Archive for the ‘திருவாசிரியம்’ Category

ஸ்ரீ திருவாசிரியம் –பாசுர அவதாரிகை —

June 15, 2023

ஸ்ரீமந்நாராயணனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள் என்று கொண்டாடப்படுகிறார்கள்.
அவர்களுள் தலைவரான நம்மாழ்வார்
திருவிருத்தம்,
திருவாசிரியம்,
பெரிய திருவந்தாதி,
திருவாய்மொழி என்று நான்கு அற்புத ப்ரபந்தங்களை அருளியுள்ளார்.

அவற்றுள் திருவிருத்தத்தில், ஸர்வேச்வரனுடைய ஸ்வரூப, ரூப, குண, விபூதிகளை எல்லாம் அவன் காட்டிக் கொடுக்கக் கண்ட ஆழ்வார்,
அவன் பரமபதத்தில் நித்யஸூரிகளுடனும் முக்தர்களுடனும் ஆனந்தமாக இருப்பதை நினைத்து,
இந்த ஸம்ஸாரத்தில் உள்ளவர்கள் அதற்குத் தகுதி பெற்றிருந்தும் அதை இழந்திருப்பதை நினைத்து,
அப்படி இழந்திருப்பவர்களில் தானும் ஒருவர் என்று உணர்ந்து,
இதற்குக் காரணம் இவ்வுலகில் இந்த தேஹத்துடன் இருப்பதே என்று பார்த்து வருந்துகிறார்.,
அதைக் கழித்துக் கொள்ள தன்னிடத்தில் எந்த சக்தியும், தகுதியும் இல்லை என்பதை உணர்ந்து
எம்பெருமானிடத்திலே “இவ்வுலகில் நான் இருக்கும் இருப்பை அறுத்தருள வேண்டும்” என்று ப்ரார்த்தித்தார்.

ஆனால் ஸர்வேச்வரனுக்கு இவருடைய ஆசையை உடனே பூர்த்தி செய்ய முடியாது.
அம்புப் படுக்கையில் கிடந்த ஸ்ரீபீஷ்மரைக் கொண்டு சில நல்ல உபதேசங்களை வெளியிடச் செய்து
நாட்டுக்கு நன்மை செய்ததைப் போலே, ஆழ்வாரைக் கொண்டும் சில ப்ரபந்தங்களை வெளியிட்டு
இந்த உலகில் இருப்பவர்களைத் திருத்த விரும்பினான்.
ஆனால் இவரோ தன்னை அடைவதற்கு மிகவும் துடிப்பதைக் கண்டு
இவருக்கு இவ்வுலகிலேயே நம்முடைய குணங்களை மிகவிரிவாகக் காட்டிக் கொடுப்போம்,
அதைக் கொண்டு இவர் த்ருப்தியுடன் இருப்பார் என்று அதைச் செய்ய,
ஆழ்வாரும் அந்த குணங்களை இதில் அனுபவிக்கிறார்.

ஸ்ரீ திரு விருத்தம் ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் விளக்கும் ருக்வேத சாரம் என்றும்
ஸ்ரீ திருவாசிரியம் ஏழு காண்டங்கள் கொண்ட சார நாராயண அநுவாகம் கொண்ட யஜுர் வேத சாரம் என்றும் –
ஸ்ரீ பெரிய திருவந்தாதி முண்டக உபநிஷத் கொண்ட அதர்வண வேத சாரம் என்றும்
ஸ்ரீ திருவாய்மொழி ஆயிரம் சாகைகள் கொண்ட சாந்தோக்யம் உபநிஷத் கொண்ட சாம வேத சாரமாய் இருக்கும் என்றும் சொல்வர்கள்-

ஸ்ரீ திரு அஷ்டாரத்தில் பிரணவம் நமஸ் சப்தார்த்த விவரணம் ஸ்ரீ திரு விருத்தம் என்றும் –
ஸ்ரீ திரு அஷ்டாரத்தில் நாராயணாய சப்த்தார்த்த விவரணம் திரு வாசிரியம் என்றும் –
ஸ்ரீ சரம ஸ்லோக விவரணம் ஸ்ரீ பெரிய திருவந்தாதி என்றும் –
ஸ்ரீ த்வய விவரணம் ஸ்ரீ திருவாய் மொழி என்றும் சொல்வர்கள்-

வ்ருஷ பேது து விசாகாயாம் குருகா பூரி காரி ஜம்
பாண்டிய தேசே கலேர் ஆதவ் சடாரிம் ஸைனபம் பஜே —-ஸ்ரீ நம்மாழ்வார் தனியன்

சகல த்ராவிடாம்நாய சாரா வ்யாக்யான காரிணம்
ஸ்ராவணே ரோஹிணீ ஜாதம் க்ருஷ்ண சமஞ்ஞம் அஹம் பஜே –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தனியன்

———————————

காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து
ஆசிரியப் பாவதனால் அருமறைநூல் விரித்தானை
தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே–அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளி செய்த தனியன்-

இந்த பூமியில் உள்ள மனிதர்கள் உஜ்ஜீவனம் அடைவதற்காகக் கலியுகத்தில் வந்து அவதரித்து,
ஆசிரியப்பா என்னும் பாட்டு க்ரமத்திலே, சிறந்த வேதமாகிற சாஸ்த்ரத்தை பரப்பியவரும்,
திசையைக் காட்டக் கூடிய ஆசார்யரும், ஒளியுடன் விளங்கும் மகிழம் பூ மாலையை அணிந்தவருமான நம்மாழ்வாரை,
அழுக்கற்ற மனஸ்ஸிலே இருக்கச் செய்து அவரை மறவாதபடி மங்களாசாஸனம் செய்யக் கடவோம்.

————

ஆழ்வார், கீழ்ப்பிரபந்தமாகிய திருவிருத்தத்தின் முதற்பாட்டில் “அழுக்குடம்பும்” என்று
தம்முடைய சரீரத்தின் தண்மையைப் பேசினார்;
இந்த முதற் பாட்டில் எம்பெருமானுடைய திருமேனியின் வைலக்ஷண்யத்திலீடு பட்டுப் பேசுகிறார்.

ஸ்வரூப ரூப குணங்கள் என்று இறே அடைவு –
ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தில் இழிந்து அனுபவிக்க வேணும் என்கிறார் யாயிற்று –
தான் துவக்கு உண்டு இருப்பதும் இதிலே யாகையாலே –

இனி இவ் வஸ்து தான் நேர் கொடு நேரே அனுபவிக்க ஒண்ணாத படி -முகத்திலே அலை எறிகையாலே-
கிண்ணகத்தில் இழிவார் மிதப்பு -ஓடம் -கொண்டு இழிவாரைப் போலே –
இந்த ரூபத்தையும் -உபமான முகத்தால் இழிந்து அனுபவிக்க வேணும் என்று பார்த்தார் –
ஸர்வதா சாம்யம் இல்லாத தொரு வஸ்து யாகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு உபமானமாகச் சொல்லுவது தான் இல்லை –

ஆனாலும் அல்ப ஸாத்ருஸ்யம் உள்ளது ஒன்றைப் பற்றி இழிய வேணும் இறே –
ஒரு மரகத கிரியை யாயிற்று உபமானமாகச் சொல்லுகிறது
அதின் பக்கல் நேர் கொடு நேர் கொள்ளலாவது ஓன்று இல்லாமையால் அது தன்னை சிஷித்திக் கொண்டு இழிகிறார்-

ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தைப் பற்றினவோ பாதி ரூபம் தன்னையும் விட்டு
உபமானத்திலே இழிந்து அது தனக்கு ஒப்பனை தேடி எடுத்துப் பேசுகிறார் –

ஆழ்வார் எம்பெருமானின் ஸ்வரூபத்தை விட்டுத் திருமேனியை அனுபவிக்கிறார்.
அதிலும் அந்த அனுபவம் தன்னை நிலை கொள்ள முடியாதபடிச் செய்ய, ஒரு உதாரணத்தைக் கொண்டு அனுபவிக்கிறார்.
எம்பெருமானை ஒரு மரகத மலையாக அனுபவிக்கப் பார்த்து,
அந்த மரகத மலையும் அவனுக்கு நேருக்கு நேர் ஒப்பாகாதாகையாலே
அந்த மலையை அலங்கரித்து எம்பெருமானுக்கு ஒப்பிட்டுப் பார்த்து அனுபவிக்கிறார்.

செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதிசூடி * அஞ்சுடர் மதியம் பூண்டு *
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய் *
திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம் *
கடலோன் கைமிசைக் கண் வளர்வதுபோல் *
பீதகவாடை முடி பூண் முதலா *
மேதகு பல்கலன் அணிந்து * சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப * மீதிட்டுப்
பச்சை மேனி மிகப் பகைப்ப *
நச்சு வினைக்கவர்தலை அரவினமளி ஏறி *
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து *
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்*
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த *
தாமரை உந்தி தனிப் பெரு நாயக! *
மூவுலகளந்த சேவடியோயே!–1-

சிவந்த பெரிய மேகத்தை இடுப்பிலே கட்டி,
மிகவும் சிவந்த கிரணங்களையுடைய ஸூர்யனைத் தலையிலே வைத்துக்கொண்டு,
அழகிய குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திரனை அணிந்து,
நக்ஷத்ரங்களாகிய பல ஒளி பிழம்புகளைக் கொண்டுள்ள, பவளம் போன்ற சிவந்த இடங்களை உடைய
ஒளிவிடும் பச்சை நிறத்தில் இருக்கும் மரகத மலை ஒன்று (எம்பெருமானுக்கு உதாரணம்).
அந்த மலை, கடலுக்குத் தலைவனான வருணனுடைய அலைகளாகிற கைகளின் மேலே
சயனித்துக் கொண்டிருப்பது போல் உள்ளது.
அடுத்து இந்த உதாரணத்தால் சொல்லப்பட்ட எம்பெருமானை விளக்குகிறார்.
பீதாம்பர (வஸ்த்ரம்), கிரீடம், கண்டி முதலான பல விதமான பொருத்தமான, தகுதியான ஆபரணங்களையும் அணிந்து,
ஒளிவிடும் திருப் பவளங்களும் (உதடுகளும்), திருக் கண்களும் சிவந்திருக்கும்படியாகவும்,
(அந்த சிவந்த நிறத்தை) வெற்றி கொண்டு திருமேனியில் பச்சை நிறம் நன்கு ஒளிவிடும்படியாகவும்,
எதிரிகளை அழிப்பதில் நச்சுத் தன்மை வாய்ந்த செயல்களை யுடையவனாகவும்,
கவிழ்ந்திருந்த தலைகளை உடையவனுமான ஆதிசேஷனாகிற படுக்கையில் ஏறி,
அலை வீசும் திருப்பாற்கடலின் நடுவே ஜகத்தைக் காப்பதற்கான உணர்வுடன் யோக நித்ரையில் சயனித்துள்ளான்.
அந்த எம்பெருமான் சிவன், ப்ரஹ்மா, இந்த்ரன் முதலான தேவர்களுடைய கூட்டமும் கை கூப்பி வணங்கும்படி சயனித்துக் கொண்டுள்ளான்.
எல்லா உலகத்தின் உற்பத்திக்கும் காரணமாயுள்ள திருநாபீ கமலத்தை உடையவன்.
ஒப்பற்ற, எல்லோரையும் விடப் பெரியவனான எம்பெருமானே!
மூன்று உலகங்களையும் அளந்த திருவடிகளை உடையவனே!

———–

த்யேயமாகச் சொல்லுகிற வஸ்துவினுடைய விக்ரஹ வை லக்ஷண்யம் சொன்னார் முதல் பாட்டில் –
அந்த த்யேய வஸ்துவினுடைய பக்கல் பிறக்கும் பரபக்தி தொடங்கி ப்ராப்ய அந்தர் கதமாய் இருக்கையாலே
தத் விஷய பக்தியே அமையும் என்கிறது இரண்டாம் பாட்டில் –

முதல் பாட்டில் –வடிவு அழகும் மேன்மையும் நீர்மையும் சொல்லிற்று –அவை கர்ம ஞானங்களினுடைய ஸ்த்தாநேயாய் நிற்க –
அனந்தரம் பிறக்கும் பரபக்தி பர ஞான பரம பக்தியை இறே உத்தேச்யமாகச் சொல்லிற்று –
அந்த ஞான கர்மங்களினுடைய ஸ்த்தாநத்திலே நிற்கிறவற்றை அனுபாஷிக்கிறார் –உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை-என்கிற இவ்வளவாலே-

இப்படி பரம விலக்ஷணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைச் சென்னியிற் சூட வேணும் என்று
ஆவல் கொண்டிருப்பதே யன்றோ புருஷார்த்தம்;-பரம பக்தர்களுடைய அந்தரங்க வுறுதியைப் பேசி மகிழ்கிறார் இப் பாட்டில்.

இப்படிப்பட்ட அழகையுடைய எம்பெருமான் விஷயத்தில் பக்தியே வேண்டும் என்கிறார்.

உலகுபடைத்துண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவார்
உயிருருகி உக்க, நேரிய காதல்
அன்பிலின்பீன் தேறல் அமுத
வெள்ளத் தானாம் சிறப்புவிட்டு ஒருபொருட்கு
அசைவோர் அசைக, திருவொடு மருவிய
இயற்கை, மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?–2-

எல்லா உலகங்களையும் ஸ்ருஷ்டித்து,
பின்பு ப்ரளயத்தின்போது அவற்றை விழுங்கிய என் ஸ்வாமியாகிய எம்பெருமானுடைய
ஓசை செய்யும் வீரக் கழலை யுடைய திருவடிகளாகிற ஒளிவிடும் அழகிய தாமரைப் பூவை அணிவதற்காக
ஆசையினால் நிறைந்த ஆத்மாவானது உருகி விழுந்தது.
அதனால் உண்டான பக்தியின் உருவில் இருக்கும் அன்பென்ன ,
பக்தியினால் ஏற்படும் ப்ரீதியிலுள்ள இனிமை என்ன,
இவைகளிலுள்ள இனிமையின் உயர்ந்த நிலையான அமுதக் கடலில் மூழ்கியிருக்கும்படியான
மேன்மையை விட்டு தாழ்ந்த ப்ரயோஜனத்திற்காக அல்லல்படுபவர்கள் அலையட்டும்.
செல்வத்துடன் கூடிய தன்மையொடும், அழியாத மிகுந்த வலிமையொடும், மூன்று உலகங்களுடனும் கூட
மேலான புருஷார்த்தமான மோக்ஷத்தைப் பெற்றாலும், தெளிந்த ஞானத்தையுடைய
பெரியோர்களுடைய அபிப்ராயம் இவைகளைப் பெற நினைக்குமோ?

—————-

முதல் பாட்டில் அவன் வடிவு அழகைப் பேசி அனுபவித்தார் –
இவன் தன்னைப் பெற்று அனுபவித்துக் கொண்டு இருக்கும் இருப்பில் அவன் விஷயமாகப் பண்ணும்
பக்தியே இனிது என்றார் இரண்டாம் பாட்டில்
இப்பாட்டில் பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்னில் அவன் தொடங்கி
ததீய சேஷத்வ பர்யந்தமாக -என்கிறது –

பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்று கேட்க,
எம்பெருமான் தொடங்கி அவன் அடியார்களுக்கு அடிமையாகும் அளவுக்குச் செல்லும் என்கிறார்.

குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம்
மூன்றுடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய்பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகிச் சுடர் விளங்ககலத்து
வரைபுரை திரைபொரு பெருவரை வெருவர,
உருமுரல் ஒலிமலி நளிர்கடல் படவர
வரசு உடல் தடவரை சுழற்றிய, தனிமாத்    
தெய்வத்தடியவர்க்கினிநாம் ஆளாகவே
இசையும் கொல், ஊழிதோறூழி ஓவாதே–3

மூன்று உலகங்களும் (மேல், நடு, கீழ்) நல்வழியில் செல்லும்படியாக திருவுள்ளத்தில் நினைப்பவனாய்,
அவ்வுலகங்களில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு நிலையில் இருந்து தொழுகையாகிற,
வேதத்தில் பரமனாகக் காட்டப்பட்டதின் மூலம் ப்ரஸித்தமான புகழையுடையவனாய்,
தன் ஆணையை நன்றாக நடத்துபவனாய்,
ப்ரஹ்மா, ருத்ரன், இந்த்ரன் ஆகிய தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தவனாய்,
ஆபரணங்களின் ஒளியையுடைய திருமார்பையுடையவனாய் இருப்பவன் எம்பெருமான்.
மலை போன்ற உயரமான் அலைகள் மோதும், பெரிய மலைகள் நடுங்கும்படியாக,
இடி முழக்கம் போன்ற கோஷமானது மிகுந்திருப்பதான குளிர்ந்த கடலை, படத்தை உடைய
ஸர்ப்ப ராஜாவாகிய வாஸுகியினுடைய உடலை மிகப்பெரிய மந்தர மலையில் சுற்றிக் கடைந்தவனும்,
ஒப்பற்ற பரதெய்வமான எம்பெருமானுக்கு அடியார்களான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இனி நாங்கள்
ஒவ்வொரு கல்பத்திலும் இடைவிடாமல் அடியவர்களாம்படியான இப்பேறு கிடைக்குமோ?

———–

கீழில் பாட்டில் பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்னில் –
சர்வேஸ்வரன் தொடங்கி –ததீய சேஷத்வ பர்யந்தமாக அனுசந்திக்கை என்றது –
அப்படிப்பட்ட அனுசந்தானத்தை உடையாரானார் பரிமாறும் பரிமாற்றம் இருக்கும் படி என் என்னில்
ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய வென்று-அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு –என்று ஆயிற்று இருப்பது
ஸ்ரீ பெரியாழ்வார் பல்லாண்டு என்று ஆண்டாக்கி -அது தன்னைப் பலவாகி-ஆயிரமாக்கி –
அது தன்னைக் கோடியாகப் பெருக்கி மங்களா சாசனம் பண்ணுகிறார் –
இவர் அவ்வளவு அமையாமல் முதலிலே கல்பத்தை விவஷித்து அது தன்னை மேல் மேல் என்னப் பெருக்குகிறார் –

சர்வேஸ்வரனுடைய சேஷித்வத்தை உபக்ரமித்து
ததீய சேஷத்தளவும் செல்ல அனுசந்தித்து
அந்த சேஷத்வ காஷ்ட்டா ப்ராப்தியைக் கொண்டு அவன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறது
நித்தியமாகச் செல்ல வேணும்

எம்பெருமான் முதல் அடியார்கள் வரை பக்தி செய்யும் அடியார்களின் பரிமாற்றங்கள்
மிகப் பெரியதாக இருக்கும் என்று அதற்கு மங்களாசாஸனம் செய்கிறார்.

ஊழிதோறூழி ஓவாது வாழிய!
என்று யாம் தொழ இசையும் கொல்,
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும் பாழ் காலத்து, இரும் பொருட்கு
எல்லாம் அரும்பெறல் தனி வித்து, ஒருதான்
ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈன்று, முக்கண் ஈசனோடு தேவுபல
நுதலி மூவுலகம் விளைத்த உந்தி,
மாயக் கடவுள் மாமுதல் அடியே–4-

எவ்வகைப்பட்ட உலகங்களும், எவ்வகைப்பட்ட ப்ராணிகளும் இல்லாதவாறு
முன்பே கடந்து போன மிகவும் நீண்ட, அதாவது உலகம் அழிந்திருந்த காலத்தில்,
கணக்கிலடங்காத ஜீவராசிகளுக்கெல்லாம் பெறுவதற்கரியனாய்,
ஒப்பற்ற, துணையில்லாத தனிக் காரணமாகத் தானே நின்றான்.
அந்நிலையில் இவ்வுலகில் சிறந்த தேவதையான ப்ரஹ்மா என்கிற பூர்ணமான முளையையும்,
மூன்று கண்களையுடைய ருத்ரனுடன், பல தேவதைகளையும் படைத்து,
இவர்களை ஒவ்வொரு கார்யத்துக்கு ஸங்கல்பித்து (சக்தியைக் கொடுத்து),
மூன்று உலகங்களையும் படைத்த திருநாபியையுடையவனாய்,
ஆச்சர்ய சக்தியை யுடையவனாய், பரதேவதையாய், பரம காரண பூதனானன
எம்பெருமானின் திருவடிகளை, ஊழிதோறும் (கல்பங்கள்தோறும்)
இடைவிடாமல் “வாழி” என்று நாம் மங்களாசாஸனம் செய்து தொழும் பாக்யம் கிடைக்குமா?

————–

மூ உலகம் விளைத்த உந்தி மாயக் கடவுள் மா முதல் அடியே ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?-என்றார் கீழே
நமக்கு மங்களா சாசனம் பண்ணப் புக்க உமக்குக் கருத்து என் என்னில் –உனக்கு அன்றிக்கே மற்றையார்க்கோ
மங்களா சாசனம் பண்ண அடுப்பது-என்று இந்தப் பிரசங்கத்தில் திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதமாக-
அத்தைப் பேசி அனுபவிக்கிறார்–

முதலிலே இவற்றை உண்டாக்கினோம் –
அநந்தரம் இவற்றுக்குக் காவலாக திக் பாலாதிகளைக் கை யடைப்பாக்கி நோக்கினோம் –
ஆகில் இவை பட்டது படுகின்றன -என்று கை வாங்கி இராதே –

ஸ்ரீ யபதியான உன்னை அழித்து இரப்பாளன் ஆக்கிக் கொடுத்து –
இட்டு வளர்ந்த கையைக் கொண்டு இரந்து- இந்திரன் கார்யம் செய்து –
தலைக் கட்டின செயல் ஒன்றையும் அனுசந்தித்தால்
உனக்கு அன்றிக்கே மற்றையார்க்கோ மங்களா சாசனம் பண்ண (வகுப்பது )அடுப்பது-என்று
இந்தப் பிரசங்கத்தில்-திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதமாக-அத்தைப் பேசி அனுபவிக்கிறார்

எம்பெருமான் இந்த உலகத்தைப் படைத்து
ப்ரஹ்மாதி தேவர்களைக் கொண்டு நடத்தி வந்து,
பின்பும் தான் தேவதையாக நிறுத்திய இந்த்ரன் தன் ராஜ்யத்தை மஹாபலியிடத்திலே பறிகொடுத்துத் துன்பத்துடன் நிற்க,
எம்பெருமான் தன் மேன்மையைக் குறைத்துக் கொண்டு ஒரு இரப்பாளனாகத் தன்னை ஆக்கிக் கொண்டு,
இந்த்ரன் கார்யத்தை நிறைவேற்றின த்ரிவிக்ரமாவதாரத்தை நினைத்து
உன்னைத் தவிர வேறு யாருக்கு நாம் மங்களாசாஸனம் செய்ய முடியும் என்று அனுபவிக்கிறார்.

மாமுதல் அடிப் போது ஒன்று கவிழ்த்தலர்த்தி,
மண் முழுதும் அகப்படுத்து, ஒண் சுடர் அடிப்போது
ஒன்று விண் செலீஇ, நான்முகப் புத்தேள்
நாடு வியந்துவப்ப, வானவர் முறை முறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு
மலர்க் கண்ணோடு கனிவாய் உடையது
மாய், இருநாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன,
கற்பகக் காவு பற்பல வன்ன,
முடி தோள் ஆயிரம் தழைத்த,
நெடியோய்க்கு அல்லதும் அடியதோ உலகே–5-

பரம காரணனான உன்னுடைய திருவடியாகிற ஒரு பூவைக் கவிழ்த்துப் பரப்பி
பூமி முழுவதையும் கைக் கொண்டும்,
அழகிய ஒளிமிகுந்த பூவைப் போன்ற மற்றொரு திருவடியை
ப்ரஹ்மா என்கிற தேவதையின் உலகமானது அதிசயப்பட்டு மகிழும்படியும்,
அவ்வுலகில் உள்ள தேவதைகள், சரியான வழியில் செல்லுகையை முறைப்படி காட்டும்
சாஸ்த்ர வழிப்படி வணங்கும்படியும்,
ஆகாசத்தில் செலுத்தினாய். தாமரைப் பூக்கள் நிறைந்த காடு மலர்ந்தால் போல் இருக்கும் திருக் கண்களோடு கூட,
பழம் போன்ற சிவந்த திருப்பவளத்தை (உதடுகளை) உடையதாய்,
பரந்த ஆயிரம் ஸூர்யர்கள் உதித்தாற்போல் இருக்கிற பல கிரீடங்களையும்,
கற்பகச் சோலை போலிருக்கிற ஆயிரம் திருத் தோள்களையும் உடையவனாய்,
எல்லாரையும்விட உயர்ந்தவனாய் விளங்குகிற எம்பெருமானைத் தவிர
மற்றெவர்க்கும் இவ் வுலகமானது அடிமைப் பட்டதோ?

————-

லௌகீகரைப் பார்த்தார் அவர்கள் வருந்திக் கை விடுவது இவன் ஒருவனையுமேயாய் –
விரும்புகைக்கும் இவனை ஒழிந்தவையாக அமைந்து –
நான் என்றும் என்னது என்றும் -பகவத் வ்யதிரிக்தரை ரக்ஷகராகத் தேடியும் போருகிறபடியைக் கண்டு
இது இருந்தபடி என்-
தங்கள் இழவுக்குக் கூப்பிட வேண்டி இருக்க -அவர்கள் அது தானும் அறியாது இருக்க
அவர்கள் இழவு பொறுக்க மாட்டாமை-தாம் ஓ என்று ஓ என்று கூப்பிடுகிறார்-

இப்படி எம்பெருமான் தன்னைக் குறைத்துக் கொண்டு உலகத்தை ரக்ஷித்தாலும்
அவனுடைய பெருமையை உணர்ந்து அவன் விஷயத்தில் ஈடுபடாமல்
உலக விஷயங்களிலேயே ஈடுபட்டு இருப்பதைப் பார்த்து,
இப்படி இவர்கள் பகவத் விஷயத்தை இழந்து போகிறார்களே என்று அவர்களுக்காகத் தான் கதறுகிறார்.

ஓ ஒ உலகினதியல்வே, ஈன்றோளிருக்க
மணை நீராட்டிப், படைத்து  இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து, தேர்ந்து உலகளிக்கும் முதற்பெரும்   
கடவுள் நிற்பப் புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது   
புல்லறிவாண்மை பொருந்தக்காட்டிக்,  
கொல்வன முதலா அல்லன முயலும்,
இனைய செய்கை இன்பு துன்பு அளித்
தொன்மா மாயப் பிறவியுள் நீங்காப்
பன்மா மாயத்து அழுந்துமா நளிர்ந்தே–6–

இந்த பூமியை முதலில் உண்டாக்கி,
வராஹவதார காலத்தில் அண்டத்தில் சுவற்றிலிருந்து இடந்து எடுத்து, ப்ரளயத்திலிருந்து காப்பாற்ற
அதை அமுது செய்து, மீண்டும் வெளியே உமிழ்ந்து, த்ரிவிக்ரமாவதாரம் செய்து அளந்து,
அதற்கு மேல் இவ்வுலகை எப்படிக் காப்பாற்றுவது என்று சிந்தை செய்து,
காப்பாற்றும்படியான ஆதி காரணனும், பர தேவதையானவன் ஸ்ரீமந்நாராயணன்.
இந்த எம்பெருமான் புகலாக இருக்க, அவனை விட்டு, அவனுடைய சொத்தாகச் சொல்லப்பட்ட,
பலவகைப்பட்ட, அவரவர்கள் அறிந்த தேவதைகளை ஆதரிப்பது எதைப்போல் இருக்கிறது என்றால்,
தன்னுடைய தாழ்ந்த புத்தியை பெரியோர்கள் மனதில் படும்படிக் காண்பித்து,
பல நன்மைகளைச் செய்த, பெற்ற தாயிருக்க அவளை விட்டு
ஒரு மணையை (பலகையை) நீராட்டுவது போலிருக்கிறது.
அந்த தேவதைகளின் செயல்கள் ஹிம்ஸிக்கை முதலான செய்யத்தகாத காரியங்களைச் செய்கையாகிற
இப்படிப்பட்ட தன்மையையுடையவை.
அவர்கள் கொடுக்கும் பலமும் துக்கத்துடன் கூடிய ஸுகமாகும்.
ஆகையால் அவர்களைச் சென்று வணங்குகை, அநாதியாய், பெரியதாய் ஆச்சர்யத்தைச் செய்யக் கூடிய
ஸம்ஸாரத்திலிருந்து நீங்குவதற்காக இல்லாமல், பலவிதமாய், பெரியதாய்
மோஹத்தை உண்டாக்கக்கூடிய சப்தம் முதலிய உலக ஸுகங்களில் நன்றாக அழுந்துகைக்குக் காரணமாகும்.
ஐயோ! ஐயோ! இந்த உலகத்தின் இயல்பு இப்படி வருந்தும்படி இருக்கிறதே!

————

திரு மேனி மேன்மை எளிமை முதல் பாசுரம்
திரு அடி பக்தியே பிராப்தி இரண்டாம் பாசுரம்
ததீய சேஷத்வம் மூன்றாம் பாசுரம்
அடியார் யாத்ரை மங்களாசாசனம் நான்காம் பாசுரம்
திரு விக்ரமன் அடிக்கே மங்களா சாசனம் ஐந்தாம் பாசுரம்
உலோகர் இயற்கை நொந்து ஆறாம் பாசுரம்
தம்மை இப்படி விலஷணம் ஆக்கிய பேற்றை அருளுகிறார் இதில்-

அல்லாதார் செய்தபடி செய்கிறார்கள் -நாம் முந்துற முன்னம் இவ்வனர்த்தத்தைத் தப்பி
இவ்வர்த்தத்தைப் பெற்றோம் என்று உகக்கிறார் இதில்

நாட்டார் கண்டார் காலில் குனிந்து திரியா நிற்க
நமக்கு முந்துற முன்னம் தேவதாந்த்ர ஸ்பர்சம் இன்றிக்கே இருக்கப் பெற்றோமே –
இந்த லாபமே அமையாதோ-என்று-ஸ்வ லாபத்தைப் பேசி இனியர் ஆகிறார் –
இப் புன்மை இன்றிக்கே இன்றிக்கே ஒழியப் பெற்ற இதுவே அமையாதோ -என்று பிரீதராய்-
இத்தையும் அந்தாதி யாக அருளிச் செய்த போதிலும்-
திரு விருத்தம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி மூன்றையும் போல்
உகப்பின் மிகுதியால் மண்டல அந்தாதியாக இல்லாமல் தலைக் கட்டுகிறார் –

யாவரும் அகப்பட வாயிற்று அவன் உண்டது –
தன்னோடு ஓக்கச் சிறை இருந்தவர்களில் சிலரை ஆஸ்ரயித்துப் பெறுவதொரு பலம் உண்டோ

இப்படி மற்றவர்கள் இவ்வுலக விஷயங்களில் ஈடுபட்டு மற்ற தேவதைகளை வணங்கித்
துன்புறுவதற்கு வருந்தினாலும், தனக்கு எம்பெருமான் க்ருபையினாலே
அப்படி ஒரு தேவையும் துன்பமும் இல்லாமல் எம்பெருமான் க்ருபை செய்துள்ளானே,
இதுவே நமக்கு அமையும் என்று தனக்குக் கிடைத்த நன்மையைச் சொல்லி அனுபவிக்கிறார்.

மற்ற ப்ரபந்தங்களை அந்தாதியாகச் செய்தவர், இதை அப்படிச் செய்யாததற்குக் காரணம்,
இதில் பெற்ற இன்பத்துக்கு மேல் ஒரு வார்த்தை சொல்ல முடியாததாகையாலே இப்பாசுரத்துடன் முடித்தருளுகிறார்.

எல்லா தேவதைகளையும் ப்ரளய காலத்தில் எம்பெருமான் தன்னுள் விழுங்கி வைத்துக்கொண்டான்
என்பதிலிருந்து, இந்த தேவதைகள் ஒருவரும் நமக்குப் புகலில்லை என்பது தெரிகிறது.

நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்,
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா,
யாவகை உலகமும் யாவரும் அகப்பட,
நிலம் நீர் தீ கால் சுடர் இருவிசும்பும்,
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க,
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓராலிலை சேர்ந்த எம்
பெருமா மாயனை அல்லது,
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே–7-

ஸம்ஹாரத்துக்குக் காரணமான, குளிர்ந்த சந்த்ரனைத் தலையில் வைத்திருக்கும் ருத்ரனும்,
ஸ்ருஷ்டிக்குக் காரணமான நான்கு முகங்களையுடைய ப்ரஹ்மாவும்,
இளம் தளிர் போன்ற ஒளியையுடைய, தேவர்களின் தலைவனான இந்த்ரனும்,
இவர்கள் தொடக்கமான எல்லாவிதமான லோகங்களும்,
எல்லாச் சேதனர்களும் உட்பட, பூமியும், நீரும், நெருப்பும், காற்றும்,
ஒளியால் வ்யாபிக்கப்பட்டிருக்கும் ஆகாசமும், மலர்ந்த கிரணங்களையுடைய சந்த்ர ஸூர்யர்களும்,
மற்றுமுள்ள எல்லாப் பொருள்களும், ஓரே காலத்தில் தன் திருவயிற்றில் ஒரு சிறு பகுதியில் சேரும்படி,
ஒரு பொருளும் வெளிப்படாதபடி எல்லாவற்றையும் உள்ளே இருக்கும் வண்ணம் உண்டு,
தன் திருவயிற்றிலே மறைத்து வைத்துக் கொண்டு, ஓர் ஆலினிலைமேல் சயனித்திருப்பவனாய்,
என்னுடைய ஸ்வாமியாய், பெரியவனாய், அளவிட்டறிய முடியாதவனாய்,
ஆச்சர்ய சக்தியையுடைய ஸ்ரீமந் நாராயணனைத் தவிர,
வேறு பெரிய ஒரு தேவதையை நாம் புகலாகக் கொண்டுள்ளோமோ?

இத் திவ்யப் பிரபந்தம் பெரும்பாலும் எம்பெருமானுடைய பரத்வ ஸ்தாபனத்திலே நோக்குடையதென்று உணரத்தக்கது.

இதில் ஆழ்வார் தமது திருநாமம் இதிலும் பெரிய திருவந்தாதியிலும் அருளிச் செய்ய வில்லை-இது மண்டல அந்தாதி பிரபந்தம் இல்லை-

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரிய வியாக்கியான ப்ராமணத் திரட்டு —

July 2, 2021

1-கலவ் புந பாப ரதாபி பூதே –பக்தாத்மநா –ஸ உத் பபூவ

பாபத்திலேயே ஈடுபட்ட மனிதர்கள் நிறைந்த கலி காலத்திலே அந்த பகவான் பக்த ரூபியாகத் தோன்றினார்

2-திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் யுக பதுத்தி தா
யதி பா ஸத்ருஸீ ஸா ஸ்யாத் பாசஸ் தஸ்ய மஹாத்ம ந –ஸ்ரீ கீதை –11-12-

ஆயிரம் சூர்யர்களுடைய ஒளியானது ஒரே காலத்திலே ஆகாயத்திலே தோன்றிற்றாகில்
அந்தப் புருஷனுடைய ஒளிக்கு அது ஸமானம் ஆகலாம்

3-நூபுராத்ய பரிமித திவ்ய பூஷண –ஸ்ரீ கத்ய த்ரயம்

நூபுரம் முதலாகிய கணக்கற்ற திவ்ய ஆபரணங்களை யுடையவன்

4-ருத்ரம் ஸமாஸ்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மாணம் ஆஸ்ரித
ப்ரஹ்மா மாம் ஆஸ்ரிதோ ராஜன் காஞ்சிதுபாஸ்ரித –பாரதம் -ஆஸ் –118-37-

தேவர்கள் ருத்ரனை அண்டி இருக்கின்றனர்
ருத்ரன் தன் தகப்பனாக பிரமனை ஆஸ்ரயித்து இருக்கிறான்
பிரமனோ என்னில் -அவனையும் பிறப்பித்த என்னை அடைந்து இருக்கிறான்
அரசனே நான் ஒருவனையும் பற்றி இருக்க வில்லை

5- வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயநாய -புருஷ ஸூக்தம்

வேத புருஷனாகிய நான் -ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும்
ஸூர்யன் போலே ஒளி விடுபவனும் -ப்ரக்ருதிக்கு அப்பால் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன்
அவனை இம்மாதிரி அறிபவன் இப்பிறப்பிலேயே முக்தனாக ஆகிறான்
மோக்ஷத்திற்கு வேறே வழி கிடையாது –

7–ததக்ஷைத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத -சாந்தோக்யம் -6-2-3-

அந்தப் ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக்கடவேன் என்று சங்கல்பித்தது
அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது

8-கதா புனஸ் சங்க ரதாங்க கல்ப த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணாம் புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி -ஸ்தோத்ர ரத்னம் -31-

திரிவிக்ரமனே சங்கு சக்கரம் கல்பக வ்ருக்ஷம் கொடி தாமரை அங்குசம் வஜ்ராயுதம் இவைகளை அடையாளமாக யுடைய
திருவடித் தாமரை இணை என் தலையை எப்போது தான் அலங்கரிக்கப் போகிறதோ

8-த்யா யதோ விஷயான் பும்ஸஸ் சங்கஸ் தேஷூப ஜாயதே
சங்காத் சஞ்சாயதே காம காமத் க்ரோதோ அபி ஜாயதே –கீதை -2-62-

விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது
அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது
காமத்தினால் கோபம் ஏற்படுகிறது

9-ஆஹார ஸூத்தவ் ஸத்வ ஸூத்தி ஸத்வ ஸூத்தவ் த்ருவா ஸ்ம்ருதி -சாந்தோக்யம் -7-26-2-

உண்ணும் உணவு சுத்தமாக இருந்ததாகில் மனம் சுத்தி அடைகிறது
மனம் பரிசுத்தம் அடைந்த அளவிலே நிலை நின்ற நினைவு எனப்படும் பக்தி உண்டாகிறது

10- ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யஷா வகமம் தர்ம்யம் ஸூ ஸூ கம் கர்த்தும் அவ்யயம் –கீதை -9-2-

வித்யைகளுக்குள்ளும் ரஹஸ்யங்களுக்குள்ளும் மேலானது இது –
பாபங்களைப் போக்கடிப்பதில் உயர்ந்தது -என்னை நேரில் காட்டுவது இது தான்
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாதது –

11-தஸ்மாத் வா ஏ தஸ்மாத் விஞ்ஞான மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய -தைத்த ஆனந்தவல்லி -5-

அப்படிப்பட்ட இந்த விஞ்ஞான மெய்ஞான ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவனும்
அந்த ஜீவனுக்கு அந்தராத்மாவாய் இருப்பவனும் ஆனந்த மெய்ஞான பரமாத்மா

12-க்லஸோ அதிக தரஸ் தேசம் அவ்யக்தா சக்த சேதஸாம்
அவ்யக்தா ஹி கதிர் துக்கம் தேஹவத்பிர வாப்யதே – -கீதை-12-5-

அவ்யக்தம் எனப்படும் ஆத்ம ஸ்வரூபத்தில் ஈடுபட்ட மனத்தை யுடையவர்களுக்கு
அதை அடையும் விஷயத்தில் மிகவும் துக்கம் உள்ளது
தேஹாத்ம அபிமானிகளுக்கு ஆத்ம ச்வரூபத்தை அடைவது மிகவும் கடினம் அன்றோ

13-சராசர விவேக ஜ்ஞா கரீயாம்ஸோ விமத் சரா
பிரமாண தந்த்ரா சந்தீதி க்ருதே வேதார்த்த ஸங்க்ரஹ –வேதார்த்த ஸங்க்ரஹம் -நிகம ஸ்லோகம்

சாரம் அசாரம் ஆகிய இவற்றை விவேகித்து அறிபவர்களும்
மிகுந்த கேள்வி ஞானத்தால் பெருமை பெற்று இருப்பவர்களும்
பிறர் இடம் மாத்சர்யம் மற்றவர்களும் -பிரமாணங்களுக்குக் கட்டுப் பட்டவர்களுமான மஹான்கள்
இக்காலத்திலும் உளர் என்னும் நிச்சயத்தாலே என்னால் வேதார்த்த ஸங்க்ரஹம் செய்யப்பட்டது

14-ஆயுரா ஸாஸ் தே -யஜுர் அஷ்ட -3-5-

நீண்ட ஆயுளைப் பிரார்த்திக்கிறேன்

15- ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்மா நே ஸா ந -மஹா உபநிஷத் –1-

நாராயணன் ஒருவனே பிரளய காலத்தில் இருந்தான்
பிரமனும் இல்லை சிவனும் இல்லை

16-த்ரவீபூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹா முநே
க்ருஹீத்வா தர்ம பா நீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷர ளிதம் பரயா பக்த்யா பாத்யார்க்யாதி பிரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவ நார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீத் யவதாரணாத்
வர்ஷா யுதான் யத பாஹுந் ந முமோச ததா ஹர –ஈஸ்வர ஸம்ஹிதை

மா முனிவரே திரு உலகு அளந்து அருளினை அச்சமயம் ஹரியின் இடம் பக்தியால் தர்மம் ஜலம் ஆயிற்று
ஜெகந்நாதானான அவன் சந்தோஷத்துக்காக அந்த ஜலத்தைக் கொண்டு அவன் திருவடிகள்
என்னால் மேலான பக்தியுடன் விளக்கப் பட்டது
பாத்யம் அர்க்யம் முதலானவைகளால் பூஜிக்கப் பட்டது
விழுந்த ஜலத்தைப் பார்த்து நான் பரிசுத்தப்படுத்த தகுந்தவனாய் இருக்கிறேன் என்று நிச்சயத்தில்
சிவன் ஜடையில் நடுவில் தாங்கினான்
பல வருஷங்கள் ருத்ரன் அத்தைத் தாங்கிக் கொண்டே விடாமல் இருந்தான்

17-ஏகஸ்மின் நப்யதிக் ராந்தே முஹுர்த்தே தியாக வர்ஜிதே
தஸ்யுபிர் முஷிதே நேவ யுக்த மாக் ரந்திதும் ப்ருசம்

பகவத் த்யானம் இல்லாமல் ஒரு முஹூர்த்தம் சென்றாலும் திருடர்களால் திருடப்பட்டவன் போல்
உறக்கக் கதறுவதே தகுந்தது

18-குஹேந ஸார்த்தம் தத்ரைவ ஸ்திதோ அஸ்மி திவசான் பஹுன்
ஆசயா யதி வா ராம புந சப்தா பயே திதி –அயோத்யா –59-3-

பெருமாள் மீண்டும் கூப்பிடுவாரோ என்னும் நப்பாசையாலே குஹனுடன் கூட அங்கேயே பல தினங்கள் தங்கினேன்

19-ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத் தனம் இச்சேத் ஹுதா ஸநாத்
ஈஸ்வராத் ஞானம் அன்விச்ச்சேத் கதிம் இச்சேத் ஜனார்த்தநாத் –ப்ரஹ்மாண்டம்

ஆரோக்யத்தை சூரியனிடம் இருந்தும் -பணத்தை அக்னியிடம் இருந்தும்
ஞானத்தை ஈஸ்வரனிடம் இருந்தும் விரும்பக் கடவன்
மோக்ஷத்தை ஜனார்த்தனிடம் இருந்து விரும்பக் கடவன்

20-ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்யோ நிதித்யாசி தவ்ய–ப்ருஹ 6-5-6-

கேட்கத்தக்கதும் நினைக்கத்தக்கதுமான ஆத்மா த்யானிக்கத் தக்கது -பார்க்காத தக்கது

21-யஸோதாஸ் த நந்த யமத் யந்தம் விமுக்தம்
மிகவும் அழகியதான யசோதையின் கைக்குழந்தை

22-கதம் ந்வயம் ஸி ஸூ ஸேத லோகே நாசமுபாகதே
ஸாகா யாம் வட வ்ருஷஸ்ய பல்லவே து ஸூ சிஸ் மித –பார -ஆற –188-94-

உலகம் எல்லாம் நாசம் அடைந்த பிறகும் ஆல மரக்கிளையில் உள்ள இளம் தளரில்
இனிய புன் முறுவலுடன் கூடிய இக்குழந்தை எப்படிப் படுத்துக்க கொண்டு இருக்கிறது

23-ப்ரஹ்மாணம் நீல ஸிதி கண்டம் ச யாஸ் சாந்யா தேவதா ஸ்ம்ருதா
பிரதிபுத்தா ந சேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -பார -சாந்தி -350-36

பிரமனையும் ருத்ரனையும் மற்றும் தேவதையாகச் சொல்லப்படும் யாவரையும் ஞானிகள் சேவிக்க மாட்டார்கள்
ஏன் எனில் அவர்கள் அளிக்கும் பலன் அளவு பட்டது –

24-ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிக்ஷித் தாஸ்து பூஜநே
ஞாத்வைவம் பக்தி ஸாங்கர்யம் ந குர்யா தேவமேவ ஹி

ஸ்கந்தன் ருத்ரன் இந்திரன் முதலான தேவதைகள் பூஜை செய்யும் விஷயத்தில்
ஞானிகளால் விலக்கப் பட்டு இருக்கிறார்கள்
இப்படி அறிந்து இம்மாதிரியாகவே பக்திக் கலப்பைச் செய்யாமல் இருக்கக் கடவன் –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -7–

February 25, 2021

நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா,
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட, நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க, ஒரு பொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த வெம்
பெருமா மாயனை யல்லது,ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே.

பதவுரை

நளிர்மதி சடையனும்–குளிர்ந்த சந்திரனை ஜடையிலே யுடைய சிவனும்
நான்முகன் கடவுளும்-பிரமதேவனும்
தளிர்ஒளி இமையவர் தலைவனும் முதலா-தழைத்த ஒளிபொருந்திய தேவேந்திரனும் ஆகிய இவர்கள் முதலாக
யாவரும்-எல்லாப் பிராணிகளும்
யாவகை உலகமும்-எல்லா வுலகமும்
அகப்பட-உட்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்-பூமி ஜலம் அக்நி வாயு, தேஜஸ் ஸுக்களையுடைய மஹத்தான ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களும்
மலர் சுடர் பிறவும்-சந்திரன் ஸூர்யன் முதலிய மற்றும் சிறந்த தேஜஸ் பதார்த்தங்களும்
சிறிது-சிறியதான திருவயிற்றின் ஒரு பக்கத்தில்
மயங்க-கலசும்படியாக
ஒரு பொருள் புறப்பாடு இன்றி-ஒரு வஸ்துவும் வெளிப்படாதபடி
முழுவதும்-எல்லாப் பொருள்களையும்
அகப்பட சுரந்து-உள்ளேயிட்டு மறைத்து
ஓர் ஆல் இலை சேர்ந்த-அத்விதீயமான வொரு ஆலந்தளிரிலே பள்ளி கொண்ட
எம்-எமக்கு ஸ்வாமியாய்
பெரு மா மாயனை அல்லது-மிகப்பெரிய ஆச்சரியங்களை யுடையனான ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து
மற்று ஒரு மா தெய்வம்–வேறொரு க்ஷுத்ர தேவதையை
யாம் உடையமோ–நாம் சேஷியாகக் கொள்ளுவோமோ? (கொள்ள மாட்டோம்)

ஸகல சேதநர்களும் ஸ்வரூப ப்ராப்த சேஷியான எம்பெருமானை அடி பணிந்து
அவனுக்கே வழுவிலா வடிமைகள் செய்ய ப்ராப்தமாயிருக்க அப்படி செய்யாதே
தேவதாந்தரங்களை ஆச்ரயித்து ஸம்ஸாரத்தையே பூண் கட்டிக் கொள்ளுகிறார்களே!
அந்தோ! இஃது என்ன அனர்த்தம்!
என்று கீழ்ப்பாட்டில் கவலைப்பட்டார்.

ஒரு ஸம்ஸாரியாவது இவருடைய துயரத்தைப் பரிஹரிக்க முன்வராமற் போகவே,
‘இப்பாழும் ஸம்ஸாரிகள் எக் கேடாவது கெடட்டும்
நாமும் அவர்களைப் போலே அனர்த்தப்பட்டுப் போகாமல் எம்பெருமானுக்கே அடிமைப் பட்டிருக்கப் பெற்றோமே!
என்று தம்முடைய மன வுறுதிக்கு உகந்து பேசுகிறார் இதில்.

ஸம்ஸாரிகள் பற்றுகிற தேவதாந்தரங்கள் யாவும் நம்மைப் போலவே பலவகை ஆபத்துக்களுக்கு உள்ளாகி
எம்பெருமானுடைய திருவருளால் தப்பிப் பிழைப்பவர்களே யொழிய
பிறருடைய ஆபத்துக்களைத் தாம் பரிஹரிக்கவல்ல ஸர்வ சக்தர்களல்லர் என்பதை விளக்க வேண்டி
‘இந்தத் தெய்வங்களெல்லாம் பிரளய காலத்தில் எம்பெருமானது திருவயிற்றிலே பதுங்கிக் கிடந்தனை காண்மின்‘ என்கிறார்.

எல்லாத் தெய்வங்களையும் உய்யக் கொண்ட பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணனுக்கன்றி
மற்று யார்க்கும் நாம் அடிமைப்பட்டவர்களல்லோம் என்பது நிகமனம்.

நளிர்மதிச் சடையனும் என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செயல் –
“ஸாதக வேஷம் தோற்ற ஜடையைத் தரித்துக் கொண்டிருக்கச் செய்தேயும் துர்மானத்தாலே ஸுக ப்ரதாநன்
என்று தோற்றுபடி தாழை மடலைக் கீறித் தலையிலே வைப்பாரைப் போலே
குளிர்ந்த சந்திரனை ஜடையிலே தரித்த ருத்ரனும்“ என்று.

இதில்“ தாழை மடலைக் கீறி“ இத்யாதி த்ருஷ்டாந்த வாக்யத்திற்குப் பொருள் யாதெனில்
உலகில் மூட்டை சுமந்து வருந்திக் கூலி ஜீவனம் பண்ணுகிறவர்கள் தாங்கள் கஷ்டப்படுகிறவர்களென்பது
பிறர்க்குத் தெரியாமைக்காகவும் தாழம்பூ முதலிய பூக்களை யெடுத்துச் சூட்டிக்கொண்டு திரிவர்களாம்,
அப்படியே சிவ பிரானும் தான ஸம்ஹாரக் கடவுளென்பதையும்
ஸாதனாதுஷ்டாநம் பண்ணி ச்ரமப்படுகிறவன் என்பதையும் பிறரறிந்து அருவருக்காமைக்காவும்
‘இவன் உல்லாஸமாக இருக்கக் கூடிய ரஸிகன்‘ என்று பலரும் நினைத்துக் கொள்வதற்காகவும்
அழகிய சந்திர கலையைச் சிரமீது அணிந்தான் போலும் என்று ஒரு விநோதமாக அருளிச் செய்தபடி.

இந்திரன், அரம்பை ஊர்வசி முதலிய அப்ஸரஸ் ஸ்திரீகள் தன்னை நன்கு காதலிக்கும்படி
அலங்காரங்கள் செய்து கொண்டு அதனால் மேனி நிறம் விறு பெற்றிருப்பனாதலால்
தளிரொளி என்று விசேஷிக்கப்பட்டான்.

ஆக முக்யமாகவுள்ள மூன்று தேவர்களைச் சொல்லவே
மற்ற சேதநாசேதங்களை விவரித்துச் சொல்ல வேண்டாமை பற்றி
முதலா யாவகையலகமும் யாவருமகபட என்றார்.

எம்பெருமானது திருவயிற்றிலுள்ளே அடங்கிக் கிடந்து ஸத்தை பெற்ற பதார்த்தங்களை
தாம் வாய் கொண்டு சொல்லுவதும்
நமக்குப் பெரும் பாக்கியமென்றோ என்றெண்ணி
நில நீர் தீ கால் சுடரிருவிசும்பும் மலர்சுடர் என்று மீண்டு விவரித்துச் சொல்லத் தொடங்கினர் போலும்.

சிறிது டன் மயங்க என்பதற்குப் பலவகையும் பொருள் கொள்ளலாம்.
(கீழ்ச்சொன்ன வஸ்துக்களெல்லாம்)
சிறிது – மிகச்சிறிய வடிவத்தை உடையனவாய்க் கொண்டு,
உடன் – ஏக காலத்திலே,
மயங்க – உள்ளே யடங்கும்படியாக என்பது ஒரு வகை.

உடன் மயங்க என்றவிடத்து உடல்மயங்க என்று பதம் பிரித்து,
சிறிதாகிய உடலிலே –
பேதைக் குழவியான எம்பெருமானது மிகச் சிறிய வுடலிலே மயங்க என்றல் மற்றொருவகை.
மற்றுங் கண்டு கொள்க.

ஆக எல்லாப் பதார்த்தங்களையும் ஒன்று தப்பாமல் திரு வயிற்றினுள்ளே அடங்கிக்கொண்டு
“பாலன் தனதுருவாய் ஏழுலகுண்டு ஆலிலையின், மேலன்று நீவளர்த்த மெய்யென்பர்“ என்றபடி
சிறு குழந்தை வடிவமாகி முகிழ் விரியாத சிற்றாலந்தளிரிலே கண்வளர்ந்த அற்புத சக்தி வாய்ந்த
ஸ்ரீமந்நாராயண மூர்த்தியை தவிர்த்து வேறொரு தெய்வத்தை நாம் தெய்வமாகக் கொள்வோம்.

“நெற்றி மேற்கண்ணானும் நிறைமொழிலாய் நான்முகனும் நீண்டநால்வாய்,
ஒற்றைக்கை வெண்பகட்டிலொருவனையு முள்ளிட்டவமர்ரோடும்,
வெற்றிப்போர்கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட,
கொற்றப்போராழியான் குணம் பரவாச்சிறுடிதாண்டர் கொடியவாறே“ என்றும்,
“அன்றெல்லாருமறியாரோ எம்பெருமானுண்டு மிழந்த எச்சில் தேவர், அல்லாதார் தாமுளரே“ என்றும்
(பெரிய திருமொழியில்) திருமங்கை யாழ்வார்ருளிச்செய்த பாசுரங்கள் இங்கே அநுஸந்திக்கத்தக்கவை.

“மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார்பதத்து நீர்?—
அங்கண்ஞாலமுண்ட போது வெள்ளிவெற்பு அகன்றதோ?
ஆதலாலரங்கனன்றி வேறு தெய்வமில்லையே“ என்ற பிள்ளைப் பெருமாளையங்கார்
விடுதிப் பாசுரமும் குறிக்கொள்ளத்தக்கது.

இத் திவ்யப் பிரபந்தம் பெரும்பாலும் எம்பெருமானுடைய பரத்வ ஸ்தாபனத்திலே நோக்குடையதென்று உணரத்தக்கது.

திருவிருத்தத்திலும் திருவாய்மொழியிலும் ஆழ்வார் தம்முடைய திருநாமத்தை அருளிச்செய்துளர்,
இப் பிரபந்தத்தில் அப்படி அருளிச் செய்யவில்லை என்பதைக் காரணமாகக் கொண்டு சிலர் சொல்லுவதாவது –
இத் திருவாசிரியம் இன்னும் பல பாசுரங்களை யுடைய பிரபந்தமாயிருந்த்தென்றும்,
காலக் கிரமத்தில் சில பாசுரங்கள் லோபித்து விட்டன வென்றும் சொல்லுகிறார்கள்.

நம்மாழ்வாருளிச்செய்த நான்கு பிரபந்தங்களும் இதற்கு அடுதத்தான பெரிய திருவந்தாதியிலும்
ஆழ்வாருடைய திருநாமம் அருளிச் செய்யப்பட்டிருக்க வில்லை யாகையால் இது சேராது

அந்தாதித் தொடையாக அமைந்த பிரபந்தங்கள் எல்லாவற்றிலும்
முடிவு பாசுரத்தின் அந்தமும் முதற்பாசுரத்தின் ஆதியும் ஒன்றாக அமையும்படி அருளிச் செய்யப்பட்டிருப்பது போல்
இப்பிரபந்தத்தில் அமையாமையால் இதைக் கொண்டு இதில் சில பாசுரங்க் லோபித்து விட்டவென்று சொல்லுவர் சிலர்,
அதுவும் சேராது

ஈற்றுத் தமிழர் சொல்லி வைத்திருக்கையால்
இப் பிரபந்தம் மண்டலித்தலாகாது என்று
சொல்லாமத்தனை யொழிய பாசுரங்கள் லோபித்தன என்றால் பொருந்த மாட்டாது.

ஆகவே இப்பிரபந்தம் பூர்ணமென்றே கொள்ளத்தக்கது.

———————————————–————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -6–

February 25, 2021

ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க மணைநீ ராட்டி,படைத்திடந் துண்டுமிழ்ந்
தளந்து,தேர்ந்துல களிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்ப புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,
கொல்வன முதலா அல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளி
தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே.

பதவுரை

உலகு–லோகங்களை
படைத்து-ஸ்ருஷ்டித்தும்
இடந்து-ஒருகால் வராஹா வதாரத்தில்) உத்தரித்தும்
உண்டு-(மற்றொரு கால் பிரளயம் வந்த போது) வயிற்றிலே வைத்து நோக்கியும்
உமிழ்ந்து-பிறகு வெளிப் படுத்தியும்
அளந்து-(பின்னுமொரு கால் த்ரிவிக்ரமனாய்) ஸ்வாதீனப் படுத்திக் கொண்டும்
புடை-ஏதோவொரு மூலையில் சொல்லப்பட்டும்
தான் அறி-தான் தோன்றித் தனமாக அறிந்து கொள்ளக் கூடியவும்
பல-வலகைப்பட்டு மிருக்கிற
தெய்வம்-தேவதைகளை
பேணுதல்-ஆராதிப்பது
தனது-தன்னுடைய
புல் அறிவாண்மை–நீச புத்தியை-பொருந்த காட்டி
விளங்கக் காட்டிக்கொண்டு–
ஈன்றோள் இருக்க மணை நீராட்டி -பெற்ற தாய்க்கு ஒரு உபசாரமும் பண்ணாதே வீட்டிட்டு அறிவற்றதொரு மணைக்கட்டைக்கு உபசாரம் பண்ணுவது போல,
கொல்வன முதலா-ஆடு பலி கொடுத்தல் கோழி பலி கொடுத்தலாகிற ஜீவஹிம்ஸை முதலான
அல்லன முயலும்–தப்புக் காரியங்களைச் செய்ய நினைக்கையாகிற
தேர்ந்து–இப்படியாகவே இன்னும் பல ரக்ஷண வழிகளைச் சிந்தித்துக் கொண்டும்
அளிக்கும்–(முக்காலங்களிலும்) ரக்ஷித்துக் கொண்டேயிருக்கிற
முதல் பெரு கடவுள் நிற்ப–ஸர்வ காரணனும் பராத்பானுமான ஸ்ரீமந்நாராயணன் (அவனை ஆச்ரயித்து உஜ்ஜீவிக்க மாட்டாமல்)
இனைய செய்கை–இப்படிப்பட்ட காரியங்களாயிரா நின்றன
அளி-(அந்த க்ஷுத்ர தெய்வங்களின்) ப்ரஸாதமோ
இன்பு துன்பு-ஸுகமென்று பேர் மாத்திரமான துக்கம் (அதாவது என்னெனில்)
தொல்-அநாதியாய்
மா-மஹத்தாய்
மாயம்-ஆச்சரியமான
பிறவியுள்-ஸம்ஸாரத்தில் நின்றும்
நீங்கா-ஒரு நாளும் நீங்குதலின்றிக்கே
பல் மா மாயத்து-பலவகைப் பட்ட வ்யாமோஹ ஜநகங்களான சப்தாதி விஷயங்களிலே
நளிர்ந்து அழுந்தும் ஆ ஓஓ உலகினது இயல்வு-இப்படிப்பட்ட லோகஸ்வபநவம் என்ன பரிதாபம் ஐயோ! (என்கிறார்)

“முடிதோளாயிரந்தழைத்த நெடியோய்க் கல்லது மடியதோவுலகே“ என்று கீழ்ப் பாட்டிலருளிச் செய்த ஆழ்வார்
தம்முடைய கொள்கைப் படியே உலகமனைத்தும் எம்பெருமானை வணங்கி வழிபட்டு
உஜ்ஜீவிக்கின்றதா என்று ஆராய்ந்து பார்த்தார்.
க்ஷுத்ர பலன்களை விரும்பி க்ஷுத்ர தேவதைகளை ஆராதிக்கின்ற க்ஷுத்ர ஜனங்களே மிகுதியாகக் காணப் பட்டன.
பரிதாபம் பொறுக்க மாட்டாமல் ஐயோ! ஐயோ! இப்படியும் உலகம் பாழாய்ப்போவதே! என்று
வயிற்றிலும் தலையிலும் அடித்துக்கொள்ளுகிறார் – ஓ ஓ என்று கதறுகிறார்.

இப்படி இவர் ஓ ஓ என்று கதறுகிற கதறல் எவ்வளவு தூரம் கேட்குமென்னில்,
இவர் தாம் கீழ்ப் பாட்டில் பேசின மேலுலகளந்த திருவடி எவ்வளவு தூரம் சென்றதோ,
அவ்வளவிலும் மேலாகவே சென்று ஒலிக்குமென்று கொள்ளீர்.

இவ்வுலகின் ஸ்வபாவத்தை நாம் என்ன சொல்லுவோம்!
இவ்வுலகம் செய்கிற காரியம் என்னவென்றால், நன்றிகெட்ட காரியஞ்செய்யா நின்றது.
பிள்ளையைப் பெறுவதற்கு முன்பு பலவகைக் கஷ்டங்கள் பட்டும் பெற்ற பின்பும்
குறையற ஸம் ரக்ஷிப்பதற்காக எத்தனையோ வருத்தங்கள் கஷ்டங்கள் பட்டும் நன்மையே செய்து போருகிற
மாதாவுக்குப் பலவகை உபசாரங்கள் செய்ய வேண்டியது ப்ராப்தமாயிருக்க,

அவளைத் திரஸ்கரித்து விட்டு
உபயோகமற்றவொரு மணைக் கட்டையை ஆதரித்து அதற்குக் கொண்டாட்டங்கள் செய்வரைப் போலே
இவ் வுலகத்தவர்கள், பலவகை உபகாரங்களும் செய்து போருகிற எம்பெருமானை அநாதரித்து விட்டு
ஒரு நன்றியும் செய்ய மாட்டாத அசேதந ப்ராயங்களான புதுத் தெய்வங்களைக் கொண்டாடுகின்றார்களே!
இது விவேகமிருந்து செய்கிற காரியமோ? அறிவு உள்ளவர்கள் இப்படியுஞ் செய்வார்களோ?

எம்பெருமான் இவ்வுலகுக்குச் செய்த உபகாரங்களை இன்று நான் புதிதாகச் சொல்ல வேண்டுமோ?
இறகு ஒடிந்த பக்ஷிகளைப் போலே கூட்டினதும், இந்திரியங்களை யிழந்து கிடந்த இவ் வாத்துமாக்களைக்
கரண களேபரங்களோடே கூட்டினதும், ஹிரண்யாக்ஷன் பாயாகச் சுருட்டிக் கொண்டு போன இந் நிலவுலகத்தை
மஹர வாரஹமாகி மீட்டுக் கொணர்ந்ததும், இவ்வுலகமெல்லாம் பிரளயப் பெருங்கடலில் நசித்துப் போக
நேர்ந்த காலத்துத் திரு வயிற்றிலே வைத்து ஸம் ரக்ஷித்தும், பிரளயங்கழிந்தவாறே பழையபடி வெளியிட்டதும்,
மாவலி யிடத்து நீரேற்றுப் பெற்றுத் தாளின் கீழ் ஆட்படுத்திக் கொண்டதும் முதலான உபகாரங்கள் சொல்லி முடியுமோ?

இப்படிப்பட்ட உபகரங்கள் இன்னும் எத்தனையோ செய்வதாகத் திருவுள்ளம் பற்றி யிருப்பவனன்றோ திருமால்.
அவனைத் தவிர வேறொரு முழுமுதற் கடவுள் இவ்வுலகுக்கு உண்டோ?
நன்றி யறிவுள்ளவர்கள் அப்பெருமாலுக் கன்றோ பணிவிடைகள் செய்ய ப்ராப்தம்,
அவனுக்குச் செய்யாத்தோடு ஒரு நன்றியுஞ் செய்ய மாட்டாத தேவதாந்தரங்களுக்குப் போய்ப் பணிவிடை செய்கிற
இவ்வுலகின் அவிவேகத்தை என்ன சொல்லுவோம்?
அந்த தேவதாந்தரங்கக்கு இவர்கள் செய்கிற ஆராதனம் என்ன வென்றால்
ஆட்டைவெட்டிப் பலியிடுவதும் கோழியைக் கொண்டு நைவேத்யஞ் செய்வதும்
இவை போல்வன ஜீவ ஹிம்ஸைச் செயல்களேயாகும்.

இதற்குப் பலனாக அந்த தேவதைகள் கொடுப்பது என்னவென்றால்,
இந்த ஸம்ஸாரத்திலேயே தரைப் பட்டு அழுந்தி உழல்வதற்கு உறுப்பான ஆபாஸ ஸுகங்களேயாம்.
உண்மையில் இவை ஸுகங்களல்ல; துக்கங்களேயாம்.

இப்படிப்பட்ட துக்கங்களைப்பெற விரும்பி
இவ்வுலகம் ப்ராப்த தேவதையைவிட்டு தேவதாந்தர பஜநம் பண்ணித் திரிகின்றதே!
அநியாமாய் அநர்த்தப் பட்டுப் போகின்றதே!
இதனில் மிக்க பரிதாபமுண்டோ! என்றாராயிற்று.

ஈன்றோளிருக்க மணை நீராட்டி பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகுகாலம்,
தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்,
போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வங் கொண்டாடுந் தொண்டீர்
பெற்றதாயிருக்க மணையடியொற்றியதே. மணை நீராட்டி –
மணை என்றது அசேதந வஸ்துக்களை யெல்லாம் சொன்னபடி.
நீராட்டி என்றது உபசாரங்கள் பலவற்றையுஞ் சொன்னபடி.

‘மணைநீராட்டுமா போலே‘ என்று சொல்லவேண்டுமிடத்து (அவாய் நிலையாக) உவமையை உள்ளடக்கி
மணை நீராட்டி என்றே சொன்னதன் கருத்து யாதெனில், தேவதாந்தர பஜநம் பண்ணுவதோடு
மணை நீராட்டுவதோடு ஒரு வாசியில்லை,
இதுதான் அது, அதுதான் இது என்று இரண்டுக்கு முள்ள அபேதத்தைக் காட்டினபடியாம்.

மாதர்கள் ப்ரஸவித்தவுடனே பெற்ற அத்தாயையும் பிறந்த சிசுவையும் ஸ்நாநஞ்செய்வித்தல்
மலை காட்டு வழக்கமாக வெகு முற்காலத்தில் இருந்ததாம்.
ப்ரஸவித்தவுடனே தாயை நீராட்டுவது பலவகைக் கஷ்டங்களுக்குக் காரணமாவதால்
அத் தாய்க்குப் பதிலாக ஒரு மணைக் கட்டையை ஸ்நானஞ்செய்விப்பது
இடைக் காலத்து வழக்கமாக இன்றைக்கும் நடந்து வருகின்றதாம்.
அதனைத் திருவுள்ளம் பற்றி இங்கு ஆழ்வார் இப்படி அருளிச்செய்தார் என்று சிலர் சொல்லுவர்.

புடைப்பலதானறி தெய்வம் பேணுதல் –
புடை என்றது ஏதோவொரு பக்கம் என்றபடி,
வேதத்தில் ஏதோ ஒரு மூலையில் சிவன் என்றும் ருத்ரன் என்றும் ஹிரண்ய கர்ப்பன் என்றும்
சில பதங்கள் கிடந்தால் அவற்றின் பிரகரணத்தையும் பொருளையும் தெரிந்து கொள்ளாது
அந்த தேவதைக்குப் பரத்துவஞ் சொல்லியிருப்பதாகக் கொள்வார்களே சிலர் அதைச் சொல்லுகிறது.
ஆனது பற்றியே தானறிதெய்வம் என்றுஞ் சொல்லப்பட்டது. புதரகாமவம் என்றபடி
அவரவர்கள் பற்றும் தெய்வங்கள் பலபலவாயிருப்பது பற்றிப் பலதெய்வம் பேணுதல் என்றார்.

தனது என்பது ‘தானது‘ என்று நீட்டல் விகாரம் பெற்றுக் கிடக்கிறது.
‘புல்லறிவாளன்‘ என்று விவேகமற்றவனைச் சொல்லுகிறது
புல்லறிவாண்மையாவது அவிவேகம் கொல்வன முதலா அல்லன –
இவ்வாழ்வார் தாமே திருவாய்மொழியில் “தீர்ப்பாரையாமினி“ என்ற திருவாய்மொழியில்
“நீர் எதுவானுஞ் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியுந் தூ வேல்மின்“ என்றும்,
“நீர்கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் ளனிழைத்தென்பயன்“ என்றும்,
“அணங்குக் கருமருந்தென்றங்கோர் ஆடுங் கள்ளும்பராய்“ என்றும்,
“ஏதம் பறைந்து அல்ல செய்து கள்ளூடு கலாய்த்தூய் கீதமுழவிட்டு நீரணங்காடுதல் கீழ்மையே“ என்றும்
அருளிச்செய்தவை இங்கு அநுஸந்திக்கத்தகும்.

இன்புதுன்புஅளி – அளிப்பது அளி, அதாவது கொடுக்கும் வஸ்து,
தேவதாந்தரங்கள் தரும்பொருள் யாதெனில், இன்பு துன்பு – இன்பாவது ஸுகம், துன்பாவது துக்கம்,
ஸுகமென்று பரமிக்கக்கூடிய துக்கமென்றவாறு ஸம்ஸாரத்தில் கிடைக்கும் ஸுகங்களெல்லாம் இப்படிப்பட்டவையேயாம்.
பிள்ளை பெறுவது செல்வம் பெறுவது என்னுமிவை மேலெழப்பர்க்கையில் ஸுகமாகத் தோன்றி,
வரவரத் துன்பமாகவே முடிகின்றமையைப் பன்னி யுரைக்குங்காற் பாரதமாம்.

தேவதாந்தர பஜனம் பண்ணுவது நித்ய ஸம்ஸாரியா யொழிவதற்கு க்ருஷி பண்ணுவதே யன்றி
வேறில்லை யென்பதைக் கூறி முடிக்கிறார்
தொன் மா மாயப் பிறவியுள் நீங்காப் பன்மா மாய்த் தழுந்துமா நளிர்ந்தே என்று.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -5–

February 24, 2021

மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி, மண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது
ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள் நாடுவியந் துவப்ப,வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு மலர்க்கண் ணோடு கனிவா யுடையது
மாய்இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன கற்பகக் காவு பற்பல வன்ன
முடிதோ ளாயிரம் தழைத்த நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே?

பதவுரை

மா முதல் அடி போது ஒன்று-(உலகத்துக்கெல்லாம்) மூலாதாரமாகிய திருவடிகளில் ஒன்றை
கவிழ்ந்து அலர்த்தி–நில மட்டமாகப் பரப்பி
மண் முழுவதும்–பூமியை யெல்லாம்
அகப் படுத்து–திருவடிக்குள்ளடக்கி ஸ்வாதீனப் படுத்திக் கொண்டும்
ஒண் சுடர் அடி போது ஒன்று–அழகிய தேஜஸ்ஸு நிறைந்த மற்றொரு திருவடித் தாமரையை
நான் முகன் புத்தேள் நாடு-பிரம தேவனுடைய உலகமானது
வியந்து உவப்ப–ஆச்சரியமும் ஸந்தோஷமும் அடையும் படியாகவும்
வானவர்–மற்றுமுள்ள தேவர்கள்
முறை முறை–சாஸ்திர விதிப்படி
வழி பட–ஆராதிக்கும்படி யாகவும்
விண்செலீஇ நிறீஇ–ஆகாசத்திலே செலுத்தி நிறுத்தி
தாமரைக் காடு மலர் கண்ணொடு–தாமரைக் காடு மலர்ந்தாற் போலிருக்கிற திருக் கண்களையும்
கனி வாய் உடையதும் ஆய்-கொவ்வைக் கனி போன்ற திரு அதரத்தையும் உடையவனாயும்
இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன–பெரிய ஆயிரம் ஸூர்யர்கள் சேர்ந்து உதித்தாற் போன்ற
முடி–திரு வபிஷேகத்தை யுடையனாயும்
பல பல கற்பகம் காவு அன்ன–பல வகைப் பட்ட கற்பகர் சோலைகள் போலே
தோற் ஆயிரம் தழைத்த–ஆயிரம் திருத் தோள்களை பணைத்திருக்கப் பெற்றவனாயுமுள்ள
நெடி யோய்க்கு அல்லதும்–பரம புருஷனான உனக்குத் தவிர (வேறு யார்க்கேனும்)
உலகு அடியதோ–இவ் வுலகம் அடிமைப் படக் கூடியதோ?

(மாமுதல்)
எம்பெருமான் உலகமளந்த சரிதையை அநுஸந்தித்து,
‘இப்படியும் ஒரு ஸெளலப்யமும் ளௌசீல்யமும் உண்டாவதே!‘ என்றீடுபட்டு
ஆச்ரிதர்க்காகத் தன்னை அழிய மாறிக் காரியஞசெய்கிற மஹோபகாரகனாகிய பரமபுருஷனுக் கன்றி
வேறு யாருக்கு இவ் வுலகம் அடிமைப்பட முடியும்?

எல்லார் தலையிலும் திருவடிகளைப் பரப்பின தெய்வத்தை நோக்கி
“அன்றிவ்வுலகமளந்தாய் அடிபோற்று“ என்று மங்களாசாஸநம் பண்ணுகை ஏற்குமே யன்றி
அவன் திருவடிகளின் கீழ் துகையுண்ட சிலரை நோக்கி
‘ஜய விஜயீபவ‘ என்னக் கூடுமோ வென்கிறார்.

மா முதல் –
என்பதைத் திருவடிக்கு விசேஷணமாக்கி உரைப்பதன்றி அண்மை விளியாகக் கொண்டு
உலகங்கட்கெல்லாம் ஆதி காரணனான எம்பெருமானே! என்று
ஸம்போதநமாக உரைத்தலும் ஒக்கும்.

போது –புஷ்பம், அதாவது
தாமரைப்பூ
அடிப்போது
பாதாரவிந்தம்.
இதைக் கவிழ்த்துப் பரப்பிப் பூமண்டலம் முழுவதையும் ஸ்வாதீனப் படுத்திக் கொண்டானாயிற்று.

செலீஇ- செலுத்தி சொல்லிசையளபெடை.
“வானவர் முறை வழிபடநெறீஇ“ என்றே பெரும்பாலும் ஓதுகின்றனர்.
நிறீஇ என்ற பாடமும், நிறுத்தி என்று அதற்குப்பொருளும் அஸ்மதாசார்யர் அருளிச் செய்த்து.
நெறீஇ என்ற பாடமும் பொருந்தும், வியாக்கியானத்திற்கும் இணங்கும்.
வானவர் – தேவர்கள்,
நெறீஇ – நல்வழிப்பட்டு,
முறை முறை – சாஸ்த்ர விதிப்படி,
வழிபட – ஆராதிக்கும்படியாக என்று பொருளாகக் கடவது.
நெறீஇ – இறந்தகால வினையெச்சம். நெறி – பகுதி,
இ-இறந்த கால வினையெச்ச விகுதி,
இகரம் ஈகாரமானதும் அளபெடுதத்தும் விகாரம்.
நான்முகப் புத்தேள் –புத்தேள் என்று தெய்வத்திற்குப் பெயர் நான் முகன் – புத்தேள், நான்முகப்புத்தேள் பிரமதேவன் என்றபடி.
அவனுடைய நாடு வியந்து உவப்ப என்றது – அவனுடைய நாட்டிலே உள்வர்கள்
‘தாமரை போல் பரம போக்யமான ஒரு திருவடி இங்கே வந்து ஸேவை ஸாதிப்பதே!‘ என்று
ஆச்சரியமும் ஸந்தோஷமும் அடைய என்றபடி.

தாமரைக்காடு என்று தொடங்கி உலகளந்த பெருமானுடைய சில அவயவங்களையும்
திருவபிஷேகத்தையும் வருணிக்கிறது.
இப்படி விலக்ஷணனான பரமபுருஷனுக்குத் தவிர மற்று யார்க்கேனும் அடிமைப்பட உரியதோ இவ்வுலகம்?

நெடியோன் என்பதன் முன்னிலை நெடியோய் என்பது.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -4–

February 24, 2021

ஊழிதோறூழி ஓவாது வாழியே, என்று யான்தொழ இசையுங் கொல்?,
யாவகை யுலகமும் யாவரு மில்லா, மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்
கெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான் ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல நுதலிமூ வுலகம் விளைத்த உந்தி,
மாயக் கடவுள் மாமுத லடியே.

பதவுரை

யாவகை உலகமும்–எவ்வகைப்பட்ட லோகங்களும்
யாவரும்–எவ்வகைப்பட்ட பிராணிகளும்
இல்லா–இல்லாமலிருந்த
மேல் வரும் பெரு பாழ் காலத்து-கீழ்க் கழிந்த மஹா ப்ரளய காலத்தில்
இரு பொருட்கு எல்லாம்–எண்ணிறந்த ஆத்ம வஸ்துக்களுக்கெல்லாம்
பெறல் அரு தனி ஒரு வித்து தான் ஆகி-பெறுதற்கரிய மூவரைக் காரணமும் தானேயாய்க் கொண்டு
தெய்வம் நான் முகன் கொழு முளை ஈன்று-நான்முகக் கடவுளாகிற சிறந்த ஒரு முளையைப் படைத்து
முக்கண் ஈசனோடு பல தேவு நுதலி-முக் கண்ணனான சிவன் முதலி பல தேவங்களை உண்டாக்கி (ஆக இவ் வகையாலே)
மூ உலகம் வளைத்த உந்தி-மூன்று லோகங்களையும் உண்டாக்கின திரு நாபியை யுடையவனாய்
மாயன்–ஆச்சர்ய பூதனாய்
கடவுள்–ஸர்வோத்தமனான ஸ்ரீமந் நாராயணனுடைய
மா முதல் அடியே–(உஜ்ஜீவனத்திற்கு) மூல காரணமான திருவடிகளையே
ஊழி ஊழி தோறு ஸர்வ காலமும்
ஓவாது–இடைவிடாமல்
வாழிய என்று யாம் தொழ இசையும் கொல்-‘வாழ்ந்திடுக‘ என்று நாம் சொல்லி வணங்கும்படியாக (பாக்கியம்) வாய்க்குமோ.

(ஊழிதோறூழி)
கீழ்ப் பாட்டில் தனிமாத் தெய்வத் தடியவர்க்கிணை நாமாளாகவே இசையுங்கொல்“ என்று
பாகவத சேஷத்வம் நமக்குக் கிடைக்குமா? என்று மனோ ரதித்தார்,
பாகவதர்களை அநுவர்த்தித்துப் பார்த்தார்,
அவர்கள் எப்போதும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு… உன சேவடி செவ்வி திருக்காப்பு“ என்று
எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாஸநம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தார்கள்,

அதைப் பார்த்து ‘இவர்களுடைய காலக்ஷேபமேயன்றோ நமக்கு உத்தேச்யம்,
இவர்களோ இடைவிடாது எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாஸநமே பண்ணிக் கொண்டிரா நின்றார்கள்.
இது மிக அழகாயிரா நின்றது
இப்படிப்பட்ட போது போக்கு நமக்கும் கிடைக்குமாகில் நலமாயிருக்குமே!‘ என்று கொண்டு,
அப்படிப்பட்ட பாக்கியம் வாய்க்குமா என்கிறார் இதில்.

யாவகையுலகமும் என்று தொடங்கி மாயக்கடவுள் என்னுமளவும்
எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகிறார்.

“பன்மைப் படர் பொருளாதுமில் பாழ் நெடுங்காலத்து நன்மைப் புனல் பண்ணி
நான் முகனைப் பண்ணித் தன்னுள்ளே, தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே“ என்ற பாசுரம்
இங்கு ‘அநுஸந்திக்கத்தகும்.

சேதந வர்க்கங்களிலும் அசேதந வர்க்கங்களிலும் ஒன்றுமில்லாதபடி மஹா ப்ரளயங் கோத்த காலத்தில்,
தேவ மநுஷ்யாதி ரூபத்தாலே எண்ணிறந்தவைகளாய் அசித்தோடே கலசிக் கிடப்பவையான
ஜீவ வஸ்துக்களுக்கெல்லாம் தானே காரணமாயிருப்பவன் எம்பெருமான்.

தனி வித்து ஒரு தானாகி –
தான் ஒரு தனி வித்தாகி என்று அந்வயிப்பது.
வித்தாகி என்னாமல் ஒரு வித்தாகி என்னாமல் ஒரு தனி வித்தாகி என்றதனால் –
நிமித்த காரணம் ஸஹகாரி காரணம் உபாதான காரணம் என்கிற மூவகைக் காரணங்களும்
எம்பெருமான் தானே யாகிறான் என்று தெரிவிக்கப் பட்டதாயிற்று.

உலகில் குடம் துணி முதலிய வஸ்துக்கள் ஜனிக்க வேணுமானால் மேற் சொன்ன முக்காரணங்களும் அமைய வேண்டும்,
பானைக்கு மண் உபாதான காரணமென்றும்,
சக்கரம் தடி தண்ணீர் முதலியவை ஸஹகாரி காரணமென்றும்,
குயவன், காலம், அத்ருஷ்டம் முதலியன் நிமித்த காரணமென்றும் சொல்லப் படும்.

கார்ய வஸ்துக்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட காரணங்கள் இருந்தாக வேண்டுமாகில்
பிரபஞ்சமாகிற காரியத்திற்கு எது உபாதான காரணம்? எது ஸஹகாரி காரணம்? எது நிமித்தகாரணம்?
என்று கேள்வி பிறக்குமே,
எம்பெருமான்றானே மூவகைக் காரணமுமாகிறானென்பது வேதாந்திகளின் கொள்கை.
இஃது இங்கு விரிப்பிற் பெருகும்.

மேல் வரும் என்பதற்கு, கீழே கழிந்த என்று பொருள் கொள்ளுதல் விபரீத லக்ஷணை யினாலென்க.
இங்கு வியாக்யான ஸ்ரீஸூக்கி –
“மேலென்றது பண்டென்றபடி,
வருமெறது போனவென்றபடி.

அரும் பெறல் என்றது நிர்ஹேகத்வத்தைக் காட்டும்.
இப்படிப்பட்ட விலக்ஷணமான தொரு காரண வஸ்துவானது ஸம்ஸாரிகளிடத்திலுள்ள கிருபையினால்
தானாகவே வந்து முகங்காட்டிக் காரியம் செய்த்தென்கை. அன்றி, ஒருவகை முயற்சியால் பெற முடியாதது.

அத்வாரக ஸ்ருஷ்டியென்றும் ஸத்வராக ஸ்ருஷ்டியென்றும் ஸ்ருஷ்டி இரு வகைப் படும்.
எம்பெருமான் தானே ஸ்ருஷ்டிப்பது அத்வாரக ஸ்ருஷ்டியாம்,
ஒருவன் மூலமாக ஸ்ருஷ்டிப்பது ஸத்வராக ஸ்ருஷ்டியாம்.
அண்ட ஸ்ருஷ்டி வரையில் தானே ஸ்ருஷ்டிப்பதலால் அது அத்வாரக ஸ்ருஷ்டி இவ் வருகுள்ள வற்றை
நான்முகன் மூலமாக ஸ்ருஷ்டிக்கிறானாகையாலே இவற்றின் ஸ்ருஷ்டி ஸத்வாரக ஸ்ருஷ்டி.

இதைச் சொல்லுகிறார் மேல்
தெய்வ நான்முகக் கொழு முளையீன்று என்று.
கப்பும் கிளையுமு காயும் கனியும் முளையினின்று உண்கிறபடியால் நான்முகன் இங்கு ஒரு முளையாகக் கூறப்பட்டான்
கொழு முளை என்றது சிறந்த அங்குரம் என்றபடி.
இப்பாலுள்ள கார்யவர்க்கங்களை யெல்லாம் உண்டாக்குகைக்குப் பாங்கான யோக்யதையை யுடையவன் பிரமன் என்றவாறு.

“நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனுந் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் என்றபடி
பிறகு அடைவே பல தேவதைகளையும் ஸ்ருஷ்டித்தானனாதலால்
தேவ பல நுகலி என்றும் அருளிச் செய்தார்.

ஆக, ஸத்வாரக ஸ்ருஷ்டியாலே உண்டாக்கின ஸகல வஸ்துக்களுக்கும் மூல கந்தம் திருநாபி யாகையாலே
மூவுலகம் விளைத்த வுந்தி என்றார்.
இப்படிப்பட்ட திருவுந்தியை யுடைய மாயக் கடவுளுண்டு –
ஆச்சரியமான ஞான சக்திகளுடையனான ஸர்வேஸ்வரன்
அவனுடைய திருவடிகளை, ஊழி தோன்றி யோவாது வாழிய வென்று யாக தொழ விசையுங்கொல்.

அந்தத் திருவடிகளை ஸ்ரமப்டுத்திக் காரியங் கொண்டவர்களைப் போலே நாமும் ஆகாமல்
அவற்றுக்குப் பல்லாண்டு பாடப் பெற வேணும்.

வாழிய – வியங்கோள்வினை முற்று.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -3–

February 24, 2021

குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம் மூன்றுடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வ னாகி, சுடர் விளங் ககலத்து
வரை புரை திரை பொர பெருவரை வெருவர, உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர
வரசுடல் தட வரை சுழற்றிய, தனிமாத் தெய்வத் தடியவர்க்கினி நாம் ஆளாகவே
இசையுங்கொல், ஊழிதோறூழி யோவாதே?

பதவுரை

மூன்று உலகம்–மூவுலகங்களும்
நெறிபட–நல்வழி படி தந்து உஜ்ஜிவிக்கும் படியாக
குறிப்பில் கொண்டு–திருவுள்ளம் பற்றி,
உடன் வணங்கு தோன்று புகழ்–அவ் வுலகங்களெல்லாம் ஒன்று சேர்ந்து வணங்கப் பெற்றமையால் ப்ரஸித்தமான கீர்த்தியை யுடையனாய்
ஆணை மெய் பெற நடாய்–தனது ஆஜ்ஞையைத் தடையின்றிச் செலுத்துமவனாய்
தெய்வம் மூவில் முதல்வன் ஆகி–மூன்று மூர்த்திகளுக்குள்ளே ப்ரதானனாய்
சுடர் விளக்கு அகலத்து–திருவாபரணச் சோதி விளங்குகின்ற திரு மார்பை யுடையனாய்,
வரை புரை–மலை போன்ற
திரை-அலைகள்
பொரு–எறியப் பெற்றதும்,
பெரு வரை வெருவர–குல பர்வதங்களும் அஞ்சும்படியாக
உரம் முரல் ஒலி மலி–இடி போல் ஒலிக்கின்ற கோஷம் நிறைந்ததும்
நளிர்-குளிர்ச்சியை யுடையதுமான
கடல்-கடலில்
படம் அரவு அரசு உடல் தட வரை–படங்களை யுடைய ஸர்ப்ப ராஜனாகிய வாஸுகியின் உடலை (மந்தரமென்கிற) பெரிய மலையிலே
சுழற்றிய-கட்டிச் சூழற்றினவனாய்,
தனி–அத்விதீயனான
மர தெய்வம்–தேவாதி தேவனுடைய
அடியவர்க்கு–பக்தர்களுக்கு
நாம் இனி ஊழி தோறு ஊழி ஓவாது ஆள் ஆக இசையும் கொல்-நாம் இனி ஸர்வ காலமும் இடையறாது ஆட்ப் பட்டிருக்கப் பொருந்துமா.

(குறிப்பில் கொண்டு)
பகவத் பக்தியைப் பற்றிப் பேசினார் கீழ்ப் பாட்டில்
பகவானோடு நின்று விடாமல் பாகவதாளவுஞசென்று பக்தி பண்ணுகை ஸ்வரூபமாதலால்
அப்படிப்பட்ட பாகவத பக்தி நமக்கு இனி ஒருநாளும் வழுவாமல் சாச்வதமாக உண்டாகக் கூடுமோவென்று
அந்த நிஷ்டையில் தமக்குண்டான அவாவை வெளியிடுகிறார் இதில்.

குறிப்பில் கொண்டு என்று தொடங்கித் தனிமாத் தெய்வம் என்னுமளவும்
எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களைச் சொல்லுகிறார்.

உலகம் மூன்ற நெறிப்படக் குறிப்பில் கொண்டு உடன் வணங்கு தோன்று புகழ் –
தன்னாலே படைக்கப்பட்ட மூவுலகங்களும் தீ வழியில் செல்லாமல் நல் வழியில் படிந்து
உஜ்ஜிவிக்க வேணுமென்று திருவுள்ளம் பற்றி
அப்படியே அவை நல்வழி படிந்து தன்னை வணங்க
அதனால் எங்கும் பரந்த புகழை யுடையவன் என்கிறது.

ஆணை மெய் பெற நடாய –
ஆணையாவது ஆஜ்னஞ, எம்பெருமானுடைய ஆஜ்ஞையாவது சாஸ்த்ரம்,
ச்ருதி ஸ்மருதிர் மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்கய் வர்த்தசே –
ஆஜ்ஞாச்சேதீ மமத்ரோஹீ மத்பக்தோபி ந வைஷ்ணவ * என்று எம்பெருமான் தானே அருளிச் செய்திருக்கிறபடி
ச்ருதி ஸ்ம்ருதிகள் முதலிய சாஸ்த்ரங்களாகிற திவ்யாஜ்ஞையைத் தடையின்றி எங்கும் நடத்துபவன் என்கை.

“கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற் பொருள் தானும், மற்றை நிலைகளும்
வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து“ என்றபடி தன்னாலே அளிக்கப்பட்ட சாஸ்த்ரங்கள்
பழுது படாதபடி அவற்றை உலகில் நன்கு பிரசாரம் செய்விப்பவன் என்றாவறு.

தெய்வம் மூவரில் முதல்வனாகி –
அரி அயன் அரன் என்று சொல்லப்படுகிற மூன்று தெய்வங்களுள் முதல் தெய்வம் தானாயிருக்கை.
“ஆணை மெய் பெற நடாய தெய்வம் மூவரில்“ என்று சேர்த்து
நடாய என்பதை தெய்வம் மூவர்க்கும் விசேஷணமாக அந்வயிப்பதும் பொருந்தும்.
அப்போது,
எம்பெருமானாகிய தன்னுடைய“ ஆஜ்ஞையை உள்ள படி பரிபாவிக்கின்ற
பிரமன் சிவன் இந்திரன் என்னும் மூவர்க்கும் நியாமகன் என்று பொருளாம்.
இப்போது, மூவரில் என்றது மூவர்க்கும் என்றபடி.

சுடர் விளக்கு அகலத்து –
சுடராவது தேஜஸ்ஸு,
திருவாபரணங்களாலுண்டாகும் தேஜஸ்ஸைச் சொல்லுகிறது.
திருவாபரணச் சோதியாலே பளபள வென்று விளங்குகின்ற திருமர்பை யுடையவனாய் என்றபடி.

வரை புரை நிரை பொரு என்று தொடங்கித் —
தட வரை சுழற்றிய என்னுமளவும் ஒரு வாக்கியம்.

துர்வாஸ முனியின் சாபத்தால் தேவர்களின் செல்வம் யாவும் கடலில் ஒளிந்து ஒழிந்து விடவே
அசுரர் வந்து பொருது அமரரை வென்றனர்,
பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து அப் பிரான் அபயமளித்துக் கட்டளை யிட்டபடி
அசுரர்களையும் துணைக் கொண்டு மந்தர மலையை மத்தாக நாட்டி வாஸுகி யென்னும் மஹா நாகத்தைக்
கடை கயிறாகப் பூட்டிப் பாற் கடலைக் கடையலாயினர்.

அப்போது மத்தாகிய மந்தரகிரி கடலிலுள்ளே அழுந்தி விட, தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர்
ஆமை வடிவமெடுத்து அம் மலையின் கீழே சென்று அதனைத் தனது முதுகின் மீது கொண்டு தாங்கி
அம்மலை கடலில் அழுந்திவிடாமற் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளி யிருந்தனன்.
அப்போது வாஸுகி நாகத்தின் வாலைப் பிடித்துக் கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக் கொண்ட அசுரர்களும்
ஆகிய இரு திறந்தாரும் அதனை வலியப் பிடித்து இழுத்துக் கடைய வல்ல வலிமை யில்லாதவராய் நிற்க
அது நோக்கி அத் திருமால் தான் ஒரு திருமேனியைத் தரித்து
தேவர்கள் பக்கத்திலேயும் வேறொரு திருமேனியைத் தரித்து
அசுரர்கள் பக்கத்திலேயும் நின்று
வாஸுகியின் வாலையும் தலையையும் பிடித்து வலமும் இடமுமாக இழுத்துக் கடைந்தனன் என்ற வரலாறு அறியத் தக்கது.

கடைகிற அக் காலத்தில் கடலானது மிகவும் பயங்கரமாக இருந்த்தென்பதைக் கூறுகின்றார்
வரை புரை திரை பொரு என்று தொடங்கி.
அப்போது கடலில் ஸாதரணமான அலைகள் கிளம்பவில்லை,
ஒவ்வொரு அலையும் ஒவ்வொரு மலை பெயர்ந்தாற்போலே பெயர்ந்து ஏறிந்ததாம்.

புரை – உவமவுருபு, மலை போன்ற (பெருப் பெருத்த) அலைகள்,
பொரு – மோதப் பெற்ற, இது கடலுக்கு விசேஷணம்.
உருமுரலொலிமலி என்பதும் கடலுக்கு விசேஷணம்
கடைகிற காலத்தில் கடலில் உண்டான த்வனி யானது இடி யிடித்தாற் போலிருந்ததாம்.
அந்த த்வனி குல பர்வதங்களையும் நடுக்கி அசைக்கவற்றா யிருந்தமை தோற்றப் பெரு வரை வெரு வர எனப்பட்டது.

உரும் என்றும் உருமு என்றும் இடிக்குப் பெயர்,
உரும்முரல் என்று பிரிக்க.
இடி போலே முரல்கின்ற (கோஷிக்கின்ற) யாதொரு ஒலியுண்டு
அது மலி – நிறைந்திருக்கிற என்றபடி.
“வரை புரை திரை பொரப் பெரு வரை வெருவுற“ என்ற பாடமும் ஒக்கும்.

நளிர் கடல் –
குளிர்ந்த கடலிலே, கடலுக்கு இயற்கையாகவுள்ள குளிர்த்தியைச் சொல்லுகிறதன்று இங்கு,
கீழ்ச் சொன்னபடி பயங்கரமாயிருக்கச் செய்தேயும்
எம்பெருமானுடைய கடாக்ஷம் பட்ட மாத்திரத்தில் குளிர்ந்தபடியைச் சொல்லுகிறது.

இப்படிப்பட்ட கடலிலே மத்தாக நாட்டின மந்தர மலையிலே வாஸுகி நாகத்தைக் கடை கயிறாகக் கட்டிச் சுழற்றிய
யாதொரு தனிமாத தெய்வமுண்டு – ஒப்புயர்வற்ற பர தேவதை,

அதற்கு நாம் ஆளாவதிலுங்காட்டில்,
அதற்கு ஆட்பட்டிருக்கும் அடியவர்களுண்டே,
அவர்கட்கு (ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு) இனிமேலுள்ள காலமெல்லாம் நாம் ஆட்பட்டிருக்க வாய்க்குமா?
இப்படிப்பட்ட மஹா பாக்யமும் நமக்குக் கிடைக்குமோ? என்றாராயிற்று.

ஆளாகவே என்ற விடத்திலுள்ள ஏகாரத்தைப் பிரித்து
“அடியவர்க்கே“ என்று கூட்டிக் கொள்ளலாம்.

பிரயோஜனாந்தர பாரான தேவைதைகளுக்காகத் தன் உடம்பு நோவக் கடலைக் கடைந்து
அம்ருதத்தைக் கொடுத்தானென்கிற மஹோபகாரத்தில் ஈடுபட்டிருக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே ஆட் பட்டிருக்க விரும்பினாராயிற்று.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -2–

February 24, 2021

உலகு படைத் துண்ட எந்தை, அறை கழல் சுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு,
அவாவா ருயிருகி யுக்க,நேரிய காதல் அன்பி லின்பீன் தேறல்,
அமுத வெள்ளத் தானாம் சிறப்பு விட்டு, ஒரு பொருட்கு
அசைவோர் அசைக, திருவொடு மருவிய இயற்கை, மாயாப் பெருவிற லுலகம்
மூன்றினொடு நல் வீடு பெறினும், கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?

பதவுரை

உலகு–உலகங்களை
படைத்து–ஸ்ருஷ்டித்து
உண்ட–(பிரளய காலத்தில்)விழுங்கிய
எந்தை–ஸர்வேச்வரனுடைய
அறை கழல் சுடர் பூ தாமரை–ஆபரண வொலி பொருந்திய திருவடிகளாகிற அழகிய தாமரை மலர்களை
சூடுதற்கு–சிரோ பூஷணமாக அணிவதற்கு
அவாவு–ஆசைப் படுகின்ற
ஆர் உயிர்–அருமையான ஆத்மாவானது
உருகி உக்க–நைந்து சிதிலமாக
நேரிய–(அந் தத்யானத்தால்) ஸம்பவித்த பக்தியாகிய
அன்பில்–ஆசைப் பெருக்கத்தில் உற்பவித்து
இன்பு ஈன் –இன்பத்தைக் கொடுக்கிற
தேறல்-தேன் போலிருக்கிற (அல்லது, தேனாகிய)
அமுதம் வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு–அமிருத ப்ரவாஹத்தில் மூழ்கி யிருக்கையாகிற பெருமையை விட்டிட்டு
ஒரு பொருட்டு அசைவோர்–க்ஷூத்ரமான வொரு பலனுக்காக அலைகின்றவர்கள்
அசைக–அப்படியே அலையட்டும்; (அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை?)
திருவோடு மருவிய இயற்கை–செல்வத்தோடு எப்பொழுதும் சேர்ந்திருக்கையாகிற நித்ய ஐச்வர்ய நிலைமை யென்ன.
மாயா பெரு விறல்–அழியாத பெரு மிடுக்கென்ன
உலகம் மூன்றினொடு–மூவுலகுக்கும் நாயகனாயிருக்கை யென்ன
நல்வீடு–உத்தமமான மோக்ஷ பதவி யென்ன (ஆகிய இவற்றை)
பெறினும்–பெறுவதாயிருந்தாலும்
தெள்ளியதோர்–விவேகிகளுடைய
குறிப்பு-அந்தரங்கமானது
கொள்வது எண்ணுமோ–பெற்றுக்கொள்ள நினைக்குமோ?

[உலகு படைத்து.]
கீழ்ப் பாட்டில் எம்பெருமானுடைய விலக்ஷணமான திருமேனி யழகை அநுஸந்தித்த ஆழ்வார்,
இப்படி பரம விலக்ஷணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைச் சென்னியிற் சூட வேணும் என்று
ஆவல் கொண்டிருப்பதே யன்றோ புருஷார்த்தம்;

இவ் வுலகிலுள்ள பாவிகள் இதனை யறியாதே
‘பிள்ளை வேணும் குட்டி வேணும் சேலை வேணும் செல்வம் வேணும்’ என்ரு க்ஷுத்ர பலன்களை யெல்லாம் விரும்பி
இவை கொடுப்பாரென்று கண்டவிடமெங்கும் அலைந்து திரிகிறார்களே! அந்தோ! இஃது என்ன கொடுமை!
என்று முதலிலே திருவுள்ளம் நொந்து அப்படிப்பட்ட க்ஷுத்ரர்களைப் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேணும்!
அவர்கள் இஷ்டப்படி அலைந்துழலட்டும்,
*உண்டியே உடையே உகந்தோடுமிம்மண்டலத்தாரைப் பற்றி நாம் சிந்திக்கவே வேண்டா,

பகவத் பக்தி தலை யெடுத்த மஹான்களும் இப் பூமியின் கண் இருக்கிறார்களன்றோ
அவர்களுடைய அத்யவஸாயத்தைக் கண்டு நாம் உகப்போம் – என்று பரம பக்தர்களுடைய
அந்தரங்க வுறுதியைப் பேசி மகிழ்கிறார் இப் பாட்டில்.

திருச் சந்த விருத்தத்தில் –
“கேடில் சீர் வரத்தனாங் கெடும் வரத்தயனரன், நாடினோடு நாட்ட மாயிரத்தனோடு நண்ணினும்,
வீடதான போகமெய்தி வீற்றிருந்த போதிலும் கூடுமாசை யல்ல தொன்று கொள்வனோ குறிப்பிலே“ என்று
திருமழிசைப் பிரான் அருளிச் செய்த பாசுரத்தைப் பெரும்பாலூந் திருவுள்ளத்திற் கொண்டு
இப் பாசுரமருளிச் செய்கிறாரென்பது உய்த்துணரத் தக்கது.

எம்பெருமானைக் கிட்டி அநுபவிப்பதிலுங்காட்டில்
அவ்வநுபவத்தைப் பற்றின மனோ ரதமே நித்யமாய்ச் செல்லுமாகில்
அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தி யுடையவர்களுடைய ஸித்தாந்தம்,
அதைத்தானருளிச் செய்தார் திருமழிசைப் பிரான்.

ப்ரஹ்ம லோக ஸாம்ராஜ்யம் கிடைத்தாலும் ருத்ர லோக ஆதி பத்யம் கிடைத்தாலும்
இந்திர லோகமாளும் பாக்கியம் வாய்ந்தாலும், பரம புருஷார்த்தமாகிய ஒன்றான பரமபதாநுபவமே கிடைப்பதானாலும்
இவற்றையெல்லாம் ஒரு புருஷார்த்தமாகவே மதிக்க மாட்டேன்.

பின்னே எனக்கு எதிலே ஊற்றமென்றால்
‘எம்பெருமானோடு கூட வேணும் எம்பெருமானோடு சேர வேணும் என்று மனோ ரதங்கொண்டிருப்பதுண்டே
அதுதான் எனக்குப் பரம போக்யம் என்றார்.

இஷ்டமான விஷயத்தை அநுபவிப்பதிற்காட்டிலும் அநுபவிப்போம் என்னும் மனோ ரதமே சிறந்ததாமென்பதை
அனுபவ ரஸிகர்கள் எளிதில் உணர்வர். தேனூறி எப்பொழுதுந் தித்திக்கும்படியானது மனோரதமேயாம்.
திருவரங்கஞ்சென்று நம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று ஒருவனுக்கு ஆவல் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்,
ஒருநாள் போய் ஸேவித்து வந்து விட்டால் அவ்வளவிலே ஆசை தீர்ந்து விட்டதாகும்.
அங்ஙனல்லாமல் மனோரதமேயாய்ச் செல்லுமாகில் அது நெடு நாளைக்கு ரஸவத்தரமாயிருக்கும்.
சந்தனம் பூசிக் கொள்ளுதல், புஷ்பஞ் சூட்டிக்கொள்ளுதல், பஞ்சகச்ச வேஷ்டி உடுத்துக் கொள்ளுதல் முதலிய
அலங்கார கார்யங்களில் பிரமசாரிகளுக்கு உள்ள ஆவல் க்ருஹஸ்தர்களுக்கு இல்லாமையும் இங்கு ஒரு உதாஹரணமாகக் காட்டத் தகும்.
ஆகவே அனுபவ நிலைமையிற் காட்டிலும் அநுபவப் பாரிப்பு நிலைமையே சிறந்ததென்பது விளங்கும்.

ஆதியில் உலகங்களைப் படைத்தும்
பிரளயம் வந்தவாறே அவற்றைத் திருவயிற்றிலே வைத்தருளி ரக்ஷித்தும் வருகிற
எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளை நாம் சிரமேல் அணிந்து கொள்ள வேணுமென்று ஆவல் கொண்டு,
அந்த ஆவலினால் நெஞ்சு நீர்ப் பண்டமாக உருகி, மேன் மேலும் பரபக்தி பரம பக்திகள் தலையெடுத்து,
அப்படிப்பட்ட பரம பக்தி நிலைமையிலே அமர்ந்திருக்கை தானே பரம போக்யமானது,
எம்பெருமானது திருவடிகள் தலைமேல் வந்து சேர வேண்டா, திருநாடும் எய்த வேண்டா,
வழுவிலாவடிவமை செய்யப் பெறவேண்டா, இவை நமக்கு வாய்க்க வேணும்” என்கிற ஆவல் ஒன்று மாத்திரம்
அநவரதம் நெஞ்சில் நடையாடுமேல் போதுமானது, இந்த ஆவல் தான் அமுத வெள்ளம்.

இப்படிப்பட்ட ஆவல் பூண்டு
“என் கண்ணனைக் ளென்று கொலோ களிக்கும் நாளே“
“மாயோனை மணத் தூணே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்து நாளே”
“அங்கடியவரோடு என்று கொலோ அணுகுநாளே“
என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கு நாளே“
“அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டு
யானுமிசைந்துடனே என்று கொலோ இருக்குநாளே“ என்றிவை போல்வன பல பாசுரங்களை
வாய் வெருவிக் கொண்டு இதுவே ஒரு ஆனந்தமாகப் போது போக்க ப்ராப்தமாயிருக்க,
இந்தப் போது போக்கை விட்டிட்டுக் கூறை சோறு முதலிய அற்ப்ப் பலன்களை அபேக்ஷித்து
அங்குமிங்கும் அலைந்துழல்கின்ற பாமரர்கள் அப்படியே அலையட்டும்,
அவர்கள் எக் கேடு கெட்டால் நமக்கென்ன! என்கிறார் ஒருபொருட்கசைவோர் அசைக என்னுமளவால்.

தெளிந்த ஞானமுடைய மஹான்கள் இப்படிப்பட்ட க்ஷுத்ர பலன்கள் கையிலே ஸித்தமாக வந்து சேர்ந்தாலும்
உதறித் தள்ளி விடுவர்கள், கீழ்ச்சொன்ன அமுத வெள்ளத்திலேயே அவர்கள் ஊன்றியிருப்பார்கள் என்கிறார் மேல்.

திருவொடு மருவிய இயற்கை பெறிலும், மாயாப் பெரு விரல் பெறினும், உலகம் மூன்று பெறினும்,
நல்வீடு பெறினும் தெள்ளியோர் குறிப்பு (இவற்றைக்) கொள்வதெண்ணாது.
“கூடுமாசை யல்ல தொன்று கொள்வனோ குறிப்பிலே“ என்ற படி எம்பெருமானோடு கூட வேணுமென்கிற
ஆசை யொன்றையே தெள்ளியோர் குறிக் கொண்டிருப்பர் என்றவாறு.
இங்குத் தெள்ளியோர் என்றது திருமழிசைப் பிரானையும் அவர் போல்வாரையும்.

“அவாவாருயிருருகியுக்க“ என்று தொடங்கி “சிறப்பு விட்டு“ என்ற வரையில்
அவர் காதல் அன்பு இன்பு தேறல் அமுதம் என்று ஒரு பொருட் பன்மொழிகளை இனைத்துத் தொடுத்திருப்பதனால்
பகவானுடைய திருவடிகளை முடிமேலணிந்து கொள்வதை ஆசைப் படும் விஷயத்தில் ஆழ்வார்க்குண்டான
ஆதரம் அளவற்ற தென்பது நன்கு வெளிப்படும்.
அவாவாருயிர் என்றவிடத்து “அவா ஆர்“ என்றும் பிரிக்கலாம், ஆசை நிரம்பிய என்று பொருளாம்.

ஒரு பொருட்கு அசைவோர் அசைக –
ஸம்ஸாரிகள் விரும்பும் பொருள்களை ஆழ்வார் தமது திரு வாக்காலே சொல்லவும் கூசி ஒரு பொருட்டு என்கிறார்.

திருவொடு மருவிய இயற்கை –
நாலு நாளில் அழிந்து போகக் கூடிய ஐச்வரியமல்லாமல் எப்போதும் ஸ்திரமாயிருக்கக் கூடிய
ஐச்வரியத்தைப் பெற்றாலும் என்றபடி.
மருவுதல் – எப்போதும் கூடியிருத்தல்.
இயற்கை – கன்மை,
ஐச்வரியத்தோடு எப்போதுங் கூடியிருக்குந் தன்மையாவது நித்ய ஸ்ரீமனாக இருக்கை.
அப்படிப்பட்ட நிலைமையையும் தெள்ளியோர் குறிப்பு வேண்ட மாட்டாதாம்.

மாயா பெரு விறல் –
ஐச்வரியம் அளவற்றிருந்தாலும் அவற்றை அநுபவிப்பதற்கு உறுப்பான சக்தி
பூர்ணமாக இல்லாவிடில் பயனில்லையே
அந்த சக்தியும் கூடவே கிடைக்கப் பெற்றாலும் அப்போதும் வேண்டார்கள் என்றபடி.

மாயா –மாய்தலாவது அழிதல், அழியாத என்கை.
உலகம் முன்றினொடு கீழே சொன்ன நித்யமான ஐச்வரியம் என்ற மாத்திரமே யல்ல,
மூவுலகத்தையும் ஆளும்படியான பெருஞ்செல்வம் கை புகுந்தாலும் வேண்டார்களென்கை.

பலசொல்லி என்! ஸகல ஐச்வர்யங்களுக்கும் மேற்பட்டதான மோக்ஷ ஸரமராஸ்யந்தானும்
பெறுவதாயிருந்தாலும் “எம்மா வீட்டுத் திறமும் செப்பம்“ என்றும்.
“இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்“ என்றும்
(பாவோ நாத்யத்ர கச்சதி) (வைகுண்டவாஸேபி ந மேபிலாஷ) என்றும்
சொல்லுகிறபடி அந்த மோக்ஷந்தன்னையும் ஒரு பொருளாக மதியார்களென்கை.

ஆக இப் பாட்டால் –
ஸம்ஸாரி களைப் போலே க்ஷுத்ர பலன்களை விரும்பி அலையாமல்
விவேகங்களைப் போலே பகவத் விஷயத்தில் அநு ராகம் மிக்கியிருப்பதே நமக்கு ப்ராப்தம் என்றாராயிற்று.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–தனியன்-அவதாரிகை- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -1–

February 24, 2021

முன்னுரை

இது – மயர்வற மருளப்பெற்ற ஆழ்வார்களுள் தலைவரும், ப்ரபந்தந ஜந கூடஸ்தருமான நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களுள் இரண்டாவதான பிரபந்தம்.

திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி என்ற நான்கு வேதங்களின் ஸாரமாம்.

நாலாயிரப் பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் இது ஆறாவதாகும். யஜுர்வேத ஸாரமுமாம்.

ஆழ்வார் தமது ஞானக் கண்ணுக்கு இலக்கான எம்பெருமானை நோக்கி. ‘தேவரீரை அநுபவிப்பதற்கு இடையூறான தேஹ ஸம்பத்த்தை அறுத்துத் தந்தருளவேணும்‘ என்று ஸம்ஸார ஸம்பந்த நிவ்ருத்தியை அபேக்ஷித்தார் – முதற் பிரபந்தமாகிய திருவிருத்தத்தில்.

ஆழ்வார் அப்படி பிரார்த்தித்த போதிலும், எம்பெருமான் இவ்வாழ்வாரைக் கொண்டு நாட்டுக்கு நன்மையாகச் சில திவ்ய ப்ரபந்தங்களை வெளியிடுவித்து சம்சாரிகளைத் திருத்திப் பணி கொள்ளத் திருவுள்ளம் பற்றினவனாகையாலே

“பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமிந்நின்ற நீர்மை இனியாமுறாமை“ என்று இவர் அபேக்ஷித்த இந்த ஸம்ஸாரத்தை விட்டு விலகி ஒரு

* நலமந்தமில்லதோர் நாட்டிலே போய்ச்சேரவேணுமென்று பாரிப்பது நம்முடைய குணங்களை அநுபவிப்பதற்காகவேயன்றி வேறொன்றுக்காகவன்றே : அந்த குணாநுபவத்தை இவர்க்கு நாம் இவ்விடத்திலேயே வாய்க்கச் செய்வோம்,

இங்கே தானே இவர் குணானுபவனம் பண்ணிக் களித்தாராய், அவ்வநுபவம் உள்ளடங்காமல் புறவெள்ளமிட்டுப் பிரபந்தங்களாகப்பெருகி லோகோபகாரமும் செய்தாராகட்டும்“ என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றித் தனது ஸ்வரூப ரூபகுண விபூதிகளைக் காட்டிக்கொடுக்க

ஆழ்வார் அவற்றைக் கண்டு பரமானந்ந்தம் பொலிய அநுபவிக்கிறார் இத்திருவாசிரியத்தில்.

ஸம்ஸார ஸம்பந்தங் கழிந்து பரமபத்த்திலே போனபின்பு அநுபவிக்க்க்கூடிய எம்பெருமானது

மேன்மையையும் நீர்மையையும் வடிவழகையும் இங்கிருந்துகொண்டே சுருக்கமாக ஏழு பாட்டாலே அநுபவிக்கிறாராயிற்று.

ஆசிரியப் பாக்களினாலமைந்த இத்திவ்யப் பிரபந்த்த்திற்குத் திரு ஆசிரியம் எனத் திருநாமம் வழங்கலாயிற்று.

அடியொன்றுக்கு நான்கு சீராய் இயற்சீர் பயின்றும் வெண்சீர் விரவியும் மூன்றாமடிக்குக் குறையாமல் பலவடிகளால் அகவலோசையுற்று இறுதியில் ஏ யென்னும் அசையுடன் முடிவது ஆசிரயப்பாவாம்.

இது –நேரிசை யாசிரியப்பா, நிலை மண்டில வாசிரியப்பா முதலிய நான்கு வகைகளையுடையது,

எல்லாவடிகளும் நாற்சீராய் ஈற்றயலடி முச்சீராய் முடிவது நேரிசை யாசிரியப்பா.

எல்லாவடிகளும் நான்கு சீராலேயே முடிவது நிலை மண்டில வாசிரியப்பா.

இப்பிரபந்தத்தில் 1,2,3,6-ஆம் பாசுரங்கள் நேரிசையாசிரியப்பாக்கள்.

4,5,7-ஆம் பாசுரங்கள் நிலைமண்டில வாசிரியப்பாக்கள்.

அந்தத்தித் தொடையால் அமைந்ததாம் இப்பிரபந்தம்.

————–

அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளி செய்த தனியன்-
————————————————————————–
காசினியோர் தாம் வாழ கலி யுகத்தே வந்து உதித்து
ஆசிரியப் பா வதனால் அரு மறை நூல் விரித்தானை
தேசிகனை பராங்குசனை திகழ வகுளத் தாரானை
மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே-

காசினியோர் தாம் பூலோகத்திலுள்ளவர்கள்
வாழ உஜ்ஜீவிப்பதற்காக
கலியுகத்தே இக் கலியுகத்தில்
வந்து உதித்து இந் நிலத்தில் வந்து அவதரித்து
அருமறை நூல் விரித்தானை தெரிய வரிதான வேத சாஸ்த்ரங்களை விவரித்தவரும்
தேசிகனை ஆசார்யரும்
திகழ் வகுளம் தாரானை விளங்குகின்ற மகிழ் மாலையை அணிந்துள்ளவருமான
பராங்குசனை நம்மாழ்வாரை
மாசு அடையா மனத்து வைத்து அஹங்கார மமகாரங்களாகிற குற்றங்களற்ற மனத்திலே வைத்து
மறவாமல் ஒருகாலும் மறவாமல்
வாழ்த்துதும் மங்களாசாஸநஞ்செய்வோம்.

————————————————————————–
பர-எதிரிகளை அங்குசம் -புற சமய வாதிகளை–தேசிகன்-ஆசார்யன்-
வெண்பா போல் ஆசிரிய பா -ஒரு வகை–அரு மறை-அரிய வேதம்-
காசினி-பூமி-தானே பிரகாசிக்கும் காசினி-

பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் தனியனுக்கு –
மணி பிரவாளம்-முத்து பவளம்-ஹாரம் போல்-கண்டத்துக்கு மேல் ஓன்று அறியாத காசினியோர்
ஆத்ம ஷேமம் பார்க்காமல்–கலி கோலாகலம் குறைக்க -யுவ வர்ண -கிரமம் படி உதித்தார்–ஆவிர்பூதம் ஆனார்-
உதயம்-சூர்யன்-வகுள பூஷண பாஸ்கரன் –அஞ்ஞானம் இருட்டு விலக்க –
கிருத யுகம் பிராமண-தத்தாத்ரியன் — திரேதா -ஷத்ரியன்- ராமன் –துவாபர -வைஸ்யன் -கண்ணன் -கலி -பராங்குசன்
லோகாந்தரத்தில் இருந்து வந்து உதித்தார் –

அவதரித்து செய்த கார்யம்–ஆசிரிய பா இனத்தில் -விஸ்தாரம்-புரியும் படி அரிய வேதத்தை விரித்து
அதுவே நிரூபகம் ஆகும் படி-விரித்தான்-என்கிறார்–
தொண்டு வைத்தே அருள பாடு போல்..–

வண் தமிழ் நூல் ஆக்கினார்—எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் –
மூன்று ஏற்றம்-ஆயிரம்-தமிழ்-இனிமை-
வேதார்த்த தரிசியான பராங்குச தேசிகன்-தன் துளவ தாரானை போல் வகுள தாரானை –
கண்ணன் கழலினை ..திண்ணம் நாரணமே -சங்க பலகை ஏற்றி–
சங்க புலவர் –சேமம் குருகையோ செய்ய திரு பாற்கடலோ
நாமம் பராங்குசனா நாரணனா-..தாமம் துளவமோ வகுளமோ
தோள்கள் இரண்டோ நான்கும் உளவோ பெருமாள் உனக்கு -என்ன கடவரே

பாவின் இன் இசை பாடி திரிவனே–
மாசற்றார் மனது உளானை -வணங்கி நாம் இருப்பது அல்லால்–திரு மாலை-பாசுரம்
மனன் அகம் மலம் அற -தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே –நிர்மல மனஸ்–ஆசை கொண்டு மனத்தில் வைக்க வேண்டும்

இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மான்-
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே –
மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னி-

பரி விராஜர் பரம ஹம்சர் –நல்லது தீயது விலக்கி- சரண் நடந்து காட்டி-
பக்தர் ஹிருதய தாமரை அமர்ந்து—நாள் கமழ வகுள் மார்பினன்-
சுப ஆஸ்ர்யம் -மங்களமான புகல் இடம்-பவித்ராணாம் பவித்ரம் மங்களானாம் மங்களம் –சத்வ குணம் வளரும்-
மறவாமல் மங்களா சாசனம் பண்ணுவோம்..
நம்மை திருத்த பாடி அருளினார் –வாழ்த்த வேண்டும்- ஆழ்வார் –திவ்ய மங்கள விக்ரகமே ஸூபாஸ்ரயம் —

இவ்விருள் தருமாஞாலத்திலே ஸம்ஸாரிகளாய்த் தடு மாறுகிற நம்போல்வாரை உஜ்ஜீவிக்கச் செய்வதற்காக இக்கலியுகத் திலே இப்பூமண்டலத்திலே வந்து திருவவதரித்துத் திருவாசிரிய மென்னுமித் திவ்யப்ரபந்தத்தை அருளிச்செய்து இதன் மூலமாக வேதார்த்தங்களை வெளியிட்டவரும்,

” ஆத்யஸ்ய ந: குலபதே : ” என்று ஆளவந்தாரருளிச்செய்தபடி ஸ்ரீவைஷ்ணவகுல கூடஸ்த ராய்க்கொண்டு ப்ரதமாசார்யரும்,

மகிழ்மாலையை நிரூபகமாகச் சாத்திக்கொண்டிருப்பவரும்,

புறமதத்தவர்களைக் கண்டித்து ஒழித்த தனாலே பராங்குசர் என்று திருநாமம் பெற்றவருமான நம்மாழ்வாரை நிஷ்கல்மஷமான நெஞ்சிலேவைத்து நித்தியம் வாழ்த்துவோமென்றதாயிற்று.

பராங்குசன் என்பதற்கு மாஞானிகள் சொல்லும் அர்த்தமும் ஒன்றுண்டு ; பரர்கட்கு அங்குசம் (மாவட்டி) போன்றவர்,- மதாந்தரஸ்தர்களை அடக்குகிறவர் என்கிற பொருள் ஒருபுறமிருக்கட்டும். பரன் என்று பரமபுருஷனான எம்பெருமானைச் சொல்லுகிறது. அவனைத் தம்முடைய ஸ்ரீஸுக்திகளாகிற மாவட்டியினால் வசப்படுத்திக்கொள்ளவல்லவர் என்கை. *

“வலக்கையாழி இடக்கைச் சங்கமிவையுடை மால்வண்ணனை, மலக்கு நாவுடையேற்கு” என்று தாமே அருளிச்செய்தார்.

சில குத்ருஷ்டிகள் மறை குலையச் சாது சனங்களடங்கத் தருக்கச் செருக்காலே எம்பெருமானுடைய பாத்வத்தை இல்லை செய்தவளவிலே ஸர்வேச்வரன் அதுகண்டு நடுங்கி “நான் பரதத்வமல்லேன், நான் பரதத்வமல்லேன்’ என்று பின் வாங்க,

ஆழ்வார், “ஒன்றுந்தேவுமுலகும்” என்கிற திருவாய்மொழி யாகிற மாவட்டியையிட்டு அவ்வெம்பெருமானாகிற களிற்றை ஓடவொட்டாதே நிலை நிறுத்திப் பரத்வஸ்தாபனம் பண்ணினபடியாலே பராங்குசரென்கிறது என்று கருத்து.

————————————————————————–
அவதாரிகை-
இது யஜூர் வேத சாரமாகும்
திரு விருத்தத்தில் ஸ்வரூப ரூப குண விபூதி காட்டி கொடுக்க – உபய விபூதிகளை அனுசந்தித்து –
நித்ய விபூதி உள்ளோர் -நித்ய சம்சாரிகளை
வீட்டை திருத்த -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கர்ம பர தந்த்ராய் இதர விஷய போக -தேக -யாத்ரையிலே கழித்து —
சர்வேஸ்வரன் உடன் நித்யர் போல் இருக்க தமக்கு யோகியதை இருந்தும்
மோகம் சர்வ பூயோஷம்–இழந்ததை அனுசந்தித்து –தேக சம்பந்தம் கழித்து கொள்ள வழி தம் பக்கம் இல்லாமல்–கர்மாதீனம் பிறந்து–
மேலும் கர்மா சேர்த்து-பிறவி மாறி மாறி-அவனை திரு அடிகளில் விண்ணப்பம் செய்து-
இனி உறாமை-அருளி–அழுந்தார் பிறப்பாம் -இறுதி பாசுரமும் அருளி-
இப் பிர பந்தத்திலும் அதுவே தாத்பர்யம்-

உறாமை உடன் உற்றேன் ஆக்காமல்-அலற துடிக்க அழ பிராத்திக்க வைத்து –
நச்சு பொய்கை ஆகாது இருக்க /பிர பந்தம் தலை கட்ட/நாடு திருத்த /–தன் குழந்தை பட்டினி போட்டு நம்மை வாழ வைக்க-
பிறந்த ஆற்றாமை தீர பாசுரம் அருளுகிறார் —
அம்பு படுக்கை சம்சாரம் பீஷ்மர் பஞ்ச பாண்டவர் போல்-
ஆழ்வார் நமக்கு அருள-இங்கு வைக்கலாம் படி அல்ல இவர் த்வரை–
இது தாழ்ந்தது என்று அறிந்த ஆழ்வாரை கொண்டே பாட வைத்து –
இருபது தடவை இனி இனி கூப்பிட வைத்தார்-பல நீ காட்டி-குண அனுபவம் இங்கே கொடுத்து திவ்ய தேசம் காட்டி-தேகம் தோஷம் –
அங்கே போய் அனுபவம் கேட்க வேண்டாம் படி அனுபவம் அதிகம் இங்கே காட்டி–அவற்றை அந்ய பரராய் அனுபவிக்கிறார்-

அந்தமில் பேரின்பம் அடைய துடிப்பது
நமது குணாநுபவம் செய்ய என்று அறிந்து கொண்டு
அவை எல்லாம் இங்கேயே காட்டி அருள
இங்கேயே பண்ணிக் களித்தாராய்
அந்த அனுபவம் உள்ளடங்காமல்
புற வெள்ளம் இட்டுப் பெரு வெள்ளம் இட்டு பிரபந்தங்களாக பெருகி
லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி
தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க

அவனது
மேன்மையையும்
நீர்மையையும்
வடிவு அழகையும்
ஏழு பாசுரங்களாலே
அருளிச் செய்கிறார் –

————————————————————————–
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எரி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1-

————————————————————————–

பதவுரை

பவளம் செம் வாய்–பவழங்களாலே சிவந்த இடங்களை யுடையதும்
திகழ் பசும் சோதி–விளங்குகின்ற பசுமையான நிறத்தை யுடையதுமான
மரகதம் குன்றம்–ஒரு பச்சை மா மலையானது,
செக்கர் மா முகில் உடுத்து–சிவந்த பெரிய மேகத்தை அரையில் உடுத்துக் கொண்டும்
மிக்க செம் சுடர் பரிதி சூடி–மிகவும் சிவந்த தேஜஸ்ஸையுடைய ஸூர்யனை சிரஸ்ஸில் அணிந்து கொண்டும்
அம்சுடர் மதியம் பூண்டு–குளிர்ந்த ஒளியையுடைய சந்திரனைக் கண்ட பூக்ஷணமாக அணிந்து கொண்டும்
பல சுடர் புனைந்து–(நக்ஷத்திரங்களாகிற) பல தேஜஸ்பதார்த்தங்களையும் (பலவகை ஆபரணங்களாக) அணிந்து கொண்டும்
கடலோன் கைமிசை–கடலரசனுடைய கை மேலே
கண்வளர்வதுபோல்–படுத்துக் கொண்டிருப்பது போல
பீதக ஆடைமுடி பூண் முதலா மேதகு பல்கலன் அணிந்து–பீதாம்பரம், திருவபிஷேகம் கண்டிகை முதலான
சிறந்த பல திருவாபரணங்களைச் சாத்திக்கொண்டு
சோதி வாயவும் கண்ணனும் சிவப்ப–அழகிய வாயும் கண்களும் சிவந்திருக்கப் பெற்று
பச்சை-பசுமையான
மேனி-திவ்யமங்கள விக்ரஹத்தின் நிறமானது
மீதிட்டு மிக பகைப்ப–மற்ற ஒளிகளெல்லாவற்றிற் காட்டிலும் மேலோங்கி மற்ற ஒளிகளோடு
போர் செய்து கொண்டு விளங்கப் பெற்று
எறி கடல் நடுவுள்–அலை யெறிகின்ற கடலினிடையே
நஞ்சு வினை–விஷத் தொழிலையும்
கவர் தலை-கப்புவிட்டுக் கிளர்கின்ற(பல) தலைகளையுமுடைய
அரவு-திருவனந்தாழ்வானாகிற
இன் அமளி ஏறி-போக்யமான சயனத்தின் மீது ஏறி
அறி துயில் அமர்ந்து -யோக நித்திரையில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வம் குழாங்கள்-சிவன் பிரமன் இந்திரன் முதலிய எல்லாத் தேவ ஸமூஹங்களும்
கை தொழ கிடந்த-ஸேவிக்கும்படியாகப் பள்ளி கொண்டிருக்கிற,
தாமரை உந்தி தனி பெரு நாயக-தாமரைப் பூவைத் திருநாபியிலே உடைய அத்விதீய ஸர்வேச்வரனே!
மூ உலகு அளந்த-மூன்று லோகங்களையும் அளந்த
சே அடியோய்-அழகிய திருவடிகளை யுடையவனே! (வாழ்ந்திடுக!)

[செக்கர் மா முகில்.]
ஆழ்வார், கீழ்ப்பிரபந்தமாகிய திருவிருத்தத்தின் முதற்பாட்டில் “அழுக்குடம்பும்” என்று
தம்முடைய சரீரத்தின் தண்மையைப் பேசினார்;
இந்த முதற் பாட்டில் எம்பெருமானுடைய திருமேனியின் வைலக்ஷண்யத்திலீடு பட்டுப் பேசுகிறார்.
அப்ராக்ருதமாய் ஒப்புயர்வற்றதான பகவத் திவ்ய மங்கள விக்ரஹத்திற்கு ப்ராக்ருத வஸ்துக்களிலே
ஒன்றை உபமானமாக எடுத்துக் கூறுவதானது
ஒட்டுரைத் திவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும், பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ என்றபடி
அவத்யமேயாயினும், ஓர் உபமானத்தையிட்டே அநுபவித்துத் தீர வேண்டியிருப்பதாலும்,
வேதாந்தங்களிலும் அப்படியே உபமானங்களை யிட்டே நிரூபித்திருப்பதாலும்
இவ்வாழ்வார் தாமும் இங்கு ஓர் உபமானத்தை யிட்டுப் பேசி அநுபவிக்கிறார்.

‘ப்ரஸித்தோபமை’ என்றும் ‘அபூதோபமை’ என்றும் உவமை இரண்டு வகைப்படும்;
முகம் சந்திரனைப் போன்றது-திருவடி தாமரையைப் போன்றது-என்றிங்ஙனே பேசுதல் ப்ரஸித்தோபமையாம்;
இனி அபூதோபமையாவது-
தமிழில் இல் பொருளுவமை எனப்படும்.
ப்ரஸித்தமல்லாத ஒரு விஷயத்தைக் கவிகள் தம் புத்தி சமத்காரத்தாலே ஏற்படுத்திக் கொண்டு
அதனை த்ருஷ்டாந்தமாக்கிக் கூறுதல் அபூதோபமையாம்.
இப்படிப்பட்ட அபூதோபமையைக் கூறுவதன் கருத்து-
உபமேயப் பொருளானது ஒப்பற்றது என்பதைத் தெரிவிப்பதேயாம்.

இப்பாசுரத்தில் அபூதோபமை வருணிக்கப்படுகிறது.
எம்பெருமான் திரு வரையில் திருப் பீதாம்பரம் சாத்திக் கொண்டும்
திரு முடியில் திருவபிஷேகமணிந்து கொண்டும்
இப்படியே மற்றும் பலபல திருவாபரணங்களைப் பூண்டு கொண்டும்,
செந்தாமரை போன்ற திருவாயும் திருக்கண்களும் விளங்கவும்,
ச்யாமமான திருமேனி நிறமானது மற்ற சோபைகளெல்லாவற்றையுங்காட்டில் விவேக்ஷித்து விளங்கவும்
கடலினிடையே திருவனந்தாழ்வானெனும் திருவணையின் மீதேறித் திருக் கண் வளர்ந்தருளாகிறபடிக்கு
த்ருஷ்டாந்தமாக வருணிக்கப் பொருத்தமான பிரஸித்தோபமை ஒன்றில்லாமையால் அபூதோபமை அருளிச் செய்கிறார்.

மரகதப் பச்சை மயமான ஒரு மலையானது
செந்நிறமான மேகத்தைப் பீதக வாடையாக உடுத்துக் கொண்டும்,
கிரீடத்தின் ஸ்தானத்திலே ஸூர்யனை அணிந்து கொண்டும்,
கண்டிகை ஸ்தானத்திலே சந்திரனை அணிந்து கொண்டும்,
முத்து ஸரம் முதலான மற்றும் பல திருவாபரணங்களின் ஸ்தானத்திலே நக்ஷத்திரங்களைப் புனைந்து கொண்டும்
திரு அதரம் திருக் கண்களின் ஸ்தானத்திலே பவழ மயமான பிரதேசங்களை யுடைத்தாகியும்
ஒரு கடலிலே பள்ளி கொண்டிருந்தால் எப்படி யிருக்குமோ அப்படி யிரா நின்றது
தேவரீர் திருக்கோலமுந்தாமுமாகத் திருப்பள்ளி கொண்டருளுகின்றமை-என்றாராயிற்று.

செக்கர் என்று சிவப்பு நிறத்துக்கும் செவ் வானத்துக்கும் பெயர்;
இங்கே, சிவந்த மேகமென்றும், செவ் வானத்தில் தோன்றிய மேகமென்றும் பொருள் கொள்ளலாம்.
மேகங்கள் மலைச் சாரலிற் படியுமாதலாலும்,
செக்கர் மா முகில் படிந்திருந்தால் பீதக வாடை யுடுத்தாற் போலிருக்கு மாதலாலும் “செக்கர்மா முகிலுடுத்து” எனப்பட்டது.
எம்பெருமான் உபமேயம்; மலை உபமானம்; பீதாம்பரம் உபமேயம், செக்கர் மா முகில் உபமானம்.

“கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன்” என்று திருவபிஷேகத்திற்கு ஸூர்யனை
ஒப்புச் சொல்லுவதுண்டாதலால் “மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி” எனப்பட்டது.
எம்பெருமானுடைய கிரீடத்திற்கு ஸாதாரண ஸூர்யன் உபமானமாகப் போராமையால்
மிக்க செஞ்சுடர் என விசேஷிக்கப்பட்டது.

பரிதி என்கிற வட சொல் ஸக்ஷாத்தாக ஸூர்யனைச் சொல்லாதாகிலும் தமிழில் இலக்கணையால்
ஸூர்யனுக்குப் பேராயிருக்கும்.
இங்கு உபமானமாகிய மலை ஸூர்ய மண்டலம் வரை ஓங்கியிருப்பதாகக் கொண்டால்
ஸூர்யன் கிரீடத்தின் ஸ்தானத்திலே ஆவன்.

மார்பில் அணிந்து கொள்ளும் ஆபரணங்களில் ‘சந்த்ர ஹாரம்’ என்பது ஒன்று;
அது சந்திரன் வடிவமாக அமைக்கப்படுமாதலால் அப் பெயர் கொண்டதாகிறது.
சந்திரனுக்கு மலையினோடு ஸம்பந்தம் கீழ்ச் சொன்னபடியிலேயாம்:
ஸூர்ய சந்த்ர மண்டலம் வரையில் ஓங்கின மலை என்று கொள்க. மதி-சந்திரன்; அம்-சாரியை.

பல சுடர் என்றது
ஆகாசத்திலுள்ள மற்றும் பல நக்ஷத்ராதி தேஜஸ் ஸமூஹங்களைச் சொன்னபடி.
திருவாபரணங்களில் நக்ஷத்ர ஹார மென்பதுமொன்று.

புனைந்த என்று பாடமான போது
பெயரெச்சமாகி மரகதக் குன்றத்திற்கு விசேஷணமாகக் கடவது!

பவளச் செவ்வாய்- ‘ப்ரவாளம்’ என்ற வடசொல் பவளமெனத் திரியும்.
வாய் என்று இடங்களைச் சொன்னபடி.
மலையிற் பல இடங்களில் பவளமுண்டாதலால் பவளங்களாற் சிவந்த இடங்கள்
“கை வண்ணந் தாமரை வாய் கமலம் போலும் கண்ணிணையுமரவிந்தம் அடியுமஃதே” என்றும்
“பவள வாய் கமலச் செங்கண்” என்றும் சொல்லப்படுகிற திவ்ய அவயவங்களுக்கு உபமானமாகக் கூறப்பட்டன.

திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம்-
பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவி மரபாதலால்
எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்கு மரகதக் குன்றத்தை[-பச்சைமாமலையை] உவமை கூறினார்.
ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி,
காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து
அவர்களுடைய ஸம்ஸார பந்தங்களை யெல்லாம் போக்குந்தன்மையும்
எப்போதும் தியானஞ்செய்வதற்கு உரியதாயிருத்தலும்
பெருங்கருணைக்கு இருப்பிடமாயிருத்தலும் முதலிய குண விசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால்,
திகழ் பசுஞ்சோதி மரகதம் என்று குன்றம் விசேஷிக்கப்பட்டது.

ஆக இப்படிப்பட்டதொரு குன்றம் உலகில் எங்குமில்லை;
இருந்தாலும் அது கடலோன் கை மிசைக் கண் வளர்வது அஸம்பாவிதம்;
ஆக இத்தனையும் ஸம்பாவிதமாகில் எம்பெருமான் படிக்குப் போலி சொல்லலாமாய்த்து.

செக்கர் மா என்று தொடங்கி, கண் வளர்வது என்னுமளவும் உபமானத்தை சிக்ஷித்து முடித்து,
இனி பீதக வாடை என்று தொடங்கி உபமேயமான எம்பெருமானுடைய அநுபவத்தில் இழிகிறார்.

செக்கர் மா முகிலுக்கு உபமேயம் பீதக வாடை;
மிக்க செஞ்சுடர்ப் பரிதிக்கு உபமேயம் முடி(அதாவது-கிரீடம்);
அஞ்சுடர் மதிக்கும் பல சுடர்கட்கும் உபமேயம் பூண் முதலா மே தகு பல்கலன்.
பூண் என்பது ஆபரண ஸாமாந்யத்துக்குப் பேராயினும்
இங்கே சந்த்ரஹார மென்கிற ஆபரண விசேஷத்தைக் குறிக்குமென்க.

மேதகு-மேவத்தகு என்றபடியாய், (திருமேனிக்குப்) பொருந்தத் தக்கன என்றதாம்.
மெய்தகு என்றும் பாடமுண்டாம்;
மெய்-திருமேனி.
கலன் –ஆபரணம்.

மீதிட்டுப் பச்சை மேனி மிகப் பகைப்ப-
எம்பெருமானுடைய திருமேனியில் பீதக வாடையின் சோதி ஒரு நிறமாகவும்,
திருவபிஷேகத்தின் சோதி மற்றொரு நிறமாகவும்,
திவ்ய பூஷணங்களின் சோதி வேறொரு நிறமாகவும்
திருவாய் திருக்கண் முதலிய அவயவங்களின் சோதி மற்றுமோர் நிறமாகவும்
இப்படிப் பலவகை நிறச்சோதிகள் இருந்தாலும் திருமேனியின் நிறமாகிய
பாசியின் பசும் புறம் போன்ற மற்ற எல்லாச் சோபைகளோடும் போரிட்டு வெற்றி பெற்று விளங்குகின்றதாம்.

மேனி என்று உடலுக்கும் நிறத்துக்கும் பேர்; இங்கு நிறத்தைச் சொல்லுகிறது. பசுமை நிறமானது;

(மீதிட்டு மிகப் பகைப்ப-மிகப் பகைத்து மீதிட என்று விகுதி மாற்றிக் கூட்டி யுரைக்கலாம்.)
என்னுடைய சோபையின் முன்னே உங்களுடைய சோபை எப்படி விளங்கலாம் என்று போராடித் தானே மேற்பட்ட தாயிற்றாம்.
மீதிடுதல்-வெற்றி பெறுதல் என்னலாம்.

ஆக இவ்வளவும் எம்பெருமானுடைய திவ்ய சோபைகளை வருணித்தாராயிற்று.
இனி பள்ளி கொள்ளுமழகைப் பேசுகிறார்.

க்ஷீர ஸாகர மத்தியில் திருவனந்தாழ்வான் மேல் துயில் கொண்டருளி,
சிவன் பிரமன் இந்திரன் முதலான தேவர்களால் தொழப்படுமவனே!
தாமரை பூத்த திரு நாபியை யுடைய ஸர்வேச்வரனே!
பண்டொரு கால் மாவலி பக்கல் நிரேற்று மூவுலகுமளந்தவனே! ஜய விஜயீ பவ-என்றாராயிற்று.

திருமேனி யழகிலும் துயில் கொண்ட அழகிலும் இவ்வாழ்வார் நெஞ்சைப் பறி கொடுத்தாராகையாலே
ஒரு வினை முற்றோடே பாசுரத்தை முடிக்க மாட்டாமல்
“மூவுலகளந்த சேவடியோயே!” என்று கண்ணாஞ் சுழலையிட்டுக் கிடக்கிறார்.

நஞ்சு+வினை-நச்சு வினை;
சத்துருக்கள் மேல் விஷத்தை உமிழும் தொழிலை யுடையவனிறே திருவனந்தாழ்வான்.

கவர் தலை-கப்புவிட்டுக் கிளர்கின்ற தலைகளை யுடைய என்று சப்தார்த்தம்;
பலபல தலைகளை யுடைய என்பது தார்ப்பரியம்.

அமளி-படுக்கை.
அறி துயில்-யோக நித்திரை.
சேவடியோய்-சேவடியோன் என்பதன் விளி.

————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திரு வாசிரியம் –வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 29, 2020

ஸ்ரீ திரு விருத்தம் ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் விளக்கும் ருக்வேத சாரம் என்றும்
ஸ்ரீ திருவாசிரியம் ஏழு காண்டங்கள் கொண்ட சார நாராயண அநுவாகம் கொண்ட யஜுர் வேத சாரம் என்றும் –
ஸ்ரீ பெரிய திருவந்தாதி முண்டக உபநிஷத் கொண்ட அதர்வண வேத சாரம் என்றும்
ஸ்ரீ திருவாய்மொழி ஆயிரம் சாகைகள் கொண்ட சாந்தோக்யம் உபநிஷத் கொண்ட சாம வேத சாரமாய் இருக்கும் என்றும் சொல்வர்கள்-

ஸ்ரீ திரு அஷ்டாரத்தில் பிரணவம் நமஸ் சப்தார்த்த விவரணம் ஸ்ரீ திரு விருத்தம் என்றும் –
ஸ்ரீ திரு அஷ்டாரத்தில் நாராயணாய சப்த்தார்த்த விவரணம் திரு வாசிரியம் என்றும் –
ஸ்ரீ சரம ஸ்லோக விவரணம் ஸ்ரீ பெரிய திருவந்தாதி என்றும் –
ஸ்ரீ த்வய விவரணம் ஸ்ரீ திருவாய் மொழி என்றும் சொல்வர்கள்-

வ்ருஷ பேது து விசாகாயாம் குருகா பூரி காரி ஜம்
பாண்டிய தேசே கலேர் ஆதவ் சடாரிம் ஸைனபம் பஜே —-ஸ்ரீ நம்மாழ்வார் தனியன்

சகல த்ராவிடாம்நாய சாரா வ்யாக்யான காரிணம்
ஸ்ராவணே ரோஹிணீ ஜாதம் க்ருஷ்ண சமஞ்ஞம் அஹம் பஜே –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தனியன்

——————

காசினியோர் தாம் வாழ கலி யுகத்தே வந்து உதித்து
ஆசிரியப் பா வதனால் அரு மறை நூல் விரித்தானை
தேசிகனை பராங்குசனை திகழ வகுளத் தாரானை
மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே-–அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளி செய்த தனியன்-

ஞானத்துக்கு அடைவு இல்லாத கலி காலத்தில்
யுக வர்ண க்ரம அவதாரம் என்னலாம் படி ஸ்ரீ ஆழ்வார் அவதரித்தார் யாயிற்று

க்ருத யுகம் -ப்ராஹ்மண வர்ணம்-தத்தாத்ரியன் —ஸ்ரீ பரசுராமன்
திரேதா யுகம் -ஷத்ரியன்–ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்  –
துவாபர யுகம் -முடி உரிமை இல்லா வைஸ்ய பிராயர் ஸ்ரீ வாசுதேவ -சாஷாத் வைஸ்யரான ஸ்ரீ நந்த கோபன் இளம் குமாரனான ஸ்ரீ கிருஷ்ணனாகவும்-
கலி யுகம் -பராங்குசன்-சதுர்த்த வர்ணம் -காரியாருக்கும் உடைய நங்கையாரும் திருக் குமாரராக

(ஆதித்ய-ராம திவாகர-அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-சூரணை -83-)

(யத் கோ ஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸ சங்க சக்ர: |
யந்மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய ||-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4)

காசினியோர் தாம் வாழ –
நேரே கண்டத்துக்கு மேல் ஓன்று அறியாத பூமியில் உண்டான மனுஷ்யர் ஜீவிக்க –(கண்டதே காட்சி -லோகாயுத மதஸ்தர் மலிந்த )

திகழ வகுளத் தாரானை
விளங்கா நின்ற திரு மகிழ் மாலையைத் திரு மார்பிலே உடையவரை
தண் துளபத் தாரானை -என்னுமா போலே –

சேமம் குருகையோ செய்ய திருப்பாற்கடலோ
நாமம் பாராங்குசனோ நாரணனோ
தாமம் துளபமோ வகுளமோ
தோள் இரண்டோ நான்கு உளதோ பெருமான் உனக்கு –என்னக் கடவது இறே-

பராங்குசன் என்பதற்கு மாஞானிகள் சொல்லும் அர்த்தமும் ஒன்றுண்டு ;
பரர்கட்கு அங்குசம் (மாவட்டி) போன்றவர்,-
மதாந்தரஸ்தர்களை அடக்குகிறவர் என்கிற பொருள் ஒருபுறமிருக்கட்டும்.
பரன் என்று பரம புருஷனான எம்பெருமானைச் சொல்லுகிறது.
அவனைத் தம்முடைய ஸ்ரீஸுக்திகளாகிற மாவட்டியினால் வசப்படுத்திக்கொள்ளவல்லவர் என்கை. *

“வலக்கை யாழி இடக் கைச் சங்க மிவை யுடை மால் வண்ணனை,
மலக்கு நாவுடையேற்கு” என்று தாமே அருளிச் செய்தார்.

சில குத்ருஷ்டிகள் மறை குலையச் சாது சனங்களடங்கத் தருக்கச்
செருக்காலே எம்பெருமானுடைய பாத்வத்தை இல்லை செய்தவளவிலே
ஸர்வேஸ்வரன் அதுகண்டு நடுங்கி
“நான் பரதத்வமல்லேன், நான் பரதத்வமல்லேன்’ என்று பின் வாங்க,

ஆழ்வார், “ஒன்றுந்தேவுமுலகும்” என்கிற திருவாய்மொழி யாகிற மாவட்டியை யிட்டு
அவ் வெம்பெருமானாகிற களிற்றை ஓட வொட்டாதே நிலை நிறுத்திப்
பரத்வ ஸ்தாபனம் பண்ணின படியாலே பராங்குசரென்கிறது என்று கருத்து.

நாள் கமழ் மகிழ் மாலை மார்வினன் மாறன் சடகோபன் —திருவாய் -4-10-11-என்னும்படியான நம்மாழ்வாரை
சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை –ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -18-என்னும்படி
ஸூபாஸ்ரயமாகக் பாவித்து
பக்தி பண்ணி வைத்து விஸ்ம்ருதி இன்றிக்கே இவ்விருப்புக்கு மங்களா சாசனம் பண்ணுவோம்

அவரும் ஊழி தொரு ஊழி ஓவாது வாழிய வென்று யாம் தொழ இசையுங்கொல்–ஸ்ரீ திருவாசிரியம் -4-என்றார் இறே

இத்தால்
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹமே ஸூபாஸ்ரயம் என்னுமத்தையும்
மங்களாஸான விஷயம் என்னுமத்தையும் -சொல்லிற்று ஆயிற்று –

விஸ்ம்ருதி இன்றிக்கே இவ்விருப்புக்கு மங்களா சாசனம் பண்ணுவோம்-

மங்களமான புகல் இடம்-பவித்ரானாம் பவித்ரம் மங்களானாம் மங்களம் –சத்வ குணம் வளரும்-மறவாமல் மங்களா சாசனம் பண்ணுவோம்..

———-

ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு இவர் அபேக்ஷிதம் சடக்கெனச் செய்யப் போகாது -அதுக்கு அடி
சர தல்பத்திலே கிடந்த ஸ்ரீ பீஷ்மரைக் கொண்டு நாட்டுக்கு சிறிது வெளிச் சிறப்பைப் பண்ணிக் கொடுத்தால் போலே
இவரை இடுவித்து சில பிரபந்தங்களை பிரவர்த்திப்பித்து சம்சாரத்தைத் திருத்த நினைத்தவன் ஆகையால் –

இங்கே வைக்கலாம் படி அல்லவே இவருடைய த்வரை-
இவர் தாம் நிர்பந்தம் பண்ணுகிறதும்
அவ் வருகே போய் குண அனுபவம் பண்ணுகைக்காக இறே

இவை தன்னை அனுபவிப்போம் என்று பார்த்து-தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க
தேஹத்தினுடைய தன்மையை அனுசந்திப்பதற்கு முன்பு காட்டிக் கொடுத்தது இவையே யாகிலும்
அவ் வருகே போய்-பரம பதத்தில் சென்று – அனுபவிப்பதும் ஓர் அனுபவம் உண்டு என்று தோற்றாதபடி
ஒரு வைஸ்யத்தைப் பிறப்பிக்க அவற்றிலே அந்ய பரராய் அனுபவிக்கிறார் –

அந்தமில் பேரின்பம் அடைய துடிப்பது-நமது குணாநுபவம் செய்ய என்று அறிந்து கொண்டு
அவை எல்லாம் இங்கேயே காட்டி அருள-இங்கேயே பண்ணிக் களித்தாராய்
அந்த அனுபவம் உள்ளடங்காமல்-புற வெள்ளம் இட்டுப் பெரு வெள்ளம் இட்டு பிரபந்தங்களாக  பெருகி
லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க
அவனது
மேன்மையையும்
நீர்மையையும்
வடிவு அழகையும்
ஏழு பாசுரங்களாலே
அருளிச் செய்கிறார் –

ஆசிரியப் பாக்களினாலமைந்த இத்திவ்யப் பிரபந்த்த்திற்குத் திரு ஆசிரியம் எனத் திருநாமம் வழங்கலாயிற்று.

அடியொன்றுக்கு நான்கு சீராய் இயற்சீர் பயின்றும் வெண்சீர் விரவியும்
மூன்றாமடிக்குக் குறையாமல் பலவடிகளால் அகவலோசையுற்று
இறுதியில் ஏ யென்னும் அசையுடன் முடிவது ஆசிரயப்பாவாம்.

இது –நேரிசை யாசிரியப்பா, நிலை மண்டில வாசிரியப்பா முதலிய நான்கு வகைகளை யுடையது,

எல்லா வடிகளும் நாற்சீராய் ஈற்றயலடி முச்சீராய் முடிவது நேரிசை யாசிரியப்பா.

எல்லா வடிகளும் நான்கு சீராலேயே முடிவது நிலை மண்டில வாசிரியப்பா.

இப்பிரபந்தத்தில் 1,2,3,6-ஆம் பாசுரங்கள் நேரிசை யாசிரியப் பாக்கள்.

4,5,7-ஆம் பாசுரங்கள் நிலை மண்டில வாசிரியப் பாக்கள்.

அந்தத்தித் தொடையால் அமைந்ததாம் இப்பிரபந்தம்.

—————

ஆழ்வார், கீழ்ப்பிரபந்தமாகிய திருவிருத்தத்தின் முதற்பாட்டில் “அழுக்குடம்பும்” என்று
தம்முடைய சரீரத்தின் தண்மையைப் பேசினார்;
இந்த முதற் பாட்டில் எம்பெருமானுடைய திருமேனியின் வைலக்ஷண்யத்திலீடு பட்டுப் பேசுகிறார்.

ஸ்வரூப ரூப குணங்கள் என்று இறே அடைவு –
ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தில் இழிந்து அனுபவிக்க வேணும் என்கிறார் யாயிற்று –
தான் துவக்கு உண்டு இருப்பதும் இதிலே யாகையாலே –

இனி இவ் வஸ்து தான் நேர் கொடு நேரே அனுபவிக்க ஒண்ணாத படி -முகத்திலே அலை எறிகையாலே-
கிண்ணகத்தில் இழிவார் மிதப்பு -ஓடம் -கொண்டு இழிவாரைப் போலே –
இந்த ரூபத்தையும் -உபமான முகத்தால் இழிந்து அனுபவிக்க வேணும் என்று பார்த்தார் –
ஸர்வதா சாம்யம் இல்லாத தொரு வஸ்து யாகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு உபமானமாகச் சொல்லுவது தான் இல்லை –

ஆனாலும் அல்ப ஸாத்ருஸ்யம் உள்ளது ஒன்றைப் பற்றி இழிய வேணும் இறே –
ஒரு மரகத கிரியை யாயிற்று உபமானமாகச் சொல்லுகிறது
அதின் பக்கல் நேர் கொடு நேர் கொள்ளலாவது ஓன்று இல்லாமையால் அது தன்னை சிஷித்திக் கொண்டு இழிகிறார்-

ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தைப் பற்றினவோ பாதி ரூபம் தன்னையும் விட்டு
உபமானத்திலே இழிந்து அது தனக்கு ஒப்பனை தேடி எடுத்துப் பேசுகிறார் –

செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1–

ஆனையைக் கண்டார் -ஆனை-ஆனை -என்னுமா போலே –
அனுபவ ஜனித ப்ரீதி உள் அடங்காமையாலே ஏத்துகிறார்-

செக்கர் மா முகில் உடுத்து-முகில்-மா முகில்-செக்கர் மா முகில்-

மிக்க செம் சுடர் பரிதி சூடி –சஹஸ்ர கிரணங்கள் என்றால் போலே ஒரு ஸங்க்யை உண்டு இறே ஆதித்யனுக்கு —

அப்படி பரிச்சின்ன கிரணன் அன்றிக்கே அநேக ஆயிரம் கிரணங்களை யுடையான் ஒரு ஆதித்யன் வந்து
உதித்தாலே போல் ஆயிற்று திரு அபிஷேகம் இருப்பது –

அம் சுடர் மதியம் பூண்டு
தன்னுடைய -ஸ்வா பாவிகமாய் இருந்துள்ள பிரதாபத்தாலே ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத படி இருக்கிற
ஆதித்யனைப் போலே அன்றிக்கே
சீதளமான கிரணங்களை யுடையவனாய் –
குறைதல் -நிறைதல்-மறு உண்டாதல் இன்றிக்கே -வைத்த கண் வாங்காதே கண்டு
இருக்க வேண்டும்படியான அழகை யுடைய சந்திரனைப் பூண்டு
(பச்சை மா மலை போன்ற திரு மேனிக்கு இது கழுத்துக்கு ஆபரணம் -கண்டிக ஆபரணம் )-

பல சுடர் புனைந்த
மற்றும் பல நக்ஷத்ரங்களையும் -( க்ரஹங்களையும் -போன்ற) ஜோதிகளையும்
ஆபரணங்களாகப் )பூண்டு

சாய்வது போல் என்ன அமைந்து இருக்க உபமானத்திலும் கூசி கண் வளர்வது போல் -என்கிறார் –
திருமலை நம்பி எம்பெருமானார்க்கு ஒருவரை அடையாளம் சொல்லுகிற இடத்தில்–
( மென்மையான காதை உடையவர் என்று சொல்லும் இடத்தில் ) பொன்னாலே தோடு பண்ணினால் இட
ஒண்ணாத படியான காதை யுடையராய் இருக்குமவரை அறிந்து இருக்கை யுண்டோ -என்றாராம் –
இங்கு உபமானத்தைச் சொல்லும் இடத்தில் உபமேயத்தைப் போலே
அங்கு உபமேயத்தைச் சொல்லும் பொது உபமானத்தை இட்டுச் சொன்னார் –

பல பலவே ஆபரணம் –திருவாய் -2-5-6—ஸ்ரீ பாஷ்யகாரர் அநேக பூஷணங்களை அருளிச் செய்து
பின்னையும்–நூபுராத் யபரிமித திவ்ய பூஷண–ஸ்ரீ சரணாகதி கத்யம் – ஆதி சப்தத்தால் தலைக் கட்டுமா போலே
இங்கும் பல் கலன்கள்-என்று தலைக் கட்டுகிறார்-

மேதகு
ஸ்வரூப அனுரூபம் என்னும்படியாய் இருக்கை –
மேன்மைக்குத் தக்கபடி என்றபடி –
மேவித் தகுதியாக என்றுமாம்-

இப்பாசுரத்தில் அபூதோபமை வருணிக்கப்படுகிறது.
எம்பெருமான் திரு வரையில் திருப் பீதாம்பரம் சாத்திக் கொண்டும்
திரு முடியில் திருவபிஷேகமணிந்து கொண்டும்
இப்படியே மற்றும் பலபல திருவாபரணங்களைப் பூண்டு கொண்டும்,
செந்தாமரை போன்ற திருவாயும் திருக்கண்களும் விளங்கவும்,
ஸ்யாமமான திருமேனி நிறமானது மற்ற சோபைகளெல்லாவற்றையுங்காட்டில் விவேக்ஷித்து விளங்கவும்
கடலினிடையே திருவனந்தாழ்வானெனும் திருவணையின் மீதேறித் திருக் கண் வளர்ந்தருளாகிறபடிக்கு
த்ருஷ்டாந்தமாக வருணிக்கப் பொருத்தமான பிரஸித்தோபமை ஒன்றில்லாமையால் அபூதோபமை அருளிச் செய்கிறார்.

மரகதப் பச்சை மயமான ஒரு மலையானது
செந்நிறமான மேகத்தைப் பீதக வாடையாக உடுத்துக் கொண்டும்,
கிரீடத்தின் ஸ்தானத்திலே ஸூர்யனை அணிந்து கொண்டும்,
கண்டிகை ஸ்தானத்திலே சந்திரனை அணிந்து கொண்டும்,
முத்து ஸரம் முதலான மற்றும் பல திருவாபரணங்களின் ஸ்தானத்திலே நக்ஷத்திரங்களைப் புனைந்து கொண்டும்
திரு அதரம் திருக் கண்களின் ஸ்தானத்திலே பவழ மயமான பிரதேசங்களை யுடைத்தாகியும்
ஒரு கடலிலே பள்ளி கொண்டிருந்தால் எப்படி யிருக்குமோ அப்படி யிரா நின்றது
தேவரீர் திருக்கோலமுந்தாமுமாகத் திருப்பள்ளி கொண்டருளுகின்றமை-என்றாராயிற்று.

எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்கு மரகதக் குன்றத்தை[-பச்சைமாமலையை] உவமை கூறினார்.
ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமே யன்றி,
காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து
அவர்களுடைய ஸம்ஸார பந்தங்களை யெல்லாம் போக்குந்தன்மையும்
எப்போதும் தியானஞ்செய்வதற்கு உரியதாயிருத்தலும்
பெருங்கருணைக்கு இருப்பிடமாயிருத்தலும் முதலிய குண விசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால்,
திகழ் பசுஞ்சோதி மரகதம் என்று குன்றம் விசேஷிக்கப்பட்டது.

ஆக இப்படிப்பட்டதொரு குன்றம் உலகில் எங்குமில்லை;
இருந்தாலும் அது கடலோன் கை மிசைக் கண் வளர்வது அஸம்பாவிதம்;
ஆக இத்தனையும் ஸம்பாவிதமாகில் எம்பெருமான் படிக்குப் போலி சொல்லலாமாய்த்து.

செக்கர் மா என்று தொடங்கி, கண் வளர்வது என்னுமளவும் உபமானத்தை சிக்ஷித்து முடித்து,
இனி பீதக வாடை என்று தொடங்கி உபமேயமான எம்பெருமானுடைய அநுபவத்தில் இழிகிறார்.

மீதிட்டுப் பச்சை மேனி மிகப் பகைப்ப-
எம்பெருமானுடைய திருமேனியில் பீதக வாடையின் சோதி ஒரு நிறமாகவும்,
திருவபிஷேகத்தின் சோதி மற்றொரு நிறமாகவும்,
திவ்ய பூஷணங்களின் சோதி வேறொரு நிறமாகவும்
திருவாய் திருக்கண் முதலிய அவயவங்களின் சோதி மற்றுமோர் நிறமாகவும்
இப்படிப் பலவகை நிறச்சோதிகள் இருந்தாலும் திருமேனியின் நிறமாகிய
பாசியின் பசும் புறம் போன்ற மற்ற எல்லாச் சோபைகளோடும் போரிட்டு வெற்றி பெற்று விளங்குகின்றதாம்.

கவர் தலை-பல தலைகளை யுடைத்தாய் ஸ்வ ஸ்பர்சத்தாலே பணைத்து பிரஜையை மடியில் வைத்து இருக்கும் தாயைப் போலே
பெரிய பெருமாளை மடியிலே வைத்து இருக்கும் தாய் தானாம் –

ஸ்ரீ அனந்தாழ்வான் திருக்கோட்டியூருக்கு நடந்த இடத்தில்-( அகளங்கனோடே உண்டான மனஸ்தாபத்தாலே இவர் அங்கு
இருக்க மடியிலே அமர்த்தி ) ஸ்ரீ பட்டரைக் கண்டு அவர் திருமேனியில் இப்படிச் செய்தானாம் –

ஸ்ரீ ஆண்டாளுக்கு முந்துற ஒரு பிள்ளை உண்டாய் அவனை இழக்க –
அங்கனே செய்ய ஒண்ணாது இவன் ஜீவிக்க வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நீராட்டி
அந்த திருமஞ்சநீரைப் பிள்ளைக்குப் புகட்டி -மஞ்ச நீர் கொடுத்த பிள்ளையாய் வளர்க்க வேணும் -என்று
காட்டிக் கொடுத்து அருளினார் ஆயிற்று –
அந்த வாசனையாலேயே ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகன் -என்று தான் ஸ்ரீ பட்டரை ஸ்ரீ அனந்தாழ்வான் சொல்வானாம் –

படுக்கையிலே ஏறுகிற இது தான் தம் பேறாக இருக்கையாலே –
ஸ்ரீ நம்பெருமாள் ஆறுகால் சிவிகையை சாதாரமாகப்
பார்த்து ஏறி அருளுமா போலே பெரிய ஆதாரத்தோடு யாயிற்று ஏறி அருளுகை –

தாமரை யுந்தி -தனி பெரும் -இவற்றால் –
நிமித்த -உபாதான -ஸஹகாரிகளும் தானே என்கை –

மூ வுலகு அளந்த -தன் பக்கல் வந்து அனுபவிக்க மாட்டாதாருக்கு அவர்கள் இருந்த இடத்திலே சென்று அனுபவிப்பிக்கும்

சேவடியோயே
இழந்த இழவை மீட்டு ரஷியாதே காதுகனனே யானாலும் விட ஒண்ணாதபடியே யாயிற்று
திருவடிகளின் போக்யதை இருக்கிறபடி-

திருமேனி யழகிலும் துயில் கொண்ட அழகிலும் இவ்வாழ்வார் நெஞ்சைப் பறி கொடுத்தாராகையாலே
ஒரு வினை முற்றோடே பாசுரத்தை முடிக்க மாட்டாமல்
“மூவுலகளந்த சேவடியோயே!” என்று கண்ணாஞ் சுழலை யிட்டுக் கிடக்கிறார்.

கண்ணழி வற்ற அழகையும் குணங்களையும் அனுபவித்தார் –

———

த்யேயமாகச் சொல்லுகிற வஸ்துவினுடைய விக்ரஹ வை லக்ஷண்யம் சொன்னார் முதல் பாட்டில் –
அந்த த்யேய வஸ்துவினுடைய பக்கல் பிறக்கும் பரபக்தி தொடங்கி ப்ராப்ய அந்தர் கதமாய் இருக்கையாலே
தத் விஷய பக்தியே அமையும் என்கிறது இரண்டாம் பாட்டில் –

முதல் பாட்டில் –வடிவு அழகும் மேன்மையும் நீர்மையும் சொல்லிற்று –அவை கர்ம ஞானங்களினுடைய ஸ்த்தாநேயாய் நிற்க –
அனந்தரம் பிறக்கும் பரபக்தி பர ஞான பரம பக்தியை இறே உத்தேச்யமாகச் சொல்லிற்று –
அந்த ஞான கர்மங்களினுடைய ஸ்த்தாநத்திலே நிற்கிறவற்றை அனுபாஷிக்கிறார் –உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை-என்கிற இவ்வளவாலே-

இப்படி பரம விலக்ஷணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைச் சென்னியிற் சூட வேணும் என்று
ஆவல் கொண்டிருப்பதே யன்றோ புருஷார்த்தம்;-பரம பக்தர்களுடைய அந்தரங்க வுறுதியைப் பேசி மகிழ்கிறார் இப் பாட்டில்.

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல்
அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு
அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2–

உருகி யுக்க அத் தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே அச்சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய்
ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –
பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்

நேரிய காதல் -அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது
அன்பில் இன்பு–பக்தியினால் உண்டான பரமபக்தி ரூபமான ப்ரீதியில் உள்ள இனிமை என்ன
ஈன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு-
இவைகளில் உள்ள இனிமையின் வை லக்ஷண்யம் ஆகிற அமுதக் கடலில் மூழ்கி –
ஒரு ரஸ சாகரமாய் இருக்கும் இறே –

விலக்ஷண விஷயமாகையாலும் –
இவனுடைய ருசியாலும்
ஒரு கடலிலே ஏகாகி விழுந்தால் போலே இருக்கும் படியான மேன்மையை விட்டு-
மேலான புருஷார்த்தமான மோக்ஷத்தைப் பெறுகைக்கு நினைக்குமோ-

உலகு படைத்து
ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜத–சாந்தோக்யம் –62-3–
(அந்தப் ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக் கடவேன் என்று சங்கல்பித்தது
அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது) என்கிற
சங்கல்ப மாத்திரத்தாலே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களையும் உண்டாக்கி –

உண்ட
உண்டான இவற்றுக்கு பிரளய ஆபத்து வர –
இவற்றை அடைய திரு வயிற்றிலே வைத்து ரஷித்துப் பண்ணி அருளிய
வியாபாரத்தால் கண்ணழிவு அற்ற மேன்மை சொல்லுகிறது

எந்தை
ஸ்வாமித்வ ப்ரயுக்தமான மேன்மையை உடையனாய் இருந்து வைத்து –

மூ உலகு அளந்த
எத்தனை யேனும் தம்மைத் தாழ நினைத்து இருந்தபடியால்-தம்மை விஷயீ கரித்தவத்தால் வந்த நீர்மை சொல்லுகிறார்

மூ உலகு அளந்த –
இதனுடைய எல்லை தாமாக நினைத்து இருக்கிறார்

அறை கழல் சுடர் பூம் தாமரை
த்வனியா நின்றுள்ள வீரக் கழலை யுடைத்தாய் அத்யுஜ்ஜ்வலமாய்
நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளை
இத்தால் அழகு -சொல்லுகிறது

இம் மேன்மையாலும்
நீர்மையாலும்
வடிவு அழகாலும் விளைந்த-பரபக்தியாதிகளை மேலே விளக்கி அருளுகிறார் –

தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
தாமரை போலே இருக்கிற திருவடிகளை என்றவாறே
கதா புந சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணம் புஜ த்வயம் மதீய மூர்த்தாநாம் அலங்க்ருஷ்யதி –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -31-
(திரிவிக்ரமனே சங்கு சக்கரம் கல்பக வ்ருக்ஷம் கொடி தாமரை அங்குசம் வஜ்ராயுதம்
இவைகளை அடையாளமாக யுடைய திருவடித் தாமரை இணை என் தலையை எப்போது தான்
அலங்கரிக்கப் போகிறதோ )–என்ன வேண்டி இருக்கும் இறே

சூடுதற்கு அவாவு ஆர் உயிர்-சூடுகையிலே அவாவி இருக்கிற -ஆசைப்படுகிற ஆத்ம வஸ்து –

உருகி யுக்க-அத்தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தால்
அவன் பக்கல் ருசி பண்ணி அல்லது நில்லான் இறே சேதனன்

அத்தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே
அச்சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய்-ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –

பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்

நேரிய காதல்
அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது

அன்பில் இன்பு
த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் சங்கஸ் தேஷுப ஜாயதே
சங்காத் சஞ்ஜாயதே காம -காமாத் க்ரோதோ அபி ஜாயதே –ஸ்ரீ கீதை -2-62-
(விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது
அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது காமத்தினால் கோபம் ஏற்படுகிறது) என்கிறபடியே
அந்த சங்கம் தான் ஓர் அன்பைப் பிறப்பித்தது

ஆகார ஸூத்தவ் சத்வ ஸூத்தி -சத்வ ஸூத்தவ் தருவா ஸ்ம்ருதி –சாந்தோக்யம் 7-26-2-
(உண்ணும் உணவு சுத்தமாக இருந்ததாகில் மனம் சுத்தி அடைகிறது
மனம் பரிசுத்தம் அடைந்த அளவிலே நிலை நின்ற நினைவு எனப்படும் பக்தி உண்டாகிறது)
இத்யாதிகளை நினைக்கிறது –
நிலை நின்ற நினைவு என்னும் பக்தி அவஸ்தை -என்றபடி –

ஸ்மர்த்தவ்ய விஷயத்தினுடைய ரஸ்யத்தையாலே இது தானே ரசிக்கும் இறே –
அது தான் என் போலே என்னில்

ஈன் தேறல்
அமுத சமுத்ரத்தில் கடைந்த அம்ருதம் போலே போக்யமாய் இருக்கும் –விஷயத்தினுடைய வை லக்ஷண்யத்தாலே –
விலக்ஷண விஷயமாகையாலும் -இவனுடைய ருசியாலும் ஒரு கடலிலே ஏகாகி விழுந்தால் போலே இருக்கும் இறே

அமுத வெள்ளத்தானாம்
இன்ப வெள்ளத்திலே உளனாகையாகிற-இன்பத்தில் திளைத்துத் திக்கித் திணற வைக்கும் அன்றோ என்றபடி –

சிறப்பு விட்டு
இந்த பரம பக்திகளை யுடையனாகை யாகிறது இறே ஐஸ்வர்யம் —-அத்தை விட்டு

ஒரு பொருள்க்கு
இத்தை விட்டால் இனிப் பெற நினைப்பது இவ்வருகே சிலவை இறே –
அவை யாகிறன– தர்ம அர்த்த காம மோக்ஷங்களில் சொல்லுகிறவை இறே –
அவற்றை ஒன்றாக நினைத்து இராத அநாதரம் தோற்ற ஒரு பதார்த்தம் என்கிறார் –

அசைவோர் அசைக
அவை தான் இது போல் ஸூலபமாய் இராது யத்னித்து பெற வேண்டுமதாய் –
பெற்றாலும் பிரயோஜனம் அல்பமாய் இருக்கும் – அவற்றுக்கு ஆசைப்படுவோர் அங்கனம் கிலேசப்படுக –

புத்திமான்கள் இவற்றை ஸ்வீ கரிப்பதாக மநோ ரதிப்பார்களோ

திரு வோடு மருவிய இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு
ஐஸ்வர்யம் நிலை நின்று அது தானே யாத்ரையாய் இருப்பது – இத்தாலும் பலம் இல்லை இறே
-இத்தோடு அடுத்து

நல் வீடு பெறினும்
நல் வீடு என்று உத்தம புருஷார்த்தத்தைச் சொல்லுகையாலே
நடுவில் கைவல்ய புருஷார்த்தத்தையும் சொல்லிற்று ஆயிற்று

பெறினும்
இது தான் பெறக் கடவது என்று இருக்கை அன்றிக்கே-இதிலே தோள் மாறும்படி யானாலும்
மநோ ரதமாக இல்லாமல் பெற்றே தீர்ந்தாலும்

கொள்வது எண்ணுமோ
இவை ஸ்வீ கரிக்கக் கடவதான மநோ ரத சமயத்திலே தான் உண்டோ
ஐஸ்வர்யம் அஸ்திரம் ஆகையால் கழி யுண்டது –
ஆத்ம லாபம் பரிச்சின்னம் ஆகையால் கழி யுண்டது –
பகவத் புருஷார்த்தம் ஆசைப்பட்ட உடம்பை ஒழிய வேறு ஒரு உடம்பைக் கொண்டு போய் அனுபவிக்குமதாகையாலே கழி யுண்டது

அவ்வுடம்போடே இருக்கச் செய்தே பெறக் கடவதான பரபக்தியாதிகளோடே
இவை ஒவ்வாதே நிற்கிற இடம் -(ஒவ்வாது என்ற இடம் )-விசார விஷயமோ –
ஆனாலும் சிலரும் நினையா நிற்கிறார்கள் என்னில்

தெள்ளியோர் குறிப்பு எண்ணுமோ
சார அசார விவேகம் பண்ணி இருப்பார்க்கு மநோ ரதத்துக்கு விஷயம் அல்ல
சார அசார விவேகஞ்ஞர் நல்லதுக்கு தீயத்துக்கும் தரமிட்டுப் -பிரித்து அறிந்து – இருப்பார்கள்

சார அசார விவேகஞ்ஞா காரீயம் சோ விமத்சரா
பிரமாண தந்த்ரா சந்தீதி க்ருதோ வேதார்த்த ஸங்க்ரஹம் –நிகமன ஸ்லோகம்
(சாரம் அசாரம் ஆகிய இவற்றை விவேகித்து அறிபவர்களும்
மிகுந்த கேள்வி ஞானத்தால் பெருமை பெற்று இருப்பவர்களும்
பிறர் இடம் மாத்சர்யம் மற்றவர்களும் -பிரமாணங்களுக்குக் கட்டுப் பட்டவர்களுமான மஹான்கள்
இக் காலத்திலும் உளர் என்னும் நிச்சயத்தாலே என்னால் வேதார்த்த ஸங்க்ரஹம் அருளிச் செய்யப்பட்டது) -என்றவாறு

கேடில் சீர் வரத்தானாம் கெடும் வரத்தயன் அரன்
நாடினோடு நாட்டமாயிரத் தன் நாடு நண்ணினும்
வீட தான போகம் எய்தி வீற்று இருந்த போதிலும்
கூடும் ஆசை யல்லது ஓன்று கொள்வனோ குறிப்பில் –ஸ்ரீ திருச்சந்த விருத்தம் -108- இத்யாதிகளை இங்கே அனுசந்திக்கத்தக்கவை –

எம்பெருமானைக் கிட்டி அநுபவிப்பதிலுங்காட்டில் அவ்வநுபவத்தைப் பற்றின மனோ ரதமே நித்யமாய்ச் செல்லுமாகில்
அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தி யுடையவர்களுடைய ஸித்தாந்தம்,-

அனுபவ நிலைமையிற் காட்டிலும் அநுபவப் பாரிப்பு நிலைமையே சிறந்ததென்பது விளங்கும்.

இப்படிப்பட்ட ஆவல் பூண்டு
“என் கண்ணனை என்று கொலோ களிக்கும் நாளே“
“மாயோனை மணத் தூணே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்து நாளே”
“அங்கடியவரோடு என்று கொலோ அணுகு நாளே“
என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கு நாளே“
“அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்ப மிகு பெருங்குழுவு கண்டு
யானுமிசைந்துடனே என்று கொலோ இருக்கு நாளே“ என்றிவை போல்வன பல பாசுரங்களை
வாய் வெருவிக் கொண்டு இதுவே ஒரு ஆனந்தமாகப் போது போக்குவதே பரம ப்ராப்யம் என்றாதாயிற்று –

அவாவாருயிருருகியுக்க“ என்று தொடங்கி “சிறப்பு விட்டு“ என்ற வரையில்
அவர் காதல் அன்பு இன்பு தேறல் அமுதம் என்று ஒரு பொருட் பன்மொழிகளை இனைத்துத் தொடுத்திருப்பதனால்
பகவானுடைய திருவடிகளை முடிமேலணிந்து கொள்வதை ஆசைப் படும் விஷயத்தில் ஆழ்வார்க்குண்டான
ஆதரம் அளவற்ற தென்பது நன்கு வெளிப்படும்.

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்“ என்றும்.
இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்“ என்றும்
(பாவோ நாத்யத்ர கச்சதி) (வைகுண்டவாஸேபி ந மேபிலாஷ) என்றும்
சொல்லுகிறபடி அந்த மோக்ஷந்தன்னையும் ஒரு பொருளாக மதியார்களென்கை.

தெள்ளியார் அனுபவம் இங்கேயே தானே-விண்ணுளாரிலும் சீரியர் இறே

ஆக இப் பாட்டால் –
ஸம்ஸாரி களைப் போலே க்ஷுத்ர பலன்களை விரும்பி அலையாமல்
விவேகங்களைப் போலே பகவத் விஷயத்தில் அநு ராகம் மிக்கியிருப்பதே நமக்கு ப்ராப்தம் என்றாராயிற்று.

————

முதல் பாட்டில் அவன் வடிவு அழகைப் பேசி அனுபவித்தார் –
இவன் தன்னைப் பெற்று அனுபவித்துக் கொண்டு இருக்கும் இருப்பில் அவன் விஷயமாகப் பண்ணும்
பக்தியே இனிது என்றார் இரண்டாம் பாட்டில்
இப்பாட்டில் பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்னில் அவன் தொடங்கி
ததீய சேஷத்வ பர்யந்தமாக -என்கிறது –

குறிப்பில் கொண்டு நெறிப் பட உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகி சுடர் விளங்கு அகலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர
உருமு உரல் ஓலி மலி நளிர் கடல் படம் அரவு
அரசு உடல் தடவரை சுழற்றிய தனி மா
தெய்வத்து அடியவர்க்கு இனி நாமாள் ஆகவே
இசையும் கொல் ஊழி தோறு ஊழி ஓவாதே –3–

இவர்களும் தன்னோடு சமானருமாய்-அவனோ ஈஸ்வரன் -இவர்களோ ஈஸ்வரர்கள் -என்று கண்டவர்க்கு
இவர்கள் பக்கலிலேயும் ஈஸ்வரத்வ சங்கை பண்ணும்படி இறே தான் இவர்களுக்குக் கொடுத்து வைத்து இருக்கும் தரம்
அவர்களுடைய சரீரத்துக்கு ஆத்மாவுக்கும் நியாமகனாய் –
தன் அளவிலே அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹத்தோடே நின்று –
அதுக்கு நியாமகனாய் –
அவர்களுக்கும் காரண பூதன் என்றவாறு-

உலகம் மூன்று நெறிப்படக் குறிப்பில் கொண்டு உடன் வணங்கு தோன்று புகழ்–ஸ்ருதி பிரசித்தம் –-மூல பிரமாணத்தில் பறை சாற்றுவதாய் இருக்குமே

அகலம்-திரு மார்பு-சுடர் விளங்கு-கடையும் காலத்தில் திரு மார்பு ஆபரணம் அசைய அதற்க்கும் மங்களா ஸாஸனம்

வரை புரை-இத்யாதி–
அவன் ஆஸ்ரித அர்த்தமாகச் செய்யும் செயல்களில் இது ஒன்றும் அமையாதோ-இவனே ஆஸ்ரயணீயன் என்பதற்கு-

நளிர் கடல்-பொறி எழக் கடையச் செய்தேயும் அவனுடைய கடாக்ஷ மாத்திரத்தாலே கடல் குளிர்ந்த படி
கடந்த வேகத்தால் குமுறாதபடி நடுங்க என்னுதல்

நளிர் –குளிர்ச்சியையும்-நடுக்கத்தையும் காட்டும்

அடியவர்க்கு இனி நாமாள் ஆகவே
ப்ரயோஜனாந்தர பரரான தேவதைகளுக்காக தன் உடம்பு நோவ கடலைக் கடைந்து
அம்ருதத்தைக் கொடுத்த மஹா உபகாரத்தை அனுசந்தித்து
அவன் நீர்மையிலே தோற்று எழுதிக் கொடுத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு--ஒப்பூண் உண்ணாமல்-

ள் ஆகவே-சேஷ பூதராக-சேஷத்வமே வடிவாக-

ஆளாகவே என்ற விடத்திலுள்ள ஏகாரத்தைப் பிரித்து–“அடியவர்க்கே“ என்று கூட்டிக் கொள்ளலாம்.–

ஓவாதே-ஒரு ஷணமும் இடை விடாதே யாக வேணும் –ஓவாது -ஒரு ஷணமும் விடாமல்
ஊழி தோறு ஊழி -சகல காலமும் என்றபடி –

ஆத்ம சத்தை உள்ளவன்று தொடங்கி பாகவத சேஷமாய்ப் போருவது பிராப்தமாய் இருக்க
கர்மத்தால் நான் என்றும் என்னது என்றும் போந்தோம்
இனி சேஷித்த காலமாகிலும் இவ்வஸ்து பாகவத சேஷம் என்னும் இடத்தை அவன் காட்ட –
அவன் பிரசாதத்தாலே கண்ட நாம் சேஷ பூதராக ஆளாகவே ஒரு ஷணமும் இடை விடாதே யாக வேணும் –

அவதரித்த சர்வேஸ்வரன் இதர சஜாதீயனாம் அன்று இறே இவர்களும் சம்சாரிகளோடே சஜாதீயர் ஆவது
இவ் வுலகில் இவ் வுண்மையை அறிவது அரிது அன்றோ என்றபடி-

————

கீழில் பாட்டில் பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்னில் –
சர்வேஸ்வரன் தொடங்கி –ததீய சேஷத்வ பர்யந்தமாக அனுசந்திக்கை என்றது –
அப்படிப்பட்ட அனுசந்தானத்தை உடையாரானார் பரிமாறும் பரிமாற்றம் இருக்கும் படி என் என்னில்
ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய வென்று-அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு –என்று ஆயிற்று இருப்பது
ஸ்ரீ பெரியாழ்வார் பல்லாண்டு என்று ஆண்டாக்கி -அது தன்னைப் பலவாகி-ஆயிரமாக்கி –
அது தன்னைக் கோடியாகப் பெருக்கி மங்களா சாசனம் பண்ணுகிறார் –
இவர் அவ்வளவு அமையாமல் முதலிலே கல்பத்தை விவஷித்து அது தன்னை மேல் மேல் என்னப் பெருக்குகிறார் –

சர்வேஸ்வரனுடைய சேஷித்வத்தை உபக்ரமித்து
ததீய சேஷத்தளவும் செல்ல அனுசந்தித்து
அந்த சேஷத்வ காஷ்ட்டா ப்ராப்தியைக் கொண்டு அவன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறது
நித்தியமாகச் செல்ல வேணும்

ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும் பாழ் காலத்து இரும் பொருள்க்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான்
ஆகி தெய்வ நான் முக கொழு முளை
ஈன்று முக் கண் ஈசனோடு தேவு பல நுதலி
மூ உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே -4-

தனி வித்து ஒரு தானாகிதான் ஒரு தனி வித்தாகி என்று அந்வயிப்பது.

தனி வித்து ஒரு தான் ஆகி–நிமித்த உபாதான சஹகாரி காரண த்ரயமும் தானே யாய்

வித்து -என்கையாலே –-காரண வஸ்து என்கை –

தனி -என்கையாலே —ஏஹோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாந –மஹா உபநிஷத்-1-
(நாராயணன் ஒருவனே பிரளய காலத்தில் இருந்தான் பிரமனும் இல்லை சிவனும் இல்லை )- என்றபடி அத்விதீயன் -என்கை

ஒரு -என்கையாலே-இதுக்கு ஸஹ காரிகள் ஒருவரும் இல்லை என்கை –

தான் ஆகி –கார்ய ரூபமான பிரபஞ்சத்துக்கு எல்லாம் வேண்டும் காரண கணம் எல்லாம் தானேயாய்
இப்படி அண்ட ஸ்ருஷ்ட்டி அளவும் தானே உண்டாக்கி –இவ்வருகு உள்ளவற்றை உண்டாக்குகைக்காக-

வித்தாகி என்னாமல் ஒரு வித்தாகி என்னாமல் ஒரு தனி வித்தாகி என்றதனால் –
நிமித்த காரணம் ஸஹகாரி காரணம் உபாதான காரணம் என்கிற மூவகைக் காரணங்களும்
எம்பெருமான் தானே யாகிறான் என்று தெரிவிக்கப் பட்டதாயிற்று.

மேல் வரும் என்பதற்கு, கீழே கழிந்த என்று பொருள் கொள்ளுதல் விபரீத லக்ஷணை யினாலென்க.
மேலென்றது பண்டென்றபடி,-வருமென்றது போனவென்றபடி.

ஸ்ரீ கோயிலுக்கு ஸ்ரீ மதுர கவி தாசரை நிர்வாஹகராக விட்டால் போலே
ப்ரஹ்மாவை இப்பால் உள்ள ஸ்ருஷ்டிக்காக உண்டாக்கினான்
ஸ்ரீ ராமானுஜர் திவ்ய ஆஜ்ஜை அன்றோ அனைத்து ஸ்ரீ கோயில் நிர்வாகங்களும் -இது அதுக்கு த்ருஷ்டாந்தம்

மூ உலகம் விளைத்த உந்தி-கீழும் மேலும் நடுவுமான உண்டான லோகங்களை உண்டாக்கிற்று அவன் திரு உந்தி யாயிற்று
அவனை ஒழியவே தானே இவை அடைய உண்டாக்கிற்றாயிற்று திரு உந்தி
திரு உந்தி என்ற ஒரு பத்மமாய்-அது அடியாக ஆயிற்று லீலா விபூதி அடைய உண்டாக்கிற்று

மாய கடவுள் — ஆச்சர்ய சக்தி யுக்தனான பர தேவதை

மா முதல் அடியே -மா முதல் மாயக்கடவுள் என்று கூட்டி -பரம காரணமான மாயக்கடவுள் என்னுதல் –
மாயக் கடவுள் ஆனவனுடைய மா முதல் அடி என்னுதல்
ஆச்சர்ய சக்தி யுக்தனான பர தேவதையான பரம காரண பூதனானவனுடைய திருவடி என்னுதல் –
மாயக் கடவுள் என்று அவனுடைய பரம ப்ராப்யமான திருவடிகள் என்னுதல் –
திருவடி -திரு மேனிக்கும் உப லக்ஷணம் என்னுதல்
அடியே வாழிய என்று யாம் தொழ இசையும் கொல் -உன் சேவடி செவ்வி திருக்காப்பு –என்றபடி

அந்தத் திருவடிகளை ஸ்ரமப்டுத்திக் காரியங் கொண்டவர்களைப் போலே நாமும் ஆகாமல்
அவற்றுக்குப் பல்லாண்டு பாடப் பெற வேணும்–

——————–

மூ உலகம் விளைத்த உந்தி மாயக் கடவுள் மா முதல் அடியே ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?-என்றார் கீழே
நமக்கு மங்களா சாசனம் பண்ணப் புக்க உமக்குக் கருத்து என் என்னில் –உனக்கு அன்றிக்கே மற்றையார்க்கோ
மங்களா சாசனம் பண்ண அடுப்பது-என்று இந்தப் பிரசங்கத்தில் திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதமாக-
அத்தைப் பேசி அனுபவிக்கிறார்–

முதலிலே இவற்றை உண்டாக்கினோம் –
அநந்தரம் இவற்றுக்குக் காவலாக திக் பாலாதிகளைக் கை யடைப்பாக்கி நோக்கினோம் –
ஆகில் இவை பட்டது படுகின்றன -என்று கை வாங்கி இராதே –

ஸ்ரீ யபதியான உன்னை அழித்து இரப்பாளன் ஆக்கிக் கொடுத்து –
இட்டு வளர்ந்த கையைக் கொண்டு இரந்து- இந்திரன் கார்யம் செய்து –
தலைக் கட்டின செயல் ஒன்றையும் அனுசந்தித்தால்
உனக்கு அன்றிக்கே மற்றையார்க்கோ மங்களா சாசனம் பண்ண (வகுப்பது )அடுப்பது-என்று
இந்தப் பிரசங்கத்தில்-திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதமாக-அத்தைப் பேசி அனுபவிக்கிறார்

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப் புத்தேள்
நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை
வழி பட நெறீ இ தாமரை காடு
மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது
மாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய் கல்லது அடியதோ வுலகே ?–5-

ஆரேனுமாகத் தன் திருவடிகளில் தலை சாய்த்தார்க்குமாக தன்னை அழிய மாறியும் கார்யம் செய்வான் ஒருவன் என்று
உன் படியை அனுசந்தித்து ஆஸ்ரிதர் மார்விலே கை வைத்து உறங்குகைக்காகச் செய்த செயல் இறே இது
ஒரு செவ்வித் தாமரைப் பூவை கவிழ்த்து அலர்த்தினால் அதினுள் அல்லிக்கு உள்ள நெருக்கு இறே
திருவடியின் கீழ்ப் பட்ட பதார்த்தங்கள் உள்ளது-திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை யாகாதே
அவன் உளனாக்க நாம் அல்லோம் என்று அகலப் பார்த்தாலும் அகல விரகு இன்றிக்கே இருந்ததீ –
இது ஒரு அலாப்ய லாபம் இருந்தபடியே

மா முதல் அடிப் போது -என்று–பரம காரணமானவனுடைய திருவடி என்னுதல் –அன்றிக்கே
மா முதல் அடிப் போது -என்றது-திருவடி தனக்கேயாய்
சேஷ பூதர் அடைய வந்து சேருவது திருவடிகளில் ஆகையால்
அவர்களுக்குப் பரம ப்ராப்யமான திருவடி என்னுதல்

ஒண் சுடர் அடி போது ஓன்று
மநுஷ்யர்களுக்கு எல்லாருக்கும் உள்ள துர்மானம்-இந்த்ராதிகளில் ஓர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கும் –
அப்படிப்பட்டவர்களை அடைய பக்ந அபிமானர் ஆக்கிக் கொள்ளுகையாலே வந்த புகரை உடைத்தாய் இருக்கை –
அழகிய சுடரை உடைய செவ்விப் பூவாகிய ஒரு திருவடி –

அநேகம் கைகளை படைத்ததால் உள்ள பிரயோஜனம் பெறும்படி திருவடியை விளக்கப் பெற்றான்

தாமரை காடு மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதுமாய்
ஆரேனுமாகத் தன திருவடிகளைத் தலையிலே வைத்தால் ஆதித்ய சந்நிதியில் தாமரை போலே
திருக்கண் செவ்வி பெறுமாயிற்று-
தாமரைக் காடு அலர்ந்தால் போலே இருக்கிற திருக் கண்ணோடே கனிந்த வாயையும் யுடைத்தாய் இருப்பதுமாய் –

இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
நாம் இங்கு காண்கிற ஆதித்யனைப் போல் அன்றிக்கே
அநேக ஆயிரம் கிரணங்களையும் கீழ்ச் சொன்ன விசேஷங்களையும் உடையராய் இருப்பார்
ஆயிரம் ஆதித்யர்கள் -சேர உதித்தால் போலேயாய்

கற்பகக காவு பற்பல வன்ன
பலவான கற்பகச் சோலை -போலே –இப்படி இருக்கிறது எது என்னில்

முடி தோள் ஆயிரம் தழைத்த
ஞாயிறு ஆயிரம் மலர்ந்தால் போலே இருக்கிறது திரு அபிஷேகம்
பலவகைப்பட்ட கற்பகச் சோலை போலே இருக்கிறது –அநேகம் ஆயிரம் பணைத்த திருத் தோள்கள் –

நெடியோய் –இப்படி தன்னை அழிய மாறி இரந்து-அவன் கார்யம் செய்து -தலைக் கட்டச் செய்தேயும் -தன்னை விஸ்வசித்து –
உடனே கிடந்தவன் முடி அவிழ்த்தனைப் போலே அநு தப்பித்து -மஹா பலி போல்வார் நலிவதற்கு முன்னே
முற்கோலி நோக்கப் பெற்றிலோம் -பறி கொடுத்தோம் -பிற்பாடாரானோம் -என்று நோக்கி லஜ்ஜித்து ஒன்றும் செய்யாதானாய்த்
தன் குறையை நினைத்து இருக்குமவன் ஆயிற்று –செய்ய வேண்டிவற்றை நீள நினைப்பவன் -நெடியோன் –

நெடியோய்க் கல்லது அடியதோ வுலகே
இப்படி சர்வ ரக்ஷகனான தன்னை ஒழிய ஜகத்து மற்றும் சிலர் கால் கீழே கிடந்ததோ-மங்களா சாசனம் பண்ண

எல்லாரையும் ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுகிறவர்கள் தலை மேலே காலை வைத்த
உனக்கு மங்களா சாணம் பண்ண அடுக்குமோ –
சிலர் கால் கீழே கிடந்தவர்களிலே சிலருக்கு மங்களா சாசனம் பண்ண அடுக்குமோ –
உன் காலின் கீழே துகை உண்டவர்களுக்கு மங்களா சாசனம் பண்ண அடுக்குமோ –சொல்லிக் காண்

நெடியோய்-நினைவிலே நெடியான்- திரு மேனியில் நெடியான்–திரு விக்ரமன் சர்வ ஸ்வாமி மனிசர்க்கு தேவர் போல் தேவர்க்கும் தேவன் –

நீ அன்றோ நெடியோன் –அனைவரிலும் சாலப் பெரியவனான திரிவிக்ரமன்-நீ அன்றோ என்றவாறு

———-

லௌகீகரைப் பார்த்தார் அவர்கள் வருந்திக் கை விடுவது இவன் ஒருவனையுமேயாய் –
விரும்புகைக்கும் இவனை ஒழிந்தவையாக அமைந்து –
நான் என்றும் என்னது என்றும் -பகவத் வ்யதிரிக்தரை ரக்ஷகராகத் தேடியும் போருகிறபடியைக் கண்டு
இது இருந்தபடி என்-
தங்கள் இழவுக்குக் கூப்பிட வேண்டி இருக்க -அவர்கள் அது தானும் அறியாது இருக்க
அவர்கள் இழவு பொறுக்க மாட்டாமை-தாம் ஓ என்று ஓ என்று கூப்பிடுகிறார்-

ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6–

தன்னோடு ஒத்து இருப்பான் ஒருவனாய் -பவ உபகரண பூதனாய் –நித்ய சம்சாரியாய் இருப்பான் ஒருவனை
ஆஸ்ரயித்துப் பலம் பெறப் பார்த்த இது தான் நித்ய சம்சாரி யாக்கைக்கு கிருஷி பண்ணினான் ஆயிற்று

வகுத்த விஷயத்தைப் பற்றி நிஷ்க்ருஷ்ட ஸூ கத்தைப் பெறப் பாராதே
சேதனர் அப்ராப்த விஷயத்தை ஆஸ்ரயித்து
அனர்த்தத்தைப் பெறப் பார்ப்பதே –இது என்ன படு கொலை என்கிறார்-

ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி-இரா நின்றார்கள்

உத்பத்திக்கு முன்னே உண்டாக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணி –
பின்னை கர்ப்பத்தில் தரித்து –
பிரசவ வேதனையை அனுபவித்து –
அநந்தரம் தண்ணிய இட்டுக் கொடு துவண்டு நோக்கினால்
அறிவு பிறந்து பண்ணின உபகாரத்தை ஸ்மரிக்கும் அளவானவாறே

அவளை விட்டு
ஒரு உபகாரமும் பண்ணவும் அறியாதே
இவன் பண்ணின உபகாரத்தையும் ஸ்மரிக்கவும் அறியாதே
இருபத்தொரு அசித் பதார்த்தத்தை கொண்டாடுவாரைப் போலே
வகுத்த விஷயத்தை விட்டு
அப்ராப்த விஷயத்தை ஆதரியா நின்றார்கள்

மணை என்றது அசேதந வஸ்துக்களை யெல்லாம் சொன்னபடி.
நீராட்டி என்றது உபசாரங்கள் பலவற்றையுஞ் சொன்னபடி.

மணைநீராட்டுமா போலே‘ என்று சொல்லவேண்டுமிடத்து (அவாய் நிலையாக) உவமையை உள்ளடக்கி
மணை நீராட்டி என்றே சொன்னதன் கருத்து யாதெனில், தேவதாந்தர பஜநம் பண்ணுவதோடு
மணை நீராட்டுவதோடு ஒரு வாசியில்லை,
இதுதான் அது, அதுதான் இது என்று இரண்டுக்கு முள்ள அபேதத்தைக் காட்டினபடியாம்.

உலகினது இயல்வே
வகுத்த விஷயத்தைப் பற்றி-நிஷ்க்ருஷ்ட ஸூகத்தைப் பெறப் பாராதே
சேதனர் அப்ராப்த விஷயத்தை ஆஸ்ரயித்து-அனர்த்தத்தைப் பெறப் பார்ப்பதே –
இது என்ன படு கொலை என்கிறார்

தேவதாந்தர பஜனம் பண்ணுவது நித்ய ஸம்ஸாரியா யொழிவதற்கு க்ருஷி பண்ணுவதே யன்றி
வேறில்லை யென்பதைக் கூறி முடிக்கிறார்
தொன் மா மாயப் பிறவியுள் நீங்காப் பன்மா மாய்த் தழுந்துமா நளிர்ந்தே என்று.

—————-

திரு மேனி மேன்மை எளிமை முதல் பாசுரம்
திரு அடி பக்தியே பிராப்தி இரண்டாம் பாசுரம்
ததீய சேஷத்வம் மூன்றாம் பாசுரம்
அடியார் யாத்ரை மங்களாசாசனம் நான்காம் பாசுரம்
திரு விக்ரமன் அடிக்கே மங்களா சாசனம் ஐந்தாம் பாசுரம்
உலோகர் இயற்கை நொந்து ஆறாம் பாசுரம்
தம்மை இப்படி விலஷணம் ஆக்கிய பேற்றை அருளுகிறார் இதில்-

அல்லாதார் செய்தபடி செய்கிறார்கள் -நாம் முந்துற முன்னம் இவ்வனர்த்தத்தைத் தப்பி
இவ்வர்த்தத்தைப் பெற்றோம் என்று உகக்கிறார் இதில்

நாட்டார் கண்டார் காலில் குனிந்து திரியா நிற்க
நமக்கு முந்துற முன்னம் தேவதாந்த்ர ஸ்பர்சம் இன்றிக்கே இருக்கப் பெற்றோமே –
இந்த லாபமே அமையாதோ-என்று-ஸ்வ லாபத்தைப் பேசி இனியர் ஆகிறார் –
இப் புன்மை இன்றிக்கே இன்றிக்கே ஒழியப் பெற்ற இதுவே அமையாதோ -என்று பிரீதராய்-
இத்தையும் அந்தாதி யாக அருளிச் செய்த போதிலும்-
திரு விருத்தம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி மூன்றையும் போல்
உகப்பின் மிகுதியால் மண்டல அந்தாதியாக இல்லாமல் தலைக் கட்டுகிறார் –

யாவரும் அகப்பட வாயிற்று அவன் உண்டது –
தன்னோடு ஓக்கச் சிறை இருந்தவர்களில் சிலரை ஆஸ்ரயித்துப் பெறுவதொரு பலம் உண்டோ

நளிர் மதி சடையனும் நான் முக கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்
அகப் படக் கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–7-

நளிர் மதி சடையனும் நான் முக கடவுளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் —முக்யமாகவுள்ள மூன்று தேவர்களைச் சொல்லவே
மற்ற சேதநாசேதங்களை விவரித்துச் சொல்ல வேண்டாமை பற்றி- முதலா யாவகை வுலகமும் யாவரும் அகப்பட –என்றார்.

சுடர் இரு விசும்பும் -என்றது-உண்டாம் இடத்திலே மற்றை நாலுக்கும் முன்னே உண்டாமது ஆகையால்
அழியும் இடத்தில்-அவை அழிந்தாலும் தான் சிறிது காலம் நின்று அழியுமது ஆகையால் வந்த புகரைப் பற்ற

சிறிது டன் மயங்க என்பதற்குப் பலவகையும் பொருள் கொள்ளலாம்.
(கீழ்ச்சொன்ன வஸ்துக்களெல்லாம்)
சிறிது – மிகச்சிறிய வடிவத்தை உடையனவாய்க் கொண்டு,
உடன் – ஏக காலத்திலே,
மயங்க – உள்ளே யடங்கும்படியாக என்பது ஒரு வகை.

உடன் மயங்க என்றவிடத்து உடல்மயங்க என்று பதம் பிரித்து,சிறிதாகிய உடலிலே –
பேதைக் குழவியான எம்பெருமானது மிகச் சிறிய வுடலிலே மயங்க என்றல் மற்றொரு வகை.

நீ சர்வ ஆதார பூதனாம் அத்தனை போக்கி உன்னை ஒழிய புறம்பே ஒன்றுக்கு ஓன்று
ஆதாரமாக வல்லது ஓன்று உண்டோ –
அன்று அவன் சர்வ ஆதார பூதனாய் இருக்கிறபடியைக் கண்டு இது ஓர் ஆச்சர்யமே என்று விஸ்மிதர் ஆகிறார் -என்று–
ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று-இங்கு நம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தார் –

பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் அற்று இருக்க பர்த்ராந்தர பரிக்ரஹம் பண்ணாது ஒழிகை இறே
இவள் அவனுக்காகை யாகிறது –
பகவத் ப்ராவண்யம் க்ரமத்தில் பிறக்கவுமாம் – இவனுக்கு முந்துற வேண்டுவது தேவதாந்த்ர ஸ்பர்சம் அறுகை இறே –
இது உண்டானால் யோக்யதை கிடைக்கும் இறே
ஆகவே ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்

இத் திவ்யப் பிரபந்தம் பெரும்பாலும் எம்பெருமானுடைய பரத்வ ஸ்தாபனத்திலே நோக்குடையதென்று உணரத்தக்கது.

இதில் ஆழ்வார் தமது திருநாமம் இதிலும் பெரிய திருவந்தாதியிலும் அருளிச் செய்ய வில்லை-இது மண்டல அந்தாதி பிரபந்தம் இல்லை-

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .