Archive for February, 2021

ஸ்ரீ விஷ்ணு புராணம் ஆறாம் அம்சம்—-

February 28, 2021

1. கலியுக தர்மம்
2. கலியின் குணபாவம்
3. நைமித்திகப் பிரளயம்-
4. பிராகிருதப் பிரளயம்
5. ஆத்யந்திகப் பிரளயம்
6. கேசித்வஜ-காண்டிக்ய விவாதம்-
7. யோக வழி-
8. நூற் பயன்-

————

1. கலியுக தர்மம்

மைத்ரேய முனிவர், பராசர மகரிஷியை நோக்கி, குரு நாதரே! உலக சிருஷ்டியையும் வமிசங்களையும் மனுவந்திரங்களின் நிலைகளையும் எனக்கு விளக்கமாகக் கூறினீர்கள். இனி கற்பத்தின் முடிவில் மகாப் பிரளயம் என்ற பெயரைக் கொண்ட சங்காரத்தைப் பற்றியும் தாங்கள் கூறவேண்டும்! என்று கேட்டார். கற்பாந்தத்திலும் பிராகிருதத்திலும் பிரளயம் உண்டாகும் விதத்தைச் சொல்கிறேன்; கேளுங்கள். நம்முடைய மாதம் பிதுர்க்களுக்கு ஒரு நாளாகும். நமது வருஷம் தேவர்களுக்கு ஒரு நாளாகும் இரண்டாயிரம் சதுர் யுகங்கள் சதுர்முகப் பிரம்மனுக்கு ஒருநாள் சதுர்யுகம் என்பது கிருதயுகம். திரேதயுகம் துவாபரயுகம், கலியுகம் என்ற நான்கும் சேர்ந்ததாகும். இந்த நான்கு யுகங்களும் தேவமானத்தினால் பன்னீராயிரம் ஆண்டுகளாகும். மைத்ரேயரே! கற்பத்தின் ஆதியான கிருத யுகத்தையும் முடிவான கலியுகத்தையும் தவிர மற்றையச் சதுர் யுகங்கள் யாவும் சமானமானவையே ஆகும். ஆதி கிருத யுகத்திலே பிரம்மா எப்படிப் படைக்கிறாரோ அதுபோலவே கடைசியான கலியுகத்திலே சங்காரஞ் செய்கிறார் என்று பராசரர் சொல்லி வரும்போது மைத்ரேயர் மற்றொரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்பி, ஓ குருநாதா! நான்கு பாதங்களால் நடக்கும் தன்மையுடைய தருமம் அழிந்துவிடத் தக்கதான கலியுகத்தின் சொரூபத்தை நன்றாக விளக்கிக் கூறவேண்டும். என்று கேட்டார். பராசர மகரிஷி கூறலானார்.
மைத்ரேயரே! கலியினுடைய ஸ்வரூபத்தை விவரமாகச் சொல்கிறேன். கேளும் கலியுகத்தில் மனிதரிடத்தில் வர்ணாசிரம ஆசார நடவடிக்கைகள் இராது. அதில்லாததால், ரிக், யஜுர், சாமம் என்ற வேதங்களில் சொல்லப்பட்ட யாகாதி கிரியைகளும் இராது. கலி காலத்தில் தர்மமான திருமணங்கள் நடைபெறாது. குரு மாணவ முறையும் இராது தம்பதிகள் ஒருவருக்கொருவர் நடந்துகொள்ளும் முறைமையும் தர்மமும் இராது. அக்கினியில் செய்யத்தக்க வேத வேள்வி முறைகளும் இல்லை. எந்தக் குலத்தவனாயினும் பலசாலி எவனோ, அவனே எல்லோருக்கும் அரசனாவான். எல்லா ஜாதிகளிலேயும் பொருள் உள்ளவனே கன்னிகாதானம் செய்யத் தகுதியுடைய வனாவானேயன்றி, கல்வி ஒழுக்கங்கள் உடையவன் அத்தகுதியுடையவனாக மாட்டான். பிராமணன் எந்த வழியினாலும் தீக்ஷிதனாவானே தவிர சாஸ்திர விதிப்படியாவதில்லை. கலியில் விதிக்கப்பட்டதே பிராயச்சித்தம் என்பதில்லை. எந்தக் கிரியையும் பிராயச்சித்தமாக ஏற்கப்பட்டு விடும் எவனுக்கு எந்த வாக்கியம் பிரியமோ, அதுவே சாஸ்திரமாகும். காளி முதலான எதுவுமே தெய்வமாகக் கொண்டாடப்படும். இன்னோருக்கு இன்ன ஆசிரமம் என்பதிராது. எவனும் எந்த ஆசிரமத்திலும் பிரவேசிப்பான் ஒருவன் தான் விரும்புவது போலப் பட்டினி கிடப்பதும், வருந்துவதும் தவஞ்செய்வதும் சாஸ்திர ரீதியான தருமமாகக் கருதப்படும். அந்தப் பொருள் இருந்தாலும், தான் தனவான், என்ற செல்வ செறுக்கு ஜனங்களுக்கு உண்டாகும். அதுபோலவே, பெண்களுக்குக் கூந்தல் செவ்வையாக இருந்தாலே அழகி என்ற கர்வம் உண்டாகிவிடும். கலியானது முற்ற முற்றப் பொன்னும் மணியும் நல்லவிதமான ஆடைகளும் அழிந்து போகும்போது, மங்கையர்கள் தங்கள் கூந்தலையே அலங்காரமாகப் பெற்றிருப்பார்கள். மேலும் மங்கையர்கள் பொருளில்லாத கணவனை விட்டு, எவனாயினும் பொருளுடையவனாக இருந்தால் அவனையே புருஷனாகத் தேடிக் கொள்வார்கள். எவன் அதிகமாகப்பொருள் கொடுப்பானோ, அவனையே ஜனங்கள் சுவாமி என்று கொள்வார்களே அன்றி, நற்குலம், நற்பிறவி முதலியவற்றைச் சுவாமி என்பதற்கு ஏதுவாகக் கொள்ள மாட்டார்கள். கலியுகத்திலே புத்திக்குப் பயன் பொருள் சம்பாதிப்பதேயன்றி, ஆன்ம ஞானம் பயனாகக் கொள்ளப்படமாட்டாது. அந்தப் பொருளும் வீடுகட்டப் பயன்படுமேயல்லாது. யாகாதி காரியங்களுக்குப் பயன்படாது. அந்த வீடும் தனது போகத்துக்கே பயன்படுமேயன்றி அதிதிகளுக்கு எவ்வளவும் பயன்படாது. மங்கையர் சளுக்கனாக இருப்பவனிடத்தில் காதல் கொண்டு உடலாலோ மனதாலோ விபசாரிகளாக இருப்பார்கள். ஆடவரோ அநியாயத்தாலாவது பணஞ் சம்பாதிப்பவரிடத்திலேயே மனம் வைத்திருப்பார்கள். எவர்களும் நண்பர்கள் வேண்டிக் கொண்டாலும் மனம் இரங்காமல், தங்கள் காரியத்தையே பெரிதாக நினைத்து அரைக்கால் பணத்திலும் ஆசை வைத்திருப்பார்கள். சூத்திராதிகள், பிராமணரைத் தம்மைப் போன்ற சாதாரண மனிதர்களாக நினைப்பார்களேயல்லாமல், சிறப்புடையவராக நினைக்க மாட்டார்கள்.
பசு மாடுகளிலும் ஜனங்களுக்குப் பால் கொடுப்பது பற்றியே உயர்வானதாகக் கருதப்படுமேயன்றி அதன் ஜாதியைப் பற்றிப் பெருமை பெறாது. இக்கொடிய காலத்தில் ஜனங்கள் யாவரும் மழையில்லாமையைப் பற்றிய அச்சமுடையவர்களாய்ப் பசிக்குப் பயந்தும், சோர்ந்தும் வானத்திலேயே கண்ணுங்கருத்துமாக இருப்பார்கள். மனிதர்கள் தவமுனிவர்களைப்போலக் காய் கிழங்குகளைப் புசித்துக் கொண்டு மழையில்லாமை முதலியவற்றால் வருந்தித் தம்மைத் தாமே கொலை செய்து கொள்வார்கள். கலிகாலத்தார், சுகம், உல்லாசம் அற்றவராய், திரவியம் க்ஷீணித்தவராய், எப்போதும் பஞ்சத்திலும் துன்பத்திலுமே தவிப்பார்கள். கலி வளர வளர, எவரும் அக்கினி பூஜை, தேவபூஜை, அதிதிபூஜை, பிண்டோதக தானரூபமான பிருது பூஜை முதலியவற்றைச் செய்யாமல், குளிக்காமலுங்கூட உணவருந்திக் காலம் கழிப்பார்கள். ஸ்திரீகள் அதிக ஆசையும் குறுகிய உடலும் கொண்டு பேருண்டி அருந்தி பல பிள்ளைகளைப் பெற்று, செல்வமின்றி வருந்துவார்கள்; மேலும் இரண்டு கைகளாலும் தலையைச் சொறிந்து கொண்டே, கணவன்; மாமனார்; மாமியார் முதலியோரின் கட்டளையை மிகவும் அலட்சியமாய் அவமதித்து வருவார்கள். தேக சுத்தமில்லாமல், தங்களைப் போஷிப்பதிலேயே மனம் ஊன்றி, ஈனமான எண்ணத்துடன் கடினமாயும் பொய்யாயும் பேசுபவர்களாக இருப்பார்கள். குலமங்கையர் தாங்கள் தீய ஒழுக்கமுடையவராகையால், அத்தகையோரிடம் நட்புக் கொண்டு, தங்கள் புருஷனுக்குப் பலவகையான தீமைகளைச் செய்து வருவார்கள். பிரமசாரிகள், விரத அனுஷ்டானம் இன்றியே வேத அத்தியயனஞ் செய்வார்கள். இல்லறத்தானோ, சிறிதும் ஓமஞ் செய்யாதிருப்பதோடு தக்க பொருள்களையும் ஈயார்கள் வானப் பிரஸ்தர், ஊரில் உள்ளவற்றையே புசித்து வருவார்கள். ஆட்சியாளர்கள், மக்களைப் பரிபாலஞ் செய்வதை முக்கியமாக எண்ணாமல் அந்த வரி இந்த வரி என்று எதையாவது சாக்கிட்டு குடிமக்களின் பொருள்களைப் பறிப்போர்கள். எவன் யானை, குதிரை முதலிய சேனைகளை வைத்திருக்கிறானோ, அவனவனே அரசனாவான். பலமற்றவன் சேவகனாவான்.
வைசியர்கள், பயிர் செய்தல், வாணிபஞ் செய்தல் முதலிய தமது தொழிலைவிட்டு, சூத்திரரது தொழிலாகிய பல தொழில்களையும் செய்து பிழைப்பார்கள், சூத்திரரோ தொழிலாகிய பல தொழில்களையும் செய்து பிழைப்பார்கள். சூத்திரரோ சந்நியாசியின் சின்னங்களை அணிந்து, பிøக்ஷ வாங்கி உண்டு அநேகர் தங்களைப் பூசிக்கும் படியான போலிப் பிழைப்பில் ஜீவிப்பார்கள். மக்கள் பஞ்சத்திலும், வரி இறுத்தலாலும் துன்பமடைந்து கோதுமை, யவம் விளையும் நீசத்தேசங்களுக்குப் போய் விடுவார்கள். இவ்விதமாக வர்ணாசிரம தர்மங்கள் கெட்டுப்போய் வேத மார்க்கமே மறைந்து போவதால், மக்கள் பாஷாண்ட மதங்களைப் பின்பற்றி விடுவார்கள், இதனால் அதர்மம் விருத்தியாகும். அதனால் மக்கள் அதர்மமாக நடக்கத் துவங்கிவிடுவார்கள். அதனால் அதர்மம் வளர்ந்து, மக்களின் ஆயுள் அற்பமாய்விடும்; ஆட்சியாளரின் குற்றத்தால், மக்கள் சாஸ்திரங்களுக்கு விரோதமான வீணான தவங்களைச் செய்வார்கள். ஆகையால் இளமையிலேயே மரணமுண்டாகும். பெண்கள் ஆறு ஏழு வயதுக்குள்ளாகவே பிள்ளைகளைப் பெறுவார்கள். ஆண்களோ ஒன்பது பத்து வயதிற்குள் பிள்ளையை உண்டாக்கும் திறமையுடைவர்களாக இருப்பார்கள். பன்னிரண்டு வயதுக்குள்ளாகவே நரை திரை முதலியன உண்டாகும். இந்தக் கலியின் முதிர்ச்சியில் மக்கள் இருபது வயதுக்குமேல் பிழைத்திருப்பதில்லை கலியுகத்தில் மக்கள் அற்ப ஞானமுடையவர்களாகவும் வீணான தவவேடங்களைப் பூண்டு கெட்ட நினைப்புக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதனால் விரைவில் நசித்துப் போவார்கள்.
மைத்ரேயரே! தருமம் எத்தனைக்கெத்தனை இழிவானதாகிறதோ, அத்தனைக்கத்தனை கலி விருத்தியாயிற்று என்று புத்திசாலிகள் தெரிந்து கொள்வார்கள். மேலும் எப்போது பாஷாண்டர் அதிகமாகின்றனரோ, எப்போது வேதம் அறிந்த நல்ல மனிதனுக்குத் தீங்குகள் நேரிடுகின்றனவோ, அப்போது கலி முதிர்ந்துள்ளது என்று அறிந்துகொள்ள வேண்டும். எப்போது யக்ஞங்களுக்கு ஈசுவரனான புரு÷ஷாத்தமனை மக்கள் யக்ஞங்களில் ஆராதிப்பதில்லையோ, எப்போது வேத வாக்கியங்களில் நாட்டமும் பிரீதியுமின்றி, பாஷாண்ட வாக்கியங்களில் இச்சை யுண்டாகுமோ அப்போது கலி மகாபலம் பொருந்தியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கலியுகத்தில் ஜனங்கள் பாஷாண்டரால் கெடுக்கப்பட்டு, படைப்புக் கர்த்தாவாகவும் சர்வேசுவரனாகவும் இருக்கும் ஸ்ரீவிஷ்ணுவை ஆராதிக்க மாட்டார்கள் மேலும் மக்கள் பாஷாண்டபுத்தியால் தேவதைகள் எதற்கு? வேதங்கள் ஏன்? பிராமணரால் ஆவதென்னதண்ணீர் விட்டுக்கழுவுவதால் மட்டும் என்ன சுத்தம்? என்று ஏதேதோ பிதற்றுவார்கள். இத்தகைய அதர்மங்களாலேயே, மேகங்கள் அற்பமழையைப் பொழியும், பயிர்கள் அற்பமாகவே பலனளிக்கும். பொருள்கள் சாரங் குறைந்திருக்கும். ஆடைகள் சணற்கோணிகள் போலிருக்கும். மரங்கள், வன்னி மரங்களைப்போல அற்பமாகவே இருக்கும். ஜாதிகள் எல்லாமே சூத்திர ஜாதி போலிருக்கும். மேலும் தானியங்கள் அணுக்கள் போலவும் பால், நெய் போலவும் சந்தனப் பூச்செல்லாம் கோரைக் கிழங்குப் பூச்சைப் போலவும் ஆகிவிடும். முனிவரே! கலியுகத்தில் மக்களுக்கு மாமனார், மைத்துனர், மாமியார், ஆசாரியர், பெண்டாட்டிகள் வேண்டுமளவு தொகையுடையவராக இருப்பார்கள். மேலும் ஜனங்கள் தாய் தந்தையரிடத்தில் அன்பில்லாதவர்களாய் மாமியார் மாமனார்களையே முக்கியமான நினைத்து, தாய் யார்? தகப்பன் யார்? யாருக்கு யார்? அவனவன் தத்தனது கர்மத்தையல்லவோ செய்யவேண்டும்! என்று பேசி வருவார்கள். இந்தக் கலியுகத்தில், மக்கள் அற்பப் புத்தியுடனும் மனம், வாக்கு காயம் ஆகிய மூன்றும் சுத்தமில்லாமல் தினந்தோறும் பாவத்தையே செய்து வருவார்கள். உண்மையில்லாதவர்களாகவும் சவுசம் இல்லாதவர்களாகவும் வெட்கமில்லாதவர்களாகவும், துக்கப்பட்டுத் தவிப்பார்கள். இத்தகைய கலிபலத்தினால் உலகமானது, வேதாத்தியயனம் யாகம், பிதுர்பூஜை, தேவ பூஜை இவைகளினின்று, தருமத்தை ஒளியச் செய்யும் இத்தகைய கலியுகத்தில் எவனாவது ஒருவன் அற்பமான தர்மத்திற்கு முயற்சி செய்வானாகில், அவன் கிருத யுகத்தில், பெருந்தவஞ் செய்து எத்தகைய புண்ணியத்தை அடைவானோ, அவ்வளவு புண்ணியத்தை எளிதில் அடைவான்!

——————-

2. கலியின் குணபாவம்

மைத்ரேயரே! மாபெரும் அறிஞரான வேத வியாசரும் கலி விஷயத்தில் ஒரு விசேஷத்தைச் சொல்லியிருக்கிறார். அதையும் நான் உமக்குச் சொல்கிறேன்; கேளும்.
ஒரு காலத்தில் தவமுனிவர்களிடையே ஒரு புண்ணிய வாதம் உண்டாயிற்று. அதாவது எந்தக்காலத்தில், கொஞ்சம் தருமம் செய்தாலும் பயன் அதிகமாகக் கிடைக்கும்? எவர் எப்படிப்பட்ட தருமத்தை எளிதில் செய்வதற்கு உரியவர்கள்? என்பதே அவர்களது விவாதமாகிவிட்டது. எனவே இந்த விஷயத்தைப் பற்றி சந்தேகம் நீங்கி, உண்மையை அறிந்து கொள்வதற்காக, முனிவர்கள் அனைவரும் வேத வியாச மகரிஷியின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றார்கள். அப்போது என் மகனான வேதவியாசர், கங்கை நதியிலே நீராடிக் கொண்டிருந்தார்; அதனால் அந்த முனிவர்கள் அவர் நீராடிவிட்டு வரும் வரையில் அவரை எதிர்பார்த்துக் கொண்டு கரையோரமாக இருந்த மரங்களின் நிழல்களில் உட்கார்ந்திருந்தனர். அப்போது கங்கா தீர்த்தத்தில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்த என் குமாரர் முழுக்கிலிருந்து எழுந்து சூத்திரன் ஸாது; கலி ஸாது என்று அந்தச் சந்தேகம் தெளிவு பெற அவரைத் தேடிவந்த முனிவர்களின் காதுகளில் கேட்கும்படிச் சொல்லிவிட்டு, மீண்டும் நீரில் மூழ்கினார். பிறகு அவர் எழுந்து, ஸாது ஸாது சூத்திரா! நீ மஹா புண்ணியவானாக இருக்கிறாய்? என்று சொன்னார். மறுபடியும் மூழ்கியெழுந்த அவ்வியாசமுனிவர் பெண்களே புண்ணியவதிகள்! அவர்களைவிடப் புண்ணியமுடையவர்கள் யார்தான் இருக்கிறார்கள் என்று சொன்னார். பிறகு அவர் நன்றாக மூழ்கிக் குளித்து நீராடிவிட்டு, ஆசமனாதி சகல அனுஷ்டானங்களையும் செய்துவிட்டு, வீற்றிருந்தார். சந்தேகம் தெளிவுபெற என் மகனைத் தேடி வந்த முனிவர்கள், வேத வியாசரை வணங்கி, நின்றனர். அவர்களை வேத வியாசர் உட்காரச் சொல்லி நீங்கள் இங்கு எதற்காக வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் சுவாமி! நாங்கள் ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவே, உங்களைத் தேடி வந்தோம். அது இருக்கட்டும் கலி ஸாது சூத்திரன் ஸாது; பெண்கள் புண்ணியவதிகள் என்று நீங்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டே நீரில் மூழ்கி எழுந்தீர்களே? அதைப்பற்றி நாங்கள் முதலில் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்! மறைக்க வேண்டாத பக்ஷத்தில், அதை எங்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும். பிறகு நாங்கள் எண்ணி வந்ததைப் பற்றித் தங்களைக் கேட்டு தெரிந்து கொள்கிறோம் என்றார்கள்.
வேத வியாசர் புன்னகை செய்தவண்ணம் அவர்களுக்குக் கூறலானார்; ஓ தவ முனிவர்களே! ஸாது; ஸாது என்று எதனால் சொன்னானோ அதைச் சொல்கிறேன் கேளுங்கள். எந்தப் புண்ணியத்தைத் கிருத யுகத்திலே செய்தால் அது பத்து ஆண்டுகளில் சித்திக்குமோ அதுவே திரேதா யுகத்தில் ஒரே ஆண்டில் சித்திக்கும். அதுவே துவாபர யுகத்தில் ஒரு மாதத்தில் சித்திக்கும். கலியுகத்திலோ ஒரே நாளில் பயன் வந்துவிடும். இது போலவே தவம், பிரமசரியம், ஜபம் முதலிய எதற்கும் உரிய பயனை மனிதன் மூன்று யுகங்களிலும் பெறுவதிலும் மிகவும் எளிதாகப் பெறுவதாலேயே, கலி ஸாது என்று சொன்னேன். இன்னும் கேளுங்கள். கிருத யுகத்தில் யோக நிஷ்டையிலிருந்து தியானஞ் செய்வதனாலும் திரேதா யுகத்தில் யாகஞ் செய்வதனாலும், துவாபர யுகத்தில் அர்ச்சிப்பதனாலும் எந்தப் பயன் உண்டாகுமோ, அது கலியுகத்தில் கேசவனுடைய நாம சங்கீர்த்தனஞ் செய்வதாலேயே கிடைத்துவிடும். தருமம் அறிந்த தவத்தோரே! மனிதன். இந்தக் கலியுகத்தில் சிறிதளவு சிரமத்தினாலேயே பெரும் அளவு தருமத்தை அடைவானாதலால், கலியை நான் கொண்டாடுகிறேன். இனி, சூத்திரன் ஸாது என்று நான் சொன்னதை விளக்கமாகச் சொல்கிறேன். பிராமணாதிகள் விரதம் அனுஷ்டானங்களில் தவறாமல் இருந்துகொண்டு முதலாவதாக வேதங்களை ஓதவேண்டும். பிறகு தரும வழியால் சம்பாதித்த பொருளைக் கொண்டு, யாகங்களை விதிப்படிச் செய்யவேண்டும். பிராமணாதியருக்குப் பகவானைப் பற்றிய பேச்சுக்களைத் தவிர வீண் பேச்சுக்கள் பேசுவதும், எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்காத அன்னாதிகளைப் புசிப்பதும் டம்பத்துக்கும் லாபத்துக்கும் யாகங்களைச் செய்வதும் பாதகமாகும். ஆகையால் அவர்கள் எப்போதும் மனம், வாக்கு, காயங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். மேலும் இரு பிறப்பாளருக்கு எதையும் விதிப்படிச் செய்யாமற் போனால் அது குற்றமாகும்.
போஜனாதிகளைக்கூட இஷ்டப்படிச் செய்யவொண்ணாமல் விதிப்படிச் செய்ய வேண்டியவையாக இருப்பதால், யாவுமே அவர்களுக்கு பராதீனமானவை அதனால் அவர்கள் எதையும் மிகவும் வருந்தித் தாங்களடைய வேண்டிய உலகங்களை ஜெயிக்கவேண்டும். சூத்திரனோ வேத அத்தியயனம். அக்கினி, யக்ஞம் முதலியவைகளின்றி, பாக யக்ஞாதிகாரமுடையவனாய் முந்திய பிராணா நியருக்குப் பணிவிடை செய்வதனாலேயே அத்தகைய உத்தம உலகங்களை அடைந்துவிட முடிகிறது. ஆகையால் அவனைவிடப் புண்ணியவான் யார் உண்டு? ஓ முனிவர்களே, சூத்திரனுக்கு இன்னது உண்ணத் தக்கது. இன்னது தின்னத் தகாதது. இது குடிக்கத் தக்கது. இது குடிக்கத் தகாதது என்ற நியமம் இல்லாமையால், சூத்திரன் ஸாது என்று நான் சொன்னேன், ஆடவர்கள் தத்தமக்குரிய தருமத்தினால் பொருள் சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்த பொருளை நல்லவைகளுக்குச் செலவு செய்யவேண்டும். நல்லவர்களுக்குச் செலவு செய்ய வேண்டும். இவ்விதமாகப் பொருளை ஈட்டுவதிலும் அதைச் சம்பாதிப்பதிலும், எத்தனைப் பிரயாசைகள் இருக்கின்றன பாருங்கள். இதை நல்ல வழியில் செலவழிப்பதிலோ, இரட்டிப்புச் சிரமம் இருக்கிறது. இவ்விதமான பலவகைக் கிலேசங்களினால் ஆடவர்கள் பிரஜாபத்தியம் முதலிய உலகங்களை வெல்கிறார்கள். பெண்களோ மனோவாக்குக் காயங்களினாலே தம் கணவர்களுக்கு அநுகூலமாக இருந்துகொண்டு சிசுருஷைகளைச் செய்து வந்தாலே கணவன் அடையும் உலகங்களை எளிதில் அடைந்து விடுகிறார்கள். இவ்விதம் அதிகச் சிரமம் இல்லாமல் வருந்திப் பெறும் உலகங்களைப் பெறுவதால், மூன்றாவதாக பெண்கள் ஸாதுக்கள் என்றேன். பிராமண உத்தமர்களே! நீங்கள் கேட்டபடி நான் சொன்னவற்றுக்குக் காரணங்களைச் சொன்னேன். இனி நீங்கள் வந்த காரியத்தைச் சொல்ல வேண்டும். அதற்கும் நான் பதில் சொல்கிறேன் என்றார் வியாசர்.
முனி சிரேஷ்டரே! நாங்கள் கேட்க வந்த சந்தேகங்கள் இப்போது நீங்கள் கூறிய விளக்கவுரைகளிலேயே அடங்கியுள்ளன, இனி நாங்கள் கேட்க வேண்டியவை வேறில்லை என்றார்கள் முனிவர்கள். பிறகு, அந்தக் கிருஷ்ணதுவைபாயனர் சிரித்து, நான் திவ்விய ஞானத்தால் உங்கள் காரியத்தை அறிந்து அதைக் குறித்துத்தான் கலி ஸாது, சூத்திரன் ஸாது ஸ்திரீகள் ஸாதுக்கள் என்று சொன்னேன். அற்ப முயற்சியிலேயே கலியில் தருமம் பலிக்கிறது. தயை சாந்தி முதலிய ஆன்மீக குணங்களாகிய தண்ணீர்களினால் அவர்கள் பாவங்களாகிய மலங்களைக் கழுவிக் கொள்கிறார்கள். சூத்திரர் பிராமணாதியருக்குப் பணிவிடை செய்வதினாலேயே பேறுபெறுகின்றனர். பெண்டிரும் கணவருக்குப் பணிவிடை செய்து, ஆயாசம் இல்லாமலேயே நற்கதியை அடைகிறார்கள்; ஆகையால் இந்த மூவரும் புண்ணியசாலிகள் என்பது என் கருத்து. கிருத யுகாதி காலங்களிலும், அந்தணர் முதலியோருக்குத் தர்மம் சம்பாதிப்பதில் பெரிய ஆயாசமுள்ளது. இதைப்பற்றி நான் பேசியதில் உங்கள் சந்தேகம் தீர்ந்தது அல்லவா? இனி நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது என்ன? என்று கேட்க, அவர்கள் சந்தேகம் நீங்கிய மகிழ்ச்சியோடு அவரை வணங்கி, விடைபெற்றுச் சென்றார்கள். மைத்ரேயரே! இந்த இரகசியத்தை நான் உமக்குச் சொன்னேன். மிகவும் துஷ்டனான கலிபுருஷனுக்கு இத்தகைய பெருங்குணமும் இருக்கிறது. நீங்கள் முதலில் லோக சம்ஹாரத்தைப் பற்றி என்னைக் கேட்டீரல்லவா? பிராகிருதம், அவாந்தரம் என்று பிரிந்திருக்கிற அந்தப் பிரளயக் கிரமத்தை இனி உமக்குச் சொல்கிறேன் கேளும்.

———————

3. நைமித்திகப் பிரளயம்-

எல்லாப் பூதங்களுக்கும் பிரளயம் மூன்று விதம். அவையாவன; நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்திகம் என்பனவாம். கல்பத்தின் முடிவில் பிரம்மனால் உண்டாகும் பிரளயம் நைமித்திகம். பரம் பொருள் பிரமாணமான விரிஞ்சனுடைய ஆயுளின் முடிவில் வரும் பிரளயம் பிராகிருதம் மோக்ஷமே ஆத்தியந்திகம் எனப்படும். என்று பராசர முனிவர் கூறியதும் மைத்ரேயர், சுவாமி! பிராகிருதப் பிரளயத்தை அறிந்துகொள்வதற்காக பரார்த்தத்தை இரட்டிக்கவேண்டும் ஒழிய, அந்தப் பரார்த்தம் என்ற கணக்கை அடியேனுக்குத் தெரிவிக்க வேண்டும், என்றார். பராசர மகரிஷி கூறலானார்.
கேளும் பிராமணரே! ஏகஸ்தானம் முதல் ஒன்றுக்கு ஒன்று பதின்மடங்கு அதிகமாய் மேலுக்கு மேல் ஸ்தானங்கள் உண்டன்றோ? அவற்றில் பதினெட்டாவது இடமே பரார்த்தம் என்று வழங்கப்படுகிறது. அந்த பரார்த்தம் இரட்டித்த காலத்தில் பிராகிருதப் பிரளயம் உண்டாகும். இப்பொழுது வியக்தம் யாவும் அவியக்தத்தில் லயப்பட்டு விடும். மனிதருக்கு நிமிஷம் என்று எதுவுண்டோ, ஒரு மாத்திரை அளவுள்ளதது. ஆகையால் அது மாத்திரை என்று சொல்லப்படும். அந்த மாத்திரைகள் பதினைந்து கொண்டது ஒரு காஷ்டை. முப்பது காஷ்டைகள் ஒருகலை. பதினைந்து கலைகள் ஒரு நாழிகை. அது பன்னிரண்டரை பல நிரையுள்ள தண்ணீரால் குறிக்கப்படும். இது மகத தேசத்தில் ஒருபடி நீரளவாம். இதை அறியும் முறையைக் கேளும். இருபது குன்றி மணி எடையுள்ள பொன்னால் நான்கு அங்குல அளவாகச் செய்த ஊசிகளைக் கொண்டு துளையிடப்பட்ட மகத தேசத்துப் படியளவான ஒரு பாத்திரத்தைத் தண்ணீரில் மூழ்த்தினால், அந்தப்பாத்திரம் எவ்வளவு காலத்தில் தண்ணீர் நிறையுமோ அத்தனைக்காலம் ஒரு நாழிகை என்று எண்ணப்படும் அல்லது, அந்தப்பாத்திரத்தில் விட்ட தண்ணீர் அதிலிருந்து வெளிப்படும் காலம் ஒரு நாழிகையாகும். இரண்டு நாழிகை ஒரு முகூர்த்தம். முப்பது முகூர்த்தம் ஒரு நாள் முப்பது நாள் ஒரு மாதம். பன்னிரண்டு மாதம் ஒரு வருடம் இந்த வருஷம் தேவர்களுக்கு ஒரு இராப்பகல் இத்தகைய இராப் பகல்கள் முந்நூற்றறுபது சேர, தேவமானத்தில் ஒரு வருஷமாம் அந்தவருஷம் பன்னீராயிரம் சேர்ந்தால் ஒரு சதுர்யுகமாகும். அந்தச் சதுர்யுகங்கள் ஆயிரம் ஆயின் சதுர்முகனுக்கு ஒரு தினம். அதற்குத்தான் கல்பம் என்றுபெயர். அதன் இறுதியில் வருவதுதான் பிரமசம்பந்தமான நைமித்திகப் பிரளயமாகும் மைத்ரேயரே! அதி உக்கிரமான அந்தப் பிரளயத்தின் சொரூபத்தை முன்னதாகச் சொல்லுகிறேன். பிறகு நைமித்திக பிரளயத்தைப் பற்றிச் சொல்கிறேன்.
ஆயிரம் சதுர்யுகத்தின் முடிவில் பஞ்சம் முதலிய காரணங்களாய், பூலோகம் பெரும்பாலும் க்ஷீணித்திருக்கும்போது, மிகவும் கொடுமையாய் நூற்றாண்டு அளவு மழையே இல்லாமல் இருக்கும். அதனால் அற்ப சக்தியுள்ள ஜந்துக்கள் யாவும் மடிந்து போய்விடும். பிறகு ஸ்ரீவிஷ்ணு பகவான் சங்காரத்துக்காக உருத்திர ரூபம் தரித்தவராய் சகல பிராணிகளையும் தம்மில் லயிக்கும்படிச் செய்யும் திருவுளம் பற்றிச் சூரியனது ஏழு கிரணங்களிலிருந்து கொண்டு சகல ஜலங்களையும் பானஞ்செய்வார். இவ்விதமாகப் பிராணிகளாலும் பூமியிலும் உள்ள தண்ணீரை யெல்லாம் உறிஞ்சிப் பூமியையெல்லாம் வறளச் செய்வார். இவ்வாறு சமுத்திரங்கள், நதிகள் அருவிகள் முதலியவற்றின் தண்ணீரை யெல்லாம் அருந்தியதால் சூரிய கிரணங்கள் ஏழும் மிகவும் பெரிதாகி, ஏழு சூரியர்களாகிக் கீழும் மேலும் ஜொலித்துப் பாதாளங்கள் உட்பட மூன்று உலகங்களையும் எரித்துவிடும். இந்த ஏழு சூரியர்களாலும் எரிக்கப்படவே இந்த பூமியானது மலைகள் கடல்கள் முதலிய எவ்விடத்திலும் ஈரப் பசையென்பதேயில்லாமல் மரஞ்செடி புல் பூண்டு முதலிய யாவும் எரிந்துபோய் ஆமையோடு போலாகிவிடும். பிறகு ஆதிசேடனின் சுவாசத்திலிருந்து உண்டானகாலாக்கினியானது ருத்திரனாகிப் பாதளங்களையெல்லாம் தகித்துக் கொண்டே, பூமிக்கும் வந்து அதையும் கொளுத்திவிடும். இவ்விதமாக அந்தப் பிரளயகாலாக்கினி ஜ்வாலா சக்கரத்தோடு கூடியதாய் புவர்லோக, சுவர்லோகங்களையும் கொளுத்திக் கொண்டே, அங்கேயே சுழன்று கொண்டேயிருக்கும். அப்போது அதன் ஜ்வாலைகளால் சூழபட்ட மூவுலகமும் சராசரங்கள் நசித்ததாய் வறுக்கிற சட்டியைப்போல இருக்கும்.
பிறகு அதிகார புருஷர்களாய், புவர்லோக சுவர்லோகங்களிலிருக்கிற மனுவாதிகள் மகாதாபத்தோடு மகர்லோகஞ் செல்வார்கள். பிறகு அங்கும் பெருந்தாபமடைந்து அவ்வுலகத்தாருடன் கூட, அதற்கும் மேலான ஜனலோகத்தை அடைவார்கள். அவர்களுக்குள்ளே யார் பரப்பிரமத்தையடையநின்றவர்களோ, அத்தகையோர் மேலும் கீழும் பத்துத்தரம் சுற்றிச் சுழன்று தவலோக சத்தியலோகங்களிற் சென்று, கடைசியாகப் பரப்பிரமத்தை அடைவார்கள். பூவுலகம் முதலிய மூவுலகங்களிலுமுள்ள மற்றவர் யாரும் ஆன்மாவில் லயப்படுவார்கள். இவ்விதமாக ருத்திர ரூபியாக இருக்கிற ஸ்ரீஜனார்த்தனர்யாவற்றையும் தகித்து தம் சுவாசத்தினின்றும் அநேக மேகங்களை உண்டாக்குவார். அதனால் யானைகளின் கூட்டத்தைப் போன்று மகாபயங்கரமான இடி மின்னல்களுடன் கூடிய பிரளயகால மேகங்கள் கவியலாகும். அவற்றில் சில கருநெய்தல் மலர் போன்றும், சில ஆம்பல்களைப் போலும்; சில கருஞ்சிவப்பாகவும் சில பொன்னிறமாயு சில கழுதை நிறமாயும், சில அரக்கு வர்ணமாயும் சில வைடூரியம் போன்றும்; சில இந்திர நீலத்துக்கு ஒப்பாயும், சில சங்கு முல்லை போலவும் சில மை நிறமாயும், சில தம்பலப் பூச்சிகள் போன்றும் வேறு சில நெருப்புப் போன்றும், சில மனோசிலை போன்றும் சில கூந்தற்பனை போன்றும் விளங்கும். அத்தகைய மாபெரும் மேகங்களின் உருவங்களில் சில பெரிய நகரங்களைப் போலவும், சில மலைகளைப் போலவும் சில தரைக்குச் சமானமாயும் இருக்கும். இத்தகைய மகாமேகங்கள் பயங்கரமாக முழங்கிக் கொண்டு; வான முழுதும் பரவி; பெருந்தாரைகளைப் பொழிந்த வண்ணம் முன்பு சொன்னதுபோல், மூன்று உலகங்களிலும் பற்றிஎரிகின்ற பெருந்தீயை அவிக்கும் அந்தத்தீயானது அவிந்த பிறகும் அம்மேகங்கள் இராப் பகல்கள் ஓயாமல் மழையைப் பொழிந்து அந்தப் பெருந்தாரைகளினாலே பூமி முழுவதையும் ஜலமயமாக்கிப் பின்பு புவர்லோகத்தையும் அப்படியே ஜலமயமாக்கி விடும். இதுபோல் அப்பெரு மேகங்கள் ஸ்தாவர ஜங்கமங்கள்யாவும் அற்று அந்தகாரஞ் சூழ்ந்த உலகில் ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பெருமழையை ஓயாமல் பொழிந்து கொண்டேயிருக்கும். ஓ மைத்ரேயரே! நித்தியனாகவும் பரமாத்துமாவாகவும் இருக்கிற ஸ்ரீ வாசுதேவனுடைய மகிமையினால் கல்ப காலத்தின் முடிவில் இப்படியெல்லாம் நிகழ்கின்றன.

—————-

4. பிராகிருதப் பிரளயம்

மைத்ரேயரே! இவ்விதமாகப் பெருமழை பொழிந்து அந்தத் தண்ணீர்ப் பெருக்கானது சப்தரிஷி மண்டலத்தையும் கவர்ந்து நிற்பதால் மூன்று உலகங்களும் ஏகார்ணவமாகிவிடும். அப்போது ஸ்ரீமந் மகாவிஷ்ணுவின் திருமுகத்திலிருந்து ஒரு மூச்சுக் காற்று உண்டாகி, அந்தப் பெரிய மேகங்களையெல்லாம் நாசஞ்செய்து கொண்டு ஒரு நூற்றாண்டளவு வரை பெருங் காற்றாக வீசிக் கொண்டே இருக்கும். பின்னர் சர்வபூதமயனாகவும் நினைத்தற்கும் அரியனாயும் அனாதியாயும் பிரபஞ்சத்துக்கு ஆதியாயும் மகாப்பிரபுவாகவும் இருக்கும். ஸ்ரீஹரி பகவான் அந்தக் காற்றை அமுதுசெய்து பிரமரூபத்தோடு அந்த ஏகார்ணவத்தில், சேஷசயனத்தின்மீது ஜனலோகத்திலுள்ள சனக, சனந்தனர் முதலிய யோகிகளாலும், பிரம லோகத்திலுள்ள, முமூட்சுக்களாலும் தியானிக்கப்பட்டவராய் தமது மாயா ஸ்வரூபமான யோகநித்திரையைக் கைக்கொண்டு வாசுதேவன் என்ற திருநாமமுடன் தம்மையே சிந்தித்தவண்ணம் திருக்கண் வளர்ந்தருள்வார். ஸ்ரீஹரி பகவான் இவ்வாறு பிரம ரூபத்துடன் அந்தக் காலத்தில் துயில்கொள்ளும் காலம் நிமித்தமாக இருப்பதாலேயே, இவ்விதம் நடக்கும் பிரளயத்துக்கு நைமித்திகப் பிரளயம் என்று பெயர். சர்வாத்மாவான ஸ்ரீ அச்சுதன் எப்பொழுது திருக்கண் விழிப்பாரோ, அப்போது தான் இந்த உலகமும் அசைவுபெறும் யோகநித்திரை புரிவாராயின், உலகமும் கண்மூடிப்போம் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமுடைய பிரமதினம் எதுவோ; அவ்வளவு காலமே இரவுமாகும். இந்த இரவின் முடிவில் ஸ்ரீவிஷ்ணு துயில் நீங்கி விழித்துக்கொண்டு பிரமரூபத்தோடு மீண்டும் சிருஷ்டித்து அருளுகின்றான் என்று முன்பே நான் உமக்குச் சொன்னேன் அல்லவா? இந்தக் கல்பத்தின் முடிவில் செய்யும் சங்காரமே அவாந்தரப் பிரளயம் நைமித்திகப் பிரளயத்தைப் பற்றி சொன்னேன். இனிப் பிராகிருதப் பிரளயத்தைப் பற்றிச் சொல்கிறேன்; கேளுங்கள்.
முன்பு நான் சொன்னதுபோல அனாவிருஷ்டி முதலியவைகளால், சகல உலகங்களும் பாதாளங்களும் நாசமாகி மகத்தத்துவ முதல் விசேஷம் வரையில் உள்ள யாவும் நசிக்கும்படி எம்பெருமானின் சங்கல்பத்தால் பிரளயம் சம்பவிக்க முதலாவதாக நீரானது நிலத்தின் குணமான கந்தத்தைக் கிரகிக்கிறது. கந்தம் கிரகிக்கப்பட்டவுடன்; நிலமானது லயப்படத் தக்கதாகி கந்ததன் மாத்திரை நசித்து நீராகி விடுகிறது. அந்த நீர் பெருகி மகாவேகமும் மிக முழக்கமுங்கொண்டு, எல்லாவற்றையும் நிரப்பிக்கொண்டு அலைகளுடைய பிரவாகத்தோடு, உலகங்களின் முடிவு வரையில் ஓடி நிற்கும் அந்தத் தண்ணீரின் குணமான ரசத்தைச் சோதியானது கிரகிக்கும்போது அத்தண்ணீர் ரசதன்மாத்திரையற்று, சோதியாகின்றது, இவ்விதமாக நீரானது நெருப்பாகி மகாதேஜசு சூழ்ந்ததாக எங்கும் நிறைந்து வியாபகமாகின்றது. இவ்விதமாக எத்திசையும் ஜ்வாலமயமாய்ச் சூழ்ந்துள்ள அந்த அனலின் குணமாகிய ரூபத்தைக் காற்றானது கிரகித்துக் கொள்கின்றது. ரூபதன்மாத்திரை நசித்ததினால் அனல் அற்று, காற்று மிக அதிகமாக வீசத்துவங்கி ஒளி நீங்கி, காற்றுமட்டுப் பேரிரைச்சலுடன் வானத்தைபற்றி வீசிக்கொண்டிருக்க, அதன் குணமாகிய ஸ்பரிசத்தை வானமானது கிரகித்துக் கொள்கிறது. பிறகு வாயுவானது நாசமாகி ஆகாயம் ஒன்றே ஆவரணமின்றி இருக்கும் ரூப; ரச; கந்த ஸ்பரிசங்கள் அற்றதாய் ஒலியையே இலக்கணமாகக் கொண்டதாய், அவயவமில்லாததாய் மிகப்பெரிதான அந்த ஆகாயமானது யாவையும் நிரப்பிக்கொண்டு நிற்கும் இவ்விதமாக சுற்றிலும் வட்டமாய் யாவுங் கொள்ளும் இடமாய் எல்லாவற்றையும் சூழ்ந்துள்ள அந்த ஆகாயத்தின் குணமாகிய சப்தத்தைப் பூதாதிகள் கிரகிக்கின்றன. பூதங்களும் இந்திரியங்களும் ஒருமிக்க அந்தப் பூதாதியில் லயமடையும் அபிமான ரூபமான இந்தத் பூதாதியானது தமஸ்ஸைப் பிரதானமாகக் கொண்டதனால் தாமசம் என்று வழங்கப்படுகிறது. இந்தப் பூதாதி என்று வழங்கப்பட்ட அகங்காரத்தைப் புத்தியையே லக்ஷணமாகக் கொண்ட மகத்தானது கிரஹிக்கின்றது. அந்த அண்டத்தினுள்ளே பூமியும் மகத்தும் முதல் எல்லையும் கடைசி எல்லையுமாக இருப்பது போலவே, வெளியிலும் முதலும் கடைசியும் எல்லையாகக் கொண்டுள்ளன.
புத்திமானே! இதுபோலவே அண்டத்துக்குப் புறத்தேயுள்ள பிருதிவி முதல் மகத் ஈறாகவுள்ள ஏழு பிரகிருதிகளும் சங்கார கிரமத்திலே முன்பு உரைத்ததுபோல், தத்தமது காரணங்களிலே லயப்படுகின்றன. இந்தப் பிரபஞ்சத்தை மூடிக்கொண்டுள்ள அண்ட ரூபமான பிருதிவியானது அதைச் சூழ்ந்த அப்புவிலும் அந்த அப்பு அதைச் சூழ்ந்த தேஜசிலும், அந்தத் தேஜசு, அதைச் சூழ்ந்த வாயுவிலும் அந்த வாயு அதனைச்சூழ்ந்த ஆகாயத்திலும் அந்த ஆகாயம் அஹங்காரத்திலும், அந்த அஹங்காரம் மகத்திலும் லயமடைகின்றன. இவற்றோடும் கூடிய அந்த மகத்தத்துவத்தைப் பிரகிருதி கிரகிக்கின்றது. குறையாமலும் மிகாமலும் முக்குணங்கள் சமமாக இருப்பதுதான் பிரகிருதியாகும். அதுதான் உலகங்களுக்குப் பிரதானமும் காரணமும் ஆகிறது. இப்படியாக, இந்தப் பிரகிருதி வியக்த ஸ்வரூபமாயும் அவ்யக்த ஸ்வரூபமாகவும் இருக்கிறது. ஆகவே, வியக்தம் அவ்யக்தத்தில் லயப்படுகிறது என்றும் ஒருவகைப்பட்டவனாயும் இயல்பில் தீயோனாயும் அக்ஷரனாயும் நித்தியனாயும் சூஷ்ம ரூபியாகையால் பிரகிருதியையும் வியாபிக்கத்தக்க புருஷனும், பிரகிருதியைப் போல் பரமான்மாவின் அம்சமாக இருக்கிறான். பரமான்மாவோ பெயர், இனம் முதலிய கற்பனைகள் இல்லாமல் எப்பொழுதும் இருப்பதையே இயல்பாகக் கொண்டவனாய், அறிய வேண்டியவனாய், சர்வேசுவரனாய், ஞானஸ்வரூபியாய் ஜீவான்மாவுக்கு மேம்பட்டவனாக இருப்பவன் அத்தகைய ஸ்ரீ விஷ்ணுவே பரப்பிரமம்! எல்லாமாக இருப்பவன் அவனே! அவனே யோகியானவன் அவனைச் சேர்ந்தவை மீண்டும் திரும்புவதில்லை! வியக்தாவியக்த சொரூபமான பிரகிருதி யாதுண்டோ, அதுவும் புருஷன் என்று சொல்லப்படும். ஜீவனும் இவ்விரண்டும் அந்தப் பரமாத்மாவிலே லயப்படுகின்றன. அந்தப் பரமாத்மாவே யாவற்றுக்கும் ஆதாரமான பிரமேசுவரன் அவன் வேதத்திலும் வேதாந்தத்திலும் விஷ்ணு முதலிய பெயர்களில் துதிக்கப்பட்டிருக்கிறான்.
பிரவிர்த்தி நிவர்த்தி என்ற இருவகை வைதிக கர்மங்களினால் தேவதா ஸ்வரூபியான ஸ்ரீவிஷ்ணுவே, ரிக், யஜுர் சாமம் என்ற பிரவிர்த்தி மார்க்கங்களிலே யக்ஞேசுவரனாகவும் யக்ஞ புருஷனாயும் ஆராதிக்கப்படுகிறான் நிவர்த்தி மார்க்கத்தில் ஞானஸ்வரூபியாகவும் ஞானமயமான திருமேனியுடையவனாயுமுள்ள ஸ்ரீவிஷ்ணுவே மோக்ஷத்தைக் கொடுக்க வல்லவனாக ஞான யக்ஞத்தால் யோகியரால் போற்றப்படுகிறான். குறில், நெடில், அளபெடை ஆகியவற்றால் சொல்லப்படும் அசித்து யாதோ அதுவும், வாக்குக்கு விஷயமாகாத சித்தும் அந்த ஸ்ரீவிஷ்ணுவின் சொரூபங்களேயாகும்! வியக்தமும் அவ்யக்தமும் புருஷனும் முக்தனும் யாவும் அந்த ஸ்ரீஹரி பகவான்தான்! சகல பிரபஞ்சத்தையும் தமக்குச் சரீரமாகக் கொண்டு விளங்குவதனால் அவை அவனுடைய சொரூபங்களேயாம்! அந்த ஸ்ரீ ஹரியிடத்தில் பிரதானமும் புருஷனும் ஒடுங்குகிறார்களல்லவா? அப்படியாக ஒடுங்குமிடமான அந்தப் பரமாத்மாவுக்கு இரண்டு பரார்த்த காலம் என்று சொன்னது ஒரு பகல் வியக்தமெல்லாம் பிரகிருதியிலும் அந்தப் பிரகிருதி புருஷனிடத்திலும் அந்தப் புருஷன் பரமாத்மாவிலும் லயமாக இருக்க, அவ்வளவு காலம் இரவாம். பிராமண உத்தமரே! நித்தியனான அந்தப் பரமாத்மாவுக்கு பகல் என்பதுமில்லை. இரவு என்பதும் இல்லை. ஆயினும் சிருஷ்டி முதலிய காரியங்களைக் கொண்டு, உபசார வழக்கால் இரவு பகல்கள் சொல்லப்படுகின்றன. இவ்விதமாக பிராகிருதப் பிரளயத்தின் தர்மத்தைச் சொன்னேன். இனி, ஆத்யந்திகப் பிரளயத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

——————-

5. ஆத்யந்திகப் பிரளயம்

மைத்ரேயரே! அறிவுடையவன் ஆத்தியாத்துமிகம் முதலிய தாபங்கள் மூன்றையும் அறிந்து ஞானமும் வைராக்கியமும் உண்டாகப்பெற்று மோக்ஷம் என்ற ஆத்யந்திக லயத்தை அடைகிறான், ஆத்தியாத்துமிக தாபமாவது தன் ஆன்மாவையும் தேகத்தையும் பற்றிய துக்கமாம். அது சரீரத்தைப் பற்றியதும் மனத்தைப் பற்றியதும் ஆகும். தலைவலி, பீனசம், ஜ்வரம், சூலை பகந்தரம், குலமம், ரத்தபேதி, சோகை, சுவாசம், வாந்தி, கண் நோய், அதிசாரம், குஷ்டம், வாயுரோகம் இவைபோன்ற ஏராளமான விஷயங்கள் சரீரத்தைப் பற்றியவை. காமம், குரோதம், பயம்; துவேஷம்; லோபம்; மோகம்; துக்கம்; சோகம், அசூயை, பொறாமை, அவமானம்; பகை பாராட்டுதல், முதலியவை மனது சம்பந்தப்பட்டவை பலவாகும், ஆதிபவுதிகமாவது ஜந்துக்களைப் பற்றியது. மிருக பக்ஷி, மனுஷ்ய பைசாச, சர்ப்ப, ராக்ஷஸாதிகளாலேயே உண்டாவதனால் அதுவும் பல வகைப்பட்டது. ஆதிதைவிதம் என்பது தெய்வத்தால் வருவது. அதுவும் குளிர், காற்று; வெய்யில், மழை, இடி முதலியவற்றால் உண்டாகும் பலவகையாம். இந்தத் தாபங்கள் மூன்றும் கருவினாலும் பிறப்பினாலும் இறப்பினாலும் மூப்பினாலும் நரகத்தாலும் உண்டாக்கப்பட்டு அநேக ஆயிரம் வகைகளாகின்றன அவற்றை விளக்குகிறேன்; கேளும்.
ஜந்துவானது மிகவும் மென்மையான உடலையுடையதாய், அநேக மலங்கள் நிறைந்த கர்ப்பத்திலே ஒருவகைத் தோலால் மூடப்பட்டு, மிக வளைந்த முதுகு, கழுத்துகளின் எலும்புகளையுடையதாக இருந்து கொண்டு, தாய் உண்ணும் புளிப்பு கசப்பு கரிப்பு, உப்பு முதலிய உறைகள் தன் மீது படும்போது அளவற்ற வேதனைகளையடைந்து தன்னுடம்பை நீட்டவும் மடக்கவும் வகையற்று மலமூத்திரங்களாகிய சேற்றிலே கிடந்து, எங்கும் துன்பமே பெற்று, மூச்சு விடமாட்டாமல் அறிவு மாத்திரமேயுள்ளதாய் கடந்த காலத்தில் அநேகப் பிறவிகளை நினைத்து, மகா விசனமடைந்ததாய், இப்படித் தன் கருமத்தால் தானே கட்டுண்டு கிடக்கின்றது. பிறகு பிறக்கும்போது பிரமதேவனால் ஏவப்பட்ட ஒருவகைக் காற்றினால் எலும்புகள் யாவும் நுறுங்கிப் போகும்படி பீடிக்கப்பட்டு, மலமூத்திரங்களாலும் சுக்கில சுரோணிதங்களாலும் பூசப்பட்ட முகத்துடன் மிகவும் பலமான பிரசவ வாயுக்களால் தலைகீழாகத் திருப்பப்பட்டு வெகு சிரமத்தோடு தாய் வயிற்றிலிருந்து வெளியே வருகிறது. பிறந்த பிறகு, வெளிப்புறக்காற்று ஸ்பரிசித்தவுடன் பெருமூர்ச்சையற்று முன்பு இருந்த ஞானத்தை இழக்கிறது, விழும்போது முட்களால் குத்தப்பட்டதைப் போன்றும் வாட்களால் அறுக்கப்படுவது போலவும் துர்க்கந்தமான இரணத்துக்கும் ஒப்பான யோனித்துவாரத்திலிருந்து புழுவைப் போலத் தரையில் விழுகின்றது. பின்னர் சொறிந்து கொள்வதற்கும் திரும்புவதற்கும் சக்தியற்றதாய், ஸ்நான பான ஆகாராதிகளைப் பிறரது இச்சைக்கேற்பவே பெறுகின்றது. மேலும் மூத்திராதிகளாலே அசுத்தமான படுக்கையில் படுத்துக்கிடந்து எறும்பு, கொசு முதலியவை கடித்தாலும் அவற்றைத் தடுக்க முடியாமல் தவிக்கின்றது. இவ்விதமாக பிறப்பின் துன்பங்களையும் அதன் பின்புண்டாகும் துக்கங்களையும் ஆதிபவுதிகம் முதலான துன்பங்களையும் மிகவும் இளமையிலேயே அடைகின்றது. பிறகு வளர்ந்து பருவம் அடையும்போது மனிதன் அஞ்ஞானமாகிய இருள் மூடியதாலே, முடனாகவே நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இனி எங்கே போவேன்? எனக்கென்ன பயன்? நான் எந்தப் பந்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்? எதற்கு நான் கட்டுப்பட்டவன்? இதற்குக் காரணம் யாது? காரணமல்லாதது எது? செய்யத்தக்கது எது? செய்யத் தகாதது எது? சொல்லத் தக்கது எது? சொல்லத் தகாதது எது? எது தர்மம்? எது அதர்மம்? எங்கே இருக்கிறேன்? எப்படி இருக்கிறேன்? இனி செய்ய வேண்டுவது எது? எது குற்றம்? எது குணமுடையது? என்று ஒன்றையும் அறியமாட்டாதவனாக இருக்கிறான். இவ்வாறு அவன் மிருகங்களைப் போல, உண்பதையும், புணர்வதையுமே முக்கியமாகக் கொண்டு, அஞ்ஞானத்தால் உண்டான அநேக துக்கங்களை அனுபவிக்கிறான். அஞ்ஞானம் என்பது தமோகுணத்தின் விகாரம். அதனாலேயே மனிதன் கெட்ட காரியங்களைச் செய்ய வேண்டி வருகிறது. ஆகவே, வைதீகக் கர்மங்கள் நடப்பதில்லை.
எனவே அஞ்ஞானிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பம் அதிகமாகிறது. பிறகு யவ்வனத்தைத் தாண்டி முதுமை வரும்போது உடல் மெலிந்து கட்டுத் தளர்ந்து, பற்கள் ஆடி, உதிர்ந்து திரையும் நரையும் அதிகமாகி, சற்று தூரத்தில் இருப்பதும் தெரியாதவாறு கண்ணின் கருவிழிகள் உள்ளே ஆழ்ந்து, மூக்குத் துவாரத்திலிருந்து மயிர்கள் உதர, உடல் ஒடுங்கி, எலும்புகள் எல்லாம் வெளிப்பட்டுத் தெரிய, முதுகெலும்பு வளைய தீபனம் மந்தமாவதால் உணவு நன்றாகச் செல்லாமலும் செறிக்காமலும் செயல்கள் குறுக, நடப்பதும் எழுவதும் படுப்பதும்கூட வருத்தமாக இருக்க காது கேளாமலும், கண்கள் தெரியாமலும் இருக்க வாயினின்று சாளை வாய்நீர் வடிந்து கொண்டிருக்க மனிதன் தவிக்கிறான். இவ்விதமாகச் சகல இந்திரியங்களும் அஸ்வாதீனப்பட்டு, மரணங்கிட்டும்போது முன்பு தான் அனுபவித்தவற்றை நினைத்து உருகிக் கொண்டு ஒரு வார்த்தை சொல்லக்கூட மிகவும் வருத்தங் கொண்டவனாய், சுவாசகாசம் உண்டாவதால் மிகுந்த ஆயாசமும் துக்கமின்மையும் உடையவனாய் எழுந்திருக்கவும் நடக்கவும் உட்காரவும் பிறருடைய உதவி அவசியப்படுவதாலேயே வேலைக்காரர்கள்; மனைவியர்; பிள்ளைகள் யாவரும் அவமதிக்க ஒரு சக்தியுமின்றி உண்ணவும் உலாவவும் ஆசையுள்ளவனாய்; ஊழியரும் பரிகசிக்க பந்துக்களும் வெறுப்படைய தன்னுடைய வாலிய அநுபவத்தைப் பூர்வ ஜன்மத்தின் அனுபவம்போல் நினைத்து, மனம் வெதும்பி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறான், இதுபோல் மூப்பில் அவன் பற்பல துக்கங்களை அனுபவித்து மரணத்தை அடைகிறான்.
இனி அந்த மரணத்தின்போது நேரும் துன்பங்களையும் கேளும் கால், கைகள் கழுத்து இவை கட்டுவிட்டுப் பெற்று பெருநடுக்கமுள்ளவனாய் சிறிது நேரம் அறிவும் சிறிது நேரம் அறிவழிவுமுள்ளவனாய் மக்கள் மனை வீடு மாடு தனம் தானியம் ஆகிய இவையெல்லாம் இனி எப்படிப் போமோ என்று கலங்கியவனாய் இப்படிப்பட்ட நிலையில் இருக்க இரம்பங்கள் போன்ற மிகக் கொடிய இயமனின் அம்புகளான கொடிய பெரும் வியாதிகளால் உயிர் பெயர கண்கள் சுழல கைகால்களை உதறிக் கொண்டு நாக்கும் உதடும் உலர உதானவாயு எழும்பித் துன்புறுத்த கண்டம் அடைத்துக் குருகுருவென்ற சப்தம் செய்ய பெருந்தாபமும் பெரும் பசியும் பெருந்தாகமும் பொருந்திய நிலையில் யமகிங்கரர்களால் பீடிக்கப்பட்டு வெகு பிரயாசைப்பட்டுத் தன் தேகத்தை விட்டுக் கிளம்புகிறான். உடனே யாதனாதேகத்தை அடைகிறான்! இவையும் இவை போன்ற மேலும் பலவிதத் துன்பங்களும் மரணத்தில் உண்டாகின்றன.
இறந்த பின்னர், மனிதர்கள் நரகத்தில் படுகின்ற அவஸ்தைகளையும் சொல்கிறேன், கேளுங்கள். யமகிங்கரர்கள் முதலில் பாசத்தாற் கட்டிப் பிணைப்பதும் பிறகு தடியால் அடிப்பதும், உக்கிரமான யமனைக் காண்பதும் கொடிய வழியைக்காண்பதும் ஆகிய துன்பங்களை அனுபவித்துப் பிறகு காய்ந்த மணலிலும் அக்கினியந்திரம் கத்தி முதலியவற்றால் நரகத்திலே படும் பாடுகள் மிகவும் கொடியவையாகும். பிராமணோத்தமரே; கேளும்! மனிதன் மரணமடைந்த பிறகு யமகிங்கரர்களால் பல்வாளினால் அறுக்கப்பட்டும் மூசையிற் போட்டுக் காய்ச்சப்பட்டும், கோடாரிகளால் பிளக்கப்பட்டும், பூமியில் புதைக்கப்பட்டும், சூலங்களில் ஏற்றப்பட்டும், புலி வாயில் இடப்பட்டும், கழுகுகளால் குத்திப்பிய்க்கப்பட்டும், கொடிய மிருகங்களால் கடிக்கப்பட்டும் காயும் எண்ணெய்க் கொப்பரையில் போடப்பட்டும் பொரிக்கப்பட்டும், உப்புச் சேற்றிலே புரட்டப்பட்டும், உயரத்திலிருந்து குப்புறத் தள்ளப்பட்டும் யந்திரங்களில் ஏற்றி வீசி எறியப்பட்டும், பாபத்தின் பயன்களாய் மனிதர்கள் நரகத்தில் படுகின்ற துன்பங்களை இவ்வளவு தான் என்று சொல்லிவிட முடியாது. இத்தகைய துக்கங்கள் நரகத்தில் மட்டுமல்ல; சுவர்க்கத்திலும் உண்டு சொர்க்கத்தில் சுகானுபவத்தை அனுபவிக்கும் போதே புண்ணியம் க்ஷயித்து, இனி நாம் வீழப்போகிறோம் என்ற நினைப்பினால் பயம் உண்டாகும்போது மனதிலே பெருந்துக்கம் உண்டாகும். இவ்விதமாக நரகத் துன்பங்களை அனுபவித்து, மீண்டும் கர்ப்பத்தில் பிரவேசித்து மனிதன் மீண்டும் பிறக்கிறான். இவ்வாறு பல முறைகள் பிறப்பதும் இறப்பதுமாய் அலைகிறான். மேலும் பிறந்தவுடனே, பால்யத்திலோ, வாலிபத்திலோ; நடுவயதிலோ; முதுமையிலோ எப்போதோ நிச்சயமாக இறக்கிறான். பிழைத்திருக்கும்போதே பலவிதமான துக்கங்களால் சூழப்படுகிறான். பஞ்சு மொய்த்திருக்கும் பருத்திக் கொட்டையைப்போல்! மேலும் பொருளைச் சம்பாதிப்பதிலும் அதைக் காப்பாற்றுவதிலும் அதன் அழிவிலும் இஷ்டமானவருக்குத் துன்பம் நேரும்போதும் அவனுக்குப் பலப்பலத் துன்பங்களே உண்டாகின்றன.
மைத்ரேயரே! எந்தெந்தப் பொருள் மனிதருக்கு இன்பமாக இருக்கிறதோ அதுவே துன்பம் என்னும் மரத்திற்கு விதையாகின்றது மனைவி, மக்கள்; நண்பர்; பொருள்; வீடு நிலம் முதலியவற்றால் எத்தனைக் துக்கம் உண்டாகிறதோ; அந்த அளவுக்கு அவற்றால் அடையும் சுகம் இருப்பதற்கில்லை. இவ்விதமாகச் சம்சாரத்தின் துக்கமாகிய வெய்யிலால் தகிக்கப்பட்டு அலையும் மனிதனுக்கு மோக்ஷம் என்ற மரத்தின் நிழலைத் தவிர, வேறு எங்கே சுகம் கிடைக்க முடியும்? ஆகவே, கர்ப்பம், பிறவி வார்த்திக்யம் முதலானவற்றால் மனிதருக்கு உண்டாகும் தாபங்கள் ஆகிய மூன்றுக்கும் மருந்து யாது என்றால், மற்றொரு சுகத்திலும் அதிசயந் தோன்றாது இருப்பதான மகாசுகரூபமாயும் துக்கத்தின் சம்பந்தமே இல்லாததாயும் நித்தியமாயும் உள்ள பகவத் பிராப்தியே என்பது எனது கருத்து ஆகையால் அறிவுடைய மனிதர் ஈனக் குணங்கள் நிறைந்தவனாகப் பகவானை அடைய முயற்சி செய்யவேண்டும்.
முனிவரே! எந்த எம்பெருமானை அடைவதற்கு ஞானமும் கர்வமும் உபாயங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றனவோ அந்த ஞானம், ஆகமஜம் என்றும் விவேகஜம் என்னும் இரு வகையாகும். சாஸ்திரங்களால் உண்டாவது ஆகமஜம், யோக சிந்தனையில் உண்டாவது விவேகஜம். முந்தியதற்குச் சப்தப் பிரமம் என்றும் பிந்தியதற்குப் பரப்பிரமம் என்றும் பெயர். இந்த இரண்டு ஞானங்களுக்கும் உள்ள பேதமாவது, அஞ்ஞானம் என்ற அந்தகாரமானது பொருள்களை மறைப்பது போல், ஜீவாத்மா, பரமாத்மா, ஸ்வரூபங்களை மறைப்பதால் அது அந்தகாரம் போன்றேயுள்ளது. ஆகமஜஞானம், விளக்கமானது இருளை நீக்கிப்பொருளை விளங்கச்செய்வதுபோல் தேக, ஆன்மாதி மயக்கங்களை நீக்கி ஜீவபரஸ்வரூபங்களை ஒருவாறு விளக்குவதால் இது விளக்குப் போன்றதாகும். பரப்பிரம்மம் என்ற விவேகஜ ஞானம் சூரியனானது இருள் முழுமையும் அழித்து பொருள்கள் யாவற்றையும் தெளிவாக விளக்குவதைப் போல், அஞ்ஞானத்தையும் முழுமையாகப் போக்கி ஸ்வரூபங்களை பிரத்யக்ஷமாய் விளங்கச் செய்வதால், அது சூரியனைப் போன்றதாகும்.
இவ்விஷயத்தில் மநுவும் வேதாந்தத்தை அறிந்து சொல்லியிருப்பதைக் கேட்பீராக, சப்தப்பிரமம் என்றும் பரப்பிரமம் என்றும் இரண்டு பிரமங்கள் உண்டு என்று அறியவேண்டும். மனிதன் சப்தப் பிரமத்தில் தேறினால் பரப் பிரம்மத்தை அடையலாம். அதர்வண வேதம் இப்படியே சொல்கிறது. அக்ஷரம் என்று சொல்லப்படும் பிரமத்தை எந்த வித்தையால் அடையலாமோ, அதற்கு பரவித்தை என்று பெயர். கர்மங்களை அறிவிக்கும் வேதாதிகள் அபரவித்தை எனப்படும், அந்தப் பரவித்தையின் விஷயமான பிரமஸ்வரூபமானது, வேதாந்தத் தாலான்றித் தோன்றாததும், தோன்றல், மறைதல், கெடுதல், வளர்தல், குறைதல் திரிதல்களாகிய விகாரமின்றியும், வாக்குக்கும் மனதுக்கும் எட்டாமலும் தேவ மனுஷ்யாதிரூபங்கள் இல்லாமலும் கைகால் முதலிய உறுப்புக்கள் இல்லாமலும் யாவற்றையும் நியமிப்பதாகவும் எங்குமுள்ளதாகவும் பூதங்களுக்குக் காரணமாகவும் எல்லாவற்றையும் வியாபித்து ஒன்றினாலும் வியாபிக்கப்படாமலும் இருக்கிறது. ஞானிகள் எதைக் காண்கிறார்களோ, அதுவே பிரமம்! அதுதான் மேலான ஞானஜோதி! அதையே விஷ்ணுவின் உத்தம ஸ்வரூபம் என்று சுருதிகளிற் சொல்லப்பட்டுள்ளது. சூக்ஷúமமான அந்தப் பிரமத்தையே மோக்ஷம் பெறவேண்டுவோர் தியானிக்க வேண்டும். பகவான் என்ற சொல், எம்பெருமானின் அளவற்ற ஸ்வரூப, ரூப குண விபவங்களைக் குறையச் சொல்லத் தக்கது. பரமாத்மாவின் தத்துவம் எதனால் விளங்குமோ அத்தகைய துவாதச அக்ஷரத்தை அங்கமாகக் கொண்டேதே பரவித்தையாகும் மற்ற வேதபாகம் யாவும் அபரவித்தையாம் சகலாதாரமாயும் சகலாதேயமாயும் விளங்குகிற ஸ்ரீவிஷ்ணுவையே வாசுதேவபதம் போதிக்கிறது. முன்பு கேசித்வஜன் என்பவரைக் காண்டிக்கிய ஜனகர் வினாவ. அநந்தனான ஸ்ரீவாசுதேவனுடைய திருநாமத்தை நாம் சொன்னது போலவே, அவரும் சொல்லியிருக்கிறார். அதை உமக்குச் சொல்கிறேன்.
ஸ்ரீவாசுதேவ பகவான், இயல்பினால் குற்றங்களோடு கலவாத சகல கலியாண குண பரிபூரணன்! சகல பூதங்களையும் தனது சக்தியின் ஒரு சிறிய பங்கினால் சூழ்ந்திருப்பவன் தனது திருவுளப்படி, அந்தந்த தருணத்திற்கு வேண்டிய திவ்ய மங்கள விக்கிரகத்தை எடுப்பவன். அதனால் சகல உலகங்களுக்கும் நலன்களைச் சாதிப்பவன். அளவற்ற தேவை பலம் ஐசுவரியம், ஞானம், வீரியம், சக்தி முதலிய குணங்களின் ராசி போன்றவன் உயர்ந்தோரிலும் உயர்ந்தவன் ஒரு துர்க்குணமும் இல்லாதவன் உயர்ந்தவர்களுக்கும் தாழ்ந்தவர்களுக்கும் ஈச்சுரன். இத்தகைய எம்பெருமான் வியூக விபவாதி ரூபங்களினாலே வியஷ்டி ரூபனாகவும் இந்த ரூபங்களால் விளங்குவதால் வியக்தனாகவும் யாவற்றையும் எல்லாக் காலங்களிலும் எல்லா வகையிலும் ஆள்பவனாகவும், எல்லாவற்றையும் எப்போதும் தான் ஒருங்கே பிரத்யக்ஷமாய்க் காண்பவனாகவும் யாவும் பொருந்தியவனாகவும், சகல சக்திகளும் உள்ளவனாகையால் பரமேசுவரன் என்ற திருநாமத்தையுடையவனாகிறான், இவ்விதமாகச் சகல தோஷரகிதமாய், சுத்தமாய், உத்தமமாய், என்றுமே பிரகிருதிக்கு உட்படாததாய் என்றும் ஒரு படிபட்டதாயுள்ள பகவத் ஸ்வரூபமானது எதனால் அறியப்படுகிறதோ, அந்த ஆகம ஞானமும் எதனாலே காணப்படுகிறதோ அந்த விவேக ஞானமும் எதனால் அடையப்படுகிறதோ அந்தப் பக்தி ரூபமான ஞானமுமே உண்மையான ஞானம் என்று சொல்லப்படும். இதற்குப் புறம்பானதெல்லாம் அஞ்ஞானமேயாகும்!

——————–

6. கேசித்வஜ-காண்டிக்ய விவாதம்-

முன்பு சொன்னபடி, குணங்களும் விபூதிகளும் விக்கிரகமுமுள்ள பகவான், தத்துவம் உணர்த்தும் சாஸ்திரத்தினாலும் யோகத்தினாலும் காணப்படுவான். இந்த இரண்டு ஞானமும் தான் அவனை அடைவதற்குச் சாதனமாகும். ஆகையால் பிரமம் என்று சொல்லப்படும் சாஸ்திரங்களை நன்கு விசாரித்து, யோகத்தில் அமரவேண்டும். யோகத்தில் இறங்கிய பிறகு அந்தத் தத்துவ சாஸ்திரத்தை நன்றாகத் திடப்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய ஸ்வாத்தியாய யோகங்கள் இரண்டும் நன்றாய்த் தேர்ந்தால் பரமாத்மா விளக்கமாகக் காணப்படும். அந்தப் பரமாத்மாவைக் காண்பதற்குச் சாஸ்திர ஞானம் ஒரு கண் யோகம் மற்றொரு மேலான கண் பரப்பிரமமான பகவான் இந்தக் கண்களால் காணக்கூடியவனே தவிர இந்த இறைச்சியாலான கண்களால் காணக்கூடியவனல்லன் என்று பராசரர் கூறியதும் மைத்ரேயர் அவரை நோக்கி, பராசர மகானே! சகல ஆதார பூதனான பரமேசுவரனை நான் எதனால் காண முடியுமோ அத்தகைய யோகத்தை நான் அறிய விரும்புகிறேன். ஆகையால் அதை அடியேனுக்குச் சொல்லியருள வேண்டும்! என்று கேட்டார். மைத்ரேயரே! பூர்வத்தில் மகாத்மாவான காண்டிக்ய ஜனகருக்கு கேசித்வஜன் சொன்ன வகையில், அந்த யோகத்தை நான் உமக்குச் சொல்கிறேன் என்றார் பராசர மகரிஷி.
பிரமமுனிவரே! காண்டிக்கியர் என்பவர் யார்? கேசித்துவஜர் யார்? யோகத்தைப் பற்றி அவர்களிடையே சம்வாதம் நேர்ந்தது எப்படி? அதைத் தாங்கள் கிருபை கூர்ந்து எனக்குச் சொல்லியருள வேண்டும் என்று கேட்க, பராசரர் சொல்லத் துவங்கினார். தருமத்வஜர் என்ற ஜனகமகா ராஜா இருந்தார். அவருக்கு மிதத்துவஜர் என்றும் கிருதத்துவஜர் என்றும் குமாரர்கள் இருவர் இருந்தார்கள். கிருதத்துவஜர் என்பவர் எப்பொழுதும் வேதாந்த விசாரணை செய்து கொண்டிருப்பார். அவருக்குச் கேசித்துவஜர் என்று புகழ்பெற்ற மைந்தர் உண்டானார். மிதத்துவஜருக்கும் காண்டிக்யஜனகர் என்ற புத்திரர் பிறந்தார். அந்தக் காண்டிக்கியர் கர்மமார்க்கத்தில் நின்று பூமியை ஆண்டு வந்தார். கேசித்துவஜரோ, ஆன்ம வித்தையில் ஊன்றியவராய் ராஜ்ய பரிபாலனஞ் செய்து வந்தார். இப்படியிருக்க அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஜெயிக்க முயன்றனர். கேசித்வஜர் காண்டிக்கியரை, இராஜ்ஜியத்திலிருந்து துரத்திவிட்டார். காண்டிக்கியர் அற்பமான சேனையுடையவராக இருந்ததால், ராஜ்யத்தை விட்டுத் தம்முடைய அமைச்சர், புரோகிதர் ஆகியோருடன் பிறர் வரக்கூடாத ஒரு காட்டில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். ராஜ்ஜியத்திலிருந்த கேசித்துவஜரோ ஞானத்தைப் பற்றியவராய் பிரம வித்தையில் இருந்து கொண்டே, உபாசனைக்கு இடையூறு செய்யும் பாவங்களைப் போக்குவதற்காகப் பல யாகங்களைச் செய்து வந்தார்.
அவ்வாறு அவர் யாகஞ் செய்துகொண்டிருக்கும்போது, ஒரு சமயம் பிரவர்க்கியம் என்ற சடங்கில், அவிசுக்கு அவசியமான பாலைக் கொடுத்து வந்த அவரது பசுவை, காட்டில் ஒருபுலி அடித்துக்கொன்றது. அதை அந்த அரசர் கேள்விப்பட்டு, இதற்குப்பிராயச்சத்தம் என்ன? என்று ரித்துவிக்குகளைக் கேட்டார். அவர்கள் எங்களுக்குத் தெரியாது! கசேருவைக்கேளுங்கள்! என்றார்கள். அரசன் அதனால் கசேருவைக் கேட்க, அவர்பார்க்கவரைக்கேளுங்கள் என்றார். அவர் எனக்குத் தெரியாது சுனகரைக் கேளுங்கள்! என்றார். சுனகரை அரசர் கேட்க அவர்; அரசே! இந்தக் காரியம் கசேருக்கோ; எனக்கோ இந்தப்பூமியிலுள்ள மற்றொருவருக்குமோ தெரியாது. ஆனால் உன்னால் ஜயிக்கப்பட்டு உனக்குப் பகைவராக இருக்கும் காண்டிக்கிய ஜனகருக்குத்தான் இந்த விஷயம் தெரியும்! என்றார். அதைக்கேட்ட அரசன் முனிவரே! நான் இதைத் தெரிந்துகொள்வதற்காகவே; என் பகைவனிடம் செல்கிறேன். அவர் என்னைக் கொல்வாராயின் யாகபலன் எனக்கு சித்திக்கும் இல்லையென்று நான் கேட்கும் பிராயச்சித்தத்தை சொன்னால் யாகம் குறைவில்லாமல் நிறைவேற்றப்படும் என்று சொல்லி; கிருஷ்ணாஜினம் தரித்தபடி; ரதத்தில் ஏறி; காண்டிக்கியர் இருக்கும் இடம் தேடிச் சென்றார். காண்டிக்கியரோ; தம் பகைவர் தம்மைத் தேடி வருவதைக் கண்டு; கோபத்தால் கண்கள் சிவக்க; தம் வில்லை வளைத்து நாணேற்றிக் கொண்டு; கேசித்வஜரை நோக்கி, அடா! நீ கிருஷ்ணாஜின கவசத்தை அணிந்துகொண்டு; யோக்கியனைப் போல் இங்கு வந்து என்னைக் கொல்லப் பார்க்கிறாய்! நாம் கிருஷ்ணாஜினம் தரித்திருப்பதால் நம்மை அவன் அடிக்கமாட்டான் என்று எண்ணிவிட்டாய். மூடா! மான்களின் உடலில் இந்தக் கிருஷ்ணாஜின கவசம் இல்லையோ? அத்தகைய மான்களை நீயும் நானும் எத்தனை அம்புகளை எய்து கொன்றிருக்கிறோம்? ஆகையால் உன்னைப் போன்றவனை அடிக்க இந்தக் கிருஷ்ணாஜினம் தடையாகாது. நீ என் அரசைக் கைப்பற்றிய பகைவன்! ஆகையால் நீ யாகத்தில் இருந்தாலும் உன்னைக் கொல்வேன். என்னிடமிருந்து நீ உயிரோடு மீள மாட்டாய்! என்றார் காண்டிக்கியர்.
அதைக் கேட்டதும் கேசித்துவஜர் அமைதியான குரலில் காண்டிக்கியரே! நான் இப்போது உம்மிடம் ஒரு தருமசந்தேகம் கேட்க வந்தேனேயன்றி உம்மைக் கொல்வதற்கு வரவில்லை. இதை நீர் யோசித்து உமது கோபத்தையாவது விட்டுவிடும்; அல்லது என்மீது உமது பாணத்தையாவது விட்டுவிடும்! என்றார். அதைக்கேட்டு காண்டிக்கியரின் அமைச்சர்; புரோகிதர் முதலியோர் இரகசியமாக; சத்துரு கைவசத்தில் வந்தவுடன் அவனைக் கொல்வது அவசியம் அந்தப் பகைவன் அழிந்தால், இந்தப் பூமி முழுவதும் நமது கைவசம் ஆகும் என்றார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்ட காண்டிக்கியர் அவர்களைப் பார்த்து, நீங்கள் சொல்வது சரிதான் பகைவனைக் கொன்றால் பூமி நமக்குச் சுவாதீனமாகும் அவனைக் கொல்லாவிட்டாலோ நமக்கு மேல் உலகம் சுவாதீனப்படும். அவனுக்கு பூமி கைவசத்தில் இருக்கும். இந்த உலக வெற்றியைவிட மேலும் வெற்றியே சிறப்புடையது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்த உலக வாழ்க்கை சிறிது காலம்தான் மேல் உலக வாழ்வோ நீடித்திருப்பது ஆகையால் என் பகைவனை நான் கொல்லாமல், அவன் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்வதே நல்லதாகும்! என்று சொல்லிவிட்டு கேசித்துவஜரை வரவேற்று, நீர் கேட்க வேண்டிய கேள்வியைக் கேளும் எனக்குத் தெரிந்தவரை நான் உமக்குப் பதில் சொல்கிறேன் என்றார்.
கேசித்துவஜர், யாகத்திற்கு உபயோகமான பசு இறந்த செய்தியைச் சொல்லி, அதற்குரிய பிராயச்சித்தத்தைப் பற்றிக் கேட்டார். காண்டிக்கியரும், சாஸ்திர விதிப்படியான பிராயச்சித்தத்தைச் சொன்னார். தமது சந்தேகம் தீர்ந்தவுடன் கேசித்துவஜர்; காண்டிக்கியரிடம் விடைபெற்று; யாகசாலைக்குச் சென்றார். விதிப்படிக் கிரியைகளைச் செய்து யாகத்தை நிறைவேற்றி; அவபிரத ஸ்நானம் செய்து செய்ய வேண்டியவற்றை யெல்லாம் செய்தும் பின்வருமாறு யோசிக்கலானார். நாம் நமது யாகத்துக்கு வந்த பிராமணரையெல்லாம் பூஜித்தோம். இருத்துவிக்குகளுக்குச் சன்மானமளித்தோம். யாசகர்களுக்குத் தானம் செய்தோம். இப்படி உலகத்துக்கு ஒப்புரவான காரியத்தை நாம் தக்கபடி செய்திருந்தும் நம்முடைய மனம் ஏன் செய்ய வேண்டியதைச் செய்யாததைப் போல் குறைகொண்டிருக்கிறது? என்று சிந்தித்தார். பிறகு; ஓஹோ! தாம் எல்லாஞ் செய்தும்; நமக்குப் பிராயச்சித்தத்தை உபதேசித்த காண்டிக்கியருக்குக் குருதக்ஷிணையைக் கொடாமற் போனோம் அல்லவா? என்று நினைத்துக்கொண்டு; கேசித்துவஜர் மீண்டும் தமது தேரில் ஏறி; காண்டிக்கியர் வசிக்கும் காட்டிற்குச் சென்றார். மறுபடியும் தம்முடைய பகைவன் எதிரில் வருவதைக்கண்டதும் காண்டிக்கியர் தம்முடைய ஆயுதத்தைக் கையில் ஏந்தி நின்றார். அதைக்கண்டதும் கேசித்துவஜர்; காண்டிக்கியரை நோக்கி ஓ மகானுபவரே! நான் உமக்குத் தீங்கு செய்ய வரவில்லை. கோபிக்கவேண்டாம் உமக்குக் குருதக்ஷிணை கொடுக்கவே வந்தேன் என்றார். அதனால் காண்டிக்கிய ஜனகர் மறுபடியும் தமது அமைச்சரிடம் எதைக் கேட்கலாம்! என்று ஆலோசித்தார். அதற்கு அமைச்சர் அவனது ராஜ்யம் முழுவதையும் உமக்குக் குருதட்சணையாகக் கொடுத்துவிடும்படிக் கேளும் புத்திசாலிகள் சமயம் வாய்த்தபோது தம்முடைய சேனைகளுக்குத் துன்பமில்லாமல் ராஜ்யத்தைச் சம்பாதிப்பார்கள்! என்றார். ஆனால் காண்டிக்கியர் சிரித்துக்கொண்டே; அமைச்சரே! சிறிது காலமே நிற்கத்தக்க இராஜ்யத்தையா என்னைப் போன்றோர் விரும்புவார்கள்? நீங்கள் அனைவரும் பொருளைச் சம்பாதிக்கும் அமைச்சர்கள் அல்லவா? இந்தச் சம்சாரத்திலேபரமார்த்தம் ஏது? அது எப்படிக் கிடைக்கும் என்ற விஷயத்தில் நீங்கள் ஒன்றுமே அறியாதவர்கள்! ஆகையால் நீங்கள் சொன்னது சரி தான்! என்று அவர்களிடம் சொல்லிவிட்டுக் கேசித்துவஜரிடம் வந்து ஐயா! நீர் அவசியம் குரு தக்ஷிணை கொடுக்கத்தான் வேண்டும் என்று நினைக்கிறீரா? என்றார். அதற்கு அவர், ஆம் என்றவுடன், அவரைப் பார்த்து, அப்படியானால் நீர் ஆன்ம ஞானவித்தையில் தேறிய வராகையால் எனக்கு நீர் குருதக்ஷிணையாக சம்சாரக் கிலேசம் போகத்தக்கதான அந்த ஞானத்தைச் சொல்ல வேண்டும்! என்றார்.

———————-

7. யோக வழி-

கேசித்துவஜர், காண்டிக்கியரை நோக்கி, காண்டியக்கியரே நீங்கள் ஏன் பகைப் பூண்டற்றதான ராஜ்யத்தை விரும்பவில்லை? க்ஷத்திரியர்களுக்கு ராஜ்யத்தைக் காட்டிலும் பிரியமானது வேறொன்றும் இராதே! என்றார். அதற்குக் காண்டிக்கியர் கேசித்துவஜரே! நான் ஏன் உம்முடைய ராஜ்யத்தை வேண்டவில்லையோ அதற்கான காரணத்தைக் கூறுகிறேன். கேளும் இந்த ராஜ்ய விஷயத்தில் விஷயமறியாதவரே ஆசைப்படுகிறார்கள் நீர் சொன்னது போலவே பிரஜைகளைக் காப்பதும் விரோதிகளைத் தர்ம யுத்தஞ் செய்து வதைப்பதும் க்ஷத்திரியருக்குத் தருமம்தான். ஆயினும் ராஜ்யத்தைக் காப்பதில் வல்லமையில்லாதவனாயும் ஆசையற்றவனாயும் இருக்கும் எனக்கு நீர் அபகரித்துக் கொண்ட ராஜ்யத்தை விரும்பாதது குற்றமாகாது. இந்தக் கருமத்தை நடத்தச் சக்தியிருந்தும் நடத்தாமல் விடுவதே குற்றமாகும். இந்த ராஜ்யத்தில் எனக்கு ஜன்மாந்தர கர்மங்களின் பயனான போகங்களை அனுபவித்துக் கழிப்பதிலேயே ஆசையிருந்தது. இது போகத்திலுள்ள ஆசை! ஏனென்றால் இவ்வாசை பொருளை அனுசரித்திருக்கிறதே யல்லாமல் கர்மத்தை அனுசரித்திருக்கவில்லை. மேலும் க்ஷத்திரியர் யாசித்திருப்பதைத் தர்மம் என்று பெரியோர்கள் அங்கீகரிப்பதில்லை. இந்தக் காரணங்களாலேயே நான் கர்மங்களில் சேர்ந்த இந்த ராஜ்யத்தை யாசிக்கவில்லை. பொருள்களின் உண்மையை அறியாதவராய் எனது என்ற வீண் அபிமானத்தால் மனம் இழுக்கப்பெற்று நான் என்னும் அகங்காரமாகிய கொடிய கள்ளையுண்டு மனம் மயங்கியிருப்பவர்களேயல்லாமல் என் போன்றோர் ராஜ்யத்தை விரும்புவதில்லை! என்றார் காண்டிக்கியர். அதைக்கேட்டு மகிழ்ந்த கேசித்துவஜர் காண்டிக்கியரே நீர் சொன்னது எனக்கும் சரியானது! ஆனால் நான்கர்மத்தினால் யோக விரோதிகளான காமக் குரோதாதிகளைப் போக்குவதற்காக, அரசாட்சியையும் யாகங்களையும் செய்து வருகிறேன். போகங்களினால் புண்ணிய க்ஷயத்தையும் செய்து வருகிறேன். நமது குலத்தில் ஆனந்தமானவரே! உமக்கோ, அதிர்ஷ்டவசத்தால் மனம் விவேகம் என்ற ஐசுவரியத்தைப் பொருந்தியுள்ளது. ஆகையால் அவித்தையின் சொரூபத்தைச் சொல்கிறேன் கேளும்.
ஆன்மாவல்லாத தேகாதிகளில் ஆன்மா என்ற நினைப்பும், தனதல்லாத அந்தந்தப் பொருளிலே தனது என்ற நினைப்பும், இந்த இரண்டும் சம்சாரமாகிய மரத்திற்கு விதையாகின்றன. தேஹியானவன் அஞ்ஞானவிருளால் மூடப்பட்டு பஞ்சபூத மயதேகத்தில், நான் எனது என்ற புத்தியைக்கொள்கிறான். ஆகாயம், வாயு, அக்கினி, ஜலம் பிருதிவி என்பவைகளுக்கு வேறானதாக ஆன்மா இருக்க தேகத்தை ஆன்மா என்று எவன் நினைக்கக்கூடும்? அதுவுமின்றி நிலம், வீடு பிறந்த புத்திரர்கள் பேராதிகள் ஆகியவற்றை எப்படித் தன்னதாக நினைக்கலாம்; இப்படி நினைப்பது அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்தினால்தான், இந்த உடலின் போகத்துக்குரிய காரியங்களையே மனிதர்கள் செய்கிறார்களே தவிர ஆத்ம போகத்துக்காக ஒன்றும் செய்கிறார்களில்லை. ஆன்மாவுக்குத் தேகம் வேறானதால் இப்படிச் செய்ததெல்லாம் பந்தத்திற்கே காரணமாகின்றன. மண் வடிவான மாளிகை மண்ணினாலும் நீரினாலும் பூசப்படுவதைப்போலவே, பிருதிவி மயமான இந்த உடலும் அன்னபானங்களாகிய மண் நீர்களினாலே பூசப்படுகிறது. பஞ்சபூத ரூபங்களான போகப் பொருள்களினாலே பஞ்சபூத ரூபமான தேகம் திருப்தி செய்யப்படுமானால் தேகத்தின் வேறான ஆன்மாவுக்கு இந்தப் போகங்களினாலேயே உண்மையான போகம் எப்படியுண்டாகும்? மேலும் இந்த ஆன்மா அநேகவாயிரம் ஜனனங்களில் சம்சாரம் என்ற வழியில் நடந்து, வாசனை என்னும் புழுதி படிந்தவனாய் மயக்கம் என்னும் சிரமத்தை அடைகிறான். இப்படி வருந்திய ஆன்மாவுக்கு எப்பொழுது ஞானம் என்னும் வெந்நீரால் அந்தப் புழுதி கழுவப்படுமோ அப்போது அந்த மயக்க வருத்தம் தீர்ந்து போகும் அது தீர்ந்தால் புருஷனின் மனம் குணப்பட்டு, வேறு அதிசயமில்லாததும் துக்கம் இல்லாததுமான மோக்ஷத்தையடைவான். மோக்ஷபயன்காம பயனைப்போல் வேறாக வரவேண்டுவதென்று இந்த ஆன்மா நிர்மல ஞானரூபியாதலால் இயல்பிலேயே மோக்ஷசுகரூபமாகவே இருக்கிறது. துக்கமான அஞ்ஞான மயங்களான ராகாதிகள் பிரகிருதியின் தன்மைகளே அல்லாமல் கன்ம தர்மங்கள் அல்ல. அது எவ்விதமெனில் தண்ணீருக்கு இயற்கையில் வெப்பம் இல்லாதிருக்க, அக்கினியோடு சேர்ந்த பாத்திர சம்பந்தத்தினால் தண்ணீர் வெப்பம் பெற்று தொனி எழுச்சி முதலியவற்றைச் செய்வதுபோல, தாபத்திரயத்தோடு கூடிய பிரகிருதியின் சம்பந்தத்தினாலே தோஷமுள்ளவனாகி அந்தப் பிரகிருதியின் தர்மங்களான பசி தாகம் முதலியவற்றை அடைகிறான். இந்த ஆன்மாவோ, அந்தப் பிராகிருதங்களுக்கு வேறாய் விகாரமில்லாது இருப்பவன்! அவித்தையின் காரணத்தை நான் உமக்குச் சொன்னேன். இதனால் வரும் கிலேசங்களுக்கு க்ஷயமுண்டாக்குவது யோகமேயன்றி வேறில்லை! என்றார். மகா அறிஞரே! யோகம் அறிந்தவர்களில் சிறந்தவரே! அந்த மகாயோகத்தை நீர் எமக்குச் சொல்லவேண்டும். இந்த நிமி சந்ததியில் நீரே யோக சாஸ்திரப் பொருளறிந்தவராக இருக்கிறீர்! என்று காண்டிக்கியர் கேட்டார்.
கேசித்துவஜர், அவரை நோக்கி, காண்டிக்கியரே! யோக ஸ்வரூபத்தைச் சொல்கிறேன், கேட்பீராக இந்த யோகத்தில் இறங்கியவன், பிரமத்தில் லயத்தை அடைந்து மறுபடியும் திரும்பமாட்டான். மனிதர்களுக்கு மனம் விஷயங்களைப்பற்றி நின்றால், பந்தத்துக்குக் காரணமாகும். அவற்றைப் பற்றாமல் இருந்தால் அது மோக்ஷத்துக்குக் காரணமாகும், ஆகையால் பந்தத்துக்கும் மோக்ஷத்துக்கும் காரணம் மனம்தான். ஆகையால் பிரகிருதி புருஷேஸ்வர ஞானமுள்ளவன், மனதை விஷயங்களிலிருந்து திருப்பி அதைக்கொண்டு பரப்பிரமமான சர்வேசுவரனை மோட்சத்துக்காகத் தியானிக்க வேண்டும். அப்படித் தியானிக்கப்பட்ட அந்தப் பிரமம் மாற்றுதலான அந்த யோகியை அயஸ்காந்தம் தன் சக்தியாலே இரும்பைத் தன்னிலைக்குக் கொண்டு வருவதைப் போலவும் அக்கினியானது அழுக்குடைய பொன்னை தனது சக்தியால் சுத்தப்படுத்தித் தன்னைப்போல் விளங்கச் செய்வது போலவும், தனது தன்மையை அடைவிக்கும் தன் முயற்சியை வேண்டிய தாய் இடைவிடாமல் நிற்றலையுடைய யாதொரு மனநிலையுண்டோ அதைப் பிரமத்திற் கூட்டுவதே யோகமாகும். இத்தகைய முமுக்ஷúவே யோகியாவான். இவன் யோகத்திலிருக்கும்போது யுஞ்சானன் அல்லது யோகயுக் என்று வழங்கப்படுவான். பிறகு பரப்பிரம்ம சாக்ஷõத்காரம் பெற்றபோது யுக்தன் அல்லது விநிஷ்பந்நஸமாதி என்று வழங்கப்படுவான். பயிற்சியிலுள்ள முந்தியவனுக்கு அந்தராயங்கள் என்ற இடையூறுகளினால் மனமானது கெடுக்கப்படுமாயின் பின்னுண்டாகும் பல பிறவிகளில் யோகம் தலைக் காட்டியபோது முக்தியுண்டாகும். யோகி மற்றொன்றையும் விரும்பாதவனாகித் தனது மனதுக்கு யோக்கியதை வருவதற்காகப் பிரமசரியம், அஹிம்சை, சத்தியம் திருடாமை ஏற்காமை வேத அத்தியயனம் சுத்தமாக இருத்தல் மகிழ்ச்சியுடனிருத்தல் தவம் செய்தல் ஆகியவற்றைச் செய்து கொண்டு பரப்பிரமத்தினிடத்திலே மனதைப் பற்றச் செய்ய வேண்டும், இயம நியமங்களாகிய இவை ஏதேனுமோர் பயனைக் கருதியவர்களுக்கு அந்தப் பயனைத் தரும் ஒன்றையும் கருதாதோருக்கு மோக்ஷத்துக்கு ஏதுவாகும். இந்த நியம, நியமாதிகளுடன் கூடிய யோகியானவன் பத்திராசனம் முதலிய ஆசனங்களில் ஏதேனும் ஓராசனத்தைக் கைக்கொண்டு பயிலல் வேண்டும். பிராணன் என்ற காற்றை பயிற்சியினாலே வயப்படுத்தவதே பிராணாயாமம் எனப்படும். இது சபீசம் என்றும் நிர்பீசம் என்றும் இருவகையாம். மூர்த்தித் தியானமந்திர ஜபங்களோடு கூடியது சபீசம்! அதற்றது நிர்ப்பீசம்! இந்தப் பிராணாயாமம் பிராணத்தினால் அபானத்தைத் தடுத்தலும் அபானத்தினால் பிராணத்தைத் தடுத்தலும் இரண்டையும் ஒருங்கே தடுத்தலுமாகிய பேதங்களால் ரேசகம் பூரகம் கும்பகம் என்று மூன்று வகைப்படும். அப்யரசியான யோகி செய்யும் சபீசம் அல்லது சரலம்பனம் என்ற பிராணாயாமத்துக்கு ஆலம்பனம் ஸ்ரீ அனந்தனுடைய ஸ்தூலரூபம் என்று அறியும் சப்தாதி விஷயங்களில் நிற்கும் இந்திரியங்களைத் தடுத்துச் சித்தத்தை இசையச் செய்வது பிரத்தியாகாரமாகும். இதனால் சஞ்சலப்படும் இந்திரியங்கள் மிகவும் வயப்படுகின்றன. அவை வசப்படாதபோது யோகியானவன் யோகத்தைச் சாதிக்கமாட்டான். இவ்விதம் பிராணாயாமத்தினால் காற்றும் பிரத்தியாகாரத்தினால் இந்திரியங்களும் வசப்பட்டபிறகு சுப ஆசிரயத்திலே மனதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு கேசித்துவஜர் சொல்லி வரும்போது காண்டிக்கியர் குறுக்கிட்டு மகானே! மனதுக்கு எது சுபாசிரயமோ அதைச் சொல்ல வேண்டும்! எந்தச் சுபாசிரயத்தை பற்றிய மனமானது ராகாதி தோஷங்களால் உண்டாகும் குறைகளைப் போக்குமோ; அத்தகையதை அறிய விரும்புகிறேன் என்று கேட்டார். மனதுக்கு ஆசிரயம் பிரமம். அது மூர்த்தம், அமூர்த்தம் என்று இயல்பால் இருவகைப்படும்! மூர்த்தமாவது சரீரத்தோடு கூடியது; அது ஹிரண்ய கர்ப்பன் முதலான பந்தஸ்வரூபம் அமூர்த்தமாவது சரீரம் அற்றது. அது முக்க ஸ்வரூபம் இந்த ஸ்வரூபம் பரம் என்று சொல்லப்படும். இத்தகைய மூர்த்தா மூர்த்தமயமான பிரபஞ்சம் யாவும் பிரமபாவனை, கர்மபாவனை உபயபாவனை ஆகவுள்ளன பாவனையாவது, பொருள்களை இடைவிடாமல் நினைத்தல்! பிரமபாவனையாவது பிரமத்தைப் பாவித்தல்! கருமபாவனையாவது கர்மத்தைப் பாவித்தல் உபயபாவனையாவது இரண்டையும் பாவித்தலாகும்; சனந்தனர் முதலிய யோகிகள் பிரமபாவனையோடு கூடியவர்கள் தேவர்களாதி யோராகத் தாவரமந்தமாக உள்ளவரனைவரும் கர்மபாவனையோடு கூடியவர்கள் இரணிய கர்ப்பன் முதலியோர் போதமும் அதிகாரமும் உடையவர்களாகையால் உபயபாவனையுடையோராவர். விசேஷமான ஞானகர்மங்கள் யாவும் க்ஷயிக்காமல் இருக்கும் வரையில் முன்பு சொன்ன விஸ்வரூபமான பிரமம் இருக்கிறது. தேவ மனுஷ்யாதி பேத ஞானத்தால் ஞானம் வேறுபட்ட ஜீவர்களைக் காட்டிலும் பரம் என்ற ரூபம் வேறானதாகவுள்ளது. அது ஜாதி முதலிய சகல பேதங்களும் அற்றது. வாக்குக்கும் எட்டாததாய் குறைவு முதலிய விகாரங்களின்றி என்றுமே ஒன்றாக, சுயம் பிரகாசமாயுள்ள ஞானஸ்வ ரூபமான வஸ்து! அதுதான் பரமாத்மாவான ஸ்ரீவிஷ்ணுவின் அமூர்த்த ஸ்வரூபமாகும்! முன்னே சொன்ன விசுவரூபத்தைக் காட்டிலும் விலக்ஷணமாய் மிகவும் உத்தமமாயுள்ளது! அரசே! அது யுஞ்சானாலே சிந்திக்கக்கூடாதது. ஆகையால் அந்த ஸ்ரீஹரியின் ஸ்தூலமான விசுவரூபத்தையே சிந்திக்கவேண்டும். வாசு தேவ அமிசமாய் பிரஜாபதியாக இருக்கும் இரணிய கர்ப்பனும், மருத்துக்களும், வசுக்களும்; ருத்திரர், சூரியர், நக்ஷத்திரங்கள், கிரகங்கள், கந்தர்வர், யக்ஷர், தைத்தியர் முதலியோரும் சகலமான தேவயோனி விசேஷங்களும், மனுஷ்யரும் மிருகங்களும், மலைகளும், மரங்களும், கடல்களும் நதிகளும் மற்றும் உள்ள சகல பூதங்களும் பூதங்களின் காரணங்களும் சேதனாசேதன ரூபமாய் ஏகபாதம்; துவிபாதம் அநேக பாதம் உள்ளதும் பாதமில்லாததும் சகலமும் ஸ்ரீஹரிபகவானின் மூர்த்த ஸ்வரூபமேயாகும்! இது சிந்திக்கக் கூடியது. ஆயினும் மூன்று பாவனைகள் உள்ளத்தால் சுத்தமன்று இத்தகைய இந்த உலகம் எல்லாம் பரப்பிரம சொரூபியான ஸ்ரீவிஷ்ணுவின் சக்தியினாலே வியாபிக்கப்பட்டிருக்கிறது. முன்பு சுத்த ஞான பிரமஸ்வரூபம் என்று சொன்னதே பரமான விஷ்ணு சக்தி இந்த இரண்டும் அல்லாமல் அவித்தை என்றும் கர்மம் என்றும் சொல்லப்பட்ட மூன்றாவது சக்தியும் உண்டு. இதனால் சூழப்பட்டே ÷க்ஷத்திரஞ்ஞன் என்னும் சக்தி; பரவி நிற்கிற சகல சம்சார தாபங்களையும் பெறுகிறது.
இதனால் மறைக்கப்பட்டுத்தான் தாரதம்மியமுள்ளதாய் காணப்படுகின்றது. எப்படியெனில், அசேதனங்களிலே இந்தச் சக்தி மிகவும் அற்பமாகவுள்ளது. தாவரங்களில் இது கொஞ்சம் அதிகமாகவும், ஊர்கின்ற ஜந்துக்களில் அதற்கும் அதிகமாயும் மிருகங்கள்; பறவைகள், மனிதர் பக்ஷிகள் கந்தர்வர்கள் தேவதைகள் ஆகிய இடங்களில் இந்தச் சக்தி மிகவும் இருக்கிறது. தேவதைகளிடம் இருப்பதைக் காட்டிலும் தேவேந்திரனிடம் அதிகம். பிரஜாபதியிடமோ அவனைவிட அதிகம். இரணிய கர்ப்பனிடத்தில் அதிலும் மேற்பட்டுள்ளது. அரசே! இந்தச் சகல ரூபங்களும் எம்பெருமானுடைய சரீரங்களேயாம்! இவையெல்லாம் ஆகாயத்தினால் முழுவதும் வியாபிக்கப்பட்டது போல், எம்பெருமானின் சக்தி; சங்கல்பத்தினாலே வியாபிக்கப்பட்டிருக்கிறது! யோகிகளால் தியானிக்கத்தக்கப் பிரமமான அந்த விஷ்ணுவினுடைய ரூபம் வித்வான்களால் சத்து என்று சொல்லப்படும். அமூர்த்த ரூபமாகும். இந்தச் சகல சக்திகளும் நிலைப் பெற்றிருப்பதாயும், விசுவரூப விலக்ஷணமாயும்; குணாதிகளாலே பெருமை பெற்றிருப்பதான ஸ்ரீஹரியின் வேறு ரூபம் ஒன்று உண்டு. எல்லாச் சகதியுமுள்ள அந்த ஸ்வரூபம்தான், லீலா விசேஷத்தினால் தேவதைகள், திரியக்குகள், மனிதர் முதலானோருடைய செய்கைகளுள்ள அவதாரச் சிறப்புக்களைச் செய்கிறது. அப்பிரமேயனான அந்த எம்பெருமானாலே அவதார ரூப வியாபாரமானது, லோகோபகாரத்துக்காகத் திருவுள்ளம் பற்றப்பட்டதேயன்றி மற்றவர்களுக்குப் போலக் கர்மத்தைப் பற்றி அறியப்பட்டதன்று ஆகையால் இது சகல ஜாதிகளிலும் வியாபித்ததாயும் இருக்கிறது. விஸ்வரூபனாகிய அவனுடைய இந்த ரூபம் எல்லாப் பாதகங்களையும் போக்கும்படியானதினால், ஆன்மாவுக்குத் தூய்மையுண்டாகும் பொருட்டு யோகப் பயிற்சி செய்யப்புகுந்வன் இந்த ஸ்வரூபத்தையே தியானிக்க வேண்டும். அக்கினியானது எப்படிக் காற்றுடன் சேர்ந்து, மஹாச் சுவாலைகள் வளரப்பெற்று, ஒரு புதரைக் கொளுத்தி நாசஞ் செய்யவல்லதோ, அப்படியே யோகிகளின் இதயத்தில் இருந்து ஸ்ரீமகாவிஷ்ணு சமஸ்த பாதங்களையும் தகித்து அருள்வார். ஆகையால் சமஸ்த சக்திகளுக்கும் ஆதாரமான அந்தத் திவ்வியத்திருவடிவிலே மனதை நிறுத்தவேண்டும். அது தான் தூய்மையான தாரணை எனப்படும்! அரசே! எங்கும் திரிந்து அலைந்த பிறகு அந்த விஷயத்தைப்பற்றி அசையாமல் இருக்கும் மனதுக்கு மூவகைப்பட்ட பாவப் பாவனைகளைக் கடந்த அந்த ஸ்வரூபந்தான், யோகிகளுக்குரிய மோக்ஷ ஏதுவான சுபாசிரயம் என்று அறிவீராக. அரசே! மற்றும் இதயத்துக்கு ஆசிரயமான தேவாதி ஸ்வரூபம் யாவும் கருமவயப்பட்டவை. ஆகையால் அசுத்தங்களேயாம். ஆகையால் மற்றவற்றை விரும்பாமல், அந்த எம்பெருமானுடைய தூய்மையான மூர்த்தரூபத்தைத் தியானிப்பதே தாரணையாகும். சித்தத்தில் தரிப்பது ஆதாரமின்றித் தாரணை கூடாது. ஆகையால் ஸ்ரீ ஹரியினுடைய எந்தரூபம் சிந்திக்கப்பட வேண்டுமோ அந்தப் பகவத் ஸ்வரூபத்தைச் சொல்கிறேன். கேட்பீராக;
பிரசன்னமான திருமுகமும், அழகிய தாமரையிதழ் போன்ற திருவிழிகளும் சமமான திருச்செவிகளும் விசாலமான பலகை போன்ற திருநெற்றியும், அழகிய செவிகளில் தரித்த அழகிய குண்டலங்களும் வலம்புரிச் சங்கு போன்ற கண்டமும், பரந்ததும் ஸ்ரீயும் ஸ்ரீவச்சம் என்ற திருமறுவும் பொருந்தியதுமான திருமார்பும், மடிப்புகளால் மூன்று பிரிவுள்ளதும் ஆழ்ந்த கொப்பூழ் உள்ளதுமான திருவுதரமும், நீண்ட எண்புயங்களும் அல்லது நாற்புயங்களும், சமமான திருத்தொடைகளும், கணுக்கால்களும், தாமரை மலர் போன்ற திருத்தாள்களும், நிர்மலமான பீதாம்பரமும், கிரீடஹார கேயூர கடகாதி திவ்வியாபரணங்களும் விளங்குகின்ற ஸ்ரீவிஷ்ணுவாகிய பரப்பிரமத்தைத் தியானிக்க வேண்டும். மேலும் சார்ங்கம், சங்கம் கதை கட்கம் சக்கரம், அக்ஷமாலை ஆகியவற்றை திருக்கரங்களிலே தாங்கி மற்ற விகண்டில் வரஹஸ்தமும், அபய ஹஸ்தமும் விளங்கத் தியானிக்கவேண்டும். சதுர்ப் புஜமாகத் தியானிப்பதானால் சங்கு, சக்கர, கதைகளும், தாமரைமலரும் ஏந்தியுள்ளதாய்த் தியானிக்கவேண்டும். இத்தகைய திவ்விய ஸ்வரூபத்தை நிலை நின்ற மனத்தால் தாரணை உறுதிப்படும் வரையில் தியானிக்க வேண்டும். தாரணை உறுதிப்படுதலாவது நடக்கும்போதும், உட்காரும் போதும் வெறெந்தச் செய்கைசெய்யும் போதும் அந்த ஸ்வரூபம் மறையாமல் தோன்றிக் கொண்டேயிருப்பதேயாகும். அப்படியானால்தான் தாரணை சித்தியானது என்று அறியலாம். இவ்விதம் தியானம் உறுதியான பிறகு, சங்க சக்கராதி ஆயுதங்களில்லாமல் அக்ஷமாலை மட்டுமே உள்ளதாயும் மிகவும் சாந்தமாயும் அந்த ஸ்வரூபத்தைச் சிந்திக்கவேண்டும். இந்தத் தாரணையும் முந்திய தாரணையைப்போல் ஸ்திரப்பட்டவுடன், கிரீடம் முதலிய திவ்விய பூஷணங்களை ஒழித்து, அந்த ரூபத்தைத் தியானிக்க வேண்டும். இவ்விதமாக ஆயுதங்களும் ஆபரணங்களும் திருக்கை முதலிய உறுப்புக்களும் நன்றாகக் கிரகிக்கப்பட்ட பிறகு, அந்தந்த உறுப்புக்குப் பிரதானமான ஒரு திருமேனியோடு கூடியவனாக அந்த எம்பெருமானைச் சிந்திக்க வேண்டும். இவ்விதம் தாரணை செய்த பிறகு, முன்னே சொன்ன அவயவங்களையுடைய அவயவியினிடத்தே மனதைச் செலுத்த வேண்டும். அந்தத் தாரணையிலேயே சித்தம் நிலைப்பதே தியானமாகும்! இது முன்சொன்ன ஆறு அங்கங்களால் ஏற்படுத்தப்படும். அத்தகைய சொரூபத்துக்கே நாமரூபாதி கற்பனைகள் இல்லாத சொரூபத்தைத் தியானங்கொண்ட மனத்தாலே கிரகிப்பது சமாதி எனப்படும்.
காண்டிக்கியரே! அடையத் தக்கதான பரப்பிரமத்தை அடைவிப்பது இந்த விஞ்ஞானமேயாகும். இதைக்கொண்டு அடைவிக்க வேண்டியது மூன்று பாவனைகளையும் கடந்த ஆன்மா! மாயையால் மறைக்கப்பட்ட ஸ்வரூபனாக இருந்த ஆன்மா, இந்தச் சாதனத்தையுடையவன். இந்த ஞானமே சாதனம். இந்த ஞானமானது அவனுக்கு மோக்ஷம் என்ற காரியத்தை உண்டாக்கிப் பிறகு திரும்பிவிடும். அதனால் இந்த ஆன்மா பரமபிரமத்தினுடைய குற்றமின்மை முதலிய தன்மைகள் உண்டாகப் பெற்றவனாய் அந்தப் பரமாத்மாவோடு வாசியற நிற்கும். அவனுக்கு முன்பு இருந்த பேதமானது அஞ்ஞானத்தால் வந்ததேயாம். ஞான ஸ்வரூபமான ஆன்மாவிலே தேவ மனுஷ்யாதி பேதத்தை உண்டாக்கும்படியான அஞ்ஞானமானது வேரற்றுப் போகுமளவில், ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இல்லாத வித்தியாசத்தை எவன்தான் கற்பனை செய்ய இயலும்?
காண்டிக்கியரே! நீர் கேட்ட அஷ்டாங்க யோகத்தை நான் உமக்குச் சுருக்கமாகச் சொன்னேன். இன்னும் உமக்கு நான் சொல்ல வேண்டுவதும் செய்யவேண்டுவதும் யாது? என்று கேசித்துவஜர் கேட்டார். அதற்கு காண்டிக்கியர், ஓ கேசித்துவஜரே! யோக சொரூபம் அறியும்படி நீர் செய்த உபதேசத்தால் என் சித்தத்தின் மலம் முழுவதும் அழிந்தது. அதனால் யாவும் எனக்குச் செய்யப்பட்டவையாயின. இப்போது நானும் எனக்கு என்று சொன்னதும் சரியானதல்ல, ஆயினும் பரமாத்தும சாக்ஷõத்தன்மை பெற்றவர்களுக்கும் நான் எனது என்று சொல்லாமல் பேசவே முடிவதில்லையே? நான் எனது என்பது அந்யதா ஞானமாம். இதனால்தான் ஆடு, மாடு, ஆண், பெண் முதலிய வழக்கங்கள் உண்டாகின்றன. பரமார்த்தமான ஆன்ம ஸ்வரூபமோ சொல்லுக்கு எட்டாதது. ஆகையால் சொற்களாலே சொல்லப்படாதது. இனி தேவரீர் தம் இடத்திற்குப் போகலாம் என்று சொல்லி அவருக்குத் தக்கபடி உபசாரம் செய்தார். கேசித்துவஜரும் தம் பட்டணத்துக்குப் போய்விட்டார்.
பிறகு, காண்டிக்கியர் குமாரனை அரசனாக அமர்த்திவிட்டு, ஸ்ரீகோவிந்தனிடம் மனம், வைத்து யோக சிந்தனையின் பொருட்டு, அதற்குத் தகுதியான ஒரு வனத்துக்குச் சென்று, ஒரே பிடிப்புடைய புத்தியுடன் யமாதி குணங்களுடன் கூடி நின்று நிர்மலமான ஸ்ரீவிஷ்ணு என்ற திருநாமமுடைய பிரம்மனிடத்திலே நாம ரூபகர்மங்கள் வேரோடு அற்று நிற்பதாகிய லயத்தையடைந்தார். கேசித்துவஜரும் மோக்ஷத்துக்காகத் தரும கர்மங்களையெல்லாம் போக்கும்படியான முயற்சியுடன் ராஜ்ய சம்பந்தமான விஷயங்களை அனுபவித்துக் கொண்டும், பயனைக் கருதாமலேயே கர்மங்களைச் செய்து, கர்ம பயன்களைக் கழித்ததால், பிரார்த்தம் யாவும் நாசமாக, சகல தாபங்களும் க்ஷயிப்பதாகிய மோக்ஷ சித்தியை அடைந்தார்.

——————-

8. நூற் பயன்-

மைத்ரேயரே! சாசுவதமான பிரமத்தோடு சேர்வதாகிய மோக்ஷம் என்று சொல்லப்படும் மூன்றாவது பிரளயம் எதுவோ, அந்த ஆத்தியந்திகப் பிரளயத்தை நான் உமக்குச் சொல்லிவிட்டேன். இவ்விதமாக, சர்க்கம், பிரதிசர்க்கம், வம்சம், மனுவந்தரம், லம்சானு சரிதம் முதலியவற்றைத் தெள்ளத் தெளிவாக அறிவித்தேனல்லவா? இந்த ஸ்ரீவிஷ்ணு புராணம் எல்லாவிதமான பாதகங்களையும் நாசஞ்செய்யவல்லது. எல்லாச் சாஸ்திரங்களுக்கும் மேம்பட்டது. புருஷார்த்தங்களை நன்றாக விவரிக்கும் திறனையுடையது. நீங்கள் மிகவும் ஆதரவோடு கேட்டதால் இதை உமக்கு நன்றாகச் சொன்னேன். இன்னும் நீங்கள் கேட்க வேண்டுவது யாதாயினும் இருந்தால் கேளும். நான் அதையும் சொல்கிறேன் என்று பராசரமகரிஷி கூறியதும் மைத்திரேயர் விண்ணப்பஞ் செய்யலானார்.
சுவாமி! அடியேன் கேட்டவைகளையெல்லாம் தாங்கள் கூறியருளினீர்கள்! இனி நான் கேட்க வேண்டுவது ஒன்றுமில்லை எல்லாச் சந்தேகங்களும் நீங்கின மனம் நிர்மலமாயிற்று. தேவரீரது அனுக்கிரகத்தால் உற்பத்தி ஸ்திதி லயங்களை அறிந்தேன். இந்தப் படைப்புக்கு ஏதுவானஎம்பெருமானும் பிரம்மா தக்ஷன் விஷ்ணு மனுமுதலானவர்களும் ருத்திர காலாந்தகாதிகளான நான்கு ராசிகளையும் அறிந்தேன். மேலும் முக்யம் வியத்தம் காலம் என்ற மூன்று விஷ்ணு சத்திகளையும் பிரமபாவனை கர்மபாவனை உபயபாவனை என்ற மூன்று பாவனைகளையும் முழுமையாய் அறிந்தேன் குருநாதரே! தேவரீரது பிரசாதத்தால் முக்கியமாய் அறியவேண்டுவனவற்றை அறிந்தேன். அதாவது யாவும் ஸ்ரீவிஷ்ணுவுக்குத் திருமேனியாய் அவனியில் வேறாகாமல் இருக்கிறது என்பதேயாம். ஆகையால் அடியேன் சந்தேக விபரீதங்கள் இன்றிக் கிருதார்த்தனானேன். தேவரீரது கிருபையால் வர்ணாசிரமாதி சகல தர்மங்களையும் பிரவர்த்தி தர்மம் நிவர்த்தி தர்மம் ஆகியவற்றையும் அறிந்தேன். இனி கேட்க வேண்டியது ஒன்றுமில்லை. அடியேனிடத்தில் தாங்கள் என்றும் பிரசன்னராக எழுந்தருளியிருக்க வேண்டும். சகலார்த்தங்களையும் அருளிச் செய்யும் மகரப்பிரயாசையை அடியேனால் அனுபவித்தீர்களே! அடியேன் செய்த இந்த அபசாரத்தை மன்னித்தருள வேண்டும். பெரியோர் புத்திரனுக்கும் சிஷ்யனுக்கும் வேறுபாட்டை எண்ணமாட்டார்களல்லவா? என்று மிக்க வணக்கத்தோடு மைத்திரேயர் விண்ணப்பிக்க பராசரர் மேலும் கூறலானார்.
ஓ, பிராமண உத்தமரே! உமக்குச் சொன்ன இந்தப் புராணம் வேதத்துக்குச் சமமானது. இதைக் கேட்பதால், ராகாதிதோஷங்களால் உண்டான பாபவகைகள் நசித்துப் போகும். இதில் சொன்ன சிருஷ்டி முதலிய ஐந்து அங்கங்களில், தேவதைகள், தைத்தியர் கந்தருவர் உரகர் ராக்ஷசர் யக்ஷர் வித்தியாதரர் சித்தர் அட்சரசுகள் பிரமத் தியானிளான மாமுனிவர்கள் ஆகியவர்களைப் பற்றிச் சொன்னேன். மேலும் பிராமணாதி வர்ணங்கள் நான்கும், புருஷருடைய உயர்ந்த சரிதங்களும், பூமியிலுள்ள புண்ணியமான பிரதேசங்கள், புண்ணிய நதிகள், புண்ணிய சமுத்திரங்கள், புண்ணிய மலைகள். ஞானவான்களின் சரிதங்கள், வர்ண தர்மங்கள், வேத சாஸ்திரங்கள் ஆகிய இவையெல்லாம் ஸ்மரணத்தாலேயே பாவம் நீக்கத்தக்கவை. இதுமட்டுமல்ல. ஜகத்தின் உற்பத்தி ஸ்திதி, நாசங்களுக்கு ஏதுவாயும் அவியயனாயும் சர்வ சொரூபியாகவும் யாவற்றுக்கும் ஆத்மாவாயும் ஐசுவரியம் முதலிய ஆறு குணங்களும் நிறைந்தவனாகவுமுள்ள ஸ்ரீஹரியும் இந்தப் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறான். யாருடைய திருநாமத்தைத் தற்செயலாய் ஒருவன் உச்சரித்தாலும், அவனுடைய சர்வ பாதகங்களும் சிங்கத்தைக் கண்ட அற்ப மிருகங்களைப்போல் விரைந்து ஓடுமோ பக்தியுடன் செய்யப்படுகின்ற எவனுடைய நாம ஸங்கீர்த்தனங்களால் சகலபாவங்களும் பெருநெருப்பில் விழுந்த தாதுக்களைப் போல லயப்பட்டுப் போகுமோ, எவனை ஒருமுறை நினைத்தவுடனேயே, அது உக்கிரமாயும் நரகதுக்கத்தைக் கொடுக்கத் தக்கதாகவும் இருக்கின்ற கலிகல்மஷமானது உடனே அழியுமோ, எவனுக்கு பிருமா, ருத்திரன், ஆதித்தர், வசுக்கள், சாத்தியர், அவிசுகள் விசுவதேவர் முதலான தேவ யோனிகளோடும் அஸ்வினி முதலிய நட்சத்திரங்களோடும், சூரியாதி சகல கிரகங்களோடும் சப்தரிஷிகளோடும் மற்றுமுள்ள அந்தந்த லோகங்களோடும் அந்தந்தலோகாதிபதிகளோடும் பிராமணாதி மனுஷ்யர்களோடும் பறவைகள் சிங்கம் முதலிய கொடிய மிருகங்களோடும் பாம்பு முதலிய ஊர்வனவற்றோடும், பலாசு முதலிய மரங்களோடும் அவற்றிலுள்ள பெருங் கடல்கள் நதிகள் பாதாளங்களோடும் அவற்றிலுள்ள ஜந்துக்களோடும் சப்தாதி விஷயங்களோடும் ஆவரணங்களோடும் கூடிய இந்தப் பிரமாண்டம் மேருவுக்கு ஓரணுப்போல எவனுக்கு ஏகதேசமாக இருக்கிறதோ யாவும் அறிந்தவனாய் எல்லாமும் உள்ளவனாய் எல்லாச் சொரூபமும் உடையவனாய் யாதொரு சொரூபமும் இல்லாதவனாய் சகல பாபநாசனாயுள்ள அந்த ஸ்ரீவிஷ்ணு பகவான் இந்தப் புராணத்தில் முக்கியமாகத்துதிக்கப் பட்டிருக்கிறார். இத்தகைய இந்தப் புராணத்தைக் கேட்பவன் அஸ்வமேதயாகத்தின் அவபிரதத்தில் ஸ்நானம் செய்தபயனை அடைவான்.
பிரயாகையிலும் புஷ்கரத்திலும் குரு ÷க்ஷத்திரத்திலும் சேதுபந்தன மகா சமுத்திரத்திலும் உபவாச விரத அனுஷ்டானஞ்செய்தவன் எந்த பயனை யடைவானோ, அந்தப்பயனை இந்தப் புராணத்தைக் கேட்டவன் அடைகிறான். மைத்ரேயரே! ஒருவன் அக்கினியை ஓராண்டுக்காலம் நன்றாக ஓமத்தால் ஆராதனை செய்துவந்தால் எந்தப் பயனை அடைவானோ அந்த நற்பயனை இதனை ஒருக்கால் கேட்டால்பெறுவான். ஒருவன் ஜ்யேஷ்டமாதத்தில் சுக்கிலபட்ச துவாதசியில் யமுனா நதியில் குளித்து நீராடி ஸ்ரீமதுராபுரியில் ஸ்ரீகிருஷ்ணனை ஆராதித்தால் உண்டாகும் பயனை கேசவனிடத்திலே மனம்வைத்து இப்புராணத்தில் ஒரு அத்தியாயத்தைக் கேட்பதனால் பெறுவான். ஜ்யேஷ்டமாதத்துச் சுக்கிலபக்ஷத் துவாதசியில் முன்னதாக உபவாசம் இருந்து யமுனையில் நீராடி மதுரையில் ஸ்ரீ மாதவனை ஆராதிப்பவனுக்கு குறைவற்ற அசுவமேத யாகப்பலன் கிடைக்கும். இத்தகைய புண்ணியவான்களான தங்கள் குலத்தாராலே, மேன்மையடைவிக்கப்பட்ட சிலருடைய செல்வத்தைக் கண்டு, பிதுர்க்கள் சொல்லியதாவது, நமது குலத்தில் பிறந்த எவனாவது யமுனா நதியில் நீராடி, உபவாசம் இருந்து ஜ்யேஷ்ட சுக்கில துவாதசியிலே மதுரையில் ஸ்ரீஜனார்த்தனனை அர்ச்சிப்பானானால் நாமும் பிறரைப் போலவே கரையேறினவர்களாய், மோக்ஷம் என்ற மேலான செல்வத்தைப் பெறுவோம். அல்லவா? ஜ்யேஷ்ட சுக்கில துவாதசியில் சுவாமியை ஆராதனை செய்து, பிதுர்க்களுக்கு யமுனையில் பிண்டத்தை எவன் போடுவான் என்றால், புண்ணியஞ் செய்தவர்களின் குலத்தில் பிறந்தவன்தான் போடுவான் என்று பிதுர்க்கள் ஆசைப்படுகின்றனர். இவ்விதமாக அந்தப்புண்ணிய தினத்திலே, யமுனா ஸ்நானம் செய்து ஸ்ரீகிருஷ்ண பகவானை ஆராதித்து, பிதுர்க்களுக்குப் பிண்டம் இடுவதனால் எந்தப்பயன் உண்டோ, அந்தப் பயனை இந்தப் புராணத்தின் அத்தியாய சிரவணத்தால் பெற்றுப் பிதுர்க்களைக் கடைத்தேற்றுவான். இந்தப்புராணம் சம்சாரத்திற்கு அஞ்சியவருக்கு ரக்ஷகமாயும் கேட்கத் தக்கவைகளில் மேம்பட்டதாயும், தூய்மையானவற்றிலெல்லாம் பரிசுத்தமாயும், தீயகனவுகளை அழிக்கவல்லதாயும் சகல தோஷங்களையும் போக்க வல்லதாயும், மக்களுக்கெல்லாம் மேலான மங்களமாயும் புத்திர சம்பத்தைத் தரத்தக்கதாகவும் விளங்குகிறது.
ஆதியில் ஸ்ரீமந் நாராயண மகாமுனிவரால் செய்யப்பட்ட இந்தப் புராணத்தை கமலோற்பவர் ருபு என்பவருக்கு உபதேசித்தார். அந்த ருபு இந்தப் புராணத்தைப் பிரியவிரதருக்குச் சொன்னார். அவர் பாகுரிக்கும் அந்தப் பாகுரி ஸ்தம்பமித்திரருக்கும் சொன்னார். அவர் ததீசருக்கும்; அவர் சாரஸ்வதிக்கும் அந்தச் சாரஸ்வதர்பிருதுவுக்கும் அவர் புருகுச்சருக்கும் அவர் நர்மதைக்கும் அவள் திருதராஷ்டிரர் விபூரணன் என்ற நாகர்களுக்கும்; அந்த இருவரும் நாகராஜனான வாசுகிக்கும் அந்த வாசுகி வச்சருக்கும் அவர் அசுவத்தாமருக்கும் அவர் கம்பளருக்கும் அவர் ஏலா புத்திரருக்கும் சொன்னார்கள். இவ்விதமாகப் பாதாள லோகத்தில் பரவியிருந்த இந்தப் புராணத்தைப் பாதாள லோகத்துக்குப் போயிருந்த வேதசிரசு என்ற முனிவர் பெற்று வந்து பூலோகத்தில் பிரமதி என்பவருக்குக் கொடுத்தார். அவர் இதனை ஜாதுகர்ணருக்குக் கொடுத்தார். அவர் இதனை அநேகப் புண்ணியசாலிகளுக்குச் சொன்னார். புலஸ்திய மாமுனிவருடைய வரப்பிரசாதத்தால் இந்தப் புராணம் எனக்கும் ஞாபகத்துக்கு வந்தது மைத்திரேயரே நானும் உமக்கு உள்ளபடி இந்தப் புராணத்தை அறிவித்தேன். நீரும் இதை இந்தக் கலியுகத்தின் முடிவிலே சினீகர் என்பவருக்குச் சொல்லுவீர்.
இந்த மகாபுராணம் பரம இரகசியமாயும் கலிதோஷ நாசனமாயும் இருப்பதை எவன் பக்தியுடன் கேட்பானோ, அவனுக்குப் பாபங்கள் யாவும் தீரும் தினந்தோறும் இந்தப் புராணத்தைக் கேட்பவனுக்குச் சகல தீர்த்த ஸ்நான பலனும் சகல தேவதா ஸ்தோத்திரப் பலனும் கிடைக்கும். இந்தப் புராணத்தில் பத்து அத்தியாயத்தைக் கேட்டவுடன் காராம் பசுவைத் தானஞ் செய்வதால் உண்டாகும் அருமையான புண்ணியம் கிடைக்கும். இதில் ஐயமில்லை எவன், சகல சரீரகனாய், சர்வ வியாபியாய் சகல லோகத்துக்கும் ஆதாரமாய் தன்னிலேதான் இருப்பவனாய், ஞானத்தினாலேயே அறியத்தக்கவனாய், ஆதியந்தம் இல்லாதவனாய்ச் சகல தேவதைகளுக்கும் இதனாயுமுள்ள ஸ்ரீ அச்சுதனை நினைத்துக்கொண்டே இந்தப் புராணத்தை முழுமையாகக் கேட்பானோ அவன் பக்தியோடு அசுவமேத யாகம் செய்த பயனை அடைவான். எந்தப் புராணத்தின் ஆரம்பத்திலும் நடுவிலும் முடிவிலும் சராசர குருவாயும் பிரமஞான சொரூபியாயும் சகல ஜகத்துக்கும் சிருஷ்டி, ஸ்திதி, சங்கார கர்த்தாவாகவுமுள்ள அச்சுத பகவான் துதிக்கப்பட்டிருக்கிறானோ அத்தகைய புராணத்தை முழுதும் கேட்பவனும், படிப்பவனும், சொல்பவனாயும் இருப்பவனுக்கும் வருகிற பயனை இப்படிப்பட்டதென்று சொல்வதற்கு மூவுலகத்திலும் ஒப்பில்லை ஒப்பற்ற மோக்ஷ சாம்ராஜ்யத்தைத் தரவல்ல ஸ்ரீஹரி பகவானே; பயனாகிறானன்றோ? எவனிடத்தில் மனம் வைத்தவன் நரகத்தில் புகமாட்டானோ எவனைத் தியானிக்கச் சுவர்க்கமும் இடையூறாக இருக்குமோ; எவனிடத்தில் மனம் பற்றியவர்க்கு பிரம லோகமும் அற்பமாகத் தோன்றுமோ; எவன் நிர்மல ஞானியருக்கு இதயத்தில் இருந்து கொண்டு; முக்தியை அளிக்கிறானோ அத்தகைய அச்சுதனைத் துதிப்பதனால் பாவம் தீரும் என்பது ஒரு விந்தையா? யக்ஞேசுவரனான எவனை யக்ஞமறிந்தவர்களான கர்மிகள் யக்ஞங்களினால ஆராதிக்கிறார்களோ; ஞானியர் எவனைப் பரம சொரூபியாகவும் தியானிக்கிறார்களோ; எவனை நினைப்பவன் பிறப்பு இறப்புக்களையும்; அறிவு, தேய்வு; வளர்ச்சிகளையும், காரிய காரணங்களாக இருத்தலையும் அடைவதில்லையோ; அத்தகைய ஸ்ரீஹரியைக் காட்டிலும் கேட்கத்தக்க பொருள் வேறு எதுவுண்டு?
ஆதியந்தங்கள் இல்லாதவனாய்ப் பிரபுவான எவன் பிதுர்ரூபியாக இருந்து விதிப்படி இடப்பட்ட கவியத்தையும் தேவ ரூபியாக இருந்து ஓமஞ் செய்யப்பட்ட அவியத்தையும் புசிக்கிறானோ; பிராமணமுடையவருக்கு எந்தப் பிரமாணமும் சகல சக்தி ஸ்தானமாயும் பிரமமாயும் இருக்கிற எவன் விஷயத்தில் ஒரு பரிச்சேதம் செய்யவொண்ணாதோ அத்தகைய ஸ்ரீஹரி பகவான்; காதிற்பட்டவுடன் சகல பாவத்தையும் போக்கி விடுவான் எவனுக்கு முடிவும் உற்பத்தியும் இல்லையோ; பரிணாமம் இல்லாத எவனுக்கு விருத்தி யக்ஷங்களில்லையோ; எவன் விகாரமற்ற வஸ்துவாக இருக்கிறானோ; புரு÷ஷாத்தமனாயும் துதிக்கத் தக்கவனாயுமுள்ள அந்த சர்வேசுவரனின் திருவடியைத் தொழுகிறேன். எவன் அந்தப்பரமபுருஷனுக்கு அநுகுணமானதையே அனுபவிக்கும் படியான சேஷபூதனாக இருக்கிறானோ, எவன்தேவாதி பேதங்களின்றி ஞானமே வடிவாகக்கொண்டு, ஒருவனாக இருந்தும் தேவதை முதலான தேகங்களைக்கொண்டு, அவற்றில் தான் என்னும் மயக்கமுற்றதனாலே, அநேகனாய், அசுத்தனாய் தோன்றுகிறானோ, எவன் ஞானத்தோடுங் கூடியவனாய் மஹத் முதலிய சகல தத்துவங்களையும் பரவச் செய்வதற்குக் கர்ம மூலத்தால் கர்த்தாவாக இருக்கிறானோ எப்பொழுதும் அவியயனாயுள்ள எம்பெருமானுடைய ஸ்வரூபமான அந்தப் பரம புருஷனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கின்றேன்.
எது, அறிவு பரவுதலும் அசையாது நிற்றலும் சேர்ந்து லயப்பட்ட ஸ்தானமாக இருக்கின்றதோ, எது ஆன்மாவுக்குப் பாவ புண்ணிய அனுபவயோக்கியமான தேகாதிகளைத் தரவல்லதாய் முக்குண வடிவாக இருக்கின்றதே மகத்து முதலிய அவஸ்தைகளை அடையாததாயும் சம்சார உற்பத்திக்குக் காரணமாயும் தானே உண்டானதாயும் எப்போதும் அழியாததாயும் உள்ள பிரதானமானது எது உண்டோ, எம்பெருமானுடைய ஸ்வரூபமான அதனைத் தொழுகின்றேன். வான், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகியவற்றின் செயல் வடிவமாயும் சப்தம் ஸ்பரிசம் ரூபம் ரசம் கந்தம் என்ற விஷயங்களாகிய போக்கிய பதார்த்தங்களைக் கொடுத்து வருவதாயும் ஆன்மாவுக்கு ஞானேந்திரிய கர்மேந்திரியங்களைக் கொண்டு உபகாரஞ் செய்வதாயும் சூக்ஷ்மமும் ஸ்தூலமுமான சொரூபமும் உடையதாயுமுள்ள வியக்தம் என்கின்ற பகவானுடைய சொரூபத்தைப் பணிகிறேன். இவ்விதம் பலவகைப்பட்ட வியக்தாவியக்த பிரகிருதிகளும் அப்பிராகிருத திவ்விய மங்கள விக்கிரமும் ஆத்துமாவும் அஜனாய் எப்போதும் உள்ளவனான எவனுக்கு ஸ்வரூபமோ அந்த ஞானாதி ஐசுவரியம் உள்ள ஸ்ரீஹரி பகவான் சகல ஆன்மாக்களுக்கும் பிறப்பு இறப்பு மூப்பு முதலிய குற்றங்கள் இல்லாத மோக்ஷ சம்பத்தைத் தந்தருள வேண்டும் என்று பராசர மகரிஷி மைத்திரேய முனிவருக்கு இந்த ஸ்ரீவிஷ்ணு புராணத்தையும் சொல்லி இந்த நூற்பயனையும் சொல்லி பகவானைப் பிரார்த்தித்து இதனை அருளிச் செய்தார்.

ஸ்ரீ விஷ்ணு புராணம் சம்பூரணம்
ஓம் நமோ ஸ்ரீவாசுதேவாய
ஆறாவது அம்சம் முடிந்தது. விஷ்ணு புராணம் முற்றிற்று.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் ஐந்தாவது அம்சம்——

February 28, 2021

1. திருமண ஊர்வலமும் தேவர்களின் பிரார்த்தனையும்
2. தேவகியைத் தேவர் போற்றுதல்
3. கிருஷ்ணாவதாரம்
4. கம்சனின் கட்டளை-
5. பூதகியின் வதம்
6. சகடயமளார்ச்சுன பங்கம்
7. காளிய மர்த்தனம்-
8. தேநுகாசுரன் வதம்-
9. பிரலம்பாசுரன் வதம்
10. கோவர்த்தன ஆராதனம்-
11. கோவர்த்தன கிரியைக் குடையாகப் பீடித்தல்
12. ஸ்ரீகோவிந்தப் பட்டாபிஷேகம்
13. ராஸக் கிரீடை
14. அரிஷ்டாசுர வதம்
15. அக்குரூரருக்குக் கம்சனின் கட்டளை!
16. கேசி வதம்
17. அக்குரூரர் கண்ணனைக் காணுதல்
18. கண்ணனைப் பிரியும் கோபியரின் கலக்கமும் அக்குரூரர் கண்ட தெய்வீகக் காட்சியும்!
19. மதுரையை அடைதல்
20. அழகான கூனியும் கம்சவதமும்
21. ராஜசபையும் குருதக்ஷணையும் கொடுத்தல்-
22. ஜராசந்தனை ஜெயித்தல்
23. யாதவரின் பரிகாசமும் துவாரகா நிர்மாணமும்!
24. முசுகுந்தனுக்கு கண்ணனின் அருளும் ஆயர்பாடிக்கு பலராமர் வருகையும்!
25. பலராமரின் மோகமும் கோபமும்
26. ருக்மணிப் பிராட்டியார் திருக்கலியாணம்
27. மாயாவதியின் காதலும் சம்பராசுர வதமும்
28. கல்யாணத்தில் சூதாட்டம்
29. நரகாசுர வதம்
30. பாரிஜாத அபஹரணம்
31. பதினாறாயிரத்து நூறு கன்னியர் விளக்கம்
32. உஷையின் கனவும் காதலும்
33. உஷையின் காதல் உறவும் பாணாசுரப் போராட்டமும்
34. காசி தகனம்
35. பலராமர் சாம்பனை மீட்ட கதை
36. குரங்கனைக் கொன்ற கதை
37. பகவான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளல்

———————-

1. திருமண ஊர்வலமும் தேவர்களின் பிரார்த்தனையும்

மைத்ரேயர்! பராசர முனிவரை நோக்கி, குருவே! அரசர்களின் வம்சங்களைப் பற்றி விளக்கமாகச் சொன்னீர்கள்! யது குலத்தில் சர்வ வியாபகனாகிய ஸ்ரீமந் நாராயணன், பரிச்சேதப்பட்டுக் காண்பதால் அமிசம் என்று சொல்லத்தக்கதாய் எந்த அவதாரத்தைச் செய்து அருள் புரிந்தானோ, அந்த கிருஷ்ண அவதாரத்தைப் பற்றி அடியேனுக்கு விவரமாகக் கூறவேண்டுகிறேன். புரு÷ஷாத்தமனான பகவான், இந்தப் பூவுலகில் அம்சத்திலும் அம்சம் என்று எண்ணும்படியாக அவதரித்து என்னென்னவெல்லாம் செய்தருளினானோ, அவற்றையெல்லாம் திருவாய் மலர்ந்து கூறியருள வேண்டும்! என்று பிரார்த்தித்தார். பராசர முனிவர் அருள் கூர்ந்து சொல்லலானார்.
மைத்ரேயரே! நீங்கள் கேட்டது போலவே, ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அம்சமான கிருஷ்ணாவதாரத்தையும் சரிதத்தையும் சொல்கிறேன். முன்பு தேவகனின் குமாரியாகவும் தேவ கன்னியருக்கு ஒப்பானவளுமான தேவகி என்பவளை வசுதேவர் திருமணஞ்செய்து கொண்டபோது மணப்பெண்ணின் சகோதரனான கம்சன், மணமக்களைக் கல்யாண ரதத்தில் ஏற்றித் தானே அந்தத் தேரை ஓட்டி ஊர்வலமாகச் சென்றான். அப்போது, ஆகாயத்தில் ஓர் அசரீரி கம்சனைத் தான் சொல்வதைக் கேட்கும் படி விளித்து, அட மூடா! நீ எந்தத் தங்கையை அவளது புருஷனோடு தேரில் ஏற்றிச் சென்று மிகவும் பிரியமாய் நடத்துகின்றாயோ, அந்தத் தங்கையின் எட்டாவது பிள்ளையே உன் உயிரை போக்கும்! என்று கம்பீரத்தொனியில் கூறியது. அதைக் கேட்டதும் கம்சன், தன் உடைவாளை உருவித் தன் தங்கை தேவகியை கொல்லத் துணிந்தான். அப்போது தேவகியின் புத்திளம் கணவரான வசுதேவர் தம் மைத்துனனான கம்சனை நோக்கி, நீ இந்த அபலையைக் கொல்ல வேண்டாம். இவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளையெல்லாம் நான் உனக்குத் தந்துவிடுகிறேன், நீ அவர்களை உன் இஷ்டப்படிச் செய்து கொள்! என்றார். அதற்கு இளகிய கம்சன், அப்படியே ஆகட்டும்! என்று ஒப்புக்கொண்டு தேவகியைக் கொல்லவில்லை. அந்தக் காலத்திலே பூமிதேவியானவள் பூபாரம் தாங்கமாட்டாமல், துன்பமடைந்து மகாமேரு பருவதத்தில் கூடிய தேவசபைக்குச் சென்று, பிரமதேவன் முதலிய தேவர்களை வணங்கி முறையிடலானாள்.
தேவர்களே! பொன்னுக்குப் பிதா அக்கினி! பசுக்களுக்குச் சூரியன் தந்தை! எனக்கும் சர்வ உலகங்களுக்கும் ஸ்ரீமந் நாராயணனே பிதா! பிரஜாபதிகளுக்கெல்லாம் பதியாகவும் முந்தியோருக்கு முந்தியவராயுமுள்ள நான்முகரும், கலை, காஷ்டை, நிமிஷம் முதலிய ரூபமோடுதோன்றாததான காலமும், ஆதித்தர், சாத்தியர், மருத்துக்கள், உருத்திரர், வசுக்கள், அசுவினி, தேவதைகள், அக்கினிகள், இயக்கர், அரக்கர், தைத்தியர், பைசாசர், நாகர், தானவர், கந்தர்வர் என்ற யாவருக்கும் அவ்வெம் பெருமானாகிய ஸ்ரீ விஷ்ணுவின் ரூபங்களல்லவா? ஆகாயமும், தீயும், தண்ணீரும், காற்றும், நானும், சப்தம் ஸ்பரிசம், கந்தம், ரூபம், ரசம் என்ற விஷயங்களும் அந்த ஸ்ரீமந் நாராயணனுடைய திருமேனியே! இவையெல்லாம் கடலில் உண்டாகும். அலைகளைப் போல் ஒன்றோடொன்று பாதிப்பனவாகவும் பாதிக்கப்படுவனவாகவும் உள்ளன. இப்போது காலநேமி முதலான அசுரர்கள் பூவுலகில் பிறந்து இரவும் பகலும் பிரஜைகளைத் துன்புறுத்துகிறார்கள். முன்பு விஷ்ணுவினால் சங்கரிக்கப்பட்ட காலநேமி என்பவன் இப்போது உக்கிரசேனன் மகனாக, கம்சன் என்ற பெயரோடு பிறந்து விட்டான். இதுபோலவே, அரிஷ்டன், தேனுகன், கேசி, பிரலம்பன்! நரகன்! சுந்தன், பாணன் முதலியவர்களும் அரச குலங்களில் பிறந்தும் கொடுமை செய்து திரிகிறார்கள். அவர்களை எண்ணக் கூட எனக்குச் சக்தியில்லை, தேவர்களே! முன்பு கொன்ற அரக்கப் பிறவியரின் சேனைகள் மிகவும் அதிகரித்திருப்பதால் என்னால் பூபாரச் சுமையையும் பாபிகளின் சுமையையும் சுமக்க முடியவில்லை. ஆகையால் நான் மிகவும் பலவீனமடைந்து பாதாளம் போய்ச் சேராதவாறு நீங்கள் தான் என்மீது அன்பு கூர்ந்து என் சுமையைக் குறைக்க வேண்டும்! என்று பூமிதேவி இறைஞ்சினாள். அப்போது பிருமதேவன் தேவர்களே: பூமிதேவி சொன்னவை உண்மை தான் நானும் உருத்திரனும் நீங்களும் ஸ்ரீமந் நாராயணனுடைய சரீரங்களாகவே இருக்கிறோம். பகவானின் விபூதிகள் எவையுண்டோ. அவற்றின் உயர்வும் தாழ்வும் ஒன்றையொன்று பாதிப்பதற்கும் பாதிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்றன. ஆகையால் நாம் திருப்பாற் கடற்கரைக்குச் சென்று, ஸ்ரீயப்பதிக்குத் தண்டம் சமர்ப்பித்து, இவற்றையெல்லாம் விண்ணப்பம் செய்வோம். அப்படிச் செய்தால் சர்வஸ்வரூபியான பகவான் பூமி நிமித்தம் சாத்வீக அவதாரஞ் செய்து தருமத்தை நிலைநாட்டி அருள்வார்! என்று சொல்லி தேவர்களை அழைத்துக் கொண்டு திருப்பாற் கடற்கரையை அடைந்தார். அங்கே யோக நிஷ்டையிலிருந்த கருடத் துவஜனான மகாவிஷ்ணுவைத் தோத்திரஞ் செய்யலானார்.
சுவாமி! வேதங்களுக்கும் எட்டாதவனே! பிரம்ம விஷயமான, விவேகத்தால் உண்டாகும் ஞானமும் நீயே! சப்தப் பிரம்ம விஷயமான ஆகமத்தில் உண்டான பரமென்று அபரம் என்றும் சொல்லப்பட்டுள்ள இரு வித்தைகளும் நீயே! உபநிஷத்துக்களில் கூறப்படுபவைகளாய், ரூபப்பட்டதும் படாததுமாக இருக்கின்ற இரண்டுபிரமம் என்று சொல்லப்பட்ட பிரகிருதி புருஷங்களும் உனது ரூபங்களேயாகும்! ஸ்தூல சூஷ்மங்களுக்கு ஆன்மாவாக இருப்பவனே! சர்வ சொரூபியே! யாவும் அறிந்தவனே! ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களும் சிøக்ஷ, கல்பம், நிருத்தம், சந்தம், ஜோதிடம், வியாகரணம் என்ற வேதாங்கங்களுக்கும், இதிகாச புராணங்களும், தர்க்கம், மீமாம்சை, தர்ம சாஸ்திரம் என்பவைகளும் நீயே! ஓ அதோஷஜனே! கண் முதலியவற்றால் உணரக்கூடாததும், ஒன்றிற்குச் சமமானதாகக் காட்டக்கூடாததும், இப்படிப்பட்டதென்று மனத்தால் நினைக்கக்கூடாததும், தேவாதி நாமங்களும் சுக்லாதி வர்ணங்களும், கை கால் முதலிய அவயவங்களில்லாததும் கிலேச, கர்மாதிகளற்றவையுமான முக்தஸ்வரூபம் யாதுண்டோ அது நீயே! பரம சொரூபம் என்பதும் நீயே! நீ காதின்றிக் கேட்கிறாய்! கண் இல்லாமலே பார்க்கிறாய் ரூபமில்லாமலேயே இஷ்டமான அநேக ரூபங்களையெடுத்துக் கொள்கின்றாய்! ஒருவராலும் அறியப்படாமல் யாவற்றையும் அறிந்து கொள்கிறாய்? பரமாத்மாவே அணுவுக்கு அணுவாய் காணக்கூடாத சொரூபமுள்ளவனான உன்னைக் காண்பவனுக்கு அஞ்ஞான நிவர்த்தி அதிகப்படுகின்றது. இவ்விதமான உபாசகனுடைய புத்தியானது உனது மேன்மையான ரூபத்தையன்றி மற்றொன்றையும் கிரஹிப்பதில்லை. நீயே யாவற்றுக்கும் ஆதார பூதன் நீயே உலகங்களைக் காப்பவன். சகல பூதங்களும் உனக்குள் அடங்கியுள்ளன. உண்டானதும் உண்டாவதும் எதுவோ, அணுவுக்கும் அணுவாக இருப்பது எதுவோ, பிரகிருதிக்கு மேற்பட்ட புருஷன் எவனோ, இவையாவும் நீ ஒருவனேயன்றி வேறல்ல. எவன் ஒருவனாக இருந்தும் நால்வகைபட்டவனாகி, உலகிற்குத் தேஜஸையும் செல்வத்தையும் அளிக்கின்றானோ, அந்த அக்கினியும் நீயே! எல்லாப் புறங்களிலும் பார்வையுடையவனும் அளவில்லாத சொரூபமுடையவனுமான பகவானே! நீ திரிவிக்கிரம அவதாரஞ்செய்து மூவுலகங்களிலும் உன் திருவடியை வைத்தாய் சுவாமி! அக்கினியானது ஒன்றாக இருந்தும் ரூபம் மாறாமலே, அநேக வஸ்துக்களில் பற்றி அநேக ரூபமாய் விளங்குவதைப்போல், நீயும் எங்கும் வியாபித்த ஒரே சொரூபியாக இருந்தும் சகல சொரூபங்களிலேயும் பற்றியவற்றைப் பெருமையாக வளர்க்கிறாய் பிரகிருதி சம்பந்தமில்லாததும் ஒப்பற்றதும் ஒன்றேயாயுமுள்ள உனது மேன்மையான சொரூபம் யாதுண்டோ, ஞானத்தினாலேயே அறியத்தக்க அந்தச் சொரூபத்தை ஞானியரே காண்கின்றனர்.
முக்காலப் பொருள்களிலும் உன்னைவிட வேறானது ஒன்றும் இல்லை, காரணகாரிய ரூபங்களாய், சமஷ்டி வியஷ்டி என்று சொல்லப்பட்ட அவியக்தமும் வியக்தமுமான சொரூபமுடையவன் நீயே! சகல வியூகாதிகளுக்கும் காரணமாய் சமஷ்டி என்று சொல்லப்பட்ட வாசுதேவ மூர்த்தியாகவும் காரியமாய் வியஷ்டி என்று சொல்லப்பட்ட சங்கர்ஷண, அதிருத்த பிரத்தியும்ன மூர்த்தியாகவும் நீயே இருக்கிறாய்! யாவையும் அறிந்தவன் நீ; எல்லாவற்றிலும் பொருந்தியவன் – நீ எல்லாஞ் செய்யவல்ல சக்தி நீ! ஞான, பலாதிசய மேன்மையுடையவன் – நீ! வளர்ச்சியும் தேய்வும் இல்லாதவன்-நீ! ஒருவர்க்கும் உள்ளடங்காமல் சுவாதீனமாக இருப்பவன் – நீ ஆதியந்த சூனியனாகவும் யாவற்றையும் தன் வசத்தில் கொண்டவனாகவும் நீயே இருக்கின்றாய்! வாட்டம், சோம்பல், அச்சம், குரோதம், காமம் முதலிய துர்க்குணங்களுடன் நீயே கூடாமல் இருக்கின்றாய்! எம்பெருமானே! நீ யாதொரு குற்றம் இல்லாதவனாகவும், உன் கிருபையின்றி அடையக் கூடாதவனாகவும், எந்தவோர் ஆதாரம் இல்லாதவனாகவும் நித்தியனாகவும் தடையற்ற உற்சாகமுடையவனாகவும் இருப்பவன் நீயே! யாவற்றுக்கும் ஈச்வரனாயும் முக்கிய ஆதாரமாயும் தேஜசுகளுக்குத் தேஜசாக இருப்பவன் நீ! பிரகிருதி முதலிய ஆவரணங்களாலும் கர்மங்களினாலும் மூடப்படாதவனே! வேறு உபாயம் இல்லாதவராலே பாவிக்கக் கூடியவனே! திரிபாத்விபூதியில் எழுந்தருளியிருப்பவனே! புரு÷ஷாத்தமா! உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன் ஓ… ஸ்ரீயப்பதியே! நீ பலவிதமாய் செய்தருளும் அவதாரங்கள் யாவும் தருமத்தை நிலைப்பிக்கும் பொருட்டு, சுயேச்சையாலே உண்டாகின்றவையே தவிர, நரகானுபவஞ் செய்பவனின் துக்கானுபவத்திற்கும் அல்ல; சொர்க்கானுபவஞ் செய்பவரின் சுகானுபவத்திற்காகவும் அல்ல! பூமியில் உள்ளவர்களின் சுகதுக்க அனுபவத்திற்காகவோ, அல்லது தர்மாதர்களால் உண்டானவைகளோ அல்ல! என்று பிரமதேவர் துதித்தார்.
பிரம்மாவின் ஸ்தோத்திரத்தை ஸ்ரீயப்பதியானவர் திருவுளம் பற்றி மகிழ்ந்து, விஸ்வரூபங்காட்டி, நான்முகனே! தேவர்களுடன் சேர்ந்து எதை என்னிடத்தில் பெறவேண்டும் என்று நீ கருதினாயோ அதைச் சொல்வாயாக அது கிடைத்ததாகவே நினைப்பாயாக! என்று கூறியருளினார், அப்போது, பிரம்மா முதலிய தேவர்கள் சுவாமியின் விசுவரூபத்தைச் சேவித்தார்கள். மீண்டும் பிரம்மதேவர் எம்பெருமானைத் துதித்தார். அசுரர்கள் மனிதப் பிறவிகள் எடுத்து, தேவர்களுக்கும் மூவுலகத்தாருக்கும் துன்பம் இழைக்கிறார்கள் அதற்குச் செய்ய வேண்டியதெதுவோ அதனை நியமித்து அருள் செய்யவேண்டும்! என்று பிரம்மா பிரார்த்தித்தார். அப்போது எம்பெருமான் தமது திருமேனியினின்றும் வெண்மையும் கருமையுமான ரோமங்கள் போலக்காணப்பட்ட தேஜசுகளை எடுத்து, வானவரே! இந்த எனது தேஜசுகள் பூமியில் அவதரித்துப் பூமிக்குப் பாரத்தால் உண்டான துன்பத்தை நீக்கும் இத்தேவர்களும் தங்கள் அம்சத்தாலே; பூமியிற் பிறந்து முன் பிறந்த துஷ்ட அசுரர்களோடு நமக்கு லீலாசாதனமாகப் போர் செய்யக் கடவார்கள்! இதனால் அசுர அமிசத்தோடு பிறந்தவர்கள் நாசமடைவார்கள். இப்போது தேவர்களுக்கும் அசாத்தியமான அசுரர்கள் யாவரும் பூமியில் அழியும் காலம் ஆகும். இப்போது வசுதேவருடைய பத்தினியான தேவகி என்பவளின் எட்டாவது கர்ப்பத்தில் அவதரிக்கும் என்னுடைய தேஜசின் கடைக்கண் பார்வையிலே அசுரர்கள் பலவீனப்பட்டு சூர்ணமாவார்கள். இதை அறிவீர்களாக என் தேஜசு அவ்வாறு அவதரித்து, கம்சனாகப் பிறந்திருக்கும் காலநேமியைச் சங்கரிக்கும்! என்று நியமித்து ஸ்ரீபகவான் மறைந்தார். மைத்ரேயரே! இவ்வாறு கூறி மறைந்துபோன எம்பெருமானுக்குத் தண்டம் சமர்ப்பித்து, அமரர்கள் அனைவரும் மேருபர் வதத்தில் தங்கள் இருப்பிடங்களுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். பிறகு, இப்படியிருக்கப் நியமனப்படி, பூமியில் அவதரித்தார்கள். இப்படியிருக்கப் பூமியைத் தாங்கிக் காப்பாற்றுகின்ற சுவாமியானவர் தேவகியின் எட்டாங்கர்ப்பத்தில் அவதரிக்கப்போகிறார் என்பதை நாரதமுனிவர் வந்து கம்சனுக்குத் தெரிவித்தார். இதைக் கேட்டவுடனேயே, கம்சன் மிகவும் சினங்கொண்டு தேவகியையும் வசுதேவரையும் சிறையில் தள்ளிப் பலமான காவலும் போட்டு விட்டான்.
எம்பெருமானோ சகல லோகங்களையும் மோகிக்கத்தக்க யோக நித்திரை என்ற தமது மாயையைப் பார்த்து ஓ, மாயா! பாதாளத்தில் இருக்கிற இரண்ய கசிபுவின் குமாரர்கள் அறுவரையும் முறையே தேவகியின் கர்ப்பத்தில் சேர்ப்பாயாக. அந்த அறுவரும் சங்கரிக்கப்பட்டவுடன் எனது அம்சமாக இருக்கும் ஆதிசேஷன் தேவகியின் ஏழாவது கர்ப்பத்தில் பிறப்பான். வசுதேவனின் பத்தினியான ரோகிணி என்பவள் ஒருத்தி நந்தகோபனுடைய கோகுலத்தில் இருக்கிறாள். அவளுடைய வயிற்றில் இருக்கும் வாயுரூபமான ஏழு மாதத்திய கர்ப்பத்தைக் கலைத்து விட்டு தேவகியின் வயிற்றில் இருக்கும் சேஷ அம்சமான ஏழு மாதத்துக் கர்ப்பத்தைக் கொண்டுபோய், ரோகிணியின் கர்ப்பத்திற் சேர்த்துவிடு! அப்போது சிறைக்காவலில் இருக்கும் பலத்தால், தேவகியின் கர்ப்பம் கலைந்துவிட்டது என்று உலகம் சொல்லிக் கொள்ளும். ரோகிணியின் கர்ப்பத்தில் அவதரிக்கும் அவர் வெள்ளிமலைச் சிகரம் போல விளங்கிய வண்ணம் கர்ப்பத்தினின்றும் இழுக்கப்பட்டதால் சங்கர்ஷணன் என்னும் பெயரைப் பெறுவார். உடனே நான் தேவகியின் கர்ப்பத்தில் பிரவேசிப்பேன் நீயும் உடனடியாக நந்தனுடைய பத்தினியையான யசோதையின் வயிற்றில் பிரவேசிக்கவேண்டும். கேள் பெண்ணே மழைக் காலத்தில் ஆவணி மாதத்தில் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி யிரவில் தேவகியிடம் நான் அவதரிப்பேன். நீயும், அந்த இரவிலேயே நவமியில் யசோதையிடம் ஜனிப்பாயாக. அப்போது என் சக்தியால் தூண்டப்பட்ட புத்தியுடன் வசுதேவன் என்னை யசோதையின் படுக்கையிலும் உன்னை தேவகியின் படுக்கையிலும் கொண்டுபோய் மாற்றி வைத்து விடுவான். உடனே, தேவகியின் தமையன் கம்சன் தன்னைக் கொல்லப்போகும் குழந்தையைக் கொல்ல வருவான். வந்ததும் உன்னைப் பிடித்துத் தூக்கி, பாறாங்கல்லின்மேல் போட்டு உன்னை வெட்ட முயற்சிப்பான்.
நீயோ வானத்தில் எழும்பி நிலை பெறுவாய். அப்போது ஆயிரக் கண்ணுடைய இந்திரன் என் மீதுள்ள பெருமையால், உனக்குத் தலை வணங்கிப் பிரணாமம் செய்து உன்னைத் தன்னுடன் பிறந்தவளாக ஏற்றுக்கொள்வான். நீயும் சும்ப நிசும்பாதி அரக்கர்களை வென்று சங்கரித்து, பெருமை பெற்று, விந்தியம் ஜாலந்தரம் முதலான யோக பீடங்களின் ஆலயங்களிலே ஆவிர்ப்பவித்து அந்தந்த ஸ்தானங்களால் பூமியையெல்லாம் சிறப்புற்று விளங்கச் செய்வாய் பூதி, சன்னதி க்ஷõந்தி காந்தி (தியௌ) எனப்பட்ட வானம், பூமி, திருதி, இலச்சை, புஷ்டி, உøக்ஷ முதலிய ஸ்திரீயம்சமானவையெல்லாம் உன் ஐஸ்வரியமாக விளங்கும். எவர் உன்னை ஆரியை என்றும் துர்க்கை என்றும் வேத கர்ப்பை என்றும் அம்பிகை, பத்திரைபத்திரகாளி ÷க்ஷமதை பாக்கியதை என்றும் உன் திருப்பெயர்களைச் சொல்லி காலையிலும் பகற்குப் பிறகும் மிகவும் வணக்கத்தோடு துதிக்கிறார்களோ அவர்களுடைய பிரார்த்தனைகளையெல்லாம் என் அனுக்கிரகத்தால் தப்பாமல் கைக்கூடச் செய்வேன். மேலும் மது மாமிசாதிகளினாலும், இன்னும் பலவித உணவுகளினாலும் சூத்திராதிகள் உன்னை ஆராதிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இஷ்டமான வரங்களைக் கொடுத்து வருவாயாக. இப்பொழுது நான் சொன்ன காரியங்களெல்லாம் என் அருளால் அப்படியே முடியும்! ஆகையால் நீ சந்தேகப்படாமல் போய் நடத்துவாயாக! என்று நியமித்தருளினார்.

—————–

2. தேவகியைத் தேவர் போற்றுதல்

இவ்வாறு எம்பெருமானால் நியமிக்கப்பட்ட யோக நித்திரையான மாயையானது அசுர அம்சமுடைய ஆறு கர்ப்பங்களையும் தேவகியின் உதரத்திற் சேர்த்துவிட்டு, ஏழாங் கர்ப்பத்தையும் இழுத்துக் கொண்டுபோய் ரோகிணியின் உதரத்திற் சேர்த்துவிட்டாள். தந்தை வசுதேவரும் முன்பு தன் மைத்துனன் கம்சனுக்கு வாக்குத் தத்தம் செய்தபடியால் தம் மனைவி தேவகியிடம் ஜனித்த ஆறு குழந்தைகளையும் கம்சனிடம் கொடுத்தார். கம்சன் அவற்றை வாங்கி வெட்டிப்போட்டான் ரோகிணியின் வயிற்றில் ஏழாவது கர்ப்பஞ்சேர்ந்தவுடன் சகல லோக ரக்ஷணார்த்தமாக ஸ்ரீஹரிபகவான் தேவகியின் கர்ப்பத்தில் எழுந்தருளினார். சுவாமியின் நியமனப்படி யோகநித்திரையும் யசோதையின் கர்ப்பத்தில் பிரவேசித்து, அவர் அவதரித்தத் தினத்திலேயே பிறந்தான். மகா விஷ்ணுவின் அம்சம் பூவுலகத்தில் சேர்ந்தவுடனே சூரியாதி கிரகங்கள் ஆகாயத்தில் விளக்கமாய்ச் சஞ்சரித்தன. வசந்தாதி ருதுக்களும் நன்றாக விளங்கின. மிகுந்த தேஜசினால் சூழப்பட்ட தேவகியைக் கண்களால் காண யாவரும் சக்தியற்றிருந்தார்கள். ஸ்ரீபகவானைத் தரிசித்து மேலான தேஜஸோடு விளங்கிய தேவகியை தேவதைகள் அங்கிருந்த புருஷர்களும் ஸ்திரீகளும் காணாதவாறு துதித்தனர்.
எப்படியெனில் ஓ, தேவகித் தாயே! நீ பூர்வகத்தில் மகத்துவத்தைக் கருப்பத்திற்கொண்டிருந்த சூக்ஷ்மப் பிரகிருதியாக இருக்கிறாய்! பிறகு சகல வேதங்களையும் கர்ப்பத்தினுடைய பிரணவ ரூபமான லோகநாதனுடைய சூக்தியாக இருக்கிறாய். படைக்கப்படும் சொரூபங்களை கர்ப்பத்தினுடைய சிருஷ்டியாயும், யாவற்றுக்கும் காரணமாய் யக்ஞங்களை கர்ப்பத்தில் வைத்துக் கொண்டிருக்கும் வேதமாகவும், பயனைக் கருக்கொண்டுள்ள பூஜையாயும், அக்கினியைக் கருக்கொண்ட அரணியாயும் தேவதைகளைக் கருவில் தரித்த அதிதியாயும், அசுரரைக் கர்ப்பத்தில் தரித்த தீதீயாயும், பகலைக் கருப்பத்தில் உடைய பின் மாலையாயும் ஞானத்தையுள்ளே கொண்டுள்ள பெரியோர்களின் பணி விடையாயும், நியாயத்தை உட்கொண்ட நீதியாயும், வணக்கத்தையுடைய லஜ்ஜையாயும், ஆசைப்படத்தக்க, பொருளை உட்கொண்டுள்ள ஆசையாயும், சந்தோஷத்தை உள் வைத்திருக்கிற திருப்தியாயும், அறிவை உட்கொண்டுள்ள புத்தியாயும், சஞ்சலமின்மையை உள்ளே தரித்திருக்கும் புத்தி நிலையாயும், கிரக நட்சத்திராதிகளையுள்ளே பொதிந்து கொண்டுள்ள ஆகாசமாகவும் இருக்கிறாய்! சகலமும் உன்னுள்ளே இருக்கின்றன! நீயே சுவாகை; சுவதை! நீயே வித்தை, நீயே சுதை! நீ ஆகாயத்தில் இருக்கும் அதிதி என்ற ஜோதியல்லவா? சகல லோக ரக்ஷண்யத்துக்காகப் பூமியில் அவதரித்தாய். தாயே! நீ அடியேங்களிடத்தில் அனுக்கிரகமுடையவளாய் உலகுக்கு நன்மை செய்தருள வேண்டும். மேலும் சகலலோகங்களையும் தரித்திருக்கும் எம்பெருமானை நீ உவப்போடுதரிக்க வேண்டும்.

———————-
3. கிருஷ்ணாவதாரம்

தேவர்களால் பலவாறும் துதிக்கப்பட்ட தேவகியானவள்; தாமரைக் கண்ணனாகிய எம்பெருமானை உலக ரக்ஷணைக்காகத் தன் கர்ப்பத்தில் தரித்திருந்தாள். பிறகு முன்பே சங்கல்பித்த விதமாக ஆவணி மாதத்தில், அமர பக்ஷத்தில், அஷ்டமி கூடிய ரோகிணியில் இரவில் உலகங்களாகிய தாமரைகள் யாவும் மலரும் பொருட்டு, சிறையிலுள்ள தேவகியிடம் ஸ்ரீமந் நாராயணனாகிய- சூரியன் உதித்தருளினான். சுவாமி அவதரித்தருளிய நாளானது சகல திசைகளும் நிர்மலமாகப் பெற்றதாய் சந்திரனது நிலவைப்போல யாவர்க்கும் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. சுவாமி அவதரித்தருளியதால் சத்புருஷர்கள் மகிழ்ந்தனர். உக்கிரமான காற்றுகள் தணிந்தன, நதிகள் தெளிந்தன, கந்தர்வர் பாடினர். அரம்பையர் ஆடினர். தேவர்கள் மலர் மழை பொழிந்தனர். இவ்விதமான லோகஹிதமாய் கருநெய்தல் பூப்போன்ற திருமேனியும் நான்கு திருத்தோளும் லச்சம் என்ற மறுப்பொருந்திய திருமார்புமாக அவதரித்த ஸ்ரீயப்பதியைவசுதேவர் சேவித்தார். பிறகு கம்சனைப்பற்றிய அச்சத்தால் சுவாமி! தேவதேவாதிபதியே! அடியேனது பாக்கியவசத்தால் இங்கு அவதரித்தருளினீர்கள் ஆயினும் திருவாழி, திருச்சங்கு முதலிய திவ்ய லட்சணங்களுடன் கூடிய இந்தத் திவ்ய ரூபத்தை அடியேனிடத்தில் அனுக்கிரகத்தினாலே, மறைத்தருள வேண்டும் ஏனெனில், இந்த மாளிகையில் தேவரீர் இப்படி அவதரித்ததை அறிந்தால் கம்சன் உடனே வந்து எங்களைக் கொல்வான். ஆகையால் இந்த ஸ்வரூபத்தை மறைத்துக்கொள்ளவேண்டும் என்று வசுதேவர் விண்ணப்பஞ் செய்தார். உடனே தேவகியும் பிரார்த்திக்கலானாள். சுவாமி! முடிவில்லாத சொரூபத்தை யுடையவராகவும், சகலலோகங்களையும் ரூபமாகக் கொண்டவராகவும், என் கர்ப்பத்தில் இருக்கும்போது சகலலோகங்களையும் திருமேனியாலே தாங்கிக் கொண்டிருப்பவராகவும் விளங்கும். நீங்கள் இம்மாயை என்கின்ற ஆச்சரியச்சக்தியினாலே பாலகனாய் அவதரித்தருளினீர்கள்! அடியாளுக்கு அனுக்கிரகஞ் செய்தருளவேண்டும்! என் தமையனான கம்சன் ஈவிரக்கமற்ற அசுரன், ஆதலால் அவனறியாதவண்ணம் நான்கு திருத்தோள் முதலிய லக்ஷணங்களுள்ள இந்தச் சொரூபத்தை மறைத்தருள வேண்டும், என்று தேவகியும் பிரார்த்தித்தாள். அவளை பகவான், பார்த்து, நீ பூர்வத்தில் புத்திரன் வேண்டும் என்று துதித்ததையே அதற்குப் பயனாக நான் உன் வயிற்றில் பிறந்து காட்டினேன், என்று கூறி அந்த ஸ்வரூபத்தை விட்டுச் சாதாரண பாலன் வடிவில் தோற்றமளித்தார்.
அதன் பிறகு வசுதேவர் தம்முடைய சிறைச்சாலையிலிருந்து அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார். சிறைக் காவலாட்களெல்லாம் யோக நித்திரையால் மதிமயங்கிச் சும்மாயிருந்தார்கள். அப்படியே, அந்த மதுரா பட்டணத்து வாயிற்காப்போரும் மயங்கிக் கிடந்தார்கள். குழந்தையை எடுத்துக் கொண்டு வசுதேவர் போகும்பொழுது உண்டான மழையை திருவனந்தாழ்வான் தன் திருமுடிகளால் தடுத்துக் கொண்டே கூட எழுந்தருளினான். அப்பொழுது சுழிந்து ஓடுகின்ற ஆழமான தண்ணீருள்ள யமுனா நதியும் குழந்தையான பகவானைத் தூக்கிச்செல்லும் வசுதேவருக்கு முழங்காலளவாக இருந்தது. அந்த யமுனைக் கரையில் கம்சனுக்குக் கப்பங்கட்ட வந்திருந்த நந்தகோபர் முதலியோரை வசுதேவர் பார்த்தார். அந்தக் காலத்தில் நந்தருடைய பத்தினியாகிய யசோதையும் யோக நித்திரையின் அம்சமான ஒரு பெண்ணைப் பெற்றும், அந்த யோக நித்திரையால் மயக்கமுற்றுப் பிறந்த குழந்தை இன்ன குழந்தை என்று அறியாமல் இருந்தாள். அங்கிருந்த அனைவரும் அப்படியே மயங்கியிருந்தார்கள். ஆகையால், வசுதேவர் அங்கு தடையின்றிச் சென்று தமது பாலகனை யசோதையின் படுக்கையில் விட்டு, அவளது பெண்குழந்தையை எடுத்துக் கொண்டு தம்முடைய சிறைச்சாலைக்கு வந்து சேர்ந்தார்.
பிறகு யசோதையானவள், மயக்கந் தெளிந்து, தன் அருகில் இருக்கும் ஆண் குழந்தையைக் கண்டு, தனக்கு மகன் பிறந்தான் என்று மிகவும் மகிழ்ந்தாள். மதுரையில் சிறைச்சாலைக்குத் திரும்பிவந்த வசுதேவரோ தாம் தூக்கிவந்த யசோதையின் பெண்குழந்தையைத் தேவகியின் படுக்கையில் விட்டவுடன், அது அழத் துவங்கியது. அதன் குரல் ஓசையைக் கேட்ட சிறைக் காவலர்கள் எழுந்தோடி தேவகிக்குப் பிள்ளை பிறந்தது என்று கம்சனுக்கு அறிவித்தார்கள். உடனே, கம்சனும் குரோத வெறியோடும் கொலை வெறியோடும் பரபரப்பாக ஓடிவந்தான். தேவகி துடிதுடித்து கம்சனை நோக்கி, அண்ணா! இது பெண் குழந்தையாயிற்றே! இதனால் உனக்கென்ன தீமை வரும்? ஒன்றும் வராது! இதையாவது விட்டுவிடு! கொன்றுவிடாதே! என்று கதறியழுதாள். ஆனால் தங்கை எவ்வளவுதான் அழுது கெஞ்சியும் கம்சன் கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல் அந்தப் பெண் குழந்தையைத் தூக்கி ஒரு பாறாங்கல்லின்மேல் போட்டு, வெட்டமுயன்றான். ஆனால் கல்லின் மேல் போட்டவுடனேயே பெண் குழந்தை எழும்பி வானத்திற்குப் பறந்துசென்று, ஆயுதங்களுடன் கூடிய எட்டுக் கைகளோடு ஒரு ரூபமெடுத்து வான வெளியில் நின்று, உரத்த குரலில் கோபத்துடன் சிரித்து கம்சனை நோக்கி, அடா மூடா! என்னைக் கல்லின் மேல் எறிந்து கொல்வதால் உனக்குப் பயன் என்ன? உன்னைக் கொல்பவன் பிறந்துவிட்டான். அவன் யாரென்று கேட்கிறாயா? அவன் சகல தேவதைகளுக்கும் சகல பாக்கியம் போன்ற மேன்மையாளன். அவன் தான் உன் முற்பிறப்பிலும் உனக்குப் பகைவன், இதை நீ அறிந்து, உனக்கு நன்மை எதுவோ அதைச் செய்துகொள்! என்று சொல்லிவிட்டு, சித்தர் முதலான தேவகணங்களால் பூஜிக்கப்பட்டு, கம்சனது கண்ணெதிரிலேயே ஆகாயமார்க்கமாகப் போய் மறைந்துவிட்டாள்.

—————–

4. கம்சனின் கட்டளை-

தன்னைக் கொல்ல ஒருவன் பிறந்துவிட்டான் என்பதை அறிந்ததும் கம்சனுக்குத் திகில் பிடித்தது. அவன் உடனே பிரலம்பன், கேசி முதலிய மகா அசுரர்களை அழைத்து, பெரும் புஜங்களைக் கொண்ட பிரலம்பனே; கேசியே தேனுகனே; அரிஷ்டனே! நீங்கள் அனைவரும் நான் சொல்வதைக் கேளுங்கள். துராத்மாக்களான தேவர்கள் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். ஆயினும் என் பராக்கிரம அக்கினியில் வெந்திருக்கும் அவர்களை மகா வீரனாகிய நான் லக்ஷ்யம் செய்யவில்லை ஏனென்றால் தேவர்களில் தேவேந்திரனோ அற்ப வீரன்! சிவனோ தவசி! சோர்வுற்ற சமயந்தேடி அசுரரைக் கொல்லும் சூரனான விஷ்ணு தான் என்னை என்ன செய்யமுடியும்? இவர்களே இப்படியானால் இவர்களைவிடக் குறைந்த பலமுடைய ஆதித்தன், வசுக்கள் முதலியவர்களால் என்ன சாதிக்க முடியும்? அவர்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு வந்தாலும் என்ன செய்ய முடியும்? இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்; கேளுங்கள். முன்பு ஒரு சமயம் தேவர்களோடு நான் போர் செய்தபோது, அவர்களுடைய தலைவனாகிய இந்திரன், நான் எய்த அம்புகளில் ஒன்றையாகிலும் தனது மார்பினால் தாங்கமாட்டாமல், முதுகினால் தாங்கிக் கொண்டு ஓடி ஒளிந்தான்! அதை நீங்கள் அறிவீர்கள். இந்திரன் என் ராஜ்யத்தில் மழை பெய்யாமல் நிறுத்தியபோது, நான் என் பாணங்களால் மேகங்களைப் பிளந்து மழையைப் பெய்வித்தேன். இது உங்களுக்குத் தெரியாதா? என் மாமன் ஜராசந்த மகாராசனைத் தவிர, மற்றெந்த அரசர்கள் தான் எனது புஜ பலத்திற்குப் பயந்து வணங்காமல் இருக்கிறார்கள்? ஆகவே இந்தத் தேவர்கள் எனக்கு அலட்சியமாகத் தோன்றுகிறார்கள். ஆனாலும் நாம் ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும். அந்தப் பகைவர்களானத் தேவர்களுக்கு நாம் செய்யவேண்டிய அபகாரம் என்ன தெரியுமா? பூமியில் விசேஷதான சீலராகவும் யாக சீலராயும் இருப்பவர்கள் யாராயிருந்தாலும் சரி. அவர்களையெல்லாம் நாம் துன்புறுத்தி வதைக்கவேண்டும். அவ்வாறு நாம் செய்தால், விருத்தியில்லாமையால் தேவர்கள் தாமே அழிந்து போவார்கள். அசுரர்களே! இன்னும் ஒன்று சொல்கிறேன். தேவகியின் வயிற்றில் பிறந்த பெண், உனக்கு யமன், முன்னமே பிறந்துவிட்டான்? என்று சொல்லியிருக்கிறதல்லவா? ஆகையால் இந்தப் பூமியில் பிறந்திருக்கிற பாலகர் விஷயத்திலும் நாம் எத்தனஞ் செய்ய வேண்டும், அதாவது, எந்தப் பாலகனிடத்திலே விசேஷமான பலமும் சாமர்த்தியமும் காணப்படுகிறதோ; அந்தப் பாலனைத் கண்டுபிடித்து எப்படியாகிலும் அவனைக் கொன்றுவிட வேண்டும்! என்று கட்டளையிட்டுவிட்டுத் தன் அரண்மனை சென்றான்.
பிறகு அவன் தங்கை தேவகியையும் மைத்துனன் வசுதேவரையும் சிறைக் காவலிலிருந்து விடுதலை செய்து, அவர்களை நோக்கி, உங்களுடைய குழந்தைகளையெல்லாம் நான் வீணாகக் கொன்றேன். கடைசியில் எனக்கும் எமனாக எவனோ ஒருவன் எப்படியோ பிறந்து எங்கோ இருக்கிறான்! உங்களுக்குப் பிறந்த குழந்தைகள் போய்விட்டதே என்று நீங்கள் வருந்த வேண்டாம். குழந்தைகள் அப்படிச் சாகவேண்டும் என்று விதியிருந்து அதன்படியே நடந்தது! மேலும் உங்களுடைய பாப பயனாகவும் அக்குழந்தைகள் கொல்லப்பட்டன! என்று சமாதானம் கூறி, அவர்களுக்கு விடை கொடுத்து, அச்சத்துடன் தன் தனிமாளிகைக்குச் சென்றான்.

——————

5. பூதகியின் வதம்

இவ்வாறு, கம்சனால் விடுதலை செய்யப்பட்ட வசுதேவர் விரைந்து சென்று இடையர் குலத்தலைவரான நந்தகோபனுடைய வண்டி வீட்டை அடைந்தார். தனக்குப் புத்திரன் பிறந்தான் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த நந்தகோபனை அவர் சந்தித்து, நந்தகோபா! பகவத் சங்கல்பத்தால் உமக்குப் புத்திர சந்தானம் உண்டாயிற்றே? அது பாக்கியம், மஹா பாக்கியம்! உமக்கு இந்த வார்த்திகத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இது பலரின் கண்ணேறு படத்தக்கது. நீங்கள் அரசனுக்குச் செலுத்த வேண்டிய கப்பம் எல்லாம் செலுத்திவிட்டீர்கள் அல்லவா? இனி மேல் நீங்கள் இங்கிருப்பது நல்லதல்ல. ஏனெனில் பொருள் உள்ளவர்கள் துஷ்டஅரசர்களின் அருகே இருப்பது எப்போதும் அபாயமேயாகும்! ஆகையால் நீங்கள் வந்த காரியம் முடிந்து விட்டது. ஆகவே இனிமேல் இங்கு தாமதிக்காமல் உடனடியாக உங்களுடைய கோகுலத்திற்குப் போய்ச் சேருங்கள். எனக்கு ரோகிணியின் வயிற்றில் பிறந்த குழந்தை ஒன்று அங்கே இருக்கிறது. அதை உங்கள் பிள்ளையைப் போலவே நீங்கள் பாதுகாத்து வரவேண்டும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தம் இருப்பிடம் சென்றார். நந்தகோபர் தம் கூட்டத்துடன் வண்டிகளில் சாமான்களை ஏற்றிக்கொண்டு கோகுலம் போய்ச் சேர்ந்தார்.
இதற்கிடையே அரக்கன் கம்ஸனால் ஏவப்பட்ட பூதனை என்ற அரக்கி ஒருத்தி நல்லதொரு பெண் உருவமெடுத்து, இரவிலே ஆங்காங்கே சிறு குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுத்துக் கொன்றுகொண்டே, கோகுலத்துக்கு வந்து நந்தகோபனின் மாளிகையில் தூங்கிக்கொண்டிருந்த யசோதையின் குழந்தையான பாலகிருஷ்ணனை எடுத்து முலைப்பாலூட்டினாள். அவள் எந்தெந்தக் குழந்தைகளுக்கு முலைப்பால் ஊட்டுவாளோ அந்தக் குழந்தைகள் உடனே ரத்த மாமிசமெல்லாம் சுண்டிப்போய் மரணமடையும் ஆனால் கிருஷ்ண பகவானான இந்தக் குழந்தையோ அந்த அரக்கியின் முலைகளைத் தன் கைகளாலே இறுகப்பிடித்து, பாலை அவளோடு உயிரோடு சேர்த்து உறிஞ்சியது. அவ்வாறு உறிஞ்சியவுடன், பூதகி தன் சுபாவமான உரத்தக் குரலில் பேரிரைச்சலிட்டுக் கதறியழுது, சுய ரூபத்தோடு தரையில் விழுந்து இறந்தாள். அந்த இரைச்சலைக் கேட்டு இடையர்கள் அனைவரும் திகைத்து எழுந்து, அங்கு ஓடி வந்து பார்த்தார்கள். அங்கு அந்தப் பூத அரக்கியின் மடியில் குழந்தை இருப்பதையும் அரக்கி செத்துக் கிடப்பதையும் கண்டார்கள். யசோதையும் பரபரப்போடு ஓடிவந்து குழந்தையை எடுத்துப் பசுவின் வாலைச் சுற்றி, அந்தப் பூதகியால் உண்டான பாலதோஷத்தைப் போக்கினாள். நந்தகோபரும் அங்கு வந்து, குழந்தையை வாரியெடுத்து கோமய சூரணத்தை அதன் உச்சந்தலையில் காப்பாக வைத்தார். என் அருமைக் குழந்தையே! எவனுடைய நாபீ கமலத்தினின்றும் இந்த உலகங்கள் யாவும் உண்டாயிற்றோ, அத்தகைய சகல உற்பத்திக்கும் காரண பூதனான, ஸ்ரீ ஹரி பகவான் உன்னைக் காப்பானாக! எவனது வராகக் கொம்பின் நுனியில் இந்தப் பூமியானது தாங்கப்பட்டு, சகல பிரபஞ்சத்தையும் தரித்திருக்கின்றதோ, அந்த மகாவராக ரூபமுள்ள பகைவரின் மார்பைப் பிளந்த அந்த நரசிம்ம ரூபியான ஜனார்த்தனன் எங்கும் உன்னைக் காப்பானாக! முன்பு சின்னஞ்சிறு வாமன உருவமாக இருந்து, ஒரு கணத்திலே மூவடி மூன்று காலடிகளினால் முறையே மூன்று உலகங்களையும் அளந்து ஆக்கிரமித்து, திருக்கைகளிலே அநேக திவ்ய ஆயுதங்களுடன் பிரகாசிக்கும் பகவான் உன்னை எப்போதும் பாதுகாப்பானாக உன் சிரசைக் கோவிந்தன் காக்க உன் கண்டத்தைக் கேசவன் காக்க, உன் குறியுட்பட்ட வயிற்றின் இடத்தையெல்லாம் ஸ்ரீவிஷ்ணு காக்க முழந்தாள், பாதங்கள் இவற்றை ஜனார்த்தனான் காக்க; முகத்தையும் கரங்களையும் அவற்றின் கீழ்புறங்களையும் மனத்தையும் மற்றுமுள்ள புலன்களையும் ஸ்ரீமந்நாராயணன் காக்கட்டும்! உனக்குப் பகைவராயுள்ள பிரேத கூசுமாண்ட ராக்ஷசாதிகள் சங்கு சக்கரம் கதை முதலிய திவ்விய ஆயுதங்களைத் திருக்கைகளில் ஏந்திய எம்பெருமானின் திருச்சங்கின் ஓசையினால் அதஞ் செய்யப்பட்டு, நாசமாவார்களாக! வைகுண்டநாதன் திசைகளிலே உன்னைப் பாதுகாப்பானாக! மூலைகளில் மதுசூதனன் காப்பானாக வானத்தில் ரிஷிகேசன் ரட்சிப்பானாக பூமியிலே தரணிதரன் காப்பானாக! என்று கூறி நந்தகோபர் தம் குழந்தைகளுக்கு சாந்திக் கிரியைகளைச் செய்தார். பிறகு, குழந்தையைச் சகட்டின் கீழ்ப்புறத்தில் தொட்டிலில் வளர்த்தினார் அங்கு விழுந்து கிடக்கும் பூத அரக்கியின் பெருத்த பயங்கர உடலைக் கண்டு அங்கு வந்த இடையர் அனைவரும் பயந்து, திகைத்து வியந்தார்கள்.

——————-

6. சகடயமளார்ச்சுன பங்கம்-

சகட்டின் கீழ்ப்புறத்தில் குழந்தையான கிருஷ்ண பகவான் பள்ளிகொண்டிருந்தபோது ஒரு நாள் அச்சகட்டில் அசுரன் ஒருவன் வந்து அவேசித்தான். அதையறிந்த கண்ணன் முலைப் பாலுக்கு அழுகின்ற பாவனையால், சிறிய திருவடிகளை மேலே தூக்கி உதைத்தான் அந்தத் திருவடிகளால் உதைபட்ட மாத்திரத்திலே சகடானது திருப்பப்பட்டு அதன் மேலிருந்த கும்பம் முதலானவைகள் உடையக் கீழே விழுந்தது. உடனே இடையர் இடைச்சியர் அங்கு ஓடி வந்து பார்த்தார்கள். அங்கே மல்லாந்து படுத்திருக்கும் குழந்தையையும் கீழே விழுந்து கிடந்த சகட்டையும் பார்த்து திடுக்கிட்டு யார் இந்தச் சகட்டை இப்படித் திருப்பியது? என்று கேட்டார்கள், அதற்கு அங்கிருந்த சிறுவர்கள் இந்தக் குழந்தைதான் அழுது கொண்டே காலைத் தூக்கியது. அதன் தாக்குதலில் இந்தச் சகடு திரும்பிக் கீழே விழுந்தது. நாங்கள் அதை எங்கள் கண்களாலேயே கண்டோம்! என்றார்கள்.
அதைக்கேட்ட யாதவர்கள் ஆச்சரியமடைந்தனர். நந்தகோபரும் வியப்போடு குழந்தையை எடுத்துக் கொண்டார். யசோதையும் சகட்டின் மேலேயிருந்து கீழே விழுந்து உடைந்த பாண்டங்களின் ஓடுகளையும் அந்தச் சகட்டையும் தயிர், மலர், அட்சதை முதலியவற்றால் பூஜித்தார்கள். வசுதேவர், கர்க்கர் என்ற தமது புரோகிதரை அழைத்து வரச் செய்தார். மகாஞானியான அம்மாமுனிவர் வந்ததும் கோகுலத்தில் யாருக்கும் தெரியாத ஏகாந்தமான ஓர் இடத்தில் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஜாதகருமம் முதலிய சடங்குகளைச் செய்து ரோகிணி வயிற்றில் பிறந்த மூத்த குழந்தைக்கு ராமன் (பலராமன்) என்றும் யசோதையின் குழந்தைக்குக் கிருஷ்ணன் என்றும் திருப்பெயர் சூட்டினார்கள். மைத்ரேயரே! பிறகு அந்த இரண்டு பாலகரும் முழங்கால்களையும் கைகளையும் ஊன்றித் தவழ்ந்து விளையாடிக் கொண்டே வரும்போது கோமயம், சாம்பல் இவற்றைத் தங்கள் திருமேனியில் பூசிக்கொண்டும், ஒரு கணமாவது ஓரிடத்திலும் நிற்காமல், மாட்டுத் தொழுவிலிருந்து கன்றுத் தொழுவிற்கும், கன்றுத் தொழுவிலிருந்து மாட்டுத் தொழுவிற்கும் ஓடுவதும்; பசுவின் வால், கன்றின் வால் இவற்றை இழுப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்பாலகரின் விளையாட்டுக் குறும்புத் தனங்களைத் தடைப்படுத்த ரோகிணியாலும் யசோதையாலும் முடியவில்லை. இப்படி யாராலும் தடுக்கக் கூடாமல் இருந்ததால் யசோதையானவள் பாலகிருஷ்ணனின் இடுப்பிலே ஒரு கயிற்றைக் கட்டி, ஓர் உரலிலே அக்கயிற்றைப் பிணைத்து வைத்துவிட்டு குழந்தையை நோக்கி குறும்புக்காரனே! மிகச் சஞ்சலமான சேஷ்டைகளையெல்லாம் செய்யும் விஷமக்காரனே! இனிமேல் ஓடு பார்ப்போம்! என்று சொல்லிவிட்டு தனது வேலைகளில் ஈடுபட்டிருந்தான்.
அவ்வாறு வேறு வேலைகளில் தாய் ஈடுபட்டிருக்கும்போது குழந்தை கண்ணன் அந்த உரலை இழுத்துக் கொண்டு, அங்கேயிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே புகுந்தான். அப்போது அந்த உரல் மரத்தின் குறுக்காய் நின்று இழுக்கப்பட்டதால், அநேக பெருங் கிளைகளோடு கூடிய அந்த, மருத மரம்முறிந்து விழுந்தது. அது விழும்போது உண்டாகிய கடகடா என்ற பெரும் சப்தத்தைக் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தார்கள். பெரிய மரம் ஒன்று இரு பிளவாக முறிந்து விழுந்திருப்பதையும் அவற்றின் இடையே, குழந்தை கிருஷ்ணன் உரலோடு கட்டுண்ட நிலையில் தவழ்வதையும் புதிதாய் முளைத்த சிறு பற்களின் வெண்மையொளி வீசப் புன்னகை செய்வதையும் பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டு நின்றார்கள். இதனால் சுவாமிக்குத் தாமோதரன் என்ற திருநாமம் உண்டாயிற்று. பிறகு, நந்தகோபர் முதலியவர்கள் இத்தகைய உற்பாதங்களைக் கண்டு பயந்து திகிலடைந்து ஆலோசிக்கத் துவங்கினார்கள். பூதகி வந்து பாலூட்டிச் செத்ததும், சகடு மாறி விழுந்ததும், புயற்காற்று முதலிய உபத்திரவங்கள் இல்லாதிருக்கும்போதே பெரிய மருத மரம் முறிந்து விழுந்ததும் போன்ற உற்பாதங்கள் அநேகம் காணப்படுகின்றன. ஆகையால் நாம் இந்த இடத்தை விட்டு வேற்றிடத்துக்கு உடனே சென்றாக வேண்டும். அப்படிச் செய்யாமற் போனால் இத்தகைய பூமி சம்பந்தப்பட்ட மகோத் பாதங்களில் நமது ஆயர்சேரிக்கே தீங்குகள் ஏற்படக்கூடும். ஆகையால் நாம்இதைவிட்டுப் போகவேண்டும் என்று ஆலோசித்து நந்தகோபர் தம் கூட்டத்தினருக்குக் கட்டளையிட்டார். அந்தந்தத் தலைவர்கள் அவரவரது கூட்டத்தினரை நோக்கி, சீக்கிரம் பிரயாணத்துக்குத் தயார் ஆகுங்கள் என்று கட்டளையிட்டார்கள். பிறகு அந்தந்தக் கூட்டத்தார், அவரவரது வண்டிகளின்மேல் சாமக் கிரியைகளைப் போட்டுக்கொண்டு புறப்பட்டார்கள். மாடு மேய்ப்போர் மாடுகளையும் கன்று மேய்ப்போர் கன்றுகளையும் ஓட்டிக் கொண்டு பிருந்தாவனம் என்னும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் சென்ற பிறகு பிருகத்வனமானது நெல் சோறு தயிர் முதலியவை சிந்தப் பெற்று, காக்கை முதலிய குரூரப் பறவைகள் நிறைந்ததாய் விகாரமாகப் பட்டுப் போயிற்று அவர்கள் புதிதாய்ப் புகுந்த பிருந்தாவனமோ நற்செயல் புரியவல்ல கண்ணனால், புதுப் பொலிவு பெற்றது. பசுக்கள் விருத்தியடைந்து செழிக்கும் வண்ணம் கண்ணன் குளிர்ந்த திருவுள்ளத்தோடு அருள்புரிந்ததால் மிகவும் கொடிய கோடையிலும் மழைக் காலத்தில் உண்டாவது போன்ற இளம் புற்கள் செழிப்புற வளரப்பெற்றிருந்தது. ஆயர்கள் எல்லாம் அந்தப் பிருந்தாவனத்தில் அரைச்சந்திர வடிவில் குடியிருப்புகளை அமைத்து அதன் ஓரமெல்லாம் வண்டிகளை நிறுத்தும் இடம் உண்டாக்கிக் கொண்டு அங்கே குடியிருந்தார்கள்.
சிறிது காலம் சென்றது. பலராமன் பால கிருஷ்ணன் இருவரும் கன்று மேய்க்கும் பருவத்தை அடைந்து காக பக்ஷங்களைத் தரித்துக்கொண்டு அக்கினி குமாரர்களான சாகன் விசாகன் என்பவர்களைப் போல் விளக்கமுற்று மயிற் பீலியை முடியிலும் காட்டு மலர்களைக் காதிலும் அணிந்துகொண்டும் இடையருக்கு உரிய புல்லாங் குழல்களினாலும் இலைகளினாலும் பல வாத்திய ஓசைகளை எழுப்பிக் கொண்டும், கைகொட்டியும் சிரித்தும் ஓடியும் ஒருவரையொருவர் சுமந்தும் கன்றுகளைமேய்த்தும் ஒருவரோ டொருவர் இணைபிரியாமல் ஓரிடத்திலேயே விளையாடிக் கொண்டும் இருந்தார்கள். மைத்ரேயரே இந்த மாயா லீலையைப் பார்த்தீரா சகல லோகங்களையும் காப்பவர் கன்று காலிகளைக் காப்பவரானார். இவ்வாறு அவர்கள் விளையாடித் திரிந்து வரும்போது மேகக் கூட்டங்களினால் வானம் முழுதும் மறைத்துக் கொண்டு, நீர்த்தாரைகளினால் திசைகளையெல்லாம் ஒன்றாக்குவதைப் போல் மழைக்காலம் வந்தது. அந்த மழைக் காலத்தில் புதிய புற்கள் நிறைய முளைத்திருந்ததாலும், அதன் மேல் ஆங்காங்கே தம் பலப் பூச்சிகள் வியாபித்திருந்தாலும் பூமியானது பச்சைக்கல்லினால் செய்யப்பட்டு இடையிடையே பதுமராகம் இழைத்தது போல் இருந்தது. புதிதாய்ச் செல்வம் அடைந்த காலத்தில் அடக்கமும் ஒழுக்கமும் இல்லாதவர்களின் மனங்கள் எப்படி யாகுமோ அதுபோல் அந்தக் காலத்தில் தண்ணீரானது வழி முறைகளை நோக்காமல் இசைந்தவாறெல்லாம் ஓடிக்கொண்டிருந்தது. விவேகமில்லாத அரசனின் ஆசிரிய பலத்தினால் குணஹீனனான ஒருவன் ஒரு பெரும் பதவியில் நிலைபெற்றது போல குணஹீனமான இந்திர வில் ஆகாயத்தில் நிலைபெற்று இருந்தது. வான மேகங்களுக்குக் கீழே நிர் மலமான நாரைகளின் வரிசையானது அபகாரம் செய்தல் முதலிய தீயஒழுக்க முடையவனிடத்திலும் நற்குலத்தான் செய்யும் நற்செய்கையைப் போல் மிகவும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. உத்தமனிடத்திலே கெட்டவன் நட்புக் கொள்வது போல் வானத்தில் மின்னலானது தோன்றி மறைந்து நிலையற்றிருந்தது மிகவும் மூடர்கள் தாம் நினைத்த கருத்து விளங்கும்படிப் பேசத் தெரியாமல் வாய்க்கு வந்தபடி யெல்லாம் பேசும் பேச்சுக்கள் வேறு பொருளைக் காட்டி விளங்காமற் போவது போல் அக்காலத்தில் புல் பூண்டுகள் முதலிய வற்றால் பாதைகள் மூடப்பட்டு விளங்காமலிருந்தன. அத்தகைய இடத்தில் மயில்களும் மான்களும் நிறைந்திருந்தன. அங்கு ராமன் கிருஷ்ணன் இருவரும் காட்டில் இடைப் பிள்ளைகளுடன் கூடி மிகவும் மகிழ்ச்சியாகச் சஞ்சரித்துக்கொண்டு இருந்தார்கள். அங்கு அவர்கள் நடத்திய திருவிளையாடலைக் கேளும்.
அவர்கள் ஓரிடத்தில் பசுக்களுடன் கானம் பாடிக்கொண்டும் ஓரிடத்தில் மிகவும் குளிர்ச்சியான மரநிழல்களில் உலவிக் கொண்டு மிருந்தார்கள் ஓரிடத்தில் கடப்பம் பூமாலைகளையும் மயில் தோகை மாலைகளையும் சாத்திக்கொண்டு, பலநிற மலைத்துகள்களை திருமேனியிற் பூசிக்கொண்டு ஆடினார்கள். மற்றோர் இடத்தில் தழைகளினால் படுக்கை போட்டு, அதில் படுத்து கண் அயர்ந்திருந்தார்கள். இன்னுமோரிடத்தில் சிறுவர்களுடன் பாடிக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் மயில்கள் கூவுவதைக் கேட்டு, அவை போலத்தங்கள் குழல்களையும் ஊதினார்கள். இவ்வளவு அநேகவிதமான பாவனைகளான திருவிளையாடல்களினால் ராமகிருஷ்ணர்களான அண்ணன் தம்பி இருவரும் மிகவும் நேசத்தோடும் மகிழ்ச்சியோடும் பிறரை மகிழ்வித்துத் தாமும்மகிழ்ந்து வந்தார்கள். இரவிலுங்கூடச்சிறிது நேரம்பசுக்களோடும் இடையச் சிறுவரோடும் விளையாடிவிட்டுத் தங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு வந்து சேர்வார்கள். மைத்ரேயரே! இவ்வாறு அக்குமாரர்கள் இருவரும், காந்தி, பலம் முதலியவற்றில் தேவாமிசம் தோன்றும்படி, நந்தகோபனது திருமாளிகையில் வளர்ந்து வந்தார்கள்.

————–

7. காளிய மர்த்தனம்-

ஒருநாள் கிருஷ்ணன் தன் அண்ணனான பலராமனை விட்டுத் தனியாகக் காட்டுக்குச் சென்று, அங்கிருந்த இடைப் பிள்ளைகளுடன் காட்டு மலர்களை அணிந்து உலாவிக்கொண்டிருந்தான். அப்போது பேரலைகளோடு பெருகிவரும், யமுனை நதியின் அருகே வந்தான். அந்நதியில் விஷாக்கினியினாய் கொதிப்படைந்த நீருடன் மிகவும் பயங்கரமாயிருந்த காளிய மடுவையும், அதன் விஷவேகத்தால் கரையிலுள்ள மரங்கள் எரிக்கப்பட்டிருப்பதையும், காற்றில் அகப்பட்ட நீர்த் துளிகளின் ஸ்பரிசத்தினாலே வானத்தில் பறக்கும் பறவைகளுங்கூட எரிந்து போவதையும் கண்டு, இந்த மடு கொடிய மிருத்யுவின் வாய்போல் இருக்கிறதே! பரம துஷ்டனாயும் விஷத்தையே ஆயுதமாகக் கொண்டவனுமான காளியநாதன் இந்த மடுவில் இருக்கிறான் அன்றோ? இவனை நாம் வென்றால், இந்த மடுவை விட்டு அவன் கடலுக்குப் போவான். இந்த மடுவில் காளிய சர்ப்பம் இருப்பதால், யமுனை நதியானது கடல் எட்டும்வரை கொடுக்கப்பட்டு, நீர் வேட்கையுள்ள மனிதருக்கும் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பானயோக்கிய மின்றி இருக்கிறது. ஆகையால் இந்தக் கொடிய சர்ப்பத்தைத் தண்டித்தே ஆகவேண்டும். அதனால் இந்த ஆயர்பாடியில் இருப்பவரனைவரும் பயமின்றி இந்த நதியின் நன்னீரைப் பயன்படுத்திக் கொள்வார்கள். வழி தவறிய துஷ்டர்களை நிக்கிரகிக்கத்தானே நாம் அவதரித்தோம்? ஆகவே, நதிக்கரையில் உள்ள இந்தக் கடப்ப மரத்தின்மேல் ஏறி காளிய சர்ப்பம் இருக்கும் மடுவில் குதிப்போம் என்று பாலகிருஷ்ணன் எண்ணமிட்டுத் தன் திருப்பரிவட்டத்தை நன்றாக இழுத்துக் கட்டிக்கொண்டு மரத்தின்மேல் ஏறி, அதிலிருந்து வேகமாய் அந்த மடுவில் குதித்தான். அப்படி சுவாமி குதித்ததால், மடுநீர் அலைந்தது. நீர் பரவியதால் தூரத்திலிருந்த மரங்கள் நனைந்தன. அம்மரங்கள் சர்ப்ப விஷாக்கினிச் சுவாலையினால், கொதித்த நீர் பட்டதுமே தீ மூட்டியது போல நாற்புறங்களிலும் சுவாலைகள் பரவி எரிந்து போயின. பாலகிருஷ்ணனோ காளியமடுவிற் குதித்தவுடனேயே தன் தோள்களைப் பலமாகத் தட்டினான். கண்ணன் தோள் தட்டிய ஓசையைக் கேட்டவுடனே காளியன் என்னும் சர்ப்பராஜன் கோபத்தினால் கண்கள் எல்லாம் சிவக்க; முகங்களில் விஷச் சுவாலைகள் மிகுந்தவனாய், மகாவிஷமுள்ள பல்வேறு பாம்புக் கூட்டங்களுடன் மடுவை விட்டு வெளியே வந்தான். அவனுடைய அநேக நாக பத்தினிகளும் அழகிய முத்து மாலைகளை அணிந்து உடம்பையசைப்பதால் காதுகளிலே அசையும் குண்டலங்கள் காந்திவீச, வெளியே வந்தனர்.
உடனே, காளியனும் மற்றையச் சர்ப்பங்களும் தங்களது உடல்களினால் கண்ணனை இறுகப்பிணைத்துக்கொண்டு கடித்தன. இவ்விதமாக அந்த மடுவில், சர்ப்பங்களினாலே சுற்றப்பட்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணனை இடைப்பிள்ளைகள் பார்த்ததும் பயந்தார்கள். அவர்கள் ஆயர்பாடிக்கு ஓடிச்சென்று ஐயோ! நம்முடைய கிருஷ்ணன் மோகத்தால் காளியமடுவில் விழுந்து மூழ்கிப் போய் காளியனால் விழுங்கப்படுகிறான், ஓடி வாருங்கள், என்று கூவினார்கள். இடி விழுந்தது போன்ற அந்தப் பேச்சைக் கேட்டு, அங்கிருந்த தாய் யசோதையும் மற்றுமுள்ள கோபாலர்களும் ஐயோ! கிருஷ்ணன் எங்கே? எப்படியிருக்கிறான்! என்று கதறிக்கொண்டு ஒன்றுந் தோன்றாமல் பரவசராய்க் கால்திடற, அந்த மடுவின் அருகே ஓடி வந்தார்கள். அதுபோலவே தந்தை நந்தகோபரும் தமையன் பலராமனும் பரபரப்புடன் ஓடி வந்தார்கள். யமுனை நதியில் பாம்புகளால் பிணைக்கப்பட்டு அசைய மாட்டாமற் கிடக்கும் கண்ணபிரானைப் பார்த்ததும் தம் கண்களில் தாரை தாரையாய் நீர்வடிய எல்லோரும் கதறி யழுது கொண்டு நின்றார்கள். நந்தகோபரும் யசோதையும் கண்ணன் திருமுக மண்டலத்திலேயே கண்களை வைத்து லயித்தவர்களாய், ஒரு செயலும் இன்றி மரம்போல் அசைவற்று நின்றார்கள். கண்ணனுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்குவது அரிது என்ற அதைரியமும் பயமும் பற்றியவர்களாக அவர்கள் நாவுலர்ந்து வாய் குளற அழுதார்கள். அவர்கள் அழுதுகொண்டே, நாமெல்லாம் யசோதையுடன் இந்த காளியமடுவில் விழுந்து விடுவோம். இனி ஆயர்பாடிக்குப் போகக் கூடாது. ஏனெனில் சூரியனில்லாத பகல் எதற்கு? கிருஷ்ணன் இல்லாத திருவாய்ப்பாடி நமக்கு எதற்கு? ஆகையால் நாம் அங்கே மறுபடியும் போவது தகுதியன்று கண்ணனை விட்டுத் தண்ணீரில்லாத குளம் போல அழகற்றதும் சுக ஹேதுவாகாததுமான இடைச்சேரிக்குப் போக மாட்டோம். எங்கே கருநெய்தல் மலர்போன்ற கண்ணன் இல்லையோ, அது தாய்வீடானாலும் அந்த வாசத்தினால் மகிழ்ச்சி உண்டாக மாட்டாது! என்று இடையர்கள் பிரலாபித்தார்கள். தந்தை நந்தகோபரும் தாய் யசோதையும் மயங்கியிருந்தனர். அப்போது பலபத்திரனான பலராமன் தன் தம்பி கிருஷ்ணனோடு தங்களுக்குரிய சங்கேத வார்த்தகைளினால் இவ்வாறு கூறலானான்.
பிரும ருத்திராதியருக்கும் அதிபதியானவனே! சுவாமி! நீ ஏன் அனந்தனான உன் சொரூபத்தை மறந்து மனுஷியனாக இருக்குந் தன்மையைக் காட்டுகிறாய்? சக்கரத்தின் அரங்களுக்கு நடுமயம் போல் உங்களுக்கெல்லாம் நீயே ஆதாரமாக இருக்கிறாய். மேலும் படைப்பவனும் அழிப்பவனும் காப்பவனும் நீ! சிந்திக்கக் கூடாத சொரூபமுடையவனே! சகல வேத சொரூபியும் நீ! ஜகந்நாதா! நீ பூபாரத்தை நீக்குவதற்காக மனித அவதாரம் செய்தருளினாய். உனது விபூதியான நானும் உன் தமையனாகப் பிறந்தேன். பகவானே! நீ மனுஷ்ய லீலையை அனுசரித்து எழுந்தருளியிருப்பதனாலே, சகல தேவதைகளும் இங்கே அவதரித்துள்ளனர். எம்பெருமானே! உன் லீலைக்கு உபயோகமாக ஆயர்பாடியில் தெய்வப் பெண்களை முன்னதாக அவதரிக்கச் செய்து அதன் பிறகு நீ அவதரித்தாயல்லவா? இவ்விதம் அவதரித்த உமக்கும் எனக்கும் உன் சங்கல்பத்தினால் பிறந்த கோபாலரும் கோபியருமல்லவோ உறவினர் ஆகிறார்கள்? அப்படியிருக்க மிகவும் விசனமடைந்துள்ள இவர்களை ஏன் உபேக்ஷிக்கிறாய்? ஓ, கிருஷ்ணா! இதுவரை நீ மனுஷ்ய பாவனையைக் காட்டியதும் பாலகனாக இருப்பதின் லீலையைக் காட்டியதும் போதும் இனிவிரைவாக மகா துஷ்ட சொரூபமாகவுள்ள அந்தப் பாம்பை அடக்கி அருள்வாயாக! என்று பலபத்திரன் (பலராமன்) நினைப்பூட்டினான்.
பாலகிருஷ்ணன் புன்னகையுடன் காளியன் என்ற அந்தப் பாம்பை ஒரு அறை அறைந்து அதன் உடலின் பிணைப்பிலிருந்து தன்னை விடுத்துக் கொண்டான். பிறகு கண்ணன் தன் இரண்டு திருக்கைகளாலும் காளியனின் நடுத்தலையை அமுக்கி அதன்மேல் ஏறி நர்த்தனம் ஆடினான். இவ்வாறு தன் திருவடிகளால் துவைத்ததால், சர்ப்ப ராஜனின் பிராணங்கள் எல்லாம் படத்திலே வந்தன துவைக்கப்படாத மற்றொரு படத்தையும் சர்ப்பராஜன் தூக்கியெடுத்தான். அதையும் கண்ணன் தன் திருவடிகளால் வணங்கியருளினான். இதனால் நசுக்குண்ட பாம்பரசன் உதிரத்தையும் நஞ்சையும் கக்கினான் அவன் சோர்வடைந்ததைப் பார்த்ததும் அவனுடைய நாகபத்தினிகள் ஸ்ரீகிருஷ்ணனின் திருவடிகளில் சரண்புகுந்து, தேவதேவேசுவரனே! நாங்கள் உன்னை அறிந்தோம். நீ சர்வ யக்ஞனாகவும் உத்தமரில் உத்தமனாயும், மனம் வாக்குக்கு எட்டாத பரஞ்சோதியென்று சொல்லப்படும் பிரம்மத்தின் திருவவதாரமாக இருப்பவன் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதமயமான பிரபஞ்சங்கள் எல்லாம் எவனது சொரூபத்தின் அமிசத்தின் அமிசத்திலும் அமிசமோ, அப்படிப்பட்டவனை நாங்கள் எப்படித் துதிப்போம் அணுவுக்கு சூட்சும மாயும் ஸ்தூலங்களுக்கும் பெரியதாகவும் இருக்கிறஎவனுடைய பரமார்த்தமான சொரூபத்தை யோகியருங்கூட அறிய மாட்டார்களோ, அத்தகைய உன்னை நாங்கள் சரணடைகிறோம் சுவாமி! தேவரீருக்குக் கொஞ்சமேனும் கோபம் என்பதில்லை. ஆயினும் இந்தக் காளியனைத் தண்டித்தது ஏனென்றால் லோக மரியாதையை நிலை நிறுத்துவதற்குத்தான் என்பதை அறிந்தோம். இனி எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருள்வீராக.
பெண்கள் திறத்திலும், பேதைகள் திறத்திலும் பெரியோர்கள் இரங்க வேண்டுமன்றோ? ஆகையால் மெலிந்து இளைத்த எங்கள் நாயகனான காளியன்மீது இரக்கம் காட்டவேண்டும். பொறுமையுடையவரில் நீர் சிறந்தவரல்லவா? சகல உலகங்களுக்கும் ஆதாரமாகிறவன் நீர்! இந்த நாகனோ அற்ப பயமுடையவன் இவன் உனது திருவடியினால் துவைக்கப்பட்டதால் அரைமுகூர்த்தத்தில் உயிரை இழப்பான் எம்பெருமானே! அற்ப வீரியனான இந்த சர்ப்பராஜன் எங்கே? உலகங்களுக்கெல்லாம் இருப்பிடமான நீர் எங்கே? எங்களுக்குப் பதிப்பிøக்ஷ தந்தருள வேண்டும். சகல லோகநாதனே! சகல ஆத்மநாதனே! இந்த நாகன் உயிரை இழக்க இருக்கிறான். எங்களுக்கு மாங்கல்யப் பிøக்ஷ தந்தருளவேண்டும் என்று நாக கன்னியர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அதனால் திருவுள்ளம் பற்றிய ஸ்ரீகிருஷ்ணன் தன் திருவடிகளால் துவைப்பதை நிறுத்தியதால், காளிங்கன் மிகவும் மெலிந்து இருந்துங்கூட சிறிது தைரியமடைந்து இளைப்பு நீங்கி, தேவதேவர்களுக்கு அதிபதியே! அருள் செய்ய வேண்டும் என்று மெல்ல மெல்ல விண்ணப்பிக்கலானான்.
எம்பெருமானே! அணிமாவாதி! எண்குணங்களையுடைய ஐசுவரியமானது எப்படி இயல்பாயும் மேலானதாயும் ஒப்பில்லாததாயும் இருக்கின்றதோ அப்படிப்பட்ட உன்னை எப்படித் துதிப்பேன்? நீ பிரகிருதிக்கு மேற்பட்ட ஆன்ம சொரூபியாயும் அவனுக்கு மேற்பட்ட முக்த சொரூபியாயும் இருக்கிறாய் பக்தன் முக்தன் மேலானவன் என்று சொல்லப்பட்டவனும் நீயே! ஆதலின் உன்னை எப்படித் துதிப்பேன்? எவனிலிருந்து பிரமனும் உருத்திரனும், இந்திரன், சந்திரன், மருத்துக்கள், அவிசுகள், வசுக்கள், ஆதித்தர் முதலானவர்களும் உண்டானார்களோ, அப்பேர்ப்பட்ட உன்னை நானெப்படித் துதிப்பேன்? மூர்த்தமாயும் அமூர்த்தமாயுமுள்ள ரூபியான எவனுடைய பரமார்த்த சொரூபத்தைப் பிருமா முதலிய தேவர்களும் அறியமாட்டார்களோ, அவனை நான் எங்ஙனம் துதிப்பேன்? யோகியரெல்லாம் சகல இந்திரியங்களையும் விஷயங்களினின்றும் திருப்பிச் செய்யுந் தியான யோகத்தினாலே எவனை அர்ச்சிக்கின்றார்களோ, அவனை நான் எப்படி அர்ச்சிப்பேன்? சணகாதி மகாயோகியரெல்லாம் எவனுடைய சொரூபத்தைத் தியானத்தாலே தங்கள் இதயங்களிலே நிறுத்தி, அஹிம்சை முதலிய மலர்களினாலே அர்ச்சிக்கின்றார்களோ, அவனை நான் எப்படி அர்ச்சிப்பேன்; ஓ தேவ தேவேசனே! இவ்வளவு அற்பனாகிய நான் அவ்வளவு மேன்மையுள்ள உன்னை அர்ச்சிக்கவும் துதிக்கவும் பணியவும் வல்லமையுடையவனல்லேன்! ஆயினும் உன் கிருபையினாலேயே அடியேனை அனுக்கிரகிக்க வேண்டும். ஸ்ரீகேசவா! அடியேன் பிறந்தது கொடி சர்ப்ப ஜாதியல்லவா? அதனால் என் இயல்பு இப்படி இருக்கிறதேயல்லாது அடியேனிடத்தில் அபராதம் ஒன்றுமில்லை அச்சுதா! நீயே சகல உலகங்களையும் படைத்து, அழிக்கிறாய் ஆகையால் அந்தந்தப் பொருள்களின் ஜாதிரூப சுபாவங்களும் உன்னாலேயே உண்டாக்கப்படுகின்றன. எந்த இயல்பினால் நான் படைக்கப்பட்டேனோ, அதன் நடத்தையே என்னிடம் உள்ளது இதுதான் உண்மை! நீ படைத்த ஜாதி முதலானவைகளுக்கு மாறாக நான் நடப்பேனாகில் உன் கட்டளைக்கு மாறாக நடத்த குற்றம் செய்தவனாவேன் அடியேனை நீ தண்டிப்பதும் நியாயம். உன் சூக்தியும் அப்படித் தானன்றோ இருக்கிறது? ஆயினும் மூடனான அடியேனை தண்டனை செய்தருளினாய். இது அடியேனுக்கு கொடுமை தீர்ப்பதாக இருந்ததால், கொண்டாடும் படியான வரமாகின்றது! இது மற்றொருவரால் கிடைக்குமானால் அது சிறப்புடையதாகாது. பகவானே, பிராணன் ஒன்றுதான். அதைப் போக்காமல் தந்தருள வேண்டுகிறேன். இனிமேல் அடியேன் செய்யத்தக்கது இன்னதென்று நியமித்து அருள் செய்யவேண்டும் என்று காளியங்கன் பிரார்த்தித்தான். அப்போது கிருஷ்ணபகவான் கருணை கூர்ந்து, ஓ சர்ப்பராஜனே! இனி நீ இந்த யமுனை நதியிலே ஒரு கணமும் இருக்கவேண்டாம்; உன் புத்திர களத்திராதி பரிவாரங்களோடு கூட சமுத்திரத்தில் சேர்வாயாக. நீ கருடனுக்குப் பயப்படவேண்டாம். உன் சிரசில் என் திருவடியின் அடையாளம் இருப்பதைக் கண்டு உன்னைக் கருடன் எதுவும் செய்யமாட்டான் என்று கூறியருளி காளிங்கனை விட்டு விட்டார்.
பிறகு காளிங்க நாகன், சுவாமியின் திருவடித் தாமரைகளில் விழுந்து வணங்கி, தன் புத்திரக் களத்திராதியுடன் கூடி யாவரும் பார்த்துக்கொண்டேயிருக்க அந்த மடுவை விட்டுக் கிளம்பிச் சென்ற பிறகு, கரையேறிவந்த கண்ணனை இறந்து மீண்டுவந்தவனைக் கண்டதைப் போலக் கண்டு, நந்தகோபர் முதலியோரெல்லாம் மிகவும் அன்போடு பாலகிருஷ்ணனை கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர்விட்டு நனைத்தார்கள். மற்றுமுள்ள யாதவர்கள் கண்ணனின் மேன்மையையும் அந்த யமுனையாற்று நீர் தூய்மைப்பட்டு விட்டதையும் கண்டு மகிழ்ந்தனர். அதன் பிறகு கண்ணன் யாதவக் கூட்டத்துடன் திருவாய்ப்பாடிக்கு எழுந்தருளினார்.

—————-

8. தேநுகாசுரன் வதம்-

பலராமன் கிருஷ்ணன் இருவரும் சேர்ந்து மாடு மேய்த்துக் கொண்டே, ரமணீயமான ஒரு பனங்காட்டிற்குச் சென்றார்கள். அந்தப் பனங்காட்டிலே தேநுகன் என்ற ஓர் அசுரன் கழுதை வடிவெடுத்து மிருகங்களின் இறைச்சியை ஆகாரமாகக் கொண்டு வசித்து வந்தான். அங்கு மனிதர்களின் நடமாட்டம் இல்லாததால் அநேகமாய் பனம்பழங்கள் நன்றாகப் பழுத்து குமுகுமுவென்று வாசனை வீசிக் கொண்டிருந்தன. இடையர் குலச் சிறுவர்கள் எல்லாம் அப்பனம் பழங்களை விரும்பி, ஓ, பலராமா ஓகிருஷ்ணா! இந்தக் காடு தேநுகன் என்ற அசுரனின் நடமாட்டத்தால் எப்போதுங் காக்கப்பட்டு வருகிறது. அதனால் இங்கு நன்றாகக் கனிந்த பழங்கள் குலைகுலையாகத் தொங்குகின்றன. அக்கனிகளை நாங்கள் விரும்புகிறோம். உங்களுக்குச் சம்மதமிருந்தால் இவற்றை உதிர்த்துத் தள்ளுங்கள். நீங்கள் பலசாலிகளாகையால் விண்ணப்பம் செய்தோம்! என்று கூறினார்கள்.
உடனே பலபத்திரனும் கிருஷ்ணனும் மரங்களில் ஏறிப் பழங்களை உதிர்த்துத் தள்ளினார்கள். இவ்விதம் அவர்கள் இருவரும் பழங்களை உதிர்க்க, அவை விழுகின்ற ஓசையைக் கேட்டு, துஷ்ட அசுரனான தேநுகன் கோபங்கொண்டு ஓடிவந்தான். கழுதை வடிவமாகவேவந்த அவ்வசுரன் தனது பின்னங் கால்கள் இரண்டினாலும் பலராமனது மார்பில் உதைத்தான். உடனே பலராமன் அதிலாவகமாய் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்து அந்த அசுரக் கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படி ஒரு பனைமரத்தின்மீது ஓங்கி வீசினான். அதனால் பெருங்காற்றானது மேகங்களை வீழ்த்துவது போல், அசுரக் கழுதை பல பழங்களை உதிரும்படிச் செய்து, தானும் தரையில் வீழ்ந்து உயிர்விட்டது. பிறகு அந்த அசுரனைச் சேர்ந்த கழுதை வடிவு கொண்ட அசுரர்கள் பலர் ஓடிவந்து ராமகிருஷ்ணர்களுடன் போரிட்டனர். தம்பி கிருஷ்ணன் சிலரையும் மூத்தவன் சிலரையும் பிடித்துச் சுழற்றித் தேநுகனை எறிந்ததைப் போலவே சுழற்றி வேடிக்கையாகப் பனைமரங்களின் மீது எறிய, அவர்களும் பழங்களுடன் விழுந்து உயிரிழந்தனர். அப்போது அந்த நிலம் முழுவதும் பனம்பழங்களும் கழுதையுடல்களும் நிறைந்து விளங்கியது. பின்னர் யாதவர் அனைவரும் பழங்களை வேண்டுமளவு புசித்து மகிழ்ந்து ராமகிருஷ்ணர்களைத் துதித்தனர் பசுக்களும் இனிய பசும் புற்களை மேய்த்து மகிழ்ந்தன.

—————–

9. பிரலம்பாசுரன் வதம்

தேநுகாசுரன் மாண்ட பிறகு, அவன் வசித்த பனங்காடு இடையர் குலச் சிறுவர்கள் விளையாடும் இடமாக மாறிவிட்டது. பிறகு வசுதேவரின் குமாரர்கள் ராமகிருஷ்ணர் இருவரும் பாண்டீரம் என்ற ஆலமரத்தின் அருகே சென்று, தோளில் அணைக் கயிற்றையும் மார்பில் வனமாலையும் அணிந்து, இளங்கொம்புள்ள காளைகளைப் போல் மகிழ்ந்து தங்கள் தோழர்களோடு விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் சிங்கநாதம் செய்வதும், சிலர் பாடுவதும், மரங்களை ஏறத் தேடுவதும் பசுக்களை அவற்றின் பெயரைக் கூப்பிட்டு அழைப்பதுமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். ராமகிருஷ்ணர்களில் மூத்தவனான பலராமன் மைப்பொடி யூட்டிய ஆடையையும் இளையவனான கிருஷ்ணன் பொற்பொடி யூட்டிய ஆடையையும் தரித்து வானவில்லோடு வெண்மையும் கருமையுமாகப் பிரகாசிக்கும் மேகங்களைப்போல் தோற்றமளித்தார்கள். இத்தகைய அலங்காரத்துடன் சகலலோக நாதருக்கும் நாதர்களாயிருக்கும் அவ்விரு பாலகரும் பூவுலகுக்கு ஏற்ப மனிதத் தன்மையோடு, மனித பாவனையோடு, லோகத்திலுண்டான பல விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருந்தனர். இருவர் கைகளைத் தண்டிகை போல் வைக்க, அதில் ஒருவர் தொங்கலாடுவதாலும் மரத்தின் விழுதுகளை முடிந்து அதில் உட்கார்ந்து வீசி ஊஞ்சலாடுவதாலும், ஆந்தோளிகைகளினாலும், ஒருவரோடு ஒருவர் கைச்சண்டையிடுவதனாலும் கட்டைகளையும் கற்களையும் சுழற்றுவது போன்ற குறளிச் செய்கைகளினாலும் இன்னும் பல விளையாடல்களினாலும் மற்றைய இடையச் சிறுவர்களோடு அவ்விருவரும் மகிழ்ந்திருந்தனர்.
அவ்வாறு அவ்விருவரும் விளையாடி வரும் நாட்களில் இவ்விருவரையும் பிடித்துக் கொண்டுபோகவேண்டும் என்பதற்காக பிரலம்பன் என்ற அசுரன் ஒருவன் ஆயச் சிறுவனைப் போல் வேடமெடுத்து வந்து இடையர் குலப்பிள்ளைகளில் ஒருவனாக விளையாட்டில் கலந்துகொண்டான். அவன் ஸ்ரீ கிருஷ்ணனை வெல்லக்கூடாத வகையை நினைத்து, பலராமனைக் கொல்ல நினைத்தான். அங்கிருந்த சிறுவர்கள் அனைவரும் ஹரீணாக் கிரீடனம் என்ற சிறுவர் விளையாட்டு ஒன்றை விளையாடத் துவங்கினார்கள். அதற்காக யாவரும் இரட்டை இரட்டையாக நின்றார்கள். அவர்களுக்குள்ளே தாமா என்பவனோடு கண்ணனும் பிரலம்பன் என்பவனோடு பலராமனும் கூடி நின்று குதித்து வரும்போது தாமாவைக் கண்ணனும் பிரலம்பனை பலராமனும் ஜயித்ததனால், தோல்வியுண்ட இருவரும் தங்களை ஜயித்த இருவரையும் தங்கள் தோள்மீது ஏற்றிச் சுமந்துகொண்டு பாண்டீரம் என்ற ஆலமரத்தடிக்கு வந்து மறுபடியும் அங்கிருந்து திரும்பினார்கள். அப்போது பிரலம் பாசுரன் பலராமனைத் தன் தோள்மேல் ஏற்றிக்கொண்டு, சந்திரனை ஏந்திய மேகம் போல் குபீரெனக் கிளம்பி ஆகாயத்தில் எழும்பினான். அதைக் கண்டு பலராமன் தன் உடலைப் பாரமாக்கினான். அந்தப் பாரத்தைச் சுமக்கமாட்டாமல் அசுரன் தன் உடலையும்பெரிதாக வளர்த்திக் கொண்டு; மழைக்கால மேகம்போல் வளர்ந்தான், எரிந்த மலை போன்ற உடம்பும் குறுகிய கீரீடமும் கவிழ்ந்த தலையும் தொங்குகின்ற மாலை ஆபரணங்களும், வண்டிச் சக்கரம் போன்ற கண்களும் பயங்கர வடிவும், பூமி நடுங்கத்தக்க நடையும் கொண்ட அந்த அசுரன் சிறிதும் அச்சமின்றித் தன்னைத் தூக்கிக்கொண்டு எழும்புவதை பார்த்து பலராமன் தன் தம்பியைக் கூவியழைத்து, ஓ கிருஷ்ணா! ஓ கிருஷ்ணா! மலை போன்ற தேகங்கொண்டு இடையப்பிள்ளை போன்ற ரூபங்தரித்த அசுரன் ஒருவனாலே நான் தூக்கிக்கொண்டு போகப்படுகிறேன்! மதுசூதனா! இப்போது நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்! இந்த துராத்துமா வெகு வேகமாக ஓடுகிறான் என்று கூறினான்.
அதைக்கேட்டதும் பாலகிருஷ்ணன், புன்னகையினால் இதழ்கள் மலரக் கூறலானான். ஓ, சர்வாத்துமகனாயும், சகல சூஷ்மங்களுக்கும் காரணனாயும் இருப்பவனே! பிரளயத்திலும் மிகுந்திருக்கும் படியான நித்தியனான நீ ஏன் மானுடத் தன்மையை மெய்யாகவே பற்றுகின்றாய் நீயே சகலலோக காரணங்களுக்குக் காரணமாய், வியக்கப் பிரபஞ்சத்துக்கு முன்பே இருப்பவனும் சகலமும் கடலினாலே மூழ்கடிக்கப்பட்டு, ஏகார்ணவமாக இருக்கும்போது, மிகுந்திருக்கிறவனுமாக இருக்கிறாய். இத்தகைய உன் தன்மையை நினைத்துக்கொள் மேலும் நாம் இருவரும் இந்தப் பூமியின் பாரத்தைப் போக்குவதற்கே அவதரித்திருக்கிறோம் என்பதை நீ அறிவாயோ? ஓ! அனந்தனே! ஆகாயம் உன் திருமுடி! மேகங்கள் உன் கேசங்கள், பூமி, உன் திருவடி அக்கினி உன் திருமுகம்! சந்திரன் உன் மனம் வாயு உன் மூச்சு நான்கு திக்குகளும் உன் நான்கு திருத்தோள்கள்! நீ ஆயிரம் திருமுகங்களும் ஆயிரம் திருக்கைகளும் ஆயிரம் திருப்பாதங்களும் கொண்டவனாய், ஆயிரம் பிரம்மாக்களுக்கும் உற்பத்தி ஸ்தானமான முதல்வனாக இருக்கிறாய்! உன் திவ்ய ரூபத்தை ஒருவனும் அறியமாட்டான். தேவதைகளும் உன் திருவவதார ரூபத்தையே அர்ச்சிக்கின்றனர். இந்த உலகம் யாவும் முடிவில் உன்னிடத்திலேயே லயமடைகின்றன. இந்தப் பூமி உன்னால் தாங்கப்பட்டன்றோ சராசர மயமான பிரபஞ்சத்தைத்தாங்குகின்றது? ஓ, உற்பத்தி விநாசங்கள் இல்லாதவனே! நீயே காலரூபமாய் யாவற்றையும் விழுங்கி விடுகின்றாய். தண்ணீரானது வடவாக்கினியினால் உண்ணப்பட்டுக் காற்றால் எறியப்பட்டு இமயமலையிலே பனியாய் நின்று, சூரிய கிரணங்களின் சம்பந்தத்தால் உருகி, மறுபடியும் தண்ணீராவதுபோல் சங்கார காலத்தில் உன்னால் விழுங்கப்பட்ட பிரபஞ்சமெல்லாம் உன் ஆதீனமாகவே இருந்து, மீண்டும் படைக்க எத்தனிக்கின்ற உனது சங்கற்பத்தினால் முன்போலவே அந்தந்த உருக்கொண்டு பிரபஞ்சமாகத் தோன்றுகின்றன. ஈசுவரனே! கல்பந்தோறும் இப்படியே சிருஷ்டிப் பிரளயங்கள் நிகழ்கின்றன; நீயும் நானும் சேர்ந்து, இந்த உலகங்களுக்கு ஏக காரணமாக இருந்து, இந்தப் பூமியின் சுமையைக் குறைக்கப் பேத ரூபமாக அவதரித்தோம் அன்றோ? இவற்றையெல்லாம் நீ நினைத்துக்கொண்டு, இந்த மனுஷ்ய பாவனையைவிடாமல், அந்த அசுரனை சம்ஹாரம் செய்து, பந்துக்களுக்கு நன்மை செய்வாயாக! என்றான் கண்ணன்.
அதைக்கேட்டதும் பலராமன் சிரித்தான். பிறகு அவன் கண்கள் சிவக்க, தன் கைப்பிடியால் அந்த அசுரனின் தலைமீது அடித்தான். அந்த இடிபட்டவுடனேயே பிரலம்பாசுரனின் கண்கள் பிதுங்கின. கபாலமுடைந்து உதிரங் கக்க அவன் தரையில் விழுந்துமடிந்தான். இவ்விதமாகப்பிரலம்பனைச் சங்கரித்ததனால் யாதவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஸ்ரீ சங்கர்ஷணரான பலராமன் மறுபடியும் கண்ணனுடன் சேர்ந்துகொண்டு ஆயர்பாடிக்குச் சென்றான்.

——————–

10. கோவர்த்தன ஆராதனம்-

ராமகிருஷ்ணர்கள் இருவரும் திருவாய்ப்பாடியில் விளையாடிக்கொண்டிருக்கும் காலத்தில், மழைக்காலம் நீங்கியது. தாமரைகள் மலர்ந்து விளங்கும் சரத்காலம் வந்தது. அப்போது சிறிய குளங்களிலிருந்த மீன்கள், புத்திர ÷க்ஷத்திராதிகளிலே பற்றிருத்தலினால் இல்லறத்தான் தாபமடைவது போல், அவை தாபமடைந்தன. சம்சாரம், அசாரம் என்பதை அறிந்த யோகியர் அதில் பற்றற்று மவுனமாக இருப்பதைப்போல் காட்டிலிருந்த மயிலினங்கள் மதம் நீங்கி, மவுனமாயிருந்தன. ஞானம் கைவந்தவர்கள் தங்கள் அகங்காரத்தோடு பொருள் முதலானவற்றை விட்டுச்சுத்த சத்வ குணமுடையவராய் சமுத்திரத்தைத் துறந்திருப்பதைப் போல் மேகங்கள் தம்மிடமிருந்த தண்ணீரையெல்லாம் விட்டுவிட்டு நிர்மலமாயும் வெண்மையான மேனியையுடையவனாகவும் வானத்தை விட்டு நீங்கியவை போலவும் விளங்கின. வறண்ட இருதயமுடையவரைப்போல குளங்களெல்லாம் சூரிய கிரணங்களால் வறண்டிருந்தன. நக்ஷத்திரங்களினாலே நிர்மலமாய் இருக்கும் வானவீதியில், பூரண மண்டலத்தோடு கூடிய சந்திரன் எழுந்து விளங்கினான். நல்ல குலத்திலே ஒரு யோகியானவன் பிறந்து முக்திபெறத் தக்க திருமேனியோடு விளங்குவது போலவே அச்சந்திரன் விளங்கினான். மந்திரம் முதலான யோக முறைகளினாலே மகாயோகத்தை அடைந்து ஒரு யதியானவன் எப்படி நிச்சலனாக இருப்பானோ அவ்வாறு சமுத்திரமானது தண்ணீர் நிறைந்து ததும்பலின்றி நிச்சலமாக இருந்தது. அகங்காரத்தினால் உண்டான துக்கத்தை மகத்தான விவேகம் போக்குவது போல், சூரிய கிரணங்களினால் உண்டான தாபத்தையெல்லாம் சந்திரன் போக்கடித்தான் ஆபரண, ரேசக, கும்பம் என்கின்ற வாயுவை நிறுத்துதல், நிலைப்பித்தல் விடல் முதலானவற்றால் பிராணாயாமம் பயில்வதுபோல் தடாகங்களின் தண்ணீர் வாய்க்கால் முதலானவைகளில் நிறைக்கப்படுதலும் பின்பு ஓரிடத்தில் நிறுத்தப்படுதலும், வேண்டுங் கழனிகளுக்கு விடப்படுதலாகிய செயல்களால் பிராணாயாமம் செய்வன போலிருந்தன! இத்தகைய சரத்காலம் வந்தபோது, இந்திரனைப் பூசிப்பதற்காக ஒரு உற்சவம் நிகழ்ந்தது. அதில் அதிக ஆசையுடைய ஆயர்கள் குதூகலமாக ஈடுபட்டிருந்தனர்.
அவர்களில் மூப்பர்களாக இருந்தவர்களிடம் கிருஷ்ணன் பின் வருமாறு கேட்டான். பெரியோர்களே நீங்கள் அனைவரும் களிக்கும்படியான இந்திர விழா என்பது என்ன? அதன் சொரூப அனுஷ்டானப் பயன்களை எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டான். அதற்கு தந்தை நந்தகோபரே பதில் கூறலானார். குழந்தாய்! தேவேந்திரன் என்பவன் ஜனங்களுக்கும் மேகங்களுக்கும் அதிபதியாக இருக்கிறான். அவன் கட்டளையிட்டால் மேகங்கள் மழை பொழிகின்றன. அந்த மழையினால் விளையும் பயிர்களைத்தான் நாமும் மற்றவர்களும் பயன்படுத்திக்கொண்டு தேவதைகளை ஆராதிக்கிறோம். மேலும் மழையினால் வளரும் பசும் புற்களினால் நம்முடைய மாடுகள் யாவும் நன்றாக வளர்க்கப்பட்டு புஷ்டியாகி நல்ல கன்றுகளை ஈன்று பால் நிறைய கறந்துகொண்டு மகிழ்ந்து திரிகின்றன. எங்கு மழை உண்டோ அங்குள்ள பூமி பயிர் நிறைந்தும் புல் நிறைந்தும் இருக்கும். அங்குள்ள பிரஜைகள் பசி வருத்தமின்றி இருப்பார்கள். இந்தப் பூமியிலுள்ள நீரைச் சூரியன் தனது கிரணங்களினாலே கிரஹித்து மேகங்களில்விட, அவற்றை மேகாதிபதியான இந்திரன் உலக நன்மைக்காக மழையாகப் பெய்விக்கிறான். ஆகையால்தான் அரசர்கள், மழைக்காலம் முடிந்தவுடன் மகிழ்ச்சியோடு யாகங்களினால் இந்திரனைப் பூசித்து வருகிறார்கள். அதுபோலவே நாமும் செய்து வருகிறோம்! என்றார். அதைக்கேட்டதும் கண்ணன் இந்திரனின் செருக்கு அழியும் பொருட்டுப் பின்வருமாறு கூறலானான்.
ஐயா! நான் சொல்வதைச் சற்றுக் கேட்க வேண்டுகிறேன். ஆயர் குலத்தினரான நாம் பயிர் செய்பவர்களல்லர் வாணிபத்தாலும் நாம் ஜீவிப்பதில்லை. நாம் காட்டில் திரிந்து மாடு மேய்த்துப் பிழைப்பவர்கள். ஆகையால் நமக்குப் பசுக்களே தெய்வம்! உலகத்தில் முக்கியமான நான்கு வித்தைகள் உண்டு. அவை ஆன்வீக்ஷகி என்ற தர்க்க வித்தை, இருக்கு முதலிய பிரிவுகளைக் கொண்டதால் திரயீ என்ற வேதம், வார்த்தை எனப்படுகின்ற பயிரிடுதல் பற்றிய சாஸ்திரம், தண்டநிதி என்கின்ற ராஜநீதி நூல் இந்த நான்கிலும் இப்போது வார்த்தா சாஸ்திரத்தை விவரிக்கின்றேன், அதைக் கேட்பீராக கிருஷி, (பயிரிடுதல்) வணிஜயா (வாணிகம்) பசுபாலனம் (மாடு மேய்த்தல்) ஆகிய இந்த மூன்றும் பிழைப்பாக இருப்பது வார்த்தை என்ற வித்தையாகும். உழவர்களுக்குப் பயிரிடுதல் ஜீவனமாகும். கடைத்தெரு வியாபாரிகளுக்கு வணிஜயா ஜீவனமாகும். நமக்கோ பசு மாடுகளே முக்கிய ஜீவனமாக உள்ளது. ஆகையால் எவன் எந்த வித்தைக்கு உரியவனோ, அவனுக்கு அதுவே தெய்வமாதலின் அதையே நாம் கந்த புஷ்பாதிகளினாலே அர்ச்சித்துப் பூஜிக்க வேண்டும். ஏனென்றால் அந்த வித்தையின் மூலமாகவன்றோ சுவாமி நமக்கு உபகாரஞ் செய்தருளினார்? மேலும் எவன் எதன் பயனை அனுபவித்துக் கொண்டு மற்றொன்றை பூஜிக்கிறானோ, அவன் இம்மையிலும் மறுமையிலும் சுகமடைவதில்லை. உலகத்தின் எல்லை, பயிரிடும் நிலம் வரைக்கும் உள்ளது. காடு என்பது அவ்வெல்லைக்குப் புறத்தேயுள்ளது. மலைகள் என்பவை காட்டின் புறத்தே இருப்பவை. அந்தக் காட்டில் வசிக்கும் நமக்கு மலைகளே முக்கியமானவை. வாயில்களும் கதவடைப்புகளும் இன்றி, நிலவுடைமைக்காரராக இல்லாத மக்களே, எவ்வுலகிலும் வண்டியில் ஏறி இஷ்டமான இடத்தில் சஞ்சரிக்கிறார்கள். அவர்கள் நம்மைப் போல சுகமுடையவர்களாக இருப்பார்கள். மேலும் இந்த வனத்தில் மலைகள் எல்லாம் தமக்கு விருப்பமான ரூபமெடுக்க வல்லவைகள் என்றும், அந்தந்த உருக்கொண்டு தத்தமது சாரல்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றன என்றும் நாமும் கேள்விப்படுகிறோம். இதற்கு உதாரணம், காட்டில் வாசஞ்செய்கின்றவர்கள் அந்த மலைகளுக்கு அபராதப்பட்டுவிட்டால் அவர்களை அந்தப் பர்வதங்கள் சிங்கம் முதலிய ரூபங்களைக் கொண்டு கொல்கின்றன. ஆகையால் நமக்கு உபகாரியாக இருக்கும் மலைகளையும் பசுக்களையும் குறித்து யாகங்களைச் செய்யவேண்டும். நமக்கு இந்திரன் ஏன்? பிராமணர்களுக்கு மந்திர யக்ஞம் முக்கியமானது. உழவர்களுக்குக் கலப்பையைப் பற்றிய யக்ஞம் முக்கியம்!
ஆனால், மலைகளையும் காட்டையும் பற்றியிருக்கும் நமக்கோ கோபர்வத யக்ஞங்கள் முக்கியமானவை. ஆகவே இந்த கோவர்த்தன கிரியை நீங்கள் பலவகை உபசாரப்பொருள்களைக் கொண்டு, விதிப்படி பசுவாலம்பனஞ் செய்து பூஜிக்க வேண்டும் இதற்காக எதுவும் ஆலோசிக்காமல் இந்த இடைச் சேரியிலுள்ள தயிர், பால், வெண்ணெய் முதலிய யாவற்றையும் எடுத்துப் பிராமணர்களுக்கும் அன்னத்தை வேண்டியவரும் பிறருக்கும் வழங்கி திருப்திப்படுத்தவேண்டும். நாம் இவ்விதம் செய்தவுடன், சரத்காலத்து மலர்களினால் கொம்புகள் அலங்கரிக்கப்பட்ட பசுக்கள் எல்லாம் வலம் வரவேண்டும். கோபாலர்களே! இதுதான் என்னுடைய மதம். நீங்கள் இதை விருப்பத்தோடு ஏற்றுச் செய்வீர்களானால் பசுக்களுக்கும் மலைகளுக்கும் எனக்கும் பிரீதியாக இருக்கும்! என்று கண்ணன் கூறினான். அதனால் நந்தகோபர் முதலிய யாதவ மூப்பர்கள் மகிழ்ந்தனர். நந்தகோபர் தம் தனயனான கிருஷ்ணனை, நோக்கி, குழந்தாய்! நீ சொன்னவை மிகவும் நேர்த்தியானவை. எங்கள் மனதுக்கும் பிடித்திருக்கிறது. ஆகையால் அப்படியே கிரியக்ஞம் ஆரம்பிப்போம்! என்றார்.
பிறகு, யாதவர்கள் அனைவரும் பர்வத யாகத்தை ஆரம்பித்தனர். கந்த, புஷ்ப, தூப, தீப, ஆராதனைகளினாலே பூஜித்து, ஓமம் செய்து, தயிர், பாயசம், இறைச்சி முதலியவற்றால் அந்தப் பர்வதத்திற்குப் பலி பிண்டங்களைச் செய்து போட்டு, பிராமணர் பலருக்கும் போஜனம் செய்வித்து, பசுக்களையும் பூஜித்தனர். பிறகு நன்றாக அலங்கரிக்கப்பட்ட பசுக்களும் கன்றுகளும் அந்த மலையை வலம் வந்தன. அது போலவே ரிஷபங்களும் (காளைகளும்) நீர் நிறைந்த மேகங்களைப்போல் கர்ஜித்துக் கொண்டு வலம் வந்தன. இவ்விதமாக மலை ஆராதனை செய்யும் போது கண்ணன் ஒரு தேவ ரூபமாய் அந்த கோவர்த்தன மலையின் சிகரத்தில் வீற்றிருந்து நான்தான் இந்தப் பர்வத தேவதை! என்று கோபாலர்கள் போட்ட அன்ன பலிகளையெல்லாம் அமுது செய்தருளினான். கீழேயிருந்து தானே அதை யாவருக்கும் காட்டிப் புன்முறுவல் செய்து, அவர்களுடன் கூட தானும் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று, அந்தத் தன் சொரூபத்தையும் அர்ச்சித்துப் பணிந்தான்! இவ்வாறு, யாதவர் அனைவரும் பருவதயாகத்தை நிறைவேற்றி, பகவத் கடாக்ஷத்தால் விரும்பிய வரங்களைப் பெற்று மகிழ்ந்தனர். மலைச் சிகரத்தில் இருந்த அந்தச் சொரூபம் மறைந்தவுடன் அவர்கள் தங்கள் ஆயர்பாடிக்குச் சென்றார்கள்.

——————

11. கோவர்த்தன கிரியைக் குடையாகப் பீடித்தல்

மைத்ரேயரே! இவ்விதம் சுவாமீ இந்திரனுக்குச் செய்ய வேண்டிய யாகத்தைத் தடுத்ததால், இந்திரன் மிகவும் கோபங்கொண்டான். உடனே அவன் சம்வர்த்தகம் என்ற மேகக் கூட்டத்தை அழைத்து, மேகங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். என் கட்டளையை உடன் ஏற்றுத் தடையின்றி நிறைவேற்றுங்கள் நந்தகோபன் என்ற இடையன் புத்தி கெட்டு கிருஷ்ணன் என்கின்ற ஒரு சின்னப் பையனின் பலத்தைப் பெரிதாக எண்ணிக் கர்வங்கொண்டு, மற்ற இடையர்களையும் சேர்த்துக்கொண்டு, எனக்கு வழக்கமாகச் செய்து வரும் யாகத்தை நிறுத்திவிட்டான். ஆகையால் அகோரமான, பெருமழையைப் பெய்வித்து அந்த இடையருக்குப் பிழைப்பாகவுள்ள மாடுகளையெல்லாம் அழித்து விடுங்கள். நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்களுக்குச் சகாயமாக நான் மலைச் சிகரம் போன்றுள்ள பெரிய யானை மீது ஏறிக்கொண்டு, வாயுவையும் தண்ணீரையும் விடும் உதவியைச் செய்கிறேன்! என்று கட்டளையிட்டான்.
அதற்கிணங்கி வானத்து மேகங்கள் யாவும், ஆயர்பாடி முழுவதும் நாசமாகும்படிப் பெருங்காற்றுடன் பெருமழையைப் பெய்தன அப்படி மழை பெய்த ஒரு கணத்தில் பூமியும் ஆகாயமும் திசைகளும் மழைத்தாரைகள் நிறைந்து ஒன்றாகக் காணப்பட்டன. மின்னல்களும் இடிகளும் கசையடிகளாகத் தாக்க, அந்த அடிக்கும் பயந்தவைபோல் மேகங்கள் திக்குகள் அதிரும்படிக் கர்ச்சித்து மிகவும் கனமான தாரைகளைப் பெய்தன இவ்விதம் ஒழிவில்லாமல் மழை பெய்து கொண்டிருந்ததால் உலகம் எல்லாம் இருள் மூடியது. உலகம் கீழும் மேலும் பக்கங்களிலும் ஜலமயமானது போலத் தோன்றியது. அப்பொழுது பசுக்கள் மகா வேகமாக வீசிய காற்று மழையிலே அலைக்கப்பட்டு இடுப்பும், தொடைகளும், கழுத்தும் சுருங்கி, மாண்டன போன்று மூர்ச்சித்து விழுந்தன. மாடுகளில் பல, தமது இளங்கன்றுகளை வயிற்றில் அணைத்துக்கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தன பலமாடுகள், கன்றுகள் விழுவதைக் கண்டு, கதறியழுதன. சில கன்றுகள் காற்றினாலும் குளிரினாலும் உடம்பெல்லாம் சோர்வடைந்து நடுங்கி அற்பத் தொனியுடன் கூவியதைக் கண்டால், அவை கண்ணனை நோக்கி, கண்ணா! நீயே எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தீனக் குரலில் வேண்டுவதுபோல் ஒலித்தன.
மைத்ரேயரே! இவ்விதம் கோபியரும், கோபாலரும் நிறைந்த அந்தக் கோகுலம் எல்லாம் இத்தகைய பெருமழையினால் மிகவும் துன்பப்பட்டு நடுங்குவதை கண்ணபிரான் கண்டதும் இந்திரன் தனக்குப் பூஜை நடக்கவில்லையே என்ற கோபத்தால் இப்படிச் செய்கிறான். ஆகையால் நாமே இந்தக் கோகுலத்தைப் பாதுகாப்பது அவசியம்! அதற்காகப் பெரிய கற்பாறைகள் நிறைந்த இந்தப் பர்வதத்தை அடியோடு பெயர்த்து இந்த இடைச் சேரிக்கே ஒரு பெருங்குடையாகப் பிடித்துக் காப்பேன்! என்று திருவுள்ளம் பற்றி, அந்தமலையைப் பெயர்த்து, ஒரே திருக்கையால் விளையாட்டுப் பொருளைத் தூக்குவது போல அதைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு கோபாலரையெல்லாம் கூவியழைத்து, சிரித்துக்கொண்டே, நீங்கள் யாவரும் உங்கள் குழந்தை குட்டிகளோடும், பசுக்களோடும் இந்த மலையின் அடியில் வந்து சேருங்கள். இந்தக் காற்றுக்கும் மழைக்கும் அஞ்சவேண்டாம். அதை நான் தடுத்துவிட்டேன். இதனடியில் உள்ள நல்ல இடங்களில் அவரவர் விருப்பம் போலச் சுகமாக இருக்கலாம். மலையானது மேலே விழுந்துவிடும் என்று பயப்படவேண்டாம். இதை நான் ஒரு சிறு பந்தைப் போல் எளிதாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்! என்று கூறிப் புன்முறுவல் பூத்தான்.
இவ்விதம் ஸ்ரீகிருஷ்ணபகவான் கூறியருளியதைக் கேட்டதும் இடையர் அனைவரும் தமது வண்டிகளில் தத்தமது பொருள்களை ஏற்றிக்கொண்டு, மாடுகளையும் கன்றுகளையும் ஓட்டிக் கொண்டு, அந்த மலையின் அடியில் வந்து சேர்ந்தனர். இடையரும், இடைச்சியரும் மகிழ்ந்தனர். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணபகவானின் மகிமையைத் துதித்துப் பாடிக்கொண்டிருக்க, பகவானும் அந்த மலையை ஆடாமல் அசையாமல் ஒரே கையால் தாங்கிக் கொண்டிருந்தான். இதுபோல் ஏழு தினங்கள் ஓயாமல் மழை பெய்ய சுவாமியும் அந்தப் பருவதத்தை குடைபோல ஏந்தி ஆயர்களையெல்லாம் காத்தருளினான். அதைக் கண்ட தேவேந்திரன் தன் முயற்சி வீணாயிற்றே என்று நினைத்து மேகங்களின் செயல்களை நிறுத்தினான்; இவ்வாறு இந்திரன் நிறுத்தி விட்டதால், ஆகாயம் நிர்மலமாயிற்று திசைகள் தெளிவடைந்தன. ஆயர்கள் அனைவரும் மலையடியிலிருந்து புறப்பட்டு பழையபடி சந்தோஷத்தோடு பாடிக்கொண்டே, ஆயர்பாடியை அடைந்தார்கள். பிறகு கிருஷ்ணபகவான் அவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டேயிருக்க, அந்தக் கோவர்த்தன கிரியை அது இருந்த இடத்திலேயே மறுபடியும் வைத்தருளினான்!

———————–

12. ஸ்ரீகோவிந்தப் பட்டாபிஷேகம்

கேட்டீரோ, மைத்ரேயரே! இவ்விதமாக கிருஷ்ண பெருமான் கோவர்த்தனகிரியை எடுத்துக் கோகுலத்தைக் காத்ததைக் கண்டு, தேவேந்திரன் வெட்கமடைந்தான், அவன் தன் ஐராவதமென்னும் யானை மீது ஏறிக்கொண்டு, கோவர்த்தன கிரியின் அருகே வந்தான். அங்கே சகல லோகங்களையும் காக்கும் எம் பெருமான் கோபால வேடம் பூண்டு யாதவப் பிள்ளைகளோடு கோக்களைக் காத்து நிற்பதையும் அந்த ஸ்வாமியின் திருமுடிக்கு நேர் மேலாக கருடன் என்னும் பெரியத் திருவடி தன் சிறகுகளால் வெய்யிற்படா வண்ணம் நிழல் செய்துகொண்டு பிறர் கண்களுக்குப் புலனாகாமல் இருப்பதையும் இந்திரன் கண்டான். உடனே அவன் யானை மீதிருந்து கீழே இறங்கி, ஏகாந்தத்தில் பகவானை வணங்கி அந்த மகிழ்ச்சியில் விழிகள் மலர, புன்னகையுடன் விண்ணப்பஞ் செய்யலானான்.
சுவாமீ ! ஸ்ரீகிருஷ்ண பகவானே! அடியேனது விண்ணப்பத்தைக் கேட்டு அருள் செய்யவேண்டும். உன் சன்னதிக்கு அடியேன் வந்தது விரோத புத்தியால் என்று எண்ணவேண்டாம், கிருபா மயமான உன் சங்கல்பத்தினாலேயே துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனங்களைச் செய்து, இந்தப் பூமியின் பாரத்தை நீக்குவதற்காக இங்கு அவதரித்தாய் என்பதை நான் அறிவேன். ஆயினும் எனக்குச் செய்யும் யாகத்துக்கு பங்கம் நேரிட்டதே என்பதால், தெரியாத்தனமாகக் கோபங்கொண்டு மேகங்களை ஏவி, கோகுலத்தை நாசஞ் செய்யும்படிக் கட்டளையிட்டேன். மஹாசக்தியுடைய நீ, குன்றெடுத்து கோகுலத்தைக் காத்த இந்த அற்புதமான திருவிளையாடலைக் கண்டு நான் பெரிதும் மகிழ்ந்தேன். நான் உன் சன்னதிக்கு வந்த முக்கிய காரியத்தைக் கேட்டருள வேண்டும். கோலோகத்தில் இருக்கும் பசுக்கள் எல்லாம் தங்கள் சந்ததியை நீ நன்றாகக் காத்து ரட்சித்ததற்காக உனக்கு ஒரு சத்காரம் செய்யவேண்டும் என்று என்னிடம் கூறின அவற்றின் வாக்கியப்படி உன்னை கோக்களின் இந்திரனாகப் பட்டம் சூட்டி, பட்டாபிஷேகம் செய்கிறேன். அதைத் திருவுள்ளம் பற்றி ஏற்றருளவேண்டும். அதனால் நீ கோவிந்தன் என்ற திருப்பெயர் பெறுவாய்! என்று தேவேந்திரன் விண்ணப்பஞ் செய்து, தனது வாகனமான ஐராவதத்தின் மேலிருந்து தீர்த்த கலசத்தை எடுத்து வந்து, தனக்கும் மேலாய்ச் சத்திய லோகத்துக்கும் மேலேயிருக்கும் கோலோகத்துக் கோக்களுக்கு இந்திரனாகையால் உபேந்திரன் நீ என்று பட்டாபிஷேகம் செய்தான்.
இவ்விதமாக ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றபோது, பசுக்கள் எல்லாம் தங்கள் மடிகளில் அளவின்றிச் சுரந்து பெருகிய பாலினால் பூமியை நனைத்தன. உபேந்திரன் என்றும் ஸ்ரீகோவிந்தன் என்றத் திருப்பெயர்கள் வழங்கி கிருஷ்ணபெருமானுக்கு பட்டாபிஷேகம் செய்த தேவராஜன் தலை வணங்கி மற்றொரு விண்ணப்பஞ் செய்தான். ஸ்ரீகிருஷ்ண பகவானே! பசுக்களின் வேண்டுதலை ஏற்ற வேணுகோபாலா! மற்றுமொரு விண்ணப்பம் உள்ளது. அதையும் திருவுள்ளம்பற்ற வேண்டும். அதாவது உனக்குத் துணையாக இருக்கும் கைங்கரியத்தின் ஆசையினால் என்னுடைய அமிசத்தைக்கொண்டு, பூமியில் அர்ச்சுனன் என்பவனை உண்டாக்கியிருக்கிறேன். அவன்பூபாரம் நீக்குவதில் உனக்குச் சகாயமாக இருக்கும்படி திருவுள்ளம்பற்றி அவனை உன்னைப்போலவே காத்தருளவேண்டும். அவனை நீ எப்போதும் ரக்ஷிக்க வேண்டும்! என்றான். அதைக் கேட்டதும் கண்ணபிரான் புன்முறுவலுடன், இந்திரா! பாரத குலத்தில் உனது அம்சத்தினால் அர்ச்சுனன் பிறந்திருக்கிறான் என்பதை நான் அறிவேன்! நான் பூவுலகத்தில் இருக்கும் வரையில் அவனைக் காப்பாற்றுகிறேன்! இந்த உலகத்தில் நான் எவ்வளவு காலம் இருப்பேனோ அவ்வளவு காலம்வரை அவனை ஒருவனும் ஜயிக்கமாட்டான். இந்த உலகத்தில் மிகவும் பலசாலிகளான கம்சன், அரிஷ்டன், கேசி, குவாலயாபீடம், நாகன் ஆகிய அநேக அசுரர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஹதம் செய்யப்பட்ட பிறகு பாரதயுத்தம் என்ற ஒரு மகாயுத்தம் நடக்கும், அதனால் பூமியின் பாரம் தீரும். ஆகையால் உன் புத்திரனான அர்ச்சுனனுக்காக நீ கவலைப்படவேண்டாம். எனக்கு எதிரில் அர்ச்சுனனுக்குப் பகைவன் என்று ஒருவன் தலையெடுக்க மாட்டான் பாரத யுத்தம் நடந்தபிறகு அந்த அர்ச்சுனனுக்காகவே யுதிஷ்டிரன் முதலியோரையும் ஆயுதத் துன்பம் ஒன்றும் இல்லாமல் காத்து ரட்சிப்பேன்! என்று கூறியளினான். வானவர்க்கரசன் சுவாமியை ஆலிங்கனம் செய்து, பணிந்து ஐராவதத்தின்மேல் ஏறி இந்திரலோகம் சென்றான். பிறகு ஸ்ரீகிருஷ்ணன் ஆயர்களோடும் பசுக்களுடனும் கோகுலத்துக்கு எழுந்தருளினான்.

———————

13. ராஸக் கிரீடை

இந்திரன் வணங்கிச்சென்ற பிறகு கோபாலர்கள் வந்து கோவர்த்தன பர்வதத்தையெடுத்த ஸ்ரீகிருஷ்ணனை நோக்கி, அப்பா கிருஷ்ணா! இப்போது நேரிட்ட பெருமழையிலிருந்து எங்களையும் பசுக்களையும் காத்தாய்! உன் செயல்கள் அற்புதமானவை! ஏனென்றால் கோவர்த்தன மலையை நீ குடையாகப் பிடித்திருக்கிறாய். உனது பிறப்போ தாழ்ந்த இடைக்குலம் தண்ணீரில் காளிங்க சர்ப்பராஜனை அடக்கியதும் பனங்காட்டில் தேநுகாசுரனை அழித்ததும் கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்ததுமாகிய உனது பாலிய லீலைகள் எங்கள் இதயங்களில் சந்தேகம் ஏற்படுத்தியுள்ளன மிகவும் பராக்கிரமமுள்ளவனே! சத்தியம், சத்தியம்! ஸ்ரீ ஹரியின் திருவடிகளின் மேல் ஆணை! நீ மனிதனல்ல? ஓ கிருஷ்ணா! பெண்டுகள் சிறுவர்கள் முதலிய இந்த ஆய்ப்பாடியில் இருப்பவர்கள் யாவருமே உன்மீது அன்பு கொண்டிருப்பதும், சகல தேவர்களும் ஒன்று கூடிச் செய்தாலும் செய்யமுடியாத உன் காரியங்களும் பாலியத்திலேயே இத்தகைய வீரம் இருப்பதும் இழிவான எங்கள் குலத்தில் உனது பிறப்பும் எங்களுக்குச் சந்தேகத்துக்கு ஏதுவாக இருக்கின்றன. நீ தேவனோ, தானவனோ, யக்ஷனோ, கந்தர்வனோ, யாரோ தெரியவில்லை யாராயிருந்தால் என்ன? நீ எங்களுக்கு உறவுமுறையானவன் உனக்குத் தண்டமிடுகிறோம் என்று வணங்கினார்கள்.
கிருஷ்ணன் சிறிது நேரம் மவுனமாக இருந்தான். பிறகு அவன் நட்புக்கோபத்துடன் ஓ, கோபாலரே! உங்களுக்கு ஏன் இந்த விசாரணை? என்னிடத்தில் அன்பிருந்தால், நான் உங்களுக்குக் கொண்டாடத் தக்கவனாக இருந்தால் நீங்கள் உறவினனாக நினையுங்கள்! நான் தேவனுமல்ல; கந்தர்வனுமல்ல நான் உங்கள் உறவினனாகப் பிறந்தவனேயன்றி வேறன்று ஆகையால் நீங்கள் வேறுவிதமாக சிந்திக்கவேண்டாம்! என்றான். அதன்பிறகு ஆயர்கள் மவுனமாகச் சென்றனர். பிறகு கண்ணன் அந்தக் கூதிர்ப் பருவத்தில் வானம் நிர்மலமாக இருப்பதையும், பாலைப் பொழிவது போல நிலவு காய்வதையும், திசைகள் யாவும் மணம் கமழும் மலர்கள் மலர்ந்திருப்பதையும் கடாட்சித்து, முன்பு தான் வரமளித்தவாறு கோபியரோடு சேர்ந்து கிரீடிப்பதற்குத் திருவுள்ளம் கொண்டு, தமையனோடு செல்லாமல் தனியாகவே வனத்துக்குச் சென்றான். பெண்களின் மனதைக் கவரும் விதமாகவும் இன்னது என்று சொல்லவுங்கூடாத இனிய தொனியோடு தாரமும் மந்திரமுமான ஓசை வேற்றுமைகளின் முறைப்பாடுடைய புல்லாங்குழலை எடுத்துக்கண்ணன் ஊதினான். அந்த வேணுகானத்தைக் கேட்டு ஆய்ச்சியர் அனைவரும் பரவசமடைந்து மாளிகைகளைத் துறந்து பரபரப்புடன் ஸ்ரீகிருஷ்ணன் இருக்குமிடந்தேடி விரைந்து சென்றார்கள். அவர்களில் ஒருத்தி கண்ணனின் குழலிசையை உற்றுக்கேட்டு, அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள். மற்றொருத்தி அருகில் சென்று கிருஷ்ணா கிருஷ்ணா! என்று ஆவலோடு அழைத்துக்கொண்டும் வேறொன்றும் பேசமுடியாமல் நாணத்தோடு நின்றாள். வேறு ஒருத்தி கிருஷ்ணனிடம் கொண்ட அன்பு மிகுதியினாலே, ஒன்றும் தெரியாதவளாய் பக்கம் நின்றாள்.
ஒரு பெண், தன் மாளிகையிலிருந்து வெளியே வரும்போது அங்கே தன் மாமனாரைப் பார்த்தாள். பயந்தாள். கண்ணனிடம் போகமுடியாததால் கண்களை மூடிக்கொண்டு, தன்மயமாய், அந்தக் கோவிந்தனைத் தியானஞ் செய்து கொண்டிருந்தாள். மற்றொருத்தி கண்ணனிடத்திலேயே சித்தம் பற்றியிருப்பதாலுண்டான ஆனந்தத்தால், புண்ணியங்களும் அவளையடையாமற் போனது பற்றிய பெருந் துக்கத்தால் பாவங்களும் மாளப்பெற்றவளாய் பரப்பிரம்ம சொரூபியாய், ஜகத்காரணமான அவனையே சிந்தித்து, மூச்சடக்கி முக்தியை அடைந்தாள். இவ்விதமாகத் தன்னைச் சூழ்ந்த கோபியர்களுடன் ராஜ கோபாலன் ராஸக்கிரீடை என்ற உற்சவத்தில் குதூகலமாய் இருந்தான். அதற்கு ஏற்றாற்போல சரத்கால நிலவும் பொழிந்து கொண்டிருந்தது. இவ்விதமாக கண்ணன் ராஸக்கிரீடை செய்தருளி வேறொரு இடத்திற்கு எழுந்து சென்றபோது யாதவக் கன்னியரெல்லாம் கூட்டமாகக் கூடி, கண்ணனின் திருவிளையாடல்களிலேயே மனம் லயிக்க அந்தப் பிருந்தாவனத்தின் நடுவில் திரிந்து ஒருத்தியிடம் மற்றொருத்தி பிதற்றிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி தோழியரே! கேளுங்கள்! நான்தான் ஸ்ரீ கிருஷ்ணன் ஆதலால் நான் லலிதமாய் நடக்கிறேன் பாருங்கள் என்று நடந்து காட்டினாள். மற்றொருத்தி நீயல்லடி கண்ணன்! நானே கண்ணன். என்னுடைய பாடலைக்கேள்! என்றாள். வேறு ஒருத்தி ஏ துஷ்டனான காளியனே; ஓடாதே நான் கிருஷ்ணன். உன்னைப்பிடிக்கிறேன் என்று தன் தோள்களைத் தானே தட்டித் தன் கையையே சர்ப்பத்தைப் போல் பிடித்து நின்றாள் மற்றொருத்தி நீங்கள் மழைக்கு அஞ்சவேண்டாம். இதோ இந்தக் கோவர்த்தனகிரியை நான் குடையாகப் பிடிக்கிறேன் என்றாள்.
இவ்விதமாக இடைச்சியர் எல்லாம் கண்ணனின் திருவிளையாடல்களைச் செய்துகொண்டு மெய்மறந்த நிலையில் பிருந்தாவனத்தில் திரிந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு பெண் தரையைப் பார்த்து, அங்கத்தில் புளகாங்கிதம் உண்டான, அருகில் இருந்தவர்களை நோக்கி, தோழியரே பாருங்கள்! இங்கே துவஜம், வஜ்ரம், கமலம் அங்குசம் முதலிய இரேகைகளையுடைய கண்ணனது திருவடித் தாமரைகளின் சுவடுகள் இருக்கின்றன, இவற்றைப் பார்க்கும்போது, அவன் விளையாட்டோடு விநோதமாக நடந்திருக்கிறான் என்று தோன்றியது. இன்னும் பாருங்கள், மகாபுண்ணியம் செய்த எவளோ ஒருத்தி அவனுடன் கூடச் சேர்ந்து, மதத்தினால் மெல்லச்சென்றிருக்கிறாள். ஏனென்றால் இதோ பக்கத்தில் அவனுடைய அடிச்சுவடுகளும் நெருங்கிச் சிறியவைகளாகக் காணப்படுகின்றன; அடியே, இங்கே கண்ணன் உட்கார்ந்து பூப்பறித்திருக்கிறான். அதனால் தான் அவனுடைய திருவடிகளின் நுனிமட்டும் இங்குப் பதிந்துள்ளன. இதோ பாருங்களடி! இங்கே கண்ணன் உட்கார்ந்து அம்மலர்களால் ஒருத்தியை அலங்கரித்திருக்கிறான். அவளோ முற் பிறவியில் ஸ்ரீமந் நாராயணனை நன்றாக ஆராதித்திருக்கிறாள். இதோ பாருங்கள்! இங்கே அவன் பூப்புணர்ந்தவளை விட்டுவிட்டு, இந்த வழியாகப் போயிருக்கிறான். இங்கே ஒருத்தியின் அடிச்சுவடுகள் நுனியழுந்தியவையாகக் காணப்படுகின்றன. ஆகையால் அவள் முன்னே சென்ற கண்ணனைச் சேரும் பொருட்டு நிதம்பபாரத்தால் வருந்தி விரைவாக நடந்திருக்கிறாள். பாங்கியரே! இங்கே ஒருத்தி அவன் கைமேல் கை வைத்துக்கொண்டு அவன் கூடவே நடந்திருக்கிறாள். அதனால்தான் இங்கே அந்த மங்கையின் காலடி வைப்புகள் நீண்டிராமல் சிறிது நெருங்கி அசுவாதீனமாக இருக்கின்றன. அடியே இங்கே பாருங்களடி அந்த வஞ்சகக் கண்ணன் அந்த மங்கையின் கையை ஸ்பரிசித்தது மாத்திரமேயன்றி, வேறு ஸ்பரிசம் எதுவும் செய்யாததால், அந்த மங்கை அவமானப்பட்டு ஆசையற்றுத் திரும்பி விட்டதாகக் காலடிச் சுவடுகள் எடுத்துக்காட்டுகின்றன. அடியே, இங்கே பாருங்களடி இங்கே கண்ணனின் காலடிச் சுவடுகள் மிக விரைவாக வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அவன் இங்கே யாரோ ஒருத்தியை, நீ இங்கேயே இரு! நான் சீக்கிரமாகப்போய் நாமிருவரும் கூடுவதற்கு ஏற்ற இடத்தைப் பார்த்துக்கொண்டு வந்து சேருகிறேன்! என்று சொல்லிவிட்டு நழுவிப் போயிருக்கிறான் என்று தோன்றுகிறது. பாங்கியரே ! இதற்குமேல் அவன் சுவடு காணப்படவில்லை. ஆகையால் அவன் மற்றையோர் புகமுடியாத இடத்துக்குப் போய் இருக்கிறான். ஆகையால் திரும்புங்களடி! என்று சொல்லி, கன்னியர் யாவரும் கண்ணனை இனிக் காண்பது அரிதென்று மனம் மயங்கி, யமுனையாற்றின் கரையில் உட்கார்ந்து அவனது சரிதங்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.
அப்படிப்பட்ட சமயத்தில் கண்ணன் அங்கு வந்தான். அவன் வந்ததும் கன்னியரெல்லாம் களிப்படைந்தனர். அவர்களில் ஒருத்தி கிருஷ்ண கிருஷ்ண என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தாள். மற்றொருத்தி புருவங்களை நெறித்து கண்களாகிய வண்டுகளால் கண்ணனது முகாரவிந்தத்தைப் பானஞ் செய்தாள். வேறு ஒருத்தி கண்ணனைக் கண்டதும் கண்களை மூடிக்கொண்டு, அவனது திவ்விய ரூபத்தையே தியானித்துக் கொண்டிருந்தாள். இப்படியாகத் தன்னைக் காதலித்துப் பல வகையான சேஷ்டைகள் செய்தவண்ணம் தன்னைச் சூழ்ந்து நிற்கும் அப்பெணகளில் சிலரிடம் கண்ணன் இனிமையாகப் பேசியும் சிலரைக் கை தீண்டுவதாலும் சமாதானம் செய்தான். பிறகு கலக்கமின்றித் தெளிவுடன் இருந்த அப்பெண்களோடு ராஸக்கிரீடை செய்யலானான். அம்மங்கையர் அனைவரும் கண்ணனைவிட்டு அகலாமல் அருகிலேயே ஒட்டியொட்டி இருந்ததால், வட்டமாக அமையவேண்டி ராசமண்டல கோஷ்டி அமையவில்லை. எனவே கண்ணன் அப்பெண்கள் ஒவ்வொருத்தியின் கையைப் பிடிக்க அந்தச் சுகத்தில் பரவசமாய் ஒவ்வொருத்தியும் கண்களை மூடிய நிலையில் மெய்மறந்து நிற்கும் போது கண்ணன் அவளவள் கையை மற்றொருத்தியின் கையோடு சேர்த்து, அவர்களை வட்டமாக நிறுத்தினான். அப்போது எல்லாப் பெண்களும் ஆனந்தப் பரவசத்தால் கண்ணனுடைய கையைத் தான் பிடித்திருப்பதாக நினைத்தார்களே தவிர மற்றொரு பெண்ணின் கையைப் பிடித்திருப்பதாக நினைக்கவில்லை. கண்ணனோ, விரைவாகப்பாயும் லாகவத்தால், யாவருக்கும் அருகிலிருப்பது போலவே காணப்பட்டான். பிறகு சரத்கால வர்ணனைப் பாட்டும், அதற்குத் தாளமாக கன்னியரின் கைவளையல்களின் குலுக்கலும் சேர்ந்து ராஸக்ரீடை விளங்கியது. ஆயினும் கண்ணன் மட்டுமே சரத் காலத்துச் சந்திரனையும் நிலவையும் ஆம்பல் மலர்ந்த தடாகங்களையும் பாட கோபியர்கள் கண்ணனது திருநாமம் ஒன்றையே பாடினார்கள். இப்படிப் பாடிச் சுற்றிவரும்போது, ஒருத்தி கங்கணங்கள் ஒலி செய்யும் தன்கையை கண்ணனின் தோள்மீது பதித்தாள். மற்றொருத்தி, யானைத் துதிக்கை போன்ற தோளுடைய கண்ணனை இறுகக்கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். இன்னும் ஒருத்தி கண்ணனின் தலையோடு தன் தலையைச் சேர்த்து அவன் தோள்களைக் கட்டிக்கொண்டாள். இவ்விதம் ஒவ்வொருத்தியும் ஆனந்தித்த வண்ணம் கண்ணனைப் பிரியாமல் இருந்தார்கள். தன்னைப் பிரிந்தால் ஒரு கணமும் ஒரு கோடி வருடமும் போலத் தோன்றும்படி அப்பெண்களுக்கு ஆனந்தத்தை வளர்த்துக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணன் ராசக்ரீடை செய்தான். கோபிகா ஸ்திரீகள் அனைவரும் தன் தன் தாய்தந்தையராலும் உடன்பிறந்தாராலும் தடுக்கப்பட்டாலும் அவர்களை லட்சியம் செய்யாமல் இரவு நேரங்களில் கண்ணனிடம் வந்து சேர்ந்து அவனிடம் மிகவும் அன்போடு ரமித்திருந்தார்கள். கண்ணனும் மனுஷ்ய அவதாரத்துக்கேற்ப, இளமைக்குரிய சாபல்யத்தைப் பெருமைப்படுத்திக் கொண்டு, இரவுகள் தோறும் அக்கோபியருடன் ரமித்து வந்தான்.
மைத்ரேயரே! தருமத்தை ஸ்தாபிக்க அவதாரஞ் செய்த எம்பெருமான் தரும விரோதமான இத்தகைய காரியஞ் செய்யலாமா? இதனால் கோபிகா மங்கையருக்குப் பாதகம் உண்டாகாதோ என்று நீங்கள் கேட்பீர் எம்பெருமான், தன்னைச் சேர்ந்தோரின் சகல பாவங்களையும் போக்கடிக்கும் படியான தூய்மையோன் அந்த மங்கையரும், வேதாந்த நிர்ணயப்படி அன்பு செலுத்த வேண்டிய இடத்திலேயே தங்கள் அன்பைச் செலுத்தினார்கள். ஆகையால் அவர்களுக்கு சகல பாவ நிவர்த்தியுண்டாயிற்றே தவிர பாபம் சம்பவிக்கவில்லை. எம்பெருமானுக்கோ தேவர்களுக்கு உண்டாவது போன்ற பாவபந்தம் உண்டாவதில்லை. ஏனென்றால், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்கள் எப்படி எல்லாப் பிராணிகளிலும் வியாபித்துள்ளனவோ, அதுபோலவே அக்கோபிகா ஸ்திரீகளிடத்திலும் அவர்களின் கணவரிடத்திலும் ஏனைய ஆன்ம கோடிகளிடத்திலும் வியாபித்திருக்கும் பரமாத்மாவாகையால், கண்ணனுக்கும் புதியதொரு பந்தம் வந்ததில்லை என்பதை அறிவீராக!

——————

14. அரிஷ்டாசுர வதம்

மைத்ரேயரே! ஒருநாள் மாலையில் கண்ணன் ராஸக்ரீடைக்குத் தயாராக இருந்தான். அப்போது அரிஷ்டன் என்ற ஓர் அசுரன் எருது வேடம் பூண்டு, இடைச்சேரியில் அட்டகாசம் செய்து பயப்படுத்திவந்தான். நீருண்ட கருமேகம் போன்ற உடலும், கூர்மையான கொம்புகளும், சூரியன் போன்ற சிவந்து பளபளப்பாக ஜொலிக்கும் கண்களும் திண்மையான கழுத்து முசுப்பும் அண்ட முடியாத பராக்கிரமமும் வாய்ந்த அவன் தன் குளம் புகளால் பூமியைப் பிளப்பவனைப் போல் இடித்துக் கொண்டும் உதடுகளை நாக்கினால் அடிக்கடி துழாவிக் கொண்டும் பரபரப்பாய் வாலைச் சுழித்து உதறிக் கொண்டும், பசுக்கள் எல்லாம் நடுங்கப் பாய்ந்து வந்தான். மாடுகளை முட்டிக் கருக்களை விழச்செய்தான்.
அத்தகைய கொடிய காளையைக் கண்ட இடைச்சிகள் கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறிக் கொண்டு கிருஷ்ணனைச் சரணடைந்தார்கள். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் கையைத் தட்டிச் சிங்கநாதம் செய்தான். அதைக் கண்டதும் விருஷப அசுரன் தன் கொம்புகளை நீட்டிக்கொண்டு கண்ணன் மீது பாய்ந்தான். கண்ணன் அதைக் கண்டு விலகாமல், இருந்த இடத்திலேயே சத்துருவை மடக்கினான். பிறகு விருஷப அசுரனின் கொம்புகளைப் பிடித்து அசையவொட்டாமற் செய்து, தன் முழங்காலினால் அவனது அடிவயிற்றில் இடித்து அவனது கர்வத்தையும் கொழுப்பையும் அடக்கி, அழுக்கு ஆடையைக் கசக்குவதைப் போல் அவனது கழுத்தைப் பிடித்துக் கசக்கி, அவனது கொம்புகளில் ஒன்றை முறுக்கி உடைத்து, அவனை அடித்தான். இதனால் அந்த அசுரன் உதிரத்தைக் கக்கிக்கொண்டு கீழே விழுந்தான். அதைக் கண்டு தேவர்கள் கண்ணனைத் துதித்தார்கள்.

——————–

15. அக்குரூரருக்குக் கம்சனின் கட்டளை!

அரிஷ்டன், தேநுகன், பிரலம்பன், முதலிய அசுரர்களை கண்ணன் அழித்ததையும், கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்ததையும் பூதகி கொல்லப்பட்டதையும் கலகக்காரரான நாரதமுனிவர் வந்து கம்சனிடம் கூறினார். தேவகியின் ஆண் குழந்தையான கிருஷ்ணனைக் கொண்டுபோய் இடைச்சேரியிலுள்ள யசோதையின், குழந்தையாக வைத்து விட்டு, யசோதையின் பெண் குழந்தையை இங்கு கொண்டு வந்து தேவகியின் குழந்தையாக மாற்றிவிட்டதுவரை யாவற்றையும் நாரதர் கூறியதும், கம்சன் வெகுண்டெழுந்து தன் மைத்துனரான வசுதேவர் மீது பொல்லாத கோபம் கொண்டான்.
உடனே கம்சன் தன் அரச சபையில் வசுதேவரை நிந்தனை செய்துவிட்டு சபையில் இங்கும் அங்கும் நடந்து இப்போது இளமைப் பருவத்தினராக இருக்கும் ராமகிருஷ்ணர்கள் பலப்படுவதற்கு முன்பே, அவர்களை அழித்து விட வேண்டும். இதற்கு மேல் வளரவிட்டால் அவர்கள் வெல்வதற்கு அசாத்தியராகி விடுவார்கள். ஆகையால், நம்மிடமுள்ள முஷ்டிகன் சாணுரன் என்ற மல்லர்களைக் கொண்டு, மல்யுத்தம் செய்வித்து அவ்விளைஞர்களைக் கொல்வோம். அதற்காக நாம் நடத்தும்வில் எய்யும் திருவிழாவொன்றைச் சாக்கிட்டு, ராமகிருஷ்ணர்கள் இருவரையும் இடையர் சேரியிலிருந்து இங்கே வரவழைத்து விரைவில் அவர்களை அழிக்கும் உபாயத்தைச் செய்யவேண்டும். அதற்கு சுவபல்க குமாரராகிய அக்குரூரனையே கோகுலத்துக்கு அனுப்ப வேண்டும் இல்லையென்றால் பிருந்தாவனத்தில் சஞ்சரிக்கும் கேசி என்பவனுக்குக் கட்டளையிட்டால், அவன் அங்கேயே அவர்களை சங்கரித்துவிடுவான். இல்லையெனில் குவலயாபீடம் என்ற என்னுடைய பட்டத்து யானை அவ்விடைப் பிள்ளைகள் இருவரையும் நாசஞ் செய்ய வல்லதாகும் என்று சிந்தித்தான். பிறகு ராம கிருஷ்ணர்களைக் கொல்வதற்காக அழைத்து வரும்படி அக்குரூரருக்கு கம்சன் கட்டளையிடலானான்.
ஓ தானபதியே! என் மகிழ்ச்சிக்காக என் கட்டளையைத் தடையின்றி நீயே நிறைவேற்றவேண்டும். அதாவது நீர் தேரில் ஏறி, இடையர்குலத் தலைவனான நந்தகோபனின் கோகுலத்துக்குப் போகவேண்டும். அங்கு விஷ்ணு அம்சமாகப் பிறந்ததாகச் சொல்லப்படும் வசுதேவரின் பிள்ளைகள் இருவர் ராமகிருஷ்ணர்கள் என்ற பெயர்களில் வளர்கிறார்கள் அல்லவா? அவர்களை வருகின்ற சதுர்த்தசியன்று இங்கு நடக்கவிருக்கும் தனுர்யாக மகோத்சவத்தில் நடக்கும் மல் யுத்தத்திற்கு வரும்படி அழைத்து வரவேண்டும். மல் யுத்தத்தில் வல்லவர்களாக என்னிடமுள்ள சாணுர முஷ்டிகர்களுடன் கூட அவர்கள் சண்டையிடுவதை இங்குள்ள யாவரும் வேடிக்கை பார்க்கட்டும். என்னுடைய குவலயா பீடம் என்ற யானை, மாவுத்தனால் தூண்டப்பட்டு, வசுதேவ குமாரர்களான அந்த துஷ்டச் சிறுவர்களைக் கொன்று விடும்! இவ்விதமாக அவர்கள் இருவரையும் வதைத்த பிறகு வசுதேவனையும், நந்தகோபனையும் துர்புத்தியுள்ள என் தகப்பன் உக்கிரசேனனையும் நான் கொன்றுவிடுவேன். பிறகு என்னைக் கொல்ல நினைத்த இடையருடைய மாடுகளையும் பொருள்களையும் பறித்துக்கொண்டு பிறகு உம்மைத் தவிர இதர யாதவர்களையெல்லாம் கொல்லும்படிக் கட்டளையிடுவேன். இப்படியெல்லாம் செய்து, இந்த ராஜ்யத்தில் யாதவப் பூண்டே இல்லாமலும்; பகைவரேயில்லாமலும் ஆள்வேன்; இதற்காக; அக்குரூரரே; நீர் ஆய்ப்பாடிக்குப் போய் வரவேண்டும். மேலும் அங்குள்ள இடையரிடத்தில்; எருமை நெய், தயிர், பால் இவற்றை விசேஷமாக நம் அரண்மனைக்குக் கொண்டு வரும் படிக் கட்டளையிட்டு வாரும்! என்று கம்சன் கூறினான். அதைக் கேட்டதும் மகா பாகவதரான அக்குரூரர்.. நாளைக்குக் கண்ணனை நாம் சேவிப்போமல்லவா? என்று தம் மனதிற்குள் மிகவும் மகிழ்ந்து கம்சனுக்கு அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தமது தேரில் ஏறிக்கொண்டு; மதுராபுரியிலிருந்து புறப்பட்டார்.

——————-

16. கேசி வதம்

பிருந்தாவனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த கேசி என்ற அசுரன், கம்சனுடைய தூதனால் ஏவப்பட்டு; ஸ்ரீகிருஷ்ணனைச் சங்கரிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் குதிரை வடிவம் கொண்டான். அவன் கிருஷ்ணன் இருக்குமிடத்திற்கு வந்து, குளம்புகளால் பூமியை இடித்துக்கொண்டும்; பிடரி மயிர்களின் நெறிப்பினால் மேகங்களைக் குத்தியும் குதித்தோடும் திறமையினால் சந்திர சூரிய மார்க்கங்களைத் தாவிக்கொண்டும் பெருங்கனைப்புச் செய்து, அங்கிருந்த ஆயர்களைத் துரத்தினான். அந்த அசுரக் குதிரையின் கனைப்பைக் கேட்ட ஆயரும் ஆய்ச்சியரும் நடுங்கிப் பயந்து, ஸ்ரீகிருஷ்ணனைச் சரணடைந்தார்கள். கண்ணா! காத்தருள்வாய்! கண்ணா காத்தருள வேண்டும் என்று கோபாலர்கள் கூவுவதைக்கேட்டதும் கண்ணபிரான் புன்முறுவலுடன் அவர்களை நோக்கி, கோபாலர்களே, நீங்கள் பயப்படவேண்டாம். அற்ப பலமுள்ள இந்தக் கேசிக்கு அஞ்சும் உங்களால், வீரருக்கு உண்டான சக்தியெல்லாம் போக்கடிக்கப்படுகின்றன. இந்த அற்பக் குதிரை சும்மா கனைத்து ஆரவாரம் செய்கிறதே தவிர வேறொன்றுமில்லை குதிரை வடிவமெடுத்து வந்து இங்கு ஆர்ப்பாட்டம் செய்யும் இவன் ஒரு பலமற்ற அசுரன் சும்மா குதித்து ஆட்டம் காட்டுகிறான். என்று கூறிவிட்டு கேசியை, நோக்கி, டே துஷ்டா! வா! வா! நான் கிருஷ்ணன்! முன்பு தக்ஷயக்ஞத்திலே பூஷா என்பவனின் பற்களை உருத்திரன் உதிர்த்ததைப் போல், இப்போது உன் பற்களையெல்லாம் நான் உதிர்த்துவிடுகிறேன்! என்று வீரமுழக்கம் செய்து கேசியிடம் சென்றான். கேசியெனும் அசுரக் குதிரையோ வாயைத் திறந்துகொண்டு கண்ணன்மீது பாய்ந்தது. அப்போது ஸ்ரீகிருஷ்ணன் தன் திருக்கையை நன்றாக நீட்டி அந்தக் குதிரையின் வாயினுள் கொடுக்க, அந்தக் கையைக் கடித்த அசுரக் குதிரையின் பற்கள் எல்லாம் தெறித்துக் கீழே விழுந்தன. உள்ளே நுழைந்த கை, வியாதியைப் போல வளர்ந்ததால், அசுரக் குதிரையின் வாய் கிழிந்தது கண்கள் பிதுங்கின. அது கால்களால் பூமியை உதைத்துக் கொண்டும் மல மூத்திரங்களை விட்டுக்கொண்டும் உடம்பு வியர்க்கப் பலமும் கர்வமும் ஒடுங்க நின்றது. கிருஷ்ணன் தன் கையைத் தளர்த்தி அந்தக்குதிரையை இரு பிளவுகளாகப் பிளந்தெறிந்தான். இவ்விதமாக கேசி என்ற அசுரனைக் கண்ணன் அழித்ததால் கோபாலர் துதித்து மகிழ்ந்தனர்.
அப்போது ஆகாய மார்க்கமாக வந்த நாரத முனிவர் கேசியசுரன் பட்ட பாடுகளைக் கண்டு மகிழ்ந்து சுவாமிக்கு விண்ணப்பஞ்செய்ததாவது. ஓ ஜகந்நாதா! சகல தேவர்களுக்கும் துன்பஞ் செய்த கேசியை, விளையாட்டாகவே நீ சங்கரித்தது மிகவும் நன்று இதுவரை நடந்திராத இந்த நராசுவ யுத்தத்தைக் காண்பதற்கே நான் சொர்க்கத்திலிருந்து இங்கு வந்தேன். மதுசூதனா! இந்த அவதாரத்தில் நீ செய்த திருவிளையாடல்கள் சிறப்புடையன. அந்தக் குதிரையரக்கன் கனைப்பைக் கேட்டாலே இந்திரன் முதலிய தேவர்கள் நடுங்குவார்கள். அந்தத் துஷ்டாத்மாவான கேசியை நீ சங்கரித்து அருள் செய்ததாலேயே உனக்குக் கேசவன் என்ற திருப்பெயர் வழங்கட்டும்! நாளைக்கு நடக்கவிருக்கும் கம்ச யுத்தத்திற்கு நான் மீண்டும் வருவேன். உக்கிரசேனன் மகனாகிய கம்சனும் அவனைச் சார்ந்த மற்றவர்களும் சங்கரிக்கப்பட்ட பிறகு தான் பூமி பாரத்தைக் குறைத்தவனாவாய்! கோவிந்தா! செய்வதெல்லாம் தேவ காரியங்கள் அதெல்லாம் உனக்கே தெரியும்! நீ பல்லாண்டு வாழ்வாயாக! நான் விடை பெறுகிறேன்! என்று சொல்லி விட்டு நாரதர் சென்றார். ஸ்ரீகிருஷ்ணன் கோபிய கோபாலரோடு, திருவாய்ப்பாடிக்குச் சென்றான்.

———————

17. அக்குரூரர் கண்ணனைக் காணுதல்

முன்பு கம்சன் இட்ட கட்டளைப்படி அக்குரூரர் மதுரையிலிருந்து ரதத்தில் ஏறி, கோகுலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தம் மனதில் சிந்தித்துக்கொண்டே வந்தார். இந்த உலகத்தில் என்னைவிடப் புண்ணியவான் வேறு யாருமில்லை. ஏனென்றால் அமிசத்தினாலே இங்கு அவதரித்துள்ள சக்கரபாணியின் திருமுகத்தைத் தரிசிக்கப் போகிறேன். செந்தாமரைக் கண்ணனின் திவ்வியத் திருமுக மண்டலத்தைக் காணப்போவதால், இப்போதே என் பிறவி சாபல்யமாயிற்று. நான் பாக்கியசாலி! எவனை இந்திரன் நூறு யாகங்களினால் ஆராதித்து சகல தேவதைகளுக்கும் அதிபதியாக இருக்கும் மேன்மையைப் பெற்றானோ, அந்த ஆதியத்யாந்த ரஹிதனான ஸ்ரீ கேசவனை நான் இந்தக் கண்களினாலேயே காண்பேனன்றோ! சர்வாத்மாவாய் எல்லாமறிந்தவனாய்; சகல சொரூபியாய், சர்வ பூதங்களிலுமுள்ளவனாய், இத்தகையவன் என்று நினைக்கக் கூடாதவனாய் எங்கும் வியாபித்தவனாய் விளங்கும் பகவான் என்னோடு பேசும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமல்லவா? எவன் அனந்த சொரூபியாக இருந்துகொண்டு தனது திருமுடியினினாலே இந்தப் பூமியை அசையாதிருக்கும்படித் தாங்குகிறானோ, பூமிக்காக இப்போது இங்கே அவதரித்தருளின அவன் என்னை அக்குரூரர் என்று அழைப்பானல்லவா? தந்தை என்றும் பிள்ளை என்றும் நண்பன் என்றும் சகோதரன் என்றும் தாய் என்றும் பந்துக்கள் என்றும் பலவகைப் பற்றாக நிற்கிற எவனுடைய இந்த மாயையைக் காப்பதற்கு உலகம் திறமுள்ளதன்றோ. அந்த எம்பெருமானுக்கு நமோ நம லோகாதாரனாக இருக்கும் அவனிடத்தில் சேதனாசேதன ஸ்வரூபமாக இருக்கும் இந்தப் பிரபஞ்சங்கள் யாவும் எல்லா விதத்தாலும் நிலைபெற்றிருக்கின்ற சத்தியத்தால், அந்த எம்பெருமான் என்னைக் கம்சனைச் சேர்ந்தவன் என்று திருவுள்ளஞ் சீறாமல் என்னிடம் சாந்தனாக இருக்கவேண்டும். எவனை நினைத்தவுடனேயே புருஷன் சகல நன்மைகளுக்கும் உரியவனாகி விடுவானோ அந்த அஜனாயும் நித்தியனாயும் இருக்கிற ஸ்ரீ ஹரியை நான் அடைக்கலமாக அடைகிறேன்! என்று அக்குரூரர் யோசித்துக்கொண்டே, தேரோட்டிச் சென்றார்.
சூரியன் அஸ்தமிக்கச் சிறிது நேரம் இருக்கும் நேரத்தில் இடையர் குலத்தினர் வசிக்கும் திருவாய்ப்பாடியை அக்குரூரர் அடைந்தார். அங்கே பசுக் கறக்குமிடத்தில் கன்றுகளின் நடுவில், அன்றலர்ந்த கரு நெய்தல் மலர் போன்ற காந்தியும் மலர்ந்த செந்தாமரை போன்ற திருவிழிகளும், ஸ்ரீவச்சம் என்னும் மறுப்பொருந்திய திருமார்பும், திரண்டு நீண்ட திருத்தோள்களும், பரந்தும் உயர்ந்தும் விளங்கும் திருமார்பும் நீண்டு உயர்ந்த கூர்மை நாசியும், வெகு விசாலமான மந்தஹாசமுள்ள திருமுகத்தாமரையும், உயர்ந்தும் சிவந்தும் உள்ள நகங்களுடன் கூடித் தரையில் பதிந்த திருவடித் தாமரைகளும், பொன் நிறமான திருப்பரிவட்டங்களும், வனமாலையும் சாற்றிக்கொண்டு, வெண்தாமரையை சேகரமாகத் திருமுடியில் அணிந்திருப்பதாலே சந்திரன் உதித்த நீலமலை போன்றவனான ஸ்ரீகிருஷ்ணனை முதலில் அக்குரூரர் கண்டார். பிறகு கண்ணனின் பக்கத்தில், அல்லி மலர் போன்ற திருமேனியுடன் நீலநிறத் திருப்பரிவட்டங்களையணிந்து கொண்டு உயரமாகவும்; தாமரை மலர் போன்ற முகமலருடையவருமான பலபத்திரரையும் கண்டார். ஞானியான அக்குரூரர், அம்மகா புருஷர்கள் இருவரையும் கண்ட உள்ளக் களிப்பின் மிகுதியினால், முகம் மலர்ந்து உடம்பெல்லாம் புளகாங்கிதம் அடையப்பெற்று, இதோ ஈருருவாய் பிரிந்துள்ள வாசுதேவ பகவானுடைய அம்சம் எதுவுண்டோ அதுதான் உத்தம தேஜசு அடையத்தக்க மேன்மையான பொருள் இதைக் கண்டதால் எனது கண்கள் இரண்டும், மிகவும் சாபல்யமாயின. இந்த உடலும் அந்த எம்பெருமானின் அனுக்கிரகத்தாலே தீண்டப்பெற்றுச் சாபல்யமாகுமோ? எந்தத் திருக்கையின் விரல்பட்டவுடனேயே புருஷர் சகல பாபங்களும் நசிக்கப்பெற்றுக் குற்றமற்ற சித்தியைப் பெறுவார்களோ அந்தத் திருக்கைத் தாமரையை ஸ்ரீமானான அவ்வனந்தன் என் முதுகின் மீது வைக்கப் பெறுவானோ? இந்தச் சுவாமி, சுபாவத்தில் குற்றமற்றவனாக இருக்கின்ற என்னைக் கம்சனது சார்பில் இருப்பதால் குற்றமுடையவனாக எண்ணுவாரோ தெரிவில்லையே! அப்படியானால் இந்தப் பிறவியைச் சுடவேண்டும். ஏனென்றால் யோக்கியரால் அங்கீகரிக்கப்படாமல் துறக்கப்படுகின்றவனுக்குப் பிறவி ஏன்? நாம் இப்படி எண்ணக் கூடாது. ஏனென்றால் ஞான சொரூபியாய், சுத்த சத்வமயனாய் ராகத்வேஷாதி தோஷங்களின்றி எப்பொழுதும் தன் சொரூபம் விளங்க சகல புருஷருடைய இதயத்திலும் எழுந்தருளுகின்ற எம்பெருமானுக்குத் தெரியாதது ஒன்று உண்டோ ஆகையால் எனது இதயத்தில் கவடிருப்பதும் இல்லாததும் அவன் அறிவான். ஆகையால் என்னைத் திரஸ்காரம் செய்யாமல் திருவுள்ளம் பற்றுவான் எனவே பிரம்ம ருத்திராதியருக்கும் ஈஸ்வரனாயும் புரு÷ஷாத்தமனாயும் இருக்கும் ஸ்ரீவிஷ்ணுவின் அம்சாவதாரமாய் ஆதிமத்யாந்தமில்லாதிருக்கும் இந்த ஸ்ரீகிருஷ்ணனை நான் பக்தியால் மனவணக்கத்தோடு நெருங்கப் பெறுவேனாக என்று மனதால் சிந்தித்தார் மகாஞானி அக்குரூரர்.

————————-

18. கண்ணனைப் பிரியும் கோபியரின் கலக்கமும் அக்குரூரர் கண்ட தெய்வீகக் காட்சியும்!

மைத்ரேயரே! இவ்விதமாக அக்குரூரர் தம் மனதில் நினைத்து கொண்டு, கண்ணன் அருகே சென்று அடியேன் அக்குரூரன் தண்டம் சமர்ப்பிக்கிறேன் என்று சிரம் வணங்கித் தண்டமிட்டார் ஸ்ரீ கிருஷ்ணனும் புனித ரேகைகளுடன் விளங்கிய தன் திருகைகளால் அவரைத்தீண்டி எடுத்து, வெகு பிரீதியோடு நெருங்கித் தழுவியருளினான். பிறகு மூத்தவரான பலராமனையும் அக்குரூரர் வணங்கினார். அதன் பிறகு அம்மகா புருஷர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் அக்குரூரரைத் தங்கள் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அக்குரூரர், அவர்களால் ÷க்ஷமாதிகள் விசாரிக்கப்பட்டார். பிறகு அவர்களுடன் உணவருந்திவிட்டு அக்குரூரர் உட்கார்ந்திருக்கும்போது அசுராம்சமான கம்சன் தன் தங்கை தேவகியையும் வசுதேவரையும் நிந்தித்துக் கொடுமைப்படுத்தியதையும், அவனது தந்தையான உக்கிர சேனனிடம் கம்சன் மனப்பகைமை கொண்டிருப்பதையும் எதன் நிமித்தமாகத் தம்மை கம்ஸன் அனுப்பி வைத்தானோ, அதையும் அவர்களிடம் விண்ணப்பம் செய்தார். அதைக்கேட்டதும் ஸ்ரீகிருஷ்ணன் புன்முறுவலுடன் தானபதியே! நான் இவற்றை அறிவேன் இதற்குத் தக்கது எதுவோ அதைச் செய்யவும் நான் சித்தமாக இருக்கிறேன். மகாஞானியே! நீர் வேறு எதையும் நினைக்கவேண்டாம் இத்தோடு கம்சன் மடிந்தான் என்று நினையும் நானும் பலராமனும் நாளை உம்முடன் மதுரைக்கு வருகிறோம் யாதவரும் வேண்டும் உலுப்பைகளைக் கொண்டு நாளையே வருவார்கள். இன்றிரவு இங்கேயே தங்கியிருங்கள். இவ்விரவு முதல் மூன்று இரவுகளுக்குள்ளாக கம்சனையும் அவனைச் சார்ந்தோரையும் நாசஞ் செய்கிறேன்! என்று கூறியருளினான். பிறகு கோபால மூப்பர்களுக்கு அக்குரூரரைக்கொண்டும் தானும் கட்டளையிட்டு தமையனோடும் அக்குரூரரோடும் நந்தகோபனின் மாளிகையில் திருக்கண் வளர்த்தியருளினான். பிறகு பொழுது விடிந்ததும் பலபத்திரரும் கண்ணனும் அக்குரூரருடன் மதுரைக்குப் புறப்படத் தயாரானார்கள். அதைக்கண்ட கோபியரெல்லாம் மிகவும் கலங்கிக் கண்களில் கண்ணீர் ததும்ப கைகளில் கை வளைகள் நெகிழ, பெருமூச் செறிந்த வண்ணம் ஒருத்தியோடு ஒருத்தியாகப் பலவாறும் பேசிக்கொள்ளலானார்கள்.
ஓ தோழியரே, ஸ்ரீகோவிந்தன் மதுரைக்குப் போனால் மீண்டும் எப்போது இங்கு வருவான்? அந்த நகரத்திலுள்ள மங்கையரின் மதுரமான பேச்சுக்களாகிய அமுதத்தைப் பானஞ் செய்வானல்லவா? நகரப் பெண்களின் பேச்சைக் கேட்கும் அவன் மனம் மீண்டும் நாட்டுப்புறத்து கோபியரிடம் பற்றுமா? இந்த ஆயர்பாடிக்கே ஒரு சார வஸ்துவான இந்தக் கண்ணனை இங்கிருந்து நீக்கு கொடிய தெய்வம் கோபியரையெல்லாம் ஒருமிக்க மறுபடியும் ஓரடி அடித்ததென்றே நினைக்கவேண்டும். நகரப் பெண்களின் பேச்சிலே கருத்துக்கள் உள்ளடங்கிப் புன்னகையுடன் பொலிவுறும் அந்நகரத்துப் பெண்களின் நடையோ வெகு சுந்தரமாக இருக்கும். கடைக்கண் பார்வையோ மனதைக் கவர்வதாக இருக்கும். ஆகையால் இதுவரை அவற்றையெல்லாம் அறியாமல் நாட்டுப்புறத்தில் வாசஞ் செய்து கொண்டிருந்த இந்தக் கண்ணன் அங்கேபோன பிறகு, அந்நகரத்து நங்கையரின் மயக்க விலங்கினால் கட்டப்படுவானாதலால், மறுபடி அவன் இங்கே திரும்பி வருவானென்று எப்படிச் சொல்ல முடியும்? இதோ பாருங்கள்! அக்குரூரன் என்ற பெயரைக் கொண்ட இந்தக் கொடூரனாலே என்னமோ வஞ்சிக்கப்பெற்று, கண்ணன் தேர் ஏறி மதுரைக்குச் சென்றான். கொஞ்சமும் தயையில்லாத இந்தக் காதகன் நாம் எல்லாம் கண்ணனிடத்தில் அன்பினால் உருகுகிறோம் என்பதை அறியானோ அறிந்தவன் என்றால் நமது கண்களின் களிப்பாகிய கண்ணனை மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்வானா? அடி இந்தக் கிருஷ்ணன் நமதன்பைச் சிறிதேனும் பாராமல் பலராமரோடு தேரில் ஏறிச் செல்கிறான். அவன் மிகவும் இரக்கமற்றவனாக இருக்கிறான். அவவைப் போகவிடாமல் தடுக்கச் சீக்கிரம் ஏதாவது முயற்சி செய்யுங்கள். ஓ பெண்களே! மாமன் முதலானவர்களுக்கு எதிரில் இதைப்பற்றிப் பேச முடியாதே என்பீரானால் விரகத்தீயில் நாம் வெந்து போகும்போது அவர்கள் என்ன செய்யமுடியும்? நந்தகோபன் முதலியோர்களும் கண்ணனுடன் கூடப்போக முயல்கிறார்களே தவிர ஒருவரும் அவனைத் தடுக்க முயலவில்லையே! தோழிகளே! மதுரைப் பெண்களுக்கு இப்பொழுது நற்பொழுது விடிந்துள்ளது. ஏனென்றால் அவர்களது கண்கள் எனும் வண்டுகள் இன்று கண்ணனின் முகாரவிந்தத்தைப் பானம் பண்ணுமல்லவா? கண்ணனுடன் செல்பவர்கள் மகா புண்ணியஞ் செய்தவர்கள்!
ஏனென்றால் அவனுடைய வடிவழகைப் பார்த்துக் கொண்டே போய் தங்கள் தேகம் புளகாங்கிதமடைய அவர்கள் மகிழ்வார்களல்லவா? மதுரை நகரப் பெண்கள் எந்த நற்கனவைக் கண்டார்களோ? ஐயோ இரக்கமற்ற தெய்வம் இந்தக்கோபியருக்கு ஒரு மகாநிதியைக் காட்டிய பிறகு கண்களைப் பறித்துக்கொண்டதே! நம்மிடம் கண்ணனுக்கு அன்பு தளரத் தளர அவன் அன்பைப் பெறாத நமது கைகளில் அணிந்த வளையல்களும் கூட நம்மோடு இருக்க விரும்பாமல் தளர்கின்றன. அந்த அக்குரூரன் குரூர ஹிருதயமுடையவன் அதனால் தான் தேரை மெதுவாகச் செலுத்தாமல் வெகு வேகமாகச் செலுத்தி நம் கண்ணனை வெகுவேகமாகக் கொண்டுபோகிறேன். பாருங்கள்! இப்படிப் புலம்பும் நம்மிடத்தில் யாருக்குத்தான் இரக்கம் ஏற்படாது! என்ன செய்வோம் தோழியரே! சிறிது நேரம் கண்ணன் நம் கண்களுக்குப் காணப்பட்டுக் கொண்டிருந்தான். பிறகு அவன் ஏறியிருந்ததிருத்தேர் மட்டுமே காணப்பட்டது. இப்போது அந்தத் தேரின் சக்கரங்களால் எழும்பிய துகள் மட்டுமே காணப்படுகிறது. ஒருகணத்தில் இதுவும் மறைந்து போகும். கண்ணனோ வெகு தூரம் சென்றுவிட்டான்! என்று கோபிகைகள் அன்போடு அவன் சென்ற திசையையே பார்த்து, புலம்பிக்கொண்டிருக்கும் போது கண்ணனோ ஆய்ப்பாடியின் எல்லையைத் தாண்டி யமுனை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தான்.
அப்போது நண்பகல் அக்குரூரர், ராம கிருஷ்ணர்களை நோக்கி, அடியேன் இந்த நதிக்குச் சென்று மாத்தியான்னிக ஆராதனத்தைச் செய்து வருகிறேன். அதுவரையில் சுவாமிகள் இங்கேயே எழுந்தருளியிக்க வேண்டுகிறேன் என்று விண்ணப்பஞ்செய்தார். பிறகு அக்குரூரர் நதியில் நீராடி ஆசமனாதிகளைச் செய்து மந்திர ஜெபத்தோடு பரப்பிரம்மத்தைத் தியானஞ் செய்தார், அப்படித் தியானம் செய்யும்போது, பல பத்திரர் சஹஸ்ரபணா மண்டல மண்டிதராய் மல்லிகை மாலை போன்ற வெண்மையான திருமேனியோடும் மலர்ந்த தாமரை போன்ற திருவிழிகளோடும் பரிமள வனமாலையும் நீலப்பட்டாடைகளும் திவ்விய கிரீட குண்டலங்களும் தரித்துக்கொண்டு வாசுகி முதலிய சர்ப்பரசர்களால் சேவிக்கப்பட்டு, யமுனை ஜலத்தில் விளங்கினார். அவரது மடியிலே கண்ணன் நீலமேகசியாமளனாய், செந்தாமரை போன்ற சிவந்த திருவிழிகளும் நான்கு திருத்தோள்களும் கம்பீரமான திருமேனியும் பிரகாசிக்கும் வண்ணம் திருவாழி முதலிய திவ்விய ஆயுதங்களையும் திவ்விய பீதாம்பரங்களையும் வனமாலையையும் தரித்துக்கொண்டு வானவில்லினாலும் மின்னற் கொடிகளாலும் விசித்திரமாகப் பிரகாசிக்கும், கருமேகம் போலத் தோன்றினார். அவரது திருமார்பில் ஸ்ரீவச்சம் என்ற மறுப்பொருந்தியிருக்க திருக்காதுகளில் மணிமயமான மகர குண்டலங்கள் குலுங்க, திருமுடியில் வெள்ளைத் தாமரை போன்ற கிரீடமும் இலங்க, யோகசித்தி பெற்று சகல குறைகளுமற்ற சனக சனந்தனாதி முனிவர்களால் தியானஞ் செய்ய, அலங்காரமாக வீற்றிருந்தார். அந்தக் காட்சியை அக்குரூரர் கண்டதும் யமுனை நதியில் ஸ்ரீராம கிருஷ்ணர்களே இப்படி எழுந்தருளியிருக்கிறார்கள் என்று தெரிந்து இவ்வளவு சீக்கிரம் அவ்விருவரும் எப்படி இங்கே எழுந்தருளினார்கள் என்று வியந்து, அவர்களைக் கேட்க வாயெடுத்தார். அவ்வளவிலே அவருக்கு வாய் எழுப்பவொட்டாமல் சுவாமி ஸ்தம்பனம் செய்துவிட்டதால் ஒன்றும் சொல்ல முடியாமல், அக்குரூரர், நதியைவிட்டு கரைக்கு வந்தார். திருத்தேரைப் பார்த்தார். அங்கு ராமகிருஷ்ணர்கள் இருவரும் முன் போலவே மனித அவதாரமாகக் காத்திருப்பதைக் கண்டார். மீண்டும் அக்குரூரர் யமுனைக்கு ஓடினார். அங்கும் முன்பு கண்ட தெய்வீகக் காட்சியையே கண்டார். உடனே அக்குரூரர் பரமார்த்தத்தை அறிந்து, எல்லாம் அறிந்த எம்பெருமானான ஸ்ரீகிருஷ்ணனைத் துதிக்கலானார். எப்பொழுதும் சத்தாக இருக்கும் ரூபமுள்ளவராயும் சிந்திப்பதற்கும் அரியதான மகிமையுள்ளவராயும் அநேக ரூபியாயும் ஒரே ரூபியாயும் இருக்கும் பரமாத்மாவுக்கு நமோ நம என்று தண்டம் சமர்ப்பிக்கிறேன்.
ஓ, மகாப் பிரபுவே! ஞானங்களுக்கு எல்லையாகவும் அறியப்படாத அளவுள்ளவனாகவும், பிரகிருதிக்கு மேம்பட்டவனாகவும் இருக்கும், உன்னை வணங்குகிறேன்! ஓ அளவில்லாமையினாலே சொல்லக்கூடாத குணமுள்ள ஆன்மாவே! சொல்லவொண்ணா உபய விபூதியாலுண்டான ஆனந்தமுள்ளவனே! அளவில்லாத திருநாமங்களுள்ள உன்னைப் பணிகிறேன். பிரம்மம் நீ! எந்தப் பொருளையும் நாமரூப கற்பனைகளில்லாமல் அறியக் கூடாமையால் நீ கிருஷ்ணன் அச்சுதன். அனந்தன், விஷ்ணு முதலிய திருநாமங்களால் துதிக்கப்படுகின்றாய்! ஓ அனந்தா! ஓ சர்வேசுவரா! சூரிய கிரண ரூபியாக இருந்து நீயே பிரபஞ்சத்தைப் படைக்கிறாய். ஆகையால் இந்தப் பிரபஞ்சமெல்லாம் உனக்குச் சேஷ பூதமாக இருக்கிறது. பிரணவபிரதிபாத்தியனான ஸ்ரீபரமாத்மா! உன்னைப் பணிகிறேன். சங்கர்ஷணனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். பிரத்யும்னனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். அநிருத்தனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன் இவ்விதம் சதுர் வியூக ரூபியான உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்று அக்குரூரர் எம்பெருமானைப்போற்றினார்.

