Archive for February, 2024

ஸ்ரீ திருவாய்மொழி நூற்றந்தாதி 

February 29, 2024

அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்
சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான் –நல்ல
மணவாளமாமுனிவன் மாறன் மறைக்குத்
தணவா நூற்றந்தாதி தான்

இரவும் பகலும், இனிய சொற்களையும் அவற்றின் பொருள்களையும் அறிய விரும்புபவர்களுக்காக, மணவாள மாமுனிகள் கருணையுடன் தமிழ் வேதமான திருவாய்மொழியின் அர்த்தங்களை, இச்சிறந்த ப்ரபந்தத்தில் நூறு பாசுரங்களாக அந்தாதி க்ரமத்தில் அருளியுள்ளார்.

மன்னுபுகழ்சேர் மணவாள மாமுனிவன்
தன் அருளால் உட்பொருள்கள் தன்னுடனே சொன்ன
திருவாய்மொழி நூற்றந்தாதியாம் தேனை
ஒருவாதருந்து நெஞ்சே! உற்று

நெஞ்சே! நித்யமான புகழை உடைய மணவாள மாமுனிகளால் திருவாய்மொழியின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளியிடுவதற்காகக் கருணையுடன் அருளப்பட்ட திருவாய்மொழி நூற்றந்தாதி என்கிற தேனைத் தொடர்ந்து பருகுவாயாக.

முதல் பாசுரம். (உயர்வே பரன் படி…) இதில், மாமுனிகள் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள், அதாவது எம்பெருமானின் மேன்மையை விளக்கி, “அவன் திருவடிகளில் பணிந்தால் உஜ்ஜீவனத்தை அடையலாம்” என்று சொல்லும் முதல் திருவாய்மொழி சேதனர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கவல்லது என்று அருளிச்செய்கிறார்.

உயர்வே பரன் படியை  உள்ளதெல்லாம் தான் கண்டு
உயர் வேதம் நேர் கொண்டுரைத்து மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு

மேன்மைகள் பொருந்திய ஸர்வேச்வரனின் தன்மைகளை முழுவதுமாக அநுஸந்தித்த ஆழ்வார், தலைசிறந்த ப்ரமாணமான வேதத்தின் க்ரமத்தில் அருளிச்செய்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் மனிதர்கள் சிறிதும் அஜ்ஞானம் இல்லாமல், உஜ்ஜீவனத்தைப் பெற்று, மோக்ஷத்தை அடைய வழிசெய்யும்.

இரண்டாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் ஸம்ஸாரிகளைத் திருந்துமாறும் தன்னுடைய ஹ்ருதயத்தைப்போலே துணையாக இருக்கும்படிக் கேட்பதையும் அனுபவித்து இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார்.

வீடு செய்து மற்றெவையும்   மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் – நீடு புகழ்
வண்குருகூர் மாறன்  இந்த மாநிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி அருள் பத்து

சிறந்த திருக்குருகூருக்குத் தலைவரான பெருமை பொருந்திய ஆழ்வார் மிகுந்த கருணையுடன் இந்தப் பரந்த உலகில் வாழ்பவர்களைத் திருத்த “எல்லாவற்றையும் விட்டு ஸ்ரீமந் நாராயணனின் மேன்மை பொருந்திய திருவடிகளைப் பற்றுங்கோள்” என்று அருளிச்செய்தார்.

மூன்றாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் பகவானின் ஸௌலப்யத்தை (எளிமையை) உபதேசித்த பாசுரங்களை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பத்துடையோர்க்கு என்றும்   பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மாநிலத்தீர்! மூண்டவன் பால் – பத்தி செய்யும்
என்றுரைத்த  மாறன் தனின் சொல்லால் போம்  நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை

ஆழ்வாரின் இனிய வார்த்தைகளான “ஸர்வேச்வரன் தன்னுடைய அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்; தன்னுடைய அவதாரங்கள் மூலமாக அவர்களுக்கு மோக்ஷத்தை அளிப்பவன்; இந்தப் பெரிய உலகில் வாழ்பவர்களே! கனிந்த அன்புடன் அவனிடத்தில் பக்தி செய்யுங்கோள்” என்பதை அனுஸந்திப்பவர்களுக்கு, நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் பிறவி என்னும் கட்டு விலகும்.

நான்காம் பாசுரம். மாமுனிகள், பறவைகளை எம்பெருமானிடம் தூதுவர்களாகப் போய், அவனுடைய அபராத ஸஹத்வம் (குற்றங்களைப் பொறுத்துக்கொள்ளுதல்) என்ற குணத்தை அறிவிக்குமாறு ப்ரார்த்திக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அஞ்சிறைய புட்கள் தமை ஆழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என இரந்து  – விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்

அழகிய சிறகுகளை உடைய பறவைகளைக் கண்ட ஆழ்வார், அவைகளிடம் “நீங்கள் சென்று என்னுடைய நிலைமையை திருவாழியை உடைய ஸர்வேச்வரனுக்குச் சொல்லுங்கோள்” என்று ப்ரார்த்தித்து, தன் சக்தியை இழந்து, எல்லா உலகிலும் எம்பெருமானைத் தேடி, கலக்கத்தை அடைந்தார். இதுவே ஆழ்வாருடைய பக்தியின் பெருமை.

ஐந்தாம் பாசுரம். மாமுனிகள், எல்லோரும் எம்பெருமானைப் புகலிடமாகக் கொள்ள உதவும் அவனுடைய ஸௌசீல்யம் (நீர்மை) என்கிற குணத்தை விளக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளம் உற்று அங்கூடுருவ ஓர்ந்து – தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடிலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து

மிகுதியான ஐச்வர்யத்தை உடைய எம்பெருமானுடைய பெருமையையும் தன்னுடைய தாழ்ச்சியையும் தன் நெஞ்சில் உணர்ந்த ஆழ்வார், அவற்றை நன்றாக ஆராய்ந்து, மிகவும் தளர்ந்து, எம்பெருமானை விட்டு விலக நினைத்தார்; ஸர்வேச்வரன் தன்னுடைய ஒளிவிடும் சீல குணத்தைக் கொண்டு, ஆழ்வாரை ஆனந்தமாக, ஸ்நேஹத்துடன் அணைத்தான்.

ஆறாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானை அடைவதும் தொழுவதும் அரிதன்று, எளிது என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கென்று  – உரிமையுடன்
ஓதி அருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு

எம்பெருமானிடம் நெருக்கமான பக்தியுடன் பேசிய ஆழ்வார், எல்லா தோஷங்களுக்கும் எதிர்த்தட்டான ஸர்வேச்வரனின் தன்மைகளை “பூர்ணனான ஸர்வேச்வரன், அவனுக்கு எதை ஸமர்ப்பித்தாலும் த்ருப்தியுடன் ஏற்றுக்கொள்வான்; மேலும் அவனை ஆராதிப்பது அரிய செயல் அன்று” என்று சொல்லி, இவ்வுலகில் அறிவற்ற மக்களுக்கு பிறவி முதலியவற்றை விலக்கியருளினார்.

ஏழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானிடத்தில் சரணடையும் இனிமையைக் கொண்டாடிச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பிறவி அற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் – அறவினியன்
பற்றுமவர்க்கென்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே! ஓடு

நெஞ்சே! “ச்ரிய:பதியான எம்பெருமான் தன்னிடம் சரணடைபவர்களை பிறவித்துயரில் இருந்து விடுவிக்கிறான்; மேலும் அவர்களுக்குப் பரமபதத்தில் உயர்ந்த ஆனந்தத்தை அளிக்கும் தன்மையுடன் இருக்கிறான்; அப்படி அவனிடம் சரணடைபவர்களுக்கு அவனே மிகவும் இனிமையானவன்” என்று அருளிச்செய்த ஆழ்வாரின் திருவடிகளையே சிறந்த துணையாகக் கருதி, அவரிடம் விரைந்து சென்று சரணடைவாயாக.

எட்டாம் பாசுரம். மாமுனிகள், நேர்மையுள்ளவர்களிடமும் நேர்மையற்றவர்களிடமும் எம்பெருமான் நேர்மையாகப் பழகுகிறான் என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஓடு மனம் செய்கை உரை ஒன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை  – நாடறிய
ஓர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை

நேர்மை இல்லாதவர்களை, அதாவது தங்கள் நிலையில்லாத மனம், உடம்பு மற்றும் வாக்கு ஆகிய கரணங்கள் ஒருமித்து இல்லாமல் இருப்பவர்களை, ஏற்றுக் கொள்வதாகிய ஸர்வேச்வரனின் குணத்தைப் பேசி எல்லோரும் உணரும்படி அருளிய ஆழ்வாரை அனுஸந்திப்பவர்களிடம் தங்கள் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த (கைங்கர்யச்) செல்வம் நிலைத்து நிற்கும்.

ஒன்பதாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் பொறுக்கப் பொறுக்க ஆனந்தத்தைக் கொடுக்கும் குணத்தைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இவை அறிந்தோர் தம் அளவில் ஈசன் உவந்தாற்ற
அவயங்கள் தோறும் அணையும் – சுவை அதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும்

ஸர்வேச்வரன் தன்னுடைய (சென்ற பதிகத்தில் வெளியிடப்பட்ட) நேர்மை போன்ற குணங்களை உணர்ந்தவர்களுடன் படிப்படியாக, அவர்களின் ஒவ்வொரு அவயவத்துடனும் ஆனந்தமாகக் கூடும் இன்பத்தைப் பெற்று அனுபவித்த ஆழ்வார், அதை மிகுந்த ஆனந்தத்துடன் அருளிச் செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளைச் சொல்லவே, ஸர்வேச்வரனின் திருவடிகள் நம் தலையில் வந்து சேரும்.

பத்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தன் எல்லா அவயங்களுடனும் கூடியதற்குத் தன்னிடத்தில் எந்தக் காரணமும் இல்லை என்பதை உணர்ந்து, த்ருப்தியுடன் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பொரும் ஆழி சங்குடையோன்  பூதலத்தே வந்து
தருமாறோர் ஏதுவறத்தன்னை – திரமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக என் சென்னி
வாழ்த்திடுக என்னுடைய வாய்

திருவாழியையும் ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் தன் திருக்கைகளில் கொண்டிருக்கும் எம்பெருமான், இவ்வுலகில் எந்தக் காரணமும் இல்லாமல் தன் நிர்ஹேதுக க்ருபையாலே அவதரித்து, தன்னை மற்றவர்களுக்குக் கொடுக்கும் தன்மயை நன்றாக அனுபவித்த ஆழ்வார், அதை அருளிச்செய்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் என் தலை வணங்கட்டும்; என்னுடைய வாய் அவருக்கு மங்களாசாஸனம் செய்யட்டும்.

பதினொன்றாம் பாசுரம். மாமுனிகள், எல்லாப் பதார்த்தங்களும் தன்னைப்போலே துன்புறுவதாகச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் – ஆய
அறியாதவற்றோடு அணைந்தழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து

தன்னடியார்களை அணுகும் ஸர்வேச்வரன் தன்னை மறைத்துக் கொள்ள, ஆழ்வாரின் சோகம் மிகவும் அதிகமாகி, விடாமல் அழும் நிலையை அடைந்தார்; தன் சோகத்தைப் புரிந்து கொள்ள அறியாத பதார்த்தங்களை கட்டிக்கொண்டு அழுதார்; இப்படிப்பட்ட ஆழ்வார் அடியார்களை தன்னுடைய கருணை மிகுந்த கண்களால் கடாக்ஷிப்பார்.

பன்னிரண்டாம் பாசுரம். மாமுனிகள், அவதாரங்களில் எம்பெருமானின் பரத்வத்தை, முன் பதிகத்துடன் தொடர்பில்லாமல், திடீரென்று நினைத்து, அதை மற்றவர்களுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி அவதாரத்தே நன்குரைத்த – வண்ணமறிந்து
அற்றார்கள் யாவர் அவரடிக்கே ஆங்கவர் பால்
உற்றாரை மேலிடாதூன்

திடமான எண்ணத்தை உடைய ஆழ்வார் ஸர்வேச்வரனின் பரத்வத்தை அவன் அவதாரங்களில் அருளிச்செய்ததை அறிந்து, அவ்வாழ்வார் திருவடிகளை அடைபவர்கள், இந்த சரீரத்துடன் இருக்கும் பந்தத்தால் ஜயிக்கப்பட மாட்டார்கள்.

பதிமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாருடன் ஏகதத்வம் (இருவரும் ஒருவரே) என்று எண்ணும்படிக் கூடின காலத்தில் தனக்குத் துணையாக இருந்து அனுபவிக்க மேலும் பலரைத் தேடிய ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஊனம் அறவே வந்து உள் கலந்த மால் இனிமை
ஆனது அனுபவித்தற்காம் துணையா – வானில்
அடியார் குழாம் கூட ஆசை உற்ற மாறன்
அடியாருடன் நெஞ்சே!  ஆடு

ஆழ்வார் அனுகூலர்களுடன் கூடி இருந்து, எந்தக்குறையும் இல்லாமல் தன்னுடன் வந்து கூடிய ஸர்வேச்வரனுடன் ஏற்பட்ட கூடலின் இனிமையை அனுபவிக்க, பரமபதத்தில் இருக்கும் அடியார் குழாங்களுடன் கூட ஆசைப்பட்டார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் அடியார்களுடன் வாழ ஆசைப்படு.

பதினான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் மற்றும் அவன் அடியார்களைப் பிரிந்து வாடும் ஒரு பெண்ணின் தாய் பாவனையில் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறை அதனால் – வாடி மிக
அன்புற்றார் தன் நிலைமை ஆய்ந்துரைக்க மோகித்துத்
துன்புற்றான் மாறன் அந்தோ!

ஆழ்வார் பரமபதத்தில் இருக்கும் அடியார்களுடன் கூடி அனுபவிக்கவும் அவர்களுடன் ஆடி மகிழவும் முடியாமல் மிகவும் வருந்தினார்; அவர் மனம் கலங்கி அவர் அருகில் இருக்கும் அவர் மீது மிகவும் அன்பு கொண்ட மதுரகவி ஆழ்வார் போன்றோர்களால் ஆராயப்பட்டு, பேசப்பட்டார்; அந்தோ!

பதினைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தன்னுடைய அடியார்களுடன் (திவ்ய ஆயுத மற்றும் ஆபரண வடிவில் இருக்கும் நித்யஸூரிகள்) வந்து, திருவாய்மொழி 2.4 “ஆடி ஆடி” பதிகத்தில் காட்டப்பட்ட வருத்தத்தைப் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அந்தாமத்தன்பால் அடியார்களோடு இறைவன்
வந்தாரத் தான் கலந்த வண்மையினால் – சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே!
வாய்ந்த அன்பை நாள் தோறும் வை

ஸர்வேச்வரன் ஸ்ரீவைகுண்டத்தில் தனக்கு இருக்கும் ஆசையை ஆழ்வாரிடம் கொண்டு, திவ்ய ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்கள் வடிவில் இருக்கும் நித்யஸூரிகளுடன் வந்து, உதாரகுணத்துடன் ஆழ்வாருடன் நன்றாகக் கலந்து ஆழ்வாரின் வருத்தத்தைப் போக்கினான். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் பொருத்தமான அன்பை எப்பொழுதும் வை.

பதினாறாம் பாசுரம். மாமுனிகள், ஈச்வரன் நம்மை “அப்பொழுதைக்கப்பொழுது என் ஆராவமுதம்” என்று அனுபவிக்கும் ஆழ்வார் தான் மிகத் தாழ்ந்தவர் என்று எண்ணி நம்மை விட்டுப் பிரிந்தால் என்ன செய்வது என்று தேவையில்லாமல் ஸந்தேஹப்பட, அந்த ஸந்தேஹத்தைப் போக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து – நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத்தான் விடேன் என்றுரைக்க
வன்மை அடைந்தான் கேசவன்

நித்யவிபூதிக்குத் தலைவனான ஸர்வேச்வரன் ஆழ்வாருடன் வந்து கலக்க ஆழ்வார் தம்மை தரித்துக் கொண்டார். ஆனால் அதன் பிறகு தன்னைப் பற்றித் தாழ்வாக நினைக்கத் தொடங்கினார்; அதைக் கண்டு வருந்தி மிகவும் உடைந்து போன எம்பெருமானைக் கண்ட ஆழ்வார், எம்பெருமானிடம் “நாம் உன்னைப் பிரிய மாட்டோம்” என்று சொல்ல, எம்பெருமான் தேறினான்.

பதினேழாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடன் இருக்கும் உறவால், தன்னுடைய முன்னோர்கள் மற்றும் பின்னோர்கள் பகவானுக்கு அடியவர்கள் ஆனதை ஆனந்தமாகப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசடைந்தார் என்று சிறந்துரைத்த – வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கெல்லாம் உய்கைக்கு
ஆறென்று நெஞ்சே!  அணை

ஆழ்வார் “நம்மைச் சேர்ந்தவர்கள், தங்களுடன் தொடர்புள்ள முன்னோர்கள் மற்றும் பின்னோர்களுடன் ஒளியைப் பெற்றனர்” என்று தெளிவாக அருளிச்செய்தார்; இவ்வாழ்வாருடைய பெருமை எல்லா இடங்களிலும் பரவியுள்ளது; நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே எல்லா ஆத்மாக்களுக்கும் மோக்ஷத்துக்கு உபாயமாகக் கொண்டு, அத்திருவடிகளில் சரணடைவாயாக.

பதினெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய தன்மையை உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட – இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலர் அடியே
வீசு புகழ் எம்மா வீடு

எம்பெருமான் தன்னைச் சரணடையும் நித்யஸம்ஸாரிகளை நித்யஸூரிகளுடன் சேர்க்கக்கூடிய மோக்ஷத்தைக் கொடுக்கிறான்; எம்பெருமானின் இத்தன்மையை ஆழ்வார் குற்றமற்ற உபதேசமாக அருளிச்செய்து இந்த ஸம்ஸாரிகளும் கண்ணனின் அருளைப் பெறும்படி செய்தார்; இப்படி எங்கும் பரவிய பெருமை வாய்ந்த ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே சிறந்த மோக்ஷ ஸ்தானம்.

பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், அடைய வேண்டிய குறிக்கோளை நிர்ணயிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எம்மா வீடும் வேண்டா என்தனக்கு உன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்துரைத்த – நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாள் இணை சூடிக்
கீழ்மையற்று நெஞ்சே!  கிளர்

ஆழ்வார் எம்பெருமானிடம் “எம்பெருமானே! தேவரீரின் திருவடிகளே எனக்குப் போதும்” என்றார்.  இப்படிச் சொன்ன ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே நம்முடைய ஸத்தைக்குக் காரணம். தாழ்ந்த விஷயங்களை விட்டு இவ்வாழ்வாரின் திருவடிகளை உங்கள் தலையில் வைத்துக் கொண்டால், நீங்கள் உயர்ந்த கதியை அடையலாம்.

இருபதாம் பாசுரம். மாமுனிகள், “திருமாலிருஞ்சோலை என்னும் திருமலையைப் புகலாகக் கொள்வதே பேற்றுக்கு வழி” என்று உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். அன்றிக்கே, மாமுனிகள் ஆழ்வார் திருமாலிருஞ்சோலை மலையையே சிறந்த குறிக்கோளாக அனுபவிப்பதை அருளிச்செய்கிறார் என்றும் சொல்லலாம்.

கிளரொளி சேர் கீழுரைத்த பேறு கிடைக்க
வளரொளி மால் சோலை மலைக்கே  – தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேருமெனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம் முடி

முன்பு அருளிச்செய்த, மிகவும் ஒளிவிடும் புருஷார்த்தத்தை அடைய, ஆழ்வார் எம்பெருமானின் இருப்பிடமான, வளர்ந்துவரும் ஒளிபடைத்த திருமாலிருஞ்சோலையை, தளராமல், மனதை வைத்து அடையுங்கோள் என்று அருளிச்செய்தார்; இத்தனை பெருமை பெற்ற ஆழ்வாரின் திருவடிகளில், நம் தலையை வைப்போம்.

இருபத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், திருமாலிருஞ்சோலை என்கிற திருமலையில் எழுந்தருளியிருக்கும் அழகர் எம்பெருமானின் வடிவழகை நன்கு அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் – வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படிகலனும்
முற்றும் அனுபவித்தான் முன்

முன்பு, ஆழ்வார் திடமாக இருந்து சிகரங்களை உடைய திருமலையை அனுபவித்து, அங்கே எழுந்தருளியிருக்கும் அழகர் எம்பெருமானின் திருமேனியை, அந்தத் திருமேனியில் அணிந்திருக்கும் திருவபிஷேகம் (கிரீடம்), சதங்கை மற்றும் ஏனைய ஆபரணங்களுடன் சேர்ந்து அனுபவித்தார்.

இருபத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், “என்னுடைய கரணங்களின் குறையால் எம்பெருமானின் குணங்களை அனுபவிக்க முடியவில்லை” என்று கலங்க அதை எம்பெருமான் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்னவளவென்ன எனக்கரிதாய்த் – தென்ன
கரணக் குறையின் கலக்கத்தைக் கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து

முன்பு, ஆழ்வார் அழகர் எம்பெருமானின் வடிவழகில் மூழ்கினார்; கரணங்களின் குறையால் ஏற்பட்ட அஜ்ஞானத்தால் “எனக்கும் கூட, எம்பெருமானின் அழகை இவ்வளவு என்று அளவுபடுத்தி அனுபவிக்க முடியவில்லையே!” என்ற ஆழ்வாரை ஸமாதானப் படுத்தி, எம்பெருமான் ஆழ்வாரின் கலக்கத்தைப் போக்கினான்.

இருபத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், கைங்கர்யம் செய்வதில் தனக்கு இருக்கும் ஆசையை வெளியிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழுவிலா ஆட்செய்ய மாலுக்கு – எழுசிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே!  புகழ்

நெஞ்சே! உயர்ந்த சிகரங்களையுடைய திருமலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடன் பிரியாமல் இருந்து எல்லாக் காலங்களிலும் குற்றமில்லாத கைங்கர்யங்களைச் செய்ய ஆசைப்பட்டு அதனால் பேரின்பத்தை அடைந்த ஆழ்வாரின் அழகிய திருவடிகளைக் கொண்டாடு.

இருபத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாரின் ப்ரார்த்தனைக்கு இணங்க எல்லாப் பொருட்களுக்கும் அந்தர்யாமியாக இருப்பதைக் காண்பிக்க, அதைக் கண்டு அனுபவித்து, வாசிக கைங்கர்யம் செய்யும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

புகழொன்று மால் எப்பொருள்களும் தானாய்
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க – மகிழ்மாறன்
எங்கும் அடிமை செய இச்சித்து வாசிகமாய்
அங்கடிமை செய்தான் மொய்ம்பால்

தகுந்த பெருமைகளை உடைய ஸர்வேச்வரன், தான் எல்லா பொருட்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கும் நேர்மை என்ற குணத்தை வெளிப்படுத்தினான். இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு எல்லா இடங்களிலும் கைங்கர்யம் செய்ய ஆசைப்பட்ட வகுளாபரணரான ஆழ்வார், மயர்வற மதிநலம் அருளப்பட்டதால் வந்த பெருமையுடன், வாசிக கைங்கர்யத்தைச் செய்தார்.

இருபத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுக்கு அடிமை செய்பவர்களைக் கொண்டாடியும், அப்படிச் செய்யாதவர்களை நிந்தித்தும் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மொய்ம்பாரும் மாலுக்கு முன் அடிமை செய்து உவப்பால்
அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் – அன்பிலா
மூடரை நிந்தித்தும் மொழிந்தருளும் மாறன்பால்
தேடரிய பத்தி நெஞ்சே!  செய்

நெஞ்சே! மிகவும் சக்தி பொருந்திய ஸர்வேச்வரனுக்கு அடிமை செய்த ஆனந்தத்தால், அவனிடத்தில் பக்தியுடன் தொண்டு செய்பவர்களைக் கொண்டாடியும் அது செய்யாத மூடர்களை நிந்தித்தும் பேசிய ஆழ்வாரிடம் உயர்ந்த பக்தியைக் கொள்.

இருபத்தஆறாம் பாசுரம். மாமுனிகள், அர்ச்சாவதாரம் வரை வந்துள்ள எம்பெருமானின் ஸௌலப்யம் (எளிமை) என்ற குணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்த்
துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் – எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று

சேதனர்களுடன் கூடி நன்றாக ஆராயப்படும் தமிழ் வேதத்தையே அடையாளமாகக் கொண்ட ஆழ்வார் “இவ்வுலகில் எம்பெருமானிடத்திலே சரணடைபவர்களுக்கு, உயர்த்தி பொருந்திய பரத்வம், சிறந்த வ்யூஹம், தூய்மையான அவதாரங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் எம்பெருமானின் அர்ச்சாவதாரமே அடைவதற்கு எளிது” என்று அருளிச்செய்தார்.

இருபத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் அடியார்களே விரும்பத்துகுந்த குறிக்கோள் என்று பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு – இயல்வுடனே
ஆளானார்க்காளாகும் மாறன் அடி அதனில்
ஆளாகார் சன்மம் முடியா

ஆழ்வார் ச்ரிய:பதியான எம்பெருமானின் திருவடிகளில் மனதை வைத்துத் தொண்டு செய்யும் அடியவர்களுக்குத் தொண்டு செய்ய ஆசைப்பட்டார். இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளுக்குத் தொண்டு செய்யாதவர்களுக்கு இவ்வுலகில் பிறவி முடியாமல் தொடரும்.

இருப்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், தானும் தன்னுடைய கரணங்களும் (எம்பெருமானை அனுபவிப்பதில்) மிகவும் ஆசையுடன் இருந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முடியாத ஆசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டு அவன் பால் படியா – ஒன்றொன்றின்
செயல் விரும்ப உள்ளதெல்லாம் தாம் விரும்பத்
துன்னியதே மாறன் தன் சொல்

ஆழ்வாரின் எல்லை இல்லாத அன்பு மேலும் பெருக, அவரின் எல்லாக் கரணங்களும் அடியார்களைவிட்டு ஸர்வேச்வரனை அடைந்தன; ஒவ்வொரு கரணமும் தன் அனுபவத்துக்கு மேல், மற்ற கரணங்களின் அனுபவத்தையும் ஆசைப்பட, ஆழ்வார் எல்லாக் கரணங்களின் அனுபவத்தையும் ஆசைப்பட்டார்; இவ்வாறு, ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் நன்கு செறிந்தன.

இருபத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், அடியார் அல்லாதவர்களுக்குத் தொண்டு செய்வது தாழ்ந்தது என்றும் எம்பெருமானுக்குத் தொண்டு செய்வது பொருத்தமானது என்றும் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சொன்னாவில் வாழ் புலவீர்! சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலால் – என்னாகும்?
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம்

நாக்கில் கவி பாடும் திறன் பெற்ற புலவர்களே! உணவு மற்றும் உடைக்காக, குறைந்த ஆயுளை உடைய மனிதர்களை உங்கள் கவிதைகளால் கொண்டாடுவதால் என்ன பயன்? எல்லோருக்கும் ச்ரிய:பதியைக் கொண்டாடும்படி உபதேசித்த திருக்குருகூரின் தலைவரான ஆழ்வாரின் அருளால், அவர்கள் பிறவி நீங்கும்.

முப்பதாம் பாசுரம். மாமுனிகள், “எம்பெருமானுக்காகவே என்னுடைய கரணங்கள் இருப்பதால் எனக்கு ஒரு குறையுமில்லை” என்ற ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சன்மம் பல செய்து தான் இவ்வுலகளிக்கும்
நன்மை உடை மால் குணத்தை நாள் தோறும் – இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை உலகீர்!
நாத்தழும்ப ஏத்தும் ஒரு நாள்

ஆழ்வார் “இவ்வுலகத்தில் வாழ்பவர்களே! பல அவதாரங்களைச் செய்து, இந்த உலகங்களைக் காக்கும் நன்மை உடைய ஸர்வேச்வரனின் கல்யாண குணங்களை எப்பொழுதும் கொண்டாடும் பேரானந்தத்தை இப்பிறவியில் பெற்றேன்” என்று அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரை ஒரு நாளாவது பாடி, உங்கள் நாக்கில் தழும்பேறும்படிச் செய்யுங்கள்.

முப்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், ஐச்வர்யம் முதலியவற்றின் தாழ்ச்சி மற்றும் அநித்யமாக இருக்கும் தன்மையினால் உள்ள தோஷங்களைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஒரு நாயகமாய் உலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி உய்க்கும் இன்பம் – திரமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மால் அடிமையே இனிதாம்
பன்னி இவை மாறன் உரைப்பால்

ஆழ்வார் 1) உலகத்துக்கு ஏக சக்ரவர்த்தியாய் இருந்து பெறும் இன்பம் நிரந்தரமன்று 2) பரந்த ஸ்வர்கத்தில் தேவர்கள் அனுபவிக்கும் இன்பமும் நிரந்தரமன்று 3) நித்யமாக ஆத்மா தன்னையே அனுபவிப்பதும் தீது மற்றும் 4) எம்பெருமானுக்கு அடிமை செய்வது மிகவும் இனியது ஆகியவைகளை ஆராய்ந்து அருளிச்செய்தார்

முப்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் வெவ்வேறு காலத்தில் ஏற்பட்ட பல அவதாரங்களை அந்தந்த இடம் மற்றும் காலத்தில் அனுபவிக்க ஆசைப்பட்டுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பாலரைப் போல் சீழ்கி பரன் அளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கை கழிந்த – சால
அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ

ஆழ்வார்திருநகரியில் அவதரித்த தலைவரான ஆழ்வார், எம்பெருமானிடத்தில் இருந்த அன்பால் அவனுடைய முற்காலத்து அவதாரங்களை அனுபவிக்க ஆசைப்பட்டு, அவை வேறு காலம் மற்றும் தேசத்தில் ஏற்பட்டதால், அது கிடைக்காமையால் குழந்தையைப் போலே சிணுங்கினார்; மேலும் அவனுக்குக் கைங்கர்யம் செய்ய மிகவும் ஆசைப்பட்டு (அது கிடைக்காமையால்), மிகவும் வருத்தமுற்றார்.

முப்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் எப்படி காலத்தால் இருந்த தடையை நீக்கி அனுபவத்தைக் கொடுத்தான் என்பதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கோவான ஈசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத்து உவாதிதனை – மேவிக்
கழித்தடையக் காட்டி கலந்த குண மாறன்
வழுத்துதலால் வாழ்ந்தது இந்த மண்

எல்லோருக்கும் தலைவனான எம்பெருமான் ஆழ்வாருடன் கூடி, காலம் கடந்திருந்தாலும், காலத்தால் வந்த தடையைப் போக்கி, தன்னுடைய பூர்வ சரித்ரங்களை ஆழ்வார் ஆசைப்பட்டபடி காட்டிக்கொடுத்து ஆழ்வாரின் துன்பத்தைப் போக்கினான்; இவ்வாறு ஆழ்வார் எம்பெருமான் தன்னுடன் கூடிய அந்த குணத்தைக் கொண்டாட, இவ்வுலகம் நிலை பெற்றது.

முப்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானைப் போன்று இருக்கும், மற்றும் எம்பெருமானுடன் தொடர்புடைய பொருட்களைப் பார்த்து, அவை எம்பெருமான் என்று ப்ரமித்து, அவைகளை எம்பெருமானாகப் பாடிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண் நிலைமையாய்க் காதல் பித்தேறி – எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை அவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு

எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தில் ஆழ்வாருடன் கலந்து பின்பு பிரிந்தான்; அதனால் ஆழ்வார் ஒரு பெண் தன்மையை அடைந்து, அவனிடத்தில் இருந்த பக்தியால், மிகவும் கலங்கி, அவன் விஷயமான பேரன்பால், அவனைப் போன்ற பொருட்களை அவனாகவே நிர்ணயித்துப் பாடினார்.

முப்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், திவ்ய ஸ்தானமான பரமபதத்தில் எம்பெருமானின் இருப்பைக் கண்டு அடைந்த பேரின்பத்தைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வீற்றிருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமை ஆனதெல்லாம் – தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்குகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து

பரமபதத்தில் வீற்றிருந்தருளும் எம்பெருமான், இங்கே வந்து, தன்னுடைய சிறந்த குணங்கள், திருமேனிகள் ஆகியவற்றைக் காட்டி ஆழ்வாரின் கலக்கத்தை நீக்கி, ஆழ்வாருடன் நன்றாகக் கலந்தான்; இப்படி ஸர்வேச்வரனைக் கண்ட ஆழ்வார், அவனை வணங்கி ஆனந்தத்தை அடைந்து, தன்னுடைய துன்பங்கள் நீங்கப் பெற்றதால், தன்னுடைய பெருமையைத் தானே அறிவித்தார்.

முப்பத்தாறாம் பாசுரம். ஆழ்வாரிடத்தில் மிகுந்த காதல் கொண்ட எம்பெருமானை நேரில் கண்டு அனுபவிக்க முடியாமையால் ஆழ்வார் மோஹித்தார்; ஆழ்வாரிடத்தில் அன்பு கொண்டவர்கள் இதற்கு ஒரு தீர்வு காண முற்பட, நல்ல ஞானம் உள்ள ஆழ்வாரின் நலம்விரும்பிகள் ஆழ்வாருக்குச் சேராத விஷயங்களையும், இந்நிலைக்குக் காரணத்தையும் தீர்வையும் விளக்கிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி மாமுனிகள் அருளிச்செய்கிறார்.

தீர்ப்பாரிலாத மயல் தீரக் கலந்த மால்
ஓர்ப்பாதும் இன்றி உடன் பிரிய – நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்

ஆழ்வாரின் தீர்க்கமுடியாத பேரன்பைத் தீர்க்க ஸர்வேச்வரன் ஆழ்வாருடன் கலந்து, ஆராயாமல் ஆழ்வாரை விட்டுப் பிரிந்தான்; இதைக் கண்ட உறவினர்கள், முன்பைவிட மிகவும் வருந்தி அறிவிழந்தார்கள்; எம்பெருமானுடைய திருநாமங்களைக் கேட்டு தன்னுடைய உணர்வை மீண்டும் பெற்றார்; இதுவே ஆழ்வாரின் தன்மை.

முப்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் திருநாமத்தைக் கேட்டுத் தன் உணர்வை மீண்டும் பெற்ற ஆழ்வார், அந்தத் திருநாமத்துக்கு உடையவனான எம்பெருமானை அனுபவிக்க முடியாமல் வாடிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சீல மிகு கண்ணன் திருநாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு – சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு

ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார், கல்யாண குணங்கள் நிறைந்த கண்ணனின் திருநாமங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்; உணர்ந்தபின் மிகவும் வருந்தி, கண்ணனின் திருமேனியைக் காண ஆசைப்பட்டு, அனுபவிப்பதற்காக அழைக்கிறார்.

முப்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தனக்கு உதவாததால், அவனுக்காக இல்லாத ஆத்மாவிலும் ஆத்மாவின் உடைமைகளிலும் தனக்கு இருக்கும் விரக்தியைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு
வேறு படில் என் உடைமை மிக்க உயிர் – தேறுங்கால்
என்தனக்கும் வேண்டா எனும் மாறன் தாளை நெஞ்சே!
நந்தமக்குப் பேறாக நண்ணு 

ஆழ்வார் “என்னுடைய ஆபரணங்கள் முதலியவையும் அவற்றைவிடச் சிறந்ததான ஆத்மாவும், பிராட்டி ஏறி வீற்றிருக்கும் திருமார்பை உடைய ஸர்வேச்வரன் திருவுள்ளத்துக்கு ஏற்புடையதில்லை என்றால், ஆராய்ந்து பார்த்தால், எனக்கும் அவை வேண்டாம்” என்று வெறுப்புடன் அருளிச்செய்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே சிறந்த குறிக்கோளாகக் கொள்.

முப்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், ஸம்ஸாரிகளின் அநர்த்தத்தைக் கண்டு வெறுத்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நண்ணாது மால் அடியை நானிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பம் உறும் இவ்வுயிர்கள் – தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை ஒன்று

இவ்வுலகில் தங்கள் பாபங்களினாலே எல்லையில்லாத துன்பங்களை அனுபவிக்கும் ஆத்மாக்களின் தாழ்ச்சியையும் அவர்கள் எம்பெருமானிடத்தில் சரணடையாமல் இருப்பதையும் கண்ட ஆழ்வார், ஆறியிருக்க முடியாமல், கண்ணீருடன் இருந்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் கருணையே நமக்குத் தகுந்த துணை.

நாற்பதாம் பாசுரம். மாமுனிகள், ஸம்ஸாரிகளும் சரணாகதி செய்வதற்கு ஸௌகரியமாகப் பரத்வத்துடன் இருக்கும் அர்சாவதாரத்தைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால்
அன்றி என ஆரும் அறியவே – நன்றாக
மூதலித்துப் பேசி அருள் மொய்ம்மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை

எல்லோரும் புரிந்து கொள்ளும்படி, “இவ்வுலகங்களைப் படைத்த ஸர்வேச்வரனைத் தவிர வேறு தெய்வம் இல்லை” என்று நன்றாக நிர்ணயித்து அருளிய வகுளாபரணரின் திருவடிகளுக்கு அஞ்ஜலி செய்வதையே என் கைகள் விரும்பும்.

நாற்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், தன்னை எம்பெருமான்  நிர்ஹேதுகமாக (ஒரு காரணமும் இல்லாமல்) ஏற்றுக் கொள்வதைக் கண்டு ப்ரமித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறன் உரைக்கு – மெய்யான
பேற்றை உபகரித்த பேரருளின் தன்மை தனை
போற்றினனே மாறன் பொலிந்து

ஆழ்வார் பொலிவுடன் “என்னிடத்தில் சிறிதளவும் பக்தி இல்லாதபோதும் நான் அவனை ஏமாற்றும் வகையில் பேசினாலும், அவன் பெரும் கருணையுடன் எனக்கு உயர்ந்த பலனைக் கொடுத்தான்” என்று அருளிச்செய்தார்.

நாற்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடைய ஒன்றும் தேவும் (திருவாய்மொழி 4.10) பதிகத்தைக் கேட்டுத் திருந்தியவர்களுக்கு மங்களாசாஸனமாகவும் திருந்தாதவர்களைத் திருத்தும் உபதேசமாகவும் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பொலிக பொலிக என்று பூமகள் கோன் தொண்டர்
மலிவுதனைக் கண்டுகந்து வாழ்த்தி – உலகில்
திருந்தாதார் தம்மைத் திருத்திய மாறன் சொல்
மருந்தாகப் போகும் மன மாசு

அடியார்களின் மிகப் பெரிய கோஷ்டியைக் கண்டு மகிழ்ந்த ஆழ்வார் “பொலிக! பொலிக!” என்றார். இவ்வுலகில் திருந்தாதவர்களைத் திருத்தினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை மருந்தாகக்கொண்டால், மனதில் இருக்கும் தோஷங்கள் நீங்கும்

நாற்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், முன்பு பேசிய எம்பெருமானின் வடிவழகை நேரில் அனுபவிக்க முடியாததால் மடல் எடுக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாசறு சோதி கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் – ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்

குற்றமற்ற ஒளியை உடைய எம்பெருமானிடம் தனக்கு ஏற்பட்ட அளவு கடந்த அன்பினால், எம்பெருமான் தன்னுடன் வந்து கலக்காததால், தனக்கு ஏற்படும் பழியையும் ஊராரின் நிந்தனைக்கு அஞ்சும் நிலையையும் கடந்து, தான் அவதரித்த ஊரில் மக்கள் நடுங்கும்படி இவ்வுலகில் மடல் எடுக்க முற்பட்டார் ஆழ்வார்.

நாற்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானைப் பிரிந்து இரவின் நீட்சியால் மிகவும் வருந்தும் நாயகியின் பாவனையில் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஊர நினைந்த மடல் ஊரவும் ஒண்ணாதபடி
கூரிருள் சேர் கங்குலுடன் கூடி நின்று – பேராமல்
தீது செய்ய மாறன் திரு உள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்ஙனேயோ?

ஐயோ! இருண்ட இரவும் அதன் துணைவர்களும் சேர்ந்து ஆழ்வாரை விடாமல் நலிந்து அவர் மடல் எடுக்க முற்படுவதைத் தடுப்பதையும், அவர் திருவுள்ளத்தை அடைந்த துன்பத்தையும் எவ்வாறு பேசுவது?

நாற்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், உருவெளிப்பாட்டைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எங்ஙனே நீர் முனிவது என்னை இனிநம்பி அழகு
இங்ஙனே தோன்றுகின்றது என் முன்னே – அங்ஙன்
உருவெளிப்பாடா உரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்

தமிழ் வேதமான ப்ரபந்தங்களை அருளிய ஆழ்வார், உருவெளிப்பாடு (மனக்கண்ணால் பார்த்து அனுபவிப்பது) என்னும் கவிதை முறையில் “என்னிடத்தில் நீங்கள் எல்லோரும் கோபம் கொள்ளலாமா? திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகு என் கண் முன்னே தோன்றுகின்றது” என்று அருளினார். இப்படிப்பட்ட ஆழ்வாரை த்யானிப்பவர்களுக்கு ஆழ்வாரே ஒரு ஆனந்தக் கடலாக இருப்பார்.

நாற்பத்தாறாம் பாசுரம். மாமுனிகள், அனுகாரத்தின் மூலம் தன்னை தரித்துக் கொண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கடல் ஞாலத்தீசனை முன் காணாமல் நொந்தே
உடனா அனுகரிக்கல் உற்று – திடமாக
வாய்ந்தவனாய்த் தான் பேசும் மாறன் உரை அதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார்

கடல் சூழ்ந்த இவ்வுலகில் எம்பெருமானை நேரில், தன் கண்ணால் கண்டு அனுபவிக்க முடியாமல் வருந்தி, எம்பெருமானை அனுகரித்து (அவனைப் போலே இருந்து), திட விச்வாஸத்துடன் அவனைப் பற்றிப் பேசினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளின் பெருமைகளை அறிந்து, அதை அனுஸந்திப்பவர்கள், ஆழ்வாருக்குத் தொண்டு செய்யும் தபஸ்ஸைச் செய்தவர்கள் ஆவர்.

நாற்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், வானமாமலை எம்பெருமானை அன்புடன் வணங்கியும் அவன் திருவடிகளில் சரணாகதி செய்தும் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நோற்ற நோன்பாதி இலேன் உன்தனை விட்டாற்றகில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன்தன் பேரருளே – சாற்றுகின்றேன்
இங்கென் நிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது

அழகை அடைந்த ஆழ்வார், உபாய விஷயமாக “எனக்கு மோக்ஷத்துக்கு வழியான கர்ம யோகம் முதலிய உபாயங்களில் எந்த ஈடுபாடும் இல்லை; உன்னைப் பிரிந்து என்னால் வாழ முடியவில்லை; என்னுடைய பேற்றுக்கு உன்னுடைய பெரிய கருணையே உபாயம்” என்று அருளிச்செய்தார். கருணை மிகுந்த இப்பாசுரங்களை அனுஸந்திக்க வல்லவர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகளுக்கு ஆராவமுதமாக இருப்பர்.

நாற்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடைய கைம்முதல் இல்லாத் தன்மையை அறிவித்து ஆராவமுதன் எம்பெருமானைச் சரணடைந்தும், எம்பெருமான் “இவர் நம் ஆழ்வார்” என்று தன் ஆசையை நிறைவேற்றாததால், கலங்கி வருத்தத்துடன் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக  – தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான்

ஆழ்வாரின் எதிர்பார்ப்பை ஆராவமுதன் கருணையுடன் நிறைவேற்றாததால் ஆழ்வார் நிறைவேற்ற முடியாத மிகவும் அதிகமான ஆசையை அடைந்து வருத்தமுற்றார். இப்படிக் கலங்கிய தன்னுடைய வருத்தத்தை வெளியிட்டார்; இப்படிப்பட்ட ஆழ்வாரே நம்முடைய குற்றமற்ற ஸ்வாமி.

நாற்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், திருவல்லவாழுக்குச் சென்று அதைச் சூழ்ந்திருக்கும் புறச்சோலைகளின் அனுபவத்தால் வருந்திப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாநலத்தால் மாறன் திருவல்லவாழ் புகப் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ்வூர் தன் அருகில் – மேல் நலங்கித்
துன்பம் உற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற

மிகவும் அன்புடன் ஆழ்வார் திருவல்லவாழ் திவ்யதேசத்தை நோக்கிச் சென்றார்; ஆனால் அதை அடைய முடியாமல், அதைச் சூழ்ந்திருக்கும் சோலைகளில், தளர்ந்து கீழே விழுந்தார்; மேலும் கலங்கி, வருந்தி இப்பாசுரங்களை அருளிச்செய்தார். இப்பாசுரங்களைக் கற்பவர்களுக்கு, அவற்றைக் கற்றபின், எம்பெருமானின் திருவடிகளுக்கு வெளிப்பட்ட பிறவிகள் கிடையாது.

ஐம்பதாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானிடத்தில் “உன்னுடைய அவதாரங்களில் செய்த லீலைகளை அனுபவித்து நான் தரித்திருக்கும்படி அனுமதிக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பிறந்து உலகம் காத்தளிக்கும் பேரருள் கண்ணாஉன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத் – திறம் தவிர்ந்து
சேர்ந்தனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே! வைகு

ஸ்ரீ நம்மாழ்வார், இவ்வுலகில் அவதரித்து எல்லோரையும் ரக்ஷிக்கும், மிகவும் கருணை பொருந்திய கண்ணன் எம்பெருமானிடத்தில் “கண்ணா! என் ஹ்ருதயத்தின் உருக்கத்தை நிறுத்தி, உன்னை அடைந்து, உன்னுடைய குணங்களை நினைத்து அனுபவிக்கும்படி அருளவேண்டும்” என்று ப்ரார்த்தித்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் வாழ்வாயாக.

ஐம்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், பிரிவாற்றாமையால் எம்பெருமானுக்குத் தூது விடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வைகல் திருவண்வண்டூர் வைகும் இராமனுக்கு என்
செய்கைதனைப் புள் இனங்காள்செப்பும் என – கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர்! நீர் வணங்குமின்

உலகத்தீர்களே! மிகவும் அன்புடன் “பறவைக் கூட்டங்களே! திருவண்வண்டூரில் நித்ய வாஸம் செய்தருளும் சக்ரவர்த்தித் திருமகனுக்கு என் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கோள்” என்று பறவைகளைத் தூது விடும் ஆழ்வாருடைய திருவடிகளை வணங்குங்கள்.

ஐம்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், ஊடலினால் எம்பெருமானைப் புறம் தள்ளும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன் நிலை போய்ப் பெண் நிலையாய்த் தான் தள்ளி – உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாள் தோறும் நெஞ்சமேநல்கு

ஆழ்வார் தன்னிலை மறந்து கோபிகைகளின் நிலையை அடைந்து, மின்னல் போன்ற இடையுடன் கூடிய பெண்களுடன் இருந்துவிட்டு நேரம் கழித்து வந்த கண்ணனிடம் கொண்ட ஊடலினால் “நான் உன்னுடன் கூட மாட்டேன்” என்று கூறிப் புறம் தள்ளினார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை தினமும் வணங்க நீ எனக்கு உதவி செய்.

ஐம்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் விருத்த விபூதியை (மாறுபட்ட செல்வங்களை) பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று – எல்லை அறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர்

முன்பு இருந்த விரோதிகளைப் போக்கும் கண்ணன், நம்முடைய ஊடலையும் போக்கி, அவனுடன் நாம் கூடும்படிச் செய்தான். அந்தக் கண்ணன் விருத்த விபூதியை உடையவன். இப்படிப்பட்ட கண்ணனை முடிவில்லாமல் வாழும் ஆழ்வார் கொண்டாடினார். தமிழ் மொழியில் மன்னரான இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளைப் பாடுபவர்கள், நித்யஸூரிகளுக்குத் தகுந்த தலைவர்களாக விளங்குவர்.

ஐம்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், கண்ணன் எம்பெருமானின் எல்லா லீலைகளையும் அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் – பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே! துவள்

நெஞ்சே! கண்ணன் எம்பெருமானின் ராஸக்ரீடை முதலிய திவ்ய லீலைகளை இரவு பகல் என்று பாராமல் கொண்டாடக்கூடிய நெஞ்சைக் கொண்டிருப்பதைப் பெருமையுடன் பேசிய ஆழ்வாரின் தேன் போன்ற இனிமையான ஸ்ரீஸூக்திகளில் எப்பொழுதும் மூழ்கி இரு.

ஐம்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், பகவத் விஷயத்தில் தனக்கிருக்கும் பெரிய காதலைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் – துவளறவே
முன்னம் அனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னும் உவப்பால் வந்த மால்

ஒரு தோஷமும் இல்லாமல் கல்யாண குணங்கள் நிரம்பிய எம்பெருமானைப் பொருந்தி அனுபவித்ததால் ஏற்பட்ட ஆனந்தத்தால், ஆழ்வார் ஒரு குற்றமும் இல்லாமல் முதலிலிருந்தே பகவத் விஷயத்தில் மூழ்கி இருந்தார். இப்படிப்பட்ட ஆழ்வார் இயற்கையான பக்தியால், பகவத் விஷயத்தில் தனக்கு எப்பொழுதும் இருக்கும் விருப்பத்தை வெளியிட்டார்.

ஐம்பத்தாறாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானிடத்தில் தான் எல்லாவற்றையும் இழந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன் உடைமை தான் அடையக் – கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனம் அறு சீர் நெஞ்சே! உண்

எம்பெருமானுடன் கூடியிருக்க முடியாததால், மிகவும் தளர்ந்த ஆழ்வார் “என்னுடைய ஆத்மாவையும், ஆத்மாவின் உடைமைகளையும் நான் விடுவதற்கு முன்பு, அவை என்னை விட்டு விலகின” என்று அருளிச்செய்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் குற்றமற்ற கல்யாண குணங்களை அனுபவி.

ஐம்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், திருக்கோளூரை நோக்கிச் செல்லத் தொடங்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

உண்ணும் சோறாதி ஒரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணிணைகள் – மண் உலகில்
மன்னு திருக்கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன் அடியே நந்தமக்குப் பொன்

ஆழ்வார், உண்ணும் சோறும் முதலிய தாரக, போஷக, போக்ய பதார்த்தங்கள் எல்லாம் எம்பெருமான் கண்ணனே என்று, தன் திருக்கண்களில் பெருகும் கண்ணீருடன், திருக்கோளூரில் பொருந்தி எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரனை நோக்கிச் செல்லத் தொடங்கினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளே நமக்கிருக்கும் ஒரே சொத்து.

ஐம்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், சோகத்தில் மூழ்கியதால் எம்பெருமானுக்குத் தூதுவிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பொன் உலகு பூமி எல்லாம் புள் இனங்கட்கே வழங்கி
என் இடரை மாலுக்கு இயம்பும் என – மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர்! போய் வணங்கும் நீர்

பறவைக் கூட்டங்களுக்கு நித்ய விபூதி (பரமபதம்) மற்றும் லீலா விபூதி (ஸம்ஸாரம்) ஆகியவற்றை முழுவதுமாக அளித்து “என்னுடைய துயரத்தை எம்பெருமானிடம் அறிவியுங்கோள்” என்று அருளிச்செய்த ஆழ்வார், ஸ்ரீவைகுண்டம் முதலிய ஸ்தலங்களுக்கு ஆசையுடன் செய்தி அனுப்பினார். பரந்த உலகத்தில் இருப்பவர்களே! இந்த ஆழ்வாரையே நீங்கள் சென்று வணங்குங்கோள்.

ஐம்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், கேட்பவர்களின் நெஞ்சை உருக்கும்படி எம்பெருமானைக் கூப்பிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பரிதா – ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஓதிடவே உய்யும் உலகு

ஸர்வேச்வரன் அழகிய பரமபதத்தில் இருக்கமுடியாதபடியும், கேட்பவர்களின் நெஞ்சை உருக்கும்படியும், ஆழ்வார் ஆராத காதலுடன் எம்பெருமானை அழைத்தார். இந்த ஸ்ரீஸூக்திகளைச் சொல்ல, உலகமே உஜ்ஜீவனத்தை அடையும்.

அறுபதாம் பாசுரம். மாமுனிகள், திருவேங்கடமுடையான் திருவடிகளில் சரணடையும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் – மலர் அடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாள் இணையே
உன் சரணாய் நெஞ்சமே! உள்

இவ்வுலகத்துக்கு உஜ்ஜீவனம் அளிப்பதற்காக ஸர்வேச்வரன் அழகிய, உயர்ந்த திருவேங்கட மலையில் எழுந்தருளியுள்ளான். ஆழ்வார், பெரியபிராட்டியார் புருஷகாரத்துடன் இப்படிப்பட்ட ஸர்வேச்வரனின் திருவடிகளைத் திடமாகப் பற்றினார். நெஞ்சே! இப்படிப்பட்ட வகுளாபரணரின் திருவடிகளையே உபாயமாகக் கொள்.

அறுபத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், க்ரூரமான இந்த்ரியங்களுக்கு அஞ்சும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

உண்ணிலா ஐவருடன் இருத்தி இவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன்புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக்கங்குல்

இனிய பெருமைகளை உடைய ஆழ்வார், எல்லையில்லாத ஆச்சர்யமான லீலைகளை உடைய ஸர்வேச்வரன், தன்னை இவ்வுலகில் தன்னுள்ளே இருக்கும் விரோதிகளான இந்த்ரியங்களுடன், இவ்வுலகில் தன்னை இருக்க வைத்ததை எண்ணிக் கதறினார். இப்படிப்பட்ட ஆழ்வாரை நினைக்கவே, இந்த ஸம்ஸாரம் என்னும் இருண்ட இரவு நீங்கும்.

அறுபத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், துயரத்தினால் அழும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகம் உற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து – இங்கிவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னும் நிலை சேர் மாறன்
அஞ்சொல் உற நெஞ்சு வெள்ளையாம்

இரவும் பகலும் துயரம் அதிகமான பராங்குச நாயகி மோஹித்தாள். ஆழ்வார், பராங்குச நாயகியின் தாயார் நிலையை அடைந்து ஸ்ரீரங்கநாதனை “இங்கு இந்தப் பெண்பிள்ளை விஷயமாக நீர் என்ன செய்ய எண்ணி உள்ளீர்?” என்று முறையிட்டார். இந்த ஸ்ரீஸூக்திகளை எண்ணினவாறே, நெஞ்சம் தூயதாகும்.

அறுபத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், தென்திருப்பேரில் தன் நெஞ்சை இழந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக – உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு
அற்றவர்கள் தாம் ஆழியார்

தன் தாயார் சொன்ன பகவானின் இனிய திருநாமங்களைக் கேட்ட ஆழ்வார், உணர்த்தி பெற்று, தன்னுடைய நெஞ்சமானது தென்திருப்பேர்நகரில் எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரன் விஷயமாக மிகவும் ஈடுபட்டு இருப்பதையும், அங்கே செல்லத் தொடங்குவதையும் அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாருக்காகவே இருப்பவர்கள், ஆழ்ந்த நெஞ்சை உடையவர்கள்.

அறுபத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் வெற்றிச் சரித்ரங்களைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஆழி வண்ணன் தன் விசயம் ஆனவை முற்றும் காட்டி
வாழ் இதனால் என்று மகிழ்ந்து நிற்க – ஊழில் அவை
தன்னை இன்று போல் கண்டு தான் உரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்

கடல்நிற வண்ணனான எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை ஆழ்வாருக்குக் காண்பித்து “இதை அனுபவித்து உம்மை தரித்துக் கொள்ளும்” என்று மகிழ்ச்சியுடன் இருந்தான். ஆழ்வார், முற்காலத்தில் நடந்த அந்த வெற்றிச் சரித்ரங்களை தற்போது நடப்பதுபோல் அனுபவித்து, அதற்கு வெளிப்பாடாக இப்பாசுரங்களை அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அனுஸந்திப்பவர்கள் உயர்ந்த வார்த்தைகளைச் சொன்னவர்களாகக் கருதப்படுவர்.

அறுபத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், “எம்பெருமானின் வெற்றிகளுக்குக் காரணமான எம்பெருமானின் திருவவதாரங்களில் ஜனங்களுக்கு ஏன் ஆசை இல்லாமல் இருக்கிறது?” என்று வருந்திப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை – உற்றுணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்துரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா

தசரதன், வஸுதேவன் முதலியவர்கள் சாஸ்த்ரத்தின் ஸாரத்தை உணர்ந்து, எம்பெருமானின் வெற்றிக்குக் காரணமான அவனுடைய விபவாவதாரங்களில் அன்பு செய்தார்கள். இதை ஆராய்ந்து அறிந்த ஆழ்வார், இவ்வுலகில் மக்கள் இந்த பகவத் விஷயத்தை இழப்பதைத் தகுந்த முறையில் அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் இனிய இசையை உடைய ஸ்ரீஸூக்திகள், தமிழில் அமைந்திருக்கும் சிறந்த சாஸ்த்ரம்.

அறுபத்தாறாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் குணங்களைச் சொல்லிக் கூப்பிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆம் அழகு வேண்டற்பாடாம் அவற்றை – தூ மனத்தால்
நண்ணி அவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்

இங்கே சொல்லப்பட்ட எம்பெருமானை நேரில் அடைந்து, காண ஆசைப்பட்ட ஆழ்வார், நன்றாக உருகி, “ஓ” என்று சொல்லிக் கதறி, சந்தத்துடன் கூடிய வேதத்தில் இருந்து, எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களை அவனுடைய அழகு மற்றும் மேன்மையுடன் பெற்று தன் மனக்கண்ணால் கண்டு அனுபவித்தார். இப்படிப்பட்ட ஸ்வாமியான ஆழ்வாரைச் சென்று அடையாதவர்கள், ஏழைகள் (அஜ்ஞானிகள்).

அறுபத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் திருமுகத்தின் அழகு தன்னை ஒருபடிப்பட்டு நலிவதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மால் அழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க – ஆழு மனம்
தன்னுடனே அவ்வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னும் அவர் தீவினை போம் மாய்ந்து

எம்பெருமானின் வடிவழகு நிலையில்லாத நெஞ்சைக்கொண்ட ஸம்ஸாரிகளை உருக்கும். அதே அழகு ஆழ்வாரைச் சூழ்ந்து, எல்லா இடமும் இருக்க, ஆழ்வாரின் நெஞ்சமும் துக்கக் கடலில் ஆழ்ந்தது. அந்த நெஞ்சத்துடன் கூடி அந்த அழகை அனுபவித்து அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாருடன் கூடியிருப்பவர்களின் பாபங்கள் அழிக்கப்படும்.

அறுபத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் விசித்ரமான (பரந்த, பலவிதமாக இருக்கும்) விச்வரூபத்தை அனுபவித்து ஆச்சர்யப்பட்டுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாயாமல் தன்னை வைத்த வைசித்திரியாலே
தீயா விசித்திரமாச் சேர் பொருளோடு – ஓயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளம் உரைத்த மாறனை நாம்
ஏய்ந்துரைத்து வாழு நாள் என்று?

ஆழ்வாரின் சேஷத்வத்தைக் காத்து, ஸர்வேச்வரன் தான் பரந்து, விரிந்து இருக்கும் தன்மையில், 1) தீ தொடக்கமான பஞ்ச பூதங்களுடனும், அவற்றின் பல்வேறுபட்ட உருவங்களுடனும் 2) பல்வேறுபட்ட சேதனர்களுடனும், அவற்றின் தோஷங்களைப் பார்க்காமல் கூடி இருந்தான். ஸர்வேச்வரனின் இப்படிப்பட்ட பரந்த சொத்துக்களை அருளிச்செய்தார் ஆழ்வார். எப்பொழுது நாம் ஆழ்வாரை அடைந்து அவரின் திருநாமங்களைச் சொல்லி வாழ்வோம்?

அறுபத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், தன்னை எம்பெருமான் திருவாய்மொழி பாடவைத்த செயலை மிகவும் ஈடுபட்டுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

என்தனை நீ இங்கு வைத்தது ஏதுக்கென மாலும்
என்தனக்கும் என்தமர்க்கும் இன்பமதா – நன்று கவி
பாடவெனக் கைம்மாறு இலாமை பகர் மாறன்
பாடணைவார்க்கு உண்டாம் இன்பம்

ஆழ்வார் எம்பெருமானிடம் “எனக்குப் பொருத்தம் இல்லாத இந்த ஸம்ஸாரத்தில் என்னை ஏன் வைத்தாய்?” என்று வினவ, எம்பெருமான் “எனக்கும் என் அடியார்களுக்கும் இன்பத்தைக் கொடுக்கும் பாசுரங்களைப் பாட” என்று பதிலுரைத்தான். எம்பெருமான் செய்த நன்மைக்குத் தான் எந்த ப்ரத்யுபகாரமும் செய்ய முடியாது என்று அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரை அடைபவர்கள் மிகவும் ஆனந்தமாக இருப்பர்.

எழுபதாம் பாசுரம். மாமுனிகள், திருவாய்மொழி பாடிக் கைங்கர்யம் செய்ய ஆசைப்படும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திருவாறன்விளையில் – துன்பம் அறக்
கண்டடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு

தன்னுடைய துன்பங்களைப் போக்கியருளுவதற்காக, தன்னை இனிய திருவாய்மொழியைப் பாடவைக்க, எம்பெருமான் பெரியபிராட்டியாருடன் திருவாறன்விளையில் ஆனந்தமாக எழுந்தருளியிருப்பதைக் கண்டு, அங்கே சென்று அவர்களுக்கு தொண்டு செய்ய ஏங்கினார். ஆழ்ந்த விச்வாஸத்தை உடையவர்களுக்கு, இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளே பரதெய்வம்.

எழுபத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் குணங்களையும் உண்மை நிலையையும் ஸந்தேஹப்பட்டு, அந்த ஸந்தேஹங்கள் தீரப்பெற்ற ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

தேவன் உரை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் – யாவையும்
தானாம் நிலையும் சங்கித்து அவை தெளிந்த மாறன் பால்
மாநிலத்தீர்! நங்கள் மனம்

திருவாறன்விளையில் இருக்கும் எம்பெருமானுடன் கூடி அவனுக்குத் தொண்டு செய்ய முடியாததால், எம்பெருமான் அடியார்களிடத்தில் அடிபணிந்திருக்கும் தன்மையையும், சேதனாசேதனங்கள் தான் என்று சொல்லும்படி இருக்கையையும், தேவையில்லாமல் ஸந்தேஹப்பட்ட ஆழ்வார், அந்த ஸந்தேஹங்கள் நீங்கப் பெற்றார். இப்பரந்த உலகில் வாழ்பவர்களே! நம் நெஞ்சம் அவ்வாழ்வாரிடத்தில் லயித்து இருக்கும்.

எழுபத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், ஆத்மா மற்றும் ஆத்மாவின் உடைமைகளில் தனக்கு ஆசை இல்லாததை அறிவித்த ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நங்கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய
இங்கிவற்றில் ஆசை எமக்குளதென்? – சங்கையினால்
தன் உயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான்
அந்நிலையை ஆய்ந்துரைத்தான் அங்கு

முற்றும் உணர்ந்த எம்பெருமான், ஆழ்வாரின் நெஞ்சை நன்றாக ஆராய, ஆழ்வாரும் தனக்கு இவ்வுலகில் ஈடுபாடு இருக்குமோ என்று தேவையில்லாமல் ஸந்தேஹப்பட்டு, தன்னைப்பற்றியும் தன் உடைமைகளைப்பற்றியும் நன்கு ஆராய்ந்து, தனக்கு அவற்றில் விருப்பம் இல்லை என்பதை உணர்ந்து, தான் உணர்ந்ததை அவனுக்கு அறிவித்து அருளிச்செய்தார்.

எழுபத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் எம்பெருமானுக்குப் பரிவுகாட்ட யாரும் இல்லை என்று வருந்த, எம்பெருமான் தனக்குப் பரிவு காட்டுபவர்கள் உள்ளனர் என்பதைக் காட்ட அதைக் கண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அங்கமரர் பேண அவர் நடுவே வாழ் திருமாற்கு
இங்கோர் பரிவரிலை என்றஞ்ச – எங்கும்
பரிவருளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்

மங்களாசாஸனம் செய்யும் நித்யஸூரிகள் நடுவில் பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் ச்ரிய:பதியான எம்பெருமானுக்கு இந்த ஸம்ஸாரத்தில் மங்களாசாஸனம் செய்பவர்கள் இல்லை என்று ஆழ்வார் பயந்தார். எம்பெருமான் “எனக்காகப் பரிவு காட்டுபவர்கள் எங்கும் உளர்” என்று சொல்ல, ஆழ்வாரின் பயம் நீங்கியது. வரிகள் பொருந்திய சதங்கைகளால் அலங்கரிக்கப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை அடைபவர்கள் உஜ்ஜீவனத்தை அடைவர்.

எழுபத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும் சாபம் மற்றும் அனுக்ரஹத்தைக் கொடுக்கக்கூடியவர்களுடன் சேர்ந்து இருக்கும் தன்மையையும் அவன் காட்டக் கண்டு, பயமற்றுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் – பாரும் எனத்
தான் உகந்த மாறன் தாள் சார் நெஞ்சேசாராயேல்
மானிடவரைச் சார்ந்தது மாய்

ஆழ்வாருக்கு இன்னமும் இருக்கும் பயத்தைப் போக்க ஸர்வேச்வரன் தன் வீரம் முதலிய குணங்களையும், தான் சிறந்த அடியார்களுடன் இருப்பதையும் “பாரும்” என்று சொல்லிக் காட்ட, அவற்றைக் கண்ட ஆழ்வார் மிகவும் மகிழ்ந்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை அடைவாயாக; அடையவில்லை என்றால், ஸம்ஸாரிகளை அடைந்து, நசித்துப் போ.

எழுபத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுடைய வடிவழகை அனுபவிக்கமுடியாமல் மிகவும் வருந்திப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாயன் வடிவழகைக் காணாத வல்விடா
யாய் அதற விஞ்சி அழுது அலற்றும் – தூய புகழ்
உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல்
அற்ற பொழுதானது எல்லியாம்

ஸர்வேச்வரனின் திருமேனி அழகைக் கண்டு அனுபவிக்க முடியாததால் மிகுந்த துயரத்தை அடைந்த ஆழ்வார், அந்த வருத்தம் மிகவும் அதிகமாகி, அழுது, எம்பெருமானை ஒரு க்ரமமில்லாமல் கூப்பிட்டார். இப்படிப்பட்ட பரிசுத்தமான பெருமைகளை உடைய ஆழ்வாருடன் கூடி இருக்கும்பொழுது அது பகல், இந்த அனுபவத்திற்குத் தடை வந்தால் அது இருண்ட இரவு.

