸ்வபாகர்களுக்கு {சண்டாளர்களுக்கு} மத்தியில் பிறப்பை அடைந்தாலும், ஹரனின் பாதத்திலேயே அர்ப்பணிப்புடன் இருப்பேன். மேலும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனிடம் {பசுபதியிடம்} அர்ப்பணிப்பில்லாமல் இந்திரனின் அரண்மனையில் பிறக்கவும் நான் விரும்பவில்லை.(177)

தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசானான அண்டத்தின் தலைவனிடம் அர்ப்பணிப்பில்லாதவன் உணவில்லாமல் வெறும் காற்று மற்றும் நீரை உண்டு வாழ்ந்தாலும் அவனது துன்பம் தீராது.(178) மஹாதேவனின் பாதத்தை நினையாமல் ஒரு கணமும் வாழ விரும்பாத மனிதர்களுக்கு அறம் மற்றும் பிறவகை நெறிகள் நிறைந்த உரைகள் ஏதும் தேவையில்லை.(179) அறமற்ற, அல்லது பாவம் நிறைந்த யுகம் தோன்றும்போது, ஒருவன் மஹாதேவனிடம் தன் இதயத்தை அர்ப்பணிக்காமல் ஒரு கணத்தையும் கடத்தக்கூடாது. ஹரனிடம் அர்ப்பணிப்பு என்ற அமுதத்தைப் பருகிய ஒருவன் உலக அச்சங்களில் இருந்து விடுபடுகிறான்.(180) மஹாதேவனின் அருளைப் பெறாத ஒருவனால் ஒரு நாள், அரை நாள், ஒரு முகூர்த்தம், ஒரு க்ஷணம் {ஒரு நிமிடம்}, ஒரு லவம் {ஒரு நொடி} கூட மஹாதேவனுக்குத் தன்னை அர்ப்பணிப்பதில் ஒருபோதும் வெல்ல முடியாது.(181) ஓ! சக்ரா, மஹாதேவனின் ஆணையின் பேரில் நான் உற்சாகமாக ஒரு புழுவாகவோ, பூச்சியாகவோ ஆவேனேயன்றி, மூவுலகங்களின் அரசுரிமையை நீ கொடுக்க முன்வந்தாலும் அஃது எனக்கு உவப்பாகாது.(182)

ஹரனின் சொல்லால் நான் நாயாகவும் ஆவேன். உண்மையில், அஃது என் உயர்ந்த விருப்பத்திற்கு இணக்கமாகவே அமையும். மஹேஸ்வரனால் கொடுக்கப்படவில்லையென்றால் நான் தேவர்களின் அரசுரிமையையும் கொள்ள மாட்டேன்.(183) சொர்க்கத்தின் ஆட்சிப்பகுதிகளை நான் அடைய விரும்பவில்லை. பிரம்ம லோகத்தை நான் விரும்பவில்லை. உண்மையில், விடுதலை {முக்தி} என்றழைக்கப்படுவதும், முற்றாகப் பிரம்மத்தோடு அடையாளம் காணப்படுவதுமான தனிப்பட்ட இருப்பின் அழிவை நான் விரும்பவில்லை. ஆனால் நான் ஹரனின் அடிமையாக வேண்டுகிறேன்[13].(184) தலையில் மகுடம் தரித்தவனும், சந்திர வட்டிலைப்போன்ற தூய வெண்ணிற உடலைக் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமான அந்தச் சிறப்புமிக்க மஹேசன் என்னிடம் நிறைவடையாத வரையில் உடல் படைத்த உயிரினங்கள் அனைத்திற்கும் நூறு முறை நேரும் முதுமை, மரணம், பிறவி மூலம் கிட்டும் துன்பம் அனைத்தையும் நான் உற்சாகமாகப் பொறுத்துக் கொள்வேன்.(185) முதுமை மற்றும் மரணத்தில் இருந்து விடுபட்டவனும், சூரியன், சந்திரன் அல்லது நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டவனும், மூவுலகங்களில் காணப்படும் உண்மையான மற்றும் உண்மையற்ற அனைத்தின் வேராக இருப்பவனும், அல்லது அவற்றுக்கு மூலக் காரணனனும், பகுபடாத ஒரே இருப்பாக உள்ளவனுமான ருத்திரனை நிறைவடையச் செய்யாமல் இந்த அண்டத்தில் அமைதிநிலையை அடைய இயன்றவன் எவன் இருக்கிறான்?(186) என் குற்றங்களின் விளைவால் எனக்கு மறுபிறவிகள் நேருமாயின், அந்தப் பிறவிகள் அனைத்திலும் நான் பவனிடம் மட்டுமே என்னை அர்ப்பணிப்பேன் {பக்தி கொள்வேன்}” என்றேன்.(187)இந்திரன் {இந்திரனாக வந்த சிவன்}, “பரம்பொருளின் இருப்புக்கு, அல்லது காரணங்கள் அனைத்திற்கும் காரணமாக அவன் இருப்பதற்கு என்ன காரணங்களை உம்மால் சொல்ல முடியும்?” என்று கேட்டான்.(188)

உபமன்யு {நான்}, “இருப்பு மற்றும் இல்லாமையாக, வெளிப்பட்ட மற்றும் வெளிப்படாதவனாக, நித்தியமானவனாக அல்லது மாற்றமில்லாதவனாக, ஒருவனாக மற்றும் பலராகப் பிரம்மத்தை ஓதுபவர்கள் எவனை விளக்குகிறார்களோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(189) தொடக்கம், நடுவுநிலை, முடிவு ஆகியவை இல்லாதவனும், ஞானம் மற்றும் பலமாக இருப்பவனும், புலப்படாதவனும், பரமாத்மாவும் எவனோ அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(190) பலம் அனைத்தும் வரும் இடமாக இருப்பவனும், எவராலும் படைக்கப்படாதவனும், மாற்றமில்லாதவனும், எந்த வித்திலிருந்தும் எழாதவனாக இருந்தாலும், அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருள்களின் வித்தாக இருப்பவன் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(191) இருள் குணத்தை {தமஸ் குணத்தைக்} கடந்தவனும், சுடர்மிக்கப் பிரகாசமாக இருப்பவனும், தவங்கள் அனைத்தின் சாரமாக இருப்பவனும், அவனைப் புரிந்து கொள்ளும் நோக்கில் நாம் கொள்ளும் திறன்கள் அனைத்தையும் கடந்தவனும், துன்பம் அல்லது கவலையில் இருந்து விடுபட ஒவ்வொருவரும் அறிய வேண்டியவனும் எவனோ அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(192) ஓ! புரந்தரா, பூதங்கள் அனைத்தின் படைப்பையும், உயிரினங்கள் அனைத்தின் எண்ணங்களையும் அறிந்தவனும், இருப்புக்கு, அல்லது அனைத்து உயிரினங்களின் படைப்புக்கு மூலக் காரணனும், எங்கும் நிறைந்திருப்பவனும், அனைத்தையும் கொடுக்கும் பலம் கொண்டவனும் எவனோ அவனையே நான் வழிபடுகிறேன்.(193)

வாதத்தால் {விவாதத்தால்} புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், சாங்கிய மற்றும் யோக அமைப்பு தத்துவங்களின் பொருளாக இருப்பவனும், அனைத்துப் பொருட்களையும் கடந்திருப்பவனும், வேண்டப்படும் தத்துவங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் அனைவராலும் வழிபடப்பட்டுத் துதிக்கப்படுபவனும் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(194) ஓ! மகவத், மகவத்தின் ஆன்மாவாக இருப்பவனும், தேவர்களின் தேவனும், உயிரினங்கள் அனைத்தின் ஆசானும் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்.(195) உலகங்கள் அனைத்தையும் படைத்த பிரம்மனை முதலில் படைத்தவனும், வெளியை (தன் சக்தியால்) நிறைத்து ஆதி முட்டையை இருப்புக்கு அழைத்தவனும் எவனோ, அவனிடமே நான் வரங்களை வேண்டுவேன்[14].(196) நெருப்பு, நீர், காற்று, நிலம், வெளி, மனம், மஹத் என்றழைக்கப்படுவது ஆகியற்றைப் படைத்தவன் பரமனைத் தவிர வேறு எவன்?(197) ஓ! சக்ரா, எனக்குச் சொல்வாயாக; மனம், புத்தி, அகங்காரம், தன்மாத்திரைகள் மற்றும் புலன்களைச் சிவனைத் தவிர வேறு எவனால் படைக்க முடியும்? சிவனைவிட உயர்ந்தவன் வேறு எவன்?[15](198) இந்த அண்டத்தைப் படைத்தவன் பெரும்பாட்டனான பிரம்மனே என ஞானிகள் சொல்கின்றனர். எனினும், அந்தப் பிரம்மன், தேவர்களின் தேவனான மஹாதேவனைத் துதித்து, நிறைவடையச் செய்ததன் மூலமே தன் பலத்தையும், செழிப்பையும் அடைந்தான்.(199) பிரம்மன், விஷ்ணு மற்றும் ருத்திரனைப் படைத்த அந்தச் சிறப்புமிக்கவனில் இருக்கும் (படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்ற) அந்த உயர்ந்த பலமானது மஹாதேவனிடமிருந்து அடையப்பட்டதே. எனக்குச் சொல்வாயாக; அந்தப் பரமனுக்கு மேலானவன் வேறு எவன்?[16](200)தைத்தியர்கள் மற்றும் தானவர்களில் முதன்மையானவர்களின் ஒடுக்கும் சக்தி மற்றும் அரசுரிமையின் மூலம் தீர்மானிக்கும் பலத்தைக் கொடுக்கவும், திதியின் மகன்களைத் தலைமைத்துவத்துடன் இணைக்கவும் வல்லவன் அந்தத் தேவர்களின் தேவனைத் தவிர வேறு எவன்?[17](201) திசைகளின் பல்வேறு புள்ளிகள், காலம், சூரியன், ஒளிரும் பொருட்கள், கோள்கள், காற்று, நீர், விண்மீன்கள், நட்சத்திரக்கூட்டங்கள் ஆகியவையும் நீ மஹாதேவனிடம் இருந்து வந்தவன் என்பதை அறியும். எமக்குச் சொல்; அந்தப் பரமனை விட உயர்ந்தவன் வேறு எவன்?(202) வேள்வியைப் படைத்து, திரிபுரத்தை அழித்த காரியங்களில் மஹாதேவனைத் தவிர வேறு எவன் இருக்கிறான்? தைத்தியர்கள் மற்றும் தானவர்களை அடைந்து பகைவர்களை நொறுக்குபவனாகச் செயல்படுபவன் மஹாதேவனைத் தவிர வேறு எவன்? (203) ஓ! புரந்தரா, ஓ! தேவர்களில் சிறந்தவனே, சித்தர்கள், கந்தர்வர்கள், தேவர்கள் மற்றும் முனிவர்களால் வழிபடப்படும் ஆயிரங்கண் கொண்ட உன்னை நான் காணும்போது, போலி தத்துவங்கள் நிறைந்த பல போலி வாக்கியங்களின் தேவை என்ன இருக்கிறது? ஓ! குசிகர்களில் சிறந்தவனே, இவை அனைத்தும், தேவர்களின் தேவனான மஹாதேவனின் கருணையால் விளைந்தவையே[18].(204,205)ஓ! கேசவா, சொர்க்கத்திலும், பிற காணப்படாதவற்றிலும் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் யாவும், நீக்கமற நிறைந்திருக்கும் தலைவனையே ஆன்மாவாகக் கொண்டிருக்கும் இந்த உலகங்களும் மஹேஸ்வரனிடம் இருந்தே வந்தன, ஜீவன் அனுபவிப்பதற்காக (அவனால்) படைக்கப்பட்டன என்பதை அறிவாயாக[19].(206) கேட்கப்படும் அனைத்தையும் அறிந்தவர்கள், பூ, புவ, சுவ, மஹா என்ற பெயர்களில் அறியப்படும் உலகங்களிலும், லோகாலோக மலைகளுக்கு மத்தியிலும், தீவுகளிலும், மேரு மலைகளிலும், மகிழ்ச்சியை விளைவிக்கும்அனைத்துப் பொருட்களிலும், உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் மஹேஸ்வரன் வசிப்பதாகச் சொல்கிறார்கள்.(207) ஓ! சக்ரா, பவனைத் தவிர வேறு எந்தப் பலமிக்க வடிவையும் தேவர்களும் அசுரர்களும் காணமுடியவில்லையெனில், அதிலும் குறிப்பாக முன்னவர்கள் {தேவர்கள்} எதிர்க்கப்படும்போதும், பின்னவர்களால் {அசுரர்களால்} பீடிக்கப்படும்போதும் அவ்வடிவத்தின் பாதுகாப்பை நாடவில்லையா?(208) தேவர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்களுக்கிடையில் பரஸ்பர அழிவை ஏற்படுத்தும் வகையில் நடக்கும் பகைமிக்கப் போர்கள் அனைத்திலும், அழிவடைவோரின் செயல்கள் சார்ந்த நிலைக்கு இணங்கிய பலத்தைப் பவனே அவர்களுக்குக் கொடுக்கிறான்.(209) எனக்குச் சொல்வாயாக; அந்தகன், சுக்ரன், துந்துபி, மஹிஷன், முதன்மையான யக்ஷர்கள் பலர், பலன், ராட்சசர்கள் மற்றும் நிவாதகவசர்கள் ஆகியோருக்கு வரங்களை அருளி மீண்டும் அவற்றை அவர்களிடம் இருந்து பறிக்க மஹேஸ்வரனைத் தவிர வேறு எவனால் இயலும்?(210) தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஆசானான {தந்தையான} மஹாதேவனின் உயிர் வித்து நெருப்பில் ஆகுதியாக ஊற்றப்படவில்லையா? அந்த வித்தில் இருந்தே தங்க மலை {பொன்மலை} உதித்தது. இத்தகைய குணத்துடன் கூடிய வித்தைக் கொண்டவன் வேறு எவன்?[20](211)திசைகளையே தன் ஆடையாகக் கொண்டவன் என இவ்வுலகில் பாடப்படுபவன் வேறு எவன் இருக்கிறான்? மேல்நோக்கிய உயிர்வித்துடன் கூடிய ஒரு பிரம்மச்சாரி என்று சொல்லப்படுபவன் வேறு எவன்? தன் உடலில் பாதியை அன்பு மனைவிக்குக் கொடுப்பவன் வேறு எவன்? காமதேவனை அடக்கவல்லவன் வேறு எவன்?(212) ஓ! இந்திரா, தேவர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பரமானந்தம் நிறைந்த உயர்ந்த பகுதியைக் கொண்டவன் வேறு எவன்? சுடலையையே தனது விளையாட்டு மைதானமாகக் கொண்டவன் வேறு எவன்? ஆடலுக்காகப் புகழப்படுபவன் வேறு எவன்?(213) எவனுடைய வழிபாடும், பலமும் மாற்றமில்லாததாகவே நீடிக்கிறது? பூத கணங்களுடன் விளையாடிக் கொண்டிருப்பவன் வேறு எவன்? ஓ! தேவா, தன்னைப் போலவே பலம் நிறைந்தவர்களையும், அந்தப் பலத்தில் செருக்கு கொண்டவர்களையும் தன் துணைவர்களாகக் கொண்டிருப்பவன் வேறு எவன்?[21](214) மாற்றமில்லாதது என மூவுலகங்களாலும் மதிக்கப்பட்டு வழிபடப்படும் இடத்தை {கைலை மலையைக்} கொண்டவன் வேறு எவன்? மழையைப் பொழிந்து, வெப்பத்தைக் கொடுத்து, சக்தியால் சுடர்விடுபவன் வேறு எவன்?(215) நம் மூலிகைச் செல்வத்தை யாரிம் இருந்து நாம் பெறுகிறோம்? அனைத்து வகைச் செல்வங்களையும் தாங்குபவன் எவன்? அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட மூவுலகங்களிலும் விரும்பியவாறு விளையாடுபவன் வேறு எவன்?(216)ஓ! இந்திரா, மஹேஸ்வரனே (அனைத்திற்கும்) மூலக் காரணன் என்பதை அறிவாயாக. ஞானம், (தவ) வெற்றி, சாத்திர விதிகளில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் ஆகியவற்றின் மூலம் யோகிகள், முனிவர்கள், கந்தர்வர்கள், சித்தர்களால் அவன் துதிக்கப்படுகிறான்.(217) வேள்விகள் செய்வது மற்றும் சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்வது ஆகியவற்றின் துணை மூலம் தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவராலும் அவன் துதிக்கப்படுகிறான். செயற்கனிகள் அனைத்தையும் கடந்தவனாக இருப்பதால் அவற்றால் அவனை ஒருபோதும் தீண்டமுடியாது. இவ்வாறு இருக்கும் அவனையே அனைத்தின் மூலக் காரணன் என்று நான் அழைக்கிறேன்.(218) அவன் திரளாகவும் {ஸ்தூலமாகவும்}, நுட்பமாகவும் {ஸூக்ஷ்மமாகவும்} இருக்கிறான். அவன் ஒப்பில்லாதவனாக இருக்கிறான். புலன்களால் அவனை உணர முடியாது. குணங்களுடன் கூடியவனாகவும், அவை அற்றவனாகவும் அவன் இருக்கிறான். குணங்கள் அவனது கட்டுப்பாட்டில் இருப்பதால் அவனே குணங்களின் தலைவனாவான். மஹேஸ்வரனின் இடம் இத்தகையதே.(219) (அண்டத்தின்) வாழ்வுக்கும், அழிவுக்கும் காரணன் அவனே. அண்டத்தின் காரணனும், அதன் அழிவுக்குக் காரணனும் அவனே. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அவனே. அனைத்துப் பொருட்களுக்கும் தந்தை அவனே. உண்மையில், அனைத்துக்கும் காரணன் அவனே.(220)

அவன் மாற்றமில்லாதவன், அவன் வெளிப்படாதவன், ஞானம் அவனே; அறியாமை அவனே; ஒவ்வொரு செயலும் அவனே; ஒவ்வொரு விடுபடலும் அவனே; அறம் அவனே; மறம் அவனே. ஓ! சக்ரா, அனைத்துக்கும் காரணன் என என்னால் அழைக்கப்படுபவனும் அவனே.(221) ஓ! இந்திரா இரு பாலினங்களின் குறியீட்டையும் கொண்டிருக்கும் மஹாதேவனின் சின்னத்தை {லிங்கத்தைக்} காண்பாயாக. படைப்பு மற்றும் அழிவு ஆகிய இரண்டுக்கும் காரணனும், தேவதேவனுமான அந்த ருத்திரன், தன் வடிவத்தில் அண்டத்தின் படைப்புக்கான ஒரே காரணமான இரண்டு பாலினங்களின் குறியீடுகளையும் வெளிப்படுத்துகிறான்[22].(222) முன்பு எனக்கு அவனே அண்டத்தின் காரணன் என்றும், அனைத்திற்கும் காரணமான ஒருவன் என்றும் என் அன்னை சொல்லியிருக்கிறாள். ஓ! சக்ரா, ஈசனைவிட உயர்ந்தவன் வேறு எவனும் இல்லை. உனக்கு விருப்பமிருந்தால் அவனது அன்பையும், பாதுகாப்பையும் பெற அவனிடம் பணிவாயாக.(223) ஓ! தேவர்களின் தலைவா, (மஹாதேவனால் வெளிப்படுத்தப்படும்) பாலினக் கலப்பின் மூலமே அண்டம் உதித்தது என்பது காணத்தக்க சான்றே. குணங்கள் கொண்டவை, குணங்கள் அற்றவை, பிரம்மன் மற்றும் பிற வித்துகளை உடனடிக் காரணங்களாகக் கொண்டவை ஆகியவற்றின் தொகையே அண்டம் என்பதை நீ அறிவாய். ஆயிரம் ஆசைகள் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்ட பிரம்மன், இந்திரன், ஹுதாசன் {அக்னி}, விஷ்ணு மற்றும் பிற தேவர்கள், தைத்தியர்கள் அசுரர்கள் அனைவரும் மஹாதேவனை விட உயர்ந்தவர் வேறு யாரும் இல்லை என்று எப்போதும் சொல்கிறார்கள்.(224) அசையும் மற்றும் அசையாதன அடங்கிய அண்டத்தில் அனைவராலும் அறியப்பட்டவனும், சிறந்தவன், தேவர்கள் அனைவரிலும் உயர்ந்தவன், மங்கலமே வடிவானவன் என்று சொல்லப்படுபவனுமான அந்தத் தேவனிடம் ஆசையால் உந்தப்பட்டு, கட்டுப்பாட்டுடன் கூடிய மனத்துடன் உடைமைகள் அனைத்திலும் உயர்ந்த விடுதலையை {முக்தியைத்} தாமதமில்லாமல் கேட்கிறேன்[23].(225)(நான் நம்புவது என்ன என்பதை நிறுவ) வேறு காரணங்களுக்கு என்ன தேவையிருக்கிறது? உயர்ந்த மஹாதேவனே அனைத்துக் காரணங்களுக்கும் காரணமாக இருக்கிறான். மஹாதேவனைத் தவிர வேறு எந்தத் தேவனின் அடையாளத்தையும் {லிங்கத்தையும்} தேவர்கள் துதித்ததாக நாம் ஒருபோதும் கேட்டதில்லை.(226) மஹேஸ்வரன் ஏற்கப்படவில்லையென்றால், வேறு யாருடைய சின்னமாவது வழிபடப்படுகிறது, அல்லது தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுகிறது என்று நீ எப்போதாவது கேட்டதுண்டா?(227) ஓ! இந்திரா, நீ உட்படப் பிரம்மன், விஷ்ணு மற்றும் பிற தேவர்கள் அனைவராலும் வழிபடப்படும் சின்னத்தை {லிங்கத்தைக்} கொண்டவனே உண்மையில் துதிக்கத்தக்க தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான்.(228) பிரம்மன் தாமரையைத் தன் சின்னமாகக் கொண்டிருக்கிறான். விஷ்ணு சக்கரத்தைக் கொண்டிருக்கிறான். இந்திரன் வஜ்ரத்தைக் கொண்டிருக்கிறான். ஆனால் உலகின் உயிரினங்கள் இந்தத் தேவர்களின் சின்னங்களைத் தரிப்பதில்லை. மறுபுறம், மஹாதேவன் மற்றும் அவனது மனைவியின் சின்னங்களையே உயிரினங்கள் அனைத்தும் தரித்திருக்கின்றன. எனவே, உயிரினங்கள் அனைத்தும் மஹேஸ்வரனுக்குச் சொந்தமானவை என்றே கருதப்பட வேண்டும்.(229) உயிரினங்களில் பெண் பாலினத்தவர் அனைவரும் உமையின் இயல்பையே தங்கள் காரணமாகக் கொண்டு உதித்தவர்கள் எனவே உமைக்குச் சொந்தமான பெண்மையின் குறியீட்டை அவர்கள் தரிக்கிறார்கள்; அதே வேளையில் உயிரினங்களில் ஆண் பாலினத்தவர் அனைவரும் சிவனில் இருந்து உதித்து, சிவனுக்குச் சொந்தமான ஆண் குறியைத் தரிக்கின்றனர். அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகங்களிலும், மஹாதேவனின் குறியீட்டையோ, அவனது மனைவியின் குறியீட்டையோ தரிக்காமலும், அந்த உயர்ந்த தலைவனைத் தவிர வேறு காரணம் இருக்கிறது என்று சொல்பவன் மிக இழிந்தவனாகக் கருதப்பட்டு, அவனை அண்டத்தின் உயிரினங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக் கூடாது[24].(230) ஆண் பாலினக் குறியீட்டுடன் கூடிய ஒவ்வொருவரும் ஈசானன் என்றும், பெண் பாலினக் குறியீட்டுடன் கூடிய ஒவ்வொருவரும் உமை என்றும் அறியப்பட வேண்டும். அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டம் இரு வகை வடிவங்களால் நீக்கமற நிறைந்திருக்கின்றன.(231) மஹாதேவனிடம் இருந்தே நான் வரங்களைப் பெற விரும்புகிறேன். ஓ! கௌசிகா, இதில் தவறினால் நான் அழிவையே விரும்புகிறேன். ஓ! சக்ரா, ஓ! பலனைக் கொன்றவனே, விரும்பியவாறு செல்வாயாக, அல்லது இருப்பாயாக.(232) வரங்களையோ, சாபங்களையோ நான் மஹாதேவனிடம் இருந்தே பெற விரும்புகிறேன். வேறு எந்தத் தேவனையும் நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். என் விருப்பங்கள் அனைத்தும் கனியும் வரத்தை வேறு எந்தத் தேவனிடம் இருந்தும் பெறவும் மாட்டேன்” என்றேன் {என்றார் உபமன்யு}.(233)

உபமன்யுவின் சிவத் துதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 14உ-உபமன்யுவிடம் இந்திரனாக வந்தவன் சிவனாக மாறியது; அந்தக் காட்சி மாறுதலை நுணுக்கமாக விவரித்த உபமன்யு; உபமன்யு சொன்ன சிவத் துதி…

{உபமன்யு தொடர்ந்தார்}, தேவர்களின் தலைவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, என் கடுந்தவங்களாலும் மஹாதேவனை நிறைவடையச் செய்ய முடியவில்லை என்ற எண்ணம் தந்த துயரத்தில் மூழ்கினேன்.(234) எனினும், கண்ணிமைப்பதற்குள் என் முன்னிருந்த தெய்வீக யானையானது, அன்னம், அல்லது குருக்கத்திப்பூ, அல்லது தாமரைத் தண்டு, அல்லது வெள்ளி, அல்லது பாற்கடலைப் போன்ற வெண்ணிறம் கொண்ட ஒரு காளையாக மாறியது. பேருடலைப் படைத்திருந்த அதன் வால் கருப்பாகவும், அதன் கண்கள் தேனைப் போன்ற பழுப்பு நிறத்திலும் இருந்தன.(235,236) வஜ்ரம் போன்று கடினமானதாக இருந்த அதன் கொம்புகள் தங்க நிறத்தில் இருந்தன. இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த அதன் கூர்முனைகளைக் கொண்டு அந்தக் காளை பூமியைப் பிளக்கப் போவதைப் போலத் தெரிந்தது.(237) அவ்விலங்கு, பசும்பொன்னாலான ஆபரணங்களால் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் முகம், குளம்புகள், மூக்கு, காதுகள் ஆகியன மிக அழகாக இருந்தன, அதன் இடையும் கட்டுக்கோப்பாக இருந்தது.(238) அதன் விலாப்புறங்கள் பேரழகுடன் இருந்தன, அதன் கழுத்து மிகப்பருத்திருந்தது. அதன் திமில் பேரழகுடன் ஒளிர்ந்து, தோள் பகுதி முழுவதையும் நிறைத்திருப்பதாகத் தெரிந்தது. (239) அது பனிமலைச் சிகரம் போலவோ, வானத்தில் உள்ள மேகங்களைப் போலவோ தெரிந்தது. அவ்விலங்கின் முதுகில் சிறப்புமிக்க மஹாதேவனும், அவனது மனைவியான உமையும் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.(240)

உண்மையில் மஹாதேவன் முழுமையாக இருக்கும் நட்சத்திரத் தலைவனை {சந்திரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான். அவனது சக்தியில் பிறந்த நெருப்பானது, மேகங்களுக்கு மத்தியில் தோன்றும் மின்னல் கீற்றுகளின் பிரகாசத்துக்கு ஒப்பாக இருந்தது. உண்மையில் பளிச்சிடும் காந்தியால் அனைத்துப் புறங்களையும் நிறைத்தபடி ஆயிரம் சூரியர்கள் எழுந்ததைப் போலத் தெரிந்தது. அந்தப் பரமனின் சக்தியானது, யுக முடிவில் அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் சம்வர்த்தக நெருப்பைப் போலத் தெரிந்தது.(241,242) திசைகள் அனைத்தும் அந்தச் சக்தியால் நிறைந்திருந்ததால் என்னால் எந்தப் பக்கத்திலும் எதையும் காண முடியவில்லை. கவலையில் நிறைந்த நான் இஃது என்னவாக இருக்கும் என்று மீண்டும் சிந்தித்தேன்.(243) எனினும், அந்தச் சக்தி நீண்ட நேரம் நீடித்திருக்கவில்லை, அந்தத் தேவதேவன் மாயையின் மூலம் திசைகள் தெளிவடைந்தன.(244) அதன்பிறகே நான் காளையின் முதுகில் அருளப்பட்டவனாக, ஏற்புடைய தோற்றத்தில், புகையற்ற நெருப்பைப் போலத் தெரிந்த சிறப்புமிக்க ஸ்தாணு அல்லது மஹேஸ்வரனைக் கண்டேன்.(245) அந்தப் பெருந்தtவன் களங்கமற்ற குணங்களைக் கொண்ட பார்வதியுடன் இருந்தான்.

உண்மையில், எதிலும் பற்று கொள்ளாதவனும், அனைத்து வகைச் சக்திகளின் கொள்ளிடமாக இருப்பவனும், நீலமிடறு கொண்டவனுமான உயர் ஆன்ம ஸ்தாணுவை, பதினெட்டுக் கரங்களுடன், அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவனாகக் கண்டேன்.(246) அவன் வெள்ளுடைகள் உடுத்தி, வெண் மாலைகள் சூடி, மேனியில் வெண்பூச்சுப் பூசியிருந்தான். அண்டத்தில் தடுக்கப்படமுடியாததான அவனது கொடியின் நிறம் வெள்ளையாக இருந்தது. அவனது மேனியைச் சுற்றியிருந்த நூலும் {பூணூலும்} வெள்ளையாகவே இருந்தது.(247) தனக்கு இணையான ஆற்றலைக் கொண்டவர்களும், ஆடுபவர்களும், பாடுபவர்களும், பல வகை இசைக்கருவிகளை இசைப்பவர்களுமான அவனது துணைவர்களால் {கணங்களால்} அவன் சூழப்பட்டிருந்தான்.(248) வெண்ணிறம் கொண்ட பிறைச் சந்திரன் அவனது மகுடமாக அமைந்து, அவனது நெற்றியில் கூதிர் கால ஆகாயத்தில் எழும் சந்திரனைப் போலத் தெரிந்தது. மூன்று சூரியர்களைப் போலத் தெரிந்த அவனது முக்கண்களின் விளைவால் அவன் காந்தியில் பளிச்சிடுபவனாகத் தெரிந்தான்.(249) அவனது உடலில் இருந்த தூய வெண்ணிற மாலை, ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தூய வெண்ணிற தாமரைச் சரத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(250)

ஓ! கோவிந்தா, அளவிலா ஆற்றலைக் கொண்டவையும், பவனுக்குச் சொந்தமானவையும், அனைத்து வகைச் சக்திகளும் நிறைந்தவையுமான ஆயுதங்களை அவற்றின் உடல் கொண்ட வடிவங்களை நான் கண்டேன்.(251) அந்த உயர் ஆன்ம தேவன் வானவில்லுக்கு ஒப்பான நிறங்களைக் கொண்ட ஒரு வில்லை ஏந்தியிருந்தான். பிநாகம் என்ற பெயரில் கொண்டாடப்படும் அந்த வில் உண்மையில் ஒரு பெரும்பாம்பாகும்.(252) உண்மையில் ஏழு தலைகள், பேருடல், கூரிய பற்கள், கடும் நஞ்சு, பெருங்கழுத்து ஆகியவற்றைக் கொண்ட ஓர் ஆண் பாம்பே அதைச் சுற்றிலும் நாண்கயிறாகக் கட்டப்பட்டிருந்தது.(253) சூரியன் அல்லது யுக முடிவில் தோன்றும் நெருப்பைப் போன்ற காந்தியுடன் ஒரு கணையும் அதில் இருந்தது. உண்மையில் அந்தக் கணையானது, வலிமைமிக்கதும், பயங்கரமானதும், தனக்கு இணையான மற்றொன்று இல்லாததும், விவரிக்க முடியாத சக்தியைக் கொண்டதும், ஒவ்வொரு உயிரினத்தையும் அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய ஆயுதமுமான சிறப்புமிக்கப் பாசுபதமே ஆகும். பெரும் வடிவத்தில் இருந்த அஃது இடையறாமல் நெருப்புப் பொறிகளைக் கக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(254,255)

அஃது {ஒரே} ஒரு காலையும், பெரிய பற்களையும், ஓராயிரம் தலைகளையும், ஆயிரம் வயிறுகளையும், ஆயிரம் கரங்களையும், ஆயிரம் நாவுகளையும், ஆயிரம் கண்களையும் கொண்டிருந்தது. உண்மையில் அது தொடர்ந்து நெருப்பைக் கக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(256) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உண்மையில் அவ்வாயுதம், பிரம்ம, நாராயண, ஐந்திர, ஆக்நேய, வருண ஆயுதங்களைவிட மேன்மையானதாகும். உண்மையில் அண்டத்தில் உள்ள வேறு எந்த ஆயுதத்தையும் தணிவடையச் செய்யவல்லதாக அஃது இருந்தது.(257) பழங்காலத்தில் சிறப்புமிக்க மஹாதேவன் அவ்வாயுதத்தைக் கொண்டே அசுரர்களின் முந்நகரத்தை {திரிபுரத்தை} ஒரு கணத்தில் எரித்து அழித்தான். ஓ! கோவிந்தா, மஹாதேவன் அந்த ஒரே கணையைக் கொண்டு மிக எளிமையாக அந்தச் சாதனையைச் செய்தான்.(258) மஹாதேவனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட அவ்வாயுதம், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மொத்த அண்டத்தையும் கண்ணிமைக்க ஆவதில் பாதி நேரத்திலேயே நிச்சயம் எரித்து விடும் ஆற்றலைக் கொண்டதாகும்.(259) இந்த அண்டத்தில் பிரம்மன், விஷ்ணு மற்றும் தேவர்கள் உட்பட இந்த ஆயுதத்தால் கொல்லப்பட முடியாத வேறு எவனும் இல்லை. ஓ! ஐயா, சிறப்பானதும், அற்புதம் நிறைந்ததும், ஒப்பற்றதுமான அந்த ஆயுதத்தை நான் மஹாதேவனின் கரங்களில் கண்டேன்.(260)

பாசுபதத்திற்கு இணையானதும், ஒருவேளை மேன்மையானதும், பெரும் பலம் வாய்ந்ததுமான புதிர்மிக்க மற்றுமோராயுதம் இருக்கிறது. நான் அதையும் கண்டேன். சூலபாணியான மஹாதேவனின் சூலம் என்று அஃது உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுகிறது.(261) அந்தச் சிறப்புமிக்கத் தேவனால் ஏவப்படும் அவ்வாயுதத்தால், மொத்த பூமியைப் பிளக்கவும், கடலின் நீரை வற்ற செய்யவும், மொத்த அண்டத்தையே அழிக்கவும் இயலும்.(262) பழங்காலத்தில் யுவனாஸ்வனின் மகனும், மூவுலகங்களையும் வென்றவனும், ஏகாதிபத்திய ஆட்சியைக் கொண்டவனும், அளவிலா ஆற்றலைக் கொண்டவனுமான மன்னன் மாந்தாத்ரி {மாந்தாதா}, அவனது துருப்பினர் அனைவருடன் சேர்த்து {லவணாசுரன் கையில் இருந்த} அவ்வாயுதத்தாலேயே அழிக்கப்பட்டான்.(263) ஓ! கோவிந்தா, பெரும் வலிமையும், பெருஞ்சக்தியும் கொண்டு ஆற்றலில் சக்ரனுக்கு ஒப்பான அந்த மன்னன் {மாந்தாதா}, சிவனிடம் இருந்து பெற்ற சூலத்தின் துணையால் ராட்சசன் லவணனால் கொல்லப்பட்டான்.(264) அந்தச் சூலம் மிகக் கூரிய முனையைக் கொண்டதாகும். மிகப் பயங்கரமான அஃது அனைவருக்கும் மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தச் செய்வதாகும். நெற்றியில் மூன்று சுருக்கங்களுடன் சீற்றத்துடன் முழங்கிக் கொண்டு அது மஹாதேவனின் கரத்தில் இருப்பதைக் கண்டேன்.(265) ஓ! கிருஷ்ணா, அது புகையற்ற நெருப்புக்கோ, யுக முடிவில் எழும் சூரியனுக்கோ ஒப்பானதாகும். அந்தச் சூலத்தின் கைப்பிடி ஒரு பெரும்பாம்பினாலானதாகும். அஃது உண்மையில் விவரிக்கப்பட முடியாததாகும். கையில் பாசத்துடன் நிற்கும் யமனைப் போலவே அது தெரிந்தது.(266) ஓ! கோவிந்தா, நான் அவ்வாயுதத்தை மஹாதேவனின் கரங்களில் கண்டேன்.

ராமரிடம் {பரசுராமரிடம்} நிறைவடைந்த மஹாதேவனால், க்ஷத்திரியர்களை அழிப்பதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட கூர்முனை போர்க்கோடரியான மற்றொரு ஆயுதத்தையும் நான் கண்டேன். (பிருகு குலத்தின்) ராமர் {பரசுராமர்} இந்த ஆயுதத்தைக் கொண்டுதான் உலகமனைத்தின் ஆட்சியாளனாக இருந்த பெரும் கார்த்தவீரியனைப் பயங்கரமான போரில் கொன்றார்.(267,268) ஓ! கோவிந்தா, அந்த ஜமதக்னி மகன் {பரசுராமர்}, அந்த ஆயுதத்தைக் கொண்டுதான் இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களை அழித்தொழித்தார்.(269) சுடர்மிக்க முனையைக் கொண்டதும் மிகப் பயங்கரமானதுமான அந்தக் கோடரியானது, பாம்பால் அலங்கரிக்கப்பட்டிருந்த மஹாதேவனின் தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. உண்மையில், அது மஹாதேவனின் மேனியில் சுடர்மிக்க நெருப்பின் தழலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(270)

பெரும் நுண்ணறிவைக் கொண்ட மஹாதேவனிடம் நான் எண்ணற்ற வேறு தெய்வீக ஆயுதங்களையும் கண்டேன். இருப்பினும், ஓ! பாவமற்றவனே, முக்கியக் குணங்களைக் கொண்ட சிலவற்றின் பெயரை மட்டுமே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.(271) அந்தப் பெருந்தேவனின் இடப்புறத்தில், மனோவேகம் கொண்ட அன்னப்பறவைகளுடன் பூட்டப்பட்டதும், பெரும்பாட்டனான பிரம்மன் அமர்ந்திருந்ததுமான தேர் நின்று கொண்டிருந்தது.(272) அதே புறத்திலேயே, சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதங்களைத் தரித்து, வினதையின் மகன் {கருடன்} மீது அமர்ந்திருக்கும் நாராயணனும் தென்பட்டான்.(273) உமா தேவியின் அருகில், பயங்கர ஈட்டி {வேல்} மற்றும் மணிகளைத் தரித்தவனும், மற்றொரு அக்னியைப் போலத் தெரிந்தவனுமான ஸ்கந்தன் {முருகன்} தன் மயில் மீது அமர்ந்திருந்தான்.(274) மஹாதேவனுக்கு முன்பாக, (ஆற்றலிலும், சக்தியிலும்) இரண்டாம் சங்கரனைப் போலத் தெரிந்த நந்தி தன் சூலத்துடன் நிற்பதையும் நான் கண்டேன்.(275)

சுயம்புவான மனுவின் தலைமையிலான முனிவர்கள், பிருகுவைத் தங்களில் முதல்வராகக் கொண்ட முனிவர்கள், சக்ரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்திருந்தனர்.(276) பூத கணங்கள், தெய்வீகத் தாய்மார்கள்[25] அனைவரும் மஹாதேவனைச் சூழ்ந்து நின்று மதிப்புடன் அவனை வழிபட்டனர்.(277) தேவர்கள் பல்வேறு பாடல்களைப் பாடுவதன் மூலம் மஹாதேவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். ரதந்தரம் {சாம வேத மந்திரம்} சொல்லும் பெரும்பாட்டன் பிரம்மனும் மஹாதேவனைத் துதித்தான்.(278) ஜியேஷ்ட சாமன் சொல்லும் நாராயணனும், பவனின் புகழைப் பாடிக் கொண்டிருந்தான். வேத மந்திரங்களில் முதன்மையான சதருத்ரீயத்தின் துணையுடன் சக்ரனும் {இந்திரனும்} துதித்துக் கொண்டிருந்தான்.(279) உண்மையில், பிரம்மன், நாராயணன், சக்ரன் {இந்திரன்} ஆகிய உயர் ஆன்ம தேவர்கள் மூவரும் மூன்று வேள்வி நெருப்புகளைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(280) கூதிர் கால மேகங்களுக்கிடையில் தன் ஒளிவட்டத்திற்கு மத்தியில் உள்ள சூரியனைப் போல அந்தச் சிறப்புமிக்கத் தேவன் அவர்களுக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(281) ஓ! கேசவா, நான் வானில் கூட்டங்கூட்டமாகப் பல சூரியர்களையும், சந்திரர்களையும் கண்டேன். பிறகு அண்டத்தின் பரகுருவான அனைத்தின் சிறப்புமிக்கத் தலைவனைத் துதித்தேன்”.(282)உபமன்யு தொடர்ந்தார் {உபமன்யு கிருஷ்ணனிடம் நான் தொடர்ந்தேன் என்று சொல்கிறார்}, “ஓ! சிறப்புமிக்கவனே, ஓ! அனைத்துப் பொருட்களின் புகலிடமே, ஓ! மஹாதேவன் என்றழைக்கப்படுபவனே, உன்னை வணங்குகிறேன். சக்ரனின் ஆடை மற்றும் வடிவம் பூண்டு, சக்ரனின் வடிவை ஏற்றுச் சக்ரனாக இருப்பவனே, உன்னை வணங்குகிறேன்.(283) வஜ்ரதாரியாக, பழுப்பாக, சிவப்பாக இருக்கும் உன்னை வணங்குகிறேன். எப்போதும் பிநாகம் தரித்திருப்பவனும், சங்கு மற்றும் சூலத்தை ஏந்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.(284) கருப்பு உடை உடுப்பவனும், கரியவனும், சுருள் முடி கொண்டவனும், கருப்பு மான் தோலை {கிருஷ்ணாஜினத்தை} மேலாடையாகக் கொண்டவனும், தேய்பிறையின் எட்டாம் திதிக்கு {கிருஷ்ணபக்ஷஅஷ்டமிக்குத்} தலைமை தாங்குபவனுமான உன்னை வணங்குகிறேன்.(285)

வெள்ளை நிறம் கொண்டவனும், வெண்மை என்று அழைக்கப்படுபவனும், வெள்ளுடை உடுத்துபவனும், அங்கமெங்கும் வெண்சாம்பல் {திருநீறு} பூசியவனும், வெண்செயல்களிலேயே எப்போதும் ஈடுபடுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(286) செந்நிறம் கொண்டவனும், செவ்வாடை உடுத்துபவனும், செங்கொடிகளுடன் கூடிய செம்பதாகைகள் கொண்டவனும், செம்மாலை சூடுபவனும், செஞ்சந்தனம் பயன்படுத்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.(287) பழுப்பு {பொன்} நிறம் கொண்டவனும், பழுப்பு ஆடை உடுத்துபவனும், பழுப்புக் கொடிகளுடன் கூடிய பழுப்புப் பதாகைகள் கொண்டவனும், பழுப்பு மாலைகளைச் சூடுபவனும், பழுப்புச் சந்தனம் பயன்படுத்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.தலைக்கு மேலே அரசக்குடை கொண்டவனும், முதன்மையான மகுடத்தைச் சூடுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(288) மனோ வேகம் கொண்டவனும், பெரும்பிரகாசம் கொண்டவனும், பாதிப் பாகத்தில் ஹாரம், தோள்வளை மற்றும் குண்டலம் அணிந்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(289) தேவர்களில் முதன்மையானவனும், முனிவர்களில் முதன்மையானவனும், இந்திரர்களில் முதன்மையானவனுமான உன்னை வணங்குகிறேன். பாதிப்பாகத்தில் தாமரை மாலை அணிந்தவனும், உடலில் பல தாமரைகளைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(290)

பாதி உடலில் சந்தனக் குழம்பு பூசப்பட்டவனும், பாதி உடலில் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், நறுமணப்பொருட்களால் பூசப்பட்டவனுமான உன்னை வணங்குகிறேன்[26].(291) சூரியனின் நிறத்தைக் கொண்டவனும், சூரியனையே போன்றவனும், சூரியன் போன்ற முகத்தைக் கொண்டவனும், சூரியனைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(292) சோமனாக இருப்பவனும், சோமனைப் போன்று மென்மையானவனும், சந்திர வட்டிலைத் தரிப்பவனும், சந்திரனின் குணத்தைக் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அழகிய பற்களைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(293) கருப்பு நிறம் கொண்டவனும், வெள்ளை நிறம் கொண்டவனும், பாதி மஞ்சள் பாதி வெள்ளையான வடிவம் கொண்டவனும், பாதி ஆண், பாதிப் பெண்ணாக இருக்கும் உடலைக் கொண்டவனும், ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பவனுமான உன்னை வணங்குகிறேன்.(294) காளையை வாகனமாகக் கொண்டவனும், முதன்மையான யானையைச் செலுத்துபவனும், அரிதாக அடையப்படுபவனும், பிறரால் அணுக முடியாத இடங்களுக்குச் செல்ல வல்லவனுமான உன்னை வணங்குகிறேன்.(295)கணங்களால் புகழ் பாடப்படுபவனும், பல்வேறு கணங்களிடம் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், கணங்கள் நடக்கும் பாதையைப் பின்பற்றுபவனும், கணங்களிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதை நோன்பாகக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(296) வெண்மேக நிறம் கொண்டவனும், மாலைவேளை மேகங்களின் காந்தியைக் கொண்டவனும், பெயர்களால் விவரிக்கப்பட முடியாதவனும், (அண்டத்தில் வேறு எதனுடனும் ஒப்பிடப்பட முடியாத) சுய வடிவைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(297) செந்நிறத்தில் அழகிய மாலை சூடியிருப்பவனும், செவ்வாடை உடுத்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.(298) தலையில் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மகுடம் கொண்டவனும், அரைச் சந்திரனால் அலங்கரிக்கப்பட்டவனும், கிரீடத்தில் பல அழகிய ரத்தினங்களைச் சூடுபவனும், தலையில் எட்டு மலர்களைக்[27] கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(299) நெருப்பு வாயும், நெருப்புக் கண்களையும் கொண்டவனும், ஓராயிரம் சந்திரர்களின் பிரகாசத்தைக் கொண்டவனும், நெருப்பின் வடிவே ஆனவனும், அழகனும், இனிமையானவனும், புரிந்துகொள்ளப்பட முடியாதவனும், புதிரானவனுமான உன்னை வணங்குகிறேன்.(300)ஆகாயத்தில் திரிபவனும், பசுக்கள் மேயும் புல்வெளிகளில் வசிப்பதை விரும்புபவனும், பூமியில் நடப்பவனும், பூமியாகவே இருப்பவனும், முடிவிலாதவனும், மங்கலம் மிகுந்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(301) உடையற்றவனும் (அல்லது திசைகளை மட்டுமே ஆடையாகக் கொண்டவனும்), இருக்கும் ஒரு கணத்திலேயே ஒவ்வோர் இடத்தையும் மகிழ்ச்சிமிக்க இல்லமாக மாற்றுபவனுமான உன்னை வணங்குகிறேன். அண்டத்தையே இல்லமாகக் கொண்டவனும், ஞானத்தையும், இன்பத்தையும் ஆன்மாவாகக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(302) எப்போதும் கிரீடம் தரிப்பவனும், பெரிய தோள்வளையை அணிபவனும், கழுத்தைச் சுற்றும் மாலையாகப் பாம்பைக் கொண்டவனும், மேனியில் அழகிய ஆபரணங்கள் பலவற்றை அணிந்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(303) சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முக்கண்களைக் கொண்டவனும், ஆயிரங்கண்களைக் கொண்டவனும், ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பவனும், பாலினமற்றவனும், சாங்கியனும், யோகியுமான உன்னை வணங்குகிறேன்.(304) வேள்விகளில் வழிபடப்படும் தேவர்களின் அருளாக இருப்பவனும், அதர்வணமாக இருப்பவனும், அனைத்து வகை நோய் மற்றும் துன்பங்களைக் குறைப்பவனும், கவலைகள் யாவையும் அகற்றுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(305)

மேகங்களைப் போல ஆழ முழங்குபவனும், பல்வேறு வகை மாயைகளைச் செய்பவனும், மண்ணுக்கும், அதில் விதைக்கப்படும் வித்துக்கும் தலைமை தாங்குபவனும், அனைத்தையும் படைத்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(306) தேவர்கள் அனைவரின் தலைவனும், அண்டத்தின் ஆசானும், காற்றின் வேகம் கொண்டவனும், காற்றின் வடிவே ஆனவனுமான உன்னை வணங்குகிறேன்.(307) பொன்மாலை அணிபவனும், மலைகளிலும், குன்றுகளிலும் விளையாடுபவனும், தேவர்களின் பகைவர் அனைவராலும் துதிக்கப்படுபவனும், கடும் வேகமும், சக்தியும் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(308) பெரும்பாட்டனான பிரம்மனின் தலைகளில் ஒன்றைத் துண்டித்தவனும், மஹிஷன் என்ற பெயர் கொண்ட அசுரனைக் கொன்றவனும், மூன்று வடிவங்களை ஏற்பவனும், அனைத்த வடிவங்களையும் தாங்குபவனுமான உன்னை வணங்குகிறேன்.(309) அசுரர்களின் முந்நகரத்தை {திரிபுரத்தை} அழித்தவனும், (தக்ஷனின்) வேள்வியை அழித்தவனும், காம தேவனின் உடலை அழித்தவனும், தண்டக்கோலைத் தரிப்பவனுமான உன்னை வணங்குகிறேன்.(310)

ஸ்கந்தனும், விசாகனும், பிராமணத் தண்டமும், பவனும், சர்வனும், அண்ட வடிவுமான உன்னை நான் வணங்குகிறேன்.(311) ஈசானனும், பகனை அழித்தவனும், அந்தகனைக் கொன்றவனும், அண்டமேயானவனும், மாயைகளைக் கொண்டவனும், புலப்படுபவனும், புலப்படாதவன் என இரண்டாகவும் இருப்பவனுமான உன்னை வணங்குகிறேன்.(312) உயிரினங்கள் அனைத்தின் கதியும், முதன்மையானவனும், அனைத்தின் இதயமும் நீயே. தேவர்கள் அனைவரிலும் பிரம்மன் நீயே, ருத்திரர்களில் சிவப்பும், நீலமும் {நீல லோகிதன்} நீயே.(313) அனைத்து உயிரினங்கள் ஆன்மா நீயே, சாங்கிய தத்துவத்தில் புருஷன் என்றழைக்கப்படுபவன் நீயே. புனிதப் பொருட்கள் அனைத்திலும் ரிஷபம் {சிறந்தவன்} நீயே. மங்கலம் என்றும் அங்கங்கள் இல்லாதவன் (பகுபடாதவன்) என்றும் யோகியரால் அழைக்கப்படுபவன் நீயே.(314) பல்வேறு வகை வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களை} நோற்பவர்களில் இல்லறத்தான் {கிருஹஸ்தன்} நீயே, அண்டத் தலைவர்களில் பெருந்தலைவன் நீயே. யக்ஷர்கள் அனைவரிலும் குபேரன் நீயே, வேள்விகள் அனைத்திலும் விஷ்ணு {முதன்மையான வேள்வி} நீயே.(315)

மலைகளில் மேரு நீயே, ஆகாயத்து ஒளிக்கோள்களில் சந்திரன் நீயே, முனிவர்களில் வசிஷ்டர் நீயே, கோள்களில் சூரியன் நீயே.(316) காட்டு விலங்குகளில் சிங்கம் நீயே, வளர்ப்பு விலங்குகள் அனைத்திலும் அனைத்து மக்களாலும் வழிபடப்படும் காளை நீயே.(317) ஆதித்தியர்களில் விஷ்ணு (உபேந்திரன்) நீயே, வசுகளில் பாவகன் நீயே, பறவைகளில் வினதையின் மகன் (கருடன்) நீயே, பாம்புகளில் அனந்தன் (சேஷன்) நீயே.(318) வேதங்களில் சாமங்கள் நீயே, யஜுஸ்களில் சதருத்ரீயம் நீயே, யோகிகளில் சனத்குமாரர் நீயே, சாங்கியர்களில் கபிலர் நீயே.(319) மருத்துகளில் சக்ரன் {இந்திரன்} நீயே, பித்ருக்களில் தேவராதன் நீயே, (படைக்கப்பட்டவை வசிப்பதற்கான) உலகங்கள் அனைத்திலும் பிரம்மலோகம் நீயே, உயிரினங்கள் அடையும் கதிகள் அனைத்திலும் விடுதலை {முக்தி}, அல்லது மோக்ஷம் நீயே.(320) பெருங்கடல்கள் அனைத்திலும் பாற்கடல் நீயே, மலைகளில் இமய மலை நீயே, வகைகள் {வர்ணங்கள்} அனைத்திலும் பிராமணன் நீயே, கல்விமான்களான பிராமணர்கள் அனைவரிலும் தீக்ஷை {யாகதீக்ஷை} பெற்றவன் நீயே.(321)

உலகில் உள்ள பொருட்கள் அனைத்திலும் சூரியன் நீயே, அனைத்தையும் அழிக்கும் காலன் நீயே. அண்டத்தில் உள்ள மேன்மையான சக்தி மற்றும் திறன்கள் அனைத்தும் நீயே.(322) உயர்ந்த பலத்தைக் கொண்டவன் நீயே. இதுவே என் நிச்சயமான தீர்மானமாகும். ஓ! பலமிக்கவனே, சிறப்புமிக்கவனே, ஓ! வழிபடுபவர்கள் அனைவரிடமும் கருணை கொண்டவனே, உன்னை வணங்குகிறேன்.(323) ஓ! யோகியரின் தலைவா, உன்னை வணங்குகிறேன். ஓ! அண்டத்தின் மூலக் காரணனே, உனக்குத் தலைவணங்குகிறேன். உன்னை வழிபடுபவனும், ஏழையும், ஆதரவற்றவனுமான என்னிடம் நிறைவடைவாயாக.(324) ஓ! நித்திய தலைவா, உன்னை வழிபடுபவனும், மிகப் பலவீனனும், வறியவனுமான இவனுக்கு {எனக்குப்} புகலிடமாவாயாக. ஓ! பரமனே, நான் செய்த பிழைகளை மன்னித்து, உன்னை அர்ப்பணிப்புடன் வழிபடுபவன் என்ற அடிப்படையில் என்னிடம் கருணை கொள்வதே உனக்குத் தகும்.(325) ஓ! தேவர்கள் அனைவருக்கும் தலைவா, நீ எனக்கு முன் தோன்றிய தோற்றத்தின் விளைவால் நான் மயக்கமடைந்தேன். {எனவே}, ஓ! மஹேஸ்வரா, நான் உன் பாதங்களைக் கழுவ நீர், அல்லது அர்க்கியம் கொடுக்க வில்லை” {என்று சொல்லி சிவனை வணங்கினேன்}.(326)

கிருஷ்ணனின் சிவத் துதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 14ஊ-சிவனிடம் இருந்து வரங்களைப் பெற்ற உபமன்யு; சிவனை நோக்கித் தவமிருந்த கிருஷ்ணன்; கிருஷ்ணன் சொன்ன சிவத் துதி…

{உபமன்யு {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தார்}, ஈசானனின் புகழை இவ்வாறு பாடிவிட்டு, பெரும் அர்ப்பணிப்புடன் அவனது காலைக் கழுவிக் கொள்ள நீரும், அர்க்கியப் பொருட்களும் கொடுத்து, அவன் இடப்போகும் எந்த ஆணைக்கும் கீழ்ப்படியத் தயாராக என் கரங்களைக் கூப்பி நின்றேன்.(327) ஓ! ஐயா, அப்போது, தெய்வீக நறுமணத்தைக் கொண்டதும், குளிர்ந்த நீர் படர்ந்ததுமான மங்கல மலர்மாரி என் தலையில் பொழிந்தது.(328) தேவ இசைக்கலைஞர்கள் தங்கள் பேரிகைகளை இசைக்கத் தொடங்கினர். ஏற்புடைய, நறுமணமிக்க இனிய தென்றல் வீசத் தொடங்கி என்னை மகிழ்ச்சியில் நிறைத்தது.(329) அப்போது காளையைத் தன் சின்னமாகக் கொண்டவனும், மனைவியின் துணையுடன் கூடியவனுமான மஹாதேவன் என்னைப் பெரும் மகிழ்ச்சியில் நிறைக்கும் வகையில் தேவர்களிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்,(330) “தேவர்களே உயர் ஆன்ம உபமன்யுவின் அர்ப்பணிப்பைப் பாருங்கள். உண்மையில் அந்த அர்ப்பணிப்பு மாறாமல் நீடித்திருப்பதும், நிலையானதும், பெரியதும், முற்றிலும் மாற்றமில்லாததுமாகும்” என்றான்.(331)

சூலபாணியான அந்தப் பெருந்தேவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஓ!கிருஷ்ணா, அவனுக்குத் தலைவணங்கிய தேவர்கள் மதிப்புடன் தங்கள் கரங்களைக் குவித்துக் கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்,(332) “ஓ! சிறப்புமிக்கவனே, ஓ! தேவர்களின் தேவா, ஓ! அண்டத்தின் ஆசானே, ஓ!அனைவருக்கும் தலைவா, இந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடையட்டும்” என்றனர்.(333)

பெரும்பாட்டனான பிரம்மனுடன் கூடிய தேவர்கள் அனைவராலும் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஈசன் மற்றும் சங்கரன் என்று வேறு பெயர்களிலும் அழைக்கப்படும் சர்வன், புன்னகைத்தவாறே என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(334) அந்தச் சிறப்புமிக்கச் சங்கரன் {உபமன்யுவிடம்}, “ஓ! அன்புக்குரிய உபமன்யு, நான் உன்னிடம் நிறைவடைந்தேன். ஓ! முனிவர்களில் முதன்மையானவனே, என்னைப் பார். ஓ! கல்விமானான முனிவனே, என்னிடம் உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்ட நீ என்னால் சோதிக்கப்பட்டாய்.(335) சிவனிடம் நீ கொண்ட அர்ப்பணிப்பின் விளைவால் நான் உன்னிடம் மிக உயர்வான நிறைவை அடைந்தேன். எனவே, உன் இதயத்தில் நீ கொண்டுள்ள எந்த விருப்பமும் கனியும் தன்மையை நான் இன்று உனக்கு அளிக்கப் போகிறேன்” என்றான்.(336)

பெரும் ஞானம் கொண்ட மஹாதேவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மகிழ்ச்சியால் என் கண்கள் கண்ணீரால் குளமானது, (அதே உணர்ச்சியின் மூலம்) எனக்கு மயிர்ச்சிலிர்ப்பும் ஏற்பட்டது.(337) மண்டியிட்டு மீண்டும் மீண்டும் அவனை வணங்கிய நான், மகிழ்ச்சியால் அடைபட்ட குரலுடன், அவனிடம்,(338) “ஓ! சிறப்புமிக்கத் தேவா, நான் இவ்வளவு நாளும் இறந்திருந்ததாகவும், இன்றுதான் பிறந்ததாகவும் தெரிகிறது, தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசானின் முன்பு இப்போது இருப்பதால் இன்றுதான் நான் என் பிறவிப்பயனை அடைந்தேன்.(339) தேவர்களும் கூட இதயப்பூர்வமான வழிபாட்டைச் செலுத்தாமல் காண முடியாத அளவிலா ஆற்றல் கொண்டவனை நான் என் கண்களால் காண்பதால் என்னைவிடப் பெருமைமிக்கவன் எவன் இருக்க முடியும்?(340) தத்துவங்கள் அனைத்திலும் உயர்ந்தது, நித்தியமானது, அனைத்திலிருந்து வேறுபட்டது, பிறப்பில்லாதது, அறிவே ஆனது, அழிவற்றது என்று கல்வியும் ஞானமும் கொண்டோர் எதைச் சொல்வார்களோ, ஓ! பலமிக்கவனே, சிறப்புமிக்கவனே, அது தத்துவங்கள் அனைத்தின் தொடக்கமாக இருப்பவனும், அழிவற்றவனும், மாற்றமற்றவனும், தத்துவங்கள் அனைத்தையும் ஆளும் விதிகளை அறிந்தவனும், புருஷர்களில் முதன்மையானவனும், உயர்ந்தவற்றில் உயர்ந்தவனுமான உன்னுடன் அடையாளங்காணப்படுகிறது.(341,342)

வலப்புறத்தில் இருந்து பெரும்பாட்டனான பிரம்மனைப் படைத்தவனும், அனைத்துப் பொருட்களைப் படைத்தவனும் நீயே. படைப்பைப் பாதுகாக்க இடப்புறத்தில் இருந்து விஷ்ணுவைப் படைத்தவன் நீயே.(343) யுக முடிவு வந்த போதும், படைப்பு மீண்டும் அழிக்கப்படும்போதும் ருத்திரனைப் படைக்கும் பலமிக்கத் தலைவன் நீயே. உன்னிலிருந்து எழுந்த அந்த ருத்திரன், பெருஞ்சக்தி கொண்ட காலன் மற்றும் (பெருங்கடலும் கொள்ள முடியாத அளவு நீரைக் கொண்ட) சம்வர்த்தக மேகம் மற்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பின் வடிவங்களை ஏற்று அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட படைப்பை அழித்தான். உண்மையில் அண்ட அழிவுக்கான காலம் நேரும்போது, அண்டத்தை விழுங்கத் தயாராக ருத்திரன் நிற்கிறான்.(344,345) அசைவன மற்றும் அசையாதன என அனைத்தையும் கொண்ட அண்டத்தின் மூலப் படைப்பாளனான அந்த மஹாதேவன் நீயே. கல்பத்தின் முடிவில் அனைத்துப் பொருட்களையும் உன்னுள் ஈர்த்துக் கொள்பவன் நீயே.(346) அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், அனைத்துப் பொருட்களின் ஆன்மாவும், அனைத்துப் பொருட்களைப் படைத்தவனையும் படைத்தவன் நீயே. தேவர்களாலும் காணப்பட இயலாதவனான நீ அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நீடித்து நிறைந்திருக்கிறாய்.(347) ஓ! தலைவா, என்னிடம் நீ நிறைவடைந்திருந்தால், நீ எனக்கு வரங்களை அளிக்க விரும்பினால், ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, உன்னிடம் நான் கொண்டுள்ள இந்த அர்ப்பணிப்பு எப்போதும் மாறாது நீடித்திருக்கட்டும்.(348) ஓ! தேவர்களில் சிறந்தவனே, உன் அருளின் மூலம் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் ஞானத்தை நான் அடைய வேண்டுகிறேன்.(349) மேலும் நான் என் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர் அனைவருடன் எப்போதும் பால் கலந்த உணவை உண்ண வேண்டும். சிறப்புமிக்கவனான நீ எப்போதும் எங்கள் ஆசிரமத்தில் இருப்பாயாக” என்று கேட்டேன்.(350)

இவ்வாறு என்னால் சொல்லப்பட்டதும், உயர்ந்த சக்தியைக் கொண்டவனும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் ஆசானும், அண்டம் அனைத்தினாலும் வழிபடப்படுபவனும், சிறப்புமிக்க மஹேஸ்வரனுமான சிவன், இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்னான்.(351) அந்தச் சிறப்புமிக்கத் தேவன், “துன்ப துயரங்கள் அனைத்தில் இருந்தும் நீ விடுபட்டிருப்பாயாக, முதுமைக்கும், மரணத்திற்கும் மேலானவனாக இருப்பாயாக. பெரும் சக்தியுடனும், ஆன்ம அறிவுடன் கூடியவனாகப் புகழடைவாயாக. என் அருளின் மூலம் முனிவர்கள் எப்போதும் உன்னை நாடி வருவார்கள். உன் நடத்தை நல்லதாகவும், அறம் நிறைந்ததாகவும் இருக்கட்டும், விரும்பத்தக்க குணங்கள் அனைத்தும் உனதாகட்டும், அண்ட அறிவைப் பெற்று, ஏற்புடைய இனிய தோற்றத்துடன் இருப்பாயாக.(353) சிதைவற்ற இளமை உனதாகட்டும், நெருப்பைப் போன்ற சக்தி உனதாகட்டும். மேலும், உனக்கு மிக ஏற்புடையதாக இருக்கும் பாற்கடலானது, நீ விரும்பிய இடத்தில் (உனது மற்றும் உன் நண்பர்களின் உணவுத் தேவைக்காகத்) தோன்றும். நீயும் உன் நண்பர்களும், தேவ அமுதம் கலந்த பாலால் தயாரிக்கப்பட்ட உணவை எப்போதும் அடைவீர்கள்.(354,355) ஒரு கல்பம் நிறைவடைந்ததும் நீ என் தோழமையை அடைவாய். உனது குடும்பம், குலம் மற்றும் உற்றார் உறவினர் வற்றாதவர்களாக இருப்பார்கள்.(356) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, என்னிடம் நீ கொண்ட அர்ப்பணிப்பு நித்தியமானதாக இருக்கும். ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நான் எப்போதும் உன் ஆசிரமத்தில் இருப்பேன்.(357) ஓ! மகனே, நீ விரும்பிய இடத்தில் வாழ்வாயாக, எந்தக் கவலையும் உனதாக வேண்டாம். ஓ! கல்விமானான பிராமணா, நீ நினைத்த மாத்திரத்தில் நான் உன் முன் தோன்றுவேன்” என்றான் {சிவன்}.(358)

இவ்வார்த்தைகளைச் சொல்லி இந்த வரங்களை அளித்தவனும், கோடி சூரியப் பிரகாசத்துடன் கூடியவனுமான அந்தச் சிறப்புமிக்க ஈசானன் அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(359) ஓ! கிருஷ்ணா, கடுந்தவங்களின் துணையுடன் இவ்வாறே நான் அந்தத் தேவர்களின் தேவனைக் கண்டேன். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட அந்தப் பெருந்தேவனால் சொல்லப்பட்ட அனைத்தையும் நான் அடைந்தேன்.(360) ஓ!கிருஷ்ணா, இங்கே வசிக்கும் சித்தர்கள், முனிவர்கள், வித்யாதரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரை உன் கண்களின் முன்பு பார்.(361) அனைத்து வகை மலர்களையும், கனிகளையும் விளைவிக்கும் இந்த மரங்களையும், செடி கொடிகளையும் பார். சுற்றிலும் இனிய நறுமணத்தைப் பொழிந்த படியே அழகிய இலைகளுடன் கூடிய அவை அனைத்துக் காலங்களுக்கும் உரிய மலர்களைச் சுமந்து கொண்டிருப்பதைப் பார்.(362) ஓ!வலிய கரங்களைக் கொண்டவனே, உயர்ந்த தலைவனும், உயர் ஆன்ம தேவனுமான அந்தத் தேவர்களின் தேவனுடைய அருளின் மூலம் இவை அனைத்தும் தெய்வீக இயல்பைக் கொண்டிருக்கின்றன” என்றார் உபமன்யு”.(363)

வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “அவரது வார்த்தைகளைக் கேட்டும், அவன் சொன்ன அனைத்தையும் என் கண்களாலேயே கண்டும் நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன். பிறகு நான் பெருந்தவசியான அந்த உபமன்யுவிடம்,(364) “ஓ! கல்விமானான பிராமணர்களில் முதன்மையானவரே, தேவர்களின் தேவனே வந்து மதித்த ஆசிரமத்தைக் கொண்ட அறவோன், பெரும்புகழுக்குத் தகுந்து உம்மைத் தவிர வேறு எவன் இருக்கிறான்?(365) ஓ! தவசிகளின் தலைவரே, பலமிக்கவனும், பெரும் சங்கரனுமான அந்தச் சிவன் எனக்கும் காட்சி கொடுத்து எனக்கு நன்மையை அருள்வானா?” என்று கேட்டேன்.(366)

உபமன்யு {கிருஷ்ணனிடம்}, “ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, ஓ! பாவமற்றவனே, நான் கண்டது போலவே நீயும் மஹாதேவனின் காட்சியை வெகு விரைவில் பெறுவாய்.(367) ஓ! அளவிலா ஆற்றல் கொண்டவனே, ஓ! மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவனே, இன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து நீ மஹாதேவனின் காட்சியைப் பெறுவாய் என என் ஆன்மப் பார்வையில் நான் காண்கிறேன்.(368) ஓ! யதுக்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, மஹேஸ்வரனிடமிருந்தும், அவனது மனைவியிடமிருந்தும் நீ இருபத்துநான்கு வரங்களைப் பெறுவாய். எது உண்மை என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்.(369) உயர்ந்த ஞானத்தைக் கொண்ட அந்தப் பெருந்தேவனுடைய அருளின் மூலம், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை நான் அறிவேன்.(370) ஆயிரக்கணக்காக இருக்கும் இம்முனிவர்களுக்கும், எண்ணற்ற வேறு பிறருக்கும் அந்தப் பெரும் ஹரன் நன்மையைச் செய்திருக்கிறான். ஓ! மாதவா, அந்தப் பெருந்தேவன் உனக்கு ஏன் நன்மையைச் செய்ய மாட்டான். பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், கருணையும் நம்பிக்கையும் நிறைந்தவனுமான உன்னைப் போன்ற ஒருவனைத் தேவர்கள் சந்திப்பது மெச்சத்தகுந்ததே. நான் சில மந்திரங்களை உனக்குச் சொல்கிறேன். நீ அவற்றைத் தொடர்ந்து சொல்வாயாக. இதன் மூலம் நீ நிச்சயம் சங்கரனைக் காண்பாய்” என்றார் {உபமன்யு}” {என்றான் கிருஷ்ணன்}.(372)

அருள்நிறைந்த விஷ்ணு {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “பிறகு நான் அவரிடம், “ஓ! மறுபிறப்பாள முனிவரே, ஓ! பெருந்தவசியே, திதியின் மகன்களைக் கூட்டங்கூட்டமாகக் கலங்கடித்த அந்தத் தேவர்கள் தலைவனை உமது அருளின் மூலம் நான் நிச்சயம் காண்பேன்.(373) ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, மஹாதேவனைக் குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த எட்டு நாட்களும் ஒரு மணி நேரத்தைப் போலக் கடந்து சென்றது.(374) எட்டாம் நாளில் நான் சடங்குகளின்படி அந்தப் பிராமணரின் கரங்களில் தீக்ஷையைப் பெற்றேன். நான் தண்டத்தை அவரது கரங்களில் இருந்து பெற்றேன். பரிந்துரைக்கப்பட்டபடி தலையையும் மழித்துக் கொண்டேன். என் கரங்களில் ஓரளவுக்குக் குசப் புற்களை எடுத்துக் கொண்டேன். மரவுரியை உடுத்திக் கொண்டேன். என் மேனியெங்கும் நெய் பூசிக் கொண்டேன். முஞ்சப் புற்களை நான் என் மடியைச் சுற்றிக் கட்டிக் கொண்டேன்.(375) ஒரு மாத காலம் நான் கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். இரண்டாம் மாதத்தில் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தேன். மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் மாதங்களைக் காற்றை மட்டுமே உண்டு கடத்தினேன்.(376) அவ்வளவு காலமும் நான் கரங்களை உயர்த்தியபடி ஒற்றைக் காலில் நின்று கொண்டு, உறக்கத்தைத் துறந்திருந்தேன். ஓ! பாரதரே, பிறகு ஆயிரம் சூரியர்களின் பிரகாசத்துடன் தெரிந்த ஒரு ஒளியை நான் ஆகாயத்தில் கண்டேன்.(377)

ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, அந்தப் பிரகாசத்துக்கு மத்தியில் நீலமலைத் திரளைப் போலத் தெரிவதும், நாரைவரிசையால் அலங்கரிக்கப்பட்டதும், மகத்தான் வானவில்களால் துலங்கியதும், மின்னல் கீற்றுகள் மற்றும் கண்களுடன் கூடிய இடி நெருப்புடன் கூடியதுமான ஒரு மேகத்தைக் கண்டேன்.(378) அந்த மேகத்திற்கு மத்தியில் பலமிக்க மஹாதேவன் பெரும் பிரகாசத்துடனும், தன் மனைவியான உமையின் துணையுடனும் இருந்தான். உண்மையில் அந்தப் பெருந்தேவன், தவங்கள், சக்தி, அழகு, பிரகாசம் ஆகியவற்றுடன் தன் அருளில் தன் அன்புக்குரிய மனைவியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(379) மனைவியுடன் கூடிய அந்தப் பலமிக்க மஹேஸ்வரன் அந்த மேகத்தின் மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான். மேக அடுக்குகளுக்கு மத்தியல் சூரியனும், சந்திரனும் இருப்பதைப் போல அந்தக் காட்சி தோன்றியது.(380) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, தேவர்கள் அனைவரின் புகலிடமும், துயரங்கள் அனைத்தையும் விலக்குபவனுமான ஹரனைக் கண்டதால் என் உடலில் மயிர் சிலிர்ப்பு ஏற்பட்டு, என் கண்கள் ஆச்சரியத்தால் விரிவடைந்தன.(381)

மஹாதேவன் தன் தலையில் ஒரு கிரீடம் சூடியிருந்தான். அவன் சூலம் தரித்திருந்தான். புலித்தோல் உடுத்தி, தலையில் சடாமுடி தரித்து, தன் கரங்களில் ஒன்றில் (சந்நியாசிக்குரிய) தண்டத்தைக் கொண்டிருந்தான். மேலும் அவன் பிநாகத்தையும், வஜ்ரத்தையும் கொண்டிருந்தான். அவனது பற்கள் கூர்முனை கொண்டவையாக இருந்தன. தோளில் சிறந்த தோள்வளை பூட்டியிருந்தான். அவனது புனித நூலாக {பூணூலாக} ஒரு பாம்பு அமைந்திருந்தது.(382) பாதம் வரை தொங்குவதும், பலவண்ண மலர்களாலானதுமான சிறந்த மாலை அவன் மார்பில் தொங்கிக் கொண்டிருந்தது. உண்மையில், கூதிர் கால மாலைப் பொழுதில் மிகப் பிரகாசமாகத் தெரியும் சந்திரனைப் போல நான் அவனைக் கண்டேன்.(383) பல்வேறு வகைப் பூத கணங்களால் சூழப்பட்டிருந்த அவன், பளிச்சென்ற பிரகாசத்துடன் பார்க்கக் கடினமான கூதிர் காலச் சூரியனைப் போலத் தெரிந்தான்.(384) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவும், வெண்செயல்களும் கொண்டவனும், காளையில் அமர்ந்திருந்தவனுமான அந்தத் தேவனைச் சுற்றிலும் ஆயிரத்துநூறு {1100} ருத்திரர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் அவனைத் துதித்துப் பாடிக் கொண்டிருந்தனர்.(385)

ஆதித்தியர்கள், வசுக்கள், சாத்யர்கள், விஸ்வேதேவர்கள், அசுவினி இரட்டையர்கள் ஆகியோர் சாத்திரங்களில் உள்ள பாடல்களைச் சொல்லி அந்த அண்டத் தலைவனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.(386) அதிதியின் மகன்களான இந்திரன் மற்றும் அவனது தம்பியான உபேந்திரன் {விஷ்ணு} ஆகிய இருவரும், பெரும்பாட்டன் பிரம்மனும் என இவர்கள் அனைவரும் பவனின் முன்னிலையில் ரதந்தரச் சாமத்தைப் பாடினார்கள்.(387) எண்ணற்ற யோக ஆசான்கள், பிள்ளைகளுடன் கூடிய முனிவர்கள், தெய்வீக முனிவர்கள், பூமாதேவி, (பூமிக்கும், சொர்க்கத்திற்கும் இடைப்பட்ட) வானம், நட்சத்திரக்கூட்டங்கள், கோள்கள், மாதங்கள், பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, பருவங்கள், இரவு, வருடங்கள், க்ஷணங்கள், முகூர்த்தங்கள், நிமிஷங்கள், அடுத்தடுத்த யுகங்கள், தெய்வீக அறிவியல்கள், அறிவின் கிளைகள், வாய்மையை அறிந்தவர்கள் ஆகியோர் பெருந்தகப்பனும் யோகத்தை அளித்தவனுமான அந்த உயர்ந்த ஆசானுக்குத் தலை வணங்கினர்.(388-390)

சனத்குமாரர், வேதங்கள், வரலாறுகள், மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது,(391) மனுக்கள் எழுவர், சோமன், அதர்வணங்கள், பிருஹஸ்பதி, பிருகு, தக்ஷன், காசியபர், வசிஷ்டர், காசியர்,(392) ஓ! யுதிஷ்டிரரே, சந்தங்கள், தீக்ஷை, வேள்விகள், தக்ஷிணை, வேள்வி நெருப்புகள், வேள்விகளில் ஊற்றப்படும் ஹவிஸ் (தெளிந்த நெய்) வேள்விக்குத் தேவையான பொருட்கள் என உடல்கொண்ட வடிவங்களுடன் அங்கே நின்று கொண்டிருந்தோர் அனைவரையும் நான் கண்டேன்.(393) லோகபாலர்கள், ஆறுகள், பாம்புகள், மலைகள், தெய்வீகத் தாய்மார், தேவர்களின் மனைவிமார் மற்றும் மகள்கள்,(394) ஆயிரமாயிரமாக, கோடிக்கணக்கில் இருந்த தவசிகள் ஆகியோர் அமைதியான ஆன்மா கொண்ட அந்தப் பலமிக்கத் தலைவனுக்குத் தலைவணங்குவதை நான் கண்டேன். மலைகள், பெருங்கடல்கள், திசைகள் ஆகியனவும் அதையே செய்தன, கந்தர்வர்கள், இசையில் திறம்பெற்ற அப்ரசரஸ்கள் ஆகியோர்,(395) அற்புதம் நிறைந்தவனான பவனின் புகழை தெய்வீகத் தொனியில் பாடிக் கொண்டிருந்தனர். வித்யாதரர்கள், தானவர்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள்,(396) அசைவன, அசையாதன எனப் படைக்கப்பட்டவை அனைத்தும் எண்ணத்ததாலும், சொல்லாலும், செயலாலும் அந்தப் பலமிக்கத் தலைவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். தேவர்கள் அனைவரின் தலைவனான சர்வன் என் முன் தோன்றி, மகிமை அனைத்துடன் அமர்ந்திருந்தான்.(397) என் கண் முன்னே மகிமையுடன் அமர்ந்திருக்கும் ஈசானனைக் கண்டு, பெரும்பாட்டன் மற்றும் சக்ரனுடன் கூடிய மொத்த அண்டமும் என்னைப் பார்த்தது.(398) எனினும், மஹாதேவனைப் பார்க்கும் சக்தி எனக்கிருக்கவில்லை.

அப்போது அந்தப் பெருந்தேவன் என்னிடம், “ஓ! கிருஷ்ணா, பார், என்னிடம் பேசுவாயாக.(399) நீ நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான முறை என்னைத் துதித்திருக்கிறாய். மூவுலகங்களிலும் எனக்கு உன்னைவிட அன்புக்குரியவன் வேறு எவனும் கிடையாது” என்றான்.(400)

நான் அவனுக்குத் தலைவணங்கியதும், அவனது மனைவியான உமாதேவி என்னிடம் நிறைவடைந்தாள். பிறகு, பெரும்பாட்டனான பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவராலும் துதிக்கப்படும் அந்தப் பெருந்தேவனிடம் நான் இந்த வார்த்தைகளைச் சொன்னேன்”.(401)

அருள் நிறைந்த விஷ்ணு சொன்னான், “நான் மஹாதேவனிடம், ஓ! அனைத்துப் பொருட்களின் நித்திய மூலமா உன்னை வணங்குகிறேன். வேதங்களின் தலைவன் என்று முனிவர்கள் உன்னைச் சொல்கிறார்கள். தவம் என்றும், சத்வம் என்றும், ரஜஸ் என்றும், தமஸ் என்றும், வாய்மை என்றும் அறவோர் உன்னைச் சொல்கிறார்கள்.(402) பிரம்மன் நீயே, ருத்திரன் நீயே, வருணன் நீயே, அக்னி நீயே, மனு நீயே, பவன் நீயே, தாத்ரி நீயே, தாஷ்டிரி நீயே, விதாத்ரி நீயே, அனைத்துப் பொருட்களின் பலமிக்க ஆசான் நீயே, எங்கும் இருப்பவன் நீயே.(403) அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் உன்னில் இருந்தே எழுந்தன. அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகங்களும் உன்னாலேயே படைக்கப்பட்டன.(404) புலன்கள், மனம், உயிர் மூச்சுகள் {வாயுக்கள்}, ஏழு வேள்வி நெருப்புகள், நீக்கமற நிறைந்திருக்கும் ஆன்மாவையே புகலிடமாகக் கொண்டோர், துதிக்கப்படுபவர்களும், துதிகளுக்குத் தகுந்தவர்களுமான தேவர்கள் அனைவரையும்விட மேன்மையானவன் என்று முனிவர்கள் உன்னைச் சொல்கிறார்கள்.(405)

ஓ! சிறப்புமிக்கவனே, வேதங்களும், வேள்விகளும், சோமன், தக்ஷிணை, பாவகன், ஹவிஸ் மற்றும் வேள்விக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் நீயே.(406) வேள்வியால் பெறும் தகுதி {புண்ணியம்}, பிறர் கொடுக்கும் கொடைகள், வேத கல்வி, நோன்புகள், கட்டுப்பாடுடையோரின் ஒழுக்க நெறிகள், பணிவு, புகழ், செழிப்பு, காந்தி, மனநிறைவு, வெற்றி ஆகியன உன்னிடம் வழிநடத்திச் செல்லவே நீடித்திருக்கின்றன.(407) ஓ!சிறப்புமிக்கவனே, ஆசை, கோபம், அச்சம், காமம், செருக்கு, மயக்கம், வன்மம், துன்பம், நோய்கள் ஆகியன உனது பிள்ளைகளே.(408) உயிரினங்கள் செய்யும் செயல்களும் நீயே, அந்தச் செயல்களால் விளையும் இன்பதுன்பங்களும் நீயே, இன்பதுன்பமற்ற நிலைகளும் நீயே, ஆசையின் அழிவில்லாத வித்தான அறியாமை நீயே, மனத்தின் உயர்ந்த மூலம் நீயே, பலம் நீயே, நிலைபேறும் நீயும்.(409) வெளிப்படாதவன் நீயே, பவனன் நீயே, புலப்படாதவன் நீயே, ஆயிரங்கதிர் சூரியன் நீயே, பிரகாசமான சித் நீயே, தத்துவங்கள் அனைத்திலும் முதல் தத்துவம் நீயே, உயிரின் புகலிடம் நீயே.(410)

மஹத், ஆன்மா, புத்தி, பிரம்மன், அண்டம், சம்பு, சுயம்பு, ஆகிய சொற்களின் மூலமும், (வேதங்களில்) அடுத்தடுத்து தோன்றும் இதுபோன்ற பிற சொல்களின் மூலமும், மஹத்துடனும், ஆன்மாவுடனும் உனது இயல்பு (வேதங்களை அறிந்த மனிதர்களால்) அடையாளம் காணப்படுகிறது. உண்மையில் இவையாவும் நீயெனக் கருதியே கல்விமானான ஒரு பிராமணன், உலகத்தின் வேராக இருக்கும் அறியாமையை வெல்கிறான்.(411,412) உயிரினங்கள் அனைத்தின் இதயம் நீயே, க்ஷேத்ரக்ஞன் என்று முனிவர்களால் துதிக்கப்படுபவன் நீயே. உன் கரங்களும் பாதங்களும் அனைத்து இடங்களிலும் நீண்டிருக்கின்றன, உன் கண்களும், தலையும், முகமும் எங்கும் இருக்கின்றன. அண்டத்தில் எங்கும் உள்ளதைக் கேட்பவன் நீயே, அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் நீயே.(413) சூரியனின் விளைவால் எழும் நிமிஷங்கள் மற்றும் காலத்தின் வேறு பிரிவுகளில் செய்யப்படும் செயல்கள் அனைத்தின் கனியாக இருப்பதும் நீயே.(414) (உயர்ந்த சித்தின்) மூலப் பிரகாசம் நீயே. புருஷன் நீயே, அனைத்துப் பொருட்களில் வசிப்பவன் நீயே. வெற்றியின் யோக குணங்களான நுட்பம், திரள், கனி, மேன்மை, பிரகாசம் மற்றும் மாற்றமில்லாமை ஆகியவை நீயே.(415)

புத்தி, நுண்ணறிவு, மற்றும் உலகங்கள் அனைத்தும் உன்னைச் சார்ந்தே இருக்கின்றன. தியானத்தில் அர்ப்பணிப்பு மிக்கவர்களும், யோகத்தில் எப்போதும் ஈடுபடுபவர்களும் வாய்மையில் அர்ப்பணிப்பும் உறுதியும் கொண்டவர்களும், தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களும் உன்னையே நாடுகிறார்கள், உன்னைச் சார்ந்திருக்கிறார்கள்.(416) மாற்றமில்லாதவனாக, அல்லது அனைத்து இதயங்களிலும் வசிப்பவனாக, அல்லது உயர்ந்த பலம் கொண்டவனாக, அல்லது ஆதி புருஷனாக, அல்லது தூய ஞானமாக, அல்லது பிரகாசமிக்கச் சித்தாக, அல்லது நுண்ணறிவு கொண்ட மனிதர்கள் அனைவரின் உயர்ந்த புகலிடமாக உன்னை அறிபவர்கள் நிச்சயம் பெரும் நுண்ணறிவைக் கொண்டவர்களே. உண்மையில் அத்தகைய மனிதர்கள் புத்தியைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள்.(417) (மஹத், அகங்காரம், தன்மாத்திரைகள் என்றழைக்கப்படும் நுட்பமான ஐம்பூதங்கள் ஆகியவை அடங்கிய) ஏழு நுட்பமான காரியங்கள், (அனைத்துமறிந்த நிலை, நிறைவு அல்லது முழுமை, தொடக்கமற்ற ஞானம், சார்பில்லா நிலை {சுதந்திரம்}, எக்காலத்திலும் பழுதில்லாததும், முடிவற்றதுமான பலம் ஆகிய) ஆறு குணங்கள், போலிக் கருத்துகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட யோகத்தை அறிதல் ஆகியவற்றின் மூலம் ஞானம் கொண்ட மனிதன், பெரியவனான உனக்குள் நுழைவதில் வெல்கிறான்” என்றேன்.(418)

ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, துன்ப துயரங்களை அகற்றுபவனான பவனிடம் நான் இந்த வார்த்தைகளைச் சொன்னதும், அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டமானது (என் வார்த்தைகளில் உள்ள உண்மையை அங்கீகரிப்பதை வெளிப்படுத்தும் விதமாக) சிங்க முழக்கம் செய்தது.(419) அங்கிருந்த எண்ணற்ற பிராமணர்கள், தேவர்கள், அசுரர்கள், பிசாசங்கள், பித்ருக்கள், பறவைகள், பல்வேறு ராட்சசர்கள், பூத கணங்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர் அந்தப் பெருந்தேவனுக்குத் தலைவணங்கினர்.(420) அப்போது பெரும் நறுமணத்தைக் கொண்ட தெய்வீக மலர்கள் என் தலையில் பொழிந்தன, அந்த இடத்தில் இனிமையான தென்றல் வீசியது.(421) பிறகு, அண்டத்தின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவனும், பலமிக்கவனுமான சங்கரன், உமாதேவியையும், தேவர்கள் தலைவனையும், என்னையும் கண்டு, என்னிடம்,(422) “ஓ! கிருஷ்ணா, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, நீ எம்மிடம் பெரும் அர்ப்பணிப்பில் நிறைந்திருக்கிறாய் என்பதை நாம் அறிவோம். உன் நன்மைக்கானதைச் செய்வாயாக. நான் உன்னிடம் கொண்ட அன்பும், பாசமும் பெரியதாகும்.(423) நீ எட்டு வரங்களைக் கேட்பாயாக.[28] ஓ! கிருஷ்ணா, ஓ! மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவனே, அவற்றை நான் உனக்கு நிச்சயம் தருவேன். ஓ! யாதவர்களின் தலைவா, அவை எவை என்பதை எனக்குச் சொல்வாயாக. நீ விரும்புபவற்றைச் சொல்வாயாக. அவை அடைவதற்கு மிகக் கடினமானவையாக இருந்தாலும் அவற்றை நிச்சயம் நீ பெறுவாய்” என்றான் {சிவன்}.(424)

கிருஷ்ணன் பெற்ற வரங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 15-பார்வதியும், பரமேஸ்வரனும் தனக்குக் கொடுத்த வரங்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

அருள்நிறைந்த கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தச் சக்திமிக்க ஒளித்திரளுக்கு {சிவனுக்கு}, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் தலைவணங்கி, அவனிடம் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நான் இந்த வார்த்தைகளைச் சொன்னேன்,(1) “அறத்தில் உறுதி, போரில் பகைவரைக் கொல்லும் ஆற்றல், உயர்ந்த புகழ், பெரும் வலிமை, யோகத்தில் அர்ப்பணிப்பு, {அனைவருடனும் அன்பாக இருத்தல்}, உன் அருகாமை, நூறு நூறாகப் {பத்தாயிரம்} பிள்ளைகள் ஆகியனவே நான் உன்னிடம் கேட்கும் வரங்களாகும்” என்றேன்.(2) சங்கரன் நான் சொன்ன வார்த்தைகளை மீண்டும் சொல்லி “அப்படியே ஆகட்டும்” என்றான்.

அதன் பிறகு, அனைத்துப் பொருட்களையும் தாங்குபவளும், அனைத்துப் பொருட்களையும் தூய்மையாக்குபவளும்,(3) சர்வனின் மனைவியும், தவங்களின் கொள்ளிடமுமான அண்டத்தின் அன்னை {பராசக்தி}, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னாள், “ஓ! பாவமற்றவரே, சாம்பன் என்று பெயர் சூட்டப்படும் மகன் ஒருவனைப் பலமிக்க மஹாதேவன் உமக்கு அருளியிருக்கிறார்.(4) நீர் என்னிடம் இருந்தும் எட்டு வரங்களைக் கேட்பீராக. நான் அவற்றை உமக்கு நிச்சயம் தருவேன்” என்றாள்.

ஓ! பாண்டுவின் மகனே, அவளுக்குத் தலைவணங்கிய நான், அவளிடம், “பிராமணர்களிடம் மாறாப் பற்று, என் தந்தையின் அருள், நூறு மகன்கள், உயர்ந்த இன்பங்கள், என் குடும்பத்தில் அன்பு, என் அன்னையின் அருள், அமைதி நிலையை அடைந்தல், ஒவ்வொரு செயலையும் புத்திசாலித்தனமாகச் செய்தல் ஆகியவற்றை நான் உன்னிடம் வேண்டுகிறேன்” என்றேன்.(5,6)

உமை {கிருஷ்ணனிடம்}, “ஓ தேவனுக்கு இணையான ஆற்றலையும், பலத்தையும் கொண்டவரே, உண்மையற்றதை {பொய்யை} நான் ஒருபோதும் சொன்னதில்லை. உமக்குப் பதினாறாயிரம் {16000} மனைவியர் வாய்ப்பர். அவர்களிடம் நீர் கொள்ளும் அன்பும், உம்மிடம் அவர்கள் கொள்ளும் அன்பும் அளவற்றதாக இருக்கும்.(7) உமது உற்றார் உறவினர் அனைவரிடம் இருந்தும் உயர்ந்த பாசத்தை நீர் பெறுவீர். உமது உடல் பேரழகு வாய்ந்ததாக இருக்கும். நீர் உம் அரண்மனையில் தினமும் ஏழாயிரம் விருந்தினர்களுக்கு உணவூட்டுவீர்” என்றாள்”.(8)

வாசுதேவன் தொடர்ந்தான், “ஓ! பாரதரே, ஓ! பீமரின் அண்ணனே, எனக்கு இவ்வாறு வரங்களை அருளிய தேவனும் தேவியும், பூத கணங்களுடன் அங்கேயே அப்போதே மறைந்தனர்.(9) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, (மஹாதேவனைத் துதிக்க நான் யாரிடம் தீக்ஷை பெற்றேனோ அந்தப்) பெருஞ்சக்தி கொண்ட பிராமணரான உபமன்யு குறித்து நான் உமக்குச் சொன்ன செய்திகள் முழுமையும் அற்புதம் நிறைந்தவையாகும்.

உபமன்யு, அந்தப் பெருந்தேவனை வணங்கிவிட்டு, என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(10) உபமன்யு, “சர்வனைப் போன்று வேறு தேவனில்லை. சர்வனைப் போன்றொரு கதியோ, புகலிடமோ வேறில்லை. இவ்வளவு உயர்ந்த வரங்களை வேறு எவனாலும் கொடுக்க முடியாது. போரில் அவனுக்கு இணையானவன் வேறு எவனும் கிடையாது” என்றார்.(11)

தண்டி முனிவரின் சிவத்துதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 16-தண்டி முனிவர் பரமசிவனைப் புகழ்ந்து செய்த துதியை கிருஷ்ணனுக்குச் சொன்ன உபமன்யு…

உபமன்யு {கிருஷ்ணனிடம்}, “ஓ! ஐயா, கிருத யுகத்தில் தண்டி என்ற பெயரில் கொண்டாடப்பட்ட முனிவர் ஒருவர் இருந்தார். இதயத்தில் பெரும் அர்ப்பணிப்புடன் கூடிய அவர், தியான யோகத்தின் துணையுடன் பத்தாயிரம் {10000} வருடங்கள் அந்தப் பெருந்தேவனைத் துதித்தார். அத்தகைய இயல்புக்கு மீறிய அர்ப்பணிப்பின் மூலம் அவர் பெற்ற கனி அல்லது வெகுமதியை நான் உனக்குச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக. மஹாதேவனைக் காண்பதில் வென்ற அவர், சில பாடல்களைப் பாடி அவனைப் புகழ்ந்தார்.(1,2) மாற்றமில்லாதவனும், சிதைவில்லாதவனுமான அந்தப் பரமாத்மாவை தவங்களின் துணையுடன் சிந்தித்து, ஆச்சரியத்தில் நிறைந்த தண்டி இந்த வார்த்தைகளைச் சொன்னார்,(3) “உயர்ந்தவனாகச் சாங்கியர்களால் விளக்கப்படுபவனும், யோகியரால் நினைக்கப்படுபவனும், முதன்மையானவனும், அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், இருப்பிலுள்ளவை அனைத்தின் ஆசானும், அண்டத்தின் படைப்புக்கும், அழிவுக்கும் காரணன் என்று கல்விமான்களால் சொல்லப்படுபவனும், தேவர்கள், அசுரர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரைக் காட்டிலும் மேன்மையானவனும், அனைத்தையும் விட உயர்ந்தவனும், பிறப்பற்றவனும், அனைத்துப் பொருட்களின் தலைவனும், தொடக்கமும், முடிவும் அற்றவனும், உயரந்த பலத்தைக் கொண்டவனும், உயர்ந்த இன்பநிலையில் இருப்பவனும், பிரகாசமானவனும், பாவமற்றவனுமான புருஷனின் பாதுகாப்பை நான் நாடுகிறேன்” என்றார்.(4-6)

தண்டி இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, தவப் பெருங்கடலும், மாற்றமில்லாதவனும், சிதைவில்லாதவனும், ஒப்பில்லாதவனும், புரிந்துகொள்ளப்பட முடியாதவனும், நித்தியமானவனும், எந்த மாற்றமும் இல்லாதவனும், பகுபடாதவனும், முழுமையானவனும், பிரம்மமே ஆனவனும், குணங்கள் அனைத்தையும் கடந்தவனும், குணங்களுடன் கூடியவனும், யோகிகளின் உயர்ந்த மகிழ்ச்சியும், சிதைவற்றவனும், விடுதலை {மோக்ஷம் / முக்தி} என்றழைக்கப்படுபவனும், மனம், இந்திரன், காற்று தேவன், மொத்த அண்டம், பெரும்பாட்டனான பிரம்மன் ஆகியோரின் புகலிடமும், மனத்தால் புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், எவ்வகை மாற்றமும் இல்லாதவனும், தூயனும், புத்தியால் மட்டுமே புரிந்து கொள்ளப்படக்கூடியவனும், மனத்தைப் போலப் பருப்பொருளற்றவனும்;(7-9) புரிந்து கொள்ளக் கடினமானவனும், அளவிடப்பட முடியாதவனும், தூய்மையற்ற ஆன்மா கொண்டோரால் அடைதற்கரியவனும், அண்டத்தின் தோற்றுவாயும், அண்டம் மற்றும் இருள் குணம் {தமஸ் குணம்} ஆகிய இரண்டையும் கடந்தவனும், புராதனமானவனும், புருஷனும், பிரகாசமிக்கவனும், உயர்ந்தவற்றில் உயர்ந்தவனுமான அந்தப் பெருந்தேவனை அவர் தம்முன் கண்டார்.(10) அவனைக் காண விரும்பி, உயிர் மூச்சுகளுடன் தன்னை அமைத்துக் கொண்டு ஜீவனில் இருந்து விளைவதில் மனம் என்றழைக்கப்படும் பிரகாசத்தின் வடிவில் வசித்து, கடுந்தவங்களைப் பயில்வதில் பல வருடங்களைக் கடத்திய முனிவர் தண்டி, அத்தவங்களின் வெகுமதியாக அவனைக் காண்பதில் வென்றதும் , பின்வரும் வார்த்தைகளால் அந்தப் பெருந்தேவனைத் துதித்தார்.(11)

தண்டி {மஹாதேவனிடம்}, “புனிதங்கள் அனைத்திலும் புனிதமானவன் நீயே, ஓ! புத்தியுள்ளோர் அனைவரிலும் முதன்மையானவனே, அனைத்தின் புகலிடமும் நீயே. அனைத்து வகைச் சக்திகளிலும் கடுஞ்சக்தி நீயே. தவங்கள் அனைத்திலும் கடுந்தவம் நீயே.(12) ஓ! பலமிக்கவனே, அருள்களை வழங்கும் தயாளன் நீயே. உயர்ந்த வாய்மை நீயே. உன்னை வணங்குகிறேன்.(13) ஓ! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே, ஓ! அனைத்து இன்பங்களின் புகலிடமே, உன்னை வணங்குகிறேன். ஓ! பலமிக்கவனே, பிறப்பிறப்புக்கு அஞ்சி மிகக் கடுமையாக முயல்பவர்களுக்கு நிர்வாணத்தைக் கொடுப்பவன் நீயே.(14) பெரும்பாட்டனான பிரம்மன், நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்), விஷ்ணு, விஸ்வேதேவர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோரே கூட உனது உண்மை இயல்பைப் புரிந்து கொள்ள வல்லவர்களல்ல. அவ்வாறிருக்கையில் எங்களைப் போன்ற மனிதர்களால் எவ்வாறு உன்னைப் புரிந்து கொள்ள முடியும்?(15)

காலன் என்றழைக்கப்படுபவன் நீயே, புருஷன் என்றழைக்கப்படுபவன் நீயே, பிரம்மன் என்றுமழைக்கப்படுபவன் நீயே. புராணங்களை அறிந்த தெய்வீக முனிவர்கள் மூவுடலைக் கொண்டவன் {மூன்று மூர்த்திகள் – பிரம்மா, விஷ்ணு, சிவன்} நீ என்று சொல்கின்றனர்.(16) அதிபுருஷன் {அதிபௌருஷம்-ஆத்மாவிலுள்ளவன்}, அத்யாத்மம் {உடலில் உள்ளவன்}, அதிபூதம் {ஐம்பூதங்களில் உள்ளவன்}, அதிதைவதம் {அதிதெய்வம்-தேவர்களில் உள்ளவன்}, அதிலோகம் {உலகங்களில் உள்ளவன்}, அதிவிஜ்ஞானம் {ஞானத்தில் உள்ளவன்}, அதியஜ்ஞம் {யாகத்தில் இருப்பவன்} நீயே.(17) ஞானிகள், தங்களில் வசிப்பவனும், தேவர்களாலேயே அறியப்பட முடியாதவனுமான உன்னை அறிவதில் வெல்லும்போது, பந்தங்களில் இருந்து விடுபட்டு, கவலைகள் அனைத்தையும் கடந்த இருப்பு நிலையை அடைகின்றனர்.(18) ஓ! பெரும்பலம் கொண்டவனே, உன்னை அறிய விரும்பாதவர்கள், எண்ணற்ற பிறப்பிறப்புகளை அடைகின்றனர். சொர்க்கம் மற்றும் விடுதலையின் {முக்தியின்} வாயிலாக இருப்பவன் நீயே. அனைத்துப் பொருட்களையும் இருப்பில் இருக்கச் செய்பவனும், மீண்டும் தன்னுள்ளேயே ஈர்த்துக் கொள்பவனும் நீயே. பெருங்கொடையாளன் நீயே.(19) சொர்க்கம் நீயே, விடுதலை {முக்தி} நீயே, (செயல்பாட்டின் வித்தாக விளங்கும்) ஆசை நீயே. உயிரினங்களை ஈர்க்கும் கோபம் நீயே. சத்வம் நீயே, ரஜஸ் நீயே, தமஸ் நீயே, கீழுலகங்கள் {பாதாளம் முதலான உலகங்கள்} நீயே, மேலுலகங்கள் நீயே.(20)

பெரும்பாட்டனான பிரம்மன் நீயே, பவன் நீயே, விஷ்ணு நீயே, ஸ்கந்தன் நீயே, இந்திரன் நீயே, சாவித்ரி நீயே, யமன் நீயே, வருணன் நீயே, சோமன் நீயே, தாத்ரி நீயே, மனு நீயே, விதாத்ரி நீயே, கருவூலத் தலைவனான குபேரன் நீயே.(21) பூமி நீயே, காற்று நீயே, நீர் நீயே, அக்னி நீயே, வெளி நீயே, வாக்கு நீயே, புத்தி நீயே, நிலைமாறாவுறுதி நீயே, நுண்ணறிவு நீயே, உயிரினங்கள் செய்யும் செயல்கள் நீயே, மெய் நீயே, பொய் நீயே, இருப்பு நீயே, இன்மை {இல்லாமை} நீயே.(22) புலன்கள் நீயே, பிரகிருதியைக் கடந்திருப்பவன் நீயே, மாற்றமில்லாதவன் நீயே. அண்டத்திலுள்ளவை அனைத்திலும் மேன்மையானவன் நீயே, அண்டத்தில்லாதவை அனைத்திலும் மேன்மையானவன் நீயே, சிந்தைக்கு எட்டுபவன் நீயே, சிந்தைக்கு எட்டாதவன் நீயே.(23) பரப்பிரம்மமும், உயர்ந்த தனிவடிவ உட்பொருள் நீயே, சாங்கியர்கள் மற்றும் உன்னைப் போன்ற யோகியர்கள் இருவரும் அடையும் கதி நிச்சயம் நீயே. (24) உண்மையில், உன் வடிவைக் காண அருள் செய்த விளைவால் நீ எனக்கு இன்று வெகுமதியளித்திருக்கிறாய். அறவோர் மட்டுமே எட்டும் கதியை நான் அடைந்திருக்கிறேன். அறிவால் தூய்மையடைந்த புத்தியைக் கொண்டோரால் வேண்டப்படும் கதியையே நான் வெகுமதியாக அடைந்திருக்கிறேன்.(25)

ஐயோ, இவ்வளவு காலம் நான் அறியாமையில் இருந்தேனே; ஞானிகள் அனைவராலும் அறியப்படும் நித்திய உட்பொருளும், உயர்ந்த தேவனுமான உன்னைக் குறித்த அறிவில்லாமல் இவ்வளவு நீண்ட காலம் உணர்வற்ற மூடனாக இருந்தேனே.(26) ஓ! அர்ப்பணிப்பு கொண்டருக்கு அருள் வழங்குபவனே, எண்ணற்ற பிறவிகளின் போக்கில் நீ காட்டிய கருணையின் விளைவால் இறுதியாக உன்னிடம் அர்ப்பணிப்புக் கொள்வதில் வென்றேன். உன்னை அறிவதில் வெல்வபன் அழிவின்மையை அனுபவிக்கத் தகுந்தவனாகிறான்.(27) தேவர்கள், அசுரர்கள் மற்றும் தவசிகளுக்கு எப்போதும் புதிராக இருப்பவன் நீயே. பிரம்மம் குகைக்குள் மறைந்திருக்கிறது. தவசிகளாலேயே கூட அதைக் காணவோ, அறியவோ முடியவில்லை[1].(28) அனைத்தையும் படைத்தவனும், அனைத்துத் திசைகளிலும் முகத்தைக் கொண்டவனுமான பலமிக்கத் தேவன் நீயே. அனைத்துப் பொருட்களின் ஆன்மா நீயே, அனைத்துப் பொருட்களையும் காண்பவன் நீயே, அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் நீயே. அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் நீயே.(29) உனக்கான உடலை உண்டாக்குபவன் நீயே. அவ்வுடலைச் சுமப்பவன் நீயே. உடல்படைத்தவன் நீயே. உடலை அனுபவிப்பவன் நீயே, உடல் படைத்த உயிரினங்கள் அனைத்தின் புகலிடமும் நீயே. உயிர் மூச்சுகளைப் படைத்தவன் நீயே, உயிர்மூச்சுகளைக் கொண்டவன் நீயே, உயிர்மூச்சுகளோடு கூடியவன் நீயே, உயிர் மூச்சுகளுடன் கூடிய அனைத்தின் புகலிடமும் நீயே.(30)

[1] “ஒவ்வொரு உயிரினத்தின் இதயமே இங்குக் குகை என்று சொல்லப்படுகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “தேவர்களுக்கும் அஸுரர்களுக்கும், முனிவர்களுக்கும் தெரியாமல் குகையில் வைக்கப்பட்டதும், வேதத்தால் அறியக்கூடாததுமான பரப்ரம்மம் எதுவோ அஃது இந்தப் பகவனான ஈஸ்வரர்தாம்” என்றிருக்கிறது.

தியான யோகத்தில் அர்ப்பணிப்பு மிக்கவர்களும், ஆன்மாவை அறிந்தவர்களும், மறுபிறவி தவிர்க்க வேண்டுபவர்களுமான அறவோர் அனைவரின் புகலிடமான அந்த அத்யாத்மம் நீயே. உண்மையில், அந்தப் புகலிடத்துடன் அடையாளம் காணப்படும் உயர்ந்த தலைவன் நீயே.(31) உயிரினங்கள் அனைத்திற்கும் இன்ப துன்பம் நிறைந்த கதிகளைக் கொடுப்பவன் நீயே. படைக்கப்பட்டவை அனைத்தின் பிறப்பிறப்பை விதிப்பவன் நீயே.(32) விருப்பங்கள் கனிவதில் வெற்றியால் மகுடம் சூட்டப்படும் முனிவர்களுக்கு வெற்றியை அருளும் பலமிக்கத் தலைவன் நீயே. பூலோகம் தொடங்கிச் சொர்க்கவாசிகள் அனைவருடன் சேர்ந்து அனைத்து உலகங்களையும் படைத்து அவை அனைத்தையும் பேணித் தாங்குபவனான நீ, நன்கறியப்பட்ட எட்டு வடிவங்களில் உன்னைப் பகுத்துக் கொள்கிறாய்.(33) உன்னில் இருந்தே அனைத்தும் உண்டாகின்றன. உன்னையே அனைத்தும் சார்ந்திருக்கின்றன. மேலும் அனைத்துப் பொருட்களும் உன்னிலையே மறைகின்றன. நித்தியமான ஒரே பொருள் நீயே.(34) அறவோரால் வேண்டப்படுவதும், அவர்களால் உயர்ந்ததாகக் கருதப்படுவதுமான வாய்மை உலகம் {சத்தியலோகம்} நீயே. யோகியர் வேண்டும் தனிப்பட்ட இருப்பு முறித்துக் கொள்ளும் நிலையாக இருப்பவன் நீயே. ஆன்மாவை ஆறிந்தோரால் நாடப்படும் விடுதலை {முக்தி} நீயே.(35)

தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் உன்னைக் காணாதிருக்க வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிரம்மன் முதலானவர்களால் குகையில் மறைத்து வைக்கப்பட்டவன் நீயே.(36) இதயத்தில் வசிப்பவனாக இருந்தாலும் மறைக்கப்பட்டிருப்பவன் நீயே. எனவே, ஓ! பவா, உன்னால் திகைப்படைந்த தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும் விபரங்கள் அனைத்துடன் உன்னைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாகின்றனர்.(37) ஓ! அனைவரின் இதயங்களிலும் வசிப்பவனே, அர்ப்பணிப்பால் இதயத் தூய்மை அடைவதில் வெல்லும் மனிதர்களுக்கு உன் விருப்பத்தின் பேரில் நீ காட்சியளிக்கிறாய்.(38) உன்னை அறிவதால் ஒருவன் இறப்பையும், மறுபிறப்பையும் தவிர்க்கலாம். உயர்ந்த அறிவுப்பொருள் {ஞானப்பொருள்} நீயே. உன்னை அறிவதால் ஒருவன் அறிய வேண்டிய உயர்ந்த பொருள் வேறேதும் இல்லை.(39) அடையத்தக்க உயர்ந்த பொருள் நீயே. உண்மையில் ஞானியாக இருப்பவன், உன்னை அடைந்ததும், அடையத்தக்க உயர்ந்த பொருள் வேறேதும் இல்லை என்று நினைக்கிறான். மிக நுட்பமானவனும், அடையத்தக்க உயர்ந்த பொருளுமான உன்னை அடைவதன் மூலம் ஒரு ஞானியானவன் அழிவற்றவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் ஆகிறான்.(40)

தத்துவம் அறிந்தவர்களும், (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) குணங்களின் அறிவைப் பெற்றவர்களும், நுட்பமான அல்லது அழிவற்ற அறிவை அடைவதன் மூலம் அழிவுநிலையைக் கடப்பவர்களும், கல்விமான்களுமான சாங்கிய அமைப்பின் தொண்டர்கள், அனைத்துப் பந்தங்களில் இருந்தும் தங்களை விடுவித்துக் கொள்வதில் உன்னை அறிந்து வெற்றி அடைகிறார்கள்.(41) வேதங்களை அறிந்தவர்கள், வேதாந்தங்களில் விளக்கப்பட்டிருக்கும் அறிவுப்பொருள் என உன்னையே கருதுகிறார்கள். மூச்சுப்பயிற்சியில் அர்ப்பணிப்புமிக்க இம்மனிதர்கள் எப்போதும் உன்னை நோக்கியே தியானித்து இறுதியாக உயர்ந்த கதியை அடைவதன் மூலம் உன்னில் நுழைகிறார்கள்.(42) அம்மனிதர்கள், ஓங்காரத்தால் அமைக்கப்பட்ட தேரைச் செலுத்திக் கொண்டு மஹேஸ்வரனுக்குள் நுழைகிறார்கள். தேவ பாதை என்றழைக்கப்படும் பாதையில் ஆத்தியம் என்றழைக்கப்படும் வாயில் நீயே.(43) பித்ரு பாதை என்றழைக்கப்படும் பாதையில் சந்திரமாஸ் {சந்திரன்} என்றழைக்கப்படும் வாயில் நீயே. காஷ்டை நீயே, திசைப்புள்ளிகள் நீயே, ஆண்டு நீயே, யுகங்களும் நீயே.(44) சொர்க்கங்களின் அரசு நீயே, பூமியின் அரசும் நீயே, வட மற்றும் தென் அயனங்களும் நீயே. ஓ! நீலம் மற்றும் சிவப்பு {நீலலோகிதன்} என்றழைக்கப்படுபவனே, பழங்காலத்தில் உன் புகழைப் பல்வேறு பாடல்களில் பாடி உயிரினங்களைப் படைக்குமாறுப் பெரும்பாட்டனான பிரம்மன் உன்னைத் தூண்டினான்.(45)

ரிக்குகளை அறிந்த பிராமணர்கள், அனைத்துப் பொருட்களிலும் பற்றற்றவனாகவும், வடிவங்களேதும் அற்றவனாகவும் உன்னைக் கருதி ரிக்குகளை ஓதி உன்னைப் புகழ்கிறார்கள். வேள்விகளில் அதர்யுக்கள், ஒரே ஞானப்பொருளான உன்னை மதிக்கும் வகையில் நன்கறியப்பட்ட மூன்று வழிகளில் யஜுஸ்களைப் பாடுகிறார்கள்.(46) தூய்மையடைந்த புத்தியைக் கொண்டவர்களும், சாமங்களை அறிந்தவர்களுமான மனிதர்கள், சாமங்களின் துணையுடன் உன்னைப் பாடுகிறார்கள். மேலும், அதர்வணங்களை அறிந்த மறுபிறப்பாளர்கள், ரிதன் என்றும், வாய்மை என்றும், மேன்மை என்றும், பிரம்மம் என்றும் உன்னைக் குறித்துப் பாடுகிறார்கள். வேள்வி நடைபெறும் இடங்களில் உயர்ந்த காரணமாக இருப்பவன் நீயே. தலைவனும், பரமனும் நீயே.(47) இரவும், பகலும் உன் கேள்விப் புலனாகவும், பார்வைப்புலனாகவும் இருக்கின்றன. பிறை நாட்களும், மாதங்களும் உன் தலையாகவும், கரங்களாகவும் இருக்கின்றன. பருவகாலங்கள் உன் சக்தியாகும், தவங்கள் உன் பொறுமையாகும் {தைரியமாகும்}, வருடம் உன் குதமும், தொடைகளும் பாதங்களுமாகும்.(48) மிருத்யு நீயே, யமன் நீயே, ஹுதாஸன் நீயே, காலன் நீயே, அழிவைத் தருவதில் வேகமாகச் செயல்படுபவன் நீயே, காலத்தின் மூலக் காரணம் நீயே, நித்திய காலம் நீயே.(49) ஆகாயத்தை நிறைத்திருக்கும் வெளி, கோள்கள் மற்றும் விண்மீன்களுடன் சேர்ந்த சந்திரமாஸும் {சந்திரனும்}, ஆதித்தியனும் நீயே. துருவ நட்சத்திரம் நீயே, சப்தமுனிவக் கூட்டம் நீயே, பூலோகம் முதலான ஏழு உலகங்கள் நீயே.(50)

பிரதானனும் {முக்கிய முதல்வனும்}, மஹத்தும் நீயே, வெளிப்படாதவன் நீயே, இவ்வுலகமும் நீயே. பிரம்மன் முதல் தாழ்ந்த செடி வடிவங்கள் வரையான அண்டம் நீயே. அனைத்து உயிரினங்களின் தொடக்கம் அல்லது மூலக் காரணன் நீயே. இருப்பு நீயே, இல்லாமையும் நீயே.(51) எட்டுப் பிரகிருதிகள் நீயே. அந்த எட்டு பிரகிருதிகளுக்கும் மேலானவன் நீயே. இருப்பில் உள்ள அனைத்தும் தெய்வீகமான உன் சுயத்தின் ஒரு பகுதியையே பிரதிபலிக்கின்றன.(52) நித்தியமான உயர்ந்த இன்ப நிலை {பரமானந்தம்} நீயே. அனைத்துப் பொருட்களாலும் அடையப்படும் கதி நீயே. அறவோரால் வேண்டப்படும் உயர்ந்த இருப்புநிலை நீயே.(53) கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட நிலை நீயே. நித்திய பிரம்மம் நீயே. சாத்திரங்கள் மற்றும் வேதாங்கங்களைக் கற்ற மனிதர்களின் தியானத்தில் அமையும் உயர்ந்த நிலை நீயே.(54) உயர்ந்த காஷ்டை நீயே, உயர்ந்த காலம் நீயே. உயர்ந்த வெற்றி நீயே, உயர்ந்த புகலிடமும் நீயே.(55) உயர்ந்த அமைதிநிலை நீயே. இருப்பின் உயர்ந்த முற்றுநிலை நீயே. உன்னை அடைவதால் உயர்ந்த வெற்றியை அடைவதாக யோகியர் நினைக்கின்றனர்.(56) மனநிறைவு நீயே, வெற்றி நீயே, ஸ்ருதி நீயே, ஸ்மிருதியும் நீயே. யோகிகள் முயற்சிக்கும் ஆன்மப் புகலிடம் நீயே, ஞானிகள் தொடரும் அழிவற்ற பிராப்தி நீயே.(57)

வேள்விக்கு அடிமைகளும், குறிப்பிட்ட ஆசைகளால் தூண்டப்பட்டு வேள்விகளில் ஆகுதிகளை ஊற்றுபவர்களும், அத்தகைய தருணங்களில் பெருங்கொடைகளை அளிப்பவர்களும் தங்கள் நோக்கமாகக் கொண்டிருப்பவன் நிச்சயம் நீயே.(58) இடையறாத பாராயணம், கடும் நோன்புகள், அமைதியான வாழ்வுமுறைக்கு இணங்கும் உண்ணா நோன்புகள் மற்றும் தன்னொடுக்கத்திற்கான பிற வழிமுறைகளுடனும், கடுந்தவங்களாலும் தங்கள் உடல்களை வீணாக்கும் மனிதர்களால் நாடப்படும் உயர்ந்த கதி நீயே.(59) ஓ! நித்தியமானவனே, அனைத்துச் செயல்களையும் துறந்தவர்களும், அனைத்துப் பொருட்களிலும் பற்றற்றவர்களுமாக இருக்கும் மனிதர்களின் கதி நீயே.(60) ஓ! நித்தியமானவனே, மறுபிறப்பில் இருந்து விடுதலை {முக்தி} அடைய விரும்புவோர், இன்பங்கள் அனைத்தின் தொடர்பறுந்து வாழ்வோர், பிரகிருதி பூதங்களின் அழிவை விரும்புவோர் ஆகியோரின் கதி நீயே.(61) ஓ! சிறப்புமிக்கவனே, விளக்க முடியாததும், களங்கமற்றதும், மாற்றமில்லாததும், ஞானம் மற்றும் அறிவியலில் அர்ப்பணிப்பு மிக்கோருக்குச் சொந்தமானதுமான உயர்ந்த கதி நீயே.(62) வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் புராணங்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஐந்து கதிகள் இவையே. உன் அருளின் மூலமே அம்மனிதர்கள் அக்கதிகளை அடைகிறார்கள் அல்லது அடையத் தவறுகிறார்கள், உன் அருளின் மூலமே அவை அவர்களுக்கு மறுக்கவும் படுகின்றன” என்றார் {தண்டி}.(63) தவங்களின் பெருங்குவியலான தண்டி இவ்வாறே ஈசானனைப் புகழ்ந்தார் {துதித்தார்}. மேலும் அவர், (மஹாதேவனை மகிமை படுத்தும் வகையில்) படைப்பாளனால் பழங்காலத்தில் படாடப்பட்ட உயர்ந்த பிரம்மத்தையும் பாடினார்”[2].(64)

[2] கும்பகோணம் பதிப்பில், “தவங்களுக்கெல்லாம் இருப்பிடமாகிய தண்டி மஹாமுனிவர் முன்னர் உலகம் படைத்த ப்ரம்மதேவர் எந்தப் பரப்பிரம்மத்தைத் துதித்தாரோ அந்தப் பரப்ரம்மமாகிய ஈஸ்வரரை மனமாரத் துதித்தார்” என்றிருக்கிறது.

உபமன்யு {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தார், “பிரம்மத்தை ஓதுபவரான தண்டியால் இவ்வாறு துதிக்கப்பட்டவனும், சிறப்புமிக்கவனும், உயர்ந்த தேவனுமான மஹாதேவன், தன் மனைவியான உமையின் துணையுடன் வந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(65) தண்டி மேலும், “பிரம்மனோ, இந்திரனோ, விஷ்ணுவோ, விஸ்வேதேவர்களோ பெரும் முனிவர்களோ உன்னை அறிய மாட்டார்கள்” என்றார். இதனால் நிறைவடைந்த சிவன் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(66)

அந்தப் புனிதமானவன் {சிவன்}, “நீ அழிவற்றவனாகவும், நித்தியமானவனாகவும் இருப்பாய். நீ கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபடுவாய். பெரும் புகழ் உனதாகும். நீ சக்தியுடனிருப்பாய். ஆன்ம அறிவு உனதாகும்.(67) முனிவர்கள் அனைவரும் உன்னை நாடுவார்கள், ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, என் அருளின் மூலம் உன் மகன் சூத்திரங்களின் ஆசானாவான்.(68) நான் இன்று உனக்கு என்ன வரங்களைத் தர வேண்டும்? ஓ! மகனே, நீ விரும்பும் பொருட்களை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான். இதன் பேரில் தண்டி, தமது கரங்களைக் கூப்பிக் கொண்டு, “ஓ! தலைவா, உன்னிடம் நான் கொண்டுள்ள அர்ப்பணிப்பு நிலையான உறுதியுடன் இருக்கட்டும்” என்று கேட்டார்”.(69)

உபமன்யு தொடர்ந்தார், “அந்தப் பெருந்தேவன், தண்டிக்கு இந்த வரங்களைக் கொடுத்து, தேவர்கள் மற்றும் முனிவர்களின் துதிகளை ஏற்றுக் கொண்டு அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(70) ஓ! யாதவர்களின் தலைவா, அந்தச் சிறப்புமிக்கத் தேவன் தன் தொண்டர்களுடன் இவ்வாறு மறைந்ததும், அந்த முனிவர் {தண்டி} என் ஆசிரமத்திற்கு வந்து அவருக்கு நேர்ந்த அனைத்தையும் எனக்குச் சொன்னார்.(71) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, தண்டியால் எனக்குச் சொல்லப்பட்ட (மஹாதேவனின்) அந்தக் கொண்டாடப்படும் பெயர்கள் அனைத்தையும் உன் வெற்றிக்காகக் கேட்பாயாக.(72) பெரும்பாட்டன் {பிரம்மன்} ஒரு காலத்தில் மஹாதேவனுக்குப் பொருந்தும் பத்தாயிரம் பெயர்களைச் சொன்னான். அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் ஓராயிரம் பெயர்கள் சாத்திரங்களில் இருக்கின்றன.(73) இந்தப் பெயர்கள் அனைவராலும் அறியப்பட்டவை அல்ல. ஓ! அழிவைக் கடந்தவனே, பழங்காலத்தில் அந்த உயர் ஆன்ம தேவனைத் துதிப்பதற்காகப் பெரும்பாட்டனான பிரம்மன் இந்தப் பெயர்களைச் சொன்னார். பெரும்பாட்டனின் அருள் மூலம் அவற்றை அடைந்த தண்டி, அவற்றை எனக்குச் சொன்னார்” {என்றார் உபமன்யு}.(74)

சிவஸஹஸ்ரநாமம் – சிவனின் ஆயிரம் பெயர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 17-தண்டி முனிவரால் அருளப்பட்டதாக உபமன்யு சொன்ன சிவஸஹஸ்ரநாமத்தை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! யுதிஷ்டிரரே, மறுபிறப்பாள முனிவர் உபமன்யு, தம் மனத்தைக் குவித்து, மதிப்புடன் கரங்களைக் கூப்பி (மஹாதேவனுக்குப் பொருந்தும்) இந்தப் பெயர்களின் தொகுப்பைத் தொடக்கமுதல் சொல்லத் தொடங்கினார்.(1)

உபமன்யு, “பெரும்பாட்டனான பிரம்மனால் சொல்லப்பட்ட சிலவற்றையும், முனிவர்களால் சொல்லப்பட்ட சிலவற்றையும், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களில் தோன்றும் சிலவற்றைக் கொண்டவையும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவையுமான பெயர்களைச் சொல்லி அனைத்து உயிரினங்களின் துதிக்குத் தகுந்தவனான அந்தப் பெருந்தேவனைத் துதிக்கப் போகிறேன்.(2) திறம்பெற்ற மனிதர்களால் (பெருந்தேவனுக்குப் பொருத்தமான) அந்தப் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. மேலும் அவை, வாய்மையும் வெற்றியும் நிறைந்தவையும், {அந்தப் பெயர்களைச்} சொல்வோரின் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வல்லவையுமாக இருக்கின்றன. வேத உரைகளால் தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவரும், தமது அர்ப்பணிப்பின் துணையால் அப்பெயர்களைக் கண்டடைந்தவருமான தண்டியால் அவை மஹாதேவனுக்குப் பயன்படுத்தப்பட்டன.(3) உண்மையில், நன்கறியப்பட்ட அறவோர் மற்றும் தத்துவங்கள் அனைத்தையும் அறிந்த தவசிகள் பலரால் சொல்லப்பட்ட அப்பெயர்களைக் கொண்டு, முதன்மையானவனும், முதல்வனே ஆனவனும், சொர்க்கத்திற்கு வழிவகுப்பவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மைகளைக் கொடுப்பவனுமான அந்த மங்கலனை நான் துதிக்கப் போகிறேன்.(4) (அவை உண்மையில் எங்கிருந்து உண்டானதோ அந்தப்) பிரம்ம லோகத்தில் இருந்து பரவிய அப்பெயர்கள் அண்டம் முழுவதும் கேட்கப்படுகின்றன. அவை அனைத்தும் உண்மை நிறைந்தவையாக இருக்கின்றன. வேதங்களின் மூலம் (அண்டத்திற்கு) அறிவிக்கப்பட்டவனும், நித்தியமானவனுமான அந்தப் பரப்பிரம்மனை அப்பெயர்களைக் கொண்டு நான் துதிக்கப் போகிறேன்.(5)

ஓ! யது குலத் தலைவா {கிருஷ்ணா}, நான் இப்போது அப்பெயர்களைச் சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் அவற்றைக் கேட்பாயாக. நீ {கிருஷ்ணா} அந்தப் பரமனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட வழிபாட்டாளனாவாய். தேவர்கள் அனைவரிலும் தனித்துவமானவனும், சிறப்புமிக்கவனுமான அந்தப் பவனை நீ வழிபடுவாயாக.(6) நீ அவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாக இருப்பதாலேயே நீ கேட்கும்படி நான் அப்பெயர்களைச் சொல்லப் போகிறேன். மஹாதேவனே நித்திய பிரம்மமாவான். நூறு வருடங்கள் தொடர்ந்து சொன்னாலும், யோக பலம் கொண்டவர்களாலும் அந்தப் பெருந்தேவனின் மகிமையையும், பலத்தையும் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. உண்மையில் மஹாதேவனின் தொடக்கமும், நடுவும், முடிவும் தேவர்களாலேயே கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை.(7,8) ஓ! மாதவா, உண்மை இவ்வாறிருக்கையில், மஹாதேவனின் குணங்களை வேறு யாரால் உரைக்க முடியும்? இருப்பினும், சிறப்புமிக்கவனும், முற்றான ஞானம் கொண்டவனுமான அந்தப் பரமதேவனின் கருணையால், நான் அவனிடம் கொண்ட அர்ப்பணிப்பால் சில எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளின் தொகுதி என்ற வடிவில் நான் அவனது குணங்களைச் சொல்லப் போகிறேன்.(9) அந்த உயர்ந்த தலைவனின் அனுமதி பெறாமல் எவராலும் அவனைத் துதிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில், அவனது அனுமதி பெறுமளவுக்கு நற்பேறு பெற்ற பிறகே அவனைத் துதிப்பதில் வென்றேன்.(10)

பிறவியும், அழிவும் அற்றவனும், அண்டத்தின் மூலக் காரணனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனும், வெளிப்படாத தோற்றம் கொண்டவனுமான அந்தப் பெருந்தேவனின் பெயர்களில் சிலவற்றை மட்டும் நான் குறிப்பிடுகிறேன்.(11) ஓ! கிருஷ்ணா, வரமளிப்பவனும், துதிக்கத்தக்க தேவனும், பலமிக்கவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனும், உயர்ந்த ஞானத்தைக் கொண்டவனுமான அந்தத் தேவனின் பெயர்களில் பிரம்மன் மூலம் சொல்லப்பட்ட சிலவற்றைக் கேட்பாயாக.(12) நான் சொல்லப் போகும் இந்தப் பெயர்கள், தயிரில் இருந்து வெண்ணையை எடுப்பதைப் போல, பழங்காலத்தில் பெரும்பாட்டனால் சொல்லப்பட்ட பத்தாயிரம் பெயர்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.(13) தங்கமானது மலைப்பாறைகளின் சாரத்தைப் பிரதிபலிப்பதைப் போலவும், தேனானது மலர்களின் சாரத்தைப் பிரதிபலிப்பதைப் போலவும், மந்தமானது {நெய்யானது} வெண்ணையைப் பிரதிபலிப்பதைப் போலவும், தொகுக்கப்பட்டிருக்கும் இப்பெயர்கள், பெரும்பாட்டனான பிரம்மனால் சொல்லப்பட்ட அந்தப் பத்தாயிரம் பெயர்களின் சாரத்தையே பிரதிபலிக்கின்றன.(14) இந்தப் பெயர்களின் தொகுப்பானது, மிகக் கொடிய பாவத்தையும் கழுவும் வல்லமை பெற்றதாகும். நான்கு வேதங்களின் தகுதி இதற்கும் உண்டு. இது முயற்சியுடன் புரிந்து கொள்ளப்பட்டு, குவிந்த ஆன்மாவுடன் நினைவில் செதுக்கப்பட வேண்டும்.(15)

இது மங்கலம் நிறைந்ததாகும். இது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இது ராட்சசர்களுக்கு அழிவை உண்டாக்கும்[1]. இது பரிசுத்தமடையச் செய்யும் பெருமை கொண்டது. பெருந்தேவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அவனிடம் அர்ப்பணிப்புள்ளவனும், நம்பிக்கையுள்ளவனுமான ஒருவனுக்கு மட்டுமே இது சொல்லப்பட வேண்டும். அர்ப்பணிப்பில்லாதவனும், நம்பிக்கையில்லாதவனும், தன் ஆன்மாவை வெல்லாதவனுமான ஒருவனுக்கு ஒருபோதும் இதைச் சொல்லக் கூடாது[2].(16) ஓ! கிருஷ்ணா, அனைத்துப் பொருட்களின் மூலக் காரணனும், பரமாத்மாவும், பெருந்தேவனும், சிறப்புமிக்கவனுமான மஹாதேவனிடம் வன்மத்தை வளர்க்கும் உயிரினம் தனக்கு முன்பான மூதாதையருடனும், தனக்குப் பின் வரும் தன் பிள்ளைகள் அனைவருடனும் நிச்சயம் நரகத்திற்கே செல்வான்.(17) இப்போது நான் சொல்லப்போகும் இந்தப் பெயர்களின் தொகுப்பு தியான யோகமாகப் பார்க்கப்படுகிறது. இது யோகமாகவும் காணப்படுகிறது. தியானத்தின் உயர்ந்த நோக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது. ஒருவன் ஜபமாக இதைத் தொடர்ந்து உரைக்க வேண்டும். இஃது அறிவுக்கு இணையானதாகும். இஃது உயர்ந்த புதிரைக் கொண்டதாகும்.(18) ஒருவன் தன் இறுதிக் கணத்திலாவது, இதை உரைத்தாலோ, உரைப்பதைக் கேட்டாலோ அவன் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறான். இது புனிதமானதாகும். அனைத்து வகை நன்மைகளும் நிறைந்த இது மங்கலமானதாகும். இஃது அனைத்துப் பொருட்களிலும் சிறந்ததாகும்.(19) அண்டமனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மனால் பழங்காலத்தில் தொகுக்கப்பட்டு, சிறந்த துதிகள் {ஸ்தோத்திரம்} அனைத்திலும் முதன்மையான இடத்தில் அவனால் இது வைக்கப்பட்டது.(20)

அந்தக் காலத்திலிருந்து உயரான்ம மஹாதேவனின் மகிமையையும், பெருமையையும் சொல்லும் இந்தத்துதி தேவர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டு, துதிகள் அனைத்தின் மன்னனாக {ஸ்தோத்திர ராஜவெனக்} கருதப்படுகிறது.(21) துதிகள் அனைத்தின் மன்னனான இது, முதலில் பிரம்மலோகத்தில் இருந்து தேவலோகமான சொர்க்கத்திற்குச் சொல்லப்பட்டது. தண்டி இதைச் சொர்க்கத்திலிருந்து பெற்றார். எனவே, இது தண்டியால் தொகுக்கப்பட்ட துதியாக அறியப்படுகிறது.(22) தண்டி இதைச் சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தார். இது மங்கலப் பொருட்கள் அனைத்திலும் மங்கலமானதாகும், இது கொடும்பாவங்களையும் கழுவவல்லதாகும்.(23) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, துதிகள் அனைத்திலும் சிறந்த துதியான இதை நான் உனக்கு உரைக்கப் போகிறேன். வேதங்களின் வேதமானவனை, புராதனப் பொருட்கள் அனைத்திலும் பழமையானவனை,(24) சக்திகள் அனைத்திற்கும் சக்தியாக இருப்பவனை, தங்கள் அனைத்திற்கும் தவமாக இருப்பவனை, அமைதியான உயிரினங்கள் அனைத்திலும் பேரமைதி கொண்டவனை, காந்திகள் அனைத்திலும் காந்தி கொண்டவனை,(25) கட்டுப்பாடு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் கட்டுப்பாடுடையவனை, நுண்ணறிவு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் நுண்ணறிவைக் கொண்டவனை, தேர்களின் தேவனாகவும், முனிவர்களின் முனிவனாகவும் காணப்படுபவனை,(26) வேள்விகள் அனைத்தின் வேள்வியாகவும், மங்கலம் நிறைந்த பொருட்கள் அனைத்திலும் பெரும் மங்கலம் கொண்டவனாகவும் கருதப்படுபவனை, ருத்திரர்கள் அனைவரின் ருத்திரனை, பிரகாசத்துடன் கூடிய அனைத்திலும் பிரகாசமிக்கவனை,(27) யோகிகள் அனைவரின் யோகியை, காரணங்கள் அனைத்தின் காரணனை, இல்லாமையில் உலகங்கள் அனைத்தும் சென்று சேர்பவனை,(28) இருப்பில் உள்ள அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருப்பவனை, அளவற்ற சக்தியுடைய ஹரன் என்று அழைக்கப்படுபவனையே இந்தத் துதி குறிப்பிடுகிறது. அந்தப் பெரும் சர்வனின் ஆயிரத்தெட்டுப் பெயர்களை {சிவசஹஸ்ரநாமத்தை} உரைக்கப் போகிறேன் கேட்பாயாக.(29) ஓ! மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, அந்தப் பெயர்களைக் கேட்பதால் நீ உன் விருப்பங்கள் அனைத்தும் கனியப் பெறுவாயாக {என்றார் உபமன்யு}.{உபமன்யு சொன்னார்}, “ஓம் {ௐ}. அசைவற்றவன் {ஸ்திரன்} நீயே. நிலையானவன் {ஸ்தாணு} நீயே, பலமிக்கவன் {ப்ரபு} நீயே, பயங்கரன் {பாநு / பீமன்} நீயே, முதன்மையானவன் {பரவரன்} நீயே, வரமளிப்பவன் {வரதன்} நீயே, மேன்மையானவன் {வரன்} நீயே. அனைத்து உயிரினங்களின் ஆன்மா {ஸர்வாத்மா} நீயே, உயிரினங்கள் அனைத்தாலும் கொண்டாடப்படுபவன் {ஸர்வவிச்யாதன்} நீயே, அனைத்துப் பொருட்களும் {ஸர்வன்} நீயே, அனைத்தையும் படைத்தவன் {ஸர்வகன்} நீயே, பவன் நீயே.(30-1) தலையில் சடாமுடி தரித்தவன் {ஜடி} நீயே, விலங்கின் தோலை ஆடையாக அணிபவன் {சர்மி} நீயே, மயிலைப் போலத் தலையில் கொண்டை கொண்டவன் {சிகண்டி/சீகி/கட்கீ} நீயே, மொத்த அண்டத்தையும் அங்கங்களாகக் கொண்டவன் {ஸர்வாங்கன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் {ஸர்வபாவநன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் அழிப்பவனாக இருக்கும் விளைவால் ஹரன் நீயே. மானுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {ஹரிணாக்ஷன்} நீயே, அனைத்து உயிரினங்களையும் அழிப்பவன் {ஸர்வபூதஹரன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் அனுபவிக்கும் உயர்ந்தவன் {ப்ரபு} நீயே.(31-2)

அனைத்துச் செயல்பாடுகளும் உண்டாகும் ப்ரவ்ருத்தி நீயே, செயலின்மை {நிவ்ருத்தி} நீயே, நோன்புகளை நோற்பவன் {நியதன்} நீயே, நித்தியமானவன் {சாஸ்வதன்} நீயே, மாற்றமில்லாதவன் {த்ருவன்} நீயே, சுடலையில் வசிப்பவன் {ஸ்மசாநவாஸி} நீயே, தலைமை முதலிய நன்கறியப்பட்ட ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந} நீயே, ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிப்பவன் {கசரன்} நீயே, புலன்களால் அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பவன் {கோசரன்} நீயே, பாவம் நிறைந்த உயிரினங்கள் அனைத்தையும் கலங்கடிப்பவன் {அர்த்தநன்} நீயே.(32-3) அனைவரும் வணங்கத்தக்கவன் {அபிவாத்யன்} நீயே, பெருஞ்செயல்களைச் செய்பவன் {மஹாகர்மன்} நீயே, தவங்களையே செல்வமாகக் கொண்டவன் {தபஸ்வி} நீயே, பூதங்கள் அனைத்தையும் விரும்பியபடி படைத்தவன் {பூதபாவநன்} நீயே, பித்தன் போல வேடமிட்டு உண்மை இயல்பை மறைப்பவன் {உந்மத்தவேஷப்ரச்சந்நன்} நீயே, உலகங்கள் மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தின் ஆசான் {ஸர்வலோகப்ரஜாபதி} நீயே.(33-4) அளவிடமுடியாத வடிவம் கொண்டவன் {மஹாரூபன்} நீயே, பேருடல் படைத்தவன் {மஹாகாயன்} நீயே, அறத்தின் வடிவம் {வ்ருஷரூபன்} நீயே, பெரும்புகழ் {மஹாயசஸ்} நீயே, உயர்ந்த ஆன்மா {மஹாத்மா} நீயே, அனைத்து உயிரினங்களின் ஆன்மா {ஸர்வபூதாத்மா} நீயே, அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் {விஸ்வரூபன்} நீயே, (அனைத்துப் பொருட்களையும் அழிக்கும் காலத்தில் அண்டத்தை விழுங்குவதற்கான) பெரும் கோரப்பற்களைக் கொண்டவன் {மஹாஹநு} நீயே.(34-5)

உலகங்கள் அனைத்தின் பாதுகாவலன் {லோகபாலன்} நீயே, அறியாமை எனும் இருளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆன்மா {அந்தர்ஹிதாத்மா} {வெளிப்படா குணம் கொண்டவன்} நீயே, மகிழ்ச்சி {ப்ரஸாதன்} நீயே. கோவேறு கழுதைகளால் இழுக்கப்படும் தேரைக் கொண்டவன் {ஹயகர்த்தபி} நீயே. மறுபிறவியெனும் இடியில் இருந்து ஜீவனைப் பாதுகாப்பவன் {பவித்ரன்} நீயே, துதிக்கத்தக்கவன் {மஹாந்} நீயே, தூய்மை, தற்கட்டுப்பாடு மற்றும் நோன்புகளால் அடையத்தக்கவன் {நியமன்} நீயே. தூய்மை மற்றும் தற்கட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்து வகை நோன்புகள் மற்றும் நியமங்களின் புகலிடம் {நியமாச்ரிதன்} நீயே.(35-6) அனைத்துக் கலைகளையும் அறிந்த தெய்வீகக் கைவினைஞன் {ஸர்வகர்மா} நீயே, (எவராலும் படைக்கப்படாத) சுயம்பு {ஸ்வயம்பூதன்} நீயே. அனைத்து உயிரினங்கள் மற்றும் பொருட்களின் தொடக்கம் {ஆதி} நீயே, அனைத்துப் பொருட்களையும் படைக்கும் ஹிரண்யகர்ப்பன் {ஆதிகரன்} நீயே, வற்றாத பலமும் இன்பநிலையும் {நிதி} நீயே, ஆயிரம் கண்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராக்ஷன்} நீயே, பெரும் சக்தியுடன் கூடிய கண்களைக் கொண்டவன் {விசாலாக்ஷன்} நீயே, ஸோமன் நீயே. ஆகாயத்தில் ஒளிர்வதற்காக உயிரினங்களில் அறவோரை மகிமையின் வடிவங்களை ஏற்கச் செய்பவன் {நக்ஷத்ரஸாதகன்} நீயே.(36-7)

சந்திரமாஸ் {சந்திரன்} நீயே, ஸூர்யன் நீயே, சனிக்கோள் {சநி} நீயே, சந்திரனின் இறங்கு கணு {கேது} நீயே, ஏறு கணுவும் {க்ரஹன் / ராஹு} நீயே,  மங்கலன் (செவ்வாய் கோள்) {கோள்களின் தலைவன்} {க்ரஹபதி} நீயே, பிருஹஸ்பதி (வியாழன் கோள்) நீயே, சுக்கிரன் (வெள்ளி கோள்) நீயே, புதன் (புதன் கோள்) நீயே, அத்ரியின் மனைவியை வழிபடுபவன் {அதரி} நீயே, {அத்ரியாநமஸ்கர்த்தன்}, கோபம் கோண்ட வேள்வியானது மானின் வடிவில் தப்பி ஓடிய போது அந்த வேள்வியை நோக்கி கணை ஏவியவன் {ம்ருகபாணார்ப்பணன்} நீயே, பாவமண்டாதவன் {அநகன்} நீயே.(37-8) அண்டத்தைப் படைக்கும் சக்தி கொண்ட தவங்களை உடையவன் {மஹாதபஸ்} நீயே, அண்டத்தை அழிக்கும் சக்தி கொண்ட தங்களை உடையவன் {கோரதபஸ்} நீயே, (பக்தர்களிடம் கொண்ட பெருங்கருணையின் விளைவால்) உயர்ந்த மனம் கொண்டவன் {அதீநன்} நீயே, உன்னிடம் வருபவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {தீநஸாதகன்} நீயே, (சூரியனாகவும், கோள்களாகவும் வடிவத்தை ஏற்றுக் காலச்சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருப்பதால்) வருடத்தை உண்டாக்குபவன் {ஸம்வத்ஷரகரன்} நீயே, (பிரணவ வடிவம், வேறு புனிதச் சொற்கள் மற்றும் அசைகளின் வடிவில் இருக்கும்} மந்திரன் {மந்தரன்} நீயே, (வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் வடிவில்) அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அதிகாரம் கொடுப்பவன் {ப்ரமாணன்} நீயே, உயர்ந்த தவம் {பரமதபன்} நீயே.(38-9)

யோகத்தில் அர்ப்பணிப்புமிக்கவன் {யோகி} நீயே, (தியான யோகத்தின் மூலம்) பிரம்மத்தில் கலக்கச் செய்பவன் {யோஜ்யன்} நீயே, (காரணங்களுக்குக் காரணனான) பெரும் வித்து {மஹாபீஜன்} நீயே, அண்டத்தில் வெளிப்பட்ட வடிவத்தில் வெளிப்படாததைக் காட்டுபவன் {மஹாரேதஸ்} நீயே, அளவிலா வலிமை கொண்டவன் {மஹாபலன்} நீயே, தங்கத்தையே வித்தாகக் கொண்டவன் {ஸ்வர்ணரேதஸ்} நீயே, (அனைத்துப் பொருட்களாகவும் இருந்து பேரறிவைக் கொண்டவனாக இருப்பதால்) அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்} நீயே, அனைத்துப் பொருட்களின் காரணன் {ஸுபீஜன்} நீயே, இம்மையிலிருந்து மறுமைக்குச் செல்லும் வழிமுறைகளுக்கான (அறியாமை மற்றும் ஆசை எனும்) செயல்பாட்டு வித்தாக இருப்பவன் {பீஜவாஹனன்} நீயே.(39-10) பத்துக் கரங்களைக் கொண்டவன் {தசபாஹு} நீயே, (எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பதால்) இமைக்காத கண்களைக் கொண்டவன் {அநிமிஷன்} நீயே, நீலமிடறு (தொண்டை) கொண்டவன் {நீலகண்டன்} நீயே, உமையின் தலைவன் {உமாபதி} நீயே, அண்டத்தில் தோன்றும் எண்ணற்ற வடிவங்கள் அனைத்தின் தோற்றுவாயும் {விஷ்வரூபன்} நீயே, சுயமேன்மை கொண்டவன் {ஸ்வயம்ஸ்ரேஷ்டன்} நீயே, வலிமையில் வீரன் {பலவீரன்} நீயே, செயலாற்றலற்ற பருப்பொருள் {பலன்} நீயே, (சாங்கியர்களால் சொல்லப்படும்) தத்துவங்கள் அனைத்தும் {கணன்} நீயே.(40-11) தத்துவங்களை விதிப்பவனும் ஆள்பவனும் {கணகர்த்தன்} நீயே, கணங்கள் என்றழைக்கப்படும் உன் தொண்டர்களின் தலைவன் {கணபதி} நீயே, முடிவிலா வெளியை மறைப்பவன் {திக்வாஸஸ்} நீயே, ஆசையின் தேவனான காமன் நீயே, (ஞானத்தையே தவமாகக் கொண்ட) மந்திரங்களை அறிந்தவன் {மந்தரவித்} நீயே, (ஆத்மாவின் இயல்பையும், குணங்களையும் உறுதி செய்வதும், ஆத்மா அல்லாதவற்றிலிருந்து வேறுபடுவதுமான தத்துவமாக நீயே இருப்பதால்) உயர்ந்த மந்திரம் {பரமோமந்த்ரன்} நீயே, (இருப்பில் உள்ள அனைத்தும் உன் ஆத்மாவில் இருந்து பிறந்ததால்) அண்டத்தின் காரணன் {ஸர்வபாவகரன்} நீயே, (இருப்பில் உள்ள அனைத்தும் மறையும்போது, வெளிப்படாத பிரம்மமான உன்னிலேயே கலப்பதால்) அண்டத்தை அழிப்பவன் {ஹரன்} நீயே.(41-12)

உன் கரங்களில் ஒன்றில் கமண்டலம் தரிப்பவன் {கமண்டலுதரன்} நீயே. மற்றொன்றில் வில்லைத் தரிப்பவன் {தந்வி} நீயே. மற்றொன்றில் கணைகளைத் தரிப்பவன் {பாணஹஸ்தன்} நீயே. மற்றொன்றில் மண்டையோட்டைத் தரிப்பவன் {கபாலவாந்} நீயே. வஜ்ரத்தைத் தரிப்பவன் {அசநி} நீயே. நூறு கொல்லியை {சதக்நியைத்} தரிப்பவன் நீயே. வாள் தரிப்பவன் {கட்கி} நீயே. போர்க்கோடரி தரிப்பவன் {பட்டிசி} நீயே. சூலந்தரித்தவன் {ஆயுதங்கள் அனைத்தையும் தரிப்பவன்} {ஆயுதி} நீயே. துதிக்கத்தக்கவன் {மஹாந்} நீயே.(42-13) உன் கரங்களில் ஒன்றில் வேள்விக் கரண்டியைக் கொண்டிருப்பவன் {ஸ்ருவஹஸ்தன்} நீயே. அழகிய வடிவம் கொண்டவன் {ஸுரூபன்} நீயே. அபரிமிதமான சக்தியைக் கொண்டவன் {தேஜஸ்} நீயே. உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரை அலங்கரிக்கும் அனைத்தையும் அளவில்லாமல் கொடுப்பவன் {தேஜஷ்கரன்} நீயே. தலையில் தலைப்பாகை அணிபவன் {உஷ்ணீஷி} நீயே. அழகிய முகம் கொண்டவன் {ஸுவக்த்ரன்} நீயே. காந்தியிலும் பலத்திலும் பெருகுபவன் {உதக்ரன்} நீயே. எளிமையும், பணிவும் கொண்டவன் {விந்தன்} நீயே.(43-14) மிக நெடியவன் {தீர்க்கன்} நீயே. புலன்களையே கதிர்களாகக் கொண்டவன் {ஹரிகேசன்} நீயே. ஆசான்களில் பேராசான் {ஸுதீர்த்தன்} நீயே. (இருப்பிலுள்ள தூய இன்ப நிலையான)[3] பரப்பிரம்மம் {க்ருஷ்ணன்} நீயே. (செல்வந்தனான ஒரு வைசியனால் அவமதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்த பிராமணனுக்கு ஆறுதலளிக்க) நரியின் வடிவை ஏற்றவன் {ஸ்ருகாலரூபன்} நீயே. (தவங்களில் இருந்து பெறும்) பலத்திற்காகக் காத்திராமல் நோக்கங்களை அனைத்தும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தார்த்தன்} நீயே. (துறவின் குறியீடாக) மொட்டைத் தலையுடன் இருப்பவன் {முண்டன்} நீயே. அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்பவன் {ஸர்வசுபங்கரன்} நீயே.(44-15)பிறப்பற்றவன் {அஜன்} நீயே. எண்ணற்ற வடிவங்களைக் கொண்டவன் {பஹுரூபன்} நீயே. அனைத்து வகை நறுமணங்களையும் மேனியில் தரிப்பவன் {கந்தகாரி} நீயே. (மன்னன் பகீரதனின் மெய்யுறுதியுடன் கூடிய வேண்டுதலால் கங்கை நீரைக் கொடுத்தாலும்) சொர்க்கத்தில் இருந்து கங்கை ஆறு பாய்ந்த போது, தலையில் உள்ள சடாமுடியில் அதனை உறிஞ்சிக் கொண்டவன் {கபர்த்தி} நீயே. அரசையும், தலைமைத்துவத்தையும் கொடுப்பவன் நீயே. காமமடக்கும் கடும் நோன்பிலிருந்து ஒருபோதும் வீழாத பிரம்மச்சாரி {ஊர்த்வரேதஸ்} நீயே. பாலுறவுக் காமம் அடக்கலில் புகழ்பெற்றவன் {மேல்நோக்கிய குறியைக் கொண்டவன்} {ஊர்த்வலிங்கன்} நீயே. எப்போதும் அண்ணாந்து {மல்லாந்து / மேல்நோக்கிப்} படுப்பவன் {ஊர்த்வசாயி} நீயே. பலத்தையே வசிப்பிடமாகக் கொண்டவன் {நபஸ்தலன்} நீயே.(45-16) தலையில் மூன்று சடைகளைக் கொண்டவன் {த்ரிஜடி} நீயே. மரவுரி தரித்தவன் {சீரவாஸஸ்} நீயே. (கடுஞ்சீற்றத்தின் விளைவால்) ருத்திரன் நீயே. தேவர்களின் படைத்தலைவன் {ஸேநாபதி} நீயே, அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {விபு} நீயே. பகலில் உலவுபவன் {அஹஸ்சரன்} நீயே. இரவில் உலவுபவனும் {நக்தஞ்சரன்} நீயே[4]. கடுங்கோபம் கொண்டவன் {திக்மமந்யு} நீயே. (வேத கல்வி மற்றும் தவங்களால் பிறக்கும்) பளிச்சென்ற பிரகாசம் கொண்டவன் {ஸுவர்ச்சலன்} நீயே.(46-17) உன் புனித நகரான வாராணசியை அழிப்பதற்காக மதங்கொண்ட யானையின் வடிவில் வந்த பெரும் அசுரனைக் கொன்றவன் {கஜஹன்} நீயே. அண்டத்தை ஒடுக்குபவர்களான தைத்தியர்களைக் கொல்பவன் {தைத்யஹன்} நீயே. அண்டத்தை அழிக்கும் காலன் நீயே. அண்டத்தின் தலைமை ஆணையாளன் {லோகதாதா} நீயே. சிறந்த சாதனைகள் அனைத்தின் சுரங்கம் {குணாகரன்} நீயே. சிங்கம் மற்றும் புலியின் வடிவம் {ஸிம்மசார்த்தூலரூபன்} நீயே. {குருதியால் நனைந்த} யானைத் தோலை உடுத்தியிருப்பவன் {ஆர்த்ரசர்மாம்பராவ்ருதன்} நீயே.(47-18) காலத்தின் தடுக்கப்பட முடியாத ஆதிக்கத்தைக் கடந்த, காலத்தை வஞ்சிக்கும் யோகி {காலயோகி} நீயே. அசல் ஒலி {மஹாநாதன்}நீயே. விருப்பங்கள் அனைத்தின் கனியும் {ஸர்வகாமன்} நீயே. நான்குவழிகளில் துதிக்கப்படுபவன் {சதுஷ்பதன்} நீயே[5]. (வேதாளம் மற்றும் பிறவற்றைப் போன்ற) இரவுலாவி {நிசாசரன்} நீயே. சடலங்களின் துணையுடன் திரிபவன் {பிரேதசாரி} நீயே. பூதங்களின் துணையுடன் திரிபவன் {பூதசாரி} நீயே. இந்திரன் மற்றும் பிற தேவர்களுக்கும் உயர்ந்த தலைவன் {மஹேஸ்வரன்} நீயே.(48-19) இருப்பிலுள்ள மற்றும் இருப்பில் இல்லாத அனைத்துப் பொருட்களின் வடிவில் உன்னை முடிவிலாமல் பெருக்கிக் கொண்டவன் {பஹுபூதன்} நீயே. மஹத் மற்றும் ஐம்பூதங்களின் எண்ணற்ற கலவைகளைத் தாங்குபவன் {பஹுதரன்} நீயே. ராஹு என்ற பெயரில் அறியப்படும் ஆதி அறியாமை, அல்லது தமஸ் {ஸ்வர்ப்பாநு} நீயே. அளவற்றவன் {அமிதன்} நீயே. விடுதலை அடைந்தவர்களால் {முக்தர்களால்} அடையப்படும் உயர்ந்த கதி நீயே. நடன விரும்பி {ந்ருத்யப்ரியன்} நீயே. எப்போதும் நடனமாடிக் கொண்டிருப்பவன் {நித்யநர்த்தன்} நீயே. பிறரை நடனமாடச் செய்பவன் {நர்த்தகன்} நீயே. அண்டத்தின் நண்பன் {ஸர்வலாலஸன்} நீயே.(49-20)அமைதியான, மென்மையான குணம் கொண்டவன் {கோரன்} நீயே. அண்டத்தை உண்டாக்கவும், அழிக்கவும் வேண்டிய தவப் பலத்தைக் கொண்டவன் {மஹாதபஸ்} நீயே. மாயையின் பந்தங்களால் உயிரினங்கள் அனைத்தையும் கட்டியிருப்பவன் {பாசன்} நீயே. அழிவைக் கடந்திருப்பவன் {நித்யன்} நீயே. (கைலாச) மலையில் வசிப்பவன் {கிரிருஹன்} நீயே. பற்றுகள் அனைத்தையும் கடந்தவனும், வெளி போன்ற பொருட்கள் அனைத்திலும் பற்றற்றவனும் {நபன்} நீயே. ஆயிரங்கரங்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரஹஸ்தன்} நீயே. வெற்றி {விஜயன்} நீயே. சோம்பலற்றவனும், விடாமுயற்சி தேவைப்படும் காரியங்களில் தாமதம் செய்யாதவனும் {வ்யவஸாயன், அதந்த்ரிதன்} நீயே.(50-21) அச்சமற்றவன் {அதர்ஷணன்} நீயே. அச்சமும் {தர்ஷணாத்மா} நீயே. பலியின் வேள்வியை முடிவுக்குக் கொண்டு வந்தவன் {யஜ்ஞஹன்} நீயே. பக்தர்கள் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் {காமநாசகன்} நீயே. தக்ஷனின் வேள்வியை அழித்தவன் {தக்ஷாயாகபஹாரி} நீயே. இனிமையானவன் {ஸுஸஹன்} நீயே. சற்றே இனிமையானவன் {சார்பற்றவன்} {மத்யமன்} நீயே.(51-22) கடுஞ்சீற்றம் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்தின் சக்தியை அபகரிப்பவனும் {தேஜோபஹாரி} நீயே. அசுரன் பலனைக் கொன்றவன் {பலஹன்} நீயே. எப்போதும் மகிழ்ச்சிமிக்கவன் {முதிதன்} நீயே. அனைவராலும் விரும்பப்படும் செல்வத்தின் {அர்த்தன்} வடிவம் நீயே. ஒருபோதும் வெல்லப்படாதவன் {அஜிதன்} நீயே. உன்னைத் தவிரத் துதிக்கத்தக்கவன் எவனும் இல்லாதவன் {அவரன்} நீயே. (பெருங்கடலின் வடிவில்) ஆழ்ந்த முழக்கங்களை இடுபவன் {கம்பீரதோஷன்} நீயே. (வெளியின் வடிவில் இருப்பதால்) எவராலும் அளக்க முடியாத ஆழத்தைக் கொண்டவன் {கம்பீரன்} நீயே. எவராலும் அளக்க முடியாத பலமும், வலிமையும் கொண்ட துணைவர்கள் மற்றும் காளையைக் கொண்டவன் {கம்பீரபலவாஹநன்} நீயே.(52-23) (மேல் நோக்கிய வேர்களைக் கொண்டதும், கீழ்நோக்கித் தங்கும் கிளைகளைக் கொண்டதுமான உலக மரம் {ந்யக்ரோதரூபன்} நீயே. ஆலமரம் {ந்யக்ரோதன்} நீயே. அண்டத்திற்கு அழிவு நேரும் வேளையில், அளவற்ற நீரில் ஓர் ஆலம் இலையில் உறங்கிக் கொண்டிருப்பவன் {வ்ருக்ஷகர்ணஸ்திதி} நீயே. ஹரி, ஹரன், கணேசன், அர்க்கன், அக்னி, வாயு முதலி வடிவங்களில் வழிபாட்டாளர்கள் அனைவருக்கும் கருணை காட்டுபவன் {விபு} நீயே. (கடலைகளை மெல்வதைப் போல எண்ணற்ற உலகங்களை மென்று விரைவாக அவற்றை விழுங்க வல்லவன் என்பதால்) கூரிய பற்களைக் கொண்டவன் {ஸுதீக்ஷ்ணதசநன்} நீயே. வடிவத்தைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய அளவு கொண்டவன் {மஹாகாயன்} நீயே. அண்டத்தை உடனே விழுங்கும் அளவுக்குப் பெரிய வாயைக் கொண்டவன் {மஹாநகன்} நீயே.(53-24) எவனுடைய துருப்புகள் எங்கும் துதிக்கப்படுமோ அவன் {விஷ்வக்ஸேநன்} நீயே. யானைகளின் இளவரசன் கைப்பற்றப்பட்ட போது தேவர்களின் அச்சங்கள் அனைத்தையும் அகற்றியவன் {ஹரி} நீயே. அண்டத்தின் வித்து {யஜ்ஞன்} நீயே. போர்க்கொடியில் சின்னமாகக் கொண்ட அதே காளையை வாகனமாகவும் கொண்டவன் {ஸம்யுகாபீடவாஹநன்} நீயே. அக்னியையே ஆன்மாவாகக் கொண்டவன் {தீக்ஷ்ணதாபன்} நீயே. தேரில் பச்சை குதிரைகள் பூட்டப்பட்ட சூரியன் {ஹர்யச்வன்} நீயே. ஜீவனின் நண்பன் {ஸஹாயன்} நீயே. அறச்செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய முறையான காலத்தை அறிந்தவன் {கர்மகாலவித்} நீயே.(54-25)

(கொண்டாடப்படும் சக்கரத்தை அடைவதற்காக) விஷ்ணுவால் துதிக்கப்பட்டவன் நீயே. விஷ்ணு நீயே. {ப்ரஸாதிதன், யஜ்ஞன்} பெருங்கடல் {ஸமுத்ரன்} நீயே. நெருப்பைக் கக்கிக் கொண்டும், வேள்வி நெய்யைப் போல உப்பு நீரைக் குடித்துக் கொண்டும் பெருங்கடலுக்குள் திரியும் குதிரைத் தலை {படபாமுகன்} நீயே. அக்னியின் நண்பனான காற்று {வாயு / ஹுதாசநஸஹாயன்} நீயே. மென்மையான தென்றலாலும் கலக்கப்படாதபோது ஓய்ந்திருக்கும் பெருங்கடலைப் போல அமைதியான ஆன்மா கொண்டவன் {ப்ரசாந்தாத்மா} நீயே. மந்திரங்களின் துணையுடன் வேள்விகளில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யெனும் ஆகுதிகளைப் பருகுபவன் {ஹுதாசநன்} நீயே.(55-26) அணுகப்பட முடியாதவன் {உக்ரதேஜஸ்} நீயே. முடிவிலா அண்டத்தில் பிரகாசத்தைப் பரப்புபவன் {மஹாதேஜஸ்} நீயே. போரில் வல்லவன் {ஜந்யன்} நீயே. வெற்றியடையும்பொருட்டுப் போரில் எப்போது ஈடுபட வேண்டும் என்ற காலத்தை நன்கறிந்தவன் {விஜயகாலவித்} நீயே. கோள்களின் நகர்வுகளைக் குறித்த அறிவியல் {ஜோதிடம்} {ஜ்யோதிஷாம்அயநன்} நீயே. வெற்றியின் வடிவம் {ஸித்தி} நீயே. (உடல் ஒருபோதும் சிதைவடையாதவனாக இருப்பதால்) எப்போதும் உடலைக் கொண்டவன் {ஸர்வவிக்ரஹன்} நீயே.(56-27) தலையில் குடுமி தரிப்பதால் இல்லறத்தான் {கிருஹஸ்தன் / சிகி} நீயே. தலை மொட்டையாக இருப்பதால் சந்நியாசி {முண்டி} நீயே. (வானப்ரஸ்தனாக இருப்பதால்) தலையில் சடாமுடி தரிப்பவன் {ஜடி} நீயே. (உன்னோடு அடையாளங்காணப்படும் அறவோர் நடந்து செல்லும் பாதை பிரகாசமானதாக இருப்பதால்) உன் கடுங்கதிர்களுக்காகப் புகழ்பெற்றவன் {ஜ்வாலி} நீயே. ஒவ்வொரு உயிரினத்தின் உடலில் பொதிந்திருக்கும் இதய ஆகாயத்தில் தோன்றுபவன் {மூர்த்திஜன்} நீயே. ஒவ்வொரு உயிரினத்தின் மண்டையோட்டுக்குள் (மூளைக்குள்) நுழைபவன் {மூர்த்தகன்} நீயே. வயதின் தோல்சுருக்கங்களைத் தரித்தவன் {பலி} நீயே. மூங்கில் புல்லாங்குழலைத் தரிப்பவன் {வேணவி} நீயே. சிறு முரசும் {பணவமும்} கொண்டவன் {பணவி} நீயே. தாளி என்றழைக்கப்படும் இசைக்கருவியைத் தரிப்பவன் {தாளி} நீயே. தானியங்களின் உமி நீக்க மரக்கலத்தைப் பயன்படுத்துபவன் {கலி} நீயே. யமனை மறைக்கும் மாயையை மறைப்பவன் {காலகடங்கன்} நீயே[6].(57-28) ஆகாயக் கோள்களால் அமைந்த காலச்சக்கர நகர்வுகளில் எப்போதும் புத்தியைச் செலுத்துவதால் கணியன் {சோதிடன் / நக்ஷத்ரவிக்ரஹமதி} நீயே. சத்வம், ரஜஸ், தமஸ் குணங்களின் விளைவாக இருக்கும் பொருட்களில் புத்தியைச் செலுத்தும் ஜீவன் {குணபுத்தி} நீயே. அழிவேற்படும்போதும் அனைத்துப் பொருட்களும் எதில் கலக்குமோ அந்நிலை {லயன்} நீயே. எவ்வகை மாற்றத்திற்கும் உட்படும் எந்தப் பொருளையும் தன்னில் கொள்ளாத நிலையாவன் {அகமன்} நீயே. அனைத்து உயிரினங்களின் தலைவன் {ப்ரஜாபதி} நீயே. பரந்த அண்டம் முழுவதும் பரவும் கரங்களைக் கொண்டவன் {விஸ்வபாஹு} நீயே. நுணுக்கமான எண்ணற்ற வடிவங்களில் வெளிப்படுபவன் {விபாகன்} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வகன்} நீயே. (படைக்கும் பொருட்களை அனுபவிக்காதவனாக இருப்பதால்) வாயில்லாதவன் {முகமில்லாதவன் /  அறிவாயிருப்பவன் {அமுகன்} நீயே.(58-29) உலகப் பந்தங்களில் இருந்து உயிரினங்களை விடுவிப்பவன் {விமோசநன்} நீயே. எளிமையாக அடையத்தக்கவன் {ஸுஸரணன்} நீயே. தங்கக் கவசத்துடன் வெளிப்படுபவன் {ஹிரண்யகவசோத்பவன்} நீயே. லிங்கச் சின்னத்தில் தோன்றுபவன் {மேட்ரஜன்} நீயே. நீர்க்கோழிகள் மற்றும் விலங்குகளைத் தேடி காடுகளில் திரிபவன் {பலசாரி} நீயே. மொத்த உலகத்திலும் திரிந்து கொண்டிருப்பவன் {மஹீசாரி} நீயே. எங்குமிருப்பவன் {ஸ்ருதன்} நீயே.(59-30)மூவுலகங்களிலும் முழக்கப்படும் எக்காளங்கள் அனைத்தினாலும் உண்டாக்கப்படும் முழக்கம் {ஸர்வதூர்யநிநாதி} நீயே. அனைத்து உயிரினங்களையும் உறவினர்களாகக் கொண்டவன் {ஸர்வாதோத்யபரிக்ரஹன்} நீயே. (சேஷன் என்றழைக்கப்படும் வலிமைமிக்க நாகனைப் போல நீ இருப்பதால்) பாம்பின் வடிவம் கொண்டவன் {வ்யாலரூபன்} நீயே. (ஜைகிஷவ்யரையோ, பிற யோகியரையோ போல) மலைக்குகைகளில் வாழ்பவன் {குஹாவாசி} நீயே. (தேவர்ப்படைத்தலைவன்) குஹனைப் போன்றவன் {குஹன்} நீயே. மலர் மாலைகளை அணிபவன் {மாலி} நீயே. உலகப் பொருட்களை அடைவதால் எழும் மகிழ்ச்சியை அனுபவிப்பவன் {தரங்கவிதன்} நீயே.(60-31) பிறப்பு, இறப்பு மற்றும் அழிவு என்ற மூன்று நிலைகளை அனைத்து உயிரினங்களும் எதனிலிருந்து பெறுகின்றனவோ அந்நிலை {த்ரிதசன்} நீயே. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று கால நிலைகளில் தோன்றும், அல்லது இருக்கும் பொருட்கள் அனைத்தையும் தாங்குபவன் {த்ரிகாலத்ருக்} நீயே. முற்பிறவி செயல்கள் மற்றும் தற்காலத்தில் செய்த செயல்கள் அனைத்தின் விளைவுகளில் இருந்தும், அறியாமை மற்றும் ஆசைகளில் உள்ள பற்றுகள் அனைத்தில் இருந்தும் உயிரினங்கள் விடுவிப்பவன் {கர்மஸர்வபந்தவிமோசநன்} நீயே. அசுரத் தலைவர்களைக் கட்டுபவன் {அஸுரேநத்ராணாம்பந்தநன்} நீயே. போரில் பகைவர்களைக் கொல்பவன் {யுதிசத்ருவிநாசகன்} நீயே.(61-32) ஞானத்தால் மட்டுமே அடையப்படுபவன் {ஸாங்க்யப்ரஸாதன்} நீயே. துர்வாசர்கள் {துர்வாஸர்} நீயே. அறவோர் அனைவராலும் பணிவிடை செய்யப்படுபவனும், துதிக்கப்படுபவனும் {ஸர்வஸாதுநிஷேவிதன்} நீயே. பிரம்மன் மற்றும் பிறரின் வீழ்ச்சிக்குக் காரணன் {ப்ரஸ்கந்தநன்} நீயே. செயல்களுக்குத் தகுந்த இன்ப துன்பங்களை அனைத்து உயிரினங்களுக்கும் நியாயமாகப் பகிர்ந்து கொடுப்பவன் {விபாகஜ்ஞன்} நீயே. ஒப்பற்றவன் {அதுல்யன்} நீயே. வேள்விகளில் கொடுக்கப்படும், பெறப்படும் பங்குகளை நன்கறிந்தவன் {யஜ்ஞபாகவித்} நீயே.(62-33) எங்கும் வசிப்பவன் {ஸர்வவாஸன்} நீயே. எங்கும் திரிபவன் {ஸர்வசாரி} நீயே. அழிவற்றவன் {த்ரோத்தமன்} நீயே. {துர்வாசன், வாஸவன், அமரன் நீயே} இமய மலைகளைப் போன்றவன் {ஹைமன்} நீயே. பசும்பொன்னைச் செய்பவன் {ஹேமகரன்} நீயே. செயல்களற்றவன் {அயஜ்ஞன்} நீயே. செயல்கள் அனைத்தின் கனிகளையும் உன்னில் தாங்குபவன் {ஸர்வதாரி} நீயே. தாங்குபவர்களாகக் கருதப்படும் முதன்மையான உயிரினங்கள் அனைத்தும் {தரோத்தமன்} நீயே.(63-34) குருதி தோய்ந்த கண்களைக் கொண்டவன் {லோஹிதாக்ஷன்} நீயே. முடிவிலா அண்டம் முழுவதும் பரவும் பார்வையுடன் கூடிய கண்களைக் கொண்டவன் {மஹாக்ஷன்} நீயே. எப்போதும் வெற்றிவாகை சூடும் சக்கரங்களுடன் கூடிய தேரைக் கொண்டவன் {விஜயாக்ஷன்} நீயே. பெரும் கல்வியுடையவன் {விசாரதன்} நீயே. பணியாட்களான உன் பக்தர்களை ஏற்பவன் {ஸங்க்ரஹன்} நீயே. புலன்களை அடக்கி ஒடுக்குபவன் {நிக்ரஹன்} நீயே. செயல்படுபவன் {கர்த்தன்} நீயே. பாம்புகளாலான இழைகளையும் துணிகளையும் கொண்ட ஆடைகளை உடுத்துபவன் {ஸர்ப்பசீரநிவாஸநன்} நீயே.(64-35)

பரமன் {முக்யன்} நீயே. தேவர்களில் இறுதியானவன் {அமுக்யன்} நீயே. நன்கு வளர்ந்தவன் {தேஹன்} நீயே. காஹளம் {எக்காளம் / காளம் / காகளம்} என்றழைக்கப்படும் இசைக்கருவியைக் கொண்டவன் {காஹலி} நீயே. அனைத்து ஆசைகளையும் அளிப்பவன் {ஸர்வகாமதன்} நீயே. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற மூன்று கால நிலைகள் அனைத்திலும் அருளின் உடல்கொண்ட வடிவம் {ஸர்வகாலப்ரஸாதன்} நீயே. எப்போதும் நன்கு பயன்படுத்தப்படும் வலிமையைக் கொண்டவன் {ஸுபலன்} நீயே. (கிருஷ்ணனின் அண்ணனான) பலராமனின் வடிவத்தை ஏற்றவன் {பலரூபத்ருதன்} நீயே.(65-36) விரும்பப்படும் அனைத்துப் பொருட்களிலும் முதன்மையான விடுதலையாக {முக்தியாக}, அல்லது உயிரினங்கள் அடையும் உயர்ந்த கதிகள் அனைத்துமாக இருப்பவன் {ஸர்வகாமவரன்} நீயே. அனைத்துப்பொருட்களையும் கொடுப்பவன் {ஸர்வதன்} நீயே. திசைகள் அனைத்திலும் முகத்தைக் கொண்டவன் {ஸர்வதோமுகன்} நீயே. வெளி அல்லது அந்தப் பூதத்தின் மாறுபாடுகளில் இருந்து அனைத்து வடிவங்களும் உதித்ததைப் போலவே பல்வேறு உயிரினங்கள் எவனிடம் உதித்தவனவோ அவன் {ஆகாசநிர்விரூபன்} நீயே. உடல் என்றழைக்கப்படும் குழிக்குள் விழுபவன் {நிபாதி} நீயே. (உடலால்அமைந்த குழிக்குள் விழுந்து உன் பங்குக்கான கவலையைக் கடக்க முடியாதவனாக இருப்பதால்) ஆதரவற்றவன் {யாருக்கும் உட்படாதவன்} {அவசன்} நீயே. இதய ஆகாயத்தில் வசிப்பவன் {ககன்} நீயே.(66-37) மிகக் கொடிய வடிவம் கொண்டவன் {ரௌத்ரரூபன்} நீயே. அம்சு என்றழைக்கப்படும் தேவன் நீயே. அம்சுவின் தோழன் நீயே, ஆதித்தியன் என்றழைக்கப்படுபவன் நீயே. எண்ணற்ற கதிர்களைக் கொண்டவன் {பஹுரச்மி} நீயே. பளிச்சென்ற பிரகாசத்துடன் கூடியவன் {ஸுவர்ச்சஸி} நீயே. காற்றை விடப் பெரும் வேகம் கொண்டவன் {வஸுவேகன், மஹாவேகன்} நீயே. மனோ வேகம் கொண்டவன் {மநோவேகன்} நீயே. அறியாமையுடன் கூடிய அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பவன் {நிசாசரன்} நீயே.(67-38) ஒவ்வொரு உடலிலும் வசிப்பவன் {ஸர்வவாஸி} நீயே. செழிப்பைத் தோழனாகக் கொண்டு வசிப்பவன் {ஸ்ரீயாவாஸி} நீயே. அறிவையும், கல்வியைக் கற்பிப்பவன் {உபதேசகரன்} நீயே. முற்றான அமைதி குறித்த கல்வியைக் கற்பிப்பவன் {அகரன்} நீயே. (அமைதியைப் போதிப்பவனாக இருப்பதால்) உள்ளடங்கிப் பேசாதவன் {முநி} நீயே. ஆன்மாவைக் காண உடலைக் கடந்தவன் {ஆத்மநிராலோகன்} நீயே. நன்கு துதிக்கப்படுபவன் {ஸம்பக்நன்} நீயே. (கருவூலங்கள் அனைத்தின் தலைவன் {குபேரன்} அந்தக் கருவூலங்களை உன்னிடம் இருந்தே பெற்றதால்) ஆயிரங்கணக்கானவற்றைக் கொடுப்பவன் {ஸஹஸ்ரதன்} நீயே.(68-39) (கசியபர் மற்றும் வினதையின் மகனான கருடனாக இருப்பதால்) பறவைகளின் இளவரசன் {பக்ஷி} நீயே. உதவி செய்யும் நண்பன் {பக்ஷன்} நீயே. (ஆயிரம் சூரியர்கள் சேர்ந்தது போன்ற காந்தியைக் கொண்டவனாக இருப்பதால்) பெரும் பிரகாசம் கொண்டவன் {ரூபன், அதிதீப்தன்} நீயே. படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் ஆசான் {விசாம்பதி} நீயே. பசிகளைத் தூண்டுபவன் {மயங்கச் செய்பவன்} {உந்மாதன்} நீயே. காம தேவன் {மதநன்} நீயே. அனைவராலும் விரும்பப்படும் அழகிய பெண்களின் வடிவம் {காமன்} நீயே. உலகின் மரம் {அச்வதன்} நீயே. கருவூலங்களின் தலைவன் {அர்த்தகரன்} நீயே. புகழைக் கொடுப்பவன் {யசஸ்} நீயே.(69-40)

உயிரினங்கள் அனைத்தின் செயல்களுக்காக (இன்ப துன்பங்கள் என்ற வடிவில்) அவற்றின் கனிகளைப் பகிர்ந்தளிக்கும் தேவன் {வாமதேவன்} நீயே. நீ பகிர்ந்து கொடுக்கும் அந்தக் கனிகளும் {ப்ராக்} நீயே. (இருப்பில் ஏதும் இல்லாத காலத்தில் இருப்பதால்) மிகப் பழமையானவன் {தக்ஷிணன்} நீயே. மூவுலகங்களையும் ஓரடியில் மறைக்கத் தகுந்தவன் {வாமனே} நீயே. அசுரத் தலைவன் பலியை வஞ்சித்து (அவனது அரசுரிமையை அபகரித்து இந்திரனுக்கு மீட்டளித்தவனான குள்ளனும் {வாமநன்} நீயே. (சனத்குமாரர் மற்றும் பிறரைப் போல வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட யோகி {ஸித்தயோகி} நீயே. (வசிஷ்டர் மற்றும் பிறரைப் போல) பெரும் முனிவன் {மஹரிஷி} நீயே. (ரிஷபர் மற்றும் தத்தாத்ரேயர் ஆகியவர்களைப் போல) எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படுபவன் {ஹித்தார்த்தன்} நீயே. (யாஜ்ஞவல்கியர் மற்றும் பிறரைப் போன்ற) சந்நியாசி {ஸித்தஸாதகன்} நீயே.(70-41) துறவி வகைக் குறியீடுகளால் அலங்கரிக்கப்பட்டவன் {பிக்ஷு} நீயே. அத்தகைய குறியீடுகள் அற்றவன் {பிக்ஷுரூபன்} நீயே. துறவி வகையினரின் நடைமுறைகளைக் கடந்து நிற்பவன் {விபணன்} நீயே. அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் உயிரினங்கள் அனைத்தையும் காப்பவன் {மென்மையானவன்} {ம்ருது} நீயே. (மகிமையையும், அவமதிப்பையும் ஒன்றாகவே கருதுபவனாதலால்) ஆசைகளேதும் அற்றவன் {அவ்யபன்} நீயே. தேவர்களின் படைத்தலைவன் என்றழைக்கப்படுபவன் {மஹாஸேநன்} நீயே. தேவர்களின் படைத்தலைவன் மீது இந்திரன் வஜ்ரத்தை ஏவியபோது, அவனது உடலில் இருந்து எழுந்த விசாகன் நீயே. அறுபது தத்துவங்கள் அல்லது அண்டத்தின் தலைமைப் பொருட்களை அனுபவிப்பவன் {ஷஷ்டிபாகன்} நீயே. (புலன்கள் அதனதன் செயல்பாடுகளுக்கு உன்னாலேயே வழிநடத்தப்படுவதால்) புலன்களின் தலைவன் {கவாம்பதி} நீயே.(71-42) (மலைகளைப் பிளக்கும்) வஜ்ரத்தைத் தரிப்பவன் {வஜ்ரஹஸ்தன்} நீயே. முடிவற்றவன் {விஷ்கம்பி} நீயே. போர்க்களத்தில் தைத்தியர் படையைக் கலங்கடிப்பவன் {சமூஸ்தம்பநன்} நீயே. தன் படைப்பிரிவுகளுக்கு மத்தியிலும், எதிரிகளின் படைப்பிரிவுகளுக்கு மத்தியிலும் தேரில் வலம் வந்து, அவர்களை அழித்து, நலமாகவும், பாதுகாப்பாகவும் திரும்பி வருபவன் {வ்ருத்தாவ்ருத்தசரன்} நீயே. (பிரம்ம அறிவின் விளைவால்) உலகப் பெருங்கடலின் அடியாழத்தை அறிந்தவன் {தாலன்} நீயே. (கிருஷ்ணன் பிறந்த குலத்தைத் தோற்றுவித்த) மது என்றழைக்கப்படுபவன் நீயே. தேனுக்கு ஒப்பான நிறத்தில் கண்களைக் கொண்டவன் {மதுகலோசநன்} நீயே.(72-43) பிருஹஸ்பதிக்கு அடுத்து பிறந்தவன் {வாசஸ்பத்யன்} நீயே. வேள்விகளில் அதர்யுக்கள் செய்யும் செயல்களைச் செய்பவன் {வாஜஸநன்} நீயே. அனைத்து வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சார்ந்தவர்களாலும் எப்போதும் துதிக்கப்படுபவன் {நித்யம் ஆஸ்ரமபூஜிதன்} நீயே. பிரம்மத்தில் அர்ப்பணிப்பு மிக்கவன் {ப்ரம்மசாரி} நீயே. (துறவியாக இருக்கும் விளைவால்) உலகில் மனிதர்களின் வசிப்பிடங்களில் திரிபவன் {லோகசாரி} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வசாரி} நீயே. வாய்மை அறிந்தவன் {விசாரவித்} நீயே.(73-44) ஒவ்வொரு இதயத்தையும் அறிந்து, அவற்றுக்கு வழிகாட்டுபவன் {ஈசாநன்} நீயே. மொத்த அண்டத்திலும் பரவி இருப்பவன் {ஈச்வரன்} நீயே. உயிரினங்கள் அனைத்தின் நற்செயல்கள் மற்றும் தீச்செயல்களுக்கான கனிகளை அவற்றுக்கு வெகுமதியாகக் கொடுப்பதற்காக அச்செயல்களைத் திரட்டிச் சேகரிப்பவன் {காலன்} நீயே. அண்ட அழிவைப் பின்தொடரும் இரவிலும் உயிரோடு இருப்பவன் {நிசாசாரி} நீயே. பிநாகம் என்றழைக்கப்படும் வில்லைத் தரித்தவன் {பிநாகவாந்} நீயே. உன் கணைகள் எட்டும் இலக்குகளான தைத்தியர்களுடனும் வசிப்பவன் {நிமித்தஸ்தன்} நீயே. செழிப்பின் ஆசான் {நிமித்தன்} நீயே. {நந்தி, நந்திகரன்}, ராமாவதாரத்தில் ராவணனுக்கு எதிரான படையெடுப்பில்  பெருங்குரங்கின் உதவி பெற்ற விஷ்ணு {ஹரி} நீயே.(74-45)

உன் தோழர்களாக இருக்கும் கணங்களின் தலைவன் {நந்தீஸ்வரன்} நீயே. பல்வேறு கணங்கள் ஒவ்வொன்றும் {நந்தி} நீயே. அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை அளிப்பவன் {நந்தநன்} நீயே. {நந்திவர்த்தநன்}. அனைவரின் மகிழ்ச்சியை அதிகரிப்பவன் நீயே {பகஹாரி} நீயே. இந்திரனைப் போன்ற உயர்ந்தவர்களின் அரசுரிமையையும். செழிப்பை பறிப்பவன் {நிஹந்தன்} நீயே. மரணம் என்ற வடிவில் அண்டத்தை அழிப்பவனாக இருப்பவன் {காலன்} நீயே. அறுபத்து நான்கு கலைகளில் வசிப்பவன் நீயே. மிகப் பெரியவன் {ப்ரம்மன்} நீயே. (முப்பாட்டன்களின் தந்தையாக இருப்பதால்) பெரும்பாட்டன் {பிதாமஹன்} நீயே. {சதுர்முகன்}.(75-46) தேவர்களாலும். அசுரர்களாலும் துதிக்கப்படும் பெரும் லிங்கம் {மஹாலிங்கன்} நீயே. ஏற்புடைய அழகிய குணங்களைக் கொண்டவன் {சாருலிங்கன்} நீயே. இருப்பிலுள்ள அனைத்துக் கருத்துகளுக்கும் உள்ள பல்வேறு வகைச் சாட்சிகளைப் புரிந்து கொள்ளச் செய்பவன் {லிங்காத்யக்ஷன்} நீயே. பார்வை மற்றும் பிற புலன்களின் மூலம் பெறப்படும் கருத்துக்ள அனைத்தின் தலைவன் {ஸுராத்யக்ஷன்} நீயே. (புலன்கள் அனைத்தையும் இதயத்துக்குள் ஈர்த்து. அவ்விடத்தில் அவை அனைத்தையும் கலப்பதற்கு உன் துணை தேவை என்பதால்) யோகத்தின் தலைவன் {யோகாத்யக்ஷன்} நீயே. (யுகங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்து) கிருதம் மற்றும் பிற யுகங்களைத் தாங்குபவன் {யுகாவஹன்} நீயே.(76-47) (நற்செயல் மற்றும் தீச்செயல்கள் அனைத்தின் கனிகளையும் கொடுப்பவனாக இருக்கும் விளைவால்) வித்துகளின் தலைவன் {பீஜாத்யக்ஷன்} நீயே. அத்தகைய வித்துகளின் மூலக் காரணன் {பீஜகர்த்தன்} நீயே. ஆன்மா தொடர்பாகச் சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள வழிகளில் செயல்படுபவன் {அத்யாத்மாநுகதன்} நீயே. வலிமைக்கும். பிற குணங்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் {பலன்} நீயே. மஹாபாரதம் மற்றும் பிற வகை வரலாறுகள் அனைத்தும் {இதிஹாஸன்} நீயே. மீமாம்ஸை என்றழைக்கப்படும் சாத்திரங்கள் {கல்பன்} நீயே. (இயக்கவியலை நிறுவிய) கௌதமர் நீயே. சந்திரனின் பெயரில் உள்ள இலக்கணப் பெரும் சாத்திரத்தின் ஆசான் {நிசாகரன்} நீயே.(77-48) எதிரிகளைத் தண்டிப்பவன் {தம்பன்} நீயே. எவராலும் தண்டிக்கப்பட முடியாதவன் {அதம்பன்} நீயே. அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்திலும் உண்மையாக இருப்பவன் {வைதம்பன்} நீயே. அர்ப்பணிப்பு கொண்டோருக்குக் கீழ்ப்படிபவன் {வஸ்யன்} நீயே. பிறரை அடக்க வல்லவன் நீயே {வஸகரன்} நீயே. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் சச்சரவுகளுக்கு ஒத்திசைபவன் {கலி} நீயே. (பூலோகம் முதலான) பதினான்கு உலகங்களைப் படைத்தவன் நீயே {லோககர்த்தன்} நீயே. பிரம்மன் முதல் (புல் மற்றும் துரும்பைப் போன்ற) இழிந்த தாவர வடிவங்கள் ஈராக அனைத்து உயிரினங்களையும் பேணிக் காப்பவன் {பசுபதி} நீயே. ஐம்பூதங்களைப் படைத்தவன் {மஹாகர்த்தன்} நீயே. (பற்றற்றவனாக எப்போதும் இருப்பதால்) எதையும் ஒருபோதும் அனுபவிக்காதவன் {அநௌஷதன்} நீயே.(78-49) அழிவற்றவன் {அக்ஷரன்} நீயே. இன்பநிலையின் உயர்ந்த வடிவம் {பரமம்ப்ரம்ம} நீயே. வலிமையில் செருக்குடைய தேவன் {பலவத்} நீயே. சக்ரன் நீயே. அறநெறி சாத்திரங்களில் காணப்படுவதும், குற்றவாளிகளைப் பீடிப்பதுமான தண்டனை {நீதி} நீயே. உலகத்தில் நிலவும் கொடுங்கோன்மையின் வடிவம் {அநீதி} நீயே. தூய ஆன்மா கொண்டவன் {சுத்தாத்மா} நீயே. (அனைத்து வகைக் களங்கங்களில் இருந்தும் மேம்பட்டவனான) களங்கமற்றவன் {சுத்தன்} நீயே. துதிக்கப்படத் தகுந்தவன் {மாந்யன்} நீயே. இடையறாமல் தோன்றி மறையும் உலகம் {கதாகதன்} நீயே.(79-50)

பெருமளவு அருளைக் கொண்டவன் {பஹுப்ரஸாதன்} நீயே. நல்ல கனவுகளைக் கொண்டவன் {ஸுஸ்வப்நன்} நீயே. அண்டத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி {தர்ப்பணன்} நீயே. அக மற்றும் புறப்பகைவர்கள் அனைவரையும் அடக்குபவன் {அமித்ரஜித்} நீயே. வேதத்தைப் படைத்தவன் {வேதகாரன்} நீயே. தந்திரங்களிலும், புராணங்களிலும், மனிதமொழி வடிவிலும் உள்ள சாற்று மொழியைப் படைத்தவன் {மந்த்ரகாரன்} நீயே. பெருங்கல்வி கொண்டவன் {வித்வாந்} நீயே. போரில் எதிரிகளைக் கலங்கடிப்பவன் {ஸமரமர்த்தநன்} நீயே.(80-51) அண்ட அழிவுக் காலத்தில் தோன்றும் பயங்கர மேகங்களில் வசிப்பவன் {மஹாமேகநிவாஸி} நீயே. (அண்ட அழிவைக் கொண்டு வரும் விளைவால்) மிகப் பயங்கரன் {மஹாகோரன்} நீயே. மனிதர்கள் அனைவரையும், அனைத்துப் பொருட்களையும் உன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் வெல்பவன் {வசீகரன்} நீயே. பேரழிவை உண்டாக்குபவன் {அக்நிஜ்வாலன்} நீயே. நெருப்பையே சக்தியாகக் கொண்டவன் {மஹாஜ்வாலன்} நீயே. நெருப்பைவிட வலிய சக்தி கொண்டவன் {அதிதூம்ரன்} நீயே. அனைத்தையும் எரிக்கும் யுகநெருப்பு {ஹுதன்} நீயே. வேள்வி ஆகுதிகளின் மூலம் நிறைவடைய வல்லவன் {ஹவி} நீயே.(81-52) மந்திரங்களின் உதவியுடன் வேள்விகளில் ஊற்றப்படும் நீரும், பிற நீர்மங்களும் {வ்ருஷ்ணன்} நீயே. நல்ல மற்றும் தீய செயல்களுடன் தொடர்புடைய கனிகளைச் சிதறடிக்கும் அற தேவனின் வடிவத்தில் இருப்பவன் நீயே, பேரின்பத்தைக் கொடுப்பவன் {சங்கரன்} நீயே. எப்போதும் பிரகாசத்துடன் கூடியவனும் {நித்யம்வர்ச்சஸ்வி} நீயே. நெருப்பின் வடிவம் {தூமகேதநன்} நீயே. வைடூரிய நிறம் கொண்டவன் {நீலன்} நீயே. லிங்கச் சினத்தில் எப்போதும் இருப்பவன் {அங்கலுப்தன்} நீயே. அருள் நிலையின் ஊற்றுக்கண் {சோபநன்} நீயே. நோக்கங்களைச் செயல்படுத்துவதில் எதனாலும் கலங்கடிக்கப்பட இயலாதவன் {நிரவக்ரஹன்} நீயே.(82-53) அருளை வழங்குபவன் {ஸ்வஸ்திதன்} நீயே. அருளின் வடிவம் {ஸ்வஸ்திபாவன்} நீயே. வேள்விக் காணிக்கைகளில் பங்கு கொடுக்கப்படுபவன் {பாகி} நீயே. வேள்விகளில் காணிக்கையளிக்கப்படும் ஒவ்வொரு பங்கையும் பகிர்பவன் {பாககரன்} நீயே. பெரும் வேகம் கொண்டவன் {லகு} நீயே. அனைத்துப் பொருட்களிலும் தொடர்பறுந்தவன் {பற்றற்றவன்} {உத்ஸங்கன்} நீயே. வலிமைமிக்க உறுப்புகளைக் கொண்டவன் {மஹாங்கன்} நீயே. உற்பத்திச் செயல்பாட்டில் ஈடுபடுபவன் {மஹாகர்ப்பபராயணன்} நீயே.(83-54) (விஷ்ணுவின் வடிவத்தில் இருக்கும்) கரிய நிறத்தவன் {க்ருஷ்ணவர்ணன்} நீயே. (கிருஷ்ணனின் மகனான சாம்பனின் வடிவத்தில் இருக்கும்) வெண்ணிறத்தவன் {ஸுவர்ணன்} நீயே. உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் புலன்கள் {ஸர்வதேஹிநாம் இந்த்ரியன்} நீயே. பெரும் பாதம் கொண்டவன் {மஹாபாதன்} நீயே. பெருங்கரங்களைக் கொண்டவன் {மஹாஹஸ்தன்} நீயே. பேருடல் படைத்தவன் {மஹாகாயன்} நீயே. பெரும்புகழ் கொண்டவன் {மஹாயசஸ்} நீயே.(84-55)

பெருந்தலை கொண்டவன் {மஹாமூர்த்தன்} நீயே. பேரளவுகளைக் கொண்டவன் {மஹாமாத்ரன்} நீயே. பரந்த பார்வையைக் கொண்டவன் {மஹாநேத்ரன்} நீயே. அறியாமையற்ற இரவின் இல்லம் {நிசாலயன்} நீயே. அழிப்பவனை அழிப்பவன் / யமனுக்கு யமன் {மஹாந்தகன்} நீயே. பெருங்காதுகளைக் கொண்டவன் {மஹாகர்ணன்} நீயே. பெரிய உதடுகளைக் கொண்டவன் {மஹோஷ்டன்} நீயே. பெரும் கன்னங்களைக் கொண்டவன் {மஹாஹநு} நீயே.(85-56) பெரும் மூக்கைக் கொண்டவன் {மஹாநாஸன்} நீயே. பெரும் தொண்டை கொண்டவன் {மஹாகம்பு} நீயே. பெரும் கழுத்தைக் கொண்டவன் {மஹாக்ரீவன்} நீயே. உடலின் பற்றுகளை அறுப்பவன் {ச்மசாநபாக்} நீயே. பரந்த மார்பைக் கொண்டவன் {மஹாவக்ஷஸ்} நீயே. பரந்த நெஞ்சம் {மஹோரஸ்கன்} நீயே. அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கும் ஆன்மா {அந்தராத்மா} நீயே. மடியில் மானைக் கொண்டவன் {ம்ருகாலயன்} நீயே.(86-57) மரத்தில் கனிகள் தொங்குவதைப் போல எண்ணற்ற உலகங்கள் எதில் தொங்குமோ அவன் {லம்பநன்} நீயே. அண்ட அழிவின் போது அண்டத்தை விழுங்க உதடுகளைத் திறப்பவன் {லம்பிதோஷ்டன்} நீயே. {மஹாமாயன்}. பாற்கடல் {பயோநிதி} நீயே. பெரிய பற்களைக் கொண்டவன் {மஹாதந்தன்} நீயே. பெரிய தாடைகளைக் கொண்டவன் {மஹாதம்ஷ்ட்ரன்} நீயே. பெரிய நாவைக் கொண்டவன் {மஹாஜிஹ்வன்} நீயே. பெரிய வாயைக் கொண்டவன் {மஹாமுகன்} நீயே.(87-58) பெரிய நகங்களைக் கொண்டவன் {மஹாநகன்} நீயே. பெரிய மயிர்களைக் கொண்டவன் {மஹாரோமன்} நீயே. முடிவிலா நீளம் கொண்ட முடிகளைக் கொண்டவன் {மஹாகேசன்} நீயே. பெரும் வயிறு படைத்தவன் {மஹாகோசனே} நீயே, பெரும் நீளம் கொண்ட சடாமுடி தரித்தவன் {மஹாஜடன்} நீயே. எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாக இருப்பவன் {ப்ரஸந்நன்} நீயே. அருளின் வடிவம் {ப்ரஸாதன்} நீயே. நம்பிக்கையின் வடிவம் {ப்ரத்யயன்} நீயே. (போரில் ஆயுதமாக அல்லது) வில்லாக மலைகளைக் கொண்டவன் {கிரிஸாதநன்} நீயே.(88-59) பிள்ளையிடம் தாயைப் போல அனைத்து உயிரினங்களிடமும் அன்பு நிறைந்தவன் {ஸ்நேஹநன்} நீயே. அன்பேதும் இல்லாதவன் {அஸ்நேஹநன்} நீயே. வெல்லப்படாதவன் {அஜிதன்} நீயே. தியான (யோகத்தில்) எப்போதும் அர்ப்பணிப்புள்ளவன் {மஹாமுநி} நீயே. உலக மரத்தின் வடிவம் கொண்டவன் {வ்ருக்ஷாகாரன்} நீயே. உலக மரத்தால் குறிப்பிடப்படுபவன் {வ்ருக்ஷகேது} நீயே. (பூதங்கள் அனைத்திலும், ஒருபோதும் தணிவடையாத நெருப்பைப் போல) உண்பதில் ஒருபோதும் தணிவடையாதவன் {நெருப்பு} {அநலன்} நீயே. (நெருப்போடு அடையாளம் காணப்படுவதன் விளைவால்) இடத்திற்கு இடம் செல்லம் காற்றையே வாகனமாகக் கொண்டவன் {வாயுவாஹநன்} நீயே.(89-60)

மலைகளிலும் சிறு குன்றுகளிலும் திரிபவன் {கண்டலி} நீயே. மேரு மலைகளில் வசிப்பிடம் கொண்டவன் {மேருதாமன்} நீயே. தேவர்களின் தலைவன் {தேவாதிபதி} நீயே. தலையை அதர்வணங்களாகக் கொண்டவன் {அதர்வசீர்ஷன்} நீயே. வாயை சாமங்களாகக் கொண்டவன் {ஸாமாஸ்யன்} நீயே. எண்ணற்ற கண்களை ஆயிரம் ரிக்குகளாகக் கொண்டவன் {ரிக்ஸஹஸ்ராமிதேக்ஷணன்} நீயே.(90-61) பாதங்களையும, கரங்களையும் யஜுஸ்களாகக் கொண்டவன் {யஜுப்பாதபுஜன்} நீயே. உபநிஷதங்கள் {குஹ்யன்} நீயே. (சாத்திரங்களில் தோன்றும்) மொத்த சடங்குகளும் {ப்ரகாசன்} நீயே. அசைவன அனைத்தும் {ஜங்கமன்} நீயே. வேண்டுதல்களை ஒருபோதும் வீண்போகச்செய்யாதவன் {அமோகார்த்தன்} நீயே. எப்போதும் அருள் வழங்குபன் {ப்ரஸாதன்} நீயே. அழகிய வடிவம் கொண்டவன் {அபிகம்யன்} நீயே. {ஸுதர்சநன் நீயே}.(91-62)  (பக்தர்கள் உன்னை நெருங்கும் அளவுக்கு) பக்தர்களை நெருங்குபவன் {உதவி செய்பவன்} {உபகாரன்} நீயே. அன்புக்குரியவன் {ப்ரியன்} நீயே. {ஸர்வன்}. அனைவருக்கும் பிடித்த தங்கம் மற்றும் விலைமதிப்புமிக்க உலோகங்கள் {கநகன்} நீயே. புடம்போட்ட தங்கத்தைப் போன்ற பிரகாசம் கொண்டவன் {காஞ்சநச்சவி} நீயே. (அண்டத்தின்) தொப்புளாக இருப்பவன் {நாபி} நீயே. (உன் மகிமைக்காக வேள்வி செய்வோரின் நன்மைக்காக) வேள்விக் கனிகளை வளரச் செய்பவன் {நந்திகரன்} நீயே. வேள்விகளைப் பொறுத்தவரையில் அறவோர் கொள்ளும் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் வடிவம் {பாவன்} நீயே. அண்டத்தை வடிவமைத்தவன் {புஷ்கரஸ்தபதி} நீயே. (மலைகள் மற்றும் பொருட்களின்) வடிவில் அழிவற்றவனாக இருப்பவன் {ஸ்திரன்} நீயே.(92-63) ஒரு மனிதன் கடந்து செல்ல வேண்டிய பனிரெண்டு நிலைகள்[7] {த்வாதசன்} நீயே. (இப்பட்டியலில் உள்ள பத்து நிலைகளுக்கிடையில் ஏற்கப்படும் நிலைகளில்) அச்சத்தை உண்டாக்குபவன் {த்ராஸநன்} நீயே. அனைத்துப் பொருட்களின் தொடக்கம் {ஆத்யன்} நீயே. யோகத்தின் மூலமாகப் பரப்பிரம்மத்தில் ஜீவனைக் கலக்கச் செய்வன் {யஜ்ஞன்} நீயே. ஜீவன் மற்றும் பரப்பிரம்மத்திற்கிடையில் யோகத்தின் மூலம் கலப்பை எது உண்டாக்குமோ அது {யஜ்ஞஸமாஹிதன்} நீயே. (ஆழ்ந்த மயக்கத்துடன் கூடிய) வெளிப்படாதவன் {நக்தன்} (காமம், கோபம், பேராசை, தீய ஆசைகளை உண்டாக்குவதால்) நான்காம் யுகத்தின் தலைமைத் தேவன் {கலி} நீயே. (அண்டத்தில் அடுத்தடுத்து பிறப்பிறப்புகளை உண்டாக்கும்) நித்தியமான காலம் {காலன்} நீயே.(94) ஆமையின் வடிவில் இருப்பவன் {மகரன்} நீயே. காலனால் வழிபடப்படுபவன் {காலபூஜிதன்} நீயே. (93-64)தோழர்களின் {கணங்களின்} மத்தியில் வாழ்பவன் {ஸகணன்} நீயே. கணங்களின் பட்டியலில் உன் பக்தர்களைச் சேர்ப்பவன் {கணகாரன்} நீயே. உன் தேருக்குப் பிரம்மனை சாரதியாகக் கொண்டவன் {பூதவாஹநஸாரதி} நீயே. சாம்பலில் {திருநீற்றில்} உறங்குபவன் {பஸ்மசயன்}[8] நீயே. சாம்பலால் அண்டத்தைக் காப்பவன் {பஸ்மகோப்தன்} நீயே. சாம்பலாலான உடலைக் கொண்டவன் {பஸ்மபூதன்} நீயே. அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருளும் மரம் {தரு} நீயே. கணங்களின் வடிவைக் கொண்டவன் {கணன்} நீயே.(94-65)

