வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –
பூதத் தாழ்வார் தம் விளக்குக்கு திரியாக சிந்தையை உருவகம் செய்தது போலே
பொய்கை ஆழ்வார் திரியாக எதையும் உருவகம் செய்ய வில்லை –
வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-
அமுதனார் மறைக் குருத்தின் பொருளையும் செம் தமிழையும் ஒன்றாய் திரியாகத் திரித்து –
அவ் விளக்குக்குத் திரியை உபயோகப் படுத்தினதாக நயம் படக் கூறுகிறார் –
இருளைப் போக்கும் குருவாதலின்-எம்பெருமானாரை-பரமன் -என்கிறார் –
குருரேவ பரம் பிரம -குருவே பரம் பொருள் -என்றபடி -எம்பெருமானாரே பரமனாயினார் -என்க –
எம் இறைவன் –
தம்மைப் போன்ற சரம பர்வ நிஷ்டர்களையும் சேர்த்து -எங்களுக்கு இறையவன் -என்கிறார் –
மறை என்பது மறைத்துச் சொல்லும் வேதம். அதாவது வேதத்தின் தாத்பர்யம் நேராக
தெளிவாக இல்லாமல் மறைத்துச் சொல்லப்படுவதனால் இது மறை என்று சொல்லப்படுகிறது .
மறையின் குருத்து என்பது மறையின் சாரம் -அதாவது உபநிடதங்கள் .
இந்த உபநிடதங்கள் எம்பெருமானைப் பற்றி , அவன் கல்யாண குணங்கள் பற்றி தெரிவிக்கின்றன.
செந்தமிழ் பாடுவார் என்றும், பாலேய் தமிழர் என்றும், முதலாழ்வார்களை செந்தமிழ் பாடுவார் என்றிறே நாம் சொல்கிறோம்.
மரத்தில் குருத்து போலே -வேத மரத்தில் உண்டான -குருத்து முக்கியப் பகுதியான வேதாந்தம் -என்க –
வேதத்தின் பிரிவுகள் உலகில் -சாகை -கிளை களாகப் பேசப் படுதலின் வேதம் மரமாக உருவகம்-செய்யப் படுகிறது –
மகாதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதஸ் சநாதன-ஸ்கந்த பூதா ருகா த்யாஸ் தே சாகாபூதாஸ் ததாபரே -கீதை -15 1- – என்று
கிருத யுக வேதம்-பிரிவு படாத ஒரே வேதம் ஆதலின் பெரிய மரமாகவும் -கிருத யுக தர்மத்தை கூறும்
பகுதி மூலமாகவும் -அதாவது -வேராகவும்-ருக் முதலானவை அடித் தண்டாகவும் –
மற்றவை கிளைகளாகவும் -கூறப் படுவதும் இங்கு நினைவுறத் தக்கது –
வடமொழி வேதத்தின் பொருள் வேறு மொழியினால்
பேசப்படுகிறது என்று தோற்றாமல்-முதல் திருவந்தாதி -என்னும் செம்தமிழ் வடிவமாகவே
வேதம் அமைந்து இருக்கிறது என்று தோன்றுகிறது என்னவுமாம் –
கீதையில் – 10-11 கூறுகிறான் –அஹம் அஞ்ஞானம் தம நாசயாம் யாத்மா பாவஸ்த்த-ஞாநதீபேன- பாஸ்வதா -என்பது கீதை
எம்பெருமானார் பொய்கை ஆழ்வார் ஏற்றின திவ்ய ப்ரபந்தம் என்னும் பிரகாசிக்கும் விளக்கை
அணையாதபடி தன் அகத்தே வைத்து -மற்றவர்க்கும் அந்நிலையை உண்டாக்கி இருளைக் கடிகிறார்-
இத்தைக் கொண்டே ஸூத்ரங்களை ஒருங்க விட்டார் ஸ்ரீ பாஷ்யகாரர்
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின் குருத்தின் பொருளையும்
செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத் திரித்து அன்று எரித்த திரு விளக்கு காட்டும் பொருள்கள் சில–
அன்று அது அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் ——-2-
நெறி வாசல் தானேயாய் நின்றானை-4-
உலகளந்த மூர்த்தி யுருவே முதல் –14-
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச் செற்றார் படி கடந்த செங்கண் மால்-20-
செய்ய மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த இறையான் நின்னாகத் திறை ——–28-
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர் –37—
பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-
அரியா யிருந்தான் திருநாமம் எண்——-51–
நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-
நேரே கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணனடிக் கமலம் தன்னை யயன் ——56-
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும் சொன்மாலை கற்றேன் தொழுது ——57-
ஏழுலகத் தாயினவு மெண்டிசையும் போயினவும் சூழரவப் பொன் கணையான் தோள் ——-62-
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் என் மேல் வினை —–64–
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –67-
ஆலன்று வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-
என்றும் விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் அடலாழி கொண்டான் மாட்டன்பு —–71–
மூப்புன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி ———–75-
பழுதொன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம் -76-
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால் கெடுமா மிடர் ———77-
மா மேனி மாயவனுக்கு அல்லாது மாவரோ ஆள் -80-
வேங்கடமே லோரு நாள் மானமாய வெய்தான் வரை -82-
வராகத் தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை அடிக்களவு போந்த படி –84-
பொன்னடியே சூடுவேற்கு என்னாகில் என்னே எனக்கு –88-
ஏனத் துருவா யுலகிடந்த ஊழியான் பாதம் மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-
ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-
மாயவனை யல்லால் இறையேனும் ஏத்தாது என் நா -94-
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-
ஓரடியில் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை -100-
—————
இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – 9-
காணும் இதயம் -காணும் கண் எனபது போலக் காண்பதற்குக் கருவியான இதயம் என்றபடி –
இதயத்து இருள் -இதயத்தின் உள்ள பொருளைப் பற்றிய அறியாமை என்றபடி —
ஏற்றினது நிறை விளக்கு ஆதலின் இருள் மீள வழி இல்லை -என்பார் –கெட -என்றார்
ஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய –
நிறை விளக்கு என்பதற்கு ஏற்ப ஞானம் -அதாவது பர ஞானம் -என்று கொள்க –
பர ஞானம் ஆவது -காணாத ஏக்கம் தீரக் கண்டு இன்புறும் வேட்கை முதிர்ச்சியால் ஏற்படும் சாஷாத் காரம் –
நிறை விளக்கு நேரே பொருள்களை தெளியக் காட்டுவது போலப் பர ஞானமும் –ஜீவ பரமான்ம தத்துவங்களை
நேரே தெளியக் காட்டுகின்றது என்க-
ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் -என்னும் பூதத்தாழ்வார் திரு வாக்கை -ஞானம் என்னும் நிறை
விளக்கு ஏற்றிய -என்று அமுதனார் பொருளோடு அச் சொல்லாலே பொன்னே போல் போற்றிக் கையாளுகிறார் –
சுடர் விளக்கு -என்பதை –நிறை விளக்கு -என்கிறார் –
திருவடி–
பெரியோர்களைத் திருவடிகள் என்று மதிப்பு தோன்றக் கூருவது மரபு –
வட மொழியிலும் தந்தையை -தாத பாதா-என்றும்
குருவை-ஆசார்ய பாதர் -என்றும் வழங்குவது உண்டு –
திரு மங்கை ஆழ்வார் -உம் தம் அடிகள் முனிவர் – என்று யசோதை கண்ணனைப் பார்த்து
பேசும் பொது தந்தையாகிய நந்த கோபரை -அடிகள் -என்று குறிப்பிடுவதாக காட்டி உள்ளார் –
உங்கள் முதலியார் சீறுவர் கிடீர் – என்பது அத் திருமொழிக்கு பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –
நம் ஆழ்வார் -மலர் மகள் விரும்பும் நமரும் பெறலடிகள் -என்று எம்பெருமானை குறிப்பிடுகிறார் –
அடிகள்-ஸ்வாமிகள் என்பது வியாக்யானம் –
உயர்வு பன்மையில் வரும் இச் சொல் ஒருமையிலும் வருவது உண்டு –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்று நம் ஆழ்வாரும்
திருவடி தன் நாமம் மறந்தும் – என்று திரு மழிசைப் பிரானும் -ஒருமையில் வழங்கியது போல்-அமுதனாரும் -பூதத் திருவடி -என்கிறார்
ஆழ்வார் என்பதும் அடிகள் என்பதும் ஒரே பொருள் கொண்டவை என்பது அமுதனார் கருத்து –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி யாடி யூழி தரக் கண்டோம் –என்றும்
மாதவன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே -என்றும்
இவ்வாறே திருவாய் மொழியிலும் வழங்கி உள்ளமை காணத் தக்கது –
இம்முறையில் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்தமையின் பூதம் என்னும் பெயர் ஆழ்வாருக்கு வழங்கல் ஆயிற்று
பண்டிப் பெரும் பதியை யாக்கிப் பழி பாவம்–கொண்டு இங்கு வாழ்வாரைக் கூறாதே -எண் திசையும்
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்-தீர்த்தகர ராமின் திரிந்து -என்பது இவரது உபதேசம் –
திரிந்து தீர்த்த கரர் ஆமின் -திரிவதனால் உங்கள் பாத தூளி பட்டுப் புனிதம் ஆகும்படி செய்யுங்கள் -என்பது கருத்து –
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவார்கள் உழக்கிய பாத தூளி படுதலால் இவ் உலகம் பாக்கியம் செய்ததே -என்று
பெரியாழ்வார் திரு மொழி – 4-4 6– என்பதும் காண்க –
இந்த உபதேசப் பாசுரத்தில் -பேர்த்தகரம் நான்குடையான் பேரோதித் திரிந்து தீர்த்த கரர் ஆமின் -என்னும்
சொல் தொடர் மிகவும் சுவை உடைத்து –
திசை அளப்பான் எண் திசையும் பேர்த்தகரம் நான்குடையான் திரு மேனி சம்பந்தத்தால் உலகம் தூயதா கிலது –
அதனை அவன் பேரோதித் திரிந்து அவனினும் பெரியோர்களாகிய நீங்கள் உங்கள் பாத தூளியினால்
புனிதம் ஆக்குங்கள் -என்று பாகவதர்களின் சிறப்பை உணர்த்திச் சுவை தருவதுதைத் துய்த்து இன்புறுக –
நல்லோர் மறையினைக் காத்து மன்ன வைப்பவர்
அந்த வேதத்தை காத்ததோடு அமையாமல் -நிலை நிற்கவும் செய்கிறார்கள் -என்றபடி –
இவ் இருள் தரும் மா ஞாலத்தில் இது செயற்கு அறிய செயல் என்பது தோன்ற -இந்த மண்ணகத்தே -என்றார் –
முழுமை வாய்ந்த ஆசார்யர் எம்பெருமானாரே –
ஆதலின் அவரே வேதத்தின் உள் பொருள் –
அவரைப் பற்றி நிற்றலே வேத மார்க்கம் என்றும்
மற்றவர்களை அங்கனம் பற்றி நிற்க செய்தாலே வேத மார்க்கத்தை பிரதிஷ்ட்டாபனம் செய்தல் -நிலை நிறுத்துதல் –
என்றும் சம்ப்ரதாயம் வல்லோர் கருதுகின்றனர் –
ஆகையால் ஸ்ரீ மத் வேத மார்க்க பிரதிஷ்டாப நாசாரியர் என்று எம்பெருமானார் சம்பந்தம் உடைய
ஆசார்ர்யர்களை இன்றும் உலகில் வழங்கி வருகிறார்கள் –
இதனையே அமுதனார் -நல்லோர் மறையினைக் காத்து மன்ன வைப்பவர் -என்பதனால்
அருளி செய்கிறார் என்பது உணரத் தக்கது-
இதயத்து இருள் கெட என்று ஆழ்வார் சாதித்தது சில காண்போம்.