எழுபத்தாறாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வாரின் துயரத்தைப் போக்க, எம்பெருமான் ஆழ்வாருக்கு மிக அருகில் வந்து ஆழ்வாருடன் கலந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என – நல்லவர்கள்
மன்னு கடித்தானத்தே மால் இருக்க மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து

ஸர்வேச்வரன் மெதுவே வந்து, பல இரவுகளும் பகல்களுமாக ஆழ்வாருக்கு இருந்த வருத்தத்தைப் போக்குவதற்காக, சிறந்த வைதிகர்கள் வாழும் திருக்கடித்தானத்தில் எழுந்தருளினான். அதைக் கண்ட ஆழ்வார் நிலைபெற்று, எம்பெருமானைப் பற்றி அருளிச்செய்தார்.

எழுபத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாரின் கருத்தைப் பின்பற்றி அவருடன் கலந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம்
திருந்த இவர் தம் திறத்தே செய்து – பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு

திருக்கடித்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரன் ஆழ்வார் இருப்பிடம் வந்து, ஆழ்வாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்து, கருணையைப் பொழிந்து ஆழ்வாருடன் ஒரு நீராகக் கலந்தான். அதன்பின் எம்பெருமான் ஆனந்தமாக இருப்பதைக் கண்ட ஆழ்வார் அதைப்பற்றி அருளிச்செய்தார்.

எழுபத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாருக்கு ஆத்ம ஸ்வரூபத்தின் பெருமையைக் காட்ட அதைக் கண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கலவி
திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து – தண்ணிதெனும்
ஆருயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்துரைத்தான்
காரிமாறன் தன் கருத்து

ஆழ்வாருடன் கலந்த எம்பெருமான், இந்தக் கலவி நிரந்தரமாக இருக்க ஆசைப்பட்டு, ஆழ்வாரின் கண்களை நிறைத்து இருந்து, அணு ஸ்வரூபத்தில் நுண்ணியதாய் இருக்கும் ஆத்மாவின் பெருமைகளைக் காட்டினான். அதை ஆராய்ந்த ஆழ்வார் தன் திருவுள்ளக் கருத்தை வெளியிட்டருளினார்.

எழுபத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், ஆத்மா எம்பெருமானைத் தவிர மற்றவர்களுக்கு அடிமைப்பட்டு இருப்பதை விலக்கிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன்
ஒருமா கலவி உரைப்பால் – திரமாக
அன்னியருக்கு ஆகாது அவன் தனக்கே ஆகும் உயிர்
இந்நிலையை ஓர் நெடிதா

ஆழ்வார் கண்ணனிடத்தில் ஈடுபாடு கொண்ட ஒரு பெண்ணின் (பராங்குச நாயகி) நிலையை அடைந்து, அவளின் தோழியின் பாவனையில் பராங்குச நாயகியின் திருமேனியில் கலவியின் அடையாளங்களைச் சொன்னாள். இந்நிலையில், ஆத்மாவின் நிலையை நன்கு ஆராய்ந்து, ஆத்மா எம்பெருமானுக்கே அடிமைப்பட்டவன் என்றும் அந்த சேஷத்வம் (அடிமைத்தனம்) தகுந்த தலைவனான எம்பெருமானுக்கு மட்டுமே, வேறு யவருக்கும் இல்லை என்றும் உணர்ந்துகொள்.

எண்பதாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுக்கே அடிமைப்பட்டிருப்பதன் உயர்ந்த நிலை பாகவதர்களுக்கு அடிமைப்பட்டு இருப்பது என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு
படுமா நிலை உடைய பத்தர்க்கு – அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது
கொல்லை நிலமான நிலை கொண்டு

ஆழ்வார் ஸர்வேச்வரனின் வடிவழகிலும் கருணை உள்ளம் ஆகிய சிறந்த குணத்திலும் ஈடுபட்டிருக்கும் பாகவதர்களிடம் அடிமை பூண்டிருந்தார். அது மட்டும் அன்று, எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருப்பதின் உயர்ந்த நிலையாக அவன் அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதைக் கருதினார். ஏனெனில் அதுவே உயர்ந்த குறிக்கோளாகையாலே.

எண்பத்தோறாம் பாசுரம். மாமுனிகள், மற்றவர்களைப் பார்த்து ஒரு காரணத்தின் அடியாக வரும் தேஹ பந்துக்களை விட்டு இயற்கையான பந்துவான எம்பெருமானைப் பற்றச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே அவரை விட்டு – தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்கும் இதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு

அஜ்ஞானிகளுக்கும் நன்மையே செய்யும் பெருமையை உடைய ஆழ்வார், கர்மம் என்னும் ஒரு காரணத்தின் அடியாக வந்த மனைவி மக்கள் முதலிய தேஹ பந்துக்களைவிட்டு, தன்னைச் சரணடைபவர்களைத் தன் அடியார்களுடன் சேர்க்கும் ச்ரிய:பதியிடம் சரணடையும்படி உபதேசம் செய்கிறார்.

எண்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுக்கு எல்லாவிதமான பந்துக்களும் செய்யும் செயல்களைச் செய்ய ஆசைப்படும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பண்டை உறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் – தண்டற நீ
செய்தருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையை
உய்துணை என்று உள்ளமே! ஓர்

தன்னுடன் நித்யமான உறவைக்கொண்ட எம்பெருமானைத் திருப்புளிங்குடியில் கண்டு வணங்கி “எல்லாவிதமான உறவுகளின் செயல்களையும் நான் இடைவிடாமல் செய்யும்படி அருளவேண்டும்” என்று ப்ரார்த்தித்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஸ்ரீ சடகோபரின் இரு திருவடிகளையும் நம் உஜ்ஜீவனத்துக்கு வழியாக நினை.

எண்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் சீலம் (எளிமை) என்னும் குணத்தில் மூழ்கியிருக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணனன்றோ நான் என்று – பேருறவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம் மனத்து மை

எம்பெருமான் “உம்முடைய ஆசைகளாக எவற்றை எல்லாம் நீர் ஆராய்ந்து வைத்துள்ளீரோ அவற்றை நான் நிறைவேற்றுகின்றேன். ஸர்வசக்தனான நாராயணன் அன்றோ நான்?” என்று சொல்லி ஆழ்வாருடன் தனக்கு இருக்கும் எல்லா உறவுகளையும் காட்டினான். ஆழ்வார் இப்படிப்பட்ட எம்பெருமானின் சீல குணத்தில் மூழ்கினார். ஆழ்வாரின் கருணை நம் மனத்தில் இருக்கும் அறியாமையைப் போக்கும்.

எண்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், சிறந்ததான வடிவழகை உடைய எம்பெருமானைக் காண ஆசைப்பட்டுக் கூப்பிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மையார் கண் மாமார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்குடனே காண எண்ணி – மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டுகந்த மாறன் பேர்
ஓத உய்யுமே இன்னுயிர்

கருநிற மையாலே அலங்கரிக்கப்பட்ட பெரிய பிராட்டியாரைத் தன் திருமார்பில் நிரந்தரமாக வைத்திருக்கும், திருக்கைகளிலே திருவாழி திருச்சங்கு ஆகியவைகளை வைத்திருக்கும் ச்ரிய:பதியை உண்மையான ஆசையுடன் கூப்பிட்டார் ஆழ்வார். தான் ஆசைப்பட்டபடி கண்ட ஆழ்வார் ஆனந்தத்தை அடைந்தார். இவ்வாழ்வாரின் திருநாமங்களைச் சொல்லவே சிறந்ததான ஆத்மா உஜ்ஜீவனத்தை அடையும்.

எண்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானை நினைவு படுத்தும் வஸ்த்துக்களால் தான் துன்புறுவதை அருளும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்றவனைக் காண எண்ணி ஆண் பெண்ணாய் – பின்னை அவன்
தன்னை நினைவிப்பவற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்

ஆழ்வார் தன்னை தரிக்கப் பண்ணும் ஸர்வேச்வரன் அவ்வாறே தன் நெஞ்சில் இருப்பதைக் கண்டு, நேரிலும் தன்னுடைய வெளிக் கண்களால் உடனே காண ஆசைப்பட்டு, ஆண் தன்மையை இழந்து பெண் தன்மையை அடைந்தார். மேலும் எம்பெருமானை நினைவுறுத்தும் மேகக் கூட்டங்கள் போன்ற வஸ்துக்களைக் கண்டு தளர்ந்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் க்ருபையை த்யானிப்பவர்களின் நெஞ்சம் உருகும்.

எண்பத்தாறாம் பாசுரம். மாமுனிகள், வருத்தத்துடன் எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களை த்யானிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

உருகுமால் என்னெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப் பேசி – மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்துரைத்த மாறன் சொல்
என்னாச் சொல்லாதிருப்பது எங்கு?

ஆழ்வார் “என் நெஞ்சம் உன்னுடைய லீலைகளை நினைத்து உருகும்; மேலும் என்னுடைய ஆசை மிகவும் அதிகமாக ஆனது” என்று வருத்தத்துடன், எம்பெருமான் காதலனாக இருக்கும் தன்மை, தன் நெஞ்சில் நிலைத்திருக்கும்படி அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை என்னுடை நாக்கு எவ்வாறு சொல்லாமல் இருக்கும்?

எண்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் வடிவழகை நம்பி எம்பெருமானுக்குத் தூதுவிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எங்காதலுக்கடி மால் ஏய்ந்த வடிவழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கவன் பால் – எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை அறுக்கும்

ஆழ்வார் “என்னுடைய காதலுக்குக் காரணம் ஸர்வேச்வரனின் இயற்கையான, தகுந்ததான வடிவழகு” என்று சொல்லி அந்நிலையில் அவனுடைய வடிவழகையே நம்பி, எங்கும் உள்ள பறவைக் கூட்டங்களைத் தூதுவராக அனுப்பினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை த்யானித்தவர்களின் தீமைகள் அழிக்கப்படும்.

எண்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், அனுப்பிய தூதுவர்கள் திரும்பி வரும் வரை பொறுக்க முடியாமல் “உடனே திருநாவாயைச் சென்று அடைய வேண்டும்” என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அறுக்கும் இடர் என்று அவன் பால் ஆங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் – அறப்பதறிச்
செய்ய திருநாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வறியாமல்

“அவன் நம் துயரங்களைப் போக்குவான்” என்று எம்பெருமானிடம் தூதுவர்களை அனுப்பினார் ஆழ்வார். ஆனால் அவருடைய திருவுள்ளமோ அந்தத் தூதுவர்கள் திரும்பி வரும் வரை பொறுக்க முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் கலங்கி, சிறந்ததான திருநாவாய்க்குச் செல்லலாம் என்று புறப்பட்டார்.

எண்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், மாலை வேளையில் தன் விருப்பத்தைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் – செல்கின்ற
ஆற்றாமை பேசி அலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என்தன் மால்

ஆழ்வார் ஸர்வேச்வரனை “நான் உனக்கு முழுமையாகக் கைங்கர்யம் செய்யும் நாள் என்று?” என்று கேட்டு, இயற்கையான பக்தியால், எம்பெருமானின் பதிலுக்குக் காத்திருக்க முடியாமல், தன்னுடைய தரியாமையைப் பேசி வருந்தினார். என்னுடைய அறியாமைக்கு நேர் எதிரான இவ்வாழ்வாரின் கருணையால், என்னுடைய அறியாமை நீங்கும்.

தொண்ணூறாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடைய மோக்ஷத்துக்கு நாள் குறிக்கப்பட்ட பின் மற்றவர்களுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னும் உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து – மேலவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நந்தமக்குத் தாள்

ஸர்வேச்வரன் “முழு மனதுடன், உம்முடைய விருப்பங்களை ஆத்மாவுடன் கூடியிருக்கும் இந்த சரீரத்தின் முடிவிலேயே நிறைவேற்றுவேன்” என்று ஆழ்வாருக்குச் சொல்ல, ஞானம் முதலிய குணங்களை உடைய ஆழ்வார், மிகவும் ஆனந்தித்து “திருக்கண்ணபுரம் சென்று அங்கிருக்கும் ஸர்வேச்வரனின் திருவடிகளைப் பணியுங்கோள்” என்றார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகள் நமக்குக் கருணையைப் பொழியாமல் இருக்குமோ?

தொண்ணூற்றொன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானால் நாள் குறிக்கப்பட்டு, எம்பெர்ருமானுடன் சேர்ந்து பரமபதத்துக்குச் செல்லத் தொடங்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தை கதியாக்கி – மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக எண்ணும் மாறன் என
கேதம் உள்ளதெல்லாம் கெடும்

தன் திருவடிகளில் சரணடைந்தவர்களுக்கு எம்பெருமான் தானே இறுதிப் பயணத்தில் துணையாக இருக்கிறான். ஆழ்வார் அந்தக் காளமேகம் எம்பெருமானையே வழித்துணையாகக் கொண்டு, திரும்பி வரும் குற்றம் இல்லாத பரமபதத்தைச் சென்றடைய எண்ணினார். இப்படிப்பட்ட ஆழ்வாரை நினைக்கவே எவையெல்லாம் துயரங்கள் என்று நினைக்கிறோமோ அவையெல்லாம் நசிக்கும்.

தொண்ணூற்றிரண்டாம் பாசுரம். மாமுனிகள், பரமபதத்தில் செய்யும் கைங்கர்யத்தைத் திருவனந்தபுரத்தில் செய்ய ஆசைப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கெடும் இடர் வைகுந்தத்தைக் கிட்டினாற்போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் – பட அரவில்
கண்துயில் மாற்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண்தனில் உள்ளோர் வியப்பவே

சிறந்த பரமபதத்தில் இருக்கும் நித்யஸூரிகள் வியக்கும்படி ஆழ்வார் பணங்களுடன் கூடிய ஆதிசேஷனில் சயனித்துக்கொண்டிருக்கும் எம்பெருமானுக்கு, பரந்த திருவனந்தபுரத்தில், துக்கமே இல்லாத பரமபதத்தை அடைந்து செய்யும் கைங்கர்யத்தைச் செய்ய ஆசைப்பட்டார்.

தொண்ணூற்றுமூன்றாம் பாசுரம். மாமுனிகள், தன்னை ஏன் தன் விருப்பத்து மாறாக ஸம்ஸாரத்தில் வைத்திருக்கிறான் என்ற ஸந்தேஹத்தை ஸர்வேச்வரன் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வேய்மரு தோளிந்திரைகோன் மேவுகின்ற தேசத்தைத்
தான் மருவாத் தன்மையினால் தன்னை இன்னும் – பூமியிலே
வைக்குமெனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு

ஸ்ரீமந் நாராயணன் வசிக்கும் திவ்ய லோகத்தை அடையாமல், பலம் வாய்ந்த மூங்கிலைப் போன்ற தோளை உடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வன், ஆழ்வாருக்கு ஏற்பட்ட தேவையில்லாத ஸந்தேஹமான “எம்பெருமான் இன்னும் என்னை ஸம்ஸாரத்தில் வைத்திருக்கிறானே” என்பதைப் போக்கினான். இப்படித் தகுந்த புகழை உடைய ஆழ்வாரே நமக்குப் புகல்.

தொண்ணூற்றுநான்காம் பாசுரம். மாமுனிகள், முன்பு உபதேசித்த பக்தி யோகம் தன் பலத்துடன் சேர்வதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சார்வாகவே அடியில் தான் உரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை – சோராமல்
கண்டுரைத்த மாறன் கழலிணையே நாள் தோறும்
கண்டுகக்கும் என்னுடைய கண்

எல்லோராலும் கைக்கொள்ள வேண்டிய, திருவாய்மொழி 1.2 “வீடுமின்” பதிகத்தில் ஆழ்வார் முன்பு அருளிச்செய்த பக்தியைப் பற்றித் தெரிந்து கொண்டு, அது ப்ரபத்தியான சிறந்த பலத்துடன் சேர்வதை ஒன்று விடாமல் அருளிச்செய்தார். ஒவ்வொரு நாளும், என்னுடைய கண்கள் இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே ஆனந்தத்துடன் காணும்.

தொண்ணூற்றைந்தாம் பாசுரம். மாமுனிகள், அடியார்கள் எம்பெருமானுடன் செய்யும் பரிமாற்றங்களைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கண்ணன் அடியிணையில் காதலுறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே – மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கைத் தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்

பெருமை படைத்த ஆழ்வார், தன்னுடைய கருணையால் அடியார்கள் எம்பெருமானின் திருவடிகளை நோக்கிச் செய்யும் செயல்களைச் சுருக்கமாக அருளிச்செய்து, அது இவ்வுலகில் உள்ள ஆத்மாக்களின் நெஞ்சில் நிலைபெற்றிருக்கும்படிச் செய்து, தான் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதை முடித்தருளினார்.

தொண்ணூற்றாறாம் பாசுரம். மாமுனிகள், தன் (ஆழ்வாரின்) ஆணைக்கிணங்கத் தன்னைப் பரமபதத்துக்கு அழைத்துச் செல்ல விரையும் எம்பெருமானைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அருளால் அடியில் எடுத்த மாலன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து – இருவிசும்பில்
இத்துடன் கொண்டேக இவர் இசைவு பார்த்தே இருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல்

முதலிலே தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே ஸர்வேச்வரன் ஆழ்வாரை ஸம்ஸாரத்திலிருந்து எடுத்தருளினான்; ஆழ்வாருடைய பரிசுத்தமான ஸ்ரீஸூக்திகள் அவருடைய அஜ்ஞானத்தால் நிறைந்த இந்தச் சரீரத்துடன் அழைத்துப் போக அவரின் அனுமதியை நோக்கிக் காத்திருக்கும் இப்படிப்பட்ட ஸர்வேச்வரனின் சுத்தியை வெளியிடும்.

தொண்ணூற்றேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தன் சரீரத்தில் ஆசைகொண்டதையும் “என்னை விரோதியான இந்தச் சரீரத்தில் இருந்து விடுவிக்கவும்” என்று இதில் ஆசையை விடும்படிச் செய்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

செஞ்சொற்பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சைதனின் – விஞ்சுதலைக்
கண்டவனைக் கால்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண்திறல் மாறன் நம் திரு

வேதத்தின் குறிக்கோளான, நேர்மையான பேச்சுக்களை உடைய பரமபுருஷன் ஞானம் முதலிய குணங்களால் நிறைந்த ஆழ்வாரின் திருமேனியின் மேல் மிகுதியான, கள்ளத்தனமான ஆசை கொண்டிருந்தான். இதைக் கண்ட, திடமான பலம் பொருந்திய ஆழ்வார், எம்பெருமானின் திருவடிகளைப் பிடித்து, தன் சரீரத்தை விடுவித்துக்கொண்டார். இப்படிப்பட்ட ஆழ்வாரே நம் செல்வம்.

தொண்ணூற்றெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானை “அநாதிகாலமாக என்னைக் கைவிட்ட நீ, இப்பொழுது என்னைக் கைக்கொண்ட காரணம் என்?” என்று கேட்க அதற்கு எம்பெருமான் பதிலற்று இருப்பதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

திருமால் தன் பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அருமாயத்து அன்று அகல்விப்பானென்? – பெருமால் நீ
இன்றென்பால் செய்வான் என்னென்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து

ஸ்ரீமந் நாராயணன் தன் விஷயத்தில் கொண்டிருக்கும் சிறந்த ஈடுபாட்டைக் கண்ட, மிகப் பெருமை வாய்ந்த ஆழ்வார் எம்பெருமானை “எம்பெருமானே! அநாதி காலமாக என்னை ஏன் ஸம்ஸாரத்தில் வைத்து உன்னிடமிருந்து தள்ளி வைத்திருந்தாய்? இப்பொழுது என்னிடம் இவ்வளவு அன்பு காட்டுவது ஏன்?” என்று கேட்க, இதற்குப் பதில் இல்லாத எம்பெருமான் வருத்தத்துடன் பவ்யமாக இருந்தான்.

தொண்ணூற்றொன்பதாம் பாசுரம். மாமுனிகள், அர்ச்சிராதி மார்க்கத்தில் தனக்குக் கிடைத்த வரவேற்பை எம்பெருமான் காட்டிக் கொடுக்க, அதை அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து – வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை உரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி

எம்பெருமான் ஆழ்வாரைச் சூழ்ந்து நின்று, பரமபதத்தை அடைவிக்கும் பழையதான அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்டிக் கொடுக்க, திருமுடியில் வகுள மாலையைச் சூடியிருக்கும் ஞான முனியான ஆழ்வார், அங்கே ஆனந்த ஸாகரத்தில் மூழ்கியிருந்ததை முழுவதும் அனுபவித்து, அங்கே ஆனந்தமாக ஒரு பாரமும் இல்லாமல் கருடர் விஷ்வக்ஸேனர் முதலிய அடியார்களுடன் வாழ்ந்ததை அருளிச்செய்தார்.

நூறாம் பாசுரம். மாமுனிகள், பரமபக்தியால் உயர்ந்த குறிக்கோளை அடைந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முனி மாறன் முன்பு உரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து – நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத் தாள் கோனை
ஒருமையுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து

முனிவரான ஆழ்வார், முன்பு கண்ட ஆனந்தங்களிலிருந்து விடுபட்டு, வருத்தத்துடன் தனியாக இருந்தார். நன்கு வளர்ந்த பரமபக்தியால் பரிபக்குவத்தை அடைந்து, ச்ரிய:பதியுடன் தன் திருவுள்ளத்தில் ஒன்றுபட்டு, நித்யஸூரிகளின் பெருமையை அதனால் அடைந்து, பிராட்டியும் எம்பெருமானும் ஆன சேர்த்தியை நேரில் கண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்யப் பெற்றார்.

———————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்

ஸ்ரீ வேதார்த்த சாரம் -மூலம்–பிரதம அத்யாயம் -பிரதம பாதம் –

February 29, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சாரா உத்த்ரியதே

————–

1-1-1-ஜிஜ்ஞாஸ அதிகரணம்
1-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –

அதிராயம் அத ஸப்த ஆனந்தர்யே வர்த்ததே -அதஸ் ஸப்த சிரஸ்கத்வாத் -அதஸ் ஸப்தஸ் ச பூர்வ வ்ருத்தஸ்ய ஹேதுபாவே -பூர்வ வ்ருத்தம் ச கர்மஜ் ஞானம் இதி விஞ்ஞாயதே ஆரிப்ஸிதஸ்ய ப்ரஹ்ம ஞானஸ்ய வேதார்த்த விஸாரைகதேஸத்வாத் –அதீத வேதஸ்ய ஹி புருஷஸ்ய கர்ம ப்ரதிபாதநோபக்ர மத்வாத் வேதாநாம் கர்ம விசார ப்ரதமம் கார்யம் இதி -அதாதோ தர்ம ஜிஜ்ஞாசா -இத்யுக்தம் -கர்மணாம் ச ப்ரக்ருதி விக்ருதி ரூபாணாம் தர்மார்த்தகாம ரூப -புருஷார்த்த சாதனதா நிஸ்ஸய -ப்ரபுத்வாதார்த்விஜ்யம் இத்யந்தேந ஸூத்ர கலாபேந ஸம் கர்ஷேணேந க்ருத –ஏவம் வேதஸ்யார்த –பரத்வே கர்மணாம் ச ததர்தத்வே தேஷாம் ச கேவலாநாம் த்ரிவர்க பலத்வே நிஸ்ஸிதே சதி வேதைகதேஸ பூத வேதாந்த பாகே கேவல கர்மணாம் அல்ப அஸ்திர பலத்வம் ப்ரஹ்ம ஞானஸ்ய ச அநந்த ஸ்திர பலத்வம் ஆபாததோ த்ருஷ்ட்வா அனந்தரம் முமுஷோ ரவதாரிதபரி நிஷ்பன்ன வஸ்து போத ஜனந ஸப்த சக்தே -புருஷஸ்ய ப்ரஹ்ம புபுத்ஸா ஜாயத இதி அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா இதி கர்ம விசார அநந்தரம் தத ஏவ ஹேதோர் ப்ரஹ்ம விசார கர்தவ்ய இத் யுக்தம் பவதி –ததிதமாஹ ஸ்ருதி –
பரீஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாந்நாஸ்த்யக்ருத க்ருதேந தத் விஞ்ஞா நார்தம் ஸ குருமேவ அபி கச்சேத் ஸமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் பிரசாந்த சித்தாய சமான்விதாய யேநாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாஸதாம் தத்த்வதோ ப்ரஹ்ம வித்யாம் இதி
ப்ராஹ்மண -வேத அப்யாஸ ரத -கர்ம சிதான் –கர்மணா ஸம்பாதிதான் லோகான் –ஆராத்யக்ஷயிஷ்ணுத்வேந க்ஷயஸ்வபாவான் கர்ம மீமாம்ஸயா பரீஷ்ய அக்ருத -நித்ய பரம புருஷ க்ருதேந -கர்மணா ந ஸம்பாத்ய இதி யோ நிர்வேத மாயாத் ஸ தத் விஞ்ஞானார்தம் குருமேவ அபி கச்சேத் ஸமித் பாணி -ஸ்ரோத்ரியம் -வேதாந்த வேதிநம் ப்ரஹ்ம நிஷ்டம் -சாஷாத் க்ருத பரம புருஷ ஸ்வரூபம் -ஸ -குரு -ஸம்யகுபஸந்நாய தஸ்மை யேந வித்யா விஸேஷேண அக்ஷரம் –ஸத்யம் பரம புருஷன் வேத வித்யாத் -தாம் ப்ரஹ்ம வித்யாம் ப்ரோவாஸ –பரப்ரூயாத் இத்யர்த –ஸ குருமேவ அபி கச்சேத் –தஸ்மை ஸ வித்வான் ப்ரோவாஸ இத்யன்வயாத் அப்ராப்தத்வாச் ச விதாவபி லிடோ விதாநாத் –சந்தஸி லங் லிட் இதி –-1- இதி ஜிஜ்ஞாஸ அதிகரணம் –1-

1-1-2-
2-ஜந்மாத் யஸ்ய யத
-அஸ்ய விசித்ர சித் அசித் மிஸ்ரஸ்ய வ்யவஸ்தித ஸூக துக்க உப போகஸ்ய ஜகத- ஜன்ம ஸ்திதி லயா யத தத் ப்ரஹ்மேதி ப்ரதிபாதயதி ஸ்ருதிரித் யர்த –யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்யபி ஸம் விசந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம இதி –ஸூத்ரே யத இதி ஹேதவ் பஞ்சமீ ஜனி ஸ்திதி லயாநாம் ஸாதாரணத்வாத் -ஜநி ஹேதுத்வம் ச நிமித்த உபாதான ரூபம் விவஷிதம் -யத இதி ஹி ஸ்ருதி -இஹ உபய விஷயா கதமிதி சேத் -யதோ வா இமாநி இதி ப்ரஸித்தவந் நிர்தேசாத் -பிரஸித்தேஸ் ச உபய விக்ஷயத்வாத் ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -ததைஷத பஹுஸ் யாம் ப்ரஜாயேயேதி –தத் தேஜோ அஸ்ருஜத இத்யத்ர ஸதேவ இதம் அக்ர ஏகமேவ ஆஸீதிதி உபாதாநநாம் ப்ரதிபாத்ய –அத்விதீயம் இதி அதிஷ்டாத் ரந்த்ர நிவாரணாத் ஸச் ஸப்த வாஸ்யம் ப்ரஹ்மைவ நிமித்தம் உபாதாநம் சேதி விஞ்ஞாயதே –ததா ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யாத்மந ஏவ விசித்ர ஸ்திரத்ரஸ ரூபேண பஹு பவநம் ஸம் கல்ப்ய ததைவ ஸ்ருஷ்டி வசநாச் ச –அதஸ் ஸ்ருதா வபி யத இதி ஹேதவ் பஞ்சமீ –அத் ரைவ ப்ரஹ்மணோ ஜகன் நிமித்த தத்வம் உபாதாநத்வம் ச ப்ரதிபாதநம் -அர்த விரோதாத் அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் இத்யாதி விசேஷ ஸ்ருத்யா சாஷிப்ய ப்ரக்ருதிஸ் ச ப்ரதி ஞாத்ருஷ்டாந்தாநு பரோதாத் அபித்ய உபதேஸாச் ச ஸாஷாச் சோபாயாம்நாநாத் ஆத்ம க்ருதே இத்யாதி பிர் ஸூத்ரை பரி ஹரிஷ்யதே –2–

நநு ச ஸர்வஞ்ஞம் ஸர்வ ஸக்தி ஸத்ய ஸங்கல்பம் நிரவத்ய தயா நிரஸ்த ஸமஸ்தா புருஷார்த்த கந்தம் ப்ரஹ்மைவாத்மாநம் விசித்ர சித் அசித் மிஸ்ரம் ஜகத் ரூபமிதம் ஸர்வமஸ்ருஐதேதி கதமுப பத்யதே –ததேதத் ஸூத்ர கார ஸ்வயமேவ பரி சோத்ய பரி ஹரிஷ்யதி –அபீதவ் தத்வத் ப்ரசங்காத ஸமஞ்ஸம் இதர வ்யபதேசாத்திதா கரணாதி தோஷ பிரசித்தி -இதி சோத்யம் -பரிஹாரஸ்து ந து த்ருஷ்டாந்த பாவாத் அதிகம் து பேத நிர்தேசாத் இதி ச –ஷரம் த்வவித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே யஸ்து ஸோ அந்ய ஸ காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்சிஜ் ஜனிதா ந சாதிப க்ஷரம் ப்ரதாநம் அம்ருத அக்ஷரம் ஹர ஷராத்மாநாவீஸதே தேவ ஏக அசித் வர்கம் ஸ்வாத்மநோ போக்யத்வேந ஹரதீதி போக்தா ஹர இத்யுச்யதே

த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அக்ஷர ஏவ ச –ஷரஸ் ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத் யுதாஹ்ருத –யோ லோக த்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர

யஸ்மாத் ஷரமதீதோ அஹம் அக்ஷராதபி சோத்தம –அதோ அஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம –இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதி கணை ப்ரத்யகாத்மநோ அதிகமர்த்தாந்தர பூதம் ப்ரஹ்ம தச்ச ப்ரத்யகாத்ம சரீர கதயா தத் ஆத்ம பூதம் ப்ரத்யகாத்மநஸ் தச் ஸரீரத்வம் ப்ரஹ்மணஸ் தத் ஆத்மவத் வஞ்ச யா ஆத்மநி திஷ்டன் யஸ்ய ஆத்மா ஸரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதி ஸ்ருதி ஸத ஸமதிகதம் ஸ சரீரஸ் யாத்மந கார்ய அவஸ்தா ப்ராப்தா வபி குண தோஷ வ்யவஸ்திதே ர் த்ருஷ்டாந்த பாவாத் ப்ரஹ்மணி ந தோஷ ப்ரஸக்தி இதி நா ஸாமஞ்ஜஸ்யம் வேதாந்த வாக்யஸ்யே தி ந து த்ருஷ்டாந்த பாவாத் இத்யுக்தம் த்ருஷ்டாந்தஸ் ச தேவ மனுஷ்யாதி ஸப்த வாஸ்யஸ்ய ஸ சரீரஸ் யாத்மந மனுஷ்யோ பாலோ யுவா ஸ்தவிர இதி நாநாவஸ்தா ப்ராப்தா வபி பாலத்வ யுவத்வ ஸ்தவிரத் வாதய-சரீர கதா தோஷா நாத்மாநம் ஸ்ப்ருசந்தி ஆத்ம கதாஸ் ச ஞான ஸூகாதய ந சரீரமிதி -அத கார்யா வஸ்தாம் காரணா வஸ்தம் ச ப்ரஹ்ம ச ப்ரஹ்ம ப்ரத்யகாத்ம சரீர தயா தத் ஆத்ம பூதமிதி ப்ரத்யகாத்ம வாசிநா சப்தேந ப்ரஹ்ம அபிதாநே தச் ஸப்த ஸாமாநாதி கரண்யே ச ஹேதும் வக்தும் நிரஸ நீயம் மதத்வயம் ப்ரதிஞ்ஞா ஸித்தே லிங்கமாஸ்மரத்ய -உத்க்ர மிஷ்யத ஏவம் பாவாதித் யவ்டுலோமி இத் யுபந்யஸ்ய அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸ்ந இதி ஹேதுருக்த தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் ஸச் ச த்யச்சா பவத் இத்யாதிநா ப்ரத்யகாத்மா ஆத்ம தயா அவஸ்தாநாத் ப்ரஹ்மணஸ் தச் சப்தேநாபிதாநம் –தத் ஸாமாநாதி கரண்யேன வ்யபதேசாச் சேத் யுக்தம் –ததா வைஷம்ய நைர் க்ருண்யே ந ஸாபேஷத்வாத் ந கர்மா விபாகா திதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப் யுபலப்யதே ச இதி தேவ மநுஷ்யாதி விஷம ஸ்ருஷ்டேர் ஜீவ கர்ம நிமித்தத்வம் ஜீவாநாம் தத் தத் கர்ம ப்ரவாஹணாம் சாநாதித்வம் ச ப்ரதிபாத்ய ததநாதித்வம் ச நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஜ்ஞாஜ்ஜவ் த்வவ் இத்யாதி -ஸ்ருதி ஷுபலப்யத இத் யுக்த்வா தத நாதித்வ அபி ப்ரலய காலே சித் அசித் வஸ்துநோர் போக்த்ரு போக்யயோர் நாம ரூப விபாகா பாவாத் ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் – நான்யத் கிஞ்சந மிஷத் இத்யாதாவே கத்வாவதாரண முப பத்யதே இதி ஸூத்ர காரேண ஸ்வயமேவ யுக்தம் –ததா ச நாத்மா ஸ்ருதேர் நித்யத்வாச்ச தாப்ய இதி ப்ரத்யகாத்மநோ நித்யத்வாதநுத் பத்தி முக்த்வா ஜ்ஜோ அத ஏவ இதி தஸ்ய ஞாத்ருத்வ மேவ ஸ்வரூப மித்யுக்தம் –
உத் க்ராந்திகத்யாகதீநாம் இத்யாதிநா அனுத்வம் சோக்தம் –தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேஸ ப்ராஜ்ஞவத் யாவதாத்ம பாவித் வாச்ச ந தோஷஸ் தத் தர்சநாத் இதி ஜ்ஞாது சப்தேந வ்யபதேஸோ ஞான குண சாரத்வாத் ஞாநைக நிரூபணீய ஸ்வ பாவத் வாச்சேத் யுக்தம்
நித்யோபலப்த்யநுபலப்தி பிரசங்கோ அந்நிய தர நியமோ வான்யதா இதி ஞான மாத்ர ஸ்வரூபாத்ம வாதே ஹேத்வாந்தராயத் தஜ் ஞாநவாதே ஸர்வ கதாத்மவாதே ச தோஷ உக்த –கர்தா ஸாஸ்த்ரார்த்த வத்த்வாத் உபாதாநாத் விஹாரோபதேஸாச் ச வ்யபதேஸாச் ச க்ரியா யாம் ந சேந்நிர்தேஸ விபர்யய உப லப்திவத நியம சக்தி விபர்யயாத் ஸமாத்ய பாவாச் ச -யதா ச தஷோ அபயதா இத்யாத்மந ஏவ ஸூபாஸூபேஷு கர்ம ஸூ கர்த்ருத்வம் ப்ரக்ருதேர கர்த்ருத்வம் ப்ரக்ருதேஸ் ச கர்த்ருத்வே தஸ்யாஸ் சாதாரணாத்வேந ஸர்வேஷாம் பல அநுபவ பிரசங்காதி ச ப்ரதிபாதிதம் –பராத்து தச் ஸ்ருதே –க்ருத ப்ரயத்நாபேஷஸ்து விஹித ப்ரதிஷித்தா வையர்த் யாதிப்ய -இத்யாத்மந ஏவ கர்த்ருத்வம் பரம புருஷாநுமதி ஸஹ க்ருத மித்யுக்தம்
அம்ஸோ நாநா வ்யபதேஸாத் அந்யதா சாபி தாஸகித வாதித்வ மதீயத ஏகே மந்த்ர வர்ணாத் அபி ஸ்மர்யதே ப்ரகாசாதி வத்து நைவம் பர ஸ்மரந்தி ச இதி அநீஸயா ஸோசதி முஹ்யமாந –ஜுஷ்டம் யதா பஸ்யத்யன்யமீஸமஸ்ய மஹிமாநமிதி வீத ஸோக -ஷரம் த்வவித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே யஸ்து ஸோ அந்நிய ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிம்ச ந வேத நாந்தரம் தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நந் நந்யோ அபிசாக ஸீதி ஜ்ஞாஜ்ஜவ் த்வாவஜாவீஸ நீசவ் பிருதகாத்மாநம் ப்ரேரி தாரம் ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ்தேநாம்ருதத்வமேதி யதா பஸ்யஸ் பஸ்யதே ருக்ம வர்ணம் கர்தார மீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சந பரமம் ஸாம்யம் உபைதி -ஸ காரணம் கரணாதிபாதியோ ந சாஸ்ய கஸ்சிஜ் ஜனிதா ந ஸாதிப -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜனம் நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் இத்யாதி ஷு ப்ரத்யகாத்மந -பரமாத்மநஸ் ச கர்ம வஸ்யத்வேந ஸோசித்ருத்வேநா ஸர்வஜ்ஞத்வேந உபாஸநாயத்த முக்தித்வேந நிர்வத்யத்வேந ஸர்வஞ்ஞத்வேந ஸத்ய சங்கல்பத்வேந சர்வேஸ்வரத்வேந ஸமஸ்த கல்யாண குணா கரத்வாதிநா ச ஸ்வரூபஸ்ய ஸ்வ பாவஸ்ய நாநத்வ வ்யபதேஸாத் –தயோரேவ தத்வமஸி அயமாத்மா ப்ரஹ்ம யோ அசவ் ஸோ அஹம் யோ அஹம் ஸோ அசவ் அத யோ அந்யாம் தேவதாம் உபாஸ்தே அந்யோ அஸா வந்யோ அஹமஸ் மீதி ந ஸவேத அக்ருத்ஸ்நோ ஹ்யேஷ ஆத்மேத்யேவோபா ஸீத ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்மேமே கிதவா இதி ச ஸர்வ ஜீவாத்ம வ்யாபித்வேநா பேத வ்யபதேஸாச் ச உபய வ்யபதேஸா விரோதேந பரமாத்மாம்ஸோ ஜீவாத்மேத் யப்யுப கந்தவ்யம்

ந கேவலம் ந்யாய ஸித்த மிதம் ஸ்ருதி ஸ்ம்ருதி ப்யாம் சாம்ஸத்வ முக்தம் ஜீவாத்மந -பாதோ அஸ்ய விச்வா பூதாநி மமைவ அம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூதஸ் ஸநாதந இதி -அம்சத்வம் நாம ஏகவஸ்த்வேகதேஸத்வம் –ததா ஸத் யுபயோ ரேக வஸ்துத்வேநா விரோதோ ந ஸ்யாதித்யா சங்க்ய ப்ரகாசாதி வத்து நைவம் பர இதி பரி ஹரதி
அந்நிய விஸேக்ஷணதைக ஸ்வபாவ ப்ரகாஸ ஜாதி குண சரீர விஸிஷ்டாநக்நிவ்யக்தி குண் யாத்மந -ப்ரதி ப்ரகாஸ ஜாதி குண ஸரீராணாம் யதா அம்சத்வம் ஏவம் பரமாத்மாநம் ப்ரத்யகாத்ம ஸரீரகம் ப்ரதி ப்ரத்யகாத்மநோ அசம்த்வம் ஏவமம்சத்வே யத் ஸ்வ பாவ அம்ச பூதோ ஜீவ நைவ மம்ஸீ பரமாத்மா ஸர்வத்ர விஸேக்ஷண விஸேஷ்ய யோஸ் ஸ்வரூப ஸ்வ பாவ பேதாத் –ஏவஞ்ச கர்தா சாஸ்த்ரார் தவத்வாத் பராத்து தச் ஸ்ருதி இத்ய நந்த ரோக்தம் ச ந விருத்யதே

ஏவம் ப்ரகாஸ சரீரவஜ் ஜீவாத்மநா மம்ஸத்வம் பராஸராதய ஸ்மரந்தி ச
ஏக தேச ஸ்திதஸ்ய அக்நேர் ஜ்யோத்ஸ்நா விஸ்தாரிணீ யதா
பரஸ்ய ப்ரஹ்மண ஸக்திஸ் ததேயமகிலம் ஜகத்
யத் கிம்சித் ஸ்ருஜ்யதே யேந சத்த்வ ஜாதேந வை த்விஜ
தஸ்ய ஸ்ருஜயஸ்ய ஸம் பூதவ் தத் ஸர்வம் வை ஹரேஸ்தநு
தே ஸர்வே ஸர்வ பூதஸ்ய விஷ்ணோரம்ஸ ஸமுத்பவா இதி

அந்யதா பாரமார்த்திகா பாரமாத்திகோபாதி சமாஸ்ரயணேந ப்ரத்யகாத்மநோ அஸம்த்வே ப்ரஹ்மண ஏவ வேதாந்த நிவர்த்யா ஸர்வே தோஷா பவேயுரிதி ஆபாசா ஏவ ச இத்யாதி ஸூத்ரைருக்தம் -அதஸ் ஸர்வதா சித் அசித் வஸ்து சரீர கதயா ததாத்ம பூதமேவ ப்ரஹ்ம கதாசித விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரம் தத் காரண அவஸ்தம் கதாசிச் ச விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரம் தத் கார்ய அவஸ்தம் ப்ரஹ்ம -ஸர்வதா சித் அசித் வஸ்து சரீர கதயா தத் விஸிஷ்டத்வேத்மபி ப்ரஹ்மண பரிணாமித்வா புருஷார்த்த ஆஸ்ரயத்வே சரீர பூத சேதன அசேதன வஸ்து கதே ஆத்ம பூதம் ப்ரஹ்ம ஸர்வதா நிரஸ்த நிகில தோஷ கந்த அநவதிக அதிசய அஸங்க்யேய ஞான ஆனந்தாத் யபரிமித உதார குண சாகரம் அதிஷ்டத இதி ப்ரஹ் மைவ ஜகன் நிமித்தம் உபாதாநம் சேதி யதோ வா இமாநி இத்யாதி வாக்யம் ப்ரதிபாதயத்யேவேதி ஜந்மாத் யஸ்ய யத தத் ப்ரஹ்மேதி ஸூஷ்டூக்தம்

ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யஸ்ய சாயமர்த -யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய அக்ஷரம் சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய அவ்யக்தம் சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதி ஸ்ருதே -ப்ரஹ்மண ஸர்வதா சித் அசித் வஸ்து சரீரகத்வாத் சதேவேதமீதாநீம் ஸ்தூல சித் அசித் வஸ்து சரீர கத்வேந விபக்த நாம ரூபம் அக்ரே ப்ரலய காலே ஸூஷ்ம தஸா பன்ன சித் அசித் வஸ்து சரீரகதயா நாம ரூப விபாக அநர்ஹாமேவ ஆஸீத் -ஸ்வயமேவ ப்ரஹ்ம ஸர்வஞ்ஞம் ஸர்வ ஸக்தி நிமித்தாந்தராநபேஷமத்விதீயம் சாதிஷ்டத்

ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இதி தன்நாம ரூப விபாகாநர்ஹா ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரகதயா ஏகமேவாவஸ்திதம் நாம ரூப விபாகார்ஹா ஸ்தூல தசாபத்த்யா பஹு ப்ரகாரம் ஸ்யாமிதி ஐக்ஷத –ஸ்யாம் ப்ரஜாயேய இதி வ்யஷ்டி சமஷ்டி வ்யபதேஸ –சித் அசிதோ பரஸ்ய ச ப்ரலய காலே அபி வ்யவஹாரா நர்ஹா ஸூஷ்ம பேத ஸர்வைர் வேதாந்தி ப்ரப்யுபகத அவித்யா க்ருத பேதஸ்ய உபாதி க்ருத பேதஸ்ய ச அநாதி த்வாப் யுபகமாத் இயாம்ஸ்து விசேஷ -ப்ரஹ்மைவாஜ்ஞம் உபாதை ஸம்பத்தம் சேதி ஸர்வ ஸ்ருதி ந்யாய விராதோ அந்யேஷாம் –ததபாவாத விரோதஸ் ச அஸ்மாகம் இதி —2-இதி ஜந்மாத் யதி கரணம் –2-

1-1-3-ஸாஸ்த்ர யோநித்வ அதி கரணம்
3 ஸாஸ்த்ர யோநித்வாத் –

ஏவம் சித் அசித் வஸ்து சரீரதயா தத் விஸிஷ்டஸ்ய ப்ரஹ்மண ஏவ ஜகத் உபாதாநத்வம் நிமிதத்வம் ச நாநுமாந கம்யமிதி ஸாஸ்த்ர ஏக ப்ராமாணகத் வாத்தஸ்ய யதோ வா இமாநி பூதாநி இத்யாதி வாக்யம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்ம போதயத்யேவேதி ஸித்தம் –3-இதி ஸாஸ்த்ர யோநித்வதி கரணம்

1-1-4-சமன்வய அதி கரணம்
4-தத் து சமன்வயாத் –

புருஷார்த தயா அந்வய ஸமன்வய சாஸ்த்ராக்ய ப்ரமாணஸ்ய புருஷார்த்த பர்யவசாயித்வே அபி ப்ரஹ்ம ஸ்வஸ்ய பரஸ்ய சாநுபவிது -அவிஸேஷேண ஸ்வரூபேண குணை விபூத்யா ச அநுபூயமாநம் அநவதிக அதிசய அநந்த ரூபமிதி புருஷார்தத்வேநாபி தேயதயா அந்வயாத் ப்ரஹ்மணஸ் ஸாஸ்த்ர பிரமாண கத்வ முபபந்ந தரமிதி நிரவத்யம் நிகில ஜகதேக காரணம் ப்ரஹ்ம வேதாந்தா ப்ரதிபாத யந்தீத் யுக்தம்-தஸ்யை கஸ்யை கதைவ க்ருத்ஸ்ன ஜகன் நிமித்தத்வம் தஸ்யைவோபாதாநதயா ஜகத் ஆத்மகத்வம் ச நாநுமாநாதி கம்யமிதி ஸாஸ்த்ரக பிரமாண கத்வாத் தஸ்ய ச அநவதிக அதிசய அநந்த ரூப தயா பரம புருஷார்தத்வாத் வேதாந்தா ப்ரதிபாத யந்த்யேவ இதி ஸ்திரீக்ருதம் –-4-இதி ஸமன்வய அதி கரணம் –4-

அத பரம் பாத ஸேஷேண ஜகத் காரண தயா ப்ரதான புருஷ ப்ரதிபாதநா நர்ஹாதயா ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் நிரஸ்தாவித்யாதி -ஸமஸ்த தோஷ கந்தமபரிமிதோதார குண சாஹரம் ப்ரஹ்மைவ வேதாந்தா ப்ரதிபாத யந்தீத் யுச்யதே –தத்ர தாவத் ப்ரதாநம் வேதாந்த பிரதிபாதநா நர்ஹாமித்யாஹ

1-1-5-ஈஷத் யதி கரணம்
5- ஈஷதேர் நா ஸப்தம்
–அஸப்தம் ஆநு மாநிகம் ப்ரதாநம் ந தத் வேதாந்த வேத்யம் –குத –ஈஷதே –ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் இதி ப்ரஸ்துத ஜகத் காரண வ்யாபாரவாசிந –ஈஷதேர்தாதோ ஸ்ரவணாத் ததைஷத பஹு ஸ்யாம் இதி –5-

6-கௌணஸ் சேந்நாத்ம ஸப்தாத் —
தத் தேஜ ஐஷத இத்யாதிஷ்வ சேதநே அபி வஸ்துநி ஈஷதிஸ் ஸ்ரூயதே தத்ர கௌண =ஏவமத்ராபி ப்ரதான ஏவேக்ஷதிர் கௌண இதி சேத் நைததுப பத்யதே ப்ரஸ்துதே ஸச் ஸப்த வாஸ்யே ஸ்ரூயமாணாச் சேதன வாசிந ஆத்ம ஸப்தாத் ஸ ஆத்மா தத்த்வமஸி ஸ்வேத கேதோ இதி ஹ்யுத்தரத்ர ஸ்ரூயதே -தேஜ ப்ரப்ருதிஷ்வபி ந கௌணமீ க்ஷணம் –தேஜ ப்ரப்ருதி ஸப்தைரபி தத் தச் சரீரகம் ப்ரஹ்மைவாபி தீயதே அநேந ஜீவேநாத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி இதி ப்ரஹ்மாத்மக ஜீவ அநு பிரவேசா தேவ ஸர்வஸ்ய வஸ்துநோ நாம ரூப பாக்த்வாத் –தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் தத் அநு ப்ரவிஸ்ய-ஸச் சத்யாச்சாபவத் நிருக்தம் சா நிருக்தம் ச நிலயநம் ச –விஞ்ஞானம் சா விஞ்ஞானம் ச –ஸத்யம் சாந்ருதம் ச ஸத்யமபவத் இதி சேதனமசேதநம் ச ப்ருதங் நிர்திஸ்ய ததுபயமநு ப்ரவிஸ்ய சத்யச் ஸப்த வாஸ்யோ அபவதிதி ஹி ஸமாந ப்ரகரணே ஸ்பஷ்டமபிஹிதம்

7-தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதேஸாத் –இதஸ் ச ப்ரதாநாதர் தாந்தர பூதம் ப்ரதாநாதர் தாந்தர பூதம் ஸச் ஸப்தாபி ஹிதம் ஜகத் காரணம் -ஸச் ஸப்தாபிஹித தத்த்வ நிஷ்டஸ்ய மோக்ஷ உபதேசாத் –தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்யே அத ஸம்பத்ஸ்யே இதி ஹி தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதிஸ்யதே -ப்ரதான காரணவாதி நாமபி ஹி ப்ரதான நிஷ்டஸ்ய மோஷோநாபிமத-7-

8-ஹேயத்வா வசநாச் ச –யதி ப்ரதானமத்ர விவஷிதம் ததா தஸ்ய ஹேயத்வாத் அத்யேயத்வமுச்யேத ந த்துச்யதே -மோக்ஷ சாதநதயா த்யேயத்வமே வாத்ரோச்யதே தத்த்வமஸி ஸ்வேத கேதோ இத்யாதிநா –8-

இதஸ் ச ந ப்ரதாநம்
9-ப்ரதிஜ்ஞா விரோதாத் —

ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா விரோதாத் -ஸச் ஸப்த வாஸ்ய தத்த்வ ஞாநேந தத் கார்ய தயா சேதன அசேதன ஸர்வ வஸ்து ஞானம் யேநாஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதி நா ப்ரதிஞ்ஞாதம் தத்தி ப்ரதான காரண வாதே விருத்யதே-சேதநஸ்ய ப்ரதான கார்யத்வாபாவாத் -ப்ரதாநாதர்தாந்தர பூத ப்ரஹ்ம காரண வாதே சித் அசித் வஸ்து சரீரம் ப்ரஹைவ நாம ரூப விபாகா விபாகாப்யாம் கார்யம் காரணம் சேதி ப்ரஹ்ம ஞாநேந க்ருத்ஸ்நஸ்ய ஞாததோப பத்யதே –9-

இதஸ் ச ந பிரதானம்
10-ஸ்வாப்யயாத் –
-ஸ்வப்நாந்தம் மே ஸோம்ய விஜாநீஹி இதி –யத்ரை தத் புருஷஸ் ஸ்வபிதி நாம ஸதா ஸோம்ய ததா சம்பந்நோ பவதி -ஸ்வம பீதோ பவதி தஸ்மாதேநம் ஸ்வபிதீத்யாசக்ஷதே -ஸ்வம் ஹ்யபீதோ பவதிஇதி ஜீவஸ்ய சேதனஸ்ய ஸூஷுப்தஸ்ய ஸதா சம்பந்நஸ்ய ஸ்வாப்யவசநாத் ப்ரதாநாதர்தாந்தர பூதம் ஸச் ஸப்த வாஸ்யமிதி விஞ்ஞாயதே –ஸ்வம பீதோ பவதி–ஆத்மாந மேவ ஜீவோ அபீதோ பவதீத்யர்தா -சித் வஸ்து சரீரகம் ததாத்ம பூதம் ப்ரஹ்மைவ ஜீவ சப்தேநாபி தீயத இதி நாம ரூப வ்யாகரண ஸ்ருத் யுக்தம் -தஜ் ஜீவ சப்தாபிதேயம் பரம் ப்ரஹ்மைவ ஸூஷுப்தி காலே அபி ப்ரலய கால இவ நாம ரூப பரிஷ்வங்காபாவாத் கேவல ஸச் சப்தாபிதேயமிதி ஸதா ஸோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வமபீதோ பவதி இத்யுச்யதே –ததாஸமாந ப்ரகரணே நாம ரூப பரிஷ்வங்காபாவேந ப்ராஜ்ஜேநைவ பரிஷ்வங்காத் ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் இத்யுச்யதே -ஆமோஷாஜ் ஜீவஸ்ய நாம ரூப பரிஷ்வங்கதேவ ஹி ஸ்வ வ்யதிரிக்த விஷய ஞான உதய –ஸூஷுப்தி காலே ஹி நாம ரூபே விஹாய ஸதா ஸம் பரிஷ் வக்த -புநரபி ஜாகரதஸாயாம் நாம ரூபே பரிஷ் வஜ்ய தத் தன்நாம ரூபோ பவதீதி ஸ்ருத் யந்தரே ஸ்பஷ்டமபிதீயதே யதா ஸூ ப்த ஸ்வப்நம் ந கதஞ்சன பஸ்யதி அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி -ஏதஸ்மாதாத்மந ப்ராணா யதாயதநம் விப்ரதிஷ்டந்தே ததா த இஹ வ்யாக்ரோ வா ஸிம்ஹோ வா வ்ருகோ வா வராஹோ வா யத் யத் பவந்தி இதி –10-

11-கதி சாமான்யாத் –ஸகல உபநிஷத் கதி ஸாமாந்யாதஸ் யாமப் யுப நிஷதி ந ப்ரதாநம் காரணமிதி ஞாயதே ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் நான்யத் கிஞ்சந மிஷத் ஸ ஈஷத லோகாந்நு ஸ்ருஜா இதி ஸ இமால் லோகாநஸ்ருஜத தஸ்மாத் வா ஏதஸ் மாதாத்மந ஆகாஸஸ் ஸம் பூத ஸ காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்ஸிஜ் ஜநிதா ந சாதிப இத்யாதி ஸகல உப நிஷத்ஸூ ஸர்வேஸ்வர ஏவ ஹி ஜகத் காரணமிதி ப்ரதி பாத்யதே –11-

12-ஸ்ருதத்வாச் ச –ஸ்ருதமேவ ஹ்யஸ்யாம் உப நிஷதி -ஆத்மத ப்ராண –ஆத்மந ஆகாஸ இத்யாதவ் ஆத்மந ஏவ ஸர்வ உத்பத்தி -அத ப்ரதாநாத சேதநாதர்தாந்தர பூதஸ் ஸர்வஞ்ஞ-புருஷோத்தம ஏவ ஜகத் காரணம் ப்ரஹ்மேதி ஸ்திதம் —12-இதி ஈஷத் யதி கரணம் –5-

1-1-6-ஆனந்த மய அதி கரணம்
13-ஆனந்த மயோ அப்யாஸாத்
–யத்யபி ப்ரதாநாதர்தாந்தர பூதஸ்ய ப்ரத்யகாத்மநஸ் சேதநஸ்ய ஈஷண குண யோக ஸம்பவதி ததா அபி ப்ரத்யகாத்மா பத்தோ முக்தஸ் ச ந ஜகத் காரணம் -தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத -இத்யாராப்ய தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞாந மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இத்யஸ்ய ஆனந்த மயத்வ ப்ரதி பாதநாத் காரண தயா வ்யபதிஷ்டோ அயம் ஆனந்த மய ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத ஸர்வஞ்ஞ பரமாத்மைவ -குத அப்யாஸாத் ஆனந்த மயஸ்ய நிரதிசய தயா ஸிரஸ்காநந்த மயத்வேநாப்யாஸாத் தே யே சதம் ப்ரஜாபதேர் ஆனந்தா ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த யதோ வாஸோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ் சந இதி ஹி வேத்யத்வேநாயமாநந்த மயோ அநவதிக அதிசயோ அப் யஸ்யயதே –13-

14-விகார ஸப்தாந்நேதி சேந்ந ப்ராசுர்யாத் –ஸ வா ஏஷ புருஷோ அந்நர ஸமய இதி விகாரார்த மயப் ப்ரகரணாத் ஆனந்த மய இத்யஸ்யாபி விகாரார்தத்வம் ப்ரதீயதே -அதோ அயம் ஆனந்த மய நா விகார ரூப பரமாத்மா இதி சேந்ந அர்த விரோதாத் பிராசுர்யார்த ஏவாயம் மயடிதி விஞ்ஞாயதே தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம் பூத இதி ஹ்ய விகார ஆத்மா ப்ரக்ருத –ப்ரகரணே ச விகாரார்தத்வம் ப்ராண மய ஏவ பரித்யக்தம் –உக்தேந ந்யாயேந ஆனந்த ப்ராசுர்யாத் பரம புருஷா ஏவாயமாநந்த மய –14-

15-தத் தேது வ்யபதேஸாச் ச –ஏஷ ஹ்யேவா நந்தயாதி இதி ஜீவான் ப்ரத்யா நந்த ஹேதுரயமா நந்தமயோ வ்யபதிஸ்யதே –அதஸ் சாயம் ந ப்ரத்யகாத்மா –15-

16-மாந்த்ர வர்ணிகமேவ ச கீயதே–ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி மந்த்ர வர்ணோதிதமேவ தஸ்மாத் வா ஏதஸ்மாத் இத்யாதி நா ஆனந்த மய இதி கீயதே –அதஸ் ச ந ப்ரத்யகாத்மா –16-

17-நேதரோ அநுப பத்தே –இதர –ப்ரத்யகாத்மா மந்த்ர வர்ணோதித இதி நாசங்க நீயம் ஸோ அஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா இதி ப்ரத்யகாத்மநோ பத்தஸ்ய முக்தஸ்ய ச ஈத்ருஸ விபஸ்சித்த்வாநுப பத்தே –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இதி விசித்ர ஸ்திரத்ரஸ ரூப பஹு பவந ஸங்கல்ப ரூபமிதம் விபஸ்சித்த்வமிதி ஹ்யுத்தரத்ர வ்யஜ்யதே -முக்தஸ்ய ஸர்வஞ்ஞஸ்யாபி ஜகத் வ்யாபாராபாவாதீத்ருஸ –விபஸ்சித்த்வா ஸம்பவ –17–

இதஸ் ச
18-பேத வ்யபதேஸாச் ச
–தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞாந மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இதி ஹி விஞ்ஞாந மயாத் ப்ரத்யகாத்மநோ பேதே நாயமா நந்த மயோ வ்யபதிஸ்யதே –ந ச விஞ்ஞாந மய விஷய தயா உதாஹ்ருதஸ் லோகே விஞ்ஞானம் யஞ்ஞம் தநுதே இதி வ்யபதேஸாத் விஞ்ஞாந மயோ புத்தி மாத்ர மித்யா சங்க நீயம் -யதஸ் ஸூத்ரகார ஏவ இமாம் ஆசங்காம் பரி ஹரிஷ்யதி வ்யபதேசாச் ச க்ரியாயாம் ந சேந்நிர்தேஸ விபர்யயய இதி -விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே இதி யஜ்ஞாதி க்ரியாயாம் ஜீவஸ்ய கர்த்ருத்வ வ்யபதேஸாச் ச ஜீவ கர்தா –விஞ்ஞான சப்தேந ஜீவஸ்யா வ்யபதேஸே புத்தி மாத்ர வ்யபதேஸே ச விஞ்ஞாநேநேதி நிர்தேச விபர்யயஸ் ஸ்யாத் புத்தே கரணத்வாதிதி –18-

இதஸ் ச
19-காமாச்ச நாநுமாநாபேஷா
–ஸோ அகாமயத பஹுஸ்யாம் இதி ஸ்வ காமாதேவாஸ்ய ஜகத் ஸர்கஸ் ஸ்ரூயதே ப்ரத்யகாதமநோ ஹி யஸ்ய கஸ்ய சித் ஸர்கே ஆநு மாநாபேஷா த்ருஸ்யதே –அநு மாந காம்யம் ப்ரதாநம் ஆநு மாநம் –19-

இதஸ் ச
20- அஸ்மின் நஸ்ய ச தத் யோகம் ஸாஸ்தி-
– அஸ்மின் ஆனந்த மயே அஸ்ய ப்ரத்யகாத்மந ஆனந்த யோகம் ஸாஸ்தி ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி இதி அத ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத ஸர்வஞ்ஞ புருஷோத்தம ஜகத் காரண பூத ஆனந்த மய –20- இதி ஆனந்த மய அதி கரணம் –6-

1-1-7-அந்தராதிகரணம்
21-அந்தஸ் தத் தர்ம உபதேஸாத் –அயம்

ஜகத் காரண பூத விபஸ் சிதாநந்த மய கஸ்சிதுபசித புண்ய விஸேஷோ ஜீவ விஸேக்ஷ தேஹ யோகாத் விஞ்ஞாயதே நாயம் பரமாத்மேதி நா சங்க நீயம் -ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ இத்யாதவ் ஸ்ரூயமாண புருஷாகார பரமாத்மைவ –குத -தத் தர்ம உபதேஸாத் –ஸ ஏஷ ஸர்வேஷாம் லோகாநாமீஸ ஸர்வேஷாம் காமாநாம் தஸ்யோதிதி நாம ஸ ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உசித இதி நிருபாதிக ஸர்வ லோக ஸர்வ காமேஸத்வம் ஸ்வத ஏவா கர்மவஸ்யத்வம் ச ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ்ய ஹி பரம புருஷஸ் யைவ தர்ம வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் இத்யாதிஷு த்ரி குணாத் மக ப்ரக்ருத்யநந்தர் கத அப்ராக்ருதஸ்வ அசாதாரண ரூப வத்த்வம் ச ஞானாதி குணவத்த்ஸ்யைவ ஹி ஸ்ரூயதே
ஞானாதயோ அபி -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச இத்யாதிஷு ஸ்ருதத்வாத் தஸ்ய குணா விஞ்ஞா யந்தே –ததா ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் இத்யாதிஷு அப்ராக்ருத ஸ்வ அசாதாரண ரூப ஸ்ரவணாத் தத்வத்தா ச விஞ்ஞாயதே -ததே தத் வாக்யகாரஸ் சாஹ -ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே இதை ப்ராஞ்ஞஸ் ஸர்வ அந்தரஸ் ஸ்யாத் லோக காமேஸோபதேஸாத் ததோதயாத் பாப்மநாம் இத்யுக்த்வா-தத் ரூபஸ்ய கார்யத்வம் மாயா மயத்வம் வேதி விசார்ய ஸ்யாத்ரூபம் க்ருதகமநுக்ர ஹார்தம் தச்சேத ஸாமைஸ் வர்யாத் இதி நிரஸ நீயம் மதமுபந்யஸ்ய ரூபம் வாதீந்த்ரியம் அந்தக்கரண ப்ரத்யக்ஷ நிர்தேசாத் இதி –வ்யாக்யாதம் ச த்ரமிடா சார்யை ந வா மாயா மாத்ரம் அஞ்ஞஸைவ விஸ்வஸ்ருஜோ ரூபம் தத்து ந சஷுஷா க்ராஹ்யம் மநஸா த்வ கலுஷேண சாதனாந்தர வதா க்ருஹ்யதே –ந சஷுஷா க்ருஹ்யதே நாபி வாஸா மநஸா து விஸூத்தேந இதி ஸ்ருதே –ந ஹ்யரூபாயா தேவ தாயா ரூபமுபதிஸ்யதே –யதா பூதவாதி ஹி ஸாஸ்த்ரம் –யதா மாஹார ஜனம் வாஸ –வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் இதி ப்ரகாரணாந்தர நிர்தேசாத் இதி -ஸாஷிண இதி ஹிரண்மய இதி ரூப ஸாமான்யாச் சந்த்ர முகவத் இதி ச வாக்யம் –தச்ச வ்யாக்யாதம் தைரேவ –ந மயடத்ர விகார மாதாய ப்ரயுஜ்யதே அநாரப் யத்வாதாத்மந இத்யாதிநா –அத ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ் சார்தாந்தர பூதோ நிருபாதிக விபஸ்சித் அநவதிக அதிஸய அநந்தோ அப்ராக்ருத ஸ்வ அசாதாரண திவ்ய ரூப புருஷோத்தம பரம் ப்ரஹ்ம ஜகத் காரமும் இதி வேதாந்தை ப்ரதிபாத்யத இதி நிரவத்யம் –21-

22-பேத வ்யபதேஸாச் சாந்ய –ய ஆதித்யே திஷ்டன் நாதித்யா தந்தரோ யமாதித்யோ ந வேத யஸ்ய யாதித்யஸ் ஸரீரம் ய ஆதித்ய மந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர் யாம் யம்ருத இத்யதி தைவதம் யஸ் சஷுஷி திஷ்டன் ய ஆத்மநி திஷ்டன் இத்யத் யாத்மம் -யஸ் ஸர்வேஷு லோகேஷு திஷ்டன் நித்யதி லோகம் யஸ் ஸர்வேஷு பூதேஷு திஷ்டன் நித்யதி பூதம் யஸ் ஸர்வேஷு வேதேஷு திஷ்டன் நித்யதி வேதம் யஸ் ஸர்வேஷு யஜ்ஜேஷு திஷ்டன் நித்யதி யஜ்ஞம் இத் யந்தர்யாமி ப்ராஹ்மணே ஸூபாலோப நிஷதி ச ய பிருத்வீ மந்தரே ஸஞ்சரன் இத்யாரப்ய யோ அவ்யக்தம் அந்தரே ஸஞ்சரன் யோ அக்ஷரம் அந்தரே ஸஞ்சரன் யோ ம்ருத்யும் அந்தரே ஸஞ்சரன் யஸ்ய ம்ருத்யுஸ் ஸரீரம் யம் ம்ருத்யுர் ந வேத ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இதி ஸர்வே தேவ ஸர்வ லோக ஸர்வ பூத ஸர்வ வேத ஸர்வஞ்ஞ ஸர்வாத்மோ பரிவர்தமாந தயா தத் தச் சரீர தயா தத் தத் அந்தராத்ம தயா தத் ததவேத்ய தயா தத் தன் நியந்த்ருதயா சைப்யஸ் சர்வேப்ய பேத வ்யபதேஸாச் சாயம் அபஹத பாப்மா நாராயண ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ்சார் தாந்தர பூதோ நிகில ஜகதேக காரணமித்தி ஸித்தம் –22-