பதினான்கு உலகங்களையும் பாதுகாப்பவன் {லோகபாலன்} நீயே. அனைத்து உலகங்களையும் கடந்திருப்பவன் {அலோகன்} நீயே. (எந்தக் குறையுமில்லாத) முழுமையானவன் {மஹாத்மா} நீயே. அனைத்து உயிரினங்களாலும் துதிக்கப்படுபவன் {ஸர்வபூஜிதன்} நீயே. (தூய்மையானவனும், களங்கமற்றவனுமாக இருப்பதால்) வெண்மையானவன் {சுக்லன்} நீயே. உடல், வாக்கு மனம் ஆகியவற்றை முன்னிலும் களங்கமற்றவையாகக் கொண்டவன் {த்ரிசுக்லன்} நீயே. விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் தூய இருப்பை அடைந்தவன் {ஸம்பநநன்} நீயே. எவ்வகைத் தூய்மையின்மையாலும் களங்கப்பட இயலாதவன் {சுசி} நீயே. பழங்காலத்தின் பேராசான்களால் அடையப்பட்டவன் {பூதநிஷேவிதன்} நீயே.(95-66) அறம் அல்லது நான்கு வாழ்வு முறைகளின் {ஆசிரமங்களின்} முறையான வடிவம் {ஆச்ரமஸ்தன்} நீயே. சடங்குகள் மற்றும் வேள்விகளின் வடிவில் உள்ள அறம் {க்ரியாவஸ்தன்} நீயே. அண்டத்தின் தெவ்வீக வடிவமைப்பாளனுடைய திறனின் வடிவம் {விச்வகர்மமதி} நீயே. அண்டத்தின் ஆதி வடிவமாகத் துதிக்கப்படுபவன் {வரன்} நீயே. பரந்த கரங்களைக் கொண்டவன் {விசாலசாகனே} நீயே. தாமிர வண்ணம் இதழ்களைக் கொண்டவன் {தாம்ரோஷ்டன்} நீயே. பெருங்கடலில் உள்ள பேரளவு நீரின் வடிவம் {அம்புஜாலன்} நீயே. (மலைகள் மற்றும் குன்றுகளின் வடிவில்) உறுதியாக நிலைத்திருப்பவன் {ஸுநிச்சலன்} நீயே.(96-67) கபிலர் நீயே. பழுப்பு நிறத்தவன் {கபிசன்} நீயே. வெண்கலவை கொண்ட வண்ணங்கள் அனைத்தும் {சுக்லன்} நீயே. வாழ்வுக்காலம் {ஆயுஸ்} நீயே. தொன்மையானவன் {பரன்} நீயே. அண்மையானவன் {அபரன்} நீயே. கந்தர்வன் நீயே. தேவர்களின் தாயான அதிதியின் வடிவில் இருப்பவன் (அல்லது அனைத்துப் பொருட்களின் தாயான பூமியின் வடிவில் இருப்பவன்) {அதிதி} நீயே. பறவைகளின் இளவரசனும், வினதையிடம் கசியபருக்குப் பிறந்தவனும் தார்க்ஷயன் என்று வேறுபெயரால் அழைக்கப்படுபவனும் {தார்க்ஷயன்} நீயே. எளிதில் புரிந்துகொள்ளப்படக்கூடியவன் {ஸுவிஜ்ஞேயன்} நீயே. ஏற்புடைய சிறந்த வாக்கை உடையவன் {ஸுசாரதன்} நீயே.(97-68) போர்க்கோடரி தரித்தவன் {பரச்வதாயுதன்} நீயே. வெற்றியை விரும்புபவன் {தேவன்} நீயே. திட்டங்களை நிறைவேற்றுவதில் பிறருக்குத் துணை புரிபவன் {அநுகாரி} நீயே. {கிருஷ்ணனைப் போன்ற} சிறந்த நண்பன் {ஸுபாந்தவன்} நீயே. துளையுள்ள இரு சுரைக்காய்களால் அமைந்த வீணையைச் சுமப்பவன் {தும்பவீணன்} நீயே. (அண்ட அழிவின்போது வெளிப்படும்) பயங்கரக் கோபம் {மஹாக்ரோதன்} நீயே. மனிதர்கள் மற்றும் தேவர்களைவிட உயர்ந்தவர்களை (பிரம்மன் மற்றும் விஷ்ணுவைப்) பிள்ளைகளாகக் கொண்டவன் {மேல்நோக்கிய உயிரணு கொண்டவன் / புலன்களை வென்றவன்}  {ஊர்த்வரேதஸ்} நீயே. அண்ட அழிவிக்குப் பிறகு நீரில் மிதக்கும் விஷ்ணுவின் வடிவம் {ஜலேசயன்} நீயே.(98-69) பெருஞ்சீற்றத்துடன் அனைத்தையும் எரிப்பவன் {உக்ரன்} நீயே. வாரிசுகளை உண்டாக்குபவன் {வம்சக்ரன்} நீயே. பரம்பரை பரம்பரையாகத் தொடரும் குடும்பமும், குலமும் {வம்சன்} நீயே. மூங்கிலாலான புல்லாங்குழலின் இசை {வம்சநாதன்} நீயே. களங்கமற்றவன் {அநிந்திதன்} நீயே. எவனுடைய உடலில் ஒவ்வொரு உறுப்பும் அழகாய் இருக்குமோ அவன் {ஸர்வாங்கரூபன்} நீயே. மாயை நிறைந்தவன் {மாயாவி} நீயே. திரும்பிவரும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் {பிரதிபலன் பாராமல்} பிறருக்கு நன்மை செய்பவன் {ஸுஹ்ருதன்} நீயே. {வாயு என்றழைகெகப்படும்} காற்று {அநிலன்} நீயே. {அக்னி என்றழைக்கப்படும்} நெருப்பு {அநலன்} நீயே.(99-70)ஜீவனைக் கட்டும் உலகபந்தங்கள் {பந்தநன்} நீயே. அந்தக் கட்டுகளைப் படைப்பவன் {பந்தகர்த்தன்} நீயே. அத்தகைய கட்டுகளை அறுப்பவன் {ஸுபந்தநவிமோசநன்} நீயே. (வேள்விகள் அனைத்திற்கும் பகைவர்களான} தைத்தியர்களிலும் வசிப்பவன் {ஸயஜ்ஞாரி} நீயே. (அனைத்துச் செயல்களையும் கைவிட்டவர்களான) செயல்கள் அனைத்தின் பகைவர்களில் வசிப்பவன் {ஸகாமாரி} நீயே. பெரும் பற்களைக் கொண்டவன் {மஹாதம்ஷ்ட்ரன்} நீயே. வலிமைமிக்க ஆயுதங்கள் {மஹாயுதன்} நீயே.(100-71) பெரிதும் நிந்திக்கப்படுபவன் {பஹுதாநிந்திதன்} நீயே. தாருகா வனத்தில் வசிக்கும் முனிவர்களைத் திகைக்கச் செய்தவன் {சர்வன்} நீயே. தாருகா வனத்தில் வசிப்பவர்களும், உன்னை இகழ்பவர்களுமான முனிவர்களுக்கும் நன்மை செய்பவன் {சங்கரன்} நீயே. அம்முனிவர்களின் அச்சங்கள் அனைத்தையும் விலக்கி, அவர்களுக்கு முக்தியளிப்பவன் {சங்கரன்} நீயே. (உடுக்கத் தேவையான ஆடையை அடைய இயலாத விளைவால்) செல்வமற்றவன் {அதநன்} நீயே. தேவர்களின் தலைவன் {அமரேசன்} நீயே. (தேவர்களில் உயர்ந்தவனாகக் கருதப்பட்டு இந்திரனாலும் துதிக்கப்படுவதன் விளைவால்) தேவர்களில் பெரியவன் {மஹாதேவன்} நீயே. விஷ்ணுவாலும் துதிக்கத்தக்கவன் {விச்வதேவன்} நீயே. தேவர்களின் பகைவர்களைக் கொல்பவன் {ஸுராரிஹா} நீயே.(101-72) அதளபாதாளத்தில் (சேஷன் என்ற பாம்பின் வடிவில்) வசிப்பவன் {அஹிர்புத்நியன்} நீயே. புலப்படாதிருக்கும் காற்றானது அனைவராலும் உணரப்படுவதைப் போலவே புலப்படாதவனாக இருப்பினும் புரிந்து கொள்ளப்படக்கூடியவன் {அநிலோபன் / அநிலாபன்} நீயே. அனைத்தின் வேர் வரை பரந்த ஞானம் கொண்டவனும், அனைத்துப் பொருட்களின் உள் இயல்பை அறிந்தவனும் {சேகிதாநன்} நீயே. உன்னில் இன்பம் கொள்பவனில் இன்பம் கொள்பவன் {ஹவிஸ்} நீயே. அஜைகபாத் என்றழைக்கப்படும் பதினோரு ருத்திரர்களில் ஒருவன் நீயே. மொத்த அண்டத்தின் ஆட்சியாளன் {காபாலி} நீயே. (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற நன்கறியப்பட்ட முக்குணங்களால் மறைக்கப்படுவதன் விளைவால்) அண்ட ஜீவன்கள் அனைத்தின் வடிவம் {த்ரிசங்கு} நீயே. முக்குணங்களுக்கு உட்படாதவன் {அஜிதன்} நீயே. குணங்கள் அனைத்தையும் கடந்தவனும், மொழி வழங்கும் எந்த உரிச்சொல்லின் துணையாலும் விளக்கப்பட இயலாதவனுமான தூய இருப்பு {சிவன்} நீயே.(102-73) தந்வந்தரி என்றழைக்கப்படும் மருத்துவ இளவரசன் நீயே. (பாவிகளுக்கு நேரும் பேரிடர்களை உண்டாக்கும் விளைவாக உள்ள) வால்நட்சத்திரம் {தூமகேது} நீயே. ஸ்கந்தன் என்றழைக்கப்படும் தேவர்ப்படைத்தலைவன் நீயே. இணைபிரியாத் தோழனும், உலகக் கருவூலங்கள் அனைத்தின் தலைவனும், குபேரன் என்றழைக்கப்படுபவனுமான யக்ஷர்களின் மன்னன் {வைச்ரவணன்} நீயே. தாத்ரி {தாதா} நீயே. சக்ரன் நீயே. விஷ்ணு நீயே. மித்ரன் நீயே. (தெய்வீகத் தச்சனான) தாஷ்டிரி {த்வஷ்டா} நீயே. துருவ நட்சத்திரம் {த்ருவன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்குபவன் {தரன்} நீயே.(103-74) வசுக்களில் பிரபாவன் என்றழைக்கப்படுபவன் {ப்ரபாவன்} நீயே. (அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் இணைக்கும் ஆன்ம இழையாக) எங்கும் செல்லவல்ல காற்று {ஸர்வகோவாயு} நீயே. அர்யமான் {சூரியனின் பெயர்} {அர்யமா} நீயே. சாவித்ரி {ஸவிதா} நீயே. ரவி நீயே. உஷங்கு என்ற பெயரில் அறியப்பட்டவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான புராதன மன்னன் {எரியும் கதிர்களைக் கொண்டவன்} {உஷங்கு} நீயே. பல்வேறு வழிகளில் உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவன் {விதாதா} நீயே. (அனைத்து உயிரினங்களுக்கும் நிறைவளிக்கவல்ல) மாந்தாத்ரி {மாந்தாதா} நீயே. அனைத்து உயிரினங்களும் உயிர் பெறும் இடம் {பூதபாவநன்} நீயே.(104-75)

பல்வேறு வடிவங்களில் இருப்பவன் {விபு} நீயே. அண்டத்தில் இருக்கும் பல்வேறு வண்ணங்களை உண்டாக்குபவன் {வர்ணவிபாவி} நீயே. (உன்னில் இருந்து உண்டாகுபவையாக உள்ள_ ஆசைகள் அனைத்தையும், குணங்கள் அனைத்தையும் தாங்குபவன் {ஸர்வகாமகுணாவஹன்} நீயே. தொப்புளில் தாமரையைக் கொண்டவன் {பத்மநாபன்} நீயே. வலிமைமிக்க எண்ணற்ற உயிரினங்களுள்ள கருவறையைக் கொண்டவன் {மஹாகர்ப்பன்} நீயே. சந்திரனைப் போன்ற அழகு நிறைந்த முகத்தைக் கொண்டவன் {சந்த்ரவக்த்ரன்} நீயே. {வாயு என்றழைக்கப்படும்} காற்று {அநிலன்} நீயே. {அக்னி என்றழைக்கப்படும்} நெருப்பு {அநலன்} நீயே.(105-76) பெரும் வலிமை {பலவாந்} நீயே. ஆன்ம அமைதி கொண்டவன் {திறனை வெளிக்காட்டாதவன்} {உபசாந்தன்} நீயே. பழைமையானவன் {புராணன்} நீயே. அறத்தின் துணையால் அறியப்படுபவன் {புண்யசஞ்சு} நீயே. {ஸ்ரீ என்றழைக்கப்படும்} லக்ஷ்மி {ஈ} நீயே. (பரமதேவனைத் துதிக்க மனிதர்களுக்குப் பயன்படும்) செயற்களத்தை அமைப்பவன் {குருகர்த்தன்} நீயே. செயற்களத்தில் வாழ்பவன் {குருவாஸி} நீயே. செயற்களத்தின் ஆன்மா {குருபூதன்} நீயே. அரச குணங்களைத் தூண்டுபவன் அல்லது அவற்றுக்கான மருந்து {குணௌஷதன்} நீயே.(106-77) (கனவற்ற உறக்க நிலையை வெளிக்காட்டும் நினைவற்ற இயல்பைக் கொண்ட நீயாகவே அனைத்துப் பொருட்களும் ஆகின்றன என்று ஸ்ருதிகள் அறிவிப்பதால்) அனைத்துப் பொருட்களும் கிடக்கும் இடம் {ஸர்வாசயன்} {தர்ப்பசாரி} நீயே. உயிர் மூச்சுகளுடன் கூடிய அனைத்து உயிரினங்களின் தலைவன் {ஸர்வேஷாம்ப்ராணிநாம்பதி} நீயே. தேவர்களுக்குத் தேவன் {தேவதேவன்} நீயே. இன்பநிலையுடன் தொடர்புடையவன் {ஸுகாஸக்தன்} நீயே. (காரண வடிவமான) ஸத் நீயே. (விளைவின் / காரிய வடிவமான) அஸத் நீயே. அனைத்திலும் சிறந்தவன் {ஸர்வரத்நவித்} நீயே.(107-78) கைலாச மலைகளில் வசிப்பவன் {கைலாஸகிரிவாஸி} நீயே. இமய மலைகளுக்குச் செல்பவன் {ஹிமவத்கிரிஸம்ச்ரயன்} நீயே. கரைகளில் நிற்கும் மரங்களை அடித்துச் செல்லும் பேரோடையைப் போல அனைத்தையும் அடித்துச் செல்பவன் {கூலஹாரி} நீயே. புஷ்கரை, பெருந்தடாகங்கள் மற்றும் இயற்கையான நீர்நிலைகள் அனைத்தையும் படைத்தவன் {கூலகர்த்தன்} நீயே. முடிவிலா ஞானவகைகளைக் கொண்டவன் {பஹுவித்யன்} நீயே. முடிவற்ற அருளை வழங்குபவன் {பஹுப்ரதன்} நீயே.(108-79) (மனிதர்களின் நன்மைக்காக இந்நாட்டுப் பொருட்களை வேறு நாட்டிற்கும், வேறு நாட்டுப் பொருட்களை இந்த நாட்டிற்கும் கொண்டு வரும்) வணிகன் {வணிஜன்} நீயே. மரத்தச்சன் {வர்த்தகி} நீயே. (உன் கோடரிக்குக் காம்பை வழங்கும் உலகமெனும்) மரம் {வ்ருக்ஷன்} நீயே. வகுளம் {மகிழம்} என்றழைக்கப்படும் மரம் நீயே. சந்தன மரம் {சந்தநம்} நீயே. {ஏழிலைப்பாலை என்றழைக்கப்படும்} சத மரம் {சதம்} நீயே. மிக உறுதியான கழுத்தைக் கொண்டவன் {ஸாரக்ரீவன்} நீயே. பெருந்தோள்களைக் கொண்டவன் {மஹாஜத்ரு} நீயே. (செயல்பாடுகள் அனைத்திலும் உறுதியானவனாக இருந்தாலும்) அமைதியற்றவன் {ஆசையற்றவன்} {அலோலன்} நீயே. (அரிசி, கோதுமை மற்றும் பிற தானிய வகைகளில் உள்ள) முக்கியப் பயிர்களும், செடிகளும் {மஹௌஷதன்} நீயே.(109-80)

பிறர் தங்கள் இதயங்களில் விரும்பும் பொருட்களை அடைய வெற்றியை அருள்பவன் {ஸித்தார்த்தகாரி}, {ஸித்தார்த்தன்} நீயே. வேதங்கள் மற்றும் இலக்கணத்தில் சரியான தீர்மானங்கள் {சந்தோவ்யாகரணோத்தரன்} நீயே. சிங்க முழக்கம் செய்பவன் {ஸிம்மநாதன்} நீயே. சிங்கப் பற்களுடன் கூடியவன் {ஸிம்மதம்ஷ்ட்ரன்} நீயே. பயணங்கள் செய்யச் சிங்கத்தில் செல்பவன் {ஸிம்மகன்} நீயே. சிங்கத்தால் இழுக்கப்படும் தேரைக் கொண்டவன் {ஸிம்மவாஹநன்} நீயே.(110-81) உண்மையின் உண்மையென அழைக்கப்படுபவன் {ப்ரபாவாத்மா} நீயே. அண்டத்தின் காலனை உணவுத்தட்டாகக் கொண்டவன் {ஜகத்காலஸ்தாலன்} நீயே. உலகங்களுக்கு நன்மையை எப்போதும் நாடுபவன் {லோகஹிதன்} நீயே. (விடுதலையின் {முக்தியின்} இன்பநிலைக்கு வழிவகுக்கும் வகையில்) உயிரினங்கள் அனைத்தையும் துன்பத்தில் இருந்து மீட்பவன் {தரு} நீயே. சாரங்கம் என்றழைக்கப்படும் பறவை {ஸாரங்கன்} நீயே. புதிய அன்னப்பறவை {நவசக்ராங்கன்} நீயே. (சேவலைப் போலவோ, மயிலைப் போலோ} நீ தலையில் கொண்டுள்ள மகுடத்தின் விளைவாக அழகுடன் தெரிபவன் {கேதுமாலி} நீயே. நீதியை நிலைநாட்ட ஞானிகள் அமரும் சபைகளைப் பாதுகாப்பவன் {ஸபாவநன்} நீயே.(111-82) அனைத்து உயிரினங்களின் வசிப்பிடம் {பூதாலயன்} நீயே. அனைத்து உயிரினங்களையும் பேணிப் பாதுகாப்பவன் {பூதபதி} நீயே. (நித்திய பூதங்களாக அமைந்திருக்கும்) பகலும், இரவும் {அஹோராத்ரன்} நீயே. குற்றமற்றிருப்பதால் ஒருபோதும் இகழப்படாதவன் {அநிந்திதன்} நீயே.(112-83) அனைத்து உயிரினங்களையும் தாங்குபவன் {ஸர்வபூதாநாம்வாஹிதன்} நீயே. அனைத்து உயிரினங்களின் புகலிடம் {நிலயன்} நீயே. பிறப்பற்றவன் {விபு} நீயே. இருப்பவன் {பவன்} நீயே. எப்போதும் கனிநிறைந்தவன் {அமோகன்} நீயே. தாரணை, தியானம் மற்றும் சமாதியுடன் கூடியவன் {சார்ந்தோருக்குக் கட்டுப்பட்டவன்} {ஸம்யதன்} நீயே. உச்சைஸ்ரவஸ் முதலிய குதிரைகள் {அச்வன்} நீயே. உணவளிப்பவன் {போஜநன்} நீயே. உயிரினங்களின் உயிர் மூச்சுகளைத் தாங்கிப் பிடிப்பவன் {ப்ராணதாரணன்} நீயே.(113-84) பொறுமையுடன் கூடியவன் {த்ருதிமாந்} நீயே. நுண்ணறிவு கொண்டவன் {மதிமாந்} நீயே. முயற்சியும், புத்திசாலித்தனமும் கொண்டவன் {தக்ஷன்} நீயே. அனைவராலும் மதிக்கப்படுபவன் {ஸத்க்ருதன்} நீயே. அறம் மற்றும் மறத்திற்கான {புண்ணியபாவங்களுக்கான} கனிகளைக் கொடுப்பவன் {யுகாதிபன்} நீயே. (புலன்களுக்குத் தலைமை தாங்கி அவை தங்கள் தங்களுக்குரிய செயல்களைச் செய்ய வைப்பதால்) புலன்களைப் பேணிக் காப்பவன் {கோபாலி} நீயே. ஒளிக்கோள்கள் அனைத்தின் தலைவன் {கோபதி} நீயே. பொருட்களின் திரட்டுகள் அனைத்தும் {க்ராமன்} நீயே. மாட்டுத் தோல்களாலான உடைகளைக் கொண்டவன் {கோசர்மவஸநன்} நீயே. பக்தர்களின் துயரை அகற்றுபவன் {ஹரி} நீயே.(114-85)

தங்கக் கரம் கொண்டவன் {ஹிரண்யபாஹு} நீயே. தங்கள் தங்களுக்குள் நுழைய முயலும் யோகியரின் உடல்களைப் பாதுகாப்பவன் {ப்ரவேசிநாம்குஹாபாலன்} நீயே. எதிரிகள் அனைவரையும் ஒன்றுமற்ற நிலைக்குக் குறைப்பவன் {ப்ரக்ருஷ்டாரி} நீயே. மகிழ்ச்சியைப் பெருமளவில் கொண்டவன் {மஹாஹர்ஷன்} நீயே. தடுக்கப்பட முடியாத காம தேவனை வென்றவன் {ஜிதகாமன்} நீயே. புலன்களை வென்றவன் {ஜிதேந்த்ரியன்} நீயே.(115-86) இசையின் எட்டாம் சுரமான காந்தாரம் நீயே. (இனிமை நிறைந்த கைலாய மலைகளில் அமைந்திருப்பதன் விளைவால்) சிறப்பான மற்றும் அழகிய இல்லம் கொண்டவன் {ஸுவாஸன்} நீயே. எப்போதும் தவங்களுடன் தொடர்புடையவன் {தபஸ்ஸக்தன்} நீயே. உற்சாகம் மற்றும் நிறைவின் வடிவம் {ரதி} நீயே. முடிவற்றவன் அல்லது பரந்தவன் {நரன்} நீயே. தொகுக்கப்பட்டவற்றுள் முதன்மையான பாடல் {மஹாகீதன்} நீயே. நீண்ட அடிகள் மற்றும் பெரும் தாவல்களுடன் ஆடுபவன் {மஹாந்ருத்யன்} நீயே. அப்ஸரஸ்களின் பல்வேறு இனக்குழுக்களால் மதிப்புடன் துதிக்கப்படுபவன் {அப்ஸரோகணஸேவிதன்} நீயே.(116-87) (காளைச் சின்னம் பொறிக்கப்பட்ட) பெரும் கொடிமரத்தைக் கொண்டவன் {மஹாகேது} நீயே. மேரு மலை {மஹாதாது} நீயே. பெரும் மலைச்சிகரங்கள் அனைத்தின் மத்தியிலும் திரிபவன் {நைகஸாநுசரன்} நீயே. பற்றிக்கொள்ள மிகக் கடினமான பெரும் வேகத்தைக் கொண்டவன் {சலன்} நீயே. சொற்களால் விளக்கப்பட முடியாதவனாக இருப்பினும் ஆசான்களால் சீடர்களுக்கு விவரிக்கப்படவல்லவன் {ஆவேதநீயன்} நீயே. ஆசான்களால் சீடர்களுக்குப் போதிக்கப்படும் கல்வயின் வடிவம் {ஆதேசன்} நீயே. இனிய நறுமணங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் உணரக் கூடியவன் {ஸர்வகந்தஸ்ஸுகாவஹன்} நீயே.(117-88) நகரங்கள் மற்றும் அரண்மனைகளின் முகப்புவாயில் {தோரணன்} நீயே. அரணமைக்கப்பட்ட நகரங்களைச் சூழ்ந்திருப்பவையும், முற்றுகையிடப்பட்ட கோட்டைக் காவற்படைகளுக்கு வெற்றியை அளிப்பவையுமான அகழிகள் மற்றும் குழிகளின் வடிவம் {தாரணன்} நீயே. காற்று நீயே {வாதன்} நீயே. மதில்கள் மற்றும் அகழிகளால் சூழப்பட்ட அரணமைக்கப்பட்ட நகரங்கள் மற்றும் ஊர்களின் வடிவம் {பரிதீபதி} நீயே. (கருடனின் வடிவில் நீயே இருப்பதால்) சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்தின் இளவரசன் {கேசரன்} நீயே. எதிர்பாலினக் கலவியால் உற்பத்தியைப் பெருக்குபவன் {ஸம்யோகன்} நீயே. அறங்கள் மற்றும் அறிவுகள் அனைத்திலும் முதன்மையானவன் {வர்த்தநன்} நீயே. அறிவு மற்றும் அறங்கள் அனைத்திலும் முதல்வன் {வ்ருத்தன்} நீயே. அறிவு மற்றும் அறங்கள் அனைத்திலும் மூத்தவனுக்கும் மேன்மையானவன் {அதிவ்ருத்தன்} நீயே. அறிவு மற்றும் குணங்கள் அனைத்தையும் கடந்தவன் {குணாதிகன்} நீயே.(118-89) நித்தியமானவனும், மாற்றமில்லாதவனும், சுயம்சார்ந்தவனும் {நித்யாத்மஸஹாயன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசானும், பாதுகாவலனும் {தேவாஸுரபதி} நீயே. அனைத்து உயிரினங்களின் ஆசானும், பாதுபாவலனும் {பதி} நீயே. கவசம் தரிப்பவன் {யுக்தன்} நீயே. பகைவர்கள் அனைவரையும் கலங்கடிக்கவல்ல கரங்களைக் கொண்டவன் {யுக்தபாஹு} நீயே. சொர்க்கத்தில் ஸுபர்வன் என்றழைக்கப்படுபவனைக் காட்டிலும் துதிக்கத்தக்க பொருள் {திவிஸுபர்வணோதேவன்} நீயே.(119-90)

அனைத்துப் பொருட்களையும் தாங்கும், அல்லது சுமக்கும் சக்தியை அருள்பவன் {ஆஷாடன்} நீயே. அனைத்துப்பொருட்களையும் சுமக்கவல்லவன் {ஸுஷாடன்} நீயே. (ஒருபோதும் உறுதியற்றவனாக இல்லாத) நிலையுறுதி கொண்டவன் {த்ருவன்} நீயே. (எக்களங்கமும் இல்லாத) வெண்மையானவன், அல்லது தூயன் {ஹரிணன்} நீயே. (அனைத்துப் பொருட்களையும்) அழிக்கவல்ல திரிசூலம் தரிப்பவன் {ஹரன்} நீயே. அண்டத்தில் தொடர்ந்து பிறப்பிறப்பில் சுழன்று கொண்டிருப்போருக்கு உடல் வடிவங்களை அளிப்பவன் {ஆவர்த்தமாநேப்யோவபு} நீயே. செல்வத்தைவிட மதிப்புமிக்கவன் {வஸுச்ரேஷ்டன்} நீயே. (நன்மை மற்றும் பணிவன்பின் வடிவிலான) அறவழி அல்லது ஒழுக்கம் {மஹாபதன்} நீயே.(120-91) (வெறும் கோபத்தால் தூண்டப்படாமல்) ஆழமான முறையான ஆய்வுக்குப் பின் பிரம்மனின் தலையை அறுத்தவன் {சிரோஹாரி} நீயே. {விமர்சன் நீயே}. கைவரை நூல் {ரேகை சாஸ்திரம்}, அடிக்காலியல், தலை அமைப்பியல், மற்றும் விசித்திர மனத்தன்மைகளைக் குறிக்கும் உடல்வடிவம் தொடர்புடைய பிற அறிவுக்கிளைகள் ஆகியவற்றில் சொல்லப்பட்டிருக்கும் மங்கலக்குறிகள் அனைத்தையும் கொண்டவன் {ஸர்வலக்ஷணலக்ஷிதன்} நீயே. தேரின் அக்ஷம் என்றழைக்கப்படும் மரச்சட்டமாக இருப்பவனும், உடலெனும் தேரில் தொடர்புடையவனும் {ரதயோகிஅக்ஷன்} நீயே. (அனைத்துப் பொருட்களிலும் அவற்றின் ஆன்மாவாக நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால்) அனைத்துப் பொருட்களிலும் தொடர்புடையவன் {ஸர்வயோகி} நீயே. வீரர்களுக்கு வீரனான பெரும் வலிமை கொண்டவன் {மஹாபலன்} நீயே.(121-92) வேதம் {ஸமாம்நாயன்} நீயே. ஸ்மிருதிகள், இதிஹாஸங்கள், புராணங்கள் மற்றும் பிற சாத்திரங்கள் {அஸமாம்நாயன்} நீயே. ஒவ்வொரு புண்ணியத்தலத்தின் சிறப்புமிக்கத் தேவன் {தீர்த்ததேவன்} நீயே. பூமியைத் தேராகக் கொண்டவன் {மஹாரதன்} நீயே. ஒவ்வொரு உயிரின உடற்தொகுப்புக்குள்ளும் நுழையும் செயலாற்றலற்ற பூதங்கள் {நிர்ஜீவன்} நீயே. செயலாற்றலற்ற பூதங்களாலான ஒவ்வொரு தொகுப்புக்கும் உயிரைக் கொடுப்பவன் {ஜீவநன்} நீயே. உயிரற்ற பருப்பொருளில் உயிரை உட்செலுத்தும் புனித மந்திரங்களும், பிரணவமும் {மந்த்ரன்} நீயே. அமைதியான பார்வைகளைச் செலுத்துபவன் {சுபாக்ஷன்} நீயே. (அனைத்துப் பொருட்களையும் அழிப்பவனாக இருப்பதால்) மிகக் கடுமையானவன் {பஹுகர்க்கசன்} நீயே.(122-93) மதிப்புமிக்க எண்ணற்ற குணங்களையும், உடைமைகளையும் கொண்டவன் {ரத்நப்ரபூதன்} நீயே. சிவந்த உடல் கொண்டவன் {ரத்நாங்கன்} நீயே. நீ பருகுவதற்காகப் பல குளங்கள் நிறைவதால் பரந்த பெருங்கடல்கள் அனைத்தும் {மஹார்ணவநிபாநவித்} நீயே. உலக மரத்தின் வேர் {மூலன்} நீயே. பெருஞ்சிறப்புகளைக் கடந்து ஒளிர்பவனும், மிக அழகியவனும் {விசாலன்} நீயே. அமுதத்தின் வடிவம் {அம்ருதன்} நீயே. காரணம், விளைவு {காரியம்} ஆகிய இரண்டும் {வ்யக்தாவ்யக்தன்} நீயே. (பெரும் யோகியாக இருப்பதால்) தவப்பெருங்கடல் {தபோநிதி} நீயே.(123-94) இருப்பின் உயர்ந்த நிலைக்கு உயரச் செய்பவன் {ஆரோஹணன்} நீயே. அந்நிலையை ஏற்கனவே அடைந்தவன் {அதிரோஹன்} நீயே. தூய ஒழுக்கம், தூய செயல்கள் மற்றும் நோன்புகளுக்காகப் புகழ்பெற்றவன் {சீலதாரி} நீயே. (அறநடத்தையின் விளைவால்) பெரும்புகழ் கொண்டவன் {மஹாயசஸ்} நீயே. (ஆற்றல் மற்றும் துணிவின் வடிவமாக நீயே இருப்பதால்) படைகளின் ரத்தினம் {ஸேநாகல்பன்} நீயே. தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {மஹாகல்பன்} நீயே. யோகம் நீயே. யுகங்கள் மற்றும் கல்பங்களால் அளக்கப்படும் நித்திய காலத்தை உண்டாக்குபவன் {யுகசரன்} நீயே. உயிரினங்கள் அனைத்தையும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அனுப்புபவன் {ஹரி} நீயே.(124-95)

(அடுத்தடுத்த யுகங்களில் வெளிப்படும் {யுகரூபத்தில்} அறம், மறம் மற்றும் அவற்றின் கலவைகளின் வடிவம்) {மஹாரூபன்} நீயே. பெரியவனும், வடிவமற்றவனும் {மஹாநாகஹநன்} நீயே. மதங்கொண்ட பெரும் யானையின் வடிவில் வாராணசி என்ற புனித நகரத்தை எதிர்த்து வந்த வலிமைமிக்க அசுரனைக் கொன்றவன் {வதன்} நீயே. காலனின் வடிவம் {ந்யாயநிர்வபணன்} நீயே. உயிரினங்கள்அனைத்தின் தகுதிகளுக்கு ஏற்ப அவற்றின் விருப்பங்களைக் கனியச் செய்பவன் {பாதன்} நீயே. {பண்டிதன்} நீயே. அணுகப்படக்கூடியவன் {அசலோபமன்} நீயே.(125-96) புலன்களின் உணர்வைக் கடந்த அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் {பஹுமாலன்} நீயே. தத்துவங்களை அறிந்தவன் (என்பதால் முற்றிலும் நிலையாக இருப்பவன்) {மஹாமாலன்} நீயே. இடைவிடாமல் அழகில் ஒளிர்பவன் {சுசீஹரஸுலோசநன்} நீயே. கழுத்தில் இருந்து பாதம் வரை நீளும் மாலைகளை அணிபவன் {விஸ்தாரன்} நீயே. சந்திரனைத் தன் அழகிய கண்களாகக் கொண்ட ஹரன் {லவணன்} நீயே. பரந்து விரிந்த உப்புப் பெருங்கடல் {கூபன்} நீயே. (கிருதம், திரேதம், துவாபரம் என்ற) மூன்று யுகங்கள் {த்ரியுகன்} நீயே. பிறருக்கான நற்பலன்கள் நிறைந்த தோற்றம் கொண்டவன் {ஸபலோதயன்} நீயே.(126-97) (சாத்திரங்கள், ஆசான் மற்றும் தியான வடிவங்களில்) மூன்று கண்களைக் கொண்டவன் {த்ரிலோசநன்} நீயே. (ஆதி பூதங்களின் நுண்வடிவங்களாக இருப்பதால்) மிக நுட்பமான வடிவங்களைக் கொண்டவன் {விஷண்ணாங்கன்} நீயே. குண்டலங்கள் அணிந்த காதுகளைக் கொண்டவன் {மணிவித்தன்} நீயே. சடாமுடி தரித்தவன் {ஜடாதரன்} நீயே. மூக்கொலியைக் குறிக்கும் (எழுத்தில்) புள்ளியாக இருப்பவன் {பிந்து} நீயே. ஹ என்ற மூச்சொலியைக் குறிக்கும் (எழுத்தில்) இரு புள்ளிகளாக இருப்பவன் {படைப்பவன்} {விஸர்க்கன்} நீயே. சிறந்த முகத்தைக் கொண்டவன் {ஸுமுகன்} நீயே. பகைவனின் அழிவுக்காகப் போர்வீரனால் ஏவப்படும் கணை {சரன்} நீயே. போர்வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்தும் {ஸர்வாயுதன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்கவல்ல பொறுமையுடன் கூடியவன் {ஸஹன்} நீயே.(127-98) அக மற்றும் புறச் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்துவதால் எழும் ஞானம் கொண்டவன் {நிவேதநன்} நீயே. இயக்கங்கள் அனைத்தையும் நிறுத்துவதன் விளைவால் வெளிப்படும் உண்மை {ஸுகாஜாதன்} நீயே. காந்தாரம் என்றழைக்கப்படும் உலகத்தில் இருந்து எழும் காதுக்கு மிக இனிய சுரம் {ஸுகந்தாரன்} நீயே. (பிநாகம்) என்றழைக்கப்படும் பெரும் வில்லைத் தரிப்பவன் {மஹாதநு} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்கும் தலைமையானவனாக இருப்பதல்லாமல் அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் ஆசைகளும் புத்தியும் {அண்ட அழிவு வரை செயல்மணத்தைக் காக்கும் தலைவன்} {கந்தபாலீபகவாந்} நீயே. செயல்கள் அனைத்தையும் உண்டாக்குபவன் {ஸர்வகர்மணாம்உத்தாநன்} நீயே.(128-99) அண்ட அழிவுக்காலத்தில் எழுவதும், பாற்குடத்தில் பாலைக் கடையும் பெண்ணின் கரத்தில் இருக்கும் மத்தைப் போல மொத்த அண்டத்தையும் கடையவல்லவனுமான காற்று {மந்தாநோபஹுலோவாயு} நீயே. முழுமையாக இருப்பவன் {ஸகலன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் காண்பவன் {ஸர்வலோசநன்} நீயே. உள்ளங்கைகளைத் தட்டுவதால் எழும் ஒலி {தலஸ்தாலன்} நீயே. உணவிருக்கும் பாத்திரமாக, அல்லது உணவாகப் பயன்படும் உள்ளங்கையைக் கொண்டவன் {கரஸ்தாலி} நீயே. கடினமான உடல் படைத்தவன் {ஊர்த்வஸம்ஹநநன்} நீயே. மிகப் பெரியவன் {மஹாந்} நீயே.(129-100)

குடையின் வடிவில் இருப்பவன் {சத்ரன்} நீயே. சிறந்த குடையைக் கொண்டவன் {ஸுச்சத்ரன்} நீயே. அனைத்து உயிரினங்களுடனும் அடையாளம் காணப்படுபவனாக நன்கறியப்பட்டவன் {விக்யாதோலோகன்} நீயே. இரண்டு அடியால் அண்டத்தை மறைத்து, மூன்றாவது அடிக்கு இடத்தைக் கேட்டவன் {ஸர்வாச்ரயக்ரமன்} நீயே. மொட்டைத்தலை கொண்டவன் {முண்டன்} நீயே. மிகக் கோர வடிவம் கொண்டவன் {விரூபன்} நீயே. முடிவற்ற திருத்தங்களுக்கு உட்பட்டு, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுமானவன் {விக்ருதன்} நீயே. சந்நியாசத்தின் குறியீடாக நன்கறியப்பட்ட தண்டத்தைக் கொண்டவன் {தண்டி} நீயே. குண்டத்தைக் கொண்டவன் {குண்டி} நீயே. செயல் வழிமுறைகளின் மூலம் அடையப்பட இயலாதவன் {விகுர்வணன்} நீயே.(130-101) பச்சை நிறக் கண்களைக் கொண்ட விலங்குகளின் மன்னனோடு (சிங்கத்தோடு) அடையாளம் காணப்படுபவன் {ஹர்யக்ஷன்} நீயே. திசைகள் அனைத்தின் வடிவம் {ககுபன்} நீயே. வஜ்ரதாரி {வஜ்ரி} நீயே. நூறு நாவுகளைக் கொண்டவன் {சதஜிஹ்வன்} நீயே. ஆயிரம் கால்களையும் {ஸஹஸ்ரபாத்}, ஆயிரம் தலைகளையும் கொண்டவன் {ஸஹஸ்ரமூர்த்தன்} நீயே. தேவர்களின் தலைவன் {தேவேந்த்ரன்} நீயே. தேவர்கள் அனைவருமாக அமைந்தவன் {ஸர்வதேவமயன்} நீயே. பேராசான் {குரு} நீயே.(131-102) ஆயிரங்கரங்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரபாஹு} நீயே. அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்பவன் {ஸர்வாங்கன்} நீயே. அனைவராலும் நாடப்படும் பாதுகாப்பு {சரண்யன்} நீயே. அனைத்து உலகங்களையும் படைத்தவன் {ஸர்வலோகக்ருத்} நீயே. புனிதத்தலங்கள் மற்றும் புண்ணிய நீர்நிலைகள் என்ற விடவங்களில் பாவங்கள் அனைத்தையும் கழுவும் பெரும் தூய்மையாளன் {பவித்ரன்} நீயே. மூன்று உயர்ந்த மந்திரங்களைக் கொண்டவன் {த்ரிக்குந்மந்த்ரன்} நீயே. (அதிதி மற்றும் கசியபரின் மகனும், உபேந்திரன் என்று அறியப்பட்ட குள்ள வடிவம் கொண்டவனும், அசுரன் பலியை வஞ்சித்து மூவுலகங்களின் அரசுரிமையைப் பெற்று தேவர்களின் தலைவனிடம் மீண்டும் கொடுத்த) இளையவன் {கநிஷ்டன்} நீயே. (ஹரிஹரன் என்றழைக்கப்படும் வடிவத்துடன் இருப்பதால்) கருப்பு மற்றும் பழுப்பு என்ற இரண்டாகவும் இருப்பவன் {கருஞ்சிவப்பு நிறமாக இருப்பவன்} {க்ருஷ்ணபிங்களன்} நீயே.(132-103) பிராமணர்களின் தண்டத்தை அமைப்பவன் {ப்ரம்மதண்டவிநிர்மாதா} நீயே. நூற்றுவக்கொல்லி {சதக்னி}, பாயக்கயிறு, ஈட்டி {சக்தி} ஆகியவற்றைத் தரித்தவன் {சதக்நீபாசசக்திமாந்} நீயே. ஆதித் தாமரையில் பிறந்தவன் {பத்மகர்ப்பன்} நீயே. பெரும் கருவறையைக் கொண்டவன் {மஹாகர்ப்பன்} நீயே. வேதங்களைத் தன் கருவறையில் கொண்டவன் {ப்ரம்மகர்ப்பன்} நீயே. அண்ட அழிவைத் தொடர்ந்து முடிவிலாதிருக்கும் நீரில் எழுபவன் {ஜலோத்பவன்} நீயே.(133-104) பிரகாச ஒளியின் கதிர்களுடன் கூடியவன் {கபஸ்தி} நீயே. வேதங்களைப் படைத்தவன் {ப்ரம்மக்ருத்} நீயே. வேத கல்வி {ப்ரம்மி} நீயே. வேதங்களின் பொருள் அறிந்தவன் {பிரம்மவித்} பிரம்மத்தில் அர்ப்பணிப்பு கொண்டவன் {ப்ராம்மணன்} நீயே. பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்கள் அனைவரின் புகலிடம் {கதி} நீயே. அளவற்ற வடிவு கொண்டவன் {அநந்தரூபன்} நீயே. எண்ணற்ற உடல்களைச் சுமப்பவன் {நைகாத்மா} நீயே. தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவன் {திக்மதேஜாஸ்வயம்புவன்} நீயே.(134-105)

(சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) உலகளாவிய முக்குணங்களைக் கடந்த இயல்பாக அல்லது ஆன்மாவாக இருப்பவன் {ஊர்த்வகாத்மா} நீயே. ஜீவன்கள் அனைத்தின் தலைவன் {பசுபதி} நீயே. காற்று வேகம் கொண்டவன் {வாதரம்ஹஸ்} நீயே. மனோவேகம் கொண்டவன் {மநோஜவன்} நீயே. சந்தனக் குழம்பை எப்போதும் பூசிக் கொள்பவன் {சந்தநி} நீயே. ஆதி தாமரையின் நுனி {பத்மநாளாக்ரன்} நீயே. தெய்வீகப் பசுவான சுரபியைச் சபித்து மேன்மையான இடத்தில் இருந்து தாழ்ந்த இடத்திற்கு அனுப்பியவன் {ஸுரப்யுத்தரணன்} நீயே. உன் எல்லையைக் காண முடியாத பிரம்மன் {நரன்} நீயே.(135-106) பெரும் கர்ணிகார மலர்மாலைகளால் அலங்கரிக்கப்படுபவன் {கர்நிகாரமஹாஸ்ரக்வி} நீயே. நீல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் கொண்டவன் {நீலமௌலி} நீயே. பிநாகம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிப்பவன் {பிநாகத்ருத்} நீயே. இமயத்தின் மகளான உமையின் கணவன் {உமாபதி} நீயே. {உமாகாந்தன்}, தலையில் கங்கையைத் தாங்குபவன் {ஜாஹ்நவீத்ருக்} நீயே.  {உமாதவன் நீயே}.(136-107) (மூழ்கிப்போன பூமியை உயர்த்த பெரும்பன்றியின் வடிவை ஏற்றதன் விளைவால்) வலிமைமிக்கவன் {வரோவராஹன்} நீயே. பல்வேறு அவதாரங்களை ஏற்று அண்டத்தைப் பாதுகாப்பவன் {வரதன்} நீயே. துதிக்கத்தகுந்தவன் {வரேண்யன்} நீயே. இடிபோன்ற குரலில் வேதங்களை உரைத்த குதிரைத்தலையுடன் கூடிய ஆதி இருப்பு {ஸுமஹரஸ்வநன்} நீயே. பேரருளாளன் {மஹாப்ரஸாதன்} நீயே. பெரிதாக அடக்கி ஒடுக்குபவன் {தமநன்} நீயே. (ஆசைகளின் வடிவில் இருக்கும்) பகைவர்கள் அனைவரையும் கொல்பவன் {சத்ருஹன்} நீயே. (ஆண்பாதி, பெண்பாதியாக இருப்பதால்) வெள்ளையும், பழுப்புமாக இருப்பவன் {ச்வேதபிங்களன்} நீயே.(137-108) தங்கம் போன்ற நிறத்தையுடைய உடலைக் கொண்டவன் {பீதாத்மா} நீயே. (அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் உள்ளிட்ட) ஜீவனின் ஐந்து உறைகளைக் கடந்திருக்கும் தூய இன்பத்தின் வடிவம் {பரமாத்மா} நீயே. கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மாவைக் கொண்டவன் {ப்ரயதாதத்மா} நீயே. பிரதானம் என்றழைக்கப்படும் அறியமை சார்ந்திருப்பதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களைக் கொண்டதும், அண்டம் உண்டாகக் காரணமானதுமான அடித்தளம் {ப்ரதாநத்ருத்} நீயே. அனைத்துத் திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் {ஸர்வபார்ச்வமுகன்} நீயே. (சூரியன், சந்திரன், அக்னி என்ற) முக்கண்களைக் கொண்டவன் {த்ரியக்ஷன்} நீயே. (பேரளவில் அறத்தைக் கொண்டிருக்கும் விளைவால்) உயிரினங்கள் அனைத்திலும் மேன்மையானவன் {தர்மஸாதாரணவரன்} நீயே.(138-109) அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் ஆன்மா {சராசராத்மா} நீயே. (புலப்படமுடியாத) நுட்பமான ஆத்மாவின் வடிவம் {ஸூக்ஷ்மாத்மா} நீயே. கனிகளில் ஆசையற்று உயிரினங்களால் அடையப்படும் அறச்செயல்கள் அனைத்தின் கனியாக விடுதலை {முக்தி} என்ற வடிவில் இறவாமையை அருள்பவன் {அம்ருதகோவ்ருஷேச்வரன்} நீயே. தேவர்களின் தேவர்களுக்கும் ஆசான் {ஸாத்யரிஷி} நீயே. அதிதியின் மகனான வசு {ஆதித்யவஸு} நீயே. எண்ணற்ற ஒளிக்கதிர்களைக் கொண்டவனும் {விவஸ்வாந்}, அண்டத்தை உண்டாக்குபவனும் {ஸவிதா}, வேள்விகளில் பருகப்படும் சோமத்தின் வடிவமும் {அம்ருதன்} நீயே.(139-110)

புராணங்கள் மற்றும் புனித வரலாறுகள் பிறவற்றின் ஆசானான வ்யாஸன் நீயே. (புராணங்கள் மற்றும் பிற புனித வரலாறுகளோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) வியாசரின் மூளையில் உதித்த சுருக்கப்பட்ட மற்றும் சுருக்கப்படாத படைப்புகள் {ஸம்க்ஷேபோவிஸ்தரஸ்ஸர்க்கன்} நீயே. ஜீவன்களின் மொத்த தொகை {பர்யயோநரன்} நீயே. பருவகாலம் {ருது} நீயே. வருடம் {ஸம்வத்ஸரம்} நீயே. மாதம் {மாஸம்} நீயே. அரைத்திங்கள் {பக்ஷம்} நீயே. இக்காலங்களை நிறைவு செய்யும் புனித நாட்கள் {ஸங்க்யாஸமாபநன்} நீயே.(140-111) கலை நீயே. காஷ்டை நீயே. லவம் நீயே. மாத்திரை நீயே. முஹூர்த்தம் நீயே. அஹஸ் {பகலாய் இருப்பவன்} நீயே. க்ஷபம் நீயே. க்ஷணம் நீயே. அண்டமெனும் மரம் நிற்கும் மண் {விச்வக்ஷேத்ரம்} நீயே. (எங்கே உயிரினங்கள் அனைத்தும் எழுமோ அந்த மாயையுடன் கூடிய புலப்படாத சைதன்யத்தின் வடிவமாக இருப்பதால்) அனைத்து உயிரினங்களின் வித்து {ப்ரஜாபீஜம்} நீயே. மஹத்தத்துவம் {லிங்கம்} நீயே. (மஹத் தத்துவத்தை உண்டாக்கும் நனவுநிலையின் வடிவமாக இருப்பதால்) ஜீவனின் அரும்பு {ஆத்யநிர்க்கமம்} நீயே.(141-112) ஸத் அல்லது விளைவு {காரியம்} நீயே. அஸத் அல்லது காரணம் நீயே. (புலன்களுக்குப் பிடிபடும் வகையில்) புலப்படுபவன் {வ்யக்தம்} நீயே. (புலன்களுக்குப் பிடிபடாத வகையில்) புலப்படாமல் இருப்பவன் {அவ்யக்தம்} நீயே. தந்தை {பிதா} நீயே. தாயும் {மாதா} நீயே. பாட்டன் {பிதாமஹன்} நீயே. (தவங்களோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) சொர்க்கத்தின் வாயில் {ஸ்வர்க்கத்வாரம்} நீயே. (ஆசையோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) அனைத்து உயிரினங்களின் உற்பத்தி வாயில் {ப்ரஜாத்வாரம்} நீயே. (எதனால் மட்டுமே பிரம்மத்தோடு கலக்கும் நிலைக்கு வழிநடத்த முடியுமோ அந்த ஆசையின்மையோடு அடையாளம் காணப்படுபவனாக இருக்கும் காரணத்தால்) விடுதலையின் {முக்தியின்} வாயில் {மோக்ஷத்வாரம்} நீயே. சொர்க்கத்தின் இன்பநிலைக்கு வழிவக்கும் அறச்செயல்கள் {த்ரிவிஷ்டபம்} நீயே.(142-113) நிர்வாணம் (அல்லது தனிப்பட்ட இருப்பைத் தவிர்த்த விடுதலை {முக்தி} நிலை) நீயே. (ஒவ்வொரு உயிரினத்திற்கும் அனைத்து வகை இன்பங்களையும் கொடுத்து) மகிழ்ச்சிப்படுத்துபவன் {ஹ்லாதநன்} நீயே. (அறவோரில் முதன்மையானோர் அடையும்) வாய்மையின் உலகம் {ப்ரம்மலோகன்} நீயே. (அறவோரால் அடையப்படும்) வாய்மையின் உலகத்தைக் காட்டிலும் மேன்மையான நிலை {பரகதி} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களைப் படைத்தவன் {தேவாஸுரவிநிர்மாதா} நீயே. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் புகலிடமாக இருப்பவன் {தேவாஸுரபராயணன்} நீயே.(143-114) (பிருஹஸ்பதி மற்றும் சுக்ரனின் வடிவில் இருப்பதால்) தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஆசானாக இருப்பவன் {தேவாஸுரகுரு} நீயே. எப்போதும் வெற்றியடைபவன் {தேவன்} நீயே. தேவர்களாலும், அசுரர்களாலும் எப்போதும் வழிபடப்படுபவன் {தேவாஸுரநமஸ்க்ருதன்} நீயே. யானையை வழிநடத்தும் மஹாமாத்ரத்தைப் போலத் தேவர்களையும், அசுரர்களையும் வழிநடத்துபவன் {தேவாஸுரமஹாமாத்ரன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் அனைவருக்கும் உரிய புகலிடம் {தேவாஸுரகணாச்ரயன்} நீயே.(144-115)

(இந்திரன் மற்றும் விரோசனன் ஆகிய இருவரின் வடிவிலும் இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களின் தலைவனாக இருப்பவன் {தேவாஸுரகணாத்யக்ஷன்} நீயே. (தேவ மற்றும் தைத்திய படைத்தலைவர்களான கார்த்திகேயன் மற்றும் கேசியின் வடிவில் நீயே இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களின் போர்த்தலைவன் {தேவாஸுரகணாக்ரணி} நீயே. புலன்களைக் கடந்து ஒளிர்ந்து கொண்டிருப்பவன் {தேவாதிதேவன்} நீயே. (நாரதர் மற்றும் பிறரைப் போன்ற) தெய்வீக முனிவர்களின் வடிவில் இருப்பவன் {தேவரிஷி} நீயே. (பிரம்மன் மற்றும் ருத்திரனின் வடிவில் இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு வரங்களை அளிப்பவன் {தேவாஸுரவரப்ரதன்} நீயே.(145-116) தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதயங்களை ஆள்பவன் {தேவாஸுரேச்வரன்} நீயே. (அண்டம் அழியும்போது) அண்டம் நுழையப் போகும் இடம் {விச்வன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதங்களை ஆள்பவனுக்கும் புகலிடமாக இருப்பவன் {தேவாஸுரமஹேச்வரன்} நீயே. தேவர்கள் அனைவராலுமான உடல்படைத்தவன் {ஸர்வதேவமயன்} நீயே. சிந்திக்கத் தனக்கு மேம்பட்ட எதுவும் இல்லாதவன் {அசிந்த்யன்} நீயே. தேவர்களின் உள் ஆன்மாவாக இருப்பவன் {தேவதாத்மா} நீயே. சுயத்தில் பிறந்தவன் {ஆத்மஸம்பவன்} நீயே.(146-117) அசைவற்ற பொருட்களின் வடிவம் {மாயையைப் பிளந்து வெளிப்படுபவன்} {உத்பித்} நீயே. மூன்று அடிகளில் உலகை மறைத்தவன் {த்ரிவிக்ரமன்} நீயே. பெருங்கல்வி கொண்டவன் {வைத்யன்} நீயே. களங்கமற்றவன் {விரஜன்} நீயே. ரஜஸ் குணத்தில் இருந்து விடுபட்டவன் {நீரஜன்} நீயே. அழிவைக் கடந்திருப்பவன் {அமரன்} நீயே. புகழ் துதிகளால் துதிக்கப்பட வேண்டியவன் {ஈட்யன்} நீயே. காலத்தைப் பிரதிபலிக்கும் தடுக்கப்பட முடியாத யானையின் ஆசான் {ஹஸ்தீச்வரன்} நீயே. கலிங்கர்களின் நாட்டில் வழிபடப்படும் புலிகளின் தலைவனுடைய வடிவம் {வ்யாக்ரன்} {வியாக்ரேஸ்வரன்} நீயே. (ஆற்றலில் ஏற்றம் கொண்டவனாக இருப்பதன் விளைவால்) தேவர்களுக்கு மத்தியில் சிங்கம் என்றழைக்கப்படுபவன் {தேவஸிம்மன்} நீயே. மனிதர்களில் முதன்மையானவன் {நரர்ஷபன்} நீயே.(147-118) பெரும் ஞானம் கொண்டவன் {விபுதன்} நீயே. வேள்விக் காணிக்கைகளில் முதல் பங்கை எடுத்துக் கொள்பவன் {அக்ரவரன்} நீயே. உணரப்பட முடியாதவன் {ஸூக்ஷ்மன்} நீயே. தேவர்கள் அனைவரின் மொத்தத் தொகை {ஸர்வதேவன்} நீயே. தவங்களால் மேம்பட்டிருப்பவன் {தபோமயன்} நீயே. எப்போதும் சிறந்த யோகத்தில் இருப்பவன் {ஸுயுக்தன்} நீயே. மங்கலமானவன் {சோபநன்} நீயே. வஜ்ரம் தரித்தவன் {வஜ்ரி} நீயே. பிராசங்கள் என்றழைக்கப்படும் பிறக்கும் தோற்றுவாய் {ப்ராஸாநாம்ப்ரபவன்} நீயே. பக்தர்களால் பல்வேறு வழிகளில் அடையப்படுபவன் {அவ்யயன்} நீயே.(148-119) (தேவர்ப்படைத்தலைவனான) குஹன் நீயே. இன்பநிலையின் உயர்ந்த எல்லை {காந்தன்} நீயே. படைப்போடு அடையாளம் காணப்படுபவன் {நிஜஸர்க்கன்} நீயே. (விடுதலையை {முக்தியை} அருளி) உயிரினங்களை மரணத்தில் இருந்து காப்பவன் {பவித்ரன்} நீயே. பிரம்மஹத்தி உட்பட அனைத்துப் பாவங்களையும் கழுவுபவன் {ஸர்வபாவநன்} நீயே. காளைகள் மற்றும் கொம்பு படைத்த பிற விலங்குகளின் வடிவில் இருப்பவன் {ஸ்ருங்கி} நீயே. மலைச்சிகரங்களை விரும்புபவன் {ஸ்ருங்கப்ரியன்} நீயே. சனிக்கோள் {பப்ரு} நீயே. யக்ஷர்களின் தலைவனான குபேரன் {ராஜராஜன்} நீயே. முற்றான களங்கமற்ற நிலை {நிராமயன்} நீயே.(149-120)

மகிழ்ச்சியை ஊக்கப்படுத்துபவன் {அபிராமன்} நீயே. தேவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தவன் {ஸுரகணன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் இடை நிறுத்துபவன் {தவிர்ப்பவன்} {விராமன்} நீயே. அனைத்து வாழ்வுமுறைகளின் தொடர்புடைய கடமைகள் அனைத்தும் {ஸர்வஸாதநன்} நீயே. நெற்றியிலும் ஒரு கண் கொண்டவன் {லலாடாக்ஷன்} நீயே. பளிங்குப் பந்தைப் போல அண்டத்தை வைத்து விளையாடுபவன் {விச்வதேவன்} நீயே. மானின் வடிவைக் கொண்டவன் {ஹரிணன்} நீயே. ஞானம் மற்றும் தவத்தின் வடிவிலான சக்தியுடன் கூடியவன் {ப்ரம்மவர்ச்சஸன்} நீயே.(150-121)(இமயம் மற்றும் மேரு முதலியவற்றின் வடிவிலான) அடையாத பொருட்கள் அனைத்தின் தலைவன் {ஸ்தாவராணாம்பதி} நீயே. பல்வேறு நோன்பு மற்றும் நியமங்களின் மூலம் புலன்களை அடக்கியவன் {நியமேந்த்ரியவர்த்தநன்} நீயே. நோக்கங்கள் அனைத்தும் நிறைவடைந்தவன் {ஸித்தார்த்தன்} நீயே. விடுதலையுடன் {முக்தியுடன்} அடையாளம் காணப்படுபவன் {ஸித்தபூதார்த்தன்} நீயே. நாங்கள் வழிபடுபவனிடத்தில் இருந்து வேறுபட்டவன் {அசிந்த்யன்} நீயே. வாய்மையையே தவமாகக் கொண்டவன் {ஸத்யவ்ரதன்} நீயே. தூய இதயம் கொண்டவன் {சுசி} நீயே.(151-122) (நோன்புகளுக்கான கனிகளைக் கொடுப்பவனாக இருக்கும் விளைவால்) நோன்புகள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவன் {வ்ரதாதிபன்} நீயே. (துரியத்தின் வடிவில் இருக்கும்) உயர்ந்தவன் {பரம்} நீயே, ப்ரம்மம் நீயே. பக்தர்களின் உயர்ந்த புகலிடம் {பக்தாநாம்பரமாகதி} நீயே. (விடுதலை கொண்டவனாக {முக்தனாக} இருப்பதால்) பந்தங்கள் அனைத்தையும் கடந்தவன் {விமுக்தன்} நீயே. லிங்க உடலில் இருந்து விடுபட்டவன் {முக்ததேஜஸ்} நீயே. அனைத்து வகைச் செழிப்புடன் கூடியவன் {ஸ்ரீமாந்} நீயே. பக்தர்களின் செழிப்பை அதிகரிப்பவன் {ஸ்ரீவர்த்தநன்} நீயே. இடையறாத மாற்றங்களுக்கு உட்படுபவன் {ஜகத்} நீயே[9].(152-123)ஓ! கிருஷ்ணா, இவ்வாறே அந்தச் சிறப்புமிக்கத் தேவனுடைய பெயர்களை அவற்றின் முக்கியத்துவத்தின் வரிசையில் புகழ்ந்து பாடினேன். நமது துதிகள், வழிபாடு மற்றும் மதிப்புக்குத் தகுந்தவனும், பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களாலும் புகழப்பட முடியாதவனும், முனிவர்களாலும் துதிக்கப்பட முடியாதவனும், அனைவரின் பெருந்தேவனுமான அந்த அண்டத் தலைவனின் புகழை வேறு எவனால் துதிக்க முடியும்?(153) எனினும், உயர்ந்த பலத்தைக் கொண்ட தேவனும், நுண்ணறிவு கொண்ட உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனுமான அந்த வேள்விகளின் தலைவனிடம் கொண்ட அர்ப்பணிப்பால், அவனிடம் இருந்து அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவனைப் புகழ்ந்தேன்.(154) ஒருவனிடம் மங்கலத்தைப் பெருக்கும் இந்தப் பெயர்களால் அருள்நிலையின் பெருந்தேவனைப் புகழ்வதன் மூலம் அர்ப்பணிப்பு மிக்க ஆன்மா மற்றும் தூய இதயத்துடன் கூடிய ஒரு வழிபாட்டாளன் தன்னை {சுயத்தை} அடைவதில் வெல்கிறான்.(155)

பிரம்மத்தை அடையும் சிறந்த வழிமுறைகளை வெளிப்படுத்தும் ஒரு துதியாக இந்தப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. இந்தத் துதியின் துணையுடன் நிச்சயம் ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்வான். முனிவர்கள் மற்றும் தேவர்கள் அனைவரும் இந்தத் துதியைத் துதிப்பதன் மூலம் அந்த உயர்ந்த தேவனைப் புகழ்கின்றனர் {துதிக்கின்றனர்}.(156) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்டவரால் துதிக்கப்படும்போது, இவ்வாறு தன் புகழைப் பாடுவோரிடம் மஹாதேவன் நிறைவை அடைகிறான். அந்தச் சிறப்புமிக்கத் தேவன் தன் பக்தர்களிடம் எப்போதும் கருணை நிறைந்தவனாவான். எல்லாம் வல்லவனான அவன் தன்னை வழிபடுவோருக்கு விடுதலையை {முக்தியை} அளிக்கிறான்.(157) நம்பிக்கையும், அர்ப்பணிப்பும் {பக்தியும்} கொண்ட மனிதர்களில் முதன்மையானோர், உயர்ந்தவனும், நித்திய தேவனுமான ஈசானனின் {இந்தத்} துதியைக் கேட்டாலும், பிறருக்காக மதிப்புடன் உரைத்தாலும், அவர்கள் தங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் கிடக்கும்போதும், அமர்ந்திருக்கும்போதும், நடக்கும் போதும், விழித்திருக்கும்போதும், கண் இமைகளைத் திறக்கும்போதும், அவற்றை மூடும்போதும் என அனைத்து நேரங்களிலும் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அவனை இவ்வாறே துதித்து, அவனைக் குறித்தே மீண்டும் மீண்டும் நினைத்து, தங்கள் சக மனிதர்களுக்கு மத்தியில் மதிப்பிற்குரியவர்களாகி பெரும் நிறைவையும், பேரின்பத்தையும் அடைவார்கள்.(158-161)

பல்வேறு வகைகளில் பல கோடி பிறவிகளின் போக்கில் ஓர் உயிரினம் தன் பாவங்கள் அனைத்தையும் கழுவிக் கொள்ளும்போதே, அவனது இதயத்தில் மஹாதேவனிடம் அர்ப்பணிப்பு {பக்தி} உண்டாகும்.(162) (அண்டத்தின்) மூலக்காரணனான பவனை வழிபடும் ஒவ்வொரு வழிமுறையையும் அறிந்த ஒருவனுடைய இதயத்தில் நற்பேற்றால் மட்டுமே அந்தப் பெருந்தேவனிடம் சிதறாத அர்ப்பணிப்பானது {பக்தியானது} முழுமையாக எழும்.(163) ஒரே நோக்கத்தைக் கொண்டதும், நடைமுறையில் ஒருபோதும் தடுக்கப்பட முடியாததுமான ருத்திரனிடம் கொள்ளும் களங்கமற்ற தூய அர்ப்பணிப்பானது தேவர்களிடம் அரிதாகக் காணப்பட்டாலும் மனிதர்களுக்கு மத்தியில் காணப்படவில்லை.(164) ருத்திரனின் அருளின் மூலமே மனிதர்களின் இதயங்களில் இத்தகைய அர்ப்பணிப்பு எழுகிறது. இத்தகைய அர்ப்பணிப்பின் விளைவால், மஹாதேவனுடன் முழுமையாகத் தங்களை அடையாளம் காணும் மனிதர்கள், உயர்ந்த வெற்றியை அடைவதில் வெல்கிறார்கள்.(165)

தன்னை நாடுவோருக்கு அருளை எப்போதும் வழங்கும் அந்தச் சிறப்புமிக்கத் தேவன், முழு ஆன்மாவைத் தன்னிடம் செலுத்துவோரைப் பணிவன்புடன் இவ்வுலகத்தில் இருந்து மீட்கிறான்.(166) மறுபிறவியிலிருந்து உயிரினங்களைக் காக்கும் அந்தப் பெருந்தேவனைத் தவிர, பிற தேவர்கள் அனைவரும், மனிதர்களுக்குத் தவங்களைப் போல வேறு ஏதும் பலத்தின் ஊற்றுக்கண் இல்லாததால் அவற்றைத் தொடர்ந்து வீணாக்கச் செய்கின்றனர்.(167) ஆன்ம அமைதியைக் கொண்டவரும், காந்தியில் இந்திரனுக்கு ஒப்பானவருமான தண்டி, விலங்குத் தோல்களை உடுத்தியிருந்தவனும், இருப்பில் உள்ள மற்றும் இல்லாத பொருட்கள் அனைத்தின் தலைவனுமான அந்தப் பெருந்தேவனை இவ்வாறே துதித்தார்.(168) இந்தத் துதியை பிரம்மனே சுமந்திருந்தான் (தனக்குள் வைத்திருந்தான்). உண்மையில் பிரம்மன் சங்கரன் முன்னிலையிலேயே இதைத் துதித்தான். (பிரம்மத்தை அறிந்தவனாகவும், பிரம்மத்தை அறிந்தோரிடம் அர்ப்பணிப்புமிக்கவனாகவும் இருப்பதால்) பிராமணன் நீயே. எனவே, உன்னால் இதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.(169) இது பாவங்கள் அனைத்தையும் கழுவி தூய்மைப்படுத்தும். இது யோகத்தையும், விடுதலையையும் {முக்தியையும்}, சொர்க்கத்தையும், மனநிறைவையும் கொடுக்கும்.(170)

இந்தத் துதியைக் கொண்டு சிதறாத அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} சங்கரனைத் துதிப்பவன், சாங்கிய தத்துவத்தின் கோட்பாடுகளில் அர்ப்பணிப்புள்ளோரின் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறார்கள்.(171) ஒரே அர்ப்பணிப்புடன் இந்தத் துதியைக் கொண்டு தினமும் ஒரு வருடம் துதிக்கும் வழிபாட்டாளன் தான் விரும்பும் கதியை அடைவதில் வெல்கிறான்.(172) இந்தத் துதி பெரும் புதிரைக் கொண்டதாகும். இது தொடக்கத்தில் படைப்பாளனான பிரம்மனின் நெஞ்சத்தில் வசித்தது. பிரம்மன் இதைச் சக்ரனுக்குச் சொன்னான். சக்ரன் இதை மிருத்யுவுக்குச் சொன்னான்.(173) மிருத்யு இதை ருத்திரர்களுக்குச் சொன்னான். தண்டி ருத்திரர்களிடம் இருந்தே இதைப் பெற்றார். உண்மையில், தண்டி தமது கடுந்தவங்களுக்கு வெகுமதியாகப் பிரம்மலோகத்தில் இதைப் பெற்றார்.(174) தண்டி இதைச் சுக்கிரனுக்குச் சொன்னார், பிருகு குலச் சுக்கிரன் இதைக் கௌதமருக்குச் சொன்னார். ஓ! மதுவின் வழித்தோன்றலே, கௌதமர் தம் பங்குக்கு இதை வைவஸ்வத மனுவுக்குச் சொன்னார்.(175)

மனு, பெரும் நுண்ணறிவைக் கொண்ட நாராயணனுக்கு இதைச் சொன்னான். சாத்தியர்களில் ஒருவனாக எண்ணப்படுபவனும், குறைவில்லா மகிமை கொண்டவனும், சிறப்பு மிக்கவனுமான நாராயணன் இதை யமனுக்குச் சொன்னான்.(176) வைவஸ்வத யமன் இதை நசிகேதனுக்குச் சொன்னான். ஓ! விருஷ்ணி குலத்தவனே, நசிகேதன் இதை மார்க்கண்டேயருக்குச் சொன்னான்.(177) ஓ! ஜனார்த்தனா, என் நோன்புகள் மற்றும் நியமங்களுக்கு வெகுமதியாக நான் இதை மார்க்கண்டேயரிடம் இருந்து பெற்றேன். ஓ! பகைவர்களைக் கொல்பவனே, பிறரால் கேட்கப்படாத இந்தத் துதியை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(178) இத்துதி சொர்க்கத்திற்கு வழிவகுக்கும். இது நோய்களை விலக்கி, நீண்ட வாழ்நாளை அளிக்கும். இது {இந்தத் துதி} வேதங்களுக்கு இணக்கமானதும், உயர்ந்த புகழுக்குத் தகுந்ததுமாகும்” {என்றார் உபமன்யு}”[10].(சாந்தி பர்வம் -285 பகுதியில் தக்ஷன் சிவனை ஆயிரத்தெட்டு பெயர்களால் துதித்ததும் சிவ சஹஸ்ர நாமாவளி என்று அழைக்கப்படுகிறது. வாயு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் வரும் சிவ சஹஸ்ர நாமாவளி அதனுடன் ஒத்துப் போகிறது. முனிவர் உபமன்யு சொன்ன துதியை யுதிஷ்டிரனுக்குக் கிருஷ்ணன் நினைவுகூர்கிறான். இதுவும் சிவஸஹஸ்ரநாமாவளி என்றே அழைக்கப்படுகிறது. லிங்க புராணத்திலும் சிவஸஹஸ்ரநாமாவளி இடம்பெற்றிருக்கிறது. அஃது இந்தச் சிவஸஹஸ்ரநாமாவளியோடு ஒத்துப் போகிறது. மஹாபாரத அனுசாசன பர்வம் 17ம் பகுதியில் வரும் இத்துதியே உண்மையில் சிவஸஹஸ்ரநாமாவளியாக அங்கீகரிக்கப்படுகிறது.)கிருஷ்ணன் தொடர்ந்தான், “ஓ! பார்த்தரே, பிரம்மச்சரிய நோன்பை நூற்று, புலன்களைக் கட்டுப்படுத்தி, தூய இதயத்துடன் முழுமையாக ஒரு வருடத்திற்கு இந்தத் துதியைத் துதிப்பவன், ஒரு குதிரை வேள்வியின் கனிகளை அடைவதில் வெல்கிறான். தானவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், யாதுதானர்கள், குஹ்யர்கள் மற்றும் பாம்புகளால் அவனுக்கு {இத்துதியைத் துதிப்பவனுக்கு} எத்தீங்கையும் செய்ய முடியாது” {என்றான் கிருஷ்ணன்}.(179-180)

சிவமகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 18-வியாசர், கபிலர், சாருசீர்ஷர், வால்மீகி, பரசுராமர், விஷ்வாமித்ரர், அசிததேவலர், கிருத்ஸமதர், ஜைகீஷவ்யர், கர்க்கர், பராசரர், மாண்டவ்யர், காலவர் உள்ளிட்ட முனிவர்களும், கிருஷ்ணனும், உபமன்யுவும் பரமசிவனின் மகிமையை யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வாசுதேவன் {கிருஷ்ணர்} பேசுவதை நிறுத்தியதும், பெரும் யோகியும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்}, யுதிஷ்டிரனிடம், “ஓ! மகனே, மஹாதேவனின் ஆயிரத்தெட்டுப் பெயர்களைக் கொண்ட இந்தத் துதியைச் சொல்வாயாக, மஹேஸ்வரன் உன்னிடம் நிறைவை அடைவானாக.(1) ஓ! மகனே, பழங்காலத்தில், நான் ஒரு மகனை அடைய விரும்பி மேரு மலைகளின் சாரலில் கடுந்தவம் பயின்றேன். அப்போது இதே துதியைச் சொல்லித்தான் நான் துதித்தேன்.(2) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அதற்கான வெகுமதியாகத் தான் என் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை நான் அடைந்தேன். நீயும் இதே துதியைச் சொல்வதன் மூலம், உன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அந்தச் சர்வனிடம் இருந்து அடைவாய்” என்றார்.(3)

அதன்பிறகு, சாங்கியம் என்ற பெயரில் வரும் கோட்பாடுகளைச் செய்தவரும், தேவர்களாலேயே மதிக்கப்படும் முனிவருமான கபிலர், “பல பிறவிகளாகப் பெரும் அர்ப்பணிப்புடன் நான் பவனைத் துதித்தேன். இறுதியாக அந்தச் சிறப்புமிக்கத் தேவன் என்னிடம் நிறைவை அடைந்து, மறுபிறவியைக் கடக்கும் அறிவை எனக்குக் கொடுத்தான்” என்றார்.(4)

அதன்பிறகு, சக்ரனின் நண்பரும், ஆலம்பனன் மகன் {ஆலம்பாயனர்} என்று வேறு பெயர் கொண்டவரும், கருணை நிறைந்தவருமான முனிவர் சாருசீர்ஷர்,(5) “நான் பழங்காலத்தில் கோகர்ண மலைகளுக்குச் சென்று நூறு வருடக் கடும் தவப்பயிற்சியில் அமர்ந்தேன். ஓ! மன்னன் பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அத்தவத்திற்கு வெகுமதியாக, நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் கூடியவர்களாக, அறமறிந்தவர்களாக, பெருங்காந்தி கொண்டவர்களாக, நோய் மற்றும் கவலையில் இருந்து விடுபட்டவர்களாக, ஒரு லட்சம் வருடங்கள் வாழும் வாழ்நாட்களைக் கொண்டவர்களாக, எந்தப் பெண் தொடர்பும் இல்லாமல் பிறந்தவர்களாக நூறு மகன்களை அந்தச் சர்வனிடம் இருந்து அடைந்தேன்” என்றார்.(6,7)

அதன்பிறகு, சிறப்புமிக்க வால்மீகி- யுதிஷ்டிரனிடம், “ஒரு காலத்தில், ஒரு மெய்மை முரண் குறித்த ஒரு சர்ச்சையின் போது, ஹோம நெருப்பைக் கொண்ட தவசிகள் சிலர், பிராமணக்கொலை செய்த {பிரம்மஹத்தி எனும்} குற்றமிழைத்தவனாக என்னைப் பழித்து ஒதுக்கினர்.(8) ஓ! பாரதா, இவ்வாறு அவர்கள் என்னை ஒதுக்கிய பிறகு, பிராமணக்கொலை செய்தது போன்ற பாவம் என்னைப் பீடித்தது.[1] அப்போது என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக, பாவமற்றவனும், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டவனுமான ஈசானனின் பாதுகாப்பை நான் நாடினேன்.(9) என் பாவங்கள் அனைத்தில் இருந்தும் நான் தூய்மையடைந்தேன். கவலைகள் அனைத்தையும் விலக்குபவனும், அசுரர்களின் முந்நகரத்தை {திரிபுரத்தை} அழித்தவனுமான அவன் என்னிடம், “உலகில் உன் புகழ் பெரிதாக இருக்கும்” என்றான் {சிவன்}” என்றார் {வால்மீகி}.(10)அதன்பிறகு, அறவோர் அனைவரிலும் முதன்மையானவரும், முனிவர்களின் கூட்டத்திற்கு மத்தியில் சுடர்மிக்கக் காந்தியுடன் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தவருமான ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்},(11) “ஓ! பாண்டுவின் மூத்த மகனே, கற்றறிந்த பிராமணர்களாக இருந்த என் சகோதரர்களை {தமையன்களைக்} கொன்றதால் நான் பிராமணக் கொலை செய்த பாவத்தால் பீடிக்கப்பட்டிருந்தேன். ஓ! மன்னா, என்னைத் தூய்மை செய்து கொண்டு நான் மஹாதேவனின் பாதுகாப்பை நாடினேன்.(12) அந்தப் பெருந்தேவனின் பெயர்களைச் சொல்லி நான் அவனைத் துதித்தேன். இதனால் என்னிடம் நிறைவை அடைந்த பவன், எனக்கு ஒரு போர்க்கோடரியையும், இன்னும் பிற தெய்வீக அயுதங்களையும் கொடுத்தான்.(13) பிறகு அவன் என்னிடம், “நீ பாவத்தில் இருந்து விடுபட்டுப் போரில் வெல்லப்பட முடியாதவனாவாய். நோயில் இருந்து விடுபட்டவனாக இருப்பதால் உன்னைக் காலனாலும் வெல்ல முடியாது” என்றான்.(14) சிறப்புமிக்கவனும், {சடா} மகுடம் தரித்தவனும், மங்கல வடிவைக் கொண்டவனுமான அந்தத் தேவன் என்னிடம் இவ்வாறே சொன்னான். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட அந்தத் தேவனின் {ஸர்வஜ்ஞனின்} கருணையால் அவன் சொன்னதனைத்தையும் அடைந்தேன்” என்றார் {பரசுராமர்}.(15)

அதன்பிறகு விஷ்வாமித்ரர், “முன் நான் க்ஷத்திரியனாக இருந்தேன். பிராமணனாக விரும்பிய நான் என் துதிகளைப் பவனுக்குச் செலுத்தினேன். அந்தப் பெருந்தேவனின் கருணையால் அடைதற்கு மிக அரிதான உயர்ந்த பிராமண நிலையை நான் அடைந்தேன்” என்றார் {விஷ்வாமித்ரர்}.(16)

அதன்பிறகு, முனிவர் அசித-தேவலர், பாண்டுவின் அரச மகனிடம், “ஓ! குந்தியின் மகனே, பழங்காலத்தில், நான் செய்த அறச்செயல்கள் மூலம் பெற்றிருந்த தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தும் சக்ரனுடைய சாபத்தினால் அழிவடைந்தன. அந்தத் தகுதிகளுடன் சேர்த்து, பெரும் புகழையும், நெடும் வாழ்நாளையும் அந்தப் பலமிக்க மஹாதேவனே அன்புடன் எனக்குத் திருப்பிக் கொடுத்தான்” என்று சொன்னார்.(18)

சக்ரனின் அன்புக்குரிய நண்பரும், தெய்வீக ஆசானான காந்திமிக்கப் பிருஹஸ்பதிக்கு ஒப்பானவரும், சிறப்புமிக்கவருமான முனிவர் கிருத்ஸமதர், ஆஜமீட குலத்தைச் சார்ந்த யுதிஷ்டிரனிடம்,(19) “சிந்தைக்கெட்டாதவனான சக்ரன், பழங்காலத்தில் ஆயிரம் வருடங்களுக்கு நீண்ட ஒரு வேள்வியை {ஸத்ரயாகத்தைச்} செய்தான். அந்த வேள்வி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, {ரதந்தரமென்னும்} சாமங்கள் உரைக்கச் சக்ரனால் நான் ஈடுபடுத்தப்பட்டேன். பிரம்மனின் கண்களில் பிறந்தவரான மனுவின் மகன் வரிஷ்டர் அந்த வேள்விக்கு வந்து, என்னிடம், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, ரததந்தரங்களை நீர் முறையாகச் சொல்லவில்லை.(20,21) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, குறையுடன் படிப்பதன் மூலம் தகுதியிழப்பை ஈட்டாமல், உமது புத்தியின் துணையுடன் சாமங்களைச் சரியாகப் படிப்பீராக. ஓ! தீய புத்தி கொண்டவரே, வேள்வியை அழிக்கும் இத்தகைய பாவத்தை ஏன் நீர் செய்கிறீர்? என்று கேட்டார்.(22) பெரும் கோபக்காரரான முனிவர் வரிஷ்டர், இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, கோபவசப்பட்டு மீண்டும் என்னிடம், “காற்றும், நீரும் இல்லாதவையும், வேறு விலங்குகளால் புறக்கணிக்கப்பட்டவையும், பாதைகளற்றவையுமான காடுகளில் அச்சத்தால் நிறைந்ததும், துயரத்துடன் கூடியதும், புத்தியற்றதுமான ஒரு விலங்காவீராக. இவ்வாறு பதினோராயிரத்து எண்ணூறு ஆண்டுகள் காலத்தை நீர் கழிப்பீராக.(23,24) இக்காலத்தை நீர் கழிக்கப்போகும் காடானது, புனித மரங்கள் ஏதும் இல்லாததாகவும், ருருக்களும் {புள்ளிமான்களும்}, சிங்கங்களும் நிறைந்ததாக இருக்கும். உண்மையில், பெருந்துயரத்தில் மூழ்கிய ஒரு கொடும் மானாவீராக” என்று சொன்னார்.(25) ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, அவர் இவ்வார்த்தைகளைச் சொன்னவுடனேயே நான் ஒரு மானாக மாறினேன். பிறகு நான் மஹேஸ்வரனின் பாதுகாப்பை நாடினேன். அந்தப் பெருந்தேவன் என்னிடம்,(26) “அனைத்துவகை நோய்களில் இருந்தும் விடுபடுவதுடன் அழிவற்றவனாகவும் {மரணமற்றவனாகவும்} நீ இருப்பாயாக. துயரம் ஒருபோதும் உன்னைப் பீடிக்காதிருக்கட்டும். சக்ரனுடன் உன் நட்பு மாறாதிருக்கட்டும், இந்திரனுடைய மற்றும் உன்னுடைய வேள்விகள் பெருகட்டும்” என்றான்.(27) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனுமான மஹாதேவன் இவ்வழியிலேயே அனைத்து உயிரினங்களுக்கும் உதவி செய்கிறான். அனைத்து உயிரினங்களின் இன்ப துன்பங்களை விதிப்பவனாகவும், விலக்குபவனாகவும் எப்போதும் அவனே இருக்கிறான்.(28) அந்தச் சிறப்புமிக்கத் தேவன், எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ புரிந்துகொள்ளப்பட இயலாதவனாவான். ஓ! மகனே, ஓ! போர்வீரர்களில் சிறந்தவனே, (மஹாதேவனின் கருணையால்) கல்வியில் இணையற்றவனாக நான் இருக்கிறேன்” என்றார் {கிருத்ஸமதர்}.(29)

அதன்பிறகு, புத்திசாலி மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான வாசுதேவன் {கிருஷ்ணன்}, மீண்டும் ஒருமுறை, “தங்கக் கண்களைக் கொண்ட மஹாதேவன் என் தவங்களால் என்னிடம் நிறைவை அடைந்தான்.(30) ஓ! யுதிஷ்டிரரே, நிறைவை அடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் என்னிடம், “ஓ! கிருஷ்ணா, அனைவரும் ஆசைப்படும் செல்வத்தைவிட என் அருளால் அனைத்து மனிதர்களின் அன்புக்குரியவனாவாய்.(31) போரில் நீ வெல்லப்பட முடியாதவனாவாய். நீ நெருப்பு நிகரான சக்தியுடையவனாவாய்” என்றான். அச்சந்தர்ப்பத்தில் மஹாதேவன் ஆயிரக்கணக்கான வேறு வரங்களையும் எனக்களித்தான்.(32) முந்தைய அவதாரமொன்றில், மணிமந்தம் என்ற மலையில் கோடிக்கணக்கான வருடங்கள் {ஒரு கோடியே ஆயிரத்து நூறு வருடங்கள்} மஹாதேவனை நான் துதித்தேன்.(33) நிறைவையடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் என்னிடம் இந்த வார்த்தைகளில், “நீ அருளப்பட்டிருப்பாயாக, நீ விரும்பும் வரங்களை வேண்டுவாயாக” என்று சொன்னான்.(34) அவனுக்குத் தலைவணங்கிய நான் அவனிடம் இவ்வார்த்தைகளில், “பலமிக்க மஹாதேவன் என்னிடம் நிறைவை அடைந்திருந்தால்,(35) ஓ! ஈசானனே, நான் அவனிடம் கொண்ட அர்ப்பணிப்பு மாறாதிருக்கட்டும். இதுவே நான் வேண்டும் வரமாகும்” என்றேன். அந்தப் பெருந்தேவன் என்னிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி அங்கேயே அப்போதே மறைந்து போனான்” என்று சொன்னான் {கிருஷ்ணன்}.(36)

ஜைகீஷவ்யர், “ஓ! யுதிஷ்டிரா, முன்பு வாராணசி {காசி} நகரத்தில் என்னைத் தேடி வந்த அந்தப் பலமிக்க மஹாதேவன், இறையாண்மையின் எட்டுக் குணங்களை {அணிமா முதலிய எண்குணங்களோடு கூடிய ஸித்தியை} எனக்கு அளித்தான்” என்றார்.(37)

கர்க்கர், “ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, சரஸ்வதி ஆற்றங்கரையில், நான் செய்த மனோவேள்வியின் விளைவால் என்னிடம் நிறைவை அடைந்த அந்தப் பெருந்தேவன், அற்புத அறிவியலும், அறுபத்துநான்கு அங்கங்களுடன் கூடியதுமான காலஞானத்தை {அறுபத்து நான்கு கலைகளிலும் அற்புத ஞானத்தை} எனக்குக் கொடுத்தான்.(38) வேதங்களை முழுமையாக அறிந்தவர்களும், இணையான தகுதிகளை உடையவர்களுமான ஓராயிரம் மகன்களையும் எனக்குக் கொடுத்தான். அவனது கருணையின் மூலம், அவர்களுடைய வாழ்நாளும், என்னுடைய வாழ்நாளும் பத்து லட்சம் ஆண்டுகளென நீண்டிருக்கின்றன” என்றார் {கர்க்கர்}.(39)

பராசரர், “ஓ! மன்னா, பழங்காலத்தில் நான் சர்வனை நிறைவடையச் செய்தேன். பிறகு நான், பெருந்தவத்தகுதியை உடையவனும், மேன்மையான சக்தியைக் கொண்டவனும், உயர்ந்த யோகத்தை அறிந்தவனும், பார்பரவும் புகழை ஈட்டுபவனும்,(40) வேதங்களைத் தொகுப்பவனும், செழிப்பின் இல்லமாக இருப்பவனும், வேதங்கள் மற்றும் பிராமணர்களிடம் அர்ப்பணிப்புள்ளவனும், கருணைக்காகப் புகழ்பெறக் கூடியவனுமான ஒரு மகனை அடைய விரும்பினேன். அத்தகைய ஒரு மகனையே நான் மஹேஸ்வரனிடமிருந்து பெற விரும்பினேன்.(41) என் இதய விருப்பம் இதுதான் என்பதை அறிந்து கொண்ட அந்த முதன்மையான தேவன், என்னிடம், “நீ என்னிடம் அடைய விரும்பும் உன் நோக்கம் கனிவதன் மூலம், கிருஷ்ணன் {கருப்பன்} என்ற பெயரில் நீ ஒரு மகனை அடைவாய். ஸாவர்ணி-மனு என்ற பெயரில் அறியப்படும் படைப்பில், உன்னுடைய மகன் ஏழு முனிவர்களில் ஒருவனாகக் கருதப்படுவான். அவன் வேதங்களைத் தொகுத்து, குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனாக இருப்பான். இது தவிர அவன் பழைய வரலாறுகளின் ஆசானாக இருந்து, அண்டத்திற்கு நன்மை செய்வான். கடுந்தவங்களுடன் கூடிய அவன், சக்ரனின் அன்புக்குரிய நண்பனாக இருப்பான். உன் மகன் அனைத்து வகை நோய்களில் இருந்து விடுபட்டவனாக இருப்பதுடன், மரணமற்றவனாகவும் இருப்பான்” என்றான். அந்தப் பெருந்தேவன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அங்கேயே அப்போது மறைந்து போனான். ஓ! யுதிஷ்டிரா, அழிவற்றவனும், மாற்றமற்றவனும், உயர்ந்த தவங்கள் மற்றும் பரமசக்தியுடன் கூடியவனுமான அந்தத் தேவனிடம் இருந்து இத்தகைய நன்மையையே நான் அடைந்தேன்” என்றார் {பராசரர்}.(45)

மாண்டவ்யர், “பழங்காலத்தில், கள்வனாக இல்லாவிட்டாலும், கள்வனென்ற ஐயப்பாட்டினால் (மன்னனின் ஆணைகளின் பேரில்) நான் சூலத்தின் மேல் ஏற்றப்பட்டேன். அப்போது சிறப்புமிக்க மஹாதேவனை நான் துதித்தபோது அவன் என்னிடம்,(46) “சூலத்தில் இருந்து விரைவில் விடுபட்டு கோடிக்கணக்கான {நூறு கோடி} வருட காலம் வாழ்ந்திருப்பாய். சூலத்தினாலுண்டாகும் நோய் உனதாகாது.(47) அனைத்துவகைத் துயரங்கள் மற்றும் நோய்களில் இருந்து நீ விடுபடுவாய். ஓ! தவசியே, உன்னுடல் தர்மத்தின் (வாய்மையின்) நான்காவது காலில் இருந்து உண்டானதால்,(48) பூமியில் நீ ஒப்பற்றவனாக இருப்பாய். உன் வாழ்வைக் கனிநிறைந்ததாக்குவாயாக. பூமியின் புனித நீர்நிலைகள் அனைத்திலும் எத்தடையுமின்றி நீராட இயன்றவனாயிருப்பாய்.(49) ஓ! கற்றறிந்த பிராமணா, உன்னுடல் அழிவடைந்ததும், நீ சொர்க்கத்தின் இன்பநிலையை எல்லையில்லா காலத்திற்கு அனுபவிக்குமாறு நான் செய்வேன்” என்றான். காளையைத் தன் வாகனமாகக் கொண்டவனும், ஒப்பற்ற காந்தியைக் கொண்டவனும், விலங்குத் தோலை உடுத்தியவனும், துதிக்கத்தக்க தேவனுமான மஹேஸ்வரன் இவ்வார்த்தைகளை என்னிடம் சொல்லிவிட்டு அங்கேயே, அப்போதே மறைந்து போனான்” என்றார் {மாண்டவ்யர்}.(50, 51)

காலவர், “முற்காலத்தில் நான் என் ஆசானான விஷ்வாமித்ரரின் பாதத்தில் கல்வி கற்று வந்தேன். என் தந்தையைக் காணும் நோக்கத்தோடு அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு என் இல்லத்திற்குப் புறப்பட்டேன். (விதவையாகியிருந்த) என் தாயார் கவலையால் நிறைந்து, அழுதுகொண்டே என்னிடம்,(52) “ஐயோ, வேத ஞானத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், இல்லம் திரும்ப ஆசானால் விடுவிக்கப்பட்டவனும், இளமையின் அருள்கள் அனைத்தையும் கொண்டவனும், தற்கட்டுப்பாடுடையவனுமான தமது மகனை உன் தந்தை ஒரு போதும் காணமாட்டார்” என்றாள்.(53) என் தாயாரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, என் தந்தையைக் காண முடியாத வருத்தத்தால் நான் நிறைந்தேன். பிறகு குவிந்த ஆன்மாவுடன் நான் மஹேஸ்வரனுக்கு என் துதிகளைச் செலுத்தியபோது, அவன் என்னிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு,(54) “ஓ! மகனே, உன் தந்தை, உன் தாய் மற்றும் நீ ஆகியோர் அனைவரும் மரணத்தில் இருந்து விடுபட்டவர்களாவீர்கள். விரைவாகச் சென்று உன் வசிப்பிடத்திற்குள் நுழைவாக; அங்கே நீ உன் தந்தையைக் காண்பாய்” என்றான்.(55) ஓ! யுதிஷ்டிரா, அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு நான் என் இல்லத்திற்குத் திரும்பிய போது, தமது தின வேள்வியை நிறைவுசெய்து வெளியே வரும் என் தந்தையைக் கண்டேன்.(56) அவர் தமது கையில் ஹோமத்திற்கான விறகையும், குசப் புற்களையும் {தர்ப்பங்களையும்}, உதிர்ந்த கனிகளையும் கைநிறையச் சுமந்து வந்தார். முறையாகத் தம்மைக் கழுவிக் கொண்டிருந்ததால் அவர் ஏற்கனவே தம் தின உணவை உண்டுவிட்டதாகத் தெரிந்தது. ஓ! பாண்டுவின் மகனே, (மகிழ்ச்சியால்) கண்ணீரில் குளித்த கண்களுடன், தமது கரங்களில் வைத்திருந்த அப்பொருட்களைக் கீழே வீசிவிட்ட என் தந்தை, அவரது பாதத்தில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த என்னை உயர்த்தித் தழுவிக் கொண்டு, என் தலையை முகர்ந்து {உச்சி முகர்ந்து}, என்னிடம், “ஓ! மகனே, நான் உன்னைக் காண்பது நற்பேற்றினாலேயே. உன் ஆசானிடம் ஞானத்தைப் பெற்றுக் கொண்டு நீ திரும்பியிருக்கிறாய்” என்று சொன்னார் {என் தந்தை}” என்றார் {காலவர்}”.(58)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சிறப்புமிக்க மஹாதேவனின் அதிசயமிக்க, அற்புதம் நிறைந்த அருஞ்செயல்களைக் குறித்துத் தவசிகள் சொன்னது கேட்டு பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} வியப்பை அடைந்தான்.(59) அப்போது புத்திமான்கள் அனைவரிலும் முதன்மையானவனான கிருஷ்ணன், புருஹுதனிடம் பேசும் விஷ்ணுவை {இந்திரனிடம் பேசும் ஈசுவரனைப்} போல அறப்பெருங்கடலான யுதிஷ்டிரனிடம் மீண்டும் பேசினான்.(60)

வாசுதேவன், “சூரியனைப் போலச் சுடர்விட்டுப் பிரகாசிப்பவராகத் தெரிந்த உபமன்யு, என்னிடம், “மறச்செயல்களால் {நியாயமற்ற செயல்களால்} களங்கமடைந்திருக்கும் பாவிகள்,(61) ஈசானனை அடைவதில் வெற்றி அடைய மாட்டார்கள். ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களால் களங்கமடைந்த மனோநிலைகளைக் கொண்ட அவர்களால் அந்தப் பரமதேவனை ஒருபோதும் அணுக முடியாது. தூய ஆன்மாக்களைக் கொண்ட மறுபிறப்பாளர்களால் மட்டுமே அந்தப் பரமதேவனை அடைவதில் வெல்ல முடியும்.(62) ஒரு மனிதன் அனைத்து வகை இன்பங்கள் மற்றும் ஆடம்பரங்களை அனுபவித்து வாழ்ந்தாலும், அந்தப் பரமதேவனிடம் அர்ப்பணிப்புடன் இருந்தானானால், அவன் தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட காட்டுத் துறவிகளுக்கு இணையானவனாகக் கருதப்படுவான்.(63) ஒரு மனிதனிடம் ருத்திரன் நிறைவையடைந்தால், பிரம்ம நிலையையோ, கேசவ நிலையையோ {விஷ்ணுவின் நிலையையோ}, தேவர்கள் அனைவருடன் கூடிய சக்ரனின் {இந்திரனின்} நிலையையோ, மூவுலகங்களின் அரசுரிமையையோ அவனால் வழங்க முடியும்.(64) ஓ! ஐயா, பவனை மனத்தில் வழிபடும் மனிதர்கள், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டு, தேவர்கள் அனைவருடன் கூடிய சொர்க்கவாசத்தை அடைகிறார்கள்.(65) குளங்கள் மற்றும் தடாகங்களை அழித்துத் தன் இல்லங்களுக்கான அடித்தளத்தை எழுப்பி உண்மையில் மொத்த அண்டத்தையே அழிப்பவனுமாக உள்ள ஒருவனும், முக்கண்களைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவனை வழிபட்டுத் துதிப்பானானால், பாவத்தால் களங்கமடையமாட்டான்.(66) மங்கலக் குறியீடுகளேதும் அற்றவனும், பாவங்கள் அனைத்தாலும் கறைபடிந்தவனுமான ஒருவனும், சிவனைத் தியானிப்பதன் மூலம் தன் பாவங்கள் அனைத்தையும் அழிக்கிறான்.(67) ஓ! கேசவா, மஹாதேவனுக்குத் தங்களை அர்ப்பணித்த புழு பூச்சிகள் மற்றும் பறவைகள் கூட முற்றிலும் அச்சமற்ற நிலையில் திரியவல்லவையாகின்றன.(68) மஹாதேவனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்கள் நிச்சயம் மறுபிறவியில் இருந்து விடுதலை அடைவார்கள் {முக்தி அடைவார்கள்} என்பது திடநம்பிக்கையுடன் கூடிய என் தீர்மானமாகும்” என்றார் {உபமன்யு}.(69) அதன் பிறகு கிருஷ்ணன், தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் மீண்டும் பின்வரும் வார்த்தைகளில் பேசினான்.(70)

அந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, “ஆதித்யன், சந்திரன், காற்று, நெருப்பு, சொர்க்கம், பூமி, வசுக்கள், விஸ்வேதேவர்கள், தாத்ரி {தாதா}, அர்யமான், சுக்கிரன், பிருஹஸ்பதி, ருத்திரர்கள், சாத்யர்கள், வருணன், கோபன்,(71) பிரம்மன், சக்ரன், மருத்துகள், பிரம்ம அறிவைக் கற்பிக்கும் உபநிஷத்கள், வாய்மை, வேதங்கள், வேள்விகள், வேள்விக் கொடைகள், வேதங்களை உரைக்கும் பிராமணர்கள், சோமம், வேள்வி செய்வபர், வேள்விக்காணிக்கைகளில் தேவர்களின் பங்குகள், வேள்விகளில் ஊற்றப்படும் தெளிந்த நெய், தீக்ஷை, நோன்பு நியமங்கள் என்ற வடிவில் உள்ள நலந்தரும் அனைத்துவகைக் கட்டுப்பாடுகள்,(72) ஸ்வாஹா, வஷட், பிராமணர்கள், தெய்வீகப் பசு, முதன்மையான அறச் செயல்கள், காலச் சக்கரம், பலம், புகழ், தற்கட்டுப்பாடு, புத்தி கொண்டோர் அனைவரின் உறுதி, நன்மை தீமைகள் அனைத்தும், ஏழு முனிவர்கள் {சப்தரிஷிகள்},(73) முதல் தரமான புத்தி, அனைத்து வகைகளைச் சார்ந்த சிறந்த தீண்டல்கள், (அறச்) செயல்கள் அனைத்தின் வெற்றி, தேவர்களின் பல்வேறு இனக்குழுக்கள், வெப்பத்தைப் பருகுபவர்கள் {ஊஷ்ம்பர்கள்}, சோமத்தைப் பருகுபவர்கள் {ஸோமபர்கள்}, லேகர்கள், ஸுயாமர்கள், துஷிதர்கள், மந்திரங்களையே தங்கள் உடல்களாகக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் {பிரம்மகாயர்கள்},(74) ஆபாஸுரர்கள், மணங்களில் மட்டுமே வாழ்பவர்கள் {கந்தபர்கள்}, பார்வையில் மட்டுமே வாழ்பவர்கள் {தூமபர்கள்}, தங்கள் பேச்சைக் கட்டுபடுத்தியவர்கள் {வாசாவிருத்தர்கள்}, தங்கள் மனங்களைக் கட்டுப்படுத்தியவர்கள் {மனோவிருத்தர்கள்}, தூய்மையானவர்கள் {சுத்தர்கள்}, யோக பலத்தின் மூலம் பல்வேறு வடிவங்களை ஏற்கவல்லவர்கள் {நிர்மாணரதர்கள்}, தீண்டலையே {தங்கள் உணவாகக்} கொண்டு வாழும் தேவர்கள் {ஸ்பர்சாசசனர்கள்}, பார்வையை உண்டு வாழும் தேவர்கள் {தர்சபர்கள்}, வேள்வியில் ஊற்றப்படும் நெய்யை உண்டு வாழும் தேவர்கள் {ஆஜ்யபர்கள்},(75) வேண்டி பொருட்களைத் தங்கள் விருப்பப்படிப் படைக்கும் வல்லமை கொண்டவர்கள் {சிந்த்யத்யோதர்கள்}, தேவர்களில் முதன்மையானவர்களாகக் கருதப்படுவோர், ஓ! ஆஜமீடரே {யுதிஷ்டிரரே}, சுபர்ணர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், தானவர்கள், யக்ஷர்கள், சாரணர்கள், பாம்புகள்,(76) திரளான அனைத்தும், மிக நுட்பமான அனைத்தும், மென்மையான அனைத்தும், நுட்பமில்லாத அனைத்தும், கவலைகள் அனைத்தும், இன்பங்கள் அனைத்தும், இன்பத்திற்குப் பின் வரும் கவலைகள் அனைத்தும், கவலைக்குப் பின் வரும் இன்பங்கள் அனைத்தும், சாங்கிய தத்துவம், யோகம், முதன்மையானவையாகவும், மிக மேன்மையானவையாகவும் கருதப்படும் பொருட்களைக் கடந்திருக்கும் துதிக்கத்தக்க பொருட்கள் யாவும், தேவர்கள் அனைவரும், அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் புராதனமான இந்தப் படைப்பைத் தாங்கி, அண்டத்தைப் பாதுகாக்கும் அனைவரும், அனைத்து உயிரினங்களையும் படைத்தவனிடம் இருந்தே பிறப்பை அடைந்தனர்.(77,78)

நான் சொன்ன இவை யாவும் தவங்களின் துணையுடன் ஞானிகள் சிந்திப்பதைவிடத் திரளானவையாகும். உண்மையில் நுட்பமான பிரம்மமே வாழ்வின் {உயிரின்} காரணமாகும். நான் மதிப்புடன் அதற்குத் தலைவணங்குகிறேன். மாற்றமற்றவனும், அழிவற்றவனும், நம்மால் எப்போதும் துதிக்கப்படுபவனுமான அந்தத் தலைவன் நாம் விரும்பிய வரங்களை நமக்கு அருளட்டும்.(79) எந்த மனிதன், தன் புலன்களை அடக்கி, தன்னைத் தூய்மை செய்து கொண்டு, இந்தத் துதியைத் தன் நோன்புக்குத் தடையில்லாமல் ஒரு மாத காலம் உரைப்பானோ, அவன் ஒரு குதிரை வேள்வி செய்ததற்கு இணையான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்வான்.(80) இத்துதியை உரைப்பதனால் ஒரு பிராமணன் வேதங்கள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்; ஓ! பிருதையின் மகனே, ஒரு க்ஷத்திரியன், வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறான்; ஒரு வைசியன் செல்வத்தையும், புத்திசாலித்தனத்தையும் அடைகிறான்; ஒரு சூத்திரன் இம்மையில் மகிழ்ச்சியையும், மறுமையில் நற்கதியையும் அடைகிறான்.(81) பெரும்புகழைக் கொண்ட மனிதர்கள், அனைத்துப் பாவங்களையும் கழுவவல்லதும், மிகப் புனிதமானதும், தூய்மையடையச் செய்வதுமான இந்தத் துதிகளின் இளவரசனை உரைப்பதால் தங்கள் இதயங்களை ருத்திரனில் நிலைக்கச் செய்கிறார்கள்.(82) இந்தத் துதிகளின் இளவரசனை உரைக்கும் மனிதன், தன் உடலில் உள்ள மயிர்க்கால்களின் அளவுக்கான வருடங்கள் சொர்க்கத்தில் வாழும் நிலையை அடைவதில் வெல்கிறான்” என்றான் {கிருஷ்ணன்}.(83)

கிழவியும், அஷ்டவக்கிரரும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 19-வதான்யரின் மகளைத் திருமணம் செய்ய நினைத்த அஷ்டவக்கிரர், அவரது கட்டளையின் பேரில் வடக்குத் திசை சென்று அந்தத் திசையின் தேவனைக் கண்டு உரையாடியது; ஒரு முதிய பெண்ணுக்கும் அஷ்டவக்கிரருக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, ஒரு மனிதன் திருமணத்தில் தன் துணைவியின் {ஸஹதர்மையின்} கரத்தை ஏற்கும் தருணத்தில், இருவரும் சேர்ந்து ஆற்றப்போகும் கடமைகள் {ஸஹதர்மங்கள்} அனைத்தையும் குறித்த உறுதிமொழியின் தோற்றுவாய் என்ன?(1) ஒன்றாகச் சேர்ந்து ஆற்றப்போகும் கடமைகள் {ஸஹதர்மங்கள்} அனைத்தின் உறுதிமொழியானது, பழங்காலத்தில் பெரும் முனிவர்களால் விதிக்கப்பட்டவையா? அஃது அறநோக்கங்களில் வாரிசுகளைப் பெறும் கடமையைக் குறிக்குமா? அல்லது பாலினக் கலவியால் ஏற்படும் உடலின்பத்தை மட்டுமே குறிக்குமா?(2) இது குறித்து என் மனத்தில் நிறையும் ஐயம் பெரியதாகும். நான் குறிப்பிடும் உறுதிமொழியானது, உண்மையில் பாலினக் கலவிக்கு வழிவகுக்கும் இயற்கையான தூண்டல்களுக்கு முரணாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இவ்வுலகத்தில் அனைத்துக் கடமைகளையும் சேர்ந்தே ஆற்றுவதற்காக ஏற்படும் சேர்க்கையானது, மறுமையில் நீடிக்காமல் மரணத்தோடு முடிந்துவிடுவதே காணப்படுகிறது.(3) அனைத்துக் கடமைகளையும் சேர்ந்தே ஆற்றுவதற்கான இந்தச் சேர்க்கை சொர்க்கத்திற்கு வழிவகுக்கிறது. ஆனால், ஓ! பாட்டா, சொர்க்கமானது இறந்து போன மனிதர்களாலேயே அடையப்படுகிறது. திருமணம் செய்து கொண்ட இணையில் ஒரு நேரத்தில் ஒருவர் இறப்பதே காணப்படுகிறது. மற்றொருவர் எங்கே இருப்பார்? எனக்கு இதைச் சொல்வீராக.(4) பல்வேறு வகைக் கடமைகளைப் பயில்வதன் மூலம் மனிதர்கள் பல்வேறு வகைக் கனிகளை {பலன்களை} அடைகின்றனர். மேலும் மனிதர்கள் பல்வேறு வகைத் தொழில்களைச் செய்கின்றனர். மாறுபட்ட இத்தகைய கடமைகள் மற்றும் செயல்களின் விளைவால் அவர்கள் செல்லும் நரகங்களும் மாறுபட்டவையாக இருக்கின்றன.(5)

குறிப்பாகப் பெண்கள் போலி நடத்தை கொண்டவர்கள் {பொய்யர்கள்} என்று முனிவர்கள் சொல்கிறார்கள். மனிதர்கள் இவ்வாறு இருக்கும்போது, குறிப்பாகப் பெண்கள் பொய்யர்கள் என்று விதிகளில் அறிவிக்கப்படும்போது, ஓ! ஐயா, கடமைகள் அனைத்தையும் சேர்ந்தே செய்வதற்கான நோக்கத்தில் பாலினங்களுக்கிடையில் எவ்வாறு சேர்க்கை ஏற்பட முடியும்?(6) பெண்கள் பொய்யர்கள் என்பதை ஒருவன் வேதங்களிலிலேயே படிக்கலாம். கடமை {தர்மம்} என்ற சொல்லானது, வேதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள படி, முதலில் பொதுவான பயன்பாட்டுக்காக (தகுதியேதும் இல்லாத நடைமுறைகளில் பயன்படுத்துவதற்காக) அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனவே, திருமணச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் அந்தச் சொல்லானது, சரியானதாக இருப்பதற்குப் பதில், பயன்பாடு ஏதும் இல்லாதவற்றில் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படும் பேச்சின் வடிவமாக மட்டுமே இருக்கிறது.(7) இக்காரியம் குறித்து இடையறாமல் சிந்தித்தாலும், எனக்கு விளக்க முடியாததாக இருக்கிறது. ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானியே, ஸ்ருதியில் விதிக்கப்பட்டுள்ளபடி தெளிவாகவும், விரிவாகவும் எனக்கு இதை விளக்குவதே உமக்குத் தகும். உண்மையில், அஃது என்ன? அதன் தன்மைகள் என்னென்ன? அதை நடைமுறைப்படுத்தும் வழியென்ன? என்பதை எனக்கு விளக்கிச் சொல்வீராக”[1].(8,9)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக அஷ்டவக்கிரருக்கும், திசை என்ற பெயரில் அறியப்படும் பெண்ணுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது.(10) பழங்காலத்தில் கடுந்தவங்களைச் செய்த அஷ்டவக்கிரர், திருமணம் செய்து கொள்ளவிரும்பி, உயர் ஆன்ம முனிவரான வதான்யரின் மகளை இரந்து கேட்டார்.(11) அந்தக் கன்னிகை சுப்பிரபை என்ற பெயரில் அறியப்பட்டிருந்தாள். பூமியில் ஒப்பிலா அழகுடையவளாக அவள் இருந்தாள். குணம், கண்ணியம், ஒழுக்கம் மற்றும் நடைமுறைகளில் அவள் அனைத்துப் பெண்களைவிட மேன்மையானவளாக இருந்தாள். (12) மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வசந்த காலத்தில் பார்வையாளரின் இதயத்தைக் களவாடும் இனிய தோட்டத்தை {மலர்வனத்தைப்} போலவே, அழகிய கண்களைக் கொண்ட அந்தப் பெண் ஒற்றைப் பார்வையிலேயே அவரது இதயத்தைக் களவாடினாள்.(13)

அந்த முனிவர் {வதான்யர்} அஷ்டவக்கிரரிடம், “சரி. நான் என் மகளை உனக்கு அளிக்கிறேன். எனினும், நான் சொல்வதைக் கேட்பாயாக. புனிதமான வடதிசை நோக்கிப் பயணிப்பாயாக. அங்கே நீ பலவற்றைக் காண்பாய்” என்றார்[2].(14)அஷ்டவக்கிரர் {வதான்யரிடம்}, “அந்தப் பகுதியில் நான் என்ன காண்பேன் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். உண்மையில் உம்மால் விதிக்கப்படும் எக்கட்டளையையும் செயல்படுத்த நான் ஆயத்தமாக இருக்கிறேன்” என்றார்.(15)

வதான்யர் {அஷ்டவக்கிரரிடம்}, “நீ கருவூலத்தலைவனின் {குபேரனின்} ஆட்சிப்பகுதிகளைக் கடந்து, இமய மலைகளையும் கடந்து செல்ல வேண்டும். அப்போது ருத்திரன் வசிக்கும் மேட்டு நிலத்தைக் காண்பாய். அது சித்தர்களும், சாரணர்களும் வசிக்கும் இடமாகும்.(16) ஆட விரும்பி துள்ளிக் குதிப்பவர்களும், பல்வேறு வடிவங்களிலான முகங்களைக் கொண்டவர்களுமான மஹாதேவனின் கணங்கள் அங்கே நிறைந்திருக்கின்றனர். ஓ! முதன்மையானவனே, பல்வேறு வண்ணங்களிலான நறுமணப்பொடிகளைப் பூசிக் கொண்டவர்களும், வெங்கலத்தாலான பல வகை இசைக்கருவிகளின் துணையுடனும், இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் ஆடிக்கொண்டிருக்கும் பல்வேறு வடிவங்களிலான பிசாசங்கள் பலவும் நிறைந்திருக்கின்றன. மின்னல் வேகத்தில் ஆடிக் கொண்டிருப்பவர்களும், முன்னே, பின்னே, குறுக்கே என அனைத்து வகை அசைவுகளையும் செய்பவர்களுமான இவை சூழவே அங்கே மஹாதேவன் வசித்து வருகிறான்.(17,18) நாம் கேள்விப்பட்டிருக்கும் மலைகளில் உள்ள அந்த இனிய இடமே அந்தப் பெருந்தேவனுக்குப் பிடித்தமான வசிப்பிடமாகும். அந்தப் பெருந்தேவன் தன் தோழர்களுடன் {கணங்களுடன்} எப்போதும் அங்கே இருக்கிறான் எனச் சொல்லப்படுகிறது.(19) முக்கண் தேவனின் (அவனைத் தன் தலைவனாக அடையும்) நிமித்தமாக உமாதேவி அங்கேதான் கடுந்தவங்களைச் செய்தாள். எனவே, மஹாதேவன் மற்றும் உமை ஆகிய இருவராலும் மிகவும் விரும்பப்படும் இடம் எனச் சொல்லப்படுகிறது.(20)

பழங்காலத்தில், மஹாதேவனின் புனித மலைகளுக்கு வடக்கே அமைந்திருக்கும் மஹாபார்ஷ்வ மலைகளின் உச்சியில், பருவகாலங்கள், இறுதி இரவு, தேவர்கள் பலர், (முதன்மையான வகையைச் சேர்ந்த) மனிதர்கள் பலர்,(21) தங்கள் உடல் கொண்ட வடிவங்களோடு மஹாதேவனைத் துதித்துக் கொண்டிருக்கின்றனர்[3]. வடக்கு நோக்கிய உன் பயணத்தில் நீ அந்தப் பகுதியையும் கடந்து செல்ல வேண்டும். பிறகு, மேகத்திரளுக்கு ஒப்பானதும், நீலவண்ணம் கொண்டதுமான ஓர் அழகிய காட்டை நீ காண்பாய். அங்கே, அந்தக் காட்டில், ஸ்ரீயை {லட்சுமியைப்} போலத் தெரியும் ஓர் அழகிய பெண் தவசியை நீ காண்பாய்.(23) வயதின் காரணமாக மதிக்கப்படுபவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளுமான அவள், தீக்ஷை நோற்றுக் கொண்டிருக்கிறாள். அங்கே அவளைக் கண்டு மதிப்புடன் நீ அவளை வழிபட வேண்டும்.(24) அவளைக் கண்ட பிறகு இவ்விடம் திரும்பியதும், என் மகளின் கரத்தைத் திருமணத்தில் பற்றுவாயாக. உன்னால் இந்த உடன்பாட்டை ஏற்க முடிந்தால், பயணம் சென்று நான் ஆணையிட்டதைச் செய்வாயாக” என்றார் {வதான்யர்}.(25)அஷ்டவக்கிரர்  {வதான்யரிடம்}, “அப்படியே ஆகட்டும். நான் உமதாணையைச் செய்வேன். ஓ! அற ஆன்மாவே, நீர் சொல்லும் பகுதிக்கு நிச்சயம் நான் செல்வேன். உமது தரப்பில், நீர் உமது வார்த்தைகளை வாய்மைக்கு இணக்கமானதாகச் செய்வீராக” என்றார்”.(26)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சிறப்புமிக்க அஷ்டவக்கிரர் புறப்பட்டுச் சென்று பயணம் மேற்கொண்டார். அவன் மேன்மேலும் வடக்குநோக்கிச் சென்று இறுதியாகச் சித்தர்களும், சாரணர்களும் நிறைந்த இமய மலைகளை அடைந்தார்.(27) இமய மலைகளை அடைந்த பிறகு, அந்த முதன்மையான பிராமணர், பெரும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்கும் பாஹுதை என்ற புனித ஆற்றுக்குச் சென்றார்.(28) அவர், சேறற்றவையும் {தெளிந்த நீரைக் கொண்டவையும்}, இனிமை நிறைந்தவையுமான அந்த ஆற்றின் தீர்த்தங்களில் நீராடி, நீர்க்காணிக்கைகளால் தேவர்களை நிறைவடையச் செய்தார். அவரது தூய்மைச் சடங்குகள் நிறைவடைந்ததும், குசப்புற்களை {தர்ப்பங்களைப்} பரப்பிச் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காகத் தம்மைக் கீழே கிடத்திக் கொண்டார்.(29) இவ்வகையில் அந்தப் பிராமணர் இரவைக் கழித்துப் பகலில் எழுந்தார். பாஹுதையின் புனித நீர்களில் மீண்டும் தமது தூய்மைச் சடங்குகளைச் செய்து கொண்டு, தமது ஹோம நெருப்பை மூட்டி, முதன்மையான வேத மந்திரங்கள் பலவற்றின் துணையுடன் அதை வழிபட்டார்.(30)

பிறகு அவர், ருத்திரன் மற்றும் அவனது மனைவியான உமை ஆகிய இருவரையும் முறையான சடங்குகளுடன் வழிபட்டு, அந்தப் பாஹுதையின் போக்கில் உள்ள ஒரு தடாகத்தின் அருகில் மேலும் சிறிது நேரம் ஓய்ந்திருந்தார். இத்தகைய ஓய்வினால் புத்துணர்ச்சியடைந்த அவர், அந்தப் பகுதியில் இருந்து கைலாசத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.(31) அப்போது அவர் அழகில் சுடர்விடுவதாகத் தெரிந்த ஒரு தங்க வாயிலைக் கண்டார். மேலும் அவர் மந்தாகினியையும், கருவூலங்களின் தலைவனான உயர் ஆன்ம குபேரனின் நளினியையும் கண்டார்[4].(32) அழகிய தாமரைகள் நிறைந்த அந்தத் தடாகத்தைப் பாதுகாப்பவர்களும், மாணிபத்ரனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களுமான ராட்சசர்கள் அனைவரும், அங்கே வந்த முனிவரைக் கண்டு, சிறப்புமிக்க அந்தப் பயணியை வரவேற்றுக் கௌரவிப்பதற்காக வெளியே வந்தனர்.(33) பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ராட்சசர்களைப் பதிலுக்கு வழிபட்ட அம்முனிவர், தமது வருகையைக் கருவூலங்களின் தலைவனுக்குத் தாமதமில்லாமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.(34) இதைச் செய்ய அவரால் வேண்டப்பட்ட ராட்சசர்கள், அவரிடம், “மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்}, புலனாய்வுக்காகக் காத்திராமல் தமது விருப்பப்படியே உமது முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்.(35) சிறப்புமிக்கவரான கருவூலங்களின் தலைவன் {குபேரன்}, உமது பயணத்தின் நோக்கத்தை நன்கறிந்திருக்கிறார். சக்தியால் தாமே ஒளிர்பவரான அந்த அருளப்பட்ட தலைவரை இதோ காண்பீராக” என்றனர்.(36)அப்போது மன்னன் வைஸ்ரவணன், களங்கமற்ற அஷ்டவக்கிரரை அணுகி, முறையாக நலம்விசாரித்தான். மதிப்பு நிமித்தமான வழக்கமான விசாரிப்புகளைச் செய்த பிறகு, அந்தக் கருவூலங்களின் தலைவன், அந்த மறுபிறப்பாள முனிவரிடம்,(37) “இங்கே வந்த உமக்கு நல்வரவு. என்னிடம் இருந்து என்ன வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக. ஓ! மறுபிறப்பாளரே, நீர் நிறைவேற்றச் சொல்லும் எதையும் நான் நிறைவேற்றுவேன்.(38) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, விருப்பத்துடன் என் வசிப்பிடத்திற்குள் நுழைவீராக. என்னால் முறையாக உபசரிக்கப்பட்டு, உமது காரியம் நிறைவடைந்த பிறகு, உமது வழியில் எத்தடையுமின்றி நீர் செல்லலாம்” என்றான் {குபேரன்}.(39)

குபேரன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அந்த முதன்மையான பிராமணரிடம் இருந்து தன் கரத்தை எடுத்து, தன் அரண்மனைக்கு அவரை வழிநடத்திச் சென்றான். தன் இருக்கையையே அவருக்கு அளித்து, கால் கழுவ நீர்கொடுத்து, வழக்கமான பொருட்களுடன் கூடிய அர்க்கியத்தையும் கொடுத்தான். அவர்கள் இருவரும் தங்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, மாணிபத்ரனின் தலைமையிலான குபேரனின் யக்ஷர்களும், கந்தர்வர்கள் மற்றும் கிண்ணரர்கள் பலரும் அவர்களுக்கு முன்னிலையில் அமர்ந்தார்கள்.(41)

அவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, கருவூலனங்களின் தலைவன் {குபேரன்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “எது உமக்குப் இன்பமெனப் புரிந்த பிறகு {உமது கருத்தை அறிந்த பிறகு}, அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்கள் இங்கே தங்கள் ஆடலைத் தொடங்குவார்கள்.(42) நான் உம்மை விருந்தோம்பலுடன் உபசரிக்க வேண்டும், முறையான உதவிகளுடன் உமக்குத் தொண்டாற்றவும் வேண்டும்” என்றான்.

இவ்வாறு சொல்லப்பட்டதும், தவசியான அஷ்டவக்கிரர் இனிய குரலில், “ஆடல் தொடங்கட்டும்” என்றார்.(43)

அப்போது, உர்வரை, மிச்ரகேசி, ரம்பை, ஊர்வசி, அலம்புஸை, கிருதாசி, சித்ரை, சித்ராங்கதை, ருசி,(44) மனோஹரை, ஸுகேசி, ஸுமுகி, ஹாஸினி, ப்ரபை, வித்யுதை, ப்ரசமி, தாந்தை, வித்யோதை, ரதி ஆகியோரும்,(45) இன்னும் அழகிய பல அப்சரஸ்களும் ஆடத் தொடங்கினர். கந்தர்வர்கள் பல்வேறு வகையான இசைக்கருவிகளை இசைத்தனர்.(46) இத்தகைய சிறப்பான இசையும், ஆடலும் தொடங்கிய பிறகு, கடுந்தவங்களைக் கொண்ட முனிவர் அஷ்டவக்கிரர், தன்னினைவில்லாமலேயே மன்னன் வைஸ்ரவணனின் வசிப்பிடத்தில் முழுமையாக ஒரு தேவ வருடத்தைக் கழித்தார்.(47) பிறகு, மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்}, அந்த முனிவரிடம், “ஓ! கற்றறிந்த பிராமணரே, நீர் இங்கே வந்து ஒரு வருடத்திற்கும் சற்று அதிகமான காலம் கடந்திருப்பதைக் காண்பீராக. குறிப்பாகக் கந்தர்வம் என்ற பெயரில் அறியப்படும் இந்த இசையும், ஆடலும், இதயத்தை (காலத்தைக்) களவாடுபவையாகும். உமது விருப்பப்படி செயல்படுவீராக, அல்லது இதுவே உமது இன்பமென்றால் {உமக்கு விருப்பமென்றால்} இது தொடரட்டும். நீர் என் விருந்தினர், எனவே, துதிக்கத்தகுந்தவராவீர். இஃது உமது இல்லமாகும். ஆணையிடுவீராக. நாங்கள் அனைவரும் உமக்குக் கட்டுப்படுகிறோம்” என்றான்.(50)

சிறப்புமிக்க அஷ்டவக்கிரர், மன்னன் வைஸ்ரவணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அவனிடம், “நான் உன்னால் முறையாகக் கௌரவிக்கப்பட்டேன். ஓ! கருவூலங்களின் தலைவா, நான் இப்போது இங்கிருந்து செல்ல விரும்புகிறேன்.(51) உண்மையில் நான் உயர்வான மகிழ்ச்சியை அடைந்தேன். ஓ! கருவூலங்களின் தலைவா, இவை அனைத்தும் உனக்குத் தகும். ஓ! சிறப்புமிக்கவனே, உன் அருளாலும், உயர் ஆன்ம முனிவர் வதான்யரின் ஆணைக்கு ஏற்புடைய வகையிலும்,(52) என் பயணத்தின் எல்லைக்கு இப்போது புறப்படப் போகிறேன். வளர்ச்சியும், செழிப்பும் உனதாகட்டும்” என்றார். அந்தச் சிறப்புமிக்க முனிவர் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, குபேரனின் வசிப்பிடத்தில் இருந்து புறப்பட்டு, வடக்கு நோக்கிச்சென்றார்.(53)

கைலாசம், மந்தரம் மற்றும் தங்க மலைகளையும் அவர் கடந்து சென்றார். எங்கே மஹாதேவன் எளிய தவசியாக உடுத்திக் கொண்டு தன் வசிப்பிடத்தை அமைத்திருக்கிறானோ, அஃது உயர்ந்தவையும், பெரியவையுமான அந்த மலைகளைக் கடந்து அமைந்திருக்கிறது.(54) அவர், குவிந்த மனத்துடனும், மதிப்புடன் தலைவணங்கியபடியும் அந்த இடத்தை வலம் வந்தார். பிறகு பூமிக்கு வந்த அவர், மஹாதேவனின் வசிப்பிடமான அந்தப் புனிதமான இடத்தைக் கண்டதால் புனிதமடைந்ததாகத் தம்மைக் கருதினார்.(55) அம்மலையை மும்முறை வலம் வந்த அந்த முனிவர், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் {மேலும்} வடக்கு நோக்கிப் புறப்பட்டார்.(56)

பிறகு அவர் இனிமை நிறைந்த மற்றொரு காட்டைக் கண்டார். அஃது அனைத்துக் காலத்திற்குமுரிய கனிகளாலும், கிழங்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் அது சிறகு படைத்த ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்களையும் {பறவைகளின் ஒலிகளையும்} எதிரொலித்துக் கொண்டிருந்தது.(57) அந்தக் காடு முழுவதும் இனிமைநிறைந்த சோலைகள் ஏராளம் இருந்தன. அப்போது அந்தச் சிறப்புமிக்க முனிவர் ஓர் அழகிய ஆசிரமத்தைக் கண்டார்.(58) அம்முனிவர், ரத்தினங்கள் நிறைந்தவையும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவையுமான பல தங்க மலைகளையும் கண்டார். ரத்தினங்கள் நிறைந்த அந்த மண்ணில் அவர் பல தடாகங்களையும், குளங்களையும் கூடக் கண்டார்.(59) மேலும் அவர் பெரும் இனிமைநிறைந்த பல்வேறு பொருட்களையும் கண்டார். இப்பொருட்களையெல்லாம் கண்டதும், தூய ஆன்மாகக் கொண்ட அந்த முனிவரின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.(60)

அப்போது அவர் தங்கத்தாலானதும், பல வகை ரத்திரனங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஓர் அழகிய மாளிகையைக் கண்டார். அற்புதம் நிறைந்த வடிவமைப்புடன் கூடிய அம்மாளிகை, அனைத்து வகையிலும் குபேரனின் அரண்மையையும் விட மேம்பட்டிருந்தது.(61) அதைச் சுற்றிலும் பல மலைகளும், ரத்தினக் குவியல்களும் இருந்தன. அந்த இடத்தில் அழகிய பல தேர்களும், பல்வேறு வகைகளிலான ரத்தினக்குவியல்களும் காணப்பட்டன.(62) அங்கே அம்முனிவர் மந்தார மலர்கள் விரவிக்கிடக்கும் நீரைக் கொண்ட மந்தாகினி ஆற்றைக் கண்டார். தன்னொளி கொண்ட ரத்தினங்கள் பலவும் அங்கே காணப்பட்டன, சுற்றிலுமிருந்த மண்ணும் பல்வேறு வகை வைரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(63) முனிவர் கண்ட மாட மாளிகையில் பல்வேறு வகைக் கற்களால் அழகூட்டப்பட்ட வளைவுகளைக் கொண்ட அறைகள் பலவற்றைக் கொண்டிருந்தது. மேலும் அந்த அறைகள், இடையிடையே பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(64) இதயத்தையும், கண்ணையும் களவாடவல்ல பல்வேறு வகை அழகிய பொருட்கள் அந்த அரண்மனையில் இருந்தன. இனிமைநிறைந்த ஆசிரமத்தில் எண்ணற்ற முனிவர்கள் வசித்தனர்.(65)

சுற்றிலுமுள்ள இந்த அழகிய காட்சிகளைக் கண்ட முனிவர், தாம் எங்கே தங்குவது என நினைக்கத் தொடங்கினார். அந்த மாளிகையின் வாயிலுக்குச் சென்ற அவர்,(66) “(உறைவிடம் விரும்பி) ஒரு விருந்தாளி வந்திருக்கிறான் என இங்கே வாழ்பவர்கள் அறியட்டும்” என்ற வார்த்தைகளைச் சொன்னார். முனிவரின் குரலைக் கேட்டதும், அம்மாளிகையில் இருந்து கன்னிகைகள் பலர் வெளியே வந்தனர்.(67) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எண்ணிக்கையில் அவர்கள் எழுவராக இருந்தனர். அழகின் பல்வேறு வகைப் பாணிகளைக் கொண்ட அவர்கள் அனைவரும் பெருங்கவர்ச்சியுடன் இருந்தனர். முனிவர் தமது கண்களைச் செலுத்திய கன்னிகையர் ஒவ்வொருவரும் அவரது இதயத்தைக் களவாடினர்.(68) எவ்வளவு சிறப்பாக முயன்றாலும் அந்தத் தவசியால் தமது மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. உண்மையில், மிக மேன்மையான அழகைக் கொண்ட அந்தக் கன்னிகையரைக் கண்ட மாத்திரமே அவர் தமது இதயத்தின் அமைதி முழுமையையும் இழந்தார். இத்தகைய ஆதிக்கங்களுக்குத் தாம் வசப்படுவதைக் கண்ட முனிவர், பெரும் ஞானியாக இருந்ததால் கடுமுயற்சி செய்து இறுதியில் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் வென்றார்.(69)

அப்போது அந்த வனிதையர் அம்முனிவரிடம், “சிறப்புமிக்கவரே, நீர் உள்ளே நுழையலாம்” என்றனர்.

அழகுமிக்கக் காரிகைகள் மற்றும் மாடமாளிகையால் ஆவலில் நிறைந்திருந்த அந்த மறுபிறப்பாள முனிவர், தாம் கேட்டுக்கொள்ளப்பட்ட படியே உள்ளே நுழைந்தார். மாளிகைக்குள் நுழைந்ததும், முதுமையின் தளர்ச்சிக் குறியீடுகளைக் கொண்டவளும், வெள்ளுடை உடுத்தியவளும், அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளுமாக ஒரு முதிய பெண்மணியைக் கண்டார்.

முனிவர் {அஷ்டவக்கிரர்}, “நன்மை விளையட்டும்” என்று அவளுக்கு ஆசி கூறினார்.

அந்த முதிய பெண்மணியும் உரிய வகையில் அவருக்கான நல்வாழ்த்துகளைத் திரும்பச் செலுத்தினாள். அவள் எழுந்திருந்து முனிவருக்கு ஓர் இருக்கையைக் கொடுத்தாள்.(70-72)

தமது இருக்கையில் அமர்ந்த அஷ்டவக்கிரர், “கன்னிகையர் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லட்டும். ஒருத்தி மட்டும் இங்கே இருக்கட்டும். எவள் ஞானம் படைத்தவளோ, எவள் தன் இதயத்தில் அமைதியைக் கொண்டவளோ அவள் மட்டும் போகாமல் இருக்கட்டும். உண்மையில், மற்ற அனைவரும் தங்கள் விருப்பப்படிச் செல்லலாம்” என்றார்.(73)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தக் கன்னிகையர் அனைவரும் அம்முனிவரை வலம்வந்து அந்த அறையைவிட்டு வெளியேறினர். அந்த முதிய பெண்மணி மட்டும் போகாமல் அங்கேயே இருந்தாள்.(74) பகல் விரைவாகக் கடந்ததும், இரவும் வந்தது. மிக நல்ல படுக்கையில் அமர்ந்திருந்த முனிவர் அந்த முதிய பெண்மணியிடம், “ஓ! அருளப்பட்ட மங்கையே, இரவு ஆழ்கிறது. நீ உறங்குவாயாக” என்றார்.(75)

அம்முனிவரால் தங்கள் விவாதம் இவ்வாறு நிறுதப்பட்டதும், முதிய பெண்மணி பெருங்காந்திமிக்கச் சிறந்த படுக்கை ஒன்றில் தன்னைக் கிடத்திக் கொண்டாள்.(76) விரைவில் தன் படுக்கையில் இருந்து எழுந்த அவள், குளிரில் நடுங்குவதாகப் பாசாங்கு செய்தபடியே முனிவரின் படுக்கைக்குச் சென்றாள்.(77) சிறப்புமிக்க அஷ்டவக்கிரர் மதிப்புடன் நல்வரவு கூறினார். எனினும், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அந்தப் பெண்மணி தன் கரங்களை விரித்து அம்முனிவரை மென்மையாக அணைத்தாள்.(78) முனிவர் அசைவற்றவராகவும், மரக்கட்டையைப் போல அசைவற்றவராகவும் இருப்பதைக் கண்ட அவள், மிக வருத்தமடைந்து அவருடன் பேசத் தொடங்கினாள்.(79)

{அவள்}, “ஒரு பெண்ணுக்கு எதிர் பாலினத்திடம் {ஓர் ஆணிடம்} இருந்து ஆசை {காமம்} மூலம் கிட்டக்கூடியதைவிட இன்பம் வேறேதுமில்லை. நான் இப்போது ஆசையின் {காமத்தின்} ஆதிக்கத்தின் கீழிருக்கிறேன். அக்காரணத்திற்காகவே நான் உம்மை நாடுகிறேன். பதிலுக்கு நீரும் என்னை நாடுவீராக.(80) ஓ! கற்ற முனிவரே, உற்சாகமாக என்னுடன் கலப்பீராக. ஓ! கல்விமானே, உம்மை நான் பெரிதும் விரும்புவதால் என்னைத் தழுவிக் கொள்வீராக.(81) ஓ! அற ஆன்மாவே, என்னுடன் கலப்பது நீர் மேற்கொண்ட கடுந்தவங்களுக்கான மிகச் சிறந்த, விரும்பத்தக்க வெகுமதியாகும். முதல் பார்வையிலேயே உம்மை நாடும் மனநிலையை நான் அடைந்துவிட்டேன். நீரும் என்னை நாடுவீராக.(82) இந்தச் செல்வமனைத்தும், இங்கே நீர் காணும் மதிப்புமிக்க அனைத்தும் என்னுடையவையே. உண்மையில் இவை யாவற்றுக்கும், எனக்கும் என் இதயத்துக்கும் நீரே தலைவராவீராக.(83) நான் உமது விருப்பம் அனைத்தையும் நிறைவேற்றுவேன். எனவே, ஓ! பிராமணரே, அனைத்து விருப்பங்களையும் அருளவல்ல இந்த இனிமை நிறைந்த காட்டில் என்னுடன் திளைத்திருப்பீராக.(84) அனைத்துவகையிலும் நான் உமக்குக் கீழ்ப்படிந்தவளாக இருப்பேன். நீர் உமது விருப்பப்படி என்னுடன் இன்புற்றிருப்பீராக. மனித மற்றும் மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட தெய்வீக ஆசைகள் அனைத்தையும் நாம் அனுபவிப்போம்.(85) ஒரு பெண்ணுக்கு இதைவிட (எதிர்பாலினத் {ஆணின்} துணையால் கிட்டும் இன்பத்தைவிட) ஏற்புடைய இன்பம் வேறேதும் கிடையாது. உண்மையில் எதிர் பால் கலவியே நாம் அறுவடை செய்யக்கூடிய மிக இனிய இன்பக்கனியாகும்.(86) காமதேவனால் தூண்டப்படும்போது பெண்கள் கணிக்கமுடியாத பெருங்கிறுக்கர்களாகிவிடுவார்கள். அத்தகைய நேரங்களில் அவர்கள் பாலைவனச் சுடுமணலில் நடந்து சென்றாலும் எந்த வலியையும் உணரமாட்டார்கள்” என்றாள்.(87)

அஷ்டவக்கிரர், “ஓ! அருளப்பட்ட மங்கையே, மற்றவர் துணைவியை நான் ஒருபோதும் அணுகுவதில்லை. அடுத்தவர் மனைவியுடன் ஒருவன் கொல்லும் கலவியானது, அறநெறி சாத்திரமறிந்தவர்களால் கண்டிக்கப்படுகிறது.(88) அனைத்துவகை இன்பங்களுக்கும் நான் முற்றிலும் அறிமுகமற்றவனாவேன். ஓ! அருளப்பட்ட மங்கையே, சந்ததி அடைவதற்காகத் திருமணத்தில் நான் விருப்பம் கொண்டிருக்கிறேன் என்பதை அறிவாயாக. நான் வாய்மையின் மீது ஆணையாகக் கூறுகிறேன்.(89) நியாயமாக அடையப்பட்ட சந்ததியின் துணையுடன், அத்தகைய துணையில்லாமல் கிட்ட முடியாத இன்பலோகங்களுக்குச் செல்வேன். உத்தமியே, அறநெறிக்கு இணக்கமானதை அறிவாயாக, அறிந்து கொண்டு உன் முயற்சிகளில் இருந்து விலகுவாயாக” என்றார்[5].(90)அந்தப் பெண்மணி, “ஓ! மறுபிறப்பாளரே, காற்று {வாயு}, நெருப்பு {அக்னி}, நீர் {வருண} தேவர்களோ, பிற தேவர்களோ கூடக் காமதேவனைப் போலப் பெண்களுக்கு ஏற்புடையவர்கள் ஆகமாட்டார்கள். உண்மையில், பெண்கள் பாலினக்கலவியை மிகவும் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள்.(91) ஆயிரம், அல்லது ஒருவேளை ஒரு லட்சம் பெண்களில் ஒருத்தி மட்டுமே தன் கணவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவளாகக் காணப்படுகிறாள்.(92) ஆசையின் {காம} ஆதிக்கத்தில் இருக்கும்போது, அவர்கள் தங்கள் குடும்பத்தையோ, தந்தையையோ, தாயையோ, சகோதரனையோ, கணவனையோ, மகன்களையோ, கணவனின் சகோதரனையோ {மைத்துனனையோ} குறித்துக் கவலைப்படுவதில்லை (காமம் இழுக்கும் வழியிலேயே அவர்கள் செல்வார்கள்).(93) உண்மையில், தங்களைக் கொள்ளும் கரைகளை இடிக்கும் பேராறுகளைப் போலவே அவர்கள் தங்களுக்கு இன்பமெனக் கருதவதைத் தேடி {லீலை செய்து} (தாங்கள் பிறந்த அல்லது திருமணத்தின் மூலம் இணைந்த) குடும்பத்தை அழிக்கிறார்கள். படைப்பாளனே, பெண்களின் களங்கங்களை விரைவாகக் குறித்துக் கொண்டு இதைச் சொல்லியிருக்கிறான்” என்றாள்”.(94)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெண்களின் குறைகளை அறிந்து கொள்ள விரும்பிய அம்முனிவர் பிறகு அந்தப் பெண்ணிடம், “இவ்வகையில் என்னிடம் பேசுவதை நிறுத்துவாயாக. ஆசைகளில் {காமத்தில்} இருந்தே ஏக்கம் எழுகிறது. நான் (வேறு) என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக” என்றார் {அஷ்டவக்கிரர்}[6].(95)அதற்குப் பதிலாக அந்தப் பெண்மணி, “ஓ! சிறப்புமிக்கவரே, காலம் மற்றும் இடத்திற்கு ஏற்றபடி (என்னில் ஏற்புடைய எதையும்) நீர் காண்பீர். அதுவரை (சில காலத்திற்கு) நீர் இங்கே வாழ்வீராக, ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே. போதிய வெகுமதியளிக்கப்பட்டவளாக நான் என்னைக் கருதிக் கொள்வேன்” என்றாள்.(96)

ஓ! யுதிஷ்டிரா, அவளால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த மறுபிறப்பாள முனிவர், அவளது வேண்டுகோளுக்கு இணங்கும் தீர்மானத்தை வெளிப்படுத்தும் வகையில், “உண்மையில், என்னால் முடிந்தவரை நான் இந்த இடத்தில் உன்னுடன் வசித்திருப்பேன்” என்றார்[7].(97)பிறகு அந்த முனிவர், முதுமையில் பீடிக்கப்பட்ட அந்தப் பெண்ணைக் கண்டு, அக்காரியம் குறித்து நியாயமாகச் சிந்திக்கத் தொடங்கினார். தமது எண்ணங்களால் கொதிப்புற்றவராக அவர் காணப்பட்டார்.(98) பிராமணர்களில் முதன்மையான அவர், அந்தப் பெண்ணின் மேனியில் எந்தப் பகுதியில் தமது கண்களைச் செலுத்தினாலும், அவரது கண்கள் எந்த மகிழ்ச்சியையும் அடையத் தவறின. மறுபுறம், அவ்வுறுப்புகளைக் கண்ட அருவருப்பினால் அவரது பார்வை விலகுவதாகத் தெரிந்தது.(99)

{அவர்}, “இந்தப் பெண்மணியே நிச்சயம் இந்த அரண்மனையின் தேவியாக இருக்க வேண்டும். ஏதாவது சாபத்தின் மூலம் இவள் அருவருப்பானவளாக்கப் பட்டாளா? இந்தக் காரணத்தை விரைவாக நான் உறுதி செய்து கொள்வது முறையாகாது” {என நினைத்தார்}.(100) தமது இதயத்தில் கமுக்கமாய் நினைத்து, காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் இருந்த அம்முனிவர், அந்த நாளின் எஞ்சிய நேரத்தையும் {பகலையும்} இக்கவலையுடனே கழித்தார்.(101)

அப்போது அந்தப் பெண் அவரிடம், “ஓ! சிறப்புமிக்கவரே, மாலை மேகங்களின் மூலம் சூரியன் சிவந்திருப்பதைக் காண்பீராக. நான் உமக்குச் செய்ய வேண்டிய தொண்டு என்ன?” என்று கேட்டாள்.(102)

முனிவர் அவளிடம், “என் தூய்மைச் சடங்குகளுக்காக நீர் கொண்டு வா. நீராடி முடித்ததும், என் நாவையும், புலன்களையும் அடக்கி நான் என் மாலைத் துதிகளைச் செலுத்த வேண்டும்” என்றார்.(103)

கன்னியான கிழவி! – அநுசாஸனபர்வம் பகுதி – 20-அஷ்டவக்கிரரை அன்புடன் கவனித்துக் கொண்ட கிழவி; மீண்டும் அஷ்டவக்கிரரின் படுக்கைக்குச் சென்றது; தடுத்த முனிவர்; கிழவி மன்றாடியது; கன்னியாக வடிவம் மாறியது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு ஆணையிடப்பட்ட அந்தப் பெண்மணி, “அப்படியே ஆகட்டும்” என்றாள். பிறகு அவள் (முனிவரின் உடலில் பூசுவதற்காக) எண்ணெயும் {தைலமும்}, தூய்மைச்சடங்கின் போது அணியும் துண்டையும் கொண்டு வந்தாள்.(1) அந்தத் தவசியால் அனுமதிக்கப்பட்ட அவள், தான் கொண்டு வந்த நறுமணத் தைலத்தை அவரது உடல்முழுவதும் பூசினாள்.(2) மென்மையாக {தைலம் கொண்டு} பூசப்பட்ட அந்த முனிவர், பூச்சு முடிந்ததும், தூய்மைச் சடங்கிற்கான அறைக்கு {மஞ்சனமாடுமிடத்திற்குச்} சென்றார். அங்கே அவர் பெருங்காந்தியைக் கொண்டதும், சிறந்ததுமான புதிய இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.(3) முனிவர் தமது இருக்கையில் அமர்ந்த பிறகு, அந்த முதிய பெண்மணி தன் மென்மையான கரங்களால் இனிமையாகத் தீண்டி அவரது உடலைக் கழுவத் தொடங்கினாள்.(4) முனிவரின் தூய்மைச்சடங்கு காரியத்தில் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக மிக ஏற்புடைய தொண்டைச் செய்தாள். கடும் நோன்புகளைக் கொண்ட அம்முனிவர், தம்மைக் கழுவிய வெண்ணீருக்கும், தம்மைக் கழுவுவதில் ஈடுபடும் மென்கரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் காணத் தவறியதால் மொத்த இரவும் இவ்வாறே கழிந்தது. நீராடலில் இருந்து எழுந்த முனிவர் மிகவும் ஆச்சரியமடைந்தார்[1].(5,6) கிழக்கு அடிவானில் சூரியன் எழுவதை அவர் கண்டார்.இதனால் ஆச்சரியமடைந்த அவர், தமக்குள்ளேயே, “இஃது உண்மையா? என் புத்திமயக்கமா?” எனக் கேட்டுக் கொண்டார்.(7) அம்முனிவர் ஆயிரங்கதிர் தேவனை {சூரியனை} முறையாக வழிபட்டார். அது முடிந்ததும், தாம் என்ன செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் கேட்டார். அந்த முதிய பெண்மணி, அமுதத்தின் சுவைக்கு ஒப்பான சுவைமிக்க உணவை அம்முனிவருக்குப் படைத்தாள்.(8) உணவு சுவைமிக்கதாக இருந்ததன் விளைவால் முனிவரால் அதிகம் உண்ண முடியவில்லை. அவர் சிறிதளவே உட்கொண்டாலும் பகல் கடந்து மாலை வந்தது.(9) அப்போது அந்த முதிய பெண்மணி படுக்கைக்குச் சென்று உறங்கும்படி முனிவரிடம் கேட்டுக் கொண்டாள். முனிவருக்கு ஒரு சிறந்த படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது, மற்றொரு படுக்கையில் அவள் படுத்துக் கொண்டாள்.(10) முதலில் முனிவரும், அந்த முதிய பெண்ணும் வெவ்வேறு படுக்கையில் படுத்திருந்தாலும், நள்ளிரவில் அந்தப் பெண் தன் படுக்கையைவிட்டு எழுந்து முனிவரின் படுக்கைக்குச் சென்றாள்.(11)

அஷ்டவக்கிரர், “ஓ! அருளப்பட்ட பெண்ணே, மாற்றான் மனைவியுடன் பாலினக் கலவியில் ஈடுபட என் மனம் மறுக்கிறது. உத்தமியே, என் படுக்கையைவிட்டுச் செல்வாயாக. நீ அருளப்பட்டிருப்பாயாக, நீயே விரும்பி இதிலிருந்து விலகுவாயாக” என்றார்[2].(12)அந்தப் பெண், “ஓ! கல்விமானான பிராமணரே, நான் ஆசையால் {காமத்தால்} கொடுமைப்படுத்தப்படுகிறேன் {காமக்கொடுமையிலிருக்கிறேன்}. என் அர்ப்பணிப்பை {பக்தியைக்} குறித்துக் கொள்வீராக. என்னை அன்புடன் அழைக்க மறுப்பதால் நீர் பாவத்தை இழைக்கிறீர்” என்றாள்.(15)

அஷ்டவக்கிரர், “தான்விரும்பியபடி செயல்படும் மனிதன் பல்வேறு பாவங்கள் இழுத்துச் செல்லும். என்னைப் பொறுத்தவரையில், தற்கட்டுப்பாட்டின் மூலம் நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவல்லவனாக இருக்கிறேன். உத்தமியே, உன் படுக்கைக்குத் திரும்பிச் செல்வாயாக” என்றார்.(16)

அந்தப் பெண், “நான் உமக்குத் தலைவணங்குகிறேன். எனக்குக் கருணை காட்டுவதே உமக்குத் தகும். ஓ பாவமற்றவரே, நான் உம்முன்பு நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறேன், நீர் எனது புகலிடமாவீராக.(17) உண்மையில், உமது துணைவியாக இல்லாத ஒருத்தியுடன் கலவியில் ஈடுபடுவதைப் பாவமாகக் கண்டீரெனில், நான் என்னை உமக்குக் கொடுக்கிறேன். ஓ! மறுப்பிறப்பாளரே, திருமணத்திற்காக என் கரத்தை நீர் ஏற்பீராக.(18) நீர் எப்பாவமும் இழைத்தவராக மாட்டீர். இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். நானே எனக்கு அதிகாரி என்பதை அறிவீராக.[3] இதில் பாவமேதும் இருந்தால், அஃது என்னை மட்டுமே சேரட்டும். நீர் என்னை ஏற்பீராக” என்றாள்.(19)அஷ்டவக்கிரர், “ஓ! உத்தமியே, நீயே உனக்கு அதிகாரியாக இருப்பது எவ்வாறு? இதன் காரணத்தை எனக்கு நீ சொல்வாயாக. மூவுலகிலும் தனக்குத்தானே தலைவியாகக் கருதத்தக்க ஒரு பெண்ணாவது இல்லையே.(20) கன்னிகையாக இருக்கும்போது அவளைத் தந்தை பாதுகாக்கிறார். இளமையில் இருக்கும்போது அவளைக் கணவன் பாதுகாக்கிறான். முதுமையில் மகன் அவளைப் பாதுகாக்கிறான். பெண்கள் தாங்கள் வாழுங்காலம் வரை ஒரு போதும் சார்பற்றவர்களாக {சுதந்திரமானவர்களாக} இருப்பதில்லை” என்றார்[4].(21)அந்தப் பெண், “கன்னிப்பருவத்தில் இருந்தே நான் பிரம்மச்சரிய நோன்பைக் கடைப்பிடித்து வருகிறேன். இதில் ஐயமேதும் கொள்ளாதீர். நான் இன்னும் கன்னியாகவே இருக்கிறேன். என்னை உமது மனைவியாக்கிக் கொள்வீராக. ஓ! பிராமணரே, நான் உம்மிடம் கொண்ட இந்த அர்ப்பணிப்பை {பக்தியைக்} கொன்றுவிடாதீர் {என் ஆசையைக் கெடாதீர்}” என்றாள்.(22)

அஷ்டவக்கிரர், “நீ என்னை விரும்புவதைப் போலவே நானும் உன்னை விரும்புகிறேன். எனினும், தீர்க்க வேண்டிய இந்தக் கேள்வியுமிருக்கிறது. என் விருப்பங்களுக்கு நான் வசப்படுவதால், முனிவரின் {வதான்யரின்} விருப்பங்களுக்கு எதிராகச் செயல்பட்டவனாகக் கருதப்படுவேனா?(23) இஃது ஆச்சர்யம் நிறைந்ததாக இருக்கிறது. இது நன்மைக்கு வழிவகுக்குமா?”. {இந்தக் கணத்தில் கிழவி குமரியாகிறாள்}.

{அஷ்டவக்கிரர் தமக்குள்ளேயே}, “இதோ அழகிய ஆபரணங்களாலும், ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு கன்னி இருக்கிறாள்.(24) இவள் பேரழகுடன் இருக்கிறாள். இவ்வளவு காலம் இவளது அழகை ஏன் முதுமை மறைத்திருந்தது? தற்போது ஓர் அழகிய கன்னியாகத் தெரிகிறாளே. இதன் பிறகு இவள் என்ன வடிவத்தை ஏற்கப்போகிறாள் என்பதை அறிய முடியாது[5].(25) ஆசைகள் மற்றும் விருப்பங்களிடம் நான் கொண்டுள்ள கட்டுப்பாட்டையோ, நான் ஏற்கனவே அடைந்திருக்கும் மனநிறைவிலிருந்தோ நான் ஒருபோதும் பிறழமாட்டேன். அத்தகைய பிறழ்வு நன்மையானதாகத் தெரியவில்லை. நான் வாய்மையுடனே என்னை ஒருங்கிணைத்துக் கொள்வேன்” {என்றார்}[6] {என்றார் பீஷ்மர்}.(26)

அஷ்டவக்கிரர் திருமணம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 21-அஷ்டவக்கிரரை அன்புடன் கவனித்துக் கொண்ட கிழவி; மீண்டும் அஷ்டவக்கிரரின் படுக்கைக்குச் சென்றது; தடுத்த முனிவர்; கிழவி மன்றாடியது; கன்னியாக வடிவம் மாறிய வட திசை தேவி…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அஷ்டவக்கிரர் பெருஞ்சக்தியைக் கொண்டவராக இருப்பினும் அந்தப் பெண் அஷ்டவக்கிரரின் சாபத்திற்கு ஏன் அஞ்சவில்லை என்பதை எனக்குச் சொல்வீராக. மேலும் அஷ்டவக்கிரர் அந்த இடத்தில் இருந்து திரும்பி வந்தது எவ்வாறு?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அஷ்டவக்கிரர் அவளிடம், “நீ இவ்வாறு உன் வடிவை மாற்றிக் கொண்டது எவ்வாறு? உண்மையற்ற எதையும் நீ சொல்லக்கூடாது. இதை நான் அறிய விரும்புகிறேன். ஒரு பிராமணன் முன்பு உண்மையைப் பேசுவாயாக” என்றார்.(2)

அந்தப் பெண், “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, சொர்க்கத்திலோ, பூமியிலோ எங்கு நீர் வசித்தாலும், {எங்கும்} பாலினங்களுக்கிடையிலான கலவி ஆசை காணப்படுகிறது. ஓ! தவறா ஆற்றல் கொண்டவரே, இவை யாவும் என்ன என்பதைக் குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(3) ஓ! பாவமற்றவரே, நீர் சரியாக இருக்கிறீரா என்பதைச் சோதிக்க நான் வகுத்த சோதனையிது. ஓ! தவறா ஆற்றல் கொண்டவரே, உமது மனோபலத்தால் உலகங்கள் அனைத்தையும் நீர் ஆடக்கிவிட்டீர்.(4) நான் வட திசைப்புள்ளியின் உடல் வடிவம் என்பதை அறிவீராக. நீர் பெண்மையின் மென்மையைக் கண்டீர். முதிய பெண்களும் கூடக் கலவியாசையின் கொடுமையை அனுபவிக்கிறார்கள்.(5) பெரும்பாட்டனும் {பிரம்மனும்}, இந்திரனுடன் கூடிய தேவர்கள் அனைவரும் உம்மிடம் நிறைவடைந்திருக்கிறார்கள். சிறப்புமிக்கவரான நீர் இங்கு வந்த நோக்கத்தை நான் அறிவேன்.(6) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உமக்கான மணப்பெண்ணின் தந்தையும், முனிவருமான வாதன்யர், நான் உமக்குப் போதிக்கும் வகையில் உம்மை இங்கே அனுப்பி வைத்தார். அம்முனிவரின் விருப்பங்களுக்கு ஏற்புடைய வகையில் நான் ஏற்கனவே உமக்குப் போதித்துவிட்டேன்[1].(7) நீர் பாதுகாப்பாக இல்லம் திரும்புவீர். நீர் திரும்பிப் பயணிக்கையில் உமக்குச் சிரமமேற்படாது. நீர் தேர்ந்தெடுத்த பெண்ணையே நீர் மனைவியாக அடைவீர். அவள் உமக்கு ஒரு மகனை ஈன்றெடுப்பாள்.(8) ஆசையினாலே நான் உம்மை வேண்டினேன். நீர் எனக்குச் சிறந்த பதிலைக் கொடுத்தீர். பாலினக்கலவியாசையானது மூவுலகிலும் கடக்கப்பட முடியாததாகும்[2].(9) இத்தகைய தகுதியை அடைந்த நீர் உமது இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்வீராக. (என்னிடம் இருந்து) வேறு என்ன கேட்க விரும்புகிறீர்? ஓ! அஷ்டவக்கிரரே, வாய்மைக்குப் பொருந்தும் வகையில் அதை நான் உமக்குச் சொல்வேன்.(10) ஓ! மறுபிறப்பாள தவசியே, உம் நிமித்தமாக முனிவர் வதான்யரால் நான் முதலில் நிறைவடையச் செய்யப்பட்டேன் {வதான்யரால் நான் வேண்டிக் கொள்ளப்பட்டேன்}. அவரைக் கௌரவிக்கவே இவை யாவற்றையும் நான் உமக்குச் சொன்னேன்” என்றாள் {வடதிசைதேவி}”.(11)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவளுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், மறுபிறப்பாளருமான அஷ்டவக்கிரர் மதிப்புமிக்க மனோநிலையில் தமது கரங்களைக் கூப்பினர். பிறகு அவர் அந்தப் பெண்ணிடம் தாம் திரும்பிச் செல்வதற்கான அனுமதியைக் கேட்டார். வேண்டிய அனுமதியைப் பெற்றுக் கொண்ட அவர் தமது ஆசிரமத்திற்கே திரும்பிச் சென்றார்.(12) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, அவர் தமது இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தபிறகு, தம் உற்றார் உறவினரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, பிராமணரான வதான்யரை நோக்கி முறையான வழியில் சென்றார்.(13) வழக்கமான விசாரிப்புகளுடன் வதான்யரால் நல்வரவு கூறப்பட்ட முனிவர் அஷ்டவக்கிரர், (தாம் வடக்கே பயணம் மேற்கொண்டிருந்தபோது) கண்ட அனைத்தையும் நன்கு நிறைவடைந்த இதயத்துடன் உரைத்தார்.(14)

அவர், “உம்மால் ஆணையிடப்படியே நான் கந்தமாதன மலைகளுக்குச் சென்றேன். அம்மலைகளுக்கு வடக்கே கிடக்கும் பகுதியில் மிக மேன்மையான தேவி ஒருத்தியைக் கண்டேன்.(15) அவள் அன்போடு என்னை வரவேற்றாள். நான் கேட்க அவள் உமது பெயரைச் சொன்னாள், மேலும் பல்வேறு காரியங்களில் போதனையும் செய்தாள். ஓ! தலைவரே, நான் அவள் சொன்னதைக் கேட்ட பிறகு அங்கிருந்து திரும்பி வந்தேன்” என்றார்.(16)

இவ்வாறு சொன்ன அவரிடம் {அஷ்டவக்கிரரிடம்} வதான்யர், “நல்ல நட்சத்திர நாளில் உரிய சடங்குகளுடன் என் மகளின் கரத்தைப் பெறுவாயாக. என் பெண்ணுக்கு மணமகனாக நீயே தகுந்தவனாவாய்” என்றார்”.(17)

பீஷ்மர் தொடர்ந்தார், “அஷ்டவக்கிரர், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி அந்தப் பெண்ணின் கரத்தை ஏற்றார். உண்மையில், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட அந்த நீதிமிக்க முனிவர் இன்பத்தால் நிறைந்தார்.(18) அந்த அழகிய கன்னிகையைத் தம் மனைவியாக அடைந்த அம்முனிவர், அனைத்து வகை (மன) நோயிலிருந்தும் விடுபட்டவராகத் தமது ஆசிரமத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார்” {என்றார் பீஷ்மர்}[3].(19)

கொடைக்கான தகுதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 22-கொடைக்குத் தகுந்த தகுதிகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கொடைகளுக்குத் தகுந்தவரென நித்திய பிராமணர்கள் யாரை அழைக்கிறார்கள்? வாழ்வு முறைக்கான குறியீடுகளைச் சுமப்பவன் பிராமணனாகக் கருதப்பட வேண்டுமா? அத்தகைய குறியீடுகள் இல்லாதவனும் அவ்வாறு கருதப்படலாமா?” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, தன் வகைக்கான கடமைகளைப் பின்பற்றும் ஒரு பிராமணன், குறியீடுகளைச் சுமப்பவனாக இருந்தாலும், அவை அற்றவனாக இருந்தாலும், இரண்டும் குற்றமற்ற நிலைகளே என்பதால் அவன் பிரம்மச்சரியக் குறியீடுகளைத் தரித்திருக்கிறானோ இல்லையோ, அவனுக்குக் கொடைகள் வழங்கப்பட வேண்டும் என்றே சொல்லப்படுகிறது” என்றார்.(2)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தூய்மையடையாத ஒருவன் வேள்வி நெய்யையோ, உணவையோ பெரும் அர்ப்பணிப்புடன் மறுபிறப்பாள வகையினருக்குக் கொடையாகக் கொடுத்தால் என்ன குற்றமேற்படும்?” என்று கேட்டான்[2].(3)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்], “தற்கட்டுப்பாடென்பதே சிறிதும் அற்றவனும்கூட அர்ப்பணிப்பின் மூலம் நிச்சயம் தூய்மையடைகிறான். ஓ! பெருங்காந்தி கொண்டவனே, அத்தகைய மனிதன், (கொடைகளால் மட்டுமல்லாமல்) அவன் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலமும் தூய்மையடைகிறான்” என்றார்[3].(4)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தேவர்கள் சார்ந்த ஒரு செயலில் ஈடுபட ஒரு பிராமணன் முனையும்போது அவன் ஒருபோதும் சோதிக்கப்படக்கூடாது என்று சொல்லப்படுகிறது. எனினும், பித்ருக்கள் சார்ந்த அத்தகைய செயல்களில் ஈடுபட அந்தப் பிராமணன் முனையும்போது (ஒழுக்கம் மற்றும் தகுதி காரியங்களில்) அவன் சோதிக்கப்பட வேண்டும் என்று கல்விமான்கள் சொல்கின்றனர்” என்றான்.(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தேவர்களைக் குறிக்கும் செயல்களைப் பொறுத்தவரையில் அவற்றைச் செய்வதில் ஈடுபடும் பிராமணரின் விளைவால் அல்லாமல், தேவர்களின் அருளாலேயே கனிதருகின்றன. வேள்விகளைச் செய்பவர்கள், அச்செயல்களுடன் பற்றியிருக்கும் தகுதியைத் தேவர்களின் மூலம் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை[4].(6) ஓ! பாரதர்களின் தலைவா, பிராமணர்கள் எப்போதும் பிரம்மத்தை ஓதுபவர்களாவர். நுண்ணறிவுடன் கூடிய முனிவர் மார்க்கண்டேயர், உலகங்கள் அனைத்திலும் இதையே பழங்காலத்தில் சொன்னார்” என்றார்[5].(7)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அறிமுகமற்றவன் {பழகாதவன்}, (தன் வகைக்கான கடமைகளுடன் தொடர்புடைய) கல்விமான், திருமணத்தின் மூலம் தொடர்புடையவன் {சுற்றத்தான்}, தவங்களுடன் கூடியவன், வேள்விச் செயல்களில் வேட்கை கொண்டவன் ஆகிய இந்த ஐவரும் ஏன் {கொடைக்குத் தகுந்த} சரியான மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள்?” என்று கேட்டான்.(8)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறிமுகமற்றவர்கள், உறவினர்கள், தவசிகள் ஆகிய முதல் மூவரும், தூய பிறவி, அறச்செயல்களில் வேட்கை, கல்வி, கருணை, பணிவு, நேர்மை, வாய்மை ஆகிய குணங்களைக் கொண்டிருந்தால் {கொடைகளுக்குத் தகுந்த} சரியான மனிதர்களாகக் கருதத்தக்கவராவர். கல்விமான்கள் மற்றும் வேள்விகளில் வேட்கை கொண்டோர் ஆகிய வேறு இருவரும், தூய பிறவி, கருணை, பணிவு, நேர்மை மற்றும் வாய்மை ஆகிய ஐந்து குணங்களைக் கொண்டிருந்தால் {கொடைகளுக்குத் தகுந்த} சரியான மனிதர்களாகக் கருதத்தக்கவர்களாவர்.(9) ஓ! பிருதையின் மகனே, வலிமையும், சக்தியும் கொண்டவர்களான பூமாதேவி, முனிவர் காசியபர், நெருப்பு தேவன் {அக்னி}, தவசி மார்க்கண்டேயர் ஆகிய நால்வரின் கருத்துகளை இப்போது சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(10)

பூமியானவள், “பெருங்கடலில் போடப்பட்ட மண்கட்டி விரைவாகக் கரைந்துவிடுவதைப் போலவே, வேள்வி செய்யத் துணைபுரிதல், கல்வி கற்பித்தல் மற்றும் கொடை ஆகிய மூன்று உயர்ந்த குணங்களில் அனைத்து வகைப் பாவங்களும் மறைந்து போகின்றன” என்றாள்[6].(11)காசியபர், “ஒரு மறுபிறப்பாளன் நற்குணத்தில் இருந்து வீழ்ந்தால், ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்கள், சாங்கிய தத்துவம், புராணங்கள், உயர் குடி பிறப்பு ஆகியவற்றாலும் அவனைக் காக்க முடியாது” என்றார்.(12)

அக்னி, “கல்வியில் ஈடுபட்டு, தன்னைக் கல்விமானாகக் கருதும் பிராமணன், தன் கல்வியின் மூலம் பிறரின் மதிப்பை அழிக்க முனைந்தால், அறம்வீழ்ந்தவனாகி, வாய்மையிலிருந்து தொடர்பறுந்தவனாகக் கருதப்படுகிறான். இத்தகைய அழிவு மேதையான ஒருவனால் மறுமையில் இன்ப உலகங்களை ஒருபோதும் அடையமுடியாது” என்றான்.(13)

மார்க்கண்டேயர், “ஓராயிரம் குதிரை வேள்விகளும், வாய்மையும் தராசில் எடை பார்க்கப்பட்டால், முன்னது பின்னதின் பாதி எடைக்காவது நிற்குமா என்பதை நான் அறியவில்லை” என்றார்”.(14)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அளவிலா சக்தி கொண்டவர்களான பூமாதேவி, காசியபர், அக்னி மற்றும் ஆயுததாரியான பிருகுவின் மகன் {மார்க்கண்டேயர்} ஆகிய நால்வரும் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு விரைவாகச் சென்றுவிட்டனர்”.(15)

யுதிஷ்டிரன், “இவ்வுலகில் பிரம்மச்சரிய நோன்பை நோற்கும் பிராமணர்கள், (இறந்து போன மூதாதையருக்குச் சிராத்தங்களில்) ஒருவன் அளிக்கும் காணிக்கைகளை {உணவை} வேண்டி உண்டால், சிராத்தங்களைச் செய்பவன் அத்தகைய பிராமணர்களுக்குக் காணிக்கையளிப்பதால், அவற்றை {அந்த சிராத்தங்கள்} நன்கு செய்யப்பட்டவையாகக் கருத முடியுமா?” என்று கேட்டான்[7].(16)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “குறிப்பிட்ட கால அளவுக்கு (பனிரெண்டு ஆண்டுகள்) பிரம்மச்சரிய நோன்பைப் பயின்று, வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும் திறமைடைந்த ஒரு பிராமணன், சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளை வேண்டி உண்டால், அவன் தன் நோன்பில் இருந்து வீழ்ந்தவனாகக் கருதப்படுவான். எனினும், அந்தச் சிராத்தம், எவ்வழியிலும் களங்கமடைந்ததாகக் கருதப்படமுடியாது” என்றார்.(17)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அறம் அல்லது கடமைக்குப் பல கதிகளும், எண்ணற்ற வாயில்களும் இருப்பதாக ஞானிகள் சொல்கின்றனர். எனினும், ஓ! பாட்டா, இக்காரியத்தில் முடிவான தீர்மானங்கள் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(18)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, தீங்கிழையாமை, வாய்மை, கோபமின்மை (மனிக்கும் தன்மை), கருணை, தற்கட்டுப்பாடு, நேர்மை ஆகியவை அறத்தின் குறியீடுகளாகும்.(19) ஓ!! மன்னா, அறத்தைப் புகழ்ந்தாலும், அதன்படி செயல்படாமல், எப்போதும் பாவத்தில் ஈடுபட்டபடியே பூமியில் திரியும் மனிதர்கள் உண்டு.(20) அத்தகைய மனிதர்களுக்கு, தங்கமோ, ரத்தினங்களோ, பசுக்களோ, குதிரைகளோ கொடுப்பவன், இறந்து போன பசுக்கள் மற்றும் எருமைகளின் இறைச்சியை உண்டு வாழ்பவர்களும், நகரங்கள் மற்றும் கிராமங்களின் வெளியில் வாழ்பவர்களும், புகாசர்கள் என்றழைக்கப்படுபவர்களுமான மனிதர்கள் மற்றும் பிறர் செய்யும் செயல்களையும், செய்யாதவற்றையும் கோபம், மடமையின் ஆதிக்கத்தில் வெளியிடும் மனிதர்கள் ஆகியோரின் மலத்தை உண்டபடியே பத்துவருடங்கள் பாழ்நரகில் மூழ்கியிருப்பார்கள்[8].(21,22) ஓ! ஏகாதிபதி, பிரம்மச்சரிய நோன்பு நோற்கும் பிராமணன் ஒருவனுக்கு, (இறந்து போன மூதாதையருக்குச் செய்யும்) சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளைக் கொடுக்காத மூடர்கள், பெரும் துன்பம் நிறைந்த உலகங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்” என்றார்.(23)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பிரம்மச்சரியத்தைவிட மேன்மையானது எது? உயர்ந்த அறக் குறியீடு எது? உயர்ந்த வகைத் தூய்மை எது” என்று கேட்டான்.(24)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, தேன் {மது} மற்றும் இறைச்சியைத் தவிர்த்தல் பிரம்மச்சரியத்தைவிட மேன்மையானது என நான் சொல்வேன். அறமானது எல்லைகள் அல்லது கட்டுப்பாடுகளுக்குள் கிடக்கிறது. துறவே சிறந்த அறக்குறியீடாகும் (அஃது உயர்வகைத் தூய்மையுமாகும்)” என்றார்.(25)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒருவன் எக்காலத்தில் அறம்பயில வேண்டும்? எக்காலத்தில் செல்வம் நாடப்பட வேண்டும்? எக்காலத்தில் இன்பத்தை அனுபவிக்க வேண்டும்? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(26)

பீஷ்மர் {யுதிஷ்டிரன், “ஒருவன் தன் வாழ்நாளின் முதற்பாகத்தில் {காலையில்} செல்வமீட்ட வேண்டும். பிறகு அறமீட்ட வேண்டும். அதன் பிறகு {இரவில்} இன்பத்தை அனுபவிக்க வேண்டும். எனினும், அவன் இவை எவற்றிலும் பற்றுக் கொள்ளக் கூடாது.(27) அவன் பிராமணர்களை மதிக்க வேண்டும், ஆசான்களையும், பெரியோரையும் வழிபட வேண்டும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்ட வேண்டும், மென்மனோநிலையுடனும், ஏற்புடைய வாக்குடனும் இருக்க வேண்டும்.(28) நீதிமன்றத்தில் பொய்யுரைப்பது, மன்னனை வஞ்சிப்பது, ஆசான்கள் மற்றும் பெரியோரிடம் போலியாக நடந்து கொள்வது ஆகியவை பிராமணக்கொலைக்கு {பிரம்மஹத்திக்கு} இணையானதாக (இணையான கொடுமையாகக்) கருதப்படுகின்றன.(29) அவன் மன்னனை ஒருபோதும் தாக்கக்கூடாது. பசுவை ஒருபோதும் அடிக்கக்கூடாது. இவ்விரு குற்றங்களும் கருக்கொலைக்கு இணையான பாவங்களாகும்.(30) அவன் தன் (ஹோம) நெருப்பை ஒருபோதும் கைவிடக்கூடாது. வேத கல்வியை ஒருபோதும் கைவிடக்கூடாது. அவன் ஒரு பிராமணனைச் சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்தக்கூடாது. இவை அனைத்தும் பிராமணக்கொலைக்கு இணையான குற்றங்கள் ஆகும்” என்றார்.(31)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எவ்வகைப் பிராமணர்கள் நல்லோராகக் கருதப்பட வேண்டும்? எந்தப் பிராமணர்களுக்குக் கொடையளித்தால் ஒருவன் பெருந்தகுதியை {பெரும்புண்ணியத்தை} ஈட்ட முடியும்? எவ்வகைப் பிராமணர்களுக்கு ஒருவன் உணவூட்ட வேண்டும்? ஓ! பாட்டா, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(32)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கோபத்தில் இருந்து விடுபட்டவர்களும், அறச்செயல்களில் அர்ப்பணிப்புமிக்கவர்களும், வாய்மையில் உறுதியுள்ளவர்ளும், தற்கட்டுப்பாட்டைப் பயில்பவர்களும் நல்ல பிராமணர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டலாம்.(33) செருக்கிலிருந்து விடுபட்டவர்களும், அனைத்தையும் பொறுத்துக் கொள்ளக்கூடியவர்களும், தங்கள் நோக்கத்தை அடைவதில் உறுதியுள்ளவர்களும், தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களும், அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகத் தங்களை அர்ப்பணிப்பவர்களும், அனைவரிடமும் நட்பு மனோநிலையுடன் இருப்பவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டலாம்.(34) பேராசையில் இருந்து விடுபட்டவர்களும், தூய இதயம் கொண்டவர்களும், ஒழுக்கத் தூய்மை கொண்டவர்களும், கல்வி மற்றும் பணிவு கொண்டவர்களும், வாக்கில் வாய்மை கொண்டவர்களும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தங்கள் கடமைகளை நோற்பவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(35) நான்கு வேதங்களையும், அவற்றின் அங்கங்கள் அனைத்தையும் கற்பவனும், (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) நன்கறியப்பட்ட ஆறு கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவனுமான பிராமணனே கொடைகளுக்குத் தகுந்தவன் என முனிவர்கள் தீர்மானித்திருக்கின்றனர். அத்தகைய தகுதிகளைக் கொண்ட பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(36)

தகுந்த பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் தன் தகுதியைப் பல்லாயிரம் மடங்கு பெருக்கிக் கொள்கிறான். ஞானமும், வேத அறிவும் கொண்டவனும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்பவனும், ஒழுக்கத் தூய்மைக்காகப் புகழப்படுபவனும், அறம் சார்ந்தவனுமான தனியொரு பிராமணன், மொத்த குலத்தையும் மீட்கும் வல்லமை கொண்டவனாவான்[9].(37) ஒருவன், அத்தகைய தகுதிகளையுடைய பிராமணனுக்கு, பசுக்கள், குதிரைகள், செல்வம், உணவு மற்றும் பிறவகைப் பொருட்களைக் கொடையளிக்க வேண்டும். அத்தகைய மனிதர்களுக்கு அத்தகு கொடைகளைக் கொடுப்பதன் மூலம் ஒருவன் மறுமையில் பேரின்பத்தை அடைகிறான்.(38) நான் ஏற்கனவே சொன்னது போல, அத்தகைய ஒரே ஒரு பிராமணன் கூட, கொடையாளியின் மொத்த குலத்தையும் மீட்கவல்லவனாவான். எனவே, ஓ! அன்பு மகனே, அத்தகைய தகுதிகளைக் கொண்ட பல பிராமணர்களுக்குக் கொடுப்பதற்கு நான் என்ன சொல்ல முடியும்? ஒருவன் கொடையளிக்கும்போது அந்தக் கொடைக்குத் தகுந்தவனையே எப்போதும் தேர்ந்தெடுக்க வேண்டும்.(39) சரியான தகுதிகளைக் கொண்டவனும், நன்மக்கள் அனைவராலும் மதிப்புடன் கருதப்படுபவனுமான ஒரு பிராமணனைக் குறித்துக் கேள்விப்படும் ஒருவன், அவன் தொலைவில் வசித்தாலும் அழைத்து, அவன் வரும்போது வரவேற்று, தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் அவனை வழிபட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(40)

கொடைகளும், கொடுக்கும் முறைகளும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 23-தேவ காரியங்கள் மற்றும் பித்ரு காரியங்கள், அவற்றுக்குரிய காலங்கள், அவற்றுக்கு அழைக்கப்படத்தக்கவர், தகாதவர் ஆகியோர் குறித்தும், கொடையறங்கள் குறித்தும், சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் செல்பவர்கள் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தேவ காரியங்கள் மற்றும் (இறந்து போன) மூதாதையருக்குச் சிராத்தங்களில் செய்யும் காரியங்களுக்காக விதிக்கப்பட்டட விதிகள் என்னென்ன என்பதை நீர் எனக்குச் சொல்வதை கேட்க விரும்புகிறேன்” எனக் கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் (நீராடல் மற்றும் தூய்மையடையச்செய்யும் பிற செயல்களின் மூலம்) தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, நன்கறியப்பட்ட மங்கலச் சடங்குகளைச் செய்த பிறகே, அவன் தேவர்களுக்குரிய காரியங்களை முற்பகலிலும், பித்ருக்களுக்குரிய காரியங்கள் அனைத்தையும் பிற்பகலிலும் செய்ய வேண்டும்.(2) மனிதர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியவற்றை அன்பு மற்றும் மதிப்புடன் நடுப்பகலில் கொடுக்க வேண்டும். பொருத்தமற்ற காலத்தில் கொடுக்கப்படும் கொடையானது ராட்சசர்களால் அபகரிக்கப்படுகிறது[1].(3) எவராலும் தாண்டப்பட்ட, அல்லது நக்கப்பட்ட, அல்லது உறிஞ்சப்பட்ட, அமைதியற்ற நிலையில் கொடுக்கப்பட்ட, பருவகாலத்தின் விளைவால் தூய்மையற்றிருக்கும் பெண்களால் காணப்பட்டவையுமான கொடைகள் எந்தத் தகுதியையும் {புண்ணியத்தையும் / பலனையும்} உண்டாக்குவதில்லை. அத்தகைய கொடைகள் ராட்சசர்களின் பங்காகக் கருதப்படுகின்றன.(4) பலருக்கு முன்னிலையில் அறிவிக்கப்பட்ட, அல்லது ஒரு சூத்திரன் உண்டதில் ஒரு பகுதியாக உள்ள, அல்லது நாயால் பார்க்கப்பட்ட அல்லது நக்கப்பட்ட கொடைப் பொருட்கள் ராட்சசர்களின் பங்குகளாக அமைகின்றன.(5)முடியோ புழுவோ விழுந்த, அல்லது எச்சிலால் களங்கமடைந்த, அல்லது நாயால் பார்க்கப்பட்ட, அல்லது கண்ணீர் துளிகள் விழுந்த, அல்லது மிதிபட்ட உணவானது ராட்சசர்களின் பங்காக அமைந்துவிட்டதாக அறியப்பட வேண்டும்.(6) ஓ! பாரதா, ஓம் என்ற சொல்லைச் சொல்லத்தகாதவர்களால் உண்ணப்பட்ட, அல்லது ஆயுததாரிகளால் உண்ணப்பட்ட, அல்லது தீய மனிதனால் உண்ணப்பட்ட உணவானது ராட்சசர்களின் பங்காக அமைந்துவிட்டதாக அறியப்பட வேண்டும்[2].(7) வேறொருவரால் ஏற்கனவே உண்ணப்பட்ட, அல்லது தேவர்கள், விருந்தினர்கள், பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் உண்ணப்படும் உணவானது ராட்சசர்களால் அபகரிக்கப்படுகிறது. அத்தகைய களங்கமடைந்த உணவை தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கொடுக்கும்போது, அஃது அவர்களால் ஏற்கபடாமல் ராட்சசர்களால் அபகரிக்கப்படுகிறது.(8) மந்திரங்கள் சொல்லப்படாத, அல்லது முறையாகச் சொல்லப்படாதவையும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்காதவையும் சிராத்தங்களில் மூவகை மறுபிறப்பாளர்களால் கொடுக்கப்படும் உணவை, விருந்தினர்களுக்கும், பிற மக்களுக்கும் பரிமாறினால் அது ராட்சசர்களால் அபகரிக்கப்படும்.(9) புனித நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகளின் துணையுடன் தேவர்களுக்கோ, பித்ருக்களுக்கோ அர்ப்பணிக்கப்படாத, அல்லது அறவொழுக்கமற்ற தீய மனிதனால் உண்ணப்பட்டதன் விளைவால் களங்கமடைந்த உணவை விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டால், அது ராட்சசர்களின் பாங்காக அமைந்துவிட்டதாக அறியப்பட வேண்டும்.(10)எவை ராட்சசர்களின் பங்காகின்றன என்று நான் உனக்குச் சொன்னேன். இனி, கொடைகளுக்குத் தகுந்த பிராமணனை உறுதி செய்யும் விதிகளை விதிக்கப் போகிறேன் கேட்பாயாக.(11) (கொடும்பாவம் செய்த குற்றத்தால்) விலக்கப்பட்ட பிராமணர்கள் {பிரஷ்டப்ராமணர்கள்}, மூடர்களாகவும், பித்தர்களாகவும் இருக்கும் பிராமணர்கள் ஆகியோர், தேவர்களுக்கோ, பித்ருக்களுக்கோ அளிக்கப்படும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவர்களல்ல.(12) ஓ! மன்னா வெண்படை நோயால் பீடிக்கப்பட்ட, அல்லது ஆண்மையற்ற, அல்லது தொழுநோய் கொண்ட, அல்லது காசநோய் கொண்ட, அல்லது (மூளைத் திரிபுடன் கூடிய) வலிப்பு {காக்காய் வலிப்பு} நோய் கொண்ட, அல்லது கண்பார்வையற்ற எந்தப் பிராமணனும் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படக்கூடாது.(13) மருத்துவம் செய்பவர்களும், வளமிக்கோரால் நிறுவப்பட்ட தேவ சிலைகளுக்குத் தொண்டாற்றுவதற்காக ஊதியம் பெறும் வழக்கம் கொண்டவவர்களும், தேவர்களுக்குத் தொண்டாற்றி வாழ்பவர்களும், செருக்கு அல்லது வேறு போலி நோக்கங்களுக்காக நோன்பு நோற்பவர்களும், சோமத்தை விற்பவர்களுமான பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(14) ஓ! மன்னா, தொழிலால் பாடகராக, நர்த்தகராக, விளையாட்டுவீரராக, இசைக்கருவி இசைப்பவராக, புனித நூல்களை உரைப்பவர்களாக, போர்வீரர்களாக, தடகள வீரராக உள்ள பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(15)

சூத்திரர்களின் புனித நெருப்பில் ஆகுதி ஊற்றுபவர்களும், சூத்திரர்களின் ஆசான்களும், சூத்திரத் தலைவர்களுக்குப் பணியாட்களாக இருப்பவர்களுமான பிராமணர்கள் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவராவர்.(16) ஆசானாகப் பணிபுரிவதற்கு ஊதியம் வழங்கப்படுபவர்களும், ஊதியம் பெற்றுக் கொண்டு சில ஆசான்களிடம் சீடனாக இருப்பவர்களுமான பிராமணர்கள் வேதங்களை விற்பவர்களாகக் கருதப்படுவதால் அவ்விரு வகையினரும் அழைக்கபடத் தகுந்தவர்களல்ல.(17) சிராத்தத்தின் தொடக்கத்திலேயே கொடையளிக்கப்பட்டவனும், சூத்திரப் பெண்ணை மனைவியாக மணந்து கொண்டவனுமான பிராமணன் அனைத்து வகை ஞானத்தையும் கொண்டிருந்தாலும் அவன் அழைக்கப்படத்தகுந்தவனல்ல[3].(18) ஓ! மன்னா, இல்லற நெருப்பற்றவர்களும், சடலங்களுக்குக் காரியம் செய்பவர்களும், கள்வர்களும், {வேறு வகைகளில்} வீழ்ந்துவிட்டவர்களுமான பிராமணர்கள் அழைக்கப்படத்தகாதவர்களாவர்[4].(19) ஓ! மன்னா, முன்பின் தெரியாதவர்களும், தீயவர்களும், புத்ரிகாபுத்திரர்களுமான பிராமணர்கள் சிராத்த நிகழ்வுகளுக்கு அழைக்கப்படத் தகுந்தவர்களல்ல[5].(20) ஓ! மன்னா, கடனுக்குப் பணமளிப்பவனும், கடனில் கிட்டும் வட்டியில் வாழ்பவனும், உயிரினங்களை விற்று வாழ்பவனுமான பிராமணன் {அத்தகைய சிராத்தங்களுக்கு} அழைக்கப்படத்தகாதவனாவான்.(21) ஓ! மன்னா, மனைவிகளுக்கு அடங்கியவர்களும், கற்பற்ற பெண்களுக்குக் கள்ளக் காதலனாக வாழ்பவர்களும், காலை மாலை துதிகளைத் தவிர்ப்பவர்களுமான மனிதர்கள் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தகாதவர்களாவர்.(22)இனி, தேவர்கள் மற்றும் பித்ருக்களை மதிக்கும் வகையில் செய்யும் செயல்களுக்காக விதிக்கப்பட்ட பிராமணனைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்மையில், (மேற்கண்ட களங்கங்கள் இருந்தாலும்) ஒருவன் எதன் விளைவால் சிராத்தங்களில் கொடையளிப்பவனாகவோ, கொடையேற்பவனாகவோ ஆவானோ அந்தத் தகுதிகளை {சிறப்புகளை} உனக்குச் சொல்லப் போகிறேன்.(23) ஓ! மன்னா, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளையும், விழாக்களையும் நோற்பவர்களும், தகுதியை {புண்ணியத்தைக்} கொண்டவர்களும், காயத்ரி {மந்திரத்தை} அறிந்தவர்களும், பிராமணர்களின் பொதுக்கடமைகளை நோற்பவர்களுமான பிராமணர்கள், உழவில் ஈடுபட்டு வாழ்பவர்களாக இருந்தாலும் சிராத்தங்களுக்கு அவர்கள் அழைக்கப்படத்தகுந்தவர்களாவர்.(24) நற்குடியில் பிறந்த ஒரு பிராமணன், பிறருக்காகப் போரில் ஈடுபடும் படைத்தொழில் செய்து கொண்டிருந்தாலும் அவன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தக்கவனாவான். எனினும், ஓ! மகனே, வாழ்வை நடத்துவதற்காக வணிகத்தில் ஈடுபடும் பிராமணன் (தகுதி கொண்டவனாகவே இருப்பினும்) அவன் {சிராத்தங்களில்} நிராகரிக்கப்பட வேண்டும்.(25)

ஓ! மன்னா, தினமும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன், அல்லது வசிக்கத்தக்க நிலையான இடங்களில் {கிராமங்களில்} வசிப்பவனும், கள்வனல்லாதவனும், தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் கடமைகளைச் செய்பவனுமான பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்.(26) ஓ! பாரதக் குலத் தலைவா, ஓ! மன்னா, காலையிலும், நடுப்பகலிலும், இரவிலும் சாவித்ரியை உரைப்பவன் {முக்காலமும் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவன்}, அல்லது ஈகையில் கிட்டும் பிச்சையில் வாழ்பவனும், தன் வகை மனிதர்களுக்குச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் மற்றும் விழாக்களை {கர்மானுஷ்டாங்களைச்} செய்பவனுமான பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத்தகுந்தவனாவான்.(27) காலையில் செல்வமீட்டி பிற்பகலில் வறியவனாகுபவன், அல்லது காலையில் வறியவனாக இருந்து மாலையில் செல்வந்தனாகுபவன், அல்லது வன்மமற்றவன், அல்லது சிறு குற்றத்தால் {மட்டுமே} களங்கப்பட்டவனாக இருக்கும் பிராமணன் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்[6].(28) செருக்கோ, பாவமோ அற்றவனும், வரட்டுச் சச்சரவுகளில் ஈடுபடாதவன், அல்லது வீட்டுக்குவீடு திரிந்து கிட்டும் பிச்சையில் வாழ்பவனுமான பிராமணன் வேள்விகளுக்கு அழைக்கப்படத் தகுந்தவனாவான்.(29) நோன்புகளை நோற்காதவன், அல்லது (வாக்கிலும், ஒழுக்கத்திலும்) பொய்மைக்கு அடிமையாகவும், கள்வனாகவும் இருப்பவன், அல்லது உயிரினங்களை விற்று வாழ்பவன் அல்லது பொது வணிகத்தின் மூலம் வாழ்பவனான பிராமணன், வேள்விகளில் சோமத்தை அடுத்தடுத்து பருகி வருபவனாக இருந்தால், ஓ! மன்னா, அவனும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனே.(30)குற்ற வழிமுறைகள், அல்லது கொடிய வழிமுறைகளின் மூலம் செல்வத்தை அடைந்து, அடுத்தடுத்த தேவர்களைத் துதிக்கவும், விருந்தோம்பல் கடமைகளைச் செய்தும் வந்தால், ஓ! மன்னா, அவனும் சிராத்தங்களுக்கு அழைக்கப்படத் தகுந்தவனே.(31) வேத விற்பனை மூலம் அடைந்த, அல்லது ஒரு பெண்ணால் ஈட்டப்பட்ட, அல்லது (நீதிமன்றங்களில் போலி சான்றுரைத்து) வஞ்சகமாக ஈட்டப்பட்ட செல்வத்தை ஒரு போதும் பிராமணர்களுக்குக் கொடுக்கவோ, பித்ருக்கான காணிக்கைகளில் செலவிடவோ கூடாது.(32) ஓ! பாரதக் குலத் தலைவா, தன் உதவியுடன் செய்யப்பட்ட ஒரு சிராத்த நிறைவின் போது, யுக்த சொற்களை {உசிதத்தைச்} சொல்ல மறுக்கும் பிராமணன், நில வழக்கில் போலி உறுதிமொழி அளிக்கும் பாவத்தை ஈட்டுகிறான்[7].(33) ஓ! யுதிஷ்டிரா, ஒரு நல்ல பிராமணன், தயிர், நெய், புது நிலவின் {அமாவாசை எனும்} புனித நாள், மான் மற்றும் காட்டு விலங்குகள் பிறவற்றின் இறைச்சி ஆகியவை கிட்டும் நேரமே சிராத்தம் செய்யப்பட வேண்டிய நேரமாகும்[8].(34)ஒரு பிராமணனால் செய்யப்படும் ஒரு சிராத்தம் நிறைவடையும் போது, ஸ்வதா என்ற சொல் சொல்லப்பட வேண்டும். ஒரு க்ஷத்திரியனால் செய்யப்பட்டால், “உன் பித்ருக்கள் நிறைவடையட்டும்” என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும்.(35) ஒரு வைசியனால் செய்யப்பட்ட சிராத்தம் நிறைவடையும்போது, “அனைத்தும் வற்றாதிருக்கட்டும்” என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும். அதே போல, ஒரு சூத்திரனால் செய்யப்படும் சிராத்தம் நிறைவடையும்போது, ஸ்வஸ்தி என்ற சொல் சொல்லப்பட வேண்டும். பிராமணர்களைப் பொறுத்தவரையில், புண்யாஹத் தீர்மானம் ஓம் என்ற அசையுடன் சொல்லப்பட வேண்டும். க்ஷத்திரியன் வழக்கில், அத்தகைய தீர்மானத்தை ஓம் என்ற அசையைச் சொல்லாமல் செய்ய வேண்டும். ஒரு வைசியனால் செய்யப்படும் செயல்களில் {சிராத்தம் அல்லது வேள்விகளில்}, ஓம் என்ற அசைக்குப் பதிலாக “தேவர்கள் நிறைவடையட்டும்” என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும்[9]. (அனைத்து வகையினரின்) விதிகளுக்கு இணக்கமாகச் செய்யப்பட வேண்டிய சடங்குகளை உனக்கு ஒன்றபின் ஒன்றாகச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(36-38)ஓ! பாரதா, ஜாதகர்மம் என்ற பெயரில் உள்ள சடங்குகள் அனைத்தும் (மறுபிறப்பாளர்களான) மூவகையினருக்கும் தவிர்க்கப்படக்கூடாததாகும். ஓ யுதிஷ்டிரா, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோரின் வழக்கில் இந்தச் சடங்குகள் அனைத்தும் மந்திரங்களின் துணையுடன் செய்யப்பட வேண்டும்.(39) ஒரு பிராமணன் இடைக்கச்சை {உபநயனத்தில் இடையிற்கட்டும் கயிறு} முஞ்சப் புற்களால் ஆனதாக இருக்க வேண்டும். அரச வகையினுக்கு வில்லின் நாண்கயிறால் {மௌர்வி புற்களால்} ஆனதாக இருக்க வேண்டும். வைசியர்களின் இடைக்கச்சை, பல்பஜி புற்களால் {பல்பஜமென்னும் சணல் நாரினால்} ஆனதாக இருக்க வேண்டும். இவ்வாறே சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன.(40)

கொடையளிப்பவர் மற்றும் கொடையளிப்பவரின் குறைநிறைகளை இப்போது விளக்கிச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(41) ஒரு பிராமணன் ஒரு பொய்யைச் சொல்வதால் கடமைதவறும் குற்றம்புரிந்தவனாகிறான். அவன் பங்குக்கு அத்தகைய செயல் பாவம் நிறைந்ததாகும். பொய் சொல்வதால் ஒரு பிராமணன் ஈட்டும் பாவத்தைப் போல ஒரு க்ஷத்திரியன் நான்கு மடங்கும், வைசியன் எட்டு மடங்கும் பாவத்தை ஈட்டுகிறான்.(42) உண்பதற்கு ஒரு பிராமணனால் முன்பே அழைக்கப்பட்ட மற்றொரு பிராமணன் {இவ்வாறு அழைக்கப்பட்ட பிறகு} வேறெங்கும் உண்ணச் செல்லக்கூடாது. காலத்தால் பிந்தி அழைத்தவனின் வீட்டில் உண்பதன் மூலம் அவன் கீழ்மையடைகிறான், மேலும், வேள்வியற்ற சமயங்களில் ஒரு விலங்கைக் கொல்வதால் உண்டாகும் பாவத்தையும் ஈட்டுகிறான்[10].(43) அதே போலவே, அரச வகையைச் சார்ந்த ஒருவன் {க்ஷத்திரியன்} அல்லது ஒரு வைசியனால் அழைக்கப்பட்ட பிறகு அவன் வேறு எங்கும் உண்டால், அவன் தன் நிலையில் இருந்து வீழ்ந்து, வேள்வியற்ற சமயங்களில் ஒரு விலங்கைக் கொல்வதால் உண்டாகும் பாவத்தில் பாதி அளவை ஈட்டுகிறான்.(44) ஓ! மன்னா, தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் பிராமணர்களாலும், க்ஷத்திரியர்களாலும், வைசியர்களாலும் செய்யப்படும் நிகழ்வுகளில், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் உண்ணும் பிராமணன், ஒரு பசுவுக்காக {ஒரு பசுவைக் கொடையாகப் பெறுவதற்காகப்} பொய்யுரைத்த பாவத்தை ஈட்டுகிறான்.(45)தன் இனம் சார்ந்தோர் மத்தியில் உண்டான பிறப்பு, அல்லது இறப்பின் விளைவால் தூய்மையற்றவனாக இருந்து, தான் தூய்மையற்றிருப்பதை அறிந்தோ, சபலத்தினாலோ மூன்று உயர்வகையைச் சார்ந்தவர் எவராலும் செய்யப்படும் அத்தகைய நிகழ்வுகளில் உண்ணும் பிராமணனும், அதே பாவத்தையே ஈட்டுகிறான்[11].(46) ஓ! ஏகாதிபதி, புனிதத் தலங்களுக்குப் பயணம் செல்வது போலப் போலிப் பாசாங்கு செய்தோ, அறச்செயல்களுக்குச் செலவழிக்கப் போவதாக நடித்தோ கொடையாளியை வேண்டி அடைந்த செல்வத்தில் வாழ்பவன், பொய்யுரைத்த பாவத்தை ஈட்டுகிறான்.(47) ஓ! யுதிஷ்டிரா, மூன்று உயர் வகையினரில் எவரும், சிராத்தங்கள் அல்லது வேறு நிகழ்வுகளில் மந்திரங்களில் உதவியுடன் உணவைப் பகிரும் போது, வேதங்கல்லாத, அல்லது நோன்பு நோற்காத, அல்லது ஒழுக்கத் தூய்மையற்ற பிராமணர்களுக்கு {உணவை} வழங்கினால் நிச்சயம் பாவத்தையே ஈட்டுவர்” என்றார் {பீஷ்மர்}.(48)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் அர்ப்பணிக்கப்படும் பொருட்களை எவருக்குக் கொடையாகக் கொடுத்தால் ஒருவனால் பேரளவு வெகுமதியை ஈட்ட முடியும் என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்.(49)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, காலத்திற்கு ஏற்ற மழையை எதிர்பார்த்து மதிப்புடன் காத்திருக்கும் உழவர்களைப் போலவே, தங்கள் கணவர்கள் உண்ட மிச்சத்த்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனைவிகளைக் கொண்ட பிராமணர்களுக்கு நீ உணவூட்டுவாயாக.(50) ஓ! மன்னா, எப்போதும் ஒழுக்கத் தூய்மை நோற்பவர்களும், ஆடம்பரங்களையும், முழுவுணவை உண்ணாமலும் தவிர்த்து மெலிந்தவர்களும், உடல் மெலிவுக்கு வழிவகுக்கும் நோன்புகள் நோற்பதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், கொடை பெறும் விருப்பத்தோடு கொடையாளிகளை அணுகுபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(51) உணவுத் தேவை, மனைவிகள் மற்றும், பிள்ளைகளின் தேவை, பலத்திற்கான தேவை, இவ்வுலகைக் கடப்பதற்கான தங்கள் புகலிடத்திற்கும், மறுமையில் இன்பநிலையை அடைவதற்குமான தேவை இருக்கும் போதும் ஒழுக்கத்தை மதிப்பவர்களும் {ஒழுக்கத்தைக் கைவிடாமல் இருப்பவர்களும்}, நிச்சயம் தேவைப்படும்போது மட்டுமே செல்வத்தை வேண்டுபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(52) ஓ! யுதிஷ்டிரா, கள்வர்களின் மூலமோ, பகைவர்களின் மூலமோ அனைத்தையும் தொலைத்தவர்களும், கொடுப்பவர்களை அணுகுபவர்களுமான மனிதர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(53) பிறரிடம் ஏதும் பெறும் தங்கள் வகையைச் சார்ந்த ஏழையின் கரங்களில் இருந்து உணவை வேண்டும் பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(54) உலகளாவிய பேரிடரின் போது தங்களுக்குச்சொந்தமான அனைத்தையும் இழந்தவர்களும், அத்தகைய நிகழ்வின் போது தங்கள் மனைவிகளை இழந்தவர்களும், பிச்சை கேட்டு வருபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(55)