—————-

19. மதுரையை அடைதல்

மைத்ரேயரே, மேலும் கேட்பீராக! இவ்வாறு யாதவ பாகவதரான அக்குரூரர் யமுனை நதி நீரில் எம்பெருமானைச் சேவித்துத் துதித்து பரப்பிரம்மரூபமான ஸ்ரீகிருஷ்ணனிடத்திலேயே தன் மனதைச் செலுத்தி நெடுநேரம் தியானித்து பிறகு அந்த நிஷ்டையைவிட்டு, கரையேறித் தம்மைக் கிருதகிருத்தியனாக நினைத்துக் கொண்டு தம்முடையதேரினருகே வந்தார். அங்கே மூத்த நம்பியும் இளைய நம்பியும் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். அவரது கண்கள் மலர்ந்தன அப்போது கிருஷ்ணன் அவரை நோக்கி அக்குரூரரே ! நீர் யமுனை ஜலத்திலே ஏதோ ஒரு ஆச்சரியத்தைக் கண்டீர் போலத் தோன்றுகிறது. ஏனென்றால் உம்முடைய கண்கள் வியப்பினால் மலர்ந்துள்ளன என்று சிரித்தான். அதற்கு அவர் அச்சுதா! அடியேன் ஜலத்தின் நடுவேயாதொரு அதிசயத்தைக் கண்டேனோ அதுவே இவ்விடத்திலும் ரூபீகரித்து என் எதிரில் இருக்கக் காண்கிறேன் ஸ்ரீகிருஷ்ண பகவானே! அந்த உலகம் எல்லாம் எவனுடைய மகா ஆச்சரிய ஸ்வரூபமோ அத்தகைய திவ்யாச்சரிய சேஷ்டிதனான உன்னோடு நான் சேர்ந்திருக்கும்போது என்ன ஆச்சரியங் கண்டாய் என்று என்னை ஏன் கேட்டருள்கின்றீர்? இனி நாம் மதுரைக்குப் போவோம்!
மதுசூதனா! இப்போதும் அடியேன் கம்சனுக்கு அஞ்சுகிறேன் சீச்சீ! அன்னியனுடைய பிண்டத்தினால் பிழைப்பவனுடைய பிறவியைச் சுடவேண்டும்! என்று சொல்லி வாயுவேகமுடைய தமது குதிரைகளை வெகு வேகமாக ஓட்டிக்கொண்டு மதுரை மாநகரை வந்தடைந்தார். அங்கு வந்ததும் அவர் ஸ்ரீராம கிருஷ்ணர்களை நோக்கி, மகா வீரர்களே! இனி, நீங்கள் இறங்கித் திருவடிகளால் நடந்துசெல்லவேண்டும். அடியேன் ஒருவனே தேர்மேல் ஏறிச்செல்வேன். முதலில் உங்கள் தந்தையான வசுதேவருடைய திருமாளிகைக்கு நீங்கள் செல்லவேண்டாம். ஏனென்றால் உங்கள் நிமித்தமாகவே அவரைமகாப் பாதகனான கம்சன் துன்பப்படுத்துகிறான்! என்று விண்ணப்பித்துவிட்டு, மதுரைக்குள் பிரவேசித்தார். பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர்கள் இருவரும் இராஜ வீதி மார்க்கமாக நகரத்து மங்கையரும் ஆடவரும் ஆனந்தமாய் கண்களால் சேவித்து நிற்க இளமதயானைகள் போல் வீதியில் விளையாடிக் கொண்டே சென்றார்கள். அப்போது அந்த வழியிலே குசும்பாதி சாயம்போட்டு ஆடைகளைச் சீர்ப்படுத்தும் வண்ணான் ஒருவனை அக்குமாரர்கள் கண்டு அவனிடம் தங்களுக்கு ஏற்ற நல்ல அழகான ஆடைகளைத் தரவேண்டும் என்று யாசித்தார்கள். அந்த வண்ணானோ கம்சனிடம் பணியாற்றியதனால் மிகவும் செருக்குற்று அவர்களை இழிவாகப் பேசினான். அதைக்கேட்டதும் கண்ணன் கோபங்கொண்டு அந்தக்கொடியவனை கையினால் ஓர் அறை அறைந்து வீழ்த்தினார். பிறகு இருவரும் பீதாம்பர நீலாம்பரங்களுடன் வேண்டிய ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியோடு பூமாலைக்காரனின் மாளிகைக்குச் சென்றார்கள்.
மைத்ரேயரே ! பீதாம்பர நீலாம்பரங்களைத் தரித்து, அதிக அழகுடன் விளங்கும் ராமகிருஷ்ணர்கள் இருவரையும் அந்த பூமாலைக்காரன் கண்டு இவர்கள் யார்? இவர்கள் யாருடைய பிள்ளைகள்? என்று யோசித்தான். பிறகு, இவர்கள் மனிதரல்லர் தேவர்களே இங்கு எழுந்தருளினார்கள் என்று நினைத்தான். பின்னர் ஸ்ரீராம கிருஷ்ணர்கள் இருவரும் அவனை நோக்கி எங்களுக்கு நல்ல மலர் மாலைகளைக் கொடு என்று யாசித்தார்கள். உடனே அவன் அவர்களுக்குத் தண்டம் சமர்ப்பித்து தெய்வீகமானவர்களே! அடியேனுக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டி, அடியேனது குடிசைக்கு எழுந்தருளினீர்களே! அடியேன் தன்யனானேன். நியமனப்படித் தங்களை அர்ச்சிக்கிறேன்! என்று சொல்லி மகிழ்ந்து அவர்கள் திருவுள்ளம் வியப்ப சில மலர்களைச் சமர்ப்பித்து சுவாமி இவை முன்னவையிற்சிறந்தவை; இவை மேலும் மிகச் சிறந்தவை! என்று மேலும் மேலும் மிகவும் மணமுள்ள அழகான மலர்களைக் கொடுத்தான். சுகந்தமும் சுத்தமுமான அம்மலர்களை ஸ்ரீராமகிருஷ்ணர்கள் மனமுவந்து தங்கள் திருமார்பில் அணிந்து கொண்டு அவனைப் பாராட்டினார்கள்.
ஸ்ரீகிருஷ்ணர், அவனுக்கு வரங்களைப் பிரசாதிக்க எண்ணி, ஓ யோக்கியனே! என்னைப் பற்றியிருக்கும் திருமகன் உன்னை ஒருபோதும் விடாமல் அனுக்கிரகம் செய்து கொண்டிருப்பாள். ஓ சவுமியனே! உனக்குப் பலஹானியோ, தனஹானியோ வரமாட்டாது காலமுள்ளளவும் உன் சந்ததி நசிக்காமல் இருக்கும். இப்படியாக நீ எனது அனுக்கிரகத்தால் பெரும் போகங்களையெல்லாம் அனுபவித்து இறுதியில் என் ஸ்மரணமும் அடைந்து திவ்வியலோகத்தை அடையக்கடவாய் உனக்கு ஆதி பவுதிகமான தோஷங்கள் வருவதில்லை. மகானுபாவனே! சூரியன் உள்ள வரைக்கும் எனக்கு இத்தகைய சுகங்கள் உண்டாகும் என்று அனுக்கிரகம் செய்து அவனால் விசேஷமாக ஆராதிக்கப்பட்டான். பின்னர் பலபத்திரரோடு, அம்மாலிகனுடைய மாளிகையிலிருந்து கிளம்பிச் சென்றான்.

——————

20. அழகான கூனியும் கம்சவதமும்

பூமாலைக்காரனின் மாளிகையிலிருந்து புறப்பட்ட ராமகிருஷ்ணர்கள் இருவரும், ராஜவீதி வழியாகச் செல்லும்போது, வழியிலே மங்கைப் பருவமுடைய கூனி ஒருத்தி கையிலே சந்தனக்கிண்ணம் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தாள். அவளைக் கண்டதும் கண்ணன் புன்முறுவலுடன், அடி நீலோத்பலம் போன்ற கண்களையுடையவளே! யாருக்கு இந்த வாசனைப் பூச்சைக் கொண்டு போகிறாய்? என்று கேட்டான். அதற்கு அவள் அழகனே! நான் நைகவக்கிரை என்றும் கம்ஸனால் சிந்தனாதிப் பூச்சுக்கள் செய்யும் வேலையில் வைக்கப்பட்டவள் என்றும் நீ ஏன் அறியவில்லை கம்சனுக்கு சந்தனம் யார் பூசினாலும் பிடிக்காது. நான் அரைத்துச் சேர்க்கும் பூச்சே அவனுக்குப் பிரியமானது ஆகையால் கம்சனின் அனுக்கிரகம் என்னும் தனத்துக்கு முக்கிய பாத்திரமாக இருக்கிறேன்! என்றாள். அதைக்கேட்டுக் கொண்டு கிருஷ்ணன் மேலும் புன்முறுவலுடன் அவளை நோக்கி, அடி இளம் பெண்ணே! இதோ நீவைத்திருக்கும் இந்தப் பூச்சு வாசனை கூட்டியதுதானே தவிர இயற்கையான மணமுடையதல்ல! மற்றொன்றோ ராஜசமுள்ள அரசர்களுக்குத் தகுமேயன்றி சாதாரணமானவருக்குத் தக்கதன்று இதுவோ மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. அழகிய முகமுடையவளே! ஆகையால் எங்களது திருமேனிக்கு ஏற்ற இதை எங்களுக்கே கொடுக்கவேண்டும்! என்று கேட்டான். அதற்கு அழகான கூனி ஒப்புக்கொண்டு அன்போடு அவர்களது திருமேனிக்கேற்ற திவ்வியமான பூச்சைச் சமர்ப்பித்தாள். ஸ்ரீராமகிருஷ்ணர் இருவரும் பத்திரபங்கரசனாவிதமாக அந்தப் பூச்சைத் தங்கள் திருமேனிகளில் தடவிக்கொண்டார்கள். பிறகு கிருஷ்ணன் அந்தக்கூனியின் கோணலை நிமிர்த்தும் வகையையும் அறிந்தவனாகையால் அவளிடம் அன்புகொண்டு தனது நடுவிரலும் அதன் முன் விரலும் கொண்ட நுனிக் கையினால் அவளது மோவாய்க்கட்டையைப் பிடித்துத் தன் திருவடிகளால் அவளது பாதங்களை அமுக்கி இழுத்துத் தூக்கி அவளை நிமிர்த்தியருளினான்.
உடனே அவளுடைய கோணல் நிமிர்ந்தது, அவள் பெண்களில் சிறந்தவளானாள்! அவள் கண்ணனின் பரிவட்டத்தைப் பிடித்துக்கொண்டு நீ என் மாளிகைக்கு வா! என்று அழைத்தாள். அதைக் கண்ட கண்ணன் பலராமரைப் பார்த்த வண்ணம் சிரித்துக்கொண்டே, குற்றமற்ற அந்த நைகவக்கிரையை நோக்கி, பெண்ணே! அப்படியே ஆகட்டும்! பிறகு ஒரு சமயம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அண்ணனைப் பார்த்து உரக்கச் சிரித்தான். இவ்வாறு நம்பிகள் இருவரும் பீதாம்பர நீலாம்பரங்களையணிந்து விசித்திரமான சந்தனப் பூச்சோடும் பலவிதமான திவ்விய மலர் மாலைகளையும் அணிந்துகொண்டு விற்கள் வைத்திருந்த ஆயுத சாலைக்குச் சென்றார்கள். அங்கிருந்த காவற்காரர்களை கண்ணன் ஏறிட்டு நோக்கி, காவல்காரர்களே! இந்தத் தனுர்யாகத்துக்கு உத்தேசித்து வைத்துள்ள வில் எங்கே இருக்கிறது? என்று கேட்டான். அவர்கள் அதைத் தெரிவித்தார்கள். உடனே, கண்ணன் அந்த வில்லை எடுத்து வளைத்து நாணேற்றினான். நாணேற்றியதும் அந்த வில் முறிந்து அந்த மதுரை நகரமெங்கும் செவிடுபடும்படி ஓசையிட்டது வில் ஒடிந்ததும் காவற்காரர்கள் ஸ்ரீராம கிருஷ்ணர்களை எதிர்க்க வந்தார்கள். அவர்களை அம்மகா புருஷர்கள் இருவரும் துவம்சம் செய்து, ஆயுதச் சாலையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். இந்நிலையில் கம்ஸனோ தன் மதுராபுரிக்கு அக்குரூரர் திரும்பி வந்ததையும் வில் முறிந்ததையும் அறிந்தான். அவன் சாணூரன் முஷ்டிகன் என்னும் மல்லர்களை வரவழைத்துச் சொல்லலானான்.
மல்லர்களே, கேளுங்கள்! நாம் எதிர்பார்த்திருந்த இடைப்பயல்கள் வந்துவிட்டார்கள் நீங்கள் என் எதிரில் அவர்களோடு மல்யுத்தம் செய்து அவர்களைக்கொன்று விடவேண்டும். அவர்கள் என் உயிரை வாங்கவே பிறந்தார்களாம். மகாபலசாலிகளே நீங்கள் அவர்களை மல்யுத்தத்தில் வென்று எனக்கு மகிழ்ச்சியளித்தால், நீங்கள் விரும்பும் பொருள்களையெல்லாம் தருவேன். என் எதிரிகளான அவ்விரு இடைச்சேரிப் பயல்களையும் நீங்கள் நியாயமாகவோ, அல்லது அநியாயமாகவோ கொன்றே தீர வேண்டும். அப்படிச் செய்தால் இந்த ராஜ்யத்தை நீங்கள் என்னுடன் சமானமாக அனுபவிக்கலாம் என்று கம்ஸன் தன் இரு மல்லர்களுக்கும் கட்டளையிட்டான். பிறகு அவன் தன் யானைப் பாகனையும் அழைத்து, யானைப்பாகனே! நீ நமது குவலயாபீடம் என்ற பெரிய யானையை இந்த சபா மண்டபத்தின் முன்னால் நிறுத்தி வைத்து, அந்த இடைப் பயல்கள் இங்கு போர் செய்ய வரும்போது, யானையைக் கொண்டே அவர்களைக் கொல்விக்க வேண்டும்! என்று கட்டளையிட்டு சதபயில் போடவேண்டிய மஞ்சங்கள் செவ்வனே போடப்பட்டிருப்பதைப் பார்வையிட்டான். பிறகு தனக்கு மரணம் கிட்டியிருப்பதை உணராமல் பொழுது விடிவதை எதிர்பார்த்திருந்தான்.
மறுநாள் பொழுது விடிந்ததும், மதுரை நகர மக்கள் சபைக்கு வந்து அவரவர் உட்காரத்தக்க மஞ்சங்களில் உட்கார்ந்தார்கள். அரசர்கள் ராஜ மஞ்சங்களில் உட்கார்ந்தனர். பின்னர் கம்சன் மல்யுத்த வீரர்களுடன் உயர்ந்ததொரு மஞ்சத்தில் அமர்ந்தான். அந்தப்புர மங்கையரும் பட்டணத்துப் பாவையரும் வேசியரும் அவரவருக்குரிய மஞ்சங்களில் உட்கார்ந்தனர். நந்தகோபர் முதலியோர் தமக்குரியவற்றில் அமர்ந்தனர். அக்குரூரரும் வசுதேவரும் தனித்துப் பேசிக்கொள்வதற்காக ஒரு ஓரத்தில் உட்கார்ந்தார்கள். மகனிடத்தில் பேரன்புடைய தேவகியானவன் முடிவு காலத்திலாவது தன் அன்பு மகனின் முகத்தைப் பார்க்கலாம் என்று பட்டணத்து மங்கையரின் நடுவே உட்கார்ந்திருந்தாள். இன்னிசைக் கருவிகள் முழங்கலாயின. மல்லன் சாணூரன் மிகவும் குதித்துக் கொண்டிருந்தான் மற்றொரு மல்லனான முஷ்டிகனும் தோள் தட்டிக் கொண்டிருந்தான் மக்கள் ஆரவாரஞ் செய்து கொண்டிருந்தனர். மாவீரராயும் பாலகராயும் விளங்கும் பலராம கிருஷ்ணர் இருவரும் புன்னகையோடு சபாமண்டப வாயிலை அடைந்தார்கள்.
அப்போது கம்சனின் கட்டளைப்படி யானைப்பாகனால் ஏவப்பட்ட குவலயாபீடம் என்ற யானை மிக்க கோபத்தோடு அவ்விரு இளைஞரையும் கொல்வதற்கு ஓடிவந்தது; அத்தருணத்தில் அந்தச் சபையின் நடுவே ஒரு ஹாஹாகாரம் உண்டாயிற்று. அப்போது பலராமர் கண்ணனை நோக்கி பகைவனால் ஏவப்பட்ட இந்த யானையைக் கொல்லாமல் இருப்பது நியாயமல்ல அதை அவசியம் கொன்றேயாக வேண்டும் என்றான். உடனே சத்துரு நாசஞ் செய்வதில் வல்லவனாகிய ஸ்ரீகிருஷ்ணன் சிம்ம நாதஞ் செய்து ஐராவதத்துக்கு ஈடான பலமுடைய அந்த யானையின் துதிக்கையைத் தன் திருக்கையினால் பிடித்து இழுத்துச் சுழற்றினான். சர்வேசுவரனாக இருந்தும் கண்ணன் திருவவதாரத்திற்கேற்ப, அந்த யானையுடன் நெடுநேரம் போரிட்டான். அதன் தந்தங்களின் நடுவே நின்று விளையாடி, பிறகு தன் வலது கையினால் அதன் இடதுபுறத் தந்தத்தைப் பிடுங்கி, அதன் மேலிருந்த யானைப் பாகனை அடித்தான். அந்த அடியினால் யானைப் பாகனின் தலை பல துண்டுகளாகச் சிதறியுடைந்தது. உடனே மூத்த நம்பியான பலராமன் அந்த யானையின் வலது தந்தத்தைப் பிடுங்கி பக்கத்திலிருந்த யானைக்காப்போரை அடித்துக் கொன்றுவிட்டு, வேகமாக எழும்பித்தாவி, தன் இடது திருவடியால் அந்த யானையின் மத்தகத்தின் மீது ஓங்கி உதைத்தான். இவ்விதம் பலராமன் விளையாட்டாக உதைத்தவுடனேயே அந்தக் குவலயாபீடம் என்ற யானையானது வஜ்ஜிராயுதத்தினால் அடிபட்ட பருவத்தைப் போலக் கீழே விழுந்து இறந்தது. இவ்வண்ணம் புருஷசிரேஷ்டர்கள் இருவரும் இந்த யானையைப் பாகனோடு சங்கரித்து விட்டு அதன் மதநீராலும் இரத்தத்தாலும் பூசப்பட்ட திருமேனியுடையவர்களாய் அதன் தந்தங்களாகிய திவ்விய ஆயுதத்தைக் கையில் ஏந்திக் கொண்டு சிங்க ஏறுகளைப் போலச் சபாமண்டபத்துக்குள் நுழைந்தார்கள்.
உடனே, சபையில் ஹாஹாகாரம் எழும்பியது. அங்கிருந்த நகரத்தார்கள் யாவரும் வியப்புடன் பார்த்தார்கள். இவனன்றோ முன்பு குழந்தைகளைக் கொன்று கொண்டிருந்த பூதனை அரக்கியைக் கொன்றவன்! இவனன்றோ மருத மரங்களை முறித்தவன்! இவனல்லவா காளிங்கன் என்ற மகாசர்ப்பத்தின் மீதேறி நர்த்தனஞ் செய்த சிறுவன்! ஏழு நாட்கள்வரை கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துப் பிடித்துக் கோகுலம் காத்தவனும் இவனேதான்! பாருங்கள்! பெண்களின் மனங்களையும் கண்களையும் மகிழ்வித்து விளையாடிக்கொண்டே போகிற இந்த கிருஷ்ணனுக்கு முன்னே போகிறவன் அவன் தமையன் பலபுத்திரனான பலராமன் புராணார்த்தம் தெரிந்த பண்டிதர்கள் அமுங்கியிருந்த யாதவவம்சத்தை ஒரு கோபாலன் தலையெடுக்கச் செய்வான் என்று சொல்வது இந்தக் கிருஷ்ணனையே போலும்! யாவற்றுக்கும் உற்பத்தி ஸ்தானமான ஸ்ரீவிஷ்ணு அம்சமாய் பூமி பாரம் தீர்க்க அவதாரஞ் செய்தவன் இவனே! என்றெல்லாம் ஸ்ரீகிருஷ்ணனையும் பலராமனையும் யாதவரும் நகர மக்களும், வர்ணித்துக்கொண்டே இருந்தனர். அப்பொழுது தேவகியின் ஸ்தனங்களின்றும் பால் பெருகி, மார்பு திடுக்திடுக் கென்று துடித்தன. வாசுதேவரோ, தன் பிள்ளைகளின் முகங்களைப் பார்த்ததால் இளமையாகக் காணப்பட்டார். அந்தப்புரத்து மங்கையர் கண்ணனைக் கண்டு மலர மலர விழித்து ஒருத்தியோடு ஒருத்தி பலவாறும் பேசிக் கொண்டார்கள். தோழியரே! அதோ கண்ணனின் திருமுகத்தைப் பாருங்களடி! மிகவுஞ் சிவந்த கண்கள் யானையோடு போரிட்டதால் உண்டான வியர்வைத் துளிகள்! சரத்காலத்தில் மலர்ந்த செந்தாமரை மலர் பனித்துளிகளோடு இருப்பது போலல்லவா தோன்றுகிறது. பெண்கள் நாயகமே! ஸ்ரீவச்சம் என்ற மருப்பொருந்தி, பகைவரின் பலத்தைப் போக்கும்படியான கற்பாறை போன்ற கண்ணனின் திருமுகத்தைப் பாரடி? திரண்ட திருத் தோள்களைப்பாரடி! அந்தக் கண்ணன் மட்டுமா? முன்னே போகிற பலராமரின் சிரிப்பிலே தான் எத்தனைக் கவர்ச்சியடி!
அதோ பாருங்களடி! கிருஷ்ணன் மல்யுத்தஞ் செய்ய சாணூரனோடு சேருகின்றான். இந்த அரசவையில் நியாயமறிந்துவர்கள் இல்லையா? யவுவனத்தை நெருங்கும் சுகுமார மேனியுடைய கண்ணன் எங்கே? வஜ்ராயுதம் போன்ற கடின தேகமுடைய மகாசூரன் எங்கே? இவ்விருவரையும் போரிடச்செய்து வேடிக்கை பார்ப்பது சபையோருக்கு நியாயமா? என்று இவ்விதமாக நகரத்துப் பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் தன் வஸ்திரங்களை இறுக வரிந்து கட்டிக்கொண்டு பூமியதிர ஜனங்களின் நடுவே குதித்துக் கொண்டிருந்தான். பலராமனும் அப்படியே தோள் தட்டிக் கொண்டிருந்தான். அவர்கள் குதித்ததால் பூமியானது பிளந்து போகாமல் இருந்ததே விந்தையாகத் தோன்றியது! பிறகு ஸ்ரீகிருஷ்ணன் மல்லனான சாணூரனோடும், பலபத்திரன் மல்லனான முஷ்டிகாசுரனுடனும் போர் செய்யத்துவங்கினார்கள். அத்தனைப் பெரிய கூட்டத்திலே இவர்களிடம் யாதொரு ஆயுதமுமில்லாத நிலையில் சன்னிபாதம் என்கிற முதலில் கைகொடுத்துப் பஞ்சாப் போடுவதனாலும் அவதூதம் என்ற புறங்கையால் கீழே தள்ளுவதாலும், முஷ்டி என்ற கைப்பிடி இடித்தலினாலுங் கீலநிபாதம் என்ற முழங்கை கணைக்கைகளைக் கொண்டு இடித்தலினாலும் வச்ர நிபாதம் என்ற கையோரங்களால் இடிப்பதனாலும் மத்திமை, அனாமிகை என்ற விரல்களின் நடுவே கட்டை விரல் வைத்த முஷ்டியினால் இடித்தலினாலும், பரதோத்தூதம் என்ற காலால் தூக்கி எரிதலினாலும் பிரமிருஷ்டம் என்ற உடம்பையெல்லாம் இறுகப் பீடித்துத் தள்ளியுழக்குவதினாலும், மிக்க கொடிய பயங்கர மற்போர் நிகழ்ந்தது, அந்தப் போரில் சாணூரன் கண்ணனோடு எவ்வளவுகெவ்வளவு வேகமாகப் பொருந்தினானோ அவ்வளவுக்கவ்வளவு பலவீனமடைந்தான் கண்ணன் சர்வ சக்தனாக இருந்ததாலும் கோபத்தாலும் அந்தச் சாணூரனோடு விளையாட்டுப் போலவே போர் செய்து கொண்டிருந்தான்.
அப்போது சாணூரனுக்குப் பலம் குறைவதையும் கிருஷ்ணனுக்கு பலம் வளர்வதையும் கண்ட கம்சன் மிகவும் கோபங்கொண்டு வாத்திய முழக்கத்தை நிறுத்தம்படிக் கட்டளையிட்டான். வாத்தியங்கள் முழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால் வானில் தேவ வாத்தியங்கள் முழங்கலாயின. தேவர்கள் வானிலிருந்து ஸ்ரீகேசவா! ஸ்ரீகோவிந்தா! சாணூரனை வெல்வாயாக நீ வெற்றியடைவாயாக என்று வாழ்த்தினர். நெடு நேரம் போர் புரிந்து கொண்டிருந்த கண்ணன் அந்த அசுரனைச் சங்கரிக்க எண்ணி அவனைத் தூக்கிக் கிறுகிறுவென்று சுழற்றித் தரையில் ஓங்கி அறைந்தான். அவனுக்கு கண்ணன் பூற்றும் போதே உயிர் போய்விட்டது! தரையில் அறைந்ததும் அவனுடல் துண்டம் துண்டமாகப் பிய்ந்து பூமியில் இரத்தச் சேற்றை உண்டாக்கியது. அதுபோலவே பலராமனும் முஷ்டிகனை தன் முஷ்டியால் சிரத்திலிடித்தும் முழங்காலால் மார்பில் இடித்தும் தரையில் தள்ளி உயிரிழந்த அவனை உதைத்துத் தள்ளினான். அவ்விரு மல்லர்களும் மடிந்தவுடன் தோசலகன் என்பவன் போருக்கு வந்தான். அவனையும் ஸ்ரீகிருஷ்ணன் தனது இடது கை முஷ்டியினால் இடித்துத் தரையில் வீழ்த்தினான். இவ்வாறு சாணூரன், முஷ்டிகன், தோசலகன் ஆகிய மூவரும் வதைக்கப்பட்டதும் மற்ற மல்லர்கள் பறந்தோடிப் போனார்கள். பிறகு தங்களோடு போர் செய்ய ஆளில்லாததால் ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனும் தங்களுக்குச் சமவயதுள்ள இடைப் பிள்ளைகளை வலுவில் இழுத்து வந்து குதித்து விளையாடி ஆனந்தக் கூத்தாடினார்கள். இதையெல்லாம் கண்ட கம்சனின் கண்கள் சிவந்தன! அவன் அங்கு இருந்த போர் வீரரையழைத்து சேவகரே! இந்த இடைப் பிள்ளைகளைச் சபைக்கு வெளியே இழுத்துச் செல்லுங்கள். நந்தகோபனைப் பிடித்து விலங்கிடுங்கள். வசுதேவனை நல்ல வயதுடையவர்க்குச் செய்யத்தக்க தண்டனை செய்து வதையுங்கள். இதோ கிருஷ்ணனோடு சேர்ந்து துள்ளுகிறார்களே, அந்த இடையர் கூட்டத்தினரின் மாடுகளையும் மற்றுமுள்ள பொருள்களையும் பறிமுதல் செய்யுங்கள்! என்று கட்டளையிட்டான். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் சிரித்துக் கொண்டே வேகமாகக் கம்சனின் மஞ்சத்துக்குத் தாவி அவனது கிரீடஞ் சுழன்று கீழே விழ அவன் தலைமயிரைப் பிடித்து இழுத்துத் தரையில் தள்ளி அவன் மீது தாவி விழுந்தான்.
மைத்ரேயரே! சர்வ லோகங்களுக்கும் ஆதாரமான ஸ்ரீகிருஷ்ணன் அவன்மீது வீழ்ந்ததும் அந்தப் பாரம் தாங்கமாட்டாமலேயே கம்ஸ மகாராஜன் உயிர் இழந்தான்! அவன் உயிர் இழந்ததும் ஸ்ரீமதுசூதனன் அவனது தலைமயிரைப்பற்றி, அவனது உடலை அரங்கின் நடுவே இழுத்தான். பாரமுள்ள சரீரத்தை இழுத்ததால், தண்ணீர் வெள்ளம் ஓடி அறுத்தாற் போன்று அவ்விடத்தில் ஓர் அகழி உண்டாயிற்று. கம்ஸன் வதைக்கப் பட்டதைக் கண்ட அவன் தம்பி சுநாமா என்பவன் கோபத்தோடு கண்ணன் மீது பாய்ந்தான். அவனை மூத்த நம்பியான பலராமன் விளையாட்டாகவே சங்காரஞ் செய்தான். இவ்விதம் மதுராபுரி அரசனான கம்சன் கண்ணனால் சங்கரிக்கப்பட்டதைக் கண்டு மக்களும் தேவரும் மகிழ்ந்தனர். கிருஷ்ணன் பலராமனோடு சென்று தந்தை வசுதேவரையும் தாயான தேவகியையும் பணிந்தார்கள். அவர்களும் ஸ்ரீராமகிருஷ்ணர்களைப் பாராட்டித் துதித்தனர்.

——————

21. ராஜசபையும் குருதக்ஷணையும் கொடுத்தல்-

தேவகி வசுதேவர்கள் துதிப்பதைக் கண்ட கண்ணன் யாதவ சமூகத்தை மோகிப்பிக்கும் பொருட்டு தன் தாய் தந்தையரை நோக்கி அம்மா! உங்களைக் காண பலநாட்கள் ஆசைப்பட்டும் நானும் பலராமனும் கம்சனது பயத்தாலேயே காணாமலிருந்தோம். தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்யாமல் ஒழியும் காலம் பயனற்றது, குருவுக்கும் தேவருக்கும் பிராமணருக்கும் தாய் தந்தையருக்கும் பணிவிடை செய்பவரின் காலம்தான் பயனுள்ளது என்று சொல்லித்தன் தமையனோடு தாய் தந்தையரை வணங்கினான். இந்நிலையில் கம்சனது பத்தினிகளும் தாய்மாரும் கம்சனின் உடலைச் சூழ்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். கண்ணன் அவர்களிடம் இரக்கம் கொண்டு கண்களில் நீர் ததும்ப அவர்களைப் பலவகையாகத் தேற்றியருளினான் பிறகு புத்திரனையிழந்த உக்கிரசேனனை சிறையிலிருந்து விடுவித்து மதுரையில் அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்தருளினான்.
உக்கிரசேனன் கம்சனுக்கும் மற்ற இறந்தோருக்கும் உரிய ஈமக்கிரியைகளைச் செய்தான். பிறகு அரியணையில் அமர்ந்து அரசாட்சி செய்து வந்தான். அப்போது கண்ணன் உக்கிரசேனனை நோக்கி, மகாப்பிரபுவே! செய்ய வேண்டிய காரியத்தைக் குறித்துச் சங்கையின்றி எனக்குக் கட்டளையிடுங்கள். இந்த யதுவம்சம் யயாதியின் சாபத்தால் ராஜ்ய பரரத்துக்கு யோக்கியம் இல்லாது இருப்பினும் இப்போது நான் உமக்குச் சேவகனாயும் நீர் சகல அரசர்களுக்கும் மேலானவனாகவும் இருப்பதால், எந்த அரசரையும் நீங்கள் கட்டளையிடலாம் ஆனால் அற்ப அரசர்களுக்கு கட்டளையிட்டு என்ன பயன்? தேவர்களுக்குக் கட்டளையிடுங்கள்! என்று சொல்லி வாயுவை நினைத்தான். வாயுவும் வந்தான். மனித அவதாரம் செய்திருந்த கண்ணன் வாயுவே! நீ இந்திரனிடம் சென்று, இந்திரா! நீ கர்வப்பட்டது போதும் இனி கர்வப்படாதே உக்கிரசேன மன்னனுக்கு சுதர்மை என்ற சபா மண்டபத்தைக் கொடுத்துவிடு! என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்வதாக அவனிடம் சொல்வாயாக. சுதர்மை என்ற சபாமண்டபம் நமது அரசருக்கு ஏற்றது அந்தச் சபாமண்டபத்தையே நீயே எடுத்து வா! என்று கட்டளையிட்டான். வாயுதேவன் தேவேந்திரனிடம் சென்று ஸ்ரீகிருஷ்ணர் கூறியதைச் சொன்னான். இந்திரனும் உடனே அந்தச் சபாமண்டபத்தைச் சமீரணன் வசம் ஒப்படைத்தான். வாயுதேவன் அதைக்கொண்டு வந்து, சுவாமி சன்னதியில் சமர்ப்பித்தான். அதை ஸ்ரீகிருஷ்ணன் உக்கிரசேனனுக்கு வழங்கினான்.
பிறகு ராமகிருஷ்ணர்களான புருஷ சிங்கங்கள் இருவரும் விதிப்படி உபநயனம் செய்விக்கப்பெற்றனர். அவ்விருவரும் இயல்பாகவே முற்றும் அறிந்தவராக இருந்தும் மனித அவதார முறைக்குப் பொருந்தும்படியாகவும் சிஷ்ய ஆசார முறையை உலகுக்கு அறிவிப்பதற்காகவும் காசியிற் பிறந்த சாந்தீபினி என்ற பிராமணோத்தமரிடத்தில் கல்வி கற்கச் சென்றார்கள். குருவுக்குரிய பணிவிடைகளைச் செய்து கற்கவேண்டிய ஒழுக்கங்களைக் கற்று வேதவேதாந்த சாஸ்திரங்களையும் தனுர்வேதத்தையும் கற்றுத் தேர்ந்தார்கள். அவ்விருவரும் அறுபத்து நான்கு தினங்களில் சகல சாஸ்திரங்களையும் அறுபத்து நான்கு கலைகளையும் அத்யயனம் செய்தார்கள். சாந்தீபினி என்ற அவர்களின் ஆசிரியரும் அவர்களை சூரியர் சந்திரர்களாக நினைத்தார். இப்படியிருக்கும்போது ஒருநாள் ராமகிருஷ்ணர்கள் இருவரும் தங்கள் ஆசிரியரை நோக்கி, குருவே! தங்களுக்கு நாங்கள் குரு தக்ஷணையாக என்ன சமர்ப்பிக்கவேண்டும்? என்று கேட்டார்கள், குருமகான் யோசித்துவிட்டு முன்னொரு சமயம் பிரபாச தீர்த்தக் கட்டத்தில் கடலில் மூழ்கி இறந்துபோன தமது புத்திரனையே கொண்டு வந்து குரு தக்ஷணையாகக் கொடுக்கும்படி வேண்டினார். ராமகிருஷ்ணர்கள் இருவரும் அப்படியே ஆகட்டும்! என்று சொல்லிவிட்டு வில்லம்புகளுடன் கடற்கரைக்குச் சென்றார்கள். உடனே சமுத்திரராஜன் அர்க்கியத்தைக் கையில் ஏந்தி அங்கு வந்து அவர்களை வணங்கி சுவாமி! அந்தச் சாந்தீபினியின் மகனை அடியேன் கொண்டு போகவில்லை சங்கின் ரூபந்தரித்து எனது ஜலத்தில் வாசஞ் செய்கின்ற பஞ்சஜனன் என்ற அசுரனே கொண்டு போனான் என்றான். அதைக் கேட்டதும் ஸ்ரீகிருஷ்ணன், சமுத்திர ஜலத்தினுள்ளே பிரவேசித்து, அந்த அசுரனைக் கொன்று, அவனது எலும்பினாலான உத்தம சங்கத்தை எடுத்துக்கொண்டார். பிறகு கண்ணன் எதன் ஒலியால் அசுரருக்குப் பலஹானியும் தேவதைகளுக்கு தேஜோவிருத்தியும் உண்டாகுமோ அத்தகைய பாஞ்சஜன்யத்தைப் பூரித்து யமபுரிக்குச் சென்றார். அங்கு அவர் யமனைச் சங்கரித்து, யாதனையிற் கிடந்த சாந்தீபினியின் குமாரனை, முன்பிருந்தது போன்ற தேகம் உடையவனாக ஆக்கிக்கொண்டு வந்து ஆசிரியரின் குருதக்ஷிணையாகக் கொடுத்தருளினான். பின்னர், ஸ்ரீராமகிருஷ்ணர்கள் மதுராபுரிக்குச் சென்றார்கள்.

——————-

22. ஜராசந்தனை ஜெயித்தல்

மகத மன்னனான ஜராசந்தனின் பெண்களாகிய அஸ்தி பிராஸ்தி என்பவர்களை கம்சன் மணந்து கொண்டிருந்தான். எனவே கம்சனைக் கிருஷ்ணன் கொன்றதனால், ஜராசந்தன் மிகவும் கோபங்கொண்டு கிருஷ்ணனை வமிசத்தோடு கொல்ல வேண்டும் என்று இருபத்து மூன்று அ÷க்ஷõஹிணி சேனையோடு மதுராபுரியை நோக்கிப்படையெடுத்து வந்தான். தலைநகரை முற்றுகையிட்டான். அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர்கள் அற்பமான சேனைகளைக் கொண்டே அவனை எதிர்த்தனர், இப்படிப் போர் செய்யும்போது இராமகிருஷ்ணர்கள் தங்களது பூர்வீக ஆயுதங்களை எடுத்துக்கொள்ள வேண்டுமென திருவுள்ளம் கொண்டதால், ஆகாயத்திலிருந்து சார்ங்கம் என்ற வில்லும் அக்ஷய தூணீரங்களும் கவுமோதகி என்ற கதையும் கிருஷ்ணனிடம் வந்தன. பலராமருக்குக் கலப்பையும் பெரியதொரு உலக்கைத் தடியும் வந்தன. இப்படி வந்த திவ்ய ஆயுதங்களை இருவரும் தரித்துக்கொண்டு, பெருஞ் சேனைகொண்ட ஜராசந்தனை வென்று மதுரைக்குத் திரும்பினார்கள். ஜராசந்தனை ஜெயித்திருந்தும் அவன் உயிரோடு திரும்பியதால், தங்களையே அவன் ஜயித்ததாக நினைத்தார்கள். அவன் ஜயிக்கப்பட்டதாக நினைக்கவில்லை கண்ணன் நினைத்ததுபோலவே ஜராசந்தன் சிறிய காலங்கழித்து மீண்டும் பெருஞ்சேனையுடன் யுத்தஞ் செய்ய மதுரைக்கு வந்தான். அப்போதும் ஸ்ரீராமகிருஷ்ணர்களால் ஜெயிக்கப்பட்டு ஓடிவிட்டான். இவ்வாறு பதினெட்டு முறைகள் யாதவருடன் போர் செய்ய ஜராசந்தன் தொடர்ந்து வந்து, கிருஷ்ணனால் தோல்வியடைந்து ஓடிப்போனான். மகாபலசாலியும் ஏராளமான சேனைகளுடையவனுமான ஜராசந்தனே பதினெட்டு முறை படையெடுத்துத் தோற்றான் என்றால் அது ஸ்ரீமந்நாராயணனுடைய வல்லமையே தவிர யாதவருடையதன்று அவருடைய திருவாழி ஒன்றே சத்துரு நாசத்துக்குப் போதுமானதாக இருந்தும் ஸ்ரீகிருஷ்ணன் பற்பல ஆயுதங்களைப் பகைவர் மீது பிரயோகித்தானே என்றால், திருவவதாரத் திருவிளையாடலாக மனுஷ்ய அவதாரம் செய்தருளிய எம்பெருமான் மனிதத் தன்மையை அனுசரித்தே பகவான்களோடு சமாதானமும் ஈனர்களோடு யுத்தமும் செய்தருளுகிறான். இந்தக் காரணத்தாலே இடத்துக்கேற்ப சாம, தான பேத, தண்டம் என்ற சதுர்வித உபாயங்களையும் அனுசரிக்கிறான். சிலவிடத்தில் ஓடிப்போவதாகவும் நடிக்கிறான். இந்தத் திருவிளையாடல்களும் இன்னின்ன காலத்தில் இப்படியென்றில்லாமல் அவன் திருவுள்ளத்தின்படியே நடக்கின்றன.

——————-

23. யாதவரின் பரிகாசமும் துவாரகா நிர்மாணமும்!

ஒருநாள் யாதவர்களின் புரோகிதரான கார்க்கியர் என்ற பிராமணரை, அவருடைய மைத்துனன், அவருக்குப் பிள்ளை பிறக்கவில்லை என்பதால், யாதவர்கள் கூட்டமாகக் கூடியிருந்த சபையில், இவர் நபும்சகர் என்று பரிகாசம் செய்தான். அதைக் கேட்ட யாதவரெல்லாம் உரக்கச் சிரித்தனர். ஆனால் கார்க்கியர் அவமானமும் கோபமுங் கொண்டு, விந்திய மலையின் தெற்கே வந்து யாதவர்களுக்குப் பகைவரான புத்திரன் ஒருவன் தமக்குப் பிறக்கவேண்டும் என்று எண்ணி இரும்புப் பொடியைத் தின்று, சிவனைக் குறித்து, தவஞ்செய்தார். சிவனார் அவர் முன்பு தோன்றி அவர் வேண்டிய வரத்தை வழங்கினார். அவர் புத்திரனுக்கான வரம் பெற்றதையறிந்த யவனதேசத்தரசன், அவரிடம் வந்து அவரை மிகவும் உபசரித்து பூசித்து, தனக்குப் பிள்ளையில்லாமையால், தன் மனைவியிடத்தில் பிள்ளையுண்டாக்கிக் கொடுக்கும்படி வேண்டினான். அவரும் அவனிடம் இரக்கம்கொண்டு, அவன் பத்தினியோடு கூடியதால், அந்த மங்கையின் வயிற்றில் வண்டு போன்ற நிறமுடைய புத்திரன் ஒருவன் உண்டானான்.
அவனுக்கு அந்த யவனதேசத்தரசன் காலயவனன் என்ற பெயரிட்டு வளர்த்துத் தக்க காலத்தில் பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டுப் பிறகு தவஞ்செய்யக் காட்டுக்குப் போய் விட்டான். காலயவனன் மிகவும் பலசாலியாகவும் உறுதியான மார்புடையவனாகவும் விளங்கினான். அதனால் கர்வம் கொண்டிருந்த அவன், கலகக்காரரான நாரத முனிவரிடம், நாரதரே! இந்தப் பூமியில் பலவான்களான அரசர்கள் யார்? என்று கேட்டான். அதற்கு நாரதர் விஷமச் சிரிப்புடன், இதில் என்ன சந்தேகம்? யாதவர்களின் தலைவர்களான ஸ்ரீ கிருஷ்ணனும் பலராமருமே பலசாலிகள்: என்றார். அதைக் கேட்டதும் காலயவனன் அநேக கோடி மிலேச்சரோடும், ரத கஜ துரகங்களோடும், யாதவர் மீது படையெடுக்க வேண்டிய முயற்சிகளைச் செய்தான். நாள்தோறும் தன் பிரயாணத்துக்குத் தடைநேரிடாதவாறு, வழிகளில் அங்கங்கே வாகனங்களை வைத்து, ஒரு வாகனம் அலுத்துப் போனவுடனே அதைவிட்டு வேறு வாகனத்தின்மேல் ஏறி, இப்படியே நெடுந்தூரத்திலிருந்து வெகு சீக்கிரமாக மதுரையை வந்தடைந்தான்.
அப்போது கண்ணன், ஓஹோ! யாதவ சேனையெல்லாம் நாசமாகும்படி நேரிட்டதே! காலயவனன் போர் செய்வானாகில் அற்பமான யாதவர்களை நாசஞ் செய்வான். இதனால் பலவீனப்படும் யாதவரை மகதராஜன் நாசஞ் செய்யக்கூடும். அல்லது மகதராஜனின் சேனை பலவீனப்பட்டிருந்தாலும் காலயவனன் அவர்களோடு சேர்ந்து யாதவரை அழித்துவிடுவான்! ஆகையால் காலயவனனாலும் ஜராசந்தனாலும் யாதவருக்குத் துன்பந்தான் நேரிடும் எனவே, யாதவர்களைக் காப்பதற்குக் கோட்டை ஒன்றை அமைப்போம். அந்தக் கோட்டையிலிருந்து பெண்களும் யுத்தஞ் செய்யத் தக்கதாக அதை அமைக்கவேண்டும் என்று நினைத்து சமுத்திர ராஜனையழைத்துப் பன்னிரண்டு யோசனை தூரம் இடம்விடும்படிக் கேட்டான். அதன் பிரகாரம் சமுத்திர ராஜன் இடம்விட்ட அவ்வளவு பெரிய பூமியில் பெரிய மதில்கள், தடாகங்கள் உத்தியான வனங்கள் உப்பரிகைகளுமாக தேவேந்திரனின் அமராவதிப் பட்டணத்தைப்போல துவாரகை நகரை நிர்மாணித்தார். அதில் ஸ்ரீகிருஷ்ணன் தம் பிரஜைகளைச் சேர்த்து வைத்துவிட்டுப் பகைவன் காலயவனன் நெருங்கி வரும் சமயத்தில் தாம் மதுரைக்குச் சென்றார். பகைவன் மதுரையை முற்றுகையிட்டதும் கிருஷ்ணன் யாதொரு ஆயுதமுமில்லாமல் நகரிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தார். அப்படிப் போகும்போது, நாரதர் கூறிய அடையாளத்தால், இவன்தான் கிருஷ்ணன் என்று காலயவனன் நிச்சயித்துக்கொண்டு இவன் ஆயுதமில்லாமல் போவதால் இவனைப் பிடித்துச் சிறை செய்வது எளிது என்று நினைத்துப் பின் தொடர்ந்தான்.
மைத்ரேயரே, கவனமாகக் கேளும் யோகிகளின் இதயங்களும் பின்தொடர முடியாதவனை காலயவனன் பின்தொடர்ந்து பிடிக்க நினைத்தான். அவன் பின்தொடர்வதையறிந்த ஸ்ரீகிருஷ்ணன் ஒரு குகையினுள் புகுந்தார். காலயவனனும் அவரைப் பின்தொடர்ந்து, அந்தக் குகையில் ஒருபுறம் படுக்கையிற் தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தனைக் கண்டு அவனையே ஸ்ரீகிருஷ்ணன் என்று நினைத்துக் காலால் எட்டியுதைத்தான். உடனே, முசுகுந்தன் தூக்கம் தெளிந்து எழுந்து காலயவனனைப் பார்த்தான். பார்த்ததும் முசுகுந்தனின் கோபத்தால் காலயவனன் தன்னுடலின் அக்கினியாலேயே எரிக்கப்பட்டுச் சாம்பலானான் மைத்ரேயரே! அந்த முசுகுந்த மன்னன் முன்பு நடந்த தேவாசுரப் போரில், அசுரரைச் சங்கரித்துத் தேவர்களுக்கு உதவி செய்தவன் அதனால் தேவர்கள் மகிழ்ந்து என்ன வரம் வேண்டும்? என்று அவனைக் கேட்டனர். அப்போது அவன் தூக்கம் இன்றி வெகுநாட்களாக அலுத்துப்போயிருந்ததால், தூங்குவதற்கான வரத்தைக் கேட்டான். தேவர்களும் அந்த வரத்தைக் கொடுத்து, உன்னைத் தூக்கத்திலிருந்து எவன் எழுப்புவானோ, அவன் தனது உடலின் அக்கினியாலேயே எரிக்கப்பட்டுச் சாம்பல் ஆவான்! என்ற வரம் தந்தார்கள். அதனாலேயே முசுகுந்த மன்னனை எழுப்பிய காலயவனன் எரிந்து சாம்பலானான். அதன் பிறகு, முசுகுந்தன் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்து, நீ யார்? என்று கேட்டான். அதற்கு ஸ்ரீகிருஷ்ணன், அரசனே! நான் சந்திர சூலம் சார்ந்த யதுகுலத்தில் பிறந்தவன். வசுதேவரின் மகன்! என்று கூறினார். அதைக் கேட்டதும் முசுகுந்த மன்னன், முன்பு தனக்கு கார்க்கிய முனிவர் கூறியதை நினைத்து, தன் படுக்கையைவிட்டு எழுந்து, சர்வேசுவரனான ஸ்ரீ கிருஷ்ணனை வணங்கி, ஓ சுவாமி! தேவரீர் ஸ்ரீமந் நாராயணருடைய அம்சாவதாரம் என்பது அடியேனுக்குத் தெரியும். முன்பு கார்க்கிய மகாமுனிவர், இருபத்தெட்டாவது யுகத்தில் துவாபரயுக முடிவில் யதுகுலத்தில் எம்பெருமான் அவதரித்தருள்வான் என்று என்னிடம் சொல்லியிருந்தார். தேவரீர்தாம் அந்த அவதார புருஷன்! மனுஷ்யரின் நலனுக்காக இவ்வாறு அவதரித்திருக்கிறீர்! அடியேன் இந்தச் சம்சாரச்சக்கரத்தில் ஓய்வில்லாமற் சுற்றிக்கொண்டு வருந்துகிறேனேயன்றி எங்கும் ஒரு சுகத்தையும் கண்டேனில்லை. கானல் நீர் என்று மூடர் அடைவதுபோல துக்கங்களையே சுகங்கள் என்று நினைத்து விட்டேன். ராஜ்யாதிகாரம். பூமி, சேனை, பொக்கிஷம், உறவினர் நண்பர், மக்கள், மனைவியர் ஏவலாட்கள் இவை யாவற்றையும் சுகமென்றே நினைத்த நான் முடிவில் அவையெல்லாம் எனக்குத்தாபத்தையே விளைவித்தன என்பதை உணர்ந்தேன். இனி தேவப்பிறவி கிடைத்தால்தான் என்ன! தேவகணங்களே அடியேனது துணையை விரும்புகின்றனர். சர்வதிபதியே! நித்யமான சுகமெங்கே இருக்கிறது? சகல உலகங்களுக்கும் காரணமான தேவரீரை ஆராதனை செய்யாமல், எவன் தான் நிரந்தரமான சுகத்தை அடையமுடியும்? அடியேன் சம்சார வழியில் திரிந்து, மிக்க தாபங்களை அடைந்து அவற்றால் மனந்தவிர்க்கப்பட்டு, ஒப்பற்ற ஒளியுடைய மோக்ஷசுகத்தில் அபிலாøக்ஷகொண்டு, எவனைக் காட்டிலும் வேறு பரமப்பிராப்பியம் இல்லையோ, அத்தகைய அபாரனாகவும் அப்ரமேயனாயுமுள்ள உன்னை அடைக்கலம் புகுந்தேன் என்று முசுகுந்த மன்னன் துதித்தான்.

—————-

24. முசுகுந்தனுக்கு கண்ணனின் அருளும் ஆயர்பாடிக்கு பலராமர் வருகையும்!

முசுகுந்தன் ஸ்ரீகிருஷ்ணனைத் துதித்து மோக்ஷத்தை வேண்டினான். ஸ்ரீகிருஷ்ணன் அவனை நோக்கி, அரசனே! நீ உத்தம உலகங்களை அடைந்து, என் அனுக்கிரகத்தினால் குறைவற்ற மஹா ஐசுவரியமுள்ளவனாய் திவ்விய போகங்களை அனுபவித்து மறுபடியும் உயர்ந்ததொரு குலத்தில் பூர்வ ஜன்ம ஸ்மரணையுள்ளவனாகப் பிறந்து எனது கடாக்ஷத்தால் மோக்ஷம் அடைவாயாக! என்று அருள் செய்தார். முசுகுந்தன் ஸ்ரீகிருஷ்ணனது திருவடிகளை வணங்கி, குகையிலிருந்து புறப்பட்டு வெளியே வந்தான். அங்கே மிகவும் குள்ளமாய்த் திரியும் மனிதர்களைப் பார்த்துக் கலியுகம் வந்துவிட்டது என்பதை முசுகுந்தன் அறிந்து, தவஞ் செய்ய எண்ணம் கொண்டு ஸ்ரீநாராயண முனிவர்கள் வாசஞ் செய்யும் கந்தம தன பருவதத்துக்குப் போனான். கிருஷ்ணனே தன் பகைவனான காலயவனனைத் தந்திரத்தால் கொன்றுவிட்டு, மதுரை சென்று அதை முற்றுகை செய்திருந்த சதுரங்கச் சேனைகளைக் கைப்பற்றித் துவாரகை சென்று உக்கிரசேன மன்னனிடம் ஒப்படைத்தான். இதனால் யாதவர்கள் பகைவர் பயமின்றி வாழ்ந்தனர். போர்கள் ஓய்ந்ததால், பலராமர், தமது உறவினரைக் காண விரும்பி, கோகுலத்துக்குச் சென்றார். கோபியர்களும் கோபாலர்களும் அவரை வரவேற்றனர். கோபியர்களிற் சிலர் அன்பினால் கோபமாகவும் சிலர் பொறாமையுள்ளவர்களாகவும், பலராமரின் பேசினர். கண்ணனிடத்து அன்பு கொண்டிருந்த கோபியர்கள் நகரத்து நாகரிகப் பெண்களிடம் கண்ணன் கவர்ச்சி கொண்டதாக நினைத்து பலராமரிடம் கேள்விகள் கேட்கலானார்கள்.
ஸ்திரமற்ற அற்பப் பிரேமையுடைய அந்த கிருஷ்ணன் சுகமாக இருக்கிறானா? அந்த கிருஷ்ணன் இங்கே ஆடிப்பாடிய போது நாங்கள் அவன் பாட்டுக்கிசைய ஆடிப் பாடியதை நினைக்கிறானா? அவன் தன் தாயைப் பார்க்கவாவது இங்கு வருவானோ? இனி அவன் பேச்சு நமக்கு எதற்கு? எவனுக்கு நாம் இல்லாத பொழுது சுகமாய்க் கழிகிறதோ, அத்தகையவனின் பேச்சை விடுங்கள் நமக்கு யார் இல்லாமல் பொழுது கஷ்டமாகப்போகிறதோ, எவன் தன் தந்தை தாய், உடன் பிறந்தார் பந்துக்கள் ஆகியோரையெல்லாம் விட்டுப் போனானோ, அத்தகையவனுக்காக நாம் ஏன் தவிக்கவேண்டும்? அந்த மாயகண்ணன் நன்றியில்லாதவரில் சிறந்தவன், இருக்கட்டும் ஓ பலராமா! அந்த கிருஷ்ணன் இங்கு வருவதாக ஏதேனும் சொன்னானா? பட்டணத்துப் பாவையரிடம் மனம் பறிகொடுத்துவிட்ட அந்தமாய கண்ணன் எங்களிடம் சிறிதும் அன்பில்லாமல் இருப்பதால் அந்த வஞ்சகனைக் கண்ணால் காணவுங்கூடாதவன் என்று எங்களுக்குத் தோன்றுகிறது! என்று இவ்விதமாக ஆய்ச்சியர் அன்போடும் ஆசையோடும் வெறுப்போடும் பலராமரிடம் ஏதேதோ! பேசி, ஸ்ரீகிருஷ்ண ஸ்மரணையினாலேயே தாமோதரா! கோவிந்தா! என்று மூத்த நம்பியையே அழைத்துவிட்டு, உடனே தங்களுக்கு கண்ணன் மீதுள்ள மோக்ஷத்தால்தான் அப்படிப் பேசுவதாக நினைத்துக் கலகல வென்றுச் சிரித்தார்கள். அப்போது பலராமர் அன்போடும் கனிவோடும் கண்ணன் கூறியனுப்பிய வார்த்தைகளை அவர்களிடம் சொல்லி அவர்களைச் சமாதானஞ் செய்தார். பிறகு அவர் ஆயர்ப்பாடியடைந்து ஆயர் ஆய்ச்சியருடன் ஆனந்தமாக ரமித்துக் கொண்டிருந்தார்.

——————

25. பலராமரின் மோகமும் கோபமும்

மனுஷ்ய தேகத்தோடு, காரிய வசத்தால் பூமியில் எழுந்தருளிப் பெரிய காரியங்களை நிறைவேற்றி, இடையரோடு வனத்தில் விளையாடிக்கொண்டிருந்த பலராமனான ஆதிசேஷனுக்குத் திருவுள்ளம் மகிழ்வதற்காக வருணன் வாருணிதேவியை அழைத்து ஓ மதிராதேவி! நீ திருவனந்தாழ்வானுக்கு மிகவும் பிரியமானவள்! ஆகையால் அவருடைய போகத்துக்காக அவர் எழுந்தருளியிருக்கும் இடத்துக்கு நீ சந்தோஷமாகப் போக வேண்டும்! என்றான். வாருணியும், பலராமர் விளையாடிக் கொண்டிருந்த பிருந்தாவனத்தில் ஒரு கடப்ப மரப்பொந்தில் தங்கியிருந்தாள். அப்போது பலராமர் அந்த வனத்தில் உலாவும் போது, அந்த மதிரையின் வாசனை வீசுவதையறிந்து, அதன் மீது விருப்பம் கொண்டு அந்தத் திசையை நோக்கிச் சென்று, அங்கே கடப்ப மரத்திலிருந்து தாரையாய் ஒழுகிக்கொண்டிருந்த மதிரையைக் கண்டு, மிகவும் மகிழ்ந்து, அதனை வேண்டுமளவும் பானஞ்செய்து, தம்முடனிருந்த கோப கோபிகையருக்கும் கொடுத்து, ஆடியும் பாடியும் மதம் பொருந்தி வீற்றிருந்தார்.
அப்போது தன் பக்கமாக ஓடிய யமுனை நதியை நோக்கி, யமுனா! நீ இங்கே வா, நான் நீராடவேண்டும் என்றார் பலராமர். யமுனையோ, அவர் மதத்தினால் இப்படிச் சொல்கிறார் என்று நினைத்து அவர் வார்த்தையை மதித்துவரவில்லை. அதனால் கோபங்கொண்ட பலராமர், தமது ஹலாயுதத்தை எடுத்து, அதன் நுனியினால் அந்த நதியை இழுத்து, ஏ துஷ்ட நதியே! நான் அழைத்தும் நீ ஏன் வராமல் இருந்தாய்? உனக்குச் சக்தியிருந்தால் இப்போது உன் விருப்பப்படிப் போ! என்றார். அவரால் இழுக்கப்பட்ட அந்த நதி, தான் போகும் வழியை விட்டு, அந்த வனத்தில் பெருகியது. பிறகு அந்த நதி தன் கன்னியுருவோடு அவர் முன்பு வந்து வணங்கி, ஹலாயுதரே! என்மீது இரக்கங் கொண்டு என்னை விட்டுவிடவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அதற்கு அவர் யமுனா! என் பலத்தை நீ அவமதித்தால் நான் உன்னை என் கலப்பையினால் ஆயிரந் துண்டமாக்கிடுவேன்! என்றார். அதைக் கேட்ட யமுனாநதி தேவி நடுநடுங்கி அந்த வனம் முழுவதும் நனைத்தது. அவரும் அந்த நதியை விட்டுவிட்டார். அந்த நதியில் நீராடிய பலராமரிடம் ஒரு புதிய காந்தி உண்டாயிற்று. பிறகு அவர் திருமுடியில் தரிக்கத்தக்கத் தாமரை மலரும், கர்ண குண்டலங்களும் தாமரை மாலையும் நீலமான இரண்டு திருப்பரிவட்டங்களும் வருணனால் அனுப்பப்பட்டுத் திருமகளால் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றையணிந்த பலராமர் மிகவும் பிரகாசமாய் இடைச்சேரியில் கிரீடித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் இரண்டு மாதங்களுக்கு அப்பால், பலராமர் துவாரகை சென்று ரைவத மன்னனுடைய மகளான ரேவதி என்பவளை மணந்து நிசிதன், உல்முகன் என்ற இரு பிள்ளைகளுக்குத் தந்தையானார்.

——————-

26. ருக்மணிப் பிராட்டியார் திருக்கலியாணம்

விதர்ப்ப தேசத்தில் குண்டினபுரியில், பீஷ்மகன் என்ற மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ருக்குமி என்ற மகன் ஒருவனும் ருக்குமணி என்ற மகளொருத்தியும் இருந்தார்கள். பேரழகியான அவளை கண்ணன் திருமணஞ் செய்துகொள்ளத் திருவுள்ளங்கொண்டிருந்தார். ருக்மணியும் கண்ணன் மீது காதல் கொண்டிருந்தாள். ஆனால் அந்தக் கன்னிகையைத் தனக்கு கொடுக்கவேண்டும் என்று கிருஷ்ணன் எவ்வளவோ வேண்டியும் ருக்மணியின் சகோதரனான ருக்குமி, துவேஷத்தினால் தன் தங்கையைக் கிருஷ்ணனுக்குக் கொடுக்காமல் ஜராசந்தனின் ஏவுதலால் சிசுபாலனுக்குக் கொடுப்பதாகத் தந்தையைக் கொண்டு வாக்குத் தத்தம் செய்வித்தான். இப்படி அவன் நிச்சயித்து விவாகம் செய்ய ஏற்பாடு செய்யும்போது, அந்தத் திருமணத்துக்கு சிசுபாலனுக்கு நண்பர்களான ஜராசந்தன் முதலான அரசர்கள் குண்டினபுரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணனும் யாதவ சேனையோடு குண்டினபுரத்திற்குச் சென்றார். ருக்மணிக்கு நாளைக்குக் கலியாணம் என்றிருக்கும்போது கண்ணன் பகைவருடன் போர் செய்யும் பொறுப்பை பலராமர் முதலியோரிடம் ஒப்படைத்துவிட்டு மணப்பெண்ணான ருக்மணியைக் கடத்திப் பலாத்காரமாகத் தூக்கிக்கொண்டு போனார். அதனால் மணமகன் சிசுபாலனும் அவனது தோழர்களான பவுண்டரகன், விடூரதன், தந்தவக்ரன், ஜராசந்தன், சாள்வன், சிசுபாலன் முதலான அரசர்களும் மிகவும் கோபங்கொண்டு எதிர்த்து வந்து, கண்ணனைச் சங்கரிக்கப்பெரும் யுத்தம் புரிந்தார்கள். இறுதியில் பலராமரிடம் அவர்கள் தோல்வியடைந்து தன் தன் நாடுகளுக்குச் சென்றனர். ருக்குமி மட்டுமே நான் ஸ்ரீகிருஷ்ணனைக் கொல்லாமல் குண்டினபுரத்துக்குத் திரும்பமாட்டேன் என்று சபதம் செய்து, கண்ணனைப் பின்தொடர்ந்தான். வழியில் அவன் கண்ணனை மடக்கிப் போர் செய்ய கண்ணன் அவனது சேனைகளை நாசஞ் செய்து, அவனையும் தலையெடுக்கவொட்டாமல் அடித்து உயிரோடு தரையில் வீழ்த்தினார். இவ்விதமாக கண்ணன் ருக்குமியை வென்று ருக்குமணியை ராக்ஷச விவாஹ முறையில் விவாகஞ் செய்துகொண்டார். அந்த ருக்மணியின் திருவுதிரத்தில் மன்மத அம்சமாய் மகாவீரியனான பிரத்தியும்னன் பிறந்தான். அவனைப் பூர்வஜன்ம விரோதத்தால் சம்பராசுரன் கொண்டு செல்ல, அவனை பிரத்தியும்னன் சங்காரஞ் செய்தான்.

——————

27. மாயாவதியின் காதலும் சம்பராசுர வதமும்

மைத்ரேய முனிவர் குறுக்கிட்டு பராசர மகரிஷியை நோக்கி குருவே, அந்தப் பிரத்தியும்னனைச் சம்பராசுரன் எப்படித் தூக்கிச் சென்றான்? அந்த சம்பராசுரனை பிரத்தியும்னன் எப்படிச் சம்ஹாரம் செய்தான்: இதை எனக்கத் தெளிவாகச் சொல்லவேண்டும்! என்று கேட்டார். அதனால் பராசர மகரிஷி அந்தக் கதையைக் கூறலானார். மைத்ரேயரே கேளும். பிரத்தியும்னன் பிறந்த ஆறாவது நாளில், சம்பராசுரன் என்ற அரக்கன் இவன் நம்மைக் கொன்று விடுவான் என்று நினைத்து அவனைக் கருவுயிர்த்த அறையிலிருந்தே கொண்டு போய்விட்டான். பிறகு திமிங்கலங்களும் முதலைகளும் நிறைந்த லவண சமுத்திரத்தில் அந்தக் குழந்தையை வீசி எறிந்துவிட்டான். அந்தக் குழந்தையை மீன் ஒன்று விழுங்கியது. அந்த மீனின் வயிற்று நெருப்பினால் எரிக்கப்பட்டாலும் அக்குழந்தை பகவானுடைய வீரியத்தால் உற்பத்தியானதால், மரணமடையாமல் இருந்தது. இது இப்படியிருக்க செம்படவர்கள் மீன் பிடிக்கும்போது அந்த மீனையும் பிடித்து அசுரர்களின் அரசனாகிய சம்பராசுரனிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்கள். அந்த அசுரனுக்கு மாயாவதி என்பவள் பெயரால் மட்டுமே பத்தினியாக இருந்தாள். அவள் சமையற்காரருக்கெல்லாம் அதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தாள். அவள் சமையலுக்காக மீன்களைச் சேதிக்கும்பொழுது, ஒரு மீனினுள் அக்குழந்தை இருப்பதைக் கண்டாள். அதைக் கண்ட அவள், இந்தக் குழந்தை எரிந்துபோன மன்மதனாகிய மரத்தின் முதல் முளையைப்போல அழகாக இருக்கிறது. இது யார்? எப்படி மீன் வயிற்றில் வந்தது? என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு நாரதர் வந்தார், வந்தவர் மாயாவதியிடம் பெண்ணே இந்தக் குழந்தையைக் குறித்து யோசிக்க வேண்டாம். இவன் ஜகத் சிருஷ்டி ஸ்திதி, சம்ஹாரங்களை நடத்துகின்ற ஸ்ரீமஹாவிஷ்ணுவின் குமாரன்! இவனை உன் கணவனான சம்பராசுரன் கொல்லவேண்டுமென்று நினைத்து, பிள்ளை பெற்ற அறையிலிருந்தே இக்குழந்தையைத் திருடிவந்து, சமுத்திரத்தில் எறிந்தான். அங்கே இந்த மீன் விழுங்கியது. அதன் பிறகு அவன் உன்னிடம் வந்து சேர்ந்தான். ஆகையால் இந்தப் புருஷ ரத்தினத்தை நீயே பயமின்றி பரிபாலனஞ் செய்து வருவாயாக! என்றார். அதைக் கேட்ட மாயாவதி அவர் சொன்னதிலிருந்து, பிரத்தியும்னன் என்ற அக் குழந்தையை மிகவும் அன்போடு போஷித்து வந்தாள். அவன் அழகைக் கண்டு இளமையிலிருந்தே அவன் மீது மாயாவதி காதலும் கொண்டிருந்தாள். அவன் யவுவனப் பருவமடைந்ததும் மாயாவதி அவன் மீது ஆசையுற்று அவனுக்குப் பலவிதமான மாயா வித்தைகளை கற்றுத் தந்து மனமும் கண்ணும் அவனை விட்டுப் பிரியாமல் அவன்மீது வைத்திருந்தாள். இது போல மாயாவதி தன் மீது காமமுற்றிருப்பதை கிருஷ்ண குமாரனான பிரத்தியும்னன் அறிந்ததும் நீ எனக்குத் தாயாக இருக்க அதைவிட்டு வேறு விதமாக என்னிடம் நடப்பதென்ன? என்று கேட்டான் அதற்கு மாயாவதி புருஷ ரத்தினமே கேள்! நீ என் மகன் அல்ல; ஸ்ரீ கிருஷ்ண பகவானின் மகன் உன் தாயின் கருவறையில் நீ இருக்கும்போதே உன்னை சம்பராசுரன் திருடிக்கொண்டுபோய்க் கடலில் வீசியெறிந்தான். அங்கு ஒரு மீன் உன்னை விழுங்கிற்று. அந்த மீன் இங்கு வந்தபோது; அதன் வயிற்றிலிருந்து உன்னை எடுத்துக் காப்பாற்றி வந்தேன். உன்னைப் பெற்றவள் உனக்காக அழுது கொண்டிருக்கிறாள். இதுவே உன் வரலாறு என்றாள். அதைக் கேட்டதும் பிரத்தியும்னன் மிகவும் கோபங் கொண்டு, சம்பராசுரனைச் சண்டைக்கு அழைத்தான். அந்த அசுரனும் சகல சேனைகளோடு திரண்டுவந்து பிரத்தியும்னனோடு போரிட்டான். பிரத்தியும்னன் அவனது சேனைகளையெல்லாம் அழித்தான். பிறகு சம்பராசுரன் ஏழு மாயைகளைப் பிரயோகித்தான். பிரத்தியும்னன் அவற்றையெல்லாம் கடந்துவந்து, எட்டாவது மாயையை அவன்மீது பிரயோகித்து அந்த சம்பராசுரனை அழித்தான். பிறகு அவன் மாயாவதியுடன் அங்கிருந்து புறப்பட்டுத் தன் தந்தையின் அந்தப்புரத்திற்கு வந்து குதித்தான்.
இவ்விதம் மாயாவதியுடன் அந்தப்புரத்தில் குதித்த அவனைப் பார்த்து, அங்கிருந்த பெண்களனைவரும் வடிவத்தால் ஒத்திருந்ததால் ஸ்ரீகிருஷ்ணன் என்றே நினைத்தார்கள். அப்பொழுது ருக்குமணி அவனைப் பார்த்துவிட்டாள். அவள் கண்களில் கண்ணீர் ததும்ப எந்தப் புண்யவதியின் மகனோ-இவன்? நவமான யவுவனத்துடன் திகழ்கிறானோ; என் பிள்ளை பிரத்தியும்னன் பிழைத்திருந்தால் இந்த வயதுடையவனாக இருப்பானல்லவா? என்று நினைத்தாள். அவள் அவனைப் பார்த்து, மகனே! எனக்கு உன்மீது உண்டாகிற அன்பையும் உன் தேக எழிலையும் பார்த்தால் என் நாயகரான ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியின் குமாரனாகவே நீ இருக்கவேண்டுமென்று தோன்றுகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நாரதர் கண்ணனையும் அழைத்துக் கொண்டு அங்கேவந்து சேர்ந்துவிட்டார். அவர் ருக்குமணிப் பிராட்டியை நோக்கி பெண்ணரசே! இவன் உன் மகன் பிரத்தியும்னன் தான் உன் சூதிகா கிருகத்திலிருந்து இவனை சம்பராசுரன் கொண்டு போனான். இப்போது இவன் அந்தப் பகைவனை அழித்துவிட்டு இங்கு வந்திருக்கிறான். இவனோடு வந்திருக்கும் இந்தப் பெண்ணின் பெயர் மாயாவதி இவள் இவனுடைய பாரியை, சம்பராசுரனின் பாரியை அல்ல. இதற்கு ஒரு காரணம் உண்டு. அதைச் சொல்கிறேன் கேள். முன்பொரு சமயம் சிவபெருமானால் மன்மதன் அழித்தபோது, அவனது மனைவியான இந்த ரதி தேவி, மிகவும் பதிவிரதையாகையால் மறுபடியும் தன் நாயகனான மன்மதனின் ஜனனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவரையில் காலந்தள்ளும் பொருட்டு பலவாறும் நடிக்கவேண்டியிருந்தது. இவளுடைய அழகான கண்களைக் கண்டு சம்பராசுரன் மயங்கி இவளைத் தன் பத்தினியாகத் தன் அந்தப்புரத்தில் வைத்துக்கொண்டான், அதனால் இவள் அந்த அசுரனைச் சமாளிப்பதற்காகப் பலவகையான போகங்களிலே மாயாமயமான ரூபங்களைக் காட்டித் தான் கிட்டப் போகாமலேயே, அவனது பத்தினியைப்போல், அவனை மோகங்கொள்ளச் செய்து வந்தாள். இவள் கனவிலும் நனவிலும் எதிர்பார்த்து ஏங்கிக் காத்திருந்த மன்மதன் உனக்குப் புத்திரனாக அவதரித்தான். அந்த மன்மதனின் பத்தினியான இரதி தேவியே இவள்! இதில் சந்தேகப்படவேண்டாம் இவன் உன் மகன்; இவள் உன் மருமகள்! என்றார், அதைக் கேட்டு யாவரும் அதிசயமும் ஆனந்தமும் அடைந்தனர். நாடே அதிசயித்தது!

——————

28. கல்யாணத்தில் சூதாட்டம்

பிரத்தியும்னனுக்குப் பின் சாருதேஷ்ணன்; சுதேஷ்ணன், சாருதேகன் கதேணன் சாருகுப்தன். பத்திரசாரு, சாருவிந்தன் சுசாரு. சாரு என்ற பிள்ளைகளும் சாருமதி என்ற ஒரு பெண்ணும் ருக்குமணிக்குப் பிறந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணனுக்கு ருக்மணியைத் தவிர, மித்திரவிந்தை, சத்தியை, ஜாம்பவதி ரோகிணி, சுசீலை; சத்தியபாமை, லக்ஷ்மணை என்ற ஏழு மனைவியர் இருந்தார்கள். அவர்களில் மித்திரவிந்தை என்பவள் காளிந்தன் என்பவனின் மகளாகையால், அவளுக்குக் களிந்தி என்று ஒரு பெயருண்டு. சத்தியை, நக்நஜித் என்பவனுடைய மகள். ஜாம்பவதி, ஜாம்பவானின் மகள். சுசீலை மத்திர ராஜனின் மகள். சத்தியபாமை சத்திராஜித்தன் மகள். ரோகிணி என்பவள் விரும்பும் ரூபத்தை எடுக்கவல்லவள். சுசீலை என்பவள் தன் பெயருக்கேற்றச் சிறந்த சீலமுடையவள். லக்ஷ்மணை சிரித்தால் மிகவும் அழகாக விளங்குபவள். அதனால் அவளுக்கு சாருஹாஸினி என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த ஏழு மனைவியரும் தவிர, ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பதினாறாயிரம் தேவிமார்களும் உண்டு. ருக்மணியின் குமாரனான பிரத்தியும்னன், சுயம்வரத்திலே தன் மீது காதல் கொண்டிருந்த மாமன் மகளான ருக்குமியின் மகளைத் திருமணஞ் செய்துகொண்டிருந்தான். அவளது கர்ப்பத்தில் மகா பராக்கிரமசாலியும் அளவற்ற வீரியமுடையவனுமான அநிருத்தன் என்பவன் அவதரித்தான். அவனுக்குத் திருமணஞ் செய்ய தம் மைத்துனனான ருக்குமி ராஜனின் பேத்தியையே கண்ணன் நிச்சயித்திருந்தார். ருக்குமிக்கு கண்ணன் பேரில் பகைமை இருந்தும், அவன் கண்ணன் விருப்பப்படி அவர் பேரனுக்குத் தன் பேத்தியைக் கன்னிகாதானம் செய்து கொடுத்திருந்தான்.
மைத்ரேயரே கேளும்! அந்தக் கலியாணத்திற்கு பலராமரும் மற்ற யாதவர்களும் போஜகடம் என்ற ருக்குமியின் தலைநகருக்குப் போயிருந்தார்கள். அங்கு அநிருத்தனுக்குத் திருமணம் நடந்தவுடன் கலிங்க ராஜன் முதலியோர் ருக்குமியை நோக்கி, ருக்குமி! பலராமனுக்குச் சொக்கட்டான் ஆடத்தெரியாது, ஆயினும் அவனுக்கு அந்த ஆட்டத்தில் பிரியம் அதிகமுண்டு. ஆகையால் மகா பலசாலியான பலபத்திரனை நாம் சூதிலே வெற்றி பெறுவோம்! என்றார்கள். அதைக் கேட்ட ருக்குமியும் சூதாட்டத்திற்கு ஏற்பாடு செய்தான். சபையிலே பலராமரோடு, ருக்குமியும் மற்ற அரசர்களும் சூதாட ஆரம்பித்தனர். முதல் ஆட்டத்தில் பலராமர் பந்தயம் வைத்த ஆயிரம் வராகனையும் ருக்குமி ஜெயித்தான். இரண்டாவது ஆட்டத்திலும் மேலும் ஆயிரம்வராகன் ருக்குமியே ஜெயித்தான். பிறகு பலராமர், பதினாயிரம் வராகனைப் பந்தயமாக வைத்தார். அதையும் சூதில் வல்ல ருக்குமியே ஜெயித்துவிட்டான். இது போலவே மூன்று ஆட்டங்களிலும் பலராமர் தோற்றார். இதைக்கண்ட கலிங்க ராஜன் சிரித்தான். ருக்குமியும் ஐயோ பாவம்! இந்த பலராமன் சூதாடத் தெரியாதவன். வீணாக என்னோடு ஆடவந்து திரவியமெல்லாம் தோற்று அவமானப்பட்டு விட்டான். ஆனால் இவன் ஓர் அக்கிரமம் செய்து விட்டான். சூது தெரியாதவன் அந்த வித்தையில் வல்லவர்களை அவமானமாகப் பேசலாமா? என்றான்.
அதைக் கேட்டதும் பலராமர் விதர்ப்பராஜனையும் கலிங்க ராஜனையும் பற்றி இழுத்து கோபத்துடன், நல்லது! இந்தத் தடவையும் ஆடுவோம்! என்று ஒருகோடி வராகனைப் பணயமாக வைத்தார். ருக்குமியும் ஒன்றும் பேசாமல் பாசிகைகளை உருட்டினான். அந்த ஆட்டத்தில் பலராமர் ஜெயித்தார். அதனால் நான் ஜெயித்தேன்! என்று அவர் உரக்கக் கூவினார். அதை ருக்குமி மறுக்கும் விதமாக, பலனே! இந்த மட்டும் நீ சொன்ன பொய் போதும்! ஜெயித்தவன் நானே! எப்படியென்றால் நீகோடி வராகன் பந்தயம் என்று சொன்னாய்! அதைநான் ஒப்புக் கொள்ளவில்லை, இப்படியிருக்க நீ ஜெயித்ததாகச் சொல்லுவாயானால் நான் ஏன் ஜயித்தவனாகமாட்டேன்! என்று கூவினான். அப்போது ஆகாயத்தில் ஒரு வானொலி எழுந்தது அது கம்பீர நாதத்துடன் பலராமருக்குக் கோபம் ஏற்படும்படியாக, பலராமர் தருமமாகச் செய்தார். ருக்குமியோ பொய் சொன்னான். ஒரு விஷயம் வாயினால் சொல்லாமற் போனாலும் காரியத்தை நடத்தினால் அது ஒப்புக்கொண்டதே ஆகும் என்றது. அதைக் கேட்ட பலராமரின் கண்கள் சிவந்தன. அவ சூதாடும் சதுரங்கப் பலகையை எடுத்து அதனாலேயே ருக்குமியை அடித்துத் தள்ளி, அதனாலே தந்தவக்கிரனுடைய சிரிப்புடன் வெளிப்பட்ட பற்களையெல்லாம் உதிர்த்துத் தள்ளினார். அங்கிருந்த ஒரு தூணை எடுத்து, மற்ற அரசர்களனைவரையும் அடித்து விரட்டினார். மைத்ரேயரே! இவ்வாறு பலராமர் கோபமாகச் சண்டையிடுவதைக் கண்டு ராஜமண்டபத்திலிருந்த அரசர்கள் ஓடிப்பறந்தனர். இப்படி நடப்பதைப் பார்த்திருந்த ஸ்ரீகிருஷ்ணன் ருக்குமாவதத்தைக் குறித்து மூத்தவரை வெறுத்தால் அவருக்குக் கோபம் வரும் அது நல்லதுதான் என்றாலோ தன் தேவியின் திருவுள்ளம் சீறும் என்றும் நினைத்தும் எதையும் பேசாமல் மவுனமாக இருந்தார். பிறகு ஸ்ரீகிருஷ்ணன் விவாகமானதன் பேரனையும் மனைவியையும் மற்ற யாதவரையும் அழைத்துக் கொண்டு துவாரகைக்குச் சென்றார்.

——————-

29. நரகாசுர வதம்

மைத்ரேயரே! மேலும் கேளும் ஸ்ரீ கிருஷ்ணன் துவாரகையை அடைந்தபோது மூவுலகங்களுக்கும் அதிபதியான தேவேந்திரன் தன் பட்டத்து யானையான ஐராவதத்தின்மீது ஏறிக்கொண்டு, துவாரகைக்கு வந்தான். அவன் ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி, நரகாசுரனைப் பற்றிச் சொல்லத் துவங்கினான். மதுசூதனா! நீ மானுஷ்ய அவதாரஞ் செய்திருந்தாலும், உன்னால் தேவர்களின் துன்பங்கள் போகின்றன. அரிஷ்டன், தேஜகன், கேசி முதலிய அரக்கர்களை, அழித்துத் தவமுனிவர்களைக் காத்தாய் இதனால் உன் திருத்தோள் வலிமையால் மூன்று லகங்களும் பாதுகாக்கப்படுகின்றன. தேவர்கள், யாகங்களில் தமக்குரியபங்குகளைப் பெறுகின்றனர். நான் எதற்காக உன்னை நாடி வந்தேனோ, அதைக் கேட்டு ஆவன செய்யவேண்டும். சத்துரு நாசகனே! பிராக்ஜோதிஷம் என்ற நகரில் பூமியின் புதல்வனான நரகாசுரன் என்று ஒருவன் சகல பிராணிகளுக்கும் கொடுமை செய்துவருகிறான் தேவர், சித்தர், கந்தர்வர் முதலியவர்களின் கன்னிகைகளையும் அரசர்களின் குமாரிகளையும் வலுவில் அபகரித்துச் சென்று தன்மாளிகையில் சிறை வைத்திருக்கிறான். எப்பொழுதும் மழை பொழிவதான வருணனின் குடையைக் கவர்ந்தான். மந்தர பர்வதத்தின் சிகரத்தைக் கொண்டு போனான். பகவானே! இன்னுங்கேள். என் தாயான அதிதியின் அமுதம் ததும்பும் குண்டலங்களைக் கவர்ந்து விட்டான். இத்துடன் நில்லாமல் எனது ஐராவதத்தையும் கவர்ந்து செல்லப் பார்க்கிறான். இத்தகைய நரகாசுரனின் அநியாயங்களை உன் சன்னதியில் விண்ணப்பித்துவிட்டேன். இனி ஆவன செய்வாயாக! என்றான். அதைக் கேட்ட கிருஷ்ணன், புன்னகை கொண்டு இந்திரனுக்கு விடை கொடுத்து அனுப்பினார். பிறகு கருடனை நினைத்தார். உடனே அந்தப் பெரிய திருவடியின்மேல் தம் தேவியான சத்தியபாமையை ஏற்றுவித்து, தாமும் அமர்ந்து கொண்டு பிராக்ஜோதிஷ புரத்திற்குப் பறந்து சென்றார்.
அங்கு நரகாசுரனின் மந்திரியான முரன் என்பவன், பிராக் ஜோதிஷபுரத்தைச் சுற்றி நூறு காதச் சுற்றளவுக்குச் சிறு கத்திகள் நுனியில் இருக்கப்பெற்ற பாசங்களைப் பரப்பி, யாருமே அதனுள் நுழையாதபடி அமைந்திருந்தான். அதைக் கண்ட ஸ்ரீகிருஷ்ணன், தம் திருவாழியை பிரயோகித்து அந்தப் பாசங்களையெல்லாம் அறுத்தெறிந்தார். உடனே முரன் என்பவன் அவரை எதிர்த்துச் சேனைகளோடு போருக்கு வந்தான். கண்ணன், அவனையும் அவனுடைய மக்கள் ஏழாயிரம் பேரையும் விளக்கில்படும் பூச்சிகளைப்போல் தம் சுதரிசன சக்கரத்தால் எரித்துவிட்டார். இவ்விதமாக முரன், அயக்கிரீவன், பஞ்சசனன் என்ற மந்திரிகளை நாசஞ்செய்து தலைநகரினுள்ளே பிரவேசித்தார். அங்கே ஏராளமான சேனைகளுடன் எதிர்த்து வந்த நரகாசுரனுக்கும் ஸ்ரீகிருஷ்ணனுக்கும் கடுமையான பெரும் போர் நடந்தது. அந்தப் போரிலேதான், மிகவும் கொடிய ஏராளமான அசுரர்களை கண்ணன் சங்கரித்தார். தன்படைகள் ராசி ராசியாக மடிவதைக் கண்ட நரகாசுரன் கண்ணன்பேரில் பலவகை ஆயுதங்களைப் பிரயோகித்தான் கண்ணன், அவற்றையெல்லாம் அழித்து, இறுதியில் சக்கராயுதத்தைப் பிரயோகித்து நரகாசுரனை இரு பிளவாக்கி வீழ்த்தினார். அவன் வீழ்ந்ததும் பூமிதேவி அதிதியின் குண்டலங்களை எடுத்துக்கொண்டு கண்ணன் திருவடிகளை வணங்கி, விண்ணப்பம் செய்யத் துவங்கினாள்.
நாதனே! எப்போது நீ வராஹ அவதாரஞ் செய்து, என்னை உன் கோட்டின் மேல் கொண்டாயோ அப்போதே உன் ஸ்பரிசத்தால் இந்த நரகன் எனக்குப் பிறந்தான். ஆகையால் நீயே எனக்கு இந்த மகனைத் தந்தாய் நீயே அவனை நாசஞ் செய்தாய், இதோ குண்டலங்கள்! இவற்றை ஏற்றுக் கொள். நரகனுடைய சந்ததியை பரிபாலனஞ் செய்தருள்! என் பாரத்தைக் குறைக்கவே நீ இந்த உலகில் அவதரித்து அருள்கின்றாய்! நீயே உற்பத்தி ஸ்தானம். நீயே லய ஸ்தானம் நீ என் புதல்வன் நரகன் செய்த பிழைகளைப் பொறுத்தருள வேண்டும்! பாவங்களைப் போக்கவே உன் மகனான நரகனை நீயே சங்கரித்தாய். ஆகையால் அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை! என்றாள். கண்ணபிரான் அவளைக் கடாட்சித்தார். பிறகு நரகனது மாளிகையின் அந்தப்புரத்திலிருந்த பதினாயிரத்து ஒரு நூறு கன்னியரையும் அவனது வாகன சாலையிலிருந்த ஆறு தந்தங்களைக் கொண்ட ஆறாயிரம் சிறந்த யானைகளையும் இருபத்தோருலக்ஷம் காம்போஜக் குதிரைகளையும், அவனது சேவகரைக் கொண்டே துவாரகையில் சேர்ப்பித்தார். அன்றியும் வருணனுடைய குடையையும் மணி பருவதத்தையும் கண்டு, அவற்றைப் பெரிய திருவடியின் மேல் ஏற்றிக் கொண்டு சத்தியபாமையுடன் தாமும் ஏறி, அதிதியிடம் அமுத குண்டலங்களை ஒப்படைப்பதற்காகவே தேவலோகத்துக்கு எழுந்தருளினார்.

——————

30. பாரிஜாத அபஹரணம்

ஸ்ரீகிருஷ்ணன் தேவலோகத்திற்குச் சென்று சுவர்க்கத்தையடைந்ததும் அதன் வாயிலில் நின்று, தமது திருச்சங்கை ஊதினார். அந்தச் சங்கநாதத்தைக் கேட்டதும் அமரர்கள் அனைவரும் அர்க்கியத்தைக் கையிலேந்தி அவரை வரவேற்று திருவடிதொழுது உபசரித்தனர். பிறகு கருடத்துவஜன் தேவ மாதாவின் திருமாளிகைக்கு விஜயம் செய்தார். இந்திரனுடன் அதிதியைத் தொழுது, நரகாசுரனை வதைத்த தகவலை ஸ்ரீகிருஷ்ணன் சொன்னார். லோக கர்த்தாவான அந்தப் பகவானை இந்திரனின் தாயான அதிதி மிகவும் பக்தியோடு துதித்தாள். தாமரைக்கண்ணா! அடியார்க்கு அபயமளிக்கும் அண்ணலே உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கின்றேன் மனம் புத்தி இந்திரியம் இவற்றுக்குக் கர்த்தாவே! ஞானியரின் இதயத்தில் இருப்பவனே! சீதோஷ்ணாதி உபாதையில்லாதவனே; சொப்பனம் முதலிய அவஸ்தைகளற்றவனே! பரமார்த்தம் தெரியாமல் மோகம் செய்யும் மாயை உன்னுடையது! அதனால்தான் மூடன் ஆன்மாவல்லாததை ஆன்மாவென்று நினைத்துப் பந்திக்கப்படுகிறான். உலகத்தார் உன்னை ஆராதித்து புத்திராதிகளான இஷ்டங்களை வேண்டுகிறார்களேயல்லாமல், தங்களுக்கு நேர்ந்துள்ள சம்சாரத்துக்கு நாசத்தை வேண்டாமல் இருக்கிறார்கள் என்றால் அது உன் மாயையேயாம்! இதற்கு ஓர் உதாரணம் பார் நான் உன்னை என் புத்திரனுக்காகவும் சத்துரு நாசத்துக்காகவுமே ஆராதித்தேனே தவிர மோட்சத்துக்காக அல்ல. இதுவும் உன் மாயைதான்! எதுவும் தரவல்ல கற்பக விருட்சத்திடம் ஒருவன் சென்று, தனக்குக் கோவணம் தரவேண்டுமென பிரார்த்தித்தான் என்றால் அது அவன் குற்றமேயாகும். கற்பக மரத்தின் குற்றமாகாது. நீயே, ஞானம் போன்றுள்ள அஞ்ஞானத்தை அழிக்கவேண்டும். ஓ பகவானே! நான் உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! ஸ்தூலமான உனது ரூபத்தைக்காண்கிறேனேயன்றிச் சூஷ்மமான ரூபத்தைக் காணவில்லையே! ஆகிலும் எனக்காக அனுக்கிரகித்து அருள்செய்ய வேண்டுகிறேன் என்றாள். அதிதியினால் துதிக்கப்பட்ட ஸ்ரீபகவான், அந்த தேவ மாதாவை நோக்கி, புன்னகையுடன் அம்மா! நீ எங்களுக்குத்தாய் ஆகையால் நீ தான் எங்களுக்கு அனுக்கிரகஞ் செய்ய வேண்டும்! என்றார். அதைக்கேட்ட அதிதி உன் திருவுள்ளம் அப்படியானால், அப்படியே ஆகட்டும் நானும் வரம் தருகிறேன். நீ பூவுலகிலும் சுரராலும் அசுரராலும் வெல்லக்கூடாதவன் ஆகக்கடவாய்! என்று மங்களாசாசனம் செய்தாள்.
பிறகு சத்தியபாமையும் தேவமாதாவான அதிதியை வணங்கி, அம்மா! நின்னை அனுக்கிரகித்து அருளவேண்டும் என்றாள். ஓ பெருமாட்டியே! உனக்கு மூப்பாகிலும் ரூபமாறுதலாகிலும் உண்டாகாதிருக்கக் கடவன! இந்த இளமையே உனக்கு நிலைத்து, எப்போதும் குற்றமற்றத் திருமேனியையுடையவளாய் இருப்பாயாக! என்று மங்களாசாசனம் செய்து இந்திரனுக்கும் கட்டளையிட அவனும் கண்ணனைப் பூசித்தான். இந்திரன் மனைவியான சசிதேவி சத்தியபாமைக்குப் பலவித உபசாரங்களைச் செய்தாள். ஆயினும் பாரிஜாத மலர்களைத் தான் சூடிக்கொண்டாளேயன்றி சத்தியபாமைக்கு வழங்கவில்லை. ஏனென்றால் அவள் சத்தியபாமையை மானிடப் பெண் என்றும் தேவருக்கே உரிய பாரிஜாதம் அவளுக்குத் தகாதது என்றும் நினைத்து விட்டாள்.
இவ்விதமாகப் பூஜிக்கப்பட்ட பிறகு ஸ்ரீகிருஷ்ணன் சத்தியபாமையுடன் தேவலோகத்து நந்தவனங்களையெல்லாம் பார்த்துக் கொண்டு வந்தார். அங்கே பலவகையான மலர்ச் செடி கொடி வகைகள் அழகழகாக வளர்க்கப்பட்டிருந்தன. மேலும் மகா சுகந்தமுள்ள பூங்கொத்துகளாகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதாயும் மாணிக்கம் போல இளந்தளிர்களால் செழித்தும், பொன் போன்ற பட்டாடைகளால் மூடப்பட்டு எப்போதும் ஆனந்தமுண்டாக்குவதாயும், பாற்கடல் கடைந்தபோது அதிலே உண்டானதாயுமிருந்த பாரிஜாத மரத்தைக் கண்டார். அப்போது சத்தியபாமை ஸ்ரீகிருஷ்ணனை நோக்கி, நாதா! நீங்கள் என்னிடம் அடிக்கடி ஒன்று சொல்வீர்களே அது ஞாபகமிருக்கிறதா? அதாவது நான் தான் உங்களுக்குப் பிரியையானவள், என்று நீங்கள் அடிக்கடிச் சொல்வது மெய்யானால் இந்தப் பாரிஜாதத்தருவைத் துவாரகைக்குக் கொண்டுபோக வேண்டும். ஜாம்பவதியானாலும் ருக்குமணியானாலும் உன்னைப்போல எனக்குப் பிரியமானவர்களல்ல என்று நீங்கள் என்னிடம் அடிக்கடிச் சொல்வதெல்லாம் வெறும் உபசார வார்த்தைகளாகச் சொல்லாமல் உண்மையாகச் சொன்னதாக இருந்தால் இந்தப் பாரிஜாத மரத்தை என் மாளிகையின் புழைக்கடைக்குப் கொண்டுபோய் வைக்க வேண்டும்! நான் இதன் மலர்களைக் கொண்டு, என் கூந்தலை அலங்கரித்து என் சக்களத்திமார் நடுவில் மிகவும் சிறந்திருக்க வேண்டும். இது என் விருப்பம்! என்றாள்.
உடனே ஸ்ரீ கிருஷ்ணன் அந்த மரத்தை அடியோடு பெயர்த்து பெரிய திருவடியான கருடனின் திருத்தோள் மீது வைத்தார். அப்போது அந்த வனத்துக் காவற்காரர்கள் ஓடி வந்து, கிருஷ்ணா! இந்திரனது பட்டத்து ராணியான சசிதேவியின் உரிமையான பாரிஜாதத்தை நீ கொண்டு போகாதது! இது உண்டான போதே யாவரும் இதை தேவராஜனுக்குக் கொடுத்துவிட்டார்கள். அவரோ, தமது காதலியான சசிக்குக் கொடுத்தார். அவளது அலங்காரத்துக்காகவே அமுதங் கடைந்தபோது தேவர்கள் இந்தப் பாரிஜாத மரத்தை உண்டாக்கினார்கள். அத்தகைய மரத்தை நீ கொண்டுபோனால் ÷க்ஷமமாய் உன் ஊர் போய்ச் சேரமாட்டாய். எந்தப் பிரிய நாயகியின் முகத்தைப் பார்த்து தேவராஜன் சகல காரியங்களையும் செய்கிறானோ, அத்தகைய தேவநாயகியான சசிதேவியின் பிரியத்துக்குப் பாத்திரமான இந்தப் பாரிஜாத மரத்தை நீ மூடத்தனமாக விரும்புகிறாய். இதை அறிந்தால் இந்திரன் வஜ்ராயுதத்தால் உன்னையே எதிர்த்துப்போர் செய்வான். அவனையே சகல தேவர்களும் பின்தொடர்வார்கள். நீ இதற்காக தேவர்களனைவரோடும் போரிட வேண்டியிருக்கும். ஆகையால் புத்திசாலிகள் கேட்டை விளைவிக்கும் காரியத்தில் பிரவேசிக்க மாட்டார்கள்! என்றார்கள்.
அதைக்கேட்டதும் சத்தியபாமைக்கு கோபம் பொங்கியது. அவள் அவர்களை நோக்கி, காவற்காரர்களே! இந்த மரத்துக்கு இந்திரன் யார்? சசி யார்? இது அமிர்தம் கடையும் போது கிடைத்தது என்றால், இது எல்லோருக்கும் பொதுவாக அல்லவோ இருக்கவேண்டும்? அப்படியிருக்க இந்திரன் ஒருவனே எப்படிக் கைகொள்ளலாம்? திருப்பாற் கடலில் பிறந்த அமுதம், சந்திரன், காமதேனு முதலியவை எப்படி யாவருக்கும் பொதுவோ அப்படியே இந்தப் பாரி நாதமும் எல்லோருக்கும் பொதுவாக வேண்டுமேயன்றி இந்திரனுக்கு மட்டுமே எப்படி உரிமையாகலாம்? ஆனால் இந்திராணி தன் கணவன் புஜபலத்தைப் பற்றிய கர்வத்தால் இதை எடுத்துக்கொண்டு போகக் கூடாது என்று தடுக்கிறாள். நல்லது. இப்போது இதை சத்தியபாமை தான் எடுப்பித்தாள் என்று அவளிடம் போய்ச் சொல்லுங்கள். நீங்கள் சிக்கிரம் சென்று இந்திராணியிடம் நீ உன் புருஷனுக்குப் பிரியமானவளாக இருந்து, அவன் உனக்கு வசப்பட்டவனாக இருந்தால், என்கணவன் இதை எடுத்துக்கொண்டு போவதை நிறுத்திவிடு பார்க்கலாம்! உன் கணவன் இந்திரன் தேவர்களுக்கு அரசன் என்பதை நான் அறிவேன். அறிந்துதான் மனித மங்கையாக இருக்கும் நான் உன்னுடையது என்று சொல்லப்படும். இந்த மரத்தை எடுப்பித்தேன், என்று கண்ணன் மனைவி சத்தியபாமை கர்வத்தோடு சொன்னாள் என்று நான் சொன்னவற்றை, அப்படியே தேவராணிக்குச் சொல்லுங்கள் என்றாள். காவலர்களும் ஓடிச் சென்று அப்படியே இந்திராணி சசிதேவியிடம் சொன்னார்கள். உடனே இந்திராணி தன் கணவனான இந்திரனைத் தூண்டிவிட்டாள்.
மைத்ரேயரே! இவ்விதமாக இந்திராணி இந்திரனைத் தூண்டிவிட்டதும், அவன் பாரிஜாதத்திற்காகச் சகல தேவ சைன்னியங்களுடன் சாக்ஷõத் பகவானோடு போர் செய்ய வந்தான். வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரனின் தலைமையில், வானவர்கள் இரும்புத்தடி, கத்தி சூலம் முதலிய ஆயுதங்களை ஏந்தி வந்தனர். இந்திரன் ஐராவதத்தின் மேலேறி வந்தான். அதைக் கண்ட கண்ணன் திசைகள் யாவும் அதிரும்படி, சங்கத்வனி செய்து ஆயிரம் ஆயிரம் பாணங்களை வர்ஷித்தார். தேவேந்திரன் ஸ்ரீகிருஷ்ணன் இரு தரப்பினரிடையில் நெடுநேரம் போர் நிகழலாயிற்று. தேவேந்திரனின் தரப்பில் வருணதேவன் தன் பாசத்தை பிரயோகித்தான். கண்ணன் தரப்பில் கருடன் சிறிய பாம்பைத் துண்டிப்பது போல தனது மூக்கினாலே துண்டித்துவிட்டார். யமன் கால தண்டத்தை எறிந்தான். மதுசூதனன் அதைத் தமது கதாயுதத்தால் கீழே தள்ளினார். குபேரன் சிபிகை என்ற ஆயுதத்தை வீச அதைத் திருவாழியினாலே கண்ணன் பொடியாக்கினார். சூரியனைத் தனது திருக்கண் ஒளியாலே ஒளியற்றவனாக்கி, அக்கினியையும் குளிர்ந்துவிடச் செய்தார். வசுக்களைச் சிதற வடித்தார். உருத்திரர்களைச் சக்ராயுதத்தால் சூலங்களை முறித்துத் தரையில் படுக்கச் செய்தார். கந்தர்வர், வசுவர், முதலியோர் இலவம் பஞ்சு போலப் பறந்தனர். மதுசூதனனும் தேவேந்திரனும் அம்புகளை மழை பொழிவது போல் பொழிந்தனர். அப்போது ஐராவதத்தோடு கருத்துமான் போரிட்டார். போரில் யாவும் ஒழிந்தன. இந்திரன் தன் வஜ்ராயுதத்தை எடுத்தான். கண்ணன் சுதர்சனத்தை கையில் எடுத்தார். இருவரையும் இந்நிலையில் எதிர் எதிராகக் கண்ட சர்வ லோகமும் நடுங்கின. இப்படியிருக்க, இந்திரன் வஜ்ராயுதத்தை எம்பெருமான் மீது பிரயோகித்தான். கண்ணனோ, அதைத் தம் கையால் பிடித்துக்கொண்டு, தம் சக்ராயுதத்தைப் பிரயோகிக்காமல், இந்திரா! நில் என்றார்.
வஜ்ராயுதத்தை இழந்த இந்திரன் ஓடிப்போக முயன்றான். கருடனால் சிதைக்கப்பட்ட ஐராவதம் சோர்வுற்றதால் ஓடவும் முடியாமல் அவன் மேலும் தவித்தான். அப்போது சத்தியபாமை அவனை நோக்கி, இந்திரா! நீ மூவுலகுக்கும் அதிபதி. சசியின் கணவன்! நீ ஓடுவது தகுதியற்ற செயல் உன் மனைவி பாரிஜாத மாலைகளை ஏராளமாக அணிந்து, உன்னைப் பணிவாளல்லவா? வாசவா! உன்னுடைய கர்வியான பத்தினி முன்போல் இனி பாரிஜாத மலரோடு உன்னிடம் அன்போடு பார்க்க முடியாதபோது உன்னுடைய தேவ ஆட்சி எதற்குப் பயன்படும், இந்திரா, நீ வருந்தியது போதும். வெட்கப்படாதே! பாரிஜாதத்தைக் கொண்டுபோ, இதற்காகத் தேவர்கள் வருந்த வேண்டாம். அந்த சசி, தன் கணவன் தேவர்களுக்கே அரசன் என்ற கர்வத்தால், தன் மாளிகைக்கு வந்த என்னை மதிக்கவில்லை. அது பற்றிப் பெண்மையால் ஆழ்ந்திராத சித்தமுடைய நான், என் கணவரின் மகிமையைக் கொண்டாடி, உன்னோடு போர் செய்யச் செய்தேன். பாரிஜாதத்திற்காக நான் என் கணவரைத் தூண்டவில்லை. அதற்காக போருக்குத் தூண்டவும் இல்லை. பிறர் பொருளை நான் அபகரித்தது போதும். பாரி ஜாதத்தை நீயே கொண்டுபோ! புருஷனது பெருமையைப் பற்றிக் கர்வப்படாத பெண்ணே உலகத்தில் இல்லை. ஆனால் சசியோ, அதற்காக மட்டும் கர்விக்கவில்லை. ரூபத்தாலும் மிகவும் கர்வமுடையவளாக இருக்கிறாள்! என்றாள். அதைக்கேட்டதும் இந்திரன் ஓடாமல் நின்று சத்திய பாமையை நோக்கி, கொடியவளே! இஷ்டனுக்குத் துக்கமுண்டாகும்படி ஏன் பேசுகிறாய்? எவன் எல்லாவற்றுக்கும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹார கர்த்தாவாக இருக்கிறானோ, அத்தகைய பகவானால் ஜெயிக்கப்பட்ட எனக்கு ஏன் வெட்கம் உண்டாகிறது? சூட்சுமத்துக்கும் சூட்சுமமாய், சகலவற்றிற்கும் பிறப்பிடமாய் இருக்கும் எவனுடைய சொரூபம் சகல வேத சாஸ்திரங்களையும் அறிந்தோருக்கன்றி, மற்றவர்களால் அறியப்படாமல் இருக்கிறதோ, எவன் ஒருவராலும் ஆக்கப்படாமல் தானே ஈஸ்வரனாய், அஜனாய், நித்தியனாய், தனது திருவுள்ளத்தால் உலக நன்மை கருதி மனுஷ்ய அவதாரஞ் செய்திருக்கிறானோ அந்தப் பகவானை வெல்லும் வல்லவன் யார்? ஆகையால் நான் தோல்வியடைந்தது நியாயம்தான்! என்றான்.

——————-

31. பதினாறாயிரத்து நூறு கன்னியர் விளக்கம்

மைத்திரேயரே! இந்திரன் தோற்றுத் துதித்ததும் கிருஷ்ணபகவான் கருத்து ஆழ்ந்திருக்கும்படிச் சிரித்து, ஓ, லோகேசுவரனே! நீயோ தேவர்களின் அரசன் நானோ மனிதன்! ஆகையால் எங்கள் அபராதத்தை நீயே பொறுக்க வேண்டும். அந்தப்பாரிஜாத விருட்சத்தைத் தகுந்த இடத்திற்குக் கொண்டு போகலாம். இதை நான் சத்தியபாமை வார்த்தையால் எடுத்தேனேயன்றி என் விருப்பத்தாலல்ல. நீ பிரயோகித்த உன் வஜ்ராயுதத்தை நீயே வைத்துக்கொள். இது உனக்குத்தான் சத்துரு சங்காரத்திற்காக ஏற்படுத்தப்பட்டது என்று கூறியருளினார். அதைக் கேட்டதும் இந்திரன், எம்பெருமானே! நான் மனிதன் என்று நீ சொல்லி, ஏன் என்னை மயக்குகிறாய்? உன்னை நான் அறிவேன். ஆயினும் சூஷ்மத்தை அறியேன், ஜகத் ரக்ஷிப்புக்குரியவன் எவனோ, அவனே நீ! ஓ அசுரசங்காரனே! இப்போது உலகத்துக்கு உபத்திரவம் செய்வோர்களைக் களைந்து வருகிறாய். இந்தப் பாரிஜாதத்தை துவாரகைக்கு நீயே கொண்டு போக வேண்டும். நீ பூமியை விட்டுப்போன பிறகு அது அங்கிராது. தேவ தேவா! ஜகந்நாதா! ஸ்ரீ கிருஷ்ணா! ஸ்ரீ விஷ்ணுவே! சங்கு சக்கர கதாபாணியே! அடியேனிடம் கிருபை கூர்ந்து அபராதத்தை மன்னித்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தான். கண்ணனும் அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்து, பூலோகத்திற்குச் சென்று துவாரகைக்கு மேலே நின்று, சங்கநாதம் செய்தார். துவாரகையில் இருக்கிறவர்கள் எல்லாம் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். நகரத்தாரெல்லாம் பார்த்திருக்க, கருடன் மீதிருந்து, சத்தியபாமையோடு ஸ்ரீகிருஷ்ணன் கீழே இறங்கி, அந்தப் பாரிஜாத மரத்தை சத்தியபாமாவின் மாளிகையிலுள்ள புழைக்கடையில் நாட்டியருளினார்.
அந்தப் பாரிஜாத விருட்சத்தின் மகிமையைச் சொல்கிறேன் கேளுங்கள். அதன் அருகே சென்ற மனிதனுக்குத் தன் பூர்வ ஜனன ஸ்மரணை உண்டாகும். அதன் மலர்களுடைய சுகந்தம் மூன்று காதமளவு வீசிக்கொண்டிருக்கும். அத்தகைய விருட்சத்தின் அருகே சென்று யாதவர்கள் அதைப் பார்த்துத் தங்களுடைய தேகங்களைத் தேவதேகங்களாகக் கண்டார்கள். பிறகு ஸ்ரீகிருஷ்ணன் பிராக்ஜோதிஷ நகரிலிருந்து கொண்டுவந்த யானை, குதிரை முதலான பொருட்களைச் சுற்றத்தாருக்குத் தக்கபடி பிரித்துக் கொடுத்தார். பிறகு நரகாசுரன் பல திசைகளிலிருந்தும் கொண்டு வந்து சிறைப்படுத்தியிருந்த கன்னியரையெல்லாம் நல்லதொரு நாளிலே நன் முகூர்த்தத்தில் திருமணம் புரிந்து கொள்ளத் திருவுள்ளம் கொண்டார். அந்தப் பதினாறாயிரத்து ஒரு நூறு மங்கையருக்கும் ஒரே நேரத்தில் தனித்தனியாய் ஒவ்வொருவராயிருக்கும்படி அத்தனை ஆயிரம் திருமேனி எடுத்து அங்கங்கே விதிப்படித் திருமணஞ் செய்து கொண்டார். அம்மங்கையரில் ஒவ்வொருத்தியும் தன் தன் கைகளைப் பிடித்திருப்பது கிருஷ்ணமூர்த்தியென்றே நினைத்திருந்தார்கள். இவ்வாறு திருக்கல்யாண மகோத்சவத்தில் மட்டுமின்றி, இதுபோல் பல ரூபங்கொண்டு, ஒவ்வொரு இரவிலும் அந்தந்த பாக்கியவதிகளின் மாளிகைகளில் தோன்றி, அவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்.

——————-

32. உஷையின் கனவும் காதலும்

மைத்ரேயரே! ருக்குமணிப் பிராட்டிக்கு பிரத்தியும்னன் முதலிய குமாரர்கள் பிறந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா? மற்றவர்களுக்குச் சொல்கிறேன், கேட்பீராக, சத்தியபாமைக்குப் பானு, பவுமன், இரிகன் முதலிய குமாரர்கள் அவதரித்தார்கள்- தீப்திமான், தாம்பிரபக்ஷன் முதலியவர் ரோகிணியின் பிள்ளைகள். சாம்பன் முதலியோர் ஜாம்பவதியின் பிள்ளைகள். பத்திரவிந்தாதிகள் நாக்னஜிதியின் பிள்ளைகள். சயிப்பியை என்பவளுக்கு சங்கிராமஜித்து முதலியோர் பிறந்தார்கள். விருகன் முதலியவர்கள் மந்திரியிடம் உதித்தவர்கள். காத்திரவான் முதலியோர் லஷ்மணையின் புதல்வர்கள். சுரதன் முதலியோர் காளிந்தியின் மக்கள். மற்ற தேவிமாரிடத்தில் பலர் பிறந்தனர். இவ்வாறு பல தேவிமார் மூலம் ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பிறந்த குமாரர்கள் எண்பதினாயிரத்து நூற்றுவராகும். இவர்கள் யாவருக்கும் எல்லா வகையிலும் மூத்தவன் பிரத்தியும்னன்! அவன் குமாரன் அநிருத்தன். அவன் குமாரன் வஜ்ரன் அநிரு தன் என்பவன் பலிச்சக்கர வர்த்தியின் பேர்த்தியும் பாணனுடைய மகளுமான உஷை என்பவளைத் திருமணஞ் செய்து கொண்டான். அதன் காரணமாக ஸ்ரீகிருஷ்ணனுக்கும் சங்கரனுக்கும் கொடிய யுத்தம் உண்டாயிற்று. அதில் ஸ்ரீ கிருஷ்ணன் பாணாசுரனின் ஆயிரம் தோள்களையும் துண்டித்து விட்டார்! இவ்வாறு பராசர மகரிஷி கூறிவரும்போது மைத்ரேயர் குறுக்கிட்டு அவரை நோக்கி, மாமுனிவரே! உஷையின் காரணமாக ஹரிஹரர்களுக்கு எப்படிப்போர் உண்டாயிற்று? ஸ்ரீ ஹரி, எப்படிப் பாணனுடைய தோள்களைத் துண்டித்தார்? இவற்றை எனக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டார். அதற்குப் பராசர முனிவர் சொன்னதாவது :
கேளும் மைத்ரேயரே! பாணன் என்னும் அசுரனுக்கு உஷை என்னும் ஒரு புதல்வி இருந்தாள். ஒரு சமயம் சிவனோடு கூடி மகிழ்ந்து கொண்டிருந்த பார்வதியை உஷை பார்த்துவிட்டு, அதுபோலத் தானும் கூடிமகிழவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவளது கருத்தை அறிந்த பார்வதி அவளைப் பார்த்து, பெண்ணே! நீ ஏன் இப்படித் தவிக்கிறாய்? உன் புருஷனுடன் கூடி நீயும் இப்படிக் கிரீடிப்பாய்! என்றாள். அதைக் கேட்ட உஷை, இந்தச்சுகம் எனக்கு எப்பொழுது கிட்டுமோ? என் புருஷன்தான் எவனோ? என்றாள். அதற்குப் பார்வதி, ஓ ராஜகுமாரி! வைகாசி மாதச் சுக்கில பக்ஷத் துவாதசியில், உன் கனவில் எவன் உன்னோடு ரமிப்பானோ, அவனே உனக்குக் கணவனாவான்! என்று கூறியருளினாள்.
பிறகு பார்வதி சொன்னதுபோல அந்த நாளில் ஒரு புருஷனோடு உடலுறவு கொண்டதாக உஷை கனவு கண்டு அவனிடத்திலேயே ஆசை மிகுந்தவளாய்க் கண்விழித்தாள். அந்த புருஷனைக் காணாமல் என் பிராண நாயகா! நீ எங்கே போனாய்? என்று நாணமின்றி விரகதாபத்தோடு புலம்பினாள். அதை அவளுடைய தோழியான சித்திரலேகை கேட்டு விட்டாள். உஷையின் தந்தையான பாணாசுரனுக்கு மந்திரியாக விளங்கும் பாண்டனின் மகள்தான் சித்திரலேகை. உஷையின் தோழியாக இருந்த அவள், உஷையிடம் நீ யாரைப்பற்றி இப்படிப் புலம்புகிறாய்? என்று கேட்டாள். உஷையோ வெட்கத்தால் அவளிடம் ஒன்றும் பேசாமல் இருந்தாள். சித்திரலேகை தன்மீது நம்பிக்கை ஏற்படும்படி உஷையை சமாதானம் செய்தாள். பிறகு உஷை, தான் கனவுகண்ட கனவு நிகழ்ச்சிகளையும் பூர்வத்தில் தன்னிடம் பார்வதி தேவி சொன்னதையும் சொல்லி, அடி தோழி! இவ்விதமான புருஷனை நான் அடைவதற்கு எது உபாயமோ, அதை நீயே செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அதற்கு சித்திரலேகை, அடி என்னுயிரே! நீ சொன்ன சங்கதி அறிவதற்கே கஷ்டமானது. சொல்லவும் அடையவும் இயலாதது. ஆனாலும் நான் உனக்கு உபகாரம் செய்ய வேண்டும். ஆகவே நான் முயற்சி செய்கிறேன். நீ ஏழெட்டு நாட்கள் வரை பொறுத்திருக்க வேண்டும் என்று சொல்லி, ஓர் உபாயம் செய்ய யோசித்தாள். அதன்படிச் செய்யலானாள்.
அதாவது தேவர்கள், கந்தர்வர், அசுரர், மனிதர் முதலியவர்களில் முக்கியமாயுள்ள வாலிபர்களின் உருவங்களையெல்லாம் ஓவியமாக சித்திரலேகை வரைந்து அந்த ஓவியங்களை யெல்லாம் ஒவ்வொன்றாக உஷையிடம் காண்பித்தாள். அவற்றை அவள் காண்பித்து இவர்களில் உன் காதலன் யார் என்று கேட்டாள். உஷையோ ஓவியத்தில் இருந்த தேவ, தானவ, கந்தர்வர்கள் அனைவரையும் விட்டுவிட்டு, மனிதர் வரிசையில் பார்த்தாள். அதில் யாதவர்களில் கண் வைத்தாள். கண் வைத்து ஸ்ரீராமகிருஷ்ணர்களைக் கண்டு வெட்கப்பட்டவளாகிப் பிரத்தியும்னனைக் கண்டு நாணிக் கண்ணை அப்புறம் போக்கி, கடைசியில் அநிருத்தனைக் கண்டு நாணந் துறந்து இவன்தான் என் கனவில் வந்தவன்! என்னைக் கனவிலே கலந்து மகிழ்ச்சி தந்தவன்! அந்தக் கனவு நாயகன் இவனேதான் என்றாள். அதைக்கேட்டதும் சித்திரலேகை மகிழ்ந்தாள். அவள் தனது யோகவித்யா பலத்தால் வானத்திற் செல்லக்கூடிய வல்லமையுடையவள். ஆகையால் அவள், உஷையை நோக்கி, ஸ்திரீ ரத்தினமே இவன் ஸ்ரீகிருஷ்ணனுடைய பேரன் இவன் பெயர் அநிருத்தன். அழகும் வீரமும் கொண்ட புகழ் பெற்றவன். இவனையல்லவா பராசக்தி உனக்குப் பர்த்தாவாக அணுகிரகித்தாள்? நீ இவனைப் பெறுவாயானால் எல்லாச் செல்வங்களையும் நீயே பெற்றதுபோல் வாழலாம். இவன் வாசஞ்செய்யும் துவாரகையோ யாரும் பிரவேசிக்க முடியாதது. ஆயினும் என்னால் இயன்றவரை முயன்று பார்க்கிறேன். உன் கனவு நாயகனை இங்கே கொண்டு வருகிறேன். இந்த ரகசியத்தை வேறு யாருக்கும் சொல்லிவிடாதே! நான் விரைவில் வந்துவிடுகிறேன் என்று உஷைக்குச் சமாதானம் சொல்லிவிட்டு சித்திரலேகை விண்வெளி வழியாகத் துவாரகைக்குச் சென்றாள்.

——————–

33. உஷையின் காதல் உறவும் பாணாசுரப் போராட்டமும்

உஷையின் தந்தையான பாணாசுரன் முன்பொரு சமயம் சிவபெருமானைத் தொழுது சுவாமி! எனக்கு ஆயிரங்கைகள் இருப்பதால் எனக்கு வெறுப்பே உண்டாகிறது. அவைகளுக்குத் தக்க யுத்தம் உண்டானால் அல்லவோ பயன்? இல்லாமற்போனால் வீண் சுமையான இந்தக் கைகளால் எனக்கு ஆகவேண்டுவது என்ன? ஆகையால் இக்கைகள் எனக்குப் பயன்படும்படியான ஏதாவது யுத்தம் வருமா? என்று கேட்டான். அதற்குச் சிவபெருமான், அட பாணா! மயில் அடையாளமுள்ள உன் வீரக் கொடியானது எப்போது முறிந்து விழுகிறதோ, அப்போது பேய்கள் முதலானவை மகிழும்படியான மாபெரும் யுத்தம் ஒன்று மூளும்! என்றார். அவரை பாணன் தொழுதுவிட்டு, தன் அரண்மனைக்குச் சென்றான். சிறிது காலம் கழித்து, ஒருநாள் அவனது கொடிமரம் முறிந்ததைக் கண்டு அவன் மிகவும் மகிழ்ந்திருந்தான்.
அந்தச் சமயத்தில் உஷையின் தோழியான சித்திரலேகை, தனது யோக வித்தைச் சிறப்பினால் துவாரகை சென்று, அநிருத்தனைத் தூக்கிக்கொண்டு வந்து, உஷையின் அந்தப்புரத்தில் சேர்த்தாள். அநிருத்தனான அந்தக் கனவு நாயகன் தன் கைக்குக் கிடைத்ததும் உஷை மிகவும் காதல் வேகங்கொண்டு அவனோடு தான் விரும்பிய போகங்களையெல்லாம் அனுபவித்து வந்தாள். இந்தச் செய்தியை அங்கிருந்த காவலாளர்கள் அறிந்து, பாணாசுரனிடம் சென்று, அரசே! கன்னிமாடத்திலே யாரோ ஓர் அரச குமாரன் எப்படியோ பிரவேசித்து, நம்முடைய கன்னியோடு சுகித்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்னார்கள். அதைக் கேட்டதும் பாணாசுரன் மிகவும் கோபமடைந்து கிங்கர சைன்னியத்தைக் கொண்டு அநிருத்தனை எதிர்த்தான். அநிருத்தனோ அங்கிருந்த வாசலின் உழல் தடியைக்கொண்டு, பாணாசுரனின் சேனா வீரர்களை நாசஞ் செய்தான். அவர்கள் அனைவரும் அநிருத்தனோடு போரிட்டு யாதவ வீரனால் ஜயிக்கப்பட்டான். அதனால் ஏங்கிய பாணனிடம் அவன் அமைச்சன், மாயையைக் கொண்டு போர் செய்யும்படி ஆலோசனை வழங்கினான். பாணாசுரனும் அப்படியே மாயையினால் போர் செய்து அநிருத்தனை நாகாஸ்திரத்தால் கட்டிப் போட்டான்.
இந்நிலைமையில், துவாரகையில் அநிருத்தனைக் காணாமல் யாதவர்கள் யாவரும் அவன் எங்கே போயிருப்பான் என்று யோசித்தார்கள். பாரிஜாத மரம் காரணமாகப் பகைகொண்ட தேவர்களே அவனை அபகரித்துச் சென்றனரோ என்று எல்லோரும் எண்ணியிருந்தார்கள். அப்பொழுது நாரத முனிவர் துவாரகை சென்று, சித்திரலேகை என்பவள் தனது யோக சக்தியினால் அநிருத்தனை பாணாசுரனின் நகரத்துக்குக் கொண்டுபோய் உஷையிடம் சேர்த்தது முதல், அநிருத்தனை பாணாசுரன் நாகாஸ்திரத்தில் கட்டிப் போட்டிருப்பது வரையிலுள்ள செய்திகளையெல்லாம் யாதவர்களிடம் விவரித்துச் சொன்னார். அதைக் கேட்டதும் யாதவர்கள் தேவர்கள்மீது தாம் கொண்ட சந்தேகம் நீங்கினார்கள். பிறகு ஸ்ரீகிருஷ்ணன் தம் பெரிய திருவடியான கருடனை நினைத்தார். உடனே வந்து நின்ற கருடனின் தோள்மீது ஸ்ரீ கிருஷ்ணன் ஏறிக் கொண்டு, பலராமர் பிரத்தியும்னர் முதலானவர்களுடன் சோணிதபுரத்திற்குச் சென்றார். அங்கு காவல் புரிந்து வந்த சிவனுடைய பிரதம கணங்கள் சிவபக்தனான பாணாசுரனுக்காக ஸ்ரீகிருஷ்ணன் முதலானவர்களை எதிர்த்தன. அவர்களையெல்லாம் துவம்சம் செய்து ஸ்ரீகிருஷ்ண பகவான், பாணபுரத்திற்கு வந்தார். அங்கு சிவனால் ஏவப்பட்ட ஒரு ஜ்வரம் மூன்று பாதங்களும் மூன்று தலைகளும் கொண்டதாய் பாணனுக்காக சாரங்கபாணியுடன் போர் செய்தது. அந்த ஜ்வரம் மூன்று சாம்பலையே ஆயுதமாகப் பிரயோகிக்கவே, அதுபட்டு பலராமர் கண்களை மூடிக்கொண்டு, ஸ்ரீகிருஷ்ணனைக் கட்டிக் கொண்டு ஆறுதல் அடைந்தார். அப்போது ஸ்ரீமந் நாராயணனும் ஒரு புதிய ஜ்வரத்தை உண்டாக்கினார். அதன் சக்தியால் சிவனின் சைவ ஜ்வரமானது, உடனே ஸ்வாமியின் தேகத்திலிருந்து ஓடிப்போய் நடுங்கியது. அப்பொழுது பிருமதேவன் பொறுத்தருளவேண்டும் என்று பிரார்த்திக்க கண்ணனும் அப்படியே ஆகட்டும் என்று கூறித் தம்முடைய வைஷ்ணவ ஜ்வரத்தைத் தன்னுள்ளே லயப்படுத்திக் கொண்டார். பிறகு சைவஜ்வரம் எம்பெருமானே, அடியேனுக்கு தேவரீரோடு நேர்ந்த யுத்தத்தை நினைக்கும் மனிதருக்கு ஜ்வரத்தினாலுண்டான துன்பம் ஏற்படாமலிருக்கக் கடவது! என்று சொல்லிவிட்டுப் போயிற்று.
பிறகு ஸ்ரீகிருஷ்ணர் அக்கினித் தேவர் ஐவரையும் நாசஞ் செய்து, அவர்களுடன் வந்த அசுர சேனைகளையும் விளையாட்டாகவே சூரணமாக்கினார். இவ்விதமாகத் தன் படைகள் நாசமாவதைக் கண்ட பாணாசுரன் தன் சேனைகள் அனைத்தையும் திரட்டிக்கொண்டு போர் செய்ய வந்தான். அவனுக்குப் பக்கபலமாகச் சிவனும் சுப்பிரமணியர் முதலானவர்களும் வந்தார்கள். இவ்வாறு ஹரிஹரர்களுக்குள் மிகக் கொடிய யுத்தம் உண்டாயிற்று. அஸ்திர சஸ்திர ஜ்வாலையினால் உலகம் கலங்கியது. பிரளயமே வந்ததாகத் தேவர்கள் கருதினர். இவ்விதமாகப் பெரும்போர் நடக்கும்போது, ஸ்ரீகிருஷ்ணன் சிரும் பணாஸ்திரத்தைச் சிவன்மீது பிரயோகம் செய்யவே, ஒன்றுமே செய்யாமல் சிவன் கொட்டாவி விட்டுக்கொண்டு சோர்ந்து போகும்படிச் செய்தார். அதனால் தைத்தியரும் பிரதம கணங்களும் நாசமடைந்தனர். சிவன் சக்தியற்றதால் தேர்த் தட்டிலேயே சோம்பலாக இருந்தார். இதனால் சிவ குமாரனான முருகனுக்கும் ஸ்ரீகிருஷ்ணனான முகுந்தனுக்கும் போர் நிகழ்ந்தது. ஸ்ரீகிருஷ்ணன் ஓர் ஹுங்காரம் செய்தார். உடனே அது முருகனின் வேலாயுதம் அடித்துச் சென்றது. பக்ஷிராஜனான கருடன் முருகனின் வாகனமான மயிலையடித்து வீழ்த்தினார். அப்போது பிரத்தியும்னன் அம்புகளைப் பிரயோகித்ததால், முருகன் சமர்க்களத்திலிருந்து ஓடிப்போனான். பலராமர் வீசிய ஆயுதங்களால் பாணாசுரனின் படைகள் நிலைகுலைந்து ஓடின. பாணாசுரன், கிருஷ்ணனோடு கடும்போர் புரியலானான். கிருஷ்ணனது கவசத்தை பிளக்கத்தக்க கொடிய அம்புகளைப் பாணன் பிரயோகித்தான். அவன் செலுத்திய அம்புகளாலேயே தடுத்த ஸ்ரீகிருஷ்ணன், பாணனைச் சங்கரிக்க எண்ணி, அநேக ஆயிரம் சூரிய சக்திமிக்க தம் சுதரிசனச் சக்கரத்தை எடுத்துப் பிரயோகித்தார். அப்படி அவர் பிரயோகிக்கும்போது, கோடரீ என்ற அசுரவித்தியா ரூபமான தேவதை திகம்பரியாக ஸ்ரீகிருஷ்ணனின் எதிரில் வந்து நின்றாள். அவ்விதம் அவள் நிர்வாணமாக நின்றதால் கண்ணன் தம் கண்களை மூடிக்கொண்டு, பாணாசுரனின் கரங்களைச் சேதிக்கும்படித் திருவாழியைப் பிரயோகித்தார். அந்தச் சக்கரம், பாணாசுரனின் வலிமை மிகுந்த ஆயுதங்களைச் சேதப்படுத்திவிட்டு, வன்மையுள்ள அவனுடைய ஆயிரம் தோள்களையும் முறையே சிதைத்து விட்டுச் சுவாமியின் திருக்கைக்குத் திரும்பி வந்து சேர்ந்தது. ஸ்ரீகிருஷ்ணன் மீண்டும் தமது திருவாழியை பாணாசுரனைச் சங்கரிப்பதற்காகச் செலுத்த நினைப்பதையும் பாணாசுரன் கைகளற்று தாரை தாரையாக இரத்தம் ஒழுகத் துடித்து நிற்பதையுங் கண்ட பரமசிவனார் கண்ணனிடம் வந்து விண்ணப்பஞ் செய்யலானார்.
ஸ்ரீகிருஷ்ணா! நீயே பரமேசுவரனும் பரமாத்மாவும் ஆதியந்தமில்லாதவனும், புரு÷ஷாத்தமனுமான ஸ்ரீஹரி என்பதை அறிவேன். திரியக்குகளில் ஒரு திருமேனியை எடுத்து வருவதெல்லாம் உனக்கு ஓர் திருவிளையாடல். ஆகையால் நீ மனிதனல்ல. அண்டினவரை ஆதரிப்பவனே! இந்த பாணாசுரனுக்கு நான் அபயம் அளித்திருக்கிறேன். அதை நீ பொய்யாக்காமல் இருக்க வேண்டுகிறேன். நான் பக்கபலமாக இருக்கிறேன் என்ற கர்வத்தால் அவன் இப்படிச் செய்தானேயன்றி உன் திறத்தின் விரோதத்தால் அபராதஞ் செய்தவனல்ல ஆகையால், அவன் குறையை என் பொருட்டு மன்னிக்க வேண்டுகிறேன் என்றார். இவ்விதம் சூலபாணியாக நின்ற உமாபதியை நோக்கி, ஸ்ரீகிருஷ்ணன், ஓ சங்கரனே! நீ வரங் கொடுத்திருப்பதால் இந்த அரக்கன் பிழைத்திருக்கட்டும் உன் வார்த்தைக்கு மதிப்பளித்து நானும் என் சக்கரத்தைப் பிரயோகிக்காமல் இப்போதே நிறுத்திவிடுகிறேன். நீ அபயங்கொடுத்தது, நான் அபயம் கொடுத்தது போலேயாம். நீ உன்னை என்னோடு இணைந்தவனாக நினை. நீ என் ஸ்வரூபம் தேவாசுர மனுஷ்யாதி ரூபமான பிரபஞ்சம் என் ஸ்வரூபம். என்னையன்றி ஒன்றுமில்லை. இந்த உண்மையை நீ அறிந்து கொள். உலகத்தார் மாயையால் இந்தப் பிரபஞ்சத்தை என் ஸ்வரூபம் அல்லாததாக நினைத்து உன்னை என் ஸ்வரூபமின்றி வேறுபட்டவனாக நினைக்கிறார்கள். நந்திக் கொடியோனே! உன் விஷயத்தில் நான் அனுக்கிரகமுடையவனானேன். நான் துவாரகை செல்கிறேன். நீயும் உன்னிடம் செல்வாயாக! என்று சொல்லிவிட்டு ஸ்ரீகிருஷ்ணன் தம் பேரன் அநிருத்தன் கட்டப்பட்டுக் கிடக்கும் இடத்திற்கு விரைந்தார். அங்கு அநிருத்தனைக் கட்டியிருந்த சர்ப்ப பாசங்கள் எல்லாம் கருடனின் காற்றுப் பட்டதுமே நசித்தன. பிறகு ருக்குமணி வல்லபன், அநிருத்தனையும் அவன் பத்தினி உஷையையும் பெரிய திருவடியின் தோள் மேலேற்றி, பிரத்தியும்னனுடன் துவாரகைக்கு எழுந்தருளினார். மைத்ரேயரே! இவ்விதமாக எம்பெருமான் பூபாரம் தீர்க்கத் துவாரகையில் தம் தேவியரோடும் புத்திர பவுத்திரர்களுடனும் வாழ்ந்து கொண்டிருந்தார்.

————————

34. காசி தகனம்

பராசர மகரிஷியை நோக்கி, மைத்ரேய முனிவர், குருநாதா! ஸ்ரீவிஷ்ணு மனுஷ்ய அவதாரஞ்செய்து பெருமைக்குரிய செயல்களைச் செய்தருளினார். இந்திரனையும் ருத்திரனையும் வென்றார். இவ்விதமாகத் தேவர்களின் அக்கிரமச் செயல்களைத் தடுக்க கண்ணபிரான் செய்த இதர செயல்களையும் எனக்கு கூறவேண்டும் என்று கேட்டார். பராசரர் கூறலானார். பிரம்ம ரிஷியே ! பரமாத்மா இந்த மனுஷ்யாவதாரத்தில் காசி நகரத்தை எரித்த கதையைச் சொல்கிறேன், கேளும்.
புண்டரக தேசாதிபதியைச் சில அஞ்ஞானிகள், நீ சாக்ஷõத் ஸ்ரீவாசுதேவ அவதாரம் என்று சொன்னதைக் கேட்டு, அந்த மூட அரசன் இவர்கள் சொல்வது மெய்தான் நான் வாசுதேவன் தான்! என்று தன்னைப் பிரஜைகள் அப்படியே வழங்கச் செய்தான். அவன் மேலும் ஸ்ரீவிஷ்ணுவின் சின்னங்களான சங்கு சக்கராதி ஆயுதங்களையும் வனமாலை முதலியவற்றையும் அணிந்து கொண்டு, கண்ணபிரானிடம் ஒரு மூடனை அனுப்பி, அவன்மூலம், அட மூடக் கிருஷ்ணா! நீ வாசுதேவன் அல்ல; நானே வாசுதேவன். ஆகையால் இன்று முதல் என் அடையாளங்களான சங்கு சக்கரங்களை விட்டுவிட்டு, உன் பெயரையும் விட்டுவிடு. இத்தனை நாள் நீ இவ்விதமாக இருந்த அபாரத்திற்காக நான் உன்னைக் கொல்ல வேண்டும். அப்படிச் செய்யாமல் உன் உயிரை நீ காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் என்னைச் சரணடைவாயாக! என்று சொல்வித்தான். அதைக்கேட்ட கண்ணன் புன்சிரிப்பு பூத்து, தூதா! உன் அரசனான பவுண்டரகனிடம் சென்று அவனது அபிப்பிராயத்தை நான் அறிந்தேன் என்று சொல். அவன் செய்ய வேண்டுவது எதுவோ அதைச் செய்யலாம் என்றும், நான் அவன் சொன்னதைத் தடையின்றி செய்கிறேன் என்றும், எல்லாச் சின்னங்களையும் தரித்து, காசி நகரத்துக்கு வந்து இந்த சக்கிரத்தை அவனிடமே விட்டுவிடுகிறேன் என்றும், அவன் கட்டளைப்படி நாளையே அவன் சரணத்துக்கு வருகிறேன் என்றும், அவ்வாறு நான் வந்து எனக்கு இனிமேல் எப்படிப் பயமில்லாமல் இருக்குமோ அப்படியே செய்துகொள்கிறேன் என்றும் சந்தேகம் வேண்டாம் என்றும் சொல் என்று சிலேடையாகச் சொல்லியனுப்பினார். தூதன் சென்றான். பிறகு கண்ணபிரான் பெரிய திருவடியின் மேலேறி பவுண்டரக வாசுதேவனின் பட்டணத்திற்குச் சென்றார்.
இதையறிந்த காசி மன்னன் பெரும் படையோடு போருக்கு வந்தான். அவனது நகரை நெருங்குமுன்பே கருட த்வஜமுடைய பெரிய தேரில் இருந்த வண்ணம் கைகளில் சங்கம், சக்கரம், சாரங்கம், தண்டம் முதலிய ஆயுதங்களையும் பீதாம்பர வனமாலைகளையும், கிரீட குண்டலாதி ஆபரணங்களையும் அணிந்து, மார்பிலே ஸ்ரீ வச்சம் போன்றதொரு மறுவை ஏற்படுத்திக்கொண்டு யுத்த சன்னதமாக வரும் காசி மன்னனான பவுண்டரகனை ஸ்ரீ கிருஷ்ணன் கண்டு சிரித்தார். அவனோடு போர் புரிந்து, அவனையும் அவனது சேனைகளையும் நாசமாக்கினார். படைகளும் ஆயுதங்களும் பாழாகி நிற்கும் பவுண்டரகனை கண்ணன் நோக்கி, ஓ பவுண்டரக மன்னனே! நீ தூது மூலமாக உன் சின்னங்களை விட்டுவிடு என்று எனக்குக் கட்டளையிட்டது போலவே, சக்கரத்தையும் கதையையும் உன்னிடமே எறிந்தேன். அவைகளுக்கு நீ பாத்திரமாகலாம் இந்தக் கருடனையும் அனுப்பிவிடுகிறேன். இவனை உன் துவஜத்தில் ஏற்றிக்கொள்ளலாம் என்று சொல்லி சக்கரம் முதலியவற்றை ஏவினார். கண்ணனின் திருக்கையிலிருந்து புறப்பட்டுச் சக்கரம், அந்தப் பொய் வாசுதேவனை அறுத்தது. கதை முறிந்தது. காசி மன்னன் கீழே விழுந்தான். அவனுடைய கொடியும் பெரிய திருவடியினால் முறிக்கப்பட்டு, அவனுடனேயே விழுந்தது. அப்போது காசி ராஜனின் நண்பன், தன் சாரங்கத்தோடு போர் செய்தான். கண்ணன் தன் சாரங்கத்தை வளைத்து அம்பு மாரிப் பொழிந்து காசி ராஜனின் சிரசையறுத்து, அந்தத் தலையை காசி நகரின் நடுத்தெருவில் விழும்படி எறிந்தார்.
அரசனின் தலை விழுந்ததைக் கண்ட ஐனங்கள் கலங்கினர் அரசன் மகன், இது ஸ்ரீ வாசுதேவன் செய்த காரியம் என்று தெரிந்து, கோபமும் சோகமுமாக அந்த மகா ÷க்ஷத்திரத்தில் தன் புரோகிதனுடன் சேர்ந்து சிவனை யாகாதிகளாலே ஆராதித்தான். அவற்றால் மகிழ்ந்த சிவன் அவனை நோக்கி, இஷ்டமான வரத்தைக் கேள் என்று சொல்ல, அரச குமாரன் சுவாமி! என் தகப்பனைச் சங்கரித்த கிருஷ்ணனை வதை செய்ய ஒரு கிருத்தியை சிருஷ்டித்துத் தரவேண்டும் என்று வேண்டினான். உடனே தக்ஷிணாக்கினியிலிருந்து அவனுக்கே நாசஹேதுவான ஒரு கிருத்தியை உண்டாயிற்று. அக்னி ஜ்வாலைகளினால் சூழப்பட்ட பயங்கர முகத்துடன் அந்தக் கிருத்தியை, மிகவும் கோபமாகக் கிருஷ்ணா, கிருஷ்ணா! என்று கூவிக்கொண்டே துவாரகைக்கு ஓடியது. அதைக்கண்டு பயந்த ஜனங்கள் கண்ணனைச் சரண் புகுந்தனர். அப்போது கண்ணபிரான் தம் தேவியரோடு சூதாடிக் கொண்டிருந்தார். உடனே அவர் தம் கையில் இருந்த பாசிகையை உருட்டி, அக்கினிச் சுவாலைகளாகிய ஜடாபாரமுடைய சிரசுடன் மகா உக்கிரமாய் வரும் அந்தக் கிருத்தியையை அழித்துவிடு என்று திருவாழியாழ்வானுக்கு நியமித்தார். உடனே சக்கரத்தாழ்வான் அந்தக் கிருத்தியைப் பின் தொடர்ந்து ஓட்டினார். அது காசிக்கே சென்றது. மைத்ரேயரே, இவ்விதமாக அந்தக் கிருத்தியையானது திரும்ப ஓடி வந்ததைக் கண்ட காசிராஜ குமாரன், சிவனாரின் பிரதம கணப் படைகளுடன் சேர்ந்து, தன் சைன்யங்களுடன் சக்கரத்தாழ்வானை எதிர்த்தான். சக்கரம் எதிரிகளின் ஆயுதங்களையெல்லாம் அழித்து, அந்தக் கிருத்தியையும் அரசனையும் கொன்று யானை, குதிரை முதலியவை நிறைந்த காசி நகரத்தையே எரித்துவிட்டது. இப்படியாகக் காசி நகரத்தை தகனம் செய்து சாம்பலாக்கியும் சுதரிசனாழ்வாரின் சீற்றம் தணியாமல், மேலும் ஆசிருத விரோதி நிரசன ரூப கைங்கரியத்தில் விருப்பமுடையவராய், கண்ணனின் திருக்கையை வந்தடைந்தது.

——————

35. பலராமர் சாம்பனை மீட்ட கதை

குருநாதரே! மகானுபாவரான பலராமன் பராக்கிரமங்களை இன்னும் நான் கேட்க ஆசைப்படுகிறேன். என்றார் மைத்ரேயர். பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! அனந்தனாயும் தரிணிதரனாயும் உள்ள ஆதிசேஷனின் அவதாரமான ஸ்ரீ பலராமர் செய்தருளிய காரியங்களைச் சொல்கிறேன்; கேளும். அஸ்தினாபுரியிலே துரியோதனனின் குமாரிக்கு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தச் சுயம்வரத்திலே நின்ற அந்தக் கன்னிகையை ஜாம்பவதியின் மகனும் கிருஷ்ண குமாரனுமான சாம்பன் என்பவன் பலாத்காரமாகத் தூக்கிச் சென்று விட்டான். உடனே மகா பராக்கிரமசாலிகளான கர்ணன், துரியோதனன், முதலியோர் சாம்பனுடன் போர் செய்தனர். முடிவில் சாம்பன் தோற்றுவிட்டான். உடனே, அந்த சாம்பனைத் துரியோதனனின் போர்வீரர்கள் பிடித்துக் கட்டி, சிறையிலடைத்துக் காவலில் வைத்தனர். இந்தச் செய்தி கிருஷ்ணனுக்கு எட்டியது. யாதவர்கள் யாவரும் ஸ்ரீ கிருஷ்ணருடன் சேர்ந்து துரியோதனனுக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லத் தயாரானார்கள். அப்போது பலராமரான பலபத்திரர் அவர்களைத் தடுத்து, உங்களுக்கு ஏன் இவ்வளவு சிரமம்! நான் போய்ச் சொன்னாலே, என் பேச்சைக் கவுரவர்கள் தட்டாமல், சாம்பனை விடுதலை செய்வார்கள். ஆகையால் நான் ஒருவனே போய் வருகிறேன் என்று சொல்லி; ஹஸ்தினாபுரம் நோக்கிச் சென்றார். நேராகத் தலைநகரம் செல்லாமல் வழியிலிருந்த ஒரு தோட்டத்தில் தங்கியிருந்தார். அவர் வந்திருப்பதை யறிந்த துரியோதனாதியர், அந்தத் தோட்டத்துக்கு அர்க்கியம், பாத்தியம், மதுவர்க்கம் முதலியவற்றுடன் சென்று அவரைப் பூஜித்தார்கள்.
அவற்றைத் திருவுள்ளம் பற்றிய பலபத்திரர், கவுரவரைப் பார்த்து நமது உக்கிரசேன மன்னர் ஒரு கட்டளையிட்டிருக்கிறார் அதனால்தான் நான் இங்கு வந்தேன். அதாவது சாம்பனை நீங்கள் விடுதலை செய்ய வேண்டும் என்றார். அதைக் கேட்டதும் பீஷ்மர் முதலானவர்களும், கர்ண துரி யோதனாதியரும் மனங் கலங்கி மிகவும் கோபங்கொண்டு பலராமரை நோக்கி ஓய்! உலக்கை வீரரே! ஆட்சிக்குத் தகாதது யது வமிசம் என்று தெரிந்தும் நீர் எப்படி இப்படிப் பேசினீர்? குருவமிசத்தாருக்கு எந்த யாதவன் கட்டளை இடுவான்? உக்கிரசேனன் கவுரவருக்குக் கட்டளையிடுகிறான் என்றால், எங்களுக்கு ராஜயோக்கியமான சத்திர சாமரங்கள் எதற்கு? அவையெல்லாம் எங்களுடைய சார்பினாலுண்டானவையல்லவா? அவைதானே இவ்வளவு பேச ஏதுவாயின? இனி நீ போனாலும் சரி; இருந்தாலும் சரி, துஷ்ட காரியஞ் செய்த சாம்பனை நாங்கள் விடுதலை செய்யமாட்டோம்! இதனால் வணங்குதற்குப் பாத்திரமான எங்களுக்கு யாதவர் வணக்கஞ் செய்யாமல் இருக்கட்டும்! வேலையாள் எஜமானனுக்கு கட்டளையிடுவதா? இது கர்வத்தின் செயல்! உங்களுக்கு அந்தக் கர்வம், உங்களை எங்களுடன் உட்கார வைத்துச் சாப்பிடுதல் முதலான காரியங்களால் வந்தது. ஆகையால் உங்கள் மேல் குற்றமில்லை. பலபத்திரா! உனக்கு நாங்கள் உபசாரஞ் செய்தது அன்பினாலேயன்றி மரியாதையால் அன்று! என்று கூறிவிட்டு துரியோதனாதி கவுரவர்கள் அனைவரும் சாம்பனை விடக்கூடாது என்ற ஒரே கட்டுப்பாடாகச் சரேலென்று அஸ்தினாபுரத்திற்குச் சென்று விட்டார்கள்.
இவ்விதமாகக் குருகுலத்தார் இழிவாகப் பேசியதாலும் மதுபான மதத்தாலும் கலங்கிக் கரையில்லாத கோபங்கொண்ட பலராமர் எழுந்து நின்று பக்கத்தில் இருந்த தரையை ஓரிடி இடித்தார். உடனே, அந்தத் தரை நான்கு, பக்கமும் அதிரும்படி பிளந்தது. அவர் கண் சிவக்க, புருவம் நெறிந்து நெற்றியிலேறக் கூவினார்: ஓஹோ! பலவீனராயும் துராத்மாக்களுமாகிய இந்தக் கவுரவருக்குத்தான் எவ்வளவு கர்வம்? யாதவர்களான எங்களுக்கு ஆட்சியுரிமை இயல்பாய் வராமல் காலபலத்தால் வந்தது என்றல்லவா அந்தக் கவுரவர் ஏளனம் சொல்கிறார்கள்? இதனால் அல்லவா உக்கிரசேனரின் கட்டளையை அவமதிக்கிறார்கள்? எப்படியிருந்தாலும் சுதர்மை என்ற சபா மண்டபத்தில் உட்கார்ந்திருப்பது யார்! நமது உக்கிரசேனர் தானே? ஆகையால் அவருக்குச் சமானமான அரசர்கள் யார் இருக்கிறார்கள்? பல மனிதர்கள் அனுபவித்துக் கழித்த ராஜ பதவியைத் தானே அக்கவுரவர்கள் பெரிதாய் மதிக்கிறார்கள்? அவர்களை ஒடுக்க எங்கள் மன்னன் உக்கிரசேனன் ஏன்? இப்போதே நான் இந்தக் கவுரவப் பூண்டேயில்லாமல் செய்கிறேன்! இப்போதே கர்ணன் துரியோதனன், துரோணன், பீஷ்மன், பாஹலிகன், பூரி, பூரிச்சிரவன், சோமதத்தன், பீமன், அர்ச்சுனன் ஆகியோரின் சதுரங்க சேனைகளையும் நாசஞ் செய்து, வீரனான சாம்பனை மீட்டு, அவன் விரும்பிய மனைவியோடு துவாரகை சென்று, உக்கிர சேனாதிகளைக் காண்பேன். இந்த வருத்தம் கூட நமக்கு ஏன்? இந்தக் கவுரவர் வாசஞ் செய்யும் இந்த நகரத்தையே கங்கையில் கவிழ்த்து விடுவோம்! என்று சினந்து குமுறினார். மதத்தால் கண் சிவக்கத் தமது உழுப்படைக் கீழே அமைந்திருக்கும் ஆயுதத்தை எடுத்து கவுரவர்களின் கோட்டை மதில் மேல் கட்டியிருக்கும் அவகங்கத்தில் மாட்டி இழுத்தார். அவர் அவ்வாறு இழுக்கவே, அந்தப் பட்டணம் முழுவதும் அசைந்து நடுங்கியது. அதைக்கண்டு துரியோதனன் முதலான கவுரவர்கள் அனைவரும் மனங்கலங்கிப் பலராமரிடம் ஓடி வந்து, ஸ்ரீபலராமரே! பலபராக்கிரமம் உடையவரே; பொறுத்தருள்க! கோபத்தையடக்கி எங்களுக்காக இரக்கம் காட்டும்! இதோ உங்கள் சாம்பனை, அவனது பத்தினியுடன் அழைத்து வந்து உம்மிடம் ஒப்படைத்துவிட்டோம். உமது பிரபாவம் அறியாமல் அபசாரஞ் செய்த எங்களைப் பொறுத்தருள்க என்று முறையிட்டார்கள் பலராமரும் பொறுத்தேன்; பயம் வேண்டாம்! என்று அபயம் தந்து, கலப்பையை அலகங்கத்திலிருந்து வாங்கியருளினார்.
மைத்ரேயரே! அதனால்தான் அஸ்தினாபுரம் இன்றும் கொஞ்சம் சாய்ந்து காணப்படுகிறது. இது ஸ்ரீ பலராமரின் பிரபாவம்! பிறகு கவுரவர்கள் சாம்பனை அலங்கரித்து மருமகனுக்குரிய மரியாதைகளையெல்லாம் செய்து சீதனங்களோடு, தங்கள் பெண்ணையும் அவனோடு கூட்டி பலராமர் பின்னே அனுப்பி வைத்தார்கள்.

————————-

36. குரங்கனைக் கொன்ற கதை

மித்திரா புத்திரரே! மேலும் கேளும். பலராமரின் மற்றொரு மகிமையைச் சொல்கிறேன். நரகாசுரன் என்று ஒரு தேவசத்துரு இருந்தானல்லவா? அவனுக்குத் துவிதன் என்று ஒரு நண்பன் இருந்தான். அவன் ஒரு வானர சிரேஷ்டன். பல பராக்கிரமங்களில் சிறந்தவன். அவன் இந்திரன் ஏவியதால் தனது சிநேகிதனைக் கிருஷ்ணன் கொன்றான் என்று கருதி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு செய்யக்கடவேன் என்று நினைத்தான். அஞ்ஞான மோகத்தால் யக்ஞங்களை அழிப்பதும் பிராணிகளையழித்து, காடுகள், நகரங்கள், கிராமங்கள் முதலியவற்றைத் தீக்கிரையாக்குவதும், மலைகளைத் தூக்கிப்போட்டு ஊர்களை நொறுக்குவதுமாக அந்த துஷ்டன் துவிதன் திரிந்துகொண்டிருந்தான். அவன் சாமரூபியாகையால் பெரியதொரு ரூபமெடுத்து பயிர்களில் விழுந்து புரண்டு, பயிர்களைப் பாழாக்குவதும் அவன் வழக்கம்! இதனால் உலகம் வேதாத்தியயனம், யாகம் முதலிய வைதீகச் சடங்குகள் இல்லாமல் மிகவும் துயரமுற்று இருந்தது. அக்காலத்தில் ஒருநாள் பலராமர் தம் மனைவியான ரேவதியோடும் மற்றும் சில தேவிமாரோடும் ரைவதம் என்ற மலையிலுள்ள வனத்தில் சென்று மத்திய பானஞ் செய்து, மங்கையர் மத்தியில் ஆட்டமும் பாட்டுமாய் உல்லாசமாக இருந்தார்.
அப்போது வானர வீரனான துவிதன் வந்தான். அவன் பலராமரது கலப்பை உலக்கைகளை எடுத்துக்கொண்டு, அவர் எதிரில் நின்று பற்களை இளிப்பதும், புருவம் நெறிப்பதும் உர்உர் என்று பரிகாசஞ் செய்வதுமாக இருந்தான். மேலும் அவன் பலராமரின் தேவிமாருக்கு எதிரே நின்று நகைப்பதும் குதிப்பதும், மதுபானப் பாத்திரங்களைக் கவிழ்ப்பதும் எறிவதுமாகப் பல வானரச் சேஷ்டைகளைச் செய்துகொண்டிருந்தான். பலராமர், அவனை ஓட்டினார். வெருட்டினார். அவன் அதை மதியாமல் மறுபடியும் கிறீச் கிறீச் சென்று கூவிக்கொண்டு துஷ்டச் செயல்களையே செய்து கொண்டிருந்தான். அதனால் பலராமர் புன்னகை செய்தபடியே உலக்கையை எடுத்து, அந்த வானரத்தின் மேல் எறிந்தார். உடனே அவன் ஒரு மலைக்கல்லை எடுத்து அவர்மேல் எறிந்தான். அவர் அந்தப் பெரிய கல்லைத் தமது உலக்கையால் பல துண்டுகளாக்கினார். அதனால் கோபங்கொண்ட அந்த வானர முரடன் உலக்கையைத் தாண்டி எழும்பி, தன் கையால் அவர் மார்பில் அறைந்தான். உடனே பலராமர் மிகவும் கோபங்கொண்டு தம் முஷ்டியினால் குரங்கின் தலையில் இடித்தார். அந்த இடியால், துவிதன் உதிரங்கக்கிக் கொண்டு உயிர்துறந்து வீழ்ந்தான். மைத்ரேயரே! இன்னும் ஓர் ஆச்சரியத்தைக் கேளும். அந்தக் குரங்கன் வீழ்ந்த போது அவனுடைய உடல் பூமியில் பட்டவுடன் மலையின் கொடு முடியொன்று, இந்திரனது வஜ்ராயுதத்தால் பிளக்கப்பட்டது போல், பல பிளவுகளாய்ப் பிளந்து வீழ்ந்தது. தேவர்கள் பூ மழை பொழிந்தனர். பிறகு தேவர்கள் பல ராமரிடம் வந்து ஓ மகாவீரனே! நீர் ஒரு நற்காரியத்தைச் செய்தருளினீர்! அந்தத்தீய குரங்கன், அசுரர் சார்பில் உபகாரமும், தேவர்களுக்கு அபகாரமும் செய்து வந்ததால் உலகம் துன்புற்றது. இப்போது அவன் உம்மால் நாசமடைந்தான் என்று துதித்து, தங்கள் தேவலோகத்திற்கு மீண்டனர். இவ்விதமாக, ஞானவானாகவும் பூமியைத் தாங்கக்கூடிய ஆதிசேஷனுடைய திருவவதாரமாகவும் விளங்கும் ஸ்ரீ பலபத்திரரான பலராமரின் திவ்வியச் சரித்திரங்கள் பலவுள்ளன.