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை யாரோத வல்லார் அறிந்து-5-
ஏத்திய நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால் கா அடியேன் பட்ட கடை—-10-
வனதிடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று——16-
தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது—————–21–
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம்—-27-
நமக்கென்றும் மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஓத்து————-38-
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39-
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு ——-44-
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–
நிற்பென்று உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து இளம் கோயில் கை விடேல் என்று –54-
பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்–65-
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-
யானே இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-
அருகிருந்த தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர் வான் கலந்த வண்ணன் வரை-75-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-
நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே அங்கண் மா ஞாலத்து அமுது–84-
அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று –85-
அன்று கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் திருக் கோட்டி எந்தை திறம் -87-
உலகு ஏத்தும் ஆழியான் அத்தி ஊரான் -95-
அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-
மேலாய் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய வன்பு –100-
——————-
மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – 10-
மன்னிய பேரிருள் மாண்ட பின் –
பேராத திண்மை வாய்ந்த இந்தப் பெரிய இருள் -பொய்கையாரும் பூதத்தாரும் ஏற்றிய விளக்கின் ஒளியால் பேர்ந்து ஒழிந்தது –
பேரிருள் முன்பு பண்புத் தொகையாய்ப் பெருமை-வாய்ந்து இருந்தது-
இப்பொழுது அந்தப் பேரிருள் வினைத் தொகையாய் பேர்கின்ற இருளாய் மாண்டது –
இவ்விருளுக்கு ஆதி இல்லை -அந்தம் உண்டு -மன்னிய இருள் ஆதி இல்லாதது -பேர்கின்ற இருள் அந்தம் உள்ளது –
இருளை மாண்டதாகக் கூறவே மீண்டு வாராது அடியோடு ஒழிந்தமை பெற்றாம்-
கண்ணன் இடையன் -இவனும் இடை கழியில் சேவை சாதித்து -இடையன் –
இடைப்பட்டவன் -நெருக்கு உகந்த படியால் இடையன் –
பொன்னடி போற்றும் –
உலகமளந்த பொன்னடியில் ஈடுபாடு மட்டுப்பட்டு –தமிழ்த் தலைவன் பொன்னடியில் மிகவும் ஈடுபட்டுப் போற்றுகிறார் எம்பெருமானார் –
அச்சுதன் பதாம் புஜமாம் பொன் மீது வ்யாமோஹம் கொண்டு மற்றவைகளை தருணமாக
மதிக்கும் எம்பெருமானார் -தமிழ்த் தலைவன் பொன்னடியைப் போற்றுகிறார் –
இப்போது மா மலராளோடு கூடி ஆயனாய் எளிமை பட்ட பரம் பொருளைக் காட்டித் தந்த
பரம உபகாரம் அங்கனம் போற்றும்படி செய்கிறது –
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற பொன் அம் கழலே தொழுமின் -மூன்றாம் திருவந்தாதி -89 –
என்று உபதேசிக்கிறார் பேய் ஆழ்வார்
அங்கனம் உபதேசித்து எம்பெருமானைக் காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடிகளைப் போற்றுகிறார் எம்பெருமானார்
அன்பு பூண்டவர்
ஞான பக்தி வைராக்யங்களை ஆன்ம தத்துவத்துக்கு அணிகளாக வருணிக்கும் மரபு பற்றி-அன்பு பூண்டவர் -என்றார் –
இனி அன்பு பூண்டவர் -என்றது அன்பிலே பூட்சியை உடையவர்கள்-அதிலே ஊன்றி இருக்குமவர்கள்
என்னலுமாம் -என்று மணவாள மா முனிகள் உரைத்து இருப்பதும் இங்கு அறியத் தக்கது –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை யல்லால்-அரசாக எண்ணேன் மற்றரசு தானே -என்று
குலசேகர பெருமாள் அருளியதும் இங்கு அறியத் தக்கது –
பரதனும் குலசேகரப் பெருமாளும் சூடிய அடிமுடி -பகவான் திறத்து அவர்கட்க்கு உள்ள பாரதந்திரிய
செல்வத்தை புலப்படுத்தும் –
நீள் முடியாய் – பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யம் அவர்கள் கைப் பட்டு இருப்பதைக்-காட்டுகிறது –
அமுதனார் காட்டும் அவர்கள் சென்னியில் சூடிய அடி முடியோ –
பகவானைக் காட்டித் தரும் ஆசார்யனான எம்பெருமானார் அளவோடு நில்லாது –
அவர்க்கு அன்பு பூண்டவர் திறத்தும் அவர்கட்கு உள்ள பார தந்திரிய செல்வதை புலப்படுத்தும்
துளங்கு நீள் முடியாய் -பாகவத கைங்கர்யத்தின் முடிவு எல்லையாய் -பரம புருஷார்த்தமான
ஆசார்ய பக்த கைங்கர்ய சாம்ராஜ்யமே -அவர்கள் கைப் பட்டு இருப்பதைக் காட்டுகிறது
பகவத் பாரதந்த்ரியம் -செல்வம்
பாகவத பாரதந்த்ரியம் -ஆச்சார்ய பாரதந்த்ரியம் -பெரும் செல்வம் –
ஆச்சார்ய பக்த பாரதந்திரியம் மிகப் பெரும் செல்வம் –என்றது ஆயிற்று –
ஏனைய திரு உடையார் போல் அல்லாது-இனி மேலும் பெற வேண்டிய செல்வம்
இல்லாமையின் இந்நிலையிலேயே நிலை நிற்றல் பற்றி என்றும் சீரியர் -என்கிறார்-
———–
சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே – 11- –
சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
அமலனாதி பிரான் -என்கிற முதல் பாசுரத்திலே –
ஆதி -என்று காரணமான பரமாத்ம ஸ்வரூபமும்
விண்ணவர் கோன் -என்பதனால் நித்ய ஸூரிகள் சேவிக்கும் பர ரூபமும் –
வேம்கடவன் -என்பதனாலும் -அரங்கத்தம்மான் -என்பதனாலும் அர்ச்சாரூபமும் –
அமலன் நிமலன் -முதலிய சொற்களினால் ஹேய ப்ரத்ய நீகத்வம் -மாசு நீக்கித் தூய்மை படுத்துதல் -முதலிய குணங்களும்
கமல பாதம் -என்பதனால் திரு மேனிக்கு உண்டான அழகும் மென்மை குளிர்ச்சி முதலிய குணங்களும்
நீதி வானவன் -என்பதனால் -பரம பதமாகிய நித்ய விபூதி செல்வமும்