நோன்புகளை நோற்பவர்களும், துன்பம் நிறைந்த விதிகள் மற்றும் வகைமுறைகளுக்குள் வலியத் தங்களை நிறுத்திக் கொள்பவர்களும், வேதங்களில் விதிக்கப்பட்டுள தீர்மானங்களுக்கு இணங்ககமாகத் தங்கள் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்பவர்களும், தங்கள் நோன்புகள் அல்லது நியமங்களின் நிறைவுக்குத் தேவைப்படும் சடங்குகளுக்கான செலவுக்காகச் செல்வத்தை வேண்டி வருபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(56) பாவிகள் மற்றும் தீயோரால் செய்யப்படும் செயல்களுக்குப் பெருந்தொலைவில் வாழ்பவர்களும், போதுமான ஆதரவில்லாமல் பலவீனமாக இருப்பவர்களும், உலகம் சார் உடைமைகளில் மிக வறியவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(57) முற்றிலும் அப்பாவிகளாக இருந்தும் வலிமையான மனிதர்களால் உடைமைகள் அனைத்தும் களவாடப்பட்டவர்களும், உணவின் தரத்தில் எந்தத் தயக்கமும் இல்லாமல் {உணவு} எவ்வாறிருந்தாலும் தங்கள் வயிறுகளை நிறைத்துக் கொள்ள விரும்புபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(58) தவங்கள் நோற்பவர்கள் மற்றும் தங்களிடம் அர்ப்பணிப்பு கொண்டோரின் சார்பில் பிச்சையெடுப்பவர்களும், சிறு கொடையிலும் நிறைவடைபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருந்தகுதியை ஈட்டுகிறான்.(59) ஓ! பாரதக் குலத்தின் காளையே, கொடையளிப்பதன் மூலம் பெருந்தகுதியை ஈட்டுவது தொடர்பான சாத்திரத் தீர்மானங்களையே நீ இப்போது கேட்டாய். இனி, நரகத்திற்கோ சொர்க்கத்திற்கோ வழிவகுக்கும் செயல்களை விளக்கப் போகிறேன், கேட்பாயாக.(60)

ஆசானின் காரியத்திற்குத் தொண்டாற்றுவதற்காக, அல்லது உயிருக்கான அச்சத்திலிருக்கும் மனிதனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தேவைப்படும் பொய்களைத் தவிர வேறு தருணங்களில் பொய் பேசுபவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(61) பிறர் மனைவிகளைக் கெடுப்பவர்கள், அல்லது அவர்களுடன் பாலினக்கலவியில் ஈடுபடுபவர்கள், அல்லது அத்தகைய தீச்செயல்களுக்குத் துணை புரிபவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(62) பிறரின் செல்வத்தைக் களவாடுபவர்கள், அல்லது பிறரின் செல்வத்தையும், உடைமைகளையும் அழிப்பவர்கள், அல்லது பிறரின் குற்றங்களை அறிக்கையிடுபவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(63) தாகந்தணிக்கக் கால்நடையால் பயன்படுத்தப்படும் நீர்நிலைகளின் கரைகள், பொதுக்கூட்டங்களுக்குப் பயன்படும் மண்டபங்கள், மேம்பாலங்கள், தரைப்பாலங்கள் {சுமைதாங்கிகள்} ஆகியவற்றை இடிப்பவர்கள், வசிப்பதற்குப் பயன்படும் வீடுகளை இடிப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(64) ஆதரவற்ற பெண்கள், அல்லது சிறுமிகள், அல்லது முதிய பெண்கள், அல்லது அச்சத்திலிருக்கும் அத்தகைய பெண்களை ஏமாற்றி வஞ்சிப்போர் நரகில் மூழ்குவார்கள்.(65)

பிறரின் வாழ்வுக்குத் தேவையானவற்றை அழிப்பவர்கள், பிறரின் வசிப்பிடங்களை அழிப்பவர்கள், பிறர் மனைவிகளைக் களவாடுபவர்கள், நண்பர்களுக்கு மத்தியில் வேற்றுமையை விதைப்பவர்கள், பிறரின் நம்பிக்கை அழிப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(66) பிறரின் குறைகளை அறிக்கையிடுபவர்கள், மேம்பாலங்கள் அல்லது தரைப்பாலங்களை {சுமைதாங்கிகளை} உடைப்பவர்கள், பிறருக்காக விதிக்கப்பட்ட பிழைப்புத்தொழிலைப் பின்பற்றி வாழ்பவர்கள், நண்பர்களின் தொண்டு பெற்றும் நன்றிமறந்தவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(67) வேதங்களில் நம்பிக்கையற்று, அவற்றை மதிக்காதவர்கள், தங்கள் உறுதிமொழிகளைப் பிளப்பவர்கள், அல்லது பிறரைக் கொண்டு பிளக்கச் செய்பவர்கள், பாவத்தால் தங்கள் நிலையில் இருந்து வீழ்ந்தவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(68) ஒழுக்கத்தில் முறையற்றவர்கள், மிகை வட்டி வாங்குபவர்கள், விற்பனையில் முறையற்ற வகையில் பெரும் லாபம் மீட்டுபவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(69) சூதாடிகள், ஐயுணர்வேதுமின்றித் தீச்செயல்களில் ஈடுபடுபவர்களும், உயிரினங்களைக் கொல்பவர்களும் நரகில் மூழ்குவார்கள்.(70)

வெகுமதிகளை, அல்லது அவசியத் தேவைக்கானவற்றை, அல்லது கூலியையோ, ஊதியத்தையோ, அல்லது தான் செய்த மதிப்புமிக்கத் தொண்டுகளுக்கான பதில் உதவியையோ எதிர்பார்த்துக் காத்திருக்கும் பணியாட்களைப் பணிநீக்கம் செய்யும்படி முதலாளிகளைச் செயல்பட வைப்பவர்கள் நரகில் மூழ்குவார்கள்[12].(71) தங்கள் மனைவிகளுக்கு, அல்லது புனித நெருப்புக்கு, அல்லது பணியாட்களுக்கு, அல்லது தங்கள் விருந்தினருக்குக் கொடுக்காமல் உண்பவர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்களை மதிப்பதற்காகச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைத் தவிர்ப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(72) வேதங்களை விற்பனை செய்வோர், வேதங்களில் குறை காண்போர், வேதங்களை எழுத்தாக்கி அவற்றைத் தாழ்த்துவோர் ஆகியோரனைவரும் நரகில் மூழ்குவார்கள்[13].(73) நன்கறியப்பட்ட நான்கு வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} சேராதவர்கள், ஸ்ருதிகள் மற்றும் சாத்திரங்களால் தடைசெய்யப்பட்ட நடைமுறைகளைச் செயல்படுத்துபவர்கள், தீய, அல்லது பாவம் நிறைந்த, அல்லது தங்கள் பிறப்பின் வகையைச் சாராத செயல்களைச் செய்பவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(74) தலைமயிரை விற்று வாழ்பவர்கள், நஞ்சை விற்று வாழ்பவர்கள், பாலை விற்று வாழ்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(75)ஓ! யுதிஷ்டிரா, பிராமணர்கள், பசுக்கள் மற்றும் கன்னிகைகளின் பாதையில் தடைகளை ஏற்படுத்துபவர்கள் {அவர்களின் குறுக்கே செல்பவர்கள்} நரகில் மூழ்குவார்கள்.(76) ஆயுதங்களை விற்பவர்கள், ஆயுதங்களைச் செய்பவர்கள், கணைகளைச் செய்பவர்கள், விற்களைச் செய்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(77) கற்களாலும், முட்களாலும், குழிகளாலும் பாதைகள் மற்றும் சாலைகளில் தடையேற்படுத்துபவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(78) போதிய வயதை அடையாத இளங்காளைகளைப் பணியில் ஈடுபடுத்துவோர், பணியில் ஈடுபடுத்தும்போது இளங்காளைகள் மற்றும் பிற விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றின் மூக்குகளில் துளையிடுபவர்கள், விலங்குகளை எப்போதும் கட்டியே வைத்திருப்பவர்கள் ஆகியோர் நரகில் மூழ்குவார்கள்.(80)

வயல் விளைச்சலில் ஆறிலொரு பங்கை வலுக்கட்டாயமாகப் பெற்றுக் கொண்டும் தங்கள் குடிமக்களைக் காக்காத மன்னர்களும், இயன்றவர்களாக இருந்தும், வளமிருந்தும் கொடையளிப்பதைத் தவிர்ப்பவர்களும் நரகில் மூழ்குவார்கள்.(81) மன்னிக்கும் தன்மை {பொறுமை}, தற்கட்டுப்பாடு, ஞானம் கொண்ட மனிதர்களையும், பல வருடங்களாகத் துணைபுரிந்தவர்களாக இருந்தும் அதற்கு மேலும் பணி செய்ய இயலாத மனிதர்களையும் கைவிடுபவர்கள் நரகில் மூழ்குவார்கள்.(82) சிறுவர்கள், முதியவர்கள், பணியாட்கள் ஆகியோருக்கு உணவைக் கொடுக்காமல் உண்ணும் மனிதர்கள் நரகில் மூழ்குவார்கள்.(83)

மேற்குறிப்பிடப்பட்ட மனிதர்கள் யாவரும் நரகத்திற்குச் செல்வார்கள். ஓ! பாரதக் குலத்தின் காளையே, சொர்க்கத்திற்கு உயரும் மனிதர்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன்; கேட்பாயாக.(84) தேவர்களைத் துதிக்கும் செயல்கள் யாவையும் செய்ய விடாததன் மூலம் ஒரு பிராமணனுக்கு எதிராக வரம்புமீறும் மனிதன் தன் பிள்ளைகள் அனைவரையும், விலங்குகள் அனைத்தையும் இழந்து துன்பப்படுவான். (அதாவது, பிராமணர்களின் அறச்செயல்களைத் தடுத்து அவர்களுக்கு எதிராக வரம்புமீறாதவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்).(85) ஓ! யுதிஷ்டிரா, சாத்திரங்களில் தங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள கடமைகளைப் பின்பற்றி, ஈகை, தற்கட்டுப்பாடு, வாய்மை ஆகிய அறங்களைப் பயிலும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்.(86) தங்கள் ஆசான்களுக்குக் கீழ்ப்படிந்து பணிகள் செய்வதன் மூலம் அறிவை ஈட்டி, கடுந்தவங்களை நோற்று, கொடையேற்கும் விருப்பமற்றவர்களானவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(87)

அச்சம், பாவம், நிறைவேற்ற விரும்புவதற்குரிய வழியில் கிடக்கும் தடைகள், வறுமை, நோயின் துன்பம் ஆகியவற்றில் இருந்து பிறரை விடுவிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(88) மன்னிக்கும் மனோ நிலை, பொறுமை ஆகியவற்றைக் கொண்டவர்களும், அறச்செயல்கள் யாவையும் உடனே செய்பவர்களும், மங்கலவொழுக்கம் கொண்டவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(89) தேன் {மது} மற்றும் இறைச்சியைத் தவிர்ப்பவர்களும், பிறன் மனைவியருடன் பாலினக் கலவியைத் தவிர்ப்பவர்களும், மது, சாராயங்களைத் தவிர்ப்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(90) ஓ! பாரதா, தவசிகளுக்கான ஆசிரமங்களை நிறுவுவதில் உதவி செய்பவர்களும், குடும்பங்களை நிறுவுபவர்களும், மனிதர்கள் வசிக்கப் புதிய நாடுகளை உண்டாக்குபவர்களும், நகரங்கள் மற்றும் ஊர்களைப் பதிப்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(91) உடைகள், ஆபரணங்கள், உணவு, பானம் ஆகியவற்றைக் கொடையளிப்பவர்களும், பிறர் {ஆதரவற்றவர்கள்} திருமணம் செய்து கொள்ள உதவி செய்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(92)

உயிரினங்கள் அனைத்திற்கும் எவ்வகைத் தீங்கைச் செய்வதையும் தவிர்ப்பவர்களும், அனைத்தையும் தாங்கிக் கொள்ளவல்லவர்களும், அனைத்து உயிரினங்களின் புகலிடமாகத் தங்களை அமைத்துக் கொண்டவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(93) தங்கள் தந்தையர் மற்றும் தாய்மாரிடம் பணிவுடன் காத்திருப்பவர்களும், தங்கள் புலன்களை அடக்கியவர்களும், உடன்பிறந்தோரிடம் அன்புடன் நடந்து கொள்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(94) உலகம் சார்ந்த பொருட்களுடன் வளமாகவும், வலிமையும், பலமும் கொண்டவர்களாகவும், இளமை இன்பத்தில் இருப்பவர்களாகவும் இருந்தாலும், தங்கள் புலன்களை அடக்கிய மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(95) தங்களுக்கு எதிராகக் குற்றமிழைப்பவர்களிடமும் அன்பாக நடந்து கொள்பவர்களும், மென்மையான மனநிலை கொண்டவர்களும், மென்னடத்தைக் கொண்டோர் அனைவரிடமும் அன்பு கொண்டவர்களும், பணிவுடன் அனைத்து வகைத் தொண்டையும் செய்து பிறருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(96)

ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பவர்களும், ஆயிரக்கணக்கான மக்களுக்குக் கொடையளிப்பவர்களும், ஆயிரக்கணக்கான மக்களைத் துயரில் இருந்து மீட்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(97) ஓ! பாரதக் குலத்தின் காளையே, தங்கம், பசுக்கள், வாகனங்கள் மற்றும் விலங்குகளைக் கொடையாள அளிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(98) திருமணத்திற்குத் தேவையான பொருட்கள், பணியாட்கள், பணிப்பெண்கள், துணிமணிகள் போன்றவற்றைக் கொடுக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(99) ஓ! பாரதா, பொதுமக்களுக்கான மகிழ்மன்றங்கள், தோட்டங்கள், கிணறுகள், ஓய்வில்லங்கள், பொதுக்கூட்டங்களுக்கான கட்டடங்கள், கால்நடை மற்றும் மனிதர்கள் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளக்கூடிய குளங்கள், உழவுக்களங்கள் {வயல்கள்} ஆகியவற்றை அமைக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(100)

வேண்டி வரும் மனிதர்களுக்கு வீடுகள், களங்கள் {வயல்கள்}, கிராமங்கள் ஆகியவற்றைக் கொடுக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(101) இன்சுவை கொண்ட கனிச்சாறுகள், வித்துகள், நெல் அல்லது அரசி {தானியங்கள்} ஆகியவற்றைப் பிறருக்குக் கொடையளிக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(102) உயர்குடியில் அல்லது கீழ்க்குடியில் பிறந்தும், நூற்றுக்கணக்கான பிள்ளைகளைப் பெற்று நீண்ட நாள் வாழ்ந்து, கருணை பயின்று, கோபத்தை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(103) ஓ! பாரதா, மறுமைக்காகத் தேவர்களையும், பித்ருக்களையும் கௌரவிக்கும் வகையில் மக்களால் செய்யப்படும் சடங்குகள், கொடைகள் குறித்த விதிகளையும், கொடைகள் மற்றும் அவற்றை அளிக்கும் செயல்முறைகள் ஆகியவற்றைக் குறித்த பழங்காலத்து முனிவர்களின் பார்வைகளையும் நான் உனக்கு விளக்கிச் சொன்னேன்” என்றார் {பீஷ்மர்}.(104)

பிரம்மஹத்தி! – அநுசாஸனபர்வம் பகுதி – 24-ஒரு பிராமணனைக் கொல்லாமலேயே பிரம்மஹத்தி பாவம் பீடிக்கக்கூடிய சூழ்நிலைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் அரச மகனே, நான் கேட்கும் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்வதே உமக்குத் தகும். உண்மையில் ஒரு பிராமணனைக் கொல்லாமலேயே ஒரு மனிதன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாகும் தருணங்கள் என்னென்ன?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, முன்பு ஒரு நாள் இதே காரியம் குறித்து விளக்கிச் சொல்லுமாறு வியாசரை வேண்டினேன். அத்தருணத்தில் வியாசர் சொன்னதை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன். சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(2)

வியாசரிடம் சென்ற நான், “ஓ! பெருந்தவசியே, வசிஷ்டரின் நாலாம் தலைமுறை வழித்தோன்றல் {வாரிசு} நீர். இஃதை எனக்கு விளக்கிச் சொல்வீராக. உண்மையில் ஒரு பிராமணனைக் கொல்லாமலேயே ஒரு மனிதன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாகும் {பிரம்மஹத்தி பீடித்தவனாகும்} தருணங்கள் என்னென்ன?” என்று கேட்டேன்.(3) ஓ! மன்னா, இவ்வாறு என்னால் கேட்கப்பட்டவரும், பராசரர் மடியில் பிறந்த மகனும், அறநெறிகளில் திறம்பெற்றவருமான அவர், சிறப்பு நிறைந்த, உறுதியான பதிலை பின்வருமாறு அளித்தார்.(4)

{வியாசர்}, “அறமொழுகும் பிராமணர் ஒருவருக்குப் பிச்சை தருவதாக அவரைத் தானே அழைத்துவிட்டு, வீட்டில் ஏதுமில்லை என்ற பாசாங்குடன் ஏதும் கொடுக்க மறுக்கும் மனிதன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாவான் {அவன் பிரம்மஹத்தி என்ற பாவத்தைச் செய்தவன்} என்பதை நீ அறிய வேண்டும்.(5)

ஓ! பாரதா, வேதங்களையும், அவற்றின் அங்கங்களை யாவையும் கற்றவரும், உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்டவருமான ஒரு பிராமணருடைய வாழ்வாதாரங்களை அழிக்கும் ஒருவன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாவான் என்பதை நீ அறிய வேண்டும்.(6)

ஓ! மன்னா, தாகம் தணித்துக் கொண்டிருக்கும் பசுவை தண்ணீர் அருந்த விடாமல் தடை செய்பவன் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாவான் என்பதை நீ அறிய வேண்டும்.(7)

காலகாலமாக ஆசான் மூலம் சீடனிடம் வரும் ஸ்ருதிகள், அல்லது முனிவர்களால் தொகுக்கப்பட்ட சாத்திரங்கள் ஆகியவற்றைப் படிக்காமலேயே அவற்றிடம் குறை காண்பவனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ கருத வேண்டும்.(8)

அழகையும், பிற சிறப்புகளைக் கொண்ட தன் மகளைத் தகுந்த மணமகனுக்கு {திருமணம் செய்து கொடுக்காத} அளிக்காத மனிதனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்.(9)

இதயம்பிளக்கும் துன்பத்தைப் பிராமணர்களுக்கு அளிக்கும் பாவம் நிறைந்த ஒரு மூடனை பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்.(10) பார்வையற்றவர்கள், முடவர்கள், மூடர்கள் ஆகியோரின் செல்வங்கள் அனைத்தையும் களவாடுபவனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்.(11) தவசிகளின் ஆசிரமங்களுக்கோ, காடுகளுக்கோ, கிராமத்திற்கோ, நகரத்திற்குத் தீ வைக்கும் மனிதனைப் பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக நீ அறிய வேண்டும்” என்றார் {என்றார் வியாசர் எனச் சொன்னார் பீஷ்மர்}.(12)

புண்ணியத்தீர்த்தங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 25-புனிதநீர்நிலைகளின் மகிமை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “புனித நீர்நிலைகளுக்குப் பயணம் மேற்கொள்வது பலன் நிறைந்தது {புண்ணியம் நிறைந்தது} என்றும்; அத்தகைய நீர்நிலைகளில் தூய்மைச்சடங்குகளைச் செய்வது பலன்மிக்கது என்றும்; அத்தகைய சிறப்புமிக்க நீர்நிலைகளைக் குறித்துக் கேட்பதும் பலன்மிக்கது என்றும் சொல்லப்படுகிறது. ஓ! பாட்டா, இக்காரியத்தில் உமது விளக்கத்தை நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, பூமியில் உள்ள புனித நீர்நிலைகளை எனக்குக் குறிப்பிட்டுச் சொல்வதே உமக்குத் தகும். ஓ! பெரும்பலம் கொண்டவரே, இக்காரியத்தில் உமது உரையைக் கேட்க நான் விரும்புகிறேன்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெருங்காந்தி {பெரும்புகழ்} கொண்டவனே, பூமியில் உள்ள புனித நீர்நிலைகளைக் குறித்த பின்வரும் பட்டியல் அங்கிரஸால் {அங்கிரஸ் முனிவரால்} செய்யப்பட்டதாகும். அருளப்பட்டிருப்பாயாக, நீ பெரும்பலனை அடையப் போகிறாய், அதைக் கேட்பதே உனக்குத் தகும்.(3)

ஒரு காலத்தில், கடும் நோன்புகளைக் கொண்டவரான கௌதமர், பெருமைமிக்கவரும், கல்விமானும், அமைதியான ஆன்மாவைக் கொண்ட முனிவருமான அங்கிரஸ் காட்டில் வசித்து வந்த போது அவரை அணுகி,(4) “ஓ! சிறப்புமிக்கவரே, புனித நீர்நிலைகள் மற்றும் புனிதத்தலங்களோடு தொடர்புடைய பலன்கள் குறித்து எனக்குச் சில ஐயங்கள் உண்டு {எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை}. இக்காரியத்தில் உமது உரையை நான் கேட்க விரும்புகிறேன். எனவே, ஓ! தவசியே, எனக்கு அவற்றைக் குறித்துச சொல்வீராக.(5) ஓ! பெரும் ஞானியே, பூமியில் உள்ள புனித நீர்நிலைகளில் நீராடுவதன் மூலம் ஒரு மனிதனால் மறுமையில் அடையப்படும் பலன்கள் என்னென்ன? இதுகுறித்து உண்மையாகவும், விதிப்படியும் எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்றார்.(6)

அங்கிரஸ், “எப்போதும் அலைகள் நடனமிடும் நீரைக் கொண்டவையான சந்திரபாகையிலோ {செனாபிலோ}, விதஸ்தையிலோ {ஜீலத்திலோ}[1] ஏழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து நீராடும் மனிதன், தன் பாவங்கள் அனைத்திதையும் முற்றிலும் கழுவிக்கொண்டு, ஒரு தவசியின் {தவசி ஒருவர் பெறுவதைப் போன்ற} பலனை அடைவான்.(7) காஷ்மீரம் என்றழைக்கப்படும் நாட்டில் பல ஆறுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் சிந்து (இண்டஸ்) என்றழைக்கப்படும் பேராற்றில் கலக்கின்றன. இந்த ஆறுகளில் நீராடுவதன் மூலம் ஒருவன் நிச்சயம் நற்குணத்தை அடைந்து, இவ்வுலகத்தில் இருந்து சென்ற பிறகு சொர்க்கத்திற்கு உயர்வான்.(8)புஷ்கரை, பிரபாஸம், நைமிசம் {நைமிசாரண்யத்தில் உள்ள தீர்த்தம்}, பெருங்கடல் {சமுத்திர தீர்த்தம்}, தேவிகை, இந்திரமார்க்கம், ஸ்வர்ணபிந்து ஆகிய ஆறுகளில் நீராடும் ஒருவன், தெய்வீகத் தேரில் அமர்ந்து கொண்டு, அப்ஸரஸ்கள் புகழ நிச்சயம் சொர்க்கத்திற்கு உயர்வான்[2].(9)ஹிரண்யபிந்துவின் நீரில் மூழ்கி குவிந்த மனத்துடன் அந்தப் புனித ஆற்றைத் துதிப்பதன் மூலமும், அடுத்ததாகக் குசேசயம் தேவாந்தம் ஆகியவற்றில் நீராடுவதன் மூலமும் ஒருவன் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் கழுவப் பெறுகிறான்[3].(10)கந்தமாதனத்தின் அருகில் இந்திரதோயைக்கும், அடுத்ததாகக் குரங்கம் என்றழைக்கப்படும் நாட்டில் உள்ள கரதோயைக்கும் செல்லும் ஒருவன் மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து, குவிந்த இதயத்துடனும், தூய உடலுடனும் அந்தப் புனித நீர்நிலைகளில் நீராட வேண்டும். இதைச் செய்வதன் மூலம் ஒருவன் குதிரை வேள்வியொன்றைச் செய்த பலனை நிச்சயம் ஈட்டுவான்[4].(11)நீல மலைகளில் உள்ள கங்காத்வாரம், குசத்வாரம் {குசாவர்த்தம்}, வில்வகம் ஆகியவற்றிலும், கனகலத்திலும் நீராடும் ஒருவன் நிச்சயம் தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டுச் சொர்க்கத்திற்கு உயர்வான்[5].(12)ஒருவன் பிரம்மசாரியாக, தன் கோபத்தை அடக்கி, வாய்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, அனைத்து உயிரினங்களிடமும் கருணையோடிருந்து, நீர்நிலைகளின் தடாகத்தில் {அபாம்ஹ்ரதம் எனும் தீர்த்தத்தில்} நீராடினால், அவன் நிச்சயம் ஒரு குதிரைவேள்வி செய்த பலனை அடைவான்.(13)

பாகீரதி-கங்கை வடதிசை நோக்கிப் பாயும் பகுதியானது, சொர்க்கம், பூமி, பாதாளம் ஆகியவை சேருமிடம் என்று அழியப்படுகிறது. ஒரு மாத காலம் நோன்பிருந்து, மஹேஸ்வரனுக்கு ஏற்புடையதாக அறியப்படும் அந்தப் புனிதத் தீர்த்ததில் {ஈஸ்வரஸ்தானத்தில்} நீராடும் ஒருவன் தேவர்களைக் காணத்தகுந்தவனாகிறான்.(14)

சப்தகங்கம், திரிகங்கம், இந்திரமார்க்கம் ஆகிவற்றில் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன், மறுபிறவியடைய நேர்ந்தால் அமுதத்தையே உணவாக அடைகிறான்[6].(15)உடலையும் மனத்தையும் தூய நிலையில் வைத்துக் கொண்டு, நாள்தவறாமல் அக்னிஹோத்ரம் செய்து, ஒரு மாத காலம் உண்ணா நோன்பிருந்து மஹாஸ்ரமத்தில் நீராடும் மனிதன் நிச்சயம் ஒரே மாதத்தில் வெற்றியை அடைவான் {அம்மாதத்திலேயே தவசித்தி பெறுவான்}.(16)

மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து, தீய ஆசைகள் அனைத்தில் இருந்தும் மனத்தூய்மையடைந்து, {மலைச்சிகரமான} பிருகுதுங்கத்தில் அமைந்திருக்கும் பெருந்தடாகத்தில் {மஹாஹ்ரதமெனும் தீர்த்தத்தில்} நீராடுவதன் மூலம் ஒருவன் பிராமணக் கொலை செய்த பாவத்தில் {பிரம்மஹத்தி என்ற பாவத்தில்} இருந்தும் கழுவப்படுவான்[7].(17)கன்யாகூபத்தில் நீராடி, பலாகையில் {பலாகை ஆற்றில்} தூய்மைச்சடங்குகளை {தர்ப்பணங்களைச்} செய்யும் ஒருவன், அதன் மூலம் தேவர்களுக்கு மத்தியில் பெரும்புகழை அடைந்து மகிமையில் ஒளிர்வான்.(18)

தேவிகையிலும், சுந்தரிகை என்ற பெயரில் அறியப்படும் தடாகத்திலும், அஸ்வினி என்றழைக்கப்படும் தீர்த்தத்திலும் நீராடும் ஒருவன், தனது மறுபிறவியில் பேரழகுடன் கூடிய வடிவத்தைப் பெறுவான்.(19)

ஒரு பிறைபக்க காலம் {பக்ஷம்} உண்ணா நோன்பிருந்து, மஹாகங்கையிலும், கிருத்திகாங்காரகையிலும் நீராடும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்திற்கு உயர்கிறான்[8].(20)வைமானிகை, கிங்கிணிகை ஆகியவற்றில் நீராடும் ஒருவன் விரும்பிய எங்கும் செல்லும் சக்தியை அடைந்து, அப்சரஸ்களின் தேவலோகத்தில் பெரிதும் மதிப்பிற்குரிய பொருளாவான்[9].(21)ஒரு மனிதன் தன் கோபத்தை அடக்கி, மூன்று நாட்கள் பிரம்மச்சரிய நோன்பிருந்து, காளிகை என்றழைக்கப்படும் ஆசிரமத்தில் {காளிகாஸ்ரமம் எனும் இடத்தில்} உள்ள விபாசை {பியாஸ்} ஆற்றில்[10] நீராடினால், அவன் மறுபிறவி எனும் கடப்பாட்டைக் கடப்பதில் நிச்சயம் வெல்வான்.(22)கிருத்திகைகளுக்குப் புனிதமான ஆசிரமத்தில் {கிருத்திகாஸ்ரமம் என்ற இடத்தில் உள்ள நீர்நிலையில்} நீராடி, பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை செலுத்தி, மஹாதேவனை நிறைவடையச் செய்யும் ஒருவன், தன் உடலும், மனமும் தூய்மையடைந்து, சொர்க்கத்திற்கு உயர்வான்.(23)

ஒருவன், தூய்மையடைந்த உடல் மற்றும் மனத்துடன் மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து மஹாபுத்தில் {மஹாகூபத்தில்} நீராடினால், அசையாதனவற்றிடும், அசையும் விலங்குகள் அனைத்திடமும், இரு கால்களைக் கொண்ட விலங்குகள் அனைத்திடமும் {மனிதர்களிடமும்} கொண்ட அச்சத்தில் இருந்து விடுபடுவான்.(24)

தேவதாருக்காட்டில் நீராடி, பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளித்து, தூய உடலுடனும், மனத்துடனும் ஏழு நாட்கள் அங்கேயே வசிப்பதன் மூலம் ஒருவன் இவ்வுலகை விட்டுச் சென்றதும் தேவர்களின் உலகை அடைவான் {தேவதை என்ற பெயர் பெறுவான்}.(25)

சரஸ்தம்பம், குசஸ்தம்பம், துரோணசர்மபதம் ஆகியவற்றில் உள்ள அருவிகளில் நீராடும் ஒருவன், நிச்சயம் அப்சரஸ்களின் உலகை அடைந்து, மனிதர்களைவிட அதிக ஆற்றல்களைக் கொண்ட அவர்களின் {அந்த அப்சரஸ்களின்} கடமையுணர்வுமிக்கப் பணிவிடைகளைப் பெறுவான்.(26)

ஒருவன் உண்ணா நோன்பிருந்து சித்திரகூடம், ஜனஸ்தானம்[11] மற்றும் மந்தாகினியின் நீரில் நீராடினால், அவன் நிச்சயம் அரச செழிப்பில் கலப்பான் {அரசுரிமை அடைவான்}.(27)சியாமை என்ற பெயரில் அறியப்படும் ஆசிரமத்திற்குச் சென்று, ஒருபிறைபக்க {பக்ஷ} தாகாலம் அங்கேயே வசித்து, அங்கே இருக்கும் புனித நீர்நிலையில் நீராடுவதன் மூலம் ஒருவன் விரும்பியபோது மறையும் சக்தியை அடைகிறான் (அந்தச் சக்தியை அடைந்து கந்தர்வர்களுக்காக விதிக்கப்பட்ட இன்பங்களை அனுபவிப்பான்).(28)

கௌசிகி என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திற்குச் சென்று, மூன்று நாட்கள் உணவும், பானமும் தவிர்த்து தூய இதயத்துடன் அங்கே வசித்திருப்பவன், (மறுமையில்) கந்தர்வர்களின் இன்பலோகத்தில் வசிக்கும் சக்தியைப் பெறுவான்[12].(29)காந்ததாரகை என்ற பெயரில் உள்ள இனிய தீர்த்தத்தில் நீராடி, உணவும், பானமும் துறந்து ஒரு மாத காலம் அங்கே வசித்திருக்கும் ஒருவன் விரும்பிய போது மறையும் சக்தியை அடைந்து இருபத்தோரு நாட்களில் சொர்க்கத்திற்கு உயர்வான்.(30)

மதங்கம் என்ற பெயரில் அறியப்படும் தடாகத்தில் {மதங்கவாபியென்னும் தீர்த்தத்தில்} நீராடும் ஒருவன் நிச்சயம் ஒரே இரவில் {அதே இரவில்} வெற்றியை அடைவான். நித்ய அந்தகை, அல்லது அநாலம்பத்திலோ,(31) நைமிசத்திலோ, ஸ்வர்க்கம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடி, தன் புலன்களை அடக்கி, பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் மனித வேள்வி {புருஷமேத யாகம்} செய்த பலனை அடைகிறான்[13].(32)கங்காஹ்ரதத்திலும், உத்பலாவனம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திலும் நீராடி, ஒரு மாதகாலத்தில் நாள்தோறும் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைவான்.(33)

கங்கையும், யமுனையும் சேருமிடத்திலும், காலஞ்சர மலைகளின் உள்ள தீர்த்தங்களிலும் நீராடி, ஒரு மாதகாலத்தில் நாள்தோறும் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் பத்து குதிரை வேள்விகளைச் செய்த பலனை அடைவான்[14].(34)சஷ்டி தடாகத்தில் {யஷ்டிஹ்ரதத் தீர்த்தத்தில்} நீராடும் ஒருவன், அன்னதானத்தின் பலனைவிடப் பெரிய பலனை அடைகிறான். ஓ! பாரதக் குலத் தலைவா, மக {மாசி} மாதத்தில், பத்தாயிரம் தீர்த்தங்களும், வேறு மூன்று கோடி தீர்த்தங்களும் (கங்கையும், யமுனையும் சேருமிடமான) பிரயாகைக்கு {இன்றைய அலாகாபாத், உத்திரபிரதேசம்} வருகின்றன. ஓ! பாரதக் குலத் தலைவா, கட்டுப்படுத்திய ஆன்மாவுடன் கூடிய ஒருவன், மக {மாசி} மாதத்தில் கடும் நோன்புகள் நோற்றுப் பிரயாகையில் நீராடினால் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்தை அடைவான்[15].(35,36)மருத்துக்களுக்குப் புனிதமான தீர்த்தத்திலும், பித்ருக்களின் ஆசிரமத்தில் அமைந்திருக்கும் தீர்த்தத்திலும், வைவஸ்வதம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திலும் நீராடும் ஒருவன், ஒரு தீர்த்தத்தைப் போலவே புனிதமும், தூய்மையும் அடைந்து, தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டவனாவான்.(37)

பாகீரதியில் {கங்கையில்} பிரம்மஸரஸுக்குச் சென்று, நீராடி, ஒருமாதம் உணவனைத்தையும் துறந்து நாள்தோறும் பித்ருக்களுக்குக் காணிக்கை அளிக்கும் ஒருவன் நிச்சயம் சோமலோகத்தை அடைவான்.(38)

உத்பாதகத்திலும், அஷ்டாவக்ரத்திலும் நீராடி, அடுத்தடுத்து பனிரெண்டு நாட்கள் உணவைத் தவிர்த்து ஒவ்வொரு நாளும் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் குதிரை வேள்விக்கான பலன்களை அடைவான்.(39)

கயையில் இருக்கும் அஸ்மப்ருஷ்டம், நிரவிந்த மலைகள், கிரௌஞ்சபதி ஆகிய மூன்றிலும் நீராடும் ஒருவன் பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} என்ற பாவத்தில் இருந்து தூய்மையடைகிறான்[16].(40) முதலிடத்தில் நீராடுவது ஒற்றைப் பிராமணக் கொலை என்ற பாவத்தில் இருந்து தூய்மையாக்கும்; இரண்டாமிடத்தில் நீராடுவது அத்தன்மையிலுள்ள இரு குற்றங்களில் ஒன்றைத் தூய்மையாக்கும்; மூன்றாமிடத்தில் நீராடுவது அத்தகைய மூன்று குற்றங்களில் ஒன்றைத் தூய்மையாக்கும்.(40)கலவிங்கத்தில் நீராடும் ஒருவன் (மறுமையில் பயன்படுத்த) பேரளவு நீரை அடைகிறான். அக்னியின் நகரத்தில் {அக்னிபுரத்தில்} நீராடும் ஒரு மனிதன், அக்னி மகளின் நகரத்தில் மறுபிறவியை அடைந்து வாழும் பலனைப் பெறுவான்.(41)

கரவீரபுரத்தின் விசாலை ஆற்றில் நீராடி, தன் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளித்து, தேவஹ்ரதத்திலும் தூய்மைச்சடங்குகளைச் செய்யும் ஒருவன் பிரம்மனைப் போன்றவனாகி அத்தகைய மகிமையில் ஒளிர்கிறான்.(42)

புனராவர்த்த-நந்தை மற்றும் மஹாநந்தையில் நீராடும் ஒரு மனிதன், தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, உலகளாவிய கருணை கொண்டு இந்திரனுக்குச் சொந்தமான நந்தனம் என்றழைக்கப்படும் தெய்வீகத் தோட்டத்திற்குச் சென்று பல்வேறு அப்சரஸ்களால் பணிவிடை செய்யப்படுகிறான்.(43)

லோஹிதை ஆற்றில் அமைந்திருப்பதும், ஊர்வசி என்ற பெயரால் அழைக்கப்படுவதுமான தீர்த்தத்தில் கார்த்திகை மாதத்தின் முழுநிலவு {பௌர்ணமி} நாளில் குவிந்த ஆன்மாவுடன் நீராடும் ஒருவன், புண்டரீகம் என்றழைக்கப்படும் வேள்வியோடு தொடர்புடைய பலன்களை அடைவான்[17].(44)பனிரெண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து ராமஹ்ரதத்தில் நீராடி, விபாசை {பியாஸ்} ஆற்றில் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கையளிக்கும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(45)

ஒரு மாதகாலம் உண்ணாநோன்பிருந்து தூய இதயத்துடன் மஹாஹ்ரதம் என்றழைக்கப்படும் நீராடும் ஒருவன் நிச்சயம் தவசி ஜமதக்னியின் கதியை அடைவான்.(46)

விந்தியம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தின் வெப்பத்திற்குத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு மனிதன், வாய்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டு, பணிவால் இயக்கப்படும் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அவன் ஒரே மாத காலத்தில் நிச்சயம் தவ வெற்றியை அடைவான்.(47)

நர்மதையிலும், சுபாரகம் {சூர்ப்பாரகோதகம்} என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்தில் நீராடி, ஒரு முழுப் பிறைபக்க {பக்ஷ} காலம் உண்ணா நோன்பிருக்கும் ஒருவன் நிச்சயம் அடுத்தப் பிறவியில் அரசகுடியில் இளவரசனாகப் பிறப்பான்.(48)

ஒருவன் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடனும், குவிந்த ஆன்மாவுடனும், ஜம்புமார்க்கம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திற்குச் சென்றால், ஒரே பகல் மற்றும் இரவு அடங்கிய காலத்திற்குள் நிச்சயம் அவன் வெற்றியை அடைவான்.(49)

சாந்தாலிகாஸ்ரமம் சென்று, கோகாமுகம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடி, இலைகளை மட்டுமே உண்டு, மரவுரிகளை உடுத்தி வாழ்பவன் தன் மனைவிகளாகப் பேரழகுடன் கூடிய பத்து கன்னிகைகளை நிச்சயம் அடைவான்.(50)

கன்யாஹ்ரதம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தின் அருகில் வாழ்வபவன் ஒருபோதும் யமலோகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. அத்தகைய மனிதன் நிச்சயம் தேவர்களுக்குச் சொந்தமான இன்பலோகங்களுக்கு உயர்வான்.(51)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஒரு புதுநிலவு {அமாவாசை} நாளில் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் பிரபாஸை என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், உடனே வெற்றியையும், இறவாத்தன்மையும் நிச்சயம் அடைவான்.(52)

ஆர்ஷ்டிசேணரின் மகனுடைய ஆசிரமத்திற்கு அருகில் உஜ்ஜானகம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திலும், அடுத்ததாகப் பிங்கையின் ஆசிரமத்தில் அமைந்திருக்கும் தீர்த்தத்திலும் நீராடும் ஒருவன், நிச்சயம் தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டவனாவான்.(53)

மூன்று நாட்கள் உண்ணாநோன்பிருந்து, குல்யை {ரிஷிகுல்யை} என்று அறியப்படும் தீர்த்தத்தில் நீராடி, அகமர்ஷணம் என்ற பெயரைக் கொண்ட புனித மந்திரங்களை உரைக்கும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைவான்.(54)

ஓரிரவு உண்ணாநோன்பிருந்து, பிண்டாரகையில் நீராடும் ஒருவன், அடுத்த நாளுக்குள் தூய்மையடைந்து, அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைவான்.(55)

தர்மாரண்யம் என்றழைக்கப்படும் காடுகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மசரத்திற்குச் செல்லும் ஒருவன், தன் பாவங்களை அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து புண்டரீக வேள்வி செய்த பலனை அடைவான்.(56)

மைநாக மலையின் நீரில் நீராடி, காலையும், மாலையும் துதிகளைச் செய்து, ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு மாத காலம் அங்கே வசிக்கும் ஒருவன் அனைத்து வேள்விகளையும் செய்த பலனை அடைவான்.(57)

காலோதகம், நந்திகுண்டம், உத்தரமானஸம் ஆகியவற்றுக்குப் புறப்பட்டு அவற்றிலிருந்து நூறு யோஜனை தொலைவில் உள்ள இடத்தை அடைந்தாலே ஒருவன் கருவைக் கொன்ற பாவத்தில் இருந்தும் தூய்மையடைவான்.(58) அவன் நந்தீஸ்வரனின் தோற்றத்தைக் காண்பதில் வென்று, பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவான். ஸ்வர்க்கமார்க்கம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் நிச்சயம் பிரம்மலோகத்திற்குச் செல்வான்.(59)

கொண்டாடப்படும் இமயம் புனிதமானதாகும். அந்த மலைகளின் இளவரசனே சங்கரனின் மாமனாவான். அவன் ரத்தினங்கள் அனைத்தின் சுரங்கமாகவும், சித்தர்கள் மற்றும் சாரணர்கள் வந்து போகும் இடமாகவும் இருக்கிறான்.(60) வேதங்களை முழுமையாக அறிந்தவனும், இவ்வாழ்வை மிக நிலையற்றதெனக் கருதுபவனுமான ஒரு மறுபிறப்பாளன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு இணக்கமாக உணவு மற்றும் பானங்கள் அனைத்தையும் தவிர்த்து, தேவர்களைத் துதித்து, தவசிகளுக்குத் தலைவணங்கி இந்த மலைகளில் தன் உடலைக் கைவிட்டால் நிச்சயம் வெற்றியை அடைந்து, நித்தியமான பிரம்ம லோகத்தை அடைவான்.(61,62)

கோபத்தை அடக்கி, காமத்தைக் கட்டுப்படுத்தித் தீர்த்தத்தில் வசித்து வருபவன், அத்தகைய வாசத்தின் விளைவால் அவனுக்கு அடையப்பட முடியாத {பலன்} எதுவும் இல்லை.(63) உலகில் உள்ள தீர்த்தங்கள் அனைத்திற்கும் செல்லும் நோக்கில் ஒருவன் அவற்றில் அடைதற்கரிதான, பயணிக்க மிகக் கடுமையான வழிகளைக் கொண்டவற்றையும் மனத்தால் நினைக்க வேண்டும் {அவற்றிற்கும் செல்ல நினைக்க வேண்டும்}.(64) தீர்த்தங்களுக்குப் பயணம் செய்வது வேள்விகள் செய்த பலனை உண்டாக்கவல்லதாகும். அனைவரையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்பவை அவை. பெருஞ்சிறப்புகளைக் கொண்ட அவற்றால் சொர்க்கத்திற்கே வழிவகுக்க இயலும். இக்காரியம் உண்மையில் பெரும்புதிராகும் {பெரும் ரகசியமாகும்}. தேவர்களே கூடத் தீர்த்தங்களில் நீராடுகின்றனர். அவை அவர்களையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்கின்றன.(65) பிராமணர்களுக்கும், தனக்கான நன்மையை அடையும் நோக்கம் கொண்ட அறம் சார்ந்த நேர்மையாளர்களுக்கும் தீர்த்தங்கள் குறித்த இந்த உரை சொல்லப்பட வேண்டும். மேலும் அவனது நலன்விரும்பிகள், நண்பர்கள், அவனுக்குக் கீழ்ப்படிந்து அர்ப்பணிப்புடன் இருக்கும் சீடர்கள் ஆகியோரும் கேட்கும் வகையில் இது சொல்லப்பட வேண்டும்” {என்றார் அங்கிரஸ்}.(66)

பெரும் தவத்தகுதியைக் கொண்ட அங்கிரஸ் இந்த உரையைக் கௌதமருக்குச் சொன்னார். அங்கிரஸ், பெரும் நுண்ணறிவைக் கொண்ட கசியபரிடம் இருந்து இதைப் பெற்றார்.(67) இவ்வுரையானது பெரும் முனிவர்களாலும் சொல்லத்தகுந்ததாகக் கருதப்படுகிறது. {ஒருவனைத்} தூய்மையடையச் செய்யும் யாவற்றிலும் இது முதன்மையானதாகும். இதை விடாமல் நாள்தோறும் சொல்லும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, இவ்வாழ்வை விட்டுச் சொர்க்கத்தை அடைவான்.(68) “அங்கிரஸின் இவ்வுரை, புதிராகக் கருதப்படுகிறது” என்று இந்த உரை குறித்துக் கேட்கும் ஒருவன், அடுத்தப் பிறவியில் நற்குடியில் பிறந்தும் தன் முற்பிறவியின் நினைவுகளுடன் கூடியவனாக இருப்பான்” என்றார் {பீஷ்மர்}”.(69)

கங்கையின் மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 26-தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட ஒரு முனிவருக்கும், சீல நோன்புடன் கூடிய உஞ்சவிருத்தி செய்து வந்த ஒரு பிராமணருக்குமிடையில் கங்கையின் மகிமையைக் குறித்து நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நுண்ணறிவில் பிருஹஸ்பதிக்கும், மன்னிக்கும் தன்மையில் {பொறுமையில்} பிரம்மனுக்கும் இணையானவரும், ஆற்றலில் சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, சக்தியில் சூரியனுக்கும் ஒப்பானவரும்,(1) அளவிலா வலிமை கொண்டவரும், கங்கையின் மைந்தருமான பீஷ்மர், போரில் அர்ஜுனனால் வீழ்த்தப்பட்டுக் கிடந்தார். மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் மற்றும் பல மக்கள் சூழ இந்தக் கேள்விகளை அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.(2) வீரர்கள் விரும்பும் படுக்கையில் கிடந்த அந்த முதிய வீரர், தமது உடலில் இருந்து விடுபெறும் மங்கல நேரத்திற்காகக் காத்திருந்தார். பாரதக் குலத்தில் முதன்மையானவரான அவரைக் காணப் பெரும் முனிவர்கள் பலர் அங்கே வந்தனர்.(3)

அவர்களில் அத்ரி, வசிஷ்டர், பிருகு, புலஸ்தியர், புலக்ஷர் மற்றும் கிரது ஆகியோரும் இருந்தனர். அங்கிரஸ், கௌதமர், அகஸ்தியர், நன்கு அடக்கப்பட்ட ஆன்மாவைக் கொண்ட ஸுமதி,(4) விஷ்வாமித்திரர், ஸ்தூலசிரஸ், ஸம்வர்த்தர், பிரமதி, தமர் ஆகியோரும் அங்கிருந்தனர். பிருஹஸ்பதி, உசானஸ் {சுக்ராசாரியர்}, வியாசர், சியவனர், காசியபர், துருவர்,(5) துர்வாஸர், ஜமதக்நி, மார்க்கண்டேயர், காலவர், பரத்வாஜர், ரைப்யர், யவக்ரீதர், திரிதர் ஆகியோரும் அங்கிருந்தனர்.(6) ஸ்தூலாக்ஷர், சுபலாக்ஷர், கண்வர், மோதாதிதி, கிருசர், நாரதர், பர்வதர், ஸுதன்வா, ஏகதர், துவிதர்,(7) நிதம்பூ, புவனர், தௌம்யர், சதானந்தர், அக்ரதவ்ரணர், பரசுராமர், கசர் ஆகியோரும் அங்கிருந்தனர்.(8) உயர் ஆன்மா கொண்டவர்களான இந்தப் பெரும் முனிவர்கள் அனைவரும் கணைப்படுக்கையில் கிடந்த பீஷ்மரைக் காண வந்தனர். தம்பிகளுடன் கூடிய யுதிஷ்டிரன், ஒருவர் பின் ஒருவரா அங்கே வந்த உயர் ஆன்ம முனிவர்களை வழிபட்டான். அந்த வழிபாட்டை ஏற்றுக் கொண்ட அந்த முதன்மையான முனிவர்கள் அங்கே அமர்ந்து ஒருவரோடு ஒருவர் உரையாடத் தொடங்கினர்.(9,10)

பீஷ்மர் தொடர்பான அவர்களது உரையாடல் மிக இனிமையானதாகவும், புலன்கள் அனைத்திற்கும் ஏற்புடையதாகவும் இருந்தது. அவர்கள் தம்மைக் குறித்துப் பேசுவதைக் கேட்ட பீஷ்மர் மகிழ்ச்சியால் நிறைந்து, ஏற்கனவே தாம் சொர்க்கத்தில் இருப்பதாகக் கருதினார்.(11) அப்போது அந்த முனிவர்கள் பீஷ்மரிடமும், பாண்டவ இளவரசர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு, காண்போர் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கிருந்து மறைந்தனர்.(12) பாண்டவர்கள் அந்தப் பேரருள் கொண்ட முனிவர்கள் மறைந்த பிறகும் அவர்களை மீண்டும் மீண்டும் துதித்துக் கொண்டிருந்தனர்.(13) பிறகு உற்சாகமிக்க ஆன்மாக்களுடன் கூடிய அவர்கள், உதிக்கும் சூரியனுக்காகக் காத்திருக்கும் மந்திரங்களில் திறன்மிக்கப் பிராமணர்களைப் போலக் கங்கையின் மைந்தரிடம் காத்திருந்தனர்.(14) அவர்களது தவசக்தியின் விளைவால் திசைப்புள்ளிகள் காந்தியுடன் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் அக்காட்சியைக் கண்டு பாண்டவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(15) அம்முனிவர்கள் பெற்றிருந்த பேரருளையும், பலத்தையும் நினைத்துப் பார்த்த பாண்டவ இளவரசர்கள், அக்காரியம் குறித்துத் தங்கள் பாட்டனான பீஷ்மரிடம் உரையாடத் தொடங்கினர்”.(16)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவ்வுரையாடல் முடிந்த பிறகு, பாண்டுவின் மகனான நீதிமான் யுதிஷ்டிரன், பீஷ்மரின் பாதங்களைத் தன் தலையால் தொட்டு, அதன் பிறகு அறம் மற்றும் நெறிகள் தொடர்பான தன் கேள்விகளை மீண்டும் கேட்கத் தொடங்கினான்.(17)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, புனிதத்தின் நோக்கில் கண்டால் எந்த நாடுகள், எந்த மாகாணங்கள், எந்த ஆசிரமங்கள், எந்த மலைகள், எந்த ஆறுகள் முதன்மையானவை?” என்று கேட்டான்.(18)

சீலம் மற்றும் உஞ்ச {சீலோஞ்சவிருத்தி} நோன்புகளை ஒரு பிராமணருக்கும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட ஒரு முனிவருக்கும் இடையில் இது தொடர்பாக நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் தென்படுகிறது.(19) ஒரு காலத்தில், மலைகளால் அலங்கரிக்கப்பட்ட மொத்த பூமியிலும் திரிந்த ஒரு முதன்மையான மனிதன், இறுதியாகச் சீல {சீல விருத்தி} நோன்புக்கு இணக்கமான இல்லறவாழ்வு முறையைப் பின்பற்றி வாழும் ஒரு முதன்மையான மனிதரின் இல்லத்திற்கு {ஒரு கிருஹஸ்தனின் வீட்டுக்கு} வந்தார்.(20) பின்னவர் தமது விருந்தினரை உரிய சடங்குகளுடன் வரவேற்றார். இத்தகைய விருந்தோம்பலைப் பெற்று மகிழ்ந்த அந்த முனிவர், தமக்கு விருந்தளிப்பவரின் இல்லத்திலேயே அவ்விரவை மகிழ்ச்சியாகக் கடத்தினார்.(21) அடுத்தநாள் காலையில் சீல நோன்பை நோற்கும் அந்தப் பிராமணர், காலையில் தாம் செய்ய வேண்டிய செயல்கள் மற்றும் சடங்குகளை முடித்து, தம்மை முறையாகத் தூய்மை செய்து கொண்டு, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டிருக்கும் தமது விருந்தினரை உற்சாகமாக அணுகினார்.(22) ஒருவரையொருவர் சந்தித்துச் சுகமாக அமர்ந்த அவ்விருவரும், வேதங்கள் மற்றும் உபநிஷதங்கள் தொடர்பான இனிமையான உரையாடலைத் தொடங்கினர்.(23) அந்த உரையாடலின் முடிவில் சீல நோன்பை நோற்கும் பிராமணர், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவரிடம் மதிப்புடன் பேசினார். ஓ! யுதிஷ்டிரா, நுண்ணறிவுடன் கூடிய அவர், நீ என்னிடம் கேட்ட அதே கேள்வியை முன்வைத்தார்.(24)

அந்த வறிய பிராமணர், “புனிதத்தின் நோக்கில் கண்டால் எந்தெந்த நாடுகள், எந்தெந்த மாகாணங்கள், எந்த ஆசிரமங்கள், எந்தெந்த மலைகள், எந்தெந்த ஆறுகள் முதன்மையானவையாகக் கருதப்பட வேண்டும்? இதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(25)தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவர், “ஆறுகள் அனைத்திலும் முதன்மையான பாகீரதி {கங்கை} பாயும் கரைகளுக்கு அருகே உள்ள நாடுகள், மாகாணங்கள், ஆசிரமங்கள், மலைகள் ஆகியவையே முதன்மையான புனிதம் கொண்டவை.(26) தவங்கள், பிரம்மச்சரியம், வேள்விகள், துறவு, ஆகியவற்றின் மூலம் ஓர் உயிரினம் அடையவல்ல கதியைப் பாகீரதியின் புனித நீரில் நீராடி அதன் அருகில் வாழ்வதால் மட்டுமே ஒருவன் நிச்சயம் அடைவான்.(27) மேனியில் பாகீரதியின் புனித நீர் தெளிக்கப்பட்டவை, அல்லது அந்தப் புனித ஆற்றில் எலும்புகள் இடப்பட்டவையான உயிரினங்கள் எக்காலத்திலும் சொர்க்கத்தில் இருந்து வீழ நேராது.(28) ஓ! கல்விமானான பிராமணரே, தங்கள் செயல்கள் அனைத்திலும் பாகீரதியின் நீரைப் பயன்படுத்தும் மனிதர்கள், இவ்வுலகில் இருந்து சென்றதும் நிச்சயம் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்.(29) தங்கள் வாழ்வின் முதல் பகுதியில் பாவம் நிறைந்த செயல்கள் பலவற்றைச் செய்த மனிதர்களும் கூட, வருடக்கணக்கில் கங்கையில் அருகில் வசிப்பதன் மூலம் மேன்மைமிக்கக் கதியை அடைவதில் வெல்வார்கள்.(30)

கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் கங்கையின் புனித நீரில் நீராடுவதன் மூலம் விளையும் பலனை நூறு வேள்விகளாலும் உண்டாக்க முடியாது.(31) கங்கையின் ஓடையில் ஒரு மனிதனின் எலும்புகள் கிடக்கும் காலம் வரை அவன் சொர்க்கத்தில் மதித்து வழிபடப்படுவான்.(32) நாள் புலர்கையில் இருளை அகற்றி, காந்தியில் சுடர்விட்டு எழும் சூரியனைப் போலவே, கங்கை நீரில் நீராடிய மனிதன் தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து காந்தியில் ஒளிர்வது காணப்படுகிறது.(33) கங்கையின் புனித நீர் இல்லாத நாடுகளும், திசைப்புள்ளிகளும் நிலவற்ற இரவுகள் போன்றவையோ, மலர்களற்ற மரங்களையோ போன்றவையாகும்.(34) உண்மையில், கங்கையில்லாத உலகம் என்பது, அறமற்ற பல்வேறு வகையினரையும், வாழ்முறைகளைக் கொண்டவர்களையும், அல்லது சோமமற்ற வேள்விகளைப் போன்றதாகும்.(35)

கங்கை இல்லாத நாடுகளும், திசைப்புள்ளிகளும், சூரியனற்ற ஆகாயத்தையோ, மலைகளற்ற பூமியையோ, காற்றில்லாத வெளியையோ போன்றவை என்பதில் ஐயமில்லை.(36) மூவுலகங்களில் உள்ள மொத்த உயிரினங்களும் கங்கையின் மங்கல நீரால் தொண்டாற்றப்பட்டால் {தர்ப்பணம் செய்யப்பட்டால்} எந்த ஆதாரத்தில் இருந்தும் அடையப்பட இயலாத இன்பத்தை அவை அடையும்.(37) சூரியனின் கதிர்களால் வெப்பமூட்டப்பட்ட கங்கையின் நீரைப் பருகும் ஒருவன், மாட்டுச் சாணத்தில் இருந்து சேகரிக்கப்படும் கோதுமை, அல்லது வேறு எந்தத் தானியத்தையும் உண்டு வாழும் நோன்பு தருவதை விடப் பெரும்பலனை அடைவான்.(38) தன்னுடலைத் தூய்மை செய்து கொள்ள ஓராயிரம் சாந்திராயணச் சடங்குகளைச் செய்யும் ஒருவன், கங்கை நீரைப் பருகும் ஒருவன் ஆகிய இருவரும் இணையானவர்களா? இல்லையா என்பதைச் சொல்ல முடியாது.(39) ஓராயிரம் வருடங்கள் ஒற்றைக் காலில் நிற்பவன், கங்கையின் கரையில் ஒரு மாதம் மட்டுமே வாழ்ந்தவன் ஆகிய இருவரும் இணையானவர்களா? இல்லையா என்பதைச் சொல்ல முடியாது[1].(40)கங்கையின் கரையில் நிரந்தரமாக வாழும் ஒருவன், பத்தாயிரம் யுகங்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பவனை விடத் தகுதியில் மேம்பட்டவனாவான்.(41) நெருப்புடன் தொடர்பேற்படுகையில் மிச்சமில்லாமல் எரியும் பஞ்சைப் போலவே, கங்கையில் நீராடும் மனிதனின் பாவங்களும் மிச்சமில்லாமல் எரிக்கப்படுகின்றன.(42) துன்பத்தால் பீடிக்கப்பட்ட இதயங்களுடன் தங்கள் சோகத்தை விலக்கும் கதியை அடைய முனையும் உயிரினங்களுக்குக் கங்கையைவிட மேன்மையான கதி வேறேதும் இல்லை.(43) கருடனைக் கண்டதும் தங்கள் நஞ்சை இழக்கும் பாம்புகளைப் போலவே, கங்கையின் புனித ஓடையைக் கண்ட உடனேயே ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவான்.(44) அறப்புகழற்றவர்கள், பாவம் நிறைந்த செயல்களுக்கு அடிமையாக இருப்பவர்கள் ஆகியோர் கங்கையில் தங்கள் புகழையும், பாதுகாப்பையும், மீட்புக்கான வழிகளையும், தங்கள் புகலிடத்தையும், மறைவிடத்தையும் கொண்டுள்ளனர்[2].(45)கொடிய இயல்புடன் கூடிய பல்வேறு பாவங்களால் பீடிக்கப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் உள்ள இழிந்தவர்கள் பலர், நரகத்தில் மூழ்கப் போகும்போது (பாவிகளாக இருந்தாலும், அவர்கள் கங்கையின் துணையை நாடினால்) மறுமையில் கங்கையால் அவர்கள் மீட்கப்படுவார்கள் {கங்கை அவர்களைக் கரையேற்றுவாள்}.(46) ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவரே, கங்கையின் புனித நீரில் நாள்தோறும் மூழ்குபவர்கள், பெரும் முனிவர்களுக்கும், வாசவனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களுக்கும் இணையானவர்களாவார்கள்.(47) ஓ! பிராமணரே, பணிவோ, அடக்கமான நடத்தையோ இல்லாத மனிதர்களில் இழிந்தவர்களும், பாவம் நிறைந்தவர்களும், கங்கையில் அருகில் செல்வதால் அறவோராகவும், நல்லோராகவும் மாறுவார்கள்.(48) தேவர்களுக்கு அமுதம் போலவும், பித்ருக்களுக்கு ஸ்வதா போலவும், நாகர்களுக்குச் ஸுதா[3] போலவும் மனிதர்களுக்கு உள்ளதே கங்கையின் நீராகும்.(49) பசியால் பீடிக்கப்பட்ட பிள்ளைகள் தங்கள் அன்னையரிடம் உணவை வேண்டுவதைப் போலவே, உயர்ந்த நன்மையை அடைய விரும்பும் மனிதர்களும் கங்கையிடம் செல்கிறார்கள்.(50)சுயம்புவான பிரம்மனின் உலகமே இடங்கள் அனைத்திலும் முதன்மையாக இருப்பதைப் போல, நீராட விரும்புவோருக்கு ஆறுகள் அனைத்திலும் முதன்மையான கங்கையே இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.(51) தேவர்களுக்குத் தலைமை ஆதாரங்களாகப் பூமியும், பசுக்களும் சொல்லப்படுவதைப் போலவே, வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் கங்கையே தலைமை ஆதாரமாக இருக்கிறாள்[4].(52) சூரியனிலும், சந்திரனிலும் தோன்றும் அமுதத்தைக் கொண்டு தங்களை ஆதரித்துக் கொள்ளும் தேவர்களைப் போலவே மனிதர்கள் ஆதரித்துக் கொள்ளத்தக்கது கங்கையின் நீராகும்.(53) கங்கைக் கரைகளில் உள்ள மண்ணை எடுத்துப் பூசிக் கொள்பவன், தேவ களிம்புகளால் அலங்கரிக்கப்பட்டுச் சொர்க்கத்தில் இருக்கும் சொர்க்கவாசியைப் போலத் தன்னைக் கருதிக் கொள்ளலாம்.(54) கங்கைக் கரையில் உள்ள சேற்றைத் தன் தலையில் பூசிக் கொள்பவன், சுற்றிலும் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றும் சூரியனுக்கு இணையான பிரகாசத்தை அடைவான்.(55)கங்கை நீர்த்துகள்களால் ஈரமூறிய காற்று ஒருவனைத் தீண்டிய உடனேயே அவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாகிறான்.(56) துன்பங்களால் பீடிக்கப்பட்ட மனிதன் கனம் தாங்காமல் மூழ்கப்போகும் நிலையில் அந்தப் புனித ஓடையைக் கண்டதும், இதயத்தில் எழும் இன்பத்தால் தன் துன்பங்கள் அனைத்தும் விலகுவதைக் காண்கிறான்.(57) கங்கையானவள், அன்னங்கள், கோகங்கள் மற்றும் தன் மார்பில் விளையாடும் பிற நீர்க்கோழிகளின் {சக்ரவாகங்களின்} இனிய ஒலியின் மூலம் கந்தர்வர்களையும், தன் உயர்ந்த கரைகளால் {மணல் மூடுகளினால்} பூமியில் உள்ள மலைகளையும் கங்கை அறைகூவி அழைக்கிறாள்[5].(58) அவளது பரப்பில் மொய்க்கும் அன்னங்கள் மற்றும் பிற வகை நீர்க்கோழிகளையும், பசுக்கள் மேயும் மேய்ச்சல் நிலங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கரைகளைக் கொண்டிருப்பதையும் கண்டு சொர்க்கதேவி தன் செருக்கை அழிக்கிறாள்.(59) கங்கைக்கரையில் வசிப்பதின் மூலம் ஒருவன் அனுபவிக்கும் உயர்ந்த இன்பமானது சொர்க்கத்தில் வசிக்கும் ஒருவனுக்குக்கூடக் கிட்டாது.(60)வாக்கு, எண்ணம் மற்றும் வெளிப்படையான செயல் ஆகியவற்றின் மூலம் செய்த பாவங்களால் பீடிக்கப்பட்ட மனிதனும் கங்கையைக் கண்ட உடனே தூய்மையடைவான் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை.(61) அந்தப் புனித ஓடையைக் கண்டு, அதைத் தொட்டு, அதன் நீரில் நீராடும் ஒருவன், தன்னுடைய ஏழு தலைமுறை மூதாதையர்களையும், ஏழு தலைமுறை வழித்தோன்றல்களையும் {வாரிசுகளையும்} இன்னும் அதிக மூதாதையர்களையும், வழித்தோன்றல்களையும் காப்பாற்றுவான்.(62) கங்கைக் குறித்துக் கேட்டு, அந்த ஆற்றுக்குச் செல்ல விரும்பி, அதன் நீரைப் பருகி, அதன் நீரைத் தொட்டு, அதனில் நீராடும் ஒரு மனிதன், தன் தந்தைவழி மற்றும் தாய்வழி குலங்கள் இரண்டையும் காப்பாற்றுகிறான்.(63) கங்கையின் நீரைக் கண்டு, தொட்டுப் பருவதன் மூலமோ, அதைப் புகழ்வதன் மூலமோ, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாவிகள் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைகின்றனர்.(64) பிறவி, வாழ்வு, கல்வி ஆகியவற்றைக் கனிநிறைந்ததாக்க விரும்புபவர்கள், கங்கைக்குச் சென்று, நீர்க்காணிக்கைகளை வழங்குவதன் மூலம் பித்ருக்களையும், தேவர்களையும் நிறைவடையச் செய்ய வேண்டும்.(65)

கங்கையில் நீராடுவதன் மூலம் ஒருவன் ஈட்டும் தகுதியானது, மகன்களைப் பெறுவதாலோ செல்வத்தைப் பெறுவதாலோ, தகுதிமிக்கச் செயல்களைச் செய்வதாலோ ஈட்ட இயலாததாகும்.(66) உடல் திறனிருந்தும், புனித ஓடையான மங்கலக் கங்கையைக் காண முனையாதவர்களை, பிறவிக் குருடர்களாகவோ, இறந்தவர்களாகவோ, வாதம் அல்லது முடத்தன்மையின் மூலம் நகரும் சக்தியற்றவர்களாகவோ நிச்சயம் கருதலாம்.(67) நிகழ்காலம், கடந்தகாலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்த பெரும் முனிவர்களாலும், இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களாலும் கூடத் துதிக்கப்படும் இந்தப் புனித ஓடையை எந்த மனிதன் மதிக்க மாட்டான்?(68) காட்டுத்துறவிகள், இல்லறவாசிகள், யதிகள், பிரம்மச்சாரிகள் போன்றோரால் பாதுகாப்பு நாடப்படும் கங்கையிடம் எந்த மனிதன் பாதுகாப்பை நாட மாட்டான்?(69) தன் உயிர் மூச்சானது தன் உடலை விட்டு வெளியேறப்போகும் காலத்தில் குவிந்த ஆன்மாவுடன் கங்கையை நினைக்கும் அறவொழுக்கம் கொண்ட மனிதன் உயர்ந்த கதியை அடைவதில் வெல்வான்.(70)

மரணகாலத்தில் கங்கையின் அருகில் வசித்து, மதிப்புடன் அவளைத் துதிக்கும் மனிதன், அனைத்து வகைத் துயரங்கள், பாவம் மற்றும் மன்னர்களிடம் கொண்ட அச்சத்தில் இருந்து விடுபடுவான்.(71) மிகப்புனிதமான அந்த ஓடை {கங்கை} ஆகாயத்தில் இருந்து பாய்ந்த போது, மஹேஸ்வரன் அவளைத் தன் தலையில் தாங்கினான். இந்த ஓடையே சொர்க்கத்திலும் துதிக்கப்படுகிறது[6].(72) இந்தப் புனித ஓடையின் மூன்று பாதைகளால் மூவுலகங்களும் (பூமி, சொர்க்கம் மற்றும் பாதாள லோகங்களும்) அலங்கரிகப்பட்டிருக்கின்றன. அந்த ஓடையின் நீரைப் பயன்படுத்தும் மனிதன் நிச்சயம் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறான்.(73) சொர்க்கத்தில் தேவர்களுக்குச் சூரியக் கதிரைப் போலவும், பித்ருக்களுக்குச் சந்திரமாஸைப் போலவும், மனிதர்களுக்கு மன்னனைப் போலவும், அனைத்து ஓடைகளுக்கும் கங்கை இருக்கிறது.(74) கங்கையை இழக்கும்போது ஒருவன் அடையும் துயரத்தின் அளவுக்கு, தாயையோ, தந்தையையோ, மகன்களையோ, மனைவிகளையோ, செல்வத்தையோ இழப்பவன் துயரை உணர மாட்டான்.(75)கங்கையைக் காணும் ஒருவன் அடையும் இன்பத்தின் அளவுக்கு எவனும் பிரம்ம லோகத்திற்கு வழிவகுக்கும் செயல்களைச் செய்வதன் மூலமோ, சொர்க்கத்திற்கு வழிவகுக்கக்கூடிய வேள்விகள் மற்றும் சடங்குகளின் மூலமோ, பிள்ளைகள் அல்லது செல்வத்தின் மூலமோ அஃதை {இன்பத்தை} அடைய மாட்டான்.(76) கங்கையைக் காண்பதன் மூலம் மனிதர்கள் அடையும் மகிழ்ச்சியானது, அவர்கள் முழு நிலவைக் காணும் போது அடைவதற்கு {அடையும் மகிழ்ச்சிக்கு} இணையானதாகும்.(77) கங்கையிடம் முழுமையாக நிலைபெறச் செய்த மனத்துடனும், ஒப்பற்ற மதிப்புடனும், அவளைத் தவிர அண்டத்தில் துதிக்கத்தக்க வேறேதும் இல்லை {அவளே ஆதாரம், அவளே பரகதி} என்ற உணர்வுடனும், வீழாத உறுதியுடனும் உள்ள மனிதன் கங்கையின் அன்புக்குரியவனாகிறான் {அவளது அனுக்கிரகத்திற்குப் பாத்திரனாவான்}.(78) பூமி, ஆகாயம், அல்லது சொர்க்கத்தில் வாழும் உயிரினங்களும், உண்மையில் மிக மேன்மையானவர்களும் எப்போதும் கங்கையில் நீராட வேண்டும். உண்மையில், கடமைகள் அனைத்திலும் அறவோருக்கு இதுவே முதன்மையான கடமையாகும்.(79) சாம்பலாக்கப்பட்ட சாகரனின் மகன்கள் அனைவரையும் அடித்துச் சென்றதாலும் புனிதமான கங்கையின் புகழ் உம்மையில் இருந்து சொர்க்கம் வரை மொத்த அண்டத்திலும் பரவியிருக்கிறது[7].(80)கங்கையில் காற்றால் எழுப்பப்படுபவையும், பிரகாசமானவையும், அழகியவையும், உயர்ந்தவையும், வேகமாகப் பாய்பவையுமான அலைகளால் கழுவப்பட்ட மனிதர்கள், தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, ஆயிரங்கதிர் கொண்ட பகல் நட்சத்திரத்திற்கு ஒப்பான காந்தியைப் பெறுவார்கள்.(81) வேள்விகளில் ஊற்றப்படும் நெய் மற்றும் பிற பானங்களைப் போன்ற பெருமையும், புனிதமும் கொண்டதும், பெரும் வேள்விகளின் பலன்களைத் தரவல்லதுமான கங்கையின் நீரில் தங்கள் உடல்களை விட்டவர்களும், அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான மனிதர்கள், நிச்சயம் தேவர்களுக்கு இணையான நிலையை அடைவார்கள்.(82) உண்மையில், புகழையும், பெரும் பரப்பையும் கொண்டவளும், மொத்த அண்டத்தோடு அடையாளம் காணப்படுபவளும், மனிதர்களாலும், முனிவர்களாலும், இந்திரனின் தலைமையிலான தேவர்களாலும் மதிக்கப்படுபவளான கங்கையானவள், குருடர்கள், மூடர்கள், அனைத்தையும் இழந்தவர்கள் ஆகியோரின் விருப்பங்கள் அனைத்தையும் கனியும் நிலையை அளிக்கவல்லவளாவாள்.(83) அண்டமனைத்தையும் காப்பவளும், மூவோடைகளாகப் பாய்பவளும், அனைத்து வகை நன்மைகளை உண்டாக்கவல்லதும், உயர்ந்ததும், புனிதமானதும், தேனைப் போன்று இனியதுமான நீரால் எப்போதும் நிறைந்திருப்பவளுமான கங்கையைத் தஞ்சமடைந்தவர்கள் சொர்க்கத்தின் இன்பநிலையை அடைவதில் வெல்வார்கள்.(84) கங்கையின் அருகில் வசிப்பவனும், நாள்தோறும் அவளைக் காண்பவளுமான மனிதன், அவளைப் பார்ப்பதன் மூலமும், தொடுவதன் மூலமும் தூய்மையடைகிறான். தேவர்கள் அவனுக்கு இம்மையிலும், மறுமையிலும் அனைத்து வகை மகிழ்ச்சியையும் கொடுப்பார்கள்.(85)

ஒவ்வொரு உயிரினத்தையும் பாவத்தில் இருந்து பாதுகாத்து, சொர்க்கத்தின் இன்பநிலைக்கு வழிவகுக்கவல்லவளாகக் கங்கை கருதப்படுகிறாள். அவள் விஷ்ணுவின் தாயான பிருச்நியாகக்[8] கருதப்படுகிறாள். சொல் அல்லது வாக்காக அவளே கருதப்படுகிறாள். அவள் வெகு தொலைவுக்குச் செல்வபவளாகவும், எளியதில் அடையப்பட முடியாதவளுமாக இருக்கிறாள். அவள் மங்கலத்தன்மை மற்றும் செழிப்பின் உடல் வடிவம் ஆவாள். அவள், தலைமைத்தன்மை அல்லது பலம் முதலிய நன்கறியப்பட்ட ஆறு குணங்களைக் கொடுக்க வல்லவளாவாள். அவள் எப்போதும் தன் அருளை வழங்குகிக் கொண்டிருக்கிறாள். அவளே அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களை வெளிக்காட்டுபவளும், அனைத்து உயிரினங்களின் உயர்ந்த புகலிடமும் ஆவாள். இம்மையில் அவளது பாதுகாப்பை நாடுபவர்கள், நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள்.(86) கங்கையின் புகழானது, ஆகாயம், சொர்க்கம், பூமி, திசைகள் மற்றும் துணைத்திசைகளின் புள்ளிகள் அனைத்திலும் பரவியிருக்கிறது. அந்த முதன்மையான ஓடையின் நீரைப் பயன்படுத்தவதுன் மூலம் மனிதர்கள் எப்போதும் உயர்ந்த வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறார்கள்.(87) கங்கையைக் கண்டு, அவளைப் பிறருக்குச் சுட்டிக் காட்டும் மனிதன், கங்கையானவள் தன்னை மறுபிறவியில் இருந்து மீட்பதையும், தனக்கு முக்தியை அருள்வதையும் காண்கிறான். கங்கையானவள், தேவர்களின் படைத்தலைவனான குஹனைத் தன் கருவறையில் சுமந்தாள். உலகங்களில் விலைமதிப்புமிக்கத் தங்கத்தையும் அவள் தன் கருவறையில் சுமக்கிறாள். ஒவ்வொரு நாளும் காலையில், அவளது நீரில் நீராடுபவர்கள், அறம் பொருள் இன்பமென்ற முத்தொகையையும் அடைவதில் வெல்கிறார்கள். மேலும் அந்த நீரானது, வேள்வி நெருப்பில் மந்திரங்களுடன் ஊற்றப்படும் நெய்யின் புனிதத்துக்கு இணையானதாக இருக்கிறது. பாவங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒருவனைத் தூய்மைப்படுத்த வல்ல அவள், தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்தவளாவாள், மேலும் அவளது ஓடையானது ஒவ்வொருவராலும் உயர்வாக மதிக்கப்படுகிறது.(88) கங்கையானவள், இமயத்தின் மகளும், ஹரனின் மனைவியும், சொர்க்கம் மற்றும் பூமி ஆகிய இரண்டின் ஆபரணமுமாவாள். அவள் மங்கலமான அனைத்தையும் வழங்குபவளும், தலைமைத்தன்மை அல்லது பலம் முதலிய நன்கறியப்பட்ட ஆறு குணங்களை அளிக்கவல்லவளும் ஆவாள்.(89) உண்மையில், ஓ! ஏகாதிபதி, கங்கையானவள் அறத்தின் நீர் வடிவமாவாள். அவள் பூமியில் நீர் வடிவில் ஓடிக் கொண்டிருக்கும் சக்தியுமாவாள். அவள், வேள்வி நெருப்பில் மந்திரங்களுடன் ஊற்றப்படும் நெய்யுடைய காந்தியைக் கொண்டவள் ஆவாள். அவள் எப்போதும் பேரலைகளாலும், அவளது நீரில் தூய்மைச் சடங்குகளைச் செய்யும் பிராமணர்களாலும் எப்போதும் அலங்கரிக்கப் பட்டிருக்கிறாள். சொர்க்கத்தில் இருந்து பாய்ந்த அவளைச் சிவன் தன் தலையில் தாங்கினான். உண்மையில் சொர்க்கங்களின் தாயான அவள், சம வெளிகளில் பாய்ந்து, பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் மதிப்புமிக்க நன்மைகளை வழங்குவதற்காகவும் உயர்ந்த மலையில் உதித்தாள்.(90)அவளே அனைத்துப் பொருட்களின் உயர்ந்த காரணமாகவும்; முற்றிலும் களங்கமற்றவளாகவும் இருக்கிறாள். அவள் பிரம்மத்தைப் போல நுட்பமானவளாக இருக்கிறாள். அவள் சிறந்த மரணப் படுக்கையை அளிக்கிறாள். அவள் உயிரினங்களை மிக விரைவில் சொர்க்கத்திற்கு வழிவகுக்கிறாள். பேரளவு நீருடன் அவள் பாய்கிறாள். அவள் அனைவருக்கும் பெரும்புகை அளிக்கிறாள். அவள் அனைத்து வடிவங்களுடனும் அடையாளம் காணப்படுகிறாள். வெற்றியால் மகுடம் சூட்டபட்ட மனிதர்களால் அவள் பெரிதும் விரும்பப்படுகிறாள். கங்கையில் நீராடியவர்களுக்கு அவளே சொர்க்கத்தின் பாதையாக இருக்கிறாள்.(91) கங்கையானவள் மன்னிக்கும் தன்மையில், பாதுகாப்பதில், தன்னால் வாழ்பவர்களை ஆதரிப்பதில் பூமாதேவிக்கு இணையானவள் என்றும், சக்தியிலும், காந்தியிலும் நெருப்புக்கும், சூரியனுக்கும் இணையானவள் என்றும், மறுபிறப்பாளர்களுக்குக் கருணை காட்டும் காரியத்தில் எப்போதும் குஹனுக்கு இணையானவள் என்றும் பிராமணர்கள் கருதுகிறார்கள்.(92) முனிவர்களால் புகழப்படுபவளும், விஷ்ணுவின் பாதத்தில் இருந்து உண்டாகுபவளும், மிகப் பழமையானவளும், மிகப் புனிதமானவளுமான அந்த ஓடையை இம்மையில் தங்கள் மொத்த ஆன்மாக்களுடன் மனத்தாலும் நாடும் மனிதர்கள், பிரம்மலோகம் செல்வதில் வெல்வார்கள்.(93) பிள்ளைகள், பிற உடைமைகள், அனைத்து வகை இன்ப நிலைகளையும் கொண்ட உலகங்கள் ஆகியவை நிலையற்றவை, அல்லது அழியத்தக்கவை என்று முழுமையாக நம்புபவர்களும், ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவர்களும், பிரம்மத்துடன் அடையாளம் காணப்படும் நிலையில் எப்போதும் நீடித்திருக்கும் நிலையை அடைய விரும்புபவர்களுமான மனிதர்கள், தாயிடம் மகன் கொள்ளும் அன்பையும், மதிப்பையும் கொண்டு கங்கைக்குத் தங்கள் துதிகளை எப்போதும் செலுத்துகின்றனர்.(94) வெற்றியை அடைய விரும்பும் தூய ஆன்மா கொண்ட மனிதன், சாதாரணப் பாலுக்குப் பதிலாக அமுதத்தைக் கொடுக்கும் பசுவைப் போன்றவளும், செழிப்பின் உடல் வடிவம் போன்றவளும், எங்கும் இருப்பவளும், உயிரினங்களின் மொத்த அண்டத்தில் இருப்பவளும், அனைத்து வகை உணவுகளின் ஊற்றுக்கண்ணாக இருப்பவளும், மலைகள் அனைத்தின் அன்னையும், அறவோர் அனைவரின் புகலிடமும், அளவிலா பலமும், சக்தியும் கொண்டவளும், பிரம்மனின் இதயத்திற்கு இன்பமளிப்பவளுமான கங்கையின் பாதுகாப்பை நாட வேண்டும்.(95)

பகீரதன் கடுந்தவங்களைச் செய்து, பரமத்தலைவனுடன் (விஷ்ணுவுடன்) கூடிய தேவர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்து, கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான். அவளிடம் செல்லும் மனிதர்கள் இம்மையிலும் மறுமையிலும் உள்ள அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுவதில் வெல்கிறார்கள்.(96) கங்கை தரும் பலன்களில் சிறு பகுதியை மட்டுமே என் புத்தியின் துணையால் கண்டு நான் உமக்குச் சொல்லியிருக்கிறேன். எனினும், அந்தப் புனித ஆற்றின் தகுதிகள் அனைத்தையும், அல்லது உண்மையில் அவளது பலம் மற்றும் புனிதத்தன்மை அனைத்தையும் உரைக்க எனக்குச் சக்தி கிடையாது.(97) ஒருவனால் தன் சக்தியைச் சிறப்பாகப் பயன்படுத்தி மேரு மலையில் உள்ள கற்களை எண்ணி விடவும், பெருங்கடலில் உள்ள நீரை அளந்துவிடவும் முடியலாம். ஆனால் கங்கை நீரின் பலன்கள் அனைத்தையும் அவன் எண்ணிவிட முடியாது.(98) எனவே, பெரும் அர்ப்பணிப்புடன் நான் சொன்ன கங்கையில் சில குறிப்பிட்ட பலன்களைக் கேட்ட ஒருவன், நம்பிக்கையுடனும், பக்தியுடனும், எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை அவற்றை மதிக்க வேண்டும்.(99) நான் சொன்ன பலன்களைக் கேட்டதன் விளைவால், நீர் மூவுலகங்களையும் உமது புகழால் நிறைத்து, எந்த மனிதனும் அடைவதற்கரியதும், அளவில் பெரியதுமான வெற்றியை நிச்சயம் அடைவீர். தன்னை மதிப்பவர்களுக்குக் கங்கையால் உண்டாக்கப்பட்ட இன்பமிக்கப் பல பகுதிகளை நீர் மிக விரைவில் அடைந்து, நிச்சயம் இன்பத்தில் திளைப்பீர்.(100) இதயப்பணிவுடன் தன்னிடம் அர்ப்பணிப்பு கொள்வோருக்குக் கங்கை எப்போதும் அருள்புரிவாள். தன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோருக்கு அனைத்து வகை மகிழ்ச்சிகளையும் அவள் அளிப்பாள். உயர்ந்த அருளைக் கொண்டவளான கங்கை, உமது இதயத்தையும் என் இதயத்தையும் அறம் நிறைந்த குணங்களில் ஈர்க்க வேண்டுகிறேன்” என்றார் {முனிவர்}”.(101)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்மாவையும், பெருங்காந்தியையும் கொண்டவரும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரும், கல்விமானுமான அந்தத் தவசி, சீல நோன்பு நோற்கும் அந்த வறிய பிராமணரிடம் இவ்வகையில் கங்கையின் முடிவிலா பலன்களைக் குறித்துப் பேசி ஆகாயத்தில் உயர்ந்தார்.(102) சீல நோன்பை நோற்கும் அந்த வறிய பிராமணர், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட தவசியின் சொற்களால் விழிப்படைந்து, கங்கையின் பாதுகாப்பை முறையாகப் பெற்று உயர்ந்த வெற்றியை அடைந்தார்.(103) ஓ! குந்தியின் மகனே, நீயும் பேரர்ப்பணிப்புடன் கங்கையை நாடி, அதன் மூலம் வெகுமதியையும், உயர்ந்த சிறப்பான வெற்றியையும் அடைவாயாக” {என்றார் பீஷ்மர்}.(104)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கங்கையின் புகழ் நிறைந்த இவ்வுரையைப் பீஷ்மரிடம் இருந்து கேட்ட யுதிஷ்டிரன், தன் தம்பிகளுடன் சேர்ந்து பெருமகிழ்ச்சியடைந்தான்.(105) கங்கையின் புகழ் நிறைந்த இந்தப் புனித உரையைச் சொல்லும், அல்லது கேட்கும் எந்த மனிதனும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவான்” {என்றார் வைசம்பாயனர்}.(106)

பிராமண நிலை! – அநுசாஸனபர்வம் பகுதி – 27- பிராமண நிலை அடைதற்கரியது என்பதைச் சொல்ல மதங்கனின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொன்னார்} யுதிஷ்திரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, சாத்திரங்களில் ஞானமும், அறிவும் கொண்டராக, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைக் கொண்டவராக, பல்வேறு வகையான சிறந்த குணங்களைக் கொண்டவராக, வயதில் முதியவராக நீர் இருக்கிறீர்.(1) புத்தி, ஞானம், தவங்களில் பிறருக்கு மேம்பட்டவராகப் புகழப்படுகிறீர். எனவே, ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, அறம் தொடர்பாக நான் உம்மிடம் பேச விரும்புகிறேன்.(2) ஓ! மன்னா, இத்தகைய காரியங்களில் கேள்வி கேட்கத்தகுந்த வேறொரு மனிதன் உலகங்கள் அனைத்திலும் கிடையாது. ஓ! மன்னர்களில் சிறந்தவரே, க்ஷத்திரியனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ உள்ள ஒருவன், பிராமண நிலையை அடைவதில் வெல்வதெவ்வாறு? அதற்கான வழிமுறைகளைச் சொல்வதே உமக்குத் தகும். தாழ்ந்த மூன்று வகைகளில் எதையும் சார்ந்த ஒரு மனிதன், பிராமண நிலையை அடவதில் வெல்வது மிகக் கடுமையான தவங்களாலா? அறச்செயல்களா? சாத்திரங்களில் உள்ள ஞானத்தாலா? ஓ! பாட்டா இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, மூன்றில் எந்த வகையைச் சார்ந்த எந்த மனிதரும் பிராமணநிலையை அடைய இயலாதவராவர். உயிரினங்கள் அனைத்திலும் உயர்ந்த நிலை அது.(5) மறுபிறவிகளுக்கு உட்பட்டு மீண்டும் மீண்டும் எண்ணற்ற வகை இருப்புகளில் பயணிப்பதன் மூலமே ஒருவன் இறுதியாக ஏதாவதொரு பிறவியில் பிராமணனாகப் பிறக்கிறான்.(6) ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக மதங்கருக்கும், ஒரு பெண் கழுதைக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல் ஒரு பழைய வரலாற்றில் தென்படுகிறது.(7) ஒரு காலத்தில் ஒரு பிராமணர் ஒரு மகனை அடைந்தான். அவன் வேறு வகை மனிதரால் உண்டாக்கப்பட்டவனாக இருந்தாலும்,[1] அவனது குழந்தைப்பருவ, இளமைப்பருவ சடங்குகள் பிராமணர்களுக்காக விதிக்கப்பட்ட விதிகளுக்கு ஏற்பவே செய்யப்பட்டன. மதங்கன் என்ற பெயரால் அழைக்கப்பட்ட அந்தக் குழந்தை, அனைத்து சிறப்புகளையும் கொண்டவனாக இருந்தான்.(8) ஓ! எதிரிகளை எரிப்பவனே, ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய அவனது தந்தை, அச்செயலுக்குத் தேவைப்படும் பொருட்களைத் திரட்டி வருமாறு அவனைப் பணித்தார். தன் தந்தையின் ஆணையை ஏற்றுக் கொண்டு, காரியத்தை நிறைவேற்றப் புறப்பட்ட அவன், ஒரு கழுதையால் இழுக்கப்பட்ட தேரை மிக வேகமாகச் செலுத்திக் கொண்டு போனான்.(9) அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த கழுதையானது வயதில் இளையதாக இருந்தது. எனவே, அந்த விலங்கு கடிவாளத்திற்குக் கட்டுப்படாமல், தன்னை ஈன்ற தாயான பெண்கழுதையின் அருகில் தேரைக் கொண்டு சென்றது. இதனால் பொறுப்பு நிறைவேற்படாத மந்தங்கன் சாட்டையினால் அந்த விலங்கின் மூக்கில் மீண்டும் மீண்டும் அடிக்கத் தொடங்கினான்.(10)தன் பிள்ளையின் மூக்கில் உள்ள வன்முறைக் குறியீடுகளைக் கண்ட அந்தப் பெண் கழுதை அதனிடம் அன்பால் நிறைந்து, “ஓ! குழந்தாய், இவ்வாறு நடத்தப்படுவதற்காக வருந்தாதே. உன்னைச் செலுத்திச் செல்பவன் ஒரு சண்டாளனாவான்.(11) ஒரு பிராமணனிடம் கடுமையேதும் இருக்காது. ஒரு பிராமணன் அனைத்து உயிரினங்களின் நண்பன் எனச் சொல்லப்படுகிறான்.[2] அவனே அனைத்து உயிரினங்களுக்கும் ஆசானாகவும், அவற்றின் ஆட்சியாளனாகவும் இருக்கிறான். {அப்படிப்பட்ட} அவனால் எந்த உயிரினத்தையும் கொடுமைப்படுத்த இயலுமா?(12) எனினும் இவன் பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவன். உன்னைப் போன்ற இளம் வயதுடைய உயிரினத்திடமும் அவன் கருணை காட்டவில்லை. இவ்வழியில் நடப்பதால் அவன் தன் பிறப்பின் வகையையே உறுதி செய்து கொண்டிருக்கிறான். தன் தந்தையிடம் இருந்து இவன் அடைந்திருக்கும் இயல்பானது, பிராமண இயல்பான கருணை, அன்பு ஆகியவை எழுவதைத் தடுக்கிறது” என்றது.(13)பெண் கழுதையின் இந்தக் கடுஞ்சொற்களைக் கேட்ட மதங்கன், தன் தேரில் இருந்து விரைவாகக் கீழே இறங்கி, அந்தப் பெண் கழுதையிடம், “ஓ! அருளப்பட்ட பெண்ணே, என் தாய் எக்குற்றத்தால் களங்கமடைந்தாள்?(14) நான் ஒரு சண்டாளன் என்பதை நீ எவ்வாறு அறிவாய்? தாமதிக்காமல் எனக்குப் பதிலளிப்பாயாக.(15) என் பிராமண நிலை எவ்வாறு தொலைந்தது. ஓ! பெரும் ஞானியே, தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்தையும் எனக்கு விளக்கமாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(16)

அதற்கு அந்தப் பெண் கழுதை {மதங்கனிடம்}, “சவரத்தொழில் செய்யும் ஒரு சூத்திரன் மூலம் ஆசையால் தூண்டப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணால் நீ ஈன்றெடுக்கப்பட்டாய். எனவே, பிறப்பால் நீ ஒரு சண்டாளனாவாய். உனக்குப் பிராமண நிலை எப்போதும் கிடையாது” என்றது”[3].(17)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெண் கழுதையால் இவ்வாறு சொல்லப்பட்ட மதங்கன் தான் வந்த சுவடுகளின் வழியே மீண்டும் தன் இல்லம் நோக்கி சென்றான். அவன் திரும்பி வந்ததைக் கண்ட அவனது தந்தை,(18) “நான் செய்ய நினைத்த வேள்விக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கும் கடினமான பணியில் நான் உன்னை ஈடுபடுத்தினேன். உன் பொறுப்பை நிறைவேற்றாமல் நீ ஏன் திரும்பி வந்தாய்? உனக்கு ஏதும் {உடல்நலம்} சரியில்லையா?” என்று கேட்டார்.(19)

மதங்கன், “எவ்வித உறுதியுமற்ற வகையில், அல்லது மிகத் தாழ்ந்த வகையில் பிறந்த ஒருவன், சரியாக இருப்பதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எவ்வாறு கருதமுடியும்? ஓ! தந்தையே, களங்கமுள்ள தாயைக் கொண்ட ஒருவனால் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்?(20) ஓ! தந்தையே, மனிதர்களைவிட மேலானதாகத் தெரியும் இந்தப் பெண் கழுதை, நான் ஒரு சூத்திரனால் ஒரு பிராமணிப் பெண்ணிடம் பெறப்பட்டவன் என்று சொல்கிறது. இக்காரணத்தினால் நான் கடுந்தவங்களைச் செய்யப் போகிறேன்” என்றான்.(21)

அவன், தன் தந்தையிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, தான் சொன்னதை உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, பெருங்காட்டிற்குச் சென்று கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினான்.(22) மகிழ்ச்சியாகப் பிராமண நிலையை அடையும் நோக்கத்திற்காகத் தவங்களைச் செய்வதில் தன்னை நிறுவிக் கொண்ட மதங்கன், தன் தவத்தின் கடுமையால் தேவர்களை எரிக்கத் தொடங்கினான்.(23)

இவ்வாறு தவங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவனிடம் தேவர்களின் தலைவனான இந்திரன் தோன்றி, “ஓ! மதங்கா, அனைத்து வகை மனித இன்பங்களையும் தவிர்த்து இத்தகைய துன்பத்தில் நீ ஏன் உன் காலத்தைக் கழிக்கிறாய்?(24) நான் உனக்கு வரமளிக்கப் போகிறேன். நீ விரும்பும் வரங்களைச் சொல்வாயாக. தாமதிக்காமல் உன் நெஞ்சில் இருப்பதைச் சொல்வாயாக. அடைவதற்கரிதாக இருந்தாலும் நான் அஃதை உனக்களிப்பேன்” என்றான்.(25)

மதங்கன், “பிராமண நிலையை அடைய விரும்பியே நான் இந்தத் தவங்களைச் செய்யத் தொடங்கினேன். அஃதை அடைந்ததும் நான் இல்லந்திரும்புவேன். இதுவே என்னால் வேண்டப்படும் வரமாகும்” என்றான்”.(26)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவனது இவ்வார்த்தைகளைக் கேட்ட புரந்தரன், அவனிடம், “ஓ! மதங்கா, நீ அடைய விரும்பும் பிராமண நிலையானது உண்மையில் உன்னால் அடையப்பட முடியாத நிலையாகும்.(27) நீ அஃதை அடைய விரும்புகிறாய் என்பது உண்மையே என்றாலும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் அஃது அடையப்பட இயலாது. ஓ! மூடப்புத்தி கொண்டவனே, நீ இந்நாட்டத்தில் பிடிவாதமாயிருந்தால் நிச்சயம் அழிவையே அடைவாய். எனவே தாமதிக்காமல் இந்த வீண்முயற்சியில் இருந்து விலகுவாயாக.(28) அனைத்திலும் முதன்மையான பிராமண நிலையை அடைய விரும்பும் இந்த உனது நோக்கமானது, தவங்களால் வெல்லப்பட இயலாததாகும். எனவே, அந்த முதன்மையான நிலையை அடைய ஆசைப்படுவதன் மூலம் நீ நிச்சயம் அழிவையே அடைவாய்.(29) சண்டாளனாகப் பிறந்த ஒருவனால், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் மிகப் புனிதமாகக் கருதப்படும் அந்நிலையை {பிராமண நிலையை} ஒருபோதும் அடைய முடியாது” என்றான் {என்றான் இந்திரன் எனச் சொன்னார் பீஷ்மர்}”.(30)

மதங்கனின் தவம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 28-பிராமண நிலை அடைவதற்குக் கடுந்தவம் இருந்த மதங்கன்; அவனைத் தடுத்த இந்திரனென யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மங்கா மகிமை கொண்டோனே, இந்திரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், கட்டுப்பாடுடைய நோன்புகள் மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஆன்மாவுடன் கூடிய மதங்கன், (தேவர்களின் தலைவனுடைய ஆலோசனைகளைக் கவனித்துக் கேட்காமல்), நூறு வருட காலம் ஒற்றைக் காலில் நின்றான்.(1)

பெரும்புகழைக் கொண்ட சக்ரன் மீண்டும் அவன் முன்பு தோன்றி, அவனிடம், “ஓ! குழந்தாய், பிராமண நிலை அடையத்தக்கதன்று. நீ அதில் நாட்டங்கொண்டாலும், அதை அடைவது உனக்குச் சாத்தியமில்லை.(2) ஓ! மதங்கா, அந்த உயர்ந்த நிலையில் ஆசை கொள்வதன் மூலம் நீ நிச்சயம் அழிவடையப் போகிறாய். ஓ! மகனே, இத்தகைய மூர்க்கத்தை வெளிப்படுத்தாதே. இஃது உன்னால் பின்பற்றத்தக்க அறப்பாதையல்ல.(3) ஓ! மூடப்புத்தி கொண்டோனே, இவ்வுலகில் நீ அதை அடைவது சாத்தியமில்லை. உண்மையில், அடையப்பட முடியாததில்ஆசை கொண்டுள்ள நீ எப்போதும் அழிவை அடையலாம்.(4) நான் மீண்டும் மீண்டும் உன்னைத் தடுத்து வருகிறேன். எனினும், தொடர்ந்து என் எச்சரிக்கைகளைக் கவனிக்காமல் உன் தவங்களின் துணையுடன் உயர்ந்த நிலையை அடைய முனைவதன் மூலம் நீ நிச்சயம் அழிவையே அடையப் போகிறாய்.(5)

விலங்கு வாழ்வில் இருந்து ஒருவன் மனித நிலையை அடைகிறான். மனிதனாகப் பிறக்கும்போது, நிச்சயம் அவன் புல்காஸ, அல்லது சண்டாள வகையிலேயே பிறப்பான்.(6) ஓ! மதங்கா, உண்மையில் ஒருவன் புல்காஸம் எனும் பாவம் நிறைந்த இருப்பு வகையில் {புல்காஸனாகப்}[1] பிறந்து நீண்ட காலம் திரிய வேண்டும்.(7) ஓராயிரம் {1000} வருடகாலம் அவ்வகையில் {சண்டாளனாகக்} கடத்திய ஒருவன் அடுத்ததாகச் சூத்திர நிலையை அடைவான்.(8) அதன் பிறகு அந்தச் சூத்திர வகையிலேயே அவன் நீண்ட காலம் திரிய வேண்டும். முப்பதாயிரம் {30,000} ஆண்டுகளுக்குப் பிறகு அவன் வைசிய நிலையை அடைவான். அந்த வகையிலும் அவன் நெருங்காலத்தைக் கடத்த வேண்டும்.(9) சூத்திர இருப்புக்குக் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தில் அறுபது மடங்கு காலம் {18 லட்சம் வருடங்கள் (30,000 X 60 =18,00,000)} இருந்த பிறகு அவன் அரச {க்ஷத்திரிய} வகையை அடைவான். க்ஷத்திரிய வகையிலும் அவன் நீண்ட காலத்தைக் கடத்த வேண்டும்.(10)இறுதியாகக் குறிப்பிட்ட காலத்தில் அறுபது {60} மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் வீழ்ந்த பிராமணனாகப் பிறக்கிறான்.
{அதாவது 18,00,000X60 =10,80,00,000 பத்து கோடியே எண்பது லட்சம் வருடங்களுக்குப் பிறகு அவன் சத்திரிய வகையிலிருந்து, வீழ்ந்த பிராமணனாகப் பிறக்கிறான்}

இவ்வகையிலும் அவன் நீண்ட காலம் திரிய வேண்டும்.(11) இறுதியாகச் சொல்லப்பட்ட காலத்தில் இருநூறு {200} மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் ஆயுதந்தரித்து வாழும் பிராமணக் குலத்தில் பிறக்கிறான். 
{அதாவது 10,80,00,000X200 =2,160,00,00,000 இரண்டாயிரத்து நூற்று அறுபது கோடி வருடங்களுக்குப் பிறகு அவன் ஆயுதந்தரித்த பிராமணக் குலத்தில் பிறக்கிறான்.}

அந்த வகையிலும் அவன் நீண்ட காலம் திரிய வேண்டும்.(12) இறுதியாகச் சொல்லப்பட்ட காலத்தில் முன்னூறு {300) மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் காயத்ரி மற்றும் பிற மந்திரங்களை உரைக்கும் பிராமணக் குலத்தில் பிறக்கிறான்.(13)
{அதாவது 2,160,00,00,000X300 =6,48,000,00,00,000 ஆறு லட்சத்து நாற்பத்தி எட்டாயிரம் கோடி வருடங்களுக்குப் பிறகு அவன் மந்திரங்களை உரைக்கும் பிராமணக் குலத்தில் பிறக்கிறான்.}

அந்த வகையிலேயே அவன் நீண்ட காலம் திரிய வேண்டும். இறுதியாகச் சொல்லப்பட்ட காலத்தில் நானூறு {400} மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் மொத்த வேதங்களையும், சாத்திரங்களையும் அறிந்த பிராமணக் குலத்தில் பிறக்கிறான். அந்த வகையிலும் அவன் நீண்ட காலம் திரிய வேண்டும்.(14)
{அதாவது 6,48,000,00,00,000X400 =259200000,00,00,000 வருட காலத்திற்குப் பிறகு அவன் மொத்த வேதங்களையும், சாத்திரங்களையும் அறிந்த பிராமணக் குலத்தில் பிறக்கிறான்}

அந்த இருப்புநிலையில் அவன் திரிந்து கொண்டிருக்கும்போது இன்பதுன்பம், விருப்புவெறுப்பு, போலியான மற்றும் தீய பேச்சு ஆகியவை அவனுக்குள் நுழைந்து அவனை இழிந்தவனாக்க முனையும்.(15) அந்த எதிரிகளை அடக்குவதில் வென்றால், அவன் உயர்ந்த கதியை அடைகிறான். மறுபுறம், அவனை அடக்குவதில் அந்த எதிரிகள் வென்றால், பனைமர உச்சியில் இருந்து தரையில் விழும் மனிதனைப் போல அவன் உயர்ந்த நிலையில் இருந்து கீழே வீழ்கிறான்.(16) ஓ! மதங்கா, நான் உனக்குச் சொல்வதை உறுதியாகத் தெரிந்து கொண்டு, வேறேதேனும் வரத்தைக் கேட்பாயாக. (நீ ஒரு சண்டாளனாகப் பிறந்திருப்பதால்) பிராமண நிலையானது உன்னால் அடையப்பட முடியாததாகும்” {என்றான் இந்திரன் எனச் சொன்னார் பீஷ்மர்}.(17)

மதங்கன் பெற்ற வரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 29-பிராமண நிலை அடைய தவம் செய்த மதங்கன்; இந்திரனால் தடுக்கப்பட்டது; மீண்டும் தவம் செய்தது; பிராமண நிலையன்றி வேறு வரங்களைக் கேட்டுப் பெற்ற மதங்கன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு இந்திரனால் சொல்லப்பட்ட மதங்கன், அவன் சொன்னதைக் கேட்க மறுத்தான். மறுபுறம், ஒழுங்கமைக்கப்பட்ட நோன்புகள் மற்றும் தூய ஆன்மாவுடன் கூடிய அவன், ஓராயிரம் வருடங்கள் ஒற்றைக்காலில் நின்று கொண்டு, தன் ஆன்மாவை ஆழமான தியான யோகத்தில் ஈடுபடுத்தி, கடுந்தவங்களைப் பயின்று வந்தான்.(1) ஓராயிரம் வருடங்கள் கடந்ததும், மீண்டும் அவனைக் காண சக்ரன் அங்கே வந்தான். உண்மையில், பலனையும், விருத்திரனையும் கொன்றவனான அவன் {இந்திரன்} அதே சொற்களையே மீண்டும் அவனிடம் சொன்னான்.(2)

மதங்கன் {இந்திரனிடம்}, “நான் பிரம்மச்சரிய நோன்பை நோற்று, தியானத்தில் குவிந்த ஆன்மாவுடன் ஒற்றைக் காலில் நின்று ஓராயிரம் ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறேன். பிராமண நிலையை அடைவதில் நான் இன்னும் ஏன் வெல்லாமல் இருக்கிறேன்?” என்று கேட்டான்.(3)

சக்ரன், “சண்டாளனாகப் பிறந்தவனால் எந்த வழிமுறைகளின் மூலமும் பிராமண நிலையை அடைய முடியாது. எனவே, நீ வேறேதேனும் வரங்களைக் கேட்பாயாக. உன் கடும் உழைப்புக் கனியற்றதாகிவிடக்கூடாது” என்று சொன்னான்.(4)

தேவர்களின் தலைவனால் இவ்வாறு சொல்லப்பட்ட மதங்கன் துயரால் நிறைந்தான். அவன் கயைக்குச் சென்று ஒற்றைக் காலில் நின்றபடியே நூறாண்டு காலத்தைக் கழித்தான்.(5) பொறுத்துக் கொள்ள மிகக் கடினமான அத்தகைய யோகத்தை நோற்றதன் விளைவால் தன் நாடி நரம்புகள் புடைத்து, கண்ணுக்குத் தெரியும் வகையில் மிகவும் மெலிந்து போனான். வெறும் தோலும் எலும்புகளும் கொண்டவனாக அவன் குறைந்து போனான். உண்மையில், அந்த அற ஆன்மா கொண்ட மனிதன் {மதங்கன்}, கயையில் கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்த போது, மிகவும் சோர்வடைந்து கீழே தரையில் விழுந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். வரங்களை அளிப்பவனும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையை அளிப்பதில் ஈடுபடும் தலைவனுமான வாசவன் {இந்திரன்}, அவன் விழுவதைக் கண்டு, விரைவாக அந்த இடத்திற்கு வந்து உடனே அவனைத் தாங்கிக் கொண்டான்[1].(7)சக்ரன், “ஓ! மதங்கா, நீ நாடும் பிராமண நிலை உனக்குத் தகுந்ததாகத் தெரியவில்லை. அந்நிலை உன்னால் அடையப்பட முடியாததாக இருக்கிறது. உண்மையில் உன் வழக்கில் அது பல ஆபத்துகள் சூழப்பட்டதாக இருக்கிறது.(8) ஒரு மனிதன் ஒரு பிராமணரை வழிபடுவதால் மகிழ்ச்சியை அடைகிறான்; அவ்வாறு வழிபடுவதைத் தவிர்க்கும்போது அவன் துயரத்தையும் இடர்களையும் அடைகிறான். அனைத்து உயிரினங்களைப் பொறுத்தவரையில், அவை வெகுமதியாகக் கருதுவதை, அல்லது ஆசைப்படுவதைக் கொடுப்பவனாகவும், அவர்கள் ஏற்கனவே கொண்டுள்ளதைக் காப்பவனாகவும் பிராமணன் இருக்கிறான்.(9) பிராமணர்கள் மூலமே பித்ருக்களும், தேவர்களும் நிறைவை அடைகின்றனர். ஓ! மதங்கா, படைக்கப்பட்டவற்றுள் முதன்மையானவனாகப் பிராமணன் சொல்லப்படுகிறான். ஆசைப்படும் பொருட்கள் யாவையும், ஆசைப்படப்பட்ட அதே வகையிலேயே பிராமணன் அருள்கிறான்[2].(10) எண்ணற்ற வகையில் இருக்கும் படைப்புகளில் திரிந்து, மீண்டும் மீண்டும் மறுபிறவிகளில் சுழலும் ஒருவன், அடுத்தடுத்த பிறவிகளிலேயே பிராமண நிலையை அடைவதில் வெல்கிறான்.(11) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் உண்மையில் அந்நிலையை அடைய முடியாது. நீ வேறேதேனும் வரங்களைக் கேட்பாயாக. நீ வேண்டிக் கேட்கும் இந்தக் குறிப்பிட்ட வரமானது, உனக்குக் கொடுக்கப்பட இயலாததாக இருக்கிறது” என்றான் {இந்திரன்}.(12)

மதங்கன் {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா, ஏற்கனவே துன்பத்தில் இருக்கும் என்னை, (இத்தகைய சொற்களால்) நீ மேலும் துன்புறுத்துகிறாயா? இந்நடத்தையால், ஏற்கனவே இறந்துவிட்டவனை நீ அடித்துக் கொண்டிருக்கிறாய். பிராமண நிலையை அடைந்தும் அதைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறிய (என்னைப் போன்ற ஒருவனுக்குக் கருணைக் காட்டாமல் இருக்கும்) உனக்காக நான் பரிதாபப்படுகிறேன்[3].(13) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, மூன்று வகையினர் எவராலும் பிராமண நிலையை உண்மையில் அடைய முடியாது என்றால், ஐயோ, அந்த உயர்ந்த நிலையை (இயற்கையான வழிமுறைகளின் மூலம்) அடைவதில் வென்றவர்கள் அதைக் கடைப்பிடிக்கவில்லையே (பிராமணர்கள் எந்தப் பாவத்தைச் செய்யவில்லை)?(14) அடைதற்கரிதான செல்வத்தைப் போன்ற பிராமண நிலையை அடைந்தும், (தேவையான கடமைகளைச் செய்வதன் மூலம்) அதைத் தக்க வைத்துக் கொள்ள முனையாதவர்கள் இம்மையில் இழிந்த ஈனர்களாகக் கருதப்பட வேண்டும்.(15) பிராமண நிலையை அடைவது மிகக்கடினமானது, அடைந்த பிறகு அதைத் தக்க வைத்துக் கொள்வதும் கடுமையானது என்பதில் ஐயமில்லை. அஃது அனைத்து வகைத் துன்பத்தையும் போக்கவல்லதாகும். ஐயோ, மனிதர்கள் அஃதை அடைந்தும் (அதற்குண்டான அறத்தையும் பிற கடமைகளையும் செய்வதன் மூலம்) அதைத் தக்க வைத்துக் கொள்ள எப்போதும் முனைவதில்லையே.(16)அத்தகைய மனிதர்களும் பிராமணர்களாகக் கருதப்படும்போது, தன்னில் நிறைவடைந்தவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்திற்கும் மேம்பட்டவனும், உலகப் பொருட்கள் அனைத்தில் இருந்தும் தொடர்பறுந்தவனும், அனைத்து உயிரினிங்களிடமும் கருணை என்ற கடமையை நோற்பவனும், தற்கட்டுப்பாடு எனும் ஒழுக்கத்துடன் கூடியவனுமான நான் ஏன் அந்த நிலைக்குத் தகுந்தவனாகக் கருதப்படவில்லை?(17) ஓ! புரந்தரா, நான் நடத்தையில் ஒழுக்கம் கொண்டவனாக இருப்பினும், என் தாயின் குற்றத்தால் இந்த நிலைக்குக் குறைக்கப்பட்டிருக்கிறேனே, எவ்வளவு கெடுபேறு கொண்டவன் நான்?(18) ஓ! தலைவா, அடைய வேண்டிய நோக்கம் என இதயத்தில் நிலைநிறுத்தி, தொடர்ந்து இவ்வளவு முயற்சிகளைச் செய்த போதிலும் என்னால் அஃதை அடையமுடியவில்லை என்றால், விதியைத் தவிர்க்க முடியாது, அல்லது தனிப்பட்ட முயற்சிகளால் வெல்ல முடியாது என்பதில் ஐயமில்லை.(19) ஓ! அறவோனே, நிலை இவ்வாறிருக்கையில், உண்மையில் நான் உன் அருளுக்குத் தகுந்தவன் என்றால், அல்லது சிறு தகுதியையேனும் கொண்டிருந்தால் வேறு வரங்களை அளிப்பதே உனக்குத் தகும்” என்றான் {மதங்கன்}”.(20)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பலனையும், விருத்திரனையும் கொன்றவன் {இந்திரன்}, அவனிடம் {மதங்கனிடம்}, “வேண்டும் வரத்தைச் சொல்வாயாக” என்றான். இவ்வாறு பெரும் இந்திரனால் தூண்டப்பட்ட மதங்கன் பின்வரும் சொற்களைச் சொன்னான்.(21)

மதங்கன், “விரும்பிய வடிவை ஏற்கும் சக்தியுடன், வானத்தின் ஊடாகப் பயணிக்கவும், என் இதயத்தில் நான் நிலைநிறுத்தும் எந்த இன்பத்தை அனுபவிக்கவும் கூடிய வல்லமை எனக்கு வேண்டும். பிராமணர்கள், மற்றும் க்ஷத்திரியர்களின் விருப்பத்துடன் கூடிய துதிகள் எனக்கு வேண்டும்.(22) ஓ! தேவா, நான் உனக்குத் தலை வணங்குகிறேன். ஓ! புரந்தரா, இவ்வுலகில் என் புகழை எப்போதும் வாழச் செய்யவும் வேண்டும்” என்றான்.(23)

சக்ரன் {மதங்கனிடம்}, “ஒரு குறிப்பிட்ட மந்திரத்தின் தேவனாக {சந்தோதேவனாகக்} கொண்டாடப்பட்டு, அனைத்துப் பெண்களாலும் நீ வழிபடப்படுவாய். ஓ! மகனே, உன் புகழ் மூவுலகங்களிலும் ஒப்பற்றதாக இருக்கும்” என்றான்[4].(24) அவனுக்கு இவ்வரங்களை அளித்த வாசவன் அங்கேயே, அப்போதே மறைந்து போனான். மதங்கனும் தன் உயிர் மூச்சைக் கைவிட்டு உயர்ந்த இடத்தை அடைந்தான்.(25) ஓ! பாரதா, பிராமண நிலை எவ்வளவு உயர்ந்தது என்பதை நீ இவ்வாறு காணலாம். பெரும் இந்திரனால் சொல்லப்பட்டதைப் போல அந்த நிலையானது (இயற்கையான பிறப்பு வழியாலன்றி) இம்மையில் அடையக்கூடியதல்ல” என்றார் {பீஷ்மர்}[5].(26)

பிராமண நிலையை அடைந்த மன்னன் வீதஹவ்யன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 30-வத்ஸ நாட்டு மன்னன் வீதஹவ்யன் பிராமண நிலை அடைந்த வரலாறு; வத்ஸ நாட்டு வீதஹவ்யனின் முன்னோர்கள்; காசி நாட்டு பிரதர்த்தனனின் முன்னோர்கள்; இரு நாட்டுக்கும் இருந்த பகை; வத்ஸர்களால் பீடிக்கப்பட்ட காசி; வீதஹவ்யனை வீழ்த்திய பிரதர்த்தனன்; பிருகுவிடம் தஞ்சமடைந்த வீதஹவ்யன்; அவனைத் தேடி வந்த பிரதர்த்தனன்; வீதஹவ்யன் பிராமணனான பிறகு அவனுக்கு உண்டான வழித்தோன்றல்களின் பட்டியல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, இந்தக் கதையை நான் கேட்டிருக்கிறேன். ஓ! நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, பிராமண நிலையானது அடைவதற்கு மிக அரிதானது என்று நீர் சொல்கிறீர்.(1) எனினும், பழங்காலத்தில் விஷ்வாமித்திரரால் பிராமண நிலை அடையப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம். எனினும், ஓ! மனிதர்களில் சிறந்தவரே, அந்நிலை அடையப்பட இயலாதது என எங்களுக்கு நீர் சொல்கிறீர்.(2) பழங்காலத்தில் மன்னன் வீதஹவ்யன் பிராமண நிலையை அடைவதில் வென்றான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஓ! பலமிக்கவரே, ஓ! கங்கையின் மைந்தரே, மன்னன் வீதஹவ்யன் மேன்மையடைந்த கதையை நான் கேட்க விரும்புகிறேன்.(3) அந்த மன்னர்களில் சிறந்தவன், பிராமண நிலை அடைவதில் எந்தச் செயல்களின் மூலம் வென்றான்? (பெரும்பலம் கொண்ட எவரிடம் இருந்தாவது அடையப்பட்ட) ஏதாவது வரத்தின் மூலமோ, தவ அறத்தின் மூலமோ அது நடந்ததா? அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, பெரும் புகழைக் கொண்ட அரசமுனி வீதஹவ்யன், அடைதற்கரிதானதும், உலகில் உள்ள அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுவதுமான பிராமண நிலையை அடைவதில் பழங்காலத்தில் வென்றான்.(5) பழங்காலத்தில் உயர் ஆன்ம மனு தன் குடிமக்களை நீதியுடன் ஆண்டுக் கொண்டிருந்த போது, அறம் சார்ந்த ஆன்மா கொண்டவனும், சர்யாதி என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான ஒரு மகனை அடைந்தார்.(6) ஓ! ஏகாதிபதி அந்தச் சர்யாதியின் குலத்தில் ஹைஹயன் மற்றும் தாலஜங்கன் என்ற இரு மன்னர்கள் பிறந்தனர். ஓ! வெற்றிமிக்க மன்னர்களில் முதன்மையானவனே, அந்த இருவரும் வத்ஸ மகன்களாக {வத்ஸ நாட்டைச் சார்ந்தவர்களாக} இருந்தனர்[1]. ஓ! ஏகாதிபதி ஹைஹயனுக்குப் பத்து மனைவியர் இருந்தனர். ஓ! பாரதா, அவன் புறமுதுகிடாத வீரர்களான நூறு மகன்களை அவர்களிடம் {தன் மனைவிகளிடம்} பெற்றான்.(8) அவர்கள் அனைவரும் குணத்திலும் ஆற்றலிலும் ஒத்தவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் பெரும்பலம் கொண்டவர்களாகவும், போரில் பெருந்திறம் பெற்றவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் வேதங்களையும், ஆயுத அறிவியலையும் முற்றாகக் கற்றனர்.(9)ஓ! ஏகாதிபதி, காசியில் திவோதாசனின் பாட்டனான ஒரு மன்னன் இருந்தான். வெற்றிமிக்க மனிதர்களில் முதன்மையான அவன் ஹர்யஸ்வன் என்ற பெயரால் அறியப்பட்டான்[2]. ஓ! மனிதர்களின் தலைவா (வீதஹவ்யன் என்ற வேறு பெயரிலும் அறியப்பட்டிருந்த) மன்னன் ஹைஹயன், காசி நாட்டிற்கு எதிராகப் படையெடுத்து, கங்கை மற்றும் யமுனை ஆறுகளுக்கிடையில் கிடக்கும் அந்நாட்டிற்குச் சென்று மன்னன் ஹர்யஸ்வனுடன் போரிட்டு அவனைக் கொன்றான்.(11) இவ்வழியில் மன்னன் ஹர்யஸ்வனைக் கொன்ற பிறகு, பெரும் தேர்வீரர்களான ஹைஹயனின் மகன்கள் வத்சர்களின் நாட்டில் உள்ள இனிமையான தங்கள் நகரத்திற்கு அச்சமில்லாமல் திரும்பிச் சென்றனர்.(12) அதே வேளையில், காந்தியில் தேவனைப் போலத் தெரிபவனும், இரண்டாம் நீதிதேவன் போல இருந்தவனும், ஹர்யஸ்வதனின் மகனுமான சுதேவன், காசியின் அரியணையில் அதன் ஆட்சியாளனாக நிறுவப்பட்டான்.(13) காசிக்கு மகிழ்ச்சியை அளிப்பவனான அந்த அற ஆன்மா கொண்ட இளவரசன் தன் நாட்டைச் சில காலம் ஆண்டு வந்தான். அப்போது வீதஹவ்யனின் நூறு மகன்களும் மீண்டும் அவனது ஆட்சிப்பகுதிக்குள் படையெடுத்து வந்து, போரில் அவனை வீழ்த்தினார்கள்.(14)இவ்வாறு மன்னன் சுதேவனை வென்ற வெற்றியாளர்கள் தங்கள் சொந்த நகரத்திற்குத் திரும்பிச் சென்றனர். அதன் பிறகு, சுதேவனின் மகனான திவோதாசன் காசியின் அரியணையில் அதன் ஆட்சியாளனாக நிறுவப்பட்டான்.(15) வீதஹவ்யனின் மகன்களான அந்த உயர் ஆன்ம இளவரசர்களின் ஆற்றலை உணர்ந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான திவோதாசன், இந்திரனின் ஆணையின் பேரில் வாராணசி நகரத்தை மீண்டும் கட்டுமானம் செய்து அரணமைத்தான்[3].(16) திவோதாசனுடைய நாட்டின் எல்லைகளில் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் நிறைந்திருந்தனர். அனைத்து வகைப் பொருட்களும், தனிவகைப் பொருட்களும் அங்கு நிறைந்திருந்தன. செழிப்பில் பெருகும் கடைகள் மற்றும் கடைவீதிகளால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அந்த எல்லைகள் கங்கைக்கரையின் வடக்குப்புறத்தில் இருந்து கோமதியாற்றின் தென்கரை வரை பரந்திருந்தது. அது {அந்த வாராணஸி நகரமானது} (இந்திரனின் நகரமான அமராவதியைப் போல) இரண்டாம் அமராவதிக்கு {இரண்டாம் அமராவதி என்று சொல்வதற்கு} ஒப்பாக இருந்தது.(17,18) ஓ! பாரதா, அந்த மன்னர்களில் புலி {திவோதாசன்} தன் நாட்டை ஆண்டுக் கொண்டிருந்தபோது, மீண்டும் ஹைஹயர்கள் தாக்கினார்கள்.(19) வலிமைமிக்க மன்னனான திவோதாசன், தன் தலைநகரைவிட்டு வெளியே வந்து அவர்களுடன் போரிட்டான். பழங்காலத்தின் தேவாசுரப் போரைப் போல இரு தரப்புகளுக்குமிடையே நடந்த அந்தப் போர் மிகக் கடுமையானதாக இருந்தது.(20)எதிரியுடன் ஆயிரம் நாட்கள் போரிட்ட மன்னன் திவோதாசன், இறுதியில் பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்களும், விலங்குகளும் கொல்லப்பட்ட பிறகு மிகவும் துன்பமடைந்தான்(21) ஓ! ஏகாதிபதி, தன் படையை இழந்த மன்னன் திவோதாசன், தன் கருவூலம் தீர்ந்துவிட்டதைக் கண்டு தன் தலைநகரைவிட்டுத் தப்பிச் சென்றான்.(22) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அந்த மன்னன், பெரும் ஞானியான பரத்வாஜரின் இனிய ஆசிரமத்திற்குச் சென்று, தன் கரங்களை மதிப்புடன் கூப்பிக் கொண்டு அம்முனிவரின் பாதுகாப்பை நாடினான்.(23)

பிருஹஸ்பதியின் மூத்த மகனும், ஒழுக்கச் சிறப்பைக் கொண்டவரும், மன்னன் திவோதாசனின் புரோகிதருமான பரத்வாஜர், தம் முன் இருக்கும் அந்த ஏகாதிபதியைக் கண்டு, அவனிடம்,(24) “நீ இங்கு வந்திருக்கும் காரணம் என்ன? ஓ! மன்னா, அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. எந்தத் தயக்கமுமின்றி உனக்கு ஏற்புடையதை நான் செய்வேன்” என்றார்.(25)

மன்னன் {திவோதாசன்}, “ஓ! புனிதமானவரே, வீதஹவ்யனின் மகன்கள் என் வீட்டில் உள்ள பிள்ளைகள் மற்றும் மனிதர்கள் அனைவரையும் கொன்றுவிட்டனர். எதிரியால் முற்றிலும் உருக்குலைக்கப்பட்ட நான் மட்டுமே உயிரோடு தப்பி வந்தேன். நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன்.(26) ஓ! புனிதமானவரே, ஒரு சீடனைக் காப்பதைப் போல என்னைப் பாதுகாப்பதே உமக்குத் தகும். பாவச் செயல்களைச் செய்யும் அந்த இளவரசர்கள், என்னை மட்டுமே உயிருடன் விட்டுவிட்டு, என் குலம் மொத்தத்தையும் கொன்றுவிட்டனர்” என்றான்”.(27)

பீஷ்மர் தொடர்ந்தார், “பெருஞ்சக்தியைக் கொண்ட பரத்வாஜர், தம்மிடம் பரிதாபகரமாக இரைஞ்சிக் கொண்டிருந்த அவனிடம் {திவோதாசனிடம்}, “அஞ்சாதே, ஓ! சுதேவன் மகனே, உன் அச்சங்கள் அகலட்டும். நீ ஆஞ்சாதே.(28) ஓ! ஏகாதிபதி, வீதஹவ்யன் தரப்பினரை ஆயிரமாயிரமாகத் தாக்கவல்ல ஒரு மகனை நீ பெறும் வகையில் நான் ஒரு வேள்வியைச் செய்யப் போகிறேன்” என்றார்.(29)

அதன்பிறகு திவோதாசனுக்கு ஒரு மகனைப் பெறும் நோக்கத்தில் அம்முனிவரால் ஒரு வேள்வி நடத்தப்பட்டது. அதன் விளைவாகத் திவோதாசனுக்குப் பிரதர்த்தனன் என்ற பெயரில் ஒரு மகன் பிறந்தான்[4].(30) அவன் பிறந்த உடனேயே பதிமூன்று வயது பாலகனாக வளர்ந்து, வேதங்களிலும், மொத்த ஆயுத அறிவியலிலும் விரைவாகத் திறம்பெற்றான்.(31) பெரும் நுண்ணறிவைக் கொண்ட பரத்வாஜர் தமது யோக சக்திகளின் துணையுடன் அந்த இளவரசனுக்குள் {பிரதர்த்தனனுக்குள்} நுழைந்தார். உண்மையில் பரத்வாஜர், அண்டத்தில் உள்ள பொருட்களின் சக்திகள் அனைத்தையும் திரட்டி அவற்றை, இளவரசன் பிரதர்த்தனனின் உடலுக்குள் நுழையச் செய்தார்.(32) ஒளிரும் கவசத்தைத் தன் மேனியில் பூட்டிக் கொண்டும், வில்லைத் தரித்துக் கொண்டும், வந்திகள் மற்றும் தெய்வீக முனிவர்களால் புகழப்பட்டும், உதிக்கும் சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான் பிரதர்த்தனன்.(33) கச்சையில் வாளைக் கட்டிக் கொண்டு தன் தேரில் ஏறிய அவன், சுடர்மிக்க நெருப்பைப் போல ஒளிர்ந்தான். வாள் மற்றும் கேடயத்துடனும், தன் கேடயத்தைச் சுழற்றிக் கொண்டும் அவன் தன் தந்தையிடம் {திவோதாசனிடம்} சென்றான்.(34) சுதேவனின் மகனான மன்னன் திவோதாசன், இளவரசனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தான். உண்மையில் அந்த முதிர்ந்த மன்னன், தன் எதிரியான வீதஹவ்யன் ஏற்கனவே இறந்துவிட்டதாக நினைத்தான்.(34)திவோதாசன் தன் மகன் பிரதர்த்தனனை யுவராஜனாக நிறுவி, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டதாகக் கருதி பெரிதும் மகிழ்ச்சியடைந்தான்.(36) அதன் பிறகு அந்த முதிர்ந்த மன்னன், எதிரிகளைத் தண்டிப்பவனான இளவரசன் பிரதர்த்தனனிடம், வீதஹவ்யனின் மகன்களை எதிர்த்துச் சென்று போரில் அவர்களைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.(37) பேராற்றல்வாய்ந்தவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான பிரதர்த்தனன் தன் தேரில் கங்கையைக் கடந்து, வீதஹவ்யர்களின் நகரத்தை எதிர்த்துச் சென்றான்.(38) வீதஹவ்யனின் மகன்கள், அவனது தேரின் சக்கரங்கள் உண்டாக்கிய சடசடப்பொலியைக் கேட்டு, அரணமைக்கப்பட்ட மாளிகைகளைப் போலத் தெரிந்தவையும், பகை வாகனங்களை அழிக்கவல்லவையுமான தங்கள் தேர்களைச் செலுத்திக் கொண்டு, தங்கள் நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(39) மனிதர்களில் புலிகளும், கவசம்பூண்ட திறமிக்கப் போர்வீரர்களுமான வீதஹவ்யனின் மகன்கள் யாவரும், உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடன் பிரதர்த்தனனை நோக்கி விரைந்து, தங்கள் கணை மாரியால் அவனை மறைத்தனர்.(40)

ஓ! யுதிஷ்டிரா, எண்ணற்ற தேர்களில் சென்று பிரதர்த்தனனைச் சூழ்ந்து கொண்ட வீதஹவ்யர்கள், இமயச் சாரலில் மழைத்தாரையைப் பொழியும் மேகங்களைப் போலப் பல்வேறு ஆயுதங்களின் மழையை அவன் மீது பொழிந்தனர்.(41) வலிமையும், சக்தியும் கொண்ட பிரதர்த்தனன், அவர்களுடைய ஆயுதங்களைத் தனதால் கலங்கடித்து, இந்திரனின் இடிநெருப்புக்கு ஒப்பான கணைகளால் அவர்கள் அனைவரையும் கொன்றான்.(42) நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அகன்ற தலைக் கணைகளால் {அர்த்தச்சந்திர பாணங்களால்} தலை துண்டிக்கப்பட்ட வீதஹவ்யனனின் போர்வீரர்கள், கோடரிகளுடன் கூடிய மரவெட்டிகளால் அனைத்துப் பக்கங்களிலும் வெட்டி வீழ்த்தப்படும் கின்சுக {பலாச} மலர்களைப் போலக் குருதியால் நனைந்த உடல்களுடன் கீழே விழுந்தனர்.(43) மன்னன் வீதஹவ்யன், தனது போர்வீரர்களும், மகன்கள் அனைவரும் போரில் வீழ்ந்த பிறகு, தன் தலைநகரில் இருந்து பிருகுவின் ஆசிரமத்திற்குத் தப்பிச் சென்றான்.(44) உண்மையில், அங்கே வந்த அந்த அரச அகதி, பிருகுவின் பாதுகாப்பை நாடினான். ஓ! ஏகாதிபதி, தோல்வியடைந்த மன்னனின் பாதுகாப்பை முனிவர் பிருகு உறுதி செய்தார்.(45)

பிரதர்த்தனன், வீதஹவ்யனின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தான். முனிவரின் ஆசிரமத்திற்கு வந்த திவோதாசன் மகன் {பிரதர்த்தனன்} உரத்த குரலில்,(46) “ஹோ… உள்ளே இருக்கும் உயர் ஆன்ம பிருகவின் சீடர்களே கேட்பீராக. நான் அந்த முனிவரைக் காண விரும்புகிறேன். அவரிடம் சென்று இதைத் தெரிவிப்பீராக” என்றான்.(47)

வந்திருப்பது பிரதர்த்தன் என்பதை அறிந்து கொண்ட முனிவர் பிருகு, தமது ஆசிரமத்தில் இருந்து வெளியே வந்து அந்த மன்னர்களில் சிறந்தவனை உரிய சடங்குகளுடன் வழிபட்டார்.(48) அவனிடம் பேசிய முனிவர், “ஓ! மன்னா, என்ன காரியம் என்று எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார். இதனால் தான் வந்த காரணத்தை முனிவரிடம் சொன்னான் மன்னன்.(49)

மன்னன் (பிரதர்த்தனன்), “ஓ! பிராமணரே, மன்னன் வீதஹவ்யன் இங்கே வந்திருக்கிறான். அவனை என்னிடம் கொடுப்பீராக. ஓ! பிராமணரே, அவனது மகன்கள் என் குலத்தையே அழித்திருக்கின்றனர்.(50) காசியின் எல்லைகளும், செல்வமும் அவர்களால் வீணடிக்கப்பட்டன {அழிக்கப்பட்டன / அபகரிக்கப்பட்டன}. எனினும் வலிமையில் செருக்குற்றிருந்த இந்த மன்னனின் நூறு பிள்ளைகளும் என்னால் கொல்லப்பட்டனர்.(51) இந்த மன்னனை {வீதஹவ்யனைக்} கொல்வதன் மூலம் நான் என் தந்தைக்குப் பட்ட கடனை அடைத்தவனாவேன்” என்றான்.

நீதிமிக்க மனிதர்களில் முதன்மையானவரான முனிவர் பிருகு, கருணை கொண்டவராக அவனிடம்,(52) “இந்த ஆசிரமத்தில் எந்த க்ஷத்திரியனும் இல்லை. இங்கே இருப்பவர்கள் அனைவரும் பிராமணர்களே” என்றார்.

பிருகுவின் சொற்களைக் கேட்ட பிரதர்த்தனன்,(53) அஃதை உண்மையென்றெண்ணி, முனிவரின் பாதங்களைத் தொட்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, மெதுவாக மெதுவாக, “ஓ! புனிதமானவரே, என் ஆற்றலின் விளைவால் இந்த மன்னன் தன் பிறவி வகையையே இழந்திருப்பதனால் நான் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டேன் என்பதில் ஐயமில்லை. ஓ!பிராமணரே, நான் விடைபெற்றுச் செல்ல அனுமதிப்பீராக, எனக்கான நன்மையை நான் உம்மிடம் வேண்டுகிறேன்.(55) ஓ! உமது பெயரால் ஒரு குலத்தை நிறுவியவரே, என் வலிமையால் இந்த மன்னன் தன் பிறவி வகையை இழந்திருக்கிறான்” என்றான்[5].முனிவர் பிருகுவால் விடைகொடுத்து அனுப்பப்பட்ட மன்னன் பிரதர்த்தனன் அந்த ஆசிரமத்தில் இருந்து வெளியேறி,(56) நஞ்சைக் கக்கும் பாம்பைப் போல நான் சொன்னது போலவே சொல்நஞ்சைக் கக்கிவிட்டு, தனது இடத்திற்குத் திரும்பிச் சென்றான். அதே வேளையில், மன்னன் வீதஹவ்யன், பிருகுவின் அறத்தகுதியால் மட்டுமே, மறுபிறப்பாள தவசி என்ற நிலையை அடைந்தான்.(57) மேலும், அதே காரணத்தின் மூலம் வேதங்கள் அனைத்தையும் முற்றாக அறிந்த நிலையையும் அடைந்தான்[6]கிருத்சமதன் என்ற பெயரில் இரண்டாம் இந்திரனைப் போன்ற அழகுடன் வீதஹவ்யனுக்கு ஒரு மகன் இருந்தான்.(58) ஒரு காலத்தில் அவனே இந்திரன் என்று நினைத்த தைத்தியர்களால் அவன் பீடிக்கப்பட்டான். அந்த உயர் ஆன்ம முனியை {கிருத்சமதனைப்} பொறுத்தவரையில், “ஓ! பிராமணரே, எங்கே கிருத்சமதர் இருக்கிறாரோ, அங்கே உள்ள மறுபிறப்பாள மனிதர்கள் அனைவராலும் அவர் உயர்வாக மதிக்கப்பட்டார்” என்று ஸ்ருதிகளில் முதன்மையான ரிக்கில் {ரிக் வேதத்தில்} இருக்கிறது. பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான கிருத்சமதன் பிரம்மச்சரிய நோன்பை நோற்கும் மறுபிறப்பாள முனிவரானான்.(60)கிருத்சமதனுக்குச் சுதேஜஸ் {ஸாவைநஸன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். சுதேஜஸுக்கு வர்ச்சஸ் {விதஸ்த்யன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். வர்ச்சஸின் மகன் விஹவ்யன் {சிவஸ்தன்} என்ற பெயரில் அறியப்பட்டான்.(61) விஹவ்யன் தன் மடியில் பிறந்த மகனாக விதத்யன் என்ற பெயரில் ஒருவனைக் கொண்டிருந்தான். விதத்யன் சத்யன் என்ற பெயரில் மகனைக் கொண்டிருந்தான். சத்யன் சந்தன் என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்தான். சந்தன் முனிவர் சிரவஸை மகனாகக் கொண்டிருந்தான். சிரவஸுக்கு தமன் {தமஸ்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். தமன், மிக மேன்மையான பிராமணனும், பிரகாசன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைக் கொண்டிருந்தான்.(63) பிரகாசன், புனித மந்திரங்களை அமைதியாகச் சொல்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், வாகிந்திரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைக் கொண்டிருந்தான். வாகிந்திரன், வேதங்கள் மற்றும் அதன் அங்கங்கள் அனைத்திலும் முற்றிலும் திறன் பெற்றிருந்தவனும், பிரமதி என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைப் பெற்றிருந்தான். பிரமதி, அப்சரஸ் கிருதாசியிடம் ருரு என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். ருரு தன் மனைவியான பிரம்மத்வரையிடம் ஒரு மகனைப் பெற்றான்[7]. அந்த மகன் மறுபிறப்பாள முனிவரான சுனகராவார். சுனகர், சௌனகர் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றார்.(65) ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, இவ்வாறே, க்ஷத்திரியர்களின் தலைவா, மன்னன் வீதஹவ்யன் தன் பிறப்பின் வகையால் {வர்ணத்தால்} ஒரு க்ஷத்திரியனாக இருந்தாலும், பிருகுவுடைய அருளின் மூலம் பிராமண நிலையை அடைந்தான்.(66) அவனது மகனான கிருத்சமதனிடம் இருந்து உதித்த குலத்தின் பரம்பரைப் பட்டியலையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். வேறென்ன கேட்கப் போகிறாய்?”[8] என்றார் {பீஷ்மர்}.(67)

வணக்கத்திற்குரியோர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 31-வணக்கத்திற்கும், வழிபாட்டிற்கும் உரியவர்கள் யாவர் என்பது குறித்து கிருஷ்ணனுக்கு நாரதர் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன், “ஓ பாரதக் குலத்தின் தலைவரே, மூவுலகிலும் மதிக்கத்தக்க வணக்கத்திற்குத் தகுந்த மனிதர்கள் யாவர்? உண்மையில் இக்காரியங்களைக் குறித்து நீர் பேசுவதைக் கேட்டு நான் ஒருபோதும் தணிவடைவதில்லை, இது குறித்து எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர், “இது தொடர்பாக நாரதருக்கும், வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது.(2) ஒரு சந்தர்ப்பத்தில் நாரதர் பிராமணர்களில் முதன்மையானோர் பலரை வழிபடுவதைக் கண்ட கேசவன், அவரிடம்,(3) “யாரை நீர் வழிபடுகிறீர். ஓ! புனிதமானவரே, இந்தப் பிராமணர்களுக்கு மத்தியில், பெருமதிப்புடன் நீர் யாரை வழிபடுகிறீர்? இஃது என்னால் கேட்கத்தக்கது என்றால் அதை நான் கேட்க விரும்புகிறேன். ஓ!அறவோரில் முதன்மையானவரே, இதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)

நாரதர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கோவிந்தா, ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே, நான் யாரை வழிபடுகிறேன் என்பதைக் கேட்பாயாக. இவ்வுலகில் இதைக் கேட்கத் தகுந்தவன் வேறு யார் இருக்கிறான்?(5) ஓ! பலமிக்கவனே, வருணன், வாயு, ஆதித்தியன், பர்ஜன்யன் {மழை தேவனான இந்திரன்}, நெருப்பின் தேவன் {அக்நி}, ஸ்தாணு {சிவன்}, ஸ்கந்தன் {முருகன்}, லக்ஷ்மி, விஷ்ணு, பிராமணர்கள் {பிரம்மன்}, வாக்கின் தேவன் {வசஸ்பதி / பிருஹஸ்பதி}, சந்திரமாஸ் {சந்திரன்}, நீர், பூமி மற்றும் சரஸ்வதி தேவி ஆகியோரைத் தொடர்ந்து வழிபடுபவர்களை நான் வழிபட்டு வருகிறேன்.(6,7) ஓ! விருஷ்ணி குலத்துப் புலியே, தவங்களுடன் கூடியவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், வேத கல்வியில் எப்போதும் அர்ப்பணிப்புடையவர்களும், உயர்ந்த தகுதியைக் கொண்டவர்களுமான பிராமணர்களை எப்போதும் நான் வழிபடுகிறேன்.(8) ஓ! பலமிக்கவனே, தற்பெருமையில் இருந்து விடுபட்டவர்களும், தேவர்களை மதிக்கும் சடங்குகளை வெறும் வயிற்றுடன் வழிபாடு செய்பவர்களும், தாங்கள் கொண்டுள்ளதில் எப்போதும் நிறைவுடன் இருப்பவர்களும், மன்னிக்கும் தன்மையுடன் {பொறுமையுடன்} கூடியவர்களுமான மனிதர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.(9) ஓ! யாதவா, வேள்விகளைச்செய்பவர்களும், மன்னிக்கும் மனோ நிலையைக் கொண்டவர்களும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களும், புலன்களை ஆள்பவர்களும், வாய்மை மற்றும் அறத்தை வழிபடுபவர்களும், நல்ல பிராமணர்களுக்கு நிலத்தையும், பசுக்களையும் கொடையளிப்பவர்களுமான மனிதர்களை நான் வழிபடுகிறேன்.(10)

ஓ! யாதவா, தவநோற்பில் அர்ப்பணிப்புள்ளவர்களும், காடுகளில் வசிப்பவர்களும், கனி மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்பவர்களும், நாளைக்கென ஒருபோதும் எதையும் சேமிக்காதவர்களும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்கள் மற்றும் சடங்குகள் அனைத்தையும் செய்பவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(11) ஓ! யாதவா, தங்கள் பணியாட்களுக்கு உணவூட்டிப் பேணி வளர்ப்பவர்களும், விருந்தாளிகளை எப்போதும் விருந்தோம்பலுடன் கவனிப்பவர்களும், தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்பட்ட மிச்சங்களை மட்டுமே உண்பவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(12) வேத கல்வயின் மூலம் தடுக்கப்பட முடியாதவர்களானவர்களும், சாத்திரங்களை உரையாடுவதில் நாநயமிக்கவர்களும், பிரம்மச்சரிய நோன்பை நோற்பவர்களும், பிறருக்கு வேள்விகளைச் செய்து கொடுப்பது மற்றும் சீடர்களுக்குப் போதிப்பது ஆகிய கடமைகளில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மனிதர்களை நான் வழிபடுகிறேன்.(13) அனைத்து உயிரினங்களிடமும் கருணையுடன் நடந்து கொள்பவர்கும், சூரியன் முதுகைச் சுடும்வரை வேத கல்வியில் ஈடுபடுபவர்களுமான மனிதர்களை நான் வழிபடுகிறேன்.(14) ஓ! யாதவா, தங்கள் ஆசான்களின் அருளை அடைய முனைபவர்களும், வேதங்களை அடைய உழைப்பவர்களும், நோன்புகள் நோற்பதில் உறுதியாக இருப்பவர்களும், ஆசான்கள் மற்றும் பெரியோர்களிடம் கடமையுணர்வுடன் பணி செய்பவர்களும், வன்மம் மற்றும் பொறாமையில் இருந்து விடுபட்டவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(15)

ஓ! யாதவா, சிறந்த நோன்புகளை நோற்பவர்களும், எண்ணங்களை வெளியிடாமல் பேசாநோன்பு நோற்பவர்களும், பிரம்மஞானம் கொண்டவர்களும், வாய்மையில் உறுதியாக இருப்பவர்களும், தெளிந்த நெய் ஆகுதிகளை {ஹவ்யங்களை} காணிக்கையளிப்பவர்களும், இறைச்சியை {கவ்யங்களை} படையல் செய்பவர்களுமான[1] மனிதர்களை நான் வணங்குகிறேன்.(16) ஓ! யாதவா, பிச்சையெடுத்து உண்டு வாழ்பவர்களும், போதுமான உணவும் பானமும் இல்லாமல் மெலிந்திருப்பவர்களும், தங்கள் ஆசான்களின் வசிப்பிடங்களில் வாழ்பவர்களும், இன்பங்களை வெறுப்பவர்களும், பூமி சார்ந்த பொருட்களை வறியவர்களுமானவர்கள் நான் வணங்குகிறேன்.(17) ஓ!யாதவா, பூமியில் உள்ள பொருட்களில் எந்தப் பற்றும் இல்லாதவர்களும், பிறரிடம் சச்சரவு செய்யாதவர்களும், ஆடை அணியாதவர்களும், எந்தத் தேவையுமற்றவர்களும், வேதங்களை அடைந்து தடுக்கப்பட முடியாதவர்களாக ஆனவர்களும், அறத்தை விளக்குவதில் நாநயமிக்கவர்களும், பிரம்மத்தைச் சொல்பவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(18) அனைத்து உயிரினங்களிடம் கருணை என்ற கடமையைப் பயில்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளவர்களும், வாய்மை பயில்வதில் உறுதியாக இருப்பவர்களும், தற்கட்டுப்பாட்டை உடையவர்களும், நடத்தையில் அமைதி நிறைந்தவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(19) ஓ! யாதவா, தேவர்கள் மற்றும் விருந்தினர்களை வழிபடுவதில் அர்ப்பணிப்புடன் உள்ளவர்களும், இல்லற வாழ்வை நோற்பவர்களும், வாழ்வுக்கான காரியத்தில் புறாக்களின் நடைமுறையைப் பின்பற்றுபவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்[2].(20)தங்கள் செயல்கள் எதனிலும் பலவீனப்படாமல் முத்தொகையை[3] {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச்} செய்பவர்களும், வாய்மை பயின்று அறமொழுகுபவர்களுமான மனிதர்களை நான் எப்போதும் வணங்குகிறேன்.(21) ஓ! கேசவா, பிரம்மத்தை அறிந்தவர்களும், வேதங்களின் அறிவைக் கொண்டவர்களும், {அறம், பொருள், இன்பம் என்ற} முத்தொகையில் கவனமாக இருப்பவர்களும், பேராசையில் இருந்து விடுபட்டவர்களும், நடத்தையில் நீதியுடன் செயல்படுபவர்களுமான மனிதர்களை நான் வணங்குகிறேன்.(22) ஓ! மாதவா, நீரை மட்டுமே உண்டு வாழ்பவர்கள், அல்லது காற்றை மட்டுமே உண்டு வாழ்பவர்கள், அல்லது, தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் காணிக்கையளிப்பட்ட உணவில் மிஞ்சியதை உண்டு வாழ்பவர்கள் பல்வேறு வகைச் சிறந்த நோன்புகளை நோற்பவர்கள் ஆகியோரை நான் வணங்குகிறேன்.(23) (தாங்கள் நோற்கும் மணம்செய்யா நோன்பின் விளைவால்) மனைவிகளற்றவர்களையும், (தாங்கள் வாழும் இல்லற வாழ்வின் விளைவால்) இல்லற நெருப்பையும், மனைவிகளையும் கொண்டவர்களையும், வேதங்களின் புகலிடமாக இருப்பவர்களையும், (தாங்கள் உணரும் கருணையின் விளைவால்) அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் புகலிடமாக இருப்பவர்களையும் எப்போதும் நான் வணங்குகிறேன்.(24) ஓ! கிருஷ்ணா, அண்டத்தைப் படைப்பவர்களும், அண்டத்தின் பெரியோர்களும், ஒரு குலம் அல்லது குடும்பத்தில் உள்ள மூத்தோரும், அறியாமை எனும் இருளை அகற்றுபவர்களும், (அறவொழுக்கம் மற்றும் சாத்திரஞானம் ஆகியவற்றுக்காக) அண்டத்தில் உள்ள மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவர்களாகக் கருதப்படுபவர்களுமான முனிவர்களை நான் எப்போதும் வணங்குகிறேன்.(25)ஓ! விருஷ்ணி குலத்தின் கொழுந்தே, இந்தக் காரணங்களுக்காக, நான் சொல்லும் இந்த மறுபிறப்பாளர்களை நாள்தோறும் நீயும் வழிபடுவாயாக. மதிப்புடன் வழிபடத்தகுந்த அவர்கள், ஓ! பாவமற்றவனே, வழிபடப்படும்போது, உனக்கு மகிழ்ச்சியை அளிப்பார்கள்.(26) நான் சொல்லும் மனிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் எப்போதும் மகிழ்ச்சியை அளிப்பவர்கள் ஆவர். அனைவராலும் மதிக்கப்பட்டு இவ்வுலகில் திரியும் அவர்கள், உன்னால் வழிபடப்பட்டால் நிச்சயம் உனக்கு மகிழ்ச்சியை வழங்குவார்கள்.(27) தம்மிடம் விருந்தினர்களாக வரும் மனிதர்கள் அனைவரையும் விருந்தோம்பலுடன் கவனிப்பவர்களும், பிராமணர்கள், பசுக்கள் மற்றும் (பேச்சு, ஒழுக்கத்தில்) வாய்மை ஆகியவற்றில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும் துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(28) அமைதியான நடத்தையில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களும், வன்மம் மற்றும் பொறாமையில் இருந்து விடுபட்டவர்களும், வேத கல்வியில் எப்போதும் கவனமாக இருப்பவர்களும், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(29) (எவரையும் முதன்மையாகக் கொள்ளாமல், சகிப்பை நிரூபிக்கும் வகையில்) தேவர்கள் அனைவரையும் வணங்குபவர்களும், வேதங்களில் ஒன்றைத் தங்கள் புகலிடமாகக் கொள்பவர்களும், நம்பிக்கை கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுமான மனிதர்கள், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(30)

பிராமணர்களில் முதன்மையானோரை மதிப்புடன் வழிபட்டு, சிறந்த நோன்பை நோற்பதிலும், ஈகையறம் பயில்வதிலும் உறுதியாக இருப்போர், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(31) தவப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள், மணம்செய்யா நோன்பை எப்போதும் நோற்பவர்கள், தவங்களால் ஆன்மத் தூய்மை அடைந்தவர்கள் ஆகியோர் துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(32) தேவர்கள், விருந்தினர்கள், சார்ந்தோர், பித்ருக்கள் ஆகியோரின் வழிபாட்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள், சார்ந்தோர் ஆகியோருக்கு உணவளித்த பிறகு எஞ்சியதை உண்போர் ஆகியோர், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(33) இல்லற நெருப்பை மூட்டி, அதைத் தொடர்ந்து எரியச் செய்து, மதிப்புடன் அதை வழிபடுபவர்களும், சோம வேள்விகளில் (தேவர்களுக்கு) ஆகுதிகளை முறையாக ஊற்றியவர்களும் துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்.(34) நீ நடந்து கொள்வது போலவே, தங்கள் தாய்மார், தந்தைமார், ஆசான்கள் மற்றும் பெரியோர்களிடம் நடந்து கொள்பவர்கள் (துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்வார்கள்)” என்றார் {நாரதர்}. இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டுப் பேசுவதை நிறுத்தினார் அந்தத் தெய்வீக முனிவர்

“.(35)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இந்தக் காரணங்களுக்காக, உன் மாளிகையில் தேவர்களையும், பித்ருக்களையும், பிராமணர்களையும், விருந்தினர்களையும் எப்போதும் வழிபடுவாயாக. இத்தகைய நடத்தையின் விளைவால் நிச்சயம் நீ விரும்பிய கதியை அடைவாய்”.(36)

மன்னன் சிபி! – அநுசாஸனபர்வம் பகுதி – 32-பாதுகாப்பை நாடி வருவோரைப் பாதுகாப்பதால் கிட்டும் பயன் குறித்துச் சொல்ல மன்னன் சிபியின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானியே, ஓ! ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரே, கடமை மற்றும் அறம் தொடர்பான காரியங்கள் குறித்து நான் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்.(1) ஓ!பாரதக் குலத்தின் தலைவா, நான்கு வகை உயிரினங்களில் பாதுகாப்பை வேண்டுவோருக்குப் பாதுகாப்பை அளிக்கும் மனிதர்கள் அடையும் பயனென்ன?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் ஞானமும், பரந்த புகழும் கொண்ட தர்மத்தின் மகனே {தர்மபுத்ரா}, பணிவுடன் பாதுகாப்பு நாடப்படும்போது, பிறருக்குப் பாதுகாப்பை அளிப்பதால் உண்டாகும் பெரும்பலன் குறித்த இந்தப் பழைய வரலாற்றைக் கேட்பாயாக.(3) ஒரு காலத்தில் ஒரு பருந்தால் விரட்டப்பட்ட ஓர் அழகிய புறாவானது, வானத்தில் இருந்து விழுந்து, உயர்ந்த அருளைக் கொண்டவனான மன்னன் விருஷதர்பனின் பாதுகாப்பை நாடியது.(4) தூய ஆன்மாவைக் கொண்ட அந்த ஏகாதிபதி, அச்சத்தால் தன் மடியில் தஞ்சமடைந்த புறாவைக் கண்டு, அதற்கு ஆறுதலளித்து, “ஓ! பறவையே, ஆறுதலடைவாயாக. உனக்கு அச்சம் ஏதும் கிடையாது.(5) இத்தகைய பேரச்சம் உனக்கு எங்கிருந்து வந்தது? நீ என்ன செய்தாய்? எங்கே செய்தாய்? எதன் விளைவாக நீ அச்சத்தால் புலன்களை இழந்து இறந்தவன் போலிருக்கிறாய்?(6) ஓ! அழகிய பறவையே, உன் நிறமானது, நீல வகையைச் சார்ந்ததும், புதிதாக மலர்ந்ததுமான கருநெய்தல் மலருக்கு ஒப்பாக இருக்கிறது. உன் கண்கள் அசோக மலர், அல்லது மாதுளையின் வண்ணத்தில் இருக்கிறது. அஞ்சாதே, ஆறுதலடைவாயாக.(7) நீ எனது பாதுகாப்பை நாடியிருக்கும்போது, உன்னைப் பாதுகாக்க இத்தகைய பாதுகாவலன் இருக்கும்போது, எவனும் உன்னைப் பிடிக்கவும் துணியமாட்டன் என்பதை அறிவாயாக.(8) உனக்காக நான் இன்று காசி நாட்டையே கொடுப்பேன், தேவைப்பட்டால் என் உயிரையும் கொடுப்பேன். எனவே, ஓ! புறாவே, அச்சம் உனதாக வேண்டாம், ஆறுதலைவாயாக” என்றான் {விருஷதர்பன்}.(9)

பருந்து {மன்னன் விருஷதர்பனிடம்}, “இந்தப் பறவை {புறா} என் உணவாக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ! மன்னா, நீ இவனை என்னிடம் இருந்து பாதுகாப்பது உனக்குத் தகாது. நான் இந்தப் பறவையை விரட்டி வந்து பிடித்திருக்கிறேன். உண்மையில், பெரும் முயற்சி செய்த பிறகு இறுதியாகவே நான் இவனை அடைந்திருக்கிறேன்.(10) இவனது இறைச்சி, குருதி, மஜ்ஜை, கொழுப்பு ஆகியவை எனக்கும் பெரும் உணவாக இருக்கும். இந்தப் பறவை என்னைப் பெரிதும் நிறைவடையச் செய்யும் வாழ்வாதாரமாக இருக்கும். ஓ! மன்னா, எனக்கும் இவனுக்கும் இடையில் இவ்வழியில் நீ குறுக்கே நிற்காதே.(11) என்னைப் பீடிக்கும் தாகம் கடுமையானதாக இருக்கிறது. பசி என் வயிற்றை எரிக்கிறது. இந்தப் பறவையை விடுவித்து, அவனைக் கைவிடுவாயாக. இனியும் என்னால் பசிக்கொடுமையைப் பொறுத்துக் கொள்ள முடியாது.(12) இவனை என் இரையாகவே விரட்டி வந்தேன். என் சிறகுகளாலும், அலகுகளாலும் இவனது உடல்கள் கிழிக்கப்பட்டுக் காயமடைந்திருப்பதைக் காண்பாயாக. இவனது மூச்சும் பலவீனமடைவதைக் காண்பாயாக. ஓ! மன்னா, இவனை என்னிடம் இருந்து பாதுகாப்பது உனக்குத் தகாது.(13) உனக்குரிய அதிகாரத்தின்படி, பிற மனிதர்களின் மூலம் அழிவை அடையும் போது உன் பாதுகாப்பை நாடும் மனிதர்களை நீ காக்கலாம். எனினும், தாகத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒரு வானுலாவி பறவையிடம் உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது.(14) உன் எதிரிகள், உன் பணியாட்கள், உறவினர்கள் உன் குடிமக்களுக்கிடையில் நடைபெறும் சச்சரவுகள் ஆகியவற்றின் மீது உனக்கு அதிகாரம் பரவலாம். உண்மையில், உன் ஆட்சிப்பகுதியின் ஒவ்வொரு பகுதிக்கும் அது பரவலாம், உன் புலன்களுக்கும் பரவலாம். எனினும், உன் அதிகாரம் ஆகாயம் வரை பரந்திருப்பதல்ல.(15) உன் விருப்பங்களுக்கு எதிராகச் செயல்படும் எதிரிகளிடம் உன் ஆற்றலை வெளிப்படுத்தி, அவர்கள் மீது உன் ஆட்சி அதிகாரத்தை நிறுவலாம். எனினும், உன் ஆட்சி, வானத்தில் பறக்கும் பறவைகள் வரை பரந்திருக்கவில்லை. உண்மையில், (இந்தப் புறாவைப் பாதுகாப்பதன் மூலம்) நீ தகுதியை ஈட்ட விரும்பினால், என்னைப் பார்ப்பதும் (என் பசியைத் தணிக்க முறையானதைச் செய்து, என் உயிரைக் காப்பதும்) உன் கடமையே” என்றது {பருந்து}”.(16)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம} தொடர்ந்தார், “பருந்தின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அரசமுனி ஆச்சரியத்தால் நிறைந்தான். அவனது {பருந்தின்} இந்தச் சொற்களை அலட்சியம் செய்யாத மன்னன், அவனது {பருந்தின்} வசதிகளையும் கவனிக்க விரும்பி, பின்வரும் சொற்களில் அவனுக்கு மறுமொழி கூறினான்.(17)

மன்னன் {விருஷதர்பன்}, “ஒரு காளையோ, பன்றியோ, மானோ, எருமையோ இன்று உனக்காக உரிக்கப்படட்டும். இன்று அத்தகைய உணவை உட்கொண்டு உன் பசியைத் தணித்துக் கொள்வாயாக.(18) என் பாதுகாப்பை நாடிய எவரையும் ஒருபோதும் கைவிடக்கூடாது என்பது என் உறுதியான நோன்பாகும். ஓ! பறவையே, இந்தப் பறவை என் மடியை விட்டு அகலாமல் இருப்பதைக் காண்பாயாக” என்றான்.(19)

பருந்து, “ஓ! ஏகாதிபதி, பன்றி, எருது அல்லது பல்வேறு வகையிலான எந்த நீர்க்கோழியின் இறைச்சையையும் நான் உண்ண மாட்டேன். இந்த வகை, அல்லது அந்த வகை உணவில் எனக்கென்ன தேவையிருக்கிறது? என் வகை உயிரினங்களுக்காக நித்தியமாக விதிக்கப்பட்டிருக்கும் உணவைக் குறித்துத் தான் என் காரியம் இருக்க முடியும்? பருந்துகள் புறாக்களை உண்பது நித்திய விதியாகும்.(20,21) ஓ! பாவமற்ற உசீநரா, இந்தப் புறாவிடம் நீ இவ்வளவு பற்றை உணர்வாயெனில், இந்தப் புறாவின் எடைக்கு இணையாக உன் உடல் சதையில் இருந்து எனக்கு இறைச்சியை அளிப்பாயாக” என்றது.(22)

மன்னன், “நீ இந்த வகையில் என்னிடம் பேசியதன் மூலம் நீ இன்று எனக்குப் பேருதவி செய்திருக்கிறாய். ஆம், நீ சொன்னதை நான் செய்வேன்” என்றான். இதைச் சொன்ன அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன்,(23) தன் சதையை அறுத்துத் தராசில் புறாவுக்கு எதிராக எடை நிறுத்தினான். அதே வேளையில் அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்தவர்களும், ரத்தினங்கள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களுமான மன்னனின் மனைவிகள்,(24) நடைபெறும் காரியத்தைக் கேள்விப்பட்டு, துன்பத்தால் பீடிக்கப்பட்டு, சோகத்துடன் அலறியபடியே வெளியே வந்தனர்.(25) பெண்கள், அமைச்சர்கள் மற்றும் பணியாட்கள் இவ்வாறு அலறியதன் விளைவால் உண்டான ஆழ்ந்த இரைச்சல் அந்த அரண்மனையில் மேக முழக்கமென எழுந்தது. மிகத் தெளிவாக இருந்த வானம், அனைத்துப் புறங்களிலும் அடர்த்தியான மேகங்களால் சூழப்பட்டது.(26) அந்த ஏகாதிபதியின் வாய்மைக்கு இணக்கமான செயலின் விளைவால் பூமி நடுங்கத் தொடங்கினாள். மன்னன் தன் விலாப்புறங்கள், தோள்கள் மற்றும் தொடைகளில் இருந்து சதை அறுக்கத் தொடங்கி,(27) அந்தப் புறாவுக்கு எதிராக எடைபார்ப்பதற்காகத் தராசில் விரைவாக நிரப்பினான். அவ்வளவும் செய்து புறாவானது தொடர்ந்து எடை அதிகமாகவே இருந்தது.(28)

இறுதியாக மன்னன் சதைகளேதுமற்று குருதியால் மறைக்கப்பட்ட வெறும் எலும்புக்கூடாக ஆன பிறகு, தன் மொத்த உடலையே கைவிட விரும்பி, ஏற்கனவே தான் அறுத்த சதைகளை வைத்திருந்த தராசில் ஏறினான்.(29) அந்நேரத்தில், இந்திரனின் தலைமையிலான மூவுலகத்தாரும் அவனைக் காண அந்த இடத்திற்கு வந்தனர். ஆகாயத்தில் இருந்த கண்ணுக்குப்புலப்படாத பூதங்களின் மூலம் தெய்வீகப் பேரிகைகளும், துந்துபிகளும் முழக்கப்பட்டன.(30) மன்னன் விருஷதர்பன், தன் மீது பொழியப்பட்ட அமுத மழையில் நீராடினான். இனிய நறுமணமும், தீண்டலும் கொண்ட தெய்வீக மலர்களும் அவன் மீது மீண்டும் மீண்டும் அபரிமிதமாகப் பொழியப்பட்டன.(31) தேவர்களும், பெரும் எண்ணிக்கையிலான கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரும், பெரும்பாட்டனான பிரம்மனைச் சுற்றி ஆடிப் பாடுவதைப் போல இவனை {இம்மன்னனைச்} சுற்றி ஆடவும் பாடவும் தொடங்கினர்.(32) அப்போது அந்த மன்னன், (அழகிலும், மகிமையிலும்) முற்றாகத் தங்கத்தாலான மாதும், தங்கம் மற்றும் ரத்தினங்களாலான வளைவுகளைக் கொண்டதும், வைடூரியங்களாலான தூண்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு மாளிகையைவிட விஞ்சி மிளிர்ந்து கொண்டிருந்த ஒரு தெய்வீகத் தேரில் ஏறினான்.(33) அரசமுனியான அந்தச் சிபி[1] தன் செயற்தகுதியின் மூலம் நித்தியமான சொர்க்கத்திற்குச் சென்றான். ஓ! யுதிஷ்டிரா, நீயும் உன்னிடம் பாதுகாப்பை நாடி வருவோரிடம் இதே வழியில் நடப்பாயாக.(34)தன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரையும், தன்னைச் சார்ந்திருப்பவர்களையும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களையும் காப்பாற்றும் ஒருவன் மறுமையில் பேரின்பத்தை அடைவதில் வெல்கிறான்.(35) நீதியும், ஒழுக்கமும் கொண்டவனும், நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டுடன் கூடியவனுமான ஒருவன் தன் நேர்மையான செயல்களின் மூலம் மதிப்புமிக்க வெகுமதிகள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்.(36) தூய ஆன்மா கொண்டவனும், பெரும் ஞானியும், கலங்கா ஆற்றல் கொண்டவனும், காசிகளின் ஆட்சியாளனும், அரச முனியுமான சிபி, நீதிமிக்கத் தன் செயல்களுக்காக மூன்று உலகங்களாலும் கொண்டாடப்பட்டான்.(37) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பாதுகாப்பு நாடி வருவோரை (சிபியைப் போலவே) பாதுகாக்க முனையும் எவரும் அதே மகிழ்ச்சியான கதியையே அடைவார்கள்.(38) அரச முனியான விருஷதர்பனின் இந்த வரலாற்றை உரைப்பவன், நிச்சயம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவான், இந்த வரலாற்றை மற்றொருவர் சொல்லி கேட்கும் மனிதனும் நிச்சயம் அதே கதியையே அடைவான்” என்றார் {பீஷ்மர்}.(39)

பிராமண மேன்மை! – அநுசாஸனபர்வம் பகுதி – 33-ஒரு மன்னனின் முக்கியக் கடமை பிராமணர்களை வழிபடுவது என்பதையும், பிராமணர்களின் மேன்மையையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஒரு மன்னனுக்காக விதிக்கப்பட்ட செயல்கள் அனைத்திலும் முதன்மையான செயல் எது? எந்தச் செயலைச் செய்வதன் மூலம் ஒரு மன்னன் இம்மை மற்றும் மறுமை இரண்டிலும், இன்புறுவதில் வெல்கிறான்?” எனக் கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, முறையாக அரியணையில் நிறுவப்பட்ட ஒரு மன்னன் பெரும் மகிழ்ச்சியை அடைய விரும்பினால், செயல்கள் அனைத்திலும் பிராமணர்களை வழிபடுவதே அவனுக்கு முதன்மையானதாக விதிக்கப்பட்டிருக்கிறது.(2) முதன்மையான மன்னர்கள் அனைவரும் இதையே செய்ய வேண்டும். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இதை நன்கறிவாயாக. வேத கல்வி பெற்றவர்களும், நீதிமிக்கவர்களுமான பிராமணர்கள் அனைவரையும் ஒரு மன்னன் எப்போதும் மதிப்புடன் வழிபட வேண்டும்.(3)

ஒரு மன்னன், விற்கள், ஆறுதலளிக்கும் பேச்சுகள் மற்றும் இன்பநுகர் பொருட்கள் அனைத்தையும் கொடையாகக் கொடுத்து, தன் நகரம் அல்லது மாகாணங்களில் வசிக்கக்கூடியவர்களும், பெருங்கல்வியைக் கொண்டவர்களுமான பிராமணர்கள் அனைவரையும் வழிபட வேண்டும்.(4) இதுவே மன்னர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செயல்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். உண்மையில், ஒரு மன்னன் எப்போதும் தன் கண்களை இதில் நிலைநிறுத்தியிருக்க வண்டும். அவன், தன்னையும், தன் சொந்த பிள்ளைகளயும் பாதுகாப்பதைப் போல அவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.(5) (கல்வி மற்றும் புனிதத்தன்மையில் தாங்கள் பெற்றிருக்கும் மேன்மைக்காக) பிராமணர்களுக்கு மத்தியில் பெரும் மதிப்புக்குத் தகுந்தவர்களாக இருப்பவர்களை மன்னன் வழிபட வேண்டும். அத்தகைய மனிதர்கள் கவலையில் இருந்து விடுபடும்போது, மொத்த நாடும் அழகில் சுடர்விடுகிறது.(6)

அத்தகைய நபர்கள் துதிக்கப்படத்தக்கவராவர். மன்னன் அத்தகையோருக்குத் தலைவணங்க வேண்டும். உண்மையில் ஒருவன் தன் தந்தைமாரையோ, பாட்டன்மாரையோ எவ்வாறு மதிப்பானோ அதே வகையில் அவர்களை மதிக்க வேண்டும். உயிரினங்கள் அனைத்தின் இருப்பும் வாசவனைச் சார்ந்திருப்பதைப் போலவே மனிதர்கள் பின்பற்றும் ஒழுக்க வழிகள் அவர்களையே சார்ந்திருக்கின்றன.(7) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலையும், பெரும் சக்தியையும் கொண்ட அத்தகைய மனிதர்கள் சீற்றமடைந்தால், தங்கள் விருப்பத்தால் மட்டுமே, அல்லது மந்திரங்களைச் சொல்வதால் மட்டுமே, அல்லது (தவச் சக்தியின் மூலம் பெறப்பட்ட) பிற வழிமுறைகளின் மூலம் மொத்த நாட்டையும் எரித்து விட வல்லவர்களாக இருப்பார்கள்.(8) அவர்களை அழித்துவிடக்கூடிய ஏதொன்றையும் நான் காணவில்லை. அவர்களது சக்தி அண்டத்தின் இறுதி எல்லையையும் அடையவல்ல நிலையில் கட்டுப்படுத்தப்பட முடியாததாக இருக்கிறது. கோபத்தில் இருக்கும்போது, காட்டின் மீது விழும் சுடர்மிக்கத் தழலைப் போலவே மனிதர்கள் மற்றும் பொருட்களின் மீது அவர்களது பார்வைகள் விழும்.(9)

பெரும் துணிவுமிக்க மனிதர்களும் அவர்களது பெயரைக் கேட்டாலே அச்சத்தால் பீடிக்கப்படுவார்கள். அவர்களது குணங்களும், சக்திகளும் அளக்கமுடியாதனவும், இயல்புக்கு மீறியனவுமாகும். அவர்களில் சிலர், புற்கள் மற்றும் கொடிகளால் அமைக்கப்பட்ட வாய்களைக் கொண்ட கிணறுகள் மற்றும் குழிகளைப் போலவும், அதே வேளையில் வேறு சிலர், மேகங்களும் இருளும் அற்ற தெளிந்த வானம் போலவும் இருக்கிறார்கள்.(10) அவர்களில் (துர்வாசர் முதலியவர்களைப் போன்ற) சிலர் கடும் மனோநிலையைக் கொண்டவர்கள் இருக்கின்றனர். அவர்களில் (கௌதமர் மற்றும் பிறரைப் போன்ற) சிலர் மென்மையான மனநிலை கொண்டவர்களும் இருக்கின்றனர். அவர்களில் (அசுரர் வாதாபியை விழுங்கிய அகஸ்தியரைப் போன்ற) சிலர் பெரும் தந்திரக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தவப்பயிற்சிகளில் அர்ப்பணிப்புமிக்கோராக இருக்கிறார்கள்.(11) அவர்களில் (உத்தாலகரின் ஆசானைப் போல) உழவுப் பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களில் சிலர் (ஆசானிடம் பணி செய்த உபமன்யுவைப் போல) பசுப் பராமரிப்பில் ஈடுபடுகின்றனர். அவர்களில் சிலர் பிச்சையெடுத்து வாழ்கின்றனர். அவர்களில் சிலர் (ஆதிகாலத்து வால்மீகி போலவும், பஞ்ச கால விஷ்வாமித்திரரைப் போலவும்) கள்வராகவும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் (நாரதரைப் போல) சச்சரவுகளை உண்டாக்குவதிலும், அவற்றில் ஈடுபடுவதிலும் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள். மேலும் சிலர், (பரதரைப் போல) நடிகர்களாகவும், நடனக் கலைஞர்களாகவும் இருக்கின்றனர்.(12)

அவர்களில் சிலர், (உள்ளங்கை நிறைய உள்ள நீரைப் போல மொத்த கடல்நீரையும் பருகிய அகஸ்தியரைப் போல) இயல்புக்குமீறிய செயல்கள் மற்றும் சாதாரணச் செயல்கள் அனைத்தையும் செய்யத்தகுந்தவர்களாவர். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பிராமணர்கள் பல்வேறு இயல்புகளையும், நடத்தைகளையும் கொண்டவர்களாவர்.(13) கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், அழமொழுகுபவர்களும், பல்வேறு செயல்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், பல்வேறு வகைத் தொழில்களில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்வாதாரத்தை அடைபவர்களுமான பிராமணர்களை எப்போதும் ஒருவன் புகழவே வேண்டும்.(14) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, பித்ருக்கள், தேவர்கள் மற்றும் (மூன்று வகை) மனிதர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோரைவிட முதிய பிராமணர்கள் உயர்ந்த அருளைப் பெற்றவர்களாவர்.(15)

தேவர்களாலோ, பித்ருக்களாலோ, கந்தர்வர்களாலோ, ராட்சசர்களாலோ, அசுரர்களாலோ, பிசாசங்களாலோ இந்த மறுபிறப்பாளர்களை வெல்ல முடியாது.(16) பிராமணர்கள், தேவனல்லாத ஒருவனையும் தேவனாக்கவல்லவர்களாவர். மேலும் தேவ நிலையில் உள்ளோரை அந்நிலையற்றவர்களாக்கவும் அவர்களால் இயலும். அவர்கள் எவனை மன்னனாக்க விரும்புவார்களோ அவனே மன்னனாவான். மறுபுறம், அவர்களால் விரும்பப்படாதவர்கள் {அனைத்தையும் தோற்று மீண்டும்} சுவற்றுக்கே செல்ல வேண்டும்.(17) ஓ! மன்னா, நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், பிராமணர்களை இகழ்ந்து, அவர்களை நிந்திக்கும் மூடர்கள் நிச்சயம் அழிவையே அடைவார்கள்.(18)

ஓ! மன்னா, புகழ்வதிலும், இகழ்வதிலும் திறம் கொண்டவர்களும், பிறரின் புகழ் மற்றும் இழிவுக்குக் காரணம் அல்லது மூலமாக இருப்பவர்களுமான பிராமணர்கள், தங்களுக்குத் தீங்கிழைக்க முனைவோரிடம் எப்போதும் கோபம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(19) பிராமணர்கள் எந்த மனிதனைப் புகழ்கிறார்களோ, அவன் செழிப்பில் வளர்வான். பிராமணர்களால் நிந்திக்கப்பட்டுக் கைவிடப்படும் மனிதன் விரைவில் தோல்வியையும் ஏமாற்றத்தையும் அடைகிறான்.(20) சகர்கள், யவனர்கள், காம்போஜர்களில் பிராமணர்கள் இல்லாததன் விளைவால் க்ஷத்திரிய இனக்குழுக்களும் இழிந்த சூத்திர நிலையை அடைந்து வீழ்ச்சியடைந்தன.(21)

திராவிடர்கள் {திரவிடர்கள் / திரமிளர்கள்}[1], களிங்கர்கள், புலிந்தர்கள், உசீநரர்கள், கோலிஸர்ப்பர்கள், மாஹிஷர்கள் மற்றும் பிற க்ஷத்திரியர்களுக்கு(22) மத்தியில் பிராமணர்கள் இல்லாததால், அவர்கள் சூத்திரர்களாக இழிநிலையை அடைந்தனர். ஓ! வெற்றிமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, அவர்களை {பிராமணர்களை} வெல்வதை விட அவர்களிடம் தோற்பதே ஏற்புடையது.(23) இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் கொல்லும் எவனும், ஒற்றைப் பிராமணனைக் கொன்றதைப் போன்ற கொடிய பாவத்தை ஈட்டுவதில்லை.(24)ஒரு பிராமணனை இழித்தோ, பழித்தோ எவனும் ஒருபோதும் பேசக்கூடாது. எங்கே பிராமணர்கள் இகழப்படுகிறார்களோ, அங்கே (அதைச் சொல்பவனையும், அவனது வார்த்தைகளையும் தவிர்க்கும் வகையில்) ஒருவன் தன் தலையைத் தொங்கப் போட்டு அமர வேண்டும், அல்லது அந்த இடத்தைவிட்டு அகன்று செல்ல வேண்டும்.(25) எந்த மனிதன் பிராமணர்களோடு சச்சரவு செய்வானோ, அவன் இவ்வுலகில் இன்னும் பிறக்கவில்லை, அல்லது பிறந்தால் மகிழ்ச்சியாகத் தன் வாழ்நாளைக் கடத்துவதில்லை.(26) காற்றை எவனும் தன் கையால் பிடிக்க முடியாது. நிலவை எவனும் தன் கரத்தால் தீண்ட முடியாது. பூமியை எவனும் தன் கரங்களில் தாங்கிக் கொள்ள முடியாது. அதே போலவே, ஓ! மன்னா, எவனாலும் இவ்வுலகில் பிராமணர்களை வெல்ல முடியாது” என்றார் {பீஷ்மர்}.(27)

பூமாதேவி சொன்ன மகிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 34-பிராமணர்களின் மேன்மை குறித்துக் கிருஷ்ணனிடம் பேசிய பூமாதேவியின் உரையை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“ஒருவன் எப்போதும் பிராமணர்களை மதிப்புடன் வழிபட வேண்டும். அவர்கள் சோமனைத் தங்கள் மன்னனாகக் கொண்டவர்கள், அவர்களால் பிறருக்கு மகிழ்ச்சியையும், துன்பத்தையும் தர முடியும்.(1) ஓ! மன்னா, ஒருவன் தன் தந்தைமாரையும், பாட்டன்மாரையும் எவ்வாறு பேணிப் பாதுகாப்பார்களோ அதே போன்று இவர்களும் பேணிப் பாதுகாக்கப்பட்டு, வணங்கப்பட்டு, உணவு மற்றும் ஆபரணக் கொடைகளையும், அவர்கள் விரும்பும் அனுபவிக்கத்தக்க பொருட்களையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தேவர்களின் தலைவனான வாசவனிடம் இருந்து அனைத்து உயிரினங்களுக்கும் பாயும் அமைதியும் மகிழ்ச்சியும் போல, பிராமணர்கள் இவ்வாறு மதிக்கப்படும் நாட்டில், அமைதியும் மகிழ்ச்சியும் பாயும்.(2) தூய ஒழுக்கம் கொண்டவர்களும், பிரம்ம ஒளி கொண்டவர்களுமான பிராமணர்கள் ஒரு நாட்டில் பிறக்க வேண்டும். (ஒரு நாட்டில் வந்து குடியேறுபவர்களுக்கு மத்தியில்) அற்புதமான தேர்வீரர்களும், எதிரிகள் அனைவரையும் எரிக்க வல்லவர்களுமான க்ஷத்திரியர்களும் விரும்பப்பட வேண்டும்.(3) இது நாரதரால் எனக்குச் சொல்லப்பட்டது. ஓ! மன்னா, நற்குடி பிறப்பு, அறம் மற்றும் நெறிகள் குறித்த அறிவு ஆகியவற்றைக் கொண்டவனும், சிறந்த நோன்புகளை உறுதியுடன் நோற்பவனுமான ஒரு பிராமணனை ஒருவன் தன் மாளிகையில் வசிக்கச் செய்வதைவிட வேறு உயர்ந்தது ஏதுமில்லை. அத்தகைய செயல் அனைத்துவகை அருளையும் உண்டாக்கவல்லது.(4) பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும் வேள்விக் காணிக்கைகள், அவற்றை ஏற்கும் தேவர்களையே சென்றடைகின்றன. பிராமணர்களே அனைத்து உயிரினங்களின் தந்தைமாராவர். ஒரு பிராமணனைவிட உயர்ந்தது ஏதுமில்லை.(5)

ஆதித்தியன் {சூரியன்}, சந்திரமாஸ் {சந்திரன்}, காற்று {வாயு}, நீர், பூமி, வானம், திசைப்புள்ளிகள் ஆகிய அனைத்தும் பிராமணனின் உடலுக்குள் நுழைந்து, பிராமணன் உண்பவற்றை எடுத்துக் கொள்கின்றன[1].(6) எந்த வீட்டில் பிராமணர்கள் உண்பதில்லையோ, அங்கே பித்ருக்களும் உண்ண மறுப்பார்கள்.(7) பிராமணர்களை வெறுக்கும் இழிந்தவனின் வீட்டில் தேவர்கள் ஒருபோதும் உண்பதில்லை. பிராமணர்கள் நிறைவடையும்போது, பித்ருக்களும் நிறைவடைகின்றனர்.(8) பிராமணர்கள் நிறைவடையும்போது, தேவர்களும் நிறைவடைகின்றனர். இதில் ஐயமேதும் இல்லை. பிராமணர்களுக்கு வேள்வி ஹவிஸைக் கொடுப்பவர்கள் (இம்மையிலும் மறுமையிலும்) நிறைவை அடைகின்றனர்.(9) அத்தகைய மனிதர்கள் அழிவை அடைவதில்லை. உண்மையில் அவர்கள் உயர்ந்த கதிகளையே அடைகின்றனர்.பிராமணர்களை நிறைவடையச் செயவதற்காகக் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட வேள்வி காணிக்கைகள்,(10) பித்ருக்கள் மற்றும் தேவர்கள் ஆகிய இருவரையும் நிறைவடையச் செய்கின்றன. உயிரினங்கள் அனைத்தும் எங்கே தோன்றினவோ அந்த வேள்வியின் காரணன் பிராமணனே.(11) இந்த அண்டம் எதனில் உண்டாகிறதென்பதையும், அழிவில் இருந்து மீண்டும் எப்போதும் வெளிப்படையாகத் திரும்புகிறது என்பதையும் அறிந்தவன் பிராமணன். உண்மையில், சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் பாதையையும், எதிரிடத்திற்கு வழிவகுக்கும் மறுபாதையையும் பிராமணன் அறிவான்.(12) நடந்தது, நடக்கப் போவது என அனைத்தையும் பிராமணன் அறிவான். இருகால் உயிரினங்கள் அனைத்திலும் பிராமணனே முதன்மையானவனாவான். ஓ! பாரதர்களின் தலைவா, பிரமாமணன் தன் வகைக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முழுமையாக அறிந்தவனாவான்.(13) பிராமணர்களைப் பின்பற்றும் மனிதர்கள் ஒருபோதும் வீழ்வதில்லை. இவ்வுலகில் இருந்து செல்லும்போது அவர்கள் ஒருபோதும் அழிவையடைவதில்லை. உண்மையில், வெற்றி எப்போதும் அவர்களுடையதே.(14) பிராமணர்களின் உதடுகளில் இருந்து உதிரும் சொற்களை ஏற்பவர்களும், தங்கள் ஆன்மாக்களைக் கட்டுப்படுத்தியவர்களுமான உயர் ஆன்ம மனிதர்கள், ஒருபோதும் வீழ்வதில்லை. வெற்றி எப்போதும் அவர்களுடையதாகவே இருக்கிறது.(15)

தங்கள் சக்தியாலும், வலிமையாலும் அனைத்தையும் எரிக்கும் க்ஷத்திரியர்களின் சக்தி, பிராமணர்களுடன் மோதும்போது தணிவடைகிறது {அழிவை அடைகிறது}.(16) {பிராமண} பிருகுக்கள், {க்ஷத்திரிய} தாலஜங்கர்களை வென்றனர். அங்கிரஸின் மகன்கள் நிபர்களை வென்றனர். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பரத்வாஜர் வீதஹவ்யர்களையும், ஐலர்களையும் வென்றார்.(17) இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் பல்வேறு வகை ஆயுதங்களைப் பயன்படுத்தவல்லவர்களாக இருந்தும், கருப்பு மான் தோலை மட்டுமே தங்களது சின்னமாகக் கொண்டவர்களும், அதையே பெயராகக் கொண்டவர்களுமான பிராமணர்கள் அவர்களை வென்று பயனடைந்தனர். பிராமணர்களுக்குப் பூமியை அளித்து, அத்தகைய செயலின் மூலம் {இம்மை, மறுமை என்ற} இரண்டு உலகங்களுக்கும் ஒளியூட்டும் ஒருவன், இறுதியாக அனைத்தும் பொருட்களின் கதியை அடைவதில் வெல்வான்[2].(18) மரத்திற்குள் மறைந்திருக்கும் நெருப்பைப் போல, இவ்வுலகில் சொல்லப்படும், அல்லது கேட்கப்படும், அல்லது, படிக்கப்படும் அனைத்தும் பிராமணனில் அடங்கிக் கிடக்கிறது.(19) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இது தொடர்பாக வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, பூமாதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல் பழைய வரலாற்றில் தென்படுகிறது.(20)வாசுதேவன், “ஓ! உயிரினங்களின் தாயே, ஓ! மங்கலத் தேவியே, என்னுடைய இந்த ஐயத்திற்கான தீர்வை நான் உன்னிடம் கேட்க விரும்புகிறேன். இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} நோற்கும் மனிதன் எச்செயலைச் செய்வதன் மூலம் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைவதில் வெல்கிறான்” என்று கேட்டான்.(21)

பூமி, “ஒருவன் பிராமணர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். இந்த ஒழுக்கமே தூய்மையடையச் செய்வதும், சிறந்ததுமாகும். பிராமணர்களிடம் மதிப்புடன் தொண்டாற்றும் மனிதனின் மாசுகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன.(22) இதிலிருந்தே (இந்த ஒழுக்கத்தில் இருந்தே) செழிப்பு எழுகிறது. இதிலிருந்து புகழ் எழுகிறது. இதிலிருந்தே புத்தியும், ஆன்ம அறிவும் எழுகிறது. இந்த ஒழுக்கத்தைக் கொண்ட ஒரு க்ஷத்திரியன் வலிமைமிக்க ஒரு தேர்வீரனாகவும், எதிரிகளை எரிப்பவனாகவும் ஆகி, பெரும் புகழை ஈட்டுவதில் வெல்கிறான்.(23) “அனைத்து வகைச் செழிப்பையும் அடைய விரும்பும் ஒருவன், நற்குடியில் பிறந்தவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனும், சாத்திரங்களை அறிந்தவனுமான ஒரு பிராமணனை எப்போதும் மதிக்க வேண்டும்” என்பதையே நாரதர் என்னிடம் சொன்னார்.(24) உயர்ந்த அல்லது தாழ்ந்த மனிதர்கள் அனைவருக்கும் மேலாகக் கருதப்படுபவர்களுக்கும் உயர்ந்த பிராமணர்களால் புகழப்படும் மனிதன் நிச்சயம் செழிப்பில் வளர்வான்.(25)

சுடப்படாத மண்ணாங்கட்டி கடலில் இடப்படும்போம் அழிவையடைவது போலவே பிராமணர்களைக் குறித்துத் தவறாகப் பேசும் மனிதனும் விரைவில் தோல்வியையும், ஏமாற்றத்தையும் அடைகிறான்.(26) இதே வகையில் பிராமணர்களைத் துன்புறுத்தும் செயல்கள் அனைத்தும் நிச்சயம் தோல்வியையும், அழிவையும் கொண்டு வரும். நிலவில் கரும்புள்ளிகளையும், பெருங்கடலில் உப்பையும் காண்பீராக[3].(27) பெரும் இந்திரனே ஒருமுறை மேனியெங்கும் ஆயிரம் பாலினக்குறிகளை {பெண்குறிகளை} அடைந்தான். பிறகு பிராமணர்களின் சக்தியின் மூலமே அவை ஆயிரம் கண்களாக மாற்றமடைந்தன.(28) ஓ! மாதவரே, இவை யாவும் எவ்வாறு நடைபெற்றன என்பதைக் காண்பீராக. ஓ! மதுசூதனரே, புகழ், செழிப்பு, மறுமையின் பல்வேறு இன்பலோகங்கள் ஆகியவற்றை விரும்புபவனும், தூய நடத்தையும், தூய ஆன்மாவையும் கொண்டவனுமான ஒரு மனிதன், பிராமணர்களின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தவனாக வாழ வேண்டும்” என்றாள் {பூமாதேவி}.(29)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! குரு குலத்தோனே, பூமாதேவியின் இச்சொற்களைக் கேட்ட மதுசூதனன், “நல்லது, நல்லது” என்று சொல்லி உரிய வடிவில் அந்தத் தேவியைக் கௌரவித்தான்.(30) ஓ! பிருதையின் மகனே, பூமாதேவிக்கும், மாதவனுக்கும் இடையில் நடந்த இந்த உரையாடலைக் குவிந்த ஆன்மாவோடு கேட்ட நீ, மேன்மையான பிராமணர்கள் அனைவரையும் வழிபடுவாயாக. இதைச் செய்வதன் மூலம் நீ விரைவில் உனக்கான் உயர்ந்த நன்மையை அடைவாய்”.(31)

பிரம்ம விதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 35-பிராமணர்களின் சிறப்பு; அவர்களுக்கான விதிகளைப் பிரம்மன் சொன்னது; பிராமணர்களின் சக்தி ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! அருளப்பட்ட மன்னா, ஒரு பிராமணன் பிறப்பால் மட்டுமே அனைத்து உயிரினங்களால் துதிக்கப்படும் தகுதியையும், சமைக்கப்பட்ட உணவின் முதல் பங்கை உண்ணும் விருந்தினரெனும் தகுதியையும் அடைகிறான்.(1) (அறம், பொருள், இன்பம், வீடு என்ற) பெரும் நோக்கங்கள் அனைத்தும் அவர்களில் இருந்தே உண்டாகின்றன. அவர்கள் {பிராமணர்கள்} அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நண்பர்களாவர். மேலும் (அவர்களின் வாயில் ஊற்றப்படும் உணவை தேவர்களே உண்பதால்) அவர்கள் தேவர்களின் வாயாகவும் இருக்கின்றனர். மதிப்புடன் வழிபட்டப்படும் அவர்கள், மங்கலம் நிறைந்த வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் நாம் செழிப்படையும்படி வாழ்த்துகின்றனர்.(2) நம் எதிரிகளால் அலட்சியம் செய்யப்படும் அவர்கள், தங்களை எதிர்ப்பவர்களிடம் {எதிரிகளிடம்} சினம்கொண்டு, கடும் சாபங்களை இட்டுத் அவர்களுக்குத் தீமையை விரும்பட்டும்[1].(3)பழைய வரலாறுகளை அறிந்த மனிதர்கள், பழங்காலத்தில் படைப்பாளன் {பிரம்மன்}, பிராமணர்களையும், அவர்களது கடமைகளைப் படைத்தபோது சொன்ன பின்வரும் பழைய ஸ்லோகங்களைச் சொல்கின்றனர்.(4) {அந்த ஸ்லோகங்கள்}, “ஒரு பிராமணன், தனக்கு விதிக்கப்பட்டவற்றைத் தவிர வேறு எதையும் செய்யக்கூடாது. பாதுகாப்பை அடைந்திருக்கும் அவர்கள், பிறரைப் பாதுகாக்க வேண்டும். இவ்வழியில் நடப்பதால் அவர்கள் தங்களுக்கு உயர்ந்த பயனைத் தரும் கதியை நிச்சயம் அடைவார்கள்.(5) தங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் செயல்களைச் செய்வதன் மூலம் அவர்கள் நிச்சயம் பிரம்ம செழிப்பை அடைவார்கள். நீங்களே அனைத்து உயிரினங்களுக்கும் முன்னுதாரணமாகவும், அவர்களைக் கட்டுப்படுத்தும் கடிவாளங்களாகவும் இருப்பீர்கள்.(6) கல்விமானான ஒரு பிராமணன், சூத்திரர்களுக்காக விதிக்கப்பட்டவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது. அத்தகைய செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு பிராமணன் தன் தகுதியை இழக்கிறான். வேத கல்வியின் மூலம் அவன் செழிப்பையும், புத்தியையும், சக்தியையும், அனைத்தையும் எரிக்கவல்ல சக்தியையும், மிக மேலான மகிமையையும் அவன் நிச்சயம் அடைவான்.(8) தேவர்களுக்குத் தெளிந்த நெய் ஆகுதிகளைக் காணிக்கையாக அளிப்பதன் மூலம் உயர்ந்த அருளை அடையும் பிராமணர்கள், பிரம்ம செழிப்புடன் சமைக்கப்படும் அனைத்து வகை உணவுகளையும் குழந்தைகளுக்கு முன்பே உண்ணக் கூடிய தகுதியைப் பெறுகிறார்கள்[2].(9) அனைத்து உயிரினங்களிடமும் கருணையால் நிறைந்தவர்களும், தற்கட்டுப்பாடு மற்றும் வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் கூடியவர்களுமான நீங்கள் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவீர்கள்.(10) மனிதர்களின் உலகில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ, தேவர்களின் உலகில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தும், தவங்கள் மற்றும் அறிவின் துணையுடனும், நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நோற்பதன் மூலமும் {உங்களால்} அடையப்படும்” {என்று சொல்கின்றன}.(11) ஓ! பாவமற்றவனே, பிரம்மனால் பாடப்பட்ட ஸ்லோகங்களையே நான் இவ்வாறு உனக்கு உரைத்தேன். உயர்ந்த நுண்ணறிவையும் ஞானத்தையும் கொண்ட படைப்பாளன் {பிரம்மன்}, பிராமணர்களிடம் கொண்ட கருணையின் மூலம் இவற்றை விதித்தான்.(12)அவர்களில் தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்தோரின் பலம், மன்னர்களின் வலிமைக்கு நிகரானதாகும். அவர்கள் தடுக்கப்பட முடியாதவர்களாகவும், சீற்றமிக்கவர்களாகவும், மின்னலின் வேகத்தைக் கொண்டவர்களாகவும், தாங்கள் செய்யும் செயல்களை மிக விரைவாகச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.(13) அவர்களில் சிங்கத்தின் வலிமையைக் கொண்டவர்களும், புலியின் வலிமையைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். காட்டுப்பன்றியின் பலத்தைக் கொண்ட சிலரும், மான் மற்றும் முதலைகளின் பலங்களைக் கொண்ட சிலரும் இருக்கின்றனர்.(14) கடும்நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட சிலரும், சுறாக்களுக்கு ஒப்பாகக் கடிக்கும் {சுறாக்களின் கடிக்கு ஒப்பான வலியைத் தரும்} சிலரும் இருக்கின்றனர். தங்களை எதிர்ப்பவர்களைத் தங்கள் வாக்கால் மட்டுமே அழிக்கவல்லவர்களாகச் சிலரும், தங்கள் கண்களின் பார்வையால் மட்டுமே அழிக்கவல்லவர்களாகச் சிலரும் இருக்கிறார்கள்.(15) ஏற்கனவே சொல்லப்பட்டது போலக் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போலச் சிலரும், மிக மென்மையான மனநிலை கொண்ட சிலரும் இருக்கிறார்கள். ஓ! யுதிஷ்டிரா, பிராமணர்கள் பல்வேறு மனோநிலைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(16)

மேகலர்கள், திராவிடர்கள் {திரமிடர்கள்}[3], லாடர்கள், பௌண்டரர்கள், கொன்வசிரர்கள், சௌண்டிகர்கள், தரதர்கள், தார்வர்கள், சௌரர்கள், சபரர்கள், பர்ப்பரர்கள்,(17) கிராதர்கள், யவனர்கள் மற்றும் எண்ணற்ற க்ஷத்திரிய இனக்குழுக்கள், பிராமணர்களின் கோபத்தின் மூலம் சூத்திர நிலைக்குத் தாழ்ந்திருக்கிறார்கள்[4].(18) பிராமணர்களை அலட்சியம் செய்ததன் விளைவால் அசுரர்கள் ஆழ்கடலைத் தஞ்சமாகக் கொள்ளும் நிலையை அடைந்தனர். பிராமணர்களுடைய அருளில் மூலமே தேவர்களும் சொர்க்த்தின் இன்பலோகவாசிகளாகும் நிலையை அடைந்தன்ர.(19)வெளி, அல்லது ஆகாயமென்ற பூதம் தீண்டப்பட முடியாதது. இமய மலைகள் தங்கள் நிலைகளில் இருந்து அசைக்கப்பட முடியாதன. கங்கையின் நீரோட்டம் அணைக்கு அடங்காதது. பிராமணர்கள் அடக்கப்பட இயலாதவர்களாவர்.(20) பிராமணர்களின் நல்விருப்பங்களை விளைவிக்காத {பேணி வளர்க்காத} க்ஷத்திரியர்கள் எவரும் பூமியை ஆள இயலாதவர்களாவர் {ஆளும் தகுதியற்றவர்களாவர்}. பிராமணர்கள் உயர் ஆன்மா கொண்டவர்களாவர் {மகாத்மாக்களாவர்}. அவர்கள் தேவர்களுக்கே தேவராவர்.(21) கடல்களைக் கச்சையாகக் கொண்ட மொத்த பூமியின் அரசுரிமையை நீ உண்மையில் அனுபவிக்க விரும்பினால், கொடைகளாலும், கீழ்ப்படிந்த தொண்டுகளாலும் அவர்களை {பிராமணர்களை} எப்போதும் வழிபடுவாயாக.(22) ஓ! பாவமற்றவனே, பிராமணர்கள்  கொடைகளை ஏற்பதன் விளைவால், அவர்களது சக்தியும், வலிமையும் குன்றுகின்றன. ஓ!மன்னா, கொடைகளை ஏற்க விரும்பாத பிராமணர்களிடம் இருந்து நீ உன் குலத்தைப் பாதுகாத்துக் கொள்வாயாக” {என்றார் பீஷ்மர்}.(23)

சோம விதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 36-இந்திரனிடம் சம்பாசுரன் சொன்ன பிராமண மகிமை; சம்பரனின் தந்தை மற்றும் சோமனுக்கு இடையில் இது குறித்து நடந்த உரையாடல் ஆகியவற்றைக் யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகச் சக்ரனுக்கும், சம்பரனுக்கும்[1] இடையில் நடந்த உரையாடல் பழைய வரலாற்றில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில் சக்ரன் {இந்திரன்}, தலையில் சடாமுடி தரித்து உடல் முழுவதும் சாம்பலை {திருநீற்றைப்} பூசிக் கொண்டும் ஒரு தவசியின் வேடத்தை ஏற்றுக் கொண்டு, கோரமான தேரொன்றைச் செலுத்திக் கொண்டு அசுரன் சம்பரனின் முன்னிலையை அடைந்தான்.(2)சக்ரன் {அசுரன் சம்பரனிடம்}, “ஓ! சம்பரா, எந்த ஒழுக்கத்தின் மூலம் நீ உன் குலத்தின் தலைவனானாய்? எந்தக் காரணத்தினால் மக்கள் உன்னை அனைவருக்கும் மேம்பட்டவனாகக் கருதுகிறார்கள்? இதை நீ எனக்கு உண்மையாகவும், விரிவாகவும் சொல்வாயாக” என்று கேட்டான்.(3)

சம்பரன் {சக்ரனிடம்}, “பிராமணர்களிடம் நான் ஒரு போதும் தீய உணர்வுகளை வளர்ப்பதில்லை. அவர்கள் சொல்லும் எந்தப் போதனையையும் கேள்வி கேட்காத மதிப்புடன் அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். பிராமணர்கள் சாத்திரங்களை விளக்க முற்படும்போது, பெரும் மகிழ்ச்சியோடு நான் அதைக் கேட்கிறேன்.(4) அவர்களது விளக்கங்களைக் கேட்ட பிறகு நான் ஒருபோதும் அவர்களை அலட்சியம் செய்ததில்லை. அல்லது பிராமணர்களுக்கு எதிராக எவ்வகையான குற்றமும் இழைத்ததில்லை. புத்தியுள்ள பிராமணர்களை நான் எப்போதும் வழிபடுகிறேன். அவர்களிடம் இருந்தே செய்திகளை எப்போதும் நான் நாடுகிறேன். நான் எப்போதும் அவர்களது பாதங்களை வழிபடுகிறேன்.(5) அவர்கள் நம்பிக்கையுடன் என்னை அணுகி, எப்போதும் என்னிடம் அன்புடன் பேசி, என் நலத்தை விசாரிக்கின்றனர். அவர்கள் கவனமற்றிருந்தாலும் நான் எப்போதும் விழிப்புடன் இருக்கிறேன். அவர்கள் உறங்கினாலும், நான் எப்போதும் விழிப்புடன் இருக்கிறேன்.(6)

சாத்திரங்களால் சுட்டிக்காட்டப்படும் பாதையிலும், பிராமணர்களிடமும் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், வன்மம் மற்றும் தீய ஆசைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டவனுமான நான், தேனீக்கள் தங்கள் கூட்டின் அடைகளை {தேனடைகளைத்} தேனால் நிறைப்பதைப் போல, என் ஆசான்களாக இருப்பவர்களும், என்னை ஆள்பவர்களுமான பிராமணர்கள், ஞானமெனும் அமுதத்தால் எப்போதும் என்னை நிறைக்கிறார்கள்.(7) உற்சாகமிக்க இதயங்களுடன் அவர்கள் சொல்லும் எதையும், நினைவு மற்றும் புத்தியின் துணையுடன் நான் எப்போதும் ஏற்றுக் கொள்கிறேன். அவர்களிடம் நான் கொண்டுள்ள நம்பிக்கையில் எப்போதும் கவனமாக இருக்கிறேன், மேலும், அவர்களை விட எவ்வாறு தாழ்ந்திருக்கிறேன் என்பதையும் எப்போதும் நினைக்கிறேன்.(8) அவர்களது நாவின் நுனியில் வசிக்கும் அமுதத்தை எப்போதும் பருகுவதன் காரணத்தால், நட்சத்திரங்கள் அனைத்தையும் விஞ்சியிருக்கும் நிலவைப் போல நான் என் குலத்தில் உள்ள பிறர் அனைவரையும் விட மேலான நிலையை அடைந்திருக்கிறேன்.(9) பிராமணர்களின் உதடுகளில் இருந்து விழும் சாத்திர விளக்கங்களையும், உலகின் ஞானிகள் ஒவ்வொருவரின செயல்களையும் கேட்பதே உலகத்தின் அமுதமாகவும், குறிப்பிடத்தகுந்த சிறப்பாகவும் கருதப்பட வேண்டும்.(10) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த மோதலைக் கண்டும், பிராமணர்கள் சொன்ன போதனைகளின் பலத்தைப் புரிந்து கொண்டும் என் தந்தை {கசியப முனிவர்} மகிழ்ச்சியாலும், ஆச்சரியத்தாலும் நிறைந்தார்.(11) உயர் ஆன்ம பிராமணர்களின் பலத்தைக் கண்ட என் தந்தை, சந்திரமாஸிடம் {சந்திரனிடம்}, “பிராமணர்கள் எவ்வாறு வெற்றியை அடைகின்றனர்?” என்று கேட்டார்.(12)சோமன்{சந்திரன் முனிவர் கசியபரிடம்}, “பிராமணர்கள் தவங்களின் மூலம் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றனர். வாக்கே அவர்களது பலமாக அமைகிறது. அரச வகையைச் சார்ந்தோரின் ஆற்றல் அவர்களின் கரங்களில் {தோள்களில்} இருக்கிறது. எனினும் பிராமணர்கள், வாக்கையே தங்கள் பலமாகக் கொண்டுள்ளனர்.(13) ஒரு பிராமணன், வசதியேதுமில்லாத தன் ஆசானின் இல்லத்தில் வசித்து, வேதங்களையோ, குறைந்தது பிரணவத்தையோ கற்க வேண்டும். அவன் கோபத்தில் இருந்து விடுபட்டு, உலகம் சார்ந்த பற்றுகளைத் துறந்து, அனைத்துப் பொருட்கள் மற்றும் அனைத்து உயிரினங்களிடமும் சமமான பார்வையைப் பெற்று ஒரு யதியாக வேண்டும்.(14) ஒருவன் தன் தந்தையின் வசிப்பிடத்திலேயே வேதங்கள் அனைத்திலும் திறம்பெற்று, மரியாதைக்குறிய நிலையை அடையுமளவுக்குப் பெரும் ஞானத்தை ஈட்டினாலும், பயணிக்காதவன், அல்லது வீட்டில் வளர்ந்தவன் {ஸாமான்யன்} என்றே மக்கள் அவனை நிந்திப்பார்கள்.(15) பூமியானது, போரிட விரும்பாத மன்னன், இல்லத்தைவிட்டுச் சென்று ஞானம் அடைய விரும்பாத பிராமணன் ஆகிய இருவரையும் எலிகளை விழுங்கும் ஒரு பாம்பைப் போல விழுங்குகிறது {அவர்கள் புகழின்றிப் போகிறார்கள்}.(16) செருக்கானது சிறுமதி கொண்டோரின் செழிப்பை அழிக்கிறது. {மணமாகாத} ஒரு கன்னிகை கருவுறுவதால் களங்கமடைகிறாள் {கெட்டுப் போகிறாள்}. ஒரு பிராமணன் வீட்டிலேயே இருப்பதால் நிந்திக்கத்தகுந்தவனாகிறான் {கெட்டுப் போகிறான்}” {என்றான் சோமன்}.(17)

அற்புதத்தன்மை நிறைந்த சோமனிடமிருந்து என் தந்தை இதைக் கேட்டறிந்தார். இதன் விளைவால் என் தந்தை பிராமணர்களை மதிக்கவும், வழிபடவும் தொடங்கினார். நான் அவரைப் போலவே உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பிராமணர்கள் அனைவரையும் வழிபடுகிறேன்” என்றான் {சம்பரன்}”.(18)

பீஷ்மர் தொடர்ந்தார், “அந்தத் தானவ இளவரசனின் {சம்பரனின்} வாயில் இருந்து உதிர்ந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட சக்ரன், பிராமணர்களை வழிபடத் தொடங்கி, அதன் விளைவாக அவன் தேவர்களின் தலைமையிடத்தை அடைவதில் வென்றான்” {என்றார் பீஷ்மர்}.(19)

கொடைபெறத் தகுந்தவர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 37-கொடைபெறத் தகுந்தவர் யாரென்பது குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, அந்நியர் ஒருவர், அல்லது நீண்டகாலம் உடன் வாழ்ந்த ஒருவர், அல்லது தொலைவில் இருந்து வரும் ஒருவர் எனக் கொடையாளியின் முன் தோன்றும் மூவரில் கொடைபெறத் தகுந்தவராக எவரைக் கருத வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவர்கள் அனைவரும் சம தகுதி கொண்டவர்களே. வேள்விகள் செய்வதற்கோ, ஆசானுக்கான கட்டணத்தை {தட்சணையை} வழங்குவதற்கோ, மனைவி மக்களைப் பராமரிப்பதற்கோ பிச்சையெடுப்பதால் சிலர் தகுதி பெறுகின்றனர். பூமி முழுதும் திரிந்து, ஒருபோதும் எதையும் வேண்டாமல் இருந்து, கொடுக்கப்படுவதைப் பெற்றுக் கொள்ளும் நோன்பைப் பின்பற்றுவதால் சிலர் கொடைபெறும் தகுதியைப் பெறுகின்றனர். மேலும், ஒருவன் வேண்டுவதை நாம் கொடுக்க வேண்டும்.(2) எனினும், நம்மைச் சார்ந்திருப்பவர்கள் துன்பமடையாத வகையில் நாம் கொடையளிக்க வேண்டும். தன்னைச் சார்ந்திருப்பவர்களைத் துன்புறுத்துவதன் மூலம் ஒருவன் தன்னையே துன்புறுத்திக் கொள்கிறான்.(3) முதல் முறையாக வந்திருக்கும் அந்நியனும் உரிய கொடைக்குத் தகுந்தவனாகக் கருதப்பட வேண்டும். தெரிந்தவரும், நன்கறியப்பட்டவரும், கொடையாளியுடன் வாழ்ந்து வருபவருமான ஒருவரும் அதே வகையிலேயே கருதப்பட வேண்டும். தொலையில் இருந்து வருபவரும் சமமாகவே கருதப்பட வேண்டும் என்றும் ஒரு கல்விமான் அறிவான்” என்றார் {பீஷ்மர்}.(4)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எவருக்கும் தீங்கிழைக்காமலும், சாத்திர விதிகளுக்கு முரண்படாமலும் கொடையளிக்க வேண்டும் என்பது உண்மைதான். எனினும், கொடை பெறுவதற்குத் தகுந்தவர் எவர் என்பதை ஒருவன் சரியாக உறுதி செய்ய வேண்டும். ஒருவனுக்குக் கொடுக்கப்படும் கொடைக்குக் குறைவேற்படாத வகையில் அவன் இருக்க வேண்டும்” என்றான்[1].(5)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ரித்விஜர், புரோஹிதர், ஆசான், ஆச்சாரியர், சீடன், (திருமண உறவின் மூலமான) உற்றார் உறவினர் ஆகியோர் கல்விமான்களாகவும், வன்மமற்றவர்களாகவும் இருக்கும்போது அவர்களை மதிப்பிற்கும், வழிபாட்டிற்கும் தகுந்தவர்களாக மதிக்க வேண்டும்.(6) அத்தகைய குணங்கள் அற்றவர்களைக் கொடைகளுக்கோ, விருந்தோம்பலுக்கோ தகுந்தவராக ஒருபோதும் கருதக்கூடாது. எனவே, ஒருவன் தன்னோடு தொடர்பு கொள்ளும் மனிதர்களை எச்சரிக்கையுடன் ஆராய்ந்தறிய வேண்டும்.(7) கோபமின்மை, வாக்கில் வாய்மை, தீங்கிழையாமை, நேர்மை, அமைதி நிறைந்த நடத்தை, செருக்கின்மை, பணிவு, துறவு, தற்கட்டுப்பாடு, ஆன்ம நிறைவு அல்லது ஆன்ம அமைதி ஆகியவற்றை இயல்பாகக் கொண்டவனும், தீய செயல்கள் ஏதுமற்றவனுமான ஒருவனே {கொடைபெறத்} தகுதியுடையவனாகக் கருதப்பட வேண்டும். அத்தகைய மனிதனே கௌரவிக்கப்படத் தகுந்தவன்.(8,9)

ஒருவன் நற்கறியப்பட்டவனாகவோ, தெரிந்தவனாகவோ இருந்தாலும், ஒருவன் புதியவனானாலும், ஏற்கனவே காணப்படாதவனானாலும் இந்தத் தகுதிகளைக் கொண்டிருக்கும் அவன் கௌரவங்களுக்கும், விருந்தோம்பலுக்கும் தகுந்தவனாகக் கருதப்பட வேண்டும்.(10) வேதங்களின் அதிகாரத்தை மறுப்பவன், அல்லது சாத்திரங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று காட்ட முனைபவன், அல்லது சமூகத்தில் உள்ள நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுவதை அங்கீகரிப்பவன் எவனும் வெறுமனே தனக்கான அழிவையே கொண்டு வருகிறான் (அவனைக் கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருத முடியாது).(11)

கல்வியை வீணாக்குபவனும், வேதங்களைப் பழித்துப் பேசுபவனும், பயனற்ற சர்ச்சைகளின் அறிவியலில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும்,(12) நல்லோரின் சபையில் (சச்சரவுகளில்) வெற்றியை ஈட்ட விரும்பி அறம் மற்றும் நெறிகளுக்கான காரணங்களை மறுத்து, அனைத்தையும் விதியின் மேல் சாத்துபவனும், மனிதர்கள் அனைவரிடமும் ஐயுணர்வு கொண்டவனும், மூடனும், தீர்மானம் கொள்ள இயலாதவனும், வாக்கில் கசந்தவனுமான ஒரு பிராமணன் வெறுப்பு நிறைந்த நாயாக அறியப்பட வேண்டும்.(14) நாயானது, குரைத்துக் கொண்டே கடிக்க முனைவதைப்போலவே, இத்தகைய மனிதனும் தன் மூச்சை வீணாகச் செலவழித்து, சாத்திரங்கள் அனைத்தின் அதிகாரங்களையும் அழிக்க முனைகிறான்.(15)

சமூகத்தை ஆதரிக்கும் நடைமுறைகள், அறம் சார்ந்த கடமைகள், சுயத்திற்கு நன்மையை உண்டாக்கவல்ல அனைத்துச் செயல்கள் ஆகியவற்றையும் ஒருவன் செய்ய வேண்டும். இவற்றைச் செய்து வாழும் மனிதன், காலத்தால் எப்போதும் நீடித்திருக்கும் அளவு செழிப்பில் வளர்கிறான்.(16) வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்களுக்கும், வேத கல்வியின் மூலம் முனிவர்களுக்கும், பிள்ளைகளைப் பெறுவதன் மூலம் பித்ருக்களுக்கும், கொடைகளை அளிப்பதன் மூலம் பிராமணர்களுக்கும், உணவூட்டுவதன் மூலம் விருந்தினர்களுக்கும் பட்ட கடனைத் தூய நோக்கத்துடனும், சாத்திர விதிகளின் படியும் சரியாகத் திரும்பச் செலுத்தும் ஓர் இல்லறத்தான் {கிருஹஸ்தாசிரமவாசி} அறத்தில் {தர்மத்தில்} இருந்து ஒருபோதும் வீழமாட்டான்” என்றார் {பீஷ்மர்}.(17,18)

பஞ்சசூடை! – அநுசாஸனபர்வம் பகுதி – 38-பெண்களின் இயல்பு குறித்து நாரதரிடம் பேசிய பஞ்சசூடையின் உரையை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதர்களில் சிறந்தவரே, பெண்களின் மனோநிலை {இயல்பைக்} குறித்து நீர் உரையாடுவதை நான் கேட்க விரும்புகிறேன். தீமைகள் அனைத்திற்கும் வேராகப் பெண்களே சொல்லப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் மிகவும் பலவீனமானவர்களாகவே கருதப்படுகிறார்கள்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக தெய்வீக முனிவர் நாரதருக்கும், (தேவலோக) அரசவை மங்கை {வேசி} பஞ்சசூடைக்கும் இடையில் நடந்த உரையாடல் பழைய வரலாற்றில் தென்படுகிறது.(2) பழங்காலத்தில் தெய்வீக முனிவரான நாரதர் உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்த போது, பிரம்மலோகத்தில் தன் வசிப்பிடத்தைக் கொண்டவளும், குற்றமற்ற அழகைக் கொண்ட அப்ஸரஸுமான பஞ்சசூடை என்பவளைச் சந்தித்தார்.(3) உடலின் ஒவ்வொரு அங்கமும் பேரழகுடன் இருக்கக்கூடிய அந்த அப்சரஸைக் கண்ட அந்தத் தவசி, அவளிடம், “ஓ! கொடியிடையாளே, என் மனத்தில் ஓர் ஐயம் இருக்கிறது. அதை எனக்கு விளக்கிச் சொல்வாயாக” என்று கேட்டார்”.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அம்முனிவரால் {நாரதரால்} இவ்வாறு சொல்லப்பட்ட அந்த அப்சரஸ் அவரிடம், “{நீர் கேட்கும்} காரியம் நான் அறிந்ததாக இருந்தால், நான் அதைக் குறித்துப் பேசத் தகுந்தவள் என்று நீர் நினைத்தால், நிச்சயம் என் மனத்தில் இருப்பதை நான் சொல்வேன்” என்றாள்.(5)

நாரதர் {பஞ்சசூடையிடம்}, “ஓ! இனியவளே, உன் தகுதிக்கு அப்பாற்பட்ட எந்தப் பணியிலும் நிச்சயம் நான் உன்னை ஈடுபடுத்த மாட்டேன். ஓ! அழகிய முகம் கொண்டவளே, பெண்களின் மனோநிலையை {இயல்பை} நான் உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்” என்றார்”.(6)

பீஷ்மர் தொடர்ந்தார், “அந்தத் தெய்வீக முனிவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த முதன்மையான அப்சரஸ் {பஞ்சசூடை}, அவரிடம், “நான் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, பெண்களைக் குறித்துத் தவறாகப் பேச இயலாதவளாக இருக்கிறேன்.(7) பெண்கள் என்னவாக இருக்கிறார்கள், அவர்கள் எத்தகைய இயல்புடன் இருக்கிறார்கள் என்பதை நீர் அறிவீர். ஓ! தெய்வீக முனிவரே, இத்தகைய பணியில் என்னை ஈடுபடுத்துவது உமக்குத் தகாது” என்று மறுமொழி கூறினாள்.(8)

அவளிடம் அந்தத் தெய்வீக முனிவர், “ஓ! கொடியிடையாளே, அஃது உண்மைதான். பொய் பேசுவதன் மூலமே ஒருவர் குற்றமிழைத்தவராகிறார். எனினும், உண்மையைச் சொல்வதில் எக்குற்றமும் இருக்க முடியாது” என்றார்.(9)

அவரால் இவ்வாறு சொல்லப்பட்டவளும், இனிய புன்னகையுடன் கூடியவளுமான அப்சரஸ் பஞ்சசூடை, நாரதரின் கேள்விக்குப் பதிலளிக்க உடன்பட்டாள். பெண்களிடம் நித்தியமாக {எப்போதும்} உள்ள உண்மையான குற்றங்களை அவள் சொல்லத் தொடங்கினாள்.

பஞ்சசூடை {நாரதரிடம்}, “பெண்கள், உயர்ந்த குடியில் பிறந்திருந்தாலும், அழகுடன் கூடியவர்களாக இருந்தாலும், பாதுகாவலர்களை {கணவர்களைக்} கொண்டிருந்தாலும், அவர்கள் {பெண்கள்} தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறவே விரும்புகிறார்கள். ஓ! நாரதரே, இக்குற்றம் உண்மையில் அவர்களைக் களங்கப்படுத்துகிறது.(11) பெண்களைவிடப் பாவம் நிறைந்தது வேறு எதுவுமில்லை. உண்மையில் பெண்களே குற்றங்கள் அனைத்தின் வேராக இருக்கிறார்கள். ஓ! நாரதரே, அதை நிச்சயம் நீர் அறிவீர்.(12) பெண்கள், புகழுடனும், செல்வத்துடனும், அழகிய பண்புகளுடனும், முற்றிலும் தங்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் உள்ள கணவர்களைப் பெற்றிருந்தாலும், வாய்ப்புக் கிடைக்கும்போது அவர்களை அவமதிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள்[1].(13) ஓ! பலமிக்கவரே, அடக்கத்தைக் கைவிட்டு, பாவம் நிறைந்த பழக்கவழக்கங்களையும், நோக்கங்களையும் கொண்ட மனிதர்களின் தோழமையை {துணையை} வளர்ப்பது, பெண்களாகிய நாங்கள் கொண்டுள்ள பாவம் நிறைந்த மனோநிலையாகும் {இயல்பாகும்}[2].(14) பெண்கள் தங்கள் முன்னிலையில் வந்து சிறிதளவு மதிப்புடன் பேசும் மனிதர்களையும் விரும்புகிறார்கள்.(15)கட்டுப்பாடுகள் எதையும் இயல்பாகவே பொறுத்துக் கொள்ளாத பெண்களும், வேறு பாலினத்தைச் சேர்ந்தவரால் {ஆண்களால்} வேண்டப்படாததாலோ, உறவினர்களிடம் கொண்ட அச்சத்தாலோ தங்களுக்காக விதிக்கப்பட்டவற்றை {கட்டுப்பாடுகளை} மீறாமல் தங்கள் கணவர்களிடமே உள்ளனர்.(16) தங்கள் உதவிகளுக்காக {விருப்பங்களுக்காக} அனுமதிக்க இயலாதவர்கள் என அவர்களுக்கு எவரும் இல்லை. அவர்கள் யாருக்கு உதவத் தயாராக இருக்கிறார்களோ, அந்த மனிதனின் வயதை அவர்கள் ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை. அழகாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒருவன் எதிர் பாலினத்தைச் சேர்ந்தவனாக மட்டும் இருந்தாலே பெண்கள் அவனது துணையை அனுபவிக்கத் தயாராக இருக்கிறார்கள்.(17) பாவத்தில் கொண்ட அச்சம், அல்லது கருணை, அல்லது செல்வம், அல்லது உற்றார் உறவினர் மற்றும் பிள்ளைகளுக்காகத் தங்கள் நெஞ்சங்களில் எழும் அன்பு ஆகியவற்றுக்காகப் பெண்கள் தங்கள் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பதில்லை.(18) மதிப்பிற்குரிய குடும்பங்களின் மத்தியில் வாழும் பெண்களும் {குலப் பெண்களும் கூட}, இளமையானவர்களும், ரத்தினங்கள் மற்றும் நகைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களும், விடுதலையுடன் கூடிய வாழ்வை நோற்பவர்களுமான தங்கள் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் {வேசிகளின்} நிலையைக் கண்டு பொறாமை கொள்கின்றனர்.(19) கணவர்களால் காதலிக்கப்படுபவர்களும், பெரும் மதிப்புடன் நடத்தப்படுபவர்களுமான பெண்களும் கூட, கூனர்கள், குருடர்கள், மூடர்கள், அல்லது குள்ளர்களுக்கும் தங்கள் உதவிகளை அளிப்பது {அவர்களோடு சேர்வதும்} காணப்படுகிறது.(20)

நகரும் சக்தியை இழந்த மனிதர்கள் {முடவர்கள்}, அல்லது அழகற்ற இழிமனிதர்களின் துணையையும் பெண்கள் விரும்புவது காணப்படுகிறது. ஓ! பெரும் முனிவரே, பெண்கள், தங்களுக்குத் துணையாகக் கொள்ளத் தகாதவன் எனக் கருதப்படுபவன் இவ்வுலகில் எவனுமில்லை.(21) எனினும், பெண்கள் தங்கள் கணவனுக்காகக் காத்திராமல் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக, தங்களுக்குள்ளேயே ஒருவரோடொருவர் தவறாகக் கலக்க முற்படுவார்கள்[3].(22) எதிர் பாலினத்தவனை அடைய இயலாமை, அல்லது உறவினர்களிடம் கொண்ட அச்சம், அல்லது மரணம் மற்றும் சிறைவாசம் குறித்த அச்சம் ஆகியவற்றின் மூலமே பெண்கள் தங்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள் நிலைத்திருக்கிறார்கள்.(23) எப்போதும் புதிய துணைகளிடம் மிகுந்த விருப்பம் கொண்டவர்களான அவர்கள் {துருதுருவென} மிகவும் அமைதியற்றவர்களாக இருக்கிறார்கள். புரிந்து கொள்ள முடியாத தங்கள் இயல்பின் விளைவால் அவர்களை அன்பாக நடத்துவதன் மூலம் கீழ்ப்படியச் செய்ய முடியாது. மீறும் எண்ணம் கொண்டிருக்கும்போது கட்டுபடுத்த முடியாதவர்களாகவே அவர்களது இயல்பு இருக்கிறது. உண்மையில் பெண்கள், ஞானிகளால் சொல்லப்படும் சொற்களைப் போன்றவர்களாவர்[4].(24) விறகால் நெருப்பு ஒருபோதும் தணிவடைவதில்லை. ஆறுகளின் நீரால் பெருங்கடல் ஒருபோதும் நிறைவை அடைவதில்லை. உயிரினங்கள் அனைத்தையும் கொல்வதால் யமன் தணிவடைவதில்லை. அதே போலவே, பெண்களும் ஆண்களால் ஒருபோதும் தணிவடைவதில்லை.(25)ஓ! தெய்வீக முனிவரே, இது பெண்களுடன் தொடர்புடைய மற்றொரு புதிராகும். அவர்கள், அழகானவனாகவும், அழகிய பண்புகளைக் கொண்டவனாகவும் ஒரு மனிதனைக் கண்டால், அவர்களின் மேனியில் நிறைவில்லா ஆசையின் குறியீடுகள் தோன்றுகின்றன[5].(26) தங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவர்களும், தங்களுக்கு ஏற்புடையவற்றை எப்போதும் செய்பவர்களும், ஆபத்து மற்றும் தேவைகளின் போது அவர்களைப் பாதுகாப்பவர்களுமாக இருக்கும் கணவர்களுக்குக் கூட அவர்கள் போதுமான மதிப்பை ஒருபோதும் காட்டுவதில்லை.(27) பெண்கள் எதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் {ஆண்களின்} துணையைப் போல விருப்பத்திற்குரிய பொருட்களின் நிறைவையோ, ஆபரணங்களையோ, இனிய வகை உடைமைகளையோ கூட ஒருபோதும் உயர்வாகக் கருதுவதில்லை[6].(28) யமன், காற்று தேவன் {வாயு}, காலன், பாதாள லோகம், பெருங்கடலில் திரியும் இடையறாத நெருப்புத் தழல்களைக் கக்கும் குதிரை வாய் {வடவாமுகம்}, கூரிய கத்தி, கடும் நஞ்சு, பாம்பு, நெருப்பு போன்ற இவை அனைத்தும் பெண்ணோடு கலந்திருக்கும் நிலையில் அவளோடு இருக்கின்றன.(29) ஐம்பெரும்பூதங்கள் எங்கிருந்து இருப்பில் உதித்தனவோ, படைப்பாளனான பிரம்மன் எங்கிருந்து அண்டத்தை விதித்தானோ, மனிதர்கள் எங்களிருந்து உதித்தனரோ அதே நித்திய பிரம்மத்தில் இருந்துதான் பெண்களும் இருப்பில் உதித்தனர். ஓ நாரதரே, பெண்கள் படைக்கப்பட்டபோதே, நான் பட்டியலிட்ட இந்தக் குற்றங்களும் அவர்களுக்குள் விதைக்கப்பட்டன” என்றாள் {பஞ்சசூடை}.(30)

பெண்களின் நடத்தை! – அநுசாஸனபர்வம் பகுதி – 39- பெண்கள் கட்டுப்படுத்தப்பட முடியாதவர்களாக இருப்பதைக் குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா, இவ்வுலகில் உள்ள மனிதர் அனைவரும், தெய்வீக இருப்பால் படைக்கப்பட்ட மாயையில் மூழ்கி பெண்களிடம் தங்களை இணைத்துக் கொள்வது {பெண்களிடம் பற்று கொள்வது} காணப்படுகிறது.(1) அதே போலவே பெண்களும், ஆண்களிடம் தங்களை இணைத்துக் கொள்வதும் காணப்படுகிறது. இவையனைத்தும் உலகமெங்கும் காணப்படுகின்றன. இக்காரியத்தில் என் மனத்தில் ஓர் ஐயம் இருக்கிறது.(2) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, (பெண்கள் இவ்வளவு குற்றங்களால் களங்கப்பட்டிருக்கும்போது) ஆண்கள் ஏன் தங்களைப் பெண்களுடன் இணைத்துக் கொள்கிறார்கள்? மேலும், பெண்களால் மிகவும் விரும்பப்படும் ஆடவர் யாவர்? அவர்கள் விரும்பாதவர்கள் யாவர்?(3) ஓ! மனிதர்களின் தலைவரே, மனிதர்கள் பெண்களைப் பாதுகாப்பது எவ்வாறு என்பதை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்[1].(4)மனிதர்கள் பெண்களிடம் மகிழ்ந்து, அவர்களுடன் விளையாடும்போது, பெண்கள் அவர்களை வஞ்சிப்பதாகத் தெரிகிறது. மேலும், ஒரு மனிதன் ஒருமுறை அவர்களது கைகளில் வீழ்ந்துவிட்டால், பிறகு அவன் அவர்களிடம் இருந்து தப்புவது அரிதாகிவிடுகிறது. புதிய புல்வெளிகளை எப்போதும் பீடிக்கும் பசுக்களைப் போலப் பெண்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாகப் புதிய மனிதர்களைப் பீடிக்கின்றனர்.(5) அசுரன் சம்பரன் கொண்டிருந்த மாயை, அசுரன் நமுசி கொண்டிருந்த மாயை, பலி அல்லது கும்பிநசி {லவணன்} கொண்டிருந்த மாயை ஆகியவற்றின் மொத்த தொகையையும் பெண்கள் கொண்டிருக்கின்றனர் {அந்த அசுரர்கள் அறிந்த மாயைகள் அனைத்தையும் பெண்களும் அறிவர்}.(6) ஆண் சிரித்தால், பெண்களும் சிரிப்பர். ஆண் அழுதால், அவர்களும் அழுவர். வாய்ப்பும், தேவையும் அமைத்தால் அவர்கள் தங்களுக்கு ஏற்பில்லாத {தங்களுக்குப் பிடிக்காத} மனிதனையும், ஏற்புடைய {இனிய} சொற்களால் வரவேற்பர்.(7) அசுரர்களின் ஆசான் {சுக்ராச்சாரியர்} அறிந்த அறிவியல் கோட்பாடுகளையும், தேவர்களின் ஆசானான பிருஹஸ்பதி அறிந்த அறிவியல் கோட்பாடுகளையும், இயற்கையாகவே ஒரு பெண் கொண்டுள்ள நுண்ணறிவின் அளவுக்கு ஆழமானவையாகவோ, மிக நுட்பமானவையாகவோ கருத முடியாது. எனவே, உண்மையில், ஆண்களால் எவ்வாறு பெண்களைக் கட்டுப்படுத்த முடியும்?(8)

அவர்கள் பொய்யை உண்மையாகவும், உண்மையைப் பொய்யாகவும் தோன்றச் செய்வர். ஓ! வீரரே, நான் கேட்கிறேன், இதைச் செய்ய இயன்றவர்களை எதிர் பாலினத்தாரால் {ஆண்களால்} எவ்வாறு ஆள முடியும்?(9) ஓ! பகைவரை அழிப்பவரே, பெண்களின் புத்தியை அவதானித்தே {அவர்களின் புத்தியில் இருந்து தேடியெடுத்துத்தான்}, பிருஹஸ்பதியும், பெரும் சிந்தனையாளர்களும் அறிவியல் கோட்பாடுகளை {சாத்திரங்களைப்} படைத்திருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது.(10) ஆண்களால் மதிப்புடன் நடத்தப்பட்டாலும், அசட்டையுடன் நடத்தப்பட்டாலும் பெண்கள் ஆண்களின் கவனத்தை ஈர்த்து அவர்களின் இதயங்களைக் கலங்கடிக்கின்றனர்[2].(11)ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, வாழும் உயிரினங்கள் அறம்சார்ந்தவையாக இருக்கின்றன. இதுவே நம்மால் கேள்விப்படப்படுகிறது. (பிறகு, இஃது எவ்வாறு உண்மைகளுக்கு இணக்கமாக இருக்க முடியும்?) அன்பு, மதிப்பு ஆகியவற்றுடன் நடத்தப்படும் பெண்கள் (உயிரினங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்ளவர்களான இவர்கள்) ஆண்களிடம் தாங்கள் கொண்டுள்ள நடத்தைக்காக நிந்திக்கத்தகுந்தவர்களாக இருப்பதே காணப்படுகிறது.(12) அவர்களுடைய நடத்தை இவ்வாறு இருக்கும்போது, அவர்களை எந்த மனிதனால் அறக்கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்பது என் மனத்தில் பெரும் ஐயமாக நிறைகிறது.(13) ஓ! குருக்களின் தலைவரே, சாத்திரங்களால் பரிந்துரைக்கப்படும் கட்டுப்பாடுகளுக்குள் உண்மையில் பெண்களைக் கட்டுப்படுத்திவைக்க முடியுமா? அல்லது நாம் வாழும் காலத்திற்கு முன்பு, அவர்களைக் கட்டுப்படுத்துவதில் எவராவது உண்மையில் வென்றிருக்கிறார்களா?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(14)

விபுலர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 40-விபுலர் மற்றும் தேவசர்மர் ஆகியோருடைய கதையைச் சொன்ன பீஷ்மர்; தேவசர்மர் வேள்வி செய்ய வெளிய செல்ல எண்ணியது; தமது மனைவியை இந்திரனிடம் இருந்து காக்கும்படி தமது சீடரான விபுலரிடம் சொல்லிச் சென்றது; விபுலர் தம் ஆசானின் மனைவியுடைய உடலுக்குள் புகுந்தது..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. ஓ! குரு குலத்தோனே, ஓ! ஏகாதிபதி, பெண்கள் குறித்து நீர் சொல்வது அனைத்திலும் பொய்யென்றேதும் இல்லை.(1) இது தொடர்பாகப் பழங்காலத்தில் உயர் ஆன்ம விபுலர், பெண்களுக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்குள் அவர்களைக் கட்டுப்படுத்துவதில் எவ்வாறு வென்றார் என்ற பழைய வரலாற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) ஓ! மன்னா, மேலும் பெரும்பாட்டனான பிரம்மனால் பெண்கள் எவ்வாறு படைக்கப்பட்டனர்? அவர்கள் எந்த நோக்கத்திற்காக அவனால் படைக்கப்பட்டனர்? என்பதையும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(3) ஓ! மகனே, பெண்களைவிட அதிகப் பாவம் நிறைந்த வேறு எந்த உயிரினமும் கிடையாது. பெண் என்பவள் சுடர்மிக்க நெருப்பாவாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தைத்தியன் மயனால் உண்டாக்கப்பட்ட மாயை அவள். கத்தியின் கூர்முனை அவள். நஞ்சவள். பாம்பவள். நெருப்பவள். உண்மையில் இவை அனைத்துமே கலந்திருப்பவள் அவள்.(4)

மனித குலத்தில் தோன்றிய அனைவரும் அறத்தன்மை கொண்டவர்களாக இருந்ததால் இயல்பான முன்னேற்றத்தின் போக்கில் அவர்கள் அனைவரும் தேவ நிலையை அடைந்து வந்தனர் என்று நாம் கேள்விப்படுகிறோம். இந்தச் சூழ்நிலை தேவர்களை அச்சுறுத்தியது.(5) எனவே, ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி பெரும்பாட்டனிடம் சென்றனர். தங்கள் மனத்தில் இருந்ததை அவனிடம் {பிரம்மனிடம்} சொல்லிவிட்டு, கண்களைக் கீழே செலுத்தியவாறு அவர்கள் அமைதியாக அவனது முன்னிலையில் {தலைகுனிந்து} நின்று கொண்டிருந்தனர்.(6) பலமிக்கப் பெரும்பாட்டன், தேவர்களின் இதயங்களில் என்ன இருக்கிறது என்பதை உறுதிசெய்து கொண்டு, ஓர் அதர்வணச் சடங்கின் உதவியுடன் பெண்களைப் படைத்தான்.(7) ஓ! குந்தியின் மகனே, முந்தைய படைப்பில் பெண்கள் அனைவரும் அறம்சார்ந்தவர்களாக இருந்தனர். எனினும், மாயையின் துணையுடன் பிரம்மனால் இப்போது படைக்கப்பட்டவர்கள் பாவம் நிறைந்தவர்களாக இருந்தனர். பெரும்பாட்டன் {பிரம்மன்} உடல்சார்ந்த அனைத்து வகை இன்பங்களையும் அனுபவிக்கும் ஆசை அவர்களுக்கு அளித்தான்.(8)

அனுபவிக்கும் ஆசையில் மயங்கிய அவர்கள் வேறு பாலினத்தவரைத் தேடத் தொடங்கினர். பலமிக்கவனான தேவர்களின் தலைவன் காமத்தின் துணையாகக் கோபத்தைப் படைத்தான்.(9) காமம் மற்றும் கோபத்தின் சக்திக்கு வசப்பட்ட ஆடவர்கள் பெண்களின் துணையை நாடினார்கள். பெண்களுக்கெனப் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட செயல்கள் என்று ஏதும் கிடையாது. இதுவே விதிக்கப்பட்ட விதியாகும்.(10) மிக வலிமையான புலன்களைக் கொண்டவர்கள் பெண்கள், பின்பற்ற வேண்டிய சாத்திரமேதுமில்லை, அவர்கள் வாழும் பொய்கள் {பொய் சொல்பவர்கள்} என்று ஸ்ருதி அறிவிக்கிறது. படுக்கைகள், இருக்கைகள், ஆபரணங்கள், உணவு, பானம், மதிக்கத்தக்க, அறம்சார்ந்த அனைத்தும் இல்லாத நிலை,(11) ஏற்பில்லாத {இனிமையற்ற} சொல் பயன்பாடு, பாலியல் துணையில் விருப்பம் ஆகியவை பிரம்மனால் பெண்களுக்கு அளிக்கப்பட்டன. ஆண்கள் கிட்டத்தட்ட அவர்களைக் கட்டுப்பாடுகளுக்குள் கட்டுப்படுத்த இயலாதவர்களாக இருக்கிறார்கள்.(12)

முறையான வரையறைகளுக்குள் அவர்களைப் படைப்பாளனாலேயே {பிரம்மனாலேயே} கட்டுப்படுத்த இயலாது எனும்போது, ஆண்களைக் குறித்து என்ன சொல்வது?(13) ஓ! மனிதர்களின் தலைவா, பழங்காலத்தில் விபுலர் தமது ஆசானின் மனைவியைக் காப்பதில் எவ்வாறு வென்றார் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(14) பழங்காலத்தில் உயர்ந்த அருளைக் கொண்டவரும், பெரும் புகழைக் கொண்டவருமாகத் தேவசர்மன் என்ற பெயரில் ஒரு முனிவர் இருந்தார். அவர், பூமியில் ஒப்பற்ற அழகுடன் கூடியவளும், ருசி என்ற பெயருடன் கூடியவளுமாக ஒரு மனைவியைக் கொண்டிருந்தார்.(15) தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் தானவர்களில் காண்போர் ஒவ்வொருவரையும் அவளுடைய அழகானது மயக்கியது. ஓ! ஏகாதிபதி, பகனைத் தண்டித்தவனும், விருத்திரனைக் கொன்றவனுமான இந்திரன், அவள் மீது குறிப்பிட்ட மயக்கத்துடனும், அவளது மேனியில் ஆசை கொண்டவனுமாக இருந்தான்.(16)

பெரும் தவசியான தேவசர்மன் பெண்களின் மனோநிலையை {இயல்பை} முழுமையாக அறிந்தவராக இருந்தார். எனவே, அவர் தமது சக்தி மற்றும் ஆற்றலில் சிறந்ததைப் பயன்படுத்தி, (அனைத்து வகைத் தீய ஆதிக்கத்தில் இருந்தும்) அவளைப் பாதுகாத்து வந்தார்.(17) அடுத்தவர் மனைவிகளின் துணையை நாடும் காரியத்தில் இந்திரன் எந்தத் தயக்கமும் கொண்டவன் அல்ல என்பதை அம்முனிவர் அறிந்திருந்தார். இந்தக் காரணத்திற்காகவே அவர் தன் சக்தி அனைத்தையும் செலவிட்டு தன் மனைவியைப் பாதுகாத்து வந்தார்.(18) ஓ! மகனே, ஒரு காலத்தில், அந்த முனிவர் ஒரு வேள்வியைச் செய்யும் விருப்பத்தை அடைந்தார். (அவர் வீட்டில் இல்லாத போது) தமது மனைவியை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அவர் சிந்திக்கத் தொடங்கினார்.(19) உயர்ந்த தவத்தகுதியைக் கொண்டிருந்த அவர் இறுதியில் தாம் பின்பற்றவேண்டிய வழிமுறையைக் கண்டடைந்தார். பிருகு குலத்தைச் சேர்ந்தவரும், விபுலர் என்ற பெயரைக் கொண்டவரும், தமக்குப் பிடித்தவருமான சீடரை அழைத்துப் பின்வருவனவற்றைச் சொன்னார்.(20)

தேவசர்மன், “ஒரு வேள்வியைச் செய்வதற்காக நான் (சிறிது காலம்) வீட்டை விட்டுச் செல்லப் போகிறேன். தேவர்களின் தலைவன் {இந்திரன்} எப்போதும் என் ருசியின் மீது பேராசை கொண்டிருக்கிறான். எனவே, நான் இல்லாதபோது, நீ உன் வலிமை அனைத்தையும் பயன்படுத்தி அவளைப் பாதுகாப்பாயாக.(21) புரந்தரனை {இந்திரனைக்} கருத்தில் கொண்டு நீ விழிப்புடன் உன் நேரத்தைக் கடத்துவாயாக. ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே, அந்த இந்திரன் பல்வேறு வேடங்களைத் தரிப்பவனாவான்” என்றார்”.(22)

பீஷ்மர் தொடர்ந்தார், “புலன்களைக் கட்டுப்படுத்தியவரும், கடுந்தவங்களில் ஈடுபடுபவரும், நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியைக் கொண்டவரும், அறக்கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், பேச்சில் வாய்மை நிறைந்தவரும், தவசியுமான விபுலர், தமது ஆசானால் இவ்வாறு சொல்லப்பட்டதும் “அப்படியே ஆகட்டும்” என்றார். எனினும், தமது ஆசான் புறப்படும் நேரத்தில், விபுலர் மீண்டும் இந்த வார்த்தைகளில் அவரிடம் பேசினார்.(23,24)

விபுலர், “ஓ! முனிவரே, சக்ரன் தோன்றும்போது என்னென்ன வடிவங்களை ஏற்பான் என்பதை எனக்குச் சொல்வீராக. அவனது உடல் எவ்வகையானது? அவனது சக்தி எப்படிப்பட்டது? இவையனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றார்”.(25)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பாரதா, அப்போது அந்தச் சிறப்புமிக்க முனிவர், சக்ரனின் மாயைகளை அனைத்தையும் குறித்து உயர் ஆன்ம விபுலரிடம் உண்மையில் விரிவாக எடுத்துச் சொன்னார்.(26)

தேவசர்மன், “ஓ! மறுபிறப்பாள முனிவனே, பாகனைத் தண்டித்த அந்தப் பலமிக்கவன் மாயை நிறைந்தவனாவான். தான் விரும்பும் வடிவங்களையே அவன் ஒவ்வொரு கணமும் ஏற்கிறான்.(27) சில வேளைகளில் அவன் ஒரு கிரீடத்தை அணிந்து கொண்டு, வஜ்ரதாரியாக இருக்கிறான். சில வேளைகளில் கையில் வஜ்ரத்துடன், தலையில் மகுடம் அணிந்து கொண்டு, காது குண்டலங்களால் அவன் தனைன அலங்கரித்துக் கொள்கிறான். ஒரே கணத்தில் அவன் அந்த வடிவத்தில் இருந்து ஒரு சண்டாளனின் வடிவத்தை ஏற்பான்.(28) சில வேளைகளில் அவன் தலையில் மணிமுடி தரித்தவனாகத் தோன்றுவான்; ஓ! மகனே, மிக விரைவில் அவன் சடாமுடி தரித்துக் கொண்டு, மேனியில் மரவுரி தரித்தவனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வான். சில வேளைகளில் அவன் நல்ல பெரிய உடல்வடிவத்தை ஏற்கிறான். அடுத்தக் கணமே அவன் மெலிந்த உடலைக் கொண்டவனாகவும், மரவுரி உடுத்தியவனாகவும் மாறுகிறான்.(29) சில வேளைகளில் அவன் வெள்ளையாகவும், சில வேளைகளில் பச்சையாகவும், சில வேளைகளில் கருப்பு நிறம் கொண்டவனாகவும் அவன் மாறுகிறான். சில வேளைகளில் அழகற்றவனுமாகவும், சில வேளைகளில் பேரழகு கொண்டவனாகவும் அவன் மாறுகிறான். சில வேளைகளில் இளைஞனாகவும், சில வேளைகளில் முதிர்ந்தவனாகவும் அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.(30)

சில வேளைகளில் ஒரு பிராமணனாகவும், சில வேளைகளில் க்ஷத்திரியனாகவும், சில வேளைகளில் வைசியனாகவும், சில வேளைகளில் ஒரு சூத்திரனாகவும் அவன் தோன்றுகிறான். உண்மையில் அந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, மேன்மையான தந்தை, தாழ்ந்த வகைத் தாய், அல்லது தாழ்ந்தவகைத் தந்தை, மேலான வகைத் தாயின் மூலம் தூய்மையற்ற வகையில் தோன்றிய பிறவியாகிறான்.(31) சில வேளைகளில் கிளியாகவும், சில வேளைகளில் காக்கையாகவும், சில வேளைகளில் அன்னப்பறவையாகவும், சில வேளைகளில் கோகிலமாகவும் {குயிலாகவும்} அவன் தோன்றுகிறான். சிங்கம், புலி அல்லது யானையின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(32) சில வேளைகளில் தேவனாகவும், சில வேளைகளில் தைத்தியனாகவும், சில வேளைகளில் மன்னனின் வேடத்தையும் அவன் ஏற்கிறான். சில வேளைகளில் பருமனாகவும், குண்டாகவும், சில வேளைகளில் வாயுக் கோளாறால் முடங்கிய அங்கங்களைக் கொண்டவனாகவும், சில வேளைகளில் பறவையாகவும், சில வேளைகளில் கோரமான பண்புகளைக் கொண்ட ஒருவனாகவும் அவன் தோன்றுகிறான்.(33) சில வேளைகளில் அவன் நான்கு கால் உயிரினமாகவும் தோன்றுகிறான். எவ்வடிவத்தையும் ஏற்கவல்ல அவன், சில வேளைகளில் புத்தியிழந்த மூடனாகவும் தோன்றுகிறான். கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் வடிவங்களையும் அவன் ஏற்கிறான்.(34)

ஓ! விபுலா, அவன் எண்ணற்ற வேடங்களை ஏற்கவல்லவனாக இருப்பதன் விளைவால் யாராலும் அவனை அடையாளங்காண முடியாது. இந்த அண்டத்தைப் படைத்தவனாலேயே கூட அவற்றைச் செய்ய முடியாது.(35) அவன் வேண்டிய போதும் புலப்படாதவனாகி தன்னை மறைத்துக் கொள்கிறான். அறிவுக்கண்ணைத் தவிர வேறு எதனாலும் பார்க்க முடியாதவனாகிறான். தேவர்களின் தலைவன் {இந்திரன்} சில வேளைகளில் காற்றாகவும் மாறுகிறான்.(36) பாகனைத் தண்டித்தவன் இந்த வேடங்களை எப்போதும் ஏற்பான். எனவே, ஓ! விபுலா, மெலிந்த இடை கொண்டவளான என் மனைவியைப் பெருங்கவனத்துடன் பாதுகாப்பாயாக.(37) ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே, வேள்விக்காக வைக்கப்பட்டிருக்கும் ஹவிஸை நக்கும் ஓர் இழிந்த நாயைப் போல அந்தத் தேவர்களின் தலைவன் என் மனைவியைக் கெடுத்துவிடாமல் அனைத்து வகையிலும் கவனம் செலுத்துவாயாக” என்றார் {தேவசர்மன்}.(38)

உயர்ந்த அருளைக் கொண்ட முனிவரான தேவசர்மன், ஓ! பாரதர்களின் தலைவா, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, ஒரு வேள்வியைச் செய்ய எண்ணி தன் வசிப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.(39) தன் ஆசானின் இவ்வார்த்தைகளைக் கேட்ட விபுலர் தமது மனத்திற்குள், “நான் அந்தப் பலமிக்கத் தேவர்களின் தலைவனிடமிருந்து இந்தப் பெண்மணியை அனைத்து வகையிலும் நிச்சயம் காப்பேன்.(40) ஆனால் அதற்கான வழிமுறைகள் என்ன? என் ஆசானின் மனைவியைக் காக்குங்காரியத்தில் என்னால் என்ன செய்ய முடியும்? தேவர்களின் தலைவன் பெரும் மாயசக்திகளைக் கொண்டவனாவான். பெருஞ்சக்தியைக் கொண்ட அவனைத் தடுப்பது மிகக் கடினமாகும்.(41) இந்திரனால் எண்ணற்ற வடிவங்களை ஏற்க முடியும் என்பதால் நமது ஆசிரமத்தை அடைப்பதாலோ, முற்றத்தில் வேலியடைப்பதாலோ, அவனை வெளியே நிறுத்த முடியாது.(42)

காற்றின் வடிவத்தை ஏற்றுத் தேவர்களின் தலைவனால் எனதாசானின் மனைவியை வலிய அபகரிக்க முடியும். எனவே, (யோக சக்தியின் மூலம்) இந்தப் பெண்மணிக்குள் நுழைந்து, நான் அங்கேயே இருப்பதுதான் சிறந்த வழிமுறையாக இருக்கும்.(43) என் ஆற்றலை வெளிப்படுத்துவதன் மூலம் என்னால் அந்தப் பெண்ணைப் பாதுகாக்க முடியாது, ஏனெனில், பாகனைத் தண்டித்த பலமிக்கவன், தான் விரும்பிய வடிவத்தை ஏற்கவல்லவன் என்பதை நான் கேட்டிருக்கிறேன்.(44) எனவே, என் யோக சக்தியின் மூலம் நான் இவளை இந்திரனிடம் இருந்து காக்கப்போகிறேன். என் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நான் இந்தப் பெண்மணியின் உடலுக்குள் நுழையப் போகிறேன்.(46) என் ஆசான் திரும்பிவரும்போதும் அவரது மனைவி கெட்டுப்போனதைக் கண்டால், கோபத்தால் அவர் நிச்சயம் என்னைச் சபிப்பார். பெரும் தவசியான அவர் ஆன்மப் பார்வையையும் கொண்டவராவார்.(46)

தேவர்களின் தலைவன் பெரும் மாயா சக்திகளுடன் கூடியவனாக இருப்பதால், வேறு பெண்களை மனிதர்கள் காப்பதைப் போல இந்தப் பெண்ணைக் காக்க முடியாது. ஐயோ, நான் இருக்கும் சூழ்நிலை நெருக்கடிமிக்கதாய் இருக்கிறதே.(47) என் ஆசானின் ஆணைக்கு நான் கீழ்ப்படி வேண்டும். எனவே, நான் என் யோக சக்தியின் மூலம் அவளைப் பாதுகாத்தால் அக்காரியம் அற்புதமான ஒன்றாய் அனைவராலும் கருதப்படும்.(48) என் யோக சக்தியின் மூலம் நான் என் ஆசானுடைய மனைவியின் உடலுக்குள் புகப் போகிறேன். தாமரையில் உள்ள நீர்த்துளி இலையை நனைக்காதிருப்பதைப் போல, நான் அவளுக்குள் இருந்தாலும், அவளது மேனியைத் தீண்டாமல் இருப்பேன்.(49) ஆசையின் கறையில் இருந்து விடுபட்டவனாக நான் இருந்தால், நான் செய்யும் காரியத்தால் எந்தக் களங்கமும் உண்டாகாது. ஒரு பயணி, தன் பயணத்தின் ஊடாக (சற்று நேரம்) வெற்று மாளிகையில் வசிப்பதைப் போலவே,(50) நானும் என் ஆசானுடைய மனைவியின் உடலில் இன்று வசிக்கப்போகிறேன். உண்மையில், யோகத்தில் குவிந்த மனத்துடன் நான் இன்று இந்தப் பெண்ணின் உடலில் வசிக்கப் போகிறேன்” என்று நினைக்கத் தொடங்கினார் {விபுலர்}.(51)

இந்த அறக் காரியங்களைச் சிறப்பாகக் கருத்தில் கொண்டு, தமது ஆசானும் தாமும் பேரளவில் கொண்டுள்ள தவத்தில் பார்வையைச் செலுத்தி, வேதங்கள் அனைத்தையும் சிந்தித்து,(52) (தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக) யோக சக்தியின் மூலம் பெண்ணின் மேனிக்குள் நுழைந்து அவளைப் பாதுகாப்பது குறித்து மனத்தில் ஒரு தீர்மனத்தை அடைவதில் அந்தப் பிருகு குல விபுலர் பெருங்கவனம் கொண்டார். ஓ! ஏகாதிபதி, அவர் என்ன செய்தார் என்று இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(53) பெருந்தவங்களைக் கொண்ட விபுலர், குற்றமற்ற பண்புகளுடன் குடிசையில் அமர்ந்திருந்த தமது ஆசானுடைய மனைவியின் அருகில் அமர்ந்தார். பிறகு, அறம் மற்றும் வாய்மையில் அவளை நிலை நிறுத்துவதற்காக விபுலர் அவளிடம் பேசத் தொடங்கினார்.(54) விபுலர், தமது கண்களை {பார்வையை} அவளுடைய கண்களில் செலுத்தி, அவளது பார்வைப் புலனில் இருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர்களுடன், தம் பார்வையின் ஒளிக்கதிர்களைக் கலந்து, காற்று எனும் பூதம், வெளி, அல்லது ஆகாயம் என்ற பூதத்துக்குள் நுழைவதைப் போலவே அந்தப் பெண்ணின் உடலுக்குள் (நுட்பமான வடிவில்) நுழைந்தார்.(55) விபுலர், தம் கண்களால் அவளுடைய கண்களையும், தம் முகத்தால் அவளுடைய முகத்தையும் ஊடுருவி, அவளுக்குள் புலப்படாமல் அவளது நிழலைப் போலவே அசைவற்றிருந்தார்.(56) இந்திரனிடம் இருந்து அவளைப் பாதுகாக்கும் நோக்கில் விபுலர் அவளது உடலின் ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்தியபடியே அவளுக்குள் தொடர்ந்து வசித்தார். அந்தப் பெண் இது குறித்து அறியாமல் இருந்தாள்.(57) ஓ! ஏகாதிபதி, இவ்வகையில் விபுலர், தமது உயர் ஆன்ம ஆசான் வேள்வி செய்துவிட்டுத் திரும்பி வரும் வரை அந்தப் பெண்ணை இவ்வாறே காப்பதில் தொடர்ந்தார்” என்றார் {பீஷ்மர்}.(58)

நாணி மறைந்த இந்திரன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 41-விபுலர் ருசி தேவியின் உடலுக்குள் இருந்த போது ஆசிரமத்திற்கு வந்த இந்திரன்; ருசியின் உடலுக்குள் இருந்து அவளது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திய விபுலர்; இவற்றை ஞானக்கண்ணால் கண்ட இந்திரன்; விபுலரின் எச்சரிக்கை; இந்திரன் நாணி மறைந்தது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு நாள் தேவர்களின் தலைவன் {இந்திரன்}, தெய்வீக அழகுடன் கூடிய ஒரு வடிவத்தை ஏற்று, தான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் இறுதியாக வாய்த்ததென எண்ணி அந்த முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தான்.(1) ஓ! மன்னா, உண்மையில் அந்த இந்திரன் ஒப்பற்ற அழகுடன் கூடியதும், பெண்களைப் பெரிதும் மயக்கக்கூடியதும், மிக இனிமையானதுமான ஒரு வடிவத்தை ஏற்று, அந்தத் தவசியின் {தவசி தேவசர்மனின்} ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.(2) அமர்ந்திருக்கும் நிலையில் இருப்பதும், மரத்தைப் போல அசையாமல் இருப்பதும், பார்வையற்ற விழிகளைக் கொண்டதும், துணியில் வரையப்பட்ட படத்தைப் போன்ற விபுலரின் உடலைக் கண்டான்.(3) மேலும் அவன், மிக அழகிய கடைக்கண்கள், சிறுத்த இடை, மற்றும் பருத்த முலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ருசி அங்கே அமர்ந்திருப்பதையும் கண்டான். அவளது கண்கள் தாமரை இதழ்களைப் போல நீளமாகவும், பெரியதாகவும் இருந்தன, அவளது முகம் முழு மதியைப் போல அழகாகவும், இனிமையாகவும் இருந்தது.(4)

அந்த வேடத்தில் வந்திருக்கும் இந்திரனைக் கண்ட அந்தப் பெண்மணி (ருசி), எழுந்து அவனை வரவேற்க விரும்பினாள். அவனது ஒப்பற்ற அழகால் ஆச்சரியத்தால் தூண்டப்பட்ட அவள், அவன் யார் என்பதைக் கேட்க விரும்பினாள்.(5) ஓ! மன்னா, அவள் எழும்பி அவனை வரவேற்க விரும்பினாலும், அவளுக்குள் வசித்து வந்த விபுலரால் அவளது அங்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டதால், அவளால் தான் விரும்பியதைச் செய்ய முடியவில்லை. உண்மையில் தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அவளால் நகர முடியவில்லை.(6) அப்போது தேவர்களின் தலைவன் {இந்திரன்} அவளிடம் இனிய குரலில் ஏற்புடைய வார்த்தைகளைப் பேசினான்.(7) உண்மையில் அவன், “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, நான் இந்திரன், உனக்காக இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக. ஓ! இனிய பெண்ணே, உன் நினைவின் மூலம் காம தேவனால் நான் பீடிக்கப்பட்டுள்ளேன் என்பதை அறிவாயாக. ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, நான் உன்னிடம் வந்திருக்கிறேன். காலம் கடந்து செல்கிறது” என்றான்.(8)

இந்திரனால் பேசப்பட்ட இவ்வார்த்தைகள் தவசி விபுலரால் கேட்கப்பட்டது. தமது ஆசான் மனைவியின் உடலுக்குள் இருந்த அவர், நேரும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.(9) களங்கமில்லா அழகுடைய அப்பெண் (ருசி), இந்திரன் சொன்னதைக் கேட்டாலும், தேவர்கள் தலைவனை வரவேற்கவோ, கௌரவிக்கவோ அவளால் எழ முடியவில்லை. விபுலரால் அவளது புலன்கள் கட்டுப்படுத்தப்பட்டதால் மறுமொழியாக அவளால் ஒரு சொல்லையும் சொல்ல இயலவில்லை.(10) வலிமையும், சக்தியும் கொண்ட அந்தப் பிருகு குலக் கொழுந்து {விபுலர்}, தமது ஆசான் மனைவியின் உடல் தரும் குறியீடுகளைக் கொண்டு, அவள் இந்திரனை அன்புடன் வரவேற்க விரும்பாமலில்லை என்று தீர்மானித்து, தமது யோக சக்திகளை மிகத் தீவிரமாகப் பயன்படுத்தி அவளது அங்கங்கள் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தினார்.(11) சச்சியின் தலைவன் {இந்திரன்}, கலக்கத்திற்கான எந்தக் குறியீட்டையும் மேனியில் காட்டாமல் அமர்ந்திருக்கும் அவளைக் கண்டு நாணமடைந்து, தன் கணவரின் சீடனுடைய யோக சக்தியின் மூலம் மயக்கத்தில் இருக்கும் அந்தப் பெண்ணிடம் மீண்டும் பேசினான்.(12)

{இந்திரன்}, “ஓ! இனிய பெண்ணே, வா, வருவாயாக” என்றான். அப்போது அந்தப் பெண் {ருசி} அவனுக்கு {இந்திரனுக்குப்} பதிலளிக்க முயற்சி செய்தாள். எனினும், அவள் சொல்ல எண்ணிய சொற்களை விபுலர் கட்டுப்படுத்தினார்.(13) எனவே, (விபுலரின் ஆதிக்கத்தில் இருந்த) அவளது உதடுகள் உதிர்த்த சொற்கள் உண்மையில் “நீ இங்கு வந்த காரணமென்ன?” என்பதாகும். நிலவு போன்று அழகுடையவளாக இருந்த அவளது வாயில் இருந்து வெளிப்பட்ட இவ்வார்த்தைகள் இலக்கணச் சுத்தமாக இருந்தன[1].(14) வேறொருவரின் ஆளுகைக்குள் இருந்த அவள் இந்த வார்த்தைகளைச் சொன்னாலும், அவற்றைச் சொன்னதற்காக வெட்கப்பட்டாள். அவள் சொன்னதைக் கேட்டதும் புரந்தரன் உற்சாகத்தை இழந்தான்.(15) ஓ! ஏகாதிபதி, அந்த எதிர்பாராத விளைவைக் கண்டவனும், ஆயிரம் கண்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான தேவர்களின் தலைவன் அனைத்தையும் தன் ஆன்மப் பார்வையால் கண்டான்.(16)அவன் அந்தப் பெண்ணின் உடலுக்குள் இருக்கும் தவசியைக் கண்டான். உண்மையில், கண்ணாடியில் பிரதிபிம்பம் இருப்பது போலத் தன் ஆசானுடைய மனைவியின் உடலுக்குள் அந்தத் தவசி இருந்தார்.(17) ஓ! ஏகாதிபதி, பயங்கரத் தவ வலிமை கொண்ட அந்தத் தவசியைக் கண்ட புரந்தரன், முனிவரின் சாபத்திற்கு அஞ்சி நடுக்கமடைந்தான்.(18) அப்போது, உயர்ந்த தவ வலிமையைக் கொண்ட விபுலர், தமது ஆசானுடைய மனைவியின் உடலைவிட்டு, அதன் அருகில் இருந்த தன் உடலுக்குத் திரும்பினார். பிறகு, பீதியடைந்திருந்த இந்திரனிடம் அவர் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(19)

விபுலர் {இந்திரனிடம்}, “ஓ! தீய ஆன்மா கொண்ட புரந்தரா, ஓ! புலனடக்கம் இல்லாத பாவம் நிறைந்த மனத்தைக் கொண்டோனே, தேவர்களோ, மனிதர்களோ உன்னை நெடுங்காலம் வழிபடமாட்டார்கள்.(20) கௌதமர் கொடுத்த சாபத்தின் விளைவால், உன் மேனி ஆயிரம் பாலினக் குறிகளுடன் {பெண்குறிகளுடன்} சிதைவடைந்ததையும், அம்முனிவரின் கருணையால் அவை கண்களாக மாற்றப்பட்டதையும் மறந்து போனாயோ? அஃது உன் நினைவில் இல்லையா?(21) நீ அதீத மூட புத்தி கொண்டவன் என்பதையும், தூய்மையற்ற ஆன்மாவைக் கொண்டவன் என்பதையும், நிலையற்ற மனத்தைக் கொண்டவன் என்பதையும் நான் அறிவேன். ஓ! மூடா, இந்தப் பெண்மணி என்னால் பாதுகாக்கப்படுகிறாள் என்பதை அறிவாயாக. ஓ! இழிந்த பாவியே, எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்வாயாக.(22) ஓ! மூட ஆன்மாவைக் கொண்டவனே, நான் இன்று என் சக்தியால் உன்னைச் சம்பலாக எரிக்கப் போவதில்லை. உண்மையில், நான் உன்னிடம் கருணையால் நிறைந்திருக்கிறேன். ஓ! வாசவா, எனவே நான் உன்னை எரிக்காமலிருக்கிறேன்.(23) பெரும் நுண்ணறிவைக் கொண்ட என் ஆசான் பயங்கர வலிமையைக் கொண்டவராவார். அவர் பாவம் நிறைந்தவனான உன்னைக் கண்டால், கோபத்தால் சுடர்விடும் தமது கண்களைக் கொண்டு இன்றே உன்னை எரித்துவிடுவார்.(24) ஓ! சக்ரா, இது போல மீண்டும் செய்யாதே. பிராமணர்கள் உன்னால் மதிக்கப்பட வேண்டும். பிராமணர்களின் வலிமையால் பீடிக்கப்படுவதன் மூலம் உன் பிள்ளைகள் மற்றும் ஆலோசகர்களுடன் சேர்ந்து அழிவடையாமல் இருப்பாயாக.(25) நீ அழிவற்றவன் என நினைத்து இது போல விரும்பியவாறு செயல்படுகிறாய். பிராமணர்களை ஒருபோதும் அவமதிக்காதே. தவத்தால் அடையப்பட முடியாதது எதுவும் கிடையாது” என்றார் {விபுலர்}”.(26)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம விபுலரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட சக்ரன், எதுவும் சொல்லாமல் வெட்கத்தில் மூழ்கி, தன்னை {புலப்படாதவனாக} மறைத்துக் கொண்டான்.(27) அவன் சென்ற ஒரு கணத்தில் உயர்ந்த தவத்தகுதியைக் கொண்ட தேவசர்மன், தாம் நினைத்த வேள்வி நிறைவேற்றி விட்டுத் தமதாசிரமத்திற்குத் திரும்பினார்(28) ஏற்புடைய செயலைச் செய்திருந்த விபுலர், தமது ஆசான் திரும்பி வந்ததும், இந்திரனின் சதியில் இருந்து தம்மால் பாதுகாக்கப்பட்டவளும், களங்கமற்ற அழகைக் கொண்டவளுமான அவரது {தேவசர்மனின்} மனைவியை ஒப்படைத்தார்.(29) அமைதியான ஆன்மாவைக் கொண்டவரும், தமது ஆசானிடம் பெரும் மதிப்பு கொண்டவருமான விபுலர், அவரை வணங்கி, அச்சமற்ற இதயத்துடன் அவரது முன்னிலையில் நின்றார்.(30)

அவரது ஆசான் சற்றே ஓய்வெடுத்து, தமது மனைவியுடன் சேர்ந்து இருக்கையில் அமர்ந்திருந்த போது, விபுலர் அவரிடம் சக்ரன் செய்தது அனைத்தையும் சொன்னார்.(31) பெரும் ஆற்றலைக் கொண்ட அந்த முதன்மையான முனிவர் {தேவசர்மன்}, விபுலரின் சொற்களைக் கேட்டு, அவரது ஒழுக்கம், இயல்பு, தவம் மற்றும் நோன்புகளில் மிகவும் நிறைவடைந்தார்.(32) விபுலரின் ஆசானும், பலமிக்கவருமான தேவசர்மன், தம்மிடம் அவர் {விபுலர்} கொண்ட நடத்தை மற்றும் அர்ப்பணிப்பைக் கண்டும், அவரது அறவுறுதியைக் கவனித்தும், “நன்று, நன்று” என்று சொன்னார்.(33)

உயர் ஆன்ம தேவசர்மன், அறம்சார்ந்த தமது சீடரை நல்வரவு சொல்லி வரவேற்று, ஒரு வரத்தைக் கொடுத்து அவரைக் கௌரவித்தார்.(34) உண்மையில், அறவுறுதி கொண்ட விபுலர், அறவுறுதியில் இருந்து ஒருபோதும் தவறாத வரத்தைத் தமது ஆசானிடம் இருந்து பெற்றார். பிறகு தமது ஆசானால் விடைகொடுத்து அனுப்பப்பட்டுத் தமது வசிப்பிடத்திற்குச் சென்று மிகக் கடுமையான தவங்களைப் பயின்றார்.(35) கடுந்தவங்களைக் கொண்ட தேவசர்மனும், பலனையும், விருத்திரனையும் கொன்றவனிடம் {இந்திரனிடம்} முற்றிலும் அச்சமற்று, அந்த நாளில் இருந்து தமது மனைவியுடன் அந்தத் தனிமையான காட்டில் வாழ்ந்து வந்தார்” {என்றார் பீஷ்மர்}.(36)

விபுலரின் வரம்புமீறல் ! – அநுசாஸனபர்வம் பகுதி – 42-பதிவின் சுருக்கம்: கடுந்தவங்களைச் செய்த விபுலர்; ருசி தேவிக்குக் கிட்டிய தெய்வீக மலர்கள்; சம்பையில் உள்ள தன் சகோதரியின் வசிப்பிடத்திற்குச் சென்ற ருசி; சகோதரி அம்மலர்களை விரும்பவே ஆசானின் ஆணையின் பேரில் மலர் கொணரச் சென்ற விபுலர்; மலர் கொணர்ந்து திரும்புகையில் விபுலர் கண்ட காட்சிகளும், கேட்ட உறுதிமொழிகளும்..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “விபுலர், தமது ஆசானின் ஆணையை நிறைவேற்றிய பிறகு, மிகக் கடும் தவங்களைச் செய்தார். பெரும் சக்தியைக் கொண்ட அவர் இறுதியாகப் போதுமான தவத்தகுதியைத் தாம் அடைந்துவிட்டதாகக் கருதினார்.(1) தாம் செய்திருக்கும் சாதனையில் செருக்கடைந்த அவர், ஓ! ஏகாதிபதி, தமது சாதனைக்கான பெரும் புகழால் அனைவராலும் மதிக்கப்பட்டு அச்சமில்லாமலும், மனநிறைவுடனும் உலகத்தில் திரிந்து கொண்டிருந்தார்.(2) அந்தப் பலமிக்கப் பார்க்கவர், தமது சாதனையாலும், கடுந்தவங்களாலும் இம்மையையும், மறுமையையும் தாம் வென்றுவிட்டதாகக் கருதினார்.(3)

ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, சில காலம் கடந்ததும், ருசியின் சகோதரி செய்ய வேண்டிய கொடையளிக்கும் விழாவுக்கான {ஆதான விழாவுக்கான} தருணம் வந்தது. அபரிமிதமான செல்வமும், தானியங்களும் அதில் கொடுக்கப்பட வேண்டும்[1].(4) அதே வேளையில், பேரழகுடன் கூடிய ஒரு தெய்வீகக் காரிகை வானத்தினூடே சென்று கொண்டிருந்தாள்.(5) அவள் ஆகாயத்தில் சென்று கொண்டிருந்த போது அவளது உடலில் இருந்து சில மலர்கள் பூமியில் விருந்தன. தெய்வீக நறுமணம் கமழ்ந்த அந்த மலர்கள் ருசியின் கணவருடைய {தேவர்சர்மனுடைய} ஆசிரமத்தின் அருகிலேயே உள்ள இடத்தில் விழுந்தன.(6) தரையில் சிதறிக் கிடந்த அந்த மலர்கள், அழகிய கண்களைக் கொண்ட ருசியால் எடுக்கப்பட்டன. விரைவில் அங்க நாட்டில் இருந்து ருசிக்கு ஓர் அழைப்பு வந்தது {தூதன் வந்தான்}.(7)மேற்குறிப்பிடப்பட்ட ருசியின் சகோதரியுடைய பெயர் பிரபாவதியாகும். அவள் அங்கர்களின் ஆட்சியாளனான சித்திரரதனின் மனைவியாக இருந்தாள்[2].(8) மிக மேன்மையான நிறத்தைக் கொண்டவளான ருசி, அந்த மலர்களைத் தன் கூந்தலில் சூடிக் கொண்டு, தான் அழைக்கப்பட்ட அங்கர்களின் மன்னனுடைய அரண்மனைக்குச் சென்றாள்.(9) அவளது கூந்தலில் இருந்த மலர்களைக் கண்டவளும், அழகிய கண்களைக் கொண்டவளுமான அங்கர்களின் ராணி, தன் சகோதரியிடம் தனக்கும் சிலவற்றைத் தருமாறு கேட்டாள்.(10)

அழகிய முகத்தைக் கொண்ட ருசி, தன் சகோதரியின் கோரிக்கையைத் தன் கணவனிடம் {தேவர்சர்மனிடம்} விரைவாகத் தெரிவித்தாள். முனிவர் தமது மனைவின் சகோதரியுடைய {கொழுந்தியுடைய} வேண்டுதலை ஏற்றுக் கொண்டார்.(11) கடுந்தவங்களைக் கொண்ட தேவசர்மன், தமது சீடரான விபுலரைத் தம் முன் அழைத்து, “செல், செல்வாயாக” என்று சொல்லி அவரிடம் அதே வகையைச் சார்ந்த சில மலர்களைக் கொண்டு வரச் சொன்னார்.(12) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எந்தத் தயக்கமும் இல்லாமல் தமது ஆசானின் ஆணையை ஏற்றுக் கொண்ட அந்தப் பெருந்தவசியான விபுலர், “அப்படியே ஆகட்டும்” என்று பதிலளித்துவிட்டு, ருசி தேவி தனது சகோதரி ஆசைப்பட்ட மலர்களை எங்கிருந்து எடுத்திருந்தாளோ அதே இடத்திற்குச் சென்றார்.(13) ஆகாயத்தில் இருந்து மலர்கள் விழுந்த (ருசியால் எடுக்கப்பட்ட மலர்கள் விழுந்த) இடத்திற்கு வந்த விபுலர், அங்கே இன்னும் சில மலர்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டார். அந்த மலர்கள் அனைத்தும், தாங்கள் வளர்ந்த செடியில் இருந்து புதிதாகப் பறிக்கப்பட்டவை போல இருந்தன. அவற்றில் எதுவும் கொஞ்சம்கூட வாடாமல் இருந்தன.(14)

அவர் பேரழகுடைய அந்தத் தெய்வீக மலர்களை எடுத்துக் கொண்டார். ஓ! பாரதா, தெய்வீக நறுமணத்தைக் கொண்ட அம்மலர்களைத் தமது கடும் தவங்களின் விளைவால் விபுலர் அடைந்தார்.(15) தமது ஆசானின் ஆணைகளை நிறைவேற்றி, அவற்றை அடைந்த அவர் பெரும் மகிழ்ச்சியுடன் சம்பக மலர்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சம்பை {சம்பா} நகரத்திற்கு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்.(16) அவ்வாறு அவர் செல்லும்போது வழியில் இரண்டு மனிதர்கள் தங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு வட்டமாக வலம் வந்து கொண்டிருந்தனர்.(17) அவர்களில் ஒருவன் அடிகளை வேகமாக வைத்து, அந்த இயக்கத்தின் இசைவைக் கெடுத்தான். ஓ மன்னா, இதன் காரணமாக அவர்களுக்குள் ஒரு சச்சரவு நேர்ந்தது.(18)

உண்மையில் அவர்களில் ஒருவன், “நீ வேகமாக அடி எடுத்து வைத்தாய்” என்று அடுத்தவனைக் குற்றஞ்சாட்டினான். மற்றவனோ, “இல்லை” என்றான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களில் ஒவ்வொருவனும் அடுத்தவர் மறுத்ததை உறுதி செய்தும், அடுத்தவர் உறுதி செய்ததை மறுத்தும், தன் கருத்தில் பிடிவாதமாக இருந்தான்.(19) இவ்வாறு பெரும் நம்பிக்கையுடன் அவர்களுக்குள் சச்சரவு நடந்து வந்தபோது, அவர்களுக்கு மத்தியில் ஓர் உறுதிமொழி கேட்கப்பட்டது. உண்மையில், அவர்களில் ஒவ்வொருவனும் திடீரென விபுலரின் பெயரைச் சென்னான்.(20) அவர்கள் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்ட உறுதிமொழி இதுதான்: “நம்மிருவரில் எவன் பொய் சொல்கிறானோ, அவன் மறுமையில் மறுபிறப்பாளனான விபுலன் அடையப் போகும் கதியை அடைவான்” என்றனர்.(21)

அவர்களுடைய இச்சொற்களைக் கேட்டதும் விபுலரின் முகம் உற்சாகத்தை இழந்தது. அவர் தமக்குள், “நான் கடுந்தவங்களைச் செய்திருக்கிறேன். இந்த இருவருக்கிடையிலான சச்சரவு கடுமையாக இருக்கிறது. மேலும் இஃது எனக்குத் துன்பம் நிறைந்ததாக இருக்கிறது. உயிரினங்கள் அனைத்திற்காகவும் மறுமையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மிகவும் துன்பம் நிறைந்த கதியை நான் அடைவேன் என்று இவர்கள் இருவரும் குற்றஞ்சுமத்தும் வகையில் நான் என்ன பாவம் செய்தேன்?” என்று நினைத்தார்.(22,23) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, விபுலர், இவ்வகையில் சிந்தித்துக் கொண்டே, தமது தலையைத் தொங்கவிட்டு, உற்சாகமிழந்த மனத்துடன் தாம் என்ன பாவம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கத் தொடங்கினார்.(24)

அவர் தமது வழியில் சிறிது தொலைவைக் கடந்து சென்றதும் தங்கம் மற்றும் வெள்ளியாலான பகடைக் காய்களைக் கொண்டு சூதாடிக் கொண்டிருக்கும் ஆறு மனிதர்களைக் கண்டார். அவர்கள் ஒவ்வொருவரும் உடலில் ஏற்பட்டிருக்கும் மயிர்ச் சிலிர்ப்புடன் ஆவலோடு சூதாடுபவர்களாகத் தெரிந்தனர். (அவர்களுக்கு மத்தியில் சச்சரவு ஏற்பட்ட போது) அவர்களும் ஏற்கனவே முதல் இருவர் ஏற்ற உறுதிமொழியைப் போலவே ஏற்பதை விபுலர் கேட்டார். உண்மையில், அவர்களது சொற்களும் விபுலரை அதே வகையிலேயே குறிப்பிட்டன.(25,26) {அவர்கள்}, “நம்மில் எவன் பேராசையால் வழிநடத்தப்பட்டு முறையற்ற வழியில் செயல்படுகிறானோ அவன் மறுமையில் விபுலன் அடையப் போகும் கதியை அடைவான்” {என்றனர்}.(27)

எனினும், ஓ! குருகுலத்தோனே, எவ்வளவுதான் முயன்று நினைவுகூர்ந்தாலும், தமது சிறு வயதில் இருந்து கூடத் தாம் அத்துமீறலேதும் செய்ததாக விபுலரால் நினைவுகொள்ள முடியவில்லை.(28) உண்மையில், நெருப்புக்கு மத்தியில் உள்ள மற்றொரு நெருப்பைப் போல அவர் எரியத் தொடங்கினார். அந்தச் சாபத்தைக் கேட்டு அவரது மனம் துயரால் எரிந்தது.(29) இத்துன்ப நிலையிலேயே நீண்ட நேரம் கடந்து சென்றது. இறுதியாக, இந்திரனின் சதியில் இருந்து தமது ஆசானின் மனைவியைப் பாதுகாக்கத் தாம் மேற்கொண்ட வழிமுறைகளை நினைவுகூர்ந்தார்.(30) {அவர்}, “அங்கத்தோடும் அங்கமும், முகத்தோடு முகமும் வைத்து நான் அந்தப் பெண்ணின் உடலில் ஊடுருவினேன். இவ்வழியில் நான் செயல்பட்டிருந்தாலும் நான் இந்த உண்மையை என் ஆசானிடம் சொல்லவில்லையே” {என்று நினைத்தார்}.(31)

ஓ! குரு குலத்தோனே, விபுலர் தம்மிடம் கண்ட வரம்புமீறல் இதுவே. உண்மையில், ஓ! அருளப்பட்ட ஏகாதிபதி, அதுதான் அவர் செய்த அத்துமீறல் என்பதில் ஐயமில்லை.(32) அவர் சம்பை நகரத்திற்குத் திரும்பி தமது ஆசானிடம் மலர்களைக் கொடுத்தார். மூத்தோரிடமும், பெரியோரிடமும் அர்ப்பணிப்புமிக்க அவர், தமது ஆசானை முறையான வடிவில் வழிபட்டார்” என்றார் {பீஷ்மர்}.(33)

விபுலரின் கதி! – அநுசாஸனபர்வம் பகுதி – 43-விபுலர் செய்த வரம்புமீறலை விளக்கிச் சொன்ன தேவசர்மன்; ஆசானால் மீட்கப்பட்ட விபுலர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, பெருஞ்சக்திமிக்கவரான தேவசர்மன், பணி செய்து திரும்பி வந்த தமது சீடரைக்{விபுலரைக்} கண்டு சொன்ன சொற்களை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(1)

தேவசர்மன், “ஓ! விபுலா, ஓ! சீடா, பெருங்காட்டில் நீ பயணித்தபோது கண்டதென்ன? ஓ! விபுலா, நீ யாவரைக் காண்டாயோ அவர்கள் உன்னை அறிவர். ருசியைப் பாதுகாக்கும் காரியத்தில் நீ எவ்வாறு செயல்பட்டாய் என்பதை நானும், என் மனைவியான ருசியும் அறிவோம்” என்றார்.(2)

விபுலர், “ஓ! மறுபிறப்பாள முனிவரே, நான் முதலில் கண்ட அந்த இருவர் யாவர்? அதற்கடுத்து நான் கண்ட அறுவர் யாவர்? அவர்கள் யாவரும் என்னை அறிந்திருந்தனர். உண்மையில், உமது பேச்சினூடாகக் குறிப்பாகச் சொல்லும் அவர்கள் யாவர்?” என்று கேட்டார்.(3)

தேவசர்மன் {விபுலரிடம்}, “ஓ! மறுபிறப்பாளா, நீ முதலில் கண்ட இருவர் பகலும், இரவும் ஆவர். அவர்கள் இடையறாமல் ஒரு வட்டத்தைப் போல நகர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இருவரும் உன் குற்றத்தின் வரம்புமீறலை அறிவார்கள்.(4) ஓ! கல்விமானான பிராமணா, உற்சாகமாகப் பகடையாடிக் கொண்டிருப்பவர்களாக (எண்ணிக்கையில் அறுவராக) நீ கண்ட வேறு மனிதர்கள் பருவ காலங்களாவர் {ருதுக்களாவர்}. அவர்களும் உன் வரம்புமீறல்களை அறிந்திருக்கின்றனர்.(5) கமுக்கத்தில் பாவமிழைத்த எந்தப் பாவியும், தன் வரம்புமீறலைத் தான் மட்டுமே அறிந்திருப்பதாகவும், வேறு எவரும் அறியவில்லை என்பதாகவும் ஓர் உறுதியான எண்ணத்தை வளர்க்கக்கூடாது.(6) ஒரு மனிதன் கமுக்கத்தில் செய்யும் பாவச் செயலை பருவகாலங்களும் {ருதுக்களும்}, பகலும், இரவும் எப்போதும் காண்கின்றன.(7)

(நீ செய்த காரியத்திற்கு) பாவிகளுக்கான உலகமே உனதாகும். நீ என்ன செய்தாய் என்பதை எனக்குச் சொல்லவில்லை. உன் பாவத்தை யாரும் அறியவில்லை என்பதே உன் நம்பிக்கையாக இருந்தது, அந்தத் தீர்மானமே உன்னை மகிழ்ச்சியில் நிறைத்தது.(8) நீ உன் ஆசானிடம் மொத்த உண்மையையும் சொல்லவில்லை; ஒரு குறிப்பிட்ட பகுதியை அவரிடம் மறைத்தாய். நீ கேட்கும் வகையில் இவ்வாறு பேசிய பருவகாலங்களும், பகலும், இரவும், இந்த உன் வரம்புமீறலை உனக்கு நினைவூட்டுவது முறை என நினைத்தன.(9) பகல், இரவு மற்றும் பருவகாலங்கள், ஒரு மனிதன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் எப்போதும் அறிபவையாக இருக்கின்றன.(10) ஓ! மறுபிறப்பாளா, தவறு செய்ததாக அஞ்சி நீ என்னிடம் சொல்லத் துணியாததை முழுதும் அறிந்தவர்களாக இருந்ததால் அவர்கள் இவ்வழியில் உன்னிடம் பேசினார்கள்.(11) இதன் காரணமாகப் பாவிகளுக்கான உலகங்களே உனதாகும். நீ செய்ததை என்னிடம் நீ சொல்லவில்லையே.(12)

ஓ! மறுபிறப்பாளா {விபுலா}, இயற்கையாகவே பாவம் நிறைந்த இயல்பைக் கொண்ட என் மனைவியைப் பாதுகாக்க முழு வல்லமையுடன் நீ இருந்தாய். நீ செய்த காரியத்தில் பாவமேதும் இல்லை. இதனாலேயே நான் உன்னிடம் மனநிறைவை அடைந்தேன்.(13) ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நீ தீச்செயலேதும் செய்திருந்தால் எத்தாமதமுமின்றி உன்னை மொத்தமாகச் சபித்திருப்பேன்.(14) பெண்கள் ஆண்களுடன் கலக்கிறார்கள். ஆண்கள் இத்தகைய கலவியை மிகவும் விரும்புகின்றனர். எனினும், நீ வேறுபட்ட ஆவலுடன் {பாதுகாக்கும் நோக்கத்துடனே} என் மனைவியைப் பாதுகாத்தாய்[1]. நீ வேறுவகையில் செயல்பட்டிருந்தால், நிச்சயம் ஒரு சாபம் கிட்டியிருக்கும். இதையே நான் நினைக்கிறேன்.(15) ஓ! மகனே, நீ என் மனைவியைப் பாதுகாத்தாய். நீ செய்த விதமும், நீ சொல்லியிருந்தால் எவ்வாறு அறிவேனோ அவ்வாறே என்னால் அறியப்பட்டது. ஓ! மகனே, நான் உன்னிடம் மனநிறைவை அடைந்தேன். கவலைகள் அனைத்தையும் விட்டு நீ சொர்க்கத்திற்குச் செல்வாயாக” என்றார் {தேவசர்மன்}.(16)பெரும் முனிவரான தேவசர்மன், விபுலரிடம் இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, தமது மனைவியுடனும், தமது சீடருடனும் சொர்க்கத்திற்கு உயர்ந்து, அங்கே பெரும் மகிழ்ச்சியுடன் தன் காலத்தைக் கழிக்கத் தொடங்கினார்.(17) ஓ! மன்னா, இந்த வரலாற்றை முன்னொரு சந்தர்ப்பத்தில் கங்கைக்கரையில் வைத்து ஓர் உரையாடலின் போக்கில் பெரும் தவசியான மார்க்கண்டேயர் எனக்குச் சொன்னார்.(18) எனவே, நான் இஃதை உனக்குச் சொன்னேன். (அனைத்தை வகை மயக்கங்கள் மற்றும் வாய்ப்புகளில் இருந்தும்) பெண்கள் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களில் அறம் சார்ந்தவர்கள் மற்றும் சாராதவர்கள் என்ற இருவகையினரும் காணப்படுகின்றனர்.(19)

அறம் சார்ந்த பெண்கள் உயர்ந்த அருளைப் பெற்றவர்களாவர். (உயிரினங்கள் அனைத்தையும் எங்கும் பேணி வளர்ப்பதால்) அவர்களே இந்த அண்டத்தின் தாய்மார் {லோகமாதாக்கள்} ஆவர். நீர்நிலைகள் மற்றும் காடுகளோடு கூடிய இந்தப் பூமியைத் தாங்குபவர்கள் அவர்களே.(20) பாவம் நிறைந்தோரும், தீய நடத்தை கொண்டோரும், குலத்தை அழிப்போரும், பாவம் நிறைந்த செயல்களையே செய்யத் துணிந்தோருமான பெண்களை அவர்களின் உடல்களில் தோன்றி வெளிப்படும் தீய குறியீடுகளை {துர்லக்ஷணங்களைக்} கொண்டு உறுதி செய்து கொள்ளலாம்.(21) உயர் ஆன்ம மனிதர்களாலும் இவ்வாறே பெண்களைப் பாதுகாக்க முடியும். ஓ! மன்னர்களில் புலியே, வேறு எந்த வகையிலும் அவர்களைப் பாதுகாக்க முடியாது.(22) ஓ! மனிதர்களின் தலைவா, பெண்கள் கொடியவர்களாவர். அவர்கள் கொடிய ஆற்றலைக் கொண்டவர்கள். அவர்களுடன் பாலினக் கலவியில் ஈடுபடுபவர்களைவிட, அவர்களின் அன்புக்கோ, விருப்பத்திற்கோ உரியவர்கள் வேறு எவருமில்லை.(23) பெண்கள், உயிருக்கே அழிவை ஏற்படுத்தும் (அதர்வண) மந்திரங்களைப் போன்றவர்களாவர். ஒருவனோடு வாழ்வதாக உடன்பட்ட பிறகும், பிறரோடு செல்ல அவர்கள் அவனைக் கைவிடத் தயாராக இருப்பார்கள். ஓ! பாண்டுவின் மகனே, எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒரே ஒருவனிடம் ஒருபோதும் அவர்கள் நிறைவடைவதில்லை.(24)

மனிதர்கள் அவர்களிடம் அன்பேதும் உணர வேண்டியதில்லை. ஓ! மன்னா அவர்களிடம் பகைமையும் பாராட்ட வேண்டியதில்லை. அறத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் துணையைத் தயக்கத்துடனும், பற்றில்லாமலும் அனுபவிக்க வேண்டுமேயன்றி ஊக்கத்துடனும், பற்றுடனும் {அனுபவிக்கக்}கூடாது.(25) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, வேறுவகையில் செயற்படும் ஒரு மனிதன் நிச்சயம் அழிவையே அடைவான். ஓ! மன்னர்களில் புலியே, அனைத்துக் காலங்களிலும், அனைத்துச் சூழ்நிலைகளிலும் அறிவே மதிப்பிற்குரியதாக இருக்கிறது.(26) பெண்ணைப் பாதுகாப்பதில் வென்ற ஒரே மனிதர் விபுலர் மட்டுமே. ஓ! மன்னா, மூவுலகிலும் பெண்களைப் பாதுகாக்கவல்லவர்களென வேறு எவரும் இல்லை” என்றார் {பீஷ்மர்}.(27)

ஐவகைத் திருமணங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 44-எவ்வகை மனிதனுக்கு ஒருவன் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்; திருமண வகைகள்; திருமணம் முழுமை பெற அவசியமானவை எவை; திருமணம் குறித்துப் பாஹ்லீகர் மற்றும் சத்தியவான் ஆகியோர் சொன்ன நீதிகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கடமைகள் அனைத்தின் வேர் எது? உற்றார் உறவினரின் வேரெது? இல்லத்தின் வேரெது? பித்ருக்கள் மற்றும் விருந்தினர்களின் வேர்களெவை? என்பவை குறித்து எனக்குச் சொல்வீராக.(1) இந்தக் காரியமே (ஒருவனுடைய மகளைத் திருமணம் செய்து கொடுப்பதே) கடமைகள் அனைத்திலும் முதன்மையானது என்று நான் நினைக்கிறேன். எனினும், ஓ! மன்னா, ஒருவன் எவ்வகை மனிதனுக்குத் தன் மகளைக் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“நன்மக்கள், ஒரு மனிதனின் ஒழுக்கம், இயல்பு {குணம்}, அவனது கல்வி, ஈட்டம் {சாதனைகள்}, அவனது பிறப்பு {குலம்} மற்றும் அவனது செயல்கள் ஆகியவற்றை விசாரித்த பிறகே தேர்ந்த ஒரு மணமகனுக்குத் தங்கள் மகளைத் கொடுப்பார்கள்.(3) ஓ! யுதிஷ்டிரா, அறம் சார்ந்த பிராமணர்கள் அனைவரும் (தங்கள் மகள்களை {திருமணம் செய்து} கொடுக்கும் காரியத்தில்) இவ்வழியிலேயே செயல்படுவார்கள். ஓ! யுதிஷ்டிரா, இது பிரம்மத் திருமணம் {பிரம்ம விவாகம்} என்று அறியப்படுகிறது.(4) ஒரு பெண்ணின் தந்தையானவன், தகுந்த மணமகனைத் தேர்ந்தெடுத்து, பல்வேறு வகைப் பொருட்களைக் கொடுப்பதன் மூலம் அந்த மணமகனைத் தூண்டி, தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளச் செய்ய வேண்டும். இவ்வகைத் திருமணமானது {பிராஜாபத்ய / க்ஷத்ர விவாகமானது}, நல்ல க்ஷத்திரியர்கள் அனைவரின் நித்திய நடைமுறையாக இருக்கிறது.(5) ஒரு பெண்ணின் தந்தையானவன், தன் சொந்த விருப்பங்களை அலட்சியம் செய்து, தன் மகளால் விரும்பப்படுபவனும், அந்தப் பெண்ணின் அவ்வுணர்வை ஏற்பவனுமான ஒருவனுக்குத் தன் மகளை அளிக்கும்போது, ஓ! யுதிஷ்டிரா, அவ்வகைத் திருமணமானது காந்தர்வம் {காந்தர்வ விவாகம்} என்று வேதங்களை அறிந்தோரால் அழைக்கப்படுகிறது.(6)

ஒரு பெண்ணின் உறவினர்களுடைய பேராசையை நிறைவடையச் செய்து, பெரும் விலை கொடுத்து அவளை வாங்கித் திருமணம் செய்து கொள்வது அசுரர்களின் நடைமுறை {இவ்வகைத் திருமணத்தை ஆசுர விவாகம்} என்று ஞானிகள் சொல்லியிருக்கின்றனர்.(7) சில வேளைகளில் ஒரு மணமகன், அழுது கொண்டிருக்கும் உறவினர்களின் தலைகளைக் கொய்து, அவர்களைக் கொன்று, அவர்களது பெண்ணை வலுக்கட்டாயமாக அபகரித்துச் செல்றான். ஓ! மகனே, அத்தகைய திருமணம் ராட்சசம் {ராக்ஷஸ விவாகம்} என்ற பெயரில் அழைக்கப்படுகிறது[1].(8) ஓ! யுதிஷ்டிரா, இவ்வைந்தில் (பிரம்மம், க்ஷத்ரம், காந்தர்வம், ஆசுரம், ராட்சசம் ஆகியவற்றில்) அறம்சார்ந்தவை {தர்மம்} மூன்றும், அறமற்றவை {அதர்மம்} இரண்டும் என இருக்கின்றன. பைசாச மற்றும் ஆசுர வகைகளை ஒருபோதும் செய்யக்கூடாது[2].(9) ஓ! மனிதர்களின் இளவரசே, பிரம்ம, க்ஷத்ர, காந்தர்வ வடிவங்கள் {திருமண வகைகள்} அறம்சார்ந்தவை ஆகும். இவற்றைத் தனித்தனியாகவும், சேர்த்தும் செய்யலாம் என்பதில் ஐயமில்லை.(10)ஒரு பிராமணன் மூன்று மனைவிகளைக் கொள்ளலாம். ஒரு க்ஷத்திரியன் இரு மனைவிகளைக் கொள்ளலாம். வைசியனைப் பொறுத்தவரையில், அவன் தன் வகையைச் சார்ந்த ஒரு மனைவியைக் கொள்ள வேண்டும். இந்த மனைவிகள் மூலம் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும்[3].(11) ஒரு பிராமணன் கொள்ளும் மூன்று மனைவியரில், தன் வகையைச் சார்ந்தவள் {ஒரு பிராமணி} முதன்மையானவளாகக் கருதப்பட வேண்டும். அதே போல ஒரு க்ஷத்திரியனுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் இரு மனைவியரில், தன் வகையைச் சார்ந்தவள் {ஒரு க்ஷத்திரியப் பெண்ணே} மேன்மையானவளாகக் கருதப்பட வேண்டும். உயர் வகையைச் சார்ந்தவர்கள் மூவரும் {முதல் மூன்று வர்ணத்தாரும்}, (அறத்திற்காக அல்லாமல்) இன்ப காரியங்களுக்காக மட்டும் தாழ்ந்த, அல்லது சூத்திர வகையில் மனைவிகளைக் கொள்ளலாம் என்று சிலர் சொல்கிறார்கள், எனினும், வேறு சிலர் இந்த நடைமுறையைத் தடை செய்கின்றனர்.(12) சூத்திரப் பெண்களிடம் பிள்ளை பெற்றுக் கொள்ளும் நடைமுறையை நல்லோர் கண்டிக்கின்றனர். ஒரு பிராமணன், ஒரு சூத்திரப் பெண்ணிடம் பிள்ளைகளைப் பெறுவதன் மூலம், ஈடு செய்யக்கூடிய {பரிகாரத்தோடு கூடிய} பாவத்தை ஈட்டுகிறான்.(13) முப்பது வயதுடைய ஒரு மனிதன், நக்நிகாம்[4] என்றழைக்கப்படும் பத்து வயதுடைய பெண்ணை மணக்கலாம். அல்லது இருபத்தோரு வயதுடைய ஒருவன், ஏழு வயதுடைய ஒரு பெண்ணை மணக்கலாம்.(14) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, சகோதரனோ, தந்தையோ இல்லாத ஒரு பெண், தன் தகப்பனுக்குப் புத்ரிகையாகக் கருதப்படலாம் என்பதால், அத்தகையவளை மணந்து கொள்ளக்கூடாது[5].(15)பூப்பெய்திய பிறகு (திருமணமாகாத) ஒரு பெண் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நான்காம் ஆண்டில், (உறவினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் எனக் காத்திருக்காமல்) தானே தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.(16) அத்தகைய ஒரு பெண்ணின் வாரிசு {சமூக} மதிப்பை இழப்பதில்லை, அத்தகைய பெண்ணுடனான கலவியும் இழிவாவதில்லை. தானே கணவனைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக வேறுவகையில் செயல்பட்டால், அவள் பிரஜாபதியின் பழிமொழியை ஈட்டுகிறாள் {பிரம்மனால் இகழத்தக்கவள் ஆகிறாள்}.(17) ஒருவன், தன் அன்னைக்கு ஸபிண்டையாக[6] இல்லாத, அல்லது தன் தந்தையின் கோத்ரத்தையே கொண்டவளாக {ஸகோத்ரையாக} இல்லாத பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதுவே மனு அறிவித்திருக்கும் (புனித விதிக்கு இணக்கமாக) நடைமுறையாகும்” என்றார் {பீஷ்மர்}.(18)யுதிஷ்டிரன், “திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒருவன், பெண்ணின் உறவினர்களுக்கு மணக்கொடை {கன்னிகாசுல்கம்} அளிக்கிறான்; வேறொருவன் பெண்ணின் உறவினர்களிடம் மணக்கொடை தருவதாக உறுதியளிக்கிறான்; வேறொருவன், “நான் இந்தப் பெண்ணைப் பலவந்தமாக அபகரிக்கப் போகிறேன்” என்கிறான்; வேறொருவன் தன் செல்வத்தை (அந்தப் பெண்ணுக்குத் தன் செல்வத்தில் ஒரு பகுதியைக் கொண்டு மணக்கொடை அளிக்கும் நோக்கில் அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு அவற்றை) வெளிக்காட்டுகிறான்;(19) மற்றொருவன் உண்மையில் திருமணச் சடங்குகளுடன் அப்பெண்ணின் கரத்தைப் பற்றுகிறான் {பாணிக்ரகணம் செய்கிறான்}. ஓ! பாட்டா, நான் உம்மைக் கேட்கிறேன், உண்மையில் அந்தப் பெண் {இவர்களில்} யாருடைய மனைவியாவாள்? உண்மையை அறிந்து கொள்ள விரும்பும் எங்களுக்குப் பார்வையைத் தரும் கண்ணாக நீரே இருக்கிறீர்” என்றான்.(20)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஞானிகள் ஆலோசித்து, அங்கீகரித்த அல்லது தீர்மானித்த மனித செயல்கள் எவையும் நன்மையை உண்டாக்குபவையாகவே காணப்படுகின்றன. எனினும், பொய் பேசுவது எப்போதும் பாவம் நிறைந்ததாகும்[7].(21) ஒரு பெண்ணானவள், தான் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தவனைத் தவிர வேறு ஒருவனிடம் தன் கரத்தைக் கொடுத்தால், {அவ்வாறு} மனைவியாகும் அந்தப் பெண், அவளுக்குப் பிறக்கும் மகன்கள், ரித்விஜர்கள், ஆசான்கள் {குருமார்}, சீடர்கள், அந்தத் திருமணத்தின் போது உள்ள உபாத்யாயர்கள் அனைவரும் பாவக்கழிவு {பிராயச்சித்தம்} செய்ய வேண்டியவர்களாகிறார்கள். அத்தகைய நடத்தைக்குப் பாவக்கழிவேதும் செய்ய வேண்டியதில்லை என்றும் சிலர் கருதுகிறார்கள்.(22) மனு, ஒரு பெண் தான் விரும்பாத ஒருவனுடன் வாழும் நடைமுறையை மெச்சவில்லை[8]. அவள் விரும்பாத ஒருவனுடன் மனைவியாக வாழ்வது இழுக்குக்கும், பாவத்திற்கும் வழிவகுக்கும். பின்வரும் வழக்குகள் எதனிலும் எவனும் அதிகப் பாவமீட்டுவதில்லை.(23) திருமணத்திற்காக ஒரு பெண் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்படும் போது, பெண்ணின் உறவினர்கள் மூலம் உரிய சடங்குகளுடன் அப்பெண்ணானவள் கடத்தியவனுக்கே கொடுக்கப்படும் காரியத்திலும், மணக்கொடை கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் காரியத்திலும் பெரும் பாவமேதும் இல்லை.(24)பெண்ணின் உறவினர்கள் தங்கள் ஏற்பைத் தெரிவித்த பிறகே மந்திரங்களும், ஹோமங்களும் செய்யப்பட வேண்டும். அவ்வாறு பயன்படுத்தப்படும் மந்திரங்களே உண்மையில் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுகின்றன. உறவினர்களால் கொடுக்கப்படாத ஒரு பெண்ணின் வழக்கில் சொல்லப்படும் மந்திரங்களும், செய்யப்படும் ஹோமங்களும் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றுவதில்லை.(25) ஒரு பெண்ணின் உறவினர்கள் மூலம் செய்யப்படும் ஏற்பாடுதான் கட்டமைப்புடன் கூடியதும், புனிதமிக்கதும் ஆகும் என்பதில் ஐயமில்லை. மந்திரங்களின் துணையுடன் திருமணம் செய்து கொடுப்பவர் மற்றும் திருமணம் செய்து கொள்பவர் ஆகியோர் செய்து கொள்ளும் ஏற்பாடு (கணவன் மனைவி என்ற உறவுமுறையை உண்மையில் உண்டாக்குவதால் இந்த ஏற்பாடே) மிகப் புனிதமானதாகும்.(26) சாத்திரவிதிகளின்படி, ஒரு கணவன், தன் முற்பிறவி செயல்கள், அல்லது கடவுளால் விதிக்கப்பட்டதன் விளைவாக அடைந்த உரிய உடைமையாகத் தன் மனைவியைக் கருத வேண்டும். எனவே, உறவினரால் மற்றொருவனுக்குக் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்ட ஒரு பெண்ணை மனைவியாக ஏற்பதன் மூலமோ, எந்தப் பெண்ணுக்காக மற்றொருவனிடம் இருந்து அவர்கள் {உறவினர்கள்} மணக்கொடை பெற்றார்களோ, அந்தப் பெண்ணைத் தன் மனைவியாக ஏற்பதன் மூலமோ ஒருவன் எந்தப் பழியையும் ஈட்டுவதில்லை” என்றார் {பீஷ்மர்}.(27)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு பெண்ணின் தந்தை, அவளுக்கான மணக்கொடையை {ஒருவனிடமிருந்து} பெற்ற பிறகு, தகுதிமிக்கவனும், சரியான விகிதங்களில் முத்தொகையை {அறம், பொருள் மற்றும் இன்பத்தைக்} கொண்டவனுமான மற்றொருவன் அவளது கரத்தைப் பெற முன்வந்தால், அந்தத் தகுதிமிக்கவனை ஏற்பதற்காக, {ஏற்கனவே} மணக்கொடை அளித்தவனை மறுப்பதன் மூலம் அந்தப் பெண்ணின் தந்தை பழியை ஈட்டுவானா?(28) இத்தகைய வழக்கில், பெண்ணைக் கொடுப்பதாக உறுதிமொழி அளித்துவிட்டு அவனை மறுப்பது மதிப்பிற்குரியதாகாது, அதே வேளையில் (மிகவும் தகுதி வாய்ந்த ஒருவனுக்குத் தன் மகளை அளிக்க வேண்டும் என்ற கடமையைக் கருத்தில் கொள்ளும்போது) தகுதிமிக்க ஒருவனை மறுப்பதும் ஒருபோதும் நன்மையைத் தராது என்பதால், இவ்விரண்டு நிலைகளும் குற்றம் நிறைந்தவையாகவே தெரிகின்றன. நான் கேட்கிறேன், அந்தத் தந்தை என்ன செய்தால் நன்மை செய்தவனாகச் சொல்லப்படுவான்? கடமைகள் அனைத்திலும் மிகக் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டிய நடவடிக்கையாக நமக்கு இது தெரிகிறது.(29) உண்மையை உறுதி செய்துகொள்ளவே நாம் விரும்புகிறோம். உண்மையில், நீரே எங்கள் கண்களாவீர். இதை நீர் எங்களுக்கு விளக்குவீராக. நீர் சொல்வதைக் கேட்பதில் நான் ஒருபோதும் தணிவடைவதில்லை” என்றான்.(30)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மணக்கொடையானது {கன்யாசுல்கம்} அப்பெண்ணை மனைவியின் நிலையை அடையச் செய்யாது. அதை {மணக்கொடையைச்} செலுத்தும் மனிதனும் இதை நன்கறிவான். அவன் அந்தப் பெண்ணுக்கான விலையாகவே அதைச் செலுத்துகிறான். மேலும், பிறர் கொடுக்கும் மணக்கொடைகளுக்காக நல்லோர் ஒருபோதும் தங்கள் மகள்களை அவர்களுக்கு அளிக்கமாட்டார்கள்.(31) திருமணத்தை விரும்பும் மனிதன் {முதுமை முதலிய} விரும்பாத குணங்களைக் கொண்டிருக்கும்போதே, பெண்ணின் உறவினர்கள் அவனிடம் மணக்கொடையைக் கோருகின்றனர். எனினும், ஒருவனுடைய சாதனைகளால் கவரப்பட்டு, “நீ என் மகளைத் தங்கம் மற்றும் ரத்தின ஆபரணங்களாக முறையாக அலங்கரித்து, அவளைத் திருமணம் செய்து கொள்வாயாக” என்று சொல்லும் மனிதனும்,(32) இந்த வேண்டுகோளுக்கு இணங்கும் மனிதனும், உண்மையில் இத்தகைய பரிமாற்றத்தால் விற்பனையில் ஈடுபடவில்லை என்பதால், அவர்களை மணக்கொடை கொடுத்தவர்களாகவோ, பெற்றவர்களாகவோ சொல்ல முடியாது. (அன்பினாலும், பாசத்தினாலும் கொடுக்கப்படும்) கொடைகளை ஏற்றுக் கொண்டு ஒரு மகளை அளிப்பது நித்திய நடைமுறையே.(33) திருமணக் காரியங்களில் சில தந்தைமார், “இத்தகைய, இத்தகைய மனிதனுக்கு நான் என் மகளை அளிப்பேன்” என்று சொல்கிறார்கள்; சிலர், “இத்தகைய ஒருவனுக்கு என் மகளை அளிக்க மாட்டேன் என்று சொல்கிறார்கள்; மேலும் சிலர், “இத்தகைய ஒருவனுக்கே நான் என் மகளை அளிப்பேன்” என்று உணர்ச்சித்துடிப்புடன் சொல்கிறார்கள்.(34)

இத்தகைய அறிவிப்புகள் உண்மையில் திருமணமாகாது. கன்னிகையரின் கரங்களுக்காக மக்கள் ஒருவருக்கொருவர் வேண்டுவது (உறுதிமொழி கொடுப்பதும், பின்வாங்குவதும்) காணப்படுகிறது. உரிய சடங்குகளுடன் உண்மையில் கரங்களை ஏற்காதவரையில் திருமணம் நடந்ததாகச் சொல்ல முடியாது. கன்னிகையரைப் பொறுத்தவரையில், பழங்காலத்தில் மருத்துகளால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட வரம் இதுவேன் என்று நாம் கேள்விப்படுகிறோம்[9].(35) மனிதர்கள் மிகத் தகுந்தவர்களாக இல்லாதவரையில் அவர்களுக்குக் கன்னிகையரை அளிக்கக்கூடாது என மனிதர்கள் அனைவருக்கும் முனிவர்கள் ஒரு கட்டளையை விதித்திருக்கின்றனர். ஒரு மகள் என்பவள், ஆசை மற்றும் இடையுறவு வழித்தோன்றல்களின் வேராக இருக்கிறாள். இதையே நான் நினைக்கிறேன்[10].(36) மகளை விற்பது மற்றும் வாங்குவது என்ற நடைமுறை மனிதர்களுக்கு மத்தியில் நீண்ட காலமாக இருக்கிறது. இந்நடைமுறைக்கு இத்தகைய பரிச்சயம் இருக்கும் விளைவால், கவனமிக்க ஆய்வில் அதில் எண்ணற்ற குற்றங்களை உன்னால் கண்டுபிடிக்க முடியும். மணக்கொடை கொடுப்பது, அல்லது ஏற்பது என்பவை மட்டுமே கணவன் மற்றும் மனைவி என்ற நிலையை உண்டாக்குவதாக ஒருபோதும் கருத முடியாது. இது குறித்து நான் சொல்லப்போவதைக் கேட்பாயாக.(37)முன்பொரு காலத்தில், மாகதர்கள், காசிகள் மற்றும் கோசலர்கள் அனைவரையும் வீழ்த்தி, விசித்திரவீரியனுக்காக இரு கன்னிகைகளை {அம்பிகை, அம்பாலிகை மற்றும் அம்பை ஆகிய மூவரை} நான் வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்தேன்.(38) அந்தக் கன்னிகையர் இருவரில் ஒருத்தி {அம்பிகை மற்றும் அம்பாலிகை ஆகிய இருவரும்} உரிய சடங்குகளுடன் திருமணம் செய்யப்பட்டாள்[11]. மற்றொரு கன்னிகை {அம்பை} களத்தில் வீரம் என்ற வடிவில் மணக்கொடை கொடுக்கப்பட்டவள் ஆதலால் முறையாக மணக்கப்படவில்லை. குருகுலத்தைச் சேர்ந்தவரும் என் தந்தையின் சகோதரருமான மன்னர் பாஹ்லீகர், இவ்வாறு கொண்டு வரப்பட்ட கன்னிகை உரிய சடங்குகளுடன் மணக்கப்படவில்லையெனில் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்று சொன்னார். எனவே, அந்தக் கன்னிகையை முறையான சடங்குகளுடன் திருமணம் செய்து கொள்ளும்படி விசித்திரவீரியனுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.(39) என் தந்தையின் {தந்தையின் சகோதரரான பாஹ்லீகரின்} சொற்களில் ஐயம் கொண்டு நான் பிறரிடம் கருத்துக் கேட்டேன். அறநெறி குறித்த காரியங்கள் என் தந்தை {பாஹ்லீகர்} அதீத கவனத்துடன் இருந்தார் என நான் நினைத்தேன்.(40)ஓ! மன்னா, பிறகு திருமணம் குறித்த காரியங்களில் அறவோரின் நடைமுறை என்ன என்பதை அறியும் விருப்பத்தில் நான் என் தந்தையிடமே சென்று, இந்தச் சொற்களைச் சொன்னேன்: “ஓ! தந்தையே {தந்தையின் சஹோதரரான பாஹ்லீகரே}, அறம்சார்ந்த மக்களின் நடைமுறைகள் என்ன என்பதை உண்மையில் நான் அறிய விரும்புகிறேன்” என்று கேட்டேன். என் ஆவலும் ஊக்கமும் அதிகமாக இருந்ததால் என் விருப்பத்தை நான் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தினேன்.(41) நான் இச்சொற்களைச் சொன்னதும், அறவோரில் முதன்மையானவரும், எனக்குத் தந்தை முறையுமான பாஹ்லீகர்,(42) “உண்மையில் உரிய சடங்குகளுடன் கன்னிகையின் கரத்தைப் பற்றாமல், மணகொடைக் கொடுப்பது மற்றும் ஏற்பதால் கணவன் மனைவி என்ற நிலை அடையப்படுவதாக நீ கருதினால், (மணக்கொடை அளித்தவனுடன் தன் மகளைச் செல்ல அனுமதிப்பதன் மூலம்) அந்தக் கன்னிகையின் தந்தையானவன் தன் குல நடைமுறையைப் பின்பற்றுவதாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளலாமேயன்றி சாத்திர நடைமுறையைப் பின்பற்றுவதாகச் சொல்ல முடியாது. ஏற்றுக்கொள்ளப்படும் சாத்திரங்களை இதையே அறிவிக்கின்றன.(43) அறநெறி மற்றும் கடமைகளை அறிந்த மனிதர்கள், உரிய சடங்குகளுடன் கரத்தைப் பற்றாமல், மணக்கொடை கொடுப்பது மற்றும் ஏற்பதில் கணவன் மனைவி என்ற நிலை ஏற்படுகின்றது என்று சொல்பவர்களின் சொற்களை ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை.(44)

ஒரு தந்தையால் அவனது மகள் கொடுக்கப்படும்போது (உரிய சடங்குகளுடன் அவளைக் கணவன் ஏற்றுக் கொள்ளும்போது) தான் கணவன் மற்றும் மனைவி என்ற நிலை ஏற்படுகிறது என்பது நன்கறியப்பட்ட சொலவடையாகும். விற்பனை அல்லது கொள்முதலின் மூலம் கன்னிகையர் மனைவி என்ற நிலையை அடைய முடியாது. விற்பனை, மணக்கொடை ஆகியவற்றின் மூலம் அத்தகைய நிலையை அடைவதாகக் கருதுவோர் நிச்சயம் சாத்திரங்களை அறிந்தோரல்ல.(45) எவரும் தம் மகளை இத்தகைய மனிதர்களுக்கு அளிக்கக்கூடாது. உண்மையில், அவர்கள் அவனுடைய மகளைத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய நபர்கள் அல்ல. ஒரு மனைவியானவள் ஒருபோதும் விலைக்கு வாங்கப்படக்கூடாது. அதே போல் ஒரு தந்தையும் தன் மகளை விற்பனை செய்யக்கூடாது.(46) பேராசையால் பீடிக்கப்பட்டவர்களும், பெண்களைப் பணிப்பெண்களாக அவர்களை அடிமைகளாக விற்பவர்களும், வாங்குபவர்களும் மட்டுமே, மணக்கொடை கொடுப்பது மற்றும் பெறுவதன் மூலம் மனைவி என்ற நிலை அடையப்படுவதாகக் கருதுகிறார்கள்.(47)

ஒரு சந்தர்ப்பத்தில் இதே காரியம் குறித்துச் சில மக்கள் இளவரசன் சத்யவானிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டனர். {அவர்கள்}, “கன்னிகையின் உறவினரிடம் மணக்கொடை கொடுப்பவன் திருமணத்திற்கு முன்பே மாண்டு போனால்,(48) வேறொருவன் அந்தக் கன்னிகையின் கரத்தைப் பற்றித் திருமணம் செய்து கொள்ளலாமா? இக்காரியத்தில் எங்களுக்கு ஐயம் இருக்கிறது. நீ பெரும் ஞானம் கொண்டவனாக இருப்பதாலும், ஞானிகளால் மதிக்கப்படுவதாலும் எங்களுடைய இந்த ஐயங்களை அகற்றுவாயாக.(49) வாய்மை கற்க விரும்பும் எங்களுக்கு நீ பார்வைப் புலனாக {கண்களாக} இருப்பாயாக” {என்று கேட்டனர்}. இளவரசன் சத்யவான், இச்சொற்களைச் சொன்னவர்களிடம்,(50) “கன்னிகையின் உறவினர்கள், எவனைத் தகுந்தவனாகக் கருதுகிறார்களோ அவனுக்கே அவளை அளிக்க வேண்டும். இதில் எத்தயக்கமும் வேண்டியதில்லை. மணக்கொடை அளித்தவன் உயிருடன் இருந்தாலே அறவோர் இவ்வழியில் செயல்படுவார்கள் எனும்போது, கொடை கொடுத்தவன் இறந்திருந்தால் இக்காரியத்தில் சிறு ஐயமும் கொள்ள வேண்டியதில்லை.(51) கணவன் இல்லாததாலோ, அவன் மாண்டுவிட்டதாலோ உண்மையில் பாலினக்கலவி மூலம் மணவுறவு ஏதும் நிகழாமல் கன்னி மனைவியாகவோ, விதவையாகவோ உள்ள ஒருத்தியை, அவளுடைய கணவனுடைய தம்பி, அல்லது அத்தகைய பிற உறவினருடன் உறவு கொள்ள அனுமதிக்க வேண்டும். மணவுறவுக்கு முன்பே கணவன் இறந்த கன்னி விதவையானவள் தன்னை அவனது தம்பியிடம் ஒப்படைக்கலாம் அல்லது தவப்பயிற்சிகளில் ஈடுபடலாம்.(52)

கணவனின் தம்பி அல்லது அத்தகைய உறவினர், இவ்வாறு விதவையானவளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிலர் கருதுகின்றனர், வேறு சிலரோ, இத்தகைய நடத்தை பரவலாக இருந்தாலும், சாத்திய விதியின் படி இல்லாமல் ஆசையில் இருந்து எழுந்ததாகவே இருக்கிறது என்கின்றனர். அவ்வாறு சொல்பவர்கள், மற்றொருவனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மற்றும் ஏற்கப்பட்ட மணக்கொடையை அலட்சியம் செய்து, அவளை எந்தத் தகுந்தவனுக்கும் அளிக்க ஒரு கன்னிகையின் தந்தைக்கு உரிமையுண்டு என்ற தெளிவான கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.(53) கன்னிகையின் கரத்தைக் கொடுப்பதாக உறுதியளித்துவிட்டு, திருமணத்திற்கு முன்பான தொடக்கச் சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தாலும், வாக்களிக்கப்பட்டவனுக்கல்லாமல் அந்தக் கன்னிகையை வேறு ஒருவனுக்கும் கொடுக்கலாம். கொடையளிப்பவனே பொய்மையின் பாவத்தை ஈட்டுகிறான்; எனினும், மனைவி என்ற நிலையைப் பொறுத்தவரையில் இஃது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.(54) திருமண மந்திரங்கள் ஏழாவது அடியிலேயே பிரிக்க முடியாத திருமணப் பந்தத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் நீர்க்கொடையுடன் ஒருவனுக்கு அளிக்கப்படும்போதே அந்தக் கன்னிகை அவனது மனைவியாகிறாள்[12].(55) கன்னிகைகளைக் கொடையளிப்பது {கன்னிகாதானம் செய்வது} பின்வரும் வழியிலேயே செய்யப்பட வேண்டும். ஞானிகள் இதை நிச்சயம் அறிவார்கள். மேன்மையான பிராமணன் ஒருவன், விருப்பமுள்ளவளும், தன் குடும்பத்திற்கு இணையான தூய்மையும், நிலையும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவளும், சகோதரனால் கொடுக்கப்படுபவளுமான ஒரு கன்னிகையை மணக்க வேண்டும். அத்தகைய பெண்ணையும், நெருப்பின் முன்னிலையில் வைத்து, உரிய சடங்குகளுடன், வழக்கமான எண்ணிக்கையில் தன்னை வலம்வரச் செய்து திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றான் {சத்தியாவன்}” என்றார் {பீஷ்மர்}.(56)

மரபுரிமை! – அநுசாஸனபர்வம் பகுதி – 45-மணக்கொடை கொடுக்கப்பட்ட கன்னிகைக்குக் கணவனில்லாத போது செய்ய வேண்டிய விதியும், பெண்களுக்கு உரிய தாய்ப்பாகம் முதலியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்]“ஒரு மனிதன், ஒரு கன்னிகைக்காக மணக்கொடையைக் கொடுத்த பிறகு சென்றுவிட்டால் {காணாமல் போய்விட்டால்}, அந்தக் கன்னிகையின் தந்தையோ, அவளை {பிறருக்குக்} கொடுக்கத்தகுந்த வேறு உறவினரோ எவ்வாறு செயல்பட வேண்டும்?[1] ஓ பாட்டா, அதனை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்தகைய கன்னிகை, மகனற்றவனும், வளமிக்கவனுமான ஒரு தந்தையின் மகளாக இருந்தால், (மணக்கொடை அளித்தவன் திரும்பட்டும் என்ற நோக்கில்) அந்தத் தந்தையே அவளைப் பராமரித்துக் கொள்ள வேண்டும். உண்மையில், அந்தத் தந்தை அந்த மணக்கொடையைக் கொடுத்தவனின் உறவினர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கவில்லையெனில், அந்தக் கன்னிகை மணக்கொடை கொடுத்தவனுக்கு உரியவள் என்றே கருதப்பட வேண்டும்.(2) அவள், (கொடையளித்தவன் இல்லாதபோதும்) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் எதனைக் கொண்டும் அவனுக்காக {கொடையளித்தவனுக்காக} வாரிசை உண்டாக்கலாம். எனினும், முறையான சடங்குகளுடன் அவளை மணந்து கொள்ளத் தகுந்தவன் வேறு யாரும் கிடையாது.(3) பழங்காலத்தில், தந்தையால் ஆணையிடப்பட்ட இளவரசி சாவித்ரி ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவனுடன் சேர்ந்திருந்தாள். அவளுடைய இச்செயல் சிலரால் மெச்சப்படுகிறது; ஆனால் சாத்திரங்களை அறிந்த பிறர் இதைக் கண்டிக்கின்றனர்.(4) அறவோரான வேறு சிலர் இவ்வழியில் செயல்படுவதில்லை. வேறு சிலர், அறவோரின் நடத்தையே, கடமை அல்லது அறநெறிக்கான முதன்மையான சான்றாகக் கருதப்பட வேண்டும் என்று சொல்கின்றனர்[2].(5)விதேஹர்களின் ஆட்சியாளனான உயர் ஆன்ம ஜனகனின் பேரனான சுக்ரது, இக்காரியத்தில் பின்வரும் கருத்தை அறிவித்தான்:(6) {சுக்ரது}, “பெண்கள், தங்கள் வாழ்வின் எக்காலத்திலும் விடுதலையை அனுபவிக்கத் தகுந்தவர்களில்லை என்ற நன்கறியப்பட்ட சாத்திரங்களின் தீர்மானம் இருக்கிறது. இஃது அறவோர் நடக்கும் பாதையாக இல்லாதிருந்தால், இந்தச் சாத்திரத் தீர்மானம் எவ்வாறு இருக்கும்? எனவே, அறவோரைப் பொறுத்தவரையில், இக்காரியத்தில் அவர்களுக்குக் கேள்வி என்றோ, ஐயம் என்றோ ஏது இருக்க முடியும்? வேறுவகையில் நடக்கத் தீர்மானிக்கும் மக்கள் எவ்வாறு அந்தத் தீர்மானத்தைக் கண்டிப்பார்கள்?[3](7) நித்திய வழக்கில் இருந்து அறமற்ற வகையில் தவறுதலே அசுரர்களின் நடைமுறையாகக் கருதப்படுகிறது. இத்தகையை நடைமுறையைப் பழங்கால ஒழுக்கமுறையில் நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை[4].(8) (விதியால் பெறப்படுவதும், அதன் காரணமாக, சாத்திரத் தீர்மானங்களில் உள்ள ஈர்ப்பின் துணையால் மட்டுமே புரிந்துகொள்ளப்படக்கூடியதுமான) கணவன், மனைவி என்ற உறவுமுறை மிக நுட்பமானதாகும். இஃது, ஆண் பெண் பாலியல் இன்ப விருப்பத்தை மட்டுமே உள்ளடக்கிய இயற்கை உறவுமுறையில் இருந்து வேறுபட்ட ஒன்றாகும்” {என்றான் சுக்ரது}. ஜனக குலத்தைச் சேர்ந்த மன்னனால் {சுக்ரதுவால்} சொல்லப்பட்டது இதுவே[5]” என்றார் {பீஷ்மர்}.(9)யுதிஷ்டிரன், “மனிதர்களின் செல்வமானது, (அவர்களுக்கு மகள்கள் இருக்கும்போது, பிறரால்) எந்த அதிகாரத்தின் பேரில் மரபுரிமையாகப் பெறப்படுகிறது? மகளானவள், அவளது தந்தையைப் பொறுத்தவரையில் மகனைப் போலவே கருதப்பட வேண்டும்” என்றான்.(10)

பீஷ்மர், “மகன் என்பவன் தன் சுயத்தைப் போன்றவனாவான், மகளும் ஒரு மகனைப் போன்றவள்தான். எனவே, ஒருவன் தன் மகளின் வடிவில் வாழும்போது, வேறு எவராலும் அவனது செல்வத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ள முடியும்? தாயின் யௌதுக உடைமை {சீர்வரிசை} என்று அழைக்கப்படும் செல்வம் எதுவும் {தாயின் ஸ்த்ரீதனமெல்லாம்}, கன்னிகையான மகளின் பங்காகிறது. தாய்வழி பாட்டனானவன், மகன்கள் இல்லாமல் இறந்தால், மகளின் மகனே அதை மரபுரிமையாகப் பெற வேண்டும்.(12) மகளின் மகன், தன் தந்தைக்கும், தன் தாயின் தந்தைக்கும் பிண்டங்களை அளிக்கிறான். எனவே, நீதியின் கருத்துக்கிணங்க மகனுக்கும், மகளின் மகனுக்குமிடையில் எந்த வேறுபாடும் கிடையாது.(13) ஒரு மனிதன் ஒரு மகளை மட்டுமே பெற்றிருந்து, அவளே மகன் என்ற நிலையில் நிறுவப்பட்டிருக்கும்போது, அவன் ஒரு மகனைப் பெற நேர்ந்தால், அத்தகைய மகன் (தன் தந்தையின் செல்வம் அனைத்தையும் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக) மரபுரிமையை அந்த மகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்[6]. மேலும், ஒரு மனிதன் ஒரு மகளைப் பெற்றிருந்து, அவள் மகன் என்ற நிலையில் நிறுவப்பட்டிருக்கும்போது, அவன் ஒரு மகனைத் தத்து எடுத்துக் கொண்டாலும், விலைக்கு வாங்கினாலும், அப்போது அந்த மகளே அத்தகைய மகனைவிட மேன்மையானவளாகக் கருதப்படுவாள் (அப்போது அவள் தன் தந்தையின் செல்வத்தில் {ஐந்தில்} மூன்று பங்கையும், அந்த மகன் இரண்டு பங்கையும் எடுத்துக் கொள்ள வேண்டும்).(14)பின் வரும் வழக்கில், மகளுடைய மகனின் நிலையானது, ஒருவனுடைய மகளின் மகன்களுடன் {உண்மையில்} ஏன் தொடர்புப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு எந்தக் காரணத்தையும் என்னால் காண முடியவில்லை. தந்தையால் விற்கப்பட்ட மகளைக் குறித்ததே அவ்வழக்கு. உண்மையாகத் தந்தையால் விலைக்கு விற்கப்பட்ட மகளுக்குப் பிறந்த மகன்கள், (அவர்களுடைய தந்தை தானே அவர்களைப் பெறாமல், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பிறர் மூலம் சந்ததியைப் பெற்றிருந்தாலும்) அவர்களின் தந்தைக்கே முற்றிலும் உரியவர்கள் ஆவர். அத்தகைய மகன்கள், தங்கள் தாய் விலைக்கு விற்கப்பட்டதன் விளைவால் தங்கள் உரிமைகள் அனைத்தையும் இழப்பதால், அவர்கள் தங்கள் தாய்வழி பாட்டனுக்கு மகள்களின் பிள்ளைகளாக ஒருபோதும் கருதப்படமாட்டார்கள்[7].(15) மேலும் அத்தகைய மகன்கள், வன்மம் நிறைந்தவர்களாகவும், அறமற்ற ஒழுக்கம் கொண்டவர்களாகவும், அடுத்தவரின் சொத்துகளை அபகரிப்பவர்களாகவும், வஞ்சகம் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆசுரம் என்றழைக்கப்படும் பாவம் நிறைந்த திருமண வகையில் பிறந்த பிள்ளைகள் நடத்தையில் தீமையானவர்கள் ஆகின்றனர்.(16)பழங்கால வரலாறுகளை அறிந்தவர்களும், கடமைகளை அறிந்தவர்களும், சாத்திரங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அவற்றில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதில் உறுதியானவர்களுமான மனிதர்கள், இது தொடர்பாகப் பழங்காலத்தில் யமனால் பாடப்பட்ட சுலோகங்களைச் சொல்கின்றனர்.(17) யமன் பாடியது இதுவே. “தன் மகளை விற்றதன் மூலம் எவன் செல்வமீட்டுவானோ, அல்லது தன் வாழ்வாதாரத்திற்காக மணக்கொடையை ஏற்ற பிறகு எவன் தன் மகளை அளிக்கிறானோ,(18) அவன் காலஸம் {காலஸூத்ரம்} என்ற பெயரில் அறியப்படும் பயங்கரமான ஏழு நரகங்களில் அடுத்தடுத்து மூழ்குவான். அங்கே அந்த இழிந்தவன், முழு நேரமும் வியர்வையையும், சிறுநீரையும், மலத்தையும் உண்டு கொண்டிருப்பான்” {என்பதே யமன் பாடிய ஸ்லோகம்}.(19)

ஆர்ஷம் என்றழைக்கப்படும் திருமண வகையில், திருமணம் செய்து கொள்ளும் ஒருவன், கன்னிகையின் தந்தைக்கு ஒரு காளையையும், பசுவையும் கொடையாக அளிக்க வேண்டும். சிலர் இந்தக் கொடையை மணக்கொடையாக (அல்லது விலையாக) கருதுகின்றனர், அதே வேளையில், அஃதை அவ்வாறு கருதக்கூடாது என்று சிலர் கருதுகின்றனர். எனினும், ஓ மன்னா, அத்தகைய ஒரு நோக்கத்திற்காகக் கொடுக்கப்படும் கொடையானது, சிறிய அளவில் இருந்தாலும், பெரிய அளவில் இருந்தாலும் அது மணக்கொடையாகவோ, விலையாகவோ கருதப்படும், அத்தகைய சூழ்நிலையில் மகளை அளிப்பது விற்பனையாகவே பார்க்கப்படும் என்பதே உண்மையான கருத்தாகும்.(20) சில மனிதர்களால் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது உண்மையாக இருந்தாலும், இதை ஒருபோதும் நித்திய வழக்கமாகக் கொள்ள முடியாது. உறவினர்களுக்கு மத்தியில் இருந்து வலுக்கட்டாயமாக அபகரித்துச் சென்ற பிறகு அப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வேறு திருமண வடிவங்களும் மனிதர்களால் செய்யப்படுகின்றன.(21) ஒரு கன்னிகையைப் பலத்தால் ஒடுக்கி அவளுடன் பாலினக் கலவியில் ஈடுபடும் மனிதர்கள், பாவமிழைத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் இருள் நிறைந்த நரகத்தில் மூழ்குவார்கள்[8].(22) குருதியுறவு இல்லாத மனிதன் எவனும் விற்பனைக்குரியவனாக மாட்டான். அவ்வாறிருக்கையில் ஒருவனுடைய சந்ததியைக் குறித்துச் சொல்ல வேண்டுமா? பாவம் நிறைந்த செயல்களைச் செய்வதன் மூலம் அடையப்படும் செல்வத்தைக் கொண்டு, புண்ணியத்திற்கு வழிவகுக்கும் எந்தச் செயலையும் செய்ய முடியாது” என்றார் {பீஷ்மர்}.(23)

பெண்களை மதிப்பீராக! – அநுசாஸனபர்வம் பகுதி – 46-பெண்களுக்குப் பொருள் கொடுத்தல் மற்றும் அவர்களை அன்போடு நடத்தல் முதலியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிம்}, “பழைய வரலாறை அறிந்தவர்கள், பிரசேதஸின் மகனான தக்ஷனின் பின்வரும் ஸ்லோகத்தைச் சொல்கிறார்கள். “எந்தக் கன்னிகையைப் பொறுத்தவரையில், அவளது உறவினர்களால் மணக்கொடையின் வடிவில் ஏதும் பெறப்படவில்லையோ, அவளை விற்பனை செய்யப்பட்டவளாகச் சொல்ல முடியாது” {என்பதே அந்த ஸ்லோகம்}[1].(1) திருமணத்தில் கரம்பற்றப்படும் கன்னிகையை மரியாதையாகவும், அன்பாகவும் நடத்தி, ஏற்புடைய அனைத்தையும் கொடுக்க வேண்டும்.(2) அவளது தந்தை, சகோதரர்கள், மாமனார், மைத்துனர்கள் {கணவனின் சகோதரர்கள்} ஆகியோர் நன்மையை அறுவடை செய்யும் விருப்பம் கொண்டவர்களாக இருந்தால், அவளை அனைத்து வகையிலும் மதித்து, ஆபரணங்களால் அவளை அலங்கரிக்க வேண்டும். அத்தகைய நடத்தை அவர்களைப் போதுமான மகிழ்ச்சிக்கும், நன்மைக்கும் வழிநடத்திச் செல்லும்.(3)மனைவிக்குக் கணவனைப் பிடிக்கவில்லை என்றாலோ, இத்தகைய விருப்பமின்மை மற்றும் இன்பமில்லாமையால் {அவள்} அவனை மகிழ்ச்சியடையச் செய்யத் தவறினாலோ, அந்தக் கணவன் தன் குலத்தைப் பெருக்க ஒருபோதும் சந்ததியைப் பெறக்கூடாது.(4) ஓ! மன்னா, பெண்கள் எப்போதும் வழிபடப்பட்டு, அன்புடன் நடத்தப்பட வேண்டும். எங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கே தேவர்களே மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.(5) எங்கே பெண்கள் வழிபடப்படவில்லையோ, அங்கே செயல்கள் அனைத்தும் கனியற்றவையாகின்றன. ஒரு குடும்பத்திலுள்ள பெண்கள், தாங்கள் நடத்தப்படும் விதத்தால் துன்பத்தை அடைந்து கண்ணீர் விட்டால், அந்தக் குடும்பம் விரைவில் அழிந்து போகும்.(6)

பெண்களால் சபிக்கப்படும் வீடுகள், ஏதோ அதர்வணச் சடங்கால் எரிக்கப்பட்டதைப் போல அழிந்து, நிர்மூலமடையும். அத்தகைய வீடுகள் தங்கள் ஒளியை இழக்கும். ஓ! மன்னா, அவற்றின் வளர்ச்சியும், செழிப்பும் இல்லாமல் போகும்.(7) மனு, தாம் சொர்க்கத்திற்குச் செல்லுமுன், “பெண்கள் பலமில்லாதவர்கள், ஆண்களின் கவர்ச்சிமிக்க மயக்கும் தந்திரங்களுக்கு எளிதில் இரையாகிறவர்கள், தங்களுக்கு அளிக்கப்படும் அன்பை ஏற்கும் இயல்புடையவர்கள், வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்கள்” என்று சொல்லி ஆண்களின் பாதுகாப்பின்கீழ் அவர்களைக் கொண்டு வந்தார்.(8) அவர்களுக்கு மத்தியிலேயே வன்மம் நிறைந்தவர்களும், கௌரவங்களில் பேராசை கொண்டோரும், கொடிய மனம் கொண்டவர்களும், அன்பற்றவர்களும், ஊடுருவ முடியாத அறிவைக் கொண்டவர்களுமான சிலரும் இருக்கின்றனர். எனினும், பெண்கள் மதிக்கத் தகுந்தவர்களாவர். மனிதர்களே அவர்களை மதிப்பீராக.(9)

ஆண்களின் அறம் பெண்களையே சார்ந்திருக்கிறது. இன்பங்கள் மற்றும் கேளிக்கைகள் அனைத்தும் முற்றிலும் அவர்களையே சார்ந்திருக்கின்றன. நீங்கள் அவர்களுக்குத் தொண்டு செய்து, அவர்களை வழிபடுவீராக. நீங்கள் உங்கள் விருப்பங்களை அவர்களின் முன்னிலையில் தளர்த்துவீராக.(10) சந்ததியைப் பெறுதல், ஏற்கனவே பிறந்த பிள்ளைகளைப் பேணி வளர்த்தல், சமூகத்திற்குத் தேவையான அனைத்துச் செயல்களையும் செய்தல் ஆகிய இவை அனைத்தும் பெண்களையே தங்களுக்கான காரணமாகக் கொண்டிருக்கின்றன.(11) பெண்களைக் கௌரவிப்பதன் மூலம் நீங்கள் உங்கள் நோக்கங்கள் அனைத்தும் கனியும் நிலையை நிச்சயம் அடைவீர்கள்.

இது தொடர்பாக, விதேஹர்களின் ஆட்சியாளனான ஜனகனின் வீட்டைச் சார்ந்த ஓர் இளவரசி {சீதை} பாடிய ஸ்லோகம் ஒன்றிருக்கிறது. அது பின்வருமாறு:(12) “பெண்களுக்கென விதிக்கப்பட்ட வேள்விகள் ஏதுமில்லை. அவர்கள் செய்ய வேண்டிய சிராத்தங்கள் ஏதுமில்லை. அவர்கள் நோற்க வேண்டிய நோன்புகள் ஏதுமில்லை. அவர்கள் தங்கள் கணவர்களுக்கு மதிப்புடன் தொண்டாற்றுவதும், விருப்பத்துடன் கீழ்ப்படிருந்திருப்பதும் மட்டுமே அவர்களுடைய ஒரே கடமையாகும். அந்தக் கடமையைச் செய்வதன் மூலமே அவர்கள் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(13) குழந்தைப் பருவத்தில் தந்தை அவளைப் பாதுகாக்கிறான். இளமையில் கணவன் அவளைப் பாதுகாக்கிறான். முதுமையில் மகன் அவளைப் பாதுகாக்கிறான். அவளது வாழ்வின் எக்காலத்திலும் பெண்ணானவள் விடுதலை பெறத் தகுந்தவளல்ல.(14) செழிப்பின் தேவிகள் பெண்களே. செல்வாக்கையும், செழிப்பையும் விரும்பும் மனிதன் அவர்களைக் கௌரவிக்க வேண்டும். ஓ! பாரதா, பெண்களைப் பேணிக் காப்பதன் மூலம் ஒருவன் செழிப்பின் தேவியையே பேணி வளர்க்கிறான் என்றும், அவளைப் பீடிப்பதன் மூலம் அவன் செழிப்பின் தேவியைத் துன்புறுத்துகிறான் என்றும் சொல்லப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}.(15)

மரபுரிமைச் சட்டம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 47-பலவர்ணப் பெண்களிடம் பிறந்த மகன்களுக்குத் தந்தையின் உடைமைகளையும், செல்வங்களையும் எவ்வாறு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “சாத்திரங்கள் அனைத்தின் விதிகளையும் நீர் முழுமையாக அறிந்திருக்கிறீர். மன்னர்களின் கடமைகளை அறிந்தவர்களில் முதன்மையானவர் நீர். ஐயங்களை விலக்குவதில் பெரியவர் என்று உலகம் முழுவதும் நீர் கொண்டாடப்படுகிறீர்.(1) ஓ! பாட்டா, எனக்கோர் ஐயம் இருக்கிறது அஃதை எனக்கு விளக்கிச் சொல்வீராக. என் மனத்தில் எழுந்திருக்கும் இந்த ஐயத்தைப் பொறுத்தவரையில், நான் வேறு எந்த மனிதனிடமும் அதற்கான தீர்வைக் கேட்க மாட்டேன்.(2) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, கடமை மற்றும் அறத்தின் பாதையில் நடக்க விரும்பும் ஒரு மனிதனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எனக்கு விளக்கிச் சொல்வீராக.(3) ஓ! பாட்டா, ஒரு பிராமணன், தன் வகையைச் சேர்ந்த ஒருத்தி, க்ஷத்திரியரில் ஒருத்தி, வைசியரில் ஒருத்தி மற்றும் அந்தப் பிராமணன் கலவி இன்பத்தில் ஈடுபட விரும்பினால் சூத்ரரில் ஒருத்தி என நான்கு மனைவிகளை அவன் கொள்ளலாம் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(4) ஓ! குருக்களில் சிறந்தவரே, அந்த மகன்களில் எவன் தந்தையின் செல்வத்தை மரபுரிமையாகப் பெறத் தகுந்தவன் என்பதை ஒருவன் பின் ஒருவராக எனக்குச் சொல்வீராக.(5) ஓ! பாட்டா, அவர்களில் எவரெவர், தங்கள் தந்தைவழி செல்வத்தில் எவ்வளவு பங்கை எடுத்துக் கொள்ளலாம்? அவர்களுக்கு மத்தியில் தந்தை வழி உடைமைகளை எவ்வாறு பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“பிராமணர், க்ஷத்திரியர் மற்றும் வைசியர் ஆகிய மூவரும் மறுபிறப்பாள வகையினராகக் கருதப்படுகின்றனர். ஓ! யுதிஷ்டிரா, இந்த மூன்று வகைகளில் {வர்ணங்களில்} திருமணம் செய்து கொள்வதே பிராமணனின் கடமை என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(7) ஓ! எதிரிகளை எரிப்பவனே, ஒரு பிராமணன், பிழையான தீர்மானம், அல்லது பேராசை, அல்லது காமம் ஆகியவற்றால் சூத்திரரில் ஒருத்தியை மனைவியைக் கொள்கிறான். எனினும், சாத்திரங்களின் படி அத்தகைய மனைவியை ஏற்க அவன் தகுந்தவனல்ல.(8) ஒரு பிராமணன், ஒரு சூத்திரப் பெண்ணைப் படுக்கைக்கு இட்டுச் செல்வதன் மூலம், மறுமையில் இழிந்த கதியை அடைகிறான். அத்தகைய செயலைச் செய்த அவன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி பாவக்கழிப்பை {பரிகாரத்தைச்} செய்ய வேண்டும்.(9) ஓ! யுதிஷ்டிரா, அந்தப் பிராமணன் அத்தகைய ஒரு செயலின் விளைவால் சந்ததியைப் பெற்றிருந்தால், அந்தப் பாவக்கழிப்பு இரண்டு மடங்கு கனமானதாக, அல்லது கடுமையானதாக இருக்க வேண்டும். ஓ! பாரதா, (தந்தைவழி) செல்வத்தை (வெவ்வேறு மனைவிகளின் பிள்ளைகளுக்கு மத்தியில்) எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பதை இப்போது நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(10)

முதலிடத்தில், ஒரு பிராமணி மனைவியிடம் பிறந்த மகனானவன், தன் தந்தையின் செல்வத்திலிருந்து நற்குறிகளைக் கொண்ட ஒரு காளையையும், சிறந்த தேர், அல்லது வாகனத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.(11) ஓ!யுதிஷ்டிரா, அதன் பிறகு அந்தப் பிராமணரிடம் எஞ்சியிருக்கும் உடைமைகளைச் சமமான பத்து பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். பிராமணி மனைவி மூலம் பிறந்த மகன், தன் தந்தைவழி செல்வத்தில் அத்தகைய நான்கு பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம்.(12) க்ஷத்திரிய மனைவியிடம் பிறந்த மகன் பிராமண நிலையைக் கொண்டவன் என்பதில் ஐயமில்லை. எனினும், தன் தாயின் மூலம் உண்டான வேறுபாட்டின் விளைவாக அவன் பத்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட உடைமையில், மூன்று பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம்.(13) மூன்றாவது வகையான வைசிய சாதியைச் சார்ந்த மனைவிக்குப் பிராமணத் தந்தையின் மூலம் பிறந்த மகன், அந்தத் தந்தையின் உடைமையில் எஞ்சியிருக்கும் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம்.(14) பிராமணத் தந்தை மூலம் சூத்திர மனைவிக்குப் பிறந்த மகனை வாரிசாகக் கருத முடியாது என்பதால், அவன் தன் தந்தையின் செல்வத்தில் எந்தப் பகுதியையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்லப்படுகிறது. எனினும், சூத்திர மனைவிக்குப் பிறந்த மகனுக்குத் தந்தை வழி செல்வத்தில் சிறிதளவேனும் கொடுக்க வேண்டும் என்பதால், எஞ்சியிருக்கும் ஒரு பகுதியைக் கருணையின் அடிப்படையில் அவனுக்குக் கொடுக்கலாம்.(15)

ஒரு பிராமணனின் செல்வம் இவ்வகையிலேயே பத்து பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும். ஒரே தாய்க்கு, அல்லது ஒரே வகைத் தாய்மாருக்குப் பிறந்த மகன்கள் அனைவரும் தங்களுக்குரிய பகுதியைத் தங்களுக்குள் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.(16) சூத்திர மனைவிக்குப் பிறந்த மகன், (பிராமணர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் சாத்திரங்கள் மற்றும் கடமைகளில்) திறமற்றவனாக இருப்பதன் விளைவால் அவனைப் பிராமண நிலை கொண்டவன் என்று கருத முடியாது. உயர்ந்த மூன்று வகையைச் சார்ந்த மனைவிகளுக்குப் பிறந்த பிள்ளைகள் மட்டுமே பிராமண நிலை கொண்டவர்களாகக் கருதப்பட வேண்டும்.(17) நான்கு வகைகள் {வர்ணங்கள்} மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது, ஐந்தாவதாக வேறேதும் பட்டியலிடப்படுவதில்லை. சூத்திர மனைவியின் மகன், தன் தந்தையின் செல்வத்தில் (மேற்சொன்ன வகையில் பிறருக்கு ஒதுக்கிவிட்டு எஞ்சியிருக்கும்) பத்தாவது பகுதியை எடுத்துக் கொள்ளலாம்.(18) எனினும், அவனுடைய தந்தை அஃதை அவனுக்குக் கொடுத்தால் மட்டுமே அவன் எடுத்துக் கொள்ள வேண்டும். அவனது தந்தை அஃதை அவனுக்குக் கொடுக்காதிருந்தால் அவன் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஓ! பாரதா, தந்தையின் செல்வத்தில் சிறு பகுதியாவது சூத்திர மனைவியின் மகனுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை.(19) கருணையானது உயர்ந்த அறங்களில் ஒன்றாகும். கருணையின் மூலமே சூத்திர மனைவியின் மகனுக்கு ஏதாவது கொடுக்கப்படுகிறது. கருணை எழுவதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், இதயப்பூர்வமான அறமாக அஃது எப்போதும் புண்ணியத்தையே உண்டாக்கும்.(20)

ஓ! பாரதா, ஒரு தந்தைக்கு (பிற வகைகளை {வர்ணங்களைச்} சார்ந்த மனைவிகள் மூலம்) பிள்ளைகள் இருந்தாலும், அல்லது (அத்தகைய மனைவிகள் மூலம்) இல்லாவிட்டாலும், சூத்திர மனைவியின் மகனுக்கு, தந்தையின் செல்வத்தில் பத்தில் ஒரு பகுதிக்கு மேல் எதுவும் கொடுக்கப்படக்கூடாது.(21) ஒரு பிராமணன், தன்னையும், தன் குடும்பத்தையும் மூன்று வருடங்கள் பராமரித்துக் கொள்ளக்கூடிய அளவுக்குச் செல்வத்தைக் கொண்டிருந்தால், அவன் அந்தச் செல்வத்தைக் கொண்டு வேள்விகளைச் செய்ய வேண்டும். ஒரு பிராமணன் ஏதுமில்லாமல் ஒருபோதும் செல்வமீட்டக்கூடாது[1].(22) ஒரு கணவன் தன் மனைவியிடம் கொடுக்க வேண்டிய உயர்ந்த தொகை (நடைமுறையில் நிலவும் நாணய முறையின்படி {பண வகையின்படி}) மூவாயிரம் நாணயங்கள் ஆகும். கணவன் மனைவிக்குக் கொடுக்கும் இந்தச் செல்வத்தை அவள் தான் விரும்பியவாறு செலவு செய்யலாம்.(23) கணவன், பிள்ளையில்லாமல் இறந்து போனால், அவனுடைய மனைவி அவனுடைய செல்வம் அனைத்தையும் அனுபவிக்கலாம். (எனினும், அவள் அவற்றில் எந்த ஒரு பகுதியையும் விற்கவோ, கொடுக்கவோ கூடாது). மனைவியானவள் (கணவன் அறியாமல்) ஒருபோதும் கணவனின் செல்வத்தில் எந்தப் பகுதியையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.(24) ஓ! யுதிஷ்டிரா, ஒரு பிராமணி மனைவி, தன் தந்தையிடம் இருந்து எந்தக் கொடையை அடைந்திருந்தாலும், மகளும் மகனைப் போன்றவளே என்பதால், (அவளது மரணத்திற்குப் பிறகு) அதை மகள் எடுத்துக் கொள்ளலாம்.(25) ஓ! மன்னா, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, மகளானவள் ஒரு மகனுக்கு இணையானவளாகவே சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கிறாள். ஓ! பாரதக் குலத்தின் காளையே, மரபுரிமை சட்டமும் {சொத்துரிமை சட்டமும்} அவ்வாறே விதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவன், செல்வத்தைப் பிரித்தல் மற்றும் கொடுத்தல் குறித்த இந்த விதிகளை நினைவுகூர்ந்து ஒருபோதும் பயனில்லாமல் செல்வத்தை ஈட்டக்கூடாது” என்றார் {பீஷ்மர்}.(26)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “சூத்திரப் பெண்ணிடம், பிராமணத் தந்தையின் மூலம் பிறந்த மகன், எந்தச் செல்வத்திற்கும் உரிமையில்லாதவனாகச் சாத்திரங்களால் அறிவிக்கப்பட்டிருந்தால், வேறு எந்த விதிவிலக்கின் மூலம் தந்தைவழி உடைமையில் பத்தில் ஒரு பகுதி அவனுக்குக் கொடுக்கப்படுகிறது?(27) ஒரு பிராமணி மனைவிக்கு, ஒரு பிராமணன் மூலம் பிறந்த மகன் ஒரு பிராமணனே என்பது கேள்விக்கப்பாற்பட்டது. க்ஷத்திரிய மனைவி, மற்றும் வைசிய மனைவி ஆகியோருக்கு ஒரு பிராமணக் கணவன் மூலம் பிறந்த ஒருவனும் பிராமண நிலையைக் கொண்டவனாகிறான்.(28) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, அத்தகைய மகன்கள் தங்கள் தந்தைவழி செல்வத்தை ஏன் சமமற்ற வகையில் பகிர்ந்து கொள்கிறார்கள்? மறுபிறப்பாளர்கள் என்ற பெயரில் சமமான உரிமை பெற்ற மூன்று உயர்ந்த வகைகளைச் சார்ந்த தாய்மாருக்குப் பிறந்ததால் அவர்கள் அனைவரும் பிராமணர்கள் என்று நீர் சொன்னீர்” என்று கேட்டான்.(29)

பீஷ்மர், “ஓ! பகைவர்களை எரிப்பவனே, இவ்வுலகத்தில் உள்ள மனைவிகள் அனைவரும் தாரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். அந்தப் பெயர் அனைவருக்கும் பயன்படுத்தப்பட்டாலும், இந்தப் பெரும் வேறுபாடு காணப்படுகிறது.(30) மூன்று பிற வகைகளைச் சேர்ந்த மூன்று மனைவிகளை மணந்து கொண்ட பிறகு, ஒரு பிராமணன் அவர்கள் அனைவருக்கும் இறுதியாக ஒரு பிராமணி மனைவியைக் கொண்டால், அவளே மனைவிகள் அனைவரின் மத்தியில் முதல்வியாகவும், பெரும் மதிப்புக்குத் தகுந்தவளாகவும் கருதப்படுவாள். உண்மையில், சக மனைவியர் அனைவருக்கும் மத்தியிலும் அவளே முதன்மையானவளாகக் கருதத்தக்கவளாவாள்.(31) கணவனுக்கான நீராடல், மேனி அலங்காரங்கள், பல் துலக்குதல், கண்களுக்கு மையிடுதல் போன்றவற்றிற்குத் தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் அவளது அறையிலேயே வைக்கப்பட வேண்டும். ஹவ்யம், கவ்யம் மற்றும் அறச்செயல்கள் செய்யக் கணவனுக்குத் தேவைப்படும் வேறு அனைத்தும் அவளது அறையிலேயே வைக்கப்பட வேண்டும்.(32) அந்தப் பிராமணி மனைவி வீட்டில் இருந்தால், கணவனின் தேவைகளைக் கவனிக்கும் உரிமை வேறு எந்த மனைவிக்கும் கிடையாது. ஓ!யுதிஷ்டிரா, பிராமணி மனைவியே கணவனுக்கு இச்செயல்களில் துணைபுரிய வேண்டும்.(33) கணவனின் மனைவிகள் அனைவரிலும், முதல்வியாகக் கருதப்படுவதால், கணவனின் உணவு, பானம், மலர்மாலைகள், ஆடைகள், ஆபரணங்கள் ஆகிய இவை அனைத்தும் பிராமணி மனைவியால் கணவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(34) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, மனுவால் விதிக்கப்பட்ட சாத்திர விதிகள் இதுவே. ஓ! ஏகாதிபதி, இதுவே நித்திய நடைமுறையின் போக்காகக் காணப்படுகிறது.(35)

ஓ! யுதிஷ்டிரா, ஒரு பிராமணன், காமத்தால் வழிநடத்தப்பட்டு, வேறு வகையில் நடந்து கொண்டால் அவன் பிராமணர்களுக்கு மத்தியில் சண்டாளனாகக் கருதப்படுவான்[2].(36) க்ஷத்திரிய மனைவிக்குப் பிறந்த மகன், பிராமணி மனைவிக்குப் பிறந்த மகனின் நிலைக்கு இணையாகவே சொல்லப்படுகிறான். பிறப்பு வகையைப் பொறுத்தவரையில், க்ஷத்திரியரைவிடப் பிராமணி மேன்மையானவளாக இருப்பதன் விளைவால் பிராமண மனைவியின் மகனிடம் ஒரு வேறுபாடு உண்டு.(37) பிறவியின் அடிப்படையில் ஒரு க்ஷத்திரியரை ஒரு பிராமணிக்கு இணையாகக் கருதப்பட முடியாது. எனவே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பிராமணி மனைவிக்குப் பிறந்த மகனே, க்ஷத்திரிய மனைவிக்குப் பிறந்த மகனை விட முதல்வனும், மேன்மையானவனுமாவான்.(38) பிறவியின் அடிப்படையில் க்ஷத்திரியர் பிராமணிக்கு இணையாக இல்லாததால், ஓ! யுதிஷ்டிரா, பிராமணி மனைவியின் மகன் தன் தந்தையின் உடைமைகளில் சிறந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக் கொள்வான்.(39) அதே போலவே, பிறப்பின் அடிப்படையில் வைசியரை, க்ஷத்திரியருக்கு இணையாகக் கருத முடியாது. ஓ! யுதிஷ்டிரா, செழிப்பு, அரசு, கருவூலம் ஆகியவை க்ஷத்திரியரைச் சார்ந்தவை.(40)

இவை அனைத்தும் க்ஷத்திரியருக்காக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ! மன்னா, கடல்களைக் கச்சையாகக் கொண்ட மொத்த பூமியும் அவனுக்குச் சொந்தமானவையே. தன் வகைக்கான கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு க்ஷத்திரியன் பெரிய செல்வாக்கை ஈட்டுகிறான்.(41) அரச செங்கோலானது அவனால் ஏந்தப்படுகிறது. ஓ! மன்னா, க்ஷத்திரியரில்லாமல் பாதுகாப்புக் கிடையாது. பிராமணர்கள் தேவர்களுக்கும் தேவர்களாக இருப்பதால் அவர்கள் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாவர்.(42) முனிவர்களால் விதிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றும் க்ஷத்திரியர்கள், உரிய சடங்குகளுடன் பிராமணர்களை வழிபட வேண்டும். இதுவே நித்திய வழக்கமாகும்.(43) கள்வர் முதலியோரால் பேராசையுடன் விரும்பப்படும் அனைத்து மனிதர்களின் உடைமைகளும் தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் க்ஷத்திரியர்களால் பாதுகாக்கப்படுகிறது. உண்மையில், மக்களுக்குச் சொந்தமான செல்வம், மனைவிகள் மற்றும் பற உடைமைகள் ஒவ்வொன்றும் க்ஷத்திரியரால் பாதுகாக்கப்படவில்லையெனில் அபகரிக்கப்படும்.(44) மன்னனாக இருக்கும் க்ஷத்திரியன், அனைத்து வகையினரையும் பாதுகாப்பவன், அல்லது மீட்பவனாகிறான். எனவே, க்ஷத்திரிய மனைவியின் மகன், வைசிய மனைவிக்குப் பிறந்தவனைவிட மேன்மையானவனாகக் கருதப்படுவான் என்பதில் ஐயமில்லை. இதன் காரணமாகத் தந்தையின் உடைமையில் க்ஷத்திரிய மனைவியின் மகனானவன், வைசியத் தாய்க்குப்பிறந்த மகனைவிடப் பெரிய பங்கை எடுத்துக் கொள்ளலாம்” என்றார் {பீஷ்மர்}.(45)

யுதிஷ்டிரன், “பிராமணர்களுக்கும் பொருந்தும் விதிகளை முறையாகச் சொன்னீர். எனினும், பிறருக்குப் பொருந்தும் விதிகள் என்னென்ன?” என்று கேட்டான்.(46)

பீஷ்மர், “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, க்ஷத்திரியன் இரண்டு மனைவிகளைக் கொள்ளலாம் என விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு க்ஷத்திரியன் சூத்திர வகையிலிருந்து மூன்றாம் மனைவியைக் கொள்ளலாம். அத்தகைய நடைமுறை வழக்கத்தில் இருப்பது உண்மையென்றாலும், சாத்திரங்களால் அஃது ஏற்கப்படவில்லை.(47) ஓ! யுதிஷ்டிரா, ஒரு க்ஷத்திரியனுக்கான மனைவிகளின் வகை இவ்வாறு இருக்க வேண்டும். ஓ! மன்னா, ஒரு க்ஷத்திரியனின் உடைமை எட்டு பங்குகளாகப் பிரிக்கபட வேண்டும்.(48) க்ஷத்திரிய மனைவியின் மகன் தந்தையின் உடைமையில் அத்தகைய பங்குகளில் நான்கை எடுத்துக் கொள்ளலாம். வைசிய மனைவியின் மகன் அத்தகைய பங்குகளில் மூன்றை எடுத்துக் கொள்ளலாம்.(49) எஞ்சியுள்ள ஒரு பங்கு, அல்லது எட்டாவது பங்கை சூத்திர மனைவியின் மகன் எடுத்துக் கொள்ளலாம். எனினும், சூத்திர மனைவியின் மகன் தந்தை கொடுத்தால் மட்டுமே எடுத்துக்கொள்ளலாமே அன்றி வேறு வகையில் எடுத்துக் கொள்ளக்கூடாது.(50)

வைசியனுக்கு ஒரே ஒரு மனைவி மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது. சூத்திர வகையில் இருந்து இரண்டாம் மனைவியைக் கொள்ளலாம். அத்தகைய நடைமுறை வழக்கத்தில் இருப்பது உண்மையென்றாலும், சாத்திரங்களால் அஃது ஏற்கப்படவில்லை.(51) ஒரு வைசியனுக்கு, வைசியரில் ஒருத்தி, சூத்திரரில் ஒருத்திய என இரு மனைவிகள் இருந்தால், அவர்களுக்கு இடையிலான நிலையில் வேறுபாடு இருக்கும்.(52) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஒரு வைசியனின் செல்வமானது ஐந்து பங்குகளாகப் பிரிக்கப்பட வேண்டும். ஓ! மன்னா, ஒரு வைசியனுக்குத் தன் வகையைச் சார்ந்த மனைவியின் மூலமான மகன்கள் மற்றும் தாழ்ந்த வகையைச் சார்ந்தவளுடைய மகன்கள் குறித்தும், அவனுடைய பிள்ளைகளுக்கு மத்தியில் அவனது செல்வம் பிரிக்கப்பட வேண்டிய வகைக் குறித்தும் நான் இப்போது சொல்லப் போகிறேன்.(53) வைசிய மனைவிக்குப் பிறந்த மகன் தன் தந்தையின் செல்வத்தில் அத்தகைய பங்குகளில் நான்கை எடுத்துக் கொள்ளலாம். ஓ! பாரதா, ஐந்தாம் பங்கானது சூத்திர மனைவிக்குப் பிறந்த மகனைச் சார்ந்தது எனச் சொல்லப்படுகிறது.(54) எனினும், அத்தகைய மகன் தன் தந்தை கொடுக்கும்போதே எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தை அவனுக்குக் கொடுக்காதவரை அவன் எதையும் எடுக்கக் கூடாது. மூன்று உயர்ந்த வகையினரிலும், சூத்திர மனைவியால் பெறப்பட்ட மகன், தந்தையின் செல்வத்தில் எந்தப் பங்குக்கும் உரிமையற்றவனாகவே எப்போதும் கருதப்பட வேண்டும்.(55)

ஒரு சூத்திரன் தன் வகையைச் சார்ந்த ஒரே ஒரு மனைவியை மட்டுமே கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அவன் மற்றொரு மனைவியைக் கொள்ளக் கூடாது. அத்தகைய மனைவியானவள் மூலம் அவன் நூறு மகன்களையே பெற்றிருந்தாலும், அவன் விட்டுச் செல்லும் செல்வத்தை அவர்கள் அனைவரும் சமமாகவே பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.(56)

பிற வகையினரைப் பொறுத்தவரையில், கணவனின் சொந்த வகையில் கொள்ளப்பட்ட மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் தங்கள் தந்தையின் செல்வத்தைத் தங்களுக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.(57) மூத்த மகனானவன், தன் தந்தையின் சிறந்த பொருட்களில் தன் தம்பிகள் ஒவ்வொருவரையும்விட ஒரு பங்கு அதிகமாகப் பெறுவதால், அவனுடைய பங்கானது பிற மகன்கள் ஒவ்வொருவரையும் விட அதிகமானதாக இருக்கும். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, இதுவே சுயம்புவால் அறிவிக்கப்பட்ட மரபுரிமை {சொத்துரிமை / வாரிசுரிமைச்} சட்டமாகும்.(58) ஓ! மன்னா, கணவனின் சொந்த வகையிலேயே கொள்ளப்பட்ட மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் அனைவருக்கும் மத்தியில் மற்றொரு வேறுபாடு இருக்கிறது. திருமணம் செய்து கொள்வதில், மூத்தவன் எப்போதும் இளைவர்களை முந்த வேண்டும்.(59) மனைவிகள் தங்கள் பிறப்பு வகையின் அடிப்படையில் சமமாகவும், பிள்ளைகள், தங்கள் தாய்மாரின் நிலையைப் பொறுத்தவரையில் சமமாகவும் இருக்கையில், முதலில் பிறந்த மகனானவன், தன் தம்பிகள் ஒவ்வொருவரையும் விட ஒரு பங்கு அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அடுத்து வரும் மகன், மதிப்பில் அடுத்ததாக இருக்கும் பங்கைக் கொள்ள வேண்டும். அதே வேளையில், அனைவரிலும் இளைய மகன், இளையவனுக்கு உரிய பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும்[3].(60) இவ்வாறு, அனைத்து வகை மனைவிகளுக்கும் மத்தியில், கணவனின் வகையையே சார்ந்த மனைவிகள் முதல்விகளாகக் கருதப்படுகிறார்கள். மரீசியின் மகனான பெரும் முனிவர் காசியபரால் இதுவே தீர்மானிக்கப்பட்டது[4]” என்றார் {பீஷ்மர்}.(61)

கலப்பு வர்ண சாதிகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 48-கலப்பு வர்ண சாதிகளின் வரலாறு குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “செல்வத்தின் தூண்டல் மூலமோ, வெறும் காமத்தின் மூலமோ, (ஆண், பெண் இருவரின்) உண்மையான பிறப்பு வகைக் குறித்த அறியாமையின் மூலமோ, அல்லது மடமையின் மூலமோ பல்வேறு வகையான கலப்புகள் {வர்ணங்களில் பல்வேறு வகை கலப்புகள்} ஏற்படுகின்றன.(1) ஓ! பாட்டா, கலப்பு வகுப்புகளில் பிறந்த மனிதர்களின் கடமைகள் மற்றும் அவர்களுக்காக விதிக்கப்பட்டுள்ள செயல்கள் என்னென்ன? இது குறித்து நீர் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தொடக்கத்தில், அனைத்து உயிரினங்களின் தலைவன் நான்கு வகைகளைப் படைத்து, வேள்வியின் நிமித்தம் அவரவருக்குரிய செயல்களையும், கடமைகளையும் விதித்தான்[1].(3) பிராமணன், நான்கு வகைகள் ஒவ்வொன்றில் இருந்தும் ஒன்றென நான்கு மனைவிகளைக் கொள்ளலாம். அவர்களில் இருவரில் (தன் வகையிலும் {பிராமண வர்ணத்திலும்}, அதற்கு அடுத்த வகையிலும் {க்ஷத்திரிய வர்ணத்திலும்} கொள்ளப்பட்ட மனைவிகளில்) அவன் தனக்குத் தானே பிறக்கிறான் (அவர்களின் அவன் பெறும் பிள்ளைகள் அவனுடைய அதே நிலை {வர்ணத்தைக்} கொண்டவர்களாகக் கருதப்படுவர்). எனினும், அடுத்தடுத்த வகைகளில் (வைசிய மற்றும் சூத்திர வகைகளில்) அவன் கொள்ளும் இரு மனைவிகளிடம் பிறக்கும் மகன்கள், தந்தையுடைய நிலையால் தீர்மானிக்கப்படாமல், அவர்களுடைய தாய்மாரின் நிலையால் தீர்மானிக்கப்படுவதால் தாழ்ந்தவர்களாவர்.(4)சூத்திரப் பெண்ணின் உடலானது சடலத்தைப் போல மங்கலமற்றது என்பதால், ஒரு பிராமணனால் ஒரு சூத்திர மனைவியிடம் பெறப்படும் மகனானவன், சடலத்தைக் குறிக்கும் வகையில் அவன் பாராசவன் என்றழைக்கப்படுகிறான். அவன் தன் (தந்தையின்) குலத்தைச் சேர்ந்த மனிதர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். உண்மையில், அவனுக்காக விதிக்கப்பட்டிருக்கும் தொண்டெனும் கடமையைக் கைவிடுதல் அவனுக்கு முறையாகாது.(5) அவன் தன் சக்திக்குத்தக்க அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றித் தன் குடும்பச் சுமைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும். வயதால் அவனே மூத்தவனாக இருப்பினும், தன் தந்தைக்குப் பிறந்தவர்களும், தன்னிலும் வயது குறைந்தவர்களுமான வேறு பிள்ளைகளுக்குக் கடமையுணர்வுடன் தொண்டாற்றி, தான் ஈட்ட நேர்வதையெல்லாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.(6)

ஒரு க்ஷத்திரியன் மூன்று மனைவிகளைக் கொள்ளலாம். அவர்களில் இருவரில் (தன் வகையிலும் {க்ஷத்திரிய வர்ணத்திலும்}, அதற்கு அடுத்த வகையிலும் {வைசிய வர்ணத்திலும்} கொள்ளப்பட்ட மனைவிகளில்) அவன் தனக்குத் தானே பிறக்கிறான் (அவர்களிடம் அவன் பெறும் பிள்ளைகள் அவனுடைய அதே நிலை {க்ஷத்திரிய வர்ணத்தைக்} கொண்டவர்களாகக் கருதப்படுவர்). சூத்திர வகையைச் சார்ந்த அவனது மூன்றாவது மனைவி மிகத் தாழ்ந்தவளாகக் கருதப்படுகிறாள். அவளிடம் அவன் பெறும் மகனானவன், ஓர் உக்ரன் என்றழைக்கப்படுகிறான்.(7)

வைசியன் இரு மனைவிகளைக் கொள்ளலாம். அவர்களில் இருவரில் (தன் வகையிலும் {வைசிய வர்ணத்திலும்}, அதற்கு அடுத்த வகையிலும் {சூத்திர வர்ணத்திலும்} கொள்ளப்பட்ட மனைவிகளில்) அவன் தனக்குத் தானே பிறக்கிறான் (அவர்களிடம் அவன் பெறும் பிள்ளைகள் அவனுடைய அதே நிலை {வைசிய வர்ணத்தைக்} கொண்டவர்களாகக் கருதப்படுவர்).

சூத்திரன், தன் சொந்த வகையில் மட்டுமே ஒரே ஒரு மனைவியைக் கொள்ளலாம். அவனால் பெறப்படும் மகனும் சூத்திரனாகிறான்.(8)

மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளைத் தவிர வேறு சந்தர்ப்பங்களில் பிறக்கும் ஒரு மகன் மிகத் தாழ்ந்தவனாகப் பார்க்கப்படுகிறான். தாழ்ந்த வகையைச் சார்ந்த ஒரு மனிதன், மேன்மையான வகையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு மகனைப் பெற்றால் அத்தகைய மகன், நான்கு தூய வகைகளுக்கு வெளியே உள்ள வகையாகக் கருதப்படுவான். உண்மையில், அத்தகைய மகன், அடிப்படையான நான்கு வகைகளோடு பார்க்கப்படும்போது இகழத்தக்கவனாகிறான்.(9)

ஒரு க்ஷத்திரியன் ஒரு பிராமணிப் பெண்ணிடம் ஒரு மகனைப் பெற்றால், அத்தகைய மகன், நான்கு தூய வகைகள் {வர்ணங்கள்} எதனிலும் சேர்த்துக் கொள்ளப்படாமல் ஒரு சூதனாகவே கருதப்படுவான். ஒரு சூதனின் கடமைகள் அனைத்தும், மன்னர்கள் மற்றும் வேறு பெரும் மனிதர்களின் புகழ்மாலைகள் மற்றும் துதிகளை உரைப்பது தொடர்புடையனவாகும்.

ஒரு வைசியனால், பிராமண வகையைச் சார்ந்த ஒரு பெண்ணிடம் பெறப்படும் மகன் ஒரு வைதேஹகன் எனக் கருதப்படுகிறான். அவனுக்கான கடமைகள், மதிக்கத்தக்க குடும்பங்களின் பெண்களின் தனிமையைப் பாதுகாக்கும் வகையில் தடிகளைத் தாங்குதல் மற்றும் அவர்கள் பின்னால் ஓடுதல் போன்ற பொறுப்புகளாகும்[2]. அத்தகைய மகன்களுக்குத் தூய்மைச் சடங்குகள் ஏதும் விதிக்கப்படவில்லை[3].(10)

ஒரு சூத்திரன், நான்கு வகைகளில் முதன்மையான வகை {பிராமண வர்ணப்} பெண்ணுடன் கலப்பதால் பெறப்படும் மகன் சண்டாளன் என்றழைக்கப்படுகிறான். கடும் இயல்புகளுடன் கூடிய அவன், நகரங்களுக்கும், ஊர்களுக்கும் வெளியில் வாழ வேண்டும். அவன் பொதுமக்களுக்குக் கொடுக்கப்படும் மரணதண்டனைகளை நிறைவேற்றும் தொழிலைச் செய்ய வேண்டும். இத்தகைய மகன்கள் தங்கள் குலத்தில் இழிந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, இவர்கள் கலப்புவர்ண சந்ததியாவர்.(11)

ஒரு வைசியனால், ஒரு க்ஷத்திரியப் பெண்ணிடம் பெறப்படும் மகன் ஒரு வந்தியாகவோ, மாகதனாகவோ ஆகிறான். அவனுக்கான கடமைகள் சொற்திறமிக்கப் புகழுரைகளை உரைப்பதாகும் {பாடுவதாகும்}. வரம்புமீறப்பட்டு, ஒரு சூத்திரனால், ஒரு க்ஷத்திரியப் பெண்ணிடம் பெறப்பட்ட மகன் ஒரு நிஷாதனாகிறான். அவனுக்கான கடமைகள் மீன் பிடித்தலாகும்.(12)

ஒரு சூத்திரன் ஒரு வைசியப்பெண்ணிடம் கலந்து அவளிடம் பெறப்பட்ட மகன் ஆயோகவன் என்றழைக்கப்படுகிறான். அத்தகைய ஒரு மனிதனுக்கு ஒதுக்கப்பட்ட கடமையானது தக்ஷனுக்குரியதாகும் (தச்சனுக்குரியதாகும்) {தச்சு வேலையாகும்}. அவர்கள் எவ்வகைச் செல்வத்தை வைத்துக் கொள்ள உரிமையற்றவர்களாவர்.(13)

கலப்பு வர்ணங்களைச் சார்ந்த மனிதர்கள், தங்கள் சொந்த கலப்பு வர்ணங்களைச் சார்ந்த மனைவிகளிடம் பெறும் பிள்ளைகள் அதே வகையைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் சாதிகளுக்குக் கீழான சாதி பெண்களிடம் பெறும் பிள்ளைகள், தங்கள் தாய் சார்ந்த நிலையை அடைவதால் தங்கள் தந்தையை விட இழிந்தவர்களாகிறார்கள்.(14)

நான்கு தூய வகைகளைப் பொறுத்தவரையில், மனிதர்கள் தங்கள் வகைகளிலும், தங்களுக்கு அடுத்த வகைகளிலும் மனைவிகளைக் கொண்டு பெறும் பிள்ளைகள் தங்கள் சொந்த வகைகளையே {வர்ணங்களையே} அடைகிறார்கள். எனினும், வேறு மனைவிகளிடம் பெறப்படும் சந்ததி, அடிப்படையான நான்கு தூய வகைகளுக்கு வெளியே உள்ள நிலையைக் கொண்டவர்களாகக் கருதப்படுவார்கள்.(15) அத்தகைய பிள்ளைகள் தங்கள் சொந்த வகுப்புப் பெண்களிடம் மகன்களைப் பெறும்போது, அந்த மகன்கள் தங்கள் தந்தைமாரின் நிலையை {வர்ணத்தையே} அடைகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த சாதிக்கு {வர்ணத்திற்கு} வெளியே மனைவிகளைக் கொள்ளும்போது மட்டுமே, அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் தாழ்ந்த நிலையை அடைகின்றனர்.(16)

ஒரு சூத்திரன், மிக மேன்மையான வகையை {பிராமண வர்ணத்தைச்} சார்ந்த ஒரு பெண்ணிடம் நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகையில் ஒரு மகனைப் பெறுவது (அத்தகைய மகன் மிகத் தாழ்ந்த சண்டாளனாகக் கருதப்படுவதால்) இதற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது. நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகையைச் சார்ந்த மகன், அடிப்படையான நான்கு வகைகளைச் சார்ந்த பெண்களிடம் கலப்பதன் மூலம், மிகத் தாழ்ந்த, இழிந்த நிலை கொண்ட சந்ததியை உண்டாக்குகின்றனர்.(17) நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகைகளைச் சார்ந்த மற்றும், அவ்வகைகளுக்கும் வெளியே உள்ள வகைகளைச் சார்ந்த பிள்ளைகள் தங்களை விட மேன்மையான வகுப்புகளைச் சார்ந்த பெண்களுடன் கலப்பதால் பெருகுகிறார்கள். இவ்வழியில் தாழ்ந்த நிலை வகுப்புகளைச் சார்ந்த மனிதர்களிடம் இருந்து பதினைந்து மிக இழிந்த நிலை கொண்ட வகுப்புகள் உண்டாகின்றன[4].(18)கலக்கத்தகாத பெண்களுடன் பாலினக் கலவி கொள்வதால் மட்டுமே கலப்பு வகுப்புகள் உண்டாகின்றன. அடிப்படையான அல்லது தூய்மையான நான்கு வகைகளுக்கு வெளியே உள்ள வகுப்புகளின் மத்தியில், சைரந்திரி என்றழைக்கப்படும் வகுப்பைச் சார்ந்த பெண்களிடம், {வைசிய தந்தைக்கும், க்ஷத்திரிய தாய்க்கும் பிறந்த} மாகதன் என்றழைக்கப்படும் வகுப்பைச் சார்ந்த ஆண்களால் பிள்ளைகள் பெறப்படுகின்றனர்.(19) அத்தகைய சந்ததியின் தொழிலானது, மன்னர்கள் மற்றும் பிறரின் மேனிகளை அலங்கரிப்பதாகும். அவர்கள் களிம்புகள் {மருந்துகள்} தயாரிப்பது, மலர்மாலைகள் தயாரிப்பது, மேனி அலங்காரப் பொருட்களை உற்பத்தி செய்வது ஆகியவற்றை நன்கறிந்தவர்களாவர். அவர்கள் தங்கள் பிறப்பின் அடிப்படையில் சுதந்திரமானவர்களாக இருப்பினும், தொண்டுக்குரிய வாழ்வையே அவர்கள் நோற்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகை மாகதர்கள் மற்றும் சைரந்திரி என்றழைக்கப்படும் பெண்களுக்கு மத்தியில் ஏற்படும் கலப்பில் ஆயோகவம் என்றழைக்கப்படும் மற்றொரு சாதி உண்டாகிறது. அவர்களது தொழில் (மீன், நீர்க்கோழி மற்றும் விலங்குகளைப் பிடிக்க உதவும்) வலைகளை உண்டாக்குவதாகும். சைரந்திரி சாதி பெண்களிடம் வைதேஹகர்கள் கலப்பதன் மூலம், மது மற்றும் சாராயம் உற்பத்தி செய்யும் மைரேயகர்கள் என்றழைக்கப்படும் பிள்ளைகள் பிறக்கிறார்கள்.(20)

நிஷாதர்களில் இருந்து மத்குரன் என்றழைக்கப்படும் சாதியும், ஓடம் செலுத்துவதைத் தொழிலாகக் கொண்ட தாஸர்கள் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு சாதியும் உண்டாகிறது. சண்டாளனிலிருந்தும், பிணங்களைக் காக்கும் தொழிலைக் கொண்ட ஸ்வபாகன் என்றழைக்கப்படும் குலம் உண்டாகிறது.(21) மாகதி சாதிப் பெண்கள், தீய நிலைகளைக் கொண்ட இந்த நான்கு சாதிகளுடன் கலப்பதன் மூலம் வஞ்சத்தையே பயின்று வாழ்வை நடத்தும் இன்னும் மூன்று சாதிகளை உண்டாக்குகின்றனர். அவர்கள் மாம்ஸன் {இறைச்சி விற்பனை செய்பவர்கள்}, ஸ்வாதுகரன் {ருசிமிக்க உணவுவகைகளைச் செய்பவர்கள்}, க்ஷௌத்ரன் {தேனெடுப்பவர்கள்}, ஸௌகந்தன் {நறுமணப் பொருள் செய்பவர்கள்} ஆகியோராவர்.(22)

வைதேஹனிலிருந்து வஞ்சகத்தைப் பயின்றும் வாழும் கொடுமையும், பாவமும் நிறைந்த சாதி தோன்றுகிறது. நிஷாதர்களில் இருந்து, கழுதை பூட்டப்பட்ட தேரில் பயணிப்பவர்களான மத்ரநாப சாதியினர் தோன்றுகின்றனர்.(23)

சண்டாளர்களில் இருந்து, கழுதைகள், குதிரைகள் மற்றும் யானைகளின் இறைச்சியை உண்பவர்களான புல்கஸன் என்ற சாதி உண்டாகிறது. இவர்கள் மனித சடலங்களின் தோலுரிப்பதால் கிடைக்கும் ஆடைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்கிறார்கள். உடைந்த மண்கலங்களில் அவர்கள் உண்பதும் காணப்படுகிறது.(24) மிக இழிந்த இந்த மூன்று சாதிகளும் ஆயோகவ சாதிப் பெண்களிடம் (வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த தந்தைகள் மூலம்) பிறக்கின்றன.

க்ஷுத்ரன் என்றழைக்கப்படும் சாதி வைதேஹகனிலிருந்து உண்டாகிறது. புறநகரங்கள் மற்றும் ஊர்களுக்கு வெளியே வசிப்பவர்களான ஆந்திரன் என்றழைக்கப்படும் சாதியும் (வைதேஹகர்களிலிருந்து) உண்டாகிறது.(25)

ஒரு சர்மகாரன், ஒரு நிஷாத சாதி பெண்ணிடம் கலப்பதன் மூலம் காராவரன் என்றழைக்கப்படும் வகுப்பை உண்டாக்குகிறான். மேலும் ஒரு சண்டாளனில் இருந்து, கூடைகள் மற்றும் மூங்கில் வேலைப்பாடுகள் செய்யும் பாண்டுசௌபாகன் என்ற பெயரால் அறியப்படும் சாதி உண்டாகிறது.(26)

ஒரு நிஷாதன், வைதேஹி சாதிப் பெண்ணுடன் கலப்பதன் மூலம் ஆஹிண்டகன் என்ற பெயரில் அழைக்கப்படும் சாதி உண்டாகிறது. ஒரு சண்டாளன், ஒரு சௌபாகப் பெண்ணிடம் பெறும் மகன், சண்டாளன் என்ற நிலை அல்லது தொழிலில் இருந்து வேறுபடாதவனாக இருக்கிறான்.(27)

ஒரு நிஷாதிப் பெண், ஒரு சண்டாளனுடன் கலப்பதன் மூலம் கிராமங்கள் மற்றும் ஊர்களுக்கு வெளியே வாழும் {அந்தேவஸாயி {பாண்டுஸௌபகன்}-ஆன) ஒரு மகனைப் பெறுகிறாள். அத்தகைய சாதிக்காரர்கள் சுடலையில் வாழ்கிறார்கள். அவர்கள் மிக இழிந்த வகையினராகக் கருதப்படுகின்றனர்.(28)

இவ்வாறே வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த தந்தைமார் மற்றும் தாய்மாரின் முறையற்ற, பாவம் நிறைந்த கலவியின் மூலம் இந்தக் கலப்புச் சாதிகள் உண்டாகின்றன. அவர்கள் மறைந்து வாழ்ந்தாலும், வெளிப்படையாக வாழ்ந்தாலும், அவர்களை அவர்களின் தொழில் கொண்டு அறிய வேண்டும்.(29)

அடிப்படையான நான்கு வகையினருக்கு {வர்க்கத்தினருக்கு} மட்டுமே சாத்திரங்களில் கடமைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பிறரைப் பொறுத்தவரையில் சாத்திரங்கள் முற்றிலும் அமைதியாக இருக்கின்றன. அனைத்து வகையினருக்கு மத்தியிலும், சாத்திரங்களில் கடமைகள் நிர்ணயிக்கப்படாத சாதிகளுக்கு, (தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்ட) என்ன செய்ய வேண்டும் என்பதில் அச்சங்கள் ஏதும் கிடையாது.(30)

வேள்வி செய்யும் வழக்கமில்லாத, அல்லது வேள்விகள் விதிக்கப்படாத மனிதர்களும், அடிப்படையான நான்கு வகைகள் {வர்ணங்களில்} இருந்தாலும், அவற்றுக்கு வெளியே இருந்தாலும், அறவோரின் தோழமையும், போதனையும் இல்லாதவர்களும், அறக்கருத்து ஏதுமின்றிக் கட்டுப்படுத்தப்பட முடியாத காமத்தினால் பிற சாதிப் பெண்களுடன் கலப்பதன் மூலம், எண்ணற்ற கலப்புச் சாதிகள் உண்டாகின்றன. அவற்றின் தொழிலும், வசிப்பிடங்களும் முறையற்ற கலவியின் மூலம் உண்டாகும் அவற்றின் பிறப்பைச் சார்ந்திருக்கின்றன.(31) நான்கு சாலைகள் சந்திக்கும் இடம், அல்லது சுடலை, அல்லது மலைகள் மற்றும் குன்றுகள், அல்லது காடுகள் மற்றும் மரங்கள் சார்ந்த இடங்களில் அவர்கள் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொள்கின்றனர். அவர்கள் இரும்பாலான ஆபரணங்களை அணிந்து கொள்கின்றனர்.(32) அத்தகைய இடங்களில் வாழ்ந்து, தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான தொழில்களை வெளிப்படையாகச் செய்கின்றனர். அவர்கள் தங்கள் மேனியை ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, பல்வேறு வகை வீட்டு உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வாழ்ந்து வருவது காணப்படுகிறது.(33) பசுக்கள் மற்றும் பிராமணர்களுக்கு உதவி செய்வதன் மூலமும், கொடுமையின்மை, கருணை, பேச்சில் வாய்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகிய அறங்களைப் பயில்வதன் மூலமும்,(34) பிறருக்காகத் தங்களின் உயிர்களையே விடுவதன் மூலமும் கலப்பு சாதி மனிதர்கள் நிச்சயம் தங்கள் வெற்றியைத் தேடிக் கொள்கின்றனர். ஓ! மனிதர்களின் தலைவா, இவ்வறங்களே அவர்களின் வெற்றிக்கான காரணங்களாக அமைகின்றன என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை.(35)

புத்தியைக் கொண்ட ஒருவன், அனைத்தையும் கருத்தில் கொண்டு, சாத்திர விதிகளின் படி தனக்குத் தகுந்த அல்லது முறையெனத் தீர்மானிக்கப்பட்ட பெண்களிடம் சந்ததியை உண்டாக்க வேண்டும். இழிந்த சாதியைச் சார்ந்த பெண்ணிடம் பெறப்படும் மகன், நீர்நிலையைக் கடக்க விரும்பும் நீச்சற்காரனுக்குப் பெருங்கனத்தைப் போலவே தன் தந்தையைக் காப்பதற்குப் பதிலாகத் துயரைக் கொண்டு வருகிறான்.(36) ஒரு மனிதன் கல்விமானாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், இவ்வுலகில் காமமும், கோபமும் மனிதனுக்கு இயற்கையான குணங்களாகவே அமைகின்றன. எனவே, பெண்கள் ஆண்களைத் தவறான பாதையில் இழுத்துச் செல்வதே எப்போதும் காணப்படுகிறது.(37) ஆண்கள் தொடர்பு கொண்டால் துன்பத்தை விளைவித்துக் கெடுப்பதே பெண்களின் இயல்பான மனப்பான்மையாக இருக்கிறது. எனவே, ஞானம் கொண்ட மனிதர்கள், பெண்களிடம் பெரும்பற்று கொள்வதில்லை” என்றார் {பீஷ்மர்}.(38)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கலப்புசாதிகளைச் சார்ந்த, தூய்மையற்ற பிறப்பைக் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். மரியாதைக்குரிய அம்சங்களைப் பார்க்கையில், அவர்கள் உண்மையில் மதிக்கத்தகுந்தவர்களாக இல்லை. இந்தப் புறத் தன்மைகளின் விளைவாக அவர்களுடைய பிறப்பைக் குறித்த உண்மையை நாம் அறிய முடியாது. ஓ! பாட்டா, இத்தகைய பிறப்பைக் கொண்ட மனிதர்களைக் குறித்த உண்மையை அறிய ஏதேனும் குறியீடுகள் இருக்கின்றனவா?” என்று கேட்டான்.(39)

பீஷ்மர், “முறையற்ற கலவியின் மூலம் பிறந்த ஒருவன், பல்வேறு குண இயல்புகளைக் கொண்டவனாக இருக்கிறான். மேலும், நல்லோராகவும், அறவோராகவும் ஒப்புக்கொள்ளப்பட்டவர்களின் செயல்களுடன் ஒருவனுடைய செயல்களை ஒப்பிடுவதன் மூலம் அவனது பிறப்பின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும்.(40) மதிப்பில்லா நடத்தை, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளவற்று எதிரான செயல்கள், நேர்மையின்மை, கொடூரத்தன்மை, வேள்விகள் மற்றும் புண்ணியத்திற்கு வழிவகுக்கும் வேறு சாத்திரச் செயல்களைச் செய்யாமை ஆகியவை ஒருவனுடைய தூய்மையற்ற பிறப்பை அறிவிக்கும்.(41) ஒரு மகன் தன் இயல்புகளைத் தந்தையிடமிருந்தோ, தாயிடமிருந்தோ பெறுகிறான். சில வேளைகள் அவன் அவற்றை இருவரிடமிருந்தும் பெறுகிறான். தூய்மையற்ற பிறப்பைக் கொண்டவனால் ஒருபோதும் தன் உண்மை இயல்பை மறைக்க முடியாது.(42) ஒரு புலி அல்லது ஒரு சிறுத்தையின் குட்டி, மேனியில் உள்ள வரிகள் அல்லது புள்ளிகளில் தன் தந்தையையோ, தாயையோ பிரதிபலிப்பதைப் போலவே ஒரு மனிதனால் தன் பிறப்புச் சூழ்நிலைகளைக் குறித்து ஒருபோதும் வஞ்சனை செய்ய முடியாது. (43) ஒருவனுடைய பிறப்பின் வழியை எவ்வளவுதான் மறைத்தாலும், அந்தப் பிறப்புத் தூய்மையற்றதாக இருந்தால், அதன் குணமோ, இயல்போ, சிறிதாகவோ, பெரிதாகவோ நிச்சயம் வெளிப்படும்.(44) அறவொழுக்கம் பயில்பவனைப் போல ஒரு மனிதன் நேர்மையாற்ற பாதையில் நடக்கக்கூடும். எனினும், அவன் அந்தச் செயல்களைச் செய்யும் காரியத்தில், அவன் நல்ல வகையைச் சேர்ந்தவனா {ஆரியனா}, வேறு வகையானவனா என்று தன் இயல்பை எப்போதும் அவன் அறிவிக்கிறான்.(45)

இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் பல்வேறு வகை இயல்புகளைக் கொண்டனவாக இருக்கின்றன. இவ்வாறு உள்ள உயிரினங்களுக்கு மத்தியில், தூய பிறப்பு மற்றும் அறவொழுக்கம் ஆகியவற்றைப் போன்ற நன்மை, அல்லது மதிப்பு வேறு எதனிலும் இல்லை.(46) ஒரு மனிதன் இழிந்த வகையில் பிறந்தவனாக இருந்தால், சாத்திரக் கல்வியின் மூலம் எழும் நற்புத்தியானது, இழிந்த செயல்களில் இருந்து அவனது உடலைப் பாதுகாப்பதில் தவறுகிறது. முற்றான நற்புத்தி பல்வேறு அளவுகளில் இருக்கிறது. அஃது உயர்வாகவோ, நடுத்தரமாகவும், தாழ்வாகவோ இருக்கலாம். தாழ்ந்த வகை மனிதனிடம் அஃது இருந்தாலும், எவ்விளைவையும் உண்டாக்காமல் கூதிர் கால மேகங்களைப் போல அது மறைந்து போகும். மறுபுறம் நற்புத்தியானது, பிறந்திருக்கும் மனிதனிடம் உள்ள தன் அளவுக்கு ஏற்ப அவனது செயல்களில் வெளிப்படுகிறது[5].(47) ஒரு மனிதன் மேன்மையான வகையை {வர்ணத்தைச்} சார்ந்தவனாக இருந்தாலும், அவன் நன்னடத்தையற்றவனாக இருந்தால், எந்த மதிப்பையோ, வழிபாட்டையோ அவன் பெறத்தகுந்தவனல்ல. கடமைகளை அறிந்தவனும், நன்னடத்தைக் கொண்டவனுமான ஒரு சூத்திரனைக் கூட ஒருவன் வழிபடலாம்.(48) ஒரு மனிதன், தான் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்களின் மூலமும், தான் கொண்ட நல்ல அல்லது தீய இயல்களின் மூலமும், பிறந்த குலத்தின் மூலமும் தன்னைத் தானே அறிவித்துக் கொள்கிறான். ஒருவன் பிறந்த குலமானது எக்காரணத்தினாலும் தாழ்ந்ததாக இருந்தால், அவன் தனது செயல்களின் மூலம் அதை விரைவில் உயர்த்தி, பிரகாசிக்கச் செய்து புகழடையச் செய்கிறான்.(49) ஞானம் கொண்ட மனிதர்கள், இந்தக் காரணங்களுக்காவே பலவகைக் கலப்புச் சாதிகள் மற்றும் தூய சாதிகளைச் சார்ந்த பெண்களில், தங்கள் சந்ததி உண்டாக்கத் தகாதவர்களைத் தவிர்க்க வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(50)

இருபது வகை மகன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 49-இருபது வகை மகன்ளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, வகைகள் {வர்ணங்கள்} மற்றும் வகுப்புகள் {கலப்பு சாதிகள்} ஆகியவற்றைத் தனித்தனியாகவும், எவ்வகைப் பெண்களிடம் எவ்வகை மகன் பெறப்படுகிறான்? மகன்களாக எவரை உரிமை கொண்டாடலாம்? என்னென்ன வகை மகன்கள் இருக்கின்றனர்? என்பவை குறித்தும் எங்களுக்குச் சொல்வீராக.(1) மகன்களைப் பொறுத்தவரையில் சச்சரவுகள் அடிக்கடி எழுகின்றன. ஓ! மன்னா, எங்கள் மனத்தைப் பீடிக்கும் ஐயங்களைப் போக்குவதே உமக்குத் தகும். உண்மையில், இக்காரியத்தில் நாங்கள் கலக்கத்தில் {தெளிவற்ற நிலையில்} இருக்கிறோம்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் மடியில் பிறந்த பிள்ளையாக {அனந்தராஜனாக}{1} ஒருவனுடைய சுயமே கருதப்படுகிறது {தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் தானே பெறும் மகன் ஔரஸன் என்றழைக்கப்படுகிறான்}.

பிள்ளை பெறும் பணிக்காகத் தன்னால் அழைக்கப்பட்ட ஒருவன் மூலம் தன் மனைவியிடம் பிறந்த மகன் நிருக்தஜன்{2} என்றழைக்கப்படுகிறான்.

தன் மனைவியிடம் தன் அனுமதி இல்லாமல் வேறு எவராலோ பெறப்பட்ட மகன் பிரஸ்ருதஜன்{3} ஆவான்[1].(3)

தன் நிலையின் இருந்து வீழ்ந்தவிட்ட மனிதன் மூலம் தன் மனைவியிடம் பெறப்பட்ட மகன் பதிதஜன்{4} என்றழைக்கப்படுகிறான்.

கொடுக்கப்பட்டவன், ஆக்கப்பட்டவன் என மேலும் இரு மகன்களும்{5,6} இருக்கின்றனர்.

அத்யுதன்{7} என்றழைக்கப்படும் மற்றொருவனும் இருக்கிறான்[2].(4)

ஒரு கன்னிகையுடைய தந்தையின் இல்லத்தில் பிறந்த மகன் கானீனன்{8} என்றழைக்கப்படுகிறான்.

இவை தவிர்த்து அபத்வம்ஸஜர்கள் என்று அழைக்கப்படும் ஆறுவகை மகன்களும்{9….14},

அபஸதர்கள் என்றழைக்கப்படும் மேலும் அறுவரும்{15….20} இருக்கின்றனர்.

ஓ! பாரதா, சாத்திரங்களில் குறிப்பிடப்படும் பல்வேறு வகை மகன்கள் இவர்களே ஆவர் என்பதை அறிவாயாக” என்றார் {பீஷ்மர்}[3].(5)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அபத்வம்ஸஜர் என்றழைக்கப்படும் அறுவர் யாவர்? மேலும் அபஸதர்கள் என்பவர்கள் யாவர்? இவை யாவையும் விரிவாக எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தாழ்ந்த மூன்று வகைகளைச் சார்ந்த மனைவிகளிடம் ஒரு பிராமணனால் பெறப்படும் மகன்கள் {மூவர்}, தாழ்ந்த இரு வகைகளைச் சார்ந்த மனைவிகளிடம் ஒரு க்ஷத்திரியனால் பெறப்படும் மகன்கள் {இருவர்}, ஓ! பாரதா, தாழ்ந்த ஒரு வகையைச் சார்ந்த மனைவியிடம் ஒரு வைசியனால் பெறப்படும் மகன் {ஒருவன்} ஆகியோரே {இந்த அறுவரே} அபத்வம்ஸஜர்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்கள் இவ்வாறே ஆறு வகைகளாக விளக்கப்படுகின்றனர். இப்போது அபஸதர்கள் யார் என்பதைச் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(8)

ஒரு பிராமணிப் பெண்ணிடம் ஒரு சூத்திரன் பெறும் மகன் சண்டாளன் என்றழைக்கப்படுகிறான். ஒரு க்ஷத்திரியப் பெண்ணிடம் சூத்திர வகையைச் சார்ந்த ஒருவன் பெறும் மகன் விராத்யன் என்றழைக்கப்படுகிறான். வைசியப் பெண்ணிடம், ஒரு சூத்திரத் தந்தை பெறும் மகன் வைத்யன் என்றழைக்கப்படுகிறான். இந்த மூவகை மகன்களும் அபஸதர் என்று அழைக்கப்படுகின்றனர்.(9)

ஒரு வைசியன் பிராமண வகையைச் சார்ந்த ஒரு பெண்ணுடன் கலப்பதன் மூலம் மாகதன் என்றழைக்கப்படும் மகனைப் பெறுகிறான், அதே வேளையில் க்ஷத்திரியப் பெண்ணிடம் வாமகன் என்றழைக்கப்படும் மகனைப் பெறுகிறான்.