1-1-8-ஆகாஸ அதி கரணம்
1-1-9-ப்ராண அதி கரணம்
23-ஆகாஸஸ் தல்லிங்காத்
24-அத ஏவ ப்ராண

ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாஸம் ப்ரத்யஸ்தம் யந்தி ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராண மேவ அபி ஸம் விஸந்தி ப்ராண மேவ அப்யுஜ்ஜிஹதே இத்யாதவ் –ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸீத் இத்யாதிநா சாமாந்யேன நிர் திஷ்டஸ்ய ஜகத் காரணஸ்ய பூதாகாஸ ப்ராண ஸஹசாரி ஜீவ வாசி ஸப்தாப்யாம் விசேஷ நிர்ணய சங்காயாம் ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்தவந் நிர்திஸ்யமாநாத் ஜகத் காரணத்வாதி லிங்காத் பூதாகாஸ ஜீவாப்யாமர் தாந்தர பூத பரம புருஷ ஏவாத்ர ஆகாஸ ப்ராண ஸப்த நிர்திஷ்ட இதி நிஸ்ஸீயதே –தத் ப்ரஸித்திஸ் து –பஹு பவந ரூபேக்ஷண அநவதிக அதிசய அநந்த ஜீவ அநந்த ஹேதுத்வ விஞ்ஞாந மய விலக்ஷணத்வ நிகில புவந பயாபய ஹேதுத்வ -ஸர்வ லோக ஸர்வ காமேஸத்வ ஸர்வ பாப்மோதயா ப்ராக்ருத -ஸ்வ அசாதாரண ரூப விஸிஷ்டஸ்ய ரவிகர விகஸித புண்டரீக நயனஸ்ய ஸர்வஞ்ஞஸ்ய ஸத்ய ஸங்கல்பஸ்ய கரணாதிபாதி பஸ்ய பரம புருஷஸ்யைவ நிகில ஜகத் ஏக காரணத்வாதிதி ஸ ஏவ ஆகாஸ ப்ராண ஸப்தாப்யாம் ஜகத் காரணத்வேநாபி தீயதே இதி நிர்ணயோ யுக்த ஏவ —23-24-ஆகாஸாதி கரணம் -ப்ராண அதிகரணம் ச –8-9-

1-1-10-ஜ்யோதிர் அதி கரணம்
25-ஜ்யோதிஸ் சரணாபிதாநாத்
–அத யதத பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்த மேஷுத்தமேஷு லோகேஷு இதம் வா வ தத்யதி தமஸ்மிந் நந்த புருஷே ஜ்யோதி இத்யத்ர ஸர்வஸ்மாத் பரத்வேந நிர்திஸ்யமாந தயா ஸகல காரண பூதஜ்யோதிக்ஷ -கௌஷேய ஜ்யோதி ஷைக்யாபிதாநாத் ஸ்வ வாக்யே விரோதி லிங்கா தர்ச நாச்ச ப்ரஸித்தமேவ ஜ்யோதிர் ஜகத் காரணத்வேந ப்ரதிபாத்யத இதி ஸங்காயாம் யத்யபி ஸ்வ வாக்யே விரோதி லிங்கம் ந த்ருஸ்யதே –ததா அபி பூர்வஸ்மின் வாக்யே பாதோ அஸ்ய விச்வா பூதாநி த்ரிபதாஸ்யாம்ருதம் திவி இதி ப்ரதிபாதி தஸ்ய ஸர்வ பூத சரணஸ்ய பரம புருஷஸ்யைவ த்யு சம்பந்தி தயா அத்ராபி ப்ரத்யபிஜ் ஞாநாத் ஸ ஏவ ஜ்யோதிஸ் சப்தேந ஸர்வஸ்மாத் பரத்வேந ஸகல காரண தயா அபீதீ யதே -அஸ்ய ச கௌஷேய ஜ்யோதிஷைக்யாபிதாநம் பலாயோபதிஸ் யத இதி ந கஸ்ஸித் விரோத –அகில ஜகதேக காரண பூத பரம புருஷோ அப்ராக்ருத ஸ்வ அசாதாரண திவ்யோ வர்ணோ திவ்ய ரூபஸ் தமஸ பரஸ்தாத் வர்தத இதி தஸ்யைவ நிரதிசய தீப்தி யோகாத் ஜ்யோதிஸ் ஸப்தாபிதேயத்வம் விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்த மேஷுத்தமேஷு லோகேஷு வாஸஸ் ச யுஜ்யதே –25-

26-சந்தோபிதா நாந்தேதி சேந்ந ததா சேதோ அர்பண நிகமாத் ததா ஹி தர்சனம் –பூர்வத்ர காயத்ரீ வா இதம் ஸர்வம் இதி காயத்ர் யாக்யச் சாந்த பிரஸ்துத மிதி நாத்ர பரம புருஷாபிதாநமிதி சேத் நைதத் பரம புருஷஸ் யைவ காயத்ரீ ஸாத்ருஸ்யஸ்யாநு ஸந்தாநோபதேஸத்வாத் தஸ்ய சந்தோ மாத்ரஸ்ய ஸர்வ பூதாத்மகத்வாநுப பத்தேரேவேதி நிகம்யதே –அந்யத்ராபி ஹ்யன்யஸ்ய சந்தஸ் சாத்ருஸ்யாத் சந்தோ நிர்தேஸா த்ருஸ்யதே தே வா ஏதே பஞ்சான்யே இத்யாரப்ய சைஷா விராட் இத்யாதவ் –26-

27-பூதாதி பாத வ்யபதேஸாப பத்தேஸ் சைவம் –பூத ப்ருதிவீ சரீர ஹ்ருதயைஸ் சதுஷ்பதேதி வ்யபதேஸஸ் ச பரம புருஷ காயத்ரீ ஸப்த நிர் திஷ்டே ஹ்யுப பத்யத இதி பூர்வோக்த ப்ரகார ஏவ சமஞ்ஜஸா–27-

28-உபதேஸ பேதான்நேதி சேந்நோபயஸ்மிந் நப்ய விரோதாத் –பூர்வத்ர த்ரி பாதஸ்யாம்ருதம் திவி இதி பரம புருஷோ வ்யபதிஸ் யதே –அத்ர அத யதத பரோ திவ இதி பஞ்சம்யா நிர் திஷ்ட த்யு சம்பந்தி ஜ்யோதிரிதி ந ப்ரத்யபிஜ்ஜேதி சேத் நைதத் உபயஸ்மிந் நபி வ்யபதேஸே விரோதா பாவாத் யதா வ்ருஷாக்ரே ஸ்யேந வ்ருஷாக்ராத் பரதஸ் ஸ்யேந இதி வ்யபதேஸ –அத்ர திவ பரத்வமேவ உபயத்ர விவஷித மித்யர்த —28-இதி ஜ்யோதிர் அதி கரணம் –10-

1-1-11-இந்த்ர ப்ராண அதி கரணம்-29-ப்ராணஸ் ததாநுகமாத் –ஆத்ம நாம் ஹித தம ரூப மோக்ஷ சாதநோபாஸந கர்ம தயா ப்ரஞ்ஞாத ஜீவ பாவஸ்ய இந்த்ரஸ்ய ப்ராணோ அஸ்மி ப்ரஞ்ஞாத்மா தம் மாமா யுரம்ருதமித் யுபாஸ்ஸ்வ இதி விதாநாத் ஸ ஏவ ஜகத் காரணம் -காரணோபாஸநம் ஹி மோக்ஷ ஸாதனம் –தஸ்ய தாவமேவ சிரம் யாவன்ன வி மோஷ்யே அத ஸம்பத்ஸ்யே இதி ஸ்ருதேரிதி நா சங்க நீயம் –ப்ராண ஸப்த ஸமாநாதி கரணேந்த்ர ஸப்த நிர் திஷ்டோ ஜீவா தர் தாந்தர பூத யுக்த லக்ஷண பரமாத்மைவ–குத ததா அநு கமாத் -பரமாத்ம அசாதாரணாநந்தாஜராம்ருதாதிஷ் வஸ்ய இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ்யாநுகமோ ஹி த்ருஸ்யதே ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்ம அஜரோ அம்ருத இதி –29-

30-ந வக்துராத்மோப தேஸாதிதி சேதத் யாத்ம ஸம்பந்த பூமா ஹ்யஸ்மிந் –உபக்ரமே ஹி மாமேவ விஜாநீஹி இதி த்வாஷ்ட்ரவதாதிநா பிரஜ்ஞாத ஜீவ பாவஸ்ய இந்த்ரஸ்யோபதேஸாத் உப ஸம்ஹாரஸ் ததநு குணோ வர்ண நீய இதி சேத் நைதத் அத்யாத்ம ஸம்பந்த பூமா ஹ்யஸ்மின் –அத்யாத்மம் -பரமாத்ம தர்ம பரமாத்ம தர்ம ஸம்பந்த -பஹு த்வமஸ் மிந்த்ர ஸப்தாபிதேயே
வாக்யோபக்ரம ப்ரப்ருத்யோப ஸம் ஹாராத்த்ருஸ்யதே –யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே இதி ஹித தமோபாஸநம் ப்ராரப்தம் –தச்ச ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி இத்யாதி -நா ஸர்வஸ்ய காரயித்ருத்வம் –ஏவமேவைதா பூத மாத்ரா இத்யாரப்ய பரஜ்ஞா மாத்ரா ப்ராணேஷ்வர்பிதா இதி ஸர்வாதாரத்வம் ததா ஆனந்தாதயஸ் ச ஏஷ லோகாதிபதி இத்யாதிநா சர்வேஸ்வரத்வம் ச –30-

31-ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா தூபதேஸே வாம தேவவத் –நாம ரூப வ்யாகரணாதி சாஸ்த்ராத் ஸர்வ ஸப்தை பரமாத்மைவாபி தீயத இதி த்ருஷ்ட்யா தஜ் ஞாபநாயாய மிந்த்ரா சப்தேந பரமாதமோபதேஸ –ஸாஸ்த்ரஸ்தா ஹி வாமதேவாதய –ததைவ வதந்தி –தத்தை தத் பஸ்யந் ருஷிர் வாமதேவ பிரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர் யஸ் ச இதி –31-

32-ஜீவ முக்ய ப்ராண லிங்காந்நேதி சே ந்நோபாஸா த்ரை வித்யாதாஸ்ரிதத்வாதிஹ தத் யோகாத் த்ரி ஷீர் ஷாணம் த்வாஷ்ட்ரமஹநம் யாவத் தயஸ்மின் சரீரே ப்ராணோ வஸதி தாவதாயு இத்யாதி ஜீவ லிங்கம் முக்ய ப்ராண லிங்கம் ஸாஸ்மின் த்ருஸ்யதே இதி நைவமிதி சேந்ந –உபாஸாத் த்ரை வித்யாத் ஹேதோ ஜீவ சப்தேந ப்ராண சப்தேந ச பரமாத்மநோ அபி தாநம் –அந்யத்ராபி பரமாத்மந ஸ்வரூபேணோபாஸநம் போக்த்ரு சரீர கத்வேந போக்ய போகோபகரண சரீர கத்வேந இதி த்ரி விதம் பரமாத்மோபாஸந மாஸ்ரிதம் –யதா ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி ஸ்வரூபேண -தத் அநு ப்ரவிஸ்ய ஸச் சத்யச் சா பவத் இத்யாதி –ஸத்யம் சாந்ரு தஞ்ச சத்யமபவத் இதி போக்த்ரு சரீரகத்வேந போக்ய போக உபகரண சரீரகத்வேநச இஹாபி தத் ஸம்பவாதேவமுபதேஸ -ஜந்மாத யஸ்ய யத இத்யாதிஷு ஸத் ப்ரஹ் மாத்மேதி ஸாமாந்ய ஸப்தைர் ஹி ஜகத் காரணம் ப்ரக்ருதி புருஷாப்யா மர்தாந்தர பூதமிதி ஸாதிதம் ஜ்யோதிஸ் சரணாபிதாநாத் இத்யஸ்மின் ஸூத்ரே புருஷ ஸூக்தோதிதோ மஹா புருஷோ ஜகத் காரணமிதி விசேஷதோ நீர்ணீதம்–ஸ ஏவ பரஜ்ஞாத ஜீவ வாசிபிரிந்த்ராதி ஸப்தைரபி க்வசித் க்வசித் ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா தத் தச் சரீர கதயா சோபாஸ்யத்வாயோபதிஸ் யத இதி ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாதூப தேஸோ வாம தேவவத் இதி உபாஸா த்ரை வித்யாத் இதி ஸாதிதம் —32- இதி இந்த்ர ப்ராண அதி கரணம் –11-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜ ஸூப்ரபாதம் -ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள்

February 29, 2024

ஶ்ரீவாதி³பீ⁴கரகு³ருபி⁴ரநுக்³ரு’ஹீதம்
॥ ஶ்ரீ: ॥
॥ ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ॥
॥ ஶ்ரீவாதி³பீ⁴கரகு³ரவே நம: ॥

வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்
வத்ஸாந் வவாய மநவத்ய குணைரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்–ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள்   தனியன் :

திருநக்ஷத்ரம்: ஆடி – பூசம்

அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம் (திருத்தண்கா, தீபப்ரகாசர் சந்நிதி அருகே)

ஆசார்யன்: மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: தமது திருக் குமாரர்களான அண்ணனப்பா, அனந்தாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

அருளிச்செயல்கள்:

  • ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீமத் பாகவதம், ஸுபாலோபநிஷத் ஆகியவைகளுக்கு குறுகிய வ்யாக்யானங்கள்.
  • பராசர பட்டரின் அஷ்ட ஸ்லோகீ வ்யாக்யானம்
  • மாமுனிகளின் நியமனப்படி : ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம், ஸ்தோத்ரம், ப்ரபத்தி, மங்களாசாசனம் –
  • வரவரமுனி சதகம் (மாமுனிகளை மேன்மைப்படுத்தி 100 ஸம்ஸ்க்ருத ச்லோகங்கள் )
  • வரவரமுனி மங்களம்
  • வரவரமுனி ஸுப்ரபாதம் –
  • மாமுனிகளின் வாழி திருநாமமாகிய “செய்ய தாமரைத் தாளினை வாழியே…” (அருளிச்செயல் கோஷ்டியில் இறுதியில் சேவிக்கப்படும்)
  • மற்றும் பல ஸ்லோகங்கங்கள் — ஸ்தோத்ர க்ரந்தங்கள்.

முடும்பை நம்பி திருவம்சத்தில் “ஹஸ்திகிரிநாதர்” என்னும் திருநாமம் கொண்டு அவதரித்தார். இவரை அண்ணா என்றும் அழைப்பார்கள். ப்ரதிவாதி பயங்கரர் என்றும் பிரபலமாக அறியப்பட்டார்.

எப்படி கூரத்தாழ்வான் எம்பெருமானாருக்கு முற்பட்டு அவதாரம் செய்திருந்தாலும் எம்பெருமானாருடைய ப்ரியமான சிஷ்யரானாரோ, அதேபோல் அண்ணாவும் மாமுனிகளுக்கு முற்பட்டு அவதாரம் பண்ணியிருந்தாலும் மாமுனிகளுக்கு இவர் ப்ரியமான சிஷ்யரானார். இவர் மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களில் (மாமுனிகளின் எட்டு முக்கிய சிஷ்யர்கள்) ஒருவருமாவார்.
——————–

ஜய ஜய யதி ஸார்வபௌ⁴ம அமல ஸ்வாந்த ! துப்⁴யம் நம:
ஜய ஜய ஜநி ஸிந்து⁴மக்³நாத்மஸந்தாரகக்³ராமணீ: ! ।
ஜய ஜய ப⁴ஜநீய ! கூரேஶ முக்²யை: ப்ரஸீத³ ப்ரபோ⁴ !
ஜய ஜய விது³ஷாம் நிதே⁴ ! ஜாக்³ரு’ஹி ஶ்ரீநிதே⁴ ! ஜாக்³ரு’ஹி ॥ 1॥

பூர்ணார்ய பூர்ண கருணா பரிலப்³த⁴ போ³த⁴ !
வைராக்³ய ப⁴க்தி முக² தி³வ்ய கு³ணாம்ரு’தாப்³தே⁴ ! ।
ஶ்ரீ யாமுநார்ய பத³பங்கஜ ராஜ ஹம்ஸ !
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 2॥

ஆநேதுமத்³ய வரத³ஸ்ய க³ஜாத்³ரி ப⁴ர்து:
பாநீய மச்ச²மதிஶீதம் அகா³த⁴ கூபாத் ।
த்⁴வாந்தம் நிரஸ்தம் அருணஸ்ய கரைஸ் ஸமந்தாத்
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 3॥

ஶ்ரீரங்க³ராஜ பத³பங்கஜயோர் அஶேஷ
கைங்கர்யம் ஆகலயிதும் ஸகுதூஹலஸ் த்வம் ।
உத்திஷ்ட² நித்ய க்ரு’திம் அப் யகி²லாம் ச கர்தும்
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 4

த்வாம் வீக்ஷிதும் ஸமுபயாதி வ்ரு’ஷாசலேந்த்³ர:
த்வத் ஸம் ப்ரக்ல்ரு’ப்த வர ஶங்க²ரதா²ங்க³பாணி: ।
ஸம் யோஜிதாம் உரஸி மாம் ப⁴வ தைவ பி³ப்⁴ரத்
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 5॥

ஶ்ரீமத் குரங்க³பரிபூர்ண விபு⁴ஸ்த்வது³க்தம்
ஶ்ரீபா⁴ஷ்ய ஶாஸ்த்ரமமலம் த்வயி ப⁴க்தி யுக்த: ।
ஶ்ரோதும் ஸமிச்ச²தி யதீந்த்³ர ! ஸிதோர்த்⁴வ புண்ட்³ர:
தம் போ³த⁴யார்த²மகி²லம் தவ ஸுப்ரபா⁴தம் ॥ 6॥

ஶ்ரீபா⁴ஷ்யமாலிகி²துமாத்த விஶாலலேக்²ய:
ஶ்ரீவத்ஸ சிஹ்ந கு³ருராநத தி³வ்ய கா³த்ர: ।
வேதா³ந்த ஸூத்ரமபி வக்தும் அமுஷ்ய ஸர்வம்
உத்திஷ்ட² லக்ஷ்மண முநே ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 7॥

ஶ்ரீமாந் ஸ பூர்ண வடுராத³ரத: ப்ரக்³ரு’ஹ்ய
ஶ்ரீபாது³காம் யதிபதே ! பத³யோ: ப்ரயோக்தும் ।
த்³வாரி ஸ்தி²திம் விதநுதே ப்ரணதார்தி ஹாரிந் !
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 8॥

காஷாய வஸ்த்ர கடி ஸூத்ர கமண்ட³லூம்ஶ்ச
ஶ்ரீத³ந்தகாஷ்ட²மபி தே³ஶிக ஸார்வபௌ⁴மா: ।
பாணௌ நிதா⁴ய நிவஸந்தி விஶுத்³த⁴கா³த்ரா:
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 9॥

த்வாம் போ³த⁴யந்தி கு³ரவ: ப்ரதி²தா மஹாந்த:
ஶ்ரீவைஷ்ணவாஶ்ச யமிநஸ்தவ பாத³ப⁴க்தா: ।
ஏகாந்திநஶ்ச விமலாஸ்த்வத³நந்யபா⁴வா:
தாந் பாலயாத்³ய யதிஶேக²ர ! ஸுப்ரபா⁴தம் ॥ 10॥

ப்³ராஹ்மே ப்ரபு³த்⁴ய விபு³தா:⁴ ஸ்வ கு³ரூந் ப்ரணம்ய
ராமாநுஜாய நம இத்யஸக்ரு’த் ப்³ருவாணா: ।
அஷ்டாக்ஷரம் ஸசரமம் த்³வயமுச்சரந்தி
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 11॥

ப்ராத: பட²ந்தி பரம த்³ரவிட³ப்ரபந்ந
கா³யத்ரி மந்த்ர ஶதமஷ்ட ஶிரஸ்கமச்ச²ம் ।
ஶ்ரீவைஷ்ணவாஸ் தவ பதா³ப்³ஜ நிவிஷ்டபா⁴வா:
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 12॥

ஆராத⁴நம் ரசயிதும் கமலாஸக²ஸ்ய
ஶ்ரீயாத³வாசலபதே: விவிதோ⁴பசாரை: ।
பாதும் ச த்³ரு’ஷ்டி கமலேந நதாந ஶேஷாந்
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 13॥

ஸஸேவ்ய ! ஸப்த ஶத ஸம்யமி ஸார்வபௌ⁴மை:
ஸத்³தே³ஶிகை: ஸகல ஶாஸ்த்ர விதா³ம் வரிஷ்டை:² ।
ஏகாந்திபி:⁴ பரம பா⁴க³வதைர் நிஷேவ்ய !
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 14॥

க³த்³ய த்ரயம் நிக³ம ஶேக²ரதீ³பஸாரௌ
வேதா³ர்த²ஸங்க்³ரஹமபி ப்ரதி²தம் ச நித்யம் ।
கீ³தார்த²பா⁴ஷ்யமபி தே³ஶிக புங்க³வாநாம்
தா³தும் ப்ரஸீத³ யதி ஶேக²ர ! ஸுப்ரபா⁴தம் ॥ 15

பாதா³ம் பு³ஜம் யதிபதே ! ஶரணம் விஹர்தும்
ஸங்க³த்ய ஸம் ஸரண வாரி விலங்க⁴நோத்கா: ।
ஆயாந்தி ஹஸ்த கமலாபி⁴த்⁴ரு’தோபசாரா:
தாந் பாஹி கருணயா தவ ஸுப்ரபா⁴தம் ॥ 16॥

ஸ்நாதும் கவேர தநயா ஸலிலேஷு ஶிஷ்யை:
ஆசார்ய பூருஷ வரை: யதிபி⁴ர் விஶுத்³தை:⁴ ।
ஶ்ரீவைஷ்ணவைஶ்ச ஸஹ ஸேவ்ய ! மஹாநுபா⁴வை:
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 17॥

ராமாநுஜார்ய ! ரமணீயகு³ணாபி⁴ராம !
ராகா³தி³ தூ³ரக³ கு³ரோ ! கு³ரு ஸார்வபௌ⁴ம ! ।
ஸத்த்வ ப்ரதா⁴ந ! ஶரணாக³த வத்ஸல !
த்வத் பாதா³ப்³ஜ யோரிஹ பரத்ர ச கிங்கர: ஸ்யாம் ॥ 18

இதி ஶ்ரீவாதி³பீ⁴கரகு³ருபி⁴ரநுக்³ரு’ஹீதம் ஶ்ரீராமாநுஜஸுப்ரபா⁴தம் ।
॥ ஶ்ரீவாதி³பீ⁴கரகு³ரவே நம: ॥

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதாந்த தீபம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -சதுர்த பாதம்

February 26, 2024

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

1-4-1-ஆநுமாநிக அதிகரணம்
110-ஆநுமாநிக மப்யே கேஷாமிதி சேந்ந சரீர ரூபகவிந்யஸ்த க்ருஹீதேர் தர்சயதி ச -கடவல்லீஷு இந்த்ரியேப்யஸ் பரா ஹ்யர்தா அர்த்தேப் யஸ்ச பரம் மனஸ் –மநஸஸ் ச பரா புத்திர் புத்தேர் ஆத்மா மஹான் பர மஹதஸ் பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர -புருஷான்ன பரம் கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதி -இத்யத்ர
கிம் சாங்க்ய யுக்தம் ப்ரதாநம் அவ்யக்த சப்தாபிதேயமுத நேதி ஸம்சய -ப்ரதாநம் இதி பூர்வ பக்ஷ -மஹத பரம் இத்யாதி தத் தந்தர ப்ரக்ரியா ப்ரத்யபிஜ் ஞாநாத் புருஷாந்ந பரம் கிஞ்சித் இதி பஞ்ச விம்சக புருஷ அதிரிக்த தத்த்வ நிஷேதாச் ச –ராத்தாந்தஸ்து
ந அவ்யக்த ஸப்தேந ப்ரதாநம் இஹ க்ருஹ்யதே -பூர்வத்ர ஆத்மாநம் ரதிநம் வித்தி சரீரம் ரதமேவ ச இத்யாதி நா உபாஸநா நிர்வ்ருத்தயே வஸ்யேந்த்ரியத்வா பாதாநாய யே ஆத்ம சரீர புத்தி மந -இந்திரிய விஷயா -ரதி ரத சாரதி ப்ரக்ரஹ ஹய கோசரத்வேந ரூபிதா தேஷு வஸீ கார்யத்வே பரா -இந்த்ரியேப்ய பரா இத்யாதி நோச்யந்தே -தத்ர சேந்த்ரி யாதய ஸ்வ ஸப்தேநைவ க்ருஹ் யந்தே ரதத்வேந ரூபிதம் ஸரீரம் இஹ அவ்யக்த -பரிணாமத்வேந அவ்யக்த ஸப்தேந க்ருஹ்யத இதி நேஹ தத்தந்த்ர ப்ரக்ரியா ப்ரத்யபிஜ் ஞாந கந்த அவ்யக்தாத் புருஷ பர இதி ச ந பஞ்ச விம்சக –அபி து ப்ராப்ய பரமாத் மைவ அந்தர்யாமி தயோபாஸநஸ் யாப் யுபாய பூத இதி ஸ இஹ வஸீ கார்ய காஷ்டாத்வேந புருஷாந்ந பரம் கிஞ்சித் இத் யுக்த
ஸூத்ரார்தஸ்து – ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் -ஆநுமாநிகம் ப்ரதாநம் ஜகத் காரணத்வேந மஹத-பரம் அவ்யக்தம் இத்யாம் நாயதே இதி சேத் தந்ந அவ்யக்த ஸப்தேந சாரீராக்ய ரூபகவிந்யஸ் தஸ்ய க்ருஹீதே பூர்வத் ராத்மாதிஷு ரதி ரதாதி ரூபக விந்யஸ்தேஷு ரதத்வேந ரூபி தஸ்ய சரீரஸ்யாத்ராவ்யக்த ஸப்தேந க்ருஹீதேரித் யர்த -அதோ வஸீ கார்யத்வே பரா இஹ உச்யந்தே –தர்சயதி சைநமர்தம் வாக்ய சேஷ இந்திரியாதீநாம் நியமன பிரகாரம் ப்ரதிபாதயன் யச்சேத் வாங்மநஸீ இத்யாதி –1-

கதம் அவ்யக்த ஸப் தஸ்ய சரீரம் வாஸ்யம் பவதீத்யா சங்க்யாஹ
111–ஸூஷ்மம் து ததர்ஹாத்வாத்
–து ஸப்தோ அவதாரணே –ஸூஷ்மம் அவ்யக்தம் ஏவ அவஸ்தாந்தரா பன்னம் சரீரம் பவதி தத் அவஸ்தஸ் யைவ கார்யார் ஹாத் வாத் -யதி ரூபக விந்யஸ்தா ஆத்மாதய ஏவ வஸீ கார்யத்வே பரா -இந்த்ரியேப்ய பரா இத்யாதிநா க்ருஹ் யந்தே –2-

தர்ஹி அவ்யக்தாத் புருஷ பர புருஷாந்ந பரம் கிஞ்சித் இதி புருஷ க்ரஹணம் கிமர்த்த மித்யத ஆஹ
112–தத் அதீநத்வ அதர்தவத்
-அந்தர்யாமி ரூபேண அவஸ்தித புருஷ அதீநத்வாத் ஆத்மாதிகம் ஸர்வம் ரதி ரதத்வாதிநா ரூபிதம் அர்த்தவத் –ப்ரயோஜநவத் பவதி –அத உபாஸந நிர் வ்ருத்தவ் வஸீ கார்ய காஷ்டா பரம புருஷ இதி ததர்தம் இஹ ரூபக விந்யஸ்தேஷு பரிக்ருஹ்யமாணேஷு பரஸ்யாபி புருஷஸ்ய க்ரஹணம் –உபாஸன நிர்வ்ருத்த யுபாய காஷ்டா புருஷ ப்ராப்யஸ் சேதி -புருஷாந்ந பரம் கிஞ்சித் சா காஷ்டா ஸா பரா கதி இத்யுக்தம் –பாஷ்ய ப்ரக்ரியயா வா நேய மிதம் ஸூத்ரம் –பரம புருஷ சரீர தயா தத் அதீனத்வாத் பூத ஸூஷ்மம் அவ்யாக்ருத மர்தவதிதி ததிஹாவ்யக்த ஸப்தேந க்ருஹ்யதே நா ப்ரஹ்மாத்மகம் ஸ்வ நிஷ்டம் தந்த்ர ஸித்தம் இதி –3-

113–ஜ்ஜேயத்வா வசநாச் ச –யதி தந்த்ர ஸித்த ப்ரக்ரியே ஹாபி ப்ரதோ ததா அவ்யக்தாஸ் யாபி ஜ்ஜேயத்வம் வக்தவ்யம் -வ்யக்த அவ்யக்தஜ்ஞ விஞ்ஞாநாத் இதி ஹி தத் ப்ரக்ரியா -ந ஹ்யவ்யக்த மிஹ ஜ்ஜேயத்வேநோக்தம் அதஸ் சாத்ர ந தந்த்ர ப்ரக்ரியாகந்த –4-

114-வததீதி சேந் ந ப்ராஜ்ஜோ ஹி ப்ரகரணாத் –அஸப்தம் அஸ்பர்ஸம் இத் யுபக்ரம்ய மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யு முகாத் ப்ரமுச்யத இதி ப்ரதாநஸ்ய ஜ்ஜேயத்வம் அந்தர மேவ வததீயம் ஸ்ருதிரிதி சேத் தந்ந அஸப்தம் அஸ்பர்சம் இத்யாதி நா ப்ராஞ்ஞ–பரம புருஷ ஏவ ஹ்யத் ரோச்யதே ஸோ அத்வேந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோ ஆத்மா ந ப்ரகாஸதே –இதி ப்ராஜ்ஞஸ் யைவ ப்ராக்ருதத்வாத் –5-

115-த்ரயாணாமேவ சைவமுப ந்யாஸ ப்ரஸ்நஸ் ச –அஸ்மின் ப்ரகரணே யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே–இத்யாரப்யா ஸமாப்தே பரம புருஷ தத் உபாஸன உபாஸகா நாம் த்ரயாணாம் ஏவைவம் ஜ்ஜே யத்வேந உபந்யாஸ ப்ரஸ் நஸ் ச த்ருஸ்யதே ந ப்ரதானாதேஸ் தாந்த்ரிகஸ்யாபி –அதஸ் ச ந ப்ரதான மிஹ ஜ்ஜேயத்வேந யுக்தம் –6-

116–மஹத் வச் ச –யதா புத்தே ராத்மா மஹாந் பர இத்யாத்ம ஸப்த ஸாமாநாதி கரண்யாந் மஹச் சப்தேந ந தாந்த்ரிகம் மஹத் தத்த்வம் க்ருஹ்யதே ஏவம் அவ்யக்த சப்தேநாபி ந தாந்த்ரிகம் ப்ரதாநம் —7-இதி ஆநுமாநிக அதி கரணம் –1-

1-4-2-சமஸ அதி கரணம்
117-சமஸவத -விசேஷாத்
–ஸ்வேதாஸ் வதரே அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீ ப்ரஜாஸ் ஸ்ருஜமாநாம் ஸ ரூபா –அஜோ ஹ்யேகோ ஜூக்ஷமாணோ அநுஸேதே ஜஹாத்யேநாம் புக்த போகாமஜோ அந்ய இத்யத்ர கிமஜா சப்தேந தந்த்ர சித்தா ப்ரக்ருதிரபி தீயதே உத ப்ரஹமாத் மிகேதி ஸம்சய –
தந்த்ர ஸித்தேதி பூர்வ பக்ஷ அஜாமேகா மித்யஸ்யா அகார்யத்வ ப்ரதீதே பஹ்வீநாம் ப்ரஜாநாம் ஸ்வா தந்தர்யேண காரணத்வ ஸ்ரவணாச் ச –ராத்தாந்தஸ்து -ந தந்த்ர ஸித்தாயா ப்ரக்ருதே ரத்ர க்ரஹணம் ஜனன விரஹஸ்ரவண மாத்ரேண தந்த்ர சித்தாயா ப்ராக்ருதே ப்ரதீதி நியமாபாவாத் -ந ஹி யவ்கிகாநாம் ஸப்தாநாம் அர்த ப்ரகரணாதிபிர் விசேஷ்யவ்யவஸ்தாபகைர் விநா விஸேஷே வ்ருத்தி நியம ஸம்பவ ந சாஸ்யாஸ் ஸ்வாதந்தர்யேண ஸ்ருஷ்டி ஹேதுத்வமிஹ ப்ரதீதிம் அபி து ஸ்ருஷ்டி ஹேதுத்வ மாத்ரம் தத் ப்ரஹமாத்மிகாயாஸ் ச ந விருத்தம் -அத்ர து ப்ரஹ்மாத் மிகாய ஏவ ஸாகாந்தர ஸித்தயா ஏதத் ஸ ரூப மந்த்ரோதிதயா ப்ரத்யபிஜ் ஞாநாத் ஸைவேதி நிஸ்ஸீயதே –
ஸூத்ரார்தஸ்து –நாயமஜா ஸப்தஸ் தந்த்ர ஸித்த ப்ரதான விஷய –குத –சமஸவத விசேஷாத் யதா அர்வாக்பிலஸ் சமஸ இதி மந்த்ரே சமஸ சாதனத்வ யோகேந ப்ரவ்ருத்தஸ்ய சமஸ சப்தஸ்ய சிரஸி ப்ரவ்ருத்தவ் –யதேதம் தச்சிர ஏஷ ஹ்யர்வாக்பிலஸ் சமஸ இதி வாக்ய சேஷ விஸேஷோ த்ருஸ்யதே ததா அஜாமேகாமித்யஜாஸப்தஸ்ய தந்த்ர ஸித்த ப்ரதாநே வ்ருத்தவ் விஸேஷா பாவான்ந தத் க்ரஹணம் ந்யாய்யம் –8-

அஸ்தி து ப்ரஹ்மாத் மிகாயா ஏவ க்ரஹணே விஸேக்ஷ இத்யாஹ

118-ஜ்யோதி ரூப க்ரமா து ததா ஹ்ய தீயதே ஏகே –ஜ்யோதி –ப்ரஹ்ம யஸ்யா உபக்ரம –காரணம் ஸா ஜ்யோதி ரூப க்ரமா –து சப்தோ அவதாரணே –ப்ரஹ்ம காரணிகைவைஷா –அஜா –ததா ஹ்ய தீயத ஏகே யதா ரூபோ அயம் அஜாயா ப்ரதி பாதகோ மந்த்ர ததா ரூபமேவ மந்த்ரம் ப்ரஹ்மாத் மிகாயா தஸ்யா ப்ரதிபாதக மதீயத ஏகே ஸாகிந –அணோர் அணீயான் மஹதோ மஹீயான் இத்யாதி நா ப்ரஹ்ம ப்ரதிபாத்ய ஸப்த ப்ராணா -ப்ரபவந்தி தஸ்மாத் சப்தார் சிக்ஷஸ் ஸமித ஸப்த ஜிஹ்வா -ஸப்த இமே லோகா பேஷு சரந்தி ப்ராணா குஹாஸ யாந்தி ஹிதாஸ் ஸப்த ஸப்த –அதஸ் ஸ முத்ரா கிர யஸ்ச ஸர்வ இத்யாதி நா ப்ரஹ்மண உத் பன்னத்வேந ப்ரஹ்மாத்ம கதயா ஸர்வ அநுசந்தான விதாந ஸமயே -அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸ ரூபாம் இதி ப்ரதி பாத்யமாநா ப்ரஹ்மாத்மிகை வேதி தத் ப்ரத்யபிஜ் ஞாநாதி ஹாப்யஜா ப்ரஹ்மாத் மிகை வேதி நிஸ்ஸீயதே –9–

அஜாத்வம் ஜ்சோதி ரூப க்ரமாத்வம் ச கதமுப பத்யதே இத்யத ஆஹ
119-கல்ப நோபதேஸாச் ச மத்வாதி வத விரோத
–கல்பநா –ஸ்ருஷ்டி ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வமகல் பயத் இத்யாதி தர்சநாத் -அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் இதி ஹி ஸ்ருஷ்டிரி ஹோபதிஸ்யதே –ப்ரலய வேலாயா மேஷா ப்ரக்ருதி பரம புருஷ ஆஸ்ரயா காரண அவஸ்தாதி ஸூஷ்மாவயவா ஸக்தி ரூபேண அதிஷ்டதே தத் அவஸ்தாபி பிராயேண அஸ்யா அஜாத்வம் -ஸ்ருஷ்டி வேலாயாம் புநஸ் தச் சரீராத் ப்ரஹ்மண ஸ்தூல அவஸ்தா ஜாயதே தத் அவஸ்தா ஜ்யோதி ரூப க்ரமேதி ந கஸ்ஸித் விரோத மத்வாதிவத் –யதா ஆதித்யஸ் யைகஸ் யைவ கார்ய அவஸ்தாயாம் -அசவ் வா ஆதித்யோ தேவமது இதி வஸ்வாதி போக்ய ரஸா தாரதயா மதுத்வம் தஸ்யைவ –அத தத ஊர்த்வம் உதேத்ய நைவோதேதர நாஸ்த மேதைகல ஏவ மத்யே ஸ்தாதா இத்யாதி நா நாம ரூப ப்ரஹாணேந காரண அவஸ்தாயாம் ஸூஷ்மஸ் யைகஸ் யைவ அவஸ்தா நாம் ந விருத்யதே தத் வத் –10-இதி சமஸ அதி கரணம் –2-

1-4-3-ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதி கரணம்
120-ந ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதபி நாநாபாவா ததிரேகாச் ச
–வாஜஸ நேயகே –யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித –தமேவ மந்ய ஆத்மாநம் வித்வான் ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இத்யத்ர கிம் சாங்க்யோக்தாநி பஞ்ச விம்சதி தத்தவாநி ப்ரதிபாத்யந்தே உத நேதி ஸம்சய –தாந்யே வேதி பூர்வ பக்ஷ
பஞ்ச பஞ்ச ஐநா இதி ஹி பஞ்ச ஸங்க்யாவிஸிஷ்டா -பஞ்ச ஐநா பஞ்ச விம்சதிஸ் ஸம்பத் யந்தே -கதம் -பஞ்ச ஐநா இதி ஸமாஹார விஷயோ அயம் ஸமாஸ பஞ்ச பூல்ய இதிவத் –பஞ்சபிர் ஜனைரா ரப்தஸ் ஸமூஹ -பஞ்ச ஜன பஞ்ச ஜனீத்யர்த லிங்க வ்யத்யய சாந்தஸ பஞ்ச ஐநா இதி பஹு வஸனாத் ஸமூஹ பஹுத்வம் சாவகம்யதே -தே ச கதீத்ய பேஷாயாம் பஞ்ச பஞ்ச ஐநா இதி பஞ்ச சப்த விசேஷிதா -பஞ்ச ஜன ஸமூஹா இதை பஞ்ச விம்சதிஸ் தத்தவாநி பவந்தி மோஷாதிகாராத் தாந்த்ரி காண் யேவேதி நிஸ்ஸீயந்தே -ஏவம் நிஸ்ஸிதே சதி தமேவ மன்ய ஆத்மாநம் -வித்வான் ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இதி பஞ்ச விம்சக மாத்மாநம் ப்ரஹ்ம பூதம் வித்வான் அம்ருதோ பவதீதி –ராத்தாந்தஸ்து –யஸ்மிந் பஞ்ச பஞ்ச ஐநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித -இதி -யச்சப்த நிர் திஷ்ட ப்ரஹ்ம ஆதாரத்வாத் ததாதேயாநாம் தத்த்வாநாம் ப்ரஹ்மாத்மகத்வ மவகம்யதே
யச்சப்த நிர் திஷ்டம் ச தமேவ மன்ய ஆத்மாநம் -இதி தச்சப்தேந பராம்ருஸ்ய ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இதி நிர்தேசாத் ப்ரஹ்மேதி நிஸ்ஸீயதே -அதோ ந தாந்த்ரிக ப்ரசங்க –ஸூத்ரார் தஸ்து –
பஞ்ச பஞ்ச ஐநா இத்யத்ர பஞ்ச விம்சதி ஸங்க்யோப ஸங்க்ரஹா தபி ந தாந்த்ரி காணீமாநி தத்தவாநி யஸ்மின் நிதி யச்சப்த நிர் திஷ்ட ப்ரஹ்ம ஆதாரதயா தாந்த்ரிகேப்யோ நாநா பாவாத் -ஏஷாம் தத்தவாநாம் ப்ருதக் பாவாதித்யர்த -அதி ரேகாச் ச -தாந்த்ரி கேப்யஸ் தத்வாதி ரேக ப்ரதீ தேஸ் ச யஸ்மிந் நிதி நிர் திஷ்ட மதிரிக்த மஹாஸஸ் ச -ந ஸங்க்யோப ஸங்க்ரஹாத பீத்யபி சப்தேன ஸங்க்யோப ஸங்க்ரஹோ ந ஸம்பவ தீத்யாஹ –ஆகாஸஸ் ய ப்ருதங் நிர்தேசாத் –அத பஞ்ச ஐநா இதி ந ஸமாஹார விஷய அபி து திக் ஸங்க்யே ஸம்ஜ்ஞாயாம் இதி ஸம்ஜ்ஞா விஷய பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா கேசித் தே ச பஞ்சை வேதி ஸப்த ஸப்தர்க்ஷய இதிவத் –11-

121-ப்ராணா தயோ வாக்ய சேஷாத் –பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா பஞ்ச பதார்த்த ப்ராணாதய இதி வாக்ய சேஷாதவ கம்யதே –பிராணஸ்ய பிராணமுக சஷுஷஸ் சஷு ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரமந்நஸ் யான்நம் மனஸோ யே மநோ விது இதி ப்ரஹ்மாத்மகா நீந்திரியாணி பஞ்ச பஞ்ச ஜனா இதி நிர் திஷ்டாநி ஜநநாச் ச ஜநா –12-

காண்வ பாடே அந்த வர்ஜிதாநாம் சதுர்ணாம் நிர்தேசாத் பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா நீந்த்ரியாணீதி கதம் ஞாயத இத்யத் ராஹ
122-ஜ்யோதிஷை கேஷாம ஸத்யந்தே
–ஏகேஷாம் -காண்வா நாம் வாக்ய சேஷே அஸத்யன்ன சப்தே வாக்யோபக்ரம கதேந தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிரிதி ஜ்யோதிஸ் சப்தேந பஞ்ச ஜநா இந்த்ரியாணீதி விஞ்ஞாயந்தே –கதம் -ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷி ப்ரஹ்மணி ப்ரதீயதே –நிர் திஷ்டே ப்ரகாசகாநாம் ப்ரகாஸகம் ப்ரஹ்மேதி கே தே ப்ரகாஸகா இத்ய பேஷாயாம் –பஞ்ச பஞ்ச ஜநா –இத்ய நிர்ஜ் ஞாதா விசேஷா பஞ்ச ஸம்க்யா ஸம்க்யாதா ப்ரகாசகாநி பஞ்ச இந்த்ரியாணீதி அவகம்யதே –அத யஸ்மிந் பஞ்ச பஞ்ச ஜநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித இதீந்த்ரி யாணி பூதாநி ச ப்ரஹ்மணி ப்ரதிஷ்டிதா நீதி ந தாந்த்ரி கதத் த்வ கந்த —13-இதி ஸம் க்யோப ஸம் க்ரஹாதி கரணம் –3-

1-4-4-காரணத்வ அதி கரணம்
123-காரணத்வேந சாகாஸாதிஷு யதா வ்யபதிஷ்டோக்தே
–ஜகத் காரணவா தீநி வேதாந்த வாக்யாநி கிம் ப்ரதான காரண தாவதைகாந்தாநி -உத ப்ரஹ்ம காரண தாவதைகாந்தாநீதி ஸம்சய –ப்ரதான காரண தாவாதை -காந்தா நீதி பூர்வ பக்ஷ -ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் இதி க்வசித் ஸத் பூர்விகா ஸ்ருஷ்டிராம் நாயதே அந்யத்ர அசதேவேதே மக்ர ஆஸீத் -அஸத்வா இதமக்ர ஆஸீத் ததா தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத இதி -அவ்யாக்ருதம் ஹி ப்ரதாநம் –அத ப்ரதான காரணதாவாத நிஸ்ஸயாத்ததே காந்தான்யேவ –ராத்தாந்தஸ்து –ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இத் யுபக்ரம்ய தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத இத்யாதிஷு சர்வஞ்ஞஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண காரணத்வ ப்ரதிபாத நாத்தஸ் யைவ ப்ரஹ்மண காரண அவஸ்தாயாம் நாம ரூப விபாக சம்பந்தி தயா ஸத் பாவா பாவாதஸத வ்யாக்ருதாதி சப்தேந வ்யபதேஸ இதி ப்ரஹ்ம காரண தாவாதை காந்தான்யேவ-ஸூத்ரார்தஸ்து-ஆகாஸாதி பத சிஹ்நிதேஷு தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத இத்யாதிஷு ஸர்வஞ்ஞஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண காரணத்வ ப்ரதிபாதநாத் ஸர்வேஷு ஸ்ருஷ்டி வாக்யேஷு யதா வியபதிஷ்டஸ் யைவ காரணத்வே நோக்தே ப்ரஹ்ம காரண தாவாதை காந்தாநி –யதா வியபதிஷ்டம் –ஸார்வஜ்ஞயாதி -யுக்ததயா அஸ்மாபிர் வ்யபதிஷ்டம் –14-

ததா ஸதி -அஸத்வா இதமக்ர ஆஸீத் இதி கிம் ப்ரவீதீத்யத ஆஹ
124-ஸமா கர்ஷாத்
–ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதி பஹுபவந ஸங்கல்ப பூர்வகம் ஜகத் ஸ்ருஜதோ ப்ரஹ்மணஸ் ஸர்வஞ்ஞஸ்ய-அஸத்வா இதமக்ர ஆஸீத் இத்யத்ர ஸமா கர்ஷாத் காரண அவஸ்தாயாம் நாம ரூப சம்பந்தி த்வா பாவேந அஸதிதி ப்ரவீதி –ஏவம் தத்தேதம் தர்ஹ்யவ்யாக்ருதம் ஆஸீத் இத்யாதிஷு -ஸ ஏஷ இஹாநு ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய பஸ்யத்ய சஷு இத்யாதி பூர்வாபரபர்யா லோசநயா தத்ர தத்ர சர்வஞ்ஞஸ்ய ஸமாகர்ஷோ த்ரஷ்டவ்ய —15–இதி காரணத்வ அதி கரணம் –4-

1-4-5-ஜகத் வாஸித்வ அதி கரணம்
125-ஜகத் வாஸித்வாத்
–கௌஷீதகி நாம் ப்ரஹ்ம தே ப்ரவாணி இத் யுபக்ரம்ய யோ வை பாவாக ஏதேஷாம் புருஷாணாம் கர்தா யஸ்ய வைதத் கர்ம ஸ வை வேதிதவ்ய இத்யத்ர வேதி தவ்ய தயோபதிஷ்ட –சாங்க்ய தந்த்ர ஸித்த புருஷ உத பரமாத்வேதி ஸம்சய -புருஷ ஏவ ப்ரக்ருதி வியுக்த இதி பூர்வ பக்ஷ –யஸ்ய வைதத் கர்ம இதி கர்ம சப்தஸ்ய க்ரியத இதி வ்யுத் பத்த்யா ஜகத் வாசித்வாத் க்ருத்ஸ்னம் ஜகத் யஸ்ய கார்யம் ஸ பரமபுருஷ ஏவ வேதிதவ்யதயோப திஷ்டோ பவதீதி –ஸூத்ரமபி வ்யாக்யாதம் –16-

126-ஜீவ முக்ய ப்ராண லிங்காந் நேதி சேத் தத் வ்யாக்யாதம் –ஏவமே வைஷ ப்ரஜ்ஞாத்மைதைராத்ம பிர் புங்க்தே -இத்யாதி போக்த்ருத்வ ரூப ஜீவ லிங்காத் –அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி இதி முக்ய ப்ராண லிங்காச் ச நாயம் பரமாத்மேதி சேத் –தஸ்ய பரிஹார ப்ரதர்தன வித்யாயாமேவ வ்யாக்யாத –பூர்வாபர ப்ரகரண பர்யா லோசநாய பரமாத்ம பரமிதம் வாக்யமிதி நிஸ்ஸிதே சத்யன்ய லிங்காநி தத் அநுகுணதயா நேதவ்யாநீத் யர்த –
நநு -தவ் ஹ ஸூப்தம் புருஷ மீயது மாஜக்மது இதி ப்ராண நாம பிரா மந்த்ரணா ஸ்ரவண யஷ்டிகா தோத்தாபநாதிநா சரீர இந்த்ரிய ப்ராணாத்யதிரிக்த -ஜீவாத்ம ஸத்பாவ ப்ரதி பாதந பரமிதம் வாக்யமித்யவகம்யத இத்யாதி உத்தரம் படதி–17-

127-அந் யார்தம் து ஜைமிநி –ப்ரஸ்ன வ்யாக்யாநாப் யாமபி சைவமேகே -து ஸப்தஸ் சங்கா நிவ்ருத்த் யர்த –ஜீவ ஸங்கீர்த்தந மந்யார்தம் –ஜீவாதிரிக்த ப்ரஹ்ம ஸத்பாவ ப்ரதி போதநார்த மிதி ப்ரஸ்ன ப்ரதி வசநாப்யாமவ கம்யதே -ப்ரஸ்னஸ் தாவஜ் ஜீவ ப்ரதி பாதநாநந்தரம் க்வைஷ ஏதத் பாலாகே புருஷோ அசயிஷ்ட இத்யாதிக –ஸூஷுப்த ஜீவ ஆஸ்ரய விஷய தயா பரமாத்ம பர இதி நிஸ்ஸித–ப்ரதி வசநமபி அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி இத்யாதி கம் பரமாத்ம விஷயமேவ -ஸூப்த புருஷ ஆஸ்ரய தயா ஹி ப்ராண ஸப்த நிர் திஷ்ட பரமாத்மைவ ஸதா ஸோம்ய ததா ஸம்பன்னோ பவதி இத்யாதிப்ய -ஜைமிநி க்ரஹண முக்தஸ்யார் தஸ்ய பூஜ்யத்வாய -அபி சைவ மேகே -ஏகே வாஜஸநேயிந இதமேவ பாலாக்ய ஜாத ஸத்ரு ஸம் வாத கதம் ப்ரஸ்ன ப்ரதி வசன ரூபம் வாக்யம் பரமாத்ம விஷயம் ஸ்பஷ்ட மதீயதே க்வைஷ ஏதத் இத்யாதி ய ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாஸஸ்தஸ் மிஞ்சேத இத்யே ததந்தம் —18-இதி ஜகத் வாசித்வ அதி கரணம் –5-

1-4-6-வாக்ய அந்வய அதி கரணம்
128-வாக்ய அந்வயாத்
–ப்ருஹ தாரண்யகே மைத்ரேயீ ப்ராஹ்மணே ந வா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவத் யாத்மநஸ்து காமாய இத்யாரப்ய ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி ப்ரதிபாத்யதே
ஸ்ரோ தவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸி தவ்ய இத்யாதவ் த்ரஷ்டவ்ய தயா நிர் திஷ்ட புருஷ தந்த்ர ஸித்த உத பரமாத்மேதி ஸம்சய –தந்த்ர ஸித்த பஞ்ச விம்சக ஏவேதி பூர்வ பக்ஷ பதி ஜாயா புத்ரவித்த மித்ர பஸ்வாதி ப்ரிய சம்பந்த்யாத்மா ந பரமாத்மா பவிதுமர்ஹாதி –ஸ ஏவ ஹி ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி ப்ரதிபாத்யதே –ராத்தாந்தஸ்து –ந பத்யாதீ நாம் காமாய பத்யாதய ப்ரியா பவந்தி ஆத்மநஸ்து காமாய இத்யுக்த்தவா -ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி நிர் திஷ்ட ஆத்மா ஜீவாதிரிக்தஸ் ஸத்ய ஸங்கல்பஸ் ஸர்வஞ்ஞ பரமாத்மைவ -யத் ஸங்கல்பாயத்தம் பத்யாதீ நாம் ஸ்வ சம்பந்திந ப்ரதி ப்ரியத்வம் ஸ ஹி ஸத்ய ஸங்கல்ப பரமாத்மா -ஆத்மஜ் ஞாநேந ஸர்வஞ்ஞாநாதயோ அபி வஹ்யமாணா பரமாத்மந்யேவ சம்பவந்தி
ஸூத்ரார்தஸ்து –வாக்யஸ்ய க்ருத்ஸ் நஸ்ய பரமாத்மந்யே வாந்வயாத் த்ரஷ்டவ்ய தயா நிர் திஷ்ட ஆத்மா பரமாத்மைவ –அம்ருதத் வஸ்ய து நாஸா அஸ்தி வித்தேந ஆத்மநி கல்வரே த்ருஷ்டே ஸ்ருதே மதே விஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் -இதம் ஸர்வம் யதயமாத்மா -தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூதஸ்ய நிஸ்வஸிதமேதத்யத் ருக்வேத -யேநேதம் ஸர்வ விஜாநாதி தம் கேந விஜா நீயாத் –இதி ஹி க்ருத்ஸ் நஸ்ய வாக்யஸ்ய பரமாத்மந்யந்வயோ த்ருஸ்யதே -19-

ஏதேப்யோ பூதேப்யஸ் சமுத்தாய தாந்யே வாநுவிநஸ்ய தீதி ஜீவ லிங்கஸ்ய மதாந்தரேண நிர்வாஹமாஹ
129-ப்ரதிஞ்ஞா ஸித்தேர் லிங்க மாஸ்மரத்ய
–ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா ஸித்தயே ஜீவஸ்ய பரமாத்ம கார்ய தயா பரமாத்மநோ அநந்யோ ஜீவ இதி ஜீவ சப்தேந பரமாத்மநோ அபி தாநம் இத்யாஸ்ம ரத்ய -மதம் -20-

130-உத் க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் ஒவ்டுலோமி –பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யத இதி சரீராத் உத் க்ரமிஷ்யத அஸ்ய ஜீவஸ்ய பரமாத்ம பாவாஜ் ஜீவ சப்தேந பரமாத்மநோ அபிதானம் இத் ஒவ்டு லோமி ஆசார்யோ மேநே –21-

131-அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ந –ய ஆத்மநி திஷ்டன் இத்யாதி பிர் ஜீவாத்மன் யந்தராத்ம தயா பரமாத்மநோ அவஸ்திதே -ஜீவாத்ம சப்தஸ்ய பரமாத்மநி பர்யவஸாநாஜ் ஜீவாத்ம சப்தேந பரமாத்மந அபிதாந மிதி காஸக்ருத்ஸ்ன ஆசார்யோ மன்யதே –இதமேவ ஸூத்ர காராபிமத மித்யவ கம்யதே த்ரயாணாம் அந்யோன்ய விரோதாத் இத பரம வசநாச் ச –22-இதி வாக்ய அந்வய அதி கரணம் –8-

1-4-7-ப்ரக்ருதி அதி கரணம்
132- ப்ரக்ருதிஸ் ச -ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத்
–பரம் ப்ரஹ்ம கிம் ஜகதோ நிமித்த காரண மாத்ரம் உதோ பாதான காரணமபீதி ஸம்சய –நிமித்த காரண மாத்ரமிதி பூர்வ பக்ஷ -ம்ருத் குலாலாதவ் நிமித்த உபாதாநயோ பேத தர்சநாத் அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் இத்யாதி பிர் பேத ப்ரதி பாதநாத் ப்ரஹ்மணோ அவிகாரத்வ ஸ்ருதி விரோதாச் ச –ராத்தாந்தஸ்து –யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இதி ப்ரஹ்ம விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதி ஞானான் யதாநுப பத்த்யா யதா ஸோம்யைகேந ம்ருத் பிண்டேந ஸர்வம் ம்ருண் மயம் இதி ம்ருத் தத் கார்ய த்ருஷ்டாந்தேந ததுப பாத நாச்ச ஜகத் உபாதான காரணம் அபி ப்ரஹ்மைவேதி விஞ்ஞாயதே –ப்ரமாணாந்தரா வசித ஸகல வஸ்து விலக்ஷணஸ்ய சாஸ்த்ரைக ஸமதிகம் யஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணஸ் சர்வஞ்ஞஸ்ய ஸர்வ சக்தே கார்ய காரண உபயா அவஸ்தாயாம் அபி ஸ்வ சரீர பூத சித் அசித் பிரகார தயா அவஸ்திதஸ்யைகஸ்யைவ நிமித்தத்வம் உபாதாநத்வம் சாவிருத்தம்
சரீர பூதா சித் வஸ்து கதோ விகார இதி கார்ய அவஸ்தா வஸ்திதஸ்யாபி சரீரண பரமாத்மந அவி காரித்வம் ஸித்த மேவ -சித் அசித் வஸ்து சரீரஸ்ய ப்ரஹ்மண ஏவோ பாதா நத்வே அபி ப்ரஹ்மண்ய புருஷார்த்த விகாராஸ்பர்ஸ ப்ரதர்சனாய ஹி அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் தஸ்மிம்ஸ் சான்யோ மாயயா சந்நிருத்த இதி வ்யபதேஸ ப்ரதிஞ்ஞாத்ருஷ்டாந்தாநு ப ரோதாத் உபா தாநம் ச ப்ரஹ்மைவேதி ஸூத்ரார்த –23-

ப்ரக்ருதி என்கிற பதம் உபாதாந காரண வாசகம்
ச -என்பதனால் நிமித்த காரணத்வம் சமுச்சயிக்கப் படுகிறது
பர ப்ரஹ்மம் ஜகத்துக்கு நிமித்த காரணம் என்பதில் ஆஷேபம் இல்லாதவனை நோக்கிச் சொல்லுகிறதாகையாலே
நிமித்த காரணத்தோபாதி உபாதான காரணமும் ப்ரஹ்மம் என்று சொல்லிற்று
இதற்கு இரண்டு ஹேதுக்கள்
ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத்
ப்ரதிஞ்ஜை யாவது -ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஜ்ஜை
த்ருஷ்டாந்தமாவது ம்ருத் பிண்ட கடாதி நிதர்சனம்
அநுப ரோதாத்-இரண்டும் பொருந்த உபாதாந காரணமும் இருந்தே தீர வேண்டும்

ம்ருத் பிண்ட திருஷ்டாந்தத்திலே ஒரே த்ரவ்யத்துக்கே பிண்டத்வமும் கடத்வத்தமும் உண்டாகும்
இங்கு வெவ்வேறு பட்ட -ப்ரஹாமும் ப்ரபஞ்சமும் -அன்றோ
மேலும் ப்ரஹ்மம் நிர்விகாரம் அன்றோ
விகாரமும் அவஸ்தா பத்தியும் பர்யாயம் அன்றோ என்னில்
ப்ரஹ்ம ஞானத்தால் பிரபஞ்ச ஞானம் உண்டாகும் என்று ஸ்ருதி சொல்லுவதால் அவற்றுக்கு உபாதான உபாதேய பாவம் இல்லாமையால் அது ஸம்பவியாது -ஆகையால் அது இசையத் தக்கது
விகார சூன்யமான ப்ரஹ்மத்துக்கு விகார ரூபமான அவஸ்தை ஸாஷாத்த்தாக சம்பவிப்பது அன்று
சேதன அசேதன ஆத்மக ப்ரபஞ்சமாகிற சரீரத்தின்விகார ஆஸ்ரயத்வம் ஸம்பவிக்கின்றது -என்பதாக ஸ்ருதியின் அபிப்ராயம் ஸித்திக்கிறது

சூர்ணிகை -165-

இனி இவனுக்கு ஜகத்தைப் பற்ற உண்டான காரணத்வம்
கடபடாதிகளைப் பற்ற குலாலாதிகளுக்கு உண்டான
காரணத்வம் போலே நிமித்தத்வ மாத்ரமோ –
என்கிற சங்கையில் உபாதான காரணமும் இவனே
என்னுமத்தை அருளிச் செய்கிறார்

இவன் தானே
ஐகத்தாய்ப்
பரிணமிக்கையாலே
உபாதானமமாயும்
இருக்கும் –

பிரக்ருதிச் ச -உபாதானமும் அவனே ப்ரதிஞ்ஞா -வும் பொருந்துகிற படியால் -ஒன்றை அறிந்தால் அனைத்தும் அறிந்த படி ஸ்வேதா கேது –
இவன் -தானே பரிணமித்து ஜகத் —தான் தான் உபாதான காரணம் -பரிணமிக்கும் ஓன்று தானே உபாதானம் -தான் -விசுஷ்ட ப்ரஹ்மம் என்றபடி –
நிமித்தமும் உபாதானமும் ப்ரஹ்மம் அபின்ன உபாதானம் -ப்ரஹ்மம் என்றபடி –

அதாவது
லோகத்தில் கார்ய உத்பத்தியில் காரணம் நிமித்த உபாதான சஹகாரி ரூபேண த்ரிவிதமாய் இருக்கும்
இதில் -நிமித்த காரணம் ஆவது -உபாதானமான வஸ்துவை
கார்ய ரூபேண விகரிப்பிக்கும் கர்த்ரு வஸ்து
உபாதான காரணம் ஆவது கார்ய ரூபேண விகரிக்கைக்கு யோக்யமான வஸ்து
சஹகாரி காரணம் ஆவது கார்ய உத்பத்திக்கு உப கரணமான வஸ்து –
கடபடாதிகளுக்கு குலால குவின நாதிகள் நிமித்தமாய்–குயவன் நெசவாளி –
ம்ருத்தந்த வாதிகள் உபாதானமாய்–மண்ணும் நூலும்
தண்ட சக்ர வேமாதிகள் சஹ காரியாய் இருக்கும்
இங்கன் அன்றிக்கே ஜகத் ரூப கராய உத்பத்தியில் ஈச்வரனே த்ரிவித காரணமுமாய் இருக்கும் –
எங்கனே என்னில்
பஹூச்யாம்–சாந்தோக்யம் -என்கிற சங்கல்ப விசிஷ்டனாய்க் கொண்டு நிமித்த காரணனாயும்
நாம ரூப விபாக அநர்ஹமாம் படி தன்னோடு கூடிக் கிடக்கிற சூஷ்ம சித் அசித் விசிஷ்டனாய்க் கொண்டு உபாதான காரணமாயும்
ஜ்ஞான சக்த்யாதி விசிஷ்டனாய்க் கொண்டு சஹகாரி காரணமாயும் இருக்கும்
ஆகையாலே உபாதான காரணமும் இவனே -என்கிறார் –
இவன் -என்று கீழ் நிமித்த காரணமாகச் சொன்ன ஈஸ்வரனைப் பரமார்சிக்கிறது
சித் அசித்துக்கள் இரண்டும் அப்ருக சித்த விசேஷணமாய்க் கொண்டு
தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அந்தர்பூதமாம் படி இருக்கையாலே
தானே ஜகதாய்ப் பரிணமிக்கையாலே -என்கிறார்
உபதானமுமாயும் இருக்கும் -என்று கீழ்ச் சொன்ன நிமித்த காரணத்தோடு
உபாதான காரணத்வத்தை சமுச்சயிக்கிறது –

இத்தால் ப்ரஹ்மத்தின் உடைய ஜகத் காரணத்வத்தை பிரதிபாதிக்கிற வேதாந்த சூத்ரத்தில்
நிமித்த காரணத்வத்தை சாதித்த அநந்தரம்
பிரகிருதி ச்ச பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத -என்று உபாதான காரணத்வத்தையும்
சொன்னால் போலே இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று
பிரகிருதி ச்ச -என்றதை உட்கொண்டே இவரும் -உபாதானமுமாயும் -இருக்கும் என்றது-சக்கரம் உம்மைத்தொகை
அங்கு -பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத-என்று சாத்யம் முன்னாக சாதனத்தைச் சொல்லிற்று
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் -முன்னே சொல்லி
இங்கு -இவன் தானேஜகத்தாய பரினமிக்கையாலே -என்று
சாதனம் முன்னாக சாத்தியத்தைச் சொல்லிற்று
பரிணாமம் அடைந்து ஜகத்தாக ஆனது -தானே முன்னே சொல்லி –
அங்கு -யேநா சரு நம ச்ருதம் பவதி அம்தம் மதம் அவிஞ்ஞாதம் விஞ்ஞாதம் சயாத-என்று
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான பிரதிஞ்ஞையாலும்
யதா சோமயை கேன ம்ருத பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விஞ்ஞா தம ஸ்யாத்-என்கிற
தத் உத்பாதகமான த்ருஷ்டாந்தத்தாலும்–விளக்கும் த்ருஷ்டாந்தத்தாலும் –
ஏக வஸ்து பரிணாமம் ஜகத்து -என்று இ றே சொல்லிற்று –
அந்த ஏக வஸ்து ஆகிறது சூஷ்ம சிதசித் விசிஷ்டமான ப்ரஹ்மம் இ றே
அத்தை இ றே இவரும் -தானே -என்கிற சொல்லால் அருளிச் செய்தது –
ஆகையால் அந்த சூத்தார்த்தமே இது என்னத் தட்டில்லை –