——————

37. பகவான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளல்

மைத்திரேயரே! இவ்விதமாகக் கண்ணபிரான், பலராமருடன், உலக ரக்ஷணார்த்தமாய், அசுரர்களையும் துஷ்ட அரசர்களையும் வதைத்தருளினான். மேலும் துஷ்ட துரியோதனாதிகளால் சூதாட்டத்தில் மோசஞ் செய்யப்பட்டு, இராஜ்யம் முதலானவற்றைப் பறிகொடுத்தப் பாண்டவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணனே தூதனாகி, கவுரவர்களின் சபைக்கு எழுந்தருளினார். அங்கு சமாதானத் தூது நிறைவேறாமல் சண்டை மூளவே, அந்த மகாபாரதப் போரில், அர்ச்சுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணனே சாரதியாக இருந்து, அநேக அரசர்களையும் அவர்களது அநேக அ÷க்ஷõகினி சேனைகளையும் அழித்து, பூமி பாரத்தை இறக்கினார். இவ்விதமாகச் சர்வேஸ்வரன் யாதவக் குலத்தில் அவதரித்து, துஷ்ட நிக்ரக, சிஷ்ட பரிபாலனங்களிலே உலகத்தை ரட்சித்து அருளினார். முனிவர் சாபம் என்ற வியாஜத்தால் தாம் அவதாரம் செய்த குலத்தையும் அழித்தார். பிறகு அவர் துவாரகையையும் மனுஷ்ய பாவனையையும் விட்டுத் தம் அம்சமான சங்கர்ஷணாதிகளோடு, தமது ஸ்தானமான பரமபதத்துக்குச் சென்றார். இவ்வாறு பராசர மகரிஷி கூறியதும் மைத்ரேயர் குறுக்கிட்டு அவரை நோக்கி, மாமுனிவரே! அந்த ஸ்ரீபகவான், முனிவர் சாப வியாஜத்தால் தமது குலத்தையே எப்படி அழித்தார்? எப்படித் தம்முடைய மனுஷ்யத் திருமேனியை விட்டுச் சென்றார். இவற்றை எனக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று கேட்டார். பராசரர் கூறலானார்.
மைத்ரேயரே! ஒரு சமயம் யாதவ குமாரர்கள் பிண்டாரசம் என்னும் தீர்த்தத்தில் விசுவாமித்திரர் கண்வர் நாரதர் என்னும் மாமுனிவர்களைக் கண்டார்கள். தமது யவுவனாதிகளால் யாதவ குமாரர்கள் கர்வங் கொண்டிருந்ததாலும், பின்னால் அவர்கள் விதி நடக்க வேண்டியிருந்ததாலும், புத்தி கெட்டு, ஜாம்பவதியின் பிள்ளையான சாம்பனைப் பெண்போல அலங்காரம் செய்து, அம்மாமுனிவர்களிடம் அழைத்துச் சென்று, சுவாமிகளே! இந்தப் பெண் கர்ப்பமாக இருக்கிறாள். இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா என்று சொல்லுங்கள் என்று பரிகாசமாகக் கேட்டார்கள். முக்காலமும் உணர்ந்த மாமுனிவர்கள், அவர்களின் வேடிக்கையைக் கண்டு கோபங்கொண்டு, இவள் ஆண் பிள்ளையும் பெறமாட்டாள், பெண் பிள்ளையையும் பெறமாட்டாள். உங்கள் யாதவ குலத்தையே நாசஞ் செய்யும் ஓர் இரும்பு உலக்கையைப் பெறுவாள் என்று கூறினார்கள். இந்தச் செய்தியை யாதவர்கள் உக்கிரசேனரிடம் அறிவித்தார்கள். உடனே, சாம்பனின் வயிற்றிலிருந்து ஓர் இரும்பு உலக்கை உண்டாயிற்று. அதைக் கண்ட உக்கிரசேன மன்னன், அதைப் பொடியாக்கி கடலிற் கொட்டிவிடும்படிக் கட்டளையிட்டான். அவர்களும் அப்படியே செய்தார்கள். ஆனால் அந்த உலக்கைப் பொடிகளோ, கடற்கரையில் கோரைகளாக முளைத்தன. அராவிய இரும்புலக்கையின் மிச்சத் துண்டு ஒன்று அம்பின் முள்ளைப்போல இருந்தது. அதையும் யாதவர்கள் கடலில் எறிந்தார்கள். அதை ஒரு மீன் விழுங்கியது. அந்த மீனை, மீனவர் பிடித்து அறுத்தனர். அதன்வயிற்றில் இருந்த அந்த இரும்பு முள்ளை ஒரு வேடன் எடுத்துத் தன் அம்பில் வைத்துக்கொண்டான். இவற்றை யெல்லாம் ஸ்ரீகிருஷ்ணபகவான் அறிந்திருந்தும், தமது சங்கற்பச் சித்தமான அதை மாற்றத் திருவுள்ளம் கொள்ளவில்லை. இப்படிப்பட்டச் சமயத்தில் தேவர்களால் அனுப்பப்பட்ட வாயுதேவன் ஸ்ரீகிருஷ்ணனைக் கண்டு, தண்டம் சமர்ப்பித்து, விண்ணப்பஞ் செய்யலானான்.
பகவானே! அடியேன் தேவர்களால் தூதுவனாக அனுப்பப் பட்டேன். வசுக்கள், மருத்துக்கள், அசுவிகள், ஆதித்தியர், ருத்திரர், சாத்தியர் முதலானவர்களுடன் தேவேந்திரன் தங்கள் சன்னதியில் விண்ணப்பஞ் செய்வதைத் திருச்செவிச் சாய்த்து கேட்க வேண்டும். அடியேங்களுடைய பிரார்த்தனையால், பூமிபாரம் தீர்ப்பதற்காகத் தேவரீர் பூமியில் அவதரித்து, தேவர்களுடன் நூறு திருநட்சத்திரங்களுக்குமேல் இங்கு எழுந்தருளியிருந்தீர்கள். மிகக் கொடிய அசுரர்களையெல்லாம் சங்கரித்து, பூபாரம் தீர்த்தீர். இனி தேவரீரை அடியேங்கள் சுவர்க்கத்திலே தினமும் சேவித்திருக்கக் கிருபை செய்யவேண்டும். தமது விருப்பம் போலவே செய்யலாம் ! என்றான். அதற்கு ஸ்ரீகிருஷ்ணபகவான், தேவ தூதனே! நீ சொன்னது யாவும் எனக்குத் தெரியும். என் குலத்தினரானயாதவர்களையும் நாசஞ்செய்ய ஆரம்பித்து விட்டேன். இந்த யாதவரும் மடியாமற் போனால் பூபாரம் நீங்காது. ஆகையால் ஏழு இரவுகளுக்குள் இதை முடித்துவிடுவேன். இந்தத் துவாரகைக்கான இடத்தை முன்பு சமுத்திர ராஜனிடம் அல்லவா பெற்றேன்? மீண்டும் இதைச் சமுத்திர ராஜனிடமே கொடுத்துவிட்டு யாதவர்களையும் முடித்துவிட்டு, உங்களிடம் வருவேன். இந்த மனித தேகத்தைவிட்டு, சங்கர்ஷணனோடுகூட யான் வந்துவிடுவேன் என்று இந்திரனிடம் சொல்! இந்தப் பூமிக்குப் பாரமாக இருந்த ஜராச்சந்தன் முதலாக யார் யார் மடிந்தார்களோ, அவர்களால் ஒரு யாதவச் சிசுக்கூட மடியவில்லை. அதுவே இந்த மண்ணுக்குப் பெரும் பாரமாகிவிட்டது. ஆகவே இவர்களையெல்லாம் மடித்துப் பிறகு உங்கள் உலகைக் காக்க நான் வருவேன் என்று இந்திராதியருக்கு அறிவிப்பாயாக! என்றார் அதனால் அவரை வாயுதேவன் வணங்கிவிட்டு, தேவர் செல்லும் வழியில் தேவருலகம் சென்றடைந்தான்.
பிறகு கண்ணபிரான் இரவும் பகலும் நாசக் குறிகளாகிய திவியம், பவுமம் அந்தரிக்ஷம் என்ற மூவகை உத்பாதங்கள் உண்டாவதைக் கண்டார். அவர் யாதவர்களை நோக்கி, பார்த்தீர்களா? இங்கே மிகவும் கொடிய உற்பாதங்கள் உண்டாகின்றன. இவற்றின் தோஷம் சாந்தமாகும் பொருட்டு, சீக்கிரமாகப் பிரபாச தீர்த்தத்துக்குப் போவோம் என்றார். அப்போது, யாதவர்களில் சிறந்த பரம பாகவதரான உத்கலர் சுவாமிக்குத் தண்டம் சமர்ப்பித்து, எம்பெருமானே! இந்த யாதவ குலத்தை முடிக்க நீங்கள் திருவுள்ளம் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இப்போது அடியேன் செய்ய வேண்டுவது என்னவோ, அதனை நியமிக்க வேண்டுகிறேன். இந்த உற்பாதக் குறிகள், யாதவ குலம் நாசமடையப் போவதையே குறிக்கின்றன என்று நினைக்கிறேன் என்றார். அவரை கண்ணபிரான் புன்சிரிப்புத்தவழ உற்று நோக்கி, உத்கலரே ! நீர் தேவாதமார்க்கத்தில் செல்லத் தக்கச் சக்தியை நாம் பிரசாதிக்கிறோம், அதனால் நீங்கள் கந்தமாதனப் பருவதத்திலுள்ள பதரிகாசிரமத்தை அடைவீராக. இந்தப் பூவுலகில் நரநாராயண ஸ்தானமான அதுதான் மிகவும் பரிசுத்த ÷க்ஷத்திரமாகும். அங்கே நீர் நம்மீது சித்தம் நிலைநாட்டிச் சிந்தித்து, நமது கிருபையினால் மோக்ஷப் பிராப்தியை அடைவீர். நாமோ நமது வமிசத்தை உபசங்கரித்து உத்தம ஸ்தானம் செல்ல நிச்சயித்திருக்கிறோம். நாம் நீங்கியவுடன் துவாரகையைச் சமுத்திரம் மூழ்கடித்துவிடும். ஆனால் நம்மிடமுள்ள பயத்தால், நம்முடையத் திருமாளிகை மட்டும் மூழ்த்தப்படமாட்டாது. நாமோ, அடியாருக்கு இதஞ்செய்ய வேண்டி, அந்த மாளிகையில் சான்னித்தியமாக இருப்போம்! என்று சொல்லி, அவருக்குத் தத்துவ ஞானத்தையும் ஆராதனாதி முறைகளையும் உபதேசித்தார். அவற்றைக் கேட்டுக்கொண்டு உத்கலர் பதரிகாசிரமம் சென்றார். யாதவர்கள் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணருடன் தமது தேர்களில் ஏறிக்கொண்டு, பிரபாசத் தீர்த்தத்துக்குப் போனார்கள். அங்கு போனதும் யாதவர்கள் விசேஷமாக மதுபானஞ்செய்தார்கள். அதனால் வெளியேறியது. அந்த வெறியால் அவர்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் எதிர்த்தனர் கலகம் விளைந்தது. இவ்வாறு பராசர மகரிஷி சொல்லி வரும்போது, மைத்ரேயர் குறுக்கிட்டு, முனிவரே! தத்தமக்குள்ள அன்னபானங்களை அருந்திய அவர்களுக்குள்ளே கலகம் எப்படி மூண்டது? என்று கேட்டார். பராசரர் கூறலானார்.
கேளும் சொல்கிறேன். என்னுடைய அன்னம் நன்றாக இருக்கிறது என்று ஒருவன் சொல்ல, அதை மறுத்து மற்றொருவன் சொல்ல இப்படியே யாவரும் சொல்ல, ஒருவரையொருவர் சாதிக்க வேண்டும் என்ற நினைப்புத் தோன்றிக் கலகமும் உண்டாயிற்று. அந்தக் கலகம் ஆயுதப் போராகவும் மாறியது. தெய்வச் சங்கற்பமும் சூழ்ந்தது. எனவே ஒருவர்மீது மற்றொருவர் ஆயுதப் பிரயோகம் செய்யலாயினர். அந்தப் பெருஞ் சண்டையில் ஆயுதங்கள் அனைத்தும் அழிந்ததால், அருகாமையில் கடற்கரையில் முளைத்திருந்த கோரைகளைப் பிடுங்கிக்கொண்டனர். அவை வஜ்ராயுதத்தைப் போல இருந்ததால், அவற்றைக்கொண்டு ஒருவரையொருவர் அடித்தனர். இவ்வாறு அடித்துக் கொண்டிருந்த பிரத்தியும்னன் சாம்பன் முதலியவர்களையும் கிருதவர்மா, சாத்தியகி அநிருத்தன் முதலியவர்களையும் கண்ணன் தடுக்கப்போக அவர்கள் கண்ணனையும் தங்கள் தங்கள் எதிரிகளுக்குச் சகாயம் செய்பவராக எண்ணிக் கொண்டு அவரையும் அடிக்க வந்தார்கள். எனவே, கண்ணனும் ஒருபிடிக் கோரையைப் பிடுங்கிக்கொண்டு, இரும்பு உலக்கை போன்ற அதனாலேயே யாதவரையெல்லாம் சங்கரித்தருளினார். மற்றுமுள்ளோரும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மடிந்தார்கள். பிறகு வெற்றி பொருந்திய கண்ணனது திருத்தேரானது, சாரதியான தாருகன் என்பவன் பார்த்துக் கொண்டேயிருக்கத் தானாகவேச் சமுத்திரத்தின் நடுவே குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டது. அதுபோலவே, சங்கு, சக்கரம், கட்கம், கதை, சார்ங்கம் என்ற பஞ்சாயுதங்களும் கண்ணனை வலம் வந்துச் சூர்யமார்க்கமாகப் போய்விட்டன. அப்போது அந்த இடத்தில் கண்ணனும் தாருகனும் தவிர, யாதவர்களில் ஒருவன்கூட அடிபட்டு விழாமல் இருக்கவில்லை. இவ்விதம் யாதவர்கள் அனைவரும் மடிந்தவுடன், சுவாமி ஸ்ரீகிருஷ்ணனும் தாருகனும் அங்கே சிறிது உலாவிக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு மரத்தடியில் பலராமர் எழுந்தருளியிருந்தார். அப்பொழுது அவரதுத் திருமுகத்திலிருந்து ஒரு சர்ப்பம் ஜொலித்துக் கொண்டுப் புறப்படுவதைக் கண்டார்கள். அந்த மகா நாகம் சமுத்திரத்தில் எழுந்தருளி, அங்கே சித்தர்களும் நாகர்களும் துதிக்க, சமுத்திரராஜன் அர்க்கியம் எடுத்து வரவேற்று ஆராதிக்க சமுத்திர நீரினுள்ளே புகுந்துவிட்டது.
அப்போது ஸ்ரீகிருஷ்ணபகவான் தமது சாரதியான தாருகனைப் பார்த்து தாருகா! நீ நமது தலைநகரம் சென்று, யாதவர்கள் அனைவரும் மாண்டத்தையும் பலதேவர் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளியதையும் வசுதேவர் உக்கிரசேனர் முதலியவர்களிடத்தில் சொல்வாயாக, நானும் யோக நிஷ்டையில் இந்த உடலைவிடப் போகிறேன். துவாரகையைச் சமுத்திரம் மூழ்கடிக்கப் போகிறது. இதை ஆகுகனுக்கும் நகரத்திலுள்ளவருக்கும் அறிவித்து விடவேண்டும். நீங்கள் அனைவரும் அர்ச்சுனனுடைய வரவை எதிர்பார்த்து அவன் வந்ததும் அவனுடன் போகவேண்டும் யாரும் துவாரகையில் இருக்கவேண்டாம் என்று சொல்! துவாரகையில் இப்படிச் சொல்லி விட்டு நீ அஸ்தினாபுரம் செல் அங்கே அர்ச்சுனனைக் கண்டு நான் சொன்னதாக அவனை சீக்கிரம் துவாரகைக்கு வந்து எனது குடும்பத்தினரை கூடுமானவரை காப்பாற்ற வேண்டும் என்று, சொல்லி அர்ச்சுனனுடன் நீயும்கூட இருந்து துவாரகையில் இருப்பவர்களையெல்லாம் அப்புறம் அலட்சியம் செய்து போவதை நாம் சகித்திருப்பதா? பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்திரதன் முதலியவர்களைச் சங்கரித்திருக்கிறோம் என்ற கர்வத்தோடு இந்த அர்ச்சுனன் இருக்கிறான். இவன் இந்தக் கிராமத்திலிருக்கும் நம்முடைய பலத்தை அறியமாட்டான். தடியுங் கையுமாக இருப்பதைக் கண்டு நம்மால் என்ன செய்ய முடியும் என்று அவன் நினைத்துவிட்டான் போலும்! என்று திருடர்கள் யோசித்து தடிகளையும் ஓட்டாஞ் சில்லுகளையும் ஆயுதமாகக் கொண்டு, எல்லோருமாகச் சேர்ந்து அர்ச்சுனன் கொண்டு வந்த பெண்களைப் பிடிக்க வந்தார்கள். அதைக் கண்ட அர்ச்சுனன் அவர்களை அலட்சியமாய் நோக்கி, ஓ துஷ்டர்களே! நீங்கள் பிழைத்திருக்க நினைத்தால் உடனே ஓடிப்போய்விடுங்கள் என்று சொன்னான். ஆனால் அவர்கள் அவனை லக்ஷ்யம் செய்யாமல் அங்கிருந்த பொருள்களையும் பெண்களையும் கவர்ந்து சென்றார்கள். பிறகு, அர்ச்சுனன் அந்தப் போரிலே திவ்வியமாயும் அழியாததாயுமுள்ள காண்டீபம் என்ற தனது வில்லை வளைத்து நாண்பூட்ட முயன்றான். அந்த முயற்சி பயனளிக்கவில்லை. அம்பைப் பூட்டுவதற்கே அவனுக்குத் திறனில்லை வருந்திப் பூட்டியும் அந்த நாண் திடமாயிராமல் தளர்ந்து போயிற்று. அது மட்டுமல்ல. அர்ஜுனன் தன் அஸ்திரங்களைப் பிரயோகிக்க முயன்றபோது அவற்றில் ஒன்றும் அவன் நினைப்புக்கு வரவில்லை இதனால் அர்ச்சுனன் மிகவும் கோபங்கொண்டு, பகைவர்மேல் அம்புகளை எய்தான். அந்த அம்புகளோ பகைவர் உடலில் பட்டு, மேல் தோலைப் பெயர்த்தனவேயன்றி மற்றொன்றும் செய்யவில்லை இப்படிப்பட்ட சமயத்தில் முன்பு அக்னி பகவான் கொடுத்திருந்த அக்ஷய தூணிரங்களில் அம்புகளும் ஒழிந்து போயின. இவ்விதமாக சகலவித இடையூறுகளும் சம்பவித்தன. அப்போது அர்ச்சுனன், முன்பு என் அம்புகளால் அநேக அரக்கர்களைச் சங்கரித்தேனே! அது ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய பலமேயல்லாது என்று பலமன்று! என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, திருடர்களெல்லாம் கண்ணபிரான் பரிக்கிரகித்திருந்த அநேகம் மங்கையரை இழுத்துக்கொண்டு சென்றார்கள். மற்றும் அநேக மங்கையர்கள் அர்ச்சுனனுக்கு திறமையில்லை என்பதை அறிந்து கொண்டு, தாங்களாகவே அங்கங்கே ஓடிப்போனார்கள்.
கேட்டீரோ, மைத்ரேயரே! பிறகு அர்ச்சுனன் அம்புகளும் இல்லாமற் போகவே, வேறு ஆயுதம் ஒன்றும் இல்லாததால் அந்த வில்லையே தடிபோலக் கொண்டு அதன் நுனியாலேயே திருடர்களை அடிக்க முயன்றான். ஆனால் அடிகள் லேசாக விழுந்ததால் பகைவர்கள் சிரித்துக் கேலி செய்தார்கள். எப்படி முயன்றும், தன்னால் காப்பாற்ற முடியாமற் போனதால், தன் கண் எதிரிலேயே உத்தமரான அந்த யாதவ மங்கையரைத் திருடர்கள் இழுத்துச் செல்வதைக் கண்ட பார்த்தன், அளவற்ற துக்கங்கொண்டு, ஓஹோ! இதென்ன கஷ்டம்! ஸ்ரீகிருஷ்ண பகவான் என் சக்தியையும் கொண்டு போய் விட்டாரே! இனி நான் என் செய்வேன்? மகத்தான வில்லும் ஆயுதங்களும் ரதமும் குதிரைகளும் வேதந் தெரியாதவனுக்குக் கொடுத்த தானத்தைப் போல வீணாயினவே! தெய்வமே வலியது! அந்த மகாத்மா இல்லாமையினாலே என்னுடைய எல்லாவகை ஆற்றலும் வீணானது மட்டுமன்றி சாமார்த்தியமற்றவர்கள்கூட என்னை வெற்றி பெறலாயிற்றே? முன்பு வெற்றிகள் பல கண்ட என் கைகளே இப்போதும் இருக்கின்றன! இடமும் அதுவே. நானும் அந்த அர்ச்சுனனே! புண்ணிய சொரூபியான கண்ணன் இல்லாமையினாலே எல்லாமே அசாரமாய்ப் போய் விட்டன. நான் அர்ச்சுனனாக இருந்ததும் பீமன் பீமனாக இருந்ததும் அந்த மகானுபாவனுடைய மகிமை! அவனில்லாததால்தானே மகாரத சிரேஷ்டனான நான் இவர்களிடம் தோற்றேன் என்று சொல்லி அழுதுகொண்டே இந்திரப்பிரஸ்தம் சென்று, அங்கே வஜ்ரனை யாதவரின் அரசனாக நியமித்தான். பிறகு அர்ச்சுனன் அங்கிருந்து அஸ்தினாபுரம் போகும் போது, வழியில் ஒரு காட்டில் ஸ்ரீவேத வியாச மகா முனிவரைக் கண்டான். அம்முனிவரின் திருவடிகளை அவன்தொழுது நின்றான். அப்போது வியாச முனிவர் அர்ச்சுனனை நோக்கிக் கூறலானார்.
அர்ச்சுனா நீ ஏன் இப்போது ஒளியற்றவனாக இருக்கிறாய்? ஆடு கழுதை முதலியவைகளின் கால் தூசிகளைப் பின்தொடர்ந்தனையோ? பிரம்மஹத்தி செய்தாயோ? உறுதியான ஓராசை கெடத் துன்பம் உற்றனையோ? ஓ பார்த்தனே! சந்தானத்துக்காக கல்யாணஞ் செய்து கொள்ள முயன்றவன் முதலானவர்கள் என்னை யாசிக்க நீ அவர்களை அலக்ஷ்யம் செய்தாயோ? புணரக்கூடாத மங்கையரோடு புணர்ந்தனையோ? நல்ல அன்னத்தைப் பிராமணனுக்குக் கொடாமல் நீ ஒருவனே புசித்து விட்டாயோ? வறுமையாளரின் பொருள்களை அபகரித்தாயோ? முறத்தின் காற்றுப்பட நின்றாயோ? கொள்ளிக் கண்ணரால் பார்க்கப்பட்டாயோ? நகம்பட்ட தண்ணீரை ஸ்பரிசித்தனையோ தண்ணீர் குடம் கொண்டு போகும்போது, அதிலிருந்த தண்ணீர் தெளித்து உன்மீது விழப்பெற்றனையோ? போரில் தாழ்ந்தவர்களால் வெல்லப்பட்டாயோ? நீ சாயை இழக்கக் காரணம் என்ன? என்று வியாசர் கேட்டார்.
அர்ச்சுனன் பெருமூச்செறிந்து, சுவாமி அடியேனது கதியைக் கேட்டருள வேண்டும். அடியேனுக்குப் பலம், தேஜஸ், வீரியம், பராக்கிரமம் சம்பத்து, காந்தி இவையெல்லாம் யாராக இருந்தாரோ அந்த ஸ்ரீகிருஷ்ண பகவான் அடியேங்களை விட்டு மறைந்துபோய் விட்டார்! எவர் ஒப்பற்ற மகானாக இருந்தும் சாதாரணரைப் போல நம்மைக் கண்டு சிரித்து பேசிக்கொண்டிருந்தாரோ, அந்தப் பகவான் எம்மைத் துறந்ததாலே நாங்கள் எல்லாம் வைக்கோலால் செய்யப்பட்ட மனிதப் பதுமைகளானோம், அம்புகளுக்கும் ஆயுதங்களுக்கும் காண்டீவம் என்ற தனுசுக்கும் அடியேனுக்கும் மேன்மை எவரால் உண்டாகியிருந்தது. அந்தப் புரு÷ஷாத்தமன் மறைந்துவிட்டான். எவருடைய கடாட்சத்தினாலே வெற்றியும் செல்வமும் மேன்மையும் எங்களை விடாமல் இருந்தனவோ, அந்த ஸ்ரீ கோவிந்த பகவான் எங்களைக் கைவிட்டுப் போய்விட்டார். பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் முதலியவர்கள் எவருடைய பிரபாவத்தால் எரிந்து போனார்களோ, அந்த ஸ்ரீகிருஷ்ண பகவான் இந்தப் பூவுலகத்தைவிட்டு மறைந்துவிட்டார். அடியேன் தனியனாய் ஒளியிழந்து காணப்படுகிறேன். அந்தக் கண்ணபிரான் இல்லாததாலே இந்தப் பூமி முழுவதும் யவ்வனம், செல்வம், ஒளி இவற்றை இழந்தது போலக் காணப்படுகிறது. மகிமை பொருந்திய காண்டீவம் எவனுடைய மகிமையினாலோ மூவுலகிலும் புகழ்பெற்று இருந்ததோ, அவனில்லாததால், அது இழிவான திருடர்களின் தடிக்குத் தோற்றுவிட்டது. என் காவலில் இருந்த அநேக ஸ்திரீகளைத் திருடர்கள் தடியுங்கையுமாக வந்து என் முயற்சியைத் தடுத்து அபகரித்துக்கொண்டு போய் விட்டார்கள். துவாரகையிலிருந்து நான் அழைத்துக் கொண்டு வந்த அந்த ஸ்ரீகிருஷ்ணருடைய தேவிமார்களைத் திருடர்கள் இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். இப்படிப்பட்ட அடியேன் தேஜசை இழந்திருப்பது ஓர் விந்தையோ? நான் உயிரோடு இருக்கிறேனே. அதுவல்லவோ ஆச்சரியம்! பெரியோரே! நீசர்களால் நான் அவமானப்பட்ட அந்தக் களங்கத்தை ஏற்று, தங்கள் முன்பு வெட்கமின்றி நிற்கிறேனல்லவா? என்று இவ்விதம் பரிதாபப்படும்படியாகக் கூறினான். வியாசர் அவனுக்கு ஆறுதல் கூறலானார்:
அர்ச்சுனா! நீ வெட்கப்படாதே! விசனமும் பட வேண்டாம் சகல பூதங்களுக்கும் இப்படிப்பட்ட காலகதி உண்டாகும். காலமே, பூதங்களின் உற்பத்திக்கும் நாசத்துக்கும் ஏதுவாகும். இதுபோலவே உலகம் எல்லாம் காலத்தினால் நிகழ்வதென்று நினைத்து மனக் கலக்கமின்றி இருப்பாயாக. நதிகள், கடல்கள், மலைகள், பூமி, தேவதைகள், மனிதர்கள், மிருகங்கள், நகரும் பிராணிகள், மரங்கள் முதலிய யாவுமே காலத்தாலேயே படைக்கப்பட்டு, மீண்டும் அதே காலத்தாலேயே நாசப்படுகின்றன. இவ்விதமாக யாவும் காலத்தின் ஆதீனமாக இருப்பதையறிந்து சமாதானமடைவாயாக. கண்ணனே அந்தக் காலஸ்வரூபி. தனஞ்சயா! அந்தக் கண்ணபிரானுடைய மகிமை நீ என்னென்ன சொன்னாயோ, அத்தகையதேயாகும்! அதில் சந்தேகமில்லை. பூமிதேவியின் பிரார்த்தனைக்கேற்ப காலரூபியான அந்த ஜனார்த்தனன், அவளது பூ பாரத்தை இறக்கப் பூமியிலே அவதரித்தார். சகல அரசர்களும் சங்கரிக்கப்பட்டனர். யாதவ குலமும் அழிந்தது. அவர் அவதரித்த காரியம் பூமியில் எதுவுமில்லை. ஆகையால் அவர் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினார். அந்த தேவாதிதேவன் படைப்புக் காலத்தில் படைப்பையும் ஸ்திதி காலத்தில் ஸ்திதியையும் எப்படிச் செய்தானோ, அதுபோல சங்கார காலத்திலும் சங்காரத்தையும் செய்யும் வல்லவன் அர்ச்சுனா! நீ அவமானப்பட்டதாக வருந்துகின்றாயே! பீஷ்மர், துரோணர், கர்ணன், முதலிய மகாசூரர்கள் எல்லாம் உன் ஒருவனாலேயே சங்கரிக்கப்பட்டார்களே, அது அவர்களுக்குத் தாழ்ந்தோரிடம் தோற்ற அவமானமல்லவா? அவர்களுக்கு அந்தக் காலத்தில் உன்னால் ஏற்பட்ட பரிபவமும் இந்தக் காலத்தில் திருடர்களால் உனக்கு ஏற்பட்ட பரிபவமும் அந்த ஸ்ரீ விஷ்ணுவின் பிரபாவமேயாகும். பார்த்தா நீ கவுரவரை வென்றதும் திருடருக்குத் தோற்றதும் எல்லாம் அந்த ஸ்ரீகிருஷ்ணனின் திருவிளையாடலேயன்றி வேறல்ல, சாக்ஷõத் பகவான் திருவுள்ளம் பற்றிய அந்த மங்கையரை அற்பர்கள் இழுத்துச் சென்றார்களே என்றல்லவா நீ விசனப்படுத்துகிறாய்? அதற்கும் ஒரு காரணமுண்டு. அதையுஞ் சொல்கிறேன் கேள்.
முன்பு ஒரு காலத்தில் அஷ்டாவக்கிரர் என்ற முனிவர் கழுத்தளவு தண்ணீரில் அமிழ்ந்து பல ஆண்டுக்காலம் வரை பிரமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நேரிட்ட போது, அசுரர் கூட்டம் எல்லாம் மடிந்தனர். அதன் காரணமாக மேரு மலைச்சாரலில் திருவிழா ஒன்றை நடத்தினார்கள். அந்த திருவிழாவுக்குப் போய்க்கொண்டிருந்த ஊர்வசி, ரம்பை, திலோத்தமை முதலிய அநேக தேவமங்கையர், அந்த முனிவரைக் கண்டு, வணங்கிப் புகழ்ந்து துதித்தார்கள்! தண்ணீரில் கழுத்தளவு மூழ்கிச் சடாபாரத்துடன் விளங்கிய அஷ்டாவக்கிர முனிவர், அத்தேவமங்கையர் செய்த வணக்கத்திற்கும் தோத்திரத்துக்கும் மனம் உவந்தார். அந்த மங்கையர் மேலும் மேலும் அவரைத் துதித்தார்கள். அப்போது அந்த முனிவர், பெண்களே நீங்கள் வணங்கியது கண்டு மகிழ்ந்தேன். உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்றார். அதற்கு அப் பெண்களில் ரம்பையும் திலோத்தமையும் சுவாமி, தேவரீர் திருவுள்ளம் உவந்ததே போதுமானது! என்றனர். மற்றத் தேவமங்கையரோ சுவாமி! தங்கள் திருவுள்ளம் உவந்ததானால் புருஷேத்தமனே எங்களுக்கு கணவனாகும்படி வரந்தர வேண்டும்! என்றார்கள். முனிவரும் அப்படியே ஆகுக! என்று வரம் தந்துவிட்டுத் தண்ணீரிலிருந்து வெளியே வந்தார். அவர், கரையேறியபோது, உடம்பு எட்டுக் கோணல்களாகவும் அகோரமாகவும் இருந்தது. அவரது கோணலுடலைக் கண்ட அத் தேவதாஸியருக்கு சிரிப்புண்டாயிற்று. அந்தச் சிரிப்பை அவர்களால் அடக்க முடியவில்லை. யாருக்கு சிரிப்பு வெளிப்பட்டதோ, அவர்களை அந்த முனிவர் கோபத்தோடு உற்று நோக்கி, பெண்களே! நான் விகாரரூபமுள்ளவன் என்றுதானே நீங்கள் என்னைப் பார்த்துச் சிரித்து, அவமானஞ் செய்கிறீர்கள். நான் முன்பு அனுக்கிரகித்ததுபோல் நீங்கள் ஸ்ரீ புரு÷ஷாத்தமனையே கணவனாக அடைந்து வாழ்ந்து, இறுதியில் திருடர் வசமாவீர்கள்! என்று சபித்தார். அதைக் கேட்ட தேவமங்கையர் பயந்து மீண்டும், அம்முனிவரிடம் மன்னிப்புக் கேட்டார்கள். அவர் மனமிரங்கி, நீங்கள் திருடர்கைப் பட்டாலும் சொர்க்கமடையக் கடவீர்கள்! என்று அனுக்கிரகம் செய்தார்.
அர்ச்சுனா கேட்டாயா, இவ்விதமாக அஷ்டாவக்கிர முனிவரது அனுக்கிரகத்தினால் அந்தத் தெய்வ மங்கையர், கண்ணபிரானையே கணவனாக அடைந்தனர். அவருடன் வாழ்ந்த அவர்கள், முனிவரது சாபத்தாலேயே திருடர் கைவசப்பட்டார்கள். ஆகையால், இதற்காக நீ வருந்தவேண்டாம். எம்பெருமானாலேயே யாவும் நிச்சயிக்கப்பட்டு முடிவு பெற்றன. ஆகையால் இந்த விஷயத்தில் சிறிதும் சோகப்படவேண்டாம். உங்களுக்கும் சங்கார காலம் நெருங்கிவிட்டது. அதனால்தான் உங்களுடைய தேஜசு, பலம், வீரியம், மகிமை ஆகியவை இழுக்கப்பட்டுவிட்டன. பிறந்தவனுக்கு மரணமும், உயர்ந்தவனுக்கு தாழ்வும் வரவேண்டுவதேயாம் கூடுவது பிரிவதும் சேர்ந்ததற்குச் செலவும் நியதியாகும். இதையறிந்த அறிவாளி நன்மையில் மகிழ்ச்சியையும், தீமையில் கவலையையும் அடைவதில்லை. ஆகையால் உனது சகோதரர்களுடன் நீ வனத்திற்குச் செல்வாயாக அர்ச்சுனா! இப்போது நான் உனக்குச் சொன்னவற்றை உன்தமையனான யுதிஷ்டிரனுக்கு (தருமனுக்கு) சொல்லி நாளையே உடன் பிறந்தாருடன் வனம் போவதற்கான முயற்சியைக் கைக்கொள் என்று வியாசர் கூறியருளினார். அதன் பிறகு அர்ச்சுனன், அஸ்தினாபுரம் சென்றான், நடந்தவற்றை தன் உடன்பிறந்தாரிடம் சொன்னான். வியாசர் கூறியருளியதையும் சொன்னான். அதைக் கேட்டதும், வியாசர் வாக்குப்படி பாண்டவர்கள், பரீக்ஷித்துக்குக் குருராஜ்யப் பட்டாபிஷேகத்தைச் செய்வித்து, உடனே வனத்திற்குச் சென்றார்கள். மைத்ரேயரே! நீங்கள் கேட்டதற்கிணங்க யாதவ வமிசத்தில் அவதரித்த வாசுதேவனுடைய சரிதங்களையெல்லாம் உமக்குச் சொன்னேன். எவன் இந்த ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய சரிதங்களைக் கேட்பானோ, அவன் சகல விதமான பாவங்களும் தீர்ந்து, ஸ்ரீவைகுந்தப் பதவியை அடைவான்.

ஐந்தாவது அம்சம் முடிந்தது.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் நான்காவது அம்சம்—-மூன்றாவது பாகம் —

February 28, 2021

15. பகவானின் திருவம்சம்
16. துர்வசு வம்சம்
17. துருகியு வம்ச வரலாறு
18. அனு வம்சம்
19. பூரு, பரத வம்சங்கள்
20. சந்தனு வம்ச வரலாறு
21. பின்னிட்ட பாண்டவ வம்ச சரிதம்
22. இஷ்வாகு வம்சம் (பிற்பகுதி)
23. மாகத வம்சம் (பிற்பகுதி)
24. கல்கி அவதாரம்

———–

15. பகவானின் திருவம்சம்

மைத்ரேய முனிவர் குறுக்கிட்டு பராசர மகரிஷியை நோக்கி, சுவாமி! இந்த சிசுபாலன் ஹிரண்யகசிபுவாக இருந்தபோதும் இராவணனாக இருந்தபோதும் ஸ்ரீவிஷ்ணுபகவானால் சங்கரிக்கப்பட்டான். அந்தப் புண்ணியத்தாலே மகா போக போக்கியங்களைப் பெற்றிருந்தானே தவிர, சாயுஜ்யப் பதவியை அடையவில்லையே? அப்படியிருக்க இப்பொழுது மட்டும் சாயுஜ்யப் பதவியை அடைந்தது எப்படி? இதை அடியேனுக்கு விளக்கமாக அறிவிக்க வேண்டும்? என்று கேட்டார். பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! சகல லோகங்களுக்கும் சிருஷ்டி, ஸ்திதி சம்ஹார கர்த்தாவாகிய விஷ்ணுபகவான், அகம்பாவியான ஹிரண்யகசிபுவைச் சங்காரம் செய்வதற்காக நரசிம்மாவதாரம் செய்தபோது, அவ்வசுரனுக்கு இவர் மகாவிஷ்ணு என்ற ஞானம் உண்டாகாமல், புண்ணியவசத்தால் மகிமை பெற்ற ஒரு ஜந்து என்ற நினைப்பே உண்டாயிற்று. ஆகையால் அந்த அசுரன் ரஜோகுணத்தின் மிகுதியால் அப்படிப்பட்ட விபரீத பாவனையைப் பெற்று, நரசிம்ம மூர்த்தியினால் சங்கரிக்கப்பட்டான். அந்தப் புண்ணியத்தால் மூன்று உலகங்களையும் ஆளத்தக்க மேன்மையான செல்வத்தைப் பெற்றான். ஆதிமத்யாந்த ரஹிதனாகவும் பரப்பிரம்மமாகவும் இருக்கும் பகவானிடத்தில் அவன் லயமடையவில்லை. அதுபோலவே, அவன் இராவணனாக இருக்கையிலும் காமப்பரவசனாகி, சீதாபிராட்டியிடம் மிகவும் அன்புள்ள ஸ்ரீராம ரூபியான எம்பெருமானால் கொல்லப்பட்ட போதும் அவனுக்கு அந்த சுவாமியைப் பகவான் என்று அறியும் ஞானம் உண்டாகாமல் மனுஷ்யன் என்கின்ற ஞானமே உண்டாயிருந்தது. மீண்டும் எம்பெருமானாலே வதை செய்யப்பட்ட மகிமையால் அவன் மறுபடியும் சேதி ராஜகுலத்தில் சிசுபாலனாகப் பிறந்து பூமண்டலத்தோர் கொண்டாடத்தக்க ஐசுவரியத்தைப் பெற்றான். ஆனால் அந்தப் பிறவியில் எம்பெருமானுடைய சகல திருநாமங்களையும் நிந்திப்பதற்கு அவன் காரணமானான். அப்படி சிசுபாலன் நிந்தித்தும் கண்ணபெருமானின் திருப்பெயர்களையே அவன் அடிக்கடி உச்சரித்து வந்தான். மேலும் செந்தாமரை போன்ற திருவிழிகளுடன் பிரகாசமான பீதாம்பரத்தைத் தரித்துக் கொண்டும் திவ்வியக் கிரீட, கேயூர, ஹார கடகங்கள் முதலிய திவ்வியாபரணங்களைத் தரித்துக் கொண்டும் திரண்டு பருத்த நீண்ட நான்கு திருக்கைகளோடு திருவாழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்கள் தரித்துக் கொண்டும் விளங்கும் கண்ணபிரானின் திவ்விய ரூபத்தையே சிசுபாலன் உண்ணும் போதும் உறங்கும் போதும், படுக்கும் போதும், உலாவும் போதும், குளிக்கும் போதும் ஒரே பிடிப்பாய் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான். அதனால் அவனுடைய கண்களுக்கு எங்கும் அந்த கண்ணபெருமானின் தோற்றமே விளங்கப்பெற்று கோபதாபத்திலும் கூட அவரது திருப்பெயரையே உச்சரித்து வந்தான். எம்பெருமானது திவ்விய சக்கரத்தினாலே அந்த சிசுபாலன் சங்கரிக்கப்பட்டான்; அவ்வெம்பெருமானுடைய ஸ்மரணைகளால் சகல பாபங்களும் நசிக்கப்பெற்று அவன் எம்பெருமானிடமே லயத்தை அடைந்தான்.

மைத்ரேயரே! சிசுபாலனின் மோட்சம் பற்றிய யாவையும் நான் உமக்குச் சொன்னேன். எம்பெருமானைப் பகைத்தாவது அவரது திருநாமங்களை சங்கீர்த்தனம் செய்வோருக்கும், நினைப்பவருக்கும், சுராசுரர்களும் அடையமுடியாத பெரும் பயனை எம்பெருமான் அளிப்பார். அப்படியிருக்க நன்றாகப் பக்தி செய்பவருக்குப் பயனளிப்பதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? இது இருக்கட்டும். ஆனக துந்துபி என்ற வசுதேவருக்குப் பவுரவி, ரோகிணி, பத்திரை, மதுரை, தேவகி முதலாக அநேக மனைவியர் இருந்தார்கள். அவர்களில் ரோகிணிக்கு பலபத்திரன், சடன்சாரணன், துர்மதன் முதலிய புத்திரர்கள் உண்டானார்கள். அவர்களில் பலபத்திரர் என்னும் பலராமர் தம் மனைவி ரேவதியின் மூலம் விசடன், உலமுகன் என்ற பிள்ளைகளைப் பெற்றார். அவருடைய சகோதரன் சாரணனுக்கு சாஷ்டி மாஷ்டி சிசு சத்தியன் சத்திய திருதி முதலிய பிள்ளைகள் பிறந்தார்கள். பத்திராசுவன், பத்திரபாகு, துர்த்தமன், பூதன் முதலானவர்கள் ரோகிணியின் வம்சத்தில் பிறந்தவர்கள். மதிரை என்பவளுக்கு நந்தன், உபநந்தன், கிருதகன் முதலிய பிள்ளைகள் பிறந்தார்கள். பத்திரைக்கு உபநிதுகதன் முதலிய பிள்ளைகள் பிறந்தார்கள். வைசாலி என்பவளுக்கு கவுவிகன் என்ற பிள்ளை பிறந்தான். தேவகியிடம் கிர்த்திமான் சஷேணன் உதாயு பத்ரசேனன் குஜுதாசன் பத்திரதேவன் என்று ஆறுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் அனைவரையும் தேவகியின் தமையனான கம்சன் கொன்றான். மானின் நியமனப்படி நள்ளிரவில் தேவகியின் வயிற்றினின்றும் பெயர்த்து, ரோகிணியின் வயிற்றிலே சேர்ந்து விட்டது. அப்படியிழுக்கப்பட்டதால் அந்த ஏழாவது பிள்ளைக்கு ஸங்கர்ஷணன் என்ற பெயர் உண்டாயிற்று. பிறகு சகல லோகங்களாகிய மகாவிருட்சத்துக்கு வேராகவும் சகல சுராசுர முனிவர்களுடைய மனதுக்கும் எட்டாதவனாகவும், ஆதி மத்யாந்த ரஹிதனாகவும் சகலகுண ஐசுவரிய சம்பன்னனாகவும் உள்ள ஸ்ரீவாசுதேவன் தம்மை பிரம்மா முதலிய சகல தேவதைகளும் பூபாரத்தை நீக்கும் பொருட்டு பிரார்த்தித்ததால், தேவகியின் கர்ப்பத்தில் எழுந்தருளினார். எம்பெருமானின் அனுக்கிரகத்தால் வளரப்பெற்ற மகா மகிமையுடைய அந்த யோக நித்திரையும், நந்தகோபனின் மனைவியான யசோதையின் வயிற்றிலே பிறந்தது. தேவகியின் கர்ப்பத்தினின்று எம்பெருமான் கண்ண அவதாரமாகத் தோன்றிய போது, சகல லோகமும் தெளிந்த பிரகாசமுடைய சூரிய சந்திராதி கிரணங்களுள்ளதாகவும் சர்ப்பம் முதலிய பயமுற்றும் தெளிவான மனதுள்ளதாகவும் அதர்மம் நீங்கியதாகவும் ஆயிற்று. சுவாமி, அவதரித்ததால் யாவரையும் நன்மார்க்கத்தில் திருத்தியருளினார்.

இவ்விதமாகப் பூவுலகத்தில் கிருஷ்ணபிரானாக அவதரித்த எம்பெருமானுக்குப் பதினாயிரத்து நூற்றியொரு பத்தினிகள் இருந்தார்கள். அவர்களில் ருக்மிணி, சத்யபாமை; ஜாம்பவதி, சாருஹாசினி முதலிய எட்டு மங்கையர் முக்கியமானவர்கள். அப்பத்தினிகளிடம் சகல ரூபியான எம்பெருமான் லக்ஷத்து எண்பதினாயிரம் பிள்ளைகளை உண்டாக்கினார். அப்பிள்ளைகளில் பிரத்தியும்னன், சாருதேஷ்ணன் ஸாம்பன் முதலிய பதின்மூன்று குமாரர்கள் முக்கியமானவர்கள். பிரத்யும்னன் என்பவன் ருக்குமியின் மகளாகிய ருக்குமவதி என்பவளை மணந்து அனிருத்தன் என்பவளைப் பெற்றான். அந்த அனிருத்தன் ருக்மியின் பவுத்திரியான சுபத்தரை என்பவளை மணந்து, வஜ்ஜிரன் என்பவனைப் பெற்றான். அவன் மகன் பிரதிபாகு அவன் பிள்ளை ஸுசாரு. இவ்வாறு அனேக ஆயிரம் கிளைகளுள் யாதவ குலத்தின் புத்திர சங்கியையைச் சொல்ல அநேக ஆயிர ஆண்டுகள் போதாது. இதுபற்றி இரண்டு சுலோகங்கள் சொல்லப்படுகின்றன. யதுகுலப் பிள்ளைகளுக்கு வில்வித்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் எண்பத்தெட்டு லக்ஷம் பெயர்களாகும். அப்படியானால் மகாத்மாக்களாகிய யாதவரின் எண்ணிக்கையை அளவிட்டு அறிவதற்கு யாரே திறமுடையோர்? அந்தக் குலத்தின் தலைவனான ஆகுகன் ஒருவனே பதினாயிரம் பதினாயிரம் லக்ஷம் பேரோடு இருக்கிறான்! என்பது தான் அச்சுலோகங்களின் கருத்தாகும். மைத்ரேயரே; முன்பு நடந்த தேவாசுர யுத்தத்தில் இறந்த மகாபலசாலிகளான அசுரர்கள் யாவரும் லோக உபத்திரவம் பண்ணும்படியான மனிதர்களுக்குள்ளும் பிறந்தார்கள். அவர்களை அழிப்பதற்காகத் தேவர்கள் எல்லாம் யதுவம்சத்தில் பிறந்தார்கள். அவர்கள் நூற்றியோரு குலமுடையோர் இவர்கள் அனைவருக்கும் ஸ்ரீவிஷ்ணுபகவானே அதிபதியாக ஆண்டு வந்ததினால் அவருக்கு அடங்கி நடந்து வந்த யாதவர்கள் நாளுக்கு நாள் விருத்தியடைந்து வரலாயினர். ஆகையால் அந்த வம்சம் மிகவும் பெருகியது. இவ்வாறு வளர்ந்த அந்த விருஷ்ணிவம்ச வரலாற்றை எவன் ஒருவன் அன்போடு கேட்கிறானோ அவன் சகல பாபங்களும் ஒழிந்தவனாகி ஸ்ரீவிஷ்ணுலோகத்தை அடைவான்!

————

16. துர்வசு வம்சம்

மைத்ரேயரே! யதுவம்ச வரலாற்றை விளக்கமாகச் சொன்னேன், இனி துர்வசு வம்சத்தைச் சொல்லுகிறேன். துர்வசுவுக்கு வன்னி என்ற மகன் ஒருவன் உண்டு. அவன் மகன் பார்க்கன், அவன் பிள்ளை பானு, அவன் மகன் திரயீசானு. அவன் பிள்ளை கரந்தமன், அவன் மகன் மருத்தன். அவன் சந்ததியற்றவனாய் புரு வமிசத்தைச் சேர்ந்த துஷ்யந்தனைப் புத்திரனாக ஏற்றுக்கொண்டான். இவ்வாறு அந்த வம்சம் யயாதியின் சாபத்தால் விருத்தியற்றுப் பவுரவ வமிசத்தையே சேர்ந்து விட்டது.

————

17. துருகியு வம்ச வரலாறு

துருகியுவின் மகன் பப்புரு. அவன் மகன் சேது, அவன் பிள்ளை ஆரப்தன். அவன் மகன் காந்தாரகன், அவன் பிள்ளை கர்மன். அவன் மகன் கிருதன், அவன் பிள்ளை துர்த்தமன், அவன் மகன் பிரசேதன், அவன் குமாரன் சத்தருமன், அவன் மேற்கு வடநாட்டிலுள்ள அநேக மிலேச்சருக்கு அதிபதியாக விளங்கி வந்தான்.

——

18. அனு வம்சம்

யயாதி மன்னனின் நான்காவது மகனாகிய அனு என்பவனுக்கு சபாநலன், சட்சு, பரமேஷு என்ற மூன்று குமாரர்கள் உதித்தார்கள். அவர்களில் சபாநலனுடைய மகன் காலாநலன். அவன் மகன் சிருஞ்சயன். அவன் பிள்ளை புரஞ்சயன். அவன் மகன் ஜனமேஜயன், அவன் பிள்ளை மகாஜாலன். அவன் மகன் மகாமனசு. அவனுக்கு உசீதரன். திதிட்சு என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். உசீதரனுக்குச் சிபி, நிருகன், நவன், கிருமிவர்மன் என்ற ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். சிபிக்குப் பிரஷதர்ப்பன் கவீரன், கேகயன், பத்ரகன் என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். திதிக்ஷúக்கு ருஷத்திரதன் என்ற பிள்ளை பிறந்தான். அவனுக்கு ஹேமன், அவன் மகன் சுதமசு. அவன் மகன் பலி. அவன் மனைவியிடம் தீர்க்கதமசு என்ற முனிவரால், அங்கன், வங்கன், களிங்கன், சிம்மன், பவுண்டரன் என்ற பிள்ளைகள் பிறந்து அவ்வப்பெயர் கொண்ட ராஜ்யங்களை ஆண்டு வந்தார்கள். அந்த சந்ததியாருக்கும் அப்பெயர்களே வழங்கின. அங்கசந்ததியில் அனபானன் பிறந்தான். அவன் மகன் திவிரதன், அவன் மகன் தர்மராதன். அவன் மகன் சித்திரரதன். அவனுக்கு ரோமபாதன் என்ற பெயருமுண்டு. அவனுடைய நண்பனான தசரத மாமன்னன், சந்ததியில்லாத அவனுக்குச் சாந்தை என்பவளை மகளாகக் கொடுத்தான். ரோமபாதனன் மகன் சதுரங்கள். அவன் மகன் பிருதுலாக்ஷன். அவன் மகன் சம்பன். அவன் சம்பை என்ற நகரை உண்டாக்கினான். அவன் மகன் அரியங்கன், அவன் மகன் பிருகத்திரதன், அவன் பிள்ளை பிரகத் கருமன். அவன் மகன் பிரகத்பா. அவன் மகன் பிரகன்மனன். அவன் மகன் ஜயத்ரதன். பிராமண க்ஷத்திரிய வம்சம் கலந்த மங்கையொருத்தியை மணந்து அவள் மூலம் விஜயன் என்பவனை பெற்றான். அவன் மகன் திருதி. அவன் பிள்ளை திருதவிரதன். அவன் மகன் சத்தியகர்மா. அவன் மகன் அதிரதன். அவன் தான் கங்கையிலே குந்தியினால் எறிந்து விடப்பட்ட கர்ணன் என்ற குமாரனைப் பெட்டியிலிருந்து எடுத்து தன் புத்திரனாக வைத்துக் கொண்டவன், அவ்வாறு வளர்ந்த கர்ணனுக்கு விருஷசேனன் என்னும் மகன் பிறந்தான். அவ்விருஷசேனன் வரையில் உள்ளவர் தாம் அங்கதேசத்தை ஆண்டுவந்த அங்க வமிசத்தாராவார்கள்.

———–

19. பூரு, பரத வம்சங்கள்

மைத்ரேயரே! இனி யயாதியின் கடைசி மகனான பூருவின் வம்சத்தைச் சொல்கிறேன். பூருவின் மகன் ஜனமேஜயன் அவன் மகன் பிரசின்வான். அவன் பிள்ளை பிரவீரன். அவன் புதல்வன் மனசியு, அவன் புத்திரன் அப்தன், அவன் மகன் சுத்தியு. அவன் மகன் பகுகதன், அவன் பிள்ளை சம்யாதி. அவன் மகன் அஹம்யாதி, அவன் மகன் ரவுத்திராசுவன். அவனுக்கு ருதேபு, க÷க்ஷபு, தண்டிலேபு, கிருதேபு, ஜலேபு, தர்மேபு, திருதேபு, தலேபு, சன்னதேபு வனேபு என்று பத்துப் பிள்ளைகள் உண்டு. ருதேபுவுக்கு ரந்திநாரன் என்ற மகன் ஒருவன் பிறந்தான். அவன் சுமதி, அப்பிரதிரதன், துருவன் என்ற பிள்ளைகளைப் பெற்றான். அப்பிரதிரதனின் பிள்ளை கண்ணுவன் அவன் மகன் மேதாதிதி, அவன் முதலாகக் கண்ணுவ வம்சத்தில் வந்தவரெல்லாம் பிராமணர்களானார்கள். அந்த அப்பிரதிரதனுக்கு ஐலீனன் என்ற மகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு துஷ்யந்தன் முதலிய நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். துஷ்யந்த மன்னனுக்குப் பிரதமா மன்னன் பிறந்தான். அவனைப் பற்றி தேவர்களால் ஒரு சுலோகம் பாடப்பட்டது. அதாவது தாயானவளின் கருப்பையில் எவனாலே புத்திரன் உண்டாக்கப்பட்டானோ அவனுக்கே அவன் புத்திரன். ஆகையால் துஷ்யந்த மாமன்னனே! பிள்ளையைப் பார்த்துக் கொள். சதுந்தலையை அவமானப்படுத்தாதே! அரசே! முன்பு யமனின் சபையிலிருந்து ஒரு புத்திரனை வீரியத்தை விட்டவனே கொண்டு போனான். இந்தக் கர்ப்பத்தை நீயே உண்டாக்கியவன் சகுந்தலை உண்மையை சொன்னாள்! என்பது தான் அந்த சுலோகத்தின் கருத்தாகும். அவ்வாறு துஷ்யந்த மன்னனால் உண்டான பரத மன்னனுக்குப் பத்தினிகளான மூவரிடத்திலும் ஒன்பது பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகளை நோக்கி, இவர்கள் எனக்குத் தக்கவர்களல்லர் என்று பிதாவே சொன்னதால், அப்பிள்ளைகளின் தாய்மார்கள் விபசார சந்தேகத்தால் தங்களை புருஷன் தள்ளி வைத்துவிடுவான்! என்று பயந்து தங்கள் பிள்ளைகளைச் சென்று விட்டார்கள். பிறகு, புத்திர உற்பத்தி வீணாகியதால் புத்திரன் வேண்டுமென்று பரதன் விரும்பி, மருத்துக்களைக் குறித்து சோமயாகம் செய்தான். அது பயனைத் தந்தது. தீர்க்க தமசு என்பவரால் பக்கத்தில் தள்ளப்பட்ட பிரகஸ்பதியின் வீரியத்தால், பத்தினியான மமதை என்பவளிடத்தில் பரத்வாஜன் என்னும் ஒருவன் பிறந்திருந்தான். அவனையே பரதனுக்குப் பிள்ளையாக மருத்துருக்கன் பிரசாதித்தார்கள். மூடையான பெண்ணே! நம் இருவராலும் பிறந்த இந்தப் பிள்ளையை நீயே காப்பாற்று என்று பிரகஸ்பதியும், அதுபோலவே பிரகஸ்பதியிடம் மமதையும் ஆகத் தந்தை தாய் இருவரும் சொல்லி விட்டதால் அந்தப் பிள்ளைக்கு பரத்வாஜன் என்ற பெயர் உண்டாயிற்று. பரதனுக்கு மக்கட்பேறு வீணானபோது, பிள்ளையாகக் கிடைத்ததால் பரத்வாஜனுக்கு விரதன் என்ற பெயரும் வழங்கலாயிற்று. அந்த விரதனுக்கு மன்யு என்பவன் பிறந்தான். அவனுக்கு பிரகத்க்ஷத்திரன் மகாவீரியன், நகரன், கர்க்கன் என்ற பிள்ளைகள் பிறந்தார்கள். நகரனுக்கு ஸங்கிருதி பிறந்தான், அவனுக்கு குருப்பிருதி ரந்திதேவன் என்று இருபிள்ளைகள் பிறந்தார்கள்.கர்க்கனுக்கு சினி பிறந்தான். அதனால் கார்க்கியர், சைனியர் என்று சொல்லப்பட்ட வம்சத்தார்களனைவரும் க்ஷத்திரியராக இருந்தும் பிராமணர்களானார்கள். மகாவீரியனுக்கு துரூக்ஷயன் என்ற மகன் பிறந்தான், அவனுக்கு திரையாருணி; புஷ்க்கரிணன், கபி என்ற மூன்று பிள்ளைகள் பிறந்து பின்னர் மகிமையால் பிராமணரானார்கள்.

பிரகத்க்ஷத்திரனின் மகன் சுஹோத்ரன். அவன் மகன் ஹஸ்தி, அவன் தான் ஹஸ்தினாபுரத்தை உண்டாக்கியவன். அவனுக்கு அஜமீடன், துவிஜம்மீடன், புருமீடன் என்ற மூன்று குமாரர்கள் ஜனித்தார்கள். பிறகு அஜமீடனின் மகன் கண்வன்; அவன் மகன் மேதாதிதி, அவ்வஜமீடனுக்கே பிரூகதிஷு என்ற வேறொரு மகன் இருந்தான். அவன் மகன் பிருகத்தனு; அவன் மகன் பிருகத்கர்மன்; அவன் மகன் ஜயத்திரதன், அவன் பிள்ளை விசுவஜித்து. அவன் குமாரன் சேனஜித்து, அவன் புதல்வர்கள் ருசிராசுவன், காசியன், திரிடஹனு வச்சஹனு என்பவராவர். ருசிராசுவனுக்கு பிருதுசேனன் பிறந்தான். அவன் மகன் பாரன். அவன் மகன் நீலன். அவனுக்கு நூறு பிள்ளைகள். அவர்களில் முக்கியமானவன் காம்பீலிய நகராதிபதியான சமரன். சமரனுக்கு பாரன், சுபாரன்; ஸதசுவன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். சுபாரனின் மகன் ஸுகிருதி அவன் மகன் விப்பிராசன், அவன் மகன் அனுஹன், அவன் சுகரின் மகளாகிய கீர்த்தியை மணந்தான். அவ்வனுஹனனுக்கு பிரமதத்தன் பிறந்தான். அவன் மகன் விஷ்வக்கேசனன், அவன் மகன் உதகஸேனன்; அவன் பிள்ளை பல்லாடன், முன்னே சொன்ன துவிஜமீடன் என்பவனின் பிள்ளை யவீநரன். அவன் திருதிமான், அவன் பிள்ளை சத்யதிருதி; அவன் மகன் திரிடநேமி; அவன் மகன் சுபாரிசுவன், அவன் பிள்ளை சுமதி, அவன் மகன் சன்னதிமான். அவன் மகன் கிருதன். அவன் இரணியநாபனால் யோகாப்பியாசம் செய்விக்கப்பெற்று பிராச்சிய சாமகருடைய இருபத்து நான்கு சங்கீதங்களைச் செய்தான். கிருதனின் மகன் உக்ராயுதன். அவனது தனயன் ÷க்ஷமியன், அவன் பிள்ளை சுதீரன், அவன் மகன் ரிபுஞ்சயன், அவன் புதல்வன் பஹீதரன். இவர்கள் தாம் புரு வம்சத்தார்கள். பவுரவர் என்றும் இவர்கள் வழங்கப்படுவார்கள். முன்னே சொன்ன அஜமீடனுக்கு நளினி என்று ஒரு மனைவி இருந்தாள். அவள் வயிற்றில் நீலன் என்பவன் பிறந்தான். அவன் மகன் சாந்தி; அவன் பிள்ளை சுசாந்தி. அவன் மகன் புரஞ்சயன். அவன் மகன் ரிக்ஷன், அவன் பிள்ளை அரியசுவன், அவன் மகன் திவோதாஸன்; அரியசுவனுக்கு அகலியை என்ற ஒரு பெண்ணும் உண்டு. அந்த அகலியை சரத்துவான் என்ற கவுதமருக்குப் பத்தினியாகி சதாநந்தர் என்பவரைப் பெற்றாள். சதாநந்தருக்கு சத்தியதிருதி என்பவர் பிறந்து தனுர் வேதத்தை முழுவதுமாகக் கற்றார். அவர் ஊர்வசி என்ற அப்சரசைக் கண்டபோது மோகவசத்தால் அவரது வீரியம் நழுவி நாணற்கட்டையிலே இருபிரிவாக விழுந்தது. அதிலிருந்து ஒருபுத்திரனும் ஒரு புத்திரியும் பிறந்தார்கள். அவர்களை வேட்டையாட வந்த சந்தனு மாமன்னன் கிருபையினால் பரிக்கிரகித்தான். அதனால் அந்தப் புத்திரனுக்கு கிருபன் என்றும், அந்தக் கன்னிகைக்கு கிருபி என்றும் பெயர்கள் உண்டாயிற்று. குமாரி கிருபியை, துரோணாச்சாரியாருக்கு மனைவியாகவும் அசுவத்தாமருக்குத் தாயாகவும் ஆனாள்.

திவோதாசன் என்பவன் மகன் மித்திராயு அவனுக்கு சியவனன் என்பவன் பிறந்தான், அவன் மகன் சுதாசன். அவன் மகன் சவுதாசன், அவன் மகன் சகதேவன், அவன் மகன் சோமகன், அவனுக்கு நூறு பிள்ளைகள், மூத்தவன் ஜந்து கடைசி மகன் பிருஷதன். பிருஷதன் மகன் துருபதன், அவன் மகன் திருஷ்டத்துயும்னன். அவன் மகன் திருஷ்டகேது, அஜமீடனுக்கு ரிஷன் என்று மற்றொரு மகன் உண்டு. அவன் மகன் சம்வரணன், அவன் மகன் குரு, அவன் தான் தரும÷க்ஷத்திரத்தைக் குரு÷க்ஷத்திரமாக்கினான். அவனுக்கு சுதனு, ஜன்னு, பரிக்ஷித்து முதலிய புத்திரர்கள் உண்டானார்கள். அவர்களில் சுதனுவின் மகன் சுகோத்திரன். அவன் மகன் சியவனன், அவன் மகன் உபரிசரவசு, அந்தவசுவுக்கு பிருகத்திரன், பிரத்தியகிரன், குசாம்பன், குசேலன், உபரிமாச்சியன் முதலிய ஏழு பிள்ளைகள் பிறந்தார்கள். பிருகத்திரதன் மகன் குசாக்கிரன்; அவன் மகன் விருஷபன், அவன் பிள்ளை புஷ்பவான். அவன் மகன் சத்யஹிதன். அவன் மகன் சுதனுவா, அவன் மகன் சந்து, அந்த பிருகத்திரனுக்கு இருபாதியாய் மற்றொரு பிள்ளை உண்டானான். அவன் ஜரை என்ற அரக்கியால் கூட்டப்பட்டதால் ஜராசந்தன் என்ற பெயரைப் பெற்றான். அவன் மகன் சகதேவன். அவன் மகன் சோம்பன்; அவன் மகன் சுருதி; சிரவசு இவர்கள் தான் மகத தேசத்தை ஆண்டு வந்த மன்னர்கள். இவர்கள் மாகதர் என்று வழங்கப்பட்டனர்.

————

20. சந்தனு வம்ச வரலாறு

பரிக்ஷித்து மகாராஜனுக்கு, ஜனமேஜயன், சுருதசேனன், உக்கிரசேனன், பீமசேனன் என்று நான்கு குமாரர்கள் இருந்தார்கள். ஜன்னு என்பவனுக்கு சுரதன் என்பவன் பிறந்தான். அவன் மகன் விடூரதன், அவன் பிள்ளை சர்வபவுமன், அவன் மகன் ஜயத்சேனன். அவன் புதல்வன் ஆராதிதன், அவன் பிள்ளை அயுதாயு, அவன் மகன் அக்கிரோதனன், அவன் புதல்வன் தேவாதிதி, அவனுக்கு ருக்ஷன் என்பவன் பிறந்தான். அவன் மகன் பீமசேனன், அவன் மகன் திலீபன், அவன் மகன் பிரதீபன், அவனுக்கு தேவாபி, சந்தனு பாகிலிகன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். தேவாபி, சிறுவயதிலேயே காட்டிற்குச் சென்று, அங்கு வசித்துக் கொண்டிருந்தான். அதனால் அவன் தம்பியான சந்தனு அரசனனான். அவனைப் பற்றி ஒரு சுலோகம் வழங்குகிறது. அதாவது அவ்வரசன் வயோதிகமான எவனைத் தன் கைகளால் ஸ்பரிசிக்கிறானோ அவன் யவுவனத்தை அடைகிறான். மேலும் மிகுந்த அமைதியையும் அடைகிறான். ஆதலால் சந்தனு என்ற பெயரைப் பெற்றான்! என்பது அச்சுலோகத்தின் கருத்தாகும். சந்தனு மன்னனின் ஆட்சியில், பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே பெய்யவில்லை, அதனால் ராஜ்யத்துக்கு உண்டான தீங்கை சந்தனு மகாராஜன் உணர்ந்து பிராமணர்களை அழைத்து சுவாமிகளே! நம்முடைய ராஜ்யத்தில் ஏன் மழையே பெய்யாமலிருக்கிறது? நான் செய்த அபராதம் என்ன? என்று கேட்டான். அதற்கு அவர்கள், வேந்தனே! மூத்தவன் இருக்க இளையவனாகிய நீ இந்தப் பூமியை ஆண்டு அனுபவிக்கிறாய், ஆகையால் மூத்தவனுக்கு விவாகம் இல்லாதிருக்கம்போது அவனது தம்பியாகிய நீ விவாகம் செய்து கொண்டால் என்ன பாதகம் உண்டோ, அந்த பாதகம் உன்னைச் சேர்ந்துள்ளது? என்றார்கள். அதற்கு என்ன செய்யவேண்டும்? என்று சந்தனு கேட்டான். அதனால் பிராமணோத்தமர்கள், அரசே! உன் தமையனான தேவாபி என்பவன் எந்தவொரு குற்றமும் பாதகமும் செய்யாமல் பரிசுத்தமானவனாக இருப்பதால், அவனுக்கு உரியது இந்த அரசாட்சி! ஆகையால் இதுவரை நீ அனுபவித்தது போதும். இனி இந்த இராஜ்யத்தை அவனுக்குக் கொடுத்து விடுவாயாக! என்றார்கள். சந்தனு மன்னன் தான் செய்த தவறுக்கு வருந்தி, தன் தமையனிடம் அரசுரிமையை வழங்க விரும்பி, அவன் இருக்கும் காட்டுக்குப் புறப்பட்டான். இதனிடையில் சந்தனுவின் அமைச்சனாகிய அசுமராவி என்பவன் அந்தக் காட்டுக்கு, வேதவாத விரோதஞ் சொல்லும்படியாகச் சில முனிவர்களை அனுப்பி வைத்தான். அவர்கள், சரியான புத்தியுடைய தேவாபியைக் கண்டு, அவனுக்குத் துர்ப்புத்திகளைப் போதித்தார்கள். இதனிடையில் சந்தனுவும் அவனுடன் சென்ற அந்தணர்களும் தேவாபியைச் சந்தித்து, மூத்தவனே இராஜ்யத்தை ஆளவேண்டும்! என்று வேதபிராமணமுள்ள நியாயங்களை அவனுக்கு போதித்தார்கள். அதையெல்லாம் கேட்ட தேவாபி, வேத விரோதமான யுக்திகளால் தூஷித்தான். அதனால் சந்தனுவுடன் சென்ற அந்தணர்கள் வெறுப்புற்றனர்.

அவர்கள் சந்தனு மன்னனை நோக்கி, அரசனே! இந்த விஷயமாக உன் தமையனை நிர்ப்பந்தஞ் செய்தது போதும். வா! இனி உன் அரசில் மழையின்மையாகிய குற்றம் நீங்கிவிடும். ஏனெனில் அநாதியான வேத வாக்கியங்களைத் தூற்றிய உன் அண்ணன் பதிதன் ஆனான். தமையன் பதிதன் ஆகிவிட்டதால் பரிவேத்துருத்துவம் என்ற குற்றம் உனக்கு இல்லை! ஆகையால் நீயே அரசாட்சி செய்ய வேண்டும்! என்று சொன்னார்கள். பிறகு சந்தனு தன் தலைநகரம் சென்று அரசாளத் துவங்கினான். தேவ தூஷணை செய்ததால், மூத்தவன் பதிதனாகி விட்டபடியால், இளையவனான சந்தனுவின் ஆட்சியில் மேகம் பொழிய, பயிர்கள் செழித்து வளர்ந்தன. பாகிலீகனின் மகன் சோமதத்தன். சோமதத்தனுக்கு பூரி, பூரிசிரவன், சல்லியன் என்று மூன்று பிள்ளைகள் உண்டு. சந்தனு மகாராஜனுக்கு தேவநதியான கங்கையிடம் சகல, நூல் அறிவும் மகா பலபராக்கிர கீர்த்திகளும் வாய்ந்த பீஷ்மர் என்பவர் பிறந்தார். மேலும் சந்தனு மன்னனுக்கு சத்தியவதி என்பவளிடம் சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அதில் சித்திராங்கதன் என்பவன் இளமையிலேயே ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்டான். விசித்திர வீரியனோ காசிமன்னனின் பெண்களாகிய அம்பிகை, அம்பாலிகை என்பவர்களை மணந்து, காம போகத்தில் மிகவும் உழன்றதனால் தொழுநோயால் மடிந்தான். பிறகு, அவர்களின் தாயான சத்தியவதி ஒரு கட்டளையிட்டாள். கிருஷ்ணத்துவை பாயனன் என்பவன் தாயின் வாக்கைத் தட்டக்கூடாது என்பதால் விசித்திர வீரியனின் மனைவிகளின் மூலமாக திருதராஷ்டிரன், பாண்டு என்பவர்களையும், ராஜபத்தினிகளால் ஏவப்பட்ட ஒரு தாதியிடத்தில் விதுரனையும் உண்டாக்கினாள். திருதராஷ்டிரன் காந்தாரி என்ற பத்தினியிடம் துரியோதனன் முதலிய நூறு பிள்ளைகளைப் பெற்றான். அவனுடைய சகோதரனான பாண்டு மன்னனோ, காட்டில் மிருக ரூபமாக இருந்த ஒரு முனிவரின் சாபத்தினால் புத்திர உற்பத்தி செய்யும் சக்தியை இழந்திருந்தான். அதனால் அவனுடைய மனைவியான குந்தியிடம் தருமன், வாயு, இந்திரன் என்ற தேவர்களால் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் என்ற குமாரர்களும் மற்றொரு மனைவியான மாத்திரியிடம் அசுவினி தேவதைகளால் நகுலன் சகாதேவன் என்பவர்களுமாக ஐந்து பிள்ளைகள் உண்டாக்கப்பட்டனர். பஞ்சபாண்டவர்களான அந்த ஐவருக்கும் திரவுபதி என்ற மனைவியிடம் குழந்தைகள் பிறந்தன.

யுதிராஷ்டிரரான தருமருக்கு திரவுபதியிடம் பிரதிவிந்தியனும் பீமனுக்கு சுருதசேனனும், அர்ச்சுனனுக்குச் சுருதகீர்த்தியும், நகுலனுக்கு சதானீகனும், சகதேவனுக்கு சுருதகர்மாவும் ஆக ஐந்து பிள்ளைகள் உண்டானார்கள். இவர்களைத் தவிர பஞ்சபாண்டவருக்கு வேறு பிள்ளைகளும் உண்டு. யுதிஷ்டிரருக்கு யவுதேயீ என்பவளிடத்தில் தேவகன் என்பவன் பிறந்தான். பீமனுக்கு இடும்பை என்னும் அரக்கியிடம் கடோத்கஜனும், காசி என்னும் மங்கையிடம் சர்வகன் என்பவரும் பிறந்தார்கள். சகதேவனுக்கு விஜயை என்பவளிடம் சுகோத்திரனும், நகுலனுக்கு ரேணுமதி என்பவளிடம் நிசமித்திரனும் பிறந்தார்கள். அர்ச்சுனனுக்கு உலூபி என்ற நாக கன்னிகையின் மூலம் இராவான் என்பவனும், மணலூர் பட்டண அதிபதியான பாண்டியனது குமாரியிடம், புத்திரிகா புத்திரனாய்ப் பப்புருவாகனன் என்பவனும் பிறந்தார்கள். மேலும் அர்ச்சுனனுக்கு சுபத்திரை என்பவளிடத்தில் இளமையிலேயே மகாபல பராக்கிரமசாலியாய்ச் சத்துருக்களையெல்லாம் ஜெயிக்கும் வல்லமை பொருந்திய அபிமன்யு என்பவன் பிறந்தான். அந்த அபிமன்யுவுக்கு உத்தரை என்பவளிடம் பரீக்ஷித்து பிறந்தான். அவன் கர்ப்பத்தில் இருக்கும்பொழுது குருவம்சத்தார் அனைவரும் நாசமாய்ப் போன பிறகு அசுவத்தாமா எய்த பிரம்மாஸ்திரத்தால் எரிக்கப்பட்டு ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய பிரபாவத்தினால் மறுபடியும் பிராணனை அடைந்தான். அதனால் அவனுக்குப் பரீக்ஷித்து என்ற பெயர் வழங்கலாயிற்று. மைத்ரேயரே! அந்த பரீக்ஷித்து மன்னன் தான் இப்போது இந்தப் பூவுலகையெல்லாம் யாதொரு குறைவுமில்லாமல் தர்மம் தழைக்கப் பரிபாலனஞ் செய்து கொண்டிருக்கிறான்.

———–

21. பின்னிட்ட பாண்டவ வம்ச சரிதம்

மைத்ரேயரே! இனிவரும் அரசர்களைச் சொல்கிறேன் கேளும். இப்போது அரசனாக இருக்கும் பரிக்ஷித்து மன்னனுக்கு ஜனமேஜயன் சுருதசேனன் உக்ரசேனன் பீமசேனன் என்ற நான்கு பிள்ளைகள் பிறப்பார்கள். ஜனமேஜயனுக்கு சதானீகன் என்பவன் பிறப்பான். அவன் யாக்ஞவல்க்கியரிடம் வேதத்தையும், கிருபாசாரியரிடத்தில் வில் வித்தையும் கற்று கொடியவைகளான விஷயங்களில் வெறுப்புற்றுச் சவுகை முனிவரின் உபதேசத்தால் ஆன்மஞானத்தில் தேர்ந்து உத்தமமான மோட்சத்தை அடைவான். சதானீகனின் குமாரன் அசுவமேத தத்தன், அவன் மகன் அதிசீமகிருஷ்ணன், அவன் மகன் நிசக்குனு, அவன் காலத்தில் ஹஸ்தினாபுரம் கங்கையால் அழிக்கப்படும். பிறகு அவன் கவுசாம்பி என்ற நகரத்தில் வாசஞ்செய்வான். அவஷக்கு உஷ்ணன் என்ற ஒரு மகன் பிறப்பான். அவன் மகன் விசித்திரரதனன். அவன் மகன் விருஷ்ணிமான். அவன் மகன் சுஷேணன், அவன் மகன் சுனீதன், அவன் பிள்ளை நிருபசசக்ஷú, ஞூவன் மகன் சுகிபலன், அவன் மகன் பாரிபிலவன், அவன் மகன் சுநயநன். அவன் மகன் மேதாவி. அவன் பிள்ளை ரிபஞ்சயன். அவன் மகன் அருவன், அவன் குமாரன் திக்குமன், அவன் மகன் பிருகத்திரதன், அவன் மகன் வகதாசன், அவனுக்கு சதானீகன் என்றொரு மகனும் உண்டு. அவனுக்கு உதயன் என்பவன் பிறப்பான். அவனுக்கு விஹீநரன் பிறப்பான். அவனுக்கு தண்டபாணி என்ற புதல்வன் ஒருவன் உண்டாவான். இதற்கு ஒரு சுலோகமுண்டு. பிராமண க்ஷத்திரியர்களுக்கு ஆதாரமாய் தேவரிஷிகளினாலும் பூஜிக்கப்பட்ட பாண்டவ வம்சமானது, கலியுகத்தில் ÷க்ஷமகனோடு முற்றுப் பெறும்! என்பதுதான் அந்த சுலோகம்.

————-

22. இஷ்வாகு வம்சம் (பிற்பகுதி)

இனி இஷ்வாகு வம்சத்தைப் பற்றிச் சொல்கிறேன். முன்பு, அந்த வமிசத்தில் பிருகத்பலன் என்பவன் உண்டானான் என்று சொல்லி முடித்தேன். அவன் மகன் பிருகத்க்ஷணன் அவனுக்கு உருஷயன், அவனுக்கு வச்சவியூகன் அவனுக்கு பிருத்வி யோமன், அவன் மகன் திவாகரன். அவன் மகன் சகதேவன். சகதேவனுடைய மகன் பிருகதசுவன். அவனுக்குக் குமாரன் பானுரதன், அவனுக்கு பிரதீதாசுவன். அவனுக்குச் சுப்பிரதீகன், அவனுக்கு மகன் மருதேவன். அவன் மகன் சுநக்ஷத்திரன், அவனுக்கு மகன் கின்னரன், அவன் மகன் அந்தரிக்ஷன். அவன் மகன் சுபர்ணன், அவனுக்கு அமித்திரஜித்து அவனுக்கு பிருகத்பாஜன். அவனுக்கு தருமி, தருமிக்கு கிருதஞ்சயன். அவன் மகன் ரணஞ்சயன். அவன் மகன் சஞ்சயன். அவன் மகன் சாக்கியன். சாக்கியன் மகன் சுத்தோதனன். அவன் மகன் ராகுளன். அவன் மகன் பிரசேனஜித்து. அவனுக்கு க்ஷúத்திரகன், அவனுக்கு குண்டகன், அவன் மகன் சுரதன், அவன் மகன் சுமித்திரன்; இவர்களே பிருகத்பல குலத்திற் பிறந்த இக்ஷúவாகு வமிசத்தாராவர். இதற்கும் ஒரு சுலோகம் உண்டு. இக்ஷúவாகுவின் குலம் கலியுகத்தில் சுமித்திரனோடு முடிவு பெறும் என்பதே அந்த சுலோகம்.

————

23. மாகத வம்சம் (பிற்பகுதி)

இனிமேல் பிரகத்திரதன் முதல் உண்டாகும் மாகதருடைய வம்சத்தைச் சொல்கிறேன். இந்த வம்சத்தில் ஜராசந்தன் முதலிய மகா பலபராக்கிரமசாலிகளான அரசர்கள் உண்டானார்கள். ஜராசந்தனுடைய மகன் சகதேவன், அவன் மகன் சோமாபி, அவன் மகன் அனுசுருதசிரவன். அவன் மகன் அயுதாயு, அவனுக்கு நிரமித்திரன், அவன் மகன் சுநேத்திரன்; அவன் மகன் சுதன் பிருகத்கருமா; அவன் மகன் சியேனஜித்து, அவன் மகன் சுருதஞ்சயன். அவன் மகன் விப்பிரன்; அவனுக்கு சுசி என்பவன் பிறப்பான். அவனுக்கு க்ஷமியன் உண்டாவான். அவனுக்குச் சுவிரதன், சுவிரதனுக்கு தருமன் பிறப்பான்; அவனுக்கு சுசிரவன் தோன்றுவான். அவனுடைய மகன் திருடசேனன். அவன் மகன் சுபலன்; அவன் மகன் சுநீதன். அவனுக்கு சத்யஜித் என்பவன் பிறப்பான். அவனுக்கு விஸ்வஜித்து, அவனுக்கு ரிபுஞ்சயன். இவர்களே பிருக்திரத வம்சத்தின் வேந்தர்கள், இனி இவர்கள் ஓராயிரம் ஆண்டளவு பெருகியிருப்பார்கள்.

———–

24. கல்கி அவதாரம்

பிருகத்திர வமிசத்தின் கடைசியில் ரிபுஞ்சயனின் மந்திரியாக சுனகன் என்பவன் விளங்குவான், அவன் தன் அரசனைக் கொன்று பிரத்தியோதனன் என்ற தன் மகனுக்கு அரசியல் பட்டாபிஷேகம் செய்வான். அந்த பிரத்தியோதனனுக்கு பாலகன் என்பவன் மகன்; அவன் மகன் விசாகயூபன்; அவன் மகன் ஜனகன். அவன் மகன் நந்திவர்த்தனன் ஆக இந்த ஐவரும் பிரத்யோதனர் என்றே வழங்கப்படுவார்கள்; அவர்கள் நூற்று முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி புரிவார்கள்; பிறகு சிசுநாபன் என்பவன் உண்டாவான்; அவன் மகன் காகவர்ணன்; அவன் மகன் ஷேமதர்மன்; அவன் பிள்ளை க்ஷதளஜசு; அவன் மகன் விதிசாரன், அவன் புதல்வன் அஜாதசத்ரு, அவன் மகன் அர்ப்பகன், அவனுக்கு உதயணன், அவன் பிள்ளை நந்திவர்த்தனன்; அவனுக்கு மகாநந்தி, இவர்கள் அனைவரும் சைசுநாபர் என வழங்கப்பட்டு, முந்நூற்று அறுபத்திரண்டு ஆண்டுகள் அரசாட்சி செய்வார்கள். அந்த மகாநந்திக்கு சூத்திர மங்கையின் வயிற்றில் பிறக்கும் பேரரசனும் மகாபலமுடைய மகாபதும நந்தன் என்பவன் பரசுராமனைப் போல் க்ஷத்திரியரையெல்லாம் நாசஞ்செய்வான். அதற்குப் பிறகு சூத்திரர்கள் ஆள்வார்கள். அந்த மகாபத்ம நந்தன் தன் ஆக்ஞைக்கு ஒருவராலும் தடை ஏற்படாதவாறு, பூவுலகை ஒரு குடைக்குக் கீழ் ஆண்டு வருவான். அவனுக்கு சுமாலி முதலிய எட்டுப் பிள்ளைகள் தோன்றி அவனுக்கு பிறகும் நூறாண்டுகள் ஆட்சிபுரிவார்கள். பிறகு இந்த ஒன்பது நந்தர்களையும் கவுடில்யன் என்றும் விஷ்ணு குப்தன் என்றும் வழங்கப்படும். பிராமணன் ஒருவன் நாசஞ்செய்வான். அதன் பிறகு அந்த மகாநந்தனின் காதற்கிழத்தியான முரை என்பவள் வயிற்றில் பிறந்த சந்ததியார்கள் பூமியை ஆண்டு வருவார்கள். அவர்களில் சந்திரகுப்தன் என்பவனை அந்த கவுடில்யப் பிராமணனே சிங்காதனம் ஏற்றிப் பட்டாபிஷேகம் செய்து வைப்பான். அந்த சந்திரகுப்தனுக்கு பிந்துசாரன் என்பவன் உண்டாவான். அவன் மகன் அசோகவர்த்தனன், அவன் மகன் சுயன். அவன் மகன் சம்யுதன், அவன் மகன் சாலிசூகன், அவன் மகன் சோமசர்மா, அவன் மகன் சததனுவா, அவனுக்குப் பிறகு பிருகத்திருதன் என்பவன் உண்டாவான். இந்த மவுரிய வம்சத்துப் பதின்மரும் நூற்று முப்பத்தேழு ஆண்டுகள் இந்தப் பூமியை ஆண்டு வருவார்கள். அவர்களுக்கு முடிவாக சுங்கர் என்ற பதின்மர் இந்தப் பூமியை ஆண்டு வருவார்கள். முன்னே சொன்ன மவுரியரின் கடைசியரசனை அவனது சேனாதிபதியான புஷ்யமித்திரன் கொன்று, தானே அரசனாவான். அவன் மகன் அக்னி மித்திரன், அவன் மகன் சுச்சியேஷ்டன், அவன் மகன் வசுமித்திரன், அவன் மகன் உதங்கன், அவன் மகன் புலிந்தகன், அவன் மகன் கோஷவசு, அவன் மைந்தன் வச்சிரமித்திரன், அவன் மகன் சூனுபாகவதன், அவன் தனயன் தேவபூதி. இந்த சுங்கர்கள் அனைவரும் நூற்றுப் பன்னிரண்டு ஆண்டுகள் பூமியை ஆள்வார்கள்.

பிறகு தேவபூமி என்ற சுங்கனை அவனது மந்திரியான வசுதேவன் என்னும் கண்வ குலத்தினன் கொலை செய்து, அரசனாவான். அதனால் பூமி இந்தக் கண்வரை அடையும். அவன் மகன் பூமித்ரன், அவன் மகன் நாராயணன், அவன் மகன் சுசர்மா கண்வவமிசத்தாரான இந்த நால்வரும் நாற்பத்தைந்து ஆண்டுக்காலம் அரசாள்வார்கள். சுசர்மனை அவனது வேலைக்காரனான ஆந்திரதன் பலிபுச்சகன் என்பவன் கொன்று ராஜ்யத்தை ஆள்வான். பிறகு அவன் தம்பி கிருஷ்ணன் அரசனாவான். அவன் மகன் சாந்தகர்ணி, அவன் மகன் பூர்ணோச்சங்கன், அவன் மகன் சாதகர்ணி, அவன் மகன் லம்போதரன், அவன் மகன் பாலகன், அவன் பிள்ளை மேகசுவாதி, அவன் மகன் படுமான், அவன் மகன் அரிஷ்டகர்மன், அவன் பிள்ளை புலிந்தசேனன், அவன் புத்திரன் சந்திரன், அவன் மகன் சாதகர்ணி, அவன் பிள்ளை சிவசுவாதி, அவன் புத்திரன் கோமதி அவன் மகன் பூனிமான். அவன் மகன் சாந்தகர்ணி, அவன் பிள்ளை சிவஸ்ரீ, அவன் பிள்ளை சிவஸ்கந்தன், அவன் மகன் யக்ஞஸ்ரீ, அவன் மகன் துவியக்ஞன், அவன் பிள்ளை புலோமாபி ஆக இந்த முப்பதின்மரும் நானூற்று எண்பத்தாறு ஆண்டுகள் பூமியை ஆள்வார்கள். பிறகு இந்த ஆந்திரரின் சேவகரான ஆபீரன் முதலிய எழுவரும் கர்த்தபீரான் என்ற பதின்மரும் அரசராவார்கள். அதற்கு பிறகு ஒரு குலத்துப் பதினாறுபேர் அரசாள்வார்கள். பிறகு யவனர் எண்மரும் துருக்கர் பதினால்வரும், முருண்டர் பதின்மூவரும், மவுனர் பதினொருவரும் ஆயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது ஆண்டுக்காலம் அரசர்களாவார்கள். பிறகு மவுனரில், ஒரு குலத்தைச் சேர்ந்த பதினொருவர் முந்நூறு ஆண்டுகள் அரசாள்வர். இவர்கள் அனைவரும் நசித்த பிறகு கிங்கிலை என்ற நகரத்தைச் சேர்ந்தவரும், அரசகுல சம்பந்தமற்றவருமான யவனரே மீண்டும் ஆள்வார்கள். அவர்களாவன, விந்தியசத்தி, புரஞ்சயன், ராமசந்திரன், தருமவர்மன், வங்கன் நந்தனன், சுநந்தி, அவன் தம்பி நந்தியசன், சுக்கிரன், பிரவீரன் என்ற இந்தப் பதின்மரும் நூற்றியாறு ஆண்டுக்காலம் அரசாள்வார்கள். இவர்களுக்குப் பிறகு இவர்களுடைய ஜாதியில் பிறந்த பதின்மூவரும் பாகிலிக தேசத்தார் மூவரும் புஷ்யமித்திரர், படுமித்திரர் என்ற பதின்மூவரும் ஆந்திரர் எழுவரும் சிற்றரசராய் ஆட்சி செய்வார்கள். கோசல நாட்டை ஒன்பதின்மரும், நைஷத தேசத்தை ஒன்பதின்மரும் ஆள்வார்கள். மகதத்தில் விசுவஸ்படிகன் என்று ஒருவன் தோன்றி செம்படவர், வேடவர் முதலியவர்களுடன் கலந்த பார்ப்பாரை ஸ்தாபிப்பான். பத்மவதி என்ற பட்டணத்தில் நாகர் என்று வழங்கப்படும் ஒன்பது மாகதர்கள் சகல அரச பரம்பரைகளையும் அழித்து, கங்கையின் உற்பத்தி ஸ்நானம் முதல் பிரயாகை வரையிலுள்ள ராஜ்யத்தை ஆள்வார்கள். கோசலம், ஆந்திரம், புண்டரம், தாமிரலிப்தம், சமதபபுரி இவற்றை தேவரக்ஷிதன் என்பவன் அரசாள்வான்.

கலிங்கம், மாகிஷம், மாகேந்திரம் முதலியர் குகர் என்போர் ஆள்வார்கள். நிடதம், நைமிக்ஷகம், காலகோசகம் என்ற ராஜ்யங்களை மணி தானியகர் அரசு செய்வர். திரை ராஜ்யம், முஷிகம் என்பவற்றை கனகப் பேருடையான் புசிப்பான். சவுராஷ்டிரம், ஆவந்தி, சூத்திரம், ஆபிரம் என்ற நாடுகளையும், நர்மதையடுத்த பாலை நிலங்களையும் கெட்டுப் போன பார்ப்பாரும் இடையர் சூத்திரர் முதலியோரும் ஆள்வார்கள். சிந்து, தேவிகை, சந்திரிகை முதலான நதிக்கரை நாடுகளை கெட்டுப்போன சூத்திரர், மிலேச்சர் முதலியோர் கைப்பற்றுவார்கள். இவ்வரசர் யாவரும் ஒரே காலத்தில் ஆண்டு வருவார்கள். இவர்கள் அதிகக் கோபமும் அற்ப அனுக்கிரகமும் உடையவர்கள். பொய்யிலும் அதருமத்திலும் மனப்பற்றுடையவர்கள். மங்கையரையும் பாலகரையும், பசுக்களையும் வதைப்பார்கள். பிறர் பொருளைக் களவு செய்வார்கள். பேராசைக்காரர்கள் இவர்களால் தருமம் சிறிது சிறிதாகக் குறையும். அப்பொழுது பொருளே உயர்ந்த குலத்துக்குக் காரணமாகும், நற்குலப்பிறப்பு உயர்ந்ததாகக் கருதப்படமாட்டாது. வலிமையே சகல தரும காரணமாகும் நல்லொழுக்கமற்ற பெண் தன்மையே விவாகஞ்செய்யக் காரணமாகும். குலங்கோத்திரம் காரணமாகாது. பொய் சொல்லும் திறமையே விவகாரத்தில் வெற்றியடையக் காரணமாக இருக்குமே தவிர, நியாயமான தருமங்கள் வெற்றியை வழங்காது. முப்புரிநூலைத் தரித்திருப்பது ஒன்று மட்டுமே பிராமணத் தன்மைக்கு காரணமாக இருக்கும். வேத சாஸ்திர ஆசாரங்கள் பிரம்மத் தன்மைக்கு ஆதாரமாக இராது வலிமையில்லாமையால் பிழைப்பிராது. பயிர்கள் இல்லாமை பிழைப்பதற்குக் காரணமாகாது. பயமின்றி உரத்த குரலில் பேசுவதே பாண்டித்யமாக இருக்கும். பொருளின்மையே சாத்வீகத்துக்குக் காரணமாக இருக்கும். ஈகைதான் தருமமாகும். யாகங்கள் தருமமாகாது. வைதீக முறையை விட அங்கீகரிப்பு முறையே விவாகத்துக்குக் காரணமாக இருக்கும். நன்றாக வேடந்தரித்தவனே பாத்திரமாவதற்கு ஏதுவாகுமேயன்றி யோக்யதை அன்று தூரமான இடத்தில் இருந்து கொண்டு, வருந்தண்ணீரே தீர்த்த ஏதுவேயன்றி சுத்தியன்று, கபடவேடந்தரித்தலே பெருமைக்கு காரணமாகுமே அன்றி தவம் முதலியவை ஆகாது. இவ்வாறு அநேக தோஷங்கள் நிறைந்த பூமியில் எந்தச் சாதியானாலும் எவன் பலவானோ அவனே அரசனாவான். அப்படிப்பட்ட நிலையில் அவர்களது கையின் கீழ் இருக்கமுடியாமல் நன்மக்கள் மலைகளின் நடுச்சாரல்களில் தங்கி வசிப்பார்கள். காய், கிழங்கு, கீரை, இலை, தேன் முதலியவைகளை ஆகாரமாகவும், மரப்பட்டைகள், தழைகள் இவற்றை வஸ்திரமாகவும் கொண்டு காற்று, வெயில், மழை முதலியவற்றால் துன்பப்படுவார்கள். எவனும் இருபத்து மூன்று ஆண்டு வரையில் பிழைத்திருப்பதே அபூர்வமாக இருக்கும். இவ்விதம் கலியுகத்தில் ஜனங்கள் க்ஷயமடைந்து தர்மங்களெல்லாம் மிகவும் அழிந்து கலியுகமும் முடியலாகும்.

அப்போது சகல லோக சிருஷ்டி கர்த்தாவாயும், சராசரங்களுக்கு எல்லாம் குருவாகவும், ஆதிமத்யாந்த ரஹிதமாகவும், சாக்ஷõத் பிரம்மமாயும் இருக்கும் ஸ்ரீவிஷ்ணுபகவான், தம் அம்சத்தால் சம்பளம் என்னும் கிராமத்தில் முக்கியமானவராக விளங்கும் விஷ்ணு யாஸு என்ற பிராமணருடைய மாளிகையில் எண்குண ஐஸ்வரிய சம்பன்னராய், கல்கி ரூபியாய் அவதரிப்பார். அளவற்ற சிறப்புடையவராகவும், மிலேச்சராகவும் திருடராகவும், துஷ்டாசாரம் கொண்டவராகவும் இருக்கும். அனைவரையும் கல்கி புருஷர் நாசஞ் செய்து அருளி, உலகமெல்லாம் தமது தருமத்தில் நிலைபெறச் செய்வார். பிறகு கலியுகம் முழுவதும் முடிவாகும் போது, இரவின் முடிவில் எழுந்தவர்களுக்கு ஏற்படும் நிர்மல புத்தியைப் போல் சகலருக்கும் புத்தி தெளிவு உண்டாகும். இனியண்டாமவர்க்குக் காரணமாக இருக்கும் அந்தக் காலத்து மனிதர்கள், மிகவும் கிழவர்களாக இருந்தாலும், தற்காலத்தில் புத்திர உற்பத்தி உண்டாகும். அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் அனைவரும் கிருதயுகத்தை அனுசரித்தவராகவே இருப்பார்கள். இது சம்பந்தமாக ஒரு சுலோகம் உண்டு. சந்திரனும் சூரியனும் குருவும் எப்போது புஷ்ய நட்சத்திரத்தில், ஒரே காலத்தில் பிரவேசிப்பார்களோ அப்போதே கிருதயுகம் உண்டாகும்! என்பதே அந்தச் சுலோகம். மைத்ரேயரே! சென்ற வருடம் இருப்பவரும் வருபவர்களும் ஆகிய அந்தந்த வமிசத்து அரசர்களைப் பற்றி உமக்குச் சொல்லி விட்டேன். பரீக்ஷித்து மகாராஜனின் உற்பத்திக் காலத்திலிருந்து நந்தன மன்னனுக்கு இராஜ்யப் பட்டாபிஷேகமாகும் காலம் வரையில் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் ஆகும். ஆகாயத்தின் வடக்கில் கிழக்கு நுனியாய் பெட்டி உண்டி போல் விளங்கும் சப்தரிஷி மண்டலத்தில் கிழக்கு நுனியில் உள்ள நட்சத்திரத்தில் இருப்பவர் மரீசி. அவருக்கு மேற்குத் திசையில் சிறிது தாழ்ந்து காணப்படுவது அருந்ததியோடு கூடிய வசிஷ்டன். அவருக்கு மேற்கில் சிறிது உயர்ந்து காணப்படுகிறவர் அங்கிரசு, அவருக்கு அண்மை மேற்கில் சதுக்கமாயுள்ள நான்கு நட்சத்திரங்களில் ஈசானியத்தில் இருப்பவர் அத்திரி. அத்திரிக்கு தெற்கில் இருப்பவர் புலஸ்தியர். அவருக்கு மேற்கில் புலகர், அவருக்கு வடக்கில் மண்டலத்துக்கு வாயவியத்தில் இருப்பவர் கிரது. வசிஷ்டருக்குத் தென்கிழக்கில் மிகச் சூட்சுமமாகக் காணப்படுவதே அருந்ததி. இந்த சப்தரிஷிகளை முன்னிட்டு உதயமாகும் புலஸ்திய கிருதுகளுக்கு இணையான தக்ஷிணேத்திர ரேகையின் தெற்குப் பக்கத்தில் அசுவினியாதி நட்சத்திரங்களில் எது காணப்படுமோ, அந்த நட்சத்திரத்தோடு கூடியவர்களாகவே, அப்த சப்தரிஷிகள் நூறாண்டுக்காலம் இருப்பார்கள். இந்தப் பரீக்ஷித்து மன்னனின் காலத்தில் அவர்கள் மகா நட்சத்திரத்தில் இருக்கிறார்கள். இப்போதுதான் தேவமானத்தில் ஆயிரத்திருநூறு ஆண்டுக் காலமான கலியுகம் துவங்கியது. இது முன்னமே தோன்றினும், எப்போதும் ஸ்ரீ சாக்ஷõத் விஷ்ணுபகவான் வசுதேவ குலத்தில் கண்ணாக அவதரித்து மறுபடியும் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினாரோ, அப்போது தான் கலியுகம் வந்ததென்று சொல்லவேண்டும். ஏனெனில் பகவான் தமது திருவடித் தாமரைகளால் இந்த பூமியை ஸ்பரிசித்துக் கொண்டிருந்ததால் கலியானது பூமியில் வியாபிக்கும் சக்தியற்றதாக இருந்தது. எம்பெருமானின் அம்சமான கண்ணன் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளிய பிறகுதான் தருமபுத்திரர் விபரீதமான நிமித்தங்களைக் கண்டு, பரீக்ஷித்துக்குப் பட்டாபிஷேகம் செய்து தம்பியருடன் ராஜ்யத்தை விட்டு, மகாப் பிரஸ்தானம் போய்விட்டார். இனி சப்த ரிஷிகள் எப்போது பூர்வாஷாடா நட்சத்திரத்திற்குப் போவார்களோ அப்போது தான் நந்தர்களின் காலம்! அதிலிருந்து கலி விருத்தியடையும்!

எந்தத் தினத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவான் தமது திவ்யலோகத்திற்கு எழுந்தருளினாரோ அன்றே கலியானது பூவுலகில் பிரவர்த்தித்தது. மைத்ரேயரே! அதன் தொகையைச் சொல்கிறேன் கேளும். சந்ததிகளையும் சந்தியம்சங்களையும் நீக்கி கலியுகத்தின் பிரமாணத்தைக் கணக்கிட்டால் மூன்று லக்ஷத்து அறுபதினாயிரம் ஆண்டுகளாகும். இதைத் தேவமானத்தால் கணக்கிட்டால், சந்தியாதிகளுடன் சேர்ந்து ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாகும். இந்தக் கலியுகம் கொஞ்சமும் மிச்சமில்லாமல் நீந்தியவுடன் மீண்டும் கிருதயுகம் உண்டாகும். யுகம்தோறும் மகாத்மாக்களான பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வருணத்தாரும் கடந்து போயினர். நான் அவர்கள் யாவரையும் குலமுறைப்படி உமக்குச் சொல்லவில்லை. ஏனெனில் அவர்கள் தொகை அனந்தம் பெயர்கள் அநேகருக்குச் சமமானவை. எனவே சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல நேரிடும். ஆகவே முக்கியமான சிலரையே உமக்குச் சொன்னேன். புருவமிசத்தைச் சேர்ந்த தேவாபியும், இக்ஷ்வாகு வமிசத்தானாகிய புருவும் மகத்தான யோக பலத்தைக்கொண்டு, கலா பக்கிராமத்தில் யாருக்கும் தெரியாமல் இருந்துகொண்டு, வருங் கிருதயுகத்தில் இங்கு வந்து க்ஷத்திரிய வமிசத்தைத் தோன்றச் செய்வார்கள். இவர்களே மனுக்குலத்துக்கு விதையாக ஏற்படுத்தப்பட்டவர்கள்; இந்தக் கிராமத்திலேயே மனு வமிசத்தாரால் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் என்று மூன்று யுகங்களும் அனுபவிக்கப்படுகின்றன. கலியுகத்திலோ, இப்போது தேவாபியும் புருவும் இருப்பது போல் சிலர் மட்டுமே விதைபோல இருப்பார்கள் மைத்ரேயரே! இந்த மனு வமிசத்தைத் தூக்குத் தொகையாகவே உமக்குச் சொன்னேன்; இந்த அரசர்கள் இந்தப் பூமி எனக்கு எப்படி வசப்படும்? என் மகனுக்கு எப்படி வசமாகும்? என் குலத்தாருக்கெல்லாம் எப்படி வசப்பட்டிருக்கும்? அத்தகைய உபாயத்தை நாம் செய்யவேண்டும்! என்ற கவலையிலேயே ஒழிந்தார்கள், இப்போதுள்ள அரசர்களுக்கு முன்பு இருந்தவர்களும் அவர்களுக்கும் முந்தியவரும், இனி உண்டாகப் போகிறவர்களும் யாவரும் இப்படிப்பட்டவர்களே ஆவார்கள். சரத்காலத்தில் வெற்றியடையும் பொருட்டுப் படையெடுத்துச் செல்லும் பேரரசரை நோக்கி, மலர்ந்த மலர்களாகிய பற்களினால் பூமி சிரிக்கின்றது போலும்! இந்த விஷயமாக பூமிதேவியால் பாடப்பட்ட பாடல்களைச் சொல்கிறேன்; கேளும் இவற்றைப் பூர்வத்தில் தருமக்கொடி நாட்டியிருந்த ஜனக மன்னனுக்கு அசிதர் என்பவர் கூறியிருக்கிறார்.

பூமாதேவியின்பாடல் கருத்துமிகவும் சாதுரியமுள்ள அரசர்களுக்கு இப்படிப்பட்ட அஞ்ஞானம் ஏன் இருக்கிறதோ! தண்ணீரில் உண்டாகும் நுரைக்குச் சமமான தம்மைச் சதமாக இவர்கள் எண்ணுகிறார்களல்லவா? முன்பு தங்களை வென்று பிறகு முறையே மந்திரிகளையும் சேவகரையும் மக்களையும் வென்று பிறகு முறையே மந்திரிகளையும் சேவகரையும் மக்களையும் வென்று பிறகு எதிரிகளையும் ஜயிக்க நினைக்கிறார்கள். பகைவர்களை இப்படி ஜெயிப்பதால் கடல் சூழ்ந்த பூமியையெல்லாம் கைவசப்படுத்துவோம் என்ற பேராசையால் முயற்சிக்கிறார்களேயல்லாது, தம்மை நெருங்கி மிருத்யு வந்திருப்பதை அவர்கள் அறிவதில்லை! நல்லது; அவர்கள் நினைப்பதுபோல கடல் சூழ்ந்த பூமண்டலமானது அவர்களது கைவசப்பட்டபோதிலும் இதற்கு முதற்காரணமான ஆன்ம ஜயத்துக்கு இது ஒரு பயனாகுமோ? மோக்ஷமன்றோ ஆன்ம ஜயத்தின் பயனாகும்! இவ்வாறு நினைத்துப் பாடுபட்ட இவர்களது பாட்டன். பூட்டன் எல்லாம் தம்மோடு கூடக் கொண்டுபோகமாட்டாமல் விட்டுப்போன என்னை, அவர்களது மக்களாகிய இவர்கள் வசப்படுத்த நினைக்கிறார்களே, இதென்ன மடமை? அகங்காரங் கொண்ட இந்த அரசர்களுக்குள் பிதாவுக்கும் புத்திரனுக்கும் அண்ணன் தம்பிமாருக்கும் என் நிமித்தமாகப் போர் உண்டாகிறதல்லவா? இந்தப் பூமியெல்லாம் என்னுடையதே என்றும் என் வமிசத்தாருக்கே இது சாஸ்வதமாக இருக்கும் என்றும் கருதும் இந்த ஈன புத்தியான அரசர்கள் எல்லோருக்கும் முந்தியவர்களின் மரணத்திற்குப் பின்னும் உண்டாகியே இருந்தது. இதென்ன விந்தை! இவ்விதமாக மமதை கொண்டு, என்னைக் கொண்டு போகமாட்டாமல் விட்டுவிட்டு மரணமடைந்த ஒருவனைப் பார்த்தும் பின்னுண்டாகிறவனுடைய சித்தத்தில் இத்தகைய மமதையானது எப்படிக் குடிகொண்டிருக்கிறது? தன்னுடைய தூதரை, பிற அரசரிடம் அனுப்பி, இந்தப் பூமி என்னுடையது நீ இதை விட்டு ஓடிப்போ! என்று சொல்லியனுப்பும் அரசரைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது! என்று பூமாதேவி பாடியுள்ளாள். இவற்றை நன்றாகக் கேட்பவருக்குச் சூரியனுக்கு முன்பு பனி அழிவதுபோல. மமதையானது அழிந்து போகும்!

உலகத்தைக் காக்கும் மகாவிஷ்ணுவின் அமிசாமிசங்களினால் அநேக மாமன்னர்கள் உண்டாகிய மனுவமிசத்தைப் பற்றி நான் உமக்குச் சொன்னேன். இதை முறையாகக் கேட்பவனது மனமானது தூய்மையாவதால் பாவமெல்லாம் போய்விடும். இந்தச் சூரிய சந்திர குலங்களைக் கேட்பதால் தனதானிய சம்பத்துகள் அதிகரிக்கும். இந்திரியங்களுக்கும் குறைவு ஏற்படாது. மகாபலசாலிகளாகவும் மகா வீரியமுள்ளவர்களாகவும் அளவற்ற பொருள் வளம் மிகுந்தவர்களாகவும் இருந்த இஷ்வாகு, ஜன்னு, மாந்தாதா, சகரன், ரகு, யயாதி முதலானவர்களெல்லாம் காலபலத்தால் ஒன்றுமின்றி மரணமடைந்து, கதையில் சொல்லத் தக்கவராய்ப் போனதைக் கண்டும் கேட்டும் விவேகமுடைய எவன்தான் பெண்டாட்டி, பிள்ளை, வீடு, நிலம் பொருள் முதலியவற்றின் காரணமாக மமதைகொண்டு திரிவான்? மகா வலிவுள்ள தோள்களுடன் கூடி பல்லாண்டுகள் தவஞ்செய்து, பலவிதமான பேறுகளைப் பெற்று, யாகாதிகளைச் செய்து மிகவும் புகழ் வாய்ந்தவர்களாக இருந்தவர்களும் கால பலத்தால் கதையிலே சொல்லப்படும்படி ஆனார்கள். பிருது என்பவன் சத்துருக்கள் அனைவரையும் வென்று சகல உலகங்களுக்கும் சென்றுகொண்டிருந்தான். அவனும் நெருப்பில் அகப்பட்ட இலவம் பஞ்சுப்போலக் காலச் சக்கரத்தில் பட்டு ஒரு நிமிஷத்தில் மாண்டுபோனான். பகைவர் அனைவரையும் வென்று, சகல தீவுகளையும் கைப்பற்றிய கார்த்த வீரியார்ச்சுனனும் கதைகளில் சொல்லப்படும் அப்படிப்பட்ட ஒருவன் இருந்தானாவென்று சந்தேகிக்கும்படி ஆகிவிட்டான்! எவரும் கொண்டாடும் படியான செல்வமும் கீர்த்தியும் பெற்றிருந்த இராவணன், அவிக்ஷதன், ரகுவமிசத்தார் முதலியவர்களுடைய சாம்பலும் இமயனுடைய புருவ நெறிப்புடன் கூடிய பார்வையினால் இந்த உலகத்தில் இல்லாமற் போயிற்றல்லவா? மாந்தாதா என்று பெயர் படைத்த மாமன்னனும் பழைய கதையானதைக் கண்டு எந்தப் புத்தியீனனும் மமதையை வகிக்கமாட்டான்! பகீரதன் முதலியோரும் சகரனும் காகுஸ்தனும் இராவணனும் ஸ்ரீராம லக்ஷ்மணரும் யுதிஷ்டிரர் முதலியோரும் முன்பு இருந்தார்கள் என்பது மெய்யோ, பொய்யோ என்னும்படி ஆகிவிட்டது. அவர்கள் இருந்தார்கள் என்பது மெய் என்றால் அவர்கள் இப்போது எங்கே போனார்கள் நமக்குத் தெரியவில்லை! பிராமண உத்தமரே! மாபெரும் மகிமையுடையவர்களாக நான் உமக்குச் சொன்ன பூர்வீகப் பேரரசர்கள் அடைந்த கதியை இப்போது இருக்கும் அரசர்களும் இனிமேல் வரப்போகிற அரசர்களும் அடைவார்கள். இந்தக் காரியத்தை அறிந்து, புத்திசாலியான மனிதன் அகந்தைக் கொள்ளக்கூடாது. இப்படியிருக்க புத்திரன், மனைவி முதலானவற்றில் மமதை கொள்ளக்கூடாது என்பதை நான் சொல்லவா வேண்டும்?இவ்வாறு பராசரர் கூறினார்.

நான்காவது அம்சம் முடிந்தது.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் நான்காவது அம்சம்—-இரண்டாவது பாகம் —

February 28, 2021

6. சந்திரன்-தாரை, புரூரவன்-ஊர்வசி கதைகள்
7. கவுசிக வம்ச வரலாறு
8. காசி அரசர்கள் வரலாறு
9. ரஜி வரலாறு
10. யயாதி மாமன்னன் கதை
11. கார்த்த வீரியார்ஜுனன்
12. ஜயாமகனின் பிள்ளைப்பேறு
13. சியமந்தகமணியின் கதை
14. அனமித்திர வம்ச வரலாறு

———–

6. சந்திரன்-தாரை, புரூரவன்-ஊர்வசி கதைகள்

புராணம் கூறிவரும் பராசரரை நோக்கி, சுவாமி! சூரிய வமிசத்தில் பிறந்த அரசர்களைப் பற்றி எனக்குச் சொன்னீர்கள். இனி சந்திர வம்சத்திற் பிறந்த அரசர்களைப் பற்றியும் நான் அறிய விரும்புகிறேன். நிலையான கீர்த்தியைப் பெற்ற அந்தச் சந்திர குலத்து அரசர்களின் சந்ததியானது இன்றும் புகழுடன் இருக்கிறதல்லவா? ஆகையால், தயைகூர்ந்து சந்திர வமிசத்தில் உதித்த அரசர்களைப் பற்றியும் கூறியருள வேண்டும்! என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! இந்த வமிசமும் அதிபல பராக்கிரமங்களும் தேஜஸும் நன்குணர்ந்த செயல்களுமுள்ள நகுஷன், யயாதி கார்த்தவீர்யார்ச்சுனன் முதலிய பேரரசர்களால் சிறப்புடையதாகும். இதை ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேன். சகல லோக கர்த்தராகிய ஸ்ரீமந் நாராயணனுடைய நாபி கமலத்தில் உதித்த பிருமாவின் குமாரர்-அத்திரி என்ற முனிவர். அவருடைய மகன் சந்திரன். அவனைச் சதுர்முகப் பிரமன் சகல அவுஷாதிகளுக்கும், பிராமணர்களுக்கும், நட்சத்திரங்களுக்கு அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்தார். அதன் மேன்மையாக சந்திரன் ஒரு ராஜசூய யாகம் செய்தான். பிறகு அதன் மகிமையினாலும் மேன்மையான அதிகாரத்தைப் பெற்றிருந்ததாலும் மதமும் கர்வமும் கொண்டு, சகல தேவர்களுக்கும் குருவாகிய பிரகஸ்பதியின் மனைவியான தாரை என்பவளை அபகரித்துக் கொண்டான். இந்தச் செய்தியை பிருமா, பிருகஸ்பதிக்கு அறிவித்தார். அதனால் சந்திரனுக்கு பிரகஸ்பதி எவ்வளவோ புத்திமதிகள் சொல்லியும் தேவரிஷிகள் எல்லோரும் வேண்டிக் கொண்டதையும் சந்திரன் கேட்காமல், தன் குருபத்தினியானத் தாரையை விடவில்லை. அதனால் போருக்கு இடமுண்டாயிற்று, அப்போது பிரகஸ்பதியிடம் பகைத்துக் கொண்டிருந்த அசுர குருவான சுக்கிரன் சந்திரனுக்குப் பக்கமாகச் சேர்ந்து கொண்டான். அதனால் அந்த அசுரகுரு சுக்கிரனின் சீடர்களான ஜம்பன் கும்மன் முதலான தானவர்களும் சந்திரன் பக்கம் சேர்ந்துக் கொண்டுப் போர் புரியத் தயாரானார்கள். ஸ்ரீருத்திர பகவான் அங்கிரசரிடம் கல்வி கற்றதால், குரு புத்திரராகிய பிரகஸ்பதிக்குத் துணைவரானார். அசுரர்களெல்லாம் சந்திரனின் சார்பில் சேர்ந்ததால் தேவேந்திரன் சகல தேவ சைன்னியர்களுடன் போர் புரிய முற்பட்டான். இவ்வாறு தேவர்களுக்கும் அசுரருக்கும் ஏற்பட்டப் போரானது தாரையின் காரணமாக நிகழ்ந்ததால் அந்தப் போருக்கு தாரகாமயம் என்று பெயர் ஏற்பட்டது. அந்தப் பெரும் போரில் இருதரப்பாரும் விதவிதமாய் ஆயுதங்களை உபயோகித்துத் தாக்கினார்கள்; இதனால் உலகம் யாவும் கலக்கமுற்றது, யாவரும் பிருமாவைச் சரணமடைந்தார்கள். அப்போது, பிருமாவானவர், சுக்கிரனையும் சிவனையும் அசுரனையும் தேவரையும் தடுத்து, சந்திரனுக்குப் புத்தி சொல்லி, தாரையைப் பிரகஸ்பதியிடம் திருப்பியனுப்பச் செய்தார். அத்துடன் சண்டையும் நின்றது.

பிறகு தம் மனைவி தாரை கருவுற்றிருந்ததை அறிந்த தேவகுருவான பிரகஸ்பதி அவளை நோக்கி, அடிபெண்ணே! எனது க்ஷேத்திரத்தில் நீ மற்றவனுடைய கருவை ஏற்றிருக்கக் கூடாது. இதுவரையில் நீ செய்த சாகசம் போதும். இனி அந்தக் கருவை விட்டுவிடு! என்றார். அதைக் கேட்ட தாரை மிகவும் பதிவிரதையாகையால், கணவனின் சொற்படி கருவை ஒருநாணற்செத்தையின் மீது விட்டுவிட்டாள். அந்தக் கருவினால் பிறந்த குழந்தை, பிறந்தவுடனேயே சகல தேவரையும் தோற்கடிக்கும்படியான திவ்யதேஜசோடு விளங்கியதைக் கண்டதும் பிரகஸ்பதி அந்தக் குழந்தை தனது பிந்துவுக்குப் பிறந்திருக்கலாம் என்று அந்தக் குழந்தையின் மீது விருப்பங் கொண்டிருந்தான். இருவருமே இவ்விதமாக அந்தக் குழந்தையின் மீது விருப்பம் கொண்டிருந்ததால் தேவர்கள் சந்தேகங்கொண்டு தாரையை நோக்கி பெண் அரசியே! இவன் சந்திரனுக்குப் பிறந்தவனா? உன் கணவரான தேவகுருவுக்கப் பிறந்தவனா? அதை எங்களுக்கு சொல்வாயாக! என்று பலமுறைகள் விடாமல் கேட்டார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு முயன்று கேட்டும் தாரை வெட்கத்தால் பதில் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். அப்போது அவளுடைய குமாரன் கோபங்கொண்டு, அவளைச் சபிக்க முயன்று, அவளைப் பார்த்து, ஓ துஷ்டையான தாயே! நீ ஏன் என் தந்தை யாரொன்பதைத் தெரிவிக்காமல் இருக்கிறாய்? இன்னும் நீ இதைத் தெரிவிக்கத் தயங்கினால் பொய் வெட்கமுள்ள உனக்குத் தகுந்த சிøக்ஷ செய்வேன்! என்று கடுகடுத்துச் சொன்னான். அப்பொழுது பிருமதேவர், அந்தக் குமாரனைத் தடுத்து, உண்மையைச் சொல்லும்படி தாரையிடம் கேட்டார். தாரை மிகவும் வெட்கத்தினால் தலைகுனிந்து கொண்டு, இவன் சந்திரனுடைய மகன்தான்! என்று சொல்லிவிட்டாள். பிறகு சந்திரன் மிகவும் மகிழ்ந்து, தன் புத்திரனைக் கட்டியணைத்து முத்தமிட்டு, குழந்தாய்! நீ மிகவும் அறிவுடையவனாகையால் உனக்கு புதன் என்று பெயர் சூட்டுகிறேன்! என்று அவனுக்குப் பெயரிட்டான்.

அந்தப் புதன் என்பவன் இளை என்பவளிடம் காமுற்று புரூரவனைப் பெற்றான். புரூரவன் தான தருமங்களைச் செய்வதில் வள்ளலாக விளங்கினான். அவன் யாகங்கள் பலவற்றைச் செய்தவன். மிகவும் ஆணழகன். ஒரு காலத்தில் ஒரு சமயம் தேவலோகத்து அப்சரஸான ஊர்வசியின் மீது சித்திரா வருணர்கள் காதல் கொண்டார்கள். அதற்கு ஊர்வசி இணங்காததினால் அவர்கள் கோபங்கொண்டு, நீ மனிதனின் மனைவியாகக் கடவாய்! என்று சபித்தார்கள். அதனால் ஊர்வசி சில காலம் பூவுலகத்தில் இருக்கும்படி வந்தாள். வந்தவிடத்தில் மகாரூபனாகவும் மிகவும் நல்ல மனதுள்ளவனாகவும் சத்திய சந்தனுமாக விளங்கும் புரூரவச் சக்கரவர்த்தியைக் கண்டாள். அவனைக் கண்டதும் பெண்மைக்கே உரிய பெருமையையும் சொர்க்க சவுக்கியத்தில் உண்டாகியிருந்த விருப்பத்தையும் ஊர்வசி விட்டு விட்டு, அளவற்ற காதலோடு அவனருகே சென்றாள். உலகத்திலுள்ள எல்லாப் பெண்களையும் விட மேலான காந்தி, சுகுமாரத்துவம், லாவண்யம், விலாசம் முதலியவற்றில் சிறந்து விளங்கும். அந்த தேவமங்கையைக் கண்டதும் புரூரவ மன்னனும் தனது மனதைப் பறிகொடுத்தான். இவ்வாறு அவர்கள் இருவரும் ஒரே மனதுடையவராய் வேறு நோக்கமின்றி எல்லா பயன்களையும் விட்டிருந்தார்கள். அப்போது புரூரவன் அவளை நோக்கி, பெண்ணே! நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ என் மீது மனம் வைக்க வேண்டும்! என்றான். அதற்கு ஊர்வசி மன்னவரே நான் சொல்வதை ஏற்று நீங்கள் நடப்பதானால் உமது இஷ்டத்துக்கு இணங்குகிறேன்! என்றான். உடனே புரூரவன் உன் சங்கேதத்தைச் சொல்லடி, கண்ணே என்றான். அதனால் தேவகன்னிகை ஊர்வசி அவனைப் புன்முறுவலுடன் நோக்கி, அரசனே நான் இரண்டு ஆடுகளைக் குழந்தைகளைப் போல வளர்த்து வருகிறேன். அவை எப்போதும் என் படுக்கையின் அருகிலேயே இருக்க வேண்டும். அங்கிருந்து அவற்றை யாருமே அபகரிக்கக் கூடாது. இது ஒரு நிபந்தனை. நீங்கள் திகம்பரராக நிர்வாணத்தோடு இருக்கும்போது நான் உம்மைப் பார்க்கக் கூடாது. இது இரண்டாவது நிபந்தனை. எனக்கு நெய்யைத் தவிர, வேறு ஆகாரம் ஒன்றுங்கூடாது. இது மூன்றாவது நிபந்தனை! இந்த மூன்றில் எது தவறினாலும் நான் உம்முடன் இருக்கமாட்டேன் என்றாள். அவளது நிபந்தனைக்கு புரூரவன் ஒப்புக்கொண்டு அப்படியே ஆகட்டும், கண்ணே! என்று சொன்னான். அவளும் அவனிஷ்டத்துக்கு இணங்கி, அவனுடன் இருந்து வந்தாள்.

பிறகு புரூரவ மாமன்னன் அவளோடு, அளகாபுரியிலும் சயித்திரரத முதலிய திவ்விய வனங்களிலும் மானசத் தடாகங்களிலும் வேடிக்கையாக விளையாடிக் கொண்டு, காதல் கேளிக்கைகளில் களித்துத் திரிந்து நாளுக்கு நாள் மகிழ்ச்சி மீதூர வாழ்ந்து வந்தான். இப்படியே அறுபத்தோரு ஆண்டுகள் கழிந்தன. ஊர்வசியும் அவனைப் போலவே, சுவர்க்கலோகத்து இன்பத்தையும் பெரிதாக எண்ணாமல் யோகானந்தத்தையே பெரிதாக எண்ணி மகிழ்ந்திருந்தாள். இந்நிலையில் தேவலோகத்தில் ஊர்வசி இல்லாததால், மற்ற தேவதாசிகளுக்கும் சித்தர், வித்தியாதரர்களுக்கும் தேவலோகம் ரமணீயமாக இருக்கவில்லை. ஆகையால், கந்தருவர்களின் அரசனாகிய விசுவாவசு என்பவன் ஊர்வசியை மறுபடியும் தேவருலகுக்குக் கொண்டு செல்வதற்கு உபாயம் என்னவென்று யோசித்தான். புரூரவனோடு கூடி மகிழ்ந்து தேவலோகத்தை ஊர்வசி மறந்திருக்கிறாள் என்றாலும் புரூரவனுக்கு அவள் விதித்திருக்கும் நிபந்தனைகளை விசுவாவசு அறிந்து கொண்டு ஓரிரவில் கந்தர்வர்களோடு வந்து கூடி படுக்கையின் அருகேயிருந்த ஆடுகளில் ஒன்றை அபகரித்துக் கொண்டு சென்றான். அவன் ஆகாயமார்க்கமாக அதைக்கொண்டு போகும் போது அந்த ஆடு அபயக்குரல் எடுத்துக் கத்தியது. அதைக்கேட்ட ஊர்வசி, ஐயோ! என் குழந்தையை யாரோ அபகரித்துச் செல்கிறாரே! அநாதையான நான் இந்தத் தருணத்தில் யாரிடம் இதைப் புகல்வேன்? என்று கூறினாள். அந்த கூக்குரலைக் கேட்டதும் புரூரவ மன்னன் துள்ளியெழுந்தான் என்றாலும் தான் நிர்வாணமாக இருப்பதால், மற்றொரு நிபந்தனைப்படி தன்னை ஊர்வசி பாராமலிருக்க வேண்டுமே என்று நினைத்து, அங்கிருந்து அவன் அகலவில்லை, பிறகு கந்தருவா மற்றொரு ஆட்டையும் கவர்ந்து கொண்டு சென்றார்கள். அந்த ஆடும் கத்தியது. அதை ஊர்வசி கேட்டு ஐயையோ! எனது மற்றொரு குழந்தையும் கொண்டு போகிறார்களே! எனக்கு கணவனும் இல்லை! வீரமில்லாத அற்பமான ஒருவனைச் சேர்ந்து நான் இப்படியாகி விட்டேனே! என்று கதறியழுதாள். அதைக் கேட்டு சகியாத புரூரவன் ஆத்திரத்துடன் குமுறியெழுந்து அளவில்லாத கோபங்கொண்டு இருட்டுள்ள இரவாக இருப்பதால் நிர்வாணமான தன்னை ஊர்வசி பார்க்கமாட்டாள் என்று நினைத்துக்கொண்டு அப்படியே எழுந்து கையிலே வாளையுருவிக் கொண்டு, அடா யாரடா திருடன்? என்று ஆரவாரத்தோடு பாய்ந்து சென்றான். அந்த சமயத்தில் கந்தருவர் மிகவும் பிரகாசமான மின்னல் ஒன்றை உண்டாக்கினார்கள். அந்த மின்னல் வெளிச்சத்தில் ஆடையற்றிருந்த அரசனை ஊர்வசி கண்டாள். உடனே அவர் தனது நிபந்தனைக்கு பங்கம் வந்தது என்று சொல்லி அவனைவிட்டு சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தாள். கந்தருவரும் ஆடுகளை அங்கேயே விட்டு விட்டுத் தாங்களும் தேவலோகத்துக்குச் சென்றார்கள். புரூரவ மன்னன் வழியில் ஆடுகளைக் கண்டதும் மகிழ்ந்து படுக்கையில் வந்து படுத்தான். அங்கே ஊர்வசியைக் காணாமல் விசனமுற்றான். அதன் பிறகு அவன் திகம்பரனாகவே (நிர்வாணமாகவே) எங்கெங்கோ ஊர்வசியைத் தேடிப் பார்த்தும் அவள் அகப்படாததால் பைத்தியம் பிடித்து, அந்தக் கோலத்துடனேயே கண்ட இடங்களில் திரிந்து கொண்டிருந்தான். இது இப்படியிருக்க ஒரு தினம் குரு÷க்ஷத்திரத்திலுள்ள ஒரு தாமரைத் தடாகத்திலே வேறு நான்கு தேவமங்கையருடன் ஊர்வசியும் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட புரூரவன், பைத்தியத்தைப் போலவே அவள் அருகே சென்று அடி என் காதலி! சிறிது நேரம் நில், சிறிது நேரம் என்னோடு பேசு, இருவரும் சிறிதுநேரமாகிலும் கூடியிருப்போம்! என்று பலப்பல காதல் வார்த்தைகளைச் சொல்லி அவளிடம் கெஞ்சினான். அதற்கு ஊர்வசி, பூலோக வேந்தே! உமது விவேகமற்ற செய்கை போதும், நான் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறேன், இந்த வருஷத்தின் முடிவில் இங்கு வாரும்! உமக்கு ஒரு நல்ல மகன் பிறந்திருப்பான். பிறகு நான் உம்மோடு ஒரு நாள் கூடியிருப்பேன் இப்போது போய்விடும்! என்று சொன்னாள். புரூரவனும் மிகவும் மகிழ்ச்சியடைந்து தன் நகருக்குப் போய்ச் சேர்ந்தான்.

அப்போது ஊர்வசி தன் தோழியரை நோக்கி தோழிகளே அவர்தான் புரூரவச் சக்கரவர்த்தி! அவருடன் கூடித்தான் நான் இத்தனை நாட்கள் விருப்பமும் மகிழ்ச்சியுமாகக் களித்திருந்தேன் என்று சொன்னாள். அதைக் கேட்ட தெய்வப் பெண்களும் அவன் மிகவும் அழகன், அரசர்க்கும் அரசன். ஆகையால் நாங்களுங்கூட அவனுடன் கூட சுகித்திருக்க விரும்புகிறோம், என்று சொன்னார்கள். பிறகு ஊர்வசியின் சொற்படி அந்த ஆண்டின் முடிவில் அவள் குறிப்பிட்ட அதே இடத்துக்கு புரூரவச் சக்கரவர்த்தி சென்றான். அங்கே ஊர்வசி, ஆயுசு என்ற ஒரு மகனைப் பெற்று, அரசனின் கைகளில் ஒப்படைத்து, ஓரிரவு அவனுடன் கூடியிருந்து ஐந்து பிள்ளைகளைப் பெறும்படியான கர்ப்பத்தையடைந்தாள். அன்றியும் அவள் அரசனை நோக்கி, அரசே! நம்மிடம் கொண்ட அன்பினால் கந்தர்வர்கள் உமக்கு வரங்கொடுக்க வந்திருக்கிறார்கள். ஆகையால் உமக்கு வேண்டிய வரத்தைக் கேட்டுக் கொள்ளும் என்றாள். ஆனால் புரூரவனோ பெருமூச்சு விட்டு, நான் பகைவர்கள் அனைவரையும் வென்று, இந்தரிய சக்தி தப்பாதவனாய் பந்துக்களிலும், சேனைகளிலும், பொக்கிஷத்திலும் குறைவற்றவனாகவும் இருப்பதால் எனக்கு வேண்டுவது வேறொன்றும் இல்லை. ஆனால் எனக்கு வேண்டுவது ஊர்வசியின் அருகே எப்பொழுதும் இணைபிரியாமல் இருப்பதேயாகும். ஆகையால் என் காலத்தை ஊர்வசியுடனே கழிக்க விரும்புகிறேன், என்றான். உடனே, கந்தர்வர்கள் அவனிடம் ஒரு அக்கினிஸ்தாலி ஒன்றைக் கொடுத்து, அரசனே! நீர் வேதத்தை அனுசரித்து இந்த அக்கினியை மூன்றாக்கி ஊர்வசியின் அருகிலேயே இருக்கும் பயனைக் கருதியாகஞ் செய்து உன் இஷ்டத்தைப் பெறுவீராக! என்றார்கள். அதன் பிரகாரம் புரூரவன் அந்த அக்கினி ஸ்தாலியை கையில் எடுத்துக் கொண்டு வரும் போது நடுக்காட்டில் இது என்ன மடமை! ஊர்வசியை நம்முடன் அழைத்துக் கொண்டு வராமல் அக்கினி ஸ்தாலியையன்றோ கொண்டு செல்கிறாய். இதனால் என்ன பயன்? என்று நினைத்து பித்தனைப் போல அந்த ஸ்தாலியை அங்கேயே வைத்து விட்டு பட்டணம் போய்ச் சேர்ந்தான். அங்கே, நள்ளிரவில் விழித்துக் கொண்டு, ஓகோ! ஊர்வசி சாலோக்கியத்தைப் பெறுவதற்காக கந்தர்வர் நமக்குக் கொடுத்த அக்கினி ஸ்தாலியை காட்டிலே போட்டுவிட்டு வந்தோமே! அதை இப்போதே போய்க் கொண்டு வரவேண்டும் என்று எண்ணி ஓடிச்சென்று, ஸ்தாலியை வைத்த இடத்தில் தேடினான், அதைக் காணாமல் அங்கே வன்னிமரத்தை நடுவிற்கொண்ட அரசமரம் ஒன்று இருப்பதைக் கண்டு, நம்முடைய அக்கினி ஸ்தாலிதான் இந்த மரமாகி இருக்கவேண்டும். ஆகையால் அக்கினி ரூபமான இதனையே கொண்டுசென்று அரணியாகக் கடைந்து அக்கினியை உண்டாக்கி அதனை உபாசிப்போம்! என்று கருதி, அதை அப்படியே நகரத்துக்கு எடுத்துச்சென்று காயத்திரி மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே அரணியைக் கடைந்தான். அந்த அரணியும் காயத்திரி மந்திர எழுத்துக்களின் கணக்குப்படி இருபத்து நான்கு அங்குல அளவுள்ளதாக ஆயிற்று. பிறகு அரணியைக் கடைந்து அக்கினியை உண்டாக்கி, அதை மூன்றாக்கி வேதவிதிப்படி ஊர்வசி சாலோக்கியத்தைக் கருதிப் பல யாகங்களைச் செய்தான். அதனால் கந்தர்வ லோகத்திற்கு புரூரவன் சென்று ஊர்வசியோடு இணைபிரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆதியில் இருந்த அக்கினி ஒன்றே அந்த ஒன்றே இந்த மனுவந்தரத்தில் மூன்றாக்கப்பட்டது.

———-

7. கவுசிக வம்ச வரலாறு

மைத்ரேயரே, மேலும் கேளும். அந்தப் புரூரவ மாமன்னனுக்கு ஆயுசு, அமாவசு, விசுவாவசு, சுருதாயு, சதாயு, அயுதாயு என்ற ஆறுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் அமாவசு என்பவனுக்கு பீமன் என்ற பிள்ளை பிறந்தான். அவனுக்குக் காஞ்சனன் பிறந்தான். காஞ்சனனுக்கு கதோத்திரன் அவனுக்கு ஜன்னு, அந்த ஜன்னு என்பவன் யாகஞ்செய்து கொண்டிருக்கும் போது கங்கை நதியானது அந்த யாகசாலைக்கு வந்து யாவற்றையும் முழுகடித்தது. அதைக்கண்டதும் ஜன்னு கோபத்தால் கண் சிவந்தான். ஸ்ரீயக்ஞ புருஷனைத் தியான பலத்தால் இதயத்தில் நிறுத்தி அந்த தேஜஸால் கங்கையைப் பானஞ்செய்துவிட்டான். பிறகு தேவ ரிஷிகள், அவனை வேண்டியபின் கங்கையை விடுவித்து, அந்த கங்கையை அவனுடைய மகளாக வைத்தார்கள். அதனால் கங்கைக்கு சான்னவி என்ற பெயர் உண்டாயிற்று. அந்த ஜன்னுவுக்கு சுமந்து என்பவன் பிறந்தான். அவனுக்கு அசகன், அவனுக்கு பலாகாசுவன், அவனுக்கு குசன், அவனுக்கு குசாம்பன், குசநாபன். அதூர்த்தரஜசுவசு என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் குசாம்பன் என்பவன் எனக்கு இந்திர சமானனான புத்திரன் உண்டாக வேண்டும் என்று தவஞ்செய்தான். அப்போது தேவேந்திரன், நமக்குச் சமானமாய் மற்றொருவன் உண்டாக வேண்டாம் என்று தானே அவனுக்குப் பிள்ளையாகப் பிறந்தான். அவன் பெயர் காதி, கவுசிகன் என்றும் அவன் வழங்கப்படுவான். அந்தக் காதிக்கு சத்தியவதி என்ற பெண் ஒருத்தி பிறந்தாள். அவளைப் பிருகு முனிவரின் மகனாகிய ரிசீக மாமுனிவர் தமக்குக் கொடுக்கும்படியாகக் கேட்டார். அதற்கு காதியானவன் இந்த முனிவரோ பிராமணர் மேலும் கிழவர், கோபக்காரர்! என்று நினைத்து அவளை அவனுக்குக் கொடுக்க மனமில்லாமல் அவரை நோக்கி ஒரு காது மட்டும் கறுப்பாகவும், மற்றைய அவயவங்கள் எல்லாம் சந்திரனைப் போலப் பிரகாசிக்கும் படியாகவும் காற்றைவிட வேகமாகச் செல்லக்கூடிய ஓராயிரம் குதிரைகளை கன்யாசுல்கமாகக் கொடுத்தால், என் புதல்வியை நான் உமக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன் என்றான். அதற்கு ரிசீக முனிவர் இணங்கி அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு வருணனிடம் சென்று அஸ்வ தீர்த்தத்தில் பிறந்த ஆயிரம் குதிரைகளைக் கொண்டுவந்து அவனிடம் ஒப்படைத்து, அந்தக் கன்னியைக் கல்யாணம் செய்து கொண்டார். பிறகு ரிசீகமுனிவர் அவளுக்கும் புத்திரோற்பத்தி செய்வதற்கு ஒரு சருவைச் செய்து வைத்தார். சரு என்பது ஒருவகைச் சோறு ஆகும். அதைக் கண்ட அவருடைய மனைவியாகிய சத்தியவதி அவரைவேண்டித் தனது தாய்க்கு ஒரு புத்திரன் உண்டாவதற்காக ஒரு சருவைச் செய்விக்கும்படி செய்தாள். இவ்விதமாக ரிசீகமுனிவர் தமது பத்தினிக்குப் பிரம தேஜசுடன் கூடிய புத்திரன் உண்டாவதற்கான சருக்களைக் கொடுத்து, நீ இந்த சருவையும் உன் தாய் அந்த சருவையும் புசிப்பீர்களாக! என்று சொல்லி விட்டு வனத்துக்குச் சென்றார்.

பிறகு தாயும், மகளும் சருவைப் புசிக்கும்போது, சத்தியவதியின் தாய், மகளே! உலகத்தில் எவனுமே தன் புத்திரனுக்கே மேன்மையான குணங்கள் இருக்கவேண்டும் என்று விரும்புவான். அஃதன்றி தன் பத்தினியின் தம்பிக்கு அக்குணங்கள் இருக்கவேண்டும் என்று விரும்பமாட்டான். ஆகையால் உனக்கு உன் புருஷன் கொடுத்த சருவானது சிறப்பானதாக இருக்கவேண்டும். க்ஷத்திரிய ஜாதியான எனது மகன் பூவுலக ஆளவேண்டியவன். ஆகையால், இப்படிப்பட்டவனுக்கு மேலான குணங்கள் அமைந்தால் சிறப்பான பயன்கள் ஏற்படும். பிராமணனுக்குப் பல பராக்கிரம சம்பத்துகள் இருப்பதால் யாது பயன்? ஆகையால் உன்னுடைய சருவை எனக்குக் கொடுத்துவிட்டு, என் சருவை நீ வாங்கி சாப்பிடு! என்று சொன்னாள்; அதற்கு மகள் சத்தியவதியும் ஒப்புக்கொண்டாள். தன் சருவைத் தான் வாங்கிப் புசித்தாள். பிறகு ரிசீக முனிவர், காட்டிலிருந்து திரும்பி வந்து கருவுற்றிருக்கும் தமது பத்தினியின் தேகத்தை கண்டு அவளை நோக்கி, அடிபாதகீ! செய்யக்கூடாத காரியத்தை நீஏன் செய்தாய்? ஏனென்றால், உன் தேகமானது மிகவும் ரவுத்ர ரூபமாகக் காணப்படுகிறது. அதற்குக் காரணம் உன் தாய்க்குக் கொடுத்த சருவை நீ புசித்திருக்கிறாய் என்று தெரிகிறது. இது தகுதியற்றது. நான் அந்தச் சருவில் சகல ஐஸ்வரிய வீரிய பலங்களையும் ஏற்றியிருக்கிறேன். உன் சருவிலே ஞானம், சாந்தி, பொறுமை முதலிய பிராமண குணங்களை ஏற்றியிருக்கிறேன். இதை நீ மாற்றி விட்டாயாகையால் உனக்கு உக்கிரமான அம்புகளை எய்யக்கூடிய க்ஷத்திரிய ஆசாரமாய் நடக்கக்கூடிய புதல்வன் தான் பிறப்பான். உன் தாய்க்கோ பொறுமை முதலிய குணங்களையுடைய பிராமணச் சாரமுள்ள குமாரன் பிறப்பான் என்று கூறினார். தன் கணவன் இவ்வாறு கூறியதும் சத்தியவதி அவரது திருவடிகளில் வீழ்ந்து, பிராணநாதா! அடியாள் தெரியாத்தனத்தால் அப்படிச் செய்துவிட்டேன். அடியாள் மீது அருள்காட்ட வேண்டும். அத்தகைய புத்திரன் எனக்கு வேண்டாம் சருவின் பலம் தப்பாதாகையால் என் பேரன் அப்படியாகட்டும் என்று வேண்டினாள். அதனால் அவள் மீது ரிசீக முனிவர் கருணை கொண்டு நல்லது அப்படியே ஆகட்டும்? என்று அனுக்கிரகஞ் செய்தார். பிறகு, சத்தியவதி ஜமதக்னி என்ற மகனைப் பெற்றாள். அவளுடைய தாய் விசுவாமித்திரதைப் பெற்றாள். அந்த சத்தியவதி, சிலகாலம் சென்ற பிறகு கவுஷதி என்ற நதியானாள். அவளது பிள்ளையான ஜமதக்னி முனிவர், இஷ்வாகு வம்சத்து அரசனான ரேணு என்பவனின் புதல்வியான ரேணுகையைத் திருமணஞ்செய்து கொண்டார். அவளது வயிற்றில் ஸ்ரீமந்நாராயணனின் அம்சத்தால், சகல க்ஷத்திரிய வம்ச நாச காரணரான பரசுராமர் பிறந்தார். விசுவாமித்திரருக்கோ பிருகு வமிசத்தைச் சேர்ந்த சுனச்சேபனே, தேவதைகளால் மகனாகக் கொடுக்கப்பட்டான். தேவர்களால் கொடுக்கப்பட்டதால் அவன் தேவராதன் என்ற பெயரைப் பெற்றான். பிறகு விசுவாமித்திரருக்கு மதுச்சந்தன், தனஞ்சயன், கிருததேவன், அஷ்டகன், கச்சபன், ஹரிரன் என்ற வேறு பிள்ளைகளும் பிறந்தார்கள். அவர்களால் கவுசிக கோத்திரங்கள் உண்டாயின. அந்தக் கோத்திரத்தார் எல்லாம் வெவ்வேறு பிரவரம்(பிரவரம்-கோத்திரத் தலைவர் முறைமை) உள்ள குலங்களில் விவாகஞ் செய்து கொள்ள வேண்டியவராய் உள்ளனர்.

————-

8. காசி அரசர்கள் வரலாறு

மைத்ரேயரே, மேலும் கேட்பீராக! புரூரவசின் மூத்தகுமாரனான ஆயுசு என்பவன் ராகுவின் மகளைத் திருமணஞ்செய்து நகுக்ஷன் க்ஷத்திர விருத்தன், ரம்பன், ரஜீ, அனேனசு என்ற ஐந்து பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் க்ஷத்திர விருத்தனுக்கு சுஹோத்திரன் பிறந்தான். அவனுக்கு காசியன், காசன், கிருச்சமதன் என்ற மூவர் பிறந்தனர். கிருச்சமதனுக்கு சவுனகன் பிறந்தான். அவன் நான்கு வர்ணங்களை உண்டாக்கினான், காசியன் என்போனுக்குக் காசி மன்னனான காசேயன் உண்டானான். அவன் மகன் ராஷ்டிரன், அவன் மகன் தீர்க்கத பசு, அவனுக்கு தன்வந்திரி பிறந்தான். முன்பு திருப்பாற்கடலில் உதித்தபோது எல்லாப் பிறவிகளிலும் எல்லா ஞானங்களையும் அறிந்த ஸ்ரீமந்நாராயணன் அந்த தன்வந்திரிக்கு நீ காசி ராஜவமிசத்திற் பிறந்து எண்வகையான வைத்திய நூல்களையும் செய்யக் கடவாயாக! வேள்விகளில் அவிர்ப்பாகமும் புசிக்கக் கடவாய்! என்று வரமளித்தார். அந்த தன்வந்திரியின் மகன் கேதுமான். அவன் மகன் பீமரதன், அவன் மகன் பிரதர்த்தனன். அவன் பத்திரசிரேணிய வமிசத்தை நாசஞ் செய்தமையால் சகல சத்துருக்களையும் நாசஞ்செய்தானென்று கொண்டு சத்துருஜித்து என்ற பெயரை அடைந்தான். அவன் தந்தையான திவோதாசன் அதிக அன்பினால், அவனை வத்சரன்று அழைத்து வந்ததால், வத்சன் என்ற பெயரும் அவனுக்குண்டு. அவன் மிகவும் சத்தியவானாகையால் சத்தியத்துவசன் என்ற பெயரையும் பெற்றான். அன்றியும் அவன் குவலயம் என்னும் புகழ்பெற்ற குதிரையொன்றை வைத்திருந்தால் குவலயாசுவன் என்ற பெயரையும் பெற்றான். அவன் மகன் அளர்க்கன், அவனைப் பற்றியொரு சுலோகம் இந்தக் காலத்தும் வழங்குகிறது. அதாவது, அளர்க்கனை விட மற்ற எவன் தான் அறுபத்தாறாயிரம் ஆண்டுக்காலம் இந்த பூமியை ஆண்டான்? என்பதுதான் அந்த சுலோகம் அவ்வாறு புகழப்படும் அளர்க்கன் என்பவனுக்கு சன்னதி என்ற மகன் பிறந்தான். அவன் மகன் சுநீதன், அவன் மகன் சுகேது, அவன் மகன் தரும கேது, அவன் மகன் சத்தியகேது, அவன் புத்திரன் விபு, அவன் புதல்வன் ஸ்வவிபு, அவன் தயைன் சுகுமாரன், அவன் குமாரன் திருஷ்டகேது, அவன் மகன் வீதியோத்திரன், அவனுக்குப் பார்க்கன், அவனுக்கு பார்க்கபூமி இவனிடத்திலிருந்து நான்கு வர்ணங்கள் உண்டாயின. இவர்கள் தான் காசியரசர்களாவார்கள்.

————-

9. ரஜி வரலாறு

ரஜி என்பவனுடைய வம்சா வழியைக் கூறுகிறேன் கேளும். ரஜிக்கு ஒப்பற்ற பல பராக்கிரமம் பொருந்திய ஐந்நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். இது இப்படியிருக்க ஒரு சமயம் தேவாசுரப்போர் ஒன்று நடந்த போது தேவரும், அசுரரும் பிரம்மனிடம் சென்று, இந்த யுத்தத்தில் யாருக்கு வெற்றியுண்டாகும்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ரஜி மன்னன் யார் சார்பில் சேர்ந்து போர் செய்வானோ அவர்கள் பக்கமே ஐயம் உண்டாகும் என்றார். அதைக் கேட்டதும் அசுரர்கள் ரஜியிடம் முன்னதாகச் சென்று, தமக்கு யுத்த சகாயம் செய்ய வேண்டும் என்று அவனை வேண்டினார்கள். அதற்கு ரஜி மன்னன், அசுரர்களே! நான் தேவர்களை வென்ற பிறகு உங்களுக்கு நான் தேவேந்திரனாக இருக்கச் சம்மதித்தால் உங்கள் சார்பில் போர் செய்கிறேன் என்றான். அதற்கு அசுரர்கள், அரசே! நாங்கள் காரியத்திற்காக ஒன்றை முன்னதாகச் சொல்லிப் பிறகு மற்றொன்றைச் செய்யமாட்டோம். எங்களுக்கு பிரகலாதரே இந்திரராக இருக்கவேணடும். அதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டோம் என்றார்கள். பிறகு அவர்கள் போய் விட்டார்கள். அதன் பிறகு ரஜி மன்னனிடம் தேவர்களும் வந்து தமக்குத் துணை செய்ய வேண்டும் என்று வேண்டினார்கள். அவர்களிடமும் ரஜி மன்னன் தன் விருப்பத்தைச் சொன்னான். தேவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அதனால் அந்த மன்னன் தேவர்கள் சார்பில் போர் செய்து அசுர சேனைகளை அழித்தான். அப்போது தேவேந்திரன் ரஜி மன்னனின் கால்களில் விழுந்து, அரசனே! ஆபத்தில் காத்ததாலும் அன்னமிட்டதாலும் நீ எங்களுக்குத் தந்தையானாய் இதனால் சகல உலகங்களிலும் உயர்ந்தவன் ஆகிவிட்டாய். நானோ உன் மகன் திரிலோகாதிபதியாக இருப்பது தந்தைக்குப் பெருமையல்லவா? என்றான். அதைக்கேட்டதும் ரஜி மன்னன் சிரித்து, இந்திரா! அப்படியே ஆகட்டும் என்றான். பிறகு ரஜி மன்னன் தன் நகரம் போய்ச் சேர்ந்தான்.

சில காலத்துக்குப் பிறகு, ரஜி மன்னன் மாண்டு போனான். அவனது பிள்ளைகளை நாரதர் தூண்டிவிட, அவர்கள் இந்திரனிடம் சென்று, நீ எங்கள் பிதாவின் புத்திரனாகையால் எங்களுக்கு உன் ராஜ்ஜியத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். இந்திரன் மறுத்தான். அவர்கள் இந்திரனை வென்று, அவனதிகாரத்தை தாங்கள் செலுத்தி வந்தார்கள். பலகாலம் சென்ற பிறகு, தேவேந்திரன் தனது குலகுருவிடம் சென்று, ஸ்வாமி! அடியேன் ஆட்சியை இழந்து இப்படி அலையலாமோ? ஆகையால் அடியேன் திருப்தியடையும்படிச் செய்யவேண்டும் என்று வேண்டினான். அதற்கு அவர் நீ முன்பே என்னிடம் வந்திருந்தால் இந்த ஆபத்து உனக்கு வந்திருக்காது. இனி உனக்காக நான் செய்யக்கூடியது எதுவுமில்லை. இன்னுஞ் சிறிது காலத்தில் உன் ஐசுவரியம் உனக்கு வரும்படிச் செய்கிறேன் என்று சொல்லி இந்திரனுக்கு தேஜஸ் வளரவும், பகைவர்களுக்கு புத்திமயங்கவும் ஒரு அபிசார ஹோமம் செய்தார். அதனால் ரஜியின் பிள்ளைகள் புத்தி மயங்கி, பிராமணத் துவேஷியராகவும், வர்ணாசிரம தர்மங்களை இழந்தவர்களாகவும் வேதத்திற்குப் புறம்பானார்கள். இதனால் இந்திரன் அவர்களை ஜெயித்து புரோகிதரின் வேள்வி வலிமையால் மகா தேஜசுள்ளவனாய், சொர்க்கத்தை மீண்டும் ஆண்டுவந்தான். இந்தவிதமாக இந்திரன் தனது சொர்க்கப் பதவியை மீண்டும் பெற்ற இந்தச் சரிதத்தைக் கேட்பவனுக்கு ஸ்தானப் பிரம்சமும் துராத்மாவாக இருத்தலும் ஏற்படுவதில்லை. ஆயுசுவின் மகனுக்கு சந்ததியில்லை. இனி க்ஷத்திரவிருத்தனுடைய சந்ததியைக் கூறுகிறேன், கேளுங்கள். க்ஷத்திரவிருத்தனின் மகன் பிரதிக்ஷத்திரன். அவன் மகன் சஞ்சயன், அவன் மகன் ஜயன், அவன் மகன் விஜயன், அவன் பிள்ளை கிருதன். அவன் மகன் ஹரியதனன், அவன் மகன் சகதேவன். அவனுக்கு அதீனன், அவன் பிள்ளை ஜயத்சேனன். அவன் மகன் சங்கிருதி, அவன் புத்திரன் க்ஷத்திர தருகன் இவர்கள் தான் க்ஷத்திரவிருத்தனுடைய வழிவந்தவர்கள்.

———–

10. யயாதி மாமன்னன் கதை

மைத்ரேய நகுஷ வம்சத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். நகுஷ மன்னனுக்கு யதி; யயாதி, சம்யாதி, ஆயாதி, வியாதி, கிருதி என்ற ஆறுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களனைவரும் சிறந்தவீரர்கள். அவர்களில் யதி என்பவன் இராஜ்யத்தை விரும்பவில்லை. ஆகையால் யாயாதி என்பவன் அரசனானான். அவன் சுக்கிரன் மகளாகிய தேவயானியையும், விருஷபருவாவின் மகளாகிய சருமிஷ்டையையும் மணந்துகொண்டான். அவனது வம்சத்தைப் பற்றிய சுலோகம் ஒன்று உண்டு. தேவயானி என்பவள் யது, துர்வசு என்ற பிள்ளைகளையும் சருமிஷ்டை என்பவள் துருகிய, அனுபூரு என்ற பிள்ளைகளையும் பெற்றார்கள், என்று அந்த சுலோகம் கூறுகிறது. யயாதி மன்னன் தன் இரு பத்தினிகளில் சர்மிஷ்டை என்பவளிடம் அதிகப் பாசம் கொண்டிருந்ததால், தேவயானி பொறாமை கொண்டு தன் தந்தையான சுக்கிராச்சாரியாரிடம் தெரிவித்தாள். அதனால் சுக்கிராச்சாரி கோபங்கொண்டு, யயாதி மன்னனுக்கு கிழடு தட்டும் வண்ணம் அவன் ஜரையை அடைய வேண்டுமென ஒரு சாபமிட்டார். அதன் விளைவாக யயாதி மன்னன் தனக்கு அகாலத்தில் மூப்பு வரும்படிச் செய்ததால் மனவருத்தமுற்று, சுக்கிராச்சாரியாரின் பாதங்களில் வீழ்ந்து வேண்டிக்கொண்டான். அதனால் அவர் மனமிரங்கி மூப்பை ஒருவருக்குக் கொடுத்து அவருடைய வனத்தை ஏற்கலாம் என்றும் அனுக்கிரகஞ் செய்தார். பிறகு, யயாதி மன்னன் தனது முதல் மகனை நோக்கி, மகனே! உன் மாதாமஹருடைய சாபத்தால் எனக்கு நேர்ந்த இந்த மூப்பை அவரனுக்கிரகத்திற்கு ஏற்ப நான் உனக்குக் கொடுத்து உனது வாலிபப் பருவத்தை நான் ஏற்று இன்னும் ஓராயிரம் ஆண்டுக்காலம் உலக இன்பங்களை அனுபவிக்க விரும்புகிறேன். ஆகையால் இதற்கு நீ இணங்க வேண்டும் என்றான். அதற்கு மூத்த மகன் யது சம்மதிக்கவில்லை. அதனால் அவனது தந்தையும், உனது சந்ததி ராஜ்யத்தை இழக்கக் கடவது என்று சபித்தார். பிறகு துர்வசு, துருக்யு, அனு என்ற பிள்ளைகளையும் யயாதி மன்னன் வரவழைத்து தனது மூப்பை ஏற்றுக்கொண்டு அவர்களுடைய யவுவனத்தைத் தனக்கு வழங்கும்படி வேண்டினான். அவர்களும் அதை ஏற்கவில்லை. எனவே அவர்களையும் யயாதி மன்னன் சபித்தான். பிறகு சர்மிஷ்டையிடம் பிறந்த தனது கடைசிப் பிள்ளையான பூருவிடமும் அவன் அதுபோலவே வேண்டினான். பூரு தன் தந்தையை வணங்கி பிதாவே! தங்கள் விருப்பம்போல நான் இதற்கு இணங்குகிறேன் என்று சொல்லி தனது தந்தையின் மூப்புத்தன்மையைத் தான் ஏற்றுக்கொண்டு தன் யவுவனத்தை தந்தைக்கு கொடுத்தான். அதைப் பெற்ற யயாதி மன்னன் தர்ம விரோதமின்றி தக்க காலங்களில் தனக்கு இஷ்டமான சகல போகங்களையும் அனுபவித்து செங்கோலைச் செவ்வனே செலுத்தி வந்தான். அவன் விசுவாசி என்ற தேவமங்கையோடும் தேவயானியோடும் அனுபவித்து காமங்களின் முடிவை காண்பேன் என்று தினந்தோறும் அதே மனத்தினனாக இருந்தான். நாளுக்கு நாள் பெண் இன்பம் இனிமையானதாகவே அவனுக்கு தோன்றியது. எனவே அவன் இப்பாடல்களைப் பாடினான்.

காமமானது காம போகங்களால் ஒருபோதும் அடங்குவதில்லை. அவிகளைச் சொரியச் சொரிய அக்கினி வளர்வது போல் வளரத்தான் வளர்க்கிறது. இந்த பூவுலகிலுள்ள சகல தானியங்களும் பொன் முதலிய சிறந்த பொருள்களும் குதிரை, பசு முதலிய மிருகங்களும் அழகிய பெண்டிரும் ஒருவனுடைய ஆசைக்குப் போதாமலேயே இருக்கின்றன. ஆகையால் அந்த ஆசையை நிறைவேற்ற முயல்வது முடியாத காரியமாகும். ஆகையால் அதை ஒழித்தலே வேண்டும். சகல பூதங்களிடத்தும் விருப்பும் வெறுப்பும் வைக்காமல் சமமான எண்ணமுடையவனுக்கு எத்திசையிலும் சுகமே தோன்றும், புத்தியீனருகு விடக்கூடாததாயும், உடையவன் தளர்வுற்றலும் தளராததாயும் இருக்கக்கூடிய ஆசையை விட்டுவிட்டால், சுகத்தை அடையலாம். மனிதன் மூப்பினால் மெலிந்துபோக அவனுடைய ரோமங்களும், பற்களும் உதிர்ந்துபோகின்றன. உயிராசை பொருளாசை என்ற இரண்டும் ஒருபோதும் மெலிவதில்லை, இளைப்பதும் இல்லை. இதற்கு ஓர் உதாரணம் ஓராயிரம் ஆண்டுக்காலம் போகானுபவம் செய்துவந்த எனபகு ஆசையானது கொஞ்சமும் குறையாமல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆகையால் நான் இனி இந்த ஆசை என்னும் பைசாசத்தை விட்டு ஒழித்து மனதைப் பரம்பிரம்மனிடத்தில் செலுத்திக் தொந்தமும், மமதையும் நீங்கியவனாய்; மிருகங்களோடு மிருகம் போலத் திரிந்து கொண்டிருக்கக் கடவேன்! என்று இவ்விதம் சிந்தித்து யயாதி மாமன்னன் தன்னுடைய மகன் பூருவவின் யவுவனத்தை அவனுக்கே திருப்பி கொடுத்தவிட்டு தன்னுடைய மூப்பைத் தானே திருப்பிப் பெற்றுக்கொண்டு; தென்கிழக்கில் துர்வசுவையும் மேற்கில் துருகியுவையும் தெற்கில் துர்வசுவையும், மேற்கில் துருகியுவையும், தெற்கில் யதுவையும் சிற்றரசராக்கிச் சகல பூமண்டலத்துக்கும் பூருவை அதிபதியாகச் செய்து பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டு தவஞ்செய்ய வனஞ்சென்றான்.

————-

11. கார்த்த வீரியார்ஜுனன்

இனி யயாதி மகாராஜாவின் மூத்த மகனான யதுவின் குலமுறையைக் கூறுகிறேன்; கேளுங்கள். மனிதர், சித்தர், கந்தருவர், இயக்கர், இராக்கதர், குகியகர், கிம்புருடர், அப்சரசுகள், நாகர், விஹகர், தயித்தியர், தானவர், ஆதித்தியர், வுத்திரர், வசுக்கள், அசுவினிகள், மருத்துக்கள், தேவரிஷிகள் ஆகிய இவர்களாலும் மோக்ஷம் பெறமுயன்றவர்களாலும் தர்மார்த்த காமங்களை விரும்பியவர்களாலும் தங்கள் தங்கள் இஷ்ட சித்தியின் பொருட்டுத் துதிக்கத்தக்கவராய், ஆதி மத்யாந்தரகிதராய், சகல உலகங்களுக்கும் இருப்பிடமாய், அளவிடக்கூடாத மகத்துவமுள்ளவராய் விளங்கும் ஸ்ரீமகாவிஷ்ணு பகவான் உலகத்திற்கு அருள் செய்வதர்காக திருவிளையாடல் புரிய ஏற்ற ஒரு திவ்விய மங்கள விக்கிரகத்தோடு அந்த வமிசத்தில் அவதரித்து அருளினார். இது சம்பந்தமாக ஒரு சுலோகம் வழங்கப்படுகிறது. யதுவின் வமிசத்தைப் பற்றி ஒருவன் கேட்பதால் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவான். ஏனென்றால் அந்த வம்சத்தில் பரப்பிரமமானது ஸ்ரீகிருஷ்ணன் என்ற திருநாமத்தோடு மனித உருவமாக அவதரித்ததல்லவா? என்பதுதான் அந்த சுலோகமாகும். அந்த யதுவுக்கு சகஸ்ரஜித்து, குரோஷ்டு, நளன், நகுஷன் என்ற நான்கு பிள்ளைகள் உண்டு. அவர்களில் சகஸ்ரஜித்தின் மகன் சதஜித்து அவனுக்கு ஹைஹயன், ஹேஹயன், வேணுஹயன் என்ற மூன்று பிள்ளைகள் உண்டு. ஹைஹயனின் மகன் தருமன், அவன் மகன் தருமேந்திரன், அவன் மகன் குந்தி, அந்தக் குந்திக்குச் சஹஸ்ரஜித்து, அவன் மகன் மகிஷ்மான், அவன் மாகிஷ்மதி என்னும் நகரம் ஒன்றை உண்டாக்கினான். அவன் மகன் பத்திசிரேணியன், அவன் மகன் தனகன் அவனுக்கு கிருதவீரியன், கிருதாக்கினி கிருததருமன், கிருதவுஜசு என்னும் நான்கு புத்திரர்கள் பிறந்தார்கள். கிருதவீரியனுடைய மகன் அர்ஜுனன் ஸ்ரீமந்நாராயணனின் அம்சமாகவும், அத்திரி குமாரராகவும் விளங்கிய தத்தாத்ரேய முனிவரை அவன் ஆராதித்து அவருடைய அனுக்கிரகத்தால் அதர்மத்திற் புகாமையும், ஸ்வதாமத்தில் பற்றும், ஆயிரங்கைகளும், யுத்தத்தில் வெற்றியும், பகைவரிடம் அவப்படாமையும் சகலலோகங்களும் கொண்டாடத்தக்க மகாபுருஷனால் மரணமும் ஆன இத்தகைய வரங்களைப் பெற்றான். அதனால் அந்த கார்த்தவீரியார்ச்சுனன் சகல தீவுகளுடன் கூடிய பூமண்டலமெல்லாம் பரிபாலனஞ் செய்து, பதினாயிரம் வேள்விகளைச் செய்தான். அவனைப் பற்றி ஒரு சுலோகம் வழங்குகிறது. எந்த மன்னரும், யாகங்கள் தவங்கள் தானங்கள் முதலியவற்றிலும் வணக்கம் முதலிய சற்குணங்களிலும் சாஸ்திரக்கல்வி கேள்விகளிலும் கார்த்தவீரியார்ச்சுனனை ஒவ்வார்கள். அவனுடைய ஆட்சியில் ஒருவனும் பொருள் இழந்தவனில்லை எந்தக் காலத்திலும் அவனது பெயரைச் சங்கீர்த்தனம் செய்தவனுக்கு இழந்த பொருள் கைகூடும்! என்று கூறப்பட்டுள்ளது.

இவ்விதம் எண்பத்தையாயிரம் ஆண்டுக்காலம் ஆரோக்கியம், செல்வம், பலம், பராக்கிரமம், ஆகியவற்றில் யாதொரு குறைவுமில்லாமல் அவன் செங்கோல் செலுத்தி வந்தான். ஒருகாலத்தில் அந்த கார்த்தவீரியார்ச்சுனன் நர்மதை யாற்றில் மங்கையரோடு கூடி ஜலக்கிரீடை செய்து மதுபானத்தில் மயங்கியிருக்கும் போது, சகல தேவ தைத்திய, கந்தர்வர்களை வென்றதனால் செருக்கடைந்த இராவணன் திக்குவிஜய யாத்திரைக்காக அங்கு வந்தான். அதைக்கண்ட கார்த்தவீரியார்ச்சுனன் அவனைப் பசுவைப் போலக் கட்டிக்கொண்டு சென்று, மாகிஷ்மதி நகரத்தின் ஒரு மூலையில் போட்டிருந்தான். அத்தகைய மகாபலசாலியான கார்த்தவீரியார்ச்சுனனை அவன் விரும்பியவண்ணம் ஸ்ரீமந் நாராயணரது வம்சத்தில் அவதரித்த பரசுராமர் எண்பத்தையாயிரம் ஆண்டின் முடிவில் சங்கரித்து அருளினார். அவனுக்கு நூறுபிள்ளை பிறந்தார்கள். அவர்களில் சூரன், சூரசேனன், விருஷசேனன், மது, ஜயத்வஜன் என்ற ஐவர் முக்கியமானவர்கள். அவர்களில் ஜயத்வஜன் என்பவனுக்கு அவன் பெயரைக் கொண்ட நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் வீதி ஹோத்திரன், இரண்டாமவன் பரதன், அவனுக்கு விருஷன், அந்த விருஷனுக்கு மது என்ற மகன் பிறந்தான். அந்த மதுவுக்கு விருஷ்ணி முதலிய நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அதனால் அந்தக் குலத்தாருக்கு விருஷ்ணிகள் என்றும் மதுக்கள் என்றும் பெயர் வழங்கலாயிற்று. யதுவைப் பற்றி, அவர்களுக்கு யாதவர்கள் என்ற பெயரும் பிரபலமாயிற்று.

—————–

12. ஜயாமகனின் பிள்ளைப்பேறு

யதுவின் மகனான குரோஷ்டு என்பவனுக்குத் துவஜினீவான் என்ற மகன் ஒருவன் பிறந்தான். அவன் மகன் சுவாதி அவன் மகன் ருசங்கு, அவன் மகன் சித்திராதன். அவன் மகன் சசபிந்து, அவன் சக்கரம், ரசம், மணி, கட்கம், சருமம், கொடி, நிதி என்ற ஏழு பொருள்களுடன் மனைவி புரோகிதன் சேனாபதி பாக்கியங்களும் ஆகப் பதினான்கு ரத்தினங்களையுடைய சக்கரவர்த்தியாக விளங்கினான். அவனுக்கு லக்ஷம் மனைவியரும் பத்து லக்ஷம் பிள்ளைகளும் உண்டு. அவர்களில் பிருதுசிரவன், பிருதுகர்மா, பிருதுகீர்த்தி, பிருதுயசன், பிருதுஜயன், பிருதுதானன் என்ற அறுவர் முக்கியமானவர்கள். அவர்களில் பிருது கீர்த்தி என்பவனின் மகன் பிருதுதமன், அவனுக்கு உசனன், அவன் நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்தான். அவனுக்கு சிதபு என்ற பிள்ளையுண்டு, சிதபுடன் மகன் ருக்குமகவசன். அவன் மகன் பராவிருத்து, அவனுக்கு ருக்குமேஷு பிருது ருக்குமன், ஜ்யாமகன் பலிதன் ஹரிதன் என்ற பிள்ளைகள் ஐவர் இருந்தார்கள். அவர்களில் ஜ்யாமகனைப் பற்றி ஒரு சுலோகம் உண்டு. அதாவது பெண்டாட்டிக்கு வசப்பட்டவர்கள் யாருண்டோ, அல்லது யார் உண்டாவார்களோ, அவர்கள் யாவரிலும் சயிப்பியையின் கணவனான ஜ்யாமகனே மேலானவன்! என்பதாகும். அவன் மனைவியான சயிப்பி என்பவள் பிள்ளையே பெறாமல் இருந்ததால், ஜ்யாமக மன்னன் பிள்ளைப் பேற்றிற்காக வேறு ஒரு கலியாணஞ் செய்துகொள்ள விரும்பினான். ஆயினும் தன் மனைவிக்குப் பயந்து, அப்படிச் செய்யாமல் இருந்தான். ஒரு சமயம் அவன் தன் போர்ப்படைகளுடன் சென்று பெரியதொரு யுத்தம் செய்து பகைவர்களை வென்றான். அப்போது அவனது பகைவர்கள், தங்கள் உறவினர்களையும் பொருள்களையும் விட்டு விட்டு ஓடினார்கள். அந்த சமயம் அதி அழகான ஒரு பெண் பயத்தால் கண் கலங்கிய வண்ணம் என்னைக் காப்பாற்ற வேண்டும் தாயே! தந்தையே சகோதரனே! என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அவள் மீது காதல் கொண்ட ஜ்யாமக மன்னன் சிந்திக்கலானான். மலடியின் புருஷனாய் பிள்ளைப் பேறற்று இருக்கும் எனக்குப் பெண்களின் திலகம் போன்ற இந்தப் பெண்ணைத் தெய்வம் தான் பிள்ளைப் பேற்றுக்காக அளித்திருக்கிறது. ஆகையால் இவளை நான் திருமணஞ்செய்து கொள்வேன் ஒருவேளை என் மனைவி சயிப்பியை கோபித்தால் என்னாவது? ஆகையால் இந்தக் கட்டழகியை அவளிடம் காண்பித்து அவளது உத்தரவைப் பெற்றாவது இவளை கல்யாண் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்து அந்தப் பெண்ணை தன் தேரில் ஏற்றிக்கொண்டு, தன் தலைநகரத்துக்கு அழைத்துச் சென்றான். அரசன் வெற்றி வீரனாய் வருவதைக் காண்பதற்காக, அவனது மனைவியான சயிப்பியையும் தன் பரிவாரங்களுடன் அரண்மனை வாசலில் வந்து வரவேற்கக் காத்திருந்தாள். அரசன் தன் தேரில் தனக்கு இடதுபுறத்தில் ஒரு கன்னிகையை உடன் அழைத்து வருவதைக் கண்டாள். சயிப்பியை உடனே அவள் கோபத்தால் உதடு துடிதுடிக்க ஜ்யாமக மன்னனை நோக்கி, ஓ சபலசித்தமுடையவனே? தேரின் மீது எவளை ஏற்றிக்கொண்டு வந்தாய்? என்று கேட்டாள். ஜ்யாமகன் பயந்து தன் மனைவிக்குப் பதில் சொல்ல எந்தவித யோசனையுமில்லாமல், இந்த கன்னிகை என் மருமகள்! என்றான்.

அதைக் கேட்டதும் சயிப்பியை மிகவும் வியப்படைந்து, மணாளனே! நானோ பிள்ளை பெறவில்லை. உனக்கு வேறொரு மனைவியும் இல்லை. இப்படி இருக்கும்போது எந்தப் பிள்ளைக்கு இவளைக் கல்யாணம் செய்யப் போகிறாய்? என்று கேட்டான். அவளுடைய கோபத்தைக் கண்ட மன்னன் தன்னுடைய விவேகத்தையும், தைரியத்தையும் இழந்து பிராண நாயகி! இனி உனக்குப் பிறக்கப் போகும் மகனுக்கு மனைவியாகவே இவளை நான் கொண்டு வந்தேன்! என்றான். அதைக் கேட்டதும் சயிப்பியை புன்முறுவலுடன், நல்லது. அப்படியே ஆகட்டும்! என்று ஒப்புக்கொண்டான். பிறகு சயிப்பியை தன் கணவனை அழைத்துக்கொண்டு அந்தப்புரத்துக்குச் சென்றாள். இவ்வாறு சில காலங்கழித்த பிறகு, சயிப்பியை வயது முதிர்ந்தவளானாள். அப்படியிருந்தும் அதிசுத்தமான லக்கினம், ஓரை, திரேக்காணம், நவாம்சம் முதலிய அங்கங்களைக் கொண்ட காலத்தில் அரசனது வாக்கு வலிமையால் சயிப்பியை கருவுற்று ஒரு குமாரனைப் பெற்றாள். அந்தப் பிள்ளைக்கு விதர்ப்பன் என்று பெயர் சூட்டினார்கள். பிறகு ஜ்யாமக மன்னன் முன்புகொண்டு வந்த கன்னிகையை அந்தப் பிள்ளைக்கு விவாகஞ் செய்வித்தான். அப்பெண்ணிற்கு ஸ்நுஷை என்று பெயர். அவள், விதர்ப்பராஜனிடம் கிருதன், கைசிகன் என்ற இருபிள்ளைகளைப் பெற்றாள். பிறகு ரோமபாதன் என்பவனையும் பெற்றாள். அந்த ரோமபாத அரசன் நாரத முனிவரிடத்தில் ஞானம் பெற்றான். அவன் மகன் பப்புரு, அவன் மகன் திருகி, அவன் மகன் கைசிகன், அவன் மகன் சேதி, அவனது சந்ததியிற் பிறந்தவர்கள் சைத்தியர்கள் என்று வழங்கப்பட்டார்கள். முன்னே சொன்ன ஸ்நுஷையின் மகனான கிருதன் என்பவனின் மகன் குந்தி. அவன் மகன் திருஷ்டி, அவன் பிள்ளை விதிருதி, அவன் மகன் தசரர்கள், அவன் மகன் வியோமன், அவன் புதல்வன் நீமுதன், அவன் மகன் விகிருதி; அவன் பிள்ளை பீமரதன், அவன் புத்திரன் நவரதன், அவன் மகன் தசரதன். அவன் பிள்ளை சகுனி, அவன் மகன் காம்பி; காம்பி மகன் தேவராதன்; அவன் பிள்ளை தேவஷத்திரன்; அவன் மகன் மது. அவன் பிள்ளை குருவமிசன்; குருவமிசனின் பிள்ளை அனு, அவன் மகன் புரு; ஹோத்திரன். அவன் மகன் அம்சன்; அவன் மகன் சத்துவதன்; அந்த சத்துவதனாலேயே இனிச் சொல்லப்படவிருக்கும் அரசர்களுக்கு சாத்துவதர் என்ற பெயருண்டாயிற்று. இந்த ஜ்யா மகனுடைய வமிசத்தைப் பற்றி சிரத்தையோடு கேட்பவர்களின் பாவங்கள் அழியும்.

————-

13. சியமந்தகமணியின் கதை

மைத்ரேயரே! முன்னே சொன்ன சத்துவதனுக்கு பஜனன், பஜமானன், திவியன், அந்தகன், தேவாபிருகன், மகாபோஜனன், விருஷ்ணி என்னும் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் பஜமானனுக்கு நிமி கிருகணன், விருஷ்ணி என்னும் மூவர் ஒருத்தி வயிற்றிலும், சதஜித்து சகஸ்ரஜித்து அயுதஜித்த என்பவர்கள் மற்றொருத்தியின் வயிற்றிலும் பிறந்தார்கள். அந்த தேவபிருதனுக்கு பப்புரு என்பவன் பிறந்தான். அவனை மனிதர்களிற் சிறந்தவன் என்றும் தேவ பிருதனைத் தேவர்களுக்கு ஒப்பானவன் என்றும் சொல்வார்கள் அவர்கள். இருவராலும் உபதேசிக்கப்பட்ட வழியினால் எழுபத்து நாலாயிரம் மக்கள் மோட்சமைந்தனர். ஆகையால் இவர்கள் மிகவும் உயர்ந்தவர்களாகப் பாராட்டப் பெற்றார்கள். மகாபோஜன் என்பவன் அதிதர்மவான். அவன் வமிசத்தில் பிறந்தோர் வோஜர் எனப்படுவார்கள். அவர்கள் மிருத்திகாவாம் என்ற நகரில் வாசஞ்செய்ததால் மார்த்திகாவார் என்றும் வழங்கப்பட்டார்கள். விருஷ்ணிக்கு சுமித்திரன், யுதாஜித் என்னும் பிள்ளைகள் பிறந்தார்கள். சுமித்திரனுக்கு அனமித்திரன், அவனுக்கு நிக்கினன், அவனுக்கு பிரசேனனும் சத்திராஜித்தும் உண்டானார்கள். அவர்களில் சத்திராஜித்து என்பவனுக்கு சூரியன் நண்பன், அவன் ஒரு காலத்தில் கடற்கரையில் நின்று சூரியனை மிகவும் பக்தியோடு துதித்தான். சூரியபகவான் அவனுடைய வழிபாட்டை மெச்சி, அவன் எதிரில் தோன்றினார். அவன் சூரியனை நோக்கி, பகவானே! உம்மை வானத்தில் நெருப்புக்கட்டியைப் போலக் காண்கிறேன் அன்றோ? அப்படித்தான் இப்போதும் உம்மைப் பார்க்கிறேன். ஆகையால் நீர் எனக்கு அனுக்கிரகம் செய்து பயன் ஒன்றும் இல்லையே? என்றான். அதைக்கேட்ட சூரியபகவான் தமது கழுத்திலிருந்து ஸ்யமந்தகம் என்ற இரத்தினத்தை கழற்றி ஒரு மறைவிடத்தில் வைத்தார். பிறகு அவர் கொஞ்சமாகச் சிவந்து, பிரகாசிப்பதாயும் குறுகிய தேகமும் பூனைக்கண் போன்ற சிறிது பொன்னிறமாயுமுள்ள விழிகளும் உடையவராகவும் காணப்படுவதைக் கண்டதும் சத்திராஜித்து சாஷ்டாங்கமாக அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் துதித்தான். அப்போது சூரியன் அவனைப் பார்த்து சத்திராஜித் உனக்கு வேண்டிய வரத்தைக் கேள். நான் தருவேன் என்றார். அதற்கு யாதவன் சத்திராஜித்து அந்த ஸ்யமந்தகமணியைத் தனக்குத் தரும்படி கேட்டான். சூரியபகவான், அதை எடுத்து அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தம்மிடம் சேர்ந்தார்.

பிறகு சத்திராஜித் அந்த ஸ்யமந்தக மணியைத் தரித்துக் கொண்டான். அதனால் அவன் சூரியனைப் போல நான்கு திசைகளையும் காந்தியுடன் விளக்கிக் கொண்டு துவாரகைக்கு வந்தான். அப்போது அவனைக் கண்ட துவாரகை மக்கள் கிருஷ்ண பரமாத்மாவின் சன்னதியில் சென்று சுவாமி, தங்களைச் சேவிக்கச் சூரியபகவான் வருகிறார் போலிருக்கிறதே! என்றார்கள். அதைக் கேட்டதும் கண்ணபிரான், புன்சிரிப்புடன் வருபவன் சூரியன் அன்று! நம்முடைய சத்திராஜித்தனே! சூரியனால் கொடுக்கப்பட் ஸ்யமந்தக மணியைத் தரித்துக்கொண்டு வருவதால் தான் அவன் அப்படித் தோற்றமளிக்கிறான். ஆகையால் அவனை அச்சமின்றிப் பாருங்கள்! என்றார். அவர் அருளிச்செய்தபடியே அவர்களெல்லாம் பார்த்தார்கள். சத்திராஜித்தனோ அதிகப் பிரகாசமான ரூபத்தடன் துவாரகைக்கு வந்து அந்த சிறப்பான இரத்தினத்தை தன் மாளிகையில் வைத்திருந்தான். அந்த ஸ்யமந்தகமணி நாள் ஒன்றுக்கு எட்டுப்பாரம் பொன்னை உண்டாக்கவல்லது. மேலும் அதன் மகிமையால் ராஜ்யத்தில் வியாதி, மழையின்மை, நெருப்பு பாம்பு முதலியவைகளின் பயம், பஞ்சம் முதலியன உண்டாவதில்லை. ஸ்ரீகிருஷ்ண பகவானோ, இந்த உத்தமமான பொருள் உக்கிரசேன மன்னனுக்கே தகுந்தது! என்று திருவுள்ளம் பற்றியிருந்தார். ஆயினும் குலத்தில் பேதமுண்டாகக்கூடாது என்பதனால் தாம் சக்திமானாக இருந்தும் அதைக் கவர்ந்து கொள்ளாமல் இருந்தார். சத்திராஜித்தும் தன் மனதிற்குள்; ஒருவேளை கண்ணன் இதைக்கொடுக்கும்படித் தன்னைக் கேட்டாலும் கேட்பார்! என்று நினைத்து அதைத் தன் சகோதரனான பிரசேனனுக்குக் கொடுத்து விட்டான். அந்த ஸ்யமந்தக மணியைப் பரிசுத்தமானவன் தரித்தால் பொன்னை உண்டாக்கிக் கொடுக்கும், அசுத்தன் தரித்தால் தரித்தவனுக்கு தீங்கையே வருவிக்கும். இதையறியாத பிரசேனன் அந்த ரத்தினத்தைத் தன் கழுத்தில் கட்டிக்கொண்டு குதிரை மீது ஏறி வேட்டையாடக் காட்டுக்குச் சென்றான். அங்கு அவனையும், அவனது குதிரையையும் ஒரு சிங்கம் கொன்று விட்டது. அந்த சிங்கம் ரத்தினத்தை வாயில் கவ்விக்கொண்டு போகும்போது; கரடி அரசான ஜாம்பவான், அந்த சிங்கத்தைக் கொன்று ஸ்யமந்தக மணியை எடுத்துக் கொண்டு தன் குகைக்குச் சென்று சுகுமாரன் என்ற தனது மகனுக்கு விளையாட்டுப் பொருளாகக் கொடுத்தான். இது இப்படியிருக்க, காட்டுக்குப் போன பிரசேனன் வராமல் இருந்ததால் யாதவரெல்லாம் குழம்பினார்கள். ஸ்ரீகிருஷ்ணன் அந்த இரத்தினத்தின் மேல் ஆசை கொண்டிருந்தாராகையால் அவர் தான் அதைத் தந்திரமாக அடைந்திருப்பார்! இது அவருடைய செயல்தான்! என்று யாதவர்கள் இரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். கண்ணன் தனக்கும் இப்படிப்பட்ட அபவாதம் உண்டாகியிருப்பதை அறிந்து, அந்தப் பழியைத் துடைப்பதற்காகச் சகல யாதவ சேனைகளுடன் புறப்பட்டு; பிரசேனனின் குதிரை சென்ற வழியைப் பின்தொடர்ந்து சென்றார். காட்டில் ஓரிடத்தில் ஏறியிருந்த குதிரையுடன் பிரசேனன் சிங்கத்தால் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டார். யாவரும் அங்கே சிங்கத்தின் காலடிகளையும் பிரசேனன் மீது தாக்கியிருக்கும் சிங்கத்தின் காலடி நகக்குறிகளையும் கண்டார்கள். அதனால் கண்ணபிரான் தமக்கு உண்டாகியிருந்த அபவாதத்திலிருந்து நீங்கினார்.

பிறகு அந்த மிருகேந்திரனான சிங்கம் சென்ற வழியை அவர் பின்தொடர்ந்து செல்லும்போது சிறிது தூரத்திலேயே அந்த சிங்கத்தைக் கரடி ஒன்று கொன்றதாகத் தெரிந்துகொண்டு அந்த ரத்தினத்தின் மகிமையைக் கருதி, அந்த கரடிசென்ற வழியையும் பின்தொடர்ந்து சென்றார். அங்கிருந்த ஒரு மலைச்சாரலில் கண்ணபிரான் தம் சேனைகள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு தாம் மட்டும் அந்தக் கரடியின் குகைக்குச் சென்றார். அங்கே சுகுமாரன் என்ற சிறுவனை லாலனை செய்து கொண்டிருந்த செவிலித்தாய், சிங்கம் பிரசேனனைக் கொன்றது சிங்கத்தை நம்முடைய ஜாம்பவன் கொன்றார். ஆகையால் ஸ்யமந்தகமணி உனதாயிற்று. குழந்தாய், அழாதே! என்று கொஞ்சுவதை கண்ணன் கேட்டார். அந்த செவிலித்தாயின் கையில் ஜொலித்துக் கொண்டிருந்த ஸ்யமந்தக மணியைக் கண்டார். அப்போது அந்த ஸ்யமந்தகமணியின் மேல் கண்ணோடி நிற்கும் ஒரு புதிய ஆடவனைக் கண்ட செவிலித்தாய் பயந்து என்னைக் காக்கவேண்டும்! என்று கூறினாள். அந்த அபயக்குரலைக் கேட்டதும் கரடி ராஜனான ஜாம்பவான் வெகுகோபத்தோடு அங்கே தாவி வந்தான். அவனுக்கும் கண்ணபிரானுக்கும் ஒரு கொடிய போர் மூண்டது. இருபத்தொரு நாள்வரை, அந்த யுத்தம் நீடித்தது. இது இப்படியிருக்க வெளியே இருந்த யாதவர் அனைவரும் ஏழெட்டு நாட்கள் வரையிலும் கிருஷ்ண பகவான் வராமையால் ஓஹோ! நமது கிருஷ்ணன் இந்தக் குகையில் நாசமுற்றிருப்பான். இல்லையென்றால் அவனுக்கு பகைவர்கள் ஜயிக்கத் தடையிருக்கமாட்டாது என்று கருதி கிருஷ்ணன் முடிந்தான் என்று சொல்லி விட்டார்கள். அதைக்கேட்ட அவருடைய உறவினர்கள், அவருக்குச் செய்ய வேண்டிய சாமக்கிரியைகளை யெல்லாம் செய்து விட்டார்கள். அவ்விதமாக வெகு சிரத்தையோடு சிரார்த்தம் செய்தால் ஸ்ரீகிருஷ்ண பகவானுக்குப் பலமும் புஷ்டியும் திருப்தியும் உண்டாயிற்று. ஜாம்பவானுக்கோ அங்கங்கள் தளர்ந்தன. ஆகாரமில்லாமøயால் உடல் மெலிந்தது. இந்நிலையில் சுவாமியால் மொத்துண்டு வெல்லப்பட்ட ஜாம்பவான் அவரது திருவடிகளில் வீழ்ந்து தண்டனிட்டு, சுவாமி சுராசுர யக்ஷராக்ஷச கந்தர்வாதிகளினாலும் தாங்கள் வெல்லக் கூடாதவராக இருக்கும்போது இந்த மண்ணுலகில் சஞ்சரிக்கும் மனிதர்களாலும் அவர்களுக்கு அடங்கும் விலங்குகளைச் சேர்ந்த எம்போன்றார் யாவராலும் வெல்லப்படுவீரோ, ஆகையால் எங்கள் சுவாமியான ஸ்ரீராமபிரானைப் போல் தாங்களும் சகல உலகங்களுக்கும் ஆதார பூதரான ஸ்ரீமந் நாராயணருடைய திருவவதாரமாகவே இருக்க வேண்டும்? என்று விண்ணப்பம் செய்து நின்றான். அவனை ஸ்ரீகிருஷ்ண பகவான் கடாட்சித்து, ஆம்! நீ நினைத்தபடி நாம் லோக ரக்ஷணார்த்தமாகவே இந்த அவதாரஞ் செய்தோம்! என்று அருளிச் செய்த அன்புடன் தமது திருக்கைகளால் ஜாம்பவானின் உடலைத் தடவிக் கொடுத்தார். அதனால் ஜாம்பவானுக்குப் போராட்டத்தால் நேர்ந்த நோயெல்லாம் நீங்கின. பிறகு கரடியரசனான ஜாம்பவான், ஸ்ரீகிருஷ்ணபகவானுக்குத் தண்டனிட்டு, மாளிகைக்கு அழைத்துச் சென்று உபசரித்து, அவருக்குத் தமது வளர்ப்பு மகளான ஜாம்பவதி என்பவளைக் கன்னிகாதானஞ் செய்து, ஸ்யமந்தக மணியையும் கொடுத்து தண்டம் சமர்ப்பித்தான். கிருஷ்ண பகவானும் அவனுடைய பக்தியினால் மனமகிழ்ந்துவிட்டு ஜாம்பவதியோடும் ஸ்யமந்தக மணியோடும் துவாரகைக்குத் திரும்பி வந்தார். அவர் வருவதையறிந்த துவாரகை மக்கள் பெரிதும் மகிழ்ந்தனர். கண்ணபிரானும் நடந்தவற்றையெல்லாம் யாதவ சமூகத்தினருக்குச் சொல்லி, ஸ்யமந்தக மணியை சத்திராஜித்திடம் கொடுத்து, தமக்கு வந்த அபவாதத்தைப் போக்கிக் கொண்டு, ஜாம்பவதியை அந்தப்புரத்தில் சேர்ந்து சுகமாகத் தங்கியிருந்தார்.

சத்திராஜித்தோ, நம்மால் கண்ணன் பேரில் வீண் அபவாதம் ஏற்பட்டுவிட்டது. அதை எப்படியாவது நிவர்த்திக்க வேண்டும் என்று நினைத்துத் தன் மகளான சத்தியபாமையை கிருஷ்ணபகவானுக்குச் சமர்ப்பித்தான். அந்த சத்யபாமையை முன்பு அக்குரூரன், கிருதவர்மா, சத்தனுவா முதலிய யாதவர்கள் கேட்டிருந்தார்கள். அவளைத் தங்களுக்குக் கொடுக்காததால், அவர்கள் அனைவரும் சத்திராஜித்தின் மேல் பகைமை பாராட்டினார்கள். ஒரு சமயம் அக்குரூரன் கிருதவர்மன் முதலியோர் சததனுவாவிடம் சென்று, சததனுவாவே! வெகுநாளாய் சத்தியபாமையைக் கேட்டுக் கொண்டிருந்த உன்னையும், எங்களையும் அவமானப்படுத்தி அவளை கிருஷ்ணனுக்குக் கொடுத்தானே அந்த சத்திராஜித்து! இனி அந்த அயோக்கியன் இருந்தாவதென்ன? நீ மிகவும் சமர்த்தன். ஆகையால் நீ அவனைக் கொன்று விட்டு அவனிடமிருக்கும் அந்த அபூர்வமான ஸ்யமந்தக மணியை அபகரித்துக் கொள்வாயாக. கிருஷ்ணன் அதற்காக உன்னை எதிர்க்க வந்தால் நாங்கள் உனக்குப் பக்கபலமாக இருந்து துணை செய்கிறோம்! என்றார்கள். அவர்களால் தூண்டப்பட்ட சததனுவா ஒருநாள் சத்திராஜித்து தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனைக் கொன்று ஸ்யமந்தகமணியை அபகரித்துக் கொண்டான். அந்தக் காலத்தில் பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் வெந்து போய்விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டு, கிருஷ்ண பகவான் அவர்கள் வாசஞ் செய்துகொண்டிருந்த வாரணாவத புரத்துக்குச் சென்றிருந்தார். கிருஷ்ண பகவானுக்கோ பாண்டவர்கள் வெந்து போகாமல் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள் என்பது தெரியும். அப்படித் தெரிந்திருந்தும் லோக மரியாதைக்காகவும் தாம் எழுந்தருளாவிட்டால் பாண்டவர்கள் பிழைத்திருக்கிறார்கள் என்று துரியோதனன் சந்தேகங்கொண்டு அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பான் என்பதாலும் அவனை அப்படிச் செய்யவொட்டாமல் தடுப்பதற்காகவும் கிருஷ்ணன் அங்கு விஜயம் செய்தார். ஆகையால் தான் சத்திராஜித்துக்கு அத்தகைய ஆபத்து நேரிட்டது. தகப்பனைக் கொலை செய்து விட்டார்களே என்ற துக்கம் தாங்காத சத்தியபாமை அதிக கோபங்கொண்டு தேரில் ஏறி வெகுவேகமாக வாரணாபுரத்துக்குச் சென்றாள். அங்கு கண்ணும் கண்ணீருமாய் கண்ணனைக் கண்டு, என் பிராணநாதா! என் தந்தை என்னைத் தங்களுக்குக் கொடுத்தார் என்ற பொறாமையால், சததனுவா என் தந்தையைக் கொன்று அவரிடமிருந்து ஸ்யமந்தகமணியை அபகரித்துக் கொண்டுவிட்டான். அது தங்களுக்கு இழைத்த அவமானமேயன்றி வேறல்ல, இதற்கு என்ன செய்யவேண்டுமோ, அதை யோசித்துச் செய்யுங்கள்! என்று விண்ணப்பஞ் செய்தாள்.

அதைக்கேட்ட கண்ணன், பாமா! நீ சொன்னதுபோல் இது எனக்குச் செய்த அவமானம் தான். அந்த துராத்மா இப்படி செய்ததை நான் சகிக்கமாட்டேன். மரத்தை விட்டு அதில் கூடுகட்டும் பறவைகளைக் கொல்லக்கூடாது. நீ ஏன் இதற்காக கதற வேண்டும்! வேண்டாம் நில்! என்று சொல்லி, அவளைச் சமாதானப்படுத்திவிட்டு, துவாரகை சென்றார். அங்கு தம் தமையரான பலராமருடன் ஏகாந்தத்தில் தனித்துப் பேசி, வேட்டையாடச் சென்ற பிரசேனன் சிங்கத்தால் அறையப்பட்டு இறந்தான். அவ்விருவரும் இறந்ததால் ஸ்யமந்தகமணியெனும் இந்த இரத்தினம் நம் இருவருக்கும் பொதுவாக உள்ளது. மற்றொருவன் கொண்டு போவதற்கு நிமித்தம் இல்லை. ஆகையால் எழுந்திருந்து தேரில் ஏறி சததனுவைக் கொல்வதற்கு முயல்வீராக! என்று கிருஷ்ணபிரான் சொன்னார். அதனால் பலராமர் அப்படியே ஆகட்டும் என்று அங்கீகரித்தார். இவ்வாறு பலராமர் கிருஷ்ணர் இருவரும் பிரயத்தினம் செய்திருப்பதை அறிந்த சததனுவா திகைத்து கிருதவர்மனிடம் சென்று, தனக்குத் துணைசெய்யும்படி வேண்டினான். அதற்கு அவன் மறுத்தான். பிறகு அவன் அக்குரூரனிடம் சென்று அவனையும் தனக்குப் பக்கபலமாக இருக்கும்படிக் கேட்டான். அவனோ, கேளப்பா! ஸ்ரீகிருஷ்ணனோ தம் திருவடித் தாக்குதலினாலேயே பூமியையெல்லாம் நடுங்கச் செய்யும் திறமுடையவன்; தேவர்களது பகைவர்களின் மனைவியரையெல்லாம் கைம்பெண்களாக்க வல்லவன் எப்படிப்பட்டவர்களாலேயும் தடைசெய்யக்கூடாத சக்கராயுதமுடையவன். அவன் அண்ணன் பலராமனோ மதத்தோடு சுழலும் கண்களால் பார்த்தவுடனேயே பகைவரது சமூகத்தை எரிக்கவல்லவர். மிகவும் பிரபல பகைவரான மதயானைகளையும் வயப்படுத்தும் திறனுடைய மரவெட்டி போன்ற கலப்பை ஆயுதமுடையவர்! அவ்விருவரோடும் யுத்தம் செய்யத்தக்க வலிமையுள்ளவன் தேவர்களில் கூட ஒருவனில்லை. அத்தகையவர்களை நாங்கள் எதிர்ப்பது எப்படி? ஆகையால் வேறு யாரையாவது உனக்குத் துணைசெய்ய வேண்டிக்கொள்! என்றான். அதைக்கேட்ட சததனுவா, அக்குரூரனே! நீ என்னைக் காக்கும் திறனில்லாதவன் என்று நினைத்தால், இந்த ஸ்யமந்தக இரத்தினத்தையாவது என்னிடமிருந்து வாங்கி நீ காப்பாற்றி வைக்கவேண்டும் என்று கெஞ்சினான். அதற்கு அக்குரூரன், அப்படியே செய்கிறேன் நீ மிகவும் துன்பப்பட நேரிட்டாலும் இந்த இரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் இருப்பதாக எனக்கு வாக்குறுதியளித்தால், நான் இதைப் பத்திரப்படுத்திக் கொடுக்கிறேன்! என்றான். அதை சததனுவா ஒப்புக்கொண்டான். அக்குரூரனும் இரத்தினத்தை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டான். பிறகு சததனுவா, ஒப்பற்ற வேகமும், நூறுகாதம் வரை இளையாமல் சுமக்குந்திறமுடைய ஒரு பெண் குதிரையின் மீது ஏறிக்கொண்டு அதிவேகமாகச் சென்று விட்டான்.

அவன் ஓடிப்போனான் என்ற செய்தியை அறிந்த பலதேவர் கிருஷ்ணபிரான் இருவரும் சைனிய, சுக்ரீவ, மேக, புஷ்பவலாகம் என்ற நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி, அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். சததனுவாவை ஏற்றிச் சென்ற பெண்குதிரை நூறுகாத தூரம் அவனைச் சுமந்து சென்ற பிறகும் அதை அவன் வற்புறுத்தி செலுத்தியதால், அது ஓடமாட்டாமல் மிதிலை நகருக்கு அருகிலிருந்த ஒரு வனத்தில் இறந்தது. ஆகையால் அவன் கால்நடையாக ஓடத் துவங்கினான். அப்போது கிருஷ்ணபிரான் தன் தமையனிடம், கால்நடையாக ஓடிச்செல்லும் அந்த அதமனை நானே பின்தொடர்ந்து ஓடிப்பிடித்துக் கொன்றுவிட்டு வருகிறேன். அதுவரையில் நீர் இந்தத் தேரில் இருப்பீராக. இங்கு சததனுவாவின் குதிரை செத்திருப்பதைக் கண்டதால் நமது குதிரைகள் பயமடைந்துள்ளன. ஆகையால் இவற்றை இங்கிருந்து அப்புறம் ஓட்டிச் செல்ல வேண்டாம் என்று சொன்னார். இவ்விதம் தம்பியான ஸ்ரீகிருஷ்ணன் கூறியதைக் கேட்ட பலராமர், அதன்படி ஒப்புக்கொண்டார். ஸ்ரீகிருஷ்ணனும் இரண்டு குரோசதூரம் ஓடிச்சென்று, தூரத்திற் காணப்பட்ட சததனுவாவை குறித்து அங்கேயே இருந்தவண்ணம் தமது சக்கரத்தைப் பிரயோகித்து அவன் சிரத்தைச் சேதித்துப் பின்பு கிட்டப்போய் அவனுடைய உடலையும் ஆடைகளையும் சோதித்துப் பார்த்தார்; அப்படிப் பார்த்ததும் ஸ்யமந்தக மணியைக் காணாததால் அவர் திரும்பி வந்து பலராமரிடம் அண்ணா! சததானுவாவை நாம் வீணாகக் கொன்றாய்? எவ்வளவு தேடியும் அந்த மகத்தான இரத்தினம் கிடைக்கவில்லை என்றார். அதனால் பலபத்திரர் மிகவும் கோபங்கொண்டு ஸ்ரீகிருஷ்ணனே நோக்கி, தம்பீ! நீ பொருள் நாட்டம் உடையவனாய் தீயவழியில் செல்கிறாய். சீச்சீ! இத்தகைய நீ இத்தகைய நீ நிந்திக்கத்தக்கவன்! இவற்றையெல்லாம் உன்னுடன் பிறந்த தோஷத்துக்காக நான் பொறுத்தேன். ஆகையால் இனிமேல் நீ உன் இஷ்டப்படி எங்கேயும் போகலாம். நான் உன்னுடன் வரமாட்டேன். எனக்குத் துவாரகையினாலாவது உன்னாலாவது மற்றுமுள்ள பந்துக்களினாலாவது ஆகவேண்டியது ஒன்றுமில்லை, நீ என் எதிரில் வந்து அநேகம் பொய்ச்சத்தியங்களைச் செய்கிறாய்! உன் சரித்திரம் கொஞ்சமும் நன்றாக இல்லை! என்று நிந்தித்தார். பிறகு அவர் தம்பியுடன் பேசாமல் மிதிலை நகருக்குச் சென்றார். அங்கே ஜனக மன்னன், அவரை வரவேற்று உபசரித்துத் தம் மாளிகை ஒன்றில் தங்க வைத்திருந்தான். அங்கு பலராமரும் மகிழ்ச்சியுடன் தங்கியிருந்தார். அத்தருணத்தில் துரியோதனன் அஸ்தினாபுரத்தினின்றும் அங்கு வந்து பலராமரிடம் கதாயுத்தாப்பியாசஞ் செய்து கொண்டிருந்தான். ஸ்ரீவாசுதேவரோ துவாரகைக்குப் போய்விட்டார். மூன்றாண்டு காலங் கடந்த பிறகு பப்புரு, உக்கிரசேனன் முதலிய யாதவர்களனைவரும் ஸ்யமந்தக மணியை கண்ணன் அபகரிக்கவில்லையென்று தெளிந்து, அந்தக் கருத்தைப் பற்றி தம்பியினிடம் மனம் முறிந்து மிதிலையில் தங்கியிருக்கும் பலராமரிடம் சென்று அவரைச் சமாதானப்படுத்தி துவாரகைக்கு அழைத்து வந்தார்கள்.

அக்குரூரனோ ஸ்யமந்தக மணியின் மகிமையால் உண்டான பொன்னைக் கொண்டு, எம்பெருமானிடத்தில் சித்தமுடையவனாய், எப்போதும் யாகங்கள் செய்து கொண்டிருந்தான். யாகஞ்செய்து கொண்டிருக்கும்போது, க்ஷத்திரியனையாவது வைசியவையாவது கொன்றவன் பிரமஹத்தி தோஷமடைவான் என்று சாஸ்திரம் கூறுவதால் தனக்கு ஸ்ரீகிருஷ்ணனால் யாதொரு துன்பமும் நேரிடமாட்டாது என்று எண்ணிய அக்குரூரன் யாக தீட்சையாகிய கவசத்தை அணிந்திருந்தான். ஸ்யமந்தக இரத்தினத்தின் மகிமையால் அங்கு அறுபத்திரண்டு ஆண்டுகள் வரை பஞ்சமும் கொள்ள நோயும் ஏற்படாமல் இருந்தது. இப்படியிருக்கும் போது சததுவதனுடைய பேரனுக்குக் குமாரனான சத்துருக்கினன் என்பவனை, அக்குரூரனைச் சேர்ந்த போஜர்கள் அழித்ததால் சாத்துவதருடைய பகைமையுடன் துவாரகையில் வாசஞ்செய்வது நியாயமல்ல என்று எண்ணி அக்குரூரன் துவாரகையிலிருந்து தன்னுடைய இனத்தாரோடு கூடப்போய் விட்டான். அவன் துவாரகையை விட்டுப்போனது முதல் அங்கு வியாதியும் பஞ்சமும் தோன்றின. இதைக் கண்டு யாதவர்கள் அனைவரும் பலராமர், உக்கிரசேனன் முதலியவர்களுடன் சென்று அதன் காரணத்தை ஆலோசிக்கத் துவங்கினார்கள். அந்த சங்கத்தில் கருடத்வஜனான கிருஷ்ணபரமாத்மா மற்றவர்களை நோக்கி, இதென்ன இங்கு அநேக துன்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்திருக்கின்றன? இது ஏன் என்று ஆலோசியுங்கள்! என்று கூறினார். அப்போது அந்தகன் என்னும் பெயருள்ள யாதவ மூப்பன் ஒருவன், கேளுங்கள் யாதவர்களே! அக்குரூரனுடைய தந்தை சுவபல்க்கன் என்று ஒருவன் இருந்தானே, அவன் இருந்த இடங்களிலெல்லாம் துர்ப்பிஷங்கள் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் காசி ராஜ்யத்தில் மழையில்லாமல் துன்பம் நேரிட்டது. காசியரசன் சுவபல்க்கனைத் தன் நகரத்துக்கு அழைத்துச் சென்றான். அதனால் மழை பெய்து நாட்டில் ÷க்ஷமம் உண்டாயிற்று. அந்த அரசனுக்கு மகள் ஒருத்தி இருந்தாள். அரசன் தனது நாட்டுக்கு நன்மை செய்ததற்காக, தன் புதல்வியை சுவபல்க்கனுக்கு கல்யாணம் செய்து கொடுத்தான். அவள் கருப்பத்திலிருந்து பிரசவ காலம் நேர்ந்தும் வெளியே வராமல் தாய்க்கு அதிகத் துன்பம் உண்டாக்கிக் கொண்டிருந்தாள். இதுபோலப் பன்னிரண்டு ஆண்டுகள் சென்றன. இப்படியிருக்கக் கணவன் தன் மனைவியின் கருவிலிருந்த சிசுவை நோக்கி மகளே! நீ ஏன் இன்னும் பிறக்கவில்லை? சீக்கிரம் வெளியில் வருவாயாக! உன் முகத்தைப் பார்க்க விரும்புகிறேன். உன்னை வயிற்றில் தாங்கியிருக்கும் உன் தாயை நீ ஏன் நெடுநாளாக வருத்தி வருகிறாய்? என்று சொன்னான்; உடனே வயிற்றிலிருந்த அந்தக் கன்னி ஐயா இன்று முதல் நாள்தோறும் ஒவ்வொரு பசுவைப் பிராமணருக்குத் தானஞ்செய்து வருவீராயின் மூன்றாண்டுகள் கழித்து நான் வெளிவருவேன் என்று சொன்னான். அதன்படி அரசன் தினந்தோறும் கோதானம் செய்ததனால் அவள் பிறந்தாள். ஆகவே அரசன் அவளுக்குக் காந்தினி என்று பெயரிட்டான். அப்படிப்பட்டவள் வயிற்றில் அப்படிப்பட்ட சுவபல்க்கனுக்குப் பிறந்தவன் இந்த அக்குரூரன். இத்தகைய சுத்தமான பிறவியும் நல்ல ஒழுக்கமுடையவர் இங்கிருந்து நீக்கியதால் இந்த உபத்திரவங்கள் யாவுமே உண்டாயின. குணவானாக இருப்பவனிடத்தில் குற்றம் பாராட்டுதல் கூடாது. ஆகையால் அக்குரூரனை இங்கே வரவழைக்க வேண்டும் என்று அந்தக் கிழவன் கூறியதை கிருஷ்ணபிரானும் மற்றவரும் கேட்டார்கள். அவர்கள் அக்குரூரனைத் துவாரகைக்கு அழைத்து வந்தார்கள்; அவன் வந்தவுடன் அவனிடமிருந்த ஸ்யமந்தக மணியின் பிரபாவத்தால் மழையின்மை, கொள்ளை நோய் முதலிய தொல்லைகள் நீங்கின.

அப்போது கண்ணபிரான் இந்த அக்குரூரனுக்கு இவ்வளவு மகிமை இருப்பதற்கு இவன் சுவபல்க்கனுக்கும் காந்தினிக்கும் பிறந்தான் என்பது போதிய காரணமல்ல இது மிகவும் சாதாரண விஷயம்! மழையின்மை முதலிய துன்பங்களை நீக்குவது என்பது மகாயோகிக்கும் அரிய காரியமாகும்! ஆகையால் ஸ்யமந்தகமணியானது இந்த அக்குரூரனிடம் தான் இருக்க வேண்டும்! என்று உறுதியாக நம்பினார். எனவே அவர் யாதவர்களனைவரையும் தமது மாளிகைக்கு வரவழைத்தார். அவர்கள் அனைவரும் கூடிய பிறகு அவர் அக்குரூரனை நோக்கி, தானபதியான அக்குரூரரே! சததனுவா அந்த ஸ்யமந்தக மணியை உமக்குக் கொடுத்தது நமக்குத் தெரியும். அந்த மணி உம்மிடம் தான் இருக்கிறது. அதன் பயன் இந்த ராஜ்யம் முழுவதும் அனுபவித்து வருகிறது. நாமெல்லாம் அனுபவித்து வருகிறோம், ஆனால் நமது பலபத்திரருக்கு அதை நான் எடுத்துக் கொண்டதாக ஒரு நினைப்பு அதற்காக அந்த மணியை இங்கு காண்பிக்க வேண்டும்! என்று கூறிவிட்டு, மவுனமாக இருந்தார். அக்குரூரர், யோசிக்கலானார். இப்பொழுது நாம் என்ன செய்வது? இல்லையென்றால், இந்த சபையிலேயே நமது ஆடைகளைச் சோதித்து ரத்தினத்தை சுவாமி எடுத்து விடுவார். பிறகு நாம் அவருக்கு விரோதியாகி விடுவோம் அது நல்லதல்ல என்று ஆலோசித்து, சகல ஜகத்காரணரான கண்ணபிரானை நோக்கிக் கூறலானார். சுவாமி! ஸ்யமந்தகமணியை சததனுவா எனக்குக் கொடுத்தான். அவன் போன பிறகு இன்றையோ நாளையோ சுவாமி நம்மைக் கேட்பார் என்ற நினைப்பில் இத்தனை நாள் வரையில் அதை நான் வைத்திருந்தேன். அதை வைத்திருக்கும் வருத்தத்தினால், சகல போகங்களிலும் மனப்பற்றில்லாமல் சிறிதும் சுகமறியாமல் இருக்கிறேன். இந்த இரத்தினத்தை தரித்துக் கொண்டாகிலும் இந்த ராஜ்யத்துக்கு ÷க்ஷமத்தை உண்டாக்கும் உபகாரத்தைச் செய்யாமல் நம்முடைய கையில் கொண்டுவந்து கொடுக்கிறானே என்று தாங்கள் நினைப்பீர்களே என்ற பயத்தால் அதை நான் வலுவில் வந்து இத்தனை நாளும் சமர்ப்பிக்காமல் இருந்தேன். ஆகையால் நீங்களே அதை யாருக்காயினும் கொடுக்கலாம்! சொல்லி தம் மடியில் முடித்து வைத்திருந்த மிகச்சிறிய பொற்சிமிழை எடுத்துத் திறந்து வைத்தார். உடனே சபை முழுவதும் அந்த மணியின் ஒளி வெள்ளம் பளபளவென்று மின்னியது. அக்குரூரர், சபையோரை நோக்கி சபையோர்களே! இந்த ஸ்யமந்தக மணியை சததனுவா என்னிடம் கொடுத்து விட்டுப் போனான். இதோ இதை நான் இங்கு வைத்து விட்டேன் இது யாரைச் சேர வேண்டியதோ, அவர் இதை எடுத்துக்கொள்ளலாம்! என்றார். யாதவர்கள் அனைவரும் நன்றாய் இருக்கிறது? என்று மகிழ்ந்து புகழ்ந்தனர். பலபத்திரரான பலராமரோ, இது நமக்கும் தனக்கும் பொதுவில் இருக்கட்டும் என்று கண்ணபிரானே முன்பு கூறியிருக்கிறான்! என்று நினைத்து அதன் மீது ஆசை கொண்டிருந்தார். சத்தியபாமாவோ, இது என் தந்தை வீட்டுத் தனம் அல்லவா? ஆகையால் இது எனக்கே உரியது! என்று நினைத்திருந்தாள். கண்ணன் அவர்கள் இருவருடைய கருத்தையும் புரிந்து கொண்டு, எருதுக்கும் சக்கரத்துக்கும் இடைப்பட்ட ஜந்துவைப் போல சங்கடப்பட்டார்.

அவர் சபையில் அக்குரூரரை நோக்கி, அக்குரூரரே! நான் இப்போது இந்த மணியை இங்குள்ளோர் அனைவர்க்கும் எதிரில் வைக்கச் சொன்னது ஏன் தெரியுமா? இதை நான் அபகரித்தேன் என்று இங்குள்ள சிலர் எண்ணியிருப்பதை மாற்றுவதற்காகவே தான்! இதுவோ, என் தமையனுக்கும் எனக்கும் பொதுவானது. நன்றாய் யோசித்தால் இது சத்தியபாமையின் பிதுர்த்தனம் ஆகையால் அவளுக்கு உரியது. இதனால் நாட்டிற்கு நலனும் சுகமும் உண்டாகிறது. எனவே, இதனை மகாபரிசுத்தனாகவும் பிரம்மசரிய விரதத்தில் உயர்ந்தவனாகவும் இருப்பவனே வைத்திருக்க வேண்டும் அசுத்தனாக இருப்பவன் இதை வைத்திருந்தால் தீமைகளே உண்டாகும்! நானோ, பதினாயிரம் பெண்களை வைத்திருப்பவன்! ஆகையால் நான் இந்தப் புனிதமான மணியை வைத்திருக்கும் யோக்கியத்தை உடையனவல்லன். சத்தியபாமையும் இதை வைத்திருப்பதற்கு அருகதையுடையவளல்ல! பலபத்திரரோ இதைத் தரிப்பதற்காகச் சுராபானம் முதலிய போகங்களையெல்லாம் இழக்க வேண்டியிருக்கும். ஆகையால், யாதவ கூட்டமும் பலராமரும் நானும் சத்தியபாமையும் உம்மைப் பிரார்த்திப்பது என்னவெனில் இத்தனை நாட்களையும் போலவே இனிமேலும் இந்த நாட்டின் நலனுக்காக அக்குரூரரே இந்த மணியைத் தரித்திருக்க வேண்டும்! இதை அவர் மறுக்க வேண்டாமென்று சபை முன்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார். புன்முறுவலோடு அதைக் கேட்டதும் அக்குரூரரோ, சுவாமியின் நியமனத்துக்கு மாறாக நான் நடப்பதற்குச் சக்தியற்றவன். ஆகவே கண்ணபிரான் திருவுரைப்படி நடக்கச் சித்தமாக இருக்கிறேன்! என்று சொல்லி அந்த இரத்தினத்தை தமது கழுத்தில் தரித்துக் கொண்டார். மைத்ரேயரே! இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணபகவானுக்கு நேர்ந்த வீண் அபவாத நீக்கத்தை நினைப்பவர்களுக்கு ஒருபோதும் அபவாதம் கிஞ்சித்தும் நேரிடுவதில்லை. கரணகளே பரங்கள் மெலிவுறாமல் வாழ்ந்து சகல பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள்!

————

14. அனமித்திர வம்ச வரலாறு

அனமித்திரனின் மகன் சினி என்று ஒருவன் இருந்தான். அவன் மகன் சத்தியகன், அவனது மகன் சாத்தியகி, அவனுக்கு யுயுதானன் என்ற பெயருமுண்டு. அவன் மகன் சஞ்சயன், அவன் மகன் குணி, அவன் பிள்ளை யுகந்தரன், இவர்கள் தான் சைனேயர் என்று வழங்கப்பட்டனர். அந்த அனமித்திரனின் வமிசத்தில் விருஷ்ணி என்பவன் ஒருவன் இருந்தான். அவன் மகன் தான் சுவபல்க்கன் அவனுக்குச் சிதிரகன் என்று ஒரு தம்பி உண்டு. சுவபல்க்கனுக்கு காந்தினியிடத்தில் அக்குரூரர் பிறந்தார். அந்த சுவபல்க்கனுக்கே மற்றொருத்தியின் வயிற்றில் உபமத்கு என்பவன் பிறந்தான். உபமத்குவுக்கு மிருதாமிருதன், விஸ்வன், அரிமேஜயன், கிரிக்ஷத்திரன், உபக்ஷத்திரன், சத்ருக்கினன், அரிமர்த்தனன், தருமதிருக்கு, திருஷ்ட தருமன் கந்தமன், ஓஜவாஹன் என்ற பிள்ளைகளும், சுதாரை என்ற பெண்ணும் பிறந்தார்கள். அக்குரூரருக்குத் தேவவான், உபதேவன் என்பவர்கள் பிறந்தார்கள். சித்திரகன் என்பவனுக்கு பிருது விபுருது முதலிய மக்கள் பலர் இருந்தார்கள். முன்பு சொன்ன சத்துவத குமாரனான அந்தகனுக்குக் குகுரன், பஜமானன், சுசி, கம்பலன், பராஹிதன் என்ற நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களில் குகுரனுக்குத் திருஷ்டன் என்பவன் பிறந்தான். அவன் மகன் கபோதரோமா, அவன் மகன் விலோமா, அவனுக்கு தும்புரு என்ற கந்தர்வனுடைய நண்பனான அனு என்பவன் பிறந்தான். அந்த அனுவுக்கு ஆனகதுந்துபி, அவனுக்கு அபிஜித்து, அவனுக்கு புனர்வசு, அவனுக்கு ஆகுகன் என்ற மகனும் ஆகுகி என்ற மகள் ஒருத்தியும் உண்டானார்கள். ஆகுகனுக்குத் தேவகன், உக்ரசேனன் என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் தேவகனுக்கு தேவவான், உபதேவன், சகதேவன், தேவரக்ஷிதா என்ற நான்கு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு விருகதேவை, உபதேவை தேவரக்ஷிதை, ஸ்ரீதேவை, சாந்தி தேவை, சகதேவை, தேவகி என்று ஏழு சகோதரிகள் உண்டு. அந்த ஏழு பெண்களையும் வாசுதேவர் திருமணஞ் செய்து கொண்டார். உக்ரசேனனுக்கு கம்சன் நியக்ரோதன், சுநாமா, அனகா, ஹ்வன், சங்கு, சுபூமி ராஷ்டிரபாலன், யுத்ததுஷ்டி சுதுஷ்டிமான் என்ற பிள்ளைகளும், கம்சை கம்சவதி சுதனூராஷ்டிர பாலிகை என்ற பெண்கள் நால்வரும் பிறந்தார்கள். பசமானன் என்பவனுக்கு விடூரதன் என்பவன் பிறந்தான். அவனுக்கு சூரன் அவன் மகன் சமி, அவன் மகன் பிரதிக்ஷத்திரன், அவன் மகன் போஜன், அவன் மகன் இருதிகன், இருதிகனுக்கு கிருதவர்மா, சததனு; தேவார்ஹன் தேவகர்ப்பன் என்ற பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் தேவகர்ப்பனுக்கு சூரன் என்பவன் பிறந்தான். அவனுக்கு மாரிஷை என்ற மனைவி ஒருத்தி இருந்தாள். சூரன், அவன் மூலம் வசுதேவன் முதலிய பத்துப் பிள்ளைகளைப் பெற்றான். அந்த வசுதேவன் பிறக்கும் போது அவரிடம் கண்ணபெருமான் திருவவதாரம் செய்யப் போகிறார் என்பதை அறிந்து தேவர்கள் ஆனகம், துந்துபி முதலிய வாத்தியங்களை முழக்கினர். அதனால் வசுதேவருக்கு ஆனக துந்துபி என்ற பெயர் உண்டாயிற்று. அவருக்கு தேவபாகன், தேவ சிரவன், அஷ்டகன், ககுச்சக்கிரன், வச்சதாரகன், சிருஞ்சயன், சியாமன், சமிகன், கண்டூஷன் என்ற ஒன்பது சகோதரர்களும் பிருதை, சுருததேவை, சுருதகீர்த்தி, சுருதசிரவை, ராஜாதிதேவி என்ற ஐந்து சகோதரிகளும் இருந்தார்கள். அந்த சூரமாமன்னனுக்கு குந்தி என்ற நண்பன் ஒருவன் இருந்தான்.

அவன் அபுத்திரனாக இருந்ததால், பிருதை என்னும் தனது தலைமகளை அவனுக்குத் தத்தஞ் செய்து கொடுத்தான். அந்த பிருதையை பாண்டு மகாராஜன் திருமணஞ் செய்துகொண்டான். பிருதைக்கு தருமன், வாயு, இந்திரன் இவர்களால் யுதிஷ்டிரன், பீமசேனன், அர்ச்சுனன் என்ற மூன்று குமாரர்கள் உண்டாக்கப்பட்டனர். மேலும் பிருதை எனும் குந்திதேவி கன்னியாக இருந்த காலத்தில் சூரியபகவானால் கர்ணன் என்பவன் உண்டாக்கப்பட்டிருந்தான். அந்த குந்திக்கு மாத்திரி என்று ஒரு சக்களத்தி இருந்தாள். அவளுக்கு நாசத்தியன்; தசிரன் என்ற தேவர்களால் நகுலன், சகாதேவன் என்ற பிள்ளைகள் உண்டாக்கப்பட்டனர். இந்தக் குந்திதேவியின் சகோதரியான சுருததேவை என்பவளைக் காருக தேசத்து அரசனான விருத்ததர்ம மன்னன் மணந்தான். அவள் வயிற்றில் தந்தவக்கிரன் என்ற அசுரன் ஒருவன் பிறந்தான். மற்றொரு சகோதரியான சுருத கீர்த்தியை கேகய மன்னன் மணந்தான். அவன் வயிற்றில் சந்தர்த்தனன் முதலிய ஐவர் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். அடுத்த சகோதரி ராஜாதிதேவி, அவந்தி மன்னனுக்கு மனைவியாகி, விந்தன், அனுவிந்தன் என்பவர்களைப் பெற்றாள். மற்றொரு சகோதரியான சிருத சிரவசு என்பவள் சேதி தேசத்து மன்னனின் மனைவியாகிய சிசுபாலன் என்ற மகனைப் பெற்றாள். சிசுபாலன் முற்காலத்துப் பிறவியில் அசுரர்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்கி ஹிரண்யகசிபு என்பவனாகும். சகல லோக குருமூர்த்தியாகிய நரசிம்ம மூர்த்தியால் ஹிரண்யன் சங்காரம் செய்யப்பட்டு மீண்டும் அவன் அளவற்ற வீரிய, சவுகரிய பராக்கிரம சம்பத்துக்கள் வாய்ந்தவனாகவும், மூவுலகத்தாரையும் தன் வயப்படுத்தி அடக்கியாளும் திறமையடைந்தவனாகவும் உள்ள ராவணனாகப் பிறந்தான். அந்தப் பிறப்பில் ஸ்ரீராமாவதாரஞ் செய்த எம்பெருமானாலேயே சங்கரிக்கப்பட்டான். பிறகு இப்பிறவியில் அவன் சிசுபாலனாகப் பிறந்த போதும், பூபாரந் தீர்ப்பதற்காக கண்ணபெருமானாக அவதரித்த பகவானிடம் அவன் பகைமையை பாராட்டி வந்தான், அதனால் கண்ணபிரானாலேயே சங்கரிக்கப்பட்டு, எப்போதும் அவ்வெம்பெருமானையே நினைத்திருந்ததால் பரமாத்வாவிடத்திலே சாயுஜ்யம் பெற்றான். பக்தியோடு தன்னைத் தியானிப்பவர்களுக்குத் திருவுள்ளம் உவந்து மோட்சம் அளிப்பதைப் போலவே, பகைமை கொண்டாவது தன்னை இடைவிடாமல் நினைத்திருந்தவருக்கும் பகவான் திருவுள்ளம் உகக்காமலும் அந்த மோட்சத்தைத் தந்தருள்கிறான்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் நான்காவது அம்சம்—-முதல் பாகம் —

February 28, 2021

1. ககுத்துமியின் கதை
2. சசாத, ககுஸ்தா, மாந்தாதா வரலாறுகள்
3. புருகுச்ச, சகர மாமன்னர்களின் வரலாறுகள்
4. சகர புத்திரரின் வரலாறும், சக்கரவர்த்தித் திருமகனார் வைபவமும்
5. நிமி வம்ச வரலாறு

——————–

1. ககுத்துமியின் கதை

பராசர முனிவரை நோக்கி மைத்ரேயர், சுவாமி! சத்கருமம் செய்யப் புகுந்தவருக்குச் செய்யத்தக்க நித்திய நைமித்திக ரூபமான கர்மங்களின் சொரூபத்தையும் வருணாசிரம முறைகளையும் தாங்கள் எனக்குக் கூறினீர்கள். இனிமேல் அரசர்களின் வமிசங்களைத் தங்களிடமிருந்து நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். தாங்கள் கிருபை செய்து அவற்றை எனக்கு விளங்கச் சொல்ல வேண்டும் என்று வேண்டினார். அவரது ஆசாரியரான பராசர முனிவர் கூறலானார். மைத்ரேயரே! இந்த வைவஸ்வத மனுவின் வமிசமானது; மகா யாக கர்த்தாக்களையும் மகாவீரர்களையும் மகாசூரரையும் கொண்ட பேரரசர்கள் வாழ்ந்த பெரியதொரு வமிசமாகும். இந்த வமிசத்தின் வரலாற்றை சகல பாபங்களும் நசிக்கும் பொருட்டு நான் உமக்குச் சொல்லுகிறேன்! ஜகங்களுக்கெல்லாம் ஆதிகாரணமானவரும் ரிக், யஜுர், ஸாமாதி மயருமான ஸ்ரீமந்நாராயண பகவானுடைய மூர்த்தி ஸ்வரூபமாய், இரணியகர்ப்பர் என்ற பெயரையுடையவராய் இந்தப் பிரமாண்டத்தின் அதிபதியான பிருமாவானவர், பூர்வத்தில் உண்டானார் அல்லவா? அந்தப் பிருமாவின் வலதுகட்டை விரலிலிருந்து தக்ஷப் பிரஜாபதி தோன்றினார். தக்ஷருடைய புத்திரி அதிதி. அந்த அதிதியின் மகன் விவசுவான் என்ற சூரியனாகும். அவனது மகன் மனு, மனுவுக்கு இஷ்வாகு, நிருகன், திருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூசன், பிருக்ஷத்திரன் என்று ஒன்பது பிள்ளைகள் பிறந்தார்கள். இவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே, அந்த மனுபுத்திரனுக்காக மித்ரா வருணனைக் குறித்து ஒரு யாகம் செய்ய அதில் ஹோதாவின் அபசாரத்தால் இளை என்ற கன்னியொருத்தி பிறந்தாள். அவள் மித்திராவருணர்களுடைய அனுக்கிரகத்தால் மீண்டும் பெண்ணாகி, சந்திரனுடைய மகனான புதனுடைய ஆஸ்ரமத்தின் அருகே திரிந்து கொண்டிருந்தாள்.

புதன்-அவள் மீது காமங்கொண்டு அவளோடு கூடிமகிழ்ந்து புரூரவன் என்ற பிள்ளையைப் பெற்றான். அந்தப் புரூரவன் பிறந்த பிறகு, பெண்ணாக மாறி சுத்தியும்னன் மறுபடியும் ஆணாக மாற வேண்டும் என்று மகா தேஜோமயமான முனிவர்கள் விரும்பினார்கள். அதற்காக யாக மயனாகவும், ரிக், யஜுர், ஸாம, அதர்வண மயனாகவும், மனோ மயனாகவும் ஞான விஞ்ஞானமயனாகவும், அன்னமயனாகவும், அமிருத மயனாகவும் சர்வமயனாகவும், இவை ஒன்றுமாகாதவனாயும், ஆறு குணசம்பன்னனாயும் இருக்கும். யக்ஞ புருஷனைக் குறித்து அம்முனிவர்கள் யாகஞ்செய்து, அந்த யாகத்தில் தோன்றிய ஸ்ரீயப்பதியினுடைய அனுக்கிரகத்தினால் இளையானவள் மீண்டும் ஆண் பிள்ளையாகி சுத்தியும்னன் என்ற பெயரைப் பெற்றான். அவனுக்கு உத்கலன், கயன், விதானன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அந்த சுத்தியும்னனோ, முன்பு பெண்ணாக இருந்ததனாலே ஆட்சியுரிமை பெறவில்லை. ஆயினும் வசிஷ்ட மாமுனிவரின் சொற்படி, அவனது தந்தை பிரதிஷ்டானம் என்ற நகரத்தைப் புரூரவனுக்குக் கொடுத்தான். பிருக்ஷத்திரன் என்பவன் ஒருநாள் வசிஷ்டருடைய பசுக்கூட்டத்தைக் காவல் புரிந்து கொண்டிருக்கும்போது, இரவில் அந்தப் பசுக்கூட்டத்தில் புகுந்த ஒரு புலியைக் கொல்லப்போய் குறி தவறி ஒரு பசுவைக் கொன்றுவிட்டான். அதனால் குருவின் சாபம் பெற்றுச் சூத்திரனானான், கரூசனிடத்திலிருந்து கரூர தேசத்தைக் காத்து வந்த மகா பராக்கிரமசாலிகளான க்ஷத்திரியர்கள் பிறந்தார்கள். திருஷ்டன் என்பவனுக்கு நரபாகன் என்பவன் பிறந்தான். அவனுக்குப் பலந்தனன் பிறந்தான். அந்தப் பலந்தனன் மகனான வச்சப்பிரீதி என்பவன், மிகவும் புகழ் பெற்றிருந்தான். அவனது மகன் பிராம்சு அந்தப் பிராம்சுவுக்கு பிரசாபதி என்பவன் பிறந்தான். அவனுக்குக் கனி மித்திரன் அவனுக்கு சக்ஷúஷன், சக்ஷúஷனுக்கு மிகவும் பராக்கிரசாலியான விமிசன். அவனுக்கு விம்சகன், அவனுக்குக் கனிநேத்திரன் அவனுக்கு அதிவிபூதி, அவனுக்கு மாவீரனான கரந்தமன், அவனுக்கு அவிக்ஷித்து, அந்த அவிக்ஷித்துக்கு நற்குணமுடைய மருத்தன் என்ற ரீதியில் புதல்வர்கள் பிறந்தார்கள். மருத்தனைப் பற்றி இரண்டு பாடல்கள் இப்போதும் வழங்குகின்றன. இந்தவுலகத்தில் மருத்தனுடைய யாகத்தைப் போல் யாருடைய வேள்வி தான் இருந்தது? அந்த யாகத்திற்கு வேண்டிய கருவிகள் யாவும் செம்பொன்னாற் செய்யப்பட்டு விளங்கின. அந்த வேள்வியிலே, சோமபானத்தால் இந்திரனும் தக்ஷிணையால் அந்தணரும், உடல் தெரியாதிருக்கும்படி மகிழ்ந்தார்கள். மேலும் அதில் வாயுக்களே உணவுகளைப் பரிமாறிய வேலையாட்கள் ஆனார்கள். தேவர்கள் சபையோராயினர்.

அத்தகைய மருத்தன் மாமன்னனாக இருந்து நரிஷ்யந்தனன் என்னும் மகனைப் பெற்றான். அந்த நரிஷ்யந்தனன் மகன் தமன். தமனின் மகன் ராஜவர்த்தனன். அவனுக்கு சுவிருத்தி, சுவிருத்திக்குக் கேவலன்; கேவலனுக்கு சுதிருதி, அவனுக்கு நரன், நரனுக்குச் சந்திரன், அவனுக்குக் கேவலன், அவனுக்குப் பந்துமான், அவனுக்கு வேகவான், அந்த வேகவானின் மகன் புதன்; அவனுடைய மகன் திருணபிந்து! திருணபிந்துவுக்கு இளிபிளை என்ற பெண் பிறந்தாள். அந்தத் திருணபிந்து மன்னனை அலம்புசை என்ற அப்சர மங்கை விரும்பிப் புணர்ந்து விசாலன் என்ற மகனை ஈன்றெடுத்தாள். அவன்தான் வைசாலி என்ற நகரத்தை உண்டாக்கினான். அவனுக்கு ஹேமசந்திரன் என்ற மகன் பிறந்தனன். அவன் மகன் சந்திரன்; அவனுடைய மகன் தூமிராஷன்; அவனுக்குச் சருஞ்யன்; அவன் மகன் சகதேவன், அவனுக்கு கிருசாசுவன் என்பவன் பிறந்தான். அவனுக்கு சோமதத்தன் என்ற புதல்வன் பிறந்து, பத்து அஸ்வமேதயாகம் செய்தான். அவனது மகன் ஜனமேஜயன். ஜனமேஜயனின் மகன் சுமதி அவர்களனைவரும் வைசாலியை ஆண்டுவந்த அரசர்களாவார்கள், இவர்களைப் பற்றி ஒரு சுலோகம் வழங்கி வருகிறது. வைசாலி நகரை ஆண்ட அரசர்கள் யாவரும் மூலபுருஷனான திருணபிந்து மாமன்னனுடைய அனுக்கிரகத்தால் தீர்க்காயுளையுடையவர்களாயும், மகாத்மாக்களாகவும், வீரர்களாயும், தர்மசீலராயும் இருந்தார்கள் என்பதுதான் அந்தச் சுலோகமாகும். இனி சர்யாதி என்பவனுக்குச் சுகன்னியை என்ற மகள் ஒருத்தி பிறந்தாள். அவளைச் சியவனர் என்ற மிகவும் புகழ்பெற்ற முனிவர் ஒருவர் திருமணம் புரிந்து கொண்டார். அந்தச் சர்யாதிக்கு ஆனர்த்தனன் என்ற ஒரு மகன் உண்டு. மேலைக் கடற்கரையில் அவன் ஆண்ட தேசத்துக்கு ஆனர்த்தம் என்ற பெயர் வழங்கலாயிற்று. அவனுக்கு ரேவதன் என்ற மகன் பிறந்து அவன் குசஸ்தலி என்ற நகரத்திலிருந்து கொண்டு ஆனர்த்த நாட்டை ஆண்டுவந்தான். அந்த ரேவதனுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மூத்தவன் தான் ககுத்துமி என்பவனாகும், அவனுக்கு ரைவதன் என்ற பெயரும் வழங்கி வரலாயிற்று. அவனுக்கு ரேவதி என்ற மகள் ஒருந்தி பிறந்தாள். அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இவளை யாருக்குக் கொடுக்கலாம் என்று கேட்கும் பொருட்டு பிரம்மலோகத்துக்குக் ககுத்துமி சென்றான். ஹாஹா ஹுஹு என்ற கந்தர்வர்கள் இருவர் அதிதானம் என்று வழங்கப்பட்ட இனிய சங்கீதத்தைப் பாடிக்கொண்டிருந்தார்கள். அது சித்திரை, தக்ஷிணை வார்த்திகை என்ற மூன்று வழிகளின் பரிவிர்த்தங்களினால் சுற்றிக்கொண்டு வருவதை அநேக யுககாலம் வரையில் அவ்வரசன் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தான். அவ்வளவு அதிக காலம் சென்றதைக் கூட ஒரு முகூர்த்த காலமாகவே நினைத்தான். அந்தச் சங்கீதம் முடிந்த பிறகு, சதுர்முகனை வணங்கிய ரைவத மன்னன் இந்தக் கன்னிகைக்கு தகுதியான கணவன் யார்? என்று பிரும்மாவைக் கேட்டான். அதற்கு அவர் மன்னனே! நீ நினைத்துக் கொண்டிருக்கும் வரன்களைச் சொல்வாயாக என்றார். அவரைக் ககுத்துமி மன்னன் வணங்கித் தான் நினைத்திருந்த சிலரது பெயர்களைச் சொல்லி, தேவா! இவர்களில் யாருக்கு நான் என் புதல்வியைக் கொடுக்கலாம்? அவனைத் தேர்ந்து சொல்லுங்கள் என்று கேட்டான்.

அரசனே! நீ யாரை எண்ணிக் கொண்டிருந்தாயோ அவர்களுடைய பிள்ளைகளும் அந்தப் பிள்ளைகளுடைய சந்ததியினரும் இப்போது பூவுலகில் இல்லை. நீ இங்கு நடந்த சங்கீத நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த நேரத்திற்குள் எத்தனையோ யுகங்கள் கழிந்து விட்டன. இப்போது பூவுலகத்தில் வைவஸ்வத மனுவந்தரத்திலே இருபத்தெட்டாவது சதுர்யுகம் முடியப் போகிறது. கலியுகம் நெருங்குகிறது. இப்போது பூர்வகாலத்தைச் சேர்ந்த நீ ஒருவனே இருப்பதால், இக்காலத்தவரான யாருக்காவது இந்தப் பெண்ணை, நீ ஒருவனாகவேக் கொடுக்க வேண்டும். இப்போது உன்னுடைய புத்திரர், மித்திரர், மனைவியர், மந்திரிகள், உறவினர், ஏவலாட்கள், சேனைகள் முதலியன யாவுமே ஒழிந்து போய்விட்டன! என்றார் பிருமா. அதைக்கேட்ட ரைவத மன்னன் மிகவும் நடுங்கி, சுவாமி! இப்படியானால் என் மகளின் கதிதான் என்ன? இனி இந்தக் கன்னியை யாருக்குத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று கேட்டான். ரைவத மன்னனே; அஜனாயும் சர்வமயனாயும் இருக்கிற எவனுக்கு ஆதி மத்தியம், அந்தம் என்ற இந்த மூன்றையும் யானும் மற்றவரும் அறியோமோ பரமேசுவரனான எவனுடைய ஸ்வரூபத்தையும் மேலான பிரபாவத்தையும், பலத்தையும் அறியோமோ, கலா முகூர்த்தாதி மயமான காலமானது பரமபதம் என்று சொல்லப்பட்ட எவனுடைய திரிபாத விபூதியை மாற்றமாட்டாதோ, உற்பத்தி நாசங்கள் இல்லாதவனாயும் சர்வ சரீரகனாயும், கர்வமயமான பெயர்களும் ரூபங்களும் இல்லாதவனாயும் என்றும் ஒருபடியே இருப்பவனாயுமுள்ள எவனுடைய அருளால் நான் படைப்பவனாகினேனோ எவனுடைய குரோத அம்சத்தால் ருத்திரமூர்த்தி சங்காரகர்த்தன் ஆனானோ, எந்தப் பரமபுருஷன் எங்கள் இருவருக்குமிடையில் காத்தலுக்கு உரிய கர்த்தாவாக அவதரித்து எழுந்தருளியிருக்கிறானோ எவன் தனது அம்சத்தினால் என்னுள் ஆவிப்பவித்து படைக்கிறானோ தானே புருஷ ஸ்வரூபியாக இருந்து காக்கிறானோ ருத்திரனிடத்தில் அம்ச ஆவிர்ப்பாவத்தால் சர்வ சங்காரஞ் செய்கிறானோ; எவன் இந்திரன் முதலியோரின் வடிவிலே உலகத்தைக் காக்கிறானோ எவன் சூரிய சந்திர ரூபியாகி இருளைப் போக்குகிறானோ, பூமி ரூபியாகி எல்லாவற்றையும் எவன் சுமக்கிறானோ, வாயுரூபியாக யாவற்றையும் எவன் அசைக்கிறானோ, அக்னிரூபியாகி பாகத்திற்கு எவன் உபயோகமாகிறானோ ஆகாயரூபியாக இருந்து சகலத்துக்கும் எவன் இடங்கொடுக்கிறானோ, தண்ணீரும் சோறுமாகி உலகத்தின் திருப்திக்கு எவன் காரணமாகிறானோ, எவன் யாவற்றையும் தன்னையும் தனக்குத்தானே பரிபாலனம் செய்கிறானோ, எவன் இதரங்களையும் தன்னையும் தானே அழித்துக் கொள்கிறானோ இந்தச் சிருஷ்டி ஸ்திதி, சங்கார கர்த்தாக்களாகிய மூவருக்கும் சிருஷ்டிக்கப்படுவனவும், காக்கப்படுவனவும், சங்கரிக்கப்படுவனவுமாக மூன்றுக்கும் வேறாய் விகாராதிகள் இல்லாமல் எவன் விளங்குகிறானோ, எவனிடம் உலகம் யாவுமே இருக்கின்றனவோ எவன் சகலலோக சொரூபியாக இருக்கிறானோ எவன் எல்லாவற்றுக்கும் முதலாவதாக இருக்கிறானோ எவன் இவ்வுலகத்தில் எங்கும் இருக்கிறானோ அந்தச் சர்வேஸ்வரனான விஷ்ணுபகவான் இப்போது பூவுலகத்தில் தன் அமிசத்தால் ஒரு திருவவதாரஞ் செய்திருக்கிறான்.

முன்பு உம்முடைய தலைநகரான குசஸ்தலியானது இப்போது யாதவ மன்னர்களால் ஆளப்பட்டு வருகிறது. துவாரகை என்ற பெயரையுடைய அந்த நகரம் தேவேந்திரனின் தலைநகரைப் போல் இருக்கிறது. அதில் எம்பெருமானார் ஆதிசேஷனது அம்சத்தினால் அவதரித்து பலராமன் என்ற திருப்பெயரோடு எழுந்தருளியிருக்கிறார். அரசனே! அவனுக்கு உன் மகளைப் பத்னியாகச் சமர்ப்பிப்பாயாக. உன் மகள், பெண்களில் இரத்தினத்தைப் போன்றவள் ஆகையால் இருவருக்கும் பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று பிருமதேவர் கூறினார். பிறகு ககுத்துமி மன்னன் பூவுலகம் வந்தான். அங்கேயிருந்தவர்கள் மிகக்குட்டையான வடிவமும், அற்ப தேஜஸும், அற்பமான ஞானசக்திகளும் கொண்டவர்களாக இருப்பதைக் கண்டு வியந்த வண்ணம் துவாரகைக்குச் சென்றான். அங்கு பலராமனுக்கு தன் செல்வியை மணஞ்செய்து கொடுத்தான். தாலத்துவசரான அந்தப் பலராமன் தன்னைவிடத் தான் மணந்தவள் அதிக உயரமாக இருந்ததால் தமது ஆயுதமான கலப்பையால் வணக்கியருளினான். அந்தப் பொற்கொடியும் அவரது உணர்ச்சிக்கு ஏற்றப் பிரமாணம் உடையவளாய், வேறு கன்னிகையைப் போலாகி விட்டாள். பிறகு ககுத்துமி மன்னன் தவஞ்செய்ய, இமயமலைச் சாரலுக்குச் சென்று விட்டான்.

—————-

2. சசாத, ககுஸ்தா, மாந்தாதா வரலாறுகள்

ககுத்துமி மன்னன், பிருமலோகத்திலிருந்து பூவுலகத்திற்கு வராமல் இருந்தபோது, புண்ணியஜனர் என்ற அரக்கர்கள் குசஸ்தலிப் பட்டணத்தை அழித்தார்கள். அதிலிருந்த அவனது தம்பியரெல்லாம் அவ்வரக்கர்களுக்குப் பயந்து நான்கு திசைகளிலும் ஓடியதால் அந்தக்குலத்து அரசர்கள் எங்கும் இருந்தார்கள். விருஷ்டன் என்பவன் மூலமாக, வார்ஷ்டகம் என்ற ராஜகுலம் உண்டாயிற்று. நரபாகன் என்பவனின் மகனும் நரபாகன் என்ற பெயரையே பெற்றிருந்தான். அவனுக்கு அம்பரீஷனும், அம்பரீஷனுக்கு விரூபனும், விரூபனுக்கு பிரஷதசுவன் என்பவனும் பிறந்தார்கள். பிரஷதசுவனுக்கு ரதீதரன் தோன்றினான். இவனைப் பற்றிய சுலோகம் ஒன்று வழங்குகிறது. அதாவது ரதீதர கோத்திரத்தில் பிறந்தவர்கள் க்ஷத்திரியர்களாக இருந்தாலும் அங்கிரசு என்ற பிராமண முனிவரின் சம்பந்தத்தினாலும் தவவலிமையினாலும் பிராமண ரூபமாகி, க்ஷத்திரிய சம்பந்தமுள்ள பிராமணராக விளங்கி வந்தார்கள். வைவச்சுத மனுவானவர் தும்மும் போது, அவரது மூக்கிலிருந்து இஷ்வாகு என்ற புதல்வன் பிறந்தான். அவனுக்கு நூறு பிள்ளைகள் உண்டு. அவர்களில் விகுக்ஷி நிமி தண்டன் என்போர் முக்கியமானவர்கள். சகுனி முதலிய ஐம்பது பிள்ளைகள் உத்தராபதம் என்ற வடநாட்டின் வேந்தரானார்கள். நாற்பத்தெட்டுப் பேர் தக்ஷிணபதம் என்ற தென்னாட்டை ஆண்டு வந்தார்கள். அந்த இஷ்வாகு மாமன்னன் அஷ்டகையில் புதியதான மாமிசத்தைக் கொண்டுவரும்படித் தனது மகனான விகுக்ஷி என்பவனுக்குக் கட்டளையிட்டான். விகுக்ஷியும் தன் தந்தையின் ஆணையை ஏற்று, காட்டுக்குச் சென்று பல மிருகங்களைக் கொன்று மிகவும் களைப்படைந்து தாங்கமுடியாத பசியினால் அவற்றில் ஒரு முயலைக் கொன்று தின்று விட்டு மீதமான மிருகங்களின் இறைச்சியைக் கொண்டு வந்து தன் தகப்பனிடம் ஒப்படைத்தான். அரசன் அவற்றைப் புரோக்ஷிக்கும் பொருட்டு தனது குலகுருவான வசிஷ்டரை வேண்டினான், அவர் அவற்றைப் பார்த்து, அரசனே! இந்த அசுத்தமான மாமிசம் எதற்கு? துராத்மாவான உனது மகன் இவற்றில் ஒரு முயலின் இறைச்சியை உண்டதால் மற்றுள்ள யாவுமே அசுத்தமாகி விட்டன என்று சொன்னார். அதனால் அந்த விகுக்ஷிக்கு சசாதன் (சசாதன்-முயலைத் தின்றவன்) என்ற பெயர் உண்டாயிற்று. அதற்குப் பிறகு இஷ்வாகு இறந்த பிறகு அவனது மகனான சசாதன் அரசனாகி, நீதி தவறாமல் ஆண்டு வந்தான்.

அவனுக்குப் புரஞ்சயன் என்ற மகன் ஒருவன் பிறந்தான். அவனுக்குப் பின்வரும் காரணத்தால் ககுஸ்தன் என்ற பெயர் உண்டாயிற்று. அதாவது திரேதா யுகத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பெரும்போர் ஒன்று நடந்தது. அதில் தேவர்கள் தோல்வியடைந்து ஸ்ரீவிஷ்ணுவை ஆராதித்தார்கள். பகவான் நாராயணன் அவர்கள் முன்பு தோன்றி, தேவர்களே உங்கள் கருத்தை நான் அறிந்தேன். நீங்கள் அஞ்சவேண்டாம், நான் பூமியில் சசாதனுடைய மகனாகப் புரஞ்சயன் என்ற க்ஷத்திரியனின் சரீரத்திலே எனது அம்சத்தால் பிரவேசித்து அந்த அரக்கர்ரகளைச் சங்காரம் செய்வேன். ஆகையால் நீங்கள் அந்தப் புரஞ்சயனை, உங்களுக்குச் சகாயமாய்ப் போருக்கு வரும்படி வேண்டுங்கள் என்று அருளிச் செய்தார். தேவர்கள் ஸ்ரீயப்பதியின் திருவடிகளை வணங்கி விடைபெற்றுப் புரஞ்சயனிடம் சென்றனர். தேவர்கள், புரஞ்சயனைக் கண்டு அரசனே! எங்களது பகைவர்களை வெல்வதற்கு, நீயே எங்களுக்குத் துணைபுரியவேண்டும். இதை மறுக்காமல் ஏற்று நிறைவேற்ற வேண்டும்! என்றார்கள். தேவர்களே! நான் உங்களுக்குத் துணைசெய்ய வேண்டுமானால், நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்ததினால் மூவுலகங்களையும் ஆளும்படியான தேவேந்திரனே எனக்கு வாகனமாக வரவேண்டும்! அவனது தோளின்மீது ஏறிக்கொண்டு தான், நான் அந்த அசுரர்களோடு போர் செய்யமுடியும்! என்றான் புரஞ்சயன் அதைத் தேவர்கள் ஏற்றனர். இந்திரன் காளையுருவம் பெற்றான். புரஞ்சயன் அந்த ரிஷபத்தின் முசுப்பின் மீது ஏறிக்கொண்டு ஸ்ரீஅச்சுதனின் தேஜஸினால் பூரித்தவனாகி அசுரர்கள் அனைவரையுமே அழித்து, தேவர்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தான். விருஷபத்தின் (ககுத்) முகப்பின் (ஸ்த) மீது ஏறியதால் அவனுக்கு ககுஸ்தன் என்ற பெயர் வழங்கலாயிற்று. அந்த ககுஸ்த மன்னனுக்கு அனேனசு பிறந்தான். அவனுக்குப் பிருது என்பவன் பிறந்தான். பிருதுவுக்கு விஷ்டராசுவன் என்பவன் பிறந்தான். அவனுக்கு யுவனாசுவன் என்பவன் பிறந்தான். அவன் சந்திர அம்சையில் பிறந்ததால் அவனுக்குச் சந்திரன் என்றும் ஒரு பெயருண்டு. அவனுக்கு சாபஸ்தி என்ற குமாரன் பிறந்தான். அவன் சாபஸ்தி என்ற நகரத்தைத் தோற்றுவித்தான். அவனுக்குப் பிருகதசுவன் பிறந்தான். அவனுக்கு குவலயாசுவன் பிறந்தான். அவன் உதங்கமா முனிவருக்குப் பகைவனாக இருந்த துந்து என்ற அசுரனைத் தனது இருபத்தோராயிரம் பிள்ளைகளோடு கூடிச் சென்று கொன்றதால் துந்துமாரன் என்ற பெயரைப் பெற்றான். அவனது பிள்ளைகளில் திருடாசுவன், சந்திராசுவன், கபிலாசுவன் என்ற மூவரைத் தவிர மற்றைய யாவரும் அந்த அசுரனின் தீமூச்சுக் காற்றால் வெந்து மடிந்தார்கள். அவர்களில் திருடாசுவனுக்கு அரியசுவன் பிறந்தான். அவனுக்கு நிகும்பனும், நிகும்பனுக்கு அமிதாசுவனும், அவனுக்கு கிருசாசுவனும், அவனுக்குப் பிரசேனசித்தும், அவனுக்கு யுவனாசுவனும் பிறந்தார்கள்.

யுவனாசுவன் நெடுநாள் புத்திரப் பேறில்லாமையினால் வெறுப்படைந்து, முனிவர்கள் வாழும் ஆசிரமங்களருகே திரிந்து கொண்டிருந்தான். முனிவர்கள் அவன் மீது கருணை கொண்டு, அவனுக்குப் புத்திரன் உண்டாவதற்காக, ஒரு யாகத்தை நடத்தினார்கள். அந்த யாகமானது நள்ளிரவில் முடிந்தது. உடனே தவசிகள் அனைவரும் மந்திர ஜபத்தால் தூய்மையாக்கப்பட்டிருந்த ஒரு தண்ணீர்க் கலசத்தை யாக வேதிகையின் நடுவே வைத்து விட்டு, உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த அரசனுக்குத் தாகம் அதிகமாக இருந்தது. அவன், முனிவர்களை எழுப்புவதற்குப் பயந்து அளவற்ற மந்திரங்களால் ஜபிக்கப்பட்டிருந்த அந்தக் கலசத்து நீரைக் குடித்து விட்டான். பொழுது விடிந்தவுடன் முனிவர்கள் எழுந்து, இந்தக் கலசத்து நீரை யார் குடித்தது? இதை யுவனாசுவரனுடைய மனைவியானவள் குடித்திருந்தால் அவள் மகாப் பலப் பராக்கிரமமுள்ள புத்திரனைப் பெற்றிருப்பாளே? அத்தகைய மந்திர நீரை யார் நாசஞ்செய்தது? என்று கேட்டார்கள். அரசன் நடந்தவற்றை அவர்களிடம் கூறி மன்னிப்பு வேண்டினான். இப்படியிருக்க, அந்த அரசனுடைய வயிற்றிலே, நாளாக நாளாக கர்ப்பம் வளர்ந்து வந்தது. மாதங்கள் நிறைந்தவுடன் அந்தக் கர்ப்பம் அவனுடைய வயிற்றைத் தன் கட்டை விரலினாலே கிழித்துக் கொண்டு வெளியே வந்தது. அரசன் மரணமடைந்தான். இவ்விதமாக குழந்தைப் பிறந்தவுடன் முனிவர்கள் ஒன்றுகூடி, பிறந்த இந்தக் குழந்தை, யாருடைய முலைப்பாலைப் பருகும்? என்று கேட்டார்கள். அப்போது அங்கே வந்த தேவேந்திரன் என்னைத் தாயாக வைத்து முலையுண்ணும் என்று சொல்லித் தனது பவித்திர விரலை, அந்தக் குழந்தையின் வாயில் கொடுக்க, அந்தப் பிள்ளை அந்த விரலிலிருந்து ஒழுகிய அமிர்தத்தைக் குடித்து ஒரே நாளில் வளர்ந்தது. இந்திரனுக்கு மாந்தாதா என்ற பெயரும் உண்டு. ஆகையால் அந்த அரசகுமாரனுக்கு மாந்தாதா என்ற பெயர் உண்டாயிற்று. அவன் மாமன்னனாகி பூமண்டலத்தை ஆண்டு வந்தான். இவனைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு. அதாவது எவ்வளவிலே சூரியன் உதயமாகிறானோ, எவ்வளவிலே அஸ்தமனமாகிறானோ, அந்த எல்லைகளுக்கு உட்பட்ட பூமண்டலம் முழுமையும் மாந்தாதாவின் ராஜ்யமாக இருந்தது! என்பது தான் அந்தப் பாடலாகும்.

அந்த மாந்தாதா, சசபிந்து என்பவனின் மகளாகிய இந்துமதி என்பவளை மணந்து, புருகுச்சன், அம்பரீஷன், நாபாகன் என்ற பிள்ளைகளையும் ஐம்பது பெண்களையும் பெற்றான். அந்தக் காலத்தில் ரிக் வேதமறிந்த சவுபரி என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கிப் பன்னிரண்டு ஆண்டுக்காலம் தவஞ்செய்து கொண்டிருந்தார். அந்தத் தண்ணீரில் சம்மதன் என்ற மிகப்பெரிய மீன் ஒன்று, பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், உறவினர்களாகிய தன் கிளைகள் அநேகம் முன்னும் பின்னும் பக்கங்களிலும் வாலிலும் தலையிலும் ஏறி விளையாடச் சஞ்சரித்துக் கொண்டிருந்தது, அவற்றைப் பிரியாமல் சம்மத மீன் எப்போதும் மகிழ்ச்சியுடன் அந்த முனிவருக்கு எதிரே சஞ்சரித்துக் கொண்டிருந்தது, அவற்றைப் பிரியாமல் சம்மத மீன் எப்போதும் மகிழ்ச்சியுடன் அந்த முனிவருக்கு எதிரே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அதனால் சவுபரி முனிவரது மனஒருமைப்பாடு நீங்கியது. அவர் அந்த மச்சம் தன் கிளைகளோடு கூடி அனுபவிக்கும் மகிழ்ச்சியைக் கண்டு, ஓ! இந்த மீனோ விரும்பத்தகாத ஈனப் பிறப்பிற் பிறந்தது. ஆயினும் அது மிகவும் பாக்கியமுள்ளது. ஏனென்றால் புத்திர பவுத்ராதிகள் விளையாடிக் கொண்டிருக்க, அவற்றோடு இணைபிரியாமல் சஞ்சரித்து மகிழ்கின்றது. இதைப் பார்க்க நமக்கே எவ்வளவு ஆசையுண்டாகிறது? ஆகையால் நாமும் இப்படியாவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று ஆலோசித்து அந்தத் தடாகத்திலிருந்து வெளியே வந்து, சந்தானத்துக்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு மாந்தாதா மன்னனிடம் வந்தார். இவர் வந்த செய்தியை அறிந்த மன்னன் அவரை எதிர்கொண்டழைத்து உபசரித்தான். அவனை சவுபரி முனிவர் நோக்கி, அரசனே! நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ எனக்குக் கன்னிகாதானம் கொடுக்க வேண்டும். என்னுடைய வேண்டுதலை மறுக்காதே! ககுஸ்த வமிசத்தாரிடம் வந்த யாசகர் தாம் விரும்பியதைப் பெறாமலிருந்ததில்லை அல்லவா? இவ்வுலகில் எத்தனையோ அரசர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குங் கன்னிகைகள் இருக்கிறார்கள். ஆயினும், யாசகரின் இஷ்டத்தை நிறைவேற்றும் விரதமுடையது உனது குலம். உனக்கு ஐம்பது பெண்கள் இருக்கிறார்களல்லவா? அவர்களில் ஒருத்தியை எனக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டும். என் பிரார்த்தனை நிறைவேறாமற் போயின் நான் வருந்துவேன். நான் வருந்தாமல் இருக்க, என் துன்பத்தை நீதான் நீக்கவேண்டும் என்றார். இவ்விதமாகச் சவுபரி முனிவர் சொன்னவுடன், மாந்தாதா மன்னன் அவரை உற்றுப் பார்த்தான். மூப்பினால் தளர்ந்து, தலை நரைத்திருந்தார் சவுபரி முனிவர்! ஆனாலும் அவருடைய வலிமையைப் பற்றிய பயத்தினால் அவரது விண்ணப்பத்தை மறுக்கமாட்டாமல் மாந்தாதா மன்னன் தலைகுனிந்து நெடுநேரம் யோசித்தான். அப்போது சவுபரி முனிவர், அரசனே! எதைப் பற்றிச் சிந்தனை செய்கிறாய்? நான் ஒன்றும் தகாததைச் சொல்லவில்லையே? அவசியம் யாருக்காவது கொடுத்தே தீரவேண்டிய கன்னியை எனக்குக் கொடுக்கும்படித்தானே நான் கேட்டேன்? இதனால் நீ புண்ணியம் பெறுவாய்! என்றார்.

அவரை அரசன் நோக்கி தவமுனிவரே! எனது குலமுறைப்படி, கன்னிகை யார் மீது இஷ்டப்படுகிறாளோ, அந்த வரனுக்கே அவளைக் கொடுப்பது வழக்கம். இது இப்படியிருக்கத் தேவரீரது வேண்டுதலோ எமது எண்ணங்களுக்கு மேற்பட்டது. அதனால் தான் செய்வதறியாமல் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதைக்கேட்ட முனிவர் இந்த அரசன் நமது வேண்டுகோளை மறுக்க இதை ஓர் உபாயமாகச் சொல்லிவிட்டான் என்றே யோசித்தார். ஏனென்றால் இந்த முனிவன் முழுக்கிழவன். ஆகையால் எத்தகைய பெண்ணும் இவரை விரும்பமாட்டாள். அப்படியிருக்க நல்ல பருவமுடைய நம் கன்னியர் இவரை விரும்புவார்களோ? ஆகையால் தானே ஆசையற்றுப் போகட்டுமே என்று அரசன் நினைத்தே அப்படிக் கூறிவிட்டான். இனி அதற்கேற்ப நடக்கவேண்டும் என்று சவுபரிக் கிழவர் தமது மனதில் எண்ணிக்கொண்டு அரசனைப் பார்த்து, அரசனே! உங்கள் குலவிரதத்தை நான் அழிக்கவிரும்பவில்லை; என்னை உமது கன்னிகைகள் இருக்கும் அந்தப்புரத்திற்குப் போகும்படி, அந்தப்புரக் காவலாளிக்குக் கட்டளையிடுவாயாக. கன்னிகையே என்னைக் கதாலிப்பவளாயின் நான் கல்யாணஞ் செய்து கொள்கிறேன். இல்லாவிட்டால் முதிர்ந்த வயதில் இந்த முயற்சி எனக்கு ஏனென்று விட்டு விடுகிறேன்! என்றார். பிறகு அவர் கூறியபடியே செய்யும் வண்ணம் அந்தப்புரக் காவலாளிக்கு அரசன் கட்டளையிட்டான். அக்காவலாளியோடு சவுபரி முனிவர் கன்னிப் பெண்களின் அந்தப்புரத்தினுள்ளே போகும்போது சித்த கந்தர்வர்களைவிட மேம்பட்ட அழகான ரூபத்தை எடுத்துக் கொண்டார். சேவகன், முனிவரை அந்தப்புரத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு அங்கிருந்த கன்னியரைப் பார்த்து உங்கள் தந்தையான அரசரிடம் இந்த முனிவர் கன்னிகை வேண்டி வந்தார். கன்னிகைகளில் யார் பிரியப்பட்டு இவரை வரித்துக் கொள்கிறார்களோ, அவர்களையே அவர்களிஷ்டப்படி இந்த முனிவருக்குக் கொடுப்பேன் என்று மகாராஜா கட்டளையிட்டிருக்கிறார் என்றான். அதைக் கேட்டதும் அரசகுமாரிகள் அந்த முனிவரை வந்துப் பார்த்தார்கள். முனிவரின் புதுவடிவத்தையும் இளமை துள்ளும் மோகன ரூப அழகுகளையும் கண்டு அக்கன்னிகைகள் அனைவரும் காமாவேசமுடையவர்களாகி நல்ல மதத்த ஆண் யானையை பெண் யானைகள் சூழ்வதைப் போலச் சூழ்ந்து கொண்டு, நான் நான் என்று பரபரப்புடன் போட்டியிட்டு அவரை வரித்தார்கள். இதனால் அப்பெண்களிடையே கலகம் ஏற்பட்டது; அவர்கள் அனைவருமே அவரை விரும்பினார்கள். எனவே அங்கு நடந்தவற்றைக் காவலாளி அரசரிடம் தெரிவித்தான். அதைக் கேட்டதும் மாந்தாதா மன்னன் மிகவும் வியப்படைந்து, என்ன இது? இனி என்ன செய்வேன்? என்ன சொல்லி விட்டேன்? என்று மனம் கலங்கி, தனக்கு விருப்பம் இல்லாதிருந்தும், வாக்குக் கொடுத்து விட்டதற்காகப் பயந்து, தன் கன்னிப்பெண்களையெல்லாம் சவுபரி முனிவருக்கே திருமணஞ் செய்து கொடுத்தான்.

பிறகு, சவுபரி முனிவர் அரசகுமாரிகளை அழைத்துக் கொண்டு ஆசிரமத்தை அடைந்தார். அதன்பிறகு சிற்பியான விசுவகர்மாவை அழைத்து தமது மனைவியருக்குத் தனித்தனியாக மாளிகைகளையும் அன்னங்கள் நீந்தும் தடாகங்களையும் மலர் வனங்களையும் அமைத்துக் கொடுக்கச் செய்தார். அவ்வாறே விசுவகர்மாவும் அமைத்துக் கொடுத்தான். பின்பு, சவுபரி மாமுனிவரது ஆக்ஞையினால் அந்த மாளிகைகளில் நந்தனம் என்ற மகாநதியானது நித்தியமாக இருந்து வந்தது. அந்த மாளிகைகளில் ராஜகுமாரிகள் வசித்து போகங்களிலும் போஜன வகையிலும் திருப்தியடைந்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் அவர்களுடைய தந்தையான மாந்தாதா மன்னன் ஒரு சமயம் தன் பெண்கள் மீதுள்ள அன்பினால், அவர்களைப் பார்ப்பதற்காக முனிவரது ஆசிரமத்தை அடைந்தான். ஆசிரமம் இருந்த இடத்தில் ஸ்படிக மயமாய் விளங்கிய மாடமாளிகைகளைக் கண்டு அதிசயித்து ஒரு மாளிகையினுள்ளே நுழைந்தான். அங்கிருந்த தனது மகளைக் கண்டு, கண்களில் கண்ணீர் ததும்ப மகளே! நீ சுகமாக இருக்கிறாயா? அல்லது அசுகமாக இருக்கிறாயா? முனிவர் உன்னிடத்தில் அன்பாக இருக்கிறாரா? நீ நம்முடைய அந்தம்புரவாசத்தை நினைக்கிறாயா? என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண் தந்தையே! நான் சுகமாகவே இருக்கிறேன். எனக்கென்று ரமணீயமான உப்பரிகையும், அழகான தோட்டமும், நீர்ப்பறவைகளோடு தாமரை முதலியவை விளங்கும் தாடகங்களும், மனதிற்கினிமையான போஜனங்களும், திவ்வியமான ஆடையாபரணங்களும் மிகவும் பரிமளமுள்ள மலர்களும் மிகவும் மென்மையான சயனா சனங்களும் இன்னும் இல்லறத்துக்குரிய யாவுமே நன்றாக இருக்கின்றன ஒரு குறையும் எங்களுக்கில்லை. இருப்பினும் பிறந்த இடம் எப்படி மறக்கும்? ஆனால் துக்கத்துக்குக் காரணம் ஒன்றும் இருக்கிறது. அது என்னவென்றால், என் கணவராகிய அந்த முனிவர் எப்போதும் என்னிடமே காதல்கொண்டு, என்னை விட்டுப்பிரியாமல் இருக்கிறார். எனது சகோதரிகளே நினைப்பதில்லை இது தான் என்மனதை வருத்துகின்றது என்றாள்.

பிறகு மாந்தாதா மன்னன் மற்றொரு மகளின் மாளிகைக்குச் சென்று, அவளிடமும் முன்போலவே, அவளது சுகத்தைப் பற்றி விசாரித்தான். அதற்கு அவளும் தனக்கு கிருஹ பூஷண, சயன, போஜனாதி சவுக்கியங்களில் ஒன்றும் குறைவில்லை என்றும், ஆயினும் தன் கணவன் தன்னை விட்டுப் பிரியாமல் எந்நேரமும் தன்னுடனேயே மகிழ்ந்திருப்பதினால் தனது சகோதரிகளுக்கு நேர்ந்துள்ள துக்கமே தனக்குத் துக்க காரணமாக இருக்கிறதென்றும் சொன்னான். பிறகு மன்னன் இதுபோலவே ஒவ்வொரு புதல்வியின் மாளிகைக்கும் சென்று விசாரித்தான். எல்லோரும் ஒன்றுபோலவே பதில் சொல்லி, அவனை நன்கு உபசரித்தார்கள். இதனால் மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ஏகாந்தத்தில் உட்கார்ந்திருந்த சவுபரி முனிவரைக் காணச் சென்று, அவரால் மரியாதை செய்யப்பெற்று, வெகு விநயத்துடன் அவரை நோக்கி, ஓ மகானுபவரே! தங்களின் உயர்வான சித்தியின் பிரபாவத்தைக் கண்டேன். நான் இதுபோன்ற சம்பத்து விலாசம் இருப்பதைக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. இது எவ்வளவோ அவ்வளவும் உமது தவத்தின் பயன் ஆகும்! என்று சொல்லி, அவரை மிகவும் புகழ்ந்தான். பிறகு அவருடன் சிலகாலமிருந்து, இஷ்டமான போகங்களை அனுபவித்து, அதன் பிறகு தனது தலைநகரை அடைந்தான். சிலகாலத்துக்குப் பிறகு, சவுபரி முனிவரின் பத்தினிகளான குமாரிகளுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகள் மீது சவுபரி முனிவருக்கு நாளுக்கு நாள் ஆசையும், அன்பும் அதிகமாயிற்று. அதனால் அவர் மமதையடைந்து, இந்தக் குழந்தைகள் மழலைச் சொற்களைச் சொல்லிக்கொண்டு சிற்றடிகளால் நடக்குமோ? இவர்கள் யவனமுடையவர்களாவார்களோ? இவர்கள் திருமணம் புரியத்தக்க பெண்களோடு கூடியிருக்கக் காண்பேனோ? இவர்களுக்குக் குழந்தைகள் உண்டாகுமோ? அக்குழந்தைகள் வளர்ந்து மனைவியரோடு சேர்ந்து சந்தானமுடையவர்களாக இருப்பதை நான் கண்டு களிப்பேனோ என்று இந்தவிதமாகக் காலம் செல்லச் செல்ல அவரது மனோரதங்கள் வளர்ந்து கொண்டே இருந்ததால், அவர் வேறு சிந்தனையில்லாமல் இருந்து வந்தார். இப்படியிருக்கும் போது சவுபரி முனிவர் தமக்குத் தாமே யோசிக்கலானார். ஓஹோ! எனக்கு நேர்ந்த மோகத்தை என்னவென்று சொல்வேன்? பதினாலாயிரம் ஆண்டுகள் சென்றாலும் இந்த மனோரதங்கள் ஒழியாது போலத் தோன்றுகிறதே! ஏனென்றால் முன்பு இருந்த மனோரதங்கள் நிறைவேற நிறைவேற புதியதான வெவ்வேற மனோரதங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றனவே. நாம் கோரியபடி குழந்தைகள் பிறந்து தவழ்ந்து சித்தடிவைத்து நடந்து வளர்ந்து பருவம் அடைந்து மணஞ்செய்து மக்களையும் பெறக் கண்டோம். இப்பொழுதோ, நமது மனமோ, பேரன்மாருக்கும் சந்ததியுண்டாவதைக் காண விரும்புகிறது. அதைக் கண்டாலும் வேறொன்று மேலும் உண்டாகும். அது நிறைய, வேறொன்று உண்டாகும். மேன்மேலும் ஆசையுண்டாவதைத் தடுப்பதுதான் எப்படி? மரணம் அடைவதனால் மாத்திரம் இந்த மனோரதங்களுக்கு முடிவுண்டாகுமேயன்றி வேறொன்றினாலும் முடிவுண்டாகாது.

இது இப்போது தான் எனக்கு நன்றாகத் தெரிகிறது. இவ்வாறு கோரிக்கைகளிலே அழுந்தியிருப்பவனுக்கு ஒருபோதும் மனமான பரம்பொருளைப் பற்றமாட்டாது. தண்ணீரில் வாசஞ்செய்யும்போது மித்திரனான மச்சத்தின் சேர்க்கையினால் அல்லவோ எனது சமாதி நிஷ்டைக்குலையலாயிற்று? சகவாச தோஷத்தால் அல்லவா, நான் அரசகுமாரிகளை மனைவியர்களாக அடைய நேர்ந்தது. இந்தப் பெண்டிரைக் கொண்டதால் அன்றோ மேன்மேலும் ஆசைப்பெருக்கம் உண்டாயிற்று. ஒரு பெண்டிரைக் கொள்வதும் ஒரு புத்திரனைப் பெறுவதுமே வெகு துக்கத்துக்குக் காரணமாக இருக்கும்போது ஐம்பது பெண்டிரையும் நூறு பிள்ளைகளையும் பெற்று நான் துக்கத்தைப் பெருக்கிக் கொண்டேனே? நான் தண்ணீரிலிருந்து செய்த தவப்பேற்றுக்கு இந்தச் செல்வப்பேறு இடையூறாயிற்றே? மச்சத்தின் கூட்டுறவால் ஏற்பட்ட மக்கட்பேற்றின் விருப்பத்தால் மனங்கவரப்பட்டுப் போனேனே? சங்கமற்றிருப்பதே முனிவர்களுக்கு மோக்ஷத்தின் காரணமாகும் சங்கத்தினால் குற்றங்கள் அல்லவா உண்டாகும்? யோக நிஷ்டை கை கூடியவனும் சங்கத்தால் வீழ்வானாகில் அற்ப சித்தியுள்ள என்போன்றோருக்கு கேட்கவும் வேண்டுமோ? இனிமேலாவது தக்க முயற்சிசெய்து, ஆன்மாவைக் காக்கவேண்டும். ஆகையால் எல்லாவற்றையும் அளிக்கவல்லவனும் இத்தகையது என்று சிந்திக்க ஒண்ணாத திவ்யச் சொரூபமுள்ளவனும், அணுவுக்கு அணுவாயும், மகத்துக்கு மகமாயும் இருப்பவனும், முன்பு ஒரு யுகத்திலே வெண்மையாயும் இந்த யுகத்திலே கருமையாயுமிரா நின்ற திவ்விய மங்கள விக்கிரஹமுள்ளவனும், பிரகிருதிக்கு உட்படாத தூய்மையுருவும், பிரகிருதிக்கு உட்பட்ட சுத்தமல்லாத சொரூபமுடையவனும், லோகேசுவரனுமான ஸ்ரீவிஷ்ணுபகவானை ஆராதிக்கக் கடவேன். சகல தேஜோரூபியாகவும், சர்வ ஸ்வரூபியாகவும், வெளிப்பட்டதும் வெளிப்படாததுமான திருமேனியை உடையவனாகவும், காரிய காரண ரூபியாகவும், தேச காலாதி பரிச்சேதமில்லாதவனாகவும் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிஷ்ணுவினிடத்திலே மீண்டும் பிறவியில்லாமல் இருத்தற்கு என் சித்தம் சஞ்சலமின்றி ஸ்திரமாக இருக்கக் கடவது. சர்வ பூதாத்துமகனாகவும் நிர்மலனாகவும் சர்வேசுவரனாகவும் ஆதி மத்யாந்தர ரகிதனாகவும் இருக்கும். அந்த அநந்தனைக் காட்டிலும் வேறாகத் தோன்றும்படியான பொருள் ஒன்றும் இல்லையோ அந்தத் தேசிகனுக்கு எல்லாம் தேசிகனாக எழுந்தருளியுள்ள ஸ்ரீவிஷ்ணுவை சரணமாகப் பற்றுகிறேன்! என்று இவ்விதம் தனக்குத்தானே சிந்தித்த சவுபரி முனிவர், புத்திரர்களையும் வீடு, தோட்டம் முதலிய யாவற்றையும் பற்றற விட்டு, தமது மனைவியருடன் வனத்துக்குச் சென்று, வானப் பிரஸ்தர் செய்யவேண்டிய நித்தியக்கர்ம அனுஷ்டானங்களைச் செய்து கொண்டு, சகல பாவங்களையும் போக்கிக் கொண்டு, அதனால் பக்குவமான சித்த நிலையை அடைந்து, அக்கினிகளே ஆத்மாவிலே ஏற்றிவிட்டுச் சந்நியாச ஆசிரமத்தில் பிரவேசித்தார். அவ்விதமாகி, சகல கிரியாக லாபத்தையும் எம்பெருமானுக்கே ஆராதனமாகச் சமர்ப்பித்து நாசம் இல்லாததும், விகார சூன்யமானதும் மரணாதிகளுக்கு இடமாகாததும் அளவற்றதும், பரம பாகவதர்கள் அடையும்படியானதுமான விஷ்ணுலோகம் என்று சொல்லப்படும் பரமபதத்தை அடைந்தார். மைத்ரேயரே! மாந்தாதா மன்னனைப் பற்றிய வரலாற்றிலேயே, இந்த சவுபரி முனிவரின் சரிதத்தையும் நான் உமக்கு சொன்னேன். இதை எவன் ஸ்மரிக்கிறானோ, படிக்கிறானோ, படிக்க வைக்கிறானோ, கேட்கிறானோ, கேட்பிக்கிறானோ, தரிக்கிறானோ, எழுதுகிறானோ, எழுதுவிக்கிறானோ, அதன்படி நடக்கிறானோ, நடத்துவிக்கிறானோ, உபதேசிக்கிறானோ, அவர்களுக்கெல்லாம் எட்டுப் பிறவிகள் வரையிலும் தீயச் சிந்தையும், தீய ஒழுக்கமும் தீயவழியில் மனம் வாக்கு செல்லுதலும், பரித்தியாகம் செய்ய வேண்டியவைகளிலே அபிமானமும் உண்டாவதில்லை!

—————

3. புருகுச்ச, சகர மாமன்னர்களின் வரலாறுகள்

மைத்ரேயரே! இனிமேல் மாந்தாதாவின் பரம்பரையைச் சொல்கிறேன். மாந்தாதாவின் மகனான அம்பரீஷனுக்கு யுவனாசுவன் என்ற புத்திரன் உண்டானான். அவனுக்கு அரிதன் பிறந்தான். அந்தக்காலத்தில் பாதாள உலகத்தில் மவுனேயர் என்ற ஆறுகோடிக் கந்தருவர்கள் இருந்தார்கள். அவர்கள் நாக குலத்தாரின் முக்கியமான இரத்தினங்களையும், ஆட்சியையும் பறித்துக் கொண்டார்கள். அதனால் நாகர்கள், திருப்பாற்கடலில் சென்று சகல தேவ தேவனான ஸ்ரீவிஷ்ணு பெருமானைத் தோத்திரஞ் செய்தார்கள். எம்பெருமான் யோக நித்திரை நீங்கி, தாமரை மலர் மலர்ந்தாற்போலத் திருக்கண் மலர்ந்தருளினார். அப்போது நாகர்கள், சுவாமீ! அடியேங்களுக்குக் கந்தருவருடைய பயம் மிகுந்துள்ளது. இது எப்படித் தீரும்? என்று கேட்டார்கள். அதற்கு முதலும் முடிவும் இல்லாத எம்பெருமான் நாகர்களே! மாந்தாதாவின் மகன் புருகுச்சன் என்பவனிடத்திலே நான் ஆவேசித்து, உங்கள் பகைவர்களை அடக்குகிறேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதன்பிறகு நாகர்கள் அவரை வணங்கி விடைபெற்று, பாதாளம் சென்று தங்கள் சகோதரியான நர்மதையை அந்தப் புருகுச்ச மன்னனின் பத்தினியாகும்படி அனுப்பிவைத்தார்கள். அவள் புருகுச்சனோடு சேர்ந்து, அந்த மன்னனைப் பாதாளலோகத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். பிறகு புருகுச்ச மாமன்னன், எம்பெருமானது தேஜோ விசேஷத்தால் ஆவேசமுற்று, கந்தர்வர்கள் அனைவரையும் நாசஞ்செய்து, தன் பட்டணத்தை அடைந்தான். அப்போது நாகமன்னர்கள் ஒன்றுகூடி, நர்மதையை அழைத்து, நர்மதாய்! யார் உன்னை நினைத்தாலும் உன் பெயரைக் கீர்த்தனஞ் செய்தாலும், அவனுக்கு சர்ப்ப பயம் இல்லாமற் போகக் கடவது என்று நர்மதைக்கு வரங்கொடுத்தார்கள். இதற்கு ஒரு பாடலும் உண்டு. அதாவது காலையில் நர்மதைக்கு நமஸ்காரம், இரவிலும் நர்மதைக்கு நமஸ்காரம். ஓ! நர்மதாய் உனக்கு நமஸ்காரம் நீ என்னை நச்சுப்பாம்புகள் கடிக்காமல் ரட்சிக்க வேண்டும்! என்று எவனொருவன் சொல்லிக் கொண்டு, இரவு பகல்களில் இருள் மூடிய இடங்களுக்குச் சென்றாலும் அவனைப் பாம்புகள் கடிப்பதில்லை. இவ்விதமாகத் தியானித்துக் கொண்டு, விஷத்தையே அருந்தினாலும் அதனால் ஒரு தீங்கும் உண்டாவதில்லை. இவ்விதமாக நர்மதைக்கு நாகேந்திரர்கள் வரங்கொடுத்து விட்டு, புருகுச்ச மன்னனுக்கும் அவனது சந்ததி அற்றுப் போகாதவாறும் பெருகும்படியும் வரங்கொடுத்தார்கள்.

புருகுச்ச மன்னன் நர்மதையோடு கூடிமகிழ்ந்து திரசதஸ்யு என்பவனைப் பெற்றான். அவனுக்கு அநரண்யன் பிறந்தான். அவனை இராணவன் திக்விஜயம் செய்துவரும்போது; சண்டை செய்து கொன்றான். அந்த அநரண்யனுக்கு பிரஷதசுவன் பிறந்தான். அவன் மகன் ஹரியசுவன், அவன் மகன் ஹஸ்தன். அவனுக்கு வசுமனது, அவனுக்குத் திரிதன்வா, அவனுக்குத் திரையாருணி. அவனுக்குச் சத்தியவிரதன் பிறந்தான். அவன் தான் திரிசங்கு என்ற பெயரைப் பெற்றவன். அந்த திரிசங்கு ஒரு சமயம் தன் தந்தையின் சாபத்தால் சண்டாளனாக மாறினான். அப்போது பன்னிரண்டு ஆண்டுக்காலம் மழையில்லாமல் ஏற்பட்ட ஒரு பெரும் பஞ்சத்தில் விசுவாமித்திரரின் மனைவியும் மக்களும் பிழைக்கும் பொருட்டு அவன் தினந்தோறும் மிருக இறைச்சிகளைக் கொண்டு வந்து கொடுத்தான். சண்டாளனிடம் வாங்கும் குற்றம் அவர்களுக்கு ஏற்படாதவாறு அந்த இறைச்சிகளைக் கங்கைக் கரையிலிருந்த ஓர் ஆலமரத்தின் கிளையிலே கட்டிக் கொண்டுவந்தான். இதனால் விசுவாமித்திரர் அவன் செயலையறிந்து மகிழ்ந்து, திரிசங்குவை அவனது உடலுடன் சொர்க்கலோகம் ஏற்றினார். அந்தத் திரிசங்குவின் மகன் ஹரிச்சந்திர மன்னனாகும். அவன் மகன் லோஹிதாசன் அவன் மகன் ஹிரிதன், ஹரிதனுக்கு சஞ்சு என்ற குமாரி பிறந்தாள். சஞ்சுவுக்கு விஜயன், வசுதேவன் என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களின் விஜயனுக்கு குருகன் பிறந்தான். அவனுக்கு விருகனும், விருகனுக்குப் பாகுவும் பிறந்தார்கள். அந்தப் பாகுமன்னன் ஹேஹயர்களால் வெல்லப்பட்டு, கர்ப்பிணியான தன் மனைவியுடன் காட்டுக்குச் சென்றான். அங்கு அவளுடைய சக்களத்தியானவள் அவளுடைய கர்ப்பம் அழிந்து போகும்படி அவளுக்கு விஷத்தைக் கொடுத்தாள். அதனால் அந்த கருவானது ஏழாண்டுக் காலம் அவளது வயிற்றிலேயே இருந்தது. இந்நிலையில் பாகு அரசனுக்கு வயது சென்றதால் அவன் அவுர்வ மாமுனிவருடைய ஆசிரமத்தின் அருகே மரணமடைந்தான். அப்போது கர்ப்பவதியான அவனது மனைவி, சிதையடுக்கித் தன் கணவனை அதன் மீது வைத்து, தானும் அவனுடனே அனுமரணஞ்செய்து கொள்ள முயன்றாள். இதையறிந்த அவுர்வ மாமுனிவர் தமது ஆசிரமத்திலிருந்து அங்கு வந்து, அவளை நோக்கி, பெண்ணே! இது வீணான எண்ணம் மகா பலப்பராக்கிரமசாலியாக அநேக யாகங்களைச் செய்யக்கூடியவனாய், கீர்த்திக்குரிய மகன் ஒருவன் உன் வயிற்றில் இருக்கிறான். ஆகையால் நீ இவ்விதமாக மரணமடைய வேண்டாம்! என்றார். உடனே, அவளும் அந்த முயற்சியைக் கைவிட்டாள். முனிவர், அவளைத் தம்முடைய ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி வந்தார். சில நாட்களில் அவள் வயிற்றிலிருந்து நஞ்சுடன் கூடிய மகா தேஜஸ் வாய்ந்த ஒரு புதல்வன் பிறந்தான். அந்தப் பிள்ளைக்கு அவன் விஷத்துடன் பிறந்ததால், சகரன் என்ற பெயரைச் சூட்டினார் அவுர்வ முனிவர். சகரன் வளர்ந்த பிறகு அவனுக்கு உபநயனஞ் செய்வித்து சகல வேத சாஸ்திரங்களையும் அவனுக்குக் கற்பித்தார். மேலும் பிருகு முனிவரால் உபதேசிக்கப்பெற்ற ஆக்கினோயாஸ்திரத்தையும் அவனுக்கு உபதேசித்தார்.

இவ்விதமாக ஓதியுணர்ந்த சகரன் என்ற அரசிளங்குமரன் ஒருநாள் தன் தாயை நோக்கி, அம்மா, என் தந்தை எங்கே? நாம் மன்னர் குலத்தில் பிறந்தும் இந்த காட்டுக்கு ஏன் வந்தோம்? என்று கேட்டான். அவள் நடந்தவற்றையெல்லாம் அவனுக்குச் சொன்னாள். அதைக்கேட்ட ராஜகுமாரன் சகரன் கோபங்கொண்டு, அன்று முதல் ஹேஹய வம்சத்தையே துவம்சம் செய்வதாகச் சபதம் செய்தான். பிறகு, அவன் தன் சபதப்படியேப் பகைவர்களை அழித்தான். அதோடு, பகைவருடன் சேர்ந்திருந்த சகர், யவனர், காம்போஜர், பாரதர், பப்பிலவர் முதலியவர்களையும் நாசஞ்செய்ய முனைந்தான். எனவே அவர்கள் அனைவரும் அவனை எதிர்க்க முடியாமல் வசிஷ்ட முனிவரைச் சரணடைந்தார்கள். அவர்களைப் பிழைத்திருக்கும் பிணங்களாக வசிஷ்ட முனிவர் நினைத்துக்கொண்டு சகரனிடம் சென்று, மன்னா! இவர்கள் உயிரோடு இருந்தாலும் இறந்தவர்களுக்கு ஒப்பாவார்கள். இவர்களே மறுபடியும் இறக்கச் செய்வதில் யாது பயன்? நானே, உன் சபதத்துக்கு விரோதம் ஏற்படாமல் இருக்க, அவர்களை வைதிக சம்பந்த சூனியராகச் செய்து விட்டேன். ஆகவே நீ அவர்களை விட்டு விடுவாயாக என்றார். சகர மன்னனும் அப்படியே ஒப்புக்கொண்டு, குருவாக்கிய பரிபாலனம் செய்தான். ஆயினும் அவர்களில் யவனரை மொட்டைத் தலையராகவும், சகரைப் பாதித்திலை மழித்தவராகவும், பாரதரை தலைமயிர் தொங்க விட்டவராகவும், பப்பிலவரைத் தாடிவளர்ப்பவராகவும் செய்து, அவர்களது வேஷங்களை மாற்றி, அவர்களை வேதாத்தியயனாதி சூனியர்களாக ஆக்கிவிட்டான். அவர்கள் அனைவரும் இவ்விதமாகத் தருமம் இழந்தனர். ஆகையால் மிலோச்சராகக் கருதப்பட்டனர். அதன் பிறகு சகர மகாராஜன் தன் நகரத்துக்குச் சென்று; தன் ஆணைக்குப் பங்கம் ஏற்படாதவாறு சகலதுவீப சமுத்திரங்களோடு கூடிய இந்தப் பூமியை நீதியாய்ப் பரிபாலித்து வந்தான்.

————

4. சகர புத்திரரின் வரலாறும், சக்கரவர்த்தித் திருமகனார் வைபவமும்

சகர மன்னனுக்கு காசியபரின் மகளாகிய சுமதி என்பவளும் விதர்ப்ப ராஜனின் மகளாகிய கேசினி என்பவளும் மனைவியராக விளங்கினார்கள். அவ்விரு மங்கையரும் மக்கட்பேற்றையடைய அவுரவ முனிவரை ஆராதித்தார்கள். அதனால் அம்முனிவர் மகிழ்ந்து அவர்களை நோக்கி, ராஜபத்தினிகளே! உங்களில் ஒருத்தி வமிசம் விளங்குவதற்கான ஒரு பிள்ளையையும் மற்றொருத்தி அப்படியில்லாத அறுபதினாயிரம் பிள்ளைகளையும் பெறலாம். யாருக்கு எது விருப்பமோ, அதைப் பெறலாம்! என்று ஒரு வரங்கொடுத்தார். பத்தினி கேசினி என்பவள், தன் வமிச விருத்திக்குரிய ஒருவனையே விரும்பினாள். அவளுடைய சக்களத்திச் சுமதியோ அறுபதியிரம் பிள்ளைகளைப் பெற விரும்பினாள். அப்படியே ஆகட்டும் என்று முனிவர் வாழ்த்தவே, அவ்விருவரும் சில நாட்களில் அவ்வாறே பிள்ளைகளைப் பெற்றார்கள். அவர்களில் கேசினியின் குமாரனான அசமஞ்சசனுக்கு அம்சுமான் என்பவன் பிறந்தான். அந்த (அசமஞ்சசம்-தீயவை) அசமஞ்சசன் சிறுவனாக இருக்கும்போது மிகவும் தீமையான செயல்களையே செய்து வந்தான். அதனால் அவனுக்கு அந்தப் பெயர் உண்டாயிற்று. சகரமன்னனோ தன் மகன் சிறுவனாக இருப்பதால் இப்படிப்பட்டத் தீங்கைச் செய்கிறான். பருவம் வந்தால் புத்திசாலியாகவும் நல்ல நடத்தையுடையவனாகவும் ஆவான் என்று நினைத்திருந்தான். ஆனால் அசமஞ்சசனோ வாலிபனாகியும் தீமையே செய்து வந்ததனால் அவனைச் சகர மன்னன், காட்டுக்குத் துரத்திவிட்டான். பிறகு அறுபதினாயிரம் பிள்ளைகளும் அசமஞ்சசனைப் போலவே, துஷ்டத்தனங்களைச் செய்யலானார்கள். அவர்களால் உலகத்தில் யாகாதி சத்காரியங்களும் சத்திய சவுசாதி ஆசாரங்களும் ஒழிந்து போவதைக் கண்ட தேவர்கள், ஸ்ரீபுரு÷ஷாத்தமரின் அம்சமாக விளங்கியக் கபில முனிவரை அணுகி வணங்கி, கபில பகவானே! சகர மன்னனின் பிள்ளைகளெல்லாம் கொடியவர்களாகி உலகத்தை அழித்து வருகிறார்கள். இதுவரையில் அவர்களால் அழிந்தவை இனியெப்படியாகுமோ தெரியவில்லை. துன்பமடைந்த இந்த ஜகத்தைக் காப்பாற்றவல்லவோ, தாங்கள் அவதரித்திருக்கிறீர்கள்! என்றார்கள். அதற்கு அவர், தேவர்களே, சில நாட்களுக்குள்ளேயே அவர்கள் அனைவரும் மாண்டு போவார்கள் என்றார். தேவர்கள் ஆறுதலடைந்தார்கள்.

இது இவ்விதமிருக்க, சகரமன்னன் அசுவமேத யாகம் ஒன்றைச் செய்யத் துவங்கினான். அதன் காரணமாகத் தன் பிள்ளைகளின் காவலில் யாகக் குதிரையைச் சுற்றுப்பயணத்திற்காக ஓட்டி விட்டான். அந்தக் குதிரையை யாரோ ஒருவன் கொண்டு போய்ப் பாதாளத்தில் விட்டுவிட்டான். பிறகு சகரனின் குமாரர்கள் அந்தக் குதிரையின் குளம்படியை அடையாளமாகக் கொண்டு ஒவ்வொரு காதமாகப் பூமியை வெட்டித் தோண்டிக் கொண்டு சென்றார்கள். பாதாள லோகத்தின் உள்ளே போய் அங்கே திரிந்து கொண்டிருந்த யாகக் குதிரையையும் அதற்குக் கொஞ்சம் தொலைவிலே, தேஜஸோடு ஜ்வலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கபில பகவானையும் கண்டார்கள். உடனே அந்தத் தீயவர்கள், இதோ! இவன் தான் நமது குதிரையைத் திருடிக் கொண்டு, யாகத்தைத் தடுத்து நமக்கு அபகாரஞ் செய்தவன். ஆகவே, இவனைக் கொல்லுங்கள்! என்று கூவிக்கொண்டே ஆயுதங்களுடன் முனிவர் மீது பாய்ந்தார்கள். இப்படியவர்கள் ஓடிவரும் போது முனிவர் சற்று உக்கிரமாக அவர்களைப் பார்த்தார். அந்தப் பார்வையில் அவர்கள் பற்றி எரிந்து சாம்பலாய்க் குவிந்தார்கள். இதுபோலத் தனது யாகக் குதிரை போனதையும், புத்திரர்கள் அழிந்தொழிந்ததையும் அறிந்து சகரமன்னன், தன் பேரனாகிய அம்சுமானை அழைத்து, அந்தக் குதிரையைக் கொண்டு வரும்படிக் கட்டளையிட்டான். அவனும் சகர குமாரர்கள் தோண்டிய வழியிலேச் சென்று கபில முனிவரைக் கண்டான். அவரை வணங்கித் தொழுதான். அப்போது அவர் அவனை நோக்கி பிள்ளாய்! நீ குதிரையைக் கொண்டு போய் உனது பாட்டனாரிடம் கொடுத்து யாகத்தை நிறைவேற்று வாயாக. உனது பேரன் சொர்க்கத்திலுள்ள கங்கா நதியைப் பூலோகத்துக்குக் கொண்டு வருவான் என்ற வரத்தையும் உனக்கு நான் தந்தேன். போ என்று அருளினார். சுவாமி! பிராமண சாபத்தால் அழிந்த அடியேனது பாட்டன்மார்கள் சுவர்க்க லோகத்தையடையும்படியான ஒரு வரத்தை நீங்கள் அளிக்க வேண்டும் என்று அம்சுமான் பிரார்த்தித்தான். அதற்குக் கபிலமுனிவர் பிள்ளாய்! நான் தான் உன் பேரன் கங்கையைக் கொண்டு வருவான் என்று முன்னமே சொன்னேனே! அந்த மகாநதியின் புனித நீரால், இறந்தவர்களின் எலும்பும் சாம்பலும் ஸ்பரிசக்கப்பட்டவுடனேயே அவர்கள் தேவலோகம் செல்வார்கள். பக்தி சிரத்தையோடு நீராடுவோரைப் பாவந்தீர்த்துக் கடைத்தேற்றும் சக்தியையுடையது கங்கையாகும். ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிக் கட்டைவிரலிற் தோன்றிய மகாநதியின் மகிமை இது மட்டுமல்ல. தன்னிடத்திற் கருத்தேயில்லாமல் இறந்தவனுடைய சரீரத்தைச் சார்ந்த எலும்பு, தோல், நரம்பு, ரோமம், சாம்பல் முதலியவற்றுள் ஏதாகிலும் அந்தப் புனிதநீரால் ஸ்பரிசிக்கப்பட்டால் கூட அந்தவுடலுக்கு உரியவன் உடனே சொர்க்கம் செல்வான் என்று சொன்னார். அதன் பிறகு அம்சுமான் அவரை வணங்கி, யாகக்குதிரையை அவிழ்த்துக் கொண்டு சென்று தன் பாட்டனாரிடம் ஒப்படைத்தான். சகர மன்னனும் அசுவமேத யாகத்தை நிறைவேற்றித் தன் பிள்ளைகள் தோண்டியப் பள்ளத்தில் பாய்ந்த சமுத்திரத்தைத் தனது புத்திரனாகப் பாவித்து லோகாந்தரஞ் சென்றான்.

அவன் மகன் அம்சுமானுக்குத் திலீபன் என்ற அரசன் பிறந்தான். அவனுடைய மகன் பகீரதன். அவன் சொர்க்கத்திலிருந்து கங்கையாகப் பூமிக்கு வரவழைத்து, பாகீரதி என்ற பெயரடையச் செய்தான். அந்தப் பகீரதனுக்கு சுஹோத்திரன் பிறந்தான். அவனுக்கு நாபாகனும், அவனுக்குச் சிந்துத்துவீபனும், அவனுக்கு அயுதாயும் பிறந்தார்கள். அயுதாயுவுக்கு ருதுபர்ணன் பிறந்தான். அவன் அக்ஷஹிருதயம் என்ற சூதாட்ட நூலைக் கற்றுத் தேர்ந்து, நளனுக்குத் துணைவனானான். ருதுபர்ணனின் மகன் சர்வகாமன் அவன் மகன் சுதாசனுக்குச் சவுதாசன் என்றும் மித்திரசஹன் என்றும் பெயர் கொண்ட குமாரன் உண்டானான். அவன் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்று திரிந்து கொண்டிருக்கும் போது இரண்டு புலிகளைக் கண்டான். அவ்விரண்டிலேயே அந்தக் காட்டிலுள்ள மற்ற மிருகங்கள் அழிக்கப்படுகின்றன என்று நினைத்து, அவற்றில் ஒன்றை அம்பினால் எய்துக் கொன்றான். அந்த அம்பு பாய்ந்து இறக்கும்போது அந்தப் புலியானது ஒரு மகா பயங்கர முகத்தோடு கூடி ராட்சஸ ரூபமாய் விழுந்தது. இரண்டாவது புலியோ, ராட்சஸனாக வெளிப்பட்டு அவனை நோக்கி, உன்மீது நான் என் பகையை தீர்த்துக் கொள்வேன்! என்று சபதமிட்டு மறைந்தது. பிறகு சிறிது காலத்திற்கெல்லாம் சவுதாசன் யாகஞ்செய்யத் துவங்கினான். அவனதுக் குலகுருவான வசிஷ்ட முனிவர் அந்த யாகத்துக்கு வேண்டிய காரியங்களைத் தயார் செய்து விட்டு சற்று, வெளியே போயிருந்தார். அந்த சமயத்தில் ராட்சஸன் வசிஷ்ட முனிவரைப் போன்ற வேடத்துடன் அங்கு வந்து, எனக்கு யாகத்தின் முடிவில் மனித இறைச்சியைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். ஆகையால் முன்னதாகவே அதைக் கொண்டு வந்து பாகஞ்செய்து வைப்பாயாக. நான் சீக்கிரம் வந்து விடுவேன்! என்று சொல்லி விட்டுப் போனான். பிறகு அவனே சமையற்காரனைப் போல வேடம் தரித்து வந்து, குரு பத்தியினால் சவுதாத மன்னன் கட்டளையிட்டதை ஏற்று மனுஷ்ய மாமிசத்தைச் சமைத்து, மன்னன் முன்பு கொண்டு வந்து வைத்தான். சவுதாச மன்னனும் அந்த மனித இறைச்சியை ஒரு பொன் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, வசிஷ்டரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவர் வந்தவுடன் அதை அவருக்குக் கொடுத்தான். அதைக் கண்டவுடனேயே வசிஷ்டர் இதென்ன! இந்த அரசனுக்கு ஏன் இந்தத் துன்மார்க்கப் புத்தி உண்டாயிற்று? திடீரென்று மாமிசத்தை நமக்கு கொண்டு வந்து கொடுக்கிறானே! இது என்ன இறைச்சி? என்று யோசித்தார். யோக திருஷ்டியினால் அதை நரமாமிசம் என்று அறிந்து மிகவும் கோபங்கொண்டு சவுதாச மன்னனை நோக்கி, தவமுனிவர்கள் புசிக்கக் கூடாதது எது என்பதை நீ அறிந்திருந்துங்கூட இதை என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டாய். ஆகையால் நீயே இதில் மிகுந்த விருப்பம் கொண்டவனாகக் கடவை! என்று சாபங்கொடுத்தார். அதைக்கேட்டதும் சவுதாசன் கலங்கி, சுவாமி! தாங்கள் விரும்பியவண்ணம் தானே அடியேன் இப்படிச் செய்தேன்? என்றான். வசிஷ்டர் நிகழ்ந்தவற்றை அறிந்து, அவனிடம் இரக்கங்கொண்டு, அரசனே! நீ ஒரு ராக்ஷசனால் வஞ்சிக்கப்பட்டாய் உன்மேல் எந்தக் குற்றமுமில்லை; ஆயினும் நான் இட்ட சாபம் வீணாகாது. ஆனால் நான் இட்ட சாபம் உனக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் வரையிலும் தான் பலிக்கும்! என்றார்.

உடனே சவுதாசன் கோபங்கொண்டு, குற்றம் எதுவும் செய்யாத எனக்கு நீங்கள் சாபமிட்டது அநியாயம்! ஆகையால் நானும் உங்களைச் சபிப்பேன் என்று சொல்லிக் கையிலே நீரை எடுத்து வீசமுயன்றான். அப்போது அவனது மனைவியாகிய மத்யந்தி என்பவள், தன் நாயகனின் கையைப் பிடித்துக்கொண்டு, மகாராஜா! நமது குலத்துக்குத் தெய்வமாயும் குருவாயும் இருக்கும் வசிஷ்ட முனிவரை நீங்கள் இப்படிச் செய்வது சரியல்ல! என்று சமாதானப்படுத்தித் தடுத்தாள்.
பிறகு சவுதாசன் தன் கையிலே எடுத்த சாபஜலத்தை தரையிலே விட்டால் மழை பெய்யாமல் போய்விடும் என்றும் நினைத்து, அந்த நீரைத் தன் கால்களின் மீது விட்டுக் கொண்டான். அவனது கோபாக்கினியால் காய்ந்த அந்தத் தண்ணீர், அவன் பாதங்களில் பட்டதனால் அவையிரண்டும் ஒளியிழந்து கருமை கலந்து வெண்மையாயின. ஆதலால் அவனுக்கு கல்மாஷபாதன் என்ற பெயர் வழங்கலாயிற்று. வசிஷ்டர் இட்ட சாபத்தின்படி அந்த மன்னன் ஆறாவது ஜாமந்தோறும் ராக்ஷச சுபாவமுடையவனாய் நாட்டிலே புகுந்து மனிதர்களை அடித்துக் கொன்று நர மாமிசம் புசித்து வந்தான். இது இப்படியிருக்க, ஒருநாள் வசந்த காலத்தில் பிராமணனான ஒரு முனிவர் தன் மனைவியுடன் கூடி மகிழ்ந்து காம லீலையில் மூழ்கியிருப்பதை அரக்க வடிவில் இருந்த சவுதாச மன்னன் கண்டான். அவனது பயங்கர உருவத்தைக் கண்டு ரிஷித் தம்பதிகள் பயந்து ஓடினார்கள். அவர்களில் முனிவனை அவன் பிடித்துக் கொண்டு ஓடினான். அப்போது ரிஷிபத்தினியான பிராமணப் பெண், அந்த ராக்ஷசனை நோக்கி, ஐயனே! நீ ராக்ஷசனல்லவே! மித்திரன் என்கிற அரசன் அல்லவா நீ! நீயோ எல்லாவற்றையும் அறிந்தவன் மேலும் பெண்ணுக்குரிய இன்பத்தைச் சிறப்பாக அறிந்தவன் நீயாயிற்றே? அப்படியிருக்க; நான் கருதிய இன்பப் பயனை அடையாமலிருக்கும்போது, நீ என் கணவனை நாசஞ்செய்வது நியாயமல்லவே! அவரை விட்டு விடு! என்று கெஞ்சிக் கேட்டுப் புலம்பினாள். அவள் புலம்பிக் கொண்டிருக்கும்பொழுதே, அரக்க வடிவிலுள்ள சவுதாசன் கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல், நரமாமிசம் புசிக்கும் வெறியோடு புலியானது பசுவைப் பிடித்துச் சென்று புசிப்பதைப் போல அவளது கணவனைத் தின்று விட்டான். அதனால், பிராமண மனைவி மிகவும் கோபங்கொண்டு அவனை நோக்கி, அடப்பாவி! என்னை இவ்விதமாக வீணாக்கி; என் கணவனைக் கொன்று புசித்தாய். ஆகையால் நீ காமபோகத்துக்காக முயற்சிக்கும்போது மரணமடைவாயாக! என்று சாபமிட்டுப் பிறகு தீக்குளித்து மடிந்து போனாள். அதன் பிறகு பன்னிரண்டு ஆண்டுக்காலம் சென்று சவுதாச மன்னனின் சாபம் தீர்ந்தது. ஒரு சமயம் அவன் சம்போகத்தில் இச்சைக் கொண்டு தன் மனைவியை நெருங்கினான். அப்போது அவனது பத்தினியாகிய மதயந்தி என்பவள் பார்ப்பனி இட்ட சாபத்தை நினைவூட்டினாள். அதனால் அரசன் ஸ்திரீ போகத்தை விட்டுவிட்டான். இப்படியானதினால் அவனுக்குச் சந்ததியில்லாமற் போயிற்று. அதனால் அவன் தன் குருவாகிய வசிஷ்ட மகரிஷியை வேண்ட, அம்மகரிஷியும் அவனது பத்தினியாகிய மதயந்தியிடம் புத்திரன் உண்டாகச் செய்தார்.

அதனால் ஏற்பட்ட கருவானது ஏழாண்டுக் காலம் வரை மதயந்தியின் வயிற்றிலிருந்து வெளிப்படாமலே இருந்தது. அதனால் மதயந்தி ஆத்திரப்பட்டு ஒரு கல்லைக் கொண்டு வயிற்றிலே இடித்துக் கொண்டாள். அதன் விளைவாகப் புத்திரனும் பிறந்தான். அவனுக்கு அச்மகன் என்று பெயரிட்டார்கள். அந்த அச்மகனுக்கு மூலகன் என்ற பிள்ளை பிறந்தான். அந்தச் சமயம் பரசராமர், பூவுலகத்திலுள்ள க்ஷத்திரிய வமிசத்தையெல்லாம் அழிப்பதாகச் சபதம் செய்திருந்தார். அதனால் பரசுராமனது பார்வையிற்படாதவாறு மூலகனைப் பெண்கள் நிர்வாணமாகச் சூழ்ந்து கொண்டு அவனைக் காப்பாற்றினார்கள். அதனால் அவனுக்கு நாரீகவசன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்த மூலகனுக்குத் தசரதன் என்பவன் பிறந்தான். அவன் மகன் இளிபிளி. அவன் மகன் விசுவஸஹன். அவன் மகன் கட்வாங்கன். முன்பொரு காலத்தில் தேவாசுர யுத்தம் நடந்தபோது கட்வாங்கனை தேவர்கள் அணுகி அவனுடைய உதவியை வேண்டினார்கள். அதற்கிணங்கிக் கட்வாங்கன் போர் புரிந்து அசுரர்களை வென்றான். அதனால் தேவர்கள் அவனைத் தமது உலகத்துக்கு அழைத்து சென்று அரசே! உமக்கு இஷ்டமான வரத்தைக் கேட்பீராக என்றார்கள். அதற்கு அவன் நீங்கள் எனக்கு வரமளிக்க வேண்டுமென்று விரும்புவது உண்மையெனில் என் ஆயுள் எவ்வளவு என்று முதலில் சொல்லுங்கள் என்றான். அவர்கள் உமக்கு இன்னும் ஒரு முகூர்த்த காலந்தான் ஆயுசு இருக்கிறது என்று சொன்னார்கள். உடனே அவன் அவர்களிடம் விடைபெற்று மிகவும் வேகமான விமானத்தில் ஏறிக்கொண்டு வெகு விரைவாகப் பூவுலகையடைந்து பிராமணரை விட ஆன்மாவின் மீது எனக்கு பிரியமில்லாமல் இருந்ததும் தேவ மனுஷ்ய பசு, பக்ஷி, விருட்ச முதலிய யாவற்றிலும் எம்பெருமானுடைய சான்னித்தியமே நித்தியமாகவுள்ளது என்று நான் நினைத்திருந்தும் உண்மையானால் முனிவர்களால் தியானஞ் செய்யப்பட்ட அந்தப் பகவானை நான் யாதொரு தடையுமின்றி அடைவேனாக! என்று வாசுதேவன் என்ற திருபெயருடைய பரமாத்மாவிடத்தில் வேதாந்த வாக்கியத்தின்படி ஆன்ம சமர்ப்பணம் செய்து அங்கேயே வயப்படுவதாகிய மோட்ச ஆனந்தத்தை அடைந்தான். இந்த அரசனைப் பற்றி சப்த ரிஷிகள் பாடியப் பாடல் ஒன்றுண்டு. அதாவது கட்வாங்கன் என்ற ராஜரிஷிக்கு ஈடாக இந்தப் பூமியில் யாருமே உண்டாகமாட்டான். ஏனென்றால் ஒரு முகூர்த்த காலம் ஆயுள் இருக்கும் போது சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்தது தனது ஞானசத்தியங்களால் சகல கதிகளையும் சகல லோகங்களையும் தாண்டி அவற்றையெல்லாம் ஸ்ரீவாசுதேவனிடம் லயித்துள்ள தனக்குள்ளேயே கண்டான் அன்றே என்பதுதான் அந்தப் பாடலாகும். அந்தக் கட்வாங்க மன்னனுக்கு தீர்க்கபாகு என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ரகுமன்னன் பிறந்தான். அவனுக்கு அஜமகாராஜன் பிறந்தான், அவன் மகன் தசரத மன்னன்.

எல்லா வகையான சுகுண பூர்ணனான பத்மநாபன், லோகரக்ஷணத்துக்காகத் தனது அமிசத்தைக் கொண்டு, ஸ்ரீராம, லக்ஷ்மண, பரத சத்ருக்கினர் என்ற நான்கு ரூபமாக, அந்தத் தசரத மகாராஜனிடம் அவதரித்தான். அந்தச் சக்கரவர்த்தித் திருமகன் ராமன், விசுவாமித்திர முனிவரின் யாகத்தை காப்பதற்காக எழுந்தருளுமளவில், வழியில் தாடகை என்ற கொடிய அரக்கியையும், அந்த யாகத்துக்குத் தீங்கு இழைக்க வந்த தாடகையின் மகனான சுபாகு முதலிய அநேக அரக்கர்களையுஞ் சங்கரித்து, தாடகையின் மற்றொரு குமாரனான மாரீசனை வாயு அஸ்திரத்தால் சமுத்திரத்தில் தள்ளிவிட்டார். தமது திருவடி மகிமையினால் அகலிகையின் சாபத்தைப் போக்கி அவளைத் தூயவள் ஆக்கினார். பிறகு, ஜனக மாமன்னரின் நகரத்துக்குச் சென்று, அங்கு பூசித்து வைக்கப்பட்டிருந்த சிவதனுசை முறித்தார். ஜனக மகாராஜனின் திருமாளிகையில் அயோநிஜையாய் அவதரித்து, வீரியசுல்க்கையாய் விளங்கிய சீதை என்ற ஸ்ரீமகாலக்ஷ்மியின் அம்சமானப் பெண்மணியை திருக்கலியாணஞ் செய்தருளினார். பிறகு, ஸ்ரீராமன் கல்யாணக் கோலத்தோடும் சீதையோடும் தம்முடைய அயோத்திமா நகரத்துக்குத் திரும்பி வரும்போது வழியில் பரசுராமரைச் சந்தித்தார். சகல க்ஷத்திரிய குலங்களையும் வேரோடு அழித்து வந்த பரசுராமரோ பொறாமையால் ஸ்ரீராமனை எதிர்த்து வந்தார்.

பலபராக்கிரமங்களால் உண்டான அவருடைய செருக்கை ஸ்ரீராமர் அழித்தார். பிறகு யுவராஜ்யப் பட்டாபிஷேகத்தை விரும்பாமல், மாற்றாந் தாயின் பேச்சுக் கிணங்கத் தந்தையின் வாக்கியத்தை சிரமேற் கொண்டு, சீதாபிராட்டியோடும் இளைய பெருமாளான லக்ஷ்மணரோடும், தண்டகாரண்யத்தில் பிரவேசித்து விராதனைக் கொன்றார். காமவெறியால் தீங்கிழைக்கத் துணிந்த சூர்ப்பனகையை இலக்குமணர் விகாரப்படுத்தியதால் மிகவும் கோபங்கொண்டு பதினாலாயிரம் வீரரோடு போருக்கு வந்த கரதூஷணர்களையும் கபந்தனையும் அழித்து அருளினார். அதற்குப் பிறகு சுக்ரீவனைத் தோழனாக்கிக் கொண்டு அவனுக்குப் பகைவனான வாலியைக் கொன்றார். சுக்ரீவன் அனுப்பிய வானர வீரர்களில் அனுமனால் இலங்கையில் இராவணன் அபகரித்துச் சென்ற சீதாபிராட்டி காவலில் இருப்பதை அறிந்து வானர சேனைகளுடன் புறப்பட்டு, சமுத்திரத்தை அணையாற் கட்டி இராவணன், கும்பகர்ணன் முதலிய அரக்கர்களை அழித்தார். உலகத்தாரின் ஒப்புரவுக்காகச் சீதையை அக்கினிப் பிரவேசம் செய்வித்தார். அக்கினியால் துதிக்கப்பட்ட சீதாதேவியை மீண்டும் ஏற்று, மறுபடியும் அயோத்திக்கு எழுந்தருளிப் பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அந்தப் பட்டாபிஷேக மகோற்சவத்தை நூறு ஆண்டுக்காலஞ் சொன்னாலும் முடியாது. ஆயினும் அதனை நான் சுருக்கமாகச் சொல்கிறேன். திவ்விய அலங்காரச் சோபிதமான மகாமண்டபத்தில் நவரத்தினச் சகிதமான சிங்காதனத்தின் மேல் சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீராமர் சீதாபிராட்டியாருடன் வீற்றிருந்தார். இளைய பெருமாளான லக்ஷ்மணரும், பரதாழ்வானும், சத்துருக்கினாழ்வானும் சத்திர சாமரங்களை வீசிய வண்ணம் பக்கங்களில் முகமலர்ந்து நின்றார்கள். விபீஷணாழ்வானும் சுக்ரீவ மகாராஜனும் அங்கதன், ஜாம்பவான் முதலானவர்களும் ஆலவட்டம் முதலியவற்றை ஏந்தி மிக்க மகிழ்ச்சியுடன் புடைசூழ்ந்திருந்தார்கள். சிறிய திருவடி எனப்படும் அனுமான் திருவடிவாரத்து, ரத்தின பீடத்திலிருந்து ஆனந்த பரவசத்துடன் சேவித்தான். பிரம்மா, இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்ற அட்டதிக் பாலகரும் மற்றுமுள்ள சகல தேவதைகளும் வசிஷ்டர், வாமதேவர், வால்மீகி, மார்க்கண்டேயர், விஸ்வாமித்திரர், பரத்வாஜர், அகஸ்தியர் முனிவர்களும், ரிக், யஜுர், சாமம் முதலிய வேதவாக்கியங்களைக் கொண்டு துதித்தார்கள். வீணை, வேணு, மிருதங்கம், படஹம், சங்கம், காஹளம், கோமுகம் முதலிய இசைக்கருவிகள் முழங்க, நிருத்த கீத முதலான மங்கள நிகழ்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்க கப்பமேந்திக் காத்திருக்கும் மன்னர்களின் நடுவே ஆசாரியர் அமைச்சர்கள் முதலியவர்கள் முறையே விதிப்படித் திவ்ய தீர்த்தங்களினால், சகல லோக ரக்ஷணம் செய்து அருள வேண்டும் ஸ்வாமி என்று பிரார்த்தனை செய்து பட்டாபிஷேக மகோற்சவத்தை நடத்தினார்கள். அதன்பிறகு பதினோராயிரம் ஆண்டுக்காலம் யாவரும் குறைவற்றுக் களித்தும் வரும்படி ஸ்ரீராம பத்திர பகவான் சகல பூமண்டலத்தையும் ஆண்டு வந்தார்.

இளவரசாய் இருந்த பரதாழ்வான் மிகவும் கொடியவர்களாக இருந்த மூன்று கோடி கந்தர்வர்களைச் சங்கரித்து, அவர்களது வசமாயிருந்த ராஜ்யங்களைத் தமதுக் கைவசஞ் செய்து கொண்டார். சத்துருக்கினாழ்வானும் யமுனை ஆற்றின் கரையில் ஒரு பெரிய வனத்தில் இருந்துகொண்டு, மிகக்கொடுமை செய்து வந்த மது புத்திரனான லவணாசுரனைச் சங்கரித்து அந்தக் காட்டை அழித்து மதுரை என்ற ஒரு திவ்ய நகரத்தை நிர்மாணித்தருளினார். இளையப்பெருமாளான லக்ஷ்மணரோ ஸ்வாமியை விட்டு இணை பிரியாமல் கைங்கர்ய நிரதராய் எழுந்தருளியிருந்தார். இவ்விதமாக ஸ்ரீராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்கினர் என்ற இந்த நால்வரும் லோகத்திற்கு இதத்தையும் தருமத்தையும் நிலைநாட்டி தமதுலகத்துக்கு எழுந்தருளினார்கள். அந்த நால்வரிடத்திலும் மிகவும் பக்தியுடையவராக இருந்த கோசல நாட்டாரும் அவர்களுடைய சாலோக்கியத்தை அடைந்தார்கள். ஸ்ரீராமபிரானுக்கு குசன் லவன் என்ற இரண்டு குமாரரும், லக்ஷ்மணருக்கு அங்கதன், சந்திரகேது என்ற இரு புதல்வர்களும், பரதருக்கு தக்ஷகன், புஷ்கலன் என்ற இரு குமாரர்களும், சத்துருக்கினருக்கு சுபாகு, சூரசேனன் என்றிரு மக்களும் உண்டானார்கள். அவர்களில் ஸ்ரீராமகுமாரனான குசனுக்கு அதிதி என்ற குமாரன் பிறந்தான். அதிதிக்கு நிஷதன், நிஷதனுக்கு அனலன், அனலனுக்கு நபசு, நபசுக்கு புண்டரீகன்; புண்டரீகனுக்கு ஷேமதனுவா, அவனுக்கு தேவானீகன், அவனுக்கு அகீனகு, அவனுக்கு குரு எனப்பிறந்தார்கள். குருவின் மகன் பாரியாத்திரன், அவன் மகன் பலன், அவன் மகன் சலன், அவன் மகன் உற்தன், அவன் மகன் வச்சிரநாபன், அவன் மகன் சங்கணன், அவன் மகன் வியுக்ஷிதாசுவன், அவன் மகன் விசுவயஹன், அந்த விசுவயஹனின் மகனாகிய ஹிரண்யநாபன் மகாயோகியரில் உயர்ந்தவனாய், ஜயிமுனியின் சீடராகிய யாக்ஞவல்கிய மகாமுனிவரிடமிருந்து யோக வித்தையைக் கற்றான். அவனுக்கு தனயன், புஷ்யன் அவனுக்கு துருவசந்தியும், துருவசந்திக்கு சுதரிசனனும், அவனுக்கு அக்னிவர்ணனும், அக்கினிவர்ணனுக்கு சீக்கிரகனும், அவனுக்கு மருவென்பவனும் பிறந்தார்கள். மரு என்பவன் தன் யோகசக்தியால் இமயமலையின் பக்கத்திலுள்ள கலாபக் கிராமத்தில், இப்போதும் யாருக்கும் தெரியாமல் வாசஞ்செய்து கொண்டு இருக்கிறான். அவன் தான் இனிவரும் கிருத யுகத்தில் சூரிய வமிசத்து அரசர்களில் முதல்வனாவான். அவனுக்கு பிரசுசுருகன் என்ற மகன் ஒருவனுண்டு. அவனுக்கு சுசந்தி என்பவன் மகன். அவனுக்கு அமர்ஷன் அவனுக்கு ஸஹஸ்வான்; அவனுக்கு விசுவபவன் அவனுக்கு பிரகத்பலன் அவன் பாரதப்போரில் அர்ச்சுனனது மகனான அபிமன்யுவினால் கொல்லப்பட்டான். இவ்விதமாக இஷ்வாகுவின் குலத்தில் பிறந்த அரசர்களில் முக்கியமான சிலரைப் பற்றிச் சொன்னேன். இவர்களது வரலாறுகளைக் கேட்பதால், பாவங்கள் தீரும். எவன் இந்த வரலாறுகளை சிரத்தையோடு படிக்கிறானோ அவன் இம்மையில் தனக்கு வேண்டியவைகளைப் பெற்று இறுதியில் சுவர்க்கத்தையும் அடைவான்!

————–

5. நிமி வம்ச வரலாறு

இஷ்வாகுவின் மகனான நிமி என்பவன் ஆயிரம் ஆண்டுகள் நடத்த வேண்டிய ஒரு யாகத்தை ஆரம்பித்து, அதற்கு வசிஷ்ட முனிவரை ஹோதாவாக நியமித்தான். அப்போது வசிஷ்டர் அவனை நோக்கி, அரசனே! தேவேந்திரன் ஐநூறு ஆண்டுகள் வரையிலும் தொடர்ந்து செய்யவேண்டிய யாகத்துக்கு என்னை முன்னமே வரித்திருப்பதால், அதுவரையில் நீ பொறுத்திருக்க வேண்டும். அதுமுடித்ததும் உடனே நான் வந்து உன் யாகத்தையும் நிறைவேற்றுகிறேன் என்று சொன்னார். அதைக் கேட்டதும் நிமி மன்னன் மவுனமாக இருந்து விட்டான். வசிஷ்டர் தம் இஷ்டப்படி அரசன் ஒப்புக்கொண்டான் என்று நினைத்து, இந்திரனுடைய யாகத்தைச் செய்விக்கச் சென்றார். ஆனால் நிமி மன்னனோ அந்தக் காலத்திலேயே கவுதமர் முதலிய முனிவர்களைக் கொண்டு தனது யாகத்தை நடத்தினான். வசிஷ்டர் இந்திரனுடைய யாகத்தை நடத்தி முடித்துவிட்டு நிமியினுடைய யாகத்தைச் செய்விக்க வேண்டுமே என்று வெகு துரிதமாக வந்தார். வந்தவர் அந்த யாகத்தை கவுதமரைக் கொண்டு நிமி மன்னன் முன்னரே நடத்தி விட்டான் என்று தெரிந்து கொண்டு, அவ்வரசன் தூங்கிக் கொண்டு இருக்கும்போதே அவனுக்கு ஒரு சாபமிட்டார். அதாவது நீ என்னை அவமதித்து இந்த யாக காரியத்தைக் கவுதமருக்குக் கொடுத்ததால் உனக்கு உடம்பே இல்லாமல் போகக் கடவது! என்று சபித்தார். அதன் பிறகு விழித்துக் கொண்ட நிமி மன்னன் தனக்கு வசிஷ்டர் சாபமிட்டதை அறிந்து, தானும் குருவுக்கு ஒரு சாபமிட்டான். இந்தத் துஷ்ட குருவானவர், என்னோடு பேசி நடந்தவற்றின் நியாயத்தையறியாமல் தூங்கிக் கொண்டிருந்த என்னை சபித்ததால் அவருக்கும் உடம்பில்லாமல் போகக் கடவது! என்று பதில் சாபமிட்டு விட்டான். பிறகு நிமி மன்னன் தனது உடலை விட்டு விட்டான். வசிஷ்ட மகரிஷியும் தம் உடலை விட்டு விட்டு ஊர்வசியைக் கண்டதனால் சிதறி விழுந்திருந்த மித்திரா வருணருடைய வீரியத்திற் பிரவேசித்து, வேறு தேகத்தை எடுத்துக் கொண்டார். நிமி மன்னனின் தேகமோ, திவ்விய பரிமளத் தைலத்தில் சீர்படுத்தப்பட்டு சுருங்குதல் முதலிய குற்றங்களில்லாமல் அப்போது தான் இறந்தவனுடைய தேகத்தைப் போலிருந்தது, இது இப்படியிருக்க அந்த யாகத்தின் முடிவில், பாகம் பெறுவதற்காக வந்த தேவர்களை நோக்கி, யாகத்தை நடத்திய ருத்துவிக்குகள், நீங்கள் எஜமானனுக்கு ஒரு வரங்கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு தேகமற்ற நிமி சொல்லலானான். ஓ தேவர்களே! நீங்கள் சகல சம்சார துக்கங்களையும் போக்கக் கூடியவர்கள். ஆன்மாவும் உடலும் தனித்தும் பிரிந்திருப்பதைக் காட்டிலும் மனிதனுக்கு வேறு துக்கம் உண்டோ? ஆகையால் எனக்குத் தேகம் வேண்டும். ஆயினும் இந்தச் சரீரத்தில் வசிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை எல்லோருடைய கண்களிலும் நான் வசிக்க விரும்புகிறேன். அத்தகைய வரத்தை நீங்கள் எனக்கு தரவேண்டும் என்றான். தேவர்கள் அவன் விரும்பியபடி அவனைச் சகல ஜனங்களுடைய கண்களிலும் இருக்கச் செய்தார்கள். அதுமுதல் சகல பூதங்களும் கண்களை இமைக்கலாயினர்.

அந்த நிமியரசனுக்கப் புத்திரனில்லாமற் போனதால் முனிவர்கள் அனைவருங்கூடி, ராஜ்யத்துக்கு அரசன் இல்லாமல் போனால் ஏற்படக்கூடியத் துன்பத்துக்குப் பயந்து, அவனுடைய உடல் அரணியில் இட்டு கடைந்தார்கள். அதிலிருந்து ஒரு குமாரன் பிறந்தான். அவன் அவ்விதமாகப் பிறந்ததனால் அவனுக்கு ஜனகன் என்ற பெயர் உண்டாயிற்று. மேலும் அவனுடைய தந்தை விதேகனாகையால் வைதேகன் என்றும், கடையப்பட்டதனாலே மிதி என்றும் பெயர்கள் உண்டாயின. அவன் பெயராலேயே அவனுடைய நகரத்துக்கு மிதிலை என்றும் அவன் பிதாவின் பெயரால் அவனது ராஜ்யத்துக்கு விதேக தேசம் என்ற பெயரும் உண்டாயிற்று. அந்த ஜனகனுடைய மகன், உதாவசு அவன் மகன் நந்திவர்த்தனன் அவன் மகன் கேது, அவனுக்கு தேவராதன், அவனுக்குப் பிருகதுத்தன்; அவனுக்கு மகாவீரியன், அவனுக்கு சுதிருதி, அவனுக்கு திருஷ்டகேது, அவனுக்கு அரியசுவன், அவனுக்கு மரு, அவனுக்கு பிரதிகன், அவனுக்கு கிருதரதன், அவனுக்கு தேவமீடன் என்றவாறு புதல்வர்கள் பிறந்தார்கள். தேவமீடனின் புதல்வன் விபுதன் அவன் மகன் மகாதிருதி. அவன் மகன் கிருதராதன், அவனுக்கு மகாரோமா, மகாரோமாவுக்கு சுவர்ண ரோமா, அவன் மகன் இருசுவ ரோமா அவனது மகன்தான் சீரத்வஜன் என்ற ஜனக மகாராஜனாகும். அவர் வேள்விச் சாலைக்காகப் பூமியை உழும் போது, கலப்பையின் வழியிலே சீதாபிராட்டி அவதரித்தாள். சீரத்வஜ மகாராஜனின் தம்பியான குசத்துவஜன் என்பவன், சாங்காசியம் என்ற பட்டணத்தை ஆண்டுவந்தான். அந்த சீரத்வஜ ஜனகருடைய மகன் பானுமான், அவனுக்கு சுத்தியும்னன்; அவனுக்கு சுசி, அவனுக்கு ஊர்ஜன் என்ற மகன் பிறந்தான். அவன் மகன் சதத்துவசன், அவனுக்கு கிருதி, அவன் மகன்ரஞ்சனன், அவன் மகன் புருஜித்து, அவன் மகன் அரிஷ்டநேமி, அவன் மகன் சுருதாயு, அவன் மகன் சுபார்சுவன், அவன் பிள்ளை சிருஞ்சயன், அவனுக்கு ÷க்ஷமாவீ, ÷க்ஷமாவீக்கு அனேனசு, அவனுக்கு பவுமரதன், அவனுக்கு சத்தியரதன், அவனுக்கு உபகு, உபகுவுக்கு உபகுப்தன் அவன் மகன் சுவரகதன், அவனுக்கு சுவாங்கன், சுவாங்கனுக்கு சுபானன், அவனுக்குச் சுவர்ச்சசு, அவனுக்கு சுபாஷன், அவன் மகன் சுசுருதன். அவன் மகன் ஜயன், ஜயனின் மகன் விஜயன். விஜயனின் மகன் இருதன், இருதனின் மகன் சுநயன், சுநயனுக்கு வீதஹவ்யன், அவன் மகன் திருதி, திருதியின் மகன் பகுளாசுவன், அவன் மகன் கிருதி, இந்தக் கிருதியினிடம் முடிந்தது ஜனக வம்சம். இவர்கள் தாம் மிதிலை நகரத்தை ஆண்டு வந்த அரசர்களாவார்கள். இவர்களில் பலர் ஆத்ம வித்தையில் நிஷ்டை பயின்ற மகானுபாவர்கள்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் மூன்றாவது அம்சம்—-இரண்டாம் பாகம் —

February 28, 2021

9. வாழ்க்கையின் நான்கு தருமங்கள்
10. விரத விவாகக் கிரியைகள்
11. இல்லற ஒழுக்கம்
12. நல்லொழுக்கம்
13. சிரார்த்த வகைகள்
14. சிரார்த்த காலம்
15. சிரார்த்தம் செய்யும் முறைகள்
16. சிரார்த்த பொருட்கள்
17. நக்கின சொரூபம்
18. ஜைன பவுத்த மத பிரவர்த்தனையும், சததனுவின் கதையும்

————-

9. வாழ்க்கையின் நான்கு தருமங்கள்

சகர மாமன்னனே! கேட்பாயாக. முதலில் பிரும்மசரியா சிரம தர்மத்தைச் சொல்கிறேன், சிறுவனாக இருப்பவன் உபநயனம் செய்யப்பெற்று, விரத நியமங்களோடு வேதங்களை ஓதிக்கொண்டு, குருவின் இல்லத்திலேயே இருக்க வேண்டும். சவுசாசார சம்பன்னனாய்க் குருவுக்கு பணிவிடை செய்ய வேண்டும். விரத அனுஷ்டானமுடையவனாய் வேதங்களை ஓதவேண்டும். காலையிலும் மாலையிலும் சூரியனையும் அக்கினியையும் மனம் ஒன்றிப் பூஜிக்க வேண்டும். குருவை வணங்கி வரவேண்டும். சீடன் தன் குருநாதர் நிற்கும் அளவில் தானும் நிற்கவும், அவர் போகும்போது தானும் உடன் செல்லவும், அவர் மேலே உட்கார்ந்தால் கீழே உட்காரவும் வேண்டும். ஒருபோதும் அவருக்கு விரோதமான காரியங்களைச் செய்யக்கூடாது அவர் ஓதென்று கட்டளையிட்டவுடனேயே அவருக்கு எதிரில் நின்றுவேறு நினைப்பின்றி வேதத்தை ஓதி உணரவேண்டும். அதன் பிறகு, குருவின் அனுமதியைப் பெற்று பிøக்ஷயினால் தான் கொண்டு வந்த அடிசிலை உண்ண வேண்டும். ஆசிரியர் நீராடியபிறகு அந்த நீரில் சீடன் நீராட வேண்டும். தினந்தோறும் காலையில் சமித்து, தருப்பை முதலியவைகளைக் குருவுக்கு கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இவ்விதமாகக் குருவினிடத்தில் ஓதவேண்டிய வேதங்களை அந்தந்த ஞானம் வருமளவும் ஓதிய பிறகு அவரிடம் அனுமதி பெற்று குருவுக்கு காணிக்கை அளித்துவிட்டுக் கிருகஸ்தாசிரமத்துக்குப் போக வேண்டும். இனி கிருகஸ்தாசிரமம் என்ற இல்லற வாழ்க்கையின் ஒழுக்கத்தைச் சொல்கிறேன். பிரம்மச்சரியத்தைக் கழித்த பிறகு விதிப்படி ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு தனக்குத் தகுந்த தொழிலில் திரவியஞ்சம்பாதித்து, இல்லற வாழ்வை நடத்த வேண்டும். பருவக்காலங்களில் பிண்டம் இடுவதினாலும் எள்ளுடன் கூடிய தண்ணீராலும் பிதுர்க்களையும், யாகங்களினால் தேவர்களையும், அன்னங்களினால் அதிதிகளையும், வேத அத்தி யமனத்தினால் முனிவர்களையும், சந்ததியினால் பிரமதேவனையும் பூதபலி கர்மத்தால் பூதங்களையும், வாத்சலியம் அன்பினால் சகல உலகங்களையும் திருப்திப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இவ்விதம் செய்து வருகிற கிரஸ்தன் தனது சுக கர்மங்களினால் சம்பாதிக்கப்பட்ட அநேக புண்ணிய உலகங்களை அடைவான். பிøக்ஷயெடுத்துண்ணும் துறவிகள் பிரமச்சாரிகள் யாருண்டோ, அவர்கள் யாவரும் கிருகஸ்தனிடத்திலேயே நிலைபெற்றிருக்கின்றனர். ஆகையால் இந்த இல்லறமானது உயர்ந்ததாகும். மேலும் வேதங்களைக் கற்பதற்காகவும் தீர்ந்த ÷க்ஷத்திர யாத்திரைக்காகவும் பூமியைப் பார்ப்பதற்காகவும், பிராமணர்கள் சுதேசம் விட்டுத் திரிந்து கொண்டிருக்கின்றனர். சிலர் ஓரிடம் என்றில்லாமலும் ஆகாரமில்லாமலும் அஸ்தமனமாகும் இடமே வீடாகக் கொண்டு தங்குவோராகத் திரிந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகையோர் அனைவருக்கும் இல்லறத்தோரே சார்பாகவும், ரட்சிப்போராகவும் இருக்கின்றனர். இத்தகைய தேசாந்திரிகள் வருமளவில் நல்வரவு கேட்பது போன்ற இனிமையான பேச்சுக்களை இல்லறத்தோன் பேசி, ஆசனம், போஜனம், சயனம் முதலியவற்றை வழங்கவேண்டும். அதிதியானவன் எவனிடம் வந்து தன்னாசை கெட்டுத் திரும்பிப் போகிறானே, அந்த அதிதியானவன் அந்த இல்லறத்தானுக்குத் தனது பாவத்தைக் கொடுத்து விட்டு, அவனது புண்ணியத்தைத் தான் கொண்டு போகிறான்.

இல்லறத்தில் இருப்பவனுக்குப் பிறரை அவமதித்தல், அகங்காரம், டம்பம் கொடுத்து விட்டோமே என்ற மனத்தவிப்பு அடித்தல்; வைதல் இவையெல்லாம் மேன்மையாக மாட்டா! இத்தகைய கெட்ட குணங்களில்லாமல் நற்குணமுடையவனாய்; எந்த கிரஸ்தன் தனக்குரிய தர்மங்களை நன்றாகச் செய்து வருகின்றானோ அவன் சகல இடையூறுகளிலிருந்தும் விடுபட்டு உத்தமமான உலகங்களை அடைவான். இப்படிக் கிருஸ்தா சிரமத்திலிருந்து செய்ய வேண்டியவைகளைச் செய்து; வயது முதிர்ந்தவுடன் தனது புத்திரர்கள் வசம் தனது பத்தினியை ஒப்புவித்தாகிலும் அவளையும் தன்னுடன் அழைத்து கொண்டாகிலும் வனத்திற்குச் செல்லவேண்டும். அவ்வாறு செல்லுதலே வானப் பிரஸ்தாசிரமமாகும். இனி; வானப்பிரஸ்தாசிரம தர்மங்களைச் சொல்கிறேன். வானப்பிரஸ்தனானவன் இலை, கனி, கிழங்கு வகைகளைப் புசித்துக் கொண்டு தாடியும் சடையும் தரித்தவனாய், எல்லாப் பொருள்களிலும் பற்றற்று முனிவனாய் அந்தக் காட்டில் தரையில் படுத்துக் கொள்ள வேண்டும். முனிவனாக இருப்பவன், தோலையாகிலும் நாணற்புல் மரவுரி முதலியவற்றையாகிலும் உடுக்க வேண்டும். முச்சந்திகளிலும் நீராட வேண்டும். அந்த வானப்பிரஸ்தனுக்குத் தேவதா ஆராதனையும் ஹோமமுமான காரியங்களாகும். அரசே! முனிவனானவன் அப்பியஞ்சனம் செய்து கொள்ள வேண்டுமாயின் காட்டெண்ணையினால் செய்து கொள்வதே தகுதியானதாகும்! தவஞ்செய்தலும் குளிர்வெப்பம் முதலியவற்றை சகித்துக் கொள்வதும் முனிவனுக்குச் சிறப்பான தர்மங்களாகும். இத்தகைய முறையில் எந்த முனிவன் வானப்பிரஸ்த தருமத்தை அனுஷ்டிப்பானோ, அவனது தீராத தோஷங்களையெல்லாம் அக்கினி தகிப்பது போலத் தகித்து நிலையான உலகங்களை அடைவான். நான்காவது சந்நியாசிக்குரிய ஆசிரமம் என்று சொல்வார்கள். எவன் புத்திரக்களத்திராதிகளிலும் பொருள் முதலானவைகளிலும் மனப்பற்றில்லாமல் இருக்கிறானோ அவன் நான்காவதாச் சிரமத்தில் பிரவேசிக்க வேண்டும். இவ்விதமாகக் காமக்குரோத மாச்சரியங்கள் இல்லாமல் சந்நியாசம் பெற்றுத் தர்மார்த்த தர்மங்களுக்கு உரிய சகல முயற்சிகளையும் விட்டு; பிரம்மஞான நிஷ்டை செய்து வரவேண்டும். அந்தச் சந்நியாசி நண்பரிடமும் பகைவரிடமும் ஒரேவிதமான மித்திர பாவத்துடனிருந்து, மிருகங்கள், பறவைகள் முதலிய பலவற்றுக்கும் வாக்கு, மனம், காயம் என்ற மூன்றிலும் துரோகஞ் செய்யாமல் இருக்க வேண்டும். புத்திராதித் தொடர்புகளையும் விட்டுவிட வேண்டும். கிராமத்தில் ஓரிரவும், பட்டணத்தில் ஐந்து இரவுகளும்; இப்படி யாக இடத்துக்குத் தக்கவாறு வாசஞ்செய்து கொண்டு ஒருவருடைய பகைமையோ; நட்போ வராதவாறு நடந்து கொள்ள வேண்டும். யதியானவன்; வீட்டில் இருப்போரெல்லாம் புகிக்கும் காலம் அறிந்து சாதி குலாச்சாரங்களில் சிறந்தவர் வீட்டுக்கு யாசகத்துக்குப் போகலாம். சந்நியாசியானவன் காமக்குரோத, லோப மதபேதங்களை விட்டு விட்டு ஒன்றிலும் எனது என்ற அபிமானம் இல்லாதவனாக இருக்க வேண்டும். எந்தத் துறவி சகல, பூதங்களுக்கும் அபயங்கொடுத்துச் சஞ்சரிக்கிறானோ; அவனுக்கு சகல பூதங்களாலும் பயமில்லை. இப்படி பிராமணன் துறவியாகித் தன்னுடைய அக்கினி ஹோத்திரத்தை, தனது சரீரத்திலேயே இருக்கச் செய்து தன் சரீரத்தில் இருக்கும் அக்கினியைக் குறித்து, தன் முகமாகிய குண்டலத்தில், பிøக்ஷயினால் கிடைத்த அவிசுகளை விதிப்படி ஓமஞ்செய்து வருவானாகில் அவன் அக்கினி சயனஞ் செய்தவர்கள் அடையும் உலகங்களை அடைவான். இது சாதாரண சந்நியாசிகளைக் குறித்ததாகும். விசேஷ சந்நியாசிக் கிரமத்தைக் கேட்பீராக. எவன் நிச்சய புத்தியுள்ளவனாய், தூய்மையாளனாய் இந்தச் சந்நியாசத்தை முறைப்படி ஆஸ்ரயிக்கிறானோ அவர் எரிகரும்பில்லாத அக்கினியைப் போல, மிகவும் சாந்தமான ஜோதியாய் விளங்கும் பிரமலோகத்தை அடைவான்.

——————-

10. விரத விவாகக் கிரியைகள்

சகர மாமன்னன், அவுர்வமா முனிவரை நோக்கி, முனிவரே வருணாசிரம தர்மங்களைத் தாங்கள் கூறியருளினீர்கள். இனி, புருஷனுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைக் கூறவேண்டும் என்றான். அரசனே; நீ கேட்ட தருமங்களைச் சொல்கிறேன். கவனமாகக் கேட்பாயாக. தந்தை முதலில் காப்பாதானம் முதலியவற்றைச் செய்து; பிள்ளை பிறந்தவுடன் அதற்கு ஜாதகர்மாதிகளான சகல கிரியைகளையும் அப்யுதயங்களாயும் செய்ய வேண்டும். பிராமணர்கள் தேவக் கிரியையாகிலும் நாந்தீ பிதுர்க்கிரியையாகிலும் செய்யும்போது பிராமணர்களை இரட்டையாகவும்; கிழக்குமுகமாக எழுந்தருளச் செய்து; திருப்தியடையும்படி திருவமுது செய்விக்க வேண்டும். நாந்தீ முகர்களான பிதுர்க்களைக் குறித்து தயிர், யவங்கள், இலந்தை இவற்றோடு கலந்த பண்டங்களை மகிழ்ச்சியோடு தேவ தீர்த்தத்தினாலேயாகிலும் பிரஜாபத்திய தீர்த்தத்தினாலே யாகிலும் பிரதக்ஷிணமாகக் கொடுக்க வேண்டும். இதுபோலவே மற்ற விருத்திகளிலும் செய்வது அவசியம். பிறகு தகப்பன் பத்தாவது நாள் முதலாக சாஸ்திரங்களில் சொல்லிய நாட்களில் தகப்பனே அந்தப் பிள்ளைக்குப் பெயர் சூட்ட வேண்டும். தன் குலதெய்வத்தின் பெயரையாவது, தன் மூதாதையரின் பெயரையாவது முன்னிட்டதாயும், புருஷனுக்குப் புருஷவாசகமாயும், ஸ்திரீக்கு ஸ்தீரிவாசகமாயும், பொருட் குறைவற்றதாயும், வெட்கமாகவோ, அருவருக்க வைப்பதாகவோ இராததாகவும், சமமான எழுத்துள்ளதாயும், மிக நீளாததாயும், மிகவும் குறுகாததாயும், அதிகக் கடினமான எழுத்தற்றதாயும், எளிதில் அழைக்கக் கூடியதாயும் உள்ள பெயரை வைக்க வேண்டும். அந்தப் பெயரானது பிராம்மணருக்கு சர்வ என்ற சொல்லோடும்; க்ஷத்திரியருக்கு வர்ம என்ற சொல்லோடும்; வைசியருக்கு குப்த என்ற சொல்லோடும், சூத்திரருக்குத் தாஸ என்ற சொல்லோடும் இறுதியில் அமைந்ததாக இருக்க வேண்டும். விஷ்ணுசர்மா; இந்திர வர்மா, சந்திரகுப்தன், ஹரிதாஸ் என்பது போலப் பெயரிட வேண்டும்.

இதுபோலப் பெயரிட்ட பிறகு, உபநிஷ்கிரமணம் முதல் உபநயனம் ஈறாகவுள்ள சம்ஸ்காரங்களைப் பிதாவினால் செய்யப் பெற்றவுடன், அந்தப் பிள்ளை குருவிடம் சென்று, முன் சொல்லிய விதிப்படி வேதசாஸ்திரங்களை கற்றுத் தேர்ந்து குருவுக்குத் தக்ஷிணை கொடுத்து; வேத விரதங்களை அனுஷ்டித்து; கிருதஹஸ்தாசிரமத்துக்குப் போக இச்சிப்பாணாகில்; அவன் திருமணஞ்செய்து கொள்ள வேண்டும். அல்லது நைஷ்டிக பிரமச்சாரியாகக் காலத்தைக் கழிக்க வேண்டும். அப்படிப் பிரமச்சாரியாக வாழ்ந்தால்; குருவுக்கோ அல்லது குருபுத்திரர்களிடமோ பணிவிடைசெய்து வரவேண்டும். அதுவுமில்லையெனில் தன் விருப்பம் போல வானப்பிரஸ்தனாகவோ, சந்நியாசியாகவோ ஆகலாம். ஒருவன் திருமணஞ் செய்துகொள்ளும் விஷயத்தில்; தன் வயதுக்கு மூன்றில் ஒரு பங்குக்கு மேற்படாத வயதுள்ள பெண்ணாகவும், அதிக அடர்த்தியான கூந்தலும் மிகக்குறைவான கூந்தலும் இல்லாதவளாகவும், அதிக கறுப்பாகவோ, வெளுப்பாகவோ இல்லாத நல்ல நிறமுடையவளாகவும், அளவுக்கு மேற்படாமலும் குறையாமலும் உள்ள அவயவங்கள் வாய்ந்தவளாகவும், சூத்திராதிகளால் வளர்க்கப்படாதவளாகவும், இழிகுலத்தில் பிறவாதவளாகவும், உடம்பில் மிகவும் ரோமங்கள் மொய்த்திராதவளாகவும், வியாதியில்லாதவளாகவும்; துஷ்டத்தனமும் துஷ்ட வார்த்தைகளும், அற்றவளாகவும் குஷ்டம் முதலிய நோயுடைய தாய் தந்தையருக்குப் பிறவாதவளாகவும்; மீசை முதலான புருஷ லட்சணங்கள் இல்லாதவளாகவும்; ஆண் பிள்ளையைப் போன்ற தோற்றம் இல்லாதவளாகவும்; பருத்த கனமான குரலில்லாதவளாகவும், மெலிவற்றவளாகவும், காக்கை போன்ற குரலற்றவளாகவும், இமைகளில் மயிர்ச் செறிவுள்ளவளாகவும், வட்டமாகவோ, வேறுவிதமாகவோ அவலக்ஷணப்படாத நேத்திரங்களைக் கொண்டவளாகவும், ரோமம் நிறைந்த கணைக்கால்களும் உயர்ந்த புறக்கால்களும் இல்லாதவளாகவும்; சிரிக்கும்போது கபோலங்கள் பாழி போல் குழிவடையாதவளாகவும் உக்கிரமான காந்தியும் மிகச் சிவந்த கண்களும், மிகப் பெருத்த கைகால்களும் இல்லாதவளாகவும் இரண்டு புருவங்களும் சமமாக அமைந்தவளாகவும் அப்புருவங்கள் நெருங்கி ஒன்றோடொன்று இணைந்திராதவளாகவும் மிகவும் இடைவெளியுள்ள பற்களற்றவளாகவும், கொடுமையும் பயங்கரமுமான தோற்றமில்லாதவளாகவும் உள்ள பெண்ணையே திருமணஞ் செய்துகொள்ள வேண்டும். மேலும் அந்தப் பெண்ணின் தாய்வழியில் ஐந்து தலைமுறைக்கும் தகப்பன் வரிசையில் ஏழுதலைமுறைக்கும் உட்படாதவளாக இருக்கவேண்டும். இத்தகைய கன்னிகையை நியாயமான விதிமுறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்தத் திருமணம் பிராம்மம் தைவம் ஆரிஷம் பிரஜாபத்தியம், ஆசுரம் காந்தருவம் ராக்ஷசம், பைசாசம் என்ற எட்டுவகையாகும். இவற்றினுள் எந்த வருணத்துக்கு எது தகும் என்று முனிவர்கள் விதித்துள்ளனரோ அந்த விவாகத்தையே செய்யவேண்டும். மற்றவற்றை ஒதுக்கிவிடவேண்டும். இவ்விதமாகத் திருமணஞ் செய்து கொண்டவளுடன், யாதொரு குறைவுமில்லாமல் இல்லறம் நடத்தி வருபவன் சுகமும் பயனும் பெறுவான்.

—————

11. இல்லற ஒழுக்கம்

சகர மாமன்னன் அவுர்வ முனிவரை நோக்கி, சுவாமி! இல்லறத்தான் கடைபிடிக்க வேண்டிய நல்ல ஒழுக்கங்களைப் பற்றி நான் அறியவிரும்புகிறேன். எத்தகைய நல்லஒழுக்கங்களில் ஒரு மனிதன் இம்மையிலும் மறுமையிலும் துன்பமடைய மாட்டானோ அத்தகையவற்றை எனக்குச் சொல்லியருள வேண்டும் என்றான். அரசனே! நல்ல ஒழுக்கமுறைமையைச் சொல்கிறேன் கேட்பாயாக. நல்லொழுக்கமுடையவனால் இம்மை மறுமைகள் சாதிக்கப்படும். சாதுக்கள் என்போர் தோஷம் இல்லாதவர்கள். அவர்களுடைய ஒழுக்கமே சதாசாரம் எனப்படும். இவற்றைச் சொன்னவரும் செய்தவரும் சப்த ரிஷிகளும் மனுக்களும் பிரஜாயதிகளுமாவர். புத்திசாலியாக இருப்பவன் பிராம்ம முகூர்த்தத்தில் விழித்து எழவேண்டும். மனதிலே தருமத்தையும் அதனோடு விரோதப்படாத அர்த்தத்தையும் சிந்திக்கவேண்டும். இந்த இரண்டுக்கும் எந்தவிதமான விரோதமும் உண்டாக்காத காமத்தைச் சிந்திக்கலாம். இப்படி சிந்திப்பதால் இம்மை மறுமைப் பயன்கள் கெடாமல் இருக்கும். தர்ம விரோதிகளான அர்த்த காமங்களை விடவேண்டும். தருமமேயானாலும் பின்பு சுகத்தையுண்டாக்காததாயும் லோக விரோதமாயும் இருக்குமானால் அதை விட்டுவிட வேண்டும். இவ்விதமாகச் சிந்தித்து எழுந்த பிறகு, நைருதி மூலையில், அம்பு பாயுமளவு தூரத்துக்கு அப்பால் சென்று, ஜலமலாதிகளைக் கழிக்க வேண்டும். வீட்டிலேயே கால் கழுவுதல் முதலிய அசுத்தமான காரியங்களைச் செய்யக்கூடாது.

தனது நிழல், மரத்து நிழல், பசு, சூரியன், அக்கினி, காற்று, பெரியோர் ஆகியவைகளுக்கு எதிராக இருந்து மலஜலங் கழிக்கலாகாது. உழுத நிலத்திலும் பயிர்களின் நடுவிலும், பசுக்கள் இருக்குமிடத்திலும், ஜன சமூகத்திலும் வழியிலும் ஆற்றங்கரைகளிலும், தண்ணீரிலும் மயானத்திலும் மலஜலங் கழிக்கலாகாது. பூணூலை காதில் சுற்றிக் கொண்டு வஸ்திரத்தால் தலையை மூடிக்கொண்டு, பகலில் வடக்கு முகமாகவும், இரவில் தெற்கு முகமாகவும் இருந்து மல ஜலாதிகளைக் கழிக்க வேண்டும். இவ்விதம் செய்யச் சங்கடமாக இருந்தால் தக்கவாறு செய்யலாம். அந்த இடங்களில் நெடு நேரம் இராமலும் ஒன்றும் பேசாமலும் காரியம் முடிந்தவுடன் செத்தைகளால் அந்த இடத்தை மறைத்துவிட்டு வரவேண்டும். பிறகு புற்றுமண், பெருச்சாளி தோண்டிய மண், தண்ணீருக்குள் இருக்கிற மண், சவுசஞ் செய்து மிகுந்த மண், அசுத்த பூமியிலிருக்கும் மண், மிகச்சிறிய பூச்சிகளோடு கூடிய மண், கலப்பையால் கிளப்பப்பட்ட புழுதி மண், ஆகியவற்றை விட்டு வேறுமண்ணைக் கொண்டு வந்து, முதலாவதாக அசுத்தத்தின் நாற்றமும் பற்றும் போகும்படிச் சவுசம் செய்து, பிறகு சுத்திக்காக இலிங்கத்தில் ஒருமுறையும், அபானத்தில் மூன்று முறையும் இடக்கையில் பத்துத் தரமும், மறுபடியும் இரண்டு கைகளிலும் ஏழு முறைகளும் மண்ணிட்டுச் சுத்தமான நீரினால் கழுவிக்கொண்டு, சுத்தமாயும் துர்க்கந்தமற்றதாயும், குமிழி கிளம்பாததாயுமுள்ள ஜலத்தினால் மும்முறை ஆசமனஞ்செய்து தலையைத் துடைத்து, சிரசில் புரோஷித்தல், இருதயம் முதலான அங்கங்களைத் தொடுதல் முதலிய விதிகளை முறைப்படிச் செய்து, பிறகு அகமர்ஷண சூத்த முதலான மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே நீராடி, சந்தியா வந்தனம் முதலிய கிரியைகளை விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும். பிறகு தலை ஆற்றி, அலங்கரித்தல் முதலிய மங்களங்களைச் செய்து கொண்டு தனக்கு விதித்திருக்கிற வகையால் திரவிய சம்பாதனை செய்தல் வேண்டும். சோமஸ்ம்ஸ்தைகள், ஹவிஸ் ஸம்ஸ்தைகள், பாக ஸம்ஸ்தைகள் என்ற யாகங்களெல்லாம் திரவியத்தைக் கொண்டே செய்ய வேண்டியவைகளாகையால், பிராமணன் தனத்தைச் சம்பாதிக்க வேண்டும். நியாயமான முறையில் தனத்தைச் சம்பாதிக்க முயற்சிசெய்து, நடுப்பகலானவுடன் மறுபடியும் நீராட வேண்டும். எப்போதும் நதிகள், நதங்கள், தடாகங்கள் இவற்றின் நன்னீரிலே நீராட வேண்டும். இவைகள் கிடைக்காமற்போனால் கிணற்று நீரை எடுத்துக் கொண்டாகிலும் அதற்கும் சக்தியில்லாமற் போனால் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்தாகிலும் நீராட வேண்டும். இப்படிக் குளித்த பிறகு பரிசுத்தமான வஸ்திரங்களை அணிந்து தேவதைகளுக்கும், ரிஷிகளுக்கும், பிதுர்களுக்கும் அவரவர் தீர்த்தத்தினாலே விதிப்படித் தர்ப்பணஞ் செய்ய வேண்டும்.

பிதுர்க்கள், பிதாமகர், பிரபிதாமகர், மாதாமகர் மாத்ரு பிதாமகர், மாத்ரு பிரபிதாமகர் ஆகியவைகளுக்கு தர்ப்பணஞ் செய்ய வேண்டும். காமியமாய் மாதா, மாதாமகி, அவர்களுடைய தாய், குருபத்தினி, குரு, அம்மான் முதலானோர், இஷ்டமித்திரன், அரசன், இவர்களுக்கும் ப்ரீதியுண்டாகும்படி தர்ப்பணஞ் செய்யலாம். அப்போது ஜெபிக்க வேண்டியது தேவாசுர, யக்ஷ, நாககந்தருவ, ராக்ஷச, பைசாச, குஹ்யக, சித்த, கூச்மாண்ட, தருக்களும் ஜலம், பூமி, காற்று இவைகளைப் பற்றிய ஜந்துக்களும் என்னால் கொடுக்கப்படும் இந்தத் தண்ணீரால் திருப்தியடைய வேண்டும். நரகங்களில் பல யாதனைகளில் இருப்பவர்களின் சோர்வு நீங்குவதற்காக இந்தத் தண்ணீரை நான் விடுகிறேன். எனக்கு உறவினராக இருப்பவர்களுக்கும் உறவினராகாதாருக்கும் ஜன்மாந்தரத்தில் பந்துக்களாக இருந்தவர்களுக்கும் என்னிடத்தில் தண்ணீரை வேண்டுவோருக்கும் எங்கேயாவது பசி, தாகங்களால் வருந்தியிருப்போருக்கும் நான் விடுகின்ற இந்த எள்ளுந் தண்ணீரும் திருப்தியை உண்டாக்கக் கடவன என்று இவ்விதமாகச் சொல்லித் தர்ப்பணம் செய்ய வேண்டும். அரசனே! இதற்குப் பெயர் காமியத் தர்ப்பணம், இதனால் சகல லோகத்துக்கும் பிரீதியுண்டாகும். இதனால் பெரும் புண்ணியம் கிடைக்கும். இதுபோல மனப்பூர்வமாகச் சிரத்தையோடு காமிய தர்ப்பணத்தைச் செய்து பிறகு மாத்தியான்னிகம் செய்து, வேதங்களாலே பிரகாசித்துக் கொண்டு உலகப் படைப்புக் கர்த்தாவாய், மகாசுத்தியுள்ளவராய்க் கர்மசாக்ஷியாய் ஸ்ரீவிஷ்ணு தேஜோமயராய் விளங்கும் சூரிய பகவானுக்கு நமஸ்காரம் என்று சொல்லியவண்ணம் சூரியார்க்கியம் விடவேண்டும். பிறகு தன் வீட்டிலிருக்கும் தேவதா பிம்பத்துக்குத் திருமஞ்சனம், திருமாலை, தூபதீபாதிகள் தளிகைகள் முதலிய உபசாரங்களினால் ஆராதனை செய்யவேண்டும். பிறகு, பிரமாகுதி முதலானவை சுவ தேவஞ்செய்து, கிரகங்கள், காசியபர், அனுமதி இவர்களுக்கு அன்னபலியிட்டு அதன் மீதியை பிருத்துவீபர்ச் சனியர்களுக்காக அவுபாசன சமீபத்திலிட வேண்டும். பிறகு, வீட்டின் வாசலில் தாதாவிதாதாக்களுக்கும், நடுவில் பிரம்மாவுக்கும் நான்கு திசைகளில் இந்திரன், யமன், வருணன், சந்திரன் என்ற நான்கு திக்குத் தேவதைகளுக்கும், வாயுவுக்கும் பிருமா அந்தரிஷம் சூரியன் இவர்களுக்கும் வடகிழக்கில் தன்வந்தரிக்கும் அன்ன பலியிட வேண்டும். இவ்விதமாக சைசுவதேவ பூதபலி கருமத்தைச் செய்து, விசுவதேவர், பூதங்கள், விசுவபதி, பிதுர்க்கள், யக்ஷர், இவர்களை எண்ணிப் பலியிட்டு, பிறகு அன்னத்தைச் சுத்தமான பூமியிலே சகல பூதங்களுக்காகப் போட்டு தேவதைகள், மனிதர், மிருகங்கள், பறவைகள், சித்தர் யக்ஷர் நாசர் தைத்தியர், பிரேதங்கள், பிசாசுகள், மரங்கள், எறும்புகள், பூச்சிகள், புழுக்கள் முதலிய சகல ஜந்துக்களுக்கும் யார் என்னாலே கொடுக்கப்படும். அன்னத்தை இச்சிக்கிறார்களோ அவர்களுக்கும் யாருக்கும் தாய் தந்தை சுற்றத்தார் யாவரும் இல்லாமலும் அன்னங்கிடைக்காது இருக்கிறார்களோ அவர்களுக்கும் இதோ இங்கு நான் அன்னத்தைக் கொடுத்தேன். இதனால் அவர்கள் திருப்தியடைந்து சுகமாக இருக்கக்கடவர். சகல பூதங்களும் நானும் இந்த அன்னமும் எல்லாம் ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூபமேயல்லாது வேறில்லாமையால் சகல பூதங்களுக்கு சரீரமான இந்த அன்னத்தை அவர்களது சவுக்யத்துக்காக இங்கே இடுகிறேன். தேவகணங்கள் எட்டு வகையினருக்கும் ஒருவிதமான மனுஷ்ய கணமும், ஐந்து விதமான திரியக்குக் கணமுமாகிய பதினான்கு பூதகணங்களிலும் சேர்ந்த சகல பிராணிகளுக்கும் திருப்தி ஏற்பட இந்த அன்னத்தை இங்கு விடுகிறேன். இதனால் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடையக் கடவர்! என்று சொல்லிப் பூமியில் அன்னத்தைப் போடவேண்டும். இல்லறத்தானே எல்லோருக்கும் ஆதாரமானவன்.

பிறகு நாய், சண்டாளன், பறவைகள் இவைகளுக்காகவும், பதிதர்களினாலும் புத்திரர் இல்லாதவர்கள் யாரோ அவர்களுக்காகவும் நிலத்தில் அன்னத்தைப் போட வேண்டும். இப்படியெல்லாம் செய்த பிறகு கால்நாழிகையாவது அதிதிகளை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். வந்த அதிதிகளை நல்வரவு கூறி வரவேற்று, ஆசனங்கொடுத்து உபசரித்து உட்காரவைத்து அன்போடு அன்னமிடுவதனாலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பிரியமாகப் பதில் சொல்வதனாலும் அவர்கள் போகும் போது அவர்கள் பின்சென்று வழியனுப்புவதனாலும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். குலமும் பெயரும் தெரியாதவனாக வேறிடத்திலிருந்து வந்தவனாக நிலையாக ஓரூரிலே வாசஞ்செய்யாதவனாக இருக்கிற அதிதியை நன்றாக பூஜிக்க வேண்டும். அன்னிய தேசத்திலிருந்து வந்தவனாகவும் தனக்கு யாதொரு உறவும் இல்லாதவனாகவும், தரித்திரனாகவும் இருந்து போஜனம் செய்ய வந்த அதிதியை பூஜித்துப் போஜனம் செய்வித்து விடாமல் தான் மட்டுமே சாப்பிடுகிறவன் நரகத்தை அடைவான். இவ்விதமாக வந்த அதிதியைக் குலம் கோத்திரம் சாகாதிகளை விசாரிக்காமல் சதுர்முகப் பிருமனைப் போல பாவித்து பூஜிக்க வேண்டும். மேலும் சுதேசியாய்ப் பஞ்சயக்ஞ பராயணனாய், குலகோத்திர ஆசாரங்களிலே தனக்கு நன்றாய்த் தெரிந்தவனாக இருக்கிற ஒருவனையாகிலும் பிதுருக்களுக்காகப் போஜனம் செய்விக்க வேண்டும். இதுவுந் தவிர தான் உண்டு மிகுதியான அன்னத்தை தனியே எடுத்து வைத்திருந்து அதை நன்றாய் வேதமோதியிருக்கிற பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும். சந்நியாசி பிரமசாரிகளுக்கும் மும்மூன்று கவளங்களுக்கும் குறையாமல் கொடுக்க வேண்டும். விபவமிருந்தால் தடையில்லாமல் எவ்வளவாகிலும் யாவருக்கும் வேண்டியமட்டும் கொடுக்கலாம். இவ்விதமாக முன் சொன்னவர்கள் உட்பட நான்கு வகைப்பட்ட அதிதிகளைப் பூஜிப்பவன் அதிகக்கடினமான பாதங்களிலிருந்தும் நீங்குவான். அதிதியானவன் எவனுடைய வீட்டுக்கு வந்து தனது ஆசை முறிந்து திரும்பிச் செல்கிறானோ அந்தக் கிருஹஸ்தனுடைய புண்ணியங்களையெல்லாம் அவன் கொண்டு செல்கிறான். தாதவும் பிரமனும் இந்திரனும் வசுக்களும் அக்கினியும் சூரியனும் ஆகிய இவர்கள் அதிதியினிடத்தில் பிரவேசித்து அவன் கொடுக்கும் அன்னத்தைப் புசிக்கிறார்கள். ஆகையால் அதிதி பூஜை செய்ய முயற்சிக்க வேண்டும். எவன் விருந்தினனை விட்டு உண்கிறானோ அவன் அன்னத்தைப் புசிக்காமல் பாவத்தைப் புசிப்பவனாவான். பிறகு புக்ககம் செல்லாத கன்னியரையும் கர்ப்பவதியையும் கிழவர்களையும் பாலர்களையும் முன்னதாகப் புசிக்கும்படி செய்து பிறகுதான் இல்லறத்தோன் புசிக்க வேண்டும். இவர்கள் எல்லாம் உண்ணாமலிருக்கத் தான் மட்டும், முன்னதாக உண்பவன் இவ்வுலகில் பாவத்தையே சாப்பிட்டு மரணமடைந்த பின் நரகத்திற்குச் சென்று சிலேஷ் மத்தை உண்பான். நீராடாமல் உண்பவன் மலத்தையே உண்கிறான். ஜபஞ்செய்யாமல் உண்பவன் சீழ் இரத்தங்களை உண்கிறான். வைசுவதேவாதி சுத்தியில்லாமல் உண்பவன், சிறுநீரை உண்கிறான். பாலர் முதலானோருக்கு முன்னதாக உண்பவன் மிருக மலத்தை உண்கிறான். ஹோமம் செய்யாமல் புசிப்பவன் கிருமிகளைப் புசிக்கிறான். அதிதிகளுக்குக் கொடாமல் புசிப்பவன் விஷத்தைப் புசிக்கிறான்.

—————

அரசனே! கிருஹஸ்தன் எப்படிப் புசிக்க வேண்டுமோ எப்படிப் புசித்தால் பாப சம்பந்தம் வராமல் இம்மையில் ஒப்பற்ற ஆரோக்கியமும் பலவிருத்தியும் அனிஷ்ட சாந்தியும் உண்டாகுமோ, அந்த முறையையும் சொல்கிறேன் கேட்பாயாக. இல்லறத்தோன் விதிப்படி நீராடி, தேவ ரிஷி பிதுர்த் தர்ப்பணம் செய்து, ஜபத்தையும் ஓமத்தையும் நிறைவேற்றி விட்டு, சுத்தமான வஸ்திரத்தைத் தரித்துக் கொண்டு, அதிதிகளுக்கும் குருமார்களுக்கும் அடுத்தவர்களுக்கும் கொடுத்துத் தானும் நல்ல பரிமள புஷ்பங்களைத் தரித்து, சிறந்த இரத்தினாதிகளை கையில் இட்டுக் கொண்டு; நிலையாக இருந்து அமுதுண்ண வேண்டும். ஒற்றை வஸ்திரமுடையவனாகவும் ஈரமான கைகால்களையுடையவனாகவும் புசிக்கலாகாது. முகத்தைச் சுத்தம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாகப் புசிக்க வேண்டும். கிழக்கு முகமாகவாவது வடக்கு முகமாகவாவது உட்கார்ந்து புசிக்க வேண்டும். மூலைக்கு எதிராகப் புசிப்பதும் மனக்கவலையோடு புசிப்பதுங்கூடாது. மேலும் சிறப்பும் இதமுமான அன்னத்தையே சுத்த தீர்த்தத்தினாலே புரோக்ஷித்துப் புசிக்க வேண்டும். அங்கஹீனர் வியாதி பிடித்தவர் முதலியவர்கள் கொண்டு வந்ததும் அருவருப்பாக இருப்பதும் நன்றாகப் பக்குவம் செய்து பாகப்படாததுமான அன்னத்தைப் புசிக்கக் கூடாது. நாற்கலி, முக்காலி ஆகியவை மீது வைத்திருக்கும் பாத்திரங்களிலும், அசுத்தமான தேகங்களிலும் சந்தி முதலான காலங்களிலும், பலவிதமான ஜனங்கள் கூடியிருக்கும் இடங்களிலும், போஜனஞ்செய்யலாகாது. அக்கினிக்கும் பசியாக இருப்பவர்களுக்கும், யோக்கியர்களுக்கும் அன்னமிட்டுக் கோபதாபம் இல்லாதவனாய்ச் சிறந்ததும் சுத்தமுமான பாத்திரத்திலே பழையதாகாத யோக்கியமான அன்னத்தை, மந்திரங்களாலே மந்தரித்து உட்கொள்ள வேண்டும். கனிகள், கிழங்குகள், வற்றல்கள், நெல்லி வடகம் போன்ற வடகங்கள், லட்டு போன்ற பண்டங்களைத் தவிர, மற்றைய பழைய உணவுகளையும், சாரமற்ற உணவுகளையும் ஒருபோதும் உண்ணக்கூடாது. விவேகமுள்ளவன், தேன், நெய், மாவு இவற்றைத் தவிர மற்ற உண்டு மீதானவற்றை உண்ணலாகாது. மதுரமானவற்றை முதலிலும், புளிப்பு உப்புகளை இடையிலும், கைப்பு, காரம் முதலானவற்றைக் கடைசியிலும் உண்ணல் வேண்டும். முதலில் நீர்த்தவைகளையும் பிறகு கடினமானவைகளையும் மறுபடியும் நீர்த்தவைகளையும் புசிக்க வேண்டும். இவ்விதம் சாப்பிடுவதால் பலமும் ஆரோக்கியமும் குறையாது. சாப்பிடுவதற்கு முன்பு, அன்னத்தை நிந்திக்காமலும் மவுனமாகவும் பிராணாதி ஐந்து ஆகுதிகளை வெகு நியமமாகச் செய்ய வேண்டும். இவ்விதமாக நன்றாகச் சாப்பிட்டு ஆபோசனம் செய்து கைகளை அடிவரையிலும் நன்றாகச் சுத்தம் செய்து கொண்டு மீண்டும் ஆசமனம் செய்து சொஸ்தமும் சாந்தமுமான மனத்தோடு, கிழக்கு முகமாகவாவது, வடக்கு முகமாகவாவது ஆஸனத்தின் மீது உட்கார்ந்து இஷ்ட தேவதைகளைச் சிந்திக்க வேண்டும்.

மேலும் அக்கினியானது காற்றினால் வளர்க்கப்பட்டு ஆகாயத்தினால் இடங்கொடுக்கப் பெற்றிருக்கிற அன்னத்தை ஜீரணம் செய்து, என் தேகத்தை நிறைவு செய்ய; அதனால் எனக்கு சுகம் உண்டாகக் கடவது! அன்னமானது ஜீரணிக்கப்பட்டு; என் உடற்கூறான பிருதிவி; அப்பு; தேயு; வாயுக்களுக்கு பலமுண்டாக்க அதனால் எனக்குக் குறைவற்ற சுகம் உண்டாகக் கடவது! இந்த அன்னமானது என்னுடைய பிராணம் அபானம் புஷ்டியுண்டாக்க, எனக்கு இடையூறில்லாத சுகமுண்டாக்கக் கடவது. உதா அக்கினியும், வடவாக்கினியும் நான் புசித்த அன்னத்தையெல்லாம் ஜீரணம் செய்து அந்த அன்னத்தின் திரிபினால் விளைவதில் சுகத்தை எனக்கு உண்டக்கக் கடவது. ஸ்ரீவிஷ்ணு ஒருவரே சகல இந்திரியங்களுக்கும் தேகங்களுக்கும் ஆன்மாவாகி ஞானசக்தி; பல ஐஸ்வரிய வீரிய தேஜஸ் என்கிற ஷட்குண பரிபூரணராய், யாவற்றுக்கும் முக்கியராயிருக்கிறார் என்கின்ற யாதொரு சத்தியமுண்டோ அந்த சத்தியத்தினாலே நான் உண்ட அன்னமானது எனக்கு ஆரோக்கியம் ஏற்பட ஜீரணமாகக் கடவது! என்று உச்சரித்து வயிற்றைத் தடவிப் பிறகு எழுந்து ஆயாசம் உண்டாகமாட்டாத காரியங்களைச் சோம்பலில்லாமல் செய்ய வேண்டும். வேத மார்க்கத்துக்கு விரோதமாகாத நல்ல சாஸ்திரங்களைப் பார்ப்பது முதலான சத்காரியங்களாலே நாளைக் கழித்து நிலைபெற சித்தத்துடன் சந்தியாவந்தனம் செய்தல் வேண்டும். சாயங்காலச் சந்தியைக் கதிரவன் பாதி மறைத்துக் கொண்டிருக்கும்போதும் உதயகால சந்தியை நக்ஷத்திரங்கள் மறையாதிருக்கும்போதும் கைகால்களை நன்றாக சுத்தம் செய்து விதிப்படி உபாசிக்க வேண்டும். பிள்ளை பெற்றத் தீட்டு சாவுத்தீட்டு உன்மாத முதலானவற்றால் வந்த மனோவிகாரம் வியாதி பெரும்பயம் இவைகளுள்ள காலம் ஒழிந்த மற்றக் காலங்கள் எல்லாவற்றிலும் காலை மாலைச் சந்திகளில் சூரிய உபஸ்தானம் செய்தல் வேண்டும். முன்பு சொன்ன நோய் போன்ற துன்பங்களில்லாத காலத்தில் சூரியனால் உதயஞ்செய்யப்பெறும் விடப்பெற்றும் யாராவது தூங்குவானாகில் அவன் பிராயச் சித்தத்துக்கு உட்படுவான். அரசனே! சூரியன் உதயமாகும் முன்பே எழுந்து காலைச் சந்தியையும் உபாசிக்க வேண்டும். இந்தச் சந்தியாவந்தனங்களைச் செய்யாத துராத்மாக்கள் தாமிகிரம் என்ற நகரமடைவார்கள். சந்தியாவந்தனம் செய்த பிறகு பாகஞ்செய்த அன்னத்தை தன் மனைவியுடன் கூட, வைசுவ தேவத்திற்காகப் பலியிடவேண்டும். அப்போதும் சண்டாளர் போன்றோருக்கும் அன்னத்தைத் தரையிலிட வேண்டும். வந்த அதிதிகளுக்குக் கால் அலம்பத் தண்ணீர் கொடுப்பது, ஆசனம் கொடுப்பது வணக்கத்தோடு நல்வரவு கூறி விசாரிப்பது போன்ற உபசாரங்களினாலும் அன்னங்கொடுத்து படுக்க வசதி செய்து கொடுப்பது போன்ற அதிதி பூஜையைச் செய்ய வேண்டும். பகலில் வந்த அதிதியை பூசியாமற் போனால் என்ன பாதகம் உண்டு என்று சொல்லப்படுமோ அதைவிட எட்டு மடங்கு அதிகமான பாதகம் இரவில் அதிதி பூஜை செய்யாதவனுக்கும் ஏற்படும். ஆகையால் இரவில் வந்த அதிதியை நன்றாகப் பூஜிக்க வேண்டும். அதனால் சகல தேவதைகளும் பூஜிக்கப்பட்டவராவார்கள். அதிதிக்குப் போஜனம் கொடுக்க சக்தியில்லா விட்டால் ஏதாகிலும் சிறிதளவு உணவு அல்லது தண்ணீர் அல்லது படுக்கை அல்லது இடமாகிலும் கொடுத்து உபசரிக்க வேண்டும்.

அதிதி பூஜை செய்தபிறகு தானும் உண்டு, பாதங்களைக் கழுவிக்கொண்டு, வெடிப்பில்லாததும் யானைத் தந்தம் முதலியவற்றினாலாவது நல்ல மரத்தினாலவாது செய்யப்பட்டதும், விசாலமானதும், ஒடியாததும் மேடு பள்ளங்கள் இல்லாமற் சமமானதும் அழுக்கில்லாததும் ஐந்து மயமாகாததும் மேலே ஆடைகளால் பரப்பப்பட்டதுமான படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும். படுக்கும்போது கிழக்கிலாவது தெற்கிலாவது தலைவைப்பது நல்லது. மற்ற திசைகளில் தலைவைப்பது ரோகங்களுக்குக் காரணமாகும். ருதுக் காலத்தில் தனது மனைவியிடம் சேர்வது நல்லது. அப்படிச் சேரும்போது கூட புருஷ நட்சத்திரத்திலே சுபமான காலத்திலே சஷ்டி முதலிய மேன்மேலும் சுபமான இரட்டைப்பட்ட இரவுகளிலே சேர்வதும் சிறப்பானதாகும். அனுகூலப்படாதவளையும், வியாதியினால் துன்பப்படுகிறவளையும், ருதுவுடையவளையும், இஷ்டப்படாதவளையும், கோபித்திருப்பவளையும், யோக்கியமாகாதவளையும், கர்ப்பிணியையும், திறமில்லாதவளையும் பிறன்மீது மனம் வைத்திருப்பவளையும் காமமில்லாதவளையும் மாற்றானது ஸ்திரீயையும் பசியால் வருந்துகிறவளையும், மிகப் புசித்திருப்பவளையும், ஜலமலாதி உபத்திரவங்களுள்ளவளையும் சேரலாகாது. மற்றும் எப்படிச் சேரவேண்டும் என்றால் ஸ்நானாதிகளினால் நிர்மலனாய்க் கந்தபுஷ்பாதிகளைத் தரித்தவனும் தகுந்த ஆகாரத்தை உண்டவனாய் ஆசையுங் காமமும் உள்ளவனாய்ச் சேரவேண்டும். சதுர்த்தசி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி, சூரிய சங்கராந்தி ஆகிய பாவ காலங்களில் எண்ணெயிட்டுக் கொள்ளுதல் பெண்டிரோடு புணர்தல், மாமிசம் உண்ணுதல் ஆகியவற்றைச் செய்பவன் மலமூத்திர போஜனம் என்ற நகரத்தையடைவான். ஆகையால் இத்தகைய பருவ காலங்களில் விவேகிகள் நியமம் உள்ளவர்களாய், நல்ல நூல்களை வாசித்தும் எம்பெருமானைத் தியானித்தும் மந்திர ஜபஞ் செய்து கொண்டும் இருக்க வேண்டும். அன்னிய ஸ்திரீயைச் சம்போகிப்பதும், மிருகங்களோடு கூடிச் சுகித்தலும் கூடாது. தேவதைகள், பிராமணர், ஆசாரியர், இவர்களுக்கு உரிய இடங்களிலும், நாற்சந்திகளிலும், தீர்த்தங்களிலும், ஆலயங்களிலும், கொட்டில்களிலும், ஜனங்கள் சேருமிடங்களிலும், மயானங்களிலும், அவற்றைச் சேர்ந்த பூங்காவிலும், புண்ணிய காலங்களிலும், பகலிலும், தரையிலும், சந்திகளிலும் மனதினாலும் ஸ்திரீ போகஞ் செய்ய எண்ணக்கூடாது. பிறர் மனையாளை மனத்தாலும் நினைக்கத்தகாது. வாக்கினால் பேசுவதும் மகாபாவமாகும். அத்தகையோர் இங்கும் ஆயுசு க்ஷீணிக்கப்பட்டு இறந்த பின் நரக வாதனைகளையும் அனுபவித்து அதன் பிறகு எலும்பில்லாத புழு முதலிய பிறவிகளாகப் பிறப்பார்கள். இவ்விதமாகப் பர ஸ்திரீகமனம் இருமையிலும் கேட்டைத் தருவது என்பதை நினைத்து, ஸ்வஸ்திரீகளிடத்திலேயே ருதுக்காலங்களில் சேரவேண்டும். ருதுக்காலமில்லாத போதும் முன்னுரைத்த குற்றங்கள் இல்லாமலும் புணரலாம்.

—————-

12. நல்லொழுக்கம்

சகர மாமன்னனே, மேலுங் கேட்பாயாக, தேவதைகள், பசுக்கள், பிராமணர் போன்ற பெரியோர்கள், ஆசாரியர் ஆகியோரைப் பூசிக்க வேண்டும். இருகாலங்களில் சந்தியை வணங்க வேண்டும். அக்கினிப் பரிசரியைச் செய்துவரவேண்டும். எப்பொழுதும் நல்ல ஆடைகளையும் சுபகரமான விஷ்ணுகிராந்தி முதலிய அவுஷதிகளையும் விஷநாசகமான கருடப்பச்சை முதலியவற்றையும் தரிக்க வேண்டும். நன்றாக அலங்கரிக்கப்பட்ட தலைமயிரும், உடம்பிலும் உசிதமான அலங்காரமுடையவனாய் நல்ல பூமாலைகளைத் தரித்திருக்கவேண்டும். கொஞ்சமாகிலும் பிறர் பொருளை அபகரியாமலும் அற்பமாகவாகிலும் பிரியமில்லாத பேச்சைப் பேசுவதிலும் பொய்யைப் பேசலாகாது. பிறருடைய குற்றங்களை எடுத்துச் சொல்வதுங்கூடாது. அயளான் மனையாளை விரும்புவதும் பகையை விரும்புவது கூடாத காரியங்களாகும். துஷ்ட வாகனத்தின் மேல் ஏறுவதும் தண்ணீர் அலப்பியிடித்த ஆற்றங்கரை முதலானவைகளைச் சேர்வதும் தகாத காரியங்கள். துவேஷியாய் இருப்பவன் பதி தன் பைத்தியம் பிடித்தவன், பலரோடு பகை கொண்டவன், அதிகத் துன்பப்படுத்துந் தன்மையுடையோன், விபசாரியைச் சேர்ந்தவன் வெள்ளாட்டியைக் கொண்டவன், அற்பன், பொய்யன் மிகச்செலவு செய்வோன், அபவாதம் உண்டாக்குவோன், வஞ்சகன் இத்தகையவரோடு நட்புக் கொள்ளலாகாது. ஒன்றியாய் வழிப்பயணஞ் செல்லக்கூடாது. வெள்ளத்துக்கு எதிராய் நீந்தக்கூடாது. தீப்பட்ட வீட்டில் பிரவேசித்தலையும் மரத்தின் நுனியில் ஏறுவதையும், பற்களைக் கடித்தலையும், மூக்கைத் தூக்குதலாக இழுப்பதையும் தவிர்க்க வேண்டும். வாயை மூடிக்கொள்ளாமல் கொட்டாவி விடுவதையும், பெருமூச்செறிவதையும் இருமுவதையும் செய்யவேண்டாம். இரைச்சலிட்டுச் சிரிப்பதும், ஓசையுடன் அபானவாயு விடுவதும், நகங்களை கடிப்பதும், செத்தையைக் கிள்ளிக் கொண்டிருப்பதும், மீசையைக் கடிப்பதும், உதட்டைக் கசக்குவதும் கூடாது. அசுத்தமும் அயோக்கியமுமான வெளிச்சங்களைப் பார்க்கலாகாது. அப்படியே நிர்வாணமாக இருக்கும் பெண்களையும், உதயாஸ்தமன காலத்துச் சூரியனையும் பார்க்கலாகாது. சவத்தைக் கண்டு ஊங்காரம் செய்யக்கூடாது. அந்தச் சவத்தின் சேரகமானது சோமனுடைய அம்சமாகும். நாற்சந்தி, மேடை அமைத்து பூஜிக்கப்படும். மரம், மயானம், உத்தியானவனம் கெட்ட பெண்களின் அண்மை இவற்றை இரவில் எப்போதும் விட்டுவிட வேண்டும். பூஜிக்கத்தக்கவர்கள், தேவர்கள், பிராமணர்கள் சோதிகள் இவற்றின் நிழல்களைக் கடக்கலாகாது. தனித்துக் காட்டுக்குப் போவது, பாழும் வீட்டில் வாசஞ்செய்வது இவையும் நல்லதல்ல. பயிர், எலும்பு, முள், அசுத்தம், பலியிட்ட சாம்பல் உமி குளித்த நீரால் நனைத்த நிலம் இவற்றைவிட்டு விலகிச் செல்லவேண்டும். யாராயினும் அயோக்கியராக இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ளலாகாது. சூதான வழிகளை நினைக்கக் கூடாது. பாம்புகள், மதயானைகள், செந்துக்களைத் தொடர்தல் அவற்றின் எதிரிலே எழுந்து நெடுநேரம் நிற்றல், முதலானவை கூடாது. அதிகம் விழித்திருத்தல், மிகவும் அதிகமாக நித்திரை செய்தல், அதிகமாக நிற்றல், அதிகம் படுத்திருத்தல், மிகவும் வருந்துதல் இவையெல்லாம் நல்லதல்ல.

பற்களினால் துன்புறுத்தும் செந்துக்களையும், கொம்புகளால் துன்பஞ் செய்யும் பிராணிகளையும் பனியையும் எதிர்காற்றையும் வெயிலையும் கண்டு விலக வேண்டும். நிர்வாணமாக இருந்துகொண்டும், கச்சத்தை விட்டுக் கொண்டும், குளிப்பதும் தூங்குவதும் ஆசமனஞ் செய்வதும் தேவபூஜை செய்வதும் கூடாது. அதுபோலவே ஹோமம் தேவபூஜை; ஆசமனாதி கிரியைகள், ஜபம் இவைகளை ஒற்றை வஸ்திரத்தோடும் செய்யவேண்டாம். நன்மையான நடத்தையுடையவரோடு ஒரு கணமாகிலும் சேர்ந்திருப்பது சிறந்ததாகும். அதமரோடுங்கூட பகைகொள்ள வேண்டாம். விவாகமானாலும், விவாதமானாலும் தனக்குச் சமமானவரோடு தான் செய்யவேண்டும். கலகத்துக்கு ஆரம்பஞ் செய்யவேண்டாம். வீணான பகைமையை விட்டுவிட வேண்டும். ஒருவரது பகையினால் கிஞ்சித்துக் கஷ்டம் வந்தாலும் சகித்துக் கொள்ளலாமே யல்லாமல் அதனால் வருகிற லாபத்தைக் கொள்ளலாகாது. குளித்தவுடன் வஸ்திரத்தால் உடம்பைத் துடைக்க வேண்டுமேயொழிய கையினால் துடைத்துக் கொள்ளக்கூடாது. பிறர்மீது தண்ணீர் தெறிக்கும்படி மயிரை உதறக்கூடாது. நின்று கொண்டு ஆசமனாதிகளைச் செய்யக்கூடாது. பாதத்தினால் பாதத்தை மிதித்துக்கொள்ளக் கூடாது. பெரியோரின் எதிரில் பாதத்தை நீட்டலாகாது. குருவுக்கு எதிராக படுப்பதும், உட்காருவதும் கூடாது. தேவாலயத்தையும், நாற்சந்தியையும் மங்களமானவற்றையும் பூஜிக்கத்தக்கவர்களையும் வலஞ்சுற்றிப் போக வேண்டுமேயல்லாமல் இடஞ்சுற்றிப் போகலாகாது. அல்லாதவற்றை இடப்புறம் சுற்றிப் போகவேண்டும். சந்திரன், சூரியன், அக்னி, தண்ணீர், காற்று, பெரியோர் ஆகியோருக்கு எதிரில் காறியுமிழ்வதும், மல மூத்திரங்களை விடுவதும் செய்யக்கூடாது. நின்றுகொண்டே சிறுநீர் முதலியவைகளை விடுதலும், வழியிலே அப்படிச் செய்வதும் கெட்ட காரியமாகும். கோழை, மலம், மூத்திரம், உதிரம் இத்தகையவற்றை மிதித்துப் போகக்கூடாது. போஜனாதி காலங்களிலும் ஜபஹோமார்ச்சனாதி காலங்களிலும், கோழையை உமிழ்தல், மூக்கை சிந்துதல் முதலிய செய்கைகளை செய்யலாகாது. ஜனங்களின் சமூகத்திலும் அப்படி செய்யலாகாது. பெண்டிர்களை அவமதிக்கவும் கூடாது. அவர்களிடம் அதிக நம்பிக்கை வைக்கவும் கூடாது. அவர்களைக் கண்டு பெருமைப்படவுங்கூடாது. அவர்களை இகழ்வதும் நல்லதல்ல. நல்லொழுக்கத்தை வேண்டுகிற விவேகியானவன் மங்களகரமானவற்றையும் புஷ்ப ரத்தினாதிகளையும் பெரியோர்களையும் சேவியாமல் வெளியே போகலாகாது. மகாஜனங்கள் சேருமிடங்களை வணங்க வேண்டும். வேத சாஸ்திரங்களில் வல்லவரான சான்றோரை அடுத்திருக்க வேண்டும். எவன் இப்படி தேவதைகளையும், ரிஷிகளையும், பிதுர்க்களையும், அதிதிகளையும், பெரியோர்களையும், அந்தந்த விதிப்படிப் பூஜித்துக் கொண்டு வருவானோ அவன் உத்தமமான உலகங்களை அடைவான்.

மேலும் மனவசியம் உள்ளவனாகித் தகுந்த காலங்களில் இருமாயும், பிரியமாயும், மிதமாயும் பேசுகிறவன், மகா சந்தோஷ காரணங்களாயும் அக்ஷயங்களாயும் இருக்கிற உலகங்களைப் பெறுவான். எவன் விவேகமும் தீயொழுக்கத்தில் நாணமும், பொறுமையும் உடையவனாய் வேதத்தில் நம்பிக்கை கொண்டு கல்வியிலும் குலத்திலும் மேலானவரிடத்திலும் வணக்கமாய் நடக்கிறானோ அவன் ஒப்பற்ற உத்தம உலகங்களை அடைவான். அகாலத்தில் மேக கர்ஜனை முதலானவை உண்டாகும்போதும், அமாவாசை முதலிய பருவ காலங்களிலும் ஆசவுசங்களிலும் கிரகண காலங்களிலும் வேதத் தியயனம் செய்யாமல் இருக்க வேண்டும். எவன் கோபங்கொண்டவர்களைச் சமாதானப்படுத்தியும், யாரிடத்தும் மாச்சரியமில்லாமலும் எல்லோருக்கும் உறவினனைப் போல இருப்பதும் பயப்பட்டவர்களுக்குத் தேறுதல் சொல்வதுமாய்ச் சாது வாயிருக்கிறானோ அத்தகையவனுக்குச் சொர்க்கமும் அற்பப் பலன் என்றே சொல்ல வேண்டும். மழை, வெய்யில் முதலானவைகளிலும், இரவிலும், காடுகளிலும் குடை மிதியடிகள் தடி முதலியவற்றைத் தரித்தவனாகி, தேகத்துக்கு தீங்கு நேராதவாறு சஞ்சரிக்க வேண்டும். அப்படி சஞ்சரிக்கும் போது மேற்பார்வையும், பக்கப் பார்வையும், தூரப் பார்வையும் விட்டு நுகத்தடியளவு தூரம் செல்லும் வழியை நன்றாகப் பார்த்துச் செல்ல வேண்டும். தீமைக்கு ஏதுவான எல்லாவற்றையும் விட்டு எவன் ஒருவன் நடக்கிறானோ அவனுக்குத் தர்மார்த்த கர்மங்களில் கொஞ்சமும் குறைவு வராது. எவன் நல்ல ஒழுக்கமும் விவேகமும் கொண்டவனாய் வித்தை, விநயம், இவற்றில் தேர்ந்தவனாய், தனக்குத் துரோகம் செய்பவனிடத்திலும், துரோக சிந்தனையில்லாதவனாய், தன்னை வைதவனிடத்திலும் பிரியமாய்ப் பேசுபவனாய் யாவரிடத்தும் கருணையுடன் மனவுருக்கத்துடன் இருப்பானோ, அவனுக்கு மோக்ஷம் அருகிலேயே இருக்கும். எவர்கள் காமக் குரோதிகளுக்கு உட்படாமல், நல்ல ஒழுக்கமுடையவர்களாய் இருக்கிறார்களோ, அவர்களது பிரபாவத்தினால் தான் இந்தப் பூமியே நிலைபெற்றிருக்கிறது. ஆகையால் பிறருக்கு நம் மீது அன்பு உண்டாகக் காரணமான சத்தியத்தையே பேசவேண்டும். சத்தியமேயானாலும் பிறருக்கு துக்க காரணமாகுமாயின் அந்த விஷயத்தில் ஒன்றும் பேசாமல் மவுனமாக இருக்க வேண்டும். ஒன்று ஒருவனுக்கு விருப்பமில்லாமல் இருக்கும்போது,அதுவே அவனது நலனுக்குக் காரணமாக இருக்கக்கூடும். ஆகையால் அதனையே சொல்ல வேண்டும். வேந்தனே! முடிவைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேட்பாயாக. இம்மையிலும் மறுமையிலும் எது பிராணிகளுக்கு நலனை உண்டாக்கவல்லதோ, அத்தகையக் காரியத்தையே மனோவாக்குக் காயம் என்கின்ற மூன்று காரணங்களிலும் செய்துவர வேண்டும்.

—————

13. சிரார்த்த வகைகள்

அவுர்வ முனிவர் மேலுஞ் சொல்கிறார். பிள்ளை பிறந்தவுடன் தந்தையானவன் தான் உடுத்தியிருக்கும் வஸ்திரத்துடன் நீராட வேண்டும், உடனே ஜாதகர்மமும் அப்பியுதய சிரார்த்தமும் செய்யவேண்டும். அந்த சிரார்த்தத்தில் தேவர்களுக்காகவும், பிதுர்களுக்காகவும் இரட்டையாகப் பிராமணர்களை வரித்து அவர்களைப் பிரதக்ஷிண வரிசையாகப் பூஜித்துப் போஜனமும் செய்விக்க வேண்டும். கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ இருந்து கொண்டு இலந்தையுடன் தயிர் சேர்த்த அக்ஷதையுடன் செய்த பண்டங்களைத் தேவ தீர்த்தத்தினாலாவது பிரம்ம தீர்த்தத்தினாலாவது கொடுக்க வேண்டும். இந்தச் சிரார்த்தத்தினால் நாந்தீமுகமாக இருக்கும் பிதுர்க்கணம் மிகவும் திருப்தியடையும். ஆகையால் புத்திரன், புத்திரிகளுக்குத் திருமணஞ் செய்யும்போதும், கிரஹப்பிரவேசங்களிலும் சிறுவருக்குப் பெயரிடும்போதும் சீமந்தத்திலும் உன்னயனத்திலும், புத்திரன் முதலானோரின் முகதரிசனத்திலும் மற்றுமுள்ள விருத்திகளில் எல்லாம் நாந்தீ சிரார்த்தம் அவசியம் செய்ய வேண்டும். அரசனே! இதுவரை பிதுர்க்களின் பூஜாக்கிரமத்தைச் சொன்னேன். இனி இறந்தோருக்காகச் செய்யும் கர்மவிதிகளைச் சொல்கிறேன் கேட்பாயாக. இறந்தவருடைய தேகத்தை நல்ல தண்ணீரைக் கொண்டு நீராட்டி மாலைகளால் அலங்கரித்து விதிப்படித் தகனஞ் செய்து பந்துக்கள் அனைவரும் உடுத்திருக்கும் ஆடைகளுடனேயே நீராடிக் குளித்து தெற்குமுகமாக இருந்து இரு இன்னானுக்கு என்று தன் இருகைகளாலும் தண்ணீரை எடுத்துத் தர்ப்பணமாக விடவேண்டும். அப்படிச் செய்த பிறகு மாடுகள் பிரவேசிக்கும் போதாகிலும் நட்சத்திரங்கள் காணும்போதாகிலும் கிருகத்தினுள் பிரவேசித்து தரையில் புல் முதலியவற்றைப் பரப்பி அவற்றின்மீது படுத்துக் கொள்ள வேண்டும். இப்படியேயிருந்து தீட்டுக் காரியங்களைச் செய்யவேண்டும். அதாவது காலையில் மட்டும் ஒருமுறை புசித்துக் கொண்டு தினந்தோறும் இறந்தவனுக்குத் தரையில் பிண்டம் போடவேண்டும். பந்துக்கள் புசிப்பதனால் இறந்தவனுக்குத் திருப்தி ஏற்படும். ஒன்றாவது மூன்றாவது ஏழாவது ஒன்பதாவது நாட்களில் வஸ்திரத் தானமும் ஊருக்கு வெளியே ஸ்நானமும் செய்து எள்ளு தண்ணீரும் விடவேண்டும். நான்காவது நாளில் அஸ்தி சஞ்சயனஞ் செய்யவேண்டும். சஞ்சயனமான பிறகு ஏழுதலைமுறைக்கு உட்பட்டவரைத் தீண்டினாலும் குற்றமில்லை. ஏழுதலைமுறைக்கு மேற்பட்டவர்களான சமானோதகரோ வாசனைப்பூச்சு பூமாலை முதலிய போகங்களைத் தவிர மற்றெல்லா கிரியைகளுக்கும் யோக்கியராவர். சபிண்டரும் சஞ்சயனங் கழித்த பிறகு படுக்கையிற் படுக்கவும், ஆசனத்தில் உட்காரவுஞ் செய்யலாம். ஸ்திரீ போகம் மட்டுமே கூடாது. சிறுவனும், மகாநதி மலைகளினூடேயுள்ள தேசாந்திரங்களுக்குப் போனவனும் ஜாதி குலாச்சாரங்களை விட்டுப் பதிதனானவனும் சந்நியாசியும் மரணமடைந்தால் அப்போது ஸ்நானம் செய்வதாலேயே தீட்டுப் போகும். இப்படியே மனப்பூர்வமாக ஜலம், விஷம் உறிப்போட்டு கொள்ளுதல் முதலானவைகளினாலே செத்தவர்களைப் பற்றியும் தீட்டுக் கொண்டாட வேண்டுவதில்லை. இப்படியெல்லாம் இறந்தவர்களைப் பற்றி ஞாதிகளுக்குப் பத்து நாட்கள் தீட்டு உண்டு. ஆகையால் அந்தப் பத்து நாட்களும் அவர்களுடைய அன்னத்தை பிறர் புசிக்கக் கூடாது. அவர்களும் தானம் கொடுத்தல், தானம் வாங்குதல், யாகஞ்செய்தல், வேதம் ஓதுதல் முதலிய கர்மங்களைச் செய்யக்கூடாது.

பிராமணருக்குப் பத்துநாட்கள் தீட்டு, க்ஷத்திரியர்களுக்குத் தீட்டு பன்னிரண்டு நாட்கள், வைசியருக்கு அரைமாதம், சூத்திரருக்கு ஒரு மாதம் ஆகும். இப்படியாகத் தீட்டிலிருந்து அது அழியும் கடைசி நாளில் ஒற்றைப்படப் பிராமணரை வைத்து விதிப்படிப் போஜனாதிகள் செய்வித்து அந்தப் பிராமணர் புசித்த பாத்திரத்தின் சமீபத்தில் தருப்பைகளைப் பரப்பி, இறந்தவனுக்குப் பிண்டம் போட்டு, ஆதி ஏகோத்திஷ்ட சிரார்த்தத்தை நிறைவேற்ற வேண்டும். இதைச்செய்த பிறகு, பிராமணர் முதலிய நான்கு வருணத்தினரும் முறையே தண்ணீர், ஆயுதம், கசை, தடி இவற்றை ஸ்பரிசித்துச் சுத்தராக வேண்டும், பிறகு யாவரும் தங்கள் வர்ணங்களுக்குரிய வைதீக கர்மங்களையும் பிழைப்பு வேலைகளையுஞ் செய்யலாம். கர்த்தாவானவன் மாதந்தோறும் இறந்த திதிகளில் ஏகோத்திஷ்ட விதியினால் மாசிமகம் செய்து வரவேண்டும். அந்த ஏகோத்திஷ்டங்களில் ஆஹ்வானம், அக்கிநவுகரணம், வைசுவ தேவிகவிப்பிர நிமந்திரணம், ஆகிய இவற்றை செய்யலாகாது. மேலும் அதில் ஒரு பவித்திரத்தோடு ஒரு அர்க்கியம் கொடுக்க வேண்டும். பிராமணர் புசித்த பிறகு பிரேதனுக்கு ஒரே பிண்டம் போடவேண்டும். எஜமானன், அபிரம்யதாம் என்று கேட்க பிராமணர்கள் அபிரதாஸ்ம என்று பதில் சொல்ல வேண்டும். கடைசியாக இன்னாருக்கு இது அக்ஷயம் என்று சொல்ல வேண்டும். இப்படியே வருஷம் முடிவு வரையில் ஏகோத்திஷ்ட விதியால் சிரார்த்தம் செய்து பிறகு சபிண்டீகரணம் செய்ய வேண்டும். அதுவும் ஆண்டின் இறுதியிலாவது, ஆறுமாதத்திலாவது, பன்னிரண்டாம் நாளிலாவது ஏகோத்திஷ்ட விதியினாலேயே செய்ய வேண்டும். அதில் எள்ளும் வாசனைத் திரவியமும் கலந்த ஜலத்தினால் நிறைக்கப்பட்டவைகளாய், பிதுர்க்களுக்காக மூன்று அர்க்கிய பாத்திரங்களும், பிரேதனுக்காக ஒரு அர்க்கிய பாத்திரமும் வைத்து, அந்தப் பிரேத பாத்திர ஜலத்தை பிதுர்ப் பாத்திரம் மூன்றிலும் கலக்க வேண்டும். இப்படியாக அர்க்கிய சம்யோஜனஞ் செய்வதால் அந்தப் பிரேதன் பிதுருத்துவத்தை அடைய அவன் முதலான பிதுர்க்களைப் பார்வணம் முதலான சிரார்த்த விதிகளால் அர்ச்சிக்க வேண்டும்.

இறந்தோனுக்குக் கருமம் செய்ய வேண்டிய கர்த்தாக்கள் புத்திரன், பவுத்திரன், புத்திரனுடைய பவுத்திரன் சகோதரன் அவனுடைய சந்ததி சபிண்டருடைய சந்ததி ஆகிய இவர்களில் முந்தினவரில்லாதபோது பிந்திவர் முறையே கனர்த்தாக்களாகிறார்கள். இவர்கள், எல்லோருமே இல்லாதபோது சமானோதகருடைய சந்ததியும் அதன் பிறகு தாயின் பக்ஷத்துச் சபிண்டருடைய சந்ததியும் அதன்பின் அந்தப் பக்ஷத்துச் சமானோதக சந்ததியும் முறையே கிரியை செய்யவேண்டும். இந்த இரண்டு குலங்களும் நசித்தப் போனால் பெண்டுகள் இந்தக் கிரியைகளை செய்யலாம். பிறகு பிதாவின் சார்பிலும்,மாதாவின் சார்பிலும் உள்ள சபிண்ட சமானோதர்களாகிலும் அல்லது சஹாத்தியாயி சீடன் முதலானவர்களாகிலும், ஒரு கூட்டத்தில் சேர்ந்தவர்களாகிலும், கர்மம் செய்யலாம். இந்தக் கிரியைகளில் பூர்வங்கள் என்றும் மத்திமங்கள் என்றும் உத்தரங்கள் என்றும் மூன்று விதங்களுண்டு. தகனந் தொடங்கி தண்ணீரைத் தீண்டுமளவில் உள்ளவைகள் பூர்வக்கிரியைகளாகும். மாதந்தோறும் செய்யத்தக்க மாசிகங்கள் மத்திமக் கிரியைகள், பிரேதன், பிதுர்க்களில் கலக்கத்தக்கதான சபிண்டீகரணத்துக்குப் பிறகு செய்ய வேண்டிய பிதுர்க்கிரியைகள் எல்லாம் உத்தரக் கிரியைகளாகும்! தந்தை தாய்களுடைய சபிண்ட சமானோதர்களினாலேயும், சகாத்தியாயி முதலானவர்களினாலேயும் பொருள் எடுத்துக் கொள்கிற ராஜாவினாலேயும் பூர்வக் கிரியைகள் செய்யப்படலாம். உத்தரக்கிரியைகளோ புத்திரன் முதலானவர்களினாலேயே செய்யப்படவேண்டும். அல்லது புத்திரியின் புத்திரர்களாலுஞ் செய்யலாம். பெண்டுகளுக்கும் ஆண்டுதோறும் இறந்த திதிகளிலே ஏகோத்திஷ்ட விதியினால் உத்தரக்கிரியை செய்ய வேண்டும். அரசனே! அந்த உத்தரக்கிரியைகளை எப்பொழுதும் எப்படியெப்படிச் செய்யவேண்டுமோ அந்தக் கிரமங்களைச் சொல்லுகிறேன்.

—————

14. சிரார்த்த காலம்

ஒருவன் அக்கறையோடும், சிரத்தையோடும் சிரார்த்தம் செய்வதனால், பிரம்மா, இந்திரன், ருத்திரன், அசுவினி, தேவர், சூரியன், அக்னி வசுக்கள், வாயு, விசுவேதேவர், பிதுர்க்கள், முனிவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், சர்ப்பங்கள் முதலிய ஜந்துக்களும் மற்றுமுண்டான பூதங்கள் போன்ற யாவற்றையும் மகிழவைக்கிறான். மாதந்தோறும் அபர பக்ஷத்திலும் அமாவாசையிலும் அஷ்டகைகளிலும் சிரார்த்தஞ்செய்ய வேண்டும். அதற்குரிய காலத்தைச் சொல்கிறேன். சிரார்த்தத்துக்குத் தகுதியான பொருள்கள் கிடைத்தபோதும், தகுதியான பிராமணன் நேர்ந்தபோதும், வியதீ பாதத்திலும் அயனத்திலும் விஷுவத்திலும் சந்திர சூரிய கிரகணங்களிலும், சூரியன் பன்னிரண்டு ராசிகளில் பிரவேசிக்கும் காலங்களிலும், நட்சத்திர பீடையும் கிரக பீடையும் உண்டாகும் காலங்களிலும் கெட்ட கனவுகளைக் கண்டபோதும், தானியத்தைப் புதிதாகக் கொண்டு வந்தபோதும் காமியச் சிரார்த்தங்களைச் செய்யலாம். அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி ஆகிய நட்சத்திரங்களுடன் கூடுமேயானால் அப்பொழுது செய்கிற சிரார்த்தம் பிதுர்க்களுக்கு வருஷத்துக்குத் திருப்தியை உண்டாக்கும். திருவாதிரை, புனர்பூசம், பூசம் இந்த நட்சத்திரங்களுடன் கூடிய அமாவாசையில் செய்த சிரார்த்தத்தினால் பிதுர்க்கள் பன்னிரண்டு ஆண்டுகள் திருப்தியடைவார்கள். அவிட்டம், சதயம், பூரட்டாதியோடு கூடிய அமாவாசை தேவர்களுக்குங் கிடைக்காத புண்ய காலமாகும். இந்த ஒன்பது நட்சத்திரங்களிலும் அமாவாசை கூடியபோது சிரார்த்தம் செய்யலாம். இதனால் பிதுர்க்களுக்கு விசேஷ திருப்தியுண்டாகும்.

மாமன்னா! இன்னுங் கேட்பாயாக, பிதுர்க்களிடத்தில் அதிக பத்தியுடையவனான புரூரவ சக்கரவர்த்தி கேட்க; ஜனககுமாரர் கூறிய பாடலின் பொருளைச் சொல்கிறேன். வைகாசி மாதத்தில் சுக்கில பக்ஷத் திரிதியையும், கார்த்திகை மாதத்தில் சுக்கில பக்ஷ நவமியும், புரட்டாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத் திரயோதசியும், மாசி மாதத்து அமாவாசையுமாகிய இந்த நான்கு திதிகளும் யுகாதிகள் என்றும் மிகவும் புண்ணியகாலம் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இவற்றிலும் சந்திர சூரிய கிரணங்களில் மூன்று அஷ்டகைகளிலும் இரண்டு அயனங்களிலும் எள்ளுடன் கூடியத் தண்ணீரையாவது பிதுர்க்களை உத்தேசித்து ஒருவன் பக்தியுடன் விடுவானாகில் அவன் ஆயிரம் ஆண்டுகள் வருஷ சிரார்த்தம் செய்த பயனை அடைவான். இது ரகசியமான விஷயம் என்று பிதுர்க்கள் கூறுகின்றனர். மாசி மாதத்து அமாவாசையானது எப்போதாவது சதய நட்சத்திரத்துடன் கூடுமாயின் அது பிதுர்க்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். அற்ப புண்யமுள்ள மனிதர்களுக்கு அது கிடையாது. அரசே! அந்தக் காலத்தில் அவிட்ட நட்சத்திரம் சேருமானால், அப்போது அன்னம் அல்லது தண்ணீரைப் பிதுர்க்களைக் குறித்துக் கொடுத்தவனுக்கு பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்க்களைத் திருப்தி செய்த பயன் கிடைக்கும். அந்தக் காலத்திலேயே பூரட்டாதியும் சேருமானால் அதில் செய்யும் சிரார்த்தத்தால் பிதுர்க்கள் திருப்தியடைந்து ஆயிரம் யுகங்கள் வரை சுகமாகத் தூங்குவார்கள். கங்கை, யமுனை, விபாசை, சரஸ்வதி, கோமதி என்ற நதிகளுக்கும், நைமிசம் என்ற ÷க்ஷத்திரத்துக்கும் ஒருவன் சென்று குளித்து அன்போடு பிதுர்ப்பூஜை செய்தால், அவனது பாவங்கள் நீங்கும். அரசனே! பிதுர்க்கள் நாம் எப்போது புரட்டாசி மாதத்தில் புத்திராதிகள் செய்த அபர பக்ஷத் திரயோதசி சிரார்த்தத்தினால் திருப்தியடைந்து மாசி அமாவாசையிலும் புத்திரர்கள் செய்த புண்ணிய தீர்த்த ஜல தர்ப்பணங்களால் திருப்தியடைவோம் என்று பாடுகிறார்கள். மனிதருக்குத் தூய்மையானச் சித்தமும் பரிசுத்தமான பொருளும் மேன்மையான காலமும், சாஸ்திரங்களின் சொல்லப்பட்ட விதிகளும் சற்குணமுள்ள பாத்திரமும் சிறந்த அன்பும் சேருமானால் சகல இஷ்டங்களும் சித்தியாகும். மன்னனே, இது விஷயமாகப் பிதுர்க்கள் கீதமிசைப்பதைக் கேட்பாயாக.

பிதுர்க் கீதங்களாவன, எவன் திரவிய வஞ்சனையில்லாமல், நமக்குப் பிண்டங்களைப் போடத்தக்கவனோ விபவமுண்டானால் வஞ்சனையின்றி ரத்தினம், ஆடைகள், தனம் முதலிய சகல போகங்களையும் நமக்காகப் பிராமணருக்குத் தானஞ் செய்பவனோ, அன்னமிடுவதற்கு மட்டுமே தகுதியான விபவமுடையவனாகில் இத்தகைய காலங்களில் மிக்க அன்போடு நல்ல பிராமணருக்கு அன்னமிடுவானோ, அதற்கு சக்தியில்லாமற் போனால் இயன்ற அளவு தானியத்தையாவது பிராமணருக்கு ஆழமாய்த் தரவல்லவனோ, அல்லது சிறு தக்ஷிணையையாவது கொடுப்பவனோ, அதற்கும் சக்தியில்லையெனில் நுனிக்கையினால் சிற்சில எள்ளுகளையாவது நல்லதொரு பிராமணனுக்கு வணங்கி நமஸ்கரித்துக் கொடுப்பவனோ, அதுவும் வழியில்லையெனில் ஏழெட்டு எள்ளுடன் நமக்கு ஒரு கைத் தண்ணீராவது விடவல்லவனோ, இதுவுமுடியாதபோது, எங்கிருந்தாவது பசுக்களுக்குத் தக்க உணவைச் சம்பாதித்து, நம்முடைய மகிழ்ச்சிக்காகச் சிரத்தையுடன் பசுக்களுக்குக் கொடுக்கிறானோ, ஒன்றுமேயில்லாதபோது, காட்டுக்குச் சென்று கைகளை உயரத்தூக்கி, உரத்த குரலுடன் சூரியன் முதலான லோக பாலகரை நோக்கி எனக்குப் பிதுர்ச் சிரார்த்தம் செய்யத்தக்க தனம் பொருள் எதுவும் இல்லை. எனது பிதுர்க்கள் திருப்தியடைய வேண்டும். எனக்கு ஒன்றுமில்லை என்று இதோ என்னிரண்டு கைகளையும் வாயுவின் மார்க்கமான ஆகாயத்தில் தூக்கிவிட்டேன்! என்று இந்த வசனங்களைப் படிப்பானோ, அத்தகைய புண்ணியவானும் புத்திமானுமான ஒருவன் நமது குலத்தில் பிறக்கவேண்டும் என்று பிதுர்க்கள் பாடியுள்ளார்கள், என்று ஜனக குமாரர் புரூரவ மன்னனிடம் கூறினார். அதை நான் உனக்கு சொன்னேன். இவ்விதமாகப் பிதுர்க்கள் தனமுள்ளபோதும் இல்லாதபோதும் நடக்கவேண்டிய முறைகளைச் சொன்னவண்ணம் செய்பவன், பூரணமாகச் சிரார்த்தம் செய்த நற்பயனை அடைவான்.

—————-

15. சிரார்த்தம் செய்யும் முறைகள்

சகர மாமன்னனை நோக்கி, அவுர்வ முனிவர் மேலும் கூறலானார். அரசனே! சிரார்த்தத்துக்கு வரிக்கவேண்டிய பிராமணர்களின் தகுதியைக் கூறுகிறேன். மூன்று நாசிகேதானுவாகங்களை ஓதி அதன்படி நடப்பவனாகவும் மூன்று மதுருக்குகளை ஓதி அதன்படி நடப்பவனும், திரிசுபர்ணானுவாகங்களை ஓதி அதன்படி அனுஷ்டான முடையவனும் மதுவித்தையில் நிஷ்டை பெற்றவனும், ஷடங்க வேதாத்தியயனஞ் செய்தவனும் அந்த வேதத்தின் பொருளையறிந்தவனும், வேத விதிப்படி அனுஷ்டானமுடையவனும் பரப்பிரமத் தியானஞ் செய்பவனும் ஜ்யேஷ்ட சாமத்தை ஓதவல்லவனும், ஆகிய இவர்களே முக்கியமானவர்களாகையால் அவர்களையே வரித்துப் போஜனம் செய்விக்க வேண்டும். இருத்து விக்கும் உடன் பிறந்தாளின் குமாரனும், புத்திரியின் மகனும் மருமகனும், மாமனாரும் அம்மானும், தவசியும் பஞ்சாக்கினி உபாசனை செய்பவனும் பஞ்சாக்கினி வித்தையிலே நிஷ்டை பெற்றவனும்; சீடனும், சம்பந்தியும் மாதா பிதாக்களை பூஜிப்பவனுமான இவர்களை முந்தியவர் நேர்ப்படாதபோது வரிக்கலாம். இவர்களும் கிடைக்கவில்லையென்றால், சுத்தமான பிராமணரைத் தேடி வரிக்க வேண்டுமே தவிர தகாதவர்களைச் சிரார்த்தத்துக்கு வைக்கக்கூடாது. தகாதவர்கள் யார் என்றால் மித்திரத் துரோகம் செய்பவன், புழுத்த நகமுடையவன், சொத்தைப் பல்லுடையவன். நபுஞ்சகன்; கன்னியரைக் கெடுத்தவன், அக்னியையும் வேதத்தையும் அகாரணமாய் விட்டவன், சோம விக்கிரயஞ் செய்பவன், மெய்யாகவோ அன்றிப் பொய்யாகவோ பதிதன் என்று தள்ளப்பட்டவன், திருடுவோன், கோட்சொல்லிக் கெடுப்பவன், ஊராருக்காகக் கூலி வாங்கிக் கொண்டு யாகஞ் செய்பவன், வேதத்தைக் கூலிக்கு ஓதுவிப்பவன், ஓதியவன், கைம்பெண்ணைக் கலியாணஞ் செய்தவன், தாய் தந்தையரை விட்டவன், சூத்திர மங்கையின் குழந்தைகளை எடுத்துவளர்ப்பவன். சூத்திரமங்கையை மணந்துகொண்டவன் தேவ தாந்தரங்களைப் பூஜித்துப் பிழைப்பவன்; இத்தகையோர் சிரார்த்தத்தில் நிமந்திருணத்துக்குத் தகுந்தவர்களல்லர். சிரார்த்தத்துக்காக; முதல் நாளிலேயே யோக்கியரான பிராமணரை வரித்து, தேவார்த்தமாகவும் பிதுரார்த்தமாகவும் க்ஷணஞ்செய்யும்படி தனித்தனியே பிரார்த்திக்க வேண்டும். பிறகு கோபதாபத்தையும் ஸ்திரீ சங்கமத்தையும் வருந்துவதையும் சிரார்த்தஞ் செய்பவனும் வரிக்கப்பட்டவனும் செய்யாமல் நியமத்துடன் இருக்க வேண்டும். சிரார்த்தம் செய்பவனாவது வரிக்கப்பட்டவனாவது ஸ்திரீ போகஞ்செய்வது மகாதோஷமாகும். அவ்விதம் செய்பவன் தனது பிதுர்க்களை ரேதசின் குழியிலே தள்ளிய பாபத்தை அடைவான். ஆகையால், தர்மசீலரான பிராமணர்களை, முதல் நாளே நிமந்திரணஞ் செய்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திரிய நிக்கிரகம் செய்து யதிகளாக இருக்கும் பிராமணரை முன்னே நிமந்திரணஞ் செய்யாமற் போனாலும் அன்றையத் தினம் அவர்கள் வீட்டுக்கு வருவாராயின் அவர்களையும் சிரார்த்தத்தில் வைக்கலாம்.

இவ்விதம், பிராமணார்த்தமாய் வந்தவருக்கு கால் அலம்பல் முதலிய உபசாரங்களைச் செய்து, பவித்திர பாணியாய் ஆசமனம் முதலானவைகளைச் செய்து, சுத்தர்களாக இருக்கும் அவர்களை ஆசனத்தில் அமர்த்தி, அமுது செய்விக்க வேண்டும். பிதுர் ஸ்தானத்தில் ஒற்றையாகவும், தேவஸ்தானத்தில் இரட்டையாகவும் அல்லது இச்சைக்கேற்ப ஒவ்வொருவரையாவது வைக்க வேண்டும். அதுபோலவே மாதாமசனுடைய சிரார்த்தத்தையும் பக்தியுடன் தேவ வரணத்தோடு கூடியதாகச் செய்ய வேண்டும். பிதுர் சிரார்த்தம் மாதாமக சிரார்த்தம் ஆகிய இவ்விரண்டுக்கும் ஒரே விசுவதேவ வரணஞ் செய்யவும் கூடும் பிதுர்வர்க்க மாதாமகவர்க்கங்களைச் சேர்ந்த தேவதாஸ் தானத்துப் பிராமணரைக் கிழக்கு முகமாகவும், பிதுர் ஸ்தானத்துப் பிராமணரை வடக்கு முகமாகவும் உட்கார வைத்துப் போஜனமளிக்க வேண்டும். இவ்விருவருக்கும் சிரார்த்தத்தைத் தனித்தனியே செய்ய வேண்டும் என்று சில முனிவர்கள் கூறுகிறார்கள். மற்றுள்ள ரிஷிகள் ஓரிடத்தில் ஒரு பாகத்தினாலேயே செய்யலாமென்று சொல்கிறார்கள். இருக்கத் தருப்பையைக் கொடுத்து அர்க்கிய விதியோடு பூசித்து, அவர்களுடைய அனுக்கியையினாலே ஆவாஹனம் செய்யவேண்டும். யவோதகத்தினால் தேவர்களுக்கு அர்க்கியம் கொடுத்து, கந்த, புஷ்ப, தூப தீபங்களினால் பூஜிக்க வேண்டும். பிதுர்க்கள் விஷயமாகச் செய்வதையெல்லாம் அப்பிரதக்ஷிணமாகச் செய்ய வேண்டும். அந்தப் பிதுர்க்களிடம் அனுக்கியை பெற்று இரட்டிப்பானத் தருப்பைகளை ஆசனத்தில் போட்டு மந்திர பூர்வமாக ஆவாகனஞ்செய்து திலோதகத்தினாலே அர்க்கியம் முதலானவற்றைக் கொடுத்து மற்ற உபசாரங்களையும் செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் யாராவது ஒரு பிராமணன் அன்னம் வேண்டி அதிதியாக வந்து விட்டால், முன்பு வரிக்கப்பட்ட பிராமணரிடத்தில் அங்கீகாரம் பெற்று அவனுக்கும் அமுதளிக்கலாம். சில யோகிகள் நாநாவித வேடமுடையவராய் தமது சொரூபம் இன்னதென்று அறியாத வகையில் மனிதருக்கு உபகாரிகளாகச் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் சிரார்த்த காலத்தில் நேரிட்ட அதிதியை அவசியமாகப் பூஜிக்க வேண்டும். அரசனே! அந்த அதிதியை உபசரிக்காவிட்டால் சிரார்த்தம் செய்த பயன் எல்லாம் அழிந்து போகும். பிறகு அக்கினியிலே கறியமுதும் காரமான வஸ்துக்களும் சேராத தூய்மையான அன்னத்தை அந்தப் பிராமணரின் அங்கீகாரத்தைப் பெற்று, அக்கினிக்கும் சோமனுக்கும் இயமனுக்கும் மந்திரங்களோடு மும்முறை ஆகுதி செய்ய வேண்டும். இவ்விதம் ஹோமம் செய்து மிகுந்த அன்னத்தைப் பிராமணருக்குரிய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். பிறகு நான்றாகப் பாகஞ்செய்யப்பட்டு சுவையாயும் இஷ்டமாயும் உள்ள அன்னங்களை சம்பூர்ணமாக அந்தப் பிராமணர்களுக்குப் பரிமாறி, இதைத் தேவரீரது திருவுள்ளம்படி அங்கீகரிக்க வேண்டும்! என்று கீழ்ப்படிதலான வார்த்தைகளால் ஆராதிக்க வேண்டும். அவர்களும் மவுனத்துடனும் முகமலர்ச்சியுடனும் அங்கீகரித்து நன்றாக அமுதுண்ண வேண்டும், கர்த்தாவும் கோபதாபமின்றியும் துரிதப்படாமலும் வேண்டியவற்றையெல்லாம் அன்போடு பரிமாற வேண்டும். பிறகு, ர÷க்ஷõக்கின மந்திரத்தைப் படித்து பூமியில் எள்ளைப் பரப்பி, அந்த பிராமணரைத் தனது பிதுர்க்களாகப் பாவிக்க வேண்டும்.

இவ்விதமாகச் செய்யும் சிரார்த்தங்களில் அந்தந்தத் தருணத்தில், பிதாவும் பிதாமகனும், பிரபிதா மகனும் இப்போது பிராமணருடைய உடல்களில் இருந்துகொண்டு என்னால் திருப்தியடைவாராக! பிதாவும், பிதாமகனும், பிரபிதா மகனும் இப்போது எனது ஓமத்தால் ஆப்பியாயனஞ் செய்யப்பட்ட மூர்த்திகளாகத் திருப்தியடைவார்கள். பிதாவும் பிதாமகனும் பிரபிதா மகனும் நான் இப்பொழுது பூமியில் இட்டப் பிண்டத்தினால் திருப்தியடையக் கடவர். பிதாவும், பிதாமகனும், பிரபிதா மகனும் நான் சொன்ன இந்த வார்த்தைகளால் திருப்தி அடைவார்களாக. யாக விக்கினகாரிகளான ராக்ஷசரெல்லாம் நாசமடைவார்களாக. யக்ஞங்களுக்கு ஈஸ்வரனும் விகாராதிகளில்லாத ஸ்வரூபமுடையவனுமான ஸ்ரீஹரியே இங்கு சகல அவியங்களையும் கவியங்களையும் அமுது செய்து கொண்டு எழுந்தருளியிருக்கிறான். அந்த எம்பெருமானுடைய சான்னியத்தியத்தினால் சகலமான ராட்சதரும் அசுரர்களும் உடனே ஓடிப்போவார்களாக. என்று சொல்லிப் பிரார்த்திக்க வேண்டும். அந்தப் பிராமணர் அமுது செய்து திருப்தியடைந்த பிறகு விகிரான்னமிட வேண்டும். பிறகு, அவர்கள் தமது கை கால்களை சுத்தம் செய்துகொள்ளத் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் தண்ணீர் தரவேண்டும். பிறகு அவர்களது நியமனம் பெற்று, வியஞ்சனாதிகளோடும், எள்ளோடும் கூடிய அன்னப்பிண்டங்களைச் சாந்தச் சித்தனாகப் போட்டு பிதுர்த் தீர்த்தத்தினால் திலோதகம் விடவேண்டும். மாதாமக விஷயத்திலும் இந்தத் தீர்த்தத்தினாலேயே பிண்ட நிர்வபணஞ் செய்ய வேண்டும். தெற்கு நுனியாகப் போடப்பட்ட தருப்பைகளில் புஷ்ப தூபாதிகளால் பூஜிக்கப்பட்ட பிண்டங்களை சுவாமிகள் அமுதுசெய்த பாத்திரத்தின் அண்மையில் முதன்மையாகப் பிதாவுக்கும் பிறகு முறையே பிதாமஹ பிரபிதாமஹருக்கும் போட வேண்டும். பிண்டத்துக்காகப் பரப்பப்பட்ட தருப்பைகளின் அடியில் நாலாவர் முதலானவர்களை லேபகர்ஷணங்களினால் மகிழ்விக்க வேண்டும். இதுபோலவே மாதாமஹரையும் வாசனைத் திரவியங்களோடும் மலர்களுடனும் கூடிய பிண்டங்களினால் திருப்தி செய்விக்க வேண்டும்.

அரசனே! முதலில் பிதுர்க்களுக்கு அன்புடன் ஸ்வதாகாரஞ் செய்து, அந்தப் பிதுர்க்கள் ஸ்வதாங்கீகாரத்துடன் ஆசிர்வதிக்க, இயன்ற அளவு தக்ஷிணையைக் கொடுக்க வேண்டும். பிறகு தேவ திருப்தியைக் காட்டும்படியான வாக்கியங்களை அவர்களைச் சொல்லும்படிச் செய்து, அவர்களுடைய ஆசிகளைப் பிரார்த்தித்துப் பெற்றுக்கொண்டு, முதலில் பிதுர்க்களுக்கும் பிறகு தேவர்களுக்கும் விசர்ச்சனஞ் செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் இதுவே கிரமம் என்பதை அறிவாயாக. விசுவ தேவதந்திர பக்ஷத்திலே தேவார்த்தமான பிராமணரை முதலில் அர்ச்சித்தும், பிறகு பிதுர் வர்க்கத்தையும் அதன் பிறகு மாதாமஹ வர்க்கத்தையும் அர்ச்சிக்க வேண்டும். விசர்ச்சனமோ முதலில் பிதுர்க்களுக்கும் பிறகு மாதாமஹர்களுக்கும் அதன்பிறகு விசுவதேவருக்கும் செய்யவேண்டும். இப்படிச் செய்து முடிந்த பிறகு இனிமையும் தாழ்மையும் உள்ள வசனங்களால் அவர்களை மேன்மைப்படுத்தி, வாசல் வரைக்கும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்கள் விடை கொடுக்கத் திரும்பி வந்து வைசுவதேவக் கிரியை செய்து, தனக்குப் பூஜ்யரும் பந்துக்களும் பிருத்தியருமானவர்களுடன் போஜனம் செய்ய வேண்டும். இப்படியாகப் பிதுர்ச்சிரார்த்த மாதாமஹ சிரார்த்தங்களைச் செய்வதால் அவனுக்கு பிதுர்க்களின் அனுக்கிரகத்தினால் சர்வாபீஷ்ட சித்தியும் உண்டாகும். சிரார்த்தத்தில் தவுகித்திரன், குதம்பம் திலம், இம்மூன்றும் பவித்திரங்கள். மேலும் வெள்ளியைப் பற்றிச் சொல்வதும் கொடுப்பதும் காட்டுவதும் பவித்திரங்கள். சிரார்த்தஞ் செய்தவனுக்கும் புசித்தவனுக்கும் குரோதம் வழிநடை துரிதம் ஆகிய மூன்றும் கூடாதவை. விசுவதேவரும் பிதுர்க்களும் மாதாமகரும் சிரார்த்தம் செய்பவருடைய குலம் எல்லாவற்றையும் போஷிப்பார்கள். பிதுர்க்களுடைய கணமானது சோமனை ஆதாரமாகக் கொண்டது. அந்தச் சந்திரனோ யோகத்தை ஆதாரமாகக் கொண்டிருப்பவன். ஆகையால் சிரார்த்தத்திலே யோகியை நிமந்திரிப்பது மிகவும் சிறப்புடையதாகும். ஆயிரம் பிராமணருக்கு முன்பு ஒரு யோகி எழுந்தருளியிருந்தால், அவர் தம்மையும் யஜமானனையும் கடைத்தேறச் செய்யவல்லவராவர் என்பதை அறிந்து கொள்வாயாக.

—————-

16. சிரார்த்த பொருட்கள்

சகர மாமன்னனே! கேட்பாயாக! ஹவிசினால் மட்டுமின்றி மாமிசத்தாலும் சிலர் சிரார்த்தம் செய்வதுண்டு. இது நிற்க சிரார்த்தத்துக்கு மிகவும் விசேஷமான பொருள்களைக் கூறுகிறேன். காலசாகம் என்ற ஒருவகைக் கீரையும், நல்லதேனும் பிரசாந்திகங்கள் என்ற ஒருவகைக் காட்டுத் தானியமும், செந்நெல்லும், வெண்சாமை, கருஞ்சாமைகளும், வழுதுணை, பிரண்டை முதலான காட்டு மூலிகைகளும், கிழங்குகளும், யவதானியங்களும், உளுந்தும், கோதுமையும், நல்ல நெல்லும், எள்ளும், மலையகத்தியும், கடுகும், பாகல், பலா, கதலி, அவரை முதலியவைகளும் சிறந்தவை. கயா என்னும் திவ்வியத் தலத்தை அடைந்து, அங்கு செய்யும் சிரார்த்தமானது மிகவும் சிறப்புடையது. அதனால் ஜன்மசாகில்யமாம். இனிச் சிரார்த்தத்துக்கு ஆகாதவற்றைச் சொல்கிறேன். ஆக்கிரயணம் என்னும் சடங்கு செய்யாமல் அறுத்த தானியமும் காராமணியும், அணுவென்ற அற்பதானியமும் மசூரங்களும், சுரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி போன்றவையும் காந்தாராகம் என்ற சம்பாவும், கரம்பம் என்ற தானியமும் பிரத்தியக்ஷமான உப்புமிகுந்த பொருள்களும் உவர் நிலத்தில் உண்டான பொருள்களும் சிவப்பல்லாத பிசின்களும், உப்பும், வாயினால் சொல்ல நன்றாக இராதவைகளும், கண்ணுக்கு இனிமையற்றவைகளும், இரவில் கொண்டு வந்து வைத்த ஜலம் முதலியவைகளும் கன்றில்லாத பசுவின் பாலும், பசுமாடு குடித்துத் திருப்தியடையக் கூடாத அற்ப ஜலமும், யாரும் கையாளாமல் விட்டு வைத்திருக்கும் கிணற்றின் தண்ணீரும், துர்க்கந்தமுள்ள தண்ணீரும், நுரைத்த நீரும், ஒற்றைக் குளம்புடைய மிருகங்களின் பாலும், ஒட்டகத்தின் பாலும், ஆட்டுப்பாலும், எருமைப்பாலும், மான் பாலும் இவையெல்லாம் சிரார்த்த காரியங்களுக்கு உபயோகிக்கத் தகாதவையாகும். மேலும் நபும்ஸகன், குலத்தாரால் தள்ளப்பட்டவன், சண்டாளன், பாஷாண்டன் அருவருக்கத்தக்க ரோகமுடையவன் வேத தருமங்களை விட்டவன் ஆகிய இவர்களாலும் கோழி, நாய், குரங்கு, ஊர்ப்பன்றி ஆகிய இவைகளினாலும் ராஜஸ்வலையான ஸ்திரீ சவுசாசாரஹீனன், பிணம் தூக்கிப் பிழைப்பவன் ஆகியவர்களால் பார்க்கப்பட்ட இடங்களிலே பிதுர்க்களும் தேவர்களும் அமுது செய்யமாட்டார்கள். ஆகையால் யாரும் பார்க்கக் கூடாத மறைவிடத்திலே மிகுந்த பக்தியுடன் பூமியில் எள்ளை இறைத்து இராக்கதர்களை ஓட்டி சிரார்த்தஞ்செய்ய வேண்டும். ரோமம் பூச்சி முதலானவைகளுடனும் கஞ்சி முதலியவைகளுடனும் கூடிய பழையது அல்லாத அன்னத்தைப் பக்தி சிரத்தையோடு நமது கோத்திரங்களைச் சொல்லி இடுவோமானால் அந்த அன்னம் பிதுர்க்கள் உண்கின்ற அமிர்தாதி உணவாகத் திகழும்.

அரசனே! கலாபக் கிராமத்தின் உபவனத்தில் மனுபுத்திரனான இஷ்வாகு மாமன்னனுக்கு பிதுர்க்கள் பாடித் தந்த கீதம் ஒன்று வழங்குகிறது. அதாவது எவர் ஒருவர் கயைக்குச் சென்று நமக்குப் பிண்டம் போடுவார்களோ, அத்தகைய யோக்கியர் நம்முடைய குலத்தில் பிறப்பார்களா? எவர் பாத்திரபத கிருஷ்ணத்திரயோதசியிலும் மகா அமாவாசையிலும் தேன் நெய்யுடன் பாயாசான்னம் கொடுப்பார்களோ, அப்படிப்பட்டவர் நமது குலத்தில் பிறப்பார்களா? எவர் கவுரி என்ற பத்து வயதுக் கன்னியை நல்ல பாத்திரத்தாற் தானம் செய்து திருமணம் செய்விப்பார்களோ, நீலம் (நீலம்-உடல் முழுவதும் சிவந்து முகமும் வாலும் வெண்மையாய் கொம்பும் குளம்பும் சிறிது வெளுத்திருக்கும் எருது) என்ற காளையை விடுவார்களோ, விதிப்படி தக்ஷிணை கொடுத்து அசுவமேதமாவது செய்வார்களோ அத்தகையோர் நமது குலத்தில் பிறப்பார்களா? என்று இவ்விதமாகத் தமது மனோ விருப்பங்காட்டி அவற்றைச் சிறப்பித்திருக்கிறார்கள்.

————–

17. நக்கின சொரூபம்

பராசர முனிவர் தமது சீடரை நோக்கி, மைத்ரேயரே! பூர்வத்தில் சகரமாமன்னனுக்கு அவுரவ முனிவர் அருளிச்செய்த சதாசாரத்தை நான் உமக்குக் கூறுகிறேன். இந்தச் சதாசாரத்தைக் கடந்தால் எவனும் நலன்களைப் பெறமாட்டான்! என்று கூறினார். சுவாமி! ஷண்டன் அபவித்தன் என்று சொல்லப்ட்ட நபும்ஸகன், தள்ளப்பட்டவன் முதலியவர்களைப் பற்றிச் சொன்னீர்கள். நக்கினன் என்பவனைப் பற்றி நீங்கள் எதுவும் கூற வில்லை. நக்கினன் என்பவன் யார்? எந்தவித நடக்கையினால் அப்பெயர் வருகிறது? இந்த நக்கின ஸ்வரூபத்தைப் பற்றித் தாங்கள் கூறுவதை நான் கேட்க விரும்புகிறேன்! தர்மவான்களுக்கெல்லாம் உயர்ந்தவரான தேவரீருக்குத் தெரியாத விஷயமில்லை. ஆகையால் நக்கின ஸ்வரூபத்தைப் பற்றிக் கூறவேண்டுகிறேன் என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். ரிக்கு, யஜுர், சாமம் என்ற பெயரையுடைய வேதமானது பிராமணரது வர்ணங்களுக்கு, மறைவாக இருக்கிறது. அத்தகைய வேதத்தை விட்டவன் யாரோ! அவனே நக்கினன் என்று அறிவீராக. நக்கினன் என்ற சொல்லுக்கு உலகத்தில் ஆடையில்லாமல் திகம்பரனாக இருப்பவன் என்று பொருள். ஆயினும் சாஸ்திரத்தில் நக்கினன் என்பது வேதரூபமான மறைவை இழந்தவன் என்பது பொருளாகும். திரயீ என்ற இந்த மூன்று வேதங்களும் வர்ணங்களுக்கு மறைவு மட்டுமல்ல, சம்ரக்ஷணமாகவும் இருக்கிறது, இத்தகைய வேதத்தை மோகத்தால் விட்டு விடுவோன் எவனோ, அவனே நக்கினன் என்று வழங்கப்படுவான். மேலும் ஒன்றைச் சொல்கிறேன் கேட்பீராக. எல்லா தருமங்களையும் அறிந்த எனது பிதாமஹரான வசிஷ்ட முனிவர் பீஷ்மருக்கு அருளிச் செய்த நக்கின சொரூப சம்பந்தமாகச் சொன்ன விஷயத்தை நான் உமக்குச் சொல்கிறேன்.

பூர்வத்தில் ஒரு காலத்தில் தேவதைகளுக்கும், அசுரர்களுக்கும் தேவமானத்தில் நூறு ஆண்டுகள் வரைக்கும் மகத்தான யுத்தம் ஒன்று நடந்தது. அதில் ஹ்ராதன் முதலிய அசுரர்களால் தேவர்கள் தோல்வியுற்று, மிகவும் துக்கமடைந்து திருப்பாற்கடலின் வடகரைக்குச் சென்று தவஞ்செய்து சகல உலகநாதனான ஸ்ரீவிஷ்ணுவின் மகிழ்ச்சிக்காக நாங்கள் எந்த வார்த்தையைச் சொல்வோமா, அதனால் இப்போதே அந்தப் பகவான் பிரசன்னமாகக் கடவாராக! எந்த மகாத்மாவிடமிருந்து பிரபஞ்சங்கள் யாவும் தோன்றினவோ அவையாவும் எங்கே மீண்டும் ஒடுங்குமோ அத்தகையவனைத் துதிக்கவல்லவர் யாருண்டு? ஆயினும் பகைவர் செய்த அவமானத்தால் நாங்கள் அபயம் வேண்டித் துதிக்கிறோம். உனது உண்மை நிலை வாக்குக்கு எட்டுமோ? எம்பெருமானே! நீயே பூமியும், ஜலமும், நெருப்பும், காற்றும், ஆகாயமும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்குவித அந்தக்கரணமும், பிரகிருதியும், அந்தப் பிரகிருதிக்கு மேற்பட்ட புருஷனுமாக இருக்கின்றாய். பிருமா முதல் துரும்பு வரை, ரூபப்பட்டதும் படாததுமாய் காலதேச பேதமுள்ளதாயுள்ள இந்தப் பிரபஞ்சம் யாவும் உன்னுடைய ஒரே திருமேனியாக இருக்கிறது. அதற்குள்ளே, ஆதியில் உனது நாபிக் கமலத்திலிருந்து படைப்புக் காரணமாக உண்டான எந்த ரூபம் உண்டோ அந்தப் பிரம ஸ்வரூபத்தை நாங்கள் வணங்குகிறோம்! என்று துதித்தார்கள்.

உடனே அத்தேவர்களின் எதிரில் திருவாழி, திருச்சங்கு முதலான திவ்ய ஆயுத சமேதனாய் பெரிய திருவடி நாயினார் திருத்தோளின் மீது எழுந்தருளி, நீலமேகச் சியாமளனாய் சேவை சாதிக்கும் ஸ்ரீமந் நாராயணனை தேவர்கள் கண்களால் கண்டு, பல்லாயிரம் முறைகள் தண்டம் சமர்ப்பித்து, ஸ்வாமீ! அடியேங்களை அனுக்கிரகித்து அருள்செய்ய வேண்டும். உம்மையே தஞ்சமாக அடைந்த அடியேங்களை அசுரரிடமிருந்து காத்தருள வேண்டும். ஹ்ராகன் முதலிய அசுரர்கள் எல்லாம் பிரமாவின் கட்டளையையும் மீறி எங்களுக்குச் சேரவேண்டிய மூன்று உலக ஹவிர்ப்பாகங்களையும் அபகரித்துக் கொண்டார்கள். நாங்களும் அந்த அசுரர்களும் சர்வாத்மகனான உன்னுடைய அம்சங்களே ஆகிறோம், ஆயினும் அவத்தையால் தோன்றிய பேதத்தால் இந்த உலகத்தை வேறாகக் காண்கிறோம். ஆகையால் இவ்விதம் வேண்டலாயிற்று. நாங்கள் தேவர்கள் தான் எனினும் வேதமார்க்கத்தை அனுசரித்து தங்களுக்குரிய தருமங்களில் நின்றவர்களாய் தபஸுடன் கூடிய அந்த அசுரர்களை ஜெயிக்க எங்களுக்கு சக்தியில்லை. சர்வாத்மகனான பகவானே! நாங்கள் அந்த அசுரரை எப்படி வெல்ல முடியுமோ, அத்தகைய உபாயத்தை அடியேங்களுக்கு தந்தருள வேண்டும்! என்று வேண்டினார். உடனே ஸ்ரீவிஷ்ணுபகவான் தமது திருமேனியிலிருந்து ஒரு மாயா மோகனை உண்டாக்கித் தேவர்களைக் கடாட்சித்து, தேவர்களே! இந்த மாயா மோகன் அவ்வசுரர்களை மோகமடையச் செய்வான். அதனால் அவர்கள் வேத வழியைவிட்டு உங்களால் கொல்லப்படுவார்கள். இப்படிச் செய்யலாமோவென்றால் உலக ரட்சண்யத்திலிருக்கும் எனக்கு பிருமாவின் கட்டளையைக் கடந்து நடப்பவர்கள் தேவராயினும் அசுரராயினும் மற்று யாராயினும் வதைக்கத் தக்கவராகிறார்கள். ஆகையால் நீங்கள் அஞ்சவேண்டாம். இந்த மாயாமோகன் உங்களுக்கும் முன்னதாகச் சென்று உங்களுக்கு உதவி செய்வான் என்ற திருவாய் மலர்ந்தருளினார். தேவர்கள் அதைக்கேட்டு மகிழ்ந்து பெருமாளைத் திருவடிதொழுது, தமது இருப்பிடம் சென்றார்கள். மாயா மோகனும் அவர்களுடன் கூடவே சென்று அசுரர்களிடம் போய்ச் சேர்ந்தான்.

————–

18. ஜைன பவுத்த மத பிரவர்த்தனையும், சததனுவின் கதையும்

கேளுங்கள், மைத்திரேயரே! அந்த மாயாமோகன் நர்மதை நதிக்கரைக்குச் சென்று, அங்கே சிரத்தையோடு தவஞ்செய்யும், அசுரரைக் கண்டு திகம்பரனாகவும், மழுங்க மழித்த தலையுடைனும், மயிற்றேகையைக் கையில் ஏந்தியவனாகவும் அவர்களருகே சென்று அசுரவேந்தர்களே! நீங்கள் எதற்காகத் தவஞ்செய்கிறீர்கள்? நீங்கள் செய்யும் தவத்துக்கு இம்மைப் பயனை விரும்புகிறீர்களா? அல்லது மறுமைப் பயனை வேண்டுகிறீர்களா? அதைச் சொல்லுங்கள்? என்று இனிமையாகக் கேட்டான். அதற்கு அசுரர்கள் புத்திமானே, நாங்கள் பரலோக லாபத்துக்காகவே தவஞ்செய்கிறோம். இந்த விஷயத்தில் நீ என்ன நினைக்கிறாய், அதைச் சொல்! என்றார்கள். தைத்தியர்களே! உங்களுக்கு மோட்சம் வேண்டுமானால் நான் சொல்லும் கர்மங்களைச் செய்யுங்கள். மோட்சத்துக்கு வழியாக இருக்கும் இந்தத் தருமத்திற்கு நீங்கள் ஏற்றவர்கள்! இதில் ஐயமில்லை. இந்தத் தருமமே மோட்சத்துக்கு ஏற்றது. இதைவிட உயர்ந்த தருமம் வேறு எதுவும் இல்லை. இந்தத் தருமத்தில் நீங்கள் இருப்பீர்களானால் மோட்சத்தைப் பெறுவீர்கள். நீங்கள் அனைவரும் மகா பலசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் இருக்கிறீர்கள். ஆகையால் இதற்குத் தகுந்தவர் நீங்களே! மேலும் இது தருமத்தின் பொருட்டேயாகும். அதர்மத்தின் பொருட்டுமாகும் இது மோட்சத்தின் பொருட்டாகும். மோட்சத்தின் பொருட்டும் ஆகாது. இது செய்யத்தக்கதாயும், தகாததாயும் இருக்கும், இது திகம்பரருடைய தருமமாயும் வெகு வஸ்திரம் தரித்தவர்களுடைய தருமமாகவும் இருக்கிறது. இது மிகவும் பரமார்த்தமாகவும் இருக்கிறது. பரமார்த்தமாகவும் இராது! என்று ஏழுவிதமான ஒருபடிப்படாத வாதங்களைக் காட்டினார் என்று மாயா மோகன் சொல்லி அநேகவிதமான யுக்திப் பிரமாணங்களைக் கொண்டு, அவ்வசுரர்களை வேத மார்க்கத்திலிருந்து இழுத்துவிட்டு, அசுர தர்மங்களை விட்டுவிடச் செய்தான், (அர்ஹத) தகுந்தவர்கள் என்று அடிக்கடி சொல்லிவந்ததனாலேயே அவர்களுக்கு ஆர்ஹதர் என்றும் அவனுக்கு அருகன் என்றும் பெயர் உண்டாயிற்று. இவ்விதமாக அருக மதபோதனைகளால் அந்தத் தைத்திரியர்கள் வேத தர்மங்களைக் கைவிட்டு அவன் கூறிய தருமத்தையே ஏற்று நடந்தார்கள். அவர்களால் பலர் அருகமதத்தாரானார்கள்.

மைத்ரேயரே! இவ்விதமான பிறகு, மாயா மோகன் அந்த வேடத்தை விட்டுச் சிவப்பு ஆடைகளை அணிந்த, ஜிதேந்திரிய ரூபங்கொண்டு மற்ற அசுரர்களிடமும் சென்று, சாந்தமாயும் இனிமையாயும் சில வார்த்தைகள் கூறலானான். அசுரர்களே! நீங்கள் இப்போது செய்து வரும் தர்மம் சுவர்க்கத்திற்காகவா? மோட்சத்திற்காகவா? எதற்கானாலும் ஆகட்டும். ஜீவ ஹிம்சையுள்ள இந்தத் தருமங்களால் என்னதான் பயன் உண்டு! நான் சொல்வதைக் கேளுங்கள். காண்கின்ற யாவும் விஞ்ஞான மயம் என்று அறியுங்கள். இந்த உலகமெல்லாம் யாதொரு ஆதாரமும் இல்லாததாய் பிராந்தி ஞானத்தால் உண்டான பொருளாக இருக்கிறது, இதுபோலவே அநாதியாகவே தோஷமுடையதாய், சம்சார சங்கடத்திலே மிகவும் உழன்று கொண்டிருக்கிறது. இந்தக் காரியம் இப்படியே தான் இதை அறிந்து கொள்ளுங்கள், அறிந்து கொள்ளுங்கள்! (புத்யத, புத்யத!) என்று மாயா மோகன் சொன்னான், அதனால் புத்தன் என்ற பெயருள்ளவனாகிய அந்த மாயா மோகன் வேத விரோதமான யுக்திகளாலே அசுரர்களை, மோகமடையச் செய்து, வேத தருமங்களை விட்டுவிடச் செய்தான். இதனால் அவ்வசுரர்களும் மற்றையோரும் பவுத்தர்களானார்கள். பிறகு மாயா மோகன், வேறுவிதமான பாஷாண்ட கற்பனைகளால் பற்பல அசுரர்களைக் கவர்ந்து குறுகிய காலத்திலேயே, வைதீக மார்க்கத்தை விட்டுவிடச் செய்தான். அதனால் அவ்வசுரர்கள் வேதத்தையும் யாகத்தையும் யாகாதி கர்மங்களையும் தேவதைகளையும், அந்தணரையும் தூற்றலானார்கள். எப்படியென்றால் இம்சை பாவம் என்று சொல்லும் வேதங்களே மறுபடியும் இம்சையைத் தரும சாதனமாகச் சொன்னது எவ்விதத்திலும் யுக்திக்கு ஒத்ததல்ல? அக்கினியில் சொரிந்த ஹவிசுகள் எரிக்கப்பட்டுச் சாம்பலாய்ப் போனபின் பயனைத் தரும் என்பது ஒன்றுமறியாத பையலின் பேச்சைப் போன்றதாகும்! அநேக யாகங்கள் செய்து இந்திரப் பதவியை அடைந்தவன் வன்னிக்கட்டை முதலான கட்டைகளைத் தின்னும்படி நேருமானால் அந்தக் கட்டைகளின் இலைகளைத் தின்னும் மிருகங்களின் பிறவியானது, அந்த இந்திரனின் பிறப்பைவிடச் சிறப்புடையதாகும் அல்லவா? யாகத்தில் கொல்லப்பட்ட பசுவுக்குச் சொர்க்கம் கிடைக்குமேயானால் அந்த எஜமானன் தன் தந்தையையே யாகத்தில் கொல்லலாம் அல்லவா? சிரார்த்தத்தில் ஒருவன் புசிக்க மற்றொருவனுக்குத் திருப்தியுண்டாகிறது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் வழிநடக்கும் தன் பந்துக்கள் சோற்று மூட்டையைச் சுமந்து, வருத்தப்படாமல் இருக்கும்படியாக, மக்கள் ஏன் மற்றவருக்கு அன்னமிடக்கூடாது! என்று இவ்விதமாக அசுரர்களெல்லாம் தூற்றும்படி மாயா மோகன் கற்பித்தான். பிறகு மாயாமோகன் பார்த்தீர்களா, அசுரர்களே? ஆபத்தவாக்கியம் என்று நீங்கள் சொல்லுகிறீர்களே அது என்ன? ஆகாயத்திலிருந்து குதித்ததோ, இல்லையோ? ஆகையால் யார் யார் இதைச் சொன்னாலும் யுக்தி யுக்தமாக இருக்கிற வாக்கியத்தைத்தான் நீங்களும் நானும் ஏற்கவேண்டுமேயல்லாமல், வீணாக ஏதோவொரு நம்பிக்கையால் அங்கீகரிக்கலாகாது, என்று சொன்னேன். அதனால் அசுரர்களில் ஒருவன் கூட வேதத்தை விரும்பவில்லை.

இவ்வாறு அசுரர்கள் வழி தப்பியவுடன், தேவர்கள் அவர்களுடன் தருமத்திற்காக யுத்தம் புரிந்து வென்றார்கள்! முனிவரே முன்பு அவ்வசுரர்கள் வைதீக மதாசாரமாகிய பலமுள்ள கவசத்தைப் பூண்டிருந்ததால் பகைவர்களால் எதிர்க்க முடியாத வலிமையுடன் இருந்தார்கள். பிறகு அந்தக் கவசம் இல்லாததால் எளிதில் வெல்லப்பட்டு விட்டார்கள். எனவே எந்த மக்கள் தங்களுடைய நல்ல மதத்தை விட்டு துர் மதங்களில் பிரவேசிப்பார்களோ அவர்கள் அனைவரும் வேதம் என்னும் காப்பை இழந்தவர்களாவதால் அவர்கள் நக்கினர் ஆவர். இங்கு பிரம்மச்சாரி கிரகஸ்தன், வானப்பிரஸ்தன் சந்நியாசி என்ற நான்கு ஆசிரமங்களையுடையவர்களைத் தவிர ஐந்தாவதாக ஒருவன் இல்லை. ஒருவன் இல்லறத்தை விடுவானாகில் அவன் வானப்பிரஸ்தத்தையாவது சந்நியாசத்தையாவது உடனே அடைய வேண்டும். அப்படிச் செய்யாமலிருந்தால் அவனும் நக்கினன் என்றே வழங்கப்படுவான். எவன் வேதம் விதித்த நித்திய கர்மங்களைச் செய்யச் சக்தியுள்ளவனாக இருந்தும் அவற்றைச் செய்யாமல் விட்டுவிடுகிறானோ அவன் அந்தத் தினத்திலிருந்தே பதிதன் ஆகிறான். ஆயினும் பிராயச்சித்தத்தினாலே அவன் சுத்தனாகலாம். ஒருவன் யாதொரு ஆபத்துமில்லாமலிருக்க பதினைந்து நாட்கள் நித்திய கர்மங்களை விடுவானானால் அவன் விசேஷமாய்ப் பதிதனாகிறான். அத்தகையவன் விசேஷப் பிராயச்சித்தத்தினால் சுத்தியடையலாம். ஒரு ஆண்டுக்காலம் எவன் நித்தியக் கிரியைகளைச் செய்யாமல் விடுகிறானோ, அவன் மகாப்பாதகன் அவனைப் பார்த்தவன், அந்தத் தோஷம் நீங்குவதற்கு சூரிய தரிசனம் செய்யவேண்டும். அந்த மாபாவியைத் தீண்டினால் உடுத்த ஆடையோடு ஸ்நானம் செய்ய வேண்டும். அந்தப் பாவிக்கோ யாதொரு பிராயச்சித்தமும் இல்லை. தேவர் ரிஷி பிதுர் பூதங்கள் எவன் வீட்டில் பூஜிக்கப்படுவதில்லையோ அவனை விடப்பாவிகள் இந்த உலகத்தில் இல்லை எவனுடைய வீடும் உடலும் தேவர் முதலானோருடைய இன்பமில்லாத பெருமூச்சால் கெட்டிருக்கிறதோ அந்தப் பாவியுடன் உட்காருதல், பேசுதல் போன்ற சம்பந்தமிருக்கக் கூடாது. அத்தகைய பாவிகளோடு, ஒரு ஆண்டுக்காலம் புகுவோனுக்கு அவனுக்குச் சமமான பாதகமேயுண்டாகும். அந்த மகாபாதகன் வீட்டில் உண்பதும், படுப்பதும் ஓரிடத்திலே கூடியிருப்பதுமாகிய விசேஷ சம்பந்தங்களைச் செய்பவன், அவனைப் போலவே மகாப் பதிதனாகின்றான். அந்தணர் முதலிய நான்குவர்ணத்தாரும் தத்தமக்குரிய தர்மத்தை விட்டு, இழிவான கருமங்களில் இருந்தாலும் அவர்களும் நக்கினர் என்ற பெயரையே பெறுவார்கள். எங்கு நான்கு வர்ணத்தாருக்கும் அத்யந்த சங்கரமுண்டாயிருக்கிறதோ அங்கே நல்ல நடத்தையுடையோர் இருப்பது மிகவும் கேடு பயப்பதாகும். ஏனெனில், தேவர் ரிஷிகளைப் பூசிக்காமல் புசிப்பவனோடு பேசினாலும் நரகமுண்டாகும். ஆகையால் அத்தகையோருடன் தமக்குள் எத்தகைய சம்பந்தமும் ஏற்படாமலிருக்க வேண்டும். தேவ பிதுர்க்களைக் குறித்துச் செய்யப்படும் சிரார்த்தமும் அத்தகைய நக்கினரால் பார்க்கப்படுமானால் அவர்களுக்குப் ப்ரீதி உண்டாகாது.

மைத்ரேயரே! ஒரு கதையைச் சொல்கிறேன் கேளும். பூர்வகாலத்தில் சததனு என்ற புகழ்பெற்ற மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு சயிபியை என்ற மனைவி ஒருத்தி இருந்தாள். அவள் தன் கணவனுக்குரிய தருமங்களையே முக்கியமாகக் கருதியிருந்தாள். அவளோ மகாப் பதிவிரதை சகல லக்ஷணங்களுடனும் கூடிய அத்தகைய மனைவியோடு சததனு மன்னன் ஜபங்கள், ஓமங்கள், தானங்கள், உபவாசங்கள், அர்ச்சனைகள் முதலியவைகளால் தேவதேவனான ஸ்ரீஜனார்த்தனனை ஆராதித்து வந்தான். இப்படியிருக்க ஒரு காலத்தில் அந்தத் தம்பதிகள் இருவரும் கார்த்திகை, ஏகாதசியில் உபவாசமிருந்து கங்கா நதியில் ஒருமிக்க நீராடிக் கரையேறினார்கள். அப்போது அங்கே ஒரு பாஷாண்டி எதிரில் வந்தான். அவனைப் பார்த்ததும் அரசனின் மனைவி அவனோடு பேசாமல் மவுனமாகவே இருந்து அவனைப் பார்த்த தோஷம் நீங்கச் சூரிய தரிசனம் செய்தாள். அந்த அரசனோ தனக்கு வில்வித்தை கற்றுத் தந்த ஆசிரியனுக்கு அந்தப் பாஷாண்டி நண்பன் என்ற கவுரவத்தை முன்னிட்டு அவனிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான். பிறகு அரசன் தன் மனையாளோடு, ஸ்ரீமந்நாராயணனுக்குத் திருவாராதனம் முதலியவற்றைச் செய்துவந்தான். பிறகு சிலகாலம் கழித்து அந்த அரசன் மரணமடைந்தான். அப்போது அவனது மனைவியும் அவனுடன் உடன்கட்டை ஏறினாள். சததனு மன்னனோ உபவாச விரதம் இருக்கும்போது பாஷாண்ட சல்லாபஞ் செய்த அபசாரத்தினால் நாயாகப் பிறந்தான். அவனது மனைவியோ, காசி மன்னனின் மகளாகப் பிறந்து சர்வ லக்ஷணங்களும் பொருந்தியவளாய் கல்வியில் தேர்ந்தவளாய், பூர்வஜன்ம நினைவுடையவளாகவும் இருந்தாள். அவளை அவளுடைய தகப்பன் திருமணஞ் செய்துகொடுக்க முயன்றான். அப்போது அந்தப்பெண், தனக்கு திருமணம் வேண்டுவதில்லையென்று சொல்லி, தகப்பனது முயற்சியைத் தடுத்துவிட்டாள். பிறகு அவள் தன் கணவன் நாயாக இருப்பதை அறிந்து விதிசை என்ற நகரத்துக்குச் சென்று நாயாக இருக்கிற தன் கணவனைக் கண்டு, தினந்தோறும் அன்போடும் மரியாதையோடும் நல்லுணவுகளைக் கொண்டுவந்து கொடுத்துவந்தாள். அந்த நாயானது அவள் கொடுக்கும் உணவுகளை உண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்து தன் சாதியியல்பின்படி மிகப்பணிவான செய்கைகளைச் செய்து வந்தது. அதைக் கண்டு ராஜகன்னியானவள் மிகவும் வெட்கமடைந்து அந்த நாயைக் கும்பிட்டு ஐயா, மகாராஜாவே! நீங்கள் விரதநாளில் தீர்த்த ஸ்நானம் செய்ய பிறகு, ஒரு பாஷாண்டியோடு தாட்சண்யத்தினால் பேசினீர்கள் அல்லவா? அந்தப் பாதகத்தினால் அல்லவா இந்த ஈனமான நாய் பிறவியாகப் பிறந்து உம்மடியாளாகிய எனக்கு வணக்கஞ் செய்கிறீர்கள்! நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள்! என்று அரசனுக்கு ஞாபகமூட்டினாள். அவள் சொன்னதைக் கேட்டதும் நாயுருவமான அரசன், நெடுநேரம் யோசித்து முற்பிறவியின் நினைப்பைக் கொண்டு மிகுந்த வெறுப்பையடைந்தான்; பிறகு அந்தப் பட்டணத்தை விட்டு ஓடிச்சென்று ஒரு மலைமீதேறிக் கீழே விழுந்து நரிப்பிறப்பை அடைந்தான். பிறகு, அரசகுமாரி ஞானதிருஷ்டியினால் தன் கணவனுக்கு நேரிட்ட இரண்டாவது பிறவியை அறிந்து கோலஹலம் என்ற மலையில் நரியாக இருந்த தனது கணவனைக் கண்டு முன்போலவே வணக்கத்துடன் ஐயனே! நீங்கள் நாயாக இருந்தபொழுது, பாஷாண்ட சம்பாஷணையினால் உங்களுக்கு அத்தகைய பிறவி நேர்ந்தது என்று உங்களுக்கு நினைப்பூட்டினேன். அதை இப்பொழுதும் நினையுங்கள் என்றாள். அதைக் கேட்ட நரியாக இருந்த மன்னன் அவள் பேசுவது சத்தியம் என்று நினைத்து அந்தக் காட்டில் இரை எதுவும் தேடாமல் பட்டினி கிடந்து, உயிர் துறந்து மனிதர் இல்லாத காட்டிலே மீண்டும் ஒரு செந்நாயாகப் பிறந்தான். அப்போதும் அவன் மனைவி, செந்நாயிடம் öன்று நீங்கள் செந்நாயல்ல நீங்கள் சததனு என்ற மன்னனாயிற்றே! நாயாகவும் நரியாகவும் இரு பிறப்பெடுத்த நீங்கள் இப்போது செந்நாயானது ஏன் தெரியுமா? என்று பூர்வ ஜன்ம நினைவுகளை ஞாபகப்படுத்தினாள்.

உடனே அரசன் தன் செந்நாய் உடலைவிட்டுக் கழுகாகப் பறந்தான். அதன் பிறகு ராஜகுமாரி அந்தக் கழுகிடம் சென்று, ஐயா! நீங்கள் கழுகு செய்யும் செயல்களைச் செய்தது போதும், நீங்கள் முந்திய பிறவியில் பாஷாண்டனோடு பேசிய பாபத்தாலல்லவா இப்படியானீர்கள் என்றாள். அதை அரசன் நினைத்து, மீண்டும் செத்து, மறுபடி ஒரு காகமாகப் பிறந்தான். அப்போதும் அந்தப் பதிவிரதை அந்த காகத்திடம் சென்று சகல அரசர்களும் வசப்பட்டு உமக்குக் கப்பம் செலுத்தப் பெற்றிருந்த நீங்கள், இப்போது பலி போஜனம் செய்யும் காகமாகப் பிறந்துவிட்டீர்களே! இதை நினையுங்கள் என்று முற்பிறவி நிகழ்ச்சியை நினைப்பூட்டினாள். அரசன் அதை நினைத்து அந்த உடலைவிட்டு, கொக்காகப் பிறந்து, மனையாளால் நினைவூட்டப்பெற்று, இறந்து பிறகு மயிலாகப் பிறந்தான். அதை அழகான அரசகுமாரி உணர்ந்து அந்த மயிலைத் தனது அரண்மனைக்குக் கொண்டுவந்து, அதற்குரிய இனியவுணவுகளை வழங்கி தன் தந்தை செய்த அசுவமேத யாகத்தின் அவபிரத தீர்த்தத்திலே நீராட்டித் தானும் நீராடி, மயிலாக இருந்த அந்த மன்னனுக்கு நாய் பிறப்பு முதல் மயூரப் பிறப்பு வரையில் நேர்ந்த பிறப்புகளை நினைவுபடுத்தினாள். பிறகு மயிலாக இருந்த மன்னன், தன் பிறவிகளை எண்ணித் துயரமடைந்து உடலைவிட்டு ஜனகமன்னனின் மகனாகப் பிறந்தான். இவ்விதமாக அவன் வளர்ந்து வந்தபோது பதிவிரதையான அரசிளங்குமரி தனக்குக் கல்யாண எத்தினஞ் செய்யும்படித் தன் தந்தையைத் தூண்டினாள். அவளது தந்தையும் அவளது சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்தான். அந்த சுயம்வரத்துக்கு ஏராளமான அரசகுமாரர்கள் வந்தார்கள். அவர்களில் விதேக ராஜகுமாரனான தன் கணவனையே அந்த காசிராஜன் மகள் வரித்தாள். அவனை மணந்து அவனுடன் சகல போக பாக்கியங்களையெல்லாம் அனுபவித்து வாழ்ந்து வந்தாள். அவளுடைய நாயகனான ராஜகுமாரன் தன் தந்தை சொர்க்கமடைந்த பிறகு அந்த விதேக ராஜ்யத்துக்கு அரசனாகி, பலரை வென்று திறை பெற்று பல யாகங்களையும் செய்து பல தானங்களையும் வழங்கி, பல புத்திரர்களையும் பெற்று, நீதிமுறையில் ஆட்சி செய்து, ஒரு யுத்தத்தில் தருமவழியில் உயிரை விட்டான். அப்போதும் அவன் மனைவி, அவனுடன் மகிழ்ச்சியாக உடன்கட்டை ஏறினாள். பிறகு அந்தத் தருமபத்தினியுடன் அரசன் இந்திரலோகத்தையும் கடந்து போய்ச் சகல இஷ்டங்களையும் பெறக்கூடிய மகாபுண்ணிய உலகங்களை அடைந்தான். இவ்விதமாக அத்தம்பதிகள் முன் சொன்னது போலத்தூய்மை பெற்று, ஒருவரை ஒருவர் பிரியாத புண்ணிய உலகினை அடைந்தார்கள்.

மைத்ரேயரே! இவ்வாறு பாஷாண்ட சம்பாஷணையினால் உண்டான பாவத்தையும் அசுவமேத யாகத்தின் அவபிரத ஸ்நானத்தின் புண்ணியத்தையும் உமக்குச் சொன்னேன். எனவே மகாபாவிகளான பாஷாண்டிகளோடு பேசுவது முதலானவற்றை விட்டுவிடவேண்டும். அனுஷ்டான காலத்தில் அதை விசேஷமாக விட்டுவிடவேண்டும். இதுவரை பலவகையான நக்கினர்களையும் உமக்குக்கூறினேன். இவர்கள் பார்த்தாலுங்கூட சிரார்த்தம் அழிந்து போகும். இவர்களுடன் பேசுவதால் அந்தந்த நாளில் செய்த புண்ணியங்கள் நசித்துப் போகும். வீணாகச் சண்டை வளர்ப்பவரும், மழுங்க மொட்டையடித்துக் கொள்வோரும் தேவபூஜை செய்யாமல் உணவருந்துவோரும், அகமும் புறமும் தூய்மையற்றவரும், பிதுர்க்களுக்குப் பிண்டமும் தண்ணீரும் இடுவதை விட்டவர்களுமான இத்தயை அசத்துக்களுடன் எவ்விதமான சம்பந்தங் கொண்டாலும் நரகமே அடைய நேரிடும். நல்லவருடன் சேர்வோரே மேன்மையான பதங்களை அடையப்பெறுவார்கள்.

மூன்றாவது அம்சம் முடிந்தது.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் மூன்றாவது அம்சம்—-முதல் பாகம் —

February 28, 2021

1. கடந்த மனுவந்தரங்கள்
2. இனிவரும் மனுவந்தரங்களின் விளக்கம்
3. வேதவியாசர்கள் வரிசை
4. வேத சாகைகளின் பேதங்கள்
5. யஜுர் வேத சாகைகள்
6. சாம, அதர்வண வேதங்கள், புராணங்கள்
7. வைணவத்தின் பெருமை
8. ஆராதனை முறையும் வருணாசிரம தருமமும்

————–

1. கடந்த மனுவந்தரங்கள்

மைத்ரேய முனிவர், பராசரரை நோக்கி, மகரிஷியே! பூமி, சமுத்திரங்கள், முதலானவற்றைப் பற்றியும், சூரியன் சந்திரன் முதலிய கோள்களைப் பற்றியும், தேவதைகள் ரிஷிகள் ஆகியோரின் படைப்பையும், துருவனுடைய சரிதத்தையும், பிரகலாதனின் வரலாற்றையும், அடியேனுக்குக் கூறினீர்கள். இனிமேல் சகல மனுவந்தரங்களையும், அவற்றின் அதிபதிகளையும், தேவர்களையும் பற்றித் தங்களிடமிருந்து அறிய விரும்புகிறேன் என்றார். பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! ஆதியில் சுவாயம்புவ மநுவிலிருந்து துவங்கி, சுவாரோ சிஷர், உத்தமர், தாமசர் ரைவதர், சாக்ஷúஷர் என்ற மனுக்கள் அறுவரும் முறையே சென்றனர். இப்பொழுது சூரியகுமாரரான வைவஸ்வத மனுவினுடைய அந்தரம் நடைபெறுகின்றது. இந்தக் கல்பத்தின் ஆதியில் நடந்த சுவாயம்புவ மநுவந்தரத்தையும் அதிலிருந்த தேவர், முனிவர் முதலானவர்களையும் சொன்னேன். இனி, சுவாரோசிஷ மனுவந்தரத்தில், பாராவாரர், துஷிதர் என்ற தேவதைகளும் விபச்சித் என்ற இந்திரனும் ஊர்ஜ ஸ்தம்பன், பிராணன், தத்தன், அக்கினி, ரிஷபன், நிஸ்வான், சார்வரீவான் என்ற சப்தரிஷிகளும் இருந்தனர். இப்படி இரண்டாவது மனுவந்தரம் நடந்தது. மூன்றாவது உத்தம மனுவந்தரம். இதில் சுசாந்தி என்பவன் இந்திரனானான். சுதாமாக்கள், சத்தியர், சிவர், பிரதர்த்தனர், வசவர்த்திகள் என்ற ஐந்து கணதேவதைகள் கணம் ஒன்றுக்குப் பன்னிருவராகச் சேர்ந்திருந்தார்கள். வசிஷ்டருடைய பிள்ளைகள் சப்தரிஷிகள், அஜன், பரசுதிவியன், முதலியவர்கள் மனுவின் குமாரர்கள். நான்காவது தாமச மனுவின் அந்தரத்திலே சுபாரர், ஹரிகள் சத்தியர் சுதீகர் என்ற கணதேவதையர் கணமொன்றுக்கு இருபத்தேழு பேர்களாக இருந்தார்கள். சிபிச் சக்கரவர்த்தி நூறு அசுவமேத யாகங்களைச் செய்ததால் வஜ்ரா யுதமேந்திய இந்திரனானான். ஜோதிர்த்தாமா, பிருகு, காரியன், சைத்திரன், அக்னி, தனகன், பீவான் என்ற சப்தரிஷிகள் இருந்தனர். நரன், கியாதி, சேதுரூபன், சானு, சங்கன் முதலியோர் அந்தத்தாமச மனுவின் புத்திரர்கள். ஐந்தாவது ரைவத மனுவந்தரம். இதில் விபு என்பவன் இந்திரன், அமிதாபர், பூதனயர் வைகுண்டர், சுசமேதர் என்பவர்கள் தேவகணங்களாய்க் கணத்துக்கு பதினான்கு பேர்களாக இருந்தார்கள். இரணிய ரோமா, வேதசிரீ ஊர்த்துவபாகு, அபரன், வேதபாகு, சுதாமா, பர்ச்சனியன் என்பவர்கள் சப்தரிஷிகள். சுசம்பாவியன், பலபந்து, சத்தியகன் முதலியவர்கள் இந்த மனுவின் குமாரர்கள்.

இந்தச் சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், நைவதர் என்ற மனுக்கள் நால்வரும் பிரியவிரதருடைய வமிசத்தில் பிறந்தவர்கள். அந்தப் பிரியவிரதர் என்பவர் ராஜரிஷியாவார். அவர் தவத்தால் ஸ்ரீவிஷ்ணுவை ஆராதித்து தன் குலத்தில் மனுவந்தராதியதிகள் உண்டாகும்படியான பாக்கியத்தைப் பெற்றார். ஆறாவது மனுவந்திரத்தின் அதிபதி சாக்ஷீஷர் என்ற மனுவாகும். மனோ ஜவன் என்பவன் இந்திரன், ஆப்பியர், பிரசூதர், பவியர், பிருதுகர், லேகர் என்ற ஐவர் கணதேவதைகள். இவர்கள் கணமொன்றுக்கு எட்டுப்பேராக இருந்தனர். இவர்கள் மகானுபாவர்கள். சுமேதன் விரஜன் அவிஷ்மான். உத்தமன் மது அதிநாமா சகிஷ்ணு என்போர் சப்தரிஷிகள். ஊரு பூரு சதத்தியும்னன் முதலான அந்த மனுவின் புத்திரர்கள் அரசரானார்கள். இனி இப்போது நடைபெறும் ஏழாவது மனுவந்தரத்துக்குச் சூரிய புத்திரரான சிரார்த்த தேவன் மனுவாகி இருக்கிறான். இதில் ஆதித்தியர், வசுக்கள், ருத்திரர் முதலானோர் தேவதைகளாக இருக்கிறார்கள். புரந்தரன் என்பவன் இந்திரன். வசிஷ்டர், காசியபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், விசுவாமித்திரர், பரத்வாஜர் என்போர் சப்தரிஷிகள். இஷ்வாகு, நிருகன், திருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன், கரூஷன், விரூஷத்திரன் இந்த ஒன்பதின்மரும் மனுவின் புத்திரர்கள். உலக ரட்சணைக்குரிய ஒப்பற்ற ஸ்ரீவிஷ்ணுவின் சாத்வீக சுக்தியானது சகல மனுவந்தரங்களிலேயும் தேவதாவதாரத்தினால் மனு முதலானோரிடமும் வியாபித்துள்ளது. ஸ்ரீமகாவிஷ்ணு சுவாயம்புவ மனுவந்தரத்தில் ஆகுதி என்பவளிடம் யக்ஞன் என்ற திருப்பெயரோடு அவதரித்தார். பிறகு உத்தம மனுவந்தரத்திலே சத்யை என்பவளிடம் சத்தியன் என்ற திருப்பெயரோடு அவதரித்தார். மறுபடியும் அவர் தாம்ச மனுவந்தரத்திலே ஹரியை என்பவளது கர்ப்பத்தில் ஹரிகள் என்ற தேவர்களுடன் ஹரி என்ற திருப்பெயரில் அவதரித்தார். சாக்ஷúஷ மனுவந்தரத்தில் விகுண்டையின் கருவில் வைகுண்டர் என்ற தேவதைகளோடு வைகுண்டர் என்ற திருப்பெயரில் அவதரித்தார். இந்த வைவசுவத மனுவந்தரம் வந்தபோது, காசிபருக்கு அதிதியிடத்திலே வாமனரூபியாய் அவதரித்து மூன்றடிகளால் சகல உலகங்களையும் ஆக்ரமித்து பகையழித்து அவற்றைப் புரந்தரனுக்கு அளித்தார். இவ்விதமாக ஸ்ரீவிஷ்ணுபகவான் ஏழு மனுவந்தரங்களிலும் ஏழு திருவவதாரம் செய்து மனு முதலான சகல பிரஜைகளையும் காத்து வருகிறார். அந்த சுவாமியானவர் தமது சக்தியினால் மனு முதலான சகல பிரபஞ்சத்தையும், அனுப்பிரவேசித்திருப்பதால் விஷ்ணு என்ற திருப்பெயரைப் பெற்றார். சகல மனுக்களும் சகல சப்த ரிஷிகளும், சகல மனுகுமாரர்களும், இந்திரர்களும் யாவரும் ஸ்ரீவிஷ்ணுவின் ஐசுவரியமானவர்கள் என்பதை அறிவீராக!

—————–

2. இனிவரும் மனுவந்தரங்களின் விளக்கம்

பராசரரே! இதுவரை உண்டான மனுவந்தரங்களைச் சொன்னீர்கள்! இனிவரும் மனுவந்தரங்களையும் அடியேனுக்குச் சொல்லியருள வேண்டும் என்று மைத்ரேயர் வேண்டினார். பராசரர் கூறலானார். சூரியனுக்கு சமிக்ஞை என்ற மனைவி ஒருத்தி இருந்தாள். அவர் விசுவகர்மாவின் மகள். சிரார்த்த தேவன் என்ற மனுவும் யமதர்மராஜனும் யமுனா என்ற நதியும் அவளுக்குப் பிறந்தனர். சமிக்ஞை தன் கணவனின் தேஜஸைச் சகிக்கமுடியாமல் தன் நிழல் என்று சொல்லும்படியான தன்னைப்போன்ற ஒருத்தியையுண்டாக்கி சாயாதேவியெனும் அப்பெண்ணைத் தன் கணவனுக்குப் பணிவிடைகள் செய்யும்படி வைத்துவிட்டு தவஞ்செய்யக் காட்டுக்குச் சென்றாள். சூரியன் அந்தச் சாயாதேவியைத் தன் பத்தினியாகிய சமிக்ஞை என்றே நினைத்து அவளிடத்திற் சேர்ந்து, சனியையும் மற்றொரு மனுவையும் தபதி என்பவளையும் பெற்றான். இது இப்படியிருக்க, ஒருநாள் யமன் சாயாதேவியைத் தனது தாயாகவே நினைத்து, உதைக்கப்போகும் போது சாயாதேவி கோபங்கொண்டு அவனை சபித்தாள். அவள் கருணையில்லாதவளாக இருந்ததால், அவள் தன் தாயல்ல என்பதை யமன் உணர்ந்தான். பிறகு சாயாதேவி உண்மையைச் சொல்லக் கேட்ட சூரியன், யோகதிருஷ்டியினால் ஆலோசித்தான். அப்போது தன் மனைவி சமிக்ஞை என்பவள் பெண் குதிரையின் வடிவில், வனத்தில் தவஞ்செய்து கொண்டிருப்பதை சூரியன் அறிந்தான். பிறகு சூரியன், தானும் குதிரையின் வடிவு எடுத்துக் கொண்டு, அவள் இருக்குமிடத்திற்குச் சென்று அவளிடத்தில் அசுவினி தேவதைகள் இருவரையும், வீரியத்தின் கடைசிப் பாகத்தினால் ரேவந்தன் என்பவனையும் உண்டாக்கி மறுபடியும் அந்தச் சமிக்ஞையை தனது இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றான். பின்பு விசுவகர்மாவானவன், சூரிய மண்டலத்தைத் தனது சாணைச் சக்கரத்தில் வைத்துத் தேய்த்து, அவனது தேஜசில் எட்டில் ஒரு பங்கைக் குறைத்து விட்டான். இவ்விதம் விசுவகர்மாவினால் தேய்த்துத் தள்ளப்பட்ட தேஜோபாகமானது, மிகவும் பிரகாசத்தோடு பூமியில் விழுந்தது. பூமியில் விழுந்த அந்தத் தேஜோ பாகத்தைக் கொண்டு விசுவகர்மா ஸ்ரீவிஷ்ணுவுக்குச் சக்கரத்தையும், சிவனுக்கு சூலத்தையும், சுப்ரமணியனுக்கு வேலாயுதத்தையும், குபேரனுக்கு சிபிகை என்ற ஆயுதத்தையும் செய்து கொடுத்தான்.

சூரியனுக்கு சாயாதேவியிடம் பிறந்த இரண்டாவது குமாரனை மனுவென்று சொன்னேன் அல்லவா? அந்த மனு முன்பிருந்த மனுவுக்கு இணையாக இருந்ததனால் சாவர்ணி என்று அழைக்கப்பட்டார். இனி வரும் எட்டாவது மனுவந்தரம் அந்தச் சாவர்ணியினுடையதாகும். அந்த மனுவந்தரத்தில் சுபதர், அமிதாபர் முக்கியர் என்ற தேவர்கள் உண்டாவார்கள். அந்தத் தேவர்கள் கணத்துக்கு இருபதின்மராக இருப்பார்கள். தீப்திமான், காலவர், இராமர், கிருபர், அசுவத்தாமா, எனது மகனான வியாசர், ருஷிய சிருங்கர் ஆகிய இவர்கள் அந்த மனுவந்தரத்தின் சப்தரிஷிகள். ஸ்ரீவிஷ்ணுவின் திருவருளால் பாதாளத்தில் வாசஞ்செய்து கொண்டிருக்கும் விரோசன குமாரரான பலிச்சக்கரவர்த்தி அந்த மனுவந்தரத்தில் தேவர்களுக்கு அரசனாவான். விரஜன், சர்வரீவரன், நிர்மோகன் முதலனா அந்த மனுவின் புதல்வர்கள் அரசராவார்கள். இனி ஒன்பதாவது மனு தக்ஷசாவர்ணி என்பவராவார்! அவரது அந்தரத்தில் வார், மரீசி கர்ப்பர் சுதர்மாக்கள் என்ற தேவர்கள் கணமொன்றுக்கு பன்னிருவராக இருப்பார்கள். அத்தேவதைகளுக்கு அற்புதன் என்போன் அதிபதியாவான். சவனன், தியுதிமான், அவியன் வசு மேதாதிதி, ஜோதிஷ்மான் சத்தியன் என்பவர்கள் சப்தரிஷிகள் ஆவார்கள். திருதகேது தீப்தகேது பஞ்சஹ்ஸ்தன் நிராமயன் பிருதுச் சிரவன் முதலியோர் அந்தத் தக்ஷõசார்வணி மனுவின் குமாரர்களாவர். இனிப் பிரமசாவர்ணி என்பவர் பத்தாவது மனுவாவர். அந்த அந்தரத்தில் சுதர்மாக்கள், வீருதர் என்ற தேவர்கள் நூறு நூறாய்ச் சேர்ந்த கூட்டமாக இருப்பார்கள். அவர்களுக்கு மகா பலசாலியான சாந்தி என்பவன் இந்திரனாவான். அந்த அந்தரத்தில் ஹவிஷ்மான், சுகிருதன், சத்தியன் தபோ மூர்த்தி, நாபாகன், அப்பிரதிமௌஜன், சத்தியகேது என்பவர்கள் சப்தரிஷிகளாவார்கள். சுஷேத்திரன், உத்தமன்ஜு, புரிஷேணன் முதலான பதின்மர் அந்த மனுவின் குமாரர்களாவார்கள். அவர்கள் இந்தப் பூமியை ரக்ஷித்து வருவார்கள். பதினோராவது மனு தர்மசாவர்ணி என்பவர், அவருடைய அந்தரத்திலே விகங்கமரென்றும், காமகமரென்றும், நிர்வாணரென்றும் ருசிகள் என்றும் சொல்லப்பட்ட தேவர்கள் முக்கியமாவார்கள். அவர்கள் கணம் ஒன்றுக்கு முப்பது முப்பது பேரிருப்பார்கள். விருஷா என்பவன் அவர்களுக்கு இந்திரனாவான். அப்போது நிச்சரன், அக்னித் தேஜன், வபுஷ்மான்; கிருணி; ஆருணி; அவிஷ்மான், அனகன் என்பவர்கள் சப்தரிஷிகளாவார்கள். சர்வத்திரகன்; ஸ்வதர்மா; தேவானீகன் முதலியவர்கள் அந்த மனுவின் புதல்வர்களாவார்கள். ருத்திர புத்திரராகிய ருத்திர சாவர்ணி என்பவர் பன்னிரண்டாவது மனுவாவார். அவருடைய அந்தரத்தில் ருது தாமா என்பவன் இந்திரனாவான். அரிதர், ரோகிதர், சமனசர், சுகர்மர்; சுராபர் என்ற தேவர் கூட்டம் ஒன்றுக்குப் பப்பத்துப் பேராக இருப்பார்கள். தபஸ்வீ, சுதபன், தபோமூர்த்தி, தபோரதி, தபோதிருதி, தபோதியுதி, தபோதனன் என்ற இந்த எழுவரும் சப்தரிஷிகள். தேவவான், உபதேவன், தேவசிரேஷ்டன் முதலான அந்த மனுபுத்திரர்கள் அரசர்களாவார்கள். ரவுச்சியன் என்பவர் பதின்மூன்றாவது மனுவாவர். சுத்திராமர், சுதாமர், சுகர்மர் என்ற தேவதைகள் கணத்துக்கு முப்பத்து மூவராக இருப்பார்கள். மகாவீரியனான திவஸ்வதி என்பவன் இந்திரனாவான். நிர்மோஹன், தத்துவதர்சி நிஷ்பிரகம்பியன், நிருச்சுகன், திருதிமான் புதல்வர்களான சித்திரசேனன், விசித்திரன் முதலியவர்கள் அப்பொழுது வேந்தராவார்கள். பதினாலாவது மனுவாக பவுமன் என்பவனாவான். அந்தக்காலத்தில் சுசி என்பவன் இந்திரனாக இருப்பான். சாக்ஷúஷர், பவித்திரர், கனிஷ்டர், பிராசிதர், வாசாவிருத்தர் என்று தேவகணங்கள் ஐந்துண்டு. அக்கினிபாகு; சுசி; சுக்கிரன், மாகதன், ஆக்னீத்திரன், யுத்தன், ததாஜிதன் என்போர் சப்தரிஷிகளாவார்கள். அந்த மனுவுக்கு உரு, கம்பீரபுத்தி முதலனா குமாரர்கள் பிறப்பார்கள். அவர்கள் தான் இந்தப் பூமியைக் காத்து வருவார்கள்.

கிருதயுக முதல் நான்கு யுகங்களின் முடிவில் வேதங்களுக்கும் அழிவுண்டாகும் அல்லவா? அப்போது அந்தச் சப்தரிஷிகள் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்து மீண்டும் அந்த வேதங்களைப் புதுப்பிப்பார்கள். கிருது யுகந்தோறும் அந்தந்த மனுக்கள் சுமீருதி என்ற தரும சாஸ்திரத்தை இயற்றி வருவார்கள். தேவதைகளோ மனுவந்தரம் முடியும் வரையில் யாகங்களில் ஹவிர்ப்பாகங்களைப் புசித்து வருவார்கள். மனுபுத்திரர்களாலும் அவரது குலத்தில் பிறக்கும் அரசர்களாலும் மனுவந்தரத்தின் இறுதிவரையிலும் பூமியானது ரக்ஷிக்கப்பட்டுவரும். இப்படியே மனுவந்தரம் தோறும் அவராலேயே உலகவுபகாரம் நிகழ்ந்து வரும். மனுவும் சப்தரிஷிகளும் தேவர்களும் இந்திரனும் மனுவின் புதல்வர்களும் எம்பெருமானுடைய சங்கல்ப காரியத்தை நிறைவேற்றும் அதிகார புருஷர்களாக விளங்குவார்கள். இவ்விதமாகப் பதினான்கு மனுவந்தரங்கள் கழியும்போது, ஆயிரம் யுகங்களின் அளவுள்ள ஒரு கல்பகாலம் சம்பூரணமாகின்றது. இது ஒரு பகற்காலம், இவ்வளவேயுள்ள இரவுக்காலமும் கழிந்த பிறகு பிரம சொரூபத்தை அனுஷ்டித்து எழுந்தருளியிருப்பவனும் முதல் சிருஷ்டி கர்த்தாவும், சகல ஐசுவரியமுள்ளவனும், சகல சொரூபியுமான ஸ்ரீஜனார்த்தன பகவான், மூவுலகையும் உட்கொண்டு யோக நித்திரையை ஆஸ்ரயித்து உலகமெல்லாம் அழிந்த மகார்ணவ ஜலத்திலே ஆதிசேடனாகிய படுக்கையிலே திருக்கண் வளர்வான். பிறகு, பகவான் யோக நித்திரையிலிருந்து விழித்து, ரஜோகுணத்தை யாச்ரயித்து முன்போலவே உலகப்படைப்பை நடத்துவான். மனுவந்தரந்தோறும் உள்ள மனு தேவ இந்திர சப்தரிஷி மனுபுத்திரர்கள் யாவரும் ஸ்திதியைச் செய்யவல்ல ஸ்ரீவிஷ்ணுவின் சாத்வீக அம்சமாவார்கள். உலகங்களை நிலைபெறச் செய்யும் தொழிலுடைய ஸ்ரீவிஷ்ணு சகல உயிரினங்களுக்கும் இதம் உண்டாகும்படிக் கிருதயுகத்தில் கபிலாதி சொரூபங்களைத் தரித்து உத்தமமான ஞானத்தைப் பிரகாசித்து அருள்வான். திரேதா யுகத்தில் அந்தந்தச் சக்கரவர்த்திகளின் சொரூபத்தைத் தரித்து, துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனங்களைச் செய்து வருகின்றார். துவாபர யுகத்திலே வேதவியாஸ சொரூபமாகி, ஒன்றாக இருக்கும் வேதத்தை இருக்கு முதலான நான்கு பிரதான பிரிவுகளாகவும் சாகா பேதங்களாலே அநேகம் பிரிவுகளாகவும் பிரிந்து உலகத்தை அனுக்கிரஹிக்கிறான். கலியுகத்திலோ கல்கி யவதாரஞ் செய்து, வேத சாஸ்திரங்களையும் தருமங்களையும் கடந்து நடக்கும் துஷ்டர்களை வழியிலே நிறுத்துகிறான். இவ்வாறு ஸ்ரீவிஷ்ணுபகவான் அந்தந்த ரூபத்தினால் உலகங்களைப் படைத்தும், காத்தும், சங்கரித்தும் வருகிறான். ஆகையால் சர்வபூத சொரூபியான எம்பெருமானைவிட ஒரு வஸ்துவும் இல்லை என்ற உண்மையை இந்தப் பிரகரணத்திலும் இதற்கு முந்தியவைகளாலும் உமக்கு தெளிவாகச் சொன்னேன். மைத்ரேயரே! இனித்தெரிந்து கொள்ள வேண்டியவை ஏதேனும் இருந்தால் கேட்பீராக.

——————

3. வேதவியாசர்கள் வரிசை

பராசர முனிவரே! தாங்கள் கூறியதிலிருந்து, சகலமும் ஸ்ரீவிஷ்ணுவினிடத்தில் உண்டாகி, அவனிடத்திலேயே நிலைபெற்று லயித்து அவனுக்குச் சொரூபமாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அந்த மகாத்மாவான எம்பெருமான் யுகந்தோறும் வியாசரூபியாகி வேதங்களைப் பிரித்தருளுகிறான் என்று கூறினீர்கள். எந்தெந்த யுகத்தில் யார் யார் வியாசர் ஆனார்களோ, அவர்களையும் வேதத்தின் சாகைகளைப் பற்றியச் சிறப்புகளையும் அடியேனுக்குச் சொல்லவேண்டும் என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! வேதம் என்கிற மகாவிருட்சத்திற்குக் கிளைகள் பலவுண்டு. அளவற்ற அவற்றை விரித்துச் சொல்வது கடினம். ஆகையால் சுருக்கமாகச் சொல்கிறேன்; கேளும். எம்பெருமான் துவாபரயுகம்தோறும் வியாசராக அவதரித்து, மக்களுக்கு உற்சாகம், சாமர்த்தியம் ஓதித்தரிக்குஞ் சக்தி இவையெல்லாம் அற்பமாக இருப்பதைக் கண்டு, அவர்களின் நலனுக்காக ஒன்றாயிருக்கின்ற வேதத்தைப் பல பிரிவுகளாக்கி அருள்செய்கிறார். அந்த எம்பெருமான் எந்த உடலைச் சேர்ந்து, வேதபேதங்களைச் செய்தருளுகின்றானோ அவையெல்லாம் வேதவியாசர் என்ற திருநாமமுடைய திருமேனிகள் என்று அறிவீராக. இனி இந்த மனுவந்தரத்தில் யார் யார் வேதவியாசரானார்களோ அவர்களைப் பற்றியும் கூறுகிறேன்; கேளும். இந்த வைவஸ்வத மனுவந்தரத்திலே துவாபர யுகந்தோறும் மாமுனிவர்களால், இருபத்தெட்டு முறைகள் வேதம் பிரிக்கப்பட்டது. ஆகையால் இதுவரையிலும், இருபத்தெட்டு வியாசர்கள் சென்றிருக்கிறார்கள். முதலாவது துவாபர யுகத்தில் பிரம்மாவே வேதவியாசராக விளங்கினார். இரண்டாவது யுகத்தில் வைவஸ்வதமனு வியாசரானார். மூன்றாவது யுகத்தில் சுக்கிரரும், நான்காவதில் பிரகஸ்பதியும், ஐந்தில் சூரியனும், ஆறில் இயமனும், ஏழில் தேவேந்திரனும், எட்டாவதில் வசிஷ்டரும், ஒன்பதாவதில் சாரசுவதரும், பத்தாவதில் திரிதாமாவும், பதினோராவதில் திரிவிருஷாவும், பன்னிரண்டில் பரத்வாஜா மாமுனிவரும், பதின்மூன்றில் அந்தரிஷரும், பதினான்கில் தருமியும், பதினைந்தாவது யுகத்தில் திரையாருணியும், பதினாறாவது யுகத்தில் தனஞ்செயனும், பதினேழாவது யுகத்தில் கிருதஞ்சயனும், பதினெட்டாவது யுகத்தில் சஞ்சயனும், வேதவியாசரானார்கள். பிறகுள்ள துவாபரங்களில் முறையே பரத்வாஜர், கவுதமர், ஹரியாத்துமா என்று இதர புராணங்களில், கூறப்படும் உத்தமர் என்பவர், வாஜீசிரவன் என்ற மறுபெயருடைய வேனன், திருணபிந்து என்ற பெயருடைய சோமசுஷ்மாயணன், வால்மீகி என்னும் திருப்பெயரால் புகழ்பெற்ற பார்க்கவரிக்ஷர் இவர்கள் வேதவியாசராயினர். இதுபோல் இருபத்து நான்கு துவாபரயுகங்கள் கழிந்த பிறகு, இருபத்தைந்தாவது துவாபரத்தில் என் தந்தையான சக்தி மாமுனிவரும் இருபத்தாறாவதில் நானும், இருபத்தேழாவதில் ஜாதுகர்ணர் என்பவரும் வேதவியாசர்களானோம். பிறகு இருபத்தெட்டாவதான இந்தத் துவாபரயுகத்தில் என் மகனான கிருஷ்ணத் துவைபாயனன் வேதவிபாகஞ்செய்தான். இப்படி இருபத்தெட்டு மாமுனிவர்கள் துவாபரயுக முடிவான காலங்களில் வேதத்தை நான்காகப் பிரித்து உலக உபகாரம் செய்து வந்தார்கள். இனிவரும் துவாபர யுகத்தின் கடைசியில் துரோண குமாரனான அசுவத்தாமா வியாசராவார்.

ஏகாக்ஷர ஸ்வரூபமாய் நாசவிகாரங்களையடையாமலிருந்த பிரணவமானது உச்சரிக்கப்படுமளவில் தான் விரிவதனாலும் வேதத்தை விரிப்பதனாலும் பிரமம் என்று சொல்லப்படும், அஃது எவ்விதமெனில்; பிரணவத்தினிடத்தில் நித்தியமாக இருக்கிற முதல் மூன்று வியாகிருதிகளும் ரிக்கு முதலான நான்கு வேதங்களும் சொல்லப்படுகின்றன. ஆகையால் அத்தகைய மகிமையுள்ள பிரணவஸ்வரூபமான சுத்தப் பிரமத்தின் பொருட்டுத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! உலகத்தின் பிரளயத்திற்கும் உற்பத்திக்கும் எது காரணமாக இருக்கிறதோ, எது மகத்தத்துவத்திற்கும் மேன்மையானதாக மறைக்கப்படும் பொருளாக உள்ளதோ அத்தகைய பிரணவ பிரம்மத்திற்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். அகாதமாயும், அபாரமாயும் அழிவற்றதாயும் உலகத்தை யோகிப்பதாயுள்ள தமோ குணத்துக்கு இருப்பிடமாயும், சத்வகுணகாரியமான பிரகாசத்தினாலும் ரஜோகுண காரியமான பிரவர்த்தனத்தாலும் தருமம் முதலிய சகல புருஷார்த்த சாதகமாயும், சாங்கிய நூலறிவுடையோருக்குப் பிரகிருதி புருஷ விவேகத்தின் உபாயமாதலால் நிலைபெறும் இடமாகவும் சமதமாதி குணங்களைச் சாதிக்கவல்ல யோகியருக்கு அவற்றை சாதிக்கும் உபாயமாயும் விளங்குகிற அந்த சப்த பிரம்மத்துக்குத் தண்டனிடுகிறேன்! எது அவியக்தமாயும் அமுதமாயும் சாஸ்தவமாயும் இருக்கிற பிரவிருத்திப் பிரம்மாக இருக்கிறதோ அதை நான் வணங்குகிறேன். சர்வப் பிரபஞ்ச காரணமானப் பிரதானமாயும் பரமாத்ம ஸ்வரூபாதிகளைக் காட்டுவதனால் பரமாத்மாவுக்குக் காரணமாயும், உபநிஷத்துகளில் அக்ஷய முதலாய்ப் பிரதானம் ஈறாகவுள்ள சொற்களால் வெகுவிதமாய் சொல்லப்படுவதாயும், பிரிவற்றதாயும் சுத்தமாயும் இருக்கிற அந்தப் பிரணவப் பிரமத்தை வணங்குகிறேன்! பரமாத்மாவான ஸ்ரீவாசுதேவனுக்கு ஸ்வரூபமாக இருக்கிற அந்தப் பிரணவரூபமான பரப்பிரமத்திற்கு நிதம் எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். உறுப்பான அக்ஷர வகையால் மூன்றாய்ப் பிரிந்திருந்தாலும் அவயவ விஸ்வரூபத்தில் பிரிவற்றதாக இருக்கின்ற அந்தப் பிரணவமானது அந்த ஸ்ரீவாசுதேவனேயாகும்; சகல பூதங்களிலும் அந்த வாசுதேவன் ஒருவனே எழுந்தருளியிருந்தாலும், பேதபுத்தி விஷயங்களான பிரமம் சூத்திர இந்திராதி மூர்த்திகளை அநுஷ்டித்திருப்பதால் வெவ்வேறாகக் கருதப்படுகிறான். அவனே இருக்கு வேதசொரூபியும், யஜுர்வேத சொரூபியும், சாமவேத ஸ்வரூபியுமாய் இந்த மூன்று வேதாரசாரமான பிரணவ ஸ்வரூபியாகவும் புருஷார்த்த ஸ்வரூபியாகவும் இருக்கிறான். அவனே சகல ஆத்மாக்களிலும் அந்தராத்மாவாக இருக்கிறான், அவனே பிரிவற்ற வேதரூபமாக இருந்து பலவிதமான வேதங்களாகப் பேதிக்கப்படுகிறான். அந்த அனந்தனான ஸ்ரீபகவானே; வேத சாகைகளைப் பிரிக்கும் வியாசாதி ஸ்வரூபியாகிறான். சகல வேத சாகைகளின் ஞானமும் இந்த ஸ்ரீஅனந்தனே என்பதையும் அறிவீராக!

—————————-

4. வேத சாகைகளின் பேதங்கள்

மைத்ரேயரே! ஆதியில் பிரம்மாவினால் அத்தியயனம் செய்யப்பட்ட வேதம், நான்கு பாதங்களையுடையதாகவும் அநேகவாயிரம் கிளைகளைக் கொண்டதாகவும் இருந்தது. அதிலிருந்து அக்கினி ஹோத்திரம், தரிசபூர்ணமாஸம், சாதுர்மாசியம், பசு பந்தம், சோமம் என்கிற ஐந்தும், தேவயக்ஞம், பிதுர் யக்ஞம், பூதயக்கியம், மனுஷ்ய யக்கியம், பிரம யக்கியம் என்ற பஞ்சமகா யக்கியங்களும் ஆகப் பத்துவிதமான யக்கியங்களும், திரவியம், தேசம், பலம், காலம், ஞானம்; கர்மம், காரகம், சிரத்தை அவஸ்தை ஆகிருதி, நிஷ்டை என்ற உறுப்பினையுடையனவாக உண்டாயின. இந்த யாகங்கள் யாவும் சர்வபீஷ்டங்களையும் கொடுக்கும் திறமுள்ளனவாகும். பிறகு, இருபத்தெட்டாவது யுகத்தில் எனது மகனான வியாசர் மகா சமர்த்தராகையால் நான்கு பாதங்களைக் கொண்ட அந்தவொரு வேதத்தை நான்காகப் பிரித்தார். இவர் இப்பொழுது எப்படிப் பிரித்தாரோ, அப்படியே முந்திய யுகங்களிலும் நானும் மற்ற முனிவர்களும் பிரித்தோம். வியாசர் பிரித்ததைப் போலவே, ஸ்ரீமந் நாராயணாம்சம் பெற்று, மற்ற வியாசர்களும் அவ்வப்போது வேதத்தைப் பிரித்தருளினார்கள் என்பதை அறிவீராக. மைத்ரேயரே! இந்தப் பூவுலகத்தில் ஸ்ரீவாசுதேவனைத் தவிர மற்றொருவன் மகாபாரதம் இயற்ற வல்லவனாகான். ஆகையால் கிருஷ்ணத் துவைபாயர் என்ற பெயரையுடைய இந்த வியாசரை ஸ்ரீமந்நாராயண அம்சம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! இந்தத் துவாபார யுகத்தில் என் குமாரனான வியாசர் வேதங்களைப் பிரித்தவிதத்தைக் கூறுகிறேன்! கேளும். வியாச மாமுனிவர், வேதங்களைப் பிரிக்கும்படி சதுர்முகப் பிருமனால் நியமிக்கப்பட்டார். அவர் தாம் பிரித்த வேத சாகைகளை அத்தியயன பரம்பரையினால் பிரவர்த்திப்பிக்க வல்லவர்களான சீடர்களை ஆராய்ந்து தேடி இருக்கு வேதத்திற்கு பைல மகாமுனிவரையும், யஜுர் வேதத்துக்கு வைசம்பாயன மகாமுனிவரையும், சாம வேதத்துக்கு ஜைமினி முனிவரையும், அதர்வண வேதத்துக்கு சுமந்து முனிவரையும் இதிஹாச புராணங்களுக்கு மகா மேதையான ரோமஹர்ஷணர் என்ற சூதரையும் பரிக்கிரகித்து அருளினார். அத்துவர்யு உத்காதா, ஹோதா பிரம்மா என்ற நால்வகையான (சாதுர்ஹோத்திரம்) ரித்துவிக்குகளில் காரியமுள்ளதாகையால், யாக ஹேதுவாக இருந்த வேதம் ஒன்றையே நான்காகப் பிரித்தார். அவற்றினால் யக்கியங்களை நடத்தியருளினார். யஜுர் வேதங்களினால் அத்துவாயு காரியத்தையும் இருக்கு வேதங்களினால் ஹோதாவின் காரியத்தையும், சாம வேதங்களினால் உத்காதாவின் செயலையும் இந்த மூன்று வேதங்களினாலேயும் அரசர்களுக்கு வேண்டிய சாந்திக பவுஷ்டிகாதிகளையுடைய அதர்வண வேதத்தாலேயும் பிரம்மாவின் செயலையும் ஏற்படுத்தினார்.

இனி வேதங்களைப் பிரித்தது எப்படியெனில், அகண்டமான வேதத்திலிருந்து இருக்குகளையெல்லாம் பிரித்தெடுத்து ஒன்றாக்கி அதனை இருக்கு வேதம் என்றும், யசுகளைப் பிரித்தெடுத்துச் சேர்த்து யஜுர்வேதம் என்றும், சாமங்களைப் பிரித்தெடுத்து சேர்த்து சாமவேதம் என்றும், மூன்று வேதங்களைச் செய்து, அரசர்களுக்கு முக்கியமான காரியங்களையும் புரோகித கிருத்தியத்தையும் நிறைவேற்றுவதற்காக அதர்வ பாகங்களையெல்லாம் சேர்த்தெடுத்து அதர்வண வேதத்தையும் செய்தருளினார். இவ்விதமாக, முன்பு ஒன்றாக இருந்த வேத விருட்சமானது நான்கு கிளைகளாகப் பிரிந்து பிறகு பெருங்காடாயிற்று. பைலமா முனிவருக்கு வேதத்தை இரண்டு சம்ஹிதைகளாகச் செய்து இந்திரப் பிரமாதி என்பவருக்கு ஒன்றையும், பாஷ்களர் என்பவருக்கு மற்றொன்றையும் அருளினார். அந்தப் பாஷ்கள முனிவர் தாம் பெற்ற சம்ஹிதையை நான்காகச் செய்து போத்தியர், அக்கினி, மாடகர், யாக்கியவல்கியர், பராசரர் என்ற நால்வருக்கு, ருக்கு வேத சாகையின் பிரிவுகளான சாகைகளைப் போதித்தருளினார். அந்த இந்திரப் பிரமதி என்ற முனிவர் தாம் ஓதிய ரிக்வேத சம்ஹிதையை தமது மகனான மாண்டூகேயர் என்பவருக்கு போதித்தார். அந்த சம்ஹிதை சிஷ்ய பிரசிஷ்ய பரம்பரையினாலே வளர்ந்து கொண்டிருந்தது. இப்படியிருக்கும் பொழுது வேதமித்திரன் என்ற சாகலயர் தாம் ஓதிய இந்திர பிரமதி சாகையை ஐந்தாகச் செய்து முத்கலன் கோமுகன் வாச்சியன், சாலீயன், சைச்சிரன் என்ற தம்முடைய மாணவர் ஐவருக்குக் கொடுத்தார். அந்தச் சாகலருடைய சப்பிரமசாரியாண சாகபூர்ணா என்பவர் இந்திரபிரமதி சம்ஹிதையை மூன்றாகச் செய்து நிருத்தம் என்ற வேதாங்கம் ஒன்றையும் செய்து ஆக நான்கையும் தமது மாணவரான கிரவுஞ்சன், வைதாளிகன், பலாகன், நிருத்தன் என்ற நால்வருக்கும் வழங்கினார். முன்பு சொல்லிய சாகலியருடைய சப்பிரமச்சாரியான பாஷ்கலி என்பவர், இந்திர பிரமிதி சாøயை மூன்றாக்கி காலாயனி, கார்க்கியர், ஜபர் என்ற மாணவர் மூவருக்கு வழங்கினார். இந்தவிதமாக ரிக் வேதத்தின் சாகைகளும் அனு சாகைகளும் பிரதி சாகைகளும் உண்டாயின. மைத்ரேயரே! ருக்வேதசாகா கர்த்தாக்களான பஹ்ருசரை நான் உமக்குத் தெரிவித்தேன்.

—————–

5. யஜுர் வேத சாகைகள்

மைத்ரேயரே! யஜுர்வேத விருட்சத்துக்குப் பிரதானமான இருபத்தேழு சாகைகளை வைசம்பாயன மகாமுனிவர் செய்தார். பிறகு அவற்றைத் தமது சீடர் அநேகருக்குக் கொடுத்தார். அவர்களும் முறைப்படி ஓதி வந்தனர். அந்த வைசம்பாயன மகாமுனிக்கும் பிரமராதருடைய குமாரரான யாக்கியவல்க்கியர் என்பவர் சீடராக இருந்தார். அவர் முக்கியமான தருமங்களையெல்லாம் அறிந்தவர். அவர் குருவுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார். முன்பொரு சமயம், மகாமேருவிலே முனிவர்களெல்லாம் கூடித் தமது சபைக்கு எந்த ரிஷி இன்று வராமலிருக்கிறாரோ அவருக்கு ஏழு தினங்களுக்குள் பிரம்மஹத்தி தோஷம் வரக்கடவது என்று ஒரு சாபம் உண்டாக்கி இருந்தார்கள். அந்த ஏற்பாட்டைக் கடந்த இந்த வைசம்பாயன மகாமுனிவர் ஒரு நாள் தம்முடன் பிறந்தவனின் புத்திரரான பாலகன் ஒருவனைக் காலினால் தீண்ட, அந்தப் பாலகன் மரணமடைந்தான். அதனால் அவருக்கு பிரமஹத்தி தோஷம் சம்பவித்தது. அப்பொழுது வைசம்பாயனர் தமது சீடர்களை நோக்கி, ஓ சீடர்களே! எனக்காக நீங்கள் பிரம்மஹத்தி நீங்கும்படியான விரதத்தைச் செய்யுங்கள். வேறு ஒன்றும் நினைக்காதீர்கள்! என்று நியமித்தார். அப்போது யாக்கியவல்கியர் குருவை நோக்கி, ஆசாரியாரே! அற்ப தேஜஸ் உள்ளவர்களான இவர்களை ஏன் வருத்தவேண்டும்? அடியேன் ஒருவனே அந்த விரதத்தைச் செய்கிறேன் என்று சொல்ல, குருவானவர் கோபமடைந்து, யாக்கிய வல்கியரை நோக்கி, நீ பிராமணரை அவமானம் செய்தாய்! இத்தகைய நீ எனக்கு சீடனாக இருக்கத் தகாது. ஆகையால் என்னிடத்தில் ஓதிய வேதங்களை விட்டுவிடு. உத்தமமான பிராமணர்களை தேஜஸ் இல்லாதவர்கள் என்று சொன்னாய், இத்தகைய சீடர் எனக்கிருந்து ஆவதென்ன? அன்றியும் என் கட்டளையையும் பங்கப்படுத்தினாய். ஆகையால் வேதங்களை விட்டுவிடு! என்று கண்டித்தார். உடனே யாக்யவல்கியர், ஓ ஆசாரியாரே! தங்களிடமுள்ள பக்தியினால் இப்படிச் சொன்னேனேயல்லாது வேறில்லை. அப்படியிருக்கக் கோபித்துக் கொள்கிற உம்மாலேயும் எனக்கு ஆகவேண்டியதில்லை. உம்மிடத்தில் ஓதின வேதமும் எனக்கு வேண்டாம்! என்று சொல்லி, உதரத்தினால் பூசப்பட்ட ரூபமுடையவைகளாய்க் காணப்பட்ட யஜுர் வேதங்களைக் கக்கி, இதோ உங்களது வேதங்களை உங்களிடமே கொடுத்தேன்! என்று சொல்லிவிட்டுத் தம்முடைய மனதின் படிபோய்விட்டார். பின்பு யாக்யவல்கியர் கக்கிய வேதங்களை மற்றப் பிராமணர்கள், நேரடியாக இந்தக் கக்கலை உண்பது தகுதியல்ல வென்று எண்ணித் தித்திரி என்ற பறவைகளாக மாறி உண்டார்கள். ஆகையால் அவர்களுக்குத் தைத்திரீயர்கள் என்ற பெயர் உண்டாயிற்று. பிறகு வைசம்பாயனரின் மாணவர்கள் அனைவரும் தமது குருவின் கட்டளையை ஏற்று, பிரம்மஹத்தி நீங்குவதற்கான விரதத்தை ஆஸ்ரயித்து அனுசரித்தார்கள். அவர்களுக்கு அதனால் சரணாத்துவர்யுக்கள் என்ற பெயர் வழங்கலாயிற்று.

யாக்கியவல்கியரோ, சூரிய பகவானிடமே யசுசுகளைக் கிரகிக்க வேண்டும் என்று கருதி பிராணாயாமம் முதலியவற்றால் சூரியனைத் துதித்துப் போற்றலானார். மோட்சத்துக்கு மார்க்கமாயும், அளவற்ற தேஜஸைக் கொண்டவராயும், ருக்கு, யஜுர், சாம வேதங்களின் ரூபமாயும் இருக்கிற சூரியனை வணங்குகிறேன்! வெய்யிலுக்கும் மறைக்கும் ஹேதுவாக இருப்பதால் அக்கினி சோம ரூபியாகவும் அதன் காரணமாக உலகத்துக்குக் காரணமாயும், வெளிச்சத்தைத் தருபவராயும் அமிர்த ஹேதுவான காந்தியை பரிப்பவராயும் இருக்கும் அவருக்குத் தண்டனிடுகிறேன்! கலை காஷ்டை, நிமிஷம் முதலிய காலத்தை அறிவிக்கும் சொரூபத்தைக் கொண்டவராயும், தியானிக்க தக்கவராயும், பிரணவ ரூபியாயும், பிரபஞ்ச ரூபியாயும் இருப்பவருக்கு எனது வந்தனம் உரியதாகுக! தனது கிரணங்களினாலே சந்திரனைப் போஷித்துத் தேவதைகளையும், ஸ்வதாமிர்தத்தினாலே பிதுர்க்களையும் காத்து ரட்சித்து வருகின்ற திருப்தி ரூபமானவருக்கு நமஸ்காரஞ் செய்கிறேன். பனி, வெப்பம், மழை ஆகியவற்றை உண்டாக்கி, ஹரிக்கின்றவராயும் முக்காலங்களின் ஸ்வரூபியாகவும் இருக்கும் சூரியபகவானுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். இந்த உலகத்தின் இருளைப் போக்கி, ஜகத்துக்கெல்லாம் அதிபதியாயும், சத்துவகுணசரீரம் உள்ளவராயும் இருக்கிற ஆதித்த பகவானுக்கு நமஸ்காரங்களைச் செய்கிறேன். எந்தத் தேவன் உதயமாகாமற் போனால் ஜனங்கள் சத்கருமங்களைச் செய்வதற்குத் தகுதியுடையவராக மாட்டார்களோ, தண்ணீரும் சுத்த ஹேதுவாக மாட்டாதோ, அத்தகைய சூரியதேவனை வணங்கித் தொழுகிறேன்! எந்தத் தேவனது கதிர்களால் ஸ்பரிசிக்கப்பட்டு மனிதன் சத்காரியங்களுக்கு யோக்கியன் ஆகின்றானோ, அத்தகைய சுத்தி காரணமான தேவனைத் தொழுகின்றேன்! பிரேரகனாயும் உற்பத்தி செய்பவனாயும் அந்தகாரத்தைப் போக்குவோனாகவும் இருக்கின்ற தேவனுக்கு எனது வணக்கங்கள்! தேவர்களுக்கெல்லாம் அதியாய் இருக்கும் ஆதித்த பகவானுக்கு பலமுறைகள் வந்தனஞ் செய்கிறேன். எந்த தேவனுடைய தேரானது இதமும் ரமணீயமுமான தேஜோமயமாக இருக்கிறதோ, குதிரைகள் ஞானரூபங்களாயும், அமிர்தங்களாயும் இருந்து அந்த ரதத்தை இழுக்கின்றனவோ, உலகங்களுக்கெல்லாம் கண்ணாக இருக்கும் அந்தப் பகவானைத் தொழுகிறேன்! என்று இவ்விதமாக யாக்கியவல்கியர் சூரியனை வணங்கி வழிபட்டு வந்தார். அப்போது சூரியபகவான் குதிரை வடிவில் அவர் முன்பு, தோன்றி, ஓ முனிவரே! உமக்கு வேண்டும் வரத்தைக் கேளும்; என்றார். அதனால் யாக்கியவல்கியர் சூரியனைத் தொழுது, சுவாமி! எனது குருவான வைசம்பாயன மகாமுனிவருக்கும், தெரியாத யஜுர் வேதங்களை எனக்கு வழங்கி அருள்புரிய வேண்டும்! என்று வேண்டினார். உடனே சூரியபகவான், அவருக்கு அவர் வேண்டிய வண்ணம் வியாசரது உபதேசமில்லாமையால், வைசம்பாயன முனிவருக்குத் தெரியாத அயாதயாமங்கள் என்ற யஜீசுகளை வழங்கியருளினார். அந்த சாகைகளை அத்தியயனஞ் செய்தவர்களுக்கு வாஜிகள் அல்லது வாஜசனேயர் என்ற பெயர் வழங்கலாயிற்று. சூரியன் (வாஜி) குதிரை வடிவத்தில் அந்த வேதத்தை உபதேசித்ததால் அந்தப் பெயர் உண்டாயிற்று. அந்த வாஜசனேய, சங்கிசையை யாக்கியவல்கிய முனிவர் காண்வசாகை முதலிய பதினைந்து சாகைகளாகப் பிரித்தார். இவ்வாறு தான் யஜுர் வேதத்தின் பிரிவுகள் உண்டாயின.

——————-

6. சாம, அதர்வண வேதங்கள், புராணங்கள்

மைத்ரேயரே! சாமவேத விருட்சத்தின் சாகா பேதங்களையும் கேட்பீராக, வியாசரது சீடரான ஜைமினியானவர், தம்முடைய குமாரரான சுமந்து என்பவருக்கு ஒரு சம்ஹிதையை உபதேசிக்க அவரும் தம்முடைய மகனான சுத்துவா என்பவருக்கு அதை உபதேசித்தார். பிறகு அந்தச் சுத்துவாவின் மகனான சுகர்மா என்பவர் தம் தந்தையிடம் தாம் கற்ற அந்த ஜைமினி சம்ஹிதையை ஓராயிரம் பிரிவுகளாகப் பிரித்துத் தமது மாணவருக்கும் கொடுத்தார். கவுசல்யர் என்னும் பெயர் பெற்றிருந்த அந்த ஹிரண்யநாபருக்கு வடநாட்டார் ஐநூறு பேர், சாம சாகையை ஓதும் சீடர்களானார்கள். அவர்கள் ஐநூறு சாகைகளை ஓதிக்கொண்டு ஒரு காலத்தில் கீழ்த்திசையில் இருந்ததால் கீழ்த்திசை சாமகர் என்று வழங்கப்பட்டனர். அந்த பவுஷ்பிஞ்சி என்பவருக்கும் லோகாக்ஷி கவுமுதி, கக்ஷீவான் லாங்கலி முதலிய சீடர்கள் இருந்தனர். அவர்கள் தாங்கள் ஓதிய சங்கிதைகளைப் பலவாக விரிவுரை செய்தனர். முன்னே சொன்ன இரணிய நாபருடைய சீடர்களில் ஒருவரான கிருதநாமா என்பவர் இருபத்து நான்கு சங்கிதைகளைத் தமது மாணவருக்கு ஓதுவித்தார். அவர்களும் இந்தச் சாம வேதத்தை மிகவும் விரிவுபடுத்தினர். இவ்விதமாகச் சாமவேதச் சாகைகளின் பிரிவுகள் உண்டாயின. இனி அதர்வண வேதத்தின் விரிவைச் சொல்கிறேன். வேதவியாச முனிவரிடம் அதர்வண வேதத்தைக் கற்றறிந்த சுமந்து என்ற முனிவர், அந்த அதர்வண வேதத்தைத் தமது சீடரான கபந்தர் என்பவரிடம் வழங்கினார். அந்த கபந்த முனிவர் அதை இரண்டு பிரிவுகளாக்கி தேவதரிசர், பத்தியர் என்ற சீடருக்கு வழங்கினார். அந்தத் தேவதரிசருக்கு, மேதன் பிரமபலி, சவுல்கா யனிபிப்பலாதன் என்ற நான்கு மாணவர்கள் இருந்தனர். அவர்கள் தேவதரிசர் செய்த நான்கு சங்கிதைகளையும் முறையே ஓதிவந்தனர்; பத்தியருக்கு ஜாபாலி குமுதாதி, சவுனகர் என்ற மூன்று மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் தமது ஆசிரியர் பிரித்த மூன்று சங்கிதைகளையும் பல சங்கிதைகளாகச் செய்தனர். அந்த சவுனகர் என்பவர் தம்முடைய சங்கிதையை இரண்டாகச் செய்து பப்புரு என்பவருக்கும், சைந்தவர் என்பவருக்கும் வழங்கினார். சைந்தவரின் சீடரான முஞ்சிசேர் என்பவர் தாம் பெற்ற சங்கிதை இரண்டாகப் பிரித்தார். அந்த சங்கிதைகளில் முக்கியமான பாகங்கள் ஐந்தாகும். அவை நக்ஷத்திர கல்ப்பம், வேத கல்ப்பம், சங்கீதா கல்ப்பம், ஆங்கிரச கல்ப்பம், சாந்தி கல்ப்பம் என்பனவாகும். நட்சத்திர கல்பம் என்பது நக்ஷத்திராதிகளுடைய சொரூப குணாதிகளை விவரிப்பதாகும். வேதகல்ப்பமாவது, பிரமத்துவம் முதலிய புரோகித காரியங்களைத் தெரிவிப்பதாகும். சங்கிதா கல்ப்பம் என்பது மந்திரங்களின் ஏற்பாட்டை உணர்த்துவது ஆங்கிரச கல்ப்பம்; ஸ்தம்பனமோஹன மாரணாதிகளான அபிசாரங்களைக் காட்டுவது யானை குதிரை முதலியவை பற்றிய பதினெட்டு சாந்திகளை விதிப்பது-சாந்தி கல்ப்பமாகும். இவைகளே அதர்வண வேதத்தில் சிறப்பானவை. இவ்விதமாக நான்கு வேதங்களின் விகற்பங்களை நான் உமக்கு அறிவித்தேன்.

இனிமேல், புராணங்களின் வரலாற்றைக் கூறுகிறேன்; கேளும்! புராணம் என்பது சாஸ்திரங்கள் அனைவற்றிலும் முதன்மையானதாகும். அது கிருதயுகத்தில் பிரும்மாவினால் நூறுகோடி கிரந்த விஸ்தாரமாக இயற்றப்பட்டு, பிராம்மம் என்ற பெயருடன் ஒன்றாகவே இருந்தது. பின்பு, திரேதா யுகத்திலே அதை ரிஷிகள் நூற்றுப் பதினெட்டு சம்ஹிதைகளோடு கூடிய பதினெட்டுப் பிரிவுகளுடன் கோடிக்கிரந்த விஸ்தாரமாகச் செய்தனர். பிறகு, வேதவியாசர் துவாபரயுகத்தின் இறுதியில் அப்புராணங்களின் சாரங்களை எடுத்து, நான்கு லக்ஷம் கிரந்த விஸ்தாரமுடையதாய், பாரதாதி ஆக்கியானங்களும் பிருதிவீ கீதை பிதுரு கீதை முதலான காதைகளையும் வராக கல்ப்பாதி, கல்ப்ப நிர்ணயங்களும், சிருஷ்டி மனுவந்தராதிகளும், வமிச வமிசானு சரிதங்களும் விளங்கும்படியாக பதினெட்டுப் புராண சங்கிதைகளைச் செய்து, தமது மாணவரான சூதமுனிவருக்கு உபதேசித்தனர். அந்த சூதர் என்ற ரோம ஹர்ஷணருக்கு சுமதி, அக்கினி, வர்ச்சன், மித்திராயு, சாம்சபாயனன், அகிருதவிரணன், சாவர்ணி என்ற சீடர்கள் இருந்தார்கள். அவர்களில் அகிருத விரணரும் சாவர்ணியும்; சாம்சபாயனரும்; வியாச கிருதமான புராண சங்கிதையைப் பற்றி தாங்களும் சில சங்கிதைகளைச் செய்தனர்; இவற்றுக்கு எல்லாம் மூலமானதாக; ஒரு சங்கிதையை ரோமஹர்ஷணர் செய்தார். இந்த நான்கின் சாரத்தைக் கொண்டுதான்; நான் இந்தப் புராணத்தை இயற்றினேன். புராணங்கள் யாவற்றினும் முதன்மையாக இருந்தது பிரம்மபுராணம், அதை முதலாகக் கொண்ட பதினெட்டுப் புராணங்கள் உண்டென்று புராணங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அவையாவன, பிராம்மம், பாத்துமம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீபம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம் பவுஷ்யத்து, பிரமகைவர்த்தம், லிங்கம், வராகம், ஸ்காந்தம், வாமனம், கவுர்மம், மாச்சியம், காருடம், பிரமாண்டம் முதலியன அவற்றின் முறையே இதுவாகும். இந்தப் புராணங்கள் யாவும் சிருஷஅடி, சங்காரம், வமிசங்கள் மனுவந்திரங்கள். வமிசங்களுடைய வரலாறுகள் ஆகியவற்றை அறிவிப்பனவாகும்.

மைத்ரேயரே! உமக்கு இப்போது நான் சொல்லி வருவது பத்மபுராணத்துக்குப் பிற்படச் சொல்லிய விஷ்ணு புராணமாகும். இது புராண வரிசையில் மூன்றாவதாகும், எல்லாப் புராணங்களிலும் சொல்லப்படுகிற சிருஷ்டி முதலியவற்றில் ஸ்ரீவிஷ்ணுவே மூலம் என்று கர்த்துருத்துவாதி அறங்களைக் கொண்டு சொல்லப்படுகிறது. ஆன்ம கோடிகளில் அறியவேண்டிய அறங்கள் அனைத்தையும், முன்பு சொன்ன நான்கு வேதங்களும் அவற்றின் அங்கங்களான சிøக்ஷ வியாகரணம் காந்தம்; நிருத்தம்; ஜோதிடம்; கல்ப்பம் என்ற ஆறும், மீமாம்சையும், நியாய நூலும், இதிகாச புராணங்களும், அறநூல்களும் ஆகிய பதினான்காகும். இவற்றுக்கு வித்யா ஸ்தானங்கள் என்றும் பெயர் உண்டு. இவை தவிர ஆயுர்வேதம் என்ற வைத்திய சாஸ்திரமும் தனுர்வேதம் என்ற ஆயுத சாஸ்திரமும் அர்த்தி சாஸ்திரம் என்ற ராஜநீதி சாஸ்திரமும் உபவித்தைகள் என்று சொல்லப்படும். இவையனைத்தும் பதினெட்டு வித்தைகள் என்று பொதுப்பட வழங்குகின்றன. இந்த வித்தைகளை வகுத்தவர்கள் பிரமரிஷிகள், தேவரிஷிகள், ராஜரிஷிகள் என்ற மூவகை முனிவர்களாவர். மைத்ரேயரே! நீங்கள் கேட்டபடி வேதத்தின் மூல சாகைகளையும், அச்சாகைகளின் பிரிவுகளையும் அவற்றின் கர்த்தாக்களையும் அவை பிரிவதன் காரணத்தையும் உமக்குத் தெரியும்படிச் சொன்னேன். சகல மனுவந்திரத்திலேயும் இப்படி சாகைகளின் பிரிப்பது சமமாக நிகழ்ந்துவரும், ஆதியில் பிரும்மாவினால் அறியப்பட்ட வேதம் நித்தியமானது. ஆகையால் இந்தச் சாகைகள் அனைத்தும் அவற்றின் விகற்பங்கள் ஆகும். இவ்விதமாக வேத சம்பந்தமான யாவற்றையும் சொல்லிவிட்டேன். இனி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!

—————-

7. வைணவத்தின் பெருமை

மைத்ரேயர் தமது குருவை நோக்கி, முனிவர் பெருமானே! நான் கேட்டவற்றுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லிவிட்டீர்கள். இனியும் ஒரு விஷயம் இருக்கிறது அதையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். அதாவது சப்தத்துவீபங்களும் பாதாளங்களும் மேலேழு உலகங்களும் அடங்கியிருக்கிற இந்தப் பிரம்மாண்டத்துக்குள்ளே ஸ்தூலங்களும் சூஷ்மங்களும், சூஷ்மத்தில் சூஷ்மங்களும் ஸ்தூலங்களில் ஸ்தூலங்களுமாக ஏராளமான உயிரினங்கள் வாசஞ்செய்கின்றன. இத்தனை பெரிய பிரம்மாண்டத்துக்குள்ளே அங்குலத்தின் எட்டில் ஒரு பங்கு இடமானாலுங்கூட பிராணிகள் இல்லாமலிருப்ப தில்லை. இந்த உயிரினங்கள் எல்லாம் கர்மபந்தத்தினாலே, இங்கே பிறக்கின்றன. பின்னர் ஆயுளின் முடிவிலே எமனுக்கு வயப்பட்டு, அவனால் நியமிக்கப்பட்ட அந்தந்த வாதனைகளை அனுபவித்து, அந்த வாதனைக்காலம் தீர்ந்த பிறகு தேவாதி யோனிகளிலே பிறந்திருக்கிறார்களே இவ்விதமாக உயிரினங்கள் ஜனன மரணக்கிரமத்தில் சுழன்று கொண்டேயிருக்கின்றன என்பது சாஸ்திரங்களின் நிச்சயம். இத்தகைய சம்சாரத்திலே சரீரிகள் எந்தக் காரியஞ்செய்தால் எமனுக்கு வயப்படாமல் தப்புவார்கள். அந்தக் காரியம் யாது? இதை அடியேனுக்குக் கூறியருள வேண்டுகிறேன் என்று வேண்டினார், பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! இந்தக் கேள்வியைத் தான் முன்பு ஒரு காலத்தில் நகுலன் பீஷ்மரைக் கேட்டான். அதற்குப் பீஷ்மர் சொன்னதாவது, குழந்தாய்! கலிங்க தேசத்திலிருந்து எனக்கு நண்பரான பிராமணர் ஒருவர் வந்திருந்தார். அவரை நான் கேட்டவைகளில் எதெது எப்படியெப்படியாகும் என்று சொல்வாரோ, அப்படியப்படியே நிகழ்ந்தன. அவர் பூர்வஜன்ம ஞானமும் யோக திருஷ்டியும் உடையவர். ஆகையால், நான் கேட்டவைகளுக்கு அவர் சொன்னது ஒருபோதும் பொய்த்ததில்லை. அந்த நம்பிக்கையினாலே நீ கேட்ட கேள்வியை நானும் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் யோகியானவர், நான் கேட்ட கேள்வியைக் குறித்து மிகவும் இரகசியமான யமகிங்கர சம்வாதம் ஒன்றை என்னிடம் சொன்னார். அதாவது ஒரு காலத்தில் பாசக்கயிற்றைக் கைகளில் எடுத்துக் கொண்டு பிராணிகளைக் கவர்ந்து வரச்சென்ற தன்னுடைய சேவகனை யமதர்மராஜன் தன்னருகே அழைத்து, தூதுவனே! நீ உனது தொழிலை நடத்தும்போது ஸ்ரீமதுசூதனை ஆஸ்ரயித்தவரைத் தீண்டாதே விட்டு விடு. நான் மற்றவர்களுக்கு பிரபுவேயல்லாது வைணவருக்குப் பிரபுவல்லேன் சகல தேவதைகளாலும் ஆராதிக்கப்பட்ட பெருமாளாலே நான் எமன் என்று பெயரிடப்பட்டுச் சகல பிராணிகளுடைய பாப புண்ணியங்களையெல்லாம் ஆராய்ந்து நடத்தும்படி நியமிக்கப்ப்டேன்! ஆகையால், அந்த ஸ்ரீஹரிக்கு வசப்பட்டு இருக்கிறானே தவிர, சுதந்திரனாக இல்லை. அவர் எனக்கிட்ட அதிகாரத்தில் நான் சிறிதளவு தவறினாலும் கூட என்னையும் அந்த ஸ்ரீவிஷ்ணுவானவர் தண்டிப்பார். கை வளையல், கிரீடம், குண்டலம் முதலிய ஆபரணங்களிலேயும் காரணமான ஸ்வர்ணம் ஒன்றே வியாபித்திருக்கிறது. அதுபோல சுரர், நரர் பசு முதலான சகல காரிய வர்க்கங்களிலும் அந்த ஸ்ரீஹரி ஒருவனே வியாபித்திருக்கிறார். ஆகையால் அவரே சர்வேஸ்வரனாகும்.

மற்ற தேவர்கள் எல்லாம் அவருடைய வியாப்தியைக் கொண்டு அவரிட்ட கட்டளைகளைச் செலுத்தி வருகிறார்கள். காற்றினால் கிளப்பப்பட்ட மண்புழுதி, காற்றடங்கியதும் மறுபடியும் பூமியிலேயே படிவது போல், பகவத் சங்கல்பத்தினால் உண்டான சுரநராதிகள் அனைத்தும், பகவத் குணவைஷம்யம் அடங்கியதும் அந்தப் பகவானிடத்திலேயே லயமடைந்து விடுகின்றன. சகல தேவதைகளாலும் அர்ச்சிக்கப்பட்ட திருவடித்தாமரைகளுள்ள அந்த ஸ்ரீஹரியை எந்த மனிதன் நிருபாதிகமாகச் சேவித்துக் கொண்டிருப்பானோ அந்த மனிதனைக் கண்டதும் நெருப்பைக் கண்டதுபோல் தூரத்தில் விட்டோடிப் போகக் கடவாயாக! என்று கட்டளையிட்டான். அதற்கு கிங்கரன், எமதேவரே! அந்த ஸ்ரீவிஷ்ணுவினுடைய பக்தனை இன்னான் என்று நான் அறிந்து நடப்பதற்காக அந்த மகா புருஷனுடைய லக்ஷணங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன் என்றான். அதற்கு யமதர்மன், கேளாய்; கிங்கரனே! எவன் தன்னுடைய வருணாசிரம தர்மங்களை பகவானுடைய ஆக்ஞா கைங்கரியங்களாகக் கருதி, அதனின்று தவறாமலும், தனது நண்பனிடத்திலும் பகைவரிடத்திலும் பாரபட்சமின்றி சமபுத்தியுள்ளவனாகவும், ஒரு பொருளையும் அபகரிக்காதவனாகவும், ஓருயிரையுங் கொல்லாதவனாகவும் மிகவும் தூய்மையான இதயமுள்ளவனாகவும் இருக்கிறானோ, அந்தப் புருஷனையே ஸ்ரீவிஷ்ணுபக்தன் என்று அறிந்து கொள்வாயாக. தூய்மையான ஞானமுடைய எவனுடைய சித்தமானது கலி சம்பந்தமான ராகத்துவேஷங்களால் அழுக்கடையாமல் எப்போதுமே ஸ்ரீமந்நாராயணன் வாசஞ்செய்யப்பெற்று விளங்குமோ, அந்த மனிதனை ஸ்ரீஜனார்த்தனனுடைய பரமபக்தன் என்று அறிவாயாக. அன்பர்களின் இதயகமலங்களில் படிக மலைபோல் ஸ்ரீபகவான் நிர்மலனாய் எழுந்தருளியிருக்கும் போது மாச்சரியம் முதலான தோஷங்கள், பறந்து போகும். குளிர்ச்சியான சந்திரனுடைய கதிர்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் அக்கினியின் காந்தியும்; சிறப்பும் பெருமையடையாததுபோல்! எவனது இதயத்தில் ஸ்ரீவாசுதேவன் எழுந்தருளியிருப்õனோ, அந்த மனிதன் நிர்மல புத்தியுடையவனாகவும், மாச்சரியம் முதலிய குறைகள் அற்றவனாகவும், மிகவும் சாந்தனாகவும், தூய்மையான ஒழுக்கமுடையவனாகவும், இனிமையாகவும் மிதமாகப் பேசுபவனாகவும்; கர்வம், வஞ்சனையற்றவனாகவும் விளங்குவான். அந்த அனாதியான பகவான் எவனுடைய இதயத்தில் எழுந்தருளியிருக்கிறானோ அவன்; இளமையான தேமாமரமானது தானிருக்குஞ் செழிப்பினாலேயே தனக்குள் இருக்கிற பூசாரத்தைக் காட்டுவதுபோல, உலகத்திலுள்ள எவருக்குள்ளும் சாந்தனாய் விளங்குவான். அந்த அவியயனாய் அநாதியான ஸ்ரீஹரிபகவான் சங்கு, சக்கராதி ஆயுத சமேதனாய் ஒருவனுடைய இதயத்தில் வீற்றிருப்பானானால் அந்தப் புருஷனுடைய பாவமெல்லாம் சூரியன் இருக்குமிடத்திலே அந்தகாரம் மறைவது போல, பாபவினாசனனான அந்தப் பகவானாலே கண்டிக்கப்பட்டுபோம். இயம, நியமாதிகளாலே பாவத்தைக் கழித்தவர்களாயும் எப்பொழுதும் ஸ்ரீ அச்சுதனிடத்திலே பற்றி நிற்கின்ற சித்தமுள்ளவர்களாயும் மாச்சரியம் மதம் முதலிய குற்றங்கள் கழித்தவர்களான புருஷர்களைக் கண்டால்; கிங்கரனே; நீ மிகவும் தூரத்தில் விலகிப்போய் விடுவாயாக.

எந்தப் புருஷன் யாருமில்லாத ஏகாந்த ஸ்தானத்திலே பிறரது பொருளான சுவர்ணராசி ஜொலித்துக் கொண்டிருக்கக் கண்டாலும் அதைத் துரும்பு போல நினைத்துத் தீண்டாமற் போவானோ, எம்பெருமான் ஒருவனையேயன்றி மற்ற எதையும் புத்திபிற்பற்றாமல் இருப்பானோ அவன் ஸ்ரீவிஷ்ணு பக்தன் என்று தெரிந்து கொள்வாயாக. இனிமேல் ஸ்ரீவிஷ்ணு பக்தியற்ற பாவியினுடைய இலக்கணமுஞ் சொல்கிறேன், கேட்பாயாக. எவன் பிறரது பொருளை எவ்விதத்திலாவது அபகரிப்பவனாகவும், உயிர்களைக் கொல்வோனாகவும், கடினமாகப் பேசுவோனாகவும், தீவினையால் வீணான மதம் பொருந்திச் சித்தங்கலங்கியவனாகவும் இருக்கிறானோ; அவனது இதயத்தில் அந்த ஸ்ரீஅனந்தன் வாசஞ்செய்யமாட்டான். எவன் நற்புத்தியில்லாதவனாய் பிறருடைய செல்வத்திலே பொறாமைப்படுபவனாயும், எம்பெருமானை ஆராதியாமலும் பாகவத விஷயத்தில் திரவியத்தை வினியோகப்படுத்தாமலும் இருக்கிறானோ, அந்த அதமனுடைய மனதில் ஸ்ரீஜனார்த்தனன் எழுந்தருளமாட்டான். எவன் தனது நண்பனிடத்திலும், உறவினரிடத்திலும், மனைவியிடத்திலும், மக்களிடத்திலும், பெற்றோரிடத்திலும் வஞ்சனையுள்ளவனாய், பணமே பெரிதாகப் பேராசை கொண்டவனாக இருக்கிறானோ, அந்த அதம் ஸ்ரீவிஷ்ணு பக்தனல்ல என்பதைத் தெரிந்துகொள். எவன் அயோக்கிய நினைவும் அயோக்கிய செயலிலும் நாட்டமும், அயோக்கிய சகவாசமும் பாபகர்மச் செயலும் செய்பவனாகக் கழிக்கின்றானோ அந்த மனித மிருகத்தை ஸ்ரீவிஷ்ணு பக்தன் அல்லன் என்று அறிந்து கொள்வாயாக! பரமபுருஷனான ஸ்ரீவாசுதேவனொருவனே சகல பிரபஞ்சமும் தாமுமாகத் திருமேனியுடையவனாக இருக்கிறான் என்று யாருக்கு ஸ்ரீஅனந்தனிடத்திலே சர்வ வியாபகத்துவ புத்தி ஸ்திரமாக இருக்கிறதோ, அத்தகைய மகான்களைக் கண்டால் தூரத்தில் விலகிப் போவாயாக! ஓ பத்மநாபா! வாசுதேவா, விஷ்ணுவே, தரணீதரா, அச்சுதா, சங்கு சக்கர கதாபாணி, நீ அடியேங்களுக்கு சரணமாக வேண்டும், என்று யாரால் சொல்லிக் கொண்டிருப்பார்களோ, அத்தகைய மகாபரிசுத்த புருஷர்களை நீ கண்ணெடுத்தும் பாராமல் தூரமாக ஓடிப்போவாயாக. சத்தியஞானானந்தமயனாய்ப் பிரகாசிக்கும் அந்த எம்பெருமான் எவனுடைய இதயகமலத்தில் வாசஞ்செய்து கொண்டிருப்பானோ அந்த மகாபுருஷனுடைய கடாக்ஷம் இருக்குமிடமெல்லாம் நீ செல்லத்தக்கவனல்ல, நானும் அங்கு செல்லத்தக்கவன் அல்லேன் பதறிச் சென்றால், எம்பெருமானது திருவாழியின் தேஜோவிசேஷத்தால் பதராக்கப்பட்டு விடுவோம். அந்த மகான், ஸ்ரீவைகுண்ட திவ்வியலோகத்துக்கே எழுந்தருளத்தக்கவன். ஆகையால் சூரியாதி உலகங்களைப் போல நம்முடைய லோகம் அந்தப் பரமபாகவதன் பரமபதத்துக்குச் செல்லும் வழியாகாமையினால், அவனது கடாக்ஷத்தக்கும் உரியதல்ல என்று சூரியனது மகனான யமகர்மராஜன் தன் சேவகனுக்குக் கட்டளையிட்டான். அந்த யமகிங்கரன், இந்த ரகசியத்தை எனக்கு உபதேசித்தான். பீஷ்மரே! உம்மிடம் உள்ள நட்பினால் அதை நான் உமக்குப் போதித்தேன்! என்று அந்த கலிங்கதேசத்துப் பிராமணர் எனக்குக் கூறினார். அந்த ரகசியத்தை நான் உமக்குச் சொன்னேன். இந்தச் சம்சாரப் பெருங்கடலில் ஆழ்ந்து கிடக்கும் பிராணிகளுக்கு ஸ்ரீமந்நாராயணனைவிடப் புகலிடம் வேறில்லை. எவன் எம்பெருமானிடம் ஆன்ம சமர்ப்பணம் செய்துள்ளானோ, அவன் திறத்திலே யமகிங்கரரும்; காலதண்டமும்; காலபாசமும் ஒன்றுஞ் செய்ய இயலாது. இதை நீர் நன்றாக அறிந்து கொள்வீராக என்று பீஷ்மர் நகுலருக்குப் போதித்தார். மைத்ரேயரே! நான் அதை உமக்குச் சொன்னேன். இனி யாது கேட்கவேண்டுமோ கேளும்.

—————–

8. ஆராதனை முறையும் வருணாசிரம தருமமும்

சுவாமீ! இந்த சம்சாரத்தை வெல்ல வேண்டுவோர் ஸ்ரீவிஷ்ணு பகவானை ஆராதிக்க வேண்டும் என்பது சித்தமாயிற்றல்லவா? இனிமேல் அந்த லோகநாதனை ஆராதிக்க வேண்டிய வழிமுறைகளையும், அப்படி ஆராதிக்கும் மனிதர், எந்தப் பயனை அடைவார்கள் என்பதையும் நான் அறிய விரும்புகிறேன். எனவே அவற்றை அடியேனுக்கு விளக்கியருள வேண்டும் என்று மைத்ரேயர், பராசர முனிவரிடம் வேண்டி நின்றார். பராசரரான பிரமரிஷி கூறலானார். மைத்ரேயரே! நீங்கள் இப்போது என்னைக் கேட்ட விஷயத்தை முன்பொரு காலத்தில் சகரமாமன்னன், அவுர்வ மகாரிஷியைக் கேட்டான். அதற்கு அந்த முனிவர் கொடுத்த விடையை நான் உமக்குச் சொல்லுகிறேன் கேளும். சகர மகாராசன், பிருகு மாமுனிவரின் குமாரரான அவுர்வ மகாமுனிவரை வணங்கி, ஸ்ரீவிஷ்ணுவின் ஆராதனை சம்பந்தமான காரியத்தையும், அந்த ஆராதனையால் விளையும் பயனையும் கேட்க அந்த முனிவர் அருளி செய்கிறார். சகர மாமன்னா! ஸ்ரீமந்நாராயணனை ஆராதனை செய்பவன் இந்தப் பூலோக வாழ்வுக்குரிய ஐசுவரியங்களையும் சொர்க்கலோக சம்பந்தமான இந்திராதி போகங்களையும், சொர்க்கத்திலிருப்பவரும் விரும்புகின்ற சதுர்முகாதி பதங்களையும் யாவற்றுக்கும் மேலான மோட்சானந்தத்தையும் பெறுவான். ஆராதனை செய்பவன் எதை எதை எவ்வளவுக்கெவ்வளவு விரும்புகிறானோ அதையதை அவ்வவ்வளவும் பெறுவான். இதில் ஐயமில்லை. அந்தச் சுவாமியை ஆராதிக்கும் வகையெப்படி என்றால், அதையும் சொல்கிறேன் கேட்பீராக. வர்ணாசிரமங்களுக்கு ஏற்ற ஒழுக்கமுள்ளவனாலேயே அந்தப் பரமபுருஷன் ஆராதிக்கப்படுவான். இந்த வழியேயல்லாமல் வேறுவழிகள் அவ்வெம்பெருமானுக்கு மகிழ்ச்சியளிப்பதல்ல. இந்திராதி தேவதாந்தா சம்பந்தமுடையவைகளாகத் தோன்றும் சகல யாகங்களினாலேயும் யாரும் அந்த எம்பெருமானையே பூஜிக்கின்றான். எந்த மந்திரங்களை ஜெபித்தாலும் அவனையே ஜபிக்கிறான். இதுபோலவே அன்னியரை ஹிம்சை செய்தாலும் அவனையை இம்சித்தவனாகிறான். எம்பெருமானே சகல தேவதைகளிலும் வியாபித்திருப்பவன். ஆகையால் எவனும் தனக்குள்ள வர்ணாசிரமங்களுக்குரிய நல்லொழுக்க முடையவனாயிருந்தே அந்த சுவாமியை ஆராதனை செய்ய வேண்டும். பிராமணனானாலும், வேந்தனானாலும், வைசியனானாலும், சூத்திரனானாலும் தனக்குரிய தருமத்தோடு எம்பெருமானை ஆராதிக்க வேண்டுமேயன்றி வேறுவிதமாக ஆராதித்தல் கூடாது. யார் பிறர்மீது அபவாதஞ் சொல்வதும், கோட் சொல்வதும், பொய் பேசுவதும் பிறர் நடுங்கும்படியாகப் பேசுதலுமாகிய குற்றங்களில்லாதவனோ அவனாலே தான் எம்பெருமான் ஆராதிக்கப்படுவான். எவன் பிறர் மனையாளிடத்திலும் பிறர் பொருளிடத்திலும், பிறரைத் துன்புறுத்தலும், மனம் பற்றாமல் இருப்பவனோ அப்படிப்பட்டவனாலேயே, பரமபுருஷன் மகிழ்விக்கப்படுவான். எவன் உயிரினங்களை அடிக்காமலும், துன்புறுத்தாமலும், கேடு நினைக்காமலும் இருப்பானோ, அவனால் தான் புரு÷ஷாத்தமன் மகிழ்விக்கப்படுவான். தேவர் விப்பிரர், ஆசாரியார் ஆகியவர்களுடைய பணிவிடைகளில் எவன் நிராதனாக இருப்பானோ அவனாலேதான் ஸ்ரீயப்பதி மகிழ்வடைவான். எவன் தனது மக்கள் மனைவி முதலியவரிடத்தில் அன்போடு நன்மைகளை நினைப்பதைப்போலவே, பிறரிடத்திலும் நன்மையை நினைத்திருப்பானோ, அவனே ஸ்ரீமந்நாராயணனுக்கு மகிழ்ச்சியூட்டவல்லவன்! யாருடைய மனம், ராகத் துவேஷாதிகளால் கெட்டுப் போகாமலிருக்குமோ, அந்தத் தூய்மையான மனத்தினாலேயே ஸ்ரீகோவிந்தன் மகிழ்விக்கப்படுவான், அரசனே வருணாசிரமங்களில் சாஸ்திரங்களினால் ஏற்பட்ட தருமங்கள் எவைகள் உண்டோ, அவைகளில் தவறாமல் நிற்பவன் ஸ்ரீவிஷ்ணுவை ஆராதிக்கத் தக்கவன் என்று அதர்வமா முனிவர் சொன்னார்.

அதைக் கேட்ட சகர மாமன்னன், முனிவரே! வர்ணாசிரமங்களையும் அவற்றிற்குரிய தருமங்களையும் நான் அறிய விரும்புகிறேன், ஆகையால் அவற்றை அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டுகிறேன் என்று விண்ணப்பம் செய்ய முனிவர் தொடர்ந்து கூறலானார். அரசே! பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நால்வகை வருணத்தாரின் தர்மங்களையும் நான் சொல்கிறேன். மனம் ஒன்றிக் கேட்பீராக. பிராமணன் தானம் கொடுக்கவும், தானம் பெறவும், யாகங்கள் செய்யவும் அதிகாரமுடையவனாய், வேத அத்தியயனத்தை விடாமற் செய்து கொண்டு நாள்தோறும் ஸ்நானத் தர்ப்பணாதிகளையும் சிரவுதஸ்மார்த்த அக்னி ஹோத்திரங்களையும் செய்து வரவேண்டும். பிழைப்புக்காகப் பிறருக்கு வைதிக கருமங்களைச் செய்வித்தலும், வேதசாஸ்திரங்களை ஓதுவித்தலும் நியாயமான நேர்மை வழிகளில் சம்பாதித்த பொருளைக் கொண்டு பிறர் கொடுக்கும் யோக்கியமான தானங்களை ஏற்றுக்கொள்வதுமாகிய செயல்களைச் செய்யலாம். பிராமணன் உயிரினங்கள் அனைத்துக்கும் நன்மையைச் செய்யவேண்டுமேயல்லாது தீமையைச் செய்யலாகாது. ஏனெனில் எல்லா உயிரினங்களிடத்தும் அன்பாக இருப்பதே பிராமணனுக்கு உயர்வு ஆகும். இந்தத் தன்மைதான் அந்தணன் என்கின்ற பெயருக்குக் காரணமாகும். பிறருடைய ரத்தினக் கற்களை, பருக்காங் கற்களைப் போல சமமான எண்ணங்கொண்டு கருதவேண்டும். ரிது காலத்திலே தன் பத்தினியோடு சேர்வது பிராமணனுக்கு நியாயமாகும். இனி க்ஷத்திரியன், தன் விருப்பப்படி பிராமணருக்குத் தானங்கள் கொடுக்கவும், யாகங்களைச் செய்யவும் வேதசாஸ்திரங்களை ஓதவும் அதிகாரமுடையவன். அவனுக்கு ஆயுதம் எடுத்துச் சேவிப்பதும், பூமியைக் காப்பதும் ஜீவனங்களாகும். ஆயினும் பூமியைக் காப்பதே முக்கியமாகும். அரசர்கள் யாவரும் பூமியைப் பரிபாலனம் செய்தே கிருத கிருத்தியராகிறார்கள். ஏனென்றால், அந்தத் தேசத்தில் நடக்கும் யாகம், தவம் முதலிய புண்ணிய கருமங்களில் அரசனுக்கும் பங்குண்டாகிறது என்பதையும் அறிவீராக. எந்த அரசன் துஷ்டரைத் தண்டித்து, நல்லோரைப் பரிபாலனஞ் செய்து, வருணாசிரம தர்மங்களை நிலைநிறுத்துகிறானோ அந்த அரசன் தனக்கு இஷ்டமான புண்ணிய உலகங்களை அடைகிறான். இனி வைசியன், பிரம்மதேவனின் பசுக்களைப் பரிபாலனஞ் செய்தலும் பயிர் செய்தலுமாகிய செயல்களைப் பிழைப்பாகக் கற்பித்தான். அவனுக்கும், வேத அத்தியயனமும் தானமும், யாகமும் செய்ய அதிகாரமுண்டு. மேலும் அவன் முந்தியவர்களைப் போல, நித்திய நைமித்திய தர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டும் வரவேண்டும். சூத்திரனோ முந்தியவருக்கு ஊழியஞ் செய்து பிழைத்தலும் அவர்களுக்குச் சேவ பூதனாக இருந்து அவரால் போஷிக்கப்படவும் வேண்டும் அல்லது சரக்குகளைக் கொண்டு விற்றுவரும் பொருளினாலாவது பிழைப்பதையுமே பிழைப்புத்தொழிலாகக் கொண்டிருக்கிறேன். மேலும் அவனுக்குத் தானங்கொடுக்கவும் பாகயக்ஞவிதியினால், பிதுர்க்கிரியை முதலான கருமங்களைச் செய்யவும் அதிகாரமுண்டு. வேத வேதங்கள் ஒழிந்தவற்றை ஓதலாம். சகல வர்ணத்தாரும் தங்கள் ஊழியக்காரர் முதலானவர்களைப் போஷிப்பதற்காக வேண்டும் பொருள் நியாயமான வழிகளில் சம்பாதிக்கலாம். சந்ததிக்காகத் தத்தமது பெண்டிரிடத்தில் ருதுக்காலங்களில் சேரலாம். எல்லா வருணத்தாருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய குணங்களாவன.

சகல பூதங்களிடமும் தயை, பொறுமை, கர்வமில்லாமை சத்தியம், சித்தி, வீண் வருத்தமின்மை, மங்களச் செய்கை, இனிமையாகப் பேசுதல், சிநேகிக்கும் குணம், வீணாசையின்மை, லோபியாகாமை அழுக்காறின்மை ஆகியவை முக்கியமாகும். பிரம்மச்சரியம் முதலிய ஆசிரமங்களுக்கும் இந்தத் தருமங்கள் பொதுவானவையாகும். ஆயினும் பிராமணாதிகளுக்கு ஆபத்தருமங்களைச் சொல்கிறேன் கேட்பீராக. பிராமணன் அரசனது கருமத்தையும் க்ஷத்திரியன் வைசியரது கருமத்தையும், வைசியர் சூத்திரரது கருமத்தையும் செய்யலாம். பிராமணர், க்ஷத்திரியர் ஆகிய இருதரத்தாரும் சூத்திரரது கருமத்தைச் செய்யலாகாது. பிராமணர், க்ஷத்திரியர் ஆகிய இருதரத்தாரும் சக்தியுடையோராக இருந்தால் கீழோருடைய கருமங்களை விட வேண்டும். ஆபத்தில் சூத்திர கருமம் தவிர மற்றையக் கீழான தருமங்களைச் செய்யலாம். இவ்விதமாக அல்லாமல் அவனவன் நினைப்பது போல் அந்தந்தத் தொழில்களைச் செய்து சாதி சங்கரஞ் செய்யலாகாது. அரசே! வருண தருமங்களை இப்போது நான் உனக்குச் சொன்னேன், இனிமேல் ஆசிரம தருமங்களை சொல்கிறேன். கேட்பாயாக என்று அவுர்வ மகாமுனிவர் சகர மாமன்னனிடம் கூறலானார்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் இரண்டாவது அம்சம்—-இரண்டாம் பாகம் —

February 28, 2021

9. சிம்சுமார சக்கரம்
10. சூரியனின் ரதம்
11. சூரியனின் சிறப்பு செயல்கள்
12. சந்திர மண்டலம்
13. ஜடபரதர் உபாக்கியானம்
14. பரம்பொருள் தெளிவு
15. ருபுநித உபாக்கியானம்
16. நிதாகரும் ஜடபரதரும் முக்தியடைந்தது

———————–

9. சிம்சுமார சக்கரம்

மைத்ரேயரே! ஸ்ரீஹரி பகவானின் சிம்சுமாரம் என்ற ஜந்துவைப் போலத் தோன்றுகின்ற நட்சத்திரக் கூட்டமாகிய ரூபத்தின் வால்பகுதியில் துருவன் இருக்கிறான். அங்கிருந்து துருவன் சுற்றிக்கொண்டு, சந்திர சூரியாதி கிரகங்களையெல்லாம் சுற்றித் திருப்ப அவைகளும் சக்கரத்தைப் போல அவனைச் சுற்றி சுழல்கின்றன. சந்திர சூர்யர்களும் மற்றுமுள்ள கிரகங்களும், நட்சத்திரங்களும் காற்றின் வடிவமான கயிறுகளினால் கட்டப்பட்டு துருவனிடம் இணைந்துள்ளன. ஆகாயத்திலிருக்கும் நட்சத்திரக்கூட்டம் யாவும், சிம்சுமாரம் என்ற ஜந்துவைப் போலக் காணப்படும். அதன் இதயத்திலே சகல தேஜோலோகங்களுக்கும் ஆதார பூதனான ஸ்ரீமந்நாராயணன் எழுந்தருளியிருக்கிறான். உத்தானபாதனுடைய மகனான துருவன் அந்த உலகநாதனை ஆராதித்து, நட்சத்திரமயமான அந்தச் சிம்சுமாரத்தின் வாலினிடத்தில் இருக்கை பெற்றான். அந்த சிம்சுமாரத்திற்கு ஆதாரம் ஸ்ரீயப்பதியேயாகும். அந்தச் சிம்சுமாரமோ துருவனுக்கு ஆதாரம். அந்தத் துருவனோ, சூரியனுக்கு ஆதாரம், அந்த சூரியனோ தேவ, மனுஷ்யாதி சகலத்துக்கும் ஆதாரம். அது எவ்விதமெனில் சூரியன் ரசவத்தான ஜகங்களை எட்டு மாதங்களில் இழுத்துப் பொழிய அந்த வர்ஷத்தினாலே சகல உயிரினங்களுக்கும் உபயோகமான உணவுகள் உண்டாகின்றன. அன்னத்தாலே தான் சகலமும் உண்டாகி வளர்கின்றன. மேலும் சூரியன் தனது உக்கிரமான கிரணங்களினால், லோகத்திலிருந்து தண்ணீரை ஆகர்ஷித்து, சந்திரனிடம் பெய்ய, அந்தச் சந்திரனும் வாயு நாடி மயங்களான வழிகளினால் புகையும் காற்றும் நெருப்புமான வடிவுள்ள மேகங்களிலே விட, அந்த மேகங்களிலிருந்து நீரானது உலகில் பொழிகிறது. அந்த மேகங்களிலிருந்து தண்ணீர் நழுவி விழாமையினால் அம்மேகங்களுக்கு அப்பிரங்கள் என்று பெயர் வந்தது. ஆனாலும் காற்றினால் அம்மேகங்கள் அலைக்கப்படும் காலத்தால் உண்டான பரிபாகத்தினால் தண்ணீர் நிர்மலமாகி விழுகிறது. ஆறுகள், பூமி, கடல்கள், பிராணிகள் ஆகியவற்றிலுள்ள நால்வகை ஜலத்தையும் கவர்ந்துதான் சூரியன் வர்ஷிக்கிறான். மேலும் ஆகாய கங்கையின் ஜலத்தைத் தனது கிரணங்களால் கொண்டு, மேகங்களிற் சேர்க்காமலே வர்ஷிப்பதும் உண்டு. அந்தத் தூய்மையான நீர் படுவதனால் மனிதனது பாவந்தீரும். அவன் நரகமடைவதில்லை. அந்த ஸ்நானம் திவ்யஸ்நானம் என்று வழங்கப்படும்.

முனிவரே! சூரியன் காணப்படும் போதே எந்த நீர் மேகமின்றி ஆகாயத்திலிருந்து விழுகிறதோ அதுதான் ஆகாய கங்கையின் நீர் என்று சொல்லப்படும். அன்றியும் கிருத்திகை முதலான ஒற்றைப்பட்ட நட்சத்திரங்களிலே சூரியன் விளங்கிக் கொண்டேயிருக்க, ஆகாயத்திலிருந்து விழுகிற நீரானது, திக்கஜங்களினாலே பொழியப்படும். ஆகாய கங்கா ஜலமாகச் சொல்லப்படும், ரோகிணி முதலிய இரட்டைப்பட்ட நட்சத்திரங்களிலே சூரியன் விளங்கிக் கொண்டேயிருக்க, வானத்திலிருந்து மேகமின்றிப் பொழியும் தண்ணீரானது சூரியன் பெய்யும் ஆகாய கங்கா ஜலமாகக் கூறப்படும். எந்தத் தண்ணீரானது மேகங்களினாலே வர்ஷிக்கப்படுகின்றதோ, அது பிராணிகளின் பிழைப்புக்காக ஓஷதிகளைப் போஷித்து அமுதமென்று சொல்லப்படும். இவ்விதமாக மழையினாலே ஓஷதிகள் பயன் கொடுக்குமளவும் போஷிக்கப்பட்டனவாகி நிற்க, அவற்றைக் கொண்டு, சாஸ்திர நோக்கமுடைய மனிதர்கள் விதிப்படிப் பலவகைப்பட்ட யக்ஞங்களைச் செய்து, தேவதைகளைத் திருப்தி செய்கிறார்கள். இவ்விதமாக யாகங்களும், வேதங்களும், பிராமணாதி ஜாதிகளும், தேவதைகளும், பறவைகளுமான இந்த உலகம் எல்லாம் மழையினாலேயே காக்கப்படுகின்றன. ஏனெனில் உணவை விளைவிப்பதே மழையல்லவா? அந்த மழையை உண்டாக்குவோன் சூரியன்! அந்த சூரியனுக்கு ஆதாரமானவன் துருவன்! அந்த துருவனுக்கு ஆதாரமாக இருப்பது சிம்சுமார சக்கரம்! அந்த சக்கரத்துக்கு ஆதாரம் ஸ்ரீமந்நாராயணன். இவ்விதமாக ஸ்ரீமந்நாராயணன் அந்தச் சிம்சுமார சக்கரத்தின் இதயத்தில் இருந்து கொண்டு, சகல பிராணிகளையும் தரிக்கும்படித் தாங்கிக் கொண்டிருக்கிறான்.

—————–

10. சூரியனின் ரதம்

மைத்ரேயரே! சூரியன் சஞ்சாரஞ் செய்யும் தட்சிணாயன உத்தராயண எல்லைகளின் நடுவாகிய கிராந்தி விருத்தங்கள் நூற்றியெண்பத்து மூன்று. அம்மண்டலங்களிலேதான் சூரியன் உத்தராயணத்தில் ஏறுவதும், தட்சிணாயனத்தில் இறங்குவதுமான முந்நூற்று அறுபத்தாறு கதிகளினால் ஒரு வருஷத்தைக் கழிக்கிறான். சூரியனது தேரானது சூரியர்களாலும், ரிஷிகளாலும், கந்தர்வராலும், அப்சரசுகளாலும், இயக்கர்களாலும், சர்ப்பங்களாலும் ஏற்றப்பட்டிருக்கும். அந்த இரதத்தில் சித்திரை மாதத்தில் தாதா என்ற சூரியனும், கிரதஸ்தலை என்ற அப்சரசும், புலஸ்தியர் என்ற முனிவரும், வாசுகி என்ற சர்ப்பமும், ரதபிருத்து என்ற இயக்கனும், ஹேதி என்ற அரக்கனும், தும்புரு என்ற கந்தர்வனும் வசிப்பார்கள். வைகாசி மாதத்தில் அர்யமா என்ற சூரியனும், புலகன் என்ற முனிவரும், புஞ்சிகஸ்தலை என்ற அப்சரசும், ரதவுஜா என்ற யக்ஷனும், கச்சவீரன் என்ற சர்ப்பமும், நாரதன் என்ற கந்தர்வனும், பிரஹேதி என்ற ராட்சனும் வசிப்பார்கள். ஆனி மாதத்தில் மித்திரன் என்ற சூரியனும், அத்திரி என்ற முனிவரும், தக்ஷகன் என்ற சர்ப்பமும், பவுருஷேயன் என்ற அரக்கனும், ஹாஹா என்ற கந்தர்வனும், ரதஸ்வனன் என்ற யக்ஷனும் இருப்பார்கள். ஆடிமாதத்தில் வருணன் என்ற சூரியனும், வசிஷ்டர் என்ற முனிவரும் சகஜநியை என்ற அப்சரசும், ஹூ ஹூ என்ற கந்தர்வனும், நாகம் என்ற சர்ப்பமும், ரதன் என்ற ராக்ஷசனும், சித்திரன் என்னும் யக்ஷனும் வசிப்பார்கள். ஆவணி மாதத்தில் இந்திரன் என்ற சூரியனும், விசுவாவசு என்ற கந்தர்வனும், சுரோதா என்ற யக்ஷனும், ஏலாபுத்திரன் என்ற சர்ப்பமும், அங்கிரசு என்ற ரிஷியும், பிரமலோசை என்ற அப்சரஸும், சர்ப்பி என்ற ராக்ஷசனும் இருப்பார்கள்.

புரட்டாசியில், விவசுவான் என்ற சூரியனும், பிருகு என்ற முனிவரும், அனுமலோசா என்ற அப்சரசும், சங்கபாலன் என்ற சர்ப்பமும், வியாக்கிரன் என்ற யக்ஷனும் இருப்பார்கள். ஐப்பசியில் பூஷா என்ற சூரியனும் வசுருசி என்ற கந்தர்வனும், வாதன் என்ற ராட்சசனும், தனஞ்செயன் என்ற சர்ப்பமும், கவுதமர் என்ற முனிவரும், கிருதாசி என்ற அப்சரசும், சுஷேணன் என்ற யக்ஷனும் இருப்பார்கள். கார்த்திகையில் பர்ச்சனியன் என்ற சூரியனும்; விசுவாவசு என்ற கந்தர்வனும், பரத்துவாஜர் என்ற முனிவரும், ஐராவதம் என்ற சர்ப்பமும், விசுவாசி என்ற அப்சரஸும், சேனஜித்து என்ற யக்ஷனும், ஆப என்ற ராக்ஷசனும் வசிப்பார்கள். மார்கழியில் அம்சன் என்ற சூரியனும், காசியபர் என்ற முனிவரும், தார்க்ஷயன் என்ற யக்ஷனும், மகாபத்மன் என்ற சர்ப்பமும், வித்தியுத்து என்ற ராக்ஷசனும், சித்திரசேனன் என்ற கந்தர்வனும், ஊர்வசி என்ற தேவமங்கையும் இருப்பார்கள். தை மாதத்தில் பகன் என்ற சூரியனும், கிருது என்ற முனிவனும், ஊர்ணாயு என்னும் கந்தர்வனும், ஸ்பூர்ஜன் என்ற அரக்கனும், கார்க்கோடகன் என்ற சர்ப்பமும், அரிஷ்டநேமி என்ற யக்ஷனும், பூர்வசித்தி என்ற தேவமங்கையும் வசிப்பார்கள். மாசிமாதத்தில் துவஷ்டா என்ற சூரியனும், ஜமதக்னி என்ற முனிவனும், திலோத்தமை என்ற தேவதாசியும், கம்பளன் என்ற சர்ப்பமும், பிரம்மா பேதன் என்ற அரக்கனும், இருதசித்து என்ற யக்ஷனும், திருதராஷ்டிரன் என்ற கந்தர்வனும் வசிப்பார்கள். பங்குனியில் விஷ்ணு என்ற சூரியனும், விசுவாமித்திரர் என்ற முனிவரும், ரம்பை என்ற தேவமங்கையும் சூரியவர்ச்சசு என்ற கந்தர்வனும், சத்தியசித்து என்னும் யக்ஷனும், அசுவதரன் என்ற சர்ப்பமும், யக்ஞாபேதன் என்ற அரக்கனும் வாசஞ்செய்வார்கள். மைத்ரேயரே! இவ்விதமாக ஒவ்வொரு மாதமும் இவர்கள் அனைவரும் ஸ்ரீவிஷ்ணு சக்தியினால் வியாபிக்கப்பட்டு உலகத்தை ஒளிபெறச் செய்வதற்காக சூரிய ரதத்தில் இருப்பார்கள்; இனி இவர்களுடைய செயல்களைக் கேளுங்கள். சூரியமண்டலத்தில் பிரகாசிக்கும் சூரியனுக்குத் தேஜஸ் விருத்தியாகும்படி ரிஷிகள் துதிக்கிறார்கள். கந்தர்வர்கள் கானமிசைக்கிறார்கள். தேவமங்கையர் நடனமாடுகிறார்கள். அரக்கர்கள் சூரியனுக்குப் பின் செல்கிறார்கள். சர்ப்பங்கள் சுமக்கின்றன. இயக்கர் கடிவாள முதலானவற்றைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார்கள். இவர்களைத் தவிர வாலகிலியர்கள் என்ற முனிவர்கள் எப்போதும் சூரியனைச் சூழ்ந்து உபாசனை செய்து கொண்டு இருக்கிறார்கள். இவ்விதமாகச் சூரியமண்டலத்தில் வாசஞ்செய்கிற ஏழு கணங்களும் அந்தந்தச் சமயங்களிலே பனி வெப்பம் தண்ணீர் ஆகியவற்றைப் பொழிவதற்குக் காரணமாக இருக்கின்றன.

——————–

11. சூரியனின் சிறப்பு செயல்கள்

பராசர முனிவரே! சூரிய மண்டலத்தில் பனி, வெப்பம், மழை இவற்றிற்குக் காரணமாக ஏழு கணங்கள் இருக்கின்றன என்றும் கந்தர்வர் யக்ஷர் ராக்ஷசர் முனிவர் வாலகிலியர் அப்சரசுகர் நாகர் ஆகியோரது தொழில்கள் இன்னதின்னது என்றும் கூறியருளினீர்கள்! ஆயினும் சூரியனுடைய தொழில் இன்னது என்பதைச் சொல்லவில்லையே! கணங்களே பனி, வெப்பம், தண்ணீர் ஆகியவற்றைப் பொழியுமானால் சூரியனுடைய தொழில்தான் என்ன? சூரியனால் மழை உண்டாகிறது என்று நீங்கள் முன்பு சொன்னீர்கள். அன்றியும் சூரியன் உதயமாகி உச்சியில் வந்து அஸ்தமனமாகிறான் என்று ஜனங்கள் சொல்கிறார்கள். இத்தகைய செயல்கள் இந்த ஏழு கணங்களுக்கும் பொதுவாக இருக்குமானால், சூரியனுக்குச் சிறப்பு யாது? அதைச்சொல்ல வேண்டும் என்று மைத்ரேயர் கேட்டார். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! ரிக்கு, யஜுர், சாமம் என்ற மூன்று வேதவடிவாகிய ஸ்ரீவிஷ்ணு சக்தியே சூரிய ரூபமாகப் பிரகாசித்துக் கொண்டு, காய்வதுமல்லாமல், உலகத்தின் பாபத்தையும் போக்கிக் கொண்டு இருப்பதனாலே, அந்த மண்டலத்தில் வாசஞ்செய்கிற ஆதித்தன் முதலிய கணங்கள் ஏழிலும் அந்த ஆதித்தனே முக்கியமானவன். அந்தந்த மாதத்தில் வருகிற சூரியனிடத்தில் மூன்று வேதமயமான ஸ்ரீவிஷ்ணு சக்தியானது பிரவேசம் செய்து விளங்குகிறது. விடியற்காலத்தில் இரிக்குகளும், மத்தியான காலத்தில் யஜுசுகளும், சாயங்காலத்தில் சாமங்களும், சூரிய சரீரகனாய் சூரியனுக்குள்ளே விளங்குகின்ற ஸ்ரீவிஷ்ணுவைத் துதிக்கின்றன. இந்த ரிக்கு முதலிய மூன்று வேதங்களும் ஸ்ரீவிஷ்ணுவுக்குச் சரீரமாக இருக்கின்றன. ஸ்ரீவிஷ்ணு சக்தியானது சூரியனுக்குள்ளே மட்டுமின்றி பிரமாதிகளுக்குள்ளும் பிரவேசித்து அந்தந்தக் காரியங்களை நடத்துகிறது. படைப்பின் துவக்கத்தில் ரிக்கு வேதமயமான பிரம்மாவாகவும், ஸ்திதியிலே, யஜுர் வேதமயமான ஸ்ரீவிஷ்ணுவாகவும் முடிவில் சாமவேதமயமான ருத்திரனாகவும், ஸ்ரீமந்நாராயணனுடைய சக்தியானது பிரகாசிக்கின்றது. ஆகையால் ருத்திர சம்பந்தமான சாமத்துவனியானது அசுத்தமென்று எண்ணப்படுகிறது. இவ்வாறு வேதத்திரய ரூபமான ஸ்ரீவிஷ்ணுவினுடைய சுத்த சாத்வீக சக்தியானது, தனது சரீரமாக இருக்கும் ஏழு கணங்களுக்குள்ளே சூரியனிடத்திலே சிறப்பாகப் பிரவேசித்திருப்பதால் சூரியனே சிறப்பாகப் பிரகாசித்துக் கொண்டு உலகத்தில் உண்டான அந்தகாரங்களையெல்லாம் நாசம் செய்கிறான்.

இவ்விதமாக வேதமயமான ஸ்ரீவிஷ்ணுசக்தியின் அணுப்பிரவேசாதி அதிசயத்தினால் சூரியன் பிரதானமானதைப் பற்றியே அந்த சூரியனை முனிவர்கள் துதித்துக் கொண்டும் கந்தர்வர்கள் பாடிக்கொண்டும் அரம்பையர்கள் ஆட்டத்தினால் மகிழ்வித்துக் கொண்டும் இராக்கதர் பின் தொடர்ந்து கொண்டும், நாகர்கள் சுமந்து கொண்டும், வாலகிலியர்கள் உபாசித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அந்த மண்டலத்திலே சக்தி ரூபத்தைத் தரித்துக் கொண்டுள்ள ஸ்ரீவிஷ்ணுபகவான் சப்தகணங்களைப் போலத் தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை. அந்தச் சப்தகணமும் ஸ்ரீவிஷ்ணுவைவிட வேறுபட்டவைகளே அணுப்பிரவேசம் எப்படியெனில் ஒரு ஸ்தம்பத்தில் இருக்கிற கண்ணாடிக்கு அருகில் எவனெவன் வருகிறானோ, அவனெல்லாம் தனது சாயலை அந்தக் கண்ணாடியில் காணும்படி அதன் காந்தியை அடைவதைப் போல் அந்த மண்டலத்திலே நிலைத்திருக்கிற ஸ்ரீவிஷ்ணுசக்தியை அங்கே மாதந்தோறும் வருகிற சூரியனும் அடைகிறான். அத்தகைய சூரியன் பிதுர்க்கள் தேவதைகள் மானிடர் முதலியோரைத் திருப்தியடையச் செய்வது எப்படியெனில் சூரியகிரண பிரபாவத்தினாலே நிறைக்கப்பட்டு அமிர்தமயமாக இருக்கும் சந்திரனைக் கிருஷ்ண பக்ஷத்திலே அக்னி முதலிய தேவதைகள் பானஞ்செய்து மிகுந்துள்ள இரண்டு கலைகளுள் ஒன்றை அமாவாசையில் பிதுருக்கள் பானஞ்செய்கிறார்கள். இதுதான் அவர்கள் திருப்தியடையும் விதமாகும். பூமியிலிருந்து தனது கிரணங்களினால் இழுக்கப்படும் ரசத்தை மறுபடியும் மழையாகப் பொழிந்து பயிர்களை விருத்தி செய்து மனுஷ்யாதிகளை சூரியன் திருப்தி செய்கிறான் என்பதை முன்னமே சொன்னேன். இவ்விதமாக சூரியபகவான் தேவர்களுக்கு பக்ஷத்திருப்தியும் பிதுர்களுக்கு மாசத் திருப்தியும் மனுஷ்யாதிகளுக்குத் தினத்திருப்தியும் செய்து வருகிறான்.

——————-

12. சந்திர மண்டலம்

மைத்ரேயரே! சந்திரனுடைய தேரானது மூன்று சக்கரங்களைக் கொண்டது. முல்லைப்பூ வர்ணமுடைய பத்துக்குதிரைகள் இடப்பக்க, வலப்பக்கங்களில் கட்டப்பட்டது. துருவனை ஆதாரமாகக் கொண்டு வேகமாகச் செல்லக்கூடியது. அந்த தேரினால் சந்திரன் நாகவீதி முதலிய வீதிகள் அமைந்துள்ள நட்சத்திரங்களிலே சஞ்சரிக்க வருகிறான். சூரிய கிரணங்களுக்கு எப்படியோ அப்படியே சந்திரனுக்கும், உதயாதி காலங்களிலே குறைவும் வளர்ச்சியும் உண்டு. சூரிய ரதத்திலுள்ள குதிரைகளைப் போல ஜலத்திற் பிறந்த சந்திர ரதத்தின் அசுவங்களும், கல்பத்தின் ஆரம்பத்தில் ஒரே முறை ரதத்தில் கட்டப்பட்டு, அதன் முடிவு வரை இருப்பன. தேவதைகளாலே பானஞ்செய்யப்பட்டு, அதன் ஒரு கலையோடு மிகுந்துள்ள அந்தச் சந்திரனைச் சூரியன் ஒரு கிரணத்தால் முன்பு தேவர்கள் பானஞ்செய்ததைப் போல; ஒவ்வொரு நாளைக்கு ஒரு கலையாக வளர்த்து நிறைக்கின்றான். இவ்விதம் அறை மாதத்தில் சந்திரனிடம் நிறைக்கப்படுகின்ற அமிர்தத்தை முப்பத்து மூவாயிரத்து முந்நூற்று முப்பத்தி மூன்று அமுதபானர்களாகிய தேவதைகள் பானம் செய்கின்றனர். இவ்விதம் தேவர்களால் பானஞ்செய்யப்பட்டு, இரண்டு கலைகள் மிகுந்தவனாய்ச் சந்திரன் சூரிய கிரணங்களில் மறைவதால், சூரிய மண்டலத்தில் பிரவேசித்தவன் போலாகி அமை என்ற கிரணத்தில் வாசஞ்செய்கிறான். அதனால் அந்த நாள் அமாவாசை என்று வழங்கப்படுகிறது. அந்த நாள் இரவு பகல்களில் சந்திரன் முந்தித் தண்ணீரிலும் பிந்திக்கொடி முதலியவைகளிலும் இருந்து, பிறகு சூரியனை அடைகிறான். ஆகையால் அந்த நாளில் எவனாகிலும் செடி கொடி முதலியவற்றைச் சேதித்தாலும் இலையை உதிர்த்தாலும் பிரம்மஹத்தி செய்த பாவத்தை அடைவான். கலாரூபமான பதினைந்தாவது பங்கினாலே, சந்திரன் சிறிது மிகுந்திருக்கிற அமாவாசையின் அபராண்ணத்திலே குறைந்துள்ள சந்திரனைப் பிதுர்க்கள் அமிர்த பானத்துக்காக உபாசித்து, அமிர்தமயமான அந்தப் பதினைந்தாம் கலையைப் பானஞ்செய்கிறார்கள். சவுமியர் என்றும், பர்ஹிஷதர் என்றும், அக்னிஷ்வாத்தர் என்றும் மூன்று பிரிவினராக இருக்கிறார்கள். அந்தப் பிதுர்க்கள் அமாவாசையில் சந்திர கிரணத்தினின்று ஒழுகும் அமிர்தத்தையுண்டு மேன்மையான மாசத் திருப்தி அடைகிறார்கள். இவ்விதமாகச் சந்திரன் அமிர்தமயமாயும், குளிர்ச்சியுள்ளவையுமான, ஜல பரமாணுக்களாலே சுக்கிலபக்ஷத்தில் தேவதைகளையும், கிருஷ்ண பக்ஷத்தில் பிதுர்க்களையும் திருப்தி செய்து புல் பூண்டு செடி கொடிகளை உண்டாக்குவதாலும், நிலவால் மகிழ்ச்சியூட்டுவதாலும் மனுஷ்ய மிருக பக்ஷிசாதிகளைத் திருப்தி செய்கிறான்.

இந்தச் சந்திரனது மகனான புதனுடைய தேரானது, வாயு, அக்கினி இவற்றினால் தோன்றியதாய், பூமியிற் பிறந்த பொன் நிறமான எட்டுக் குதிரைகளுடன் கூடியதாய், வரூதம் என்ற முன்தாங்கும் உறுப்பும், அனுகர்ஷம் என்ற அடிப்பகுதியைத் தாங்கும் உறுப்பும், பதாகை முதலிய அவயவமும் கொண்டதாகும். சுக்கிரனுடைய ரதமும் இத்தகைய அவயவ அலங்காரங்களைக் கொண்டதாய் எட்டுக்குதிரைகளைக் கட்டியதாய் மிகப்பெரியதாய், பொன்மயமானதாய் விளங்கும் அங்காரகனுடைய இரதமும் பெரியது. அது அக்கினியிற் பிறந்து பத்மராகம் போலச் சிவந்த எட்டு குதிரைகள் பிணைக்கப்பட்டது. பிரகஸ்பதியின் தேரும் எட்டுக் குதிரைகள் பூட்டியதாகும். அந்தத் தேரிலே ஏறிய குருபகவான், ஒவ்வொரு வருஷம் இருக்கிறார். சனியானவன் ஆகாயத்தில் பிறந்த சித்திர வர்ணமான ரதத்தில் ஏறி, மெல்லச் சஞ்சரிக்கின்றான். ராகுவின் தேரானது சிறிது வெண்ணிறமுடையதாய், வண்டின் நிறமுடைய எட்டுக்குதிரைகள் பூட்டியதாய் அமைந்துள்ளது. இத்தகைய ரதத்தில் ஏறிய ராகுவானவன் சூரியனுக்கு மேலே அந்தகாரமயமான மூன்றாவது ஸ்தானத்தில் சஞ்சரித்துக் கொண்டு, பருவகாலங்களில் அங்கிருந்து திரும்பி பூமி முதலியவற்றின் சாயைகளிலே புகுந்து சூரிய சந்திரர்களை மறைத்து கிரகணங்களை ஏற்படுத்துகிறான். அதுபோலவே கேதுவின் ரதத்தில் புகை வர்ணமுடைய எட்டுக்குதிரைகள் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கேதுவும் ராகுவைப் போலக் கிரகணங்களை உண்டாக்குவான். இவ்விதமாக சூரியன் முதலிய நவகிரகங்களின் ரதங்கள் அமைந்திருக்கும் இந்தக் கிரக நட்சத்திர மண்டலங்கள் யாவுமே, வாயுரூபமான கயிறுகளால் துருவனோடு இணைக்கப்பட்டு தத்தமது சாரத்தில் சுழல்கின்றன. ஆகாயத்தில் உண்டான மண்டலங்கள் அனைத்தும், அத்தனைக் காற்றுக் கயிறுகளினாலே கட்டப்பட்டு, செக்கை இழுக்கும் எருதுகள் தாமாகச் சுற்றுவ÷õடு செக்கையும் சுற்றுவிப்பதுபோல், தாமும் சுற்றிக்கொண்டு தங்களுக்கு ஆதாரமான துருவனையும் சுற்றுவிக்கின்றன. மேலும் இந்தக் கிரகங்கள் யாவும் காற்றின் வடிவான சக்கரத்தினால் தினந்தோறும் ஏவப்பட்டு, கொள்ளிக்கட்டை சுழல்வது சக்கரம் சுழல்வதாகக் காணப்படுவதைப் போல், சுழல்கின்றன. ஆகையால் இந்தக் காற்றுக்குப் பிரவகம் என்ற பெயர் உண்டாயிற்று. இது நிற்க; முன்பு நான் சிம்சுமாரா திருதியான துருவாதார ரூபம் என்று சொன்னேன் அல்லவா? அதையுங் கூறுகிறேன், கேளுங்கள்.

அந்த ஸ்வரூபத்தைக் காண்பவன் அன்றையப் பகலில் செய்த பாவத்திலிருந்து விடுபடுவதுமன்றி, அந்தச் சிம்சுமார சக்கரத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளனவோ, அத்தனை ஆண்டுகள் சுகமாக ஜீவித்திருப்பான். நட்சத்திர ரூபிகளான சில தேவதைகள் அதன் அவயவமாய் இருப்பார்கள். அந்தச் சிம்சுமாரத்துக்கு உத்தானபாதன் மேல் வாயிலிலும், யக்ஞன் கீழ்வாயிலிலும், தருமன் சிரத்திலும், நாராயணன் இதயத்திலும், அசுவினி தேவதைகள் கால்களிலும், வருணனும் அயர்மாவும் பின் தொடைகளிலும், சம்வச்சரம் குறியிலும், மித்திரன் அபானத்திலும், அக்கினியும் மகேந்திரனும் காசிபனும் துருவனும் முறையே வாலிலும் உள்ளனர். இந்த அக்கினி முதலிய நான்கு நட்சத்திரங்களும் மற்ற அவயவங்களிலுள்ள நட்சத்திரங்களைப் போல் அஸ்தமனமாகாமல் எப்போதும் காணப்படுவன. மைத்ரேயரே! நீங்கள் கேட்டது போல, பூமியின் இருப்பையும், அதில் மலைகள், கடல்கள், தேசங்கள் ஆகியவற்றின் அமைப்பையும், ஆகாயத்திலுள்ள கிரக நட்சத்திரங்களின் இருப்பையும் கூடியவரையில் சொன்னேன். மேலும் அதன் சுருக்கத்தைச் சொல்கிறேன், கேட்பீராக. ஸ்ரீவிஷ்ணுவின் சரீரமான ஜலம் யாதுண்டோ, அதிலிருந்து தாமரைப் பூவைப் போன்ற பூமியானது பருவதசமுத்திரங்களுடன் உண்டாயிற்று. ஆகையால் இந்தப் பூமியும் அவருடைய சரீரமேயாகும்! இதுமட்டுமல்ல சூரியாதி ஜோதிகளும் பூமி முதலிய உலகங்களும், வனங்களும், மலைகளும், திசைகளும், நதிகளும், ஆழக்கடல்களும் என்றும் இருக்கின்றதென்று சொல்லத்தக்க சித்தும் மாறுவதனாலே இல்லையென்று சொல்லத்தக்க அசித்தும் யாவுமே அந்த ஸ்ரீவிஷ்ணுவின் சரீரங்களாக இருக்கின்றன. ஞானமே வடிவான, சகல ஜீவன்களையும் சரீரமாகக் கொண்டுள்ள அந்த ஸ்ரீபகவானுக்கும் ஞானமே சுத்தஸ்வரூபமேயல்லது தேவமனுஷ்யாதிரூபமன்று. ஆகையால் பர்வதசமுத்திர பூமியாதி ரூபபேதங்கள் எல்லாம் ஜீவன்களுடைய கர்ம வசத்திலுண்டான ஞானபேதத்தைப் பற்றியவைகளாகும். எப்போது இப்படிப்பட்ட ஞானமயமான தனது சொரூபம் சுத்தமானதாகத் தோன்றும், சகலமும் கர்மமூலமான நினைப்பின் பேதத்தினாலே வெவ்வேறு விதமாகத் தோன்றுவதாகுமேயன்றி, இயல்பாகவே அவ்வவ் வஸ்துக்களில் அந்தந்த பேதங்கள் இருக்கமாட்டாது ஞானமயமான பொருளே நிலையானதாகையால் அஸ்தி (இருக்கிறது) என்று உள்பொருளாய்க் கூறப்படும். ஞானம் இல்லாத ஜடம் யாவும் மாறிப் போவனவாகையால் நாஸ்தி (இல்லை) என்று இல்பொருளாய்ச் சொல்லப்படும். ஏனெனில் ஆன்மஸ்வரூபத்தைக் காட்டிலும் ஆதியும், மத்தியமும் முடிவும் இல்லாததும் எப்போதும் மாறாமல் ஒரே ரூபத்தையுடையதுமான பொருள் எங்கே இருக்கிறது? எது அடிக்கடி வேறுபாட்டை அடைகிறதோ அதில் உண்மை எங்கே இருக்கிறது? இவற்றை உதாரணப்படுத்திக் காட்டுகிறேன்.

முதலில் பிருத்வியானது மண் உருண்டையாகி, பிறகு குடமாகி, அது உடையக் கபாலமாகி, அந்தக் கபாலம் துண்டு துண்டாகிச் சூரணமாகி, அப்புறம் துகளாகி அதற்குப் பிறகு அணுவாக மாறுகின்றது. இவையெல்லாம் ஆத்ம ஸ்வரூப யதார்த்தம் தெரியாமல் தேவமனுஷ்யாதி ரூபமாக நிச்சயித்துக் கொண்டவர்களுக்குத் தங்களால் அனுபவிக்கப்படுகின்ற வெவ்வேறு பொருளாகக் காணப்படுகின்றன அல்லவா? இவற்றில் எதை வஸ்துவென்று சொல்லலாம். ஞானகாரமான ஆன்ம வஸ்துவைத் தவிர வேறு எதுவுமே இருக்கிறது என்று சொல்லத்தக்க வஸ்துவல்ல. அந்த ஞானகாரமோ அவரவருடைய கர்ம பேதத்தினால் மாறுபட்ட சித்தமுடைய ஜனங்களுக்கு தேவாதி சரீரப் பிரவேசத்தால் அந்தந்த ரூபமாகத் தோற்றமளிக்கிறது. ஆன்ம ஸ்வரூபமானது இயல்பில் கர்மமில்லாததும், அதனால் வருகின்ற பிரகிருதி சம்பந்தமான மலமில்லாததும், அதனால் உண்டாகத்தக்கதான சோஹ மோஹலோ பாதி தோஷ சம்பந்தம் இல்லாதுடம் தேய்வு வளர்ச்சி முதலியன இல்லாமையால் ஒரே ரூபமானதுமாய் இருக்கிறது. இத்தகைய ஞானரூபமான ஆத்ம ஸ்வரூபமே ஸ்ரீவாசுதேவனுடைய சரீரம்! ஆகையால் அது தன்மயமாக இருக்கின்றது. அந்த ஸ்ரீவாசுதேவராத்மகம் ஆகாத பொருள் ஒன்றுமில்லை. மைத்ரேயரே! இந்தவிதமாக ஞானஸ்வரூபம் ஒன்றே நித்தியமாக இருக்கிறது. ஆகையால் சத்திய பதார்த்தம் என்றும் மற்றது மாறி மாறி அழிவதனாலே அசத்தியம் என்றும் உண்மையை உமக்குச் சொன்னேன். சொல்லாமல் மட்டுமே இருக்கிறது என்று சொல்லத்தக்க நானாவித ஸ்வரூபமுடைய வஸ்துக்கள் யாவும் கர்மாதீனமாகவே இருக்கின்றன. அந்தக் கர்ம ஸ்வரூபம் யக்ஞம் என்றும் பசு என்றும், இரித்விக்குள் என்றும் அக்கினி என்றும், சோமம் என்றும், அரை என்றும் சொர்க்காபேஷை என்றும்! இப்படிப் பலவகையில் கர்ம மார்க்கத்தில் காணப்பட்டவைகளாகும். இவைகளுக்குப் பயன் புவர்லோகம் முதலிய உலகங்களேயாகும். நான் உம்மிடம் சொல்லி விளக்கிய லோகச்சிறப்புகள் எத்தனையுண்டோ அத்தனையிலும் கர்ம வசியனாக இருக்கும். புருஷன் மாறி மாறிப் போய் வந்து கொண்டிருக்கிறான். ஆகையால் இந்தக்கர்ம மார்க்கப்பயன்களிலே ருசி வைக்காமல் எல்லாம் அஞ்ஞானத்தால் தோன்றுவனவென்றும், ஞானம் ஒன்றே நித்திய சுத்த நிர்மல ரூபமானது என்றும் அறிந்து, ஸ்ரீவாசுதேவ பகவானை அடைவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும்.

———————

13. ஜடபரதர் உபாக்கியானம்

பராசர மகரிஷியே! நான் கேட்டவண்ணம் பூமி, கடல், நதிகள், கிரகங்கள் முதலியவற்றின் ஸ்வரூபங்களையும் மூன்று உலகமும் ஸ்ரீவிஷ்ணுவையே ஆதாரமாகக் கொண்டு நிலைபெற்றிருப்பதையும் ஞானஸ்வரூபமே முக்கியமானது என்பதையும் நீங்கள் எனக்கு விளக்கியருளினீர்கள்! பரத மாமன்னனது சரிதத்தை பின்னர் அறிவிப்பதாகச் சொன்னீர்கள். அதன்படி இப்போது அதைக் கூறியருளல் வேண்டும். யோகத்துடன் கூடி ஸ்ரீவாசுதேவனிடத்தில் இதயத்தை நிலைநிறுத்தித் தியானஞ்செய்து கொண்டு சாளக்கிராம ÷க்ஷத்திரத்தில் வசித்த அந்தப் பரதமகாராஜனுக்கு, ஸ்ரீஹரித்தியான பிரபாவத்தாலும், ÷க்ஷத்திர மகிமையினாலும் மோட்சமுண்டாகாமல், மறுபடி பிராமண ஜன்மம் எப்படி ஏற்பட்டது? அவர் அந்தப் பிராமணப் பிறவியில் என்ன செய்தார்? அந்த விஷயங்களை நீங்கள் எனக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்றார் மைத்ரேயர். உடனே பராசரர் கூறலானார். மைத்ரேயரே! அந்தப் பரத மகாராசன் எம்பெருமானது திருவடிகளையே தியானஞ் செய்துகொண்டு சாளக்கிராமத்திலேயே பலகாலம் வசித்து வந்தார். அவர் மகா குணவான்; மிகவும் உத்தமர், அவர் சொப்பனம் மத்தியம் உள்பட சகல அவஸ்தைகளிலும் யக்ஞேச, அச்சுத கோவிந்த, மாதவ, அநந்த, கேசவ, விஷ்ணோ ஹ்ருஷிகேசா வாசுதேவா, உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்பதை உச்சரித்துக் கொண்டிருந்தாரேயல்லாது வேறொன்றையும் உச்சரிக்கவில்லை. வைதிக கிரியைகளை நடத்துவதற்காக சமித்து, புஷ்பம் தருப்பை முதலியவற்றைச் சேகரிப்பது போன்ற செயல்களைத் தவிர வேறெதையுஞ் செய்ததில்லை. இவ்விதமாகப் பரதர் பற்றில்லாமல் யோக தவம் செய்து வரும் போது, ஒருநாள் மகாநதியில் நீராடிச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து கொண்டிருக்கும்போது, அங்கே கருவுயிர்க்கும் தருணமுடைய மான் ஒன்று, தன்னந்தனியாகத் தண்ணீர் குடிக்க வந்தது. அது நீர் அருந்திக் கொண்டிருக்கும்போது, அதிபயங்கரமான சிங்கத்தின் கர்ஜனைக்குரல் கேட்டது. அந்தக் கர்ஜனையைக் கேட்ட மான் மிகவும் பயந்து திகைத்துப் பரபரப்புடன்; நதியின் உயர்ந்த கரை மீது ஏறிச் சென்றது. அப்போது அதன் கர்ப்பமானது கீழேயிருந்த நதி நீரில் விழுந்து அலைகளிலே மிதந்தது. பரதர் அந்தமான் குட்டியைக் கண்டு இரக்கங்கொண்டு, அதைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். இது இப்படியிருக்க அந்தமான், கருப்பம் விழுந்த அதிர்ச்சியினாலும் மிக உயரத்தில் ஏறிய வருத்தத்தாலும் கீழே விழுந்து இறந்தது. தாய்மாமன் இறந்ததும் அதன் சின்னஞ்சிறு மான்குட்டி அந்தரமாக இருப்பதையுங்கண்ட பரதயோகி மிகவும் இரக்கங்கொண்டு, அந்தக் குட்டியை எடுத்துக் கொண்டு தமது ஆசிரமம் சேர்ந்தார்.

பிறகு, அவர் மான் குட்டியை வெகு அன்புடனே வளர்த்து வந்தார். ஆசிரமத்தின் அருகாமையில் இருந்த இளம்புற்களை மேய்ந்து கொண்டும், புலியைக் கண்டால் பயந்து ஆசிரமத்துக்கு ஓடி வந்து ஒளிந்து கொண்டும் காலையில் புறப்பட்டு மேய்ந்து விட்டு, மாலையில் ஆசிரமத்திற்குத் திரும்பிவந்து தங்கிக்கொண்டும் இருந்தது. இவ்விதமாக அந்த மான் ஓடி விளையாடுவதைக் கண்ட பரதரின் மனம், அதனிடத்தில் பற்றும் பாசமும் கொள்ளலாயிற்று. ராஜ்யம், மக்கள் முதலிய பந்தபாசங்களை விட்டு, யோக நிஷ்டையிலிருந்த அந்த முனிவர் மான் மீது மிகவும் அபிமானம் கொண்டிருந்தார். அதைச் சிறிது நேரம் காணவிட்டாலுங்கூட, ஐயோ நம்முடைய மான்குட்டியைக் காணவில்லையே? அதைச் செந்நாய் தின்றதோ, புலியறைந்ததோ, இன்னமும் வரவில்லையே? என்ன செய்வேன்? என்று வருந்துவார் அந்த மான் விளையாடிய இடங்களில் அதன் சிறு குளம்புகளில் பெயர்க்கப்பட்ட மேடு பள்ளமான இடத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவேன்? அப்படிப்பட்ட என்னுடைய மான் குட்டி எங்கே போயிற்றே தெரியவில்லையே! அது என்னருகே வந்து, தனது கொம்பினால் என்னுடம்பை உரசி, சுகம் உண்டாக்குமோ? அது ÷க்ஷமமாய் இங்கே திரும்பி வந்து சேர்ந்து சுகத்தை உண்டாக்குமோ இங்கு வராமல் துன்பத்தை உண்டாக்குமோ? என்ன செய்வேன்? இப்போதுதான் முளைத்த தனது சிறுபற்களால் கடித்த தருப்பைப் புற்களும் நாணல்களும் சாமவேதிகளான பிரமச்சாரிகளைப் போல் மொட்டையாகத் தோன்றுகின்றனவே? இவ்வாறு அது மறுபடியும் வந்து மேயக் காண்பேனோ? என்று பரத மகரிஷி வருந்துவதும், அது வந்ததும் பெருமகிழ்ச்சியடைவதுமாக இருந்தார். இவ்வாறு அந்த மான் குட்டியின் மீது அன்பு பாராட்டி வந்ததால், ராஜ்ய போகாதிகளைத் துறந்த அவருக்கும் சமாதி நிஷ்டை கலைந்தது. இந்நிலையில் அவருக்கு மரண காலமும் நெருங்கியது. அப்போது, தந்தையை அவனது அன்பு மகன் நோக்குவதைப் போல, அந்த மான்குட்டியானது கண்ணில் கண்ணீர் ததும்ப நோக்கிக் கொண்டிருந்தது. அதுபோலவே, பிரியமான மகனைத் தந்தை பார்ப்பது போல பரதரும் கண்ணீர் ததும்ப மான்குட்டியைப் பார்த்துக் கொண்டே பிராணனை விட்டார். அதனால் மறுபிறவியில் அவர், கங்கைக் கரையில் ஒரு மானாகப் பிறந்தார். ஆயினும் தனது யோகச் சிறப்பினால் பூர்வ ஜன்ம ஞானமுடையவராக இருந்தார். அதனால் வெறுப்புற்றுத் தன் தாயைப் பிரிந்து முன்பிருந்த சாலக்கிராம ÷க்ஷத்திரத்தை அடைந்து, அங்குள்ள உலர்ந்த புற்களையும், சருகுகளையும் தின்று, மானாகப் பிறக்க ஹேதுவான கர்மங்களைக் கழித்து, அங்கேயே மரணமடைந்தார். பிறகு, அந்த ஊரிலேயே, நல்ல ஒழுக்கமும் யோக நிஷ்டையும் மிகுந்த உத்தமமான பிராமணர் குலத்திலே பூர்வ ஜன்ம ஸ்மரணையோடு பிறந்தார். பூர்வஞானம் தோன்றியதால், முன்பு போலவே சகல சாஸ்திரங்களின் உண்மையை உணர்ந்தவராய் எல்லாவிதமான ஞானத்திலும் தேர்ச்சி பெற்றவராய், ஆத்ம சொரூபத்தைப் பிரகிருதிக்கு வேறாகவும், தேவாதி சகல சரீரங்களிலும் உள்ள ஆத்ம ஸ்வரூபம் யாவும் தம்மைவிடப் பேதமில்லாமல், விலக்ஷணமான ஞானகாரமுள்ளவையாகப் பாவித்து வந்தார்.

வேத சாஸ்திரங்களைக் கற்றுத்தேர்ந்தார். அவர் ஆத்மஞானியாக இருந்ததால் எந்தவொரு கர்மத்தையும் செய்யவில்லை, மேலும், அழுக்கு நிறைந்த உடம்போடும், அழுக்கேறிய கந்தை ஆடைகளோடும், ஊத்தைப் பல்லோடும், கண்டோர் அருவருத்து, அவமதிக்கும்படி நடந்து வந்தார். உலகோர் செய்யும் வெகு மதிப்பானது, யாக சம்பத்துக்கு மிகுந்த கேட்டை விளைவிக்கும். அவமதிப்போ, கர்வ அகங்காரங்களைப் போக்குவதால் யோக சித்தியைத் தருவதாகும். ஆகையால் யோகியானவன், யாவரும் தன்னிடம் சேராமல், தன்னை அவமானம் செய்யும்படி ஜடனைப் போலக் காட்டிப் பெரியோருடைய ஒழுக்கத்திற்குப் பழுதுவராமல் காத்து நடக்கவேண்டும்! என்று இரணிய கர்ப்பவாக்கியங்களை நினைத்து அந்தப் பிராமணர் வித்துவானாக இருந்தும் மூடனைப் போலவும் பித்தனைப் போலவும் திரிந்து கொண்டிருந்தார். இவ்விதமாக அவர் இருந்ததால், அவருக்கு ஜடபரதர் என்ற பெயர் வழங்கலாயிற்று. புழுத்துக் கெட்டுப்போன உழுந்து, யவதானியம் முதலியவற்றால் செய்த அப்பங்களையோ, கீரையையோ காட்டுக் கிழங்குகளையோ ஏதாவது ஒன்றை அவர் தின்று பிராணதரணை செய்து வந்தார். இந்நிலையில் அவரது தந்தை இறந்தார். அவருடைய தம்பியரும், அண்ணன்மார்களும் மற்றுமுள்ள பந்துக்களும், அற்ப ஆகாரம் கொடுத்து, அவரைக் கொண்டு கழனி வேலையைச் செய்வித்து வந்தார்கள். அவர் அந்த வேலையைக் கூடத் திருத்தமாக செய்யாமல் மூடனைப் போலச் செய்துவந்தார். அவர், இதுபோன்று அற்ப ஆகாரத்தைப் புசித்து வந்தாலும் அவர் உடல் நன்றாகப் பருத்தும் கண்கள் இரண்டும் வித்தியாசமில்லாமல் சமமாக விளங்கவே தோற்றத்தில் மாற்றமின்றி இருந்துவந்தார். அவரது உறவினரும் ஊராரும் கூலி கொடுக்காமல், சிறிது ஆகாரத்தை அவருக்குக் கொடுத்து வேலை வாங்கி வந்தார்கள். அவர்கள் எந்த வேலையைச் செய்யச் சொன்னாலும் ஜடபரதர் அந்த வேலையைத் தடையின்றிச் செய்தார். முன்பு சொன்னதுபோல், அழுக்குத் தீர்ப்பது போன்ற செய்கைகள் ஒன்றுமில்லாமல், சிகை, யக்ஞோபவீதம் முதலிய பிராமணக் குறிகளும், நீராடல் சந்தியாவந்தனம் செய்தல் முதலிய பிராமணச் செயல்கள் மட்டுமே உடையவராய், பித்தனைப் போலவே ஜடபரதர் திரிந்துவந்தார். இந்நிலையில், சவ்வீர ராஜனுடைய சாரதியானவன் அவரைக் காளிக்கு நரபலியிட நிச்சயித்து, இரவில் அவரைப் பிடித்துக் கொண்டு சென்றான். பலியிடுவதற்குரிய அலங்காரங்களையெல்லாம் அவருக்குச் செய்து, காளியின் திருக்கோயிலின் எதிரே, கொலை செய்யும் இடத்தில் கொண்டு நிறுத்தினான். அந்தக் காளியானவள். அவர் மகாயோகி என்பதையறிந்து, அவரைப் பலியிட வந்த அந்தக் கொடியவனையே, தன் கத்தியினால் வெட்டி, அவனது கழுத்திலிருந்து ஒழுகிய ரத்தத்தை தன் பரிவாரத்துடன் கூடச்சேர்ந்து குடித்து மகிழ்ந்தாள்.

பிறகு ஒருநாள், சவ்வீர ராஜனுடைய சேவகன் ஒருவன் ஜடபரதரைப் பிடித்துக்கொண்டு சென்றான். ஜடபரதரை, அரசனது சிவிகையைச் சுமப்பதற்குத் தகுந்த சிவியானாக நினைத்து, அமிஞ்சி பிடித்துப் போட்டான். ஒருநாள் அரசன், இஷிமதி நதி தீரத்தில் இருந்த கபில மகாமுனிரைக் காண்பதற்கு விரும்பினான். துக்கமயமான சம்சாரத்தில் எது உயர்ந்தது! என்பதை அந்த முனிவரிடமிருந்து தெரிந்து கொள்ள அரசன் விரும்பினான். எனவே அவன் பயணப்பட்டான். அவ்வரசனுடைய பல்லக்குப் போயிகளாக அமிஞ்சி பிடித்துப் போட்டிருந்த ஆட்களிலே ஜடபரதரும் சேர்ந்திருந்தார். சகல ஞானமும் உணர்ந்தவராக அவர் இருந்தாலும் கூட, தமது முற்பிறவிப் பாவங்களைத் தொலைக்க, அவர் பல்லக்கை சுமந்து சென்று கொண்டிருந்தார். அப்படிப் போகும் போது, நுகத்தடியளவு தூரம் ஜந்து வொன்றும் இல்லாபடித் தரையைப் பார்த்துக்கொண்டே அவர் மெதுவாக நடந்து சென்றார். மற்றவர்கள் துரிதமாக நடந்தனர். பல்லக்கின் வேகம் குறைந்தது. அதனால் சிவிகையில் இருந்த அரசன் சரியாய் நடங்கள்! என்று சிவிகை யாரை அதட்டினான். அவன் அப்படி அதட்டியும் பல்லக்கின் வேகம் குறைந்ததால், அரசன் மிகவும் கோபத்துடன் சிவியாரே! என் பேச்சையுங் கடந்து ஏனிப்படி நடக்கிறீர்கள்? என்று பலமுறைகள் கூவினான். அதற்கு சிவியாட்கள், மகாராஜா! எங்களின் குற்றமில்லை. இவன்தான் இப்படி நடக்கிறான் என்று ஜடபரதரைக் குற்றம் சாட்டினார்கள். அதைக்கேட்ட அரசன், அடா! என் பல்லக்கைச் சிறிது தூரந்தானே நீ சுமந்திருக்கிறாய்! இதனாலேயே விடாய்த்துப் போய்விட்டாயே! மேலும் நீ வருத்தத்தை! சகிக்க மாட்டாதவனோ! பிரத்யக்ஷத்தில் நீ பருத்தவனாகவே காணப்படுகிறாயே! என்று கேட்டான். அதற்கு ஜடபரதர், அரசே! நான் பருத்தவனும் அல்ல. உனது பல்லக்கை நான் சுமக்கவும் இல்லை. அதற்காக நான் வருந்தவும் இல்லை. அதனால் நான் ஆயாசமும் அடையவில்லை! என்றார். அதைக் கேட்ட அரசன், அவரது கருத்தைப் புரிந்துகொள்ளாமல் பார்வையில் நீ பருமனாகத்தானே தோன்றுகிறாய்? இப்போது உனது தோளில் என் பல்லக்கு இருக்கிறது. சுமை சுமந்தால் எந்தப் பிராணிக்கும் களைப்பு ஏற்படும் என்பது நிச்சயமாக இருக்க நீ ஏன் பொய் சொல்கிறாய்? என்று கேட்டான். அதற்கு ஜடபரதப் பிராமணர், அரசே! நீ என்னவோ பிரத்யக்ஷமாய்க் கண்டேன் என்று சொன்னாயே அந்த வஸ்துவை முன்னே நான் அறியச் சொல்வாயாக அது பலம் உள்ளது என்பதையும் இல்லாதது என்பதையும் பற்றிப் பிறகு பேசலாம். மேலும் என்னாலே சிவிகை சுமக்கப்பட்டது. அது இப்போதும் என்மேல் இருக்கிறது என்று சொன்னாயல்லவா? இது சுத்தப்பொய். அதைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக? நிலத்திலே இரண்டு பாதங்கள் இருக்கின்றன. அவற்றின்மேல் கணைக்கால்கள் இருக்கின்றன. அவற்றிலே தொடைகள் இரண்டும் நிற்கின்றன. அவற்றை ஆதாரமாகப் பற்றி நிற்கிறது. வயிறு, மார்பு, கைகள், தோள்கள் இவையனைத்தும் வயிற்றின் மேல் இருக்கின்றன. இந்தத் தோளின் மீது படிந்திருப்பது சிவிகை இப்படியிருக்க எனக்கு ஏது பாரம்? அந்தச் சிவிகையிலே நீ என்று உன்னால் நினைக்கப்பட்ட தேகம் இருக்கிறது. அந்தத் தேகத்தில் நீ இருக்கிறாய். அதுபோலவே, இந்த தேகத்தில் நான் இருக்கிறேன்.

அரசே! நீயும் நானும் தேகங்களாய் மாறி நிற்கிற மற்றவரும் பிருத்வி முதலிய பஞ்சபூதங்களாலே சுமக்கப்படுகிறோம். இந்தப் பூதவர்க்கமும் குணங்களின் வெள்ளத்திலே வீழ்ந்து, அதன் வசத்தால் நடத்தல் முதலிய செயல்களைச் செய்கின்றன. சத்துவம் முதலான குணங்கள் கருமங்களுக்கு வசப்பட்டிருக்கின்றன. அந்தக் கருமங்கள் அவித்தையினாலே சம்பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வவித்தை சகல பிராணிகளிலும் இருக்கின்றது. ஆத்மாவோ சுத்தமாய், நாசமில்லாததாய், பசி முதலியவைகள் இல்லாததாய் சத்துவாதி குணரகிதமாய், குணமயமான பிரகிருதியைக் காட்டிலும் வேறானதாக இருக்கிறது. அது சகல ஜந்துக்களிலும் தேகம்போல் அநேக அம்சமாய் இராமல் ஒரே அம்சமாக இருக்கிறது. அது வளர்வதுமில்லை; தேய்வதுமில்லை. இப்படியாக ஆன்மாவுக்கு விருத்தியோ தேய்வோ இல்லாமலிருக்க, நான் பருத்திருக்கிறேன் என்று எந்த யுக்தியினாலே சொன்னாய்? அன்றியும் பூமி, பாதம், கணைக்கால், தொடை, இடை முதலான உறுப்புகளின் அடுக்கின் மேலுள்ள தோளில் இருக்கும் பல்லக்கினால் எனக்குப் பாரம் உண்டென்றால் அந்தப் பாரம் உனக்கும் சமமாக இருக்க வேண்டும். மேலும் சகலமான பேருக்கும் இந்தப் பல்லக்கின் பாரம் மட்டுமல்ல, காடு, மலை, வீடு முதலானவற்றைப் பற்றிய பாரமும் உண்டென்றே சொல்ல வேண்டும். இப்படியின்றி, ஆன்மாவானது பிராகிருதங்களான அவயவங்களைவிட வேறு என்பது சித்தப்படும்போது, நான் பாரத்தைச் சுமக்கிறேன் என்பது ஏது? இந்தப் பல்லக்கு எந்தப் பொருளால் ஆனதோ, அந்தப் பொருளால் ஆனது தான் இந்த உடம்புமாகும். இதில் தான் எனக்கும் மற்றவருக்கும் மமத்துவம்! எனது என்ற அபிமானம் உள்ளது! என்று சொல்லி விட்டுப் பல்லக்கைச் சுமந்து கொண்டு சென்றார். இதைக் கேட்டவுடன் அரசன் திடுக்கிட்டு சிவிகையிலிருந்து கீழே இறங்கி ஜடபரத யோகியாரின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, ஐயா! அடியேன் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்தருள வேண்டும். தேவரீர் ஜடனைப்போல ரூபந்தரித்துள்ளீர். தேவரீர் யார் என்றே தெரியவில்லை. என்ன காரணத்தினால் என்ன பயனைக் கருதி இங்கே எழுந்தருளினீர்கள் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்! என்றான். அரசே! நீ யார் என்று என்னைக் கேட்டாயல்லவா? அதற்கு நான் இன்னார் என்று விடையளிக்க முடியவில்லையே! எப்பயனை கருதி எதனால் இங்கே வந்தாய் என்பதற்குப் பதில் சொல்ல வேண்டுவதில்லை. எங்கும் வருவதற்குப் பயன் அனுபவமே. இந்தச் சுகதுக்க அனுபவங்கள். புண்ணிய பாவங்களால் உண்டானவைகளாய். இடத்தையும் காலத்தையும் பற்றியிருப்பதால் ஜீவன்கள் தனது கர்மானுபவத்திற்கு உரியதேச காலங்களிலே தேகாதிகளைப் பெற்று வருகின்றனர் என்றார் ஜடபரதர்.

யோகியாரே! சகல காரியங்களுக்கும் தருமா தருமங்களும் காரணம் என்பதும் சுகதுக்க அனுபவித்திற்காகத் தேகம் பிரவேசிப்பது என்பது சரிதான். ஆனால் நான் இன்னார் என்று ஆன்மாவைக் குறித்துச் சொல்லக்கூடாது என்று கூறினீர்களே? அதையறிய விரும்புகிறேன் ஆத்மா என்பது இல்லாத பொருள். ஆகையால் அப்படிச் சொல்லக்கூடாது என்றால் ஆத்மா இருக்கிற வஸ்துவேயல்லாமல் இல்லாததன்றே இந்த நான் என்னும் சொல் ஆன்மாவின்மேல் பிரயோகிப்பது குற்றம் அல்லவே? இப்படியிருக்க நான் இன்னான் என்று சொல்ல முடியாது என்று நீங்கள் எப்படிச் சொன்னீர்கள்? என்று அரசன் கேட்டான். அரசே! ஆன்மாவைக் குறித்து நான் என்னும் சொல்லைப் பிரயோகிப்பது குற்றமல்ல. அதுவும் சரிதான். ஆனால் நான் இன்னான் என்பதனால் ஆத்மாவல்லாத தேகாதிகளிலே ஆத்மபுத்தியும், இப்படிப்பட்ட பிராந்தியைத் தெரிவிக்கும் சொல்லாவதும் ஆகிய குற்றங்கள் உண்டாம். அரசே! நான் என்று சொல்வது எது? நாக்கும், உதடுகளும், பற்களும், தாழ்களும் தான். நான் என்று சொல்கின்றன என்று நினைக்கிறாயே, அவைகள் அனைத்தும் கருவிகளே யல்லாமல் கர்த்தாவான ஆத்மாவன்று, தேகத்தைக் காட்டிலும் வேறானது. ஞானமே வடிவாகக் கொண்ட நான் என்னும் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறான வடிவுள்ள ஆத்ம ஸ்வரூபம் ஒன்று இருக்குமானால் என்னை இன்னான் என்று சொல்லலாம். அப்படித்தான் இல்லையே? ஆன்மா நித்தியப்பொருள். உடல் முதலியவை அநித்தியப் பொருள்கள். ஆகையால் அரசனாகிய நீயும் இந்தச் சிவிகையைச் சுமக்கின்ற நாங்களும் எல்லாமே இருக்கும் பொருளல்ல. எப்படியெனில் முன்பு மரமாக இருந்தது வெட்டப்பட்டு கட்டையாயிற்று. பிறகு அது நீ ஏறியிருக்கிற பல்லக்கு ஆயிற்று. இந்த நிலையில் அதற்கு மரம் என்றோ கட்டை என்றோ பெயர்களில்லை! மகாராஜா மரத்தின்மேல் ஏறியிருக்கிறார் என்று இவர்களே சொல்வார்களா? அல்லது கட்டையின் மேல் இருக்கிறார் என்றுதான் சொல்வார்களா? சிவிகையில் இருக்கிறார் என்றுதானே சொல்வார்கள்? இதனை ஆராய்ந்தால் சிவிகை என்பது ஒருவகை ஜோடிப்பே ஆகும். அதாவது கட்டைகள் அடுக்கப்பட்ட ஜோடிப்பு. இந்த ஜோடிப்பைப் பிரித்துவிட்டுப் பிறகு பல்லக்கு எங்கே என்பதை தேடிப்பார். அதுபோலவே சலாகை முதலியவற்றைப் பிரித்துக் குடையைத் தேடிப்பார். இந்த நியாயத்தாலேயே, இன்னார், நான் இன்னார் எப்படி என்பது தெரியும், கர்மவசத்தால் உண்டாகியிருக்கிற தேகங்களிலே புருஷன் என்றும் ஸ்திரீ என்றும், மாடென்றும், ஆடென்றும், யானையென்றும், குதிரையென்றும், மரம் என்றும் கொடி என்றும் வழங்கப்படுகின்றன. நீ, நான் என்கிற சொற்களின் முக்கியப் பொருளான ஆன்ம சொரூபமானது ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல, தேவனுமல்ல, மனிதனுமல்ல, மிருகமுமல்ல, மரமுமல்ல. இத்தேவத்துவலதி தர்மங்கள் எல்லாம் கர்மத்தினால் வந்த சரீரரத்தின் ரூபபேதங்களேயாகும். அரசே! நீ உலகத்தாருக்கு அரசன்! தகப்பனுக்கு மகன்! பகைவனுக்கு பகைவன்! மனைவிக்கு மணாளன்! மகனுக்குப் பிதா! இப்படடியிருக்க உன்னை யார் என்று நான் சொல்வேன். மேலும் நீ என்ன சிரசா, கழுத்தா, வயிறா? இந்த உடம்புக்கு நீ யார்? உனக்கு இந்த உடல்யாது? இவ்விதமாய்ச் சகல உறுப்புகளுக்கும் வேறாய் இருக்கிற நீயே நன்றாக ஆலோசித்து நான் யார் என்று சிந்தித்துக்கொள். உண்மை இப்படியிருக்க என்னை நான் இன்னான்! என்று வேறுபடுத்தி எப்படிச் சொல்லமுடியும் என்று ஜடபரதர் விளக்கினார்.

——————

14. பரம்பொருள் தெளிவு

ஆத்ம தத்துவத்தைப் பற்றி ஜடபரதர் கூறியதும் அரசன், அவரை நோக்கி சுவாமீ! சகல ஜந்துக்களிலும் பிரகிருதியிலும் வேறாய் ஞானஸ்வரூபமாய் மகத்தானதாய் ஒரேவிதமான ஆத்ம ஸ்வரூபம் உண்டென்றும் கூறினீர்கள். சிவிகையை நான் சுமக்கவில்லை; என்னிடத்தில் சிவிகையும் இல்லை; இந்த உடல் சுமக்கின்றது. நம்மைவிட அது வேறானது. திரிகுணங்களின் ஏவலினால் பஞ்சபூதங்கள் அசைகின்றன. அந்தக்குணப் பிரவிருத்தியும் கருமத்தினால் ஏவப்படுகிறது. ஆகையால் அவற்றால் எனக்கென்ன என்றும் தாங்கள் இத்தகைய பரமார்த்தங்களைக் கூறினீர்கள். மகானே! நான் இந்தச் சம்சாரத்தில் எது உயர்ந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் கபில மஹாமுனிவரிடம் போகப் புறப்பட்டேன். இதனிடையில் அந்தப் பரமார்த்த விஷயத்தைத் தேவரீர் அருளிச் செய்ததால் என்மனம் தங்களையே நாடுகின்றது. கபில முனிவர் உலக அஞ்ஞானத்தைப் போக்கும் பொருட்டு பூமியில் இறங்கிய ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமானவர். தங்களையே அந்தக் கபிலராக நான் கருதுகிறேன். ஆகையால் அடியேனுக்கு எது உயர்ந்ததோ அதனை அறிவிக்க வேண்டும், என்றான். அரசே! இப்போது நீ என்னை உயர்வைப் பற்றிக் கேட்கிறாயா? அல்லது பரமார்த்தத்தைப் பற்றிக் கேட்கிறாயா? சிரேயசு என்பதும் பரமார்த்தம் என்பதும் ஒன்றல்ல. எந்த மனிதன் தனது இஷ்ட தேவதைகளை ஆராதித்துப் பணம் முதலிய சம்பத்துக்களை இச்சிக்கின்றானோ அந்தச் செலவப்பேறே சிரேயசு எனப்படும். அதுபோலவே, சந்தானத்தை இச்சிப்பவன் அதையடைவது சிரேயசாகும். யக்ஞாதி கர்மங்களைச் செய்து சுவர்க்காதிகளைப் பெற நினைப்பவனுக்கு அந்தச் சுவர்ககாதிகளே சிரேயசாகும். எந்தவொரு பயனையுங்கருதாமல் யாகாதி கர்மங்களைச் செய்பவனுக்கு அந்தக் கருமமே உயர்வாகும். யோக நிஷ்டையிலிருந்து ஆத்மத் தியானஞ் செய்வோருக்கு அதுவே உயர்ந்தது. அந்த ஆன்மாவுக்குப் பரமாத்மாவோடு ஒன்றாகக் கூடுதல் மேலான சிரேயசாகும். இப்படி ஒன்றுக்கொன்று மேலான ஏழு சிரேயசுகள், முக்கியமானவைகள். இவற்றின் உட்பிரிவான சிரேயசுகளும் உண்டு. இவையெல்லாம் பரமார்த்தங்களல்ல. எப்படியெனில் பணமே பரமார்த்தமானால் அதைத் தருமத்திற்காகவும், காமத்திற்காகவும் செலவு செய்வார்களல்லவா? அப்படிச் செலவு செய்வதனால் அது பரமார்த்தம் ஆகமாட்டாது. இதனால் சாதிக்கப்படுகின்ற தர்ம, காமங்களும் அழியக்கூடியவை. ஆதலால் அவை பரமார்த்தம் என்று சொல்லப்படமாட்டா; காரியங்கள் எல்லாம் காரணங்களுக்குப் பரமார்த்தமேயல்லாமல் யாவற்றுக்கும் ஆகமாட்டாது. ராஜ்யம் முதலானவை பரமார்த்தம் என்றால், அவை நிலையானதாகாமையால் அவை பரமார்த்த மாகாத்ரிக்கு, யஜுர், சாமம் என்ற வேதங்களின் விதிப்படி செய்கின்ற யாக கருமத்தையே பரமார்த்தம் என்று நீ நினைத்திருந்தாயானால், அதுவுமல்ல மண் என்ற காரணப்பொருளினால் உண்டாக்கப்படும் குடம் முதலியவைகளுக்கான காரியங்கள் எல்லாம் காரணமான மண்ணின் தன்மையையே அடைந்திருப்பதைப் போல், நாசப்படத்தக்க சமித்து; நெய், தர்ப்பை முதலியவற்றால் செய்யப்படும் யாகாதி கர்மமும் நாசப்படத்தக்கது. ஆகையால் அதுவும் பரமார்த்தமாகாது. பரமார்த்தம் என்பது நாசப்படாததாக ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டதேயாகும்! யாதொரு பயனையும் விரும்பாமற் செய்கிற யாகங்கள், மோக்ஷத்துக்குச் சாதனமானவை. ஆகையால் அவை பயனைக் கொடுத்தவுடன் நசிப்பதால் அது பரமார்த்தமல்ல ஆன்மத் தியானமும், விசதம் விசத்தரம், பிறவற்றினின்றும் தெளிவு, நற்றெளிவு என்று இவ்வகைப்பட்ட அவஸ்தா பேதங்களை யடைதலாலும், போனதை நினைத்தல், பிரத்யக்ஷத் தோற்றம் முதலாக க்ஷணந்தோறும் மாறுதலினாலும் அது பரமார்த்தமன்று.

பரமாத்மாவோடு ஆத்மா ஐக்கியமாகின்ற யோகமே பரமார்த்தம் என்று சிலர் நினைக்கிறார்கள் அல்லவா? அப்படிப்பட்ட யோகம் பொய்; ஆகையால் அதுவும் பரமார்த்தம் அன்று! அந்த யோகம் ஏன் பொய்யென்றால் ஒரு பொருள் மற்றொரு பொருளாக ஆகமாட்டாதாகையால் ஜீவாத்மாவானது பரமாத்மாவாக மாறமாட்டாது. ஆகையால் அரசே! நான் முன்பு சொன்னவைகள் யாவும் சிரேயசுகள் என்பதில் ஐயமில்லை. பரமார்த்தம் எதுவென்று சுருக்கமாகச் சொல்கிறேன், கேள். தேகத்தைப் போலப் பல பொருளாயிராமல் ஒரு பொருளாயும், ஞானத்தினால் எங்கும் வியாபிக்கக் கூடியதாயும், தேகத்தைப் பற்றிய வித்தியாசமின்றிச் சமமாயும், நிர்மலமாயும், சத்துவாதிகுண சம்பந்தம் இல்லாததாயும், பிரகிருதிக்கு வேறுபட்டதாயும், உற்பத்தி விநாச விருத்தி க்ஷயாதிகள் இல்லாததாயும், நுண்மையினாலே அக்கினி வாயு ஜலாதிகளான அழிக்கும் பொருள்களுக்கு உட்படாததாயும், பற்றிக்கொள்ளுதல் முதலான தோஷங்கள் இன்றி, தேகாதிகளுக்கு அதிபதியாயும் இருக்கிற ஆத்மஸ்வரூபம் எதுவுண்டோ அது மேலான ஞானவடிவமாய், அவித்யா ரூபங்களான ஜாதி நாமாதிகளோடு பூதம், வர்த்தமானம், பவிஷியத் என்ற மூன்று காலங்களிலேயும் கூடாதது. தன்னுடையதும் பிறரதுமான தேகங்களில் இருக்கின்ற அந்த ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி எல்லாம் ஒரே விதம் என்ற ஞானம் எதுவுண்டோ, அந்த ஞானஸ்வரூபம் தான் பரமார்த்தமாம்! ஆதலால் தேக வித்தியாசத்தினால் மாறுபாடாக நினைப்பவர்கள் யதார்த்தத்தை அறியாதவர்கள். புல்லாங்குழலின் உள்ளே நுழைந்த காற்று ஒன்றாயிருந்தும் அதன் துவார பேதங்களினால் அந்தக் காற்றுக்கு ஆறுவகை ஸ்வரபேத நாமதேயம் உண்டாவதைப்போல, ஆத்துமஸ்வரூபம் பேதம் இல்லாததாக இருந்தும், அதற்குப் புறம்பான கர்ம பேதத்தினால் வந்த சரீர பேதத்தைப் பற்றி, தேவன், மனிதன் என்ற விவகாரம் உண்டாகிறது. அந்தக் கர்மாவாகிய மறைவு அழிந்தால் அந்தத் தேவாதிபேதம் இல்லவேயில்லை என்று அறிவாயாக! என்று ஜடபரதர் உபதேசித்தார்.

————–

15. ருபுநித உபாக்கியானம்

மைத்ரேயரே! இவ்விதமாக ஜடபரதர் கூறியும் அந்த அரசன் மனம் திடப்படாமையால் ஒன்றுமே பேசாமல் சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது ஜடபரதர், ஞானபேதம் இன்மையைப் பற்றிய கதையொன்றைச் சொல்லத் துவங்கினார். அரசே! நிதாகருக்கு ஞானத்தை உண்டாக்க ருபு என்பவர் பூர்வத்தில் பரமேஷ்டிக்கு ருபு என்ற குமாரர் ஒருவர் உண்டு. அவர் இயல்பாகவே தத்துவ ஞானமுடையவராக இருந்தார். அவருக்குப் புலஸ்திய முனிவரின் குமாரரான நிதாகர் என்பவர் சீடராக இருந்தார். அவருக்கு அந்த ருபு சகலகலா ஞானங்களையும் ஓதுவித்தார். அவ்வளவு கலைகளைக் கற்றிருந்தும் கூட நிதாகருக்கு ஆத்தும ஸ்வரூபத்தில் பேதம் இல்லாமையைப் பற்றிய வாசனை இல்லை என்பதை ருபு அறிந்துகொண்டார். ஆயிரம் ஆண்டுகள் சென்ற பிறகு தேவிகா நதிக்கரையில், புலஸ்தியர் ஏற்படுத்திய ஓர் உத்தியான வனத்தில் நிதாகர் வசித்துக் கொண்டிருந்தார். அவரைக் காண ருபு முனிவர் சென்றார். அப்போது நிதாகர் வைசுவ தேவத்தை முடித்துவிட்டு, வாசலில் வந்து அதிதிகளை எதிர்பார்க்கும் தருணத்தில், ருபு முனிவர் வருவதைக் கண்டார் வந்தவரை நிதாகர் உபசரித்து, சுவாமி! அமுது செய்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். அதற்கு ருபு முனிவர், பிராமணோத்தமரே! உமது வீட்டில் நான் புசிக்கத்தக்க பொருள் என்ன இருக்கிறது? ஈனமான போஜனத்தில் எனக்குப் பிரியமில்லை என்றார். உடனே நிதாகர், சுவாமி என் கிருஹத்தில் அரிசி மாவினாலும் யவதானியங்களாலும் செய்யப்பட்ட அப்பளங்கள் இருக்கின்றன. காய், கிழங்கு, கனி வகை உணவுப்பொருள்கள் உள்ளன. அவற்றையெல்லாம் தேவரீர் அமுது செய்தருளலாம் என்றார். குருநாதரோ, இவையெல்லாம் அற்ப போஜனங்கள்! எனக்கு இவற்றை அருந்தப் பிரியமில்லை. மோர்க்குழம்பு, பாயாசம், தேன் குழல், முதலியவற்றைப் புசிக்க விரும்புகிறேன் என்றார். உடனே, நிதாகர் தம் மனைவியை அழைத்து அடி! நம்முடைய இல்லத்துக்கு ஒரு பெரிய மகான் வந்திருக்கிறார். அவருக்கு, நம் வீட்டில் மிகவும் உயர்ந்த பொருள் எதுவுண்டோ அதைக் கொண்டு அன்னஞ்செய்து, அவருக்கு உணவிடுவாயாக! என்றார். அவரது மனைவியும் தன் கணவனின் கட்டளையை ஏற்று, அக்காரவடிசில் முதலியவற்றைச் செய்து; பரிமாறினாள். அவற்றை ருசித்துப் புசித்துக் கொண்டிருந்த ருபுவை பார்த்து, சுவாமி! தங்களுக்குத் திருப்தியும் சந்துஷ்டியும் உண்டாயினவா? தேவரீர் திருவுள்ளம் நலமா? தேவரீர் எழுந்தருளியிருக்கும் இடம்எது! எங்கிருந்து எழுந்தருளியிருக்கின்றது? எங்கே எழுந்தருள உத்தேசித்து, இங்கே எழுந்தருளியது? இவற்றையெல்லாம் எனக்குச் சொல்ல வேண்டும் என்று நிதாகர் கேட்டார்.

பிராமணோத்தமரே! எவனுக்குப் பசியுண்டோ அவனுக்குத்தான் அன்னத்தைப் புசிப்பதனால் திருப்தி உண்டாகிறது. எனக்கு பசியில்லை அப்படியிருக்கு எனக்குத் திருப்தியுண்டாவென்று ஏன் கேட்கிறீர்? பிருதிவி சம்பந்தமான தாதுவானது கர்ப்பத்திலிருக்கும் அக்கினியால் அழிக்கப்படும் அளவில் பசியும் அந்த அக்னி வேகத்தினால் உள்ளேயிருக்கும் நீர் வற்றிப் போவதால் தாகமும் உண்டாகின்றன. (இந்தப் பசி தாகங்கள் இச்சா ரூபங்கள் ஆகையால் அவை மனோதர்மமாகும்.) ஆயினும் தாது க்ஷயத்தினால் உண்டாகின்றனவாகையால் தேக தருமங்களாகின்றன. எனக்கு இவை இல்லையே! ஆகையால் பசியினால் உண்டான திருப்தி இப்போது மட்டுமல்ல, எப்போதுமே எனக்கு இல்லை. மனது நலமாயிருப்பது சந்துஷ்டியும் சித்தத்தின் தன்மைகளுமேயாகும். ஆகையால் இவ்விரண்டையும் பற்றிச் சித்தத்தையல்லவா கேட்க வேண்டும்? என்னை ஏன் கேட்கிறீர்? நான் மட்டுமல்ல, என்னைப் போலுள்ள ஆன்மாக்களுக்கெல்லாம் இந்தப் பசி முதலானவை இல்லையென்று அறிவீராக. வாசஸ்தானம் எது? எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று நீர் கேட்டவைகளுக்குப் பதில் சொல்கிறேன் கேளும். புருஷன் தேவமனுஷ்யாதி சகல சரீரங்களிலேயும் இருக்கத்தக்கவனாய், சகல அசேதனங்களிலேயும் வியாபிக்கத்தக்கவனாய்; ஆகாயத்தைப் போல ஒன்றோடும் ஒட்டாதவனாய் இருக்கிறான். இத்தகைய ஆன்மாவைப் பார்த்து எங்கே இருக்கிறாய்? எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்ற கேள்விகளுக்குப் பொருள் இல்லை! ஆகையால், அத்தகைய நான் போகிறவனுமல்லன்; வருகிறவனுமல்லன்; ஓரிடத்தில் இருப்பவனுமல்லன் நீயும் மற்றவர்களும் கூட அப்படியேதான்! ஆனால் வருவதும் போவதுமாகத் தோன்றுவது தேகவசத்தினாலேயாகும். ஆகையால் போக்குவரத்துகளுக்குக் கர்த்தாவாகத் தோன்றும் இந்தத் தேகம் நான் அன்று; அதுபோலவே நீயும் அன்று? மற்றவர்களும் மற்றவர்கள் அன்று! ஆனால் நல்ல போஜனம் அளிப்பாய்; அற்ப ஆகாரம் வேண்டாம் என்று நான் சொன்னது சுபாவ சித்தமோ உபாதியைப் பற்றியதோ என்று உமது கருத்தை அறியப் பரீட்சை செய்தேனேயன்றி நான் மெய்யாகக் கேட்கவில்லை. இந்த விஷயத்தைப் பற்றி சொல்கிறேன், கேட்பீராக.

உண்பவனுக்கு இது சுவையுள்ளது; இது ருசியில்லாதது என்று ஒரு நியதியும் இல்லை. யாதொரு வியாதியும் இல்லாமல் நல்ல பசியுள்ளவனுக்கு புழுத்த உளுந்து முதலியவற்றால் செய்த தாழ்வான உணவுகளும் ருசியாகவே இருக்கும். அப்படியில்லாதவனுக்குத் தேன்குழல், அக்காரவடிசில் முதலியவை ருசிகரம் ஆகாமற் போகின்றன. ஆகையால் உண்பவனுடைய உடலின் தன்மையின்படி உணவுகளில் ருசியும் அருசியும் உண்டாகின்றன. எனவே மதுரம் என்பதும் அமதுரம் என்பதும் அவுபாதிகமேயன்றி சுவாபிகமன்று, மண்ணாற்கட்டிய வீடு, மண்ணாலேயே பூசப்பட்டு உறுதியாவது போல, பிருத்வி மயமான இந்த உடலும் பிருத்விச் சம்பந்தமான பொருள்களாலேயே உறுதியாக வேண்டியுள்ளது. அதனால் தான் யாவருமே உணவருந்த வேண்டுவது அவசியம். யவம்; கோதுமை, பயிறு முதலிய தானியங்களும் நெய் எண்ணெய் பால் தயிர் முதலிய ரசவஸ்துக்களும் வெல்லம் கனிகள் முதலிய பொருள்களும் பிருத்வி சம்பந்தமான அணுக்களேயாகும். ஆகையால் நான் முன்பு சொல்லி வந்த விஷயங்கள் யாவையும் நன்றாக அறிந்து, இது இனிப்பு இது இனிப்பல்ல என்றும், இவன் தேவன் இவன் மனிதன் என்றும், பேதவிசாரனை செய்யும் மனதை, இத்தகைய பேதங்களெல்லாம் கர்மத்தினால் வந்த விகாரங்கள், என்றும் ஆத்ம சொரூபத்தில் வைஷமியம் யாதும் இல்லை என்றும் சமத்துவ ஞானம் உள்ளதாகச் செய்யவேண்டும். இத்தகைய சமத்துவ புத்திதான் மோக்ஷகாரணமாகும் என்றார் ருபு. நிதாகர் தம் குருவை வணங்கி, ஐயனே! பரமார்த்தத்தைப் பற்றித் தாங்கள் கூறிய வசனங்களைக் கேட்டு என் அஞ்ஞானம் நீங்கியது. தாங்கள் யாரோ தெரியவில்லை. சாதித்தருள வேண்டும்! என்று விண்ணப்பஞ்செய்தார். ருபு, தன் சீடனை நோக்கி, உமக்கு ஆசாரியனான ருபு என்பவன் தான் நான்! உமக்கு ஞானத்தைப் போதிக்கவே இங்கு வந்தேன். நினைத்தபடி உமக்குப் பரமார்த்தத்தைத் தெரிவித்தேன். இனி நான் என்னிடம் போகிறேன். உமக்குச் சுருக்கமாக ஒன்றைச் சொல்கிறேன் கேளும். தேவ மனுஷ்யாதி பேதமாய்க் காணப்படுகின்ற சேதன ஸ்வரூபம் யாவும் ஒன்றேயல்லாமல் பேதப்பட்டதன்று. தேவாதி பேதங்களோ கர்ம வசத்தினால் வந்த பூதவிகாரங்களாகும். இப்படிச் சேதனா சேதனாத்துமகமான சகல பிரபஞ்சமும் ஸ்ரீவாசுதேவன் என்னும் திருநாமமுடைய பரமாத்மாவுக்குத் திருமேனியாய் இருக்கின்றன! என்று கூறினார். அதைக்கேட்ட நிதாகர், இனி அடியேன் அப்படியே நினைத்திருக்கிறேன் என்று தண்டம் சமர்ப்பித்து மகாபக்தியோடு உபசாரஞ்செய்தார். அதன் பிறகு ருபு முனிவர் தம் இருப்பிடத்தை அடைந்தார்.

———————-

16. நிதாகரும் ஜடபரதரும் முக்தியடைந்தது

ஜடபரத மகரிஷி சவ்வீர ராஜனை நோக்கி, அரசே! கேள், மறுபடியும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ருபுவானவர் தம் சீடர்களுக்கு ஞானோபதோம் செய்ய நினைத்து, அந்த நகரத்துக்குச் சென்றார். அப்போது பரிவாரங்களுடன் அரசன் பட்டணப்பிரவேசம் செய்து கொண்டிருந்தான். நிதாகர் காட்டிலிருந்து சமித்து, கருப்பைகளைச் சேகரித்துக் கொண்டு சந்தடியாக இருந்ததால் தீட்டுப் படுவோம் என்று பட்டணத்தினுள் போகாமல் தூரத்தில் நின்று கொண்டிருந்தார். பசியினால் மெலிந்திருந்த நிதாசரைக் கண்ட ருபு முனிவர், ஓ பிராமணரே! நீங்கள் ஏன் ஒன்றியாக இங்கே நிற்கிறீர்? என்று கேட்க, அதற்கு நிதாகர், சுவாமி! இங்கு அரசன் பட்டணத்துக்குள் போகிறான். ஆகையால் ஜனநெருக்கம் அதிகமாக இருப்பதால், உள்ளே போகமுடியாமல் இங்கே நிற்கிறேன் என்றார். அதைக் கேட்டதும் ருபு முனிவர், ஐயனே! அரசன் யார்? ஜனங்கள் யார்? எனக்குத் தெரியவில்லை நீரோ அதைத் தெரிந்தவராக இருக்கிறீர்! ஆகையால் எனக்குத் தெரியும்படிச் சொல்லவேண்டும் என்றார். உடனே நிதாகர், அதோ பாரும், பெரியமலைச் சிகரம் போன்று மிகப்பெரியதாக இருக்கும் யானையின் மேல் ஏறிக்கொண்டு பிரகாசிக்கிறானே, அவன் தான் அரசன்! அவனைச் சுற்றி நிற்பவர்கள் பரிவாரங்கள்! என்றார். அதற்கு ருபு புன்முறுவலுடன், ஐயா! நீர் அரசர் என்றும் யானை என்றும் வெவ்வேறான லக்ஷணமுடையனவாய், இரண்டு பொருள்களை ஒரே சமயத்தில் சொல்கிறீர்கள். எனக்கோ அவற்றில் பேதம் தெரியவில்லை. என்ன விசேஷமோ அதை எனக்குத் தெளிவுபடுத்த வேண்டும். யார் அரசன்! எது யானை? இதையறிய விரும்புகிறேன் என்றார். அவரை நிதாகர் வியப்புடன் பார்த்தபடி, என்ன பிராமணரே! கீழே இருப்பது யானை, மேலே இருப்பது அரசன்! இது உமக்குத் தெரியவில்லையா? என்று கேட்டார். பிராமணரே! கீழே இன்னது மேலே இன்னது என்று எனக்கு நன்றாகத் தெரிவிக்க வேண்டும் என்று ருபு சொன்னார், உடனே நிதாகர் ருபு முனிவரின் மேல் ஏறிக்கொண்டு இப்பொழுது நான் சொல்வதைக் கேளும். நான் இருக்குமிடம்தான் மேல்; மேலே என்னைப்போல் ஏறியிருப்பவனே அரசன்! நீர் இருக்கும் இடம்தான் கீழ், உம்மைப் போல கீழே சுமந்து கொண்டிருப்பதை யானையென்று அறியும்! இந்த விஷயம் உமக்குத் தெரிவதற்குத்தான் கண்கூடாகக் காண்பித்தேன்! என்றார் நிதாகர். பிறகு ருபு புன்முறுவலுடன் சரிதான் நீ என்பதும் நான் என்பதும் எனக்குத் தெரிந்தால் அல்லவோ மற்றைய காரியங்களை நான் அறிந்து கொள்வேன்? அந்தப் பேதமே எனக்குத் தெரியவில்லை! ஆகையால் நீ நான் என்பவர்கள் யாரோ என்பதை தெரியச்சொல்ல வேண்டும் என்றார். எனக்கு இப்படிச் சொன்னதைக் கேட்டவுடன் நிதாகர் பரபரப்புடன் அவரது திருவடிகளில் விழுந்து தண்டம் சமர்ப்பித்து சுவாமீ! தேவரீர் எனது ஆசாரியரான ருபுவென்று நினைக்கிறேன். மற்றவர்களுடைய இதயம் இப்படி ஆத்ம அபேத ஞானத்தால் தூய்மையடைந்திருக்õது. ஆகையால் நீங்கள் எனது குருநாதர் என்பதில் சந்தேகமேயில்லை என்றார். அதை ருபுமுனிவர் ஆமோதித்து, நான் ருபுதான்! நீ எனக்குச் செய்த பணிவிடைக்கு மகிழ்ந்து உனது ஞானத்தை நிலைப்படுத்த நான் இங்கு வந்தேன். பரமார்த்த சாரமான அபேத ஞானத்தையும் உனக்குச் சுருக்கமாகச் சொன்னேன் என்று சொல்லிவிட்டுத் தமது இருப்பிடம் போய்ச் சேர்ந்தார். நிதாகரும் சகல ஆத்ம சொரூபங்களும் ஒரே வகையானவையே என்ற உறுதியடைந்து, யாவற்றையும் பிரம்மஸ்வரூபமாகத் தியானித்து, மேலான மோட்சத்தை அடைந்தார்.

அரசே! நீயும் அப்படியேதான். சத்துருக்கள், மித்திரர்கள் என்ற வித்தியாசமின்றி, கர்மவசத்தால் எங்கும் இருக்கின்ற ஆத்ம சொரூபம் ஒருவிதமானதே என்பதை நினைத்திருப்பாயாக. களங்கமற்ற சுத்தமான ஆகாயம் ஒன்றேதான் ஆயினும் அது உபாதி வசத்தால் கறுப்பு, வெளுப்பு என்று வெவ்வேறாகத் தோன்றுகிறது. அதுபோலவே ஒரே விதமான ஆத்ம ஸ்வரூபம் அஞ்ஞானிகளுக்கு வெவ்வேறாகத் தோற்றமளிக்கிறது. இதை இன்னுஞ் சுருக்கமாகச் சொல்கிறேன், கேள். எந்தெந்தப் பொருளுண்டோ, அந்தந்தப் பொருள்கள் யாவும் ஸ்ரீ அச்சுதனுடைய சொரூபம்தான்! அவனுக்கு வேறானதும் மேலானதும் எதுவுமில்லை. நானும் அவன் ஸ்வரூபம்; நீயும் அப்படியே சகலமும் அப்படித்தான். ஆகையால் எல்லாம் வேறு வேறு என்கின்ற பேதபுத்தியாகிய அஞ்ஞானத்தை விட்டு விடு என்று ஜடபரதயோகியார் கூறினார். அரசன் சுத்த ஞானியானான் ஜடபரதயோகியும் பூர்வ ஜன்ம ஸ்மரணத்தினால் ஞானயோகமடைந்து அந்தப் பிறவியிலே மோட்சமடைந்தார். இத்தகைய மகானுபாவரான ஜடபரத யோகியாரின் இந்த மேன்மையான சரிதத்தை எவன் ஒருவன் சொல்லுகிறானோ, எவன் பக்தியுடன் இதைக் கேட்கிறானோ அத்தகையோரெல்லாம் சுத்த ஞானமுடையவர்களாகி மோக்ஷம் பெறுதற்குத் தக்கவராவர்.

இரண்டாவது அம்சம் முடிந்தது.

———————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் இரண்டாவது அம்சம்—-முதல் பாகம் —

February 28, 2021

1. பிரியவிரத வம்சம்
2. பூமண்டலத்தின் பிரிவுகள்
3. பாரததேச வர்ணனை
4. பிலக்ஷத் தீவுகளின் வர்ணனை
5. பாதாள லோகம்
6. நரக லோகம்
7. புவர்லோக, மேல் லோகங்களும் கிரக நிலைகளும்
8. சூரிய மண்டலமும் அதன் மார்க்கமும்

—————————–

1. பிரியவிரத வம்சம்

பராசர முனிவரே! உலகப்படைப்புப் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் பதிலளித்து விட்டீர்கள். நீங்கள் கூறியருளிய முதலம்சத்தில், உலகப்படைப்பு சம்பந்தமாக நான் மீண்டும் ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகிறேன். சுவாயம்புவ மனுவின் பிள்ளைகளான பிரியவிரதன், உத்தானபாதன் என்பவர்களில், உத்தானபாதனுக்கு துருவன் என்ற மகன் பிறந்தான் என்று அருளிச்செய்தீர்கள். மற்ற பிரியவிரதனுடைய வமிசத்தை பற்றித் தாங்கள் கூறவில்லை. ஆகையால் அதைச் சொல்ல வேண்டும் என்று மைத்ரேயர் கேட்டார். அதற்கிணங்கி பராசர மகரிஷி கூறலானார். கேளும் மைத்ரேயரே! அந்த பிரியவிரதன் கர்த்தமப் பிரஜாபதியின் குமாரியை மணந்து சம்ராட்டு, குஷி என்ற இரு பெண்களையும் ஆக்கினீத்திரன், அக்கினிபாகு, வபுஷ்மான், தியுதிமான், மேதா, மேதாதிதிபவியன், வைனன், புத்திரன், ஜியோதிஷ்மான் என்ற பத்துப்பிள்ளைகளையும் பெற்றான். அவர்கள் மகாஞானியர். அவர்களில் ஜியோதிஷ்மான் என்பவன் தனது பெயருக்கேற்ற வகையில் மிகவும் தேஜஸ் உடையவனாக விளங்கினான். பிரியவிரதனின் பிள்ளைகளில் மேதா, அக்கினிபாகு, புத்திரன் என்ற மூவரும் பூர்வஜன்ம ஞானத்தால் யோகாப்பியாசத்தில் முக்கிய மகானுபவராய் அரசாட்சி முதலியவற்றில் பற்றற்றவராய், கர்ம பலன்களை விரும்பாதவாய் விதிப்படிக் கர்மாதிகளைச் செய்து வந்தனர். அதனால் பிரியவிரதன் தன்னுடைய ஆட்சியிலிருந்த ஏழு தீவுகளை அந்த எழுவருக்கும் ஒப்படைத்தான். அவர்களில் ஆக்கினீத்திரன் என்பவன் ஐம்பூத்வீபத்தையும், மேதாதி என்பவன் பிலக்ஷத்துவீபத்தையும், வபுஷ்மான் என்பவன் குசத்வீபத்தையும், தியுதிமான் என்பவன் கிரவுஞ்சக்தி வீபத்தையும், பவியன் என்பவன் சாகத்துவீபத்தையும், வைனன் என்பவன் புஷ்பகரத்து வீபத்தையும் அரசாண்டு வந்தார்கள்.

ஜம்பூத் தீவின் அதிபதியான ஆக்கினீத்திரனுக்கு, நாபி கிம்புருஷன், ஹரிவருஷன், இளாவிரதன், ரமியன், இரண்வான் குரு; பத்திராசுவன், கேதுமாலன் என்ற ஒன்பது புதல்வர்கள் பிறந்தனர். அவர்களுடைய தந்தை தனது அரசான ஜம்பூத்வீபத்தை ஒன்பது பங்காக்கி, நாபிக்கு தென்பகுதியான பாரத வருஷத்தையும், ஹரிவருஷனுக்கு நைஷத்தையும், இளாவீரதனுக்கு மேருமலையின் இடைப்பட்ட இளாவிருத வருஷத்தையும், ரம்மியனுக்கு நீலாசலத்தைச் சேர்ந்த ரம்மியக வருஷத்தையும், ஹிரண்யவானுக்கு அதற்கு வடக்கிலுள்ள ஸ்வேத வருஷத்தையும், குரு என்பவனுக்கு சிருங்கலத் என்ற மலைக்கு வடக்கிலுள்ள குரு வருஷத்தையும், பத்திராசுவனுக்கு மேருமலையின் கிழக்கேயுள்ள பத்திராசுவ வருஷத்தையும், கேதுமாலனுக்கு கந்தமாதன வருஷத்தையும் கொடுத்து அவர்களுக்கு ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்து விட்டுத் தவவேடம் பூண்டு, மிகவும் தூய்மையான ஸாளக்கிராமம் என்ற திவ்விய ÷க்ஷத்திரத்திற்குப் போய்ச் சேர்ந்தான். கிம்புருஷ வருஷம் முதலான எட்டு வாசஸ்தானங்களிலும் வசிப்போருக்கு யாதொரு முயற்சியும் இல்லாமலேயே பெரும்பான்மையின் சுகானுபவயே கிடைக்கும். துக்க அனுபவமும், மூப்பு, சாவு, இவை பற்றிய பயமும், தருமம், அதருமம் என்பவைகளும் உத்தமன், மத்தியமன், அதமன் என்ற வித்தியாசங்களும், பிராணிகளுடைய உடல் குறைதல் போன்ற அடையாளமுள்ள யுகபேதங்கள் இல்லை.

ஹிமாஹ்வயம் அல்லது பாரதம் என்ற தேசத்துக்கு அதிபதியான நாபி என்பவருக்கு, மேரு தேவி என்பவளிடத்தில் மிகவும் தேஜசுடைய ரிஷபர் என்பவர் பிறந்தார். அவர் நூறு பேருக்குள்ளே மூத்தவர். அந்த ரிஷப மகாராஜன் தர்மமாக ராஜ்ய பரிபாலனஞ்செய்து, பலவிதமான யாகங்களையும் நிறைவேற்றி, மூத்தகுமாரனான பரதனுக்கு ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்வித்து விட்டு, தவஞ்செய்யும் பொருட்டுப் புலகருடைய ஆஸ்ரமமான சாளக்கிராம ÷க்ஷத்திரத்திற்குச் சென்றார். அங்கு அவர் வானப் பிரஸ்த விதிப்படி தவங்களையும், யாகங்களையுஞ்செய்து, அந்த தவமுயற்சியினால் உடலிலுள்ள நம்புகள் வெளித்தோன்றும்படி மிகவும் இளைத்துப் போய், பிறகு தனது ஆடைகளையெல்லாம் எறிந்து, நிர்வாணமாய், வாயில் பந்து போன்ற கற்கவளத்தை வைத்துக் கொண்டு அங்கிருந்து மகாப்பிரஸ்தானம் போய்விட்டார். இவ்விதமாக பரத மகாராஜனுக்குக் கொடுக்கப்பட்டதால் இந்த தேசத்திற்குப் பாரத வருஷம் என்ற பெயர் வழங்கலாயிற்று. அந்தப் பரதனுக்கு தர்மசீலனான சுமதி என்ற புதல்வன் பிறந்தான். பரதனும், நீதிமுறைப்படி அரசாண்டு, யாகங்களைச் செய்து, பிறகு புத்திரனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு, சாளக்கிராம ÷க்ஷத்திரத்திற்குச் சென்று, யோகாப் பியாசஞ் செய்து, பிராணனை விட்டான். அவன் மறுபடியும் உத்தமமான யோகியர் வமிசத்தில் ஒரு பிராமணனாகப் பிறந்தான். மைத்ரேயரே! அந்தப் பரதனின் சரித்திரத்தை பிறகு சொல்கிறேன். பரதனின் குமாரனான சுமதிக்கு, இந்திரத்தியும்னன் என்ற குமாரன் பிறந்தான். அவனுக்குப் பரமேஷ்டி என்பவன் குமாரன் அவனுக்குப் புத்திரன் பிரதிஹாரன். அவனுடைய மகன் பிரதிகர்த்தா. அவனுக்குப் பவன் என்பவனும், அவனுக்கு உத்கீதி என்பவனும், அவனுக்கு பிரஸ்தாவன் என்பவனும் பிறந்தார்கள். அவன் மகன் பிருது. பிருதுவின் மகன் நக்தன், அவனுடைய மகன் கயன்; கயனுடைய மகன் நான், அவன் மகன் விரோகணன், அவன் மகன் வீரியன், அவன் மகன் தீமான். அவன் மகன் மகாந்தன், அவன் மகன் பாவனன், அவன் மகன் துவஷ்டா, அவனுக்கு விரஜன், விரஜனுக்கு ரஜன். அவன் மகன் சதஜித்து, அந்த சதஜித்துக்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர்; அவர்களில் மூத்தவன் விஷ்வக்ஜோதி, இந்த விஷ்வக்ஜோதி முதலியவர்களால்தான் பிரஜைகள் நன்றாக வளர்க்கப்பட்டார்கள், அவர்களால் இந்தப் பாரத வருஷம் ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அவர்களது குலத்தில் பிறந்தவர்களால், பாரத பூமியானது எழுபத்தொரு சதுர்யுகம் வரை அனுபவிக்கப்பட்டது. இதுதான் சுவாயம்புவமனுவின் படைப்பாகும். இந்த வராக கல்பத்தில், முதலாவது மனுவான சுவாயம்புவமனுவின் காலத்தில்தான் இந்தப் பிரியவிரத சந்ததிக் கிரமம் நடந்தது.

—————-

2. பூமண்டலத்தின் பிரிவுகள்

பராசர முனிவரே! தாங்கள் சுவாயம்புவமனுவின் படைப்புக் கிரமத்தைக் கூறியருளினீர்கள். இனி பூமியின் மண்டலத்தையும் அதிலுள்ள சமுத்திரங்கள், தீவுகள், மலைகள், காடுகள், நதிகள், தேவர்கள், நகரங்கள் ஆகியவற்றின் அளவு, ஆதாரம், சொரூபம் ஆகியவற்றைக் கூறவேண்டும்! என்று மைத்ரேயர் கேட்டார். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! இந்த விஷயங்களை விவரித்துச் சொல்வதற்கு அநேகம் ஆயிரம் ஆண்டுகள் போதாது. ஆயினும் நான் சுருங்கச் சொல்கிறேன். இந்தப் பூமியானது ஜம்புத்துவீபம், சால்மலத்துவீபம், பிலக்ஷதவீபம், குசத்துவீபம், கிரவுஞ்சத்துவீபம், சாகத்துவீபம், புஷ்கரத்துவீபம் என்ற ஏழு த்வீபங்களாகப் பிரிந்திருக்கின்றன. இந்த ஏழு த்வீபங்களும் உப்பு, கருப்பஞ்சாறுகள், நெய், தயிர், பால், சுத்தநீர் என்ற ஏழு சமுத்திரங்களால் சூழப்பட்டுள்ளன. இவற்றினுள்ளே, ஜம்புத்வீபம் என்பது எல்லாவற்றுக்கும் நடுவில் இருக்கிறது. அதற்கு நடுவில் மேரு என்ற சுவர்ண மலையானது எண்பத்து நாலாயிரம் யோசனை உயரமும், பதினையாயிரம் யோசனை பூமிக்குள்ளே ஊடுருவியும், முப்பத்தேழாயிரம் யோசனை தரையில் விரிந்ததும், பதினாறாயிரம் யோசனை அடியில் விரிந்ததுமாகி, பூமி என்ற தாமரை மலருக்குக் கர்ணிகையைப் போல விளங்குகிறது. இதற்குத் தென்திசையில் இமவான்; ஏமகூடம், நிஷதம் ஆகிய மூன்றும் வடபுறத்தில் நீலம், சுவேதம், சிருங்கி என்ற மூன்றும் வருஷங்களின் எல்லை மலைகளாக இருக்கின்றன. அவற்றின் நடுவேயிருக்கும் இரண்டு மலைகள் லக்ஷம் யோசனைப் பிரமாணம் உள்ளனவாயும், மற்றவை பதினாயிரம் யோசனை குறைந்தவையாயும் இருக்கின்றன. அவையெல்லாம் இரண்டாயிரம் யோசனை உயரமும் அவ்வளவு பரப்பளவும் கொண்டவையாம். இந்த ஜம்புத்வீபத்தில் முதல் பாரதவர்ஷமும் அடுத்து கிம்புருஷமும் அடுத்து ஹரி வருஷமும் மூன்றும் மேருவின் தெற்கேயுள்ளவை. ரம்மியக வருஷம், ஹிரண்மய வருஷம், குரு வருஷம் ஆகிய மூன்றும் வடக்கில் உள்ளவை. பாரத வருஷம் எப்படித் தெற்கின் கடைசியோ, அப்படியே குருவருஷம் வடக்கின் கடைசியாக இருக்கின்றது. மேருவைச் சுற்றிலுமுள்ள பூமி இளாவருஷம் என்று சொல்லப்படும். இவ்வருஷங்கள் ஒவ்வொன்றும் ஒன்பதினாயிரம் யோசனை பரப்புடையவை. இந்த இளாவிருத வருஷத்தில் நான்கு மலைகள் மேருவுக்குத் தாங்கிகளாக இருக்கும்படி உண்டாக்கப்பட்டு, பதினாயிரம் யோசனை உயரமுள்ள உன்னத கேஸ்ர பர்வதங்களாக இருக்கின்றன. அவற்றின் கிழக்கே மந்தரமும், தெற்கில் கந்தமாதனமும், மேற்கில் விபுலமும், வடக்கில் சுபார்சுவமும் இருக்கின்றன. அந்த மலைகளில் முறையே கடம்பு, நாவல், அத்தி, ஆல் என்ற மரங்கள் பதினோராயிரம் யோசனை அளவுள்ளனவாய், கொடிமரங்களை நாட்டியதுபோல் அமைந்துள்ளன.

முனிவரே! அந்த நாவல் மரத்தைப் பற்றித்தான் இந்தப் பூமிக்கு ஜம்பூத்வீபம் என்ற பெயர் உண்டாயிற்று. அந்த நாவல் மரத்தின் பழங்கள் மகாகஜப் பிரமாணமுள்ளவைகளாய் மலையின் மீது விழுந்து சிதைய அவற்றின் ரசத்தினால் ஜம்பு நதி என்ற புகழ்பெற்ற ஒருநதி ஓடுகின்றது. அந்த நதியின் தண்ணீரை அவ்விடத்தார் பானஞ்செய்வதால் அவர்களுக்கு வியர்வையும் துர்க்கந்தமும் மூப்பும் இந்திரியங்களில் பலக்குறைவும் உண்டாவதில்லை. மேலும் மனமானது எப்பொழுதும் நல்லநிலையில் இருக்கும். அவ்வாற்றங்கரையின் மண்ணானது அந்த ரஸத்தில் நனைந்து காற்றினால் உலர்ந்து ஜாம்பூநதம் என்ற பெயரைக் கொண்டு சித்தர்கள் தரிக்கும்படியான ஸ்வர்ணமாகின்றது. அந்த மேருமலைக்குக் கிழக்கில் பத்திராசுவ வருஷமும், மேற்கில் கேதுமால வருஷமும் இருக்கின்றன. அன்றியும் மேருவின் கிழக்கு முதலாகிய நான்கு திசைகளிலும் முறையே சைத்திரரதம், கந்தமாதனம், வைப்பிராசம், நந்தனம் என்ற நான்கு உத்தியானவனங்கள் உள்ளன. அவற்றில் அருணோதம் மகாபத்திரம் ஸிதோதம்; மானசம் என்ற நான்கு ஏரிகள் தேவதா யோக்கியங்களாக இருக்கின்றன. அந்த மேருவின் கிழக்கில் ஸிதாம்பம், குமுத்துவான்; குரரி; மாலியவான். வைகங்கம் முதலான கேஸர பர்வதங்கள் உண்டு. சில திரிகூடம், கிசிரம், பதங்கம், ருசிகம், நிஷம் முதலியன தென்புறத்தில் உள்ள கேஸர பர்வதங்கள் சிகிவாஸம், வைடூரியம் கபிலம் கந்தமாதனம், ஜாருதி முதலானவை. மேருவைச் சுற்றிலும் இருக்கிற அவயவங்களில் சேர்ந்திருக்கும் சங்ககூடம், ரிஷபம், ஹம்சம், நாகம், காளாஞ்சம் முதலியன வடகேசர அசலங்களாகும்.

மைத்திரேயரே! மேருவுக்கு மேல் பதினாலாயிரம் யோசனை விசாலமுள்ள பிரம்மாவின் மாபெரும் பட்டணம் இருக்கிறது. அதைச்சுற்றி, எட்டுத்திசைகளிலும் லோக பாலகர் எட்டுப்பேருக்கும் சிறந்த பட்டணங்கள் உண்டு. ஸ்ரீவிஷ்ணு பாதத்தினின்றும் உதித்த கங்காநதி ஆகாயத்திலிருந்து சந்திரமண்டலத்தில் விழுந்து அதை நனைத்துக்கொண்டு மேருவின் மீதிருக்கும் பிரம்மாவினுடைய நகரத்திற்கு நாலுபுரத்திலும் நான்கு பிரிவாக விழுந்து சீதை, அளகநந்தை சட்சு, பத்திரை என்ற பெயர்களைப் பெற்று விளங்குகின்றன. அவற்றுள் சீதை என்ற நதியானது மலை மேல் மலையாக ஆகாயமார்க்கத்திலிருந்து பத்திராசுவ வருஷத்தில் இறங்கிச் சமுத்திரத்தில் சேருகின்றது. அதுபோலவே அளகநத்தை நதியும் தென்புறத்து மலைகளின் வழியாய்ப் பாரதவருஷத்தில் சென்று ஏழு பிரிவாய்ப் பிரிந்து சமுத்திரத்தில் விழுகின்றது. சட்சு என்னும் நதியும் மேற்குமலைகளைக் கடந்து கேதுமால வருடத்தில் சென்று சமுத்திரத்தில் சங்கமமாகிறது. அதுபோலவே பத்திரை வடமலைகளின் வழியாகக் குருவருஷத்தில் புகுந்து கடலையடைகிறது. மாலியவர்து, கந்தமாதனம் என்ற மலைகள் நீலநிஷதபர் வதங்களின் அளவாக இருக்கின்றன. அவற்றின் நடுவிலேதான் மேருமலையானது கர்ணிகையைப் போலுள்ளது. பாரதகேது, மாலபத்திராசுவ வருஷங்கள் எல்லைப்புற மலைகளாகி, ஜடராதிகளுக்கு வெளியே இந்தப்பூமி என்ற தாமரை மலருக்கு நான்கு இதழ்களாக விளங்குகின்றன. ஜடரம்; ஏமகூடம் என்ற மலைகள் தெற்கு வடக்காக, நீல நிஷத மலைகளின் அளவில் தென்புற எல்லை மலைகளாக இருக்கின்றன. கந்தமாதனம் கைலாயம் என்ற இரண்டு மலைகளும் எண்பதினாயிரம் யோசனையுடையவை. அவை கிழக்குத்திசையின் எல்லை மலைகளாய் நீண்டு சமுத்திர நடுவில் இருக்கின்றன. நிஷதம்; பாரியாத்திரம் இவ்விரண்டும்; கீழ்த்திசை மலைகளைப் போலவே மேலைத்திசையின் எல்லை மலைகளாக இருக்கின்றன. திரீசிருங்கம்; ஜாருதி என்பவை; முன்னே சொன்ன மலைகளைப் போலவே நீண்டு சமுத்திரத்தின் நடுவே வடக்கெல்லை மலைகளாக இருக்கின்றன.

முனிவரே; இவ்விதம் இளாவிரத வருஷத்தில் உட்பிரிவின் எல்லை மலைகளாக இரண்டாயிரம் இருக்கின்றன. மகாமேருவின் நான்கு புறத்திலும் கேசரமலைகள் சில இருக்கின்றன என்று சொன்னேன் அல்லவா? அந்த சிதனாசல மலை முதலியவற்றின் நடுவேயுள்ள சரிவான பள்ளத்தாக்குகள் சித்தசாரணர்கள் வாசஞ் செய்யுமிடங்களாக உள்ளன. அவற்றிலே மிகவும் மனோகரமான ஸ்ரீவனம் கிம்சுகவனம்; நளவனம்; சயித்திர ரதம் என்ற வனங்களும் ஹேமசித்திரம், பூதவனம், பிரமபாரிசம், சுநாபகம் என்ற புரங்களும் இருக்கின்றன. அங்கே ஸ்ரீமகாலக்ஷ்மி, விஷ்ணு, அக்னி, சூரியன் முதலிய தேவர்களுக்கும் வாசஸ்தலங்கள் இருக்கின்றன. அம்மலைச் சந்துகளில் கந்தர்வ யக்ஷõதிகள் கீதவாத்தியமிசைத்து ஆடிப்பாடிக் கொண்டிருப்பார்கள். இவையெல்லாம் பூலோக சொர்க்கங்கள் என்று வழங்கப்படும். இவற்றைப் புண்ணியவான்கள் போய்ச் சேருவார்களேயல்லாமல், மற்றவர் அனேக பிறவிகளையெடுப்பினும் போய்ச் சேரமாட்டார்கள். ஸ்ரீவிஷ்ணுபகவான் பத்திராசுவ வருஷத்தில் ஹயக்ரீவரூபியாக எழுந்தருளியிருக்கிறார். கேதுமால வருஷத்திலே வராஹரூபியாகவும், பாரத வருஷத்திலே கூர்ம ரூபியாகவும்; குரு வருஷத்திலே மச்சரூபியாகவும் எழுந்தருளியிருக்கிறார். அந்த ஸ்ரீஹரிபகவான் சர்வசொரூபியாய்ச் சர்வாதாரமாய் எங்குமேயுள்ளார். முன்பு சொன்ன கிம்புருஷாதி வருஷங்கள் எட்டிலும் சோகம், ஆயாசம், பயம்; பசி முதலிய துன்பங்களில்லாமல் பிரஜைகள் எல்லாம் நல்ல மனதுடன் தேஜோபலாதிகளையுடையவராய்ப் பதினாயிரம் பன்னீராயிரம் ஆண்டுகள் வரை ஜீவிப்பார்கள். அங்கே மழையே பெய்வதில்லை. பூமியில் சுரக்கும் தண்ணீரே எப்போதும் போதுமானதாக இருக்கும். அங்கே கிருதயுகம் திரேதாயுகம் முதலிய கால கற்பனைகள் இராது. அவ்வருஷங்களுக்குள்ளே ஒவ்வொன்றிலும் எவ்வேழு குலபர்வதங்களும் உண்டு. அந்தப் பருவதங்களிலிருந்து அநேகமாயிரம் நதிகள் உண்டாகி வெகு ரமணீகரமாய்ப் பாய்கின்றன.

————

3. பாரததேச வர்ணனை

சமுத்திரத்துக்கு வடக்கே இமயத்திற்குத் தெற்கே இருக்கிற பூமியானது பரதனுடைய சந்ததியார் வசிப்பதால், பாரதவர்ஷம் என்ற பெயரைப்பெற்றது. மைத்ரேயரே! இதன் பரப்பளவு ஒன்பதாயிரம் யோசனை தூரமாகும். சொர்க்கத்தையடைகிறவர்களும், மோக்ஷத்தையடைகிறவர்களுக்கும் பிரவிருத்தி, நிவர்த்தி கர்வ சாதன பூமியாக இருப்பது இதுவேயாகும். இதில் மகேந்திரம், மலயம், ஸஹ்யம், சுத்திமான், ரீக்ஷம் விந்தியம், பாரியாத்திரம் என்ற ஏழுவித மலைகள் இருக்கின்றன. பிராணிகள் இங்கிருந்து தான் சொர்க்கமடைகிறார்கள். மோக்ஷத்தைப் பெறுகிறார்கள். மிருகாதி பிறவிகளையும் நரகத்தையும் இங்கிருந்தே அடைகிறார்கள். இதைவிட வேறிடத்தில் மனிதர்களுக்கு சொர்க்கானுபவர்க்கங்களுக்கு உரிய கர்மங்கள் விதிக்கப்படவில்லை. இந்தப்பாரத வருஷத்துக்கு இந்திர த்வீபம் கசேரு, தாம்பர பர்ணம், கபஸ்திமான், நாகத்வீபம், சவுமியத்வீபம், காந்தர்வத்வீபம், வாருணத்வீபம், பாரதத்துவீபம் என்ற பெயருடைய ஒன்பது பிரிவுகள் உண்டு. அவற்றில் ஒன்பதாவது பிரிவான பாரதத்துவீபம் என்பதே நாமிருக்கும் இந்தப் பூமியாகும். இது சகரர் தோண்டிய கடலால் சூழப்பட்டுள்ளது. இந்தப்பாரத கண்டமானது தெற்கு வடக்கில் ஆயிரம் யோசனையளவாக இருக்கிறது. கிழக்கில் கிராத தேசமும், மேற்கில் யவனதேசமும் இருக்கின்றன. நடுவில் பிரம்ம க்ஷத்திரிய; வைசிய; சூத்திரர் என்ற நான்கு வருணத்தினரும் வகுப்பின்படி இருக்கின்றனர். யாகங்களைச் செய்வதும், யுத்தஞ்செய்து துஷ்டர்களையடக்குதலும், வாணிபஞ்செய்தலும், சிற்பத்தொழில் செய்வதுமாகிய ஜீவன உபாயங்களிலே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதில் சதத்துரு சந்திர பானக முதலிய நதிகள்; இமயமலையிலிருந்து பெருகுகின்றன. வேதஸ்மிருதி முதலிய நதிகள் பாரியாத்திர பருவதத்திலிருந்து உண்டாகிப் பாய்கின்றன. நருமதை, சுரசை, முதலிய நதிகள் விந்திய மலையில் உற்பத்தியாகின்றன. தாபீ, பயோஷ்ணீ, நிர்விந்தியை முதலிய நதிகள் சஹ்ய பர்வதத்தின் தாழ்வரையின்று உண்டாகின்றன. கிருதமாலை, தாம்பரபருணீ நதிகள் மலயாசலத்தில் உண்டாகின்றன. திரிசாமா, ரிஷிகுல்யா முதலிய நதிகள் மகேந்திரகிரியில் உதிக்கின்றன. குமாரீ முதலிய நதிகள் சுத்திமத்தென்னும் மலையில் பிறந்தவை. இவற்றைச் சார்ந்த உபநதிகளும் வேறு ஆறுகளும் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இவ்வாற்றங்கரையில் குரு பாஞ்சாலம், மத்தியதேசம், பூர்வதேசம், காமரூபம், ஆந்திரம், கலிங்கம், மகதம், பாண்டியதேசம், அபராந்தம், சவுராஷ்டிரம், சூத்திர தேசம், ஆபீரதேசம், பாப்பர தேசம், மாருகம், மாளவம், பாரியாத்தி ரம்சவ்வீரம், சிந்து, ஊணம், சால்வம், கோசலம், மத்திரம், ஆராமம், அம்பஷ்டம், பாரசீகம் முதலிய பல தேசத்து மக்களும் வாசஞ்செய்து கொண்டு, அவற்றின் தண்ணீரைப் பானம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் தான் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நால்வகை யுகபேதங்களும் உண்டு.

இங்குதான் யோகியர் தவஞ்செய்கின்றனர். யாகசீலர் யாகஞ்செய்கின்றனர். தானசீலர் தானம் செய்கின்றனர். இவ்விதமான பரலோக சாதகமான நல்ல தருமங்களை ஜனங்கள் ஆதரவோடு செய்து வருகின்றனர். இந்த ஜம்புத்தீவிலே யக்ஞ புருஷனாகவும், யக்ஞ சொரூபியாகவும் இருக்கிற ஸ்ரீவிஷ்ணுபகவான் யக்ஞங்களினால் ஆராதிக்கப்படுகிறான். ஏனெனில் இந்தச் சம்புத் தீவானது பரலோக சாதகமான கருமங்களைச் செய்யத் தகுந்த இடமாகையால், பாரதவருஷம் தான் உயர்வானது. மற்ற பூமியெல்லாம் போகங்களுக்கு உரியனவாம். ஒரு ஜந்து அநேகப் பிறவிகளிலே செய்த புண்ணியத்தினாலே இவ்விடத்தில் மனிதப்பிறவியாகப் பிறக்கும்; இந்தப் பாரத வருஷத்தைப் பற்றித் தேவதைகள் பாடியபாட்டைக் கேளுங்கள். சொர்க்கத்துக்கும் மோக்ஷத்துக்கும் ஏதுவான கர்மங்களுக்குச் சாதகமாயிருக்கிற இந்தப் பாரதவருஷத்திலே தேவஜன்மத்துக்குப் பின்னாயினும் இந்த ஜன்மத்தைப் பெறுவாராயின் அவர்களே புண்ணியவான்கள். அவர்களே தேவர்களிலும் மேலானவர்கள். அவ்விடத்து ஜனங்கள் கர்ம பயன்களிலே கருத்தை வைக்காமல் செய்யும் கருமங்களையெல்லாம் பரமாத்மாவான ஸ்ரீவிஷ்ணுவுக்கு அர்ப்பணஞ்செய்து நிர்மலர்களாய் அந்த அநந்தனிடத்திலே லயத்தை அடைகின்றனர். நமக்குச் சொர்க்கப் பிராப்தி காரணமான கருமம் அனுபவித்தலினாலே அழிந்த பிறகு எவ்விடத்திலே தேக சம்பந்தைப் பெறுவோமா அதையும் அறியோம். இப்போது பாரதவருஷத்திலே பிறவி பெற்று ஞானேந்திரியக் கர்மேந்திரியங்களைக் குறைவறப் பெற்றவர்கள், சுலபமாய், ஆன்மா கடைத்தேறும் வழியைத் தேடச் சக்தி பெற்றவர்களாவார்கள். ஆகையால் அவர்கள் மகாபுண்ணியவான்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மைத்ரேயரே! இப்படி ஒன்பது வருஷங்களாகப் பிரிந்து லக்ஷம் யோசனை பரப்பளவுள்ள ஜம்புத்து வீபத்தின் விவரத்தைச் சுருக்கமாகச் சொன்னேன். இந்த ஜம்புத்து வீபத்தைச் சுற்றிய வளையத்தைப் போல் லவண சமுத்திரமானது லக்ஷ யோசனை விஸ்தாரமுடையதாக அமைந்திருக்கிறது.

—————–

4. பிலக்ஷத் தீவுகளின் வர்ணனை

இந்த ஜம்புத்தீவானது உப்புக் கடலினால் சுற்றப்பட்டது போலவே, இந்த லவண சமுத்திரம் பிலக்ஷத் தீவினாலே சுற்றப்பட்டிருக்கிறது. ஜம்புத்தீவின் பரப்பளவு லக்ஷயோசனையாகும். அதைவிட இருமடங்கு பரப்பளவைக் கொண்டது பிலக்ஷத்தீவாகும். இந்த பிலக்ஷத்தீவின் அதிபதியான மேதாதிதி என்பவனுக்கு சாந்தஹயன், சிவன், சிசிரன், சுகோதயன், ஆனந்தன், ÷க்ஷமகன், துருவன் என்று ஏழுபிள்ளைகள் இருந்தார்கள். அந்தத் தீவில் அவர்களின் பெயராலேயே சாந்தஹயம், சிவம், சிசிரம், சுகதம், ஆனந்தம், ÷க்ஷமகம், துருவம் என்ற ஏழு தேசங்கள் ஏற்பட்டன. அவற்றுக்கு கோமேதகம், சந்திரம், நாதம் துந்துபி சோமகம், சுமனசு, வைபிராஜம் என்ற ஏழு மலைகள் எல்லைகளாகும். மிகவும் ரமணீயமான இந்த மலைகளிலுள்ள ஜனங்கள் தேவ கந்தர்வாதிகளோடு வேடிக்கையாக வாசஞ்செய்து கொண்டிருப்பார்கள். அங்கு சகல ராஜ்யங்களும் தூய்மையானவை. அங்கு ஜனங்கள் வெகுகாலம் கழித்த பின்பே மரணமடைவார்கள். நோய்களும் மனோவியாதிகளும் அங்கில்லை. அந்த ஏழு வருஷங்களிலும் சமுத்திரத்தோடு சேரத்தக்க அது தப்தை சிகி வபாவை, திரிதிவை, சுக்கிலமை, அமிருதை, சுகிருதை என்ற ஏழு நதிகள் ஓடுகின்றன. இவையெல்லாம் பெயர் சொன்னவுடன் பாதங்களை நீக்கும் மகிமை வாய்ந்தவை. மேலும் பற்பல சிற்றாறுகளும், சிறுமலைகளும் அங்குள்ளன. அவ்விடத்தார் உத்சர்ப்பிணி என்ற விருத்தி காலமும் அவசர்ப்பிணி என்ற க்ஷய காலமும் கிருதாதியுக பேதங்களுமில்லாமல் எப்போதுமே திரேதா யுகத்திற்குச் சமமான காலமுடையோராய் அந்த மலைச்சாரல்களில் வசிப்பார்கள். இந்த ஆற்று நீரைப் பானஞ்செய்து சுகமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இந்த பிலக்ஷத்தீவு முதலாய் சாகத்தீவு வரையிலுள்ள பூமிகளில் நோயற்று ஐயாயிரம் ஆண்டுகள் வரையில் மக்கள் வாழ்வார்கள். இந்த ஐந்து தீவுகளிலுள் வருணாசிரம தர்மம் உண்டு. அங்கே ஆரியகர், இகரர், வீதிசியர், பாவியர் என்ற நான்கு பிரிவுகள் உண்டு. அந்தத் தீவின் நடுவே முன்பே சொன்ன நாவல் மரத்தின் அளவில் ஒரு கல்லால மரம் இருக்கிறது. அதனால் தான் அந்தத் தீவுக்கு பிலக்ஷத் தீவு என்ற பெயர் வழங்கலாயிற்று. அங்கே சர்வேசுவரனான ஸ்ரீவிஷ்ணுபகவான் சோமரூபியாய், ஆரியகர் முதலானவர்களால் ஆராதிக்கப்படுகிறார். அந்தப்பிலக்ஷத் தீவானது அதன் அளவாயுள்ள கருப்பஞ்சாற்றுக் கடலால் சூழப்பட்டுள்ளது.

இனி, சால்மலித் தீவைப் பற்றிக் கூறுகிறேன். கேட்பீராக-இந்தச் சால்மலித் தீவுக்கு அதிபதியான வபுஷ்மா என்பவனுக்குச் சுவேதன் அரிதன் ஜிமூதன், ரோஹிதன்; வைத்துதன், மானசன், சுப்பிரபன் என்ற ஏழு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களது பெயரில் அங்கு ஏழு தேசங்கள் உண்டு அத்தீவின் அளவு, பிலக்ஷத் தீவைவிட இருமடங்கு அதிகம். அங்கு குமுதம் உன்னதம்: பலாஹம் துரோணம் கங்கம் மகிஷம் ககுத்துமான் என்ற ஏழு மலைகள் ஏழு வருஷங்களுக்கும் எல்லைகளாக அமைந்துள்ளன. அவை நானாவித இரத்தினங்களின் உற்பத்தி ஸ்தானம் அவற்றினுள்ளே துரோணம் என்ற மலை, மூலிகைகளின் பிறப்பிடம்; பூர்வத்தில் ஆஞ்சநேயர் அங்கிருந்து தான் சஞ்சீவினி முதலிய ஒஷதிகளைச் சக்கரவர்த்தித் திருமகனுக்காக இலங்கைக்குக் கொண்டு சென்றார். அந்தத் தீவில் யோனி, தோயை விதிருஷ்ணை சந்திரை சுக்கிலை விமோசினி நிவிருத்தி என்ற நதிகள் ஏழுண்டு. அங்கு கபிலர் அருணர் பீதர் கிருஷ்ணர் என்ற நான்கு வருணத்தினர் சர்வசொரூபியான எம்பெருமானை; வாயு ரூபியாகப் பாவித்து யாகங்களைச் செய்து பூஜித்து வருகிறார்கள். அங்கு சகல தேவதைகளும் சாந்நித்யமாய் இருக்கின்றனர். அதன் நடுவில் மிகவும் பெரியதான இலந்தை மரம் ஒன்றிருக்கிறது. அதனாலேயே அந்தத் தீவிற்கு சால்மலத் தீவு என்ற பெயர் உண்டாயிற்று. அதைச் சுற்றிலும்; மதுச் சமுத்திரம் சூழ்ந்துள்ளது. இந்தச் சமுத்திரத்தைச் சுற்றிலும், இதற்கு இரட்டிப்பு அளவுள்ள குசத்வீபம் இருக்கிறது. அதற்கு அதிபதியான ஜியோதிஷ்மானுக்கு உத்பிதன், வேணுமான்; சுவைரதன்; லம்பன் திருதி பிரபாகரன் கபிலன் என்ற ஏழு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுடைய பெயராலேயே அங்கு ஏழுதேசங்கள் இருக்கின்றன. அதில் தேவ, அசுர யக்ஷ கின்னர கிம்புருஷ கந்தர்வாதி தேவகணங்களும் தாமிகன் தக்ஷ்மிகன் தேஹர் மந்தேஹர் என்ற நான்குவகை ஜனங்களும் வசிக்கின்றனர். அந்த நான்கு வருணத்தினரும் தமது கர்மாதிகாரம் நிவர்த்தியாகும் பொருட்டு ஞானனுஷ்டானமுடையோராய் பிரம்மரூபியான ஸ்ரீஜனார்த்தனனை ஆராதித்து உக்கிரமான பயன்தரவல்ல பூர்வ ஜன்மங்களைத் தொலைக்கின்றனர். அவ்விடத்தில் வித்திருமம், ஹேமசைலம் தியுதிமான் புஷ்பவான் குசேசயம் ஹரி மந்தரம் என்ற ஏழுமலைகள் இருக்கின்றன. தூதபாயை சிவை பவித்ரை சுமதி வித்யு தம்பை மஹி என்ற ஏழுநதிகள் அங்கு பாய்கின்றன. இவை தவிர உபநதிகளும் உபபர்வதங்களும் அநேகம் அங்கு உள்ளன. சிறந்த நாணற்புல் அங்கு இருப்பதாலேயே அந்தத் தீவுக்கு குசத்வீபம் என்ற பெயர் உண்டாயிற்று. இந்தத் தீவின் அளவுள்ள சர்ப்பி சமுத்திரம் (நெய்க்கடல்) இதைச் சூழ்ந்துள்ளது.

இச்சமுத்திரத்தை கிரவுஞ்சத தீவு சுற்றிக் கொண்டிருக்கிறது. இதன் வளமையைச் சொல்கிறேன்; கேளுங்கள் இந்தத் தீவானது முந்திய தீவைவிட இருமடங்கு பரப்பளவு கொண்டது. இதன் அரசனான தியுதிமான் என்பவருக்கு குசலன், மனுகன், உஷ்ணன், சிவான், அந்தகாரகன், முனு, துந்துபி என்ற ஏழுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களின் பெயரால் அங்கு ஏழுதேசங்கள் உண்டு. மேலும் கிரவுஞ்சம் வாமனம் அர்த்தகாரகம் வடவாக்கினிக்கு சமமான இரத்தினசைலம், திவாவிருது புண்டரீகன் துந்துபி என்ற ஏழு மலைகள் எல்லை மலைகளாக இருக்கின்றன. அவற்றுள் கிரவுஞ்சம் என்ற பருவதத்தைப் பற்றி அந்தத் தீவுக்கு அப்பெயர் வந்தது. இந்த மலைகள் எல்லாம் ஒன்றிலொன்று இரட்டிப்பான அளவுள்ளனவாக இருக்கும். இந்த மலைகள் எல்லாம் சித்த சாரண கிம்புருஷ கின்னராதிகள் வினோதமாய் விளையாடிக் கொண்டிருக்கு மிடங்களாகும்; இந்த வருஷங்கள் ஏழிலும் புஷ்கரர் புஷ்கலர் தன்னியர் திஷ்யர் என்ற நான்கு வருணத்தாரும் தேவதானவர்களுடன் வாசஞ்செய்வார்கள். கவுரீ குமுத்துவதீ சந்தியா ராத்திரி மனோ ஜவா கியாதி புண்டரீகா என்ற ஏழுபெரிய நதிகளும் பல உபநதிகளும் பாய்கின்றன. இங்குள்ளவர்கள் ருத்திர ரூபியாய் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீஜனார்த்தனனை யாகங்களால் ஆராதித்து வருகிறார்கள். இத்தகைய கிரவுஞ்சத் தீவானது அதன் அளவுக்குத் தயிர்க்கடலால் சூழப்பட்டுள்ளது. இனி அந்தக் கடலைச் சூழ்ந்துள்ள சாகத் தீவானது அளவில் கிரவுஞ்சத் தீவை விட இருமடங்குள் பெரியது. அதில் அந்தத் தீவின் அதிபதியான பவிரயன் என்பவனின் குமாரர்களான ஜலதம், குமாரம், சுகுமாரம். மரிசகம், குசுமோதம், சுமோதம், மகாத்துருமம் என்பவர்களின் பெயரில் ஏழுபிரதேசங்கள் உள்ளன. அவற்றின் எல்லைகளாக உதயகிரி, ஜலதாரம், ரைவதகம், சியாமம், அம்போகிரி, ஆம்பிகேயம், கேசரி என்ற ஏழுமலைகள் உள்ளன. அங்கு சித்தர் கந்தருவர் விளையாடுமிடமாக சாகம் என்ற மகாவிருட்சம் விளங்குவதால் அதற்குச் சாகத்துவீபம் என்ற பெயர் உண்டாயிற்று. அதன் இலைகளில் உறைந்து காற்று வீசும்போது மிகுந்த ஆனந்தவுல்லாசமுண்டாகும். அங்கு பாப ஹரங்களான சுகுமாரீ, குமாரீ, நளினீ, வேணுகீ இக்ஷú தேனுகை, கபஸ்தீ என்ற ஏழு முக்கிய நதிகள் ஓடுகின்றன. அங்கு தரும ஹானியும் பரஸ்பரக் கலகமும் மரியாதையை மீறுதலும் இராது. மங்கர், மாகதர், மானசர், மந்தகர் என்ற நான்கு வருணத்தார் அங்கு வசிக்கின்றனர். அங்கு சூரிய சொரூபியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவிஷ்ணுபகவானைத் தங்களுக்கு விதித்துள்ள ஞான கருமங்களினால் ஆராதித்து வருகின்றனர். இந்த சாகத்வீபமானது அதன் அளவையுடைய க்ஷீரசமுத்திரத்தால் (பாற்கடலால்) சூழப்பட்டுள்ளது.

மைத்ரேயரே! இந்தப் பாற்கடலைச் சுற்றி புஷ்கரம் என்ற தீவுள்ளது. அதன் அளவு சாகத்வீபத்தின் அளவைவிட இரட்டிப்பானது. அந்தத் தீவிலே அதன் அதிபதியான சவனனுக்கு பிள்ளைகள் இருவர் உண்டு. அவர்களது பெயரில், மகாபீதம், தாதகீ என்ற இரண்டு பிரதேசங்கள் இருக்கின்றன. அவற்றை மானகோத்ரம் என்ற பெரிய மலையானது இரண்டாகப் பிரித்து தீவின் நடுவே வளையம்போல் அமைந்துள்ளது. அந்தமலை ஐம்பதாயிரம் யோசனை உயரமும் அதன் அளவு விஸ்தீரணமுங்கொண்டது. அங்குள்ள மக்கள் வியாதி சோகம் முதலிய துன்பம் இல்லாமல் பதினாயிரம் ஆண்டு ஜீவித்துச் சுகமாக இருக்கிறார்கள். மேலானவன், கீழானவன் என்ற வேறுபாடும், கொல்பவனும் கொல்லப்படுவோனும், பொறாமை, அசூயை, பயம், கோபம் முதலிய துர்க்குணங்களும் மெய் பொய்களும் அங்கு இல்லை. முன்னே சொன்ன மானசோத்ரம் அன்றி வேறு மலைகளும் நதிகளும் அங்கு இல்லை. அங்கிருக்கும் மனிதர்கள் அனைவரும் தேவர்களுக்கு இணையான ரூபமுடையவர்கள். அங்கு வர்ணாசிரம ஆசாரங்களும் தரும நடக்கைகளும் இல்லை. அங்கு வேதம் ஓதுதல், பயிரிடுதல் போன்ற பிழைப்புகளும், ராஜநீதி முறைகளும் மேலோருக்குக் கீழோர் பணிசெய்தல் போன்ற செயல் முறைகளும் இல்லை. அது பூலோக சொர்க்கம் என்று சொல்லப்பட்டு சுத்த போகத்திற்கே உரியதாக இருக்கிறது. நோய், மூப்பு முதலியன அங்இ இல்லை. அங்கு பிருமதேவன் வாசஞ்செய்யும் விசேஷச் சிறப்புடைய ஆலமரம் ஒன்றுள்ளது. அதனாலேயே அதற்குப் புஷ்கரத்வீபம் என்ற பெயர் உண்டாயிற்று. அந்தத் தீவைச் சுற்றிலும் அதன் அளவேயுள்ள சுத்தோதக சமுத்திரம் (சுத்த நீர்க்கடல்) சூழ்ந்துள்ளது. மைத்ரேயரே! இந்த விதமாக, அந்த ஏழு தீவுகளும் ஏழு சமுத்திரங்களால் சூழப்பட்டிருக்கின்றன. தீவுகளும் சமுத்திரங்களும் ஒரே அளவாயுள்ளன. முந்திய த்வீபச முத்திரங்களைவிடப் பிந்திய சமுத்வீப இரட்டித்த அளவுள்ளவை சகல சமுத்திரங்களிலும் எப்போதும் தண்ணீர் சமமாகவே இருக்கும் உயர்வதும் தாழ்வதுமில்லை. ஆயினும் ஒருபாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் அக்னியின் சம்பந்தத்தால் பொங்குவதும் அக்னியின் சம்பந்தம் நீங்கும் போது தணிவதுமாயிருப்பது போல் சுக்கில பக்ஷ, கிருஷ்ண பக்ஷ காலங்களில் சந்திரனுடைய உதய அஸ்தம காலங்களில் பொங்கவும் தணியவும் செய்கின்றன. இப்படிப் பொங்குவதும் அடங்குவதும் ஐந்நூற்று ஐம்பது அங்குலம் வரையுமே உள்ளது என்று நிச்சயிக்கப்பட்டுள்ளது. அந்த புஷ்கரத்தீவில் ஷட்சரங்களோடு கூடிய அன்னமானது முயற்சியின்றி கிடைக்கும் முன்பு சொன்ன சுத்த நீர்க்கடலின் புறத்தே உலகநிலை காணப்படவில்லை. ஆயினும் முந்திய பூமிக்கு இரட்டிப்பான சுத்த சுவர்ணபூமி காணப்படுகிறது. அங்கே ஒரு ஜீவனும் இல்லை. அதற்குப் பின்னால் பதினாயிரம் யோசனை உயரமும், பதினாயிரம் யோசனை பரப்பும் உள்ள லோகா லோகம் என்ற பெருமலை ஒன்றுள்ளது. அதன் நாற்புறமும் அந்தகாரம் சூழ்ந்துள்ளது. அந்த இருளுக்குப் புறத்தே அண்டச் சுவர் சுற்றிக் கொண்டிருக்கிறது. இவ்விதமாக இந்த பூமியானது சகல சமுத்திர த்வீபங்களோடும், அண்ட தாடகத்தோடும் ஐம்பது கோடி யோசனையளவுடன் யாவற்றுக்கும் உற்பத்தி ரக்ஷணைகளைச் செய்துகொண்டு, கந்தம் முதலிய குணங்கள் ஐந்தையும் கொண்டு விளங்குகிறது!

——————-

5. பாதாள லோகம்

மைத்ரேயரே! பூமியின் பரப்பளவைப் பற்றி சொன்னேன். அதன் உயரம் எழுபதினாயிரம் யோசனை. அதில் அதலம், விதலம், நிதலம், ரசாதலம், மகாதலம், சுதலம், பாதாளம் என்ற ஏழு கீழ் லோகங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் பதினாயிர யோசனை அளவுடையதாகும். இவற்றில் வெண்மை, கருமை, செம்மை, பொன்மையாகிய நிறங்களைக் கொண்ட பருக்கை மலைகளும் பொன்மயமான பூமிகளும் இருக்கின்றன. அங்குள்ள மித்தையான மேடைகளில் தானவர், தைத்யர், முதலிய அசுர ஜாதியினரும், பெருமையுடைய நாகஜாதியினரும், வாசஞ்செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு சமயம் நாரத முனிவர் பாதாளத்திலிருந்து ஸ்வர்க்கத்திற்கு வந்து, தேவ சபையில் இந்திரனை நோக்கி, பாதாள லோகங்கள் சொர்க்கலோகத்தை காட்டிலும் மிகவும் அழகாக இருக்கின்றன. அங்குள்ள நாகஜாதியினர் அணிந்துள்ள ஆபரணங்களிலுள்ள திவ்விய ரத்தினங்கள் மிகப்பிரகாசமாகவும், மிக மகிழ்ச்சியளிப்பவையாகவும் விளங்குகின்றன. ஆகையால் பாதாளத்துக்கு இணை ஏது? என்றார். அங்கே தைத்யதானவருடைய பெண்கள் அங்கும் இங்குமாகத் திரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்ப்பவன் மகா விரக்தியுடையவனாக இருந்தாலும் மையல் கொண்டு அவர்கள் மீது மனதை இழந்து விடுவான். அங்கு பகலில், சூரிய கிரணங்கள் வெப்பம் இல்லாமல் வெளிச்சத்தை மட்டும் வீசிக்கொண்டிருக்கும். அதுபோலவே சந்திரக் கிரணங்களும் சைத்தியஞ் செய்யாமல், வெளிச்சத்தை மட்டுமே தருகின்றன. இஷ்டத்திற்கேற்ற உணவுகளையும் பானங்களையும் அருந்தி அங்கிருப்பவர் காலஞ்செல்வதையே அறியாமல் குதூகலமாக இருக்கிறார்கள். அங்கு, மகாவினோதமான உதயமான வனங்களும், ரமணீயமான நதிகளும், தாமரைத் தடாகங்களும், குயில் முதலிய பறவைகளின் இனிய கீதமும், அதிசுகந்த புல்லாங்குழல் இசை, மிருதங்க முழக்கம் முதலான ஒலிகளும், ஆடல்பாடல்களும் இன்னும் வேண்டிய போக பாக்கியங்களும் எப்போதும் சம்பூரணமாய் அனுபவிக்கப்படுகின்றன. இந்தப் பாதாளத்துக்குக் கீழே, முப்பதாயிரம் யோசனையுள்ள இடத்திலே ஸ்ரீமகாவிஷ்ணுவின் தமோ குணாசிரயமான திருமேனியுடன் விளங்கும் ஆதிசேஷன் எழுந்தருளியிருக்கின்றார். அவர் அநந்தன் என்ற திருநாமத்தால் புகழப்பட்டு, தேவர்களாலும் முனிவர்களாலும் பூசிக்கப்படுகிறார். மேலும் ஸ்வஸ்திகம் என்ற ரேகையினால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் திருமுடிகளோடுங்கூடி அந்தத் திருமுடிகளிலுள்ள திவ்யரத்தின காந்திகளாலே திக்குகளை ஒளிரச்செய்து கொண்டும், லோக நலன் கருதி அசுரர்கள் அனைவரையும், சக்தி ஹீனராக்கி கொண்டிருக்கும் திருவிழிகளையுடையவராய், எப்பொழுதும் கிரீட வரிசைகளைத் தரித்து, முடியில் அக்கினி ஜ்வலிக்கும் வெள்ளி மலையைப் போலவும், நீளமானப் பட்டாடையையும் வெண்மையான முத்துமாலைகளையும் தரித்து, ஆகாய கங்கை மேலே விழவும் இடையிலே மேகஞ்சூழவும் இருக்கும் கைலாய மலையைப் போலவும் விளங்குகிறார்.

திருக்கைகளில் உலக்கையும், கலப்பையும் தரித்தவராய் காந்தி வாருணி என்ற தேவிகள் உபாசிக்க அவர் வீற்றிருக்கிறார். அவரது முகங்களிலிருந்து பிரளய காலத்திலே விஷாக்கினிச் சுவாலைகளோடு கூடிய காலாக்னி ருத்திரன் சங்கர்ஷண மூர்த்தியாலே ஆவேசிக்கப்பட்டு உண்டாகி ஜகத்தையெல்லாம் நாசஞ்செய்வான். அந்த ஆதிசேடன் இந்தப் பூமி மண்டலத்தை தனது திருமுடிகளில் ஓராபரணத்தைப் போலத் தரித்துக்கொண்டு, பாதாளத்தின் அடியில் சகலதேவதைகளாலும் பூஜிக்கப்படுகிறார். அங்குள்ள பகவானின் பலத்தையும், சக்தியையும் வருணிக்க தேவர்களாலும் இயலாது. நான் முன்பே சொன்னது போல, த்வீப, சமுத்திர பருவதாதிகளோடுங்கூடிய இந்தப் பூமண்டலம் அவரது திருமுடியில் ஒரு பூமாலையைப் போல் விளங்குகிறது. ஆனால் அவரது சறிப்பை விவரிக்க யாவருக்கும் இயலாது, அந்த அனந்தன் மதத்தினால் கண்கள் சுழலக் கொட்டாவி விடுவாரானால் இந்தப் பூமி முழுவதுமே நடுநடுங்கும் தேவ; தானவ, யக்ஷ, கந்தர்வ, சித்த சாரணாதிகளும் அவருடைய குணங்களின் முடிவைக் காணமாட்டாராகையால், அவருக்கு அனந்தன் என்ற திருநாமம் உண்டாயிற்று. அவருடைய திருமேனியில் நாககன்னியர் கைம்மலர்களால் சமர்ப்பித்த ஹரிச்சந்தணமானது, அவரது மூச்சுக்காற்றால் வீசப்பட்டு, திக்குகளில் மேல் கந்தப்பொடி இறைத்தது போலாகிறது. முன்பு ஒரு காலத்தில் கர்க்கர் என்ற பெயர்பெற்ற ஒரு மாமுனிவர் அவரை நெடுநாட்கள் ஆராதித்து, சூரியாதி சகல கிரகசாரக் கிரமங்களையும், அந்தக் கிரகசாரத்தினால் குறிக்கப்படுகிற பல சிறப்புகளையும், நன்றாக அறிந்தார். அத்தகைய அந்த நாகராஜனால் இந்தப் பூமியானது தரிக்கப்பட்டு, தேவ மனுஷியாதிகளோடு கூடிய லோக வரிசையைத் தாங்கிக் கொண்டிருக்கிறது.

————-

6. நரக லோகம்

மைத்ரேயரே! பூமியின் கீழே இருக்கும் இருட்பள்ளத் தண்ணீருக்குங்கீழே, பாபிகள் வதைக்கப்படும் நரகஸ்தானங்கள் உள்ளன. அவை ரவுரவம், சூகரம், ரோதம், தாலம், விஸஸுதம், மகாச்சுவாலம், தப்தகும்பம், லவணம், விலோகிதம், ருதிராம்பம், வைதரணி கிருமிசம், கிருமிபோஜனம், அசியத்திரவனம், கிருஷ்ணம், லாலாபட்சம், பூயவகம், அக்கினிச்சுவாலம் அதச்சிரம் சந்தமிசம் கிருஷ்ண சூத்திரம் தமசு அவீசி சுவபோசனம் அப்பிரதிஷ்டம் முதலிய ஆயிரம் கொடிய நாகங்கள் இயமனுடைய அதிகாரத்தில் இருக்கின்றன. இதில் ரவுரவம் குரு என்ற மிருகத்தினால் துன்புறுத்தும் இடம், சூகரம்-பன்றிகளால் பீடிக்கப்படும் இடம், ரோதம்-அசையவொட்டாமல் நிறுத்தப்படும் இடம், தாலம்-பனை மரத்தினின்று விழச்செய்து, அதன் மட்டைகளால் அறுக்கப்படும் இடம், விஸநஸம்-கைவாளால் அறுக்குமிடம். மகாச்சுவாலம்-பெருநெருப்பு, தப்தகும்பம்-காய்ச்சிய எண்ணெய்குடம். லவணம்-அறுத்து அறுத்து காய்ச்சி உப்பிடுவது. விலோகிதம்-உதிரத்தை உறியும்படிச் செய்வது, ருதிராரம்பம்-காய்ச்சிய ரத்தத்தில் போகுமிடம், வைதரணி-கடப்பதற்கு வருத்தமான ஆறு கிருமிசம் புழுக்கள் துளைக்கும் இடம். கிருமிபோஜனம்-புழுக்களைத் தின்னும் இடம், கிருஷ்ணம்-நெருங்கின இரும்பு முட்கள் மேலே நடக்க செய்யும் இடம், தாருணம்-சகிக்கத் தகாத குளிராயிருக்கும் இடம், சந்தமிசம்-சந்தமிசினி என்ற ஆயுதத்தால் நாக்கைப் பிடுங்கும் இடம், கசிபத்திரவனம்-நாற்புறமும் கொடிய கத்திகளை நாட்டி நடக்கவைக்குமிடம், பூயவஹம்-அதிக துர்க்கந்தமாய் நிமிஷமும் பொறுக்கக்கூடாத இடம், கிருஷ்ண சூத்திரம்-சக்கரத்தில் ஏற்றிக் கால்விரலில் ஒரு கயிற்றை மாட்டி உடல் எல்லாம் ஒன்றாகும்படி இறுக்கக் கட்டி அறுக்கப்படும்படியான இடம். இங்கு பாவிகளுக்கு ஆயுதபயம், ஜந்து பயம் முதலிய சகலவிதமான பயங்களும் உண்டு. அவற்றினுள்ளே விழுகிற பாவிகளுக்குள் பொய் சாட்சி சொல்பவன் பட்சபாதத்தினால் விவகாரத்தில் அநியாயமாகப் பேசுவோன், பொய் சொல்வோன் ஆகியோர் ரவுரவ நரகத்தில் வீழ்கின்றனர். சிசுவைக் கொல்வோர், பட்டணத்தை அழிப்போர், பசுக்களைக் கொல்வோர், மூச்சைத் திணற வைப்போர், ரோதமடைவோர், மத்தியபானஞ்செய்வோர் பிரமஹத்தி செய்வோர், பொன்னைத் திருடுவோர் இவர்களோடு சேர்ந்தவர்களும் சூகர நரகத்தில் வீழ்வார்கள். அரசனைக் கொல்வோன், வைத்தியனைக் கொல்வோன், குருவின் மனைவியோடு கூடி மகிழ்பவன், உடன்பிறந்தாளைச் சேர்ந்து இன்புறுபவன், அரசரின் ஊழியரைக் கொல்வோன் ஆகியோர் தப்தகும்பம் என்னும் நகரத்திற்கு இரையாவார்கள். மனைவியை விற்போன் தன்னிடம் அன்பாக இருப்பவனைக் கைவிடுவோன், அடைக்கலம் புகுந்தவனை அடித்து விரட்டுபவன் முதலானவர்கள் தப்த லோகத்திற்கு ஆளாவார்கள். மகள், மருமகள் முதலானவரோடு புணர்கின்றவன், குருவை அவமதிப்போன், கோபித்துத் திட்டுபவன், முதலானவர்கள் மகாச்சுவால நரகத்தைச் சேர்வார்கள். தேவதூஷணை செய்பவனுக்கும், புணரக்கூடாத பெண்களோடு புணர்கிறவனுக்கும் லவணம் என்னும் நரகம் கிடைக்கும். திருடனுக்கும், உலக ஒப்புரவை அழிப்பவனுக்கும் விலோமம் நேரிடும். தேவ தூஷணை, பிராமண தூஷணை, பிதுரு தூஷணைச் செய்பவனும், உத்தம வஸ்துக்களைத் தூஷிப்பவனும், பிறருக்குத் தீங்கு செய்வோனும், சூனியம் வைப்பவனும், கிருமிசம் கிருமி பஷம் என்பவற்றில் விழுவார்கள்.

பிதுர்க்களையும் அதிதிகளையும் விட்டு முன்னதாக உண்பவனும், வேடர் முதலியோருக்கு அம்புகள், கத்திகள் முதலிய ஆயுதங்களைச் செய்து கொடுப்பவர்களும், விசஸநத்தைச் சேர்வார்கள். அயோக்கியரிடத்தில் தானம் ஏற்போர், வைதீக கருமங்களுக்குத் தகாதவனுக்கு அவற்றைச் செய்விப்பவன், சோதிட நூலை உணராமல் பயன் சொல்வோன் ஆகியோர் அதோமுகத்தில் வாதைப்படுவார்கள். சாகசஞ்செய்பவனுக்கும் பிறருக்குக் கொடுக்காமல் தான் ஒருவனே நல்ல வஸ்துவைப் புசிப்பவனுக்கும், பூயவக வேதனை உண்டாகும். பூனை, கோழி, ஆடு, நாய், பன்றி, பறவைகள் முதலியவற்றை எப்போதும் மிகவும் கொஞ்சி வளர்ப்பவனும் அந்த நரகத்தையே அடைவான். கூத்தாடிப் பிழைக்கும் பிராமணன், மல்யுத்தம் செய்து பிழைக்கும் பிராமணன், தூண்டில் முதலிய கருவிகளால் மீன்களைப் பிடிக்கும் பிராமணன், குண்டகோளகர் முதலியோரின் அன்னத்தைத் தின்பவன், விடமிடுவோன், கோட் சொல்வோன், மனைவியைக் கூட்டிக் கொடுத்து பிழைப்பவன், பருவமற்ற காலத்தில் பொருளாசையால் பருவச் சடங்குகளைச் செய்பவன், வீட்டைக் கொளுத்துவோன், நட்பைக் கெடுப்பவன், பறவைகளைக் கொலைக்கு விற்பவன், ஊருக்காக யாகஞ்செய்பவன், யாகத்தில் சோமம் என்ற ஆட்டாங்கொடியை விற்பவன் முதலியோர் ருதிராம்பத்தில் விழுவார்கள். யாகத்தை அழிப்பவன், ஊரையழிப்பவன் முதலியோர் வைதரணி நரகத்தை அடைவார்கள். பணம், வயது முதலியவற்றால் செருக்கடைந்து, கிராமத்து எல்லைகளை மாற்றுபவர்கள், சுத்தம் இல்லாதவர்கள், மோசஞ்செய்து பிழைப்பவர்கள் ஆகியோர் கிருஷ்ணத்தை அடைவார்கள். வைதீக உபயோகமில்லாமல் வீணாகப்பலாசு முதலிய மரங்களை வெட்டுபவர்கள், ஆடுகளை விற்பவர், மிருகங்களைக் கொன்று திரிகின்றவர் முதலியவர்களும் அக்கினிச் சுவாலத்தில் பிரவேசிப்பார்கள். கொளுத்தக் கூடாத பாண்டம் முதலியவற்றில் தீயிடுகின்றவனும், அதிலேயே சேருவான், விரதலோபஞ் செய்பவன், தனக்குரிய ஆசிரம தர்மத்தை விடுவோன், சந்தமிசத்தில் வீழ்ந்து வேதனைப்படுவான். பிரமச்சாரிகளாக இருந்தும் பகலிலும் இரவிலும் ஜீவசத்தான சுக்கிலத்தை விடுபவர்கள், புத்திரராலே ஓதுவிக்கப்படுபவர்கள் ஆகியோர் சுவபோஜனத்தில் படுவார்கள், தத்தமது வர்ணாசிரம விரோதமான காரியங்களைச் செய்தல் மனோவாக்குக் காயங்களினால் பாதசஞ் செய்தல் முதலான துர்ச்செயல்களை உடையவரெல்லாம் இதுபோலவே அந்தந்த நரகங்களில் சேர்வார்கள். இதுபோலவே அநேகவிதமான பாவங்களைச் செய்பவர்கள் வேதனைப்படும்படியான நரகங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. நரகலோகத்திலிருக்கும் பிராணிகள் தலைகீழாக இருந்து கொண்டு சுவர்க்கத்திலுள்ள தேவர்களைப் பார்த்துத் துன்பப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். தலைகீழாக அவஸ்தைப்படும் நரகவாசிகளைப் பார்த்து தேவர்களும் மிகவும் பயந்து கொண்டிருப்பார்கள். பாவிகள் நரக வேதனைகளை அனுபவித்த பிறகு, தாவரங்களாகவும், புழுக்களாகவும், ஜலவாசிகளாகவும், பறவைகளாகவும், மிருகங்களாகவும், மனிதராகவும், மனிதரில் தர்மசீலராகவும், தேவர்களாகவும் மோக்ஷமயைத்தக்கவராகவும் ஆவார்கள்.

இவர்கள் எல்லாம் முந்தினவரில் பிந்தினவர் ஆயிரத்தில் ஒரு பங்காய் முந்தையப் பிறவியிற் பிந்தியப்பிறவித் தொடர்பு கொண்டு, மோக்ஷமடையும் வரை உழன்று கொண்டே இருப்பார்கள். சுவர்க்கத்தில் எத்தனை ஆன்மாக்கள் இருக்குமோ, அத்தனை ஆன்மாக்கள் நரகத்திலும் உண்டு. எந்த ஜீவன் பாவஞ்செய்து பிராயச்சித்தம் செய்து கொள்ளவில்லையோ, அது நரகத்தையடையும், வேதங்களில் எந்தெந்தப் பாவங்களுக்கு, எந்தெந்தப் பிராயச்சித்தம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவற்றை நன்றாக ஆராய்ந்து மனு முதலிய மாமுனிவர்கள், அற்பத்திற்கு அற்பமாகவும், கனத்திற்குக் கனமாகவும் தாங்கள் இயற்றிய தரும நூல்களில் கூறியுள்ளனர். மைத்ரேயரே! சாந்திராயணம் முதலிய தவங்களாயும், யக்ஞம், தானம் முதலிய கர்மங்களாயும் விதிக்கப்பட்டிருக்கும் சகல பிராயச்சித்தங்களும் மேலான பிராயச்சித்தம் ஸ்ரீகிருஷ்ணனுடைய ஸ்மரண சங்கீர்த்தனங்களேயாகும்! அதாவது எம்பெருமான் நிருபாதி சர்வசேஷி என்றும் தான் அவனுக்குச் சர்வதேச சர்வகால சர்வாவஸ்தைகளிலும் கிருபாதிகதாசன் என்றும், அவற்றில் கர்த்துருத்வாதிகள் சுவா தந்தரியத்தால் அல்லவென்றும் அவற்றைப் போக்கும் உபாயம் அவனே என்றும் நினைத்து, அவனது திருவடிகளையே சரணடைந்து அவனது திருநாமங்களையே கீர்த்தனம் செய்து கொண்டிருத்தலாகும். ஆகையால் இந்த ஸ்ரீகிருஷ்ண ஸ்மரணப் பிராயச்சித்தமானது பகவத்குண பிரபாவத்தாலும் ஆத்ம ஸ்வரூபத்தாலும் தெளிந்து நிற்கின்ற விலக்ஷணதிகாரிக்கேயன்றி மற்றவருக்கல்ல. மற்றவருக்கோ கருமாதிகளே என்று தெரிந்து கொள்ள வேண்டும். எவன் பாவஞ்செய்தபோது, ஐயோ! இனிச் செய்யமாட்டேன். எம்பெருமான் நியமித்த நியமனத்தை உல்லங்கனம் செய்தேனே இனி என்ன செய்வேன்? என்று மனம் தரிப்பானோ அவனுக்கே பிராயச்சித்தத்தில் அதிகாரமுண்டு. அத்தகையவனுக்கு விதித்த பிராயச்சித் தங்களுக்குள்ளே முன்சொல்லப்பட்ட ஸ்ரீஹரி சம்ஸ்மரணமே சிறந்தது, அதுவும் ஒரு தரம் செய்வதே போதுமானது. பலதரஞ் செய்தாலே இனிச் செய்யும் பாவங்களுக்குக் காரணமான பூர்வ பாவங்களின் ஸ்மஸ்காரத்தையழித்து, வரும் பாவங்களை நாசஞ்செய்யும். இந்த ஸ்ரீஹரிஸ்மரணத்துக்கு காலநியமம் வேண்டுவதில்லை. காலை, நடுப்பகல், மாலை, இரவு ஆகிய எந்தக் காலத்திலும், எந்த மனுஷனானாலும், எவ்விதமாக வேண்டுமானாலும் ஸ்மரிக்கலாம். அவ்விதம் ஸ்மரித்துக் கொண்டே ஸ்ரீமந்நாராயணனைச் சரணமடைந்தவன் அப்போதே சகல பாவங்களிலிருந்தும் கிலேசங்களிலிருந்தும் நீங்கியவனாய் மோட்சமடைவான். அத்தகையவனுக்குச் சொர்க்கத்தை அடைவது இடையூறாகவே இருக்கும். ஜப ஹோம அர்ச்சனாதி சகல கருமங்களிலும் ஸ்ரீவாசுதேவ ஸ்மரணஞ்செய்கின்ற மகாத்மாவுக்கு இந்திரப்பதவி கிடைப்பதும் இடையூறுதான். ஏனென்றால் மீண்டும் திரும்பும்படியான சொர்க்கத்தை அடைவதற்கும் மோக்ஷ காரணமான ஸ்ரீவாசுதேவாதி திவ்ய நாம ஸ்மரணத்துக்கும் உள்ள தாரதம்மியத்தை நீரே அறிந்து கொள்வீராக. ஆகையால் எப்பொழுதும் ஸ்ரீவிஷ்ணுபகவானை ஸ்மரிக்கிற மனிதன் அவனது சகல பாதகங்களும் நீங்குவதால் நரகமடையமாட்டான்.

மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதல்லவா சொர்க்கம்? நரகமோ இதற்கு மாறாக இருப்பதாகும். புண்ய பாவங்களே சொர்க்க நரக சாதகங்கள். ஆகையால் உபசார வழக்காய் அவைகளே சொர்க்க நரகமாக வழங்கப்படுகின்றன. மேலும் ஒரே வஸ்து புருஷ பேதத்தால் சுகஹேதுவாகவும், துக்க ஹேதுவாகவும், பொறாமை கோபம் முதலியவைகளுக்குக் காரணமாகவும் இருக்கிறது. மேலும் ஒருவனுக்கு ஒரே வஸ்து காலதேச அவஸ்தா பேதத்தால் ஒருமுறை சுகஹேதுவாகவும், மற்றொரு முறை துக்க ஹேதுவாகவும், கோபானுக்கிரக ஹேதுவாகவும் ஆகின்றது. ஆகையால் இது சுகம், இது துக்கம் என்று ஒரு வஸ்துவை நிர்ணயித்துச் சொல்லக்கூடுவதில்லை. கர்மவசமான மனோவிருத்தி பேதத்தினாலே, வஸ்துக்களில் சுக துக்காதி ஸ்வரூபமுண்டாவதைப் பற்றி பகவத் பிராப்தியாகிற மோக்ஷத்தைத் தவிர மற்றெல்லா நிருபாதிக சுகரூபமாயும் ஸ்திரமாயும், இராமையினால் சுவர்க்காதிகளும் இடையூறாகும். இவ்விதமாக மனோவிருத்தியான ஞானமானது விஷயங்களை பற்றுமாயின், சம்சார பந்தத்துக்குக் காரணமாகிறது. அப்படிப் பற்றாமல் இருந்தால் பிரமப் பிராப்திக்குக் காரணமாகின்றது. ஆகையால் மனோவியாபாரத்தினாலே சம்சார மோக்ஷங்களாகிய சகலமும் உண்டாகின்றன. மோக்ஷ சாதனமாகிய வித்தையும், பயனைக் கருதாமல் செய்யும் செயலாகிய அவித்தையும் ஞானத்தினாலேயே சாதிக்கப்படுபவை. மைத்ரேயரே! நீங்கள் கேட்டபடி பூமண்டல, பாதாள, நரகங்கள், மலைகள், நதிகள், சமுத்திரங்கள் ஆகியவை பற்றிய யாவையும் தங்களுக்குச் சுருக்கமாகச் சொன்னேன். இனி நீங்கள் எதைக் கேட்க விரும்புகிறீர்கள்? இவ்விதமாக பராசரர் கேட்டார்.

——————-

7. புவர்லோக, மேல் லோகங்களும் கிரக நிலைகளும்

பிரம்ம முனிவரில் உயர்ந்தவரே பூலோக சொரூபங்களை நீங்கள் கூறக்கேட்டு நான் மிகவும் மகிழ்ந்தேன். இனி புவர்லோகம் முதலிய மேலுலகங்களின் சொரூபங்களையும் சூரியன் முதலிய கோள்களின் அமைப்பையும் அளவுகளையும் சொல்லியருள வேண்டுகிறேன் என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! சூரிய சந்திரர்களது கிரணங்களாலே எவ்வளவு தூரம் பிரகாசம் படுகிறதோ, அவ்வளவு தூரம் சமுத்திரங்கள்; நதிகள், மலைகள் முதலியவற்றோடு கூடிய பாகமானது பூலோகம் என்று வழங்கப்படுகிறது. இந்தப் பூமியானது அண்டகடாஹத்தை நாற்புறமும் தொட்டிருப்பதாகிய வட்டப்பரப்பின் அளவு எதுவோ; அதுவே வியாசப் பிரமாணமான அளவையுடைய ஆகாயமாகும். இது புவர்லோகம்! பூமிக்கு லக்ஷம் யோசனை தூரத்திலே சூரிய மண்டலம் அமைந்துள்ளது. அதற்கு லக்ஷம் யோசனை தூரத்திலே சந்திரமண்டலம் இருக்கிறது. அந்தச் சந்திர மண்டலத்துக்குச் சரியாக லக்ஷம் யோசனை தூரத்தின் மேலே நக்ஷத்திர மண்டலம் இருக்கிறது. அந்த நக்ஷத்திர மண்டலத்துக்கு மேலே இரண்டு லக்ஷம் யோசனை தூரத்திலே புதன் மண்டலம் இருக்கிறது. அதற்கும் அதனளவு தூரத்தில் சுக்கிர மண்டலம் இருக்கிறது. சுக்கிரமண்டலத்துக்கு அவ்வளவு தூரத்தில் அங்காரக மண்டலமும், அதற்கு அவ்வளவு தூரத்தில் பிரகஸ்பதி மண்டலமும், அதற்குமேல் அவ்வளவு தூரத்தில் சனி மண்டலமும் இருக்கின்றன. அதற்கு மேல் லக்ஷயோசனை தூரத்தில் துருவ மண்டலமானது சகல சேரதிச் சக்கிரத்திற்கு நடுவே நாட்டியுள்ள கம்பத்தைப் போல் விளங்குகிறது. இவ்வளவுதான் சுவர்லோகம் இவ்விதம் உயரத்திலுள்ள மூன்று லோகமும் யாக பலானுபவத்துக்கு ஸ்தானமாக இருக்கிறது. யாகமோ இந்தப் பாரத வருஷத்திலேயே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அந்த துருவ மண்டலத்துக்கும் மேலே கோடி யோசனை தூரத்திலே, ஒரு கல்பகாலம் வாழ்கின்ற பிருகு முதலிய முனிவர்கள் வாசஞ்செய்யும் மகர்லோகம் இருக்கிறது. அதற்கு மேலே இரண்டுகோடி யோசனை தூரத்தில் பிருமபுத்திரரான ஜனகாதிகள் வாசஞ்செய்யும் ஜனலோகம் இருக்கிறது. அதற்குமேல் எட்டுக்கோடி யோஜனை தூரத்தில் தபோலோகம் இருக்கிறது. அதில் வைராஜர் என்ற தேவதைகள், பிரளய அக்கினியினால் உண்டான வெப்பம் இல்லாமல் இருக்கின்றனர். தபோலோகத்துக்கு மேல் பன்னிரண்டு யோஜனை தூரத்தில் சத்தியலோகம் இருக்கிறது. அதுதான், மீண்டும் மரணமடையாதவர்கள் வாசஞ்செய்யும் பிரம்மலோகம் என்று கருதப்படுகிறது. இவற்றின் விவரத்தைச் சுருக்கமாகச் சொல்கிறேன். காலாலே நடந்து செல்லத்தக்க தாய்ப்பூமி சம்பந்தப்பட்ட வஸ்து எதுவுண்டோ அதுவெல்லாம் பூலோகம் என்று சொல்லப்படும். அதன் நிலப்பரப்பை முன்னமே சொல்லிவிட்டேன். பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில்; சித்தர்களும் முனிவர்களும் வாசஞ்செய்யும் இடம் எதுவோ, அதுவே புவர்லோகம். அது லோகங்களில் இரண்டாவதாகும்.

துருவனுக்கும் சூரியனுக்கும் நடுவில் பதினான்கு லக்ஷம் யோஜனை அளவான இடம் சுவர்க்கலோகம் ஆகும். இந்த மூன்று உலகங்களுக்கும் கல்பந்தோறும் உண்டாக்கப்படுவதால் கிருதகம் என்றும், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்ற இந்த மூன்றும் கல்பந்தோறும் உண்டாக்கப்படாமையினால் அகிருதகம் என்றும் வழங்கப்படும். இந்தக் கிருதகம், அகிருதகம் என்ற இரண்டுக்கும் நடுவில் மஹர்லோகம் இருக்கிறது. அது கல்ப முடிவில் ஜன சூனியமாகிறதேயன்றி, அதன் சொரூபம் நசிப்பதில்லை. ஆகையால், அது கிருதாகிருதகம் என்று வழங்கப்படும். மைத்ரேயரே! இந்த மேலேழு லோகங்களும், பாதாளங்களாகிய கீழேழுலகங்களும் பிரம்மாண்டத்தின் பரப்பு எனப்படும். இவை விளாம்பழத்தில் விதையானது ஓட்டினால் சுற்றிலும் சூழப்பட்டிருப்பது போல, மேலும் கீழும் பக்கங்களிலும் அண்ட கடாஹத்தினாலே சூழப்பட்டுள்ளது. இந்த அண்ட கடாஹமானது, பத்து மடங்கு அதிகமான தண்ணீராலும் அந்த ஜலமாவது அக்கினியினாலும் அந்த அக்கினியானது வாயுவினாலும், அந்த வாயுவானது ஆகாசத்தினால் பப்பத்துப் பங்கு அதிகமாக சூழப்பட்டிருக்கின்றன. அந்த ஆகாசமும் பத்துப் பங்கு அதிகமான பூதாதியினாலும், அந்தப் பூதாதியும் பத்துப் பங்கு அதிகமான மஹத் தத்துவத்தாலும் சூழப்பட்டுள்ளது. இந்த மஹத் தத்துவத்தைப் பிரகிருதி தத்துவம் சூழ்ந்துள்ளது. அது காலத்தைப் பற்றிய முடிவையோ இடத்தைப் பற்றிய அளவையோ கொண்டிராமையால், அனந்தம் என்று வழங்கப்பட்டு, முடிவில்லாததாய் யாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது. அதில் இப்படிப்பட்ட அநேக ஆயிரங்கோடி கோடி அண்டங்கள் உள்ளன. அன்றியும் ஞானத்தினாலே வியாபிக்கத்தக்கவனும், சுயம்பிரகாசனும் ஞான சொரூபியுமான சீவனும் அந்தப் பிரதான தத்துவத்தின், மரத்தில் நெருப்பைப் போலவும், எள்ளில் எண்ணெயைப் போலவும் மறைந்துள்ளான். இவ்விதமாக ஒன்றோடொன்று கலந்திருக்கும் தன்மையுடைய பிரகிருதியும் புருஷனும் சகலபூத வியாபகமான ஸ்ரீவிஷ்ணு சக்தியினாலே வியாபிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓ மகாபுத்திமானே! அந்த விஷ்ணு சக்தியே பிரகிருதி புருஷர்களை வேறுபடுத்துவதாகிய மோக்ஷத்துக்கும், கூட்டுவதாகிய பந்தத்துக்கும் காரணமாக இருப்பதுந் தவிர, படைப்புக்காலத்திலே சத்துவாதி குணங்கள் விஷமப்படுவதற்கும் காரணமாக இருக்கிறது. காற்றானது அநேகம் நீர்த்துளிகளை யாதொரு பற்றுமில்லாமல் வகிப்பது போல் அந்த விஷ்ணு சக்தியும் பிரகிருதி புருஷ ரூபமான யாவற்றையும் பற்றில்லாமலேயே வகிக்கின்றது. வேர், கவை, கிளை, இலை முதலிய அவயவங்களுடன் கூடிய மரமானது, முதலில் விதையிலிருந்து எப்படி உண்டாயிற்றோ, எப்படி அதனின்று வேறுவிதைகளும், அவற்றிலிருந்து வேறு மரங்களும் உண்டாகி, அவ்விதமான காரணத்தினாலே வியாபிக்கப்பட்டிருக்கின்றனவோ, அதுபோலவே சத்துவாதி குணமயங்களான மஹத்தத்துவம் முதல் பிருத்வியாதி பூதங்கள் ஈறாக உள்ள வஸ்துக்கள் யாவும் அவ்வியக்கத்தினின்றே உண்டாகின்றன. பிறகு அவற்றிலிருந்து தேவ, மனுஷியாதிகளும் அவர்களிடமிருந்து அவர்களுடைய புத்திரர்களும், பவுத்திரர்களும் உண்டாகி வருகின்றனர். விதையிலிருந்து மரமும், மரத்திலிருந்து விதைகளும் இப்படியாகப் பெருகி வருவதனால் அவற்றிற்குக் குறையவில்லை. அந்த மரம் விதையிலிருந்து உண்டானாலும் அதற்கு ஆகாசம், காலம் முதலானவை கூடச் சேர்த்திருத்தலினாலே காரணமாவது போல், பிரகிருதியிலிருந்து உண்டாகிற பிரபஞ்சத்துக்கு ஸ்ரீஹரிபகவான் அந்தப் பிரகிருதியின் சான்னியத்தினால் காரணமாகின்றதால் பரிணாம விகாரமில்லாமல் இருக்கின்றார்.

மைத்ரேயரே! நெல்லின் விதையிலேயே மறைந்திருக்கிற வேர், தாள்இலை, முளை, கதிர், பூ, பால், அரிசி, உமி என்பன. உழவு, விதைப்பு, நீர் பாய்ச்சல் முதலிய முளைத்தற்கு வேண்டுவதான காரியக் கருவிகளைப் பெற்று நன்றாய்ப் புலனாவதுபோல் பலவிதமான கர்மங்களில் வீழ்ந்துள்ள ஆத்மாக்கள், ஸ்ரீவிஷ்ணு சக்தியை அடைந்து, தேவ மனுஷ்யாதி பேதத்தினால் வெளிப்படுகின்றன. வேதத்தின் காரண வாக்கியங்களின்படி எங்கிருந்து இந்த உலகமெல்லாம் உண்டாகுமோ, எங்கே நிலைபெற்றிருக்குமோ, எங்கே லயத்தை அடையுமோ, எதனால் வியாபிக்கப்பட்டிருக்குமோ, அந்தப் பரப்பிரமம் விஷ்ணுவேயாகும். பிரம்மம் என்பது பரமபதம் என்பதும் சத்து, அசத்து என்பதும் எதுவும் அந்த ஸ்ரீவிஷ்ணுவேயாகும். இந்த உலகங்கள் யாவும் வித்தியாசமின்றி அந்த விஷ்ணுவினுடையதாய் இருக்கிறது. அவ்யக்தமான மூலப்பிரகிருதி சரீரகனும், வியக்தமான லோக சரீரகனும் அந்த ஸ்ரீவிஷ்ணுவே! அந்த ஸ்ரீவிஷ்ணு தேவனே, தன்னைப் பெறுவதற்குச் சாதனமான யாகாதிகளுக்குக் கர்த்தாவாகவும் உத்தேசிய தேவதையாகவும் கிரியா சொரூபியாகவும் அதன் பயனாகவும் அந்தக் கிரியைகளின் உபகரணங்களான சொரூபம் முதலியனவாகவும் இருக்கின்றன. அவனைவிட மேலானது வேறொன்றும் இல்லை. அவனே யாவற்றுக்கும் சொரூப யோக்கியதா சக்திகளைக் கற்பிப்பவன் என்பது கருத்து.

————-

8. சூரிய மண்டலமும் அதன் மார்க்கமும்

மைத்ரேயரே! பிரம்மாண்ட நிலையை உமக்கு விளக்கிக் கூறினேன். இனி சூரியன் முதலான கிரகங்களின் நிலையைச் சொல்லுகிறேன் கேளுங்கள். சூரியனுடைய தேரானது பதினாயிரம் யோசனை விசாலமுள்ளதாய் ஒன்பதாயிரம் யோசனை வரை சூரிய மண்டலத்தினால் வியாபிக்கப்பட்டிருக்கும். அதன் இருபுறத்து இருசுகளையும் சேர்க்கும் கட்டையானது இருபதினாயிரம் யோசனை அளவையுடையது. அதன் ஒருபுறத்தில் இருசு ஒரு கோடியே ஐம்பத்தேழு லக்ஷம் யோசனையளவுள்ளது. அதிலே தான் சக்கரம் ஒன்று மாட்டப்பட்டிருக்கும். அந்தச் சக்கரமானது சம்வச்சர ஸ்வரூபமாக இருக்கும். அதற்குக் காலை, நடுப்பகல், பிற்பகல் என்ற நாட்பிரிவுகள் மூன்றும் இருசு கோத்திருக்கும் இடமாயிருக்கும். சம்வத்சரம், பரிவச்சரம், இடாவச்சரம், அநுவச்சரம், இத்வச்சரம் என்ற வருஷங்கள், பேதங்கள் ஐந்தும் அரங்களாகும். இரிதுக்கள் ஆறும் சுற்று வட்டங்களாக இருக்கும். இத்தகைய அவயவங்கள் உள்ளதாயும், க்ஷயமில்லாதிருக்கிற அந்தச் சக்கரத்திலே தான் காலச்சக்கரம் முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அந்த இரதத்துக்கு காயத்ரி பிருகிதி உஷ்ணிக் ஜகதீ, திருஷ்டுப் அனுஷ்டுப், பஸ்தி என்ற சந்தங்கள் ஏழுமே குதிரைகளாக இருக்கின்றன. அந்தச் சூரிய ரதத்தில் மற்றொரு புறத்து இருசு, நாற்பத்தையாயிரத்து ஐநூறு யோசனை அளவுள்ளது. நுகத்தடியின் அளவும் இருசின் அளவும் சமமாகும். அந்தச் சிற்றிருசானது, தனது நுகத்தடியின் பாதியோடு கூட, வாயுரூபமான கயிறுகளுடன் கட்டப்பட்டுத் துருவனை ஆதாரமாகக் கொண்டுள்ளது. பேரிரிசு கோக்கப்பட்டிருக்கம் சக்கரமானது மானசோத்திர பர்வதத்தின் மீதுள்ளது. அந்தப் பர்வதத்தின் மேல் கிழக்கில் வஸ்வோகசாரா என்ற இந்திரனுடைய பட்டணமும், தெற்கில் சம்யமனி என்ற எமனுடையப் பட்டணமும் மேற்கில் சுகா என்ற வருணனுடைய பட்டணமும், வடக்கில் விபாவநீ என்ற சோமனுடைய பட்டணமும் இருக்கின்றன.

சூரியன் தென்திசையை அடையும்போது ஜோதிச்சக்கரத்தின் கடைசியை அடைந்தவனாகி, எறிந்த அம்பைப் போல் விரைவாக ஓடுகிறான். அந்தச் சூரியபகவான் தான் இரவு பகல் என்ற ஏற்பாட்டுக்குக் காரணமாயும் யோகிகளுக்குச் சகல கிலேசங்களும் விடுபட்டுப் போகுங்காலமாகிய முடிவுக்காலத்தில் தேவயான வழியாகவும் இருக்கிறான். (தேவயானம் என்பது அர்ச்சிராதி மார்க்கம், அதாவது முதலில் அக்னி, பிறகு முறையே பகல் பூர்வ பக்ஷம், உத்தராயணம், வருஷம், காற்று, சூரியன், சந்திரன், மின்னல், வருணன், இந்திரன், பிரமன் என்பவர்களது எல்லைகளாம். மோக்ஷம் அடைபவர்கள் செல்லும் வழி இதுவேயாகும். சூரியன் நமக்கு எப்படிப் பகலிலே அதிக உஷ்ணமாயும், பிரகாசமாயும் காணப்படுகிறானோ அதுபோலவே எங்கும் இருக்கிறான். ஆகையால் உதயாஸ்தமன பேதங்கள் இல்லை. ஆனால் திக்குவி திக்குகள் எதிலும் எவர்களுக்கு எங்கே காணப்படுகிறானோ அங்கே உதயம் என்றும், அதற்கு நேர்கோணத்தில் அஸ்தமனம் என்றும் உலக விவகாரம் உண்டாயுள்ளது. ஆகவே, எப்பொழுதும் உதயாஸ்தமனங்கள் உண்டாயிருக்கிற காரணம் இவ்வளவேயல்லாமல் சூரியனுக்கு இயல்பாக உதயமும் அஸ்தமனமும் இல்லவே இல்லை. இந்திரன் முதலியவருடைய பட்டணங்களில் சூரியன் எங்கிருந்தாலும் அதனையும் பக்கத்துக் கோணங்கள் இரண்டையும் புரங்கள் இரண்டையும் ஸ்பரிசிக்கிறேன். உதயமானது முதல் கிரணங்கள் வளரப்பெற்றிருந்து நடுப்பகலுக்கு மேல் கிரணங்கள் சுருங்கப்பெற்றவனாய் அஸ்தமனமாகிறான். இந்த உதயாஸ்தமனங்களைக் கொண்டுதான், கிழக்கு என்றும் மேற்கென்றும் திக்குகள் வகுக்கப்பட்டன. இதைக்கொண்டே வலதுபுறம் தென்திசை எனவும், இடதுபுறம் வடதிசை எனவும் குறிக்கப்படுகின்றன. சூரியன் எதிரில் எவ்வளவு காய்கிறானோ, அவ்வளவு பின்புறத்திலும் பக்கங்களிலும் காய்கிறான். ஆனால் மகாமேருவில் இருக்கிற பிரமசபையில் செல்லும்போது, அதன் காரணங்களாலே, சூரிய கிரணங்கள் ஒளி மழுங்கித் திரும்புவதால் அந்தச் சபையைச் சூரியன் காய்வதில்லை. இதுபோன்ற உதய அஸ்தமயங்களினாலேயே, கிழக்கு முதலிய திசைகள் ஏற்பட்டிருப்பதால், மேருமலையானது சகல வருஷங்களுக்கும் வடக்காகவே ஆகின்றது. அதனால் மேருவின்மேல், பிரமசபையின் காந்தியினால் பகலும், சூரிய சஞ்சாரமின்மையால் இரவுமாக எப்போதுமே இருக்கும்.

அஸ்தமயமாகிற சூரியனுடைய கிரணங்கள் அக்னியில் பிரவேசிப்பதால் அந்த அக்கினியானது, இரவில் அதிகமாகப் பிரகாசிக்கிறது. அக்கினிக் கிரணங்கள் பகலில் சூரியனிடத்தில் பிரகாசிப்பதால் சூரியன் அதிகமாய்ப் பிரகாசிக்கிறான். இப்படியாக உஷ்ணப் பிரகாசமுள்ள தேஜஸ் இரண்டும் மாறி மாறி ஒன்றிலொன்று கலந்து விளங்குகின்றன. மேருவின் புறத்திலும், வடபுறத்திலும் பூமியின் பாதியில் சூரியன் உதயமாகும்பொழுது இருளான இரவும், வெளிச்சமான பகலும் முறையே தண்ணீரில் பிரவேசிப்பதால், அந்தத் தண்ணீரானது சிறிது சிவப்பாகவும்,வெளுப்பாகவும் ஆகிறது. இவ்விதமாக புஷ்கரத்தீவின் நடுவினால் பூமியில் முப்பதில் ஒரு பங்கைச் சூரியன் கடப்பதனால் நாலில் முப்பதில் ஒரு பங்காகிய முகூர்த்தக்காலம் உண்டாகிறது. குயவனுடைய சக்கரத்தில் திரிகின்ற பூச்சியைப் போல, ஜோதிச் சக்கரத்தில் திரிகின்ற சூரியன் தென்திசை நீங்கி, உத்தராயணத்தின் முதலான மகரத்திலே வரும்போது, முற்பட்ட பகலிரவுகளை விட வித்தியாசமான பகலிரவுகளைச் செய்து வருவான். பிறகும் அப்படியே முறையாகக் கும்பம்; மீனம் என்ற ராசிகள் இரண்டையும் கடந்து மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது, பூமத்தியாகிய விஷுவத்தின் கதியைச் சேர்ந்து பகலிரவுகளைச் சரியாகச் செய்வான். அங்கிருந்து சஞ்சரிக்கும் போது, நாள்தோறும் பகல் வளர்ந்து கொண்டே வர, இரவு க்ஷீணித்துக் கொண்டே வரும். இப்படியாக மிதுனம் வரையில் சூரியன் சென்று, கர்க்கடக ராசிக்குத் திரும்பும் போது தக்ஷிணாயனம் உண்டாகும். குயவனது சக்கரத்தின் நுனியிலிருக்கும் பூச்சியைப் போல், தக்ஷிணாயனத்திலே சூரியன் விரைவாகச் சஞ்சரித்துக் கொண்டு, பன்னிரண்டு முகூர்த்த காலமான பகலினால் பதின்மூன்றரை நட்சத்திரங்களையும், பதினெட்டு முகூர்த்த காலமான இரவினாலே மற்ற பதின்மூன்றரை நட்சத்திரங்களையும் கடக்கிறான். மறுபடியும் உத்தராயணத்துக்கு வரும்போது, குயவனின் சக்கரத்தின் நடுவே கிடக்கும் பூச்சியைப் போல், மந்தமாகச் சஞ்சரித்துக் கொண்டு முந்திய இரவு பகல்களுக்கு மாறான இரவு பகல்களை உண்டாக்குகிறான். ஆகவே, உத்தராயணத்தில் பகலின்; வளர்ச்சி பதினெட்டு முகூர்த்த அளவாகவும், இரவின் குறைவு பன்னிரண்டு முகூர்த்த அளவாகவும், இருக்கும் சக்கரத்தின் நாபியானது அங்கேயே அதிமந்தமாய்ச் சுழல்வது போலவே ஜோதிச் சக்கர மையத்தினாலேயே துருவனும் சுழன்று கொண்டிருக்கிறான். இவ்விதம் தட்சிணாயன உத்தராயணங்களிலே; அந்தந்த ராசி மண்டலங்களைச் சூரியன் கடக்கும். திறத்தால், பகல் வளர இரவு குறைதலும், இரவு வளரப் பகல் குறைவதுமாக இருக்கும் சூரியனோ பகலிலும் இரவிலும் அவ்வாறு ராசிகளைச் சமமாகக் கடக்கிறான். ஆயினும் ராசிகளின் அளவு வித்தியாசத்தினால் இரவு பகல்களில் வித்தியாசம் உண்டாகின்றது. மேலும் இந்த மாறுபாடு அங்கங்கேயிருந்து பார்ப்பவர்களுடைய பார்வையிற்படுகின்ற உதயாஸ்தமய பேதத்தினாலுமாகும்.

இரவு உஷையென்றும், பகல் வியுஷ்டி என்றும் வழங்கப்படும் இந்த உஷா, வியுஷ்டிகளின் நடுவானது சந்தி என்று வழங்கப்படும். இப்படிச் சந்தி ஏற்படும்போது, மந்தேகர் என்ற அரக்கர் சூரியனையே புசிக்க முயல்கிறார்கள். அவர்களுக்கு நித்ய மரணமும் உடல் நாசமாகாமலிப்பதுமாகப் பிரமதேவனாலே சாபமிடப்பட்டிருக்கிறது. அவ்வசுரர்கள் சூரியன்மீது பாயும்போது, சூரியனுக்கும் அசுரர்களுக்கும் கொடிய யுத்தம் உண்டாகிறது. அதன் நிமித்தம் பிராமணோத்தமர்கள் பிரணவ, வியாகிருதி காயத்ரீ மந்திரங்களினாலே அபிமந்தரித்த தண்ணீரை எறிகின்றனர். அந்தத் தண்ணீரானது வஜ்ரம் போலாகி அசுரரை நாசஞ்செய்கிறது. பிறகு, பிராமணர்களாலே அக்னி ஹோத்திரத்தில் மந்திரத்துடன் ஆகுதி செய்யப்படும். முதல் ஆகுதியினால் ஆயிரங்கிரகணங்களுக்குள்ள சூரியன் என்னுஞ் ஜோதியானது உலகமெல்லாம் பிரகாசிக்கும்படி விளங்குகிறது. அந்தப் பிரணவமானது ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூபமாய்; வியாகிருதி தேவதைகளுக்கு இடமாய் வேதங்களுக்கு எல்லாம் அதிபதியாக இருப்பதால், அதன் உச்சாடன மகிமையால் அரக்கருக்கு நாசம் உண்டாகிறது. நிர்விகாரமாய், உள்ளே தோன்றும் ஜோதியாக இருக்கிற ஸ்ரீவிஷ்ணுவினுடைய உத்தம அம்சமானது சூரியனாகி, அந்தப் பிரணவத்தைப் பொருந்தியிருப்பதால், அதையது தெரிவித்துக் கொண்டு, அந்த ஜோதியை நடத்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய பிரபாவமுள்ள பிரணவத்தினால் ஸ்ரீவிஷ்ணுவின் தேஜோமயமான சூரியன் விளக்கப்பட்டதாகி மந்தேகர் என்ற பெயரையுடைய பாபங்களைக் கொளுத்தி விடுகிறது. ஆகையால் சந்தியாவந்தன காரியத்தை எவனும் விட்டு விடலாகாது. விடுவதனாலே, சூரியனைக் கொன்ற பாபத்தை அடைவான். இவ்விதமாக வாலகிலியர் முதலான மகாபிராமணர்களாலே ஏட்சிக்கப்பட்டு சூரியபகவான் லோக சம்ரட்சணார்த்தமாய் அப்புறஞ்செல்கிறான். சந்தியாகால நிர்ணயத்தைச் சொல்கிறேன். கேட்பீராக பதினைந்து நிமிஷங்கள் ஒரு காஷ்டை முப்பது காஷ்டைகள் ஒரு கலை, முப்பது கலைகள் ஒரு முகூர்த்தம். அவை முப்பது சேர்ந்து இரவும் பகலுமாகிய ஒரு நாளாம். இப்படிப்பட்ட நாளில் விருத்தியானாலும் க்ஷயமானாலும் அவற்றுக்கு ஏற்ற அளவைக் கொண்ட பதினைந்தாம் பங்கான ஒரு முகூர்த்த காலமே சந்தியா காலமாகும். உதயகாலந் தொடங்கி சூரியன் மூன்று முகூர்த்தஞ் செல்லுமளவும் பிராதக் காலம் என்று சொல்லப்படும். அது பகலில் ஐந்தில் ஒரு பங்காம் அதற்குமேல் மூன்று முகூர்த்த காலம் சங்கலம் என்று சொல்லப்படும். அந்தச் சங்கல காலத்தின் மேலே மூன்று முகூர்த்த காலமானது மத்தியான்னமாகும். அதன் பிறகு மூன்று முகூர்த்தகாலமானது அபரான்ன காலம் ஆகும். பின்பு உள்ள மூன்று முகூர்த்தகாலம் சாயான்ன காலம். இப்படிச் சரியான பதினைந்து முகூர்த்தமுள்ள பகலானது விஷுவத் காலத்திலாகும். இந்த நாளானது உத்தராயண தக்ஷிணாயனங்களிலே வளர்ந்துங் குறைந்தும் ஒரு போது, பகலினால் இரவு விழுங்கப்பட்டும், மற்றொருபோது இரவினால் பகல் விழுங்கப்பட்டும் இருக்கும். சரத்ருதுவின் ஆரம்பமான துலாராசியில் சூரியன் வருகையிலும் வசந்த ருதுவின் ஆரம்பமான மேஷ ராசியில் சூரியன் இருக்கும்போதும் விஷுவம் என்ற காலம் உண்டாகின்றது. அதுதான் ஏற்றக்குறைவில்லாத இரவு பகல்களை உடையதாகும்.

சூரியன் கர்க்கடக ராசியில் இருக்கும்போது, தட்சிணாயனமும், மகர ராசியில் இருக்கும்போது உத்தராயணமும் ஆகும். பிராம்மணோத்தமரே! முன்பு நான் முப்பது முகூர்த்த அளவானது ஒரு நாளாகும் என்று சொன்னேன். அவை பதினைந்து கூடியது ஒரு பக்ஷம். இரண்டு பக்ஷங்கள் ஒரு மாதம், சூரிய கதியினாலாகும் இரண்டு மாதங்கள் ஒரு ருதுவாகும். மூன்று ருதுக்கள் ஒரு அயனமாகும். இரண்டு அயனங்கள் ஒரு வருஷம். இவ்வருஷமானது சவுரம், சாந்திரம், சாவனம், நாக்ஷத்திரம் என்று நான்கு வகைப்படும். இப்படி விகற்பிக்கிற வருஷங்கள் ஐந்து கூடி, ஆரம்பத்தைப் போல விகற்பமின்றி முடிவதாலே, யுகம் என்ற பெயரையடையும், அவற்றுள் முதலாவது சம்வச்சரம் என்றும், இரண்டாவது பரிவச்சரம் என்றும் மூன்றாவது இடாவச்சரம் என்றும், நான்காவது இத்வச்சரம் என்றும், ஐந்தாவது அனுவச்சரம் என்றும் வழங்கப்படும். சுவேதமலைக்கு வடக்கே சிருங்கவான் என்ற மலை ஒன்றுண்டு. அது மூன்று கொடிமுடிகளைக் கொண்டது. அந்த முடிகளில் ஒன்று தென்புறத்திலும், மற்றொன்று வடபுறத்திலும் இன்னொன்று நடுவிலும் இருக்கின்றன. தென்புறச் சிருங்கத்தில் சூரியன் சஞ்சரிப்பதனால் உத்தராயணமும், நடுவே வருவதால் விஷுவமும் உண்டாகின்றன. கிருத்திகையின் முதற்பாதத்தில் சூரியன் இருக்கும்போது, சந்திரன் விசாக நட்சத்திரத்தின் நாலாம் பாதத்தில் இருப்பான். சூரியன் விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சஞ்சரிக்கும்போது சந்திரன் கிருத்திகையின் முதலில் இருப்பான். இத்தகைய காலம் தான் மகாவிஷுவம் என்ற புண்ணிய காலம் ஆகும். அப்போது சிரத்தையுடைய புருஷர், தேவதைகள், பிதுர்கள் இவர்களை உத்தேசித்து பிராமணருக்குத் தானங்கொடுக்க வேண்டும். இது தானத்துக்கு முகமாயுள்ளது. அப்போது தானங்கொடுப்பவன் மகாபுண்ணியம் செய்தவனாகிறான். இனி, யாக காலங்களைக் கூறுகிறேன். பகல், இரவு, அர்த்தஜாமம் என்ற பக்ஷம், கலை, காஷ்டை, க்ஷணம், பவுர்ணமி, அமாவாசை, சந்திரன் காணப்படாத குரு என்பதுமான அமாவாசையின் பிரிவுகள் பூரண சந்திரனிலுள்ள ராகை என்பதும் குறைந்த சந்திரனிலுள்ள அனுமதி என்பதுமான பவுர்ணமாவாசையிலுள்ள பிரிவுகள் தபம், தபசியம், மது மாதவம் சுக்கிரம் சுசி என்கிற மாசி முதலிய மாதங்களாகிய உத்தராயண ருதுக்கள் மூன்று, நபம் ந சியம், இஷம், ஊர்ச்சம், சகம், சகசியம் என்கிற ஆவணி முதலிய மாதங்களாகிய தக்ஷிணாயன ருதுக்கள் மூன்று. இந்தக் காலங்கள் எல்லாம் முக்கியமான யாக காலங்கள் என்பதை நன்றாய் அறிதல் வேண்டும்.

முன்பு லோகா லோகம் என்று ஒரு பெரிய மலையைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? அதன் நாற்புறங்களிலும் கர்த்தமப் பிரஜாபதியின் பிள்ளைகளான சுதன்வா, சங்கபா என்பவர்களும் ஹிரண்ய ரோமா, கேதுமான் என்ற வேறு இருவரும் ஆகலோகபாலகர்கள் நால்வர் இருக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் சுகதுக்கங்களும், ராகத்வேஷாதிகளுமான துன்பங்கள் இல்லை. மைத்ரேயரே! அகஸ்திய வீதிக்கு வடக்காகவும், அஜ வீதிக்குத் தெற்காகவும், வைசுவானவ வழிக்கு வெளியிலிருக்கிற மார்க்கம் பிதுர்யானமாகும். அதாவது, அதுவே பிதுர்லோகஞ்சேரும் வழியாகும். அங்கே அக்னிஹோத்ரமுடையவரான சில முனிவர்கள் வாசஞ்செய்து கொண்டு வேதத்திலுள்ள கர்மகாண்டங்களைத் துதித்துக் கொண்டு யாகமுயற்சிகளை செய்து கொண்டுமிருப்பார்கள். அந்த உலகத்தை அடைய விரும்புவோருக்குத் தான் பிதுர்யானம் என்ற தூமாதி மார்க்கம் உண்டு. (தூமாதி மார்க்கம் அதாவது முதலில் தூமம், பிறகு முறையே இரவு அமர பக்ஷம், தக்ஷிணாயனம் மாதங்கள், பிதுர்லோகம், ஆகாயம், சந்திரன் என்பவை எல்லைகள். இந்த வழியிற்சென்றவர்கள் கர்மலோகானுபவம் முடிவுபெற்றதும், மீண்டும் சந்திரனை விட்டு, ஆகாயம், காற்று, புகை, மேகம், மழை நீர், விதைகள் இவற்றின் ஸ்திரீ புருடர்களையடைந்து கர்மங்களுக்கேற்ற தேகத்தோடு பிறப்பார்கள்.) அவ்வுலகத்திலிருக்கும் பிதுர்க்கள், கர்மகாண்டம் அழியாதபடி சந்ததிகளினாலும் தபசினாலும் வேதத்தியானங்களினாலும் ஸ்தாபித்து வருவதும் அல்லாமல் முந்தினவர் பிந்தினவர்களுடைய வமிசத்திலேயும், பிந்தியவர் முந்தினவர்களுடைய வமிசத்திலேயும் பிறந்து கொண்டே, இந்த மூன்று உலகமும் அழியும் காலமாகிய பிருமாவின், நாள்வரை இருப்பார்கள். நாகவீதிக்கு வடக்காகவும், சப்தரிஷி வீதிக்கு தெற்காகவும் உள்ள மார்க்கம் தேவமார்க்கம் என்று சொல்லப்படும். அங்கு, இந்திரிய வெற்றியுள்ளவர்களாய் சித்திபெற்ற நிர்மல பிரமச்சாரிகளான சில மகாத்துமாக்கள் இருக்கின்றனர். அவர்கள் சந்ததியை வெறுத்திருப்பதால் மிருத்யுவை வென்றவர்களானார்கள். அந்த எண்பதாயிரம் இருடிகளும் சூரியனுடைய வடபுற வழியை ஆஸ்ரயித்துப் பிருமாவின் தினபரியந்தம் யாதொரு துன்பமும் அழிவும் இன்றி இருப்பார்கள். இந்த இருப்பு, லோபமும் குரோதாதிகளும் ஸ்திரீ சம்போகமும் விருப்பு வெறுப்புக்களும் இல்லாமையினாலும் கர்மத் தொடர்பை விட்டிருப்பதாலும் யோகத்திலிருந்து வழுவாமையினாலும் சத்தாதி விஷயங்களில் குற்றத்தைக் காண்பதாலும் அவ்விடத்தில் இருப்பவர் பிருமதினத்தின் முடிவுவரை நிலை நிற்பதாலும் அது அமிருத்வம் என்று வழங்கப்படும். இந்தப் பிரும தின அந்தமான காலமே பிரம்மஹத்தி செய்த பாவத்தின் பயனாக நரகத்தை அனுபவிப்பதற்கும் ஏற்படுத்திய காலமாகும். அந்தக் காலத்தில் பூமி முதல் துருவன் இருக்கும் ஸ்தானம் அளவும் அழிந்து போய்விடும்! சப்தரிஷிகளுக்கு மேலே வடபுறத்திலே துருவ நட்சத்திரம் இருக்குமிடம் யாதுண்டோ அது திவ்வியமாகவும் மகாப் பிரகாசமாகவும் இருக்கின்ற மூன்றாவது ஆகாய ஸ்தானம் அது விராட்புருஷனுக்கு இருதய நாடிஸ்தானமானது பற்றி, அங்கே விஷ்ணு எழுந்தருளியிருக்கிறார். ஆகையால் அதற்கு விஷ்ணுபதம் என்ற பெயர் ஏற்பட்டது. அது காமாதி தோஷங்களைக் கழித்துப் பரமாத்துமாவினிடத்தில் மனதைப் பதியவைத்த யோகிகளுக்கு, புண்ணிய பாப கர்மங்களெல்லாம் க்ஷயித்தபோது அடையத்தக்க ஸ்தானமாகும். யோகிகள் பாவபுண்ணியங்கள் ஒழிந்ததாலே சுகதுக்க அனுபவ ரூப சம்சார ஏதுக்களில்லாதவர்களாய் எந்த உத்தமமான இடத்திலே சென்று ஆனந்தத்தோடு இருப்பார்களோ அதுதான் ஸ்ரீவிஷ்ணுவினுடைய பரமபதமாகும்!

லோகதாக்ஷிகளான தருமன், துருவன் முதலிய மகாத்மாக்கள் எங்கே இருந்து கொண்டு அந்த ஸ்ரீவிஷ்ணுவினுடைய ஐசுவரியத்துக்குச் சமானமான ஐசுவரியமாகிய இந்திரிய வெற்றியினாலே சீர்ப்பட்டிருக்கும் யோகப் பிரபாவம் உள்ளவர்களாய் விளங்குகின்றன. ரா அதுதான் ஸ்ரீவிஷ்ணுவினுடைய பரமபதமாகும்! சராசரங்கள் எல்லாம் எங்கே குறுக்காகவும் நெடுக்காகவும் கோக்கப்பட்டு, எங்கே இருப்பனவாய், உண்டாவனவாய் இருக்குமோ அதுவே ஸ்ரீவிஷ்ணுவினுடைய பரமபதமாம். எது ஆகாயத்திலே சூரியனைப் போல் மகாத்மாக்களுக்கு சுத்த விசேஷ ஞானத்தினாலே பிரத்யக்ஷமாய் விளங்குமோ, அதுவே ஸ்ரீவிஷ்ணுவினுடைய பரமபதமாகும். அங்கே சென்றவர்கள் மீண்டும் சம்சாரபந்தத்தையடையாமல் பிரம்மாவுடன் கூடி மோட்சத்தை அடைவார்கள். அது கிரம முந்தி ஸ்தானமாகையால், மோக்ஷ ஸ்தானமான பரமபதம் என்று சொல்லப்படும். அதுஎப்படி லோகாதாரமாகிறது என்பதைச் சொல்கிறேன் கேளுங்கள். மகா தேஜஸுள்ள துருவன் அங்கே நடுக்கூச்சம் போல் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறான் அன்றோ? அந்தத் துருவனிடத்திலே சகல கிரக நக்ஷத்திரங்களும் ஸ்தாபிக்கப்பட்டு இருக்கின்றன. அந்தக்கிரக நக்ஷத்திரங்களில் மேகங்கள் நாட்டப்பட்டு மழையானது சகல ஓஷதிகளின் மூலமாக படைப்புக்குக் காரணமாயும் தேவதைகள் முதலானோருக்கு போஷணையாகவும் இருக்கிறது. அதனாலேயே நெய் முதலிய அவிசொரிகின்ற ஆகுதி மூலமாகத் தேவர்கள் திருப்தியடைந்தவர்களாய் லோகசிருஷ்டிக்கும் ஸ்திதிக்கும் காரணமாகின்றனர். இவ்விதமாக இந்த விஷ்ணுபதம் என்கிற பரிசுத்தமான மூன்றாவது ஸ்தானமானது மூன்று உலகங்களுக்கும் ஆதாரமாயும் விருத்தி ஹேதுவாயும் இருக்கிறது. மைத்ரேயரே! அந்த விஷ்ணு பதத்தின் பரிசுத்தப் பிரபாவத்தை மேலும் கேட்பீராக, அங்கிருந்து சகல பாதகங்களையும் நாசஞ்செய்யவல்ல கங்கை என்று நதியானது உண்டாகி, தேவ மங்கையரின் சரீரத்திலுள்ள குங்குமப் பூச்சினால் பொன் நிறமுடையதாய் விளங்குகின்றது. ஸ்ரீவிஷ்ணு பகவானுடைய இடது திருவடித் தாமரையின் கட்டைவிரல் நகத்திலுண்டான பிரவாகத்திலிருந்து பெருகி வரும் அந்தக்கங்கை நதியைத் துருவன் இரவும் பகலும் பக்தியோடு தனது சிரசில் வகிக்கிறேன். பிறகு, சப்தரிஷிகள் பிராணாயாமம் செய்து கொண்டு, அந்தக் கங்கையின் அலைகளினால் ஜடைகள் மிதக்க, அகமர்ஷண ஸ்நானம் செய்துகொண்டு இருக்கிறார்கள். பிறகு அந்தக் கங்கை நதியின் ஜலப்பிரவாகத்தினால் சந்திர மண்டலம் நன்றாக நனைக்கப்பட்டு இரவில் அதிகக் காந்தியை அடைந்து விளங்குகிறது.

பிறகு, அது சந்திர மண்டலத்தை விட்டுப் புறப்பட்டு, மேருமலையின் மீது விழுந்து சீதா, அளகந்தா சட்சு பத்திரை என்ற பெயர்களை பெற்று நான்கு திசைகளிலும் இவ்வுலகத்தைத் தூய்மைப்படுத்தும் பொருட்டு இறங்கி வருகின்றது. அந்த நான்கு பிரிவுகளில் தென்புறம் வருகிற அளகநந்தை என்ற கங்கையின் பிரிவை, சிவன் மகா பக்தியோடு நூறு வருஷத்துக்கு மேலான காலமும் தன் சிரசில் தரித்துப் பிறகு விடுகின்றார். அது சிவனுடைய ஜடாமகுடத்திலிருந்து தரையில் வீழ்ந்து, சகரகுமாரருடைய நொறுங்கிய எலும்புகளை நனைத்து, அந்தப் பாவிகளையும் சொர்க்கஞ்சேரும்படிச் செய்தது. இந்த மகாநதியில் ஸ்நானம் செய்தவுடனேயே சகல பாவங்களும் பாழாவதுமன்றி, மகா புண்ணியமும் உண்டாகும். புத்திராதிகள் அதன் தண்ணீரினால் பிதுர்க்களுக்கு ஒருமுறை தர்ப்பணம் செய்வார்களானால் அதனால் அந்தப் பிதுருக்கள் நூறு ஆண்டுகள் மட்டும் ஒப்பற்ற திருப்தியை அடைவார்கள். அந்தக் கங்கா நதியின் கரையில் பிராமணரும் க்ஷத்திரியரும் யக்ஞேசுவரனான ஸ்ரீபுரு÷ஷாத்தமனை மகா யக்ஞங்களினாலே ஆராதித்து, இந்த உலகத்தில் மேல் உலகத்திலும் மிகுந்த செல்வத்தை அடைந்தார்கள். யோகிகளும் அதன் நன்னீரில் நீராடிப் பாவங்கள் நசிக்கப்பெற்று ஸ்ரீகேசவனிடத்திலே சித்த லயத்தினால் மோக்ஷõனந்தமும் பெற்றார்கள். அந்தக் கங்கையானது தன்னில் மூழ்குகிறவர்களுக்கும், தன்னை உண்பவருக்கும், துதிப்பவருக்கும், பரிகசிப்பவருக்கும், விரும்புகிறவருக்கும், காண்பவருக்கும், கேட்பவருக்கும் சகல பாவநிவர்த்தி செய்யும்படியான மகிமையை உடையது; நூறு காதத்துக்கு அப்புறம் இருந்தாகிலும் கங்கை! சங்கை! என்ற நாம சங்கீர்த்தனம் செய்தவர்களுக்கும், மூன்று பிறவிகளினாலே நேர்ந்துள்ள பாவங்களை ஒழிக்கும். இவ்விதமாக மூவுலகங்களையும் தூய்மைப்படுத்தவல்ல கங்கை நதியானது அவதரிக்கப் பெற்ற புனித ஸ்தலமாக, அந்த விஷ்ணுபாதமானது விளங்குகிறது.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம்—நான்காம் பாகம் –

February 28, 2021

21. தனு முதலியோர் வமிச வரலாறு
22. தேவரதிகாரமும் பகவத் மகிமையும்

————–

21. தனு முதலியோர் வமிச வரலாறு

மைத்ரேயரே! இத்தகைய புகழ்மிக்க பிரகலாதனனுக்குச் சிபிபாஷ்கலன், விரோசனன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். விரோசனனுக்கப் பலிச் சக்கரவர்த்தி பிறந்தான். பலிக்கு பாணாசுரன் முதலிய நூறு பிள்ளைகள் பிறந்தனர். இது நிற்க, இரணியாட்சனுக்குச் சர்ச்சுரன் சகுனி, பூதசந்தாயனன், மகாநயான், மஹாபாஹி, காலநாபன் என்ற பிள்ளைகள் அறுவர் பிறந்தார்கள். இது திதியின் வமிசமாகும். இனி காசிபருக்குப் பாரியையான தனு முதலிய பெண்களின் வமிசங்களைச் சொல்கிறேன்; கேளுங்கள் தனு என்பவளுக்கு துவிமூர்த்தா, சம்பரன் அஜோமுகன், சங்குசிரன், கபிலன், சங்கரன், ஏகவத்திரன், தாரகன், சொர்ப்பானு, விருஷர்பர்வா, புலோமன், விப்ரசித்தி முதலிய அதிபலசாலிகளான பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிலே சொர்ப்பானுவுக்குப் பிரபை என்பவளும் விருஷபர்வாவுக்குச் சர்மிஷ்டையென்பவளும், வைசுவாநாதனுக்கு உபதாநவி அயசிரை புலோமை காலகை என்ற நான்கு கன்னிகைகளும் பிறந்தார்கள். அவர்களில் புலோமை, காலகை என்பவர்கள் மரீசிக்கு மனைவியாயினர். அவர்களுக்கு புலோலமர், காலகேயர் என்ற புகழ்பெற்ற அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள். இரணியனுக்குச் சகோதரியான சிம்ஹிகை என்பவள் விப்பிரசித்திக் மனைவியாகி திரியமிசன் சல்லியன் நபன் வாதாவி இல்லலன், நமுசிககிருமன், அந்தகன், நரகன், காலநாபன் ராகு என்ற மகாசக்தியுள்ள பிள்ளைகளைப் பெற்றான். இவ்விதமாகத் தனுவென்பவனின் வமிச்தி மகாபலசாலிகளான அசுரர்கள் பலர் பிறந்தார்கள். இவர்களுக்கு சஹஸ்ர சங்கைகளாகப் புத்திர பவுத்திர சந்தானங்கள் உண்டாயின. முன்பு நான் சொன்னது போல ஆத்ம ஞானியான பிரகலாதாழ்வானின் வமிசத்தில் நிவாதகவசர் என்ற தைத்தியர் தோன்றினர். தாம்பரை என்பவளுக்குக் காசிபர் மூலமாக சுதி, சேனி, பரசி, சுக்ரீவை கிருத்தரி, சுசி என்ற ஆறுபெண்கள் பிறந்தார்கள். அவர்களில் சுகிக்குக் கோட்டான்களும், காக்கைகளும் பிறந்தன. சேனி என்பவளுக்குப் பருந்துகளும், பரசிக்குச் செம்போத்துகளும், கிருத்திரிக்கு கழுகுகளும்; சுகிக்குத் தண்ணீர்ப் பறவைகளும், சுக்ரீவைக்குக் குதிரைகளும் ஒட்டகங்களும் பிறந்தன. இது தாம்பரையின் வமிச விபரமாகும். இனி, விந்தைக்குக் கருடன், அருணன் என்ற இரண்டு புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களில் கருடன் சர்ப்பங்களைப் புசிப்பவனாய் கடூரமான ரூபமுடையவனாய் பறவையினத்துக்கெல்லாம் உயர்ந்தோனாய் புகழ்பெற்றிருந்தான். சுரசை என்பவளுக்கு ஆகாயத்தில் பறக்கும் ஆற்றலுடைய ஆயிரம் பாம்புகள் பிறந்தன. கத்துருவுக்குப் பலமும் தேஜசுடைய அநேக பணமண்டல மண்டிதங்களாயுள்ள அநேகம் நாகங்கள் உண்டாயின. அவை கருடனுக்கு வயப்பட்டிருந்தன. அந்த நாகர்களில் சேஷன், வாசுகி, தக்ஷகன், சங்கன், சுவேகன், மகாபத்மன், கம்பளன், அசுவதரன், ஏலாபுத்திரன், கார்க்கோடகன், தனஞ்சயன் என்போர் முக்கியமானவர்கள். அவர்கள் விஷச்சுவாலையோடும் தந்தங்களுடனும் கூடிய முகங்களோடும் விளங்குவார்கள்.

குரோதவசை என்பவளுக்குப் பதினாயிரம் ராட்சச சர்ப்பங்களும், நிலத்திலும் நீரிலும் சஞ்சரிக்கும் பறவைகளும் பிறந்த குரோதவச கணம் என்ற பெயரைப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் கோரமானவர்கள். சுரபி என்பவளுக்கு மரங்களும், கொடிகளும், புற்களும் உண்டாயின. சுஷை என்பவளுக்கு யட்ச ராட்சதர்களும், மனு என்பவளுக்க அப்சரசுகளும், அரிஷ்டை என்பவளுக்கு மகாபலசாலிகளான கந்தர்வர்களும் பிறந்தார்கள். இந்தவிதமாக தாவர ஜங்கமங்களான காசிபரின் சந்தானங்களையெல்லாம் சொன்னேன். அவர்களுடைய புத்திர பவுத்திராதி சந்ததிகளோ எண்ணமுடியாத அளவில் பெருகின. மைத்ரேயரே! இது சுவாரோசிஷ மனுவந்தரத்துப் படைப்பாகும். இனி வைவஸ்வத மனுவந்திரத்தில் வருணன் ஒரு யாகம் நடத்த, அதில் சதுர்முகப் பிருமன் ஹோதாவாகி அதை நிர்வாகம் செய்தான். அப்போது பிரஜா சிருஷ்டி செய்தவிதத்தை விவரமாகக் கூறுகிறேன் கேளுங்கள். தேவ, ரிஷி, கந்தர்வ பன்னகாதிகளுக்கும் பிதாமகனான சதுர்முகன் நூதன சிருஷ்டி செய்ய காலம் பெறாமல் பூர்வத்தில் சுவாரோசிஷ மனுவந்தரத்திலே தன் சங்கல்பத்தால் உண்டான சப்தரிஷிகளை நோக்கி, வைவசுவத மனுவந்தரத்திலே நீங்களே பிரஜைகளைப் படையுங்கள்! என்று நியமித்தான். இவர்களும் அப்படியே செய்தனர். இது நிற்க. தேவர் தேவதைகளினாலே அசுரர்கள் எல்லாம் விநாசமாய்ப் போனதால், திதி என்பவள் புத்திர சோகமடைந்து அநேக காலம் தன் கணவரான காசிபரை ஆராதித்து வந்தாள். அவர் அதனால் மகிழ்ந்து திதியை நோக்கி, பெண்ணே! உனக்கு பிரியமான வரத்தைக் கேள்! என்றார். அதற்கு அவள், எனக்கு இந்திரனைச் சங்கரிக்கத் தக்கவனான ஒரு மகன் உண்டாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். அதைக் கேட்டதும் காசிபமுனிவர் அவளைப் பார்த்து எனது பிரிபுத்தினியே; உனக்கு இந்திரனை சங்கரிக்கத்தக்க மகன் வேண்டும் என்றால் நூறு ஆண்டுகள் சம சித்தத்துடன் சுசியாய்க் கர்ப்பத்தைத் தரித்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால் உன் விருப்பப்படி மகன் ஒருவன் பிறப்பான் என்று சொல்லி, அவளுடன் கூடிக் கலந்தார். அதனால் அவருடைய மனைவி கருவுற்று நித்தியமும் சுசியாய் விரதம் அனுஷ்டித்து வந்தாள். இப்படியிருக்க இந்தச் செய்தியை இந்திரன் அறிந்தான். உடனே அவன் சூழ்ச்சி செய்து அந்த ரிஷிபத்தினியின் அருகில் வந்து இருந்து; அவளுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டு அவளது கர்ப்பத்தை சிதைக்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். இப்படியிருக்க சிலநாள் குறைய நூறு ஆண்டுகள் நிறையும் காலத்தில் ஒருநாள் திதிதேவி பாதசுத்தி செய்யாமல் படுக்கையில் படுத்து நித்திரை செய்தாள். அப்போது இந்திரன் அவள் சுத்தமில்லாமல் அசுசியாக இருப்பதையறிந்து வஜ்ராயுதத்தை எடுத்துக்கொண்டு; அவள் வயிற்றிலே சூட்சும ரூபத்துடன் சென்று அந்தக்கர்ப்பத்தை ஏழு துண்டுகளாகத் துண்டித்தான். அப்போது அந்தச் சிசு, பெருஞ்சப்தத்துடன் ரோதனம் செய்ய இந்திரன், ரோதனம் செய்யாதே என்று பலமுறைகள் கூறி கோபங்கொண்டு அந்த ஏழு துண்டுகளையும் மறுபடியும் எவ்வேழாகத் துண்டித்தான். அந்த நாற்பத்தொன்பது துண்டங்களுக்கும் மரோதி (ரோதனம் செய்யாதே) என்று சொன்ன காரணத்தால் மருத்துக்கள் என்ற நாமதேயம் உண்டாயிற்று. பிறகு, அந்த மருத்துக்கள் விவேக சத்துவ சம்பன்னராய் இந்திரனுக்கு உதவலானார்கள்.

———————

22. தேவரதிகாரமும் பகவத் மகிமையும்

மைத்ரேயரே! பூர்வத்தில் மிருது மாமன்னன் மாமுனிவர்களால் முடிசூட்டப் பெற்ற போது கிரக நட்சத்திரங்களுக்கும் ஓஷதிகளுக்கும் பிராமணர்களுக்கும் வேள்விகளுக்கும், தவங்களுக்கும், சந்திரனை அரசாக பிருமதேவன் நியமித்தான். குபேரனை ராஜாக்களுக்கு அதிபதியாகவும் வருணனை ஜலத்துக்கு அதிபதியாகவும், விஷ்ணு என்னும் சூரியன் ஆதித்யர்களுக்கும் அதிபதியாகவும், தக்ஷனை கர்த்தமர் முதலிய பிரஜாநாகருக்கு அதிபதியாகவும், இந்திரனை வசு ருத்திர, ஆதித்திய பிரமுகமான தேவதைகளுக்கு அதிபதியாகவும், பிரகலாதனைத் தைத்யதானவருக்கு அதிபதியாகவும், யமதர்மனை பிதுர்தேவதைகளுக்கு அதிபதியாகவும், ஐராவதத்தை யானைகளுக்கு அதிபதியாகவும், வாசுகியை பாம்புகளுக்கெல்லாம் அரசாகவும் விருஷப ராஜனைப் பசுக்களுக்கு அதிபதியாகவும், ஹிமவானை மலைகளுக்கு அரசாகவும், கபிலரை முனிவர்களுக்கு அரசாகவும், சிங்கத்தை மிருகங்களுக்கு அதிபதியாகவும், கல்லால மரத்தை மரங்களின் அரசாகவும் ஏற்படுத்தி, இவ்விதமாக அந்தந்த சாதிகளுக்குத் தக்கபடி தலைவர்கள் ஆகும்படி ராஜ்யாதிபத்யங் கொடுத்தருளினான். இப்படிச் செய்த பிறகு அந்த பிரம்மா வைராசப் பிரஜாதிபதியின் குமாரனான சுதன்வாவைக் கீழ்த்திசைக்கு அதிபதியாகவும், கர்த்தமப் பிரஜாபதியின் தனயனான சங்கபதனை தென்திசைக்கு அதிபதியாகவும், ரஜசு என்ற பிரஜாபதியின் மகனான கேதுமா என்பவனை மேலைத்திசைக்கு அதிபதியாகவும், பர்வசன்யப் பிரஜாபதியின் மகனான ஹிரண்யரோமா என்பவனை வடதிசைக்கு அதிபதியாகவும் நியமித்தான். அவர்களால் தீவுகள், சமுத்திரங்கள், மலைகள் ஆகியவற்றுடன் கூடிய பூமண்டலம் யாவும், இது வரையில் தங்கள் எல்லைகளிலே தர்மமாக பரிபாலிக்கப்பட்டு வருகின்றன. இப்போது நான் சொன்னவர்களும் மற்ற அரசர்களும் ஜகத்தை ரக்ஷிப்பதில் புகுந்துள்ள ஸ்ரீமந்நாராயணனுடைய விபூதியாக இருப்பவர்கள் என்று அறிந்து கொள்வீராக. பூர்வத்தில் இருந்தோரும் இப்போது இருப்போரும் இனிமேல் உண்டாவோருமான பூதாதிபதிகள் யார் யாருண்டோ அவர்கள் அனைவரும் சர்வமயனாக இருக்கும். விஷ்ணுவின் அம்ச பூதர் என்று அறிவீராக. தேவ, தானவ பைசாச மானுட, பட்சி, மிருக, பன்னதாதிபதிகளும், கிரகாதிபதிகளும் விருட்ச பருவதாதிபதிகளுமாக இருப்போரும், சென்றோரும் உண்டாவோரும், யாவரும் சர்வ பூதமயனான ஸ்ரீவிஷ்ணுவின் அமிச பூதரேயன்றி வேறல்ல.

மைத்ரேயரே! ஜகத் ரட்சண தீட்சிதனும், சர்வேசுவரனுமான ஸ்ரீஹரியைத் தவிர யாருக்கும் காக்கும் திறமையில்லை இதுமட்டுமல்ல. அவன் சத்துவ குணாச்ரியமான சொரூபத்தோடு எப்படி ஜகத்தை ரட்சிக்கிறானோ அப்படியே ராஜச தாமச குணங்களை அங்கீகரித்துப் படைப்புக் காலத்தில் படைப்புக் கர்த்தாவாகிச் சங்காரஞ்செய்துகொண்டும் இருக்கிறான். அந்த ஜனார்த்தனன் சிருஷ்டியிலும் நான்கு வகையின்னாய் அப்படியே ஸ்திதி சங்காரங்களிலும், நந்நான்கு பேதமுடையவனாகவும் இருக்கிறான். எப்படியெனில் முதல் அம்சத்தில் பிரமாவாகவும், இரண்டாவது அம்சத்தில் மரீசிப் பிரஜாபதிகளாகவும், மூன்றாவது அம்சத்தில் காலமாயும், நான்காவது அம்சத்தில் சகலபூதங்களாயும், ரசோகுணத்தை ஆஸ்ரயித்துப் படைப்பான். ஸ்திதிக் காலத்தில் சத்தவ குணாசிரயமான முதலமிசத்தினால் நானாவித திவ்ய அவதார ரூபிராயும், இரண்டாவது அம்சத்தினால் மனுவாதி ரூபியாயும், மூன்றாவது அம்சத்தில் காலரூபியாயும், நான்காவது அம்சத்தில் சகல பூதங்களிலிருந்தும் ரட்சிப்பான். சங்கார காலத்தில் தமோ குணத்தை ஆஸ்ரயித்து முதலம்சத்தால் ருத்ரரூபத் தரித்தும், இரண்டாவது அம்சத்தால் அக்னி; வாயு, அந்தகாதி ரூபங்களைக் கொண்டும், மூன்றாவது அம்சத்தால் காலசொரூபந் தரித்தும், நான்காவது அம்சத்தில் சர்வபூத அந்தரியாமியாக இருந்தும் சங்கரிப்பான். மைத்ரேயரே! இவ்விதமாகக் கல்பந்தோறும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய கிரியைகளில் எம்பெருமானுக்கு நந்நான்கு பேதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. பிருமாவும் தஷாதிகளும் காலமும் சகல பூதங்களும் ஸ்ரீவிஷ்ணுபகவானுடைய லோகசிருஷ்டி ஹேதுக்களான லீலா விபூதிகளாகும். உபேந்திராதியவதார சொரூபங்களும் மனு முதலானவர்களும் காலமும் சகல பூதங்களும் ஸ்ரீவிஷ்ணுவினுடைய லோக சங்கார காரணங்களான விபூதிகளாகும். பிரம்மாவும் மரீசி முதலிய பிரஜாபதிகளும் ஆதிகாலம் முதலாகப் பிரளயகாலம் வரையிலும் சதுர்வித பூதசாதங்களைப் படைத்து வருகிறார்கள். ஆதிகாலத்தில் பிரம்மாவினாலும் இடையிலே மரீசி முதலிய பிரஜாபதிகளாலும் பிறகு அந்தந்த ஜந்துக்களாலும் படைக்கப்பட்டு வருகின்றன. படைப்புக்கெல்லாம் முக்கிய காரணம் காலம் கால சக்தியல்லாமல் பிரம்மாவும் தக்ஷõதிகளும் பிரஜைகளும் படைக்கமாட்டார்கள். ஸ்திதியும் இப்படியே கால சக்தியில்லாமல் நடைபெறாது.

பிரளயத்திலே ருத்திராதிகளும் கால சக்தியின்றி சங்கரிக்கமாட்டார்கள். மைத்ரேயரே! அநேக வார்த்தைகளினால் பிரயோசனமென்ன? எதனால் எது படைக்கப்படுகிறதோ, அந்தப் படைக்கப்படும் வஸ்துவின் படைப்பைக் குறித்துக் காரணமாக இருக்கும் அந்த வஸ்துவெல்லாம் எம்பெருமானின் திருமேனியேயாகும். இதுபோலவே, ஒன்றைச் சங்கரிக்கின்ற வஸ்து எதுவுண்டோ அதுவும் சங்கார ஹேதுவான ஜனார்த்தனனுடைய வுத்திர ரூபமாகும். ஸ்ரீவிஷ்ணுவே, சிருஷ்டியும் ரக்ஷணையும் சங்காரமும் செய்யும் ஜீவன்களுக்கு அந்தரியாமியாகிச் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களைச் செய்தருளுகிறான். இந்தவிதமாகவே சத்துவ, ராஜச, தமோ குணங்களில் புகுந்து சிருஷ்டிக்காலம் முதலிய காலங்களினால் மூன்றுவிதமாக இருக்கிற பிரம்மாதி ஸ்தாவாரந்தமான நாராயணனுடைய ரூபத்தை விவரித்தேன். இனிமேல் முக்தஜீவமயமான அவனுடைய ரூப அந்தரத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். பிரகிருதி குணவர்ச்சிதமும் ஞானகுணவத்தும் சுயம்பிரகாசமும் உபமான ரகிதமும், சகலபூத வியாபகமும், பிரம்மாதி ஜீவசாதங்களைவிட உயர்ந்த முக்த ஜீவ ஸ்வரூபமும் ஸ்ரீமந்நாராயணனுடைய பரஸ்வரூபம் என்று வழங்கப்படும். அதுவும் நான்குவிதமாக இருக்கும். இவ்வாறு பராசர மகரிஷி கூறிவிரும்போது, மைத்ரேயர் குறுக்கிட்டு முனிவரே! ஞானமயமாய், நாராயணனுக்குச் சரீரபூதமான முக்த சொரூபம் நான்குவிதம் என்றீர்களே, அதைச்சற்று விளக்கமாகக் கூறவேண்டும்! என்று வேண்டினார். அதற்குப் பராசரர் பின்வருமாறு விளக்கம் கூறலானார். மைத்ரேயரே! உலகத்தில் விருப்பதற்கு உரிய பொருளைச் சம்பாதிப்பதற்குக் கருவியாக இருப்பது சாதனம் என்றும், இஷ்டவஸ்துவானது சாத்தியம் என்றும் சொல்லப்படும். மோட்சத்தை விரும்பும் யோகிகளுக்கு பிராணயாமம் போன்றவை சாதனமாயும் பரப்பிரம்மமானது சாத்தியமாகவும் உள்ளன. யோகிகளுக்கு முக்தி நிமித்தமாக யோக சாஸ்திரத்தினாற் பிறந்த பிராணாயாமம் முதலிய சாதனங்களுடைய ஞானமானது அந்த ஞானமய ஸ்வரூபத்திற்கு முதல் பேதமாகும். பாதமோட்சனார்த்தமாக யோகப் பயிற்சி செய்து கொண்டிருப்பவனுக்கு சாத்தியமாய் சாஸ்திரத்தினால் உண்டான ஆன்ம விஷயமான ஞானமானது இரண்டாவது பேதமாகும். இவ்விரண்டும் சாத்திய சாதன சம்பந்தத்தினாலே சேர்ந்ததாய், தேவ மனுஷியாதி பேதமில்லாத ஆன்மாவைப் பற்றி வியாபித்திருக்கிற தியான ரூபமான ஞானமானது மூன்றாவது பேதம். இந்த மூன்று வகையான ஞானங்களுக்கும் சாதனமாக இருத்தலாகிய விசேஷம் யாது உண்டோ அதைத் தள்ளுதலினாலே தோன்றும் ஆத்மசாட்சாத்காரமானது நான்காவது பேதம்! இந்த ஞானம் பொருளான ஆன்ம ஸ்வரூபமானது சாதனா அனுஷ்டானம் இல்லாததாய் ரூபாதிகளுக்கு கோசரமாகத்தாய் சுருக்கமின்றி வியாபித்திருப்பதாய், உபமான ரகிதமாய், தன்னாலேயே அறியத்தக்கதாய், விருத்தி க்ஷயாதிகளற்றதாய், குறிகளால் அறியப்படாததாய், உணவாசை முதலிய ஆறு ஊர்ஜிகமற்றதாய் பற்றாததாய் நின்று ஞானமயனான ஸ்ரீவிஷ்ணுபகவானுக்கு பிரமம் என்ற பெயர் கொண்ட சொரூபம் என்று வழங்கப்படும். எந்த யோகிகள் அந்த ஸ்வரூபத்திலே முடிவுகாலத்து நினைப்பின் சக்தியினாலே, வேறான நினைப்புகளையெல்லாம் தவிர்த்து, சகல உபாதிகளும் இல்லாமையாகிற லயத்தை அடைகிறார்களோ; அவர்கள் சம்சாரம் என்ற கழனியில் விதைப்பதற்கு உமி நீங்கிய அரிசியைப் போலாவார்கள்.

நான் இப்போது விவரித்த முக்த ஸ்வரூபத்துக்கு உள்ள சகல குணங்களையும் கொண்டதாய், நித்திய சுத்தமாய், சர்வாத்மகமாய், பரிபூரணமாய், வேறுகுணங்களில்லாததாய் கல்யாண குணங்களைக் கொண்டதாய், ஸ்ரீவிஷ்ணு என்ற திருநாமமுடைய உத்தம ஸ்வரூபம் ஒன்றுண்டு. அதுதான் பரப்பிரம்மம் என்று வழங்கப்படும். அந்த பரப்பிரம்மத்தை அடைந்த யோகியானவன் புனராவிருத்தி இல்லாமல், புண்ணிய பாவ வர்ஜிதனாய், சகல கிலேசமும் இல்லாதவனாய், அத்யந்த நிர்மலமான ஆனந்தானுபவஞ்செய்து கொண்டிருப்பான். அந்தப் பரப்பிரம்மத்துக்கு மூர்த்தம் அமூர்த்தம் என்று சொல்லப்பட்டு அழியாததாகையால் அக்ஷரம் என்ற பெயரைப் பெறும். ஏகதேசத்திலிருக்காத அக்கினியின் பிரபைச் சிறப்பு பரவலாக வியாபித்திருப்பதைப் போலவே, பரப்பிரம்மமான நாராயணனுடைய சக்தி சிறப்பானது. சகல ஜெகத்தையும் வியாபித்துள்ளது. அக்கினியின் அருகிலேயிருந்தால் பிரபைச் சிறப்பு அதிகமாக இருக்கும். தூரத்திலிருந்தால் அது சொற்பமாக இருக்கும். அதுபோலவே, ஸ்ரீமந்நாராயணனுடைய சக்தியும் பிரமாதி ஸ்தாவராந்தமான ஜகத்தில் ஏறவுங் குறையவும் வியாபித்துள்ளது. அதன் விவரத்தையும் சொல்லுகிறேன். கேளுங்கள். பிரம்ம, விஷ்ணு ருத்திரரிடத்திலே, பிரம சக்தியானது அதிகஅளவில் வியாபித்திருக்கும் அதிலே பிரம ருத்திரர்களிடத்திலே அனுப்பிரவேசமாகவும் விஷ்ணுவினிடத்திலே சொரூபமாகவும் இருக்கும் என்று அறியவேண்டும். இனி, அவர்களைக் காட்டிலும் தக்ஷõதிகளும் அவர்களைவிட மனிதர்களும், அவர்களைவிட பசு, பட்சி சரீஷ ரூபங்களும், அவற்றை விட மரஞ்செடி கொடிகளும் முறைமுறையாகக் குறைந்திருக்கும். இவ்விதமாக உற்பத்தி நாசம் முதலிய விற்பங்களையுடையதாயும், கணக்கற்றதாயும், நித்தியமாயும் இருக்கிற இந்தப் பிரபஞ்சம் எம்பெருமானுக்கு ஒரு ரூபமாகும்! பூர்வத்தில் சொல்லப்பட்ட சர்வ சக்திகளையும் கொண்டவனுக்கு மூர்த்தமான வேறொரு ரூபமும் உண்டு. மந்திர ஜபாதி சகிதமான சாலம்பனம் என்ற மகாயோகத்தை பயிலு போது யோகிகளுக்குள்ளே அஸ்திர பூஷணாதி சகிதமும் திவ்வியமுமான விஷ்ணு தேவனுடைய அந்த ரூபந்தான் தியானஞ்செய்ய வேண்டுவதாகும். சித்தத்தை நிச்சலமாக்கி யோகாப்பியாசஞ் செய்யும் யோகியாருக்கு இப்போது நான் அறிவித்த தியானச் சிறப்பு சித்திக்கும். மைத்ரேயரே! அந்த எம்பெருமானுக்கு முன்பு சொன்ன சகலரூபங்களை விட பரமமான ரூபம் அந்த விஷ்ணு ஸ்வரூபமேயல்லாது வேறல்ல. அதுவே திருவுள்ளமுகந்த ஸ்வரூபம். ஏனென்றால், அந்த ஸ்ரீஹரியே சர்வாத்துமகமான பரப்பிரம சொரூபம். அவனிடமே சகல லோகங்களும் வஸ்திரங்களில் நூல்களைப் போலக் கலந்து கோப்புண்டு இருக்கின்றன. எப்படியெனில் சகல உலகங்களும் அவனாலே உண்டாகி, அவனிடத்திலேயே நின்றிருக்கின்றன. க்ஷராக்ஷரமயனான ஸ்ரீவிஷ்ணு, பிரகிருதி புருஷாதிகளையெல்லாம் அஸ்திர பூஷணங்களாகத் திரிந்திருப்பவன்-இவ்வாறு பராசரர் கூறியதும் மைத்ரேயர் குறுக்கிட்டு, முனிவர் பெருமானே! ஸ்ரீமந்நாராயணன் சகல ஜகத்தையும் அஸ்திரபூஷண சொரூபமாகத் தரித்திருக்கும் விதத்தை சொல்ல வேண்டும்! என்று கேட்டார்.

பராசரர் அதற்கு பின்வருமாறு விவரித்து கூறினார். அப்பிரமேயனாயும், சர்வ சக்தனாயும் சர்வேசுவரனாயும் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவிஷ்ணு பகவானுக்குத் தெண்டம் சமர்ப்பித்து , என் பிதாமகனான வசிஷ்ட முனிவர் அருளிச்செய்த வண்ணம் ஸ்ரீமந்நாராயணனுடைய அஸ்திரபூஷணாதி சொரூபத்தை விவரிக்கிறேன்; கேளுங்கள். உலகத்தோடு ஒட்டாதவனும் பிரகிருதி குணராகிதனுமான க்ஷேஷத்திரக்ஞனே, கவுஸ்துபமணியாகவும் ஜகதாதி காரணமான மூலப்பிரகிருதியே! ஸ்ரீவச்சம் என்ற மறுவாகவும், புத்தியே! கவுமோதகி என்ற கதாயதமாகவும், சாமசாகங்காரமே பாஞ்சசன்னியம் என்ற சங்காகவும், சாத்விகங்காரமே சாரங்கம் என்ற வில்லாகவும், சலனாத்மகமான மனமே மகாவேகத்தில் வாயுவையும் மிஞ்சக்கூடிய சுதர்சனம் என்ற சக்கரமாகவும், பஞ்ச மஹா பூதங்களும், முத்து மாணிக்க மரகத இந்திர நீல வஜ்ஜிரமயமாய், பஞ்சவர்ணமான வைஜயந்தி என்ற வனமாலையாகவும், ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் அம்புகளாகவும், வித்தையே அத்யந்த நிர்மலமான நந்தகம் என்ற கத்தியாகவும், அவித்தையே அந்தக் கத்தியின் உறையாகவும் ஸ்ரீமந்நாராயணன் பிரகிருதி புருஷர்களையெல்லாம் அஸ்திர பூஷண சொரூபமாகத் தரித்துக் கொண்டு விசித்திர சக்தியுக்தனாகிச் சேதனருக்கெல்லாம் இதஞ்செய்தருள்வான். வித்தையும் அவித்தையும் சேதனமும் அசேதனமும் நாராயணனிடத்தில் தான் இருப்பவை கலா, காஷ்டா முகூர்த்த அகோராத்திர மாச அயன சம்வச்சரரூபமான காலமும் ஸ்ரீஹரி சொரூபமாகும். பூலோக புவர்லோக சவர்லோகங்களும், மகாலோக, ஜனலோக தவலோக சத்தியலோகங்களும், மகாலோக, ஜனலோக தவலோக சத்தியலோகங்களும், தேவ, மனுஷ்ய பசு, பக்ஷியாதி உயிர் வகைகளும், ரிக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்கிற வேதங்களும், உபநிஷத்தக்களும் இதிஹாசங்களும், வேதாங்கங்களும், மநுவாதி ஸ்மிரிதிகளும், கல்ப சூத்திரங்களும் காவியங்களும் கீதங்களும் மற்றும் உண்டான இதர சாஸ்திர வகையும் மூர்த்தங்களாயும் அமூர்த்தங்களாயும் இருக்கும் பதார்த்தங்களும் ஸ்ரீமந்நாராயணனுடைய சரீரமே என்று நினையுங்கள். யாவருக்கும் ஸ்ரீஹரியே ஆத்மபூதன்! சகலமும் அவனே! அவனைக் காட்டிலும் காரியமும் காரணமுமான வேறுபொருள் இல்லை என்ற திடசித்தம் எவனுக்கு ஏற்படுகிறதோ, அவன் பிறவித்தொடர்புடைய, தொந்த துக்கமில்லாமல் பரமமான மோட்ச ஆனந்தத்தை அடைவான். மைத்ரேயரே! சகலபாபக்ஷயகரமான ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் முதலாம் அமிசத்தை, இருபத்திரண்டு அத்தியாயங்களில் விளக்கமாகச் சொன்னேன். இந்த முதலாவது அம்சத்தை கேட்ட மனிதருக்கு, புண்ணிய நதிகளில் பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகைப் பவுர்ணமி அமாவாசையில் ஸ்நானம் செய்த பயன் உண்டாகும். புத்திர பவுத்திர தன கனக, வஸ்து வாகனங்களும் அட்சயமான பரமபத சுகமும் உண்டாகும்! தேவ, ரிஷி, பிதுர், கந்தர்வ, யக்ஷர் ஆகியோரது படைப்பு வரிசை முறையைக் கேட்டவருக்க, தேவ, ரிஷி கந்தர்வாதிகளனைவரும் மகிழ்ந்து வலுவிலேயே சகல அபீஷ்டங்களையும் கொடுப்பார்கள்.

முதல் அம்சம் முடிந்தது.

———————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-