க்ஷத்திரியனால் மேன்மையான வகைப் பெண்ணிடம் ஒரு வகை மகனைப் பெற முடியும்.(10) உண்மையில் ஒரு க்ஷத்திரியனால், ஒரு பிராமணப் பெண்ணிடம் பெறப்பட்ட மகன் சூதன் என்றழைக்கப்படுகிறான். இந்த மூவரும் கூட அபஸதர்கள் என்றழைக்கப்படுகின்றனர். ஓ! மன்னா, இந்த ஆறு வகை மகன்களும் மகன்களல்ல என்று சொல்ல முடியாது” என்றார் {பீஷ்மர்}.(11)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒருவனுடைய நிலத்தில் {மனைவியிடத்தில்} பிறந்தவனே அவனுடைய மகன் என்று சிலர் சொல்கின்றனர். மறுபுறம், ஒருவனுடைய வித்தில் இருந்து பெறப்பட்டவனே ஒருவனுடைய மகன் என்றும் சிலர் சொல்கின்றனர். இந்த இரு வகை மகன்களும் சமமானவர்கள்தானா? மேலும், அந்த மகன் யாருடையவன்? ஓ! பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவனுடைய வித்தில் இருந்து பிறந்தவன் அவனுடைய மகனே. எனினும், வித்துக்குச் சொந்தக்காரன் அதில் இருந்து பிறக்கும் மகனைக் கைவிட்டால், அத்தகைய மகன் எவனுடைய மனைவியிடம் பெறப்பட்டானோ அவனுடையவனாவான். அத்யுதன் என்றழைக்கப்படும் மகனுக்கும் இதே விதியே பொருந்தும். அவன் எந்த மனிதனின் வித்திற்குப் பிறந்தானோ அவனுக்கே உரியவனாவான். இருப்பினும், வித்துக்குச் சொந்தக்காரன் அவனைக் கைவிட்டால், அவன் தன் தாயின் கணவனுடைய மகனாகிறான். சட்டம் இதையே அறிவிக்கிறது என்பதை அறிவாயாக” என்றார்.(13)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒருவன் எவனுடைய வித்தில் பிறக்கிறானோ அவனுக்கு மகனாகிறான் என்பதை நாம் அறிவோம். அந்த மகனை ஈன்றெடுக்கும் பெண்ணின் கணவன் அவனிடம் {அந்த மகனிடம்} உரிமையைப் பெறுவது எவ்வாறு? அதே போல அத்யுதன் என்றழைக்கப்படும் மகன், எவனுடைய வித்தில் இருந்து பிறந்தானோ அவனது மகனாகவே அறியப்பட வேண்டும். உரிமையும் வளர்ப்பும் முறிந்து போனதன் விளைவால் அவன் பிறரின் மகனாவது எவ்வாறு?” என்று கேட்டான்.(14)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் தன் மடியில் பிறந்த மகனை ஏதோ ஒரு காரணத்திற்காகக் கைவிட்டால், உயிர் வித்து மட்டுமே மகன் என்ற நிலையை உண்டாக்க முடியாது என்பதால், அவனை அத்தகைய மகனின் தந்தையாகக் கருத முடியாது. நிலத்தை {மனைவியை} உரிமையாகக் கொண்ட மனிதனுக்கு உரியவனாகவே அத்தகைய மகன் கருதப்பட வேண்டும்.(15) ஒரு மனிதன் ஒரு மகனைப் பெற விரும்பி, கருவுற்றிருக்கும் பெண்ணை மணக்கும்போது, தன் மனைவிக்குப் பிறந்த மகனானவன், தன் நிலத்தில் விளைந்த கனியே என்பதால் அவனுக்கே உரியவனாவான். எந்த மனிதனின் உயிர்வித்தில் அந்த மகன் பிறந்தானோ, அவன் அத்தகைய மகனிடம் எந்த உரிமையும் கொள்ள முடியாது.(16) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஒருவனது நிலத்தில் {மனைவியிடத்தில்} பிறந்தவனும், தன்னால் பெறப்படாதவனுமான மகன், தன்னை உண்மையில் பெற்ற தந்தையின் அடையாளங்கள் அனைத்தையும் சுமக்கிறான் (தன் தாயின் கணவனுடைய அடையாளங்களைச் சுமப்பதில்லை). இவ்வாறு பிறக்கும் மகன், உடற்குறி அளிக்கும் சான்றுகளை மறைக்க முடியாது. அவன் கண் பார்வையிலேயே (மற்றொருவனுக்குரியவன் என்று) அறியப்படுவான்[4].(17) ஆக்கப்பட மகனைப் பொறுத்தவரையில், அவன் சில வேளைகளில் ஆக்கியவரின் பிள்ளையாகவும், வளர்த்தவரின் பிள்ளையாகவும் {கிருத்ரிமபுத்ரனாகக்} கருதப்படுகிறான். அவனது வழக்கில், மகன்தன்மைக்கான காரணமாக உயிர்வித்தோ, பிறந்த நிலமோ இருப்பதில்லை” என்றார்.(18)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மகனாக ஆக்கப்பட்டவனும், எடுத்து வளர்க்கப்பட்டதன் காரணமாக மகன் என்ற நிலை உண்டானவனும், உயிர்வித்தையோ, பிறந்த நிலத்தையோ மகன் என்ற நிலைக்குக் காரணமாகக் கொள்ளாதவனுமான மகன் எவ்வகை மகனாவான்?” என்று கேட்டான்.(19)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தந்தை மற்றும் தாயால் சாலையில் கைவிடப்பட்ட ஒரு மகனை ஒருவன் எடுத்து வளர்க்கும்போது, அவ்வாறு எடுத்து வளர்ப்பவன், பெற்றோரைத் தேடியும் காணத்தவறும்போது, அவனே அத்தகைய மகனின் தந்தையாகிறான், பின்னவனும் ஆக்கப்பட்ட மகன் {கிருத்ரிமபுத்ரன்} என்று அழைக்கப்படுகிறான்.(20) சொந்தங்கொள்ள எவரும் இல்லாதபோது அவன் தன்னை வளர்ப்பவருக்கு உரிமையாகிறான். மேலும் அத்தகைய மகன், தன்னை வளர்ப்பவர் சார்ந்த வகைக்கு உரியவனாகவே கருதப்படுகிறான்” என்றார்.(21)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அத்தகைய ஒருவனின் தூய்மைசெய் சடங்குகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும்? எவருக்கு எத்தகைய சடங்குகள் செய்யப்பட வேண்டும்? அவன் எந்தப் பெண்ணை மணந்து கொள்ள வேண்டும்? ஓ!பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(22)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெற்றோரால் கைவிடப்பட்ட மகன், தன்னை எடுத்து வளர்த்தவரின் வகையையே அடைவதால், தன்னை எடுத்து வளர்ப்பவரின் வழக்கத்திற்கு இசைவாகவே அத்தகைய மகனின் {உபநயனம் முதலிய} தூய்மைச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.(23) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உண்மையில், அத்தகைய மகனை வளர்ப்பவன், தன் சொந்த குல மற்றும் உறவுகளின் நடைமுறைப்படி அவனுக்குண்டான தூய்மைச் சடங்குகள் அனைத்தையும் செய்ய வேண்டும். அத்தகைய மகனுக்குத் திருமணத்தில் அளிக்கப்படும் பெண்ணைப் பொறுத்தவரையிலும்கூட, அவள், அவனை வளர்ப்பவனின் வகையைச் சார்ந்தவளாகவே இருக்க வேண்டும்.(24) ஒரு மகனின் உண்மைத் தாயை உறுதி செய்ய முடியாதபோது மட்டுமே இவை யாவும் செய்யப்பட வேண்டும். மகன்களுக்கு மத்தியில், ஒரு கன்னிகைக்குப் பிறந்தவனும் {கானீனனும்}, திருமணத்திற்கு முன்பே கருவுற்ற தாய்க்குப்பிறந்து அதையடுத்து {திருமணத்திற்குப் பிறகு அவளால்} வளர்க்கப்பட்டு வருபவனும் {ஸஹோடனும்} மதிப்பற்றவர்களாகவும், மிக இழிந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.(25) எனினும், சட்டப்படியான திருமணத்தின் மூலம் தந்தையால் பெறப்பட்ட மகன்களுக்கு விதிக்கப்பட்ட தூய்மைச் சடங்குகளையே இவர்கள் இருவரும் பெற வேண்டும். தந்தையின் வித்தில் பிறந்ததன் விளைவால் தந்தையின் மகனாகுபவன் {க்ஷேத்ரஜன்}, அபஸதர்கள் என்றழைக்கப்படும் மகன்கள், கன்னிப்பருவத்தில் மனைவியால் பெறப்பட்டு, திருமணத்திற்குப் பிறகு வளர்க்கப்படுபவர்கள் {ஸகோடர்கள்} ஆகியோரைப் பொறுத்தவரையில்,(26) பிராமணர்களும், பிறரும் தங்கள் தங்கள் வகைக்குரிய அதே தூய்மைச் சடங்குகளையே அவர்களுக்கும் செய்ய வேண்டும். பல்வேறு வகை மகன்கள் பொறுத்தவரையில் சாத்திரங்களில் காணப்படும் தீர்மானங்கள் இவையே. உன் கேள்விகள் தொடர்புடைய அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். வேறு என்ன நீ கேட்க விரும்புகிறாய்?” என்று கேட்டார் {பீஷ்மர்}.(27)

சியவனரும் மீன்களும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 50-தோழமையினால் ஏற்படும் கருணை குறித்துச் சொல்வதற்காக சியவனரின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; பனிரெண்டு வருடம் நீரில் தவமிருந்த சியவனர்; நீர்வாழ் உயிரினங்களுடன் அவருக்கு இருந்த தோழமை; மீன்பிடித்த மீனவர்கள்; இறந்த மீன்களைக் கண்டு துயருற்ற சியவனர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அடுத்தவர் துயரத்தைக் கண்டு உணரும் கருணை, அல்லது பரிதாப உணர்வின் இயல்பென்ன? ஒருவன் மற்றவனுடன் தோழமையுடன் வாழ்வதன் விளைவால் அந்த மற்றவனிடம் அவன் கொள்ளும் கருணை, அல்லது பரிவு உணர்வின் இயல்பென்ன? பசுக்கள் தொடர்புடைய உயர்ந்த அருளின் (அளவென்ன?) இயல்பென்ன? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே, இதுதொடர்பாக ஒரு பழங்கதையில் நஹுஷனுக்கும், முனிவர் சியவனருக்கும் இடையில் நடந்த உரையாடலை உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பழங்காலத்தில், பிருகு குலத்தைச் சேர்ந்தவரும், உயர்ந்த நோன்புகளை எப்போதும் நோற்பவருமான பெரும் முனிவர் சியவனர், உதவாசம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைச் சில காலத்திற்கு வாழ விரும்பி அதன் படியே வாழவும் தொடங்கினார்.(3) செருக்கு, கோபம், இன்பதுன்பங்கள் ஆகியவற்றைக் கைவிட்ட அந்தத் தவசி அந்நோன்பு நோற்கும் உறுதியேற்றுக் கொண்டு, உதவாஸ விதிகளின் படி பனிரெண்டு ஆண்டுகள் வாழத் தொடங்கினார்[1].(4) அம்முனிவர் அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதேபோலவே அவர் நீரில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். அந்தப் பலமிக்கத் தவசி அனைவரும் நடந்து கொள்ளும் நடத்தையால் நிலவுக்கு ஒப்பானவராக இருந்தார்.(5)தேவர்கள் அனைவரையும் வணங்கி, பாவங்கள் அனைத்தில் இருந்தும் தம்மைத் தூய்மை செய்து கொண்ட அவர், கங்கையும், யமுனையும் கலக்கும் இடத்தில் உள்ள நீரில் நுழைந்து, உயிரற்ற ஒரு மரக்கட்டையைப் போல அங்கே நின்று கொண்டிருந்தார்.(6) காற்றுக்கு ஒப்பான வேகத்தைக் கொண்டவையும், சீற்றத்துடன் முழங்கி வருபவையுமான அவ்விரு ஆறுகளின் நீரோட்டத்தை எதிர்த்து அஃதை அவர் தமது தலையில் தாங்கினார்.(7) பிரயாகையில் கலக்கும் கங்கை, யமுனை, பிற ஆறுகள், தடாகங்கள் ஆகியன அந்த முனிவரைப் பீடிக்காமல் (அவருக்கான மதிப்பைக் காட்டி) அவரைக் கடந்து சென்றன.(8) ஒரு மரக்கட்டையின் தன்மையை அடைந்த அந்தப் பெரும் முனிவர் சில வேளைகளில் அந்த நீரிலேயே கிடந்து சுகமாக உறங்கினார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, சில வேளைகளில் அந்த நுண்ணறிவுமிக்கத் தவசி நிமிர்ந்த நிலையில் நின்று கொண்டிருந்தார்.(9) அந்த நீரில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் ஏற்புடையவராக அவர் இருந்தார். இவை யாவும் சிறு அச்சமேதுமில்லாமல் அந்த முனிவரின் உதடுகளை முகர்ந்து பார்த்தனர்.(10)

அந்தப் பெரும் நீர்ச் சங்கமத்தில் அம்முனிவர் இவ்வழியிலேயே நெடுங்காலம் இருந்தார். ஒரு நாள், சில மீனவர்கள் அங்கே வந்தனர்.(11) ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே, அம்மனிதர்கள் கைகளில் வலைகளுடன் அம்முனிவர் இருந்த இடத்திற்கு வந்தனர். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த அவர்கள் அனைவரும் மீன் பிடிக்க விரும்பினர்.(12) நல்ல உடற்கட்டு, அகன்ற மார்பு, பெரும் பலம் தன்னுத் துணிவைக் கொண்டவர்களும், நீருக்கஞ்சி ஒருபோதும் திரும்பாதவர்களும், தங்கள் வலைகளின் மூலம் ஈட்டுவதைக் கொண்டு வாழ்பவர்களுமான அம்மனிதர்கள், மீன்பிடிக்கத் தீர்மானித்தனர்.(13) ஓ! பாரதர்களின் தலைவா, பல மீன்களைக் கொண்ட அந்த நீர்நிலைக்கு வந்த அந்த மீனவர்கள், தங்கள் வலைகள் அனைத்தையும் ஒன்றாகக் கட்டினர்.(14) மீனை விரும்பியவர்களும், எண்ணிக்கையில் பலராக இருந்தவர்களுமான அந்தக் கைவர்தர்கள் {செம்படவர்கள்} ஒன்றாகச் சேர்ந்து, தங்கள் வலைகளுடன் கங்கை மற்றும் யமுனையின் நீரில் ஒரு பகுதியைச் சூழ்ந்து கொண்டனர்.(15)

உண்மையில் அவர்கள், புதுக் கயிறுகளால் அமைக்கப்பட்டதும், போதுமான அளவுக்கு நீள அகலங்களுடன் கூடிய ஒரு பெரிய இடத்தைக் கவரவல்லதுமான தங்கள் வலையை நீரில் வீசினர்.(16) நீருக்குள் இறங்கிய அவர்கள் அனைவரும், மிகப் பெரியதும், ஒரு பெரிய இடத்தில் நன்கு பரவியிருந்ததுமான தங்கள் வலையைப் பெரும்பலத்துடன் இழுக்கத் தொடங்கினர்.(17 அவர்கள் அனைவரும் அச்சத்தில் இருந்து விடுபட்டவர்களாகவும், உற்சாகம் நிறைந்தவர்களாகவும், ஒருவர் சொல்வதை மற்றவர் செய்ய முழுமையாகத் தீர்மானித்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை வலைக்குள் சிக்க வைப்பதில் வென்றனர்.(18) ஓ! மன்னா, அவ்வாறு அவர்கள் தங்கள் வலையை இழுத்த போது, பெரும் எண்ணிக்கையிலான மீன்களுடன் சேர்த்து பிருகுவின் மகனான சியவனரையும் எளிதாக இழுத்தனர்.(19) அவரது உடலில் ஆற்றுப் பாசிகள் அதிகம் வளர்ந்திருந்தன. அவரது தாடியும், சடாமுடியும் பச்சைநிறத்தில் இருந்தன. அவரது மேனி முழுவதும் சங்குகளும், தலைகளுடன் கூடிய வேறு மெல்லுடலிகளும் {பன்றிமுட்களும்} காணப்பட்டன.(20)

வேதங்களை நன்கறிந்தவரான அம்முனிவர் நீரில் இருந்து இவ்வாறு இழுக்கப்பட்டதைக் கண்ட அந்த மீனவர்கள் அனைவரும் கூப்பிய கரங்களுடன் நின்று, நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் விழுந்தும், மீண்டும் மீண்டும் தலைவணங்கினர்.(21) வலையில் அகப்பட்ட மீன்கள், வலை இழுக்கப்பட்டதன் மூலம் உண்டான அச்சம் மற்றும் துன்பத்தினாலும், நிலத்திற்குக் கொண்டு வரப்பட்டதன் விளைவாலும், தங்கள் உயிரை விட்டன.(22) மீன்களுக்கு நேர்ந்த இந்தப் பெரும் படுகொலையைக் கண்ட அந்தத் தவசி, கருணையால் நிறைந்து மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டார்.(23)

மீனவர்கள், “அறியாமையின் மூலம் நாங்கள் (புனிதமானவரான உம்மை நீரில் இருந்து இழுத்து) இப்பாவத்தை இழைத்துவிட்டோம். எங்களிடம் நிறைவடைவீராக. நாங்கள் நிறைவேற்ற வேண்டிய உமது விருப்பம் எது? ஓ !பெருந்தவசியே, எங்களுக்கு ஆணையிடுவீராக” என்று கேட்டனர்”.(24)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்டதும், தம்மைச் சுற்றிலும் மீன்குவியல்களுக்கு மத்தியில் இருந்த சியவனர், “நான் மிகவும் விரும்பும் விருப்பத்தைக் குவிந்த கவனத்தோடு கேட்பீராக.(25) நான் இந்த மீன்களோடு இறக்கப் போகிறேன், அல்லது என்னை இவற்றோடு சேர்த்து விற்று விடுவீராக. நான் இவற்றோடு சேர்ந்து நீரில் நெடுங்காலம் வாழ்ந்துவிட்டேன். இத்தகைய நேரத்தில் நான் இவற்றைக் கைவிட விரும்பவில்லை” என்றார் {சியவனர்}.

அவர் இவ்வார்த்தைகளை அவர்களிடம் சொன்னதும், அந்த மீனவர்கள் பெரும் அச்சமடைந்தனர். வெளிறிய முகங்களுடன் கூடிய அவர்கள் மன்னன் நஹுஷனிடம் சென்று, நடந்தது அனைத்தையும் தெரிவித்தனர்” {என்றார் பீஷ்மர்}.(27)

மீன்களும் மீனவரும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 51-சியவனருக்கான விலையைச் சொன்ன நஹுஷன்; பசுவின் பெருமை; மீனவர்களிடம் இருந்து பசுவைப் பெற்றுக் கொண்ட சியவனர்; சொர்த்தையடைந்த மீன்களும், மீனவர்களும்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“மன்னன் நஹுஷன், சியவனர் அடைந்த நிலையைக் கேட்டு தன் அமைச்சர்கள் மற்றும் புரோகிதரின் துணையுடன் அந்த இடத்திற்கு விரைவாகச் சென்றான்.(1) முறையாகத் தன்னைத் தூய்மை செய்து கொண்ட அந்த மன்னன் தன் கரங்களைக் கூப்பிக் குவிந்த கவனத்துடன் உயர் ஆன்ம சியவனரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.(2) அப்போது மன்னனின் புரோகிதர், ஓ! ஏகாதிபதி, வாய்மை நோன்பு நோற்றவரும், உயர் ஆன்மா கொண்டவரும், (காந்தியிலும், சக்தியிலும்) தேவர்களுக்கே ஒப்பானவருமான அந்த முனிவரை உரிய சடங்குகளுடன் வழிபட்டார்.(3)

நஹுஷன் {சியவனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, “உமக்கு ஏற்புடையவகையில் நான் செய்ய வேண்டிய செயலென்ன? ஓ! புனிதமானவரே, செய்வதற்குக் கடினமான செயலாக இருந்தாலும், உமது ஆணையின் பேரில் என்னால் நிறைவேற்ற முடியாத செயலேதும் கிடையாது” என்றான்.(4)

சியவனர், “மீன் பிடித்து வாழும் இம்மனிதர்கள் தங்கள் உழைப்பால் முற்றிலும் களைப்படைந்திருக்கின்றனர். இந்த மீன்களுடன் சேர்த்து எனக்குமான விலையை நீ இவர்களுக்குக் கொடுப்பாயாக” என்றார்.(5)

நஹுஷன், “இந்தப் புனிதமானவர் ஆணையிட்டபடியே இவரை விலைக்கு வாங்க என் புரோகிதர் இந்த நிஷாதர்களிடம் ஓராயிரம் நாணயங்களை {ஓராயிரம் பொன்னை} விலையாகக் கொடுக்கட்டும்” என்றான்.(6)

சியவனர், “ஓராயிரம் நாணயங்கள் {ஓராயிரம் பொன்} என் விலையாக முடியாது. கேள்வி உன் விவேகத்தைச் சார்ந்தது. அஃது என்னவாக இருக்க வேண்டும் என்பதை உன் புத்தியில் தீர்மானித்து ஒரு நல்ல விலையைக் கொடுப்பாயாக[1]” என்றார்.(7)நஹுஷன், “ஓ! கல்விமானான பிராமணரே, இந்த நிஷாதர்களிடம் நூறாயிரம் நாணயங்கள் கொடுக்கப்படட்டும். ஓ! புனிதமானவரே, இஃது உமது விலையாகுமா? அல்லது வேறு வகையில் நினைக்கிறீரா?” என்று கேட்டான்.(8)

சியவனர், “ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, நூறாயிரம் நாணயங்களால் என்னை விலைக்கு வாங்கக் கூடாது. இவர்களுக்குச் சரியான விலையைக் கொடுப்பாயாக. நீ உன் அமைச்சர்களுடன் ஆலோசிப்பாயாக” என்றார்.(9)

நஹுஷன், ” இந்த நிஷாதர்களிடம் ஒரு கோடி நாணயங்களை என் புரோகிதர் கொடுக்கட்டும். இதுவும் உமது விலையாகாது என்றால், மேலும் அதிகம் அவர்களுக்குக் கொடுக்கப்படட்டும்” என்றான்.(10)

சியவனர், “ஓ! மன்னா, ஒரு கோடி நாணயங்களாலோ, அதற்கு மேலோ கொடுத்து விலைக்கு வாங்க நான் தகுந்தவனன்று. எது முறையானதோ, சரியானதோ அந்த விலை இவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். நீ பிராமணர்களுடன் ஆலோசிப்பாயாக” என்றார்.(11)

நஹுஷன், “என் நாட்டில் பாதி, அல்லது மொத்த நாடும் இந்த நிஷாதர்களுக்குக் கொடுக்கப்படட்டும். அஃது உமது விலையாகலாம் என நான் நினைக்கிறேன். எனினும், ஓ! மறுபிறப்பாளரே, நீர் என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டான்.(12)

சியவனர், “ஓ! மன்னா, நான் உன்னுடைய நாட்டில் பாதியையோ, முழு நாட்டையோ விலையாகக் கொள்ளத் தகுந்தவனல்ல. இந்த மனிதர்களுக்குக் கொடுக்கத்தகுந்த சரியான விலை கொடுக்கப்பட வேண்டும். நீ முனிவர்களுடன் ஆலோசிப்பாயாக” என்றார்”.(13)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்தப் பெரும் முனிவரின் இந்தச் சொற்களைக் கேட்டு நஹுஷன் பெரும் துன்பத்தால் பீடிக்கப்பட்டான். அவன் தன் அமைச்சர்கள் மற்றும் புரோகிதருடன் சேர்ந்து இக்காரியம் குறித்து ஆலோசிக்கத் தொடங்கினான்.(14) அப்போது அங்கே, கனி மற்றும் கிழங்குகளை உண்டு காட்டில் வாழ்பவரும், ஒரு பசுவுக்குப் பிறந்தவருமான ஒரு தவசியானவர் மன்னன் நஹுஷனிடம் வந்தார்.(15)

ஓ! மன்னா, அந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவர் அந்த ஏகாதிபதியிடம், “நான் விரைவில் உன்னை நிறைவடையச் செய்கிறேன். இம்முனிவரும் நிறைவடைவார்.(16) கேலிக்காகக் கூட நான் பொய் பேசியவனல்ல, எனும் போது வேறு சந்தர்ப்பங்களைக் குறித்துச் சொல்ல வேண்டுமா? நான் சொல்வதை நீ தயங்காமல் செய்ய வேண்டும்” என்றார்.(17)

நஹுஷன், “ஓ! சிறப்புமிக்கவரே, பிருகு குலத்தைச் சேர்ந்த இந்தப் பெரும் முனிவருக்கான விலை என்ன என்பதைச் சொல்வீராக. இந்தப் பயங்கர நிலையில் இருந்து என்னையும், என் நாட்டையும், என் குலத்தையும் காப்பீராக.(18) புனிதரான சியவனர் கோபமடைந்தால் மூவுலகங்களை அழித்துவிடுவார் எனும்போது, தவங்களில்லாதவனும், கர வலிமையை மட்டுமே சார்ந்திருப்பவனும், வேறொன்றுமில்லாதவனுமான என்னைக் குறித்துச் சொல்ல வேண்டுமா?(19) ஓ! பெரும் முனிவரே, எங்கள் அமைச்சர்கள் மற்றும் எங்கள் புரோகிதருடன் சேர்த்து அடியற்ற கடலில் வீழ்ந்து விட்ட எங்களுக்குத் தெப்பமாவீராக. இந்த முனிவருக்கான விலை என்ன என்பதைத் தீர்மானிப்பீராக” என்று கேட்டான்”.(20)

பீஷ்மர், “பசுவுக்குப் பிறந்தவரும், பெருஞ்சக்தியுடன் கூடியவருமான அந்தத் தவசி நஹுஷனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அந்த ஏகாதிபதியையும், அவனது அமைச்சர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இவ்வாறு பேசினார்:(28) “ஓ! மன்னா, பிராமணர்கள் நான்கு வகையினரில் முதன்மையானவர்களாவர். எனினும் அவர்களுக்கு விலையேதும் நிர்ணயிக்க முடியாது. பசுக்களும் மதிப்பில்லாதவையே. எனவே, ஓ!மனிதர்களின் தலைவா, அந்த முனிவரின் விலையாக நீ ஒரு பசுவைக் கருதுவாயாக” என்றார்.(22)

ஓ! மன்னா, அந்தப் பெரும் முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட நஹுஷன், தன் புரோகிதர் மற்றும் அமைச்சர்கள் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியால் நிறைந்தான்.(23) கடும் நோன்புகளைக் கொண்டவரும், பிருகுவின் மகனுமான சியவனரின் முன்பு சென்ற அவன், ஓ! ஏகாதிபதி, தன்னால் இயன்றதில் சிறந்த முறையில் அவரை நிறைவடையச் செய்யும் வகையில் அவரிடம் இவ்வாறு பேசினான்.(24)

நஹுஷன், “ஓ! மறுபிறப்பாள முனிவரே, எழுவீராக, ஓ! பிருகுவின் மகனே, எழுவீராக, ஒரு பசுவை உமக்கான விலையாகக் கொண்டு நீர் விலைக்கு வாங்கப்பட்டீர். ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவரே. இதுவே உமது விலை என நான் நினைக்கிறேன்” என்றான்.(25)

சியவனர், “சரி, ஓ! மன்னர்களின் மன்னா, இதோ எழப் போகிறேன். ஓ! பாவமற்றவனே, நீ முறையாகவே என்னை விலைக்கு வாங்கியிருக்கிறாய். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, பசுவுக்கு நிகராக வேறு எந்தச் செல்வத்தையும் நான் காணவில்லை.(26) பசுவைக் குறித்துப் பேசுவது, அவற்றைக் குறித்துப் பிறர் பேசுவதைக் கேட்பது, பசுக்களைக் கொடையளிப்பது, பசுக்களைப் பார்ப்பது ஆகியவை மிக மெச்சத்தகுந்தவையும், உயர்மங்கலமானவையும், பாவம் போக்குபவையுமான செயல்களாகும்.(27) பசுக்களே செழிப்பின் வேராக எப்போதும் இருக்கின்றன. பசுக்களில் குற்றமேதும் கிடையாது. ஹவிஸ்-ன் வடிவில் தேவர்களுக்குச் சிறந்த உணவை எப்போதும் அளிப்பவை பசுக்களே.(28) ஸ்வாஹா மற்றும் வஷட் என்ற புனித மந்திரங்கள் எப்போதும் பசுக்களிலேயே நிறுவப்பட்டுள்ளன. அவையே வேள்வியின் வாயாக இருக்கின்றன.(29) அவை பலத்தைக் கொடுக்கக் கூடிய சிறந்த அமுதத்தை விளைவிக்கின்றன. அனைத்து உலகங்களின் வழிபாட்டையும் ஏற்றுக் கொள்ளும் அவை அமுதத்தின் ஊற்றுக்கண்ணாகக் கருதப்படுகின்றன(30). உண்மையில் பசுக்கள், உயர்ந்த சக்தியாகவும், அனைத்த உயிரினங்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளிப்பவையாகவும் கருதப்படுகின்றன.(31) எந்த நாட்டில் பசுக்கள், தங்கள் உரிமையாளர்களால் நிறுவப்பட்டு, அச்சமில்லாமல் அழகில் ஒளிர்கின்றனவோ, அந்த நாட்டின் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன.(32) சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் படிக்கட்டுக்களாகப் பசுக்களே இருக்கின்றன. பசுக்கள் சொர்க்கத்திலேயே புகழப்படுகின்றன. பசுக்கள் ஒவ்வொரு விருப்பத்தையும் கொடுக்க வல்லவர்களும், அனைத்தையும் கொடுக்கவல்லவர்களுமான தேவிகளாக இருக்கின்றன. இவ்வளவு உயர்வானவையாகவும், மேன்மையானவையாகவும் இவ்வுலகில் வேறெதுவும் கிடையாது” என்றார்”.(33)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பசுக்களின் மகிமை மற்றும் மேன்மை குறித்து நானும் இதையே உனக்குச் சொல்கிறேன். பசுக்கள் தொடர்புடைய புண்ணியங்களில் ஒரு பகுதியைச் சொல்வதற்கு மட்டுமே நான் தகுந்தவன் ஆவேன். இக்காரியம் குறித்து முழுமையும் சொல்லும் தகுதி எனக்கில்லை.(34)

நிஷாதர்கள், “ஓ! தவசியே, நீர் எங்களைக் கண்டீர், எங்களிடம் பேசவும் செய்தீர். நல்லோருடன் நட்பு கொள்வது ஏழே சொற்களை மட்டுமே சார்ந்ததாகும் எனச் சொல்லப்படுகிறது.(35) சுடர்மிக்க வேள்வி நெருப்பு, அதன் மேல் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதிகள் அனைத்தையும் உண்ணும். அற ஆன்மாவையும், பெரும் சக்தியையும் கொண்ட நீர், மனிதர்களுக்கு மத்தியில் சுடர்மிக்க நெருப்பின் சக்தியுடன் இருக்கிறீர்.(36) ஓ! பெரும் கல்விமானே, நாங்கள் உம்மை அமைதிப்படுத்துகிறோம். நாங்கள் உம்மிடம் சரண் அடைகிறோம். எங்களுக்கு அருள் செய்ய, எங்களிடம் இருந்து இந்தப் பசுவை எடுத்துக் கொள்வீராக” என்றனர்.(37)

சியவனர், “வறியவர், அல்லது துயரில் வீழ்ந்த ஒருவரின் கண், ஒரு தவசியின் கண், அல்லது கடும் நஞ்சுமிக்க ஒரு பாம்பின் கண் ஆகியன, காற்றின் உதவியுடன் சுடர்விடுவதும், வைக்கோல் பொதியை எரிப்பதுமான நெருப்பைப் போல ஒரு மனிதனை அவனது வேர்வரை எரித்துவிடும் சக்தி கொண்டவையாகும்.(38) நீங்கள் எனக்கு அளிக்க விரும்பும் பசுவை நான் ஏற்றுக் கொள்கிறேன். மீனவர்களே, ஒவ்வொரு பாவத்தில் இருந்தும் விடுபட்டு, உங்கள் வலைகளில் பிடிபட்டிருக்கும் இந்த மீன்களுடன் சேர்த்து, எந்தத் தாமதமும் இல்லாமல் சொர்க்கத்திற்குச் செல்வீர்களாக” என்றார்”.(39)

பீஷ்மர் தொடர்ந்தார், “இதன்பிறகு, தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அந்தப் பெரும் முனிவருடைய சக்தியின் விளைவால், அவர் சொன்ன அந்தச் சொற்களின் மதிப்பால், அந்த மீனவர்களும், அந்த மீன்களும், சொர்க்கத்திற்குச் சென்றனர்.(40) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மன்னன் நஹுஷன், மீனவர்களும் அந்த மீன்களும் சொர்க்கத்திற்கு உயர்வதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்.(41) பிறகு பசுவிடம் பிறந்த முனிவரும், பிருகு குல சியவனரும் என அந்த இரு முனிவர்களும் மன்னன் நஹுஷனுக்குப் பல வரங்களை அளித்து அவனை மகிழ்வித்தனர்.(42)

அப்போது, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பெரும் சக்தியைக் கொண்டவனும், பூமி அனைத்தின் தலைவனுமான மன்னன் நஹுஷன் மகிழ்ச்சியால் நிறைந்து, “போதும்” என்று சொன்னான்.(43) தேவர்களின் தலைவனான இரண்டாம் இந்திரனைப் போல இருந்த அவன், தன்னறத்தை உறுதி செய்ய அந்த வரங்களை ஏற்றுக் கொண்டான். முனிவர்கள் வரமளித்ததும் மகிழ்ச்சியால் நிறந்த அம்மன்னன் அவ்விருவரையும் பெரும் மதிப்புடன் வழிபட்டான்.(44) சியவனரைப் பொறுத்தவரையில், அவரது நோன்பு முடிந்ததால் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார். பசுவில் பிறந்தவரும், பெரும் சக்தியைக் கொண்டவருமான முனிவரும் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(45) ஓ! ஏகாதிபதி, நிஷாதர்கள் அனைவரும், அவர்கள் பிடித்த மீன்களும் சொர்க்கத்திற்கு உயர்ந்தன. மன்னன் நஹுஷனும், மதிப்புமிக்க வரங்களை அடைந்து தன் நகரத்திற்குள் நுழைந்தான்.(46) ஓ! மகனே, இவ்வாறே நீ கேட்ட அனைத்தையும் குறித்து உனக்கு நான் சொல்லிவிட்டன். ஓ! யுதிஷ்டிரா, பிறரைப் பார்ப்பதாலும், அவர்களுடன் வாழ்வதாலும் உண்டாகும் பாசத்தையும், பசுக்களின் உயர்ந்த அருளையும், உண்மை அறத்தை உறுதி செய்வது போன்ற காரியங்களைக் குறித்து நான் உன்னுடன் உரையாடினேன். ஓ! வீரா, உன் நெஞ்சில் இன்னும் என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வாயாக” {என்றார் பீஷ்மர்}.(47,48)

சியவனரும், குசிகனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 52-பரசுராமர், விஷ்வாமித்ரர் பிறப்புக் காரியமாகச் சியவனர் குசிகனிடம் வசித்தது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, எனக்குக் கடலைப் போன்றொரு பெரிய ஐயம் உள்ளது. ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, அதைக் கேட்பீராக. அதை அறிந்து கொண்டு அதைக் குறித்து எனக்கு விளக்கம் அளிப்பீராக.(1) ஜமதக்னியின் மகனும், அறவோர் அனைவரிலும் முதன்மையானவருமான ராமர் {பரசுராமர்} குறித்து எனக்குப் பேராவல் இருக்கிறது. அந்த ஆவலை நிறைவடையச் செய்வதே உமக்குத் தகும்.(2) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட ராமர் {பரசுராமர்} எவ்வாறு பிறந்தார்? அவர் பிறப்பால் மறுபிறப்பாள முனிவர்களைச் சார்ந்தவர். அவர் எவ்வாறு க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றுபவரானார்?(3) ஓ! மன்னா, ராமர் {பரசுராமரின்} பிறப்பு சூழ்நிலைகளைக் குறித்து எனக்கு விளக்கமாக உரைப்பீராக. மேலும் குசிக குலமகனான ஒரு க்ஷத்திரியன் {விஷ்வாமித்ரர்} எவ்வாறு பிராமணர் ஆனார்?(4) ஓ! மனிதர்களின் தலைவா, உயர் ஆன்ம ராமர் {பரசுராமர்} மற்றும் விஷ்வாமித்ரரின் பலம் நிச்சயம் பெரியதாகும்.(5) ரிசீகரின் மகனுக்கு {ஜமதக்னிக்குப்} பதிலாக அவரது பேரன் {பரசுராமர்} க்ஷத்திரிய ஒழுக்கத்தைக் கொண்டதேன்? மேலும் குசிகனின் பேரன் {விஷ்வாமித்ரர்} எவ்வாறு ஒரு பிராமணரானார்? அவர்கள் இருவரின் மகன்களுக்குப் பதிலாக, அவர்களுடைய பேரர்களுக்கு இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நேர்ந்ததேன்? இந்தச் சூழ்நிலைகளைப் பொறுத்தவரையில் உண்மையை விளக்குவதே உமக்குத் தகும்” என்றான் {யுதிஷ்டிரன்}.(6)

பீஷ்மர், “இது தொடர்பாகச் சியவனருக்கும், குசிகருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் பழைய வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.(7) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தவசிகளில் சிறந்தவரும், பிருகு குலத்தைச் சேர்ந்தவருமான சியவனர், இந்தக் களங்கம் (க்ஷத்திரிய நடைமுறைகளைச் செய்யும் தமது வழத்தோன்றலின் விளைவாக) தமது சொந்த குலத்தையும் பாதிக்கும் என்பதை (தமது ஆன்மப் பார்வையில்) கண்டார்.(8) அந்நிகழ்வின் நல்லது, கெட்டது, பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்தவரும், தவத்தையே செல்வமாகக் கொண்டவருமான சியவனர் குசிகர்களின் குலத்தை (அந்தக் குலத்தில் இருந்துதான் தமது குலம் க்ஷத்திரிய நடைமுறைகளின் களங்கத்தை அடையப்போகிறது என்பதால் அக்குலத்தை) எரிக்க விரும்பினார்.(9)

மன்னன் குசிகனிடம் சென்ற சியவனர், அவனிடம், “ஓ! பாவமற்றவனே, உன்னுடன் சில காலம் வசிக்கும் விருப்பம் என் இதயத்தில் எழுந்துள்ளது” என்றார்.(10)

குசிகன், “ஓ! புனிதமானவரே, பெண்கள் கொடுக்கப்படும்போது ஒன்றாக வசிப்பது குறித்துக் கல்விமான்கள் விதிக்கின்றனர். ஞானம் கொண்டவர்கள் இத்தகைய தொடர்பிலான நடைமுறையை மட்டுமே பேசுகின்றனர்.(11) ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்ட முனிவரே, என்னுடன் வசிப்பதற்கு நீர் நாடும் காரியம் விதிகளால் அங்கீகரிக்கப்படவில்லை. கடமை மற்றும் அறங்களின் விதிகளுக்கு முரணாக இருப்பினும், நீர் விரும்பி ஆணையிடுவதை நான் செய்வேன்” என்றான்”.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெரும் தவசியான சியவனரின் முன் ஓர் இருக்கையை வைக்க ஆணையிட்ட மன்னன் குசிகன், தன் மனைவயின் துணையுடன் அந்தத் தவசியின் முன்னிலையில் நின்றான்.(13) சிறு குடுவையில் உள்ள நீரைக் கொண்டு வந்த அந்த மன்னன், அவரது பாதங்களைக் கழுவிக் கொள்ள அந்நீரை அளித்தான். பிறகு அவன் தன் உயர் ஆன்ம விருந்தினரைக் கௌரவிக்கும் வகையில் முறையான சடங்குகள் அனைத்தையும் செய்தான்.(14) நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நோற்பவனான உயர் ஆன்ம குசிகன், தேன் மற்றும் பிற பொருட்கள் அடங்கிய உரிய வடிவத்திலான பொருட்களை அந்தப் பெரும் முனிவருக்குக் கொடுத்து, அவரை ஏற்கச் செய்தான்.(15)

கல்விமானான அந்தப் பிராமணரை இவ்வழியில் வரவேற்றுக் கௌரவித்த அந்த மன்னன் {குசிகன்} மீண்டும் அவரிடம் {சியவனரிடம்}, “உமது ஆணைகளுக்காக நாங்கள் இருவரும் காத்திருக்கிறோம். ஓ! புனிதமானவரே, உமக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டுமென ஆணையிடுவீராக.(16) ஓ! கடும் நோன்புகளைக் கொண்டவரே, நாடோ, செல்வமோ, பசுவோ, வேள்விகளில் கொடுக்கப்படும் பொருட்கள் அனைத்துமோ, அஃது உமக்கு வேண்டுமோ அந்தச் சொல்லை எங்களுக்கச் சொன்னால் அவை அனைத்தையும் நாங்கள் உமக்கு அளிப்போம்.(17) இந்த அரண்மனை, இந்த நாடு, நீதிமிக்க இந்த இருக்கை {சிம்மாசனம்} ஆகியவை உமது விருப்பத்திற்காகக் காத்திருக்கின்றன. நீரே இவை அனைத்தின் தலைவராவீர். பூமியை நீர் ஆள்வீராக. என்னைப் பொறுத்தவரையில் முற்றிலும் நான் உம்மையே சார்ந்திருக்கிறேன்” என்றான்.(18)

மன்னனால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளில் பெரும் மகிழ்ச்சியடைந்த பிருகு குலத்தின் சியவனர், குசிகனிடம் மறுமொழியாக இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(19)

சியவனர் {குசிகரிடம்}, “ஓ! மன்னா, நான் உன் நாட்டிலோ, செல்வத்திலோ, நீ கொண்டிக்கும் கன்னிகையரிலோ, உன் பசுக்களிலோ, உன் மாகாணங்களிலோ, வேள்விக்குத் தேவையான பொருட்களிலோ பேராசை கொள்ளவில்லை. நான் சொல்வதைக் கேட்பாயாக.(20) உனக்கும், உன் மனைவிக்கும் விருப்பம் உண்டானால் நான் ஒரு குறிப்பிட்ட நோன்பை நோற்கத் தொடங்குவேன். அந்தக் காலத்தில் நீயும் உன் மனைவியும் எத்தயக்கமும் இல்லாமல் எனக்குத் தொண்டாற்ற விரும்புகிறேன்” என்றார்.(21)

ஓ! பாரதா, முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னனும் ராணியும் மகிழ்ச்சியால் நிறைந்து, “ஓ! முனிவரே, அப்படியே ஆகட்டும்” என்று அவருக்குப் பதிலளித்தனர்.(22)

முனிவரின் சொற்களில் மகிழ்ச்சியடைந்த மன்னன் அவரை அந்த அரண்மனையில் உள்ள ஓர் அறைக்கு அழைத்துச் சென்றான். அது காண்பதற்கினிய சிறப்பான ஒன்றாக இருந்தது. மன்னன் அந்த அறையில் உள்ள அனைத்தையும் அவருக்குக் காட்டினான்.(23)

மன்னன், “ஓ! புனிதமானவரே, இஃது என் படுக்கையாகும். நீர் விரும்பியவாறு இங்கே வாழலாம். ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, நானும், என் ராணியும் உமக்குத் தேவையான வசதிகள் மற்றும் இன்பங்கள் அனைத்தையும் கொடுப்பதற்குச் சிறப்பாக முனைவோம்” என்றான்.(24)

அவர்கள் ஒருவரோடொருவர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே சூரியன் நடுவானைக் கடந்தான். முனிவர் மன்னனிடம் உணவும், பானமும் கொண்டு வரும்படி ஆணையிட்டார்.(25)

முனிவரை வணங்கிய மன்னன் குசிகன், “என்ன வகை உணவு உமக்கு ஏற்புடையது? உண்மையில் உமக்கு என்ன உணவை நான் கொண்டு வர வேண்டும்” என்று கேட்டான்.(26)

ஓ! பாரதா, மகிழ்ச்சியால் நிறைந்த அம்முனிவர் அந்த மனிதர்களின் ஆட்சியாளனிடம் {குசிகனிடம்}, “சரியான உணவு எனக்குக் கொடுக்கப்பட வேண்டும்” என்று கேட்டார்[1].(27)இச்சொற்களை மதிப்புடன் ஏற்றுக் கொண்ட மன்னன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி உரிய வகை உணவை அம்முனிவருக்குக் கொடுத்தான்.(28)

கடமைகள் அனைத்தையும் அறிந்தவரான புனிதர் சியவனர், அவரது உணவை முடித்துக் கொண்டு, மன்னன் மற்றும் ராணியிடம், “நான் உறங்க விரும்புகிறேன். ஓ! பலமிக்கவனே, உறக்கம் எனை ஆட்கொள்கிறது” என்று சொன்னார்.(29)

பிறகு அந்த முனிவர்களில் சிறந்தவர், அவருக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருந்த ஓர் அறைக்குச் சென்று, ஒரு படுக்கையில் தம்மைக் கிடத்திக் கொண்டார். மன்னனும், ராணியும் அங்கே அமர்ந்தனர்.(30)

முனிவர், “நான் உறங்கும் போது என்னை விழிப்படையச் செய்யாதீர். நீங்கள் விழித்திருந்து, நான் உறங்கும் வரை என் கால்களை அழுத்துவீராக” என்றார்.(31)

கடமைகள் அனைத்தையும் அறந்த குசிகன், சிறு தயக்கமும் கொள்ளாமல், “அப்படியே ஆகட்டும்” என்றான்.

உண்மையில் மன்னனும், ராணியும் அன்றிரவு முழுவதும் விழித்திருந்து,(32) முனிவர் சொன்ன வகையிலேயே அவரைப் பார்த்துக் கொண்டு தொண்டாற்றினர். ஓ! ஏகாதிபதி, அந்த அரச இணை, பெரும் ஊக்கத்துடனும், கவனத்துடனும் அந்த முனிவரின் ஆணையை நிறைவேற்றினர்.(33) அதே வேளையில், மன்னனிடம் இவ்வாறு ஆணையிட்ட அம்முனிவர், தன் நிலை மாறாமல், ஒரு முறை கூடத் திரும்பிப் படுக்காமல், தொடர்ந்து இருபத்தோரு நாட்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.(34)

ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, மன்னன் தன் மனைவியுடன் சேர்ந்து, அந்த மொத்த காலத்திற்கும் உணவனைத்தையும் கைவிட்டு, அம்முனிவரை பார்த்துக் கொண்டு தொண்டாற்றினான்.(35) இருபத்தோரு நான்கள் கழிந்ததும் அந்தப் பிருகுவின் மகன் {சியவனர்} தாமாக எழும்பினார். அந்தப் பெரும் தவசி, அவர்களை அழைக்காமலேயே அந்த அறையை விட்டு வெளியே சென்றார்.(36) பட்டினியால் களைத்துப் போயிருந்த மன்னனும், ராணியும் அவரைப் பின்தொடர்ந்தாலும் அந்த முனிவர்களில் முதன்மையானவர் அவர்கள் மேல் ஒரு பார்வையைக் கூடச் செலுத்தவில்லை.(37) சிறிது தொலைவு சென்றதும், அந்த அரச இணையரின் பார்வையில் இருந்து அந்தப் பிருகுவின் மகன் (தமது யோக சக்தியால் தம்மை மறைத்துக் கொண்டு) மறைந்து போனார். இதனால் துயரால் பீடிக்கப்பட்ட மன்னன் பூமியில் விழுந்தான்.(38) பிறகு, பெரும் காந்தியைக் கொண்ட அந்த ஏகாதிபதி, ஆறுதலடைந்து விரைவாக எழுந்து, தன் ராணியின் துணையுடன், அந்த முனிவரை எங்கும் தேடத் தொடங்கினான்” என்றார் {பீஷ்மர்}.(39)

குசிகனைத் துன்புறுத்திய சியவனர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 53-மீண்டும் இருபத்தோரு நாட்கள் உறங்கிய சியவனர்;. நீராடச் சென்று மீண்டும் மறைந்தது; தனக்குப் பரிமாறப்பட்ட உணவை எரித்தது; மன்னனையும் அவனது மனைவியையும் தேரில் பூட்டி தம்மை இழுக்கச் செய்தது; சாட்டையால் அவர்களை அடித்தது; மன்னனின் அவல நிலையைக் கண்டு துயருற்ற குடிமக்கள்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “முனிவர் {சியவனர்} மறைந்ததும் மன்னன் {குசிகன்} என்ன செய்தான்? உயர்ந்த அருளைக் கொண்ட அவனது மனைவி என்ன செய்தாள்? ஓ! பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த முனிவரை {சியவனரைக்} காணாத மன்னன் {குசிகர்}, களைத்துப் போனவனாக, பொறிகலங்கியவனாக, வெட்கமடைந்தவனாகத் தன் ராணியின் துணையுடன் தன் அரண்மனைக்குத் திரும்பினான்.(2) உற்சாகமற்ற மனநிலையில் தன் மாளிகைக்குள் நுழைந்த அவன் யாரிடமும் எந்த வார்த்தையும் பேசாதிருந்தான். அவன் சியவனரின் நடத்தையை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான்.(3) பிறகு நம்பிக்கை இழந்த இதயத்துடன் தன் அறைக்குச் சென்றான். அங்கே அவன் {குசிகன்} தன் படுக்கைக்கு எதிரில் படுத்திருக்கும் பிருகுவின் மகனை {சியவனரைக்} கண்டான்.(4) அம்முனிவரை அங்கே கண்ட அவர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். உண்மையில் அவர்கள், அந்த ஆச்சரியகரமான நிகழ்வைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினர். முனிவரைக் கண்டதும் அவர்களது களைப்பு மறைந்து போனது.(5)

அவரது அருகில் உள்ள தங்கள் இருக்கைகள் மீண்டும் அமர்ந்த அவர்கள், முன்பைப் போலவே அவரது பாதங்களை மெதுவாக அழுத்த {பிடித்துவிடத்} தொடங்கினர். அதே வேளையில் அந்தப் பெருந்தவசி முன்பைப் போலவே தமது ஆழ்ந்த உறக்கத்தைத் தொடர்ந்தார். இப்போது அவர் மறுபுறம் திரும்பிப் படுத்திருந்தது மட்டுமே வேறுபாடு.(6) பெரும் சக்தியைக் கொண்ட அவர் மீண்டும் இருபத்தோரு நாட்களை இவ்வாறு கழித்தார். அச்சத்தால் கலக்கமடைந்திருந்த அந்த அரச இணையர் அம்முனிவர் குறித்த தங்கள் மனநிலையில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.(7) தமது உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட அந்தத் தவசி, மன்னன் மற்றும் ராணியிடம், “என் உடலில் எண்ணெய் பூசுங்கள். நாங்கள் நீராட விரும்புகிறேன்” என்றார்.(8) அவர்கள் களைத்துப் போனவர்களாக இருந்தாலும், உடனே சம்மதித்து, நூறு முறை கொதிக்கவைத்துத் தயாரிக்கப்பட்ட விலைமதிப்புமிக்க எண்ணெயுடன் {சதபாகத் தைலத்துடன்} அம்முனிவரை அணுகினர்.(9) அந்த முனிவர் சுகமாக அமர்ந்திருந்தபோது, அந்த மன்னனும், ராணியும், பேசாமல் அவருக்குப் பூசிவிடுவதைத் தொடர்ந்தனர். உயர்ந்த தவத் தகுதியைக் கொண்ட அந்தப் பிருகுவின் மகன் போதும் என்ற சொல்லை ஒருமுறையேனும் சொல்லவில்லை.(10)

எனினும் அந்த அரச இணையர் முற்றிலும் வெறுப்பற்றவர்களாக இருப்பதைக் கண்டார். அவர், திடீரென எழுந்து, நீராடும் அறைக்குச் சென்றார்.(11), மன்னனின் பயன்பாட்டுக்குத் தகுந்தவையும், நீராடலுக்குத் தேவையானவையுமான பல்வேறு பொருட்கள் அங்கே தயாராக இருந்தன. எனினும், அந்தப் பொருட்களை எடுக்காமல், அவற்றிற்கு எம்மதிப்பையும் காட்டாமல் அந்த முனிவர் மன்னன் குசிகன் ({குசிகனும்} அவனது மனைவியும்) பார்த்துக் கொண்டிருக்கும்போதே தமது யோக சக்தியால் மீண்டும் அங்கேயே அப்போதே மறைந்து போனார். எனினும், ஓ! பாரதர்களின் தலைவா, இஃது அந்த அரச இணையரின் உள்ளச்சமநிலையைக் குலைக்கவில்லை.(12,13) அடுத்து அந்தப் பலமிக்க முனிவர், நீராடி முடித்து அரியணையில் அமர்ந்திருப்பவராகத் தென்பட்டார். உண்மையில், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, இந்த இடத்தில் தான் அவர் தம்மை அரசனுக்கும், அரசிக்கும் வெளிப்படுத்திக் கொண்டார்.(14) உற்சாகமிக்க முகத்துடன் கூடிய மன்னன் குசிகன் தன் மனைவியுடன் சேர்ந்து, பெரும் மதிப்புடன் சமைக்கப்பட்ட உணவை அம்முனிவருக்கு அளித்தான். ஞானத்துடனும், முற்றிலும் மனக்கலக்கம் ஏதும் இல்லாமலும் குசிகன் இந்தக் காணிக்கையை அளித்தான்.(15)

அந்தத் தவசி, “உணவு கொண்டவரப்படலாம்” என்ற சொற்களைச் சொன்னார். மன்னன் தன் மனைவியின் துணையுடன் விரைவில் அங்கே உணவைக் கொண்டு வந்தான்.(16) பல்வேறு வகை இறைச்சிகளும், அது போன்ற வெவ்வேறு தயாரிப்புகளும் அதில் இருந்தன. பல வகைக் காய்கறிகளும், கீரைகளும் அதில் இருந்தன.(17) பாகுகள், மாப்பண்டங்கள், ரஸாலை[1] ஆகியவை இருந்தன. அப்பம், பல்வேறு சுவைகளுடன் கூடிய மோதகங்களும் அதில் இருந்தன. முனிவர்கள் உண்ணும் காட்டு உணவுகள் அதில் இருந்தன.(18) மன்னர்கள் உண்ணும் உணவுகள் மற்றும் பலவகைக் கனிகள், இலந்து, புன்கம், காஸ்மரியம் {பெருங்குமிழம்பழம்}, பல்லாதகம் {சேங்கொட்டை} ஆகியவையும் இருந்தன.(19) இல்லற வாழ்வை நோற்பவர்கள் {கிருகஸ்தர்கள்} உண்ணத்தக்கவை, காட்டில் வசிப்பவர்களால் {வானப்ரஸ்தர்கள்} உண்ணத்தக்கவை ஆகியவையும் அதில் இருந்தன. இவ்வாறு அனைத்து வகை உணவுகளையும் முனிவரின் சாபத்திற்கு அஞ்சி மன்னன் கொண்டு வந்து, தன் விருந்தினரின் முன்பு வைத்தான்.(20)சமையலறையில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவனைத்தும் சியவனரின் முன்பு வைக்கப்பட்டது. அவருக்காக ஓர் இருக்கை வைக்கப்பட்டது, ஒரு படுக்கையும் விரிக்கப்பட்டது. உணவுவகைகள் வெண் துணிகளால் மறைக்கப்பட்டிருந்தன. எனினும், பிருகு குலத்தின் சியவனர் அந்தப் பொருட்கள் அனைத்திற்கும் நெருப்பிட்டு அவற்றைச் சாம்பலாகக் குறைத்தார்.(21,22) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த அரச இணையர் முனிவரின் இந்த நடத்தையினால் கோபமேதும் அடையாதிருந்தனர். முனிவரும் முன்பைப் போலவே மன்னன் மற்றும் ராணியின் கண்களுக்கு முன்பாகவே அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(23) அரச முனியான குசிகன், ஒரு வார்த்தையும் பேசாமல் தன் அருகில் உள்ள தன் மனைவியுடன் அதே நிலையில் அந்த இரவு முழுவதும் அங்கேயே நின்றிருந்தான். பெருஞ்செழிப்புடன் கூடிய அவன் கோபவசப்படாமல் இருந்தான்.(24) பல்வேறு வகையிலான தூய மற்றும் நல்ல உணவுகளும், சிறந்த படுக்கைகளும், நீராடலுக்கு வேண்டிய அபரிமிதமான பொருட்களும், பல்வேறு வகைத் துணிகளும் ஒவ்வொரு நாளும் திரட்டப்பட்டு, முனிவருக்காக அந்த அரண்மனையில் தயாராக வைக்கப்பட்டிருந்தன. உண்மையில் சியவனரால் அந்த மன்னனின் நடத்தையில் எந்தக் களங்கத்தையும் காண முடியவில்லை.(25,26)

அப்போது அந்த மறுபிறப்பாள முனிவர், மன்னன் குசிகனிடம், “நீயும் உன் மனைவியும் ஒரு தேரில் உங்களைப் பூட்டிக் கொண்டு, நான் சொல்லும் இடங்களுக்கு என்னைச் சுமந்து செல்வீராக” என்றார்.(27) அம்மன்னன் {குசிகன்}, தவத்தையே செல்வமாகக் கொண்ட சியவனரிடம், “அப்படியே ஆகட்டும்” எனத் தயக்கமேதுமின்றிச் சொன்னான். மேலும் அவன் முனிவரிடம், “எந்தத் தேரை நான் கொண்டு வர வேண்டும்? இன்பமான பயணத்திற்குரிய தேர் வேண்டுமா? அல்லது என்னுடைய போர்த்தேரைக் கொண்டு வரவா?” என்று கேட்டான்.(28)

மகிழ்ச்சியும், மனநிறைவும் கொண்ட மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்தத் தவசி அவனிடம், “பகை நகரங்களை ஊடுருவ நீ பயன்படுத்தும் தேரை முறையாக ஆயத்தம் செய்வாயாக. உண்மையில், ஆயுதங்கள், கொடிமரங்கள், கொடிகள், ஈட்டிகள், கணைகள், தங்கத் தூண்கள், தடிகள், ஆகியவற்றுடன் உன் போர்த்தேரை ஆயத்தம் செய்வாயாக.(29,30) அதன் சடசடப்பொலி மணியோசைக்கு ஒப்பானதாகும். பசும்பொன்னாலான எண்ணற்ற வளைவுகளால் அஃது அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. உயர்ந்த மற்றும் சிறந்த ஆயுதங்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் எப்போதும் அதில் இருக்கின்றன” என்றார்.

மன்னன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, தன் பெரிய போர்த்தேரைத் தயார் செய்தான்.(31) பிறகு அவன் தன் மனைவியை {அத்தேரின்} இடதுபுறத்திலும், தன்னை வலப்புறத்திலும் பூட்டிக் கொண்டான். மூன்று கைப்பிடிகளைக் கொண்டதும், ஒரே நேரத்தில் வஜ்ரம்போன்ற கடினத்தையும், ஊசிபோன்ற கூர்மையையும் கொண்ட முனையுடன் கூடியதுமான சாட்டையை அந்தத் தேரில் வைத்தான்[2].(32)தேவையான அனைத்தையும் அந்தத் தேரில் வைத்த மன்னன், அம்முனிவரிடம், “ஓ! புனிதமானவரே, தேர் எங்கே செல்ல வேண்டும்? ஓ!, பிருகுவின் மகன் {சியவனர்} ஆணையிடட்டும்.(33) நீர் குறிப்பிட விரும்பும் இடத்திற்கு உமது தேர் செல்லும்” என்றான்.

இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்தப் புனிதர் அம்மன்னனிடம் {குசிகனிடம்},(34) “இங்கிருந்து படிப்படியாக மிக மெதுவாக இந்தத் தேர் இழுக்கப்பட வேண்டும். நீங்கள் இருவரும் என் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து, களைப்பேதும் நான் உணராத வகையில் செல்ல வேண்டும்.(35) மிக இனிமையான வகையில் நான் சுமக்கப்பட வேண்டும். உன் மக்கள் அனைவரும் அவர்களுக்கு மத்தியில் செல்லும் போது இதைப் பார்க்க வேண்டும். நான் சாலையில் செல்லும்போது என்னிடம் வரும் எந்த மனிதனும் விரட்டப்படக்கூடாது. நான் அனைவருக்கும் செல்வக் கொடை கொடுப்பேன்.(36) வழியில் என்னை அணுகும் பிராமணர்கள் அனைவருக்கும் அவர்களுடைய விருப்பங்களையும், ரத்தினங்களையும், செல்வத்தையும் மிச்சமில்லாமல் கொடுப்பேன்.(37) ஓ! மன்னா, எத்தயக்கத்திற்கு இடமின்றி இவை அனைத்தையும் நிறைவேற்றுவாயாக” என்றார்.

முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன், தன் பணியாட்களை அழைத்து அவர்களிடம்,(38) “இந்தத் தவசி ஆணையிடும் எதையும் நீங்கள் அச்சமில்லாமல் கொடுக்க வேண்டும்” என்றான்.

முனிவர் அந்தத் தேரில் சுமக்கப்பட்டபோது, அபரிமிதமான ரத்தினங்கள், தங்கம், அழகிய பெண்கள், ஆடுகள்,(39) நாணயமாக்கப்பட்ட மற்றும் ஆக்கப்படாத தங்கம், குன்றுகள் அல்லது மலைச்சிகரங்களுக்கு ஒப்பான பெரும் யானைகள், மன்னனின் அமைச்சர்கள் அனைவரும் அவரைப் பின்தொடர்ந்தன.(40) இயல்புக்கு மீறிய இக்காட்சியைக் கண்டு துயரடைந்த அந்த நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அலறல்கள் எழுந்தன. கூர்முனை கொண்ட அந்தச் சாட்டையைக் கொண்டு முனிவர் திடீரென மன்னனையும், ராணியையும் தாக்கினார்.(41) முதுகிலும், கன்னங்களிலும் இவ்வாறு தாக்கப்பட்டாலும் அந்த அரச இணையர் கலக்கத்திற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. மறுபுறம் அவர்கள் அம்முனிவரை முன்பு போலவே தொடர்ந்து சுமந்தனர்.(42) ஐம்பது இரவுகளாக உணவேதும் அவர்களது உதடுகளைக் கடக்கவில்லை என்பதால் தலை முதல் பாதம் வரை நடுங்கியபடியே மிகப் பலவீனமாக இருந்த அந்த வீர இணை எவ்வாறோ அந்தச் சிறந்த தேரை இழுத்துக் கொண்டிருந்தனர்.(43) சாட்டையால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு ஆழமான வெட்டுக் காயங்களை அடைந்த அந்த அரச இணையர் குருதியால் நனைந்தவர்களாகினர். உண்மையில், ஓ! ஏகாதிபதி, பூவுண்டாகுங்காலத்தைச் சேர்ந்த இரு கின்சுக {பலாச} மரங்களைப் போல அவர்கள் தெரிந்தனர்.(44)

தங்கள் மன்னனும், ராணியும் அடைந்திருக்கும் அவல நிலையைக் கண்ட குடிமக்கள் பெரும் துயரால் பீடிக்கப்பட்டனர். முனிவர் தங்களைச் சபித்துவிடப் போகிறார் என்ற அச்சத்தில் நிறைந்திருந்த அவர்கள் துன்பத்திலும் அமைதி காத்தனர்.(45) ஈரிருவராக ஒன்று சேர்ந்த அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர், “தவங்களின் வலிமையைப் பார். நாம் அனைவரும் கோபமடைந்திருந்தாலும் இந்த முனிவரைப் பார்க்கவும் இயலாதவர்களாக இருக்கிறோம்.(46) தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட இந்தப் புனித முனிவர் பெரும் சக்திமிக்கவராக இருக்கிறார். அரசன் மற்றும் அரசியின் பொறையை {உறுதியான தாங்கும் திறனைப்} பார்.(47) களைப்பு மற்றும் பசியில் சோர்வுற்றிருந்தாலும் அவர்கள் இன்னும் தேரை இழுத்துக் கொண்டிருக்கின்றனர்” என்றனர். பிருகுவின் மகன் {சியவனர்}, குசிகனுக்கும் அவனது ராணிக்கும் இந்தத் துயரை உண்டாக்கினாலும், அவர்களிடம் நிறைவின்மை அல்லது கலக்கத்தின் எந்தக் குறியீட்டையும் காணத் தவறினார்”.(48)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவர் {சியவனர்}, அரசனும், அரசியும் கலங்கமடையாதிருப்பதைக் கண்டு, தாமே இரண்டாவது கருவூலத் தலைவன் {குபேரன்} என்பதைப் போல (மன்னனின் கருவூலத்தில் இருந்து அடையப்பட்ட செல்வத்தை) பெரிய அளவில் கொடையளிக்கத் தொடங்கினார்.(49) இச்செயலாலும் மன்னன் குசிகன் நிறைவின்மைக்கான எந்தக் குறியீட்டையும் காட்டவில்லை. (அந்தக் கொடைகளின் காரியத்தில்) முனிவர் ஆணையிட்டவாறே அவனும் செயல்பட்டான். இவை யாவற்றையும் கண்ட அந்தச் சிறந்த தவசி (அந்த அரச இணையரிடம்) மகிழ்ச்சியடைந்தார்.(50) அந்தச் சிறந்த தேரில் இருந்து கீழே இறங்கிய அவர், அந்த அரச இணையரைப் பூட்டுகளில் இருந்து விடுவித்தார்.(51)

உண்மையில் அந்தப் பிருகுவின் மகன் {சியவனர்}, மென்மையான, ஆழமான, மகிழ்ச்சி மிக்கக் குரலில், “உங்கள் இருவருக்கும் நான் ஒரு சிறந்த வரத்தைத் தர ஆயத்தமாக இருக்கிறேன்” என்றார்.(52)

அவர்களுடைய உடல்கள் சாட்டையால் துளைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் மின் மென்மையானவர்களாக இருந்தனர். அன்பால் உந்தப்பட்ட அந்தச் சிறந்த தவசி, ஓ! பாரதர்களின் தலைவா, அமுதத்துக்கு ஒப்பாகக் குணம் செய்யும் அறங்களைக் கொண்ட தமது கரங்களால் அவர்களை மென்மையாகத் தீண்டினார்.(53)

பிறகு அம்மன்னன் {குசிகன்}, “நானும், என் மனைவியும் களைப்பேதும் உணரவில்லை” என்றான். உண்மையில் அவர்களது களைப்பனைத்தும் முனிவரின் பலத்தால் விலகின, அதனால்தான் மன்னனால் முனிவரிடம் இவ்வாறு சொல்ல முடிந்தது.(54)

அவர்களுடைய நடத்தையில் மகிழ்ச்சியடைந்த சிறப்புமிக்கச் சியவனர், அவர்களிடம், “நான் இதற்கு முன்பு ஒருபோதும் பொய்மை பேசியதில்லை. எனவே, நான் சொல்வது போல்தான் நடக்க வேண்டும்.(55) கங்கையின் கரையிலுள் உள்ள இவ்விடம் மிக இனிமை நிறைந்ததும், மங்கலமிக்கதாகவும் இருக்கிறது. ஓ! மன்னா, நான் ஒரு நோன்பிருந்து சிறிதுகாலம் இங்கே வசிக்கப் போகிறேன்.(56) நீ உன் நகரத்திற்குத் திரும்பிச் செல். நீ களைத்திருக்கிறாய். நீ மீண்டும் இங்கு வரலாம். ஓ! மன்னா, நாளை உன் மனைவியுடன் இங்கே மீண்டும் வந்து என்னைக் காண்பாயாக.(57) கோபம் அல்லது துயரத்தின் வசப்படாதே. பெரும் வெகுமதியை நீ அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது. எது உன்னால் விரும்பப்படுகிறதோ, எது உன் இதயத்தில் இருக்கிறதோ, அது நிச்சயம் நிறைவேறும்” என்றார்.(58)

முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் கூடிய மன்னன் குசிகன், முக்கியப் பொருள் கொண்ட இந்த வார்த்தைகளை அந்த முனிவருக்கு மறுமொழியாகச் சொன்னான்.(59) {குசிகன்}, “ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, நான் கோபத்தையோ, துன்பத்தையோ வளர்ப்பதில்லை. ஓ! புனிதமானவரே, நாங்கள் உம்மால் தூய்மையடையச் செய்யப்பட்டு, உம்மால் புனிதமடைந்தோம். நாங்கள் மீண்டும் இளமையை அடைந்திருக்கிறோம். எங்கள் உடல்கள் அதிக அழகையும், பெரும் பலத்தையும் கொண்டிருப்பதைப் பாரும்.(60) உம்மால் சாட்டையைக் கொண்ட உண்டாக்கப்பட்ட காயங்களையும், தழும்புகளையும் காண முடியவில்லை. உண்மையில் என் மனைவியுடன் கூடிய நான் மிக நல்ல உடல்நிலையில் இருக்கிறேன்.(61) என் தேவி ஓர் அப்ரசஸைப் போன்ற அழகிய உடல்படைத்தவளாகிவிட்டதைப் பார்க்கிறேன். உண்மையில் அவள் இதற்கும் முன்பு கொண்டிருந்த இனிமையையும் காந்தியையும் கொண்டிருக்கிறாள்.(62) ஓ! பெரும் தவசியே, இவை அனைத்தும் உமது அருளால் ஏற்பட்டது. உண்மையில், ஓ கலங்கடிக்க முடியாத பலத்தைக் கொண்ட புனிதமான முனிவரே, இவையாவற்றிலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை” என்றான்.(63)

மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட சியவனர், அவனிடம், “ஓ! ஏகாதிபதி, நாளை மீண்டும் இங்கே உன் மனைவியுடன் வருவாயாக” என்றார்.(64)

இந்த வார்த்தைகளுடன் அரசமுனியான குசிகன் விடைகொடுத்து அனுப்பப்பட்டான். அழகிய உடலைக் கொண்ட அந்த ஏகாதிபதி, அந்த முனிவரை வணங்கிவிட்டு தேவர்களின் இரண்டாம் தலைவனை {இரண்டாம் இந்திரனைப்} போலத் தன் தலைநகருக்குத் திரும்பிச் சென்றான்.(65) அமைச்சர்களும், புரோகிதரும் அவனை வரவேற்க வெளியே வந்தனர். அவனது துருப்பினரும், ஆடல் மகளிரும், அவனது குடிமக்கள் அனைவரும் அவ்வாறே வந்தனர்.(66) அவர்கள் அனைவராலும் சூழப்பட்டவனும், அழகு மற்றும் காந்தியால் சுடர்விடுபவனுமான மன்னன் குசிகன், வந்திகளும், மாகதர்களும் அவனது புகழ்பாட, மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் தன் நகரத்திற்குள் நுழைந்தான்.(67)

தன் நகரத்திற்குள் நுழைந்து, காலைச் சடங்குகள் அனைத்தையும் செய்து, தன் மனைவியுடன் சேர்ந்து உண்டான். பெரும் காந்தியைக் கொண்ட அந்த ஏகாதிபதி அவ்விரவை மகிழ்ச்சியாகக் கடத்தினான்.(68) அவர்கள் ஒவ்வொருவரும் தங்களில் மற்றவரை புது இளமை பெற்றவராகக் கண்டனர். துன்பங்கள் மற்றும் கவலைகள் ஏதுமற்ற அவர்கள் தங்களில் ஒவ்வொருவரையும் ஒரு தேவராகக் கண்டனர். அந்த முதன்மையான பிராமணரிடம் இருந்து வரமாகப் பெற்ற காந்தியுடனும், தாங்கள் கொண்டிருந்த அழகிய, இனிமையான வடிவங்களுடனும் அவர்கள் இருவரும் அவ்விரவைத் தங்கள் படுக்கையில் மகிழ்ச்சியாகக் கடத்தினர்.(69) அதே வேளையில், பிருகு குலத்தின் புகழைப் பெருகச் செய்பவரான அந்த முனிவர் {சியவனர்}, தமது யோக சக்தியினால், கங்கைக்கரையில் உள்ள அந்த இனிய காட்டை, அனைத்து வகைச் செல்வங்களும் நிறைந்ததும், தேவர்களின் தலைவனுடைய வசிப்பிடத்தின் அழகையும், காந்தியையும் விஞ்சும் வகையில் பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஓர் இடமாக மாற்றினார்” {என்றார் பீஷ்மர்}.(70)

குசிகனிடம் நிறைவடைந்த சியவனர்! – அநுசாஸனபர்வம் பகுதி – 54-மாய மாளிகையையும், பல அற்புதக் காட்சிகளையும் கண்ட மன்னன் குசிகன்; தன் மனைவியிடம் முனிவரின் பெருமைகளைச் சொன்னது; குசிகனின் எண்ணங்களை மனத்தால் அறிந்த சியவனர் அவனுக்கு ஒரு வரமளிக்க முன்வந்தது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த இரவு கடந்ததும், விழித்தெழுந்த அந்த உயர் ஆன்ம மன்னன் {குசிகன்} தன் காலைச் சடங்குகளைச் செய்தான். தன் வசிப்பிடமாக முனிவரால் {சியவனரால்} தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் காட்டுக்கு அவன் தன் மனைவியின் துணையுடன் சென்றான்.(1) அங்கே வந்ததும் அந்த ஏகாதிபதி {குசிகன்}, முற்றிலும் பொன்னாலானதும் அரண்மனை போன்றதுமான ஒரு மாளிகையைக் கண்டான். ரத்தினங்களாலும், விலைமதிப்பற்ற கற்களாலும் ஆன ஆயிரம் தூண்களைக் கொண்ட அது {மாளிகை} கந்தர்வர்களின் நீர்மாடக்கூடம் போல இருந்தது[1].(2) குசிகன், அந்தக் கட்டுமானத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வீக வடிவமைப்புக்கான சான்றுகளைக் கண்டான். மேலும் அவன் அழகிய பள்ளத்தாக்குகளுடன் கூடிய மலைகளையும், தாமரைகளுடன் கூடிய தடாகங்களையும் அங்கே கண்டார்;(3) ஓ! பாரதா, விலைமதிப்புமிக்க, ஆச்சரியகரமான பொருட்கள் நிறைந்தவையும், வாயில்கள் மற்றும் தோரணங்களோடு கூடியவையுமான மாளிகைகளையும் கண்டான். பொன்வயல்களுக்கு ஒப்பான வகையில் செழித்து வளர்ந்த புற்களுடன் கூடிய திறந்தவெளிகளையும், இடங்களையும் அங்கே கண்டான்.(4)மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சஹகாரங்கள் {ஒட்டுமாமரங்கள்}, கேதகங்கள் {தாழைகள்}, உத்தாலகங்கள் {குறும்பலா}, தவங்கள், அசோகங்கள், மலரும்நிலையில் உள்ள குந்தங்கள் {குறுக்கத்தி மரங்கள்}, அதிமுகங்களையும் {முல்லைக்கொடிகள்} அவன் கண்டான்.(5) சம்பகங்கள் {சண்பக மரங்கள்}, திலகங்கள் {திலகமரங்கள்}, பவ்யங்கள் {பலா மரங்கள்}, பனசங்கள் {மகிழ மரங்கள்}, வியாஞ்ஜுலங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கர்ணீகாரங்களையும் {கொன்றைமரங்கள்} அவன் அங்கே கண்டான்.(6) அழகாக வளர்ந்திருக்கும் சியாமங்கள், வாரணபுஷ்பங்கள் அஷ்டபடிகம் என்றழைக்கப்படும் கொடிகள் பலவற்றையும் மன்னன் கண்டான்.(7) மேலும் அம்மன்னன், பல்வேறு வகைத் தாமரங்களைப் பேரழகுடன் மலரும் மரங்களையும் (!), ஒவ்வொரு பருவகாலத்திற்கும் உரிய மலர்களையும் சுமக்கும் சில மரங்களையும் அங்கே கண்டான்[2]. தெய்வீகத்தேர்களையோ, அழகிய மலைகளையோ போலத் தெரிந்த பல மாளிகைகளையும் அவன் கவனித்தான்.(8)ஓ! பாரதா சில இடங்களில் குளிர்ந்த நீர் நிறைந்த தடாகங்களும், வேறு சில இடங்களில் வெண்ணீர் நிறைந்த தடாகங்களும் இருப்பதைக் கண்டான். பல்வேறு வகைச் சிறந்த இருக்கைகளும், விலைமதிப்புமிக்கப் படுக்கைகளும்,(9) பொன் மற்றும் இரத்தினங்களால் ஆனவையும், பேரழகுடன் கூடியவையும், மதிப்புமிக்கவையுமான துணிகள் மற்றும் போர்வைகள் விரிக்கப்பட்டவையுமான கட்டில்களும் அங்கே இருந்தன. நன்கு சமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு ஆயத்தமாக உணவு வகைகளும், பானங்களும் அங்கே இருந்தன.(10) பேசும் கிளிகள், பெண் கிளிகள், பிரிஞ்சராஜங்கள் {வண்டுகள்}, கோகிலங்கள் {குயில்கள்}, சதபத்ரங்கள் {மரங்குத்திகள்}, கோயஷ்டிகங்கள் {நாரைகள்}, குக்குபங்கள் {காட்டுக் கோழிகள்},(11) மயில்கள், சேவல்கள், தாத்யுஹங்கள் {குருட்டுக் காக்கைகள்}, ஜீவஜீவகங்கள் {கவுதாரிகள்}, சக்கோரங்கள், குரங்குகள், அன்னங்கள், சாரசங்கள் {கொக்குகள்}, சக்கரவாகங்கள் {வாத்துகள்} ஆகியன அங்கே இருந்தன.(12)

ஓ! ஏகாதிபதி, மகிழ்ச்சியாக இருக்கும் அப்சரஸ்களும், மகிழ்ச்சியான கந்தர்வக்கூட்டங்களும் ஆங்காங்கே இருப்பதை அவன் கண்டான்.(13) வேறு சில கந்தர்வர்கள் தங்கள் அன்புக்குரிய மனைவிகளுடன் அங்கே விளையாடிக் கொண்டிருப்பதையும் அவன் கண்டான். மன்னன் சில வேளைகளில் இந்தக் காட்சிகளைக் கண்டான், சில வேளைகளில் அவனால் காண முடியவில்லை (ஏனெனில் அவை அவனது கண்களுக்கு முன்னால் தோன்றி மறைபவையாக இருந்தன).(14) மென்மையான குரலிசைகளையும், வேதங்கள் மற்றும் சாத்திரங்களைத் தங்கள் சீடர்களுக்கு எடுத்துரைக்கும் ஆசான்களின் இனிய குரல்களையும் அந்த ஏகாதிபதி கேட்டான். தடாகங்களில் விளையாடும் வாத்துகளின் இணக்கமான கொக்கரிப்புகளையும் கேட்டான்.(15)

இத்தகைய அழகிய காட்சிகளைக் கண்ட மன்னன் தனக்குள்ளேயே நினைக்கத் தொடங்கினான், “இது கனவா? இவை யாவும் என் மனத்தின் மயக்கத்தால் ஏற்படுகின்றனவா? அல்லது இவையனைத்தும் உண்மைதானா?(16) ஓ!, நான் என் பூலோகவாசத்தைக் கைவிடாமலேயே சொர்க்கத்தின் இன்பத்தை அடைந்துவிட்டேன். ஒருவேளை இஃது உத்தரக் குருக்களின் புண்ணிய நாடா? அல்லது அமராவதி என்றழைக்கப்படும் தேவர்த்தலைவனின் வசிப்பிடமா?(17) ஓ! காண்பதற்கினிய அற்புதக் காட்சிகளைப் பார்க்கிறேன்” {என்று நினைக்கத் தொடங்கினான்}. இவ்வகையில் நினைத்த அந்த ஏகாதிபதி இறுதியாக அந்த முதன்மையான முனிவரை {சியவனரைக்} கண்டான்.(18) ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களால் அமைக்கப்பட்ட தூண்களுடன் கூடிய அந்தப் பொன்மாளிகையில் ஒரு விலைமதிப்புமிக்கச் சிறந்த படுக்கையில் பிருகுவின் மகன் {சியவனர்} கிடந்தார்.(19) தன் மனைவியுடன் கூடிய மன்னன், மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் முனிவர் கிடந்த படுக்கைக்குச் சென்றான். எனினும், சியவனர் தாம் கிடந்த படுக்கையுடன் சேர்ந்து விரைவில் மறைந்துபோனார்.(20)

மன்னன் காட்டின் மற்றொரு பகுதியில், அம்முனிவர் குசப்புல்லாலான விரிப்பில் {தர்ப்பாஸனத்தில்} அமர்ந்து கொண்டு, மனத்தில் சில உயர்ந்த மந்திரங்களை உரைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.(21) இவ்வாறே அம்முனிவர் தமது யோக சக்தியால் மன்னனை மலைப்படையச் செய்தார். அந்தக் கணத்திலேயே அந்த இனிய காட்டில் இருந்த அப்சரஸ் கூட்டங்களும், கந்தர்வக்கூட்டங்களும், அந்த அழகிய மரங்கள் அனைத்தும் மறைந்தன.(22) கங்கையின் கரை எப்போதும் போன்ற அமைதியை அடைந்து, குசப்புற்களாலும், எரும்புப்புற்றுகளாலும் மறைந்திருக்கும் பழைய தன்மையை அடைந்தது.(23) மன்னன் குசிகன், அந்த அற்புதக் காட்சியையும், உடனே அது மறைந்து போனதையும் தன் மனைவியுடன் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்.(24)

மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன்கூடிய அம்மன்னன் தன் மனைவியிடம், “ஓ! இனியவளே, எங்கும் காண முடியாத இனிமையான காட்சிகள் பலவற்றை நாமிருவரும் கண்டோம்.(25) இவையனைத்தும் பிருகு மகனின் {சியவனரின்} அருளாலும், அவருடைய தவப் பலத்தாலும் நடைபெறுகிறது. ஒருவன் தன் கற்பனையில் காணும் அனைத்தையும் தவங்களின் மூலம் அடைய முடிகிறது.(26) மூவுலகங்களின் ஆட்சியுரிமையைவிடத் தவங்கள் மேன்மையானவை. நன்கு செய்யப்பட்ட தவங்களின் மூலம் விடுதலையையே {முக்தியையே} அடைய முடியும். உயர் ஆன்மா கொண்டவரும், தெய்வீகமானவருமான முனிவர் சியவனருடைய தவங்களின் வலிமையைப் பார். அவர் விரும்பினால் (இப்போது இருப்பதைத் தவிர இன்னும்) வேறு உலகங்களையும் உண்டாக்க முடியும்.(27,28) புனிதமான வாக்கு, புத்தி மற்றும் செயல்களை அடைவதற்காக மட்டுமே இவ்வுலகில் பிராமணர்கள் பிறக்கிறார்கள். சியவனரைத் தவிர வேறு யாரால் இவை அனைத்தையும் செய்ய முடியும்?(29) அரசுரிமையை எளிதில் அடைந்துவிடலாம். ஆனால் பிராமண நிலையானது அடைய முடியாததாகும். ஒரு பிராமணரின் பலத்தின் மூலமே நன்கு பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகளைப் போல நாம் ஒரு தேரில் பூட்டப்பட்டோம்” என்றான்.(30)

மன்னனின் மூளையில் தோன்றிய இந்நினைவுகளைச் சியவனர் அறிந்தார். மன்னனின் சிந்தனைகளை உறுதி செய்து கொண்ட முனிவர் அவனிடம் {குசிகனிடம்} “விரைவாக இங்கே வா” என்று சொன்னார்.(31)

இவ்வாறு சொல்லப்பட்ட மன்னனும், ராணியும் பெரும் தவசியை அணுகி வழிபாட்டுக்குத்தகுந்த அவரிடம் தலைவணங்கி நின்றனர்.(32) ஓ! மனிதர்களின் தலைவா, பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முனிவர் அந்த ஏகாதிபதிக்கு ஆசிகூறி அம்மன்னனுக்கு ஆறுதல் அளித்து, “இந்த இருக்கையில் அமர்வாயாக” என்றார்.(33)

இதன் பிறகு, ஓ! ஏகாதிபதி, அந்தப் பிருகுமகன் {சியவனர்} எவ்வகை வஞ்சனையோ, பொய்மையோ இன்றி மென்மையான சொற்கள் பலவற்றால் மன்னனை நிறைவடையச் செய்து,(34) “ஓ! மன்னா, செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தையும், ஆறாவதாக மனத்தைக் கொண்ட அறிவுப்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தையும் நீ முற்றிலும் அடக்கியிருக்கிறாய். அதன் காரணமாகவே நான் உனக்காகத் தயாரித்த கடுஞ்சோதனைகளில் இருந்து சிறுதீங்குமின்றி நீ வெளியேறியிருக்கிறாய்.(35) ஓ! மகனே, வாக்குடைய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் உன்னால் முறையாகக் கௌரவிக்கப்பட்டுத் துதிக்கப்பட்டேன். உன்னிடம் எப்பாவமும் இல்லை, மிகச் சிறிய பாவமும் உன்னிடம் இல்லை.(36) ஓ! மன்னா, எனக்கு விடை கொடுப்பாயாக, நான் எந்த இடத்தில் இருந்து வந்தேனோ அங்கே இப்போது திரும்பிச் செல்லப் போகிறேன். ஓ! ஏகாதிபதி, நான் உன்னிடம் பெரும் நிறைவடைந்திருக்கிறேன். நான் உனக்குத் தரத் தயராக இருக்கும் வரத்தை ஏற்பாயாக” என்றார்.(37)

குசிகன் {சியவனரிட, “ஓ! புனிதமானவரே, நெருப்புக்கு மத்தியில் வசிப்பவனைப் போலவே நான் உமது முன்னிலையில் இருந்தேன். ஓ! பிருகு குலத்தின் தலைவரே, நான் இன்னும் எரியாமல் இருப்பதே போதுமானதாகும்.(38) ஓ! பிருகுவை மகிழ்ச்சியடையச் செய்பவரே, இதுவே நான் அடைந்த உயர்ந்த வரமாகும். ஓ! பாவமற்றவரே, ஓ! பிராமணரே, நீர் என்னிடம் நிறைவடைந்ததும், நானும் என் குலம் அழியாமல் மீட்டதும் என் வழக்கில் சிறந்த வரங்களாகும்.(39) ஓ! கல்விமானான பிராமணரே, உமது அருளுக்கான குறிப்பிடத்தகுந்த சான்றாக இதை நான் கருதுகிறேன். என் வாழ்வின் இலக்கு நிறைவேறியது. என் அரசுரிமைக்கான கதியாகவும் இதையே நான் கருதுகிறேன். என் தவங்களின் உயர்ந்த கனியாகவும் நான் இதையே கருதுகிறேன்.(40) ஓ! கல்விமானான பிராமணரே, ஓ! பிருகுவை மகிழ்ச்சியடையச் செய்பவரே, நீர் என்னிடம் நிறைவடைந்திருந்தால் என் மனத்தில் உள்ள ஐயங்கள் சிலவற்றை விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(41)

சியவனர் அருளிய வரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 55-ன் மனத்தில் இருந்த ஐயங்கள் அனைத்தையும் சியவனரிடம் கேட்ட குசிகன்; தமது செயல்பாடுகளுக்கான காரணங்களைக் குசிகனுக்கு விளக்கிச் சொல்லி அவனுக்கு வரமளித்த சியவனர்…

சியவனர் {மன்னன் குசிகனிடம்}“நீ என்னிடம் இருந்து ஒரு வரத்தை ஏற்பாயாக. ஓ! மனிதர்களின் தலைவா, உன் மனத்தில் இருக்கும் ஐயம் என்ன என்பதையும் எனக்குச் சொல்வாயாக. நான் நிச்சயம் உன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்” என்றார்.(1)

குசிகன் {முனிவர் சியவனரிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! பிருகுவின் மகனே, நீர் என்னிடம் நிறைவடைந்தீரானால், என் அரண்மனையில் சில காலம் நீர் வசித்த நோக்கத்தை எனக்குச் சொல்வீராக, அதை நான் கேட்க விரும்புகிறேன். என்னால் உமக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் பக்கம் திரும்பாமல் இருபத்தோரு நாட்கள் உறங்கியதில் உமது நோக்கம் என்ன?(2) மேலும், ஓ! தவசிகளில் முதன்மையானவரே, ஒரு வார்த்தையும் பேசாமல் அந்த அறையை விட்டுச் சென்றது ஏன்?(3) மேலும், வெளிப்படையான காரணம் ஏதும் இல்லாமல் ஏன் மறைந்தீர்? பிறகும் மீண்டும் ஏன் மறைந்தீர்? ஓ! கல்விமானான பிராமணரே, முன்பைப் போலவே மீண்டும் இருபத்தோரு நாட்கள் ஏன் படுக்கையில் கிடந்து உறங்கினீர்?(4) உமது நீராட்டத்திற்காக உம் மீது நாங்கள் எண்ணெய் பூசியதும் என்ன காரணத்தினால் நீர் சென்றுவிட்டீர்? பல்வேறு வகையான உணவு வகைகளை என் அரண்மனையில் திரட்டச் செய்துவிட்டு, அதன்பிறகு தீயின் துணையுடன் அவற்றை ஏன் எரித்தீர்?(5)

திடீரென என் தேரில் என் நகரில் நீர் செய்த பயணத்திற்கான காரணம் என்ன? அவ்வளவு செல்வத்தைக் கொடையளித்ததில் உமது நோக்கம் என்ன? உமது யோக பலத்தால் உண்டான காட்டில் உள்ள அதிசயங்களை எங்களுக்குக் காட்டியதில் உமது நோக்கம் என்ன?(6) உண்மையில், ஓ! பெருந்தவசியே, பொன்னாலான மாட மாளிகைகள் பலவற்றையும், ரத்தினங்கள் மற்றும் கற்களாலான சட்டங்களால் தாங்கப்படும் படுக்கைக்ள பலவற்றையும் எங்களுக்குக் காட்டியதில் உமது நோக்கம் என்ன?(7) அந்த அதிசயங்கள் அனைத்தும் எங்கள் பார்வையில் இருந்து மறைந்து போனது ஏன்? இவை யாவற்றின் காரணங்களையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ!பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, உமது செயல்கள் இவ்வளவையும் நினைத்து நான் மீண்டும் மீண்டும் திகைப்படைகிறேன்.(8) உம்மில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய எந்தக் குறிப்பிட்ட நோக்கத்தையும் நான் காணத்தவறுகிறேன். ஓ! தவங்களையே செல்வமாகக் கொண்டவரே, உமது செயல்கள் அனைத்தையும் குறித்த உண்மைகளை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான் {குசிகன்}.(9)

சியவனர் {மன்னன் குசிகனிடம்}, “நான் செய்த இச்செயல்கள் அனைத்தையும் என்னைச் செய்யத் தூண்டிய காரணங்களை விரிவாக உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! ஏகாதிபதி, உன்னால் கேட்கப்பட்டுப் பிறகு உன்னைத் தெளிவடையச் செய்ய என்னால் மறுக்க முடியாது.(10) பழங்காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் தேவர்கள் அனைவரும் கூடியிருந்தபோது, பெரும்பாட்டனான பிரம்மன் சில வார்த்தைகளைச் சொன்னார். ஓ! மன்னா, நான் அவற்றைக் கேட்டேன், அதை இப்போது உனக்குச் சொல்கிறேன்.(11) {பிரம்மன்}, “பிரம்ம, க்ஷத்திரிய சக்திகளுக்கு இடையிலான போராட்டத்தின் விளைவால் என் குலத்தில் கலப்பு நேரப் போகிறது” {என்றான் பிரம்மன்}[1]. ஓ! மன்னா, உன் பேரன் பெரும் சக்தியும் பலமும் கொண்டவனாக இருப்பான்.(12) இதைக் கேட்டதும், உன் குலத்தை அழிக்கும் தீர்மானத்துடன் நான் இங்கே வந்தேன். ஓ! குசிகா, உண்மையில் உன் குலத்தை முற்றாக அழித்து, உன் வழித்தோன்றல்கள் அனைவரையும் சாம்பலாக்கவே நான் வந்தேன்[2].(13) ஓ! ஏகாதிபதி, இந்நோக்கத்தால் தூண்டப்பட்டு உன் அரண்மனைக்கு வந்த நான் உன்னிடம், “நான் ஒரு நோன்பை நோற்கப் போகிறேன். என்னைக் கவனித்துக் கொண்டு கடமையுணர்வுடன் தொண்டு செய்வாயாக” என்றேன்.(14) எனினும் உன் வீட்டில் நான் வசித்திருந்தபோது, உன்னிடம் நான் எந்தக் களங்கத்தையும் காணத் தவறினேன். ஓ! அரசமுனியே, அந்தக் காரணத்தினால்தான் நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய். இல்லையெனில் இறந்தோருடன் நீ ஏற்கனவே கணக்கிடப்பட்டிருப்பாய்.(15)இந்தத் தீர்மானத்துடன், நானே எழுவதற்கு முன் யாராவது என்னை விழிப்படையச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் நான் இருபத்தோரு நாட்கள் உறங்கினேன்.(16) எனினும், நீயும் உன் மனைவியும் என்னை விழிப்படையச் செய்யவில்லை. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நான் உன்னிடம் மகிழ்ச்சியடைந்தேன்.(17) படுக்கையில் இருந்து எழுந்து உங்களிடம் ஏதும் பேசாமலேயே நான் அந்த அறையை விட்டு வெளியே சென்றேன். ஓ! ஏகாதிபதி, நீ என்னைக் கேட்பாய், அதனால் உன்னைச் சபிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டும் என்ற நம்பிக்கையிலேயே நான் அதைச் செய்தேன்.(18) பிறகு நான் என்னை மறைத்துக் கொண்டு, உன் அரண்மனையின் ஓர் அறையில் மீண்டும் என்னை வெளிப்படுத்திக் கொண்டு மீண்டும் இருபத்தோரு நாட்கள் யோகத்துயில் கொண்டேன்.(19) என்னைத் தூண்டிய நோக்கம் இதுதான். பசியாலும், களைப்பாலும் கோபமடையும் நீங்கள் இருவரும் நான் விரும்பாததைச் செய்வீர்கள் என்று நினைத்தேன். இந்த நோக்கத்துடன்தான் நான் உன்னையும் உன் மனைவியையும் பசியால் பீடிக்கச் செய்தேன்.(20)

எனினும், ஓ! மன்னா, உன் இதயத்தில் சிறு கோப உணர்ச்சியோ, எரிச்சலோ எழுவில்லை. ஓ! ஏகாதிபதி இதனால் நான் உன்னிடம் பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.(21) பல்வேறு உணவு வகைகளைக் கொண்டுவரச் செய்து, அவற்றுக்குத் தீ மூட்டியபோது, அதைக் கண்டு நீயும் உன் மனைவியும் கோபமடைவீர்கள் என்று நினைத்தேன். எனினும், என்னுடைய அந்தச் செயலையும் நீங்கள் பொறுத்தீர்கள்.(22) பிறகு, ஓ! ஏகாதிபதி, தேரில் ஏறிக் கொண்டு உன்னிடம், “நீயும், உன் மனைவியும் என்னைச் சுமப்பீராக” என்றேன். ஓ! மன்னா, நான் சொன்னதை நீங்கள் சிறு தயக்கமுமின்றிச் செய்தீர்கள். இதனால் நான் மகிழ்ச்சியால் நிறைந்தேன். நான் கொடுத்த செல்வக் கொடைகளும் உங்கள் கோபத்தைத் தூண்டவில்லை.(23,24) ஓ! மன்னா, உன்னிடம் நிறைவடைந்த நான், நீயும் உன் மனைவியும் இங்கே கண்ட அந்தக் காட்டை என் யோக பலத்தின் உதவியால் உண்டாக்கினேன். ஓ! ஏகாதிபதி, நான் கொண்டிருந்த நோக்கத்தைக் கேட்பாயாக.(25)

உன்னையும், உன் ராணியையும் நிறைவடையச் செய்வதற்காக உன்னை நான் சொர்க்கத்தில் ஒரு பார்வை காணச் செய்தேன். ஓ! ஏகாதிபதி, இந்தக் காட்டில் நீ கண்ட அனைத்துப் பொருட்களும் சொர்க்கத்தின் முன்சுவையாகும்.(26) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நீயும் உன் மனைவியும் பூமிசார்ந்த உடல்களைக் கொண்டிருந்தாலும், உங்களைச் சில காலம் சொர்க்கத்தின் காட்சிகள் சிலவற்றைக்  காணும்படி செய்தேன்.(27) தவங்களின் பலத்தையும், அறத்திற்காகச் சேமிப்பில் இருக்கும் வெகுமதியையும் காட்டுவதற்காகவே இவை யாவும் செய்யப்பட்டன. ஓ! ஏகாதிபதி, அந்த இனிமைநிறைந்த பொருட்களைக் கண்டதும் உன் இதயத்தில் எழுந்த ஆசையை நான் அறிவேன்.(28) ஓ! பூமியின் தலைவா, பூமியின் அரசுரிமையையும், சொர்க்கத்தின் அரசையும் அலட்சியம் செய்து, பிராமணத் தன்மையையும், தவங்களின் தகுதியையும் நீ அடைய விரும்பினாய்.(29) ஓ! மன்னா, இதையே நீ நினைத்தாய். பிராமண நிலையை அடைவது மிகக் கடினமாகும்; பிராமணனான பிறகு, ஒரு முனிவரின் நிலையை அடைவது மிகக் கடினமாகும்; முனிவரான பிறகு ஒரு தவசியாவது மிகக் கடினமாகும்.(30)

நான் உனக்குச் சொல்கிறேன், உன் ஆசை நிறைவடையும். ஓ! குசிகா, உன் பெயரால் {கௌசிகர் [விஷ்வாமித்ரர்] என்று} அழைக்கப்படும் பிராமணன் ஒருவன் உன்னில் இருந்து எழுவான். உன்னிலிருந்து மூன்றாம் தலைமுறையைச் சார்ந்தவன் பிராமண நிலையை அடைவான்.(31) ஓ! ஏகாதிபதி, உன் பேரன், பிருகுக்களின் சக்தியின் மூலம் நெருப்பின் காந்தியுடன் கூடிய ஒரு தவசியாக இருப்பான்.(32) அவன் மனிதர்கள் அனைவருக்கும், மூவுலகங்களில் வசிப்போருக்கும் எப்போதும் அச்சத்தை ஊட்டுவான். நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்.(33) ஓ! அரச முனியே, உன் மனத்தில் இப்போது இருக்கும் அந்த வரத்தை ஏற்பாயாக. நான் விரைவில் புனித நீர்நிலைகள் அனைத்திற்கும் பயணம் புறப்பட {தீர்த்த யாத்திரை செல்ல} இருக்கிறேன். காலம் கடந்து போகிறது” என்றார் {சியவனர்}.(34)

குசிகன், “ஓ! பெருந்தவசியே, என் வழக்கில் நீர் என்னிடம் நிறைவடைந்திருப்பதே எனக்கு உயர்ந்த வரமாகும். நீர் சொன்னது நடக்கட்டும். ஓ! பாவமற்றவரே, என் பேரன் ஒரு பிராமணனாகட்டும்.(35) உண்மையில், ஓ! புனிதமானவரே, பிராமணத்வ நிலை என் குலத்தைப் பற்றட்டும். நான் இந்த வரத்தையே கேட்கிறேன். ஓ! புனிதமானவரே, மீண்டும் நான் உம்மை விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(36) ஓ! பிருகுவை மகிழ்ச்சியடையச் செய்பவரே, பிராமணத்வ நிலை எவ்வழியில் என் குலத்தைப் பற்றும்? எவன் என் நண்பனாக இருப்பான்? என் அன்பையும், மதிப்பையும் எவன் பெறுவான்?[3]” என்று கேட்டான் {குசிகன்}.(37)

விஷ்வாமித்ரர் மற்றும் பரசுராமர் பிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 56-பிருகு குலத்திலும், குசிக குலத்திலும் நேரப்போகும் வர்ணக் கலப்புக் குறித்துக் குசிகனிடம் சொன்ன சியவனர்; விஷ்வாமித்ரர் மற்றும் பரசுராமரின் பிறப்பை முன்கூட்டியே அறிவித்தது…

சியவனர் {மன்னன் குசிகனிடம்*}, “ஓ! மனிதர்களின் தலைவா, ஓ! ஏகாதிபதி, உன் குலத்தை அழிப்பதற்காக நான் இங்கே வந்த சூழ்நிலைகள் அனைத்தையும் நிச்சயம் நான் உனக்குச் சொல்ல வேண்டும்.(1) ஓ! மன்னா, வேள்விக் காரியங்களில் க்ஷத்திரியர்களுக்குப் பிருகு மகன்களின் துணை எப்போதும் வேண்டும் என்பது நன்கறியப்பட்டதே. தடுக்கப்பட முடியாத அளவுக்கான விதியின் மூலம் க்ஷத்திரியர்களும், பார்க்கவர்களும் வீழப் போகிறார்கள்.(2) ஓ! மன்னா, பிருகுவின் வழித்தோன்றல்கள் அனைவரையும் க்ஷத்திரியர்கள் கொல்லப் போகிறார்கள். விதி விதிக்கும் விதியால் பீடிக்கப்படும் அவர்கள் தாயின் கருவறையில் உள்ள குழந்தைகளையும் விட்டுவிடாமல் பிருகு குலத்தை அழிக்கப் போகிறார்கள்.(3)
*குசிகன்= கௌசிகன், கவுசிகன்

அவுர்வன் {ஔர்வன்} என்ற பெயரில் பிருகு குலத்தில் ஒரு முனிவன் தோன்றுவான். பெருஞ்சக்தியுடன் கூடிய அவன் நிச்சயம் நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியுடன் இருப்பான்.(4) அவன் மூன்று உலகங்களையும் எரிக்கப் போதுமான அளவுக்குக் கோபத்தை வளர்ப்பான். மலைகள் மற்றும் காடுகளுடன் கூடிய மொத்த உலகத்தையும் சாம்பலாகக் குறைக்கத்தக்கவனாக அவன் இருப்பான்.(5) சிறிது காலத்திற்குப் பிறகு அந்தக் கோப நெருப்பின் தழல்களை, கடலில் உலவும் குதிரையின் {வடவையின்} வாயில் வீசித் தணிக்கப் போகிறான்.(6) அவன் {ஔர்வன்} ரிசீகன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெறுவான். ஓ! பாவமற்றவனே, மொத்த ஆயுத அறிவியலும் உடல்கொண்ட வடிவத்துடன் அவனிடம் வந்து சேரும்.(7) விதி விதிக்கும் விதியின்படி மொத்த க்ஷத்திரிய குலத்தையும் அழிப்பதற்காக அவனிடம் வந்து சேரும். உள்ளொளியின் மூலம் அந்த அறிவியலைப் பெற்றுக் கொள்ளும் அவன், உயர் ஆன்மா கொண்டவனும், உயர்ந்த அருளைக் கொண்டவனுமான அவனது மகன் ஜமதக்னிக்குத் தன் யோக பலத்தின் மூலம் அதை {அந்த ஆயுத அறிவியலைக்} கொடுப்பான். அந்தப் பிருகு குலப் புலியும் {ஜமதக்னியும்} அதைத் தன் மனத்தில் தாங்குவான்.(8,9)

ஓ! அற ஆன்மா கொண்டவனே, ஓ! பாரதர்களின் தலைவனே, ஜமதக்னி உன் குலத்தின் {குசிக குலத்தின்} மகிமையைப் பரவச் செய்வதற்காக அக்குலத்தில் ஒரு பெண்ணை மணப்பான்.(10) காதியின் மகளும், உன் பேத்தியுமானவளைத் தன் மனைவியாகக் கொள்ளும் அந்தப் பெரும் தவசி {ஜமதக்னி}, க்ஷத்திரிய வித்தகங்களுடன் கூடிய ஒரு மறுபிறப்பாள மகனை {பரசுமாரமனைப்} பெறுவான்.(11) உன் குலத்தில் பிராமணக் குணங்களுடன் கூடிய க்ஷத்திரியனாக ஒரு மகன் {விஷ்வாமித்திரன்} பிறப்பான். பேரறத்துடன் கூடிய அவன் காதியின் மகனாக {விஷ்வாமித்ரனாக} இருப்பான். விஷ்வாமித்ரன் என்ற பெயரில் அறியப்படும் அவன், தேவர்க்காசானான பிருஹஸ்பதிக்கு இணையான சக்தி கொண்டவனாகக் கருதப்படுவான்.(12) சிறப்புமிக்க ரிசீகனே, பெரும் தவங்களுடன் கூடிய இந்த க்ஷத்திரியனை {விஷ்வாமித்ரனை} உன் குலத்திற்குக் கொடுப்பான். (பிருகு குலத்தில் ஒரு க்ஷத்திரியன் மற்றும் உன் குலத்தில் ஒரு பிராமணன் என்று) மகன்களைப் பரிமாறிக் கொள்ளும் இக்காரியத்திற்கு இரு பெண்களே காரணமாக இருப்பார்கள்.(13) இவை யாவும் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} ஆணைப்படியே நடந்தேறும். இஃது ஒருபோதும் வேறுவகையாகாது. உன்னில் இருந்து மூன்றாம் வழித்தோன்றலைப் பிராமணத்வம் என்ற நிலை பற்றும். (திருமண உறவின் மூலம்) நீ பார்க்கவர்களுக்கு உறவினனாவாய்” என்றார் {சியவனர்}”.(14)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம தவசியான சியவனர் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் குசிகன் இன்பத்தால் நிறைந்து பின்வரும் சொற்களில் பதிலுரைத்தான்.(15) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, உண்மையில் அவன், “அப்படியே ஆகட்டும்” என்றான். பெருஞ்சக்தியுடன் கூடிய சியவனர் மீண்டும் மன்னனிடம் பேசி,(16) ஒரு வரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அவனைத் தூண்டினார். மன்னன், “மிக்க நன்று. ஓ! பெரும் தவசியே, என் விருப்பம் கனியும் நிலையை நான் உம்மிடம் இருந்து பெறுவேன்.(17) என் குலம் பிராமணத்வ நிலை கொண்டதாகட்டும். அஃது எப்போதும் தன் இதயத்தில் அறத்தை நிலைநிறுத்திக் கொள்ளட்டும்” என்றான். இவ்வாறு வேண்டப்பட்ட தவசி சியவனர், மன்னனின் வேண்டுதலை அருளி,(18) அந்த ஏகாதிபதியிடம் விடைபெற்றுக் கொண்டு தாம் எண்ணியிருந்த புனிதநீர்நிலைகளுக்கான பயணத்திற்குப் புறப்பட்டார். ஓ! பாரதா, பிருகுக்களும், குசிகர்களும் {கௌசிகர்களும்} எவ்வாறு திருமணத்தின் மூலம் இணைந்தனர் என்பது குறித்த உன் கேள்விகள் தொடர்புடைய அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், ஓ! மன்னா, முனிவர் சியவனர் சொன்னவாரே அனைத்தும் நடந்தன. (பிருகு குலத்தில்) ராமர் {பரசுராமர்} பிறப்பும், (குசிக (கௌசிக) குலத்தில்) விஷ்வாமித்ரர் பிறப்பும் சியவனர் குறிப்பிட்ட வழியிலேயே நடந்தேறின” {என்றார் பீஷ்மர்}.(20)

தவமும் கொடையும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 57-தவம், கொடை ஆகியவற்றின் சிறப்புக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, உமது சொற்களைக் கேட்டு நான் திகைப்படைகிறேன். பெருஞ்செழிப்பைக் கொண்டிருந்த எண்ணற்ற மன்னர்கள் அனைவரும் இப்போது இந்தப் பூமியில் இல்லாததை நினைத்து என் இதயம் துயரால் நிறைகிறது.(1) ஓ! பாரதரே, ஓ! பாட்டா, நான் பூமியை வென்று, நூற்றுக்கணக்கான நாடுகளை அடைந்திருந்தாலும், கோடிக்கணக்கான மக்களைக் கொன்றிருப்பதை நினைத்து துயரடைகிறேன்.(2) ஐயோ, எங்களால் கணவர்களையும், மகன்களையும், தாய்மாமன்களையும், சகோதரர்களையும் இழந்திருக்கும் முதன்மையான பெண்மணிகளின் அவலநிலை என்னவாக இருக்கும்?(3) எங்கள் உறவினர்களும், நண்பர்களும், நலன்விரும்பிகளுமான குருக்களைக் கொன்றதால் நாங்கள் தலைகீழாக நரகில் மூழ்கப் போகிறோம். இதில் ஐயமேதும் கிடையாது.(4) ஓ! பாரதரே, நான் என் உடலைக் கடுந்தவங்களில் ஈடுபடுத்த விரும்புகிறேன். ஓ! மன்னா {பீஷ்மரே}, அந்தக் கதியை நோக்கில் கொண்டு நான் உம்மிடம் இருந்து போதனைகளைப் பெற விரும்புகிறேன்” என்றான்”.(5)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம பீஷ்மர், யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்டு, தம் புத்தியின் துணையுடன் அவை குறித்துக் கூர்மையாகச் சிந்தித்து யுதிஷ்டிரனுக்கு மறுமொழி கூறினார்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக. அது பெரும் ஆச்சரியம் நிறைந்ததாகவும், பெரும் புதிராகவும் இருக்கிறது. உயிரினங்கள் செய்யும் குறிப்பிட்ட செயல்கள் அல்லது அவை பின்பற்றும் ஒழுக்க வழிகளின் வெகுமதியாக மரணத்திற்குப் பின்னால் அடையும் கதிகள் குறித்துச் சொல்லப் போகிறேன்.(7) ஒருவன் தவங்களின் மூலம் சொர்க்கத்தை அடைகிறான். ஒருவன் தவங்களின் மூலம் புகழை அடைகிறான். ஓ! பலமிக்க மன்னா, ஒருவன் தவங்களின் மூலம் நீண்ட வாழ்நாளையும், இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைகிறான்.(8) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தவங்களின் மூலம் ஞானம், அறிவியல், உடல்நலம், நோயிலிருந்து விடுதலை, மேனி அழகு, செழிப்பு, அருள் நிலை ஆகியவற்றை ஒருவன் அடைகிறான்.(9) தவங்களின் மூலம் ஒருவன் செல்வத்தை அடைகிறான். பேசாத அமைதி நோன்பை {மௌனவிரதம்} நோற்பதன் மூலம் ஒருவன் மொத்த உலகையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வருகிறான். கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் இன்பத்திற்குரிய அனைத்துவகைப் பொருட்களையும் அடைகிறான். தீக்ஷை சடங்கைச் செய்வதன் {வேள்விதீக்ஷை செய்வதன்} மூலம் ஒருவன் நல்ல உயர்ந்த குடும்பத்தில் பிறக்கிறான்.(10)

(சமைக்கப்பட்ட உணவைத் தவிர்த்து) கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்டு தங்கள் வாழ்வைக் கழிப்பவர்கள் நாட்டையும், அரசு உரிமையையும் அடைவதில் வெல்கிறார்கள். செடி மற்றும் மரங்களின் இலைகளைத் தங்கள் உணவாக உண்டு வாழ்வோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(11) நீரை மட்டுமே உண்டு வாழும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான். கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் தன் செல்வத்தைப் பெருக்கிக் கொள்கிறான். ஒருவன் தனது ஆசானுக்கு மதிப்புடன் தொண்டாற்றுவதன் மூலம் கல்வியை அடைகிறான். பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் நாள்தோறும் சிராத்தங்கள் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் எண்ணிக்கையிலான பிள்ளைகளை அடைகிறான்.(12) கீரை மற்றும் காய்கறிகளில் தீக்ஷை {சாக விரதம்} நோற்கும் ஒருவன் பெரும் எண்ணிக்கையிலான பசுக்களை அடைகிறான். புற்கள் மற்றும் துரும்புகளை உண்டு வாழ்பவர்கள் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தேவையான சடங்குகளுடன் மும்முறை நீராடும் ஒருவன் பெரும் எண்ணிக்கையிலான மனைவிகளை அடைகிறான். வெறும் காற்றை மட்டுமே குடிக்கும் ஒருவன் பிரஜாபதியின் உலகவாசத்தை அடைகிறான்.(13)

ஒவ்வொரு நாளும் நீராடி, இரு சந்தி வேளைகளிலும் புனித மந்திரங்களை உரைக்கும் பிராமணன், தக்ஷனின் நிலையை அடைகிறான் {நெடுங்காலம் உயிர்வாழ்வான்}. காடு மற்றும் பாலைவனத்தில் உள்ள தேவர்களை வழிபடுவதன் மூலம் ஒருவன் நாட்டையோ, அரசுரிமையையோ அடைகிறான். நீண்ட உண்ணா நோன்பின் மூலம் உடலைக் கைவிடும் நோன்பை நோற்கும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான்.(14) தவச் செல்வத்துடன் கூடிய ஒருவன் எப்போதும் தன் நாட்களை யோகத்தில் கடத்துவதால், நல்ல படுக்கைகள், இருக்கைகள் மற்றும் வாகனங்களை அடைகிறான். சுடர்மிக்க நெருப்புக்குள் நுழைவதன் மூலம் உடலைக் கைவிடும் ஒருவன், பிரம்மலோகத்தில் மதிப்பிற்குரிய பொருளாகிறான்.(15) கடினமாக உள்ள வெறுந்தரையில் {கட்டாந்தரையில்} கிடப்பவர்கள், வீடுகளையும், படுக்கைகளையும் அடைகிறார்கள். மரவுரிகளை உடுத்துபவர்கள் நல்ல ஆடை மற்றும் ஆபரணங்களை அடைகிறார்கள்.(16)

இனிமையான சுவைகள் பலவற்றைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் பெருஞ்செழிப்பை ஈட்டுவதில் வெல்கிறான். இறைச்சி மற்றும் மீனைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் நீண்ட வாழ்நாளைக் கொண்ட பிள்ளைகளைப் பெறுகிறான்.(17) {நீரில் வசிக்கும்} உதவாசம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையில் சில காலம் கழிக்கும் ஒருவன் சொர்க்கத்தின் தேவனாகவே ஆகிறான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, வாய்மை பேசும் மனிதன், தேவர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடுவதில் வெல்கிறான்.(18) கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன், தனது உயர்ந்த சாதனைகளின் விளைவால் பெரும் புகழை ஈட்டுகிறான். கொடூரம் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் உடல்நலத்தையும், நோயில் இருந்து விடுதலையையும் அடைகிறான். பிராமணர்களிடம் மதிப்புடன் தொண்டாற்றுவதன் மூலம் ஒருவன் நாட்டையும், அரசுரிமையையும், பிராமணன் என்ற உயர்ந்த நிலையையும் அடைகிறான்.(19) நீரையும், பிற பானங்களையும் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் உயர்ந்த சாதனையின் விளைவாக ஒருவன் நித்தியமான புகழை ஈட்டுகிறான். உணவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் இன்பத்திற்குரிய பல்வேறு பொருட்களை அடைகிறான்.(20)

(தீங்கிழைக்காமல் தவிர்ப்பதன் மூலம்) உயிரினங்கள் அனைத்திற்கும் அமைதியான நிலையைக் கொடுக்கும் ஒருவன் ஒவ்வொரு துயரத்தில் இருந்து விடுபடுகிறான். தேவர்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம் ஒருவன் நாட்டையும், தெய்வீக அழகையும் அடைகிறான்.(21) மக்கள் அடிக்கடி செல்லக்கூடியவையும், இருளாக இருப்பவையுமான இடங்களுக்கு விளக்கை அளிப்பதன் மூலம் ஒருவன் நல்ல பார்வையை அடைகிறான். நல்ல மற்றும் அழகிய பொருட்களைக் கொடுப்பதன் மூலம் ஒருவன் நல்ல நினைவையும், புத்தியையும் அடைகிறான்.(22) நறுமணப் பொருட்கள் மற்றும் மலர்மாலைகளைக் கொடுப்பதன் மூலம் ஒருவன் பெரும் பரப்பில் பரவியிருக்கும் புகழை அடைகிறான். தலைமுடி மற்றும் தாடிகளை மழிக்காமல் தவிர்ப்பவர்கள் சிறந்த பிள்ளைகளை அடைவதில் வெல்கிறார்கள்.(23) ஓ! பாரதா, நோன்புகள், தீக்ஷை மற்றும் நீராடல்களை (விதிப்படி) பனிரெண்டு ஆண்டுகள் நோற்கும் ஒருவன், திரும்பிவராத வீரர்களால் அடையப்படும் உலகத்தை விட மேன்மையான உலகத்தை அடைகிறான்.(24) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஒருவன் தன் மகளைத் தகுந்த மணமகனுக்குப் பிரம்ம வடிவத்தின் படி அளிப்பதன் மூலம் {திருமணம் செய்து கொடுப்பதன் மூலம்} அவன் ஆண், பெண் பணியாட்களையும், ஆபரணங்களையும், வயல்களையும், வீடுகளையும் அடைகிறான்.(25)

ஓ! பாரதா, வேள்விகள் செய்வது மற்றும் நோன்புகள் நோற்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்திற்கு உயர்கிறான். கனிகளையும், மலர்களையும் கொடையளிப்பவன் மங்கல ஞானத்தை அடைவதில் வெல்கிறான்.(26) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடிய ஆயிரம் பசுக்களைக் கொடையளிப்பவன் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான். சொர்க்கத்தில் நடந்த தேவர்களின் கூட்டத்தில் இதுவே சொல்லப்பட்டது.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொண்டுகளுடன் கூடியதும், கன்றுடன் சேர்ந்ததுமான ஒரு கபிலைப் பசுவைப் பால் கறப்பதற்கான வெண்கலக் குடத்தோடு கொடையளிப்பவன் பல்வேறு சாதனைகளைச் செய்பவனாகி, அந்தப் பசுவிடம் இருந்து தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைகிறான்.(28) அத்தகைய மனிதன், தான் செய்த கொடையின் விளைவால், அந்தப் பசுவின் உடலில் உள்ள முடிகளுடைய எண்ணிக்கையின் அளவுக்கான வருடங்கள் சொர்க்கத்தில் வசித்து, மறுமையில் (நரகத் துன்பங்களிலிருந்து) தன் மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் தன் குலத்தின் ஏழாம் தலைமுறை வரை மீட்கிறான்[1].(29) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கொம்புளுடன் கூடிய பசுவையும், அதனுடன் சேர்த்து பால் கறப்பதற்கான வெங்கலக் குடத்தையும், தங்கத்தால் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட துணியையும், எள்ளையும் {திலதேனுவையும்}, ஒரு தொகை பணத்தையும் தக்ஷிணையாகக் கொடுக்கும் மனிதன் வசுக்களின் உலகை அடைகிறான்[2].(30)கடலில் மூழ்கும் மனிதனை ஒரு படகின் பாய்மரம் காற்றைப் பற்றிக் கொண்டு மீட்பதைப் போலவே, பசுவைக் கொடையளிப்பவன் மறுமையில் நரகத்தின் ஆழ்ந்த இருளில் வீழும்போது, இம்மையில் செய்த செயல்களால் அவன் தடுக்கப்படுவான்.(31) தன் மகளைப் பிரம்ம வடிவ திருமண முறையின்படி தகுந்த மனிதனுக்கு அளிக்கும் ஒருவன், அல்லது ஒரு பிராமணனுக்கு நிலத்தைக் கொடையாக அளிக்கும் ஒருவன், அல்லது உரிய சடங்குகளின்படி (ஒரு பிராமணனுக்கு) உணவைக் கொடையளிக்கும் ஒருவன் புரந்தரலோகத்தை அடைவதில் வெல்கிறான்.(32) அனைத்துவகை அறைகலன்களுடன் ஒரு வீட்டை, வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்தவனும், அனைத்து வகைச் சாதனைகளையும், நல்லொழுக்கத்தையும் கொண்டவனுமான ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் உத்தரக் குருக்களின் நாட்டில் ஒரு வசிப்பிடத்தை அடைவான்.(33) வண்டியிழுக்கும் காளைகளைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வசுக்களின் உலகத்தை அடைகிறான். தங்கத்தைக் கொடையளிப்பது சொர்க்கத்திற்கு வழிவகுக்கிறது. பசும்பொன்னைக் கொடையளிப்பது இன்னும் பெரிய பலனுக்கு வழிவகுக்கிறது.(34) குடையைக் கொடையளிக்கும் ஒருவன் மாட மாளிகையை அடைகிறான். காலணிகளைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் நல்ல வாகனங்களை அடைகிறான். துணிகளைக் கொடையளிப்பது மேனி அழகைத் தருகிறது, நறுமணப் பொருட்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுமையில் நறுமணமிக்க மனிதனாகிறான்.(35)

ஒரு பிராமணனுக்கு மலர்கள், கனிகள், செடிகள் மற்றும் மரங்களைக் கொடையளிப்பவன், எந்த உழைப்பும் இல்லாமலேயே, அழகிய பெண்கள் மற்றும் அபரிமிதமான செல்வத்துடன் கூடிய மாட மாளிகையை அடைவான்.(36) பல்வேறு வகைச் சுவைகளுடன் கூடிய உணவு மற்றும் பானங்களையும், இன்பத்திற்குரிய பிற பொருட்களையும் கொடையளிப்பவன், அத்தகைய பொருட்களை அபரிமிதமாக அடைவதில் வெல்கிறான். வீடுகள் மற்றும் துணிகளைக் கொடையளிப்பவன் அதே வகைப் பொருட்களைப் பெறுவான். இதில் ஐயமேதும் கிடையாது.(37) மலர்மாலைகள், தூபங்கள், நறுமணப் பொருட்கள், களிம்புகள், நீராடலுக்குப் பிறகு மனிதர்களுக்குத் தேவைப்படும் பொருட்கள், மலர் வளையங்கள் ஆகியவற்றைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன், அனைத்து வகை நோயில் இருந்தும் விடுபட்டு, மேனி அழகையும் அடைந்து, பெரும் மன்னர்களுக்காக ஒதுக்கப்பட்ட உலகத்தில் இன்பமாக விளையாடுவான்.(38) ஓ! மன்னா, தானியம் சேமித்து வைக்கப்பட்டதும், படுக்கைகள் அமைக்கப்பட்டும், செல்வங்கள் நிரம்பியதும், மங்கலமானதும், இனிமை நிறைந்ததுமான ஒரு வீட்டை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் அரண்மனை போன்ற வசிப்பிடத்தை அடைகிறான்.(39) நறுமணப் பொருட்களால் மணமூட்டப்பட்டதும், சிறந்த போர்வை விரிக்கப்பட்டதும், தலையணைகளுடன் கூடியதுமான ஒரு நல்ல படுக்கையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவன், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளும், இனிமையான குணங்களைக் கொண்டவளுமான ஓர் அழகிய மனைவியை எந்த முயற்சியுமின்றி அடைவதில் வெல்வான்.(30) போர்க்களத்தில் வீரனின் படுக்கையை {வீரசயனம்} ஏற்கும் மனிதன், பெரும்பாட்டனான பிரம்மனுக்கு இணையானவனாவான். இதைவிட உயர்ந்த கதி வேறேதும் இல்லை. இதையே பெரும் முனிவர்கள் அறிவித்திருக்கிறார்கள்” என்றார் {பீஷ்மர்}”.(41)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “குருக்களைத் திளைக்கச் செய்பவனான யுதிஷ்டிரன், தன் பாட்டனின் சொற்களைக் கேட்டு, வீரர்களுக்காக ஒதுக்கப்படும் கதியை விரும்பினாலும், ஓர் இல்லறத்தானின் வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} நோற்பதில் எந்த அருவருப்பையும் அதற்கு மேலும் வெளிக்காட்டவில்லை[3].(42) ஓ! மனிதர்களின் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அதன்பிறகு பாண்டுவின் பிற மகன்களிடம் பேசிய யுதிஷ்டிரன், “நமது பாட்டன் சொன்ன சொற்கள் உங்களுக்கு நம்பிக்கையை அளிக்கட்டும்” என்றான்.(43) இதைக் கேட்ட பாண்டவர்கள் அனைவரும், அவர்களுக்கு மத்தியில் இருந்த புகழ்பெற்ற திரௌபதியும் யுதிஷ்டிரனின் சொற்களை மெச்சி, “சரி” என்று சொன்னார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(44)

குளமும், மரங்களும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 58-மரங்களை நடுதல் மற்றும் குளம் வெட்டல் ஆகியவற்றால் கிட்டும் பலன்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதர்களின் தலைவரே, ஓ! குருக்களில் சிறந்தவரே, மரங்களை நடுதல் {தோட்டம் வைத்தல்} மற்றும் குளங்களைத் தோண்டுதல் ஆகியவற்றால் உண்டாகும் பலன்களை நான் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பார்வைக்கு இனிமையானதும், வளமிக்கதும், பல்வேறு வகை உலோகங்களால் அலங்கரிக்கப்பட்ட {காவிக் கற்களினால் விளங்கிக் கொண்டு} இனிமை நிறைந்த காட்சிகளுக்கு மத்தியில் அமைந்திருப்பதும், அனைத்து வகை உயிரினங்கள் வசிப்பதுமான ஒரு நிலமே முதன்மையான இடமாகக் கருதப்படுகிறது.(2) அத்தகைய நிலத்தில ஒரு குறிப்பிட்ட பகுதியே ஒரு குளத்தைத் தோண்டத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பல்வேறு வகைக் குளங்களை முறையான வரிசையில் நான் உனக்குச் சொல்லப் போகிறேன். மேலும் (அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக நீரைப் பெருகச் செய்யும் நோக்கில்) குளங்களைத் தோண்டுவதால் உண்டாகும் பலன்களையும் உனக்குச் சொல்லப் போகிறேன்.(3) ஒரு குளத்தைத் தோண்டச் செய்யும் மனிதன் மூவுலகங்களிலும் மதிப்புக்கும், வழிபாட்டுக்கும் தகுந்தவனாகிறான்.(4) நீர் நிறைந்த ஒரு குளமானது, ஒரு நண்பனின் வீட்டைப் போல ஏற்புடையதும், நன்மையானதும் ஆகும். அது சூரியனையே நிறைவடையச் செய்வதாகும். தேவர்களின் வளர்ச்சியிலும் அது பங்காற்றுகிறது. (தோண்டச் செய்பவனின்) புகழுக்கு வழிவகுக்கும் பொருட்கள் அனைத்திலும் அதுவே {குளம் வெட்டுதலே} முதன்மையானதாகும்.(5)

குளம் வெட்டுதல், அறம், பொருள், இன்பம் என்ற முத்தொகைக்கும் பங்காற்றுகிறது[1]. மதிப்பிற்குரிய மனிதர்கள் வசிக்கும் நிலத்தில் ஏற்படுத்தப்படுவதையே முறையாகத் தோண்டப்பட்ட குளமாக ஞானிகள் சொல்கின்றனர். உயரினங்களுக்குத் தேவையான நான்கு காரியங்களுக்கும் தொண்டாற்றுவதே ஒரு குளம் என்று சொல்லப்படுகிறது. மேலும், குளங்களே ஒரு நாட்டின் மிகச் சிறந்த எழிலாக அமைகின்றன.(6,7) தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், பித்ருக்கள், உரகர்கள், ராட்சசர்கள், மேலும் அசைவற்ற உயிரினங்களும் கூட நீர் நிறைந்த ஒரு குளத்தையே தங்கள் புகலிடமாகக் கொள்கின்றனர்.(8) எனவே, குளங்களால் உண்டாகும் பயன்களையும், அவற்றைத் தோண்டச் செய்த மனிதர்களுக்குக் கிட்டும் பலன்களையும் குறித்துப் பெரும் முனிவர்களால் சொல்லப்பட்டதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(9)மழைக்காலத்தில் நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்த மனிதன் ஓர் அக்னிஹோத்ர வேள்வியைச் செய்த பலனை அறுவடை செய்கிறான் என்று ஞானிகள் சொல்கின்றனர்.(10) கூதிர்காலத்திலும் {சரத்காலத்தில்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்த மனிதன், ஆயிரம் பசுக்களைக் கொடையளித்தவன் இம்மையில் அறுவடையச் செய்த பலனை அடைகிறான்.(11) குளிர் காலத்தில் {ஹேமந்த காலத்தில்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்த மனிதன், அபரிமிதமான தங்கத்தைக் கொடையளித்து வேள்வி செய்தவனின் பலனை அடைகிறான்.(12) பனிக்காலத்தில் {சிசிரருது காலத்தில்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்தவன், ஓர் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்.(13) வசந்த காலத்தில் நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்தவன் அதிராத்ர வேள்வியைச் செய பலனை அடைகிறான்.(14) கோடைக்காலத்திலும் {க்ரீஷ்மகாலத்திலும்} நீரைக் கொண்டிருக்கும் குளத்தைச் செய்தவன் ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான் என்று முனிவர்கள் சொல்கிறார்கள்.(15)

எவன் செய்த குளத்தில் பசுக்கள் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்வது காணப்படுகிறதோ, எதிலிருந்து அறவோர் நீர் எடுக்கின்றனரோ அந்த மனிதன் தன் குலம் முழுவதையும் காக்கிறான்.(16) எவனுடைய குளத்தில் பசுக்களும், பிற விலங்குகளும், பறவைகளும், மனிதர்களும் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்கின்றனரோ அந்த மனிதன் ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.(17) ஒருவனுடைய குளத்தில் இருந்து எவ்வளவு நீர் குடிக்கப்படுகிறதோ, நீராடுவதற்காகப் பிறரால் எவ்வளவும் நீர் எடுக்கப்படுகிறதோ, அவ்வள்ளவும் குளத்தைத் தோண்டியவனின் நன்மைக்காகச் சேமிக்கப்பட்டு, மறுமையில் அவன் முடிவிலாத நாட்களுக்கு அவற்றை அனுபவிக்கிறான்.(18) ஓ! மகனே, நீரானது, குறிப்பாக மறுமையில் அடைவதற்கரிதானதாக இருக்கும். நீரைக் கொடையளிப்பது நித்திய மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.(19) இங்கே எள்ளைக் கொடையளிப்பாயாக. நீரைக் கொடையளிப்பாயாக. விளக்குகளைக் கொடையளிப்பாயாக. உயிரோடு இருக்கும்போதும், விழிப்புடன் இருக்கும்போதும் நீ உறவினர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பாயாக. மறுமையில் இச்செயல்களை உன்னால் செய்யவே இயலாது.(20)

ஓ! மனிதர்களின் தலைவா, அனைத்துக் கொடைகளையும்விட நீரைக் கொடையளிப்பது உயர்ந்ததாகும். பலனைப் பொறுத்தவரையில் இது பிற கொடைகள் அனைத்திலும் மேலானதாக இருக்கிறது. எனவே, நீ நீரைக் கொடையளிப்பாயாக.(21) இவ்வாறே குளங்கள் வெட்டுவதில் கிட்டும் உயர்ந்த பலன்களை முனிவர்கள் அறிவித்திருக்கின்றனர். இப்போது மரங்களை நடுதல் {தோட்டம் அமைத்தல்} குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்.(22) ஆறு வகை அசைவற்ற பொருட்கள் {தாவரங்கள்} சொல்லப்படுகின்றன. அவை விருக்ஷங்கள் {மரங்கள்}, குல்மங்கள் {புதர்கள்}, லதைகள் {கொடிகள்}, வள்ளிகள் {செடிகள்}, த்வக்ஷாரங்கள் {மூங்கில்}, பல்வேறு வகைத் திரினங்கள் {புற்பூண்டுகள்} ஆகியனவாகும்.(23) இவையே பல்வேறு வகைக் காய்கறிகள் {தாவரங்கள்}. அவற்றை நடுவதால் ஏற்படும் பலனை இப்போது கேட்பாயாக. மரங்களை நடுவதன் மூலம் ஒருவன், மனிதர்களின் உலகில் புகழையும், மறுமையில் மங்கலப் பலன்களையும் அடைகிறான்.(24) அத்தகைய மனிதன், பித்ருக்களின் உலகில் மெச்சி மதிக்கப்படுகிறான். அத்தகைய மனிதன் தேவர்களின் உலகில் வசிப்பவனாக மாறினாலும் அவனுடைய பெயர் மறையாது.(25)

மரங்களை நடும் மனிதன், தனது தந்தை வழி மற்றும் தாய் வழிகளில் உள்ள மூதாதையரையும், வழித்தோன்றல்களையும் மீட்கிறான். எனவே, ஓ! யுதிஷ்டிரா, நீ மரங்களை நடுவாயாக.(26) ஒரு மனிதன் நடும் மரங்களே அவனுடைய பிள்ளைகளாகின்றன. இதில் ஐயமேதும் இல்லை. அத்தகைய மனிதன் இந்த உலகில் இருந்து செல்லும்போது சொர்க்கத்திற்கு உயர்கிறான். உண்மையில், நித்தியமான அருள் உலகங்கள் பலவும் அவனுடையவை ஆகின்றன.(27) மரங்கள் தங்கள் மலர்களால் தேவர்களையும், தங்கள் கனிகளால் பித்ருக்களையும், தாங்கள் தரும் நிழலால் விருந்தினர்கள் மற்றும் அந்நியர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்கின்றன.(28) கின்னரர்கள், உரகர்கள், ராட்சசர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள் மற்றும் முனிவர்கள் ஆகியோர் அனைவரும் மரங்களையே தங்கள் புகலிடமாகக் கொள்கின்றனர்.(29)

மலர்களையும், கனிகளையும் சுமக்கும் மரங்கள் மனிதர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்கின்றன. மரங்களை நடுபவன், பிள்ளைகளால் மீட்கப்படும் ஒரு தந்தையைப் போல மறுமையில் மரங்களால் காக்கப்படுவான்.(30) எனவே, தனக்கான நன்மையை அடைய விரும்பும் மனிதன், குளக்கரைகளில் மரங்களை நட்டுத் தன் பிள்ளைகளைப் போலவே அவற்றை வளர்க்க வேண்டும். அறிவு மற்றும் சாத்திரங்கள் ஆகிய இரண்டின்படியும் ஒரு மனிதன் நடும் மரங்கள், அவற்றை நடுபவனின் பிள்ளைகளே ஆகின்றன.(31) ஒரு குளத்தை வெட்டும் பிராமணன், மரங்களை நடுபவன், வேள்விகளைச் செய்பவன் ஆகியோர் அனைவரும் வாக்கில் வாய்மைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்களைப் போலவே சொர்க்கத்தில் வழிபடப்படுகிறார்கள்.(32) எனவே, ஒருவன் குளங்களை வெட்டச் செய்து, மரங்களை நடச் செய்து, பல்வேறு வேள்விகளில் தேவர்களை வழிபட்டு வாய்மை பேச வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(33)

பிராமண வழிபாடு! – அநுசாஸனபர்வம் பகுதி – 59- பிராமண வழிபாடு குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தின் தலைவரே, வேதங்களைத் தவிர வேறு சாத்திரங்களில் குறிப்பிடப்படும் கொடைகளில் உமது கருத்தின்படி மிகச் சிறந்தது எது?(1) ஓ! பலமிக்கவரே, இக்காரியத்தில் நான் பேராவலைக் கொண்டுள்ளேன். கொடையளித்தவனின் கொடை மறுமையில் அவனைப் பின்தொடர்வதைக் குறித்தும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(2)ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அனைத்து உயிரினங்களுக்கும் அன்பையும், பற்றையும் உறுதியளிப்பதும், அனைத்து வகைத் தீங்குகளையும் செய்யாதிருப்பதும், துயரில் இருக்கும் மனிதனுக்கு அன்போடு உதவி செய்வதும், தாகத்துடன் வேண்டுபவனுக்கு வேண்டிய பொருட்களைக் கொடையளிப்பதும்,(3) தன்னால் அளிக்கப்படும் கொடையென்று ஒருபோதும் நினைக்காமலேயே கொடையாளிகளால் கொடுக்கப்படும் கொடைகளும் உயர்ந்த மற்றும் சிறந்த கொடைகளாகும்.(4) தங்கத்தைக் கொடையளிப்பது, பசுவைக் கொடையளிப்பது, பூமியைக் கொடையளிப்பது ஆகிய இவையே பாவம் போக்குபவையாகக் கருதப்படுகின்றன. கொடையளிப்பவனைத் தீயச் செயல்களில் இருந்து இவை காக்கின்றன.(5) ஓ! மனிதர்களின் தலைவா, நீ எப்போதும் அறவோருக்கு அத்தகைய கொடைகளை அளிப்பாயாக. கொடைகள் கொடையளிப்பவனைப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் பாதுகாக்கின்றன என்பதில் ஐயமில்லை.(6)

தன் கொடைகள் நித்தியமானவையாக இருக்க வேண்டும் என விரும்பும் மனிதன், அனைவராலும் விரும்பப்படும் பொருட்கள் எதையும், தன் வீட்டில் உள்ள சிறந்த பொருட்கள் எதையும் தேவையுள்ளோருக்கு எப்போதும் கொடுக்க வேண்டும்.(7) ஏற்புடைய பொருட்களைக் கொடையளிப்பவனும், பிறருக்கு ஏற்புடையவற்றைச் செய்பவனுமான மனிதன், தனக்கு ஏற்புடைய பொருட்களை அடைவதில் எப்போதும் வெல்கிறான். அத்தகைய மனிதன் நிச்சயம் இம்மையிலும், மறுமையிலும் அனைவருக்கும் ஏற்புடையவனாகிறான்.(8) ஓ! யுதிஷ்டிரா, வறியவனும், ஆதரவற்றவனும், உதவியை வேண்டுபவனுமான ஒருவனுடைய விருப்பங்களைப் போலிப் பகட்டுடன் தன் சக்திக்கு ஏற்ற வகையில் செய்யாத மனிதன் கொடியவனும், இழிந்தவனுமாவான்[2].(9)துயரில் வீழ்ந்திருப்பவனும், ஆதரவற்றவனுமான ஒரு பகைவன் உதவியை வேண்டிக் கேட்கும்போதும், அத்தகைய பகைவனுக்கும் உதவி செய்பவன் உண்மையில் மனிதர்களில் முதன்மையானவனாவான்.(10) இளைத்தவனும், கல்விமானும், ஆதரவேதுமில்லாதவனும், துயரால் பலவீனமடைந்தவனுமான ஒரு மனிதனின் பசியை நிறைவடையச் செய்யும் ஒருவனுக்கு எந்த மனிதனும் (தகுதியில்) இணையாகமாட்டார்கள்.(11) ஓ! குந்தியின் மகனே, மகன்கள் மற்றும் மனைவி இல்லாதவர்களாக, துயரில் மூழ்கியவர்களாக இருந்தாலும் பிறரிடம் எவ்வகை உதவியையும் வேண்டாதவர்களும், நோன்புகளையும், கர்மங்களையும் நோற்பவர்களுமான அறம் சார்ந்த மனிதர்களின் துயரத்தை அனைத்து வழிமுறைகளின் மூலமும், சக்திக்குத் தகுந்த வகையிலும் ஒருவன் எப்போதும் விலக்க வேண்டும்.(12)

(கொடை பெறும் எதிர்பார்ப்பில்) தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் ஆசி கூறாதோரும், மதிப்புக்குத் தகுந்தவர்களும், எப்போதும் நிறைவுடன் இருப்பவர்களும், எவ்வகையிலும் வேண்டாமல் பெறும் பிச்சையை உண்டு வாழ்பவர்களுமான மனிதர்கள்,(13) கடும் நஞ்சுமிக்கப் பெரும் பாம்பாகக் கருதப்படுகிறார்கள். ஓ! பாரதா, அவர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் அவர்களிடமிருந்து எப்போதும் நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்வாயாக. அவர்கள் முதன்மையான ரித்விக்குகளாத் தகுந்தவர்களாவர். ஒற்றர்கள் மற்றும் முகவர்கள் மூலம் அவர்களைக் கண்டுபிடிப்பாயாக.(14) ஓ! குருவின் மகனே, தேவையான அனைத்துப் பொருட்களுடனும், பணியாட்கள், நல்ல ஆடைகள், இன்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உரிய பொருட்கள் அனைத்துடனும் கூடிய நல்ல வீடுகளைக் கொடையளிப்பதன் மூலம் அம்மனிதர்களை நீ கௌரவிக்க வேண்டும்.(15) அறச்செயல்களைச் செய்யும் அறவோர், வெகுமதிகளை அறுவடை செய்யும் விருப்பத்தால் இவ்வழியில் செயல்படாமல், தங்கள் கடமை என்ற நோக்கத்தால் உந்தப்பட்டு இத்தகைய கொடைகளை அளிக்க வேண்டும். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, மேற்கண்ட அறவோர், பக்தி மற்றும் நம்பிக்கையின் மூலம் புனிதப்படுத்தப்பட்ட அந்தக் கொடைகளை ஏற்காமல் போகும் வகையில் நல்ல மனிதர்கள் செயல்படக்கூடாது.(16)

கல்வியில் குளித்தவர்களும், நோன்புகளில் குளித்தவர்களுமான மனிதர்கள் இருக்கிறார்கள். எவரையும் சாராமல் அவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை அடைகின்றனர். கடும் நோன்புகளைக் கொண்ட இந்தப் பிராமணர்கள், தங்கள் பயிற்சிகளை எவருக்கும் அறிவிக்காமல், வேத கல்வி மற்றும் தவங்களுக்கும் தங்களை அர்ப்பணித்தவர்களாக இருக்கிறார்கள்.(17) தூய நடத்தை கொண்டோரும், புலனடக்கம் கொண்டோரும், ஆசையைப் பொறுத்தவரையில் தாங்கள் மணந்து கொண்ட மனைவிகளோடு எப்போதும் நிறைவாக இருப்பவர்களுமான அந்த மனிதர்களுக்கு நீ எந்தக் கொடைகளை அளித்தாலும், நீ செல்லப் போகும் உலங்கங்கள் அனைத்திலும் உனக்குத் துணையாக இருக்கும் புண்ணியத்தை நீ அடைவாய்.(19) காலையிலும், மாலையிலும் புனித நெருப்புக்குள் முறையாக ஆகுதிகளை ஊற்றுவதன் மூலம் ஒருவன் வெல்லும் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட மறுபிறப்பாள மனிதர்களுக்குக் கொடையளிப்பதன் மூலமும் அதே தகுதியை {புண்ணியத்தை} ஒருவன் அறுவடை செய்யலாம்.(19) பக்தி மற்றும் நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டதும், தக்ஷிணையுடன் கூடியதுமான ஒருவேள்வி உனக்காகக் காத்திருக்கிறது. அதுவே வேள்விகள் அனைத்திலும் உயர்ந்ததாகும். நீ கொடையளிக்கும்போது அந்த வேள்வி தடையில்லாமல் பாயட்டும் {நடக்கட்டும்}[3].(20)ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய மனிதர்களை நோக்கில் கொண்டு செய்யப்படும் வேள்வியில், பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் அத்தகைய மேன்மையான மனிதர்களுக்குப் பக்தியுடனும், வழிபாட்டுடனும் கொடுக்கப்படும் கொடைகளை அர்ப்பணிக்கத் தெளிக்கப்படும் நீரானது, ஒருவன் தேவர்களுக்குப் பட்டிருக்கும் கடனிலிருந்து அவனை விடுவிக்கிறது[4].(21) கோபவசப்படாதவர்கள் பிறருக்குச் சொந்தமான துரும்பையும் எடுக்க விருப்பம் இல்லாதவர்கள், இனிமையான வாக்கை உடையவர்கள் ஆகியோர் உயர்ந்த மதிப்புமிக்க வழிபாட்டைப் பெறத் தகுந்தவர்களாவர்.(22) அத்தகைய மனிதர்களும், (ஆசையிலிருந்து விடுபட்டவர்கள்) பிறரும் கொடுப்பவர்களை மதிப்பதில்லை. அதே போலக் கொடைகளைப் பெறவும் முனைவதில்லை. எனினும், கொடையாளிகள் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதைப் போல அவர்களைப் பேணி வளர்க்க வேண்டும். நான் அவர்களுக்குத் தலைவணங்குகிறேன். அவர்களிடம் இருந்து ஒருவனுக்குச் சொர்க்கமும், நரகமும் கிடைக்கலாம்[5].(23) ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள் வேதங்களை அறிந்திருக்கும்போதும், சீடர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும்போதும் அவ்வாறு ஆகிறார்கள். க்ஷத்திரிய சக்தியானது ஒரு பிராமணனோடு மோதும்போது அதன் பலத்தை இழக்கிறது என்பதில் ஐயமில்லை.(24)ஓ! யுதிஷ்டிரா, நீ ஒரு மன்னன் என்றும், பெரும் சக்தியைக் கொண்டவன் என்றும், செல்வாக்குடையவன் என்றும் நினைத்துக் கொண்டு, பிராமணர்களுக்கு எதுவும் கொடுக்காமல் உன் செல்வத்தை அனுபவிக்காதே.(25) ஓ! பாவமற்றவனே, உன் வகைக்கான கடமைகளைச் செய்து, உன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உன்னிடமுள்ள செல்வத்தைக்கொண்டு பிராமணர்களை வழிபடுவாயாக.(26) பிராமணர்கள் அவர்கள் விரும்பியவண்ணம் வாழட்டும். நீ எப்போதும் அவர்களுக்கு மதிப்புடன் தலைவணங்க வேண்டும். உன் பிள்ளைகளைப் போலவே அவர்களும் தங்கள் விருப்பப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்து எப்போதும் இன்பமாக இருக்கட்டும்.(27) ஓ! குருக்களில் சிறந்தவனே, நித்திய நிறைவுடன் கூடியவர்களும், உன் நலம் விரும்பிகளும், சிறிதளவிலேயே நிறைவடைபவர்களுமான அத்தகைய பிராமணர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கத்தகுந்தவன் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்?(28)

கணவர்களைச் சார்ந்திருந்து அவர்களுக்குக் கீழ்ப்படிவதை மட்டுமே நித்திய கடமையாகக் கொண்ட பெண்களுக்கு அத்தகைய கடமையே ஒரே கதியென்பதைப் போலவே, பிராமணர்களுக்குத் தொண்டாற்றுவதே நமது நித்திய கடமையும், கதியுமாகும்.(29) மதிக்கப்படாத பிராமணர்கள், க்ஷத்திரியர்களில் உள்ள கொடுமைகளையும், பாவம்நிறைந்த பிற செயல்களையும் கண்டு நம்மைக் கைவிடுவார்களேயானால், ஓ! மகனே {யுதிஷ்டிரா}, (30) பிராமணர்களின் தொடர்பில்லாமல், குறிப்பாக வேத கல்வி கற்பது, வேள்விகள் செய்வது, மறுமையில் அருள் உலகங்களை எதிர்பார்ப்பது, பெரும் சாதனைகளைச் செய்வது ஆகியவற்றைச் செய்ய இயலாமலேயே நாம் இருந்தால் அப்படிப்பட்ட உயிரால் நமக்கென்ன பயன்?(31) இது தொடர்பான நித்திய நடைமுறை என்ன என்பதை நான் சொல்லப் போகிறேன். ஓ! மன்னா பழங்காலத்தில் க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்குத் தொண்டாற்றினார்கள்.(32)

அதே போலவே வைசியர்கள் அந்தக் காலத்தில் அரச வகையினரை {க்ஷத்திரியர்களை} வழிபடுவதும், சூத்திரர்கள் வைசியர்களை வழிபடுவதும் நடைமுறையில் இருந்தது. இதையே நாம் கேள்விப்படுகிறோம். ஒரு பிராமணன் சுடர்மிக்க நெருப்பைப் போன்றவனாவான். அந்தப் பிராமணனைத் தீண்டவோ, அவனது முன்னிலைக்குச் செல்லவோ இயலாத சூத்திரன் தொலைவிலிருந்தே அவனுக்குத் தொண்டாற்றினான்.(33) க்ஷத்திரியனும், வைசியனும் மட்டுமே அந்தப் பிராமணனைத் தொட்டு, அல்லது அவனது முன்னிலைக்குச் சென்று அவனுக்குத் தொண்டாற்ற முடியும். பிராமணர்கள் மென்மையான இயல்பைக் கொண்டவர்களாவர். அவர்கள் நடத்தையில் உண்மை நிறைந்தவர்கள். அவர்கள் உண்மையான அறத்தைப் பின்பற்றுபவர்களாவர்.(34) கோபமாக இருக்கும்போது அவர்கள் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவர்களாவர். ஓ! யுதிஷ்டிரா, இத்தகைய இயல்பைக் கொண்டவர்களை மதிப்புடன் கீழ்ப்படிந்து, அவர்களுக்குத் தொண்டாற்றுவாயாக. உயர்ந்தவர்களுக்கும் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் ஆகியோரை விடப் பிராமணர்கள் மேன்மையானவர்களாவர்.(35) சக்தி மற்றும் வலிமையில் சுடர்விடும் க்ஷத்திரியர்களின் சக்தியும் தவங்களும் கூடப் பிராமணர்களிடம் சக்தியற்றுப் போகும்.(36)

பிராமணர்களைவிட என் தந்தையே கூட எனக்கு அன்புக்குரியவரல்ல. என் தாயும் கூட அவர்களைவிட எனக்கு அன்புக்குரியவளல்ல. ஓ! மன்னா, என் பாட்டனும் அவர்களைவிட எனக்கு அன்புக்குரியவரல்ல. என் உயிரும் அவர்களைவிட எனக்கு அன்புக்குரியதல்ல.(37) ஓ! யுதிஷ்டிரா, இந்தப் பூமியில் உன்னைவிட எனக்கு அன்புக்குரியது வேறேதுமில்லை. ஆனால், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பிராமணர்கள் உன்னைவிட எனக்கு அன்புக்குரியவர்களாவர்.(38) ஓ! பாண்டுவின் மகனே, நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். சந்தனு அடைந்த அருள் உலகங்கள் அனைத்தையும் எதைக் கொண்டு நான் அடைவேன் என நம்புகிறேனோ அந்த வாய்மையின் மீது ஆணையாக உறுதிகூறுகிறேன்.(39) அவர்களுக்கு முன்னிலையில் பிரம்மனோடு ஒளிர்ந்து கொண்டிருக்கும் அந்தப் புனித உலகங்களைத் தெளிவாக நான் காண்கிறேன். ஓ! மகனே, நான் அங்கே சென்று முடிவிலா நாட்களுக்கு அவர்களுடன் வசிக்கப் போகிறேன்.(40) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, ஓ! ஏகாதிபதி, பிராமணர்களை மதிக்கும் வகையிலும், அவர்களுக்குத் துணையாகவும் செய்திருக்கும் இந்தச் செயல்கள் அனைத்தையும் சிந்தித்தும், (என் ஆன்மக் கண்களால்) இந்த உலகங்களைக் கண்டும் நான் மகிழ்ச்சியால் நிறைகிறேன்” என்றார் {பீஷ்மர்}[6].(41)

கொடை வேள்வி! – அநுசாஸனபர்வம் பகுதி – 60-வேண்டி நிற்பவர்கள், வேண்டாதவர்கள் ஆகிய இருவரில் யாருக்குக் கொடுக்கும் கொடை சிறந்தது என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தூய நடத்தை, கல்வி, பிறப்பு மற்றும் குருதித் தூய்மை ஆகியவற்றில் இணையானவர்களான இரு பிராமணர்களில், ஒருவர் வேண்டுபவர், மற்றொருவர் வேண்டாதவர் என்ற வேறுபாட்டை மட்டும் கொண்டிருந்தால், அவ்விருவரில் எவருக்குக் கொடையளிப்பது சிறந்தது என நான் கேட்கிறேன்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிருதையின் மகனே, வேண்டும் ஒருவனுக்குக் கொடுப்பதைவிட, வேண்டாமல் இருக்கும் ஒரு மனிதனுக்கு அளிக்கப்படும் கொடையே பெரும் பலனைத் தருமெனச் சொல்லப்படுகிறது. மனநிறைவுடைய ஒரு மனிதனே அக்குணமில்லாதவனும், உலகின் புயல்கள் மற்றும் உணவுகளுக்கு மத்தியில் ஆதரவற்றவனுமான ஒருவனை விட நிச்சயம் அதிகத் தகுதி வாய்ந்தவன்.(2) ஒரு க்ஷத்திரியனின் உறுதியானது, அவன் பிறரைப் பாதுகாப்பதில் இருக்கிறது. பிராமணனின் உறுதியானது, அவன் {பிறரை} வேண்ட மறுப்பதில் இருக்கிறது. உறுதி, கல்வி, மனநிறைவு ஆகியவற்றைக் கொண்ட பிராமணன் தேவர்களை மகிழச் செய்கிறான்.(3) ஒரு வறிய மனிதனின் தரப்பில் வேண்டி நிற்கும் செயலானது பெரும் நிந்தனைக்குரியது என ஞானிகள் சொல்கின்றனர். பிறரை வேண்டும் இந்த மனிதர்கள் கள்வர்களையும், கொள்ளையர்களையும் போல உலகிற்குத் தொல்லை கொடுப்பவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.(4) வேண்டி நிற்கும் மனிதன் இறப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும், கொடுப்பவன் இறப்பதாகச் சொல்லப்படுவதில்லை. கொடுப்பவன் வேண்டுபவனுக்கு உயிரைக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, ஒரு கொடையின் மூலம் அந்தக் கொடையாளி தன்னையே மீட்டுக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.(5)

கருணை மிக உயர்ந்த குணமாகும். கருணையால் வழிநடப்படும் மக்கள் வேண்டி நிற்போருக்குக் கொடையளிக்கிறார்கள். எனினும், இரக்காதவர்களும், ஆனால் வறுமையிலும், துயரிலும் மூழ்கியிருப்பவர்களுமான மனிதர்கள், உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக மதிப்புடன் அழைக்கப்பட வேண்டும்.(6) தங்கள் வகையில் முதன்மையானவர்களாகக் கருதப்பட வேண்டிய அத்தகைய பிராமணர்கள் உன்னுடைய நாட்டில் வாழ நேர்ந்தால், சாம்பலால் மறைக்கப்பட்ட நெருப்பாக அவர்களை நீ கருத வேண்டும்.(7) தவங்களில் சுடர்விடும் அவர்கள், மொத்த பூமியையும் எரிக்கவல்லவர்களாவர். ஓ! குரு குலத்தின் மகனே, அத்தகைய மனிதர்கள் பொதுவாக வழிபடப்படுவதில்லை என்றாலும், அவர்களை அனைத்து வழியிலும் வழிபாட்டுக்குத் தகுந்தவர்களாகவே கருத வேண்டும்.(8) ஞானம், ஆன்மப் பார்வை, தவம், யோகம் ஆகியவற்றுடன் கூடிய அத்தகைய மனிதர்கள் எப்போதும் நமது வழிபாட்டுக்குத் தகுந்தவர்களே. ஓ! பகைவர்களை எரிப்பவனே, அத்தகைய பிராமணர்களை நீ எப்போதும் வழிபடுவாயாக.(9) எவரிடமும் வேண்டி நிற்காத முதன்மையான பிராமணர்களிடம் ஒருவன் தானே சுயமாகச் சென்று, பல்வேறு வகைச் செல்வங்களை அபரிமிதமாக அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும். வேத கல்வியும், உயர்ந்தவையும், சிறந்தவையுமான நோன்புகளைக் கொண்டவருமான ஒரு பிராமணருக்குக் கொடையளிக்கும் மனிதன், ஒவ்வொரு காலையிலும், மாலையிலும் புனித நெருப்பில் முறையாக ஊற்றப்படும் ஆகுதிகளில் இருந்து பாயும் பலனை அடைவதில் வெல்கிறான்.(10)

ஓ! குந்தியின் மகனே, கல்வி, வேதங்கள் மற்றும் நோன்புகளின் மூலம் தூய்மையடைந்தவர்களும், சார்பற்று {சுதந்திரமாக} வாழ்பவர்களும், வேத கல்வியும், தவங்களும் வீட்டின் உச்சியில் இருந்து அறிவிக்கப்படாமல் மறைத்து வைத்திருப்பவர்களும், சிறந்த நோன்புகளை நோற்பவர்களுமான முதன்மையான பிராமணர்களை அழைத்து, பணியாட்கள், ஆடைகள், அறைகலன்கள், இன்பத்திற்குரிய பிற பொருட்கள் ஆகியவற்றுடன் கூடியவையும், நன்கு கட்டப்பட்டவையுமான இனிமையான வீடுகளை நீ அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(11,12) ஓ! யுதிஷ்டிரா, கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், நுணுக்கமான பார்வை கொண்டவர்களுமான அந்த முதன்மையான பிராமணர்கள், பக்தியுடனும், மதிப்புடனும் கொடுக்கப்படும் கொடைகளை மறுப்பதால் கொடையாளியை வருத்தமடையச் செய்யக் கூடாது என நினைத்து அவற்றை ஏற்கலாம்.(13) மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உழவர்களைப் போல எந்தப் பிராமணர்கள் திரும்பி வருவதற்காக அவர்களுடைய மனைவிமார் காத்திருப்பார்களோ அவர்களை {அந்தப் பிராமணர்களை} நீ அழைக்க வேண்டும். அவர்களுக்கு உணவைக் கொடுத்த பிறகு, அவர்கள் வீடு திரும்பியதும், அவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவர்களுடைய மனைவிமார், உணவுக்காக உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டுக் காத்திருக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு மத்தியில் உணவைப் பகிர்ந்து கொடுக்கும் வகையில் மேலும் அதிகமான உணவை நீ கொடையளிக்க வேண்டும்[1].(14) ஓ! மகனே, கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் கூடிய பிரம்மசாரிகள், முற்பகலில் ஒருவனுடைய வீட்டில் உண்பதன் மூலம் அவர்கள் எந்த வீட்டில் உண்கிறார்களோ அந்த இல்லறத்தானிடம் மூன்று நெருப்புகளையும் நிறைவடையச் செய்கிறார்கள் {அது ப்ராதஸ்ஸவனம் [காலை ஹோமம்]}.(15)-ஓ! மகனே, உன் இல்லத்தில் கொடை வேள்வி நடுப்பகலில் நடைபெறட்டும், அப்போது (உன் விருந்தினர்களுக்கு நன்றாக உணவு அளித்த பிறகு) நீ பசுக்களையும், தங்கத்தையும், ஆடைகளையும் கொடையளிப்பாயாக. நீ இவ்வாறு நடந்து கொள்வதால் நிச்சயம் தேவர்களின் தலைவனை {இந்திரனை} நிறைவடையச் செய்வாய். {இது மாத்யாந்நஸவனம்}.(16) தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிராமணர்களுக்குக் காணிக்கையளிப்பது மூன்றாம்வேள்வியாகும். இத்தகைய வேள்வியால் நிச்சயம் நீ விஸ்வேதேவர்களை நிறைவடையச் செய்வாய். {இது மூன்றாவது ஸவனம்}.(17) அனைத்து உயிரினங்களிடமும் கருணை, அனைத்து உயிரினங்களுக்கும் உரியதைக் கொடையளித்தல், புலனடக்கம், துறவு, உறுதி, வாய்மை ஆகியவையே அந்தக் கொடை வேள்வியின் இறுதி நீராடலாக {அவபிருதங்களாக} அமைகிறது.(18) ஓ! மகனே, பக்தி மற்றும் நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டதும், பெரும் தக்ஷிணையுடன் கூடியதுமான இந்த வேள்வி உனக்காகக் காத்திருக்கிறது. கொடையால் அமைந்த இந்த வேள்வியே பிற வேள்விகள் அனைத்தையும் விஞ்சி இருக்கிறது. ஓ! மகனே, இந்த வேள்வி உன்னால் எப்போதும் செய்யப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(19)

நான்கில் ஒரு பங்கு! – அநுசாஸனபர்வம் பகுதி – 61-ஒரு மன்னன் கொடுக்கக்கூடிய கொடைகள் மற்றும் செய்யத்தக்க வேள்விகள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, கொடைகள் மற்றும வேள்விகளுக்கான உயர்வான வெகுமதிகளை ஒருவன் எங்கே அடைகிறான் என்பதைக் குறித்து விவரமாக அறிய விரும்புகிறேன். அவ்வெகுமதிகள் இம்மையில் ஈட்டப்படுகின்றனவா? மறுமையில் வருமா? இவை இரண்டில் மேன்மையான பலனை உண்டாக்கவல்லதாக எது சொல்லப்படுகிறது? யாருக்குக் கொடைகள் அளிக்கப்பட வேண்டும்? எந்த வகையில் கொடைகளும், வேள்விகளும் செய்யப்பட வேண்டும்? எப்போது அவை செய்யப்பட வேண்டும்? ஓ! கல்விமானான ஐயா, நான் உம்மைக் கேட்கிறேன். கொடைகளுக்கான கடமை குறித்து என்னிடம் உரையாடுவீராக.(1,2) ஓ! பாட்டா, நான் உம்மைக் கேட்கிறேன், வேள்வி மேடையில் கொடுக்கப்படும் கொடைகள், அல்லது அந்த இடத்திற்கு வெளியே கொடுக்கப்படும் கொடைகள் ஆகியவற்றில் எது உயர்ந்த வெகுமதிக்கு வழிவகுக்கும்?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, பொதுவாகவே ஒரு க்ஷத்திரியன் கடுஞ்செயல்களில் ஈடுபடுபவனாவான். அவனது வழக்கில், வேள்விகளும், கொடைகளும் அவனைத் தூய்மைப்படுத்துவதாகவோ, புனிதப்படுத்துவதாகவோ கருதப்படுகிறது.(4) நல்லோராகவும், அறவோராகவும் இருப்பவர்கள், பாவச்செயல்களில் ஈடுபடும் அரச வகையினரின் கொடைகளை ஏற்பதில்லை. இதன் காரணமாகவே மன்னனானவன் தக்ஷிணையின் வடிவிலான அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்ய வேண்டும்[1].(5) ஓ! ஏகாதிபதி, நல்லோரும், அறவோரும் தங்களுக்கு அளிக்கப்படும் கொடைகளை ஏற்றால் க்ஷத்திரியனானவன் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் இடையறாமல் கொடையளிக்க வேண்டும். கொடைகள் பெரும் பலன்களை உண்டாக்கவல்லவையும், பெரிதாகத் தூய்மை செய்பவையுமாகும்.(6) ஒருவன் நோன்புகளை நோற்று, வேள்விகளைச் செய்து, அனைத்து உயிரினங்களுக்கும் நண்பர்களாக இருப்பவர்களும், அறவோரும், வேதங்களை அறிந்தவர்களும், செயல்கள், ஒழுக்கம் மற்றும் தவங்களில் பெரும் திறம் கொண்டவர்களுமான பிராமணர்களைச் செல்வத்தால் நிறைவடையச் செய்ய வேண்டும்.(7) அத்தகைய பிராமணர்கள் உன் கொடைகளை ஏற்கவில்லையெனில் எப்பலனும் உனதாகாது. அபரிமிதமான தக்ஷிணையுடன் வேள்விகளைச் செய்து, அறவோருக்கு ஏற்புடைய நல்ல உணவைக் கொடையளிப்பாயாக.(8)ஒரு கொடையைச் செய்வதன் மூலம் ஒரு வேள்வியைச் செய்தவனாக உன்னை நீ கருதிக் கொள்ளலாம். வேள்விகளைச் செய்யும் பிராமணர்களுக்குக் கொடைகள் கொடுத்து அவர்களைத் துதிக்க வேண்டும். அதைச் செய்தால், அவர்கள் செய்யும் அந்த வேள்விகளின் பலன்களில் ஒரு பங்கை நீ அடையலாம்.(9) அத்தகைய பிராமணர்களைப் பிள்ளைகளைப் போலவும், சொர்க்கத்திற்கு மக்களை அனுப்புபவர்களைப் போலவும் நீ ஆதரிக்க வேண்டும். இவ்வாறு செயல்படுவதால் நீ நிச்சயம் பெரும் சந்ததியை அடைவாய். உண்மையில் பிரஜாபதியைப் போலவே பெரும் சந்ததியை அடைவாய்.(10) அறவோரானவர்கள், அறச் செயல்கள் அனைத்தின் காரணங்களையும் ஆதரித்து முன்னேற்றமடையச் செய்வார்கள். ஒருவன் தன்னிடமுள்ள அனைத்தையும் கொடுத்து அத்தகைய மனிதர்களையும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்பவர்களையும் ஆதரிக்க வேண்டும்.(11) ஓ! யுதிஷ்டிரா, செழிப்பை அனுபவிக்கும் நீ, பசுக்களையும், வண்டிக்காளைகளையும், உணவையும், குடைகளையும், ஆட்கள், பாதுகைகள் அல்லது காலணிகளையும் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(12) வேள்வி செய்யும் பிராமணர்களுக்குத் தெளிந்த நெய்யையும், உணவு, தேர்கள், குதிரைகள் பூட்டப்பட்ட வாகனங்கள், வசிக்கும் வீடுகள், மாளிகைகள் மற்றும் படுக்கைகளையும் கொடையளிப்பாயாக.(13) ஓ! பாரதா, அத்தகைய கொடைகள் கொடையாளியைச் செழிப்பிலும், செல்வத்தில் நிறையச் செய்யும், மேலும் தூய்மையானதாகவும் கருதப்படும். செய்யும் செயல்களுக்காக நிந்திக்கப்படாதவர்களும், தங்களுக்கென வாழ்வாதாரங்கள் ஏதும் இல்லாதவர்களுமான பிராமணர்களைத் தேட வேண்டும்.(14) அத்தகைய பிராமணர்களுக்கு வாழ்வாதாரங்களை ஒதுக்கி வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ அவர்களைப் பேணி வளர்ப்பாயாக. எப்போதும் அத்தகைய ஒழுக்கம் க்ஷத்திரியர்களுக்கு ராஜசூயம் மற்றும் குதிரை வேள்விகளைவிட உயர்ந்த நன்மையை அளிக்கும்.(15)

பாவத்தில் இருந்து தூய்மையடைந்தால் நிச்சயம் நீ சொர்க்கத்தை அடைவாய். உன் கருவூலத்தை நிறைத்து உன் நாட்டிற்கு நீ நன்மையைச் செய்ய வேண்டும்.(16) அத்தகைய ஒழுக்கத்தால் நீ நிச்சயம் அதிகச் செல்வத்தை அடைந்து (அடுத்த வாழ்வில்) {மறுமையில்} ஒரு பிராமணனாவாய். ஓ! பாரதா, (அறச்செயல்கள் செய்வதற்கான, ஆதரிப்பதற்கான) உன் வழிமுறைகளையும், வேறு மனிதர்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பாயாக.(17) நீ உன் பணியாட்களை உன் பிள்ளைகளைப் போல ஆதரிப்பாயாக. ஓ! பாரதா, பிராமணர்கள் என்ன கொண்டிருக்கிறார்களோ அதை அனுபவிக்க விட்டும், என்ன கொண்டிருக்கவில்லையோ அவற்றைக் கொடையளிக்கவும் செய்து அவர்களைப் பாதுகாப்பாயாக.(18) உன் வாழ்வு பிராமணர்களின் காரியங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கட்டும். பிராமணர்களுக்கு நீ பாதுகாப்பை வழங்கவில்லை என்று ஒருபோதும் சொல்லப்படாதிருக்கட்டும். அதிகச் செல்வத்தை, ஒரு பிராமணன் கொண்டிருக்கும்போது; அஃது அவனுக்குத் தீமையின் ஊற்றுக்கண்ணாக மாறும்.(19) நிலையான செல்வம் மற்றும் செழிப்பின் தொடர்பு அவனை நிச்சயம் செருக்கால் நிறைத்து (உண்மைக் கடமைகளில் இருந்து) அவனைத் திகைப்படையச் செய்யும். பிராமணர்கள் திகைப்படைந்து, மடமையில் மூழ்கினால், அறமும், கடமைகளும் நிச்சயம் அழிந்து போகும். அறத்திற்கும், கடமைக்கும் ஒரு முடிவு ஏற்பட்டால், அஃது அனைத்து உயிரினங்களின் அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.(20)

செல்வத்தைத் திரட்டி, கருவூல அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்களிடம் அதைக் கொடுத்துவிட்டு, தன் அதிகாரிகளிடம், “இந்நாட்டில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு செல்வத்தை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொல்லி, மீண்டும் தன் நாட்டைக் கொள்ளையடிக்கத் தொடங்கும் ஒரு மன்னன்,(21) அச்சம் மற்றும் கடுஞ்சூழ்நிலைகளில் அவனது ஆணைகளுக்கிணங்க இவ்வாறு திரட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு வேள்விகள் செய்வதில் செலவிட்டால், அவ்வேள்விகள் ஒருபோதும் அறவோரால் மெச்சப்படுவதில்லை என்பதை நீ அறிவாயாக.(22) கொடுமைப்படுத்தப்படாத குடிமக்களின் மூலம் கருவூலத்தில் விருப்பத்துடன் செலுத்தப்படும் செல்வத்தைக் கொண்டே ஒரு மன்னன் வேள்விகளைச் செய்ய வேண்டும். கடுமை மற்றும் பலவந்த அபகரிப்பு மூலம் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு ஒருபோதும் வேள்விகள் செய்யக்கூடாது.(23) மன்னன் தன் குடிமக்களின் நலனில் அர்ப்பணிப்புடன் இருப்பதன் விளைவால் அவர்கள் அபரிமிதமானதும், நோக்கத்திற்காகவே விருப்பத்துடன் கொடுக்கப்பட்டதுமான செல்வமாரியால் மன்னனை நீராட்டும்போது, அவன் தக்ஷிணையின் வடிவிலான பெரும் கொடைகளுடன் கூடிய பெரும் வேள்விகளைச் செய்ய வேண்டும்.(24) முதியோர், சிறார், குருடர், வேறுவகையில் தகுதியிழந்தோர் ஆகியவர்களின் செல்வங்களை மன்னன் பாதுகாக்க வேண்டும். வறட்சிக்காலத்தில் தன் மக்கள் கிணறுகளில் இருந்து பெற்ற நீரின் துணையுடன் ஏதோ தானியங்களை வளர்ப்பதில் வென்றால், மன்னன் அவர்களிடம் இருந்து செல்வமெதையும் ஒருபோதும் எடுக்கக்கூடாது. அதேபோல, அழுது கொண்டிருக்கும் பெண்களிடம்[2] இருந்தும் எந்தச் செல்வத்தையும் எடுக்கக்கூடாது.(25)வறியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களிடம் இருந்து எடுக்கப்படும் செல்வம் நாட்டையும், நாட்டின் செழிப்பையும் நிச்சயம் அழித்துவிடும். மன்னன் அறவோருக்கு எப்போதும் இன்பத்திற்குரிய பொருட்களை அபரிமிதமாகக் கொடையளிக்க வேண்டும். அம்மனிதர்கள் கொண்டுள்ள பட்டினி குறித்த அச்சத்தை நிச்சயம் அவன் விலக்க வேண்டும்.(26) முறையாக உண்ண இயலாத பிள்ளைகள், எவர்களுடைய உணவைப் பரிதாபமான ஏக்கத்துடன் பார்ப்பார்களோ அம்மனிதர்களைவிடப் பெரும்பாவிகள் வேறு யாரும் இல்லை.(27) உன் நாட்டிற்குள் அந்தப் பிள்ளைகளைப் போலக் கல்விமானான எந்தப் பிராமணராவது ஏக்கத்துடன் இருந்தால், அத்தகைய செயலை அனுமதித்தற்காகக் கருவைக் கொன்ற பாவத்தை நீ ஈட்டுவாய்.(28)

மன்னன் சிபி, “எவனுடைய நாட்டில் ஒரு பிராமணனோ வேறு எந்த மனிதனோ பசியால் ஏங்குகிறானோ அம்மன்னனுக்கு ஐயோ” என்று சொல்லியிருக்கிறான்.(29)

எந்த நாட்டில் ஸ்நாதக வகைப் பிராமணர்கள் பசியேக்கத்தில் இருக்கிறார்களோ அந்நாடு ஏழ்மையில் மூழ்கும். அத்தகைய நாடு அதன் மன்னனுடன் சேர்ந்து நிந்திக்கப்படும்.(30) எவனுடைய நாட்டில் கணவர்கள் மற்றும் மகன்களுக்கு மத்தியில் அழுது கதறி, உள்ளங்கொதித்துத் துன்பப்படும் பெண்கள் எளிதாகக் கடத்தப்படுகிறார்களோ அந்த மன்னன் உயிரோடிருந்தாலும் இறந்தவனேயாவான்.(31) தங்களைப் பாதுகாக்காதவனும், தங்கள் செல்வங்களை வெறுமனே கொள்ளையடிப்பவனும், வேறுபாடுகள் அனைத்தையும் போட்டுக் குழப்புபவனும், வழிநடத்த இயலாதவனும், கருணையற்றவனும், மன்னர்களிலேயே பெரும்பாவியாகக் கருதப்படுபவனுமான மன்னனைக் கொல்ல குடிமக்கள் ஆயுதமேந்த வேண்டும்.(32) எந்த மன்னன் தன் மக்களிடம் தானே அவர்களின் பாதுகாவலன் என்று சொன்னாலும் அவர்களைப் பாதுகாக்க இயலாதவனாக இருக்கிறானோ அவன் விசர்நோயால் பீடிக்கப்பட்டதும், வெறி கொண்டதுமான நாயைப் போலத் தன் குடிமக்களால் கொல்லப்பட வேண்டும்.(33) ஓ! பாரதா, பாதுகாப்பைக் கொடுக்காத மன்னன், குடிமக்கள் இழைக்கும் பாவங்களில் நான்கில் ஒரு பகுதியை அடைகிறான்.(34) மொத்த பாவங்களும் அத்தகையே மன்னனையே சேரும் எனச் சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் பாதி அவனுடையதாகும் எனக் கருதுகிறார்கள். எனினும், மனுவின் அறிவிப்பை மனத்தில் சுமக்கும் நாம், பாதுகாப்பைக் கொடுக்காத மன்னர்கள் அத்தகைய பாவங்களில் நான்கில் ஒரு பகுதியை அடைவார்கள் என்று கருதுகிறோம்.(35)

ஓ! பாரதா, எந்த மன்னன் தன் குடிமக்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறானோ அவன் தன் பாதுகாப்பின் கீழ் தன் குடிமக்கள் ஈட்டும் பலன்களில் நான்கில் ஒரு பகுதியை அடைகிறான்.(36) ஓ! யுதிஷ்டிரா, அனைத்து உயிரினங்களும் மழையின் தேவனுடைய புகலிடத்தை நாடுவதைப் போலவோ, சிறகுபடைத்த காற்றுவாசிகள் {பறவைகள்} ஒரு பெரும் மரத்தைப் புகலிடமாக நாடுவதைப் போலவே நீ உயிரோடுள்ளவரை, உன் குடிமக்கள் அனைவரும் உன்னைப் புகலிடமாக நாடும் வகையில் நீ செயல்படுவாயாக.(37) ஓ! பகைவர்களை எரிப்பவனே, ராட்சசர்கள் குபேரனை நாடுவதைப் போலவோ, தேவர்கள் இந்திரனை நாடுவதைப் போலவோ, உன் உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் உன்னையே அவர்களது புகலிடமாக நாடட்டும்” என்றார் {பீஷ்மர்}.(38)

பூமி தானம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 62-நிலக்கொடை குறித்தும், வேறு கொடைகளைக் குறித்தும் பிருஹஸ்பதி இந்திரனுக்குச் சொன்ன விபரங்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “’இதைக் கொடுக்க வேண்டும், இதையும் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லும் ஸ்ருதிகளின் அறிவிப்புகளை மக்கள் அன்புடன் ஏற்கிறார்கள். மேலும், மன்னர்களைப் பொறுத்தவரையில், பல்வேறு மனிதர்களுக்குப் பல்வேறு பருட்களைக் கொடையளிக்கிறார்கள். எனினும், ஓ! பாட்டா, கொடைகள் அனைத்திலும் சிறந்தது, அல்லது முதன்மையானது எது?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அனைத்து வகையான கொடைகளிலும் (பலனின் அடிப்படையில்) நிலக்கொடையே முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. நிலம் அசைவற்றதாகவும், அழிவற்றதாகவும் இருக்கிறது. அதன் உரிமையாளன் தன் இதயத்தில் நிலைநிறுத்தும் சிறந்த பொருட்கள் அனைத்தையும் அது கொடுக்கவல்லது.(2) ஆடைகள், ஆபரணங்கள், ரத்தினங்கள், விலங்குகள், நெல், வாற்கோதுமை ஆகியவற்றை அது கொடுக்கிறது. உயிரினங்கள் அனைத்தின் மத்தியிலும், நிலக் கொடை கொடுப்பவன் என்றென்றைக்கும் செழிப்பில் வளர்வான்.(3) நிலம் நீடித்திருக்கும்வரை அந்தக் கொடையாளி செழிப்பில் வளர்வான். ஓ! யுதிஷ்டிரா, நிலக்கொடையை விட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை.(4) மனிதர்கள் அனைவரும் ஒரு சிறு அளவு நிலத்தையாவது கொடையளிப்பதாக நாம் கேள்விப்படுகிறோம். மனிதர்கள் அனைவரும் நிலக்கொடையளித்திருப்பதாலேயே அவர்கள் அனைவரும் சிறு அளவு நிலத்திலாவது இன்புற்றிருக்கிறார்கள்.(5)

இம்மையிலாகட்டும், மறுமையிலாகட்டும் எச்சூழ்நிலையில் வாழ்ந்தாலும் உயிரினங்கள் அனைத்தும் தங்கள் செயல்களைச் சார்ந்தே வாழ்கின்றன. பூமாதேவி {நிலம்} செழிப்பின் சுயமாக இருக்கிறாள். அவள் வலிமைமிக்கத் தேவியாவாள். இம்மையில் பிறருக்குத் தன்னைக் கொடையளிப்பவனை (மறுமையில்) அவள் தன் தலைவனாக்கி {கணவனாக்கிக்} கொள்கிறாள்.(6) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அழிவற்றதான நிலத்தைத் தக்ஷிணையாகக் கொடையளிப்பவன், மறுமையில் மனிதனாகப் பிறந்து, பூமியின் தலைவனும் ஆகிறான்.(7) இம்மையில் ஒருவன் அடையும் இன்பம், முற்பிறவியில் அவன் அளித்த கொடைகளின் அளவுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும். சாத்திரங்கள் சுட்டிக் காட்டும் தீர்மானம் இதுவே ஆகும். ஒரு க்ஷத்திரியன் நிலக் கொடை அளிக்க வேண்டும், அல்லது போர்க்களத்தில் தன் உயிரை விட வேண்டும்.(8) க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரையில் இதுவே செழிப்பின் உயர்ந்த ஊற்றுக்கண்ணாகிறது. நிலம் கொடையளிக்கப்படும்போது, அது கொடையாளியைத் தூய்மைப்படுத்துகிறது, புனிதப்படுத்துகிறது என நாம் கேள்விப்படுகிறோம்.(9) பாவம் நிறைந்த நடத்தை கொண்டவனும், பொய்யுரைத்தவனும், பிராமணக் கொலை செய்த குற்றவாளியுமான மனிதன் கூட நிலக்கொடையின் மூலம் தூய்மடைகிறான். உண்மையில் அத்தகைய கொடை அத்தகைய பாவியையும் கூட, அவன் செய்யும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் மீட்கிறது.(10)

அறவோரானவர்கள், பாவம் நிறைந்த மன்னர்களிடம் இருந்து நிலக்கொடையை மட்டுமே ஏற்பார்கள், வேறெதையும் ஏற்கமாட்டார்கள். பூமியானவள் கொடையளிக்கப்படும்போது ஒரு தாயைப் போலவே கொடுப்பவனையும், பெற்றுக் கொள்பவனையும் தூய்மையாக்குகிறாள்.(11) பிரியதத்தை என்பது பூமாதேவியின் நித்தியமான மற்றும் ரகசியமான மற்றுமொரு பெயராகும்[1]. கொடையாகக் கொடுக்கப்படுபவள், அல்லது ஏற்கப்படுபவளுமான அவளது அன்புக்குரிய பெயர் பிரியதத்தை என்பதாகும்.(12) நிலக்கொடை விரும்பத்தக்கதாகும். ஒரு கல்விமானான பிராமணனுக்கு நிலக்கொடையளிக்கும் மன்னன், ஒரு நாட்டையே கொடையாக அடைகிறான்.(13) அத்தகைய மனிதன், இவ்வுலகில் தன் மறுபிறவியில், ஒரு மன்னனுக்கு இணையான நிலையையே அடைகிறான். எனவே, ஒரு மன்னனானவன், தனக்குப் பூமி கிடைத்த உடனேயே பிராமணர்களுக்கு நிலக்கொடை அளிக்க வேண்டும்.(14) பூமியின் தலைவனான ஒருவனைத் தவிர வேறு எவனும் {அரசனல்லாதவன் எவனும்} நிலக்கொடையளிக்கத் தகுந்தவனல்ல. அதே போலத் தகாத எவனும் நிலக்கொடையை ஏற்பதும் தகாததே[2].(15)நிலத்தை விரும்புபவர்கள் (நிலக்கொடை அளிக்கும்) இவ்வழியிலேயே தங்களைச் செலுத்திக் கொள்ள வேண்டும். அறம்சார்ந்த மனிதனுக்கு உரிமையான நிலத்தை அபகரிப்பவன் ஒருபோதும் நிலத்தை அடையமாட்டான்.(16) அறவோருக்கு நிலக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் நன்னிலத்தை அடைவான். அற ஆன்மா கொண்டவனான அத்தகைய கொடையாளி இம்மையிலும், மறுமையிலும் பெரும்புகழை ஈட்டுவான்.(17) பிராமணர்கள், எந்த மன்னனைக் குறித்து, “இவன் கொடையளித்த நிலத்தில் நாங்கள் வாழ்கிறோம்” என்று சொல்வார்களோ, அவனது நாட்டைக் குறித்த சிறு பழியையும் அவனுடைய எதிரிகளாலும் சொல்ல முடியாது[3].(18) வாழ்வாதாரம் இல்லாததால் ஒரு மனிதன் இழைக்கும் பாவங்கள் அனைத்தும், மாட்டுக் குளம்பினால் மறைக்கப்படும் அளவுக்கு நிலக்கொடையளிப்பதன் மூலம்கூடக் கழுவப்பட்டுவிடுகின்றன.(19) தங்கள் செயல்பாடுகளில் வஞ்சகமாக இருப்பவர்கள், அல்லது கடுச் செயல் புரியும் மன்னர்களுக்கு, நிலக்கொடையே அதிகம் தூய்மைப்படுத்தும், (பலனடிப்படையில்) அதுவே உயர்ந்த கொடையுமாகும் என்பது கற்பிக்கப்பட வேண்டும்.(20)ஒரு குதிரை வேள்வியை {அஸ்வமேதயாகத்தைச்} செய்யும் மனிதனுக்கும், ஓர் அறவனோக்கு நிலக்கொடை அளிக்கும் ஒருவனுக்கும் இடையில் மிகச் சிறிய வேறுபாடு மட்டுமே உண்டெனவே பண்டைக்காலத்தவர் எண்ணினர்.(21) வேறு அறச்செயல்கள் எதனையும் செய்வதன் மூலம் கிட்டும் பலனில் கல்விமான்கள் ஐயுறுவார்கள். உண்மையில், அவர்கள் ஐயுறாத ஒரே செயல், கொடைகள் அனைத்திலும் முதன்மையான நிலக்கொடையே ஆகும்.(22) நிலக்கொடை அளிக்கும் விவேகியானவன், பொன், வெள்ளி, ஆடை, ரத்தினங்கள், முத்துகள் மற்றும் விலமதிப்புமிக்கக் கற்கள் ஆகிய அனைத்தையும் கொடுத்தவனாகிறான்.(23) தவங்கள், வேள்வி, வேதப் புலமை, நன்னடத்தை, பேராசையின்மை, வாய்மையில் உறுதி {சொல்தவறாமை}, பெரியோர், ஆசான்கள் மற்றும் தேவர்களுக்குச் செய்யும் வழிபாடு ஆகிய இவை அனைத்தும் நிலக்கொடை அளித்தவனிடம் வசிக்கின்றன.(24) தங்கள் தலைவர்கள் நன்மையடைவதற்காகத் தங்களைத் துச்சமாக எண்ணிப் போரிட்டுத் தங்கள் உயிரைப் போர்க்களத்தில் விட்டுப் பிரம்ம லோகத்திற்கு உயர்ந்தவர்களும் கூட, நிலக்கொடையளிப்போர் அடையும் பலன்களை விஞ்சிவிட இயலாது.(25)

முலைப்பால் கொண்டு தன் பிள்ளைக்கு எப்போதும் உணவூட்டும் ஒரு தாயைப் போலவே பூமாதேவியானவள், நிலக்கொடை அளிக்கும் மனிதனை {தான் கொண்டுள்ள} சுவைகள் அனைத்திலும் நிறைவடையச் செய்கிறாள்.(26) மிகக் கொடிய மிருத்தியு, வைகின்கர, தண்டம், தமம், நெருப்பு மற்றும் பயங்கரமான மிகக் கொடிய பாவங்கள் அனைத்தும் நிலக்கொடை அளிக்கும் மனிதனை அணுக முடியாது[4].(27) நிலக்கொடையளிக்கும் அமைதியான ஆன்மா கொண்ட மனிதன், (அந்தச் செயலின் மூலம்) பித்ருலோகத்தில் வசிப்பவர்களையும், தேவலோகத்தில் வசிப்பவர்களையும் நிறைவடையச் செய்கிறான்.(28) உடல் மெலிந்தவனும், உற்சாகமற்றவனும், வாழ்வாதரமற்றவனும், பலவீனத்துடன் ஏங்கிக் கொண்டிருப்பவனுமான ஒருவனுக்கு நிலக்கொடையளிக்கும் மனிதன், அவனுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதால் ஒரு வேள்வி செய்த பலனுக்கும், கௌரவத்துக்கும் தகுந்தவனாகிறான்.(29) நிறைந்த மடியில் பால் வழியும் பசுவானது, அன்புடன் தன் கன்றை நோக்கி ஓடுவதைப் போலவே உயர்ந்த அருளைக் கொண்ட பூமியானவளும் நிலக்கொடையளிப்பவனை நோக்கி ஓடுகிறாள்.(30)உழப்பட்டதாகவோ, விதை தூவப்பட்டதாகவோ, பயிர் விளைந்திருப்பதாகவோ உள்ள நிலத்தை, அல்லது தேவைகள் அனைத்துடன் கூடிய ஒரு மாளிகையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் (மறுமையில்) அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றவல்லவனாகிறான்.(31) வாழ்வாதாரத்தையும் இல்லற நெருப்பையும் கொண்டவனும், தூய நோன்புகள் மற்றும் பயிற்சிகளைக் கொண்டவனுமான ஒரு பிராமணனை நிலக்கொடையை ஏற்கச் எசய்யும் மனிதன், எந்த ஆபத்திலோ, துயரத்திலோ ஒருபோதும் வீழ மாட்டான்.(32) நாளுக்கு நாள் நிலவு வளர்வதைப் போலவே நிலக்கொடை அளித்தவனின் பலனும் அந்நிலத்தில் ஒவ்வொரு முறை பயிர் விளையும்போதும் மேன்மையடைகிறது.(33) பண்டைய வரலாற்றை அறிந்தவர்கள், நிலக்கொடை தொடர்பாக இந்த ஸ்லோகத்தைப் பாடியிருக்கிறார்கள். அந்த ஸ்லோகத்தைக் கேட்ட ஜமதக்னியின் மகன் (ராமர்) மொத்த நிலத்தையும் கசியபருக்குக் கொடையளித்தார்.(34) “என்னைக் கொடையாகப் பெறுவாயாக. என்னைக் கொடையளிப்பாயாக. என்னைக் கொடையளிப்பதன் மூலம் (ஓ! கொடையாளியே) நீ மீண்டும் என்னையே அடைவாய். இம்மையில் கொடையளித்தது மறுமையில் மீண்டும் அடையப்படும்” என்பதே நான் குறிப்பிடும் ஸ்லோகமாகும்[5].(35)வேதங்களின் இந்த உயர்ந்த அறிவிப்பை சிராத்தம் செய்யும் நேரத்தில் உரைக்கும் பிராமணன் உயர்ந்த வெகுமதியை அடைகிறான்.(36) பிறருக்குத் தீங்கிழைப்பதற்காக அதர்வணச் சடங்குகளைச் செய்யும் பலமிக்க மனிதனின் பாவத்திற்கு நிலக்கொடையே உயர்ந்த பாவக்கழிவாகும். உண்மையில், நிலக்கொடையளிப்பதன் மூலம் ஒருவன், தனது தந்தைவழி மற்றும் தாய்வழியில் பத்து தலைமுறைகளை மீட்கிறான்[6].(37) நிலக்கொடையின் பலன்களைக் குறித்த இந்த வேதத் தீர்மானத்தை அறிந்தவன், தன் தந்தைவழி மற்றும் தாய் வழி குடும்பங்கள் இரண்டிலும் பத்து தலைமுறைகளை மீட்பதில் வெல்கிறான். (அனைத்து உயிரினங்களும் தங்கள் வாழ்வாதாரங்களை நிலத்திலேயே அடைவதால்) நிலமே அனைத்து உயிரினங்களின் அசல் தோற்றுவாயாகும் {காரணமாக இருக்கிறது}. நெருப்பின் தேவனே {அக்னியே} பூமிக்குத் தலைமைதாங்கும் மேதையாகச் சொல்லப்படுகிறான்.(38) ஒரு மன்னனின் பட்டமேற்பு விழா நடைபெற்றதும், அவன் நிலக்கொடைகளை அளிக்கும் வகையிலும், அறவோரிடம் இருந்து அவன் நிலத்தை ஒருபோதும் அபகரிக்காத வகையிலும் இந்த வேதத் தீர்மானமானது அவனுக்குச் சொல்லப்பட வேண்டும்.(39) மன்னனின் உரிமையில் இருக்கும் மொத்த செல்வமும் பிராமணர்களுக்குரியது என்பதில் ஐயமில்லை. அறநெறி அறிவியலை நன்கறிந்த மன்னனே அந்த நாட்டுடைய செழிப்புக்கான முதல் தேவையாக இருக்கிறான்.(40)நேர்மையற்ற ஒழுக்கமும், நாத்திக நம்பிக்கையும் உள்ள மன்னனைக் கொண்ட மக்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அத்தகைய மக்கள் ஒருபோதும் அமைதியாக உறங்கவோ, விழிக்கவோ முடியாது.(41) அவனுடைய தீச்செயல்களின் விளைவால் அவனுடைய குடிமக்கள் எப்போதும் கவலையால் நிறைந்திருப்பார்கள். குடிமக்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் உடைமைகளையும், புதிய உடைமைகளையும் சட்டப்பூர்வமான வழிமுறைகளின்படி பாதுகாக்கும் நிகழ்வுகளை அத்தகைய ஆட்சியாளனின் நாட்டில் ஒருபோதும் காண முடியாது.(42) மேலும், ஞானியாகவும், அறம் சார்ந்தவனாகவும் உள்ள மன்னனைக் கொண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் உறங்கி, மகிழ்ச்சியாகவே விழிக்கிறார்கள்.(43) அத்தகைய மன்னனின் அருள்நிறைந்த அறச்செயல்களின் மூலம் அவனது குடிமக்கள் கவலையில் இருந்து விடுபடுகிறார்கள். தீச்செயல்களில் இருந்து தடுக்கப்படும் குடிமக்கள் தங்கள் ஒழுக்கத்தின் மூலம் செழிப்பில் வளர்கிறார்கள். தாங்கள் கொண்டுள்ளதைத் தக்கவைத்துக் கொள்ளவல்ல அவர்கள், புதிய உடைமைகளை மேலும் மேலும் அடைகிறார்கள்.(44) நிலக்கொடையளிக்கும் மன்னன் நற்பிறப்பைக் கொண்டவனாகக் கருதப்படுகிறான். அவனே ஆண்மகனாகக் கருதப்படுகிறான். அவன் நண்பனுமாவான். அவன் தன் செயல்களில் அறம் சார்ந்தவனாக இருக்கிறான். அவன் கொடையாளியாகவும் இருக்கிறான். அவன் ஆற்றல் படைத்தவனாகவும் கருதப்படுகிறான்.(45)

வளமான நிலத்தைப் போதிய அளவில் வேதமறிந்த பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதர்கள் தங்கள் சக்தியின் விளைவால் பல சூரியர்களைப் போல இந்த உலகத்தில் ஒளிர்கிறார்கள்.(46) மண்ணில் தூவப்படும் விதைகள் வளர்ந்து நல்ல பயிராக விளைவதைப் போலவே, நிலக்கொடையளிப்பதன் விளைவால் ஒருவனுடைய விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையால் அவன் மகுடம் சூட்டப்படுகிறான்.(47) ஆதித்யன், வருணன், விஷ்ணு, பிரம்மன், சோமன், ஹுதாசனன் {அக்னி}, சிறப்புமிக்கவனும், திரிசூலபாணியுமான மஹாதேவன் ஆகியோர் அனைவரும் நிலக்கொடையளிக்கும் மனிதனை மெச்சுகிறார்கள்.(48) உயிரினங்கள் பூமியில் இருந்து உயிர்பெறுகின்றன, மேலும் அவை மறையும்போதும் பூமியிலேயே கலக்கின்றன. நால்வகை உயிரினங்களும் பூமியையே தங்கள் மூலக்கூறுகளின் சாரமாகக் கொண்டிருக்கின்றன {பூமியின் குணங்களையே கொண்டிருக்கின்றன}.(49) ஓ! ஏகாதிபதி, அண்டத்தின் உயிரினங்களுக்குத் தாயும், தந்தையும் பூமியே ஆவாள். ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, பூமியோடு ஒப்பிடத்தக்க பூதம் வேறேதும் கிடையாது.(50)

ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகத் தேவ ஆசானான பிருஹஸ்பதிக்கும், சொர்க்கத்தின் ஆட்சியாளனான இந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற ஓர் உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(51) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய நூறு வேள்விகளில் விஷ்ணுவைத் துதித்த மகவத் {இந்திரன்}, நாநயமிக்கவர்கள் அனைவரிலும் முதன்மையான பிருஹஸ்பதியிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தான்.(52)

மகவத், “ஓ! சிறப்புமிக்கவரே, எக்கொடையை அளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்திற்கு வருவதிலும், இன்பநிலையை அடைவதிலும் வெல்கிறான்? ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, உயர்ந்ததும், வற்றாததுமான பலனை உண்டாக்கவல்ல கொடையைக் குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்”.(53)

பீஷ்மர் தொடர்ந்தார், “தேவர்களின் தலைவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், தேவர்களின் ஆசானும், பெருஞ்சக்தி கொண்டவருமான பிருஹஸ்பதி, நூறு வேள்விகளைச் செய்தவனிடம் மறுமொழியாக இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(54)

பிருஹஸ்பதி, “ஓ! விருத்திரனைக் கொன்றவனே, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, பொற்கொடை, பசுக்கொடை, நிலக்கொடை ஆகிய இவற்றாலேயே ஒருவன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(55) ஓ! தேவர்களின் தலைவா, ஓ! பலமிக்கவனே, நிலக்கொடையை விட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை. ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ள படி இக்கொடையையே நான் மிக உயர்ந்ததாகக் கருதுகிறேன்.(56) போர்க்களத்தில் அச்சமில்லாமல் பகைவர்களுடன் மோதி தங்கள் உயிரை விடும் வீரர்கள் சொர்க்கத்திற்கு வருகிறார்கள். அவர்களின் கதி எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நிலக்கொடையளிக்கும் கொடையாளியை அவற்றில் எதனாலும் விஞ்சமுடியாது.(57) தங்கள் உடல்களை அலட்சியம் செய்து, தங்கள் தலைவர்களின் நன்மைக்காக முயன்று போர்க்களத்தில் தங்கள் உயிரைவிடும் மனிதர்கள் பிரம்ம லோகத்திற்கே உயர்கிறார்கள். அவர்களும் கூட (ஒருவன் அடையும் பலன் அல்லது அவன் வெல்லும் இன்ப நிலையைப் பொறுத்தவரையில்) நிலக்கொடையளிப்பவனைக் கடக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்.(58) நிலக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன், தனது மூதாதையரில் ஐந்து தலைமுறையினரையும், வழித்தோன்றல்களில் ஆறு தலைமுறைகளையும் என இந்தப் பதினொருவரை மீட்கிறான்.(59) ஓ! புரந்தரா, பொன் மற்றும் ரத்தின வளம் கொண்ட நிலத்தைக் கொடையளிக்கும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்தில் உயர்வாக மதிக்கப்படுகிறான்.(60)

ஓ! மன்னா, (விளைச்சலைப் பொறுத்தவரையில்) அனைத்து விருப்பங்களையும் தரவல்ல வளமிக்க நிலத்தைக் கொடையளிக்கும் ஒருவன் (மறுமையில்) மன்னர்களுக்கு மன்னன் என்ற நிலையை அடைவதில் வெல்கிறான். எனவே, நிலக்கொடையே கொடைகள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(61) ஓ! வாசவா, (விளைச்சலைப் பொறுத்தவரையில்) அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையால் மகுடம் சூட்டவல்ல நிலத்தைக் கொடையளிப்பவன் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(62) ஓ! ஆயிரம் கண்களைக் கொண்டவனே, அனைத்துச் சிறப்புகளையும் கொண்டதும், அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையைக் கொடுக்கவல்லதுமான ஒரு பசுவைக் கொடையளிக்கும் மனிதன், சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான்.(63) ஓ! தேவர்களின் தலைவா, நிலக்கொடையளிக்கும் கொடையாளி, சொர்க்கத்திற்கு வரும்போது, நூற்றுக்கணக்கான தேனாறுகள், நெய், பால் மற்றும் தயிராறுகளால் நிறைவடைகிறான்.(64) ஒரு மன்னன் நிலக்கொடைகளை அளிப்பதன் மூலம் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். எனவே, நிலக்கொடையைவிட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை.(65)

பெருங்கடலால் சூழப்பட்ட பூமியைத் தன் ஆயுதங்களின் துணையுடன் வென்று அதைக் கொடையளிக்கும் மன்னன், மனிதர்கள் அனைவராலும் பேசப்படுவான், பூமியின் பரப்பில் மலைகள் இருக்கும் வரையிலும் அவனது நினைவுகளும் நீடித்திருக்கும்.(66) நிலக்கொடைக்கான பலனுடன் கூடியவன், அனைத்துச் சுவைகளுடன் கூடிய மங்கலமிக்க, வளமான நிலத்தைக் கொடையளிப்பவனுக்கு ஒதுக்கப்படும் வற்றாத இன்ப உலகத்தை அடைகிறான்.(67) ஓ! சக்ரா, செழிப்பையும், மகிழ்ச்சியையும் அடைய விரும்பும் மன்னன், உரிய சடங்குகளுடன் தகுந்தோருக்கு நிலக்கொடையை எப்போதும் அளிக்க வேண்டும்.(68) எண்ணற்ற பாவங்களைச் செய்த மனிதன், மறுபிறப்பாள வகையினருக்கு நிலத்தைக் கொடையளித்தால், பாம்பானது தன் சட்டையை உரித்துக் கொள்வதைப் போலத் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(69) நிலக்கொடையளிப்பவன், கடல்கள், ஆறுகள், மலைகள், காடுகள் என அனைத்தையும் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான்.(70)

நிலத்தைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன், தடாகங்களையும், குளங்களையும், கிணறுகளையும், ஓடைகளையும் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான். நிலத்தில் உள்ள ஈரப்பதத்தின் விளைவால் ஒருவன் நிலக்கொடையளிப்பதன் மூலம் பல்வேறு சுவைகளுடன் கூடிய பொருட்களைக் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான்.(71) நிலக்கொடையளிக்கும் மனிதன், பயன்விளைவிக்கும் உயர்ந்த குணங்களைக் கொண்ட மூலிகைகள் மற்றும் செடிகளையும், மலர்கள் மற்றும் கனிகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்களையும், இனிமை நிறைந்த காடுகளையும், சிறுகுன்றுகளையும் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(72) நிலத்தைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் அடையும் பலனானது, தக்ஷிணையின் வடிவில் அபரிமிதமான கொடைகளுடன் செய்யப்படும் அக்னிஷ்டோமம் மற்றும் பிறவற்றைப் போன்ற பெரும் வேள்விகளைச் செய்வதன் மூலமும் அடையப்பட முடியாததாகும்.(73) நிலக்கொடையளிப்பவன், தன் தந்தைவழி மற்றும் தாய்வழிக் குலங்களின் பத்து தலைமுறைகளை மீட்கிறான் என்று ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. அதே போல, கொடையளிக்கப்பட்ட நிலத்தை அபகரிப்பதன் மூலம் ஒருவன் நரகில் மூழ்கித் தன் தந்தை வழி மற்றும் தாய் வழி குலத்தின் பத்து தலைமுறையினரை அதே துன்பத்தில் ஆழ்த்துகிறான்.(74) நிலக்கொடை அளிப்பதாக உறுதியளித்தவிட்டு அளிக்காத, அல்லது கொடையளித்துவிட்டு மீண்டும் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்ட மனிதன், யமனின் ஆணையால் வருணனின் பாசத்தில் கட்டப்படுவதன் விளைவால் நீண்ட காலத்தைப் பெருந்துன்பத்தில் கடத்துவான்.(75)

இல்லற நெருப்பில் நாள்தோறும் ஆகுதிகளை ஊற்றுபவர்களும், வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், மிகக் குறைந்த வாழ்வாதாரங்களைக் கொண்டவர்களும், தங்கள் வசிப்பிடங்களில் உறைவிடம் நாடி வரும் ஒவ்வொரு விருந்தினரையும் விருந்தோம்பலுடன் வரவேற்பவர்களுமான முதன்மையான பிராமணர்களை மதித்து வழிபடுவோர் ஒருபோதும் யமனிடம் செல்ல வேண்டியதில்லை.(76) ஓ! புரந்தரா, ஒரு மன்னன் பிராமணர்களுக்குத் தான் பட்ட கடனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, பிற வகையினரில் உள்ள ஆதரவற்றவர்களையும், பலவீனர்களையும் பாதுகாக்க வேண்டும்.(77) ஓ! தேவர்களின் தலைவா, வாழ்வாதாரங்கள் ஏதுமற்ற ஒரு பிராமணனுக்கு வேறொருவனால் கொடையளிக்கப்பட்ட நிலத்தை ஒரு மன்னன் திரும்பப்பெறக்கூடாது.(78) உற்சாகமற்றவர்களும், ஏதுமற்றவர்களுமான அத்தகைய பிராமணர்களின் நிலங்கள் திரும்பப் பெறப்படுவதால் அவர்களது விழிகளில் இருந்து விழும் கண்ணீரானது, திரும்பப் பெறுபவனின் மூதாதையர்கள் மற்றும் வழித்தோன்றல்களில் மூன்று தலைமுறையனரை அழிக்கவல்லதாகும்.(79) நாட்டில் இருந்து விரட்டப்பட்ட ஒரு மன்னனை மீண்டும் நிறுவ முயற்சித்து அதில் வெல்லும் மனிதன், சொர்க்கவாசத்தை அடைந்து, அங்கே வசிப்பவர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறான்.(80)

கரும்போ, யவமோ {வாற்கோதுமையோ}, கோதுமையோ போன்ற பயிர்கள் விளையும், அல்லது பசுக்கள், குதிரைகள் மற்றும் இழுவைக்கான வேறு கால்நடைகள் நிரம்பியதும், கொடையாளின் கரவலிமையால் வெல்லப்பட்டதும், அடியில் கனிமவளம் கொண்டதும், பரப்பில் அனைத்து வகைச் செல்வங்களாலும் மறைக்கப்பட்டதுமான நிலத்தைக் கொடையளிக்கும் மன்னன், மறுமையில் வற்றாத இன்ப உலகங்களை அடைவான், மேலும் அத்தகைய மன்னன் பூமி வேள்வி {பூமிஸத்திரம்} செய்தவனாகச் சொல்லப்படுகிறான்.(81,82) நிலக்கொடை அளிக்கும் மன்னன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் கழுவப்பட்டு, அதன் மூலம் தூய்மையடைந்து, அறவோரால் அங்கீகரிக்கப்படுகிறான். இவ்வுலகில் அறம்சார்ந்த மனிதர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறான்.(83) நிலத்தைக் கொடையளிப்பதால் கிட்டும் பலனானது, நீரில் விழும் எண்ணெய்த் துளி அனைத்துப் பக்கங்களிலும் பரவி, நீர்ப்பரப்பை மறைப்பதைப் போலவே {நிலத்தினுடைய} உரிமையாளரின் நன்மைக்காக அந்நிலத்தில் பயிர் விளையும் ஒவ்வொரு முறையும் அதிகரிக்கிறது.(84) ஓ! சக்ரா, பகைவரை நோக்கிப் போர்க்களத்தில் தங்கள் உயிரை விடும் வீரர்களும், சபைகளின் ரத்தினங்களுமான மன்னர்கள் பிரம்ம லோகத்தை அடைகிறார்கள்.(85) ஓ! தேவர்களின் தலைவா, நிலக்கொடையளித்தவன் பூமிலிருந்து சொர்க்கத்திற்கு வரும்போது ஆடல் பாடலில் திறன்பெற்றவர்களும், தெய்வீக மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அழகிய காரிகையர் அவனை அணுகுகிறார்கள்.(86)

உரிய சடங்குகளுடன் மறுபிறப்பாள வகையினருக்கு நிலக்கொடையளிக்கும் மன்னன், தேவர்கள் மற்றும் கந்தர்வர்களால் எப்போதும் துதிக்கப்பட்டு தெய்வீக அருள் உலகங்களில் திளைத்திருக்கிறான்.(87) ஓ! தேவர்களின் தலைவா, நிலக்கொடையாளி ஒருவன் பிரம்மலோகத்திற்கு உயரும்போது தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நூறு அப்சரஸ்கள் அவனை அணுகுகின்றனர்.(88) நிலக்கொடையளிக்கும் ஒருவனுக்கு, சிறந்த நறுமணம் கொண்ட மலர்கள், ஒரு சிறந்த சங்கு, சிறந்த இருக்கை, ஒரு குடை, சிறந்த வாகனங்களுடன் கூடிய சிறந்த குதிரைகள் ஆகியவை எப்போதும் தயாராக இருக்கின்றன.(89) ஒரு மன்னன் நிலக்கொடையளிப்பதன் மூலம், நறுமணமிக்கச் சிறந்த மலர்களையும், பொற்குவியல்களையும் எப்போதும் பெறுகிறான். அனைத்துவகைச் செல்வங்களையும் பெறும் அத்தகைய மன்னனின் கட்டளைகள் எங்கும் மீறப்படுவதில்லை, அவன் எங்கே சென்றாலும் {ஜய எனும் ஒலியாலான} வெற்றிக்கூச்சல்கள் மட்டுமே அவனை வாழ்த்திக் கொண்டிருக்கும்.(90) ஓ! புரந்தரா, சொர்க்கவாசம், பொன், மலர்கள், மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் மற்றும் செடிகள், குசம், கனிமவளம் மற்றும் பசும்புற்கள் ஆகியன நிலக்கொடைக்கான வெகுமதிகளாக அமைகின்றன. நிலக்கொடையளிக்கும் ஒருவன் மறுமையில் அமுதம் விளையும் நிலத்தை அடைவான்.(91) நிலக்கொடைக்கு நிகரான கொடை வேறேதும் இல்லை. தாயைவிடப் பெருமதிப்புக்குத் தகுந்த பெரியோர் வேறெவரும் இல்லை. வாய்மையை விட உயர்ந்த கடமை வேறேதும் இல்லை. கொடையளித்ததைவிட விலைமதிப்புமிக்கச் செல்வம் வேறேதும் இல்லை” என்றார் {பிருஹஸ்பதி}”.(92)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அங்கிரஸ் மகனிடமிருந்து {பிருஹஸ்பதியிடமிருந்து} இந்த வார்த்தைகளைக் கேட்ட வாசவன், பொன், ரத்தினங்கள் மற்றும் பல்வேறு வகைச் செல்வங்களுடன் கூடிய மொத்த பூமியையும் அவருக்குக் கொடையளித்தான்.(93) நிலக்கொடைக்கான பலன்களை அறிவிக்கும் இந்த ஸ்லோகங்களைச் சிராத்த நிகழ்வின் போது உரைத்தால், அதில் அளிக்கப்படும் காணிக்கைகளின் எந்தப் பகுதியையும் ராட்சசர்களாலோ, அசுரர்களாலோ அபகரிக்க முடியாது.(94) இத்தகைய சிராத்தத்தில் பித்ருக்களுக்கு ஒருவன் அளிக்கும் காணிக்கைகள் வற்றாதவை ஆகின்றன என்பதில் ஐயமில்லை. எனவே, சிராத்த நிகழ்வுகளின் போது, அழைக்கப்படும் பிராமணர்கள் உண்ணும்போது, கல்விமானான ஒருவன் நிலக்கொடையின் பலன்கள் தொடர்பான இந்த ஸ்லோகங்களை உரைக்க வேண்டும்.(95) ஓ! பாரதர்களின் தலைவா, கொடைகள் அனைத்திலும் முதன்மையான கொடையைக் குறித்து நான் சொல்லிவிட்டேன். நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(96)

அன்னதானம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 63-உணவுக் கொடை குறித்துப் பீஷ்மருக்குச் சொன்ன நாரதர்; உணவுக்கொடையாளி செல்லும் உலகங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு மன்னன் இவ்வுலகில் கொடைகளை அளிக்க விரும்பும்போது, ஓ! பாரதர்களில் சிறந்தவரே, உண்மையில் மேன்மையான சிறப்புகளைக் கொண்ட பிராமணர்களுக்கு அவன் வழங்க வேண்டிய கொடைகள் என்ன?(1) என்ன கொடையால் பிராமணர்கள் உடனே நிறைவடைவார்கள்? பதிலுக்கு அவர்கள் வழங்கும் பலன்கள் என்ன? ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, கொடைகளில் இருந்து எழும் பலன் மூலம் அடையத்தக்க உயர்ந்த வெகுமதி என்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(2) ஓ! மன்னா, இம்மையிலும், மறுமையிலும் வெகுமதிகளை விளைவிக்கும் கொடைகள் என்னென்ன? இவை யாவற்றையும் நான் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். இவை யாவற்றையும் குறித்து என்னிடம் விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தெய்வீகத் தோற்றமுடைய நாரதரிடம் முன்பொரு சந்தர்ப்பத்தில் இதே கேள்விகள் என்னால் முன்வைக்கப்பட்டன. அந்தத் தெய்வீகத் தவசி என்னிடம் மறுமொழியாகச் சொன்னதை நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)

நாரதர், “தேவர்களும், முனிவர்கள் அனைவரும் உணவைப் புகழ்கிறார்கள். உலக நடைமுறையும், அறிவுசார் துறைகள் அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன.(5) இதற்கு முன்பு உணவுக்கொடைக்கு நிகரான கொடை வேறேதும் இருந்ததும் இல்லை, இனி இருக்கப்போவதுமில்லை. எனவே, மனிதர்கள் எப்போதும் உணவுக் கொடை அளிப்பதையே குறிப்பாக விரும்புகிறார்கள்.(6) இவ்வுலகில், சக்திக்கும், பலத்துக்கும் உணவே காரணமாகிறது. உயிர்மூச்சுகள் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன.(7) இல்லறத்தார், துறவிகள், தவசிகள் {கிருஹஸ்தர்கள், பிரம்மசாரிகள், ஸந்நியாசிகள், வானப்பிரஸ்தர்கள்} என மனிதர்களில் அனைத்து வர்க்கத்தினரும் உணவைச் சார்ந்தே இருக்கின்றனர். உயிர்மூச்சுகள் உணவைச் சார்ந்தே இருக்கின்றன. இதில் ஐயமேதும் இல்லை.(8) (தேவையின் அடிப்படையில்) தன் உறவினர்களில் எவரையும் துன்புறுத்திய ஒருவன், தன் செழிப்பை விரும்பினால் அவன் உயர் ஆன்ம பிராமணர் அல்லது துறவி ஒருவருக்கு உணவுக்கொடை அளிக்க வேண்டும்.(9) சிறப்புகள் நிறைந்த பிராமணர் வேண்டுதலின் பேரில் உணவைக் கொடையளிக்கும் மனிதன், மறுமையில் பெரும் மதிப்புமிக்கச் செல்வத்தை அடைவான்.(10)

செழிப்பாக இருக்க விரும்பும் இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, இல்லத்திலிருந்து நெடுந்தொலைவு பயணத்தால் களைத்துப் போயிருக்கும் ஒரு தகுதியான முதிய மனிதர் அந்த இல்லறத்தானின் வசிப்பிடத்திற்கு வரும்போது அவரை மதிப்புடன் வரவேற்க வேண்டும்.(11) பந்தங்கள் அனைத்தையும் தாண்டும் கோபத்தைக் கைவிட்டு, அறம் சார்ந்த இயல்பை அடைந்து, வன்மத்திலிருந்து விடுபட்டு, உணவைக் கொடையளிக்கும் மனிதன், நிச்சயம் இம்மையிலும் {இப்பிறவியிலும்}, மறுமையிலும் {மறுபிறவியிலும்} மகிழ்ச்சியை அடைவான்.(12) ஓர் இல்லறத்தான் தன் வசிப்பிடத்திற்கு வரும் மனிதனை ஒருபோதும் அலட்சியப்படுத்தவோ, திருப்பி அனுப்புவதன் மூலம் அவனை அவமானப்படுத்தவோ கூடாது. ஒரு சண்டாளனுக்கோ, ஒரு நாய்க்கோ கொடுக்கப்பட்ட உணவுக்கொடை ஒருபோதும் தொலைவதில்லை {வீண்போகாது}.(13) முன்பின் அறியாதவனும், வழியில் களைப்படைந்தவனுமான ஒருவனுக்குத் தூய உணவைக் கொடையளிக்கும் மனிதன் நிச்சயம் பெரும்பலனை அடைவான்.(14) பித்ருக்கள், தேவர்கள், முனிவர்கள், பிராமணர்கள், தன் வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினர்கள் ஆகியோரை உணவுக்கொடையால் நிறைவடையச் செய்யும் மனிதன், மிகப் பேரளவு பலன்களை அடைவான்.(15)

கொடும்பாவத்தைச் செய்த ஒருவனும், வேண்டி வரும் ஒருவனுக்கு, அல்லது குறிப்பாக ஒரு பிராமணனுக்கு உணவைக் கொடையளித்தால் அவன் அந்தக் கொடும்பாவத்தின் மூலம் ஒருபோதும் கலக்கமடையமாட்டான்.(16) ஒரு பிராமணனுக்கு அளிக்கும் உணவுக்கொடை வற்றாததாகிறது {அழியாததாகிறது}. ஒரு சூத்திரனுக்கு அளிக்கப்படும் உணவுக்கொடை பெரும் பலனை விளைவிக்கவல்லதாகும். இதுவே பிராமணர்களுக்கும், சூத்திரர்களுக்கும் கொடுக்கப்படும் உணவுக்கொடையால் உண்டாகும் பலன்களுக்கிடையிலான வேறுபாடு ஆகும்.(17) ஒரு பிராமணனால் வேண்டப்படும்போது ஒருவன் அவனது குலத்தையோ, ஒழுக்கத்தையோ, வேதப் புலமையையோ விசாரிக்கக்கூடாது. அவன் கேட்ட உணவை ஒருவன் கொடுக்க வேண்டும்.(18) ஓ! மன்னா, உணவுக்கொடை அளிப்பவன், உணவைத் தரும் பல மரங்களையும், இன்னும் பிற விருப்பத்திற்குரிய பொருட்களையும் இம்மையிலும் மறுமையிலும் அடைவான்.(19) மங்கல மாரியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உழவர்களைப் போலப் பித்ருக்களும் (சிராத்தங்களில்) தங்கள் மகன்களும், பேரப்பிள்ளைகளும் உணவைக் கொடையளிப்பார்கள் என்று எப்போதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.(20)

பிராமணன் என்பவன் பெரும்பொருளாவான். அவன் ஒருவனுடைய வசிப்பிடத்தில் வந்து, “எனக்குக் கொடு {தேஹி}” என்று கேட்கும்போது, அந்த வசிப்பிடத்தின் உரிமையாளன் பலனடைய விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த வேண்டுதலைக் கேட்பதன் {கொடுப்பதன்} மூலம் நிச்சயம் பெரும் பலனை அடைகிறான்.(21) பிராமணன் இந்த அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் விருந்தினனாவான். அனைத்து உணவுகளிலும் முதல் பங்குக்கு அவன் உரியவனாகிறான்[1]. பிச்சை வேண்டும் விருப்பத்தில் வந்தடைந்ததும், பிராமணர்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதன் விளைவால் மதிப்புடன் திரும்பிச் சென்றதுமான வீடு செழிப்பில் பெருகும். அத்தகைய வீட்டின் உரிமையாளன், மறுமையில் வாழ்க்கையின் அனைத்து ஆடம்பர வசதி வாய்ப்புகளுடன் கூடிய ஒரு குடும்பத்தில் பிறவியை அடைவான்.(22,23) இவ்வுலகில் உணவுக்கொடைகளை அளிக்கும் மனிதன் மறுமையில் நிச்சயம் சிறந்த இடத்தை அடைவான். இன்பண்டங்களையும், இனிப்பான உணவுகளையும் கொடையளிக்கும் ஒருவன் சொர்க்க வாசத்தை அடைந்து, அங்கே வசிக்கும் பிறராலும், தேவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவான்.(24) உணவே மனிதர்களின் உயிர் மூச்சுகளாக அமைகிறது. அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளது. உணவுக் கொடைகளை அளிப்பவன், (தன் செல்வமாக) பல விலங்களையும், பல பிள்ளைகளையும், (வேறு வடிவில்) குறிப்பிடத்தக்க செல்வத்தையும் அடைந்து, இன்புத்திற்குரிய ஆடம்பர வசதிகளுடன் கூடிய பொருட்களை அனைத்தையும் அபரிமிதமாக அடைவான்.(25)உணவுக் கொடையாளி ஒருவன் உயிரைக் கொடுத்தவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில் அவன் அனைத்தையும் கொடுத்தவனாகச் சொல்லப்படுகிறான். எனவே, ஓ! மன்னா, அத்தகைய மனிதன் இம்மையில் பலம் மற்றும் வடிவ அழகு ஆகிய இரண்டையும் அடைகிறான்.(26) கொடையாளியின் வீட்டுக்கு ஒரு விருந்தினனாக வந்த ஒரு பிராமணனுக்கு முறையாக உணவு கொடுக்கப்பட்டால், அந்தக் கொடையாளி பெரும் மகிழ்ச்சியை அடைந்து, தேவர்களாலேயே துதிக்கப்படுபவனாகிறான்.(27) ஓ! யுதிஷ்டிரா, பிராமணன் என்பவன் பெரும்பொருளாவான். அவன் வளமிக்க நிலமுமாவான். அந்த நிலத்தில் விதைக்கப்படும் எந்த வித்தும் பலனெனும் அபரிமிதமான பயிராக விளைகிறது.(28) உணவுக் கொடையானது கொடையாளிக்கும், கொடை பெறுபவனுக்கும் உடனே மகிழ்ச்சியை உண்டாக்குவது காணப்படுகிறது. வேறு கொடைகள் அனைத்தும் காணப்படாத {கண்ணுக்குத் தெரியாத} கனிகளையே {பலன்களையே} உண்டாக்குகின்றன.(29) உணவில் இருந்தே உயிரினங்கள் தோன்றின. ஓ! பாரதா, உணவில் இருந்து மகிழ்ச்சியும் இன்பமும் உண்டாகின்றன. அறம், செல்வம் ஆகிய இரண்டும் உணவில் இருந்தே பாய்கின்றன {உண்டாகின்றன}. நோய்த்தீர்வு அல்லது உடல்நலமும் உணவில் இருந்தே பாய்கிறது.(30)முந்தைய கல்பத்தில், அனைத்து உயிரினங்களின் தலைவன் {பிரம்மன்}, உணவே அமுதம், அல்லது இறவாமையின் தோற்றம் என்று சொன்னார். உணவே பூமி, உணவே சொர்க்கம், உணவே ஆகாயம். அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன.(31) உணவு இல்லாத போது, உடலுயிராக அமையும் ஐம்பூதங்களும் ஒன்று கலந்த நிலையில் நீடிக்காது {அவை பிரிந்து போகின்றன}. உணவு இல்லையென்றால் பலவானின் பலமும் தவறுவது காணப்படுகிறது.(32) அழைப்புகள், திருமணங்கள் மற்றும் வேள்விகள் அனைத்தும் உணவில்லாமல் நின்று போகின்றன. உணவில்லாத போது வேதங்களும் மறைந்துபோகும்.(33) அண்டத்தில் உள்ள அசையும் மற்றும் அசைவற்ற உயிரினங்கள் அனைத்தும் உணவையே சார்ந்திருக்கின்றன. மூன்று உலகங்களிலும் அறமும், செல்வமும் உணவையே சார்ந்திருக்கின்றன. எனவே ஞானிகள் உணவுக்கொடை அளிக்க வேண்டும்.(34) ஓ! மன்னா, உணவுக்கொடையளிக்கும் மனிதனின் பலம், சக்தி, புகழ், சாதனைகள் ஆகியன மூவுலகங்களிலும் இடைவிடாமல் அதிகரிக்கின்றன.(35)

உயிர்மூச்சுகளின் தலைவனான காற்று தேவன் {வாயு}, (சூரியனால் உறிஞ்சப்படும் நீரைக் கொண்டு சென்று) மேகங்களுக்கு மேலே அமர்கிறான். இவ்வாறு மேகங்களுக்குச் சுமந்து செல்லப்படும் நீரானது, ஓ! பாரதா, சக்ரனால் பூமியின் மீது பொழியப்படுகிறது.(36) சூரியன் தன் கதிர்களின் மூலம் பூமியின் ஈரப்பதத்தை உறிஞ்சுகிறான். காற்று தேவன் {வாயு} சூரியனிலிருந்து அந்த ஈரப்பதத்தை விழச் செய்கிறான்.(37) ஓ! பாரதா, மேகங்களில் இருந்து அந்த நீர் பூமியின் மீது விழும்போது பூமாதேவி ஈரமடைகிறாள்[2].(38) அப்போது மக்கள், அண்டத்தின் உயிரினங்கள் சார்ந்திருக்கும் மொத்த விளைச்சலைத் தரும் பல்வேறு வகைப் பயிர்களை விதைக்கிறார்கள். இவ்வாறு உண்டாக்கப்படும் உணவிலேயே இறைச்சி, கொழுப்பு, எலும்புகள், அனைத்து உயிரினங்களின் உயிர் வித்து ஆகியவற்றின் தோற்றம் இருக்கிறது.(39) ஓ! மன்னா, இவ்வாறு தோன்றும் உயிர் வித்தில் இருந்து பல்வேறு வகை உயிரினங்கள் உண்டாகின்றன. உடலுக்குள் உள்ள அக்னி மற்றும் சோமன் ஆகிய இருவரும் உயிர்வித்தை உண்டாக்கிப் பராமரிக்கிறார்கள்.(40) இவ்வாறு உணவில் இருந்தே சூரியன், காற்று மற்றும் உயிர்வித்து உண்டாகி செயல்படுகின்றன. ஒரே பூதம், அல்லது ஒரே அளவு என்று சொல்லப்படுகிற இவை யாவற்றில் இருந்துதான் அனைத்து உயிரினங்களும் உண்டாகின்றன.(41) ஓ! பாரதர்களின் தலைவா, தன் வீட்டுக்கு வரும் ஒருவனுக்கு உணவைக் கொடுக்கும் மனிதன், உயிரினங்களுக்கு உயிர் மற்றும் சக்தி ஆகிய இரண்டையும் காணிக்கையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான்” என்றார் {நாரதர்}”.(42)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்ட நான் எப்போதும் உணவுக் கொடைகளைக் கொடுத்து வருகிறேன். எனவே, நீயும் வன்மத்தில் இருந்து விடுபட்டு, உற்சாகமிக்க இதயத்துடன் உணவைக் கொடையளிப்பாயாக.(43) ஓ! மன்னா, ஓ! பலமிக்கவனே, உரிய சடங்குகளுடன் தகுந்த பிராமணர்களுக்கு உணவைக் கொடையளிப்பதன் மூலம் நீ சொர்க்கத்தை அடைவதில் உறுதிகொள்ளலாம்.(44) ஓ! ஏகாதிபதி, உணவைக் கொடையளிக்கும் கொடையாளிகளுக்காக ஒதுக்கப்படும் உலகத்தைக் குறித்து உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. சொர்க்கத்தில் உள்ள அந்த உயர் ஆன்ம மனிதர்களின் மாளிகைகள் பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.(45) ஆகாயத்து நட்சத்திரங்களைப் போன்ற பிரகாசத்துடன் கூடியவையாக, பல தூண்களால் தாங்கப்பட்டவையாக, சந்திர வட்டிலைப் போன்று வெண்மையாக, கிங்கிணி மணிகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டவையாக, புதிதாய் உதித்த சூரியனைப் போல நம்பிக்கையூட்டுபவையாக உள்ள அரண்மனை போன்ற அந்த வசிப்பிடங்கள் நிலையானவையாகவோ, அசைபவையாகவோ இருக்கின்றன.(46) அந்த மாளிகைகளில், தரையில் வாழும் விலங்குகளும், பொருட்களும், நீரில் வாழும் விலங்குகளும் பொருட்களும் நூற்றுக்கணக்கில் இருக்கும். அவற்றில் சில வைடூரியத்தின் பிரகாசத்துடனும், சில சூரியப்பிரகாசத்துடனும் இருக்கும். அவற்றில் சில வெள்ளியாலானவையாகவும், சில பொன்னாலானவையாகவும் இருக்கும்.(47) அந்த மாளிகையில் வசிப்போரின் விருப்பங்கள் கனியும் நிலையால் மகுடம் சூட்டவல்ல பல மரங்களும் அங்கே இருக்கும். சுற்றிலும் பல குளங்கள், சாலைகள், சபைகள், கிணறுகள், தடாகங்களும் இருக்கும்.(48) எப்போது உரத்த சடசடப்பொலியை வெளியிடும் சக்கரங்களுடன் கூடியவையும், குதிரைகளும் பிற விலங்குகளும் பூட்டப்பட்டவையுமான ஆயிரக்கணக்கான வாகனங்கள் அங்கே காணப்படும். உணவு மற்றும் அனுபவிக்கத்தக்க பொருட்களின் மலைகளும், ஆடை ஆபரணக் குவியல்களும் அங்கே காணப்படும்.(49) பாலோடும் ஆறுகள் எண்ணற்றவையும், அரிசிக் குன்றுகளும், வேறு உணவு வகைகளும் அங்கே காணப்படும். உண்மையில், பொன்னொளிப் படுக்கைகளுடன் கூடிய வெண்மேகங்கள் போன்ற பல அரண்மனைகள் அந்த உலகங்களில் காணப்படும்.(50)

இவ்வுலகில் உணவுக்கொடை அளித்த மனிதர்களால் இவை அனைத்தும் அடையப்படும். எனவே, நீ உணவுக் கொடையாளியாவாயாக. உண்மையில், இவ்வுலகில் உணவுக் கொடையளிக்கும் உயர் ஆன்மா கொண்ட அறவோருக்கு ஒதுக்கப்படும் உலகங்கள் இவையே. இக்காரணங்களுக்காகவே இவ்வுலகில் மனிதர்கள் எப்போதும் உணவுக்கொடையளிக்க வேண்டும்” {என்றார் பீஷ்மர்}.(51)

தானத்திற்கான கால அட்டவணை! – அநுசாஸனபர்வம் பகுதி – 64-எந்தெந்த நட்சத்திரங்களில் என்னென்ன கொடையளிக்கலாம் என்பது குறித்து தேவகியிடம் சொன்ன நாரதர்; அவற்றை யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உணவுக்கொடைக்கான விதிகளைக் குறித்த உமது உரையாடலை நான் கேட்டேன். இப்போது கொடைகள் அளிக்கக்கூடிய கோள்கள் மற்றும் விண்மீன் சேர்க்கைகளைக் குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக தேவகிக்கும், முதன்மையான முனிவரான நாரதருக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில் தேவர்களைப் போன்ற இயல்புகளைக் கொண்டவரும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவருமான நாரதர் துவாரகைக்கு வந்த போது தேவகி அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாள்.(3) தம்மிடம் கேள்வி கேட்ட அவளுக்கு அந்தத் தெய்வீக முனிவர் பின்வரும் சொற்களில் முறையாகப் பதிலளித்தார். அவற்றை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)

நாரதர், “ஓ! அருளப்பட்ட பெண்மணியே, கிருத்திகை நட்சத்திரத்தில்[2], நெய் கலந்த பாயசத்தைத் தகுந்த பிராமணர்களுக்குக் கொடுத்து நிறைவடையச் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் மகிழ்ச்சி நிறைந்த உலகங்களை அடைகிறான்.(5)பிராமணர்களுக்குத் தான் பட்ட கடனில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக ஒருவன், ரோகிணி நட்சத்திரத்தில் அரிசி, நெய், பால், பிறவகை உணவு மற்றும் பானங்களுடன் பல கைப்பிடிகள் நிறைந்த மான் இறைச்சியை அவர்களுக்கு {பிராமணர்களுக்குக்} கொடையளிக்க வேண்டும்[3].(6)சோமதைவதம் (அல்லது மிருகசீரிஷ) நட்சத்திரத்தில் கன்றுடன் கூடிய பசுவை கொடையளிப்பவன் மனிதர்களின் இவ்வுலகில் இருந்து, பேரின்பம் நிறைந்த சொர்க்கலோகத்திற்குச் செல்கிறான்.(7)

{திருவாதிரை நட்சத்திரத்தில்} உண்ணா நோன்பிருந்து, எள் கலந்த கிருசர உணவைக் கொடையளிப்பதன் மூலம் மறுமையில் கத்தி போன்ற கூர் முனைகளைக் கொண்ட பாறைகளுடன் கூடிய மலைகள் உள்ளிட்ட கடினங்கள் அனைத்தையும் கடக்கிறான்[4].(8)ஓ! அழகு நிறைந்த பெண்மணியே, புநர்வஸு {புனர்பூசம்} நட்சத்திரத்தில், உணவுப்பண்டங்களைக் கொடையளிக்கும் ஒருவன் தன் மறுபிறவியில் மேனி அழகு கொண்டவனாக, பெரும் புகழைக் கொண்டவனாக, அபரிமிதமான உணவு இருக்கும் குடும்பத்தில் பிறப்பான்.(9)

புஷ்ய {பூசம்} நட்சத்திரத்தில் நாணயமாக்கப்பட்ட, அல்லது கட்டியாகவுள்ள பொன்னைக் கொடையாக அளிக்கும் ஒருவன், இருளால் சூழப்பட்ட உலகங்களில் {பகுதிகளில்} வசித்தாலும் சோமனைப் போலப் பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருப்பான்.(10)

அஷ்லேஷ (ஆயில்யம்} நட்சத்திரத்தில் வெள்ளியையோ, காளையையோ கொடையாக அளிப்பவன் அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு பெருஞ்செழிப்பையும் செல்வாக்கையும் ஈட்டுவான்.(11)

மகம் நட்சத்திரத்தில் எள் நிறைந்த மட்பாண்டங்களை {மடக்குகளைக்} கொடையளிப்பதன் மூலம் ஒருவன் இவ்வுலகில் பிள்ளைகளையும், விலங்குகளையும், மறுமையில் இன்பநிலையையும் அடைகிறான்[5].(12)பூர்வ பால்குனி {பூரம்} நட்சத்திரத்தில் உண்ணா நோன்பிருக்கும் கொடையாளி, பானிதம் {கற்கண்டு} கலந்த உணவை பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் அவனுக்குக் கிட்டும் வெகுமதி இம்மையிலும், மறுமையிலும் பெருஞ்செழிப்பாகும்[6].(13)உத்தர பால்குனி {உத்திரம்} என்றழைக்கப்படும் நட்சத்திரத்தில் ஷஷ்திகம் என்றழைக்கப்படும் அரிசியுடன் நெய்யும் பாலும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடையலாம்.(14) உத்திர பால்குனி {உத்திரம்} நட்சத்திரத்தில் மனிதர்களால் அளிக்கப்படும் எக்கொடையும் வற்றாததாகிறது. இது மிக நிச்சயமானதாகும்.(15)

ஹஸ்தம் நட்சத்திரத்தில் உண்ணா நோன்பை நோற்று நான்கு யானைகளுடன் கூடிய தேர் ஒன்றைக் கொடையாக அளிக்கும் மனிதன், அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருளவல்ல பேரின்ப உலகங்களை அடைகிறான்.(16)

சித்திரை நட்சத்திரத்தில் ஒரு காளையையும், நறுமணப் பொருட்களையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன், நந்தனக் காடுகளில் விளையாடும் தேவர்களைப் போல அருள் நிறைந்த அப்சரஸ் உலகங்களில் விளையாடுகிறான்[7].(17)சுவாதி நட்சத்திரத்தில், செல்வக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் தன் விருப்பம்போலவே சிறந்த உலகங்களை அடைந்து, அதையும் தவிரப் பெரும்புகழையும் அடைகிறான்.(18)

விசாக நட்சத்திரத்தில், ஒரு காளையையும், மிக அதிக அளவில் பாலைத் தரும் ஒரு பசுவையும், ஒரு வண்டி நிறைய நெல்லையும், அவற்றை மறைக்கும் பிராஸங்கத்தையும்[8], அணிந்து கொள்ள ஆடைகளையும் கொடையளிப்பதன் மூலம்(19) ஒரு மனிதன் பித்ருக்களையும், தேவர்களையும் நிறைவடையச் செய்து மறுமையில் வற்றாத பலன்களை அடைகிறான். அத்தகைய மனிதன் எந்தப் பேரிடரையும் சந்திக்காமல் நிச்சயம் சொர்க்கத்தை அடைகிறான்.(20) பிராமணர்கள் வேண்டும் எப்பொருளையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தான் விரும்பும் வாழ்வாதாரங்களை அடைந்து, மரணத்திற்குப் பிறகு பாவிகள் அடையும் அனைத்து இடர்களில் இருந்தும் நரகத்தில் இருந்தும் மீட்கப்படுகிறான்.(21)அனுராதா {அனுஷம்} நட்சத்திரத்தில், உண்ணா நோன்பிருந்து, சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய துணிகள் மற்றும் வேறு ஆடைகளையும், உணவையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்தில் நூறு யுக காலம் மதிக்கப்படுகிறான்.(22)

ஜியேஷ்டம் {கேட்டை} நட்சத்திரத்தில், {மூலகம் என்றழைக்கப்படும்} கிழங்குகளுடன் {முள்ளங்கியுடன்} சேர்த்துக் காலசாகம் என்றழைக்கப்படும் கீரையை {கருவேப்பிலையைக்} கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெருஞ்செழிப்பையும், விரும்பத்தக்க கதியையும் அடைகிறான்.(23)

அடக்கப்பட்ட ஆன்மாவைக் கொண்ட ஒருவன், மூல நட்சத்திரத்தில், பிராமணர்களுக்குக் கனிகள் மற்றும் கிழங்குகளைக் கொடையளிப்பதன் மூலம் பித்ருக்களை நிறைவடையச் செய்து, விரும்பத்தக்க கதியை அடைகிறான்.(24)

பூர்வாஷாதம் {பூராடம்} நட்சத்திரத்தில், உண்ணா நோன்பிருக்கும் ஒருவன், நற்குடியில் பிறந்தவரும், நல்லொழுக்கம் கொண்டவரும், வேதங்களை அறிந்தவருமான ஒரு பிராமணருக்கு தயிர் நிறைந்த குடுவைகளை {தயிர்ப்பாத்திரங்களைக்} கொடையளிப்பதன் மூலம், தன் மறுபிறவியில் பசுக்கள் நிறைந்த குடும்பத்தில் பிறக்கிறான்.

உத்தராஷாதம் {உத்திராடம்} நட்சத்திரத்தில், அபரிமிதமான நெய் மற்றும் கற்கண்டு ஆகியவற்றுடன் வாற்கோதுமைக் கஞ்சி நிறைந்த குடுவைகளைக் கொடையளிக்கும் ஒருவன் தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைகிறான்.(25,26) அபிஜித் என்றழைக்கப்படும் நட்சத்திரத்தில் {உத்தராட நட்சத்திரத்தின் நடுப்பகல் வேளையில்} தேனையும், நெய்யையும் ஞானிகளுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஓர் அறவோன் சொர்க்கத்தை அடைந்து அங்கே மதிக்கத்தகுந்தவனாகிறான்[9].(27)சிரவண {திருவோணம்} நட்சத்திரத்தில் கம்பளம் மற்றும் அடர்த்தியான இழைநய அமைப்புக் கொண்ட {தடிமனான} வேறு துணிகளையும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தூய ஒளியுடன் கூடிய வெண்தேரைச் செலுத்திக் கொண்டு இன்பலோகமெங்கும் உலவுவான்.(28)

தனிஷ்டை {அவிட்ட} நட்சத்திரத்தில் காளைகள் பூட்டப்பட்ட ஒரு வாகனத்தையோ, துணிக்குவியல்கள் மற்றும் செல்வத்தையோ அடக்கப்பட்ட ஆன்மாவுடன் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தன் மறுபிறவியில் சொர்க்கத்தை அடைகிறான்.(29)

சதபிஷை {சதய} நட்சத்திரத்தில் அகில் மற்றும் சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுமையில் அப்சரஸ்களின் தோழமையையும், பல்வேறு வகையான நித்திய நறுமணப் பொருட்களையும் அடைகிறான்.(30)

பூர்வபாத்ரபதம் {பூரட்டாதி} நட்சத்திரத்தில் ராஜமாஷத்தை {மொச்சைக் கொட்டையைக்}[10] கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுபிறவியில் பெரும் மகிழ்ச்சியை அடைந்து, அனைத்து வகை உணவுப் பொருட்களையும், கனிகளையும் ஏராளமாகக் கையிருப்பில் கொண்டிருப்பான்.(31)உத்தரா {உத்திரட்டாதி} நட்சத்திரத்தில் ஆட்டிறைச்சியை {செம்மறியாட்டு இறைச்சியைக்} கொடையாக அளிக்கும் ஒருவன், அத்தகைய செயலின் மூலம் பித்ருக்களை நிறைவடைச் செய்து, மறுமையில் வற்றாத பலன்களை அடைகிறான்.(32)

ரேவதி நட்சத்திரத்தில் கறப்பதற்குரிய வெண்கலப் பாத்திரத்துடன் ஒரு பசுவைக் கொடையாக அளிக்கும் ஒருவனை, அவ்வாறு கொடையளிக்கப்பட்ட பசுவானது, அவன் விரும்பும் அனைத்தும் கனியும் நிலையை அருளத் தயாராக மறுமையில் {அவனை} அணுகுகிறது.(33)

அஸ்வினி நட்சத்திரத்தில் குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுபிறவியில் யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த குடும்பத்தில் பிறந்து, பெரும் சக்தியுடன் திகழ்கிறான்.(34)

பரணி நட்சத்திரத்தில் பசுவையும், எள்ளையும் பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மறுபிறவியில் பெரும்புகழையும் ஏராளமான பசுக்களையும் அடைகிறான்” என்றார் {நாரதர்}.(35)

பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வாறே எந்தெந்த நட்சத்திர நாள்களில் என்னென்ன கொடைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை நாரதர் தேவகிக்குச் சொன்னார். இதைக் கேட்ட தேவகியும் தன் மருமகள்களுக்கு (கிருஷ்ணனின் மனைவியருக்கு) அவற்றை மீண்டும் சொன்னாள்” {என்றார் பீஷ்மர்}.(36)

வேறு தானங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 65-பொன், வெள்ளி, நீர், நெய், குடை, தேர் ஆகியவற்றைக் கொடையளிபதால் உண்டாகும் பலன்களையும், அவை குறித்த பெரியோர்களின் கருத்துகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும்பாட்டன் பிரம்மனின் மகனான சிறப்புமிக்க அத்ரி, “பொன்னைக் கொடையளிப்பவர்கள் இவ்வுலகில் அனைத்தையும் கொடையளிபவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்” என்றார்.(1)

மன்னன் ஹரிச்சந்திரன், “பொன்னைக் கொடையளிப்பது பாவத்தைப் போக்கவல்லது, நெடுநாள் வாழ்வுக்கு {நீடித்த ஆயுளுக்கு} வழிவகுப்பது, பித்ருக்களுக்கு வற்றாத பலனை உண்டாக்கவல்லது” என்றான்.(2)

மனு, “நீர்க்கொடையே அனைத்துக் கொடைகளிலும் சிறந்தது” என்றார். எனவே, ஒரு மனிதன் கிணறுகளையும், குளங்களையும், தடாகங்களையும் தோண்ட வேண்டும்.(3) பல்வேறு உயிரினங்கள் நீரைப் பெறும் நிறைந்த கிணறானது, அதைத் தோண்டிய மனிதனின் பாவச்செயல்களில் பாதியை நீக்கிவிடுவதாகச் சொல்லப்படுகிறது.(4) பசுக்களும், பிராமணர்களும், அறவோரும் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளப் பயன்படும் கிணறு, குளம் அல்லது தடாகங்களைத் தோண்டிய ஒரு மனிதன் சார்ந்த மொத்த குலமும் நரகம் மற்றும் பாவத்தில் இருந்து மீட்கப்படுகிறது.(5) கோடை காலத்தில் தடையில்லாமல் அனைவரும் நீர் பெறும் வண்ணம் கிணறு அல்லது குளத்தைத் தோண்டிய மனிதன் அனைத்து வகைப் பேரிடர்களையும் கடக்கிறான்.(6)

சிறப்புமிக்கப் பிருஹஸ்பதி, பூஷன், பகன், அஸ்வினி இரட்டையர்கள், நெருப்பு தேவன் {அக்னி} ஆகியோரை நெய் நிறைவடையச் செய்வதாகச் சொல்லப்படுகிறது.(7) நெய்யானது உயர்ந்த மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். அது வேள்விக்கான உயர்ந்த {மிக முக்கிய} தேவையாக இருக்கிறது. நீர்மங்கள் அனைத்திலும் அதுவே சிறந்தது. நெய்யைக் கொடையளிப்பது மிக மேன்மையான பலனை உண்டாக்குகிறது.(8) மறுமையில் இன்பத்தை வெகுமதியாக அடைய விரும்புபவனும், புகழையும் செழிப்பையும் விரும்புபவனுமான மனிதன், தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, தூய்மையடைந்த ஆன்மாவுடன் பிராமணர்களுக்கு நெய்க்கொடை அளிக்க வேண்டும்.(9) அஸ்வினி மாதத்தில் பிராமணர்களுக்கு நெய்க்கொடையளிக்கும் மனிதனிடம் நிறைவடையும் அஸ்வினிகள் அவனுக்கு மேனி அழகை அளிக்கின்றனர்.(10) பிராமணர்களுக்கு நெய்க் கலந்த பாயசத்தைக் கொடையாக அளிக்கும் மனிதனின் வசிப்பிடத்தை ராட்சசர்கள் தாக்குவதில்லை.(11)

நீர் நிறைந்த குடுவைகளைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன் ஒருபோதும் தாகத்தால் இறக்கமாட்டான். அத்தகைய மனிதன் வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் அடைவான், அவன் எந்த வகைத் துன்பத்திற்கும் ஆளாகமாட்டான்.(12) பெரும் பக்தியுடனும், புலனடக்கத்துடனும் பிராமணர்களில் முதன்மையானோருக்கு கொடையளிக்கும் மனிதன், அந்தப் பிராமணர்கள் தங்கள் தவங்களின் மூலம் வென்ற பலன்களில் ஆறில் ஒரு பங்கை எடுத்துக் கொள்கிறான்.(13) பிராமணர்களுக்கு வாழ்வாதாரங்களையும், சமைப்பதற்கும், குளிர்விரட்டவும் உதவும் விறகுகளையும் கொடையளிக்கும் மனிதன், தன் நோக்கங்கள் அனைத்தும், செயல்கள் அனைத்தும் வெற்றியால் மகுடம் சூட்டப்படுவதைக் காண்பான். அத்தகைய ஒருவன், தன் பகைவர்கள் அனைவரையும் விட அதிகக் காந்தியுடன் ஒளிர்வது காணப்படுகிறது.(14,15) அத்தகைய மனிதனிடம் சிறப்புமிக்க நெருப்பு தேவன் {அக்னி} நிறைவடைகிறான். மற்றொரு வெகுமதியாக அவன் ஒருபோதும் கால்நடைகள் {விலங்குகள்} அற்றவனாக ஆவதில்லை, மேலும் போரில் அவன் நிச்சயம் வெற்றி அடைவான்.(16)

ஒரு குடையைக் கொடையளிக்கும் மனிதன், பிள்ளைகளையும் {சந்ததியையும்}, பெருஞ்செழிப்பையும் அடைகிறான். அத்தகைய மனிதன் ஒருபோதும் கண் நோயால் பாதிக்கப்படுவதில்லை. ஒரு வேள்வியைச் செய்வதால் உண்டாகும் பலன் அவனுடையதாகிறது.(17) கோடை காலத்திலோ, மழைக்காலத்திலோ ஒரு குடையைக் கொடையளிக்கும் மனிதனின் இதயம், எக்காரணத்தினாலும் எரிச்சல் அடைவதில்லை.(18) அத்தகைய மனிதன் அனைத்து வகைக் கடினங்கள் மற்றும் தடைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் விரைவாக வெல்கிறான். ஓ! மன்னா, உயர்ந்த அருளைக் கொண்டவரும், சிறப்புமிக்க முனிவருமான சாண்டில்யர், அனைத்துக் கொடைகளிலும் தேர்க்கொடையே சிறந்தது” என்று சொன்னார்” என்றார் {பீஷ்மர்}.(19-20)

தானபலன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 66-காலணி, எள், நிலம், பசு, உணவு ஆகியவற்றைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் பலன்களை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, சுடு மணலில் நடக்கும்போது, பாதம் சுடும் பிராமணர் ஒருவருக்குக் காலணிகளைக் கொடையளிக்கும் மனிதன் என்ன பலன்களை அடைகிறான் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிராமணர்களின் பாதங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்குக் காலணிகளைக் கொடையளிக்கும் மனிதன், முட்கள் அனைத்தையும் நசுக்குவதில் வென்று, அனைத்து வகைக் கடினங்களையும் கடகிறான்.(2) ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய மனிதன் தன் எதிரிகளை அனைவரின் தலைகளுக்கு மேல் இருக்கிறான். ஓ! ஏகாதிபதி, கோவேறு கழுதைகள் பூட்டப்பட்டவையும், பொன் மற்றும் வெள்ளியாலானவையுமான வாகனங்கள் அவனுக்குக் கிடைக்கும். காலணிகளைக் கொடையளிப்பவன், நன்கு பயிற்சி பெற்ற குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு வாகனத்தைக் கொடையளித்த பலனை ஈட்டுவதாகச் சொல்லப்படுகிறது” என்றார்.(3,4)

யுதிஷ்டிரன், “ஓ! பாட்டா, எள், நிலம், பசு மற்றும் உணவு ஆகியவற்றைக் கொடையளிப்பதால் கிட்டும் பலன்களை மீண்டும் விரிவாக எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)

பீஷ்மர், “ஓ! குந்தியின் மகனே, எள்ளைக் கொடையளிப்பதனால் கிட்டும் பலனென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ! குருக்களில் சிறந்தவனே, நான் சொல்வதைக் கேட்ட பிறகு, விதிப்படி எள்ளைக் கொடையளிப்பாயாக.(6) எள்ளானது, பித்ருக்களுக்கான சிறந்த உணவாகச் சுயம்புவான பிரம்மனால் உண்டாக்கப்பட்டது. எனவே, எள்ளைக் கொடையளிப்பது பித்ருக்களை எப்போதும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. மாக {மாசி} மாதத்தில் பிராமணர்களுக்கு எள்ளைக் கொடையளிக்கும் மனிதன், அச்சுறுத்தும் அனைத்துவகை உயிரினங்களும் நிறைந்த நரகத்தை ஒருபோதும் காண வேண்டியதில்லை.(8) எள்ளைக் காணிக்கையளித்துப் பித்ருக்களைத் துதிக்கும் ஒருவன், அனைத்து வேள்விகளிலும் தேவர்களை வழிபடுபவனாகக் கருதப்படுகிறான். ஒருவன் எந்நோக்கமும் இல்லாமல் ஒரு சிராத்தத்தில் எள்ளைக் காணிக்கையளிக்கக்கூடாது[1].(9) பெரும் முனிவரான கசியபரின் அங்கங்களில் இருந்து எள் உண்டானது. எனவேதான் கொடை குறித்த காரியங்களில் அவை உயர்ந்த பலனைத் தரக்கூடியவையாகக் கருதப்படுகின்றன.(10)எள்ளானது செழிப்பையும், மேனி அழகையும் கொடுத்து அந்தக் கொடையாளியைப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடையச் செய்கிறது. இந்தக் காரணத்தினால்தான் எள்ளைக் கொடையளிப்பது வேறு எந்தப் பொருளையும் கொடையளிப்பதைவிடச் சிறப்புமிக்கதாகிறது.(11) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான ஆபஸ்தம்பர், சங்கர், லிகிதர், பெரும் முனிவரான கௌதமர் ஆகியோரனைவரும் எள்ளைக் கொடையளித்ததன் மூலமே சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(12) பாலினக் கலவியைத் தவிர்த்து பிரவிருத்தி அறங்கள் அல்லது செயல்களை நோற்று, எள் காணிக்கையுடன் ஹோமம் செய்யும் பிராமணர்கள் (தூய்மையிலும், திறனிலும்) தடுப்பு மருந்தான ஹவிக்கு இணையானவர்களாகக் கருதப்படுகிறார்கள்[2].(13) எள்ளுக்கொடையானது அனைத்துக் கொடைகளுக்கும் மேலானதாகப் புகழ்பெற்றது. கொடைகள் அனைத்தின் மத்தியிலும் எள்ளுக்கொடையானது வற்றாத பலனை உண்டாக்கவல்லதாகக் கருதப்படுகிறது.(14) பழங்காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் ஹவி (தெளிந்த நெய்) கிடைக்காத போது, ஓ! பகைவர்களை எரிப்பவனே, முனிவர் குசிகர் தன் வேள்வி நெருப்புக்ள மூன்றுக்கும் எள்ளையே காணிக்கையளித்துச் சிறந்த கதியை அடைவதில் வென்றார்.(15) ஓ! குருக்களின் தலைவா, இவ்வாறே சிறந்த எள்ளுக்கொடை குறித்த விதிமுறைகளை உனக்குச் சொன்னேன். இந்த விதிமுறைகளின் விளைவாலேயே எள்ளுக்கொடையானது மிக மேன்மையான பலனைக் கொண்டது எனக் கருதப்படுகிறது.(16)இதன்பிறகு நான் சொல்லப்போவதைக் கேட்பாயாக. ஓ! ஏகாதிபதி, ஒரு காலத்தில் ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய தேவர்கள், சுயம்புவான பிரம்மனின் முன்னிலைக்குச் சென்றனர்.(17) பூமியில் ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய அவர்கள் பிரம்மனை சந்தித்து, “எங்கள் வேள்விக்காக இஃது எங்களுக்கு வேண்டும்” எனச் சொல்லி மங்கலப் பூமியில் ஓர் இடத்தை அவனிடம் இரந்து கேட்டனர்.(18)

தேவர்கள், “ஓ! சிறப்புமிக்கவரே, நீரே தேவர்கள் அனைவரின் மற்றும் பூமி அனைத்தின் தலைவராவீர். ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, உமது அனுமதியுடன் நாங்கள் ஒரு வேள்வியைச் செய்ய விரும்புகிறோம்.(19) வேள்விப் பீடத்தை அமைக்கச் சட்டப்பூர்வமான வழிமுறைகளின் மூலம் பூமியைப் பெறாத மனிதன், தான் செய்யும் வேள்வியின் பலனை ஒருபோதும் ஈட்டுவதில்லை.(20) அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட அண்டமனைத்தின் தலைவன் நீரே. எனவே, நாங்கள் செய்ய விரும்பும் வேள்விக்காகப் பூமியில் ஒரு பகுதியை எங்களுக்கு அருள்வதே உமக்குத் தகும்” என்று கேட்டனர்.(21)

பிரம்மன், “தேவர்களில் முதன்மையானோரே, கசியபனின் மகன்களே, நீங்கள் நினைத்த வேள்வியை நீங்கள் எங்கே செய்வீர்களோ அந்த நிலப்பகுதியை நான் உங்களுக்குத் தருவேன்” என்றான்.(22)

தேவர்கள், “ஓ! புனிதமானவரே, எங்கள் விருப்பங்கள் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டன. நாங்கள் எங்கள் வேள்வியைப் பெரிய தக்ஷிணையுடன் இங்கே செய்யப் போகிறோம். எனினும், முனிவர்கள் இந்த நிலப்பகுதியை எப்போதும் துதிக்கட்டும்” என்றனர்.(23)

அப்போது அந்த இடத்திற்கு அகஸ்தியர், கன்வர், பிருகு, அத்ரி, விருஷாகபி, அசிதர் மற்றும் தேவர்கள் ஆகியோர் வந்தனர்.(24) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, அப்போது உயர் ஆன்ம தேவர்கள் அங்கே தங்கள் வேள்வியைச் செய்தனர். அந்த முதன்மையான தேவர்கள் அதை {அந்த வேள்வியை} உரிய நேரத்தில் நிறைவடையச் செய்தனர்.(25) மலைகளில் முதன்மையான இமயத்தின் சாரலில் தங்கள் வேள்வியை நிறைவடையச் செய்த தேவர்கள், தங்கள் வேள்வியில் இருந்து எழும் பலனில் ஆறில் ஒரு பகுதியை நிலக்கொடைக்குக் கொடுத்தனர்.(26) சாணளவு நிலத்தையாவது நம்பிக்கையுடனும், மதிப்புடனும் (ஒரு பிராமணனுக்குக்) கொடையளித்த மனிதன் எந்தக் கடின சூழ்நிலையிலும் ஒருபோதும் சோர்வடைய வேண்டியதில்லை, மேலும் அவன் எந்தப் பேரிடரையும் ஒருபோதும் சந்திக்க மாட்டான்.(27)

குளிர், காற்று, சூரியன் ஆகியவற்றை வெளியே வைப்பதும், ஒரு தூய நிலப்பகுதியில் நிற்பதுமான ஒரு வீட்டைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி தேவலோகத்தை அடைந்து, அவனது பலன் தீர்ந்தாலும் ஒருபோதும் அங்கிருந்து வீழாமல் இருப்பான்.(28) ஓ! மன்னா, ஞானம் கொண்ட ஒரு கொடையாளி, வசிப்பதற்குரிய ஒரு வீட்டைக் கொடையளிப்பதன் மூலம், சக்ரனின் துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்வான். அத்தகைய மனிதன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(29) புலனடக்கம் கொண்டவரும், வேதங்களை நன்கறிந்தவரும், பிறவியால் ஆசான்களின் குடும்பத்தைச் சார்ந்தவருமான ஒரு பிராமணர் எவனுடைய வீட்டில் மனநிறைவுடன் வசிக்கிறாரோ அவன் உயர்ந்த இன்ப உலகங்களை அடைவதில் வென்று இன்புற்றிருக்கிறான்[3].(30)ஓ! பாரதர்களில் சிறந்தவனே, குளிர் மற்றும் மழையை வெளியே வைப்பதும், கணிசமான அளவுக்குக் கட்டமைப்பைக் கொண்டதும், பசுவுக்கு உறைவிடமளிப்பதுமான ஒரு கொட்டகையைத் தானம் அழிப்பதன் மூலம் ஒரு கொடையாளி தன் குலத்தை ஏழு தலைமுறைக்கு (நரகத்திலிருந்து) மீட்கிறான்.(31) உழத்தகுந்த ஒரு நிலப்பகுதியைக் கொடையளிப்பதன்மூலம் அந்தக் கொடையாளி சிறந்த செழிப்பை அடைகிறான். கனிம வளம் உள்ள ஒரு நிலப்பகுதியைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி தன் குலம் மற்றும் குடும்பத்தின் செல்வாக்கைப் பெருக்குகிறான்.(32) தரிசு நிலத்தையோ, வறண்ட நிலத்தையோ ஒருவன் ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது; அதேபோலச் சுடலைக்கு அருகிலுள்ள நிலத்தையோ, அத்தகைய கொடையளிப்பதற்கு முன்னர் ஒரு பாவியால் அனுபவிக்கப்பட்டு, சொந்தங்கொண்டாடப்பட்ட நிலத்தையோ ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது.(33) ஒரு மனிதன், வேறொருவருக்குச் சொந்தமான நிலத்தில் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் சிராதத்தைச் செய்யும்போது, அந்த நிலக்கொடையையும், சிராத்ததையும் பித்ருக்கள் கெட்டுப் போகச் செய்வார்கள்.(34) எனவே ஞானம் கொண்ட ஒருவன் சிறு நிலப்பகுதியையாவது விலைக்கு வாங்கி அதைக் கொடையளிக்க வேண்டும். முறையாக விலைக்கு வாங்கப்பட்ட நிலத்தில் ஒருவனுடைய மூதாதையர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் பிண்டம் வற்றாததாகிறது {அழிவடையாததாகிறது}.(35)

காடுகள், மலைகள், ஆறுகள், தீர்த்தங்கள் ஆகியவை உரிமையாளர்கள் அற்றவை எனக் கருதப்படுகின்றன. இங்கே சிராத்தம் செய்வதற்கு நிலமேதும் விலைக்கு வாங்கப்பட வேண்டியதில்லை.(36) ஓ! மன்னா, நிலக்கொடையின் பலன்கள் குறித்த காரியத்தில் இதுவே சொல்லப்படுகிறது. ஓ! பாவமற்றவனே, இதன் பிறகு, பசுக்கொடைகுறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(37) தவசிகள் அனைவரையும் விடப் பசுக்கள் மேன்மையானவையாகக் கருதப்படுகின்றன. அவ்வாறு இருப்பதாலேயே, இந்தக் காரணத்தினாலேயே தெய்வீகமான மஹாதேவன் அவற்றின் துணையுடன் தவங்களைச் செய்தான்.(38) ஓ! பாரதா, பசுக்கள் சோமனின் துணையுடன் பிரம்மலோகத்தில் வசிக்கின்றன. வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மறுபிறப்பாள முனிவர்கள் உயர்ந்த கதியாக இருக்கும் இந்த உலகத்தை {பிரம்மலோகத்தை} அடையவே முயற்சிக்கிறார்கள்.(39) ஓ! பாரதா, பால், நெய், தயிர், சாணம், தோல், எலும்புகள், கொம்புகள் மற்றும் மயிர் ஆகியவற்றைக் கொடுத்துப் பசுக்கள் மனிதர்களுக்கு நன்மை செய்கின்றன.(40)

பசுக்கள் குளிரையோ, வெப்பத்தையோ உணர்வதில்லை. அவை எப்போதும் பணி செய்கின்றன. மழைக்காலங்களும் அவற்றைப் பாதிப்பதில்லை.(41) பசுக்கள், பிராமணர்களின் துணையுடன் உயர்ந்த கதியை (பிரம்மலோக வாசத்தை) அடைவதால், பசுக்களும், பிராமணர்களும் இணையானவர்கள் என ஞானிகள் சொல்கின்றனர்.(42) பழங்காலத்தில், மன்னன் ரந்திதேவனால் செய்யப்பட்ட ஒரு பெரும் வேள்வியில் பெரும் எண்ணிக்கையிலான பசுக்கள் கொன்று காணிக்கையளிக்கப்பட்டன. கொல்லப்பட்ட அவ்விலங்குகளின் தோல்களில் சுரந்த சாற்றிலிருந்து சர்மண்வதி என்ற பெயரில் அழைக்கப்படும் ஓர் ஆறே உண்டானது.(43) அதன் பிறகு, பசுக்கள் வேள்விக்குத் தகுந்த விலங்குகளாக கொள்ளப்படுவதில்லை[4]. அவை கொடைக்குத் தகுந்த விலங்குகளாகக் கொள்ளப்படுகின்றன. ஓ! ஏகாதிபதி முதன்மையான பிராமணர்களுக்குப் பசுக்கொடையளிக்கும் மன்னன், தனக்கு நேரும் ஒவ்வொரு இடரையும் நிச்சயம் கடப்பான். ஆயிரம் பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன் நரகத்திற்குச் செல்ல மாட்டான்.(44,45)ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, அத்தகைய மனிதன் எங்கும் வெற்றியை அடைகிறான். பசுவின் பால் அமுதமெனத் தேவர்களின் தலைவனே சொல்லியிருக்கிறான்.(46) இதன் காரணமாகப் பசுக்கொடை அளிக்கும் ஒருவன் அமுதத்தைக் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான். நோய் தடுக்கும் பாலில் இருந்து உண்டாக்கப்படும் நெய்யானது வேள்வி நெருப்பில் ஊற்றத்தக்க ஆகுதிகள் அனைத்திலும் மிகச் சிறந்ததென வேதங்களை அறிந்த மனிதர்கள் அறிவித்திருக்கிறார்கள்.(47) இக்காரணத்தினால், ஒரு பசுவைக் கொடையளிக்கும் மனிதன், வேள்விக்கான ஆகுதியைக் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான். காளை மாடானது சொர்க்கத்தின் உடல்வடிவமாகும். சிறப்புகளைக் கொண்ட ஒரு பிராமணனுக்கு ஒரு காளையைக் கொடையளிப்பவன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, உயிரினங்களின் உயிர் மூச்சுகளாகப் பசுக்கள் சொல்லப்படுகின்றன.(48,49) எனவே, பசுக்கொடை அளிக்கும் மனிதன் உயிர்மூச்சுகளைக் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான். வேதங்களை அறிந்த மனிதர்கள், வாழும் உயிரினங்களின் உயர்ந்த புகலிடமாகப் பசுக்கள் இருப்பதாகச் சொல்கின்றனர்.(50)

எனவே, பசுக்கொடையளிக்கும் மனிதன், அனைத்து உயிரினங்களுக்குமான உயர்ந்த புகலிடத்தைக் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான். பசுவானது கொல்லப்படுவதற்காக (அவளைக் கொல்பவனிடம்) ஒருபோதும் கொடுக்கப்படக்கூடாது; அதே போல மண்ணை உழுபவனுக்கும் பசுவைக் கொடுக்கக்கூடாது; அதே போல ஒரு நாத்திகனிடமும் பசுவைக் கொடுக்ககூடாது. ஓ! பாரதர்களின் தலைவா, பசுவை வளர்ப்பதையே தொழிலாகக் கொண்டவனுக்கும் பசுக்கொடை அளிக்கப்படக்கூடாது[5].(51) {பசுவுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்} அத்தகைய பாவிகளுக்குப் பசுவைக் கொடுக்கும் மனிதன் எப்போதும் நீடிக்கும் நரகத்தில் மூழ்குவான் என ஞானிகள் சொல்கின்றனர்.(52) ஒருவன், உடல் மெலிந்ததோ, வாழும் கன்றை உண்டாக்காததோ, மலடாகவுள்ளதோ, நோய்வாய்ப்பட்டதோ, அங்கக் குறைபாடு கொண்டதோ, களைத்திருப்பதோவான பசுவை ஒரு பிராமணனுக்கு ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது.(53) பத்தாயிரம் பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன் சொர்க்கத்தை அடைந்து, இந்திரனின் துணையுடன் அருள்நிலையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். இலட்சக்கணக்கான பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன், வற்றாத இன்பலோகங்களை அடைவான்.(54) இவ்வாறே பசுக்கொடை மற்றும் எள்ளுக் கொடை மற்றும் நிலக்கொடை ஆகியவற்றின் பலன்களை உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! பாரதா, உணவுக்கொடை குறித்து இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.(55)ஓ! குந்தியின் மகனே, உணவுக் கொடையானது மிக உயர்ந்த கொடையாகக் கருதப்படுகிறது. பழங்காலத்தில் மன்னன் ரந்திதேவன் உணவுக்கொடை அளித்ததன் மூலமே சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(56) களைத்தவனும், பசித்தவனுமான ஒருவனுக்கு உணவுக்கொடையளிக்கும் மன்னன் சுயம்புவுக்குச் சொந்தமான உயர்ந்த இன்பலோகத்தை அடைகிறான்.(57) ஓ! பெரும்பலம் கொண்டவனே, உணவுக்கொடை அளிப்பவர்களுக்குக் கிட்டும் இன்ப நிலையைப் பொன், ஆடைகள், மற்றும் பிற பொருட்களைக் கொடையளிப்பதன் மூலம் கூட மனிதர்கள் அடையத் தவறுகிறார்கள்.(58) உண்மையில் உணவே முதல் பொருளாகும். உணவே உயர்ந்த செழிப்பாகக் கருதப்படுகிறது. உணவிலிருந்து உயிர் தோன்றுகிறது, சக்தியும், ஆற்றலும் பலமும் தோன்றுகின்றன.(59) எப்போதும் கவனத்துடன் அறவோருக்கு உணவுக்கொடையளிக்கும் ஒருவன் ஒருபோதும் எந்தத் துன்பத்திலும் வீழ்வதில்லை. பராசரரால் இதுவே சொல்லப்படுகிறது.(60)

தேவர்களை முறையாக வழிபட்ட பிறகு, உணவே முதலில் அவர்களுக்குப் படைக்கப்பட வேண்டும். ஓ! மன்னா, குறிப்பிட்ட மனிதர்கள் என்ன வகை உணவை உண்பார்களோ, அந்த மனிதர்களால் வழிபடப்படும் தேவர்களும் அதே வகை உணவையே உண்பதாகச் சொல்லப்படுகிறது[6].(61) கார்த்திகை மாத வளர்பிறையில் உணவுக்கொடையளிக்கும் மனிதன் இம்மையில் ஒவ்வொரு கடினத்தையும் கடப்பதில் வென்று, மறுமையில் வற்றாத இன்பநிலையை அடைகிறான்.(62) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தன் வசிப்பிடத்தில் பசியுடன் வரும் விருந்தினருக்கு உணவுக்கொடையளிக்கும் மனிதன், பிரம்மத்தை அறிந்த மனிதர்களுக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அனைத்தையும் அடைகிறான்.(63) உணவுக்கொடையளிக்கும் மனிதன், அனைத்து கடினங்களையும், துன்பத்தையும் நிச்சயம் கடப்பான். அத்தகைய மனிதன் ஒவ்வொரு பாவத்தையும் கடந்து, ஒவ்வொரு தீச்செயலில் இருந்தும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறான்.(64) இவ்வாறு உணவு, எள், பூமி {நிலம்} மற்றும் பசுக் கொடைகள் அளிப்பதன் பலன்களை நான் உனக்குச் சொன்னேன்” என்றார் {பீஷ்மர்}.(65)

ஜல தானம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 67-தண்ணீரைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் பலன்களை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, நீர் சொன்ன பல்வேறு வெகை கொடைகளின் பலன்களைக் கேட்டேன். ஓ! பாரதரே, குறிப்பாக உணவுக்கொடையே மெச்சத்தகுந்தது, உயர்வானது என நான் புரிந்து கொள்கிறேன்.(1) எனினும், நீர்க்கொடை அளிப்பதன் பெரும்பலன்கள் என்னென்னன? ஓ! பாட்டா, நான் இதை விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அது குறித்து நான் உனக்குச் சொல்கிறேன்.(3) ஓ! பாவமற்றவனே, கொடைகளைக் குறித்து நீர் தொடங்கி உனக்குச் சொல்லப் போகிறேன். உணவுக்கொடை மற்றும் நீர்க்கொடை மூலம் ஒரு மனிதன் அடையும் பலனை, வேறு எந்தக் கொடையினாலும் அடைய இயலாது என்றே நான் நினைக்கிறேன். எனவே, உணவு அல்லது நீர் கொடுப்பதைவிட மேன்மையான கொடை வேறேதும் இல்லை. உணவாலேயே அனைத்து உயிரினங்களாலும் நீடித்திருக்கமுடிகிறது.(4,5)

இந்தக் காரணத்தினாலேயே உலகங்கள் அனைத்திலும் உணவே மிக மேன்மையான பொருளாகக் கருதப்படுகிறது. உணவிலிருந்தே உயிரினங்களுக்குப் பலமும் சக்தியும் நிலையாக அதிகரிக்கிறது.(6) எனவே, உணவுக்கொடையே மிக மேன்மையான கொடை என உயிரினங்கள் அனைத்தின் தலைவனே {பிரம்மனே} சொல்லியிருக்கிறான். ஓ! குந்தியின் மகனே, (உணவுக்கொடை குறித்து) சாவித்திரி சொன்ன மங்கலச் சொற்கள் என்னென்ன என்பதை நீ கேட்டிருக்கிறாய்.(7) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, அச்சொற்கள் சொல்லப்படுவதற்கான காரணமென்ன, அச்சொற்கள் என்னென்ன, புனித மந்திரங்களின் போக்கில் அவை சொல்லப்பட்டதெவ்வாறு என்பதை நீ அறிவாய். உணவுக்கொடை அளிப்பதன் மூலம் ஒரு மனிதன் உயிரையே கொடையாக அளிக்கிறான்.(8)

உயிர்க்கொடையைவிட இவ்வுலகில் மேன்மையான கொடை வேறேதுமில்லை. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, லோமசர் சொன்ன வாக்கியத்தை நீ அறியாதவனல்ல.(9) ஓ! ஏகாதிபதி, முற்காலத்தில் மன்னன் சிபி ஒரு புறாவுக்கு உயிரளித்ததன் விளைவால் அடைந்த கதியானது, ஒரு பிராமணனுக்கு உணவை அளிக்கும் கொடையாளியால் அடையப்படுகிறது.(10) எனவே, உயிரைக் {கொடையாகக்} கொடுப்பவர்கள் மறுமையில் மிக மேன்மையான இன்ப உலகங்களை அடைவதாக நாம் கேள்விப்படுகிறோம். ஓ! குருக்களில் சிறந்தவனே, உணவானது {உணவுக்கொடையானது}, நீருக்கு {நீர்க்கொடைக்கு} மேன்மையானதாகவோ, அல்லாததாகவோ இருக்கலாம்.(11) நீரின் துணையின்றி எதனாலும் நீடித்திருக்க இயலாது. கோள்கள் அனைத்தின் தலைவனான சிறப்புமிக்கச் சோமனே {சந்திரனே} நீரில் இருந்துதான உதித்தான்.(12)

அமுதம், சுதை, ஸ்வதை, பால், அனைத்து வகை உணவு, இலையுதிர் மூலிகைகள், செடிகொடிகள் ஆகியன நீரில் இருந்தே உண்டாகின்றன.(13) ஓ! மன்னா, இவற்றில் இருந்தே அனைத்து உயிரினங்களின் உயிர் மூச்சுகளும் உண்டாகின்றன. தேவர்கள் அமுதத்தையே தங்கள் உணவாகக் கொள்கின்றனர். நாகர்கள் சுதையை உணவாகக் கொள்கின்றனர்.(14) பித்ருக்கள் ஸ்வதையைத் தங்கள் உணவாகக் கொள்கின்றனர். விலங்குகள் செடி கொடிகளைத் தங்கள் உணவாகக் கொள்கின்றன. அரிசி முதலியன மனிதர்களின் உணவாக அமைகின்றன என ஞானிகள் சொல்கின்றனர்.(15) ஓ! மனிதர்களின் தலைவா, இவை அனைத்தும் நீரில் இருந்தே உண்டாகின்றன. எனவே, நீர்க்கொடைக்கு மேலான கொடை வேறேதும் இல்லை.(16)

ஒரு மனிதன் செழிப்படைய விரும்பினால் அவன் எப்போதும் நீர்க்கொடை அளிக்க வேண்டும். நீர்க்கொடையானது மிகவும் புகழத்தக்கதாகும். அது கொடையாளிக்கு பெரும் புகழையும் நீண்ட வாழ்நாளையும் அளிக்கிறது.(17) ஓ! குந்தியின் மகனே, நீர்க்கொடையாளியானவன், எப்போதும் தன்னுடைய பகைவர்களின் தலைகளுக்கு மேலேயே இருப்பான் {அவர்களைவிட உயர்ந்தவனாக இருப்பான்}. அத்தகைய ஒருவன் தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்து, என்று நீடித்திருக்கும் புகழையும் ஈட்டுகிறான்.(18) ஓ! மனிதர்களின் தலைவா, ஓ! பேரொளி கொண்டவனே, அந்தக் கொடையாளி தான் செய்த ஒவ்வொரு பாவத்தில் இருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்திற்குச் செல்லும்போது மறுமையில் முடிவிலா இன்பத்தை அடைகிறான். அத்தகைய மனிதன் மறுமையில் வற்றாத அருள் உலகங்களை ஈட்டுகிறான் என மனுவே சொல்லியிருக்கிறார்” என்றார் {பீஷ்மர்}.(19)

யமன் சொன்ன தானங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 68-எள், விளக்கு, உணவு மற்றும் ஆடைகளைக் கொடையளிப்பது குறித்து யமனுக்கும் ஒரு பிராமணருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, எள், இருள்விலக்கி ஒளிதரும் விளக்குகள், உணவு மற்றும் ஆடைகளைக் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்களை மீண்டும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்தில் இது தொடர்பாக ஒரு பிராமணருக்கும், யமனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட கதை குறிப்பிடப்படுகிறது.(2) கங்கைக்கும் யமுனைக்கும் இடையில் உள்ள நாட்டில், யாமுனை என்றழைக்கப்படும் {யமுனை உற்பத்தியாகும் களிந்த} மலையடிவாரத்தில் பிராமணர்கள் வசித்து வந்த ஒரு பெரிய நகரம் இருந்தது.(3) ஓ! மன்னா, பர்ணசாலை என்ற பெயரால் கொண்டாடப்பட்ட அந்த நகரம் தோற்றத்தில் மிக இனிமை நிறைந்ததாக இருந்தது. அங்கே கல்விமானான பிராமணர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தனர்.(4)

ஒரு நாள், இறந்தோரின் ஆட்சியாளனான யமன், கறுப்பு உடை உடுத்தியிருந்தவனும், குருதிச்சிவப்பான கண்களுடன் கூடியவனும், நட்டவகையில் நிற்கும் முடியுடன் கூடியவனும், காகம் போன்ற கண்களும், மூக்கும் பாதங்களும் கொண்டவனான தன் தூதுவனை {கிங்கரனை} அழைத்து,(5) “பிராமணர்கள் வசிக்கும் நகரத்திற்குச் சென்று, அகஸ்திய குலத்தில் பிறந்தவனும், சர்மின் {சர்மி} என்ற பெயரைக் கொண்டவனுமான மனிதனை இங்கே கொண்டு வருவாயாக.(6) மன அமைதியையே நோக்கமாகக் கொண்ட அவன் கல்விமானாகவும் இருக்கிறான். அவன் வேதங்களைக் கற்பிப்பதில் ஈடுபடும் ஆசானாகவும் இருக்கிறான், அவனது நடைமுறைகள் நன்கு அறியப்பட்டவையாக இருக்கின்றன. அங்கேயே வாழும் அதே குலத்தைச் சேர்ந்த வேறு எவனையும் என்னிடம் கொண்டு வராதே.(7) அந்த மற்றொருவனும், குணங்கள், கல்வி மற்றும் பிறவியில் அவனுக்கு இணையானவனே. பிள்ளைகள் மற்றும் ஒழுக்கக் காரியங்களில் இவனும் நுண்ணறிவு மிக்கச் சர்மினுக்கு ஒப்பானவனே.(8) நான் கருத்தில் கொண்டவனையே நீ கொண்டு வருவாயாக. அவன் (இங்கே மதிப்பில்லாமல் இழுத்து வரப்படுவதற்குப் பதிலாக) மதிப்புடன் வழிபடப்பட வேண்டும்” என்றான். அந்த இடத்திற்குச் சென்ற தூதன், அவன் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு முரணாகவே செயல்பட்டான்.(9) கொண்டுவரப்பட யமனால் தடுக்கப்பட்ட மனிதனைத் தாக்கி அங்கே கொண்டு வந்தான். பெருஞ்சக்தி கொண்ட யமன் அந்தப் பிராமணனைக் கண்டதும் எழுந்திருந்து, முறையாக அவனை வழிபட்டான்.(10)

பிறகு, அந்த இறந்தோரின் மன்னன் {யமன்} தன் தூதனை அழைத்து, “இவனைக் கொண்டு சென்று, மற்றொருவனைக் கொண்டு வருவாயாக” என்றான்.

இறந்தோரின் பெரும் நீதிபதியான அவன் {யமன்} இந்த வார்த்தைகளைச் சொன்ன போது, அந்தப் பிராமணன் அவனிடம், “நான் என் வேத கல்வியை முடித்துவிட்டேன். மேலும் நான் இப்போது உலகப் பந்தத்தோடு இல்லை. என் உயிர் இருப்புக்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறதோ, அவற்றை இங்கே வசித்துக் கடத்த விரும்புகிறேன்” என்றான்.(11,12)

யமன், “ஒருவன் உயிர்வாழ, காலத்தால் விதிக்கப்பட்ட சரியான கால அளவை என்னால் உறுதி செய்ய முடியாது. எனவே, காலத்தால் தூண்டப்படாத என்னால் ஒருவனை இங்கே வசிக்க அனுமதிக்க முடியாது. நான் இவ்வுலகில் ஒருவன் செய்யும் அறச்செயல்களை {அல்லது மறச்செயல்களைக்} குறித்துக் கொள்கிறேன்.(13) ஓ! கல்விமானும், பேரொளியும் கொண்ட பிராமணா, உடனே உன் வசிப்பிடத்திற்குத் திரும்புவாயாக. ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் மனத்தில் இருப்பது என்ன என்பதையும், நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(14)

பிராமணன், “என்னென்ன செயல்களைச் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் பலனை {புண்ணியத்தை} ஈட்டுகிறான். ஓ! அனைத்திலும் சிறந்தவனே, மூவுலகங்களில் (இக்காரியத்தில்) முதன்மையான அதிகாரங்களைக் கொண்டவன் நீயே” என்றான்.(15)

யமன், “ஓ! மறுபிறப்பாள முனியே, கொடைகள் குறித்த சிறப்புவிதிகளைக் கேட்பாயாக. எள்ளுக்கொடையளிப்பது மிக மேன்மையான கொடையாகும். அஃது என்றும் நிலைக்கும் பலனை உண்டாக்குகிறது.(16) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, ஒருவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எள்ளுக்கொடையை அளிக்க வேண்டும். நாள்தோறும் எள்ளுக்கொடையளிப்பதன் மூலம் தன் அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை நிச்சயம் அடைகிறான்.(17) சிராத்தங்களில் எள்ளுக்கொடையளிப்பது மெச்சப்படுகிறது. உண்மையில், எள்ளுக்கொடையானது மிக மேன்மையான கொடையாகும். சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி எள்ளைப் பிராமணர்களுக்குக் கொடையளிப்பாயாக.(18) வைசாக {வைகாசி} மாத முழு நிலவு நாளில் {பௌர்ணமியில்} ஒருவன், பிராமணர்களுக்கு எள்ளுக்கொடையளிக்க வேண்டும். ஒருவன் தன்னால் முடிந்த அளவுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எள்ளை அவர்களை உண்ணச் செய்யவும், தீண்டச்செய்யவும் வேண்டும்.(19) தங்களுக்கு நன்மையை அடைய விரும்புபவர்கள், தங்கள் மொத்த ஆன்மாக்களுடன் தங்கள் வீடுகளில் இதைச் செய்ய வேண்டும்.[1] அதே போல மனிதர்கள் நீர்க்கொடை அளிக்கவும், குடிநீர் விநியோகிக்கும் ஓய்விடங்களை நிறுவவும் வேண்டும்[2].(20) ஒருவன் குளங்களையும், தடாகங்களையும், கிணறுகளையும் வெட்ட வேண்டும். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அத்தகைய செயல்கள் உலகில் அரிதானவையாகும்.(21) எப்போதும் நீர்க்கொடை அளிப்பாயாக. இச்செயல் புண்ணியம் நிறைந்ததாகும். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அத்தகைய கொடைகள் அளிப்பதற்காக நீ சாலையோரங்களில் நீர் பகிர்ந்து கொடுக்கும் ஓய்விடங்களை {நிழற்பந்தல்களை} நிறுவ வேண்டும்.(22) ஒருவன் உண்ட பிறகு, அவனுக்குக் குறிப்பாகக் கொடுக்கப்பட வேண்டிய கொடை குடிப்பதற்கான நீராகும்” என்றான் {யமன்}”.(23)பீஷ்மர் தொடர்ந்தார், “அவனிடம் {அந்தப் பிராமணனிடம்} இச்சொற்களை யமன் சொன்னதும், தூதுவன் அவனை மீண்டும் அவனது வசிப்பிடத்தில் கொண்டு விட்டான். அந்தப் பிராமணன் திரும்பியதும், தான் பெற்ற போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தான்.(24) இவ்வாறு அவனை அவனது வசிப்பிடத்தில் திரும்ப விட்ட யமனின் தூதவன் {கிங்கரன்} யமனால் உண்மையில் வேண்டப்பட்ட சர்மினைப் பிடித்தான். சர்மினைக் கொண்டு சென்று தன் தலைவனிடம் {யமனிடம்} சொன்னான்.(25) பெருஞ்சக்தி கொண்டவனான அந்த இறந்தோரின் நீதிபதி {யமன்}, அறம்சார்ந்த அந்தப் பிராமணனை வழிபட்டு, சிறிது நேரம் அவனோடு உரையாடிவிட்டு, மீண்டும் அவனது வசிப்பிடத்திற்குக் கொண்டு செல்ல விடைகொடுத்தான். அவனிடமும் யமன் அதே போதனைகளையே சொன்னான். சர்மினும் மனிதர்களின் உலகிற்குத் திரும்பி வந்து யமன் சொன்ன அனைத்தையும் செய்தான்.(27) பித்ருக்குக்கு நன்மை செய்யும் விருப்பத்தின் மூலம் யமன் நீர்க்கொடையைப் போலவே, இருள் நிறைந்த இடங்களுக்கு விளக்கைக் கொடையளிப்பதையும் மெச்சுகிறான். எனவே, இருள்நிறைந்த இடத்தை ஒளியூட்ட விளக்கைக் கொடையளிப்பவன் பித்ருக்களுக்கு நன்மை செய்பவனாகக் கருதப்படுகிறான்.(28) எனவே, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, இருண்ட பகுதிகளுக்கு ஒளியூட்ட ஒருவன் எப்போதும் விளக்குகளைக் கொடையளிக்க வேண்டும். விளக்கைக் கொடையளிப்பது, தேவர்கள், பித்ருக்கள் மற்றும் சுயத்தின் பார்வைத்திறனை அதிகரிக்கிறது[3].(29)ஓ! மன்னா, ரத்தினங்களைக் கொடையளிப்பது மிக மேன்மையான கொடை என்று சொல்லப்படுகிறது. ரத்தினக்கொடையேற்ற ஒரு பிராமணன், ஒரு வேள்வியைச் செய்வதற்காக அவற்றை விற்றால் எப்பிழையும் இழைத்தவனாகான்.(30) ரத்தினக் கொடையேற்று, அவற்றை மீண்டும் பிராமணர்களுக்கே கொடையளிக்கும் பிராமணன் வற்றாத பலனை ஈட்டி, அவன் உண்மையில் யாரிடம் இருந்து அவற்றைப் பெற்றானோ அவனுக்கும் வற்றாத பலனை அளிக்கிறான்.(31) அனைத்துக் கடமைகளையும் அறிந்த மனு, முறையான கட்டுப்பாடுகளை நோற்பவனான ஒருவன், முறையான கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு பிராமணனுக்கு ரத்தினக் கொடையளிக்கும்போது, தானும் வற்றாத பலனை ஈட்டி, அவற்றைப் பெறுபவனுக்கும் வற்றாத பலனை அளிக்கிறான்.(32)

தான் மணந்து கொண்ட மனைவியுடனே மனநிறைவுடன் இருப்பவனும், ஆடைகளைக் கொடையளிப்பவனுமான மனிதன், சிறந்த நிறத்தையும், தனக்கான சிறந்த ஆடைகளையும் ஈட்டிக் கொள்கிறான்.(33) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பசு, பொன், எள் ஆகியவற்றைக் கொடையளிப்பதால் கிட்டும் பலன்களை வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் பல்வேறு பணிப்பாணைகளுக்கு ஏற்புடைய வகையில் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(34) ஒருவன் திருமணம் செய்து கொண்டு, தான் மணந்த மனைவியரிடம் சந்ததியை எழுப்ப {உண்டாக்க} வேண்டும். ஓ!குருகுலத்தின் மகனே, அனைத்து உடைமைகளைக் காட்டிலும் ஆண் குழந்தை {மகனைப்} பெறுவதே முதன்மையானதாகக் கருதப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}.(35)

கோதானம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 69-யுதிஷ்டிரனின் வேண்டுகோளுக்கிணங்க பசுக்கொடை, நிலக்கொடை ஆகியவற்றைக் குறித்து மீண்டும் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே, கொடைகள் குறித்த சிறப்பு விதிகளையும், முக்கியமாக நிலக்கொடை குறித்தும் எனக்கு மீண்டும் சொல்வீராக.(1) அறச்செயல்களைச் செய்யும் பிராமணனுக்கு ஒரு க்ஷத்திரியன் நிலக்கொடை அளிக்க வேண்டும். அத்தகைய பிராமணன் உரிய சடங்குகளுடன் அக்கொடையை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும், க்ஷத்திரியனைத் தவிர வேறு எவனும் நிலக்கொடையளிக்கத் தகுந்தவனல்ல.(2) இப்போது, பலனை {புண்ணியத்தை} ஈட்ட விரும்பும் அனைத்து வர்க்கங்களைச் சேர்ந்த மனிதர்கள் கொடையளிக்ககூடிய பொருட்கள் யாவை என்பதைச் சொல்வதே உமக்குத் தகும். இக்காரியம் குறித்து வேதங்கள் என்ன சொல்கின்றன என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மூன்று கொடைகள் ஒரே பலன்களை உண்டாக்கவல்லவையாக, ஒரே பெயரைக் கொண்டவையாக இருக்கின்றன[1]. உண்மையில் அம்மூன்றும் அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்யும் நிலையை அளிக்கவல்லவையாகும். அத்தகைய குணங்களைக் கொண்டவை பசு, நிலம் மற்றும் அறிவு {கல்வி} என்ற மூன்று பொருட்கள் ஆகும்.(4) வேதங்களில் இருந்து பெறப்பட்ட அறச் சொற்களைத் தன் சீடர்களுக்குச் சொல்லும் மனிதன், நிலம் மற்றும் பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டுவதற்கு இணையான பலனை அடைகிறான்.(5) அதே போல, பசுக்களும் (கொடைக்குத்தகுந்த பொருட்களாக) புகழப்படுகின்றன. அவற்றைவிட உயர்ந்த கொடையாக வேறு எந்தப் பொருளும் இருப்பதில்லை. பசுக்கள் உடனே பலனை அளிக்கவல்லவையாக இருக்கின்றன. ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய கொடை பெரும்பலனுக்கு வழிவகுக்குமேயன்றி வேறில்லை.(6) பசுக்கள் அனைத்து உயிரினங்களுக்கு அன்னைகளாகின்றன. அவை அனைத்து வகை மகிழ்ச்சிகளையும் அளிக்கின்றன. தன் செழிப்பை விரும்பும் ஒருவன் எப்போதும் பசுக்கொடையளிக்க வேண்டும்.(7) எவனும் பசுவை உதைக்கவோ, பசுக்களுக்கு மத்தியில் செல்லவோ கூடாது. பசுக்கள், மங்கல இல்லங்களான தேவிகளாக இருக்கின்றன. இதன் காரணமாகவே எப்போதும் அவை வழிபடத்தகுந்தவையாக இருக்கின்றன.(8)பழங்காலத்தில தேவர்கள் ஒரு வேள்வியைச் செய்வதற்காக நிலத்தை உழுதபோது கலப்பையில் பூட்டப்பட்ட இளங்காளைகளைத் தாக்க சாட்டையைய்ப பயன்படுத்தினர். எனவே, அத்தகைய நோக்கத்திற்கு நிலத்தை உழும்போது, காளைகள் மீது சாட்டையைப் பயன்படுத்துவது நிந்தனையையோ, பாவத்தையோ ஈட்டாது. எனினும், வேறு செயல்களில் காளைகள் ஒருபோதும் சாட்டையால் தாக்கப்படக்கூடாது.(9) பசுக்கள் மேயும்போதோ, கிடக்கும்போதோ எவரும் எவ்வழியில் அவற்றை எரிச்சலூட்டக்கூடாது. தாகமாக இருக்கும் பசுக்களுக்குத் தண்ணீர் கிட்டாதபோது, (அவை குளத்திற்கோ, தடாகத்திற்கோ, ஆற்றுக்கோ செல்வதைத் தடுப்பதன் விளைவாக) {அவற்றை எரிச்சலூட்டும்} அத்தகைய மனிதனை வெறுமனே பார்ப்பதன் மூலமே அவற்றால் அவனையும், அவனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழித்துவிட முடியும்.(10) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் சிராத்தங்களில் அல்லது தேவர்களை வழிபடும் இடங்களில் உள்ள பீடங்களே கூடப் பசுஞ்சாணம் கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு, புனிதப்படுத்தப்படுகின்றன எனும்போது பசுவை விடப் புனிதமான விலங்குகள் வேறு எவை இருக்கக்கூடும்?(11) தான் உண்பதற்கு முன்பாக, வேறு ஒருவனுக்குச் சொந்தமான பசுவுக்குக் கைப்பிடி நிறையப் புல்லைக் கொடுக்கும் மனிதன், அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்யும் நிலையை அளிக்கும் நோன்பை நோற்பவனாகக் கருதப்படுகிறான்.(12) அத்தகைய ஒருவன் பிள்ளைகளையும், புகழ், செலவம், செழிப்பு ஆகியவற்றையும் அடைந்து, அனைத்துத் தீமைகளையும், தீய கனவுகளையும் விலக்குகிறான்” என்றார் {பீஷ்மர்}.(13)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கொடையளிக்கத்தகுந்த பசுக்களுக்கான குறியீடுகள் என்னென்ன? கொடைகளாகக் கொடுக்கக்கூடிய பசுக்கள் என்னென்ன? பசுக்கொடை கொடுக்கப்பட வேண்டிய மனிதர்களின் குணங்கள் என்னென்ன? மேலும், யார் யாருக்கெல்லாம் பசுக்கள் கொடுக்கப்படக்கூடாது?” என்று கேட்டான்.(14)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒழுக்கத்தில் நேர்மையற்ற ஒருவனுக்கோ, பாவம் நிறைந்தவனுக்கோ, பேராசை நிறைந்தவனுக்கோ, வாக்கில் பொய்மை கொண்டவனுக்கோ, பித்ருக்கள் மற்றும் தேவர்களுக்குக் காணிக்கையளிக்காதவனுக்கோ பசுவை ஒருபோதும் கொடுக்கக்கூடாது.(15) வேதங்களைக் கற்றவனும், உலகம்சார்ந்த செல்வத்தில் வறியவனும், பல பிள்ளைகளைக் கொண்டவனும், இல்லற நெருப்பைக் கொண்டவனுமான ஒரு பிராமணனுக்குப் பத்துப் பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் எண்ணற்ற பேரின்ப உலகங்களை அடைகிறான்.(16) ஒரு மனிதன், வேறு ஒருவரிடம் இருந்து கொடையாகப் பெற்றதைத் துணையாகக் கொண்டு பலன் நிறைந்த செயல் எதைச் செய்யும்போதும், அச்செயலால் உண்டாகும் பலனில் ஒரு பகுதியானது, எவனுடைய செல்வத்தைக் கொண்டு அச்செயல் செய்யப்பட்டதோ அவனுக்குரியதாகிறது.(17) ஒருவனை உற்பத்தி செய்தவன் {தந்தை}, ஒருவனைக் காப்பாற்றியவன், ஒருவனுக்கு வாழ்வாதாரங்களை வழங்கியவன் ஆகியோர் மூன்று தந்தைமாராகக் கருதப்படுகிறார்கள்.(18) ஆசானுக்குக் கடமையுணர்வுடன் செய்யும் தொண்டு பாவத்தை அழிக்கிறது. செருக்கானது பெரும்புகழையும் அழித்துவிடும். மூன்று பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது பிள்ளையில்லாப் பழியை அழிக்கிறது, பத்துப் பசுக்களை உடைமையாக்கிக் கொள்வது வறுமைப் பழியை அகற்றுகிறது.(19)

வேதாந்தத்தில் அர்ப்பணிப்புள்ளவனும், பெரும் கல்வியைக் கொண்டவனும், ஞானம் நிறைந்தவனும், புலன்களில் முழுக்கட்டுப்பாடு கொண்டவனும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றுபவனும், உலகம் சார்ந்த அனைத்துப் பற்றுகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டவனும், அனைத்து உயிரினங்களிடமும் இனிமையான சொற்களைச் சொல்பவனும், பசியால் உந்தப்பட்டாலும் ஒருபோதும் தீச்செயல் ஏதும் செய்யாதவனும், மென்மையானவனும், அமைதியான மனநிலையைக் கொண்டவனும், விருந்தினர்கள் அனைவரிடமும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்பவனுமான ஒரு பிராமணனுக்கு, அதே நடத்தைகளைக் கொண்டவனும், பிள்ளைகள் மற்றும் மனைவிகளைக் கொண்டவனுமான ஒரு மனிதன் வாழ்வாதாரங்களைக் கொடுக்க வேண்டும்.(20,21) தகுந்த மனிதனுக்குப் பசுக்கொடை அளிப்பதன் மூலம் எவ்வளவு பலன் கிட்டுமோ, அதே அளவு பாவம் ஒரு பிராமணனுக்கு உரியதைக் களவாடுவதன் மூலம் கிட்டுகிறது. அனைத்துச் சூழ்நிலைகளிலும் பிராமணனுக்கு உரியதைக் கொள்ளையிடுவது தவிர்க்கப்பட வேண்டும், அவனது மனைவிகள் தொலைவில் வைக்கப்பட வேண்டும்[2]” என்றார் {பீஷ்மர்}.(22)

மன்னன் நிருகன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 70-மன்னன் நிருகனின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; வழிதவறி வந்த பசு; பசுவை வேறொரு பிராமணருக்குக் கொடையளித்த மன்னன் நிருகன்; ஓணானாக மாறியது; கிருஷ்ணன் நிருகனை விடுவித்தது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஒரு பிராமணனுக்கு உரியதைக் கொள்ளையிட்டதன் விளைவால் மன்னன் நிருகன் அடைந்த பேரிடரைக் குறித்த கதையை இது தொடர்பாக அறவோர் குறிப்பிடுகின்றனர்.(1) சில காலத்திற்கு முன்பு, யதுகுலத்தைச் சார்ந்த சில குறிப்பிட்ட இளைஞர்கள் நீர் தேடிச் சென்ற போது, புல் மற்றும் கொடிகளால் நன்கு மறைக்கப்பட்ட ஒரு பெரிய கிணற்றை அடைந்தனர்.(2) அதனிலிருந்து நீரெடுக்கும் விருப்பத்தில் அதன் வாயைச் சுற்றியிருந்த கொடிகளை அகற்ற பெரிதும் முயற்சி செய்தனர். அந்த வாயில் தூய்மையடைந்ததும், அதனுள் ஒரு பெரிய ஓணான் வசிப்பதைக் கண்டனர். அந்த இளைஞர்கள் அச்சூழலில் இருந்து அந்த ஓணானை மீட்க மீண்டும் மீண்டும் பெரும் முயற்சிகளைச் செய்தனர்.(3,4) மலையின் அளவுக்கு ஒப்பாக இருந்த அந்த ஓணானைக் கயிறுகளாலும், தோல் வார்களாலும் விடுவிக்க முயன்றனர். தங்கள் நோக்கத்தில் வெல்ல முடியாத அந்த இளைஞர்கள் ஜனார்த்தனனிடம் சென்றனர்.(5)

அவர்கள் அவனிடம், “கிணற்றின் மொத்த இடத்தையும் ஒரு பெரிய ஓணான் மறைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. எங்கள் சிறந்த முயற்சிகளினாலும் அதை அச்சூழலில் இருந்து மீட்க முடியவில்லை” என்றனர். கிருஷ்ணனிடம் இதுவே சொல்லப்பட்டது.(6) அந்த இடத்திற்குச் சென்ற வாசுதேவன், அந்த ஓணானை வெளியே எடுத்து யாரது என அதனிடம் கேட்டான். அந்த ஓணான் பழங்காலத்தில் பல வேள்விகளைச் செய்து புகழ்பெற்ற மன்னன் நிருகனின் ஆன்மாவைத் தான் கொண்டிருப்பதாக அந்த ஓணான் சொன்னான்.(7)

இச்சொற்களைச் சொன்ன அந்த ஓணானிடம் மாதவன், “நீ அறச்செயல்கள் பலவற்றைச் செய்திருக்கிறாய். நீ எப்பாவத்தையும் இழைக்கவில்லை. ஓ!மன்னா, உனக்கு ஏன் இந்தத் துன்பம் நிறைந்த கதி ஏற்பட்டது? இஃது ஏன்? எதனால் ஏற்பட்டது?(8) நூறும், ஆயிரமும், மீண்டும் நூறும், எண்ணூறும் பத்து லட்சமுமான பசுக்களை நீ கொடையளித்திருப்பதாக நாங்கள் கேட்டிருக்கிறோம். எனவே, இந்தக் கதி உனக்கு ஏன் ஏற்பட்டது?” என்று கேட்டான்.(9)

அப்போது நிருகன் கிருஷ்ணனிடம் மறுமொழியாக, “ஒருநாள், இல்லற நெருப்பை முறையாக வழிபட்டு வந்த ஒரு பிராமணருக்குச் சொந்தமான பசுவானது, உரிமையாளர் இல்லாதபோது அவரது வசிப்பிடத்தில் இருந்து தப்பி என் மந்தையில் நுழைந்துவிட்டது.(10) என்னுடைய மேய்ப்பர்கள் அந்தப் பசுவைத் தங்கள் ஆயிரம் பசுக்களையில் அதையும் சேர்த்துக் கொண்டனர். சமயத்தில், சொர்க்கத்தில் மகிழ்ச்சியை அடைய விரும்பி நான் அந்தப் பசுவை வேறொரு பிராமணருக்குக் கொடையளித்தேன்.(11) உண்னையான உரிமையாளர் வீடு திரும்பியதும், தொலைந்து போன தன் பசுவைத் தேடி இறுதியாக மற்றொருவருடைய வீட்டில் அதைக் கண்டடைந்தார். அவளைக் கண்டதும் அதன் உரிமையாளர், “இஃது என்னுடைய பசு” என்றார்.(12) மற்றொருவர் தன் கூற்றை ஆதரிக்கவும், அவ்விருவருக்குள்ளும் சச்சரவு எழுந்து இறுதியாகக் கோபத்துடன் என்னிடம் வந்தனர்.

அவர்களில் ஒருவர் என்னிடம், “இந்தப் பசுவை எனக்குக் கொடையளித்தவன் நீயே” என்றார். மற்றொருவர், “இந்தப் பசு என்னுடையவள், நீ அவளை என்னிடம் இருந்து களவு செய்துவிட்டாய்” என்றார்.(13)

நான் யாரிடம் பசுவைக் கொடுத்திருந்தேனோ அவரிடம் நூற்றுக்கணக்கான வேறு பசுக்களுக்கு மாற்றாக அந்தப் பசுவை வேண்டிக் கேட்டேன். ஆவல் நிறைந்த என் வேண்டுதலுக்கு இணங்காமல் அவர் என்னிடம்,(14) “நான் பெற்ற பசுவானவள் இடத்திற்கும் காலத்திற்கும் நன்கு பொருந்தியிருக்கிறாள். அவள் அமைதியானவளாகவும், எங்களை மிகவும் விரும்புபவளாகவும் இருப்பதையும் தவிர்த்து அபரிமிதமான பாலையும் தருகிறாள். அவள் தரும் பால் மிக இனிமையானதாக இருக்கிறது. அவள் என் வீட்டில் அனைத்துப் புகழுக்கும் தகுந்தவளாகக் கருதப்படுகிறாள்.(15) அதையும் தவிர, மெலிந்து பலவீனமாக இருக்கும் என் பிள்ளைக்கு அவளே உணவூட்டுக்கிறாள். என்னால் அவளைக் கொடுக்கவே இயலாது” என்றார். இச்சொற்களைச் சொல்லிவிட்டு அந்தப் பிராமணர் சென்று விட்டார்.(16)

பிறகு நான் அந்த மற்றொரு பிராமணரிடம் அவருக்கு ஒரு மாற்றைக் கொடுக்கும் வகையில், “இந்த ஒரு பசுவுக்குப் பதிலாக நூறாயிரம் பசுக்களைப் பெற்றுக் கொள்வீராக” என்றேன்.(17)

எனினும், அந்தப் பிராமணர் என்னிடம் மறுமொழியாக, “அரச வகையைச் சார்ந்தோரிடம் இருந்து நான் கொடைகளை ஏற்பதில்லை. ஆதரவில்லாமலே என்னால் செயல்பட இயலும். காலத்தைக் கடத்தாமல் என் பசுவையே எனக்குக் கொடுப்பாயாக” என்றார். ஓ! மதுசூதனா, இவ்வாறே அந்தப் பிராமணர் என்னிடம் பேசினார்.(18)

நான் அவருக்குப் பொன், வெள்ளி, குதிரைகள் மற்றும் தேர்களையும் கொடையாகக் கொடுக்க முன்வந்தேன். அந்த முதன்மையான பிராமணரோ அக்கொடைகள் எதையும் ஏற்க மறுத்துச் சென்றுவிட்டார்.(19) அதே வேளையில், தடுக்கப்படமுடியாத காலத்தின் ஆதிக்கத்தால் உந்தப்பட்டு நான் இவ்வுலகில் இருந்து சென்றேன். பித்ரு லோகத்திற்குச் சென்ற நான் அங்கிருந்து இறந்தோரின் மன்னனிடம் {யமனிடம்} அழைத்துச் செல்லப்பட்டேன்.(20)

என்னை முறையாக வழிபட்ட யமன், என்னிடம், “ஓ! மன்னா, உன் அறச்செயல்களின் கதியை உறுதிசெய்ய முடியவில்லை.(21) எனினும், ஒரு சிறிய பாவம் நீ அறியாமலேயே உன்னால் இழைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பாவத்திற்கான தண்டனையை இப்போதோ, பிறகோ நீ விரும்பியவாறு அனுபவித்துக் கொள்வாயாக.(22) நீ (அரியணை ஏறியதும் சொந்த அனுபவம் கொண்ட அனைத்து மனிதர்களையும்) காப்பாய் என உறுதிமொழியேற்றாய். நீ கூறிய அந்த உறுதிமொழியானது உன்னால் கண்டிப்புடன் காக்கப்படவில்லை. நீ ஒரு பிராமணனுக்கு உரியதை அபகரித்தாய். இந்த இருவகைப் பாவத்தை நீ இழைத்திருக்கிறாய்” என்றான்.(23)

நான், “முதலில் தண்டனை எனும் துன்பத்தை நான் அனுபவிக்கப் போகிறேன், அது முடிந்ததும், ஓ! தலைவா, எனக்காகக் காத்திருக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பேன்” என்றேன். நான் இச்சொற்களை இறந்தோரின் மன்னனிடம் {யமனிடம்} சொன்னதும் பூமியில் விழுந்தேன்.(24)

அவ்வாறு விழுந்தாலும், யமனால் உரக்கச் சொல்லப்பட்ட சொற்களை என் காதுகள் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தச் சொற்கள், “வசுதேவனின் மகனான ஜனார்த்தனன் உன்னைக் காப்பான்.(25) ஓராயிரம் வருடங்கள் நிறைவடைந்ததும், உன் பாவச்செயலுக்கான தண்டனை தீரும்போது, உன் அறச்செயல்களின் மூலம் நீ ஈட்டிய வற்றாத இன்ப உலகங்கள் பலவற்றை நீ அடைவாய்” என்பதாகும்.(26)

தலைகீழே விழுந்த நான், இடைநிலை வகையைச் சார்ந்த ஓர் உயிரினமாக வடிவம் மாறி இந்தக் கிணற்றுக்குள் கிடப்பதைக் கண்டேன். எனினும் என் நினைவு என்னைவிட்ட அகலவில்லை.(27) இன்று உன் மூலமாக நான் மீட்கப்பட்டேன். உன் தவங்களின் பலத்தைத் தவிரச் சாட்சியங்கூறக் கூடியது வேறென்ன? ஓ! கிருஷ்ணா, உன் அனுமதியுடன் நான் விடைபெற வேண்டும். நான் சொர்க்கத்திற்கு உயர விரும்புகிறேன்” என்றான் {நிருகன்}.(28)

கிருஷ்ணனால் அனுமதிக்கப்பட்ட மன்னன் நிருகன், அவனைத் தலைவணங்கியபிறகு ஒரு தெய்வீகத் தேரில் ஏறிச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(29) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, நிருகன் இவ்வாறு சொர்க்கத்திற்குச் சென்ற பிறகு, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, வாசுதேவன் இந்த ஸ்லோகத்தைச் சொன்னான்.(30) {அவன்}, “ஒரு பிராமணனுக்கு உரிய எதையும் எவனும் அறிந்தே அபகரிக்கக்கூடாது. ஒரு பிராமணனின் உடைமை அபகரிக்கப்பட்டால் அஃது அந்தப் பிராமணனின் பசு மன்னன் நிருகனை அழித்தது போலவே அவ்வாறு அபகரித்தவனை அழித்துவிடும்” {என்றான் கிருஷ்ணன்}.(31)

ஓ! பார்த்தா, நல்லோரைச் சந்திப்பது ஒருபோதும் கனியற்றுப் போகாது என்பதை நான் மீண்டும் உனக்குச் சொல்கிறேன். ஒரு நல்லோனைச் சந்தித்ததால் நரகத்தில் இருந்து மன்னன் நிருகன் மீட்கப்பட்டதைப் பார்.(32) ஒரு கொடையானது பலனை விளைவிப்பதைப் போலவே, ஒரு கொள்ளைச் செயலும் பாவத்திற்கே வழிவகுக்கிறது. எனவே, ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் பசுக்களுக்கு எத்தீங்கையும் இழைப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(33)

நாசிகேதன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 71-யமன் பசுக்கொடை குறித்து நாசிகேதனுக்குச் சொன்ன சிறப்புகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாவமற்றவரே, பசுக்கொடை அளிப்பதன் மூலம் அடையப்படும் பலன்களை இன்னும் விரிவாக எனக்குச் சொல்வீராக. ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உமது சொற்களில் ஒருபோதும் நான் தணிவடைவதில்லை” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழைய வரலாற்றில் முனிவர் ஔத்தாலகிக்கும் நாசிகேதன் என்றழைக்கப்பட்டவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2)

ஒரு காலத்தில் பெரும் நுண்ணறிவுடன் கூடிய முனிவர் ஔத்தாலகி தன் மகனான நாசிகேதனை அணுகி, அவனிடம், “நீ எனக்குப் பணிவிடை செய்து தொண்டாற்றுவாயாக” என்றார்.(3) தாம் நோற்றுவந்த நோன்பின் நிறைவுக்குப் பிறகு அந்தப் பெரும் முனிவர் மீண்டும் தமது மகனிடம், “தூய்மைச் சடங்கைச் செய்வதில் ஈடுபட்ட நான், வேத கல்வியில் ஆழமாக ஈர்க்கப்பட்டதால்,(4) விறகுகள், தர்ப்பை புற்கள், மலர்கள், நீர்க்குடுவை மற்றும் நான் சேகரித்து வைத்திருந்த கீரைகள் ஆகியவற்றைக் கொண்டுவர மறந்துவிட்டேன். ஆற்றங்கரையில் இருந்து அந்தப் பொருட்களை நீ என்னிடம் கொண்டு வருவாயாக” என்றார்.(5)

குறிப்பிடப்பட்ட அந்த இடத்திற்குச் சென்ற அந்த மகன், அந்தப் பொருட்கள் அனைத்தும் ஓடையால் அடித்துச் செல்லப்பட்டிருப்பதைக் கண்டான். தன் தந்தையிடம் திரும்பி வந்த அவன், “அந்தப் பொருட்களை நான் காணவில்லை” என்றான்.(6)

பசி, தாகம் மற்றும் களைப்பு ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தவரும், உயர்ந்த தவத்தகுதியைக் கொண்டவருமான முனிவர் ஔத்தாலகி, திடீரெனக் கோபமடைந்து, “நீ இன்று யமனைச் சந்திப்பாய்” என்று தன் மகனை சபித்துவிட்டார்.(7)

இவ்வாறு தன் தந்தையின் இடி வாக்கால் தாக்கப்பட்ட மகன், கூப்பிய கரங்களுடன் “என்னிடம் நிறைவடைவீராக” என்றான். எனினும், அவன் விரைவில் பூமியில் விழுந்து உயிரை இழந்தான்.(8)

பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் நாசிகேதனைக் கண்ட அவனது தந்தையும் துயரத்தால் தன் உணர்வுகளை இழந்தார். அவரும், “ஐயோ, நான் என்ன செய்துவிட்டேன்” என்று வருந்தி பூமியில் விழுந்தார்.(9) துயரத்தால் நிறைந்திருந்த அவர் அழுது புலம்பியதிலேயே எஞ்சிய நாள் முழுவதும் கடந்து இரவும் வந்தது.(10)

ஓ! குரு குலத்தவனே, அப்போது தன் தந்தையின் கண்ணீரால் நனைந்திருந்த நாசிகேதன், தான் கிடந்த தர்ப்பைப் புல் விரிப்பில் உயிர் திரும்புவதற்கான அறிகுறிகளை வெளியிட்டான். தந்தையின் கண்ணீரில் அவன் உயிர் மீண்டது, மங்கலமாரியில் நனைந்த வித்துகள் முளைப்பதற்கு ஒப்பானதாக இருந்தது.(11) அப்போதே நினைவு திரும்பியிருந்த மகன் இன்னும் பலவீனமாகவே இருந்தான். நறுமணக் களிம்புகள் பூசப்பட்ட உடலுடன் கூடிய அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து அப்போதுதான் எழுந்தவனைப் போலத் தெரிந்தான். முனிவர் {ஔத்தாலகி} அவனிடம்,(12) “ஓ! மகனே, உன் செயல்களின் மூலம் நீ மங்கல உலகங்களை அடைந்தாயா? நீ என்னிடம் மீண்டு வந்தது நற்பேறே. உன்னுடல் மானுட உடலாகத் தெரியவில்லையே” என்று கேட்டார்.(13)

இவ்வாறு உயர் ஆன்மாவான தந்தை கேட்டதும், தன் கண்களாலேயே அனைத்தையும் கண்ட நாசிகேதன், முனிவர்களுக்கு மத்தியில் பின்வரும் பதிலை அளித்தான்.(14) {அவன்}, “உமது ஆணைக்குக் கீழ்ப்படிந்து இனிமையான பிரகாசத்துடன் கூடிய பரந்த யமலோகத்திற்குச் சென்றேன். அங்கே ஆயிரம் யோஜனைகள் பரந்திருப்பதும், அனைத்துப் பகுதியிலும் பொன்னொளி வீசுவதுமான ஓர் அரண்மனையைக் கண்டேன்.(15) யமன், தன்னை முகம் நோக்கி வரும் என்னைக் கண்டதும், தன் பணியாட்களிடம், “இவனுக்கு நல்ல இருக்கையைக் கொடுப்பீராக” என்றான். உண்மையில் இறந்தோரின் மன்னனான அவன் உமது நிமித்தமாகவே அர்க்கியம் மற்றும் பிற பொருட்களுடன் என்னை வழிபட்டான்.(16)

யமனால் இவ்வாறு வழிபடப்பட்டு, அவனது அமைச்சர்களுக்கு மத்தியில் அமர்ந்த நான், மென்மையாக அவனிடம், “ஓ! இறந்தோரின் நீதிபதியே {அறமன்னா}, நான் உன் வசிப்பிடத்திற்கு வந்திருக்கிறேன். என் செயல்களுக்குத் தகுந்த உலகங்களை எனக்கு ஒதுக்குவாயாக” என்றேன்.(17)

யமன் {நாசிகேதனிடம்}, “ஓ! இனியவனே, நீ இன்னும் இறக்கவில்லை. தவசக்தி கொண்ட உன் தந்தை “யமனைச் சந்திப்பாயாக” என்றார். உன் தந்தையின் சக்தி சுடர்மிக்க நெருப்பைப் போன்றதாகும். என்னால் அவரது வாக்கைப் பொய்யாக்க இயலாது.(18) நீ என்னைப் பார்த்துவிட்டாய். ஓ! குழந்தாய், இனி நீ செல்லலாம். உன் உடலை உண்டாக்கியவர் உனக்காக அழுது புலம்புகிறார். நீ என் அன்புக்குரிய விருந்தினனாவாய். உன் இதயத்தில் உள்ள விருப்பத்தைச் சொன்னால் நான் உனக்கு அருள்வேன். நீ வளர்க்கும் விருப்பம் எதையும் வேண்டுவாயாக” என்றான்.(19)

இறந்தோரின் மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட நான், அவனிடம், “எந்தப் பயணியும் திரும்பிச் செல்ல முடியாத உனது ஆட்சிப்பகுதிக்குள் நான் வந்துவிட்டேன். ஓ! இறந்தோரின் மன்னா, உண்மையில் நான் உன் கவனத்தை ஈர்க்கத்தகுந்தவனாக இருக்கிறேனெனில் அறச்செயல் செய்தோருக்கென ஒதுக்கப்படுபவையும், உயர்ந்த செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டவையுமான உலகங்களைப் பார்க்க விரும்புகிறேன்” என்றேன்.(20)

இவ்வாறு என்னால் கேட்டுக்கொள்ளப்பட்ட யமன், சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட பிரகாசமிக்க ஒரு வாகனத்தில் என்னை ஏறச் செய்தான். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அந்த வாகனத்தில் என்னைச் சுமந்து சென்று அறவோருக்கென ஒதுக்கப்பட்ட இன்பம் நிறைந்த உலகங்களை எனக்குக் காட்டினான்.(21) நான் அந்த உலகங்களில் உயர் ஆன்ம மனிதர்களுக்காக ஒதுக்கப்படும் பெரும் பிரகாசமிக்க மாளிகைகள் பலவற்றைக் கண்டேன். அந்த மாளிகைகள் பல்வேறு வடிவங்களிலும், அனைத்து வகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தன.(22) சந்திர வட்டிலைப் போலப் பிரகாசமாக இருந்த அவை கிண்கிணி மணி வரிசையால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் நூற்றுக்கணக்கானவை பல அடுக்குக் கொண்டவையாக இருந்தன. அவற்றுக்குள் இனிய தோட்டங்களும், காடுகளும், தெளிந்த நீர்த்தேக்கங்களும் இருந்தன.(23) வைடூரியம் மற்றும் சூரியப் பிரகாசத்தைக் கொண்டவையும், வெள்ளி மற்றும் பொன்னாலானவையுமான அவை தங்கள் நிறத்தில் காலைச் சூரியனுக்கு ஒப்பானவையாக இருந்தன.(24) அவற்றுக்குள் பல உணவு மலைகளும், அனுபவிக்கத்தக்க பொருட்களும், ஆட்கள் மற்றும் படுக்கைகளும் அபரிமிதமாக இருந்தன. அவற்றுக்குள் அனைத்து விருப்பங்கள் கனியும் நிலையையும் அருளவல்ல மரங்கள் பலவும் இருந்தன.(25)

அங்கே பல ஆறுகளும், சாலைகளும், பரந்த மண்டபங்களும், தடாகங்களும், பெரிய ஏரிகளும் இருந்தன. சடசடப்பொலி கொண்ட சக்கரங்களுடன் கூடியவையும், சிறந்த தேர்கள் பூட்டப்பட்டவையுமான ஆயிரக்கணக்கான தேர்கள் அங்கே காணப்படுகின்றன.(26) பாலோடும் ஆறுகள் பலவும், நெய்யாலான மலைகள் பலவும், தெளிந்த நீரைக் கொண்ட பெரிய நீர்த்தேக்கங்களும் அங்கே இருந்தன. உண்மையில் இதற்கு முன்பு என்னால் காணப்படாதவையும், இறந்தோரின் மன்னனால அங்கீகரிக்கப்பட்டவையுமான இன்பம் நிறைந்த உலகங்கள் பலவற்றை நான் கண்டேன்.(27) அப்பொருட்கள் அனைத்தையும் கண்ட நான், பழைமையானவனும், பலமிக்கவனுமான அந்த இறந்தோரின் நீதிபதியிடம் {யமனிடம்}, “பாலும், நெய்யும் நித்தியமாக ஓடும் இந்த ஆறுகள் யாருடைய பயன்பாட்டுக்கும் அனுபவத்திற்கும் விதிக்கப்பட்டிருக்கின்றன?” என்று கேட்டேன்.(28)

யமன் {நாசிகேதனிடம்}, “நோய் தடுக்கும் பால் மற்றும் நெய்யாலான இந்த ஓடைகள் மனிதர்களின உலகில் கொடையளிக்கும் அறவோரின் இன்பத்திற்காக இருக்கின்றன என்பதை அறிவாயாக. அனைத்து வகைக் கவலைகளில் இருந்தும் விடுபட்ட மாளிகைகள் நிறைந்த வேறு நித்திய உலகங்களும் இருக்கின்றன. அவை பசுக்கொடை அளிப்பதில் ஈடுபடும் மனிதர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன.(29) வெறுமனே பசுக்கொடை மட்டுமே புகழத்தக்கதன்று. பொருத்தமுடைமை, அல்லது பசுக்கொடை கொடுக்கப்படும் நபர், அந்தக் கொடைகளை அளிக்கும் காலம், கொடையாக அளிக்கப்படும் பசுவின் வகை, கொடையளிக்கும்போது நோற்கப்படும் சடங்குகள் ஆகியனவும் கருத்தில் கொள்ளத்தக்கனவாகும். பசுக்கொடையானது, (அவற்றைப் பெறும்) பிராமணர்கள் மற்றும் (கொடுக்கப்படும்) பசுக்கள் ஆகிய இரண்டின் குறிப்பிடத்தக்க தகுதிகளையும் உறுதிசெய்து கொண்டபிறகு கொடுக்கப்பட வேண்டும். எவனுடைய வசிப்பிடத்தில் நெருப்பு அல்லது சூரியனால் துன்பப்பட நேருமோ அவனுக்குப் பசுக்களைக் கொடுக்கக்கூடாது.(30)

வேதங்களை அறிந்தவனும், கடுந்தவங்களைச் செய்தவனும், வேள்விகளைச் செய்பவனுமான பிராமணனே பசுக்கொடை பெறுவதற்குத் தகுந்தவனாகக் கருதப்படுகிறான். துன்பம் நிறைந்த சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்டவை, அல்லது உணவூட்டவும் வளர்க்கவும் போதிய வழிமுறைகள் இல்லாத வறிய இல்லறவாசிகளால் கொடுக்கப்படுபவை ஆகிய பசுக்கள் இந்தக் காரணங்களுக்காகவே உயர்ந்த மதிப்புள்ளவையாகக் கருதப்படுகின்றன[1].(31) பசுக்கொடையளிக்க விரும்பும் ஒருவன், மூன்று இரவுகளுக்கு உணவு அனைத்தையும் தவிர்த்து, நீரை மட்டுமே பருகி வாழ்ந்து, வெறும் நிலத்தில் உறங்கி, அவற்றைப் பெறும் பிராமணர்களை (வேறு கொடைகளாலும்) நிறைவடையச் செய்த பிறகு கொடையளிக்க வேண்டும்.(32) கொடையளிக்கப்படும் பசுவுடன் அவற்றின் கன்றுகளும் துணையாகச் செல்ல வேண்டும். மேலும் அவை உரிய பருவகாலங்களில் நல்ல கன்றுகளை ஈனக்கூடியவையாக இருக்க வேண்டும். அவ்வாறு கொடையளிகப்படும்போது அவற்றோடு சேர்த்து பிற பொருட்களுக்கும் துணையாகக் கொடுக்கப்பட வேண்டும். கொடையளித்த பிறகு, அந்தக் கொடையாளி, பிறவகை உணவுகள் அனைத்தையும் தவிர்த்து, நோய் தடுக்கும் பாலை மட்டுமே மூன்று நாட்கள் உண்டு வாழ வேண்டும்.(33)குற்றமற்றதும், உரிய இடைவெளிகளில் நல்ல கன்றுகளை ஈனக்கூடியதும், உரிமையாளரின் வீட்டில் இருந்து தப்பி ஓடாததுமான ஒரு பசுவுடன் துணையாகக் கறப்பதற்குரிய வெண்கல பாத்திரத்தையும் கொடையாக அளிக்கும் ஒருவன் அந்த விலங்கின் உடலில் உள்ள மயிர்களின் எண்ணிக்கை அளவுள்ள காலம் வரை சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிப்பான். நன்கு பயிற்சியளிக்கப்பட்டதும், சுமைகளை இழுக்கவல்லதும், பலமுள்ளதும், வயதில் இளமையானதும், எந்தத் தொல்லையும் கொடுக்காததும், பெரிய வடிவில் உள்ளதும், சக்தியுடன் கூடியதுமான ஒரு காளையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் ஒருவன், பசுக்களைக் கொடையளிப்பவர்களுக்காக ஒதுக்கப்படுபவையும், அறவோரால் அங்கீகரிக்கப்படுபவையுமான உலகங்களை அனுபவிக்கிறான்.(34)

பசுக்களிடம் மென்மையாக நடந்து கொள்பவனாக அறியப்படுபவனும், பசுக்களையே புகலிடமாகக் கொள்பவனும், நன்றி மறவாதவனும், தனக்கென வாழ்வாதாரம் ஏதுமற்றவனுமான ஒருவனே பசுக்கொடை பெறத்தகுந்தவனாகக் கருதப்படுகிறான். ஒரு முதிர்ந்த மனிதன் நோய்வாய்ப்படும்போதோ, ஒரு பஞ்சம் ஏற்படும்போதோ, ஒரு பிராமணன் ஒரு வேள்வியைச் செய்ய எண்ணும்போதோ, ஓர் உழவன் உழவுக்காக உழ விரும்பும்போதோ, பிள்ளை பெறும் நோக்கத்திற்காக ஹோமத் திறன் மூலம் ஒருவன் மகனைப் பெறும்போதோ,(35) ஒருவனுடைய ஆசானின் பயன்பாட்டிற்காகவோ, ஒரு குழந்தையை வளர்ப்பதற்காகவோ ஒருவன் தன் அன்புக்குரிய பசுவைக் கொடையளிக்கலாம். (பசுக்கொடை அளிக்கும் காரியத்தில்) காலம் மற்றும் இடம் குறித்த வகையில் மெச்சத்தகுந்த கருத்துகள் இவையே. பெருமளவு பாலைத் தருபவையோ, (பணிவு மற்றும் வேறு பண்புகளுக்கென) நன்கறியப்பட்டவையோ, விலைக்கு வாங்கப்பட்டவையோ, கல்விக்கான வெகுமதியாக அடையப்பட்டவையோ, (செம்மறியாடு, வெள்ளாடு முதலிய) உயிரினங்களுக்கு மாற்றாகக் காணிக்கையாக அடையப்பட்டவையோ, கரங்களின் வலிமையால் வெல்லப்பட்டவையோ, (மாமனார் மற்றும் மனைவியின் உறவினர்களிடம் இருந்து) திருமண வரதட்சணையாகப் பெறப்பட்டவையோ அத்தகைய பசுக்களே கொடையளிக்கத் தகுந்தவை” என்றான் {யமன்}”.(36)

நாசிகேதன் {தந்தை ஔத்தாலகரிடம்} தொடர்ந்தான், “வைவஸ்வதனின் இச்சொற்களைக் கேட்ட நான் மீண்டும் அவனிடம், “பசுக்களைப் பெற முடியாத போது, எந்தப் பொருட்களைக் கொடுப்பதன் மூலம் கொடையாளிகள் பசுக்கொடை அளிக்கும் மனிதர்களுக்காக ஓதுக்கப்படும் உலகங்களை அடைய முடியும்” என்று கேட்டேன்.(37)

என்னால் கேட்கப்பட்டவனும், ஞானியுமான யமன், பசுக்கொடைகளை அளிப்பதன் மூலம் அடையப்படும் கதியை மேலும் விளக்கினான். அவன், “பசுக்கள் இல்லாத போது ஒரு மனிதன் பசுக்களுக்குப் பதிலாகக் கருதப்படுபவற்றைக் கொடையளிப்பதன் மூலம் பசுக்கொடை அளித்த பலனைப் பெறுகிறான்.(38) பசுக்கள் இல்லாத போது, நோன்பை நோற்று, நெய்யாலான ஒரு பசுவைக் கொடையளிக்கும் ஒருவன் தன் பயன்பாட்டுக்கு நெய் ஆறுகளை அடைவான். அவை அன்புக்குரிய தன் குழந்தையை அணுகும் அன்னையைப் போல அவனை அணுகும்.(39) நெய்யாலான பசுவும் இல்லாத போது, நோன்பை நோற்று எள்ளாலான பசுவைக் கொடையளிக்கும் ஒருவன், இவ்வுலகின் துன்பங்கள் அனைத்தையும் கடந்து, மறுமையில் நீ காணும் பாலாறுகளில் இருந்து எழும் பெரும் மகிழ்ச்சிகளை அனுபவிக்கிறான்.(40) எள்ளாலான பசுவும் இல்லாத போது, நீராலான பசுவைக் கொடையளிக்கும் ஒருவன், மகிழ்ச்சிமிக்க இந்த உலகங்களுக்கு வருவதில் வென்று, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருளவல்லதும், தெளிந்த நீரைக் கொண்டதும், குளுமையானதுமான இந்த ஆற்றையும் அனுபவிக்கிறான்” என்றான் {யமன்}.(41)

ஓ! மங்கா மகிமை கொண்டவரே, இறந்தோரின் மன்னன் {யமன்}, நான் அவனுடைய விருந்தினனாக இருக்கையில் இவையாவற்றையும் விளக்கிச் சொன்ன போது, அவன் காட்டிய அற்புதங்கள் அனைத்தையும் கண்டு பேரின்பத்தையே உணர்ந்தேன்.(42) இனி நான் உமக்கு நிச்சயம் ஏற்புடையதைச் சொல்லப் போகிறேன். நான் இப்போது அதிகச் செல்வம் தேவைப்படாத ஒரு பெரும் வேள்வியைப் பெற்றிருக்கிறேன். ஓ! தந்தையே, (பசுக்கொடையால் அமைந்த) அந்த வேள்வி என்னில் இருந்து உண்டாவதாகச் சொல்லப்படலாம். அதைப் பிறரும் அடைவார்கள். அது வேத விதிகளுக்கு இணக்கமற்றதல்ல.(43) இறந்தோரின் பெரும் மன்னனைக் காண இயன்றதால், நீர் என்னைச் சபித்தது எனக்குச் சாபமாக அமையாமல், உண்மையில் அருளாகவே அமைந்தது. அங்கே கொடைகளுக்குக் கிட்டும் வெகுமதிகளைக் கண்டேன். எனவே, ஓ! பேரான்மாவே, என் மனத்தில் ஐயமேதும் மறைந்திராமல் இனி கொடையெனும் கடமையைப் பயில்வேன்.(44)

ஓ! பெரும் முனிவரே, அறவோனான யமன், மகிழ்ச்சியால் நிறைந்தவனாக என்னிடம் மீண்டும் மீண்டும், “அடிக்கடி கொடையளிக்கும் ஒருவன் மனத்தூய்மையை அடைவதில் வென்ற பிறகு குறிப்பாகப் பசுக்கொடையை அளிக்கிறான்.(45) (கொடைகள் குறித்த) இவ்வுரை புனிதம் நிறைந்ததாகும். கொடைகள் குறித்த கடமைகளை ஒருபோதும் அவமதிக்காதே. மேலும், கொடைகளானவை தகுந்த மனிதர்களுக்கு, தகுந்த காலம் மற்றும் இடத்தில் வழங்கப்பட வேண்டும். எனவே, எப்போதும் நீ பசுக்கொடை அளிப்பாயாக. இக்காரியத்தில் ஒருபோதும் ஐயமேதும் கொள்ளாதே.(46) பழங்காலத்தில், கொடைகளின் பாதைகளில் அர்ப்பணிப்புள்ள உயர் ஆன்ம மனிதர்கள் பலர் பசுக்கொடைகளை அளித்துவந்தனர். கடுந்தவங்களைச் செய்வதற்கு அஞ்சிய அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கபடி கொடைகளை அளித்து வந்தனர்.(47) காலத்தில் அவர்கள் தங்கள் செருக்கு, பகட்டு ஆகிய மிகையுணர்வுகள் அனைத்தையும் கைவிட்டுத் தங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றனர். பித்ருக்களைக் கௌரவிக்கும் சிராத்தங்கள் மற்றும் அறச்செயல்கள் அனைத்திலும் ஈடுபடும் அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்க பசுக்கொடைகளை அளித்து, அச்செயல்களுக்கு வெகுமதியாகச் சொர்க்கத்தை அடைந்து, அத்தகைய அறத்திற்காகப் பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.(48)

ஒருவன், காம்யாஷ்டமி என்ற பெயரில் அழைக்கப்படும் சந்திரனின் எட்டாம் நாளில் (ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி) கொடைபெறுவோரின் தகுதியை உறுதி செய்து கொண்டு முறையாக ஈட்டப்பட்ட பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும். கொடையளித்த பிறகு, ஒருவன் பத்து நாட்களுக்குச் சேர்ந்தாற்போல் (வேறு வகை உணவுகள் அனைத்தையும் தவிர்த்து) பசுவின் பால், அவற்றின் சாணம் மற்றும் கோமியம் ஆகியவற்றை மட்டுமே உண்டு வாழ வேண்டும்.(49) ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன் தெய்வீகப் பசுவைக் கொடையளித்ததற்கு இணையானதாகும். இரு பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வேதங்களின் தேர்ச்சி என்ற வெகுமதியை அடைகிறான். பசுக்கள் பூட்டப்பட்ட தேர்கள் மற்றும் வாகனங்களைக் கொடையாளிப்பதன் மூலம் ஒருவன் புனித நீர்நிலைகளில் நீராடிய பலனை அடைகிறான். கபிலை இனப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(50) உண்மையில், முறையான வழியில் அடையப்பட்டதும், கபிலை வகையைச் சார்ந்ததுமான ஒரே ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் தான் இழைத்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். பசுத் தரும் பாலைவிட (சுவையில்) உயர்ந்தது வேறேதும் அல்ல. பசுக்கொடையே உண்மையில் மிக மேன்மையான கொடையாகக் கருதப்படுகிறது.(51) பசுவானது பாலைத் தருவதன் மூலம் உலகங்கள் அனைத்தையும் துன்பத்தில் இருந்து மீட்கிறது. மேலும், பசுவே உயிரினங்கள் உண்ணும் உணவை உண்டாக்குகிறது. பசுச் செய்யும் தொண்டின் அளவை அறிந்த ஒருவன் தன் இதயத்தில் அதன் மீது அன்பை வளர்க்கவில்லையெனில் அவன் நிச்சயம் நரகில் மூழ்கக் கூடிய பாவியாவான்[2].(52)ஒருவன் ஆயிரம், நூறு, பத்து, அல்லது ஐந்து பசுக்களைக் கொடையளிப்பவனும், உரிய இடைவெளிகளில் நல்ல கன்றுகளை ஈனும் ஒரே ஒரு பசுவை அறம் சார்ந்த ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவனுமான ஒருவன், அந்தப் பசுவை அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்யும் புனித நீர் கொண்ட ஆற்றின் வடிவில் நிச்சயம் சொர்க்கத்தில் காண்பான்.(53) பசு அளிக்கும் செழிப்பு மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தவரையில், பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் பசுக்கள் வழங்கும் பாதுகாப்புக் காரியத்தில் பசுக்கள் பூமியில் விழும் சூரியக் கதிர்களுக்கு இணையானவையாக இருக்கின்றன. பசுவைக் குறிக்கும் சொல், சூரியக்கதிர்களையும் குறிப்பதாக இருக்கிறது. பசுக்கொடையளிப்பவன், பூமியின் பெரும்பகுதியில் பரந்திருக்கும் ஒரு பெரிய குலத்தை உண்டாக்குவான். எனவே, பசுக்கொடையளிக்கும் ஒருவன் இரண்டாம் சூரியனைப் போலப் பிரகாசத்துடன் ஒளிர்வான்.(54) பசுக்கொடை அளிக்கும் காரியத்தில் ஒரு சீடன் தன் ஆசானைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அத்தகைய சீடன் ஒவ்வொருமுறையும் சொர்க்கத்திற்குச் செல்வதில் நிச்சயம் வெல்கிறான். (அறச் செயல்களைச் செய்யுங்காரியத்தில்) ஆசானைத் தேர்ந்தெடுப்பது, விதிகளுக்கு இணக்கமான மனிதர்களால் உயர்ந்த கடமையாகக் கருதப்படுகிறது. உண்மையில், இதுவே தொடக்க விதியாகும். (பசுக்கொடையைப் பொறுத்தவரையில்) அனைத்து விதிகளும் அதையே சார்ந்திருக்கின்றன.(55) ஆய்வுக்குப் பிறகு, பிராமணர்களுக்கு மத்தியில் தகுந்த மனிதனைத் தேர்ந்தெடுக்கும் ஒருவன், முறையான வழிமுறைகளில் அடையப்பட்ட ஒரு பசுவை அவனுக்குக் கொடையளித்து, அந்தக் கொடையை அவனை ஏற்கச் செய்ய வேண்டும். தேவர்கள், மனிதர்கள் மற்றும் நாமும், பிறருக்கு நல்லதை விரும்பும் காரியத்தில், “உன் அறத்தின் விளைவாகக் கொடைகளுக்குரிய பலன்கள் உனதாகாட்டும்” என்று சொல்கிறோம்” என்றான் {யமன்}.(56)

ஓ! மறுபிறப்பாள முனிவரே, இறந்தோரின் நீதபதி இவ்வாறே என்னிடம் பேசினான். பிறகு நான் அறவோனான அந்த யமனுக்குத் தலைவணங்கினேன். அவனது அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவனது ஆட்சிப்பகுதிகளை விட்டகன்று உமது பாதங்களின் அடியில் வந்து சேர்ந்தேன்” என்றான் {நாசிகேதன்}[3].(57)

இந்திரன் கேள்விகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 72-பசுக்கொடை தொடர்பாகப் பிரம்மனிடம் இந்திரன் கேட்ட கேள்விகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, முனிவர் நாசிகேதர் பசுக்கொடை குறித்துப் பேசியதை நீர் எனக்குச் சொன்னீர். ஓ! பலமிக்கவரே, அந்தச் செயலின் பலனையும், முன்சிறப்புகளையும் குறித்தும் சொன்னீர்.(1) ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கப் பாட்டா, ஒரே ஒரே பிழையின் விளைவாக உயர் ஆன்ம மன்னன் நிருகனுக்கு நேர்ந்த துன்பத்தின் அதீத விளவையும் எனக்குச் சொன்னீர்.(2) அவன் (ஓணானின் வடிவில்) நீண்ட காலம் துவாராவதியில் வசிக்க நேர்ந்ததையும், அவனது பரிதாபகரமான நிலையில் இருந்து கிருஷ்ணனால் எவ்வாறு மீட்கப்பட்டான் என்பதையும் சொன்னீர்.(3) எனினும், இதில் எனக்கு ஓர் ஐயம் இருக்கிறது. அது பசுக்கொடை குறித்ததாகும். நான் பசுக்கொடை அளித்தவர்கள் வசிப்பதற்காக ஒதுக்கப்படும் உலகங்களைக் குறித்து விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தொடக்ககாலத் தாமரையில் உதித்தவனுக்கும் {பிரம்மனுக்கும்}, நூறு வேள்விகளைச் செய்தவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(5)

சக்ரன், “ஓ! பாட்டா {பிரம்மாவே}, கோலோகத்தில் வசிப்போர், தங்கள் பிரகாசத்தால் சொர்க்கலோகவாசிகளின் செழிப்பையும் விஞ்சியவர்களாக, (அவர்களைத் தாழ்ந்த நிலையடைந்தவர்களாக்கி) அவர்களைக் கடந்து நிற்பதாகக் காண்கிறேன். இஃது என் மனத்தில் ஓர் ஐயத்தை எழச்செய்கிறது.(6) ஓ! புனிதமானவரே, கோலோகங்கள் என்னவகைச் சார்ந்தவை? ஓ! பாவமற்றவரே, அவற்றைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. உண்மையில், பசுக்கொடை அளிப்போர் வசிக்கும் உலகங்களின் இயல்பு என்ன? அதை அறிய விரும்புகிறேன்.(7) அந்த உலகங்கள் என்ன வகைச் சார்ந்தவை? அவை என்ன பலன்களைக் கொடுக்கின்றன? அங்கே வசிப்பவர்கள் என்ன உயர்ந்த பொருளை அடைவதில் வெல்கிறார்கள்? அதன் குணங்கள் என்ன? மேலும் மனிதர்கள் அனைத்து வகைத் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு அந்த உலகங்களை அடைவதில் எவ்வாறு வெல்கிறார்கள்?(8)

பசுக்கொடையளிப்பவன் தன் கொடையின் பலன்களை எவ்வளவு காலம் அனுபவிக்கிறான்? மனிதர்கள் எவ்வாறு பல பசுக்களைக் கொடையளிக்கலாம், மேலும் எவ்வாறு அவர்கள் கொடையளிக்கலாம்?(9) பல பசுக்களைக் கொடையளிப்பதால் என்ன பலன் கிடைக்கிறது? சிலவற்றை மட்டுமே கொடையளிப்பதால் என்ன பலன் கிடைக்கிறது? உண்மையில் எந்தப் பசுவையும் கொடையளிக்காமல் மனிதர்கள் எவ்வாறு பசுக்கொடையாளிகள் ஆகலாம்? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக.(10) ஓ! பலமிக்கத் தலைவரே, பல பசுக்களைக் கொடையளித்தவனும், சில பசுக்களை மட்டுமே கொடையளித்தவனுக்கு இணையானவனாக ஆவது எவ்வாறு? சில பசுக்களை மட்டுமே கொடையளிப்பவன், பல பசுக்களைக் கொடையளித்தவனுக்கு இணையாவது எவ்வாறு?(11) பசுக்கொடையின் சிறப்புக்காக என்ன வகைத் தக்ஷிணை புகழ்பெற்றதாக இருக்கிறது? ஓ! புனிதமானவரே, வாய்மைக்கு ஏற்புடையவகையில் இவை யாவற்றையும் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான் {இந்திரன்}.(12)

பிரம்மனின் பதில்! – அநுசாஸனபர்வம் பகுதி – 73-பசுக்கொடை தொடர்பாக இந்திரன் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரம்மன்…

பெரும்பாட்டன் {பிரம்மன், இந்திரனிடம்}, “ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரா}, பசுக்கொடை தொடங்கி, அவை குறித்து நீ கேட்ட கேள்விகள் மூவுலகிலும் வேறு யாராலும் சொல்ல முடியாதவையாக இருக்கின்றன.(1) ஓ! சக்ரா, நீ கூடக் காண முடியாத பலவகை உலகங்கள் இருக்கின்றன. ஓ! இந்திரா, அவ்வுலகங்கள் என்னாலும், கணவனுடன் பாசமாக உள்ள கற்புடைய பெண்களாலும் காணப்படுகின்றன.(2) பக்தி மற்றும் அறச்செயல்களின் மூலம் சிறந்த நோன்புகளைக் கொண்ட முனிவர்களும், அற ஆன்மாக்களான பிராமணர்களும் தங்கள் உடலுடன் அந்த உலகங்களுக்குச் செல்கிறார்கள்.(3) சிறந்த நோன்புகளை நோற்கும் மனிதர்கள், பிரகாசமான கனவுப்படைப்புகளுக்கு ஒப்பான அந்த உலகங்களைத் தங்கள் தூய்மையான மனங்களால் கண்டு, உடல் குறித்த தங்கள் நினைவை இழந்து (தற்காலிக) முக்தி நிலையை அடைவதில் வெல்கிறார்கள்[1].(4)ஓ! ஆயிரம் கண்களைக் கொண்டவனே {இந்திரா}, அந்த உலகங்களுக்குரிய பண்புகளை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. அங்க காலத்தின் நடைமுறை இருப்பதில்லை. அங்கே முதுமையோ, அண்டத்தில் எங்குமிருக்கும் நெருப்போ இருப்பதில்லை. அங்கே சிறு தீமையோ, நோயோ எந்த வகைப் பலவீனமோ கிடையாது.(5) ஓ! வாசவா, அங்கே வாழும் பசுக்கள், தங்கள் இதயங்களில் வளர்க்கும் ஆசைகள் அனைத்தும் கனியும் நிலையை அடைகின்றன.(6) விரும்பிய எங்கும் செல்ல இயன்று, உண்மையில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிமையாகச் சென்று தங்கள் மனங்களில் எழும் விருப்பங்கள் அனைத்தும் கனியை நிலையை அவை அடைகின்றன. தடாகங்கள், குளங்கள், ஆறுகள் மற்றும் பல்வேறு வகைக் காடுகள், மாளிகைள், குன்றுகள் மற்றும் உயிரினங்களுக்கு உரிய இனிமை நிறைந்த பொருட்கள் அனைத்தும் அங்கே காணப்படுகின்றன. நான் சொல்லும் இவை அனைத்திலும் மேன்மையாக வேறு எந்த இன்ப உலகமும் இல்லை.(7,8)

ஓ! சக்ரா, அனைத்து உயிரினங்களிடமும் மன்னிக்கும் குணத்துடன் கூடியவர்களும், அனைத்தையும் தாங்கிக் கொள்ள வல்லவர்களும், அனைத்துப் பொருட்களிடமும் அன்புபாராட்டுபவர்களும், ஆசானிடம் கடமையுணர்வுடன் கீழ்ப்படிந்து நடந்து கொள்பவர்களும், செருக்கு மற்றும் பகட்டில் இருந்து விடுபட்டவர்களுமான முதன்மையான மனிதர்கள் உயர்ந்த இன்பநிலையைக் கொண்ட அவ்வுலகங்களுக்குச் செல்கிறார்கள்.(9) அனைத்து வகை இறைச்சியையும் தவிர்ப்பவனும், தூய்மையான இதயத்தைக் கொண்டவனும், அறமொழுகுபவனும், பெற்றோரை மதிப்புடன் வழிபடுபவனும், பேச்சு மற்றும் ஒழுக்கத்தில் வாய்மையைக் கடைப்பிடிப்பவனும், பிராமணர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனும், குற்றமற்ற ஒழுக்கம் கொண்டவனும்,(10) பசுக்களிடமும், பிராமணர்களிடமும் ஒருபோதும் கோபம் கொள்ளாதவனும், அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புள்ளவனும், ஆசான்களிடம் மதிப்புடன் தொண்டாற்றுபவனும், மொத்த வாழ்வையும் வாய்மைக்கும், கொடைக்கும் அர்ப்பணித்தவனும், தனக்கு எதிரான வரம்புமீறல்கள் அனைத்தையும் எப்போதும் மன்னிப்பவனும், மென்மையானவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், தேவர்களிடம் மதிப்பு நிறைந்தவனும், விருந்தினர்கள் அனைவரிடமும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்பவனும், கருணை நிறைந்தவனுமான ஒருவன், மாறும் இயல்பற்றதும், நித்தியமானதுமான கோலோகத்தை அடைவதில் வெல்வான்.(12)

பிறன்மனையுறவில் ஈடுபடுபவன் அத்தகைய உலகத்தைக் காண மாட்டான்; ஆசானைக் கொன்றவனும், பொய்மை பேசுபவனும், பகட்டான வெற்றுப் பேச்சுகளில் ஈடுபடுபவனும், பிறருடன் எப்போதும் சச்சரவு செய்பவனும், பிராமணர்களிடம் எப்போதும் பகைமை பாராட்டுபவனும் ஒருபோதும் அத்தகைய உலகத்தைக் காண மாட்டார்கள். உண்மையில், அத்தகைய குற்றங்களால் களங்கப்பட்டிருக்கும் தீய பாவியால் அந்த இன்பலோகங்களைக் காணவும்முடியாது;(13) நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன், கபடம் நிறைந்தவன், நன்றி மறந்தவன், வஞ்சனை செய்பவன், ஒழுக்கக்கேடன், அறத்தை அலட்சியம் செய்பவன், பிராமணர்களைக் கொன்றவன் ஆகியோராலும் அவ்வுலகங்களைக் காணவும் முடியாது. அத்தகைய மனிதர்களால், அறச் செயல்களைச் செய்வோரின் வசிப்பிடமாக இருக்கும் கோலோகத்தைக் கற்பனையிலும் காண முடியாது.(14) ஓ! தேவர்களின் தலைவா, கோலோகத்தின் நுட்பமான விளக்கம் உட்பட அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! நூறு வேள்விகளைக் செய்தவனே, இனி பசுக்கொடை அளிப்போர் அடையும் பலன்களைக் குறித்துக் கேட்பாயாக.(15)

நியாயமாக அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டு அவற்றை விலைக்கு வாங்கிப் பசுக்கொடையளிப்பவன், அத்தகைய செயலின் கனியாக வற்றாத இன்பம் நிறைந்த உலகங்கள் பலவற்றை அடைகிறான்.(16) ஓ! சக்ரா, பகடையில் {சூதில்} வென்ற செல்வத்தைக் கொண்டு பசுக்கொடை அளிப்பவன் பத்தாயிரம் தேவ வருடங்களுக்கு இன்ப நிலையை அனுபவிக்கிறான்.(17) மூதாதையர் செல்வத்தில் தன் பங்காக ஒரு பசுவை அடையும் ஒருவன், அதை நியாயமாக அடைந்ததாகவே சொல்லப்படுகிறது. அத்தகைய பசுவையும் கொடையளிக்கலாம். அவ்வாறு அடைந்த பசுக்களைக் கொடையளிப்பவர்கள், வற்றாத நித்திய இன்ப உலகங்களை அடைகின்றனர்.(18) ஓ! சச்சியின் தலைவா, ஒரு பசுவைக் கொடையாக அடைந்தவன், தூய இதயத்துடன் அவளை {மீண்டும் வேறொருவனுக்கு} கொடையளித்தால் அவன் இன்பம் நிறைந்த நித்திய உலகங்கள் நிச்சயமாக அடைகிறான்.(19) பிறந்ததிலிருந்து (இறக்கும் காலம் வரையில்) புலனடக்கத்துடன் வாய்மையையே பேசுபவனும், ஆசான் மற்றும் பிராமணர்கள் செய்யும் அனைத்தையும் தாங்கிக் கொள்பவனும், பொறுமையைக் கடைப்பிடிப்பவனுமான ஒருவன் பசுவிற்கு இணையான கதியை அடைவதில் வெல்கிறான் {கோக்களுக்கும் அவற்றின் மீது தயையோடு இருப்பவனுக்கும் கதியொன்றே}.(20)

ஓ! சச்சியின் தலைவா, பிராமணர்களிடம் ஒருபோதும் முறையில்லாமல் {சொல்லத்தகாத சொல்லைப்} பேசக்கூடாது. மேலும் மனத்தாலும் ஒருவன் ஒரு பசுவக்கு எத்தீங்கையும் செய்யக் கூடாது. ஒருவன் பசுவின் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, பசுவிடம் கருணை காட்ட வேண்டும்[2].(21) ஓ! சக்ரா, வாய்மை எனும் கடமையில் அர்ப்பணிப்புடன் இருப்பவனுக்குக் கிட்டும் பலன்கள் என்ன என்பதைக் கேட்பாயாக. ஒருவன் ஒரு பசுவைக் கொடையளித்தால், அந்த ஒரு பசு ஆயிரம் பசுக்களுக்கு இணையானதாகிறது.(22) அத்தகைய தகுதிகளைக் கொண்ட {வாய்மையுடன் கூடிய} ஒரு க்ஷத்திரியன் ஒரே ஒரு பசுவைக் கொடையளித்தால் அவன் ஒரு பிராமணனுக்கு இணையான பலனைப் பெறுகிறான். ஓ! சக்ரா, ஒரு க்ஷத்திரியன் கொடுக்கும் அந்த ஒரு பசுவானது, அதே சூழ்நிலையில் ஒரு பிராமணன் கொடுக்கும் ஒற்றைப் பசுத் தரும் பலனைத் தருகிறது. இது சாத்திரங்களில் நிச்சயமான தீர்மானமாக இருக்கிறது.(23) அதேபோன்ற சிறப்புகளைக் கொண்ட ஒரு வைசியன் ஒரே ஒரு பசுவைக் கொடையளித்தால், அந்தப் பசு ஐநூறு பசுக்களுக்கு இணையானதாகும் (ஐநூறு பசுக்களைக் கொடையளித்ததற்கு இணையான பலனைத் தரும்).(24)தவங்கள் மற்றும் வாய்மைக்கு அர்ப்பணிப்புடனும், ஆசான்களிடம் கடமையுணர்வுடன் தொண்டாற்றுவதன் மூலம் (சாத்திரங்களிலும், அனைத்து செயல்களிலும்) திறனுடனும், மன்னிக்கும் மனநிலையுடனும், தேவர்களை வழிபடுவதில் ஈடுபட்டும், அமைதியான ஆன்மாவுடனும், (உடல் மற்றும் மனத்தில்) தூய்மையுடனும், அறிவொளியுடனும், அனைத்துக் கடமைகளையும் நோற்றும், அனைத்து வகைத் தற்பெருமைகளில் இருந்தும் விடுபட்டும் இருக்கும் ஒரு மனிதன், ஒரு பிராமணனுக்கு ஒரு பசுவைக் கொடையளித்தால், உரிய சடங்குகளுடன் கொடையளித்த அந்தச் செயலின் மூலம் அவன் அபரிமிதமாகப் பாலைத் தரும் ஒரு பசு அடையும் பெரும் பலனை அடைகிறான். எனவே, ஒருவன் வாய்மையை நோற்று, தன் ஆசானிடம் பணிவுடன் தொண்டாற்றி, ஒற்றை அர்ப்பணிப்புடன் எப்போதும் பசுக்கொடையை அளிக்க வேண்டும்.(25,26) ஓ! சக்ரா, வேதங்களை முறையாகக் கற்று, பசுக்களிடம் மதிப்புள்ளவனாக, பசுக்களைப் பார்ப்பதாலேயே எப்போதும் மகிழ்ச்சியடைபவனாக, பிறவி முதல் பசுக்களிடம் எப்போதும் தலைவணங்குபவனாக உள்ள ஒருவன் அடையும் பலன்களைக் கேட்பாயாக.(27) ராஜசூய வேள்வி செய்வதனால் ஒருவன் அடையும் பலன், பொற்குவியல்களைக் கொடையளிப்பதால் ஒருவன் அடையும் பலன் ஆகிய உயர்ந்த பலன்களைப் பசுக்களிடம் மதிப்பு காட்டும் ஒருவன் அடைகிறான். அறம்சார்ந்த முனிவர்களும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட உயர் ஆன்ம மனிதர்களும் இவ்வாறே சொல்கின்றனர்.(28)

வாய்மையில் அர்ப்பணிப்புடனும், அமைதியான ஆன்மாவுடனும், பேராசையில் இருந்து விடுபட்ட நிலையுடனும், பேச்சில் எப்போதும் வாய்மையுடனும், பசுக்களிடம் மதிப்பு காட்டுவதை உறுதியான நோற்பாக நோற்று வருபவனும், தான் உணவு உட்கொள்வதற்கு முன் சீரான வகையில் பசுக்களுக்கு ஏதாவது உணவைக் கொடுத்து வருபவனுமான ஒரு மனிதன் அத்தகைய செயலின் மூலம் ஆயிரம் பசுக்களைக் கொடையளித்த பலனை அடைகிறான்.(29) ஒரு நாளைக்கு ஒரேயொரு வேளை மட்டுமே உண்டு, மற்ற வேளை உணவுகளைப் பசுக்களுக்குக் கொடுப்பவனும், இத்தகைய கருணையையும், மதிப்பையும் அவற்றுக்குக் காட்டுபவனுமான மனிதன், பத்து வருடங்கள் அளவில்லாத இன்பத்தை அனுபவிப்பான்.(30) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, ஒரு நாளைக்கு ஒரேயொரு வேளை மட்டுமே உண்டு மற்ற வேளை உணவுக்கான பொருளைச் சேமித்து ஒரு பசுவை விலைக்கு வாங்கி, அதை (ஒரு பிராமணனுக்குக்) கொடையளிக்கும் மனிதன் அந்தக் கொடையின் மூலம் அந்த ஒரே ஒரு பசுவின் உடலில் உள்ள முடிகளின் எண்ணிக்கை அளவுக்குப் பசுக்களைக் கொடையளித்த பலனை ஈட்டுகிறான்.(31) பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் பிராமணர்கள் அடையும் பலன்களைக் குறித்த அறிவிப்புகள் இவையே. இனி க்ஷத்திரியர்கள் அடையும் பலன்களைக் கேட்பாயாக. இவ்வகையில் ஒரு பசுவை விலைக்கு வாங்கி அதை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் க்ஷத்திரியன் ஐந்து வருட காலத்திற்கான பேரின்ப நிலையை அடைகிறான். அவ்வாறே நடந்து கொள்ளும் ஒரு வைசியன் க்ஷத்திரியன் அடையும் பலனில் பாதிப் பலனை அடைகிறான். அவ்வாறே நடந்து கொள்ளும் ஒரு சூத்திரன், வைசியன் அடையும் பலனில் பாதிப் பலனை அடைகிறான்.(32)

தன்னை விற்று அதன் மூலம் பசுக்களை விலைக்கு வாங்கி அவற்றைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன், பூமியில் பசுக்கள் காணப்படும் காலம் வரை சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிப்பான்.(33) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, தன்னையே விற்று அதன் மூலம் அடையப்படும் பசுவில் உள்ள ஒவ்வொரு முடியிலும் வற்றாத இன்பத்தைத் தரும் ஓர் உலகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. போரிட்டுப் பசுக்களை அடைந்து அவற்றை (பிராமணர்களுக்குக்) கொடையளிக்கும் மனிதன்,(34) தன்னையே விற்று பசுவை அடைந்து அதைக் கொடையளிப்பதால் கிட்டும் பலனை அடைகிறான். பசு இல்லாத போது, புலனடக்கத்துடன் கூடிய எள்ளால் ஆன பசுவைக் கொடையளித்தால், அவன் அத்தகைய பசுவின் மூலம் அனைத்து வகைத் துன்பங்களில் இருந்து மீட்கப்படுகிறான். அத்தகைய மனிதன் பெரும் இன்பநிலையில் திளைத்திருக்கிறான்.(35) வெறும் பசுக்கொடை மட்டுமே பலனைக் கொடுத்துவிடுவதில்லை. கொடை பெறுபவனின் தகுதி, காலம், பசுவின் வகை, நோற்கப்படும் சடங்கு ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒருவன் பசுக்கொடை அளிப்பதற்கான காலத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். (கொடையளிக்கப்படும்) பசுக்கள் மற்றும் (அவற்றைப் பெற்றுக் கொள்ளப் போகும்) பிராமணர்களின் குறிப்பிடத்தக்க தகுதிகளும் உறுதிசெய்யப்பட வேண்டும். நெருப்பு, அல்லது சூரியனால் துன்பத்துக்கு ஆளாகக் கூடிய வசிப்பிடம் கொண்ட ஒருவனுக்குப் பசுக்களைக் கொடுக்கக்கூடாது.(36)

வேதமறிந்தவனும், தூய குலத்தில் வந்தவனும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவனும், வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளவனும், பாவம் இழைக்க அஞ்சுபவனும், பல்வேறு வகை ஞானங்களைக் கொண்டவனும், பசுக்களிடம் கருணை கொண்டவனும், மென்மையான நடத்தையைக் கொண்டவனும், அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குபவனும், தனக்கென உறுதியான வாழ்வாதார வழிமுறைகள் இல்லாதவனுமான ஒருவன், பசுக்கொடை பெறத் தகுந்த மனிதனாகக் கருதப்படுகிறான்.(37) வாழ்வாதார வழிமுறைகள் ஏதும் அற்றவனும், (எடுத்துக்காட்டாக, பஞ்சகாலத்தில்) உணவில்லாமையால் பெரிதும் பீடிக்கப்பட்டவனுமான ஒரு பிராமணனுக்கு, உழவு காரியங்களுக்காகவோ, ஹோமத்தின் விளைவால் பிறந்த ஒரு பிள்ளைக்காகவோ, அவனுடைய ஆசானுக்காகவோ, (இயற்கையான நடைமுறையில்) பிறந்த ஒரு பிள்ளையைக் காப்பதற்காகவோ ஒரு பசுவைக் கொடையளிக்கலாம். உண்மையில், அந்தக் கொடையானது உரிய காலத்தில், உரிய இடத்தில் கொடுக்கப்பட வேண்டும்.(38) ஓ! சக்ரா, இயல்புகள் நன்றாக அறியப்பட்டவையும், அறிவுக்கான வெகுமதியாக அடையப்பட்டவையும், (செம்மறியாடு, வெள்ளாடு முதலிய) வேறு விலங்குகளுக்கு மாற்றாக விலைக்கு வாங்கப்பட்டவையும், கரங்களின் ஆற்றலால் வெல்லப்பட்டவையும், திருமணத்தில் வரதட்சணையாகப் பெறப்பட்டவையும், ஆபதான சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்டவையும், வறிய உரிமையாளர்களால் பராமரிக்கப்பட இயலாமல் வேறொருவனின் இல்லத்தில் வளர்த்துக் கொள்ளக் கொடுக்கப்பட்டவையுமான பசுக்களை உரிய கொடைப் பொருளாகக் கருதலாம்.(39) உறுதியான உடல்படைத்தவையும், நல்ல இயல்புகளைக் கொண்டவையும், இனிய நறுமணத்துடன் கூடியவையும், புகழத்தக்க கொடைகளாகக் கொள்ளப்படுகின்றன. ஓடைகள் அனைத்திலும் முதன்மையான கங்கையைப் போலவே மாட்டின விலங்குகள் அனைத்திலும் கபிலைப் பசுவே முதன்மையானதாகும்.(40)

பசுக்கொடை அளிக்க விரும்பும் ஒருவன், மூன்று இரவுகள் உணவு அனைத்தையும் தவிர்த்து, நீரை மட்டுமே உண்டு வாழ்ந்து, அதே காலத்திற்கு வெறும் தரையில் உறங்கி, பிராமணர்களுக்கு வேறு கொடைகளை அளித்து நிறைவடையச் செய்த பிறகு அவர்களுக்குப் பசுக்கொடை அளிக்க வேண்டும். குற்றங்குறையற்ற அத்தகைய பசுவும், மெலிந்ததாக இல்லாமல் நலமான கன்றுகளுடன் கொடுக்கப்பட வேண்டும். அந்தக் கொடையை அளித்த பிறகு அடுத்த மூன்று நாட்களுக்கு அந்தக் கொடையாளி பசுத் தரும் பொருட்களை மட்டுமே உணவாக உண்ண வேண்டும்.(41) அமைதியாகப் பால் கறக்க விடுவதும், நலமிக்கக் கன்றுகளை ஈனுவதும், உரிமையாளரின் இல்லத்தில் இருந்து தப்பி ஓடாததுமான நல்ல இயல்பைக் கொண்ட ஒரு பசுவைக் கொடுப்பதன் மூலம், அந்தக் கொடையாளியானவன் அந்தப் பசுவின் உடலில் இருந்த மயிர்களின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்கள் மறுமையில் இன்பத்தை அனுபவிப்பான்.(42) அதே போல, பெருஞ்சுமைகளை இழுக்க வல்லதும், இளமையானதும், பலமானதும், அடக்கமானதும், கலப்பையில் பூட்டப்படுவதை அமைதியாகப் பொறுத்துக் கொள்வதும், பெரும் உழைப்பைக் கோரும் பணிகளைச் செய்யும் சக்தி படைத்ததுமான ஒரு காளையை ஒரு பிராமணனுக்குக் கொடுக்கும் ஒருவன், பத்துப் பசுக்களைக் கொடையளித்தவன் அடையும் உலகங்களை அடைவான்.(43) காட்டில் பசுக்களையும் பிராமணர்களையும் (ஆபத்திலிருந்து) காக்கும் மனிதன், அனைத்து வகைத் துன்பத்தில் இருந்தும் மீட்கப்படுகிறான். அவன் அடையும் பலன்கள் என்ன என்பதைக் கேட்பாயாக.(44)

அத்தகைய மனிதன் ஈட்டும் பலனானது, ஒரு குதிரை வேள்வி செய்த நித்திய பலனுக்கு இணையானதாகும். அத்தகைய மனிதன், மரணக் காலத்தில் தான் விரும்பும் கதியையே அடைவான்.(45) உண்மையில் அவன் த்ன இதயத்தில் எந்த வகை இன்பத்தை விரும்பினாலும், அவை அவனது செயலின் விளைவால் அடையத்தக்கதாகின்றன.(46) உண்மையில், பசுக்களால் அனுமதிக்கப்பட்ட அத்தகைய மனிதன், அனைத்து இன்ப லோகங்களிலும் கௌரவிக்கப்பட்டு வாழ்கிறான். இந்த நோக்கோடு காடுகளில் நாள்தோறும் பசுக்களைப் பின்தொடரும் மனிதன் ஒருவன்,(47) புல், சாணம் மற்றும் மரத்தின் இலைகளை உண்டு வாழ்ந்து, பலனில் உள்ள விருப்பத்தில் இருந்து விடுபட்டு, முறையற்ற பொருட்கள் ஒவ்வொன்றில் இருந்தும் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அனைத்து வகைக் களங்கங்களில் இருந்து மனம் தூய்மையடைந்து, அவன் விரும்பும் எந்த உலகம், அல்லது மகிழ்ச்சியான வேறு எந்த உலகமாக இருந்தாலும், அங்கே ஆசையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, தேவர்களின் துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்வான்” என்றான் {பிரம்மன்}.(48)

பொன்தானமும் தக்ஷிணையும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 74-பசுக்கொடை, பசுத்திருட்டு, பசு விற்பனை, பொற்கொடை மற்றும் தக்ஷிணை தொடர்பாக இந்திரனுக்குப் பதிலளித்த பிரம்மன்…

இந்திரன் {பிரம்மனிடம்}, “ஓ! பாட்டா, தெரிந்தே பசுவைக் களவு செய்பவன் அல்லது பேராசையின் காரணமாக அதை விற்பவன் என்ன கதியை அடைகிறான் என்பதை அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1)

பெரும்பாட்டன் {பிரம்மன்}, “உணவுக்காகக் கொல்லவோ, செல்வத்திற்காக விற்கவோ, ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பதற்காகவோ ஒரு பசுவைக் களவாடும் மனிதர்களுக்கு நேரும் விளைவுகள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக.(2) சாத்திரக் கட்டுப்பாடுகளை எண்ணிப் பார்க்காமல் ஒரு பசுவை விற்பவன், அல்லது கொல்பவன், அல்லது ஒரு பசுவின் இறைச்சியை உண்பவன், செல்வத்திற்காக ஒரு பசுவைக் கொல்லச் செய்பவன்(3) எனக் கொல்பவன், உண்பவன், கொலையை அனுமதிப்பவன் ஆகியோர் கொல்லப்பட்ட அந்தப் பசுவின் உடலில் உள்ள மயிரின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்கள் நரகில் வாடுவார்கள்.(4) ஓ! பெரும்பலம் கொண்டவனே, இந்தக் குற்றங்களும், ஒரு பிராமணனின் வேள்வியைத் தடை செய்வதால் உண்டாகும் வகையிலான குற்றங்களும் பசுக்களை விற்பனை செய்வது மற்றும் களவாடுவது ஆகியனவற்றின் மூலம் {ஒருவனைப்} பற்றுகின்றன.(5) ஒரு பசுவைக் களவாடி அவளை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் அந்தக் கொடையின் வெகுமதியாகச் சொர்க்கத்தின் இன்ப நிலையை அனுபவித்தாலும், களவு செய்த பாவத்திற்காக நெடுங்காலம் நரகில் துன்பத்தை அனுபவிக்கிறான்.(6)

ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, பசுக் கொடையில் பொன்னே தக்ஷிணையாக அமைவதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில், வேள்விகள் அனைத்திலும் பொன்னே சிறந்த தக்ஷிணையாகச் சொல்லப்படுகிறது.(7) பசுக்கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தன் மூதாதையரில் ஏழு தலைமுறையினரையும், வழித்தோன்றல்களில் ஏழு தலைமுறையினரையும் மீட்பதாகச் சொல்லப்படுகிறான். பொன் தக்ஷிணையுடன் பசுக்கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மேற்சொன்னதில் இரட்டிப்பு எண்ணிக்கையில் {பதினான்கு தலைமுறைக்கான} தன் மூதாதையரையும், வழித்தோன்றல்களையும் மீட்கிறான்.(8) கொடைகளில் சிறந்தது பொன் கொடையே. மேலும் பொன்னே சிறந்த தக்ஷிணையாகவும் இருக்கிறது. ஓ! சக்ரா, பொன்னே தூய்மையடையச் செய்வதில் பெரியதாகும், மேலும் உண்மையில் தூய்மை செய்யும் பொருட்கள் யாவிலும் சிறந்ததுமாகும்.(9) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, பொற்கொடையளிப்பவனின் மொத்த குலத்தையும் அந்தப் பொன்னே புனிதப்படுத்துகிறது. ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, இவ்வாறு நான் தக்ஷிணை குறித்து உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன்” என்றான் {பிரம்மன்}”.(10)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இதையே பிரம்மன் இந்திரனிடம் சொன்னான். இந்திரன் இதைத் தசரதனுக்கும், தசரதன் இதைத் தன் மகனான ராமனுக்கும் சொன்னார்கள்.(11) ரகுகுல ராமன் அதைத் தன் அன்புக்குரிய தம்பியும், பெரும்புகழைக் கொண்டவனுமான லக்ஷ்மணனுக்குச் சொன்னான். லக்ஷ்மணன் காட்டில் வசித்தபோது இதை முனிவர்களுக்குச் சொன்னான்.(12) அதன்பிறகு தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த அஃதை கடும் நோன்புகளைக் கொண்ட முனிவர்களும், பூமியின் அறமன்னர்களும் தங்களுக்கு மத்தியில் தாங்கிப் பிடித்தனர்.(13) ஓ! யுதிஷ்டிரா, என் ஆசான் இதை எனக்குச் சொன்னார். பிராமணர்களின் கூட்டங்களில், வேள்விகளில், அல்லது பசுக்கொடைகளில், அல்லது இருவர் சந்திக்கும்போது ஒவ்வொரு நாளும் இதை உரைக்கும் பிராமணன், மறுமையில் தேவர்களின் துணையுடன் வசிக்கும் வற்றாத இன்ப லோகங்கள் பலவற்றை அடைகிறான்.(14,15) உயர்ந்த தலைவனும், புனிதமானவனுமான பிரம்மன், (பசுக்கொடை குறித்து இந்திரனிடம்) இதையே சொன்னான்” என்றார் {பீஷ்மர்}.(16)

நோன்புகளும், நியமங்களும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 75-நோன்பு, நியமம், கற்றல், அடக்கம், வேதம் மறவாமை, கற்பித்தல், உரிய கடமைகளைச் சிறப்பாகச் செய்தல் முதலியவற்றின் பலன் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பலமிக்கவரே, கடமைகளைக் குறித்து என்னிடம் நீர் சொல்வதன் மூலம் எனக்குப் பெரிதும் நம்பிக்கையுண்டாகிறது. எனினும், நான் கொண்டுள்ள சில ஐயங்களைச் சொல்கிறேன். ஓ! பாட்டா, அவற்றை விளக்குவீராக.(1) மனிதர்கள் நோற்கும் நோன்புகளுக்காக {விரதங்களுக்காக} சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பலன்கள் என்னென்ன? ஓ! பெரும் காந்தி கொண்டவனே, வேறு வகை நியமங்களை நோற்பதற்குண்டான பலன்களின் இயல்பென்ன? மேலும், வேதங்களை முறையாகக் கற்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன்கள் என்னென்ன?[1](2) கொடைகளின் பலன்கள் என்ன? வேதங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் உள்ள பலன்கள் என்ன? வேதங்களைக் கற்பிப்பதில் கிட்டும் பலன்கள் என்ன? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன்.(3)ஓ! பாட்டா, இவ்வுலகில் கொடைகளை ஏற்காமல் இருப்பதால் உண்டாகும் பலன்கள் என்னென்ன? அறிவைக் கொடையளிப்பதில் தெரியும் பலன்கள் என்ன?(4) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் மனிதர்களுக்கும், போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடாத வீரர்களுக்கும் கிட்டும் பலன்கள் என்ன? தூய்மை மற்றும் பிரம்மச்சரிய ஒழுக்கம் ஆகியவற்றால் கிட்டும் பலன்கள் என அறிவிக்கப்பட்டவை என்னென்ன?(5) தாய் தந்தையருக்குத் தொண்டாற்றுவதன் மூலம் கிட்டும் பலன்கள் என்ன? ஆசான்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம் கிட்டும் பலன்கள் என்ன? கருணை மற்றும் அன்புக்குரிய பலன்கள் என்ன?(6) ஓ! பாட்டா, ஓ!சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரே, இவை யாவற்றையும் உண்மையாகவும், விரிவாகவும் அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். இதில் நான் கொண்டிருக்கும் ஆவல் பெரியதாகும்” என்று கேட்டான்.(7)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு விரதத்தை (நோன்பை) முறையாகத் தொடங்கி ஒரு தடையும் இல்லாமல் அதைச் சாத்திரங்களின் படி நிறைவடையச் செய்யும் ஒருவன் நித்திய இன்ப உலகங்களைத் தனதாகக் கொள்கிறான்.(8) ஓ! மன்னா, நியமங்களின் பலன்கள் இம்மையிலேயே காணக்கிடைக்கின்றன. நீ வென்றுள்ள இந்த வெகுமதிகள் அனைத்தும் நியமங்கள் மற்றும் வேள்விகளுக்குரியவையாகும்.(9) வேத கல்வியின் பலன்கள் இம்மையிலும், மறுமையிலும் காணப்படுகின்றன. வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள ஒருவன் இவ்வுலகத்திலும், பிரம்மலோகத்திலும் இன்பமாகத் திளைத்திருப்பதே காணப்படுகிறது.(10)

ஓ! மன்னா, தற்கட்டுப்பாட்டின் பலன்களை விரிவாக உனக்குச் சொல்கிறேன் இப்போது கேட்பாயாக. தற்கட்டுப்பாடு கொண்டவர்கள் எங்கும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தற்கட்டுப்பாடுடையவர்கள், ஆசையற்றதனால் அல்லது ஆசையை அடக்குவதனால் உண்டாகும் இன்பத்தை எப்போதும் அனுபவிக்கிறார்கள்.(11) தற்கட்டுப்பாடுடையவர்கள் பகைவர்கள் அனைவரையும் அழிக்கவல்லவர்களாவர். தற்கட்டுப்பாடுடையவர்கள் தாங்கள் நாடும் அனைத்தையும் அடைவதில் வெல்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(12) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, தற்கட்டுப்பாடுடையவர்கள் அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அடைகிறார்கள். தவங்கள் மற்றும் (கர) வலிமையின் மூலம் மனிதர்கள் சொர்க்கத்தில் இன்புறும் மகிழ்ச்சியானது தற்கட்டுப்பாடும், மன்னிக்கும் தன்மையும் கொண்டோரின் உடைமையாகிறது.(13) கொடையை விடத் தற்கட்டுப்பாடே பலன்மிக்கதாகும். ஒரு கொடையாளி, பிராமணர்களுக்கு ஒரு கொடையை அளித்தபிறகு கோபவசப்படக்கூடும். எனினும், தற்கட்டுப்பாடுடைய மனிதன் ஒருபோதும் கோபவசப்பட மாட்டான். கோபவசப்படாமல் கொடையளிக்கும் மனிதனே நித்திய இன்பலோகங்களை அடைவதில் வெல்கிறான். கோபமானது கொடையின் பலனை அழிக்கிறது. எனவே தற்கட்டுப்பாடே கொடையைவிட மேன்மையானதாகும். (14-16)

ஓ! ஏகாதிபதி, சொர்க்கத்தில் பத்தாயிரக்கணக்கில் கண்ணுக்குத்தெரியாத பல்வேறு இடங்கள் இருக்கின்றன. சொர்க்கத்தில் உள்ள இந்த இடங்கள் யாவும் முனிவர்களுக்கு உரியனவாகும். இவ்வுலகை விட்டு அகலும் மனிதர்கள் அவற்றை அடைந்து, தேவர்களாக மாறுகிறார்கள்.(17) ஓ! மன்னா, பெரும் முனிவர்கள் தங்கள் தற்கட்டுப்பாட்டின் துணையால் மட்டுமே அங்கே செல்கின்றனர், பிறகு தங்கள் முயற்சிகளின் கதியாக மேலான மகிழ்ச்சிமிக்க உலகங்களை அடைகின்றனர். எனவே, தற்கட்டுப்பாடே (திறனில்) கொடையை விட மேன்மையானதாகும்.(18) ஓ! மன்னா, (வேதங்களைக் கற்பிப்பதற்காக) ஆசானாக ஆகிறவனும், நெருப்பை முறையாக வழிபடுபவனுமான மனிதன், இவ்வுலகத் துன்பங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மலோகத்தில் வற்றாத இன்பநிலையை அனுபவிப்பான்.(19) வேதங்களைக் கற்று, அறம்சார்ந்த சீடர்களுக்கு அந்த அறிவைக் கற்பித்தவனும், தன் ஆசானின் செயல்களைப் புகழ்பவனுமான மனிதன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(20)

வேத கல்வி கற்பவனும், வேள்விகளைச் செய்பவனும், கொடையளிப்பவனும், போரில் பிறரின் உயிர்களைக் காப்பவனுமான ஒரு க்ஷத்திரியனும் அதே போன்ற பெரும் கௌரவங்களைச் சொர்க்கத்தில் அடைகிறான்.(21) தன் வகைக்கான கடமைகளை நோற்பவனும், கொடைகளை அளிப்பவனுமான ஒரு வைசியன், மகுடம் சூடும் வெகுமதியாக அக்கொடைகளுக்கான பலன்களை அறுவடை செய்கிறான். தன் வகைக்கான கடமைகளை (மூன்று வகையினருக்கான தொண்டுகளை) முறையாக நோற்பவனான ஒரு சூத்திரன் தன் தொண்டுகளுக்கான வெகுமதியாகச் சொர்க்கத்தை வெல்கிறான்.(22)

(சாத்திரங்களில்) பல்வேறு வகை வீரர்கள் பேசப்படுகின்றனர். அவர்கள் அடைந்த வெகுமதிகள் என்னென்ன என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக. வீர குலத்தைச் சார்ந்த ஒரு வீரனுக்கு வெகுமதிகள் நிலையானவையே.(23) வேள்வி வீரர்கள், தற்கட்டுப்பாட்டு வீரர்கள், வாய்மை வீரர்கள், வீரன் என்ற பெயருக்குத் தகுந்த பிறர் என்று பலர் இருக்கின்றனர். போர்க்கள வீரர்கள், மனிதர்களுக்கு மத்தியில் கொடைவீரர்கள் ஆகியோரும் இருக்கின்றனர்.(24) சாங்கிய நம்பிக்கை கொண்ட வீரர்கள் என்றழைக்கப்படும் பலர் இருக்கிறார்கள். உண்மையில், யோக வீரர்கள் என்றழைக்கப்படும் வேறு பலரும் இருக்கிறார்கள். காட்டு {வானப்பிரஸ்த} வாழ்வில், வீட்டு {கிருஹஸ்த} வாழ்வில், துறவு (அல்லது சந்நியாச) வாழ்வில் என வீரர்களாக வேறு சிலர் கருதப்படுகின்றனர்.(25)

அதே போலவே புத்திவீரர்கள் மற்றும் பொறுமைவீரர்கள் என்றழைக்கப்படுவோரும் உண்டு. அமைதிநிலையில் வாழ்பவர்களும், அறவீரர்களாகக் கருதப்படும் பிற மனிதர்களும் இருக்கிறார்கள்.(26) பல்வேறு வகை நோன்புகளையும், நியமங்களையும் பயிலும் பல்வேறு வகை வீரர்களும் இருக்கிறார்கள். வேதகல்வி வீரர்கள், அதையே கற்பிப்பதில் அர்ப்பணிப்புள்ள வீரர்கள் ஆகியோரும் இருக்கிறார்கள்.(27) மேலும், அர்ப்பணிப்புடன் ஆசான்களுக்குத் தொண்டாற்றுவதில் வீரர்கள், தங்கள் தந்தைமாரை மதிப்பதில் வீரர்கள் எனவும் சில மனிதர்கள் கருதப்படுகிறார்கள். தாய்க்குக் கீழ்ப்படிவதில் வீரர்கள், தாங்கள் நோற்கும் பிச்சைக்கார வாழ்வில் வீரர்களும் இருக்கிறார்கள்.(28) காட்டுத்துறவியாக {வானப்ரஸ்தராக} அல்லது இல்லறவாசியாக {கிருஹஸ்தராக} வாழ்ந்தாலும் விருந்தினர்களுக்கு விருந்தோம்பும் வீரர்களும் இருக்கிறார்கள். இந்த வீரர்கள் அனைவரும் தங்கள் செயல்களுக்காக வெகுமதியையும் அடையும் வகையில் மேன்மையான இன்ப உலகங்களை அடைகிறார்கள்.(29)

வேதங்கள் அனைத்தையும் நினைவில் கொள்வது, அல்லது புனித நீர்வெளிகள் அனைத்திலும் தூய்மைச்சடங்குகளைச் செய்வது ஆகியவை, ஒருவன் நாள்தோரும் வாய்மை பேசுவதற்கு இணையானவையாகவோ அல்லாதவையாகவோ இருக்கலாம்.(30) ஒரு காலத்தில் ஓராயிரம் குதிரை வேள்விகளும், வாய்மையும் ஒரே தராசில் எடைபார்க்கப்பட்டன. அப்போது வாய்மையே ஓராயிரம் குதிரைவேள்விகளைவிட எடைமிக்கதாகத் தெரிந்தது.(31) வாய்மையினாலேயே சூரியன் வெப்பத்தைத் தருகிறான்; வாய்மையாலேயே நெருப்புச் சுடர்விடுகிறது; வாய்மையாலேயே காற்று வீசுகிறது; உண்மையில் அனைத்தும் வாய்மையைச் சார்ந்தே இருக்கின்றன.(32)

தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிராமணர்களை வாய்மையே நிறைவடையச் செய்கிறது. வாய்மையே உயர்ந்த கடமையெனச் சொல்லப்படுகிறது. எனவே எவனும் ஒருபோதும் வாய்மையெனும் வரம்பை மீறக்கூடாது.(33) முனிவர்கள் அனைவரும் வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களது ஆற்றல் வாய்மையைச் சார்ந்தே இருக்கிறது. அவர்கள் வாய்மையின் மூலமே உறுதியேற்கிறார்கள். எனவே வாய்மையே மேன்மையானதாகும். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, வாய்மை நிறைந்த மனிதர்கள் அனைவரும் தங்கள் வாய்மையின் மூலமே சொர்க்கத்தை அடைவதில் வென்று, அங்கே இன்பத்தில் திளைத்திருக்கிறார்கள்.(34) வாய்மை தரும் வெகுமதியே தற்கட்டுப்பாடாகும். நான் முழு இதயத்துடன் அதுகுறித்து உனக்குச் சொல்லிவிட்டேன். தற்கட்டுப்பாடுடையவனும், எளிய இதயம் கொண்டவனுமான மனிதன், நிச்சயம் சொர்க்கத்தில் பெரும் வெகுமதிகளை அடைகிறான்.(35)

ஓ! பூமியின் தலைவா, பிரம்மச்சரியத்தின் பலன்களை உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன் இப்போது கேட்பாயாக. ஓ! மன்னா, பிறப்பிலிருந்து மரணம் வரை பிரம்மச்சரிய நோன்பைப் பயிலும் மனிதனால் அடையமுடியாதது எதுவுமில்லை என்பதை அறிவாயாக. பல கோடி முனிவர்கள் பிரம்மலோகத்தில் வசிக்கின்றனர்.(36,37) இங்கே இருந்தபோது, அவர்கள் அனைவரும் வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், தற்கட்டுப்பாடுடையவர்களாகவும், உயிர்வித்தை மேலிழுத்தவர்களாகவும் இருந்தனர். ஓ! மன்னா, ஒரு பிராமணனால் பிரம்மச்சரிய நோன்பு முறையாக நோற்கப்பட்டால் அவன் நிச்சயம் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்துவிடுவான். அந்தப் பிராமணன் சுடர்மிக்க நெருப்பெனச் சொல்லப்படுகிறான். தவங்களில் அர்ப்பணிப்புள்ள அந்தப் பிராமணர்களில் நெருப்பு தேவன் {அக்னி} காணப்படுகிறான்.(38,39) ஒரு பிரம்மசாரியானவன் சிறு கோபத்தை அடைந்தாலும் தேவர்களின் தலைவனே அச்சத்தில் நடுங்குவான். இதுவே முனிவர்களால் நோற்கப்படும் பிரம்மச்சரிய நோன்பில் காணப்படும் பலனாகும்.(40)

ஓ! யுதிஷ்டிரா, தந்தை தாயை வழிபடுவதில் உள்ள பலனைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! மன்னா, எதனிலும் குறுக்கிடாமல் தன் தந்தைக்குக் கடமையுணர்வுடன் தொண்டாற்றும் ஒருவன், அதே போலத் தன் தாய்க்கோ, தன் அண்ணனுக்கோ, வேறு பெரியோருக்கோ, ஆசானுக்கோ தொண்டாற்றும் ஒருவன் ஆகியோர் சொர்க்கவாசத்தை ஈட்டுகிறார்கள் என்பது அறியப்பட வேண்டும். தூய்மையடைந்த ஆன்மைவைக் கொண்ட மனிதன், பெரியோர்களுக்குச் செய்யும் இத்தகைய தொண்டின் விளைவாக அவன் நரகை ஒருபோதும் காணவும் மாட்டான்” என்றார் {பீஷ்மர்}.(41,42)

கோதான விதிமுறைகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 76-பசுக்கொடைக்கு உரிய விதிமுறைகள் மற்றும் சிறப்புகள் முதலியவற்றை மாந்தாதாவுக்குச் சொன்ன பிருஹஸ்பதி…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா, எவ்விதிகளின்படி (பசுக்) கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் எண்ணற்ற நித்திய இன்பலோகங்களை அடைகிறானோ, {எவ்விதிகள்} பசுக்கொடைகளை ஒழுங்கு படுத்துமோ, அந்த உயர்ந்த விதிகளைக் குறித்து நீர் விரிவாகச் சொல்வதை நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, பலன்களைப் பொறுத்தவரையில் பசுக்கொடையைவிட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை. நியாயமான முறையில் அடையப்பட்ட ஒரு பசுவைக் கொடையளித்தால், அந்தக் கொடையாளியின் மொத்த குலமும் உடனே மீட்கப்படுகிறது.(2) அறவோரின் நன்மைக்கென உண்டான அந்தச் சடங்கு, அடுத்து அனைத்து உயிரினங்களுக்காக அறிவிக்கப்பட்டது. அந்தச் சடங்கு தொடக்கக் காலத்தில் இருந்து நடந்து வருகிறது. அஃது அறிவிக்கப்படும் முன்பே இருந்தது. உண்மையில், ஓ! மன்னா, பசுக்கொடை குறித்த அந்தச் சடங்கைப் பற்றிச் சொல்கிறேன் கேட்பாயாக[1].(3) பழங்காலத்தில் எண்ணற்ற பசுக்கள் (கொடையளிப்பதற்காக) மன்னன் மாந்தாத்ரியிடம் {மாந்தாதாவிடம்} கொண்டுவரப்பட்ட போது, (உண்மையில் அவற்றைக் கொடையளிப்பதற்காக) நோற்கப்பட வேண்டிய சடங்குகளைக் குறித்த ஐயத்தால் நிறைந்த அவன், (தேவர்களின் ஆசானான) பிருஹஸ்பதியிடம் அந்த ஐயத்திற்கான விளக்கத்தை முறையாகக் கேட்டான்.(4)பிருஹஸ்பதி {மந்தாதாவிடம்}, “பசுக்கொடையாளி {கொடையளிப்பதற்கு} முந்தைய நாளே முறையாகக் கட்டுப்பாடுகளை நோற்று, பிராமணர்களை முறையாகக் கௌரவித்து, கொடைக்கான (சரியான) நேரத்தைக் குறிக்க வேண்டும். கொடையளிக்கப்பட வேண்டிய பசுக்களைப் பொறுத்தவரையில் அவை ரோகிணி என்றழைக்கப்படும் வகையைச் சார்ந்தவையாக {சிவப்பு பசுக்களாக} இருக்க வேண்டும்.(5) அந்தப் பசுக்களிடம் சமங்கே {அங்கங்கள் நிரம்பியவளே}, வாஹுலே {அபிவிருத்தியடைகிறவளே} என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும். பசுக்களை நிறத்தப்பட்டிருக்கும் இடத்திற்குள் நுழைந்து, பின்வரும் ஸ்ருதி சொல்லப்பட வேண்டும்,(6) “பசுவே என் அன்னை. காளை என் தந்தை. சொர்க்கம் மற்றும் பூமி சார்ந்த செழிப்பை (எனக்குக் கொடுப்பாயாக). பசுவே என் புகலிடமாக இருக்கிறாள்” {என்பதே அந்த ஸ்ருதி}. அங்கே நுழைந்து இவ்வழியில் செயல்படும் கொடையாளி அங்கேயே அந்த இரவைக் கழிக்க வேண்டும். மேலும் அவன் அந்தப் பசுவைக் கொடையளிக்கும்போதும் அந்தச் சூத்திரத்தை {மந்திரத்தைச்} சொல்ல வேண்டும்[2].(7) பசுவோடு இருக்கும் அந்தக் கொடையாளி, அவற்றின் சுதந்திரத்தைத் தடுக்கும் எதையும் செய்யாமல், (பசுக்களை எரிச்சலூட்டுவது போலத் தன்னையும் எரிச்சலூட்டும் கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளை விரட்டாமல்) வெறும் தரையில் படுப்பவன், தன்னைச் சரியாகப் பசுவின் நிலைக்கே குறைத்துக் கொள்வதன் விளைவாக அவனது பாவங்கள் அனைத்தும் உடனே தூய்மையடைகின்றன.(8)காலையில் சூரியன் எழும்போது, கன்று மற்றும் காளையுடன் பசுவானது கொடையளிக்கப்பட வேண்டும். அத்தகைய செயலின் வெகுமதியாக, நிச்சயம் சொர்க்கமே உன்னால் அடையப்படுகிறது. மந்திரங்களில் குறிப்பிடப்படும் அருள் அனைத்தும் உனதாகும்.(9) மந்திரங்களில் “பசுக்கள் பலம் மற்றும் சக்தியுடன் கூடிய முயற்சி ஆகியவற்றைக் கொண்டனவாகும். பசுக்கள் தங்களிடம் ஞானத்தையும் கொண்டிருக்கின்றன. வேள்வி அடையும் அமரநிலையை {இறவாநிலையை} அவை கொண்டிருக்கின்றன. சக்திகள் அனைத்திற்கும் அவை புகலிடமாக இருக்கின்றன. உலகம் சார்ந்த செழிப்பை வெல்லும் படிநிலைகள் அவையே. அண்டத்தின் நித்திய நடைமுறைகளை அவையே கொண்டிருக்கின்றன. ஒருவனுடைய குலத்தைப் பெருக்குபவை அவையே.(10) (நான் கொடையளிக்கும்) பசுக்கள் என் பாவங்களை அழிக்கட்டும். அவை சூரியன் மற்றும் சோமனின் இயல்புகளைக் கொண்டிருக்கின்றன. நான் சொர்க்கத்தை அடைவதற்கு இவை துணைபுரியட்டும். ஒரு தாயானவள் தன் பிள்ளையைக் காப்பது போல இவை என்னைக் காக்கட்டும். நான் சொல்லும் மந்திரங்களில் இல்லாத அருள்களும் எனதாகட்டும்” என்று சொல்லப்படுகிறது.(11) காச நோய், அல்லது வேறு நோய்களை ஒழிப்பதிலும், உடலில் இருந்து விடுபடும் காரியத்திலும், பசுவின் ஐந்து பொருட்களை ஒரு மனிதன் எடுத்துக் கொண்டால், பசுவானது சரஸ்வதியாற்றைப் போல அவனுக்கு அருளை வழங்குகிறது.

(ஒரு கொடையாளி), “பசுக்களே, நீங்களே அனைத்து வகைப் பலன்களையும் அழிப்பவர்கள். என்னிடம் நிறைவடையும் நீங்கள் எனக்கு விரும்பத்தக்க கதியைக் கொடுப்பீராக.(12) நான் இன்று நீங்களாகவே ஆகிறேன். உங்களைக் கொடையளிப்பதன் மூலம், நான் என்னையே கொடுக்கிறேன்” (என்று சொன்னதும், கொடையைப் பெற்றுக் கொள்பவன்), “நீங்கள் இனி உங்களைக் கொடுப்பவர்களுக்கு உரிமையானவர்கள் இல்லை. நீங்கள் இப்போது எனதாகிறீர்கள். சூரியன் மற்றும் சோமனின் இயல்பைக் கொண்ட நீங்கள் கொடையாளியையும், கொடை பெறுபவனையும் அனைத்து வகைச் செழிப்பாலும் சுடர்விடச் செய்கிறீர்கள்” (என்று சொல்ல வேண்டும்).(13) (ஏற்கனவே குறிப்பிட்டது போல) கொடையாளி, மேற்கண்ட ஸ்லோகத்தின் முதல் பகுதியைச் சொல்ல வேண்டும். அதைப் பெறுபவனும், பசுக்கொடையை ஒழுங்குபடுத்தும் சடங்கை அறிந்தவனுமான மறுபிறப்பாளன் {பிராமணன்}, பசுவைக் கொடையாகப் பெறும்போது, (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) மேற்கண்ட ஸ்லோகத்தின் பிற்பாதியைச் சொல்ல வேண்டும்.(14)

ஒரு மனிதன், பசுக்கொடை அளிப்பதற்குப் பதிலாக அதற்குரிய விலையையோ, துணிமணிகளையோ, பொன்னையோ கொடையளித்தாலும் பசுக்கொடை அளித்தவனாகவே கருதப்படுகிறான். (பசுவுக்குப் பதிலாக) பசுவுக்குரிய விலையைக் கொடையளிப்பவன், “மேல்நோக்கும் முகம் கொண்ட இந்தப் பசுவானவள் கொடையளிக்கப்படுகிறாள். நீ இவளை ஏற்பாயாக” என்று சொல்ல வேண்டும். (பசுவுக்குப் பதிலாக) துணிமணிகளைக் கொடையளிப்பவன், “(இந்தக் கொடை பசுவாகக்கருதப்படட்டும் என்ற பொருள் படும்) பவிதவ்யா” என்ற சொல்லைச் சொல்ல வேண்டும். (பசுவுக்குப் பதிலாகப்) பொன்னைக் கொடையளிக்கும் மனிதன், “(நான் கொடுக்கும் இந்தப் பொன், பசுவின் இயல்பையும் வடிவையும் கொண்டதாகும் எனப் பொருள்படும்படி) வைஷ்ணவி” என்ற சொல்லைச் சொல்ல வேண்டும்.(15) மேற்குறிப்பிட்ட வகையில் கொடையளிக்கும்போது இவ்வார்த்தைகளே சொல்லப்பட வேண்டும். பிறருக்காக இத்தகைய பசுக்கொடைகளை அளிப்பதன் மூலம், {உண்மையான பசுக்கொடைக்கு} முப்பத்தாறாயிரம் {36,000} வருடங்களும், {பசுவுக்குப் பதிலாகத் துணிமணிகளைக் கொடையளித்தால்} எட்டாயிரம் {8,000} வருடங்களும், {பசுவுக்குப் பதிலாகப் பொற்கொடை அளித்தால்} இருபதாயிரம் {20,000} வருடங்களும் சொர்க்கவாசம் வெகுமதியாக அறுவடை செய்யப்படுகின்றன[3].(16)பசுவுக்குப் பதிலாகக் கொடுக்கப்படும் கொடைகளின் முறையான பலன்கள் இவையே. அதே வேளையில், உண்மையான பசுவையே கொடையளிப்பவனைப் பொறுத்தவரையில், பசுவுக்குப் பதிலாகக் கொடையளிப்பதில் உள்ள பலன்கள் அனைத்தும், கொடை பெறுவனின் (அவன் தன் இல்லம் நோக்கி எடுத்து வைக்கும்) எட்டாவது அடியிலேயே கொடையாளிக்குக் கிட்டிவிடுகிறது[4].(17) உண்மையான பசுவைக் கொடையளிப்பவன் இவ்வுலகில் அற நடத்தை கொண்டவனாக மாறுகிறான். பசுவுக்கான விலையைக் கொடையளிப்பவன் அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுகிறான். (உண்மைப் பசுவைக் கொடையளிப்பதற்குப் பதில் இவ்வழியில்) பசுக்கொடையளிப்பவன் கவலைகள் எதையும் அடையமாட்டான். {உண்மையான பசுவைக் கொடையளிப்பவன், பசுவுக்கான விலையைக் கொடையளிப்பவன், பசுவுக்குப் பதிலாக வேறு ஒரு பொருளைக் கொடையளிப்பவன் ஆகிய} இந்த மூவரும், அதிகாலையிலேயே முறையாகத் தங்கள் தூய்மைச் சடங்குகளையும் பிற {வழிபாட்டுச்} செயல்களையும் செய்பவர்களும், மஹாபாரதத்தை நன்கறிந்தவனும் விஷ்ணு மற்றும் சோமனின் உலகங்களை அடைகிறார்கள்[5].(18) ஒரு பசுவைக் கொடையளித்த பிறகு அந்தக் கொடையாளி மூன்று இரவுகளுக்கு நோய் தடுக்கும் பால் நோன்பை {கோவிரதத்தைப்} பின்பற்றிப் பசுக்களுடன் ஓரிரவைக் கழிக்க வேண்டும். அந்தப் பிறைநாள் {திதி} தொடங்கி, காம்யம் என்ற பெயரில் அறியப்படும் எட்டாம் நாளில் இருந்து பசுவின் பால், சிறுநீர் மற்றும் சாணம் ஆகியவற்றை மட்டுமே உண்டு அவன் மூன்று இரவுகளைக் கழிக்க வேண்டும்[6].(19)ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தெய்வீக நோன்புக்கு (பிரம்மச்சரிய நோன்புக்கு) உரிய பலனை அடைகிறான். இரண்டு பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் அவன் வேதங்களில் திறன் பெறுகிறான். ஒரு வேள்வியைச் செய்து, விதிப்படியான சடங்குகளுக்கு ஏற்புடைய வகையில் பசுக்கொடையளிக்கும் மனிதன், மேன்மையான தன்மையிலான பல உலகங்களை அடைகிறான். எனினும், அந்தச் சடங்கைக் குறித்து அறியாத மனிதனால் (சாத்திர அறிவுப்புகளைக் காணாது பசுக்கொடையளிப்பவனால்) அவற்றை ஒருபோதும் அடைய முடியாது.(20) அபரிமிதமான பாலைத் தரும் ஒற்றைப் பசுவைக் கொடையளிக்கும் மனிதன், பூமியில் ஒன்றாகத் திரட்டப்படும் விரும்பத்தக்க பொருட்கள் அனைத்தையும் கொடையளித்த பலனை ஈட்டுகிறான். எனவே, நிறைந்த மடியைக் கொண்டதன் விளைவால் ஹவ்யகவ்யங்களைத் தரும் அத்தகைய பசுக்கள் பலவற்றைக் கொடையளிப்பதைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்? மேன்மையான எருதொன்றைக் கொடையளித்தால் உண்டாகும் பலனானது, பசுக்கொடையால் கிட்டும் பலனைவிடப் பெரியதாகும்.(21)

ஒருவன், தன் சீடனாக இல்லாத, அல்லது நோன்புகளை நோற்காத, அல்லது நம்பிக்கையற்ற, அல்லது கோணல் புத்தி கொண்ட மற்றொருவனுக்கு இந்தச் சடங்கைக் குறித்த அறிவைப் போதிக்கக்கூடாது. உண்மையில் இவ்வறம், வெகுமக்கள் அறியாத ஒரு புதிராகும். அதையறிந்தவன் அனைத்து இடங்களிலும் அதைக் குறித்துப் பேசக் கூடாது.(22) இவ்வுலகில் நம்பிக்கையற்ற மனிதர்கள் பலர் இருக்கின்றனர். மனிதர்களுக்கு மத்தியில் ஈனர்களும், ராட்சசர்களுக்கு ஒப்பானவர்களுமானவர்களும் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு இவ்வறத்தைப் போதிப்பது தீமைக்கே வழிவகுக்கும். நாத்திகத்தை உறைவிடமாகக் கொண்ட அத்தகைய பாவிகளுக்குப் போதிக்கப்பட்டால் அதற்கு ஈடான தீமையே விளையும்” என்றார் {பிருஹஸ்பதி}”.(23)

{பீஷ்மர், யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “ஓ! மன்னா, பிருஹஸ்பதியின் போதனைகளுக்கு ஏற்புடைய வகையில் பசுக்கொடையளித்து, பேரின்ப உலகங்களை அடைந்த அறம்சார்ந்த ஏகாதிபதிகளின் பெயரை உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(24) உசீனரன், விஷ்வகசுவன், நிருகன், பகீரதன், யுவனாசுவன் மகனும் கொண்டாடப்பட்டவனுமான மாந்தாத்ரி {மாந்தாதா}, முசுகுந்தன், பூரித்யும்னன், நைஷதன், ஸோமகன்,(25) புரூரவன், பாரதர்களில் முதல்வனான பரதன், தசரதன் மகனும், வீரனுமான ராமன், மற்றும் பெரும் சாதனைகளைச் செய்த கொண்டாடப்பட்ட மன்னர்கள் பலரும்,(26) பரந்து அறியப்பட்ட செயல்களைச் செய்த மன்னன் திலீபனும், சடங்குகளுக்கு ஏற்புடைய வகையில் பசுக்கொடை அளித்ததன் விளைவால் சொர்க்கத்தை அடைந்தனர். மன்னன் மாந்தாத்ரி {மாந்தாதா}, வேள்விகள், கொடைகள், தவங்கள், அரச கடமைகள், பசுக்கொடைகள் ஆகியவற்றை எப்போதும் செய்து வந்தான்.(27) எனவே, ஓ! பிருதையின் மகனே, (பசுக்கொடை குறித்து) பிருஹஸ்பதி சொன்னதான, நான் உன்னிடம் சொன்ன போதனைகளை மனத்தில் கொள்வாயாக. குருக்களின் நாட்டை அடைந்ததும், உற்சாகமிக்க இதயத்துடன் நீ முதன்மையான பிராமணர்களுக்குப் பசுக்கொடையளிப்பாயாக” என்றார் {பீஷ்மர்}”.(28)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு பீஷ்மரால், பசுக்கொடையை அளிக்கும் சரியான வழிமுறைகள் குறித்துச் சொல்லப்பட்டவனான மன்னன் யுதிஷ்டிரன், பீஷ்மர் விரும்பிய அனைத்தையும் செய்தான். உண்மையில், மன்னன் யுதிஷ்டிரன், தேவர்களின் ஆசான் {பிருஹஸ்பதி}, அரசன் மாந்தாத்ரிக்கு {மாந்தாதாவுக்குச்} சொன்ன அறம் முழுவதையும் தன் மனத்தில் கொண்டான்.(29) யுதிஷ்டிரன் அந்தக் காலத்தில் இருந்த பசுக்கொடைகளை அளிக்கவும், {அவ்வாறு பசுக்கொடையளிக்கும் போது} யவையரிசி நொய்களையும், பசுஞ்சாணத்தையும் தன் உணவாகவும் பானமாகவும் கொள்ளத் தொடங்கினான். மேலும் அம்மன்னன் அந்த நாள் முதலே வெறுந்தரையில் உறங்கத் தொடங்கி, ஆன்மக் கட்டுப்பாட்டுடனும், ஒரு காளையின் ஒழுக்கத்துடனும் முதன்மையான ஏகாதிபதியாக ஆனான்[7].(30) அந்தக் குரு மன்னன் {யுதிஷ்டிரன்} அந்த நாள் முதலே பசுக்களைக் கவனிக்கவும், எப்போதும் அவற்றை வழிபடவும், அவற்றின்புகழைப் பாடவும் தொங்கினான். அந்த நாள் முதலே அம்மன்னன், பசுக்களைத் தன் வாகனங்களில் பூட்டும் நடைமுறையைக் கைவிட்டான். அவன் எங்குச் செல்ல நேர்ந்தாலும் நல்ல இனக் குதிரைகளால் இழுக்கப்படும் தேர்களிலேயே சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(31)

கபிலைப் பசு! – அநுசாஸனபர்வம் பகுதி – 77-பசுக்கொடையின் சிறப்பு மற்றும் கபிலைப் பசுக்களின் வரலாறு குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்}, “பணிவுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் சந்தனுவின் அரசமகனிடம் {பீஷ்மரிடம்} பசுக்கொடை குறித்து விரிவாகக் கேள்வி எழுப்பினான்.(1)

மன்னன் {யுதிஷ்டிரன் பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, பசுக்கொடையின் பலன்களை இன்னும் விரிவாக மீண்டும் எனக்குச் சொல்வீராக. ஓ! வீரரே, அமுதம் போன்ற உமது வார்த்தைகளைக் கேட்பது எனக்கு ஒருபோதும் தெவிட்டுவதில்லை” என்றான்”.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, பசுக்கொடையின் பலன்களைக் குறித்தும் விரிவாக மீண்டும் சொல்லத் தொடங்கினார்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கன்றுடன் கூடியதும், பணிவானதும், வேறு நற்குணங்களைக் கொண்டதும், வயதில் இளமையானதுமான ஒரு பசுவை துணியால் சுற்றிலும் மூடி ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாகிறான்.(4) (நரகத்தில்) சூரியனற்ற பல உலகங்கள் இருக்கின்றன. பசுக்கொடையளிக்கும் ஒருவன் அங்கே செல்லமாட்டான்.(5) எனினும், பருகவும், உண்ணவும் இயலாததும், பால் வற்றியதும், பலவீனமான புலன்களைக் கொண்டதும், நோய்வாய்ப்பட்டதும், முதுமையடைந்ததும், நீர் வற்றிய குளத்தைப் போன்றதுமான பசுவை ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பதன் மூலம், அவனுக்குத் துன்பத்தையும், ஏமாற்றத்தையும் அந்த மனிதன், காரிருள் நரகில் நிச்சயம் நுழைவான்.(6) கோபம் நிறைந்த, தீய, அல்லது நோய்வாய்ப்பட்ட, அல்லது பலவீனமான, அல்லது ஏற்கப்பட்ட விலையைக் கொடுக்காமல் வாங்கப்பட்ட, அல்லது ஏற்போனான மறுபிறப்பாளனை துன்பத்தாலும், ஏமாற்றத்தாலும் பீடிக்கச் செய்யும் பசுவை ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது. அத்தகைய மனிதன் (செய்த வேறு அறச்செயல்களின் வெகுமதியாக) அடையும் உலகங்கள் அவனுக்கு எந்த மகிழ்ச்சியையோ, எந்தச் சக்தியையோ அளிக்காது.(7) பலமானதும், நன்னடத்தைக் கொண்டதும், வயதில் இளையதும், நறுமணத்துடன் கூடியமான பசுக்கள் மட்டுமே (கொடையளிக்கும் காரியத்தில்) அனைவராலும் மெச்சப்படுகின்றன. உண்மையில், கங்கையே அனைத்து ஆறுகளிலும் முதன்மையானவளாக இருப்பது போலவே பசுக்கள் அனைத்திலும் முதன்மையானதாகக் கபிலைப் பசு ஆகும்” என்றார்.(8)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கொடையளிக்கப்படும் நல்ல பசுக்கள் அனைத்தும் சமமாகவே கருதப்படும் போது கபிலைப் பசுவைக் கொடையளிப்பது (அதிகப் பலனைத் தருவதாக) அறவோரால் ஏன் மெச்சப்படுகிறது? ஓ! பெரும்பலம் கொண்டவரே, கபிலைப் பசுவின் தனித்தன்மை என்ன என்பதை நான் கேட்க விரும்புகிறேன். உண்மையில், இக்காரியம் குறித்து எனக்குச் சொல்லத் தகுந்தவர் நீரே” என்றான்[1].(9)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, கபிலைப்பசு படைக்கப்பட்ட சூழ்நிலை குறித்த இந்த வரலாற்றைப் பழங்கால மனிதர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அந்தப் பழைய வரலாற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(10)

பழங்காலத்தில், சுயம்புவான பிரம்மன் முனிவர் தக்ஷரை அழைத்து, “உயிரினங்களைப் படைப்பாயாக” என்றான். உயிரினங்களுக்கு நன்மை செய்ய விரும்பிய தக்ஷர் முதலில் உணவைப் படைத்தார்.(11) ஓ! பலமிக்கவனே, தேவர்கள் அமுதத்தைச் சார்ந்திருப்பதைப் போலவே, தக்ஷர் நிர்ணயித்த உணவைச் சார்ந்தே அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன.(12) அசைபவை {உயிருள்ள} மற்றும் அசைவற்ற {உயிரற்ற} பொருட்கள் அனைத்தின் மத்தியிலும் அசைபவையே {உயிருள்ளவையே} மேன்மையானவை. அசையும் உயிரினங்களுக்கு மத்தியில் பிராமணர்களே மேன்மையானவர்கள். வேள்விகள் அனைத்தும் அவர்களிலேயே நிறுவப்பட்டுள்ளன.(13) வேள்வியின் மூலமே சோமம் (அமுதம்) கிடைத்தது. வேள்வியானது பசுக்களில் நிறுவப்பட்டுள்ளது[2]. தேவர்கள் வேள்விகளின் மூலமே நிறைவடைகின்றனர். படைப்பைப் பொறுத்தவரையில், வாழ்வாதார வழிமுறைகளே முதலில் தோன்றின, அடுத்துதான் உயிரினங்கள் வந்தன.(14) உயிரினங்கள் பிறந்ததும் அவை உணவுக்காக உரக்க அழத் தொடங்கின. அவை அனைத்தும், தாயையோ, தந்தையையோ அணுகும் பிள்ளைகளைப் போல உணவைத் தரும் படைப்பாளனை அணுகின.(15)அனைத்து உயிரினங்களின் நோக்கத்தை அறிந்தவரும், அனைத்து உயிரினங்களின் புனிதமான தலைவருமான தக்ஷர், தாம் படைத்த அவற்றுக்காக அமுதத்தில் பெரும்பகுதியை தாமே குடித்தார்.(16) அவர் தாம் குடித்த அமுதத்தில் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வந்த ஏப்பத்தில் சுற்றிலும் சிறந்த நறுமணம் கமழ்ந்தது. அந்த ஏப்பத்தின் விளைவால் சுரபி என்ற பெயரைக் கொண்ட ஒரு பசுப் பிறந்ததைத் தக்ஷர் கண்டார். எனவே இவ்வகையில் அவருடைய மகளான இந்தச் சுரபி அவரது வாயில் இருந்து உண்டானாள்.(17) சுரபி என்றழைக்கபடும் அந்தப் பசு, உலகத்தின் தாய்மாராகக் கருதப்படும் எண்ணற்ற மகளை ஈன்றெடுத்தாள். அவற்றின் நிறம் பொன்னைப் போல இருந்தது. அவை அனைத்தும் கபிலைகளாக இருந்தன. அவை உயிரினங்கள் அனைத்தின் வாழ்வாதார வழிமுறைகளாக இருந்தன.(18) ஆற்றில் அலைகள் ஒன்றோடொன்று மோதும்போது, அனைத்துப் பக்கங்களிலும் அபரிமிதமான நுரை உண்டாவதைப் போலவே அமுதத்துக்கு ஒப்பான நிறத்தைக் கொண்ட அந்தப் பசுக்கள் பால் பொழியத் தொடங்கிய போது, அந்தப் பாலின் நுரை எழுந்து, அனைத்துப் புறங்களிலும் பரவத் தொடங்கின[3].(19)அனைத்து உயிரினங்களின் நோக்கத்தை அறிந்தவரும், அனைத்து உயிரினங்களின் புனிதமான தலைவருமான தக்ஷர், தாம் படைத்த அவற்றுக்காக அமுதத்தில் பெரும்பகுதியை தாமே குடித்தார்.(16) அவர் தாம் குடித்த அமுதத்தில் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வந்த ஏப்பத்தில் சுற்றிலும் சிறந்த நறுமணம் கமழ்ந்தது. அந்த ஏப்பத்தின் விளைவால் சுரபி என்ற பெயரைக் கொண்ட ஒரு பசுப் பிறந்ததைத் தக்ஷர் கண்டார். எனவே இவ்வகையில் அவருடைய மகளான இந்தச் சுரபி அவரது வாயில் இருந்து உண்டானாள்.(17) சுரபி என்றழைக்கபடும் அந்தப் பசு, உலகத்தின் தாய்மாராகக் கருதப்படும் எண்ணற்ற மகளை ஈன்றெடுத்தாள். அவற்றின் நிறம் பொன்னைப் போல இருந்தது. அவை அனைத்தும் கபிலைகளாக இருந்தன. அவை உயிரினங்கள் அனைத்தின் வாழ்வாதார வழிமுறைகளாக இருந்தன.(18) ஆற்றில் அலைகள் ஒன்றோடொன்று மோதும்போது, அனைத்துப் பக்கங்களிலும் அபரிமிதமான நுரை உண்டாவதைப் போலவே அமுதத்துக்கு ஒப்பான நிறத்தைக் கொண்ட அந்தப் பசுக்கள் பால் பொழியத் தொடங்கிய போது, அந்தப் பாலின் நுரை எழுந்து, அனைத்துப் புறங்களிலும் பரவத் தொடங்கின[3].(19)அனைத்து உயிரினங்களின் நோக்கத்தை அறிந்தவரும், அனைத்து உயிரினங்களின் புனிதமான தலைவருமான தக்ஷர், தாம் படைத்த அவற்றுக்காக அமுதத்தில் பெரும்பகுதியை தாமே குடித்தார்.(16) அவர் தாம் குடித்த அமுதத்தில் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வந்த ஏப்பத்தில் சுற்றிலும் சிறந்த நறுமணம் கமழ்ந்தது. அந்த ஏப்பத்தின் விளைவால் சுரபி என்ற பெயரைக் கொண்ட ஒரு பசுப் பிறந்ததைத் தக்ஷர் கண்டார். எனவே இவ்வகையில் அவருடைய மகளான இந்தச் சுரபி அவரது வாயில் இருந்து உண்டானாள்.(17) சுரபி என்றழைக்கபடும் அந்தப் பசு, உலகத்தின் தாய்மாராகக் கருதப்படும் எண்ணற்ற மகளை ஈன்றெடுத்தாள். அவற்றின் நிறம் பொன்னைப் போல இருந்தது. அவை அனைத்தும் கபிலைகளாக இருந்தன. அவை உயிரினங்கள் அனைத்தின் வாழ்வாதார வழிமுறைகளாக இருந்தன.(18) ஆற்றில் அலைகள் ஒன்றோடொன்று மோதும்போது, அனைத்துப் பக்கங்களிலும் அபரிமிதமான நுரை உண்டாவதைப் போலவே அமுதத்துக்கு ஒப்பான நிறத்தைக் கொண்ட அந்தப் பசுக்கள் பால் பொழியத் தொடங்கிய போது, அந்தப் பாலின் நுரை எழுந்து, அனைத்துப் புறங்களிலும் பரவத் தொடங்கின[3].(19)பாலை உறிஞ்சி கொண்டிருந்த கன்றுகளின் வாயில் இருந்த நுரைகள், அப்போது பூமியில் அமர்ந்திருந்த மஹாதேவனின் தலையில் விழுந்தது. பலமிக்க மஹாதேவன், கோபத்தால் நிறைந்து, தன் கண்களை அந்தப் பசுக்களின் மேல் செலுத்தினான்.(20) அவனது நெற்றியை அலங்கரித்திருந்த மூன்றாவது கண்ணால் அவன் அவற்றைப் பார்ப்பது, அவற்றை எரிப்பதைப் போலத் தெரிந்தது. மேகங்களைப் பல வண்ணங்களில் ஒளிரச் செய்யும் சூரியனைப் போலவே, மஹாதேவனின் மூன்றாவது கண்ணில் இருந்து வெளிப்பட்ட சக்தியானது, அந்தப் பசுக்களில் பல்வேறு நிறங்களை உண்டாக்கியது. எனினும், சோமலோகத்தில் நுழைந்ததன் மூலம் மஹாதேவனின் பார்வையில் இருந்து தப்பித்தவையின் நிறத்தில் எந்த மாற்றமும் உண்டாகததால் அவை பிறந்த போது இருந்த நிறத்துடனேயே இருந்தன.(21,22)

உயிரினங்கள் அனைத்தின் தலைவரான தக்ஷர், மஹாதேவன் பெருங்கோபம் கொண்டதைக் கண்டு, அவனிடம்,(23) “ஓ! பெருந்தேவா, நீ அமுதத்தால் நனைந்திருக்கிறாய். தாயிடம் பால் பருகும் கன்றுகளின் வாயில் இருந்து விழும் பாலோ, நுரையோ தூய்மையான எச்சமாக[4] ஒருபோதம் கருதப்பட்டதில்லை. அமுதத்தைப் பருகும் சந்திரமாஸ் {சந்திரன்}, மீண்டும் அதைப் பொழிகிறான். எனினும், அது தூய்மையற்றதாகப் பார்க்கப்படுவதில்லை.(24) அதே போலவே, பசுக்கள் தரும் பாலும், அமுதத்தில் இருந்தே பிறந்ததால், (கன்றின் வாயால் மடி தீண்டப்பட்டதால்) அஃது ஒருபோதும் தூய்மையற்றாகக் கருதப்படக்கூடாது. காற்று ஒருபோதும் தூய்மையற்றதாகாது. நெருப்பு ஒருபோதும் தூய்மையற்றதாகாது. பொன் ஒருபோதும் தூய்மையற்றதாகாது. கடல் ஒருபோதும் தூய்மையற்றதாகாது.(25) அமுதமானது, தேவர்களால் பருகப்பட்டாலும் கூட ஒருபோதும் தூய்மையற்றதாகாது. அதே போலவே, பசுவின் பாலும், கன்றால் மடி உறிஞ்சப்பட்டாலும் ஒருபோதும் தூய்மையற்றதாகாது. இந்தப் பசுக்கள், தாம் தரும் பாலின் மூலமும் அதிலிருந்து உண்டாகும் நெய்யின் மூலம் மூன்று உலகங்களையும் ஆதரிக்கப் போகின்றன.(26) அமுதத்தோடு அடையாளங்காணப் படக்கூடிய பசுவின் மங்கலச் செல்வத்தை அனைத்து உயிரினங்களும் அனுபவிக்க விரும்புகின்றன” என்றார் {தக்ஷர்}. உயிரினங்கள் அனைத்தின் தலைவனான தக்ஷர் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, மஹாதேவனுக்கு ஒரு காளையையும், பசுவையும் கொடையளித்தார்.(27)ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தக் கொடையின் மூலம் தக்ஷர், ருத்திரனின் இதயத்தை நிறைவடையச் செய்தார். இவ்வாறு நிறைவடைந்த மஹாதேவன், தன் வாகனமாக அந்தக் காளையை அமைத்துக் கொண்டான். அந்தப் பசுவின் வடிவத்தைக் கொண்டே மஹாதேவன் தன் போர்த்தேரில் மிதக்கும் கொடிமரத்தின் பொறியை அமைத்துக் கொண்டான். இந்தக் காரணத்தினாலேயே ருத்திரன், காளைக்கொடி தேவன் என்று அறியப்படுகிறான்.(28) அந்நிகழ்வில்தான் தேவர்கள் அனைவரும் கூடி மஹாதேவனை விலங்குகளின் தலைவனாக நிறுவினர். உண்மையில் பெரும் ருத்திரன் பசுக்களின் தலைவனாகி, காளைக்கொடி தேவனென்றும் பெயரிடப்பட்டான்.(29)

எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பசுக்கொடையளிக்கும் காரியத்தில், பெருஞ்சக்தி கொண்டதும், (வெண்மையிலிருந்து) மாறா நிறம் கொண்டதுமான கபிலைப்பசுவே அடிப்படையில் விரும்பப்படும் கொடையாகக் கருதப்படுகிறது.(30) இவ்வாறே உலகத்தின் உயிரினங்கள் அனைத்திலும் பசுக்களே முதன்மையானவையாக இருக்கின்றன. அவற்றில் இருந்தே உலகங்கள் அனைத்திற்கும் தேவையான வாழ்வாதாரங்கள் தோன்றின. அவை ருத்திரனையே தங்கள் தலைவனாகக் கொண்டவையாகும். அவை பாலின் வடிவில் சோமத்தை (அமுதத்தைக்) கொடுக்கின்றன. அவை மங்கலமானவையாகவும், புனிதமானவையாகவும், அனைத்து விருப்பங்களையும் அருள வல்லவையாகவும், உயிரைக் கொடுக்கவல்லவையாகவும் இருக்கின்றன. ஒரு பசுவைக் கொடையளிப்பவன், மனிதர்களால் விரும்பப்படும் அனுபவிக்கத்தக்க அனைத்துப் பொருட்களையும் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(31) செழிப்பை அடைய விரும்பும் மனிதன், தூய இதயத்துடனும், தூய உடலுடனும் பசுவின் தோற்றத்தைக் குறித்த இந்த ஸ்லோகங்களைப் படித்தால், தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, செழிப்பு, பிள்ளைகள், செல்வம் மற்றும் விலங்குகளை அடைகிறான்.(32) ஓ! மன்னா, பசுக்கொடையளிப்பவன் ஹவ்ய மற்றும் கவ்ய கொடைகளுக்குரிய பலன்களையும், பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்துவதற்குரிய, அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும் வேறு அறச்செயல்களுக்குரிய, வாகனங்கள் மற்றும் துணிமணிகளைக் கொடையளிப்பதற்குரிய, பிள்ளைகள் மற்றும் முதியோரைப் பேணிவளர்ப்பதற்குரிய பலன்களையும் அடைவதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}”.(33)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஆஜமீட குலத்தைச் சேர்ந்தவனும், பிருதையின் மகனுமான அசரன் யுதிஷ்டிரன், தன் பாட்டனின் இச்சொற்களைக் கேட்டு, தன் சகோதரர்களுடன் சேர்ந்து, முதன்மையான பிராமணர்களுகு பல்வேறு நிறங்களிலான காளைகளையும், பசுக்களையும் கொடையளிக்கத் தொடங்கினான்.(34) உண்மையில், மறுமையில் இன்பலோகங்களை வெல்வதற்கும், இம்மையில் பெரும்புகழை அடைவதற்கும், மன்னன் யுதிஷ்டிரன் பல வேள்விகளைச் செய்து, பிராமணர்களுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களை வேள்விக் கொடையாக அளித்தான்”.(35)

கோமதி மந்திரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 78-பசுக்களின் சிறப்புகளையும், கோமதி மந்திரத்தையும் சௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“பழங்காலத்தில், இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவனும், நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான மன்னன் சௌதாசன்[1], தன் குடும்பப் புரோகிதரும், முனிவர்களில் முதன்மையானவரும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரும், எங்கும் செல்ல வல்லவரும், பிரம்மத்தின் கொள்ளிடமும், நித்திய வாழ்வை {மரணமற்ற வாழ்வைக்} கொண்டவருமான வசிஷ்டரை அணுகி அவரிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தான்.(1,2)சௌதாசன் {வசிஷ்டரிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! பாவமற்றவரே, மூவுலகங்களில் புனிதமானது எது? எப்போதும் உரைப்பதால் ஒரு மனிதனை உயர்ந்த பலனை அடையச் செய்வதும் எது?” என்று கேட்டான்”.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், ” தம் முன்பு தலைவணங்கி நின்ற மன்னன் சௌதாசனிடம் கல்விமானான வசிஷ்டர், முதலில் பசுக்களை வணங்கி (உடலாலும், மனத்தாலும்) தம்மைத் தூய்மைசெய்து கொண்டு, அனைவருக்கும் உயர்ந்த நன்மைகளை விளைவிக்கும் பசுக்கள் குறித்த புதிரைக் குறித்து உரையாடினார்.(4)

வசிஷ்டர், “பசுக்கள் எபோதும் நறுமணமிக்கவை. குங்கிலியம் கசிவதன் மூலம் தோன்றும் நறுமணம் அவற்றின் உடலில் இருந்து வெளிப்படுகிறது. பசுக்களே அனைத்து உயிரினங்களின் பெரும்புகலிடமாக இருக்கின்றன. பசுக்களே அனைத்துக்குமான அருள் ஊற்றாக அமைகின்றன.(5) பசுக்களே கடந்த காலமாகவும், எதிர்காலமாகவும் இருக்கின்றன. பசுக்களே வளர்ச்சியின் நித்திய ஊற்றாக இருக்கின்றன. பசுக்களே செழிப்பின் வேராக இருக்கின்றன. பசுக்களுக்குக் கொடுக்கப்படும் எதுவும் தொலைந்து போவதில்லை.(6) பசுக்களே உயர்ந்த உணவாக அமைகின்றன. அவையே தேவர்களுக்குச் சிறந்த ஹவியாக இருக்கின்றன. ஸ்வாஹா மற்றும் வஷட் என்றழைக்கப்படும் மந்திரங்கள் பசுக்களிலேயே எப்போதும் நிறுவப்பட்டிருக்கின்றன.(7) பசுக்கள வேள்விக்கனிகளாக அமைகின்றன. வேள்விகள் பசுக்களிலேயே நிறுவப்பட்டுள்ளன. பசுக்களே கடந்த காலமாகவும், எதிர்காலமாகவும் இருக்கின்றன, அவற்றைச் சார்ந்தே வேள்விகளும் இருக்கின்றன.(8) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஓ! பெரும்பிரகாசம் கொண்டவனே, ஹோமத்தில் பயன்படுத்தப்படும் ஹவியை முனிவர்களுக்குப் பசுக்களே காலையும், மாலையும் தருகின்றன.(9) ஓ! பெரும்பலம் கொண்டவனே, பசுக்களைக் கொடையளிப்போர், தாங்கள் இழைத்த பாவங்கள் அனைத்தையும் தாங்கள் வீழ நேரும் அனைத்து வகைத் துன்பங்களையும் கடக்கின்றனர்.(10)

தான் கொண்ட பத்துப் பசுக்களில் ஒரு பசுவைக் {10%} கொடையளிப்பவனும், நூறு பசுக்களில் பத்தைக் {10%} கொடையளிப்பவனும், ஆயிரம் பசுக்களில் நூறைக் {10%} கொடையளிப்பவனும் ஒரே அளவு பலனையே ஈட்டுகின்றனர்.(11) நூறு பசுக்களைக் கொண்டிருந்தாலும், நாள்தோறும் வழிபடுவதற்காக இல்லற நெருப்பை நிறுவாதவன், ஆயிரம் பசுக்களைக் கொண்டிருந்தாலும் வேள்விகளைச் செய்யாதவன், செல்வத்தைக் கொண்டிருந்தாலும் (கொடையளிக்காமல், விருந்தோம்பல் கடமைகளைச் செய்யாமல்) கஞ்சனாகச் செயல்படுபவன் ஆகிய மூவரும் மதிப்பெதற்கும் தகுதியற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்,(12) தீமையற்றவையும், துணிகளால் மறைக்கப்பட்டவையுமான கபிலைப்பசுக்களைக் கன்றுகளுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரங்களுடனும் கொடையளிக்கும் மனிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியடைகிறார்கள்.(13) பலமிக்கப் புலன்களைக் கொண்டதும், நூற்றுக்கணக்கான மந்தையில் முதன்மையானதாகக் கருதப்படுவதும், (பொன் அல்லது வெள்ளியிலான) ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடியதுமான இளங்காளையை வேத கல்வி கொண்ட ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதர்கள், இவ்வுலகில் பிறப்பெடுக்கும்போதெல்லாம் பெருஞ்செழிப்பையும், செல்வாக்கையும் அடைவதில் வெல்கிறார்கள்.(14,15)

ஒருவன் பசுக்களின் பெயர்களை உரைக்காமல் ஒருபோதும் படுக்கைக்குச் செல்லக்கூடாது. அதே போல, காலையில் பசுக்களின் பெயர்களைச் சொல்லாமல் ஒருபோதும் படுக்கையில் இருந்து எழவும் கூடாது. அவன் காலையும், மாலையும் பசுக்களிடம் மதிப்புடன் தலைவணங்க வேண்டும். இத்தகைய செயல்களின் விளைவால் அவன் நிச்சயம் பெருஞ்செழிப்பை அடைவான்.(16) பசுக்களின் சிறுநீர் மற்றும் சாணத்தில் அவன் ஒருபோதும் வெறுப்புணர்வு கொள்ளக்கூடாது. அவன் ஒருபோதும் பசு இறைச்சி உண்ணக்கூடாது. இதன் காரணமாக அவன் நிச்சயம் பெருஞ்செழிப்பை அடைவான்.(17) ஒருவன் எப்போதும் பசுக்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும். அவன் ஒருபோதும் எவ்வகையிலும் பசுக்களை அவமதிக்கக்கூடாது. கெட்ட கனவுகளைக் கண்டால் மனிதர்கள் பசுக்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(18) எப்போதும் பசுஞ்சாணம் பயன்படுத்தி நீராட வேண்டும். காய்ந்த பசுஞ்சாணத்திலே அமர வேண்டும். அவன் ஒருபோதும் பசுஞ்சாணத்தில் மலமும், சிறுநீரும் கழிக்கக்கூடாது, உமிழவும் கூடாது. அவன் ஒருபோதும் பசுவின் வழியில் தடங்கலேற்படுத்தக்கூடாது.(19) ஒருவன், நீரில் நனைத்துத் தூய்மை செய்யப்பட்ட பசுத்தோலில் அமர்ந்து, மேற்கு நோக்கிக் கண்களைச் செலுத்தி உண்ண வேண்டும். பேச்சை அடக்கி, வெறும் மண்ணை உணவாக்கி {தரையையே பாத்திரமாக்கி} அவன் நெய்யுண்ண வேண்டும். இத்தகைய செயல்களின் விளைவால் அவன் பசுக்களையே தோற்றுவாயாகக் கொண்ட செழிப்பை அடைவான்[2].(20)ஒருவன் நெய்யைப் பயன்படுத்தி நெருப்பில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அவன் நெய்யைக் கொடையளிப்பதன் மூலம் பிராமணர்களை ஆசி கூறச் செய்ய வேண்டும். அவன் நெய்க்கொடையளிக்க வேண்டும். அவன் நெய்யை உண்ணவும் வேண்டும். அத்தகைய செயல்களுக்கான வெகுமதியாக அவன் பசுக்கள் அழிக்கும் செழிப்பை நிச்சயம் அடைவான்.(21) கோமதி என்ற பெயரில் அழைக்கப்படும் வேத மந்திரங்களைச் சொல்லி எள்ளினாலான பசு வடிவத்தைச் செய்து, அனைத்து வகை ரத்தினங்களாலும் அஃதை அலங்கரித்துக் கொடையளிப்பவன், தான் செய்த செயல்கள் மற்றும் தவிர்த்த செயல்களின் காரணமாக எந்தத் துன்பத்தையும் ஒருபோதும் அனுபவிக்க மாட்டான்.(22) “பெரும் அளவில் பாலைத் தருபவையும், பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளைக் கொண்டவையும், சுரபியின் மகள்களுமான பசுக்கள், பெருங்கடலை அணுகும் ஆறுகளைப் போலவே என்னை அடையட்டும்.(23) நான் எப்போதும் பசுக்களைக் காண்பேன். பசுக்களும் என்னைப் பார்க்கட்டும். பசுக்கள் எங்களுக்குரியவை. நாங்கள் அவற்றுக்குரியவர்கள் பசுக்கள் இருக்கும் இடத்திலேயே நாங்கள் இருப்போம்”(24) என்று {மேற்கண்ட கோமதி மந்திரத்தைப்}[3] பேரச்சம் நேரும் வேளைகளில் இரவிலோ, பகலிலோ, இன்பத்திலோ, துன்பத்திலோ ஒரு மனிதன் சொல்ல வேண்டும். இத்தகைய சொற்களைச் சொல்வதன் மூலம் அவன் நிச்சயம் அனைத்து அச்சங்களில் இருந்து விடுபடுவான்” என்றார் {வசிஷ்டர்}.(25)

கோதானப் பலன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 79-பல்வேறு வகைப் பசுக்களைக் கொடையளிப்பதால் கிட்டும் பல்வேறு வகையான பலன்கள் குறித்து ஸௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்…

வசிஷ்டர் {மன்னன் சௌதாசன் (அ) கல்மாஷபாதனிடம்}“முற்காலத்தில் படைக்கப்பட்ட பசுக்கள், பெரும் முன்சிறப்புகளுடன் கூடிய நிலையை அடையும் விருப்பத்தில் நூறாயிரம் வருடங்கள் கடுந்தவங்களைப் பயின்றன.(1) உண்மையில், ஓ! பகைவரை எரிப்பவனே, அவை தமக்குள்ளேயே, “இவ்வுலகின் வேள்விகளில் அனைத்து வகையிலும் சிறந்த தக்ஷிணையாக மாறுவோம், எக்குற்றமும் இல்லாதவராவோம்.(2) நமது சாணம் கலந்த நீரில் நீராடுவதன் மூலம் மக்கள் புனிதமடையட்டும். அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் நோக்கில் தேவர்களும், மனிதர்களும் நமது சாணத்தைப் பயன்படுத்தட்டும். நம்மைக் கொடையளிப்பவர்களும் நமக்கான இன்பலோகங்களை அடையட்டும்” என்று {தங்களுக்குள்ளேயே} சொல்லிக் கொண்டன[1].(3,4)அவற்றின் தவங்கள் நிறைவடையும் தருணத்தில் அவற்றின் முன் தோன்றிய பலமிக்கப் பிரம்மன், அவை வேண்டிய வரங்களைக் கொடுத்து, “நீங்கள் விரும்பியவாறே ஆகட்டும். நீங்கள் உலகங்கள் அனைத்தையும் (இவ்வாறு) காப்பீராக” என்றான்.(5)

கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் அன்னையரான அவை அனைத்தும், தங்கள் விருப்பங்கள் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டு எழுந்தன. ஒவ்வொரு காலை வேளையிலும் மக்கள் மதிப்புடன் பசுக்களை வணங்க வேண்டும். இதன் விளைவாக அவர்கள் நிச்சயம் செழிப்பை வெல்வார்கள்.(6) ஓ! ஏகாதிபதி, பசுக்களின் தவங்கள் நிறைவடைந்தபோது அவை உலகின் புகலிடங்களாகின. இதன் காரணமாகவே பசுக்கள் உயர்ந்த அருளைக் கொண்டவையாகவும், புனிதமானவையாகவும், அனைத்திலும் முதன்மையானவையாகவும் சொல்லப்படுகின்றன. இதன் காரணமாகவே பசுக்கள் அனைத்து உயிரினங்களின் தலைக்கு மேலே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(7)

தனக்கு ஒப்பான கன்றுகளுடன் கூடியதும், அபரிமிதமான அளவில் பாலைக் கொடுப்பதும், தீய பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி பிரம்மலோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(8)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு சிவப்பு நிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சூரிய லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(9)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு பலவண்ணப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சோம லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(10)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு வெண்ணிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் இந்திர லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(11)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கருநிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் அக்னி லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(12)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதும், புகைவண்ணத்துடன் கூடியதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் யம லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(13)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், நீர் நுரையின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வருணலோகத்தை அடைகிறான்.(14)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், காற்றில் பறக்கும் தூசியின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் காற்றுதேவனின் உலகத்தில் {வாயுலோகத்தில்} பெரும் கௌரவங்களை அடைகிறான்.(15)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், பழுப்புநிறக் கண்களுடன் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், பொன் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் குபேரலோகத்தில் பேரின்பத்தை அனுபவிக்கிறான்.(16)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், வைக்கோல் புகையின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பித்ருக்களின் உலகத்தில் {பிதிருலோகத்தில்} பெரும் கௌரவங்களை அடைகிறான்.(17)

கன்றுடன் கூடியதும், தொண்டைச் சதை தொங்கும் ஒரு பருத்த பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் எளிதாக விஸ்வேதேவர்களின் உயர்ந்த உலகத்தை அடைகிறான்.(18)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பாலைத் தருவதும், அனைத்து வகைத் தீமையில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதும்மான ஒரு கௌரி பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வசுக்களின் உலகத்தை அடைகிறான்.(19)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், வெண்கம்பளி நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சாத்தியர்களின் உலகை அடைகிறான்.(20)

ஓ! மன்னா {சௌதாசா}, உயர்ந்த திமிலைக்கொண்டதும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி மருத்துகளின் உலகத்தை அடைகிறான்.(21)

வயதால் முழுமையாக வளர்ந்ததும், அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும் நீல நிறமாக இருப்பதுமான ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் உலகங்களை அடைகிறான்.(22)

தொண்டைச் சதை தொங்குவதும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி அனைத்துத் துன்பங்களில் இருந்து விடுபட்டு, பிரஜாபதிக்கே சொந்தமான உலகங்களை அடைகிறான்.(23)

ஓ! மன்னா, பசுக்கொடை அளிப்பதையே வழக்கமாகக் கொண்ட மனிதன், சூரியப் பிரகாசம் கொண்ட ஒரு தேரில் மேகங்களின் ஊடாகத் துளைத்துச் சென்று சொர்க்கத்தை அடைந்து அங்கே காந்தியுடன் ஒளிர்கிறான்.(24)

பசுக்கொடையளிப்பதை வழக்கமாகக் கொண்ட மனிதன் மனிதர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். இவ்வாறு சொர்க்கத்திற்குச் செல்லும்போது, அழகிய இடைகளைக் கொண்டவர்களும், அழகிய ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஆயிரம் தெய்வீகக் காரிகையரால் அவன் வரவேற்கப்படுகிறான். இப்பெண்கள் அங்கே அவனுக்குப் பணிவிடை செய்து, அவனை மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள்.(25) அமைதியாக அங்கே உறங்கும் அவன், அந்த மான்விழி மங்கையரின் வீணை இசையாலும், அவர்களுடைய வல்லகிகளின் மென்மையான சுரத்தாலும், நுபரங்களின் {காற்சிலம்புகளின்} இனிய கிண்கிணி ஒலியாலும், அவர்களுடைய சிரிப்பிசையாலும் விழிப்படைகிறான்[2].(26) பசுக்கொடையளிக்கும் மனிதன் சொர்க்கத்தில் வசிக்கிறான்; தான் கொடுக்கும் பசுக்களின் உடலில் உள்ள மயிர்களின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்களுக்கு அவன் அங்கே கௌரவிக்கப்படுகிறான். (புண்ணியம் தீர்ந்து) சொர்க்கத்தில் வீழ நேரும் அத்தகைய மனிதன் மனித வகையிலேயே பிறப்பெடுக்கிறான்; உண்மையில் மனிதர்களுக்கு மத்தியில் ஒரு மேம்பட்ட குடும்பத்திலேயே பிறப்பெடுக்கிறான்” என்றார் {வசிஷ்டர்}.(27)

கோ மந்திரங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 80- பசுவைக் குறிக்கும் புனித மந்திரங்களை ஸௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்…

வசிஷ்டர் {மன்னன் சௌதாசனிடம்}“பசுக்கள் நெய்யையும், பாலையும் தருகின்றன. அவையே நெய்யின் ஊற்றுக்கண்ணாகவும், {அமுதம் போன்ற} நெய்யில் இருந்து உண்டானவையாகவும் இருக்கின்றன. அவையே நெய்யாறுகளாகவும், நெய்ச்சுழல்களாகவும் இருக்கின்றன. பசுக்கள் எப்போதும் என் வீட்டில் இருக்கட்டும்.(1) நெய்யே எப்போதும் என் இதயமாக இருக்கிறது. நெய்யானது என் தொப்புளிலும் நிறுவப்பட்டிருக்கிறது. நெய்யானது என் அங்கங்கள் யாவிலும் உள்ளது. நெய் என் மனத்தில் வசிக்கிறது.(2) பசுக்கள் எப்போதும் என் முன்னே இருக்கின்றன. பசுக்கள் எப்போதும் என் பின்னே இருக்கின்றன. என் மேனியின் அனைத்துப் பக்கங்களிலும் பசுக்கள் இருக்கின்றன. நான் பசுக்களின் மத்தியிலேயே வாழ்கிறேன்”(3) என்ற இந்த மந்திரத்தை நீரைத்தொட்டுத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு காலையிலும், மாலையிலும் ஒவ்வொரு நாளும் ஒருவன் சொல்ல வேண்டும். இதனால் அந்த நாளில் தான் இழைக்கும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் அவன் விடுபடுவான்.(4)

ஆயிரம் {1,000} பசுக்களைக் கொடையளித்து இவ்வுலகத்தைவிட்டுச் செல்லும் ஒருவன், வசு என்றழைக்கப்படும் தெய்வீக கங்கை ஏங்கே பாய்கிறதோ, எங்கே பொன் மாளிகைகள் பல இருக்கின்றனவோ, எங்கே கந்தர்வர்களும், அப்சரஸ்களும் இருக்கின்றனரோ அந்த உலகங்களுக்குச் செல்கிறான்.(5) ஆயிரம் {1,000} பசுக்களைக் கொடையளித்தவர்கள், ஓடும் நீராகப் பாலையும், சேறாகப் பாலாடைக்கட்டிகளையும் {வெண்ணையையும்}, மிதக்கும் பாசியாகத் தயிரையும் கொண்ட பல ஆறுகள் எங்கே ஓடுகின்றனவோ அங்கே செல்கிறார்கள்.(6) சாத்திரங்களிலுள்ள சடங்குகளுக்கு ஏற்புடைய வகையில் நூறாயிரம் {1,00,000} பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன், (இம்மையில்) பெருஞ்செழிப்பை அடைந்து, சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(7) அத்தகைய மனிதன் தன் தந்தைவழி மற்றும் தாய்வழி மூதாதையரில் பத்து தலைமுறையினரை பேரின்பம் நிறைந்த உலகங்களை அடையச்செய்து தன் மொத்த குலத்தையும் புனிதப்படுத்துகிறான்.(8)

பசுக்கள் புனிதமானவை. அவை உலகில் உள்ள அனைத்திலும் முதன்மையானவை. அவையே உண்மையில் அண்டத்தின் புகலிடமாக இருக்கின்றன. அவையே தேவர்களின் அன்னையராகவும் இருக்கின்றன. அவை உண்மையில் ஒப்பற்றவையாகும். அவற்றை வேள்விக்கெனவே அர்ப்பணிக்க வேண்டும்.(9) ஒருவன் பயணம் புறப்படும்போது அவற்றுக்கு வலப்பக்கமாக (அவற்றைத் தனக்கு இடப்பக்கமாக வைத்துச்) செல்ல வேண்டும். சரியான காலத்தை உறுதிசெய்து கொள்ளும் அவர்கள் அவற்றைத் தகுந்த நபர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(10) பெருங்கொம்புகளைக் கொண்டதும், கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன், அச்சத்தில் இருந்து விடுபட்டவனாக, நுழையக் கடினமான யமனின் அரண்மனைக்குள் நுழைவதில் வெல்லலாம்.(11)

ஒருவன் எப்போதும், “பசுக்கள் அழகிய வடிவைக் கொண்டவை. பசுக்கள் பல்வேறு வடிவங்களிலானவை. அவை அண்டத்தின் வடிவம் கொண்டவை. அவையே அண்டத்தின் அன்னையராக இருக்கின்றன. ஓ! பசுக்கள் என்னை அணுகட்டும்” என்ற புனித மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.(12)பசுக்கொடையைவிடப் புனிதமிக்க வேறு கொடையேதும் இல்லை. அதிக அருள் பலனைக் கொடுக்கவல்ல வேறு கொடையேதும் இல்லை. பசுவுக்கு இணையான வேறேதும் இல்லை, அதே போலவே பசுவுக்கு இணையான வேறேதும் இருக்கப் போவதுமில்லை.(13) பசுவின் தோல், மயிர், கொம்புகள், வால், பால், கொழுப்பு ஆகியவை அனைத்தும் வேள்வியை ஆதரிக்கின்றன. பசுவை விடப் பயன்மிக்கதாக இருப்பது வேறு எது?(14) கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் தாயும், அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய மொத்த அண்டத்தையும் மறைத்திருப்பதுமான பசுவுக்கு நான் மதிப்புடன் தலைவணங்குகிறேன்.(15) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, பசுத் தரும் உயர்ந்த பலன்களில் ஒரு பகுதியை மட்டுமே நான் உனக்கு உரைத்திருக்கிறேன். பசுக்கொடையைவிட மேன்மையான கொடை இவ்வுலகில் வேறேதும் இல்லை. பசுவை விட உயர்ந்த புகலிடமும் இவ்வுலகில் வேறேதும் இல்லை” என்றார் {வசிஷ்டர்}”.(16)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்மா கொண்ட அந்த நிலக் கொடையாளி (மன்னன் ஸௌதாசன்) முக்கியமானவற்றில் முதன்மையான முனிவர் வசிஷ்டரின் இந்தச் சொற்களை நினைவுகூர்ந்து, புலனடக்கத்துடன் கூடியவனாகப் பெரும் எண்ணிக்கையிலான பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளித்தான். மேலும், அக்கொடைகளின் விளைவாக அந்த ஏகாதிபதி மறுமையில் பல இன்பலோகங்களை அடைவதில் வென்றான்” {என்றார் பீஷ்மர்}.(17)

கோலோகம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 81-அருளப்பட்டவர்கள் அடையும் பசுக்களின் உலகத்தைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, புனிதப்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் இவ்வுலகில் உயர்வானதும், ஏற்கனவே குறிப்பிடப்பட்ட வேறு புனிதங்கள் யாவற்றையும் விட மிகப் புனிதமானது எது?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“பசுக்களே அனைத்திலும் முதன்மையானவை. அவை மிகப் புனிதமானவை மற்றும் அவையே மனிதர்களை (அனைத்து வகைப் பாவங்கள் மற்றும் துன்பங்களில் இருந்தும்) மீட்கின்றன. தாங்கள் தரும் பால், மற்றும் அதிலிருந்து உண்டாகும் ஹவி ஆகியவற்றின் மூலம் பசுக்களே அண்டத்தின் உயிரினங்கள் யாவற்றையும் தாங்கிப் பிடிக்கின்றன.(2) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பசுக்களைவிடப் புனிதமானது வேறேதும் இல்லை. மூவுலகங்களில் உள்ள அனைத்திலும் முதன்மையான பசுக்களே புனிதமானவையாகவும், பிறரைத் தூய்மைப்படுத்த வல்லவையாகவும் இருக்கின்றன.(3) பசுக்கள், தேவலோகத்தையும் விட உயர்ந்த உலகத்தில் வசிக்கின்றன. கொடையளிக்கப்படும் போது தங்களைக் கொடையளித்தவர்களை அவை மீட்கின்றன. ஞானமுள்ள மனிதர்கள் பசுக்கொடைகளை அளிப்பதன் மூலம் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(4)

யுவனாஸ்வனின் மகன் மாந்தாத்ரி {மாந்தாதா}, யயாதி, (அவனது தந்தையான) நஹுஷன் ஆகியோர் ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையளித்தனர்.(5) அந்தக் கொடைகளின் வெகுமதியாக அவர்கள் தேவர்களாலும் அடைய முடியாத அத்தகைய உலகங்களை அடைந்தனர். ஓ!பாவமற்றவனே, இது தொடர்பாகப் பழங்காலத்தில் ஓர் உரையாடல் நடந்திருக்கிறது. அதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(6) ஒரு காலத்தில், நுண்ணறிவுமிக்கச் சுகர், தமது காலைச் சடங்குகளை முடித்துக் கொண்டு, மன அடக்கத்துடன் கூடியவராக, தீவில் பிறந்தவரும், முனிவர்களில் முதன்மையானவரும், மேன்மை, கீழ்மை ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாட்டை அறிந்தவரும், தமது தந்தையுமான கிருஷ்ணரை {வியாசரை} அணுகி, அவரை வணங்கி, அவரிடம், “வேள்விகள் அனைத்திலும் முதன்மையானது என உமக்குத் தோன்றும் வேள்வி யாது?(7,8) ஞானமுள்ள மனிதர்கள் எச்செயலைச் செய்வதன் மூலம் உயர்ந்த உலகத்தை அடைவதில் வெல்கின்றனர்? புனிதமான எச்செயலைச் செய்ததன் மூலம் தேவர்கள் சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிக்கிறார்கள்?(9) எந்த வேள்விப் பண்பு வேள்வியாக அமைகிறது? {அதாவது, வேள்வியை நிறைவடையச் செய்வது எது?} வேள்வியானது எதைச் சார்ந்திருக்கிறது? தேவர்களால் சிறந்ததெனக் கருதப்படுவது எது? ஓ! ஐயா, அனைத்திலும் மிகப் புனிதமானது எது என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(10)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, தமது மகனின் இச்சொற்களைக் கேட்டவரும், கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான வியாசர் அவரிடம் பின்வருமாறு உரையாடினார்.

வியாசர் {சுகரிடம்}, “பசுக்களே அனைத்து உயிரினங்களின் ஆதாரமாக இருக்கின்றன. பசுக்களே அனைத்து உயிரினங்களின் புகலிடமாக இருக்கின்றன. பசுக்கள் புனிதமானவை, பசுக்களே அனைத்தையும் புனிதப்படுத்துபவையுமாகும்.(12) முன்பு பசுக்கள் கொம்பற்றவையாக இருந்ததாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கொம்புகளைப் பெறுவதற்காக நித்தியமானவனும், பலமிக்கவனுமான பிரம்மனை அவை துதித்தன.(13) பலமிக்கப் பிரம்மன், பசுக்கள் பிராயத்தில் அமர்ந்து தங்கள் துதிகளைச் செலுத்துவதைக் கண்டு, அவை ஒவ்வொன்றும் விரும்பியதைக் கொடுத்தான்.(14) அதன் பிறகு அவற்றுக்குக் கொம்புகள் முளைத்தன, அவை ஒவ்வொன்றுக்கும் விரும்பியவை கிடைத்தன. ஓ! மகனே, பல்வேறு வண்ணங்களிலும் இருந்தவையும், கொம்புகளுடன் கூடியவையுமான அவை அழகில் ஒளிரத் தொடங்கின.(15)

பிரம்மனாலேயே வரமளிக்கப்படப் பசுக்கள் மங்கலமானவையாகவும், ஹவ்யகவ்யங்களைக் கொடுப்பவையாகவும் இருக்கின்றன. அவையே பலன்களின் உடல்வடிவமாக இருக்கின்றன. அவை புனிதமானவையாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. அவை சிறந்த வடிவங்களையும், குணங்களையும் கொண்டவையாக இருக்கின்றன.(16) பசுக்களில் உயர்ந்த மற்றும் சிறந்த சக்தி இருக்கிறது. பசுக்கொடை பெரிதும் மெச்சப்படுகிறது. செருக்கிலிருந்து விடுபட்டு, பசுக்கொடையளிக்கும் நல்லோர்(17) அறச்செயல்களைச் செய்பவர்களாகவும், அனைத்துப் பொருட்களையும் கொடையளித்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். ஓ! பாவமற்றவனே, அத்தகைய மனிதர்கள் உயர்ந்ததும் புனிதமானதுமான பசுக்களின் உலகத்தை அடைகிறார்கள்.(18) அங்குள்ள மரங்கள் இனிய கனிகளை உண்டாக்குகின்றன. உண்மையில் அம்மரங்கள் சிறந்த மலர்களாலும், கனிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. ஓ!மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அம்மலர்கள் தெய்வீக நறுமணத்துடன் கூடியவையாக இருக்கின்றன.(19) அவ்வுலகத்தில் உள்ள மொத்த நிலமும் ரத்தினங்களால் ஆனதாக இருக்கிறது. மண் யாவும் பொன்னாக இருக்கின்றன. ஒவ்வொரு பருவகாலங்களுக்கும் உரிய சிறப்பான தட்பவெப்ப நிலையே அங்கே நிலவுகிறது. அங்கே புழுதியோ, தூசியோ இருப்பதில்லை. உண்மையில் உயர்ந்த மங்கலம் நிறைந்ததாக அஃது இருக்கிறது.(20)

அங்கே பாயும் ஓடைகள், மலர்ந்த செந்தாமரைகளைத் தங்கள் மார்பில் தாங்கி, ரத்தினங்களையும் பொன்னையும் தங்கள் கரைகளில் தாங்கி காலைச் சூரியனின் பிரகாசத்துடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.(21) விலைமதிப்புமிக்க ரத்தின இதழ்களையும், பொன்மயமாகப் பிரகாசிக்கும் மகரந்தங்களையும் கொண்ட கருநெய்தல் மற்றும் தாமரை மலர்கள் கலந்து நிலையில் நிரம்பியிருக்கும் மடுக்களும் அங்கே நிறைந்திருந்தன.(22) சுற்றிலும் கொடிகளால் பின்னப்பட்டு மலர்ந்திருக்கும் அலரிக் காடுகளாலும், மலர்ச்சுமைகளுடன் கூடிய ஸந்தானக {ஸகஸ்ராவர்த்த} காடுகளாலும் அவை {அந்த மடுக்கள்} அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.(23) பிரகாசமான முத்துகள், மிளிரும் ரத்தினங்கள் மற்றும் ஒளிரும் பொன் ஆகியவற்றால் பல வண்ணங்களை அடைந்திருக்கும் கரைகளைக் கொண்ட ஆறுகளும் அங்கே இருக்கின்றன.(24) அந்த உலகத்தின் சில பகுதிகள் அனைத்து வகை ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிறந்த மரங்களால் மறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில பொன்னாலானவையாகவும், சில நெருப்பின் காந்தியை வெளிப்படுத்துபவையாகவும் இருக்கின்றன.(25)

பொன் மலைகள் பலவும், ரத்தினங்களாலான குன்றுகள் மற்றும் கொடுமுடிகள் பலவும் அங்கே இருக்கின்றன. அனைத்து வகை ரத்தினங்களாலும் அமைந்த நெடுஞ்சிகரங்களின் விளைவால் அவை அழகில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.(26) அவ்வுலகதை அலங்கரிக்கும் மரங்கள் எப்போதும் மலர்களையும், கனிகளையும் விளைவிக்கின்றன, அவையும் எப்போதும் அடர்த்தியாக இருக்கும் இலைகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஓ! பாரதக் குலத்தின் தலைவா[1], அம்மலர்கள் எப்போதும் தெய்வீக நறுமணத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன, கனிகளும் பெரும் சுவைமிக்கவையாகவும் இருக்கின்றன.(27) ஓ! யுதிஷ்டிரா, அறச்செயல்களைச் செய்த மனிதர்க்ள எப்போதும் அங்கே இன்பமாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். துன்பம் மற்றும் கோபத்தில் இருந்து விடுபட்ட அவர்கள் தங்கள் விருப்பங்கள் யாவும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டுத் தங்கள் காலத்தை அங்கே கழிக்கின்றனர்.(28) ஓ! பாரதா, அறச்செயல்களைச் செய்தவர்களும், புகழ் கொண்டவர்களுமான மனிதர்கள், பேரழகுடன் கூடிய இனிய வாகனங்களில் ஓரிடத்தில் இருந்து மறுஇடத்திற்குச் சென்று மகிழ்ச்சியில் அங்கே விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.(29) மங்கலமான அப்சரஸ் கூட்டங்கள், தங்கள் ஆடல் பாடல்களின் மூலம் அங்கே அவர்களை மகிழ்வித்துக் கொண்டு இருக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரா, உண்மையில் பசுக்கொடைகளை அளிப்பதற்கன வெகுமதியாக ஒரு மனிதன் அத்தகைய உலகத்திற்குச் செல்கிறான்.(30)பூஷன் மற்றும் பெரும்பலம் கொண்ட மருத்துகளைத் தங்கள் தலைவர்களாகக் கொண்ட உலகங்கள் பசுக்களைக் கொடையளிப்பவர்களால் அடையப்படுகின்றன. அரச வருணன் செல்வத்ததில் மேம்பட்டவனாகக் கருதப்படுகிறான். பசுக்கொடையாளியானவன், வருணனைப் போன்ற செல்வநிலையை அடைவான். ஒருவன், உறுதியான நோன்பு கொண்டவனாக, “யுகாந்தரா {காலத்தைத் தாங்குபவை}, சுரூபா {அழகான வடிவம் கொண்டவை}, பஹுரூபா {பல நிறங்களைக் கொண்டவை}, விஷ்வரூபா {அண்டந்தழுவியவை}, மாதரா {அன்னையராய் இருப்பவை ஆகிய பசுக்கள் என்னைக் காக்கட்டும்}” என்று (பசுக்களைப் பொறுத்தவரையில்) பிரஜாபதியாலேயே அறிவிக்கப்பட்ட இந்த மந்திரத்தை நாள்தோறும் சொல்ல வேண்டும்[2].(31,32)மதிப்புடன் பசுக்களுக்குத் தொண்டாற்றுபவனும், பணிவுடன் அவற்றைப் பின் தொடர்பவனுமான ஒருவன், தன்னிடம் நிறைவடைந்த பசுக்களிடமிருந்து மதிப்புமிக்கப் பல வரங்களை அடைவதில் வெல்கிறான்.(33) ஒருவன் தன் இதயத்தாலும் {மனத்தாலும்} ஒருபோதும் பசுக்களுக்குத் தீங்கு செய்யக்கூடாது. உண்மையில் அவன் அவற்றுக்கு மகிழ்ச்சியையே அளிக்க வேண்டும். அவன் எப்போதும் பசுக்களை மதித்து, தலைவணங்கி அவற்றை வழிபட வேண்டும்.(34) புலனடக்கத்துடனும், உற்சாகத்துடனும் கூடிய ஒருவன் பசுவால் அனுபவிக்கக்கூடிய (பசுவால் மட்டுமே கொடுக்கப்படக்கூடிய) இன்பநிலையை அனுபவிப்பதில் வெல்கிறான். அவன் மூன்று நாட்கள் பசுவின் சூடான சிறுநீரைக் குடிக்க வேண்டும். அடுத்த மூன்று நாளைக்கு அவன் பசுவின் சூடான பாலைக் குடிக்க வேண்டும்.(35) இவ்வாறு மூன்று நாட்கள் சூடான பாலைக் குடிக்கும் அவன் அடுத்த மூன்று நாள் சூடான நெய்யைக் குடிக்க வேண்டும். இவ்வகையில் மூன்று நாள் சூடான நெய்யைக் குடித்த ஒருவன், அடுத்த மூன்று நாட்கள் காற்றை மட்டுமே உண்டு வாழ வேண்டும்.(36) {இவற்றின் மூலம்} இன்ப உலகங்களை அனுபவிக்கத் தேவர்களுக்குத் துணை செய்வதும், புனிதமான பொருட்கள் அனைத்திலும் மிகப் புனிதமானதுமான நெய்யானது தலையில் தாங்கப்பட வேண்டும்[3].(37)நெய்யின் துணை கொண்டே ஒருவன் ஆகுதிகளைப் புனித நெருப்பில் ஊற்ற வேண்டும். நெய்க்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் பிராமணர்களைத் தனக்கு ஆசி கூறச் செய்ய வேண்டும். ஒருவன் நெய்யுண்டு, நெய்க்கொடை அளிக்க வேண்டும். இந்நடத்தையின் வெகுமதியாக அவன் பசுக்களுக்குச் செந்தமான செழிப்பை அடைவான்.(38) ஒரு மாத காலம் ஒவ்வொரு நாளும் பசுஞ்சாணத்தில் இருந்து யவங்கள் எனும் அரிசியை உண்பதால் ஒருவன் பிராமணனைக் கொன்ற பாவத்தைப் போன்ற கொடும்பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(39) தைத்தியர்களிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு தேவர்கள் பாவக்கழிப்பாக இதையே செய்தனர். இந்தப் பாவக்கழிப்பின் விளைவாகவே அவர்களால் தேவர்கள் என்ற தங்கள் நிலையை மீண்டும் பெற முடிந்தது. உண்மையில் இதன் மூலமே அவர்கள் தங்கள் பலத்தை மீண்டும் அடைந்து வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டனர்.(40) பசுக்கள் புனிதமானவை. அவை பலன்களின் {புண்ணியங்களின்} உடல் வடிவங்களாக இருக்கின்றன. அவை பாவங்களைப் போக்கவல்ல அனைத்திலும் எதிர்பார்க்கும் பலனைத் தரவல்லவையாகவும், உயர்வையாகவும்இருக்கின்றன. பிராமணர்களுக்குப் பசுக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான்.(41) பசுக்களுக்கு மத்தியில் தூய நிலையில் வாழும் ஒருவன், நீரைத் தீண்டிய பிறகு, கோமதி என்ற பெயரால் அறியப்படும் புனித மந்திரங்களை மனத்தால் உரைக்க வேண்டும். இதைச் செய்வதால் ஒருவன் (பாவங்கள் அனைத்தில் இருந்து) தூய்மையடைந்து புனிதமடைகிறான்.(42)

அறச்செயல்களைச் செய்வோரும், அறிவாலும், வேத கல்வியாலும், நோன்புகள் நோற்பதாலும் தூய்மையடைந்தோருமான பிராமணர்கள், புனித நெருப்புகளின் மத்தியிலோ, பசுக்கள், அல்லது பிராமணக் கூட்டங்களின் மத்தியிலோ மட்டுமே வசித்து, அனைத்து வகையிலும் ஒரு வேள்வியைப் போன்றதாக இருக்கும் (கோமதி மந்திரம் விளைவிக்கும் பலனுக்காக) கோமதி மந்திரத்தின் அறிவைத் தங்கள் சீடர்களுக்குப் போதிக்க வேண்டும். ஒருவன் கோமதி மந்திர ஞானம் எனும் வரத்தை அடைவதற்காக மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(43,44) ஒரு மகனை அடைய விரும்பும் மனிதன் இந்த மந்திரத்தைத் துதிப்பதன் மூலம் அஃதை அடைவான். செல்வத்தை அடைய விரும்பும் ஒருவன் இந்த மந்திரத்தைத் துதிப்பதன் மூலம் தன் விருப்பம் நிறைவேறப்பெறலாம். நல்ல கணவரை அடைய விரும்பும் பெண்ணானவள், இதே வழிமுறைகளின் மூலம் தன் விருப்பம் வெற்றியால் மகுடம் சூடப்படும் நிலையை அடையலாம். உண்மையில், இந்த மந்திரத்தைத் துதிப்பதன் மூலம் ஒருவன் தான் விரும்பும் எதுவும் கனியும் {தான் விரும்பும் எதையும் பெறும்} நிலையை அடையலாம்.(45) ஒருவன் பசுக்களுக்குச் செய்யும் தொண்டினால் அவனிடம் நிறைவடையும் அவை, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருள வல்லவையாக நிச்சயம் இருக்கின்றன. பசுக்கள் உயர்ந்த அருளைக் கொண்டவை. அவையே வேள்விக்கான முக்கியத் தேவையாக இருக்கின்றன. அவை அனைத்து விருப்பங்களையும் அருளக்கூடியவை ஆகும். பசுவைவிட மேன்மையானது வேறேதும் இல்லை என்பதை அறிவாயாக” {என்றார் வியாசர்}.(46)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு தமது உயர் ஆன்மத் தந்தையால் சொல்லப்பட்டவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான சுகர், அக்காலம் முதல் ஒவ்வொரு நாளும் பசு வழிபாட்டைச் செய்யத் தொடங்கினார். ஓ! மகனே, நீயும் அதே வழியில் உன்னை நடத்திக் கொள்வாயாக” {என்றார் பீஷ்மர்}.(47)

கோமயம் மற்றும் கோமியத்தில் ஸ்ரீதேவி! – அநுசாஸனபர்வம் பகுதி – 82-ஸ்ரீதேவிக்கும் பசுக்களுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், பசுக்களின் சாணத்திலும், சிறுநீரிலும் அந்த ஸ்ரீதேவியே வசிப்பது குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்},[1] “பசுக்களின் சாணத்தில் ஸ்ரீ {லட்சுமி} இருக்கிறாள் என நான் கேட்டிருக்கிறேன். அஃது எவ்வாறு என்பதை நான் கேட்க விரும்புகிறேன். ஓ! பாட்டா, என் ஐயங்களை நீர் அகற்ற வேண்டும்” என்று கேட்டான்.(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, இது தொடர்பாகப் பசுக்களுக்கும், ஸ்ரீக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில் ஸ்ரீதேவி {லட்சுமி தேவி}, ஓர் அழகிய வடிவை ஏற்றுக் கொண்டு ஒரு பசுமந்தைக்குள் நுழைந்தாள். அவளது அழகெனும் செல்வத்தைக் கண்ட பசுக்கள் ஆச்சரியத்தால் நிறைந்தன.(3)

பசுக்கள் {ஸ்ரீதேவியிடம்}, “ஓ! தேவி, நீ யார்? பூமியில் ஒப்பற்ற இவ்வழகை நீ எங்கிருந்து பெற்றாய்? ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட தேவியே, உன் அழகெனும் செல்வத்தைக் கண்டு நாங்கள் ஆச்சரியத்தால் நிறைகிறோம்.(4) நீ யார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். உண்மையில், நீ யார்? நீ எங்கே செல்லப் போகிறாய்? ஓ! மிக மேன்மையான ஒளிமிக்க நிறத்தைக் கொண்டவளே, நாங்கள் அறிய விரும்பும் அனைத்தையும் எங்களுக்கு விரிவாகச் சொல்வாயாக” என்றன.(5)

ஸ்ரீ {பசுக்களிடம்}, “நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. நான் உயிரினங்கள் அனைத்தின் அன்புக்குரியவள் ஆவேன். உண்மையில் நான் ஸ்ரீ என்ற பெயரால் அறியப்படுகிறேன். என்னால் கைவிடப்பட்ட தைத்தியர்கள் என்றென்றும் கெட்டுப் போனார்கள்.(6) இந்திரன், விவஸ்வத் {விவஸ்வான்}, சோமன், விஷ்ணு, வருணன், அக்னி ஆகிய தேவர்கள் என்னை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.(7) உண்மையில், முனிவர்களும், தேவர்களும் தங்களிடம் என்னைக் கொண்டிருக்கும்போது மட்டுமே வெற்றியால் மகுடம் சூடப்படுகின்றனர். பசுக்களே, எந்த உயிரினங்களுக்கு மத்தியில் நான் நுழையவில்லையோ அங்கே அழிவு நேருகிறது.(8) அறம், பொருள், இன்பம் ஆகியவை என்னுடன் சேர்ந்திருக்கும்போது மட்டுமே இன்பத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. மகிழ்ச்சியைக் கொடுப்பவர்களான பசுக்களே, நான் அத்தகைய சக்தியைக் கொண்டவள் என்பதை அறிவீராக.(9) நான் உங்களில் ஒவ்வொருவரிடமும் வசிக்க விரும்புகிறேன். நானே முன்வந்து உங்களை வேண்டுகிறேன். நீங்கள் அனைவரும் ஸ்ரீ உள்ளவர்களாவீராக” என்றாள்.(10)

பசுக்கள் {ஸ்ரீதேவியிடம்}, “நீ நிலையற்றவளாகவும், ஓய்வற்றவளாகவும் இருக்கிறாய். மேலும் நீ பலரால் அனுபவிக்கப்படுபவளாகவும் இருக்கிறாய் {நீ பலருக்குப் பொதுவானவளாக இருக்கிறாய்}. நாங்கள் உன்னைக் கொள்ள விரும்பவில்லை. நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக.(11) எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அனைவரும் நல்வடிவங்களைக் கொண்டவர்களாக இருக்கிறோம். உன்னால் எங்களுக்குத் தேவையென்ன இருக்கிறது? நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக. (எங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்ததன் மூலம்) நீங்கள் ஏற்கனவே எங்களை மிகவும் நிறைவடையச் செய்துவிட்டாய்” என்றன.(12)

ஸ்ரீ, “பசுக்களே, நீங்கள் என்னை வரவேற்காதது முறையா? நான் அடைதற்கரிதானவள். என்னை ஏன் நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள்?(13) சிறந்த நோன்புகளைக் கொண்ட உயிரினங்களே, வேண்டாமல் மற்றொருவரிடம் செல்லும் ஒருவன் அவமதிக்கப்படுவது நிச்சயம் என்ற உலகமறிந்த இப்பழமொழி உண்மை என்றே தெரிகிறது.(14) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், உரகர்கள், ராட்சசர்கள், மனிதர்கள் ஆகியோர் மிகக் கடுந்தவங்களைச் செய்தபிறகு மட்டுமே என்னை அடைவதில் வெல்கிறார்கள்.(15) இத்தகைய சக்தியைக் கொண்ட நீங்கள் என்னை ஏற்பீராக. இனியவர்களே, அசையும், மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகங்களிலும் ஒருபோதும் எவராலும் நான் அவமதிக்கப்படுவதில்லை” என்றாள்.(16)

பசுக்கள், “ஓ! தேவி, நாங்கள் உன்னை அவமதிக்கவில்லை. நாங்கள் உன்னை அவதூறு செய்யவும் இல்லை. நீ நிலையற்றவளாகவும், இதயத்தில் ஓய்வற்றவளாகவும் இருக்கிறாய். இதன் காரணமாக மட்டுமே நாங்கள் உன்னை விடுகிறோம்.(17) அதிகம் பேச என்ன இருக்கிறது? நீ தேர்ந்தெடுக்கும் இடத்திற்குச் செல்வாயாக. நாங்கள் அனைவரும் சிறந்த வடிவங்களைக் கொண்டவர்களாக இருக்கிறோம். ஓ! பாவமற்றளவே, உன்னால் எங்களுக்குத் தேவையென்ன இருக்கிறது?” என்று கேட்டன.(18)

ஸ்ரீ, “கௌரவங்களை அளிப்பவர்களே, இவ்வகையில் உங்களால் கைவிடப்படும் நான் நிச்சயம் உலகமெங்கும் அவமதிப்புக்குரியவளாக இருப்பேன். எனக்கு அருள் புரிவீராக.(19) நீங்கள் அனைவரும் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். உங்களிடம் பாதுகாப்பை நாடுவோரைப் பாதுகாக்க எப்போதும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் பாதுகாப்பை வேண்டியே நான் உங்களிடம் வந்திருக்கிறேன். என்னிடம் குற்றமேதுமில்லை. (இந்நிலையில் இருந்து) என்னைக் காப்பீராக.(20) நான் எப்போதும் உங்களிடம் அர்ப்பணிப்புடன் இருப்பேன் என்பதை அறிவீராக. உங்கள் உடலில் உள்ள இழிவான பகுதி ஒன்றிலாவது நான் வசிக்க விரும்புகிறேன். உண்மையில், நான் உங்கள் குதத்திலாவது வசிக்க விரும்புகிறேன்.(21) பாவமற்றவர்களே, நீங்கள் புனிதமானவர்களாகவும், உயர்ந்த அருளைப் பெற்றவர்களாகவும் இருப்பதால் உங்கள் உடலில் யாதொரு பாகத்தையும் அருவருக்கத்தக்கதாகக் கருதவில்லை. எனினும், என் வேண்டுதலை அருள்வீராக. உங்கள் உடல்களில் எந்தப் பகுதியில் நான் வசிக்க வேண்டும் என்பதைச் சொல்வீராக” என்று கேட்டாள்”.(22)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஸ்ரீயால் இவ்வாறு சொல்லப்பட்டவையும், எப்போதும் மங்கலமாக இருப்பவையும், தங்களிடம் அர்ப்பணிப்புள்ளவர்களிடம் அன்பு பாராட்டுபவையுமான பசுக்கள், ஓ! மன்னா, ஒன்றோடொன்று ஆலோசித்து, ஸ்ரீயிடம் இந்தச் சொற்களைச் சொல்லின.(23)

பசுக்கள், “ஓ! பெரும்புகழைக் கொண்டவளே, நாங்கள் உன்னைக் கௌரவிக்க வேண்டும் என்பது நிச்சயம் விரும்பத்தக்கதே. நீ எங்களது சிறுநீரிலும், சாணத்திலும் வாழ்வாயாக. ஓ! மங்கல தேவியே, இவை இரண்டும் புனிதமானவையே” என்றன.(24)

ஸ்ரீ, ” உதவ விரும்பி எனக்கு நீங்கள் அருள் புரிந்தது என் நற்பேறே. நீங்கள் சொன்னவாறே ஆகட்டும். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருப்பீராக. மகிழ்ச்சியை அளிப்பவர்களே, நான் உண்மையில் உங்களால் கௌரவிக்கப்பட்டேன்” என்றாள்”.(25)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பாரதா, பசுக்களுடன் இந்த உடன்படிக்கையைச் செய்து கொண்ட ஸ்ரீ, அங்கேயே, அப்போதே அந்தப் பசுக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன்னைக் காட்சியில் இருந்து மறைத்துக் கொண்டாள்.(26) ஓ! மகனே, இவ்வாறே நான் பசுஞ்சாணத்தின் மகிமை குறித்து உனக்குச் சொல்லிவிட்டேன். பசுக்களின் மகிமை குறித்து மீண்டுமொருமுறை உனக்குச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக” {என்றார் பீஷ்மர்}.(27)

சுரபிக்காக உண்டான கோலோகம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 83-சுரபி மேற்கொண்ட கடுந்தவத்தையும், பிரம்மன் சுரபிக்குக் கொடுத்த இறவாமை குறித்தும், கோலோகம் தேவலோகத்துக்கு மேலிருப்பதன் காரணத்தைக் குறித்தும் இந்திரனுக்குச் சொன்ன பிரம்மன்…

பீஷ்மர், “ஓ! யுதிஷ்டிரா, பசுக்கொடையளிப்போரும், புனித நெருப்பில் ஆகுதிகளாகக் காணிக்கையளிக்கப்பட்டவற்றில் எஞ்சியிருப்பதை உண்டு வாழ்வோரும் அனைத்து வகை வேள்விகளையும் எப்போதும் செய்பவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(1) தயிர் மற்றும் நெய்யின் துணையின்றி எந்த வேள்வியையும் செய்ய முடியாது. வேள்வியின் தன்மையே நெய்யைச் சார்ந்திருக்கிறது. எனவே, வேள்வியின் வேராகவே நெய் (அல்லது அதை உண்டாக்கிய பசு) கருதப்படுகிறது.(2) கொடைகளனைத்திலும் பசுக்கொடையே உயர்ந்ததென மெச்சப்படுகிறது. பசுக்களே அனைத்திலும் முதன்மையானவை. புனிதமான அவை, தூய்மை செய்வதிலும், புனிதப்படுத்துவதிலும் சிறந்தவையாக இருக்கின்றன.(3) செழிப்பையும், அமைதியையும் அடைவதற்காக மக்கள் பசுக்களைப் பேணி வளர்க்க வேண்டும். பசுக் கொடுக்கும் பால், தயிர் மற்றும் நெய் ஆகியன அனைத்து வகைப் பாவங்களில் இருந்தும் ஒருவனைத் தூய்மைப்படுத்த வல்லவையாகும்.(4) பசுக்கள், இவ்வுலகிலும், மேலுலகிலும் பெருஞ்சக்தி கொண்டவையாகச் சொல்லப்படுகின்றன. ஓ! பாரதக் குலத்தின் காளையே, பசுக்களை விடப் புனிதமிக்கவை வேறு எதுவும் இல்லை.(5)

ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பெரும்பாட்டனுக்கும், தேவர்கள் தலைவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(6) தேவர்கள் வீழ்த்தப்பட்டு மூவுலகங்களின் தலைவனாகச் சக்ரன் ஆன பிறகு, அனைத்து உயிரினங்களும் செழிப்பில் வளர்ந்து, உண்மை அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவையாக மாறின.(7) அப்போது ஒரு சந்தரப்பத்தில், ஓ! குரு குலத்தின் காளையே, முனிவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், உரகர்கள், ராட்சசர்கள், தேவர்கள், அசுரர்கள், சிறகு படைத்த உயிரினங்கள், பிரஜாபதிகள் என அனைவரும் ஒன்றுகூடி பெரும்பாட்டனைத் துதித்தனர். அங்கே நாரதர், பர்வதர், விஸ்வாவசு, ஹாஹா-ஹுஹு ஆகியோர்,(8,9) அந்த அனைத்து உயிரினங்களின் பலமிக்கத் தலைவனை {பிரம்மனைத்} துதித்து தெய்வீகத் தொனியில் பாடிக்கொண்டிருந்தனர். காற்றின தேவன் அங்கே தெய்வீக மலர்களின் நறுமணத்தைச் சுமந்து வந்தான்.(10)

உடல்வடிவங்களுடன் கூடிய பருவகாலங்களும், தெய்வீக இசையின் துணையுடன் தெய்வீகக் கன்னியர் ஆடிப் பாடிக் கொண்டிருந்த தேவர்களின் கூட்டத்திற்கு மலர்களின் குறிப்பிட்ட நறுமணங்களைத் தனித்தனியாகச் சுமந்து வந்தன. அந்தச் சபைக்கு மத்தியில் தேவர்களின் தலைவனிடம் {பிரம்மனிடம்} தலைவணங்கிய இந்திரன், அவனிடம்,(11,12) “ஓ! பெரும்பாட்டா, ஓ! புனிதமானவரே, உலகங்கள் அனைத்தின் தலைவர்களான தேவர்களின் உலகத்தைவிடக் கோலோகம் ஏன் உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.(13) ஓ! தலைவா, பசுக்கள் செய்த எந்தத் தவம் அல்லது எந்தப் பிரம்மச்சரியத்தின் விளைவால் அவை தேவர்களைவிட உயர்ந்த உலகத்தில் மகிழ்ச்சியாக வசிக்கவல்லவையாக இருக்கின்றன?” என்று கேட்டான் {இந்திரன்}.(14)

இந்திரனால் இவ்வாறு கேட்கப்பட்ட பிரம்மன் அந்தப் பலனைக் கொன்றவனிடம், “ஓ! பலனைக் கொன்றவனே {இந்திரனே}, நீ எப்போதும் பசுக்களை அவமதித்திருக்கிறாய்.(15) எனவே, உன்னால் பசுக்களின் மகிமையை முன்கூட்டியே அறிய முடியவில்லை. ஓ! பலமிக்கவனே, ஓ! தேவர்களின் தலைவா, பசுக்களின் மகிமையையும் பெருஞ்சக்தியையும் சொல்கிறேன் கேட்பாயாக.(16) பசுக்கள் வேள்வியின் அங்கங்களாகச் சொல்லப்படுகின்றன. ஓ! வாசவா அவை வேள்விக்கு ஒப்பானவையாக இருக்கின்றன. அவை இல்லாமல் வேள்வி ஏதும் இருக்க முடியாது.(17) அவற்றின் பால், அதனிலிருந்து உண்டாகும் ஹவி ஆகியவற்றால் அவை அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கின்றன.(18) அவற்றில் ஆண் கன்றுகள் உழவுக்குத் துணை செய்வதன் மூலம் நெல் முதலிய தானியங்களை விளைவிக்கன்றன.(19) அவற்றில் இருந்தே வேள்விகளும், ஹவ்யகவ்யங்களும், பால், தயிர் மற்றும் நெய்யும் உண்டாகின்றன. எனவே, ஓ! தேவர்களின் தலைவா, பசுக்கள் புனிதமானவையாக இருக்கின்றன. பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்படும் அவை பல்வேறு சுமைகளைச் சுமக்கின்றன.(20)

பசுக்கள் முனிவர்களை ஆதரிக்கின்றன. அவை பல்வேறு செயல்பாடுகளின் மூலம் அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கின்றன. ஓ! வாசவா, பசுக்கள் தங்கள் நடத்தையில் வஞ்சனையற்றவையாகும். அத்தகைய நடத்தையின் விளைவாலும், நன்கு செய்யும் செயல்களின் விளைவாலும் அவை நம்மை விட உயர்ந்த உலகங்களில் எப்போதும் வாழ்கின்றன.(21) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, பசுக்கள் ஏன் தேவர்களை விட உயர்ந்த உலகத்தில் வசிக்கின்றன என்பதை நான் இன்று உனக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்.(22) ஓ! வாசவா, பல சிறந்த பல வடிவங்களைக் கொண்ட பசுக்களே (பிறருக்கு) வரங்களை அளிப்பவையாகவும் இருக்கின்றன. அவை சுரபிகள் என்றழைக்கப்படுகின்றன. புனிதமான செயல்பாடுகளையும், மங்கலக் குறிகள் பலவற்றையும் கொண்ட அவை புனிதப்படுத்துவனவற்றில் உயர்ந்தவையாக இருக்கின்றன.(23) ஓ! பலனைக் கொன்றவனே, ஓ! தேவர்களின் தலைவா, சுரபியின் பிள்ளைகளான பசுக்கள் ஏன் பூமிக்கு இறங்கிச் சென்றன என்ற காரணத்தை விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(24)

ஓ! மகனே, பழங்காலத்தில் தேவயுகத்தில் உயர் ஆன்ம தேவர்கள் மூவுலகங்களின் தலைவர்களாக இருந்தபோது, அதிதி கடுந்தவங்களைச் செய்து (அதன் வெகுமதியாகத்) தன் கருவறையில் விஷ்ணுவைக் கொண்டாள். உண்மையில், ஓ! தேவர்களின் தலைவா, அவள் ஒரு மகனை விரும்பி நீண்ட பல வருடங்களாக ஒற்றைக் காலில் நின்று {தவம் செய்து} கொண்டு இருந்தாள்.(25,26) பெருந்தேவியான அதிதி இவ்வாறு கடுந்தவங்களைச் செய்வதைக் கண்டவளும், தக்ஷனின் மகளும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவளும், சிறப்புமிக்கவளுமான சுரபியும், அவளைப் போலவே தேவர்களும், கந்தர்வர்களும் செல்லும் அழகிய கைலாச மலைகளின் சாரலில் கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினாள்.(27,28) உயர்ந்த யோகத்தில் நிறுவப்பட்ட அவள், பதினோராயிரம் {11,000} வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று {தவம் செய்து} கொண்டு இருந்தாள்.(29) தேவர்கள், முனிவர்கள் மற்றும் பெரும் நாகர்கள் அனைவரும் அவளது தவங்களால் கடுமையாகச் சுடப்பட்டனர். என்னுடன் சேர்ந்து வந்த அவர்கள் அனைவரும் அந்த மங்கலத் தேவியைத் துதிக்கத் தொடங்கினர்.(30)

அப்போது நான், “ஓ! தேவி, ஓ! களங்கமற்ற ஒழுக்கம் கொண்டவளே, எக்காரியத்திற்காக நீ இத்தகைய கடுந்தவங்களைச் செய்கிறாய்?(31) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, ஓ! அழகானவளே, உன் தவங்களால் நான் நிறைவடைந்தேன். ஓ! தேவி, நீ வரும்பும் வரத்தைக் கேட்பாயாக. நீ கேட்கும் எதையும் நான் தருவேன்” என்றேன். ஓ! புரந்தரா, இவையே நான் சுரபியிடம் சொன்ன சொற்களாகும்.

என்னால் இவ்வாறு சொல்லப்பட்டதும், எனக்குப் பதிலளிக்கும் வகையில் சுரபி, “ஓ! பெரும்பாட்டனே, எனக்கு வரங்கள் தேவையில்லை. ஓ! பாவமற்றவரே, நீர் என்னிடம் நிறைவடைந்ததே எனக்குக் கிட்டிய பெரும் வரமாகும்” என்றாள்.(33)

ஓ! தேவர்களின் தலைவா, ஓ! சச்சியின் தலைவா, ஓ! தேவர்களில் முதன்மையானவனே, இச்சொற்களை என்னிடம் சொன்ன அந்தச் சிறப்புமிக்கச் சுரபியிடம் நான்,(34) “ஓ! தேவி, ஓ! அழகிய முகம்படைத்தவளே, ஆசை மற்றும் பேராசையில் இருந்து விடுப்பட்ட உனது வெளிப்பாட்டிலும், நீ செய்த தவங்களிலும் நான் மிகையான நிறைவை அடைந்தேன். எனவே நான் உனக்கு இறவாமையை வரமாகத் தருகிறேன்.(35) என் அருளின் மூலம் மூவுலங்களிலும் உயர்ந்த இடத்தில் உள்ள உலகத்தில் நீ வசிப்பாயாக. அந்த உலகம் கோலோகம் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படப் போகிறது.(36) எப்போதும் நற்செயல்களையே செய்யும் உன் சந்ததி, மனிதர்களின் உலகில் இருக்கட்டும். ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, உண்மையில் உன் மகள்கள் அங்கே வசிக்கப் போகிறார்கள்.(37) தெய்வீக மற்றும் மானுட இன்பங்கள் அனைத்தும் நீ நினைத்த மாத்திரத்தில் உனதாகும். ஓ! அருளப்பட்டவளே, சொர்க்கத்தில் இருக்கும் இன்பம் எதுவும் உனதே ஆகும்” என்று பதிலளித்தேன்.(38)

ஓ! நூறு கண்களைக் கொண்டவனே, சுரபியின் உலகங்கள் அனைத்து விருப்பங்களையும் நிறைவடையச் செய்ய வல்லவையாகும். மரணமோ, முதுமையோ, நெருப்போ அங்கே வசிப்பவர்களைத் தாக்காது.(39) ஓ! வாசவா, தீயூழேதும் அங்கே ஏற்படாது. இனிய காடுகள் பலவும், இனிய ஆபரணங்கள் மற்றும் அழகிய பொருட்கள் யாவும் அங்கே காணப்படுகின்றன.(40) ஓ! வாசவா, சிறப்பான ஆயத்தங்களுடன் கூடியவையும், செலுத்துபவரின் விருப்பத்திற்கேற்பச் சொல்லக்கூடியவையுமான பல அழகிய தேர்களும் அங்கே இருக்கின்றன. ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, பிரம்மச்சரியம், தவங்கள், வாய்மை, தற்கட்டுப்பாடு, கொடைகள், பல்வேறு வகை அறச்செயல்கள், புனித நீர்நிலைகளுக்குப் பயணம் மேற்கொள்ளல் ஆகியவற்றாலும், உண்மையில், கடுந்தவங்கள், நன்றாகச் செய்யப்பட்ட அறச்செயல்கள் ஆகியவற்றாலும் மட்டுமே ஒருவன் கோலோகத்தை அடைய முடியும்.(41,42) ஓ! சக்ரா, நீ கேட்டவை அனைத்திற்கும் நான் முழுமையாகப் பதிலளித்துவிட்டேன். ஓ! அசுரர்களைக் கொல்பவனே, ஒருபோதும் பசுக்களை அவமதியாதே” என்றான் {பிரம்மன்}”.(43)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, சுயம்புவான பிரம்மனின் இச்சொற்களைக் கேட்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுமான சக்ரன், அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் பசுக்களை வழிபடவும், அவற்றுக்குப் பெரும் மதிப்பளிக்கவும் தொடங்கினான்.(44) ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, பசுக்களின் புனிதத்தன்மை குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். இவ்வாறே, ஓ!மனிதர்களின் தலைவா, ஒவ்வொரு பாவத்தையும் தூய்மையாக்கவல்ல பசுக்களின் புனிதத்தன்மை, முன்சிறப்புகள் மற்றும் மகிமைகளை உனக்குச் சொல்லிவிட்டேன். பிற பொருட்களில் இருந்து புலன்விலக்கம் பெற்ற மனிதன், ஹவ்யகவ்யங்கள் காணிக்கையளிக்கப்படும் தருணங்கள், அல்லது வேள்விகளிலோ, பித்ருக்களைத் துதிக்கும் தருணங்களிலோ இதைக் குறித்துப் பிராமணர்களுக்குச் சொன்னால் அவன் தன் மூதாதையர்களின் ஒவ்வொரு விருப்பமும் கனியும் நிலையை அடைவதில் வெல்கிறான்.(45-47)

பசுக்களிடம் அர்ப்பணிப்பு கொண்ட மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதில் வெல்கிறான். உண்மையில், பசுக்களிடம் அர்ப்பணிப்பு கொண்ட பெண்களும், தங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(48) மகன்களைப் பெற விரும்புபவன் மகன்களை அடைகிறான். மகள்களைப் பெற விரும்புபவன் மகள்களைப் பெறுகிறான். செல்வத்தை விரும்புபவன், செல்வத்தை அடைவதில் வெல்கிறான், அறத்தகுதியை விரும்புபவன் அறத்தகுதியை ஈட்டுவதில் வெல்கிறான்.(49) அறிவை விரும்புபவன் அறிவை அடைகிறான். இன்பத்தை விரும்புபவன், இன்பத்தை அடைவதில் வெல்கிறான். உண்மையில், ஓ! பாரதா, பசுக்களிடம் அர்ப்பணிப்புள்ள ஒருவனால் அடைய முடியாதது ஏதுமில்லை” {என்றார் பீஷ்மர்}.(50)

பொன் சிறப்பு! – அநுசாஸனபர்வம் பகுதி – 84-தங்கத்தின் தோற்றம்; பொன்தானத்தின் முன்சிறப்புகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பலன் நிறைந்த பசுக்கொடை குறித்து எனக்குச் சொன்னீர். கடமைகளை நோற்பவர்களான மன்னர்களின் வழக்கில் அக்கொடை பெரும் பலன்மிக்கதாகும்.(1) கோன்மை {அரசுரிமை} எப்போதும் துன்பம் நிறைந்ததாகும். தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் அது சுமக்கப்பட இயலாததாகும். பொதுவாகவே மன்னர்கள் மங்கல கதிகளை அடையத் தவறுகிறார்கள்.(2) எனினும், எப்போதும் நிலக்கொடை அளிப்பதன் மூலம் அவர்கள் தங்களை (தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும்) தூய்மைப்படுத்திக் கொள்வதில் வெல்கிறார்கள். ஓ! குரு குலத்தின் இளவரசரே, பல கடமைகளைக் குறித்து நீர் எனக்குச் சொல்லியிருக்கிறீர்.(3) பழங்காலத்தில் மன்னன் நிருகன் பசுக்கொடையளித்ததையும் எனக்குச் சொன்னீர். பழங்காலத்தில் முனிவர் நாசிகேதர் செய்த செயல்களின் பலன்களையும் எனக்குச் சொன்னீர்.(4)

அனைத்து வேள்விகளிலும், உண்மையில் அனைத்து வகை அறச்செயல்களிலும் நிலத்தையோ, பசுவையோ, பொன்னையோ கொடையளிக்க வேண்டும் என்று வேதங்கள் மற்றும் உபநிஷத்துகளில் விதிக்கப்பட்டிருக்கிறது.(5) எனினும், ஸ்ருதிகள் தக்ஷிணைகள் அனைத்திலும் மிக மேன்மையானதும், சிறந்ததும் பொன்னே என்று அறிவிக்கின்றன. ஓ! பாட்டா, இக்காரியம் குறித்து உண்மையில் நீர் சொல்ல விரும்புகிறேன்.(6) பொன் என்றால் என்ன? அஃது உண்டானது எவ்வாறு? அஃது எப்போது இருப்புக்கு வந்தது? அதன் சாரம் என்ன? அதற்குத் தலைமை தாங்கும் தேவன் யார்? அதன் கனிகள் {பலன்கள்} என்னென்ன? அனைத்திலும் முதன்மையானதாக அஃது ஏன் கருதப்படுகிறது?(7) ஞானிகள் பொற்கொடையை மெச்சும் காரணம் என்ன? அனைத்து வேள்விகளிலும் பொன்னே சிறந்த தக்ஷிணையாகக் கருதப்படுவதற்கான காரணம் என்ன?(8) நிலம் மற்றும் பசுக்களை விடப் பொன்னே தூய்மையாக்குவதில் மேன்மையானதாக ஏன் கருதப்படுகிறது? உண்மையில் அஃது ஏன் மேன்மையான தக்ஷிணையாகக் கருதப்படுகிறது? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(9)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, என்னால் புரிந்து கொள்ள முடிந்த அளவுக்குப் பொன்னின் தோற்றம் தொடர்புடைய சூழ்நிலைகளை விரிவாகச் சொல்கிறேன், குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(10) பெருஞ்சக்தி கொண்ட என் தந்தை சாந்தனு இவ்வுலகை விட்டுச் சென்றபோது, நான் அவரது சிராத்தத்தைச் செய்யக் கங்காத்வாரத்திற்குச் சென்றேன்.(11) அங்கே சென்றதும் என் தந்தையின் சிராத்தத்தைத் தொடங்கினேன். என் தாயான ஜானவி அங்கே வந்து எனக்குப் பேருதவி புரிந்தாள்.(12) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பல தவசிகளை அழைத்து அவர்களை என் முன் அமரச் செய்து, நீர்க்கொடை மற்றும் பிற கொடைகள் உள்ளிட்ட தொடக்கச் சடங்குகளைச் செய்யத் தொடங்கினேன்.(13) குவிந்த மனத்துடன் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தொடக்கச் சடங்குகள் அனைத்தையும் செய்து ஈமப்பிண்டத்தை முறையாகக் கொடையளிப்பதில் என்னை நிறுவிக் கொண்டேன்.(14) அப்போது, ஓ! மன்னா, தரையைத் துளைத்துக் கொண்டு நான் விரித்து வைத்திருந்த குசப் புற்களின் ஊடாக அங்கதங்கள் மற்றும் பிற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அழகிய கரம் எழுவதை நான் கண்டேன்.(15) தரையில் இருந்து எழும் அந்தக் கரத்தைக் கண்ட நான் ஆச்சரியத்தில் நிறைந்தேன். உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் கொடுக்க இருந்த பிண்டத்தை ஏற்பதற்காக என் தந்தையே வந்ததாக நான் எண்ணினேன்.(16)

பிறகு, சாத்திர ஒளியில் சிந்தித்தபோது, யாருடைய சிராத்தம் செய்யப்படுகிறதோ அவருடைய கையில் பிண்டத்தைக் கொடுக்கக்கூடாது என்று வேதங்களில் தோன்றும் விதி எனக்குத் திட நம்பிக்கையை அளித்தது. எவருடைய ஈமச் சடங்குகள் நடைபெறுகிறதோ அம்மனிதரின் கரத்தில் ஈமப் பிண்டத்தை ஒருபோதும் கொடுக்கக்கூடாது என்ற என் மனத்தில் இவ்வாறே ஒரு திடமான நம்பிக்கை எழுந்தது. பித்ருக்கள் பிண்டத்தைப் பெறுவதற்காகக் காணத்தக்க வடிவங்களில் வருவதில்லை. மறுபுறம், அதற்கெனப் பூமியில் விரிக்கப்பட்ட குசப்புற்களிலேயே அதை வைக்க வேண்டுமென விதி சொல்கிறது. என் தந்தையின் இருப்பைக் குறிப்பதாக அமைந்த அந்தக் கரத்தை அலட்சியம் செய்துவிட்டு,(17-19) பிண்டம் அளிக்கும் முறையைக் குறித்த சாத்திர அதிகாரத்தைச் சார்ந்த உண்மை விதியை நினைவகூர்ந்து, என் முன்னே பரப்பி வைக்கப்படிருந்த குசப்புற்களிலேயே முழுப் பிண்டத்தையும் காணிக்கையிட்டேன்.(20) ஓ! மனிதர்களின் இளவரசே, நான் செய்தது சாத்திர விதிக்கு முற்றிலும் இணக்கமானது என்பதை அறிவாயாக. ஓ! ஏகாதிபதி, அதன் பிறகு என் தந்தையின் கரம் எங்கள் பார்வையில் இருந்து மறைந்து போயிற்று.(21)

அவ்விரவு நான் உறங்கிய போது, என் கனவில் பித்ருக்கள் தோன்றினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே} என்னிடம் நிறைவடைந்த அவர்கள், இச்சொற்களில், “நாங்கள் உன்னிடம் நிறைவடைந்தோம்.(22) விதியில் பற்றுடன் இருப்பதை நீ இன்று வெளிப்படுத்தினாய். சாத்திர விதிகளில் இருந்து நீ வழுவாததைக் கண்டு நாங்கள் நிறைவடைந்தோம். ஓ! மன்னா, சாத்திர விதிகள் உன்னால் பின்பற்றப்பட்டதால் மேலும் அதிகாரமிக்கவையாகிவிட்டன.(23) இத்தகைய உன் நடத்தையின் மூலம், நீ உன் அதிகாரத்தையும், சாத்திரங்கள், வேத திறன், பித்ருக்கள், முனிவர்கள், பெரும்பாட்டனான பிரம்மன், பெரியோர்களான பிரஜாபதிகள் ஆகியோரின் அதிகாரங்களையும் கௌரவித்துப் பராமரித்திருக்கிறாய். சாத்திரப் பற்றுப் பராமரிக்கப்பட்டிருக்கிறது. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நீ இன்று மிகச் சரியாகச் செயல்பட்டிருக்கிறாய்.(24,25) நீ நிலக்கொடையும், பசுக்கொடையும் அளித்தாய். நீ பொற்கொடையும் அளிப்பாயாக. பொற்கொடை தூய்மைடையச் செய்தவதில் பெரியதாகும். ஓ! கடமைகளை நன்கறிந்தவனே, அத்தகைய உன் செயல்பாடுகளின் மூலம் நாங்களும், உன்னுடைய மூதாதையர் அனைவரும் எங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைவோம் என்பதை அறிவாயாக. அத்தகைய கொடைகள் மூதாதையரிலும், வழித்தோன்றல்களிலும் பத்து தலைமுறையினரை மீட்கின்றன” என்றார்கள். என் கனவில் தோன்றிய என் மூதாதையரால் சொல்லப்பட்ட சொற்கள் இவையே. ஓ! மன்னா, பிறகு விழிப்படைந்த நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன்.(26-28)

உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே, நான் பொற்கொடை அளிப்பதில் என் இதயத்தை நிலைநிறுத்தினேன். ஓ! ஏகாதிபதி, இப்போது இந்தப் பழைய வரலாற்றைக் கேட்பாயாக.(29) இது மிகுந்த பாராட்டுக்குரியதும், கேட்பவரின் வாழ்நாள் காலத்தை நீட்டிப்பதும் ஆகும். இது முதலில் ஜமதக்னியின் மகனான ராமருக்கு {பரசுராமருக்கு} உரைக்கப்பட்டது. பழங்காலத்தில் பெருங்கோபத்தில் நிறைந்த ஜமதக்னியின் மகன் ராமர்,(30) பூமியின் பரப்பில் இருந்து இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களை அழித்தார். வீரரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவருமான ராமன், மொத்த பூமியையும் அடக்கிய பிறகு, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் அனைவராலும் புகழப்படுவதும், அனைத்து விருப்பமும் கனியும் நிலையை அருளவல்லதுமான குதிரை வேள்வியைச் செய்தற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார்.(31,32) அந்த வேள்வியானது அனைத்து உயிரினங்களையும் தூய்மையடையச் செய்து, அதைச் செய்தவரின் சக்தி மற்றும் காந்தியையும் மேம்படுத்துகிறது. பெருஞ்சக்தி கொண்ட ராமர் அந்த வேள்வியைச் செய்ததன் மூலம் பாவமற்றவரானார்.(33) எனினும், அந்த முதன்மையான வேள்வியைச் செய்த உயர் ஆன்ம ராமர் முற்றிலும் மென்மையான இதயத்தை அடையத் தவறினார்.(34) பிருகு குல ராமர், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவர்கள் மற்றும் தேவர்களிடமும் சென்று அவர்களிடம் கேள்வி கேட்டார். பின்னிரக்கம் மற்றும் கருணையால் நிறைந்திருந்த அவர், அவர்களிடம், “உயர்ந்த அருளைக் கொண்டவர்களே, கடுஞ்செயல் புரிந்த மனிதர்களையும் தூய்மையாக்குவது எது என்பதை அறிவிப்பீராக” என்றார்.

இவ்வாறு அவரால் சொல்லப்பட்டவர்களும், வேதங்கள் மற்றும் சாத்திரங்களை முழுமையாக அறிந்தவர்களுமான அந்தப் பெரும் முனிவர்கள் அவரிடம்,(35,36) “வேத அதிகாரங்களால் வழிநடத்தப்பட்டுக் கல்விமான்களான பிராமணர்கள் அனைவரையும் நீ கௌரவிப்பாயாக. சில காலத்திற்கு இவ்வொழுக்கத்தைப் பின்பற்றிய பிறகு, உன்னைத் தூய்மை செய்து கொள்வதற்கு என்ன செய்யப்பட வேண்டும் என்பதை மறுபிறப்பாள முனிவர்களிடம் மீண்டும் கேட்பாயாக.(37) அந்தப் பெரும் ஞானிகள் உனக்குத் தரும் ஆலோசனையைப் பின்பற்றுவாயாக” என்றனர்.

பிறகு, பெருஞ்சக்தி கொண்டவரும், பிருகுக்களைத் திளைக்கச் செய்பவருமான அவர் {பரசுராமர்}, வசிஷ்டர், அகஸ்தியர், கசியபர் ஆகியோரிடம் சென்று அதே கேள்வியைக் கேட்கும் வகையில், “பிராமணர்களில் முதன்மையானோரே, என் இதயத்தில் எழும் விருப்பம் இதுவே. உண்மையில் என்னைத் தூய்மை செய்து கொளவதில் வெல்வது எவ்வாறு?(38,39) எந்தச் செயல்கள் மற்றும் சடங்குகளின் மூலம் இதைச் செய்யலாம்? அல்லது கொடையின் மூலம் எட்டப்படும் என்றால், என்னுடைய இவ்விருப்பம் நிறைவேற எப்பொருள் கொடையளிக்கப்பட வேண்டும்? அறவோரில் முதன்மையானோரே, தவத்தையே செல்வமாகக் கொண்ட நீங்கள் எனக்கு உதவ விரும்பினால் என்னைத் தூய்மை செய்து கொள்வதில் நான் வெல்வது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வீராக” என்றார்.(40)

முனிவர்கள், “ஓ! பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே, பாவம் செய்த மனிதன் பசு, நிலம் மற்றும் செல்வத்தைக் கொடையளிப்பதன் மூலம் தூய்மையடைகிறான். இதையே நாம் கேள்விப்படுகிறோம்.(41) தூய்மையடைவதற்கு பெரிதும் உதவுவதாகக் கருதப்படும் மற்றொரு கொடையும் இருக்கிறது. ஓ! மறுபிறப்பாள முனிவா, நாங்கள் சொல்வதைக் கேட்பாயாக. அப்பொருள் சிறந்ததும், அற்புதத் தன்மை நிறைந்ததும், நெருப்பின் சந்ததியுமாக இருக்கிறது.(42) பழங்காலத்தில் அக்னி தேவன் உலகமனைத்தையும் எரித்தான். அவனது வித்தில் இருந்தே பிரகாச நிறம் படைத்த பொன் உண்டானது என நாம் கேள்விப்படுகிறோம். பொற்கொடை அளிப்பதன் மூலம் உன் விருப்பம் கனியும் நிலையால் நிச்சயம் மகுடம் சூட்டப்படுவாய்” என்றனர்.(43)

அப்போது, கடும் நோன்பைக் கொண்டவரும், சிறப்புமிக்கவருமான வசிஷ்டர் குறிப்பாக, “ஓ! ராமா {பரசுராமா}, நெருப்பின் காந்தியைக் கொண்ட பொன் முதலில் இருப்பில் உதித்தது எவ்வாறு என்பதைக் கேட்பாயாக.(44) அந்தப் பொன்னே உனக்குப் பெரும் பலனை அளிக்கும். கொடையளிக்கப்படுவதில் பொன் மிகவும் மெச்சப்படுகிறது. தங்கம் என்றால் என்ன? அஃது எங்கிருந்து வந்தது? அது மேன்மையான தன்மைகளைப் பெற்றது எவ்வாறு? என்பனவற்றையும் நான் உனக்குச் சொல்கிறேன்.(45) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இவை குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக. பொன்னானது நிச்சயம் நெருப்பு மற்றும் சோமனின் சாரமாகும் என்பதை அறிவாயாக.(46)

செம்மறியாடு (அக்னிலோகத்துக்கு வழிவகுப்பதால்) நெருப்பாக (அக்னியாக) இருக்கிறது; வெள்ளாடு (வருணலோகத்துக்கு வழிவகுப்பதால்) வருணனாக இருக்கிறது; குதிரை (சூரியலோகத்துக்கு வழிவகுப்பதால்) சூரியனாக இருக்கிறது; யானைகள் (நாகலோகத்துக்கு வழிவகுப்பதால்) நாகர்களாக இருக்கின்றன; எருமைகள் (அசுரலோகத்துக்கு வழிவகுப்பதால்) அசுரர்களாக இருக்கின்றன;(47) கோழிகளும், பன்றிகளும் (ராட்சசலோகத்துக்கு வழிவகுப்பதால்) ராட்சசர்களாக இருக்கின்றன; ஓ!பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே. பூமி (வேள்வியின் பலனுக்கும், கோலோகத்துக்கும், வருணலோகத்துக்கும், சோமலோகத்துக்கும் வழிவகுப்பதால்) வேள்வியாக, பசுவாக, நீராக, சோமனாக இருக்கின்றன. இதையே ஸ்மிருதிகள் அறிவிக்கின்றன.(48) மொத்த அண்டத்தையும் கடைந்த போது திரளான ஒரு சக்தி கண்டடையப்பட்டது. அந்தச் சக்தியே பொன்னாகும். எனவே, ஓ! மறுபிறப்பாள முனிவா, (நான் ஏற்கனவே குறிப்பிட்ட) இந்தப் பொருட்கள் அனைத்துடனும் ஒப்பிடும்போது நிச்சயம் பொன்னே மேன்மையானது. அது விலைமதிப்புமிக்க, உயர்ந்த, சிறந்த பொருளாகும்.(49)

இதன் காரணமாகவே தேவர்களும், கந்தர்வர்களும், உரகர்களும், ராட்சசர்களும், மனிதர்களும் பிசாசங்களும் அதைக் கவனத்துடன் பற்றிக் கொள்கின்றனர்.(50) ஓ! பிருகு குலத்தின் மகனே {பரசுராமா}, இவர்கள் அனைவரும் தங்கத்தை மகுடங்களாகவும், தோள்வளைகளாகவும், பலவகை ஆபரணங்களாகவும் மாற்றி அவற்றின் துணையுடனே ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.(51) ஓ! மனிதர்களின் இளவரசே[1], இதன் காரணமாகவே பொன்னானது தூய்மைப்படுத்தும் நிலம், பசு மற்றும் பிற வகைப் பொருட்கள் அனைத்தையும் காட்டிலும் மிகுந்த தூய்மைப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.(52) ஓ! பலமிக்க மன்னா, பொற்கொடையே உயர்ந்த கொடையாகும். அது நிலம், பசு மற்றும் பிற பொருட்களைக் கொடையளிப்பதைக் காட்டிலும் மேலான புகழைத் தருவதாகும்.(53)ஓ! தேவப் பிரகாசம் கொண்டவனே, பொன்னானது நித்தியமாகத் தூய்மைப்படுத்தும் பொருளாகும். அதுவே தூய்மைப்படுத்துவனவற்றில் முதன்மையானதாக இருப்பதால் பிராமணர்களில் முதன்மையானோருக்கு நீ அதைக் கொடையளிப்பாயாக.(54) தக்ஷிணைகள் அனைத்திலும் பொன்னே சிறந்ததாகும். பொன்னைக் கொடையளிப்பவர்கள் அனைத்தையும் கொடையளிப்பவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(55) உண்மையில், பொன்னைக் கொடையளிப்பவர்கள் தேவர்களைக் கொடையளிப்பவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அனைத்து தேவர்களும் சேர்ந்தவன் அக்னியாவான், தங்கம் அக்னியையே தன் சாரமாகக் கொண்டிருக்கிறது.(56) எனவே, தங்கத்தைக் கொடையளிப்பவன் தேவர்கள் அனைவரையும் கொடையளித்தவனாகச் சொல்லப்படுகிறான். எனவே, ஓ! மனிதர்களின் தலைவா, பொற்கொடையைவிட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை” என்றார் {வசிஷ்டர்}.(57)

வசிஷ்டர் {பரசுராமரிடம்} தொடர்ந்தார், “ஓ! மறுபிறப்பாள முனிவா, ஓ! ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனே, தங்கத்தின் முன்சிறப்புகளை மீண்டும் சொல்கிறேன் கேட்பாயாக.(58) ஓ! பிருகு குலத்தின் மகனே, நான் இதை முன்பு புராணத்தில் கேட்டிருக்கிறேன். இது பிரஜாபதியின் பேச்சையே பிரதிபலிக்கிறது.(59) ஓ! பிருகு குலத்தின் மகனே, சிறப்புமிக்கவனும், உயர் ஆன்மாவைக் கொண்டவனும், திரிசூலபாணியுமான ருத்திரனுக்கும், அவனது மனைவியான {உமா} தேவிக்கும் முதன்மையான மலையான ஹிமவத்தின் {இமயத்தின்} சாரலில் திருமணம் முடிந்த பிறகு, சிறப்புமிக்கவனும், உயர் ஆன்மா கொண்டவனுமா அந்தத் தேவன் {சிவன்}, தேவியுடன் தன்னைக் கலக்க விரும்பினான்.

கவலை நிறைந்த தேவர்கள் அனைவரும் ருத்திரனை அணுகினார்கள். மஹாதேவனிடமும், வரமளிக்கும் அவனது மனைவியான உமைக்கும் மதிப்புடன் தலைவணங்கி, சேர்ந்து அமர்ந்திருக்கும் அவர்களை நிறைவடையச் செய்த அவர்கள், ஓ! பிருகு குலத்ததைத் தழைக்கச் செய்பவனே, ருத்திரனிடம், “ஓ! சிறப்புமிக்கவனே, ஓ! பாவமற்றவனே, தேவியுடன் நீ கலப்பது என்பது,(60-62) தவங்களுடன் கூடிய ஒருவனுக்கும், தவங்களுடன் கூடிய மற்றொருவருக்கும் இடையே ஏற்படும் கடும் கலவியாகும். உண்மையில், ஓ! தலைவா, இது பெரும் சக்தி கொண்ட ஒருவனுக்கும், அதற்குச் சற்றும் குறையாத சக்தியுடன் கூடிய மற்றொருவருக்கும் இடையில் ஏற்படும் கலவியாகும். ஓ! சிறப்புமிக்கவனே, நீ தடுக்கப்பட முடியாத சக்தியுடன் கூடியவன். உமாதேவியும், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டவள்.(63) ஓ! சிறப்புமிக்கத் தேவா, இந்தக் கலவியால் உண்டாகும் சந்ததி நிச்சயம் பெரும்வலிமை கொண்டதாகவே இருக்கும். உண்மையில், ஓ! பலமிக்கத் தலைவா, அந்தச் சந்ததி மூவுலகங்களிலும் எதையும் எஞ்சவிடாமல் அனைத்துப் பொருட்களையும் எரித்துவிடும்.(64)

ஓ! அண்டமனைத்தின் தலைவா, ஓ! பெரிய கண்களைக் கொண்டவனே, மூவுலகங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தில், உன் முன்பு நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் இந்தத் தேவர்களுக்கு ஒரு வரத்தை அருள்வாயாக.(65) ஓ! பலமிக்கவனே, சந்ததிக்குரிய வித்தாகும் இந்த உயர்ந்த சக்தியைக் கட்டுப்படுத்துவாயாக.(66) உண்மையில், இந்தச் சக்தி மூவுலகங்களில் உள்ள சக்திகள் அனைத்தின் சாரமாகும். நீங்கள் இருவரும் கலக்கும் செயலின் மூலம் இந்த அண்டத்தை நிச்சயம் எரிப்பீர்கள்.(67) உங்கள் இருவருக்கும் பிறக்கும் சந்ததி நிச்சயம் தேவர்களைப் பீடிக்க வல்லதாக இருக்கும். ஓ! பலமிக்கவனே, பூமாதேவியோ, ஆகாயமோ, சொர்க்கமோ, இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தோகூட உன் சக்தியைத் தாங்க முடியாது என உறுதியாக நாங்கள் நம்புகிறோம்.(68,69) ஓ! பலமிக்கவனே, ஓ! சிறப்புமிக்கத் தேவா, நீ எங்களுக்குத் துணைபுரிவதே உனக்குத் தகும். ஓ! தேவர்களில் முதன்மையானவனே, உமாதேவியிடம் நீ ஒரு மகனைப் பெறாமல் இருப்பதிலேயே அந்த உதவி அடங்கியிருக்கிறது.(70) எனவே, கடுமையானது, பலமிக்கதுமான உன் சக்தியைப் பொறுமையுடன் தடுப்பாயாக” என்றனர்.

ஓ! மறுபிறப்பாள முனிவா, அப்படிச் சொன்ன தேவர்களிடம், காளை மாட்டைத் தன் சின்னமாகக் கொண்ட மஹாதேவன், “அப்படியே ஆகட்டும்” என்று பதிலளித்தான். இவ்வாறு சொன்னவனும், காளையைத் தன் வாகனமாகக் கொண்டவனுமான அந்தத் தேவன், தன் உயிர் வித்தை மேலிழுத்தான் {மேல்நோக்கச் செய்தான்}.(71,72) அந்தக் காலம் முதலே அவன் (உயிர்வித்தை மேல்நோக்கி இழுத்தவன் என்ற பொருள் கொண்ட) ஊர்த்தவரேதஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறான். எனினும் ருத்திரனின் மனைவி, உற்பத்தியைத் தடுத்த தேவர்களின் முயற்சியால் பெருஞ்சினமடைந்தாள்.(73) எதிர் பாலினமாக இருந்ததன் விளைவால் (கோபத்தைச் சிறிது கட்டுப்படுத்த முடியாதவளாக) அவள் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி, “என் தலைவர் என்னிடம் சந்ததியை உண்டாக்க விரும்பிய போது, அக்காரியத்தில் அவரை நீங்கள் எதிர்த்தீர்கள், அச்செயலின் விளைவால், தேவர்களே நீங்கள் மகனற்றவர்கள் ஆவீர்கள். உண்மையில், என்னிடம் சந்ததி பிறப்பை நீங்கள் எதிர்த்தீர்கள்,(75) எனவே, உங்களுக்குச் சந்ததி உண்டாகாமல் போகட்டும்” என்றாள்.

ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, அந்நேரத்தில் நெருப்பின் தேவன் {அக்னி} அங்கே இல்லை.(76) அந்தத் தேவியுடைய சாபத்தின் விளைவாகவே தேவர்கள் பிள்ளையற்றவர்களானார்கள். அவர்களால் வேண்டப்பட்ட ருத்திரன், ஒப்பற்ற பலத்துடன் கூடிய தன் சக்தியை {வீரியத்தைத்} தானே தாங்கிக் கொண்டான்.(77) எனினும், அதிலொரு சிறு பகுதி அவனுடைய உடலில் இருந்து வெளியேறி பூமியில் விழுந்தது. பூமியில் விழுந்த அந்த வித்தானது, சுடர்மிக்க நெருப்பில் குதித்து மிக ஆச்சரியகரமாக (அளவிலும், சக்தியிலும்) வளரத் தொடங்கியது.(78) ருத்திரனின் சக்தி, பெரும்பலமிக்க மற்றொமொரு சக்தியுடன் கலந்து ஒரே சாரமானது {ஒளியில் ஒளி சேர்ந்து ஒன்றாகிவிட்டது}. அதே வேளையில், சக்ரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அனைவரும்,(79) தாரகன் என்ற பெயரைக் கொண்ட அசுரனால் நன்றாக வாட்டப்பட்டனர். ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், மருத்துகள், அசுவினிகள்,(80) சத்யஸ்கள் ஆகியோரனைவரும், அந்தத் திதியின் மகனுடைய ஆற்றலின் விளைவால் மிகவும் பீடிக்கப்பட்டனர். அழகிய தேர்கள் மற்றும் மாட மாளிகைகளுடன் கூடிய தேவலோகங்கள் அனைத்தும்,(81) முனிவர்களின் ஆசிரமங்கள் ஆகியவையும் அசுரர்களால் அபகரிக்கப்பட்டன. தேவர்களும், முனிவர்களும் உற்சாகமற்ற இதயங்களுடன் கூடியவர்களாகப் பலமிக்கவனும், சிறப்புமிக்கவனும், மங்கா மகிமை கொண்டவனுமான பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள்” {என்றார் வசிஷ்டர்}.(82)

பொன் வரலாறு! – அநுசாஸனபர்வம் பகுதி – 85அ-அக்னியை விரட்டிச் சென்று பிடித்த தேவர்கள்; தேவர்களால் வேண்டப்பட்ட அக்னி; அக்னி கங்கையைக் கருவூட்டியது; அதை மேருமலையின் சாரலில் விட்ட கங்கை; தத்தெடுத்துக் கொண்ட கிருத்திகை தேவி; தங்கமும், கந்தனும் பிறந்த கதை…

தேவர்கள் {பிரம்மனிடம்}, “ஓ! பலமிக்கவரே, உம்மிடம் இருந்து வரங்களைப் பெற்றவனும், தாரகன் என்ற பெயரைக் கொண்டவனுமான அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் பீடித்து வருகிறான். அவனுக்கு மரணத்தை விதிப்பீராக.(1) ஓ! பெரும்பாட்டனே, ஓ! சிறப்புமிக்கவரே, அவனிடம் இருந்த எழும் பேரச்சத்திலிருந்து எங்களை மீட்பீராக. உம்மைத் தவிரே வேறு புகலிடம் எங்களுக்குக் கிடையாது” என்றனர்.(2)

பிரம்மன், “நான் அனைத்து உயிரினங்களிடமும் சமமாகவே நடந்து கொள்கிறேன். எனினும், நீதியற்றதை என்னால் ஏற்க இயலாது. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் எதிரியான தாரகன் விரைவில் அழிவை அடைவான்.(3) தேவர்களில் முதன்மையானோரே, வேதங்களும், நித்திய கடமைகளும் அடியோடு அழிக்கப்படாது. இக்காரியத்தில் நான் முறையான விதியைச் செய்திருக்கிறேன். உங்கள் இதய நோய் விலகட்டும்” என்றான்.(4)

தேவர்கள் {பிரம்மனிடம்}, “நீர் வரமளித்ததன் விளைவாலும் அந்தத் திதியின் மகன் தன் வலிமையில் செருக்குற்றிருக்கிறான். அவன் தேவர்களால் கொல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். பிறகு எவ்வாறு அவனைக் கொல்ல முடியும்?(5) ஓ! பெரும்பாட்டனே, தேவர்களாலோ, அசுரர்களலோ, ராட்சசர்களாலோ கொல்லப்பட முடியாதவகையில் அவன் உம்மிடம் இருந்து வரம்பெற்றிருக்கிறான்.(6) முற்காலத்தில் செய்த வினையின் விளைவால் தேவர்கள் பெருகாதவாறு ருத்திரனின் மனைவியால் {உமாதேவியால்} சபிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓ! அண்டத்தின் தலைவா, “நீங்கள் சந்ததியைப் பெற மாட்டீர்கள்” என்பதே அவள் விதித்திருக்கும் சாபமாகும்” என்றார்கள்.(7)

பிரம்மன், “தேவர்களில் முதன்மையானோரே, அந்தத் தேவி சபித்தபோது அக்னி அங்கில்லை. அவனே தேவர்களின் எதிரியை அழிக்கும் சந்ததியைப் பெறப் போகிறான்.(8) தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் மற்றும் இறகு படைத்த உயிரினங்கள் அனைத்தையும் கடந்தவனாகவும், ஒரு முறை ஏவினாலே எதிரியைக் கலங்கடிக்கும் ஆயுதமான ஈட்டியுடன் கூடியவனுமான அக்னியின் வாரிசு {ஸ்கந்தன்}, எவனை நீங்கள் அஞ்சுகிறீர்களோ அந்தத் தாரகனை அழிப்பான். உண்மையில் உங்கள் எதிரிகள் யாவரும் அவனால் அழிக்கப்படுவார்கள்.(9,10)

ஆசை என்பது அழிவற்றது. காமம் என்ற பெயரில் அறியப்படும் அந்த ஆசையும், அக்னியின் சுடர்மிக்க வடிவில் விழுந்த ருத்திரனுடைய வித்தின் ஒரு பகுதியும் ஒன்றே.(11) வலிமைமிக்கதும், இரண்டாவது அக்னிக்கு ஒப்பானதுமான அந்தச் சக்தியானது, தேவர்களின் எதிரிகளை அழிக்கக்கூடிய ஒரு வாரிசை உண்டாக்குவதற்காக அக்னியால் கங்கையில் விடப்படும்.(12) அக்னி உமையின் சாபத்திற்கு உள்ளாகவில்லை. அந்தச் சாபம் இடப்பட்ட போது வேள்வி ஆகுதிகளை உண்பவன் அங்கே இல்லை.(13) எனவே, நெருப்பின் தேவனை {அக்னி தேவனைத்} தேடுங்கள். அவனை இப்பணியில் நிறுவுங்கள். பாவமற்றவர்களே, தாரகனை அழிக்கு வழிமுறைகளை நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.(14)

சக்தியுடையவர்களின் சாபங்கள், சக்தியுடையவர்களிடம் எந்த விளைவையும் உண்டாக்காமல் தவறிப் போகும். பலமான சக்தியுடன் தொடர்பேற்படும்போது வேறு சக்திகள் பலவீனமடையும்.(15) தவங்களுடன் கூடியோர், அழிவற்றவர்களாக இருப்பவர்களும், வரமளிக்க இயன்றவர்களுமான தேவர்களையே அழிக்கத்தகுந்தவர்களாவர். பழங்காலத்தில் தோன்றிய விருப்பம், அல்லது ஆசை, அல்லது காமம் அனைத்து உயிரினங்களிடமும் அழிவற்றதாக இருக்கிறது.(16) அக்னி அண்டத்தின் தலைவனாவான். அவன் புரிந்து கொள்ளப்படவோ, விளக்கப்படவோ இயலாதவன். விரும்பிய எங்கும் செல்லவல்லவனும், அனைத்திலும் இருப்பவனுமான அவனே அனைத்தையும் படைத்தவனுமாவான். அவன் உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வாழ்கிறான். பெரும்பலம் கொண்ட அவன் {அக்னி} ருத்திரனைவிடவும் மூத்தவனாவான்.(17) பெரும் சக்தியின் திரளாக இருப்பவனும், வேள்வி ஆகுதிகளை உண்பவனுமான அவனைத் தேடுங்கள். அந்தச் சிறப்புமிக்கத் தேவன் உங்கள் இதயங்களில் உள்ள விருப்பத்தை நிறைவேற்றுவான்” என்றான் {பிரம்மன்}.(18)

பெரும்பாட்டனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்மத் தேவர்கள், தங்கள் நோக்கம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டதன் விளைவால் உற்சாகமிக்க இதயங்களுடன் நெருப்பின் தேவனை {அக்னிதேவனைத்} தேடிச் சென்றனர்.(19) தேவர்களும், முனிவர்களும், மூவுலகங்களின் ஒவ்வொரு பகுதிக்கும் அக்னியை நினைத்துக் கொண்டே அவனைக் காண விரும்பி தேடிச் சென்றனர்.(20) ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே {பரசுராமா}, தவமும், செழிப்பும் உடைவயர்களும், உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுபவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான அந்த உயர் ஆன்மாக்கள் {தேவர்கள்} அனைவரும் அண்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றனர்.(21) எனினும், வேள்வி ஆகுதிகளை உண்பவன் {அக்னி} தனக்குள்ளேயே தன்னை மறைத்துக் கொண்டதால் அவர்களால் அவனைக் காண முடியவில்லை. அந்த நேரத்தில், நீரில் வாழும் ஒரு தவளையானது, அக்னியின் சக்தி சுட்டதன் விளைவால் பாதாள லோகத்தின் ஆழத்தில் இருந்து உற்சாகமற்ற இதயத்துடன் தரையில் தோன்றியது.(22)

அச்சிறு உயிரினம் {தவளை}, அச்சத்தால் துளைக்கப்பட்டவர்களும், நெருப்பின் தேவனைக் காணும் ஆவலில் உள்ளவர்களுமான அந்தத் தேவர்களிடம்,(23) “தேவர்களே அக்னி இப்போது பாதாள லோகத்தில் வசித்து வருகிறான். அந்தத் தேவனின் சக்தியால் எரிக்கப்பட்டு, அதைத் தாங்கிக் கொள்ள இயலதாவனாகவே நான் இங்கே வந்திருக்கிறேன்.(24) தேவர்களே, வேள்வி ஆகுதிகளைத் தாங்கிச் செல்லும் சிறந்தவன் {அக்னி} இப்போது நீருக்கடியில் இருக்கிறான். நாங்கள் அனைவரும் அவனது சக்தியால் எரிக்கப்படுகிறோம்.(25) உங்களுக்கு அவனால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமெனில் அங்கே செல்வீராக. உண்மையில் அங்கே செல்வீராக. எங்களைப் பொறுத்தவரையில், அக்னி மீது கொண்ட அச்சத்தின் காரணமாக நாங்கள் இவ்விடத்தைவிட்டுத் தப்பிச் செல்லப் போகிறோம்” என்றது. இவ்வளவையும் சொல்லிவிட்டு அந்தத் தவளை நீருக்குள் குதித்தது.(27)

வேள்வி ஆகுதிகளை உண்பவன் {அக்னி} அந்தத் தவளையின் நயவஞ்சகத்தை அறியவந்தான். அவ்விலங்கிடம் வந்த அவன், அதன் மொத்த {தவளை} இனத்தையும் சபிக்கும் வகையில், “இது முதல் நீங்கள் சுவைப் புலன் இழந்தவர்களாக இருப்பீர்கள்” என்றான்.(28) தவளைகளுக்கு இந்தச் சாபத்தைக் கொடுத்து விட்டு அவன் அந்த இடத்தைவிட்டு அகன்று வேறு இடத்திற்கு வெகு வேகமாகச் சென்றான். உண்மையில் அந்தப் பலமிக்கத் தேவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.(29) ஓ! பிருகுக்களில் சிறந்தவனே, தங்களுக்குச் செய்த தொண்டின் காரணமாகத் தவளைகள் அடைந்த பரிதாப நிலையைக் கண்ட தேவர்கள் அவற்றுக்கு அருள் புரிய விரும்பினார்கள். அது தொடர்பான அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன். ஓ! வலிய கரங்களைக் கொண்ட வீரா, நான் சொல்வதைக் கேட்பாயாக.

தேவர்கள், “அக்னியின் சாபத்தால் நாக்குகளை இழந்து, அதன் காரணமாகச் சுவை உணர்வு இல்லாதிருந்தாலும், பல்வேறு வகை வாக்குகளைச் சொல்ல இயன்றவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.(31) உணவு இல்லாமல், தன்னினைவு இல்லாமல், களைத்து, வற்றிப் போய், உயிரற்ற ஒன்றைப் போலப் பொந்துகளுக்குள் வாழ்ந்தாலும், பூமி உங்கள் அனைவரையும் தாங்கிக் கொள்ளும் {ஆதரிக்கும்}.(32) இரவு நேரத்திலும், அனைத்தும் அடர்த்தியான இருளில் மூழ்கியிருந்தாலும் உங்களால் உலவ இயலும்” என்றனர்.

தவளைகளிடம் இதைச் சொன்ன தேவர்கள், சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட தேவனைக் கண்டுபிடிக்கப் பூமியின் ஒவ்வொரு பகுதிக்கும் மீண்டும் செல்லத் தொடங்கினர். எனினும், அவர்களது முயற்சிகள் அனைத்திற்கும் பிறகும் அவர்கள் அவனை அடையத் தவறினார்கள்.(33)

அப்போது, ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, சக்ரனின் யானையின் அளவுக்குப் பெரியதும், வலிமைமிக்கதுமான மற்றொரு யானை, தேவர்களிடம், “அக்னி இப்போது அரச மரத்திற்குள் வசித்து வருகிறான்” என்றது.(34)

ஓ! பிருகுவின் வழித்தோன்றலே, சினத்தால் தூண்டப்பட்ட அக்னி, யானைகள் அனைத்தையும் சபிக்கும் வகையில், “உங்கள் நாவுகள் தலைகீழாக மாறிப் போகட்டும்” என்றான்.(35)

யானைகளால் சுட்டிக்காட்டப்பட்ட நெருப்பின் தேவன் இவ்வாறே யானைகள் அனைத்தையும் சபித்துவிட்டு, சில காலம் வன்னி மரத்தில் வசித்திருக்கலாம் என்றெண்ணி அதன் இதயத்திற்குள் நுழைந்தான்.(36) ஓ! பலமிக்க வீரா, ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே, யானைகளின் பிரதிநிதி ஒன்று செய்த தொண்டில் நிறைவடைந்தவர்களும், கலங்கடிக்க முடியாத ஆற்றலைக் கொண்டவர்களுமான தேவர்கள் யானைகளுக்குக் காட்டிய அருளைச் சொல்கிறேன் கேட்பாயாக.(37)

தேவர்கள், “யானைகளே, மாறிப் போன இந்நாவைக் கொண்டே அனைத்தையும் உண்பீர்கள். இந்த நாவுகளைக் கொண்டே தெளிவற்ற உரத்த குரலைக் கொடுக்க இயன்றவையாக இருப்பீர்கள்” என்றனர்.(38)

இவ்வாறு யானைகளுக்கு அருள் வழங்கிய சொர்க்கவாசிகள் மீண்டும் அக்னியைத் தேடிச் சென்றனர். உண்மையில், அரச மரத்தைவிட்டுவெளியே வந்த நெருப்பின் தேவன் வன்னி மரத்தின் இதயத்திற்குள் நுழைந்தான்.(39) அக்னியின் இந்தப் புதிய வசிப்பிடத்தையும் ஒரு கிளி வெளிப்படுத்தியது. தேவர்கள் அந்த இடத்திற்குச் சென்றார்கள். கிளியின் நடத்தையில் சினம் மூண்ட சுடர்மிக்கத் தழல்களின் தேவன் {அக்னி}, மொத்த கிளி இனத்தையும் சபிக்கும் வகையில், “இந்நாள் முதல் நீங்கள் பேசும் சக்தியை இழப்பீர்கள்” என்றான்.(40)

உண்மையில், வேள்வி ஆகுதிகளை உண்பவனால் கிளிகள் அனைத்தின் நாவுகளும் புரட்டப்பட்டன. கிளியால் சுட்டிக்காட்டப்பட்ட இடத்தில் அக்னியைக் கண்டு, அதன் மீது விதிக்கப்பட்ட சாபத்தையும் கண்ட தேர்கள், அந்தப் பாவப்பட்ட உயிரினத்திடம் கருணை கொண்டு,(41) “நீ கிளியாக இருப்பதன் விளைவால், உன் பேச்சு சக்தி முழுவதையும் இழக்க மாட்டாய். உன் நாவு புரட்டப்பட்டிருந்தாலும், கி என்ற எழுத்துடன் கூடிய பேச்சைக் கொண்டிருப்பாய்.(42) ஒரு குழந்தையையோ, ஒரு முதியவரையோ போன்று உன் பேச்சு இனிமையாகவும், தெளிவில்லாமலும், அற்புதமாகவும் இருக்கும்” என்றனர்.

கிளியிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லி விட்டு, வன்னி மரத்தின் இதயத்திற்குள் இருக்கும் நெருப்பின் தேவனைக் கண்ட தேவர்கள்,(43) அஃதை அறச்சடங்குகள் அனைத்திலும் நெருப்புண்டாக்குவதற்கான புனித விறகாக்கினர். அந்தக் காலத்தில் இருந்துதான் வன்னி மரத்திற்குள் வசிக்கும் வகையில் நெருப்பு காணப்படுகிறது.(44) மனிதர்கள், (வேள்விகளில்) நெருப்புண்டாக்குவத்றகு முறையான வழிமுறையாக வன்னிமரத்தையே கருதுகின்றனர். பாதாள லோகத்தில் உள்ள தண்ணீரும் சுடர்மிக்கத் தழல்களின் தேவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது.(45) ஓ! பிருகு குலத்தவனே, அந்தக் கொதி நீரே, மலையூற்றுகளில் கக்கப்படுகிறது. அக்னி அதில் சில காலம் வசித்ததன் விளைவால் அவனது சக்தியின் மூலம் அவை வெப்பமடைந்தன.(46)

அதே வேளையில் அக்னி, தேவர்களைக் கண்டு வருந்தினான். அவன் தேவர்களிடம், “என்ன காரணத்திற்காக இங்கே வந்தீர்கள்?” என்று கேட்டான். தேவர்களும், பெரும் முனிவர்களும் அவனிடம், “நாங்கள் உன்னை ஒரு குறிப்பிட்ட பணியில் நிறுவ விரும்புகிறோம். அதை நிறைவேற்றுவதே உனக்குத் தகும்.(48) அதைச் செய்வதனால் உனக்கும் மிகப் பெரிய நன்மை உண்டாகும்” என்றனர்.(49)

அக்னி, “உங்கள் காரியம் என்ன என்பதை எனக்குச் சொல்லுங்கள். தேவர்களே நான் அதை நிறைவேற்றுவேன். நீங்கள் விரும்பும் எந்தக் காரியத்திலும் நிறுவப்படவே எப்போதும் நான் விரும்புகிறேன். எனவே தயங்காமல் ஆணையிடுவீராக” என்றான்.(50)

தேவர்கள், “பிரம்மனிடம் பெற்ற வரத்தின் விளைவால் செருக்கால் நிறைந்திருப்பவனும், தாரகன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் அசுரன் இருக்கிறான். அவனது சக்தியின் மூலம் அவன் எங்களை ஒடுக்கிப் பீடிக்கிறான். அவனது அழிவை நீ விதிக்க வேண்டும்.(51) ஓ! ஐயா, ஓ! உயர் அருளைக் கொண்ட பாவகா, இந்தத் தேவர்களையும், பிரஜாபதிகளையும், முனிவர்களையும் நீ காப்பாயாக.(52) ஓ! பலமிக்கவனே, ஓ! வேள்வி ஆகுதிகளைச் சுமப்பவனே, அந்த அசுரனிடமுள்ள எங்கள் அச்சங்களை எல்லாம் விலக்கக்கூடியவனும், உன் சக்தியுடன் கூடியவனுமான ஒரு வீர மகனைப் பெறுவாயாக.(53) நாங்கள் பெருந்தேவியான உமையால் சபிக்கப்பட்டிருக்கிறோம். உன் சக்தியைவிட எங்களுக்குப் புகலிடம் வேறேதும் இல்லை. எனவே, ஓ! பலமிக்கத் தேவா, எங்கள் அனைவரையும் நீ காப்பாயாக” என்றனர்.(54) இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறப்புமிக்கவரும், வேள்வி ஆகுதிகளைச் சுமப்பதில் தடுக்கப்பட முடியாதவனுமான அவன்{அக்னி}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி பாகீரதி என்ற வேறு பெயரால் அழைக்கப்படும் கங்கைக்குச் சென்றான்.(55)

அக்னியானவன், அவளோடு (ஆன்மக்) கலவி புரிந்து, அவளைக் கருவுறச் செய்தான். உண்மையில் (விறகும் ஊட்டப்பட்டு, காற்றின் துணையும் இருக்கும் போது) அக்னி வளர்வதைப் போலவே அக்னியின் வித்தும் கங்கையின் கருவறைக்குள் வளரத் தொடங்கியது.(56) அந்தத் தேவனின் சக்தியால் கங்கையின் இதயம் மிகவும் கலக்கமடைந்தது. உண்மையில், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் பெரும் துன்பத்தை அனுபவித்தாள்.(57) சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட தேவன், பெருஞ்சக்தி கொண்ட தன் வித்தைக் கங்கையின் கருவறைக்குள் விடும்போது, ஒரு குறிப்பிட அசுரன் (தன் சொந்த காரியம் எதற்காகவோ) அச்சுறுத்தும் வகையில் முழக்கமிட்டான்.(58) (அவளை அச்சுறுத்துவதற்காக அல்லாமல்) தன் சொந்த காரியத்திற்காக அந்த அசுரனால் வெளியிடப்பட்ட அச்சுறுத்தும் முழக்கத்தால், மிகவும் கலக்கமடைந்த கங்கையின் கண்கள் அச்சத்தால் உருளத் தொடங்கின, அவளது கலக்கத்தை வெளிப்படுத்தின.(59) தன்னினைவை இழந்த அவள், தன் உடலையும், தன் கருவறைக்குள் உள்ள வித்தையும் தாங்கிக் கொள்ள முடியாதவளானாள். சிறப்புமிக்கத் தேவனின் சக்தியால் கருவூட்டப்பட்டிருத ஜானுவின் மகள் {கங்கை} நடுங்கத் தொடங்கினாள்.(60)

ஓ! கல்விமானான பிராமணா {பரசுராமா}, அவள் தன் கருவறையில் சுமக்கும் வித்தின் சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், சுடர்மிக்க நெருப்பின் தேவனிடம், “ஓ! சிறப்புமிக்கவரே, என்னால் இனியும் உமது வித்தை என் கருவறையில் சுமக்க முடியாது.(61) உண்மையில், உமது வித்தின் மூலம் நான் மிகவும் பலவீனமடைந்திருக்கிறேன். முன்பிருந்த உடல்நலம் இப்போதில்லை. ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! பாவமற்றவரே, மிகவும் கலக்கமடைந்திருக்கும் எனது இதயம் எனக்குள் இறந்தேவிட்டது.(62) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, இன்னியும் என்னால் உமது வித்தைச் சுமக்க முடியாது. எனக்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தின் காரணமாகவே நான் அதை விடப்போகிறேனேயன்றி உறுதியின்மையால் அல்ல.(63) ஓ! சுடர்மிக்கத் தழல்களின் சிறப்புமிக்கத் தேவா, உண்மையில் உமது வித்துடன் என் மேனி தொடர்பில் இல்லை. ஓ! பெருங்காந்தி கொண்டவரே, நமது கலவி, தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக நுட்பமாக நேர்ந்ததே அன்றி, சதைக்காக அல்ல.(64) ஓ! வேள்வி ஆகுதிகளை உண்பவரே, (நான் செய்ய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட) இந்தச் செயலால் கிட்டும் பலனெதுவும் உம்மையே சேர வேண்டும். உண்மையில், இச்செயலின் அறமோ, மறமோ உம்மையே சாரவேண்டும் என்று நினைக்கிறேன்” என்றாள்.(65)

நெருப்பின் தேவன், அவளிடம், “என் வித்தைச் சுமப்பாயாக. உண்மையில், என் சக்தியுடன் கூடிய கருவைச் சுமப்பாயாக. அது பெரும் விளைவுகளுக்கு வழிவகுக்கும்.(66) நீ மொத்த பூமியையும் தாங்கிக் கொள்ளக் கூடியவளாவாய். இந்தச் சக்தியைத் தாங்கிக் கொள்ளாததன் மூலம் உனக்கு எதுவும் கிடைக்காது” என்றான்.(67)

நெருப்பின் தேவனாலும், வேறு தேவர்களாலும் அறிவுறுத்தப்பட்டாலும் ஓடைகளில் முதன்மையான அவள் {கங்கை}, மலைகள் அனைத்திலும் முதன்மையான மேருவின் சாரலில் அந்த வித்தை விட்டாள்.(68) (ஏதோ வகையில்) அந்த வித்தைத் தாங்கிக் கொள்ள முடிந்தாலும், (அக்னியும், ருத்திரனும் ஒன்றென்பதால்) ருத்திரனின் சக்தியால் ஒடுக்கப்பட்ட அவளால், எரியும் சக்தியின் விளைவால் அந்த வித்தை அதற்கு மேலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(69)

ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பெருந்துன்பத்துக்குப் பிறகு நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்தச் சுடர்மிக்க வித்தை அவள் கைவிட்ட பிறகு, அக்னி அவளைக் கண்டு,(70) அந்த ஓடைகளில் முதன்மையானவளிடம், “நீ கைவிட்ட கரு நலமாக இருக்கிறதா? ஓ! தேவி, அஃது எந்த நிறத்தில் இருந்தது? அஃது என்ன வடிவத்தில் தெரிந்தது? அஃது எத்தகைய சக்தியைக் கொண்டிருந்தது? அதைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(71)

கங்கை {அக்னியிடம்}, “அந்தக் கரு தங்க நிறத்தில் இருந்தது. ஓ! பாவமற்றவனே, அதன் சக்தியில் உம்மைப் போல இருந்தது. முற்றிலும் களங்கமற்றதாக, சுடர்மிக்கக் காந்தியுடனும், சிறந்த நிறத்துடனும் கூடிய அது மொத்த மலையையே ஒளியூட்டியது.(72) ஓ! தவசிகள் அனைவரிலும் முதன்மையானவரே, அதன் மணம் தாமரைகளும், நெய்தல்களும் உள்ள மடுக்களின் மணம் போலவும், கடப்ப மலர்களின் மணம் போலவும் குளிர்ச்சியாக இருந்தது.(73) சூரியனின் கதிர்களின் மூலம், மலையில் உள்ள பொருட்களும், தாழ்நிலமும் பொன்னாக மாறுவதாகத் தோன்றுவதைப் போலவே அந்தக் கருவைச் சுற்றிலும் இருந்த அனைத்தும் அதன் காந்தியால் தங்கமாக மாறிவிட்டதாகத் தெரிந்தது.(74) உண்மையில், அந்தக் கருவின் காந்தியானது, மலைகளிலும், ஆறுகளிலும், ஊற்றுகளிலும் வெகு தொலைவுக்குப் பரவியிருக்கிறது.(75) உண்மையில், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மூவுலகங்களும் அதன் மூலம் ஒளியூட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஓ! வேள்வி ஆகுதிகளைச் சுமக்கும் சிறப்புமிக்கவரே, உமது பிள்ளை இவ்வகையிலேயே இருக்கிறான்.(76) சூரியனையோ, சுடர்மிக்க உம்மைப் போன்றோ, அழகில் இரண்டாம் சோமனைப் போன்றோ அவன் இருக்கிறான்” என்றாள் {கங்கை}. இச்சொற்களைச் சொன்ன அந்தத் தேவி அங்கேயே, அப்போதே மறைந்து போனாள்.(77)

ஓ! பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே, பெருஞ்சக்தியைக் கொண்டவனான பாவகனும் {அக்னியும்}, தேவர்களின் காரியத்தை நிறைவேற்றிவிட்டு தான் விரும்பிய இடத்திற்குச் சென்றுவிட்டான்.(78) இச்செயலின் விடைக்கான விளைவாலேயே முனிவர்களும், தேவர்களும், நெருப்பின் தேவனுக்கு ஹிரண்யரேதஸ் என்ற பெயரை அளித்தனர்[1].(79) (கங்கைக் கைவிட்ட பிறகு) அந்த வித்தைப் பூமி தாங்கிய காரணத்தால் அவளும் வசுமதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறாள்.[2] அதேவேளையில், பாவகனிடம் இருந்து பிறந்து, குறிப்பிட்ட காலம் கங்கையால் தாங்கப்பட்டு,(80) நாணற்காட்டில் விழுந்த அந்தக் கருவானது, வளரத் தொடங்கி இறுதியாக ஓர் அற்புத வடிவை அடைந்தது. கிருத்திகை நட்சத்திரத்திற்குத் தலைமை தாங்கும் தேவி எழுஞாயிறுக்கு ஒப்பான அந்த வடிவைக் கண்டாள்.(81) அது முதல் அவள் தன் முலையை உண்ணக் கொடுத்து தன் மகனாகவே அந்தப் பிள்ளையை வளர்க்கத் தொடங்கினாள். இந்தக் காரணத்தினாலேயே சிறந்த காந்தியைக் கொண்ட அந்தப் பிள்ளை அவளது பெயரைக் கொண்டு கார்த்திகேயன் என்று அழைக்கப்படலானான்.(82) ருத்திரனின் உடலில் இருந்து வெளிய விழுந்த வித்தில் இருந்து அவன் வளர்ந்ததால், அவன் ஸ்கந்தன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான். அவனது பிறப்புச் சம்பவம் தனிமையான நாணற்காட்டில் அனைவரின் பார்வைக்கும் மறைவில் நடந்ததால் அவன் குஹன் என்ற பெயராலும் அழைக்கப்பட்டான்.

இவ்வழியிலேயே சுடர்மிக்கத் தழல்களின் தேவனுடைய வாரிசாகவே தங்கம் இருப்புக்கு வந்தது[3].(83) எனவே அந்தத் தங்கமே பொருட்கள் அனைத்திலும் முதன்மையானதாகக் காணப்பட்டு, தேவர்களின் ஆபரணங்களானது. இந்தச் சூழ்நிலையில் இருந்து அந்தத் தங்கம், ஜாதரூபம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது[4].(84) விலைமதிப்புமிக்கப் பொருட்கள் அனைத்திலும் முதன்மையானதாகவும், ஆபரணங்களுக்கு மத்தியில் முதன்மையானதாகவும் அது {தங்கம்} இருக்கிறது. தூய்மைப்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் அதிகத் தூய்மைப்படுத்துவதும், மங்கலப் பொருட்கள் அனைத்திலும் அதிக மங்கலமானதாகவும் அஃது இருக்கிறது. தங்கமானது, அனைத்தின் தலைவனும், பிரஜாபமதிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அக்னியே ஆகும். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, புனிதப் பொருட்கள் அனைத்திலும் அதிகப் புனிதம் வாய்ந்தது தங்கமே. உண்மையில் தங்கமானது, அக்னி மற்றும் சோமனின் சாரத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது” {என்றார் வசிஷ்டர்}.(86)

பிருகு, அங்கிரஸ், கவி! – அநுசாஸனபர்வம் பகுதி – 85ஆ-பிரம்மனின் வேள்வியில் பிறந்தவர்கள்; மஹாதேவனின் மகனான பிருகு; அக்னியின் மகனான அங்கிரஸ்; பிரம்மனின் மகனான சுக்கிரன்; பிருகு, அங்கிரஸ் மற்றும் சுக்கிர சந்ததிகள்; பொற்கொடையளிப்பவர்கள் அடையும் கதி…

வசிஷ்டர் {பரசுராமரிடம்} தொடர்ந்தார், “ஓ! ராமா, பரமாத்மாவோடு அடையாளம் காணப்படும் பெரும்பாட்டனின் சாதனை குறித்த பிரம்ம தரிசனம் என்றழைக்கப்படும் இவ்வரலாற்றை நான் பழங்காலத்தில் கேட்டிருக்கிறேன்.(87) ஓ! பெரும் வலிமை கொண்டவனே, தேவர்களில் முதன்மையானவனும், அச்சந்தர்ப்பத்தில் வருணனின் வடிவை ஏற்றவனுமான தலைவன் ருத்திரன் பழங்காலத்தில் செய்த வேள்விக்கு(88) அக்னியைத் தலைமையாகக கொண்ட தேவர்களும் முனிவர்களும் வந்தனர். (உடல்வடிவத்துடன் கூடிய) வேள்வி அங்கங்கள் அனைத்தும், உடல்வடிவத்துடன் கூடிய வஷத் என்றழைக்கப்படும் மந்திரமும் அந்த வேள்விக்கு வந்தன.(89) எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான சாமங்களும், யஜுஸ்களும் தங்கள் உடல்வடிவத்துடன் அங்கே வந்தன. சொற்களை உச்சரிக்கும் வதிகளால் அலங்கரிக்கப்பட்ட ரிக் வேதமும் அங்கே வந்தது.(90) லக்ஷணங்கள், ஸ்வரங்கள், ஸ்தோபங்கள், நிருக்தங்கள், ஸ்வரங்களின் வகைகள், ஓங்கார அசை, நிக்ரகம், பிரக்கிரகம் ஆகியவை அனைத்தும் மஹாதேவனின் கண்களில் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டன.(91) உபநிஷத்துகள், வித்யை, சாவித்திரி, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை அனைத்தும் அங்கே வந்து சிறப்புமிக்கச் சிவனால் ஆதரிக்கப்பட்டன.(92)

அனைவரிலும் பலமிக்க அத்தலைவன் {சிவன்} அப்போது தனக்குள் தானே ஆகுதிகளை ஊற்றினான். உண்மையில், பிநாகைபாணி பலவகை வடிவங்களைக் கொண்ட அந்த வேள்வியை அழகானதாகத் தெரியச் செய்தான்.(93) சொர்க்கம், ஆகாயம், பூமி, வானம் அவனே. அவன் பூமியின் தலைவன் என அழைக்கப்படுகிறான். தடங்கல்கள் அனைத்தையும் ஆளும் தலைவன் அவனே. அவன் ஸ்ரீயுடன் கூடியவன், மேலும் அவன் சுடர்மிக்கத் தழல்களின் தேவனோடு {அக்னியோடு} அடையாளம் காணப்படுகிறான்.(94) அந்தச் சிறப்புமிக்கத் தேவன் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறான். பிரம்மன், சிவன், ருத்திரன், வருணன், அக்னி, பிரஜாபதி ஆகியோரும் அவனே. அவனை உயிரினங்கள் அனைத்தின் மங்கலத் தலைவனாவான்.(95) ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, (உடல்வடிவம் கொண்ட) வேள்வி, தவம், கலவிச் சடங்குகள், கடும் நோன்புகளுடன் சுடர்விடும் திக்ஷா தேவி, பல்வேறு திசைப்புள்ளிகள் மற்றும் அவற்றைத் தலைமை தாங்கும் தேவர்கள், அவர்களின் மகள்கள், தெய்வீக அன்னையர் ஆகியோர் அனைவரும் ஒரே திரளாக ஒன்றாகப் பசுபதியிடம் வந்தனர்.(96,97)

உண்மையில் வருணனின் வடிவத்தை ஏற்றிருந்த உயர் ஆன்ம மஹாதேவனின் வேள்வியைக் கண்ட அவர்கள் அனைவரும் மிகவும் நிறைவடைந்திருந்தனர். பேரழகுடன் கூடிய தெய்வீகக் காரிகையரைக் கண்டு பிரம்மனின் வித்து வெளியேறி பூமியில் விழுந்தது.(98) அந்த வித்துப் புழுதியில் விழுந்ததன் விளைவால், பூஷன் (சூரியன்), அந்தவித்தின் துகள்களோடு கலந்த மண்ணைத் தன் கையால் பூமியில் இருந்து எடுத்து வேள்வி நெருப்புக்குள் விட்டான்.(99) அதே வேளையில், சுடர்மிக்கத் தழல்களுடனும், புனித நெருப்புடனும் கூடிய வேள்வி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. (ஹோத்ரியாக) பிம்மன் நெருப்புக்குள் ஆகுதிகளை ஊற்றிக் கொண்டிருந்தான். இவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருந்த பெரும்பாட்டன் ஆசையால் தூண்டப்பட்டான் (எனவே அவனது வித்து வெளிவந்தது).(100) ஓ! பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே, அந்த வித்து வெளிவந்ததும், வேள்விக் கரண்டியில் அதை எடுத்த அவன், சுடர்மிக்க நெருப்பில் தேவையான மந்திரங்களுடன் ஆகுதி நெய்யாக அஃதை ஊற்றினான்.(101) பெருஞ்சக்தி கொண்ட பிரம்மன் அந்த வித்திலிருந்தே நான்கு வகை உயிரினங்களை இருப்புக்குள் எழச் செய்தான். பெரும்பாட்டனின் வித்தானது, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களுடன் கூடியதாக இருந்தது. அதில் உள்ள ரஜஸ் குணத்திலிருந்து பிரவிருத்தி, அல்லது செயற்கோட்பாட்டுடன் கூடிய அசையும் உயிரனங்கள் அனைத்தும் உண்டாகின.(102) தமஸ் குணத்திலிருந்து அசைவற்ற உயிரினங்கள் அனைத்தும் தோன்றின. எனினும், அந்தவித்துக்குள் வசித்த சத்வ குணம் இரு வகை இருப்புகளுக்குள் நுழைந்தது. அந்தச் சத்வ குணம், தேஜஸ் அல்லது ஒளியின் இயல்பாக (புத்தியுடன் அடையாளங் காணப்படுவதா) இருக்கிறது[5].(103)அனைத்து உயிரினங்களிலும் உள்ள சத்வ குணமானது, எது சரி, எது தவறு என்பதைக் காட்டும் ஒளியோடு அடையாளம் காணப்படுகிறது. பிரம்மனின் வித்தானது இவ்வாறு வேள்வி நெருப்பில் ஆகுதியாக ஊற்றப்பட்ட போது, ஓ! வலிமைமிக்கவனே, அதிலிருந்து மூவர் இருப்புக்குள் எழுந்தனர்.(104) தத்தமது காரணங்களினால் வந்த குணங்களைக் கொண்டவர்களும், சிறந்த உடல்களைக் கொண்டவர்களுமாக மூன்று ஆண்கள் {புருஷர்கள்} உண்டானார்கள். (பிரிக் என்றழைக்கப்படும்) நெருப்பின் தழல்களில் இருந்து முதலில் எழுந்ததன் காரணமாக ஒருவர் பிருகு என்ற பெயரில் அழைக்கப்பட்டார். (அங்காரம் என்றழைக்கப்படும்) எரியும் கரித்துண்டிலிருந்து {தணலிலிருந்து} இரண்டாமவர் வந்ததால் அவர் அங்கிரஸ் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.(105) அணைந்த கரித்துண்டு குவியலில் இருந்து {தணலின் ஒளியிலிருந்து} மூன்றாமவர் வந்ததால், கவி {சுக்கிராச்சாரியர்} என்ற பெயரில் அவர் அழைக்கப்பட்டார். உடலில் இருந்து தழல்கள் வெளிப்பட முதலில் வந்தவர் பிருகு என்றழைக்கப்பட்டார் என ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.(106)

வேள்வி நெருப்பின் கதிர்களில் இருந்து மரீசி என்ற மற்றொருவரும் எழுந்தார். மரீசியில் இருந்து (பின்னர்) கசியபர் எழுந்தார். (எரியும்) கரித்துண்டில் இருந்து அங்கிரஸ் எழுந்தார் என ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. அந்த வேள்வியில் பரப்பப்பட்டிருந்த குசப்புற்களில் {தர்ப்பைகளில்} இருந்து வாலகில்யர்கள் என்றழைக்கப்படும் (மிகக் குறுகியவர்களான) முனிவர்கள் உண்டாகினர். ஓ! பெரும்பலம் கொண்டவனே, அதே குசப்புற்களில் {தர்ப்பைகளில்} இருந்தே அத்ரி உண்டானார். நெருப்பின் சாம்பலில் இருந்து, தவங்களுடன் கூடியவர்களும், வேதங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், சிறந்த சாதனைகள் அனைத்தும் கொண்டவர்களும், மறுபிறப்பாள முனிவர்களுமான வைகானசர்கள் தோன்றினர்.(108,109) அக்னியின் கண்களில் இருந்து பேரழகு மேனியுடன் அசுவினி இரட்டையர்கள் தோன்றினர். இறுதியாக அவனது காதுகளில் இருந்து பிரஜாபதிகள் அனைவரும் தோன்றினர்.(110)

அக்னியுடைய உடலின் மயிர்க்கால்களில் {வியர்வைத் துளைகளில்} இருந்து முனிவர்கள் உண்டாகினர். அவனது வியர்வையில் இருந்து சந்தங்களும் {வேதங்களும்}, அவனது பலத்திலிருந்து மனமும் உண்டாகின. இதன் காரணமாகவே அக்னியானவன், அனைத்துத் தேவர்களும் ஒன்றுதிரண்ட வடிவம்(11) என வேதமறிந்த முனிவர்களால் வேத அதிகாரத்தின் வழிகாட்டுதற்படி சொல்லப்படுகிறான். அக்னியின் தழல்களை உயிருடன் வைத்திருக்கும் மரத்துண்டுகள் மாதங்களாகக் கருதப்படுகின்றன. விறகு அளிக்கும் சாரம் பிறைநாட்களாக {பக்ஷங்களாக} அமைகின்றன.(112) அக்னியின் ஈரல் பகல் இரவு என்றழைக்கப்படுகிறது அவனது கடும் ஒளி முஹுர்த்தங்களாக அழைக்கப்படுகின்றன. அக்னியின் குருதியே ருத்திரர்களின் ஊற்றுக்கண்ணாகக் கருதப்படுகிறது. அவனது குருதியில் இருந்து மைத்ரதேவதைகள் என்ற தங்க நிறம் கொண்ட தேவர்கள் உண்டாகிறார்கள்[6].(113) அவனது புகையில் இருந்து வசுக்கள் உண்டாகினர். அவனது தழல்களில் இருந்து ருத்திரர்களும், பிரகாசத்துடன் கூடிய (பனிரெண்டு) ஆதித்தியர்களும் உண்டாகினர்.(114) ஆகாயத்தில் நிறுவப்பட்டுள்ள கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் பிற விண்மீன்கள் ஆகியவை அக்னியின் (எரியும்) கரித்துண்டுகளாகக் கருதப்படுகின்றன. அண்டத்தை முதலில் படைத்தவன் அக்னியையே பரப்பிரம்மமாகவும், நித்தியமானவனாகவும், அனைத்து விருப்பங்களையும் அருள வல்லவனாகவும் அறிவித்தான்.(115) இஃது உண்மையில் ஒரு புதிராகும்.இந்தப் பிறவிகள் அனைத்தும் உண்டான பிறகு, (வேள்விக்காக) வருண வடிவத்தை ஏற்றிருந்த மஹாதேவன், பவனனைத் தன் ஆன்மாவாகக் கொண்டவனிடம்,(116) “இந்தச் சிறந்த வேள்வி என்னுடையதாகும். நானே இதன் கிரஹபதி. வேள்வி நெருப்பில் இருந்து முதலில் உண்டான மூவரும் என்னுடையவராவர். அவர்கள் என் வாரிசுகளாகக் கருதப்படுவர் என்பதில் ஐயமில்லை. வானை அதிகாரம் செய்யும் தேவர்களே இஃதை அறிவீராக. அவர்கள் இவ்வேள்வியின் கனிகளாவர் {பயன்களாவர்}” என்றான் {சிவன்}.(117)

அக்னி, “இந்த வாரிசுகள் என் அங்கங்களில் இருந்து பிறந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் உயிர்பெற என்னையே சார்ந்திருக்கின்றனர். எனவே, அவர்கள் என் பிள்ளைகளாகவே கருதப்பட வேண்டும். வருணனின் வடிவில் உள்ள மஹாதேவன் இக்காரியத்தில் பிழை செய்கிறான்” என்றான்.(118)

இதன்பிறகு, “உயிரினங்கள் அனைத்தின் பெரும்பாட்டனும், உலகங்கள் அனைத்தின் தலைவனுமான பிரம்மன், “இவர்கள் என் பிள்ளைகளாவர். வேள்வி நெருப்புக்குள் ஊற்றபட்ட வித்து என்னுடையதாகும்.(119) நானே இவ்வேள்வியை நிறைவேற்றியவன். என்னில் இருந்து வெளிவந்த வித்தை வேள்வி நெருப்புக்குள் ஊற்றியவன் நானே. கனியானது, எப்போதும் வித்தை நட்டு வைத்தவனுக்கே உரியதாகும். என்னுடைய வித்தே இந்த மூவரின் பிறப்புக்கு அடிப்படைக் காரணமாகும்” என்றான்.(120)

பெரும்பாட்டனிடம் சென்ற தேவர்கள், தலைவணங்கி, மதிப்புடன் கைகூப்பியவாறு அவனிடம்,(121) “ஓ! சிறப்புமிக்கவரே, நாங்கள் அனைவரும், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டமும் உம் வாரிசுகளே ஆவோம். ஓ! ஐயா, (வாரிசு குறித்த காரியத்தில்) சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட அக்னி,(122) சிறப்பும் பலமும்மிக்க மஹாதேவன் ஆகியோரின் விருப்பங்கள் நிறைவேறட்டும்” என்றனர்.

இந்த வார்த்தைகளின் மூலம், சூரியப் பிரகாசத்துடன் கூடியவரும், முதலில் பிறந்தவருமான பிருகு, பிரம்மனுக்குப் பிறந்தவராகவே இருந்தாலும், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தின் ஆட்சியாளனும், வருண வடிவில் இருந்தவனுமான பலமிக்க மஹாதேவனே அவரை {பிருகுவைத்} தன் சொந்த பிள்ளையாகப் பெற்றுக் கொண்டான். பிறகு பெரும்பாட்டன் {பிரம்மன்} அங்கிரஸ் அக்னியின் மகனாக வேண்டும் என நினைத்தான்.(123,124) அனைத்து உண்மைகளை அறிந்த பெரும்பாட்டன் பிறகு கவியை {சுக்கிரரைத்} தன் மகனாக எடுத்துக் கொண்டான். பூமியில் மக்கள் பெருகுவதற்காக உயிரினங்களை உண்டாக்கும் காரியத்தில் ஈடுப்பட்டவரும், பிரஜாபதிகளில் ஒருவராகக் கருதப்படுபவருமான பிருகு, அதுமுதல் வருணனின் வாரிசாக {வாருணி என்று} அழைக்கப்பட்டார்.(125) அனைத்து செழிப்பையும் கொண்ட அங்கிரஸ் அக்னியின் வாரிசாக {ஆக்னேயர் என்று} அழைக்கப்பட்டார், கொண்டாடப்படும் கவி {சுக்கிரன்} பிரம்மனின் பிள்ளையாக அறியப்பட்டார். முறையே அக்னியின் தழல்கள் மற்றும் கரித்துண்டுகளில் இருந்து உண்டான பிருகுவும், அங்கிரஸும் உலகில் பேரினங்களையும் குலங்களையும் உண்டாக்கியவர்களானார்கள்.(126) உண்மையில், பிருகு, அங்கிரஸ் மற்றும் கவி ஆகியோரே பிரஜாபதிகளாகவும், பல குலங்கள் மற்றும் இனங்களை உண்டாக்கியவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அனைவரும் இம்மூவரின் பிள்ளைகளே. ஓ! பலமிக்க வீரா, இஃதை அறிவாயாக.(127)

பிருகு தமக்கு இணையான தகுதிகளையும், சாதனைகளையும் கொண்ட ஏழு மகன்களைப் பெற்றார். சியவனர், வஜ்ரசீர்ஷர், சுசி, ஔர்வர்,(128) வரமளிக்கும் சுக்ரர், விபு {வரேண்யர்}, ஸவனர் என்பதே அவர்கள் பெயர்கள். இவர்கள் எழுவர். அவர்கள் பிருகுவின் பிள்ளைகளாதலால் பார்க்கவர்களாவார்கள். அவர்கள் தங்கள் மூதாதையான பிருகு, வருண வடிவில் இருந்த மஹாதேவனால் தத்தெடுக்கப்பட்டதால் வாருணர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் பிருகு குலத்தைச் சேர்ந்தவர்களாவர்.(129)

அங்கிரஸ் எட்டு மகன்களைப் பெற்றார். அவர்களும் வாருணர்கள் என்று அறியப்படுகிறார்கள். அவர்கள் பிருஹஸ்பதி, உதத்தியர் {உசத்தியர்}, வயஸ்யர், சாந்தி,(130) தீரர் {கோரர்}, விருபர், ஸம்வர்த்தர், எட்டாவதாக ஸுதன்வா என்ற பெயர்களைக் கொண்டவராவர். இந்த எண்மரும் அக்னியின் வாரிசுகளாகக் கருதப்படுகின்றனர். அனைத்துத் தீமைகளில் இருந்து விடுபட்ட அவர்கள் அறிவுக்கு மட்டுமே அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.(131)

பிரம்மனால் எடுத்துக் கொள்ளப்பட்ட கவியின் மகன்களும் வாருணர்கள் என்ற அறியப்படுகிறார்கள். எண்ணிக்கையில் எண்மரான அவர்கள் அனைவரும் (மணம்செய்து கொள்ளாமல் வாழும் வாழ்வை நோற்காமல்) இனங்களையும், குலங்களையும் உண்டாக்கினார்கள். இயல்பில் மங்கலர்களான இவர்கள் அனைவரும் பிரம்மத்தை அறிந்தவர்களாக இருந்தனர்.(132) கவியுடைய எட்டு மகன்களின் பெயர்கள், கவி, காவியர், திருஷ்ணு {விஷ்ணு}, பெரும் நுண்ணறிவைக் கொண்ட உசநஸ் {சுக்கிரர்}, பிருகு, விரஜர் {வருணன்}, காசி {காசியபர்}, அனைத்துக் கடமைகளையும் அறிந்த உக்ரர் {அக்னி} ஆகும்.(133) இவர்களே கவியின் எட்டு மகன்களாவர். இவர்களின் மூலமே மொத்த உலகத்திலும் மக்கள் பெருகினர். அவர்கள் அனைவரும் பிரஜாபதிகளாவர், அவர்களின் மூலமே பல சந்ததிகள் உண்டாக்கப்பட்டன.(134) ஓ! பிருகு குலத் தலைவா, இவ்வாறே மொத்த உலகமும், அங்கிரஸ், கவி மற்றும் பிருகுவின் சந்ததியால் பெருகியது.(135) ஓ! கல்விமானான பிராமணா, பலமிக்கவனும், வேள்விக்காக வருணனின் வடிவில் இருந்தவனும், பரமனுமான தலைவன் மஹாதேவனே முதலில் கவியையும், அங்கிரஸையும் தத்தெடுத்தவர். எனவே, அவர்கள் இருவரும் வருணனாகக் கருதப்படுகின்றனர்.(136) வேள்வி ஆகுதிகளை உண்பவனும், சுடர்மிக்கத் தழல்களைக் கொண்டவனுமான தேவன் அதன் பிறகே அங்கிரஸைத் தத்தெடுத்தான். எனவே, அங்கிரஸின் சந்ததி அக்னி குலத்திற்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது.(137)

பழங்காலத்தில் தேவர்கள், பெரும்பாட்டனான பிரம்மனை நிறைவடையச் செய்து, அவனிடம், “(பிருகு, அங்கிரஸ், கவி மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களைக் குறிப்பிட்டு) அண்டத்தின் தலைவர்களான இவர்கள் எங்கள் அனைவரையும் காக்கட்டும்.(138) அவர்கள் அனைவரும் (பூமியில் பெருகும்) வாரிசுகளை உண்டாக்குபவர்களாட்டும். அவர்கள் அனைவரும் தவம் செய்பவர்களாட்டும். உமது அருளால் இவர்கள் அனைவரும் (யாரும் வசிக்க முடியாத காடாகிவிடாமல்) உலகத்தைக் காக்கட்டும்.(139) இவர்கள் தங்கள் சக்தியால் பெரும் குலங்களையும், இனங்களையும் உண்டாக்கி சக்தியில் பெருகட்டும். இவர்கள் அனைவரும் வேதங்களின் ஆசான்களாகவும் பெரும் செயல்களைச் செய்பவர்களாகவும் ஆகட்டும். இவர்கள் அனைவரும் தேவர்களின் நண்பர்களாகட்டும். உண்மையில் இவர்கள் அனைவரும் மங்கலம் நிறந்திருக்கட்டும். இவர்கள் பெரும் இனங்களையும் குலங்களையும் நிறுவுபவர்களாகவும், பெரும் முனிவர்களாகவும் ஆகட்டும். பெரும் தவம் செய்பவர்களாகவும், உயர்ந்த பிரம்மச்சரியத்தில் அர்ப்பனிப்புமிக்கவர்களாகவும் ஆகட்டும்.(141) ஓ! பெரும் பலம் கொண்டவரே {பிரம்மாவே}, நாங்களும், இவர்கள் அனைவரும் உமது சந்ததியே. ஓ! பெரும்பாட்டனே, தேவர்களையும், பிராமணர்களையும் படைத்தவர் நீரே.(142) மரீசியே உமது முதல் வாரிசு. பார்க்கவர்கள் என்று அழைக்கப்படும் யாவரும் உமது சந்ததியே. (நாங்களும் அவ்வாறே ஆகிறோம்). ஓ! பெரும்பாட்டனே, இந்த உண்மையைக் கண்டு நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி ஆதரிப்போம்.(143) இவ்வழியில் இவர்கள் அனைவரும் தங்கள் சந்ததியைப் பெருக்கி, அண்ட அழிவுக்குப் பிறகு ஒவ்வொரு படைப்பின் போதும் உம்மை நிறுவட்டும்” என்றனர்.(144)

இவ்வாறு சொல்லப்பட்டவரும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனுமான பிரம்மன், அவர்களிடம், “அவ்வாறே ஆகட்டும். நான் உங்கள் அனைவரிடமும் நிறைவடைந்தேன்” என்றார். தேவர்களிடம் இதைச் சொல்லிவிட்டு, அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயே சென்றான்.(145) பழங்காலத்தில், தேவர்களில் அனைவரிலும் முதன்மையானவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான வேள்விக்காரணத்திற்காக வருண வடிவத்தை ஏற்றிருந்தவனுமான மஹாதேவனின் வேள்வியில் இதுவே நடந்தது.(146) அக்னியே பிரம்மனாவான். அவனே பசுபதியுமாவான். அவன் சர்வனுமாவான். அவன் ருத்திரனுமாவான். அவன் பிரஜாபதியுமாவன்[7]. தங்கம் அக்னியின் வாரிசு என்பது நன்கறியப்பட்ட ஒன்றாகும்.(147) (வேள்வி காரியங்களுக்கு) நெருப்பு அடையப்பட முடியாத போது, தங்கம் அதற்கு மாற்றாக இருக்கிறது. வேத திறன்தேர்வின் மூலம் கொடுக்கப்படும் குறியீடுகளால் வழிநடத்தப்படுபவனும், அதிகாரங்களை அறிந்தவனும், நெருப்போடு தங்கம் அடையாளம் காணப்படுவதை அறிந்தவனுமான ஒருவன் இவ்வழியிலேயே செயல்படுவான்.(148)வேள்வி செய்பவன், தரையில் குசப்புற்களை {தர்ப்பங்களை} பரப்பி வைத்து விட்டு அதில் தங்கத்தை வைத்து, அதில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். எறும்புப்புற்றின் துளைகளிலும், வெள்ளாட்டின் வலக்காதிலும்,(149) சமமான தரைப்பகுதியிலும், தீர்த்தங்களின் நீரிலும், பிராமணன் கையிலும் ஆகுதிகள் ஊற்றப்பட்டால், அதனால் நிறைவடையும் சிறப்புமிக்க நெருப்பின் தேவன் {அக்னி}, தன் பெருக்கத்திற்காகவும், தன் மூலம் தேவர்கள் பெருக்கத்திற்காகவுமான ஆதாரமாக இதைக் கருதுவான்.(150) எனவேதான் தேவர்கள் அனைவரும் அக்னியைத் தங்கள் புகலிடமாகக் கொண்டு அவனிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள் என நாம் கேள்விப்படுகிறோம். அக்னி பிரம்மனில் இருந்து உதித்தான், அக்னியில் இருந்து தங்கம் உதித்தது.(151) எனவே, பொற்கொடையளித்து அறம் நோற்கும் மனிதர்கள், தேவர்கள் அனைவரையும் கொடையளித்தவர்களாகக் கருதப்படுகிறார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(152) பொற்கொடை அளிக்கும் மனிதன் மிக உயர்ந்த கதியை அடைகிறான். சுடர்மிக்கப் பிரகாச உலகங்கள் அவனுடையவையாகும். உண்மையில், ஓ! பார்க்கவா, அவன் சொர்க்கத்தில் மன்னர்களுக்கு மன்னனாக நிறுவப்படுகிறான்.(153)

சூரியன் எழும்போது உரிய மந்திரங்களுடன் விதிப்படி பொற்கொடை அளிக்கும் மனிதன், கெட்ட கனவுகளால் முன்னறிவிக்கப்படும் தீய விளைவுகளை அகற்றுவதில் வெல்கிறான்.(154) சூரியன் எழுந்ததும் {முதல் சந்திப்பொழுதில்}, பொற்கொடை அளிக்கும் மனிதன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்து விடுபடுகிறான். நடுப்பகலில் பொற்கொடை அளிப்பவன், எதிர்காலப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(155) இரண்டாம் சந்திப்பொழுதில் {மாலை வேளையில்} ஆன்ம அடக்கத்துடன் பொற்கொடை அளிக்கும் ஒருவன் பிரம்ம, வாயு, அக்னி, சோம தேவர்களுக்குரிய உலகங்களை அடைவதில் வெல்கிறான்.(156) அத்தகைய மனிதன் இந்திரனுக்கு உரிய பேரின்ப உலகங்களின் மங்கலப் புகழை ஈட்டுகிறான். இவ்வுலகில் பெரும்புகழை அடையும் அவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து இன்பத்திலும் மகிழ்ச்சியிலும் திளைக்கிறான்.(157)

உண்மையில், அத்தகைய மனிதன் மகிழ்ச்சிகரமான உலகங்கள் பலவற்றை அடைந்து, புகழிலும், மகிமையிலும் ஒப்பற்றவனாகத் திகழ்கிறான். தடையற்ற பாதையைக் கொண்ட அவன், விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்வதில் வெல்வான்.(158) அவன் அடையும் உலகங்களில் இருந்து ஒருபோதும் விழ நேராமல், அவன் ஈட்டிய மகிமை பெரிதாகும். உண்மையில், பொற்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் எண்ணற்ற இன்ப உலகங்களை அடைந்து நித்திய இன்பத்தை அனுபவிப்பான்.(159) சூரியன் எழும்போது நெருப்பை மூட்டி, ஒரு குறிப்பிட்ட நோன்பு நோற்கும் நோக்கில் பொற்கொடை அளிக்கும் மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதில் வெல்கிறான்.(160) தங்கம் அக்னியோடு அடையாளங்காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. எனவே, பொற்கொடை பேரின்பத்தை விளைவிக்கும். விரும்பப்படுபவையும், இதயத்தைத் தூய்மைப்படுத்துபவையுமான சாதனைகளும் பலன்களையும் அடைவதற்குப் பொற்கொடையானது வழிவகுக்கிறது.(161)

ஓ! பாவமற்றவனே, இவ்வாறு பொன்னின் தோற்றத்தைக் குறித்து உனக்குச் சொன்னேன். ஓ! பலமிக்கவனே, ஓ! பிருகு குலத்தைத் திளைக்கச் செய்பவனே, கார்த்திகேயன் எவ்வாறு வளர்ந்தான் என்பதை அறிவாயாக.(162) நீண்ட காலத்திற்குப் பிறகு கார்த்திகேயன் வளர்ந்தான். ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, அதன் பிறகு அவன் இந்திரனின் தலைமையிலான தேவர்கள் அனைவராலும் தேவ படையின் தளபதியாக {படைத்தலைவனாகத்} தேர்ந்தெடுக்கப்பட்டான்.(163) ஓ! பிராமணா, அவன் உலகங்கள் அனைத்திலும் நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டுத் தேவர்களின் தலைவனுடைய ஆணையின் பேரில் தைத்தியன் தாரகனையும், அசுரர்கள் பலரையும் கொன்றான்.(164) ஓ! பெரும் வலிமை கொண்டவனே, பொற்கொடை அளிப்பதன் பலன்களைக் குறித்தும் நான் உனக்குச் சொன்னேன். எனவே, ஓ! பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நீ பொற்கொடை அளிப்பாயாக” என்றார் {வசிஷ்டர்}”.(165)

பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வாறு வசிஷ்டரால் சொல்லப்பட்டவரும், பேராற்றல் கொண்டவருமான ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, பிராமணர்களுக்குப் பொற்கொடை அளித்து, தம் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தார்.(166) ஓ! மன்னா, ஓ! யுதிஷ்டிரா, இவ்வாறே நான் பொற்கொடை குறித்த அனைத்தையும், பொன்னின் தோற்றம் குறித்தும் சொன்னேன்.(167) எனவே, நீ பிராமணர்களுக்கு அபரிமிதமாகப் பொற்கொடை அளிப்பாயாக. உண்மையில், ஓ! மன்னா, பொற்கொடையளிப்பதன் மூலம் நீ நிச்சயம் உன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவாய்” {என்றார் பீஷ்மர்}.(168)

தாரக வதம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 86-குமரனுக்கு முலையுண்ணக் கொடுத்த கார்த்திகைப் பெண்கள்; தேவர்கள், முனிவர்கள் முதலியோரால் குமரனுக்குக் கொடுக்கப்பட்ட பொருட்கள்; தாரகன் கொல்லப்பட்டது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, வேத கேள்வியில் குறிப்பிடப்படுவதும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு ஏற்புடையதுமான பொற்கொடையால் உண்டாகும் பலன்களைக் குறித்து விரிவாகச் சொன்னீர்.(1) பொன்னின் தோற்றம் குறித்தும் நீர் சொன்னீர். இப்போது தாரகனின் அழிவு குறித்து எனக்குச் சொல்வீராக.(2) ஓ! மன்னா, அந்த அசுரன் தேவர்களால் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான் என நீர் சொன்னீர். அவனுடைய அழிவு எவ்வாறு ஏற்பட்டது என்பதை விரிவாக எனக்குச் சொல்வீராக.(3) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, தாரகன் கொல்லப்பட்டதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து அறிய விரும்புகிறேன். அதைக் கேட்பதில் என் ஆவல் பெரிதாக இருக்கிறது” என்றான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, (தாரகனின் ஆற்றல் மூலமும், கங்கை அக்னியின் வித்தைக் கைவிட்ட நடத்தையின் மூலமும்) பெரும் துன்பத்தில் இருந்த தேவர்களும், முனிவர்களும், கிருத்திகை அறுவரிடமும் அந்தப் பிள்ளையை வளர்க்கத் தூண்டினர்.(5) தெய்வீக மங்கையரில் (அவர்களைத் தவிர வேறு) எவரும் அக்னியின் வித்தைத் தங்கள் கருவறையில் தாங்கும் சக்தி கொண்டவர்களாக இல்லை.(6) பெரும் சக்தி கொண்ட அக்னியின் வித்தைக் கைவிட்ட பிறகு அதைத் தாங்கத் தயாராக இருந்த அந்தத் தேவிகளிடம் நெருப்பின் தேவன் பெரும் நிறைவடைந்திருந்தான்.(7) ஓ! மன்னா, அக்னியின் சக்தி ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு (கருவறைக்குச் செல்லும்) வழியில் வைக்கப்பட்டபோது, கிருத்திகைகள் அறுவரும், தங்கள் கருவறையில் கொண்ட ஒவ்வொரு பகுதியையும் பேணி வளர்க்கத் தொடங்கினர்.(8)

எனினும், உயர் ஆன்மக் குமாரன் அவர்களின் கருவறைகளில் வளரத் தொடங்கியபோது, அவனுடைய சக்தியால் பீடிக்கப்பட்ட அவர்களது உடல்கள் (சொர்க்கத்திலோ, பூமியிலோ) எங்கும் அமைதியைக் காணத் தவறின.(9) அவர்களது உடல்களால் சக்தியால் நிறைக்கப்பட்டு ஈனும் காலமும் இறுதியாக வந்தது. ஓ! மனிதர்களின் இளவரசே, அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கருவை ஈன்றனர்.(10) ஆறு வெவ்வேறு கருவறைகளில் தாங்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதிகள் அனைத்தும் வெளியே வந்ததும் ஒன்றாகின. பூமாதேவி அப்பிள்ளையை, பொற்குவியலில் இருந்து எடுத்தாள்.(11) உண்மையில், சிறந்த வடிவத்தில் இருந்த அந்தப் பிள்ளை, நெருப்பின் தேவனை {அக்னியைப்} போலக் காந்தியுடன் சுடர்விட்டான். அழகிய பண்புகளைக் கொண்ட அவன், காண்பதற்கினிய நாணற்காடுகளில் வளரத் தொடங்கினான்.(12)

காந்தியில் காலைச் சூரியனைப் போல இருந்த அவர்களது பிள்ளையைக் கிருத்திகைகள் கண்டனர். அன்பால் நிறைந்தவர்களாக, உண்மையில் அவனிடம் அதிக அன்புடன் கூடிய அவர்கள் தங்கள் முலைகள் உண்ணக் கொடுத்து அவனை வளர்க்கத் தொடங்கினர்.(13) கிருத்திகைகளுக்குப் பிறந்து அவர்களாலேயே வளர்க்கப்பட்டதால் மூவுலகங்களிலும் அவன் கார்த்திகேயன் என்று அறியப்படலானான். ருத்திரனிடமிருந்து விழுந்த வித்தில் உதித்த அவன் ஸ்கந்தன் எனப் பெயரிடப்பட்டான், தனிமையான நாணற்காட்டில் பிறந்ததால் அவன் குஹன் (ரஹஸ்யமாகப் பிறந்தவன்) என்ற பெயராலும் அழைக்கப்பட்டான்.(14) முப்பத்து மூன்று தேவர்கள், (உடல்வடிவங்களுடன் கூடிய) திசைப்புள்ளிகள், அவற்றுக்குத் தலைமை தாங்கும் தேவர்கள் {திக்பாலர்கள்}, ருத்திரன், தாத்ரி {தாதா}, விஷ்ணு, யமன், பூஷன், அர்யமன், பகன்,(15) அம்சன், மித்திரன், ஸாத்தியர்கள், வாசவன் {இந்திரன்}, வசுக்கள், அசுவினிகள், நீர், காற்று, ஆகாயம், சந்திரமாஸ், நட்சத்திரக் கூட்டங்கள், கோள்கள், சூரியன்,(16] உடல்வடிவத்தோடு கூடிய ரிக், சாமம், யஜுஸ்கள் அனைத்தும் சுடர்மிக்கத் தழல்களின் தேவனுடைய {அக்னியுடைய} மகனான அந்த அற்புதமான பிள்ளையைக் காண அங்கே வந்தனர்.(17)

ஆறு தலைகளைக் கொண்டவனும், பனிரெண்டு கண்களைக் கொண்டவனும், பிராமணர்களிடம் பெரும் அர்ப்பணிப்பு கொண்டவனும், குமாரன் என்றழைக்கப்படுபவனுமான அந்தப் பிள்ளையின் புகழை முனிவர்களும், கந்தர்வர்களும் பாடினர்.(18) அவனது தோள்கள் அகலமாக இருந்தன, அவனுக்குப் பனிரெண்டு கரங்கள் இருந்தன, அவனுடைய காந்தி நெருப்புக்கும், ஆதித்தியனுக்கும் ஒப்பானதாக இருத்தது. நாணற்புதரில் நீண்டு கிடக்கும் அக்குழந்தையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும்,(19) பெரும் மகிழ்ச்சியால் நிறைந்து, அந்தப் பேரசுரன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கருதினர். தேவர்கள் அவனுக்கு உற்சாகமூட்ட பல்வேறு வகைகளிலான பொம்மைகளையும், பொருட்களையும் கொண்டு வந்தனர்.(20) அவன் குழந்தையைப் போல விளையாடியபோது, அவனுக்குப் பல்வேறு வகைப் பொம்மைகளும், பறவைகளும் கொடுக்கப்பட்டன. சிறந்த இறகுகளைக் கொண்டவனான கருடன், பலவண்ண தோகைகளை உடைய தன் பிள்ளையான மயிலை அவனுக்குக் கொடுத்தான்.(21)

ராட்சசர்கள் அவனுக்குப் பன்றியையும், எருமையையும் கொடுத்தனர். அருணன் அவனுக்கு, கடுங்காந்தியைக் கொண்ட சேவலொன்றைக் கொடுத்தான்.(22) சந்திரமாஸ் செம்மறியாட்டையும், ஆதித்தியன் தன் பளபளக்கும் கதிர்களையும் கொடுத்தனர். பசுக்கள் அனைத்தின் தாயான சுரபி அவனுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடுத்தாள்.(23) அக்னி அவனுக்குப் பல நற்குணங்களைக் கொண்ட வெள்ளாடு ஒன்றைக் கொடுத்தான். ஐலன் அவனுக்குப் பெரும் அளவிலான மலர்களையும் கனிகளையும் கொடுத்தான். சூதன்வான் அவனுக்கு ஒரு வண்டியையும், அளவிலாத கூபரம் கொண்ட ஒரு தேரையும் கொடுத்தான்.(24) வருணன் கடலில் விளையும் பல சிறந்த மங்கலப் பொருட்களைஉம், சில யானைகளையும் கொடுத்தான். தேவர்களின் தலைவன், சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் பல்வேறு வகைப் பறவைகள்,(25) இரைதேடும் பயங்கர விலங்குகள், மற்றும் பல்வேறு வகைக் குடைகள் பலவற்றையும் கொடுத்தான். பெரும் கூட்டங்களாக இருந்த ராட்சசர்களும், அசுரர்களும் அந்தப் பலமிக்கப் பிள்ளையின் பின்னால் அணிவரிசையில் நடக்கத் தொடங்கினர்.(26)

அக்னியின் மகன் வளர்வதைக் கண்ட தாரகன், பல்வேறு வகைகளில் அவனை அழிக்க முயன்றாலும் அந்தப் பலமிக்கத் தேவனை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.(27) சரியான நேரத்தில் தேவர்கள் தனிமையில் (நாணற்காட்டில்) அக்னிக்குப் பிறந்த மகனை தங்கள் படைத்தலைவனாக நிறுவினர். அசுரன் தாரகன் தங்களை ஒடுக்கு வருவது குறித்தும் அவனுக்குச் சொன்னார்கள்.(28) தேவர்களின் படைத்தலைவன் வளர்ந்ததும், பெரும் பலத்தையும், சக்தியையும் கொண்டவனாக இருந்தான். காலத்தில் அந்தக் குஹன் தன் தடுக்கப்பட முடியாத ஈட்டியை {வேலைக்} கொண்டு தாரகனைக் கொன்றான்.(29) உண்மையில், குமரன் அந்த அசுரனை விளையாட்டு போல எளிமையாகக் கொன்றான். தாரகனைக் கொன்ற பிறகு அவன் தேவர்களின் தலைவனை மூவுலகங்களின் அரசாட்சியில் மீண்டும் நிறுவினான்.(30)

வலிமையும், ஆற்றலும் கொண்ட அந்தத் தேவர் படைத்தலைவன் அழகிலும், காந்தியிலும் சுடர்விட்டுக் கொண்டிருந்தான். பலமிக்க ஸ்கந்தன், தேவர்களின் பாதுகாவலனாகி, சங்கரனுக்கு ஏற்புடையதைச் செய்தான்.(31) பாவகனின் சிறப்புமிக்க மகன், தங்க வடிவம் கொண்டவனாக இருந்தான். உண்மையில் குமாரனே எப்போதும் தேவர்களின் படைத்தலைவனாக இருந்தான்.(32) நெருப்பு தேவனுடைய பலமும், சக்தியுமாக இருந்த தங்கம் கார்த்திகேயனுடன் (ஒரே வித்தில்) பிறந்ததாகும். எனவே, தங்கமானது, உயர்வானதும், மங்கலமானதும், மதிப்புமிக்கதும், சிறந்ததும், வற்றாத பலனைக் கொண்டதுமாக இருக்கிறது.(33) ஓ! குரு குலத்தின் மகனே, இவ்வாறே பழங்காலத்தில் பிருகு குல ராமரிடம் {பரசுராமரிடம்} வசிஷ்டர் சொன்னார். எனவே, ஓ! மனிதர்களின் மன்னா, பொற்கொடை அளிப்பாயாக.(34) ராமர் {பரசுராமர்}, பொற்கொடை அளித்ததன் மூலம் தம் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து, இறுதியாகப் பிற மனிதர்களால் அடைய முடியாத சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அடைந்தார்” என்றார் {பீஷ்மர்}.(35)

சிராத்த பலன்! – அநுசாஸனபர்வம் பகுதி – 87-நீத்தார் வழிபாட்டுக்குரிய விதிகள் மற்றும் ஒவ்வொரு திதியிலும் சிராத்தம் செய்வதன் பலன் ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! அற ஆன்மாவே, நான்கு வகைக்கான கடமைகள் குறித்து நீர் எனக்குச் சொல்லியிருக்கிறீர். அதுபோலவே, ஓ! மன்னா, (இறந்து போன மூதாதையருக்கான) சிராத்தம் {நீத்தார் வழிபாடு} தொடர்பான விதிகள் அனைத்தையும் இப்போது எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்”.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு யுதிஷ்டிரனால் சொல்லப்பட்டதும், அந்தச் சாந்தனுவின் மகன் {பீஷ்மர்}, விதிகளுக்கு இணக்கமாகச் சிராத்தம் தொடர்பான பின் வரும் சடங்கை அறிவிப்பதில் தம்மைத் தாமே நிறுவிக் கொண்டார்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, சிராத்த சடங்கு குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன் கவனமாகக் கேட்பாயாக. ஓ! எதிரிகளை எரிப்பவனே, மங்கலமானதும், புகழத்தக்கதும், புகழையும், சந்ததியையும் உண்டாக்கவல்லதுமான அந்தச் சடங்கு, பித்ருக்களைக் கௌரவிப்பதில் ஒரு வேள்வியாகக் கருதப்படுகிறது.(3) தேவர்களோ, அசுரர்களோ, மனிதர்களோ, கந்தர்வர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ, பிசாசங்கள் அல்லது கின்னரர்களோ எவராக இருந்தாலும் ஒருவன் பித்ரு வழிபாட்டை எப்போதும் செய்ய வேண்டும்.(4) மக்கள் பித்ருக்களை முதலில் வழிபடுவதும், அதன் பிறகு தேவர்களைத் துதித்து அவர்களை நிறைவடையச் செய்வதும் காணப்படுகிறது. எனவே, ஒருவன் மிகக் கவனமாக எப்போதும் பித்ரு வழிபாட்டைச் செய்ய வேண்டும்[1].(5)ஓ! மன்னா, பித்ருக்களைக் கௌரவிக்கும் சிராத்தத்தைப் பின்னர்ச் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தப் பொதுவிதி (புதுநிலவு {அமாவாசை} நாளின் பிற்பகலில் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் சிராத்தம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லும்) ஒரு சிறப்பு விதியால் தடுக்கப்பட்டிருக்கிறது[2].(6) (இறந்து போன) பாட்டனார்கள் {மூதாதையர்கள்} எந்த நாளில் சிராத்தம் செய்தாலும் நிறைவடைவார்கள்[3]. எனினும், (பின்பற்றத் தகுந்த சூழ்நிலைகளை நோக்கில் கொண்டு சிராத்தங்களைச் செய்யும்) குறிப்பிட்ட சந்திர நாட்களின் {திதிகளின்} நிறைகுறைகளை இப்போது சொல்லப் போகிறேன். (7) ஓ! பாவமற்றவனே, எந்த நாட்களில் சிராத்தங்களைச் செய்தால் என்ன கனிகள் அடையப்படும் என்பது குறித்துச் சொல்லப் போகிறேன். கவனமாகக் கேட்பாயாக.(8)வளர்பிறையின்[4] ஒன்றாம் நாளில் {பிரதமையில்} பித்ருக்களைத் துதிப்பதன் மூலம் ஒருவன், விரும்பத்தக்க சாதனைகளைச் செய்யும் பிள்ளைகள் பலரைப் பெறவல்ல அழகிய மனைவிகளைத் தன் வசிப்பிடத்தில் அடைவான்.(9)வளர்பிறையின் இரண்டாம் நாளில் {துவிதியையில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் மகள்கள் பலரை அடைகிறான். மூன்றாம் நாளில் {திருதியையில்} அதைச் செய்பவன் பல குதிரைகளை அடைகிறான். நான்காம் நாளில் {சதுர்த்தியில்} அதைச் செய்பவன் (வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் போன்ற) சிறு விலங்குகளின் பெரும் மந்தையைத் தன் வீட்டில் அடைகிறான்.(10)

ஓ! மன்னா, ஐந்தாம் நாளில் {பஞ்சமியில்} சிராத்தம் செய்பவர்கள் மகன்கள் பலரை அடைகிறார்கள். ஆறாம் நாளில் {சஷ்டியில்} சிராத்தம் செய்வோர் பெரும் காந்தியை அடைகிறார்கள்.(11)

ஏழாம் நாளில் {சப்தமியில்} அதைச் செய்யும் ஒருவன் பெரும் புகழை அடைகிறான். எட்டாம் நாளில் {அஷ்டமியில்} அதைச் செய்யும் ஒருவன் வணிகத்தில் பெரும் லாபங்கள் ஈட்டுகிறான்.(12)

ஒன்பதாம் நாளில் {நவமியில்} அதைச் செய்யும் ஒருவன் பிளவில்லாத {ஒற்றைக்} குளம்பைக் கொண்ட விலங்குகள் பலவற்றை அடைவான். பத்தாம் நாளில் {தசமியில்} அதைச் செய்யும் ஒருவன் பசுக்கள் என்ற பெருஞ்செல்வத்தை அடைகிறான்.(13)

பதினொன்றாம் நாளில் {ஏகாதசி} அதைச் செய்யும் ஒருவன் துணிமணிகள் மற்றும் (பித்தளை மற்றும் பிற உலோகங்களாலான) பாத்திரங்கள் போன்ற செல்வத்தை அடைகிறான். அத்தகைய மனிதன் பிரம்ம காந்தியுடன் கூடிய மகன்கள் பலரையும் அடைவான்.(14)

பனிரெண்டாம் நாளில் {துவாதசியில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன், விரும்பினால் வெள்ளி மற்றும் தங்கத்தினாலான பல்வேறு வகை அழகிய பொருட்களை எப்போதும் காண்பான்.(15)

பதிமூன்றாம் நாளில் {திரையோதசியில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன், தன் இனத்தில் சிறப்புமிக்கவனாவான். பதினான்காம் நாளில் {சதுர்த்தசியில்} சிராத்தம் செய்பவனுடைய குடும்பத்தில் உள்ள இளையோர் அனைவரும் {புருஷர்கள் அனைவரும் இளமைப் பருவத்திலேயே} மரணமடைவார்கள் என்பதில் ஐயமில்லை. அத்தகைய மனிதன் போரில் சிக்குவான். புதுநிலவு நாளில் {அமாவாசையில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அடைவான்.(16,17)

தேய்பிறையில் பத்தாம் நாள் {தசமி} தொடங்கி, (தசமி தொடங்கி அமாவாசை வரை வரும் நாட்களில்) பதினான்காம் நாளை {சதுர்த்தசியை} மட்டும் விட்டுவிட்டு வரும் அனைத்து நாட்களும் சிராத்தம் செய்வதற்கு மெச்சத்தகுந்த நாட்களே. தேய்பிறையின் மற்ற நாட்கள் {தேய்பிறையில் பிரதமை தொடங்கி நவமி வரையுள்ள நாட்கள்} அவ்வாறானவை அல்ல {சிராத்தம் செய்யத் தகுந்தவை அல்ல}.(18) மேலும், சிராத்த காரியங்களில் வளர்பிறையைவிடத் தேய்பிறை சிறந்ததாக இருப்பதைப் போலவே, முற்பகலைவிட, நாளின் பிற்பகலே சிறப்பானதாகும்[5]” என்றார் {பீஷ்மர்}.(19)

சிராத்த ஹவிஸுகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 88-சிராத்தத்தில் ஆகுதிகளாகப் பயன்படுத்தத் தகுந்த பொருட்களையும், அவற்றின் பலன்களையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பெரும்பலம் கொண்டவரே, பித்ருக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் எந்தப் பொருள் வற்றாததாகிறது என்பதை எனக்குச் சொல்வீராக. மேலும் (காணிக்கை அளிக்கப்படும்) எந்த ஹவிஸ் {ஆகுதி பொருள்} காலத்திற்கும் நீடித்திருக்கிறது? உண்மையில் (கொடுக்கப்பட்டால்) நித்தியத் தன்மையை அடைவது எது?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர், “ஓ! யுதிஷ்டிரா, சிராத்த சடங்கை அறிந்த மனிதர்கள், சிராத்த நோக்கில் தகுந்ததெனக் கருதும் ஹவிஸ்கள் {வேள்வி நெருப்பில் இடத்தக்க பொருட்கள்} எவை என்பதையும், அவை ஒவ்வொன்றினாலும் விளையும் பலன்களையும் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(2) ஓ! மன்னா, எள், அரிசி, வாற்கோதுமை, உளுந்து, நீர், கிழங்குகள், கனிகள் ஆகியவற்றைக் கொண்டு சிராத்தம் கொடுக்கப்பட்டால் ஒரு மாத காலம் வரை பித்ருக்கள் நிறைவடைந்திருப்பார்கள்.(3) அதிக அளவிலான எள்ளைக் கொண்டு சிராத்தம் செய்யப்பட்டால், அத்தகைய சிராத்தம் வற்றாததாகிறது என மனு சொல்லியிருக்கிறார். அனைத்து வகை உணவுகளிலும், எள்ளே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.(4) சிராத்தங்களில் மீன்கள் காணிக்கையளிக்கப்பட்டால், இரண்டு மாத காலம் வரை பித்ருக்கள் நிறைவடைந்திருக்கின்றனர். {செம்மறி} ஆட்டிறைச்சியினால் மூன்று மாதங்கள் வரையும், முயலிறைச்சியினால் அவர்கள் நான்கு மாதங்கள் வரையும் நிறைவடைந்திருக்கின்றனர்.(5)

ஓ! மன்னா, வெள்ளாட்டு இறைச்சியால் ஐந்து மாதங்கள் வரையும், பன்றியிறைச்சியால் ஆறு மாதங்கள் வரையும், பறவைகளின் இறைச்சியால் ஏழு மாதங்கள் வரையும் அவர்கள் நிறைவடைந்திருக்கின்றனர்.(6) பிருஷதம் {புள்ளிமான்} என்றழைக்கப்படும் மான்களில் இருந்து கிடைக்கும் இறைச்சியால் எட்டு மாதங்கள் வரையும், ருருவிடம் {கறுப்பு மானில் இருந்து} கிடைக்கும் இறைச்சியால் ஒன்பது மாதங்கள் வரையும், கவய {மற்றொரு வகை மான்} இறைச்சியால் பத்து மாதங்கள் வரையிலும் அவர்கள் நிறைவடைந்திருக்கின்றனர்.(7) எருமை இறைச்சியால் அவர்கள் பதினோரு மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றனர். சிராத்தத்தில் அளிக்கப்படும் மாட்டிறைச்சியால் அவர்கள் ஒரு முழு வருடத்திற்கு நிறைவடைந்திருக்கிறார்கள்.(8) மாட்டிறைச்சியைப் போலவே நெய்யுடன் கலந்த பாயசம் பித்ருக்களுக்கு மிகவும் ஏற்புடையதாகும். வாத்ரீநச இறைச்சியால் பித்ருக்கள் பனிரெண்டு வருடங்கள் நீடிக்கும் அளவுக்கு நிறைவடைந்திருக்கிறார்கள்[1].(9) பித்ருக்கள் இறந்த சந்திர நாளில் {திதியில்} ஆண்டுதோறும் காண்டாமிருகத்தின் இறைச்சி காணிக்கையளிக்கப்பட்டால் அது வற்றாததாகிறது. காலசாகம் என்றழைக்கப்படும் கீரை {அறைக்கீரை}, காஞ்சன மலரின் இதழ்கள், வெள்ளாட்டிறைச்சி ஆகியவை காணிக்கையளிக்கப்பட்டால் அவையும் வாற்றாதவையாகின்றன.(10)ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக உண்மையில் பித்ருக்களாலேயே பாடப்பட்ட சில ஸ்லோகங்கள் (இவ்வுலகில்) பாடப்படுகின்றன. இவை பழங்காலத்தில் சனத்குமாரரால் சொல்லப்பட்டவை.(11) {அந்த ஸ்லோகங்கள்}, “எங்கள் குலத்தில் பிறந்தவன் எவனும், சூரியன் தெற்கு நோக்கிச் செல்கையில் {தக்ஷிணாயனத்தில்}, மக நட்சத்திரத்தின் கீழ் வரும் (தேய்பிறையின்) பதிமூன்றாம் நாளில் {திரயோதசியில்} எங்களுக்கு நெய் கலந்த பாயசம் கொடுக்க வேண்டும்.(12) எங்கள் குலத்தில் பிறந்த ஒருவன், நோன்பு நோற்பவனைப் போலவே, மக நட்சத்திரத்தின் கீழ் வெள்ளாட்டு இறைச்சியையோ, காஞ்சன மலரின் இதழ்களையோ {எங்களுக்குக்} காணிக்கையளிக்க வேண்டும். அவன், ஒரு யானையின் நிழலால் மறைக்கப்படும் இடத்தில் உரிய சடங்குகளுடன் நெய் கலந்த பாயசத்தை எங்களுக்குக் காணிக்கையளிக்கும் வகையில் அர்ப்பணிக்க வேண்டும்” {என்று சொல்கின்றன}[2].(13)பல மகன்களைப் பெற ஆசைப்பட வேண்டும், ஏனெனில் அவர்களில் ஒருவனாவது, எது உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுகிறதோ, எதன் கிளைகளுக்கு அடியில் கொடுக்கப்படும் காணிக்கைகள் அனைத்தும் வற்றானவாகின்றனவோ அந்த ஆலமரம் நிற்கும் கயைக்கு (தன் மூதாதையருக்குச் சிராத்தம் செய்வதற்காகச்) செல்வான்[3].(14) சிறிதளவு நீர், கிழங்குகள், கனிகள், இறைச்சி, அரிசி ஆகியவற்றைத் தேனில் கலந்து ஆண்டுதோறும் {குறிப்பிட்ட மூதாதையரின்} இறந்த நாளில் காணிக்கையளித்தால் அவை வற்றாதனவாகின்றன” என்றார் {பீஷ்மர்}.(15)

சிராத்த நட்சத்திர பலன்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 89-சிராத்தங்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் செய்யப்பட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதை சசபிந்துவுக்குச் சொன்ன யமன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, வெவ்வேறு நட்சத்திரங்களில் விரும்பினால் செய்ய வேண்டிய {கட்டாயமில்லா} சிராத்தங்களைக் குறித்து மன்னன் சசபிந்துவிடம் யமன் சொன்னதை உனக்குச் சொல்லப்போகிறேன்; கேட்பாயாக[1].(1)எப்போதும் கிருத்திகை நட்சத்திரத்தில் சிராத்தம் செய்யும் மனிதன், புனித நெருப்பை நிறுவி ஒரு வேள்வியைச் செய்தவனாகக் கருதப்படுகிறான். அத்தகைய மனிதன் நோயில் இருந்து விடுபட்டு, தன் பிள்ளைகளுடன் சொர்க்கத்திற்கு உயர்கிறான்.(2)

பிள்ளைகளைப் பெற விரும்புபவன், ரோகிணி நட்சத்திரத்தில் சிராத்தம் செய்ய வேண்டும், அதே வேளையில் சக்தியைப் பெற விரும்புபவன் மிருசீரிஷ நட்சத்திரத்தில் சிராத்தம் செய்ய வேண்டும். ஆர்த்திரா {திருவாதிரை} நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் ஒரு மனிதன் கடும் செயல்களைச் செய்தவனாகிறான் {அவன் கொடுஞ்செய்கையுள்ளவனாவான்}.(3)

புனர்பூசத்தில் சிராத்தம் செய்யும் மனிதன் உழவில் லாபம் ஈட்டுவான். வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் விருப்பமுள்ள மனிதன் புஷ்யத்தில் {பூசத்தில்} சிராத்தம் செய்ய வேண்டும்.(4)

அஷ்லேஷ {ஆயில்யம்} நட்சத்திரத்தில் அதைச் செய்யும் ஒருவன், வீரமைந்தர்களைப் பெறுகிறான். மகத்தில் அதைச் செய்வதன் மூலம் ஒருவன் தன் இனத்தில் சிறந்தவனாகிறான்.(5)

பால்குனியில் {பூரத்தில்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் நற்பேறு பெறுகிறான். பிந்தைய பால்குனத்தில் {உத்தரத்தில்} அதைச் செய்பவன் பல பிள்ளைகளைப் பெறுகிறான்; ஹஸ்த நட்சத்திரத்தில் அதைச் செய்பவன் தன் விருப்பங்கள் கனியும் நிலையை அடைகிறான்.(6)

சித்திரை மாதத்தில் அதைச் செய்வதன் மூலம் ஒருவன் பேரழகுடன் கூடிய பிள்ளைகளைப் பெறுகிறான். ஸ்வாதி நட்சத்திரத்தில் அதைச் செய்வதன் மூலம் ஒருவன் வணிகத்தில் லாபம் ஈட்டுகிறான்.(7)

பிள்ளைகளைப் பெற விரும்பும் மனிதன், விசாக நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் தன் விருப்பம் கனியும் நிலையை அடைகிறான். அனுராதாவில் {அனுஷத்தில்} செய்வதன் மூலம் ஒருவன் மன்னர்களுக்கு மன்னனாகிறான் {சக்கரவர்த்தியாகிறான்}.(8)

ஓ குரு குலத்தில் முதன்மையானவனே, ஜியேஷ்ட {கேட்டை} நட்சத்திரத்தில் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் பக்தியுடனும், பணிவுடனும் காணிக்கைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் அரசுரிமையை அடைகிறான்.(9)

மூல நட்சத்திரத்தில் சிராத்தம் செய்யும் ஒருவன் உடல் நலத்தை அடைகிறான், ஆஷாதத்தில் {பூராடத்தில்} அதைச் செய்பவன், சிறந்த புகழை ஈட்டுகிறான். ஆஷாதத்தில் {பூராடத்தில்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் கவலைகள் அனைத்தில் இருந்து விடுபட்டு மொத்த உலகத்தையும் சுற்றுவதில் வெல்கிறான்.(10)

அபிஜித் {உத்திராடம்} நட்சத்திரத்தில் அதைச்செய்வதன் மூலம் ஒருவன் உயர்ந்த ஞானத்தை அடைகிறான். சிரவணத்தில் {திருவோணம்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் இவ்வுலகத்தில் இருந்து செல்லும்போது மிக உயர்ந்த கதியை அடைகிறான்.(11)

தனிஷ்ட {அவிட்டம்} நட்சத்திரத்தில் சிராத்தம் செய்யும் மனிதன் ஒரு நாட்டின் ஆட்சியாளனாகிறான். வருணனால் தலைமைதாங்கப்படும் நட்சத்திரத்தில் (சதபிஷ {சதயம்} நட்சத்திரத்தில்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் மருத்துவராக வெற்றி அடைகிறான்.(12)

முந்தைய பாத்திரபத {பூரட்டாதி} நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் அளவிலான வெள்ளாடுகளையும், செம்மறியாடுகளையும் உடைமையாக அடைகிறான்; அதையே பிந்தைய பாத்திரபதத்தில் {உத்திரட்டாதியில்} செய்யும்போது அவன் ஆயிரம் பசுக்களை அடைகிறான்.(13)

ரேவதி நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் அதிகமான வெண்கல மற்றும் தாமிரப் பாத்திரங்களைச் செல்வமாக அடைகிறான். அஸ்வினியில் செய்வதன் மூலம் அவன் பல குதிரைகளை அடைகிறான். அதே வேளையில் பரணியில் செய்தால் அவன் நீண்ட வாழ்நாளை {ஆயுளைப்} பெறுகிறான்.(14)

சிராத்தம் குறித்த இந்த விதிமுறைகளைக் கேட்ட மன்னன் சசபிந்து, அதன்படியே செயல்பட்டு, மொத்த உலகையும் அடக்குவதில் எளிதாக வென்று {உலகம் முழுவதும்} ஆட்சி செலுத்தினான்” என்றார் {பீஷ்மர்}.(15)

நிமந்திரணம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 90-சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படுவனவற்றை எவ்வகைப் பிராமணர்களுக்குக் கொடுக்கலாம்; பந்திக்குத் தகுந்த, தகாத பிராமணர்கள் யாவர் என்பவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குருகுலத்தில் முதன்மையானவரே, சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளை எவ்வகைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும் என்பது குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கொடை குறித்த விதிகளை அறிந்த க்ஷத்திரியன், (கொடையளிக்கும்போது) ஒருபோதும் பிராமணர்களைச் சோதிக்கக்கூடாது. எனினும், தேவ மற்றும் பித்ரு வழிபாட்டுச் செயல்கள் {கர்மங்கள்} அனைத்திலும் பரிசோதனை செய்வது முறையே எனச் சொல்லப்படுகிறது.(2)

மனிதர்கள், தேவர்களிடம் இருந்து வரும் பக்தியால் நிறையும்போது மட்டுமே பூமியில் அவர்கள் தேவர்களை வழிபடுகிறார்கள். எனவே ஒருவன் தேவர்களுக்கே கொடையளிப்பதாகக் கருதி, பிராமணர்கள் அனைவருக்கும் கொடையளித்த பிறகே தேவர்களை அணுக வேண்டும்.(3) எனினும் சிராத்தங்களில், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஒரு நுண்ணிறிவுமிக்க மனிதன், (சிராத்த சடங்குகளைச் செய்வதற்குத் துணை புரியவும், பித்ருக்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளைக் கொடையளிக்கவும் தக்க) பிராமணர்களைச் பரிசோதித்தறிய வேண்டும். அத்தகைய ஆய்வு அவர்களுடைய பிறப்பு, நடத்தை, வயது, தோற்றம், கல்வி, பெற்றோரின் உன்னத நிலை ஆகியவை தொடர்புடையதாக இருக்க வேண்டும்.(4)

பிராமணர்களில் சிலர் தாங்கள் அமர்ந்த பந்தியைக் கெடுப்பவர்களாகவும், சிலர் அதைப் புனிதப்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். ஓ! மன்னா, பந்தியில் தவிர்க்கப்பட வேண்டிய பிராமணர்கள் யாவர் என்பதைச் சொல்கிறேன், கேட்பாயாக[1].(5) சூதுநிறைந்தவனாகவோ, கருவைக் கொன்ற குற்றம் புரிந்தவனாகவோ, காச நோய் கொண்டவனாகவோ, விலங்குகளை வளர்ப்பவனாகவோ, வேத கல்வியற்றவனாகவோ, கிராமத்தின் பொதுப் பணியாளனாகவோ {ஊர்ப் பொதுவுக்கு ஏவல் தொழில் செய்பவனாகவோ}, கடன் கொடுத்து, அதில் வரும் வட்டியைக் கொண்டு வாழ்பவனாகவோ, பாடகனாகவோ, அனைத்துப் பொருட்களை விற்பவனாகவோ,(6) தீ வைப்பவனாகவோ, நஞ்சு கொடுப்பவனாகவோ, காமத்தரகு தொழில்புரிபவனாகவோ, சோமத்தை விற்பவனாகவோ, கைவரைநூல் {கைரேகை சாஸ்திர} அறிஞனாகவோ, மன்னனிடம் பணிசெய்பவனாகவோ {அரசு ஊழியனாகவோ}, எண்ணெய் விற்பவனாகவோ, வஞ்சகனாகவோ, பொய் உறுதி மொழியேற்பவனாகவோ,(7) தந்தையிடம் சச்சரவு செய்பவனாகவோ, தன் வீட்டில் தன் மனைவியின் கள்ளக்காதலைப் பொறுத்துக் கொள்பவனாகவோ {வேறு புருஷனை வைத்திருக்கும் மனைவியுள்ளவனாகவோ}, சபிக்கப்பட்டவனாகவோ, கள்வனாகவோ, ஏதோவொரு கைத்தொழில் செய்து பிழைப்பவனாகவோ,(8) வேடம் தரிப்பவனாகவோ {நடிகனாகவோ}, நடத்தையில் வஞ்சனையுள்ளவனாகவோ, நண்பர்களென அழைக்கப்படுபவர்களுக்குப் பகையாக நடப்பவனாகவோ {நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவனாகவோ}, பிறன்மனை நயப்பவனாகவோ, சூத்திரர்களின் ஆசானாகவோ {நோன்பு நோற்காதவர்களுக்குக் கற்பிப்பவனாகவோ}, ஆயுதந்தரிக்கும் தொழிற் செய்பவனாகவோ,(9) (வேட்டைக்காக) நாய்களுடன் திரிபவனாகவோ, நாயால் கடிபட்டவனாகவோ, மூத்த சகோதரர்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டவனாகவோ, விருத்தசேதனம் செய்து கொண்டவனாகவோ {தோல் நோயுள்ளவனாகவோ / தொழுநோயாளியாகவோ}[2], தன் ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியவனாகவோ,(10) நடிகனாகவோ, ஒரு தேவனை {தெய்வத்தை} அலங்கரித்து {பூஜை செய்து} வாழ்பவனாகவோ, கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் கூட்டங்களின் சேர்க்கைகளைக் கணிப்பதன் மூலம் வாழ்பவனாகவோ {ஜோதிடனாகவோ} இருப்பவர்கள் பந்தியில் தவிர்க்கப்படத் தகுந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(11)ஓ! யுதிஷ்டிரா, சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள் அத்தகைய பிராமணர்களால் உண்ணப்பட்டால், அவை (பித்ருக்களின் வயிற்றை நிரப்புவதற்குப் பதிலாக) ராட்சசர்களின் வயிற்றை நிரப்புமென வேதமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.(12) ஒரு சிராதத்தத்தில் உண்ட பிறகு, அன்றைய வேதகல்வியைத் தவிர்க்காதவனும், அந்த நாளில் ஒரு சூத்திரப் பெண்ணுடன் பாலினக் கலவி புரிந்தவனுமான ஒருவன், தன்னுடைய அத்தகைய செயல்களின் விளைவாகத் தன்னுடைய பித்ருக்கள் ஒரு மாத காலத்திற்குச் சாணத்தில் கிடக்க நேரிடும் என்பதை அறிய வேண்டும்.(13) சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள், சோமத்தை விற்கும் பிராமணனுக்குக் கொடுக்கப்பட்டால் அவை மனிதவுடற் கழிவுகளாக {மலஜலமாக} மாறும்; மருத்துவத் தொழில் பழகும் ஒருபிராமணனுக்குக் கொடுக்கப்பட்டால் அவை சீழாகவும், குருதியாகவும் மாறும்; தேவனை அலங்கரித்து {பூஜை செய்து} வாழும் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் எக்கனியையும் {எப்பலனையும்} கொடுக்கத் தவறும்; வட்டித் தொழிலில் வாழ்பவனுக்குக் கொடுக்கப்பட்டால் புகழ்க்கேட்டுக்கு வழிவகுக்கும்;(14) வணிகத்தில் ஈடுபடும் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அவை இம்மையிலும், மறுமையிலும் கனி {பலன்} கொடுக்காது. விதவையான தாய்க்கு (இரண்டாம் கணவன் மூலம்) பிறந்த பிராமணனுக்குக் கொடுக்கப்பட்டால், அவை சாம்பலில் ஊற்றப்படும் ஆகுதிகளைப் போலக் கனியற்றவையாகிவிடும்.(15)

(சிராத்தங்களில் காணிக்கையளிக்கப்படும்) ஹவ்யகவ்யங்களை, தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாதவர்களும், தங்கள் வகைக்குரிய நல்லொழுக்க விதிகளைப் பின்பற்றாதவர்களுமான பிராமணர்களுக்குக் கொடுப்பவர்கள், மறுமையில் எவ்வித பலனையும் அத்தகைய கொடைகள் உண்டாக்காததைக் காண்பார்கள்.(16) இத்தகைய மனிதர்களின் இயல்புகளை அறிந்தும், அவர்களுக்கு இத்தகைய பொருட்களைக் கொடையளிக்கும் சிறுமதியாளன், தன்னுடைய நடத்தையால் தன் பித்ருக்களை மறுமையில் மனிதக் கழிவுகளை உண்ணச் செய்கிறான்.(17) பிராமணர்களில் இழிந்தவர்களான இவர்கள் பந்தியில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை அறிவாயாக. சூத்திரர்களுக்குப் போதிக்கும் சக்தியற்ற பிராமணர்களும் அதே வகையைச் சார்ந்தவர்களே.(18) குருடனாக இருக்கும் பிராமணன் பந்தியில் உள்ள அறுபது பேரைக் களங்கப்படுத்துகிறான்; ஆண்மையற்ற ஒருவன் நூறு பேரைக் களங்கப்படுத்துகிறான். ஓ! மன்னா, வெண்குஷ்டம் கொண்டவன், எத்தனை பேரைப் பார்ப்பானோ அத்தனை பேரையும் களங்கப்படுத்துகிறான்.(19) தலையைத் துணியால் மூடிக் கொண்டும், தெற்கு நோக்கி அமர்ந்தும், கால்களில் பாதுகைகளை அணிந்த நிலையிலும் சிராத்தங்களில் உண்ணப்படும் எதுவும், அசுரர்களையே நிறைவடையச் செய்யும்.(20)

வன்மத்துடனும், மதிப்பில்லாமலும் கொடுக்கப்படும் எதுவும், அசுர இளவரசனின் (பலியின்) பங்காகிறது என்று பிரம்மனாலேயே விதிக்கப்பட்டிருக்கிறது.(21) நாய்களையும், பந்தியைக் கெடுக்கும் இத்தகைய பிராமணர்களையும், சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளில் தங்கள் கண்களைச் செலுத்த அனுமதிக்கக்கூடாது. இந்தக் காரணத்திற்காக, பிறர் பார்வையில் இருந்து மறைக்கப்பட்ட இடங்களிலேயே சிராத்தங்கள் நடத்தப்பட வேண்டும். அந்த இடத்தில் எள்ளைத் தூவி {இறைத்து} வைத்திருக்க வேண்டும்.(22) எள் இல்லாமல் செய்யப்படும், அல்லது ஒரு மனிதனால் கோபத்துடன் செய்யப்படும் சிராத்தத்தில் ராட்சசர்களாலும், பிசாசங்களாலும் ஹவி களவாடப்படும்.(23)   பந்தியில் தவிர்க்கப்படத் தகுந்தவனை உண்ண அழைத்து சிராத்தம் செய்யும் மூடன், ஒப்பீட்டளவில் {அத்தகைய} ஒருவனால் பார்க்கப்படும் பிராமணர்களின் எண்ணிக்கை அளவுக்கான {அந்த சிராத்தத்திற்குரிய} பலனை இழப்பான்.(24)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பந்தியைப் புனிதப்படுத்துபவர்கள் யாவர் என்பதை இப்போது சொல்கிறேன், கேட்பாயாக. பரிசோதனையின் மூலம் அவர்களை நீ கண்டறிய வேண்டும்.(25) தூய அறிவு, வேத கல்வி, நோன்புகள், நியமங்களையும், நல்ல மற்றும் அற நடத்தையையும் கொண்ட பிராமணர்கள் அனைவரும் அனைத்தையும் புனிதப்படுத்துபவர்களாக அறியப்பட வேண்டும்.(26) பந்தியில் அமரத் தகுந்தவர்கள் யாவர் என்பதைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். நான் இப்போது குறிப்பிடும் வகையில் நீ அவர்களை அறிந்து கொள்ளலாம். மூன்று நாசிகேதங்கள்[3]ஐந்து வேள்வி நெருப்புகள்[4]ஐந்து சுபர்ணங்கள்[5], (வேத அங்கங்களெனும்) ஆறு கிளைகள் ஆகியவற்றை அறிந்தவனும்,(27) வேதங்களைப் போதித்த தந்தைமாரின் வழித்தோன்றலும், சந்தங்களை நன்கறிந்தவனும், ஜியேஷ்ட சாமத்தை அறிந்தவனும்[6], பெற்றோரின் ஆளுகைக்குக் கீழ்ப்படிந்தவனும், வேதங்களை அறிந்தவனும், பத்துத் தலைமுறை மூதாதையர்களைக் கொண்டவனும்,(28) தான் மணந்து கொண்ட மனைவியரிடம் மட்டுமே அவர்களுடைய பருவகாலங்களில் கலவிபுரிபவனும், அறிவாலும், வேதத்தாலும், நோன்புகள் மற்றும் நியமங்களாலும் தூய்மையடைந்தவனுமான ஒரு பிராமணன் பந்தியைப் புனிதப்படுத்துகிறான்.(29)அதர்வசிரசை {அதர்வண வேதத்தைப்} படிப்பவனும்[7], பிரம்மச்சரிய நடைமுறைகளை நோற்பதில் அர்ப்பணிப்புள்ளவனும், அற நோன்புகளை நோற்பதில் உறுதியுள்ளனும், வாய்மை நிறைந்தவனும், அறவொழுக்கம் ஒழுகுபவனும், தன் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளை முறையாக நோற்பவனும்,(30) களைப்படையும் வகையில் தீர்த்த நீர்நிலைகளில் நீராடுதவற்கு முயற்சி செய்பவனும், உரிய மந்திரங்களுடன் வேள்விகளைச் செய்து இறுதி நீராடலைச் செய்தவர்களும்,(31) கோபத்தின் ஆளுகையில் இருந்து விடுபட்டவர்களும், கலக்கமடையாதவர்களும், மன்னிக்கும் இயல்பைக் கொண்டவர்களும் {பொறுமைசாலிகளும்}, புலனடக்கத்துடன் கூடிய தற்கட்டுப்பாடு கொண்டவர்களும், அனைத்து உயிரினங்களின் நன்மையிலும் அர்ப்பணிப்புள்ளவர்களுமான மனிதர்கள் சிராத்தங்களுக்கு அழைக்கப்பட வேண்டும்.(32) இவர்களுக்குக் கொடுக்கப்படும் எதுவும் வற்றாததாகிறது. உண்மையில் இவர்களே பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாவர். உயர்ந்த அருளைக் கொண்ட வேறு சிலரும் பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாகக் கருதப்பட வேண்டும்.(33)அவர்கள் யதிகள், மோக்ஷ அறத்தைக் குறித்து அறிந்தவர்கள், யோகத்தில் அர்ப்பணிப்புள்ளர்கள், அற்புத நோன்புகளை முறையாக நோற்பவர்கள், குவிந்த மனத்தோடு (புனித) வரலாறுகளை முதன்மையான பிராமணர்களுக்கு உரைப்பவர்கள் ஆவர் {இவர்களும் பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாகக் கருதப்பட வேண்டும்}.(34) பாஷ்யங்களை {சாத்திர விரிவுரைகளை} அறிந்தவர்கள், இலக்கணக் கல்வியில் அர்ப்பணிப்புள்ளவர்கள், புராணங்களைப் படிப்பவர்கள், தர்மசாத்திரங்களைப் படிப்பவர்கள்,(35) (தர்ம சாத்திரங்கள் மற்றும் புராணங்களைப் படித்துவிட்டு) அவற்றில் விதிக்கப்பட்டுள்ள தரத்தில் செயல்படுபவர்கள், ஆசானின் வசிப்பிடத்தில் (குறிப்பிட்ட காலம்) வாழ்ந்தவர்கள், பேச்சில் வாய்மை நிறைந்தவன், ஆயிரங்களைக் கொடையளித்தவன்,(36) வேதங்கள், சாத்திரங்கள், தத்துவச் சூத்திரங்கள் அனைத்திலும் {இவை அனைத்தின் அறிவில்} முதன்மையானவர்கள் ஆகியோர் தாங்கள் காணும் தொலைவுக்குரிய அளவில் அப்பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாவர்.(37) பந்தியில் அமர்பவர்கள் அனைவரையும் அவர்கள் புனிதப்படுத்துவதாலேயே அவர்கள் பந்திகளைப் புனிதப்படுத்துபவர்கள் {பந்தி பாவனர்} என்றழைக்கப்படுகிறார்கள். வேத ஆசிரியராக இருந்த தந்தையின் வழித்தோன்றலும், தானே வேத ஆசிரியராக இருப்பவனுமாகிய ஒரே ஒருவனே கூடத் தன்னைச் சுற்றிலும் முழுமையாக ஏழு மைல்களை {இரண்டரை குரோசங்கள் தொலைவைப்} புனிதப்படுத்துகிறான் என்று பிரம்மஞானிகள் சொல்கிறார்கள்.(38) ரித்விக்காக இல்லாதவன், வேத ஆசிரியராக இல்லாதவன் ஆகியோர் ஒரு சிராத்தத்தில் முதன்மையான இருக்கையில் அமர்ந்தால், அங்கே இருக்கும் பிற ரித்விக்குகளின் அனுமதியோடே அவன் (தனது அச்செயலின் மூலம்) பந்தியில் அமர்ந்திருப்போர் அனைவரின் பாவங்களை எடுத்துக் கொள்கிறான்.(39) மறுபுறம், வேதங்களை அறிந்தவனும், பந்தியைக் கெடுக்கவல்லதாகக் கருதப்படும் களங்கங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனுமான ஒருவன் (சிராத்தத்தில் முதன்மையான இருக்கையில் அமர்வதன் மூலம்) வீழ்ந்துவிட்டவனாகக் கருதப்பட மாட்டான். அத்தகைய மனிதன் நிச்சயம் அப்பந்தியைப் புனிதப்படுத்துபவனாகவே இருப்பான்.(40)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்தக் காரணங்களுக்காகவே சிராத்தங்களுக்கு அழைப்பதற்கு முன் நீ பிராமணர்களை முறையாகப் பரிசோதிக்க வேண்டும். தன் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவர்களையும், நல்ல குடும்பங்களில் பிறந்தவர்களையும், பெருங்கல்வி கற்றவர்களையும் மட்டுமே நீ அழைக்க வேண்டும்.(41) தன் நண்பர்களுக்கு உணவூட்ட மட்டுமே சிராத்தங்களைச் செய்பவனுடைய ஹவி, தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவடையச் செய்யாமல் சொர்க்கத்திற்கு உயர்வதில் தவறுகிறது.(42) தான் செய்யும் சிராத்தங்களில் (தகுந்த மனிதர்களை அழைத்து அவர்களுக்கு உணவூட்டுவதில் முறையான கவனம் செலுத்தாமல்) நண்பர்களையும், உறவினர்களையும் மட்டுமே திரட்டும் ஒருவன் (துன்பங்கள் மற்றும் தடைகளில் இருந்து விடுபட்டு ஒளியூட்டப்பட்ட பாதையாக இருக்கும்) தேவ பாதையில் நடக்கத் தவறுகிறான். நண்பர்களை மட்டுமே திரட்டி, சிராத்தம் செய்யும் மனிதன், சொர்க்கத்திற்கு உயர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. உண்மையில், நண்பர்களைக் கவனிக்கும் நிகழ்வாகச் சிராத்தங்களை மாற்றும் மனிதன், கட்டியிருந்த சங்கலி அறுபடும்போதே, தான் அமர்ந்திருந்த கொம்பில் இருந்தும் விடுபடும் பறவையைப் போலவே அவன் சொர்க்கத்திலிருந்து தொடர்பறுந்தவனாகி விடுவான்[8].(43) எனவே, சிராத்தம் செய்பவன் (அத்தகைய நிகழ்வுகளின்போது) தன் நண்பர்களைக் கௌரவிக்கக்கூடாது. வேறு சந்தர்ப்பங்களில் அவர்களை ஒன்றாகத் திரட்டி, அவர்களுக்குச் செல்வக்கொடை அளிக்கலாம். சிராத்தங்களில் காணிக்கையளிக்கப்படும் ஹவியும், கவியும் நண்பர்களாகவும், பகைவர்களாகவும், நடுநிலையாளர்களாகவும் இல்லாதவர்களுக்கே அளிக்கப்பட வேண்டும்.(44) வறண்ட நிலத்தில் விதை விதைத்தால் அது முளைக்காததைப் போலவோ, விதைக்காதவன் விளைச்சலின் பங்கைப் பெறாததைப் போலவோ சிராத்தக் காணிக்கைகளும், தகாத மனிதனால் உண்ணப்பட்டால் இம்மையிலும், மறுமையிலும் எப்பலனையும் உண்டாக்காது[9].(45)வேத கல்வியற்ற பிராமணன், புல் அல்லது வைக்கோல் எரிவதால் உண்டாகும் நெருப்பைப் போன்றிருந்து, விரைவில் அத்தகை நெருப்பைப் போலவே அணைந்து போகிறான். வேள்வி நெருப்பின் சாம்பலில் ஆகுதிகளை ஊற்றக்கூடாது என்பதைப் போலவே சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளை அத்தகைய ஒருவனுக்கு {வேத கல்வியற்ற பிராமணனுக்குக்} கொடுக்கக்கூடாது.(46) சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள் (தகுந்த மனிதர்களுக்குக் கொடையளிக்கப்படுவதற்குப் பதிலாக) {சிராத்தங்களைச்} செய்பவர்களுக்குள்ளேயே பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்போது, அவை பிசாசங்களுக்கான கொடைகளாகக் கருதப்படும் நிலையை அடைகின்றன. அத்தகைய காணிக்கைகள் தேவர்களையோ, பித்ருக்களையோ நிறைவடையச் செய்வதில்லை. மறுவுலகை அடைவதற்குப் பதிலாக அவை, கன்றையிழந்து கொட்டிலுக்குள் திரியும் பசுவைப் போல இங்கேயே சுற்றித் திரிகின்றன.(47) வேள்வி நெருப்பு அணைந்து உண்டாகும் சாம்பலில் ஊற்றப்படும் நெய் ஆகுதியானது தேவர்களையோ, பித்ருக்களையோ ஒருபோதும் அடையாததைப் போலவே, ஒரு நர்த்தகருக்கோ, பாடகருக்கோ, அளிக்கப்படும் கொடை, அல்லது வஞ்சகனுக்கோ, பொய்யனுக்கோ கொடுக்கப்படும் தக்ஷிணையும் ஒரு பலனையும் உண்டாக்குவதில்லை.(48) பொய்யனுக்கோ, வஞ்சகனுக்கோ அளிக்கப்படும் தக்ஷிணையானது, கொடுப்பவனுக்கும், பெறுபவனுக்கும் எந்த நன்மையையும் அளிப்பதில்லை. அத்தகைய தக்ஷிணை அழிவைத் தருவதும், நிந்தனைக்குரியதுமாகும். அதைச் செய்யும் மனிதனின் பித்ருக்கள் தேவர்களின் பாதையில் இருந்து விழ நேரிடும்.(49)

ஓ! யுதிஷ்டிரா, கடமைகள் அனைத்தையும் அறிந்த முனிவர்களால் நிறுவப்பட்ட எல்லைகளுக்குள்ளேயே எப்போதும் நடப்பவர்களும், தங்கள் திறனில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களுமான மனிதர்களையே தேவர்கள் பிராமணர்களாக அறிகிறார்கள்.(50) ஓ! பாரதா, வேத கல்வி, அறிவு, தவம், செயல்கள் {கர்மங்கள்} ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ள பிராமணர்களை முனிவர்கள் என்றறிய வேண்டும். சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள் அறிவில் அர்ப்பணிப்புள்ளவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். உண்மையில், பிராமணர்களைக் குறித்து ஒருபோதும் தவறாகப் பேசாதவர்களையே மனிதர்களாகக் கருத வேண்டும்.(52) சபைக்கூட்டங்களுக்கு மத்தியில் நேரும் உரையாடல்களில் பிராமணர்களைக் குறித்துத் தவறாகப் பேசும் மனிதர்களுக்குச் சிராத்த நிகழ்வுகளில் ஒருபோதும் உணவு அளிக்கப்படக்கூடாது. ஓ! மன்னா, பிராமணர்கள் பழிக்கப்பட்டால், அவர்கள் தங்களைப் பழித்தவனின் மூன்று தலைமுறைகளை அளித்துவிடுவார்கள்[10].(53) ஓ! மன்னா, இதுவே வைகானச முனிவர்களின் அறிக்கையாகும். வேதங்களை அறிந்த பிராமணர்களை ஒரு தொலைவிலேயே கண்டுவிட முடியும்.(54) ஒருவன் பிராமணர்களை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சிராத்தங்களில் அத்தகையவர்களுக்கே காணிக்கை அளிக்க வேண்டும். ஓ! பாரதா, ஆயிரமாயிரம் போலிப் பிராமணர்களுக்கு உணவூட்டுவதால் விளையும் பலனை, வேத அறிவுள்ள ஒரேயொரு பிராமணனுக்கு உணவூட்டுவதன் மூலம் ஒருவன் அடைந்துவிடலாம்” என்றார் {பீஷ்மர்}.(55)

சிராத்தம் தோன்றிய வரலாறு! – அநுசாஸனபர்வம் பகுதி – 91-சிராத்தம் உண்டான வரலாறு மற்றும் சிராத்தத்தில் கைவிட வேண்டியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“சிராத்தம் என்பது முதலில் யாரால், எந்த நேரத்தில் கருதப்பட்டது? அதன் சாரம் என்ன? {அது எவ்வகையானது?} பிருகு மற்றும் அங்கிரஸின் வழித்தோன்றல்கள் மட்டுமே உலகத்தில் இருந்த நேரத்தில் எந்த முனிவர் சிராத்தத்தை நிறுவினார்?(1) சிராத்தத்தில் எச்செயல்களைச் செய்யக் கூடாது? கிழங்குகளும், கனிகளும் காணிக்கையளிக்கப்படும் சிராத்தங்கள் யாவை? சிராத்தங்களில் என்ன வகை அரிசி தவிர்க்கப்பட வேண்டும்? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, சிராத்தம் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டது, அறிமுகம் செய்த காலம், அந்தச் சடங்கின் சாரம் {வகை}, அதைக் கருதிய முனிவர் யார் என்பனவற்றைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(3) ஓ! குரு குலத்தவனே, சுயம்புவான பிரம்மனில் இருந்து அத்ரி உண்டானார். அத்ரியின் குலத்தில் தத்தாத்ரேயர் என்ற பெயரில் ஒரு முனிவர் பிறந்தார்.(4) தத்தாத்ரேயர், தவத்தையே செல்வமாகக் கொண்டவரும், நிமி என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு மகனைப் பெற்றார். நிமி, பெரும் மேனியழகைக் கொண்ட ஸ்ரீமான் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றார்.(5) முழுமையாக ஓராயிரம் வருடங்கள் கழிந்ததும், கடுந்தவங்களைச் செய்தவரான ஸ்ரீமான் காலத்தின் ஆளுகைக்கு வீழ்ந்து, இவ்வுலகை விட்டுச் சென்றார்.(6) அவரது தந்தையான நிமி, சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கும் சடங்கின் படி தூய்மைக்கான கர்மங்களைச் செய்து, தன் மகனின் இழப்பையே தொடர்ந்து நினைத்துக் கொண்டு பெருந்துயரில் நிறைந்திருந்தார்[1].(7)அந்தக் கவலையின் காரணத்தை நினைத்துப் பார்த்த அந்த உயர் ஆன்ம நிமி, பதினான்காம் சந்திர நாளில் {சதுர்த்தசியில்} (உணவு பானம் உள்ளிட்ட) ஏற்புடைய பல்வேறு பொருட்களைத் திரட்டினார். அடுத்தக் காலையில் அவர் படுக்கையில் இருந்து எழுந்தார்.(8) துயரமிக்க இதயத்துடன் உறக்கத்தில் இருந்து எழுந்த அவர், ஒரு பொருளில் அஃது {இதயம்} ஈர்க்கப்பட்டிருப்பதிலிருந்து விலகுவதில் வென்றார். அவரது புத்தியானது வேறு காரியங்களில் சுறுசுறுப்பாக இயங்கத் தொங்கியது.(9) அப்போதுதான் அவர் குவிந்த கவனத்துடன் சிராத்தம் செய்யும் கருத்தை அடைந்தார். தவங்களையே செல்வமாகக் கொண்ட அந்தத் தவசியால், கனிகள் மற்றும் கிழங்குகள் உள்ளிட்ட தமது உணவுப் பொருட்கள் அனைத்தும், தமக்கு ஏற்புடைய அனைத்து வகைத் தானியங்களும் மிகக் கவனமாகக் கருத்தில் கொள்ளப்பட்டன.(11) புதுநிலவு {அமாவாசை} நாளில் அவர் துதிக்கத்தக்க எண்ணற்ற பிராமணர்களை (தமது ஆசிரமத்திற்கு அழைத்தார்). பெரும் ஞானம் கொண்ட நிமி அவர்களை (குசப் புற்களாலான) இருக்கைகளில் அமரச் செய்து, அவர்களை வலம் வந்து கௌரவித்தார்.(12) தன் வசிப்பிடத்திற்கு அழைத்து வந்த ஏழு பிராமணர்களை அணுகிய அந்தப் பலமிக்க நிமி, உப்பு கலக்காத சியாமாக அரசியாலான {சாமையரிசியாலான} உணவை அவர்களுக்குக் கொடுத்தார்.(13) உணவுண்டு கொண்டிருந்த அந்தப் பிராமணர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளில் தெற்கு நோக்கிய நுனிகளைக் கொண்ட எண்ணற்ற குசப்புற்கள் {தர்ப்பங்கள்} அவர்களது பாதங்களை நோக்கி வைக்கப்பட்டன.(14) தூய உடல், மனம் மற்றும் குவிந்த கவனத்துடன் கூடிய நிமி, குறிப்பிட்ட வகையில் அந்தப் புனிதப் புற்களை வைத்து, இறந்து போன மகனின் பெயரையும், அவனது குடும்பத்தையும் {கோத்திரத்தையும்} சொல்லி அவனுக்கு அரிசி பிண்டத்தை அளித்தார் {பிண்டப் பிரதானம் செய்தார்}.(15)

முனிவர்களில் முதன்மையான அவர் {நிமி}, இதைச் செய்துவிட்டு, (தம் அறிவுக்கு எட்டிய வரையிலும்) எந்தச் சாத்திரத்திலும் விதிக்கப்படாத செயலைச் செய்துவிட்டோமெனக் கருதி வருத்தத்தால் நிறைந்தார். உண்மையில் இவ்வாறு வருத்தத்தால் நிறைந்த அவர், தாம் செய்ததை நினைக்கத் தொடங்கினார்.(16) “ஐயோ, இதற்கும் முன்பு முனிவர்களால் ஒருபோதும் செய்யப்படாததைச் செய்திருக்கிறேன். (விதிக்கப்படாத ஒரு செயலைச் செய்து வினோதமான சடங்குகளை அறிமுகம் செய்தவன் என்ற வகையில்) பிராமணர்களின் சாபங்களை எவ்வாறு நான் தவிர்க்கப் போகிறேன்” என்று அவர் நினைத்தார்.(17) அப்போது அவர் தம் குலத்தின் அசல் மூதாதையரை நினைத்தார். அவர் நினைத்த மாத்திரத்தில், தவங்களைச் செல்வமாகக் கொண்ட அத்ரி அங்கே வந்தார்.(18) இறப்பற்றவரான அத்ரி, மகன் நிமித்தமாகத் துன்பத்தில் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் அவரை {நிமியைக்} கண்டு, ஏற்புடைய ஆலோசனைகளின் மூலம் அவருக்கு ஆறுதல் வழங்கினார்.(19)

அவர் {அத்ரி} அவரிடம் {நிமியிடம்}, “ஓ! நிமியே, உன்னால் செய்யப்பட இந்தச் சடங்கு பித்ருக்களைக் கௌரவிக்கும் ஒரு வேள்வியாகும். ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவனே, அச்சமேதும் உனதாக வேண்டாம். பழங்காலத்தில் பெரும்பாட்டனே {பிரம்மாவே} இதைக் கண்டடைந்தார்.(20) நீ செய்த இந்தச் சடங்கு சுயம்புவாலேயே விதிக்கப்பட்டதாகும். சுயம்புவை {பிரம்மாவைத்} தவிர வேறு எவரால் சிராத்தத்திற்கான இந்தச் சடங்கை விதிக்க இயலும்?(21) ஓ! மகனே, சிராத்தங்கள் குறித்து விதிக்கப்பட்ட அந்தச் சிறந்த விதியை நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! மகனே, சுயம்புவால் விதிக்கப்பட்டதையே நீயும் பின்பற்றுவாயாக. முதலில் நான் சொல்வதைக் கேட்பாயாக.(22) ஓ! தவங்களைச் செல்வமாகக் கொண்டவனே, மந்திரங்களின் உதவியுடன் புனித நெருப்பில் முதலில் கரணம் செய்த பிறகு, அடுத்ததாக ஒருவன் நெருப்பின் தேவனுக்கும் {அக்னிக்கும்}, சோமன் வருணன் போன்ற தேவர்களுக்கும் எப்போதும் ஆகுதிகளை ஊற்ற வேண்டும்.(23) அடுத்ததாகப் பித்ருக்களின் துணைவர்களான விஸ்வேதேவர்களுக்கும் சுயம்பு காணிக்கைகளில் {அவிர்ப்பாகத்தில்} ஒரு பகுதியை விதித்தார்.(24)

சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளைத் தாங்கும் தேவியான பூமாதேவியும் அப்போது வைஷ்ணவி, காசியபி, வற்றாதவள் {அக்ஷயை} என்ற பெயர்களில் புகழப்பட வேண்டும்.(25) சிராத்தத்திற்கான நீர் இறைக்கப்படும்போது, பெரும்பலம் கொண்டவனான வருணன் புகழப்பட வேண்டும். ஓ! பாவமற்றவனே, அதன் பிறகு அக்னி மற்றும் சோமன் ஆகிய இருவரும் மதிப்புடன் இருப்புக்கு அழைக்கப்பட்டு (ஆகுதிகளால்) நிறைவடையச் செய்யப்பட வேண்டும்.(26) பித்ருக்கள் என்ற பெயரால் அழைக்கப்படும் தேவர்கள் சுயம்புவாலேயே படைக்கப்பட்டனர். உயர் ஆன்மாவைக் கொண்ட உஷ்மபர்களும் அவராலேயே படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளில் பங்குகள் {அவிர்ப்பாகங்கள்} விதிக்கப்பட்டிருக்கின்றன.(27) சிராத்தங்களில் இந்தத் தேவர்கள் அனைவரும் துதிக்கப்படுவதன் மூலம், {துதிப்பவரின்} மூதாதையர்கள் தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறார்கள். சுயம்புவால் படைக்கப்பட்டவர்களான மேலே குறிப்பிடப்படும் பித்ருக்கள் எண்ணிக்கையில் எழுவராவர்.(28) அக்னியைத் தங்கள் வாயாகக் கொண்டிருக்கும் விஸ்வேதேவர்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். இப்போது சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளின் பங்குகளுக்கு {அவிர்ப்பாகங்களுக்குத்} தகுந்த உயர் ஆன்ம தேவர்களின் பெயர்களைச் சொல்லப் போகிறேன்.(29)

பலன் {ஸஹன்}, திருதி {கிருதி}, விபாப்மன், புண்ணியக்ருத், பாவனன், பார்ஷ்னி {கிராம்யன்}, க்ஷேமன் {க்ஷேம்யன்}, ஸமூஹன், திவ்யஸானு,(30) விவஸ்வத் {விவஸ்வான்}, வீரியவத் {வீர்யவான்}, ஹ்ரீமத் {ஸ்ரீமான்}, கீர்த்திமத் {கீர்த்திமான்}, கிருதன், ஜிதாத்மன், முனிவீர்யன், தீப்தரோமன், பயங்கரன்,(31) அனுகர்மன், பிரதீதன் {பிரீதன்}, பிரதாத்ரி {பிரதாதா}, அம்சுமான், சைலாபன், பரமன், குரோதி, தீரோஷ்ணி, பூபதி,(32) ஸ்ரஜஸ் {ஸ்ரஜன்}, வஜ்ரின் {வஜ்ரீ}, வரி ஆகியோர் நித்திய விஷ்வேதேவர்களாவர். வித்யுத்வர்ச்சஸ், ஸோமவர்ச்சஸ், ஸூர்யஸ்ரீ என்ற பெயர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர்.(33) அவர்களுக்கு மத்தியில் உள்ளவர்களான ஸோமபன், ஸூர்யஸாவித்ரன், தத்தாத்மன், புண்டரீயகன், உஷ்ணீநாபன், நபோதன், விஷ்வாயு, தீப்தி,(34) சமூஹரன், ஸுரேசன், வியோமாரி, சங்கரன், பவன், ஈசன், கர்த்திரி {கர்த்தா}, கிருதி, தக்ஷன், புவனன், திவ்யகர்மக்ருத்,(35) கணிதன், பஞ்சவீர்யன், ஆதித்யன், ரஷ்மிமத் {ரஷ்மிவான்}, ஸப்தக்ருத், ஸோமவர்ச்சஸ், விஷ்வக்ருத், கவி,(36) அனுகோப்திரி {அனுகோப்தா}, சுகோப்திரி {ஸுகோப்தா}, நப்திரி {நப்தா}, ஈஷ்வரன் ஆகிய இவர்கள் அனைவரும் விஸ்வேதேவர்களாவார்கள். நித்தியமானவர்களான அவர்கள், காலத்தில் நேர்வது அனைத்தையும் அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.(37)

கோத்ரவம் {கேழ்வரகு}, புலகம் என்றழைக்கப்படும் தானிய வகைகளைச் சிராத்தத்தில் காணிக்கையளிக்கக்கூடாது. சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பெருங்காயம் சேர்ந்த உணவு வகைகள், கிழங்குகள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு {உள்ளி},(38) முருங்கை, மலையாத்தி, {கஞ்சா, பூசணி வகைகள்}, நஞ்சு தடவிய கணைகளால் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சி, பரங்கிக்காய், சுரைக்காய், கரியுப்பு வகைகள் அனைத்தும் காணிக்கையளிக்கப்படக்கூடாது.(39) ஊர்ப்பன்றி இறைச்சி, வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சி, கருஞ்சீரகம், இந்துப்பு வகைகள், சீதபாகியென்னும் கீரை,(40) முளை, இறைச்சியைத் துண்டு துண்டாக வெட்டி செய்யப்படும் பலகாரங்கள், சிங்காரக் கொட்டை {சிருங்காடகம்} ஆகியவை சிராத்தத்தில் கைவிடப்பட வேண்டியவை ஆகும். சிராத்தங்களில் அளிக்கப்படும் அனைத்துக் காணிக்கைகளிலும் அனைத்து வகை உப்புகளும், நாவற்கனிகளும் கைவிடப்பட வேண்டும்.(41) உமிழப்பட்ட, கண்ணீர் விழுந்த பொருட்கள் யாவும் சிராத்தங்களில் கொடுக்கப்படக்கூடாது[2]. பித்ருக்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளில், அல்லது ஹவ்யகவ்யங்களோடு தேவர்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளில் சுதர்சனம் என்றழைக்கப்படும் கீரை தவிர்க்கப்பட வேண்டும்.(42) இவை கலந்த ஹவி பித்ருக்களால் ஏற்கப்படுவதில்லை. சிராத்தம் நடைபெறும் இடங்களில் சண்டாளனும், ஸ்வபசனும் {சக்கிலியனும்} தவிர்க்கப்பட வேண்டும்;(43) மஞ்சள் கலந்த துணிகளை அணிந்திருப்பவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், (வரம்புமீறலுக்காக) விலக்கப்பட்டவர்கள், பிராமணக் கொலைக் குற்றவாளிகள், கலப்பு பிராமணன், விலக்கப்பட்ட மனிதனின் உறவினர் ஆகியோரும் தவிர்க்கப்பட வேண்டும். சிராத்தம் நடைபெறும் இடத்தில் இருந்து ஞானம் கொண்ட மனிதர்களால் இவர்கள் அனைவரும் விலக்கப்பட வேண்டும்” என்றார் {அத்ரி}.(44)பழங்காலத்தில், தவங்களைச் செல்வமாகக் கொண்டவரும், சிறப்புமிக்கவருமான அத்ரி, தம் குலத்தைச் சேர்ந்த முனிவர் நிமியிடம் இச்சொற்களைச் சொல்லிவிட்டு சொர்க்கத்திலுள்ள பெரும்பாட்டனின் சபைக்குத் திரும்பிச் சென்றார்” என்றார் பீஷ்மர்.(45)

செரிமானத் துணைவன் அக்னி! – அநுசாஸனபர்வம் பகுதி – 92-சிராத்தம் செய்த முனிவர்கள்; செரிமானம் அடையாத தேவர்களும், பித்ருக்களும்; துணை செய்த அக்நி; ஹோமத்தோடு சிராத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மேற்குறிப்பிட்ட வகையில் நிமி செயல்பட்டபிறகு, விதிகளில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி (சிராத்தம் என்றழைக்கப்படும்) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையிலான வேள்வியைப் பெருமுனிவர்கள் அனைவரும் செய்யத் தொடங்கினர்.(1) கடமைகள் அனைத்தையும் செய்வதில் உறுதியாகவுள்ள முனிவர்கள் சிராத்தங்களைச் செய்து, புனித நீர் காணிக்கைகளை (பித்ருக்களுக்குக்) கவனமாக அளிக்கத் தொடங்கினர்.(2) எனினும், அனைத்து வகை {வர்ண} மனிதர்களாலும் (பித்ருக்களுக்கு) அளிக்கப்படும் காணிக்கைகளின் விளைவாக, அவ்வுணவைப் பித்ருக்கள் செரிக்கத் தொடங்கினர்.(3) விரைவில் அவர்களும், தேவர்களும் செரியாமையால் பீடிக்கப்பட்டனர். உண்மையில், அனைத்து மனிதர்களும் அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கிய உணவுக் குவியல்களால் பீடிக்கப்பட்ட அவர்கள் {பித்ருக்களும், தேவர்களும்} சோமனிடம் சென்றனர்.(4)

சோமனை அணுகிய அவர்கள், “ஐயோ, சிராத்தங்களில் எங்களுக்கு அளிக்கப்படும் உணவின் விளைவால் உண்டான எங்கள் துன்பம் பெரிதாக இருக்கிறது. எங்கள் சுகத்திற்குத் தேவையானதை நீ விதிப்பாயாக” என்றனர்.(5)

அவர்களிடம் சோமன், “தேவர்களே, சுகமடைய விரும்புபவர்களே, நீங்கள் சுயம்புவின் {பிரம்மனின்} வசிப்பிடத்திற்குச் செல்வீராக. அவர் உங்களுக்கான நன்மையைச் செய்வார்” என்று பதிலளித்தான்.(6)

ஓ! பாரதா, சோமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்களும், பித்ருக்களும் மேரு மலைகளின் சிகரத்தில் அமர்ந்திருந்த பெரும்பாட்டனிடம் சென்றனர்.(7)

தேவர்கள், “ஓ! சிறப்புமிக்கவரே, வேள்விகளிலும், சிராத்தங்களிலும் எங்களுக்கு அளிக்கப்படும் உணவால் நாங்கள் பெரிதும் பீடிக்கப்படுகிறோம். ஓ! தலைவா, எங்களுக்கு அருள்புரிந்து எங்களுக்கான நன்மையைச் செய்வீராக” என்று கேட்டனர்.(8)

அவர்களுடைய சொற்களைக் கேட்ட சுயம்பு {பிரம்மன்} அவர்களிடம் மறுமொழியாக, “இதோ என்னருகில் அக்னி தேவன் அமர்ந்திருக்கிறான். அவனே உங்களுக்கான நன்மையைச் செய்வான்” என்றான்.(9)

அக்னி, “ஐயன்மீர், சிராத்தம் செய்யப்படும்போது, நமக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை நாம் சேர்ந்தே உண்போம். அக்காணிக்கைகளை என்னுடன் சேர்ந்து நீங்கள் உண்டால், அவற்றை எளிதிற் செரிப்பதில் வெல்வீர் என்பதில் ஐயமில்லை” என்றான்.(10)

நெருப்பு தேவனின் இச்சொற்களைக் கேட்ட பித்ருக்களின் இதயம் சுகமடைந்தது. இக்காரணத்தினாலேயே, ஓ! மன்னா, சிராத்தங்களில் காணிக்கை அளிக்கப்படும்போது, முதல் பங்கானது நெருப்பு தேவனுக்கு அளிக்கப்படுகிறது.(11) ஓ! மனிதர்களின் இளவரசே, சிராத்தத்தில் காணிக்கைகளின் முதல் பங்கு நெருப்பு தேவனுக்கு அளிக்கப்பட்டால், மறுபிறப்பாள வகையில் பிறந்த ராட்சசர்களால் அத்தகைய சிராத்தத்திற்கு எந்தத் தீங்கையும் செய்ய முடியாது[1].(12) சிராத்தத்தில் நெருப்பு தேவனைக் கண்டதும் ராட்சசர்கள் அதனைவிட்டுத் தப்பி ஓடுவார்கள். சிராத்த சடங்கென்பது, முதலில் பிண்டத்தை (இறந்துபோன) தந்தைக்கு அளிப்பதாகும். அடுத்ததாக மற்றொன்று பாட்டனுக்கு அளிக்கப்பட வேண்டும்.(13) அடுத்ததாக ஒன்று பூட்டனுக்கு {பெரும்பாட்டனுக்கு} வழங்கப்பட வேண்டும். இதுவே சிராத்த விதியாகும். ஒவ்வொரு பிண்டம் கொடுக்கப்படும் போதும், அந்தக் கொடையாளி குவிந்த கவனத்துடன் சாவித்திரி மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.(14) இந்த மந்திரமானது பித்ருக்களுக்குப் பிடித்தவனான சோமனிடமும் சொல்லப்பட வேண்டும். பருவகாலம் தொடங்கிய ஒரு பெண், அல்லது காதறுந்த ஒருவன் ஆகியோர் சிராத்தம் நடைபெறும் இடத்தில் இருக்க அனுமதிக்கப்படக்கூடாது. அதேபோல, சிராத்தம் செய்யும் மனிதனின் கோத்திரத்தைத் தவிர வேறு கோத்திரப்பெண்ணையும் அங்கே கொண்டுவரக்கூடாது[2].(15)ஓர் ஆற்றைக் கடக்கும்போது ஒருவன் தன் பித்ருக்கள் அனைவரின் பெயர்களையும் சொல்லி அவர்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளிக்க வேண்டும். உண்மையில், வழியில் ஓர் ஆறு வரும்போது ஒருவன் தன் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளித்து அவர்களை நிறைவடைச் செய்ய வேண்டும்.(16) முதலில் தன் சொந்த குலத்தைச் சேர்ந்த மூதாதையருக்கு நீர்க்காணிக்கைகளை அளித்துவிட்டு, அதன் பிறகே (இறந்து போனவர்களான) தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அத்தகைய காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(17) ஒருவன் ஓர் ஓடையைப் பலவண்ணங்களிலான இரு எருதுகள் பூட்டப்பட்ட தேரில் கடக்கும்போதோ, ஓர் ஓடையைப் படகுகளில் கடக்கும் போதோ அவனுடைய பித்ருக்கள் நீர்க்காணிக்கைகளை எதிர்பார்க்கிறார்கள்.(18) இதையறிந்தவர்கள் எப்போதும் பித்ருக்களுக்குக் குவிந்த கவனத்துடன் நீர்க்காணிக்கைகளை அளிக்கின்றனர். ஒவ்வொரு தேய்பிறையிலும் வரும் அமாவாசை நாளில் ஒருவன் இறந்து போன தன் மூதாதையருக்குக் காணிக்கை அளிக்க வேண்டும்.(19)

பித்ருக்களிடம் அர்ப்பணிப்பு கொள்வதன் மூலம் வளர்ச்சி, நீடித்த வாழ்வு, சக்தி, செழிப்பு ஆகியன அனைத்தும் அடையத்தக்கவையாகின்றன. பெரும்பாட்டனான பிரம்மன், புலஸ்தியர், வசிஷ்டர், புலஹர்,(20) அங்கிரஸ், கிரது, பெரும் முனிவரான கசியபர் ஆகிய இவர்கள், ஓ! குரு குலத்தின் இளவரசே, யோகப் பேராசன்களாகக் கருதப்படுகிறார்கள்.(21) அவர்கள் பித்ருக்களாகவே கணக்கிடப்படுகிறார்கள். ஓ! ஏகாதிபதி, இதுவே சிராத்தம் குறித்த உயர்ந்த சடங்காகும். பூமியில் செய்யப்படும் சிராத்தங்களின் மூலம் ஒருவனுடைய குலத்தைச் சேர்ந்த, இறந்து போனவர்கள், துன்பநிலையில் இருந்து விடுபடுகிறார்கள்.(22) ஓ! குரு குல இளவரசே, இவ்வாறே சிராத்த விதிகள் குறித்துச் சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் நான் விளக்கிச் சொன்னேன்” என்றார் {பீஷ்மர்}.(23)

உபவாஸம், விகஸம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 93அ-உண்ணாநோன்பின் குறியீடுகள்; தவங்களுக்கும் உண்ணாநோன்புகளுக்கும் இடையிலான வேறுபாடு; ஒருவன் விகஸம் உண்பவனாகும் நிலை ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு பிராமணரின் அழைப்பின் பேரில், (உண்ணா) நோன்பை நோற்கும் பிராமணர்கள், (அந்தச் சிராத்தத்தில் அளிக்கப்படும்) ஹவியை உண்டால், தங்கள் நோன்பு தவறிய வரம்புமீறலுக்காக அவர்கள் குற்றம் சுமத்தப்படலாமா? (அல்லது அவர்கள் அத்தகைய அழைப்பைப் பெறும்போது அந்தப் பிராமணரின் அழைப்பை மறுக்க வேண்டுமா?) ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வேதங்களில் குறிப்பிடப்படாத அத்தகைய நோன்புகளை {அவேதோக்த விரதங்களை} நோற்கும் பிராமணர்கள் தங்கள் விருப்பத் தூண்டுதலின் பேரில் உண்ணலாம். எனினும், வேதங்களில் குறிப்பிடப்படும் நோன்புகளை நோற்கும் பிராமணர்களைப் பொறுத்தவரை, ஓ! யுதிஷ்டிரா, சிராத்தம் செய்பவனின் வேண்டுகோளுக்கு இணங்க சிராத்த ஹவியை உண்பதன் மூலம் அவர்கள் தங்கள் நோன்பைக் கெடுத்த குற்றம்புரிந்தவராகக் கருதப்படுவார்கள்” என்றார்.(2)

யுதிஷ்டிரன், “சில மனிதர்கள் உண்ணா நோன்பை {உபவாஸத்தை} தவம் என்கின்றனர். உண்மையில் தவமானது உண்ணா நோன்புடன் அடையாளங்காணத் தக்கதா? இல்லையா? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

பீஷ்மர், “ஒரு மாத காலமோ, அரை மாத {ஒரு பக்ஷ} காலமோ தொடர்ந்து உண்ணா நோன்பிருப்பதைத் தவம் என்றே மக்கள் கருதுகிறார்கள். எனினும், தன் உடலைத் துன்புறுத்திக் கொள்பவன் தவசியாகவோ, கடமைகளை அறிந்தவனாகவோ கருதத்தக்கவனல்ல என்பதே உண்மை[1].(4) எனினும், துறவானது தவங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு பிராமணன் எப்போதும் உணவைத் தவிர்ப்பவனாகவும், பிரம்மச்சரியம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்பவனாகவும் இருக்க வேண்டும்[2].(5) ஒரு பிராமணன் வாக்கையும் {பேச்சையும்} தவிர்த்து எப்போதும் தன்மறுப்பைப் பயின்று வேதமுரைக்க வேண்டும். அந்தப் பிராமணன், அறமீட்டும் விருப்பத்தால், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளும், உறவினர்களும் சூழ இருக்க வேண்டும். அவன் உறங்கக்கூடாது {எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கக்கூடாது}.(6) அவன் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். அவன் எப்போதும் வேதங்களையும், சாத்திரங்களையும் படிக்க வேண்டும். அவன் எப்போதும் வாய்மை பேசி, தன்மறுப்பைப் பயில வேண்டும்.(7) அவன் விகசம் (தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் படைத்த பிறகு எஞ்சும் உணவை) உண்ண வேண்டும். உண்மையில் அவன் தன் வசிப்பிடத்திற்கு வரும் அனைவரையும் விருந்தோம்பலுடன் வரவேற்க வேண்டும். அவன் எப்போதும் அமுதம் (விருந்தினர், பணியாட்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் உண்ட பிறகு எஞ்சும் உணவை) உண்ண வேண்டும். அவன் சடங்குகள் அனைத்தையும் முறையாக நோற்று, வேள்விகளைச் செய்ய வேண்டும்” என்றார்.(8)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒருவன் எப்போதும் உண்ணா நோன்புகளை நோற்பவனாகக் கருதப்படுவது எவ்வாறு? அவன் நோன்புகள் நோற்பவனாவது எவ்வாறு? ஓ! மன்னா, அவன் விகசத்தை உண்பவனாவது எவ்வாறு? எதைச் செய்வதன் மூலம் அவன் விருந்தினர்களுக்குப் பிடித்தமானவன் ஆகிறான்” என்று கேட்டான்.(9)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “காலையிலும், மாலையிலும் குறிப்பிடப்படும் நேரங்களில் மட்டுமே உணவை எடுத்துக் கொண்டு இடைப்பட்ட நேரத்தில் எந்த உணவையும் தவிர்ப்பவன், உணவைத் தவிர்ப்பவனாக {உண்ணா நோன்பிருப்பவனாகச்} சொல்லப்படுகிறான்.(10) ஒருவன் தான் மணந்து கொண்ட மனைவியிடம் மட்டும், அவளது பருவகாலங்களில் மட்டும் கலவி புரிபவனாக இருந்தால் அவன் பிரம்மச்சரிய நோன்பை நோற்பவனாகச் சொல்லப்படுகிறான். எப்போதும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வாக்கில் {பேச்சில்} வாய்மைநிறைந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(11) {வேள்வியில்லாமல்} ஒன்றுமில்லாமல் கொல்லப்படும் விலங்குகளில் இருந்து கிட்டும் இறைச்சிகள் அனைத்தையும் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் இறைச்சியைத் தவிர்ப்பவனாகிறான்[3]. கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். பகல் நேரத்தில் உறக்கத்தைத் தவிர்ப்பதன் மூலம் அவன் எப்போதும் விழிப்புடன் இருப்பவனாகக் கருதப்படுகிறான்.(12) விருந்தினர்கள், பணியாட்களின் தேவைகளுக்குத் தொண்டாற்றிய பிறகு எஞ்சுவதையே எப்போதும் உண்பவன், எப்போதும் அமுதத்தை உண்பவனாகச் சொல்லப்படுகிறான்.(13)பிராமணர்கள் (உணவை) உண்ணும் வரை உண்ணாமல் தவிர்ப்பவன், அத்தகைய தவிர்த்தலின் மூலம் சொர்க்கத்தையே வெல்பவனாகக் கருதப்படுகிறான்.(14) தேவர்கள், பித்ருக்கள், உறவினர்கள், சார்ந்திருப்பவர்கள் ஆகியோருக்குப் படைத்த பிறகு எஞ்சுவதை உண்பவன் விகசம் உண்பவனாகச் சொல்லப்படுகிறான்.(15) அத்தகைய மனிதர்கள், பிரம்மனின் வசிப்பிடத்தில் பேரின்ப உலகங்கள் பலவற்றை அடைகிறார்கள். ஓ! மன்னா, அங்கே அவர்கள் அப்சரஸ்கள் மற்றும் கந்தர்வர்கள் ஆகியோருடன் வசிக்கிறார்கள்.(16) உண்மையில், அவர்கள் தேவர்கள், விருந்தினர்கள், பித்ருக்கள் துணையுடனும், தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் சூழவும் திளைத்து அனைத்து வகைகளிலும் அந்த உலகங்களில் இன்புற்றிருக்கிறார்கள். இதுவே அவர்களுடைய உயர்ந்த கதியாகிறது” என்றார் {பீஷ்மர்}.(17)

தானம் – தக்கார் தகவிலார்! – அநுசாஸனபர்வம் பகுதி – 93ஆ-கொடைபெறத் தகுந்தவர், தகாதவர் யார் என்பதைக் குறித்து விருஷாதர்ப்பிக்கும் சப்தரிஷிகளுக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பிராமணர்களுக்குப் பல்வேறு வகைக் கொடைகளை மக்கள் கொடுப்பது காணப்படுகிறது. எனினும், ஓ! பாட்டா, கொடையாளிக்கும், கொடைபெறுபவருக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?” என்று கேட்டான்.(18)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிராமணன் நீதிமானிடம் இருந்தும், நியாயமற்றவனிடம் இருந்தும் கொடைகளைப் பெறுகிறான். கொடையாளி அறவோனாக இருந்தால் அதைப் பெறுபவன் சிறு களங்கத்தையே {பாவத்தையே} ஈட்டுவான். மறுபுறம் கொடையாளி அறமற்றவனாக {அதர்மியாக} இருந்தால் அதைப் பெறுபவன் நரகத்தில் மூழ்குவான்.(19) இது தொடர்பாக, ஓ! பாரதா, விருஷாதர்ப்பிக்கும், முனியெழுவருக்கும் {சப்தரிஷிகளுக்கும்} இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழைய வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.(20)

கசியபர், அத்ரி, வசிஷ்டர், பரத்வாஜர், கோதமர் {கௌதமர்}, விஷ்வாமித்திரர், ஜமதக்னி, கற்புக்கரசியான (வசிஷ்டரின் மனைவி) அருந்ததி ஆகியோர் அனைவருக்கும் பொதுவாகக் கண்டை என்ற பெயரில் பெண் பணியாள் ஒருத்தி இருந்தாள். பசுஸகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு சூத்திரன் அளவது கணவனானான்.(21,22) கசியபரும், பிறரும், பழங்காலத்தில் தியான யோகத்தின் துணை கொண்டு பிரம்மத்தை அடைய விரும்பி கடுந்தவங்களைச் செய்தபடியே உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தனர்.(23) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அந்தக் காலத்தில் கடும் பஞ்சம் தோன்றியது. உலகம் முழுவதும் உள்ள உயிரினங்கள் பசியால் பீடிக்கப்பட்டு மிகவும் பலவீனமடைந்தன.(24) முன்பொரு காலத்தில் {அந்தப் பஞ்ச காலத்தில்} சிபியின் மகனால் {விருஷாதர்ப்பியால்} செய்யப்பட்ட வேள்வி ஒன்றில், அவன் தன் மகனையே {அநிலனை} வேள்விக் கொடையாக ரித்விக்குகளுக்கு அளித்தான்.(25) நீண்ட வாழ்நாளைப் பெறாத அவன் அக்காலத்தில் பசியால் இறந்தான். ஏற்கனவே சொல்லப்பட்டவர்களும், பசியால் பீடிக்கப்பட்டவர்களுமான அம்முனிவர்கள், இறந்து போன அந்த இளவரசனை {அநிலனை} அணுகி, அவனைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர்.(26) பசிக்கொடுமையால் தூண்டப்பட்ட அவர்கள், எவனுடைய வேள்வியைச் செய்து கொடுத்தார்களோ அவனுடைய மகனின் உடலையே ஒரு பாத்திரத்தில் இட்டுச் சமைக்கத் தொடங்கினர்.(27) மானுடலோகத்தில் {மனிதர்களின் உலகத்தில்} இருந்த உணவனைத்து மறைந்து போகவே, தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள விரும்பிய அந்தத் தவசிகள், தங்களைத் தாங்கிக் கொள்வதற்காக அத்தகைய துன்பகரமான மாற்றத்தை அடைந்தனர்.(28) அவர்கள் இவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திரிந்து கொண்டிருந்த விருஷாதர்ப்பனின் மகனான மன்னன் சைப்யன், அந்த முனிவர்களிடம் வந்தான். உண்மையில் அவன், பசிக் கொடுமையால் தூண்டப்பட்டுச் சடலத்தைச் சமைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்களைத் தன் வழியில் சந்தித்தான்.(29)

விருஷாதர்ப்பனின் மகன் {சைப்யன்}, “(என்னிடமிருந்து) நீங்கள் பெறும் கொடை உங்கள் அனைவரையும் உடனே விடுவிக்கும். எனவே, உங்கள் உடல்களைத் தாங்கிக் கொண்ட ஒரு கொடையே ஏற்பீராக. தவங்களையே செல்வமாகக் கொண்ட தவசிகளே, என்னிடம் உள்ள செல்வத்தைச் சொல்கிறேன் கேட்பீராக.(30) எந்தப் பிராமணர் என்னிடம் (கொடைகளை) வேண்டுகிறாரோ அவரே எப்போதும் எனது அன்புக்குரியவர். உண்மையில், நான் உங்களுக்கு ஆயிரம் கோவேறு கழுதைகளைக் கொடுக்கிறேன். வெள்ளை மயிர் கொண்டவையும், வேகத்தில் முதன்மையானவையும், ஒவ்வொரு காளையைத் தன்னுடன் கொண்டவையும், நல்ல முறையில் கன்றீன்றவையும், பால் தருபவையுமான ஆயிரம் பசுக்களையும் உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறேன்.(31) வெண்ணிறம் கொண்டவையும், சிறந்த இனத்தில் பிறந்தவையும், கனமான சுமைகளை இழுக்க வல்லவையுமான ஆயிரம் காளைகளையும் உங்களுக்குத் தருகிறேன். நல்ல இயல்பைக் கொண்டவையும், தங்கள் வகையில் முதன்மையானவையும், கொழுத்தவையும், ஒவ்வொன்றும் முதல் கன்றை ஈன்றவையும், வயிற்றில் இரண்டாம் கன்றைக் கொண்டவையுமான பெரும் எண்ணிக்கையிலான பசுக்களையும் {தலையீற்றுப் பசுக்களையும்} கொடுக்கிறேன்[4].(32) முதன்மையான கிராமங்கள், தானியங்கள், பண்டங்கள், மிக அரிதானவையும், விலைமதிப்புமிக்கவையுமான ரத்தினங்கள் ஆகியவற்றில் இருந்து உங்களுக்கு வேறு என்ன கொடுக்க வேண்டும் என்பதை எனக்குச் சொல்லுங்கள். உண்ணத்தகாத இவ்வுணவை உண்ண முயலாதீர். உங்கள் உடல்களைத் தாங்கிக் கொள்ள உங்களுக்கு என்ன தர வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(33)

முனிவர்கள், “ஓ! மன்னா, ஓர் ஏகாதிபதியிடம் இருந்து கொடையேற்பது முதலில் இனிமையாகத் தான் தெரியும், ஆனால் முடிவில் அது நஞ்சாக இருக்கும். ஓ! மன்னா, இதை நன்கறிந்தும், நீ ஏன் இந்தக் காணிக்கைகளால் எங்களுக்கு ஆசை காட்டுகிறாய்?[5](34) ஒரு பிராமணனின் உடலானது தேவர்களின் களமாகும் {வயலாகும்}. தவத்தின் மூலம் அது தூய்மையடைகிறது. மேலும் பிராமணனை நிறைவடையச் செய்வதன் மூலம் ஒருவன் தேவர்களையே நிறைவடையச் செய்கிறான்.(35) ஒரு மன்னன் தனக்குக் கொடுக்கும் கொடைகளை ஒரு பிராமணன் ஏற்றுக் கொண்டால் அத்தகை ஏற்பின் மூலம் அவன் அந்த நாளின் தவத்தால் அவன் அடைய வேண்டிய பலனை இழக்கிறான். உண்மையில், இவ்வாறு ஏற்றுக் கொள்வது ஒரு காட்டையே எரிக்கும் சுடர்மிக்கக் காட்டுத்தீயைப் போலவே பலன்களை எரித்துவிடுகிறது.(36) ஓ! மன்னா, உன்னிடம் வேண்டுவோருக்குக் கொடையளிப்பதன் விளைவால் கிட்டும் மகிழ்ச்சி உனதாகட்டும்” என்ற சொற்களைச் சொல்லிவிட்டு அவர்கள் அந்த இடத்தைவிட்டு வேறு வழியில் சென்றுவிட்டனர்.(37)அந்த உயர் ஆன்மாக்கள் சமைக்க நினைத்த இறைச்சி சமைக்கப்படாமலேயே எஞ்சியது. உண்மையில் அந்த இறைச்சியைக் {இளவரசன் அநிலனைக்} கைவிட்டுச் சென்ற அவர்கள், உணவு தேடி காடுகளுக்குள் நுழைந்தனர்.(38) அதன் பிறகு, மன்னனின் அமைச்சர்கள், தங்கள் தலைவனால் தூண்டப்பட்டுக் காடுகளுக்குள் நுழைந்து அத்திக்கனிகளைப் பறித்து அவற்றை அந்த முனிவர்களுக்குக் கொடுக்க முயற்சித்தனர்.(39) மன்னனின் அதிகாரிகள் அவற்றில் சில அத்திகளைத் தங்கத்தால் நிரப்பி, அவற்றைப் பிறவற்றோடு கலந்து அந்தத் தவசிகளை ஈர்த்து, அவர்களை ஏற்கச்செய்ய முயன்றனர்.(40)

அந்த அத்திக்கனிகளில் சிலவற்றை எடுத்த அத்ரி, அவை கனமாக இருப்பதைக் கண்டு அவற்றை ஏற்க மறுத்தான். அவர் {அத்ரி}, “நாங்கள் அறிவற்றவர்கள் அல்ல. நாங்கள் மூடர்களும் அல்ல.(41) இந்த அத்திகளுக்குள் பொன்னிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். எங்களுக்குப் புலன்களிருக்கின்றன. உண்மையில் நாங்கள் உறங்காமல் விழித்திருக்கிறோம். இவ்வுலகில் ஏற்கப்பட்டால் அவை மறுமையில் கசப்பான விளைவுகளை உண்டாக்கும். இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியை நாடும் எவனும் ஒருபோதும் இவற்றை ஏற்கக்கூடாது” என்றார்.(42)

வசிஷ்டர், “ஒரு பொன் நாணயத்தை நாங்கள் ஏற்றாலும்கூட, அது (அதனோடு தொடர்புடைய பாவம்) நூறாகவோ, ஆயிரமாகவோ கணக்கிடப்படும். எனவே, நாங்கள் பல நாணயங்களை ஏற்றால் நிச்சயம் மறுமையில் நாங்கள் மகிழ்ச்சியற்ற நிலையையே உறுதியாக அடைவோம்” என்றார்.(43)

கசியபர், “பூமியில் உள்ள நெல் மற்றும் யவம் யாவும், உலகில் தோன்றும் பொன், விலங்குகள் மற்றும் பெண்கள் யாவும், ஒரு தனி மனிதனின் ஆசையை நிறைவடையச் செய்ய இயலாதவையாகும். எனவே, ஞானம் கொண்ட ஒருவன் பேராசையைக் கைவிட்டு அமைதியைப் பின்பற்ற {ஒழிவடைய} வேண்டும்” என்றார்.(44)

பரத்வாஜர், “ருருவின் கொம்புகள் முதலில் தோன்றிய பிறகு, அந்த விலங்கோடு சேர்ந்து தானும் வளர்கிறது. மனிதனின் பேராசையும் அதுபோன்றதுதான். அதற்கு ஓர் அளவில்லை” என்றார்.(45)

கோதமர் {கௌதமர்}, “உலகிலுள்ள பொருட்கள் யாவும் ஒரு மனிதனை நிறைவடையச் செய்யவல்லவையல்ல. மனிதன் (ஆறுகளின் நீர் அனைத்தினாலும் நிறைவடையாத கடலைப் போலவே) நிறைவடையாதவன் என்பதால் அவன் பெருங்கடைப் போன்றவனாவான்” என்றார்.(46)

விஷ்வாமித்திரர், “ஒருவன் பேணிவளர்த்த ஆசை நிறைவடையும்போது, உடனே மற்றொன்று {மற்றொரு ஆசை} முளைத்து நிறைவைத் தேடி அவனைக் கணையாகத் துளைக்கிறது” என்றார்.(47)

ஜமதக்னி, “கொடையேற்காமையே அடித்தளமாக இருந்து தவங்களைத் தாங்குகிறது. எனினும், ஏற்பது செல்வத்தை (தவத்தின் பலன்களை) அழிக்கிறது” என்றார்.(48)

அருந்ததி, “உலகின் பொருட்கள் (வேள்விகள் மற்றும் கொடைகளின் மூலம்) அறமீட்டச் செலவு செய்யும் நோக்கில் சேமிக்கப்படுவதாகச் சிலர் கருதுகிறார்கள். எனினும், உலகச் செல்வத்தைக் காட்டிலும் அறமீட்டுவதே சிறந்ததென நான் கருதுகிறேன்” என்றாள்.(49)

கண்டை, “பெருஞ்சக்தி கொண்ட என் தலைவர்களே பெரும்பயங்கரமாகத் தெரியும் இதற்கு இவ்வளவு அஞ்சுகிறார்கள் என்றால் பலவீனமான நான் இன்னும் அதிகம் அஞ்சுகிறேன்” என்றாள்.(50)

பசுஸகன், “அறச்செல்வமே மிக மேன்மையானதாகும். அதைவிட மேன்மையானது வேறேதும் இல்லை. அந்தச் செல்வத்தையே பிராமணர்கள் அறிகிறார்கள். அச்செல்வத்தின் மதிப்பைக் கற்பதற்காக மட்டுமே நான் இவர்களிடம் பணியாளாகப் பணிபுரிகிறேன்” என்றான்.(50)

முனிவர்கள் (அனைவரும் ஒன்றாக), “இந்நிலத்து மக்களின் மன்னன் அளிக்கும் கொடையால் மகிழ்ச்சி அவனுடையதாகட்டும். பொன்னை உட்பொதிந்து இக்கனிகளை எங்களுக்கு அனுப்பியவனின் கொடை வெற்றியடையட்டும்” என்றனர்”[6].(52)பீஷ்மர் தொடர்ந்தார், “உறுதிமிக்க நோன்புகளைக் கொண்ட அம்முனிவர்கள் இச்சொற்களைச் சொல்லிவிட்டு பொன்னுள்ள அத்திகளைக் கைவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று தாங்கள் விரும்பிய இடத்திற்குச் சென்றனர்.(53)

அமைச்சர்கள், “ஓ! மன்னா, அம்முனிவர்கள், அத்திகளுக்குள் பொன் இருப்பதை அறிந்து கொண்டு சென்று விட்டனர். இதை நீ அறிவாயாக” என்றனர்”.(54)

பீஷ்மர் தொடர்ந்தார், “அமைச்சர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட விருஷாதர்ப்பி, அந்த முனிவர்கள் அனைவரின் மீதும் கோபத்தால் நிறைந்தான். உண்மையில் அந்த ஏகாதிபதி அவர்களைப் பழிவாங்க விரும்பி தன் வீட்டிற்குள் சென்றான்.(55) கடுந்தவங்களை நோற்ற அவன், மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொரு முறையும் நெய்யாலான ஆகுதிகளைப் புனித நெருப்பில் {ஆகவனீயமெனும் அக்கினியில்} ஊற்றினான்.(56) அந்த ஓதலின் விளைவால் அனைவரையும் அச்சுறுத்தவல்ல வடிவம் ஒன்று {பேயொன்று} அந்நெருப்பில் இருந்து எழுந்தது. விருஷாதர்ப்பி அவளுக்கு யாதுதானி என்ற பெயரைச் சூட்டினான்.(57) மன்னனின் மந்திர ஓதலில் இருந்து வந்ததும், இறுதி இரவை {காளராத்திரியைப்} போன்று பயங்கரமானதுமான அந்த வடிவம் {அந்தப் பேய்}, அந்த ஏகாதிபதியின் முன்பு கூப்பிய கரங்களுடன் தோன்றியது. மன்னன் விருஷாதர்ப்பியிடம் அவள், “நான் நிறைவேற்ற வேண்டியதென்ன?” என்று கேட்டாள்.(58)

விருஷாதர்ப்பி, “செல், முனியெழுவரையும், அருந்ததியையும், பெண்பணியாளின் கணவனையும், பெண்பணியாளையும் தொடர்ந்து சென்று அவர்களுடைய பெயர்களின் பொருளைப் புரிந்து கொள்வாயாக.(59) அவர்களின் பெயர்களை உறுதி செய்து கொண்ட பிறகு, அவர்கள் அனைவரையும் கொல்வாயாக[7]. அவர்களைக் கொன்ற பிறகு, நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக” என்றான்”.(60)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தனக்குரிய வடிவத்தில், யாதுதானி என்று பெயரிடப்பட்ட அந்த ராட்சசி “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, அந்தப் பெரும் முனிவர்கள் உணவு தேடி திரிந்து கொண்டிருந்த காட்டை நோக்கிச் சென்றாள்”.(61)

பேராசை தவிர்த்தல்! – அநுசாஸனபர்வம் பகுதி – 93c-சப்தரிஷிகளுக்கும், யாதுதானிக்கும் இடையில் நடந்த உரையாடல்; சப்தரிஷிகள் தங்கள் ஆசையை ஒழித்து சொர்க்கம் சென்றது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்….

{பீஷ்மர், யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “உண்மையில், ஓ! மன்னா, அத்ரியைத் தங்களுக்கு மத்தியில் கொண்ட அம்முனிவர்கள் கிழங்குகளையும், கனிகளையும் உண்டு அந்தக் காட்டில் திரிந்து கொண்டிருந்தனர்.(62) அப்படி அவர்கள் திரிந்து வரும்போது, அகன்ற தோள்களையும், பருத்த கரங்கள் மற்றும் கால்களையும், ஊட்டமிக்க முகம் மற்றும் வயிற்றைக் கொண்ட ஒரு துறவியை {சுனஸ்ஸகனைக்} கண்டனர். கொழுப்புநிறைந்த அங்கங்களைக் கொண்ட அவர் ஒரு நாயுடன் திரிந்து கொண்டிருந்தார்.(63)

நன்கு வளர்ந்து அழகாக இருந்த அங்கங்களுடன் கூடிய அந்தத் துறவியைக் கண்ட அருந்ததி, முனிவர்களிடம், “உங்களில் எவராலும் இத்தகைய நன்கு பருத்த தன்மையை ஒரு போதும் வெளிக்காட்ட இயலாது[8]” என்றாள்.(64)வசிஷ்டர், “இந்த மனிதரின் புனித நெருப்பு நம்மைப் போன்றதல்ல, ஏனெனில், காலையிலும் மாலையிலும் அவரால் அதில் ஆகுதிகளை ஊற்ற இயலும், நம்மில் எவரும் அதைச் செய்ய இயலாது. இதன் காரணமாகவே அவரும், அவரது நாயும் நன்கு பருக்கிறார்கள்” என்றார்[9].(65)அத்ரி, “இந்த மனிதன் நம்மைப் போலப் பசிக்கொடுமையை அனுபவிக்கவில்லை. இவனது சக்திக்கு நம்மைப் போல எந்தக் குறைவும் ஏற்படவில்லை. பெரும் சிரமத்துடன் அடையப்பட்ட அவனுடைய வேதங்கள் நம்முடையதைப் போலத் தொலைந்து போகவில்லை. எனவே, அவனும் அவனது நாயும் நன்கு பருத்திருக்கிறார்கள்” என்றார்.(66)

விஷ்வாமித்திரர், “இந்த மனிதன் நம்மைப் போலச் சாத்திரங்களில் உள்ள நித்திய கடமைகளை நோற்க இயலாதவனாக இல்லை. நான் சோம்பலானவனாக இருக்கிறேன். நான் பசிக்கொடைமையை அனுபவிக்கிறேன். நான் அடைந்த ஞானத்தைத் தொலைத்துவிட்டேன். இவ்வகையில் இந்த மனிதன் நம்மைப் போன்றவனில்லை. எனவே இவனும், இவனது நாயும் பருத்திருப்பதாக நான் காண்கிறேன்” என்றார்[10].(67)ஜமதக்னி, “நம்மைப் போல, ஆண்டுக்குத் தேவையான தானியங்களையும், விறகுகளையும் சேமிக்க வேண்டிய எண்ணம் இந்த மனிதனுக்கு இல்லை. எனவே, இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாக நான் காண்கிறேன்” என்றார்.(68)

கசியபர், “நம்மைப் போல, வீட்டுக்கு வீடு சென்று “கொடுப்பீராக, கொடுப்பீராக” என்று சொல்லி பிச்சையெடுப்பவர்களும், குருதியுடன் கூடியவர்களுமான நான்கு சகோதரர்கள் இம்மனிதனுக்கு இல்லை. எனவே இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாகக் காண்கிறேன்” என்றார்.(69)

பரத்வாஜர், “நம்மைப் போல இந்த மனிதன் தன் மனைவியை நிந்தித்துச் சபித்தற்காக வருந்த வேண்டியதில்லை. அவன் இவ்வளவு தீமையாகவும், உணர்வற்றவனாகவும் செய்படவில்லை. எனவே இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாகக் காண்கிறேன்” என்றார்[11].(70)கோதமர் {கௌதமர்}, “இந்த மனிதன் நம்மைப் போலக் குசப் புற்களாலான மூன்றே துண்டுகளாலான மறைப்பையும், மூன்று வருடம் பழைமையான ஒரே ஒரு ரங்கு தோலையும் {உடுத்திக்} கொண்டிருக்கவில்லை. எனவே இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாக நான் காண்கிறேன்” என்றார்”[12].(71)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “திரிந்து கொண்டிருந்தவரான அத்துறவி, இந்தப் பெரும் முனிவர்களைக் கண்டு, அவர்களை அணுகி, வழக்கப்படியே அவர்கள் அனைவரின் கரங்களையும் தொட்டு வணங்கினார்.(72) அப்போது அந்தக் காட்டில் வாழ்வாதாரங்களை அடைவதற்கான சிரமத்தையும், அதன் விளைவாகத் தாங்கிக் கொள்ள வேண்டிய பசிக் கொடுமையையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிவிட்டு அனைவரும் அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.(73) உண்மையில், வாழ்வாதாரத்திற்குத் தேவையான கனிகளைப் பறித்தல் மற்றும் கிழங்குகளைத் தோண்டி எடுத்தல் போன்ற ஒரு பொதுக் காரியத்துக்காகவே அவர்கள் காட்டில் திரிந்து கொண்டிருந்தனர்.(74) ஒருநாள், அவர்கள் திரிந்து கொண்டிருந்தபோது, தாமரைகள் நிறைந்த ஓர் அழகிய தடாகத்தைக் கண்டனர். அதன் கரைகள் ஒன்றுக்கொன்று அருகில் அடர்த்தியாக நின்ற மரங்களால் மறைக்கப்பட்டிருந்தன. அத்தடாகத்தின் நீர் தூய்மையானதாகவும், தெளிவானதாகவும் இருந்தது.(75) உண்மையில், அத்தடாகத்தை அலங்கரித்திருந்த தாமரைகள் அனைத்தும் காலைச் சூரியனின் நிறத்தைக் கொண்டிருந்தன. நீரில் மிதந்த இலைகள் வைடூரிய நிறத்தில் இருந்தன.(76) பல்வேறு வகை நீர்க்கோழிகள் அதன் பரப்பில் விளையாடிக் கொண்டிருந்தன. அதனிடம் செல்ல ஒரே ஒரு பாதை மட்டுமே இருந்தது. கரைகள் சேறாக இல்லை, நீரை அடைவதும் எளிதாக இருந்தது.(77)

பயங்கர முகத்தோற்றம் கொண்டவளும், மந்திரங்களில் இருந்து உண்டானவளும், விருஷாதர்ப்பியால் தூண்டப்பட்டவளுமான ராட்சசி யாதுதானி அத்தடாகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்தாள்.(78) பசுஸகனின் துணையுடன் கூடிய அந்த முதன்மையான முனிவர்கள், சில தாமரைத் தண்டுகளை {தாமரைக் கிழங்குகளைத்} திரட்டும் நோக்கத்தில், யாதுதானியால் காக்கப்பட்ட அத்தடாகத்தை நோக்கிச் சென்றனர்[13].(79)தடாகத்தின் கரையில் நிற்கும் பயங்கரத் தன்மை கொண்ட யாதுதானியைக் கண்ட அந்தப் பெரும் முனிவர்கள், அவளிடம்,(80) “இந்தத் தனிமையான காட்டில் தனியாக நிற்கும் நீ யார்? யாருக்காக நீ இங்கே காத்திருக்கிறாய்? உண்மையில் உன் நோக்கம் என்ன? தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இத்தடாகத்தின் கரையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டனர்.(81)

யாதுதானி, “நான் யார் என்பது ஒரு பொருட்டில்லை. (என் பெயர், குலம் மற்றும் நோக்கம் குறித்து) நான் கேட்கத்தகாதவளாவேன். தவத்தையே செல்வமாகக் கொண்டவர்களே, இத்தடாகத்தைக் கண்காணிக்க நிறுவப்பட்டிருக்கும் காவலாளி நான் என்பதை அறிவீராக” என்றாள்[14].(82)முனிவர்கள், “நாங்கள் அனைவரும் பசித்திருக்கிறோம். எங்களிடம் உண்பதற்கு வேறேதும் இல்லை. உன் அனுமதியுடன் நாங்கள் சில தாமரைத் தண்டுகளைத் திரட்டிக் கொள்கிறோம்” என்று கேட்டனர்.(83)

யாதுதானி, “ஓர் ஒப்பந்தத்திற்கு உடன்பட்டு நீங்கள் விரும்பிய அளவுக்குத் தாமரைத் தண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் பின் ஒருவராக நீங்கள் உங்கள் பெயர்களை என்னிடம் சொல்ல வேண்டும். பிறகு, தாமதமில்லாமல் நீங்கள் தண்டுகளை எடுத்துக் கொள்ளலாம்” என்றாள்”.(84)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவளுடைய பெயர் யாதுதானி என்பதையும், (அவர்களுடைய பெயர்களின் பொருள்களையும், தங்கள் சக்தியின் எல்லையையும் அறிந்த பிறகு) தங்களைக் கொல்லவே அவள் அங்கே நின்று கொண்டிருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்டவரும், பசியால் துடித்துக் கொண்டிருந்தவருமான அத்ரி, அவளிடம் இந்தச் சொற்களைச் சொன்னார்.(85)

அத்ரி, “நான் உலகத்தைப் பாவத்தில் இருந்து தூய்மையடையச் செய்கிறேன் என்பதால் நான் அத்ரி என்று அழைக்கப்படுகிறேன். மேலும், நாள்தோறும் வேதங்களை மும்முறை படிப்பதால் நான் என் இரவுகளைப் பகலாக்கியிருக்கிறேன். மேலும், நான் வேதங்கல்லாத இரவேதும் இல்லை. ஓ! அழகிய பெண்ணே, இந்தக் காரணங்களுக்காகவும் நான் அத்ரி என்று அழைக்கப்படுகிறேன்” என்றார்[15].(86)யாதுதானி, “ஓ! பெரும்பிரகாசம் கொண்டவரே, உமது பெயருக்கு நீர் கொடுத்த விளக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, சென்று தாமரைகள் நிறைந்த இந்தக் குளத்திற்குள் மூழ்குவீராக” என்றாள்.(87)

வசிஷ்டர், “நான் (பலம் முதலியவற்றின் யோக குணங்களைக் கொண்ட) செல்வத்தை உடையவன். மேலும், இல்லற வாழ்வுமுறையை நோற்கும் நான் அத்தகைய வாழ்வு முறையை நோற்கும் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகக் கருதப்படுகிறேன். (இத்தகைய) செல்வத்துடன் கூடியவனாகவும், இல்லறத்தானாக வாழ்வதனாலும், இல்லறத்தார் அனைவரிலும் முதன்மையானவனாகக் கருதப்படுவதாலும் நான் வசிஷ்டன் என்றழைக்கப்படுகிறேன்” என்றார்[16].(88)யாதுதானி, “உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. அசல் வேர்கள் அடைந்த சொல்வடிவ மாற்றத்தைப் பொறுத்தவரையில் இது புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைத் தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்[17].(89)கசியபர், “நான் எப்போதும் என் உடலைப் பாதுகாக்கிறேன், என் தவங்களின் விளைவாகப் பிரகாசத்துடன் இருக்கிறேன். இவ்வாறு என் உடலைப் பாதுகாப்பதினாலும், என் தவங்களின் மூலம் உண்டான பிரகாசத்தினாலும் நான் கசியபன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்” என்றார்[18].(90)யாதுதானி, “ஓ! பெரும்பிரகாசம் கொண்டவரே, உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்.(91)

பரத்வாஜர், “என் மகன்கள், சீடர்கள், தேவர்கள், பிராமணர்கள் மற்றும் என் மனைவி ஆகியோரை நான் எப்போதும் ஆதரிக்கிறேன். இவர்கள் அனைவரையும் சுகமாக ஆதரிப்பதன் விளைவால் நான் பரத்வாஜன் என்று அழைக்கப்படுகிறேன்” என்றார்[19].(92)யாதுதானி, “வேர்ச்சொல்லானது சொல்வடிவத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதன் விளைவால் உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்.(93)

கோதமர் {கௌதமர்}, “தற்கட்டுப்பாட்டின் உதவியால் நான் சொர்க்கத்தையும், பூமியையும் வென்றேன். அனைத்து உயிரினங்கள் மற்றும் பொருட்களைச் சம பார்வையுடன் பார்ப்பதன் விளைவால் நான் புகையற்ற நெருப்பைப் போன்றவனாக இருக்கிறேன். எனவே, நான் உன்னால் அடக்கப்பட முடியாதவனாவேன். மேலும், நான் பிறந்த போது, என் உடற்பிரகாசம் சுற்றிலும் இருந்து இருளை விலக்கியது. இந்தக் காரணங்களினால் நான் கோதமன் என்றழைக்கப்படுகிறேன்” என்றார்[20].(94)யாதுதானி, “ஓ! பெருந்தவசியே, உமது பெயருக்கு நீர் என்னிடம் சொன்ன விளக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்.(95)

விஷ்வாமித்திரர், “அண்டத்தின் தேவர்கள் என் நண்பர்களாவர். நான் அண்டத்தின் நண்பனுமாவேன். எனவே, ஓ! யாதுதானியே நான் விஷ்வாமித்திரன் என்றறியப்படுகிறேன்” என்றார்[21].(96)யாதுதானி, “வேர்ச்சொல்லானது சொல்வடிவத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதன் விளைவால் உமது பெயருக்கான நீர் சொல்லும் விளக்கம் என்னால் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்.(97)

ஜமதக்னி, “நான் தேவர்களின் வேள்வி நெருப்பில் இருந்து உண்டானவன். எனவே, ஓ! அழகிய பண்புகளைக் கொண்டவளே, நான் ஜமதக்னி என்றழைக்கப்படுகிறேன்” என்றார்[22].(98)யாதுதானி, “ஓ! பெருந்தவசியே, (வேர்ச்சொல்லின் பல்வேறு சொல்வடிவ மாற்றங்களின் விளைவால்) நீர் சொன்ன உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக” என்றாள்.(99)

அருந்ததி, “நான் எப்போதும் என் கணவரின் அருகில் நின்று, அவரோடு சேர்ந்து பூமியைத் தாங்குகிறேன். நான் எப்போதும் என் கணவரின் இதயத்தை என்னை நோக்கித் திருப்புகிறேன். இக்காரணங்களுக்காக நான் அருந்ததி என்றழைக்கப்படுகிறேன்” என்றார்[23].(100)யாதுதானி, “வேர்ச்சொற்களில் உண்டாகியிருக்கும் சொல்வடிவ மாற்றங்களின் விளைவால் உமது பெயருக்கு நீ கொடுத்த விளக்கத்தை என்னால் முற்றிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. சென்று, இந்தத் தாமரைத் தடாகத்தில் மூழ்குவாயாக” என்றாள்.(101)

கண்டை, “கண்ட என்றால், கன்னத்தின் ஒரு பகுதி என்பது பொருளாகும். ஓ! சைப்யனின் வேள்வி நெருப்பில் உதித்தவளே, என்னிடம் அந்தப் பகுதி பிறரைவிட உயர்ந்திருப்பதால் நான் கண்டை என்ற பெயரில் அழைக்கப்படுகிறேன்” என்றாள்.(102)

யாதுதானி, “வேர்ச்சொல்லில் ஏற்பட்டிருக்கும் சொல்வடிவ மாற்றங்களின் விளைவால் உன் பெயருக்கு நீ சொன்ன விளக்கம் முற்றிலும் என்னால் புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. சென்று, இந்தத் தாமரைத் தடாகத்தில் மூழ்குவாயாக” என்றாள்.(103)

பசுஸகன், “நான் காணும் விலங்குகள் அனைத்தையும் நான் பாதுகாத்து வளர்க்கிறேன். மேலும் நான் விலங்குகள் அனைத்திற்கும் நண்பனாக இருக்கிறேன். எனவே, ஓ! நெருப்பில் பிறந்தவளே (மன்னன் விருஷாதர்ப்பி உண்டாக்கிய வேள்வி நெருப்பில் பிறந்தவளே), நான் பசுஸகன் என்றழைக்கப்படுகிறேன்” என்றான்[24].(104)யாதுதானி, “வேர்ச்சொல்லில் ஏற்பட்டிருக்கும் சொல்வடிவ மாற்றங்களின் விளைவால் உன் பெயருக்கு நீ சொன்ன விளக்கம் முற்றிலும் என்னால் புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. சென்று, இந்தத் தாமரைத் தடாகத்தில் மூழ்குவாயாக” என்றாள்.(105)

சுனஸ்ஸகன், “இத்தவசிகள் சொன்ன வகையில் என் பெயருக்கான உச்சரிப்பு விளக்கத்தை நான் சொல்ல இயலாதவனாக இருக்கிறேன். ஆனால், ஓ! யாதுதானி, சுனஸ்ஸகஸகாயன் என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன் என்பதை அறிவாயாக” என்றான்.(106)

யாதுதானி, “நீர் உன் பெயரை ஒரே ஒரு முறை மட்டும் சொன்னீர். நீர் சொன்ன விளக்கம் பிடிபடுவதாக இல்லை. எனவே, ஓ! மறுபிறப்பாளரே, மீண்டும் சொல்வீராக” என்றாள்[25].(107)சுனஸ்ஸகன், “நான் ஒரே ஒரு முறை சொன்னதன் விளைவால் என் பெயர் உனக்குப் பிடிபடவில்லை என்பதால், நான் என் திரிதண்டத்தால் உன்னைத் தாக்கப் போகிறேன். அதனால் தாக்கப்பட்ட நீ தாமதமில்லாமல் சாம்பலாக எரிந்து போவாயாக” என்றான்”.(108)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஒரு பிராமணனால் தரப்படும் தண்டைக்கு ஒப்பான அந்தச் சந்நியாசியின் திரிதண்டத்தால் தலையில் தாக்கப்பட்டவளும், மன்னன் விருஷாதர்ப்பின் மந்திரங்களினால் உண்டானவளுமான அந்த ராட்சசி, பூமியில் விழுந்து சாம்பலாகக் குறைந்து போனாள்.(109)

இவ்வாறு அந்த வலிமைமிக்க ராட்சசியை அழித்த சுனஸ்ஸகன் தன் தண்டத்தைப் பூமியில் ஊன்றி, புல் தரையில் அமர்ந்தான்.(110) அப்போது அந்த முனிவர்கள் தாங்கள் விரும்பிய அளவுக்குத் தாமரைகளைப் பறித்து, தாமரைத் தண்டுகளையும் எடுத்துக் கொண்டு தடாகத்துக்கு மேலே வந்து மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(111) பெரும் முயற்சி செய்து தாங்கள் சேகரித்த தாமரைக் குவியைத் தரையில் வைத்த அவர்கள், பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை செலுத்துவதற்காக மீண்டும் அதற்குள் மூழ்கினர்.(112) மேலே வந்த அவர்கள், தாங்கள் தாமரைத் தண்டுகளைச் சேகரித்து வைத்திருந்த கரையின் பகுதிக்குச் சென்றனர். அந்த இடத்திற்கு வந்த அந்த முதன்மையான மனிதர்கள் அந்தத் தண்டுகள் எங்கும் காணப்படவில்லை என்பதைக் கண்டனர்.(113)

முனிவர்கள், “பசித்திருந்த எங்களால் உண்ணும் விருப்பத்தில் திரட்டப்பட்ட தாமரைத்தண்டுகளை எந்தப் பாவம் நிறைந்த, கடின இதயம் படைத்த மனிதன் களவாடினான்?” என்றனர்”.(114)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பகைவர்களை நொறுக்குபவனே, அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஐயமுற்று, “நாம் ஒவ்வொருவரும் குற்றமற்றவர் என்பது குறித்து உறுதிமொழியேற்போம்” என்றனர்.(115) அப்போது பசியாலும், களைப்பினாலும் பீடிக்கப்பட்டிருந்த அந்தத் தவசிகள் அனைவரும் இந்த முன்மொழிவுக்கு உடன்பட்டு, இந்த உறுதிமொழிகளை {சபதங்களை} ஏற்றனர்.(116)

அத்ரி, “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், பசுவைக் காலால் உதைத்தவனும், சூரியனைப் பார்த்து சிறுநீர் கழித்தவனும், ஓதல் விலக்கப்பட்ட நாட்களில் வேதம் ஓதுபவனும் ஆகட்டும்” என்றார்.(117)

வசிஷ்டர், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், வேதங்கற்பதைத் தவிர்ப்பவனாகவோ, நாய்களை இழுத்துச் செல்பவனாகவோ, துறவு வாழ்வுமுறைக்கு விதிக்கப்பட்ட விதிகளுக்குக் கட்டுப்படாத துறவியாகத் திரிபவனாகவோ, தன் பாதுகாப்பை நாடி வந்தவனைக் கொல்பவனாகவோ, தன் மகளை விற்று வாழ்பவனாகவோ, கஞ்சனிடமும், இழிந்தோரிடமும் செல்வம் வேண்டுபவனாகவோ ஆகட்டும்” என்றார்.(118,19)

கசியபர், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், அனைத்து இடங்களிலும் அனைத்து வகைச் சொற்களையும் பேசுபவனாகவும், நீதிமன்றத்தில் பொய் சாட்சி கொடுப்பவனாகவும், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை உண்பவனாகவும், தகாத மனிதர்களுக்குக் கொடையளிப்பவனாகவும், தகுந்த மனிதர்களுக்குத் தகாத காலங்களில் கொடையளிப்பவனாகவும், பகல்வேளையில் பெண்களுடன் பாலினக் கலவியில் ஈடுபடுபவனாகவும் ஆகட்டும்”(120,121)

பரத்வாஜர், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், பெண்கள், உறவினர்கள் மற்றும் பசுக்களிடம் நீதியற்ற கொடும் நடத்தை கொண்டவனாகட்டும். அவன் தன் மேன்மையான அறிவையும், திறனையும் வெளிப்படுத்துவதன் மூலம் சச்சரவுகளில் பிராமணர்களை அவமதிக்கட்டும். ஆசானை அவமதித்து ரிக்குகளையும், யஜுஸ்களையும் படிக்கட்டும். வைக்கோல் அல்லது செத்தையில் உண்டாக்கப்பட்ட நெருப்பில் அவன் ஆகுதிகளை ஊற்றட்டும்” என்றார்.(122,123)

ஜமதக்னி, “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், நீரில் மலத்தையும் புழுதியையும் வீசிய குற்றம் புரிந்தவனாகட்டும். அவன் பசுக்களிடம் பகை பாராட்டட்டும். அவன் பருவகாலம் அல்லாமல் பெண்களிடம் பாலினக்கலவிசெய்த குற்றம்புரிந்தவனாகட்டும். அவன் அனைத்து மனிதர்களின் வெறுப்பையும் ஈர்க்கட்டும். அவன் தன் மனைவியின் ஊதியத்தில் இருந்து தன்னைப் பராமரித்துக் கொள்ளட்டும். அவன் நண்பர்கள் எவரையும் கொள்ளாதிருக்கட்டும், அவன் பல பகைவர்களைக் கொண்டிருக்கட்டும். அவன் மற்றொருவனுக்குச் செய்த விருந்தோம்பலுக்குப் பதிலாக அந்த மற்றொருவரின் விருந்தினராகட்டும்” என்றார்[26].(124,125)கோதமர், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், தான் கற்ற வேதங்களை விட்ட குற்றம் புரிந்தவனாகட்டும். அவன் மூன்று புனித நெருப்புகளைக் கைவிட்டவனாகட்டும். அவன் சோமத்தை (சோமலதையை / சோமச்சாற்றை) விற்பனை செய்பவனாகட்டும். அனைத்து வகை {வர்ண} மக்களாலும் நீர் இறைக்கப்படும் ஒரேயொரு கிணற்றை மட்டுமே கொண்ட கிராமத்தில் வசிப்பவனும், ஒரு சூத்திரப் பெண்ணை மணம் செய்து கொண்டவனுமான ஒரு பிராமணனுடன் அவன் வாழட்டும்” என்றார்[27].(126,127)விஷ்வாமித்திரர், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், தன் வாழ்நாளிலேயே தன் ஆசான்களையும், பெரியோர்களையும், பணியாட்களையும் பிறர் பராமரிக்கும் நிலையைக் காணும் விதியை அடையட்டும். அவன் நற்கதி அடையாதிருக்கட்டும். அவன் பல பிள்ளைகளின் தந்தையாகட்டும்.(128) அவன் எப்போதும் தூய்மையற்றவனாகவும், பிராமணர்களில் இழிந்தவனாகவும் இருக்கட்டும். அவன் தன் உடைமைகளில் செருக்குடையவனாக இருக்கட்டும். அவன் நிலத்தை உழுபவனாக இருக்கட்டும், அவன் வன்மம் நிறைந்தவனாக இருக்கட்டும்.(129) அவன் மழைக்காலங்களில் திரிபவனாக இருக்கட்டும். அவன் ஊதியம் கொள்ளும் பணியாளாகட்டும். அவன் மன்னனின் புரோகிதனாகட்டும். வேள்விக்குத் துணை புரியத் தகாத தூய்மையற்ற மனிதர்களின் வேள்விகளுக்கு அவன் துணை புரியட்டும்” என்றார்.(130)

அருந்ததி, “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவள், தன் மாமியாரால் எப்போதும் அவமதிக்கப்படட்டும். அவள் எப்போதும் தன் கணவரிடம் எரிச்சலடையட்டும். அவள் தன் வீட்டிற்கு வரும் எந்த நல்ல பொருளையும் பிறருக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் உண்ணட்டும்.(131) அவன் தன் தலைவனின் உறவினர்களை அவமதித்து, தன் கணவனின் வீட்டில் ஒவ்வொரு மாலை வேளையிலும் வறுத்த வாற்கோதுமை மாவை உண்டு வாழட்டும். அவள் (அவளைக் களங்கப்படுத்தும் கறைகளின் விளைவாக) அனுபவிக்கத்தகுந்தவளாகக் கருதப்படட்டும். அவள் ஒரு வீர மகனின் தாயாகட்டும்” என்றாள்[28].(132)கண்டை, “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவள், எப்போதும் பொய் பேசுபவளாக இருக்கட்டும். அவள் எப்போதும் தன் உறவினர்களுடன் சண்டையிடுபவளாகட்டும். அவள் பணத்தையே கருத்தில் கொண்டு தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கட்டும்.(133) தான் சமைத்த உணவை யாருக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் தனியாகவே அவள் உண்ணட்டும். அவள் தனது மொத்த வாழ்வையும் அடிமைத்தனத்தில் கழிக்கட்டும். உண்மையில், தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவள் குற்றச் சூழ்நிலைகளில் பாலினக்கலவி புரிந்த விளைவால் கருவுற்றவளாகட்டும்[29]” என்றாள்.(134)பசுஸகன், “தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், அடிமைத் தாய்க்குப் பிறக்கட்டும். அவன் பயனற்ற பிள்ளைகள் பலரைப் பெறட்டும். அவன் ஒருபோதும் தேவர்களை வணங்காதிருக்கட்டும்” என்றான்.(135)

சுனஸ்ஸகன், “தாமரைத் தண்டுகளை அகற்றியவன், சாமங்கள் மற்றும் யஜுஸ்கள் அனைத்தையும் படித்தவனும், கவனமாகப் பிரம்மச்சரிய நோன்பை நோற்றவனுமான ஒரு பிராமணனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் பலனை அடையட்டும். அவன் அதர்வணங்கள் அனைத்தையும் படித்த பிறகு இறுதி நீராடலைச் செய்யட்டும்” என்றான்.(136)

முனிவர்கள் அனைவரும், “நீ சொன்ன செயல்கள் அனைத்தும் பிராமணர்களால் விரும்பப்படுவது என்பதால் நீ ஏற்றது உறுதிமொழியே {சபதமே} அல்ல. ஓ! சுனஸ்ஸகா, எங்கள் தாமரைத் தண்டுகளை அபகரித்தவன் நீயே என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றனர்.(137)

சுனஸ்ஸகன்,“தாமரைத்தண்டுகள் உங்களால் வைக்கப்பட்டதைக் காணாமல், நானே அவற்றை உண்மையில் களவு செய்தேன் என்பதால் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.(138) நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தத் தண்டுகளை நான் மறைந்துபோகச் செய்தேன். பாவமற்றவர்களே, உங்களைச் சோதிக்கும் விருப்பத்திலேயே அச்செயல் என்னால் செய்யப்பட்டது.(139) நான் உங்களைக் காக்கவே இங்கே வந்தேன். கொல்லப்பட்டுக் கிடக்கும் அந்தப் பெண் யாதுதானி என்றழைக்கப்பட்டவள் ஆவாள். அவள் கடும் இயல்பைக் கொண்டவளாவாள். மன்னன் விருஷாதர்ப்பியின் மந்திரங்களில் உண்டான அவள் உங்கள் அனைவரையும் கொல்லும் விருப்பத்திலேயே இங்கே வந்தாள்.(140) தவங்களையே செல்வமாகக் கொண்ட தவசிகளே, அந்த மன்னனால் அனுப்பப்பட்டு இங்கு வந்த அவள் என்னால் கொல்லப்பட்டாள். இல்லையென்றால், வேள்வித்தீயில் உண்டானவளும், தீயவளுமான அந்தப் பாவம் நிறைந்த உயிரினம் உங்கள் உயிர்களை வாங்கியிருப்பாள்.(141) கல்விமான்களான பிராமணர்களே அவளைக் கொல்லவும், உங்களைக் காக்கவுமே நான் இங்கே வந்தேன். நான் வாசவன் என்பதை அறிவீராக. நீங்கள் பேராசையின் ஆதிக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டீர்கள். இதன் விளைவாக நீங்கள் இதயத்தில் எழுந்தவுடனேயே விருப்பம் கனியும் நிலையைத் தரும் நித்திய உலகங்கள் பலவற்றை வென்றீர்கள். மறுபிறப்பாளர்களே, தாமதமில்லாமல் இந்த இடத்தில் இருந்து எழுந்து, உங்களுக்காக ஒதுக்கபட்ட அந்த அருள் உலகங்களுக்குச் செல்வீராக” என்றான்”.(142)

பீஷ்மர் தொடர்ந்தார், “புரந்தரனின் மறுமொழியால் உயர்ந்த நிறைவை அடைந்த அந்தப் பெரும் முனிவர்கள் “அப்படியே ஆகட்டும்” என்றனர். பிறகு அவர்கள் இந்திரனின் துணையுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(143) இவ்வாறே உயர் ஆன்மா கொண்ட அம்மனிதர்கள், பசிக்கொடுமையால் பீடிக்கப்பட்டாலும், அனுபவிக்கத்தகுந்த பல்வேறு பொருட்களைக் கொடுப்பதாக அத்தகைய நேரத்தில் ஆசை காட்டப்பட்டாலும், அந்த ஆசைக்கு வசப்படுவதைத் தவிர்த்தனர். அத்தகை தன் மறுப்பின் விளைவாலேயே அவர்கள் சொர்க்கத்தை அடைந்தனர். எனவே ஒருவன் எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னிடத்திலிருந்து பேராசையைக் கைவிட வேண்டும் என்பது தெரிகிறது.(144,145) ஓ! மன்னா, இதுவே உயர்ந்த கடமையாகும். பேராசை கைவிடப்பட வேண்டும். (நீதிமிக்க முனிவர்களின் செயல்களைச் சொல்லும்) இக்கதையை மானுட சபைகளில் உரைக்கும் மனிதன்.(146) செல்வத்தை அடைவதில் வெல்கிறான். அத்தகைய மனிதன் ஒருபோதும் துன்பகரமான கதியை அடைய வேண்டியதில்லை. பித்ருக்கள், முனிவர்கள் மற்றும் தேவர்கள் ஆகிய அனைவரும் அவனிடம் நிறைவடைகின்றனர். மேலும் மறுமையில் அவன் புகழ், அறத்தகுதி மற்றும் செல்வத்தைக் கொண்டவனாகிறான்” {என்றார் பீஷ்மர்}.(147)

களவும், சாத்திரமும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 94-இந்திரனுடன் தீர்த்தயாத்திரை சென்ற ரிஷிகள்; தாமரை மலர் களவு போனதால் அனைவரும் சபதம் செய்தது; களவு செய்த இந்திரன் ரிஷிகளின் சொற்களை சாத்திரம் என்றது ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “புனித நீர்நிலைகளை நோக்கிப் பயணம் செய்யும்போது (ஒருவர் பின் ஒருவராகப் பல முனிவர்கள்) ஏற்ற உறுதிமொழிகளைச் சொல்லும் பழைய வரலாறு இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(1) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, அந்தக் களவுச் செயல் இந்திரனால் செய்யப்பட்டது, அரச முனிகள் மற்றும் மறுபிறப்பாள முனிவர்கள் பலரால் உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.(2)

ஒரு காலத்தில் மேற்குப் பிரபாஸத்தை நோக்கி முனிவர்கள் கூட்டமாகச் சேர்ந்து சென்றனர். அங்கே அவர்கள் செய்த ஆலோசனையின் விளைவாக, பூமியின் புனித நீர் நிலைகளை அனைத்துக்கும் அவர்கள் பயணம் செய்வதெனத் தீர்மானித்தார்கள்.(3) ஓ! மன்னா, சக்ரன், அங்கிரஸ், பெருங்கல்வியுடையவரான கவி, அகஸ்தியர், நாரதர், பர்வதர், பிருகு, வசிஷ்டர், கசியபர், கௌதமர், விஷ்வாமித்திரர் மற்றும் ஜமதக்னி ஆகியோர் அங்கிருந்தனர்.(4) காலவர், அஷ்டகர், பரத்வாஜர், அருந்ததி, வாலகில்யர்கள், சிபி, திலீபன், நஹுஷன், அம்பரீஷன், அரசன் யயாதி, துந்துமாரன், பூரு ஆகியோரும் அங்கிருந்தனர்.(5) இந்த முதன்மையான மனிதர்கள், விருத்திரனைக் கொன்றவனான உயரான்ம சதக்ரதுவை தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு, ஒன்றன்பின் ஒன்றாகப் புனித நீர்நிலைகள் அனைத்திற்குச் சென்று, இறுதியாக மாக {மாசி} மாதத்தின் முழு நிலவு {பௌர்ணமி} நாளில் உயர்ந்ததும், புனிதமானதுமான கௌசிகியை அடைந்தனர்.(6) புனித நீர்நிலைகள் அனைத்திலும் நீராடியதன் மூலம் தங்கள் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்த அவர்கள் இறுதியாக மிகப் புனிதமான பிரம்மசரஸுக்குச் சென்றனர். நெருப்பைப் போன்ற பெருஞ்சக்தி கொண்ட அம்முனிவர்கள், அத்தடாகத்தில் நீராடி, தாமரைத் தண்டுகளைத் திரட்டவும், உண்ணவும் தொடங்கினர்.(7) அந்தப் பிராமணர்களில் சிலர், தாமரையின் தண்டுகளையும், வேறு சிலர் கருங்குவளையின் {கருநெய்தல்/நீலோத்பல) தண்டுகளையும் பிரித்தெடுத்தனர். விரைவில் அவர்கள் அகஸ்தியரால் பிரித்தெடுக்கப்பட்ட (கரையில் வைக்கப்பட்டிருந்த) தண்டுகள் எவராலோ எடுக்கப்பட்டுவிட்டதைக் கண்டனர்.(8)

முனிவர்களில் முதன்மையான அகஸ்தியர், அவர்கள் அனைவரிடமும், “என்னால் பிரித்தெடுக்கப்பட்டு இங்கே வைக்கப்பட்டிருந்த நல்ல தண்டுகளை எடுத்தவர் யார்? உங்களில் எவரோ ஒருவர்தான் இச்செயலைச் செய்திருக்க வேண்டுமென நான் ஐயுறுகிறேன். அவற்றை எடுத்துக் கொண்டவன் என்னிடம் திருப்பித் தரட்டும். இவ்வாறு என் தண்டுகளைக் கையாடல் செய்வது உங்களுக்குத் தகாது.(9) அற சக்தியைக் காலங்கெடுக்கும் எனக் கேள்விப்படுகிறோம். எனவே, அறம் பீடிக்கப்படுகிறது. மறம் உலகைக் கெடுத்து, முழுமையாக இங்கே தன்னை நிறுவிக்கொள்ளும் முன்னர், நான் சொர்க்கம் செல்வது நல்லது[1].(10) காலம் வரும்போது, கிராமப் புறங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பிராமணர்கள் சூத்திரர்கள் கேட்கும் வகையில் வேதங்களை உரக்கச் சொல்லும் காலம் வருவதற்கு முன்னர், கொள்கை நோக்கங்களின் மூலம் மன்னர்கள் அறவிதிகளுக்கு எதிராகச் செயல்படும் காலம் வருவதற்கு முன்னர் நான் சொர்க்கம் செல்வது நல்லது.(11) உயர்ந்த, நடுத்தர, தாழ்ந்த வகைகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை மக்கள் கருதாமல் விடும் காலம் வருவதற்கு முன்னர் நான் சொர்க்கம் செல்வது நல்லது. உலகை அறியாமை பீடித்து, அனைத்துப் பொருட்களும் இருளில் மூழ்குவதற்கு முன்னார் நான் சொர்க்கம் செல்வது நல்லது[2].(12) பலமிக்கவர்கள் பலவீனர்களுக்குத் தலைமை தாங்கி அவர்களை அடிமைகளாக நடத்தும் காலம் வருவதற்கு முன்னர் நான் சொர்க்கம் செல்வது நல்லது. உண்மையில், இவற்றைப் பூமியில் காணும்வரை இருப்பதற்கு நான் துணியேன்” என்றார் {அகஸ்தியர்}.(13)அவர் சொன்னதில் மிகுந்த கவலையடைந்த முனிவர்கள் அந்தப் பெருந்தவசியிடம், “நாங்கள் உமது தண்டுகளைக் களவு செய்யவில்லை. நீங்கள் எங்களிடம் ஐயங்கொள்வது தகாது. ஓ! பெரும் முனிவரே, நாங்கள் மிகப் பயங்கர உறுதிமொழிகளை ஏற்கப் போகிறோம்” என்றனர்.(14) தங்கள் குற்றமற்ற தன்மையை உணர்ந்து, அற விளைவைத் தாங்க விரும்பி இச்சொற்களைச் சொன்ன முனிவர்களும், அரச வழித்தோன்றல்களான தவசிகளும், ஒருவர் பின் ஒருவராகப் பின்வரும் உறுதிமொழிகளை {சபதங்களை} ஏற்கத் தொடங்கினர்.(15)

பிருகு, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், வையப்படும்போது வைபவனும், தாக்கப்படும்போது தாக்குபவனும், (வேள்விகளில் கொல்லப்படும்) விலங்குகளின் முதுகெலும்புடன் இணைந்த இறைச்சியை உண்பவனுமாகட்டும்” என்றார்[3].(16)வசிஷ்டர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், வேத கல்வியைப் புறக்கணித்து, நாயை இழுத்துக் கொண்டு ஒரு நகரத்திலோ, ஊரிலோ துறவியாக வாழட்டும்” என்றார்[4].(17)கசியபர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், அனைத்துப் பொருட்களையும் அனைத்து இடங்களிலும் விற்பனைசெய்து, அடைக்கலப் பொருட்களைக் கையாடல் செய்து, பொய் சாட்சி சொல்பனாகட்டும்” என்றார்.(18)

கௌதமர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், அனைத்து உயிரினங்களையும் சமபார்வையில் பார்க்காத புத்தியுடன், அனைத்திலும் செருக்கை வெளிப்படுத்திக் கொண்டு, எப்போதும் கோபம் மற்றும் ஆசையின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டவனாகட்டும். அவன் நிலத்தை உழுபவனாகவும், வன்மத்தால் ஈர்க்கப்பட்டவனாகவும் ஆகட்டும்” என்றார்[5].(19)அங்கிரஸ், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், எப்போதும் தூய்மையற்றவனாகட்டும். அவன் (தன் தீச்செயல்களுக்காக) நிந்திக்கத் தகுந்தவனாகட்டும். அவன் நாய்களை இழுத்துச் செல்லட்டும். அவன் பிராமணக் கொலை {பிரம்மஹத்தி பாவம்} செய்த குற்றவாளியாகட்டும். வரம்புமீறல்களைச் செய்த பிறகு பாவக்கழிப்புகளில் அவன் வெறுப்பு கொண்டவனாகட்டும்” என்றார்.(20)

துந்துமாரன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், தன் நண்பர்களிடம் நன்றிமறந்தவனாகட்டும். அவன் ஒரு சூத்திரப் பெண்ணிடம் பிறக்கட்டும். அவன் (வீட்டுக்கு வரும்) எந்த நல்ல உணவையும் (பிறருக்குப் பங்களிக்காமல்) தனியாக உண்பவனாகட்டும்” என்றார்[6].(21)திலீபன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரே ஒரு கிணறு உள்ள கிராமத்தில் வசிப்பவனும், ஒரு சூத்திரப் பெண்ணுடன் பாலினக் கலவி கொண்டவனுமான ஒரு பிராமணனுக்காக ஒதுக்கப்படும் புகழ்க்கேடு கொண்ட துன்பகரமான உலகங்களை அடையட்டும்” என்றான்[7].(22)பூரு, “உமது தண்டுகளைக் களவு செய்தவன் மருத்துவத் தொழிலைப் பின்பற்றட்டும். அவன் தன் மனைவியுடைய ஊதியத்தின் மூலம் ஆதரிக்கப்படட்டும். அவன் தன் மாமனாரிடம் இருந்து வாழ்வாதாரத்தை ஈட்டட்டும்” என்றான்.(23)

சுக்கிரன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை உண்ணடும். அவன் பகற்பொழுதில் பாலினக் கலவி கொள்ளட்டும். அவன் மன்னனின் பணியாளாகட்டும்” என்றார்.(24)

ஜமதக்னி, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், தடைசெய்யப்பட்ட நாட்களில் அல்லது சந்தர்ப்பங்களில் வேதங்களைப் படிக்கட்டும். தன்னால் செய்யப்படும் சிராத்தங்களில் அவன் நண்பர்களுக்கு உணவூட்டட்டும். அவன் ஒரு சூத்திரனின் சிராத்தத்தில் உண்ணட்டும்” என்றார்.(25)

சிபி, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், (நாள்தோறும் செய்யும் வழிபாட்டுக்கென) நெருப்பை நிறுவாமலேயே இறந்து போகட்டும். பிறர் செய்யும் வேள்விகளைத் தடை செய்த குற்றவாளியாகட்டும். தவம் நோற்பவர்களிடம் அவன் சச்சரவு செய்யட்டும்” என்றான்.(26)

யயாதி, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், தன் மனைவி பருவகாலத்தில் இல்லாத போதும் அவனே தன் தலையில் சடாமுடி தரித்து நோன்பு நோற்றுக் கொண்டிருக்கும்போதும் அவளிடம் பாலினக் கலவியில் ஈடுபட்ட குற்றவாளியாகட்டும். அவன் வேதங்களையும் அலட்சியம் செய்பவனாகட்டும்” என்றான்.(27)

நஹுஷன் {நகுஷன்}, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், துறவு நோன்பை ஏற்ற பிறகு இல்லற வாழ்வுமுறையில் வாழட்டும். ஒரு தனிப்பட்ட நோன்பு அல்லது ஒரு வேள்விக்கான தொடக்கச் சடங்குகளைச் செய்த பிறகு, அவன் (எவ்வகைக் கட்டுப்பாடுகளுமின்றி) விரும்பியவாறு செயல்படுபவனாகட்டும். (எவ்வகை அறிவுத்துறையிலும் கற்க வரும்) சீடர்களுக்கான உரைக்காகப் பணம் சார்ந்த நிறைவை ஏற்பவனாகட்டும்” என்றான்.(28)

அம்பரீஷன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், பெண்கள், உறவினர்கள் மற்றும் பசுக்களிடம் நீதியற்ற கொடூர நடத்தை கொண்டவனாகட்டும். அவன் பிராமணக் கொலை {பிரம்மஹத்தி பாவம்} செய்த குற்றவாளியாகட்டும்” என்றான்.(29)

நாரதர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், உடலோடு ஆன்மாவை அடையாளம் {உடலும், ஆன்மாவும் ஒன்றெனக்)காண்பவனாகட்டும். பழிக்கத்தக்க ஆசானிடம் அவன் சாத்திரங்களைப் பயிலட்டும். ஒவ்வொரு படிநிலையிலும் உச்சரிப்பு விதிகளுக்கு எதிரான குற்றம் செய்தபடியே அவன் வேதங்களை ஓதட்டும். அவன் பெரியோர் அனைவரையும் அவமதிக்கட்டும்” என்றார்.(30)

நாபாகன், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், எப்போதும் பொய் பேசுபவனாகவும், அறவோரிடம் சச்சரவு செய்பவனாகவும் ஆகட்டும். அவன் தன் மருமகனால் அளிக்கப்படும் பணத்தில் நிறைவடைந்து அதை ஏற்றுத் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கட்டும்” என்றான்.(31)

கவி, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரு பசுவதைத் தன் காலால் தாக்கிய குற்றவாளியாக்கட்டும். அவன் சூரியனைப் பார்த்து சிறுநீர் கழிக்கட்டும். தன்னிடம் உறைவிடம் நாடும் மனிதனை அவன் கைவிடட்டும்” என்றார்.(32)

விஷ்வாமித்திரர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், தன் தலைவனிடம் வஞ்சகமாக நடந்து கொள்ளும் பணியாளாகட்டும். அவன் மன்னனின் புரோகிதனாகட்டும். வேள்விகளில் துணை செய்யத்தகாதவனுக்கு அவன் ரித்விக்காகட்டும்” என்றார்.(33)

பர்வதர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரு கிராமத்தின் தலைவனாகட்டும். அவன் கழுதைகளில் பயணங்கள் போகட்டும். அவன் தன் வாழ்வுக்காக நாய்களை இழுத்துச் செல்லட்டும்” என்றார்.(34)

பரத்வாஜர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், கொடூர நடத்தையும், வாய்மையற்ற பேச்சும் கொண்ட ஒருவனுடைய பாவங்கள் அனைத்தையும் செய்த குற்றவாளியாகட்டும்” என்றார்.(35)

அஷ்டகர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஞானமற்றவனும், வினோத மனப்போக்கனும், பாவம் நிறைந்த நடத்தை கொண்டவனும், நீதியற்ற முறையில் பூமியை ஆளும் மனநிலை கொண்ட ஒரு மன்னனாகட்டும்” என்றார்.(36)

காலவர், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரு பாவம் நிறைந்த மனிதனைவிடப் புகழ்க்கேட்டை அடையட்டும். அவன் தன் உற்றார் உறவினரிடம் பாவச்செயல் புரிபவனாகட்டும். அவன் பிறருக்கு அளித்த கொடைகளை அறிவிப்பவனாகட்டும்” என்றார்.(37)

அருந்ததி, “உமது தண்டுகளைக் களவு செய்தவள், தனது மாமியாரைக் குறித்துக் குறைபேசுபவளாகட்டும். அவள் தன் தலைவனிடம் அருவருப்பு கொள்பவளாகட்டும். அவள் தன் வீட்டிற்கு வரும் எந்த நல்ல உணவையும் தனியாக உண்பவளாகட்டும்” என்றாள்.(38)

வாலகில்யர்கள், “உமது தண்டுகளைக் களவு செய்தவன், (தன் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக) ஒரு கிராமத்தின் நுழைவாயிலில் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கட்டும். அவன் தன் கடமைகளை அனைத்தையும் அறிந்தவனாக இருந்தாலும், அனைத்து அத்துமீறல்களையும் செய்த குற்றவாளியாகட்டும்” என்றனர்[8].(39)சுனஸ்ஸகன்“உமது தண்டுகளைக் களவு செய்தவன், நாள்தோறும் செய்ய வேண்டிய ஹோமத்தை அலட்சியம் செய்து மகிழ்ச்சியாக உறங்கும் பிராமணனாகட்டும். அவன் அறத் துறவியாகி, எக்கட்டுப்பாடையும் நோற்காமல் விரும்பியபடி நடந்து கொள்பவனாகட்டும்” என்றான்.(40)

{பசுஸகனோகு கூடிய} சுரபி, “உமது தண்டுகளைக் களவு செய்தவளுடைய பால், மனித மயிராலான கயிற்றால் கட்டப்பட்ட (பின்னங்) கால்களுடனும், தன்னுடையதல்லாத கன்றுடனும், வெண்கலப் பாத்திரத்தில் கறக்கப்படட்டும்” என்றாள்[9]“.(41)பீஷமர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! குரு மன்னா, முனிவர்களும், அரச தவசிகளும் இவ்வாறு பல்வேறு உறுதிமொழிகளை ஏற்றதும், ஆயிரங்கண் கொண்ட தேவர்களின் தலைவன், கோபம் நிறைந்தவராக இருக்கும் முனிவர் அகஸ்தியரின் மீது தன் கண்களைச் செலுத்தி மகிழ்ச்சியால் நிறைந்தவனானான்.(42) தாமரைத் தண்டுகள் மறைந்து போனதால் மிகுந்த கோபத்தில் இருந்த அந்த முனிவரிடம் பேசிய மகவத் {மகவான்}, தன் மனத்தில் ஓடியதை இவ்வாறு அறிவித்தான். ஓ! மன்னா, மறுபிறப்பாளர்களும், தெய்வீகமானவர்களும், அரசர்களாகவும் இருந்த அந்தத் தவசிகளுக்கு மத்தியில் இந்திரன் சொன்னதைக் கேட்பாயாக.(43)

சக்ரன் {இந்திரன்}, “உமது தண்டுகளைக் களவு செய்தவன், பிரம்மச்சரிய நோன்புகளை முறையாக நோற்றவராகவோ, சாமங்கள் மற்றும் யஜுஸ்களை முறையாகப் படித்தவராகவோ உள்ள ஒரு பிராமணருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கட்டும். அதர்வ வேதங்கற்று நிறைவடைந்ததும் இறுதி நீராடலைச் செய்த பலன் அவனை அடையட்டும்.(44) உமது தண்டுகளைக் களவு செய்தவன் வேதங்கள் அனைத்தையும் கற்ற பலன்களை அடையட்டும். அவன் அனைத்துக் கடமைகளை நோற்பவனாகவும், அறவொழுக்கம் கொண்டவனாகவும் ஆகட்டும். உண்மையில், அவன் பிரம்மலோகத்தை அடையட்டும்” என்றான்.(45)

அகஸ்தியர், “ஓ! பலனைக் கொன்றவனே, சபிப்பதற்குப் பதிலாக நீ வாழ்த்துகிறாய். (என் தண்டுகளை நீயே எடுத்திருக்கிறாய் என்பது தெளிவாகத் தெரிகிறது). அவற்றை என்னிடம் கொடுப்பாயாக. அதுவே நித்திய கடமையாகும்” என்றார்.(46)

இந்திரன், “ஓ! புனிதமானவரே, பேராசையால் வழிநடத்தப்பட்டு நான் உமது தண்டுகளை அகற்றவில்லை. உண்மையில், நாம் நோற்க வேண்டிய கடமைகளை {தர்மங்களை} இக்கூட்டத்தில் கேட்கும் விருப்பத்தாலேயே நான் அவற்றை அகற்றினேன்.(47) ஸ்ருதிகளில் முதன்மையானவை கடமைகளாகும். கடமைகளே (உலகக் கடலைக் கடப்பதற்கான) நித்திய பாதையாகின்றன. (கடமைகளைப் பொறுத்த வகையில்) நித்தியமானவையும், மாற்றமில்லாதவையும், மாற்றங்கள் அனைத்தையும் கடந்தவையுமான முனிவர்களின் உரையாடல்களை {ரிஷிவாக்கியத்தை} நான் கேட்டேன்[10].(48) ஓ! கல்விமானான பிராமணர்களில் முதன்மையானவரே, உமது தண்டுகளான இவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வீராக. ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்துக் களங்கங்களில் இருந்தும் விடுபட்டவரே, என்னுடைய இந்த வரம்புமீறலை மன்னிப்பதே {பொறுப்பதே} உமக்குத் தகும்” என்றான்”.(49)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தேவர்களின் தலைவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மிகுந்த கோபத்தில் இருந்த தவசி அகஸ்தியர் தன் தண்டுகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முனிவர் பெரும் உற்சாகத்தை அடைந்தார்.(50) அதன் பிறகு அந்தக் காட்டுவாசிகள் பல்வேறு புனித நீர்நிலைகளுக்குச் சென்றனர். உண்மையில், அந்தப் புனித நீர்நிலைகளுக்குச் சென்ற அவர்கள், எங்கும் தங்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்தனர்.(51) ஒவ்வொரு பர்வ நாளிலும் இந்தக் கதையை மிகுந்த கவனத்துடன் படிக்கும் மனிதன், அறியாமை கொண்ட தீய மகன் ஒருவனை ஒருபோதும் பெறமாட்டான். அவன் ஒருபோதும் கல்வியை இழக்கமாட்டான்.(52) எந்தப் பேரிடரும் அவனைத் தீண்டாது. அதுவும் தவிர, அனைத்து வகைக் கவலைகளில் இருந்து அவன் விடுபடுவான். முதுமையும், தளர்வும் ஒருபோதும் அவனுடையவையாகாது. அனைத்து வகைக் களங்கங்கள் மற்றும் தீமைகளில் இருந்து விடுபட்டு, பலன் கிட்டுபவனான அவன் சொர்க்கத்தை அடைவான்.(53) ஓ! மனிதர்களின் இளவரசே, முனிவர்களால் நோற்கப்படும் இந்தச் சாத்திரத்தைப் படிப்பவன், இன்பம் நிறைந்ததும், நித்தியமானதுமான பிரம்மலோகத்தை நிச்சயம் அடைவான்” {என்றார் பீஷ்மர்}.(54)

மழைதருமோ என் மேகம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 95-சூரியனுக்கும் ஜமதக்நி முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, ஈமச் சடங்குகளில் குடைகள் மற்றும் காலணிகள் கொடையளிக்கும் வழக்கம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது? எந்த நோக்கத்திற்காக அக்கொடைகள் கொடுக்கப்பட்டன? ஈமச் சடங்குகளில் மட்டுமல்லாமல் அவை வேறு அறச்சடங்குகளிலும் கொடுக்கப்படுகின்றன. அறத்தகுதியை அடையும் நோக்கில் அவை பல இடங்களில் கொடுக்கப்படுகின்றன. ஓ! மறுபிறப்பாளரே, நான் இவ்வழக்கத்தின் உண்மையான பொருளை விரிவாக அறிய விரும்புகிறேன்” என்றான்.(1-3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! இளவரசே, அறச்சடங்குகளில் குடைகளும், காலணிகளும் கொடுக்கும் வழக்கம் எவ்வாறு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை விரிவாகச் சொல்லப் போகிறேன் கவனமாகக் கேட்பாயாக.(4) ஓ! இளவரசே, இது நிரந்தரமாக நோற்கப்படும் சக்தியை எவாறு அடைந்தது, பலன்தரக்கூடிய {புண்ணியச்} செயலாக எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதைக் குறித்து உனக்கு முழுமையாகச் சொல்லப் போகிறேன்.(5)

இது தொடர்பாகக் குறிப்பிடப்படும் ஜமதக்னிக்கும், உயர் ஆன்ம சூரியனுக்கும் இடையில் நடந்த உரையாடலை உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! பலமிக்க மன்னா, பழங்காலத்தில் பிருகு குலத்தைச் சேர்ந்த சிறப்புமிக்க ஜமதக்னி, விற்பயிற்சி செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.(6) அவர் இலக்கு பாரத்துக் கொண்டே கணைக்குப் பின் கணையாக ஏவி கொண்டிருந்தார். அவரது மனைவியான ரேணுகை, அவ்வாறு ஏவப்படும் கணைகளை எடுத்துக் கொண்டு சுடர்மிக்க சக்தியுடன் கூடிய அந்தப் பிருகுக் குலக் கொழுந்திடம் அவற்றைத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

தமது கணைகளில் விஸ் ஒலிகளாலும், தமது வில்லின் நாணொலியாலும் நிறைவடைந்த அவர், ரேணுகை தம்மிடம் திரும்பத் தரும் கணைகளை மீண்டும் மீண்டும் மீண்டும் ஏவி தமக்குத் தாமே மகிழ்ச்சியடைந்து வந்தார். ஓ! ஏகாதிபதி, ஜேஷ்ட மூலத்தில் சூரியன் இருந்த மாதத்தில் ஒருநாள் நடுப்பகல் மதிய வேளையில்,(7-9) அந்தப் பிராமணர், தமது அம்புகள் அனைத்தையும் ஏவிவிட்டு, ரேணுகையிடம், “ஓ! அகன்ற விழிகளைக் கொண்ட பெண்ணே, என் வில்லில் இருந்து நான் ஏவிய கணைகளை எடுத்துக் கொண்டு வருவாயாக.(10) ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, அவற்றை மீண்டும் என் வில்லில் இருந்து தொடுக்கப் போகிறேன்” என்றார்.

அந்தப் பெண்மணி அவ்வாறு சென்ற போது, சூரியனின் வெப்பத்தால் தலையும் பாதமும் சுட்டதன் விளைவால் மரநிழலில் அமர்ந்தாள். அருள் நிறைந்தவளும், கருங்கண்களைக் கொண்டவளுமான ரேணுகை, தன் கணவரின் சாபத்திற்கு அஞ்சியதால் ஒரு கணம் மட்டுமே ஓய்வெடுத்து, கணைகளைத் திரட்டிதிரும்பக் கடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். அருள் நிறைந்த குணங்கைக கொண்ட அந்தக் கொண்டாடப்பட்ட பெண்மணி, பாதங்களின் வலியோடும், மனக்கசப்போடும் அவற்றை எடுத்துத் திரும்பி வந்தாள். அச்சத்தால் நடுங்கியவாறே அவள் தன் கணவரை அணுகினாள்.(11-14)

போபத்தால் நிறைந்திருந்த அம்முனிவர், அழகிய முகம் படைத்த தம் மனைவியிடம், “ஓ! ரேணுகையே, நீ திரும்பி வருவதில் இவ்வளவு தாமதமேன்?” என்று மீண்டும் மீண்டும் கேட்டார்.(15)

ரேணுகை, “ஓ! தவங்களைச் செல்வமாகக் கொண்டவரே, சூரியனின் கதிர்களால் என் தலையும் பாதங்களும் சுடப்பட்டன. வெப்பத்தால் ஒடுக்கப்பட்ட நான் ஒரு மர நிழலில் ஒதுங்கினேன்.(16) என் தாமதத்திற்கு இதுவே காரணமாகும். ஓ! தலைவா, காரணத்தைச் சொல்லிவிட்டேன் நீர் என்னிடம் சினம் தவிர்ப்பீராக” என்றாள்.(17)

ஜமதக்னி, “ஓ! ரேணுகையே, சுடர்மிக்கக் கதிர்களைக் கொண்டவனும், இவ்வழியில் உன்னைப் பீடித்தவனுமான பகல் நட்சத்திரத்தை {சூரியனை} நான் இன்றே கடுஞ்சக்தி கொண்ட என் ஆயுதங்களால் அழிக்கப்போகிறேன்” என்றார்”.(18)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஜமதக்னி, பல கணைகளை எடுத்துக் கொண்டு, தமது தெய்வீக வில்லை இழுத்து, சூரியனை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, அவனது (நாள்முறை) போக்கில் அவனைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்.(19) ஓ! குந்தியின் மகனே, போரிடத் தயாராக இருக்கும் அவரைக் கண்ட சூரியன், ஒரு பிராமணனின் வேடத்தில் அணுகி, அவரிடம், “நீர் வெறுப்படையும் அளவுக்குச் சூரியன் செய்ததென்ன?(20) ஆகாயத்தில் நகர்ந்து, பூமியின் ஈரப்பத்தத்தை மேலே ஈர்த்து மீண்டும் அதனை அவளிடமே மழையாகப் பொழிகிறான்.(21) ஓ! மறுபிறப்பாளரே, இதன் மூலமே மனிதர்களுக்கு ஏற்புடைய உணவு உண்டாகிறது. உணவே உயிர் மூச்சுகளாகிறது என்று வேதங்கள் சொல்கின்றன.(22) ஓ! பிராமணரே, மேகங்களில் மறைந்து தன் கதிர்களால் சூழும் சூரியன் ஏழு தீவுகளையும் மழைப்பொழிவால் நனைக்கிறான்.(23) ஓ! பலமிக்கவmரே, இவ்வாறு பொழியப்படும் ஈரப்பதமானது, இலைகள், கனிகள், காய்கறிகள், மூலிகை ஆகியவற்றுள் பரவி உணவாக மாறுகிறது.(24)

ஓ! பிருகுவின் மகனே, பிறப்புச் சார்ந்த சடங்குகள் {ஜாதகர்மம்}, அனைத்து வகை அற சோன்புகள் {சௌளம்}, புனித நூலைத் தரித்தல் {உபநயனம்}, பசுக்கொடைகள், திருமணங்கள், வேள்வியை நோக்கமாகக் கொண்ட பொருட்கள் அனைத்தும், மனிதர்கள் ஆட்சி செய்வதற்கான விதிமுறைகள் {தர்மங்கள்}, கொடைகள் {தானங்கள்}, (மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான) அனைத்து வகை உறவுமுறைகள் {திரவியத்தினால் உண்டாகும் ஜனச்சேர்க்கைகள்}, செல்வமீட்டல் ஆகியவை உணவிலேயே தங்கள் பிறப்பிடத்தைக் கொண்டிருக்கின்றன. இதை நன்கறிவீராக.(25,26) அண்டத்தில் உள்ள ஏற்புடைய நல்ல பொருட்கள் யாவும், உயிரினங்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவும் உணவில் இருந்தே உண்டாகின்றன. நீர் நன்கறிந்தவற்றையே நான் முறையாக உமக்குச் சொல்கிறேன். உண்மையில், நான் சொன்ன யாவற்றையும் நீர் அறிவீர்.(27) எனவே, ஓ! மறுபிறப்பாள முனிவரே, உமது கோபத்தைத் தணித்துக் கொள்வீராக. சூரியனை அழிப்பதன் மூலம் உமக்கு லாபமென்ன?” என்று கேட்டான் {சூரியன்}.(28)

குடை, காலணி கொடை! – அநுசாஸனபர்வம் பகுதி – 96- குடை மற்றும் காலணிகளைக் கொடையளிப்பதன் மூலம் உண்டாகும் பலன்களைக் குறித்துச் சூரியனுக்கும் ஜமதக்நி முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “நாள் சமைப்பவனால் {சூரியனால்} இவ்வாறு வேண்டப்பட்டபோது, தவசிகளில் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான ஜமதக்னி என்ன செய்தார்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குரு குல வழித்தோன்றலே, நெருப்பின் பிரகாசத்துடன் கூடியவரான ஜமதக்னி, சூரியனின் முறையீடுகள் அனைத்துக்குப் பிறகும், தமது கோபத்தை வளர்ப்பதையே தொடர்ந்தார்.(2)

ஓ! மன்னா, அப்போது பிராமண வேடத்தில் இருந்து சூரியன், கூப்பிய கரங்களுடன் அவரிடம் தலைவணங்கி இனிமையான சொற்களைச் சொல்லி,(3) “ஓ! மறுபிறப்பாள முனிவரே, சூரியன் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கிறான். தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் பகலின் தேவனை நீர் எவ்வாறு துளைப்பீர்?” என்று கேட்டான்.(4)

ஜமதக்னி {சூரியனிடம்}, “நீ அசைபவனாகவும், அசைவற்றவனுமாக இருக்கிறாய் என்பதை நான் என் அறிவுவிழியால் {ஞானக்கண்ணால்} அறிவேன். இந்நாளில் நான் உனக்கு நிச்சயம் ஒரு பாடத்தைப் படித்துக் காட்டுவேன் {கற்பிப்பேன்}.(5) நடுப்பகலில் ஒரு கணம் சொர்க்கங்களில் நிற்பவனாக நீ தெரிகிறாய். ஓ! சூரியா, அப்போது நான் என் கணைகளால் உன்னைத் துளைப்பேன். என்னுடைய இந்தத் தீர்மானத்தில் எந்த மாற்றமும் கிடையாது” என்றார்.(6)

சூரியன், “ஓ! மறுபிறப்பாளர முனிவரே, ஓ! வில்லாளிகளில் சிறந்தவரே, நீர் என்னை அறிவீர் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஓ! புனிதமானவரே, நான் குற்றமிழைத்திருந்தாலும், உமது பாதுகாப்புக்காக நான் பணிந்திருப்பதைக் காண்பீராக” என்றான்”.(7)

பீஷ்மர் தொடர்ந்தார், “இதைக் கேட்டதும் துதிக்கத்தகுந்த ஜமதக்னி நாள் சமைப்பவனிடம் புன்னகையுடனே, “ஓ! சூரியா, என் பாதுகாப்பை நீ நாடும்போது எனக்கு அச்சமேதும் கிடையாது.(8) பிராமணர்களில் உள்ள எளிமை {மனநேர்மை}, பூமியின் உறுதி {அசையாமை}, சந்திரனின் மென்மை {குளிர்ச்சி}, வருணனின் ஈர்ப்பு {கடலின் ஆழம்}, அக்னியின் பிரகாசம், மேருவின் ஒளி, சூரியனின் வெப்பம் {குபேரனின் செல்வம்} ஆகியவற்றைக் கடப்பவனே, பாதுகாப்பு நாடி வந்தவனைக் கொல்வான்.(9,10) வேண்டி வந்தவனைக் கொல்ல இயன்றவன், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தவும், பிராமணனைக் கொல்லவும், மதுபானம் பருகவும் இயன்றவனாவான்.(11) எனவே, உன் கதிர்களால் சுடப்படும்போது, அதிலிருந்து மக்கள் விடுபடும் வகையில் இத்தீமைக்கு ஏதாவதொரு தீர்வை நீ சிந்திப்பாயாக” என்றார்.(12)

சூரியன், “ஓ! பெரும் முனிவரே, என் கதிர்களைத் தடுத்துத் தலையைக் காத்துக்கொள்வதற்குரிய இந்தக் குடையைப் பெற்றுக் கொள்வீராக. தோலாலான இந்தக் காலணிகள் இரண்டும் பாதங்களைப் பாதுகாக்கும்.(14) இந்த நாள் முதல் அறச்சடங்குகள் அனைத்திலும் இப்பொருட்களைக் கொடையளிப்பது உறுதியான பயன்பாடாக நிறுவப்படட்டும்” என்றான்”.(15)

பீஷ்மர் தொடர்ந்தார், “குடைகளையும், காலணிகளையும் கொடையளிக்கும் இவ்வழக்கம் சூரியனாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. ஓ! பரதனின் வழித்தோன்றலே, இக்கொடைகள் மூவுலகங்களிலும் பலன்கொடுக்க வல்லவையாகக் கருதப்படுகின்றன.(16) எனவே நீயும் பிராமணர்களுக்குக் குடைகளையும், காலணிகளையும் கொடையளிப்பாயாக. இந்தச் செயலின் மூலம் நீ பெரும் அறத்தகுதியை ஈட்டுவாய் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை.(17) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, நூறு விலாக்களை {கம்பிகளைக்) கொண்ட ஒரு வெண்குடையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவன், இறந்த பிறகு இன்ப நிலையை அடைந்து, பிராமணர்கள், அப்சரஸ்கள் மற்றும் தேவர்களால் மதிக்கப்படும் இந்திரலோகத்தில் வசிப்பான்.(18,19)

ஓ! பலமிக்கவனே, சூரியனின் வெப்பத்தால் பாதம் சுடும் ஸ்நாதகப் பிராமணர்களுக்கும், அறச் சடங்குகளைப் பயிலும் பிராமணர்களுக்கும் காலணிகளை வழங்குபவன், தேவர்களாலேயே விரும்பப்படும் உலகங்களை அடைவான்.(20) ஓ! பாரதா, அத்தகைய மனிதன், தன் மரணத்திற்குப் பிறகு உயர்ந்த சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வசிப்பான்.(21) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, அறச்சடங்குகளில் குடைகளையும், காலணிகளையும் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்களை நான் உனக்கு முழுமையாகச் சொல்லிவிட்டேன்” {என்றார் பீஷ்மர்}.(22)

கிருஹஸ்த தர்மங்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 97-இல்லறத்தானின் கடமைகள், பலிக்காணிக்கைகள், மதுபர்க்கத்துடன் கூடிய விருந்தோம்பல், அவற்றுக்குரிய பலன்கள் குறித்து வாசுதேவனுக்கும், பூமாதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே, இல்லற வகையின் கடமைகள் {கிருஹஸ்தாஸ்ரமத் தர்மங்கள்}அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. மேலும், இவ்வுலகில் செழிப்பையடைவதற்காக ஒரு மனிதன் செய்ய வேண்டிய அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாக வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் பூமாதேவி ஆகியோரைக் குறித்த பழைய கதையை உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) ஓ! பாரதக் குலத்தின் சிறந்த இளவரசே, பலமிக்கவனான வாசுதேவன், பூமாதேவியைப் புகழ்ந்து பாடிய பிறகு, இதே கேள்வியை அவளிடம் கேட்டான்.(3)

வாசுதேவன் {கிருஷ்ணன், பூமாதேவியிடம்}, “இல்லறத்தான் என்ற நிலையைப் பின்பற்றும் நானும் என் போன்றோரும் என்ன செயல்களைச் செய்ய வேண்டும்? அத்தகைய செயல்கள் எவ்வாறு நன்மைபயக்கும்?” எனக் கேட்டான்.(4)

பூமாதேவி {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவரே, ஓர் இல்லறத்தானால் முனிவர்கள், தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் ஆகியோர் வழிபடப்பட வேண்டும், வேள்விகளும் செய்யப்பட வேண்டும்.(5) தேவர்கள் வேள்விகளாலும், மனிதர்கள் விருந்தோம்பலாலும் எப்போதும் நிறைவடைகிறார்கள் என்பதை என்னிடம் இருந்து அறிந்து கொள்வீராக. எனவே, இல்லறத்தான் அவர்கள் விரும்பும் பொருட்களால் அவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும்.(6) ஓ! மதுசூதனரே, அத்தகைய செயல்களின் மூலம் முனிவர்களும் நிறைவடைகிறார்கள். ஓர் இல்லறத்தான், நாள் தோறும் உணவுண்ணும் முன்னர், தன் புனித நெருப்பையும், தன் வேள்விக் காணிக்கைகளையும் கவனிக்க வேண்டும்[1].(7) ஓ! மதுசூதனரே, தேவர்கள் இத்தகைய செயல்களால் நிறைவடைகின்றனர். ஓர் இல்லறத்தான் நாள்தோறும் பித்ருக்களை நிறைவடையச் செய்வதற்காக, உணவு மற்றும் நீர் மற்றும் உணவுக் காணிக்கைகளையோ,(8) கனிகள், கிழங்குகள் மற்றும் நீர்க்காணிக்கைகளையோ அளித்து விஷ்வேதேவர்களுக்கு வெந்த உணவையும், அக்னி, சோமன் மற்றும் தன்வந்தரி ஆகியோருக்கு தெளிந்த நெய்யையும் காணிக்கையளிக்க வேண்டும்.(9,10)அவன் தனிப்பட்டவையும், தனித்துவம் வாய்ந்தவையுமான காணிக்கைகளைப் பிரஜாபதிக்கு {பிரம்மனுக்கு} அளிக்க வேண்டும். அவன் தென்பகுதியில் யமனுக்கும், மேற்குப் பகுதியில் வருணனுக்கும், வடக்குப் பகுதியில் சோமனுக்கும், வீட்டுக்குள்ளேயே பிரஜாபதிக்கும், வடகிழக்கில் தன்வந்தரிக்கும், கிழக்கில் இந்திரனுக்குமென முறையான வரிசையில் வேள்விக் காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(12) வீட்டின் வாயிலில் அவன் மனிதர்களுக்கு உணவுக்காணிக்கை அளிக்க வேண்டும்[2]. ஓ! மாதவரே, இவையே பலிக் காணிக்கைகள் என்றறியப்படுகின்றன. மருத்துகளுக்கும், தேவர்களுக்கும் ஒருவனுடைய வீட்டிற்குள்ளேயே பலிக்காணிக்கை அளிக்கப்பட வேண்டும்.(13) விஷ்வேதேவர்களுக்கு அது திறந்தவெளியிலும் {ஆகாயத்திலும்}, ராட்சசர்களுக்கும், பூதங்களுக்கும் இரவிலும் கொடுக்கப்பட வேண்டும்.(14) இந்தக் காணிக்கைகளை அளித்த பிறகு அந்த இல்லறத்தான், பிராமணர்களுக்குக் காணிக்கை அளிக்க வேண்டும். பிராமணர்கள் எவரும் இல்லையென்றால் உணவின் முதல் பகுதி நெருப்பில் வீசப்பட வேண்டும்.(15)ஒரு மனிதன் தன் மூதாதையருக்குச் சிராத்தம் அளிக்க விரும்பினால் அவன், சிராத்தச் சடங்கை நிறைவு செய்யும்போது, தன் மூதாதையர்களை நிறைவடையச் செய்து, முறையான வரிசையில் பலிக்காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(16) அதன் பிறகு அவன் விஷ்வேதேவர்களுக்குக் காணிக்கைகளை அளிக்க வேண்டும். அடுத்ததாக அவன் பிராமணர்களை அழைத்து, தன் வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு உணவுடன் விருந்தளிக்க வேண்டும்.(17) ஓ! இளவரசே, இச்செயலால் விருந்தினர்கள் நிறைவடைவார்கள். எவன் நீண்ட காலம் வீட்டில் தங்காமல், வந்த குறுகிய காலத்தில் சென்றுவிடுவானோ அவனே விருந்தினன் என்றழைக்கப்படுகிறான்.(18) ஓர் இல்லறத்தான், தன் ஆசான், தந்தை, நண்பன் மற்றும் விருந்தினனிடம், “என் வீட்டில் உமக்குக் கொடுக்க இன்னது வைத்திருக்கிறேன்” என்று சொல்ல வேண்டும். மேலும் அதன்படியே அவன் ஒவ்வொரு நாளும் அதைக் கொடுக்க வேண்டும்.(19,20)

அந்த இல்லறத்தான் அவர்கள் செய்யச் சொல்லும் எதையும் செய்ய வேண்டும். இதுவே நிறுவப்பட்ட வழக்கமாகும். ஓ! கிருஷ்ணா, அந்த இல்லறத்தான், அவர்கள் அனைவருக்கும் உணவளித்த பிறகு இறுதியாகவே உணவை உட்கொள்ள வேண்டும்.(21) அந்த இல்லறத்தான், தன் மன்னன், புரோகிதர், ஆசான், மாமனார், ஸ்நாதகப் பிராமணர்கள் ஆகியோர் ஒரு வருடம் முழுவதும் தன் வீட்டில் தங்கினாலும் மதுபர்க்கக் காணிக்கைகளுடன் அவர்களை வழிபட வேண்டும்.(22) காலையிலும், மாலையிலும் நாய்கள், ஸ்வபசர்கள் {சக்கிலியர்கள்}, பறவைகளுக்குத் தரையில் உணவு காணிக்கையிடப்பட வேண்டும். இது வைஷ்வேதேவ காணிக்கை என்றழைக்கப்படுகிறது[3].(23) இந்தச் சடங்குகளைப் பேரார்வத்துடன் கூடிய தெளிந்த மனத்துடன் செய்யும் இல்லறத்தான் இவ்வுலகில் {இம்மையில்} முனிவர்களின் அருளையும், இறந்த பிறகு {மறுமையில்} சொர்க்கலோகங்களையும் அடைகிறான்” என்றாள் {பூமாதேவி}.(24)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பூமாதேவியிடம் இருந்து இவை யாவற்றையும் கேட்ட பலமிக்க வாசுதேவன் {கிருஷ்ணன்} அதன்படியே செயல்பட்டான். நீயும் அதே வழியிலேயே செயல்படுவாயாக.(25) ஓ! மன்னா, ஓர் இல்லறத்தானின் கடமைகளான இவற்றைச் செய்வதன் மூலம் நீ இவ்வுலகில் புகழை அடைந்து, இறந்த பிறகு சொர்க்கத்தை அடைவாய்” {என்றார் பீஷ்மர்}.(26)

புஷ்பதூபதீப பலிகள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 98-மலர், நறுமணப்புகைப்பொருள், விளக்கு ஆகியவற்றைக் கொடையளித்து, பலிக்காணிக்கைகளை அளிப்பது குறித்து மன்னன் பலிக்குச் சுக்ரன் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, விளக்குக்கொடை எந்த வகையைச் சார்ந்தது? இக்கொடை எவ்வாறு தோன்றியது? அதைச் செய்வதனால் கிட்டும் பலன்கள் என்னென்ன? இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிர்னிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாக அனைத்து உயிரினங்களின் தலைவனான மனுவுக்கும், சுவர்ணருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொல்லும் பழங்கதை சொல்லப்படுகிறது.(2) ஓ! பாரதா, பழங்காலத்தில், சுவர்ணர் என்ற பெயரில் ஒரு தவசி இருந்தார். அவரது நிறம் தங்கம் போன்றிருந்ததால் அவர் சுவர்ணர் (தங்க நிறம் கொண்டவர்) என்றழைக்கப்பட்டார்.(3) தூய குலம், நன்னடத்தை மற்றும் சிறந்த திறன்களைக் கொண்டவராகவும் இருந்த அவர் வேதங்கள் அனைத்திலும் ஆளுமைபெற்றவராக இருந்தார். உண்மையில், அவர் கொண்டிருந்த சிறப்புத் திறனகளால் அவர் உயர்ந்த குலத்தில் பிறந்த பலரைக் கடந்திருப்பவராக இருந்தார்.(4) ஒரு நாள், கல்விமானான அந்தப் பிராமணர், உயிரினங்கள் அனைத்தின் தலைவரான மனுவைக் கண்டு அவரை அணுகினார். ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அவர்கள், வழக்கமாக மரியாதை நிமித்தமான விசாரிப்புகளைச் செய்தனர்.(5) அவர்கள் இருவரும் வாய்மை நோற்பதில் உறுதியுள்ளவர்களாக இருந்தனர். ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அவர்கள், தங்க மலையான அந்த மேருவின் இனிமை நிறைந்த சாரலில் அமர்ந்தனர்.(6) அங்கே அமர்ந்த அவர்கள், பழங்காலத்தின் உயர் ஆன்மத் தேவர்கள், மறுபிறப்பாள முனிவர்கள் மற்றும் தைத்தியர்கள் தொடர்புடைய பல்வேறு காரியங்களை ஒருவருக்கொருவர் சொல்லி விவாதிக்கத் தொடங்கினர்.(7)

அப்போது சுவர்ணர், சுயம்புவான மனுவிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்: “அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக நான் கேட்கப் போகும் ஒரு கேள்விக்குப் பதிலளிப்பதே உமக்குத் தகும்.(8) ஓ! உயிரினங்கள் அனைத்தின் தலைவரே, மலர்கள் மற்றும் வேறு நல்ல நறுமணங்களைக் கொண்டு தேவர்கள் வழிபடப்படுவது காணப்படுகிறது. இஃது என்ன? இந்த நடைமுறை எவ்வாறு தோன்றியது? அதனுடன் தொடர்புடைய பலன்கள் என்னென்ன? இக்காரியம் குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(9)

மனு {சுவர்ணரிடம்}, “இது தொடர்பாகச் சுக்கிரனுக்கும், உயர் ஆன்ம (தைத்தியனான) பலிக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழைய வரலாறு சொல்லப்படுகிறது.(10) ஒரு காலத்தில், பிருகு குலத்தின் சுக்கிரர், விரோசனனின் மகனான பலி மூவுலகங்களையும் ஆண்டுக் கொண்டிருந்தபோது, அவனை அணுகினார்.(11) வேள்விக் கொடைகளை அபரிமிதமாக அளிக்கும் அந்த அசுரர்கள் தலைவன் {பலி}, அர்க்கியத்துடன் அந்தப் பிருகுவின் வழித்தோன்றலை வழிபட்டு (அவருக்கு ஓர் இருக்கையை அளித்து) தன் விருந்தினர் அமர்ந்த பிறகு அவனும் அமர்ந்தான்.(12) அச்சந்தர்ப்பத்தில் மலர்கள், நறுமணப்புகைப்பொருள், விளக்குகளுடன் பிணைந்த பலன்கள் தொடர்பாக நீர் தொடங்கிய அதே காரியம் முன் வைக்கப்பட்டது. உண்மையில், தைத்தியர்களின் தலைவன் {பலி}, தவசிகள் அனைவரிலும் பெருங்கல்வியைக் கொண்ட சுக்ரரிடம் இந்த உயர்ந்த கேள்வியை வைத்தான்.(13)

பலி {சுக்கிரரிடம்}, “ஓ! பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, உண்மையில் மலர்கள், நறுமணப்புகைப்பொருள், விளக்குகள் ஆகியவற்றைக் கொடையளிப்பதால் உண்டாகும் பலன் என்ன? ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, இது குறித்து நீர் என்னிடம் உரையாடுவது உமக்குத் தகும்” என்றான்.(14)

சுக்கிரர் {பலியிடம்}, “முதலில் தவம் உயிர்பெற்றது. அதன் பிறகு தர்மம் (அல்லது கருணை மற்றும் பிற ஒழுக்கங்கள்) வந்தது. அதன் இடைவெளியில் செடிகொடிகள் உயிர்பெற்றன[1].(15) அவை எண்ணற்ற இனங்களாக இருந்தன. அவை அனைத்தும் (தேவன்) சோமனையே {சந்திரனையே} தங்கள் தலைவனாகக் கொண்டிருக்கின்றன. இந்தச் செடிகொடிகளில் சில அமுதமாகவும், சில நஞ்சாகவும் கருதப்படுகின்றன. இதுவுமல்லாமல் அதுவுமல்லாமல் சில சேர்ந்து ஒருவகையாகின.(16) மனத்திற்கு நிறைவையும் இன்பத்தையும் அளிப்பது அமுதமாகும். தன் மணத்தின் மூலம் மனத்தை அதிகம் வாட்டுவது நஞ்சாகும்.(17) அமுதமானது உயர்வானது, மங்கலமானதெனவும், நஞ்சானது மங்கலமற்றது எனவும் அறிவாயாக. இலையுதிர் மூலிகைகள் {தாவரங்கள்} அனைத்தும் அமுதமாகும். நஞ்சானது நெருப்பின் சக்தியால் பிறக்கிறது.(18) மலர்கள் மனத்திற்கு மகிழ்வூட்டி செழிப்பை அளிக்கின்றன. எனவே அறச் செயல்களைச் செய்யும் மனிதர்க்ள அவற்றுக்குச் சுமனஸுகள் என்ற பெயரை அளித்தனர்.(19) தூயநிலையில் இருக்கும் மனிதன், தேவர்களுக்கு மலர்களைக் காணிக்கையளித்து அந்தந்த ஏவர்கள் நிறைவடைவதன் விளைவால் அவர்களுக்குச் செழிப்பை அளிக்கின்றனர்.(20)ஓ! தைத்தியர்களின் ஆட்சியாளா {பலியே}, ஓ! தலைவா, வழிபாட்டாளர்கள் தேவர்களின் பெயர்களைச் சொல்லி மலர்களைக் காணிக்கையளிக்கும்போது, காணிக்கையளிப்பவர்களுடைய பக்தியின் விளைவாகத் தேவர்கள் நிறைவடைகின்றனர்.(21) (இலையுதிர்) மூலிகைகள் பல்வேறு வகைகளைச் சேர்ந்தவையாகவும், பல்வேறு வகைச் சக்திகளைக் கொண்டவையுகாவும் இருக்கின்றன.(22) வேள்வி காரியங்களுக்குப் பயன்படும் மரங்கள் எவை, பயன்படாதவை எவை என்பதை உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக. அசுரர்களுக்கு ஏற்புடைய மலர்மாலைகள் எவை, தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும்போது பலன்தருபவை எவை என்பதையும் கேட்பாயாக.(23) ராட்சசர்கள், உரகர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், பித்ருக்கள் ஆகியோருக்கு முறையே ஏற்புடைய மலர்மாலைகள் எவை என்பதையும் முறையான வரிசையில் சொல்லப் போகிறேன்.(24) பல்வேறு வகைகளைச் சேர்ந்த மலர்களில் சில காட்டு மலர்களாகவும், சில மனித வசிப்பிடங்களுக்கு மத்தியில் வளர்பவையாகவும், சில நன்கு உழப்பட்ட நிலத்தில் நட்டாலன்றி ஒருபோதும் வளராத மரங்களுக்கு உரியவையாகவும்; சில மலைகளில் வளரும் மரங்களில் உள்ளவையாகவும்; சில முள்மரங்களில் உள்ளவையாகவும் இருக்கின்றன. நறுமணம், அழகிய வடிவம், சுவை ஆகியவற்றிலும் வகைப்பாடுகள் உண்டு.(25)

மலர்கள் ஏற்புடையவை, ஏற்பில்லாதவை என்ற இரு வகை மணங்களைத் தருகின்றன. ஏற்புடைய மணம் கொண்ட மலர்களே தேவர்களுக்குக் காணிக்கயளிக்கப்பட வேண்டும்.(26) முள்ளில்லா மரங்களின் மலர்கள் பொதுவாக வெண்ணிறத்தில் இருக்கின்றன. ஓ! தலைவா, அத்தகைய மலர்கள் எப்போதும் தேவர்களுக்கு ஏற்புடையனவாகும்.(27) ஞானம் கொண்ட ஒருவன், தாமரை போன்ற நீர் மலர்களாலான மாலைகளைக் கந்தர்வர்கள், நாகர்கள் மற்றும் யக்ஷர்களுக்குக் காணிக்கையளிக்க வேண்டும்.(28) காரமணமிக்கச் சிவப்பு நிற மலர்களை உண்டாக்கும் செடிகொடிகள் எதிரிகளுக்குத் தீங்கிழைக்கும் மந்திரங்களுடன் கூடிய செயல்களுக்குத் தகுந்தவையென அதர்வணங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன.(29) கொடுஞ்சக்தியைக் கொண்டவையும், தீண்டினால் துன்பத்தைத் தருபவையும், முள் மரங்கள் மற்றும் செடிகளில் வளர்பவையும், குருதிச்சிவப்பு அல்லது கரு நிறமுள்ளவையுமான மலர்கள், பூமி சாராத (தீய) பிசாசுகளுக்கு {பூதங்களுக்குக்} கொடுக்கப்பட வேண்டும்.(30)

ஓ! தலைவா, மனத்திற்கும், இதயத்திற்கும் மகிழ்ச்சியூட்டுபவையும், கசக்கும்போது ஏற்புடையவையும் {இனிய மணத்தைத் தருபவையும்}, அழகிய வடிவம் கொண்டவையுமான மலர்கள், மனிதர்களுக்குக் கொடுக்கத்தகுந்தவை எனச் சொல்லப்படுகின்றன.(31) மயானங்கள் மற்றும் சுடலைகள், அல்லது தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடங்களில் வளரும் மலர்கள், வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைத் தங்கள் நோக்கங்களாகக் கொண்ட சடங்குகள் மற்றும் திருமணம் ஆகியவற்றிலோ, காமத்திளைப்பு மற்றும் கமுக்கமான இன்பச் செயல்களிலோ கொண்டுவரப்பட்டுப் பயன்படுத்தப்படக்கூடாது.(32) மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் பிறந்தவையும், ஏற்புடைய மணம் மற்றும் தன்மைகளைக் கொண்டவையுமான மலர்கள், தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்பட வேண்டும். அத்தகைய மலர்களில் சந்தனம் தெளித்து, சாத்திர விதிகளின்படி முறையாகக் காணிக்கயளிக்கப்பட வேண்டும்.(33) தேவர்கள் மலர்களின் மணத்திலும், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோர் அவற்றின் தோற்றத்திலும், நாகர்கள் அவற்றின் தீண்டலிலும், மனிதர்கள் மணம், பார்வை மற்றும் தீண்டல் ஆகிய மூன்றிலும் நிறைவடைகிறார்கள்.(34) மலர்கள் தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும்போது, அவர்களை உடனே நிறைவடையச் செய்கின்றன. வெறுமே நிறைவேற்ற விரும்புவதன் மூலமே ஒவ்வொரு நோக்கத்தையும் அவர்கள் {தேவர்கள்} நிறைவேற்றவல்லவர்களாக இருக்கிறார்கள். மலர்களைக் காணிக்கையளிக்கும் பக்தர்களிடம் நிறைவடையும்போது தங்கள் வழிபாட்டாளர்களால் பேணி வளர்க்கப்படும் நோக்கங்கள் அனைத்தையும் அவர்கள் உடனே நிறைவடையச் செய்கிறார்கள்.(35) நிறைவை அடையும் அவர்கள் தங்களை வழிபடுபவர்களையும் நிறைவடைச் செய்கிறார்கள். கௌரவிக்கப்படும் அவர்கள் தங்களை வழிபடுபவர்களையும் அனைத்துக் கௌரவங்களிலும் இன்புறச் செய்கிறார்கள். அலட்சியமும் அவமதிப்பும் செய்யப்படும்போது அவர்கள் அந்தத் தீய மனிதர்களை எரித்து நிர்மூலமாக்குகிறார்கள்.(36)

நறுமணப்புகைப்பொருட்கள் கொடையளிப்பது {தூபங்கொடுத்தல்} குறித்த விதிகளின் படி உண்டாகும் பலன்களை இனி உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! அசுரர்களின் இளவரசே, நறுமணப்புகைப்பொருட்கள் பலவகைப்படும் என்பதை அறிவாயாக. அவற்றில் சில மங்கலமானவையாகவும், சில மங்கலமற்றவையாகவும் உள்ளன.(37) சில நறுமணப்புகை பொருட்கள் {பிசின் போன்ற} வடிநீர் கொண்டவையாகும். சில நெருப்பில் நிறுவப்படும் நறுமண மரத்தால் ஆனவையாக இருக்கின்றன. வேறு சில, பல்வேறு பொருட்கள் கலந்து செயற்கையாகக் கரங்களால் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. அவற்றின் மணம் ஏற்புடையவை, ஏற்பில்லாதவையென இருவகைப்படும். இது குறித்து விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக[2].(38) ஸல்லகி மரத்தைத்[3] தவிர மற்ற மரவடிநீர்கள் {பிசின்கள்} தேவர்களுக்கு ஏற்புடையவையே. எனினும், வடிநீர்கள் {பிசின்கள்} அனைத்திலும் குங்கிலியம்[4] நிச்சயம் சிறந்ததாகும்.(39) சாரி வகைத் தூபங்கள் அனைத்திலும் அகில்[5] சிறந்ததாகும். யக்ஷர்கள், ராட்சசர்கள், நாகர்கள் ஆகியோருக்கு அது மிகவும் ஏற்புடையதாகும். ஸல்லகி மரத்தின் பிசினும், அதே வகையைச் சார்ந்த பிறவும் தைத்தியர்களால் மிகவும் விரும்பப்படுகின்றன.(40) கடும் நெடிகள் கொண்ட வேறு நீர்மங்களுடன் கலந்து, சால மரம் மற்றும், தேவதாரு மரங்களின் பிசினில் செய்யப்பட்ட தூபங்கள் மனிதர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கின்றன.(41) இத்தகைய தூபங்கள் தேவர்கள், தானவர்கள் மற்றும் பூதங்களை உடனே நிறைவடையச் செய்வதாகச் சொல்லப்படுகிறது[6]. இவற்றையும் தவிர அன்பு நோக்கங்களுக்காக மனிதர்களால் பயன்படுத்தப்படும் பல வகைத் தூபங்களும் இருக்கின்றன.(42) மலர்க்காணிக்கையில் உண்டாவதாகச் சொல்லப்படும் அனைத்துப் பலன்களும் நிறைவை விளைவிக்கும் இத்தகைய தூபங்களைக் கொடையளிப்பதாலும் கிட்டும் என்று அறியப்பட வேண்டும்.(43)விளக்குகள் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்கள்; அவற்றை யார் எந்த நேரத்தில், எவ்வகையில் கொடுக்க வேண்டும்; என்ன வகை விளக்குகள் கொடுக்கப்பட வேண்டும் என்பவற்றைக் குறித்து இனி சொல்லப்போகிறேன்.(44) ஒளியானது சக்தி என்றும் புகழ் என்றும், மேல்நோக்கிய போக்குக் கொண்டது என்றும் சொல்லப்படுகிறது. எனவே, சக்தியாக இருக்கும் ஒளியைக் கொடையளிப்பது மனிதர்களின் சக்தியை அதிகரிக்கிறது[7].(45) அந்ததமஸ் என்ற பெயரிலான ஒரு நரகம் இருக்கிறது. சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் {தக்ஷிணாயன} காலமும் இருளானதாகக் கருதப்படுகிறது. அந்த நரகத்திலும், அந்தக் காலத்தின் இருளிலும் இருந்து தப்புவதற்கு ஒருவன் சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கும் {உத்தராயனத்தில்} காலத்தில் விளக்குகளைக் கொடையளிக்க வேண்டும். இத்தகைய செயல் நல்லோரால் மெச்சப்படுகிறது[8].(46) மேலும், ஒளியானது மேல்நோக்கிய போக்கைக் கொண்டிருப்பதாலும், இருளுக்கான தீர்வாகக் கருதப்படுவதாலும் ஒருவன் ஒளிக்கொடையாளியாக இருக்க வேண்டும். இதுவே சாத்திரங்களின் தீர்மானமாகும்.(47) விளக்குகளைக் கொடையளித்ததன் மூலமே தேவர்கள், அழகையும், சக்தியையும், பிரகாசத்தையும் கொண்டவர்களானார்கள். அத்தகைய செயல்களைச் செய்யாமல் இருந்ததால், ராட்சசர்கள் அதற்கு எதிரான குணங்களுடன் கூடியவர்களானார்கள். எனவே ஒருவன் எப்போதும் விளக்குகளைக் கொடையளிக்க வேண்டும்.(48)விளக்குகளைக் கொடையளிப்பதன் மூலம் ஒரு மனிதன் கூரிய பார்வையையும் பிரகாசத்தையும் பெறுகிறான். விளக்குகளைக் கொடையளிப்பவன் வேறு எவரின் பொறாமைக்கான பொருளாக இருக்கக்கூடாது. மேலும், வேறு யாரும் கொடுக்கப்படும் விளக்குகளைக் களவாடுதலும், அணைப்பதும் கூடாது.(49) விளக்கைத் திருடுபவன் குருடனாகிறான். அத்தகைய மனிதன் (மறுமையில்) இருளில் திரிந்து ஒளியற்றவனாகிறான். விளக்குகளைக் கொடையளிப்பவன் தேவலோகத்தில் ஒளிரும் ஒளி வரிசையைப் போல அழகுடன் ஒளிர்கிறான்.(50) விளக்குகளிலும், நெய்யால் எரிபவை சிறந்தவையாகும். அந்த வரிசையில் அடுத்ததாக இலையுதிர்மூலிகைச் சாறுகளால் (எண்ணெய்யால்) எரிபவை வருகின்றன. வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் விரும்புபவன், விலங்குகளின் எலும்புகளில் இருந்து பாயும், சாறு, அல்லது மஜ்ஜை அல்லது கொழுப்பில் ஒருபோதும் (விளக்கை) எரிக்கக்கூடாது[9].(51) தன் முன்னேற்றத்தையும் செழிப்பையும் விரும்பும் மனிதன், மலையிறக்கங்களிலும், காடுகளில் உள்ள சாலைகளிலும், அடைதற்கரிய பகுதிகளிலும், மனித வசிப்பிடங்களுக்கு மத்தியில் உள்ள புனித மங்களுக்குக் கீழும், சாலைகளின் சந்திப்புகளிலும் எப்போதும் விளக்குகளைக் கொடுக்க வேண்டும்.(52) விளக்குகளைக் கொடையளிக்கும் மனிதன் எப்போதும் தன் குலத்திற்கு ஒளியூட்டி, ஆன்மத் தூய்மையையும், வடிவத்தில் பிரகாசத்தையும் அடைகிறான். உண்மையில் அத்தகைய மனிதன் மரணத்திற்குப் பிறகு, ஆகாயத்தில் உள்ள ஒளியுடல்களின் {நட்சத்திரங்களின்} தோழமையை அடைகிறான்.(53)தேவர்கள், யக்ஷர்கள், உரகர்கள், மனிதர்கள், பூதங்கள் மற்றும் ராட்சசர்களுக்குப் பலிக்காணிக்கைகளை அளிப்பதன் மூலம் கிட்டும் கனிகள் தொடர்பான பலன்களைக் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன்.(54) பிராமணர்கள், தேவர்கள், விருந்தினர்கள், பிள்ளைகள் ஆகியோருக்கு முதலில் படைக்காமல் உண்ணும் இரக்கமற்ற தீய மனிதர்கள் ராட்சசர்களாக அறியப்பட வேண்டும்.(55) எனவே, ஒருவன் தான் தயாராக வைத்திருக்கும் உணவை முதலில் தேவர்களுக்குப் படைத்து, புலனடக்கத்துடனும், குவிந்த கவனத்துடனும் முறையாக அவர்களை வணங்க வேண்டும். அவன் மதிப்புடன் தலைவணங்கி தேவர்களுக்குப் பலியை காணிக்கையளிக்க வேண்டும்.(56) இல்லறத்தோர் அளிக்கும் உணவாலேயே தேவர்கள் எப்போதும் ஆதரிக்கப்படுகின்றனர். உண்மையில், அவர்களுக்குக் காணிக்கையளிக்கும் வீடுகளுக்கு அவர்கள் அருள்புரிகின்றனர். யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள், விருந்தினர்கள், வீடற்ற மனிதர்கள் அனைவரும் இல்லற வாழ்வு முறையை நோற்கும் மனிதர்கள் அளிக்கப்படும் உணவாலேயே ஆதரிக்கப்படுகின்றனர்.(57) உண்மையில் தேவர்களும், பித்ருக்களும் தங்கள் வாழ்வாதாரங்களை இத்தகைய காணிக்கைகளின் மூலமே அடைகின்றனர். இத்தகைய காணிக்கைகளால் நிறைவடையும் அவர்கள், பதில் உதவியாகக் காணிக்கையளிப்பவனுக்கு நீண்ட வாழ்நாள், புகழ் மற்றும் செல்வத்தைக் கொடுத்து நிறைடையச் செய்கின்றனர்.(58)

ஏற்புடைய மணமும், தோற்றமும் கொண்ட தூய உணவில் பால் மற்றும் தயிரைக் கலந்து, மலர்களுடன் சேர்த்துத் அவற்றைத் தேவர்களுக்குக் காணிக்கையளிக்க வேண்டும்.(59) யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் பலிகள், சாராயத்தின் துணையுடனும் கூடியவையாகவும், நெற்பொரி மற்றும் அவல்களால் அலங்கரிக்கப்பட்டவையாகவும், குருதி மற்றும் இறைச்சி நிறைந்தவையாக இருக்க வேண்டும்[10].(60) தாமரைக்ள மற்றும் உத்பலங்களுடன் {நெய்தல்களுடன்} கூடிய பலிகள் நாகர்களுக்கு ஏற்புடையவையாகும். வெல்லத்தில் வேகவைக்கப்பட்ட எள்ளானது, பூமி சாராத பூதங்களுக்குக் காணிக்கையளிக்கப்பட வேண்டும்.(61) பிராமணர்கள், தேவர்கள், விருந்தினர்களுக்கு முதலில் படைக்காமல் எந்த உணவையும் உண்ணாதவன், உணவின் முதல் பங்குகளுக்கான உரிமையை அடைகிறான். அத்தகைய மனிதன் பலமும், சக்தியும் பெறுகிறான். எனவே உணவின் ஒரு பகுதியை தேவர்களுக்குப் படைத்து மதிப்புடன் அவர்களை வழிபடாமல் ஒருவன் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது.(62) இல்லத்தில் தேவர்கள் வாழ்வதன் விளைவால் ஒருவனுடைய வீடு அழகில் சுடர்விடுகிறது. எனவே, தனக்கான முன்னேற்றத்தையும், செழிப்பையும் விரும்பும் ஒருவன், அனைத்து உணவுகளின் முதல் பகுதியையும் வீட்டில் வசிக்கும் தேவர்களுக்குப் படைத்து அவர்களை வழிபட வேண்டும்” என்றார் {சுக்ரர்}.(63)இவ்வாறே, பிருகு குலத்தவரும், கல்விமானானுமான கவி {சுக்கிரர்} அசுரர்களின் தலைவனான பலியிடம் சொன்னார். அடுத்ததாக முனிவர் சுவர்ணருக்கு அந்த உரையாடலே மனுவால் சொல்லப்பட்டது. சுவர்ணரும் தம் பங்குக்கு அதை நாரதருக்கு உரைத்தார்.(64) தெய்வீக முனிவரான நாரதர் குறிப்பிடப்பட்ட பல்வேறு செயல்களுக்கான பலன்களை எனக்கு உரைத்தார். ஓ! மகனே, அந்தப் பலன்களை அறிந்து கொண்ட நீ குறிப்பிடப்பட்ட பல்வேறு செயல்களைச் செய்வாயாக” என்றார் {பீஷ்மர்}.(65)

பிருகுவும் அகத்தியரும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 99-மலர், நறுமணப்புகைப்பொருள், விளக்கு ஆகியவற்றைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் பலன் குறித்த நஹுஷன் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; பிருகு முனிவருக்கும் அகஸ்தியருக்கும் இடையில் நடந்த உரையாடல்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதர்களின் தலைவரே, மலர்கள், நறுமணப்புகைப்பொருட்கள், விளக்குகள் ஆகியவற்றைக் கொடையளிப்பவர்களால் வெல்லப்படும் பலன்களை நான் கேட்டேன். பலி அளிப்பதில் விதிகளை முறையாகப் பின்பற்றுவதில் உள்ள பலன்களைக் குறித்தும் நான் கேட்டேன். ஓ! பாட்டா, இது குறித்து மீண்டும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(1) உண்மையில், ஓ! ஐயா, நறுமணப்புகைப்பொருட்கள் மற்றும் விளக்குகளைக் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்களை மீண்டும் எனக்குச் சொல்வீராக. இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்த ஆசிரமத்தை} நோற்கும் மனிதர்களால் பலிகள் தரையில் இடப்படுவதேன்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக நஹுஷன் {நகுஷன்}, அகஸ்தியர் மற்றும் பிருகு ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(3) ஓ! ஏகாதிபதி, தவங்களையே செல்வமாகக் கொண்ட அரச முனி நஹுஷன், தன் நற்செயல்களின் மூலம் சொர்க்கத்தின் ஆட்சி உரிமையை அடைந்தான்.(4) ஓ! மன்னா, புலனடக்கத்துடன் சொர்க்கத்தில் வசித்த அவன், மனித மற்றும் தேவ இயல்பைக் கொண்ட பல்வேறு செயல்களைச் செய்வதில் ஈடுபட்டு வந்தான்.(5) ஓ! மனிதர்களின் தலைவா, அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியிடமிருந்தே பல்வேறு வகை மனிதச் செயல்களும் {கர்மங்களும்}, பல்வேறு வகைத் தெய்வீகச் செயல்களும் தோன்றின.(6) ஓ! ஏகாதிபதி, வேள்வி நெருப்பு, புனித விறகு, குசப்புல் {தர்ப்பை}, மலர்கள் ஆகியவற்றைத் திரட்டுவது, (மாவாக்கப்பட்ட) நெற்பொரியால் அலங்கரிக்கப்பட்ட உணவைக் கொண்ட பலி அளிப்பு, நறுமணப்புகைப்பொருள் மற்றும் விளக்குகளைக் காணிக்கையளிப்பது போன்ற அனைத்துக்கும் தொடர்புடைய பல்வேறு சடங்குகள், அந்த உயர் ஆன்ம மன்னன் சொர்க்கத்தில் வசித்தபோது நாள்தோறும் உண்டானவையே ஆகும். உண்மையில், அவன் சொர்க்கத்தில் வசித்திருந்தாலும், யப {ஜப} வேள்வியையும் (அமைதியாக மந்திரங்களை ஓதுவதையும்), தியான வேள்வியையும் செய்து வந்தான்.(7,8)

ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, நஹஷன் {நகுஷன்}, தேவர்களின் தலைவனாகவே இருந்தாலும், பழங்காலத்தில் தான் செய்து வந்ததைப் போலவே உரிய சடங்குகள் மற்றும் விழாக்களுடன் தேவர்கள் அனைவரையும் அவன் வழிபட்டு வந்தான்.(9) சில காலம் கழிந்த பிறகுதான் நஹுஷன் தான் தேவர்களின் அனைவரின் தலைவன் என்ற நிலையை உணர்ந்தான். இதனால் அவன் செருக்கில் நிறைந்தான். அந்தக் காலம் முதல் (இங்குச் சொன்ன வகையிலான) அவனுடைய செயல்கள் {கர்மங்கள்} அனைத்தும் நின்று போயின.(10) தேவர்கள் அனைவரிடம் இருந்தும் தான் பேற்ற வரத்தின் விளைவால் ஆணவத்தில் நிறைந்திருந்த நஹுஷன், முனிவர்களையே தங்கள் தோள்களில் அவனைச் சுமக்கச் செய்தான். எனினும் அறச்சடங்குகள் அனைத்தையும் அவன் கைவிட்டதன் விளைவால் அவனுடைய சக்தி குறையத் தொடங்கியது.(11) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களில் முதன்மையானோரைத் தன் வாகனங்களைச் சுமக்கச் செய்வதைத் தொடரும் அளவுக்கு நஹுஷன் மிக நீண்ட காலம் செருக்கால் நிறைந்திருந்தான்.(12) அவன் முனிவர்களை அவமதிக்கும் வகையில் இந்த வேலைகளை அவர்களைச் செய்ய வைத்தான். ஓ! பாரதா, ஒரு நாள் அகஸ்தியர் அவனுடைய {நகுஷனுடைய} வாகனத்தைச் சுமக்கும் நாள் வந்தது.(13)

அந்தக் காலத்தில், பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான பிருகு, ஆசிரமத்தில் அமர்ந்திருந்த அகஸ்தியரின் முன்பு சென்று அவரிடம்,(14) “ஓ! பெருந்தவசியே, தேவர்களின் தலைவனாகியிருக்கும் இந்தத் தீய ஆன்மா கொண்ட நஹுஷனால் நம்மீது இழைக்கப்படும் இத்தகைய கண்ணியமின்மைகளுக்கு நாம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்” என்று கேட்டார்.(15)

அகஸ்தியர் {முனிவர் பிருகுவிடம்}, “ஓ! பெரும் முனிவரே, நஹுஷனை சபிப்பதில் நான் எவ்வாறு வெல்ல முடியும்? வரங்களை அளிப்பவரே {பிரம்மரே}, நஹுஷனுக்குச் சிறந்த வரங்களை எவ்வாறு கொடுத்தார் என்பதை நீர் அறிந்திருக்கிறீர்.(16) சொர்க்கத்திற்கு வந்த நஹுஷனால் வேண்டப்பட்ட வரம், தன் பார்வையில் பட்ட அனைத்தும் அதன் சக்தியனைத்தையும் இழந்து தன் ஆளுகைக்குள் வர வேண்டும் என்பதாகும்.(17) சுயம்புவான பிரம்மன் இவ்வரத்தையே அவனுக்கு அளித்திருக்கிறார். இந்தக் காரணத்தினாலேயே உம்மாலோ, என்னாலோ அவனை எரிக்க இயலவில்லை. முனிவர்களில் முதன்மையான வேறு யாராலும் அவனை எரிக்கவோ, அவனது உயர்ந்த நிலையில் இருந்து தள்ள இயலாததும் இந்தக் காரணத்தினாலேயே ஆகும்.(18) ஓ! தலைவரே, முன்பொரு சமயம் நஹுஷன் குடிப்பதற்காகப் பிரம்மனால் அமுதம் கொடுக்கப்பட்டது. இந்தக் காரணத்தினாலும் நாம் அவன் எதிரில் பலமற்றவர்களாகிறோம்.(19) அந்தப் பரமதேவன், உயிரினங்கள் அனைத்தையும் துயரத்திற்குள் மூழ்கடிக்கவே நஹுஷனுக்கு அவ்வரத்தை அளித்ததாகத்தெரிகிறது. மனிதர்களில் இழிந்தவனான அவன் பிராமணர்களிடம் நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறான்.(20) ஓ! பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, இந்நிலையைக் கருத்தில் கொண்டு என்ன செய்யப்பட வேண்டும் என்று எங்களுக்குச் சொல்வீராக. உமது அறிவுரைப்படியே நான் செயல்படுவேன் என்பதில் ஐயமில்லை” என்றார்{அகஸ்தியர்}.(21)

பிருகு {அகஸ்தியரிடம்}, “பெரும் சக்தி கொண்டவனும், ஆனால் விதியால் மயக்கப்பட்டிருப்பவனுமான நஹுஷனின் பலத்திற்கு எதிர்ச்செயல் செய்யும் நோக்கில் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} ஆணையின் பேரிலேயே நான் இங்கே வந்திருக்கிறேன்.(22) தேவர்களுக்குத் தலைவனாகியிருக்கும் தீய ஆன்மா கொண்ட அந்த அற்பன் இன்று உம்மையே அவனுடைய தேரில் பூட்டப் போகிறான். அவன் கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடந்ததன் விளைவாலும், என் சக்தியின் துணையுடனும் அவன் இந்திரனின் நிலையில் இருந்து என்னால் வீசியெறியப்படப் போகிறான்.(23) நான் இன்று உம் பார்வையிலேயே தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்தவனுமான நஹுஷனை இந்திரனின் இருக்கையில் இருந்து வீசியெறிந்து, நூறு வேள்விகளைச் செய்தவனான உண்மையான இந்திரனை அதில் அமர்த்தப் போகிறேன்.(24) தேவர்களின் தலைவனாக இருக்கும் அந்த நேர்மையற்றவன், விதியால் பீடிக்கப்படிருக்கும் அவனது புத்தியின் விளைவால் அவனது வீழ்ச்சியைக் கொண்டு வரும்பொருட்டு ஓர் உதையின் மூலம் இன்று உம்மை அவமதிக்கப் போகிறான்.(25)

அத்தகைய அவமதிப்பால் சினமடையும் நான், பிராமணர்களின் எதிரியும், அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கடந்தவனும், பாவம் நிறைந்தவனுமான அந்த இழிந்தவனிடம், “நீ ஒரு பாம்பாவாயாக” என்று இன்று சபிக்கப் போகிறேன்.(26) ஓ! பெருந்தவசியே, நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ச்சீ ச்சீ என்று சொல்லப்படுவதன் விளைவால் சக்தி அனைத்தையும் இழந்திருக்கும் தீய ஆன்மாகக் கொண்ட நஹுஷனை நான் இந்து பூமிக்கு வீசப் போகிறேன்[1].(27) உண்மையில், தலைமைத்துவம் மற்றும் சக்தியால் மயங்கியிருப்பவனும், நியாயமற்ற செயல்களைச் செய்யும் அற்பனுமான நஹுஷனை நான் இன்று வீசியெறியப் போகிறேன். ஓ! தவசியே, உமக்கு ஏற்புடையதென்றால் நான் இதைச் செய்வேன்” என்றார் {பிருகு}.(28இவ்வாறு பிருகுவால் சொல்லப்பட்டவரும், மித்ராவருணனின் மகனும், மங்கா மகிமையும் பலமும் கொண்ட அகஸ்தியர், உயர்ந்த நிறைவை அடைந்து அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபட்டார்” என்றார் {பீஷ்மர்}.(29)

தீபதானமும், நஹுஷனும்! – அநுசாஸனபர்வம் பகுதி – 100-அகஸ்தியரின் சடையில் மறைந்திருந்த பிருகு; அகஸ்தியரைக் காலால் தாக்கிய நஹுஷன்; நஹுஷனைச் சபித்த பிருகு; தான் அளித்த கொடைகளால் சாபத்தில் இருந்து மீண்ட நஹுஷன்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“நஹுஷன் எவ்வாறு துன்பத்தில் மூழ்கினான்? அவன் எவ்வாறு பூமியில் வீசப்பட்டான்? உண்மையில் அவன் எவ்வாறு தேவர்களின் அரசுரிமையை இழந்தான்? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“பிருகு மற்றும் அகஸ்தியர் ஆகிய முனிவர்கள் இருவரும் இவ்வாறே தங்களுக்குள் பேசிக் கொண்டனர். நஹுஷன் முதலில் தேவர்களின் தலைவனான போது நல்ல வழியிலேயே செயல்பட்டான் என்பதை ஏற்கனவே சொன்னேன். உண்மையில் மனித மற்றும் தெய்வீக இயல்புடைய அனைத்துச் செயல்களும் அந்த உயர் ஆன்ம அரச முனியிடமிருந்தே உண்டாகின.(2) விளக்குகள் கொடை மற்றும் அதே வகைச் சடங்குகள் அனைத்தும், பலிகளை முறையாக அளிப்பது, குறிப்பாகப் புனித நாட்களில் செய்யப்படும் சடங்குகள் அனைத்தும்(3) என இவை யாவும் தேவர்களின் அரசுரிமையில் அமர்ந்த உயர்ந்த ஆன்ம நஹுஷனால் முறையாக நோற்கப்பட்டன. பக்திச் செயல்பாடுகள் அனைத்தும் ஞானம் கொண்ட மனிதர்களாலேயே மனிதர்களின் உலகிலும், தேவர்களின் உலகிலும் எப்போதும் நோற்கப்படுகின்றன. உண்மையில், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அத்தகைய செயல்பாடுகள் நோற்கப்பட்டால், இல்லறவாசிகள் எப்போதும் செழிப்பையும், முன்னேற்றத்தையும் அடைவதில் வெற்றி அடைகிறார்கள். தேவர்களுக்கு விளக்குகள், நறுமணப்புகைப்பொருட்களைக் கொடையளிப்பதும், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவதும் அவ்விளைவுகளையே ஏற்படுத்தும்.(4,5)

உணவு சமைக்கப்படும்போது, அதன் முதல் பகுதியானது ஒரு பிராமணருக்குக் கொடுக்கப்பட வேண்டும். பலி என்றழைக்கப்படும் குறிப்பிட்ட காணிக்கைகள் வீட்டில் வசிக்கும் தேவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். தேவர்கள் அத்தகைய கொடைகளால் நிறைவடைகின்றனர்.(6) அத்தகைய காணிக்கைகளால் தேவர்கள் எவ்வளவு நிறைவடைகிறார்களோ அதற்கு நூறு மடங்களவுக்குப் பெரிதாக அந்த இல்லறவாசியைப் பதிலுக்கு அவர்கள் நிறைவடையச் செய்வார்கள்.(7) பக்தியும் ஞானமும் கொண்ட மனிதர்கள் நறுமணப்புகைப் பொருட்களையும், விளக்குகளையும் கொடையளித்து நெடுஞ்சாண்கிடையாக வணங்கவும் செய்வார்கள். அத்தகைய செயல்கள் அவற்றைச் செய்பவர்களுக்கு முன்னேற்றத்தையும், செழிப்பையும் எப்போதும் கொண்டு வரும்.(8) தூய்மைச் சடங்குகளின் போது, நீரின் உதவியுடன் தேவர்களுக்குப் பணிந்து செய்யப்படும் சடங்குகள் யாவும் தேவர்களை நிறைவடையச் செய்யவே உதவுகின்றன.(9) முறையான சடங்குகளுடன் வழிபடப்படும்போது உயர்ந்த அருளைக் கொண்ட பித்ருக்களும், தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களும், வீட்டில் வசிக்கும் தேவர்கள் அனைவரும் நிறைவடைகின்றனர்.(10)

தேவர்களின் அரசுரிமையை அடைந்தபோது, இத்தகைய கருத்துகளால் நிறைந்திருந்த பெரும் மன்னன் நஹுஷன், பெரும் மகிமையால் நிறைந்த இந்தச் சடங்குகள் மற்றும் கடமைகள் அனைத்தையும் பின்பற்றினான்.(11) சில காலம் கழித்து நஹுஷனின் நற்பேறு தேய்வடைந்ததன் விளைவாக அவன் இந்த நோன்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, நான் ஏற்கனவே சொன்னவாறு கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறிச் செயல்படத் தொடங்கினான்.(12) நறுமணப் புகைப்பொருட்கள் மற்றும் விளக்குகளைக் காணிக்களிப்பதில் உள்ள விதிகளை நோற்காமல் தவிர்த்ததன் விளைவாகத் தேவர்களின் தலைவனான அவனிடம் சக்தி குன்றத்தொடங்கியது.(13) அவனுடைய வேள்விச் சடங்குகளும், கொடைகளும் ராட்சசர்களால் தடுக்கப்பட்டன. இந்தக் காலத்தில்தான் அவன் முனிவர்களில் முதன்மையானவரான அகஸ்தியரைத் தன்தேரில் பூட்டினான்.(14) பெரும்பலம் கொண்ட நஹுஷன், சிரித்துக்கொண்டே, சரஸ்வதி ஆற்றங்கரையில் இருந்து (தான் குறிப்பிட்ட இடத்திற்கு) வாகனத்தைச் சுமக்க அந்தப் பெருமுனிவருக்கு ஆணையிட்டு, அவரை அந்தப் பணியில் நிறுவினான்.

அந்நேரத்தில, பெருஞ்சக்தி கொண்ட பிருகு, மித்ராவருணனின் மகனிடம் {அகஸ்தியரிடம்),(15) “நான் உமது தலையில் உள்ள சடாமுடிக்குள் நுழைவது வரை நீர் உமது கண்களை மூடிக் கொள்வீராக” என்றார். மங்கா மகிமை கொண்டவரும், வலிமையும், சக்தியும் கொண்டவருமான பிருகு இதைச் சொல்லவிட்டு, சொர்க்கத்தின் அரியணையில் இருந்து நஹுஷனை வீசி எறிவதற்காக, மரக்கட்டையைப் போல அசையாமல் நின்றிருந்த அகஸ்தியரின் சடாமுடிக்குள் நுழைந்தார். விரைவில் நஹுஷன், தன் வாகனத்தைச் சுமக்க வரும் அகஸ்தியரைக் கண்டான்.(16,17)

தேவர்களின் தலைவனான அவனைக் கண்ட அகஸ்தியர், அவனிடம், “தாமதமில்லாமல் என்னை உன் வாகனத்தில் பூட்டுவாயாக. நான் உன்னை எந்த இடத்திற்குச் சுமந்து செல்ல வேண்டும்.(18) ஓ! தேவர்களின் தலைவா, நீ செல்ல விரும்பும் இடத்திற்கு நான் உன்னைச் சுமந்து செல்வேன்” என்றார். இவ்வாறு அவரால் சொல்லப்பட்ட நஹுஷன் அந்தத் தவசியைத் தன் வாகனத்தில் பூட்டினான்.(19) அகஸ்தியரின் சடாமுடிக்குள் இருந்த பிருகு, நஹுஷனின் இச்செயலால் பெரும் நிறைவடைந்தார். அவர் நஹுனனின் மீது தம் கண்களைச் செலுத்தாமல் இருப்பதில் கவனம் செலுத்தினார்.(20) பிரம்மனிடம் இருந்து சிறப்புமிக்க நஹுஷன் பெற்றிருக்கும் வரத்தின் சக்தியை முழுமையாக அறிந்தவரான பிருகு இவ்வழியில் செயல்பட்டார். அகஸ்தியரும் நஹுஷனால் இவ்வாறு நடத்தப்பட்டாலும் கோபவசப்படாமல் இருந்தார்.(21) ஓ! பாரதா, அப்போது மன்னன் நஹுஷன் தன் அங்குசத்தைக் கொண்டு அகஸ்தியரைத் தூண்டினான். அந்த உயர் ஆன்ம முனிவர் அப்போதும் கோபவசப்படாமல் இருந்தார். தேவர்களின் தலைவன் கோபமடைந்தவனாகத் தன் இடதுகாலால் அகஸ்தியரின் தலையைத் தாக்கினான்.

அம்முனிவர் இவ்வாறு தலையில் தாக்கப்பட்ட போது, அகஸ்தியரின் சடாமுடிக்குள் இருந்த பிருகு,(22,23) சினத்தால் தூண்டப்பட்டவராக, பாவம் நிறைந்த ஆன்மாவான நஹுஷனைச் சபிக்கும் வகையில், “இந்தப் பெரும் முனிவரின் தலையை உன் காலால் நீ தாக்கியதால்,(24) ஓ! தீய புத்தி கொண்ட அற்பனே, பாம்பாக மாறி பூமியில் விழுவாயாக” என்றார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வாறு காணப்படாதவராக இருந்த பிருகுவால் சபிக்கப்பட்ட நஹுஷன் உடனடியாகப் பாம்பாக மாறி பூமியில் விழுந்தான். ஓ! ஏகாதிபதி, நஹுஷன் பிருகுவைக் கண்டிருந்தால், அவரால் தன் சக்தியைக் கொண்டு அவனைப் பூமியில் வீழ்த்துவதில் வெற்றியடைந்திருக்க முடியாது. நஹுஷன் அளித்திருந்த பல்வேறு கொடைகள், அவன் செய்திருந்த தவங்கள் மற்றும் அற நோன்புகளின் விளைவாக,(25-27) ஓ! மன்னா, அவன் பூமியில் வீசப்பட்டால் தன் நினைவை இழக்காமல் இருப்பதில் வென்றான். அப்போது அவன் சாபத்தில் இருந்து வெளியே வரும் நோக்கில் பிருகுவை அமைதிப்படுத்தினான்.(28) கருணையில் நிறைந்த அகஸ்தியரும் சாபத்தை முடிவுக்குக் கொண்டுவர பிருகுவை அமைதிப்படுத்துவதில் நஹுஷனுடன் சேர்ந்து கொண்டார். இறுதியாக நஹுஷனிடம் கருணை கொண்ட பிருகு, அந்தச் சாபத்தில் இருந்து வெளியே வரும் வழியைச் சொன்னார்.(29)

பிருகு {நஹூஷனிடம்}” குரு குலத்தின் முதன்மையானவனாக யுதிஷ்டிரன் என்ற பெயரில் (பூமியில்) ஒரு மன்னன் தோன்றுவான். அவனே உன்னை இந்தச் சாபத்தில் இருந்து விடுவிப்பான்” என்றார். இதைச் சொன்ன அம்முனிவர் நஹுஷனின் பார்வையில் இருந்து மறைந்தார்.(30) வலிமையும், சக்தியும் கொண்ட அகஸ்தியரும், நூறு வேள்விகளைச் செய்தவனான உண்மையான இந்திரனின் காரியத்தில் இவ்வாறு ஈடுபட்டு, மறுபிறப்பாள வகையினர் அனைவராலும் வழிபடப்பட்டுத் தமது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(31)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீயே பிருகுவின் சாபத்தில் இருந்து நஹுஷனை மீட்டாய். உண்மையில் உன்னால் விடுவிக்கப்பட்ட அவன் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிரம்மலோகத்திற்கு உயர்ந்தான்.(32) நஹுஷனை பூமியில் வீசியெறிந்த பிருகு பிரம்மலோகத்திற்குச் சென்று பெரும்பாட்டனிடம் அதைச் சொன்னார்.(33)

இந்திரனைத் திரும்ப அழைத்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, தேவர்களிடம், “தேவர்களே, நான் கொடுத்த வரத்தின் மூலம் நஹுஷன் சொர்க்கத்தின் அரசுரிமையை அடைந்தான்.(34) எனினும், சினம் கொண்ட அகஸ்தியரால் அரசுரிமையை இழந்த அவன் பூமியில் வீசப்பட்டான். தேவர்களே, ஒரு தலைவன் இல்லாமல் உங்களால் வெற்றியடைய முடியாது.(35) எனவே, நீங்கள் மீண்டும் இந்திரனையே சொர்க்கத்தின் அரசுரிமையில் நிறுவுவீராக” என்றான்.

ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, மகிழ்ச்சியால் நிறைந்த தேவர்கள் தங்களிடம் இவ்வாறு சொன்ன பெரும்பாட்டனிடம் மறுமொழியாக “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்னார்கள். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, தெய்வீகப் பிரம்மனும் சொர்க்கத்தின் அரசுரிமையில் இந்திரனை நிறுவினான். மீண்டும் தேவர்களின் தலைவனான வாசவன், அழகிலும், பிரகாசத்திலும் ஒளிரத்தொடங்கினான். பழங்காலத்தில் நஹுஷனின் வரம்புமீறலால் நேர்ந்தது இதுவே.(36-38) எனினும், நான் குறிப்பிட்ட வகையிலான செயல்களின் மூலம் அடைந்த பலன்களால் இழந்த தன் நிலையை மீண்டும் அடைவதில் நஹுஷன் வென்றான். எனவே, மாலை வந்ததும், இல்லற வாழ்வுமுறையை நோற்பவர்கள் ஒளிக்கொடையளிக்க வேண்டும்.(39) ஒளியைக் கொடையளிப்பவன் நிச்சயம் மரணத்திற்குப் பிறகு தெய்வீகப் பார்வையை அடைவான். உண்மையில், ஒளியைக் கொடையளிப்பவர்கள் முழு நிலவைப் போலப் பிரகாசமடைவார்கள்.(40) ஒளிக்கொடையளிப்பவர்கள், எத்தனை இமைப்பொழுதுகள் அவ்விளக்குகள் எரியுமோ அவ்வளவு வருடங்கள் வடிவு அழகுடன் கூடியவர்களாக, பலம் கொண்டவர்களாக இருப்பார்கள்” என்றார் {பீஷ்மர்}.(41)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்