ஏகமேவ அத்விதீயம் –மஹா வாக்கியம் -சத்தாகவே ஒன்றாகவே இரண்டாவது இல்லாமல் இருந்தது -சத் கார்ய வாதம் –என்றும்-நிமித்தம் தேட வேண்டாம் –
காரணமாக சத்தாகவே இருந்தது -உபாதானமாக சூஷ்மமாக இருந்தது –
தத்வமஸி -இதுவும் மஹா வாக்கியம்
நிர்விசேஷ சின் மாத்திரம் அத்வைதம் —
ததா தமா நம ஸ்வயம் குருத -என்றும்-அந்த ப்ரஹ்மம் தானே தன்னை செய்து கொண்டது உபாதானமாக -யானாய் தன்னைத் தான் பாடி –
ச்ருஷ்டௌ சருஜதி சாதமானம் விஷ்ணு பால யஞ்ஞ பாதி ச -உப சம்ஹரியதே சாந்தே சம்ஹாததா ச ஸ்வயம் பிரபு —ஸ்ரீ விஷ்ணு புராணம் -1–12-என்றும்
ச ஏவ ஸ்ருஜ்யதே ச ச சர்க கர்த்தா ச ஏவ பாதயந்தி ச பாலயதேச
ப்ரஹ்மா தயவ சத தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய-இத்யாதிகளால்
படைக்கப்பட்ட வையும் அவரே கர்த்தாவும் அவரே -பரிபாலிப்பவனும் அவனே
இந்த நிமித்த உபாதான யோர் ஐக்யத்தை
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஸூ வ்யக்தமாக சொல்லா நின்றது இறே –

கார்யே அனந்தே ஸ்வ தநு முகத த்வாம் உபாதானம் ஆஹு
சா தே சக்தி ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய
இச்சா யாவத் விஹரதி சதா ரங்க ராஜ அந பேஷா
ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா ஊர்னநாபவ் விபாவ்யா –31-

ஹே ரங்க ராஜ

அந பேஷா–ஸ்வதஸ் ஸித்தமான

தே இச்சா–தேவரீருடைய சங்கல்பமானது

ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய–இது செய்யக் கூடியது இது செய்யக் கூடாதது என்கிற வரம்பை மீறி

சதா -எப்போதும்

யாவத் விஹரதி–எங்கும் முழுவதும் உலாவுகின்றது

சா தே சக்தி -அப்படிப்பட்ட சங்கல்பமே தேவரீருடைய சக்தி என்கிற குணமாகும்

இப்படிப்பட்ட சக்தி தேவரீருக்கு இருக்கின்றதால்

கார்யே அனந்தே–எல்லையில்லாத கார்ய வர்க்கங்களின்

ஸ்வ தநு முகத த்வாம்–தேவரீருடைய சரீரமாகிய சேதன அசேதன த்வாரா -தேவரீரை

உபாதானம் ஆஹு–உபாதான காரணமாக வைதிகர்கள் சொல்லுகின்றனர்

ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா–அப்படிப்பட்ட சக்தி தான் பாசுபதமத பிரகிரியையில் காட்டிலும் வ்யாவ்ருத்தி

சம்பாதகம் ஆகின்றது ஈஸாநா -பசுபதி -ஐசா நாம் -பாசுபத மத ப்ரக்ரியா என்றபடி –

ஊர்னநாபவ் விபாவ்யா-அந்த சக்தி சிலந்திப் பூச்சியின் இடத்தில் காணத் தக்கது –

ஸ்வரூப விகாரம் இன்றிக்கே இருக்கச் செய்தே ஸ்வ சரீர பூத விசேஷண முகத்தால்
தந்து ஜாதமான கார்ய ஜாதத்துக்கு
தான் உபாதானமாம் படி உண்டான ஸ்வ பாவம் –

சர்வ சக்தன் -உபாதான குணம் இருந்தும் அதிகாரம் உண்டே –

சிலந்தி இடமே காணலாம் -பாசுபத வாத நிரசனம்

ஹேத்வந்தர நிரபேஷமான சங்கல்பம் -ஸமஸ்த காரியத்திலும் சரீர த்வார உபாதானமாக ஸ்ருதிகள் சொல்லும்

சக்யம் சக்யம் வாசி இல்லாமல் கரை அழித்து செய்யும் அவதி இல்லாத சக்தி

சங்கல்பம் கொண்டே ஜகத் நிர்வாஹணம்

சிலந்தி த்ருஷ்டாந்தம்

———

133-அபித்யோபதேஸாச் ச –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயே இதி ஸ்ரஷ்டுர் ப்ரஹ்மணஸ் ஸ்வஸ்யைவ ஜகதா காரேண பஹு பவந சிந்தநோபதேஸாச் ச ஜகத் உபாதாநம் நிமித்தம் ச ப்ரஹ்மைவேதி நிஸ்ஸீயதே –24-

134-ஸாஷாச் சோபயாம் நாநாத் –கிம்ஸ் வித்வநம் க உ ஸ வ்ருஷ ஆஸீத் இத்யாதி நா ஜகத் உபாதாந நிமித்தாதவ் ப்ருஷ்டே ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் -ப்ரஹ்மாத்ய திஷ்டத் இத் யுபாதாநம் நிமித்தம் சோபயம் ப்ரஹ்மைவேதி ஹி ஸாஷாதாம் நாயதே -அதஸ் சோபயம் ப்ரஹ்ம -25-

135-ஆத்ம க்ருதே -ததாத்மாநம் ஸ்வயமகுருத இதி ஸ்ரஷ்டுராத்மந ஏவ ஜகதாகாரேண க்ருதிருபதிஸ்யதே -அதஸ் சோபயம் ப்ரஹ்மைவ –நாம ரூப பாவாப்யா மேகஸ்ய கர்ம கர்த்ரு பாவோ ந விருத்த –26-

யத் யாத்மாந மேவ ப்ரஹ்ம ஜகதாகாரம் கரோதி தர்ஹி ப்ரஹ்மணோ அபஹத பாப்மத்வாதிகமநவதிகாதிஸய –ஆனந்த ஸ்வரூபத்வம் ஸர்வஞ்ஞத்வம் இத்யாதி ஸர்வம் விருத்யதே அஞ்ஞத்வ அஸூகித்வ கர்ம வஸ்யத்வாதி விபரீத ரூபத்வாத் ஜகத இத்யத உத்தரம் படதி

136-பரிணாமாத் –அஜ்ஞ ப்ரஹ்ம விவர்தவாதே -ஹி தத் பவத்யேவ -அஜ்ஞாநஸ்ய தத் கார்ய ரூபா நந்தா புருஷார் தஸ்ய ச வேதாந்த ஜன்யஜ் ஞான நிவர்த்யஸ்ய ப்ரஹ்மண்யேவா ந்வயாத் ததா ஸாஸ்த்ரஸ்ய ப்ராந்த ஜல்பிதத் வாபாதாச் ச -அவி பக்தா நாம ரூப ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீர கஸ்ய ப்ரஹ்மணோ விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரத்வேந பரிணாமோ ஹி வேதாந்தேஷுபதிஸ் யதே -தத்தேதம் தர்ஹ்யயாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத இத்யேவ மாதிபி -அபுருஷார்த்தாஸ் ச விகாராஸ் சரீர பூத சித் அசித் வஸ்து கதா –காரண அவஸ்தாயாம் கார்ய அவஸ்தாயாம் ச ஆத்மபூதம் ப்ரஹ்ம அபஹத பாப்மத்வாதி குணகமேவ -ஸ்தூல ஸூஷ்ம அவஸ்தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் வஸ்துநோ ப்ரஹ்ம ஸரீரத்வம் ப்ரஹ்மணஸ் தத் ஆத்மத்வம் ய ப்ருதிவ்யாம் திஷ்டன் யஸ்ய ப்ருதிவீ சரீரம் இத்யாரப்ய யஸ்யாவ்யக்தம் சரீரம் யஸ்யாஷரம் சரீரம் யஸ்ய ம்ருத்யுஸ் சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்ம அபஹத பாப்மா திவ்யோ தேவ இத்யேவமாதி ஸ்ருதி ஸத ஸமதிகதம் அதஸ் ஸர்வம் அநவத்யம் –27-

137-யோநிஸ் ச ஹி கீயதே –யத் பூத யோநிம் பரி பஸ்யந்தி தீரா கர்தாரம் ஈஸம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் இத்யாதிஷு ஸர்வஸ்ய பூத ஜாதஸ்ய பரம புருஷ யோநித்வேந கீயதே -ஹி ஸப்தோ ஹேதவ் யஸ்மாத் யோநிரிதி கீயதே தஸ்மாச் சோபாதாநமபி ப்ரஹ்ம –யோநி ஸப்தஸ் சோபாதாந காரண பர்யய –28–இதி ப்ரக்ருத் யதி கரணம் —

1-4-8-ஸர்வ வ்யாக்யாநாதி கரணம்
138-ஏதேந ஸர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா
–யதோ வா இமாநி –இத்யாதிஷுதா ஹ்ருதேஷு வாக்யேஷு ஜந்மாத் யஸ்ய யத இத்யாதி நோக்த ந்யாய கலாபேந ஸர்வே வேதாந்தா ப்ரஹ்ம பரா வ்யாக்யாதா –பதாப்யாஸோ அத்யாய –பரி ஸமாப்தித்யோத நார்த –29-இதி -ஸர்வ வ்யாக்யாநாதி கரணம் –8-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதாந்த தீபம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -த்ருதீய பாதம்

February 26, 2024

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

1-3-1-த்யுப்வாத் யதி கரணம்
66-த்யுப்யாத் யாயதநம் ஸ்வ ஸப்தாத்
–ஆதர்வணே -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ சாந்தரிக்ஷமோதம் மநஸ் ஸஹ பிராணைஸ் ச ஸர்வைஸ் தமேவைகம் ஜாநதாத்மாந மந்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைக்ஷ ஸேது இத்யத்ர த்யு ப்ருதிவ்யாதாதீநாம் ஆயதநம் கிம் ஜீவ உத பரமாத்வேதி ஸம்சய ஜீவ இதி பூர்வ பக்ஷ மந ப்ரப்ருதீ ந்த்ரியாதார்த்தவ ஸ்ருதே உத்தரத்ர நாடீ சம்பந்தாத் ஜாயமாநத்வ ஸ்ருதேஸ் ச –ராத்தாந்தஸ்து -நிருபாதிக ஆத்மத்வ அம்ருத சேது த்வயோ -பரமாத்ம தர்மயோ ஸ்ரவணாத் பரமாத்மை வாயம் –ஸர்வம் நியந்தருதயா ஆப்நோ தீதி ஹ்யாத்மா –அம்ருதஸ்ய ப்ராபக தயா சேதுஸ் ச ஸ ஏவ நாடீ ஸம்பந்த பஹுதா ஜாயமாநத்வஞ்ச — ஸந்ததம் ஸிராபிஸ் து லம் பத்யாகோஸ ஸந்நிபம் அஜாயமாநோ பஹுதா விஜாயதே இத்யாதி ஷு ஸர்வ சமாஸ்ரயணீயத்வாய அஜஹத் ஸ்வ பாவஸ் யைவ பரமாத்ம நோ அபி த்ருஸ்யதே இதி ஸூத்ரார் தஸ்து –த்யு ப்ருதிவ்யாதீநாமாயதநம் பரமாத்மா ஸ்வ ஸப்தாத் –1-

67-முக்தோபஸ்ருப்ய வ்யபதேஸாச் ச –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷமுபைதி திவ்யம் இதி ச பந்தான் முக்தஸ்ய ப்ராப்ய தயா வ்யபதேஸாச் சாயம் பரமாத்மா –2-

68-ந அநுமாந மதச் சப்தாத் ப்ராண ப்ருச்ச –ஆநு மாநம் –அநுமாந கம்யம் ப்ரதாநம் யதா தத் வாசி ஸப்தா பாவாத் ததிஹ ந க்ருஹ்யதே –ததா ப்ராண ப்ருத பீத் யர்த –அதஸ் சாயம் பரமாத்மா –3-

69-பேத வ்யபதேசாத் –அநீ ஸயா ஸோசதி முஹ்யமாந –ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்ய மீஸம் இத்யாதி நா ஜீவாத் பேதேந வ்யபதேசாச் சாயம் பரமாத்மா –4-

70-ப்ரகரணாத் –அத பரா யயா ததஷரமதி கமயத இத்யாதி நா பரமாத்மந ஏவ ப்ரக்ருதத்வாத் -5-

71-ஸ்தித்யத நாப்யாம் ச –தயோரந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அநஸ்நன் நந்யோ அபிசாக ஸீதி இதி கர்மபலமநஸ்நத -பரமாத்மநோ தீப்ய மாந தயா ஸ்திதே -ஜீவஸ்ய கர்ம பரவசதயா தத் பலாதநாச்ச பரமாத்மநோ ஜீவாத் பேதாவகமாத் அம்ருத ஸேதுர்த் யுப்வாத்யாயதநம் ந ஜீவ -அத்ருஸ்யத்வாதி குணக இத்யநேந பரமாத்மத்வே ஸ்தாபிதே அபி நாடீ ஸம்பந்த பஹுதா ஜாயமாநத்வ லிங்காத் யா அவாந்தர ப்ரகரண விச்சேதா சங்கா ஸா நிராக்ருதா -த்யுப் வாத்யாயதநமிதி வைஸ்வா நரஸ்ய த்ரை லோக்ய சரீரத்வாதிநா பரமாத்மத்வ நிர்ணய இதி மத்யே வைஸ்வாநர வித்யா நிரூபிதா —6-இதி த்யுப்வாத் யதி கரணம் –1

1-3-2- பூமாதி கரணம்
72-பூமா ஸம்ப்ரஸாதா தத் யுபதேசாத்
–சாந்தோக்யே -யத்ர நான்யத் பஸ்யேதி நானயச் ஸ்ருணோதி நான்யத் விஜாநாதி ஸ பூமா இத்யத்ர பூம ஸப்த நிர்திஷ்டோ நிரதிசய வை புல்ய விஸிஷ்ட ஸூக ஸ்வரூப கிம் ப்ரத்யகாத்மா -உத பரமாத்மேதி ஸம்சய -ப்ரத்யகாத்மேதி பூர்வ பக்ஷ –தரதி ஸோகமாத்மவித் இதி ப்ரக்ரம்ய நாமாதி பரம் பர யோத்தரோத்தர பூயஸ்த்வேந ப்ரஸ்ன பிரதி வசனாப்யாம் ப்ரவ்ருத்தஸ் யாத்ம யுபதேஸஸ்ய ப்ராண ஸப்த நிர் திஷ்டே ப்ரத்யகாத்மநி ஸமாப்த்தி தர்சநாத் ப்ரத்யகாத்மந ஏவ பூமஸம் ஸப்த நமிதி நிஸ்ஸீயதே –ராத்தாந்தஸ்து -யத்யபி ப்ரஸ்ன பிரதிவசநாப்யாம் உத்தர உத்தர பூயஸ்த்தவ வசனம் ப்ராணே பர்யவஸ்திதம் ததாபி பிராணாவேதிநோ அதிவாதித்தவம் உக்த்வா -ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேநாதி வததி இதி து சப்தேன உபாஸக பேதம் ப்ரதிபாத்ய -தஸ்ய ஸத்ய உபாஸகஸ்ய பூர்வஸ்மாதாதிக்ய உபதேசாத் ஸத்ய சப்தாபிதேயம் பரம் ப்ரஹ்மைவ பூம விசிஷ்டம் இதி –ஸூத்ரார்தஸ்து -பூம குண விசிஷ்டம் பரம் ப்ரஹ்ம ஏவ ஸம் ப்ரசாதாதத் யுபதேசாத் –ஸம் ப்ரஸாத –ப்ரத்யகாத்மா ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத்ஸமுத்தாய பரம் ஜ்யோதி ரூப ஸம் பத்ய இத்யாதி உபநிஷத் ப்ரஸித்தே –ஏஷ து வா அதி வததி இதி ப்ரத்யகாத்மநோ அதிகதய உபதேசாத் -அதி வாதித்வம் ஹி ஸ்வோபாஸ்யாதிக்ய வாதித்வம் –7-

73-தர்ம உப பத்தேஸ் ச -ஸ்வா பாவிக அம்ருதவ –ஸ்வ மஹிம ப்ரதிஷ்டிதத்வ -ஸர்வாத்மத்வஸர்வ உத்பத்தி ஹேதுத்வா தீநாம் பூம்நி ஸ்ரூய மாணாநாம் தர்மாணாம் பரஸ்மின் நேவ ப்ராஹ்மண் யுப பத்தேஸ் ச பூமா பரம் ப்ரஹ்ம ஏவ -8-இதி பூமாதி கரணம் –2-

1-3-3-அக்ஷர அதிகரணம்
74-அக்ஷரமம் பராந்த த்ருதே
–வாஜிநாம் கார்கி ப்ரஸ்நே ஸ ஹோவாசைதத்வை தத் அக்ஷரம் கார்கி ப்ராஹ்மணா அபி வதந்த்ய ஸ்தூல மநண் வஹ்ரஸ்வம தீர்கமலோஹிதமஸ் நேஹ மச்சாயம் இத்யத்ர அக்ஷர ஸப்த நிர் திஷ்டம் ப்ரதாநம் -ஜீவோ வா உத பரமாத்மா இதி ஸம்சய ப்ரதாநம் ஜீவோ வா ந பரமாத்வேதி பூர்வ பக்ஷ –கஸ்மின் து கல்வாகாச ஓதஸ் ச கல் வாகாச ஓதஸ் ச ப்ரோதஸ் ச இத் யுக்தே ஆகாசாதார தயோச்ய மாந மக்ஷரம் ப்ரதாநம் ஜீவோ வா ப்ரதா நஸ்ய விகாரா தாரத்வாஜ் ஜீவஸ்யா சித்வஸ்த்வாதாரத்வாத் ந பரமாத்வேதி –ராத்தாந்தஸ்து -யதூர்த்வம் கார்கி திவ இத்யாரப்ய காலத்ரய வர்திந க்ருத்ஸ்னஸ் யாதார தயா நிர் திஷ்ட ஆகாஸோ அவ்யாக்ருதமேவ ந வாயுமாநாகாஸ –தத பஸ்ஸாத் கஸ்மின்நு கல் வாகாச ஓதஸ்ஸ ப்ரோதஸ்ஸ இதி ப்ருஷ்டே ததா தராத யோஸ்யமாநமேதத் அக்ஷரம் ந ப்ரதாநம் பவிதும் அர்ஹாதி –நாபி ஜீவ -ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி ஸூர்யா சந்த்ர மஸவ் வித்ருதவ் திஷ்டத இத்யாரப்ய ப்ரஸாஸ நாத் சர்வாதாரத்வ ஸ்ருதே –ஸூத் ரார் தஸ்து -ஏதத் வை ததஷரம் கார்கி இதி நிர்திஷ்டம் அக்ஷரம் பரமாத்மா அம்பராந்தத்ருதே –அம்பரம் வாயுமாநாகாஸ அம்பராந்த அம்பர பார பூதம் அம்பர காரண மிதி யாவத் காரணாபத்தி ரேவ ஹி கார்யஸ் யாந்த ஸ சாம்பராந்த அவ்யாக்ருதம் ப்ரதாநம் தஸ்ய த்ருதே –தாரணாத் –அவ்யாக்ருத்ஸயாபி த்ருதே ரக்ஷரம் பரமாத்மைவேத் யர்த –9-

ஏவம் தர்ஹி ஜீவோ பவிதும் அர்ஹாதி தஸ்ய ப்ரதான த்ருத் யுப பத்தேர் இத்யா ஸங்க்யாஹா

75-ஸா ச ப்ரஸாஸ நாத் –ஸா ச அம்பராந்தத்ருதி ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி ஸூர்யா சந்த்ரமசவ் இதி ப்ரஸாஸ நாச்ச் ரூயதே -ப்ரஸாஸநம் -ப்ரக்ருஷ்டம் ஸாஸனம்அப்ரதிஹதாஜ்ஞா –ந சா ப்ரதி ஹதாஜ்ஞயா க்ருத்ஸ் நஸ்ய சித் அசித் ஆத்மகஸ்ய ஜகதோ த்ருதிர் ஜீவே உப பத்யதே –அதோ ந ஜீவ –10-

76-அந்ய பாவ வ்யாவிருத்தேஸ் ச -அந்யபாவ –அந்யத்வம் அஸ்ய அக்ஷரஸ்ய பரம புருஷாதன் யத்வம் வ்யாவர்தயதி வாக்ய சேஷ –அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு இத்யாதி நா ஸர்வைரத்ருஷ்ட மேததக்ஷரம் ஸர்வஸ்ய த்ரஸ்ட்ரித்யாதி ப்ரதான ஜீவா ஸம்பாவ நீயார்த ப்ரதிபாதநாத் —11-அக்ஷர அதிகரணம் –3-

1-3-4-ஈஷதி கர்ம அதிகரணம்
77-ஈஷதி கர்ம வ்யபதேஸாத் ஸ
–ஆதர்வணிகாநாம் ஸத்ய காம ப்ரஸ்நே ய புநரேதம் த்ரி மாத்ரேணோமித்ய –நேநைவாக்ஷரேண பரம் புருஷமபித் யாயீத இத்யாரப்ய –ஸ ஸாம பிருந்நீயதே ப்ரஹ்ம லோகம் ஸ ஏதஸ் மாஜ் ஜீவக நாத் பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷத இத்யத்ர த்யாதீ ஷதி கர்மதயா வ்யபதிஷ்ட பரம புருஷ கிம் ஹிரண்ய கர்ப –உத பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம இதி ஸம்சய –ஹிரண்ய கர்ப இதி பூர்வ பக்ஷ -பூர்வத்ரைக மாத்ரம் ப்ரணவம் உபாஸீநஸ்ய மனுஷ்ய லோக ப்ராப்திம் பலம் த்விமாத்ரம் உபாஸீநஸ் யாந்தரிக்ஷ லோக ப்ராப்திம் ச பலமபிதாயா நந்தரம் ய புந ரேதம் த்ரி மாத்ரேண இதி த்ரி மாத்ரம் ப்ரணவம் உபாஸீ நஸ்ய பலத்வே நோச்யமாந ப்ரஹ்ம லோகஸ்த புருஷே க்ஷண கர்ம பூதஸ் சதுர்முக ஏவேதி விஞ்ஞாயதே மனுஷ்ய லோகாந்தரிக்ஷ லோக ஸாஹசர்யாத் ப்ரஹ்ம லோகோ அபி ஷேத்ரஞ்ஞ லோக இதை நிஸ்ஸயாத்
ராத்தாந்தஸ்து –பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷதே இத் ஈஷதி கர்மதயா நிர் திஷ்ட புருஷ விஷயேஸ் லோகே –தமோங்காரேணை வாய நேநாத்வேதி வித்வான் யத் தச்சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரஞ்ச இதி நிருபாதிக சாந்தத்வ அம்ருதத்வாதி வ்யபதேசாத் பரமாத்மை வாயமிதி நிஸ்ஸீயதே -ஏவம் பரமாத்மத்வே நிஸ்ஸிதே ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச தத் ஸ்தானமேவ அபிததாதி இத்யவகம்யதே
தத் விஷய தயோதாஹ்ருதே ச ஸ்லோகே யத் தத் கவயோ வேதயந்த -தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய –இத்யேவமாதிபிஸ் ஸூரிபிர் த்ருஸ்யத்வ வசனம் ததேவ த்ரபயதி -ஸூத்ரார் தஸ்து –ஈஷதி கர்ம ஸ பரமாத்மா த்யாய தீஷத்யோ ரேக விஷயத்வேந த்யாயதி கர்மா அபி ஸ ஏவேத் யர்த -வ்யபதேசாத் -தத் விஷய கதயா சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரம் சேதி பரமாத்ம தர்மாணாம் வ்யபதேசாத் —12-இது ஈஷதி கர்ம அதி கரணம் –4-

1-3-5-தஹர அதி கரணம்
78-தஹர உத்தரேப்ய –
-சாந்தோக்யே அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரா ஹாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ் ஞாஸி தவ்யம் இத்யத்ர ஹ்ருதய புண்டரீக மத்ய வர்தீ தஹர ஆகாஸஸ் ஸ்ரூயமாண கிம் பூதகாச -உத ஜீவ அத பரமாத் வேதி ஸம்சய –ப்ரதமம் தாவத் பூதாகாஸ இதி யுக்தம் ஆஸ்ரயிதும் இதி பூர்வ பக்ஷ
ஆகாஸ சப்தஸ்ய பூதாகாஸோ ப்ரஸித்தி ப்ராசுர்யாத் ஆகாஸ அந்தர்வர்த்திநோ அந்யஸ்ய அன்வேஷ்ட வ்யதா ப்ரதீதேஸ் ச –ராத்தாந்தஸ்து –கிம் ததத்ர வித்யதே யதன் வேஷ்டவ்யம் இதி சோதிதே யாவான் வா அயமாகாச இத்யாராப்ய ஏதத் ஸத்யம் ப்ரஹ்ம புரம் இத் யந்தேந தஹர ஆகாஸஸ் யாதி மஹத்த்வ ஸர்வ ஆஸ்ரயத்வ அஜரத்வ சத்யத்வாத்ய பி தாய அஸ்மின் காமாஸ் ஸமாஹிதா இத்யாகாஸ அந்தர் வர்திநோ அன்வேஷ்டவ்யா காமா இதி ப்ரதிபாத்ய கோ அயம் தஹர ஆகாஸ ஸப்த நிர் திஷ்ட -கே தத் ஆஸ்ரயா காமா இத் யபேஷாயாம் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா இத்யாரப்ய ஸத்ய ஸங்கல்ப இத் யந்தேந ஆகாஸ ஸப்த நிர் திஷ்ட ஆத்மா காமாஸ் ச அபஹத பாப்மத் வாதயஸ்தத் விசேஷண பூதா இதி ப்ரதிபாத யத் வாக்யம் அபஹத பாப்மத்வாதி விஸிஷ்ட பரமாத்மாநமாஹ –உபக்ரமே ச அன்வேஷ்ட வ்யதயா ப்ரதிஜ்ஞாத ஆகாஸ ஆத்மா ஏதத் விசேஷண பூதா அபஹத பாப்மத் வாதய காமா இதி வாக்யம் ஞாபயத் அத ய இஹாத்மாந மநுவித்ய வ்ரஜந்த்யேதாம்ஸ் ச சத்யான் காமான் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி இத் யுப ஸம்ஹரதி -அதோ அயம் தஹர ஆகாஸ அபஹத பாப்மத் வாதி விஸிஷ்ட பரமாத் மேதி நிஸ்ஸீயதே ந பூத ஆகாசாதிரிதி -ஏவம் தர்ஹ் யஸ்மிந் வாக்யே அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய இதி ப்ரத்யகாத்ம ப்ரதீதே -தஸ்ய சோத்தரத்ர பிரஜாபதி வாக்யே அபஹத பாப்மத்வாதி குணகத்வாவகமாத் ப்ரத்யகாத் மைவ தஹராகாச இதி பூர்வ பஷீ மன்யதே –ராத்தாந்தீ து ப்ரத்யகாத்மா கர்ம பரவசதயா ஜாகரித ஸ்வப்ந ஸூஷுப் த்யாத் யவஸ்தாபி திரோஹித அபஹத பாப்மத்வாதிக பரமாத்மநம் உப ஸம்பந்த தத் ப்ரஸாதாதாவிரர்பூத குணக பிரஜாபதி வாக்யே ப்ரதிபாதிந தஹர ஆகாஸஸ்த்வ திரோஹித நிருபாதிக அபஹத பாப்மத்வாதிக பிரத்யாகாத்மன்ய ஸம்பாவ நீய ஜகத் விதரண ஸமஸ்த சித் அசித் வஸ்து நியமநாத் யநந்த குணக பிரதிபன்ன இதி நாயம் ப்ரத்யகாத்மா தஹராகாஸ அபி து பரமாத்மை வேதி மன்யதே —
ஸூத்ரார்தஸ்து -தஹராகாச பரம் ப்ரஹ்ம உத்தரேப்ய –உத்தர வாக்யக தேப்ய அபஹத பாப்மத் வாதி பரமாத்மா அசாதாரண தர்மேப்யோ ஹேதுப்ய –13-

79-கதி ஸப்தாப்யாம் ததாஹி த்ருஷ்டும் லிங்கம் ச –அஸ்மின் தஹாராகாஸே ஸர்வாஸாம் ப்ரஜாநாம் அஜாநதீநாம் அஹரஹர்யா கதிஸ் ஸ்ரூயதே யஸ் ச தஹராகாஸாவமர்ஸ ருபை தச் ஸப்த ஸாமாநாதி கரண தயா ப்ரயுக்தோ ப்ரஹ்ம லோக ஸப்த தாப்யாம் தஹராகாச பரம் ப்ரஹ்மேத் யவகம்யதே -தத்யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம ஷேத்ரஞ்ஞா உபர்யுபரி சஞ்ச ரந்தோ ந விந்தே யுரேவமேவேமாஸ் ஸர்வா ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்த்ய ந்ருதேன ஹி ப்ரத்யூடா இதி ததா ஹி த்ருஷ்டம் –ததா ஹ்யன்யத்ர பரஸ்மின் ப்ராஹ்மண் யேவம் ரூபம் கமநம் த்ருஷ்டும் ஏவமேவ கலு சோம்யேமாசர்வா ப்ரஜாஸ் ஸதி சம்பத்ய ந விதுஸ் ஸதி ஸம்பத்ஸ் யாமஹ இதி –ததா ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச பரஸ்மின் ப்ரஹ்மண் யேவ த்ருஷ்ட –ஏஷ ப்ரஹ்ம லோகஸ் ஸம்ராடிதி ஹோவாச இதி லிங்கம் ச –மா பூதன்யத்ர தர்சனம் அஸ்மின் ப்ரகரணே ஸர்வாஸாம் ப்ரஜாநாம் ஸ்ரூயமாண மஹரஹர் கமநம் ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச தஹராகாச ஸஸ்ய பரமாத்மத்வே பர்யாப்தம் லிங்கம் -ச ஸப்தோ அவதாரணே -ஏததேவ பர்யாப்தமித் யர்த –14-

80-த்ரு தேஸ் ச மஹிம்நோ அஸ்யாஸ்மிந்நு பலப்தே –அஸ்ய

த்ருத்யாக் யஸ்ய பரமாத்மநோ மஹிம்நோ அஸ்மின் தஹராகாஸே உப லப்தேரயம் பரமாத்மா –த்ருதி -ஜகத் விதரணம் பரமாத்மநோ மஹிமேத் யன்யத்ராவகம்யதே –ஏஷ ஸர்வேஸ்வர ஏஷ பூதாதி பதிரேஷ பூத பால ஏஷ ஸேதுர் விதரண ஏஷாம் லோகாநாம ஸம் பேதாய இதி –ஸா ச அஸ்மிந்தஹராகாஸ உப லப்யதே –அத் ய ஆத்மா ஸ ஸேதுர்வி த்ருதி ரேஷாம் லோகாநாம ஸம் பேதாய இதி –15-

81-ப்ரசித்தேஸ் ச –கோ ஹ்யேவாந் யாத்க ப்ராண்யாத் யதேஷ ஆகாஸ ஆனந்தோ ந ஸ்யாத் ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸாதேவ ஸமுத்பத்யந்தே இத்யாதிஷ் வாகாஸ சப்தஸ்ய பரஸ்மின் ப்ரஹ்மணி ப்ரஸித்தே ஆகாஸ ஸப்த ஏவ பரமாத்ம தர்ம விசேஷிதோ பூதகாச சங்காம் நிவர்த்தய தீத் யர்த –16-

82-இதர பராமர்ஸாத்ஸ இதி சேந்நா சம்பவாத் –பரமாத்மந

இதர ஜீவ அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய இத ஜீவஸ்ய பரமார்ஸாத்ஸ ஏவ தஹாராகாச இதி சேத் தன்ன பூர்வோக்தாநாம் குணாநாம் தஸ்மிந் ந சம்பவாத் –17-

83-உத்தராச் சேதாவிர் பூதஸ்வரூபஸ் து –உத்தராத் –பிரஜாபதி வாக்யாத் அபஹத பாப்மத்வாதி குணகோ ஜீவோ அவகம்யத இதி சேத் தன்ன ஜாகரி தாத்ய வஸ்தாபிர நாதி கால ப்ரவ்ருத்தாபி புண்ய பாப ரூப கர்ம மூலாபி திரோஹித குணக பர ப்ரஹ்மோபாஸ ஜெனிததுப ஸம்பத்த்யா ஆவீர் பூதஸ்வ ரூபோ அசவ் ஜீவஸ் தத்ர பிரஜாபதி வாக்யே அபஹத பாப்மத்வாதி குணக கீர்தித தஹராகாசஸ் த்வதி ரோஹித ஸ்வரூப அபஹத பாப் மத்வாதி குணக இத்யஸ்மிந்தஹராகாஸே ந ஜீவ சங்கா –18-

தஹர வாக்யே ஜீவ பரா மர்ஸ கிமர்தமிதி சேத் தத்ராஹ

84-அந்யார்தஸ் ச பராமர்ஸ –அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யத இதி-பரம் ஜ்யோதிஸ் ஸ்வரூப தஹராகாஸோப ஸம்பத்த்யா அஸ்ய ஜீவஸ்யா ந்ருத திரோஹித ஸ்வரூபஸ்ய ஸ்வரூப ஆவிபாவோ பவதீதி தஹராகாசஸ்ய ஜகத் விதரணாதிவஜ் ஜீவ ஸ்வரூப ஆவீர் பாவாபாதந ரூப ஸம்பத் விசேஷ ப்ரதி பாதநார்தோ ஜீவ பராமர்ஸ –19-

85-அல்ப ஸ்ருதேரிதி சேத்ததுக்தம் –தஹரோ அஸ்மின் நித்யல்ப பரிமாண ஸ்ருதி ராராக்ரப மிதஸ்ய ஜீவஸ்யைவோப பத்யதே ந து ஸர்வஜ் மாஜ் ஜ்யாயஸோ ப்ரஹ்மண இதி சேத் தத்ர யதுத்தரம் வக்த்வயம் தத் பூர்வமேவோக்தம் -நிசாய்யாத் வாதித்யநே ந –20-

86-அனு க்ருதேஸ் தஸ்ய ச -அநு க்ருதி –அநு கார தஸ்ய பரமாத்மநோ அநு காராத்தி ஜீவஸ்ய ஆவீர் பூத ஸ்வரூபஸ்ய அபஹத பாப்மத்வாதி குணகத்வம் அதோ அநு கர்து ஜீவாத் அநு கார்ய பர ப்ரஹ்ம பூதோ தஹாராகாச அர்த்தான்தர பூத ஏவ –தத் அநு காரஸ் ச தத் ஸாம்யாபத்திஸ் ஸ்ரூயதே யதா யஸ்ய பச்யதே ருக்ம வர்ணம் கார்தாரமீசம் புருஷன் ப்ரஹ்ம யோநிம் –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி இதி –21-

87-அபி ஸ்மர்யதே –ஸ்மர்யதே ச தத் உபாஸநாத் தத் ஸாம்யா பத்தி ரூபாநுக்ருதிர் ஜீவஸ்ய இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதரம்யம் ஆகதா –ஸர்கே அபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச இதி —22-இதி தஹராதி கரணம் –5-

1-3-6-ப்ரமாதி கரண பூர்வ பாக
88-ஸப்தாதேவ ப்ரமித –
-கட வல்லீஷ்வாம் நாயதே —

அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி–ஈஸாநோ பூத பவ்யஸ்ய ந ததோ விஜூ குப்ஸதே -ஏதத் வைதத் -உத்தரத்ர ச அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிரிவாதூமக -ததோ பரிஷ்டாத் அங்குஷ்ட மாத்ர புருஷோ அந்தராத்மா ஸதா ஜநாநாம் ஹ்ருதயே சந்நிவிஷ்ட இதி அத்ராங்குஷ்ட ப்ரமிதோ ஜீவாத்மா உத பரமாத்மேதி ஸம்சய -ஜீவாத் மேதி பூர்வ பக்ஷ –அந்யத்ர ஸ்வீக்ருத ஸ்பஷ்ட ஜீவ பாவே புருஷே அங்குஷ்ட ப்ரமிதத்வஸ்ருதே -ப்ராணாதி பஸ் ஸஞ்சரதி ஸ்வ கர்மபிர் அங்குஷ்ட மாத்ரோ ரவிதுல்ய ரூப இதி -ராத்தாந்தஸ்து –தத்ர ஸ்வ கர்ம பிர் இதி ஜீவ பாவ நிஸ்ஸயவதத்ராபி ஈஸாநோ பூத பவ்யஸ்யேதி பூத பவ்யேஸித்ருத்வ தர்சநாத் பரமாத்மைவேதி -ஸூத்ரார்தஸ்து –ஸப்தாதேவ ப்ரமித –அங்குஷ்ட ப்ரமித பரமாத்மைவ ஈஸாநோ பூத பவ்யஸ்ய இதி பூத பவ்யேஸி த்ருத்வ தர்சநாத் பரமாத்மைவேதி
ஸூத்ரார்தஸ்து ஸப்தாதேவ ப்ரமித –அங்குஷ்ட ப்ரமித பரமாத்மைவ ஈஸாநோ பூத பவ்யஸ்யேதி பரமாத்ம வாசி ஸப்தாத்

கதமநவச் சின்னஸ்ய பரமாத்மநோ அங்குஷ்ட ப்ரமிதத்வ மித்யா சங்க்யாஹ
89-ஹ்ருத்ய பேஷயா து மனுஷ்யாதி காரத் வாத்
–உபாஸ நார்த்தம் உபாஸக ஹ்ருதயே வ்ரத மாநத்வாத் உபாஸக ஹ்ருதயஸ்ய அங்குஷ்ட மாத்ரத்வாத் ததபேஷயேதம் அங்குஷ்ட ப்ரமிதத்வம் -மனுஷ்யாணாம் ஏவ உபாஸ கத்வ ஸம்பாவநயா மனுஷ்யாநதி க்ருத்ய ப்ரவ்ருத்தத் வாச்சாஸ்த்ரஸ்ய மனுஷ்ய ஹ்ருதயாபேக்ஷயேதம் யுக்தம் ஸ்திதம் தாவதுத்தரத்ர ஸமாப யிஷ்யதே –24–இதி ப்ரமித அதி கரண பூர்வ பாக–

1-3-7-தேவாதி கரணம்
90-ததுபர்யபி பாதராயணஸ் சம்பவாத் –மனுஷ்யாதிகாரம்

ப்ரஹ்ம உபாஸந ஸாஸ்த்ரமித்யுக்தம் –தத் ப்ரசங்கேந தேவாதீ நாமபி ப்ரஹ்ம வித்யாயாம் அதிகாரோ அஸ்தி நவேதி சிந்த்யதே ந தேவாதீநாம் அதிகார அஸ்தீதி பூர்வ பக்ஷ –பரி நிஷ் பன்னே ப்ரஹ்மணி சப்தஸ்ய ப்ராமாண்ய சம்பவே அபி தேவாதீநாம் விக்ரஹாதி மத்த்வே ப்ரமாணா பவாத் மந்த்ரார்த்தவாதாநாம் -அபி விதி சேஷ தயா விக்ரஹாதி ஸத் பாவபரத்வா பாவாத் விக்ரஹவந் நிர் வர்த்யாஹரஹரநுஷ்டீயமாந விவேகாதி சாதன ஸப்தக ஸம்ஸ் க்ருதமநோ நிஷ் பாத்யோபாஸந நிர் வ்ருத்தவ் தேஷாம் ஸாமர்த்யா பாவாத்
ராத்தாந்தஸ்து –ஜகத் ஸ்ருஷ்டி ப்ரகரணேஷு நாம ரூப வ்யாகரண ஸ்ருத்யைவ தேவாதீ நாம் விக்ரஹாதி மத்த்வம் ஸித்யதி -தேவாதீ நாம் தேஹ இந்த்ரியாதி கரணமேவ ஹி நாம ரூப வ்யாகரணம் மந்த்ரார்த்த வாத யோஸ் ச ததுபலப்தே –தயோர் அநுஷ்டேய-ப்ரகாஸந ஸ்துதி பரத்வே அபி ததுப பத்தயே தத் ஸத் பாவே பிரமாணத்வாத் தேவாதீ நாம் விக்ரஹாதி மத்த்வ ஸித்தி -நஹி விக்ரஹாதி மத்தயா ஸ்துதி ப்ரகாஸநம் ச ததபாவே சம்பவதி —
அதஸ் ஸாமர்த்ய ஸம்பவாதஸ் த்யேவாதிகார –ஸூத்ரார்தஸ்து ததுபர்யபி தேப்ய –மனுஷ்யேப்ய உபரி வர்த்தமாநாநாம் தேவாதீநாமப்யதிகாரோ அஸ்தி
யத்வா தத் ப்ரஹ்ம உபாஸநம் உபரி தேவாதிஷ்வபி சம்பவதி தேஷாம் அபி ப்ரஹ்ம ஸ்வரூப தத் உபாசன ப்ரகாரஜ் ஞாந தத் அர்த்தித்வதது பாதாந ஸாமர்த்ய சம்பவாத் –பூர்வோபார் ஜிதஜ் ஞாநா விஸ்மரணாத் ஞான ஸம்பவ தாபத்ரய அபிஹதி பூர்வக ப்ரஹ்ம குணஜ் ஞாநாச் சார்தித்வ ஸம்பவ –ஸ்ருஷ்டி வாக்ய மந்த்ரார்த்தவாதேஷு விக்ரஹவத்த்வாதி தர்சநாத் ஸாமர்த்ய ஸம்பவஸ் சேதி பகவான் பாதராயணோ மன்யதே –25-

91-விரோத கர்மணீதி சேந்நா நேக ப்ரதி பத்தேர் தர்சநாத் –கர்மணி யாகாதவ் விக்ரஹ வத்த்வே ஸதி ஏகஸ்ய யுகபதநேகயாகேஷு ஸந்நிதான அநுப பத்தேர் விரோத ப்ரஸஜ்யதே இதி சேத் தன்ன ஸக்தி மதாம் ஸுபரி ப்ரப்ருதீநாம் யுகபதநேக சரீர ப்ரதிபத்தி தர்சநாத் –26-

92-ஸப்த இதி சேந் நாத ப்ரபவாத் ப்ரயக்ஷ அநு மாநாப்யாம் –விரோத இதி வர்ததே –மா பூத் கர்மணி விரோத -ஸப்தே து வைதிகே விரோத ப்ரஸஜ்யதே விக்ரஹத்த்வே ஹி தேஷாம் ஸாவ யவத்வே நோத்பத்தி விநாஸ யோகா துத்பத்தே ப்ராக் விநாஸா தூரத்வம் ச வைதிகாநாம் இந்த்ராதி ஸப்தாமாமர்தா ஸூந்யத்வம் அநித்யத்வம் வா ஸ்யாதிதி சேத் தன்ன அத ப்ரபவாத் அத வைதிகா தேவ ஸப்தாத் இந்த்ராதே ப்ரபவான் -பூர்வ பூர்வேந்திராதவ் விநஷ்டே வைதிகாதிந்ராத்யாக்ருதி -விசேஷ வாசிந ஸப்தா திந்ராத்யாக்ருதிவிசேஷம் ஸ்ம்ருத்வா ததாகாரமபரமிந்த்ராதிகம் ஸ்ருஜிதி பிரஜாபதிரிதி வைதிகஸ்ய சப்தஸ்ய ந கச்சித் விரோத –
ந ஹி தேவதைத்தாதி ஸப்தவத் இந்த்ராதி ஸப்தா வ்யக்தி விசேஷ சங்கேத பூர்வகா ப்ரவ்ருத்தா அபி து கவாதி ஸப்தவதாக்ருதி விசேஷ வாசிந இதி தேஷாமபி நித்ய ஏவ வாஸ்ய வாசக பாவ வைதிகாதிந்த்ராதி சப்தாத் ததர்த்த விசேஷம் ஸ்ம்ருத்வா குலாலாதிரிவ கடாதிகம் பிரஜாபதிஸ் ஸ்ருஜதீதி குதோ அவகம் யதே -ப்ரத்யக்ஷ அனுமானாப் யாம் -ஸ்ருதி ஸ்ம்ருதிப்யாமித்யர்த்த -ஸ்ருதிஸ் தாவத் வேதேந ரூபே வ்யாகரோத் ஸதாஸதீ ப்ரஜாபதி –ததா ஸ பூரிதி வ்யாஹரத் ஸ பூமிம ஸ்ருஜத இத்யாதிகா
ஸ்ம்ருதிரபி ஸர்வேஷாம் ச ஸ நாமாநி கர்மாணி ச ப்ருதுக் ப்ருதுக் வேத சப்தேப்ய ஏதாதவ் ப்ருதுக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே -நாம ரூபம் ச பூதாநாம் க்ருத்யா நாம் ச ப்ரபஞ்ச நம் -வேத சப்தேப்ய ஏவாதவ் தேவாதீ நாம் சகார ச இத்யாதிகா –29-

93-அத ஏவ ச நித்யத்வம் –யத ப்ரஜாபதி வைதிகாச் சப்தா தர்தாகாரம் ஸ்ம்ருத்வா ததாகாரம் ஸ்ம்ருத்வா ததாகாரம் ஸர்வம் ஸ்ருஜதி -அதஸ் ச வஸிஷ்ட விஸ்வா மித்ராதீ நாம் மந்த்ர ஸூக்தாதி க்ருத்த்வே அபி மந்த்ராதி மயஸ்ய வேதஸ்ய நித்யத்வம் திஷ்டத்யேவ–ப்ரஜாபதிர் ஹி நைமித்திக பிரளயாந்தரம் மந்த்ர க்ருதோ வ்ருணீதே -விச்வாமித்ரஸ்ய ஸூக்தம் பவதீத்யாதி வேத ஸப்தேப்யோ அநதீத மந்த்ராதி தர்சன சக்த வசிஷ்டாத்ய க்ருதி விசேஷம் ஸ்ம்ருத்வா வசிஷ்டத்வாதி பத ப்ராப்தே அனுஷ்டித கர்ம விசேஷ அம்ஸா ஸ் அநு ஸ்ம்ருத்ய தத் ஆகார விசேஷான் தான் வஸிஷ்டாதீன் ஸ்ருஜதி -தே சாநதீத்யைவ வேதைகதேஸ பூத மந்த்ராதீன் ஸ்வரதோ வர்ணதஸ் சாஸ்கலிதான் படந்தி -ததேஷாம் மந்த்ராதி க்ருத்வே அபி வேத நித்யத்வம் உப பத்யதே –28-

ப்ரஜாபதி ப்ரப்ருதிஷுஸர்வேஷு தத்த்வேஷ்வ வ்யாக்ருத பர் யந்தேஷு அவ்யாக்ருத பரிணாம ரூபேஷு சப்தமயேஷி வேதேஷு ச விநஷ்டேஷ்வ வ்யாக்ருத ஸ்ருஷ்ட்யா வ்ருத்தவ் கதம் வேதஸ்ய நித்யத்வ மித்யத்ர ஆஹ

94-ஸமாந நாம ரூபத் வாச்சா வ்ருத்தாவப்ய விரோதோ தர்சநாத்ம் ஸ்ருதேஸ் ச –அவ்யாக்ருத ஸ்ருஷ்ட்யா வ்ருத்தா வபி ஸ்ருஜ்யாநாம் ஸமாந நாம ரூபத்வாதேவ ந கஸ்ஸித் விரோத ஆதி சர்கே அபி ஹி பரம புருஷ பூர்வ ஸம்ஸ்தாநம் ஜகத் ஸ்மரன் ததைவ ஸ்ருஜதி வேதாம்ஸ் ச பூர்வ அநு பூர்வீ விஸிஷ்டாநாவிஷ் க்ருதயா ஹிரண்ய கர்ப்பாய ததாதீதி -பூர்வ ஸம்ஸ்தான மேவ ஜகத் ஸ்ருஜதீதி கதமவகம்யதே -தர்சநாத் ஸ்ம்ருதேஸ் ச –தர்சனம் ஸ்ருதி அஹோ ராத்ராணி விததத் விஸ்வஸ்ய மிஷதோ வஸீ ஸூர்யா சந்த்ர மஸவ் தாதா யதா பூர்வ மகல்பயத் திவம் ச ப்ருத்வீம் சாந்தரிஷமதோ ஸூவரிதி யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை இதி ச ஸ்ம்ருதிராபை யதர் துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே –த்ருஸ்யந்தே தாநி தாந்யேவ ததா பாவா யுகாதிஷு -இதி ஏததேவ வேதஸ்ய நித்யத்வம் யத் பூர்வ பூர்வ உச்சாரண க்ரம விசேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேணோச் சார்யத்வம் பரம புருஷோ அபி ஸ்வரூப ஸ்வா ராதன தத் பலயாதாத்ம்யாவ போதி வேதம் ஸ்வ ஸ்வரூபவந் நித்யமேவ பூர்வ அநு பூர்வீ விசிஷ்டம் ஸ்ம்ருத்வா ஆவிஷ்கரோதி -அதோ தேவாதீநாம் ப்ரஹ்ம வித்யாதி காரே ந கஸ்சித் விரோத –29-இதி தேவதாதி கரணம் –7-

1-3-8-மத்வதி கரணம்
95-மத்வாதிஷ்வ சம்பவாதநதி காரம் ஜைமிநி
–சாந்தோக்ய அசவ் வா ஆதித்யோ தேவ மது இத் யுபக்ரம்ய –தத் யத் பிரதமம் அம்ருதம் தத்வஸவ உப ஜீவந்தி இத்யுக்த்வா ஸ ய ஏததேவம் அம்ருதம் வேத வஸூநாமேவைகோ பூத்வா அக்னி நைவ முகேநைத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யதி இத்யாதிநா ருக் யஜுஸ் ஸாமாதி வேதோதித கர்ம ஸம்பாத்ய ரஸாதாரதயா மதுமயஸ் யாதித் யஸ்ய பூர்வ தக்ஷிண பஸ்ஸிமோத்தரோர்த்வாம் ஸாந் வஸூ ருத்யாதித்ய மருத் ஸாத்யநாம்நாம் தேவ கணாநாம் போக்யத்வேந அபிதாய தைர்புஜ்யமாநாகாரேணாதித்யாம் ஸாநு பாஸ்யாநு பதிஸ்ய தாநேவாதித்யாம் ஸாம்ஸ் ததா பூதான் ப்ராப்யஅநு பதி ஸதி –ஏவமாதிஷு பாஸ நேஷுவஸ்வாதீநாம் உபாஸ்யாந்தர் கதத்வேந கர்ம கர்த்ரு பாவ விரோதாத் ப்ராப்யஸ்ய வஸூத் வாதே ப்ராப்தத் வாச்ச –ராத்தாந்தஸ்து –ப்ரஹ்மண ஏவ ததவஸ் தஸ்யோ பாஸ்யாதீநாம் ஸதாம் ஸ்வா வஸ்த ப்ரஹ்ம அநு ஸந்தாநா விரோதாத் கல்பாந்தரே வஸூத் வாதே ப்ராப்தத்வா விரோதாஸ் ச வஸ்வாதீநாம் அதிகார சம்பவதீதி –ஸூத்ரார் தஸ்து மது வித்யாதிஷு வஸ் வா தீநாம் அநதிகாரம் ஜைமிநிர் மன்யதே -அசம்பவாத் -வஸ்வாதீநாம் ஏவ உபாஸ்யாநாம் உபாஸகத்வ அசம்பவாத் வஸூத் வாதே ப்ராப்தத்வாதேவ ப்ராப்யத்வா சம்பவாச் ச –30-

96-ஜ்யோதிஷி பாவாச் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி ராயுர் ஹோபாஸதே அம்ருதம் இதி ஜ்யோதிஷி -பரஸ்மின் ப்ரஹ்மணி தேவ மனுஷ்ய யோரதிகார ஸாதாரண்யே ஸத்யபி ஜ்யோதிஷாம் ஜ்யோதி —பரம் ப்ரஹ்ம தேவா உபாஸதே இதி விசேஷ வசனம் வஸ்வா தீநாம் கர்ம கர்த்ரு பாவ விரோதாத்தேஷு தேஷாம் அநதிகாரம் த்யோதயதி -தேவா இதி ஸாமான்ய வசனம் ச -வஸ்வாதி விசேஷ விஷய மித்ய வகம்யதே -அந் யேஷாம விரோதாத் –31-

97-பாவம் து பாத ராயணோ அஸ்தி ஹி –து -ஸப்த பக்ஷம் வ்யாவர்த்தயதி –வஸ்வாதீ நாம் மது வித்யாதிஷு அதிகார ஸத் பாவம் பகவான் பாதராயணோ மன்யதே -அஸ்தி ஹி வஸ்வாதீ நாமேவோபாஸ் யத்வம் ப்ராப்யத்வம் ச இதாநீம் வஸூ நாமேவ ஸதாம் கல்பாந்தரே வஸூத் வஸ்ய ப்ராப்யத்வ சம்பவாத் ப்ராப்யத்வம் சம்பவதி -ஸ்வாத்மநாம் ப்ரஹ்ம பாவ அநு ஸந்தான ஸம்பவாது பாஸ்யத்வம் ச சம்பவதி -ய ஏதா மேவம் ப்ரஹ்ம உப நிஷதம் வேத இதி ஹி க்ருத்ஸ்நாயா மது வித்யாயா ப்ரஹ்ம வித்யாத்வ மவகம்ய தே –32–இதி மத்வதிகரணம்–8-

1-3-9- அப ஸூத்ராதி கரணம்
98-ஸூகஸ்ய ததநாதர ஸ்ரவணாத் ததாத்ரவணாத் ஸூஸ்யதே ஹி
-ப்ரஹ்ம வித்யாயாம் ஸூத்ரஸ் யாப்யதிகாரோ அஸ்தி -நேதி ஸம்சய –அஸ்தீதி பூர்வ பக்ஷ –அர்தித்வ ஸாமர்த்ய சம்பவாத் –ஸூத்ரஸ்யாநக்நி வித்யத்வே அபி மநோ வ்ருத்தி மாத்ரத்வாத் உபாசனநஸ்ய சம்பவதி ஹி ஸாமர்த்யம் -ப்ரஹ்ம ஸ்வரூப தத் உபாஸந ப்ரகாரஜ் ஞானம் சேதிஹாஸ புராண ஸ்ரவணாதேவ நிஷ்பத்யதே
அஸ்தி ஹி ஸூத்ரஸ் யா பீதிஹாஸ புராண ஸ்ரவணாநுஜ்ஞா -ஸ்ராவயேச் சதுரோ வர்ணாந் க்ருத்வா ப்ராஹ்மண மக்ரத இதி –ததா தத்ரைவ விதுராதீ நாம் ப்ரஹ்ம நிஷ்டத்வம் த்ருஸ்யதே -உபநிஷத் ஸ்வபி -ஆஜஹாரமாஸ் ஸூத்ரா நேநைவ முகே நாலாப யிஷ்யதா இதி ஸூத்ர சப்தேநா மந்த்ர்ய ப்ரஹ்ம வித்யோபதேஸ தர்சநாச் ஸூத்ரஸ்ய அபீ ஹாதிகாரஸ் ஸூஸ்யதே –ராத்தாந்தஸ்து –உபாஸநஸ்ய மநோ வ்ருத்தி மாத்ரத்வே அபி அநதீதவே தஸ்ய ஸூத் ரஸ்ய உபாஸநோபாய பூதஜ் ஞாநா சம்பவாத் ந சார்மத்ய ஸம்பவ -கர்ம விதிவத் உபாஸநா விதயோ அபி
த்ரை வர்ணிக விஷயாத்யயநக்ருஹீதஸ் வாத்யாயோத் பன்ன ஞாந மேவ உபாஸநோபாய தயா ஸ்வீ குர்வதே —
இதிஹாஸா தயோ அபி ஸ்வாத்யாய ஸித்த மேவ ஞானம் உப ப்ரும்ஹ யந்தீதி ததோ அபி நாஸ்ய ஞான லாப –ஸ்ரவாணானுஜ்ஞா து பாப ஷயாதி பலா -விதுராதீ நாம் து பவாந்தர வாஸநய ஞான லாபாத் ப்ரஹ்ம நிஷ்டத்வம் -ஸூத்ரேத்யா மந்த்ரணம் அபி ந சதுர்த்தி வர்ணத்வேந அபி து ப்ரஹ்ம வித்யா வைகல் யாச்சு கஸ்ய ஸம்ஜா தேதி –அதோ ந ஸூத்ரஸ் யாதிகார –ஸூத்ரார் தஸ்து -ப்ரஹ்ம வித்யா வைகல்யேந ஹம்ஸோக்தா நாதர வாக்ய ஸ்ரவணாத்ததை வாசார்யம் ப்ரத்யாத்ரவ ணாச்சார்யே தஸ்ய ஸூஷ்ரூ ஷோர் வித்யா அலாப க்ருதா ஸூக் ஸூஸ்யதே –ஹி சாப்தோ ஹேதவ் –யஸ்மா தஸ்ய ஸூகே ஸூஸ்யதே அதஸ் ஸோச நாச் ஸூத்ர இதி க்ருத்வா ஆசார்யோ ரைக்வ ஜான ஸ்ருதிம் ஸூத்ரேத்யா மந்த்ரயதே ந ஜாதி யோகே நேத்யர்த –33-

99-ஷத்ரியத்வகதேஸ் ச –-அஸ்ய ஸூஸ் ரூஷோ ஷத்ரியத்வாவக தேஸ் ச ந ஜாதி யோகேந ஸூத் ரேத்தயா மந்த்ரணம் ப்ரகரண ப்ரக்ரமே ஹி பஹு தாயீ இத்யாதி நா தாந பதித்வ பஹு தர பக்வாந் நதாயித்வக்ஷத்த்ருப்ரேக்ஷண பஹு கிராமாதி ப்ரதாநை ரஸ்ய ஜாந ஸ்ருதேஸ் ஸூஸ்ரூஷோ ஷத்ரியத்வம் ப்ரதீதம் –34-

100-உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத் —உபரிஷ்டடாச் சாஸ்யாம் வித்யாயாம் ப்ரஹ்மண ஷத்ரியோ ரேவான்வயோ த்ருஸ்யதே -அத ஹ ஸுநகம் ச காபேய மபிப்ரதாரிணம் ச இத்யாதி நா –
அப் ப்ரதாரீ ஹி சைத்ரதத ஷத்ரிய -அபிப்ரதாரிணஸ் சைத்ர தத்வம் ஷத்ரியத்வம் ச காபேய ஸாஹாச் சர்யால் லிங்காத் அவகம்யதே-
பிரகாரணா ந்தரே ஹி காபேய ஸஹஸரிண சைத்ரத தத்வம் ஷத்ரியத்வஞ்சா வகதம் -ஏதேந வாவ் சைத்ரரதம் காபேயோ அயாஜயந் இதி தஸ்மாச் சைத்ரரதோ நாமைக க்ஷத்ர பதரஜாயதேதி ச
அதோ அஸ்யாம் வித்யாயாம் அந்விதோ ப்ராஹ்மண அதிதரோ ஞான ஸ்ருதி பிர் அபி ஷத்ரியோ பவிதும் அர்ஹாதி –35-

101-ஸம்ஸ்கார பராமர்ஸாத்த பாவாபிலாச் ச –வித்யா உபதேஸே உப த்வா நேஷ்யே இத் யுப நயன ஸம்ஸ் கார பாரமர்ஸாத் ஸூத்ரஸ்ய தத் அபாவ சநாச்சாநதிகார -ந ஸூத்ர பாதகம் கிஞ்சிந்த ச ஸம்ஸ்காரம் அர்ஹாதி -இதி ஹி நிஷித்யதே –36-

102-தத் அபாவ நிர்தாரணே ச ப்ரவ்ருத்தே –நைதத ப்ராஹ்மணோ விவக்தும் அர்ஹாதி சமிதம் ஸும்யாஹர இதி ஸூஸ்ரூஷோர் ஜாபாலேஸ் ஸூதரத்வாபாவ நிஸ்ஸய ஏவோபதேச ப்ரவ்ருத்தேர் நாதிகார –37-

103-ஸ்ரவணாத்யய நார்த ப்ரதிஷேதாத் -ஸூத்ரஸ்ய ஸ்ரவணாத்யய நாதீதி ஹி ப்ரதிஷித்யந்தே –
தஸ்மாச் ஸூத்ர சமீபே நாத்யே தவ்யம் இதி –அநுபஸ்ருண்வதோ அத்யயநாதிர் ந ஸம் பவதி –38-

104-ஸ்ம்ருதேஸ் ச -ஸ்மர்யதே ச ஸூத்ரஸ்ய வேத ஸ்ரவணாதவ் தாண்ட -அத ஹாஸ்ய வேதம் உபஸ்ருண்வத த்ர்புஜதுப்யாம் ஸ்ரோத்ர ப்ரதி பூரணம் உதாஹரணே ஜிஹ்வாச் சேதோ தாரணே சரீர பேத இதி –அப ஸூத்ர அதி கரணம் –9-

ப்ராசங்கிகம் பரி ஸமாப்ய பிராகிருதம் பரி ஸமா பயதி

105-கம்ப நாத் —அங்குஷ்ட ப்ரமித ப்ரகரண மத்யே –யதிதம் மிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நிஸ்ஸ்ருதம் -மஹத் பயம் வஜ்ரமுத்யதம் பயாதஸ்யாக்நிஸ்தபதி இத்யாதவ் ப்ராண ஸப்த நிர் துஷ்டாங்குஷ்ட ப்ரமித ஜெனித பய நிமித்தாக்நி வாயு ஸூர்ய ப்ரப்ருதி க்ருத்ஸ்ந ஜகத் கம்பநாத் ஸ்ரூயமாணாதங்குஷ்ட ப்ரமித பரமாத்மை வேதி நிஸ்ஸீயதே –40-

106-ஜ்யோதிர் தர்சநாத் –அஸ்மின்நேவ ப்ரகரணே தத் சம்பந்தி தயா ந தத்ர ஸூர்யோ பாதி இத்யாரப்ய தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி இதி ஸர்வேஷாம் சாதகஸ்யா நவதிகாதி ஸயஸ்ய பாஸ் ஸப்தாபி ஹி தஸ்ய ப்ரஹ்ம பூதஸ்ய ஜ்யோதிஷோ தர்ச நாச் ச அங்குஷ்ட ப்ரமித பரமாத்மா –41—இதி ப்ரமித அதி கரணம்

1-3-10-அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாதி கரணம்
107-ஆகாஸோ அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாத்
–சாந்தோக்யே ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா தத் ப்ரஹ்ம ததம்ருதம் ஸ ஆத்மா இத்யத்ர ஆகாஸ ஸப்த நிர்திஷ்ட கிம் முக்தாத்மா உத பரமாத்மேதி ஸம்சய –முக்த இதி பூர்வ பக்ஷ -தூத்வா சரீர மக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகம் அபி ஸம்பவாமி இதி முக்தஸ்யாநந்தர ப்ரக்ருதத்வாத் –ராத்தாந்தஸ்து –நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா இதி ஸ்வயம் அஸ்ப்ருஷ்ட –நாம ரூப தயா நாம ரூபயோர் நிர்வோட்ருத்வேந ரூயமாணோ அயம் ஆகாசோ பக்த முக்தோபயா வஸ்தாத் ப்ரத்யகாத்மந அர்த்தாந்தரத் வாத் பரமாத்மைவ
ஸூத்ரார்த்தஸ்து –ஆகாஸ பரமாத்மா தஸ்ய நாம ரூபாயோர் நிர்வோட்ருத்வதத ஸ்பர்ச லக்ஷணார்த் தாந்தரத்வ வ்யபதேசா-ப்ரத்யகாத்மநோ ஹ்யர்த்தாந்தர பூத ஏவ நாம ரூபயோர் நிர்வோடா-பாத்தாவஸ்தஸ்தாவன் நாம ரூபாப்யாம் ஸ்ப்ருஷ்டஸ் தத் பரவஸஸ் சேதி ந நிர்வோடா முக்தஸ்யாபி ஜகத் வியாபார ரஹிதத் வான்ந நிரவோட் ருத்வம் –ஆதி சப்தேந நிருபாதிக ப்ரஹ்மத்வ அம்ருதத்வாத்மத்வா தீதி க்ருஹ்யந்தே தாநி நிருபாதிககாநி முக்தஸ்யாபி ந சம்பவந்தி –42-

நநு தத்வமஸ்யாதி நைக்ய வ்யபதேஸாத் நேஹ நாநாஅஸ்தீதி பேத ப்ரதிஷே தாச்ச ந ப்ரத்யகாத்மந அர்த்தாந்தர பூத பரமாத்மேத்யா சங்க்யாஹ
108-ஸூஷுப்த் யுத் க்ராந்த்யோர் பேதேந –வ்யபேதசாதிதி வர்த்ததே –ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்த ப்ராஜ்ஜேநா ஆத்மநா அந் வாரூட இதி
ஸூ ஷுப்த் யுத்க்ராந்யோர் லுப்த ஸகல விசேஷ விஞ்ஞாநாத் ப்ரத்யகாத்மநஸ் ததாநீ மேவ ஸர்வஞ்ஞதயா பேத வ்யபதேஸாத் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத எவ் பரமாத்மா –43-

109-பத்யாதி சப்தேப்ய –பரிஷ் வஞ்ஜகே ப்ராஞ்ஜே ஸ்ரூயமாணேப்ய பத்யாதி சப்தேப்யஸ் சாயம் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத பரமாத்மா ஸர்வஸ்யாதி பதிஸ் ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந இத்யாதவ்
ஐக்யோபதேஸ பேத ப்ரதிஷேதவ் து ப்ரஹ்ம கார்யத்வ நிபந்தநா விதி –தஜ்ஜ லான் இதி -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இத்யாதி ஸ்ருதி பிரேவ வ்யக்தவ் –44- இதி அர்த்தாந்தர்த்வாதி வியபதேஸ அதி கரணம் –10-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதாந்த தீபம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -த்விதீய பாதம்

February 26, 2024

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -த்விதீய பாதம்-

1-2-1-ஸர்வத்ர ப்ரஸித்தி யதிகரணம்
33-ஸர்வத்ர ப்ரஸித்தி உபதேசாத்
–சாந்தோக்ய -ஸ்ரூயதே ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ் ஜலாநிதி சாந்த உபாஸீத –அத கலு க்ரதுமயோ அயம் புருஷோ யதா க்ரது ரஸ்மில்லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி ஸ க்ரதும் குர்வீத மநோ மய ப்ராண சரீர இதி
அத்ர ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இதி ஸர்வாத்மகத்வேந நிர் திஷ்டம் ப்ரஹ்ம கிம் ப்ரத்யகாத்மா -உத பரமாத் மேதி ஸம்சய -ப்ரத்யகாத் மேதி பூர்வ பக்ஷ
ஸர்வத்ர தாதாத்ம்ய உபதேசோ ஹி தஸ்யைவ உப பத்தே -பரஸ்ய து ப்ரஹ்மணஸ் ஸகல ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதா நஸ்ய ஸமஸ்த ஹேயாகர ஸர்வ தாதாத்ம்யாம் விராதோதேவ ந சம்பவதி —
ப்ரத்யகாத்மநோ ஹி கர்ம நிமித்தோ ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்த ஸர்வ பாவ உப பத்யதே –ஸ்ருஷ்ட்யாதி ஹேதுகத்வம் ச தத் தத் கர்ம நிமித்தத்வேந ஸ்ருஷ்ட்யாதேர் உப பத்யதே
ப்ரஹ்ம சப்தோ அபி ப்ருஹத்வ குண யோகேந தஸ்மா தேதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னம் ச ஜாயதே இதிவத் தத்ரைவ வர்த்ததே –ரத்தாந்தஸ்து தஜ்ஜலான் இதி ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இதி தஜ்ஜன்ம ஸ்திதி லய ஹேதுகம் ததாத்மகத்வம் ப்ரஸித்த வந் நிர்திஸ்ய மாநம் பரஸ்யைவ ப்ரஹ்மண உப பத்யதே –பரஸ்மாத் ப்ரஹ்மண ஏவ ஹி ஜகஜ் ஜன்ம ஸ்திதி லயா ப்ரஸித்த ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதம் ஸர்வம ஸ்ருஜத இத்யாதி ஷு –ததா ஸர்வாத்மகத்வம் ச ஜன்மாதி ஹேதுகம் பரஸ்யைவ ப்ரஹ்மண ப்ரஸித்தம் ஸந் மூலாஸ் ஸோம்யேமாஸ் ஸர்வா ப்ரஜாஸ் ஸதாயநாஸ் ஸத் ப்ரதிஷ்டா -ஐததாத்ம்யமிதம் ஸர்வம் இதி -ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாநாத்மநஸ் ச பரஸ்ய ஹேயாகர ஸர்வ பூதாத்மத்வமவிருத்தம் –
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் யஸ்ய ப்ருத்வீ சரீரம் -ய ஆத்மநி திஷ்டன் -யஸ்யாத்மா சரீரம் ஸ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத இத்யாதி நா சரீர ஆத்ம பாவேந ஸர்வாத்மத்வ உப பாதநாத் –சரீர ஆத்மநோஸ் ச ஸ்வபாவ வ்யவஸ்தாபநாத் -ஸர்வம் ப்ரஹ்மேதி ஸாமாநாதி கரண்ய நிர்தேசஸஸ் ச ஸர்வ சப்தஸ்ய ஸர்வ சரீரகே ப்ராஹ்மண்யேவ ப்ரவ்ருத்தேர் உப பத்தே -சரீர வாசீ ஹி ஸப்த சரீரிண்யாத்மந்யேவ பர்யவஸ்யதி தேவ மனுஷ்யாதி ஸப்த வத்
ஸூத்ரார்தஸ்து –ஸர்வத்ர ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இதி நிர்திஷ்டே வஸ்துநி ஸர்வ ஸப்த வாஸ்யே ஸாமாநாதி கரண்யேந தத் ஆத்மதயா நிர் திஷ்டம் பரம் ப்ரஹ்மைவ
குத -ப்ரஸித்த உபதேசாத் -தஜ்ஜலாநிதி ஸர்வம் இதம் ப்ரஹ்ம கலு இதி ப்ரஸித்தவத் தஸ்ய உப தேஸாத்
ததேவ ஹி ஜகஜ் ஜந்ம ஸ்திதி லய ஹேதுத்வேந வேதாந்தேஷு ப்ரஸித்தம் –1-

34–விவஷித குண உபபத்தேஸ் ச –மநோ மயத்வாதிகாஸ் ஸத்ய ஸங்கல்பத்வ மிஸ்ரா விவஷிதா –குணா பரஸ்மின் நேவ உப பத்யந்தே –2-

35-அநுப பத்தேஸ் து சாரீர –ஏதேஷாம் குணா நாம் அநந்த துக்க மிஸ்ர பரிமித ஸூகே லவ பாகிந் யஜ்ஜே கர்ம பரவஸே ஸாரீரே பிரத்யாகாத்மந் யநுப பத்தேஸ் சாயம் ந சாரீர அபி து பரமேவ ப்ரஹ்ம –3-

36-கர்ம கர்த்ரு வ்யபதேஸாச் -ச ஏதமித ப்ரேத்யாபி சம்ப விதாஸ்மி இதி ப்ராப்ய தாயோ பாஸ்யோ நிர்திஸ்யதே ப்ராப்த்ருதயா ச ஜீவ –அதஸ் ச ஜீவா தன்யதேவேதம் பரம் ப்ரஹ்ம –4-

37-ஸப்த விசேஷாத் –ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதய இதி சாரீரஷ் ஷஷ்ட்யா நிர் திஷ்ட உபாஸ்ய ப்ரதமயா –அதஸ் ச ஜீவாதந்ய –5-

38-ஸ்ம்ருதேஸ் ச -ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹனம் ச இதி ஸ்ம்ருதேஸ் ச –அதஸ் ச ஜீவா தன்ய உபாஸ்ய பரமாத்மா –6-

39-அர்ப் கௌகஸ்த்வாத் தத் வ்யபதேசாச் ச நேதி சேந்ந நிஸாய்யத்வா தேவம் வ்யோமவச்ச -ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதய இதி அல்ப ஸ்தானத் வாத் அணீயான் வ்ரீஹேர்வா யாவாத்வா இத் யல்பத்வ வ்யபதேசாச் ச ந பரம் ப்ரஹ்மேதி சேந்ந நிசாய்யத்வாதேவம் ஏவம் உபாயஸ் வாத்தே தோரல்பாயதநத் வால்பத் வ்யபதேஸ -ந ஸ்வரூப அல்பதவேந ஜ்யாயாந் ப்ருதிவ்யா இத்யாதி நா ஸர்வஸ் மாஜ்ஜ்யாயஸ்த் வோப தேஸாத் -ஜ்யாயஸோ அப்யஸ்ய ஹ்ருதயாயதநாவச் சேதேந அல்பத்வ அநு ஸந்தானம் உப பத்யதே -வ்யோமவத் யதா மஹதோ அபி வ்யோம்நஸ் ஸூசி பதாதிஷ் வல்பத்வ அநு சந்தானம் -ச சப்தோ அவதாரணே தத்வ தேவேத் யர்த —
ஸ்வா பாவிகம் சாஸ்ய மஹத்தவம் அத்ராபிதீயத இத்யர்த -ஜ்யாயான் ப்ருதிவ்யா ஜ்யாயா நந்தரிஷாஜ்ஜ்யா யாந்திவோ ஜ்யாயா நேப்யோ லோகேப்ய இதி ஹ்ய நந்தர மேவ வ்யபதிஸ்யதே –7–

40-ஸம்போக ப்ராப்திரிதி சேந்ந வைசேஷ்யாத் –யத் யுபாஸக ஸரீரே ஹ்ருதயே அயமபி வர்த்ததே ததஸ்தத்வ தேவாஸ் யபி சரீர ப்ரயுக்த ஸூக துக்க ஸம்போக ப்ராப்திரிதி சேந்ந ஹேதுவை சேஷ்யாத்–ந ஹி ஸரீராந்தர் வர்த்தித்வமேவ ஸூக துக்க உப போக ஹேது –அபிது கர்ம பரவஸத்வம் தத்த்வ பஹதபாப்மந -பரமாத்மநோ ந சம்பவதி –-8-இதி ஸர்வத்ர பிரஸித்தி யதிகரணம் –1-2-1-

1-2-2-அத்த்ரதிகரணம்
41-அத்தா சராசர க்ரஹணாத்
–கடவல்லி இஷ்வாம் நாயதே யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் சோபே பவத ஓதந ம்ருத்யுர்யஸ்ய உபஸேசநம் க இத்தா வேத யத்ர ஸ இதி –
அத்ரோதநோப ஸேசந ஸூசிதோ அத்தா கிம் ஜீவ உத பரமாத்மேதி ஸம்சய -ஜீவ இதி பூர்வ பக்ஷ –குத –
போக்த்ருத் த்வஸ்ய கர்ம நிமித்தத் த்வாஜ் ஜீவஸ் யைவ தத் ஸம் பாவாத் –ராத்தாந்தஸ்து
ஸர்வ உப ஸம்ஹாரே ம்ருத்யு உபஸேசந மதநீயம் சராசராத் மகம் க்ருத்ஸ்னம் ஜகதிதி தஸ்யை தஸ் யாத்தா பரமாத்மமைவ-ந சேதம் கர்ம நிமித்தம் போக்த்ருத்வம் -அபி து ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி லய லீலஸ்ய பரமாத்மநோ ஜகத் உப ஸம்ஹாரித்வ ரூபம் போக்த்ருத்வம் —
ஸூத்ரார்த்த -ப்ரஹ்ம க்ஷத்ரவ் தனஸ் யாத்தா பரமாத்மா ப்ரஹ்ம க்ஷத்ர சப்தேந சராசரஸ்ய க்ருத்ஸ்னஸ்ய ஜகதோ க்ரஹணாத் -ம்ருத்யு உபஸேசநோ ஹ்யோதநோ ந ப்ரஹ்ம க்ஷத்ர மாத்ரம் -அபி து ததுபல லஷிதம் சராசராத்மகம் க்ருத்ஸ்னம் ஜகதேவ -9-

42-ப்ரகரணாச் ச –மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந சோசதி நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா இதி பரஸ்யைவ ஹீதம் ப்ரகரணம் –அதஸ் சாயம் பரமாத்மா –10-

நன்வ நந்தரம் ருதம் பிபன்னவ் ஸூக்ருதஸ்ய லோகே குஹாம் ப்ரவிஷ்டவ் பரமே பரார்த்யே இதி த்வயோ கர்ம பலாத நாதந ஸ்ரவணாத் பரமாத்ம நஸ்ச கர்ம பலாத நான்வயாத் அந்தகரண த்விதீயோ ஜீவ ஏவ தத்ராத்தேதி ப்ரதீயதே -அதோ அத்ராபி ஸ ஏவ ஜீவோ அத்தா பவிது மர்ஹா தீத்யா சங்க்யாஹ
43-குஹாம் ப்ரவிஷ்டா வாத்மாநவ் ஹி தத் தர்சநாத் –குஹாம் ப்ரவிஷ்டவ் ஜீவாத்ம பரமாத்மாநவ் -ஜீவ த்விதீய –பரமாத்மைவ தத்ர ப்ரதீயதே இத்யர்த
ஸ்வய மநஸ்நதோ அபி பரமாத்மந ப்ரயோஜகதயா பாநே அந்வயோ வித்யதே -ஜீவத்விதீய -பரமாத் மேதி கதவம கம்யதே —
தத் தர்சநாத் –தயோரேவ ஹ்யஸ் மிந் ப்ரகரணே குஹா ப்ரவேஸ வ்யபதேசோ த்ருஸ்யதே தம் துர் தர்சம் கூட மநு ப்ரவிஷ்டம் குஹா ஹிதம் கஹ் வரேஷ்டம் புராணம் அத்யாத்ம யோகாதிகமேந தேவம் மத்வா தீரோ ஹர்ஷ ஸோகவ் ஜஹாதி இதி பரமாத்மந யா ப்ராணேந ஸம்பவத் யதிதிர் தேவதா மயீ குஹாம் ப்ரவிஸ்ய திஷ்டந்தீ யா பூதேபிர் வ்யாஜாயத இதி ஜீவஸ்ய –கர்ம பலாந் யத்தீத்யதிதி –ஜீவ –11-

44-விசேஷணாச் ச –-அஸ்மின் ப்ரகரணே –ஹ்யுப க்ரம ப்ரப்ருதியோப ஸம்ஹாராஜ் ஜீவ பரமாத்மநா வேவோபாஸ்யத்வ -உபாஸகத்வ ப்ராப்த்ருத்வாதிபிர் விஸிஷ்யதே மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந ஸோசதி -விஞ்ஞாந சாரதிர் யஸ்து மநஸ் ப்ரக்ரஹ வான்நர ஸோ அத்வேந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் இத்யாதி ஷு அதஸ் சாத்தா பரமாத்மா –-12–அத்த்ரதிகரணம் –2-

1-2-3-அந்தராதிகரணம்
45-அந்தர உப பத்தே
–சாந்தோக்யே -ய ஏஷோ அந்தரஷிணி புருஷோ த்ருஸ்யதே ஏக்ஷ ஆத்மேதி ஹோவாசைத தம்ருதமபய மேதத் ப்ரஹ்ம இத்யத்ர அஷ்யாதார –புருஷ கிம் ப்ரதிபிம்ப ஆத்ம ஜீவதேவதா விசேஷ அந்யதம -உத பரமாத்மேதி ஸம்சய –ஏஷ்வன்யதம இதி பூர்வ பக்ஷ –
குத –ய ஏக்ஷ –த்ருஸ்யதே இதி ப்ரஸித்த வத் சாஷாத்கார நிர்தேசாத் –ராத்தாந்தஸ்து -பரமாத்மைவாய மஷ்யாதார -புருஷ -அஷி புருஷ சம்பந்தி தயா ஸ்ரூயமாணா -நிருபாதிகாத் மத்வ அம்ருதத்வ -அபயத்வ ப்ரஹ்மத்வ ஸம் யத்வாமத்வாதய -பரமாத்ம அந்யேவோப பத் யந்தே —
ப்ரஸித்த வந் நிர்த்தேசஸ் ச யஸ் சஷுஷி திஷ்டன் இத்யாதி ஸ்ருத் யந்தர ப்ரஸித்தே ரூப பத்யதே
சாஷாத்காரஸ் ச தத் உபாஸந நிஷ்டாநாம் யோகிநாம் –ஸூத்ரார் தஸ்து –அஷ் யந்தர பரமாத்மா -ஸம் யத்வாமத் வாதீநாம் குணா நாம த்ரைவோப பத்தே –13-

46-ஸ்தாநாதிவ்ய தேசாச் ச –ஸ்தாநம் ஸ்திதி –பரமாத்மந ஏவ யஸ் சஷுஷி திஷ்டன் இத்யாதவ் சஷுஷி ஸ்திதி நியம நாதீ நாம் வ்யபதேஸாச் சாயம் பரமாத்மா –14-

47-ஸூக விஸிஷ்டாபிதாநா தேவ ச –பிராணோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம இதி ஸூக விஸிஷ்ட தயா ப்ரக்ருதஸ்யைவ பரஸ்யைவ ப்ரஹ்மணோ அஷ்யாதாரதயா உபாஸ் யத்வாபி தாநாச் சாயம் பரமாத்மா –ஏவ காரோ அஸ்யைவ ஹேதோர் நைரபேஷ்யாவகமாய –15-

பிராணோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம இத்யத்ர ஸூக விஸிஷ்டம் பரமேவ ப்ரஹ்மாபிஹிதமிதி கதமிதமவகம்யதே யாவதா நாமாதி வத் ப்ரதீகோபாஸ நமே வேத்யா சங்க்யாஹ
48-அத ஏவ ச ஸ ப்ரஹ்ம -யதஸ் தத்ர பவ பய பீதா யோபகோஸலாய ப்ரஹ்ம ஸ்வரூப ஜிஞ்ஞாஸவே கம் ச து கம் ச ந விஜாநாமி இதி ப்ருச்யதே யதேவ கம் ததேவ கம் யதேவ கம் இத் யந்யோன்ய வ்யவச்சேதக தயா அபரிச்சின்ன ஸூக ஸ்வரூபம் ப்ரஹ்மேத் யபிதாய ப்ராணம் ச ஹாஸ்மை தத் ஆகாஸம் சோசு இத்யுக்தம் –அத ஏவ க ஸப்தாபி தேயஸ் ஸ ஆகாஸோ அபரிசின்ன ஸூக விஸிஷ்டம் பரம் ப்ரஹ்மைவ –16-

49-ஸ்ருதோபநிஷத்க கத்யபிதா நாச்ச –ஸ்ருதோப நிஷத்கை –அதிகத ப்ரஹ்ம யாதாத்ம்யை ப்ரஹ்ம ப்ராப்தயே யா கதிரர்சிராதி ரதி கந்தவ்யதயா அவகதா ஸ்ருத் யந்தரே தஸ்யாஸ் சேஹாஷி புருஷம் ஸ்ருதவதோ அதி கந்தவ்யதயா தே அர்சிஷ மேவாபி சம்பவந்தி இத்யாதி நா அபிதாநாதாஷிபுருஷ பரமாத்மா –17–

50-அந வஸ்தி தேர ஸம் பவாச் ச நேதர –பரமாத்மந இதர ஜீவாதிக –தஸ் யாஷ்ணி நியமேந அநவஸ்திதே அம்ருதத்வ ஸம்யத்வா மத்வாதீ நாம் சா ஸம் பவாந்ந ஸோ அஷ்யாதார —18-அந்தராதிகாரணம்–3-

——————

1-2-4-அந்தர்யாம் யதிகரணம்
51-அந்தர்யாம் யதிதைவாதி லோகாதிஷு தத் தர்ம வ்யபதேஸாத்
–ப்ருஹ தாரண்யகே ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோ யம் ப்ருத்வீ ந வேத யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ப்ருத்வீமந்தரோ யமயத்யேக்ஷ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத –இத்யாதிஷு ஸர்வேஷு பர்யாயேஷு ஸ்ரூயமாணோ அந்தர்யாமீ கிம் ப்ரத்யகாத்மா உத பரமாத்மேதி ஸம்சய –ப்ரத்ய காத்மேதி பூர்வ பக்ஷ —
வாக்ய சேஷ த்ரஷ்டா ஸ்ரோதா மந்தா இதி த்ரஷ்ட்ருத்வாதி ஸ்ருதே –நான்யோ அதோ அஸ்தி த்ரஷ்டா இதி த்ரஷ்டந்தர நிஷேதாச்ச –ராத்தாந்தஸ்து –ப்ருதிவ்யாத் யாத்ம பர்யந்த ஸர்வ தத்த்வாநாம் சர்வைஸ் தைரத்ருஷ்டே நைகேந நியமனம் நிருபாதிக அம்ருதத்வாதிகம் ச பரமாத்மந ஏவ தர்ம இத் யந்தர்யாமீ பரமாத்மா -த்ரஷ்ட்ருத்வாதிஸ் ச ரூபாதி ஸாஷாத்கார –ஸ ச பஸ்யத்ய சஷு இத்யாதிநா பரமாத்மாநோ அப்யஸ்தி –நான்யோ அதோ அஸ்தி த்ரஷ்டா இதி ச ஜீவேநா த்ருஷ்டாந்தர்யாமி த்ரஷ்ட்ருவத் அந்தர்யாமிணா அபி அத்ருஷ்ட த்ரஷ்டாந்தர நிஷேத பர ஸூத்ரார்த்த –அதி தைவாதி லோகாதிபத சிஹ்நிதேஷு வாக்யேஷு ஸ்ரூயமாணோ அந்தர்யாமீ பரமாத்மா –ஸர்வ அந்தரத்வ ஸர்வா விதிதத்வ -ஸர்வ சரீரகத்வ ஸர்வ நியமன ஸர்வாத்மத்வ அம்ருதத்வாதி பரமாத்ம தர்மாணாம் வ்யபதேஸாத் –19-

52-ந ச ஸ்மார்தம தத் தர்மாபி லாபாச் சாரீரஸ் ச –ஸ்மார்த்தம் ப்ரதாநம் -சாரீர ப்ரத்யகாத்மா –ஸ்மார்த்தம் ச சாரீரஸ் ச ந அந்தர்யாமீ –தாயோர ஸம்பாவித யுக்த தர்மாபிலாபாத் –யதா ஸ்மார்தஸ்யா சேதனஸ்யா ஸம்பாவநயா ந அந்தர்யாமித்வ ப்ரஸக்தி ததா ப்ரத்யகாத்மநோ அபீத் யர்த –20-

53-உபயே அபி ஹி பேதே நைந மதீயதே –உபயே காண்வா மாத்யந்திநா அபி யோ விஞ்ஞாநே திஷ்டன் -ய ஆத்மநி திஷ்டன் இதி யத பிரத்யாகாத்மநோ பேதே நைநம் -அந்தர் யாமிண மதீயதே அதோ அயம் ததாதி ரிக்த பரமாத்மா —21-இதி அந்தர்யாம் யதிகரணம் –1-2-4-

1-2-5-குணக அதிகரணம்
54-அத்ருஸ்யத்வாதி குணகோ தர்மோக்தே
–ஆதர்வணே அத பரா யயா தத் அக்ஷரம் அதிகம்யதே யத் தத் அத்ரேஸ்யம் இத்யாராப்ய யத் பூத யோநிம் பரிபஸ் யந்தி தீரா -அஷராத் பரத பர இத்யாதவ் கிம் ப்ரதான புருஷவ் ப்ரதிபாத்யேதே உத பரமாத்மைவேதி ஸம்சய -ப்ரதான புருஷா விதி பூர்வ பக்ஷ -ப்ருதிவ்யாத் யசேதன கத த்ருஸ்யத்வாதீநாம் ப்ரதிஷேதாத்தஜ் ஜாதீய சேதனம் ப்ரதான மேவ பூதயோந் யக்ஷரமிதி ப்ரதீயதே –ததா அக்ஷராத் பரத பர இதி ச தஸ்யா திஷ்டாதா புருஷ ஏவேதி–ராத்தாந்தஸ்து –உத்தரத்ர யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் இதி ப்ரதான புருஷ யோர ஸம்பாவிதம் ஸார்வஞ்யம பிதாய தஸ்மா தேதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னம் ச ஜாயதே இதி ஸர்வஞ்ஞாத் ஸத்ய சங்கல்பாஜ் ஜகத் உத்பத்தி –ஸ்ரவணாத் பூர்வோக்த மத்ருஸ்யத்வாதி குணகம் பூத யோன் யக்ஷரம் அக்ஷராத் பரத பர இதை ச நிர் திஷ்டம் தத் அக்ஷரம் பரம் ப்ரஹ்மை வேதி விஞ்ஞாயதே –ஸூத்ரார்த்தஸ்து -அத்ருஸ்யத்வாதி குணக பரமாத்மா –ஸர்வஜ் ஞத்வாதி தத்தர் மோக்தே –22-

55–விசேஷண பேத வ்யாபதேசாப்யாம் ச நேதரவ் –விசிநஷ்டி ஹி ப்ரகரணம் ப்ரதாநாத் பூதயோன் யக்ஷர மேக –விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாநாதிநா –ததா அக்ஷராத் பரத பர இதி -அக்ஷராத் அவ்யாக்ருதாத் பரதோ அவஸ்திதாத் புருஷாத் பர இதி புருஷாச் சாஸ்ய பூத யோன்யஷரஸ்ய பேதோ வியபதிஸ் யதே –அதஸ் ச ந ப்ரதான புருஷவ் –அபி து பரமாத்மை வாத்ர நிர் திஷ்ட –23-

56-ரூபோ பந்யா ஸாச் ச –-அக்னிர் மூத்தா இத்யாதி நா ஸமஸ்தஸ்ய சித் அசித் ஆத்மக பிரபஞ்சஸ்ய பூதயோன் யக்ஷர -ரூபத்வேந உபன்யாஸாச் சாயம த்ருஸ்யத்வாதி குணக பரமாத்மா —24-இதி அத்ருஸ்யத்வாதி –குணக அதிகரணம் –5-

1-2-6–வைஸ்வாநர அதிகரணம்
57-வைஸ்வாநரஸ் ஸாதாரண ஸப்த விசேஷாத்
–சாந்தோக்ய ஆத்மாந மேவேமம் வைஸ்வாநரம் ஸம் ப்ரத்யத்யேஷி –தமேவ நோ ப்ரூஹி இத்யாரப்ய யஸ்த்வேதமேவம் ப்ராதேச மாத்ரமபி விமான மாத்மாநம் வைஸ்வாநரம் உபாஸ்தே இத்யத்ர கிமயம் வைஸ்வாநர பரமாத் மேதி ஸக்ய நிர்ணய உத நேதி ஸம்சய –அஸக்ய நிர்ணய இதி பூர்வ பக்ஷ –வைஸ்வாநர சப்தஸ்ய ஜாடராக்நவ பூத த்ருதீயே தேவதா விசேஷ பரமாத்மநி ச வைதிக ப்ரயோக தர்சநாத் அஸ்மின் ப்ரகரணே ஸர்வேஷாம் லிங்கோபலப்தேஸ் ச –ராத்தாந்தஸ்து கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம இதி ஸர்வேஷாம் ஜீவானாம் ஆத்மபூதம் ப்ரஹ்ம கிமிதி ப்ரக்ரமாத் உத்தரத்ர ச ஆத்மாநம் வைச்வா நரம் இதி ப்ரஹ்ம ஸப்த ஸ்தாநே ஸர்வத்ர வைஸ்வாநர ஸப்த ப்ரயோகாச்ச வைஸ்வாநர ஆத்மா ஸர்வேஷாம் ஜீவாநாம் ஆத்ம பூதம் பரம் ப்ரஹ்மேதி விஞ்ஞாயதே –ஸூத்ரார்த்த –வைஸ்வாநர ஸப்த நிர் திஷ்ட பரமாத்மா வைஸ்வாநர ஸப்தஸ்ய அநேக அர்த சாதாரணஸ்யாபி அஸ்மின் ப்ரகரணே பரமாத்ம அசாதாரண விசேஷணை ஸர்வாத் மத்வாதிபி விசேஷ்ய மாணத்வாத் –விசேஷ்யதே இதி விசேஷ –25-

58-ஸ்மர்யமாணம் அநு மானம் ஸ்யாதிதி –ஸ்மர்ய மாணம்-ப்ரத்யபிஜ் ஞாயமாநம் அநு மீயதே அநேநேதி அநுமாநம் –இதி ஸப்த ப்ரகார வசந -இத்தம் ரூபம் ஸ்மர்ய மாணம் வைச்வாநரஸ்ய பரமாத்மத்வே அநு மாநம் ஸ்யாத் த்யு ப்ரப்ருதி ப்ருதி வ்யந்தம் அவயவ விபாகேந வைச்வாநரஸ்ய ரூபம் இஹ உப திஷ்டம் -அக்னிர் மூர்தா சஷுஷீ சந்த்ர ஸூர்யவ் த்யாம் மூர்தாம் யஸ்ய விப்ரா வதந்தி இதி ஸ்ருதி ஸ்ம்ருதி ப்ரஸித்தம் பரம புருஷ ரூபம் இஹ ப்ரத்யபிஜ் ஞாயமாநம் வைச்வா நரஸ்ய பரமாத்மத்வே லிங்கம் ஸ்யாதித் யர்த –26-

59-ஸப் தாதிப்யோ அந்த ப்ரதிஷ்டா நாச்ச நேதி சேந்ந ததா த்ருஷ்ட் யுபதேசாத சம்பவாத் புருஷமபி சைநம தீயதே -அநிர்ணயமா சங்க்ய பரிஹரதி –ஸப்தாதிப்யோ அந்த ப்ரதிஷ்டா நாச்சேதி -ஸப்தஸ் தாவத் வாஜிநாம் வைச்வாநர வித்யா ப்ரகரணே ச ஏஷோ அக்னிர் வைஸ்வாநர இதி வைஸ்வாநர ஸமாநாதி கரண அக்னி ஸப்த-அஸ்மின் ப்ரகரணே ச ஹ்ருதயே கார்ஹா பத்ய இத்யாரப்ய வைஸ்வாநரஸ்ய ஹ்ருத்யாதி ஸ்தாநஸ்ய அக்னி த்ரய பரி கல்பநம் ப்ராணா ஹுத்யாதாரத்வம் சேதி ப்ரதீயதே –வாஜி நாமபி ஸ யோ ஹ வை தமேவ மக்நிம் வைஸ்வாநரம் புருஷவிதம் புருஷே அந்த ப்ரதிஷ்டிதம் வேத இதி வைஸ்வாநரஸ்ய சரீராந்த ப்ரதிஷ்டி தத்வம் ப்ரதீயதே -அத ஏதை லிங்கை வைஸ்வாநரஸ்ய ஜாடராக்நித்வ ப்ரதீதே நாயம் பரமாத்வேதி ஸக்ய நிர்ணய இதி சேத் தந்ந –ததா த்ருஷ்ட் யுப தேஸாத் -திருஷ்ட்டி உபாஸனம் தத் உபாஸந உப தேசாதித் யர்த -ஜாடராக்னி சரீர தயா வைஸ்வாநரஸ்ய பரமாத்மாந உபாஸனம் ஹ்யத்ரோபதிஸ் யதே –அயம் அக்னிர் வைஸ்வாநர-புருஷோ அந்த ப்ரதிஷ்டித இத்யாதவ் -கதமவ கமயத இதி சேத் அசம்பவாத் -கேவல ஜாடராக்நே -த்ரை லோக்ய சரீரத் வாத்ய சம்பவாத் -புருஷமபி சைநமதீயதே -ச ஸப்த ப்ரஸித்தவ் -வாஜிநஸ் தத்ரைவ ஸ ஏஷோ அக்னிர் வைஸ்வாநரோ யத் புருஷ இதி ஏநம் வைஸ்வாநரம் புருஷமபி ஹ்ய தீயதே –புருஷஸ் ச பரமாத்மமைவ புருஷ ஏவேதம் ஸர்வம் புருஷாந்த பரம் கிஞ்சித் இத்யாதி ஷு பிரஸித்தே –27-

60-அத ஏவ ந தேவதா பூதம் ச –யத த்ரை லோக்ய சரீர அசவ் வைஸ்வாநர யதஸ் ச நிருபாதிக புருஷ ஸப்த நிர் திஷ்ட அத ஏவ நாக்ந் யாக்யா தேவதா மஹா புருஷத்ருதீயஸ்ச வைஸ்வாநரஸ் சங்க நீய –28-

61-சாஷாதப்ய விரோதம் ஜைமினி -அக்னி சரீர தயா வைஸ்வாநரஸ்ய உபாஸ நார்த்தம் அக்னி ஸப்த ஸாமாநாதி கரண்ய நிர்தேச இத்யுக்தம் –விஸ் வேஷாம் நராணாம் நேத்ருத்வாதிநா சம்பந்தேந யதா வைஸ்வாநர ஸப்த பரமாத்மநி வர்ததே யதைவ அக்னி ஸப்தஸ் யாபி அக்ர நய நாதிநா யோகேந ஸாஷாத் பரமாத்மநி வ்ருத்தவ் ந கஸ்சித் விரோத இதி ஜைமிநி ராசார்யோ மன்யதே–29-

யஸ்த் வேத மேவம் ப்ராதேச மாத்ரமபி விமான மாத்மாநம் வைஸ்வாநரம் இதி த்யு ப்ரப்ருதி ப்ருதி வ்யந்த ப்ரதேச -சம்பந்திந்யா மாத்ரயா பரிச்சின்னத்வ மநவச் சின்னஸ்ய பரமாத்மந வைஸ்வா நரஸ்ய கதமுப பத்யத இத்யத் ராஹ

62-அபி வ்யக்தேர் இத்யாஸ் மரத்ய -அநவச் சின்னஸ் யைவ பரமாத்மந உபாஸநாபி வ்யக்த்யர்தம் த்யு ப்ரப்ருதி வ்யந்த ப்ரதேச பரிச்சின்னத்வம் இதி ஆஸ்மரத்ய ஆசார்யோ மன்யதே –30-

த்யு ப்ரப்ருதி ப்ரதேஸாவச் சேதேந அபி வ்யக்தஸ்ய பரமாத்மந த்யுப் வாதித்யாதீநாம் மூர் தாத்யவயவ கல்பநம் கிமர்தமிதி சேத் தத்ராஹ

63-அநு ஸ்ம் ருதேர் பாதரி –அநு ஸ்ம்ருதி உபாஸனம் –ப்ரஹ்ம ப்ராப்தயே வ்ரதோபாஸ நார்தம் மூர்த ப்ரப்ருதி –பாதாந்த தேஹ பரி கல்பந மிதி பாதரி ராசார்யோ மன்யதே –31-

அயம் வைஸ்வாநர பரமாத்மா த்ரை லோக்ய சரீர உபாஸ்ய உப திஸ்யதே சேத் உர ஏவ வேதிர் லோமாநிபர்ஹிர் ஹ்ருதயம் கார்ஹா பத்ய இத்யாதிநா உபாஸக சரீரா வயவாநாம் கார்ஹா பத்யாதி பரி கல்ப நம் கிமர்த மித்ய த்ராஹ

64-ஸம்பத்தேரிதி ஜைமினிஸ் ததா ஹி தர்சயதி–வைஸ்வநர வித்யாங்க பூதாயா உபாஸகை -அஹரஹ க்ரியமாணாயா ப்ராணா ஹுதே -அக்னி ஹோத்ரத்வ ஸம்பாதநாய கார்ஹா பத்யாதி பரி கல்பந மிதி ஜைமினிரா சார்யோ மன்யதே –ததா ஹி அக்னி ஹோத்ர ஸம்பத்தி மேவ தர்சய தீயம் ஸ்ருதி ப்ராணா ஹுதிம் விதாய அத யா ஏவம் வித்வான் அக்னி ஹோத்ரம் ஜூஹோதி இதி -உக்தாநா மர்தாநாம் பூஜிதத் வக்யாப நாய ஆசார்ய க்ரஹணம் –32-

65-ஆம நந்தி சைந மஸ்மின் –ஏநம் பரம புருஷம் வைஸ்வா நரம் த்யுப்வாதி தேஹம் அஸ்மின் உபாஸக தேஹே ப்ராணாக்நி ஹோத் ரேணாராத்யத் வாயாம நந்தி ஹி –தஸ்ய ஹ வா ஏதஸ்ய வைஸ்வா நரஸ்ய மூர்தைவ ஸூ தேஜா இத்யாதி நா
உபாஸக மூர்தாதி பாதாந்தா ஏவ த்யு ப்ரப்ருதய பரம புருஷஸ்ய மூர்தாதய இதி ப்ராண அக்னி ஹோத்ர வேலாயா மநு ஸந்தேயா இத்யர்த —33-இதி வைஸ்வாநர அதிகரணம் –1-2-6-

ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -த்விதீய பாதம் ஸம் பூர்ணம்

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதாந்த தீபம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -பிரதம பாதம்-

February 26, 2024

———————————————————————-

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே
–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே
–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -பிரதம பாதம்

ஸ்ரீ யகாந்தோ அநந்தோ வர குண கணைகாஸ் பத வபுஸ்
ஹதா சேஷாவத்ய பரகமபதோ வாங் மனஸயோ
அபூமிர் பூமிர்யோ நதஜந த்ருஸாம் ஆதி புருஷோ
மனஸ் தத் பதாப்ஜே பரி சரண ஸக்தம் பவது மே
ப்ரணம்ய சிரஸா ஆச்சார்யாம்ஸ் ததா திஷ்டேந வர்த்தமநா
ப்ரஹ்ம ஸூத்ர பதாந்தஸ்த வேதாந்தார்த ப்ரகாஸ்யதே

அத்ரேயம் ஏவ ஹி வேத விதாம் ப்ரக்ரியா –
அசித் வஸ்துநஸ் ஸ்வரூப தஸ் ஸ்வ பாவதஸ் ஸாத்யந்த விலக்ஷண -தத் ஆத்ம பூதஸ் -சேதனஸ் ப்ரத்யகாத்மா
தஸ்மாத் பத்தான் முக்தான் நித்யாச்ச –
நிகில ஹேய ப்ரத்ய நீக தயா -கல்யாண குணைக தாந தயா ச
ஸர்வ அவஸ்த சித் அசித் வ்யாபகதயா தாரக தயா -நியந்த்ரு தயா சேஷி தயா ஸாத்யந்த விலக்ஷண பரமாத்மா
யதோக்தம் பகவதா -த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அக்ஷர ஏவ ச
ஷரஸ் ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே -உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹ்ருத யோ லோக த்ரயம் ஆவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர யஸ்மாத் ஷர மதீதோ அஹம் அஷராத் அபி சோத்தம அதோ அஸ்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தம இதி

ஸ்ருதிஸ் ச
ப்ரதான க்ஷேத்ரஜ்ஞ பதிர் குணேஸ -பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம்
அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வியாப்ய நாராயண ஸ்திதஸ் -இத்யாதிகா
கூடஸ்த -முக்த ஸ்வரூபம் யேத்வஷரம் அநிர்தேஸ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகம் அசிந்த்யம் ச கூடஸ்தம் அசலம் த்ருவம் இத்யாதி வ்யபதேசாத்
ஸூத்ர காரஸ் சைவமேவ வததி நேதரோ அநு பபத்தே பேத வ்யபதேசாத் அநு பபத்தேஸ் து ந சாரீர கர்ம கர்த்ரு வ்யபதேஸாச் ச ஸப்த விசேஷாத் ஸம் போக ப்ராப்திரிதி சேந்ந வைசேஷ்யாத்
ந ச ஸ்மார்தமதத் தர்மாபிலாபாச் சாரீரஸ் ச உபயே அபி ஹி பேதேநைந மதீயதே விசேஷண பேதே வ்யபதேஸாபப்யாம்

ச நேதரவ் முக்தோபஸ்ருப்ய வ்யபேதஸாச் ச ஸ்தித்யத நாப்யாம் ச
இதர பரமர்ஸாத் ஸ இதி சேந்நா சம்பவாத் உத்தராச்சேதாவிர் பூத ஸ்வரூபஸ் து ஸூஷுப்த் யுத்க்ராந்த்யோர் பேதேந பத்யாதி ஸப்தேப்ய -அதிகம் து பேத நிர்தேசாத் அதி கோபதே ஸாத்து பாதாரயணஸ் யைவ தத் தர்சநாத் ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத சந்நிஹிதத் வாச்ச போக மாத்ர ஸாம்ய லிங்காச்ச இத்யாதிபி
ந ஸாவித்யா க்ருத முபாதி க்ருதம் வா பேதம் ஆஸ்ரித்யைதே நிர்தேஸா -இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகதா–சர்கே அபி நோப ஜயந்தி ப்ரலயே ந வ்யதந்தி ச ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி -முக்தோபஸ்ருப்ய வ்யபதாஸாச் ச உத்தராச் சேத் ஆவிர்பூத ஸ்வரூபஸ்து

ஸம்பத்ய ஆவீர்பாவஸ் ஸ்வேந ஸப்தாத் ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத் வாச் ச போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச இதி ஸர்வ அவித்ய உபாதி விநிர் முக்த மதி க்ருத்யைவ பேத உபபாதநாத்
ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரேஷு ஸர்வத்ர பேதே நிர்திஷ்டே -சித் அசித் ஈஸ்வர ஸ்வரூப பேதஸ் ஸ்வா பாவிகோ விவஷித இதி நிஸ் சீயதே
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம –தஜ்ஜலா நிதி சாந்த உபாஸீத -வாசா ரம்பணம் விகாரோ நாமதேயம் ம்ருத்தி கேத்யேவ ஸத்யம் –
ஸ தேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமே அத்விதீயம் –ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத –சந் மூலாஸ் சோம்யேமாஸ் ஸர்வா ப்ரஜாஸ் ஸதாயதநாஸ் ஸத் ப்ரதிஷ்டா
ஐததாத்ம்யம் இதம் ஸர்வம்-

தத் ஸத்யம் ஸ ஆத்மா தத்வமஸி ஸ்வேத கேதோ ஷேத்ரஞ்ஞம் ஷாபி மாம் வித்தி தத் அந்யத் வமாராம்பண ஸப்தாதிப்ய இதி பரஸ்ய ப்ரஹ்மண -காரணத்வம் க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் ஆத்மக ப்ரபஞ்சஸ்ய கார்யத்வம் காரணாத் கார்யஸ்ய அநந்யத்வம் சோஸ்யமாந மேவமேவோப பத்யதே
ஸர்வ அவஸ்தஸ்ய சித் அசித் வஸ்துந பரமாத்ம ஸரீரத்வம் பரமாத்மானஸ்சாத்மத்வம் யஸ் ப்ருதிவ்யாம் திஷ்டன்யஸ்ய ப்ருத்வீ ஸரீரம் -யஸ் ஆத்மநி திஷ்டன்யஸ்ய யாத்மா ஸரீரம் யஸ் ஆத்மநம் அந்தரோ யமயதி –யஸ்ய அவ்யக்தம் ஸரீரம் -யஸ்ய அக்ஷரம் சரீரம் –யஸ்ய ம்ருத்யுஸ் ஸரீரம் -ஏஷ ஸர்வம் பூதம் அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -அந்த ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்ம இத்யாதி ஸ்ருத்ய ஏவ உப திஷ்டமிதி
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட பரமாத்மா காரணம் -ஸ ஏவ பரமாத்மா ஸ்தூல சித் அசித் வஸ்து சரீர கார்யமிதி -காரண அவஸ்தாயாம் கார்ய அவஸ்தாயாம் ச சித் அசித் வஸ்து சரீர கதயா தத் ப்ரகார பரமாத்ம ஏவ ஸர்வ ஸப்த வாஸ்ய இதி பரமாத்ம சப்தேந ஸர்வ ஸப்த சாமானதி கரண்யம் முக்ய மேவ உப பன்நதரம்
அநேந ஜீவேந ஆத்மந அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி-தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் தத் அநு ப்ரவிஸ்ய ஸச் சத்யச் சாபவத் இத்யாதி ஸ்ருதி ரேவ மமர்த்தம் உப பாதயதி
ஸர்வம் ஆத்மதயா அநு ப்ரவிஸ்ய தச் சரீரத்வேந ஸர்வ ப்ரகார தயா ஸ ஏவ ஸர்வ ஸப்த வாஸ்யோ பவதீத் யர்த
பஹுஸ்யாம் இதி பஹு பவந சங்கல்போ அபி நாம ரூப விபாகா நர்ஹாதி ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீர கதயைகதா அவஸ்தி தஸ்ய விபக்த நாம ரூப சித் அசித் சரீர கதயா பஹு ப்ரகாரதா விஷய இதி வேதவித் ப்ரக்ரியா -யே புநர் நிர்விசேஷ கூடஸ்த ஸ்வ ப்ரகாஸ நித்ய சைதன்ய மாத்ரம் ப்ரஹ்ம ஞாதவ்யத யோக்தமிதி வதந்தி தேஷாம்
ஜந்மாத் யஸ்ய யத
ஸாஸ்த்ர யோநித்வாத்
தத் து சமன்வயாத்
ஈஷதேர் நா ஸப்தம் –இத்யாதே
ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத ஸ நந் நிஹிதத் வாச்ச போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச
அநா வ்ருத்திஸ் ஸப்தாதந அநா வ்ருத்திஸ் ஸப்தாத் இத்யந் நஸ்ய ஸூத்ர கணஸ்ய ப்ரஹ்மணோ ஜகத் காரணத்வ பஹுபவந ஸங்கல்ப ரூபேஷணாத் யநந்த விசேஷ ப்ரதிபாதன பரத்வாத் ஸர்வம் ஸூத்ர ஜாதம் ஸூத்ர காரோதாஹ்ருதா
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இத்யாத்யா -ஸர்வ ஸ்ருதயஸ் ச ந சங்கச்சந்தே
அதோச்யேத யேநாஸ்ருதம் ஸ்ருதம் இத் யேக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞானம் ப்ரதிஜ்ஞாய -யதா ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந இத்யேகம் ம்ருத் பிண்டாரப்த கட ஸராவாதீநாம் தன் ம்ருத் பிண்டாத் அநந்ய த்ரவ்ய தயா தஜ் ஞாநேந தேஷாம் ஞாததேவ ப்ரஹ்ம ஞாநேந ததாரப் தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் ஆத்ம கஸ்ய ஜகதஸ் தஸ்மாதநதிரிக்த வஸ்து தயா ஞாததா ஸம்பவ தீத் யுப பாத்ய
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இதீதம் ஸப்த வாஸ்யஸ்ய சித் அசித் ஆத்மக ப்ரபஞ்சஸ்ய ஸ்ருஷ்டே பிராங் நிகில பேத ப்ரஹாணேந ஸச் ஸப்த வாஸ்யேநைகதா பத்திம் கட சராவாத் யுத்பத்தே ப்ராக் உத்பாதக ம்ருத் பிண்ட ஏகதா பத்திவத் அபிதாய ததைக்ஷத பஹுஸ் யாம் இதி ததேவ ஸச் ஸப்த வாச்யம் ப்ரஹ்ம சித் அசித் ஆத்மக ப்ரபஞ்ச ரூபேண ஆத்ம நோ பஹு பவநம் ஏக ம்ருத் பிண்டஸ்ய கட சராவாதி ரூபேண பஹு பவந வத் சங்கல்ப்ய ஆத்மாந மேவ தேஜஸ் ப்ரப்ருதி ஜகத் ஆகாரேண அஸ்ருஜதேதி சாபிதாய ஐததாம் யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ச ஆத்மா தத்வமஸி இத்யபிதா நாத் ப்ரஹ்மைவா வித்யா க்ருதேந பாரமார்த்திகேந வோபாதிநா ஸம்பத்தம் தேவாதி ரூபேண பஹு பூத மதி வேதவித் ப்ரப்யுவ கந்தவ்யமிதி தத யுக்தம் ஞாஜ்ஜவ் த்வாவஜாவீ சனீஸவ் நித்யோ நித்யோநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் இத்யபி ஸ்ருதி பி
ஜீவா நாமஜத்வ நித்யத்வ பஹத்வ வசநாத் யதி கட சராவாதேருத் பத்தே ப்ராகேகீ பூதஸ்யைவ ப்ரஹ்மணஸ் ஸ்ருஷ்ட் யுத்தர காலீநம் நாநாவித ஜீவ ரூபேண பஹுத்வம் உச்யதே ததா ஜீவானாம் அஜத்வ நித்யத்வ பஹுத்வாதி விருத்யதே
ஸூத்ரவிரோதஸ் ச இதர வ்யபதேசாத் ஹிதா கரணாதி தோஷ ப்ரஸக்தி இதி ப்ரஹ்மைய தேவ மனுஷ்யாதி ஜீவ ஸ்வரூபேண பஹு பூதம் சேதாத்மநோ ஹித கரணாதி தோஷ ப்ரஸக்திரித் யுக்த்வா அதிகம் து பேத நிர்தேசாத் இதி ஜீவாத் ப்ரஹ்மணோ அர்த்தாந்தரத்வம் யுக்தம் –
ததா ச வைஷம்ய நைர்க்கருண்யே ஜீவா நாம் பூர்வ பூர்வ கர்ம அபேக்ஷத்வாத் விஷம ஸ்ருஷ்டே இதி பரிஹ்ருதே –
ததா ந கர்மாவிபாகாதிதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப்யு பலப்யதே ச இதி ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இதி ஸ்ருஷ்டே பிராக விபாக வஸனாத் ஸ்ருஷ்டே ப்ராக் ஜீவா நாம பாவாத் தத் கர்ம ந ஸம்பவதீதி பரிசோத்ய ஜீவா நாம் தத் கர்ம ப்ரவாஹணாம் சாநாதித்வாதிதி பரிஹ்ருதம் -நாத்ம ஸ்ருதேர் நித்யத்வாச்ச தாப்ய இத்யாத்மந உத்பத்த்ய பாவஸ் சோக்தோ நித்யத்வம் ச ஸ்வாப் யுபகம விரோதஸ் ச
ஆமோஷாஜ் ஜீவ பேதஸ்யாநாதித்வம் ஸர்வை ரேவ ஹி வேதாந்தி ப்ரப்யுப கம்யதே -அதஸ் ஸ்ருதி விரோதாத் ஸூத்ர விரோதாத் ஸ்வாப்யுபக விரோதாஸ் ச ஸ்ருஷ்டே பிராகே கத்வாவதாரணம் நாம ரூப விபாகாபாவாபிப்ராயம் நாம ரூப விபாகா நர்ஹா ஸூஷ்ம சித் அசித் வஸ்து ஸக்தி பேத ஸஹம் சேதி ஸர்வைரப்யுப கம்யதே –இயாம்ஸ் து விசேஷ அவித்யா பரி கல்பநே அப்யுபாதி பரி கல்பநே அபி ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்யா வித்யா சம்பந்தி நஸ் சோபாதி சம்பந்தி ந சேதனஸ் யா பாவாத வித்யோபாதி ஸம்பந்தவ் தத் க்ருதாஸ் ச தோஷா ப்ரஹ்மண ஏவ பவேபுரிதி சந் மாத்ர ப்ரஹ்ம வாதே அபி ப்ராக் ஸ்ருஷ்டேஸ் சந் மாத்ரம் ப்ரஹ்மைக மேவ ஸ்ருஷ்ட் யுத்தர காலம் போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபேண த்ரிதா பூதம் சேத்
கட சராவ மணிக வஜ் ஜீவேஸ்வரயோர் உத்பத்தி மத்த்வம நித்யத்வம் ச ஸ்யாத் -அதை கத்வா பத்தி வேலாயாமபி போக்த்ரு போக்ய நியந்த்ரு ஸக்தி த்ரயம் அவஸ்திதம் இதி சேத் கிமிதம் ஸக்தி த்ரய ஸப்த வாஸ்யமிதி விவேச நீயம் –
யதி சந் மாத்ரஸ்யைகஸ் யைவ போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபேண பரிணாம ஸாமர்த்யம் ஸக்தி த்ரய -ஸப்த வாஸ்யம் ஏவம் தர்ஹி ம்ருத் பிண்டஸ்ய கட சராவாதி பரிணாம சமர்த்தஸ்ய தத் உத்பாதகம் இவ ப்ரஹ்மண ஈஸ்வர அதீநாம் உத்பாதகத்வம் இதி தேஷாம நித்யத்வ மேவ அதேஸ் வராதீ நாம் ஸூஷ்ம ரூபேண அவஸ்திதி ரேவ ஸக்தி ரித் யுச்யேத தர்ஹி ததரிக்தஸ்ய சந் மாத்ரஸ்ய ப்ரஹ்மண ப்ரமாணா பாவாத் ததப் யுபகமே ச தத் உத்பாத்ய தய ஈஸ்வர அதீனாம் அநித்யத்வ பிரசங்காச் ச த்ரயாணாம் நாம ரூப விபாகா நர்ஹ -ஸூஷ்ம தஸா பத்திரேவ ப்ராக் ஸ்ருஷ்டே ரேகத்வா வதாரணாவ ஸேயேதி வக்தவ்யம்
ந ததா தேஷாம் ப்ரஹ்மாத்ம கத்வ அவதாரணம் விருத்யதே
அதஸ் ஸர்வ அவஸ்தா வஸ்தி தஸ்ய சித் அசித் வஸ்துந ப்ரஹ்ம சரீரத்வ ஸ்ருதேஸ் ஸர்வதா ஸர்வ சப்தைர் ப்ரஹ்மைவ கார்ய பூதம் ஜகத் நாம ரூப விபாகாநர்ஹ ஸூஷ்ம சித் அசித் வஸ்து விசிஷ்டம் ப்ரஹ்ம காரண மிதி ததேவ ம்ருத் பிண்டஸ்தாநீயம் -ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இத்யுச்யதே -ததேவ விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து விசிஷ்டம் ப்ரஹ்ம கார்யமிதி ஸர்வம் சமஞ்ஜஸம்
ஸ்ருதி நியாய விரோதஸ்து தேஷாம் பாஷ்யே ப்ரபஞ்சித இதி நேஹ ப்ரதன்யதே -பாஷ்போதித அதிகரணார்த்த ச ஸூத்ரார்த்த விவரண ஸூக க்ரஹணாய ஸம் ஷேபண உபன்யஸ்தே

சாரீரக அத்யாய பதார்த்த ஸங்க்ரஹ
தத்ர ப்ரதமே பாதே -ப்ரதான புருஷா வேவ ஜகத் காரண தயா வேதாந்தா ப்ரதிபாத யந்தீத்யா சங்க்ய ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் நிரவத்யம்-ஸமஸ்த கல்யாண குணாகரம் ப்ரஹ் மைவ ஜகத் காரண தயா ப்ரதிபாத யந்தீத் யுக்தம் –
த்விதீய த்ருதீய சதுர்த பாதேஷு காநிசித் வேதாந்த வாக்யாநி ப்ரதாநாதி ப்ரதிபாதன பராணீதி தன் முகேந ஸர்வ அசேஷபமா சங்க்ய தான்யபி ப்ரஹ்ம பராணீத் யுக்தம்
தத்ர அஸ் பஷ்ட ஜீவாதி லிங்க காநி வாக்யாநி த்விதீயே நிரூபிதாநி -ஸ்பஷ்ட லிங்ககாநி த்ருதீயே -சதுர்தே து ப்ரதாநாதி ப்ரதிபாதநச் சாயாநு ஸாரீணீத விசேஷ
அத பிரதம அத்யாயே ஸர்வம் வேதாந்த வாக்ய ஜாதம் -ஸார்வஞ்ய-ஸத்ய சங்கல்பத்வாதி யுக்தம் ப்ரஹ்மைவ ஜகத் காரண தயா ப்ரதிபாத யதீதி ஸ்தாபிதம்

த்வதீயே து ஸாங்க்யாதி வேத பாஹ்ய பக்ஷ ப்ரதிக்ஷேப முகேந தஸ்யை வாதரணீ யதா ஸ்திரீக்ருதா

த்ருதீய சதுர்த்யோ வேதாந்த வாக்யாநாமன்யோன்ய விப்ரதிஷேதாதி தோஷ கந்தாபாவக்யாபநாய வியதாதீநாம் ப்ரஹ்ம கார்யதா ப்ரகாரோ விசோத்யதே

தத்ர த்ருதீய பாதே ச சித் அசித் பிரபஞ்சஸ்ய ப்ரஹ்ம கார்யத்வே ஸத்யப்யசிதம் ஸஸ்ய ஸ்வரூபான் யதா பாவேந கார்யத்வம் சிதம்ஸஸ்ய ஸ்வ பாவான் யதா பாவேந ஞான சங்கோச விகாஸ ரூபேண கார்ய தோதிதா

சதுர்தே

து ஜீவ உபகரணாநாம் இந்த்ரியாதீநாம் உத்பத்தி ப்ரகார இதி ப்ரதமேநாத்யா யத்வயேந முமுஷுபிர் உபாஸ்யம் நிரஸ்த நிகில தோஷ கந்தம் அநவதிக அதிஸய அசங்க்யேய கல்யாண குண கணம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்மேதி ப்ரதிபாதிதம்
உத்தரேண த்வயேந ப்ரஹ்ம உபாஸன ப்ரகாரஸ் தத் பல பூத மோக்ஷ ஸ்வரூபம் ச சிந்த்யதே

தத்ர த்ருதீயஸ்தே பிரதம பாதே ப்ரஹ்ம உபாஸிஸிஷ உத்பத்த்யே ஜீவஸ்ய ஸம் ஸரதோ தோஷா கீர்திதா

த்விதீயே சோபாஸிஸிஷ உத்பத்த்யேஏவ ப்ரஹ்மணோ நிரஸ்த நிகில தோஷதா கல்யாண குணாகரதா ரூப உபய லிங்கதா ப்ரதிபாத்யதே

த்ருதீயே து ப்ரஹ்ம உபாஸன ஏகத்வ நாநாத்வ விசார பூர்வகம் உபாஸநேஷு உப ஸம்ஹார்ய அநுப ஸம்ஹார்யகுண விசேஷா பிரபஞ்சிதா

சதுர்த்தே து உபாசனஸ்ய வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாகத்வம் யுக்தம்

சதுர்த்த அத்யாயே ப்ரஹ்ம உபாஸனபல சிந்தா க்ரியதே

தத்ர ப்ரதமே பாதே ப்ரஹ்ம உபாசன பலம் வக்தும் உபாசன ஸ்வரூப பூர்வக உபாசன அநுஷ்டான ப்ரகாரோ வித்யா மஹாத்ம்யம் சோஸ்தே

த்விதீய து ப்ரஹ்ம உபாஸீநாநாம் ப்ரஹ்ம ப்ராப்தி கத் யுபக்ரமே பிரகார சிந்தித

த்ருதீயே த்வர்ச்சிராதிகதி ஸ்வரூபம் அர்ச்சிராதி நைவ ப்ரஹ்ம ப்ராப்திரிதி ச ப்ரதிபாத்யதே

சதுர்தே து முக்தஸ்ய ப்ரஹ்ம அநுபவ பிரகாரஸ் சிந்த்யதே –
அதோ முமுஷு பிர் ஞாதவ்யம் நிரஸ்த நிகில தோஷ கந்தம் அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கணா கரம் நிகில ஜகத் ஏக காரணம் பரம் ப்ரஹ்ம தஜ் ஞானம் ச மோக்ஷ சாதனம் அஸக்ருதாவ்ருத்த ஸ்ம்ருதி ஸந்தான ரூபம் உபாஸனாத்மகம் உபாஸன பலம் ச அர்ச்சிராதிநா பரம் ப்ரஹ்ம உபஸம்பத்ய ஸ்வ ஸ்வரூப பூத ஞானாதி குண ஆவிர்பாவ பூர்வக அநந்த மஹா விபூத்ய அநவதிக அதிசய அநந்த ப்ரஹ்ம அனுபவோ அபுனரா வ்ருத்தி ரூப இதி சாரீரிக ஸாஸ்த்ரேண யுக்தம் பவதி

க -க- க 1-1-1-ஜிஜ்ஞாஸ அதிகரணம்
1-ஓம் அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா

ப்ரஹ்ம மீமாம்ஸா விஷய ஸா கிம் ஆரம்பணீயா உத அநாரம்பணீ யேதி ஸம்சய -ததர்தம் பரஷ்யதே -வேதாந்தா கிம் ப்ரஹ்மணி ப்ரமாணம் உத நேதி
ததர்தம் பரி நிஷ்பந்நே அர்தே சப்தஸ்ய போதன ஸாமர்த்ய அவதாரணம் சம்பவதி நேதி ந சம்பவதி இதி பூர்வ பக்ஷ
ஸம்பவதீதி ராத்தாந்த -யதா ந சம்பவதி -ததா பரி நிஷ் பன்னே அர்தே சப்தஸ்ய போதன ஸாமர்த்யா பாவாத் ஸித்த ரூப ப்ரஹ்மணி ந வேதாந்தா ப்ரமாணம் இதி தத் விசாராகாரா ப்ரஹ்ம மீமாம்ஸா ந ஆராம்பணீயா யதா சம்பவதி ததா ஸித்த்யேப்யர்த்தே சப்தஸ்ய போதனா ஸாமர்த்ய சம்பவாத் வேதாந்தா ப்ரஹ்மணி பிரமாணம் இது சா சாரம்பணீயா ஸ்யாத் -அத்ர பூர்வ பக்ஷ வாதீ மன்யதே –வ்ருத்த வ்யவஹாராத் அந் யத்ர வ்யுத்பத்த்ய சம்பவாத் வ்யவஹாரஸ்ய ச கார்ய புத்தி பூர்வகத்வேந கார்ய ஏவார்த்தே ஸப்த சக்த்வ தாரணாத் பரி நிஷ் பன்னே அர்தே ப்ரஹ்மணி ந வேதாந்தா பிரமாண மிதி தத் விசாரரூபா ப்ரஹ்ம மீமாம்ஸா ந ஆரம்பணீயேதி -ஸித்தாந்தஸ்து பாலா நாம் மாதா பித்ரு ப்ரப்ருதி -அம்பாதாத மாதுல ஸிஸூ பஸூ பக்ஷி ம்ருகாதி ஷு அங்குல்யா நிர்திஸ்ய-தத் தத் அபிதாயிநஸ் ஸப்தான் ப்ரயுஞ்ஞாநை -க்ரமேண பஹுஸஸ் ஸிஷிதாநாம் தத் தச் ஸப்த ஸ்ரவண சம நந்த்ரம் ஸ்வாத்மநா மேவ ததர்த்த புத்தி யுத்பத்தி தர்சநாத் சப்தார்த்தயோ ஸம்பந்த அந்தரா தர்சநாத் சங்கே தயித்ரு புருஷாஜ் ஞாநாச் ச போத்ய போதக பாவ ஏவ சப்தார் தயோஸ் ஸம்பந்த இதி நிஸ் சின்வாநாநாம் பரி நிஷ் பன்னே அர்தே சப்தஸ்ய போதகத்வ அவதாரணம் ஸம்பவ தீதி ப்ரஹ்மணி வேதாந்த வாக்யா நாம் ப்ராமாண்யாத் ததர்த்த விசாராகாரா ப்ரஹ்ம மீமாம்ஸா ஆராம்பணீயேதி
ஸூத்ரரார் தஸ்து –அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா –அத இத்யா நந்தர்யே-அத இதி ச வ்ருத்தஸ்ய ஹேதுபாவே ப்ரஹ்மணோ ஜிஞ்ஞாஸா ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா–ஞாதும் இச்சா ஜிஞ்ஞாஸா=இச்சாயா இஷ்ய மாண ப்ரதாநத்வாதிஷ்ய மாணம் ஞானம் இஹாபிப்ரேதம்
பூர்வ வ்ருத்தாத் அல்ப அஸ்திர பல கேவல கர்மாதிகமாத நந்தரம் தத ஏவ ஹேதோர் அநந்த ஸ்திர பல ப்ரஹ்மாதிகம கர்தவ்ய –க —ஜிஞ்ஞாஸாதி கரணம் –க –

————-

க க உ –1-1-2-
உ -2- ஜந்மாத் யஸ்ய யத –
தைத்தரீயகே –யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி -யத் ப்ரயந்த் யபி ஸம் விஸந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம இத்யேதத் வாக்யம் விஷய
கிமேதஜ் ஜிஜ்ஞாஸ்ய தயா ப்ரதிஞ்ஞாதம் ப்ரஹ்ம ஜகஜ் ஜன்மாதி காரண தயா லக்ஷண தஸ் ப்ரதிபாத யிதும் சக்நோதி ந வேதி ஸம்சய -ந சக்நோ தீதி பூர்வ பக்ஷ —
குத -ஜகஜ் ஜன்மாதீநாம் உப லக்ஷண தயா விசேஷணதயா வா ப்ரஹ்ம லக்ஷணத்வா சம்பவாத்
உப லக்ஷணத்வே ஹ்யுபலஷ்யஸ் யாகாராந்தர யோகோ அபேக்ஷித -ந சேஹ ததஸ்தி அத உப லக்ஷணத்வம் ந சம்பவதி விசேஷணத்வே அபி அநேக விசேஷண விசிஷ்டதயா அபூர்வஸ்யை கஸ்ய ப்ரதிபாத கத்வம் ன் சம்பவதி விசேஷணாநாம் வ்யாவர்த்தகத்வேந விசேஷண பஹுத்வே ப்ரஹ்ம பஹுத்வ ப்ரஸக்தே
-ராத்தாந்தஸ்து ஏகஸ்மின் ந விருத்தா நாம் விசேஷணாநாம் அநேகத்வ அபி ஸ்யாமத்வ யுவத்வாதி விஸிஷ்ட –தேவ தத்தவஜ் ஜகஜ் ஜன்மாதி விசிஷ்டம் ப்ரஹ்மைக மேவ விசேஷ்யம் பவதி
உப லக்ஷணத்வே ஜன்மாதி பிருப லஷ்யஸ்ய ப்ரஹ்ம ஸப்தாவகத ப்ருஹத் த்வாத் யாகாராஸ் ச சந்தீதி ஜகஜ் ஜன்மாதி –காரணம் ப்ரஹ்மேதி லக்ஷணத ப்ரதிபாதயிதம் சக்நோ தீதி –ஸூத்ரார்த்த -அஸ்ய விவித விசித்ர போக்த்ரு போக்ய பூர்ணஸ்ய ஜகத யதோ ஜன்மாதி தத் ப்ரஹ்மேதி பிரதிபாதயிதும் சக்நோத்யே தத் வாக்யமிதி –உ–இதி ஜந்மாத் யதிகரணம் —

——–

1-1-3- -ஸாஸ்த்ர யோநித்வாத்
யதோ வா இமாநி –இத்யாதி வாக்யமேவ விஷய
தத் கிம் ஜகாத் காரணே ப்ரஹ்மணி ப்ரமாணம் -உத நேதி ஸம்சய -நைதத் பிரமாணம் இதி பூர்வ பக்ஷ -அநுமான ஸித்த ப்ரஹ்ம விக்ஷயத்வாத்–பிரமாணாந்தரா விஷயே ஹி ஸாஸ்த்ரம் பிரமாணம் -ஜகதஸ் சாவ யத்வேந கார்யத்வாத் –கார்யஸ்ய ஸ்வ உபாதான உப கரண ஸம் ப்ரதான ப்ரயோஜனாத் யபிஜ்ஞ கர்த்ருகத்வாத் ஜகந் நிர்மாண கார்ய சதுர -கர்ம பரவஸ பரிமித ஸக்த்யாதி ஷேத்ரஞ்ஞ விலக்ஷணஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ ஸக்தஸ் ஸர்வேஸ்வர அநுமான ஸித்த இதி தஸ்மிந் யதோ வா இமாநி பூதாநி இத்யாதி வாக்யம் பிராமணம் இதி -ராத்தாந்தஸ்து -ஜகத கார்யத்வே -அப்யேகதைவைகேநைவ க்ருத்ஸ்னம் ஜகத் நிர்மித மித்யத்ர ப்ரமாணா பாவாத் -ஷேத்ரஞ்ஞாநா மேவ விலக்ஷண புண்யா நாம் ஞான ஸக்தி வைசித்ர்ய ஸம்பாவ நயா காதாசித் கஸ்ய சிஜ் ஜகத் ஏகதேச நிர்மாண ஸாமர்த்ய சம்பவாத் தததிரிக்த புருஷ அநுமானம் ந சம்பவதீதி ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் ப்ரஹ்மணஸ் தத் ப்ரதிபாதகத்வேந தஸ்மிந் -யதோ வா இமாநி பூதாநி –இத்யாதி வாக்கியம் -ப்ரமாணம் இதி —
ஸாஸ்த்ரம் யோநி -யஸ்ய காரணம் பிரமாணம் தத் ப்ரஹ்ம ஸாஸ்த்ர யோநி -பிரமாணாந்தர அவிஷயத்வேந ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் ப்ரஹ்மண தஸ்மிந் யதோ வா இமாநி இத்யாதி -வாக்யம் பிரமாணம் இதி ஸூத்ரார்த்த –3-இதி -ஸாஸ்த்ர யோநித்வாதி கரணம் –3

———-

4- தத் து சமன்வயாத்
ப்ரஹ்மணஸ் ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சம்பவதி நேதி விசார்யதே –ந ஸம்பவ தீதி பூர்வ பக்ஷ —
குத
ப்ரவ்ருத்தி நிவ்ருத்த் யன்வய விரஹிணோ ப்ரஹ்மணி ஸ்வரூபேணா புருஷார் தத்வாத் புருஷார்த்த அவ போதகத்வேந ச ஸாஸ்த்ரஸ்ய ப்ராமாண்யாத்-மோக்ஷ சாதன ப்ரஹ்ம த்யான விதி பரத்வே அபி அஸத்யபி ப்ரஹ்மணி தத் த்யான விதாந சம்பவாத் ந ப்ரஹ்ம ஸத்பாவே தாத்பர்யமிதி ப்ரஹ்மண -ஸாஸ்த்ர ப்ரமாணகத்வம் ந சம்பவதி
ராத்தாந்தஸ்து அதிசயித குண பித்ரு புத்ராதி ஜீவனஜ் ஞானவத் அநவதிக அதிசய அநந்த ஸ்வரூப ப்ரஹ்ம ஞானஸ்ய நிரதிசய புருஷார் தத்வாத் தஸ்ய ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சம்பவதி -ஆனந்தோ ப்ரஹ்ம -யதேஷ ஆகாஸ ஆனந்தோ ந ஸ்யாத் -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் இத்யாதிபிர் அநவதிக அதிசய அநந்தஸ்வரூபம் ப்ரஹ்மேதி ஹி ப்ரதிபாத்யதே –
அதோ ப்ரஹ்ம ஸ்வேந பரேண வா அப் யநுபூயமாநம் நிரதிசய அனந்த ஸ்வரூப மேதி தத் ப்ரதிபாதன பரஸ்யைவ ஸாஷாத் புருஷார்த்த அன்வய -ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரஸ்ய து தத் ஸாத்ய பல சம்பந்தாத் புருஷார்த்த அந்வய இதி
ஸூத்ரார்த்த -து ஸப்த ப்ரஸக்தா சங்கா நிவ்ருத்யர்த்த –தத் பூர்வ ஸூத்ர உதிதம் ப்ரஹ்மண ஸாஸ்த்ர யோநித்வம் சமன்வயாத் ஸித்த்யதி –ஸம்யக் புருஷார்த்த தயா அந்வய ஸமன்வய -வேதி துர் நிரதிசய அநந்த ஸ்வரூபத்வேந பரம புருஷார்த்த ரூபே பரே ப்ரஹ்மணி வேதகதயா ஸாஸ்த்ரஸ்ய அந்வயாத் ப்ரஹ்மண ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சித்த்யத்யே வேதி —4- இதி சமன்வய அதிகரணம் -4-

———–

1-1-5-ஈஷத் அதிகரணம்
5-ஈஷதேர் நா ஸப்தம்

யேநாஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதி -ஜகத் காரணவாதி வேதாந்த வேத்யம் விஷய
தத் கிம் சாங்க்ய யுக்தம் ப்ரதாநம் –உத அநவதிக அதிசய அநந்தம் ப்ரஹமேதி ஸம்சய –ப்ரதானமிதி பூர்வ பக்ஷ —
குத
ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அன்வயேநாநுமாநாகார வாக்ய வேத்யத்வாத் –
யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதிநா -ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாநம் ப்ரதிஞ்ஞாய -யதா சோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந இதி த்ருஷ்டாந்தேந ஹ்யுபபாத்யதே -ஏவம் அநு மானிகம் ஏவ ஏதத் வாக்ய வேத்யமிதி நிஸ் சீயதே –
ஸதேவ சோம்யேதம் இதி சச்சப்த ப்ரதான விஷய -ததைஷத பஹுஸ்யாம் இதி ச கௌணம் ஈஷணம் பவிதுமர் ஹாதி தத்தேஜ ஐஷத -இத்யாதி கௌணேக்ஷண ஸாஹசர்யாச் ச -ராத்தாந்தஸ்து –ததைக்ஷத பஹுஸ்யாம் இதி பஹு பவந ஸங்கல்ப ரூபேக்ஷண அந்வயாத் -ஸதேவ சோம்ய இதி காரண வாசி ஸச் ஸப்த விஷயோ நா சேதநம் ப்ரதாநம் -அபி து ஸார்வஜ்ஞய ஸத்ய சங்கல்பாதி யுக்தம் பர ப்ரஹ்மை வேதி நிஸ் சீயதே -ந ச அநு மானாகார மேதத் வாக்யம் ஹேதுத்வநு பாதாநாத்
அந்ய ஞாநேநாந்யஜ் ஞாநா ஸம்பவ பரிஜிஹீர்க்ஷயா து த்ருஷ்டாந்த உப பாதாநாம் –ந ச முக்யேக்ஷண சம்பவே கௌண பரிக்ரஹ ஸம்பவ –தேஜஸ் ப்ரப்ருதி சரீரகஸ் யாந்தர் யாமிணோ வாசகத்வாதிதி பரமேவ ப்ரஹ்ம ஜகத் காரண வாதி வேதாந்த வேத்யம் –இதை –
ஸூத்ரார்த்தஸ் ச –ஈஷதேரிதி ஈஷதிதாத்வர்தஸ் ஈஷணம் –ஸப்த ப்ரமாணம் யஸ்ய ந பவதி தத ஸப்தம் -பரோக்தமாநுமாநிகம் ப்ரதாநம் –
ஸதேவ சோம்யேதம் இதி ஜகத் காரண தயா ப்ரதிபாதித அந்வயிந ஈஷண வ்யாபாராந்நா சேதனம ஸப்தம் தத் அபி து ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் ப்ரஹ்மைவ ஜகத்காரணமிதி நிஸ் சீயதே –இதி –5-

6-கௌணஸ் சேந் நாத்ம ஸப்தாத்
தத்தேஜ ஐக்ஷத -இத்ய சேதனகத கௌணேக்ஷண சாஹசர்யாத் -ததைக்ஷத இத்யர்த ஈஷதிர் கௌண இதி சேந்ந ஆத்ம சப்தாத் –
ஸச் ஸப்தாபிஹிதே ஈஷிதரி ஐ ததாத்ம்யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா இதி ஸ்ரூயமாணாச் சேதன வாசிந –
ஆத்ம ஸப்தாதயமீக்ஷதிர் முக்ய ஏவேதி ப்ரதீயதே –ஐததாத்ம்யமிதம் ஸர்வம் இதி தேஜ ப்ரப்ருதீ நாமபி ததாத்மகத்வாவகமாத் தேஜ ப்ரப்ருதீ ஷணமபி முக்யமே வேத்யபி ப்ராய –6-

7-தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதேசாத்
இதஸ் ச ஸச் ஸப்தாபி ஹிதம் ந ப்ரதாநம் அபி து பரமேவ ப்ரஹ்ம –தத்த்வமஸி இதி ஸதாத்மகதயா ப்ரத்யகாத்ம அநு ஸந்தான நிஷ்டஸ்ய தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யே அத ஸம்பத்ஸ்ய இதி மோக்ஷ உப தேசாத் தத் காரணம் பரமேவ ப்ரஹ்ம -7-

8-ஹேயத்வா வசநாச் ச —
யதி ப்ரதாநம் இஹ காரண தயா விவஷிதம் ததா தஸ்ய மோக்ஷ விரோதித்வாத்தே யத்வம் உச்யதே -ந சோஸ்யதே –அதஸ் ச ந ப்ரதாநம் –8-

9-ப்ரதிஞ்ஞா விரோதாத்
ப்ரதான வாதே ப்ரதிஞ்ஞா ச விருத்யதே யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இதி வஹ்யமாண காரண விஞ்ஞாநேந சேதன அசேதன மிஸ்ர க்ருத்ஸ்ன ப்ரபஞ்ச ஞானம் ஹி ப்ரதி ஞாதம் -சேதன அம்சம் ப்ரதி ப்ரதானஸ்யா காரணத்வாத் தஜ் ஞாநேந சேதன அம்சோ ந ஞாயத இதி ந ப்ரதாநம் காரணம் -9-

10-ஸ்வாப்யயாத்
ஸ்வம் அபீதோ பவதி -ஸதா சோம்ய ததா ஸம்பந்நோ பவதி இதி ஜீவஸ்ய ஸூஷுப் தஸ்ய ஸ்வாப்யயஸ் ஸ்ரூயதே -ஸ்வ காரணே ஹ்யப் யய ஸ்வாப்யய–ஜீவம் ப்ரதி ப்ரதானஸ்யா காரணத்வாத் ஸ்வாப்யய ஸ்ருதி விருத்யதே –அதஸ் ச ந ப்ரதாநம் அபி து ப்ரஹ்மைவ –10-

11-கதி சாமான்யாத்
இதர உப நிஷத் கதி சாமான்யா தஸ்யாம் சோபநிஷதி ந ப்ரதாநம் காரணம் விவஷிதம்
இதராஸூ சோபநிஷத்ஸூ -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித்–தஸ்மா தேதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னம் ச ஜாயதே பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச ஸ காரணம் கரணாதிபாதிப ஆத்மநி கல்வரே விதிதே ஸர்வமிதம் விதிதம் -தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூதஸ்ய விஸ்வ ஸிதமேதத்யத்ருக்வேத புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் தஸ்மாத் விராட ஜாயத ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத்
ஸ இமான் லோகந ஸ்ருஜத தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் =ஸ ஏகாகீ ந ரமேத இதி ஸர்வஞ்ஞ புருஷோத்தம ஏவ காரணதயா ப்ரதிபாத்யதே -அஸ்யாஸ் ச தத் கதி சாமான்யா தத்ராபி ஸ ஏவ காரண தயா ப்ரதிபாதன மர்ஹா தீதி ந ப்ரதாநம் –11–

12-ஸ்ருதத் வாஸ் ச
ஸ்ருதமே வாஸ்யாம் உப நிஷதி ஆத்மத ஏவேதம் ஸர்வம் இதி -அதஸ் ச ஸதேவ சோம்ய இத்யாதி ஜகத் காரணவாதி வேதாந்த வேத்யம் ந ப்ரதாநம் -ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் பரம் ஏவ ப்ரஹ்ம இதி ஸ்திதம் —இதி -ஈஷத் யதிகரணம் –5-

—————–

1-1-6- ஆனந்த மய அதிகரணம்
13-ஆனந்த மயோ அப்யாஸத்

தைத்திரீயகே –தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத இதி -ப்ரக்ருத்ய தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயத் -அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இத்யத்ர ஜகத் காரண தயா அவகத -ஆனந்தமய -கிம் ப்ரத்யகாத்மா -உத பரமாதமேதி ஸம்சய -ப்ரத்யகாத்மேதி பூர்வ பக்ஷ -குத -தஸ்யைக்ஷ ஏவ சாரீர ஆத்மா இத் யாநந்த மயஸ்ய சாரீரத்வ ஸ்ரவணாத் –ஸாரீரோ ஹி சரீர சம்பந்தீ -ச ச ப்ரத்யகாத்ம ஏவ -தஸ்ய சேதநத்வேநேஷா பூர்விகா ஸ்ருஷ்டி ரூப பத்யத இதி -ராத்தாந்தஸ்து -ஸ ஏஷ ஆனந்தஸ்ய மீமாம்ஸா பவதி இத்யாராப்ய-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் இதி நிரதிசய தஸா சிரஸ்கோ அப்யஸ்யமாந ஆனந்த ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ்ய பரஸ்யைவ ப்ரஹ்மண இதி நிஸ் சீயதே -சாரீராத்மத்வம் ச பரமாத்மந ஏவ தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத -இத்யாகாஸாதி ஜகாத் காரண தயா அவகத ஏவான் நமயஸ்ய சாரீர ஆத்மேதி ப்ரதீயதே ஆத்மாந்தர நிர்தேசாத்
ஸ்ருத் யந்த்ரேஷு -ப்ருதிவ் யக்ஷராதீநாம் சரீரத்வம் பரமாத்மந ஆத்மத்வம் ச ஸ்ரூயதே யஸ்ய ப்ருதிவீ சரீரம் இத்யாராப்ய-ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இதி
அன்னமயஸ் யாத்மைவ ப்ராண மயாதிஷு தஸ்யைக்ஷ ஏவ சாரீர ஆத்மா யஸ் பூர்வஸ்ய இத் யநுக்ருஷ்யத இதி ப்ரத்யகாத்மநோ விஞ்ஞான மயஸ்ய ச ஸ ஏவ சாரீர ஆத்மா -ஆனந்த மயே து தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா யஸ் பூர்வஸ்ய இதி நிர்தேச -ஆனந்தமயஸ்யாநன்யாத்மத்வ ப்ரதர்சநார்த்த -அதோ ஜகத் காரண தயா நிர்திஷ்டம் ஆனந்தமய பரமாத்மைவேதி —
ஸூத்ரார்தஸ்து –ஆனந்த மய ஸப்த நிர் திஷ்ட ஆகாசாதி ஜகாத் காரணபூதஸ் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ் பரமாத்மா –
குத
தஸ் யாநந்தஸ்ய நிரதிசய ப்ரதீதி பலாத் -ஸ ஏகோ மாநுஷ ஆனந்த -தே யே சதம் இத்யாத் யப் யாஸாத் தஸ்ய ச ப்ரத்யகாத்மந்ய ஸம்பாவிதஸ்ய தததிரிக்தே பரமாத்மன்யேவ சம்பவாத் –13-

14-விகார ஸப்தான்நேதி சேந்ந ப்ராசுர்யாத் –ஆனந்த மய -இதி விகாரார்த்தான் மயட் ஸப்தான்நாயம விக்ருத பரமாத்மா -அஸ்ய ச விகாரார்தத்வமேவ யுக்தம் அன்னமய இதி விகார உபக்ரமாதிதி சேந்ந-ப்ரத்யகாத்மநோ அபி ந ஜாயதே ம்ரியதே வா இத்யாதி விகார ப்ரதி ஷேதாத் ப்ராசுர்யார்த்த ஏவாயம் மயடிதி நிஸ்ஸயாத் -அஸ்மிம்ஸ் சா நந்தே யதோ வாசோ நிவர்த்தந்தே இத்யாதி வஹ்யமாணாத் பிராசர்யாதயமாநந்த ப்ரசுர பரமாத்மைவ -நஹ் யநவதிக அதிசய ரூப ப்ரபூதாநந்த ப்ரத்யகாத்மநி ஸம்பவதி –14-

15-தத்தேது வ்யபதேசாச் ச -ஏஷ ஹ்யேவா ஆநந்தயாதி இதி ஜீவான் ப்ரதி ஆனந்த யித்ருத் வ்யபதேசாதயம் பரமாத்மைவ –15-

16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி மந்த்ர வர்ணோதிதம் ப்ரஹ்மைவ தஸ்மாத் வா ஏதஸ் மாதாத்மந இத்யாரப்ய ஆனந்தமய இதி ச கீயதே –ததஸ் சா ஆனந்த மயோ ப்ரஹ்ம -16-

ப்ரத்யகாத்மந பரி ஸூத்தம் ஸ்வரூபம் மந்த்ர வர்ணோதித மித்யா சங்க்யாஹ
17-நேதரோ அநுப பத்தே
–பரஸ்மாத் ப்ரஹ்மண -இதர ப்ரத்யகாத்மா ந மந்த்ர வர்ணோதித -தஸ்ய விபஸ்சிதா ப்ரஹ்மணா இதி விபஸ்சித்வ அநுப பத்தே –விவிதம் பஸ்யச் சித்த்வம் ஹி விபஸ் சித்த்வம் தச்ச ஸோ அகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேய இத்யாதி வாக்யோதித நிருபாதிக பஹு பவந ஸங்கல்ப ரூபம் ஸர்வஞ்ஞத்வம்
தத்து ப்ரத்யகாத்மந பரி ஸூத்தஸ் யாபி ந சம்பவதி ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத சந்நிஹிதத் வாச்ச இதி வஹ்ய மாணத்வாத் –அத பரம் ப்ரஹ்மைவ மாந்த்ர வர்ணிகம் –17-

18-பேத வியபதேஸாஸ் ச –-பீஷாஸ்மாத் வாத பவதே இத்யாதிநா -அக்னி வாயு ஸூர்யாதி ஜீவ வர்கஸ்ய ஆனந்த மயாத் ப்ரஸாஸிது -ப்ரஸாஸி த்வயத்வேந பேதோ வ்யபதிஸ்யதே –அதஸ் சாநந்தமய பரமாத்மேதி –
யோஜனாந்தரம் -தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் -அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இதி விஞ்ஞாந மயாஜ் ஜீவாதா நந்த மயஸ்ய பேதோ வ்யபதிஸ்யதி –விஞ்ஞான மயோ ஹி ஜீவ ஏவ ந புத்தி மாத்ரம் -மயட் ச் சுருததே –அதஸ் சா நந்த மய பரமாத்மா –18-

19-காமாச் ச நாநுமாநாபேஷா –ஸோ அகாமயத இத்யாரப்ய இதம் ஸர்வமஸ்ருஜத இதி காமாதேவ ஜகத் ஸர்கஸ்ரவணாத் அஸ்ய ஆனந்த மயஸ்ய ஜகத் சர்கே நாநுமாந கம்ய ப்ரக்ருத்யபேஷா ப்ரதீயதே
ப்ரத்யகாத்மநோ யஸ்ய கஸ்ய சிதபி சர்கே ப்ரக்ருத் யபேஷாஸ்தி -அதஸ் சாயம் ப்ரத்யகாத்மநோ அந்ய பரமாத்மா –19-

20-அஸ்மின் நஸ்ய ச தத் யோகம் ஸாஸ்தி -ரஸோ வை ஸ -ரஸம் ஹ்யே வாயம் லப்த்வா ஆனந்தீ பவதி இதி அஸ்மின் -ஆனந்த மயே ரஸ ஸப்த நிர்திஷ்டே அஸ்ய அயம் ஸப்த நிர்திஷ்டஸ்ய
ஜீவஸ்ய தல்லாபாதா நந்த யோகம் ஸாஸ்தி ஸாஸ்த்ரம் -ப்ரத்யகாத்மநோ பல்லாபாதா நந்த யோக -ஸ தஸ்மாதன்ய பரமாத்மை வேத்யா நந்த மய -பரம் ப்ரஹ்ம –20- இதி ஆனந்த மயாதிகரணம்–7-

—————-

1-1-7-அந்தராதிகரணம்
20-அந்தஸ் தத் தர்ம உபதேசாத் –சாந்தோக்யே ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ய ஏஷோ அந்தரஷிணி புருஷோ த்ருஸ்யதே இத்யஷ் யாதித்யாதாரதயா ஸ்ரூயமாண புருஷ
கிம் ஜீவ விசேஷ உத பரம புருஷ இதி ஸம்சய–ஜீவ விசேஷ இதி பூர்வ பக்ஷ
குத -ஸ சரீரித் வாத் -சரீர ஸம் யோகோ ஹி கர்ம வஸ்யஸ்ய ஜீவஸ்ய ஸ்வ கர்ம பல போகாயேதி -ராத்தாந்தஸ்து –ஸ ஏஷ ஸர்வேப்ய பாப்மப்ய உதித இத்யாதிநா அபஹத பாப்மத்வ பூர்வக ஸர்வ லோக காமே ஸத்வ உபதேசாத் -தேஷாம் ச ஜீவேஷ்வ சம்பவாத் அயமஹ்யாதித் யாதார புருஷோத்தம ஏவ -ஸ்வ அசாதாரண விலக்ஷண ரூப வத்த்வம் ச ஞான பல ஐஸ்வர்யாதி கல்யாண குண வத்தஸ்ய சம்பவதி -ஸ்ரூயதே ச தத் ரூபஸ்ய அப்ராக்ருதவம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் து பாரே இத்யாதவ் –ஸூத்ரார்தஸ்து –ஆதித்யாத் யந்தஸ் ஸ்ரூயமாண புருஷ பரம் ப்ரஹ்ம –தத் அசாதாரண அபஹத பாப்மத்வாதி தர்ம உபதேசாத் –21–

22-பேத வியபதேசாச் சான்ய –ய ஆதித்யே திஷ்டன் நாதித்யா தந்தர –ய ஆத்மநி திஷ்டன் நாத்மநோ அந்தர –இத்யாதிபிர் -ஜீவாத் பேத வியபதேசாச் சாயம் ஜீவா தன்ய பரமாத்மைவ –-22–இதி அந்தர் அதிகரணம் –

1-1-8-ஆகாஸாதி கரணம்
23-ஆகாஸஸ் தல் லிங்காத்
–சாந்தோக்ய –அஸ்ய லோகஸ்ய கா கதி இத்யாகாஸ இதி ஹோவாஸ ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாஸம் ப்ரத்யஸ் தம் யந்தி இத்யத்ர ஆகாஸ ஸப்த -நிர்திஷ்டம் -ஜகத் காரணம் -கிம் ப்ரஸித்த ஆகாஸ –உத ஸமஸ்த சித் அசித் வாஸ்து விலக்ஷணம் ப்ரஹ்மேதி ஸம்சய –ப்ரஸித்த ஆகாஸ -இதி பூர்வ பக்ஷம் –குத
ஆகாஸ சப்தஸ்ய லோகே தத்ரைவ வ்யுத்பத்தே -யதோ வா இமாநி பூதாநி இத்யாதி ஸாமான்ய லக்ஷணஸ்ய ஸதாதி ஸப்தாநாம் அபி சாதாரணத்வேந ஆகாஸதேவ ஸமுத்பத்யந்தே இதி விஸேஷே பர்யவஸாநாத் -ஈஷா –க்ஷணா தயோ அப்யாகாச ஏவ ஜகத் காரணமிதி நிஸ்சிதே ஸதி கௌணா வர்ணநீயா இதி –ராத்தாந்தஸ்து -ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்தவந் நிர்தேசாத் -பிரஸித்தேஸ் சேஷா பூர்வகத்வாத் சித் அசித் வஸ்து விலக்ஷணம் ஸர்வஞ்ஞம் ப்ரஹ்ம ஆகாஸ ஸப்த நிர்திஷ்டமிதி
ஸூத்ரார்தஸ்து –ஆகாஸ ஸப்த நிர்திஷ்டம் பரமேவ ப்ரஹ்ம ப்ரஸித்த வந் நிர்திஸ்ய மாநாத் ஜகத் காரணத்வாதி லிங்காத் —23-இதி ஆகாஸாதி கரணம் –1-1-8-

————–

1-1-9-ப்ராண அதிகரணம்
24-அத ஏவ ப்ராண –சாந்தோக்ய -ப்ரஸ்தோதர்யா தேவதா ப்ரஸ்தாவமந்வாயதா இதி பிரஸ்துத்ய கதமா ஸா தேவதேதி –ப்ராண இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராணமேவாபி ஸம் விஸந்தி -ப்ராண மப்யுஜ் ஜிஹதே ஸைஷா தேவதா ப்ரஸ்தாவ மன்வாயத்தர இத்யத்ர நிகில ஜகத் காரண தயா ப்ராண ஸப்த நிர் திஷ்ட-கிம் ப்ரஸித்த பிராண உதோக்த லக்ஷணம் ப்ரஹ்மேதி ஸம்சய –ப்ரஸித்த ப்ராண இதி பூர்வ பக்ஷ –
குத -ஸர்வஸ்ய ஜகத ப்ராணாயத்தஸ்திதி தர்சநாத் ச ஏவ நிகில் ஜகதேக காரண தயா நிர்தேச மர்ஹாதீதி –ராத்தாந்தஸ்து ஸிலா காஷ்டாதி ஷு அசேதநேஷு சேதன ஸ்வரூபேஷு ச ப்ராணாயத்த ஸ்தித்யபாவத் ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்த வன்னிர்தேசா தேவ ஹேதோ ப்ராண ஸப்த நிர் திஷ்டம் பரமேவ ப்ரஹ்ம ஸூத்ரமபி வ்யாக்யாதம் —24-இதி ப்ராண அதிகரணம் –1-1-9-

1-1-10-ஜ்யோதிர் அதிகரணம்
25-ஜ்யோதிஸ் சரண அபிதாநாத்
–சாந்தோக்ய அத யத்த பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வதா ப்ருஷ்டேஷ்வ நுத்தமேஷுத்தமேஷு லோகேஷு இதம் வா வத்யதிதமஸ்மிந்நந்த புருஷே ஜ்யோதி இத்யத்ர ஜகத் காரணத்வ வ்யாப்த நிரதிசய தீப்தி யுக்த தயா ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம்
கிம் ப்ரசித்த ஆதித்யாதி ஜ்யோதி உத பரமேவ ப்ரஹ்மேதி ஸம்சய -ப்ரஸித்த ஜ்யோதிரிதி பூர்வ பக்ஷ –குத
இதம் வாவ தத்யதி தமஸ்மின் நந்த புருஷ ஜ்யோதி இதி கௌஷேய ஜ்யோதிஷா பிரஸித்தே நைக்யாவகமாத் ஸ்வ வாக்யே
தததிரிக்த பர ப்ரஹ்ம அசாதாரண லிங்கா தர்ச நாச்ச -ராத்தாந்தஸ்து -ப்ரஸித்த ஜ்யோதிஷோ அந்ய தேவ பரம் ப்ரஹ்மேஹ நிரதிசய தீப்தி யுக்தம் ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம் –குத –
பாதோஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபதாஸ்யாம்ருதம் திவி இதி பூர்வ வாக்ய த்யு சம்பந்தி தயா நிர் திஷ்டஸ் யைவ சதுஷ் பதோ ப்ரஹ்மண -அத யதத பரோ திவோ ஜ்யோதி இத்யத்ர ப்ரத்யபிஜ் ஞாநாத் –தச்ச பரமேவ ப்ரஹ்மேதி விஞ்ஞாதம் ஸர்வேஷாம் பூதா நாம் தஸ்ய பாதத்வேந வியபதேசாத்
ஏவம் பர ப்ரஹ்மத்வே நிஸ்சிதே கௌஷேய ஜ்யோதிக்ஷ ததாத்மகதவ அநு சந்தானம் பலயோபதிஸ் யத இதி ஞாயதே –
ஸூத்ரார்த்தஸ்து -ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம் பரம் ப்ரஹ்ம அஸ்ய ஜ்யோதிஷ பூர்வ வாக்யே ஸர்வ பூத் பாதத்வம் –ஸர்வ பூத பாதத்வம் ச பரஸ்யைவ ப்ரஹ்மண உப பத்யதே –25-

26–சந்தோ அபிதாந் நாந்நேதி சேந்ந ததா சேதோ அர்பண நிகமாத்ததாஹி தர்சனம் —காயத்ரீ வா இதம் ஸர்வம் இதி காயத்ர்யாக்யச் சந்தஸ ப்ராக்ருதத்வாத் ஸர்வ பூத பாதத்வேந காயதர்யா ஏவாபிதா நான்ந ப்ரஹ்மேதி சேத் நைதத் –
ததா சேதோ அர்பண நிகமாத் –காயத்ரீ யதா பவதி ததா ப்ரஹ்மணி சேதோ அர்பணோபதேஸாத் -காயத்ரீ ஸாத்ருஸ்யம் சதுஷ் பாத்த்வம்
ப்ரஹ்மண்யநு ஸம்தேயமித் யுபதிஸ்யதே -காயத்ர்யாஸ் ஸர்வாத்மகத்வ அநுப பத்தேரித் யர்த –ததா ஹி தர்சனம் ததா ஹ்யன் யத்ராபி ப்ய சந்தஸ ஏவ சாத்ருஸ் யாச் சந்தஸ் சப்தே நாபிதாநம் த்ருஸ்யதே தே வா ஏதே பஞ்சான்யே பஞ்சான்யே தச சம்பத்யந்த இத்யாரப்ய சைஷா விராடன்னாத் இதி –26-

27-பூதாதி பாத வ்யபதேசோப பத்தைஸ் சைவம்- பூத ப்ருதிவீ சரீர ஹ்ருதயாநி நிர்திஸ்ய சைஷா சதுஷ்பதா இதி பூதாதீ நாம் -பாதத்வ வ்யபதேஸோ ப்ரஹ்மண்யேவோப பத்யத இதி ப்ரஹ்மைவ காயத்ரீ ஸப்த நிர் திஷ்ட மிதி கம்யதே–27-

28-உபதேஸ பேதான்நேதி சேன்நோபயஸ்மிந் நப்ய விரோதாத் –பாதோ அஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபாதஸ் யாம்ருதம் திவி இதி பூர்வ வாக்யோதிதம் பரம் ப்ரஹ்மை வாஸ்து –ததாபி அத யதத பரோ திவோ ஜ்யோதி –இதி த்யு ஸம்பந்த மாத்ரேண நேஹ தத் ப்ரத்யபிஜ் ஞாயதே தத்ர ஸாத்ர சவ்ய உபதேச பிரகார பேதாத் தத்ர ஹி திவி இதி த்யா ஸப்தம்யா நிர் திஸ்யதே இஹ ச திவ பரோ ஜ்யோதி இதி பஞ்சம்யா ததோ ந ப்ரதி ஸந்தானமிதி சேந்ந உபயஸ்மிந்நபி வ்யபதேஸ உபரிஸ்திதி ரூபார்தைக் யேந ப்ரதிஸம்தாநா விரோதாத் யதா வ்ருஷாக்ரே ஸ்யேந வ்ருஷாக்ராத் பரத ஸ்யேந இதி —28-ஜ்யோதிர் அதிகரணம் –1-1-10-

1-1-11-இந்த்ர ப்ராண அதிகரணம்
29-ப்ராணஸ் ததாநுகமாத்
–கௌஷீதகீ ப்ராஹ்மணே ப்ரதர்தந வித்யாயாம் த்வமேவ வரம் வ்ருணீஷ்வ யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே இதி ப்ரதர்தந யுக்த இந்த்ர பிராணோ அஸ்மி ப்ரஞ்ஞாத்மா தம் மாமாயுரம்ருதமித் யுபாஸ்வ இத்யாஹா –அத்ர ஹிததம உபாஸன கர்மதயா நிர் திஷ்ட இந்த்ர ப்ராண ஸப்தாபிதேய
கிம் ஜீவ –உத பரமாத் மேதி ஸம்சய –ஜீவ இதி பூர்வ பக்ஷ -குத
இந்த்ர சப்தஸ்ய ஜீவ விஸேஷே ப்ரஸித்தே –ப்ராண ஸப்தஸ் யாபி தத் ஸமாநாதி கரணஸ்ய -ஸ ஏவார்த இதி தம் மாமாயு ரம்ருதம் இத் யுபாஸ்வ இதி தஸ்யைவ உபாஸ்யத்வ உப தேஸா திதி –ரத்தாந்தஸ்து
இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டம் ஜீவாதர் தாந்தர பூதம் பரம் ப்ரஹ்ம ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஞ்ஞாத்மா ஆனந்தோ அஜரோ அம்ருத இதீந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ் யைவ ஜீவேஷ்வ ஸம்பாவித அனந்தத்வ அஜரத்வ அம்ருதத்வ ஸ்ரவணாத்
ஸூத்ரார்தஸ்து –உபாஸ்யதய உபதிஷ்டம் இந்த்ர ப்ராண ஸப்த அபிதேயம் பரம் ப்ரஹ்ம -ததேதி பிரகார வசன பர ப்ரஹ்ம ப்ரகார பூதேஷ்வா நந்தாதிஷு அஸ்ய அநுகமாத் –29-

30-ந வக்துர் ஆத்ம உபதேஸாதிதி சேதத் ஆத்ம ஸம்பந்த பூமாஹ் யஸ்மிந் –நாயம் உபாஸ்ய பரமாத்மா மாமேவ விஜாநீஹி தம் மாமாயுரம்ருதமித் யுபாஸ்வ இதி ப்ரஞ்ஞாத ஜீவஸ் யேந்த்ரஸ்ய வக்துஸ் ஸ்வாத்மந உபாஸ்யத்வ உபதேசாத் உபக்ரமே ஜீவ பாவ நிஸ்சயே ஸத் யுப ஸம்ஹாரஸ்ய தத் அநு குணதயா நேயத்வாதிதி சேந்ந —
அத்யாத்ம ஸம்பந்த தஸ்ய பூமா பஹுத்வம்
ஜீவாதர் தாந்தர பூதாத்மா அசாதாரண தர்ம ஸம்பந்த பஹுத்வம் அஸ்மின் ப்ரகரணே உபக்ரம ப்ரப்ருத்யோப ஸம்ஹாராது பலப்யதே –உபக்ரமே தாவத் யம் த்வம் மனுஷ்யாய ஹிததமம் மன்யஸே இதி ஹ்யநே நோச்யமானம் உபாஸனம் பரமாத்ம உபாசன மேவ தஸ்யைவ ஹித தமத்வாத் ததா ஈஷா ஏவ ஸாது கர்ம காரயதி இத்யாதி ஸாத்வ ஸாது கர்மணோ காரயித்ருத்வம் பரமாத்மந ஏவ தர்ம தத்யதா ரதஸ்யா ரேஷு நேமி ரர்பிதா நாபாவரா அர்பிதா ஏவமேவைதா பூத மாத்ரா ப்ரஞ்ஞா மாத்ராஸ் வர்பிதா ப்ரஞ்ஞா மாத்ரா ப்ராணோ அர்பிதா இதி ஸர்வா தாரத்வம் ச தஸ்யைவ தர்ம ஆனந்தாத யஸ் ச ஏஷ லோகாதி பதிரேக்ஷ ஸர்வேச இதி ச ஹீதி ஹே தவ் அத பர ப்ரஹ்மை வாயமித் யர்த –30-

பரமாத்மைவோ பாஸ்யஸ் சேத் கதமிந்த்ரோ மாம் உபாஸ்வ இத் யுபாதிதேஸேத்யத ஆஹ
31-ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாத் உப தேசோ வாமதேவவத்
–இந்த்ரஸ்ய ஜீவஸ் யைவ ஸத -ஸ்வாத்மத்வேந உபாஸ்ய பூத பரமாத்ம உபதேஸோ அயம் ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா –அந்த ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்மா –தத்த்வமஸி -ய ஆத்மநி திஷ்டன் நாத்மநோ அந்தரோ யமாத்மா ந வேத யஸ்யாத்மா ஸரீரம் ய ஆத்மாநாம் அந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத –ஏஷ ஸர்வபூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதீதி ஹி சாஸ்த்ராணி பரமாத்மாநம் ஜீவாத்மந ஆத்மதயோ பதிதிஸூ -அதோ ஜீவாத்ம வாசிநஸ் ஸப்தா -ஜீவாத்ம சரீரிகம் -பரமாத்மாநமேவ வதந்தீதி ஸாஸ்த்ர த்ருஷ்டார்தஸ்ய தஸ்ய மாமேவ விஜாநீஹிமாம் உபாஸ்ஸ்வ இதி ஸ்வாத்ம சப்தேந பரமாத்ம உபதேசோ அயம் ந விருத்த்யதே –யதா வாமதேவ ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா ஸ்வாத்ம சரீரிகம் பரமாத்மாநம் பஸ்யன்னஹமிதி பரமாத்மா நமவோசத்
தத்தை தத் பஸ்யன் ந்ருஷிர் வாமதேவ பிரதிபேதே அஹம் மனுரபவம் ஸூர்ய்யஸ் சாஹம் கஷீவாந் ருஷி ரஸ்மி விப்ர இதி –31

32-ஜீவ முக்ய ப்ராண லிங்காந்நேதி சேந்நோபாஸா த்ரைவித்யா தாஸ்ரிதத்வாதிஹ தத் யோகாத் -த்ரி ஸிர் ஷாணம் த்வாஷ்ட்ரமஹநமருந் முகான்யதீன் ஸாலா வ்ருகேப்ய ப்ராயச்சம் –யாவத் த்யஸ் மிஞ்சரீரே ப்ராணோ வசதி தாவதாயு இதி ஜீவ முக்ய ப்ராண லிங்காத் நாத்யாத்ம ஸம்பந்த பூம்நா பரமாத்மத்வ நிஸ்சய இதி சேந்ந -பரமாத்மந ஏவ ஸ்வா காரேண ஜீவ சரீரீகத்வேந ப்ராண சரீரீகத்வேந சோபாஸா த்ரை வித்யாத்தேதோ தத் தச் சப்தேநாபிதாந மிதி நிஸ்ஸீயதே -அந்யத்ராபி ப்ரஹ்ம உபாஸனே த்ரை வித்யஸ் யாஸ்ரிதத்வாத் ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –ஆனந்தோ ப்ரஹ்ம இதி -ஸ்வா காரேண உபாஸ்யத்வம் ஸச்ச த்யச்சா பவத் இத்யாதிநா போக்த்ரு சரீரகத்வேந போக்ய சரீரகத்வேந ச
இஹ ப்ரதர்தன வித்யாயாமபி தஸ்ய த்ரை வித்யஸ்ய சம்பவாத் அத இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ் பரமாத்மா —32-இதி இந்த்ர ப்ராண அதிகரணம் -1-1-11-

ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -பிரதம பாதம் ஸம் பூர்ணம்

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் அருளிச் செய்த ஸ்ரீ வரவர முனி ஸூ சரித சஷகம்

February 16, 2024

ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||
-இவர் தனியன்:

திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.-திருநக்ஷத்ரம் -ஆனி அவிட்டம் -அவதார ஸ்தலம் -ஸ்ரீ திரு மழிசை -ஆச்சார்யர் –திருத்தகப்பனார் -ஸ்ரீ நரசிம்ஹாச்சார்யர்

மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.

மூலர்ஷே ஸ்ரீ நகர்யாம் உதயம் அதிகாதோ ஜைத்ர ஜிஹ்வே ஸதாஸாத்
தஸ்மாத் தாபாதி பூர்வம் ருசிர வர இதி ப்ராப்த நாமா குணைஸ்வா
திஷ்டந் கிராம் கடாரே கதிசந ஸரதோ மாதூலா வாஸ பூதே
ஸ அங்க உபாங்காக மஜ்ஜோ த்ரமிட நிகம வித் பிராப தாரா நுதாரான்
–1-

மணவாள மா முனிகள் ஆழ்வார் திரு நகரியில் திகழக்கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணருக்குத் திருகுமாரராக ஐப்பசித் திரு மூலத்தில் திரு அவதரித்தார்
தம்முடைய திருத்தகப்பனாரிடம் இருந்து திருவிலச்சினை ப்ரஸாதிக்கப் பெற்று வடிவழகினாலே அழகிய மணவாளன் என்று திருநாமம் இடப்பெற்றார்
பின்பு ஒரு சில ஆண்டுகள் சிக்கில் கடாரத்தில் தம் அம்மான் திருமாளிகையில் இருந்து கொண்டு அங்க உபாங்கங்களோடு வேதத்தையும் ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும் கற்று குணவதியான பத்னியையும் அடைந்தார்

பூய ஸ்ரீ ரெங்க நாதே நிஜ நிலயகதே ஸ்ரீ நகர்யாம் கடாராத்
ஸ்ரீ சைல ஆர்யம் ஆஸ்ரித தத் கலி யதிபதவ் விம்சதிம் ஸம் ஸதி ஸ்ம
தத் தத் தாம் தத்ஸபர்யாமநுதி நம கரோத் த்ராவிட ஆம்நாய பாஷ்யம்
ஷட் த்ரிம்ஷத் ஸஹஸ்ரைஸ் ஸூ கணிதமதிபிர் வாக் விதேயம் ததவ் ஸா
-2-

நம்பெருமாள் மீண்டும் கோயிலேற எழுந்து அருளின பிறகு அழகிய மணவாளரும் சிக்கில் கடாரத்தில் இருந்து ஆழ்வார் திருநகரிக்குச் சென்று திருவாய் மொழிப்பிள்ளை என்று ப்ரஸித்தரான திருமலை ஆழ்வாரை ஆச்ரயித்தார்
அங்கு அந்தத் திருவாய் மொழிப்பிள்ளையால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த உடையவரைக் குறித்து யதிராஜ விம்சதியை அருளிச் செய்தார்
திருவாய் மொழிப்பிள்ளையால் அளிக்கப்பட யதிராஜ கைங்கர்யத்தைத் தினம் தோறும் செய்து வந்தார்
திருவாய் மொழிக்கு வியாக்யானமான ஈடு முப்பத்தாயிரத்தை கூர்மையான புத்தியுள்ள ஸ ப்ரஹ்ம சாரிகளுடன் கேட்டு வாஸோ விதேயமாக்கிக் கொண்டார்

ஸ்ரீ சைலேஸாய க்ருத்வா ஸஸ பதம் அகில த்ராமிட ஆம்னாய பாஷ்ய
வ்யாக்யா தீஷாம் ததோ அஸ்மின் ஸ்ரிதவதி பரமம் தாம தத் கிம் க்ரியாட்யா
தத் ஸூக்த்யா ரங்கநாத ப்ரணமருதுகீ பட்ட நாதேந கோதாம்
நத்வோத் யாநாத்ரி நாதம் ததநு வரவரோ ரங்கராஜம் ததர்ஸ
–3-

அந்த அழகிய மணவாள நாயனார் திருமலை ஆழ்வாரின் அந்திம தசையில் -ஆழ்வார்களுடைய தர்ம வேதங்களை தத் வ்யாக்யானங்களோடு கூடக் கால ஷேபம் செய்து கொண்டு இருப்பேன் என்று சபதம் செய்து
பின்பு அவர் திரு நாடி அலங்கரித்த போது அவருக்குச் செய்ய வேண்டிய சரம கைங்கர்யங்களை செய்தார்
அவரது வாக்குப்படி பெரிய பெருமாளைத் திருவடி தொழ வேண்டும் என்று ஆவலுடன் திரு நகரியில் இருந்து புறப்பட்டு வழியில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வாரையும் ஆண்டாளையும் மங்களா ஸாஸனம் செய்து திருமாலிருஞ்சோலை அக்கறையும் மங்களா ஸாஸனம் செய்து திருவரங்கத்தை அடைந்து பெரியபெருமாளைக் கண்டு களித்தார்

தேநாஸ்மின் நித்ய வாஸம் ப்ரதி நியமித ஹ்ருல் லோக குர்வாதி சர்யாம்
தத் ஸூக்திம் தத் க்ருஹாம்ச ஸ்வமநஸி கலயன் ரங்க கைங்கர்ய மாப்தா
கத்வா உசவ் வேங்கடாத்ரிம் ததநு கரிகிரிம் பூத புர்யாம் யதீந்த்ரம்
நத்வா கத்வா உத காஞ்சீம் வரத குரு வரதாத்ரி ஜாத் பாஷ்யமாப
-4-

அந்த பெரிய பெருமாளுடைய தரிசனத்தால் ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய வாஸம் பண்ண வேண்டும் என்று கட்டுண்ட மனத்தை யுடையவரானார்
பிள்ளை லோகாச்சார்யர் முதலான ஆச்சார்யர்களின் சரித்ரங்களைக் கேட்டு அவர்களுடைய ஸ்ரீ ஸூக்திகளை மனதில் அனுசந்தித்து -அவர்களுடைய திரு மாளிகைகளை ஸேவித்து திரு அரங்கநாதனின் கைங்கர்யத்தைப் பெற்றார் -பின்பு திவ்ய தேசங்களை மங்களா ஸாஸனம் செய்வதாகத் திரு உள்ளம் பற்றி -திரு வேங்கட மலைக்கும் -அத்திகிரிக்கும் சென்று பின்னர் ஸ்ரீ பெரும் பூதூரில் எம்பெருமானாரைத் திருவடி தொழுது பிறகு திரு வெஃகாவை அடைந்து கிடாம்பி திருமலை நாயனார் என்கிற ஆத்ரேய வரதாச்சார்யர் ஸந்நிதியில் ஸ்ரீ பாஷ்யத்தை அதிகரித்தார் –

ஸ்ரீ ரெங்கம் ப்ராப்ய தஸ்மிந் நித்ய வசதி க்ருத் மங்களா ந்யஸ்ய வாஞ்சந்
ஆசவ் சார்த்தஸ் ஸூதே நோஜ் ஜஹத தத் க்ருஹிணீம் துர்ய மாபாஸ்ரமம் ஸா
அத்ர ஸ்ரீ சைல நாதாஹ்வய பரி மலிதம் மண்டபம் காரயித்வா
லோகாச்சார்யாதி ஸூக்திம் வ்யவ்ருணுத நிபுணம் ரம்ய ஜாமாத்ரு யோகீ
–5-

மீண்டும் திருவரங்கத்தை அடைந்து அங்கே நியதமாக வசிப்பதற்கு ஸ்தானத்தை ஏற்படுத்திக் கொண்டு எம்பெருமானுக்குத் தடை இன்றி மங்களா ஸாஸனம் செய்ய விரும்பியவராய் எழுந்து அருளி இருந்தார்
அதற்கு இடையூறான ஆஸவ் சத்தைச் சிலர் தெரிவிக்க அதனால் போரக் கிலேசித்து பத்னியையம் குமாரரையும் த்யஜித்து ஸந்யாஸ ஆஸ்ரமத்தை ஸ்வீ கரித்தார் –
பெரிய பெருமாளிடம் இருந்து அழகிய மணவாள ஜீயர் என்று திரு நாமத்தைப் பெற்று அங்கு ஸ்வாச்சார்யரான திருமலை ஆழ்வாரின் திரு நாமத்தால் ஒரு வியாக்யான மண்டபத்தை ஏற்படுத்தி அவ்விடத்தே இருந்து கொண்டு பிள்ளை லோகாச்சார்யார் முதலிய பூர்வர்களுடைய ஸ்ரீ ஸூக்திகளை நன்றாக விவரித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார் –

தத்ராச்சாம் ரங்க ராஜம் ததுதித நியமாத் ப்ராப்ய பூயோபி ரார்யை
வாதூலாத்யைஸ்ரி தாங்க்ரி கமபி து குத்ருஸாம் தாஸ ரத்யார்ய வர்யாத்
ஜித்வா தஸ்மிந் வதூலே ஸஹ வரத குரு ஸ்வ ஆச்சார்ய ரங்காதி ராஜம்
தத்வா வாதூல வம்சோ ஸமதிககருணாம் ஸர்வ லோகே விவவ்வரே
–6-

பின்பு பெரிய ஜீயர் பெரிய பெருமாளுடைய நியமனத்தாலே ஸ்ரீ ரெங்கராஜரைத் தமக்கு திருவாராதனமாகப் பெற்றார் –
பின்னர் கோயில் அண்ணன் முதலான அநேக கந்தாடை அய்யங்கார்களும் மா முனிகளின் திருவடிகளை ஆஸ்ரயித்தனர்
பின்பு ஒரு சமயம் ஒரு ஏக தண்டி ஸந்யாஸி பெரிய ஜீயரைத் தன்னுடன் வாதத்துக்கு அழைக்க அவனை வேடலப்பையின் சிஷ்யரான தாசரதி யட்சன் மூலமாக ஜயித்தார்
பின்பு கோயில் அண்ணனும் தாசாரதி ஆச்சானை மடத்துக்கு அழைத்துக் கொண்டு வர ஜீயரும் ப்ரீதியுடன் தன்னுடைய திரு வாராதனத்தில் எழுந்து அருளி இருந்த ஸ்ரீ ரெங்கராஜரை அவருக்கு ப்ரஸாதித்து வாதூல வம்சத்தில் தனக்குள்ள அதிகமான கருணையை அனைத்து உலகிற்கும் வெளிப்படுத்தினார் –

வாத்ஸ்யே தேவாதி ராஜே வரத குரு வரைஸ் சாகமாகத்ய த்ருஷ்ட்வா
ஸ்மேரஸ் வாந்தோ அபி பாக்ய வ்யதிகர விரஹாத் ஷேமம ப்ராப்ய யாதே
ஸ்வாச்சார்ய ஸ்ரீ ஜாநகீ ஸப்ர பல நியமநே நாபி முக்யாது பேதே
ஸ்பீதை ஸ்வைர் த்ருஷ்டி பாதைர் கநதர கருணா சார வர்ஷம் வவர்ஷ
–7-

ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தில் உதித்த தேவராஜன் என்கிற எறும்பி அப்பா -திருவரங்கத்துக்கு வந்து ஆப்த பந்துவான கந்தாடை அண்ணனோடே கூட ஜீயர் மடத்துக்கு எழுந்து அருளி -மணவாள மா முனிகளை ஸேவித்து திருவாய் மொழியில் ஓர் இடத்திற்கு ஜீயர் சாதித்து அருளிய அர்த்த விசேஷங்களைக் கேட்டுப் போர ப்ரீதரானார்
ஆனாலும் விதி கூடாமையாலே ஜீயர் மடத்தில் அமுது செய்யாமலும் -ஜீயருடைய திருவடிகளில் ஆஸ்ரயிக்காமலும் தமது ஊருக்கு மீண்டும் எழுந்து அருளினார்
அவரது திருவாராதன எம்பெருமானான சக்ரவர்த்தித் திருமகன் அவரது கனவிலே -நீர் சேஷ அவதாரமான ஜீயர் திருவடிகளிலே அபசாரப்பட்டு வந்தீர்
ஜீயர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து அபராத ஷாமணம் பண்ணிக்கொண்டு வந்தால் ஒழிய உம்முடைய கையாலே திரு வாராதனம் கொள்ள மாட்டோம் நீர் கடுகப் போவீர் என்று எறும்பி அப்பாவை நியமித்து அருள
அவரும் உடனே புறப்பட்டுக் கோயிலுக்கு எழுந்து அருளி அத்யாதாரத்துடனே ஜீயரை தண்டனிட ஜீயரும் தமது மலர்ந்த திருக் கண்களாலே குளிரக்கடாக்ஷித்து அப்பாவிடம் மிகவும் கருணை மழையைப் பொழிந்தார் –

பத்வேமாம் ஸப்த கோத்ரீம் பிரதிவத பயக்ருத் வர்ய கோவிந்த வர்யவ்
வாத்ஸ்யம் ஸ்ரீ தேவ ராஜம் யமிநமபி மஹாவாந சைலாதி வாஸம்
ஆர்யா நந் யாம்ஸ் ச க்ருத்வா வஸூதிகி பவராந் பஞ்ச ரத்நீம் ச க்ருத்வா
பவ்த்ரவ் ஸ்வவ் ரம்ய ஜாமாதரமதிக குணம் பட்ட நாதம் ரரக்
ஷ -8-

எழுபத்து நான்கு சிம்ஹாசனாதி பதிகளிலே பரிகணிதரான முதலியாண்டான் முடும்பை நம்பி முடும்பை அம்மாள் ஆஸூரிப்பெருமாள் கிடாம்பிப்பெருமாள் குமாண்டூர் இளையவல்லி யாச்சான் -வங்கி புரத்து நம்பி ஆகிய ஏழு கோத்ரத்தாரும் தங்களுக்குள்ளே சம்பந்தம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று நியமனம் செய்து ஸப்த கோத்ர வ்யவஸ்தையை ஏற்படுத்தினார் பெரிய ஜீயர்
பிரதிவாதி பயங்கரம் அண்ணன் பூர்வ ஆஸ்ரமத்தில் கோவிந்த தாஸர் என்கிற திரு நாமமுடையவரான பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் எறும்பி அப்பா வான மா மலை ஜீயர் கோயில் கந்தாடை அண்ணன் திருவேங்கட ராமானுஜ ஜீயர் அப்பிள்ளார் அப்பிள்ளை ஆகிய எண்மரையும் அஷ்ட திக் கஜங்களாக நியமித்து பஞ்ச ரத்னங்களையும் நியமித்தார்
நற்குணங்கள் நிறைந்த தமது பவ்த்ரர்களான அழகிய மணவாள நாயனாரையும் -ஜீயர் நாயனாரையும் -பெரியாழ்வார் ஐயனையும் நன்கு ரக்ஷித்தார்

தேவம் பூயோ தித்ருஷுஸ் ஸட மத நமஸவ் ஸ்ரீ நகர்யாம் கதஸ்தம்
நத்வா ஸ்துத்வா ப்ரஹ்ருஷ்டோ விபு நவ நிலயீம் வர்த்த யித்வா அர்ய சேதா
ஜிஞ்ஞாஸூர் யாதவாத் ரோதி சரணி ஜனந் யார்ய தர்சீ நிவ்ருத்த
ப்ராப்தார்த்தஸ் துஷ்ட சேதாஸ் சத நிஜ நிலயே வஹ்னிதாநத்வ க்ருஹ் ணாத்
-9-

மீண்டும் சடகோபரான நம்மாழ்வாரை ஸேவிக்க விரும்பி ஆழ்வார் திருநகரிக்குச் சென்று அவரை ஸ்துதித்து ஏத்தி திருவடி தொழுது இன்புற்றவராய் நவதிருப்பதி எம்பெருமான்களை மங்களா ஸாஸனம் செய்தார்
திரு நாராயணத்து ஆய் என்ற ஜனன்யார்ச்சர்யர் இடம் இருந்து ஆச்சார்ய ஹ்ருதயத்தின் பொருளை அறிய வேண்டும் எண்டு விரும்பி திரு நாராயண புரத்துக்குப் புறப்பட்டார்
வழியில் சிறிய தொலைவிலேயே அவரைக் கண்டு அவருடன் திருநகரிக்கு மீண்டு எழுந்து அருளி ஆச்சார்ய ஹ்ருதய ரஹஸ்யார்த்தங்களைக் கேட்டு அறிந்தார்
பின்பு கூரை வேய்ந்த தம் மடத்துக்கு தீ வைத்தவர்களை அந்த தேசத்து அரசன் தண்டிக்க முற்பட்ட போது அதனைத்தடுத்து அவர்களைக் காத்து அருளினார்

க்ருத்வா அசவ் ஸ்ரீ நகர்யாம் சட மதந முதே மண்டபம் கால மேகம்
வீதி ஸ்ஸீமாஸ் ச க்ருத்வா ருசிர வர மஹா மண்டபம் கல்பயித்வா
விப்ரம் ஸ்ரீ ஹர ஸ்வகுட்யாம் நிஜசரந ஜூஷம் தத்ர கைங்கர்ய கார்யே
நிஷ் ப்ராப்யாஸாத்யா ஹ்ருஷ்டா புநரபி குருகா மாக மத் ரங்க தாம
-10-

பெரிய ஜீயர் நம்மாழ்வார் திரு உள்ளம் உகக்கும் படி திரு நகரியில் காளமேக திரு மண்டபத்தையும் திரு வீதிகளையும் எல்லைகளையும் ஏற்படுத்தி அழகிய மணவாளன் திரு மண்டபத்தையும் உண்டாக்கினார்
தம் திருவடிகளை ஆஸ்ரயித்த திருவேங்கடமுனையான் என்ற ப்ராஹ்மணனைத் திருக்குறுங்கடி கைங்கர்யத்திலே நியமித்து மீண்டும் திரு நகரி ஏற எழுந்தருளி ஆழ்வாருக்கு அனைத்து அழகும் கண்டருளப்பண்ணி மகிழ்ந்து பின்பு திருவரங்கத்துக்கு எழுந்து அருளினார் –

தத்ர ஸ்ரீ தால வ்ருத்த வ்யஜந பரிகரேண உத்தமம் சேவமாநம்
ஸ்வப்நே ஸ்ரீ ரெங்க பர்த்ரா ஸ்வயம் அநுகதி தஸ்வாஹி ராஜாவதார
மத்யாஹ்நே காஞ்ச வ்ருத்தாம் ப்ரதி ரஹஸி பரம் ஸ்வாஹி ராஜத்வ வேத்ரீம்
ஸ்வம் பாவம் நிஹ்நுவாத பணி பதீ சயனம் ப்ரத்யஹம் சேவதே ஸ்ம
–11-

ஒரு நாள் திருவாலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்த உத்தம நம்பி பெரிய ஜீயருடைய பாலின் வண்ணமான திருமேனி நிறத்தை வேறு விதமாக நினைத்து -நெடும் போது இருக்க வேண்டாம் என்று கூடி அபசாரப்பட ஜீயரும் மடத்துக்கு எழுந்து அருளினார் –
உத்தம நம்பியும் தூங்கிப் பல கணிக்கதவிலே சாய்ந்திருக்க -பெரிய பெருமாள் அவர் கனவிலே தோன்றி -திருவனந்த ஆழ்வானைத் தொட்டுக் காட்டி -இவர் காணும் மா முனிகளாக அவதரித்துள்ளார் -என்று கூறினார்
உத்தம நம்பியும் கண் விழித்து அப்போதே மடத்துக்கு வந்து ஜீயர் திருவடிகளில் விழுந்து அபராத ஷாமணம் பண்ணிக்கொண்டார் –
பின்பு ஒரு நாள் மத்யாஹ்னம் சடகோபகொற்றி என்கிற மூதாட்டி திருமலை ஆழ்வார் என்கிற வ்யாக்யான மண்டபத்திலே யகாந்தமாக எழுந்து அருளி இருந்த ஜீயரைக் கதவுப்புரையிலே ஆதி சேஷனாகக் கண்டதை ஒருவருக்கும் வெளியிடாமல் மறைக்கும் படி நியமித்தார் ஜீயர் –
ப்ரதிதினமும் அரவின் அணை மிசை மேய மாயனாரான பெரிய பெருமாளை மங்களா ஸாஸனம் செய்து கொண்டு எழுந்து அருளி இருந்தார்

ஏவம் பூதம் முனீந்த்ரம் தரணி ஜலதி ஜாநாயகோ ரங்க நாத
ஸ்வஸ்மை பாஷ்யம் ஸ்ருதிநம் லகு தர ரமுநேர் வக்தும் ஆஜ்ஞா பயத்தம்
ஸோ அயம் ஸம்வத்ஸரேண த்ரமிட மய ஸூதாம் ரங்க நாதாய வர்ஷத்
ஸ்ரீ சைலேத் யாதி பத்ய ப்ரவசன முக தஸ்தேந ஸம் பூஜிதோ அபூத்
–12-

இப்படி இருக்கிற பெரிய ஜீயரை ஒரு நாள் ஸ்ரீ பூ நாயகரான நம்பெருமாள் மகிழ் மாலை மார்பினரான நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமான திருவாய் மொழியின் வியாக்கியானங்களைச் சொல்லும்படி நியமித்தார்
அவரும் ஒரு ஸம்வத்ஸர காலம் தொண்டர்க்கு அமுதான திருவாய் மொழியின் ஈடு முதலான வ்யாக்யானங்களை நம்பெருமாள் திரு முன்பே அருளிச் செய்தார்
சாற்று முறை அன்று நம்பெருமாள் அரங்கநாயகம் என்கிற ஐந்து வயதான அர்ச்சக குமாரனாக வந்து ஸ்ரீ சைல தயா பாத்ரம் எண்டு தொடங்கும் தனியனை அருளிச் செய்து ஆசார்யரான ஜீயரை உரிய முறையில் ஸம்மானித்தார்-

லோகாசார்ய யுக்த தத்வத்ரிதயமநு யுக ஸ்லோக வாக் பூஷ டீகா
மாலா ஸம் ஷேப கீதாஹ்ருதய விவரணே ஞான சாரதி டீகே
அந்தாதிம் ரத்ன மாலாம் ஸடரிபு பணி திவ்யா க்ரியாமாந கோலம்
சக்ரே கௌசித் விவைராவ கலயத நிஹீநாத்ம ப்ருச் சாபதே ஸாத்
–13-

பெரிய ஜீயரும் பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்த தத்வத்ரயம் ரஹஸ்ய த்ரய அர்த்த ப்ரதி பாதகமான முமுஷுப்படி -ஸ்ரீ வசன பூஷணம் -இவைகளுக்கு வியாக்கியானங்களை கீதைக்கு சங்ஷிப்தமான தொரு விவரணத்தையும் ஞான சாரம் மற்றும் ப்ரமேய ஸாரத்திற்கு வியாக்கியானங்களையும்
திருவாய் மொழி நூற்றந்தாதி உபதேச ரத்னமாலை ஈடு முப்பத்தாறாயிரப்படிக்கு ப்ரமாணத்திரட்டு ஆகியவற்றையும் அருளிச் செய்தார்-நீங்களும் ஸ்ரீ வசன பூஷணாதிகாரிகளோ அஹங்காரம் மேலிட்டுச் சண்டை இடுவதற்கு என்று தெருவில் சண்டையிடும் நாய்களைக் கேட்க்கும் வ்யாஜத்தால் விவாதம் பண்ணிக்கொண்டு இருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருவரைத் தம்முள் விரோத பாவம் அற்றவர்களாகச் செய்தார் ஜீயர்

தத்த்வா க்ஷேத்ரம் மடீயம் ப்ருதக புஜி மிஷாத் ரங்க பர்த்ரே நிசீதே
வ்ருத்தாம் காஞ்சித் விவாஸ்ய ஸ்த விரத ருருஹந்யாயதோ அலர்க்க ஹேதோ
பத்தீம் வ்ருத்தாம் ச ஹித்வா புநரபி க்ருபயா வைஷ்ணவா கோவி முக்தாம்
அங்கீ குர்வன் நஸாஹ்யாக தவரத ஹரிம் ஸ்வீச காராதி க்ருச்ச்ராத்
–14-

ஒரு சமயம் மடத்திற்குச் சொந்தமான விளை நிலத்துக் கூலி யாட்கள் மடத்திற்குச் சொந்தமான இடத்தில் உண்டு சென்றதை அறிந்து உடனே அந்நிலத்தை பெருமாளுக்கு ஸமர்ப்பித்தார்
ஒரு நாள் வயதான மூதாட்டி ஒருத்தி இரவு மடத்திலே சயனிக்க முற்பட கிழட்டணி லாகிலும் மரமேற வல்லது ஓன்று அன்றோ –
உகவாதார் அபவாதம் சொல்ல இது போதுமே என்று கூறி அவ்வம்மையாரை வெளியேற்றினார்
தளிகைக்காக கறியமுது திருத்தித் தரும் அம்மையார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் பரிவோடு ஸமர்ப்பித்த தூதுளங்கீரையை உதாஸீனத் படுத்தியதை அறிந்து அவ்வம்மையாரை கைங்கர்யத்தில் இருந்து விலக்கி பின்னர் பாகவத அவமானம் பண்ணின பாபத்துக்கு மன்னிப்புக் கேட்கச் செய்து கிருபையுடன் ஏற்றுக் கொண்டார்
ஜீயரை ஆஸ்ரயிக்கத் தனியே வந்த வரம் தரும் பெருமாள் பிள்ளையை -வரத ஹரியை -ஸ்ரீ வைஷ்ணவர்களை முன்னிடாதே தனித்து வருவதே என்று வெறுத்து ஆறு மாஸம் புறத்திண்ணையிலே இருக்கச் செய்து பின்பு அங்கீ கரித்து அருளினார் –

சத்த்வஸ்தோதி ஸ்வரூபம் வ்ரதிவர மஹிதம் ப்ராப்ய சத்தேச கர்த்தா
பட்டார்யாய ஸ்வ சிஷ்யான் விநய பரிதயந் தோஷத் ருஷ்டிம் விதூய
பூர்வ அநுஷ்டாந நிஷ்டா புநரபி வ்ருஷபாத்ரிஸ முக்யான் தித்ருஷு
சாகம் ஸ்ரீ வாதி பீக்ருத் குருமுக விநதை ராஸ்தயா அசவ் ப்ரதஸ்தே
–15-

ஸத்வ குணத்தில் நிலை நிற்பவராய் வான மா மலர் முதலான யதிகளால் ஆஸ்ரயிக்கப்பட்டவரான மா முனிகள் நல் வார்த்தை கேட்டு அனுப்பிய வடநாட்டு அரசன் ஒருவனுக்கு பாகவத சேஷத்வமே பரமார்த்தம் என்று எழுத அனுப்பினார்
அக்காலத்தில் கோயில் பட்டர் ஒருவர் ஜீயரிடம் உம்முடைய ஸிஷ்யர்கள் நம்மை வணங்காமல் அவமானப்படுத்துகிறார்கள் என்று கூற
ஜீயரும் விசாரித்த அளவிலே ஸிஷ்யர்கள் அவருடைய தோஷங்களை சொல்லி எங்களுக்கு அவரை அனுவர்த்திக்க விருப்பமே இல்லை -என்ன
அவரைப் பெருமாளாக நினைத்துப்பணிவுடன் சேவித்துப் போங்கள் எண்டு தோஷம் உள்ள இடத்திலும் குண பிரதிபத்திநாடக்கும்படி செய்தார்
பூவர்களின் அனுஷ்டானத்தில் நிலை நிற்பவரான பெரிய ஜீயர் மீண்டும் திருவேங்கடம் முதலான திவ்ய தேசத்து எம்பெருமான்களை ஸேவிக்க ஆசைப்பட்டு பிரதிவாதி பயங்கரம் அண்ணன் முதலான பணிவுள்ள முதலிகளுடன் புறப்பட்டார் –

நாதம் ஸ்தம்பேரமாத் ரேஸ் ததநுஸக ருதா மீஸ்வராம் ஸாவ தம்சம்
ஸ்துத்வா தத்வா அத தஸ்மிந் கதி பயதி வசான் தேவராஜாதி யுக்த
நத்வா க்ருத ரஹ்ரதேஸம் ததனு ச கடிகாத் ரீஸ்வரம் தேவராஜ
க்ராமம் ஸ்ரீ ரெங்கயித்வா விமல மத ஸரஸ் ஸஹ் யஜாம் ஸ ஹ்ய கார்ஷீத் –
-16-

அத்திகிரி நாதனான பேர் அருளாளனை ஸேவித்து வைகாசித்திரு நாளில் பக்ஷி ராஜனான பெரிய திருவடி நாயனார் மீது ஆபரணம் போல் திகழும் அவனைப் பணிந்து ஏந்தி அங்கேயே சில நாட்கள் எழுந்து அருளி இருந்தார்
பின்பு ஒரு நாள் ஸேவிக்க வந்த எறும்பி அப்பாவோடு புறப்பட்டு திருப்புடக்குழி எம் போர் ஏற்றையும் கடிகைத் தடம் குன்றில் அக்காரக்கனியையும் மங்களா ஸாஸனம் செய்து அருளி எறும்பியை அடைந்து அவ்வூருக்கு வட திருவேங்கடம் என்று திரு நாமம் இட்டு அங்குள்ள குளத்திற்கு திருக்காவேரி என்று பெயர் இட்டு அருளினார்

த்ருஷ்ட்வா ஸ்ரீ வேங்கடாத்ரிம் ததநு ஸ நிகடே தஸ்ய கோவிந்த ராஜம்
யோகீந்த்ர ஸ்தாபிதம் ஸ்ரீ சடமதந முகான் சம்யமீந்த் ராம்ஸ் ச நத்வா
ஆருஹ் யாத்ரிம் ததீஸம் யதிபதி ஸஹிதம் ஸ்ரீ நிதிம் சங்க சக்ரோ
தஞ்சத் பாஹும் ஸடாரி ப்ரமுக ஸூவ சநைஸ் துஷ்டுவே ஹ்ருஷ்ட சேதா
–17-

பின்னர் திரு வேங்கட மலையை அடைந்து அதன் அடிவாரத்தில் எம்பெருமானாராலே எழுந்து அருளப் பண்ணப் பட்ட கோவிந்த ராஜனையும்
நம்மாழ்வார் முதலான ஆழ்வார்களும் சேவித்து திருமலை ஏறி அருளி யதிராஜரான எம்பெருமானரோடு திருவாழி திருச்சங்குகளை திருக்கைகளில் ஏந்திய அலர் மேல் மங்கை உறை மார்பனை அருள் மாறன் சேரலர் கோன் நற்கலியன் முதலான ஆழ்வார்கள் திருவேங்கடமுடையான் விஷயமாக அருளிச் செய்த பாசுரங்களை அனுசந்தித்துத் திருவடி தொழுது மனம் மகிழ்ந்தார் –

தத்ர ஸ்ரீ கார்ய க்லுப்த்யை யாதிபதி யமிநம் கல்பயித்வா நிதேசே
தஸ்மாத் ப்ரஸ்தாய கத்வா ரகுவர நிலயம் கிம் க்ருஹம் நிஸ்து லேஸம்
ஸ்ரீ மந்தம் பக்தி ஸாரம் தசரத தநயம் பூர்ணவர்யம் ச நத்வா
ஸூதம் பார்த்தஸ்ய நீரஷிததர திலகம் ஸம்ய மீந்த்ரம் ச பேஜே
—-18-

அங்கே -திருமலையில் -ஸ்ரீ காரியத்திற்காக இளம் கேள்வி எம்பெருமானார் ஜீயரை நியமித்து அங்கு புறப்பட்டு திரு வெவ்வுளூர் வீர ராகவனையும் -திரு நின்றவூர் நித்திலத் தொத்தையும் திரு மழிசையில் பக்தி ஸாரரான திருமழிசைப் பிரானையும் பிச்சை வாரணப் பெருமாள் கோயிலில் தாசாரதியான முதலியாண்டானையும் -பூவிருந்த வல்லியில் காஞ்சீ பூர்னரான திருக்கச்சி நம்பியையும் திருவல்லிக்கேணியில் பார்த்த சாரதியையும் திரு நீர்மலை எம்பெருமானையும் ஸ்ரீ பெரும் பூதூரில் எம்பெருமானாரையும் மங்களா ஸாஸனம் செய்து அருளினார் –

பூயோ நத்வா கரீசம் ததநுஸ மதுராம் தத் த்வயோத்பத்தி பூதம்
கத்வா ஸ்துத்வா அபி ராமம் பணி திலக புரே தேவ நாதம் ச நத்வா
வந்தி த்வா ஸத் கவீந்த்ரம் கலி மதந முநீம் திவ்ய தேசான் ப்ரணம்ய
ஸ்ரீ ரெங்கம் ப்ராப்ய யோகீ சிரவிரஹருஜம் ஸ்பீத மோதோ முமோச
–19-

மீண்டும் பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளி பேர் அருளாளனை ஸேவித்து அங்கிருந்து த்வயம் விளைந்த திருப்பதியான மதுராந்தகத்திற்குச் சென்று சக்ரவர்த்தித்த திருமகனை ஸ்துதித்து பின்னர் திரு வஹீந்திர புரத்துக்கு எழுந்து அருளி தெய்வ நாயகனை மங்களா ஸாஸனம் செய்து அருளி நாலு கவிப்பெருமாளும் திருக்கலி கன்றியுமான திருமங்கை ஆழ்வாரை திரு நகரியிலே ஸேவித்து திருக்கண்ண புரம் ராஜ மன்னார் குடி திருக்குடந்தை முதலான திருப்பதிகளையும் வணங்கி திருவரங்கத்தை அடைந்து பெரிய பெருமாளை நெடுநாள் பிரிந்ததால் உண்டான வருத்தம் தீர்ந்து மகிழ்ந்தார்

நத்வா ஸ்ரீ ரெங்க நாதம் விவித மணி முகைர் வஸ்துபிஸ் தோஷயித்வா
நித்யம் தத்ரைவ திஷ்டன் ஸ்வ தின சரித க்ருத தேவராஜார்ய ஜூஷ்டா
ஸார்வஞ்ஞாத் வ்ருத்த கேஸம் வரத ஹரி மசவ் பாவநார்த்தம் நிதேஷ்டா
த்ருஷ்டாத் த்ருஷ்டைர் வதூலம் வரத குரு வரம் சத்ததம் சம்பு போஷ
–20-

பெரிய பெருமாளை ஸேவித்து தாம் கொண்டு வந்த பலவகைப்பட்ட திரு ஆபரணங்கள் -திரு வெண் கொற்றக்குடை கள் -திரு வெண் சாமரங்கள் -திரு ஆலவட்டங்கள் -முதலான பொருள்களாலே உகப்பித்து நித்தியமாக அங்கேயே திருவரங்கத்திலேயே -எழுந்து அருளி இருக்கையாலே தம் வ விஷயமான தின சர்யை என்கிற பிரபந்தத்தை அருளிச் செய்த எறும்பி அப்பாவால் வந்து அடையப்பட்டார்
ஜீயர் எல்லாம் அறிந்தவராகையாலே கைங்கர்யத்திற்காக வந்த வரம் தரும் பெருமாள் பிள்ளை தீஷையோடு இருப்பதைப் பார்த்து ஸூத்த்யர்த்தமாக இன்றைக்கு திருமுடி விளக்குவித்துக் கொள்ளும் என்று நியமித்தார்
அன்றைய தினமே வரம் தரும் பெருமாள் பிள்ளைக்குக் குமாரர் பிறந்து பத்து நாளும் கடந்தது என்ற செய்தி வர அனைவரும் ஜீயரின் எல்லாம் உணர்ந்த தன்மையைக் கண்டு வியந்தனர்
கந்தாடை அண்ணன் திரு மாளிகையில் உபாதான திரவ்யத்தைக் கொண்டு நடந்து வந்த அழகிய சிங்கர் திரு வாராதனத்திற்கு த்ரவ்யம் குறைந்து வருகிறபடியைக் கண்டு
தமக்கு வந்த திரு முன் காணிக்கை த்ரவ்யத்தை தினம் தோறும் அண்ணன் திரு மாளிகைக்கு அனுப்பும் படி நியமித்து
இவ்வண்ணம் த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும் அண்ணனை அந வரதம் ஆதரித்துப் போந்தார்

அர்ச்சா ரூபாம் ஸ்வ மூர்த்திம் சரண ஸரஜி ஜத்ராயிணீம் உத்தரீயம்
ஸ்வ தர்சம் ஸ்வேத ம்ருத்ஸ்நாம் ஸ்வமத விதரன் ப்ராஹிணோத் தேவ ராஜம்
வாநாத்ரவ் யோகி வர்யம் விபு பரி சரணே ஸ்தாபயித்வா ஸ்வ ஸிஷ்யம்
கோவிந்தார்யம் ச கோதா ப்ரஸதந முகதோ பட்ட நாதம் ஸமாக்யத்
-21-

பிறகு ஜீயர் தம்முடைய அர்ச்சா விக்ரஹத்தையும் திருவடித் தாமரைகளைப் பாதுகாக்கும் திருவடி நிலைகளையும் -திருப்பரி யட்டத்தையும் -திருக்கண்ணாடியையும் -திருமண் காப்பு சேஷத்தையும் தந்து எறும்பி அப்பாவை அவருடைய ஊருக்கு அனுப்பி அருளினார்
அழகிய வரதரான ராமானுஜ ஜீயரை வான மா மலையில் தெய்வ நாயகப்பெருமாள் ஸ்ரீ காரியத்துக்காக நியமித்தார்
திருவாடிப் பூரத்தில் ஆண்டாளுடைய தீர்த்த ப்ரஸாதங்களை ஆதரத்தோடு கொணர்ந்து சமர்ப்பித்த கோவிந்த தாஸர் அப்பருக்கு பட்டர் பிரான் தாஸர் என்று திரு நாமம் சாத்தி அருளினார்

த்ரஷ்டும் பூயஸ் சடாரிம் ஸபதி ஜிக மிஷத் மாதுரம் பாண ராஜம்
தாபாத் யை பாவயித்வா ததுசிதஸிபி காதாரணாத் யர்ச்யமாநா
தத் தத்த க்ராம வர்யம் ருசிர வர இதி க்யாப யித்வா முனீந்திர
ஸேதோர் மார்கேண கச்சந்த குருத மனஸா தீந்த்ரிணீ வ்ருஷ மோக்ஷம்
–22–

மீண்டும் நம்மாழ்வாரை ஸேவிக்க விரும்பி விரைந்து புறப்பட்ட ஜீயர் மதுரை அரசனான மஹா பலி வாணராயனுக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்து அருளி அவனாலே பல்லக்குச் சுமத்தலாகிற கைங்கர்யத்தினால் கௌரவிக்கப் பட்டார் –அவன் கொடுத்த முத்தரசனத்தல்
என்ற க்ராமத்தை அழகிய மணவாள நல்லூர் என்று பெயர் இட்டார் –
திருவணை வழியாகச் செல்லும் போது தமக்கும் முதலிகளுக்கும் நிழல் கொடுத்த பெரிய புளிய மரம் மோக்ஷம் அடைய வேண்டும் என்று மனத்தால் நினைத்தார் -அவ்வளவிலே அம்மரம் பட்டுப்போய் பரமபதத்தை ப்ராபித்தது

த்ருஷ்ட்வா ஸ்ரீ மச் சடாரிம் புநரபி ருதுகீ பூர்வ வத் ரங்க தாம்நி
ஸ்ரீ ஸம் நத்வா வநாத்ரவ் யதிவரயமிநம் ப்ராஹிணோத் கிங்க்ரி யார்த்தே
ஸ்ரீ மத் ராமானுஜ அங்க்ர் யோரம்ருத குரு வரை ரர்ப்பித்தாம் ஸூக்தி மாலாம்
வ்யாஸஷாணோ மஹார்கைர சரஸ க்ருத முகை ரங்க நாதம் புபோக்ஷ
–23-

நம்மாழ்வாரை மங்களா ஸாஸனம் செய்து விட்டு மீளவும் குதூ ஹலத்தோடு கோயிலுக்கு எழுந்து அருளிப் பெரிய பெருமாளைப் பணிந்து நின்றார் –
திருமாலிருஞ்சோலையில் ஸ்ரீ கார்ய நிர்வாஹகராய் இருந்து கைங்கர்யம் பண்ண யதிராஜ ஜீயரை அனுப்பி வைத்தார்
எம்பெருமானாரின் திருவடித் தாமரைகளில் திருவரங்கத்து அமுதனாரால் சமர்ப்பிக்கப்பட்ட சொல் மாலையான இராமானுஜ நூற்றந்தாதி க்கு வ்யாக்யானம் அருளிச் செய்தார்
நறு நெய் பச்சை கற்பூரம் முதலிய சிறந்த பதார்த்தங்களாலே நம்பெருமாளை உபசரித்து உகப்பித்தார்

ஸ்ரீ மான் காந்தோ பயந்தா ஸடரிபு பணி திவ்யாக்ரியாயா ஸஹஸ்ரை
ஷட்பிஸ் த்ரிம்ஷத் ஸஹஸ்ர்யா உபசயக்ருதி தி ஸ்ரீஸ பட்டார்ய கீத
ஆக்யாதாம் க்ருஷ்ண பாதைர் கலி கலுக்ஷபலாத் கர்சிதாம் பூர்வ டீகாம்
திருஷ்ட்வா பட்டேச ஸூக்தேர் லலிதர ஸமயீம் வ்யாக்ரியாம் ஸாது சக்ரே
–24-

கைங்கர்யச் செல்வம் நிறைந்தவரான மணவாள மா முனிகள் திருவாய் மொழி வியாக்யானமான ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கர் என்று திருமாலை தந்த பெருமாள் என்கிற பட்டராலே கொண்டாடப்பட்டார்
கிருஷ்ண ஸூரியான பெரியவாச்சான் பிள்ளையால் அருளிச் செய்யப்பட பெரியாழ்வார் திரு மொழி வியாக்யானத்தின் முன் -பெரும் -பகுதி கலியின் கொடுமையினால் காணாமல் போக அப்பகுதிக்கு ரஸ மயமான ஒரு வியாக்யானத்தை நன்றாக அருளிச் செய்தார் ஜீயர்

பாலம் வாதூல நாதம் ஸ்வ க்ருத விவரண ஸ்லாகிநம் வர்தயித்வா
பாணார்யே தத் சஹாயே புவந குரு தனம் ரங்க நாதம் ததவ் ஸா
ஆம்நாய நாம் விமர்ஸீ குருவர ஹ்ருதயம் ஸ்தாவிரே வ்யாசி கீர்ஷத்
யுஷ்மத் வம்ஸ் யார்த்த மேதத்த்விதி வரத குரும் ப்ராஹ தேதாநு புக்தா
–25-

தம்முடைய வியாக்யானத்தைக் கொண்டாடின அதி பாலரான கந்தாடை நாயனை ஆசீர்வதித்து பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யானம் எழுதும் போது உடன் இருந்து உதவிய திருப்பாண் ஆழ்வார் தாதர் நாயனாருக்கு பிள்ளை லோகாச்சார்யரின் திருவாராதனப் பெருமாளான ஸ்ரீ ரெங்கராஜரைக் கொடுத்து அருளினார்
ஜீயர் முதுமையில் திருக்கழுத்து நோவ ஆசார்ய ஹ்ருதய வியாக்யானம் எழுதுகையில் எதற்க்காக இப்படி ஸ்ரமப்பட வேண்டும் என்று கேட்ட கோயில் கந்தாடை அண்ணனுக்கு உம்முடைய வம்சனத்திற்காகவே என்று பதில் உரைத்தார்

ஹ்ருதயம் வாதூல வர்யம் வரத குரு வரம் வாதிபீ க்ருத் குரும் ச
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ சடாரிம் ஸ்ருதி விவரணயோர் கல்பயித்வா அபி ஷிக்தவ்
தேவஸ் யாதேஸ மேவம் ஜகதி சபலயந் ஸ்வாவ தாரேண பூயா
ப்ராப்தும் ஸ்வம் தாம திவ்யம் ருசிர வரமுனிஸ் சேதநாயாம் சகாங்ஷே
–26-

ஜீயர் தம் மனதுக்கு இனியவர்களான கந்தாடை அண்ணனையும் பிரதிவாதி பயங்கரம் அண்ணனையும் முறையே பகவத் விஷய ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாசனங்களில் அபிஷேகம் செய்து அருளினார்
இவ்வண்ணம் எம்பெருமானுடைய நியமனத்தை தம்முடைய அவதாரத்தாலே நிறைவேற்றி மணவாள மா முனிகள் மீண்டும் தம்முடைய திவ்யமான ஸ்தானத்தை அடைய மனஸ்ஸால் நினைத்தார் –

ஆர்த்திம் ஸ்வோக்த்யா விவ்ரண்வத் ருசிர வர முனி ஸ்யந்த நஸ்தம் ரமேஸம்
ஸ்ரீ ரெங்கேஸம் தித்ருஷு ஸ்வ மட துரி சமாகத்ய திஷ்டந்த மேவ
த்ருஷ்ட்வா தூதாகி லாத்திர் கதிபயதி வசான் லோக பாக்யேந ஜீவன்
பூயோ ராமானுஜ அங்கரி த்வய சமுபகமே துர் நிவாரத்வரோ அபூத்
–27-

எம்பெருமானை உடனே அடைய வேண்டும் என்று தம்முடைய திரு உள்ளத் துடிப்பை -ஆர்த்தி பிரபந்தம் மூலம் வெளிப்படுத்திய ஜீயர் திருத்தேரிலே புறப்பட்டு திருமகள் கொழுநனாகிய நம்பெருமாள் மடத்து வாசலிலே நின்று ஸேவை ஸாதிக்கக் கண்ட துக்கம் எல்லாம் தீர்ந்தவராய் உலகத்தார் செய்த பாக்யத்தால் ஒரு சில நாட்கள் எழுந்து அருளி இருந்து மீண்டும் எம்பெருமானாரின் திருவடி இணையை அடைவதில் மிகுந்த த்வரையை யுடையவரானார் –

தஸ்மின் காலே ஷிதீஸம் கமபி யதுகிரே ஸூந்தரம் பட்ட நாத
த்வாரா ரஷத் ஸ்வ பவ்த்ரே நிஜதநு க்ருதயே பாஜநம் ஸ்வம் திதேச
ஸ்தித்வா ராமானுஜ அங்க்ரிய ஆஸ்ரித இஹ சரதாம் சப்ததிம் த்ரயப்த பூர்வாம்
ஸோ அயம் ராமானுஜ அங்க்ரித்வய மதருதிரோத் காரி கும்பே ப்ரபேதே
–28-

அக்காலத்தில் வந்தடைந்த அண்ணராய சக்ரவர்த்திக்கும் மேல் நாட்டுத் தோழப்பருக்கும் வர தமையரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருக்கும் பரவஸ்து பட்டர் பிரான் ஜீயரைக் கொண்டு பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்வித்து அருளினார் –
பின்பு தம்முடைய பூர்வாஸ்ரம திருப்பேரானார் இடத்தில் தமது அர்ச்சா விக்ரஹத்தை எழுந்த அருளப் பண்ணுவதற்காகத் தம்முடைய திருக்கைச் செம்பைக் கொடுத்து அருளினார்
எம்பெருமானார் திருவடிகளில் ஊன்றியவராய் 73 திரு ன் நக்ஷத்ரங்கள் இந்நிலவுலகில் எழுந்து அருளி இருந்த ஜீயர் ருதிரோத்காரி ஸம்வத்சரத்தில் எம்பெருமானார் திருவடிகளை அடைந்தார்

ஸாஹஸ்ராணாம் சதுஷ்காத நுகலி சரதே ஸர்வாக் சதுர்ப்யாஸ தேப்யா
சப்தத் யூர்த்வம் த்விதீயே சதுலசித கருத் யுக்த சாதாராணாப்தே
மூலே க்லுப்தா வதாரோ க ந இவ ஸஜலா ஸர்வ ஸந்தாப ஹாரீ
ஸ்ரீ மான் காந்தோ பயந்தா முனி ரிஹ ஜய தாதா விரிஞ்ச ப்ரபஞ்சம்
–29-

கலியுகம் பிறந்த 4472-ஸாதாரண வருஷத்தில் துலா -ஐப்பசி -மாதத்தில் வளர்பிறையில் திருமூல நன்னாளில் திருவவதரித்து நீருண்ட காள மேகம் போலே அனைவருடைய தானங்களையும் போக்கிக்கொண்டு எழுந்து அருளி இருந்த கைங்கர்யச் செல்வரான பெரிய ஜீயர் உலகம் உள்ளவரையில் இங்கே வெற்றியோடு விளங்கட்டும்

வரத யாக்ருத்யாத ரங்க ப்ரபு மணி வஸசா மிஞ்ச வ்ருத்தாகி ராஸ
ஸ்வா வாஸே வஹ்னி ஜூஷ்டே பணி பதி வபுஷா நாலதோ நிர்கமேன
ஸ்ரீ மான் சேஷ அவதாரோ வரவர முனி ரித்யேவ ஸர்வோ அபி லோக
யம் மேநே தம் குணாட் யம் ருசிர வர முனிம் ப்ரோஸச்ய தன்யோ மதாத்மா
–30-

பாலின் வண்ணம் போன்ற திருமேனி நிறத்தாலும் உத்தம நம்பிக்கு கனவிலே தோன்றிய பெரிய பெருமாள் -இவர் காணும் மா முனிகளாக அவதரித்துள்ளார் -என்று திருவானந்தாழ்வானைத் தொட்டுக் காட்டி அருளிச் செய்கையாலும் -திருமலை ஆழ்வார் கால ஷேப கூடத்திலே சடகோபக் கொற்றி என்ற மூதாட்டி பெரிய ஜீயரை ஆதிசேஷன் உருவில் கொண்டதாலும்
ஆழ்வார் திருநகரியிலே ஜீயர் எழுந்து அருளி இருந்த மடத்துக்கு சிலர் நெருப்பு வைத்த போது பாம்புருக்கொண்டு கோமுகச்சாரிக்கை வழியே வெளியில் வந்தபடியால் கைங்கர்யச் செல்வம் நிறைந்த ஆதி சேஷனின் அவதார பூதரே மணவாள மா முனிகள் என்று எல்லா உலகத்தாராலும் கருதப்படும் குணக்கடலான பெரிய ஜீயரைப் பற்றி பேசி அடியேன் தன்யன் ஆனேன்

இத்தம் பூ சார வாசான் ந்ருஹரி குரு வராடீ தாசரத் யார்ய வம்ஸ்யாத்
ஜாதஸ் தத் த்ருஷ்டி பூதோ வரத குரு க்ருபா லப்த போத ப்ரபுத்த
ஸத்ஸே வீராக வார்யோ ருசிர வர முனே ஸர்வ லோகேடி தாங்க்ரே
வ்யாஜஹ்ரே திவ்ய சர்யா ரஸ சஷகம் இதம் யா படேத் ஸோ அதி தன்ய
–31-

இவ்வண்ணம் மஹீ சார க்ஷேத்ரமான திருமழிசையில் வஸிக்கும் முதலியாண்டான் திரு வம்ஸ்யரான நரசிம்ஹாச்சார்யருக்கு புத்ரனாகப் பிறந்து அவரால் கடாக்ஷிக்கப் பட்டவரும் வரதாச்சார்யருடைய அருளாலே பெற்ற அறிவினால் விளங்குபெறும் நல்லோர்களைப் பணிபவருமான வீர ராகவார்யர் அனைத்து உலகினராலும் வணங்கப்படும் திருவடிகளை யுடையவரான மணவாள மா முனிகளின் திவ்ய சரித்ர அமுதத்தை இவ்வாறு அருளிச் செய்தார் -இந்நூலைப் படிப்பவர் அதி தன்யராவர்-

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ அருளிச் செயல் ஸஹஸ்ர நாமம்

February 14, 2024

அயர்வறும் அமரர்கள் அதிபதி போற்றி;
உயர்வற உயர்நலம் உடையவ போற்றி;

மயர்வள மதிநலம் அருளினாய் போற்றி;
பயிலும் சுடரொளி மூர்த்தி போற்றி:

பூமகள் நாயக போற்றி; ஓசை
மாமத யானை உதைத்தவ போற்றி;

அண்டக் குலத்துக் கதிபதி போற்றி;
பிண்டமாய் நின்ற பிரானே போற்றி;

அத்தா போற்றி; அரியே போற்றி;
பத்துடை யடியவர்க் கெளியாய் போற்றி;

அகவுயிர்க் கமுதே போற்றி; மாயச்
சகடம் உதைத்தாய் போற்றி; ஞானச்
சுடரே போற்றி; சொல்லுளாய் போற்றி;
உடையாய் போற்றி; உத்தமா போற்றி;

அதிர்குரல் சங்கத் தழகா போற்றி;
கதியே போற்றி; கரியாய் போற்றி;

குறளாய் போற்றி; குருமணி போற்றி;
மறையாய் போற்றி; மாதவா போற்றி;

அந்தணர் வணங்கும் தன்மைய போற்றி;
சிந்தனைக் கினியாய் போற்றி; சிற்றாயர்
சிங்கமே போற்றி; சேயோய் போற்றி;
அங்கதிர் அடியாய் போற்றி; அசுரர்கள்
நஞ்சே போற்றி; நாதா போற்றி;
பஞ்சவர் தூதா போற்றி; பாரிடம்
கீண்டாய் போற்றி; கேசவா போற்றி;
நீண்டாய் போற்றி; நிமலா போற்றி;

முதல்வா போற்றி; முத்தா போற்றி;
அழகா போற்றி ; அமுதே போற்றி;

கஞ்சனைக் காய்ந்த காளாய் போற்றி;
அஞ்சனக் குன்றே போற்றி; அஞ்சன
வண்ணா போற்றி; வள்ளலே போற்றி;
அண்ணா போற்றி; அண்ணலே போற்றி;

அச்சுதா போற்றி; அச்சனே போற்றி;
அச்சுவைக் கட்டியே போற்றி; அந்தணர்
சிந்தையாய் போற்றி; சீதரா போற்றி;
அந்த முதல்வா போற்றி; அந்தரம்
ஆனாய் போற்றி; அருவா போற்றி;
வானே தருவாய் போற்றி; வேதப்
பிரானே போற்றி; பிறப்பிலி போற்றி;
இராமா போற்றி; இறைவா போற்றி;
வக்கரன் வாய்முன் கீண்டவ போற்றி;
அக்கா ரக்கனி போற்றி; அங்கண்
நாயக போற்றி; நம்பீ போற்றி;
காய்சின வேந்தே போற்றி; அங்கை
ஆழிகொண் டவனே போற்றி; அந்தமில்
ஊழியாய் போற்றி; உலப்பிலாய் போற்றி;
காரணா போற்றி; கள்வா போற்றி;
சீரணா போற்றி; கேசவா போற்றி;
உரையார் தொல்புகழ் உத்தம போற்றி;
அரையா போற்றி; அண்டா போற்றி;
அந்தமில் ஆதியம் பகவனே போற்றி;
அந்தணர் அமுதே போற்றி; ஆநிரை
காத்தாய் போற்றி; கருமணி போற்றி;
கூத்தா போற்றி; குறும்பா போற்றி;
ஆவலன் புடையார் மனத்தாய் போற்றி;
மூவர்கா ரியமும் திருத்துவாய் போற்றி;
மூதறி வாளனே போற்றி; முதுவேத
கீதனே போற்றி; கேடிலி போற்றி;
அடர்பொன் முடியாய் போற்றி; மென்தளிர்
அடியாய் போற்றி; அமலா போற்றி;
அடிமூன் றிரந்தவன் கொண்டாய் போற்றி;
கடவுளே போற்றி; கண்ணாவாய் போற்றி;
அரவப் பகையூர் பவனே போற்றி;
குரவை கோத்த கு.கா போற்றி;
அலரே போற்றி; அரும்பே போற்றி;
நலங்கொள் நாத போற்றி; நான்மறை
தேடி ஓடும் செல்வா போற்றி;
ஆடா வமளியில் துயில்வோய் போற்றி;
மூன்றெழுத் தாய முதல்வா போற்றி;
தோன்றாய் போற்றி; துப்பனே போற்றி;
அலமும் ஆழியும் உடையாய் போற்றி;
கலந்தவர்க் கருளும் கருத்தாய் போற்றி;
அணிவரை மார்ப போற்றி; அரிகுலம்
பணிகொண்டலைகடல் அடைத்தாய் போற்றி;
அரிமுக போற்றி; அந்தணா போற்றி;
உரகமெல் லணையாய் போற்றி; உலகம்
தாயவ போற்றி; தக்காய் போற்றி;
ஆயர்தம் கொழுந்தே போற்றி; யார்க்கும்
அரிநவ போற்றி; அப்பனே போற்றி;
கரநான் குடையாய் போற்றி; கற்பகக்
காவன நற்பல தோளாய் போற்றி;
ஆவினை மேய்க்கும்வல் லாயா போற்றி;
ஆலநீள் கரும்பே போற்றி; அலையார்
வேலை வேவவில் வளைத்தாய் போற்றி;
அப்பிலா ரழலாய் நின்றாய் போற்றி;
செப்பம துடையாய் போற்றி; சேர்ந்தார்
தீவினை கட்கரு தஞ்சே போற்றி;
காவல போற்றி; கற்கீ போற்றி;
குன்றால் மாரி தடுத்தவ போற்றி;
நன்றெழில் நாரண போற்றி; நந்தா
விளக்கே போற்றி; வேதியா போற்றி;
அளப்பரு வேலையை அடைத்தாய் போற்றி;
சீலா போற்றி; செல்வா போற்றி;
பாலா லிலையில் துயின்றாய் போற்றி;
மிக்காய் போற்றி; ஒண்சுடர் போற்றி;
சக்கரச் செல்வா போற்றி; நலனுடை
ஒருவா போற்றி; ஒண்சுடர் போற்றி;
அருமறை தந்தாய் போற்றி; ஆணிச்
செம்பொன் மேனி எந்தாய் போற்றி;
எம்பிரான் போற்றி; எங்கோன் போற்றி;
உறவு சுற்றம் ஒன்றிலாய் போற்றி;
பிறர்களுக் கரிய வித்தகா போற்றி;
பரமா போற்றி; பதியே போற்றி;
மரகத வண்ணா போற்றி; மறைவார்
விரித்த விளக்கே போற்றி; மன்றில்
குரவை பிணைந்த மாலே போற்றி;
போதலர் நெடுமுடிப் புண்ணிய போற்றி;
மாதுகந்த மாரபா போற்றி; முனிவரர்
விழுங்கும் கோதிலன் கனியே போற்றி;
அழக்கொடி யட்டாய் போற்றி; அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினாய் போற்றி;
அமரர்க் கமுதம் ஈந்தோய் போற்றி; ஆதி
பூதனே போற்றி; புராண போற்றி;
புனிதா போற்றி; புலவா போற்றி;
தனியா போற்றி; தத்துவா போற்றி;
நச்சுவா ருச்சிமேல் நிற்பாய் போற்றி;
நிச்சம் நினைவார்க் கருள்வாய் போற்றி;
ஆளரி போற்றி; ஆண்டாய் போற்றி;
வாளரக்க ருக்கு நஞ்சே போற்றி;
விகிர்தா போற்றி; வித்தகா போற்றி;
உகங்கள் தொறுமுயிர் காப்பாய் போற்றி;
மல்லா போற்றி; மணாளா போற்றி;
எல்லாப் போருளும் விரித்தாய் போற்றி;
வையந் தொழுமுனி போற்றி; சக்கரக்
கையனே போற்றி; கண்ணா போற்றி;
குணப்பரா போற்றி; கோளரி போற்றி;
அணைப்பவர் கருத்தாய் போற்றி; அந்தணர்
கற்பே போற்றி; கற்பகம் போற்றி;
அற்புதா போற்றி; அற்றவர் கட்கரு
மருந்தே போற்றி; மருத்துவ போற்றி;
இருங்கை மதகளி றீர்த்தாய் போற்றி;
உள்ளுவார் உள்ளத் துறைவாய் போற்றி;
தெள்ளியார் கைதொழும் தேவனே போற்றி;
வாமா போற்றி; வாமனா போற்றி;
ஆமா றறியும் பிரானே போற்றி;
ஓரெழுத் தோருரு வானவ போற்றி;
ஆரெழில் வண்ண போற்றி; ஆரா
அமுதே போற்றி; ஆதிநீ போற்றி;
கமலத் தடம்பெருங் கண்ணா போற்றி;
நண்ண லரிய பிரானே போற்றி;
கண்ணுதல் கூடிய அருத்தா போற்றி;
தொல்லையஞ் சோதி போற்றி; ஞானம்
எல்லையி லாதாய் போற்றி; கவிக்கு
நிறை பொருள் போற்றி; நீதியே போற்றி;
அறந்தா னாகித் திரிவாய் போற்றி; 200.

புறந்தொழு வார்க்குப் பொய்யன் வாழ்க;
மறைம லர்ச்சுடர் வாழ்க; மறையோர்
கண்ணான் வாழ்க; கவியளான் வாழ்க;
பண்ணுளான் வாழ்க; பண்பன் வாழ்க;
மண்மகள் கேள்வன் வாழ்க; மாக
விண்முதல் நாயகன் வாழ்க; வித்தகப்
பிள்ளை வாழ்க; பித்தன் வாழ்க;
ஒள்ளியான் வாழ்க; உயர்ந்தான் வாழ்க;
மண்பகர் கொண்டான் வாழ்க; நறுவிய
தண்துழாய் வேதியன் வாழ்க; மண்புரை
வையம் இடத்த வராகன் வாழ்க;
அய்யன் வாழ்க; ஆத்தன் வாழ்க;
பரிவாய் மீண்ட சீரான் வாழ்க;
கரிய முகில்புரை மேனியன் வாழ்க;
கலையார் சௌற்பொருள் வாழ்க; தெய்வத்
தலைவன் வாழ்க; தஞ்சன் வாழ்க;
பண்புடை வேதம் பயந்தான் வாழ்க;
வெண்புரி நாலுடை மார்பன் வாழ்க;
தனிமாத் தெய்வம் வாழ்க; அமரர்
முனிவர் விழுங்குங்கன் னற்கனி வாழ்க;
ஏலு மறைப் பொருள் வாழ்க; இறப்பெதிர்
காலக் கழிவும் ஆனவன் வாழ்க;
இன்பன் வாழ்க; ஈசன் வாழ்க;
அன்பன் வாழ்க; அறவன் வாழ்க;
அறமுய லாழிப் படையவன் வாழ்க;
உறியார் வெண்ணெயுண் டுகந்தான் வாழ்க;
செந்தமிழ் பாடுவார் தேவன் வாழ்க;
சுந்தரன் வாழ்க; சூழ்ச்சி ஞானச்
சுடரொளி வாழ்க; சோதீ வாழ்க;
உடன்மிசை உயிரெனக் கரந்தோன் வாழ்க;
ஆடற் பறவையன் வாழ்க; எடுப்பும்
ஈடுமில் ஈசன் வாழ்க; உட்குடை
அசுரர் உயிரெலா முண்டவன் வாழ்க;
பசுநிரை தொலைவு தவிர்த்தான் வாழ்க;
எண்ணம் புகுந்து திதிப்போன் வாழ்க;
எண்ணன் வாழ்க; எண்ணுவா ரிடரைக்
களைவான் வாழ்க; கற் றாயன் வாழ்க;
கிளரொளி மாயன் வாழ்க; காள
மேகம் வாழ்க; மெய்ம்மை வாழ்க;
நாக நடுக்கம் தீர்த்தான் வாழ்க;
வேதன் வாழ்க; வீடுடையான் வாழ்க;
போதகம் வீழப் பொருதான் வாழ்க;
வைய முதல்வன் வாழ்க; ஆண் டளக்கும்
ஐயன் வாழ்க; அரங்கன் வாழ்க;
ஆற்ற நல்வகை காட்டுவோன் வாழ்க;
ஊற்றம் உடையான் வாழ்க; செங்கட்
கருமுகில் வாழ்க; காரணம் கிரிசை
கரும முதல்வன் வாழ்க; கன்னலின்
கட்டியே வாழ்க; கரிய குழலுடைக்
குட்டன் வாழ்க; கூற்றம் வாழ்க;
கருவினை வண்ணன் வாழ்க; கருமமும்
கரும பலனும் ஆவோன் வாழ்க;
தேவர் விருத்தன் வாழ்க; தேவர்க்கும்
தேவன் வாழ்க; தெய்வம் மூவரில்
முதல்வன் வாழ்க; முகுந்தன் வாழ்க;
சதிரன் வாழ்க; சந்தோகன் வாழ்க;
சுடர்கொள் சோதீ வாழ்க; கடலுள்
கிடந்தவன் வாழ்க; கேழல் வாழ்க;
பவித்திரன் வாழ்க; பரபரன் வாழ்க;
திவத்தை யருள்பவன் வாழ்க; கணக்கறு
தலத்தனன் வாழ்க; நம்பன் வாழ்க;
நிலத்திடைக் கீண்ட அம்மான் வாழ்க;
பீதக ஆடையன் வாழ்க; வேள்வியும்
வேதமு மானான் வாழ்க; வேண்டிற்று
எல்லாம் தருபவன் வாழ்க; யார்க்கும்
நல்லான் வாழ்க; நம்பிரான் வாழ்க;
கூடாரை வெலுஞ்சீர்க் கோவிந்தன் வாழ்க;
ஓடாப் படையான் வாழ்க; மண்ணிக்
குறுங்கயிற் றாற்கட் டுண்டவன் வாழ்க;
நிறங்கிளர் சோதி நெடுந்தசை வாழ்க;
பிறப்பொடு மூப்பொன் றில்லவன் வாழ்க;
மறைப்பொருள் வாழ்க; மாயன் வாழ்க;
மன்ற மரக்கூத் தாடினான் வாழ்க;
என்றும் அரியான் வாழ்க; ஆழியால்
அன்றங் காழியை மறைத்தான் வாழ்க;
வென்றிநீர் மழுவன் வாழ்க; வினைதீர்
மருந்தே வாழ்க; மணியே வாழ்க;
அருந்தேவன் வாழ்க; அழகன் வாழ்க;
அன்னமாய் அருமறை பயந்தான் வாழ்க;
தன்னடி யார்மனத் தென்றும்தேன் வாழ்க;
மனத்துக் கினியான் வாழ்க; மாசற்றார்
மனத்துளான் வாழ்க; மணிக்குன்று வாழ்க;
மதிகோள் விடுத்த தேவன் வாழ்க;
மதியில் நீசர்சென் றடையான் வாழ்க;
முடிகளா யிரத்தான் வாழ்க; அவனி
அடிமூன் றிரந்து கொண்டவன் வாழ்க;
அமுதங் கொண்டான் வாழ்க; அமரர்தம்
அமுதே வாழ்க; அறிவன் வாழ்க;
ஆயிரம் பேருடை யம்மான் வாழ்க;
ஆயன் வாழ்க; ஆதியான் வாழ்க;
பணிலம்வாய் வைத்தான் வாழ்க; கன்று
குணிலா எறிந்தான் வாழ்க; கொள்ளக்
குறைவிலன் வாழ்க; கோவலன் வாழ்க;
மறுகலி லீசன் வாழ்க; மறைநான்கும்
ஓதினான் வாழ்க; ஊழி வாழ்க;
ஆதியம் புருடன் வாழ்க; ஆயர்க்கு
அதிபதி வாழ்க; ஆளன் வாழ்க;
நிதியன் வாழ்க; நெடுமால் வாழ்க;
படிவான மிறந்த பரமன் வாழ்க;
தடவரைத் தோளன் வாழ்க; தூய
பெருநீர் யமுனைத் முறைவன் வாழ்க;
எரிநீர் வளிவான் மண்ணான் வாழ்க;
கல்விநாதன் வாழ்க; பயில்நூல்
நல்யாழ் நரம்பின் முதிர்சுவை வாழ்க;
பூவணை வாழ்க; பூவனை மேவிய
தேவி மணாளன் வாழ்க; மைதோய்
சோதி வாழ்க; தூயான் வாழ்க;
ஆதி வராகமும் ஆனான் வாழ்க;
ஆழியங் கையில் கொண்டான் வாழ்க;
வேழப் போதகம் வாழ்க; அசுரரைத்
துணிப்பான் வாழ்க; துயக்கன் வாழ்க;
கணக்கில் கீர்த்தியான் வாழ்க; அடியார்க்கு
அருள்பவன் வாழ்க; அண்டமூ டுருவப்
பெருந்திசை நிமிர்ந்தான் வாழ்க; அஞ்சன
மேனியன் வாழ்க; வெள்ளை மூர்த்தி
ஆனவன் வாழ்க; அருங்கல வுருவின்
ஆயர் பெருமகன் வாழ்க; தலைகண்
ஆயிரமுடையான் வாழ்க; அடியார்க்கு
மெய்யன் வாழ்க; மின்னும் ஆழியங்
கையன் வாழ்க; காலிகள் மேய்க்க
வல்லவன் வாழ்க; வல்லான் வாழ்க;
அல்லிக் கமலக் கண்ணன் வாழ்க;
எய்ப்பினில் வைப்பே வாழ்க; அண்டத்
தப்புறத் துய்த்திடும் ஐயன் வாழ்க;
அணிகொள் மரகதம் வாழ்க; தாள் அடைந்தார்க்கு
அணியன் வாழ்க; அனந்தன் வாழ்க;
அமுதினு மாற்ற இனியான் வாழ்க;
தமர்கட் கெளியான் வாழ்க; தேவகி
சிறுவன் வாழ்க; சிட்டன் வாழ்க;
அறிவுப்பயன் வாழ்க; ஆவி வாழ்க;
வானோர் நாயன் வாழ்க; தனக்குத்
தானே உவமன் வாழ்க; தேடற்கு
அறியவன் வாழ்க; ஆட்கொள்ள வல்ல
பெருமாள் வாழ்க; பெருந்தகை வாழ்க;
பேதியா இன்ப வெள்ளம் வாழ்க;
வேதநல் விளக்கே வாழ்க; வேதப்
புனிதன் வாழ்க; புணைவன் வாழ்க;
கனிவார் வீட்டு இன்பம் வாழ்க;
கங்கை போதரக் கால் நிமிர்ந்தான் வாழ்க;
நங்கள் வைப்பும் வாழ்வும் வாழ்க;
யாதவன் வாழ்க; யாழிசை வாழ்க;
ஆதியம் பெருமான் வாழ்க; வேதம்
கண்டான் வாழ்க; கைம்மா துன்பம்
விண்டான் வாழ்க; விண்ணாளி வாழ்க;
வில்லான் வாழ்க; விபீட ணற்கு
நல்லான் வாழ்க; நரநா ரணனாய்
அறநூல் விரித்தான் வாழ்க; வேள்வியில்
குறளாய் நிமிர்ந்த வஞ்சன் வாழ்க;
அஞ்சிறைப் புள்ளின் பாகன் வாழ்க;
கஞ்சனை வஞ்சனை செய்தான் வாழ்க;
அமரர் கோமான் வாழ்க; என்றும்
இமையவர்க் கரியான் வாழ்க; இமையவர்
குலமுதல் வாழ்க; குலக்குமரன் வாழ்க;
அலைகடல் வண்ணன் வாழ்க; அலைகடற்
பள்ளியான் வாழ்க; பரமேட்டி வாழ்க;
வெள்ளத் தரவில் துயின்றான் வாழ்க;
குன்றா ரும்திறல் தோளன் வாழ்க;
கன்றால் விளவெறிந்த காளை வாழ்க; 400
“வெல்க “\
மதகளி றன்னான் வெல்க; மதுரைப்
பதியினன் வெல்க; பத்தராவி வெல்க;
அசுரர் கூற்றம் வெல்க; மணித்தேர்
விசயற் கூர்ந்தான் வெல்க; யசோதைதன்
சிங்கம் வெல்க; சிலையாளன் வெல்க;
செங்கதிர் முடியான் வெல்க; அடலாழிப்
பிரானவன் வெல்க; பீடுடையான் வெல்க; 410.
இராவ ணாந்தகன் வெல்க;அந்தமில்
புகழான் வெல்க;புதுனலுருவன் வெல்க;
திகழும் பவளத் தொளியான் வெல்க;
அந்தமிழ் இன்பப் பாவினன் வெல்க;
இந்திரன் சிறுவன்தேர் முன்னின்றான் வெல்க;
ஆநிரை மேய்த்தான் வெல்க;வைத்த
மாநிதி வெல்க;மண் ணிரந்தான் வெல்க;
மத்த மாமலை தாங்கீ வெல்க; 420
சித்திரத் தேர்வலான் வெல்க;சீற்றம்
இல்லவன் வெல்க;இழுதுண்டான் வெல்க;
மல்லரை யட்டான் வெல்க;மாசறு
சோதீ வெல்க;சுடர்விடு கமலப்
பாதன் வெல்க;பகலாளன் வெல்க;
படிக்கே ழில்லாப் பெருமான் வெல்க;
இடிக்குர லினவிடை யடர்த்தான் வெல்க; 431
அரட்டன் வெல்க;அரியுருவன் வெல்க;
இரட்டை மருதம் இறுத்தான் வெல்க;
வாணன் தடந்தோள் துணித்தான் வெல்க;
ஓணத்தான் வெல்க;உந்தியில் அயனைப்
படைத்தான் வெல்க; பருவரையாற் கடலை
அடைத்தான் வெல்க; ஆழிசங்கு வாழ்வில்
தண்டா திப்பல் படையான் வெல்க;
அண்டமோ டகலிடம் அளந்தான் வெல்க;
அரியுரு வாகி யந்தியம் போதில்
அரியை யழித்தவன் வெல்க; அமரர்
பிதற்றும் குணங்கெழு கொள்கையன் வெல்க; 440
மதியுடை அரற்கும் மலர்மகள் தனக்கும்
கூறு கொடுத்தருள் உடம்பன் வெல்க;
ஏறும் இருஞ்சிறைப்புட் கொடியான் வெல்க;
ஒத்தார் மிக்கார் இல்லவன் வெல்க;
பத்திரா காரன் வெல்க;பழமறை
தேடியுங் காணாச் செல்வன் வெல்க;
ஆடும் கருளக் கொடியான் வெல்க;
அடைந்தார்க் கணியன் வெல்க;கடலைக்
கடைந்தான் வெல்க;கட்கினியான் வெல்க;
காண்டற் கரியவன் வெல்க;புள்வாய் 450
கீண்டான் வெல்க;கேடிலான் வெல்க;
கையில் நீளுகிர்ப் படையான் வெல்க;
வையம் அளந்தான் வெல்க;யாவையும்
ஆனான் வெல்க;அமுதுண்டான் வெல்க;
ஊனா ராழிசங் குத்தமன் வெல்க;
அவலம் களைவான் வெல்க; என்றானும்
அவுணர்க் கிரக்கம் இலாதான் வெல்க;
அறவ னாயகன் வெல்க;மனத்து 460
அறமுடை யோர்கதி வெல்க;அறுசுவை
அடிசில் வெல்க;ஆதிப்பிரான் வெல்க;
வடிசங்கு கொண்டான் வெல்க;வண்புகழ்
நாரணன் வெல்க;நாயகன் வெல்க;
ஆர மார்பன் வெல்க;அண்டர்
தங்கோன் வெல்க;தம்பிரான் வெல்க;
சங்கமிடந்தான் வெல்க;சனகன் 470
மருமகன் வெல்க;மதுசூதன் வெல்க;
உருவு க்கரிய ஒளிவணன் வெல்க;
எங்கும் பரந்த தனிமுகில் வெல்க;
நங்கள் நாதன் வெல்க;நல்வினைக்கு
இன்னமுது வெல்க;ஏழிசை வெல்க;
பிள்ளை மணாளன் வெல்க;வலத்துப்
பிறைச்சடை யானை வைத்தவன் வெல்க;
நிறைஞா னத்தொரு மூர்த்தி வெல்க; 480
அலைகடற் கரைவீற் றிருந்தான் வெல்க;
சிலையால் மராமரம் சிதைத்தான் வெல்க;
அனந்த சயனன் வெல்க;இலங்கையைச்
சினந்தனால் செற்ற கோமகன் வெல்க;
ஆய்ப்பாடி நம்பி வெல்க;நஞ்சுகால்
பாப்பணைப் பள்ளி மேவினான் வெல்க;
உலகளிப் பானடி நிமிர்த்தான் வெல்க;
உலகமூன் றுடையான் வெல்க;உறங்குவான்
போல யோகுசெய் பெருமான் வெல்க;
காலசக் கரத்தான் வெல்க;காலநேமி 490
காலன் வெல்க; காமரூபி வெல்க;
பால்மதிக் கிடர் தீர்த்தவன் வெல்க;
பிறப்ப றுக்கும் பிரானவன் வெல்க;
மறைப்பெ ரும்பொருள் வெல்க; மனனுணர்
அளவிலன் வெல்க;அண்டவாணன் வெல்க;
வளரொளி யீசன் வெல்க;வருநல்
தொல்கதி வெல்க;தூமொழியான் வெல்க; 500
செல்வமல்கு சீரான் வெல்க;செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலன் வெல்க;
வைப்பே வெல்க;மருந்தே வெல்க;
வியலிட முண்டான் வெல்க;நமன் தமர்க்கு
அயர வாங்கரு நஞ்சன் வெல்க;
ஆய்மகள் அன்பன் வெல்க;வஞ்சப்
பேய்மகள் துஞ்சநஞ் சுண்டான் வெல்க;
அழகியான் வெல்க;அலங்காரன் வெல்க; 510
தழலைந் தோம்பி வெல்க; தக்கணைக்கு
மிக்கான் வெல்க;விண்ணவர் கோன் வெல்க;
திக்குநிறை புகழான் வெல்க;திருவாழ்
மார்பன் வெல்க;மதுரவாறு வெல்க;
கார்மலி வண்ணன் வெல்க;குவலயத்
தோர்தொழு தேத்தும் ஆதி வெல்க;
செங்கமல நாபன் வெல்க;நரங்கலந்த 520
சிங்கம் வெல்க;சிந்தை தன்னுள்
நீங்காதிருந்த திருவே வெல்க;
தேங்கோதநீர் உருவன் வெல்க;
பிள்ளையரசு வெல்க;பிள்ளைப்பிரான் வெல்க;
வெள்ளியான் வெல்க;வேதமயன் வெல்க;
வேல்வேந் தர்பகை கடிந்தோன் வெல்க;
ஆல்மேல் வளர்ந்தான் வெல்க;ஆழி
வலவன் வெல்க;வாயழகன் வெல்க; 531
நிலமுன மிடந்தான் வெல்க;நீலச்
சுடர்விடி மேனி யம்மான் வெல்க;
அடியார்க் கென்னை ஆட் படுத்தோன் வெல்க;
பாரதம் பொருதோன் வெல்க;பாரளந்த
பேரரசு வெல்க;பெற்றமாளி வெல்க;
காளை யாய்க் கன்று மேய்த்தான் வெல்க;
கேளிணை ஒன்றும் இலாதான் வெல்க;
வேதத்து அமுதமும் பயனும் வெல்க; 540
வேத முதல்வன் வெல்க;வேதத்தின்
சுவைப் பயன் வெல்க;சுடரான் வெல்க;
நவின்றேத்த வல்லார் நாதன் வெல்க;
ஆதி மூர்த்தீ வெல்க;அந்தியம்
போதில் அவுணனுடல் பிளந்தான் வெல்க;
ஆமையும் ஆனவன் வெல்க; துளவுசேர்
தாமநீண் முடியன் வெல்க;தனிப்பெரு
மூர்த்தி வெல்க; முண்டியான் சாபம்
தீர்த்தான் வெல்க;தெய்வம் வெல்க;
வளைவணற் கிளையவன் வெல்க;தயிரொடு 551
அளைவெணெய் உண்டான் வெல்க;மெய்ந்நலம்
தருவான் வெல்க;சாமமா மேனி
உருவான் வெல்க;உய்யவுலகு படைத்து
உண்டமணி வயிறன் வெல்க; அண்டமாய்
எண்டிசைக் குமாதி வெல்க;அண்டமாண்
டிருப்பான் வெல்க;இருங்கைம் மாவின்
மருப்பொசித் திட்டான் வெல்க;மரமெய்த
திறலான் வெல்க;தீமனத் தரக்கர் 560
திறலை யழித்தான் வெல்க;திருவின்
மணாளன் வெல்க;மண்ணுயிர்க் கெல்லாம்
கணாளன் வெல்க;மண்ணழகன் வெல்க;
கையெடு கால்செய்ய பிரான் வெல்க;
வைகுந்த நாதன் வெல்க; வைகுந்தச்
செல்வன் வெல்க;செங்கணான் வெல்க;
தொல்வினைத் துயரைத் துடைப்பான் வெல்க;
கூரா ராழிப் படையவன் வெல்க; 570
காரேழ் கடலேழ் மலையே ழுலகும்
உண்டும்ஆ ராத வயிற்றன் வெல்க;
தொண்டர் நெஞ்சில் உறைவான் வெல்க;
கொடைபுகழ் எல்லை யிலாதான் வெல்க;
குடமாடு கூத்தன் வெல்க;குவளை
மலர்வணன் வெல்க;மண்கொண்டான் வெல்க;
புலம்புசீர்ப் பூமி யளந்தவன் வெல்க;
உலகுண்ட வாயன் வெல்க;ஊழியேழ்
உலகுண் டுமிழ்ந்த ஒருவன் வெல்க;
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே வெல்க; 580
கடல்படா அமுதே வெல்க;அம்பொனின்
சுடரே வெல்க;நற் சோதீ வெல்க;
அமரர் முழுமுதல் வெல்க;அமரர்க்கு
அமுதம் ஊட்டிய அப்பன் வெல்க;
அமரர்க் கரியான் வெல்க;பொதிசுவை
அமுதம் வெல்க;அறமுதல்வன் வெல்க;
அயனை யீன்றவன் வெல்க;ஆலினிலைத்
துயின் றவன் வெல்க;துவரைக்கோன் வெல்க; 591
அரக்க னூர்க்கழல் இட்டவன் வெல்க;
இருக்கினில் இன்னிசை யானான் வெல்க;
விழுக்கையாளன் வெல்க;துளவம்
தழைக்கும் மார்பன் வெல்க;அளத்தற்கு
அரியவன் வெல்க;அயோத்தி யுளார்க்கு
உரியவன் வெல்க;உயிரளிப்பான் வெல்க;
ஏழுல குக்குயிர் வெல்க;ஆற்றல்
ஆழியங் கையமர் பெருமான் வெல்க; 600.
4.

திருமக ளார்தனிக் கேள்வன் அருள்க;
பெருநிலம் விழுங்கிய வாயன் அருள்க;
ஆலி னிலைப்பெரு மானே அருள்க;
மால்விடை ஏழ்செற் றவனே அருள்க;
தெள்ளிய சிங்கம் அருள்க; கொள்ளை
கொள்ளிக் குறும்பன்அருள்க; யார்க்கும்
அறிவரு மாயன்அருள்க; ஏழேழ்
பிறவி யறுப்பான் அருள்க; இமையவர்
தந்தைதாய் அருள்க; தவமுனி அருள்க; 610
எந்தையே அருள்க; ஏற்பரன் அருள்க;
ஒடியா இன்பப் பெருமையன் அருள்க;
படுகடல் அமுதே அருள்க; பத்தர்கள்
நுகர்கனி அருள்க; நூல்மார்ப அருள்க;
பகல்க ரந்தச்சுடர் ஆழியான் அருள்க;
ஆயர் பாடிவிளக்கே அருள்க;
வாய்முதல் அப்பன் அருள்க; வானவர்
புகலிடம் அருள்க; புள்வலான் அருள்க; 621.
வகையால் அவனி இரந்தான் அருள்க;
எங்கள்செல் சார்வே அருள்க; வடிவார்
சங்கம் கொண்டான் அருள்க; உலகுய்ய
நின்றான் அருள்க; நெடியோன் அருள்க;
குன்றே குடையா எடுத்தான் அருள்க;
மழுவியல் படையான் அருள்க; வேதாந்த
விழுமிய பொருளான் அருள்க; வேத
முதற்பொருள் அருள்க; முனைவன் அருள்க; 631.
மதனன் தன்னுயிர்த் தாதை அருள்க;
வானவர் கொழுந்தே அருள்க; மூவா
வானவன் அருள்க; வாசுதேவன் அருள்க;
வண்ணம் அழகிய நம்பி அருள்க;
எண்ணில் மூர்த்தி அருள்க; என்னுயிர்க்
காவலன் அருள்க; காகுத்தன் அருள்க;
கோவிந்தன் அருள்க; கோவர்த்தன் அருள்க; 641.
சாமவேதியன் அருள்க; செய்ய
தாமரைக் கண்ணன் அருள்க; தாமரைத்
தாளான் அருள்க; தாசரதி அருள்க;
தோளா மாமணி அருள்க; தொண்டர்க்கு
இனியான் அருள்க; இருடிகேசன் அருள்க;
பனிமல ராள்வலம் கொண்டான் அருள்க;
கோல வராகன் அருள்க; கருமுகில் 650
போலும் உருவன் அருள்க; தொழுவார்
சிந்தை பிரியான் அருள்க; சேது
பந்தம் திருத்தினான் அருள்க; பத்தர்க்கு
அமுதே அருள்க; அளப்பில்ஆ ரமுதை
அமரர்க் கருளும் விளக்கே அருள்க;
நரனே அருள்க; நந்தகோ பன்இள
வரசே அருள்க; ஜம்பால் ஓதியை
ஆகத்து இருத்தினான் அருள்க; கடலுள்
நாக மேந்தித் துயின்றான் அருள்க; 660
நாந்தக மேந்திய நம்பி அருள்க;
கூந்த லார்மகிழ் கோவலன் அருள்க;
குறியமா ணெம்மான் அருள்க; கூந்தல்வாய்
நெறியக் கீண்டான் அருள்க; நெறிமையால்
நினையவல் லார்கதி அருள்க; தன் அடியார்க்கு
இனியான் அருள்க; எனக்கரசு அருள்க;
துத்திசேர் நாகத்து அணையான் அருள்க;
அத்தம் அடுத்த பத்தாம் நாளில்
தோன்றினான் அருள்க; மூன்றினில் தோன்றி
மூன்றினில் மூன்றுரு வானான் அருள்க;
பாற்கடல் வண்ணன் அருள்க; சங் கோதப் 670
பாற்கடல் சேர்ப்பன் அருள்க; சார்ங்கவில்
கையன் அருள்க; கன்னல் அருள்க;
வெய்யவாள் தண்டு சங்கு சக்கரம்
வில்லும் ஏந்துவோன் அருள்க; வீயா
மல்லலஞ் செல்வக் கண்ணன் அருள்க;
ஞானப் பிராஅன் அருள்க; பரி முகமாய்
ஞானக் கலைப்பொருள் அருளினான் அருள்க;
வெற்றிக் கருடக் கொடியோன் அருள்க;
கற்றைக் குழலான் அருள்க; விடமுடைப்
பாம்பின் மேல்நடம் பயின்றான் அருள்க; 680
ஆமகிழ்ந் துகந்தவை மேய்ப்பான் அருள்க;
மும்மை மூர்த்தி அருள்க; இவ்வுலகில்
எம்மாண்பு மானான் அருள்க; என்னுடை
நாயகன் அருள்க; நான்மூர்த்தி அருள்க;
வேய்ங்குழ லூதும் வித்தகன் அருள்க;
ஆழியொன் றேந்தியே கூற்றே அருள்க;
ஊழி பெயர்த்தான் அருள்க; ஒருநல்
சுற்றம் அருள்க; சுற்றுநின் றகலா
உற்றார் இலாத மாயவன் அருள்க; 690
உணவுப் புள்ளேறி ஊர்வான் அருள்க;
அவுணன் உடலைப் பிளந்தவன் அருள்க;
அறிவினுக் கரிய பிரானவன் அருள்க;
குறிய மாணுருக் கூத்தன் அருள்க;
ஆதியும் அந்தமும் இல்லவன் அருள்க;
ஒதம் போல்கிளர் வேதநீரன் அருள்க;
ஆவிக் கொருகொள் கொம்பே அருள்க;
கோவி நாயகன் அருள்க;கூரார்
ஆழிபணி கொண்டவன் அருள்க;பிறவிகள்
ஏழும் அறுக்கும் சொல்லான் அருள்க; 700
தோற்றக் கேடவை இல்லவன் அருள்க;
ஆற்றல் மிகுந்த ஆற்றலான் அருள்க;
இம்மைக் கும்மினி ஏழேழ் பிறவி
அம்மைக் குங்கதி யாவான் அருள்க;
இமையோர்க் கரிய அப்பன் அருள்க;
இமையோர் நாயகன் அருள்க; இமையோர்
பெருமான் அருள்க;பெரியான் அருள்க;
அருமா மறைப்பண் ணகத்தான் அருள்க;
இலங்கு சோதியன் அருள்க; மதிள்நீர்
இலங்கை மானகர் பொடித்தான் அருள்க; 710
இருளன்ன மேனியான் அருள்க; சகடம்
உருள உதைத்தான் அருள்க; இன்னமுத
வெள்ளம் அருள்க; விமலன் அருள்க;
பள்ளிமா மாயன் அருள்க; பற்றிலார்
பற்றநின்றவன் அருள்க; மூவுலகும்
முற்ற விரிசுடர் முடியன் அருள்க;
இன்னப்பா அருள்க; இன்பவாறு அருள்க;
பொன்பெயரோன் நெஞ்சம் கீண்டான் அருள்க;
ஈட்டிய வெண்ணெய் உண்டவன் அருள்க; 721
தேட்ட ருந்திறல் தேனே அருள்க;
உணர்வினிக் கரியான் அருள்க; இருப்பிணி
அணிநெடுந் தோள்புணர்ந் தவனே அருள்க;
உலகு செய்பவன் அருள்க; ஏழுசேர்
உலகம் ஆண்டவன் அருள்க; உலகேழும்
புகக்க ரந்ததிரு வயிற்றான் அருள்க;
மகர நெடுங்குழைக் காதன் அருள்க;
எண்ணற் கரியான் அருள்க; கருமுகில்
வண்ணன் அருள்க; வரம்புக் கடங்காக் 730
கீர்த்தியான் அருள்க; கேடிலா உணர்வின்
மூர்த்தியான் அருள்க; முற்ற மண்ணிடம்
தாவிவிண் ணுறநீண் டளந்தான் அருள்க;
ஓவரி வெஞ்சிலை வலவன் அருள்க;
உயர்வினை யேதரும் ஒண்சுடர் அருள்க;
உயர நின்றதோர் சோதீ அருள்க;
எளிவரும் இயல்வினன் அருள்க; ஞாலம்
அளந்திடந் துண்ட அண்ணல் அருள்க;
ஞாலம் தத்தும் பாதன் அருள்க;
ஞாலமுண் டுமிழ்ந்த மாஅல் அருள்க; 740
உம்பர் கோமான் அருள்க; துழாய்முடி
நம்பெரு மானே அருள்க; இலனது
உடையன் இதுவென நினைவரியான் அருள்க;
விடையேழ் வீயப் பொருதான் அருள்க;
மாகத் திளமதி சேர்சடை யானைப்
பாகத்து வைத்தான் அருள்க; ஞானத்தால்
ஆகத்து அனைப்பார்க்கு அருள்வான் அருள்க;
நாகத் தணையான் அருள்க; நற்பல
தாமரை நாண்மலர்க் கையவன் அருள்க;
தாமரை மின்னிடை நாகன் அருள்க;
என்றும் இனியான் அருள்க; பலவென 750
ஒன்றென அறிவரும் வடிவினன் அருள்க;
என்னுடைச் சுற்றம் அருள்க; தொண்டர்க்
கின்னருள் புரிவோன் அருள்க; எந்நின்ற
யோனியு மாகிப் பிறந்தவன் அருள்க;
ஞானத் தின்னொளி உருவன் அருள்க;
ஏறு சேவகன் அருள்க; அன்றிலங்கை
நீறு செய்த வீரன் அருள்க;
எல்லாப் பொருட்கும் சேயான் அருள்க;
நல்லன நமக்கே தருவான் அருள்க;
எண்ணில் தொல்புக ழீசன் அருள்க; 760
நண்ணுவார் சிந்தை பிரியான் அருள்க;
குரங்கையா ளுகந்த கோமான் அருள்க;
விரிந்த புகழான் அருள்க; கைகழால
நேமியான் அருள்க;நேசன் அருள்க;
மாமணி வண்ணன் அருள்க; சோத்தம்
பிரானவன் அருள்க; பெம்மான் அருள்க;
சராச ரத்தைவீ டேற்றினான் அருள்க;
எழிலேறு அருள்க; ஏகமூர்த்தி அருள்க; 771
தொழுவார் வினைகளைத் துடைப்பான் அருள்க;
முனிவர்க் கருள்தரும் தவமே அருள்க;
தனியேன் வாழ்முதல் அருள்க; வானுளார்
அறிய லாகா வானவன் அருள்க;
நிறைமூ வுலகுக்கும் நாயகன் அருள்க;
எள்க லிராக மிலாதான் அருள்க;
உள்கலந் தார்க்கோர் அமுதே அருள்க;
கொள்கை கொளாமை யிலாதான் அருள்க;
அளிநன் குடையான் அருள்க; எண்மீ 780
தியன்ற புறவண் டத்தான் அருள்க;
மயங்கச் சங்கம்வாய் வைத்தான் அருள்க;
என்குல தெய்வம் அருள்க; அசுரர்
வன்குலம் வேர்மருங் கருத்தான் அருள்க;
கூனேறு சங்கம் இடத்தான் அருள்க;
கூனே சிதையவில் தெறித்தான் அருள்க;
கோமளப் பிள்ளை அருள்க; அந்தணர்
ஓமம் ஆனான் அருள்க; ஓமத்து
உச்சியான் அருள்க; உயிராளன் அருள்க; 790
பச்சைமா மலைபோல் மேனியன் அருள்க;
அனைத்துல கும்விளக்கும் சோதீ அருள்க;
புனத்துழாய் மாலையான் அருள்க; பொறியுணர்
வகையிலான் அருள்க; ஐவர் தூதனாய்ச்
சவையில் சென்ற மாயனே அருள்க;
துற்றி யேழுல குண்டவன் அருள்க;
கொற்றவன் அருள்க; குழலழகன் அருள்க;
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் அருள்க;
படியிது வெனலாம் படியலான் அருள்க; 800.

.5.
வீவில் சீராய் செய செய; மன்னரை
மூவெழு கால் கொன்ற தேவே செய செய;
மன்னு பெரும்புகழ் மாதவ செயசெய;
என்னமர் பெருமா செயசெய; என்றும்
தேனும் பாலும் அமுதுமா வாய் செய;
வானவர் சென்னி மணிச்சுட ரேசெய;
எல்லா உயிர்க்கும் தாயோய் செயசெய;
நல்லோர் பிரானே செயசெய; நரக
நாசனே செயசெய; நரபதி செயசெய; 810
தேசமுன் னளந்தவ செய;தெள்ளி யாய் செய;
எழில்கொள் சோதீ செயசெய;ஏறேழ்
தழுவிய எந்தாய் செயசெய; தந்தை
கால்விலங் கறவந்து தோன்றினாய் செயசெய;
நால்வே தக்கடல் அமுதே செயசெய;
ஏழுல குடையாய் செயசெய;எழில்பெறத்
தாழும் மகர குண்டலத் தாய்செய;
ஒண்சங் கதைவாள் ஆழியாய் செயசெய;
கண்டு கோடற்கரியாய் செயசெய; 820
ஒருவா செயசெய; ஒலிநீர் உலகம்
தருவாய் செயசெய; தன்னுள் அனைத்தும்
தானவற் றுள்ளும் நிற்போய் செயசெய;
வானவர் தெய்வம் செயசெய; வாலியின்
மாவலம் அழித்தவில் லாளா செயசெய;
தேவர்கள் நாயக செய;கார் மேகம்
கலந்த தோருருவக் கண்ணா செயசெய;
நலந்திகழ் நாரண செயசெய;நனவில்
சென்றார்க்கும் நண்ணற் கரியவ செயசெய;
நின்றோங்கு முடியாய் செயசெய;நித்திலத் 830
தொத்தே செயசெய;கோகன கத்தவன்
கேள்வ செயசெய;கிளர்மூ வுலகும்
வேள்வியில் அளந்த அந்தண செயசெய;
ஏழுல குக்கும்ஆதீ செயசெய;
பாழியந் தோள்நான் குடையாய் செயசெய;
ஞாலம் ஏழையும் உண்டு பண்டோர்
பாலன் ஆகிய பண்பா செயசெய;
வனமாலை மார்ப செயசெய;அமரர்
தனிமுதல் வித்தே செயசெய;தாயின்
குடலை விளக்கிய கோனே செயசெய; 840
படவர வின்னணைப் பரஞ்சுட ரேசெய;
கோதில் செங்கோல் குடைமன் னரிடை
தூது நடந்தாய் செயசெய; சுடரொளி
ஒருதனி முதல்வா செயசெய;உலகுணும்
பெருவயிற் றானே செயசெய; பேய்மகள்
துஞ்ச நஞ்சு சுவைத் துண்டாய் செயசெய;
அஞ்சிறைப் புட்கொடி யுடையாய் செயசெய;
கோசலை தன்குல மதலாய் செயசெய;
தேசுடைத் தேவா செயசெய;தெய்வச்’
சிலையா செயசெய;தேவா செயசெய; 850
அலைகடல் அரவம் அளாவியோர் குன்றை
வைத்தவ செயசெய;வானவ செயசெய;
பைத்தேய் சுடர்ப்பாம் பணையாய் செயசெய;
தேவா சுரம்செற் றாய்செய செய; தனி
மூவா முதலாய் செயசெய;முத்தீ
மறையாய் செயசெய; வடமா மதுரைப்
பிறந்தாய் செயசெய; பிறவாய் செயசெய;
பெருந்தாளுடைய பிரானே செயசெய;
பெருந்தோள் நெடுமால் செயசெய;போத்தொரு
தாயில் வளர்ந்த நம்பீ செயசெய; 860
ஆயிரம் தோளாய் செயசெய;அசுரர்
குலமுதல் அரிந்த படையாய் செயசெய;
நிலமன்ன னாயுல காண்டவ செயசெய;
பணமா டாவணைப் பள்ளிகொண் டருளும்
மணவாள செயசெய; மல்லொடு கஞ்சனும்
துஞ்ச வென்றமணி வண்ணா செயசெய;
தஞ்சினம் தவிர்த்தார் தவநெறி செயசெய;
தனிநின்ற சார்விலா மூர்த்தி செயசெய;
பனிமதி கோள்விடுத் துகந்தாய் செயசெய;
பாரிட மாவாய் செயசெய;பாரதப் 870
போரிடைக் கலந்த மாயா செயசெய;
பீடுடை நான்முகற் படைத்தாய் செயசெய;
நாடுடை மன்னர்க்குத் தூதா செயசெய;
ஞானச் சுடரொளி மூர்த்தி செயசெய;
ஏனத் துருவாய் செய;எம்மான் செய;
விண்ணோர் தம்மற வாளா செயசெய;
விண்ணோர் முடிதோய் பாதா செயசெய;
மாபா வம்விட அரற்குப் பிச்சைபெய்
கோபால கோளரி செயசெய; குதிகொண்டு
அரவில் நடித்தாய் செயசெய; கருமுகில் 880
திருநிறத் தவனே செயசெய; குழல்வாய்
வைத்த மாயனே செயசெய;மணித்தோர்
மைத்துனற் குய்த்த ஆயனே செயசெய;
மாற்றாரை மாற்றழிக்க வல்லவா செயசெய;
நாற்றச் சுவையூ றொலியாய் செயசெய;
சூருரு வின்பேய் அளவுகண் டாய்செய;
காரணி மேகம் நின்றதொப் பாய்செய;
தடவரை யகலம துடையவ செயசெய;
சுடரொளி யேசெய;தூமறை யாய்செய; 890
அரன் அயன் எனவுல கழித்தமைத் தாய்செய;
பொருள் என் றிவ்வுலகம் படைத்தவ செயசெய;
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் செயசெய;
கலைப்பல் ஞானத்துக் கண்ணனே செயசெய;
வானிலும் பெரிய மாயைவல் லாய்செய;
ஞானநல் லாவி யாவாய் செயசெய;
நடுவே வந்துய்யக் கொள்வாய் செயசெய;
குடைந்து வண்டுணுந் துழாய்முடி யாய்செய;
ஞாலமுன் னீசெய;ஞாலமுண் டுமிழ்ந்த
மாலே செயசெய;மாகட லாயசெய; 900
வீடில் சீர்ப்புகழ் ஆதிப் பிரான்செய;
ஈடும் வலியும் உடையநம் பீசெய;
கற்கொண்டு கடலைத் தூர்த்தாய் செயசெய;
மற்பொரு தோளுடை யாய்செய; ஆலில்
நீளிலை மீதுசேர் குழவியே செயசெய;
வாள்வரி வில்லும் வளையாழி சங்கமும்
கதையும் அங்கையில் உடையாய் செயசெய;
அதிர்கடல் வண்ணா செயசெய; ஐவாய்
அரவணை மேலுறை யமலா செயசெய;
கரைசெய் மாக்கடல் கிடந்தவ செயசெய; 910
நக்க பிரானொடு அயனும் இந்திரனும்’
ஒக்கவும் தோற்றிய ஒருவா செயசெய;
காயமும் சீவனும் ஆவாய் செயசெய;
பேயைப் பிணம்படப் பாலுண்பி ரான்செய;
சிந்தைக்கும் கோசரம் அல்லாய் செயசெய;
செந்தண் கமலக்கண் கைகா லாய்செய;
பனைத்தாள் மதகளி றட்டவ செயசெய;
வினைசெய் வோய்செய;வினை தீர்ப் போய்செய;
மணிமின்னு மேனிநம் மாயவ செயசெய;
அணிமா னத்தட வரைத்தோ ளாய்செய; 920
பாலனாய் ஏழுல குண்டவ செயசெய;
ஆலிலை யன்ன வசம்செய் வாய்செய;
ஞாலத் தூடே நடந்தும் நின்றும்
சாலப் பலநாள் கிடப்பாய் செயசெய;
பகையும் நட்பும் ஆவாய் செயசெய;
பகலும் இரவுமாய் தின்றாய் செயசெய;
உவகையும் முனிவுமாய் உள்ளாய் செயசெய;
மகனொரு வர்க்கு மல்லாய் செயசெய;
ஞாலம்செய் தாய்செய; நம்பர மன்செய;
கோலங் கொண்முகில் வண்ணா செயசெய; 930
அளந்து காண்டற் கரியவ செயசெய;
இளமையும் முதுமையு மாவாய் செயசெய;
கல்வியா வாய்செய;கல்விசெய் வாய்செய;
செல்வநல் குரவும் செய்வாய் செயசெய;
நரகமும் சுவர்க்கமும் ஆவாய் செயசெய;
பெருமையும் சிறுமையும் உடையாய் செயசெய;
ஞானமும் மூடமும் ஆவாய் செயசெய;
தானும் பிரமனும் சிவனுமா வாய்செயசெய;
பிரிவும் புணர்ச்சியு மாவாய் செயசெய; 940
கரியும் கழுதும் கழுதையும் மல்லரும்
மருதும் விடையும் மடித்தாய் செயசெய;
இருளொடு சுடருமாய் இருந்தாய் செயசெய;
உறியார் நறுவெணெய் தானுகந் துண்ட
சிறியாய் செயசெய; சேடா செயசெய;
தண்மையும் தண்டமும் ஆவாய் செயசெய;
உண்மையோ டின்மையாய் வருவாய் செயசெய;
விடமும் அமுதமும் விரவுவாய் செயசெய;
அடலே றேசெய;ஐம்படை யாய்செய;
தேற்றமும் கலக்கமும் ஆவாய் செயசெய; 950
ஏற்றரும் வைகுந்தம் அருள்வாய் செயசெய;
வெந்திறல் வீரரொப் பாய்செய;
சிந்தை தன்னில் முந்திநிற் பாய்செய;
இன்பமும் துன்பமும் தருவாய் செயசெய;
தன்முடி வொன்றிலாத தண்துழா யாய்செய;
தழலானாய் செய;நிழலா னாய்செய;
பழியா னாய்செய;பகழா னாய்செய;
புண்ணியம் பாவம் ஆவாய் செயசெய;
எண்ணமும் மறப்புமாய் இருப்பாய் செயசெய; 960
புதுமை யாவாய்செய;பழமை யாவாய்செய;
முதுது வரைக்குலப் பதியாய்செயசெய;
சந்தமா னாய்செய;சமயமா னாய்செய;
அந்தணன் பிள்ளையை அருளினாய் செயசெய;
எவ்வ நோய்களைத் தீர்ப்பாய் செயசெய;
பவ்வ நீருடை யாடையாய் செயசெய;
பாரக லம்திரு வடியாய் செயசெய;
நீரழல் வானொடு நிலங்கா லாய்செய; 970
மாதிரம் எட்டும் தோளாய் செயசெய;
தீதில் நன்னெறி காட்டுவாய் செயசெய;
மின்னுரு வாய்செய;விளக்கொளி யாய்செய;
பொன்னுரு வாய்செய;மணியுரு வாய்செய;
தமிழாய் செயசெய;வடசொல் லாய்செயசெய;
சமயங் கண்டவை காப்பாய் செயசெய;
நால்வகை வருணமும் ஆனாய் செயசெய; 980
மேலைவா னவரும் அறியாய் செயசெய;
அறமுதல் நான்கவை அருள்வாய் செயசெய;
நெறியெலா முரைத்த மூர்த்தி செயசெய;
அறுசுவைப் பயனும் ஆனாய் செயசெய;
நெறிவாசல் தானேயாய் நின்றாய் செயசெய;
கலங்காப் பெருநகர் காட்டுவாய் செயசெய;
வலந்தாங்கு சக்கரத் தண்ணால் செயசெய;
கொண்டற் கைமணிவண்ணா செயசெய;
அண்டத் தமரர் பணியநின் றாய்செய;
நீரேற்று உலகெலாம் நின்றளந் தாய்செய; 990
ஈரிரு மால்வரைத் தோளாய் செயசெய;
பரமமூர்த் திசெய;பௌழியா செயசெய;
பரனே செயசெய;பற்பநா பாசெய;
புள்ளுவா செயசெய;புருடோத்த மாசெய;
கள்ளமா தவசெய;கடியமா யாசெய;
உலகில் திரியும் கருமகதி யாய்செய; 1000
உலகுக் கோருயிர் ஆனாய்செயசெய;
வெஞ்சுட ரேசெய;விஷ்ணுவே செயசெய;
தஞ்ச மாகிய தந்தை தாயொரு
தானு மாயவை யல்லனு மாஞ்செய;
மீனோ டாமை கேழலரி குறளாய்
முன்னும் இராம னாகித் தானாய்ப்
பின்னும் இராமனாய்த் தாமோ தரனாய்க்
கற்கியும் ஆவாய் செயசெய;வெற்பெடுத்து
ஒற்கமின்றி நின்றாய் செயசெய;
நாகநி காசெய;நாராய ணாசெய; 1008.
சம்பூர்ணம்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ பூர்வ ஆச்சார்யர்களின் -ஸ்ரீ மன் நாத -யாமுன முனிகள்–ஸ்துதிகள் –

February 14, 2024

ஸ்ரீ லக்ஷ்மி நாதாக்ய சிந்தௌ சடாரிபு ஜலதஹா ப்ராப்ய காருண்ய நீரம்!
நாதா த்ரவப் க்ஷிஞ்சன் ததானு ரகுவரம் போஜ ஷக்சுர் ஜலாப்யம்!!
கத்வதாம் யாமுநாக்யம் சரிதாமத் யதீந்த்ராக்ய பாத்மாகாரேந்திரம்!
ஸம்பூர்ய ப்ராணி சாஸ்யே ப்ரவஹத பஹூதா தேசிகேந்த்ர பிரமேகைஹி.”!!

ஸ்ரீ லட்சுமி நாதன் ஒரு பெரிய கடல்.  நம்மாழ்வார் ஒரு மேகம்.
இந்த கருமேகம் ஆழ்வார் கடலில் இருந்து தண்ணீரை (ஞானம்/அறிவு) எடுத்து மலைகளில் மழையாக (பாசுரங்கள்) பொழிந்தார்.
மலை என்பது ஸ்வாமி நாதமுனிகல் என்று குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நீர்வீழ்ச்சிகளாக நீர் விழுகிறது,
இந்த நீர் வீழ்ச்சி ஸ்வாமி உய்யக்கொண்டார் மற்றும் ஸ்வாமி மணக்கால் நம்பி என்று குறிப்பிடப்படுகிறது,
இந்த நீர் அருவி ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெரிய ஆற்றை அடைந்தது.
அப்போது ஏரியில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஏரி ஸ்வாமி ராமானுஜரால் குறிப்பிடப்படுகிறது.
ஏரியில் இருந்து 74 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

———

ஸ்ரீ பூர்வ ஆச்சார்யர்களின் -ஸ்ரீ மன் நாத  முனிகள்–ஸ்துதிகள்

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்துக்குள் ஸ்ரீ மன் நாதமுனிகள் விஷயமாக சதுஸ் ஸ்லோஹி –

யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

———

ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம் த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர தம் வந்தே யாமுநாஹ் வயம்-

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

————

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

நமோ நமோ யாமுநாயா-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-

———————————————————

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –

அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத

————————————————-

ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணப் புக்கவர்
ஆசார்ய ஸ்துதியிலே பார்ப்பான் என் -என்னில்
கர்னே ஸ்ப்ருஷ்டே கடிம் சாலயதி -போலே அசங்கதம் -என்னில்
ஸ்ரீ பகவத் விஷயத்தைத் தமக்கு ஸ்துதி விஷயம் ஆக்கிக் கொடுத்த உபகார ஸ்ம்ருதியாலும்
ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அடியான ஜ்ஞான வைசத்யார்த்தமாகவும்
அவிக்ன பரி சமாப்த் யர்த்தமாகவும் -பண்ணுகிறார் -ஆகையாலே சங்கதம் –

ஆனால் மானசமாக அமையாதோ -என்னில்
இப் பிரபந்தத்தை அதிகரிப்பார்க்கு உபகாரம் ஆகையாலே வாசிகம் ஆக்கினதும் யுக்தம் –

உபகார ச்ம்ருதியாலே வந்த ஆசார்ய அனுவர்த்தனம் பிரமாண பிரசித்தம் –
ஆசார்ய தேவோ பவ -என்றும்
நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய -என்றும்
ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்றும்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ -என்றும்
ஒரு ரத்னத்தை ஒருவன் கொடுத்தால் அதனுடைய மஹார்க்கத்தை அறியக் கொடுத்தவனை
ஆதரிக்க பிரமாணம் வேண்டுமோ -ஆகையால் இது உபபன்னம் –

ஜ்ஞான வைசத் யார்த்தமாக ஆசார்ய அனுவர்த்தனம் சிஷ்டாசார ப்ராப்தம் –
அபி வந்தா குரு நாதௌ-சிஷ்யதீ பதமி நீர வீன் –இது மீமாம்சகா -என்றும்
யதா கனன் கனித்ரேண-இதி மனு -என்றும்
யஸ்ய பிரசாதாத் வஷ்யாமி நாராயண கதாமிமாம் -இதி வைசம்பாயன -என்றும்
லௌகிகம் வைதிகம் வாபி -இதி மனு -என்றும்

அங்கனே ஆகில்
ஸ்வ ஆசார்யனை விட்டு அவர் குருக்களை பற்றுவான் என் என்னில்
ஆசார்ய ஸ்துதியிலும் ஆசார்ய பிரியம் இறே உத்தேச்யம் –
ஸ்வாஸ்ரயணத்தில் காட்டில் ஸ்ரீ பெரிய முதலியாரை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ப்ரீதி மிக்கு இருக்கையாலே அதைப் பேசுகிறார் –

ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை
ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலெ பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி
இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது
உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும்
அவரை ஆஸ்ரயிக்கிறார்

இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே -என்றதும் .
வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –

இங்கும் ஆதி அந்தம் களிலே ஆசார்ய ஸ்துதி யாய்
நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –

முதலிட்டு மூன்று ஸ்லோகத்தாலே
ஸ்ரீ பெரிய முதலியாரை நமஸ்கரிக்கிறார் –

————————————————————————

ஸ்லோகம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தில் ஒருவனைக் கவி பாடப் புக்கால்
அவன் ஐஸ்வர்யத்தைச் சொல்லிக் கவி பாடுமா போலே
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யமான ஜ்ஞான வைராக்யங்கள் உடைய பிரகர்ஷத்தை சொல்லி நமஸ்கரிக்கிறார் –

மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் –புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -முதல் திருவந்தாதி -43-என்று
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு தனம் பக்த்யாதிகள் என்று சொல்லிற்று இறே –

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–1-

நமோ –
அஹம் அபி ந மம பகவத ஏவ அஹம் அஸ்மீத் ஏவம் அமமதாம் யோஜயத்யதோ நம இதி -என்கிறபடியே
எனக்கு உரியேன் அல்லேன் –
பெரிய முதலியாருக்கு சேஷம் -என்கிறார் –

நமோ விஷ்ணவே -என்கிறாப் போலே –
நமோ நாதாயா -என்கிறார் உபகார ஸ்ம்ருதி யாலே –

ஓம் நமோ விஷ்ணவே (ஷடத் அக்ஷரீ )-என்றும்
நம இத்யேவ வாதி ந -என்றும்
நம ரிஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
தேஷாமபி நமோ நம -என்றும் சொல்லக் கடவது இறே –

ஸ்ரீ ஈஸ்வர முனிகள் -ஸ்ரீ ரங்க நாதன் என்று திருநாமம் சாற்றுகையாலே
நாதன் என்று திரு நாமம் ஆகிறது –
எப்படிப் பட்டவர் -என்னும் அபேஷையில் சொல்லுகிறது –

அசிந்த்ய –
இவருடைய ஜ்ஞானாதிகள் இன்னாருடைய ஜ்ஞானாதிகள் போலே இருக்கும் என்று
நினைக்க ஒண்ணாது -என்னுதல்
இவ்வளவு என்று ஜ்ஞானாதிகராலும் -பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை

அத்புத –
கீழ் இயத்தா ராஹித்யத்தைச் சொல்லுகையாலே-க்ருஹீதாம்சம் அனுசந்தித்தார்க்கு
ஆச்சர்ய அவஹமாய் இருக்கும் -என்கை –
அமுதூரும் என்றக்கால் -இத்யாதியில் க்ருஹீதாம்சம் இனிதாய் இருக்கும் என்றது இறே –

அக்லிஷ்ட –
வ்யாசாதிகளைப் போலே ஸ்வ யதன சாத்திய தபஸ்ஸாலே வந்தது அன்றிக்கே
ததாமி புத்தி யோகம் தம் -என்றும்
மயர்வற மதி நலம் அருளினன் -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே வருத்தம் அற்று இருக்கை-

ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –
அதாவது –
ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்
அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –

ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-என்றும்
வித்ய அந்ய அசில் பனை புணம் -என்றும்
வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –

வைராக்ய –
இவ் விலஷண ஜ்ஞானத்தாலே பகவத் வ்யதிரிக்தங்களில்
நிஸ்ப்ருஹராய் இருக்கை –
வேண்டேன் மனை வாழ்க்கையை -பெரிய திருமொழி -6-1-

ராசயே –
ராசி என்று சமூஹம்-
ஜ்ஞான இராசே –வைராக்ய ராசயே –
ஜ்ஞான வைராக்யங்கள் ஒன்றாய் இருக்க ராசயே -என்பான் என் -என்னில் –
ஸ்ரீ பகவத் ஸ்வரூபாதிகள் ஜ்ஞான விஷயங்கள் ஆகையாலே பல –
பிதரம் மாதரம் -என்று த்யாஜ்ய விஷயங்களும் பலவாகையாலே சொல்லலாம் –

லோகத்தில் விலஷணர் உடைய ஜ்ஞான வைராக்யங்கள் எல்லாம் இவருடைய
ஜ்ஞான வைராக்யங்களிலே அந்தர்ப்பூதம் ஆம்படி இருக்கையாலே சொல்லுகிறது -என்றுமாம் –

யத் கிஞ்சித் சாது குர்வந்தி யஸ் தத் வேத யத்ச வேத ச மயைத துக்த இதி –
யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம்
விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி -என்றும்
லோகத்தில் அனுஷ்டிதமான கர்மங்களும் ஞானங்களும் யாவன் ஒருத்தன் உடைய
கர்ம ஞானங்களிலே அந்தர் கதமாய் இருக்கும் -அவன் தானே கிடீர் ரைக்வன் -என்று பார்த்து சொல்லுமா போலே

முநயே –
ந விவேதாத்மநோ காத்ரம் -என்றும்
பஸ்யந்நபி ந த்ருஷ்ட்வான் -என்கிறபடியே
த்தேய வஸ்துவை சர்வதா சாஷாத் கரிக்கை

ஏது செய்தால் மறக்கேன் மனனே -பெரிய திரு மொழி -9-3-3- என்றும்
என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -திருவாய் மொழி -7-3-6- என்றும்
இவர் கிருஷ்ணனை அனுசந்தித்து இருக்க ராஜாவாலும் சமாதி பங்கம் பண்ணப் போயிற்று இல்லை –

ராம மேவா நுபச்யந்த -என்னுமா போலே –

அகாத பகவத் பக்தி சிந்தவே –
பக்தியாவது ஜ்ஞான விசேஷமாய் இருக்க -பக்தியைப் பிரித்துச் சொல்லிற்று –
அதினுடைய ப்ராசுர்யம் சொல்லுகைக்காகவும் –
ப்ரதான்யம் சொல்லுகை தோற்றுகைக்காகவும் –

பக்தி யாகிறது -சிநேக பூர்வம் அனு த்யானம் பக்தி -என்றும்
ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -என்றும் சொல்லுகிறபடியே-
அனுபவ ஆசை -அனுபவிப்பதில் விருப்பம் –

பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
வாஸூ தேவோ அஸி பூர்ண – என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது

அகாத
அஷோப்ய-கலக்க ஒண்ணாத –
அர்த்தாந்தரம் -பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஒருவரால் நிலை கொள்ள ஒண்ணாது இருக்கை –

சிந்தவே –
காதல் கடலின் மிகப் பெரிது –திருவாய்மொழி -7-3-6-என்றும்
ஆசை என்னும் கடல் -பெரிய திருமொழி -4-9-3- என்றும்
ஈஸ்வரனுக்கும் நிலை கொள்ள ஒண்ணாதே
தாம் அதில் புக்கு அமிழ்ந்தபடியாய் இருக்கை –

அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
முனயே அகாத பகவத் பக்தி சிந்தவே நாதாய நம -என்று அந்வயம் –

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைப் பற்றிய ஞானம் -ஞானமாவது தத்வ த்ரய -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை-அர்த்த பஞ்சக ஞானம் என்றுமாம்
அன்னை அத்தன் புத்ரன் பூமி வாசவார் குழலார் இவர்களைப் பற்றிய வைராக்யங்கள் -இரண்டுமே கும்பலாகக் குவிந்து இவராக ஆயிற்று

(பகவத் பக்தி ரசத்துக்கு -ஆழ்ந்ததோர் கடல் போலே இருப்பாரே -கலக்க முடியாதபடி –
பகவத் பக்திக்கு சமுத்திரம் என்றும்
பகவத் பக்தி யாகிற சமுத்திரத்தை தம்மிடம் கொண்டவர் என்றுமாம் )

————————————————————————–

ஸ்லோகம் -2- அவதாரிகை
முதல் ஸ்லோகத்தாலே பரத்வ விஷயமான ஜ்ஞானாதிகள் உடைய பிரகர்ஷம் சொல்லிற்று
இந்த ஸ்லோகத்தாலே அவதார விஷயமான ஜ்ஞானாதிகள் ஆகையாலே
அதினுடைய ப்ரக்ருஷ்ட தரத்வம் சொல்லுகிறது

அன்றிக்கே
கீழ் சொன்ன ஜ்ஞானாதிகள் தம்மளவில் பர்யவசியாதே
என்னளவும் வர வெள்ளம் கோத்தது –
என்னவுமாம் –

தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்-2-

மது ஜிதங்க்ரி ஸரோஜா -எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைப் பற்றின
தத்தவ ஜ்ஞான–உண்மை உணர்ச்சி என்ன
அனுராக –ஆசை என்ன
மஹிமா அதிசய அந்த ஸீம்நே–இவற்றின் பெரு மேன்மைக்கு எல்லை நிலமாயும்
நாதாயா-எனக்கு நாதராயும் இருக்கிற
தஸ்மை நாத முநயே நமோ–அந்த நாத முனிகளுக்கு நமஸ்காரம்
அத்ர பரத்ர சாபி-இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும்
நித்யம் யதீய சரனௌ-எப்போதும் -எந்த ஸ்ரீமந் நாதமுனிகளுடைய திருவடிகள்

தஸ்மை நமோ –
நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை -என்றும்
நமோ நமஸ்தே ஆஸ்து சஹஸ்ர க்ருத்வ-என்றும் சொல்லுகிறபடியே –
இன்னம் அவர்க்கு அடியேன் -என்கிறார் –

மது ஜீத் –
அநிருத்தராய் வந்து அவதரித்து
முதல் களையான மதுவை நிரசித்தால் போலே
பகவத் ப்ராப்தி பந்தகங்களைப் போக்குமவன் -என்கை –

அங்க்ரி –
அந்த ஸ்வ பாவத்திலே -குணைர் தாஸ்யம் உபாகத -என்று பெரிய முதலியார் தோற்று இருக்கும் படியையும்
அவருடைய அனன்யார்ஹ சேஷத்வமும் சொல்லுகிறது –

ஸரோஜ –
சம்பந்தம் இல்லா விடிலும் விட ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது –
விகாசம் செவ்வி குளிர்ச்சி பரிமளம் முதலான வற்றுக்குத் தாமரையை ஒரு படிக்குப் போலியாகச்
சொல்லலாய் இருக்கை –

தத்தவ ஜ்ஞான –
தத்வ ஜ்ஞானம் ஆவது –
அவதார விஷய ஜ்ஞானமும்
ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத
த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-என்று
தானே அருளிச் செய்தான் இறே –

தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்றும்
அஹத்வா ராவணம் சங்க்யே-என்றும்
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த
பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –
அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -என்றும்
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி

அனு ராக-
அனு ராகம் ஆவது -இவற்றை எல்லாவற்றையும் அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாத ப்ரேமம் –

மஹிமா அதிசய அந்த ஸீம்நே –
ஜ்ஞான அநு ராகங்கள் உடைய மஹத்த்வத்தின் முடிவே எல்லையாய் இருக்குமவர்க்கு
மஹிமா -மஹத்த்வம் –
மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

நாதாயா –
அஸ்மத் நாதாயா –

நாத முநயே –
இத் தர்சனத்துக்கு நாதனே -என்று
மது சூதனை யன்றி மற்று இலேன் -திருவாய்மொழி -2-7-6-என்று இருக்கும்
மஹாத்மாக்களாலே கொண்டாடப் படுவாராய் ஆயிற்று –
தத்வ ஹிதங்களை திரு வுள்ளத்திலே கூடு பூரிக்குமவர் –
தஸ்மை நம -என்று அந்வயம் –

உபகார ஸம்ருதியாலே அவரை ஆதரித்தீர் ஆகில்
ஐஹிக ஆமுஷ்மிகங்களுக்கு வேண்டாவோ -என்று பகவத் அபிப்ராயமாக அருளிச் செய்கிறார் –
அத்ர பரத்ர சாபி –
சம்சாரத்திலும்
பிராப்யமான நித்ய விபூதியிலும் –

நித்யம் –
நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே
அனவரதம் -என்கை –

யதீய சரனௌ –
என்னை இவ் வவஸ்தாபன்னனாக்கிய திருவடிகள் –

சரணம் –
உபாய உபேயங்கள் இரண்டும்

மதீயம் –
பெரிய முதலியார் திருவடிகள் ஆகில் எனக்கு இரண்டுமாய் இருக்கும் -என்கை –
அதாவது -சம்சார தசையிலே பகவானே உபாயம் என்று உபதேசித்து
உபாயாத்யவசாயத்துக்கு அடியான ஸ்வ அனுக்ரஹத்தாலே
பகவத் பிராவணயத்தை விளைத்தும்
பிராப்ய தேசத்தில் சென்றால் நித்ய ஸூரிகள் கோஷ்டியில் பிரவேசிப்பித்தும்
பின்பு நித்ய ஸூரிகளோபாதி உத்தேச்யமாய் இருக்கையாலும் -அப்படிச் சொல்கிறது –

அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ மதீயம் சரணம்
மது ஜிதங்க்ரி சரோஜ தத்தவ ஜ்ஞான அனுராக மஹிம
அதிசய அந்த சீம்னே நாதாய தஸ்மை
நாத முனயே நம -என்று அந்வயம் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —
வானவர் நாடு –
ஆச்சார்யர் திருவடிகளே உத்தேச்யம்
சரணம் -உபாயம் உபேயம் இரண்டுமே என்றபடி -)

பகவத் தத்வ ஞானமும் பகவத் அநு ராகமும் இவர் இடம் சேர்ந்து விசரமித்தன போலும் -ஆகவே இவற்றுக்கு இவரே ஸீமா பூமி –

மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

——————————————————————————-

ஸ்லோகம் -3- அவதாரிகை –

த்ருஷார்த்தனுக்குத் தண்ணீர் குடிக்கப் பர்யாப்தி பிறவாதாப் போலே
பின்னையும் அவர்க்கு அடியேன் -என்கிறார்

ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாத அச்யுத விஷயத்திலே
ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகையாலே
தம்மளவில் பர்யவசியாதே
பகவத் விஷயத்துக்கு அபூமியான சம்சாரம் எங்கும்
வெள்ளம் இடும்படியான இவர் உடைய
ஜ்ஞான பக்திகள் உடைய
பிரக்ருஷ்டதையைச் சொல்லுகிறது –

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-3-

அபரிமித அச்யுத பக்தி –அளவில்லாத பகவத் பக்தி என்ன
அபரிமித தத்தவ ஜ்ஞாநம்–அளவில்லாத தத்வ ஞானம் என்ன
அம்ருதாப்தி பரிவாஹ ஸூபைர்–இவை யாகிற அமுதக் கடலின் பரிவாஹம் போன்று பிரசன்ன சீதளங்களான
வசோபி-ஸ்ரீ ஸூக்தி களாலே
லோகே -இவ் வுலகத்தில்
அவதீர்ண பரமார்த்த –அவதாரம் செய்து இருக்கிற பரம புருஷார்த்தமாயும்
சமக்ர பக்தி யோகாய –பரி பூர்ணமாயும் இருக்கிற பக்தி யோகத்தை உடையவராய்
யமிநாம் வராய–யோகிகளின் சிறந்தவரான
நாத முநயே -பூயோ நமோ—நாத முனிகளுக்கு மறுபடியும் நமஸ்காரம்

பூயோ நமோ
புனஸ்ஸ நம
நமோ நமஸ்தே -என்கிறபடியே

அபரிமித –
கிடந்த பாயிலே வெள்ளம் கோத்தால் போலே
இருந்த இடங்களிலே வந்து கிட்டும்படி
எல்லை இறந்து இருக்கை –

அச்யுத –
நியந்த்ருத்வ ஸ்வாமித்வாதி கல்யாண குணங்களாலே குறை வற்று இருக்கை -என்னுதல் –
ஏக ரூபமாய் இருக்கும் -என்னுதல்
என்றும் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இருப்பை நழுவ விடாதவன் -என்னுதல் –
ஆர்ந்த புகழ் அச்சுதன் -திருவாய்மொழி -3-5-11- என்றும்
நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -திருவாய்மொழி -3-6-8-என்கிறபடியே
ஆஸ்ரிதரை தம் தாம் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாதவன் -என்னுதல் –

பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –
பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற
அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான
ஸூபமான வசஸ் ஸூக்களாலே-
உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய்
அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –

பரிவாஹம் ஆவது -அவ்வவ ரஷண அர்த்தமாக
அதிக ஜல நிர்க்க மனஸ் ரோதஸ்ஸூ –
வசஸ் ஸூக்களுக்கு ஸூபத்வம் ஆவது –
அவிஸ் தர்ம சந்திக்தம் -இத்யாதிகளை உடைத்தாய் இருக்கை

லோகே –
பகவத் பக்திக்கு மேட்டு மடையான சம்சாரத்திலே
சைஷா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்ட்டிதா -என்று
பரம பதத்தில் பரிமாறக் கடவ பக்தியை
நான் முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய்மொழி -7-5-1-என்கிறபடியே
சம்சாரத்தில் நடையாடும்படி பண்ணினபடி –

அவதீர்ண –
ஈஸ்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –

பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

பக்தி யோகாய –
பக்தியை உடையரான –
உக்தமான பக்தி தத்வ ஜ்ஞானங்கள் இரண்டையும்
பக்தி சப்தத்தாலே சொல்லிற்று

நாத முநயே யமிநாம் வராய –
முடியானே -திருவாய்மொழி -3-8- யில் சொல்லுகிற படியே
அவனை அல்லது அறியாத கரணங்களை உடையராய் இருப்பார்க்குத் தலைவர் ஆனவருக்கு
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-என்று
இருக்கும் அவர்களுக்கு வரணீயராய் இருக்குமவர் -என்றுமாம்-

அபரிமித அச்யுத பக்தி தத்வ ஜ்ஞானம்
அம்ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி யோகாய
யமிநாம் வராய நாத முனயே பூயோ நம -என்று அந்வயம்-

ஸ்ரீ ஸூக்திகளை பக்தி பரிவாஹம் என்றது –சொல்லாவிடில் சரீரம் தரிக்க முடியாது -பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த சொற்கள்
அம்ருத பரிவாஹம் -பிரசன்னமாயும் மதுரமாயும் சீதளமாயும்
ஸ்ரீ நியாய தத்வம் போன்ற இப்பொழுது லுப்தமான கிரந்தங்களும்-நித்ய காலக்ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் -இவையே பின்பு ஏடு படுத்தப் பட்டு நம்மளவும் வந்தனவே
யோகம் -குருகைக் காவல் அப்பன் அளவு மட்டுமே –
பக்தி -நெஞ்சு கனிந்து ப்ரீதி ரூபமான த்யானம் -பரமார்த்த சமக்ர -இரண்டு விசேஷங்கள் -ஸ்வயம் பிரயோஜனம் -என்றும் அவனை பிராபிக்க பர்யாபதமான உபகரணம் என்றது ஆயிற்று –
அவதீர்ண –
ஈச்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –
பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

(வசோபி – ஸ்ரீ -ந்யாய தத்வம் -கிரந்தம் ஸ்ரீ தேசிகன் போன்றார் காட்டி அருளி உள்ளார்கள்
நித்ய கால ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் உண்டே
பக்தி யோகம் -ஸ்ரீ -குருகை காவல் அப்பனுக்கு பிரசாதித்து அருளிய யோக சாஸ்திரமும் –
ஸ்ரீ -மணக்கால் நம்பி போல்வாருக்கு சாதித்து அருளிய பிரபத்தி சாஸ்திரமும் –
பரமார்த்த -சமக்ர -இரண்டு விசேஷணங்கள்-பரம புருஷார்த்தம் என்றும் -பரி பூர்ணம் -என்றும் –
ஸ்வயம் பிரயோஜனம் என்றதாயிற்று -)

———————————————————————————

ஸ்தோத்ரம் -65-அவதாரிகை –

ராமோ த்விர் நாபி பாஷதே-என்கிற சங்கல்பத்தை விட்டீரே யாகிலும்
ஸ்ரீ பெரிய முதலியாரோடு வித்யையாலும்
ஜன்மத்தாலும் உண்டான சம்பந்தத்தையே பார்த்து அருளி –
என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே
விஷயீ கரிக்க வேணும் -என்ன

அதுக்குக் கண்ணழிவு இல்லாமையாலே
அப்படிச் செய்கிறோம் -என்று ஈஸ்வரன் அனுமதி பண்ண

தாம் அனுமதி பெற்றாராய்
ஸ்தோத்ரம் தலைக் கட்டுகிறது –

அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

அக்ருத்ரிம –
க்ரியயா நிர்வ்ருத்த க்ருத்ரிம தத் ரஹித அக்ருத்ரிம
ஸ்வாபாவிக -இத்யர்த்த –
ஒரு செய்கையால் உண்டாக்கப் பட்டது க்ருத்ரிமம் -செயற்கை
அப்படி அற்றது அக்ருத்ரிமம் -இயற்கையானது –
குலம் தானே யோகி குலம் ஆகையாலே
நை சர்க்கிகம் -என்கை –
மெய்யான ப்ரேமம் -என்னவுமாம் –

தவச் –
ப்ராப்த சேஷியான உன்னுடைய

சரணார விந்த –
ஆஸ்ரிதருக்கு இழியும் துறையை போக்யமான
திருவடிகளை –

ப்ரேம ப்ரகர்ஷாவதிம்-
ப்ரேமாதிஸய ஸீமா பூமி யானவர்
நமக்கு இதர விஷயங்களில் ப்ரேமம் எல்லாம்
இவர்க்கு வகுத்த விஷயத்திலே இறே இருப்பது –

மாத்மவந்தம் –
பகவத் சேஷத்வம் ஸ்வரூமாகவே
ஆத்மா யாதாம்ய ஜ்ஞானம் உடையவர் -என்கை –
தநவந்தம் -என்னுமா போலே –

பிதாமஹம் நாத முநிம் –
குடல் துடக்கை உடையராய்
பகவத் ஜ்ஞான நிதியாய்
உள்ளவரை –

விலோக்ய –
கடாஷித்து

ப்ரஸீத –
அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் –

மத் வ்ருத்தம சிந்தயித்வா –
அஸ்த் கர்மத்தை விஸ்மரிக்கக் கடவராக வேணும் -என்கை –

மத் வ்ருத்தம் -என்று
சத் கர்மத்தை நினைக்கிறது –
வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –

ஸ்வ கதமான வற்றை அநாதரித்து
பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து
ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –

(பிதாமஹத்வம் வித்யையாலும் ஜென்மத்தாலும் –ஸ்ரீ ஈஸ்வர பட்டாழ்வார் இவர் திருத் தந்தை – )

—————————————————————————–

ப்ரஹர்ஷயிஷ்யாமி என்கிற இத்தால் பரார்த்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்ற ஸம்ப்ரதாய தாத்பர்யத்தை அறுதி யிட்டார்

த்வயத்தில் உத்தர வாக்கியத்தில் நமஸ் ஸப்தம் கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களையாவது தனக்கு என்னப் பண்ணுகை
ஸ்வயம் துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளும்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -என்று ஆழ்வாரும்
மற்றை நம் காமன்கள் மாற்று -என்று நாச்சியாரும்
ஐம்புலன் அகத்தடக்கி -என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்று ஸ்ரீ மத் லோகாச்சார்யாரும்
அஹம் அந்நாத -என்ற போக்த்ருத்வத்துக்கு முன்னே அஹம் அன்னம் என்று

தன்னுடைய போக்யத்வத்தை அன்றோ முக்தன் சொல்லுவதாக ஸ்ருதியும் ஓதிற்று
போக்த்ருத்வமும் போக்யத்வாய விறே
புங்க்தே ஸ்வ போகம் அகிலம் பதி போக சேஷம் -என்னா நின்றது இறே –

—————–

இப்படிப்பட்ட புருஷார்த்தத்துக்கு உபாயமாக அவன் தன்னையே பற்றுகிறார் ஆளவந்தார்-

ந தர்ம நிஷ் டோஸ்மி -என்று கர்ம ஞானாதிகளைக் கை விட்டது அஞ்ஞான அசக்திகளால் அன்று
பல விலம்பம் என்றும் அல்ல
அவதார ரஹஸ்ய ஞான ஸஹ க்ருத பக்தி ரூப உபாயாந்தரம் தேஹ அவசானத்திலே பலிக்கும் என்று
ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி -என்று கீதாச்சார்யன் அருளிச் செய்தான் அன்றோ
அவ்வழியாலும் கை வையாதே எம்பெருமானையே தஞ்சமாகப் பற்றியது உபாயாந்தர சாமான்யம் அப்ராப்தம் என்று அன்றோ —

ஸ்வரூப விருத்தம் என்று இறே கை விட்டது
ப்ரபாகாந்தர்ப் பரித்யாகத்துக்கும் அஞ்ஞான சக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது -என்று அன்றோ ஸ்ரீ வசன பூஷண நிஷ் கர்ஷம்
ஆகையால் அன்றோ விதி ரஹஸ்யத்தில் பரித்யஜ்ய என்று உபாயாந்தர பரித்யாகத்தை விதித்தான்
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்னுமா போலே விட்டே பற்ற வேண்டும் -என்று இறே சம்பிரதாய நிஷ் கர்ஷம் –

——————-

இதில் ஆதி அந்தங்களில் பிதா மஹாரான ஸ்ரீ மன் நாதமுனிகளை நிர்தேசித்து உள்ளார்

ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் கோபால ரத்னத்தைத் தனக்குத் தந்த மஹா உபகாரகரான ஆச்சார்யன்

என்று முதற் கண் மூன்று ஸ்லோகங்களாலே ஸ்துதித்தார்

தன்னுடைய சரணாகதி தர்மத்தையும் அநாதரித்து அவர் சம்பந்தமான கண்ணழிவு அற்ற உபாயத்தையே பார்த்து
அடியேனைக் கடாக்ஷிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து தலைக் கட்டுகிறார்

தனமாய தானே கை கூடும் -என்று ஸ்ரீ வைஷ்ணவ தனமான ஞான பக்தி வைராக்யங்களோடே
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்தோடே வாசியற எல்லாமே ஆச்சார்ய அதீநம் என்றபடி

ஆச்சார்ய வைபவத்தில் உபக்ரமித்து ஆச்சார்ய வைபவத்தில் உப ஸம்ஹாரம் செய்யும் உத்க்ருஷ்ட ஸ்தோத்ர ரத்னம் –

————————————————————

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்-102-

வரத
ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் –
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்

ச து –அந்த எம்பெருமானாரோ
யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்
ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –

ச ச –அந்த ஆளவந்தார் தாமும்
நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே

ச ச -அந்த நாதமுனிகளும்
பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்
குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு
இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ

ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும்
தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்
ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ –
பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ

இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத்
தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ

நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம்
என்னும் இடத்தை மூதலிக்கிறார்

சித்திர் பவதி வாநேதி சம்சய அச்யுதபி சேவிநாம்
ந சம்சய யோஸீத் தத் பக்த பரிசர்யாரதாத்மநாம் –அந்தப்புர பரிகரத்தை நோக்காது இருக்கப் போகாதே
யஸ்யா வீஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே அகிலம்
ச்ருத்வா வரம் தத் அநு பந்த மதாவலிப்தே நித்யம் ப்ரஸீத பகவான் மயி ரெங்கநாத –தேசிகன்

இந்த ஸ்லோகம் வசந்த திலக வ்ருத்தம் –

————

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹி
ஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே

நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் பக்தி அவக்ரஹே
வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்––1-5-

நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் -ஸ்ரீ நாதமுனிகள் என்ற பிரசித்தமான மேகத்தை ஸ்துதிக்கிறேன்
பக்தி அவக்ரஹே-பக்தியாகிற தீர்த்தம் அருமைப்பட்டு இருந்த துர் பிஷ காலத்தில்
வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –பகவத் வியதிரிக்த விஷயாந்தரங்களில் விரக்தியில் என்ன –பகவத் ஞான பக்திகள் என்ன ஆகிய இவற்றை எங்கும் வர்ஷிக்க வல்ல

—————

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

நாதேந முனிநா தேந பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதாம் –ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–5-

வேதங்களில் பொதிந்துள்ள உண்மைகள் அனைத்தும் அவரிட்மன் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக நிற்கும் நிலை பெற்றது
அப்படிப்பட்ட நாதமுனிகள் மூலம் நான் உயர்ந்த நல்லவரை அடைவேன் ஆவேன்

நாதமுனியை எனது நாதராக (எஜமானர்) நான் வைத்திருக்கிறேன்,
யாருடைய கைகளில் வேதங்களின் அடிப்படையான கருவானது புரிதலின் தெளிவைப் பெற்றதோ –
இதை ஹஸ்தாஅமலகா என்று அழைக்கலாம்,
இந்த நாதத்தைக் கொண்டு ஒருவர் கூறுவது போல், நான் ” அநாத ” (ஸ்வாமி இல்லாமல் )  இருக்க முடியாது.

தேவாதி நாத கமலா ப்ருதனேசா பூர்வாம்
திபிதந்தரம் வகுளா பூஷணா நாதா முக்யை
ராமானுஜ ப்ரப்ருதிபி பரி பூஷிதாக்ராம்
கோப்த்ரீம் ஜகந்தி குரு பங்க்தி அஹம் ப்ரபத்யே -ஸ்ரீ தேவ நாயக பஞ்சாசத்-2-

குரு பரம்பரை -தேவாதி நாதன் தொடங்கி -கமலா -ப்ருதனேசர் -ஸ்ரீ விஷ்வக்சேனர் -வகுளா பூஷணர்-
நாதா முக்யை-ஸ்ரீ நாத முனிகள் தொடக்கமாக -பெரிய நம்பி -ஸ்ரீ ராமானுஜர்-அஸ்மத் ஆச்சார்யர் வரை – –குரு பங்க்தி-

பரதாய பரம் நமோஸ்து தஸ்மை
ப்ரதமோதாஹரணாய பக்தி பாஜாம்
யத் உபஞ்ஞம் அசேஷ த: ப்ருதிவ்யாம்
ப்ரதிதோ ராகவ பாதுகா ப்ரபாவ:–ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-1-ப்ரஸ்தாவ பத்ததி –விஷயம் அறிமுகம் -2-

பரதாய பரம் நமோ அஸ்து -அந்த பரதாழ்வான் பொருட்டு நமஸ்காரங்கள் –
ஜடா பரதர் துஷ்யந்த மகனும் பரதன் -நாட்டிய சாஸ்திரம் அருளிய பரதன் -போன்ற பலர் உண்டே
தஸ்மை பிரதமோதாஹரணாய பக்தி பாஜாம் -பக்தர்களுக்கு முதல் உதாரணம் -மற்றவர்களை வியாவர்த்தித்து –
ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ -கோடி ராமரும் அண்ணல் உனக்கு ஒப்போ கௌசல்யை –
யத் உபஞ்ஞம் அசேஷத ப்ருதிவ்யாம் பிரதிதோ ராகவ பாதுகா பிரபாவ-பாதுகையின் பெருமையை உலகோர் அறியும்படி

ஸ்ரீ ராமனுடைய ஸ்ரீ பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தி உள்ளதை உலகுக்கு எடுத்துக் காட்டிய
பரம பாகவதனாகிய பரதனை சேவிக்கின்றேன்

பரதன் -என்றது ஸ்ரீ நாத முனிகளையும் குறிக்கும் -பாவ ராக தாள கொண்டு அருளிச் செயலை அளித்தார் அன்றோ –
தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல் ஸ்ரீ நாத முனி-
பாதுகையான நம்மாழ்வார் பெருமை உலோகர் இவரால் தானே பரவப் பெற்றது
ஸ்ரீ நம்மாழ்வாரையும் திருவாய் மொழியும் தானே உலகை உஜ்ஜீவிக்கும் பரம சக்திகள்

ஸ்ரீபரதாழ்வானால் தான் ஸ்ரீராமானுடைய பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தியிருக்கிற தென்பது எல்லா வுலகத்திற்கும் தெரிந்தது.
ஆகையால் ஸ்ரீபரதாழ்வாரைத் தான் ஸேவிக்கிறேன்.

ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் முதல் அங்கத்தில் இருபத்தைந்தாவது ஸ்லோகத்தில்
“பரத” என்பது நாதமுனிகளைச் சொல்லுகிறது.
அதனால், ஸ்ரீநம்மாழ்வாருடைய பெருமை ஸ்ரீநாதமுனிகளால் தான் உலகத்திற்கு தெரிந்தது
“பரத” என்பதால் தெரியப்படுத்தபட்டதில் பாவ, ராக, தாள் என்கிற மூன்று ஸங்கதிகளிலேயும்
மஹா பண்டிதராகிய நாதமுனிகளை ஸேவிக்கிறேன்

——————-

ஸ்ரீ பூர்வ ஆச்சார்யர்களின் -ஸ்ரீ யாமுன முனிகள்–ஸ்துதிகள் –

ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்—

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.

“யத்பதாம்போருஹ ” எனும் சொல்
ய், அ, த், ப், அ, த், அ, ம், ப், ஒ, ர், உ, ஹ், அ எனப் பதிநான்கு பகுதிகளாலானது.
அதாவது ஏழு ஜோடித் திருவடிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இந்த ஏழு இணைத் திருவடிகள் ஸ்வாமியின் ஐந்து ஆசார்யர்கள்,
ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ ஆளவந்தாரையே குறிப்பனவாகக் கொள்ள வேணும்.

இதை வேறு விதமும் காணலாம்.
இந்த “யத்பதாம்போருஹ ” சப்தத்தை ஷஷ்டி தத்புருஷ ஸமாஸமாக எடுத்து,
யஸ்ய பதாம்போருஹே எனக் கொண்டு,
யாவருடைய தாமரைத் திருவடிகளில் என விளக்கம் பெற்று,
மேலும் அதை இப்படி மூவகைகளில் நிர்வஹிக்கலாம்:

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடித் தாமரைகள் அவரது திருமேனியிலே வணங்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவரால் தொழப்பட்ட எம்பெருமான், ஆழ்வார், நாதமுனிகளின் திருவடிகள்,

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் –
அவர் தம் சிஷ்யர்கள், சிஷ்யர்களைத் திருவடிகளாகக் கூறுதல் மரபாதலால். ஆகவே அவர்தம் ஐந்து சிஷ்யர்களைக் குறிக்கும்.

ஸ்ரீ ஸ்வாமியின் இத் தனியன் “பதாம்போருஹ” என “ப” சப்தத்தோடு தொடங்குகிறது.
ஸ்ரீ பெரிய நம்பிகள் தாம் ஸ்வாமிக்குப் பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து மந்த்ரோபதேசமும் அர்த்த உபதேசமும் செய்து வைத்தார்.
ஆகவே அவர்க்கு ஸ்வாமியின் ஆசார்ய பரம்பரையில் விசேஷ இடமுண்டு.
அவர் திருநாமம் ஸ்ரீ பராங்குச தாசர் என்பது “ப”வில் தொடங்குவது.
ஸ்ரீ பராங்குசர் என்பது முதலிலேயே நம்மாழ்வார் திருநாமம்.
இவ்வாறாக, ஸ்ரீ இராமாநுசர் தம் ஆசார்யன் தனியனில் குருபரம்பரை முழுமையையும் துதித்தாராயிற்று.

ஸ்ரீ ஆழ்வானின் சிஷ்யரும் சுவாமியின் சமகாலத்தவருமான ஸ்ரீ அமுதனார் தம் க்ரந்தத்தில்
ஸ்ரீ இராமானுசருக்கு அவர் முன்னோருடனான தொடர்பையே விசேஷித்துப் பாடினார்.

இதுவே ஒரு பேரறிவாளனுக்கான அடையாளம்.
ஒரு சாதாரண வித்வான் சொல்லுக்கு, தானே உள்ள பொருளோடு நிற்பார்.
ஸ்ரீ சுவாமியின் ஈடு இணையற்ற மேதா விலாசம் நமக்கு அவரது ஒரு சொல்லில் பல பொருள்களைக் காட்டுகிறது.
ஸ்ரீ எம்பெருமானாரின் க்ரந்தங்கள், சொற்கள் பழையதாகி வருகின்றன, ஆனால் பொருளோ தினமும் இளமையாய் உள்ளது.

யோ நித்ய அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாஹாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே

ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம்
அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
அகில புவன–ஆசீர் வசனம் ஆசீர்வாத ரூப -வஸ்து நிர்த்தேச-இரண்டும்
அசேஷ -விஷ்ணவே நம -நமஸ்கார ரூப
வஸ்து நிர்த்தேச மங்களா சாசனம் -இரண்டும்
ஆக மூன்று வகை

இரண்டாவது மங்கள ச்லோஹம்-
பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

ஸ்ரீ வேதாந்த ஸங்க்ரஹ மங்கள ஸ்லோகம்
அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே –சேஷ ஸாயினே-
நிர்மல ஆனந்த கல்யாணைதயே -விஷ்ணவே நம –

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி —

ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தாருக்கு அருளிச் செய்த தனியன்

யத்பதாம் போருஹ த்யாநா வித்வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் –

ஸ்ரீ ஆளவந்தார் உடைய இரண்டு திருவடிகளை மட்டும் உத்தேசிக்கப் படுகின்றன அல்ல
யதோதாம் போருஹ –ஆறு எழுத்துக்களுக்கு வர்ணக்ரமம் சொன்னால் 14 எழுத்துக்கள் தேறும்
யகார -அகார -தகார -பகார -அகார – ககார -ஆகார -மகார-மாகார ஓகார -ரெப -உகார -ஹகார -அகார
ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ ஆளவந்தார் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை
யஸ்ய பதாம் போரு ஹி -சம்பந்த சாமானே ஷஷ்டி –
மாதா பிதா -வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
பத -ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை சொல்லி
அம்போருஹ-தாமரைக்கு வாசகமான -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே போலே
ஸ்ரீ பராங்குச தாசர் -பெரிய நம்பி–என்று ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் காட்டி அருளுகிறார்

ஸ்ரீ கீதா பாஷ்யம் -தடங்கல் இல்லாமல் நிறைவு பெறவும் -உலகில் பரவவும் தமது ஆச்சார்யரை நமஸ்கரிக்கிறார்
ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் அருளிச் செய்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்துதிக்கும் மங்கள ஸ்லோகம்

யத் -என்னும் பதம்
எந்த -என்று பிரசித்தமான -ஆச்சார்ய குண பூர்த்தி உள்ள மேன்மையைக் காட்டும்
பத -அம் போருஹ-
தாமரை மலர் போன்ற என்ற உதாஹரணம் -அந்த திருவடிகள் அனுபவிக்க வல்லவை
அந்த த்யானம் மகிழ்வோடு இணைந்து உள்ளதால் பக்தி என்றும் கூறப்படும்
த்யான
துரோணாச்சார்யாருக்கு ஏகலைவன் போலே தான் ஸ்ரீ ஆளவந்தாருக்கு என்றத்தைக் காட்டும்

த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ
அழிக்கப்பட்ட அனைத்து பாபங்களையும் கொண்ட -என்பதால்
ஒரு முறை கடாக்ஷ லேசத்தாலே பலவிதமான பாபங்களும் அழிக்கப் பட்டன –
அதன் பின்னர் இடைவிடாமல் அந்த ஸ்ரீ ஆளவந்தாருடைய திருவடித் தாமரைகளையே எண்ணி இருப்பதால்
அவை வாசனையோடு முழுமையாக நீக்கப் பட்டன -என்றவாறு

வஸ்துதாம்
வஸ்துவாக இருத்தல் –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம் ததோ விது –தைத்ரியம் -2-6-1-ப்ரஹ்மத்தை அறிந்து கொண்டவன்
என்றால் அவனை இருக்கிறவனாக அறிகிறார்கள்
அஹம் வஸ்துதாம் உபயாத
நான் அடைந்துள்ளேனா -என்ற வியப்பால் அருளிச் செய்கிறார்
இப்படியாக தனது அநிஷ்டங்களும் அப்ராப்தங்களும் நீங்கப்பெற்று இஷ்டப் பிராப்தி அருளியதற்கு
மனம் வாக்கு காயம் -முக்கரணங்களாலும் ஏவப்பட்டு நமஸ்காரம் செய்கிறார்
இதைக் கேட்பவர்களுக்கும் அநேக மங்களங்களும் உண்டாகும்
இத்தால் ஆச்சார்ய வந்தனம் குரு பரம்பரயா த்யானம் பூர்வகமாக பக்தி செய்ய வேண்டும்
என்று உணர்த்தப்பட்டது

யதா பதாம் —அம்போருஹம் தாமரை திருவடிகளை தியானித்து
அசேஷ கல்மஷம்
வஸ்துத்வத்வம் அடைந்தேன் -இரண்டும்
த்யாநேன–கண்டு -இடைவிடாமல் நினைப்பதே-விமல சரீர சேவையால்
ஸ்ரீ ஆளவந்தாரை குறித்து மட்டும்

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–.
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் தரிஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷

விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்த ஜீவனுக்கு விஷயங்கள் நீங்குகின்றன
ஆனால் விஷயங்களில் ஆசை நீங்குவது இல்லை –
ஞான யோக நிஷ்டனுக்கு மேலான ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டவுடன் இவ்வாசையும் நீங்குகிறது
ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் -ஏக ஆஸ்ரய தோஷம் –

ஆத்மாவை கண்டாலே போகும்
முயன்றாலும் -இந்திரியங்கள் மனத்தை இழுத்து செல்லும்
அன்யோன்ய ஆஸ்ரயம் வரும்
இத்தை போக்க அடுத்த ஸ்லோகம்

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஷ்சத.–
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந—৷৷2.60৷৷

இந்திரியங்கள் அடக்கி ஆத்ம தர்சனம் -என்கிறான் –
பிரத்யனம் செய்தாலும் –இந்திரியங்கள் பலமானவை -மனசை பலாத்காரமாக இழுக்கும் –

இந்திரியங்களை விலக்கி என்னிடம் செலுத்து -த்யானம் பண்ண பண்ண சத்வ குணம் வளர்ந்து
ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை வைத்து
அதே போலே திருவடித் தாமரை த்யானம்
வஸ்துத்வம் அடைந்தது -அடுத்த நிலை
இருப்பு -தன்மையுடன் -ஸத்வித்யா பிரகரணம் -சங்கல்பித்து ஸ்ருஷ்ட்டி செய்தது -சங்காத்வம்-உள்ளே புகுந்து
தேறி இருத்தல் -சஸாபி ராம –பரிஷத் கத சனையி அனுபவிக்க ஆசை உடன் –
பூ சத்தாயாம் சத்தை பெற ஸ்ரீ ராமாயணம் கேட்க இறங்கி-

கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமியின் ஆளவந்தார் பற்றிய தனியன்”

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்–

“யத்பதாம்போருஹ ” எனும் சொல்
ய், அ, த், ப், அ, த், அ, ம், ப், ஒ, ர், உ, ஹ், அ எனப் பதிநான்கு பகுதிகளாலானது.
அதாவது ஏழு ஜோடித் திருவடிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இந்த ஏழு இணைத் திருவடிகள் ஸ்வாமியின் ஐந்து ஆசார்யர்கள், ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ ஆளவந்தாரையே
குறிப்பனவாகக் கொள்ள வேணும்.

இதை வேறு விதமும் காணலாம்.
இந்த “யத்பதாம்போருஹ ” சப்தத்தை ஷஷ்டி தத்புருஷ ஸமாஸமாக எடுத்து,
யஸ்ய பதாம்போருஹே எனக் கொண்டு, யாவருடைய தாமரைத் திருவடிகளில் என விளக்கம் பெற்று,
மேலும் அதை இப்படி மூவகைகளில் நிர்வஹிக்கலாம்:

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடித் தாமரைகள் அவரது திருமேனியிலே வணங்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவரால் தொழப்பட்ட ஸ்ரீ எம்பெருமான், ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ நாதமுனிகளின் திருவடிகள்,
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவர்தம் சிஷ்யர்கள், சிஷ்யர்களைத் திருவடிகளாகக் கூறுதல் மரபாதலால்.
ஆகவே அவர்தம் ஐந்து சிஷ்யர்களைக் குறிக்கும்.

ஸ்ரீ ஸ்வாமியின் இத்தனியன் “பதாம்போருஹ” என “ப” சப்தத்தோடு தொடங்குகிறது.
ஸ்ரீ பெரிய நம்பிகள் தாம் ஸ்வாமிக்குப் பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து மந்த்ரோபதேசமும் அர்த்த உபதேசமும் செய்து வைத்தார்.
ஆகவே அவர்க்கு ஸ்ரீ ஸ்வாமியின் ஆசார்ய பரம்பரையில் விசேஷ இடமுண்டு.
அவர் திருநாமம் ஸ்ரீ பராங்குச தாசர் என்பது “ப”வில் தொடங்குவது.
ஸ்ரீ பராங்குசர் என்பது முதலிலேயே ஸ்ரீ நம்மாழ்வார் திருநாமம்.

இவ்வாறாக, ஸ்ரீ இராமாநுசர் தம் ஆசார்யன் தனியனில் குருபரம்பரை முழுமையையும் துதித்தாராயிற்று.
ஸ்ரீ ஆழ்வானின் சிஷ்யரும் ஸ்ரீ சுவாமியின் சமகாலத்தவருமான ஸ்ரீ அமுதனார் தம் க்ரந்தத்தில் ஸ்ரீ இராமானுசருக்கு
அவர் முன்னோருடனான தொடர்பையே விசேஷித்துப் பாடினார்.

இதுவே ஒரு பேரறிவாளனுக்கான அடையாளம். ஒரு சாதாரண வித்வான் சொல்லுக்கு, தானே உள்ள பொருளோடு நிற்பார்.
ஸ்ரீ சுவாமியின் ஈடு இணையற்ற மேதாவிலாசம் நமக்கு அவரது ஒரு சொல்லில் பல பொருள்களைக் காட்டுகிறது.
ஸ்ரீ எம்பெருமானாரின் க்ரந்தங்கள், சொற்கள் பழையதாகி வருகின்றன, ஆனால் பொருளோ தினமும் இளமையாய் உள்ளது.

பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி அடிமை கொண்டாய்
தமியேனுக்கு அருளாய் முந்திய பாசுரம்
அறிவித்து சத்தாக ஆக்கி
வஸ்துவை உருவாக்கி உஜ்ஜீவனமும் கொடுத்து
அசந்நேவ பவதி–
நான்கு நிலைகள் பார்த்தோம்
1-இருத்தல் 2-நிலை பெருத்து இருத்தல் -3-பகவத் ஞானம் -4-கைங்கர்யம்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -4 –

மருள் சுரந்த முன்னை வினை -சூழலாக அஞ்ஞானம் கர்மா இரண்டும் உண்டே –
வேர் அறுத்து அசேஷ -சவாசனமாக ருசி யுடன் போக்கி
பன்ன பணித்த –ஆராய -பரன் பாதம் சென்னியில் தரிக்க வைத்தான்
பொருள் ஆக்குதல் இல்லை -ஒரு பொருள் -அத்விதீயமாய் -ஒருத்தி மகனாய் போலே
சேஷ பூதனாக அறிந்து அடிமை
ஆச்சார்ய நிஷ்டை ஸ்ரீ வடுக நம்பி நிலை
ஸ்ரீ அமுதனார் -அதுக்கும் மேலே -அன்பு செய்யும் சீரிய பேறுடையார் அடிக்கீழ் –
இந்த தனித்தன்மை ஒரு பொருள் பாகவத சேஷத்வம்

ஸ்ரீ ஸ்வாமி தனித்தன்மையுடன் அழகாக பிரமாணங்களைத் தொகுத்து அருளிச் செய்தார்
ஆச்சார்யர் கடாக்ஷத்தாலும் வாக் அம்ருத வர்ஷீயான இவர் பிதா மஹரின் ஆசீர்வாதத்தாலும்
இவர் பிதாவின் ஆசீர்வாதத்தாலும் ஸ்ரீ ஸ்வாமி நம்மை எல்லாம்
அமுத மொழிகளால் நீண்ட ஆண்டுகள் நனைக்கட்டும்

———–

பரம் ப்ரஹ்மை வாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோ பாத்யா லீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ஸ்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

——————-

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹித
ஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே

விதாய வைதிகம் மார்க்கம் அகௌதஸ் க்ருத கண்டகம்
நே தாரம் பகவத் பக்தேர் யாமுநம் மநவாமஹை –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்-4-

விதாய வைதிகம் மார்க்கம் -வைதிக நெறியை செய்து அருளி

அகௌதஸ் க்ருத கண்டகம் விதாய -தூர்வாதிகள் ஆகிற முள் அற்றதாக செய்து அருளி
சித்தி த்ரயம் -ஆகம பிராமண்யம் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் இத்யாதி திவ்ய பிரபந்தங்களைச் செய்து அருளி -என்றவாறு
குத குத அது என் இது என் என்று துர் ஆக்ஷேபங்கள் செய்து கொண்டு இருக்கும் தூர்வாதிகளே கௌதஸ்குதர்-

நே தாரம் பகவத் பக்தேர் -ஸ்ரீ பகவத் பக்தியை தழைத்து ஒங்கச் செய்து அருளிய
யாமுநம் மநவாமஹை -ஸ்ரீ ஆளவந்தாரை த்யானிக்கக் கடவோம்

வேதமார்க்க பிரதிஷ்டாபன ஆச்சார்யரான ஸ்ரீ யமுனைத் துறைவனை சிந்திக்கக் கடவோம் என்றதாயிற்று

குண அனுபவத்தால் தமக்கு பிறந்த நாநா பாவத்தால் ஸ்வ கீயரையும் கூட்டிக் கொண்டு பஹு வசனம் –

———-

விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–8-

உலகத்தில் மிகவும் உயர்ந்த இடமான பிருந்தாவனத்தில் உள்ள யமுனை நதியிடம் மிகவும் அன்புடன் கிருஷ்ணன் இருந்தான்
அந்த நீரில் இருந்து காளியனை அவ்விடத்து விட்டு விலக்கினான்
இந்த யமுனை நதி போன்றே அடியார்களைக் காப்பாற்றவும் தீய புத்தியை விலக்கவும் உறுதியுடையவர் ஆளவந்தார் ஆவார்
அப்படிப்பட்ட அவரிடம் நான் ஆழ்ந்து உள்ளேன்
இந்த ஸ்லோகத்தில் யாமுனம் யமுனை ஆற்றையும் ஆளவந்தாரையும் குறிக்கும் –

யமுனையின் புனித நீரில் ( ஆளவந்தார் ) நீராடுவோம்,
அவர் சராசரி மோகம் மற்றும் பற்றுதல் ஆகியவற்றுடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்தவர்,
சாதுக்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றவர்,
மற்றும் கிருஷ்ணரால் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள் மிகச் சரியாக இருந்தன .
(இரண்டாவது பொருள்: பிருந்தாவனத்திற்கு அருகில் உள்ள விஷப் பாம்பு அகற்றப்பட்ட யமுனை நதியின்
புனித நீரில் ஸ்நானம் செய்வோம், அதில் கிருஷ்ணர் ஆர்வம் காட்டினார்.)

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்