அடியார்க்கு என்னை ஆள் படுத்த -என்பதனால் லீலா விபூதி என்னும் இவ் உலக செல்வமும்-
சேரச் சொல்லப் பட்டு உள்ளமை காண்க –
பாண் பெருமாள்
ஆழ்வார்கள் பதின்மருள் குலசேகரரும் பாணருமே -பெருமாள் -என்று நூல்களில் வழங்கப் படுகின்றனர்
குலசேகரர்-அருளி செய்த திருமொழி -பெருமாள் திருமொழி -என்று வழங்கப் படுவது காண்க
இங்கே அமுதனார் -பாண் பெருமாள்-என்று வழங்குகிறார் திருப் பாண் ஆழ்வாரை –
இவரை அடி ஒற்றி இவர் குலத்தவரான ஐயங்கார் திருவரங்கத் தந்தாதியில் -அருள் பாண் பெருமாள் -என்கிறார் –
வேதாந்த தேசிகன் முனி வாஹன போகத்தில் -கண்ணனையே கண்டு உரைத்தக கடிய காதல் பாண் பெருமாள் -என்று
அருளி இருப்பதும் அறியத் தக்கது
பாணனார் திண்ண மிருக்க இனி இவள் நாணுமோ -பெரிய திரு மொழி – 8-2 2- – என்னும்
திரு மங்கை மன்னன் திரு வாக்கும்
இங்கு பாணனார் ஆகிறார் சேதனருக்கு ஸ்வா தத்ரியத்தால் வந்த மறத்தைப் போக்கி –
சேஷத்வ ஞானத்தை உணர்த்தி சேர விடும் ஆசார்யன் இறே -பாணனார் -என்கிறாள் காணும் இவள் –
என்பது வியாக்யான ஸ்ரீ ஸூக்தி –
வேதாந்த தேசிகன் -அமலன் -என்கிறது மல பிரதிபடன் -என்றபடி -இத்தால் மோஷ ப்ரதத்வம் சொல்லிற்று ஆயிற்று –
என்று முனி வாஹன போகத்திலே அருளி செய்துள்ளமை காண்க
இராமானுசன் தன்னை சார்ந்தவர் தம் காரிய வண்மை –
அரங்கத் தம்மான் தன்னைக் காட்ட பட்டதனால் கண்டு வாழ்ந்தார் பாணர் –
பாணர் அடி முதல் முடி வரை தாம் கண்டதை பாட்டினால் காட்ட -எம்பெருமானார் கண்டு
பிறருக்கும் அரங்கத் தம்மானுடைய அவ் அரும் கட்சியை அப் பாட்டினாலேயே காட்டிக் கொடுத்தார் –
அரங்கனை தமக்கு காட்டிய பாணர் சரணங்களை தலை மேல் புனைந்தார் எம்பெருமானார் –
அத்தகைய எம்பெருமானார் பாணர் பாட்டினாலேயே அரங்கனை காட்டித் தருதலின் -ஆசார்யராகிய அவரையே
தமக்கு சார்வாக கொண்டனர் சில சால்புடையோர் –
அவர்கள் அங்கனம் கொண்டதோடு ஆச்சார்யா அபிமான நிஷ்டையில் வழுவாது -ஒழுகி நிலை நிற்றல்
அமுதனாருக்கு மிக்க வியப்பும் நயப்பும் தருகிறது –
இக்கடல் இடத்தே இராமானுசன் தன்னை சார்ந்தவர்
பகவானை பற்றுவதற்கு கூட இசைவார் இல்லாத இவ் உலகிலே அதனுடைய
எல்லை நிலத்தளவும் வந்து எம்பெருமானாரைப் பற்றி நிற்கும் பெற்றிமை வாய்ந்தவர்கள் என்றது ஆயிற்று –
காரியல் வண்மை -என்றுமொரு பாடம் உண்டு
அப்பொழுது காரினுடைய இயல்பை உடைத்தான வள்ளன்மை என்று பொருள் படும் .அதாவது
மேகம் நீர் நிலம் என்ற வேறுபாடு இன்றி மழை பொழிவது போலே எம்பெருமானாரை சார்ந்தவர்களும்
வேண்டுபவர் வேண்டாதவர் என்ற வேறு பாடு இன்றி எம்பெருமானார் திவ்ய குணங்களை பொழியும் வள்ளன்மை -என்றபடி –
——–
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது
அடங்கும் இதயத்து இராமானுசன் அம் பொன் பாதம் என்னும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே —12-
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் –
இடம் என்று பொதுப்பட சொல்லுகையாலே இவ் உலகினையும் சரி -விண் உலகினையும் சரி –
இவர் கீர்த்தி எல்லா இடங்களையும் தன்னுள் கொண்டமை புலனாகிறது
மகா விஷ்ணு போன்றது பக்தரான திரு மழிசை பிரான் கீர்த்தியும்
விஷ்ணு வ்யாபிப்பான் -இவர் கீர்த்தியும் எங்கும் உளதாய் இருக்கிறது
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை -நான் முகன்திருவந்தாதி – 5-
இவருடைய மதியைத் -துய்ய மதி -என்று மணவாள மாமுனிகள் போற்றிப்-புகழுகிறார் உபதேச ரத்ன மாலையிலே –
இடம் கொண்ட கீர்த்தி -விரிவடைந்த கீர்த்தி எனினுமாம்
இவர் சொன்னபடி எம்பெருமான் தான் இருக்கும் இடத்தைக் கொண்டமையால் வந்த கீர்த்தி என்னலுமாம் –
மணி வண்ணா நீ கிடக்க வேண்டும் பைந்நாகப் பாய் படுத்துக்கொள் -என்று
இவர் சொன்ன படி-திரு வெக்காவில் எம்பெருமான் மீண்டும் இடம் கொண்டு -சொன்ன வண்ணம் செய்த பெருமாள்-என்று
பேர் பெற்று விளங்கும் ஐதிஹ்யம் காண்க –
இனி எம்பெருமான் தான் கோயில் கொண்டு உள்ள ஊரகம் பாடகம் திரு வெக்கா என்னும்-தளங்களை விட்டு –
இவர் திரு உள்ளத்திலே இடம் கொண்டமையால் வந்த கீர்த்தியை சொல்லலுமாம் –
நின்றதும் -இருந்ததும் -கிடந்ததும் -என் நெஞ்சுளே -திருச் சந்த விருத்தம் -64 -என்றது காண்க
இனி இடம் கொண்ட கீர்த்தியை –
மழிசைக்கு அடை ஆக்கலுமாம் –
உலகும் மழிசை யும் புகழ்க் கோலால் தூக்க உலகு தன்னை வைத்தெடுத்த பக்கத்தினும்
மழிசையை வைத்து எடுத்த பக்கமே வலிதான புகழ் உடைமை திரு மழிசைக்கு கூறப்பட்டதாகிறது –
உலகின் மகிமைகளை எல்லாம் தன்னுள் கொண்டது திரு மழிசை -என்க-
மஹீசார ஷேத்ரம் மழிசை எனப்படுகிறது –
இணை அடிப் போது அடங்கும் இதயம் –
ஒரு சிறிய மலரிலே இரண்டு பெரிய மலர்கள் அடங்குகின்றன –
இதய மலர் சிறிது –இணை அடிப் போதுகள் பெரியன-
அழகிய இரண்டு திருவடிகளையும் இதயத்திலே வைத்து த்யானம் செய்கிறார் எம்பெருமானார் -என்றபடி .
அம் பொன் பாதம் –
தங்கப் பாத்தரத்தை எவர் தீண்டினும் மாசு படாது –
எம்பெருமானார் பாதத்தை எவர் பற்றினாலும் குற்றம் அன்று –
சர்வ சமாஸ்ரயநீயம்-என்ற படி
இறைஞ்சும் திரு -இறைஞ்சுதலே திரு என்க-
எம்பெருமானாரை இறைஞ்சுதலே செல்வம் என்றது ஆயிற்று –
எம்பெருமானை இறைஞ்சுதலும் செல்வமே யாயினும் -கஜாந்தம் ஐஸ்வர்யம் -என்று-
யானையைக் கட்டித் தீனி போடுவதை இறுதியாகக் கொண்டது ஐஸ்வர்யம் -என்பது போலே-
ஆசார்யன் அளவும் இறைஞ்சுதல் சென்றால் தான் செல்வம் ஆகும் -என்க –
முனிவர் –
எம்பெருமானாரையே இடை விடாது மனனம் பண்ணும் இயல்பினர் –
எம்பெருமானார் இதயத்திலே மழிசைக்கு இறைவன் இணை அடிப் போதுகளையே
த்யானிப்பது போலே – இத் திருவாளர்கள் இராமானுசன் அம் பொன் பாதத்தையே நினைந்த-வண்ணம் இருக்கின்றனர் -என்க –
திருமழிசைப்பிரான் மறந்தும் புறம் தொழா மாந்தர் என்று எம்பெருமான் விஷயத்தில் சாதித்தார்.
இவர் எம்பெருமானார் மிசை பற்றுள்ளவர் விஷயத்தில் மறந்தும் புறம் தொழேன் என்கிறது இங்கு
திருமுனிவர்க்கு அன்றி என்று சொற்களால் புலப்படுவது குறிப்பிடத்தக்கது
————-
செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செம் தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீர் ரங்கத்
தய்யன் கழல்க்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே – 13-
செய்யும் மறைத் தமிழ் மாலையும் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் இருவகை மாலைகளை அரங்கத்து ஐயனுக்கு சமர்ப்பிக்கின்றார் –
ஒருவகை -திரு துழாய் மாலை
மற்று ஒரு வகை -தமிழ் மாலை
ஆண்டாளும் அரங்கனுக்கு பா மாலையும் பூ மாலையும் சமர்பித்து உள்ளாள்-
ஆயின் அப்பூ மாலை அவளால் தொடுக்கப் பட்டது அன்று -சூடி சமர்பிக்கப் பட்டது தான்
திருத் துழாய் மாலையோ தொண்டர் அடி பொடி ஆழ்வார் தம் கையினாலேயே தொடுத்தது –ஆதலின் –
செய்யும் துளப மாலை -என்றார் –
ஆழ்வார் தாம் தொண்டர் ஆனமைக்கு ஏற்ப கழலில் அணிவித்ததும்
அவர் பத்தி கண்டு மயங்கிக் கிடக்கிறான் போலும் ஐயன் அரங்கத்திலே -இனி ஆழ்வார் இடம் உள்ள மதிப்பினால்
மாற்றாது அங்கனமே கழலில் அணிந்து இருந்தான் ஆகவுமாம்-
இனி கழலில் அணிந்தது உப லஷணமாய்-தோள் இணை மேலும் -திருவாய் மொழி -1 9-7 – -என்ற
பாசுரப்படி அந்த அந்த-அவயவங்களிலே புனைந்தான் ஆகலுமாம் –
கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்த்
தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதுமாகிலே -பெரிய திருமொழி -11 1-9 – –
இங்கு மிக்க சீர்த் தொண்டர் எனபது -தமக்கு ஒரு பயன் கருதாது -பரிவுடன் அரங்கனை பரிந்து-காப்பவரைக் குறிக்கிறது –
பூம் துளவு அவர் இட்டதாயின் வருந்த வேண்டியது இல்லை –
பிரிந்து வருந்தும் தலைவிக்கு தான் இன்பம் காண வில்லையே என்பதனால் அன்று ஏக்கம் –
தான் பிரிந்த நிலையில் தலைவனை அருகில் இருந்து பாதுகாப்பார் யாரும் இல்லையே
என்பதனால் ஆயது அது –மிக்க சீர் தொண்டர் பக்கத்தில் இருப்பது தெரிந்தால் அவ் ஏக்கம் நீங்குகிறது என்க-
அத்தகைய மிக்க சீர் தொண்டர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரே
பசும் துளவ மாலை
துழாய் வாடும் -இவ் ஆழ்வார் கைப் படினோ-புதுக் கணிக்கிறது திருத் துழாய் -அதற்க்கு காரணம்
அரங்கனுக்கு அணி செய்ய திருத் துழாய் வடிவத்தில் நித்ய ஸூரியே வந்து இருப்பதால் –
தனக்கு தொண்டு பட்ட ஆழ்வார் உடைய திருக் கரம் பட்டதும் புத்துணர்ச்சி ஏற்பட்டு புதுக் கணிப்பு உண்டாகிறது –
அது பசுமை நிறத்தாலே வெளிப்படுகிறது -அது தோன்ற -பசும் துளவ மாலை -என்கிறார் –
அரங்கனுக்கு இவர் துளவ மாலை அணிவித்தாலும் இவர் செய்வது அரங்கன் தொண்டு அன்று -துளவத் தொண்டே –
அதாவது திருத் துழாய் ஆழ்வாருக்கு புரியும் தொண்டே எனபது அறிய தக்கது –
துளவத் தொண்டரே -இவர் -துளவத் தொண்டாய் -என்று இவர் கூறிக் கொள்வது காண்க –
திருத் துழாய் ஆழ்வாருக்கு புரியும் தொண்டு அவருக்கு ஆள் பட்ட தொண்டர் அனைவருக்கும்
புரியும் தொண்டாய் தலைக் கட்டும்
செம் தமிழில் பெய்யும் மறைத் தமிழ் மாலை
மறையின் குருத்தின் பொருளையும் செம் தமிழையும் ஒன்றாக திரித்தி பாடினார் -பொய்கை ஆழ்வார் –
நான் மறை செம் பொருளை செம் தமிழால் அளித்தார் பாண் பெருமாள்-
இவரோ மற்று ஒரு பாஷையாய் இராது தமிழாகவே ஆகி விட்ட வேதம் என்னும்படியான
தமிழ் மாலையை தொடுத்து அளிக்கிறார் –
பேராத சீர் அரங்கத்து ஐயன் –
பேராத -நீங்காத
சீர் -கல்யாண குணங்கள்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப் பிரான் -என்றார் நம் ஆழ்வாரும்
இனி சீர் ரங்கம் என்பதை ஸ்ரீ ரங்கமாக கொண்டு -அத் திரு வரங்கத்துக்கு -பேராத – என்பதை
அடை மொழி யாக்கலுமாம் -பேராத -நகராத
திரு அயோத்யையில் இருந்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஸ்ரீ ரங்க விமானத்தை எழுந்து அருளப் பண்ணிக்
கொண்டு போகும் பொழுது இங்கு காவேரிக் கரையிலிருந்து விபீடணற்கு பெறாமல் இருந்தது பிரசித்தம் –
இனி சத்ய லோகத்தில் இருந்தும் -அயோத்திக்கும் -அங்கு இருந்து விபீடணன் மூலம் காவிரி ஆற்று இடை க்கும்
பேர்ந்து வந்தது போலே -இங்கு இருந்து வேறு ஓர் இடத்துக்கு எக்காலத்தும் பெறாமல் இருத்தல்
பற்றி –பேராத சீர்ரங்கம் -என்றார் ஆகவுமாம்-
அவனும் சீர் அரங்கம் விட்டுப்பேராமல் இருக்க
தானும் சீர் அரங்கம் விட்டுப் பேராமல் மங்களா சாசனம் செய்தார் அன்றோ
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளியதையே முன் பின்னாக மாற்றி
அரங்கத்து ஐயன் – என்று அருளி செய்கிறார் அமுதனார்
பரன்
சேஷித்வத்தின் எல்லை நிலையில் இருந்து தனக்கு மேற்பட்டவர் இல்லாமையாலே
எம்பெருமானை –பரன் -என்பது போலே -சேஷத்வத்தின் எல்லையில் இருந்து தனக்கு
மேம்பட்டவர் இல்லாமையாலே தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -பரன் -என்கிறார் –
பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன்
ஆழ்வார் தொடர்களுடைய அடிப் பொடியை ஆதரித்து அதனையே தனக்கு
நிரூபகமாக கொண்டார் -எம்பெருமானார் அடிப் பொடியின் அடியை அன்றி -ஆதரியாதவர் ஆனார் –
பரனாக ஆழ்வாரையே கொண்டமையின் –அவன் தாள் அன்றி
பரன் என்று பேர் கொண்ட எம்பெருமான் தாள்களையும் ஆதரியார் -என்னுமாம் –
ஆழ்வார்கள் அனைவரும் ஒரே சமஷ்டியாய் -ஒரே தரத்தினராய் இருத்தலின் – அவர்கள் திருவடிகளையும் –
அவர்கள் தந்த ஞானத்தால் உய்ந்த அவர்களுடைய சீடரான நாதமுனி முதலிய ஆசார்யர்கள் உடைய திருவடிகளையும்
எம்பெருமானார் ஆதரிப்பது இதற்கு முரண் படாது -என்க –
மெய்யன்
பரன் தாள் அன்றி ஆதரியாதது போலே மெய்யை அன்றி ஆதரியாதவர் எம்பெருமானார் -என்க –
பொய்யை சுரக்கும் பொருளை துரந்து மெய்யைப் புரக்கும் இராமானுசன் -79 என்பர் மேலும் –
சரணே கதி வேறு எனக்கு –
வேறு கதி -தனி சிறப்புற்ற பேறு
எம்பெருமானுடைய திருவடி -பேறு
ஆச்சார்யராம் எம்பெருமானாருடைய திருவடியோ-சிறப்பு வாய்ந்த வேறு பேறு -என்று உணர்க –
திருத் துழாய் ஆழ்வாருக்கு ப்ராப்யம் அரங்கத்து ஐயன் திருவடி –
அணிவிப்பவரான ஆழ்வாருக்கு பிராப்யம் திரு துழாய் ஆழ்வாருக்கு அடிமை புரிவதால் உகக்கும் தொண்டர்கள் அடி
எம்பெருமானாருக்கு ப்ராப்யம் பரரான ஆழ்வாருடைய திருவடி
அமுதனார்க்கு ப்ராப்யம் ஆசார்யரான எம்பெருமானார் திருவடி-என்றது ஆயிற்று-
திருமாலை அறியாதார் திருமாலை அறியார் என்று வழங்குவது காண்கிறோம்.
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணைப் பணியும் என்றும்,
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம், என்றும்
அடைதற்கு உரியவன் அரங்கனே என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லி ,
அய்யனே அரங்கனே உன் அருள் என்று அவன் அருளே உபயம் என்று நிச்சயித்து ,
வாழும் சோம்பர் என்று அவன் அருளையே நோக்கி இருப்பது ஆத்ம ஸ்வருபம் என்று நிர்ணயித்து ,
அதற்க்கு மேலில் பாட்டுக்களில் எல்லை நிலமான ததீய சேஷத்வதைச் சொல்லி அருளிய செந்தமிழ் அன்றோ இவரது .
தமது சொற்களை மலராகவும் நூலை மாலையாகவும் கொண்டாரிறே இவர் .
பெய்யும மறைத் தமிழ் மாலை –செய்யும் சங்கத் தமிழ் மாலை என்னுமா போலே
————–
கதிக்குப் பதறி வெம்கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை ஆற்றேன் கொல்லி காவகன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமானுசனைச் சொர்விலனே -14 –
கலை சொல் பதிக்கும் கவி என்று கூட்டுக
சாஸ்திர சொற்களை அமைத்து திரு மொழி அருளி செய்து உள்ளாராம் குலசேகர பெருமாள் –
திருக் கண்ண புரத்தில் உள்ளவர் பேசும் வார்த்தைகளிலே சாஸ்திரங்கள் இலங்கும் என்கிறார்
திருமங்கை ஆழ்வார் –கலை இலங்கு மொழி யாளர் -8 1-1 – -என்பது அவர் திரு மொழி
கட்புலன் ஆகாதவைகளான பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களை சாஸ்திரங்கள் நமக்கு தெரிவிப்பது போலே –
அவர்கள் பேசும் வார்த்தைகளும் நமக்கு அவற்றை உணர்த்து வனவாய் இருத்தலின் –
கலை இலங்கு மொழி யாளர் –என்றார் ஆழ்வார் –
அங்கனமே குலசேகர பெருமாள் திவ்ய பிரபந்தத்திலும் சொற்கள் சாஸ்திரம் போலே அவற்றை அறியுமாறு செய்தலின்
கலை சொல் என்று வருணிக்கிறார் அமுதனார்
இடம் அறிந்து ரத்னங்களை பதிப்பது போலத் தக்கவாறு பெருமாள் திரு மொழியில் சொற்கள் பதிக்கப் பட்டு உள்ளன
பதிக்கும் என்பதால்
சொல்லை ரத்னமாகவும் -கவியை ஆரமாகவும் -உருவகம் செய்தமை போதரும் –ஏக தேச உருவகம்
ஹாரத்தில் ரத்னங்கள் போலத் தமிழ் மாலையில் சொற்கள் பதிக்கப் பட்டு உள்ளன –
கலைச் சொல் என்று கொண்டு கூட்டாது இருந்தபடியே கலை என்பதைக் கவிக்கு அடையாக்கிப் பொருள் கூறலுமாம் –
கலையாகிய கவி என்று இரு பெயரொட்டுப் பண்புத் தொகை-சாஸ்த்ரமான பெருமாள் திரு மொழி -என்றபடி –
இதனால் கொல்லி காவலன் தனது அனுபவம் உள் அடங்காது -வெளிப்படும் தன சொற்களை ரத்னங்களைப் பதித்து
வைத்தால் போன்று அழகு பட இணையக் கொத்து வைத்த சாஸ்திர ரூபமான கவி -என்றதாயிற்று –
வன்பெரு வானகம் உய்ய , அமரருய்ய ,மண்ணுய்ய ,மண்ணுலகில் மனிசருய்ய ,
துன்பமிகு துயர்கல அயர்வொன்றில்லாச் சுகம் வளர –அன்பொடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளும்
வ்யூஹ நிலையின் திருக் குணமான சொஹார்தத்தை இங்கு சொல்கிறது
இருளிரிய சுடர்மணிகள் என்றும், இனிதாக திருக்கண்கள் வளர்கின்ற –என்றும் அவனுடைய ரூபத்தை சாதித்தருள்கிறார்.
அடுத்த திருமொழியில் தேட்டறும் திரள் என்று ததீய சேஷத்வத்தை பரக்கப் பேசுகிறார்.
அரசாக எண்ணேன் மற்றரசுதானே என்று அனந்யார்ஹ சேஷதவத்தை அறிவிக்கிறார்.
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் இவ்வையம் என்று இந்த உலகதிதின் நிலையில்லாத் தன்மையை குறிப்பிடுகிறார்
இவ்வான்மாவுக்கு எம்பெருமானுக்கும் நமக்கும் இருக்கும் சம்பந்தம் பல த்ருஷ்டாந்தங்கள் வாயிலாக கொடுதருள்கிறார்.
தருதுயரம் என்னும் திருமொழ்யில் . இதில் தலைவன், தாய், மருதத்துவன் என்று பல உறவுகள் கொண்டு நிரூபித்தருள்கிறார் இவ்வாழ்வார்.
அவனைத் தவிர வேறொன்றும் வேண்டாம் என்று ‘நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே ‘என்பதைக் காணலாம்.
இதற்க்கு எல்லாம் திலதமாய் , எம்பெருமான் ஈசன் திருமலையில் ஏதேனும் ஆக இருக்கும் நிலையை பாரிக்கிறார்
எம்பெருமான் சம்பந்தமே பேறு என்று இருப்பவர்கள்
‘படியாய்க் கிடந்து உன் பவள வாய்க்காண்பேனே ‘ என்று கைங்கர்யததில் களை அறுக்கிறார்
பாடும் பெரியவர் –
பெருமாள் திருமொழியை அனுசந்திக்கும் போது-கவி இன்பத்துடன் அது தரும் இறை உணர்வின் இன்பமும் சேர்ந்து
பேரின்பக் கடலில் திளைத்துப் பாடத் தொடங்குகிறார்கள் ரசிகர்கள் –
அவர்களைப் பாடும் பெரியவர் -என்கிறார் அமுதனார் –
இனி -இன்னிசையில் மேவிச் சொல்லிய இன் தமிழ் — 6-10 – என்றபடி
இன்னிசை மேவியதாலின் பாடுகின்றனர் என்னலுமாம் –
பாடுவதே பெருமை என்க –
பாதங்களே துதிக்கும் பரமன்
குலசேகரப் பெருமாள் அடியிலும் இடையிலும் முடிவிலும் முறையே
பொன்னி வருடும் அடியையும்-1-11
முடி மேல் மாலடியையும் –7 11- –
அரசு அமர்ந்தான் அடியையும் – 10-7 -சொல்லி
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவதையே முதலிலும் இறுதியிலும் பலனாக அமைத்து துதிக்கிறார் –
அடித் துதியான கலை கவியாம் சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர்க்கு தொண்டர் தொண்டரான
எம்பெருமானாரோ
அவர்கள் பாதங்களையே துதிக்கிறார் –
அதனால் தொண்டர்கள் திறத்துக் கொண்ட ஈடுபாட்டில் தமக்கு மேற் பட்டார் எவருமே இல்லாத நிலையை
எய்தினமையின் எம்பெருமானாரை பரமன் -என்கிறார் – பரமன் -தனக்கு மேற் பட்டவர் இல்லாதவன்
————–
சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –
அழகை மட்டும் கண்டு அவனது ரஷிக்கும் ஆற்றலைக் காணாமையின் அச்சத்தில் ஆழ்ந்தவர் எழுந்து இலர் –
பான்மை -இயல்பு
இறைவனாலும் போக்க ஒண்ணாதபடி அன்பினால் விளைந்த-அச்சம் ஆழ்வாரது இயல்பு
விஷ்ணு பிரவணர்-ஈடுபட்டவர் ஆழ்வார் -விஷ்ணு சித்த பிரவணர் எம்பெருமானார் –
எனக்கு என்ன தாழ்வு இனியே
இனி-சேராமை உறுதிப் பட்ட பின்பு
சாரா மனிசரை சேர்ந்தால் அன்றோ தாழ்வு வாரா நிற்கும்
சாரும் மகான்களை சாராதவரை சேராமையாலே எனக்கு தாழ்வு வர வழி இல்லை அன்றோ –
அதுவே நான் பெற்ற பேறு என்கிறார் –
————-
தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –
மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே ஆள்கின்ற நாள்
கலி புருஷன் தலம் முழுவதும் தன் ஆட்சியை பரப்பி நிலை நாட்டிக் கொண்டு விட்டான் -இதனைக் காட்டுகிறது –
மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே ஆள்கின்ற நாள்-என்னும் சொற்தொடர் –
மழை பெய்து நெல் விளைந்தது என்னும் இடத்து போலே –
தாழ்ந்து ஆள்கின்ற நாள் –
என்னும் இடத்துத் தாழ்ந்ததனால் ஆள்கின்ற நாள் -என்று பொருள் படுத்தல் காண்க
கலியே –
ஏகாரம் பிரிநிலை கண் வந்தது -மறை ஆட்சி முழுதும் மறைந்தது -கலி ஆட்சி காலூன்றி நின்றது –
இருளும் ஒளியும் சேர்ந்து இருக்க இயலாது அன்றோ –
அளித்தால் ஆவது –
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று திருவாய்மொழி -5 2-1 – – கலியை கெடுத்து உய்யும் வழியை புலப்படுத்தும்
மறையை தாழ்வுற்ற நிலையிலிருந்து மேம்பட உயர்த்தி அது காட்டும் வீட்டு நெறிக்கண் செலுத்துதல்-
வீடளிப்பான் மண்ணின் தலத்து உதித்து உய்மறை நாலும் வளர்த்த -96 – என்று மேலே இவரே கூறுவதும் காண்க –
காண்மின் –
இது அனுபவத்திலே கண்ட உண்மை அன்றோ -நான் உபதேசித்து தெரிந்து கொள்ள
வேண்டும்படி யாவோ இருக்கிறது என்கிறார் –
எனவே நீங்கள் ஒவ் ஒருவரும் -எனக்கு என்ன தாழ்வு இனி -என்னும்படி என்னைப் போலே
அடியார் அளவும் பெருகும் வண்ணம் எம்பெருமானார் இடம் ஈடுபடுவதே அடுப்பது என்னும்
கருத்தும் தோற்றுகிறது-இது குறிப்பு எச்சம் –
அரங்கர் -என்று பன்மையில்
முக்தி அடைந்தவர்கள் தங்கள் இன்பத்துக்கு போக்கு வீடாக எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யப்
பல வடிவங்கள் கொள்வது போலே -அரங்கனும் ஆண்டாள் மீது உள்ள காதல் மிகுதியால்
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள வடிவோடு அமையாது அவளது அவதார ஸ்தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரிலும்
வட பெரும் கோயில் உடையான் வடிவம் கொண்டு காத்துக் கிடத்தலின் அரங்கர் -என்று பன்மையில் கூறினார்
தலையரங்கம் -இரண்டாம் திருவந்தாதி – 79- -என்றபடி திருவரங்கமே தலைமையகமாகவும்
ஏனைய திவ்ய தேசங்கள் கிளை யகங்களாகவும்-அரங்கனே எல்லா இடங்களிலும் எழுந்து அருளி இருந்து
அருள் புரிவதாகவும் கூறப்படும் சம்ப்ரதாயமும் இங்கு உணரத் தக்கது –
இயல்பாய் அமைந்த கூந்தல் மணத்துக்கு மேலே -நாடாத மலர் -திருவாய் மொழி – 1-4 9- –எனப்படும்
ஆத்ம புஷ்பத்தின் உடைய ஆசார்ய பாரதத்ரியம் என்னும் மணமும் கூடவே ஆண்டாள் சூடிய மாலை
நிகரற்ற நறு மணம் கமழுவது ஆயிற்று
இங்கனம் செழும் குழல் மேல் மாலைத் தொடை தென்னரங்கற்கு ஈயும் மதிப்பு உடையவள் ஆனாள் ஆண்டாள் –
இதனையே -தன்னுடைய திருக் குழலிலே சூடி வாசிதமாக்கி கொடுத்த வைபவத்தை உடையவள் -என்று
இவ்விடத்திலே உரையை அருளி செய்தார் பெரிய ஜீயர்
ஆண்டாள் பேர் அவாவுடன் சூடிக் கொடுத்த மாலையை தலையாலே தாங்குகிறான் அரங்கன் –
தலையாய மணத்தை தலையாலே தானே தாங்க வேணும்
மௌலி சூழ்கின்ற மாலை
முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில் வண்ணன்
கற்றத் துழாய் சேர் கழல் அன்றி -மற்று ஒன்றை
இச்சியா அன்பர் தனக்கு எங்கனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து -ஞான சாரம் – 8- –
என்கிறபடி பயன் கருதாத பரமைகாந்திகள் செய்வது அனைத்தையும் உச்சியால் ஏற்கும் அவன்
காதலியான காரிகை சூடிக் கொடுத்ததை தலையாலே தாங்கக் கேட்க வேணுமோ –
சூடிக் கொடுத்த மாலையை திரு முடியிலே ஒரு புறத்திலே மட்டும் தாங்கினால் போதாதாம் -திருப்தி இல்லை
ஆசை தீர முடி எங்கும் படும்படி சூழ்கின்றதாக அந்த மாலையை தாங்க வேண்டுமாம் –
அது தோன்ற-மௌலி சூழ்கின்ற மாலை-என்றார்
சூடிக் கொடுத்தவள் -எனபது பாடிக் கொடுத்தவள் என்பதற்கும் உப லஷணம்-
இன்னிசையால் பாடிக் கொடுத்தால் நற்பா மாலை பூ மாலை சூடிக் கொடுத்தாள்-என்னும் பிரசித்தி காண்க –
பூ மாலையை மௌலி யில் சூடுகின்றான்-பா மாலையை தலையில் வைத்து கொண்டாடி இன்ப வெள்ளத்தில் ஆழகின்றான் –
வேதம் காட்டும் தூய அற நெறி –
நாராயணனே நமக்கேபறை தருவான் – என்னும் தொடக்கத்திலேயே அவருக்குத் துலங்கி விட்டது –
அத் தூய நெறி நாராயணனே – அந் நெறி நமக்காக ஏற்பட்டது -நாம் அந் நெறியிலே நடக்க வேண்டும் –
புண்ணியம் யாம் உடையோம்- மற்றை நம் காமங்கள் மாற்று- குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது-
அந் நெறி பறையிலே- கைங்கர்யம் என்னும் பேற்றிலே – நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும் –
அந் நெறியிலே நடப்பதாவது-நாராயணன் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றி நிற்கை -இதுவே தூய நெறி
எம்பெருமானார் -உபநிஷத்துக்களில் தெளிவற்ற நிலையில் சொல்லப்படும் பொருள்கள் தெள்ளத் தெளிய
திருப்பாவை யாகிய கோதோ உபநிஷத்தில் சொல்லப் பட்டு இருப்பது கண்டு விசேஷித்து
அதனில் மிக்க ஈடுபாடு கொண்டார் –
சந்நியாசிகள் உபநிஷத்தை அனுசந்திக்க வேண்டும் என்னும் முறைக்கு ஏற்ப எம்பெருமானார் அனுசந்திக்கும்
உபநிஷத்தாய் அமைந்தது -திருப்பாவை –அதனால்-திருப்பாவை ஜீயர் -என்ற பிரசித்தி அவருக்கு ஏற்பட்டது
தொல் அருளால் வாழ்கின்ற
ஆண்டாள் தொல் அருளே எம்பெருமானார் வாழ்வுக்கு எல்லாம் அடித்தளமாய் அமைந்தமை பற்றித் –
தொல் அருளால் வாழ்கின்ற -என்றார் –
இராமானுசன் என்னும் மா முனி –மா முனி என்னும் இராமானுசன் என்று மாற்றுக –
இராமானுசனே இந் நூலில் எங்கும் அடை கொளி யாய் இருத்தலில் இங்கும் அங்கனமே கொண்டு
முநி ஸ்ரேஷ்டரான எம்பெருமானார் -என்று உரை அருளினார் மணவாள மா முனிகள் –
வாழ்கின்ற வள்ளல் என்று இராமானுசன் தனக்குக் கிடைத்ததை இவ்வுலகிற்கும் ,
யாவருக்கும் வழங்கி அருளியதை கண்டோமே. ‘இன்னருளால் ‘ ‘ஆசை உடையோருக்கு ‘என்று
மாமுனிகள் தானும் அருளிச் செய்தாரிறே
மாமுனியே : முனி ஸ்ரேஷ்டர் என்று மாமுனிகள் இதற்கு அழகாக உரை இட்டருளியது நோக்க வேணும்
———–
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வெந்து எய்தினரே -17 –
கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும் தனியானை
வெஞ்சினக் களிற்றை -பெரிய திருமொழி – 7-10 8-
முத்தின் திரள் கோவையை -பத்தராவியை -நித்திலத்தொத்தினை –யரும்பினை யலரை -யடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியும் சுவைக் கரும்பினை -கனியை-சென்று நாடி -கண்ண மங்கையுள் கொண்டு கொண்டேனே
திருமங்கை ஆழ்வாரும்-தனி யானையைப் பாடுகிறார் -அதனைப் பரிசிலாகப் பெறுவது இவர்க்கும் நோக்கமாகும் –
இந்த யானையை கொடுப்பார் வேறு எவரும் இலர் -தன்னையே தான் தருவது இது –
தன்னைத் தந்த கற்பகம் -என்னும் நம் ஆழ்வார் திரு வாக்கும் காண்க
கண மங்கை கற்பகத்தை -எனபது திரு மங்கை ஆழ்வார் அருளிய பெரிய திரு மடல் –
கலை பரவும் பீடு படைத்த அவ் எம்பெருமான் திரு மங்கை ஆழ்வார் உடைய
ஈடு இல்லாத தண் தமிழ்க் கவியைக் கண்டு வியக்கிறான்
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -என்கிறார் ஆழ்வார்
இங்கனம் செருக்குற்ற சர்வேஸ்வரனையும் கற்பிக்கலாம் படியான கவிதை எனபது தோன்ற –
தனியானைத் தண் தமிழ் செய்த – என்கிறார் –
தண் தமிழ்
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் என்னும் இவை அனைத்தும் இறைவன் காட்ட –
தம் கண்டபடியே
கற்பவர் மனத்தில் பதியும் படியும் -உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் அவனுக்கு போலி யாயும் –
பிரியாது இணைந்த பிரகாரமாயும் இருப்பதை உணரும் படியும் -அவனது இனிமையை நுகரும்படியும் செய்து –
சம்சார தாபத்தை அறவே போக்கி குளிர வைப்பதாய் இருத்தல் பற்றி –தண் தமிழ் -என்கிறார் –
எய்தினர் முனியார் மனம் கனியார்
நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான
காதல் விஞ்சியவராய் -காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே
இன்பமாகவும் கொண்டு இருத்தலின் -ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –
எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்-
அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு
இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -என்க-
எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள் கூறுக
———–
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –
இப்பாசுரம் ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரை பற்றியதாலின் அவர் அருளி செய்த
அரு மறையின் பொருள் ஆயிரம் இன் தமிழ்ப் பாடினான் -என்பதை அடி ஓற்றின படி
தெரிய சொன்ன ஆயிரம்
மறைந்த மறைகளை மீட்பதற்காகவே இறைவன் அவதாரம் செய்தான் ஹயக்ரீவனாக –
உபநிடந்தங்களின் கருத்துக்களை எல்லாம் இனிதாகத் திரட்டி கீதை என்னும் அமுதத்தை
ஊட்டுவதற்காகவே அவ இறைவன் அவதரித்தான் கண்ணனாக –
உய்யும் வழி தெளியாது பவக்காட்டிலே வழி திகைத்து அலமந்த மாந்தர்க்கு வழி காட்டுவதற்காகவே
காட்டின் இடையே ஆநிரை காக்கும் ஆயனாக ஆயினான் எம்பெருமான் என்பர் –
ஒரு ஆறு ஒருவன் புகாவாறு உருமாறும் ஆயவர் -பெரிய திருவந்தாதி – 56- என்றார் நம் ஆழ்வார் .
தவறான வழியில் போய் தடுமாறாத படி நல் வழி -கீதையின் மூலம் -காட்டுவதற்காகவே ஆயன்
உருவகமாக மாறினான்
கீதை அருளி செய்வதற்காகவே கண்ணன் அவதரித்தது போலே -நம் ஆழ்வார் ஆயிரம் இன் தமிழான
திருவாய்மொழி அருளி செய்வதற்காகவே அவதரித்தார் –
கண்ணன் வட மொழியிலே கீதை தந்தான் –
நம் ஆழ்வார் இன் தமிழிலே திருவாய்மொழி தந்தார் –
கீதை அர்ஜுனனையும் மயங்கச் செய்தது –
திருவாய்மொழி அனைவர்க்கும் தெரியச் சொன்ன ஆயிரம்
எம்பெருமானின் பரத்வம் , காரணத்வம், வ்யாபகத்வம் , கல்யானகுணங்கள்,ஆர்த்தி ஹரத்வம் என்று
பல திவ்ய குணங்களை நமக்கு பத்துக்கள் தோறும் ஈந்து அருளினார் இவர்.
சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் –
நம் ஆழ்வார் பெரியன் -மதுர கவி ஆழ்வார் பெரியார் -பெரியனைப் பெரியராலே தான் தன்னுள்ளே-வைக்க முடியும் –
புவியும் -லீலா விபூதியும் -இருவிசும்பும் -நித்ய விபூதியும் -தன்னகத்தே கொண்டவன் –பெரியோனாகிய மாயன் –
அவன் செவியின் வழியே புகுந்து நம் ஆழ்வார் உள்ளத்திலே நின்றான் –
அதனால் பெரியோனையும் உள்ளடக்கிய பெரியரானார் நம் ஆழ்வார் –
அத்தகைய நம் ஆழ்வாரையும் சிந்தை உள்ளே பெய்தற்கு இசைந்து இருக்கிறது
மதுர கவி ஆழ்வாருக்கு உள்ள பெருமை –ஆதலின் அவரைப் பெரியவர் என்றே குறிப்பிடுகிறார் –
இறைவனை தம் உள்ளத்திலே வைத்துக் கொள்ளுதல் முதல் நிலையாகும் –
அது எல்லா ஆழ்வார்களுக்கும் பொதுவானது –
ஆசார்யனை தம் உள்ளத்தில் வைத்துக் கொள்ளுதல் இறுதி நிலையாகும் –
அது ஏனையோருக்கு அன்றி மதுர கவி ஆழ்வாருக்கே அமைந்தது ஒன்றாகும் –
இது பற்றியே -பத்துப் பேரையும் -பத்து ஆழ்வார்களையும் – சிரித்து இருப்பார் ஒருவர் -என்றார் இவரை ஸ்ரீ வசன பூஷண காரர் –
இனி பெரியவர் என்று பொது சொல்லால் குறிப்பிடிதலின் -தம் நெஞ்சினால் நம் ஆழ்வாரை அன்றி
வேறு ஒன்றும் அறியாத -பெரியவர்கள் எல்லோரையும் சொல்லலுமாம் –
சீர்-ஞானம் முதலிய குணங்கள்
இனி ஆச்சார்ய நிஷ்டை யாகிய சிறப்பை கூறலுமாம்
உயிர்கள் எல்லாம் உய்வதற்கு உதவும்
எல்லோரையும் உய்விப்பதற்காக மதுரகவி ஆழ்வாருடைய குணங்களை அல்லது அவரது ஆசார்ய நிஷ்டையை
தாம்-மாறனடி உய்ந்து காட்டியும் -உபதேசத்தால் கேட்பவர்களும் கைக் கொள்ளலாம் படி வழங்கியும்
உபகரித்து அருளினார் எம்பெருமானார்
உயிர்கள் எல்லாம் உய்வதற்கு உதவும்
ஆசார்ய நிஷ்டைக்கு அதிகார நியமம் இல்லை ஆதலால் உயிர்கள் எல்லாம் என்று திருவாக்கு .
தேக சமபந்த துறையில் அதிகார நியமம் இருக்கலாம் . ஆத்ம சம்பந்த விஷயத்தில் இல்லை என்றபடி
சுவாமி வேதாந்த தேசிகனும்
” துன்புற்ற மதுரகவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல்வழிகள் துணிவார்கட்கே’என்று
குருபரம்பரா சாரத்தில் அருளியது காணலாம்
மணவாள மா முனிகள்-
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம் -ஆர்த்தி பிரபந்தம் -55 – என்று
இவ் ஆசார்ய நிஷ்டையில் நிலைத்து நிற்பதும் -எம்பெருமானார் உய்வதற்கு உதவியதன் பயனே என்று அறிக –
தாமாகவே உற்று துணையாகி நம்மிடையே எம் முயற்சியும் இல்லாத நிலையிலும்
தமது இயல்பான அருளாலே நாம் உய்வதற்கு உதவுதலின் –
எம்பெருமானார் உறு துணை யாயினார் என்னலுமாம் -உறுகின்ற துணை உறு துணை –
பெரிய ஜீயர் உரையில் ‘என் உறு துணையே ‘ என்று இருப்பதால்
அப்படி பாடம் இருக்கலாம் என்று சுவாமி நல்லான் சக்கரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார் திருவுள்ளம்
———-
உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-
இதுகாறும் எம்பெருமானாருக்கு ஆழ்வார்கள் இடத்திலும் அவர்களுடைய திவ்ய பிரபந்தங்களிலும்
உள்ள ஈடுபாடு கூறப் பட்டது –
முதல் ஆழ்வார்கள் முதலில் வரிசையாகப் பேசப் பட்டு உள்ளனர் –
தாம் இருக்கும் இடத்தில் வந்து இறைவனால் காட்ஷி கொடுக்கப் பட்டவர்கள் பேசப்பட்டனர் முன்னர் –
அர்ச்சை நிலையில் தாம் இருக்கும் இடத்துக்கு வருவிக்கப்பட்டு காட்சி கொடுக்கப் பட்டவரான
திருப் பாண் ஆழ்வார் பேசப்பட்டார் பின்னர்
சொன்ன வண்ணம் செய்த பெருமாளாய் -அர்ச்சை நிலையில் காட்சி கொடுக்கப் பட்டவர் பாணற்கு அடுத்து பேசப்படுகிறார் –
திருப் பாண் ஆழ்வார் –
அர்ச்சை எம்பெருமான் சொன்ன வண்ணம் செய்து ஆட்செய்தவன் மூலம் உகப்பித்த மழிசைக்கு இறைவனை அடுத்து
அழகைக் காட்டி ஆதரம் பெருக வைத்து அர்ச்சை எம்பெருமானாம் அரங்கனால் ஆட்கொள்ளப்பட்ட
துளவத் தொண்டரைப் பேசுவது -முறை தானே -ஆட்செய்தான் அங்கே -ஆட்கொண்டான் இங்கே –
பிறகு அவ்வரங்கனை -கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே -என்னும்
வேட்கை மீதூர்ந்த குலசேகரப் பெருமாள் பேசப்படுகிறார்
பின்னர் பெரி யாழ்வார் பேசப்படுகிறார்
அரங்கன் அழகைக் கண்டு ஆதரம் பெருகி ஆட் செய்தவருக்கு பிறகு
வீரம் கேட்டு வீணே பயப்பட்டு விரைந்து படையுடன் ஆட்செய்யப் புறப்பட்டவரை பேசுவது பொருத்தம் அன்றோ –
பொங்கும் பரிவாலே அவன் அறிவாற்றல் ஒன்றும் பாராது -அவனைத் தான் காப்பாற்ற போவதாக மயங்கி
படை எடுத்து -புறப்பட்ட குலசேகர பெருமாளுக்கு பின்னர் –
சர்வேஸ்வரன் உடைய அழகு மென்மைகளையே பார்த்து தொல்லை மாலை ஒன்றும் பாராது மயங்கிப்
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையரைப் பேசுவது தகும் அன்றோ –
பெரியாழ்வாரை சார்ந்து இருப்பவளான ஆண்டாளை அவரை அடுத்துப் பேசினார் –
நம் ஆழ்வார் இடமும் திரு மங்கை ஆழ்வார் இடம் உள்ள ஈடுபாடு
தொடக்கத்திலேயே முதல் இரண்டு பாசுரங்களினால் பேசப் பட்டு இருந்தாலும் –
அவர்களுடைய ப்ராதான்யம் கருதி –
இறுதியில் நாத முனியை பேசத் தொடங்கும் முன் அவர்களைப் பற்றி பேசினார் –
அவர்களிலும் திரு மங்கை ஆழ்வாரைப் பற்றி ஒரு பாசுரமும் –
நம் ஆழ்வாரைப் பற்றி இரண்டு பாசுரங்களும் அருளி செய்தார் –
நம் ஆழ்வாருக்கு உள்ள மிக முக்கிய தன்மையை நோக்கி அவரை இறுதியிலே பேசினார் –
அவ்விரு பாசுரங்களில் முறையே –
நம் ஆழ்வாரை அன்றி வேறு ஓன்று அறியாத மதுர கவி ஆழ்வார் உடைய வீறுடைமையும் –
பரபக்தி முதலியவற்றின் அடைவிலே அருளி செய்த திருவாய் மொழியினுடைய சீர்மையையும் அருளி செய்து முடித்தார் –
ஏனைய செல்வம் போலே அளவுக்கு உட்படாது வாரி வாரி வழங்கத் துய்க்கத் துய்க்கத் குறைவு படாதது
இத் திருவாய்மொழியாம் செல்வம் என்பது தோன்ற –பெரும் செல்வம்-என்கிறார் –
ஏனைய செல்வம் -அறனீனும் இன்பமுமீனும் -இச் செல்வமோ வீட்டு இன்பத்தையும் தருதலின் அதனினும்
மிக்கது என்பது தோன்ற –உறு பெரும் செல்வம் -என்றார்-
அறியக் கற்று -வல்லார் வைட்ணவர்-என்றபடி -ஞான ஜென்மத்தை தந்து -வைஷ்ணவராக மதிக்கப்பட செய்து -உயர்
குலத்தாரையும் -அறிவுடையாரையும் -அவர் பால் சென்று அருளை-பாகவத அனுக்ரகத்தை-நாடி நிற்கச் செய்தலின்
உறு பெரும் செல்வமாகப் போற்றப் படுகின்றது
உயர் குரு
இங்கு கூறப் படும் குருவோ -சம்சார நிவர்தகமான பெரிய திரு மந்த்ரத்தை உபதேசித்தவன்
வெறி தரு பூ மகள் நாதனும்
திரு மகள் கேள்வன் -நமக்குப் பிராட்டி புருஷகாரமாய் இருத்தலின் உபாயமாய்ப் பேறு
தருவான் ஆகிறான் -பிராட்டியோடு கூடி இருந்து நாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்பதனால் ப்ராப்யனாகவும்
பெறும் பேறாகவும் -ஆகிறான்
திருவாய் மொழியும் -இவை பத்தும் வீடே – 1-1 11- – என்ற படி வீடு அளிப்பதாலின் உபாயமாகவும் –
கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே –10 6-11 – -என்றபடி வீட்டில் உள்ளாறும்
கேட்டு இன்புறும்படி இருத்தலின் ப்ராப்யமாகவும் ஆதலின் -பூ மகள் நாதன் -ஆயிற்று –
———–
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –
திருவாய் ஈரத் தமிழ்
மனத்தால் மட்டும் நினையாமல் , மனதிலிருக்கும் எண்ணம் , எண்ணோட்டம் ,
வாய் வழியாக வழிந்து திருவாய்மொழியாக வெளி வந்தாதால் திருவாய்மொழி
வாய் வெருவின மொழி வாய் மொழி -என்க –
இவள் இராப்பகல் வாய் வெருவி-திரு வாய் மொழி -2 4 5- – – என்னும் இடத்தில்
ஈட்டில் –அவதானம் பண்ணி சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாத்யாயராக சொல்லுகிற இத்தனை –
ஈரத் தமிழ்
சம்சாரிகள் வெப்பத்தை தணிக்கும் ஈரமான தமிழ் ஆதலால் ஈரத் தமிழ்
மேலும் அமுதம் போல் இனித்து ஈரமான தமிழ்
இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் –
மதுர கவி ஆழ்வாருக்கு இனியவர் -அவர் பரம்பரையில் வந்தவரும் –
நாத முனிகளுக்கு கண்ணி நுண் சிறு தாம்பை உபதேசித்தவருமான பராங்குச நம்பி–
அவர் சீர் -அருள் மிக்கு உபதேசித்து அருளின வள்ளன்மை ,ஞான பக்திகள் ,இசை உணர்வு -முதலியன
இசை உணர்ந்தோர்க்கு இனியவர் –சீர் பயின்றதாக கூறுவதால் -இன்னிசை பாடித் திரியும் அவர்
பரம்பரையினரான பராங்குச நம்பி -இசையோடு கண்ணி நுண் சிறு தாம்பை உபதேசித்ததாக தெரிகிறது –
நெஞ்சால் வாரிப் பருகும் –
சம காலத்தவர் ஆயின் -கண்ணால் அள்ளிப் பருகி இருப்பார் –
எம்பெருமானார் பிற் காலத்தவர் ஆதலின் நெஞ்சால் நினைந்து நினைந்து அவரை அள்ளிப் பருகுகிறார் -என்றபடி –
பருகுதல் கூறவே -நாத முனிகள் நீராய் உருகினமை பெறப்படும் –
இனியவர் தம் சீரைப் பயின்று நீராய் உருகினார் -நாதமுனிகள்-
அத்தகைய நீரைப் பருகி விடாய் தீர்த்து இன்புறுகிறார் எம்பெருமானார் –
நாத முனிகளை ஆர்வத்துடன் நெஞ்சால் நினைந்து இனிது அனுபவிக்கிறார் எம்பெருமானார் -என்பது கருத்து –
என் தன் மா நிதி –
ஏனைய நிதிகள் போலே அழிவுறாத புதையல் எம்பெருமானார் –
ஆழ்வான் உதவிய ஞானக் கண்ணால் அப் புதையலைக் கண்டு எடுத்து ஆண்டு அனுபவிக்கும் தனது பாக்கியம்
தோற்ற –என் தன் மா நிதி -என்கிறார் –
———-
நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –
தூய் நெறி சேர் எதிகட் கிறைவன் –
இவ்வடை மொழி யமுனைத் துறைவற்கும் இசையும் -இராமனுசற்கும் இசையும் –நெறி-ஒழுக்கம் -உபாயமுமாம்
ஒழுக்கம் –ஆவது அனுஷ்டானம் -அது சாத்விக த்யாகத்துடன் -பகவான் என்னைக் கொண்டு தன் பணியை
தன் உகப்புக்காக செய்து கொள்கிறான் என்றும் நினைப்புடன் -அனுஷ்டிக்கப் படுதலின் தூயதாயிற்று -என்க –
இனி அஹங்காரக் கலப்பினால் மாசுற்ற மற்ற உபாயங்களை விட்டுத் தூயதான சித்த உபாயத்தின்
எல்லை நிலமான ஆசார்யனையே உபாயமாக கொள்ளலின் தூய் நெறி என்றார் ஆகவுமாம் –
ஆளவந்தார் நாத முநிகளையே உபாயமாகவும்-
எம்பெருமானார் ஆளவந்தாரையே உபாயமாகவும் -கொண்டு உள்ளமையின் தூய் நெறி சேர்ந்தவர்கள் ஆயினர் என்க –
இனி யமுனைத் துறைவர் இணை யடி -என்பது ஆளவந்தார் திருவடியான பெரிய நம்பியை
குறிப்பால் உணர்த்துகிறது என்றும் கூறுவர்-இவ் விஷயம் லஷ்மீ நாத -பத்ய வ்யாக்யானத்தில் ஸ்பஷ்டம் –
யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடைய இராமானுசன் ஆகையாலே
ஆளவந்தாருக்கு சரணத்வயம் என்னலாம்படியான பெரிய நம்பியும் ஸூசிதர்
இளையாழ்வாரை விஷயீ கரித்த அனந்தரத்திலே-
இளையாழ்வீர் பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யத்துக்கு எழுந்து அருளும் போது-
மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் வானோர் வாழ எழுந்து அருளினாப் போலே
மேலை வானோர் வாழ இவரும் தமக்கு அடியேனான அடியேனை அப்படியும் யுமக்கு வைத்து
திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று அவர் அருளிச் செய்தார்
என்னைக் காத்தனன் –
என்னைக் காக்கும் பொறுப்பைத் தாமே எம்பெருமானார் ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி விட்ட படியால்
நான் என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலைந்து துவள வேண்டியது இல்லை-என்றது ஆயிற்று –
—————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .