Archive for the ‘ஸ்ரீ நம் ஆழ்வார்’ Category

எங்கும் எதிலும் எதாகவும் எப்போதும் நிறைந்த ஓர் தனிப் பேர் வித்து–

June 8, 2026

கடவுள் – வித்து

ஊழிதோ றூழி… … …யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும்பொருட்
கெல்லாம் அரும்பெறல் தனிவித்து ஒருதானாகி……– திருவாசிரியம் – 4

தானே தனித்தோன்றல் தன்னொப்பொன் றில்லதான்
தானே பிறர்கட்கும் தனித்தோன்றல் – தானே..

வைப்பாம் … …
எப்பால் யவர்க்கும் நலத்தால் உயர்ந்துயர்ந்து
அப்பாலவன்

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்…

ஒக்கலை வைத்து … …
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன்

ஓவாத் துயர்ப்பிறவி … …
மூவாத் தனிமுதலாய் 

சீர்மைகொள் வீடு சுவர்க்க நரகீறா
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற
கார்முகில்போல் வண்ணன் …

எங்கும் எதிலும் எதாகவும் எப்போதும்

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்–கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞானவெள்ளச் சுடர் மூர்த்தி…

அமைவுடை அறநெறி … … … …
அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே.–

என்னுள் கலந்தவன் … … … …
மன்னு முழுவே ழுலகும் வயிற்றினுள்
தன்னுள் கலவாத தெப்பொருளுந் தானிலையே–

எப்பொருளுந் தானாய்… வானத்தும் வானத்துள் ளும்பரும்
மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்தானத்தும் எண்டிசையும் தவிராது
நின்றான் தன்னை…

எங்குவந் துறுகோ என்னையாள் வானே ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேனும் அவையுமோ நீயின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே –

பூவைகள் போல்……………..
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் …வான்புலன் இறந்ததும் நீயே.

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உல கங்களுமாய்
இன்பமில் வெந்நர காகி இனியநல் வான் சுவர்க் கங்களுமாய்
மன்பல் உயிர்களு மாகிப் பலபல மாய மயக்குக்களால்
இன்புறும் இவ்விளையாட்டையானைப் பெற்றேதும் அல்லலிலனே.

யானுநீ தானே யாவதோ மெய்யே அருநர கவையும் நீ ஆனால்
வானுயர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் எனிலும்
யானுநீ தானாய்த் தெளிதொறும் நன்று மஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளுநின் தாள்களை எனக்கே-

எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யாலென் றிரணியன் தூண்புடைப்ப
அங்கப் பொழுதே அவன்வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே.

யானே என்னை … … .யானே நீஎன் னுடைமையும் நீயே…

என்னை முற்றும் உயிருண்டு என்மாய ஆக்கை இதனுள் புகுந்து
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் …

இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை என் னுள் வைத்தான்.. 

மாயம் செய்யேல் … … நேசம் செய்து உன்னோடு என்னை
உயிர் வேறின்றி ஒன்றாகவே

ஊனில் வாழ் உயிரே… …தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே
கலந்தொழிந்தோம்கூசம் செய்யாது கொண்டாய் 

எனதாவி யுள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வ தென்பதுண்டே
எனதாவி ஆவியும்நீ பொழிலேழும் உண்ட எந்தாய்
எனதாவி யார்யானார் தந்தநீகொண் டாக்கினையே.

பற்ப நாபன்… … …
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டெனக்கே தன்னைத்தந்த
கற்பகம்..

உணர்வி லும்பர் … … … யானும் தானா யொழிந்தேனே.

என்னுடைக் கோவலனே…
உன்னுடைச் சோதிவெள்ளத் தகம்பால் உன்னைக்கண்டு…
என்றைக்கு மென்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை
இன்தமிழ் பாடிய ஈசனை-

தாள்களை எனக்கே…
தோள்களை யாரத் தழுவிஎன்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ.

ஆறெனக்கு… … … எனதாவியும் உனதே…ஏகமூர்த்தி… … … உன்
ஆகமுற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.

மாயனென்… … …காயமும் சீவனுந் தானே…

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள்நீர் மல்கி

அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்
இன்றேநாம் காணா திருப்பதுவும் – என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து.

மனனக மலமற மலர்மிசை எழுதரும்
மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனில னெனனுயிர் மிகுநரை இலனே.

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யான் எனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை நாடோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்க மின்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்தறிந்தே.

கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்
கோலந்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொள் உயிர்களும் யானே என்னும்
கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்

நாழாலமர் … …
பாருநீ வானுநீ காலுநீ தீயுநீ
நீரும்நீ யாய்நின்ற நீ.

கண்ணுள்ளே… …
மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம்பிரானையே.

தளர்வின்றி…
வளரொளி ஈசனை மூர்த்தியைப்
பூதங்கள் ஐந்தை இருசுடரை…

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்…என்று கொல் சேர்வது… …
… … நிலநீர் எரிகால் விணு உயிர்
என்றிவை தாம்முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ…

பிறந்த மாயா … …
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே..

ஏகமூர்த்தி இருமூர்த்தி … ….. ஐந்து பூதமாய் இரண்டு சுடராய்…

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ணனேறக் கொலோ
காண்கின்ற உலகத்தீர்க் கென்சொல்லுகேன்
காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றவே.

புகழுநல் லொருவனென்கோ பொருவில்சீர்ப் பூமி யென்கோ
திகழும்தண் பரவை யென்கோ தீயென்கோ வாயு வென்கோ
நிகழுமா காச மென்கோ நீள்சுட ரிரண்டு மென்கோ
இகழ்விலிவ் வனைத்து மென்கோ கண்ணனைக் கூவு மாறே.

மூவுலகங் களுமாய் அல்லனாய் உகப்பாய்…

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவையல் லனுமாய்.

விண்மீ திருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல்சேர்ப்பாய்
மண்மீ துழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்…

அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்…

பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்தவண் டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருள்தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே.

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீயின்னே
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யேபோ லிவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே

போர விட்டிட் டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக் கொண்டெத்தை அந்தோ எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது போல என்னா ருயிரை
ஆரப் பருக எனக் காரா வமுதா னாயே.

திடவிசும் பெரிவளி நீர்நிலம் இவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே.

இலனது வுடையனி தெனநினைவ் வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்.

புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.

யாருமோர் நிலைமையனென வறி வரிய எம்பெருமான்…

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்த இந்நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரிது…

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண்டோறும் – பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.

பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான்கிடக் குங்கட லென்னும்
செய்யதோர் நாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தியீ தென்னும்
நையுங்கண் ணீர்மல்க நின்று நாரண னென்னுமன் னேஎன்
தெய்வ வுருவில் சிறுமான் செய்கின்ற தொன்றறியேனே

அறியும்செந் தீயைத் தழுவி அச்சுத னென்னும் மெய்வேவாள்
எறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தனென்னும்
வெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே

ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும்
நின்றகுன் றத்தினை நோக்கி நெடுமாலே வாவென்று கூவும்
நன்றுபெய் யும்மழை காணில் நாரணன் வந்தானென் றாலும்
என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே.

கோமள ஆன்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும்
போமிள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ தென்னும்
ஆமள வொன்று மறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால்செய்து செய்கின்ற கூத்தே.

திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே யென்னும்
உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தானென்று துள்ளும்
கருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே யென்னும்
வெருவிலும் வீழ்விலு மேவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.

விரும்பிப் பகைவரைக் காணில் வியலிட முண்டானே என்னும்
கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணனென் றேறப் பறக்கும்
பெரும்புல ஆநிரை காணில் பிரானுள னென்றுபின் செல்லும்
அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே.

மேகங்க ளோவுரை யீர்திரு மால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுக்களுக் கெவ்வாறு பெற்றீர் உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள்பெற்றதே.

வண்டுக ளோவம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தி லொண்பூ
உண்டுக ளித்துழல் வீர்க்கொன் றுரை க்கியம் ஏனமொன்றாய்
மண்துக ளாடி வைகுந்தமன்னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும் மலருள வோநும் வியலிடத்தே.

ஆழ்வார் திருப்பதிகட்குச் செல்லும்போது முதலில் இயற்கை வளம் காட்சியளிக்கும். அதனை அவர் இறையின் மேனியாக் கருதி வருணிப்பர்; பின்னே உயிராகிய மூர்த்தியைப் போற்றுவர்.

சொன்னால் விரோதம் … … …
தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை… 

ஆரா அமுதே … … …
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் ..

மானேய் நோக்கு நல்லீர் … … …
வானோர் வண்கமு கும்மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ்திரு வல்லவா ழுறையும்
கோனாரை .

என்றுகொல் தோழிமீர் … … …
பொன் திகழ் புன்னைமகிழ் புதுமா தவிமீ தணவி
தென்றல் மணங்கம ழுந்திரு வல்லவாழ் நகருள்
நின்ற பிரான்

நிச்சலும் …
பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதண வும்தண் திருவல்லவாழ்
நச்சர வின் அணை மேல்நம் பிரானது நன்னலமே.

காண்பதெஞ் ஞான்று… …
பாண்குரல் வண்டினொடு பசுந்தென்றலு மாகியெங்கும்
சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்
மாண்குறள் கோலப்பிரான்

பாதங்கள் … … …
ஓத நெடுந் தடத்துள் உயர்தா மரைசெங் கழுநீர்
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்
நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை

நாடொறும் … …
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ் தண்திருவல்லவாழ்
நீடுறை கின்ற பிரான்

கழல்வளை … …
குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்
சுழலில் மலிசக்கரப் பெருமான்.

உணர்த்த லூடல்… …
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம்பெருமானை.

நோக்கும் பக்கமெல் லாம்கரும்பொடு செந்நெ லோங்கு செந்தாமரை
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை வண்துலை வில்லி மங்கலம்..

காலம் பெற … …
கோலச்செந் நெற்கள் கவரிவீசுங் கூடுபுனல் திருப்பேரையிற்கே.

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ …

மாயோனிகளாய் … ….. … எல்லாம் எவ்வுயிர்க்கும் தாயோன் ..

நீயும் நானும் … …தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே.

ஒத்தார் … அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா ..

போகின்ற … … தாய் தந்தை உயிர் ஆகின்றாய்…

மேலாத்… …மேலாத் தாய் தந்தையும் அவரே…

முந்தைத் தாய் தந்தையே முழுவேழுலமுண்டாய்…
சிந்தையாலும் … தேவபிரானையே
தந்தை தாயென்றடைந்த வண்குருகூரவர் சடகோபன்…

தாம்பாலாப்… …
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தாஉன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.

கண்ணுஞ்செந் தாமரை கையும் அவைஅடி யோஅவையே
வண்ணம் கரியதோர் மால்வரை போன்று மதவிகற்பால்
விண்ணும் கடந்தும்ப ரப்பால்மிக்குமற்றெப் பால்யவர்க்கும்
எண்ணு மிடத்ததுவோ எம்பிரான தெழில்நிறமே.

நிறமுயர் கோலமும் பேருமுருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங் கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக்காய்நின்ற தன்றி ஒன்றும்
பெறமுயன் றாரில்லை யால் எம்பிரான் பெருமையையே.

உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின வாம் எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன் உயிராயின காவிகளே.

செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதி சூடிஅஞ் சுடர்மதி யம்பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்…

கடலோன் கைம்மிசைக் கண்வளர் வதுபோல்
பீதக ஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
பச்சை மேனி மிகப்ப கைப்ப
நச்சுவினைக் கவர்தலை அரவின் அமளிஏறி
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர்முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுல களந்த சேவடி யோயே.- திருவாசிரியம் – 1

நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓ ராலிலைச் சேர்ந்தஎம்
பெருமா மாயனை
 அல்லது
ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே.-திருவாசிரியம் – 7–

முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கு மென்பர்…

தானோ ருருவே தனிவித்தாய் தன்னில் மூவர்…

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை…

தஞ்சமாகிய… …
… … மூவர் தம்முள்ளும் ஆதியை…

தேவர் முனிவர்க் கென்றும் காண்டற் கரியன்
மூவர் முதல்வன் ஒருமூவுல காளி…

யாருமோர் நிலைமையன் எனவறி வரியஎம் பெருமான்
யாருமோர் நிலைமையன் எனவறி வெளியஎம் பெருமான்
பேருமோர் ஆயிரம் பிறபல வுடையஎம் பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே’

வரிவளையால்… …
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்தேத்தும்
விரிபுகழான்… .

பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகனவனே…

தளர்ந்தும்… …
கிளர்ந்து பிரமன் சிவனிந்திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே

நோலா தாற்றேன்… …. …
நீலார் கண்டத் தம்மானும்
நிறைநான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர்சூழ
விரும்பும் திருவேங் கடத்தானே

பராபரன்
புரமொருமூன் றெரித் தமரர்க்கும் அறிவீய்ந்து
அரனயனெனவுல கழித்தமைத் துளனே

என்னப்பன் எனக்கா யிகுளாய்
என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப் பனுமாய்…

திண்ணன் வீடு முதல்மு ழுதுமாய்
எண்ணின் மீதியனெம்பெருமான்
மண்ணும் விண்ணுமெல் லாமுட ணுண்ட நங்
கண்ணன ல்லதில்லையோர் கண்ணே.

வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன்
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக்கேயுளன்
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள்ளென்று வீடும்தரும் நின்று நின்றே.

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்து அடியனோ டிக்கால மிருக்கின்றதே.

அந்தாமத் தன்புசெய்தென் ஆவிசேர் அம்மானுக்கு
அந்தாம வாழ்முடிசங் காழிநூ லாரமுள
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தா மரையடிகள் செம்பொன் திருவுடம்பே

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப் பறுக்கு மப்பால்
திண்ணநாம் அறியச் சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமர ராவார்.

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியா மாமாயத் தடியேனை வைத்தாயால்
அறியா மைக்குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே.

எழுமைக் குமென தாவிக் கின்னமு தத்தினை எனதாருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி வண்ணனைக் குடக்கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினைத்
தொழுமின் தூய மனத்தரா யிறையும் நில்லா துயரங்களே.

கோலமே தாமரைக் கண்ணதோ ரஞ்சன
நீலமே நின்றென தாவியை ஈர்கின்ற
சீலமே சென்றுசெல் லாதன முன்னிலாம்
காலமே உன்னைஎந் நாள்கண்டு கொள்வனே.

உரைக்க வல்லேனல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்க ணென்று செல்வன்நான் காதல் மையலேறினேன்
புரைப்பிலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.

மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்…

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்கும்நின்னோரையில்லாய் நின்கள் வேட்கை எழுவிப்பனே.

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின் றனரே.

பிணக்கற அறிவகைச் சமயமும் நெறிஉள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்குமின் பசையற அவனுடை உணர்வு கொண் டுணர்ந்தே.

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன்…

மாட்டாதே யாகிலும் இம் மலர்தலைமா ஞாலம்நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தால் மாஞாலம் வருந்தாதே.

அறிவினால் குறைவில்லா அகல்ஞானத் தவரறிய
நெறிஎல்லாம் எடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி…

எங்குவந் துறுகோ என்னையாள் வானே ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோ நீ இன்னேயானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான்புலன் இறந்ததும் நீயே.

உருவாகிய ஆறு சமயங்கட் கெல்லாம்
பொருவாகி நின்றானவன்

இறுக்கும் இறையிறுத் துண்ண எவ்வுல குக்கும் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன் தானே
மறுத்திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மினீரே.

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந் நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரி துயிர்காள்
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து அரிஅயன் அரன் என்னு மிவரை
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே.

மும்மூர்த்திகளைப் பிர்மா – விஷ்ணு – ருத்ரன் – என்று நாம் சொல்கிறோம்; சிலர், பிதா – குமாரன் – பரிசுத்த ஆவி – என்கிறார். அவர்கட்கு இன்னும் வெவ்வேறு பெயர்களும் உலகில் உரைக்கப்படுகின்றன. அவைகளிற் சில வருமாறு: ஒஸிரிஸ் – ஐஸிஸ் – ஹோரஸ் (எகிப்தியர்); ஓடின் – பிரீயா – தார் (ஸ்காண்டிநேவியர்); ஆனு – இயா – பேல் (அஸ்ரியர்); தௌலாக் – பான் – மொல்லாக் (துருயுதர்); அமிர்தாப்பர் – அவலோகீதீசுரர் – மஞ்ஜுசுரி (வட புலப்புத்தர்); கேதர் – பினா – சொக்மா (யூதர்); அஹுரமஜதர் – மித்திரர் – அஃரிமான் (பாரஸீகர்). உண்மை ஒன்று. அது பலவிதமாக வழங்கப்படுகிறது

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அண்ட கோளத்தார் அணு – (ஸ்ரீ அண்ட கோள மெய்ப் பொருள்)ஸ்ரீ நம்மாழ்வார் அகவல்–

June 7, 2026

இது ‘மயர்வற மதிநலம்’ அருளப் பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற் குழாங் கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர்க்கு எழுதி யருளிய திருப்பாசுரம் என்பது, கூடலழகர் புராணத்தில் ‘அண்ட கோளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்’ என வருங் கடவுள் வணக்கப் பாடலால் (13) துணியலாகும்.

அண்ட கோள மெய்ப் பொருள்-ஸேது ஸம்ஸ்தான மஹா வித்வானும் பாஷா கவி சேகரரும் அண்ணாமலை சருவகலாசாலைத் தமிழாராய்ச்சியாளருமாகிய ஸ்ரீ ரா. இராகவையங்கார்
ஸ்வாமிகள் எழுதியது- சென்னைத் திருவல்லிக்கேணி ஸ்ரீ வேத வேதாந்தவர்த்தனீ மகா சபையாரால் -1934.-வெளியிடப்பெற்றது-

அண்ட கோளத்தாரணு’ என்ற பாசுரம், ‘ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அகவல்’ என்ற தலைக்குறிப்புடன், ஆழ்வார் திருநகரித் தாயவலந்தீர்த்தான் கவிராயரவர்கள் வீட்டிற்கிடைத்த ஒற்றையேட்டில் முதன்முதல் என்னாற் காணப்பட்டது. அதனை மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திரிகை தொகுதி 3, பக்கம் 405ல் வெளியிட்டுள்ளேன். அப்பாசுரத்துக்கு அக்காலத்துப் பொருள் காண்டல் அரிதாயிருந்தமையால் ‘இதன் பொருள் இப்போது நன்கு விளங்கவில்லை’ என்ற குறிப்பும் ஆங்குத் தரப்பட்டுள்ளது. அப்பாசுரத்தைப் பற்றி நெடுங்காலம் யான் சிந்தித்து வந்ததில், சிலவாண்டுகட்குமுன் அதன் உண்மைப்பொருள் இஃதென்பதை உணரலாயினேன்.-அப்பாசுரத்தின் சொற்றொடர்ப் பொலிவினையும், அதனுளடங்கிய அரிய பெரிய வடமொழிப்பொருளின் மாட்சியையும் நோக்குமிடத்து அஃது ஆழ்வார் அருளிச் செயலாதற்குரிய எல்லாத் தகுதியும் வாய்ந்தது என்று சொல்லத் தடையில்லை. சங்கப்புலவர்கள் தம்மைப் பெரிதும் மதிக்கும்படி ஆழ்வார் செய்வித்த செய்தியைக் குருபரம்பரை நூல்களும், ‘அண்டகோளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்’ (கடவுள் வணக்கம், 13) என இற்றைக்குச் சில நூற்றாண்டுகட்கு முற்பட்டவராகத் தெரியும் கூடற்புராண ஆசிரியரும் கூறுவது, ஆழ்வார் அருளியதே இப்பாசுரம் என்பதை வலியுறுத்தல் காணலாம்.இவ்வரிய பெரிய பாசுரத்தை யான் பலகாலும் சிந்தித்துக் கண்ட கருத்துக்களை இப்புத்தகத்தில் விளங்க விரித்துள்ளேன். என்னால் விரிய உபந்யஸிக்கப் பெற்ற இப்பாசுரார்த்தத்தைக் கேட்டு மகிழ்ந்த சென்னைத் திருவல்லிக்கேணி ஸ்ரீ வேதவேதாந்த வர்த்தனீ மஹாஸபையார், இதனைப் பலரும் அறிய வெளியிடவிரும்பியவாறு, அச்சபையின் பிரசுரமாக இஃது இப்போது வெளியிடப்பெறுகின்றது. இதனை அச்சிடற்குரிய பொருளை முன்வந்துதவிய, திருவல்லிக்கேணி: ஸ்ரீபார்த்தசாரதி சந்நிதி டிரஸ்டிகளில் ஒருவரான ராவ்பஹதூர் ஸ்ரீமான். வி. ரங்கநாதம் செட்டியார் அவர்கட்கும், அம்மஹாசபையார்க்கும் என் மனமார்ந்த பெருநன்றி உரியதாகும்.–ஸ்ரீ ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள்-

சீரண்ட கோளத் திருப்பாட் டுரையிதென
யாரும் தெளிய வியம்புகேன் – பாரிற்
றெருள் காட்டும் வேதச் செழுந் தமிழ் நா வீறன்
அருள் காட்ட மெய்ம்மை யறிந்து–
தற் சிறப்புப் பாயிரம்

அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணற் பரப்பில்
வேரும் வித்து மின்றித் தானே   (5)
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னென்றுண் டொண்சுவை தருவது மற்றது
கல்லி னெழுந்து கடலி னழுந்தி
யறுகாற் குறவ னீரற விளைக்குஞ்  (10)
செறி பொழிற் குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன (15)
ளவளிவ ளுவளென வறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.
–ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அகவல்-

 அண்டகோளத்து ஆரணு ஆகி என்பது அண்டகோளத்தினுடைய அரிய அணு வளர்ந்து என்றவாறு.-ஆகல் – வளர்தல்; பரிணமித்தல்; வளர்தற்குக் காரணமாகிய ஊழினை ‘ஆகலூழ்‘ (திருக்குறள் – 372) என்பதனாலறிக. பின்னும் பிரிக்கப்படாத பரமாணு என்பதறிய ஆரணு என்றார். பரமாணு இரண்டு கொண்டது அணு என்பது வடநூற் கொள்கை (பாகவதம்). அண்டகோளத்து ஆரணு – அண்டகோளமாகிய பிரபஞ்சத்தின் இறுதியம்சமாகிய பரமாணு. அஃது ஆகி என்றது அஃது அண்டகோளமாக வளர்ந்து எ-று. ஆலின் வித்து வளர்ந்து என்றால் ஆலின்வித்து ஆலாக வளர்ந்து என்று பொருளாதல் போல இதனையும் கொள்க. பிரபஞ்சத்தின் இறுதி நிலை (இதுவே படைப்பிற்கு முன்னிலை யுமாகும்) பரமாணுவே என்பதை ஸ்ரீ பாகவதம் 3-ஆம் ஸ்கந்தம் (11 – 1) ‘பிரபஞ்சத்தின் இறுதியமிசம் பரமாணு என்றறியப்படுவது’ என விளக்கியவாற்றான் உணர்க. மேற்படி 3-ஆம் ஸ்கந்தம் 11

பிண்டம் பூத்த பேரெழி லொருமை என்பது சராசர ரூபமான பிராணிகள் மலர்தற்குக் காரணமான பெருமையோடு கூடிய நலத்தையும் ஏகத்வத்தையுமுடைய எ-று.-ஆம் அத்தியாய முடிவில் ‘ஐம்பது யோசனை அகலமுள்ளதும் மேன்மேலும் பதின்மடங்கு அதிகமுள்ள விசேஷண முதலியவற்றால் வெளியிற் சூழ்ந்ததுமாகிய இவ்வண்டகோசமும் இன்னும் மற்றுமுள்ள பல்கோடி யண்டங்களும் எந்த வஸ்துவினிடம் பிரவேசித்துப் பரமாணுவாகக் காணப்படுகின்றனவோ அந்த வஸ்துவைக் காரணங்கட்கெல்லாம் காரணமெனவும், புருஷனும் மஹாத்மாவுமாகிய விஷ்ணுவின் ஸ்வரூபமெனவும், அக்ஷரமாகிய பரப்பிரமம் எனவுங் கூறுகின்றனர்’ என்று வருதலான் இதனுண்மை நன்கறியப்படும். பலகோடி அண்டகோள வரிசைகளும் பரதெய்வத்தினிடம் பரமாணுவாக ஒடுங்கிக்கிடந்து பின் அவன் ஸங்கல்பத்தாற் பரிணமித்து அவ்வண்ட வரிசையாதலையே இங்குக் குறித்தாரென்பது ஜகத்காரணமாகப் பரப்பிரமத்தைக் கூறுதல் கொண்டு எளிதிலறியப்படும். ‘ஆகி’ என்று பரிணமித்தல் கூறுதலான் இவ்வாரணு உயிரணு ஆகாமை நன்கறியலாகும். பிரபஞ்சமாகிய பரமாணுவுக்குப் பரிணாமம் உள்ளதல்லது, அணுவாகிய ஆத்மாவிற்கு அஃதில்லாமை தெளிக. ‘அண்டகோளத்து ஆரணு’ என்புழி அத்துச்சாரியை ‘காமத்துக் காழில்கனி’ (திருக்குறள் – 1191) என்புழிப்போல அல்வழிச்சாரியையாகக் கொண்டு அண்டகோளமாகிய அரிய அணு எனினும் இழுக்காது. ஆகிப் பூத்த மரம் என இயையும்.

ஈருயிர் மருங்கின் ஆருயிர் தொகுத்து என்புழி, ஈருயிர் மருங்கின் என்பது இருவகைப்பட்ட உயிர்களின் பக்கத்தில் எ-று.-மோக்ஷாநந்தத்திற்கு உபகாரமாகிய தெய்வ ஸம்பத்தையுடைய உயிர் என்றும், ஸம்ஸார பந்தத்திற்கு உபகாரமாகிய ஆஸுர ஸம்பத்தையுடைய உயிரென்றும் வகுக்கப்பட்ட இருவகை உயிர்களின் பக்கலில் என்று கொள்க. ஸ்ரீகீதை பதினாறாம் அத்யாயத்தில் ‘இவ்வுலகிற் பிராணிகளின் ஸ்ருஷ்டி, தேவர்களின் ஸ்வபாவ முள்ளதென்றும், அஸுரர்களின் ஸ்வபாவமுள்ளதென்றும் இருவகைப்படும்’ என்று பகவான் அருளிச்செய்ததை ஈண்டைக்கு நோக்கிக் கொள்க. இனி ஈருயிரென்றது ஸ்ரீகீதை ஏழாம் அத்யாயத்தில் பகவானைத் தொழாரும் தொழுவாருமாகிய ‘துஷ்க்ருதிந: ஸுக்ருதிந:’ என்று கூறப்பட்ட இருவகை உயிர்களை எனினுமாம். தொழாராகிய துஷ்க்ருதிகள் நராதமர், மாயை கவர்ந்த மதியினர், அஸுரஸ்வபாவமுள்ளவர், மூடர் என்று நால்வகையினர் எனவும், தொழுவாராகிய ஸுக்ருதிகள் ஆர்த்தன், ஜிஜ்ஞாஸு, அர்த்தார்த்தி, ஞானி என நால்வகையினர் எனவும், இவருள் ஞானி அத்யர்த்த ப்ரியனான மேன்மையனெனவும், அப்பெருந்தகையோன் கிடைத்தற்கரியோனெனவும், அவனே ஸர்வம் வாஸுதேவனென்னும் ஞானவான் எனவும் அருளிச் செய்தலால் தொழாரும் தொழுவாருமாகிய இருவகை உயிர்களின் பக்கலில் என்றாலும் பொருந்தும்.

‘ஆருயிர் தொகுத்து’ என்றது கிடைத்தற்கரிய உயிர்களாகிய தெய்வஸம்பத்து நிறைந்த ஞானிகளாகிய பரமைகாந்திகளைத் தன்னடிநீழலிற் குழாங்கொளச் செய்து என்றவாறாம். ஆருயிர் – ‘ஸமஹாத்மா ஸுதுர்ல்லப:’ என்றபடி தனக்குங் கிடைக்கரிய மஹாத்மாக்கள் எ-று. வாஸுதேவ தருச்சாயையை விட்டுப் புறம்போகாத பெருந்தகையார் அவரே என்க. மஹாத்மா என்பதே ஆருயிர் எனப்பட்டதெனினும் பொருந்தும். தொகுத்து என்றதனால் கிடைத்தற்கரிய இப்பரமைகாந்திகளைத் தன்னடி நீழலில் திரள்வித்தது பகவத் ப்ரயத்நமென்று காட்டியவாறு. ப்ருஹ்ம ஸூத்ர பாஷ்ய முடிவில் ‘அத்யர்த்தப் பிரியம் ஞாநிநம் லப்த்வா‘ (இவ்வளவென்று சொல்லற்கரிய ப்ரீதியுடையவனாகிய ஞானியைத் தன் பேறாக அடைந்து) என்று ஸ்ரீ பாஷ்யகாரர் உரைத்தருளுதலான் அளவிடப்படாத பிரியனாகிய ஞானியைப் பரதெய்வம் தன் லாபமாக அடைதல் கருத்தல்லது ‘ஞானி பரதெய்வத்தை அடைந்து’ என்பது ஆழ்வார் கருத்தாகாமை கண்டுகொள்க

இனி, ஈண்டு மருங்கு என்றது சுற்றம் எனக் கொண்டு, இருவகையுயிராயுள்ள சுற்றத்திற் கிடைத்தற்கரிய தன் ஆத்மஸமாநரான அரியஞானிகளைத் தொகுத்து எனினுமாம். ‘ஞானீ த்வாத்மைவ மேமதம்’ (ஞானியோ என்னுயிரே யென்பது என் கொள்கை) என்னும் ஸ்ரீ கீதையால் ஞானி பகவானுக்கு ஆத்மாவாதல் தெளியலாம். தீயவுயிரையும் சுற்றமென்றது, வெறுக்கின்ற அவர் பாலும் உறைதலானும் அவரையும் சன்ம சன்மாந்தரங் காத்துச் சேறலானும், அவர்க்கும் அருள இருக்குந் தாயும் தந்தையும் தானாதலானும், அவரையும் மகவென்று கருதித் திருத்தமுயறல் காட்டியவாறு. ‘தாய் தந்தை எவ்வுயிர்க்குந் தான்’ என் இவ்வாழ்வாரே அருளிச்செய்தலானிதனுண்மையுணர்க. ‘பிதா மாதாச ஸர்வஸ்ய’ என்பது மஹாபாரதம். சுத்த ஸத்வ நிஷ்டரான பரமைகாந்திகளைத் தொகுத்து நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பிற் றொன் மிகு பெருமரம் என இயைக்க. தொகுத்துப் பரப்பில் மிகு மரம் என்க.

4. நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பில் என்றது முத்துக்களை யொத்த வெண்மையான ஒளியையுடைய பரந்த மணற் பிரதேசத்தில் எ-று.-வெண்மையும், ஒண்மையும், குளிர்த்தியும், உயர்த்தியும், தூய்மையும், அருமையும் முதலிய சிறப்பால் நித்திலத்தன்ன என்றார். வெண்மணற் பரப்பு என்றது ச்வேதத்வீபம் எ-று. இது, திருப்பாற்கடலின் வடகரையிலுள்ள மஹா பரிசுத்த ஸ்தல விசேஷம். திருப்பாற்கடல் கொழித்த நித்திலத்திற்கும் இப்பரப்பில் வெண்மணற்கும் வேற்றுமை காண அரியதாய் ஒரே சுவேதமயமா யுண்மையால் இவ்வாறு கூறப்பட்டது. இதனைப் பாரதம் சாந்திபருவம் (343) ‘பாற்கடலின் வடபாகத்திற் பேரொளி நிறைந்த ச்வேதத்வீபம் இருப்பது; அங்குள்ள மக்கள் சந்திரனையொத்த காந்தியினர்; நாராயண பராயணர்; அவ்வன்பர் புருஷோத்தமனை ஏகாந்த பாவனையாலடைந்தவர்; பொறிகளால் வேறொன்றும் நுகராதவரும், உண்ணாதவரும், அசைவற்றவரும், நறுமணங்கமழ்பவரும், ஏகாந்திகளு மாவர்’, என வருவனவற்றா லறிக. இந்த த்வீபத்திற்கு நாரதமஹருஷியானவர் தெய்வகிருபையாற் சென்று ஈங்குள்ள அநிருத்த மூர்த்தியைப் பலபடியாக ஸ்துதித்ததும் பரமைகாந்திகளைத் தரிசித்து ஆச்சரியமடைந்ததும் பிறவும் அப்பருவத்தே கண்டு கொள்க. -இனி ஸஹஸ்ரநாம த்யான சுலோகத்தில் ‘க்ஷீரோதந்வத்ப்ரதேசே’ என்பதில் திருப்பாற்கடல் வடகரையில் மணி விளக்கெடுக்கும் மணற்பரப்பில் நித்திலமாலையணிந்த அணையில் இம்மூர்த்தி எழுந்தருளி இருப்பது கூறுதலான், அதற்கியைய நித்திலப் பரப்பில் எனவும் அன்ன வெண்மணற் பரப்பில் எனவும் கூறினு மமையும். அன்ன வெண்மணல் – அத்தகைய வெண்மணல்.

5. வேரும் வித்தும் இன்றி = தான் நிலைபெறுதற்குக் காரணமான மூலமும், தானுண்டாதற்குக் காரணமான பீஜமும் தானே யன்றி வேறில்லாமல் எ-று.-வினைகளையே வேராகவும், அவ்யத்தத்தை வித்தாகவும், பிறவிகளைக் கிளைகளாகவும் கொண்ட ஸம்ஸார வ்ருக்ஷத்தின் (ஸ்ரீகீதை; விஷ்ணு புராணம் ௭ – ஆம் அத்யாயம்) இது வேறாய பரப்ருஹ்ம வ்ருக்ஷம் என்பது தோன்ற வேரும் வித்தும் இன்றி என்றார். எல்லாப் பொருட்குந் தானே வேரும் வித்துமாகு மென்றவாறு. இத்தன்மையை,-‘வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனி நின்ற கார்முகில் போல்வண்ணன்‘ (திருவாய்மொழி, 2,8,10) என்று பணித்தலாறிக. ஸ்ரீ கீதையிலும் ‘பீஜம்மாம் ஸர்வ பூதாநாம்‘ (எல்லாப் பிராணிகட்கும் வித்தாகிய என்னை) என்பதனால் எல்லா பிராணிகட்குந்தானே வித்தாயிருத்தலைப் பகவான் வெளியிட்டருளினான். ‘எல்லாப் பொருள்கட்கும் வித்தாய்’ ‘தானோருருவே தனிவித்தாய்’ (திருவாய்மொழி, 1 – 5 – 2, 4) என்று பணித்தல் காண்க. ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் ஸம்ஸார வ்ருக்ஷத்திற்கு அவ்யக்தத்தை வித்தென்று கொண்டு, வித்துண்டாதற்கு ஆகாயம் காலம் முதலிய காரணமாதல் போல, அஃதுண்டாதற்கு ஸ்ரீஹரிபகவான் காரணன் என்பர் (ஏழாம் அத்யாயம் பார்க்க). இதனால் அவ்யக்தத்தின் பரிணாமத்திற்கு இறைவன் காரணனாதல் அறியலாம்.

5 – 6 தானே தன்னிலையறியா – ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான தானேயும் தன் ஸ்வபாவ மகிமை அறியலாகாத எ-று.-தன்நிலை – தன் தெய்வநிலை: ‘-துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே
.–திருவாய்மொழி (3, 10, 6); அஃது அநந்த கல்யாண குணமுடைமை. அஃது அவனால் இவ்வளவென்றறியப் படுமாயின் அநந்தம் என்று முழங்கிய சாஸ்த்ரங்கள் வீணாகுமென்க. ஒருவன் தன்கண் அச்சமும் தன் வலியில் ஐயமும் உள்ள போதன்றே தன்னை அளந்தறியப்புகுவான்? அவ்விரண்டுமில்லாமையால் தன்னிலையை அளந்தறிதலே யில்லாமை அறிக. அசித்தினும், பத்தர் முக்தர் நித்யர் எனப்பட்ட ஆத்மாக்களினும் வேறாய்ப் பிரிப்புண்டு அவற்றிற்கு ஈசனான தானே அறியலாகாத என்றவாறாம். அறியா மரம் என இயையும். ‘தனக்குந்தன் றன்மை யறிவரியானைத் தடங்கடற் பள்ளியம்மானை’ எனத் திருவாய்மொழியில் (8, 4, 6) வருவதான் இதனுண்மை யுணர்க. ஆண்டு, ஈட்டில் நம் பிள்ளையாசிரியர், இத்திருப்பாட்டின் கருத்தொடு பொருந்தவே ‘ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான தன்னாலுந் தன்னைப் பரிச்சேதிக்கப் போகாது ஸ்வேத த்வீபவாசிகள் ஆஸ்ரயிக்கைக்கு …. திருப்பாற் கடலிலே கண்வளர்ந்தருளினவனை‘ என வ்யாக்யானமிட்டது காண்க.

இனி யஜுர்வேத காடகத்தில் ‘த்வமேவத்வாம் வேத்த யோஸி ஸோஸி (நீ யாராயுள்ளனை அவனாயுள்ளனை யென்று நின்னை நீயே யறிகிற்வை) எனவும், ஸ்ரீகீதையில் (10 – 15) ‘நீ நின்னை ஸ்வயமாகவே நின்னறிவால் அறிகின்றனை’ எனவும், பரிபாடலில் (3) ‘நின்னைப் புரைநினைப்பினீயல துணர்தியோ’ – நின்னை உயர்வுகூறக் கருதின் அது நீயே யுணரினல்லது பிறரானுணரப்படுதியோ (பரிமேலழகருரை) – எனவும் வருதலான் ஈண்டுத் தானே தன்னிலையறியா என்பது தன்னியல்பு தானே யறிந்து எனக்கருதினாரெனினு மிழுக்காது. இதற்கு அறியா மிகு மரம் என இயைக்க. இவ்வாறு பிறர் அறியாமைக்குக் காரணமிவையென, தொன்மிகுபெருமரம் என்று இப் பரப்ருஹ்ம வ்ருக்ஷத்தை விசேடிக்குமாற்றால் விளக்குகின்றார்.

6. தொன்மிகு பெருமரம் என்பது அநாதியே மிகுத்த பெரிய பர ப்ருஹ்மமாகிய வ்ருக்ஷம் எ-று.-காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துவாலும் பரிச்சேதிக்கப்படுவதொன்றன்றே ஒருவர் அறிவிற்கு விஷயமாவது? இஃது அம்மூன்று பரிச்சேதமும் கடந்துள்ளதென்று இவ்விசேடண்ங்களாற் கொள்ளவைத்தவாறாம். தொன்மரம் என்றதனால் காலவளவையைக் கடந்ததென்றும், மிகுமரம் என்றதனால் தேசவளவையைக் கடந்ததென்றும், பெருமரம் என்றதனால் வஸ்து அளவையைக் கடந்ததென்றும் தெளிவித்தது கண்டுகொள்க. ‘ப்ருஹத் ரூப:’ என்னுந் திருநாமம் பற்றிப் பெருமை வஸ்துபரிச்சேதங் கடந்ததுக்கு ஆயிற்று. ‘இனைத்தென வெண்வரம்பறியா யாக்கையை’ என்பது பரிபாடல். இதற்குப் பரிமேலழகர் ‘இனைத்தென எண்ணும் எண்ணிற்கு எல்லை யறியப்படாத வடிவினை யுடையை‘ என்றுரைத்தலானறிக. இக்காலத்ததென்றும், இவ்விடத்ததென்றும், இப்படித்தென்றும் அறியலாகாததென்று குறித்ததெனக் கொள்க.

மரம் என்பது உவமையாற் போந்த பெயர்; தன்னடி நீழலிற் புக்கார் பயன்றுய்த்து வாழ நிற்கும் மரம் போலுதலான் இறைவனை மரமாக்கினார். ‘அருஞ்சுரத்து மரம் போல அடைந்தார்க்களித்தல் அவற்கியல்பு‘ என்பர் நச்சினார்க்கினியர் (சீவகசிந்தாமணி, 3). ‘வாஸுதேவதரு’ என்ப. வ்ருக்ஷ: என்பது, இறைவன் ஆயிரநாமத்துளொன்றாதல் காண்க. ஸ்ரீ பராசரபட்டர் ‘உயிர்கட்கு ஜீவனமாகி அவ்வுயிர்கள் தனக்கிழைக்கும் அபராதங்களைப் பொறுத்து நிற்றலான் மரம்‘ என்று பெயராயிற்றென்றார். மூன்றுலகிற்கும் நிழல் செய்தலான் இறைவன் ‘பூர்புவஸ்வஸ்தரு:’ என்று பெயர் சிறப்பன் என்பதும் அவ்வாயிர நாமத்தே கண்டது. ப்ரமாணங்களிற் றலைசிறந்த வேதம் ‘வ்ருக்ஷ இவ ஸ்தப்தோ திவிதிஷ்டத்யேக:‘ என்று முழங்கிற்று. ஒருவன் மரம் போல அசையாது திவ்ய லோகத்திலுள்ளானென்பது இதன் பொருள். வால்மீகி பகவானும் தாரை கூற்றால் ‘நிவாஸ வ்ருக்ஷஸ் ஸாதூநாம்‘ (ஸாதுக்களுக்குப் புகலிடமான மரம்) என்று பெருமாளைக் கூறினான். ‘ப்ரஹ்மதரு’ என்று ப்ரஹ்லாதாழ்வான் கூற்றில் வைத்துப் பராசர பகவான் வெளியிட்டு அதனினின்று முக்தியென்னும் பழம் விழுவதென்னுங் கருத்தால் ‘முக்தி பல ப்ரபாத:’ என விளக்கியருளியதையும் ஈண்டைக்கு நோக்குக. இவ்வாழ்வார் திருப்பாட்டிற்கு இப்பராசரர் கருத்தே உடன்பாடாகும்.-இம்முன்னோர் மொழி பொருளைப் போற்றியே இவ்வாழ்வார் ‘மரம்’ என்றாரென்க. ‘என்னை ஆக்கிக் கொண்டெனக்கே தன்னைத் தந்த கற்பகம்‘ என்பதும் மரங்களினுயர்ந்ததாகக் கூறியதாகும்.

அன்றியும் ஈண்டு ஸ்வேதத்வீபத்து அநிருத்த மூர்த்தியை ‘மரம்’ என்றது, அம்மூர்த்தி பச்செனத் தழைத்த திருவடிவுடையனாதல் பற்றியென்று கொள்ளத்தகும். பரிபாடலின் கண் அநிருத்தமூர்த்தியைப் ‘பைங்கண் மாஅல்‘ என்றதனையும் அதற்குப் பரிமேலழகர் ‘பசிய உடம்பினையுடைய அநிருத்தனே’ என உரை கூறியதனையும் நோக்கித் தெளிக. ( ஈண்டே ‘பொன்கட்பச்சை’ என்புழிச் ‘சிவந்த உடம்பினையுடைய காமனே’ எனவுரைத்துப் ‘பச்சை யென்பது ப்ரத்யும்நனென்னும் வடமொழித் திரிபு’ என விளக்கியதனையும் நோக்கிக் கொள்க.)பிற்காலத்தவரும் இக்கருத்தே தழுவி ‘அத்தியின் மத்தியிலே … நித்திரைகொள்ளுந் தமாலத்துருவன்’ (அழகர் கலம்பகக் காப்பு) எனப்ப் பாடியதனையுங் காண்க. மஹாபாரதம் சாந்திபர்வத்தில் நாரத மஹருஷி ஸ்வேதத்வீபஞ் சென்று இம்மூர்த்தியை ஸ்துதித்த ஸ்தோத்திரத்தில் ‘வநஸ்பதயே நம: (வனங்கட்குப் பதியாகிய பெரு மரத்திற்கு நமஸ்காரம்) என வருதலும் ஈண்டு நினைக்கத்தகும்.

‘மனிசரு மற்று முற்றுமாய்‘ என்னுந் திருவாய்மொழி யீட்டில் ‘தடங்கடற் சேர்ந்த பிரானை’ என்புழி நம்பிள்ளை ஆசிரியர் – ‘திருப்பாற்கடலிலே அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதார கந்தமிறே (அவதாரங் கிளைத்தற்குரிய கிழங்கு-கந்தம் – கிழங்கு. அவதார கந்தம் – அவதார மூலம். கந்தம் மூலம் கிழங்கு மூன்று மொருபொருளன.); வெள்ளத்தரவிற் றுயிலமர்ந்த வித்திறே‘ என்று அருளிச் செய்ததனையும் ஈண்டைக் கேற்ப நோக்கிக் கொள்க. ப்ரச்நோபநிஷத்தில் ‘ஒரு விருக்ஷத்திற் பல பறவைகளுந் தங்கியிருத்தல்போல உலகெல்லாம் பரமாத்மாவினிடத்துத் தங்கியிருப்பன’ என்பதனால் இஃது உவமையாற் போந்த பெயரென்பது அறியப்படும். விஷ்ணுபுராணத்தும், மகாவிஷ்ணு விருக்ஷம் என்றும், ஸ்ரீதேவி அதன்கட் படர்ந்த கொடி என்றும் பராசரபகவான் அருளிச் செய்தான் (1, 8). மரம் தன் பழத்தைத் தானுண்ணாது தன்னையடைந்த உயிர் உண்ணநிற்றல்போல இறைவனுண்மை உணர்ந்துகொள்க. ‘பெருமரம்’ என்புழிப் பெருமை தான் பெரியதாயிருப்பதனாலும், தன்னையடைந்ததைப் பெரிதாக்குதலாலும் உள்ளது என்பர். இதனை விஷ்ணுபுராணத்தில் ப்ருஹ்ம சப்தத்திற்கு ஸ்ரீ பராசர பகவான் ‘பெரிதாதலானும் பெரிதாக்குதலானும் ப்ருஹ்மம் என்று அறியப்படுவது’ என்று கூறியதனாலும் உணரலாம். வெண்மணற் பரப்பில் வேரும் வித்துமின்றி ஆரணுவாகிப் பிண்டம் பூத்த தன்னிலையறியாத் தொன்மிகு பெருமரம் என்க.

7. மூவழி முப்பழம் முறைமுறை தருதலின்: மூவழி – ஐச்வர்யகதி, ஆத்மகதி, பரமாத்மகதி என்ற மூன்று நெறியில்: அசித்து சித்து பரதெய்வம் என்ற மூன்றேயுண்மையால் அவற்றை யடையும் நெறிகளும் மூன்றேயாயின. ஐச்வர்யம் – இனிய தேஹவிசேஷமும் அஃது அநுபவித்தற்கினிய தாரக போஷக போக்யங்களும் ஆக அசித்துப் பரிணமிப்பதேயாகும்; இவை இந்திரச் செல்வம் முதலியன என்க. ஆத்மகதி என்பது கைவல்யமார்க்கம்; கேவலம் ஆத்மாவை அநுபவித்தற்குரிய வழி எ-று. பரமாத்மகதி – நிரதிசயாநந்தமான மோக்ஷ மார்க்கம். இந்நெறிகளிற் செல்லும் அதிகாரியும் மூவகையினர் என்பர். ஆர்த்தனும் அர்த்தார்த்தியும் என் இருவகைப்படும் ஐச்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும், மோக்ஷார்த்தியுமென மூவகைப்படுதல் -ஸ்ரீகீதை ஏழாம் அத்யாயத்திற் கண்டது. இம்மூன்றதிகாரிகட்கும் ஈச்வரனைப் பக்திபூர்வகமாக அடைதல் வேண்டப்பட்டதாகும். எங்ஙனம் ஒரு மரத்திலுண்டாகும் பல்வகைக் கனிகளை அடைய விரும்பின பலரும் அம்மரத்தை ஆச்ரயிப்பது இன்றியமையாததோ, அங்ஙனமே இம்மூன்றதிகாரிகளும் தாம்தாம் அடைய விரும்பிய பலன்களை எய்தற்குப் பலப்ரதாதாவாகிய ஈச்வரனை அடைதல் இன்றியமையாததாகுமென்றுணர்க. அவர் கருதிய பலன்கள் வேறேனும், இம்மூவரும் ஆச்ரயிக்கவேண்டிய இடம் ஒன்றேயாதல் நன்கு துணிக. இதனாலன்றே, ஆளவந்தாரென்னும் பெரியார் ‘பக்தியோகமே இம்மூன்று பலன்களுக்கும் காரணம்’ என்று கீதார்த்தஸங்க்ரஹத்தில் (௨௭) விசதமாக அருளிச்செய்தார். இதனை, ‘பக்தியோகஸ்ததர்த்தீசேத்’ என்பது முதலாக வருமிடங்களிற் கண்டுகொள்க. ஸ்ரீ கீதாபாஷ்யத்திலும் ஸ்ரீ பாஷ்யகாரர் ‘தேஷாம் ஜ்ஞாநீ’ என்கின்ற ச்லோக விளக்கத்தில் ‘ஞானிக்கு என்னொருவனிடத்திற் பக்தி, மற்றை இருவர்க்குமோவெனின் தங்களிஷ்ட பலத்திலும், அவற்றிற்கு ஸாதனமாகையாலே என்னிடத்திலும் பக்தி’ என்று பக்தியையே இம்மூன்றற்கும் ஏதுவாக்கி அது வித்யாஸ பலன்றருவது இவ்விதமென்றுங் கூறியருளினார்.

மஹாபாரத்தத்திலும் ‘சதுர்விதா மமஜநா பக்தா:’ என்று, ஸ்ரீகீதையிற் சொல்லியபடியே, ஐச்வர்யார்த்தியை ஆர்த்தன், அர்த்தார்த்தி என இருவகைப்படுத்து மற்றை யிருவரொடுங் கூட்டி, நால்வரும் என் பக்தர்கள் எனக்கூறியுள்ளதும் காண்க. இவற்றாற் கர்மத்தையே முக்யமாகக் கொண்டு அதனடியாகப் பிறந்த ஞானந் துணையாக ஐச்வர்யங்களை விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்திமார்க்கம் ஐச்வர்ய கதி என்றும், ஞானத்தையே முக்யமாகக் கொண்டு கர்மந்துணையாக ஆத்மாவை அடைய விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்தி மார்க்கம் கைவல்யகதி என்றும், கர்மஞானங்கள் துனையாக ஈச்வரனையே யடையவிரும்பி அதனையே உபாஸிக்கும் ஏகபக்திமார்க்கம் பரமாத்மகதி அல்லது மோக்ஷகதி என்றும் நன்கு துணிந்துகொள்க. ‘நோற்ற நோன்பிலேன்’ என்னுந் திருவாய்மொழி யீட்டில் நம் பிள்ளை யாசிரியர் ‘ஞான கர்மங்களிரண்டுங் கூடினாற் பக்தி கூடியல்லது நில்லாது’ என்று உரைத்ததனையும் தெளிய நோக்கிக் கொள்க. இதனாலன்றே ஆளவந்தார் கீதார்த்த ஸங்க்ரகத்தில்,’

முப்பழம் – ஐச்வர்ய சுகம், கைவல்ய சுகம், மோக்ஷ சுகம் என்ற் மூன்று கனிகளை எ-று. இம்மூவகையை‘ப்ருஹ்மணோஹி ப்ரதிஷ்டாஹம்‘ என்னுங் கீதையின் பாஷ்யத்திற் காண்க.
இறவாதுவி காரம்மிலை யாகும்பிர மத்திற்
கெவ்வேதுவின் யான்றங்கிட னவ்வேதுவி னழியா
அறனால்விளை தற்கும்மொரு முடிபேதுணி புடையா
ரடையின்ப மதற்குந்நிலை யிடனாகுவ லம்மா’
-என்பது கீதைப்பாடல்.முறைமுறை – அவரவர் அர்த்தித்த கிரமங்களில் எ-று. அதிகாரியும் பலராய் அவர் விருப்பமும் பலவாதலின் முறைமுறை என்று அடுக்கினார்.
மறைமுறையால் வானாடர் கூடி – முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தா லொவ்வாதே
‘ (பெரியதிருவந்தாதி – 61) என்பது போலக் கொள்க. முறை என்று நூற்குப் பெயராதலான் முறை முறை என்பது நூன்முறையென்றால், அவனிட்ட வழக்கு சாஸ்த்ரம் என்பதாகாது சாஸ்த்ரமிட்ட வழக்கிலே அவன் தருவதாய் இறைவனுக்குத் தலைமை கூறாது சாஸ்த்ரத்திற்கே அவனினுமிகுத்துத் தலைமை கூறுவதாக முடியும். அன்றியும் சாஸ்த்ரம், பரதெய்வத்திற்கும் அதன் செயற்கும் ஞாபகவேதுவல்லது காரகவேது ஆகாமையு முணர்க (வாய்மொழியோடை மலர்ந்த தாமரைப்பூ’ என வரும் பரிபாடலிற் பரிமேலழகர் ‘தாமரைப்பூ படைப்பிற்கு முதலாக வந்து மலரும் என்பதற்கு வேதம் ஞாபகவேதுவாதலின்’ எனவுரைத்தது காண்க). சாஸ்த்ரத்திற்கும் பரதெய்வம் எட்டாதது என்று கூறுதலானும் பரம்பொருளின் தலைமை யுணரப்படும். தருதலின் = தருதலான் எ-று. தருதற்கண் எனினும் அமையும். தருதலான் ஒன்றுண்டு ஒண்சுவை தருவது என இயையும். ஈதலின், கொடுத்தலின் என்று உயர்த்தியும் தாழ்ச்சியும் தோன்றக்கூறாது ‘தருதலின்’ என ஒத்தோன் கூற்றாற் கூறியது, இறைவன் தன்னடைந்தார்க்குத் தன்னையே ஒக்க அருள் செய்தல் குறித்த தென்றுணர்க. ‘வீடும்பெறுத்தித் தன்மூவுலகுக்குந்தரு மொருநாயகமே’ (திருவாய்மொழி ௩ – ௧0 – ௧௧) என வரும் ஆழ்வார் திவ்ய ஸூக்திகளால் இதனுண்மை யுணர்க. ஒருநாயகம் ஈச்வரனுடையதாதல் தெள்ளிது. தன்னொக்க அருளலால் அஃது இவனுக்காயிற்றென்று உணர்க. தன் மூவுலகு என்றதனால் ஐச்வர்யம் ஈச்வரனதாதல் தெளியலாம். ஐச்வர்யம் என்ற சொல்லே இவ்வுண்மையை விளக்கும்.

ஒன்றுண்டு ஒண்சுவை தருவது – ஒண்மையொடு கூடிய இனிமையைத் தருவது ஒன்று உள்ளது எ-று.-ஒண்மை – ‘ஒளிக்கொண்ட சோதியுமா யுடன்கூடுவதென்று கொலோ’ என்ற திருவாய்மொழியிற் கூறியருளியபடி, ஜ்யோதிர்மயமான முக்தஸ்வரூபத் தன்மை. ஒண்மை தருவது கூறியதனால் இவ்விருக்ஷம் ஜ்யோதிர்விருக்ஷம் என்பது உய்த்துணரலாகும். சுவை – பரமஸாம்யமான நிரதிசயாநந்த ஸுகம். ஈண்டே தருவது கூறியதனால் இச்சுவை பரமஸாம்யமாதல் நன்கு துணியப்படும். ‘தம்மையே யொக்க வருள்செய்வர்‘ எனவும் ‘நிரஞ்சன: பரமம் ஸாம்யம் உபைதி’ எனவும் ‘போகமாத்ர ஸாம்யலிங்காச்ச’ எனவும் ‘பரஞ்ஜ்யோதிருபஸம்பத்ய‘ எனவும் வருமிடங்கள் நோக்கிக் கண்டு கொள்க. இதனால் இது மோக்ஷமாகிய பேரின்பமென்று குறித்தார்.- 

9 – 11. கல்லின் எழுந்து கடலினழுந்தி அறுகாற்குறவன் நீரற விளைக்கும் செறிபொழிற் குப்பை தரு கட்பு – இதன்கண், அறுகாற்குறவன் – அறுகாற்கு உறவன் என்றவாறு. அறுகால் – ஆறு வாய்க்கால்; ஆறு வழி எனினுமமையும். இவை ஆறிந்திரியங்களென்றவாறு. ஆறிந்திரியங்கள் – மெய் வாய் கண் மூக்குச் செவி மனம் என இவை; ‘இந்திரியாணி ஷட்’ (பொறிகள் ஆறு) என்பது வடநூல் வழக்கு. கீதாசாரியனும் ‘மநஷ் ஷஷ்டாநீந்த்ரியாணி’ என அருளிச்செய்தான். ஆறிந்திரியங்கட்கும் உறவு பூண்டவன் பத்தாத்மா எனவறிக. இவன் உடம்பைவிட்டுப் புறப்படும்பொழுதும் இவ்வாறிந்திரியங்களையும் விடாது உடன் கொண்டு சேறலான் இவற்றிற்குச் சிறப்பாக உறவுபூண்டவன் என்று பெயர் பெற்றான். இவ்வுண்மையை,

பொறியீச் சுரனா முயிரெவ் வுடலிற்
புகுவானெதினின் றுபுறப் படுவான்
எறிகால் தொடுமவ் விடனின் றுமணத்
தினையீர்ப் பதுபோ லிவனீர்த் தெழுமே
(கீதை – ௧௫ – ௮)என வருங் கீதைப்பாடலா லறியலாகும். ஜனன மரணங்களிற் சீவன் இந்திரியங்களுடன் வருவது போவதாயிருக்கு மென்பது ப்ருஹ்மஸூத்ரபாஷ்யத்து, இரண்டாம் அத்யாயம் நான்காம் பாதத்திலும், மூன்றாம் அத்யாயம் முதற்பாதத்திலும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது. இந்திரியங்களை வேதம் ‘தசமே புருஷேப்ராணா: ஆத்மைகாதச’ ‘சீவனிடத்தில் இந்திரியங்கள் பத்து, மனம் பதினொன்றாகும்’ என்றதினால் இந்திரியங்களை ப்ராணபதத்தால் கூறுதல் நோக்கி அதன் மொழிபெயர்ப்பாகிய ‘கால்’ என்பதனாற் பாடியருளினாரெனினும் ஸமஞ்ஜஸமே யாகும். பதினோரிந்திரியங் கூறியிருப்ப ஆறிந்திரியங்கட்கே உறவுள்ளவன் என்றது, கருமேந்திரியமைந்தும் சரீரத்துடன் உண்டாய் அதனோடு இறுதியில் நசித்துவிடுமென்று வ்யாஸ பகவான் ப்ருஹ்மஸூத்ரத்தில் அருளிச்செய்தது பற்றியென்று துணியப்படும். இதனை ‘ஹஸ்தாதயஸ்து ஸ்திதேதோ நைவம்’ என்பதற்கு ஸ்ரீ பாஷ்யகாரர் உரைத்தருளிய வாற்றானுணர்க. இதனால் இவ்வைந்தையுங் கொள்ளாது ஆறிந்திரியங்கட்கே உறவுள்ளவன் என்றார் என்க.

கல்லின் எழுந்து கடலின் அழுந்தி நீரற என்பது, மலையிடை நின்றும், கடலிடை மூழ்கியும் பசையற உணக்குதலான் எ – று.-இவற்றால் இந்திரியங்கட்கு உறவு பூன்ட பத்தாத்மா ஐச்வர்ய காமனாய் அஃதெய்தற்கு உபாயமாகத் தீர்த்தம் படிந்தும், மலையிடைத் தனி நின்றும், நெருப்பிடை நின்று பசையற வுணக்கியும் தவஞ்செய்தல் முதலிய கர்மங்களைக் குறித்தாராவர். இதனை-பொருப்பிடையே நின்றும் புனற்குளித்து மைந்து நெருப்பிடையே நிற்கவுநீர் வேண்டா‘ (மூன்றாந்திருவந்தாதி – ௭௬)என வரும் பாசுரங்கொண்டுணர்க. எழுதல் – இராது நிற்றலாதலானும், கல் – பொருப்பாதலானும் ‘பொருப்பிடையே நின்றும்’ என்பதனையே ‘கல்லின் எழுந்து‘ என்பதனாற் கூறினார். ‘கல்லுங் கனைகடலும் வைகுந்த வானாடும்‘ (பெரிய திருவந்தாதி 68) என்புழிக் கல் என்பது பொருப்பாதல் காண்க. ‘வடபெருங்கல்’ எனப் புறப்பாட்டினும் இமயமலையைக் கூறுதல் காணலாம். புனற்குளித்து மென்பதனையே ‘கடலினழுந்தி’ என்று கூறிக்காட்டினார். தீர்த்தங்களிற் றலை சிறந்ததாகலின் கடலைக் கூறினார். ‘நீண்ட தோள் மால் கிடந்த நீளகடனீ ராடுவான், பூண்டநா ளெல்லாம் புகும்’ (மூன்றாந்திரு. 69) என்றபாசுரத்தால் இதன் உயர்த்தி நன்குணரலாகும். அழுந்தல் – மூழ்குதல். நீரற என்பது பசையற உணக்குதலாதலான் நெருப்பிடை நிற்றல் கூறினார். பரமைகாந்திகள் வேண்டாவென்று தள்ளியவற்றை இப்பத்தாத்மா ஐச்வர்ய காமனாய்ச் செய்தொழுகுமாறு கூறப்பட்டது. ‘நீரற’ என்பது பசையற வுணக்குதலைக் குறிப்பதாதல் ‘முழூஉவள்ளுர முணக்குமள்ள‘ (புறம் 219) என்று கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானை நல்லிசைப்புலவர் பாடியதனான் நன்கறியலாகும். ஐச்வர்யகாமன் பல்வகைக் கர்மங்களையே தலையாகக் கொண்டு காயம் வாட்டுதலை-படிமன்னு பல்கலன் பற்றோடறுத் தைம்புலன் வென்று
செடிமன்னு காயஞ்செற்றார்களு மாங்கவனை யில்லார்
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியு மீள்வர்கள்’
–4-1-9-

விளைக்கும் செறி பொழிற் குப்பை தருகட்பு – (அறுகாற்கு உறவன்) இவ்வாறு எழுந்து அழுந்தி நீர் அறுதலான் அவற்றின் பயனாக விளைக்கின்ற செறிந்த கற்பகச் சோலை உதிர்த்த குப்பைகள் தரும் வஞ்சம் எ-று. பொழில் என்றது, கற்பக முதலிய ஐந்தருக்களுள்ள சோலையாதலான். இதனைக் கற்பகச் சோலை என்பது தலைமையான வண்மை பற்றி. ஈண்டுக் கூறிய இந்திரச் செல்வம்,-‘இன்றளிர்க் கற்பக நறுந்தேனிடைதுளிக்கு நிழலிருக்கை’-என்பதும், அதுவும் அவ்வைந்தருச்சோலை யுதிர்த்ததென்பதும், நல்லறிவாளர் கண்டுகைவிட்ட மயல் (துரால்) என்பதும் தோன்றச் செறிபொழிற் குப்பை என்றார். ‘குப்பை கிளர்ந்தன்ன செல்வத்தை’ என்பது இவர் திருவாக்கு. இது, நல்கிய இறைவனை ஆங்கு மறப்பித்தலானும் புண்ணிய கர்மம் நசித்து மண்ணிடைத் தோன்றியவிடத்தும் அச்செல்வத்திற்கே வாசனையால் முயலச்செய்தலானும், ‘குப்பை தருகட்பு’ என்றார். கட்பு – களவு, வஞ்சம் எ – று. ‘செல்வம் வந்துற்ற காலைத் தெய்வமுஞ் சிறிது பேணார்’ என்ப. (பாரதம்)’வியன் மூவுலகு பெறினும் போய்த் தானேதானேயானாலும்’ (திருவாய்மொழி 8 – 10 – 2) என்று ஐச்வர்ய கைவல்யங்களைக் கூறியவிடத்து ஐச்வர்யார்த்தி மூவுலகும் அருமையிற் பெறுதல் கூறியதேனும் ஈண்டுத் தலைமைபற்றி இந்திரச் செல்வமே கருதினாரெனக் கொள்க.

இனி, இதற்கே வேறோருரை கூறுதும். அறுகாற்கு உறவன் என்புழி அறுமீனாய்க் கால்வடிவாகவுள்ள உரோகிணிக்கு உறவுபூண்ட சந்த்ரன் எ-று. உரோகிணி ஆறாய்ச் சகடம் எனப்பெறுதலும் சந்த்ரனுக்கு அதிகப்பிரியையாதலும் நூல்களிற் காணலாகும். இஃது அறுமீன் எனவும் பெயர் பெறுமென்பது ‘அறுமீனினைவனள்’ என வரும் அகநானூற்றின் குறிப்பில் ‘அறுமீன் – உரோகிணி’ எனக் கூறியதனானறிக. கால் – உருளை. ‘சகடக்கால்’ (நாலடி) எனவும் ‘கால்பார்கோத்து ஞாலத்தியங்கும்‘ (புறம். 185) எனவும் வருவன காண்க. வ்ருஷப வீடு சந்த்ரனுக்கு உச்சஸ்தானமாதலின் ஆண்டுள்ள உரோகிணியின்பால் அவன் மிகவும் உறவுள்ளவனாயினன் என்பர். ரோஹிணீசன் ரோஹிணீ நாயகன் என்பன சந்திரன் பெயர்களாகும்-இவன் நீரறஎன்றது, இவன் உடலமிழ்தத்தைத் தேவர் பருகலான் இவன் அமிழ்தம் அற என்றவாறாம். இவ்விதம் சந்த்ரன் அமிர்தமயமாய்க் குளிர்ந்த ஜலபரமாணுக்களாலே சுக்ல பக்ஷத்தில் தேவர்களையும் கிருஷ்ண பக்ஷத்தில் பிதுர்க்களையும் திருப்தி செய்கின்றான் என்று புராண ரத்னம் கூறுதலை நோக்குக (விஷ்ணுபுராணம் 2 – 12). இத் தேவர் வளர்ச்சிக்கு ஒருவன் உடல் தேயவேண்டுவதென்று குறித்தவாறாம்

இனிக் கல்லினெழுந்து கடலின் அழுந்தி என்பதனைக் கடலினழுந்திக் கல்லினெழுந்து என மாறிக் கூட்டுக. சிந்தாமணிப் பதிகத்திற் ‘குணமாலையை வைதுமாறி’ என்பதனை ‘மாறி வைது’ என மாறிக் கூட்டியதுபோல ஈண்டுங் கொள்ளற்பாலது; இவ்வளர்ச்சியும் நிலைபேறுடையதில்லையென்று இதிகாசங் காட்டியது இஃதென்க. இவ்விந்திரச் செல்வம் துர்வாஸ முனிவர் சாபத்தாற் கடலினழுந்தி மந்தரமென்னுங் கல்லானெழுந்து சந்த்ரன் நீரற விளைக்கும் செறிபொழிற்குப்பை என்றவாறாம். சந்த்ரன் விளைக்கும் பொழில் என்க. சந்த்ரன் தன் அமிழ்தம் அறா நிற்கவும், விளைக்கின்ற கற்பகச்சோலை எ-று. ஓஷதீசன் சந்த்ரனாதலான் அவன் விளைக்கும் பொழில் என்றார். இச் செல்வம் சந்த்ரன் விளைப்பதென்றாலும் இழுக்காது; என்னையெனிற் கூறுவேம். வீடு புகுதற்குரியது அர்ச்சிராதிகதியென்றும் சுவர்க்கம் புகுதற்குரியது தூமாதிகதி என்றும் வேதம் கூறும். இவ்விருகதிகளுள் ஐச்வர்யார்த்திகள் புகும் தூமாதிகதி, முதலிற் சந்த்ரனிடம் புக்கு அப்பாற் சுவர்க்கம் போகும் முறைமைத் தாதலின் ‘சாந்த்ரமஸம்’ என்று வழங்கப்படும். இச்செல்வம் திங்களாகிய உண்டியால் அமைவதனாலும் இதனுண்மை யுணர்க. பரிபாடலில், ‘நிறைமதி யுண்டி யமரர்க்கு’ எனவும், ‘அமரருண்டி மதி‘ எனவும், ‘மதியுண் அரமகள்‘ எனவும் வருவனவற்றால் தேவர்க்குத் திங்களுணவாதல் காணலாம். இச் செல்வம் குப்பையாதலும் கட்பு ஆதலும் இவ்வுரைக்கும் ஒக்கும்.

11 – 12. ஒன்று வித்து அறு கோட்டு – பிறிதொன்று வித்து அற்ற குற்றமுடைத்தென்றவாறு.-இது கைவல்யார்த்தியின் பலனாதல் காட்டுவாராய் வித்தற்ற தோஷமுடைத்தென்று கூறினார். கோள் – குற்றம். தாளையுடையது தாட்டு என வருவதுபோல இதனையுங் கொள்க. வித்து என்பது பெரிய மரத்தையுந் தன்னுட் சூக்குமமாய் அமர்த்திக்கொண்டு, வாய்த்தவிடத்து அம்மரமாய்ப் பரிணமிப்பதற்குக் காரணமாய தொன்று. இதனை ‘நீல நிறத்து நெடுந்தகை வந்தோர், ஆலமர் வித்தினருங்க் குறளானான்‘ எனக் கம்பநாடர் கூறுதலானறியலாம். ஈண்டுத் தன்னிலையறியாத் தொன்மிகுபெருமரம் இக்கனியினுள்ளே சூக்குமமாகவும் இல்லாமையால், எப்பொருட்கும் வித்தாய தனிமுதல் இல்லாமல், கேவலந் தன்னைத்தானே அனுபவிப்பதாகலின், தெய்வமில்லாமையைக் குற்றமாகக் கொண்டு கூறினார். ‘தானோருருவே தனிவித்தாய்‘ (1, 5, 4) என்னுந் திருவாய்மொழியிலே இறைவனே வித்தாகக் கூறப்படுதல் காணலாம்.


‘பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து பின்னும்
இறக்கவு மின்புடைத்தா மேலும் – மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லா லெண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே யேத்தாப் பகல்’
(பெரிதிருவந். 80)என்பதனாற் கைவல்ய சுகத்தின் சிறப்பெல்லாம் விசதமாக எடுத்தோதி, அதன்கட் பரதெய்வத்தை யேத்தாத மறப்பே பூர்ணமென்றும் அஃது ஏதமே என்றும் தேற்றமாக உரைத்தருளியதுகொண்டு இங்கும் குற்றமுடைத்தென்று தெளிவித்தார். ஏதம், குற்றம், கோள் என்பன ஒரு பொருளன. ஏதம் – துன்பம் எனினுமமையும்.-நிற்கின்ற தெல்லா நெடுமாலென் றோராதார் கற்கின்ற தெல்லாங் கடை’ (இரண்டாந்திரு. 54)-ஆதலான், இவர்க்குக் கைவல்யசுகம் கடையாயிற்று. இந்திரச் செல்வம் பெற்றவன் தன் புண்ணியம் நசித்துப் பின் மண்ணிற் பிறத்தலான் ஒருகால் தெய்வத்தை நினைந்து வீடெய்த அவகாசமுண்டு. இக்கைவல்யசுகத்திற் பட்டானுக்கு மீண்டும் பிறத்தலின்மையால், தெய்வ நினைப்பிற்கே அவகாசமில்லை யென்று கொண்டு கடையாக்கினார். ‘அமரர் கழல்தொழுது நாளும் இடைநின்ற வின்பத்த ராவர்‘ (இரண்டாந் திருவந்தாதி, ௧௧) என்பதனால் தேவர்க்குக் கடவுள் கழறொழுதலுண்மையும் அவர் இடைநின்ற இன்பத்தராதலும் உணர்ந்துகொள்க. இதற்கு வேறுகூறலு முண்டு.-இனிக் கைவல்யத்தைத் தோடற்ற நெல்வித்திற்கு (௧, ௨௨) விஷ்ணுபுராணத்தில் உவமித்தலான், அதனையே ஈண்டுத் தழீஇயினாரெனக் கொண்டு ‘வித்தறு தோட்டு’ எனப்பாடம் ஓதி, ஒன்று அறுதோட்டு வித்து என்றாலும் நன்கு பொருந்தும். ‘நாற்கூற்றே மருந்து’ (திருக்குறள். ௬௫0) என்புழிப்போலத் தோட்டது என்பது தோட்டு என விகாரமாயிற்றெனினும் இழுக்காது.

12. ஆமா விளைக்கும் நாடன் என்பது, இங்ஙனம் ஆமாறு நாடு விளைப்பவன் எ – று. ஆம் ஆறு என்பது ஆமா என வந்தது செய்யுள் விகாரம். ‘தேறுமா செய்யா அசுரர்களை‘ (பெரிய திருவந்தாதி, ௩௩) என இவ்வாழ்வாரே வழங்குதல் கண்டு கொள்க; ‘ஆமாறொன்றறியேன்’ (திருவாய், 4, 9, 2) என்பது இவர் வழக்கேயாம். இங்ஙனம் ஆகும் ப்ரகாரத்திலே (ஆம் ஆற்றிலே) விளக்கும் நாடன் என்க. ஜகத் சிருஷ்டி செய்பவன் எ – று. விளைக்கும் நாடன் என்பதனை நாடுவிளைப்பவன் என்று கொள்க; ‘செய்த வேள்வியர்’ (திருவாய் 5,7,6) என்பதனை வேள்வி செய்தவர் என்று கொள்வது போல. இவ்வழக்கு வடநூலிலே மிகவும் பயில்வதொன்று; பெருந்தமிழ்நூல்களிலும் ஆங்காங்குக் காணலாம்.

நாடு விளைப்பவன் – உலகு படைப்பவனாகிய பிரமன். நாடு உலகிற்காதல் ‘நாட்டைப் படையென் றயன்முதலாத் தந்த‘ என்னும் நாச்சியார் திருமொழியால் (14,9) அறிந்துகொள்க. இறைவன் ஆணையாற் பிரமன் நாடு விளைப்பது இம்மூன்று பெரும்பலன்களுள் ஒன்றேனும், உயிர்கட்கு ஆமாறன்றி வேறில்லை யென்பது கருத்தாகும். ஸ்ரீமத் பாகவதத்தில் (11 – 3 – 7) ‘ஆதிமூர்த்தி ஜீவனுக்கு உயர்ந்த ஸித்தி உண்டாம்பொருட்டுப் பூதங்களாற் பிராணிகளைப் படைத்தான்‘ என வருதலானும் உணர்க.-உய்யவுலகு படைத்து‘ எனப் பெரியாழ்வார் திருமொழியிலும் (1, 6, 1)-படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள்
பணிந்தேத்த வல்லார் துயராயவெல்லாந் துடைத்திட் டவரைத் தனக்காக்கவென்னத் தெளியா
‘-எனப் பெரியதிருமொழியிலும் (10, 6, 7) வருதல் கொண்டு இவ்வுண்மை அறிக. உயிர்கட்கு அநுகூலிக்கவே உலகு விளைப்பதல்லது ப்ரதிகூலிக்கவில்லையென்பது கருத்து. இங்ஙனம் மாக்கதிக்கணாமாறு நாடு விளைப்பவனாகவும் ‘என்னொருவர் தீக்கதிக்கட் செல்லுந்திறன்’ எனப் பெரியோரிரங்குதலான் இஃதெளிதிலறியலாம். தீக்கதி புகுவது உயிர்கள் தம் தீயவினையால் என்றறிக.

‘நாவாயி லுண்டே நமோநார ணாவென்று
ஓவா துரைக்கு முரையுண்டே – மூவாத
மாக்கதிக்கட் செல்லும் வகையுண்டே யென்னொருவர்
தீக்கதிக்கட் செல்லுந் திறன்
‘ (முதற்றிருவந்தாதி, 95)-என்னும் பாசுர நோக்கிக் கொள்க. வாய் படைக்கப்பட்டுள்ளது; அதன்கண்ணே நாப் படைக்கப்பட்டுள்ளது; நாரணா என்றுரைக்கும் உரை நித்யமாகவுள்ளது. இந்நாவையும் இத்திவ்ய நாமாவையுஞ் சேர்த்தால் ‘மாக்கதிக்கட் செல்லவகையுண்டே’ என்றோதியவாறாம். ஈச்வரன் உடம்பைப் படைப்பது பந்தம் ஒழிதற்கேயன்றி வேறொன்றற்கில்லை யென்பது.-ஆப்பங்கொழியவும் பல்லுயிர்க்கும் – ஆக்கை கொடுத்தளித்த கோனே குணப்பரனே யுன்னை விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்‘ (நான்முகன் றிருவந்தாதி, 93)என்பதனாலறியலாம். இத்துணையுங் கூறியவாற்றால் படைப்பவன் உலகு விளைப்பது, உயிர்கள், முற்கூறிய மூன்று கதிகளிலும் ஆமாறல்லது நரகிற்போமாறில்லையென்று துணிந்து கொள்க.

இவனைப் பரமேஷ்டி, சுவயம்பூ என்பதுபற்றித் தன்னிற் றலைமை வேறில்லானென்று பொருள் கொள்ளலாமேனும், பின் முலையிலி என்று உறுப்புப்பற்றி வந்தததனோ டொருபடித்தாய் இயைபுள்ளதாகாமை யுணர்க. ஜகத்சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமன், முதல்முதல் அநிருத்த மூர்த்தியிடத்தே தோன்றினானென்பது மஹாபாரதம் சாந்தி பர்வம் – ‘அநிருத்தாத் ததா ப்ரஹ்மா தந்நாபி கமலோத்பவ:’ எனவரும் வாக்யத்தால் அறியப்படுதலான் ஸ்ருஷ்டியினாரம்பமும் இத் தொன்மிகு பெரு மரமாகிய அம்மூர்த்தியின்கண்ணே நிலையுறுவ தாதலால் இயைபு காணலாகும்.13. அவனே தலையிலி என்பது உலகு விளைப்பவனாகிய அப்பெரியோனே தன் தலையிழந்தவனாயினான் எ – று.-நாடன் என்பதன்பின் அவனேயென அடுத்து வேண்டாத சுட்டுச்சொல் வந்தது, முன்னே எல்லாருடைய தலைகளையும் தன் தலைகளையும் படைக்கும் அவனே பின்னே தலையில்லையாயினான் என்று குறிக்கொள்ளுதற்கென அறியலாம். சிந்தாமணிப் பதிகத்தில் (4) ‘தேவிபோகி…சுடுகாடவள் சேர்ந்தவாறும்’ என்புழி ‘தேவியவள்’ என வந்தது, முன்னே இன்னமிழ்தாயினவள் பின்னே இங்ஙனஞ் சுடுகாடுபுக்காள் என உணர்த்தற்கு என்பதுபோல இதனையுங்கொள்க.-பிரமன் பலதலை படைத்துக்கொண்ட செய்த மத்ஸ்ய புராணம் ௩-ஆம் அத்யாயத்திற் (30 – 41) கண்டது. ஆண்டு இவன் தன்னுடம்பிற் றோன்றிய ஸரஸ்வதியைக் கண்டு காமித்தான் என்றும், இவனைக்கண்டு ஒவ்வோர் திசையிலும் அவள் ஒதுங்கினாள் என்றும், ஒதுங்கியதிசையெல்லாம் இருந்தபடியே தலையைப் படைத்துக்கொண்டு நோக்கினானென்றும், அதுகண்டுஸரஸ்வதி வானம் புகலாயினள் என்றும், அவள் வான்புகுதலைக் காண உச்சியில் ஐந்தாந்தலை படைத்து நோக்கினான் என்றும், இவ்வாறு ஐந்தலையன் ஆயினானென்றும், ஐந்தாந்தலையைச் சடைகளான் மறைத்திருந்தானென்றும் கூறுதல் காணலாம். இவன் ஐந்தலை வரலாறு இப்புராணங் கூறுதல் கொண்டு, இவன் முதற்கண்ணே நான்கு மில்லனாயிருந்தானென்று உய்த்துணரலாகும்.-கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும்’ (குறள், 1101) ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவம் இல்லான் என்றது, இவன் காமபோகந்துய்த்தற்கேற்ற உறுப்பே இல்லையாயினான் என்பது கருதிற்று. ‘ஐம்புலனு மொண்டொடிகண்ணே யுள’ என்பது திருக்குறள். பின் பிரமசிரசு கிள்ளப்பட்டுச் சிவபிரான் கையது ஆயிற்று எனப் பன்னூலினுங் கேட்கப்படுதலான், தலையிலி என்றார். ‘கபாலநன் மோக்கத்துக் கண்டு கொண்மின்’ (திருவாய்மொழி. 4 – 10 – 4) என்புழி, நம்பிள்ளையாசிரியர் ‘ஒருவன் தலைகெட்டு நின்றான்’ என்று உரைத்ததனாலும் ‘தலையிலி’யாதலுணர்க; ‘வாணன் கையிழந்து நின்றான்’ என்பதுபோல இதனையும் கொள்க.

இவனைப் பரமேஷ்டி, சுவயம்பூ என்பதுபற்றித் தன்னிற் றலைமை வேறில்லானென்று பொருள் கொள்ளலாமேனும், பின் முலையிலி என்று உறுப்புப்பற்றி வந்தததனோ டொருபடித்தாய் இயைபுள்ளதாகாமை யுணர்க. ஜகத்சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமன், முதல்முதல் அநிருத்த மூர்த்தியிடத்தே தோன்றினானென்பது மஹாபாரதம் சாந்தி பர்வம் – ‘அநிருத்தாத் ததா ப்ரஹ்மா தந்நாபி கமலோத்பவ:’ எனவரும் வாக்யத்தால் அறியப்படுதலான் ஸ்ருஷ்டியினாரம்பமும் இத் தொன்மிகு பெரு மரமாகிய அம்மூர்த்தியின்கண்ணே நிலையுறுவ தாதலால் இயைபு காணலாகும்.-‘தேவுமெப் பொருளும் படைக்கப் பூவினான்முகனைப் படைத்த தேவன்’ (திருவாய், 2,2,4)என்பதனால் இப்படைப்பின் மூலம் ஸர்வேச்வரனிடத்திலே நிலைபெறுவது என்க.

13. அவன் மகள் முலையிலி = அப்பிரமனுக்கு மகளாய்த் தோன்றிய ஸரஸ்வதி ஸ்தனமில்லையாயினாள் எ – று.-பிரமன் தவத்தால் அவன் திருமேனியிற் றோன்றினாள் என்றும், இவள் அவனுக்கு மகளேயாகவும் இவளெழிலான் மனங்கவரப்பட்டுக் காமித்தானென்றும், அது கண்டு பிரமபுத்திரராகிய மகருஷிகள் பிரமனை வெறுத்தனரென்றும் மத்ஸ்யபுராணமும் ஸ்ரீபாகவதமும் நன்குவிளக்குதலான், , இவள் பிரமனுக்கு மகளேயாதல் தெள்ளிது. தமிழில் மகள் என்பது மனைவிக்கும் பெயராதலின், பின் அவன் இவளை மனைவியாக விழைந்ததற்கும் பொருந்தவே ‘அவன் மகள்’ என்று ஈண்டுக் கூறப்பட்டது என்பது பொருந்தும்.-இவளை முலையிலியென்றது, இயலும் இசையுமல்லது வேறு ஸ்தனமில்லாமையா லென உய்த்துணரலாகும். ‘ஸங்கீதமபி ஸாஹித்யம் ஸரஸ்வத்யா: குசத்வயம்’ என வரும் வடமொழிவழக்கானுணர்க. ஸரஸ்வதி ஞானசக்தி என்பது நூல்களின் றுணிபு. ‘ஞானமுதல்வி’ என்பர். ஞானங் காமத்தைத் தொலைக்குமே யல்லது அதனை யுண்டாக்கமாட்டாது. ‘கற்றவர் ஞானமின்றேற் காமத்தைக் கடக்கலாமோ’ என்று கம்பநாடர் பாடுதலானும் இஃதுணரலாகும். இங்ஙனங் காமஞ் செய்யாது ஞானமே செய்தலான் இவளை முதிர்ந்த மூதாட்டியாகவே வருணிப்பர். முலையின்மை காமமின்மைக்கு அடையாளமெனினும் பொருந்தும். ‘முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற்றற்று’ (திருக்குறள், 402) என்பதனான் இதனை யுய்த்துணர்க. முலையென்றது ‘காமாநுபோகத்தை’ என்று தக்கயாகப்பரணி உரைகாரர் வெளியிடுவதுங் காண்க. இவளையே பெரியபிராட்டியார் அமிசமான ஆத்மவித்யாரூபிணியாகக் கொண்டு உபாஸிக்குமிடத்து வ்ருத்தையாக வழங்குவது ‘ஸாயம் ஸரஸ்வதீம் ச்யாமாம்; நமாமி விஷ்ணுதைவத்யாம் வ்ருத்தாம் கருடவாஹநாம்’ என வருந் தியானத்தால் உலகம் அறிந்தது.

நூல்வலையிற் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‘ (நான்முகன்றிரு. 40) என்பதனாற் பெரியபிராட்டி வித்யாரூபிணியாதல் தெளியலாம். வாராமுலைமாதர் பேதையர் என்றும், வருமுலை மாதர் யுவதிகள் என்றும் வந்தமுலைமாதர் பேரிளம்பெண்டிர் என்றும், வந்து முலையில்லையாயினார் வ்ருத்தையள் என்றும் தெரிந்துகொள்க.
ஈட்டினரும் பதத்திற் சீயர் ‘யௌவன சூசகமான முலையானவை‘ என உரைத்ததனாலும் இதனுண்மை யறியலாகும். (திருவாய்மொழி 4 – 6 – 10). பெரிய பிராட்டியார் ஆத்மவித்யாரூபிணியாதல் விஷ்ணு புராண ஸ்ரீஸ்துதியிற் கண்டது.-இவ்வாறு தலைவனுந் தலைவியும் முறையே தலையிலியும் முலையிலியுமாதலே யன்றி இத்தலைவி –

14. தானும் ஈனாள் ஈனவும் படாஅள் என்றது இவள் தானும் ஒரு ப்ரஜையைத் தன்னினின்று ப்ரஸவிக்கமாட்டாள், ஒருவராற் ப்ரஸவிக்கப்படவுமாட்டாள் எ – று.ஈனாள்…படாஅள் என ஈண்டுக்கூறியதன் காரணம் நுணுகி நோக்கிற் புலனாம். எவ்விதத்தினும் எவரானும் தவறாதவன் என்றுணர்க. (மஹாபாரதம், சாந்தி 353). இவள் வாக்தேவியாய்ச் சப்தமே வடிவாயுள்ளவளாதலின் உலகிற் பெண்டிர்போலக் கருவுயிர்த்தலில்லை எ – று. இவள் வடிவான சப்தம் பரப்ருஹ்மத்துக்கு ச்வாஸமாய் நித்யமான வேதவாக்யமாதலான், ஈனவும் படாஅள் என்றாரென்ன. ஈனப்பட்டால் நித்யமாதல் கெடும்; ‘ஏதத் நிச்வஸிதம்’ என்பது ப்ருஹதாரண்யக சுருதி. இவ்வாறே ஸுபாலசுருதியுங் கூறிற்று. இங்ஙனம்

15. எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் – எழுவரும் மூவருமாகிய பதின்மர் ப்ரஜைகளைப் பெற்றனள் என்று வியப்புச் சுவைபட உரைத்தார். தசப்பிரமாக்களைப் புத்திரராக அடைந்தாள் என்பதைக் குறித்ததாம். காமாநுபவபோக ஸூசகமான முலையில்லாளாகியும், காமாநுபோகந் துய்த்தற்குரிய ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவவிசேட மில்லாதவனைக் கலந்து – வேதம் ஒவ்வொரு சுமங்கலையும் அடைய வேண்டி ஆசீர்வதித்த – பத்துமக்களையும் பயந்தனள்; இது வியப்பாகும் என்பதாம்.வேதம் பத்து மக்கள் பெறுபடி வாழ்த்தியது ‘தசாஸ்யாம் புத்ரா நாதேஹி பதிம் ஏகாதசம் க்ருதி’ என்னும் வாக்யத்தாலறிந்தது; ‘பதின்மர்மக்களைப் பெற்று பதியைப் பதினோரா மகவாகச் செய்க’ என்பது இதன் பொருள்.உள்ளவளாகியும் –

இவள், பிரமாவின் சக்தியாய் அவன் உள்ளத்தமர்ந்து அவன் மானஸபுத்ரர்களான பிரமர்பதின்மரை உண்டாக்கியபடியால் இங்ஙனங் கூறினார். பிரமதேவனுடைய புத்ரர்கள் பதின்மர் என்பதும், அவர் இவரிவர் என்பதும் ஸ்ரீமத் பாகவதம் 3 – ஆம் ஸ்கந்தம் (12 – 22) ‘மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்த்யர், புலஹர், க்ரது, ப்ருகு, வஸிஷ்டர், தக்ஷர், பத்தாமவராகிய நாரதர்‘ என்பதனால் அறிக. இவருள் ப்ருகு, மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், க்ரது என்னும் இவர் ஸப்த ப்ரஹ்மாக்கள் என்று ஸ்ரீ பாகவதத்தில் (11 – 14 – 4) ஒரு தொகையாக வழங்கப்படுதலான் எழுவர் மூவர் என்று பிரித்துரைத்தார். பத்தினை மூன்றும் ஏழுமாக எண்ணிக் கோடலும் பண்டை வழக்கேயாகும். ‘முடிப்போது மூன்றேழென் றெண்ணினான்’ (மூன்றாந் திருவந். 77) என்று பெரியார் பணித்தலானறிக.-பிரமசக்தியாய்ப் பிரமனினைவி லமர்ந்து இப்பதின்மரையுந் தோற்றுவித்தலாற் பயந்தனள் என்றார். ‘திதியின் சிறுவர்’ என்புழிப் போலச் சிறுவர் என்பது மக்களுக்காயிற்று.

உலகத்தை அபிவிர்த்தி செய்யவும், உயிர்கட்கு ஞானோதயஞ் செய்யவும், ஆசாரத்தை அநுஷ்டிப்பித்துத் திருத்தவும் இவரைப் பயந்தனள் என்று கருதிக் கூறினார். ‘மலர்மிசை முதல்வனு மற்றவனிடைத்தோன்றி, யுலகிருளகற்றிய பதின்மரும்’ எனப் பரிபாடலின் வருவது கொண்டு இதன் உண்மையுணர்க. ‘சிந்தாதேவி‘ (சிலப்பதிகாரம்) என்பதும் புலமாமகள் என்பதும் (சிந்தாமணி) இவள் பெயராதலால், பிரமன் நினைவிலமர்தல் அறிக. இப்பதின்மரும் பிரமன் நினைவிற்றோன்றியோர் என்பது ‘விதியின் மக்களும்’ (பரிபாடல், ௩) என்புழி ‘ஆதிப்பிரமற்கு நினைவிற்றோன்றிய பிரமர் பதின்மருள்’ எனப் பரிமேலழகர் உரைத்ததனான் உணரலாம்.இனி இரட்டுறமொழிதலான், ஸரஸ்வதியாகிய வித்யா லக்ஷ்மி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் என்று கொண்டு, மூன்றும் ஏழுமாய் அக்ஷரவொலிவடிவாய் நுண்ணியவாய் திருமந்திரம்பத்தெழுத்துக்களையும் உலகுய்ய உதவினள் எனினும் நன்கு பொருந்தும்.அகார உகார மகாரமாகப் பிரிப்புண்பதுபற்றி ப்ரணவத்தை ‘த்ர்யக்ஷரீ’ ‘த்ரிவ்ருத்’ என வழங்குதலான் அஃது மூன்றாதல் தெள்ளிது. எஞ்சிய ‘நமோ நாராயணாய’ என்பது ஏழாதல் கண்டுகொள்க. அச்க்ஷரங்கள் தேவதைகளின் வடிவாதலும் உயர்த்தியும் நோக்கி உயர்திணையாற் கூறினார். ‘இசைத்தலுமுரிய வேறிடத்தான‘ (தொல்காப்பியம்) என்பது, இலக்கணம்.இங்ஙனம் மறைத்துக் கூறியது, மறையிற் றலைசிறத்தல் பற்றியும் இதன் கௌரவம் பற்றியும் எனக் குறிக்கொள்க. இதன் அநுக்ரக விசேடம் ப்ரஹ்லாதாழ்வான் முதலியோரிடம் நன்கு காணலாம். அக்ஷரங்கள் தெய்வவடிவே என்பதும் அவ்வவ் வக்ஷரங்கட்கு அதிதெய்வம் இவையென்பதும் அக்நிபுராணம் கூறிற்று. தமிழிலும் பாட்டியலிற் காணலாம். மந்த்ரகாரிணி ஸரஸ்வதி என்பது பற்றி இவ்வாறு கூறப்பட்டது.

16. அவள் இவள் உவள் என அறிதல் – இவ்வாறு இருடிகளையும் திருமந்த்ரத்தையும் உலகுய்யப் பயந்த அத்தகையள் ஸரஸ்வதியென இலக்குமியென ஒருபடியாகத் துணிதல் எ-று. உவள் – உகாரார்த்தமா யுள்ளவள்; இலக்குமி என்பது திருமந்த்ரார்த்தத்தால் ஸம்ப்ரதாயஸ்தர் பலரும் நன்கறிவர். அவள் ஒழிந்த இவள் ஸரஸ்வதி என்பது தெள்ளிது. இது பிரமன் மகளாதலானும் நன்கறிந்ததாம். உபகாரஸ்ம்ருதி செய்ய வேண்டுதலின் அறிதல் இன்றியமையாதென்று கருதிக் கூறினார். பத்தெழுத்தினையும் உலகில் வெளியிட்ட இருடியர் இப்பதின்மர் எனக் கருதினாரோ என ஊகிக்கவும் இடனுண்டு. இருடி, மந்த்ரம், தெய்வம் மூன்றும் ஸர்வதா உபாதேயமாகக் கடவன வென்பது நம் பெரியோர் திருவாக்காதலான், அவற்றையே இவரும் ஞாபிக்கின்றார் எனக் கொள்ளலுமாம்.

17. துவளறு காட்சிப் புலவரது கடனே – துவட்சியற்ற அறிவினாற் புலவரென்று பெயர்சிறந்தாரது கடப்பாடேயாம் எ – று.புலவரது கடன் என்றது, மஹாபாரதத்தில் ‘வித்வத் ஸம்ரக்ஷணம்‘ என ஓர் பகுதியுண்டு – அதன்கண், வித்வான் அஷ்டாக்ஷர ஜபபாராயணனாக இருத்தல் கூறப்பட்டுள்ளது. அவ்வுண்மையை அச்சங்கப்புலவர்க்கு அறிவுறுத்துவாராய்க் கடன் என்றுரைத்தருளினாரென்க. துவளல் – வாடுதல். துவளறு காட்சி – யதாவஸ்திதஞானம். அஃதாவது பொருளியல்புள்ளவா றுணரும் நுண்ணறிவு. புலவர் என்புழிப் புலம் அறிவாதலிற் காட்சிப் புலவர் என்பதற்கு இவ்வாறு கூறப்பட்டது. அன்றியும் இச்சங்கப்புலவர் ஸரஸ்வதி அம்சமென்ப வாதலான் அவள் பயந்த இருடியரையும், இலக்குமியின் வடிவாகிய அவளே பயந்த திருமந்த்ரத்தையும், அது கூறும் வாசுதேவ தருவையுமல்லது தஞ்சம் வேறில்லையென்றும் உய்த்துணர வைத்தவாறாம்.

பரமாத்ம சக்தி பலபல படியாகக் கேட்கப்படுவது’ என்பது வேதமாதலின், அவள் இலக்குமியாகவும் ஸரஸ்வதியாகவும் நூல்கள் கூறுமென் றுணர்க. நாமங்கையே, நாவினுணின்று மலரு ஞானக் கலைகளுக்கெல்லாம் ஆலியும் ஆக்கையும் இறைவன் றானே (திருவாய் 1, 9, 8) என்று ஞாபித்து, அவ்விறைவனையும் அவள் பரிகரத்தையும் பாடுக என்று அருள் செய்தாள் எனக் கருதி உபகாரஸ்ம்ருதி பண்ணிய பெரியாரும் நம் ஆழ்வார்களி லுண்டு.

நாம்பெற்ற நன்மையு நாமங்கை நந்நெஞ்சத்
தோம்பி யிருந்தெம்மை யோதுவித்து – வேம்பின்
பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்
றருணீர்மை தந்த வருள்’
–என பூதத்தார் அருளிச்செயலானறிக. ஸரஸ்வதியே வேத மந்த்ரகாரிணியென்று தக்கயாகப்பரணி உரையாசிரியர் உரைப்பர் (தாழிசை, 593). இவற்றாற் பயந்தவள் இவள் என அறிதல் கடனென்றார்.

இனி நாமங்கையும் அறிந்தோதற்கரிய பொலிவுடையன் இறைவனென்று பாடியருளிய பெரியாரு முண்டு. இதனை ‘நாமங்கை தானு நலம்புகழ வல்லளே, பூமங்கை கேள்வன் பொலிவு’ (மூன்றாந் திருவந்தாதி, 57) என்பதனால் அறியலாம். தான் நன்கறியாததொன்றை உலகிற்கோதவல்லவள் இவளில்லை யன்றே? ஆதலால் வித்யாலக்ஷ்மியாகிய பூமங்கை தான் தன்கேள்வன்படி உணரவல்லள்; உவள்தான் நம்வினை தீர்த்து அவனை உணர்த்தவல்லள்; ஆதலான் ‘உவளென அறிதல் கடன்’ என்றார். இவ்விருவரும் பரமாத்ம சக்தி பேதமாதலின் எங்ஙனம் அறியினும் பயனுண்டென்பது கருத்து.

இனி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் எவள் அவள் பிரமற்கு மகளென மனையாட்டியென அறிதல் புலவர் கடன் என்றாரென்றலும் ஒன்று.பராசக்தியியல்பு பலபடியாதல் பிறர்க்கு மொக்கும். இதனை ‘அவளத்தனா மகனாந் தில்லையான்’ எனத் திருக்கோவையினும் ‘அனகநாடற் கெம்மன்னை, மனைவி தாய் தங்கை மகள்’ எனச் சிதம்பரச் செய்யுட்கோவையினுங் கூறுதலானுணர்க. ஸரஸ்வதி பரமாத்மசக்தி யென்பதும் அவள் பிரமனுக்குப் புத்திரியாயினாள் என்பதும் தொன்னூற் துணிபு. இவ்வாறே மஹாபாரதம் சாந்திபர்வம் மோக்ஷதர்மத்தில் ‘பிரமாவின் புத்திரியாகிய என்னுடைய ஸரஸ்வதீதேவியானவள் தவறாதவள், சத்தியமுள்ளவள்’ எனப் பகவான் அருளிச்செய்தலானும் உண்மையறிக. இனி,-கண்ணன் கழலிணை, நண்ணு மனமுடையீர்
எண்ணுந் திருநாமந், திண்ண நாரணமே
‘ (10,5,1)என்னுந் திருவாய்மொழி எழுதிய திரு ஏட்டினைச் சங்கப்பலகையின்மேல் வைக்க அப்பலகை அத்திருவேட்டளவிற் சுருங்கிப் பிறர் இதனோடொக்கவிருக்க இடந்தாராது இதன் தெய்வச்சிறப்புணர்த்தியது என்று குருபரம்பரையிற் கேட்கப்படுதலான், அதற்கியைய, அப்புலவர் ஆராய்ந்து துணிய எழுதியருளிய இத்திருப்பாட்டும் அத்திருநாம மந்த்ரத்தையும் அதைப் பயந்த பராசக்தியையும் அதற்குரிய பரதெய்வத்தையும் தலைமையாகக் கொண்ட தென்று உய்த்துணர்ந்து கொள்க.

பரமகாருணிகரான நம்மாழ்வார் தாம் பெற்ற பேறு எல்லாப் புலவர்க்குமாமாறு, ஸகல சாஸ்த்ரார்த்தங்களும் ஆடிநிழலினடங்கவைத்து மெய்ப்பொருள் தேற்றிய வித்தகத் தனிப்பாட்டு இஃதாகும். இங்ஙனம் வடநூற்பொருளையே யுடைய தமிழ்ப்பாட்டாதலின் இதனை ‘ஆரியத் தமிழ்’ என்று கூடலழகர்புராணமுடையார் கூறினாரென்க. வேதப்பொருளேயுடைய தமிழை ‘வேதத் தமிழ்’ என்பதுபோல இதனையுங் கொள்க.

ஈயா டுவதோ கருடற் கெதிரே யிரவிக் கெதிர்மின் மினியா டுவதோ
நாயா டுவதோ வுறுமிப் புலிமுன் நரிகே சரிமுன் னடையா டுவதோ
பேயா டுவதோ வெழிலூர் வசிமுன் பெருமா னடிசேர் வகுளா பரணன்
ஓரா யிரமா மறையின் றமிழின் ஒருசொற் பொருமோ வுலகிற் கவியே’
-என்பது சங்கத்தார் இவ்வரிய பாசுரத்தை வியந்து ஆழ்வார் திவ்யபிரபந்தத்தைப் புகழ்ந்துபாடிய பாட்டாகும்.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சடகோப திவ்ய சரித்திரம்-பகுதி-3-

June 4, 2026

திராவிட வேத மருளிய படலம்‌

ஐயரிமைக்‌ கண்ணுறுந்தன்‌ றேவியார் சென்‌ றாரி யன்றே வியினொடு மோரமுத கூபத்‌
தெய்தியந்நீர்‌ மொண்டிடும் போழ்‌ தவள்‌ பொன்‌ றோண்டி யிடித்தது
துய்யவனச்‌ செயலறிந்தம்‌ மனைவி நீத்துத்‌ துரிய நிலை பெற்றெதிக டோன்ற லானோன்‌
செய்ய மலர்ச்‌ சேவடி நஞ்‌ சென்னி சேர்த்துத்‌ திரவிட வேதப் பட லஞ்‌ செப்புவாமே –1-

இன்ன வாறு நூற்‌ றெண் பதி மாயனு மன்னி யேபுளி நீழலில்‌ வைகுற
வன்னவர்க ளடி பணிந்‌ தாய் மலர்க்‌ கன்னி யந்தொடைக்‌ காரி குலப் பிரான்‌ –2-

வார ணம் முனம்‌ வாவியின்‌ கண் பரனார ணனென்‌ றதை வெளி நல்கல்போ
லாரணத்தி னரும்‌ பொரு ளாய்ந்துல கோர ணத் தமி ழோதலுற்‌ றானரோ–3-

முற்றிலுந் துறத்‌ தற்குள முன்னினோர்‌ சுற்ற மற்றுந்‌ துறப்பதை மானவே
வெற்றி மாலருள்‌ மேவ விரோதியாம்‌ பற்ற றற்குளம்‌ பற்றின னாகியே–4-

அருத்தி மீக்கொண்‌ டடி முடி யொன்றிலா விருக்கு வேதத்‌ தியைந்த பொருளெலாஞ்‌
சுருக்கி யின்றமிட்‌ டூக்கிலன்‌ பாய்த்திரு விருத்த நூறு விளம்பினன்‌ மாதரோ–5-

மாசில்‌ சோதி மணி வண்ண னென்பவ நாச னாதன்‌ குணாநு பவந் தருஞ்‌
தேசு லாமெசு சைத்தமிழேழ்‌ திருவாசி ரீஇயத்‌ தறைந்தன னன்புற–6-

இக்‌கி னின்புற்‌ றினிக்கக் கொண்‌ டாடிய வக் குணாநு பவத்தெழு மார்வமே
மிக்க தர்வண வேத மந்தாதியாத்‌ தொக்கி யெண்பத்தி னேழ் தொடை சொற்றனன்‌–7-

அந்த வார்வத்‌ தழுந்தி யணி நலமந்த மற்ற வளம்பதிக்‌ கேகுவான்‌
சிந்தை யுட்கொடு சிர்கொள்‌ சரம ப்ரபந்த மொன்று பகர்ந்திட வுன்னியே–8-

மாயி ருங்கடன்‌ மானிலத்‌ தோங்கிய தூய சாமப்‌ பொருளைச்‌ சுருக்கியோ
ராயி ரத்தொரு நாற்றிரண்‌ டாய பா வேய தாந் திரு வாய்மொழி யென்றரோ–9-

பேரு றும்பிர பந்த மதிற் பிரான்‌ நார ணனென்ற தும்முயிர்‌ நாடிடுஞ்‌
சீரு மன்னவன்‌ செய்கு முபாயமுமேர் கொணாடினை யீதலு மோதினான்‌–10-

இத்தகுந்‌ திரு வாய்மொழி யீரைந்து பத்தி லொன்றிரண்‌ டும் பரன்‌ பாரினின்‌
மத்த ளைக் குறி வாய் வைத்த மாயனீர்‌ நத்தி சையுமென்‌றே நிலை நாட்டினன்‌–11-

விரிக்கு மூன்றுடன்‌ மேவிய நான்கினின்‌ முருக்க விழன மொய்ம்பனைப்‌ பாருளீர்‌
பெருக்கு நும்முளப்‌ பேதைமை நீக்கியின்‌ றருத்‌தி செய்யுமென்‌றே யறி வித்தனன்‌–12-

மற்று மைந்துட னாறிலம்‌ மாயனாங்‌ கற்றை வார் குழற்‌ கன்னி கொண்‌ மார்பனை
வுற்றி டற்குள்‌ ளுபாய முரைத்தனன்‌ சிற்றிலைப் புளி வாழ் தரு செம்மலே—13–

கேடி லேழுட னெட்டிற்‌ கிளர் தரு வீடு சேர விரோதிக ளாமவை
நாடி வென்று நசைவில்‌ லவனடி கூட வேணுமென்‌றே தமிழ்க்‌ கூறினான்‌–14-

ஒன்பதோடு முயரொரு பத்தின லன்பர்‌ சேரவ்‌ வணிந கருய்த்திடு
நன்பி னோடு பலனையு நானிலக்‌ தின்ப மாக விசைத்தன னன்றரோ-15–

அத்த குந் திரு வாய்மொழி யை யிரு பத்து ளொவ்வொரு பத்தின்‌ ப்ரபாவம
குத்து வந்தனைக்‌ கூறுவங் கேட்டவை பித்த ரேஞ் சொற்‌ பெரியோர்‌ பொறுப்பரே –16–

பண்ண மைந்தவப்‌ பா முதற்‌ பத்தினிற்‌ கண்ணனே பர னென்று கழறி மற்‌ றெண்ணு மோரிரண்‌ டெவ்வுயிர்‌ கட்கு மவ்‌ வண்ணலே யினி யானென்‌ றறைந்தனன்‌—17-

பின்னு மூன்றினிற்‌ பேரரு ளான் குணந்‌ தன்னையே யுயிர்‌ சாற்றிடு மென்றதும்‌
உன்னு நான்கு ளுயிரவன்‌ றன்னையே மன்னு மென்றும்‌ வாய்ப்ப விளம்பினான்‌-18-

ஏயு மைந்தினி லெம் பெரு மானே யுபாய மாமுயிர்க்‌ கென்று பகர்ந்த பின்‌
னாயு மாறினி லாருயி ருய்குவான்‌ மாய வன் செய்‌ யுபாயம்‌ வழங்கினான்‌-19-

மற்று மேழினில்‌ மாயனைச்‌ சேருதற்‌ குற்றிடும் பல்‌ விரோத முரைத்து நற்‌
சொற்றி கழ்ந்தடெட்‌ டிற் சொல்‌ விரோதிக ளற்றிடும் மென்‌ றறைந்தன னன்றரோ–20-

பாகு நேரொன்‌ பதிற் றிரு வாளனா லாகு லாப மறைந்தொரு பத்திறான்‌
சோக மோகந்‌ தொலைத்தவர்‌ வாழ் திரு மாக மானிலம்‌ வைகிய தோதினான்‌ –21–

புத்தமுதின்‌ சுவை மறையின்‌ பொருள் கொள் சர ம ப்ரபந்தம்‌ பொலியு மொவ்வோர்‌
பத்துறு மொவ் வொரு திருவாய்மொழி யெனும்பேர்‌ கொளு மினிய
வத்தமதெம்‌ மறிவளவில்‌ வினவியமாத் திரந் தொகுத்திங் கறிவித்‌தோமால்‌
முத்தர்களுக்‌ கிடக்கை வலக்‌ கை தெரியா மூடனெறி மொழியுமாறே–32-

உயர்வறவென்‌ தெடுத்த திலச்‌ சாமமுத லக்கர முனொளிரக்‌ காட்டி
யயர்வறுமால்‌ கல்யாண குணமனைத்தும்‌ பாகதர்க ளறியச் செய்து
மயர்வறுமா னில வுயிர் நா யகமிதுவோ வதுவோ வென மயங்கு நெஞ்சத்‌
துயரற மா மருதிடை போங்‌ கண்ணனையே பரத்வமெனத்‌ துலக்கி னானால்‌–33-

வீடுமின்முற் றமென வெடுத்‌ கருடிருவாய்‌ மொழியிலரும்‌ விமலனாமக்
கேடில்பர மன் றனை மா னில வுயிர்காள்‌ ப்ரபத்தி பண்ணிக்‌ கிட்டி மேலை
நாடடைமி னென்றுடன் பத்‌ துடை யடியென்‌ றெடுத் தினிய நயநக்‌ கஞ்சக்‌
காடுடைய னளை திருடிப்‌ பிணிப் புணலெத்‌ திறமெனமோ கத் தாழ்ந்‌ தானால்‌–34–

மாதமிரு மூன்‌றவன் செள லப்ய குண வாரிதியின்‌ மடிந்து பின்னச்‌
சீதரனுள்‌ ளுகந்தருளத்‌ தெளித்து முளத்‌ தாராது செப்பி யம் பொற்‌
போது றுமின்‌ னவள் கொழுநன்‌ றன்னடியா ரெவை செயினும்‌
கோதறு செள லப்ய குண னெனவு மச் சேடக் கவியிற்‌ கூறினானால்‌–35-

அஞ்சிறையென்‌ றருடிருவாய்‌ மொழியதனில்‌ பிராட்டியின தவத்தை பூண்டாங்‌
கெஞ்சலில் விண்‌ ணாடுடைய னபராத சகத்துவமே யேதுவாக
நெஞ்சுறக் கொண்‌ டவனடியிற்‌ றனாதுறு கண்‌ முழுமை யும் போய்‌ நிகழ்த்தமின்‌று குஞ்சினுக் கென்றுழ விறலைக் கடை யொதுக்குங் குருகினங்காள்‌ கூறீ ரென்றான்‌ –36-

வளவேளென்‌ ஐருடிருவாய்‌ மொழி யதனின்‌ மாறனை முன்‌ மருவி நீக்குந் தளவாயொன்‌ றமையா துண்‌ மம்மர் கொளச்‌ குருகினஞ்சந் தனுப்ப மாயோன் இளவேய்மென்‌ றோளிணையா ளூடலறச் சூடுவமென்‌ றிசைந்‌தீண்‌டேகிக் களப நறுங்‌ குய மருவும்‌ மவனருளே யுலகறியக்‌ கழறினானால்‌ —37-

பரிவதிலீ சனையெனுமோர்‌ பதிகமதி லார் கலி சூழ் பாரிலுள்ளீ
ரரிகுணமீ தென்றறியா துள மயங்‌கிக்‌ கொடிய பவத்‌ தழ றாழ்கின்றீர்‌
சரியலவப்‌ பரமனுந்து ராராத்திய னன்‌ றவனைச்‌ சார்ந்து வாழ்த்தி
யிரு விசும்பிற்‌ பிறப்பிலரா யுச்‌சீவியுங்களென விசைத்தா னன்றே–38-

பிறவியெனும்‌ பதிகமதி லெம்பெருமான்‌ ஸ்வாராத்யனாம்‌ பேணித் தூய
நறவுகுபன்‌ மலர்கொடு பூசியுமவனா ராதனையு நனிசுகந்தகந்
தற நெறியே வுருவமதா யொளிருமெனப்‌ பாரறிய வறிவித்‌ தானால்‌
மறலியை வென்‌ றடுவெளிக ளுடைய நங்கை திரு வயிறு வாய்த்தோ னம்மா–39-

ஓடும்புள்‌ ளேறி யெனும்‌ பதிகமதி லக் குணங்க ளுந்தி பூத்த
மோடம் பொன்‌ வரை நகலத்‌ திரு மணவாளன் கரண மூன்‌றுமொன்‌றாய்க்‌ கோடின்றிப்‌ பரிசுத்த மா மடியார்‌ தமை யுகந்து கூடு மென்றாங்‌
காடும்புற்‌ கொடி பரித்த வழுதி குலத்‌ தரசுசுத னறிவித்‌ தானால்‌–40-

இவையு மவையு மென வருளுந்‌ திருவாய்‌ மொழியி னிசைத்த வண்ண
நவையறுமெய்ய டியனெனத்தம்‌ மிடத்‌ தெம்பெருமா னனியுகந் தாங்‌
கவையவங் கண் முழுமை யினாற்‌ சாத்மிக்க சாத்மிக்க வணைத்த தான சுவையினை முந்‌ நில மறியச்‌ சொற்றனனிக்‌ கலி கெட வந்துதித்தானன்றே–41-

பொருமானீள்‌ படை யெனும பதிகமதி லெம்‌ பெ ருமான் நற்‌ புலவி நீங்கி நிருகேதுக கடாட்சமருள்‌ வைபவ மிம்‌ மானிலத்தி னிகழ்த்தினானா
லொரு கோடி கயல் புரளுந்‌ திரை கொள் பொரு நற்றுறைவோ னொளிரு மாடக்‌
குருகூரன்‌ சட வாயு வணுகாது நிரசித்த குழகன்‌ றானே–32-

இரண்டாம்பத்து

மன்னுமவ்‌ விரண்டாம்‌ பத்தில்‌ வரு முதற்‌ பதிகத்‌ தெம்மான்‌
பின்னு மூடியதிலார்த்தி பெருகி நாயகியாய்‌ நின்று
தன்னை நேர்‌ சேதந அசேதனங்களை நினைத்து நீவி
ரென்னின் மாறனை வேட்டீர் கொலென்ன வருந்தி யதுரைத்தான்–33-

திண்ணெனும்‌ பதிகத்‌ தார்த்தி தீர் தரக்‌ கூட்டலாலப்‌
பண்ணவன்‌ குண சமர்த்திக்‌ கேதுவாம்‌ பரத்வ முன்னீர்‌
மண்ணிடை யவதாரத்தில்‌ மலர் தரு நலங்க ளெல்லாம்‌
நண்ணுமென்‌ றவன் பரோப தேசமு நவின்றான்‌ மாதோ–34–

ஊனில் வாழ்‌ பதிகத்தந்த வுரகமெல்‌ லணையான்‌ றன் கு
ணானுபவ விரோதஞ் செய்‌ நவை கொள்‌ சம்சார நீத்‌து
வானுளோர்‌ பரவு நித்ய சூரிக ளோடு வாழ்வன்‌
யானெனும்‌ குறிப்பை வையத்‌ தியாவரு மறியச்‌ சொன்னான்‌–35-

ஆடி ஆடி யெனுந் தூய பதிகத்தக்‌ குறிப்பண்‌ ணாது
ணாடி நெஞ்‌ சுழன்று மாற னாயகி யவத்தைக் கொண்டு
வாடி மோகித்திருக்கும்‌ வண்ணம தறிந்து தாய் பார்‌
தோடவிழ்‌ துளவினான் முன்‌ சொல்ல ரங் கருளினாரால்‌–36-

அந் தாமத்‌ தன்பெனுஞ் சொற்‌ பதிகத்த வவத்தை போக
வந்துடன்‌ சம்சிலேடித்த மாயவன்‌ ஸெளந்தர்யத்து
நந்தலி னித்யமுத்தர்‌ நல்கிய சேவை யுள்ளுஞ்‌
சிந்தை சென்‌றனுபவித்த செவ்வியை விளம்பினானால்‌–37-

வைகுந்தா வென நின்‌ றோதும்‌ பதிகமான்‌ மாறனீங்கல்‌
செய்குமோ நமை விட்‌ டென்று திகைத்ததின்‌ சங்கை பண்ணப்‌
பெய்குமா முகிலே யென்றும்‌ பிரிகலே னுனையா னென்றும்‌
மொய் குழல்‌ நங்கை பாலன்‌ மொழியமான்‌ மழ்ச்சி சொன்னான்‌ –38-

மேதகு கேசவன் றன்‌ பதிகமவ்‌ விபுத னாந் துவாதச நாம னான மாதவ னருளி னானம்
தீதில் சம்‌ பந்தா சம்பந்திகளு முச்‌சீ வித்தாரென்‌ றோதினான்‌ கலிகெடற்கிவ்‌ வுலகிடை யுதித்த நம்பி -39-

அணைவெனும்‌ பதிகத்‌ தெம்மா னருளிய செவ்வி யோர்ந்து
தணிவில் பற்‌ பலசம்சாரி தயங்கு முன்‌ மருள்கெடத் தன்‌
ணிணையில்சம்‌ பந்தியாக விசைய மோக்கப் பரத்தைப்‌
பணித்தனன்‌ றிருந்த வின் சொற்‌ பாவலர்க்‌ கரசரேறே -40-

பண்ணமைந் திலகுமெம்மா வீடெனும்‌ பதிகந் தன்னி
லண்ணறன்‌ சம்பந்திக்கு மழிவில் விண்‌ ணடளிப்பா
னெண்ண நின்‌ ப்ரீதிக்கன்றி யென் பொருட்‌ டளிக்க வேண்டாம்‌
கண்ணநீ யெனக் கைங்கர்ய நிச்சயம்‌ கழறினானால் –41–

கிளெரொளி யிளமை யென்று கிளத்திய பதிகத்‌ திம்மெய்‌
தளர்முன முயிர்களன்று சாற்‌ று கைங்‌ கர்ய சித்திக்‌
கிளமதி தவழும்‌ பொன் கோட்‌ டெழில் கொள் மா லிரும் பூஞ்‌ சோலை
வளர் திரு மலையைச்‌ சென்று மருவுமென்‌ றருளிச்‌ செய்தான்‌–42-

மூன்றாம் பத்து-

முத்தமிழின்‌ சுவைக் கடலைக்‌ கடைந்து கொள்ள முதவினிய தாந் திரு வாய்‌ மொழியின்‌ மூன்றாம்‌
பத்தின் முடிச்‌ சோதி யெனும்‌ பதிகந் தன்னிற்‌ பனி மலர்க்கார்‌ மரு விடபப்‌ பருப் பதத்தார்‌
மைத்தகரு மாமுகினேர்‌ வண்ண னெம்மான்‌ மாலழகன்‌ செளந்தர்ய வலையுட்‌ பட்டுச்‌
சித்தமிவண்‌ டிரும் பாதங்‌ கீடுபட்ட செய்தி யுல கோரறியத்‌ தெரிவித்தானால்‌–43-

முன்னீரென்‌ றருடிவாய்‌ மொழியின்‌ மாறன்‌ முனமழக ரெழிற்‌ கடலின்‌ மூழ்கிக்‌ கங்கு
றன்னை யறி யாதுழன்ற னுபவித்தற்‌ கசக்தி வருவது காண்‌ சங்கோ சம்மென்‌
றுன்னியதில்‌ வ்யாமோகித்‌ திருக்க மாயோ னுற்றி தற்கென்‌ னீயழுங்‌க லுலக மேத்‌தும்‌
பொன்னி வரும் வடமலை சென்றணை யடைந்து புல்லுவா யெனுமருளைச்‌ சொல்லினானால்‌–44-

ஒழிவில் காலமென வருள் பதிகந் தன்னில் உலா மகிழ்ந்து ஆதரத்துடன் நம் உயிர்காள் இன்றே
யழிவிறிரு வேங்கடவெற்‌ புடையான்‌ றன்பா லடைந்தவன் காற் றுணை யினை வாக் கக மெய்ம்‌ முன்றாற்‌
றழுவியிடம்‌ பொருளே வல்‌ கொண்டு யாமுஞ்‌ சகல வித கைங்கர்யஞ்‌ சமர்த்தியாக
வழுவறு மெய்த்‌ தொழும்பு புரிந்திடுவா மென்ன வழுதியர் கோன்‌ காரி சுதன்‌ வழங்கினானால்‌–45-

புகழநல்லொ ருவனென்னும்‌ பதிகந் தன்னில்‌ பூமகள் கோன்‌ சர்வமு மாய்ப்‌ பொலியும்‌ தன்மை
யகமகிழ்ந்தின்‌ புற வளிக்கு மணங்கி யானவ்‌ வண்ணறனை யெக்‌ குணங் கொண்‌ டழைப்பே னென்ன
மிக மலைந்து தேர்ந்தவன் சேவடியிற்றாழ்ந்து விருப்பொடு வாசிக வடிமை வியப்பதாக
விகல் கெட முப்‌ பொழுது மடைந்தியற்றி வாழு மிறுமாப்பை, யுல கறிய விசைத்தானன்றே –46-

மொய்ம்மாம்பூம்‌ பொழிலெனுஞ் சொற் பதிகத்‌ தாழ்ந்த முன்னீரிற்‌ றிருவணை செய்‌ முகுந்தன்‌ வெய்ய
கைம்மாவுக்‌ கருள் புரி நங்‌ கண்ணற்‌ கன்பாய்க்‌ கைங்கர்யம்‌ புரியுமவர்‌களைக் கொண்‌ டாடி
யெம்மானைப்‌ பரவாது பணியுஞ்‌ செய்யா திருக்குமவர்‌ தமை யிகழ்ந்‌ தங்‌ கியம்பினானால்‌
அம்மானைக்‌ காளையரை யளித்த பெம்மான்‌ ௮பராவதாரமிவ ணடைந்‌ தகோவே–47-

செய்ய தா மரைக் கண்ணெனும்‌ பதிகந்‌ தன்னிற்‌ றேசுறுமானில வுயிர் செய்‌ திருப்பணிக்கு
மெய்ய பர வ்யூகமொடு விபவாந்தர்யாமிய துகளையஅபவிக்கன்மிகவும்‌
துய்ய பரா தீனமுறு மர்ச்சை யென்னிற்‌ சுலபமதா மென வுலகிற்‌ றுலக்கினானான்‌ மைய வரி வண்டு பொடி யாடு நிம்ப மாலை யுறுங் காரி சுத மாறன் றானே–48-

பயிலுஞ்‌ சுடரொளியெனும்‌ பதிகம் தன்னிற்‌ பல கோடி யண்ட ரண்டப்‌ பரப்பை யீன்ற
வெயிலந்‌ திகிரிகொடிர வாக்குமெந்தை மெய்யடியிற்‌ கைங்கர்யம்‌ விரும்பி நாளுஞ்‌
செயுமன்பர்‌ தன்னடியார்க்‌ கடிய ரெற்கா சிரியரேனப்‌ பாகவத சேடத்வத்தை
யுய வென்றார்‌ கலிப்புவியு ளறிவித்தானா லுயர் புளிக்கா வணத்துறை யு மொருவன்றானோ-49-

முடியானென்‌ நினிதருளும்‌ பதிகந்‌ தன்னின்‌ முன்னுரைத்த சேடத்வ முறைமை யாலோர்‌
பிடியின்றிப்‌ போதமுறா தவன் குணத்தின்‌ பீடுடைய ஸ்மாரகமாய்ப் பேர்ந் தாட்‌ செய்ய
வடிவுறுமோ ரிந்த்ரியம் பஞ்‌ சேந்த்ரியத்தின்‌ மருவுதலை வேட்ட தென வழங்கினானால்‌
குடிகுடியாட்‌ செயுமடி யார்க்‌ கழிவினாடு கொடுத்தருளும்‌ வரையாது கொடுக்கும்‌ கொண்டல்–50-

சொன்னால்வி ரோதமெனும்‌ பதிகன் தன்னிற்‌ சொற்றெரி நாவலிற்‌ பிறரைத்‌ துதித்துப்பாடி
லென்னாகு மப்பொருள்வந்‌துமதுகால மெதுவரைப்போமது வெழிலி யெழுமின்னென்று
தன்னோடு மிணைந்‌து பிறப்‌ பிலியாய்‌ நிற்குஞ்‌ சார்ங்கனிருந்‌ தாளிணையிற்‌ சாற்றுவீரேற்‌
றென்னா வென்‌ றளி முரலுந்‌ துளவத் தண்ணல்‌ சேணுலுகி னித்தியராய்த்‌ திரிவீரென்றான்‌–51-

சன்மம்‌ பலபலவெனும்‌ பதிகத்தின் முன்‌ சாற்றிய லெளகீகவி தங்களுள்ளம்‌
வன்மீனுக்‌ கிடருறுத்தி யானை காத்த மாயவன் பால்‌ மருவுதலின்‌ மாறக்‌ கண்டாற்‌
கன்போடப்‌ பரமனடித்‌ துணையிற்‌ செய்யு ளாக்கெதிற்‌ ருமடையு மபீட்ட முற்று
மென்போடுள்‌ ளுருகியவ ரறிவான்‌ வேண்டி யிசைத்தனன்றென்‌ குருகூர் வந்திருந்த கோவே–52-

நாலாம்‌ பத்து
ஒருநான்கு பத்திலுறு மினிய தீஞ்சொல்‌ லுகளொரு நாயகப்பதிகத்‌ துலகு ளோர்கா
ளிருமாநி லம் பரவு நிதி படைத்திவ்‌ வெறி கடற்பா ரொரு குடைக்‌கீ
மருவாரைந்‌ தரு நிழலிந்த்‌ ராணி கூடும்‌ வாழ்வுறினும்‌ நச்வரமா மறையும்‌ காணாத்‌
திருமாது கேள்வனது பவமே நித்யஞ்‌ சேருவீ ரவனடியிற்‌ றிருகாதென்றான்‌.–53-

பாலனா யெனுந்திருவாய்‌ மொழியின்‌ முன்னம்‌ பகருபதே சம்பலி யாப்‌ பரமன்‌ றன்பாநற்
சாலபினி வேசமடைந் துள மயங்‌கித்‌ தண்ணளியாய்‌ முனஞ்செயவ தாரத்‌துள்ள
சீல முழுவது முகந்தெற்‌ கருள வேண்டுந் தென்னிலங்கை யீடழித்த திறத்தோ யென்றான்‌
காலனகர்‌ பாழ்பட வண்‌ புளிக்குட்‌ டென்பாற்‌ கருணை முகம்‌ வைத்‌தமர்ந்த கழகனம்மா–54-

கோவைவா யாளெனுஞ்சொற்‌ பதிகந் தன்னிற்‌ கொன்றை முடி.யோனிரப்பைத்‌ தொலைத்தாங்‌ கின்னும்‌
மேவாது குருதியருள்‌ பரமன்‌ முன்னம்‌ மேவு திரு வவதார விதங்கள் காட்ட
நாவாய் கொண்‌ டவன் குணம் பற்‌ பலவுஞ்‌ சொல்லி நாடுமதி ப்ரீதியினை நவின்றா னெங்குந்
தேவாகு மவனே யிவ்‌ வுலகு முய்யச்‌ சென்று மகிழ்‌ மாறனெனச்‌ செனித்தோ னன்றே–55-

மண்ணையிருந் தென்றருளும்‌ பதிகத்‌ தந்த மால வதாரங்களெலாம்‌ வழங்கி யேகத்‌
துண்ணென மா றனுமணங்கி னவத்தை கொண்டுட்‌ சோகித்தங்‌கெவை யவன்‌ றன்‌ சோதி யுள்ள
கண்ணுறுமோ வவை திருமாற்‌குரிய வென்‌று கதறி யுளம்‌ புலர்ந்து மிகக்‌ காதல்‌ கொள்ளும்‌
வண்ணமறிந் தீன்றவளுஞ்‌ சேடிமார் முன்‌ வழங்கலென வுரைத்தனனுண்‌ மயர்வற்றோனே –56-

வீற்றிருந்தே ழுலகமெனும்‌ பதிகத்‌ தந்த வெய்யமய றீர் தரவே விமலன்‌ முன்னா
ணூற்றுவர்பாற்‌ சந்துபட நடந்தோன்‌ மாதர்‌ நுண்டுகிலைக்‌ கவர்ந்து தரு நுதியில்‌ வைத்தோன்‌
மாற்றறு மெய்த்‌ தவ வாய்மை நித்யமுத்தர்‌ மாடடரத்‌ திருவினோடு மருங்கி லீண்டப்‌
போற்றியுள மதிழுமதி ப்ரீதி தன்னைப்‌ புங்கவ னானில மறியப்‌ புகன்றான்‌ மாதோ–57-

தீ ர்ப்பாரென்‌ றினிதருளும்‌ பதிகத்‌ தெந்தை சேவை யளித்‌ துடன்‌ மறையத்‌ தீரா மையல்‌
போர்ப்பாளாய்ச்‌ சோகமுறத்‌ தாயரீது புன் சமயத்‌ தேவர் செயல்‌ போக்க வென்று
பார்ப்பாரா கிற பொழுதத்‌ தலைவி தோழி பாகவத கீர்த்தனையும்‌ பாதத்‌ தூளுஞ்
சேர்ப்பீரே லிவள்பிணிக்கு மருந்தா மென்னச்‌ சேர்க்கவது தீர்ந்த தெனத்‌ தெரிவித்‌தானால்‌ –58-

சீல மிலா வெனுந் திருவாய்‌ மொழியிற்‌ சோகந் தீர்ந்துடனெம்‌ பெரு மானுந் திவ்யரூபஞ்‌
சாலவெனக்‌ களித்தருளுள்‌ ளிரங்கி யார்க்குந் நாயகனெ பகற்‌ றடங் கண்‌டுஞ்சா
தோல மோடங்‌ கவன் குணம் பற்‌ பலவுஞ்‌ சொல்லி யுலை மெழுதிற்‌ கரைந்தழைத்த துறழச்‌ சொற்றா
னீலமணித்‌ திரளனைய கூந்தற்‌ செவ்வாய்‌ நேரிழை கொ ணங்கைசுதனிமலன்‌ றானே –59-

ஏறாள மிறையெனுஞ்சொற்‌ பதிகத்‌ தெந்தை யிரவு பகல்‌ விழி பொருந்தா திரங்‌கக் கூவ
மாறாதங்‌ கொளித்தமையா லவலுகந்‌து மருவ வுரித்‌ தாதிய வாத்‌ மாத்மியங்க
டேறாதெற்‌ குலகவர் போல்‌ வேண்டாமென்று திரஸ்கரித்த மாற் மிவண்‌ டெரிவித்‌ தானால்‌
வீறாரு மதகரிவாண்‌ மருப்பொசித்த வேந்தனடி யே பரவும்‌ விமலன்‌ றானே–60–

நண்ணாதா ரென்றருளும்‌ பதிகத்‌ துன்க ணண்ணியவெவ்‌ வூடலையு நனிபொறுப்பேன்‌
கண்ணானின்‌ னிடத்திலதி விமுகரான காமர் கொள்‌ சீவரைப்பார்க்‌க க்‌ கருத்திற்‌ சற்று
மெண்ணேனிவ்‌ வுடற்பொறைவிட்‌ டகலச்‌ செய்வா யேழுலகுங்‌ கண்டிடவா யிடைநின்‌ றாம் பற்‌
பண்ணாளா வென்றவன் சே வடியை வாழ்த்திப்‌ பற்றியவா றினிய சமிழ்ப்‌ பகர்ந்தான்‌ மாதோ–61-

ஒன்றுந்தே வென்றருளும்‌ பதிகத்‌ இந்த வுலகிலுள சேகனர்பா லுகந்து பின்னு
நன்றல நீர்‌ பிறதெய்வ நயக்கும்‌ வாய்மை காரணனே பரமனென நால் வேதங்க
ணின்றுமுறை யிடலறியா துழன்று கெட்டீர்‌ நீக்யெதை யினி யேனு நிமலன்‌ செம்பொன்‌
குன்றநிகர்‌ மணிகொணெடு மாட மோங்குங்‌ குருகையர்க்காட்‌ செய்யுமெனக்‌ கூறினானால்‌-62-

இத் திருவாய்‌ மொழியினை மாறனு முகந்தங்‌ கியம்பலுமச்‌ சுவை செவியா லினிது மாந்தி
வித்தகன் நம்‌ பொலிந்து நின்ற பரமனெஞ்சம்‌ வியந்ததற்கோர்‌ கைமாறு விருதீவான்றன்‌
சித்தமதி லுன்னியனத் துவசம்‌ வண்டார்‌ செய்ய மடழ்த்‌ தொடையலுமச்‌ செவ்வி யோன்பான்‌
மத்தகசத்‌ துறுகணறச்‌ செய்தோ னீந்து வகுள பூடணனெனப்‌ பேர்‌ வழங்கப்‌ பெற்றான்‌–63-

ஜந்தாம்‌ பத்து

கையார் சக்‌ கரத்தனெனும்‌ பதிகத்‌தி யானுட்‌ கருத்துறு மெய்ப்‌ பத்தியிலாக்‌ கபட னாக
மெய்யாய தொழும்பரினு மவன்‌ றன்‌ னாமம்‌ விளம்பியொரைம்‌ பொறிப்பாக்ய விடய மாக்கும்‌
பொய்யேனுக்‌ குகந்தவன்‌ ஸ்வா பவந் தன்னைப்‌ போரவளித்‌ தனனென்‌ று புகழ்ந்து தன்பாற்‌
செய்யாளுக்‌ குகந்தவரை மார்ப னெங்கோன்‌ செய்யுபகார ச்ம்ருதி யைச்‌ செப்பினானால்‌–64-

பொலிக பொலிகவென வருள் பதிகத்‌ திற்றாம்‌ போர வுகந்‌ தருளிய மெய்ப்‌ போதத்தாலே
பலவிதங்கொ ளுளமொருக்கிற்‌ றிருந்தி வாழும்‌ பாகவத ரோடு தம்‌ ப்ரபாவ நோக்க
மலிவுடனிங்‌ கெழு நித்ய முக்தர்‌ தம்மை மங்களா சாசனம்‌ புரிந்த வகையுஞ்‌ சொல்லிக்‌
கலிகெடுமென்‌ றுரைத்துடன்‌ காடாய முக்கோல்‌ கைக் கொளெதிபதி வடிவுங்‌ காட்டினானால்‌–65–

மாச றுசோ தியென வருள்‌ பதிகத்‌ தெந்தை மாதவன் விச்‌ லேடமதை மனத்துட்‌ கொண்டு
பாசிழை கொ ணாயகி தன்‌ மைத்தாயீண்டிப்‌ பாரிலலர்‌ தூற்றிய வெம்‌ பழிக்கென்‌ செய்வேன்‌
பேசவரி தாய கொடுந் தொழில தான பெண்ணை மட லூர்வனெனப்‌ பிதற்றினனா
லாசறு பெண்‌ பேதை முத லன்பரியாரு மறிதர லாம்படி புளிக் கீழமரும்‌ வேந்தே–66-

ஊரெல்லா மெனவருளும்‌ பதிகத்‌ தன்முன்‌ னுன்னு மட லூர்வதற்கு மொண்ணா தாகி) காரெல்லா மொருபடிகொண் டிருந்த தென்னக்‌ கங்குலிடை தனித்‌ திரவு யங்‌ கழியா தின்று
பாரெல்லா முண்டுமிழ் நங்‌ கண்ண னான பண்ணவன் வா ராமையிற்‌ பலுகிற்‌றென்றச்‌
சீரெல்லா முரைத்துரைத்து வருந்தா நின்ற செயலெனப் பா ரவரறியத்‌ தெரித்தான்‌ மன்னோ—67-

எங்கனேயோ வெனுந்திருவாய்‌ மொழியிலந்த விரவுகழிந் துதய னும் வந் தெழுந்த தற்பின்‌
மங்குறவழ்‌ மணி மாடக்‌ குறுங்கை நம்பி வழங்கிய சே வையிலழுங்கு
கொங்குலவோ தியை யனைமார்‌ புலம்ப லென்னீ கோற்றொடி யென்‌றே முனியக்‌ குணத்தின்‌ மிக்கா
ளங்க வன்பா லென் மனமுங்‌ கண்ணு மோடி யடைந்த முனியீரெனுமா றறிவித்தானால்‌–68-

கடன்ஞால மெனவருளும்‌ பதிகத்‌ தெம்மான்‌ காட்சி யளித்‌ துடன்‌ மறையக்‌ காதல்‌ கொண்டு
குடமனைய நகிலமரி மைக்கட்செவ்வாய்க்‌ கோபியர் கண்‌ ணனில் லீலை கொண்டா லன்ன
மடவரலா யப் பரமன்‌ லீலை முற்றும்‌ மனமகழ்ந்தங்‌ கனுகரித்த வகைய தாகப்‌ படவரவத்‌ தரசவனே யவதரித்த பனிமலர் சூழ் புளி நிழலோன்‌ பணித்தா னன்றே,–69-

நோற்றநோன்‌ பெனவருளும்‌ பதிகத்தின் முன்‌ னுவலுமநு கார மென்ற நொய்மை தீர்ந்து
மாற்றரிய திருநாடு ததி பாண்டற்கு வழங்கருளா யுனைப் பிரிந்தோர்‌ மாத்திரைப் போழ்‌
தாற்றேனுன்‌ திருவடியே யுபாய மென்‌றுள்‌ ளன்பொழுகச்‌ செஞ்‌சாலி யரியினூடு
சேற்றுறு தாமரை மலர் சீவரமங்கைக்குட்‌ சீதரன் றாள்‌ பற்றியதைச்‌ செப்பினானால்‌–70-

ஆராவ முதமெனுஞ் சொற்‌ பதிகத்தங்கு மடைந்து பல சித்தியிலா ததினானொந்து தீராத வாசையொடு செழு நீர்ப்‌ பண்ணைத்‌ திருக் குடந்தை யெம்‌ பெருமான்‌ திருப் பாதத்தி
னீராயலைந்து கரைந் துருகித்‌ தன்னுண்‌ ணின்றிடுமாக்‌ ருந்தநத்தை நிகழ்த்தி மாயன்‌
காராருந் திருமேனி யம்மான்‌ கண்ணன்‌ கழலிணை பற்‌ றிய வாய்மை கழறினானால்‌–71–

மானேய் நோக்‌ கெனுந் திருவாய்‌ மொழியிலந்த மாதவனும்‌ பல சித்தி வழங்கா துள்ளந்
தேனார் பூஞ்‌ சோலைகள்‌ சூழ்ந் தணி கொண் மாடத்‌ திருவல்ல வாழ்‌ புகப் போய்த்‌ திகைத்து வீழ்ந்தக்‌
கோனார்செம்‌ பதும மல ரடியை வாழ்த்திக்‌ கூடியது பவிப்பதென்று கொல்லோ வென்று
கானாரும்‌ பிடி நடைகொ ளீ குளைமார் முன்‌ கழறியவா றுரைத்தனன்‌ வெங் கலி வென்றோனே–72–

பிறந்தவாறு மெனவருள்‌ பதிகத் தென்‌ றும்‌ பேணியவா சையிற்‌ பலனைப்‌ பெறற்கில்லென்‌ று
சிறந்தவவ தாரங்க டோறுஞ் சென்‌று சீர் கெழு குணானுபவஞ்‌ செய்ய வுள்ளம்‌
மறந்து மலைந்‌ தலையாத பக்தி நாளும்‌ மாறாமற்‌ றருக வென மறிகடற்‌ கண்‌
ணிறந்த குரு மகனைத் தக்‌ கணைக்கன்‌ றீந்த வெம்பெருமான்‌ றனக்குரைத்த இசைத்தான்‌ மாதோ–73-

ஆறாம்‌ பத்து

வைகலெனும்‌ பதிகமவ தாரமதில்‌ இட்ட சித்தி வராமை பின்னு
முய்வர்தொழு மர்ச்சாவ தாரமதி லுளமனைத்து மூன்றி வண்டார்‌
கொய் மலர்க்கா வின மருவு திருவண்வண்‌ டூருறையும்‌ கோவலன் பாற்‌
செய் மருவு புள்ளினஞ்சந்‌ தனுப்பிபவாறு லகறியத்‌ தெரிவித்தானால்‌–74-

மின்னிடையென்‌ றருள்பதிகத்‌ தத்தூதி லெம்பெருமான்‌ மிகவொ ளித்துத்‌
தன்னுழையி லினிதுவர லறிந் துமக்குப்‌ பலவாய சலவேன்‌ மைக்‌கட்‌
கன்னியரங்‌ குளரவர்நீத்‌ திவணேக லென ப்‌ரணய கலகத்தாலே
பன்னகமீ நடித்தவனைத்‌ திரஸ்காரம்‌ பண்ணினதைப்‌ பகர்ந்தான்‌ மாதோ–75-

நல்குமவப்‌ பதிகம ப்ரணயகலக விருத்தமதா நலிவி றம்மைப்‌
பல்கதிரு மதியுமினி மினியெனவாஞ்‌ சேணுலகப்‌ பரம னண்ணார்‌
வெல்லு முயர் விருத்த விபூதிகளு மெனைக் கைக் கொள்ள மேவினானென்‌
றெல்ல வரு மறிவுறவே யுடைய நங்கை யீன்ற சுத னிசைத்தானம்மா–76-

குரவையெனும்‌ பதிகமதி லவ்வாறு கூடிய நங்‌ கொண்டல்‌ வண்ணன்‌
பரவையிற்க ணைவர் கொடி பாஞ்சாலிக்‌ களவில் கலை பல்கச் செய்தோ
னரவணையான்‌ குரவை முத லாடிய பல்‌ லீலைகளு மநு சந்தித்தாங்‌
கிரவு பக லகமகழ்ந்து ப்ரீதி யடைந்‌ததை யறிய வியம்பினானே—-77-

துவளிலெனும்‌ பதிகமதவ்‌ வதுபவத்தோர்‌ விச்லேடர்‌ தோன்றி மாதாய்ச்‌
சலிகெட மோகங் கொடு தண்‌ தொலை வில்லி மங்கல மால்‌ சரணைப்‌ பற்று
மவை யறியா தனை முனிய வதைமறுக்கப்‌ போகாதங்‌ கவளவாவை
யிவஎளவுமெண்‌ ணாது வீடு மென் றிகுளை சொல்வதென விசைத்தான்‌ மாதோ–78–

மாலுக்கென்‌ றருள்பதிகத்‌ திவ்வாறு வருந்தியுமான்‌ மருவானாகக்‌
கோலுகக்கத்‌ தரிவைவிர கார்த்தியின லுடலசந்து குறையச்‌ செம்‌பொன்‌
னீலக்கல்‌ லிழைதரள வடமொடு சங்‌ கெழில்‌ பலவு நில்லா தாகிக்‌
காலக்கண்‌ டனை வருந்திச் சொல்லுஞ்‌ சொல்லாக முனங்‌ கழறினானால்‌–79–

உண்ணுஞ்சோ நென்றருளும்‌ பதிகமதிற்‌ றாய்சோக முறவன்னா டன்‌
பெண்ணுஞ்‌ சோகந் தெளிந்து தாரக போஷக போக்யம்‌ பின்னு மெல்லாங்‌
கண்ணன் றா னென்றனக்கென்‌றே திருக்கோளூர் செலத்தாய்‌ கலக்‌கந்‌ தீர்ந்து
திண்ணங் கொண்டென் மகளவ் வூரடைந்தா ளெனுமாறு செப்பினானால்‌–80-

பொன்னுலகாளீ ரெனுஞ் சொற்‌ பதிகமதவ்‌ வணி நகர்க்குப்‌ போவே னென்று
மன்னிய காற்‌ பலகானி யாறுபோக மாளாது மலைந்தாங்‌ குற்ற
வன்னமொடங்க குருகினங்கா ளுமக்கிரு விபூதியு நானளிப்பன்‌ றுத்திப்‌
பன்னகமீத்‌ துயில் பரம பத நாதற் குரையுமெனப்‌ பகர்ந்தான் மாதோ–81–

நீராயென்‌ றிடு திருவாய்‌ மொழியினிற்‌ சந்தனுப்பியுமா னிகழானாக
வாராயென்‌ றழைத்திடு தங்‌ குரலறிவா ருள முருகு மாறு மெய்ய
பேராயிரங் கொளு மெம்‌ பெருமாற்கு முத்தருறை பெரு நாட்டிற்குந்
தாராள மாயடைய வோல மிட்டங்‌ கழைப்பதெனச்‌ சாற்‌ றினானால்‌–82–

உலகெனுஞ்சொற்‌ பதிகமதிற்‌ றாமுறுமா க்ருந்த நத்தி லுண்மை சொல்ல
நிலையொடுறும்‌ பொருட்டுயர் விண்‌ ணாடகன்றித்‌ திருமலையந் நெடு நாடாக
நலமுறநிற்‌ றனமென வின்‌ னோனு மலர்‌ மேலுறையு நங்கை தன்னை
யலைவறு மெய்க்‌ காரணமாய்க்‌ கொண்டவன்றா ளடைந்த மென வறிவித்தானால்‌-83

எழாம்‌ பத்து

உண்ணிலா விய பதிகத்‌ தோத நீர்‌ வண்ணனரு
ணண்ணிலா தார்த்தி கொடுன்‌ னளினமலர்ச்‌ சேவடியை
யண்ணிலா திந்த்ரியத் தெக்‌ காலமளவும்‌ மழுங்கப்‌
பண்ணினா யென்று மனப்‌ பாதையறி வித்தனனால்–84-

கங்குல்லெ னும்பதிகத்‌ திவ்வாறு காதல்‌ கொள
வங்கவடாய்‌ செம்பொன்‌ னரங்கன்‌ றனைக் குறித்திம்‌
மங்கை யுய்யற்‌ கெவ் வண்ணம்‌ வைத்தீர் சங் கற்பமெனப்‌
பங்கமறக்‌ கேட்டுருகும்‌ பான்மை யறிவித்தனனால்‌–85-

வெள்ளை யெனும் பதிக மெய்த்தா யிவை யுரைக்கக்‌
கள்ளவிழ் பூங்‌ கோதை கொளுங்‌ காதறெளிந் தருகாம்‌
பிள்ளைக் குழாங் கொடிருப்‌ பேரை செல்லு வேனெனத்தாய்‌
தள்ள நிராகரித்துச்‌ சாருவதாகப் பகர்ந்தான்‌–86–

ஆழிப்‌ பதிகத்‌ தவன் பிரிவிற்‌ றுன்பமுறப்‌
பாழியந்தோண் மாயன்‌ பண்டை யவதார மெல்லாம்‌
வாழியின மாறனுக்கு வந்துதவச்‌ சிந்தித்துச்‌
சூழக்‌ குணத்தியல்பு சொல்வதென வோதினனால்‌–87–

கற்பாரெனும் பதிகங்‌ காண் விஜயோபா தாநக்‌
சிப்பாலி ராம க்ருஷ்ண ரென்னு மவதார நிற்கத்‌
தப்பாக வே பிறரைத்‌ தாழ்வதிலென்‌ னென்றுடன்றான்‌
முப்போது மால் குணத்தின்‌ மூழ்கியவா றிங்குரைத்தான்‌–88-

பாமரு வென்றோதும்‌ பதிகத்‌ தவன் குணமுண்‌
ணா மருவி யும் மெதிரி னண்ணா ததினாலுன்‌
றே மலர்த்தா ளெப்போது சேர்வே னென வுருகா
ஏமுறுமாக்ருந்தன மியற்றியதையே பணித்தான்‌ –89–

ஏழையெனும்‌ பதிகத்‌ திவ் வணமாக்ருந்‌த நங்கேட்‌
பாழியான்‌ றன்ன வுரு பாக்ய சம்சிலேட மின்‌றித்‌
தாழ மனமுருகித்‌ தன்னுள்‌ வருத்த மெலாந்‌
தோழியர்க்கு மன்னையர்க்கும் சொல்லுவதாகப்‌ பணித்தான்‌ –90-

மாயா வெனும் பதிகத்‌ திவ்வாறுளம் வருந்து
நாயேனை யிவ் வுலக நண்ண வைத்த தென்னெனப்பார்‌
தாயோன் விசித்திர விபூதி தனைக் காட்டச்‌
சேயோன்‌ மகிழ் மாறன்‌ சிந்தை மகிழ்‌ வைப் பகர்ந்தான்‌ –91-

என்றை தனி லென்னை யிவ ணேன் வைத்தா யென்ன வெற்கு
மொன்றடியார்க்‌ குந் தமிழ் நீ யோத வைத்‌த தென்னலுமக்‌
கன்‌று குணிலா யெறியுங்‌ கண்ணனுரைக்‌ குப் பதிலெந்
நன்றி புரி வேனென வுண்‌ ணலியும் வகை யுரைத்தான் -92–

இன்பமென்லும் பதிகப்‌ திவ்வா றுபகரித்த
மின்பொலியு மார்பனுறை மெய்த் திருவாறன் விளைக்கு
ளன்புடன் சென்‌ நின் றமிழை யரங்கேற்ற வேணுமென
வென்புருகு மார்த்தியினை யீங்கருளிச்‌ செய்தனனே–93–

எட்டாம் பத்து-

தேவிமா ரெனும்பதிகத்‌ தப்பதிக்குச்‌ செல முடியா திடை தருகித்‌ திருமா துண்மை
மேவு புரு டாகார பூதை யாக மெய் யுறு மாச்ருத பார தந்த்ரிய முற்றும்‌
பாவுதலிற்‌ றமக்கினிய பலனில்லென்று பன்னு குண மேற் சங்கை பண்ண மாயோ
னாவலிற் றன்‌ கல்யாண குணங்கள்‌ காட்ட வதி சங்கை தீர்ந்துகந்த தருளினானே –94-

நங்களெனும்‌ பதிகத் தெம்‌ பெருமான்‌ றன்முனளின முகங்‌ காட்‌ டாது நலியச்‌ செயய
லெங்கனமற்‌ றவனறியச்‌ சஞ்சா ரத்தி னியற்கை யுள தோ வென்‌ றிரங்கி மிக்கச்‌
சங்கை கொடெற்‌ கவை மிகவும்‌ தியாச்சய மென்று தாயருயிர்த்‌ தோழி பல தாதி மார்முன்‌
னுங்களோ டெமக்கனிப் பற்‌ றில்லை யென்றாங்‌ கோதியதாய்க்‌ காரி சுதனுரை செய்‌ தானால்‌–95–

௮ங்கெனுஞ் சொற்‌ பதிகமதிற்‌ பற்றில்‌ லென்றாங்‌ கறைந்திடமா லவனுளத் துற்‌ றருளே செய்யச்‌
சுங்கையிலன்‌ னோனெழி லெவ் வநமுங் கண்டு தானழுங்குந் துயர் மறந்து தனை யல்லாதிம்‌
மங்கை மண வாளனதி ரூபத்துக்கு மங்களா சாசன பரரில்‌ லென வருந்தப்‌ புங்கவ நித்திய முத்தர்‌ முழூட்சு வுண்டுட்‌ புலரலென மகிழ்ந்த வகை புகன்றானம்மா-96-

வார்கடா வியென வருட்‌ பதிகத்‌ தெந்தை மாறனுமக்‌ இன்ன முள மலையுமென்‌று
சீர் கெழுதன்‌ வீர்ய சக்தி குணங்கள்‌ யாவுஞ்‌ சேவை பர சமர்த்தியை யுந்‌ தெளியக்‌ காட்டி
யேர் கொள் பொழிற்‌ றிருச் செங்குன்‌றூரில் வாழு மெம்பெருமான்‌ பயமறச் செய்‌ யியற்கை சொன்னான்‌
கார்கொளுமைம்‌ பாலுடைய நங்கை யீன்ற கண் மணி நாற் கவிப்‌ புலவர்‌ களிக்கும் வேந்தே–97-

மாயக் கூத்‌ தா வெனுஞ் சொற்‌ பதிகத் திந்த வாறு பயம்‌ போக்கியது மான சத்தி
னாயவநு பவமாத லாற் பாக்யத்தி னநுபவமே வேண்டு மென வதி சங்‌கித்து
தாயவனெம்‌ பெருமானை வணங்க மிக்கச்‌ சாக்ஷாத்‌ கரிக்க வெனத்‌ தாமுந் தன்பான்‌
மேயபுல னுங் கரைந்தங்‌ கழைத்த வாறிம்‌ மேதினியோ ரறிதரவே விரித்தான்‌ மன்னே–98–

எல்லியுங் கா லென வருளும்‌ பதிக மாற னிவ்வாறு கூப்பிட மாலிவ னின்‌ மிக்க வல்லல் கொளுந் திருஷ்ணையதாய்‌ வருந்தி யன்னோன்‌ ஆக்ரோசம்‌ பண்ணு முன மடைந் தோமில்லை
வல்லை யதற்‌ கிதமாகப்‌ போனான்‌ மாறன்‌ மாலுறுவ னென்று திருக்‌ கடித்தானம் போய்ச்‌
சொல்லுவமால்‌ சாத்மித்த பின்பென்றேகுஞ்‌ சூட்சி யறிந்‌தக மகிழச்‌ சொற்றான்‌ மாதோ–99-

இருந்தெனுஞ்சொற் பதிகமதி லுகந்து மாறனேர் கொடிருக்‌ கடித்‌ தானத்‌ திருடி கேசன்‌
பொருந்தியுள மகிழ்ந்‌து தம தூடனீங்கப்‌ புல்லியது சொப்பனமோ பொய் மாலோ வென்
றருந் துயருற்‌ றிவை சொப்ன மோகமன்றென்‌ றதி சங்கை தீர்ந்துடனங்‌ கதிமால் கொள்ளத்‌
திருந்தியவன்‌ றனை யடைந்த தருளிச் செய்தான்‌ றென் குருகூ ரவதரித்த செவ்வியோனே–100–

கண்கள்‌ சிவந்தெனும் பதிகத்‌ ததிமாலுற்ற கண்ணனவ யவங்களிலுங்‌ கலன்களூள்ளும்‌
வண்ணமதி லும் மனமுங்‌ கண்ணு மாழ்ந்து மாதமிரு மூன்றளவும்‌ வாரா நிற்கத்‌
தண்ணளியோ னருள்‌ கொடு பின்‌ மீண்டம்‌ மாறன்‌ சர்வ ஸ்வா மித்வமதைச்‌ சாற்றினானாற்‌
பண் கொளுமென்‌ மொழி யுடைய நங்கை யீன்ற ப்ரபந்ந ஜன கூடனருட்‌ பரமன் றானே–101–

கருமாணிக்‌ கமலை யெனும்‌ பதிகத்‌ திந்தக்‌ கண்ணனடி சேடத் வக்‌ கனிவினாலள்‌ ளூருகாநின்‌ றெப்பொழுதுந் தனை மறந்தோ ரொண்டொடி யினவத்தை கொடவ்‌ வுததி வண்ணன்‌
றிருமாலின்‌ குணங்களிலீ டுபடா நின்ற செயலை யுயிர்த்‌ தோழியர்க டெரிந்து தாய்க்குன்‌
னருமாது படு துயர மறிதி யென்றங்‌ கறைவதெனப்‌ பாரறிய வறிவித்தானால்‌–102-

நெடுமாலுக்‌ கடிமை யெனும்‌ பதிகத்‌ தெந்தை நித்திய சூரிகள் பரவு நிமல னேழ்ப
கடுமாயத்‌ தொலைத்தணங்கை மணந்த வென்றிக்‌ கண்ணனுடைக்‌ கல்யாண குணத்திலீடு
படுமாயத்‌ தடியருக்கு மடியர்‌ செய்ய பதமலரென்‌ னுயிர் நிலையாய்ப்‌ பரித்தே னென்றான்‌
சுடுமாதித்‌ தனுக்க விழா விதய கஞ்சந் தோடவிழ வுதித் தருளுஞ்‌ சுடரோனன்றே.-103-

ஒன்பதாம்‌ பத்து-

கொண்ட பெண்டிர்‌ மக்க ளென்னுங்‌ கோதறு பதிகத் திந்த
மண்டலத் துள்ளீ ருங்கண்‌ மனை யுற முறையார்‌ வாழ்வுங்‌
கண்ட மாத்‌ திர மல்‌ லாது கடிப்பதிங் கிறையு மின்னந்
தண்டயி ருலகுண்‌ டோன்ற ன்றாட்டுணை யல தென்றானே–104-

பண்டைநா ளென்னு மின்சொற்‌ பதிகமம்‌ புளிங்குடிக் கண்‌
விண்டுவைப்‌ பரமனாகுங்‌ காசினி வேந்தை மாறன்‌
கண்டு நின்‌ னுறவின்‌ மெய்ய காரிய மனைத்துந் தந்‌துன்‌
னண்டையி லிருத்தி நல்வாழ்‌ வருடி யென்‌ றறிவித்தானால்‌–105–

ஓராய பதிகத்‌ தந்த வொண் சுட ராழி மாய
னேராய் நீ வேண்டும்‌ யாவு நின்னுளப்‌ படியே செய்வம்‌
நாராயணனு நானென்று நல்லுற வதனைக்‌ காட்ட
வாராத சீலத்‌ தற்கா றாழ்ந்ததா யருளினானால்‌–106–

மையாரும்‌ பதிக மென்னும்‌ வண்டமிழ்த்‌ தொடையி லந்தக்
கையாழிள்‌ சங்கு வேந்தைக்‌ காண வென்‌ றதிமால்‌ கொண்டு
நையாநின் றினித ழைத்தந் நாரணன்‌ றனைக் காண்‌ குற்றங்‌
குய்யா நின்‌றுகந்த தாய வுண்மையை யறிவித்தானால்‌–107–

இன்னுயிர்ச் சேவல் என்று அங்கு இனிதருள் பதிகத் தெந்தை
பொன்னவள்‌ கொழுநன்‌ கூடிப்‌ போயபி னதிமாலுற்று
மன்னிய குருகீ ரென்றன்‌ மாதவன்‌ வருக வென்‌றுங்‌
கன்னியம்‌ பேடை யோடு கரைமினென்‌ தறிவித்தானால்‌-108-

உருகுமா னெஞ்சு மென்றங்‌ கோதிய பதிகத்‌ தென்னுட்
டிருகுமாய்த்‌ திடுபுள்‌ ளூருந்‌ தேவனின்‌ செயல்களெண்ணிப்‌
பெருகுமால்‌ வேட்கை கொண்டு பேசிய தழீஇய தன்மை
முருகுமா மகிழலங்கன்‌ மொய்ம் பனீண்‌ டறிவித்தானால்‌–109-

எங்கானற்‌ பதிக மாற னேந்திழை யவத்தை கொண்டெற்‌
கங்காய காதன்‌ மாற னழகென வவை பற்‌றா சாய்ச்‌
செங்கானன்‌ னாரையீர் தென்‌ றிரு மூழிக்‌ களத்துள்‌ ளோன் பா
னங்காத லுரைமி னென்று நவின்றவா றறிவித்தானால்‌–110–

அறுக்குமப்‌ பதிகத்‌ தின்முன்‌ னனுப்புந் தூதரியைத்‌ தன் முன்‌
குறுக்குமுன்‌ மிக விளைத்‌தக்‌ கோவலன்‌ நிரு நாவாய
னுறற்கு நாளுள தோமாயற்குரிய தொண்டி யற்‌றுவேனோ
மறுப்பனோ வன்னோ னென்றுண்‌ மனோ ரத மறிவித்தானால்‌–111–

மல்லிகைப்‌ பதிக மாறன்‌ மடவர லாகி யந்தி
புல்லிய வாடை தங்கள்‌ பூவணை யன்றில்‌ வேயின்‌
சொல்லியல்‌ கடல்வே டாயர்‌ தோழிசாந் தணி வெறுத்தாங்‌
கல்லிருந் தரியைக் கூவி யழுங்கலாய்ப்‌ பகர்ந்தான்‌ மாதோ–112-

மாலை நண்‌ ணி யெனுந்‌ தூய வண்ட மிழ்ப்‌ பதிக மாற
னோலையார்‌ கலிசூழங்க ணுல குளீர்‌ கண புரத்து
நீலமா மலை போ னின்ற நிமலனை வணங்கீர்‌ துஞ்சுங்‌
காலை விண்‌ ணாடளிக்குங் கருதுமென்‌ றருளினானால்‌-113–

பத்தாம்‌ பத்து–

தாள தாமரை யாம்பதி கந்தனில
வாளை பாய்தட மல்குதிரு மோகூர்க்‌
காள மேகங்‌ கழல்பணிந் தால்வழிக்‌
காளு நற்றுணை யாமென்‌ றறைந்தனன்‌–114–

கெடுமி டர்ப் பதிகங் கிளர்‌ மாட மார்ந்‌
தடர னந்த புரத்தது கூலரை
மடம றும்பன்‌ மயக்கு மறச்செயு
நடலை தீர்ந்தவ ணாடு மென்‌ றோதினன்‌–115–

வேய்மரும்பதி கத்தவன்‌ மேனகர்‌
தாமடைதற்‌ கிலாததிற்‌ றம்மையிப்‌
பூமி வைக்குமோ வென்று புலர்ந்துபின்‌
மாம ணாற்ற மகிழ்ந்ததை யோதினான்‌–116–

சார்வெ னும்பதி கத்துமுன்‌ சாற்றிய ‘
சீர்கொள்‌ பக்தி பலத்துடன்‌ சேர்ந்ததாற்‌
சோர்வி லததைத்‌ தொல்லுல கத்தினுக்‌
கார்வ மோடிங்‌ கறைந்தன னன்றரோ—117–

கண்ண னாம்பதி கந்தனிற்‌ காரினேர்‌ வண்ண மேனிகொண்‌ மாயனை வாழ்த்துறுந்‌
திண்ணமேவுநர்‌ சீர்த்தி தனைப் புவிக்‌ குண்ணெ கிழ்ந்திங்‌ குரைத்தனன்‌ மாறனே–118-

அருளெ னும்பதி கத்தவ னன்பினு
லிருள் செ றிந்த தம்‌ மென்புட றன்னொடு
மருவு பொன் மதில்‌ வாட்டா றடைவமென்‌
றுருகி நெஞ்சொ டுரைப்பன வோதினான்‌–119–

செஞ்சொ லாம்பதி கத்திறன்‌ சிர் கொண் மெய்‌ வஞ்ச மோடரி வாஞ்சை வைத்‌ தாளமால்‌ விஞ்சியே கலக்‌ தாய்ந்து பின்‌ விட்டதை யெஞ்சிலாதிங்‌ இசைத்தனன்‌ மாறனே.–120-

மன்றிருப்பேர்‌ நகருறை மாறனக்‌
கின்று மாற னிசைத்திலன்‌ பாவெனச்‌
சென்‌ று ழன்றவன்‌ சிந்தை நிறைவுற
வொன்ற வெந்தை யுகந்துபி னோதுவான்‌.–121-

திருவெனும் பதி கந்தனிற்‌ செந்திரு
மருவு மார்பன்‌ மகிழ்ந்து வியத்தல் கண்‌
டுருவி னோய் முன்‌ னொழித்தின்று சேறுத
லருமை யோ வென்‌ றழுங்கிய தோதினான்‌-122-

சூழ்ந்தெ னும்பதி கத்தரி சூரிகள்‌ வாழ்ந்தி டும்பதி யின் வழி காட்ட வாங்‌ காழ்ந்து முற்று மனுபவித்‌ தண்ணறா டாழ்ந்த வாறிவண்‌ சாற்றினன்‌ மாதரோ.–123-

முனிய தாம்பதி கத்துமுன்‌ னின்பு போய்த்‌
தனிய தாகத்‌ தளர்ந்து தெளிந்து பின்‌
னனிய தாம்பர மபக்தி யானைந்தப்‌
பனி கொண்‌ மாயனைப்‌ பற்றிய தோதினன்‌–124–

இந்த வாறெழு தா முறை யின் பொரு
டந்த போழ்து மதுர கவித்தவன்‌
சிந்தை கூர்ந்தவன்‌ சேவடி யுன்னுபு
நந்த லின்றி நனிவரைந்‌ தானர–125-

திராவிட வேத மருளிய படலம் முற்றும்‌-

திரு வர்ச்சைப்‌ படலம்‌

தீதறு மெய்ஞ்‌ ஞான நிறை யாள வந்தார்‌ திருவுளத்து முன்னியவை செய்யு முன்பே
மாதவன்றன்‌ னுலகருளச்‌ சரம பிம்ப மலர்க்‌ கையிடை விரன் மூன்று மடித்துக்‌ காட்டிப்‌
போதர மெய்ச்‌ சிச்சர் மனம்‌ வருந்த வெல்லை போந்து விர னிமிர்த் தருணம்‌ புநிதனாக
வாதவனிற்‌ றோன்று மெதி பதி தாள்‌ வாழ்த்த யர்ச்சை யெனும்‌ படலமதை யறிவிப்‌ பாமால்‌–1-

எம்மாற னைத் தடிந் தின்‌ றிணை யடிக்காட்‌ கொண்டருளு மெழில்‌ கொள்‌ சோதி
யம் மாறன்‌ றனைப்பணிவோர்க்‌ கின்னமுதச்‌ சடகோப னருள் சேர்‌ கொண்ட
றெம்மாறுஞ்‌ செந்தமிழோ ராயிரமுஞ்‌ செய்துகந்த செயற்குத் தூய
கைம்மாறு செய்தருள்வா னெனப் பரம வானாட்டிற்‌ கருணை பூத்தோன்‌–2-

தெள்ளமுதத்‌ திருமகளம்‌ புவிமாது மிருமருங்குந்‌ திகழத்‌ தூய
வள்ளயில்சே ரைம்படையு முறை முறைநின்‌ றருளி செய்ய மருவுந் தீய
பள்ளவினைச்‌ தொடரறுத்த நித்யர் குழாம்‌ புடை பரந்து பல்லாண்‌ டேத்தப்‌
புள்ளரசன்‌ மீத் தோன்றி முன்போல விண்ணகத்திற்‌ பொலிந்தான்‌ மாதோ–3–

விண்ணகத்திற்‌ றோன்றி யிவ்வா றடல் வாண னயிரந்தோள்‌ வீட்ட நாதன்‌
பண்ணமைந்த பைங்கமலத்‌ தாளேறு வரையகலப்‌ பரமன்‌ சேவை
தண்ணளியோ டீந்தருளப்‌ பாந்தண்முடி மீக்கிடந்து தயங்கு ஞாலத்‌
துண்ணயந்த வெவ்வினை தீர்த்‌ தருண் ஞான தேசிகனு முவந்து கண்டே–4–

மருவாருந் துளவமுகி லைக்கனிவாய்‌ முடியார வணங்கி வாழ்த்தி
வுருகாநின்‌ றிடவரிதன்‌ சேவை யளித்‌ தணி நகர்செல்‌ லுழியந்‌தோ நின்‌
றிருவாணை நின்னாணை கண்டாய் போ கேலுனது திருநா டெற்குத்‌
தருவாயென்‌ றாரணமுந் தேடறியா வடி பரவிச்‌ சாற்‌றுவானால்–5–

குருதிவெளென்‌ பசை நரம்பு செறி தசை சர்‌ மங்கொளுடற்‌ குரம்பை யின் கண்‌ ணரைபிணி கொண் டது குறிக்‌ காறளர்க்து கோலூன்றி நனி வருந்தி
மருள்‌ கொளுமிப்‌ பிறப்பிலினு முழன்‌ றிடிலயா னுய்வதற்கென்‌ வழி யுண்டோதாய்‌
சுருதியொடோ திமமுயர்த்தோ னரனமரர்‌ தேடறியாத்‌ தூய்மை யோனே–6-

என்ன லுமா லுமதருளிம்‌ மெய்யடியர்ம. துர கவிக்‌ இசைய வீண்டு
முன்னுளமூ வர்களுடன் மற்‌ றவருரைசெய்‌ செந்தமிழின்‌ மொழியு நீவிர்‌
சொன்ன மறை நான்னெரும்‌ பொருளுடன் பின்‌ னவருரைக்குந் தொடையு மோதி
மன்னுமிவ ணெனவுமலைந் தடியனுள மருவாதிவ்‌ வளநா டென்றான்‌–7-

இவ்வணமா லுடன்வகுள பூடணன்றன்‌ ஸனுளவிருப்‌ப மினிது கூற வவ்வியினின்‌ மதுரகவி யும் மெனைக் கைக்‌ கொண்ட கன்றாலடியே னுய்வன்‌
பவ்வ நெடு வரி விழி கொ ணங்கைகுமா ராவெனுமுன்‌ படியுளோர்க்குச்‌
செவ்வியினான்‌ மறைத் தமிழை நீயலதிங் கெவரிருந்து தெரிவிப்‌பாரால்‌–8-

என்‌ றிடவுள்‌ ளுழன்‌ று தெளிந் தடி பரவிக்‌ குடி மறவா திளமையான
கன்றை மறந்‌ தனை பிரிதலுலகியல் போ தம் மகவைக்‌ களைந்தின்‌ போகந்
துன்றிய நற்‌ கனியமுதா ரடிசிறனை யுண்கிலதிற்‌ சுவை யேதெனு
மொன்றிடுமோ தந்தையருக்‌ கவைசிவண வெனைப் பிரித லொவ்வா தென்றான்‌–9–

மத்தளைவாய்‌ வைத்த கரு முகில் புரையுந்‌ திருமேனி மாயன்‌ றுய்ய
புத்தமுதிற்‌ றெளிதமிழா யிரமருணன்‌ னாவீறு போத நும்மை
நத்திய மெய்‌ யடிம துர கவியுழுலா திவணிருநா நவின்ற வண்ண
நித்தியமா கப்பொலிந்திங் குமதுதிரு முன்னரிலே நிற்போமென்றான்‌–10-

அம்புவியிற்‌ கலிகெடுமென்‌றுரைசெய் மகி ழலங்கலுறு மஞ்ச வூர்‌தி
யெம்பெருமான்‌ றிருவுளத்தின்‌ படி திருந்தி மதுரகவி யிடையா வண்ண
மூம்பருல கோடு புவிக்‌கா முதல்வ னீயே யென்‌ றுரை த்துகந்து
தம்பது மக்‌ கட்கடையாற்‌ குளிர விழித்‌தவன் கனியச்‌ சாற்‌றினானால் –11-

தென்றிசைமார்த்‌ தாண்டனுரு வாயுதயஞ்‌ செய்ததுவுந் திருப்‌ புளிக் கீழ்
ஓன்றியொரு பதினாரூண்‌ டளவின மக்‌ கோர் மறுசொல்‌ வுரைத்த வாறும்‌
பொன்றிலரு நான்மறையின்‌ பொருளினைச் செந் தமிழ்த் தொடை யிற்‌ புகன்ற வாறு
மின்று திரு மாலினுட னேகலந்திங்‌ கவனருளுக்‌ கிசைந்த வாறும்‌–12–

எண்ணி நெடு மாலிலிவனே பரமென்று றுதகொடுள்ளி னினிய பக்தி
பண்ணியவன்‌ றாளிணையி லாரியனே தெய்வமென்றிப்‌ படியோர்‌ காணக்‌
கண்ணிநுணென்‌ றொருப திக நாவீற னம் மதுர கவியோ வென்னத்
தண்ணமுதைக்‌ கடைந்தெடு வெண்‌ சுதையிலுமின்‌ சுவை யொழுகச்‌ சாற்றினானால்–13-

இன்னணஞ்சின்‌ னாள்வரை முப்‌ போதுமவன்‌ தாளிணையை யிறைஞ்‌ ச மாற
னன்னவற்கோர்‌ நாடனிலிக்‌ கலி விபவத்‌ தியாமிருப்ப தழக தல்ல
பொன்னி வருந் தென்மலை நின்‌ றகிலுரிஞ்சிப்‌ புனல் பரக்கும்‌ பொருந லாய
நன்ன தி நீர்‌ கொடுவெனினே ரர்ச்சையியற்‌ றிடுவை யென நவின்‌ றான்‌ மாதோ –14–

அம்மொழி கேட்‌ டெவ் வகையந் நீரை யெடுத்‌ தமைத்திடுத லருடி யென்ன
மைம்முகிலூ ரும்புளிக்கா வண மகிழ் மா றனுமிவனை மகிழ்ந்து நோக்கி
யிம்மணனா றும்புனற டாவினிறைத்‌ தடிலெருவை யினிதுண்‌டாகுஞ்‌
செம்மலுளோ யதை யெடுத்தந் நீரில் விட நம்முருவிற்‌ றிகழு மென்றே –15–

ஓத வுள்லி லுவகையம்‌ பேரலை மோத மாறன்‌ மொழிந்த மொழிப்படி
வேத நாவர்‌ மிடைந்து செலத் திரைச்‌ சீத நீர்ப் பொரு நாநதி சென்றரோ–16-

பொற் கு டத்திற்‌ புனல் கொடு நான் மறை விற்ப னர்கள்‌ விளம்பிட மும்மத
வெற் பொ ருங்களி றின் பிடர்‌ வைத்துல கற்பு தங்கொள வார்த்தெழப்‌ பல்லியம்‌–17-

காவி யொண் கண்‌ கணிகைய ராட விண்‌ மேவு வோர்கள்‌ வியந்து நறு மலர்‌
தூவ மாடங்கொ டோரண வீதி வாய்‌ மாவ லங்கொடு மாறளி மேவியே–18-

சந்த கிற்றேவ தாரமெனுந்தறும்‌ மிந்த னம் மிட்‌ டெரிவளர்த்‌ தப்புனற்‌
பைந்த மனியப்‌ பாத்திரத்‌ திட்டுயர்‌ சிந்தெழுங் கதிர்ச்‌ சென்னிறச்‌ செம்புற–19-

அட்ட பின்மற்‌ றமுது கொள்‌ பொன்றடா விட்ட நீர் குளிர மேயபி னோக்கலு
மட்டு லாமரை மாமலர்க்‌ கை குவிந்‌திட்ட தோருரு வெய்திடக்‌ கண்டனன்‌–20-

காண்ட லும் முட்‌ கலங்கிப்‌ பதறியங்‌ காண்ட கை முன்‌ னடைந்தடி சென்னியிற்‌
பூண்டென்‌ குற்றம்‌ பொறுத்திடு வாயென வேண்டிப்‌ பின்னும்‌ விளம்பினன்‌ மெய்த்தவன்‌–21-

சொன்ன சொற்படி சோர்வணு வின்றியா னின்ன காலை யியற்றின னின்னுருத்‌
தன்னை யன்றிச்‌ சமைந்தது வேறுரு வென்ன காரண மென் பிழை யென்னவும்‌–22-

கார்கொள்‌ வெங்கலி யுங்கெடுங்‌ காணுமென்‌ றேர்கொள்‌ பா முன்‌னிசைத்து நான்‌ காட்டிய
பார்கொள்‌ மாக்கள்‌ பராவும்‌ பவிஷ்யதா சார்ய னாமிவ னென்றுபு சாற்றியே–23-

மண்ட லத் துண்‌ மருள் கொள்‌ பிறமத கண்ட னஞ் செய வுங் கலி காயவு
மண்டர்‌ நாத னருளில்‌ வருந்திரிதண்ட மாருந்‌ தவத்திறை யென்றனன்‌–24-

அன்ன மாறனை வாழ்த்தி யணி மகிழ்‌ மன்ன னின்னுரு வாய்ப்ப வமைத்திடற்‌
இன்னருள்புரி வாயென வேந்தலு முன்னி யன்பனை நோக்கி மொழிகுவான்‌–25-

முன்னி னப்புனன்‌ மொண்டுவந் தட்டிடிலென்னி னேருரு வெய்துமென்‌ றோதலு
மன்ன மாறனை வாழ்த்தி யணிநல மன்னு மாதவ ரோடு மகிழ்ந்தரோ–26-

கங்‌கிரும ருங்குமடர்‌ சங்கின முழன்று கக்கிய மணித்திர ளுகுத்து நில மெங்கும்‌ [ பொங்கு கதிர்‌ தங்கு முயர்‌ திங்களி னிலங்கும்‌ பொற்புறுதி ருப்‌ பொருந ந ற்புனல் கொணர்ந்தாங்‌
கிங்கிதமோ டங்கரிய மங்கள மு கூர்த்தத்‌ திப்புனலை யட்டுமுனி னப்பினில்‌ விடுக்கத்‌
துங்கவனெ ருங்குகுழ னங்கையருள்‌ பாலன்‌ சோதி வடி வாகியது மாதவ னறிந்தான்‌–27-

விண்டலநி ரைந்த பல வண்டமு முகாந்த மேவு பெரு வாரியினி னோவுமென நாடி
யுண்டுமிழ்‌ தருங் கருணை மண்டு திரு மாலே யுற்றடைய நங்கை வயி னற்ற நயனாகிக்‌
கொண்டறவழ்‌ திந்‌திரிணி யண்டி மறை யோ தெங்‌ குருவினுரு மன்னவொளி ரெருவையை யளித்த
வண்டலுறு தண் பொருநல்‌ கொண்ட புக ழாரும்‌ வளத்தினை யறிந்‌து பு கிளத்தலரி தம்மா -28-

பொன்னிமு தலாய பல தன்னதியி லாடிற்‌ புலப்படுமு டற்குறும லத்தினை யறுத்‌து மன்னுமிக நல்லறிவு மிந்நதியி லாடில்‌ வழுத்துமு னழுக்கறு மொழுக்கமுட னுள்ளம்‌
பன்னு கலை யாதுமுறு மின்னருளி னாற்புட்‌ பகத்தனெனவே பொருலி கத்தினி லடைந்தே
துன்னுமக வாழ்வுறுவர்‌ பின்னுயிர் கழன்றாற்‌ சொற்றெரி யணைக்‌ கடவுள்‌ பற்றுவ னுகந்தே -29-

உப்பய முடுத்திலகு வைப்புயி ரனைத்தும்‌ முய்ய வென வேதமுள செய்ய பொரு ளெல்லாம்‌
துப்பமை தமிழ்ப்பட வுரைப்பபென நாடிச்‌ சூழரவ தாயபுளி நீழலி லுறும் மெம்‌
மப்பனுரு விற் பொருந றுப்பெருவை தந்த வந்நிலைமை யாற்றாம் ப்ர வன்னியென நாம
மிப்பொரு விலாறுறு மெனப் பிறவி யாய வேதமறு மாதவனு மோதின னுகந்தே –30-

இப்பெய ருறும் பொருந லப்பினி தளித்த வென்று நிகர்‌ நின்றோ ளிரு மன்றன் மகிழ்‌ மாலைத்‌
துப்பனுரு வைவிழிக ளிப்ப மிக நோக்கித்‌ துய்யவடி வாயதென மெய்யனு மகிழ்ந்தவ்‌
வொப்பரி யதாய வடி வைப்பணிகொ ளும்மா லூர்சினைய டர்ந்து மலரார் புளி நிழற்‌ கீழ்ச்‌
சிற்பரம னங்கை யருள்‌ கற்பக மிணைந்த சேவடி வணங்கு பு வம்மா வடிவை வைத்தான்‌ –31-

எந்தையேநீ யுந் தருளி லந்தமோட மைந்த திக்கரண முற்றொளிரும்‌ விக்கிரக மென்று
வந்தனை புரிந்தினிதின்‌ சிந்தை யரு ணந்தா மாறவென வோதலுநா வீறனு முணர்ந்தச்‌
சுந்தரமி குந்தவடி வந்தனை யணைந்தே சுப்பிரம தென்றதில நுப்‌ பிரவேசிக்க
முந்தவிப வந்தரை படிந்த வுயர் வந்தோர்‌ மொய் தரு மலர் மழைகள்‌ பெய்தனர்க ளம்மா –32-

இன்னண நிலம் படியு முன்னை விபவத்தை யெல்லை யறு ஞான முனி வல்லை யி லடக்கிக்‌
கன்னவில் புயன் வழுதி மன்னர் மர புற்றோன் காரி மக ராசனருண்‌ மாரி சொரி கொண்டல்‌
பொன்னணி நெடும் புரிசை மின்னிய விமானம்‌ போதவு மமைத்த ருணி கேதந மதற்குண்‌
மன்னுறவ மைத்தன னெற்‌ றன்னை நிகர்‌ மாறன்‌ வண்மை யு று தானான தன்மையினை யன்றே –33

வீசுதிரை சூழ் புண ரி தூசென வுடுத்த மேதினியி னங்கவியை யோதுபு சிறந்தாம்‌
காசிலுயிர்‌ பாலிருகை பாசம தெடுத்தே யந்தக வரேலடையி னந் துவை நீ யென்ற
வாசிமுக மாகவொளி வீசுபரி யங்க மத்தியி லெழுந் தருள வித்‌தரை யிலங்கத்‌
தேசிக முறுங்கலை பன்‌ மாசறு கலன்க டிவ்விய மகிழ்த் தெரியல்‌ செவ் வியி னணிந்தே —34-

அன்றுமுதன்‌ மன்றன் மகிழ்‌ துன்று நற விண்டை யண்ணலுறு மர்ச்சையினை நண்ணுபு வணங்கி
நின்று தின மொன்று மதி குன்றில் வருடத்து நிச்சலம தாயபல வுச்‌சவ நடாத்திக்‌
கன்று குனி லென் றெறியு மின்றிகழு மார்பன்‌ காணி பொரு ளீன்றவர்கள்‌ பேணு மனை வாழ்வா
மென்றிவை னைத்து மறை யின் றமிழு ரைத்தோ னிணைப்பத மெனத்துதி பணித்தவ ணிருந்தான்‌ —

திரு வர்ச்சைப்‌ படலம்‌ முற்றும்‌-

பரவாத கண்டனப்‌ படலம்‌–

தாரிலுயர்‌ யாதவ ப்ர காசிக்‌ கெண்ணை தாக்கொருகா ளவன் கப்யா சமெனும்‌ வாக்ய
நீர்மைகெடப்‌ பொருள்‌ சொலவின்‌ னவனோ ராக்கண்‌ ணீரனலிற்‌ குறங்கு குப்ப நீச னோர்ந்திச்‌
சீரவனனஞ்‌ சமயமடு மென்‌று கொல்வான்‌ சேணத செல்‌ லுழி யெம்‌பார்‌ தெரிக்க நீங்கி
யேருறுமத்‌ திகிரியன் வந் தழைக்கச்‌ சென்ற விளையாழ்வா னடித்‌ துணையை யிறைஞ்சு வாமால்‌ –1–

இம் மா மது ரக வித்தவ விறையோனுற வவனி
னம் மாமலர்ச்‌ சரணைப் பணி யடியானொரு மறையோன்‌
கைம்மாவிடர்‌ கெடு சக்கிரி கருதும் பதி தொறும் போய்ப்‌
பைம்மாமுகி லுருவத்தனைப்‌ பணி வானவண்‌ சென்றே –2–

செந்தாமரை மகள் மேவிய திருமாலினி தமரு
மிந்தாரணி மணி மேடை யின்‌ னெழிலார் பதி தொறுமே
வந்தாழி கொ ளளியோனடி மருவாவரு வழியிற்‌
கொந்தாரலர்‌ செறி சோலை கொள்‌ கூடற்பதி யுற்றான்‌ –3–

விண்டோயுத யனை நேர் கதிர்‌ விடு மாமணி கனகங்‌
கொண்டாரண மென வெல்லையில்‌ குலவு மெயிற்‌ சிகரி
மண்டேர்‌சன கரமே வுபு மதுவார்கடி பெருகுந்‌
தண்டாமரை மகணாயகன்‌ றனையே துதி புரிவான்‌ –4–

கருமாமுகி லுருவா பொழி கருணைப் பெரு மழையாய்‌
திருமாமகள கணவா வென வேதந் தமிழ்‌ செய்யும்‌
பெருமான் பர வடியாயொளிர்‌ பேராயிர முறு மெம்‌
மொரு மா மணி முதலே யென வுருகும் வயி னவணே–5–

வாதம்புரி சங்கத்தொரு வல்லோனதை வினவா
வேதந்தமிழ்‌ செய்தோனென விருதோதனை யவனா
லோதங்கவி சங்கத்தின மொவ்வாவகை யறியா
தேதிங்கன முரையாடினை யினி நீ விடுகென்றான்‌–6–

அப்பத்தனின்‌ செவிவாய்சுடு மழனேரது படியச்‌
செப்பற்கவ னடல் வெந்துயர்‌ செறிவாரிதி முழுகி
வைப்பிற்றிக ழணி பற்பல வளமாநிதி நிறைவுற்‌
றொப்பற்றொளிர்‌ குருகாபுரி யொல்லைப் பொழுதற்றே –7–

செங்கட்பிடி நடைநுண்டுடி சிவணும்மிடை யுடைய
நங்கைக் கரு மகனாகிய நாவீ றனை யடையா
வெங்கட்கரு முதலீரிரு வெழுதா முறை முழுது
மங்கட்படி யறியத் தமிழ தனிற்றரு மழகா -8-

தெதிபாண்டனுக்‌ கருள்‌ வானவன்‌ சிறு கூறையி லுறைமால்‌
பதி தோறம டியன்மேவுபு பரிவாலடி தொழுதேர்‌
மதுராபுரி யடையாவவண்‌ மாலைத் தமிழ்‌ மறையாற்‌
றுதி செய்யுளி யக மேவிய தூர்த்தன் பிற வாதி –9–

உன்னாலுரை கவி யென்றிறை யுன்னாததை யிழிவு
சொன்னானென வவணிற்றிடு துயர் சேர் மொழி யுரையா
மன்னாவினி யவனெவ்வீடும்‌ வகையே யரு ளிலையே
லென்னாவிகொ ளென மாறனி னெதிரிற் படுத்‌ தனனால்‌ –10-

உண்ணலோ டுறக்க மற்றாங்‌ கொருவன் ப்ரா யோபவேசம்‌
பண்ணின வசை யுளோர்ந்‌து பராங்குச னுவகை பூத்துத்‌
துண்ணெனச்‌ சிச்சனாம மதுரகவி யழைத்த வ்வன்ப
னெண்ணம தனை த்து மோதி யெழுதினன்‌ னிருபமம்மா–11-

கரைந்துள முருகுங்‌ கண்ணன்‌ கழலிணை யெனுமோர்‌ பாவை
வரைந்தொரு முடங்க லாக்கி மதுரை போ யிஃதைச்‌ சங்கத்
தரங்க நீர்ப்‌ பலகை வைக்கிற்‌ றாழுவ ரன்னோ ரென்றிவ்‌
வுரங்கொணெஞ்‌ சவன்பா னீபோ யுணர்த்தென வளித்து ரைத்தான்‌ -12–

செல்லடர்‌ புளிகொண்‌ மாறன்‌ றிருமுக முனி கொண்‌ டந்த
நல்லறி வாள னோக்கி நனி மகழ்ந் தெழுப்பி மாறன்‌
சொல்லிய தனைத்து மோதித்‌ துதித்திட வவனும்‌ போற்றி
வல்லையின்‌ மதுரை சென்றான்‌ மலி கதிர்‌ கடலுட்‌ சென்றான்‌–13–

தோட்டடர்ந் தளிமுரன்‌று துன்னுதார்‌ மகிழ் கொண்‌ மார்பன்‌
பாட்டுறு நிருபங்‌ கொண்ட பாகத னறிய வெய்ய
கோட்டமார்‌ மனத்துச்‌ சங்கக்‌ குழுஉக்களின்‌ கருத்தீ தென்று
காட்டுவா னெழுந்த தன்ன காரிருட்‌ படர்ந்த தன்றே –14–

அன்றிர வவணோ ரில்லத்‌ தந்தணன்‌ றுயின்று நீங்கத்‌
துன்று சங்‌ கத்தோர்‌ நெஞ்சஞ்‌ சூறிருட்‌ பிழம்பிப்‌ பாவா
மென்றினா லறுமென்‌ றே முன்‌ னியம்புவா னெழுந்த தன்ன
குன்றிலாக்‌ கதிரோன்‌ றுய்ய குண புலத்‌ தெழுந்தானன்றே–15–

கொங்கலர்‌ நறவு காலும்‌ குளிர் மலர்‌ வாவி யாய
வங்கடைந் தெமது பெம்மா னாரணந்‌ தமிழாய்ச்‌ செய்தோன்‌
பொங்குபா மகிமை காண்பான்‌ புலவரீர்‌ நீங்கள்‌ வைகுஞ்‌
சங்கமாம்‌ பலகை தன்னிற்‌ சற்றிடங்‌ கொடுப்பீ ரென்றான்‌–16–

அன்னதை வினவா வன்னோ ரந்தணன்‌ சிறுசுருட்கு
மின்னுமப்‌ பலகை யிற்றாம்‌ விலகிச்சற்‌ றிடங் கொடுக்க
மன்னுவ்‌ வேத நாவன்‌ வகுள பூ டணனை நெஞ்ச
முன்னியம்‌ முடங்க றன்னை முடியினின்‌ றிருகை யேந்தி–17–

ஆங்குறு புலவ ராய ரஜோ குணத்‌ தவர்க ணோக்கப்‌
பாங்குட னிருத்தச்‌ சங்கப்‌ பலகையு மூவகை பூத்துத்‌
தாங்கி மீ தரும மும்மைத்‌ தமிழுறு குழூஉக்கண்‌ முற்றும்‌
வீங்குநீ ரதனுள்‌ வல்லை விழும்படி. சுருங்கிற்‌ றன்றே –18–

புடத்தில் வைத்‌ தெடுக்கக்‌ கட்டைப்‌ பொன்னு மாற்‌ றதிக மா போற்‌
றடத்து வீழ்த்‌ தோலை தன்னாற்‌ றம்முள மலமு நீங்க
விடக்கரு தாமுன்‌ புன்மை விளம்புநா வூமை யாதி
யிடக் கரற்‌ றறிவு மீக் கொண்‌ டெய்தினர்‌ கடைமீதன்றே –19–

வந்தனர்‌ வகுள மார்பன்‌ வரைந்திடு நிருபஞ்‌ சென்னி
நந்துத லின்றிச்‌ சூடி நாமெனு மகங்கா ரத்தின்‌
பந்தன முண்டு நாயேம்‌ பரிபவப்‌ பட்டோ மின்றியா
முய்ந்தன மென்று தம்முள்‌ ஞன்னுபு வணங்கிப்‌ பின்னர்‌–20-

மைப்படி மேனி செந்தா மரை விழி மாலே வந்தே
ரிப்படி தன்னின்‌ மாற னெனவவ தரித்த நங்க
ளப்பன தடியிற்‌ றாஞ்செய்‌ ய பாரத க்ஷமை செய்‌ வான் சங்‌
கப்புல வோர் கண்‌ முற்றுங்‌ கருத்துற முன்னி மன்னோ –21-

சிந்துகு ழுலகிற் காரி சிறுவனால்‌ விடுக்க வந்த
வந்தண்‌ னுபய பாத மன்பொடு பராவி யன்னோன்‌
முந்துற நடக்கப்‌ பின்னே முடுகியவ்‌ வூமை யானோர்‌
சந்தனப்‌ பொதும்பர்‌ சூழ்தென்‌ குருகையிற்‌ சார்ந்தா ரன்றே–22-

சிற்றிழை நுசுப்பு நங்கை திரு வயி றுதித்த செல்வன்‌
பொற்றளி வலம தாகப்‌ போந் தவன்‌ முன்னே சென்று
கற்றிலே நீ சொல்‌ வேதக்‌ கவியினிற்‌ பரம பக்தி
யுற்றிலே நாயே மென்றுள்‌ ளுன்ன வூமையு மகன்ற–23-

கண்ணினுண்‌ சிறுத்தாம்‌ போதுங்‌ கவி வலர்‌ பணி பாதத்தை
யுண்ணெகிழ்‌ வுடனே பல்கா னாத்தழும்‌ பெழவே வாழ்த்தி
நண்ணினா ரடிமை பூண்டார்‌ நைச்யாநு சந்தா னத்தைப்‌
பண்ணினா ரவன் கழற்கோர்‌ பாமல ரருச்சித்‌ தாரால்‌ –24–

ஈ யாடுவதோ கருடற்‌ கெதிரே யிரவிக் கெதிர் மின்‌ மினியா டுவதோ
நாயாடுவதோ விறு வெம்‌ புலிமுன்‌ நரி யாடுவதோ நர கே சரிமுன்‌
பேயாடுவதோ வழகூர்‌ வசி முன்‌ பெருமான்‌ வகுளா பரண ருள்‌ கூர்ந்‌
தோவா துரையா யிரமா மறையின்‌ ஒரு சொற் பெறுமோ உலகிற்‌ கவியே–25-

என்றேய்‌ சுடர் கொள்‌ வகுளா பரணன்‌ னிரு தாமரை நே ருறு தா ளிணையிற்‌
பொன்றா தவர் தம்‌ மவரில்‌ லொருவர்க்‌ கொருவர் தெரியாப்‌ புகலின்‌ கவிதா
னொன்றாகிய தீ தவனின்‌ னருளென்‌ றுவவைக்‌ கடலுற்‌ றவருள்‌ ளறிய
முன்றா மிழை தீ மையினைப்‌ பல்கான்‌ முன்னிப்‌ புகலா மன்னுங்‌ கவியோர்‌ –26–

இந் நாள்‌ வரையிவ்‌ வகை சென்‌ றெவரும்‌ மெதிரா நமையின்‌ றெழிலார்‌ வகுள
மென்றா ரணியோ னொருவாய்‌ மொழியால்‌ வென்றா னதனால்‌ விரிநீ
மன்னா கு பராங்கு சனா மெனவே வழுவா தொரு பே ரழியா துரையா
வன்னோ ரிவனின்‌ கழலே பரவா வணிமா மதரைப்‌ பதயே கினரால்‌–27–

சங்கத்‌ தவரிற்‌ பதினெண்‌ மதருந்‌ தாமென்‌ றுறு மித்‌ தனியே தனிவந்
திங்குற்‌ றிடமா மகிழம்‌ புயனின்‌ னேவல்‌ கொடுவம்‌ முனியும்‌ மவரைப்‌
பங்கப்‌ படவென்‌ றவனின்‌ கழலே பரவும்‌ படி. செய்‌ திவணிப்‌ படியே
துங்கத்‌ தவனென்‌ றிடவே வதியாச்‌ சோதித்‌ திருநா டேகுற்‌ றனனே –28-

பரவாத கண்டனப்‌ படலம் முற்றும்‌-

திரு நாத முனிப்‌ படலம்‌

தென் புதுவா புரி மடக் கோ தைப் பிராட்டி செந்தமிழிற்‌ காட்டு வணஞ்‌ சேவெற்‌ போர்க்கு
ளன்பினோட மக்கார வடிசினூறு கடாரஞ் செய்‌ தருளி யெழுந் தவ்வூரேகப்‌
பின்னவளு நல் கோயி லண்ணனென்றோர்‌ பேர் வழங்கக்‌ கொண்‌ டருளெம்‌ பெருமா னார் தம்‌
நன்கமல மாமலர்‌ த்தாள்‌ சென்னி கொண்டு நாதமுனிப்‌ படலமதை நவில்குவாமால்‌–1–

முருகு விண்ட மா மகிழணி நின்மல முதல்வ
னருளி னல்வழி நின்றவம்‌ முனிவர னழிவி
றிரு மடந்தையுள்‌ ளுகந்துறை திரு மரு மார்பன்‌
பெரு விசும்படைந் தநேக நாட்‌ சென்றதன்‌ பின்னர்‌ -2–

அந்த மாமுனி வரன்றன தடிபணிந்‌ தன்னான்‌
சிந்தையே மகிழ்‌ தரப் பணி விடை பல செய்து
வந்த நான்மறைச்‌ சீடனின்‌ மரபுழித்‌ தோன்றும்‌
விந்தை சேர் பராங்‌ குச நம்பி யென்னுமோர்‌ விமலன்‌–3–

பையராமுடி மிசை யுறக்‌ கிடந்த பா ரதனிற்‌
றுய்ய மாவிசை தாங்கிய மது மகிழ்த்‌ தொடை சூழ்‌
செய்ய மார்புடைப்‌ பரன்றனக்‌ கம் முனி செய்த
பொய்யிலா வகை தானு நன்‌ கியற்றினன்‌ போந்தான்‌ –4–

ந்த வாறு பராங்குச நம்பியு மியற்றி
வந்த நாண்மதுரச் செயுண்‌ மாமுனி வரன் போ
மந்த நாண் முத லாக முற்‌றோன்‌றிய மகிழ் கொ
ணந்த மாறனை முதலிய நின்மலர்‌ நவின்ற–5–

இனிய செந்தமிழ்‌ மறை யெலா மிருநில வரைப்பி
னனியு மோதுவித்‌ திடுவர்க ளின்மையி னாலுங்‌
கனிவி னவ்வண மோதுவித்‌ திடினுநி கரிலாப்‌
புனித ராகியிங்‌ குற்றவவ்‌ விமலர்கள்‌ பொருந்தி –6–

மன்னும்‌ விந்தையை யோர்ந்தியா முணர்ந்தடின்‌ மடிவா
மென்னவே மனத் தெண்ணம தெழுந்ததினாலும்‌
உன்னவே பர கதியினை யுகந்தினி துதவு
மன்ன செந்தமிழ்‌ மறை யெலா மழிந்தன வன்றே –7–

இருநிலந்தனி லிவ்வணந்‌ தமிழ்மறை யெல்லா
மருவலின்‌ நியே மலினமா யழி தருஞ்‌ செயலைத்‌
திருமலிந்தணி சிறந்தொளி மிகுந்துபு திகழும்‌
பருமை தங்கு வைகுந்தமா நகரெனும் பதியில்‌–8–

அண்ட கோளம தழிதரு முடிவினு மழிவி றோண்டர் தங்குழா மிருமருங்‌ கினு மிகச்‌ சூழ்ந்தே
வண்டலர்க்கர முகிழ்த்தன ரிறைஞ்சியே வாழ்த்த வெண்டரும்‌ பணா முடியரா வணைய தன்‌ மிசையே —9-

அஞ்சநந் திகழ்‌ தரு முகிற்‌ குலமளி யலம்புங்‌
கஞ்ச நாண் மலர்‌ பூத்தலர்ந் தென வுருக்‌ கலந்த
விஞ்சு வாணிதம்‌ பெருகு பைந்‌ துளவணி விமல
னெஞ்சி னானில வலயமுன்‌ னிகழ்ந்ததை நினைவான்‌ –10-

அறிவி லாதுயி ரடங்கலும்‌ பவக்கட லாழ்ந்து
சிறிது மோரிடம்‌ தங்குறு துறமுறுஞ்‌ செயலை
நெறியி னோர்ந்தது தவிர்ந்து நற்‌ பரகதி நேர்வா
னறிய வாரணந்‌ தனைத் தமிழதனினா னவின்றும்–11-

உணர்கிலாது பின்‌ னும் கொடும்‌ பவந்தனி லுழன்று
புணரு நந்தமை யறிகிலா வகைய பொருவில்‌
குணமு றுந் தமி ழோதூவித்‌ திடுவர்கள்‌ குரைநீ
ரணவு பாரிடத்‌ தின்மையி னென்றுளி யருள்வான்‌–12-

மூல மென்றொரு காலழைத்‌ திடுவதன்‌ முன்னர்‌
நீல மாமுகி லென்ன வக்‌ கரிமுன ணிமலன்‌
றாலம்‌ வாழுயிர்‌ தமைப்பினுந் திருத்து வான்‌ றகைசேர்‌
சீல மாய வித்தகையன செய்குவன்‌ நேர்ந்தே–13–

கான மாமல ராடன திணையடி கருதுஞ்‌
சேனை நாயகன்‌ றனதருள்‌ வழியுறச்‌ செல்லு
மூன மேதுமி லமைச்சராங்‌ கஜாநநர்‌ தம்மை
யான நாதனு நோக்கியின்‌ னுரை செய்வா னன்றே–14–

ஈர நீர்புடை சூழ்தரு முலகுயி ரெல்லாம்‌
பார மாய பழவினை பற்றறுத்‌ துய்வான்‌
சீர தாகுமுன்‌ னிகழ்த்திய மறைத் தமிழ்‌ தெரிப்பா
ராரு மின்மையி னாலவ ணெழுந்தினி தடைந்தே–15–

அரிய செந்தமிழ்‌ மறை யெலா மினிதெடுத்‌ தருளி
வருதி யென்றுரை செய்யலு மாமலர்‌ மடந்தை
பொருது மார்புடைப்‌ புங்கவ னடியிணை போற்றிக்‌
கரியி னாநநமுடை யருங் கழறுவ ரன்றே-16-

உறழ்வி னின்னுரை மறுத்திட வல்லவ ருளர்கொ
லிறைவ வவ்வண முலகிடை யுதித்தலு மெமக்காங்‌
கறிவு தீர்ந்திடு மாதலி னத் தமி ழனைத்து
நெறியி னோர்ந்திடும்‌ வண்ணம தியாதென நிமலன்‌–17–

நினக்கெ னன்னது நந்தமக்‌ கன்று கொ னிகழு
மனத்தி னுற்றவக்‌ கவலை யற்‌ றேகுதி மருவுங்‌
கனத்த பாரிடத்‌ ததற்கு நல்‌ வழியினைச்‌ காட்டா
வுனக்கு நல்லரு ளாங்குமீ குவமென மொழிந்தான்‌–18-

மறைக ளாலுநன்‌ களப்பதற்‌ கரியமா மருமா
னறழைவிளங்கிய மலரடி வாழ்த்தினர்‌ நவையிற்‌
கறைவிளங்கிய பையயராத்‌ தாங்கிய கடல்சூழ்‌
தறையிடத்தினிற்‌ றோன்றுவா னெழுந்தனர்‌ தாமே–19-

குட கிழிந்த கரு முருகு சந்தினொடு கொண்டு வெண்டிரை எறிந்து நீள்‌
தடமு றுந்‌ கரைகட கர வண்டல் படு தண்ணரும் புனல்‌ பரந்து சேர்
புடவி யின் மகிமை பெருகு மொன்‌ றிணையில்‌ பொன்னி நல்வளஞ்‌ சுரந்திடுந்
திடமிகுந்த புய லணவு பைம் பொழில்‌ சிறந் துயர்ந்திடு மரும்பதி–20–

எண்ணிறந்தவள மேவு தண் கழனி யேடலர்ந்தமரை மீதிலே
நண்ணி வெண்பணில மீனு மொண்டரள நாறு நுண்ணிலவு வீசவே
பண்ண மைந்தகளி வண்டினங்கள் படர்‌ பாவு செங்குமுதம்‌ வாய் விளும்
விண்ணி வந்து பல மேடை நின்றொளிரும்‌ வீர நாரண புரமரோ –21-

வச்சிரத்தினி லிழைத்த பற் பல வரைக் குலங்கணிகர்‌ மாடமு
முச்சிவிட்புல முகட்டினிற் படியு மொப்பருஞ்சின கரங்களுங்‌
கச்சறுக்கு நகிலத்‌து மங்கையர்‌ களிப்புடன்பயிலு சாலையும்‌
நச்சி யந்தணர்க ணிச்சலும் மரிய நற்றவம் புரி யிடங்களும்‌ –22-

வண்டினம் பல மருங்கணைந்து முரன்‌ மா மலர்ப் பொழிலு விண்ணு லாங்
கொண்டல் வெண்டிரையி னுள்ளி வந்து புனல்‌ கொள்ளுறுந் தகைய கன்றவாம்‌
விண்டு புண்டரீ க மங்கைமார் முகம்‌ விளங்கு மெண்ணறு தடங்களும்‌
தண்டருந் நறை தயங்கு தண்டுளப நந்தனங்கள்பல கோடியும்‌ –23–

சக்ரவாள கிரி யொத்‌துயர்ந்திலகு சதுர மா மதி லினங்களும்‌
புக்கு மா மலரி னட்டலக்குமி பொருந்தி மட்டில் பல வாவண
மிக்க வீ திகள னந்தமுங்கனக வீறு கொண்ட விரதங்களு
மிக்கணிப்பரு வளத்தின் மிக்குய ரெழின் மிகுத் தவ நகர்க்கணே–24–

நச்சியுற்றினிது வைகுமந்தணர்‌ த நற்பருங்குல மத ற்குளே
வெச்சடுத்திடு பவக் கடற்றனில்‌ வீழுந்து நொந்துற வழிந்திடு
மிச்சகத்‌ தயி ரனைத்து நற் கதி யெழக் கடுக்கலி யுகத்தினின்‌
முச்சகத்திரமு மிருசதத்தொடிரு பத்திரண்டினி லிரண்டுமே –25–

ஒன்றுமிந்தவரு டங்கள்‌ சென்ற பின்‌ முறுவதானசுப கிருது யாண்‌
டன்றி நன்மிதுந மென்னு மாதமுட னணிய பூரணையு மென்றுமே
பொன்றிறன்மையபு தன்‌ றன் வாரமு மிணைந்த தானவ றுடந்தனி லென்றெனும்படி யுகந்துதித்தன ரெம்‌ மிருள் களைந்தருள வென்பரால்‌–26-

௮நகனின்னருளில்‌ வந்‌ துதித்தருள்‌ கஜாந நத்தவரு மிம்பரா
லினிய தன்மையஸ்ரீ ரெங்க நாதமுனி யென்று நாமமது பெற்றனர்‌
முனிவில்‌ சிந்தை யுடை நிபுணராகி மறை முற்‌று நன்கினி துணர்ந்து மே
தினி முதன்மை திரி லோக மெங்குமிசை சென்றுலாவுற வளர்ந்தனர்‌.–27–

இக்கணிப்பினிலை யுற்றடுத் துவள ரெட்டருந் தகைய வப்பரர்‌
முக்குணத்தினு முதற் குணத்துடை முதற் பரத்த வரி பத்தியே
மிக்கெழிற் படரு மத் திருப்பதியில்‌ விட் புலத்தெழு முகிற் குலம்‌
புக்கெனத்தளி யிடத்தினிற் பொலி பொருப்புயர்ந்த புய மன்னனார்‌–28-

போத னைம்முகன் மு தற் படுங் கடவுள்‌ போற்றருந் தகைய பாதமே
மாத னம்மென மனத்‌தி னுட்கொடு வணங்‌கி நன்குற வழுத்தியே
வேத நன்மறை வழாத வவ்விறை விருப்புடனக மகிழ்ந்திட
வேத நைந்த பல வாய தொண்டுகளிழைத்‌து வந்தனரு ளன்பினால்‌.–29–

இன்ன வாறனைய ரெங்க நாதமுனி யென்னு மந்த மறை யாளரு மா
மன்ன னார் தமது தொண்டி னல்வழியில்‌ வந்த நாளிலொரு வைகன்‌
றுன்னு மா நகர் தொ றும் பணிந்து வர மன துளித்தமது தெய்வமா
மன்ன மாயனை வணங்‌கி நின்றெதிரி லறிய வின்ன மொழி யுரை செய்வார் –30-

கிட்டு வார்வினை யறுத்து வாழ்வருள்‌ கிடைப்பிலா மணி நிறத்தனே
வட்டவாரித யுடுத்த மானில வரைப்பினிற் கொடு நடத்தை சேர்‌
துட்டரானவர்‌ துடிப்ப நூறிவெகு சிட்டர் பாலன மியற்றுவா
னிட்டமாக முன்‌ னுதித்‌து வந்தெழின்‌ மிகுத்து யர்ந்த மது ராபுரி–31–

கோவருந்‌ தகைய கோகுலம் பொருவில்‌ கோவருத்தன முடன் விருந்
தாவனம் பிரிதி துவாரகை பதரி தாரு மிக்க திரு வேங்கட
மே வயோத்‌தி யணி நைமிசாரணியம்‌ விந்தை யின்னமுத லான சீர்‌
பாவுறும் வட புலத்தினின்‌ றிசை பரந்த நற் பதி தொறுஞ்செலா –32–

அங்கி லங்குன்வடி வங்கள் கண்டினி தகங் குளிர்ந்‌திட வணங்கியே
யிங்கெழுந்‌து வர வரமுகந்தருள்‌ செ யென்‌ றிறைஞ்சியய னின்றிடச்‌
சங்குடன்றி விரி தண்டு வாள்‌ வரிவில்‌ தங்கு செங்கமல மன்னனார்‌
புங்க வன்னவரை நன்‌கினவ்வகை புரிந்தி வன் கடிது செல்கெனா–33–

முன்னு மர்ச்சக முகேந வின்னண மொழிந்திடக்‌ கடிதெழுந்து போய்‌
மன்னு முத்தர திசைக்கணின்‌ றிசை மலர்ந்திலங்குறு வதானவா
மன்ன திவ்ய பல தேச மெங்கிலு மடைந்திறைஞ்சி விரை வாகியே
பின்னெழுந்‌து தம நாடு செல்லுழி பிறங்கு மன்ன மறையாளரே –34–

ஓடு தெண்டிரை யரும் பொ னொண்மணி யொதுக்கு பொன்னி வளம்‌ மன்னு சோ
ணாடி லங்குறு மரங்கமே முதல நற்றலந்‌ தொறும்‌ வணங்கியே
மாடணிந்தபுனன்‌ மானிலந்தனின்‌ மலிந்த வெவ் வினை யறுத்தருள்‌
கோடில்‌ சிந்தையரும்‌ வந்த ணைந்தனர்‌ குடந்தை யென்றுரை யரும்ப தி –35–

அயனெ னுந் தகைய வேள்வி யந்தணர்க ளாரணத்‌ தொலியு மணி யறா
வியனி டந்தழுவு மாவ ணத்தொலியு மேவரும்‌ பல வளங்கள் சேர்‌
புயலி ணைர்தமணி மாட நன்மறுகு பொங்கு மங்கல விழாவெழு
மயர்வில்‌ சும்லையு மளாவி வெண்டி ரைய வம்பினோடி கலி யார்க்குமால்‌–36–

அருமறைக்குரிய புனிதர்‌ நித்தமு மமைக்கும்‌ வேள்வி யெழு மாவியும்‌
இரு தனப்பொறையி னொசி யிடைச்சிய ரெழிற் றருங் குழலருத்து நீன்‌
முருகடுத்தொளிரு மகரு நற் புகை யுண்‌ முற்று மொன்றி விணகத்‌தெழ
வரு முகிற் குலமி தென வுறக் கருதி மஞ்ஞை நின்‌ றசை தரும் பொழில்‌–37–

அணிபெருகுதிரைக ளொன்றுமா லலவிர்மணி யுகுபொனி தன்னிலுந்
திணிபெரு முயர்திரு மாளிகை செறிதரு மறுகிலு மின் புனல்‌
பணிமதி யணிசடை யோன்நலம்‌ பற்று பரன்‌ றளி மீதிலும்‌
தணிவரு கலியென மைம் முகி றடமுளிறங்‌கி மடுக்குமால்‌–38-

பானல மருவிடு மீர்தன பாரம தொசியு மருங்குலார்‌
கானலர்‌ குழலிய ரின்சொலுங்‌ கடிமலர்‌ நிறை தரு வாவியும்‌
வானக முகிறவழ்‌ சோலையு மா மறை வேதிய ருள்ளமுந்
தூநகை மாடமு மினமுறத்‌ துளி மலர்க்‌ கண்ணனை நாடுமால்‌ –39-

இளையன பெருவள மிடையுமவ்‌ வெழினக ரிடை நவ மாமணி
புநை புரி சையுமெண்‌ விமானமும்‌ பொன்னகர்‌ மிசை யுறு சிகரியும்‌
வனையுமி னொளிமிகு தூபியு மலிந்து சிறந்தடு கோயிலை
யனைய நின்‌ மலருமடைந்தன ரகமெழு மோகையோ டென்பரால்–40-

அன்னவிருந்தளி தன்னிலோ ரஞ்சன வெற்புக்‌ கிடந்ததை
யென்ன மலர்க்கண்‌ வளர்ந்தரு ளெந்தமை யாளுடை நின்மலன்‌
கொன்னவிலுமயி னேர்விழிக்‌ கோமள வல்லி புணர்ந்தவன்‌
முன்னரடைந்தடி தாழ்ந்தனர்‌ மூவுலகும் மிசை கொண்டனர்‌ –41–

அண்டமடங்கலு நின்றரு ளன்ன பரன்றன மாமணி
கொண்டொளி வீசபி டேகமொண்‌ கோடிய செஞ்சிலை யின்னுதல்‌
கண்டவர்‌ சிந்தை கவர்ந்திடும்‌ கருணை மிகப் பொழி யுந்தகை
புண்டரிகம் புரை கண் குளிர்‌ பூரண சந்திர வானனம்‌ –42–

குடந்தை கிடந்தருள்‌ கொள்கை யென்‌ கோல வெனும்‌ மழிசைப் பிரா
னிடந்தனி லின்னுரை யாடவே யெழுந்த வெழிற் கனி வாய் வரைத்‌
தடந்தனி யம்புய மைம்படை தாங்கிய செங்கர மா மலர்‌
மடந்தை வதிந்தருண்‌ மார் பொளிர்‌ மாடுடை மேவிய சீரரை –43–

புண்டரி கன்வதி நாபியே போந்தடை வார் பிற விப் பிணி
கண்டி மருந்தென வாகுமீர்ங்‌ கமல மலர்ப்பத மின்னவை
மண்டி மனத்தி லெழக்களி கண்டு கணுற்று வணங்கியே
யண்டரு மா மறை முற்றையு மறிந்தரு ளன்னவர்‌ நின்றனர்‌ –44-

நம்பர மாரிய ராயவந் நவையில்‌ பெருங் குண ரிவ்வண
மம்பர மன்றனை யேத்தியே வங்கய னின்‌ றிடும்‌ வேலையோர்‌
வம்பறு வந்தி இனம் வரு மாறுபோலன்று மடைந்தன
ளெம் பெரு மானிரு தாமரை யென்னு மடித்துணை போற்றியே–45–

ஏவன கண்டிரு நண்பனவ்‌ வெம்பெரு மான்றன மீதிலே
மாவமு தத்து மினித்ததாய்‌ மா மகிழ்‌ மாறனுரைத்தவாம்‌
மேவரு நற்றகை யாயிர மென்றமிழ்‌ மாமறை தன்னுளா
ராவமு தென்னு மரும் பதி கந்தனை யார நவின்றரோ –46–

முன்னுற நின்றிட வன்னவர்‌ முன்னு முணர்ந்தவை தம்முளே
மன்னும ரும்பொரு டன்னையே வழாம லுணர்ந்தன ராசியே
பன்னிவை யாயிர முள்ளிவை பத்தெனு மஞ்சட கோபனே
சொன்ன தெனுமிவை தம்முளே தோன்றலினன் கறி வேனெனா–47–

அன்னவ டன்னை யடுத்திவை யாயிர முட்குறை வாகலா
லின்னவை சொற்றனர்‌ யார் கொலோ விப் பிர பந்த மனைத்துமே
நின்னிட முண்டு கொ லன்றி நீ நெறியி னுணர்ந்தனை யோவயன்‌
மன்னிய புத்தக மேலுமுண்‌ டோவென வின்சொல்‌ வழங்கினார்–48-

சொற்ற சொலைச் செவி யோர்ந்தனார்‌ துணை யடி யைத் தொழு துரை
ணற்றவ தென்குரு கூரெனு நகரத னுட் சட கோபனென்‌ செய்வா
றற்றை யுதித்து மறைப் பொரு ளனைத்து மருந் தமிழான் முனா
ளுற்று விரித்தன ரென்று முன்‌ னோருரை செய்குவ ராதலால்‌ –49–

அத்தமி ழாயிர முள்ளிவை யன்‌ றடி யேனறி யேனயற்‌
புத்தக மும்மிலை முற்றுணர்‌ புனிதரு மிங்கிலை யென்றனள்‌
அத்தன்‌ மறைத்தளி வாழுமா ராவமுதன்‌ பதமாமலர்‌
சித்தமுகந்து வழுத்துறாச்‌ சிறியர்‌ முகத்து விழித்திடாள்‌ –50-

அன்ன வின்சொ லறிந்தன ராகியே
யின்ன செந்தமிழ்‌ மாமறை யாவுமே
மன்னி வைகும்‌ வளநகர்‌ யாதென
வுன்னி யுன்னி யுருகினர்‌ நின்றோ–51-

தேறி யுள்ளமிச்‌ செந்தமிழ்‌ தம்மைமுற்‌
கூறு மச்சட கோப னுதித்தருண்‌
மாறி லாவள வண்குரு கூரெனும்‌
வீறு கொண்டு விளங்கு பதிக்கணே –52–

அன்றி யெங்கு மிருப்பரி தாகுமா
லின்று சென்றறி வேனென வேமன
மொன்றி வேக முடனெழுர்‌ தோகையிற்‌
றென்றி சாமுகஞ்‌ சென்றனர்‌ நோக்கியே–53-

பாட்டு வண்டு படும்பல பூம்பொழிற்
கூட்ட மன்னக்‌ குருகை யடைந்தனர்‌
வாட்ட மின்மகிழ்‌ மாற னருள்வடப்‌
பூட்டி. முக்கப்‌ பொருவில்‌ குணத்தரே–54-

மெலிந்து சென்றருண்‌ மேதகு சிந்தையோ
ரலிந்து சேரு மகன்மணி யாலய
மலிந்து செங்கம லங்கள்‌ வருமுகிற்‌
பொலிந்து நின்ற பிரானடி போற்றியே–55-

வேலை சூழ்தரு மேதிநி மீமிசை
சால வேயரு டந்த கடிமழ்‌
மாலை கூடிய மாறனை யுந் தொழாச்‌
சீல மோடுட்‌ செழித்துமு னின்றரோ–56-

தூநகும்மணி துன்றபி டேகமும்‌
வான வாவு மதியைப்‌ பழீசெயு
மோன மாய முகமும்‌ கருணை சேர்‌
தேன வாவுந் திருமலர்க்‌ கண்களும்‌-57-

வாம விற்புரு வங்களு மாசிலாத்‌ து மறைத்தமிழ்‌ சொற்ற செழுந்துவர்க்‌
காம ரொண்கடி கைக்கிணை வாயுமுள்‌ ளாம ணித் திரு வார முறுவலும்‌–58-

துய்ய மாமகழ்‌ துன்றிய மார்பமுஞ்‌
செய்ய சின்முத்‌ திரைக்கர முந்தொழு
மெய்ய ருக்குயர்‌ வீட்புல மீதலால்‌
வய்ய கம்புகழ்‌ மாமலர்ப்‌ பாதமும்‌–59-

விண்ட லத்தெழு வெஞ்சுடர்‌ வானவன்‌
மண்ட லத்திடை வந்தன னென்னவே
யொண்டு லங்கு மொளித்திரு மேனியுங்‌
கண்டு கண்டு களிக்கட லாழ்ந்தனர்‌–60-

யோக நன்னிலை யோரவர்‌ மாறனை த்‌
தாக மோடித்‌ தகையின்‌ வழுத்தியே
மேக மீச்செல்‌ விமானந்‌ தனைவல
மாக வந்து மகிழ்ந்த னராகியே–61-

பந்த மாய பழைய வினையறுக்‌
தெந்த மக்கரு ளின் வகு ளப்பிராற்‌
கந்த மற்ற வணி பெருந் தொண்டுகள்‌
புந்தி யோடு புரிந்தனன்‌ வந்திடும்‌–62-

அப்ப ராங்குச நம்பி யடுத்தனா
னைப்ப ராவி யினைய நவில்வரா
லிப்ப ராவு மண்ணேழிலு நின்ற சீர்த்‌
துப்ப ராயவத்‌ தூ நெறி யாளரே–63-

வாச மன்மகிழ்‌ மாறன்‌ முதலியோர்‌
பேசு செந்தமிழ்‌ யாவுமிப்‌ பேர் நக
ராசி லோங்குவ துண்டுகொ லன்‌ றுஸ்ரீ
கோச முண்டுகொல்‌ கூறுதி ரென்றனர்‌–64-

சொற்ற சொற்ச டுளைச்செவி யேறு முன்‌
மற்ற னானும்‌ வழங்குவன்‌ சிற்பக
லுற்ற தாண்டுபி னோய்ந்து மலினமா
யிற்றை நாளிவ ணே து மிலையெனா–65–

பின்னு மோதுவன்‌ பெய்மது மாமதிழ்‌
துன்னும்‌ மார்புடைத்‌ தோன்ற லடிபணிந்
தன்ன வன்ற னருளிற்‌ பர கதி
மன்னி வைகும்‌ மதுர கவியெனும்‌–66-

எங்க ளாரிய னிங்கு விபவமாய்த்‌
தங்கு நாளிற்‌ றரணி யெலாமிசை
பொங்கு மாறப்‌ புனிதன்‌ விடயமாய்ப்‌
பங்க மின்றிப்‌ பரிவி னவின்றவாம்‌–67-

கண்ணி நுண் சிறுத்‌ தாம்பெனுங்‌ கானறை
யுண்ண யப்புறு மோர்பதி கம்மனான்‌
விண்ணி னிற்செலும்‌ வேலையிற்‌ சீடராய்‌
நண்ணினர்க்கு நவின்தன னன்பினால்‌–68-

அன்ன சீடர்‌ மரபின னாகலா
லென்னி டத்தது வன்றிமற்‌ நின்றெனாப்‌
பின்னுங்‌ கேட்டி யென்றாங்குப்‌ பிதற்றுவா
னின்ன வந்தமி ழின்குண மியாவுமே–69-

இப்பதிகத்‌ து று மகிமை யெனையோ வென்னி லின்றதையு முரைத ருவனிசைந்துகேட்டீ
யொப்பற விட்‌ புலமுகடுங்‌ கிழிய வப்பா லோங்கு புளிக்‌ காவணத்து ளூறையுஞ்‌ சீதத்‌
துப்புறுபாட்‌ டளிமுரலத்‌ துளிக்குந் தண்டேன்‌ றூங்கு மகிழ்த்‌ தொடையகலஞ்‌ சூடுமெம்மா
னப்பறுவா ட்கமலமுகத்‌ தெதீரே நந்தண்‌ ணரிய குசத்‌ திழைதவிசட்‌டதன் மேல்‌ வைக–70-

புல்லியவைம்‌ பொறி வழியிற்‌ போக்கா தேக புந்தியுடன்‌ புண்ணியராய்ப்‌ பொருந்தி யன்ன
சில்லியறற்‌ குழலுடைய நங்கை மாது திரு வயிறு வாய்த்தோனைச் சிந்தை செய்யா
யெல்லியினும்‌ பகலினுமோ ரணுவு நீங்கா திருந்தனரா யோகியர்கட்‌ கிணையாய்‌ மன்னிச்‌
சொல்லருபே ரானந்தக்‌ கடலுட்‌ டாழ்ந்து சோர்விலரும்‌ தகைமை யவப்‌ பதிகந்‌ தன்னை–71-

பன்னரிய நற்றேவ கானத்‌ தோடும்‌ பன்னீராயிர முருவே பகர்வராகினாங் கன்‌னோர் தம்‌
லன்ன செயற்‌ கதி யோகை கொண்டானாகி யணி கிளரச்‌ சடகோப
முன்னரெழுந்த தருள் புரிவா னெனவே முன்னோர்‌ மொழிந்தனரா லிங்‌கிது தான்‌ முறையோ வென்ன
மன்னு பராங்‌ குச நம்பி வழங்கினானான்‌ மாமறையின்‌ பொருளுணரம்‌ மதி வல்‌ லோர்க்கே–72-

சொற்றமொழி யிரு செவியு ளேறா முன்னர்த்‌ தூய மனத்‌ ததியோ கை தூங்கத்‌ தூங்கப்‌
பற்றறு பராங்குசனைப் பற்றற்‌ கன்ன பதிகமே பணி புருட கார மென்னாப்
புற்றளரு நெஞ்சுடைய புனித ரன்னோன்‌ பூங்கமலத்‌ தாளிணையைப்‌ போற்றா நின்றே
மிற்றை யுகந்‌ தன்னதை நுந்‌ தாசனேற்கின்‌ றீந் தருள்வீ ரெனவின–73-

மிக வணக்கத்‌ தடி வணங்கி நிற்குமன்ன விமலர்‌ தமை யன்னோனும்‌ வியந்து நோக்கி
நிகரறு மப்‌ பதிகமதற்‌ நின்மலர்க்கு நிகழ்த்துவனென்‌ றுபதேச நெறியா னாங்குப்‌
புகரறு தன்‌ னாரியனை நெஞ்சுட்‌ கொண்டு போதனை செய்‌ தருளின னாற்‌ புலம்போ மார்க்கத்‌
தகமதனைச்‌ செலுத்தலிலா வளவில்‌ யோக வருநிலை தேர்ந்தினி துணர்ந்த வன்னோர்க்‌ கன்றே–74-

துன்னு றுந்தகை யன்ன நற்‌ பாவைத் தூய னாமப்‌ பராங்குச நம்பி
தன்னி டந்தனி லின்னன மாகத்‌ தகையி னோர்ந்‌து தெளிந் தன ராதி
யன்ன வன்றன தின்னரு டன்னா லந்த ரங்க முகந்தனர்‌ சென்றார்‌
மன்னு மாமல ரன்ன மணந்த மன்ன னாரடி நன்குற வுன்னி–75-

தேவ கானங்‌ கடிதினிற்‌ சென்று தேர்ந்து ணர்ந்திவ ணார்ந்தன ரகிச்‌
சேவி யார்மன மேவரி தாகுஞ்‌ செய்ய மாமகி ழையனின்‌ முன்ன
ரோவில்‌ சிந்தையத்‌ தூயனுகந்தன்‌ றுரை செய்‌ வண்ணம்‌ புரை செகு மன்ன
பாவி னங்களை யாவருங்‌ கேட்பப்‌ பாட லுற்றனர்‌ பீடுடன்‌ மன்னோ–76–

மாட லர்ந்த பணாடவி தாங்கும்‌ வாரி சூழ்தரு பாரிட மெங்கும்‌
வீட லர்விசை நாடிய நன்னா வீற னென்ற வம்‌ மாறனின்‌ முன்னர்ப்‌
பீடி, லர்மனக்‌ கோடறுறந்த பேரருட்டழை சீருறு மன்னோர்‌
பாடு மின்னிசை யீடிலமுதம்‌ பரிந்து ஈன்கு சொரிந்தன ரன்றே–77-

வான்பயி லமரர்‌ யாரு மறுவிலா ரிசைக்குந் துய்ய
தேன் பயி லினிய கானஞ்‌ செவியிடை யடையா முன்ன
ரூன்பயில்‌ குலிசப்‌ புத்தே ளோங்கவை யிடத்தி யாழ்‌ வல்லோன்‌
றான் படர்ந்‌ தனனோ வென்னச்‌ சாற்றினர்‌ விரையச்‌ செல்வார்‌ –78–

வாரிசூ ழுலக முய்ய வந்தரு ணிமலர்‌ செய்யுஞ்‌
சீரிய கான மோர்ந்து சிறிது நீங்‌ கரிய வாதி
யேரி மிரசுண மெல்லா மிருஞ்சிறைப்‌ பந்தர்‌ வீசிக்‌
காரிரு விசும்பி னூடே கவிந்தன சுழலு மாதோ–79-

முல்லைய நிலத்தின்‌ மாயோன்‌ முற்குழற்‌ கானஞ்‌ செய்யு
மெல்லையன்‌ னேனைச்‌ சூழ்ந்த வியல்பென நிரைக ளெல்லா
நல்லிசை செலியி னோரா நாற்றிசை மருங்குந் தீட்டுஞ்‌
சொல்லிலோ வியமே யென்னத்‌ துன்னின மலியுமாதோ –80–

மைப்புய லூர்தி செய்ய மலர் புரை விழிகளே போற்‌
செப்பறு முடல மெல்லாஞ்‌ செலியிலே னென்பான் சேடன்‌
ஒப்பிலாச்‌ செலிய நேக முற்றமை பலித்த தென்னாத்‌
துப்புறுங்‌ களியி னழ்வான்‌ றூய வவ்‌ விசை கேட்‌ டம்மா -81–

மானினங் கரடி வேழம்‌ வரிப்புலி யரிமா னின்ன
வான்பல விலங்‌ யாவு மறிவிழந் திரையுந்‌ தேடா
தூனமி லெழுவை மான வுற்ற வவ்‌ விடத்தே நிற்கு
மீனரை யணுகா வன்னோ ரிசையமு தருந்தி மாதோ –82-

தண்ணளி சுரக்கு மன்ன தகையினா ரிசைக்குங்‌ கானம்‌
விண்ணக முழுது மேவி விரவி நிற்‌றலினாற்‌ றுய்ய
பண்ணமை துளவத்‌ தெம்மான்‌ பண்டிட மெங்குந் தாய
வண்ணமுற்‌ றொளிருஞ்‌ செய்ய மலர்ப்பத மொக்கு மம்மா –83–

காரணத்‌ துதித்த வன்னோர்‌ கழறிசை யொன்றே யெல்லாப்‌
பாரண வுயிர்க டம்மைத்‌ தன் வசப்‌ படுத்த லாலே
சீரணம்‌ கயனும்‌ வீயச்‌ செறிதரு முடிவிற்‌ றன்பா
னாரண னனைத்துங்‌ கொள்ளு நவை யிலாத்‌ தகைமை யொக்கும்–84-

அவ் விம லன் செய்‌ கான மணிந்தன ராகி மண்ணோ
ரெவ் விடந் தனிலீ தென்னா விரங்கினர்‌ செவிசெய்‌ நோன்மை
யொவ்வவிவ்‌ விசை வலானை யுற்று நோக்‌ குறவே கண்கள்‌
செவ்விதிற்‌ புரிய கில்லாச்‌ செய்கையி னயர்வ ரன்றே–85-

பாதவஞ்‌ சலியா வாங்குப்‌ பறவைகள்‌ சிறிதுங்‌ கூவா
வாதவ னிவனே குங்கா லன்றென விரையச்‌ செல்லான்‌
போதவந் தணர்க ணாவும்‌ புரிகில வேத வோதை
தீதவம்‌ படுத்‌துங்‌ கானச்‌ சிறை வலை யகட்ட வம்மா–86-

மாரத மொழுக வன்னோர்‌ வழங்கிசை செவியி னாரா
நாரதன்‌ முதலா யாழின்‌ நல் வளந்‌ தெரியும்‌ வல்லோர்‌
போர வுள்‌ ளுடைந்து நாணம்‌ பூண்டி னி திருப்பரென்றா
லாரதன்‌ மகிமை தேர்ந்திங்‌ கறைய வல்‌ லவர்க ளம்மா—-87-

இவ்வகைத்‌ தாய கானத்‌ தெண்ணருந் தகமை சேரத்‌
திவ்லிய மதரப்‌ பாவைத்‌ தீஞ்சுவை யொழுக வன்னோ
ரொவ்வ நாற்‌ பத்தைந் தென்றங்‌ கோதுநா ளளவாய்ச்‌ சொன்ன
வவ்வண மாகப்‌ பன்னீ ராயிர முருச் செபித்தார்‌–88–

இணையிலா ரிசைத்த தேவ வின்னிசைக்‌ குகந்தா னாகிக்‌
கணையென மிளிர்ந்து நீண்ட கண்ணுடை நங்கை பால
னணை வரு மதிர்ச ன யகல்விசும்‌ பகட்டிற்‌ றோன்றுங்‌
குணமுறுந்‌ தொனியி னின்று குளிர்ந்தன னுரை சொய்‌ வானால்‌–89–

என்னகொல்‌ வெகுவாய்‌ நீரில்‌ கெந்தமைக்‌ குறித்தி யாரும்‌
பன்னுதற்‌ கருமரேகம்‌ பகலிமைப்‌ பொழுது நீங்காத்‌
துன்னியே யருமை யான தொழிலினைப்‌ புரிந்தீ ரென்ன
வன்னவர் செவியுட்‌ கேட்ப வறைந்தன னினிதி னம்மா—90-

அவ்வுரை செவியிற்‌ கேட்டவ்‌ வநகருங்‌ களிதுலங்கிச்‌
செவ்வியின்‌ வணங்கி நாயேன்‌ செந்தமிழ்‌ மறைகணான்கு
மெவ்வமின்‌ றுணர வென்‌ றிங்‌ கியைந்தன னடிய னேன் செய்‌
வெவ்வினை கழற வோத வேண்டு நாவீ ற வென்ன–91–

மாமகிழ்‌ மாறனுள்ள மகிழ்ந்துரை செய்வ னன்பா
நாமுனக்‌ கெதிரி னின்று நவிலுத லறமன்‌ றர்ச்சை
தூ மலர்‌ வாய் திறந்து சொல்லுவந் திரையி னப்பால்‌
நீ மனங்‌ களிப்பக்‌ கேட்டு வரைந்திடு நிமல வென்றான்–92–

என்ன லு மாடிப்‌ பாடி யிரு நிதி கிடைத்த தென்ன
மன்னு மா நந்த மென்னும்‌ வாரிதி படிந்து மாறன்‌
சந்நிதி யருகிற்‌ சென்று சரண் பணிந் தருடி யென்னக்‌
கன்னலு மமிழ்ந்து மேய்ப்பக்‌ கழறினன்‌ மறை நான்‌ கன்றே—93-

தூயமா தவத்து வைகும்‌ பதின்மர் சொற் றமிழு மாநா
லாயிர முரைத்துத்‌ தேவ கானமிங் கமுதி னேய்ப்ப
நீயிவ ணிசைத்த தாலே நிற்கு நாதமுனி யென்றே
ரேயு நா மமுமளித்தங்‌ கின்புற விருந்த பின்னர்‌–94-

நாதமா முனியுஞ்‌ சொன்ன நான் மறைப்‌ பொருளு மோர்ந்து
போதமுற்‌ றமலன்‌ செய்ய பொன்னடி பணிந்து நாயேன்‌
மாதவ மிழைத்த தாலிம்‌ மாறனுள்‌ ளுகந்து நாவா
லோதின னம்போற்‌ பாரி லொருவரில்‌ லெனவுங் கொண்டான்‌–95–

கருத்தி னிற்கடிய வன்பு கொண்டிலகு கண்ணகத்‌ துயிர்கள்‌ யாவையுந்
திருத்தி நம் ஸமய நிலை நிறுத்‌து பு திகைப் புறும் பல மதம் செகுத்‌
தருத்தி யொன்றபய மறை நிறுத்தி யு மநேக வைகலி வண்‌ வைகுவா
ருரைத்த விப் பெருந் தகை தனக்குரிய யோகி யாகுமிவ ரென்றனன்‌–96–

மறுவளரு மறுகால் வண்‌ டினங்கள்‌ பாட மடை திறந்தின்‌ மது வொழு கும்‌ வகுள மார்பத்‌
திருவளரு மெங்கோனிவ்‌ வண்ண மாகத்‌ திரிதண்ட மேந்துமெதி சேகரன் றன்‌
னருவள மெல்‌ லா மொழியா தன்னோர்க் கோதி யதிரிசனா மாறன் மவு னமதாங்‌ காலை
பொருவரு நன்‌ னிலை பிறழா திலகு மன்ன புனிதரங்க நாதமுனிப்‌ புகழ்சேர்‌ தூயர்‌–97–

தாயிழந்த சேய் போலு மெழிலி நீங்குஞ்‌ சாயலுறு மயில் போலுற்‌ தயங்கி வாடிச்‌
சேயிதழ் நன்‌ மரை மலர்க்கண்‌ பனிப்பத்‌ துய்ய திரை யுடுமா னில வலையஞ்‌ செழிப்புற்‌ றோங்க
வேயிருந்தோ ணங்கை திரு வயிற்று ணின்றே விண் சுடரோ னென வெழுந்து விளங்குஞ்‌ ஜோதி
மாயமறு மெய்யறிவின்‌ றளித்த கோவே மதியிலியேன்‌ மனம் புகுந்து வளருந் தேவே–98-

கருணை பொழி விழி முதலே நடு வீறில்லாய்‌ கலி வைரி புன் சமயக்‌ கலகர்‌ தீய
வருமொளியே வழுதி குல வாழ்வே துய்ய வண்டுளவப்‌ புயலாதி வழங்கு மஞ்சத்‌
திருவளருக்‌ துவசத்தா யரிய நான்கு செழு மறையைச்‌ செந்தமிழ்‌ செய்‌த தேவே
யுருகுமன வன்பர்களுக்‌ கன்றி யெட்டா வுத்தமமே யென்று பல வுரையா வேத்தி–99-

அடங்கரு மெம்ஞ்‌ ஞான முறு மனைய கோவா மமலனுக்கே பற்பல வுத்‌ தவங்கள்‌ செய்வான்‌
றொடங்கி யுயர்‌ குறுங்குடி வாழ்‌ நம்பி வந்தான்‌ தொன்னிலங்க ளுய்ய வந்த தோன்றல்‌ வந்தான்‌
மடந்தையர் தந்‌ திலக நங்கை மைந்தன்‌ வந்தான்‌ வழுதி குலத்‌ தொரு முதல்வன்‌ வந்தான் வந்தான்‌
ஓடுங்கலறுஞ்‌ சடவைரி வந்தா னோங்கு மாறனெனும்‌ திருப்பெயர்‌ கொளொருவன்‌ வந்தான்‌—100-

அனை முலையை யுண்ணாது கடந்தா னவ் விண்ணவிர் புளிக்கா வணத்தி லினி தமர்ந்தான் வந்தான்‌
வனையிசை மதுரகவிதம்‌ பெருமான்‌ வந்தான்‌ வண்மை கொள்‌ பராங்குசனே வந்தான்‌ வந்தான்‌
புனையுமது மலி வகுளா பரணன்‌ வந்தான்‌ பொரு விலருஞ்‌ சடகோபன்‌ போந்தான்‌ போந்தான்‌
நினை வரு மெய்ஞ்‌ ஞாந நநம்‌ மாழ்வார்‌ வந்தார்‌ நீசமுறும்‌ பரமதம்‌ வென்‌ னிமலன்‌ வந்தான்‌–101–

குயினினனால்‌ பொழிற் குருகூர்‌ நம்பி வந்தான்‌ கோதறு நா வீறனெ னுங்‌ கோமான்‌ வந்தான்‌
செயிர் மறுகுங்‌ கலி வைரி வந்தான்‌ வந்தான்‌ செழும் வேதற்‌ தமிழ்‌ செய்த செல்வன்‌ வந்தான்‌
எயிலெழு கொண்‌ டொளிரரங்கத்‌ தீசன்‌ கொங்க மீர்ங்கமலத்‌ தடி யாரு மிறைவன்‌ வந்தான்‌
மயர்வறு நம்‌ பொய்கை முத லாழ்வார்‌ தம்மை மகிழ்ந்த வய வங்‌ கொண்ட மன்னன்‌ வந்தான்‌ –102–

வண்டலம்பும்‌ பொழில் வழுதி நாடன்‌ வந்தான்‌ மறையவர் தம்‌ மனத்‌திருந்து வளர்வான்‌ வந்தான்‌
குண்டுபடு பேரகழி வளருங்‌ கோமான்‌ குளிர் மதமோங்‌ குறவந்த குமரன்‌ வந்தான்‌
விண்ட புனற்‌ றண் பொருநைத்‌ துறைவன்‌ வந்தான்‌ வேட்டவர் தம்‌ வினை யறுத்தாள்‌ விமலன்‌ வந்தான்‌
பண்டு நன்னாத முனியென்ப ரர்க் குகந்து பண்டைய நாலாயிரமும்‌ பகர்ந்தான்‌ வந்தான்‌–103–

என்றுபல சின்னங்க ளியம்பி யார்ப்ப வெழிலியென மங்கல பல்‌ லியமு மேங்க
பொன்ற யுவா னவருகந்து மலர் மந்‌ தாரம்‌ பொழிதர மண்‌ ணோர் குழுமிப்‌ புகழ்ந்து போற்ற
மன்றறரு மணி மாட மோங்கித்‌ தோன்று மணிநகர முழுதுமரு வளங் கொண் டோங்க நடாத்தி வந்தார்‌–
நன்று மன திடை மிகவா னந்தங்‌ கொண்டு நாடோறும்‌ பற்பல் விழா நடாத்தி வந்தார்–104-

இங்குள மகிழ்ந்திவணம்‌ ரங்க முனி யெந்த மிறைவனெனு மந்தண்‌ மகிழ்‌ நற வொழுகு மார்பற்‌
கங்கமல மொன்று முக நங்கை யணி பாலற்‌ களப்பறு ப லுச்சவ நடத்தி யருள்‌ மாறன்‌
பொக்கணி மி குந்தினி திலங்குறு மடிக்கே பொற் புறுப றொண்டு களை யற்புடனி யற்றாத்‌
தங்கி யவ ளந்திகழு மிங்குதிரமாகத்‌ தரித்திடுவ மென்றுத மனத்தி லெணி யுற்றார்‌–105-

ஆர்வமொடு மிவ்வணம னோர் வருகு நாளி லட்ட திசை பொங்கிசை தம்‌ மிட்டதெய்வ மாகுங்‌
கார்வளரு மோதிமினை நேர்வுறு மருங்குற்‌ கற்புமிகு பொற்றிருவி னற்புடைய மன்ன
னார்வளரு மன்பினொடு மோர் பகல்‌ கனாவி னத்‌து திகிரிப் படை கொள்‌ சுத்த வுரு வோடு
நீர்வளரு மப்பரர்மு னேர் பெறவ டைந்தே நின்‌ நினைய பற்பல சொல்‌ சொற்றிடுவரம்மா–106-

திரைக் கட லரைக்குடு தரைக்குளிசை கொண்டோய்‌ சிறு பர வாதி யர்கள்‌ வீறினை யடக்கும்‌
விரைத்தனி மிழ்த் தொடையு ரத்தணியு நந்நா வீறனென நாம முறு மாறனை யடுத்தே
மரைத்‌ துணையை நேரடி சிரத்திடை புனைந்தே வணங்‌ மிக வேண்‌டிட விணங்கியவன்‌ வந்தங்‌
குரைத்‌திட மறைத் தமிழ்‌ சிரத்தையொடு கேட்டு ளுகந்திட விருப்‌ புள தவந்தனை யொழுக்கும்‌-107–

நந்தம்வள நன்னக ரடைந்திடுதி யென்றே நவின்றிடவு மொப்பரு கவின்றழையுமாற
னந்தமிழ்‌ மறைப்பொரு ளுகந்தினி துரைத்தா னடிக்கினிய வன்பவர்‌ திடுக்கென விழித்தே
சிந்தை தனி லுன்னியுட னிந்தநகர்‌ செல்வான்‌ சிதைவறு கதிர்க்‌ கடவு ளுதயமு னெழுந்தே
நிந்தையறு தண் பொருநல்‌ வந்து புன லாடி நித்திய கடன்களை முடித்துட னெழுந்தே.–108–

செந்தழ னிறத்த பல சந்த மணி மேவித்‌ தினகரனை யொத்திலகு சினகர மடைந்தே
நந்திறைவ னுக்கருள்‌ புரிந்துதவு மாதி நாதனை யிறைஞ்சி வலமேத மிலடைந்தே
யிந்து தவழ்திந்திரிணி மேவலு முகந்தே விருந்தருளு நங்கையி னருந்தவ மெழுந்த வந்தமறு மெந்தைமு னடைந்தனையர்‌ தாமு மப்பரம னொப்பறு மலர்ப் பத மிறைஞ்சா–109–

மாவல நிறத்திலணி கோவலாம்‌ மாதி மாலினை வழுத்து றவே கோலிமுன மொன்றுந்‌
தேவென வுரைத்த பதி கந்தனை வினாவிச்‌ செப்பமோ டளித்தபரி சர்ச்சையிலு மாறன்‌
மேவிய நன்‌ னித்திய வி பூதியொடு லீலா விபூதியிலு முள்ள பல சேதநர்‌ களுய்யக்‌
கோவென விருந்து நனி போதக மெனுஞ் செங்‌ கோலினை நடாத்தி வருகின்றன னுகந்தே–110–

வானவர்கள்‌ சித்தர் பல தானவர்க ணித்தம்‌ வந்தடி பணிந்‌ து மலர்‌ சிந்தியே வழுத்த
நானில மதற்குளுள மானிடர்களெல்லா நாடொறு மெழுந்தபு பலாண்டிசை பயின்றே
தேனுகு மலர்ப் பத முறத் தொழுது நிற்கத்‌ தேவ ரடி யார் நடன கீதமு முழங்கக்‌
கோனென விருந்து தமி ழாரணம்‌ விளங்கக்‌ கொண்டிரு விபூதி புரிகின்றன னுகந்தே–111–

திரு நாதமுனிப் படலம் முற்றும்‌

ஸ்ரீ சடகோப திவ்ய சரித்திரம்‌ முற்றும்‌-


——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீசடகோப திவ்ய சரித்திரம்-பகுதி-2-

June 2, 2026

திருப் புளிப்‌ படலம்‌

பருமா னிலத்தி லடர்நீச முற்ற பரவாதி யர்க்கியமனாய்க்‌
திருமாதிருக்கு மணிமார்பருக்க திக நேசருக்கினியவாங்‌
குருவாயுதித்த வெிராசன்‌ மெச்சு குண சீல னித்தனடியா
மிரு தாமரைச் செம்‌ மலரே மனத்து ளெளியே மிருத்தி நினைவாம்–1-

மதியோடருக்க ரிருபாடு முற்று மருமாமரைச்‌ செம்மலரே
பொதிநீல்வரைக்கு நிகராகி நின்ற பொருவான தற்ற பெருமா
னெதிரே திருக்கு முதவாய் முகிழ்த்த வெழில் கால்‌ கிடத்தி யிறையும்‌
நிதியாலிழைத்த கடமாமுலைப்‌ பெணிதியோடு மெச்சு பொழுதில்–2-

இமையோர் வணங்க முனிவோரிறைஞ்ச விறையோரிதென்கொல் விபரீ
தமதாயதென்று வகையோடிரங்க வடியார்கள்‌ சங்க மறை சொல்‌
விமலாதிமன்‌ற னருளானதின்‌று வெளியானதென்று மகிழக்‌
கமமாய துன்ப நிறை வாரி நின்று கரை காண வன்பர் கணமே–3-

மிடியே மிகுப்ப வதினோ மவர்க்கு மிளிர்மா னிதிக்‌ குவையுமே
னெடுநாடிருக்‌ லெயர்‌ வோடிருக்கு நிலமானிடர்க்‌ கிருகணு
மிடைசேர்‌ தரக்கொ ளவரோகை தற்கு மினிதே யிரட்டி யயில்வே
லுடையானொடுற்ற விள வாணகைக்கு மொழியா மகிழ்ச்சி எழவே–4-

தரைமீது சற்று மசையாது வைத்த தலமே கிடக்கு முளைதான்‌
புரை தரு மத்த வளையாதி மைத்த புகழ் சாயல்‌ கண்டு மகிழ்வான்‌
மரைநே ரரிக்க ணுறவே விழித்து மணி வாய்‌ திறந்து பொதுவர்‌
நிரையே களிக்க வவர்பாலுதித்து நெடு நா டவழ்ந்த தெனவே–5-

இருதோள்‌ குலுங்க விருகா தணிந்த வெழிலே மிகுந்த மணி சேர்‌
தருநீடு குண்டலமராக வொண்வி றரலோடிலங்க வவிருந்‌
திருமார்‌ பணிந்த வணியே சரிந்து செகமீ திழிந்து புரளச்‌
சுருணாறு குஞ்சி மிசையார் கலன்‌கடொடை யோடசைந் தொளிரவே–6-

பிறையோ டிகற்றரு மனோகரத்தின்‌ பிழை தீர்‌ நுதற்க ணணியு
நிறைவா லொளித்‌ தரளமே யிழைத்த நெடிதாய சுட்டி யலைய
விறையா மடிச்செ நறையோடு புத்து றிரு தாமரைச்செ மலர்மே
லுறை யோதி மத்தண்‌ சிறை யோதி மப்புள்‌ ளொலீயே தரக்க லெனவே–7-

எணிலாத தன்மை யுறுபார வண்ட மிசையா வடங்கு மிடமா
மணிமேவு பண்டி யரைசேர்‌ சதங்கை யொடு கீழ்‌ சரிந்து புரளப்‌
புணராய செந்துவரை நேரிலங்கு புகழ் தாளி னங்குலிகளொ
ணிணர்கோடை யங்கையுடன்‌ மாமுழந்து மிடவே சிவந்த நிறமே–8-

திருமாமடந்தை புவிமாது செவ்வி திகணீளை தங்களுடனே
யொருநீல விண்டு நிகராக நின்ற வொளிராதி தன்னை வலமா
யருகே தவழ்ந்து வரு போதிலய் யனனையோடு தந்த மரெலாம்‌
பெரு கோகை மண்டி யெழ நீடு கண்டு பினிலே தொடர்ந்‌து வரவே–9-

எழிலே மிகுந்த மதவேளு மண்டி. யெதிர்காணுறிற்றன்‌ வடிவவ்
வுழியார வெள்ளி யணை வானோர்‌ பெண்மை யுறவே விருப்புளடையக்‌
கழிதே லங்க வருளாதி நின்று களி நீடிடத்தின்‌ வடபால்‌
வழியாகி நின்ற மதி மேவு திந்திரிணி நீழலுற்‌ றனனரோ–10-

மாக னகக் கலை சூழரையிற்புனை மாறனணைத் தலமா
நாக மதைக்கலி யேகுது முற்பட ஞாலமடுத்‌ தெகின
மாகி யுதித்திடு போதி யெனச்சொல வார வழுத்‌தி விரைந்
தேகி யுரைப்படி. யாய திருப்புளி யேர்தகை சிற்பகர்வாம்‌.–11-

கஞ்ச மலர்த்தவி சந்தர முற்றெழு கண்ணோரு வெட்டனொடு
மஞ்சி னிறத்தடை கண்டர்‌ தமக்கு மகிழ்ந்தினி தெட்டரிதா
யெஞ்சலினித்திய வும்பரிலுற்றிட மெங்கும்‌ விரிந்‌ திடலா
லஞ்சயினற்படை யங்கை தரிக்கு மரிந்தம னொக்குமரோ–12-

வானக மண்டல மோர்கையின்‌ மன்னிய வாணி தனத்‌ திசையா
மேனனிகொண்டிடு மோதி மனண்ணிய வேலை யுயிர்ப் படையா
நானன்‌ முகங்களு நாடி யிரும்மரி தாமரை பெற்றிடலாற்‌
றானவருங்‌ கமலாலய மன்னு பிதாமக னொக்குமரோ.–13-

வானதி தன்னுடன்‌ மீத விரும்பிறை வான்முக மஞ்சுறலா
லூனமிலங்கமலாதன மன்னய னோர் தலை தங்குறலாற்‌
றூனகு கொன்றையு மாடரவுந் தலை சூடியை யொன்றுமதே
ஞானமிகுந்தந மாறனுகந்தன னாடிய திந்த்ரிணியே.–14-

வென்றிமிகுத்திடு மங்கதமுற்று விளங்கு பதிக்குமடி
நின்றெவருக்கு மகிழ்ந்தினி தெட்டி னிமிர்ந்து சலிப்படையா
வன்றிறலிற்படுமண்ட முகட்டிடை மன்னி யுணிற்குமதை
யென்ற முறச்சரிவின்றி நிறுத்தெழு வென்னு முரைக்குறழா–15–

கொண்டபசுஞ்சுடர்‌ விண்டுவையுஞ்‌ சிறுகுன்‌று கடம்மையுமே
கண்டதை யொன்று மணங்கையினன்‌ கவிகை யெனும்‌ வண்ணமுற
வண்ட மடங்க லு மண்டி விரிந்தெழு மந்தர மாந்தனையும்‌
வண்டலையும்‌ பல தண்டலைதம்மையு மன்னவே கண்டிடிலே.–16-

காயொடடை திரள்‌ சேர்தரு நற்கனி காண மிகுக்குமலர்‌
தூயமிகக்கெழு காலடி பட்டுயர் சோர்வி றிசைத்‌ திசைப்போ
யோயடை யுற்றிடு மோவல துக்கு விணோடுநதிக்குள்‌ விழா
மேயலை கிட்டுமோ வோர்கில மித்தரை வீழ்தரலற்றனவே–17-

ஆருமலர்க்கணணாலு மளப்பரி தாய் முடிவற்றி மிருஞ்‌
சாருமெணற்றப லாயிர மற்படு சாகை தழைத்திடலா
லாரணமொக்கு மலாமலு மற்று வலாரி நிகர்க்குமதே
சேருமை யுற்றொளி சேர்சசி தொட்டுயர்‌ சேணகருற்றிடலால்‌–18-

வாரிகலிங்க மெனா வரை கொண்டிடு மானில மண்டிமிரு
மாரிருள்‌ வெம்பகை போழ்தர வெங்கதி ராமசி கொண்‌ டெழுகுஞ்‌
சூரிய னொன்றினராவித னுண்ணுழை தோறு மெஞ்ஞான ரவி
சாரொளியா லொரு தீபமெனும்படி. தானொளி தந்திடுமால்‌–19-

பாயுமிதிற்‌ சிறிதேனு முரைத்திடில்‌ பாருள மட்டுமிழி
வாயுவுடற்படு நோய்களனைத்தும்‌ வராமலடர்த்திடமாற்‌
றீயகனற்‌ கணுவேனுமிதிற்‌ படில்சேகுரு கப்‌ புனல்க
ளேயது வெத்தல மோவவ்விடத்தினி லேற விடுத்திடுமால்‌–20-

யோகவருங்‌ கொடி தாய தொழில் புரிவோர்களு மிவ்வழியா
யேக வரும் பொழு தீதவர்கண்படி லேய பவந் தொலையும்‌
ஆகவ நன்னகர்‌ மேவி விளங்குவராகில்‌ விளம்புவர்‌ யார்‌
தாகமொடும்‌ வழிபாடு செயும்‌ மவர் தாமடையும்‌ திறனே-21-

தாறுபடுங்கமுகேர்பெறு தெங்கொடு சாமரையிற்‌ பொலியச்‌
சீறி மலர்ந்தகல்‌ வானுயருங் கவிர்தேரின்‌ விளக்கொளிரச்‌
சூறடி விண்டவழ்‌ சோலையெறுழ்‌ மனர்தாழ்ம்‌ தயனிற்பவன
மாறனெனும்படி பூவரசுற்றிடும்‌ வாளர வப்புளியே–22-

அத்தனறா மாவலி பான்‌ மூவடி. மண்‌ வாங்ய நாள னைத்துந் தள்னுள்‌
வைத்தடக்கு மலரடியே மானவிரு வானமெலா மலர்ந்து நீண்ட
இத்தகைய புளிநீழற்ற வழ்ந்‌ தோடிச் சென்‌ றணைந்‌ தவிள வலாய
முத்தி நிலமடி தொழுவோர் தமக்கருளும் பரன தன்‌ றன் மூலம் சேர்ந்தான்–23-

பாரடையிற்‌ பரகதியிற்‌ சேர்த்தருள்வாம்‌ வடபாற்கட்‌ பரிந்துமுன்‌ போய்‌ ஓரடியிட்டினிவரவின் றொழுதிரெனத் தென் புறத்துற்‌றுறையும்‌ தீய
காரடமற்படு முடலத்தே மனருங்‌ கொடுந்‌ தமரைக்‌ காய்வான்‌ போலச்‌
சீடரப்புளி வேரிற் சென்ற பரன்‌ றெக்கண மாந் திசையை நோக்கா–24-

ஐம்புலமாயந்தனை நிராகரிக்கும்‌ யோகியர்கட்‌ ௧ றிவிப்பான்‌ போற்‌
செம்பது மாதனந்தரித்‌துட் கரிகாப் புடையகலாச் செழித்து நீண்டு
வம்புறுமற்கமல நறும் போதெனவே யிடையிடைசெவ்வரிகளோடிப்‌
பம்பருட்‌ கணிணைபிறழா தெழிலாரு நாசி நுனி பார்த்துமாதோ–25-

வடமேருப்‌ பொன்கிரி நின்றிழிதரு பல்லருவியென வயங்குமார்பி
னிடமே வொண்ணிலவு மிழும்‌ வெண்டரள மணியார மிலங்கவே நேர்
படமேலி நிமிர்ந்த மிருமரகத நல்வரைய தனுட்‌. படிர்த சோதித்‌
தடமேய செங்க தரிற்‌ றிருமேனி யொளி செய்யச்‌ சலியானாகி–26-

பல்லாயிரங்கோடி யண்டமு மவ் வண்டத்துட்‌ பரந்து வாழு
மெல்லாமுந் தானாகி நின்றருளு முதலாய வெழில் கொள்‌ சோதி
வில்லாரைம்படையாதி நிர்மலனே பரமாயவிமல னென்ன
மல்லாரும்‌ வலது கரத்தில்‌ குசின்முத்திரை தரித்து வயங்கிமாதோ–27-

மற்றோர்‌ செங்கர கமல முன்னொரு நாட்‌ டோன்றிய வம் மலரே யன்னப்‌
பொற்றோ யுமப் போதிற்‌ புடை பரந்த வுந்தியின் மேற்‌ பொருந்தச்‌ சேர்த்தி யுற்றோடும் பேருயிர்ப் புள்ளு ற வடக்கி யாம்பலம்போ துறழ்வாய்மூடி
முற்றோகை யொளி பரந்‌து வாண் முக நின்றொளி செய்ய மோனமாகி.–28-

அகலுகில்லேனிறையு மெனத்‌ திருமாதுள்ளுற மகிழ்வுற்ற மருமார்‌ சகமுழுதுந் தன்னுளுறக்‌ தானடக்குந் தாட் கமலத் தார்வம்‌ வைத்துப்‌ பன்
பகர்தரக்‌ கண்ணகத்‌ துழலு மிரு வினையாம்‌ பவந் தொடைத்துப்‌ பாநாடீயும்‌
நிகரிலருர்‌ தகைய வட்டாக்‌ கரப்பொருளே தாரகமாய்‌ நெஞ்சுட்‌ கொண்டு–29-

உருகிய பேரன்பினொடும் வந்தணைந்தா ரிருவினை யீர்த்‌து யர்வானீயத்‌
தருமுதலே மெல்லணையா யந்நிழலே மேனிழற்றுஞ்‌ சத்திரமாகப்‌
பெருகிய மெய்ஞ்ஞானச் செங்கோலோச்சி வீற்றிருந்து பிறங்னானா
லிரு நிலங்கொள்‌ மருளகலச்‌ செங்கதர் போற்‌ றென்பாலி லெழுந்தானம்மா–30-

இவ்வணம்‌ வீற்றிருந்‌ தருளுமேந் தறனைக் கண்‌ டெளிதி னெடுப்பா னெண்ணிப்‌
பவ்வங்கொளலை வாரி தன்னிலும்‌ பேருவகை வெள்ளம் பம்பி யோங்‌கச்
செவ் வண்ணந் திகழ் சுடரோன்றனை மின்சேருந்‌ தகையிற்‌ றழுவினாளான்‌
மைவ்‌ வண்ணந் திகழோதிப்‌ பொன்னுடைய நங்கை யெனு மடந்தை தானே—31-

கையாரத்‌ தழுவியணைத்‌ தெடுத்தளவிற்‌ பேர்வரைபோற்‌ கனப்ப நோக்கி
யையோ வீதென்கொலெனப்‌ பதைபதைப்புற்‌ றசைத்‌ தெடுத்து மசையா னாகி
மெய் சோரக் கை சோர மாழாந்து வாய் குழறி மிகவே விம்மி
மையோதி யெழுதியவோர்‌ சித்திரம் போலத்‌ தனையு மறந்தான் மன்னோ–32-

மருவிரியுங் குழலுடைய நங்கை யெனும் மட மாதோர் வண்ணந்தேறிப்‌
பொருமலொடு விம்மலு மென்மே லெழவுள்ளுற வடக்கிப்‌ பொரு வேற்‌ கண்ணின்‌
றருவியெனப்‌ புனல்சோர வாம்பலென வாயங்‌ காந்தறைந் தாண்‌
விரு நிலனும்‌ பெரு வானுங்‌ கருதுறவே யிசை வாய்ந்த விறையோற்‌ கன்றே–33-

போதகமோடிகல்‌ வேடற்‌ இருவானமீந்து முகிற் பொலிந்‌து நின்ற நாதனருட்‌ பல்காற்‌ சிந்தித்‌ தோகை மீக்கிளர்‌ நனியுந்தேசார்‌காதலனின்‌ றிங்கோடி த்‌ தவழ்ந்ததுவே பெறும் பேறாய்க் கருதி நின்ற சீத நறுங்‌ களி வண்டு பாண் முரலுந்‌ தொடை யகலத் திறல் வேற்‌ கோமான்‌–34-

பருந்தாரயில் வாட்‌ படை விழியாள்‌ பரிவிற்‌ சோர்வுற்‌ றுரைத்த
திருந்தாரங்கை வேனுதி போற்‌ செவியினாடே நுழைதரலும்‌
வருந்தா நின்றுள்ளினி திரங்கி மாழாந் தீ தென்‌னதிசயமென்‌
றருந்தாட்‌ கமலத்‌ தவிர் கழல்‌ களதிரக் கடிதிற்‌ குறுகினனால்‌–35-

மழஞ்சே றொளிவிட் டெழுங் கதிரை வளையுமூர்‌ கோள்‌ சூழ்ந்ததெனக்‌ குழைஞ்சேயுள்ளந் திருந்தலர்க்குக்‌ கொடுமை கூருங் கொலைவேலான்
பழஞ்சேயாம்பற்‌ றுவர்‌ வாய பாலனாமப்‌ பரனைத் தன்‌
முழைஞ்சேயேம வரை யன்ன மொய்ம்பாற்‌ றழுவி யெடுத்தனனால்–36-

தண்ணென்‌ நதி சூடிறையன்னான்‌ றாதையாய தாட்கமலத்‌
தண்ண றன்னோடும்ப ரெல்லாமறியச்‌ சுடரை யெடுத்தளவிற்‌
றிண்ணஞ்‌ சிகரம் போற்‌ கனப்பச்‌ செழியர்‌ கோமான் றிறலழிந்து
கண்ணிலாதான்‌ பெற்றிழந்த காட்சி யண்ணலா யினனால்‌–37-

மன்னர்கோமா னெடுத்ததற்‌ பின்‌ மாழாந்துருகிக்‌ தமர்குழுவுந்‌
துன்னுங்‌ கதிர் வேன ராதிபருந்‌ துணைமென்கொங்கை நுண்மருங்கு
லின்னல்கூரப்‌ பணைத் தண்ணாந் திறுமாந்திருக்குங்‌ குவடிணையா
மன்னம் போலு நடையாரு மசைத்‌ தசைத்துப்‌ பார்த்தனரால்‌,–38-

தம்மாலாகுந் திறத்தினொடுந்‌ தழுவி யசைத்‌ துப்‌ பார்த்தளவிற்‌
செம்மா மேனித்‌ தனி முதல்வன்‌ சிறிதுஞ்‌ சலியாலகை நோக்கா
நம்மாலாகா வகையன்றி தாறுங்கதிர்காலிப்‌ புதல்வன்‌
செம்மாந்‌ திருக்கும்‌ களியானைத்‌ திரட்குமசையா னென்றனரே–39-

சனித்தநாட்‌ டொட்டின்‌ றளவுஞ்‌ சலியாத ணுவுமதி விரைவி
லினித்த செவ்வாய்‌ கண்டிறந்‌ தின்றெளி திற்றவழ்ந்திங்‌ கோடியதால்‌
பனித்த நெஞ்சில்லாதார்‌ தம்‌ பார்வை யெச்சிலெய்தியதோ
தனிச் செஞ்சுடரே யெனவொளிரித்தனைய ற் கென்பார் சிலரன்றே–40-

மருந்தனின்சொற்‌ நிருமாது வளரு மணிமார்பன்‌ கொல்லோ
திருந்து, தனிச்‌ செங்கோ னடத்துஞ்‌ சேனை முதல்வன்‌ தான்‌ கொல்‌லோ
கருந்தண்ணீர்‌ மண்ணிடத்தேதோ காரண த்தின்‌ பொருட்டாக
அருந்தவத்‌ திம்மன்னவன்‌ பா லடைந்தார்‌ கொல்லோ வென்பாரால்‌–41-

தேனார்கமலத்‌ திருமகட்குந் திரைப்பார்‌ மகட்குந் தனிச்‌ செல்வக்‌
கோனாதனுக்குக்‌ குடிகுடியாட்‌ சேய்யுஞ்‌ செழியர்தங்‌ கோமான்‌
மேனாளிழைத்த மெய்த்‌ தவங்கள்‌ விளங்க முற்று முடித்திலனோ
ஏனாமிவ்வாறிப்‌ புதல்வற்‌ இருக்கும்‌ திறனென்பார்‌ சிலரே—42-

வாளை கமுகு மடல்‌ கீறு வயல்சூழ்‌ குருகாபுரி யளிக்குங்‌
காளையன்னா னிம்மை தனிற்‌ கணமும்‌ தீமை நினையானாய்‌
வேளை மூன்று மெய்யறமே விளங்கச்‌ செய்தான்‌ யாம றநிவோங்‌
கோளை யெய்திக்‌ கொடுமை யன்னன்‌ கொண்டதிறனெ னென்பார்‌ சிலரே–43-

வியனார்ப தம மென்போதே மிளிருங்‌ கண்கால்‌ கரமாயு
முயர்வா னிலவினேர்‌ மதியே யொளிமா முகமாயும்‌ படைத்தே
யியலாரிப்‌ பாலகன்‌ றனக்கங்‌ கிவ்வாற ளித்தவீர்ங்கமலத்‌
தயனே கொடிய பாவியென வறைவா ருள்ளங் கரைவால்-44-

என்று கூறுமொழிகளைக்‌ கேட்டி றுமாந்‌ திணைந்த வன்னமுலை
துன்றுங்குழ னங்கை மாதுர்‌ தோன்ற றானு முள்ளுடைந்து
கன்றிமாழாற்‌ தனராடிக்‌ கண்ணீர்‌ தமை மஞ்சன மாட்டக்‌
குன்றுபோலப்‌ பொலிந்து நின்ற கோமான்‌ முன்னரிவை சொல்‌வார்–45-

கொண்டலிற்‌ பொலிந்து நின்ற கொழுஞ்சுடர்ப்‌ பரிதி வேந்தே
வண்டர்தந்‌ துயரந்திர வகலிடத்து தித்த கோவே
பண்டொரு விலங்கிற்கோடிப்‌ பாலனம்‌ புரிந்த வுன்றன்‌
மண்டரு ளினையின்‌ றெங்கண்‌ மறைத்தனை யெம்பான்‌ மன்னோ–46-

வழிவழி நினக்காட்‌. செய்து வர்த வல்வினையே மின்று
கழிபெருங்‌ கொடிய துன்பக்‌ கடலிடையாழ்த னன்றே
பழிவழி யொழுகா வன்பர்‌ படுந்‌.துயர்‌ காப்பா யென்று
மொழிவது பொய்யதாமோ முதற்பரம்‌ பொருளிரங்காய்‌–47-

அறிவிலாச்‌ சிறியரே போலெதுவு நின்னடியலாது
பிறி துயர்‌ நினைந்ததுண்டோ பெருந்துய ருழன்று வாடுங்‌
குறியினைப்‌ புரிவதென்னோ குணப்பெருங்‌ கடலேநாவி
செறிகுழற்‌ றிருமணாளா செழிக்க வின்னருள்‌ செய்வாயே–48-

அருளிழிந் தொழுகு தாதை யன்னை மெய்ஞ்ஞான மோதுங்‌
குருமுத னைத்து நீயாய்க் கொண் டினிதிருக்கு மெம்பாற்‌
பெருகிய வருள்‌ செய்யாதே பிறங்கு மெய்ப்பொருளே மேன்மேல்‌
வருதுய ரதனின்‌ மூழ்க வைக்தனை யென்கொலின்றே–49-

வன்புறு மனத்தேன்‌ நின்பான்‌ மனிமக வருள்வா யென்ன
வன்புடன்‌ வேண்டுங்காலை யளித்திடா தொழியின்‌ மேவுந்
துன்பமொன்‌ றதுவே யாகுந் தூய்மறைப் பொருளே யன்றி
யின்ப மதருள்வான்‌ போல விடர்‌ பல விளைத்ததென்னோ–50-

மூல மென்றொருகாற்‌ கூவு முன்னரே யடைந்தோர் மாவி
னேலஞரொழிந்தா யின்றிவ்விளி வரலிடரின்‌ மூழ்கச்‌
சாலவு முழன்‌ற நேகந் தர முனை யழைத்து மென்னோ
வாலடை துயின்ற கோவே யருள் செயா திருந்தவாறே–51-

உள்ள நெக்குருகி யிவ்வாறொலி திரைப்‌ பரவை ஞாலத்‌
தெள்ளருஞ்‌ சிறப்பு வாய்ந்த வெரி மணிப்‌ பூணாரேத்தப்‌
புள்ளுயர்‌ கொடியனாங்குப்‌ பொலிந்தருள்‌ புரியானாகத்‌
தள்ளருந்துயரவாரி தன்னுளாழ்ந்‌ திருந்தாரன்றே–52-

வரிசிலைச்சுவடு தோய்ந்த வரை பொருவயிர த்திண்டோட்‌
குரிசிலாண்‌ டகைமையாலுட்‌ கொள்ளஞ ரடக்கா நின்றான்‌
பெரிய வாட்டடங்கணல்லாள்‌ பேதைமைக்‌ குணத்தாலன்ன
துரியனைக்‌ கண்டி கண்டு துயருளாழ்ந்தினைய சொல்வாள்‌-53-

நஞ்சிற்‌ பொலிகண்‌ ணங்கையர்‌ நகை கண்டயல்‌ சூழ்ந்தே
கொஞ்சத்தனி மஞ்சத்திடை குலவித்துயில்‌ வளர்ந்தென்‌
நெஞ்சத்‌ துயரகலக்‌ களிநிலைபெற்றிட வருளா
விஞ்சுற்றுயர்தருமித்தரு வேருற்ற தென் மதலாய்‌–54-

தளிர்மெல்லடி தனவைப்‌ பழி நுதலாய்‌ குல மதலாய்‌
மிளிரொண்மணி மனைவாய்ப்‌ பவ வினையாள்‌ செயவிழைவா
லொளிமேனி சற்றசையா விடு முழையே கிடந்தனையே
யெளிதாயிவனுறவே யெழுமிகல்‌ வந்த தெனிறையோய்‌–55-

இருகட்புல னில்லாதவர்க்‌ கிடையே யளித்‌ தன்றே
பருகுற்றிடு வகைபோ லொளிர்‌ பனிமாமதி நுதலாய்‌
மருவுற்றெழு களியுட்கொளும்‌ வகையே தவழ்‌ நடைசெய்‌
துருகித்‌ துயருற வென்னதை யுடனே கரந்தனையே–56-

பழுமாமர விலைமேலோரு பகலோர்‌ சிறுமகவாய்த்‌
தழுவாவிழி துயில்வோனருட்‌ டகையால் வரு மகனே
யெழுநீள்பசியதனான்மல ரெழில் வாய் திறந்‌ தினிதா
யழு மோசையை யெளியேன் செவி யடையுந் திற னென்றே–57-

துனியே மிகு மா பாதகத்‌ தொழிலே யரு வினையே
னினிதாய்‌ மடிமிசை வைத்‌ தம மிழிபானிறை வூட்டக்‌
கனிவாய் திறந்‌ துண வென்றுகொல்‌ களியோடது காண்பேன்‌
பனிமாமதி மரபூடெழு பகல்‌ போலொளிர்‌ மகனே–58-

இங்குன்றன தணியும்‌ பெருவெழிலார்மதி முகமும்‌
பொங்குஞ்செழு வகுளப்புயம்‌ பொருவு நயநயுக
முங்கண்டவர்‌ கண்ணெச்‌ சிலதுடையப்பல காப்புத்‌
தங்கும்படி செயவென்றெழு தருவா யொளி யுருவே–59-

கோடுஞ்சிலை நுதலாயணி குழையார்கன மரும்பப்‌
பாடுள்ள விர்‌ பனி தூங்கவே செங்கீரைய தொன்றி
யாடும் பருவ மிதாகலினரிதாய தொல் வினை யேன்‌
நீடுந்துயரது தீர்தர நீ யென்று புரிவாய்‌.–60-

துன்றுங் குழன் மட மங்கையர்‌ சூழ்வுற்றனர்‌ தாலோ
வென்றுன்றனை யாட்டச்சுட ரெறிமா மணியதனா
லொன்றும்படியிழை தொட்டிலிலோடித்‌ தவழ்ந்தேறி
மின்‌ றுன்றிய கழலாய் மலர்‌ விழி யென்று கொ றுயில்வாய்‌–61-

என்றென்‌ வயிறிடை நின்று நீ யிவண் வந்‌ துதித்தனையோ
வன்றொன்றியே யிது நாள் வரை யஞரிற்பட மூழ்கு
முன்றன்றவ முது தந்தையு முறவோர்களு மியானுங்‌
குன்றில்‌ களி கொள வென்று கொல்‌ சப்பாணி கொட்டுவையே—62-

சித்தந் தனிலுறு வெந்துயர்‌ தீரக்களிசேரக்‌
கத்துந் திறலதுகண்டு நீயினியாகிலுங் கனிவாய்‌
முத்தந் தர வெழுவாய் தரு மூலத் துறைவோ யென்‌
புத்தென்‌றுரை நரகப்பிணி போகப்பணி மகனே–63-

விட்டுக்கதிர்‌ பொலியுஞ்சுடர்‌ மிளிரும்‌ பசுமுகிலு
மெட்டிக்கு மகிழ வந்தென விவரிம்மர முறை வோய்‌
வட்டச்‌ சிறு பறை கைக்கொடு வரு சிற்ற வருடனே
கொட்டித்‌ திரிதரலென்‌று கொல்‌ கொடியே னிடர் கெடவே–64-

தாராகண நடு நின்றோளிர்‌ தருமாமதி யெனவே
வேரார்‌ தருசிறு பாலகரிடை மன்னுற வெய்தி
வாரார் முலை மடவார் மலி மறு கூடொளிர்‌ சிறிய
தேரார விடுத்‌ தென்று கொறிரிவா யொளியுருவே–65-

வரமாமலரிணை நேரடி மணி நூபுரமொலியே
தரநாடொறும்‌ விரைவோடியே தள வெண்ணகை யிளையார்‌
பரவாவகன் மறு கூடிழை பயில்‌ சிற்றில் கண்‌ முழுதுந்
திரமாக வெனொரு பாலக சிதைத் தென்று கொல்‌ வருவாய்‌.–66-

அணிமாநகருறைவோர்‌ பல ரடையா வெனதிடையே
மணிவார்‌ குழையுடையாயுனன்‌ மகனா டொறுமளவில்‌
திணியோடின றருவம்புகள்‌ செய்கின்றன னெனவே
பணியாவெழ விறை யென்ற.கொல்‌ பயில்வாய்‌ மறுகிடையே–67-

பெருநீருலகிடை மாமகள்‌ பெருமானுயர்‌ மதமே
மருவாமலி, தரவே செயுமனர்‌ கோனளி மகனே
திருமாதுறுமணி மாளிகைத்‌ திருவே முதன் மருவா
திருமாமரநிழல்‌ வைகுறுமிதுவோவுன விதியே–68-

கடல்வேலை கடந்தாலென விழிநீரிருபுடையும்‌
விடவே யெரிதரு வெங்கனலிடைமென்றளி ரெனவே
யுடல்சோர்‌ தரமாழாந்தினி துருகுஞ்‌ செயல் கண்டு
மிடரேனென வுரையாடலை யிதுவோ வுன தறமே–69-

மிகவே நறை யுகு மாலுகவிரி மாலையினிறையோய்‌
மகனே யருமகனேயென மதசோர்தரல்‌ கண்டே
யுகவாவெனதனைநீ யினி யுருகே லென வுரையா
வகமேவிய துயர் தீர் தர வருளாதது தகவோ–70-

நகுமின் சுதரிசனன் பத நளினங்களை மறவேந்
தகவெந் துயர் கொள மன்னுயிர் தமை யெங்‌ கணு நலியே
மிகு நல்லற வினை யன்‌றியே புரியோ மொரு வினையுஞ்‌
செகுவெந் துயரிடை மூழ்குறு செயலென்ன கொல் விதியே–71-

கொலை பழுத்தொழு கூன்‌ வைவேற் கொற்றவர்‌ குழுமி நந்தந்‌
தலைமகனிவனே யென்று தாங்கருந் திறைகள்‌ கொண்டு
சிலை நுதற்றிருவே யுன்றன்‌ நிருவடி போற்றா நின்றார்‌
உலைவு றென்‌றுயரந் தீர வுகந்ததைக் கண்ணாற் பாராய்‌-72-

சிற்றிடைக் கன்னிமாருன்‌ சீரடிச்சுவடு காண்பான்‌
முற்றிலந் தூதை கொண்டிம்‌ மூதெகினத்தி னீழற்‌
சுற்றிலுஞ் சிற்றில் செய்து துன்னி நின்றார்‌ நீயத்தைப்‌
பற்றுமென்‌றுயரந்‌ தீரப்‌ பணி மலர்க் கண்ணாற்‌ பாராய்‌-73-

செவ்விய வொளி கொள் மேனிச் செல்வனோர்‌ வளர் வெண்டிங்கட்‌
கொவ்வ நாடொரும்‌ பூரித்து முடல்‌ சிறி தசையானாக
வவ்வணமிருப்பக் கண்டே யறற் குழஞரிலாழ்ந்தாங்
கிவ்வணம் பருவந்தோறு மிரங்கி யுள்ளுருகா நின்றார்‌—74-

எல்லியும் பகலு நீங்கா தியாவருமிருப்பச்‌ செம்பொற்‌
சில்லியங் குழலாணங்கை செவ்வி யிற்றினங்கடோறு
மில்லகந்தனிலே முன்னரியற்றிய வாறு போல
வல்லியல் கமலக் கண்ணாற்‌ கவ்விடத்தி யற்றா நின்றாள்–75-

வண்டலைந்திழி தேனுண்டு மருவுதாரிமிரு மார்பக்‌
கொண்டலைப் பொருவும்‌ வண்கைக் கோமகன்‌ குழவி தன்னைக்‌
கண்டு கண்டுருகித்‌ துன்பக் கடற்கரை காணானாகிப்‌
பண்டருங் குறுங்கை வாழும்‌ பரமனதுரை மறந்தே-76-

நச்சினர் வினையை நீக்கும்‌ ஞான தேசிகனெடுப்பான்‌
வைச்ச பண்டிதர்களாலு மந்திரத் தலைவராலும்‌
வெச்சுறு முத்தீ யோம்பும்‌ வேத வந்தணர்களாலும்‌
பச்சிலை வகை யினாலும்‌ பார்‌த்தனனிருந்தா னன்றே-77-

நீருலாம்பொருனை நாடனெஞ்சிடர்‌ நிறைய நாளு
மேருலாங்குழவி தன்னை யெடுத் தினி தளிப் போர்க்கென்றன்‌
சீருலாந் தரணியாவுஞ்‌ சிறப்புடன ளிப்பேனென்ன
வோருரைவழங்கி யன்னோரு றும்‌ வழி பாரா நின்றான்‌-78-

ஞானவாரமுத முண்டு நாடொறு மவயவாதி
வானவாந் தருக்களே போல்‌ வளர்தரத் தருவின் மூலத்
தேனலம் பொருந்த யோகி யென வினி தமர்ந்‌து வாமு
மூனமிலாத வெந்தை யொளித்திர மேனி தன்னில்‌-79-

விரைக்கருங்குழலாணங்கை வேந்தர் கோன்‌ முதலயாரு
நிரைக்குலந் தமது கன்றை நீங்கிலா வகை போற் சூழ்ந்தே
யுரைக்கரும் பதினாருண்டீ யுடனெறும்‌ பணுகா வண்ண
மரைக் கணப் பொழுது நீங்கா தன்னவ ரிருந்தா ராங்கே–80-

திருப் புளிப் படல முற்றும்‌-

திரு மதுரகவிப்‌ படலம்‌-

பைத்தலை யாவந்‌ தாங்கும்‌ பாரிடத்‌ துயிர்கட்‌ கெல்லா
மெய்த்தகு முகலேய்‌ மேனி மாயனெம்‌ பெருமான்‌ றன்னைக்‌
கைத்தலத்‌ தமர்ந்த நெல்லிக்‌ கனி யெனக்‌ காட்டித்‌ தந்த
மெய்த்தவ னெதிராசன்‌ றன்‌ விரை மலரடி யுட்‌ கொள்வாம்–1-

கர கமலங்கள்‌ கூப்பிக்‌ கை தொழு மவர் தம்‌ தீய
நரகவித்‌ தருள்வான்‌ ஞான நாதனிவ்‌ வாறிருக்க
குரகத முகத்தாற்‌ கன்பாங்‌ குமுத கணாம்சராம் ம
துரகவிப்‌ பெருமாள்‌ வந்து தோன்றிய விபரஞ் சொல்வாம்‌–2-

உலகெனு மடந்தைக்‌ கோங்கு முருவமை யவயவாதி
யலகிலா வளஞ் சேர்‌ தேய மவற்றுளிப்‌ பாண்டி நந்நா
டிலகொளி வதன மந்த வெழின் முகங்‌ கவினத்‌ தீட்டும்‌
திலகம தென்னகத் தோன்றித்‌ திகழ்தருந் திருக்கோளூரே-3-

அத்தமா னிறத்து வேதத்‌ தந்‌தணன்‌ முதலாந்‌ தேவர்‌
தத்தமானியை யெடுத்துச்‌ சாற்றிடக்‌ கமல மென்போ
துய்த்தமா னிலமான்‌ செய்ய வொளியடி வருடப்‌ பாம்பில்‌
வைத்தமா னிதி மலர்க்கண்‌ வளர்தருந் திருக்கோளூரே–4-

மாகய மருப்புமாய்த் தான்‌ மலரடி. வணங்குந் தூயோ
ரேகய வேள்வி யாற்ற வெழுந் தடர்‌ கரிய தூமம்‌
ஆகயம்‌ படரக்‌ கண்டே யணி முகிற்‌ குலங்களென்னாக்‌
கேகயம்‌ பல நின்‌ றாடிக்‌ கிளர்தருந் திருக்கோளூரே –5-

அமலமுற்‌ நிடலான்‌ மீதி லணிமை தங்குறலான்‌ மீவான்‌
கமலக ணுறலா னற்பொற்‌ கலை தரித்‌ திடலான் மண்ணின்‌
குமரர் கண்‌ணிணைக்கு மெட்டாக்‌ கொள்கையா லொளிரு மாடம்‌
விமல விண்டு வினை யொப்பாய்‌ விளங்ககுறுந் திருக்கோளூரே –6–

எங்கண்மா னகர் போந்‌ தெந்த மிறையடி வண்டி யேகுஞ்‌
சங்கரன்‌ றனைநீ தாகத்‌ தருக்குட னெம் போனிற்குந்‌
துங்க நன்‌ றெனவான்‌ கைலைத்‌ தொல் கிரி யினை நக்கென்னாத்‌
திங்களஞ்‌ சவீசேர்‌ மாடம்‌ திகழ் தரும்‌ திருக்கோளூரோ–7-

இத்திரு நகரில்‌ வேத வெழிற்‌ பெருங் குலத்துட்டு வாப
ரத்தின தந்த மாகு மணிய விக்கிரம வாண்டிற்‌
சித்திரை மாதத்‌ தோடு சேர்ந்த சுக்கில பக்கச்‌ச
துர்த்த சித்‌ திதியுஞ்‌ சுக்ர வாரமுங்‌ கலந்ததாகும்‌–8-

சித்திரை நாளி லாசான்‌ சிச்சரி னியல்பு மன்னோர்‌
பத்தியும்‌ விசுவாசத்தின்‌ பான்மையு நிலத்‌ து வாமும்‌
புத்தியி லுயிர்கட்‌ கன்பாய்ப்‌ புகழ் பெறக்‌ காட்டித்‌ தூய
முத்தியின்‌ விளைவை நல்க முதற் பரம்‌ பொருளா லன்றே–9-

இருணலி தரக்கால்‌ சோதி யிளங்கதி ருதையமுன்ன
ரருணனா ருதிந்குந் தன்மை யாமெனப்‌ பரவை ஞால
மருணசிப்‌ படைய ஞான வாரமு தருளுஞ் செம்பொன்‌
வருணநங்‌ காரிமாறன்‌ வருமுன்‌ மெழுந்த வள்ளல்‌.–10-

முடிவிலின்னவனால்‌ வேத முற்றணர் திறத்தைக்‌ கூறிற்‌
கடிமலர்‌ கமலச் சேக்கைக்‌ கண்ணவற் கிழுக்குண்டாமா
லொடி திரைப்‌ பரவை ஞாலத்‌ துயிர் கண் மேல்‌ வைக்கு மன்பாற்‌
படி முழு தளந்து கொண்ட பரமனே யனை யனாவான்‌–11-

பண்டரும்‌ பரம வேதவிதிப்படி பரித்த முந் நூல்‌
விண்டலத்‌ தெழுந்துலாவு மின்னெனப்‌ பிறழு மார்பன்‌
வெண்டிக ழூர்த்த புண்ட்ர மேவிய னுதலான்‌ சேந்த
மண்டு பொற்‌ சடிலத்‌ தாலே வயங்கு சேகரத்தினானே–12–

பரந்த வணையான்‌ செய்ய பத கமலங்க ளல்லாற்‌
புரந்தர னீறாய்‌ வேதப் புனிதனே முதலாந் தேவர்‌
வரந்தர வல்லே மென்ன வந்து முன்‌ னிற்பாரேனுங்‌
கரந்தலை குவித்துச்‌ சற்றுங்‌ கணித்திடாக்‌ கருத்தனம்மா–13-

கொல்லு நஞ்‌ சடக்கு கண்டக்‌ குழகனு மறை வலானும்‌
வெல்லுதற்‌ கரிய காம வெகுளிக ளவிக்கு நீரான்‌
புல்லிய நெறியி னாளும்‌ பொறி புலன்‌ றமைப் போக்‌காது
சொல்லிய வறத்தினிற்குந்‌தூய நன்மனத்‌ தனம்மா.–14-

சென்னிகழ்‌ வடைத லாகச்‌ செப்பிய கால மூன்று
முன்னி யுள்‌ ளறியும்‌ ஞானத்‌ துறுதி கொண்‌ டுயர்வு பெற்றோன்‌
பன்னுதற்‌ கரியவாய பதும வாதனத்‌ தட்டாங்க
மன்னிய யோகத்‌ தின்‌ கண்‌ வரம்பினான்‌ மகிழ்வு கொண்டோன்‌–15–

இன்ன தன்மைய மதுரகவிப் பெருமா னெண்ணுதற்கரிய வேதாந்தத்‌
தன்னியல் புணரு நிபுணனாய்ச் சத்வந் தலை யெடுத் தெவருமோர் தரமு
ளுன்னிய வளவிற்‌ பரகதி யுதவயோத்தியே முதற் றிரு மடந்தை
மன்னியோ ரிறையு மகல்கிலா மருமன் வளர்தரும்‌ பத தொறுஞ்‌ சென்றே–16-

விழுத்தகு மூவகை யுள்ள நெக்‌ குருகி விரைமல ரருச்சனைபுரியா
வழுத்தியாங்‌ குளவாம்‌ புனித நற்‌ றிவலை வானக முகடு தைவரவே
கொழுத்தலை யெறியுங் கங்கையை முதலாக்‌ கொண்ட பற்பல நதிபடிந்து
பழுத்த மெய்ஞ்ஞான நிலை யுணர்ந்‌ தநேகம் பகல் வட புலத்திருந்தனனால்‌.–17-

அங்கரு முனிவ னிவ்வண மிருப்ப வணிய வைகுந்த நன்னாட்டிற்‌
பொங்கருட்‌ பரம வுருவினித்தியர்கள்‌ புடை பரந்‌ திறைஞ்சினர்‌ பொலிய
சங்குடன்‌ றிகரி வாள் கதை வரிவிற்‌ றாங்கி வீற்றிருந்தரு ணிமலன்‌
செங்கையிற்‌ பிரம்பொன்‌ றேந்தி நன்களிக்குஞ்‌ சேனையர்‌ தலைவனைக் கூவி–18-

இன்றெழும்‌ துலூற்‌ றீ யிருட்‌ பிழம்பை யிகலறத்‌ துடைத்தருள்‌ புரிவான்‌
சென்றுந மமிசைபூதரா யுதித்துத்‌ திருப்புளியடியில் யோகியரா
யொன்றிய பதமாசனந்தரித்‌ திருக்கு மொப்பிலா மாறனுக்கின்றே
பொன்மக ளிடமுன்னீர்ப் பெரும்‌ தகையைப் போற்றிரு விலச்சினை முதலா–19-

மந்திர வுபதேசமும்புரிந் திவணீர்‌ வருதிரென்‌ றுரைத்திட விரைவிற் சிந்தையுள்‌ ளுவகை கொண்டன னிவணந் திந்த்ருணி யடியில்‌ வீற்‌றிருக்கும்‌ நந்த மதிறையாங் கொந்தவிழ்‌ குழலி னங்கை தன்‌ திரு வயிறுதித்த சுந்தர வதநற்‌ கவ்வணம்‌ புரிந்து தொன்னக ரடைந்தனன்‌ றூயோன்-20-

சங்கொடும்‌ புனிதத்‌ திகிரியும்‌ தாங்கித்‌ தயங்குறு மூர்த்த புண்டரனாய்‌
மங்கலி லதிதேயோ மயனாய்‌ நின்மலனுமாய் வீற்றிருந்தனனால்‌
பொங்கலைப்‌ புணரி நிலந்தனி புரக்கும்‌ புரவல னியற்றருந் தவத்தில்‌
வெங்கலி கரப்ப வந்தெழுந்தருளும்‌ விமல மெய்ஞ்‌ ஞான நாயகனே–21-

இருந்தரு டரவிங்கணை யிலான்‌ முன்ன ரெழுந்தன னுத்தரதிசை யிற்‌ றதா
பொருந்திய மதுர கவியெனும்‌ பெயர் கொள்‌ புனித மெய் யற நிலை பிறழா
வருந்தவ முனிவ னொருபக லிரவி லனை பிரிந்த லமருகன்‌ றின்‌
வருந்தியுள ளுருகி யணி திருக்கோளூர் வணங்கினன்‌ தென்றிசை நோக்கா–22-

நோக்கலு மிவணந் திருப்புளி யடியி னுவலருந் தகையின்‌ வீற்றி ருக்கு
மாக்கவி னிமல மாறனன்னவன்றன்‌ மணி விழி யிணையினுக்‌ கல்‌லாற்
றாக்குற வெவர்க்குந் தோற்றில னாகித்‌ தள தளப்‌ புடனெழுமுதைய
நீக்கருஞ்‌ சவி கொள்‌ கதிரெனப்‌ பொலிந்து நின்றிடக்‌ கண்டனன வனும்‌–23-

காண்டவச்‌ செழுமி னொளியிடுஞ்‌ சுடரைக்‌ கடிய வெங்கானக மதனிற்
றாண்டி நின்‌ றெரியு மங்கி கொ லலது தட நகர்‌ வேவுறக்‌ கனன்று
நீண்டு பற்றிடு செங்‌ கனல்‌ கொலோ வென்ன நெஞ்சயிர்ப்‌ புடனி ருந்தனனால்‌
மாண்டகு மினிய தமிழ் மறை யுரைத்த வன்றன தடி பணிந் துய்ந் தோன்‌–24-

இவ்வண மிரண்டு மூன்று நா ளளவா யெண்ணியு மவ்வொளி மழுங்கா
தவ்வண மிருப்ப வென் விழிப்‌ புலனுக்‌ கன்றிமற்‌ றியாவர்‌ கண்ணிணைக்கு
மொவ்வுத லின்றி யொளி யுட னிலங்க லென்னகொ லிதுவெனக்‌ கலங்கிச்‌
செவ்விய நெறிகொண்‌ முனிவரன்‌ பின்னுர்‌ திரு வினாயகன்‌ செய லென்னா.–25-

நன்றுகொ லிதனைக்‌ கண்ணுறி லழியா நவையிலா வொளியதா யிலங்கு
கின்றது கணமுந் தங்குறா விரைவிற்‌ கிளம்பியான்‌ சோதனை
சென்‌றிவ ணடைவ னெனத்திரங்‌ கொடுதொ றென்முக நோக்‌கின னெழுந்தான்‌
மன்றலந்‌ துளவத்‌ தாரினா னடியர்‌ மலரடி யன்‌றி மற்றுன்னான்‌–26-

உதைய வெங்கதிரி னொளி விடுஞ்‌ சுடரை யொன்றுற நோக்கியச்‌ சுடரே
சிதைவினன்‌ னெறியாக்‌ கொண்டிரா முழுதுஞ்‌ சென்று சென்றரும்பக றொருங்கண்‌
டதைமலர்‌ வளரச்‌ செயதிடை யுறு நற்‌ றலந் தொறுஞ்‌ சோதனை புரிந்து
புதை யிருட்‌ பிழம்பு சீத்தொளிர்‌ மாடம்‌ பொலி திரு வரங்கம் வந்தடைந்தான்–27-

அத் திரு நகரி லரங்கனை வணங்கி யற்றைய பகலினைக்‌ கழித்து
நத்தம் வந்தடைய வாய்ந்தன னவணந்‌ நகை விடுஞ்‌ சோதியே பின்னு
மத்திசை யொளிர வெழுந்தனன்‌ விரை விலடவி வெற்பகன்‌ றிருங் கரையைக் குத்திரு்‌ந் திரை கொள்‌ பொருனை சூழ்‌ தருமிக்‌ குருகை மானகரம்‌ வந்தடைந்தான்‌-28-

எழுந்தரு டரவு மவ்வொளி மறைய விரும்பல தருவினான்‌ மறைந்து
மழுங்கியது கொலோ வெனும்பினுந்‌ தென்பால்‌ வந்தனன்‌ வட புலத்‌ தொளிரத்‌
தொழுந்தகை யுடையவ்‌ வருந்தவ முனியித்‌ தொன்னக ரிடத்ததீ தென்ன
வழுந்தினன்‌ களியி லடைந்தன னிவணே யடைதலு மறைந்த தவ்‌ வொளியே–29-

வந்த வருந்தவ மாமுனி வோனு
மிந்த நகர்க்கு ளேதேனும்‌ விசேடம்‌
விந்தையி னுண்டுகொ லென்ன வினாவச்‌
சிந்தை யுவந்தனர்‌ செப்புவர்‌ மன்னோ,–30-

எந்தம்‌ விளங்கயி லேந்திறை வோனே சந்தத முஞ்செய்‌ தவத்தினின்‌ மாயோ னந்தமிலண்ணறன்‌ னின்னரு ளாலே மைந்தனும்‌ வந்து பிறந்தன னன்றே.–31-

தோன்றிய வன்று தொடங்கியி தீறா யான்ற வரும் பதி னாறெனு மாண்டாய்‌
வான்றழை வெஞ்சுடர்‌ வானவ னே போற்‌ கான்ற கவின்றிகழ்‌ காண்டகு மேனி,–32-

சற்றுமசைத்திலன்‌ றாமரை யங்க ணுற்று விழித்தில னொள்ளிய செம்மை
முற்றியவாயது மூடுத லின்றிப்‌ பற்றிழையான்‌ முலைப் பாலு மருந்தான்‌–33-

தீண்டரு மெய்த்தவ செப்பிய தன்றி யாண்டு தோறுங்கவி னங்கம்‌ வளர்ந்தே
நீண்டிட வோர்தரு நீழ லிடத்தே மாண்டக வைகினன்‌ மைந்தனு மன்றே.–34-

அன்றுமுதற்கொ டருந்திறல்‌ வேலோ னின்றள வாக வெழுந்தரு ளூன்போற்‌
சென்றவ ராய செழுந்தவர்‌ தம்மாற்‌ குன்றி னிதிக்குவை கொள்ள வளிப்பேன்‌.–35-

என்னவுரைத்தன னிந்நெடு நாளாய்த்‌ துன்ன வருட் கொடு பார்த்தனன்‌ றுய்ய
வன்னவ ராலு மசைந்தில னாக மன்னிய வின்னலின்‌ மாழ்கின னன்னோன்‌–36-

என்றுரை செய்தன ரின்றத னைப் போய்‌ நன்றறி வேனென நாறிய மாடங்
குன்றென நின்றொளிர்‌ கோமறு கின்கண்‌ சென்று நடந்தனன்‌ றீதில் குணத்தோன்‌–37-

வருந் தவனைச் செழு மாமறு கிற்கண்‌ டரந்தை யழுங்கினனன் னவர்காணா
இருந்தவெழிற் புயவேந்தலிடம் போய்‌ விரைந்தனர் சென்‌ற விளம்பினரன்றே.–38-

கேட்டள விற்பொன்‌ கிரிப்பெரு மொய்ம்பின்‌ வாட்டகை மன்னன்‌ மதிக்கடலாய
கூட்டவமைச்சர்கள்‌ கூட்டி வரத் தீ வீட்டிய லற்கெதிர்‌ மேவின னன்றே–39–

இந் நக ருக்குணி யெய்துற வென்றன்‌ முன்னரிழைத்த முதற்றவ மேயென்‌
றன்ன முனிப்பர னாய்மல ரன்ன மன்னுமடித்‌ துணையார வழுத்தி–40-

ஆக்கமு றும் முடை யார வொடுக்கி நீக்கரும்‌ வெந்துயர்‌ நீடின னிற்கும்‌
வீக்கவடற்புய வேந்தனை யன்னோ னோக்கின னின்று நுவன்றிட லுற்றான்–41–

நெய்கதழ்‌ வேலநின்‌ னெஞ்சிடர்‌ கொள்ளுஞ்‌ செய்கை யதென்ன கொல்‌ செப்பு தி யென்னப்‌
பொய்கை தனிற்பல புட் செறி பாண்டி மொய் கவினுற்று முதிர்ந்திடு நாடன்‌.–42-

மைந்த னிலாது வருந்திய தாதி யந்த மராத்தி லடைந்ததை யீறாய்‌
விந்தை யினங்கிடை மேவிய வெல்லாஞ்‌ சிந்தை மயக்கொடு செப்பினனன்றே.–43-

இந்த வாறிரு நிலந்தனி புரந்தரு ளிறையோன்‌ சந்த மாமுடி மன்னவன்‌ சாற்றின னிற்ப
வந்த மாமுனி யருண்முக நோக்கினராகி அந்த மாமதி யமைச்சர் நின்‌ றறைகுவர்‌ மாதோ,–44-

அரிய மாமறைப்‌ பொருளெலா மினிதுணர்ந்‌ தரியாந்‌ துரிய மால்பத மன்றி மற்‌ றுணர் தராத்‌ தூயோய்‌
விரிய காதமென்‌ மேலெழுந் துயரெனு மிகுந்த கரிய வார் கலிக்‌ கரை பெறாதுழன்றுயர்‌ கடையோம்‌–45-

களிப்பெனும்பெரு மதுக் கட லாழ் தரக்‌ கமலத்‌ தளிர்க்கு மெல்லடிக்‌ குமரனத் தருநிழல்‌ விட்டெங்‌
களிக்குலம்படு மாம்பலம்‌ போதினுக்‌ கரிய நளிக் கனிக்கிணை வாய்‌ திறந்‌ தொரு மொழி நவில–46-

விருப்புளிப்புரிரந் தருளுவ தன்‌ றிமேல்‌ வேங்கைப்‌
பொருப்பு விட்ட பைங்‌ரியெனத் தனியிடை பொலியுந்
திருப்புளித் தலத்‌ திருந்தெடுத்‌ தன்னை தன்‌ செமுலை
யருப்புளிற்பெரு கமுதுண வருள்‌ செய வேண்டும்‌–47-

இவ் வணம்புரி்‌ந் திடிலொரு சூச்சியு மேறாச்‌
செவ் வணந்திகழ்‌ சடிலசேகர வருந் திறலோய்‌
பவ்வ வெண்டி ரைப்‌ பரவை மா னிலந்தனி புரக்குங்‌
கவ்வை யின்னக ரன்புட னளித்தகங்‌ களிப்ப–48-

மண்டலேசுர ரனை வரு நின்னடி வணங்கப்‌
பண்டை யாய்வழி வருமுடி சூட்டினர்‌ பரவுக்‌
கொண்ட தோரரி யணைமிசை யிருத்தினங்‌ கொடியேந்
தொண்டு செய்தனம்‌ வருகுவ மென்றுபு சொற்றார்–49-

சொற்ற வம்மொழி யிரு செவி வெதுப்புறத்‌ தூய்மை
யுற்ற மாமுனி வரனவ னுறைவிட மதனை
யிற்றை நீரது காட்டுமி னிவ்வண மியற்றிப்‌
பிற்றை யானது கொள்ளுவ னென்மொழி பெய்தான்‌–50-

என்ற மாமுனி வரன்றனை மிறையவர்க்‌ இறையோன்‌
துன்று பற்பல மங்கல முரசினந் தொனிப்ப
நன்று கொண்டினி தேகியத்‌ தருநிழ னவையின்‌
றொன்றி வைகிய வொளியினைக்‌ காட்டின னுகந்தே,–51-

முன்னம்‌ தாயினை நீங்கிய முலை விடாக்‌ கன்று
பின்னம்‌ காண்குறு வகை யெனப்‌ பெய்யொளி பிறங்க
மன்லுர்‌ தாரு நன்‌ னிழலிடைக்‌ கதிரென வைகும்‌
பொன்னந் தேசினம்‌ மாறனைக்‌ கண்டனன்‌ புனிதன்‌-52-

வண்டு சூழ் மகிழ்‌ மாறனைக்‌ காண்டலும்‌ வதநம்‌
விண்டலர்ந்திட லாலவன்‌ முகமது விளங்கும்‌
புண்டரீகமென்‌ பத ற்குமம்‌ மாறனைப்‌ பொருவி
லண்ட யோனி யென்‌பதற்கு மிங்கைய மில்லம்மா–53-

மோன மாகியோகத்தினி திருந்தருண்‌ முதல்வ
னான நாதனைக்‌ காண்டலு மன்னவ னருளால்‌
ஞான முன்னைய துதயமா குற முனி நளினத்‌
தேனவாமலர்த்‌ தாட்டுணைச்‌ சடை முடி தீண்டி –54-

இப்பெருந்தனிச்‌ சோதியோ வென்றன திதயற்‌
துப்பனன்‌ மெழு கெனவுருக்‌ கியதெனுந் தூய
முப்பரஞ்சுடர்‌ தம்மிலு முதற் சுட ரிதுவென்‌
றப் பராங்குசன்‌ குணனெலா மெடுத்தெடுத்‌ தறையும்‌.–55-

கண்ணுகர்ந்தவர்‌ தம்மிலுங்‌ களி நறா வருந்தி
யுண்ணெகிழ்ந் து நின்‌றாடுறும்‌ பாடுறு முயர் யாழ்ப்‌
பண்னுலாமொழி நங்கை கொண் மகிமை யிப்‌ பரவை
நண்ணு மானிலத்‌ துற்றவர்‌ யாரென நவிலும்‌.–56-

அங்கு மிங்குமா யெழுந்தெழுர்‌ தேமுறு மமல
னிங்கு தோன்றுதற்‌ கெத்தவ மிழைத்த திவ்‌ வெறிநீர்‌
தங்கு மானில மென்னுமியான்‌ பெற்றிடுந்‌ தகையிற்‌
பொங்கு பேறியார்‌ பெற்றவ ரெனத்தனைப்‌ புகழும்‌.–57-

மருப்படுங்கம லாநந மலருமாநதந்தப்‌
பெருக்கி னீடுகட்‌ புனலிடை மூழ்குறும்‌ பிதிருந்
திருத்தகும்புய வரைகள்‌ பூரிப்புடன்‌ றிகழ
விருப்பினாற் புள காங்‌கித மடைதர வியக்கும்‌–58-

இத்தரைக்குள் யா னியற்றிய தவப் பல னின்றே
முத்தி யின்விளை யதனை யீந்தது வென மொழியும்‌
பித்தடைந்தவ ரென்ன மெய்‌ மறந்தளி பிதிருங்‌
கொத்து நன்மலர்‌ கொய்து கொய்‌தெறி தரு மன்றே.–59-

இவ்வணம்பர மானந்தக்‌ கடலத னிடையே
யவ்வரந்தரு முனிவரன்‌ மெய் மறந்‌ தாழ்ந்து
செவ்வை யின்னகந் தெளிந்து பின்‌ றோத்திரஞ்‌ செய்வான்‌
கொவ்வை வாயுடை நங்கை தன்‌ குலக்கொழுந் தனையே,–60-

செஞ்சுடர்‌ போலொளி செய்‌தே சுறு மெய்ப் பொருளே
மஞ்செனவே யணி சேர்‌ மானிற மெங்குரையாய்‌
விஞ்சகல் மார்பிடையே மேவி விளங்குறு பொற்
கஞ்சமலர்த் தவிசார் காரிகை மெய்த்‌ தவனே-61-

பொங்கட லாரவுணர்‌ பொயொழியப்‌ புவியில்‌
வெங்கதழ்‌ வாளமரில்‌ வீசு செழுந்திகிரி
சங்குட னொண் கதை வாள்‌ சார்ங்க மெனுந்தவர் மற்‌
றெங்கிவை வைத்தனையோ வென்றனை யாளொளியே–62-

மந்தர மாமலையின்‌ வாகொரு நான்கிலுனுங்‌
சுந்தர மோடடல்சேர்‌ தோளிணை பெங்கு கொலோ
இந்தள ராகமிசைத்‌ தின்னளி பல்லடருங்‌
கந்தமுறுந் துளவக்‌ கண்ணிகளெங்கு கொலோ–63-

பாதக வெவ்வீனைகள்‌ பாரிடம்‌ விட்டகலத்‌
தீதறு மெய்யறிவார்‌ தேசிடு மாதவனே
மாதக வாயுறுசீவத்ச மெனும் மருவும்‌
பீதக மெய்யொளி சேர்‌ பீடுடை யெங்கு கொலோ—64-

செஞ்சரண்‌ வீழ்சுரர் நோய்‌ தீர் தர மண் கொளு நாள்‌
விஞ்சகல்‌ வான்முகடுமே வர நின்றது தான்
எஞ்சலி னன் மணியா லிழை பல பூண்டிகழிக்‌
குஞ்சி கொலோ வழுதிக்‌ கோமகனே யுரையாய்‌—65-

நாடிய வாசமுறு நான நறுந் திலகம்‌
பீடிய லாவணியப்‌ பெய்யொளி செய்வது தான்‌
நீடிய வெண்ணிலவி னேரவிர்‌ புண்டரமரர்‌
கோடிய செம்பிறை நேர்‌ கொண்டொளிரிந் நுதலே—66-

அண்டர்‌ தொழக்குளிர வன்றருள்‌ செய்தது தான்‌
வண்டலர்‌ செங்கமல மான மிளிர்ந்தரிகள்‌
கொண்டு பரந்தணிசேர்‌ குழைகளி னோடி சலிக்‌
கண்டவர்‌ கண் கவரிக்‌ கண்ணிணையே கொலரோ–67-

கோவியர்‌ மத்தளைபால்‌ கொண்டினி துண்டது தான்‌
காவிய நீள் விழி நங்கைக்குயர்‌ மாமதலாய
தூவிய னற்பவளத்‌ துண்ட மிரண்டதனைச்‌
சீவியிணை த்ததெனத்‌ திகழுமிவ்‌ வாய் கொலரோ–68-

முன்னொரு வாரணமே முலமெனுஞ் சொலையே
மன்னுற வேற்றத தான்‌ மா மறை யாலுணராய்‌
நன்னய நான் மகர குண்டல நின்றினிதூ
சன்னளி யாடுறமிக்‌ காது கொல்‌ சற்றுரையாய்‌–69-

விழுத்தகு வால் வளையை வென்‌று பசுங்கமுகிற்‌
பழுத்தணி கொண்டு பள பளப் புட னோங்குறுமிக்‌
கழுத்து கொ லண்டமெலா முண்டு களித்ததுவே
கொழுத்தலை மண்டு புனற்‌ கூர் பொருனைத் துறையாய்‌–70-

விண்ணவருக்கனிய வெண் சுதை யீந்தருள்வான்‌
தண்ணலையைக் கடையுஞ்‌ சார் தகை யுற்றது தான்‌
வண்ணமுறுங் கிரிபோன்‌ மல்லோடு பேரணியு
தண்ணிய விப்புயமோ நங்கை கண்‌. மா மணியே,–71-

சந்தமுறும்பசிய தாமரை யோடிகல
விந்தை சின்‌ முத்திரையை மேவிய விக்கரமோ
நொந்தக நைந்தரனார்‌ நுன் சரணே சரணாய்‌
வந்தடி வீழ்தருமுன்‌ மாபலி யிட்டதுவே,–72-

துண்ட நறுந்துவரோ தூய்மை யருங் கமலம்‌
விண்டிதழோ வெனவே விளங்கணி யிவ் விரறான்
மண்டு நிரைக்குலம் விண்‌ மாரி நெருங்குதலைக்‌
கண்டழு கால் வரையைத்‌ தாங்கி யளித்ததுவோ–73-

நிம்பவலங்கலொடு நீண் மணி யார முநி
ரம்பி நிதிக் கிரிபோ லகன்றொளி ரிம் மருமப்‌
பம்பிடமேகொலரும்‌ பைங் கமலத்திடை வாழ்‌
வம்பு மலர்க் குழலாள்‌ வாழ்வினுகக்குமிடம்‌–74-

குயிற்றிட மேதினியிற்‌ கோதறு மெய் யறிவைப்‌
பயிற்றிட வேவிய வெம்‌ பரம்பொருண்‌ முத்திரையைக்‌
கயிற்றிட மேகொளிறை கவின்மிக வார்ந்தொளிரிவ்‌
வயிற்றிட மேகொலுயிர்‌ வைத்து வளர்த்ததுவே–75-

அங்கம லாதனனை யன்றருள்‌ செய்தது தான்‌
துங்கம லாதவனார்‌ தோன்றின ரென்ன வொளி
பொங் கமலாதடையிற்‌ பூம் புனலிற் சுழிபோற்‌
பங்கம லாதளிசேர்‌ பாவுமிவ்‌ வுந்தி கொலோ–76-

பார்த்தனணிந்த செழும்‌ பைந் தொடை யுங்கனத
தீர்த்தமு மன்றரனார்‌ செஞ்சடை மீதுறவே
சேர்த்தது தானெழிலச்‌ செய்ய மலர்க் கழலோ
நீர்த்தல மேழிலுமே நின்ற புகழ்ச்சுடரே.–77-

ஏறுட னம்பதும விரேகை பரந்த மலர்‌
வீறுகெடுத்து மணி மேவி யடைந்தவர் நோய்‌
மாறுபடுத்தி யருண்‌ மா மலரிவ்வடியோ
வீறிலிரும் புவி மண்‌ டாவி யளர்ந்த துவே,–78–

சேய மணிச் சடிலச்‌ சேகர னிவ்வனமா யேயரியன்‌றி விழி யேனெனு மக்குறியே மேயவனாகிய நா வீறனை யுன்றனரு மாயமதைத் தெரியும்‌ வல்லவர்‌ யார் கொலெனா-79-

பற்பல தோத்திரமுஞ்‌ செய்து பரன் செயலைக்‌
கற்புடை நங்கை முதல்‌ கண்டு மகிழ்ந்திடுவான்‌
சிற்பரனுக்கணிசேர்‌ செவிப்புல னுண்டுகொலென்‌
றற்பக நின்றெழவே யம்முனி வோரிறையே–80-

அடுத்த திரைக்கடன் மண்‌ ணதிர்ச்சி மிகுந்திடவே
யெடுத்தோரிருங்கலை முன்‌ னே யெறியக்‌ குணமே
கொடுத்தருள்‌ செய்தெளியேங்‌ கோது தொலைப்பவனுந்‌
திடுக்கென வேவிழிக டிறந்தன னோக்கினனால்‌–81-

நீக்கமருங்களியி னாழ்ந்தன னின்றெ வரு
நோக்கினர்‌ மன்னுறவே நோன்மையி னேழுலகு
மாக்கிய நல்லிசைகொ ளவ்வரு மா முனிவன்‌
வாக்கிவ னுக்குள கொலென்‌று மகிழ்ந்தனனாய்‌-82-

சித்தின் வயிற்றிடையே சிறிய துதித்திடிலே
யெத்தை யருந்தியது வெங்கு கிடக்குமென
வத்தை யருந்தியது வங்கு கிடக்குமென
வித்தக னன் பொடுவாய்‌ விண்டுரை செய்‌ தனனால்‌ -83-

அதுல னுரைத்திடு மம்மொழி தன்செவி யடையா முன்‌
மதுர கவித்தவ னெந்தை யடித் துணை மலர் வாழ்த்திச்‌
சதுமறை யுட்பொருண்‌ முற்றுமோ ரிம்மொழி தனிலொன்றி
யது வென வுட்கொடு கந்தன னங்ங னிருக்குங்கால்‌–84-

வந்தடி சென்னி புனைந்தவர்‌ வெவ் வினை மருவாதே
விந்தையி னின்ப முகந் தரு ணன் மகிழ்‌ விரை மார்பன்‌
இந்தை யுவந்து விளம்பிய வம்மொழி செவியோரா
வந்தர நின்று பொழிந்தனர்‌ விண்ணவ ரலர்மாரி-85-

மல்லட ரும்புய நின்மல னன்று மகழ்ந்தீயு
நல்லமு அண்டு வியந்தவி ணும்பரி னனியேயு
மல்லலெனுங்கட றன்னி லழுங்கிய வனைவோருஞ்‌
சொல்லமு தஞ்செவி யுண்டு களித்தனர்‌ துணிவுற்றார்‌–86-

எத்திசை யுந்தனி நின்று புரந்தரு ளிறையோனோ
டுத்தி யுறும் பணி நுண்ணிடை நங்கையு முடனாகப்‌
பித்தரெனும்படி தம்மை மறந்தனர்‌ பேரோகை
யத்தி யழுங்‌கி மயங்கி யுணர்ந்தனராய் நின்றே-87-

அங்கை யெனும் மலர்‌ சென்னி புனைந்தன ராயம் பொன்‌
றங்கிய செஞ்சடை கொண்டெழுமம்முனி தனையார
வெங்கடம்‌ வெந்துயர்‌ மங்க வெழுந்தரு ளிறைபோற்றி
யங்கச னுந்திய வெஞ்சரம்‌ வெனறவ வருள் போற்றி–88-

வய்யக மெங்கு மலிந்து பிறங்கிசை வளர்ந்தோங்கப்‌
பொய்யிலருந்தவ மெண்ணில்‌ புரிந்த புனித போற்றி
வெய்ய கொடும் பவ மெவ்வுயிரும் விட மேவாவந்
தய்யமறும்படி மெய்யறி வின்‌றருளடி போற்றி-89-

என்று வணங்கெ ருள்ள நிரம்பி யெழுந்தோகை
யொன்றுற நின்றிட மன்ற லுறுங்குழன்‌ மட மாதர்‌
வன்றிறலின் மணி மண்டபமெங்கு மலிந்தோங்கிக்‌
குன்றின் மிகுந்தெரு வெங்கு முளங்களி கொண்டாராய்‌–81-

விந்தையலங்கிர்த நன்கு புரிந்தனர்‌ மென்மேலுஞ்‌
சந்தன நன்புனு கின்பணி நீர் மலர்‌ தயிர் நெய் பால்‌
புந்தியிலன்பு மிகுந்து பொழிந்தனர்‌ பொருவில்லா
மைந்தனுதத்தரு ளன்றினு மினறெண்‌ மடங்காக,–82-

இவ்வண மெண்ணி லருந்தகை யந்நக ரெல்லோரு
மெவ்வமி லுள்ள மகிழ்ந்தனர்‌ வைகுற விகல் சேருந்‌
தெவ்வர் கடம்முயிர்‌ தனஜொளி மண்டிய திறல்வேலான்‌
முவ்வுல கும்புகழம் முனி தன்னடி. முடி தாழ்ந்தே–83-

மின்னவிருஞ்சடை மன்னு மருந்தவ வினையேன் முன்‌
சொன்ன வணந்திரை மண்டி யெழுங்கடல்‌ சூழும் பரர்‌
நின்னததன் கண்‌ மலிந்து பிறங்கிய நிதி யெல்லா
முன்னது வின்று நீ கொள்ளுதி யென்றவனுரை செய்தான்‌–84-

அவ்வுரை தன்னை யுணர்ந்து மறிந்தில னெனவே யவ்‌
வெவ்வமி னன்னெறி கொண்ட வருந்தவ னிடை வைகப்‌
பவ்வவருங்கடன்‌ மண்டனி நின்றளி பகல் வேலான்‌
செவ்விய வன்னவன்‌ முன்பினு மின்னுரை செய்வானால்‌–85-

இன்று கொடும்பவ வல் வனை யேன் சொலை யேறாதே
யொன்றிய தென்னென வன்பு மிகுந்தன னுரைசெய்யத்‌
துன்றிய மின்னவி ருஞ்சடை கொண்டு துறந்தெல்லாம்‌
பின்றவ நல்விர தங்கொ டெழுந்தவர்‌ பிழை யில்லோய்‌–86-

மன்னவர்‌ தம் வினை கொண்டு மகிழ்ந்திட வகை நன்றோ
வின்னமு துண்டவர்‌ வெங்கடு வுண்பர் கொலெனவே முன்‌
றென்ன முகந் தனில்‌ வெங்கதர்‌ கண்டெழு சீராளன்‌
சொன்ன துணர்ந் தெழின்‌ மன்னவர்‌ மன்னவன சொல் வானால் –87-

சங்கென வெண்ணில வுந்தி யிலங்கு பறவ யோகி
ருங்குல தன்மமி தென்னிலெ மைந்தனை யுற நன்றாய்ச்‌
செங்கனி மென்றுவ ரென்ன விளங்குறு செவ்வாயை
யிங்கு திறந்து சொ னன்கு மொழிந்திட விறை செய்யா–88-

அப்புமலர்க்சண்‌ விழித்திட வின்னுமதருள் செய்தே
யொப்பிலிவன்‌ றனை யன்னை முலைப்பய முண வோங்கு
மிப்புளி நின்று மெடுத்தெமிடந் தனி லினி தீந்து
செப்பரு வாழ்வை யளித்தரு ளென்றுரை செய்தானால்‌-89-

திரு மதுரகவிப்‌ படலம்‌ முற்றும்‌.

பதின்மர்‌ திரு வரன் முறைப்‌ படலம்‌

ஆடரவத்‌ தமளி துயி லரங்கன் செய்ய வடி பரவக்‌ கூரேச னடைய மேலை
வீடுமக்கின்‌ றளித்தனமென்‌ றரங்கன் சொல்ல விபுதனென்‌ சம்பந்தா சம்பந்திகட்குன்‌
நாடிடந் தந்தருடி யென வுரைத்‌துக்‌ கைக் கொ ணன்மையிற்‌ காடாயமுயர்‌ நனிவீ செந்தை
சேடமுனி கழல் பணிந்து பதின்மர் தங்க டிரு வரன்முறைப்‌ படலஞ்‌ செப்புவாமால்‌–1-

இன்னணங்‌ குரிசி லுரை செவி யுணர்ந்தாங்‌ கேதிலாத்‌ தவமுனி யுகந்து
தென்னனின்‌ மகவென்‌ றுள்ளினை யதுவோர்‌ தேவரா சியமெனத்‌ திரண்ட
கன்னவிறிறற்‌ றோட்‌ காளைமன்‌ மதுர கவி யடி பணிந்ததை யருடி
யென்னலு முன்னாண்‌ டறிந்தவை முழுது மியம்பின னெவர்களு மறிய–2-

தாதளைந்தின வண்‌ டூது பைந் துளபத்‌ தாரினன்‌ கரைக்கள னூர்திப்‌
போதவற்‌ கரு நான்‌ மறையன வடிவிற்‌ போதமுற்‌ றிடவருள்‌ புனிதன்‌
ஆதவனெளி கெட்‌ டிர வுறப்‌ பகலி லாழி கொண்‌ டெறி தருக படன்
வாத முண்‌ ணரவப்‌ பணாடவி நடித்த மாயவன்‌ பர வாசு தேவன்–3-

செங்கதிர்‌ மதிமின்‌ மினியென வொளி கொள் சேணுறு நித்தியரான்றிப்‌
பங்கய னரனிந்‌ திரன் முத லறியாப்‌ பதத்தவ னுள்மகிழ்ந்‌ து லகோர்‌
நங்கழ னிலைபெற்‌ றின்புற வவர்த நவை கொள்வெவ்‌ வினைத் தொட ரகலச்‌
சங்கையி லவதாரங்கள்‌ செய்துரைத்த சது மறை விதி வழி யனைத்தும்‌-4-

கற்றிடற்‌ குரிய ரெவர்க்கு முட்‌ பொருள்கள்‌ கசடற வெளிப்பட லரிதாய்‌
மற்றுளோ ருள்ளற்‌ கறமில தாகி வழங்கலி லவரெவாறுய்வார்‌
இற்றை நாடொடங்கி யாவரு மஃதை யெளிதினி லறிவதற்‌ கினிய
சொற்றருந் தமிழி லருமறைப்‌ பொருளைச்‌ சொற்றிடி லுய்வரென்‌ றெண்ணி-5–

பைத்தலை யரவுக்‌ கரசனோ டினிய பரிகர மனைத்தையும்‌ விளித்தங்
கத்திசூழுலகின்‌ முன்பினு மமிச மவதரித்‌ திடப்புரிந் தறநூன்‌
முத்தமிழதனிற்‌ றெளிதரப்‌ பொருளை மொழிந்து வெம்‌ பிறமத நெறிகொள்‌
சித்தர்களெளிதிற்‌ பரமிதென்‌ றறியச்‌ செய்திடச்‌ செவ்லியிற்‌ செய்மின்‌–6-

என்றவர்க்‌ குரைத்திவ்‌ வுலகுயக்‌ கருது மெம்பிரான்‌ சரபசங்கார
வென்றி கொளுகிரி னரகரி யெனுமம்‌ மேதகு விமலனுள்‌ ளுகந்தே
இன்று நீ செய்த தவத்தினு முன்னா ளெய்து மாதவத்தினு முனக்கு
மன்றலங்‌ குழவி யெனப் புகழுடைபோய்‌ மலடற வுதித்தன னென்‌றான்‌–7-

மாமுனி யுரைத்த வுரை செவி யுணரா வாம்பரி மன்னர் கோனயந்து
தேமலர்த்துள வினானருட்‌ பெறுமச்‌ சேடன் மற்‌ றுள பரிகரங்க
டாமினி துதித்த தெவ்விட மவர்கள்‌ சாற்றிய நூல்கள் யா வெனவும்‌
நாமவேன்‌ மன்னா நினக்கறி வுறயா னவில் குவ னென நவில்குவனால்‌-8–

முதலாழ்வார்கள்‌

தண்டுழாய்‌ மார்பன்‌ பாஞ்ச சன்னி யாழ்‌ வானு மிந்தத்‌
தொண்டை மானிலப்‌ பெண்‌ கண்டந் துலங்கு மங்கலமே யென்ன
வண்ட மொடிலகு மிஞ்சி யத்திமா நாகந் தன்னுட்‌
கொண்டலார் கலியென்‌றுள்ளிக் குளிர் புனற் பருகும் பொய்கை–9-

தோடலவிழ்ந் தொழுகு செந்தேன்‌ றும்பிதங்ளேயோ டுண்டு
பாடொலி கறங்குஞ்‌ செய்ய பங்கய மலரினுள்ளே
கேடி றுவா பராந்தங்‌ கெழு முசித்தார்த்தி தன்னி
னாடுமைப் பசியிற் சுக்ல பக்கமு நயந்த காலை–10-

ஓணமோ டார னன்ன ளொன்றிய தினத்தி லாங்கு
மாணமர்‌ குழவி யாயவ்‌ வளநகர்‌ வதிந்து நாம
நீணிலத்தவர்கள்‌ பொய்கை யாரென நிகழ்த்த மேலோர்‌
பேணிய புவிகள்‌ முற்றும்‌ வலஞ் செய்வான்‌ பெயர்ந்தான ன்றே–11-

திண்டிறற்‌ கதையு முன்னஞ்‌ செப்பிய திருநா டுள்ளே
வெண்டிரைக்‌ கரங்கண்‌ முத்தம்‌ வீசுமம்‌ புதிக்கங்‌ குற்ற
துண்ட வெண்‌ பிறை யோனென்னச்‌ சுதையவிர்‌ மாட மல்லை
வண்டிமிர்ந்‌ தடருத்யான வனத்துறு குருக்‌கத்திக் கண்‌–12-

வாய்ந்த பொன்‌ மலரிலக்த யுகமொடு வருட மாதத்‌
தேந்திடு புதன விட்டத்‌ திளமக வுருவாய்‌ நாம
மாய்ந்த பேருலகர்‌ பூதத்‌ தய்யனென்‌ றழைக்க முன்னீர்‌
தோய்ந்த மாநில மன்னோனும்‌ வலஞ் செய்வான்‌ றொடங்கிச் சென்றான்‌–13-

நாந்தக மதுமுன்‌ சொன்ன நாட்டெறி கடற்‌ கரைக்கண்‌
மாந்தளி ரனைய மேனி மாதரார்‌ மயிலை தன்னிற்‌
பாந்தளிற்‌ பயிலு மாதி கேசவப்‌ பெருமாள்‌ கோயி
லேய்ந்த நீள்‌ புனல் கொள்‌ கூபத்‌ திருந்த செவ்‌ வல்லிப் போதில்‌–14–

முன்னிருவருக்கு மாங்கு மொழி யுக வருட மாதம்‌
தன்னிலந்‌ தசமி பொன்னாட்‌ சதையம்‌ வந்‌ துதித்த நாம
மின்னிலத்‌ தவர்கள்‌ பேயரென்றிட முதிர்ந்த ஞான
மன்னியவாறு பூமி வலஞ் செய்வான்‌ றொடங்கிச் சென்றான்‌–15-

முனம் புவி வலஞ் செயச் சென்‌ மூவரிற்‌ பெரியோன்‌ செய்யி
லனம்பயில்‌ கோவ லற்றோ ரம்மையார்‌ மனைக் கண்‌ சென்றித்‌
தினந்துயில்‌ வுறவெற்‌ கும்மி லிடமருள்‌ செய்வீ ரென்ன
மனமகிழ்ந் தவளத் தொண்டன்‌ மலரடி பரவிச்‌ சொல்வாள்‌–16-

அய்யவிக்‌ குடிற்கு டிண்ணை யொருவருக்‌ கணையா மற்று
மெய்யவரிருவராகில்‌ வீற்றிருந்‌ திடலா மூன்று
துய்யவராகின்‌ மாயன்‌ றொடர நிற்றிடலா மென்னப்‌
பொய்யிலாள்‌ மனைக்கு ளன்பிற்‌ புகுந்து கண்டுயிலுங்‌ காலை–17-

பூதமா முனிவ னின்னோன்‌ போலவே வினவி வந்தம்‌
மேதகு விமலனோடு வீற்றிருந் தருள மற்றும்‌
கோதிலா னொருவ னன்னோன்‌ போல மேய்‌ வினவிக்‌ கூட
வேதிலார்‌ மூவராகி யிசைந்து நின்‌றிடு மவ்வேலை–18-

நள்ளிருட்‌ பிழம்பி னாங்கு நனிபடர்‌ தர வவ்வேலை
கள்ளிருந் தொழுக வண்டர்‌ காமரு பெடையோ டுண்டு
கொள்ளரும்‌ பார்ப்பு முண்ணக்‌ கொடுத்‌து வாழ் துளவக்‌ தெந்தை
ஜெள்ள லாரிடைக்க ணின்று நெருக்கிட வவருஞ்‌ சொல்வார்‌-19-

அய்ய மூவரின்‌ முன்னோனங்‌ கடை தரு மிருட்குலங்க
ணைய வென்‌ றாழி யான்ற னளீரடிக்‌ கமலப்‌ போதில்‌
வையமோர்‌ தகழி யாக வாரிதி நறு நெய்‌யாக
வெய்யவன்‌ விளக்கதாக விருப்புட னேற்றினானால்‌–20-

பின்பிரு வருக்குண்‌ முன்னோன்‌ பேரிருட்‌ பிழம்பு துஞ்ச
வன்பொரு தகழி யாக வார்வமே நறு நெய்‌யாக
வின்புறு சித்தை யந்நெய்‌ யிடுதிரி யாகப்‌ போத
நன் மணி விளக்கதாக நாரணன்‌ கழலிற்‌ சூட்ட–21-

துன்னிய விருள் கணீங்கித்‌ துளவினான்‌ கலுழன்‌ மீதங்‌
கன்னவர்க்கெதிரில்‌ காட்சி யளித்திட வவருட்‌ பின்னோன்‌
மன்னிய திருவைக்‌ கண்டேன்‌ மாசில் பொன்‌ மேனி கண்டேன்‌
பின்னுமைம்‌ படை கைக்‌ கண்டேன்‌ பேரருட்‌ கடலென்றோதி –22-

மூவரொன்‌ றாகி யார்க்கு முதல்வனை வித யீசற்குந்
தேவனைக்‌ கமலவீட்டுச்‌ செல்வி நாயகனை வாழ்த்தி
மேவுபு வணங்க யன்னோன்‌ விரிபுகழ தனினெஞ்ச
வாவுற வேதாந்தார்த்தம்‌ வண்டமிழ்த்‌ தொடை செய்தாரால்‌–23–

அத்திரு நாட்டில்‌ மாயன்‌ நிருவாழி யாழ்வான்‌ மெய்யர்‌
நித்தமைந்‌ தழலை யோம்பு நீணகர்‌ மழிசை தன்பாற்‌
பத்துடை யடியர்‌ மேலாம்‌ பார்க்கவ ரிடி தன்றேவி
மைத்தகோ திசுக வின்சொற்‌ கனகாங்கி மணி வயிற்றில்‌–24-

செப்புறு விபவாப்தத்துட்‌ செயிரறு மகர சுக்லத்‌
தொப்பறு தசமி பொன்னா ளுற்றிடு மக நாளெங்கு
மற்புத மெனவோர்‌ பிண்ட மாய வதரிக்க நொந்தம்‌
மைப்படி குழலியோடவ்‌ வரமுனி யதை யெடுத்தே–25-

வனத்துறு யிரப்புத்‌ தூற்றில்‌ வைத்தவ ரேகப்‌ பின்பு
வனத்துளோர்‌ தமைப்புமக்கு மலரவ ளருளினாலே
வனத்துறு புணரி சூழ் குவலயமா ததனைக்‌ காக்க
வனப்புறு குழவி போல வடிவமைந்‌ தழுமவ்‌ வேல்வை -26-

அந் நக ருறையு நெய்யா ராழியா னறிந்து சென்று
தன்னிரு கண்களாரத்‌ தழிஇய ருளமுத மூட்டி
மன்னு தன்‌ வடிவு காட்டி மாயனுண்‌ மகிழ்ந்து போய
பின்னரம்‌ மகவு தாயைப்‌ பிரிந்த கன்‌றனைய வேங்க -27-

அற்றைநா ளரிதா சென்னு மருட்டிரு வாள னென்னும்‌
வெற்றி வேந் தொருவ னன்பின்‌ மேவவவ்‌ வனத்து முன்செய்‌
நற்றவ மதனாற்‌ கண்ட நாகிளங்‌ குழவி செங்கை
பற்றி யுண்‌ மகிழ்தன்‌ றாரப்‌ பங்கயச்‌ செல்விக்‌ கீந்தான்‌ -28-

கொந்தவி சளக பாரக்‌ குவிமுலை மடமா னோக்கி
வந்தியா கையிலன்‌ போடு வாங்கி யுள்‌ளு வகை பொங்கக்‌
கந்துக நகிலங்‌ கொண்டு கான்முளை மலர்‌ வாய்‌ வைக்கச்‌
செந்தளிர்‌ மேனி கொள்ளச்‌ செல்வனும்‌ பருகா துற்றான்‌ –29–

என்ன காரணமோ வென்றங்‌ கிருவரும்‌ வருந்தா நிற்க
மன்னுமவ்‌ வூரினான்காந் வருணத்தோர்‌ திருமா னேய
னுன்னி யிப்‌ புதுமை கேளா வுளங்கனிந் தினிய தீம்பால்‌
கன்னியங்‌ குழவிக்‌ கென்று காய்ச்சிவந் துதவ வுண்டான்‌–30-

நாடொறு மன்பி னன்னோ னல்க வுண்‌ டிடுமோர்‌ நாளிற்‌
கோடிலா னுளமீ தென்றுட்‌ குறித்ததி லிறையுட்‌ கொண்டிச்‌
சேடமுண்‌ டிடினிற்‌ கொன் போற்‌ சிறுவனுண்‌ டாகு மென்ன
நீடிய களி கூர்ந்‌ துண்டந் நேயனுங்‌ குழவி யீன்றான்‌ –31–

மண்ணுளோர்‌ புகழப்‌ பன்னீ ராண்டவண்‌ வதிந்து வெவ்வே
றெண்ணமுற்‌ றிதர மாய சமயம தியல்பு கோக்க
நண்ணியங்‌ குளதே வெல்லா நலிதர வறிதல்‌ காணப்‌
பண்ணவ னாழி யானே பரமென வுறுதி கொண்டே –32–

மருமலர்‌ நறவ மாந்தி வண்டிமிர்ந்‌ தடருஞ்‌ சோலைத்‌
திருவலிக்‌ கேணி தன்னிற்‌ சென்ற மெய்ப்‌ பொறி யடக்கிக்‌
குருமணி வண்ண னுன்னிக் கொடுந்தவ முஞற்று நாளி
லெருது வெந் கொடு முக்‌ கண்ணா னெய்தின னுமை யோடன்றே–33-

வெறுமையா லறுவை கீறி வேளை போக்கிடப்‌ பொருத்து
மறிஞரை யுமைகாண்‌ குற்றிவ்‌ வறியனுக்‌ கருள்வா யின்று
தறுகண்வெங்‌ கயத்தோ லன்பா சார்ந்தென மறுக்கத்‌ தாழ
மறுவிலான்‌ முனவன்‌ நண்ண மதித்திடா திருந்துந் தேறான்‌ –34-

மாசிலாய்‌ நினது ளென்சொல்‌ வழங்குவ னெனவீ டென்ன
வாசிலா ததற்கு நாமோ ரதிகாரி யில்லை யென்னத்‌
தேசிக னகைத்தாங்‌ கேநின்‌ சீர்மை யிக்கலை பொருத்து
மூசிபோம்வழி நூலேனு முடன்‌ செலற்‌ குதவா யென்ன –35-

முக்கணான்‌ பரிகசித்தா னிவனென முனிந்து வெய்ய
வக்கனிக்‌ கணை விழிப்ப வவன்றவத்‌ தழலை யேவ
விக்கி நொந்‌ துயரேழ்‌ மால் பெய்‌ வித்‌ தும தவியா தெண்ணி
நக்கனும்‌ பக்தி சார நாமமிட்‌ டேகினானால்‌–36-

இத்தகை மழிசை வேந்த னிணைமரு திறுத்த வேந்தே
மத்தளை தயிர் பாலுண்ட மாயனே பரனென்றோ துந்
தத்துவப்‌ பொருளு மாறு சாத்திரப்‌ பொருளு மோர்ந்து
முத்தமிழதனில்‌ யாரு மொழி தரப்‌ புகன்றான்‌ மாதோ –37–

காரமர்‌ மேனி நங்கள்‌ கண்ணனின்‌ கவுத்துவாம்சத்‌
தார் கலி பரசு ராம னாணையி லொதுக்கித்‌ தந்த
கேரள நாட்டு மாதர்‌ கிளரொளி வதன நோக்கி
மாரவேண்‌ மயல் கொள்‌ வஞ்சிக்‌ களநக ரரசுகந்து–38-

அகனில முழுதுமோச்சு மரசனாங்‌ கொருவன் பால
வுகமுறு பராபவத்து ளோங்கிய மாசிச் சுக்லத்‌
திகல் கெடு தசமி பொன்னா ளெய்திய புனர் பூசத்திற்‌
பகலவ னொளியே யன்ன பைங் கதிர்க்‌ குழவியானான்‌–39-

சேரனுக்‌ கிள வலாகச்‌ செனித்‌ துவெண்‌ டிருமண் காப்பு
நேர்கொள் வைணவர்க ளோடு நித்தலும்‌ ராம காதை
யோரு நாட்‌ கரனோடெந்தை யொருவனாய்ப்‌ பொருதுங்‌ காதை
போரவு மொழியக்‌ கேட்டுப்‌ பொருதுவன்‌ கரனோடென்‌றே –40-

வழிகொடு கடந்த போத மைச்சரான்‌ மறை வலார்கள்‌
பழிபடு கரன் மற்‌ றுள்ள பரிகர மழிந்தாரென்று
மொழி தரு காதை சொல்ல முழக்கு பேரிகையை யென்‌ று
கழுகுலா மயிற்கை வேந்தன்‌ களிப்புடனிருந்தானம்மா–41-

இன்னவா றியைந்த வாய்மை யேதிலா வுழைய ரோர்ந்து
மன்னனுக்‌ கிவ்வா றோதும்‌ வைணவர்‌ நீக்க வென்று
ளுள்ளியவ்‌ வினன் செய்‌ பூசைக்‌ குரிய தென்‌ னரங்கன் சாத்தும்‌
பொன்னணி யாரந் தாமே கவர்ந்து பின்‌ புகலலுற்றார்‌–42–

கடகரி மருப்பொசித்த கண்ணன்‌ முத்தாரந்‌ தன்னை
மட மிலா விபுதராநின்‌ வைணவர்‌ கவர்ந்தா ரென்ன
வடலரசவர்கள்‌ செய்யா ரென்றுரை யாடிப் பாந்தட்‌
குடமதுட்‌ கையிட்‌ டன்னோர்க்‌ குறுதியே கூறினால்‌–43-

இனையன விழைத்த பேர்க ளுழையரென்‌ நினனுளெண்ணி
வனமணி மார்ப னெந்தை மாமதி லரங்க மேவித்‌
தனைக் குல சேகராழ்வா ரென்று பேர்‌ சாற்றப்‌ பெற்று
முனமுள ராம காதை மொழிந்தனன்‌ றமிழி லன்றே–44-

கள்ளவி ழளகபாரக்‌ கடைசியர்‌ களை கொய்‌ வேலை
பள்ளநீர்ப்‌ பழன முற்றும்‌ பங்கயல்‌ குமுத நீலத்‌
தொள்ளிய வுருவிற்‌ காட்ட வோதையிட்‌ டலமார்ந் தெங்குங்‌
கொள்ளை வண்‌ டுள மயங்குங்‌ கோமகன்‌ வழுதி நாட்டில்‌–45–

அல்லியங்‌ கோதை மாதரகனிலா மணி மாடஞ் சேர்‌
வில்லிபுத்தூரின்‌ மெய்ய விப்பிரர்‌ குலத்து முன்னஞ்‌
சொல்லு நற்‌ குரோதனத்திற்‌ றோன்‌றிய மிதுன சுக்லச்‌
செல்வ நற் பலகோளேகாதெசிகொள்‌ ஞாயிறு நன்னாளில்‌–46-

சோதிநாட்‌ கருடன்‌ சேயாய்ச்‌ தோன்றியப்‌ பருவஞ்‌ சென்று
நீதி நூ லனைத்தும் மோர்ந்து நிலமலர நந்தனான
வாதிமா லடியர்‌ தம்பா லன்பு பூண்‌ டவன் பதத்திற்‌
போது நந்தவனம்‌ வைத்துப பூந் தொடை யளித்து வந்தான்‌–47-

ஆவலிற்‌ றுளபமற்று மமுதுகு மலர்கள்‌ கொய்து
மாவல மார்பன்‌ செய்ய மலரடி சூட்டு நாளிற்‌
சீவல தேவனென்னுந் தென்னர்கோன்‌ பரமதாய
தேவினைத்‌ தெரிவா லுள்ளந்‌ திகைத்திருங்‌ கவலை பூண்டே–48-

ல்வியின்‌ முதிர்ந்து ஞானக்‌ கடலெனக்‌ கருணை பூத்த
செல்வ நம்‌ பியினைக் கூவித்‌ தேவினுட் பரமீதென்று
சொல்வதற்‌ குலகுளோரிற்‌ றுளக்கறு மறை மற்‌றுள்ள
பல்வகை நூல்களாய்ந்த பாவலர்த்‌ தேர்மினென்றான்‌–49-

இன்னிலத்‌ தியாவரேனு மிணையிலாப்‌ பரமீதென்று
நன்னெறி மநு நூன்‌ மற்று நான் மறை யெவையாலேனு
மன்னிடப்‌ பிரதிபாதிக்க வல்லரே லளவிலிந்தப்‌
பொன்னுறு கிழி யறுத்துப்‌ போவரென்‌ றறிவித்தானால்‌–50-

கற்றறிவாளர்‌ பல்லோர்‌ கசடற வறிந்தீ தென்று
சொற்றிடற்‌ கரியதாகச்‌ சோர்வுறப்‌ புதுவை வாழு
மற்றுறந்‌ திடவென்‌ றோட்டும்‌ வடபெருங்‌ கோயிலுள்ளா
னற்றை நா டொடையல்‌ சூட்டவ்‌ வன்பனின்‌ கனவிற்‌ சொல்வான்‌–51-

வார்ந்த வேல்‌ வழுதி கூடன்‌ மன்னர் கோன்‌ பரமீதென்‌ று
தேர்ந்திட வறிவிப்‌ போரிக்‌ கிழியறச்‌ செய்வாரென்‌ று
நேர்ந்தவ னாற்றி னான்‌ நிருபன தவைக்க ணீயுஞ்‌
சார்ந்திதென்‌ றறிவித்துப் பொன்‌ றனை யறுத்‌ திவணேகென்றான்‌–52-

கொழுஞ்சுட ரனைய நேமிக்‌ கோவல னுரைப்பவன்னோன்‌
அழுங்கி யு னடியிலன்பி னாய் மலர்‌ த்‌ தொடையல்‌ சூட்டுந்
தொழும்பல தறியா யான் மெய்ச்‌ சொரூபமீ தென்பான்‌ கொட்டுத்‌
தழும்பினைக்‌ காட்டி வீட்டத்‌ தக்கதோ கிழியை யென்றான்‌–53–

மெய்ய நின்‌ கவலை மாற்றி வேந்தன தவைக்கண் வாதஞ்‌
செய்யு நா ளெழுந்து யானுன்‌ சிந்தை வந் திருப்ப னஞ்ச
லய்யவென்‌ றிட வவ்‌ வன்ப னரசர் கோணவைக் கண் சென்று
பையராத்‌ துயிலு மாலே பரமென வறிவித்தானால்‌–54–

கொய்யுளைப்‌ பரிவேந் தன்னோன்‌ கூறிய தோர்ந்து பின்னுங்‌
கையிலங்‌ காழி மாலே பரமெனக்‌ கழறும்‌ வாய்மை
மெய்யெனில்‌ கிழி யறுந்து விழுமெனச்‌ சமையமெல்லா
நைய வீழ்ந்தது வெல்லோர்க்கு நாரணன்‌ பரமனென்ன–55-

மீனகேதனனுகந்தவ்‌ விபுதனைக்‌ களிற்றி லேற்றித்‌
தானைபின்‌ றொடர வீதி தனை வலம்‌ வருங் காலத்தில்‌
வானினான்‌ முகன் வேய்‌ முத்தன்‌ வார் தொழக்‌ கலுழன்மீது
தேனிறை துளவத்‌ தெந்தை சேவை தந் தருளக் கண்டே–56–

கூடினான்‌ களிதுலங்கக்‌ குணமிகு பரமன்‌ தாளைச்‌
சூடினான்‌ றுதி பல்காலுஞ்‌ சொல்லினான்‌ றுளங்‌கி நெஞ்சம்‌
வாடினா னிவர்கண்‌ ணீறு வருமெனத்‌ திருப்பல்லாண்டு
பாடினா னெவர்க்கு நீயே பரமெனத்‌ தொழுதான் மாதோ–57-

பொன்னவள்‌ கொழுநன்‌ வாழ்த்திப்‌ போனபின்‌ புனிதனாகும்‌
பின்னமி லிவர்க்குப்‌ பட்டர்‌ பிரானென நாமஞ்‌ சாத்திக்‌
கன்னவி றிரடோட்‌ காளை கனிந் திவர்க்‌ கடிமையாக
மன்னுமிவ்‌ வுலகிற்‌ பாக வத மியற்‌ றமிழ்செய்தானால்‌-58-

இளையவன்‌ புதுவை சென்றாங்‌ கெந்தைபான்‌ முன்னினந்தா
வனமதுபுரந்து செய்ய மலரளித்‌ திடுமோர் நாளிற்‌
கனவண னருளா னீளை கடிவனத்‌ துளவத் தூற்றிற்‌
சினமக ளுருவதாகத்‌ திருவின் வந்‌ தவதரித்தாள்‌–59-

மண்டமர்‌ கடந்த வாழி வடபெருங்‌ கோவிலார்க்குத்‌
தண்டுள வெடுக்குங்‌ காலத்‌ தளிர் நிறக்‌ குழவி தன்னைக்‌
கண்டுட னெடுத்து வந்து கனிவுடன்‌ வளர்க்க வன்னாள்‌
கொண்டலிற்‌ சுருளுங்‌ குஞ்சிக்‌ குழவி போய்ப்‌ பருவமுற்றான்‌–60-

ஒடரித்‌ தடங்கணாளவ்‌ வொளிமணி வண்ணற்‌ கன்னோன்‌
ஜோடவிம்‌ மலர்கள்‌ கொய்து தொடுத்து வைத்‌ தயல்‌ போங்‌ காலை
நாடியுள்‌ ளுகந்து நீண்ட நள்ளிரு ளளகந் தன்னிற்‌
சூடிநீர்க்‌ கிணற்றிற்‌ பார்த்துச்‌ சுற்றி வைத்‌ திடுமோர் நாளில்‌–61-

தார்வட பத்திரற்குச்‌ சாத்தவன்‌ னோனெடுக்க
வார்குழலிருப்ப நோக்‌கி மதி மலைந்‌ துழன்‌ று கெட்டுச்‌
சீர்கெழிம்‌ மடமான்‌ செய்த செய்கை யென்‌ றறிந்து மற்று
மேர் கொடே மலர் கொய்‌ தெந்தை யிணை யடி புனைந்தான்‌ மன்னே–62-

அம்மல ரணிந்த மாலவ்‌ வடியனின்‌ கனவிற்‌ சென்றப்‌
பொம்மல் வெம்‌ முலையாள்‌ சூடும்‌ போதுகந்‌ தளித்திடாதிச்‌
செம்மல ரளித்த தெற்குத்‌ திருவுள மிலையென்றேக
விம்மறை யோனு மன்னா ளிந்திரை யாமென் றெண்ணி–63-

படத்தர வணையானுள்ளப்‌ படிமல ரளித்துச்‌ சூடிக்‌
கொடுத்தவ ளென்று காமங்‌ கொழுங்கயற்‌ கண்ணிக் கீந்தான்‌
மடக்கொடி யுகந்‌து பொன்னி யரங்கனை மணந்து முன்னீ
ரிடத்‌ துப நிடதார்த்தத்தை யிசைத்தன டமிழிலன்றே–64-

கடி கொள் சந்தகிலுருட்டுங்‌ காவிரி நதிநீர்‌ சூழத்‌
தொடுநிரை விளைவாஞ்‌ சாலிச்‌ சோழநாடதனுள்‌ மண்டங்
குடிநக ருறையும்‌ விப்ர குலத்திலோர்‌ வனமாலாஞ்சத்‌
தடியர்பாற்‌ கலியுகத்தி லழகிய தனுமாதத்தில்–65-

கேட்டை நாளவதரித்‌துக்‌ கிளரொளி மகவாய்‌ ஞான
நாட்டமார்‌ விப்ர நாரா யணனென நாமம் பெற்று
வாட்டமின்‌ மறை கண்‌ மற்றை மனு முத னூல்க ளோர்ந்து
கோட்டமின்‌ மனத்தா னென்று கூறிட வதியுமெல்லை–66-

மஞ்சுயர்‌ மாட நீண்ட மாமதி லரங்கஞ்‌ சென்றோ
ரஞ்சன வண்ணன்‌ செம்பொ னடி யிணை வணங்க மாயோன்‌
கஞ்ச நீண்‌ மலரரிக்கட்‌ கடையரு ளளித்தன்‌ னோன்ற
னெஞ்சினைக்‌ கவர்ந்து தன்பா னே யவா னாக்கினானால்‌–67–

அற்றைநாண்‌ முதலன்னோ னெம்‌ மரங்கனே யரணென்‌
றுள்ளிற்‌ பற்றிமா மலர் கொணந்தா வனமது பரிவாய்‌ வைத்து
நற்றொடை யளித்துச்‌ செல்லு நாளொரு தினத்திலந் நா
டுற்றிடு திருக் கரம்ப னூரில் வாழ்‌ கணிகைமானாள்‌–68-

காவிவென்‌ றகன்று நீண்ட கயற்கணர்‌ துவர் வாய்த் தேவ
தேவகி யெனும் பேர்‌ கொள்ளுந்‌ தெரிவையு மிகுளை மாரு
மாவலி னிசளை யென்றோ ரணி நகர்க்‌ கரசன் பாற் சென்‌
றேவல்கள்‌ புரிந்து தன் பொ னெழினகர்க்‌ கெய்துமாறில்‌–69-

இவ்வெழில்‌ வனங்கண்‌ டுட்சென்‌ றெய்திரு வளநோக்‌ குங்கா
னவ்விகொணயரநி விப்ர காரணன்‌ றன்னைக்‌ காணச்‌
செவ்வியோ னிவளை யோர் கண்‌ டிரும்பியும்‌ பாரா நிற்க
வவ்வணி மாதுக்‌ குற்ற பின்னவ ளறை கின்றாளால்‌–70-

மைப்படு குழலி யிந்த வையகத்‌ தெவரையும் யான்‌
கைப்படுத்‌ துவனென்‌ நென்பாற்‌ கழறினை யலவோ விந்தத்‌
துப்பனை வசஞ்செயின்னீ தொழில் வல வேசி யென்ன
வெப்படி யேனு நங்கா யிவனை யென்‌ வசப்படுப்பேன்‌–71-

சூளென வுரைக்க மற்றோர்‌ தொன்னக ரடைய வீண்டு
வாளரி மதர்க்கட்‌ டேவ தேவகி வஞ்சமுற்று
நீளலர்‌ வனத்‌துக்‌ சுன்னோன்‌ பரிவுட னீரிறைக்கும்‌
வேளை பார்த்‌ திவளங்‌ குற்றம்‌ மடையினை விலக்கி வந்தாள்‌ –72-

இன்னணஞ்‌ சிலநாட்‌ சென்றவ்‌ வேதிலா னீயாரென்ன
நன்னய நிதி வெறுத்து நாயினேன்‌ பரனைக்‌ காண்பா
னுன்னடி பணிந்து சந்ம முய்ந்திட வந்தேனென்ன
வன்னவ னிசமென்‌ அள்ளி யவ்வனம்‌ பயிலுங் காலை–73-

வருடமோ ரிரவிற்‌ பெய்ய மறைவலான்‌ சிறுகுடிற்கு
ளிருடிபோல்‌ வேடங்கொண்ட விவளையான்‌ அழைக்க வந்தெ
னருடருக்‌ தவனே நின்றன டியினை வருடல்‌ செய்வேன்‌
முருடனே னென நயந்து முனிவனை வசஞ் செய்தாளால்‌–74-

அன்றுதொட்‌ டவளை யின்னே னிறையள வகலானாகிப்‌
பின்றொடர்ந்‌ தேக வன்னாள்‌ பின்னவள்‌ வியந்த பின்னர்ப்‌
பொன்தரத்‌ தரமிலாய்நீ போவெனப்‌ புகல மின்னாண்‌
முன்‌ றில்வற்‌ தணுகி யென்னோ முடங்கி நெஞ்‌ சுருகுங் காலை–75–

வாவிசூழரங்கன்‌ றன் பொன்‌ வட்டிலை யெடுத்தன்னோனா
லேலிய தூதன்‌ போல வெய்திய வேசி தன் முன்‌
மேவி வட்‌ டிலை யுன்‌ விப்ர நாரணன்‌ கொடுத்து விட்டா
னாவியி னவனைக் கூவி யணை கெனக்‌ கொடுத்த கன்றான்‌–76–

அன்னவன்‌ கொடுத்தகன்ற வனந்தர மவனைக்‌ கூவிப்‌
பின்னமி லணைந்து மற்றும்‌ பிற்றை நாள்‌ வெறுக்க வாங்கு
பொன்னரங் கேசன்‌ கோயிற்‌ பொலன் கொள்‌ வட்டிலைக்‌ காணாதீ
தென்ன காரண மென்றேங்கி யிறைவனுக்‌ கறிவித்‌ தாரால்‌–77-

செம்பியன்‌ சினத்தக்‌ கோயிற்‌ சேவக ரனைவோர்க் கூவி
யெம்பிரான்‌ வட்டி றன்னைக்‌ கவர்ந்த தாரியம்பீ ரென்று
வெம்பிட வருத்துங்காலவ்‌ வேசையின்‌ றூதி சென்றெம்‌
வம்பவிழளகத் தேவதேவகி மடமான்‌ கண்ணே—78-

அடுத்தவ னொருவன்‌ விப்ர நாரண னவன் றன்‌ றூதாய்‌
விடுத்தவ னொருவ னோர் பொன்‌ மேய வட்டிலைக் கைக்‌ கொண்டு
கொடுத்தன னதுவோ வென்று கூறு முன்‌ படை திரண்டவ்‌
வடுக்கணி மனைசோதித் தவ்‌ வட்டிலை யெடுத்தாங் கெய்தும்‌–79-

துப்பனை யழைத்து நின்றன்‌ றாதனார்‌ கவர்ந்த தென்னீ
செப்புவா யெனவுமன்னோன்‌ செப்பலென்‌ றூதுமில்லை
யிப் பொன்‌ வட்டிலையும்‌ யானிங்‌ கெடுத்ததி லென வேந் துள்ளம்‌
வெப்பியன்‌ னோனைக்‌ காவற்‌ படுத்திட விளம்பிச்‌ சென்றான்‌–80-

பொன்னிசூழரங்கனிந்தப்‌ புனிதனொன்‌ றறியான்‌ யானே
யன்னவ ளிடத்திற்‌ சென்றிவ்‌ வட்டிலை யளித் தன்னோன்ற
னன்னயத்‌ தூதனென்று நவின்றன னென்று வைவேன்‌
மன்னவ னருகிற்‌ சென்று கனவுரை வழங்கனானால்–81-

கேட்டமன்‌ னவனாமென்ன கேடிழைத்‌ தனமென்‌ றுள்ளம்‌
வாட்டழுற்‌ றவணெழுந்தம்‌ மறை வலான்‌ சிறையை நீக்‌கிக்‌
கோட்டமின்‌ மனத்தனோ யென்‌ கொடும்பிழை பொறுத்தி யென்று
தாட்டுணை தழுவ வன்னோன்‌ றன்பிழை குறித் தயர்ந்தே–82-

முன்னினந் தவனம் வைத்தம்‌ முகிழ் மலர்த்‌ தொடையல்‌ சூட்டித்‌
தென்னரங்‌ சேசன்‌ மெய்ய திருவடித்‌ தொழும்பனாகி
யன்னவ னடியவர்க்கு மடியர்காற்‌ றுகணாமங்கொண்
டின்னியல்‌ வேதாந்தார்த்த மிசைத்தனன்‌ றமிழிலன்றே–83-

ஒதமா னீர்கொள்‌ பொன்னி யுலவு தண்‌ சோழ நாட்டின்‌
மாதவர்‌ வேள்வி நாளும்‌ வளர்த்திடு முறந்தை தன்னிற்‌
சீதவா ரங்கொழிக்குஞ்‌ செய்யுறு கதிரினுளளே
கோதறு கலி யுகத்திற்‌ கூறு துன்‌ மதியப்தத்தில்‌–84–

விருச்சிக மதியிற்‌ புந்தி விமாநநாள்‌ ஸ்ரீவத்ஸாஞ்சத்‌
துருக்கிளர்‌ மதலை யாயங்குதித்தழ வுழவன்‌ காணாத்‌
தருக்குடனெடுத்தச் சேயைத்‌ தன் மனை வளர்க்கச் சேயுந்‌
தெருட்சியின் முதிர்ந்த ஞானச்‌ சிந்தையாய் வளர்ந்து பின்னர்‌–85-

நித்தனு மரங்கத் துற்றுத்‌ திரு முகத்‌ துறைக்கு நேர் நின்‌
றத்தனை மனத்துட்‌ கொண்டம்‌ கவன் குணம்‌ பலவும்‌ சொல்லிப்‌
பித்தரிற்‌ கடையனேனென்‌ பிறப்பறுத்‌ தருள்வா யென்று
புத்தல ரடிவணங்கிப்‌ போரு நாளொரு நாளாங்கே–86–

போதுலாம்‌ பொதும்பர்‌ சூழும்‌ பொன்னரங் கேசனாரக்
கோதிலாற்‌ கருள்வானெண்ணிக்‌ குண மிகு முனிவனாகும்‌
வேத சாரங்கன்‌ றன்பான்‌ மேவு புகன வினீநஞ்‌
சீதவார்‌ புனலலைக்குந் திரு முகத்‌ துறைக் கண்‌ சென்று –87–

அங்கிருந் தொரு வனம்பா லன்பினின்‌ றகலா னாடகிச்‌
செங்கர முடி மேல்‌ வைத்தித்‌ திசை தொழு திறைஞ்டு நிற்கும்‌
புங்கவன்‌ றனை நின்றோளிற்‌ பொலிய வைக்‌ திவண் வாவென்‌று
வங்கமா கடல் கடைந்த மாயவனருளிச்‌ சென்றான்‌–88-

அவ்வுரை முனிவன்‌ கேளா வன்புடனெழுந் தாங்குற்ற
செவ்வியோன்‌ றனை யழைப்பச்‌ சிறியனான்‌ புலை யனையா
எவ்வண மெழுவேனென்ன விசைத்தனன்‌ றிருத் தோளேற்றிப்‌
பவ்வநீ ரணை படுத்த பாழியான்‌ றிருமுன்‌ புய்த்தான்‌–89-

வண்டின முரலுந்தாம வனமணி மார்பன்‌ றன்னைக்‌
கண்டுள நிறையாநந்த நீரிரு கண்ணுங்‌ காட்ட
வண்டர் நாயகனை வாழ்த்தி யவனருளமுத மாந்திப்‌
பண்டு போம்‌ பொருள் கிடைத்த படி யுள மகிழ்ந்தா னன்றே–90-

மாட மாளிகை யரங்க மறைவலா ரிவனை வாழ்த்திக்‌
கோடுடைப் பரனுக்குற்ற குணங்களி லீடுபட்டுப்‌
பாடலி லுனக்கு நாமம்‌ பாண் பெரு மாளென்‌றோத
வீடிலான்‌ வேதாந்தார்த்த மிசைத்தனன்‌ றமிழிலன்றே–91–

கொல்லுலைப்‌ படுவே லங்கைக்‌ கோமகன்‌ வதி சோணாட்டுட்‌
சில்லரிச்‌ சிலம்பு மாதர்‌ செறி தரு குறையலூரி
லல்லி நற்‌ கமலக் கண்ண னழகிய தனு வஞ்சத்தின்‌
மல்லலங்‌ கலி யுகத்தில்‌ வரு நள வருடமன்னோ–92-

பொங்கு கார்த்திகை யுவாவிற்‌ பொன்னெரி நாளினல்ல
மங்கல யோக நான்காம்‌ வருணம துதித்து நாமம்‌
நங்குல நீல னென்று நவின்றிட வளவன்‌ றன்னாற்‌
சங்கையி னிதிபடைத்தோர்‌ தரணியும்‌ புரந்து வந்தான்‌–93–

ஆவியி லுலக மோம்பு மவன் றிரு நகரி லுள்ளோர்‌
வாவியி லரம்பை மாதர்‌ வைகலு மாட வோர்நாட்‌
கூவிளங்‌ கனி மென்‌ கொங்கைக்‌ கொடி யிடைக்‌ கமல மாது
மேவியிப்‌ புவிமானென்ன வியந்து நீராடி னாளால்‌–94–

அன்னவ ளடைதலோடு மரம்பைய ரகலக்‌ கண்டார்‌
பொன்னவ டனிக்க வாங்கோர்‌ புனிதன் வந் திவளை நோக்கா
நின்னிட மெவணின்‌ பேரென்‌ னிற்றலென்‌ றனித்திங்‌ கென்னக்‌
கன்னலிற்‌ கனிந்த தீஞ்சொற்‌ கன்னியும்‌ கழறு வாளால்‌-95-

நாக மங்கையரோ டிங்கு நணுகின னெனை யன்னோர் விட்‌
டேகின ரினியுன்‌ பண்டி யெய்திய மகள் யா னென்னக்‌
கேகையச்‌ சாயன்‌ மாதைக்‌ கிழத்தி பா லளித்து நாளும்‌
பாகமா ரமுத மூட்டிப்‌ பரிவுடன்‌ வளர்க்குங்‌ காலை–96-

நீலனவ்‌ வநகன்பாலோர்‌ நேரிழை யியைந்‌து வாழுஞ்‌
சீலம தறிந்தனாளைத்‌ திருமணஞ்‌ செய்ய வென்று
கோலியாங்‌ கணுகிச்‌ செம் பொன்‌ குறை வறக்‌ கொடுக்க வன்னோன்‌
னேலவார்‌ குழலி யுள்ள மென்றவ னியம்பப் பின்னர்–97-

குருகுலாமயிற்கை வேந்தன்‌ கோகில மொழியைக் கேட்கத்‌
திரு விலச்சனை யுண்டாகிற்‌ செய்வனென்றுரைப்பச் சென்று
மருமலர்ப் பொதும்பர் சூழு மாமதி னறையூர் நம்பி
யருளினன்‌ றிருமுன் பெற்றீண்ட டைதலு மவள் பின்‌ சொல்வாள்‌–98-

வான்றொடை புனை நாட்‌ டொட்டோர்‌ வருடமதளவுமெற்கோர்‌
நோன்பது வைணவர்க்கு ணூறு பேரழைத்து நித்தம்‌
பான்மிசை கருனை மற்றும்‌ பல மளித்‌ தவருண்பிக்கி
னானுனை மணப்பே னென்ன நன்றென மணஞ் செய்தானால்‌–99-

மன்றலா னது தொட்‌ டன்னோன்‌ வைணவர்க் களித்துக் காணாக்‌
குன்றிய நிதியோ னாயுட்‌ குழைவது வளவன்‌ கேட்டு
யின்‌று நந் நிலுவை வாங்க யேகு மென்‌ றுரைக்கத் தூதர்‌
சென்றிட முனிந்தி லென்னச்‌ செம்பியன்‌ சிறையிலிட்டான்‌—100-

வெம்பிய சிறையி லன்னோன்‌ வெதும்ப நும்‌ வேக்கிறைக்கும்‌
வம்பவிழ்‌ கமலத் தொங்கல்‌ வைணவர்‌ வேழ்விக்கும் யான்‌
அம் பொன தளிப்பே னென்றங்‌ கத்தி மா நகரத்‌ தெம்மா
னெம்பதிக்‌ கேகென்‌ றன்னோற்‌ கியம்பினன்‌ கனவிலன்றே–101-

அக்கன வறியா நீல னத்திமா நரகம்‌ வந்து
மிக்க நும்‌ பகுதி கோடி வேந்தென விசைந்தவ்‌ வூருட்‌
புக்க நன்‌ னிதி காணாது புலர்ந்திடக்‌ கனவில்‌ வந்து
சக்கரத்‌ தெந்தை காட்டுந் தனத்தவர்க்‌ குளதளித்தான்‌–102-

மற்ற நன்னிதியு முன் போல்‌ வைணவர்க் களிக்கக் காணா
துற்றிட வழிப் பறி செய்‌து,தவவவ்‌ வேள்விக்கோர் நாள்‌
சொற்றெரி வீழி துயின்ற மாயவன்‌ றிருவினோடு
விற்றிரட்‌ பணி பூண்‌ டாற்றின்‌ மேவினன்‌ கிழவோரன்ன–103-

அன்னவ ரடைய நீல னகமகிழ்ந் தணுகி வல்லை
பொன்னணி பறித்தன்‌ னோர்தம்‌ பொற் கலை விரித்து வைத்து
பன்னக நடித்த பொற்றாட்‌ பவள மெல்‌ விரலின்‌ மிஞ்சி
தன்னை வெள்‌ ளெயிற்றால்‌ வாங்கித்‌ தானைவைத்‌ தெடுக்குங் காலை–104-

அந்தர மசைபட்டாலு மசை படா விதனை யோர்ந்து
கந்துகக்‌ களினு போல்வான்‌ காய்சினத்‌ தவனை நோக்கி
மந்திர முணர்ந்தாய்‌ கொல்லோ மறை வலா வதையான்‌ றேறத்
தந்திடில்‌ விவெனென்னச்‌ சக்கரத்‌ தெந்தை சொல்லும்–105-

வழிப்பறிக்‌ கபடர்‌ மேலாம்‌ வள்ளலிம்‌ மந்திரந் தான்‌
விழுமிய ததினாலிந்த மென் மலர்‌ வாவி யுண்ணீ
முழுகி நாமமு மணிந்‌துண்‌ மொய்த்தவன்‌ பகலத்‌ தென்னை
தொழுது பின்‌ வினவிற்‌ சொல்வன்‌ றூய வென்னலு மிசைந்தான்‌–106-

மாதவ னடியை வாழ்த்தி வலச் செவி கொடுக்க வன்னோன்‌
கோத றட்டாக் கரத்தைக்‌ கூறவு மிருளகன்று
போதமுற்‌ றெனை யிவ்‌ வாறிற்‌ போந்துனதடிக் காட் செய்த
நாதனே கண்டு கொண்டே னாரண னாமமென்றே–107–

சூடினான்‌ மடி மாங்காயிட்‌ டடியனை வழித் தொண்‌ டாக்குங்‌
கோடுளாய்‌ மாதரார்தங்‌ கூர் விழி வலையிற்‌ பட்டு
வாடினேன்‌ வாடி யென்றும்‌ வருந்தினே னெனப்‌ பாமாலை
பாடினான்‌ பரமீதென்று பாருளோர்‌ தெளிய மாதோ–108-

பொன்வரைக்‌ குடுமி மீதூர்‌ புயலெனக்‌ கலுழன்மீது
கன்னியர்‌ அளவினானுங்‌ காட்சி தந்தருளிப்‌ பின்னர்‌
மன்னு நங்‌ கலிய னென்று நாமமும் வழங்கிச்‌ செல்ல
வின்னவ னுகந்தம்‌ மாயன்‌ பதிதொறு மிறைஞ்ச வென்றே–109-

நாடிப்பல்‌ பதிகஞ்‌ சொல்லி நாற் கவிப்‌ புலவனென்று
நீடிய விருது பெற்று நிகழுறும் பொழுது கொன்றை
சூடியின்‌ கழல் சம்பந்த தூதனாங் கொருவன்‌ செல்லா
ஏட வெம்‌ மிறை போலிந்த விருதுனக்‌ கிசையாதென்ன–110-

கலியனீ தறிந்திவ்‌ வண்ணம்‌ விருது கொள்‌ கவியின்‌ மிக்க
வலியன தவைக்கண்‌ சென்றியாம்‌ வாதமே புரிவ மென்று
சொலிவரு மிவனை யன்னோன்‌ றூயனென்‌ றறியானாி
வெலுவமென்‌ றெண்ணி நீயோர்‌ குறளினை விளம்பென்றானால்‌–111–

இந்தவா றுரைப்ப நெஞ்சத்‌ தேதிலாக்‌ கலியனோர்ந்தே
யந்தமா நகர்க்குள்‌ வைகும்‌ வைணவத்‌ தம்மை யாரை
யெந்தமக்‌ குமது பூசை யெம்பிரான்‌ றனை நீர் சற்றே
தந்திடு மெனக்கைக்‌ கொண்டச்‌ சார்ங்கனை யெதிரில்‌ வைத்தே–112-

ஒருகுற ளென்றெடுத்துப்‌ பதிகமொன்‌ றுரைத்துத்‌ தான்கொள்‌
விருதுகள் அனைத்தையும் கூறி வென்ற பின் இவனை யன்னோன்
திருவடி வணங்கி நாயேன்‌ செய் பிழை பொறுத்தி யென்று
பருதி முன்‌ சசியினின்று பரகால னென்று போனான்–113-

நாரணன்‌ பதிகடோறு நாடியன்‌ னவனும்‌ வாழ்த்தி
யாரணப்‌ பொருளீ தென்றுள்‌ ளறிந்து பற்‌ பதிகமாக
பாரணு முயிர்கள்‌ செய்ய பழ வினை யறுத்துய்தற்‌குக்‌
காரணமாகச் செய்தான் கலியனும்‌ தமிழின் மன்னோ–114-

திருப் புளி யாழ்வார்‌

நன்னய துவாபர சயத்தினலி வில்லா மன்னு மிதுநத்தில்வரு மாசிறிரு மூலம்‌
பன்னக வரோதய னுகந்து பனி மாலூ ரின்னறு மலர்ப் புளி யுருக் கொடி வனுற்றான்‌-115-

இங்கன முரைத்தடு ப்ர பந்நர்களிவர்க்கே
யங்கமென வுற்றிடுவ ரண்ணலினி நீ யிப்‌
புங்கவனை நம் புதல்வ னென்று புகலாது
வங்கமவி பவ்வமதி மாயனென வெண்ணீ -116-

கற்றின மறித்ததோர்‌ கழைத்தலை யிடத்தும்‌
புற்றரவ மீதும் விழி போதவள ரெந்தை
சிற்‌றுருவினேரிலிவன்‌ சென்‌று தனடிக்காட்‌
பற்றிய நின்‌ பேரினுயர்‌ பாரிலெவருள்ளார்‌–117-

வாரிச நிகேதனன்‌ மலைத் தெரிவை பாகன்‌ ஈரிமு மறைக்குவடு மின்னு மறியாத
சூரிகள்‌ பராவுமிவன்‌ றொண்டு புரிகின்ற வாரிய நினாது புக ழாருரை செய்கிற்பாற்‌,–118-

வெஞ்சமர்‌ கடந்தவிறல்‌ வேக்தென விளம்ப
நெஞ்சிரு ளகன்‌ றுவகை நீள்கடலழுந்தா
வெஞ்சலிலிவன்பர னெனும்வகை தெரிந்தே
வஞ்சலி புரிந்திறைவ னம்முனி பணிந்தான்‌-119-

இத்தகைமை யுற்றபுக ழெய்து முதிர்‌ ஞானத்‌
தத்துவ முனிப்பர னடித்துணை யிறைஞ்சா
நத்தியுல காய சட நாசனென நாமம்‌
முத்தி தருகானரு முதற்கினி தளித்தே–120-

எம்பிறவி வெவ்வலை யிறக்கருணை கூரும்‌
நம்பி யருள் செய்த மொழி நாயினன்‌ மறந்தே
வம்புலவு பைந் துளவ மாலை யணி மார்பா
கொம்புலவு திந்தரிணி கொண்ட சடகோபா–121-

கண்ண நினை யிவ்வுலகர்‌ காள்‌ முளையினெஞ்சத்‌
தெண்ணி யடியன் பிழை யிழைத்தது பொறுத்தி
விண்ணவிர்‌ திருப்புளி வியந்த பெருமானே
தண்ணளி யெனுங்கட றதும்பு சடகோபா–122-

என்‌றுபல வாறுள மியைந்து பணி மாறி நன்‌று புரி யாத பவ நாடி நனி செய்யுந்
தன்றனைய னாயவன்‌ சனித்த வரு ளோரா நின்று பு திகைத்து பு நினைந்து பு மகிழ்ந்தே–123-

என்னை யுல கோர்பொரு ளெனத் திரு வுளத்தி
துன்னி யருள்‌ வான் வயி றுதித்த பெருமானா
நின்னை மக வென்ற பிழை நீ பொறு வெனத்தார்‌
மன்னவ னிரந்‌து பு மலர்க்கழல்‌ பணிந்தான்‌–124-

அன்னவ னிறைஞ்சலு மருட்கொடளி சூழாத்‌
தென்னவெனு மாலையன்முன்‌ செய்யு மவதாரந்‌
தன்னை முழு தும் மவன்‌ றனா துளம்‌ வியப்பப்‌
பின்னமி லளித்தனன்‌ பிறப்பினை யறுப்பான்‌–125–

தாறுகொள்‌ மதக்கரி தடிந்த விறை தந்த
வீறிலவ தாரமதி லின்புற வுளங்கண்‌
மாறில் வகை பற்றவுடன்‌ வாய் புகழ வென்போற்
பேறுறுவ ரார் கொலெனவே பெரிதுவந்தான்‌.–126-

இன்னண நவின்‌ றுவல மெய்தியிம மால்கொண்
மின்னெனு நுடங்கடை விழிக்கரு விளைப்பூ
கன்னியுட னப் பரன்‌ கழற்றுணைபணிந்தே
நன்னக ரடைந்து நித நாடுவர் தொழற்கே–127–

பதின்மர்‌ திரு வரன்முறைப்‌ படலம் முற்ரம்

நூற்றெட்டுத்‌ திருப் பதிப்‌ படலம்‌

திரு மகழ்‌ மார்பரங்கன்‌ நிருவடித்‌ துணையதாகு
மருமகிழ்‌ மாலை மாறன்‌ மலர்ப் பதத்‌ தினிதுவாழு
மிருமகி தலத்துளோங்கு மெதிபதி சரணம் போற்றி
யருமகிமைய நூற்றெட்டா மரும்பதிப்‌ படலஞ்‌ சொல்வாம்‌–1-

குருதிகொப்பளிக்கும்‌ வைவேற்‌ கொற்றவன்‌ றேவிசேரப்‌
பருதியிற்‌ றிகழு மேனிப்‌ பரமனை யிவ் வாறாகக்‌
கருதிநித்தமும்‌ போந்தன்னான்‌ கழறொழு தினிய செய்யுட்‌
டருதவத்‌ திறையை நீ கொள்‌ தகையார் பெற்றாரென் றேத்தி–2-

அண்டமு மண்டத்துற்ற சராசர மனைத்து மாகும்‌
புண்டரீகக்கண்‌ ணாழிப்‌ புங்கவன்‌ போந்து போந்திவ்‌
வெண்டிசை போற்றச்‌ செய்த வெழில் விபவாவதாரந்
தண்டரை யின்றர்ச்சாவதாரமாய் விளங்கலாலே–3–

அன்னது நிகர்ப்ப நம்பா லடைந்தவதாரஞ்‌ செய்த
பன்னருஞ்‌ சிறப்புற் றோங்கிப்‌ பரமனு மிவ்வாறாவா
னென்ன மண்ட லங்கள்‌ காக்கு மெழின் முடி மன்னர் போந்தே
சென்னி தாழ்ந்‌ திறைஞ்சும்‌ வேந்தன்‌ றிருவுளத்‌ தெண்ணா நின்றே–4-

பொனனக ரிமையோர்‌ போற்றப்‌ பொலிந்து நின்‌ றருளுமாதி
சினகரத்தினுக்குத்‌ தெற்கிற்‌ றிகழ் திருப்‌ புளியின்‌ கீழ் பா
லன காற்‌ புளத்து வாழு மனைய மாறனுக்குக்‌ கோயில்‌
கனக ரத்தினத்தினாலே கவின் பெற வமைத்துப்‌ பின்னர்‌–5–

சங்கராசனுக்கு முத்தித்‌ தலமுகந் தளித்த வாதிப்‌
புங்கவன்‌ மிக்க வாதிப்‌ புனிதன்‌ றன்பாற்‌ றனாது
தங்கு நீர்‌ வளங் கொண்டோங்குந் தரை யெழி னகராங்குள்ள
மங்கல நிதிபூண்‌ மற்றும்‌ வளமெலா முகந்து நல்கி–6–

பாட்டளி துதைந்து பாடும்‌ பனிவளர்‌ வகுளத்‌ தெம்மான்‌
றாட்டுணை கருதியன்னோன்‌ றழை விழிக்‌ கருணையாலே
வாட்டடங்‌ கண்ணாணங்கை மாதொடுஞ்‌ சின்னாளீங்கு
வேட்டனன்‌ வைகி வேந்தன்‌ விளம்பரும்‌ பதியிற் சேர்ந்தான்‌–7-

அனையவ ரிவ்வாருக வணி பெருஞ்‌ சுடர் கொள்‌ மேனி
புனை தரும்‌ வகுளத்‌ தெம்மான்‌ பொற்றிரு வடித் துணைக்கே
தனை நிகர்‌ மதுரச்‌ செய்யுட்‌ டவப்பிரான்‌ பலவாறாய
நினைவரு மடிமை செய்யா நின்‌று முன்‌ னினைய சொல்வான்‌–8-

எளியனா மடியேற்‌ ஒன்று ஹித புரு டார்த்த தத்வங்‌
களை விளக்‌ குறு விசேடார்த்‌ தங்களை யெல்லாங்‌ கைசே
ருள மயக்‌ கறவே யுள்ள முகந்துரைத்‌ தருடி. யென்றே
வள மலர்க்‌ கரங்கள்‌ கூப்பி வணங்‌கினன்‌ வழங்கினானால்‌–9–

இன்னணம்‌ பரமன்‌ முன்ன ரிசைத்தன னிற்குங்காலை
அன்னு மெய்ஞ்ஞான நித்ய சூரி கடமக்கிலாது
பின்னெவர்களுக்கு மெட்டாப்‌ பேறுரித்‌ தாகி யோங்கும்‌
தன்னிக ரில்லா வைகுந் தத்தினிற்‌ பொலிந்து வாழும்‌–10-

திரு வினாயக னொண்போதின்‌ செல்வனன்‌ றிட்ட சாப
மிருவிநாயகன்‌ றாதைக்கன்‌ றீர்த்தவன்‌ கமல பாத
மருவினாய கருவோட்டி வானுகந் தளிக்கு மெம்மான்‌
பொரு வினாயக மாறற்குப்‌ புகழ்ந் தெதிர்‌ விழி கொடுப்பான்‌–11–

கருத்தினிற்‌ கருதா முன்னர்க்‌ கலுழனு முன்னர்‌த் தோன்ற
வெருத்தமீ தலரின்‌ மேன்மா திரு நில மாது நீளை
யருத்தி யி னுடன் வந்தேற வவிர் பொலன்‌ கிரியின் மீது
கருத்ததோர் வெற்‌ புவந்து கலந்தெனத்‌ திகழத் தோன்றி–12–

இருமருங் கினிது வாழு மிந்திரை முதலா மூவர்‌
கரு விழி யெனுங்கார்‌ வண்டின்‌ கண் முக மலரின் வீழப்‌
பொருதயிற்‌ றிகிரி யாதி பூங்கரத்‌ தடக்குந்துய்ய
செருவிகற்‌ படை களைந்து முறை முறை திகழ்மின் காட்ட–13–

அங்கையிற்‌ பிரம்பொன்‌ றேந்தி யண்டாண்ட முழுதுங்‌ காக்கும்‌
பொங்கருட்‌ சேனை நாதன்‌ புகழ்ந்தனன்‌ முன்னரேகத்‌
துங்கலில்‌ வினை தீர்‌ நித்ய சூரிகள்‌ நெருக்கிப் பக்க
மெங்கிலுஞ்‌ சூழ்ந்து சென்னி யெழிற்கா முகிழ்த்தாராகி –14–

பாயிர மறைகணான்கும்‌ பாடுறப்‌ பலர்கள்‌ சில்லோ
ராயிர ஈாமங்‌ கூறி யடியினை பணிந்தாரேத்த
தூயவர்‌ சிலர் ப்ர தாபஞ்‌ சொல்லியங் கர முகிழ்த்தா
ராயவண்‌ வெகுபராக்கென்‌ றன்னவ ரெழுச்சி கூர–15–

தாணுவயனே முதலர்‌ காணரிய மாயன்‌ றனக்கு விழி யிற்றுறு மெனத்தமதுளத்தே |
பூணரிய சங்கைகொடு மாணுறு மநேகர்‌ பொங்கு பல வாழியொடு மங்கள முரைப்பச்‌
சேணிமிரு வெண்மதியின்‌ வாணில வெறிக்குஞ்‌ சித்திர மிழைத்தபல சத்திர மெடுத்தே
யேணுடைய இற்சிலர்க ணீணசையி னொடு மெழிற்றிரு வொண்‌ மேனி யினிழற்றினர்கள்‌ செல்ல–16-

ஆமவர்க ளிற்சிலர் க டேமருவுமென்பூ வாசறுமி னாசை யுறு தூசி னொடு சுண்ணம்‌
பூமருவு மங்கை கொட மா மணமும்‌ வீசப்‌ போதமிக வுற்ற சிலர்‌ போதவு மிரட்டும்‌
காமரொணி லாவுலவு சாமரைக ளன்னான்‌ காயமெனு மார்கலியின்‌ மேயகவினங்கத்‌
தாமரையை நாடி வரு கோமள மிகும்புட்‌ சாதியி னுயர்ந்த பல வோதிமநிகர்ப்ப–17-

மந்தவிள மாருத மிகுந்தடைய வால வட்டமல ரங்கைகொடு சிட்டர் பலர் வீச
விந்தை யுறு பற்பலர்கள்‌ சிந்தை மகிழ்‌வோடும்‌ விசித்திர விநோத வொண்‌ விசுத்த விருதுக்க
ளந்தமற வங்கை கொடு முந்தினர்‌ நடப்ப வற்புத மிகுந்தணிய பொற் புலவு மின்னா
ரெந்தையி னருங்குண முகந்‌ தினி துரைத்தே யின்னிசை யிசைத்‌தனர் கண்‌ முன்னுற நடப்ப–18-

௮ண்ட பகிரண்டமுமு துண்ட விறை வந்தா னக்கனய னுக்கரிய விக்கிரமன்‌ வந்தான்‌
முண்ட கமின்‌ மார்பினிடை கொண்டபரன்‌ வந்தான்‌ முற்றுமுயிர்‌ தானாக வுற்றவ னடைந்‌தான்‌
பண்டைமறை நாலினிலுங்‌ கண்டறிய கில்லாப்‌ பராதீன மற்றிலகு புராதன னெழுந்த
னெண்டிசையு மண்டிசைகொள்‌ கொண்டல் வணன்‌ வந்தா னென்று பல நற்கின ஈயின்‌ றன கறங்க–19-

ஆடக மணிக் குழைகள்‌ பாடலை தரப்பொன்‌ னரத்தவொ ணரிப்பரி புரத்தொலி கறங்க
பாடக வடித்துணையி டக ஈடித்தே பான்மொழியர்‌ சிற் சிலர் கண்‌ மேன்மையி னடப்ப
மாடக முடுத்ததிரை நாடிய முழக்கோ மாறரிய கோடையிடி யேறது கொலென்ற
நீடக மயிர்ப்புறவே கோடணிய காள நிகழ்த்தரிய பல்லிய மிகுத்தன கறங்க-20-

இன்னன வளங்களய முன்னின நடப்ப வெங்கிலு நிறைந்‌ துறையு மங்கள முகுந்தன்‌
பன்னக முடித்தலய னின்னலொழி யெம்மான்‌ பங்கய வரும் பனைய கொங்கை யயிராணி
மன்னவன்‌ முதற்சுரர்க டன்னடி வணங்க வந்தருள்‌ புரிக சவ னெழுந்தனன்‌ விரைந்தே)
தன்னை நிகராய சுட ரென்னவொளி பொங்கிச்‌ சந்தமுறு மாறனெதி ரந்தர நிறைந்தான்‌–21-

வாரண மளித்தருளு நாரணனிவ்‌ வாறு வானக மிசைப் பொலிய வானகு மகழ்ப்பூந்
தாரணியு மார்பனிசை தாரணி யுயர்ந்தோன்‌ றன்னடி வணங்குமவர்‌ துன்னு வினை தீர்ப்பான்‌
சீரணிய பொற் கமல வேரணிப கண்கடிறந்து வகை நீர் மடை திறந் தொழுக நீல்வா
ணேரணவு குஞ்சி மிசை யாரமலரங்கை நிகழ்த்தரிய வன்பொடு முகிழ்த்தன னுவந்தே –22-

செங்கவி னுறு பைங்‌ கமலம் வீற்‌றிருக்குந் திருமக ணாயக னெம்மான்‌
சங்குடன்‌ பதும விரேகைகள்‌ பரந்து தாமரை மலரொடு மிகலிப்‌
பொங்குமெய்‌ யுளவன்‌ பொடு தொழு மவர்கள்‌ பொருந்‌த வெம்‌ பவப் பிணி மருந்தா
யங்கண் மா ஞால மகலிரு விசும்பு மளந்த பொற்‌ றிருவடித்‌ துணையும்‌ –23-

வானகத்‌ தவிருஞ்‌ செக்களை யனைய வயங்குமாற்‌ றுயர்ந் தொளிர்‌ பசும்பொன்‌
னான நற்‌ கலையை நன்மருங்‌ கலைப்ப வணிந்தெழிலுறுதிரு வரையு
மூனமி லொருநான்‌ முகத்தனை யளிக்கு மொளி கொள் பைங் கமல முன்‌ னளித்த
கானகு மலரிற்‌ புடைபரந்‌தகன்று கவினுறு நாபிநற்‌ றலமும்‌ –24-

அழிவுறு முடிவி லெண்ணிலண்‌ டாண்ட மதனுள சராசரத்‌ தொகை கண்‌
முழுமையு நெருங்கி யடங்குறு மிடமா மொய்யொளி யுதர பந்தனமும்
வழுவறுஞ்‌ சரச வீட்ட ர சுகந்த மாணிழை மடந்தையுள்‌ ளூகந்தெப்‌
பொழுது முள்‌ வதியு மஞ்சன வரையிற்‌ பொற்புறு மார்பின திடமும்‌ –25-

அத்திரு மருமத்‌ துற்றினி திவகு மணியபொன்‌ முப்புரி யிழையும்‌
நத்திவண்‌ மனக்க ளிணைந்திசை முரன்று நறைத் துளி யுண்டடை கிடக்கப்‌
பத்தெனும்‌ இசையு மணம் புகுந் தொளிரப்‌ பரவு வண்‌ டிருத் துழாயணியு
மத்தியி னிலகுங்‌ கெளத்துவ மணியும்‌ வற்சமென்‌ றுரை திரு மருவும்‌ –26-

ஒன்னல ருதிர மலகையுண்‌ டுவப்ப வுதவிய திதிரியை முதலா
மன்னுமைம்‌ படைக டாங்கி நன்‌ கமல மலரெனச்‌ சிவந்தொளிர்‌ கரமு
மின்னொளி கதுவு மங்கத மணிந்து வெற்பிரு நான்கொடு மிகலிப்‌
பொன்னக ருவப்பப்‌ புணரி முன்‌ கடைந்து பொற்புறு மீரிரு புயமும்‌ –27-

அண்டமுண்‌ டுகந்த கண்டமுங்‌ கரந்தன்‌ றாய்ச்சியர்‌ மத்தளை தயிர்‌ பா
லுண்டு விண்‌ டிலகு முண்டக மலரி னொளிர்ந்தனி யரக்கெனச்‌ சிவப்புட்‌
கொண்டு கண்‌ டவர் கண்‌ கவர்ந்திடு வாயுங்‌ கோமள மிகுந்தகன்‌ றருளுண்‌
மண்டு செங்‌ கமல மலரினுக்‌ கிணை செவ்‌வரி பரந்‌ துயர்ந்த கணினையும்‌–28-

வாமவிற்‌ புருவத்‌ துணையும் வெண்‌ பிறையின்‌ மலிந்த நன்‌ நுதற்றிகழ் நான
நாமமுங் கமல மலரெனப்‌ பொலிந்து நவை யிலா வட்ட வொண் மதியிற்
றூமலி கவினுற்‌ றிலகு மாநநமுந் துன்றிய கதிர் மணி முடியு
நீமநற்‌ பசிய மரகத மலையை நிகர்த்தில கருந் திரு வுருவும்‌ –29-

இரு மருங்கிலு மஞ்‌சலி புரிந்தனர் வீற்‌ றிருந்தரு ளினியசொற்‌ கனி வாய்த்‌
திருமகண்‌ முதலா மூவர் தங்‌ கனகந்‌ திகழு சுந்தரமு மன்னவர் தம்‌
பெருகிய வணியின்‌ விநோதமு நிமலன்‌ பிழை யறு குணத்தினி தியல்பும்‌
பொருவரும்‌ வகுள பூடண னுகந்து புகழ்ந்தனன்‌ கண்டு கண்டுருகா–30-

இவ்வண மாநந்‌ தத்துட னிமல னெண்ணிறிவ்‌ யாத்தும ஸ்வரூப மம்மா
திவ்ய மங்‌கள விக்கிரக திவ்ய தேவி பூடணா யுத திவ்ய
வெவ்வமில்‌ குண சேட்‌டி தங்களை யுமுளஞ்‌ சிறந்தநு பவித்துந
னவ்வநு பவத்தை வெளியிடுஞ்‌ சர்வ வாரணத்‌ தந்த சாரமதாம்‌–31–

அருந்தகைய திருமந்திரார்த்‌ தத்தை யடக்கி நால்‌ வேதசாரமதாந்
துரிதமி லீரிரண்டு ப்ரபந்தத் தொடர்பினால்‌ விளக்கிட மனத்துட்‌
கருதுமு னனைய மாறனுக்குகந்து கருணையிற்‌ சேவை சாதிப்பான்‌
றிருவளர்‌ நித்ய சூரிகளெ வருஞ்‌ சென்றனர்‌ திருப்புளி மருங்கே–32-

இருவி னைத் தொடரின் செய லற்றுயர்‌
திருவுறக் கடை சென்றவ ருமிவ்வூர்‌
வருத லுற்றன ராயினம்‌ மன்னகர்‌
பெருகு சீரெவர்‌ பேசுக்‌ தகையரே-33–

அந்த நித்திய சூரிக ளன்னவே
மிந்த மானிலத்‌ தேய்பதி தோறும் வாழ்‌
கந்த மார்வனக்‌ கண்ணி கொள்‌ யாவரும்‌ ்‌
வந்து சேவை வழங்கிட லாயினார்‌–34-

பெருவரங்கள்‌ கருது மன்பர்‌ பெற வழங்கு வகுளநங்‌
குருவரங்கொள்‌ கவியிலன்பு கொடுவ வண்‌ முனரனய
னிருவரங்க ளமுதமண்டி யெழுகு பொன்னி வலம்‌ வருந்‌
திஸருவரங்க ந௧ருறங்கு திருவரங்க னெய்தினான்‌ –35–

மருவரு நூறிதட் கமல மன்னி கர்மா றன்‌றருவின்‌
மருவரு நூலினிதுணர்வான்‌ வந்தனனன்‌ னானெதிரே
திருவுறையூ ரியறுளவந்‌ திகழ்ந்தலையு மணி மார்பத்‌
திருவுறையூ ரெனும் பதியிற்‌ சிறந்துறையு மிறையோனும்‌–36-

கருத்தஞ்ச வானோ ருருக்கும் பொ னாமன்‌ கணத்தின் மு னேதுஞ்சவே
வருத்தஞ்செய்‌ மாய னருக்கன் குலாவு மணிப் பொன்னின்‌ மாடங்கள்‌ சேர்
திருத் தஞ்சை யாய நகர்க் கண்ண மாலுஞ்‌ சிறைப் புள்ளின்‌ மேனாடின
னிருத்தஞ்செ யாகன்‌ றமிழ்ச் செஞ்சொன்‌ மாறன்‌ றமர்க்கன்பர்‌ நேயன் முனே–37-

அருவன்‌ பிலியா மரவின்‌ றலை மேற்‌ பெருவன்‌ பினினா டிய நம்‌ பெருமான்‌
திரு வன்‌பிலில் வாழ்‌ தேவு முவண வொருவன்‌ பிடர்மே லுற்றானிவணே—38-

கருக்க ரும்படர்‌ கண்ட னாதிதே வருக்க ரம்பட வாண னாயிரங்‌
குருக்க ரம்பக லாழி கொண்டரி திருக் கரம்பனூர்த்‌ தேவு மெய்தினான்‌.–39-

புள்ளறை யும் பொழில்‌ பொன் மதில்‌ வானை நள்ளறை கூவவி ணாமய வெனவாம்
வெள்ளறை மாயனு மேவின னம்பொற் கள்ளறை வந்த கருங்குழலோடு–40-

பொருப்புள்ளம்‌ பூதப்‌ படையாற்கெட்‌ டாதென்றும்‌ போற்றடியார்‌
விருப்புள்ளம்‌ பூதல மாதின்‌ விளங்கவினார் முகமாந்‌
திருப்புள்ளம்‌ பூதங்‌ குடிவிற்‌ றிகழ் ராமனும் பொழிலிற்
கருப்புள்ளம்‌ தங் குரு கைம் மாறற்‌ கீந்தனன்‌ காட்சியதே–41-

திருப்பே ரொருக்கா னினைப்போர்‌ திருக்கே திரித்தாண்மகிழ்‌
மருப்பே ரளித்தா ருடைக்கோ னெதிர்க்கே வரத் தேறினான்‌
திருப்பேர்‌ நகர்க்கோ ரிறைச்சேர்‌ தடத்தே திகைத்தே யழை
மருப்பேர்‌ கரித்தோ மொழித்தா னிருக்கே வழுத்தாதியே–42-

மருவாத வல்வினை மாறருளாத்‌ திருவாத வனேரணி கொண்டவன் முன்‌
திருவாதனூர்‌ மேவிய சீதரனும்‌ பெருவா தமோடு பிறங்கனனால்‌–43–

செருவழுந் திறலுடைய ராகிடுந் தீய பிணி மருவழுந்‌ திட வவுணர்‌ வளை திரிக்‌ தெறியு மணி
திருவழுந்‌ தூரிறையு மேயினன்‌ செய்ய மகிழ்‌ மருவழுந்‌ திய வணி கொண்‌ மார்பினன்‌ முனரரோ–44-

தருச்சினை மலராற்‌ செய்ய தாட்டுணை மலரின்‌ மீதே
யருச்சனை புரிந்து வானோ ரக மகிழ்ந் திறைஞ்சி யேகத்‌
திருச் சிறு புலியூர்‌ வாழும்‌ தேவனெம்‌ பெருமான்‌ றானு
முருச்சிறைப்‌ புட்பான்‌ மாறற்‌ குதவினன்‌ சேவை மன்னோ –44-

சூறை யாகத்‌ துதைந்தெழு தீயவர்க்‌ கிறை யாக்கி யிருந்தவனாந் திருச்‌ சேறை
யாயனுஞ்‌ சென்‌றன னந்தமிழ்‌ வீறை யாரும்‌ விமலன்‌ றிருமுனம்‌–45–

உருத்தலைச் சங்‌கம் புதிய வொன்றால் எரித்தரக்கர்
கருத்தலைச் சங்கவர் திறளைக் கண்டனஞ் செய்‌ தினிதுகந்த
திருத்த லைச் சங்‌ க நாண்மதியத்‌ தேவர் பிரா னும் மடைந்தான்‌
குருத்த லைச் சங்கப்புலவோர்‌ கொண்ட செருக்‌ கடர்ப்பான் முன்‌-46-

சீர்‌ திருக்‌ குடந்தை மானகர்க்‌ கமர்ந்த தேவனற்‌ புளென்ற வாகன
வூர் திருக்‌ குடந்தை யோர் கணத்‌தின் முன ரோகை யுற்றெழுந்து நாடினான்‌
பார் திருக்‌ குடந்தை யானவர்‌ கருதும் பராங்குசற்‌ குறுண்‌ மைசேரிடை
வார் திருக்குடந்தை மாதனத்து நங்‌கை வாழ்வினுக்‌ குகந்து முன்‌னரோ–47-

தருக்கண்டி யானை யிடர்‌ தந்துகன்‌ மடந்தை யுருக்கண்டி யாரதிவ ளோதுமுனி யென்ற
திருக்கண்டி யூரிலுறை தேவனு முகந்தெங்‌ கருக்கண்டி மாறனுயர்‌ கண் முன மடைந்தான்‌–48-

மண்ணக முறும் வினை வரைந்தருளு மாறன்‌ கண்ணக முன்‌ னண்ணினன கங்களி சிறப்ப
விண்ணகர மெண்ணறிரு விண்ணகர நண்ணுந் தண்ணகமலம் புரை தடங்கணிறை யோனும்‌ –49-

கருதிருக்‌ கண்ணறனை நில வுயிர்க்‌ கங்கை யுறு கனி யெனத் தந்த மகிழ்தேன்‌
றரு திருக்‌ கண்ணி புனை யளி புயத்‌ தெந்தை யெழு தளவிரைச்‌ செங்‌ கமல நே
ரிரு திருக்‌ கண்ணவுயர்‌ கருடனற்‌ கந்தர முளிசை கரப்‌ பொன்னி னோடு சென்‌
றொரு திருக் கண்ணபுர வள நகர்க்‌ கண்ணவனு முயர்புளிக்‌ கண்‌ மருவினான்‌.–50-

அருவாலில்‌ வளர்ந் தொ ணடி.ப்பொடியா லுருவா லிகைதற்‌ குதவுற்‌ றெணிலாக்‌
குருவா லிபர்‌ தங்கள்‌ குழா மலியுந்‌ திருவாலி வாழ் தேவனுஞ்‌ சென்றனனால்‌.–51-

பாகை யினிப்படு பான்மொழி மின்னா ரோகை யின் மாளிகை யும் பரு லாவ
வாகையின்‌ மின்னென லாகும்‌ வளங் கொள்‌ நாகையி னாதனு நாடின னம்மா–52-

மறையூ டு வதிந்‌ தருளெம்‌ பெருமானறையூ ருறை நம்‌பியுமெய்தினனாற்‌
நிறையூ கமனேரலருக்‌ கயிலிற்‌ கறை யூறிய காரிகுலச்‌ சுதன்முன்‌–53-

வெந்திற லுறுந் திதிரி நந்துவி லருங்கதை விளங்கு வடிவாள்‌
சந்தம லரங்கைக டயங்கமரு வண்டுமுர றண்டுளவமுஞ்‌
செந்திரு மடந்தையு முரந்தனில்‌ வயங்க நொடி சென்‌ றனனரோ
நந்திபுர விண்ணகர வெந்தையு மினங்கையரு நந்தனெதிரே–54-

அருவிந்தள மளிபாடுசெ யடருங்களை கடியு மிருவிந்தள முலையார்மரை யெழில் செந் துவர்‌ குவளை
வருவிந்தன முகம் வாய்விழி யென வேகரை மருவுந்‌ திருவிந்தளூருறை மாயனுஞ்‌ சென்றானவன் முனமே–55-

குருச்சித்‌ தரமா ளிகை மிசையே கொண்டல்‌ வந்து கண் படுக்குந்‌
திருச்சித் திர கூடத்தமர்ந்த சீமானும் போந்தான் மலரா
லருச்சித்‌ திரவெ ணீங்காத வன்பர்‌ கொண்ட வெவ்வினையை
வருச்சித்‌ திரங்கு நங்கோனாம்‌ வகுளாபரணன்‌ றிரு முன்னர்‌-56–

காரா மணிச்சுனை கலக்க முகை விண்டே வாரா மதுத்தளி மலர்த்தவி சுகந்த
தாரா மடுத்தன தழைத்திடு வளஞ்சேர்‌ சீராம விண்ணகரச்‌ சீதரனுமுற்றான்‌–57-

ஏடலார் குழ னங்கை தன் சுத னெந்தை யஞ் சட கோபனின்‌
பாட லார் தமி ழாசை யான் மிகு பரிவதோடு முன்‌ மருவினா
னாட லாருர காசனன்பிட ராரவேறியே நேரிலாக்‌
கூட லூரெனு மாவளப்பதி கொண்டவன்‌ றுயர் விண்டவன்‌–58-

வண்ணங்‌ குலையா தமடந் தையர்மா றிண்ணங்‌ குலை யன்‌பர் செருக்‌ கருவா
னெண்ணங்‌ குடியா னுமுனெய்‌ தினனாற்‌ கண்ணங்‌ குடி நின்று ககப்‌ பிடர்மேல்–59-

வண்ண மங்கல மாமலர்‌ மேவிய வெள்ளை யன்ன விராசிக ளாதவ
மன்னை வெஞ்சமர்‌ வேளையி லே மறை மாயோனின்‌
றண்ண மங்கையி னாமயவால்வளை யென்ன நன்கணி யோடு முலாவிடு தங்கு பல்வள நீள் பணை சூழ் தரு தாரார்‌ சீர்க்‌
கண்ண மங்கையி னோகையினோடுறை யன்பர்‌ தங்களி னாவியுமேவன கன்கணண்ணபி டேகமனாளொடு கானாரும்‌
விண்ண மங்கைகு லாவிய காவின மன்னுமங் குரு காபுரி மாறனின்‌ மென் கண் முன்னணி சேவை தரா புளின்‌ மேலானான்‌–60-

உருக்கவித்‌ தலத்‌ துளோடு மும்பரு நடுங்கவே
செருக்கவித்‌ தலங்கைமன்‌ செருக்கழித்த வாதியாந்‌
திருக்கவித்‌ தலத்‌ துகந்த தேவுமெய்தி னம
தருக்கவித்‌ தலங்கெடுத்த தன்னிகர்க்கு மாறன் முன்‌–61-

வள்ளி யங்குழை யின்சொன்‌ மடந்தையர்‌ கள்ளி யங்குங்‌ கவின் குரு காரின்முன்‌ பள்ள யங்குடி கொண்ட பரவைசெய்‌ வெள்ளி யங்குடி மாயனு மேவினான்‌–62-

அணிமாடத்‌ திடை யிருந்த லைம்பால் கொண்‌ மாதர் செயுந்‌
திணி மாட கத்தியாழ்ப் பண்‌ செவியின் மடுத்‌ தகணமெலா
நணி மாட கத்துலவு நாரியர் கண்‌ டினிதுவக்கு
மணி மாடக்‌ கோயிலுறை மாமகணாதனு மடைந்தான்‌–63-

நந்தமர்‌ முன்கை மின்னிடை மாதர்‌ நடை கண்டே
வந்‌துறை யும்ப லஞ்சம னத்தே வட்கிப்போம்‌
விந்தை வைகுந்த விண்ணகரத்தே விளைவோடா
ரந்தமி லானு மிந்திரை யோடடைந்தானால்‌–64-

வரிமேய விளமுசுவு முழவோர்‌ கண்டார்‌ வளைகொடெறி தரவது தென்‌ மரமேறாவெண்‌)
கரிமேய விண்ணகர மிசையிற்‌ றாவிக்‌ கற்பகக்கா வூடொளியுங்‌
லரிமேய விண்ணகரத்‌ திறையும்‌ போந்தா னன்பர் குழா மிடுபதக மாகும் பாரப்‌ பரிமேய விறை யளவுஞ்‌ சகியா நம் பராங்குசன் நன்‌ குரைசெய்தமிழ்‌ பரிந்துளோர்வான்‌–65-

ஆவனார்தொக லார்மன வன்பர் தங்‌ காவ னார் தொடு கண்ணி மகிழன் முன்‌
மாவ னார் தொகை யுற்று மகிழ்ந்து வாழ்‌ தேவனார் தொகைச்‌ செல்வனு மெய்தினான்‌–66-

வருடோத்தவ மாதோத்தவ மகிழ்வோடு செ யது விண்‌
வருடோத்தரம்‌ புரியப் பசு மலை யிற்றி கழுறு வண்‌
புருடோத்தம மெனவே யுரை பொரு வின்னக ரிடை வாழ்‌
புருடோத்தம னுஞ்சென்றனன்‌ பொலிவா ருவணத்தே–67-

பம்பு செங் கதிரோன்‌ றன்னைப்‌ பாயிரு ளனைத்து மொன்றி
வம்பற வுறவு செய்வான்‌ வருந்தகை யனைய மாற
னம்பொன்செ யுருவந் தாங்கு மமலனின்‌ றிரு முன்‌ பாகச்‌
செம்பொன்செய்‌ கோயில்‌ வாழும்‌ திரு வினாயகனும்‌ போந்தான்‌–68-

வெற்றி யம்பலத்‌ தாடும்‌ விளங்கனல்‌ நெற்றி யம்பலர்‌ நேர் சடை யாற் கருள்‌
பெற்றி யம்பலரும் பரன்‌ பேரருட்‌ டெற்றி யம்பலத்‌ தேவனு மெய்தினான்‌-69-

அருமணிக்‌ கூட லுற்ற விர்தரத்‌ துடைய நங்கைக்‌ கொரு மணிக்‌ கூடற்‌ சங்க மொழிப்பவ னுரை நூலோர்வான்‌
பெருமணிக்‌ கூடத்‌ தோடும்‌ பிறங்கு மாடங்களோங்குந்‌ திருமணிக்‌ கூடத்‌ தானுஞ்‌ சென்றனன்‌ கடிதினம்மா–70-

நெருக்கா வளவில்‌ நிரை மேய்த்து நேர்ந்தங்‌ கிகலுந்‌ தீ யோரைக்‌
கருக்கா வளவிற்‌ சென்றாயர்‌ கன்னி மாரோ டினிதாடும்‌
திருக்கா வளம் பாடிக் குறையுஞ்‌ செங்கட்‌ டிருமாலும் போந்தான்‌
பெருக்கா வளமார்‌ தென் குருகைப்‌ பெருமான்‌ வகுளப்‌ பரன்‌ முன்னே –71-

எள்ளக்‌ குளத்தினை யினித்த சொலரும்பிக்‌
குள்ளக்‌ குளத்தியர்‌ குருடேந் திட வரால்கள்‌
பள்ளக்‌ குளத்திடை பரந் துயர்‌ குதிக்கும்‌
வெள்ளக்‌ குளத்திலுரை மெய்யனு மடைந்தான்‌.-72-

சுருப்பார்த்‌ தலம்பு பொழில்‌ சூழ் குருகை மாறன் பால்‌
விருப்பார்த்‌ தநெஞ்சடியார்‌ வெவ் வினை தீர்ப்‌ பான் முன்னர்‌
மருப்பார்த்‌ ததண்டுளவ மாலையணி மார்பிலங்கத்‌
திருப் பார்த்தன்‌ பள்ளி யுறை தேவ பிரானும் மடைந்தான்‌–73-

இருமா னிலம்பரவு மகிழ் மார்ப னின் வாயி லினிதாயெழு
மொருமா வளங் கொள் கவி பெற வேணு மென்றேகி யுயர் மேவு தண்‌
முருகா ரரும்பு விரி புளி மேவி னன் கரிய முகின் மேருவின்‌
வருமாறு புண் மீது திருமா லிருஞ்சோலை வளர் மாயனே–74-

சினத் திருக் கோட்‌ டிபமலற மருப் பொசித்த திருக்கரன்ற னடிபரவு்‌ந் திறத்தினோருண்‌ மனத் திருக்கோட்‌ டிடுங் கருணை வரதன் செய்ய மரைத் திருமா மகளுகந்த வரை நேர் மார்பன்‌
முனத் திருக்கோட்‌ டினை யுறுவெற்‌ பெடுத்தானுய்ய முகிறடுத்தோன்‌ பழமறை தேர்‌ முதுவோர் வாழுந்‌
தனத் திருக்கோட்‌ டி யெனு மணி நகர் வாழெந்தை செளமிய நாராயணனுஞ்‌ சார்ந்தான்‌ மன்னோ–75–

வையமுறு மாருயிர்கள்‌ செய்யும் வினை யோடி யுயர்‌ வானி லடையா
வுய்யும் வகை யாக வரு மய்யனருண்‌ மாறனுரை யொன்று பெறவே
பையரவ மீது துயின்‌ மைய வரி மூசி யடர்‌ பாசொளி துழாய்‌
மெய்ய மலை யாளனிவண்‌ செய்ய மலர்‌ மாதினொடு மேவினனரோ–76-

செல்லாரு மாறுறுவ ரெல்லாரு மேபரவு தீந்தாமமார்‌
சல்லாப மாறனுரை யில்லார்வ மொடுகட றான்றீய வெய்‌
வில்லாளி யேழிடப மல்லோடு காயும் வலி வேந்தாகு மெம்‌
புல்லாணி மாயவனும்‌ மல்லாரு மோதியொடு போந்தனரோ–77-

எருத்தண லமரர்‌ யாரு மியாங்களுச்‌ சீவித்தற் கெங்‌
கருத்தண்கா வென நின்‌ றேத்தக்‌ கருணை கூர்ந் தருளினானை
மருத்தண்கா வுகு செந் தேனால்‌ வானுற வளருஞ்‌ செந்நெற்‌
றிருத்தண்கா லுறையு மம்பொற் றிருமகட்‌ கிறை வந்தானால்‌–78-

குன்றுறழ்‌ மாடம்‌ பம்பிய வீதிக்‌ குருகூரில்‌ வென்றி கொண்‌ மாறன்‌ செந்தமிழ்‌ தானும்‌ வியந்தே விண்‌
பொன்றல மேவர்‌ தண் புளி நீழற்‌ பொலிவானான்‌ றென்றிரு மோகூ ரம்பதி வாழும்‌ திருமாலே–79-

தோடவிழும்‌ நிம்பத்‌ தொடைசூழ்‌ வழுதியர் முன்‌ டிப்‌ பரம்பொருணந் நாரணனா மென்றுரை த்தோன்‌
பாட லுகந்தருளும்‌ பானீய மாலுருவோன்‌ கூடலழகன்‌ கருடன்‌ கூடி யிவண்‌ சென்றனனால்‌–80-

சழக்கறு நீருலவு பெரு வராற்க டுள்ளிச்‌ சாடிடத்தீம்‌ பல வுதிர்க்‌கத்‌ தகர்ந்து வீழும்‌ பழப்பொறைகங்‌ குறுவேழ நுதியிற்‌ றூங்கும்‌ பைந்தேனி ரூலு டையப்‌ படியமேதி
வழுக்குற வண்‌ டர் மிகு பூங்‌ கழனி சூழ்ந்த வண் புதுவா புரி வளரு மலர் வாவிக் கண்‌ புழைக்கை யிடர்‌ கெட வஞ்ச லென்று வந்த பொன்னவள் சேர்‌ வடபத்ர சயநன்‌ போந்தான்‌–81-

சிலைவில்லி மங்கலமை நுதலோதி நங்கை யருள்‌ சிறுவோனருள்‌
கலைவில்லி மங்கல நகரில் வந்தனன் கரிய களனென்‌ ற பொன்‌
மலைவில்லி மங்கலம ழிய வென்ற செம்பதும மகள் மொய்ம்பனார்‌
தொலைவில்லி மங்கலம தனிலொன்று தும்பியிசை துளவத்தனே–82-

௮ரமங்கை நிகர் கொங்குண்‌ குழனங்கை சுதனன்பு ளடியர்க்குவிண்‌
சரமங்கை தருமின்ப னொரு செஞ்சொல்‌ பெறவென்று தனிவந்தனன்‌
வரமங்கை நகரொன்று திரு நண்ப னென தென்‌ று வரு பொன்னவன்‌
னுரமங்கை கொடு விண்ட நரசிங்கன்‌ வலி கொண்ட வுவணத்தனே–83-

தென்றிருப்பே றையில்வளர்‌ சீதான்‌ றன்றிரப்பே ருரைப்பவர்‌ தங்களுக்‌
கொன்றிருப்பே யுதவுவன்‌ மாறன் வாய்‌ துன்றிரும்பே ருரை பெறத்‌ தோன்றினன்‌.–84-

மருவை குந்தளம னுடைய நங்கைவயின்‌ வந்தவன்‌ னினிய சந்தமா
குருவை குந்தமிளிர்‌ நறுமை கண்டகுதை யுள்ளியே மிகவு நள்ளிடார்ப்‌
பொருவை குந்தனருள்‌ சிவனிரந்த பலி பொன்றிடக்‌ குருதி தந்தவன்‌
றிருவை குந்தநக ருறைவை குந்தனிவன்‌ சென்றனன்‌ கருட னொன்றியே-85-

மருப்புளிக்கண்‌ வளர்பவன்‌ பாவினில்‌ விருப்புளித்தன்‌ விறற்புய மால் வரை
யுருப்புளின்‌ மிசை யொன்றி மிக் கொல்லையிற்‌ றிருப் புளிங்குடிச்‌ சீதரன்‌ சென்றனன்‌–86-

மருமலர்‌ நிம்பத்‌ தொடையணி தென்ன வரேரதயனாங்‌ குருகுல வங்கைப்‌ படையுறு காரி குமாரனரு
ளருமறை யின்சொற்‌ றமிழ் பெற வுன்னி யடைந்தனனாற்‌ றிருமக ளன்பன்‌ வர குண மங்கைத்‌ திருமாலே–87-

மருக்கு லாமகிழ்‌ மார்பினன்‌ செய்யுள் வேட்‌ டிருக்கு ளுமெந்தை யின்புறுந் தொண்டதாய்க்‌
கருக்குளன்றிக்‌ கடத்துங்‌ கருணையோன்‌ றிருக் குளந்தைப்‌ பதியவன்‌ சென்றனன்‌–88-

மன்றன்‌ மா மகிழ்‌ மார்பினன்‌ செய்யுள் வேட்‌ டொன்றி னன் புளி யொள்ளயில்‌ வேற்கலி
கன்றி விண்ணகர்‌ கண்ட குறுங்குடி நின்ற நம்பியு கந்து நிகழ்ந்தரோ-89-

மஞ்ச னந்தவழ்‌ தண்டலை வாவி சூழ்‌ மாட மார் திருக்‌ கோளூ ரகந்தனி
னஞ்ச னந்தன்‌ றுயிறரு மாமுகி னாயகன் வைத்த மாநிதி நாதன்‌ வெங்‌
கஞ்ச னந்த வுதைத்தவன்‌ பிங்கலற்‌ கான செம்பொ னளித்தினுங்‌ காணுவா
னஞ்ச னந்தங்‌ கரங்கொடு நோக்குவா னவலோடிங் கடைந்த னன்‌ மாதரோ –90-

திருவ னந்த புரமுகந்த செமலருந்தி யிறைவனா மருவ னந்த ழுவுமலங்க லணி முகுந்த னணுகினான்‌
கருவ னந்த வெமையுகந்த கருணை நங்கை யென வுரை யொருவ ளந்த னருமை நந்த னெளி சுதந்த்ர னெதிரரோ–91-

திண்பரி சாரங்‌ கங்கர மேவுந் திறலோனேர்‌
வண்பரி சார மன்னிறை யோனெம்‌ மன மேவு
நண்பரி சாரங்‌ கொண்டுயர்‌ பாவி னசைவைய்யா
வெண் பரி சாரர்‌ தந் திகழ்‌ மாற னெதிரானான்‌–92-

பனித் திருக் கார்த்‌ தொலி கெழு தண்‌ பரவை யூடே யினிது வளர்‌
தனித் திருக்காட்‌ கரையோனுந்‌ தந்தான் சேவை யுகந்தடியார்‌
துனித் திருக்கா றலைத்தரிய துணைத்தா ளருளு மணித்தான் வாய்க்‌
கனித் திருக்காரக மேவிக்‌ கவினார் குருகாபுரிச்‌ சுடர்க்கே–93-

காழிக்‌ கடாபணை சூழத்‌ திகழ் குருகாபுரிவாய்‌
வாழிக்‌ கலியடன்‌ மாறற்‌ கருள்புரி வானுகவா
முழிக்‌ கள நக ராழிக்‌ கரனளி மூசழகார்‌
சூழிக்‌ கமலவ ளோடுற்‌ றனனுயர்‌ தூய்ப்புளியே–94-

குருப்புலி யோநி வழிப்பிறவாது குலைத்தெமை யாளு மகிழ்‌
மருப்புலி யூறு மதுத் தொடைமார்பன்‌ வழுத்திடு பாவுணர்வா
னிருப்புலி யானை யுரித்தணி யாடை யிடைக்கணி வோனயர்‌ தீர்‌
திருப்புலி யூரனிவற்கு முனேர்பு திருப்புளி நாடினனால்‌-95-

இங்குன்‌ ரூளே சரணமென்று ளெண்ணா வந்திங்‌ கடிதொழுவோர்‌
வெங்குன்‌ றாத வினை தீர்ப்பான்‌ விரையார்‌ வகுளத்‌ தார்க்கோ முன்‌
செங்குன்‌ றூரென்‌ றுரை சேருந் திருவாழ்‌ நகரு ளினிதுறையு
மங்குன்‌ றூராற்‌ கரியானும்‌ மடைந்தான்‌ பாக்க ணசை கொண்டே-96-

காவாயென வணிவானவர்‌ கண மோடினி தடையா
பூவாயடி தொழவே யவர்‌ புரை தீர் வருட்‌ டருபுள்‌
நாவாயிடை யமர் மாயனு நலமார் தமிழ்‌ நசையாற்‌
றேவாயந மகிழ் மாலை சொல்‌ செவியோன் முன நணினன்‌–97-

குருவல்ல வாவு முலை யுடை நங்கை பாலனுயர்‌ குணமொன்று பாவி னசையாய்ப்‌
பொருவல்ல வால் வகுள வணிகொண்ட, மாறனெதிர்‌ பொதி யன்பி னாடினனரோ
வொருவல்ல வாவெமைமு னருள்செய்த வாவெனவிண்‌ ணுளர்வந்‌து தாழ நிதமுந்‌ திருவல்ல வாழுறையு முகிலெள்ளு மேனியிறை திரை பொக்கு வாரி யணையான்‌–98-

தண்டா தரிக்கமல வண்டான முற்றதிரு தன்மார்‌ பிருக்கு மிறை யோன்‌
மண்டா தரிக்கமுகில்‌ விண்டாற டுத்தவன்வண்‌ வண்டூரி னித்த மிமையோர்‌
விண்டா தரிக்கவருள்‌ கொண்டா தரித்தவன்வி ரைந்தேக மைப்பு னலிதா னண்டா தரிக்கமல ரொண்டாள ளிக்கு மகிழந் தாரன்‌ முற்கணினனால்‌.–99-

சூட்டோதி மந்தமது போட்டோடிணைந்‌ அலவு தோட்டோ டவிழ்ந்த மலர்நீர்‌ மாட்டோதி மங்கையர்கள்‌ வேட்டாடு கின்ற திரு வாட்டாற தென்‌றுரை செயுந்‌
கோட்டோதி மந்நிலவு நாட்டானு மம்மமவிர்‌ கோட்டானை நங்கை புதல்வன்‌
பாட்டோது வன்னமது பாட்டே யுகந்தெனவுப்‌ பாட்டோ னடைந்தனனரோ.–100-

பெருவித்து வக்கோட்டி பெருகித் தமிழ்ச் சூட்டு குருகைப்ப ரற்கேத்து மடியர்க்கு நோய்க்‌
கருவித்து வக்கோட்டி யழிவிற்‌ கதிக்காட்டு கருணைக்கடற்கேற்ப வெதிருற்றனன்‌
றிருவித் து வக்கோட்டிலிறை யுட் கருக்கோட்டன்‌ செருவிற்‌ றலைக்‌ கோட்டு மதவெற்பினை
மருவித்து வக்கோட்டி கலி முற்ப றித்தாட்ட மதுமுற்றளிப்பாட்ட துளவத்தனே–101-

துருக்கடித்‌ தானத்த வரைக்கு முற்‌ காலத்தி றொனித்தழைக்‌ காமுற்று யரையட்டவன்‌
திருக்கடித்தானத்தன்‌ வனத் தனித்‌ தாமத்தன்‌ சிறைக்ககத் தேறித்த ணெகினத்துவேர்‌
நெருக்கடித்‌ தானத்த மருக்கனைப்‌ போலுற்ற நிதிக்கருத்‌ தேவைக்கு மடி யர்க்குறுந்‌
தருக்கடித்‌ தானத்தன்‌ மகிழ்ப்பனித்‌ தாமத்தன்‌ சடத்தினைக்‌ காய்நித்த னெதிருற்றனன்‌–102-

மாறன் விளை யாடி மலர்‌ மாதுவள சேர் குருகை மான கருணா
வீறன்விளை சாரமுறு பாவினசை யோடவன்முன்‌ மேவினனிலா
நீறன்விளை யாநநச ரோருக நிகேதனனு நேடரியனா
மாறன்விளை யாகுநகர்‌ நாடிநிதம்‌ வாழுமுத லாயபரனே–103-

இருவிசும்பிடை யமரரும்பர வெம துநம்பிமெய்‌ வாதனால்‌
பொருவிலின்கவீ பெற வெழுந்‌துயர்‌ புளியிலொன்‌ றின னளிகுலா
மருவிரிந்து நறவுகும் புது மலரடர்ந்திவர்‌ சோலை சூழ்‌
திருவயிந்திர புரமெனும் பதி திகழுமம்புய லொருவனே–104-

மாவ டம்பமொளி ரோவி யத்‌ துலவு:மங்கை யாருடைய நங்கை சேய்‌
பாவ லம்பெறவு ளாவ லின் வினதை பால னேறிமிக வோலமாய்‌
நாவ லம்புவியுண்‌ மேவு முவர் முன நண்ணியே கிருபை பண்ணினேன்‌
கோவ லம்பதியின்‌ மாவலன்‌ கருணை கூடினோன்‌ புளியி னாடினான்‌—105-

மச்ச விழி நங்கையருள் எச்சமொரு செந்தமிழ் வழ ங்குமெனவே
யிச்சையொடு கந்துமதிர்‌ கச்சணி குறுங்கணுறு மிந்திரையொடு
கச்சி நகர் நின்று அருளும் அச்சுதன் அன்று துயர்‌ கடிந்த வலியோ
னச்சரவ மீது துயில்‌ பச்சை முகிலும் புளியி னண்ணினனரோ–106-

பெருவட்ட புயகரனங்‌ கமல னாதிப்‌ பெரும் தேவ ராசுரர் தமைப் பிலத்தில்‌ வீழ்த்தப் பொருவட்ட புயகரம்ய வணையா யென்றே போந்தனர்க ளனுதினமும்‌ போற்றி யேகத்‌
திருவட்ட புயகரமென்‌ றுரை சேர் திவ்ய தேசமகிழ்ந் தினிதுறையுந் திருமால்‌ வந்தான்‌
கருவட்ட புயகரலா வன்பர்‌ தம்பாற்‌ கண்ணருள் செய்‌ தருண் மாறன்‌ கண் முனம்மா–107-

பண்காம்‌ பிற்‌ றெரித்திடு செம்‌ பவள வாயன்‌ பைம் பொனிறைத்‌ தொளிர் மாடப்‌ பருப்பதஞ்சூழ்‌
பண்காம்‌ பிற்‌ றெரித்திடு செம்‌ பவள வாயன்‌ பைம் பொனிறைத்‌
தண்காவி னின்றருளெம்‌ பெருமா னொல்லைச்‌ சழக்கறு புட்‌ பிடரேறிச்‌ சார்ந்தான்‌ மிக்கு
வண்காரி மாறனுரை யாரணத்தின்‌ வண்டமிழ் கேட்‌டுகந்திடமின் மருவி மாதோ–108-

மஞ்சினம் தெண்‌ முதிர்ந்துளையா வுயிர்க்கு முத்த மல்கு மணி மாட மிசை மடவார்‌ நின்று
நஞ்சினுங்கா ரளகமுண வூட்டுந் தூம நனி கெழுமி யாசை யெலா நறைய தாக்கும்‌
வெஞ்சினமற்‌ றற நெறிக்கண்‌ ணகலார்‌ வாழும்‌ வேளூரை யாளரியு மேவினானால்‌ செஞ்சிலம்பா ருடைய நங்கை வயிறு வாய்த்தோன்‌ செந்தமிழ் கேட்‌டுகந்திடப் புட்‌ செலுத்தி மாதோ–109-

உருப்பாட கத்தடிய நங்கைக்‌ குயர்மகவாய்‌
விருப்பாடகத்தடியார்‌ வெவ் வினை தீர்‌ மாறனெ திர்‌
பொருப்பாடகத்தனுவான்‌ சிலை யிறுத்த புங்கவனாந்‌
திருப்பாடகத் துறையுஞ்‌ ஸ்ரீதரனுஞ் சென்றனனால்‌–110-

சூர கந்தடிந்‌ தோனுயிர்த்‌ தோன்றனைச்‌
சேர கந்தணித்‌ தோன்செழுஞ்‌ சோலை சூழ்
நீர கந்தனி நின்றருள மால் குரு
கூர கந்தனிற்‌ கூடினன்‌ மாதரோ–111-

முத்தனைய வெண்ணகை செம்‌ பவளவாய் கொண்‌ முகிழ்‌ மலர்க்‌ கைக்‌ கடைகியர்தமுகமாய்‌ நின்று
மத்தமுடன்‌ களைகடிய வவர் முகந் தா மரை யெனவோ திம மயங்கு வளைமென்‌ சாலி
நித்கிலமார்ந் திலகு பழ னங்களார்ந்த நிலாத்திங்கட்‌ டுண்டத்து நெடுமால் முன்ன
மத்திவிளித்‌ திடுமுனஞ் சென்‌ றருள்வோன் மாற னாரணச் செந் தமிழ் தருமென்‌ றடைச்தான்‌ மாதோ–112–

வம்பு லாவு மகிழ் மலர்த்‌ தாரினான்‌ பம்பு மாமறைப்‌ பாவில வாவியே
உம்பர்‌ போற்று நம்‌ மூரக மால்‌ முனம்‌ தும்பி காத்தவன்‌ றோன்றினன்‌ மாதரோ —113-

வண்ணமுறு மாதவர்செய்‌ வேள்வி தோறும்‌ வழங்குறுமா குதிய வியை வாங்க நாளும்‌
விண்ணவர்தங்‌ குழூஉக்கணிரைந் தணி கொண்‌ மாட வெஃகாவிற் துயிலமரும்‌ வேந்தன்‌ வாசச்‌
சுண்ணமனைர்‌ தளி பெடையோ டமுதமுண்ணுந்‌ துளவலங்க லாடுதிருத்‌ துலங்கு மார்ப
னண்ணலரு ளிலகு மயிற்‌ காரி சூனு நாவீறற்‌ கருள்புரிவா னண்ணி னால்‌,–114-

இருக்கார கங்கனியாப்‌ புல்லரிடந் தன்னடியே யிறைஞ்சு மெய்யன்‌
பருக்கார கங்கடிவார்‌ தானெனதென்‌ றிடுங்கனகன்‌ பருமார்‌ பத்துட்‌
பெருக்கார கங்கலுழக்‌ ண்டவன் சேயினை மருவும்‌ பெற்றி யோர்‌ தென்‌
றிருக்கார கங் கருதும்‌ பொன்னவள் காந்தரு முகந்து சேர்ந்தாரன்றே–115-

உருக்கார்வா னந் தணிவார்‌ தன்னடியார்‌ செய்த பிழை யுகந்தன்‌ னோரைத்‌
கருக்கார் வானந் தருவார்‌ மறந்தொரு காற்‌ றமை யெணினுங்‌ கருணை செய்வார்‌
மருக்கார்வா னந் தவழுந்‌ தண்டலைசூழ்‌ மணிமாட மல்க யோங்குந்‌
திருக்கார்வா னந் தனில் வாழும் பரந்தா மரும் புளிக் கண்‌ சேர்ந்தார்‌ மாதோ–116-

அண்டர்‌ நாய கன் கபாலி யம்புயத்தி னன்றொழும்‌
புண்ட ரிக மந்திரங்கொள்‌ பூவை வாழு மார்பினான்‌
கண்டல்‌ வேலி நின்றிலங்கு கள்‌ வனூரு மாயவன்‌
வண்டு லாவ லங்கலாட வந்தனன் புள்‌ ளொன்றியே–117-

குருப்பவள வண்ணவத ரத்துடைய ஈங்கையருள்‌ குமரன்‌ செஞ்‌ சொல்‌
விருப்பவள வண்ண றனை முப்போதும்‌ வந்தனை செய்‌ விபுதர்‌ தாயர்‌
கருப்பவள வண்ணவிடா தருள்புரிவோன்‌ கனக மதிற்‌ ககனமோங்‌குந்
திருப்பவள வண்ண நக ருறை கருமா முகலுருவன்‌ சேர்ந்தானன்றே–118-

வண்டொடுதே னினமுல்கே சர நறுந்தா ரிலகு புய மாறன்‌ செஞ்‌சொற்‌
ணுற்றான்‌ தண்டமிழ்கேட்‌டுகந்திடப் புட்‌ பிடரேறி யரவெகினைத்‌ தருக்க
புண்டரிகத்‌ தாளிறை மெய்‌ யடியர் பணிக்‌ குடனுருகப்‌ புரக்கும்‌ போதத்‌
திண்டிறலார்‌ பயில் பரமேச்‌ சுரவிண்ண நகரில் வரு திருமான்‌ மன்னோ-119-

உட்புல னெனுமோர்‌ பாகனூ ணுதிர வுடலெனு நாப்பணி லுறச்‌ சேர்
கட்செவி நாசி வாயெனு நான்கு கற்கி வாய்‌ மதிக்கருள்‌ பூட்டி
நுட்ப நூலுரைக்கு மறநெறி செலுத்து நுவலரு மறையவர்‌ வளர்‌ சீர்ப்‌
புட்குழி நெடுமால்‌ சடகரிக்‌ கருள்வான்‌ போந்தனன்‌ போரகெஞ்‌சுகந்தே–120-

நன்றி யோர் தொழு நாயகன்‌ வெஞ்சட வென்றி மாறன்‌ விழுத்தமிழ்‌ வேட்டி வண்‌
சென்ற னன்னறை சேர் மலர்க்‌ காவொளிர்‌ நின்ற வூருறை நின்மல மாயனே–121-

பருமணி யிமைக்குஞ்‌ செஞ்சூட்‌ டராவணைப்‌ பரம னீலக்‌
குருமணி வண்ண னெவ்வுட்‌ கோவல’ னடைந்தா னொன்னார்‌
மருமமுண்‌ டொளிரும்‌ வைவேற்‌ காரி சேய்‌ மாறனாவா
லொருகவி பெற வென்‌ றுன்னா வுவணன்‌ மொய்ம்‌ புந்தி மாதோ–122-

கார்மலை மேனி வேங்கட்‌ கடகரி மருப்பொசித்துப்‌
போர்மலை முனிந்த சீற்றப்‌ புயவலிக்‌ குரிசில்‌ வண்மை
நீர்மலை யாதி செல்வி நீளையுற்‌ றெழுந்தான்‌ முத்து
வார்மலை யுடைய நங்கை மகவினுக்‌ கருள வென்றே-123-

கொந்து லாநெடுங்‌ குந்தள நங்கை சேய்‌ செந்த மிழ்த் தொடை சிந்தை யுள்‌ ளுன்னியே
யந்த ணாளரமருந் திருவிட வெந்தை வாழ் தரு விண்டுவு மெய்தினான்‌–124-

இருக்கடன்‌ மல்லைந் திலக கணந் திகழ் மா றன் கவிவேட்‌ டிசைக்கு மென்றுட் டருக்கடன்‌ மல்லைப்‌ பொருவா குவலியுளோ யனநடைப் பொன் றரப்‌ பெண்ணாள் பா
கருக்கடன்‌ மல்லைத்‌ தொலைத்தா யருளெமக்கென்‌ றும்பர்தொழுங்‌கடிகொள்‌ செம்பொன்‌
றிருக்கடன்‌ மல்லைப்‌ பதி வாழெம்‌ பெருமா னெகின நிழற்‌ சென்றான்‌ மாதோ–125–

மருவல்லிக்‌ கேணிளநீ ரளக மொழி முலை நங்கை மடமா னென்னு
மொருவல்லிக்‌ கேசுதன் மா றன் கவி வேட்‌ டளைசுவைப்பா லுடனே வெண்ட
யிருவல்லிக்‌ கேகி யுறிக்‌ கண்கவர்வோன்‌ மணிமாட மிலங்கும்‌ வண்‌மைத்
திருவல்லிக்‌ கேணி வள ரெம் பெருமான்‌ புட்கடவிச்‌ சென்றான் மாதோ-126-

முடிகை கூப்பு முள்கனிந்த மொய்த்த வன்பி னோர்கள் பால்‌
மடிகை யோடு யிர்ப்பறுக்கு மாறனின்‌ சொல் வாவியே
சுடிகை யோதி மத்தனன்ன வேதியர்கள்‌ சூழ்‌ திருக்‌
கடிகை மாநகர்க்குள்‌ வாமுங்‌ கண்ணனெய்தினனரோ-127–

சஞ்ச ரீகவிழி நங்கை பாலிலவ தரித்தவன்‌ சடமரித்தவன்‌
செஞ்சொ லாயதமி ழொன்ற வாவியுயர்‌ சிற்றி லைப்புளியு ளுற்றனன்‌
வஞ்ச மாயை யொரு கஞ்ச னே வுமத மத்த கக்கரியு தைத்தவன்‌
கஞ்ச மாதுவளர்‌ நெஞ்சி னானடியர்‌ கற்பகன்‌ னரவ வெற்பனே-128-

நங்கையார்‌ குழவி யின் சொ னாடி வந் தடைந்தா னும்ப
ரெங்கணா யகவென்‌ றேத்து மிகன்மதக்‌ கரியி னீட்டம்‌
தங்க நாயகி களோடு தனித்தனி வதுவை யாற்றும்‌
சிங்க வேழ்‌ குன்றில்‌ வாழுந் தெய்வ நாயகனு மாதோ–129-

மற்புனை யிலங்கை மூதூர்‌ வள்ளல்கம்‌ பத்துவீழ
விற்புனைந் தெழில் கொள்‌ தோளான்‌ மிளிர் நிலா மணி மாடத்தி
னற்புத மிகுமயோத்தி யாண்டகை யடைந்தா னின்பா
கற்பழ மொழிச்சி நங்கை கண்மணி கவி வேட்‌ டன்றே–130-

பொருந்தலரூ ணுண்டொளிரு மயில் வேற்காரி பு.தல்வனடி.யார்க்கு வினை பொருந்தா தேக
மருந்தனைய திருவடியோ னெகினத்‌ தங்கா வணனிறைக் கீழ்ச் சடவைரி மலர்வாய்ச்‌ செஞ்சா
லருந்தமிழ் வேட்‌டிந்திரையோ டெழுந்தா னக்கன்‌ ௮டற்பதுமா சுரற்குழலா வலைய வாங்கோர்‌
திருந்கணிமா தாகியனோன்‌ முனிந்த சோலை சேர் நைமி சாரணியத் திருமால்‌ மன்னோ–131-

நள்ளிரு ளளகபார நங்கையார்‌ மகவின்‌ சொற் கொண்
டுள்ளுகர்‌ தருள்வான்‌ புள்ளி னொல்லையி னெழுந்தான்‌ றொல்லை
பொள்ளனால்‌ கரவெற்‌ பாண்ட புங்கவன்‌ பவளத்‌ துண்டக்‌
கிள்ளை சேர்‌ பொழில் கொள்‌ சாளக்‌ கிராம நின்‌றருள் வோனன்றே–132-

மதரிரு விழிக்க ணங்கை மதலை வாய்ப்‌ பனுவல்‌ வேட்டுச்‌
சிதறியாச்‌ சியத்தை யுண்ட சீதரன்‌ பெரு மழைக்குப்‌
பதறியாச்‌ சிரமத்‌ தெய்தப்‌ பருமலை யெடுத்துக்‌ காத்த
வதரியாச்‌ சிரமத்‌ துற்ற மாயவ னெழுந்தான்‌ மன்னோ–133-

கொண்டலைந்‌ தரு நே ராங்கைக்‌ குரிசினன்‌ னெறிவாய்‌ நின்று
விண்டிலான்‌ காரி சூனு விளம்புறு பனுவல்‌ வேட்டீண்‌
டண்டின திரைக டோறும்‌ ஆரமீன்‌ றிடு கங்‌கைக் கண்‌
கண்டமா நகரின்‌ வாழுங்‌ கண்ணனு மெழுந்தான்‌ மன்னோ–134-

குருதிதோ யயில்வே றாங்குங் கொற்றவன்‌ காரி சூது
சுருதிதோய்‌ தமிழ் வேட்‌ டைவர்‌ தூதனாம்‌ விசையன்‌ போரில்‌
பரிதோ யிரத மூரும்‌ பாகனா மறையோர்‌ வாழும்‌
பிரிதிதோ யிலங்கை செற்ற பீடுளோ னெழுந்தா னம்மா–135-

விடமெனக்‌ கருத்து நீண்ட வேல் விழி யுடைய நங்கை
யிடமவ தரித்த செல்வ னின்னுரை கழறு மென்றே
குடவர்தம்‌ மனையில்‌ ரெய்பால்‌ கொள்ளை கொண்‌ டறியே னென்னும்‌
வடமது ரையினில்‌ வாழும்‌ மாயவ னெழுந்தான்‌ மாதோ –136-

கண்டு வரார்தமை யண்டகிலார் வினை கண்டிந மாறனெரி
பண்டு வராடை மண்‌ மண்டிசை யானுரை பண்டறு பாவினசை
கொண்டு வராலினம்‌ விண்டல மூடு செல்‌ கண்டுறு நீர் புடை சூழ்
வண்டு வராபதி விண்டுவும்‌ மேவினன்‌ மண்டல மேழ்புகழ–137-

ஆடி நேர்‌ கொடி றிரண்டு மணி செய்யு முடைய நங்கை
தோடவள்‌ கமலப் பண்டி தோன்றிய சிறுவன்‌ செஞ்சொல்
நாடி நன்‌னெறி வாய்‌ நின்‌ற நந்தர் கோன்‌ மதலை யாயர்‌
பாடி வந்‌ தருள்வோன்‌ யார்க்கும்‌ பரமனு மடைந்தான்‌ மன்னோ -138-

சேற்கடல்‌ விளக்கு முண் கட்‌ சேயிழை யுடைய நங்கை
சூற் கடங்‌ குறவெ ழுந்த தோன்றனல்‌ லுரைவேட்‌ டங்கை
வேற்கட மதமா வாணன்‌ விறற் புயந்‌ துணித்தம்‌ பைவாய்ப்‌
பாற்கடல்‌ துயிலு மாதிப்‌ பரமனு மெழுந்தான்‌ மாதோ–

நூற் றெட்டுத்‌ திருப்பதிப்‌ படலம்‌ முற்றும்‌-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீசடகோப திவ்ய சரித்திரம்-பகுதி-1-

May 28, 2026

ஸ்ரீ சடகோப திவ்ய சரித்திரம் / திருக்குருகூர் நித்தியவாசியும் தமிழாசிரியரும் உபயகவி வித்வானுமான உ. வே. தேவராஜய்யங்கார் ஸ்வாமிகளென்ற தேவராஜ பாரதிகளால் (தேவேச) இயற்றப்பட்டது ; சுவடியாயிருந்ததை மேற்படியார் மாணாக்கரும் ஆழ்வார்திருநகரி ஸ்வாமி ஆதிநாதராழ்வார் .. பெரியன் தேசிகமய்யங்காரென்ற பெரியன் வெங்கிட்ட நாராயணய்யங்கார் குமாரர் பெரியன் வெ. நா. ஸ்ரீநிவாஸனால் எடுத்தெழுதப்பட்டு ; R. ஸ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமிகளால் தகுந்த ஆதாரங்களுக்கிணங்க பார்வையிடப்பட்டு படங்களுடன் … அச்சிட்டு வெளியிடப்பட்டது

உலக மீரேழினுள்ளவும்‌ பரூர்வன வேயாதி
யலகிலா வுயிர்கட்கெல்லா மக மொடு புறமாய்‌ நின்றங்‌
கிலனுளனெனு முரைக்கு மிசைந்து சாத்விகர்கள்‌ போற்றும்‌
வலமுறு திரு வைகுந்த மாயவனுகந்து முன்னாள்–1-

அரவரசழைத்து நீ யிவ்வவனி போயிரு நூறாண்டு
பரமதங்களைக் கடிந்து பாடிய முரைத்‌து வாவென்‌
றுரை செயப்‌ பெரும்பூதூர்‌ வந்துதித்து நூற்றிருபதேழிற்‌
பரன்‌ றணவாற்ற கல்லாப்‌ பரமனோடெழுந்த வேலை -2-

குரகதக்‌ கயவாய்‌ விண்ட கோவலனெதியை நோக்கித்‌
திரை கடலுலகில்‌ முன்போற்‌ சென்‌றவதரித்து நும்மை
மருவிய நிலுவை நீக்கி வாருமென்‌ றுரைப்ப நாமம்‌
வரா வர முனியென்றோத வைணவர்‌ குலத்து மன்னோ-3-

தாதுரு நறை வண்டுண்டு ததை மலர்ப்‌ பழனஞ்‌ சூழுங்‌
கோதிலா மறையோர்‌ வாழ்‌ தென் குருகை வந்தவதரித்து
மாதுலர்‌ க்ரகம்‌ போய்‌ வாழ்ந்து மற்ற மீண்டணுகிமாற
னோது செந்தமிழ்‌ வேதார்த்த முரைத்தரும்‌ பொருட்டே னுண்ணும்‌-4-

காலையோர்‌ புனிதன்‌ ஞாதில்‌ காரனாண்டிறந்த வாய்மை
சீலே மாதவனுக்‌ கோதத்‌ தீம்‌ பயனுகருங்‌ கன்றைக்‌
கோல வானினத்தினின்‌று கூட்டறப்‌ பிரித்ததே போற்‌
சால நொந்திறந்தோர்க்‌ காகுஞ்‌ சடங்கினைக்‌ கழித்த பின்னர் -5-

இல்லறத்‌ தியலிலின்ன மியைந்திடிற்‌ பரநாடேகத்‌
தொல்லை மிக்குறு மென்றெண்ணித்‌ துரியமா மனுநூலாதி
வல்ல மெய்ப்‌ புனிதனாயெண்‌ வாரணமெனவும்‌ போதத்‌
தெல்லையில்‌ குணத்தின் மிக்க வெண்மரோ டியையுங் காலை -6-

கனிந்தள முருக யட்டக சங்களம்‌ முனிதாள்‌ சென்னி
புனைந்து நாவீறன்‌ மற்றும்‌ புனிதர்‌ வைபவங்கள்‌ கேட்க
நினைந்தன முரைத்தியென்ன நிமலனவ்‌ வடியர்‌ தங்கள்‌
மனங்களி துளங்கச்‌ சொன்னான்‌ மணிப்‌ பிரவாளம்‌ தன்னில்–7-

என்ன மாதவத்து வைகும்‌ மணவாள வெதியும ப
னன்னிலை யுணருமட்ட கசங்களு நனியுகப்பச்‌
சொன்ன செஞ்சொற்களாய குரு பரம்பரையைக்‌ கேட்டல்‌
கன்னவ ராகந்தானந்த வார்கலி படிந்தாரன்றே –8-

கோதி லந் நூற்கு நாமங்‌ குருபரம்‌பரை யென்‌ றோதி
மாதவ னுரைத்த வாய்மை மறையொடுந் தமிழுஞ்‌ சேர்ர்த
தாதலி னுணரவல்ல வதிகாரிக்கன்‌ றி மற்றோ
ரோத வொண்‌ ணாததாலு முகமற்‌றி ருத்தலானும்–9-

உயக்கருத்‌ துடையரா ய்வறந் துளங்களிந் துணர்வோர்க்‌ கெல்லா
மயக்கறவ குளமாலை வரதனா வீறன்‌ மற்றுந்‌
துயக்கறு பதின்மர்தங்‌ கடூய நற்‌ காதை முற்று
மியற்றமிழ்‌ தன்னிற் பேர்த்திங் கின்புற விசைப்பீ ரென்ன–10-

பத்துநூற்‌ றொருநாற்பத்‌ தேழாண்‌ டிடபமதாந்‌ திங்க
ளூத்திரட்டாதி நன்னாளந் நகருறு தேவேச
வித்தகன்‌ சடகோபன்‌ றிவ்விய சரித்திர மென்றோதி
அத்தனங் கூரத்தாழ்வான்‌ றளியாங் கேற்றினானே–11-

மேதகு சடகோபன்‌ திவ்விய சரித்திரத்‌தைக் கேட்போர்‌
மாதகவுடை யோராக மாநிலமிருந் திகத்தி
லேதமில்குண ராய்மக்க ளிரு நிதிபெற்‌று மாற
னோதிய தமிழ்‌ வேதத்தாற்‌ பரத்தினில் உய்குவாரே-12-

கேட்டவர்‌ படித்தோர்‌ முற்றுங் கிளத்‌தினர்‌ வரைந்தோ ருள்ளங்‌
கோட்டமில்‌ குணராய்ச்‌ செல்வங்‌ கொடுத்ததைப்‌ படிப்பித்தோரிவ்‌
வேட்டினைப்‌ பரிபாலித்‌ தோரேனு நான்முகன்‌ போற்றெந்தை
தாட்டுணை பரவிச்‌ செய்யாடன்னொடும வாழ்வர் அன்றே–13-

நீர்மைகொண்‌ மெய்யடியர்‌ பரவடியுஞ்‌ செய்ய நிறங்கொடு பொற்றிருவரை யினிலவுந் தூசும்‌,
மார்பிலகு மணிவடமும்‌ திகழ்மு நூலும்‌ மரை மலர்ச்‌ செங்கரத்தனிடை வளர் முக்கோலுஞ்‌
சீர்கெழு பாடிய முரைத்த பவளவாயுஞ்‌ சேதனர்‌ பாலருளொழுகு திருக் கணோக்கும்‌,
ஏர்கொடிரு முகத்தொளியு மிலங்கநின்ற வெதிராசன்‌ விரை மலர்த் தாளிறைஞ்சி வுய்வாம்–1-

மதுரவின்‌ கதையின்‌ மேலாய்‌ மறைத்தமிழுரைத்த ஞான,
அதுலன்றன்‌ சரிதை கூற அருந் துணையாகும்‌ வாசப்‌,
பதுமமேலயற்கு மேனாட்‌ பாலனத்‌ துருவமகிச்‌,
சதுமறை நவின்ற மாயோன் றாட்டுணைக்‌ கமலப் போதே–2-

மணிகொள் நெடும் திரையாழிப்‌ புடவிமாது மதிமுகவொண்டிலத மென வயங்கு மாடத்‌,
தணிதிகழ்‌ தென் குருகை யினாவீற மாற னருண் மாரி வைபவமெம் மறிவாற்‌ சொல்லத்‌;
துணிகுவ மின்னமுதி லெழு திருவே பிம்பத்‌து வரிதட் செந் தாமரை மேற்‌ றுலங்குமானே
பணிமொழி மென்குமிழ்‌ மறிந்து குழைபாய்வை வேற்‌படை மதர்க்கட் கடையருணீ பாலிப்பாயே–3-

தேனுகும்‌ பொழிற்‌ றென்‌ குருகாபுரி,
ஞான தேசிகனன்‌ புகழோத மீ
வான நாடுறை மாமகிழ்‌ காற்றுணைச்‌
சேனை நாதன்‌ றிருவடி யுன்னுவாம்–4-

அற்றவ னுருவமாகி யனேக நூலுலகுக்‌ கீந்து,
மற்றடந் திரடோள்‌ வேந்தாய்‌ வனம்‌ புகுந்தரக்க ரீட்டஞ்‌
செற்ற பினைவர்‌ கட்காய்ச்‌ சிறிய தூதெழுக்து பின்னர்ச்‌
சிற்றிலைப்‌ புளிக்குள்‌ வந்த செல்வனை மனத்துட்‌ கொள்வாம்–5-

சீராரும்‌ பொய்கையர்‌ பூதத்தார்‌ மபயார்‌ திருமழிசைப் பரன்‌ வகுளச்‌ செல்வன்‌ கோளூர்‌
ஏராரும்‌ மதுரகவி முனிவன்‌ சேரர்க்‌ கிறைவனருட்‌ பாகவத ரிரு தாட்டூளி,
பாராரும்‌ வழுதியர்‌ முன்‌ கிழி யறுத்த பட்டர்‌ பிரான்‌ கோதை யருட்‌ பாணன்‌ கையிற்‌, கூராரும்‌ வேற்‌ கலியனின்னோர்‌ செய்ய குரைகழலெம்‌ முடிக்‌ கணியாய்ச்‌ கூட்டுவாமால் -6-

கண்ணினுண்‌ சிறுத்தாம்போதிக்‌ காரி சேயருள்‌ பெற்றுய்ந்த
அண்ணன்‌ மெய்ப்‌ போத நாதமுனி திருவடியுஞ் ஞானம்‌,
நண்ணிய வுய்யக் கொண்டார்‌ நலந்திகழ்‌ மணக்கால் நம்பி,
தண்ணிய வாள வந்தார்‌ தாளிணை மலருங்‌ கொள்வாம்–7-

நறைத்துள வலங்கன்‌ மார்பன்‌ நாண்மல ரடியினான்கு
மறைத்தமி ழுதவு ஞான வகுளபூ டணனை வாழ்த்தக்‌
கறைத் தலைப்‌ பணிமன்னேயிக்‌ காசினியதனின்‌ முக்கோல்‌
இறைத்தவ னாகி வந்த வெதிபதி கழலுட்‌ கொள்வாம்–8-

எண்டிசையோரும்‌ புகழப் பணிமன்னே யிங்‌ கெதிபதியாய்ப்‌ பர சமயத்‌ திருளை வென்று
புண்டரத்தை நிலை நிறுத்தச்‌ கிரிமி கண்ட பூபதியும்‌ சிவமலதோர்‌ பொருளிலென்‌ று மண்டலத்துள்‌ ளோர்களிடத் தொப்பம்‌ வாங்கி மாமுனிவன்‌ பாலனுப்ப மகிழ்ந்து நோக்கிக்‌
கொண்டல்‌ வண்ணனே பரமாய்க்‌ குறித்தனுப்புங்‌ கூரத்தாழ்‌ வானடியே கூடுவாமே–9-

வாரிதிகலையிற்‌ சூழிம்மானில மாந்தருள்ளக்‌
காரிருட்‌ பிழம்பு தஞ்‌ சக்கதிர்‌ பதினெட்டு நேரச்‌
சிர்கொளட்‌ டா தசத்துள்‌ சிறப்புறு ரகசிய மோதெம்‌
மாரியன்‌ பிள்ளைலோகா சாரிய னருட்பெற்‌ றுய்வோம்–10-

வண்டின முரன்‌ றிந்தள விசை பயிலு மருமலர்த்துள வினான்‌ மதக் கூழ்த்‌
தெண்டிரை கொ ழிக்குங்‌ கருங்கடற்‌ புவியாஞ்‌ செறு விடைப்‌ பரமதக்‌ களையைக்‌
கண்டறக்களைந்‌ தின்னருட் புனல்‌ விடுத்துக்‌ கணந் தளர்வடை வுறா வளர்ப்பான்‌,
தண்டலை யுடுக்குற்‌ தூப்பில்‌ வந்துதி வேதாந்த தேசிகனடி தாழ்வாம்–11-

தேனினமுரன்றுபாடும்‌ மடிழ் மலர்த் தெரியல் வேய்ந்த,
ஞானதேசிகனுரைத்த நான்மறைத்‌ தமிழ்ச் சுடர்க்கு,
மேனியைத் தகழியாக்கி மெய்யறி விடு நெய்யாக்கி,
மானிலம் விளங்கச் செய்த வரவர முனி தாட்கொள்வாம்–12

நந்தணிமகர யாழ்க்கை நங்கையார்‌ குழவீ சீர்த்தி,
செந்தமிழதனினாயேன்‌ செட்‌ புவானெடுத்துக் கொண்ட
தந்தகன்‌ ககனமீனை யய்ய மற்றெணுவே னென்ன,
வந்த வாறமையுமுன்னீர்‌ வையக மதினின்மாதோ–1-

நூற்றிதழ்க்‌ கமலத்தோனு னுவலுதற்‌ கரியதான,
மாற்றருந் தகை கொண்டோங்கு மாறன் றன்‌ சரிதை தன்னைத்‌,
தேற்றமின்‌ மனத்து நாயேன்‌ செப்புவான்‌ றொடங்கலீங்கோர்‌
ஆற்தினுண்‌ மணலையோர்‌ சேயளப்பதற்க்‌ கெழு தலேய்க்கும்–2-

விண்ணவர்க்‌ கரிய மாறன்‌ மேம்படு புகழைப்‌ பாரில்‌,
னுண்ணியல்‌ புடைய நாயேனு வலுவானெடுத்துக்‌ கொண்ட
தெண்ணியார்‌ கலி நீர்‌ முற்று மேந்திளங்‌ குழவி யொன்று
அண்ணி நுண்‌ மூழை தனைனா லளப்பதை நிகர்க்கு மாதோ–3-

கரும்பினுரு வங்கோணி லதினுள்‌ ளாருங்‌ கனிந்த சுவையினை யறிந்தோர்‌ களைவார்‌ கொல்லோ ,
விரும்பிய கண்டுருக்‌ கரடு முரடதென்று, விலக்குவரோ வறிவுடையோ ரவைகள்‌ போல,
விரும்புவி யிற்றமியே னாலுரைக்கும்‌ பாக்களிழி வெனினு மகிலுறைந்த வேதிலாவண்‌
பெரும்‌ புகழ்‌ நஞ்‌ சடகோபன்‌ காதை கண்டு பேணுவரே புலமை கொணற்‌ பெருமை யோரே–4

பாண்டி நாட்டு திருப்பதிப்‌ படலம்‌
சீர்வள ரெதிராசன்‌ பொற் றிருவடிக் கமலம்‌ போற்றிக்‌
கார்வளர் மேனியெம்மான்‌ கண்ணை யுற்றுயிர்களுய்ய
ஏர் வளர் மாறனாக வெழுந் தவதாரஞ்‌ செய்யும்‌
பார் வளரிசை கொள்‌ செல்வப் பாண்டி நாட்டணி விரிப்பாம் -1-

உலகெலாந்‌ தனிபுரக்குமுயர்‌ மழை முகிற்‌ குழாங்கள்‌
அலைவிலாதரியதீம்‌ பயோததி யென வானார்ந்து
பலவளம்பெருகு தெண்ணீர்ப் பரவை நீர்பருகிச்‌ சூலாய்‌
நிலவிய தரள மீனுநீனிறக்‌ கடல்போன் மீண்ட-2-

திரு மகிழலங்கன் மார்பன்‌ றிருவடித் துணைக் காட் செய்வான்‌
கருமிடற்றரனார்‌ வாழ் வெண் கையிலை யென்‌ கிரி யெழுந்து
வருவபோன் முகிற்‌ குழாங்கள்‌ வானிடை. யடர்ந்து வாரிப்‌
பொரு திரை யருந்தி நீலப் பொருப்பென மீண்டவம்மா–3-

அலம்பு வண்டிருந்த தார்‌ நம்மரிந்த மனலரே யங்கைத்
தலமமர்‌ திகிரி மானத்‌ தடித்தியங்‌க வன்றனாம
வலம்புரித் தொனியே யென்ன வாணிடை யதிர்ந் திளங்காற்‌
சிலம்பிடை யவன்றன்‌ சாபமுமிழ்‌ கணைத் திரள் போற் பெய்த–4–

மந்தர கிரியை வென்று மல்லடர்த்‌ துயர்ந்து நீண்ட,
சுந்தரத்‌ திருத்தோளண்ணல்‌ சுடு சரந் துரந்து மேனாட்‌,
கந்தர வடி.வரக்கர்‌ களைகளைக்‌ களையக்‌ கண்டே,
யந்தரத்‌ திமையோர்‌ தூற்று மலர்‌ மழை யென வான்‌ பெய்த–5-

விரிதரு முகட்டின்‌ மீது விடாதுறப்‌ பொழியும்‌ தாரை
அரிய விண்ணுலகத்தான வமரரிவ்‌ விளங்‌ கானச்சி
யுரிய தன்னகர்க்குச்‌ சேர வுயரு மிம்‌ மலையைக்‌ கொள்வான்‌
சொரிதரு வடங்கள்‌ போலத்‌ துலங்கின துதைந்து மாதோ–6–

துவளிலாடக முகட்டிற்‌ றோன்று பல்லருவி யீட்டங்‌
கவளமும்‌ மதப்புழைக்கைக்‌ கரிகட மருப்பு குக்குறந்
தவள வொண்டராள மீர்த்துச்‌ சங்கையி றருக்கள்‌ சாடிக்‌
குவலயத்‌ திளஞரோகை கொள்ள வந்திழித்த வம்மா–7-

மண்ணிடை யிழிந்த தோயம்‌ வாரணத்தினமு மானு
மெண்ணிடற்‌ கரியதாய விடபத்தின்‌ குழுவு மீர்த்துப்‌
புண்ணியம்‌ புரிவார்‌ நெஞ்சம்‌ போலெங்கு நிரவி வந்து
தண்ணிய திரைகண்‌ மோதுந் தாம்பர வன்னி சேர்ந்த–8-

தடந்திரைக்‌ கரத்தின்‌ வாரித்‌ தரளமா மணிகள்‌ வீசி
யடர்ந்த வன்னீத்தத்‌ தூடே யமிழ்ந் தெழு மரத்தின்‌ றோற்றம்‌
மிடைந்த வைம்‌ படைகளேந்தும்‌ விமலன்‌ பாற்‌ கடலை வேண்டிக்‌
கடைந்திடுங்‌ காலத்துற்ற கற்பகத்‌ தருவைப்‌ போன்ற–9-

கோடி னோடந் திகிரியுங்‌ கொண்டுமால்‌
ஈடி றாமரைக்‌ கண்ணிடை யிற்பசு
மாடு மேவி மறிகடற்‌ சேர்தலால்‌
ஓடுமப்‌ புனல்‌ நாரண னொக்கு மால்–10-

மலை களைந்திடை மாதரைச்‌ சேர்ந்து மீ
துலை குருந்த மொசித்து மருதிற்‌ போய்‌
விலை யுயர்ந்திடு மான்பின மேவலால்‌
அலை கொளப் புனல்‌ கண்ணனை யன்னதே–11-

ஆன வெள்ள மரி புலி வேங்கை மான்‌
றான வாரணஞ்‌ சம்பு எண்‌ கேனமே
ஏனல்‌ சந்தக லின்வகுளஞ்‌ செருக்‌
கூனமில்‌ பல வோங்கும்‌ வளை புனை–12-

குங்குமம்‌ சண்பகம்‌ பனை கோங்கில
வங்க மேலம்‌ வசம்‌ பொடு சாதி மா
பங்கம மற்றிடு பற்பல பாதவ
முங்கணிப்பில்‌ விலங்குகளுங் கொடு–13-

ஏக்க மொடு மெயின ரெயிற்றியர்‌
தாக்கருந் துயர்‌ தன்னிலழுங்கிட
வாக்கு செந்தினை யாரிடி தன்னெடுந்
தேக்கிலைக்‌ குடில்‌ சேரவரன்றியே–14-

செறிந்து பற்பல நல்வளஞ்‌ சேர்‌ தரும்‌
குறிஞ்சி விட்டுக்‌ கொடுங்க ணரவமும்‌
நெறிந்திரிந்திட நின்றெரி வீசியுள்‌
வறண்ட பாலையில்‌ வந்து கலந்ததே–15-

அன்னிலத்தைக்‌ குறிஞ்சிய தாக்கியே
மன்னு மாங்குள யாவும்‌ வரன்றியே
துன்னு முல்லை நிலத்திடைச்‌ சூழ்ந்ததாற்‌
தன்னிகர்த்திடும்‌ தாம்பிர வன்னியே–16-

அண்டர்வெள்ள மலமர வன்னவர்‌
மண்டுபாடி வயின்புகுந்‌ தாங்குள
தண்டுளித் தயிர்த்தாழி யளை நெய் பால்‌
கொண்டு வெண்ண திக் கோலந் திகழ்ந்ததே –17-

மல்லலான்‌ விடை மற்றிளங் கன்றுடன்‌
முல்லையங் குழலாயர்‌ முகிழ் முலை
வல்லிமார்கள்‌ வனையும்‌ பணி துகில்‌
மெல்ல மெல்ல வுண் மேவி வரன்‌றியே–18-

மற்றுமுள்ள வளங்களை வாரியே
கொற்ற வெண் குடைக்‌ கோமகன்‌ காரிதன்‌
நற்றவத்துதி நந்தன்‌ புகழென
வெற்றுநீர்‌ மருதத்திடை யேய்ந்ததே–19-

மருப்பொடிக்‌ கமழுஞ் சோலை வான்றருக்‌ குலங்கள்‌ சாடிச்‌
சுருப்பொடு மயில்களாங்குச்‌ சூழ் தரும்‌ பறவை பாய
விருப்பொடு காக்கு மள்ளர்‌ வெள்ளங்கள்‌ வெருக்‌ கொண் டோடக்‌
கருப்பொடித்‌ தயல் சூழ் வாளை கம்புளாரங் களீர்த்து–20-

மள்ளர்‌ தம்‌ சேரி யன்னோர்‌ வளர்த்திடு மெகினங்‌ கோழி
புள்ளின மிடப மேடம்‌ பூங்கிடிக்‌ குருளையோடு
விள்ளு முக்கனிகளீர்த்து வேரி முண்டகக்‌ காடூடுற்‌
அள்ளிதழ்த்‌ தேனினோடு மொன்றிச்‌ செந்நிறத்ததாகி–21-

கொங்க விழி ரதத்தேனைக்‌ கொள்ளை கொண்டளிகள்‌ பாடும்‌
பங்கய வாவி தோறும்‌ பரந்து நித்திலங்க ளீனுஞ்‌
சங்குலாம்‌ பணை கடோறுந் தடையறப்‌ படிந்து நீலத்‌
துங்க வெண்டிரை கண்‌ மோதுந்‌ தூய நீர்க்‌ கடலுட்‌ சேர்ந்த–22-

தேர்ந்‌ துணர்ந்தோர்த நெஞ்சிற்‌ றெளிவுறக்‌ நீத்த நீடு
வார்ந்தலை யகடு கீண்டு வகிர் தர வொதுக்கல்‌, வெம் போர்‌
ஆர்ந்த தோள வுணன்றன்னை யரி யுருவாகி யெம்மான்‌
ஈர்ந்தணி பூண்ட மாலை யெழிலினைப்‌ பொருவு மாதோ–23-

நாடுகடோறம்‌ பாய்ந்த நறம் புன றடையாயுள்ள
கோடுக ளனைத்துஞ்‌ சாடிக்‌ குமுறிடு மொலியுஞ்‌ செந்தேன்‌
ஓடு தண்டலைகள்‌ யாவு மொண் சிறை யறு காற்‌ றும்பி
பாடு மத்தொனியு மாங்குப்‌ பரந்தன வெங்கு மாதோ–24-

கட்கடை குழையைத்‌ தாவுங்‌ கடைசியர்‌ குழுவினோடும்‌
உட்களி தூங்க மள்ள ருண்ணுதற்‌ கமைத்த வூனை
மட்கலத்‌ தெடுத்து மீது வைத்தல ரணையின்‌ மேய
புட்குல மிரிய வந்து புகுந்தன ரனந்தர்‌ மாதோ,–25-

வெட்டுவர்‌ சுமப்பர்‌ வாரி வீசுவர்‌ வரம்பை நேராய்க்‌
கட்டுவர்‌ மிதிப்‌ர்‌ கோட்டுக்‌ கரு நிறப்‌ பகட்டினத்தை
மட்டறப்‌ பூட்டிச்‌ சாறு வார்கரும பொடித்‌ தனேகர்‌
எட்டு மாதீரமுமஞ்ச வேரடித்‌ துழுவர்‌ மாதோ–26–

முருகவிழ்‌ கமலப்போதின்‌ முத்தனம்‌ வளைகளீனக்‌
குருகு தன்‌ கருவாமென்றே குறித்து வெண்‌ சிறகான்‌ மூடி
அருகிருந் தடை கிடக்கு மகன பணைத்‌ தலத்து வானெற்‌
பெருக வென்‌ றகத்திலுள்ளிப்‌ பெய்குவ ரெங்கும் வித்தே–27-

பருமருங்‌ குடை நற்‌ பாகற்‌ பழங்‌ கனிந்திழிந்த தேனும்‌
மரு,மலர்‌ விரியுஞ்‌ சூத வார் கனித்‌ தேனு மீத
விரு மரம்பையின்‌ பலங்கள்‌ வீழ்ந்திழி தேனும்‌ பாயத்‌
திரு மகிழலங்கன்‌ மார்பன்‌ கீர்த்தி போல்‌ வளருஞ் செந்நெல்–28-

இற்றொடி னுழை நுசுப்பு மிரணியத் துகளை நேர்தே
மற்றொடு தனப்‌ பொருப்பும்‌ வாள்‌ பொரு விழியும்‌ பெற்ற
பொற்றொடிக்‌ கடைசி மார்கள்‌ பூந் துகிற்‌ கொடிமென்‌ பூவி
வற்றொடு களைகள்‌ யாவும்‌ வரைந்து பின்‌ குரவை செய்வார்–29-

வரி வளை யலறி யீன்ற மணிதிகழ் கழனி தோறும்‌
விரிகளை கடியு மாதர்‌ விளங்கு நன்‌ முகத்தை நோக்கி
உரிய மா மதியமென்ன வுண்ணெகிழ்ந் தலரு மாம்ப
றரியல னெழுந் தானென்னத்‌ தாமரை மலர்‌ வாய்‌ மூடும்–30-

அந்தரத்‌ தடர்ந்த வாச வைந்தரு நீழல்‌ வைகுஞ்‌
சந்த வானினங்‌ கறிக்கச்‌ சலிப்புறு தோங்கித்‌ திண்டோள்‌
மைந்தரைக்‌ கண்ட கற்பு மகளிர் தங்‌ குழுக் கணாணிக்‌
கந்தரஞ்‌ சாய்ப்பதே போற்‌ கவிழ்ந்தன சாலி யெங்கும்–31-

அகட்டிரசித மீன்றாவ வரிந்தரி யனைத்தும்‌ வாரிச்‌
சகட்டினு மெருத்தின் மீதுந் தலையினுக்‌ கொடு போ யண்ட
முகட்டினிற்‌ படியப்‌ பல் போர்‌ மூட்டியே பிணை யனீலப்‌
பகட்டின மனந்தம்‌ பூட்டிப்‌ பற் பலர்‌ தெழிப்பர்‌ மாதோ–32-

உளங்களி தூங்கவாரு மொண்டொடித்‌ திரளினோடுரந்
தளந்தளமாக வெங்குஞ்‌ சார்ந்த நெற் பொலியை வாரிக்‌
களங்களைப்‌ புதுக்கித்‌ தூய காற்றினிற்‌ றூற்றிப்‌ பின்ன
ரளந் தளந்‌ தவர் கடங்க ளகத்தினிற்‌ கொணர்வர்‌ தாமே–33-

காவியும்‌ கடையு நேமிக்‌ ககமுமென்‌ கமலப் போதுந்
தா விடுஞ்‌ சினை வராலுஞ்‌ சைவலத்‌ துணரு ஞண்டு்‌ந்
தூவியவனமு மீனுந் தூய தெண்‌ டிரையுங்‌ காட்டி
வாவிக ளனைத்து மாதர்‌ வடிவெனப்‌ பொலியு மாதோ–34-

தாதினி னிறையு மம்பொற்‌ றடத்தினிற்‌ றிகழ் வெண்கஞ்சப்‌
போதினி லினிதமர்ந்து பொலிவுறு மனத்தின்‌ றோற்ற
நீதி நின்‌ றுயர்ந்த மாற னிகழ்த்து மத்‌ தமிழை யோர்வான்‌
மேதினி தன்னில் வாணி மெய்த்தவம்‌ புரித லொக்கும்–35-

வெடித்திடுஞ்‌ சினைவரால்‌ போய்‌ வெண் மதிச்‌ சசத்தைக்‌ கீறி
வடித்திடு மமுதத்தோடும்‌ வாரணிந்‌ தடர்ந்த கொங்கைத்‌
தொடிக்கைய ரிருண்ட கூந்தற்‌ சொரிந்தடு நறவு மொன்றி
மடித்தலை யெறிந்தனேக மாநதிக் கிணையா யோடும்–36-

கயமெலாம்‌ பறவை கூடும்‌ காவெலா மயில்களாடும்‌
வயலெலாங் கரும்பு நீடும்‌ வரம்பெலாந்‌ தேன்களோடும்‌
வியன்றருக்‌ குலங்களெல்லாம்‌ விளரி வண்டினங்கள்‌ பாடும்‌
அயலறப் பெருகி நாடு மரும்புனல்‌ குவடு சாடும்–37-

கணையினுங்‌ கொடியதாகுங்‌ காவியம்‌ கருங்கட்‌ செவ்வாய்த்‌
துணையிள முலைக்கரும்பொற்‌ றொடி யுழத்‌ தியரின்‌ வெள்ளம்‌
பணையிடத்‌ தடர்ந்து செய்யும்‌ பணை யிகழ்‌ குரவையோடு
இணை தட வொலிகளெங்கும்‌ கெழுமியார்‌ கலி போலார்க்கும்–38-

வாளை விண்‌ முகடு தாவு மாமரங்கனிக டூவும்‌
வேளை மாங்குயில்கள்‌ கூவும்‌ வெள்ளனம்‌ வயல் கடாவு
நீளரி மலர்த்‌ தேனுண்ணு நீர்முகில்‌ பொழின்‌ மேனண்ணும்‌
பாளைகள்‌ மிகவுமொன்றும்‌ பனி வளர்‌ கமுகின்‌ கண்ணும்–30-

தாமரைத்‌ தடங்கடோறும்‌ தடமுலை மடவாரீட்டம்‌
பூமலர்க்‌ கழனி தோறும்‌ பூங்கரு வண்டுப்‌ பாட்டம்‌
தேமரு பொழில் கடோறும் செழிப்புறு மயில்களாட்டம்‌
தோமறநோக்கும்‌ பக்கந் தோறும் பன்‌ மலர் சேர்‌ தோட்டம்–31-

குடங்கையினகன்று கொலைத்‌ தொழில்‌ புரியுங்‌ கூற்றினைப்‌ பழித்த வெவ்‌ விழிகொண்
மடந்தையரிருண்ட குழற்றிரட்‌ கருத்து மணந் திகழகிற் புகை ககனத்‌
தடர்ந்தன விமையா தவர்கள்‌ கண்‌ ணெச்சின்னாட்டணி யழித்திடா நீலப்‌
படந்தனை விரித்து மறைத்தன கடுப்பப்‌ படர்ந்தன விண்ணிட மெல்லாம்–32-

வண்டலம்பிடு பூந்தண்டலை யுகுதேன்‌ வழிந்து பாய்வுற வளர் கன்னல்‌
அண்டர்‌ தம்பதியிலடைய வாங்குலவு மானினங் கறித்திடச் சிதறி
எண்டிசை யிடங்கண்‌ முழுவது மறைய வெழின் மணி யினங்கள் வீழ்‌ தோற்றம்‌
விண்டலத்‌ திரவி தனக்‌ குடைந் துடுக்கள்‌ வெடித்து வீழ்ந்திடுதலைப்‌ பொருவும்–33-

போதலர்ந்திரத நறவிழிந்தொழுகு புனிதமா முல்லைய நிலத்தில்‌
யாதவரியற்றுல்‌ குழலிசை யினைக்கேட்‌டைம் பொறி வழி யுளஞ்‌ செலுத்தா
மேதகு தவரு மெய்யறி விழந்து மேலை நாளி ருந்தமை கருதி
மாதவ னெழுந்தா னெனவவன்‌ றனையே மருவியின்‌ புறுவமென்‌ றெழுவார்–34-

எழலிகண் படுக்குந் தண்டலை யரங்கி லிவர் முருக்‌ கலரொளி விளக்கவ்‌ வுழிவிளங்‌ கிட வொண்‌ சிறை யறு பதங்களுறு அமளிக்‌ குலங்கள்‌ பண்‌ணியற்ற
பழியிலன்‌ புறு மேன்மையரென விருந்தொண்‌ பறவை கண்‌ மகிழ்வுற விமையா
விழி கொளுஞ் சிகிகள்‌ பயிலின மடவார்‌ விழைவொடு நடிப்பன நடிக்கும்–35–

அஞ்சனமணிந்து விடத்தினிற்‌ கருத்தை யரி பரந்‌ தகன்ற கண்‌ மடவார்‌
மஞ்சனம்‌ புரிநீ ரருவி பாய்ந்திட நெல்‌ வளர்வன வகன் பணை முழுதும்‌
பைஞ்சிறைக்‌ கிளியும்‌ பூவையுமிருந்து பாடுவ சோலை கடோறும்‌
கஞ்ச நன்‌ மலருங்‌ காவியுந் திகழ்வ கயந் தொறும்‌ வழுதி நாட்‌டகத்தே–36–

காவினிற்‌ றிகழும்‌ பலவினற்‌ கனியைக்‌ கறித்தொரு
பாகமாய்க்‌ குரங்கொன்‌ றாவலிற்‌ புசித்து விட்டிட வதனை யருகெழுந்‌ தொருகரு முசுவும்
வாவிமுன்கறித்த விடத்தினைப்‌ பிடித்து வாயை வைத்‌ தருந்துதல்‌ கதிர்கா
றேவிருட்‌ பகையைக்‌ கரும்பை யிராகு சினங் கொடு தீண்டுதல்‌ கடுக்கும்–37-

அற்புத மிகுந்த விரு நிதி யுறலா லம்புயத்‌ திருமகிழ்‌ வுறலால்‌
பற்பல வண்ட ருகப்புடன்‌ மிடைந்து பரிந்துரை பான்மையான்‌ மின்னார்‌
கற்பக மருவுந் தன்மையா லெவருங்‌ கணிப்பரு முயர்ச்சி யினாலும்‌ பொற்பினின்‌ மிகுந்த பொன்னகர்க்‌ கிணையாய்ப்‌ பொலி தரும்‌ பாண்டி நன்னாடு–38-

உந்திமே லொருநான்‌ முகனை முன்‌ படைத்தன்‌ னோன் றனைக் கொண்டு வெண்ணீற்றா
னிந்திரன்‌ முதலாந்‌ தேவரை யுலகத்‌ செண்ணருஞ்‌ சராசரத்‌ தொகையைத்‌
தந்திடப்‌ புரிந் தங்கவை தொறு நிறைந்‌து சாக்ஷியா யிருந்தருள்‌ பெருமான்‌
வந்து தித்தருளும்‌ பாண்டி நாடதனுள்‌ வளத்தினை யுரைத்திடற்‌ பாற்றே–39-

பாண்டிய நாட்டுத்‌ திருப்பதிப்‌ படலம் முற்றும்

திருநகரப்‌ படலம்‌

தண்டலை சூழ்ந்தில குறு சாளக்கிராமஞ்‌ சார்ந்துழியோர்‌ பதினூறு சயினர்‌ வந்தாங்
கண்டியெம்மோ டடல்வாதம்‌ புரிவீ ரென்ன வன்னவர்க்கா யிரம் பணங்கொளரவாய் நின்று
புண்டரிகத்தாளவனைப்‌ பரமதாக்கி போதவலர்‌ தன்னடிக்கட்‌ பொருத்து ஞானத்‌ திண்டிறல்‌ கொளெ திராஜன்‌ கழலை வாழ்த்தித்‌ திருநகரப்படல மதைத்‌ தெரிவிப்பாமால் –1-

சங்கமீனுந்தரள நிலவுல
கெங்கு மாரகழின்புடை யேய் பொலன்‌
றுங்க நீளெயில் சூழ்‌ குருகாபுரி
பொங்கு வாசவன்‌ பொன்னக ரொக்குமால்–2-

வச்சிரத்தி னிடைக்கிடை மாடுபெய்‌
மச்சிவர்ந் தொழிர்‌ மாளிகையும்‌ பளிக்‌
குச்சிமேய வுயர்‌ மணி மேடையும்‌
பச்சையாமறையும்‌ மடைப்பள்ளியும்–3-

பம்பரத்தை நிகர்த்த பயோதரக்‌
கொம்பனார்கந்து கம்பயில்‌ கூடமும்‌
வம்புலாந்‌ அணர்‌ மஞ்சமு மாமணித்‌
தம்பநாட்டுஞ்‌ சயனத்‌ தலங்களும்–4-

பீதகத்திற்‌ சமைத்தொளிர்‌ பித்தியுங்‌ கோதறும்‌ வயிடூரீய கும்பமுற்‌
றாதவன்‌ றொட்டவிர்ந்த சிகரியும்‌ மேதகத்தின்‌ விமானமுங்‌ கோயிலும்–5-

கள்ளலம்பு,கருங்குழல்‌ வாணுதல்‌
அள்ள யிற்க ணடர்க்தெழு மா முலை
கிள்ளையின்‌ சொற்கிளவிநன்மாதர்க
டுள்ளீயாடிடு தோரண வாயிலும்–6-

வானிறாவு கயற் கொடி வைகிய பானிலாமணி மேடையின்‌ பந்தியுந்
தூனிறத் தண் மதி முகத் தோகைமார்‌ கானிசைக்குங்‌ கருமணிச்‌ சாலையும்–7-

பன்னிறக்‌ கதிர்வீசும்‌ பரப்பினாற்‌ றுன்னிராவும்‌ பகலும்‌ துலங்கிடா
நன்னகர்த்‌ தெருவீதி நலத்தையா மின்னதென்றிங்‌ கெடுத்‌ துரைப்பாமரோ–8-

விந்தையிற்‌ சிறவோர்‌ விளையாடிடத்‌ தந்தவாழி சமைத்து று தேரினிற்‌
பந்தனஞ்செய்‌ பரியின்‌ விலாழிநீர்‌ சிந்தவீதியிற்‌ சேறுறு மாதரோ–9-

சீதவாரம்‌ திமிர்ந்த சிமிழ்முலை மாதர் வீணை மலர்க்‌ கைபிடித்து நற்‌
கீதமோ தொலியுங் ளர்‌ மாதவர்‌ வேத கோடமு மேய தவ்‌ வீதியே–10-

தூலை யுற்று நுடங்கிடை மாதரை வேலை யுற்று மிளிர்க்தகை வீரர் கண்‌
மாலையிட்டு மணம்புரி பல்லிய மோலை யுற்ற கடலொலி யொக்குமே–11-

கெண்டையொண்‌ கட்கிளி மொழிமா தரின்‌ கொண்டை கொண்டவிர்‌ கோதை நறவுக வண்டலிட்டு மறுகு வழுக்கமே வொண்டொடித்‌ திரள்யாஞ்‌ சொல வொண்ணுமோ-12-

நீனிறக்கற்‌ சகர நிறைத்தெழு மேனிலைக் கண்‌ மிளிர் கயற் கேதனர்‌
தேனினின்‌ சொற்றெரிவையர்‌ கட்கிணை தானிருக்கத்‌ தவஞ்செயன்‌ மானுமே–13-

ஒள்ளிருஞ்சுதை மாட த்தினுற்றவிழ்‌ நள்ளிருட்‌ குழனங்கை முகத்தொளி
வெள்ளி வெற்புயர்‌ வெண்மதி மாமுகிற்‌ குள்ளிருந்து வெளிப்பட லொக்குமோ–14-

பூவணத்தரளத்திற்‌ பொலிந்தடர்‌ காவணத்தின்‌ கவின்றிகழ்‌ பற்பல
வாவணத்துளமைந்த சிறப்பையிப்‌ பாவணத்திற்‌ பகர்ந்திடற்‌ பாலதோ–15-

ஆரநானமலர்ந்த நறைகொள்கர்ப்‌ பூரநீள்விலைப்‌ பொற்றுகி றாவுழைக்‌
கோரமா னிடபங்‌ கலை கோரதம்‌ வாரணங்கண்‌ மலிந்தது கூலமே–15-

சிந்தியாது பொய்‌ செப்பு தலில்லரிச்‌ சந்திரன்‌ றனிற்றாழ்‌ குனரின்‌ மதி
மந்தராய்த்‌ திரிவாரிற்சுரகுரு வந்தணன்‌ றனிற்றாழ்‌ குனரற்றதே–16-

இன்னலுற்‌ நிரப்‌ போர்க்கிறை யீ விலாப்‌ பொன்னை வைத்துப்‌ புகல்‌ சொல்லும்‌ புல்லரி
லன்ன முற்றுறங்கும்‌ பணை யங்கர் கோன்‌ கன்னனுக்குக்‌ கடையின ரில்லையால்–17-

விட்பரந்த புகழ்ப்பெரு மேன்மையர்‌ திட்புயச்‌ சிறுவோர்‌ சிலர்‌ சேவறாள்‌
முட்பொரும்‌ படைகட்டி முயலொலி மட்கலைக்‌ கெதிர்‌ மாறுகொ ளோலமே–18-

மின்னி னுண்ணிடை மெல்லியலார்கடம்‌ மன்னனோடு மகிழ்ந்து புணர்ந்திட
வன்னை யில்விட்‌ டவரவ ரிற்‌ புகல்‌ பொன்னினாள் வந்து புக்கது போன்றதே–19-

காதலன்‌ பொற்கலையை நெகழ்த்தமெல்‌ லோதிநாணி விளக்கை யொளிக்கவம்‌
மாது பூணு மணியொளி வீசிடப்‌ போத வெட்கிக்‌ கரங்கண்‌ புதைக்குமால்–20-

மானறுங்குழல்‌ மங்கைய ரன்பரோ டானவின்ப மனைத்து மிகுளையர்‌
பானவில்கப்பசியுறு மிற்புலி மோனமோடுண்‌ முழுமையும்‌ நோக்குமே–21-

காவி நோக்கியர்‌ காதல ரூடலின்‌ மேவுமாமணி மேடை யொளித்திட
வாவலோடெழுந்தாட வரன்னரென்‌ றோவியந்தொழ வுன்னி நகைப்பரால்–22-

வற்றனத்‌து மடந்தையர்‌ மாடமூ டுற்றுநாளு முடுபதி தான்செலப்‌
பெற்றதாலவட்‌ பெய்விளக்‌ காவியாற்‌ கற்று மெய்யைக்‌ களங்க மென்பார்களே–23-

கோலமாடக்‌ குழுக்குண்‌ மடந்தையர்‌ சாலவாயற்‌ றிறந்து தனித்தனி
வேலினேர்‌ விழிநோக்கொளி வீதிவாய்‌ நீல மா மலர்த்‌ தோரண நேர்ந்தவால்–24-

அஞ்சினாறும்‌ புனுகு மணிந்து வா சஞ் சிறந்த குழலியர்தத்தை பாற்‌
செஞ்சொனாமம்‌ பயிற்றச்‌ செலற்கது பஞ்சரத்துட்‌ பதுங்கு மணத்தினால்–25-

தென்‌ றமிழ்‌ வட நூறெரி வோர்கடம்‌ முன்றிறன்னிற்‌ புராண முதுப்பொருள்‌
பொன்றிலாது புகன்றிட மாந்தர்கள்‌ சென்று கேட்டுத்‌ தினமு மகிழ்வரால்–26-

மானநீர்ப்‌ பொருணா நதியின்‌ வடக்‌ கானினேறரன்‌ கோயிலமைந்ததான்‌
மேனிலைத்‌ தென் விரசைக்‌ கவாசியா ஞான நாடெனலா மிந் நகரையே–27-

ஏறுமிவ்‌ வளங்கொள்குரு காபுரியி னூடே யீறிலொளி வீசு பொனியற்றெழு நிரைத்த
வீறணியு மண்டபமுண்‌ மேவி யருள் காரி மாறனரி யாதன மகழ்ந்தினி திருந்தான்–28-

வாமரைநிகர்‌ த்தவீழி மங்கைய ரனேகர்‌ சாமரையிரட்ட வெகுதாதியர்கணின்‌று தாமரையலர்க்கு நிகர் தாளிணை பெயர்ப்பத்‌ தூமறை நல்‌ வேதயாக டோததிர மியம்ப–29-

வைரமுடி சூடுதிணி மன்னவர்‌ கடங்கள்‌ செயிரினை யெடுத்தினிது செப்பிட மருங்கே
யுயிரனைய மந்திரிக ஞற்றவை யுரைப்ப மயினிகர்‌ கருங்குழல் கொண்‌ மங்கையர்கள் பாட–30-

வலங்கொள்‌ தட மார்பினிடை வண்டிமிரு நிம்ப வலங்கலொடு வெண்டரள வாரமு மிலங்க
விலங்கரிக ளொண்புய மிடைந்த வலயங்கள்‌ இலங்குற வெண்‌ மண்ணுத லிருந்தொளி தயங்க–31

அளக்கரு மளக்கரி னதிர்முரசொலிப்ப விளக்கொளி யயிற்படை விரற்பதுமமின்ன தளத்துள வலங்கலணி தாயமுகிலே வந்‌ துளத்தினிதுறக்‌ குழைகளொண்‌ சுடரெறிப்ப–33-

கொந்தலரு மோதியர்கள்‌ கும்பமொடு தீபம்‌ வந்தினிதெடுப்ப மதி வாணில வெறிக்கும்‌
சுந்தர மணிக் கவிகை சூழவதனீழல்‌ இந்திரனெனப்‌ பெரிதிருந்தனன்‌ மகிழ்ந்தே–34-

வாசமலர்‌ கொண்டடரு மங்குலினிருண்ட கேச மட மங்கையர்‌ கிளர்ந்தொளிருமம்பொற்‌
றூசுடனெய்‌ வாசமணி சுண்ணமு மெடுத்தே வீசவடன்‌ மைந்தர் பலர்‌ மெல்லடியில்‌ வீழ–35-

பட்டமறு வற்றருள்‌ பரந்தெழு நிலாவின்‌ வட்டமதி யொத்தொளி செய்‌ வத்திர மிலங்க
மட்டுறுமலர்க்கமல மானவிரு கண்ணின்‌ றெட்டிசை தழைத்திட வருட்டிரை யெறிப்ப–36-

இவ்வண மகிழ்ந்தினி இருந்தருள்‌ சுரந்து நவ்விநயநத்‌துடைய நங்கை யொடு நீலப்‌
பவ்வவலை சூழ்புவி பரித்து முறை செங்கோற்‌ செவ்விதினி யற்று பொழு துற்ற துரை செய்வாம்–37-

திருநகரப்படல முற்றும்‌

திருக்குறுங்குடிப்‌ படலம்‌

வெண்டி ரை கறங்குங்‌ கடனிலவரைப்பின்‌ மிடைந் துயிர்ப்பயிர்‌ கொடுங்க கலியாம்‌
அண்டு வெம்‌ கதிரான்‌ மிக்குடல் வெ தும்பி யழிதரா தல் கலின்ஞான
மண்டு விண்‌ மாரி பெய்தருளியரா மானுசன்‌ றாட்டுணை வணங்கி கொண்டல் கண் படுக்கும்‌ தண்டலை யுடுத்த குறுங்குடிப்‌ படலமின்‌ றுரைப்பாம்–1–

பொங்கு நீ டிரைகொ ளு வரியந்தானைப்‌ பூவை மெய்‌ வழியிலோர்‌ குடைக்கீழ்த்‌
தங்க வைத்‌ தனேக நாளர சியற்றித்‌ தனையனில்லாமையின்‌ மெலிந்து
கங்குலிற்‌ கரிய கூந்தலந் துவர் வாய்க்‌ கயற் கணங்‌ கற்பு று நங்கை
பங்கய மலரின்‌ முகமதி நோக்கிப்‌ பார்த்திபன்‌ மொழி சில பகர்வான்‌–2-

இழையிடை புகுதற்கிட மிலா தடர்ந்த . விளமுலை துடி யினே ரிடைநால்‌
புழை நெடுங் கரமென்‌ பிடிநடைத்‌ திருவே பொற் கலத்‌ தடிசிலிற்‌ சிறுகை
தழைவுற வளைந்தங்‌ கிளநகை புரிந்து தவழ்நடை பயிற்றிடு மழகார்‌
மழவிளஞ்‌ சேய்க டமைப் பெ றாதுற்ற வாழ் விருந்‌ தென் பய னென்றான்–3-

சிற்றெரும்‌ பணியி னடப்பன கடுப்பச்‌ சிறுமயி ரொழுங்குமே கலைசூழ்‌ புற்றரவல் குற்‌ றமனியக்‌ கொடியே பொன்னக ரமிழ்தினு மினிமை-யுற்றமென்‌ குதலைச்‌ சிறுவர் கண்‌ மிழற்று மொருசொலிச்‌ செவிப் புலத்‌ தேர்க்கப்‌ பெற்றில ரன்றோ மகர யாழ்‌ முழலைப் பேசு வரினிதெனப்‌ பிறர்க்கே–4-

துப்பித டளவின்‌ முகை யணி முறுவற்‌ றோகை நன்‌ னெறியிலோர்‌ மகவைக்‌
கைப்பெறினேழு பிறப்பினு , மியற்றுங்‌ கடும் பவந்‌ தொலைத்து மா விரசைக்‌
கப்புற மிருத்து மெனிற்புவி துறந்தா ரணிய முற்‌ றைம்பொறி யடக்கித்‌
தப்பில துடலங்‌ கருக வைம்‌ தழலுட்‌ டவஞ் செய றரும் பய னெவனோ.–5-

ஐங்கணைக்‌ குறிசில்‌ வசந்த மண்டபமுற் றணிசெயு மரம்பையங்‌ குறங்கும்‌
பங்கய மலரின்‌ மிதிக்குமுன்‌ சிவக்கும்‌ பதமுநின்‌ றொளிகொள்‌ பெண்‌ மயிலே
செங்கர மதனா லபனருள்‌ கொடு நஞ்‌ சென்னியிற்‌ பொறித்தடும்‌ பொழுது
சங்க நன்‌னிதியுந் தரணியும்‌ பெறுவீர்‌ தனைய ரில் லென வெமுதினனோ–6-

இந்திர தனுவை நிம்பபத்‌ திரத்தை யிகல் செயும்‌ புருவ நற்‌ கமுகின்‌
கந்தரம்‌ வருக்கைக்‌ கனி மொழித்‌ திருவிக்‌ காசினி யதனுணம்‌ மரபில்‌
வந்த திண்‌ டிரடோள்‌ மன்னரி லெவரு மகவின் நல்‌ வாழ்வுற நமக்குச்‌
சந்ததி யிது நாள்‌ வரையிலா ததற்கென்‌ றாழ் வினைப்‌ புரிக்தன மென்றான்–7-

வண்டினம்‌ பெடைக ளுடனிரும்‌ தமுதுண்‌ மருமலர்த்‌ தொடை யணி குழலாய்‌
கண்டினு மினிய மழலை மென்‌ மொழி கொள்‌ கான்முளைப்‌ பொருளிது நாளுங்
கொண்டிலா துணவு முறக்கமும்‌ பெரிதாய்க்‌ குவிமுலைப்‌ போகமே நுகர்ந்து
தெண்டிரைக்‌ கடல் சூழ்‌ புவியு நன்‌ னிதியுசந் திறமென வாழ்ந்தன மென்றான்–8-

இவ்வின மெலிந்து பகையின ருதிர அம் மிருஞ் சிறைப்‌ புள்ளினுக்‌ கிரையாய்‌
வவ்வு மொள் ளயில் வேற்‌ படை யுறு மங்கை மன்னவனுரைத்த சொல்‌ வினவி
நவ்வியை னச் சுணங்கணிர்‌ தடர்பொன்‌ னக கெனத்‌ திமிர் முலை வனசச்‌
செவ்வி கொள்‌ வதன வனநடைத் தெரிவை செப்புவள் சில மொழி யன்றே -9-

இன்னல ரெனுமும்‌ மதமுகும்‌ புழைக்கை யிபமெனுங்‌ குழுவினுக்கரியாம்‌
மன்ன வெவ்‌ வுலகு மகவிலார்‌ தமக்கு வலி கொள் புத்‌ தெனு நர கென்று
நன்னெறி யுணரு மறிஞர்‌ நின்னவை யினவில் வதைக்‌ கேட்டு நாமிதுநா
ளுன்னின மிலையப்‌ பொருளிலா தெவ்வாழ்‌ வொன்றினும்‌ பயனிலை யென்றாள்–10-

என்று மன்னவனு மங்கையுள்‌ சிலநா ளிரங்‌யிந்நாள்‌ வரை யினுநாஞ்‌
சென்றமுப்‌ பொழுது மிடைவிடா திழைஞ்சுஞ்‌ செழுங்கரு முகிலெனப்‌ பொலிந்து
நின்ற நம்‌ பெருமான்‌ றனதடிபரவி நிகழ்த்‌ துவ மின்றவ னமக்கு
மன்றலங்குழலா யஞ்சலென்றருளி மகவர மளித்தருள்‌ குவனேல்–11

வந்தரசியற்றி வாழ்குவ மாங்கம்‌ மகவர மளித்திடா னெனினாஞ்‌
சுந்தரவதனத் தெரிவை யந்கெறியே சூழிருஞ்‌ சடைமுடி. தாங்கிச்
செந்த ழலிடை நின்றருந்தவம்‌ புரிவோர்‌ செறியுமக்‌ கான மேகுவமென்‌
றந்‌ தமன்‌ னவர்கோன்‌ மங்கை பாலுறுதி யறைந்தவ ளுடன்‌ றளிக்‌ கெழுந்தான்–12–

கஞ்ச நன் மலரை யனைய வானனத்துக்‌ கன்னிய ரிருவர் முன்‌ னெதிர
மஞ்சினு மிரட்டி யதிர் குரன்‌ முரசும்‌ வலம் புரிச்‌ சங்கமு மொலிப்ப
வெஞ்சலி னிறை நீர்த்‌ தசம்புடன் மலரு மினிய நற்‌ கனிகளும்‌ வரமுன்‌
அஞ்சுக மொழிமின்‌ னணங்குமன்‌ னவனு மறிந்தறிந்‌ தக மதிழ்ந்தனரால்–13-

பன்னகமிசை நின்றெழுந்து மேனிவந்த பருமணிப்‌ புரிசையும்‌ பரந்த
மின்னொளி விரிக்கு மாட மண்டபங்கண்‌ மிடைந்த பன்‌ மறுகையுங்‌ கடந்து
கன்னலி னமிழ்திற்‌ கனிந்த மென்‌ றீஞ்சொற் கரும்புய னிகருமொண்‌ கூந்த
லன்ன மென்‌ னடையி னணங்கு மன்னவனு மன்பினத்‌ தளிவலம்‌ வந்தார்–14-

செய்ய வொண்‌ கமல மலர்த்தவி சுகந்த திசைமுகத்‌ தயனுறு மிடர்தீர்ந்
துய்ய விண்‌ ணமரர்‌ மஞ்சன முதலா வுள்ளன வெடுத்தினி தளிப்ப
மெய்யவன்‌ பொடுமா ராதன மியற்ற விண்டொட ராசையங்‌ கிரியோர்‌
துய்ய வண்‌ டினங்க ளிசை செய் பைந்‌ துளவத்‌ தொடையல் கொண்‌ டடியிணை பணிய–15-

ஒன்னல ரெனும்வெற்‌ திரைக்கட லினை யுண்‌ டொளிருமொண்‌ டிகிரி முன்‌னடையின்‌
இன்னொளி மழுங்கிப்‌ பரிபவ முறுவ மென்றுரு மாறி வந் தருக்கர்
பன்னிரு வருமுள்‌ ளுவந்திறைஞ்சி யடர்‌ பவரையோ லக்கமா யிருமின்‌
என்னவொ ரிருகை குவித்து வேகு பராக்‌ கென்றவர்‌ கட்டியம்‌ மியம்ப–16-

புகரில்‌ யாழெடுத்து மாடக முருக்கிப்‌ புரிரரம பிசைத்திசை நிறுவப்‌
பகரெழு வகையி னிசைகளை முறையிற்‌ பாணியிற்‌ சுதையினு மினிதாய்‌
அகமகிழ்‌ வொடுமக்‌ கின்னா ரியற்ற வவிர்ந்த செஞ்‌ சடை முடி தரிக்கு
நிகரிலாப்‌ ப்ருகு மார்க்கண்டரு மருங்கி னெடிய மா மறையினிற்‌ புகழ-17-

முருகு கொப்பளிக்க நறவுகுந் துளவ முடியினிற்‌ புடைபரந்‌ தளிக
டுருவிமுன்‌ னடிக்கு மரமபையர்‌ தமக்குச்‌ சுருதியி னின்னிசை பயில
விருவிசும்‌ பகட்டூ ரிருளினிற்‌ கிளர்வுற்‌ றெழுந்த வெண்‌ பிறை திகழ்‌ மறுவின்‌
றிரு நுதற்‌ றலத்துட்‌ செழு மணங்‌ கமழுந்‌ தென் கலைப்‌ புண்டரா மொளிர–18-

செவ்வரியோடிப்‌ புடை பரந் தெழுந்து செவி யொடும்‌ பொருதிக்‌ காண்பவர்‌ கண்‌
வவ்வுறு நீரதாகி நீண்டகன்று மானிலத்‌ துறு முயிர்ப்‌ பயிர்கள்‌
வெவ் வினை யொழியத்‌ தண்ணளி கொழித்து வீளங்கிருங்‌ கண்ணிணை விமலன்‌
பவ்வவார்‌ கலியுட்‌ கிளர்ந் தெழுந் தகையோ பங்கயமோ வெனத்திகழ.–19-

வாட்டடம்‌ பொருந்து மதிமுக மதனுண்‌ மலர்ந்த செலங் கமலமோ வதனுட்‌
காட்டிடும்‌ பவளக் கடிகையோ வெனக் கண்‌ கவர்ந்திடு வாயித ழிலங்க
கோட்டிரு மலையிற்‌ சினந்தெதிர்‌ பொருதக்‌ கொழுஞ் சுட ரருக்கரோ ரிருவர்‌
ஈட்டு வெவ்வினையி னெழுந்தனர்‌ கடுப்ப விலங்கிட மகர குண்டலமே–20-

பொங்கலைப்‌ புணரி நிலந்தனைக்‌ கவர்வான்‌ பொதிந்தெழுங்காலையிற்‌ கிளரும்‌
வெங்கனல்‌ கடுப்பத்‌ திகிரியு மொளிர் வெண்‌ விதுவெனச்‌ சங்கமும்‌ விளங்கக்‌
கங்குலிற் கரிய மலை யெனப்‌ பரந்து கவினுறு மார்பிடைச்‌ செழுநீன்‌
மங்குலிற்றிகமு மின்னெனத்‌ துவளும்‌ வயங்கு முப்புரி யிழை யிலங்க -21-

துங்க முற்றமர்ந்த குடக்கெனும்‌ திசையிற்‌ றோன்றி யம்‌ புயலின்‌கீ ழுதிக்குஞ்‌ செங்கணிற்றுலங்குஞ்‌ செக்‌ கரினரை யிற்‌ செழும் பொற்‌ பீதாம்பர மிலங்க
விங் கருமுகிலினிவ்வணம்‌ பொலிந்த நின்ற மெய்ப்‌ பரன்றிரு முன்னர்‌
௮ங்கடற்‌ றழைத்த வருள்‌ கொண்‌ மன்னவனு மரிவையோ டினிது வந்தடைந்தான்–22-

அண்ட மா யண்டத்துட்‌ பொருளாகி யரிய நான்‌ மறைக்கு மெட்டாத
புண்டரீ கங்கொ ணயன வெம்‌ பெருமான்‌ பொலிந்து நின்‌ றருள் பிரான்‌ றிருத்தாள்‌
கண்டவர்‌ தாளுந்‌ தடக்யைக்‌ கூப்பிக்‌ கவினொளி விரித்திடும்‌ பல்பூண்‌
மண்டல மாது புனை தர வீழ்ந்து வணங்குபு நின்றன ரன்றே–23-

கருந்தட மலையிற்‌ பொலிந்து நின்றருளுங்‌ கருணை யங்‌ கடலினை நோக்கிப்‌
பொருந்தல ருரத்தி னுதிரமுண்‌ டொளிரும்‌ பொரு வயிற்‌ படை கொண்‌ மன்னவனு
மருந்தினு மினிய மொழி நெடுங் கருங்கண்‌ மங்கையு மிருகணீர்‌ பொழிய
வருந்தி நின்‌ றிரங்கி யிரு கை மேற்‌ குவித்து வழுத்துவர்‌ விழுத்தகு மொழியே–24-

அண்டமு மீரேழுலகும்‌ படைத்த னாளி லதிர் சனா யிப்பதியு ளமர்ந்தாய்‌ பின்பு
முண்டகத்தி னான்‌முகனைப்‌ படைத்தன்னோனை முன் படைத்த வுலகளிக்க முதல்வனாக்கத்‌
திண்டிறமில்‌ லாதவனுன்‌ னடியை யுள்ளித் திருவட்டாக்‌ கரப் பொருளை சிந்தை செய்ய
வண்டிமிருந்‌ துளவலங்கன்‌ மார்பிலங்க மா மகள்‌ பூ நீளையுடன்‌ வந்த கோவே–25-

வெந்தறுக ணால் வாய்மும்‌ மதப் புழைக்கை வேழத்தை விற் படைக்கை வேடன்‌ சீறி
வந்தடரக்‌ கடமகன்று நெடுந் தூரங் கொள் வழி துரத்தி யிப்பதிக்கண் வர வன்னோனைத்‌
தந்த மதனாலுறுத்த வவனுங் குத்தத்‌ தந்தியுமக்‌ குறவனு மித்‌ தலத்தின்‌ மாள
விந்திர னந்தகன்‌ றூதர்க் கலை யென்றுந்‌ தனிணை யடிக் காட்‌ செய்‌து கந்த வெழிலிண்ணா–26-

வேதங்க ளீரிரண்டுஞ்‌ சிச்சர்கட்கோர்‌ விப்பிரர் பன்‌ னாள் வரையும்‌ விளம்பிப்‌ பின்னும்‌
போதமிலா னதிலொருவ னிருக்கை நோக்கிப்‌ புங்கவனும்‌ புன் பிறப்பிற்‌ போவாய்‌ நீ யென்‌
றோதவவ னூரினம் விட்‌ டயலூர்க்கேதி யுன்றளி சூழ் புறம்‌ பிடுங்கி யுடலம் பேணப்‌
பேதமிலா தென தடிய னவனென றுன்னிப்‌ பின் பிறப்பில்‌ வீடளித்த பெருமையோனே–27-

வானவரும் தவளமத வாரணங்கொள்‌ வாசவனும்‌ புயவலி போய்‌ வதியுநாட்டைத்‌ தானவர் முன்‌ பறி கொடுத்தங்‌ கமல யோனி தனைத் தொழ வங்‌ கவனவர் கடம்மை சோக்கி
மானிலத் திற்றிரை கொள்‌ பொருனைக் கவாசி வனமதில்‌ நம்மா லுகந்‌ து வளர்கின்றானீர்‌
தேனின் மலர்‌ கொடுதொழுமென்‌ றுரைக்க வந்து தேவர் தொழ வவர்க்கருளுஞ்‌ செவ்வியோனே–28-

சங்கனெனு மறையோன்றே விருவரோடுன்‌ றனைச் சரியென்‌ றெணியாசை தன்னைக் காக்கப்‌
பொங்கு தவஞ்‌ செய்திட நாரதனுழன்று போந்தவனை வாரணமாய்ப்‌ போவாயென்ன
வங்கவனம்‌ முனிவனை யேத்திட மெஞ்ஞான வறிவுணர்வாய்‌ நீ யென்ன வவனும்‌ பின் போய்‌
வங்கமலி யார் கலியுட்‌ சங்கமாயுன்‌ மலரடி வந்தேத்த வருண்‌ மனத்தினானே–29-

அண்டமு மவ்வண்டத்து ளுலவுந் தீயு மலைகடலு மனிலமுமோ ரணுவின்மான
வுண்டு வந்தோ ராலடையிற்‌ பாலனாகி யோகந பநந் துயில வுந்தி தோன்று
முண்டக மென்மலரதி னான்முகத்தோன்‌ றன்னை முன் படைத்தாங் கவற்குனையே மூல மென்னும்‌
பண்டை யிருக்காதிய நான்மறை யனைத்தும்‌ பானிறங்‌ கொளோதிமமாய்ப்‌ பகர்ந்த கோவே–30-

பன்றி யுருக் கொண்டு திரைக்கடல்‌ சேர்‌ மண்ணோர்‌ பருமருப்பிற்றுகளினைப்போற்‌ பரித்து வந்தாய்‌
வென்றி கொளும்‌ வழுதி வள நாடன்றுய்ய மெய்மை யறற்தாங்‌கி சக்ர பாணியாருள்‌
துன்றொளிர் வேலச்சுதர்‌ தாமரைக் கண்ணர்‌ பொற்‌ செங்கணர் பொற்‌ காரிகையா ரெந்தை முன்னோர்‌
குன்றலிலா வழி வழி சந்ததிகளன்பிற்‌ கொடுத் தடிமை கொண்ட பெருங்குணக்‌ குன்றோயே–31-

பொங்கலை நீராழியினைப்‌ புடையுடுக்கும்‌ புவி மகளைக்‌ குடை நிழலிற்‌ புரக்குங்‌ கோவும்‌,
புங்கவிழித்‌ தெரிவையு மித்துதி மொழிந்து புத்தெனு மக்கொடு நரகப்‌ புவியிலெம்மைத்
தங்கவிடா தீடேற்றிக்‌ கதி யளிக்குந் தனையரெமக்‌ கருளென வஞ்சன வெற்பூடே
செங்கமலக்‌ காடுடனோர்‌ மதியுங்கூடிச்‌ செறிந்ததென நின்றவன் முன்‌ செப்பினாரே–32-

தன்னெறிவா யுலகமெலா மோச்சுஞ்‌ செங்கோல்‌ நலமுறு வேந் தினைய மொழி நவிலப் போதின்‌
மின்னுறையு மார்பனணி யாழி சங்கு வில் கதை நாந்ககப்‌ படை கொள்‌ விமலன்‌ கொண்மூ
வன்ன வருள்‌ சுரந்து பொலிந்தோங்கி நின்ற வாதிமா லதரிச வாக்காகச்‌ செம்பொன்‌
மன்னு மணி மாடத் தென்‌ குறுங்கை செல்வீர்‌ மகவளிப்போமென வொருசொல்‌ வழங்கினானே–33-

என்னவெழு மம்மொழி கேட்டிரு புயமு மிருவரையை
மன்ன நெடி தோங்கி யிவண்‌ மனமகிழ்வுற்‌ றிறைஞ்சினனாய்‌
கொன்னவிலு மயிற்படையைக்‌ கொடு மடையா ரிகலடக்கம்‌
மின்ன விரு மணிமுடியான்‌ மின்னினை நேரிடையினொடு–34-

அருமறையு மளவிடுதற்‌ கரிய வொரு தனிப்பொருளாய்க்‌
கரு முகிற்போற்‌ பொலிந்து நின்ற கருணை யமுதினை வலமாய்‌
மருமலரு நிம்பமணி மதர் நெடுந்தோண்‌ மன்னன் மனத்
தெருமர லற்றெழில்‌ விரச சினகர முன்‌றிலி லணைந்தான்–35-

உலகமெலாம்‌ பொது நீக்கி யொரு தனி நாயகம்‌ புரக்கு
மிலகுமணிப்‌ பூண்டிகழு மெழில் கனகத்‌ தடவுரக்கா
வலன முறை யிற் கடிது வருதிரெனச்‌ சாற்றிடலு
மலகிலற நெறி யமைச்ச ரனைவரும்‌ வந்தடைந்தனரால்–36-

வந்தடைந்த வமைச்சரனை வருமரசர்‌ கோனொலிக்குஞ்‌
சந்தமுறு மொண் கழல்க டயங்குமலர்த்‌ தாடொழுது
சிந்தையுவந்‌ துடை யொடுக்கித்‌ திகழ் கரத்தின்‌ வாய் புதைத்து
முந்து நிற்ப மன்னனவர்‌ முக நோக்கி விளம்ப லுற்றான் -37-

வண்டினங்க ளிசைபாட மஞ்ஞையெலாம்‌ கண்ணுளர் போற்‌
றண்டலைவாய்‌ நடனமிடுந்‌ தண் குறுங்கை மா நகரு
ளெண்டிசையும்‌ போற்றி செயு மெம்பெரு மானெந்தமை யாட்‌
கொண்டு வழி வழி யருளுங்‌ கோதிலாச்‌ சுடர் மூர்த்தி–38-

அண்ட மெலா மளித் தருளின்‌ னருளாழி யண்ணறனைக்‌
கண்டுதெரி சித்திருகண்‌ களிப்புறயாஞ்‌ செல்வதினான்‌
மண்டு திரைக்‌ கடலனைய வரும்‌ படைகளைக்‌ கடிது
கொண்டூ வருகுதிரென்னக்‌ கோமானு முரைத்தனனால்–39-

ஒன்னலர் தம்‌ மணி முடிக ளூரஞ்சுதா ளரசர்பிரான்‌
சொன்ன வுரை கேட்டிருதாட்‌ டுணையுமுடியிற்‌ புனைந்து
நன்னெறியிற்‌ றிகழமைச்சர்‌ நவையிலா விரைவினொடு
மின்னவிரச்‌ சினகரத்தை விட்‌ டினிது சென்றனரால் -40-

கூம்போடி வான்முகடு கூடு நெடுந் தேர்முதலா
யாம் பேர்‌ படைக்கலங் கொண்‌ டரசர் பிரான்‌ திரு முன்னர்த்‌
தாம் போய்‌ வணங்கி நன்கு சாற்ற வவர்முக நோக்கித்‌
தேம்பாடு வண்டிணை தார்த் திருமார்பன்‌ செப்பலுற்றான்–41-

இப்பெருநம்‌ படையொடு முன்‌ னேகுதிரென்‌ றவர்க்கருளி
ஒப்பில்லாப்‌ பரிபூட்டி யுயர் மணித் தேர்‌ கொணர்தி யெனச்‌
செப்பிடச்‌ சாரதி நொடியிற்‌ சென்‌ றிறைவர்‌ கோனுரைத்த
வப்படியம்‌ பொற்றேர் கொண்‌ டரசர் பிரானடி தொழுதான்–42-

மஞ்செனவள்‌ வார்முரசும்‌ வால்வளையு நின்றதிரத்‌
தஞ்சமென வந்தடைந்தார்‌ தமக்கருளுங்‌ கருணை வள்ளல்‌
பஞ்சினை நேரடித் துவர் வாய்ப்‌ பணி மொழி யன்னாளினொடு
விஞ்சொளிருந்‌ தேரேறி விரைந்து பெரும்படை கலந்தான்–43-

மின்னொளி ததும்பியணி கொண்டவிர தந்தனை விரைந்து கொடுபோய்‌
மன்னவ னரும்படையி றன்ன விரு பங்கிலும்‌ வளைந்து வருமால்‌
சொன்ன பணி செய்யுமதி மந்திரி யருந்திய துரங்க கணமு
முன்னத மிகுந்த புய மைந்தர் நடவும்‌ திகிரியும்‌ பலவரோ–44-

சுந்தர ரதந்தனை விரைந்தரசியங்க வயறுன்னி மயில்போற்‌
கந்தர நறுங்குழல்‌ மடந்தைய ரடர்ந்தரிய கவரிவிசிற
வந்தவ னுகந்த பணி தந்‌தடி பணிந்து வரு மைந்தர் பலர் சூழ்ந்‌
தந்தர மெழுந்தணி புரந்தரன்‌ வருங்கவி னடைந்தனனரோ–45-

முத்தின நிறைத்தொளிர்‌ மணிக்குவை யழுத்தி வெளி முற்று மொளிரும்
சத்திர மெடுப்பவர்கள்‌ சுற்றிலு நிழற்றவய றத்ததிமென
மத்தள மடிக்கவின்‌ மொழிச்சியர் நடிக்க விதழ்வைத்து வெகு பேர்‌
நத்தின முழக்க வமுதத்தினி தொலிக்குமுயர்‌ நாகாசுரமே–46-

வெண்டரள மண்டியணி கொண்டொளிரு தண்டிகையுண்‌ மென்‌ சிறைகொளும்
வண்டர் நற வுண்டுகுதி கொண்டுலவு தண்டெரியல்‌ மந்திரிகள்‌ சூழ்ந்
தண்டை தனின்‌ மிண்ட வுயர்‌ புண்டர மணிந்திலகு மந்தணர் குழாங்
கொண்டனிற வெந்தறுகண்‌ தந்திமிசை யுந்தி வரல்‌ கோடி யுளவே–47-

குந்தமொடு சூலமயி றண்டு சிலை வாளி கதை கொண்டெ றிதிரைச்‌
சிந்து வென லாகவெழு கம்பலை கொள்‌ சேனை பல சென்றடருமா
லிந்து முறி வாணுதன்‌ மடந்தையர்‌ விலோசன மிருந்தொளிசெய
வந்‌ துலவு மீனென விருங்கயல்கொள்‌ கேதன மலிந்தனவரோ–48-

சித்திர மிழைத்த கனகப்படமுகக்‌ கரி கதித்த திரளி
றத்தி வருமொப்பில வெணற்ற தவளத் துரகதத்‌ தொகுதிகள்‌
அத்திரவிழிப்புவி மகட்குடை யெனப் பொலியு மற்புதமிகு
நத்தின மிகச்செ றியு மத்தியிடை. யெற்றலை யினைப்‌ பொருவுமால் -49-

சந்திர விருங்கவிகை யின்னிழலிறங்குறு மதன்‌ றனணியார்‌
தந்தமடமங்கையருடன்‌ கரியினந்தர மிசைந்து வருவோர்‌
சுந்தர மிகுஞ்‌ சசி மடந்தையருடன்‌ கரிய துன்னி யெழு சூழ்‌
கந்தர மமர்ந்து வரு மிந்திர ரனந்தரி னிகர்ந்திடுவரால்–50-

முத்தின மிகுத்தடு கடற் புவியினைப் பொதுவின்‌ முற்‌ றுமளிகோன்‌
சுத்தமரையைப்‌ பொருமடித்‌ துணையினைத் தொழுது சுற்றி வருமின்‌
பத்தியினயிற் படையினைக் கரமதிற் கொணிரு பத்திறலினோ
ரத்தமு ளிரத்தின மிழைத்த சிவிகைக்குழு வெணற்றவையரோ–51-

சுத்தவமுதத்தினு மினித்தமொழி வைத்த பல சொற் கவிகளால்‌
வித்தகமிகுத்திடு குணத்தரசனைத்‌ துதி செய்‌ விற்பனர்களைக்‌
கைத்துணை குவித்தவனெழுச்சியை யுரைத்து வரு கட்டியர்களை
யித்தனை யெனத் தெரித லுற்றினி துரைக்கும்‌ தெமக்கரிதரோ–52-

எண்டிசையு மண்டி வருகின்ற விவரும் படை யெழுந்து களெலாம்‌
விண்டல மடர்ந்திட மிகுங்கதிர்‌ மறைந்திட விரிந்தொளிசெயும்‌
வெண்டரள மென்னகை மடந்தையர்‌ கலன்களு மிடைந் திருமணி
கொண்ட விரதங்களு மனந்தமரி யின்னொளி மிகுந்‌ திடுமரோ–63-

பங்கய வரும்பினொ டெதிர்ந்தடி பரந்தணி செய்‌ பம்பரநிகர்‌
கொங்கையர்‌ கமுங்குழலிழிந்த மகரந்த மிரு கும்ப மிசையார்‌
துங்கமுறு தந்திகள்‌ பொழிந்திடு மதங்களொடு துன்றிவிரவி
யெங்கு மிகு பங்கமிடு மென்னிலவை யின்‌ கண மியம்ப வெளிதோ–64-

தண்டிரை கொ ளங்கடலை யன்ன விரு பங்கில்‌ வரு தண்டுகளு நீர்க்‌
கொண்டலி னிருண்டுவரு தந்தமுறு தந்தியின் மிகுந்த குழுவும்‌
விண்டொடர்‌ பொலன் குவடை யன்ன விரதங்களு மிசைந் து வரவி
வண்டமுழு துந்துதி குறுங்கை நகரந் தனை யடைந்தனனரோ–65-

நனை விண்ட நறுங் கமலப்‌ பிரசஞ்‌ சினை கொண்ட செழுங் கய லுண்டுகளுங்‌
கனை கொண்ட கருங்கடனேரகழைப்‌ புனைகின்ற பொலன் மதில்‌ வானுறுமே-66-

புயலுற்ற பொலன்மணி மாளிகைகள்‌
கயலுற்ற கருங்கணுடங்‌ கிடையார்‌
மயலுற்ற மதன் சமர்‌ வென்றும௰ழ்‌
செயிரற்றொளிர்‌ மேனிலை சேணுறுமே–67-

பண்ணுற்ற மொழிச்சியர்‌ பற்பலர்க
ணண்ணித்தின நற்கழல்‌ பந்துபயில்‌
விண்ணுற்று மிளிர்ந்தடர்‌ கூடமிகுந்
தெண்ணற்ற திருந்தணி செய்‌ திடுமால்–68-

வாரூடு கிழிக்கு மதர் முலைமின்‌
னாராடிடு நாடக சாலைகளுங்‌
காரான கருங்குழலார்களிசை
யாராயு மரண்மனையும்‌ பலவே–59-

அமிழ்தத்‌துமினித்த வருஞ்சுவை முத்‌
தமிழ் கற்றிடு சாலையுமால்புகழோ
து மறத்தினுருக்கிளர்‌ தூய் மறை நான்‌
குமுணர்த்திடு கூடமுமாயிரமே–60-

மணிவார்‌ கொடிறுக்கிய மாமுரசைக்‌
குணிலாலே துவைத்திடு கோடணையு
மணியாழிசை யார்வமு மார்ந்திலகுந்
துணி வீசிய தோரண வாயிலெலாம்–61-

கஞ்சப்‌ பெணுளங்‌ களிசெய்‌ கணவன்‌
விஞ்சக்‌ கதிர் வீசுபொ னிஞ்சயும் வெம்‌
நஞ்சத்தனரன்‌ முடிகாணரிதாய்‌
விஞ்சித் திகழ்‌ கோபுர மேலுறுமே–62-

மீனந்தவழ்‌ மாடமிசைத் திமிர்பாற்‌
றூ நன்கொடியாடுத றொன்னகர் வாழ்‌
மானின் மகவாமென வெண்கையினால்‌
வானொன்றுவர்‌ கூவுதல் மானுமரோ–63-

முருகூரு நிம்பமல ரணியா னெழுந்தருளன்‌ முனமே யறிந்திநகர்வாழ்‌
இருநாக மன்ன விரு தனபார மங்கை யரு மிகலாரு மைந்தர் குழுவுந்
திருமா துறுந்தவள மணிமாட மண்டியணி செயும்‌ வீதியெங்கு நடுவார்‌
மருவேரி யம் மடல்‌களொடு பூக முங்கழையு மதியேற ரம்பைகளுமே–64-

கருமா முகிற் படியு மிருவான கட்டுற மகர தோரணங்க ளிடுவார்‌
பருவா னிறத்தரள மணிவா யமைத் தொளிகள்‌ பரிகா வணங்க ளிடுவார்‌
அருமா டகத் தகழி யிடையா நெயிட்டு வெயிலளி தீப மெங்கு மிடுவார்‌
விரிவா னகர்க்குமிடர்‌ தருவீதி முற்றவுமி விதமா யியற்று பொழுதில்–65-

உலகேழுமுற்ற முடிவுறு நாளினிற்‌ கிளரு முவராழி கட்‌ கிணை யெனப்‌
பலமாரு மப்படைக ளிருநா றிசைக் கண் வரை பரவா வரச் சுடர்‌ கொளுஞ்‌
சலமா றையிற் படை கொள்‌ வயவார் முதற்‌ றலைவர்‌ தமை யிடழித்திடு புர
வலனீ டிரத்னமணி யதனா லிழைத்த நகர்‌ மதில்‌ வாயினிற்‌ குறுகினான்–66-

இனனீதி யுற்ற வறு தொழிலோ ரிருக்கொலியொ டெதிர் காண்‌ வரக்கரிய சூற்‌
கனமீதினிற்‌ படியு மணிமாட மட்டில் பல கவின்வீதி பிற்பட வொளிர்‌
முனமே யுரைத்த நெடுமதி லாலையத்தினகன்‌ முது வாயிலிற்‌ சிகர வொண்‌
டன மேருவைப்‌ பழி செயணி தேர்‌ நடத்தி யடறளமோடு முற்றனனரோ–67-

அடலாழி யுற்ற கர னடியா ரடிக்கமல மகலா மனத்தி னிறையோன்‌
கடனீ டிரட்டியக லிகறானை கட்கவணி கவின் வாயி னிற்பவருளி
விட தேர் நிறுத்தி நிலவுமிழ்‌ மாமதிக்கு நிகர்‌ விரியான னத்தினணியார்‌
மடமாது பிற் செலமி னொளி வீசுமத்தளியை வலமாக வுற்றனனரோ–68-

மரையா தனத்திலுறை யொருநான்‌ முகத்தவனு மறையோதி நிற்பவடல்கொ
ளுரையோதி மத்தனைவிலெனவே பரித்தவர னுறுகாதன்‌ மக்களுடனே
விரையாரலர்த்துளவ முடியாயெமக்கருடி வினையே மடைக்கலமெனத்‌
தரைமீதினிற்‌ றொழுது பலவாய நற்றுதிக கடகையோடி யற்றி மகிழ–69-

அகல்வா னகத்‌ துறையு மிமையோர் கணத்தி னெடு மயிராவதத்தின்‌ மிசையூர்‌
இகன்மா மலைச்சிறைகடுணி தூ றையிற் குவிச மெழிலார்‌ கரத்திற் திகழ
மகவானடுத்தினிய நறையோடு கற்பகமென்‌ மலரா லருச்சுனை செயத்‌
தகவாத ரத்தினொடு விரிசாம நற் சுருதி தனை யோதிடத்தவர்களே–70-

மருவார்‌ கமலங்கள்‌ மலர்ந்த நெடுங்‌ கருமாமுகின்மீது கவின்றிகழ
வொருகோடி யருக்க ருதி த்தனெரென்‌ திருமா முடியொன்‌று திகழ்ந்திடவே–71-

வருசூரிய மண்டல மத்தியனென்‌ றருமாமறையான தறைந்தவெனப்‌
பெரியோர்க ளுரைத்திடு பெற்றியையா முருவாக முனந்தெரி வுற்றன மால்-72-

செடியாதுமிலாது செழித்த நுதற்‌ கடி நான முறுந்தில கத்‌ தினொடும்‌
வீடுதண்சுடர்‌ வெண்பிறை யொன்றுளதேல்‌ வடிவேறெனை மானுமென திகழ–73-

மாசற்றமுண்‌ மேவி மலர்ந்த விருந் தே சுற்றணி கொண்ட செழும்‌ முகமெம்‌
மீசற்கிணை யுண்டெனி லென்றனை நேர்‌ பேசத்‌ தகுமென்று பிறங்டவே–74-

மரைமா மலரென்ன மலர்ந்தவிர்செவ்‌ வரிமீது பரந்த வருட்கணிணை
தரைவாழு முயிர்ப்‌யிர்‌ தான் வளரப்‌ புரைதீ ரருண் மாரி பொழிந்திடவே–75-

நகுவொண்கதிரம்‌ பொனின்மாமணியால்‌ வகுவங்கத மிட்டுயர்‌ மாநகருட்‌ டகுவைந்தருவின்‌ றிகழ்சாகை நிரை நிகரென்னவே நாற்புய நின்றொளிர–76-

வாடாதமரைத்திரு மாமலரை சாடா விலகங்கை கடம்மிலக
லாடாழியொ டொண்‌ கதை யந்தனுவா ணீடாய வலம்புரி நின்றொளிர–77-

சிறையோதிமமேல்‌ வருசேவனொடுங் கறையாய களத்தரனே முதலோர்‌
அறியாது விளங்கு மடித்துணையா நெறியாக நிகழ்த்‌துவ தெவ்வினையே–78-

அந்தப் படிகத்‌ தமையத் தளியுள்‌ ளிந்தப்படி யேய்ந்திடு நம்‌பிமுனஞ்‌
சிந்தப்படி கண்ணொடு தெவ்வரெலா மந்தப்படி யாளிறை வந்தனனால்–79-

காசத்த மனத்தரி காணமுன மாசத்த மனத்தி சூழ்‌ மானிலமு
ணேசத்த மனத்திறை நேரவுமெற்‌ றேசத்த மனத்தி றிகழ்ந்ததுவே.–80-

ஓலைப்புனல்‌ சூழ்‌ புவியோம்பிடு செங்‌ கோலைத்‌ தரிகோன்‌ பவனிக்‌ கெழுமக்‌
காலைக்குமுனே குறு கட்டியரின்‌ மாலைப் பொழு தெற்கு முன்‌ வந்ததுவே–81-

கூவற்ற குயின்னட மற்ற மயில்‌ வாவற்றிர ளூண்ணிரை வைகுமிட
மேவச் செல்லுற்றன மென்‌ கவிக டாவற்ற தடம்பொழி றன்னிலரோ–82-

வீசக்கரவாக விரும்பியணை நேசப்பெடை நீங்க மென்குமுத
மாசைத்‌ தனி யன்பர்வரக்‌ களிகொள்‌ வாசக்‌ குழலாரின்‌ மலர்ந்தனவே–83-

பரிவிற்‌ புணர்பான்மைய வன்பர் தமைப்‌ பிரிவுற்றவர்‌ பேது ற வெங்குள ரென்‌
றரிபற்று மலர்க்கணை யைந்துகொடு திரிவுற்றனன்‌ சித்தச னெங்குமரோ–84-

இவ்வாறு தூலங்குறு மெல்லிலடற் றெவ்வானவர்‌ சிந்தை கலங்க வொளிர்‌
வெவ்வாழி விளங்குகை நம்பியம ரவ்வாயி னிகழ்ந்த தறைந்‌திடுவாம்‌.–85-

திருக்‌ குறுங்குடிப்‌ படலம்‌ முற்றும்‌,

வரம்‌ வேண்டுகோட்‌ படலம்‌

தேனுகு பூம்பொழி லிடைமாடக்‌ களாருத்‌ திருநாராயணபுரத்திற்‌ சிச்சர்கூடி
ஞானமுனி நின்னுருப்‌ போலர்ச்சை யொன்று நாங்களியற்றியதினடி நாளுந் தாழ்ந்தெம்‌
மூனமற வேண்டுமெனப்‌ பணியச்‌ செய்வித்‌ துடையவரோ வென்றதை மாற்‌ றுரைக்கச்‌ செய்ரா
மானுசன்றாளிணை மலர்நஞ்செ ன்னி சூடி வரம்வேண்டுகோட்‌ படலம்‌ வருவிப்பாமால்–1-

கொந்துற்ற குழற்கொடி நேரிடையு வந்துற்‌ றமரு மரைமாமலரின்‌
பந்திச்‌ செழு மாமுகில்‌ பார்த்தனரால்‌ வந்திக்கு மறைப் பொரு டன்னைமுனே–2-

வெண்ணித்தில வொண்வட பேழுதலா மண்ணிற்பட வீழ்ந்து வணங்கி யிரு
கண்ணிற்‌ புனலோடு கனிந்‌ துருகி நண்ணிப்‌ பறுதிப்பை நவின்‌ றிடுவார்‌-3-

அற்புக்கொரு வாழியினான வளாய்ப்‌ பற்பத்‌ தளிமேவிய பாலின்மொழி
கற்புத்‌ திருமங்கை கவின்றிகழ விற்பத்தொடு மெய்மணிமார்‌ புடையாய்–4-

மஞ்சிற்‌ கரிவாவென வந்தருள்வான்‌, கஞ்சத்‌ தடமேவிய வெங்கரவைத்‌
துஞ்சக்கனனின்‌ றெரி தூய்மை யுறும்‌அஞ்சக் கரம்‌ வீசி யறுத்தவனே–5-

அரிதாய பலாயிர வண்டமெலாம்‌ விரிவாக வீடுத்தி டுனக்‌ கடியேந்‌
தரிகான்முளை தன்னை யெமக்கருளல்‌ பெரிதோ விது வென்று பிறழ்ந்தனனே–6-

இன்னவாறுள மின்புற்‌ நிறையுமா றன்னை வாழ்த்திக்‌ தளிவலமாய் முகின்‌
மின்னையே மிடை மெல்லியலோடுதான்‌ மன்னி கேதனம்‌ வந்தணைந்‌ தானரோ–7-

மாலதிக்கிணை யாதிய வாலனம்‌ பால சர்க்கரை நெய்யொடு பாகமாய்‌
வேலை மாய னமுது செய்‌ மிச்சிலை கோலமோடுண்‌ டருந் துயில்‌ கொண்டனன்–8-

அனனடைப்‌ பொன்னணங்குறு நம்பியவ்‌ வினனிடங்‌ கனவிலுனக்‌ கஞ்சவா
கனனரும்‌ பொருடந்தவன்‌ காதலார்‌ தனைய னற் பொருடந்தில னென்றனன்–9-

சொன்ன வாய்மை துளைச் செவி யேறுமுன்‌ மன்ன னுள்ள மலங்கி
பொன்னினோடு புலரி நீராடிமால்‌ சந்ததிக்குட்‌ புகுந்தினல்‌ சாற்றுமால்‌–10-

மெச்சயன்‌ மதமேவ மறையை நின்‌ னிச்சையா லசைரர்‌ சென்‌ றெடுத்‌ தெழற்‌
கச்சமுற்ற வவன்‌ றுயராற்றுவான்‌ மச்ச ரூப மெடுத்தருள்‌ மாயனே–11-

இமையவர்‌ திரண்டின்புற வின்சுவை யமுதமீயெமக்‌ கண்ணலெனச்‌ சொலச்‌
சிமையம்வெந்‌நறச்‌ சேர்த்திட வாரியுட்‌ கமடமாதிய கார் முகில்‌ வண்ணனே–12-

இரணியாக்க னுயிர்க்கிடர்‌ செய்குவான்‌ தரணியைக்‌ கொடு பாதலந்தான்‌ செல
வரணியாவெனு மன்பர்க்கருள்‌ செய முரணியங்டியாய்‌ வரு முர்த்தியே–13-

பாரினுட்‌ பரநா மலதில்லை யென்‌றாருயிர்‌ முன்னறைந் துரையீரெனுங்‌
கூரயிற்‌ கனகன்‌ னுயிர் கோறவே நாரசிங்கம தாய் வரு நம்பியே–14-

திறமிலா மையிற்றேவ ருலகையும்‌ மறமுறும்‌ புயமாவலிகைக்‌ கொளத்‌
தறையும் வானு நின்றாளிணையே தொழக்‌ குறளுருக்‌ கொண்டருளிய கொண்டலே–15-

அத்தி சூழு மிலங்கை யரசனான்‌ மெத்தவாற்றன்‌ மெலிந்துள சந்துமா
கத்துளோருன்‌ கழறொழவன்‌ றுகா குத்தனாய்‌ வந்தருளிய கொண்டலே–16-

மண்ணகப்பெண்‌ வருந்த நினைத்தொழு தண்ணலென்‌ பொறை யாற்றுவை யென்‌ றலும்‌
மூண்ணெகிழ்ந்தம்‌ குகந்தெழிலான்‌ மிகும்‌ கண்ணனாகி யருளிய கர்த்தனே–17-

பாருளோர்‌ வெம்பவத்தளை பூண்டுனைச்‌ செர்கிலாது புன்றீய மதாந்தராய்‌
நீர்மை குன்றிட நீயவர்க்‌ கின்னருள்‌ கூரவே கற்கியாய் வரு கொண்டலே–18-

பழுதி லெண்டிசையோர்‌ புகழ்‌ பண்பறா வழுதி மன்னர்‌ மரபிலுதித்த யான்‌
எழுதலை முறையா யுனையே தொழ மழலை நன்மக வில்லெனன்‌ மாட்சியோ–19-

ஊழ்வினைப்‌ பயனோ வலதும்பர்‌ பாற்‌ றாழ்வு செய்தனனோ பற்றளிகளாம்‌
வாழ்வகற்றி வதிந்தனனோவல தேழை மாந்தர்க்கிட ரிழைத்தேனரோ–20-

பொம்மலுண்ணக்‌ கலத்துறு பூசுரர்‌ தம்மையேகக்‌ கடிந்தனனோ தமிழ்ச்‌
செம்மலார்ந்த கொழுநனைச்‌ சேர் தருமைம்‌ முகிற் குழல்‌ வாழ்வறித்தேனரோ–21-

மண்டலத்‌ துண்மகவுறு மாந்தரைக்‌ கண்டு நெட்டுயிர்ப்‌ புற்றனனோகரங்‌
கொண்டு பாலிறையேனுங்‌ குழவி கட்‌ குண்டுகக்க வுதவின னில்லையோ–22-

வேதியர்‌ பெரியோர்கள்‌ வியந்ததங்‌ காதலாரைக்‌ கருதினனோ வயல்‌
மாதரோடு மருவிக்‌ கருவையுந் தீதெணாது செகுத்தனனோ கொலோ–23-

ஊதியத்திலவாவி யுலகமொவ்‌வாத பொய்மை வழங்னெனோபலி
யாதுலர்‌ முன்னளிக்குவ னென்றலைத்‌ தேதுமில்‌லு மக்கேகுமினென்‌றெனோ–24-

கொஞ்சமேனு மிரக்கங்‌ கொளாதுயி ரஞ்ச வீண் கொலை யாற்றினனோ வெனைத்‌
தஞ்சமாகுற்‌ தமர்க்கருள்‌ செய்வபோல்‌ வஞ்சமே செய் மனத்தினனே கொலோ–25-

பெற்ற வின்பயம்‌ பேரிளங்‌ கன்றுணச்‌ சற்று மின்றித்‌ தகைந்து கறந்துவாக்
குற்றசங்க மொழித்து மதுவினைக்‌ கற்றிலாரிற்‌ கருதி யுண்டேன்‌ கொலோ–26-

மெய்வருந்த விழைத்திடு வேலையர்க்‌ கெய்து கூலி கொடுத்தன வில்லையோ
செய்யெனாமுனஞ்‌ செய்தவர்‌ நன்றி யுண்‌மையிதாக மறந்தனனே கொலோ–27-

ஆறிலொன்‌ று கொளா துறுத்‌ தாசையால்‌ ஊறு செய்துல கோம்பினனோதவத்‌
தேறுபோல்வர்க ளெய்திடில்‌ யான் கொடுஞ்‌ சேறு சேர வெழாதிருந்தேன் கொலோ–28-

முன்னியற்றுக்‌ தவமுடி வில்லையோ பின்னிழைத்திடும்‌ பேறுங்‌ குறைந்ததோ
வின்னிலத்திலி யாங்கள்‌ மலடராய்‌ மன்னவென்று வரங்கொணர்ந்‌ தேமரோ–29-

அன்று வேழ மழைக்கு முனாவலாய்ச்‌ சென்று றூஉகண்‌ செகுத்துத்‌ துரோபதைச்‌
கொன்றவாடை வுதவிய நின்னருளின்‌ றெமக்கிலதாயதெ னேந்தலே–30-

இப்படிக்‌ குரிசி லுள்ள த்திருந்த வெந் துயரமெல்லாம்‌
மைப்புயலுரு வோனக்கன்‌ மலமறக்‌ குருதி யீந்த
நப்பின யணங்கு கேள்வ னம்பி காற்றுணையில்‌ வீழ்ந்து
செப்பினனழுங்கிப் பல்காற்றிருக்கு நீர் கலுழமாதோ–31-

மண்ணினன்‌ களைகணீ யென்‌ றலமரு மாண்பு நோக்கிப்‌
புண்ணியவெதவேந் தன்பிற்‌ பொறிக்கும்‌ புண்டரமிலங்கத்‌
தண்ணளிக் கடலா னம்பிதனாதுள மகிழ்ந்‌திவ்‌ வேந்தின்‌
கண்ணினுக்‌ கணியனாய் நின்‌ றீனிய சொற்‌ கழறுவானால்–32-

மானிலத் துறவிலார் தம்‌ மண்டமர்கடந்த வொள்வேல்‌
மீனவன்‌ மரபுட்டோன் றும்‌ வேந் துனக்குரிய சேயாய்‌
நானடைகுவனின்‌ சோக நவையற மகிழ்ந்தெல்லீருந்
தேனின முரலுஞ்‌ சோலைக் குருகை சென்றிடுமின் என்றே–33-

மாயவனுரைத்த மாற்றம்‌ வள்ள றன்‌ செவியுறாமுன்‌
வேயுறழ்‌ புயமிரண்டு மேருவினிமிரச் செய்யாள்‌
நேயனேவன்மீ னட்ட நேமியா யுலகமுண்ட
தூய கந்தரத்தா யென்றே துதிபல வியம்பி நின்‌றான்–34-

பாடினா னாடினான்‌ செம்பதமலரணி முடிக்கட்‌
சூடினா னாழியானின்‌ சுதனெனுங்‌ கருணையே கொண்‌
டாடினானணியனா மவ்வாண்டகை வடிவு நோக்கங்
கூடினான்‌ றொழதா னின்பக்‌ குளிர் கடல்‌ முழுகி நின்றான்–35-

விஞ்சை யரியக்கர்‌ விண்ணோர்‌ விரை கொளைந் தருவின்‌ பூவான்‌
மஞ்சன மாரி பெய்ய மண்ணுளோரிறைஞ்சி யேத்த
கஞ்ச மின்னிலகும்‌ திண்டோட்‌ காரியார்க்‌ கருளீந் தன்று
குஞ்சரத்து றுகணீத்த கோவலன்‌ கோயில் புக்கான்–36-

மாமனங்‌ கதர்சனாக மறைந்த பின்‌ குருதி தோய்ந்த
நாம வேலிறையுங் காதனங்கையு மிக மகிழ்ந்து
தேமலர்த்‌ துளவினான்‌ றன்‌ சினகரம்‌ வலமதாய்த்தன்‌
றாமமுற்றடிசி லுற்றுத்‌ தளத்துடனிருந்த பின்னர்–37-

பிழையறப்‌ புவிபுரக்கும்‌ பேரருட்‌ ஞரிசினீதி
யுழையரை விளித்து யூகமொலி கடற்றிரளே யின்பந்
தழை வுறச் செய்து பிற்றைப்‌ புலரியிற்றருதிர்‌ நீவிர்‌
குழை பொரு கயற் கணார்‌ வாழ் குருகையா மடைதற் கென்றான்–38-

ஆங்கரசியம்பா முன்னரறிவின்மிக்‌ கமைச்சரெல்லாம்‌
பாங்குறு மிரதமியானை பாய் பரி படைக் குழாங்க
ளீங்கு வந்தடைந்த தெந்தாயினி யருளென்னே யென்று
வீங்கிய குவவுத் திண்டோள்‌ வேந்தனுக்‌ கறிக்கை செய்தார்–39-

மந்திர மறையோர்‌ வாழ்த்த மங்கள வியங்களார்ப்ப
பந்தையொத்‌ தெழுந்த கொங்கைப்‌ பரத்தையர்‌ நடிப்ப மன்னன்‌
பைநதுள வலங்க னம்பி பங்கயப்‌ பதமுட்கொண்டு
வந்தனை புரிந்து பொற்றேர்‌ மங்கையோ டேறினானால்–40-

வாளரி மதர்க்க ணல்லார்‌ வயங்கு சாமரமிரட்ட
காளமும்‌ முரசு சங்குங்‌ கறங்க வானிலவு காலுங்
கோளகை கவிகை யேந்‌திப்‌ படைகளின்‌ குழு முன் செல்ல
வாளி மொய்ம்பினனும்‌ பொற்றே ரணி கொள்‌ வாம் பரி நடாத்தி–41-

குதி தோய்ந்தொளிரும்‌ வெற்றிக் கொற்ற வேற்‌ கலியனன்பர்க்‌
கருணிதியமரு மவ்வூர்க்‌ கண் மறுகதனைத் தாண்டி
இரு விசும்பணவு செம்பொனெயில கழியையு நீங்கித்‌
திரு மகிழ்ந்‌ துறையு மார்பன்‌ செழும் பணைத் தலமடைந்தான்–42-

தூய தாமரைத்‌ தடத்தையு மத்தடந் தோயு
மாயந் தன்னையு மணிமலர்க்‌ காவையு மயலி
னேய தண்பணை களையு மற்‌றுள வள மெல்லாம்‌
ஏயவோகையி னணங்கிலுக் கிறையவன்‌ காட்டும்‌–43-

அங்கயத்‌ தடைந் தரிவையர்‌ தேர் நிமிர்ந் தாடச்‌
செங்கயத்தடி முகத்தொரு தனமு மேற்றெரிதல்‌
வெங்கயத்தடர்‌ முலையினா யாங்கதில்‌ விளங்கும்‌
பங்கயத் தட மலர்‌ முகை போன்றன பாராய்–44-

வடு வகிர்க் கிணையாய கண்‌ ணணங்குசின்‌ மடவார்‌
இடுபுனற்‌ குடைந்தேந்து பின் குழலில்‌ வைத்திடு தேன்‌
விடு வெண்‌ டாமரைப்‌ போது சூற் கொண் முகின் மீதில்‌
படுமுடுக்கணம்‌ போன்‌ றினி திலங்குவ பாராய்–45-

மாங்குயிற்‌ சொலி னன்னவர்‌ குடைந்தெழ மறைக்குந்
தேங்குழற்றிர ளொதுக்கிடத்‌ தெரியும்‌ வத்‌ திரந்தான்‌
ஈங்கெழிற்‌ கொடியிடையினாய்‌ மேற்பட ரெழிலி
நீங்க வுட்‌ டெரி வெண்மதி நிகர்த்தன பாராய்‌–46-

அனிச்சப்போது மெனஞ்சத்தின்‌ றூவியுமழுத்தி
நனிச் சிவப்புறும்‌ மடியினாய்‌ நாரந் தோய்வான்‌ செல்‌
கனிச் செவ்வாயினர்‌ சிலம்பொலி கேட்டனக்‌ கணங்கள்‌
பனிச்சையோடு தம்‌ மினமெனத்‌ தொடர்வன பாராய்–47-

கருமுகிற்குழலா யொரு கன்னி செங்கமல
மருவை யோருவானாசி வைத்திட முக மதி யென்‌
றருகு கூம்புமம்‌ மலரினைக்‌ காணி லதன்னார்‌
திருமுகத்தினுக்‌ கடையு நாணென்னலாந் தெரிவாய்–48-

கோங்கு கொங்கைகள்‌ காட்ட நன்முருக்‌ இதழ் காட்ட
மாங்குயின்‌ மொழி காட்ட மாவடு விழி காட்டத்‌
தேங்குழைத் தளிர்‌ திருவுருக்‌ காட்டிடச்‌ சிறந்து
பாங்கரும்‌ பொழின்‌ மடந்தையர்‌ போன்றன பாராய்–49-

விரியறத்தின ரரும்பொருள டையுமவ்வேலை
யரியதாயதம்‌ முறவினை த்‌ தழுவுத லனையக்‌
கரியவாயசந் தானுணும்‌ மிரையினைக் கண்டே
யுரியதன் கிளைகூவுவ காண்டி யொண்டொடியே–50-

தேகி யென்றவர்க்‌ கிம்மியு மளித்திடாச்‌ சிறிய
ராகி நின்‌றவ ரரும் பொருளாக்கிக்‌ காப்பது போல்‌
கோகிலத்தினன்‌ மொழி மினாய் தேன் கணங்‌ கொழுந்தே
னேகி யெங்கனு மீட்டி வைத்‌ திருப்பன பாராய்‌–51-

வயற்றலந்‌ தொறு மடர்ந்த பைங் களைகளை மாய்க்கும்‌
புயற்றருங்குழலுழத்தியர்‌ கண்ணெழிற்‌ பொலிய
வயிற்றிரிந் திடும் புட்‌ குலமவாவொடு மடைந்து
கயற்றிரள்களென்‌ றேங்கி யங் கிருப்பன காண்டி–52-

இன்ன தன்மைய வளனெலா மெடுத்தெடுத்‌ தொளிரும்‌
பொன்னின் மா மெளலி மன்னவன்‌ புயற் கருங் குழற்பைங்‌
கன்னனன் மொழிக்‌ கனி யிதழ்க்‌ குரைத் துரைத் துகந்து
செந்நென்‌ மன்னிய பணை பொழிற் பின்னிடச் சென்றான்–53-

பெருகு மார்கலிக் கணை யெனப்‌ பெருந் தவப்‌ படைகள்‌
வருக நாற்றிசைப்‌ புறத்தினு நண்ணி வெண் மருப்பார்‌
பொருகை மாமதக் குஞ்சரம்‌ புரை பவனுயர்ந்து
குருகை மா நகரர் தனைக்‌ குறுகினனன்றே–54-

ஆதி நான்மறை யந்தண ரோதிட மடவார்‌
வீதி யெங்கணு மயினிநீர்‌ சுழற்றிட வினிதன்‌
மாதினோடு பன்மாமணி மறுகெலாங்‌ கடந்து
கோதிலாத தன் கோயிலைக்‌ குறுகினன்‌ கோமான்–55-

இருந்ததானைகட்‌ கொருவிடை கொடுத்தினி திறையோன்‌
பொருந்து நீண் முகிற்‌ பொலிந்து நின்‌றருளிய பெருமான்‌
றிருந்து சேவடி யனு தினந் தொழுது மண்‌ சிறிதும்‌
வருந்து றாதுள மகிழ்ந்‌ தரசி யற்றியே வந்தான்–56-

கந்‌தமாலுகக்‌ கண்ணி கொள்‌ காவலனினிதின்‌
இந்தவா றரசியற்றி நுண்ணிடையிற விணைந்த
சந்தவார் முலைத்‌ தையலோடினிது வாழ்வுறு நாள்‌
வந்தவாறெடுத்‌ தியம்பிட லுற்றனன் மன்னோ

வரம்‌ வேண்டு கோட்‌ படலம்‌ முற்றிற்று

திரு வவதாரப் படலம்‌

வாதினான்‌ மிகு வாதியர்‌ தங்களை
நீதி நூல்‌ கொடுவென்று நினைப்பருஞ்‌
சேதி நீளெர்திரத்தினி லிட்ட நங்‌
கோதில்‌ ராமானுசன்‌ பதங் கொள்ளுவாம்–1-

ஆரஞ்‌ செய்ய வலரனமோடுச
கோரஞ்‌ செய்மன்‌ குருகையுண்‌ மாறனாய்‌
நீரஞ்‌ சேயவ ணேய னடைந்தவ
தாரஞ் செய்படலந்தனைச்‌ சாற்றுவாம்–2-

வையமோர்குடை நீழலிற்‌ வைத்தெழிற்‌
றையலோடு தருக்குற வாழுநாட்‌
பொய்யிலா தவப்‌ பூவை வயிற்றிடை
துய்ய சூற்குறி தோன்‌ றிய தற்பமே–3-

மங்கலஞ்செய மாமல ரன்னவே ,
பொங்கருட்‌ பொலிவுற்ற பொலன்முக
மெங்கும் வெள்‌ ளியவாகி யிலங்கு மொண்‌
திங்களென்னத் திகழ்ந்தது மாதரே–4-

மட்டுவாரு மரையின்‌ முகையெனப்‌
பட்ட வார் கொ டணிந்த பயோதரங்‌
கட்டலிழ்ந்த வக்‌ கானின்‌ மலரென
வட்டமிட்டு மணிக்கண்‌ கறுத்ததே–5-

துங்க வேலைச்‌ சுடுசரந் தன்னை யொண்‌
கொங்கவிழ்ந்த குவளை யம்‌ போதை வெல்‌
லுங் கருங்கண்‌ குழைந்து டல் ரோமமெய்‌
௮ங்கமெங்கு மழகிற் பொடித்ததே–6-

ஒது மோகை யடக்க வடங்ககில்‌
லாது மேற்க சிவார்ந்தது போலவே
கோதினீலக் குழற்‌ கொடி நேரிடை
மாதின் மேனி வெளிர்ப்பு மலிந்ததே–7-

தொன் மரத்தி னிலையிற் றுலங்குறு நன்மைப்‌ பண்டி நலத்திற்‌ கனத்ததவ்‌
வின் மலிந்த நுதற்‌ கொடி மின்‌னெனுந் தன்மையான விடையுந் தடித்ததே–8-

தண்ணிலாவின்‌ தரள மணி யென வண்ணி யெங்கும்‌ சுவேத மரும்பிய
துண்ணி வந்த நரம்புடம் பெங்கிலும்‌ மண்ணுவப்ப மலிந்து பசுத்தவே–9-

நலந்தருங்கொடி நைந்த விடைச்சிதன்‌
புலங்கொண் மேனியிற்‌ போர்த்த பசுநரம்‌
பிலங்கு பொற்றிருப்‌ பாவை யிடையிடை
துலங்கிழைத்த மரகதந் தோன்றுமால்–10-

செயிரறும்‌ பலதேசிக நற்கலன்‌
பயில் வுறுந்தன பார வரைமிசை
யயர்விலேற வமைத்த படியெனும்‌
வயிறணிந்த மடிப்பு மறைந்தவே–11-

அண்டமு மதனுட்‌ பொருளி யாவையும்‌
உண்டகட்டிலடக்கு மொருவனே
கொண்டன்‌ மைக்குழற்‌ கோற்றொடி மாது தன்‌
பண்டி வந்‌து படிந்தன னென்பரால்–12-

தேங்கொள்‌ செங்கம லாதனன்‌ றேடரும்‌
பூங்கழற்றனிப்‌ போற்றிருந்தான்‌ றனை
பாங்கு பெற்ற பசுங்கொடி. மாது தான்‌
றாங்கி நிற்கத்‌ தவமென் செய்தாளரோ–13–

கன்னி பண்டியைக்‌ கான வடமாகவே
முன்னரே யுவமிப்பர்‌ முறைமையால்‌
பொன்னுடைப் பரன்‌ போந்தனன்‌ வைகலா
லன்னதேதிரமாக வமைந்ததே–14-

வேதமோதிய வேதி யருந் தவப்‌
போத ஞானப்‌ புனிதரும்‌ போந்து போற்‌
தோது மன்னவர்க்குற்ற சடங்கெல
மாதந்தோறு மடவரற்‌ காற்றினார்–15-

குமுதவாய்க்‌ கொடிக்‌ குற்றிடைப்‌ பாங்கிமா
ரமுதினுமினிதாக வமை பல்வி
தமுதிருண்டிதர வெறுத்தும் முணா
துமுதகங்‌ கணந்தோறு மருந்தியே–16-

மாத மைந்தினோ டைந்து மலிந்த பின்‌
றீதமைந்‌தித்‌ திரை நெடு மண்ணெலாம்‌
பேதமைய்யிற்‌ பிழைப்பரிதாமெனப்‌
போதமைந்த னுருக்கொடு போந்தரோ–17-

பேதியாது பிறங்குமெய்ஞ்‌ ஞானத்தைப்‌
போதியா நற்பதந் தனிற்‌ போக்குவா
னோதிருக்கு மறத்தெரிந்தோர்கிலா
வாதியான பரஞ்சுடரண்ணலே–18-

சந்த நீண்முடி மன்னன்‌ றவத்தனால்‌
இந்தமாதி னெழில்மிகு பண்டியில்‌
வந்தடங்கி யிருக்கு மகிமையாம்‌
விந்தை தன்னை வியப்பொடு நோக்குவான்–19-

கந்தரத்திற்‌ றுலங்கு களத்தனொ
டுந்திமா மலரோனை முதலவா
னந்தரத்திறை யோனொ டமரரும்‌
வந்துநாளும்‌ வணங்கித்‌ துதிப்பரால்–29-

வானக முகட்டின் மீது வயங்கு பொன்‌ முடிகளோங்கத்‌
தேனக மலர்த்தாட் சேடன்‌ செகத்துறப்‌ பொலிந்து நின்ற
நீனக முலையிம்‌ மாதின்‌ நெருங்குறு வயிற்றிற் போந்த
தீனரைக்‌ கலவாச்சோதி யெவ்வண முரைத்தி யென்பார்–21–

அண்டமு மதனுள்ளான வலை புனற் ககனநேமி
மண்டெரி யனிலமற்று மனிதர் புள்‌ விலங்கி யாவும்‌
உண்ட கட்டிடையே வைத்த வொருவனே மடமினாடன்‌
பண்டியுளடங்கி நிற்கும்‌ பரிசெவன்‌ பகரா யென்பார்–22–

தொலைவறு நிலையதாகத்‌ துலங்குறு பூதமைந்‌து
நிலை திரிந் திருக்கு மூழி நெருங்கிய வேலை தன்னில்‌
உலை வுருவனைத்தும்‌ பண்டி யுள்ளுற வடக்கியாலி
னிலையதன்மீ வளர்ந்தார்க்‌ கீதென வரிதோ வென்பார்–23–

திங்களின்‌ மரபிற்‌ றோன்றித்‌ திரை நெடு நேமி யாண்ட
பொங்கு வேல்‌ வழுதி மன்னர்‌ புரிந்த மெய்த்தவமோ வென்பார்‌
இங்கணீவ் விறையோன்‌ செய்த வெழிற்றவப்பேரே யென்பார்‌
மங்குனேர் குழலாள்‌ பெற்ற மகிமையே மகிமை யென்பார்–24–

எம்மை யாளுடைய வீசனிங்கு வந்‌ துதித்தலாலே
விம்மூநீர்ப்பொருனை யேயவ்‌ விரசையா மென்பாரீங்கே
இம்மியுமகலா வாழ்வுற்றிருந்திடு மவரே நித்யர்‌
பொம்மலி நகரே யந்தப்‌ புனித வைகுந்த மென்பார்–25–

கோதகமுடையராகிக்‌ கொடுந் தொழில்‌ கொலைகளாதி
பாதகம்‌ புரி்ந்து நாளும்‌ பழிப்புறு நிலையரேனுந்‌
தீதகற்றிடு மித்தூய திருநகரடையி லன்னோர்‌
மாதக வுடையராகி வாழ்வர்‌ விண்ணாட்டி லென்பார்–26–

மண்ணிழை தவமோ மற்ற மானிடர்‌ தவமோ மீதின்‌
விண்ணவர்‌ தவமோ வேள்வி வேதியர்‌ தவமோ தென்பால்‌
நண்ணினர்‌ தவமோ விந்த நகரிழை தவமோ யாரும்‌
எண்ணரிதாய சோதி யிங்கு வந்‌ துதிப்ப வென்பார்–27–

இவ்வணமடைந்து நாளுமிமையவர்‌ வணங்கி யேகப்‌
பவ்வமைக்கடனே ரங்கட் பனிமொழிக்‌ கரியகூந்தற்‌
கொவ்வை வாய்த்‌ தெரிவை யாகங் குழையெனக்‌ குழைந்‌ துவாடி
வவ்வி நேர்விழி கொள்‌ பாங்கிமா ரிருபுறமும் தாங்க–28-

மெலமெல நடப்பாளொல்கி மீளவுமடைந்து சோர்வாள்‌
அலணை யொண்‌ கூந்தல் சோர வலமரலடைவாள்‌ யாருஞ்‌
சலம் வர முனிவா ளன்னாள்‌ சார்துய ருரைக்கலாமோ
தலமிசை யிருந்திவ்வாறு தளர்வொடு வருந்து மெல்லை–29–

விண்டல வெளியி னின்று விளம்பிய வமர ரெல்லாம்‌
கண்டரு மறைக ணின்றுங்‌ கருது தற்‌ கரியசோதி
மண்டலத்‌ துதிக்கும்‌ வேலை வந்ததின்‌ றெனவுள்‌ ளோகை
கொண்டு நம்‌ வினைக ளெல்லாம் குடியொடுந்‌ தொலைந்தது என்னா–30-

அடக்கருமுவகை வெள்ளத்‌ தாழ்ந்தன ராகப்‌ பாவத்‌
தொடக்கறுத்‌ துய்ந்தோமென்னத்‌ துணைக் கர முடியிற்கூப்பி
யிடக்கறத்‌ தொழுவ ரோரா யிரமறை நவிலு நாமம்‌
விடக்கருத்‌ திலர்களாகி விளம்புவர்‌ குணங்களெல்லாம்–31–

ஆடுவர்‌ கள்ளுண்டாரின்‌ மெய் மறந்‌ தறிவுசோர்ந்து
பாடுவர்‌ மறைகணான்கும்‌ பற்பல தரமானந்தத்‌
தோடுகட்புனலில்‌ மூழ்கி யுருகுவ ரினிதி னுள்ளம்‌
பீடுற விமையா நாட்டம்‌ பெற்றமை பலித்த வென்பார்–32–

இருவிசும்‌ பகட்டுள்‌ வானோ ரிவ்வண்ண மாடிப்‌ பாடி
மருவிரி தருமந்தார மலர் கொடு சொரியச் சோதித்‌
திருமுகத் தரம்பை மாதர் செருக்குடனடிப் பயாரு
முருகயா ழெடுத்தியக்க ருகந்தன ரிசைகள் பாட–33–

அடல்கெழு வாணனாரோ ராயிரங்‌ கரங்களாலுந்
திடமுட னடிப்ப வார்க்கு மொலியெனத்‌ தெருவிலூடே
குடமுழாத்‌ தொனி முழங்கக்‌ கொடும் பவத்‌ தொடரறுத்துக்‌
கடம்படு முனிவோ ருள்ளக்‌ கவலை யற்‌று வந்து வாழ்த்த–34–

நவமணிக்‌ காளஞ்‌ சின்ன நவையிலா முரசத்தோடும்‌
தவள வொணிலவு காலுஞ்‌ சங்கமு முகிலினார்ப்பப்‌
பவள வாய்க்‌ கரிய கூந்தற்‌ பைந்தொடி சுதையி னின்சொற்‌
குவளை யொண் கண்ணா ருள்ளங்‌ குளிர்ந்து மங்கலங்கள் பாட–35-

வழக்கிடப்‌ பலநூ லாய்ந்தும்‌ வாய்மை கொ ணிலையைத்‌ தேறாச்‌
சழக்குறு புலவோ ருள்ளந் தன்னின்‌ மெய் யறிவு தோன்ற
இழக்க வெவ்‌ வினைகளெல்லா மெத்திற முடையாரேனுந்
தொழக் கருத்‌ துடையராகுந் துணிவரு டேவேயாகி–36–

நண்ணிய கலியி னாற்பத்து மூன்றா நாளென நவில்பிர மாதிப்‌
புண்ணிய வாண்டிற்‌ புனித வைகாசிப்‌ பூரணை வெள்ளியுங் கலந்த
வெண்ணிய திருவிசாக நன்னாளி லெறி திரை யறி துயின்‌ மாலே
விண்ணெழுமுதைய விரவி போன்‌ றுலதில்‌ விளங்கிழை வயிற்றினின்‌ றுதித்தான்–37–

பொங்கு வெண்‌ டிரை கொ ளிருநில வரைப்பிற்‌ போற்றுறு மடியவர் முகமாம்‌
பங்கயமலர்கள்‌ விகசித மடையப்‌ பரமத விருளின மிரிய
விங்குழலுயிர்கள்‌ பவப் புனல்‌ சுவற வெண்ணரு மளிமுரன்‌ றிருந்தேன்‌
சங்குறும்‌ வகுள பூடண பாஸ்கரோதய மாயது பாரீர்‌–38-

கணிப்பெரு நிலைய வாரண நான்குங்‌ கருதி நின்‌ றளவிடற்கரிய
திணிப் பெருந் திரடோடிரு முத றலைவன்‌ செழியனன்னுதற்‌ சிறு மகவாய்ப்‌
பணிப்பெருஞ்‌ சுடிகை மிசையுறக்‌ கிடந்த பாரிடத்‌ துதித்தன னென்றான்‌
மணிப் பெரு முடிய மன்னர் கோ னிழைத்த மாதவ மியம்பிட லெளிதோ–39-

மதித்திட வெவரு முதித்தவக்‌ கணமே வருசட வாயுவைத்‌ தடுத்துக்‌
கதித்த மெய்ஞ்‌ ஞானக்‌ கடலிடை முழ்கிக்‌ கண்ணிணை யுற விழி யாதுஞ்‌
சதிர்த்திருப்‌ பவளவாய்‌ திறவாதுந் தரையிடை யசை வறக்‌ கிடந்த
வெதிர்த்த செஞ்‌ சுடரின்‌ றேசுறுங்‌ குழவிக்‌ கிகுளைய ரினை யன புரிவார்–40–

இள நிலவெறிக்கும்‌ பிறையினைப்‌ பழித்தங்‌ கிலங்குறு நுதற்றலந் திருத்தித்‌
தளதளப்‌ புடனுட்‌ டிரண்டழ கொழுகித்‌ தயங்கிடு நாசியை யுறுவி
வளமை நற்‌ கரமு மணி முழந் தாளும்‌ வகை யுறக்‌ கை கொடு முறுக்கிக்
கிளர்தரு மம்பொற்‌ கோடிகத்‌ தேந்திக்கெழீ இயபொற் சுண்ண நீராடி–41–

நறிய பொற்‌ கலையின்‌ மெய்யது துடைத்து நாபிநற்‌ றலமுற நோக்கிச்‌
செறி மயிர்‌ மணி யுச்சியினெயும்‌ பொத்தித்‌ திகைத்தயர்‌ வதிகரித்திருந்த
மறிமரு ணோக்கின்‌ மடவர றன்பால்‌ மைந்தனை மலர்க்கரத்‌ தேந்தி
வெறி மலர்க்‌ கூந்தற்‌ குவளை யொண்‌ கண்ணார்‌ விழைவொடு மளித்தனரன்றோ–42-

வாங்கிய வளவிற்‌ படுதுய ரனைத்து மாள மென்‌ மேலறப்‌ பெருகித்‌
தேங்கிய வுவகைக் கடலிடை யாழ்ந்து செழிய தன்‌ மடித்தலத் திருத்திப்‌
பூங்கரும்‌ பனுக்கு மொழிச் சிறு விடைவிற்‌ புருவமெல்‌ லியலுறுமணங்கு
கோங்கரும்‌ பனைய விள முலை பிடித்தக்‌ குழவி தன்‌ வாயிடை வைத்தாள்–43–

வைத்தவார்‌ தனத்துக்‌ கலசம தருந்தா வரவாப்‌ பருமிதமடைய
வித்தகைக்‌ குழவி யிருநிலவரைப்பி லிருப்பது முளது கொல்‌ லென்னப்‌
புத்தகமனைய புறவடித் துவர் வாய்ப்‌ பூவை யுண்‌ மழுங்கி யிங்‌ கிருப்ப
மத்தகக்‌ களிற்ற மன்னர் கோ னுணர்ந்த வண்ணமு மிழைத்தது முரைப்பாம்–44-

அடன்மிகுந்திகலு மவுணரை யடர்த்த வைம்படை தாங்கிய பெம்மான்‌
மடலுறுங்‌ கமல மலரடியகலா மனத்திறை யவனிடம்‌ பகர்வான்‌
றடமுலை வரையின்‌ வடமணிந்திலகு தையலாளி குளையர்‌ விரைந்தே
திடமிகுந்தொளிரும்‌ புயவலி யரசர்‌ திரண்டு சூழவை யிடை யடைந்தார்–45–

கொண்டலும்‌ தருவு நாணநன்‌ னிதி கைக்‌ கொண்டுகந் திரவலர்க்‌ களிக்கும்‌
வண்டின நெருங்கி யின்னிசை முரல மதுவிழி நிம்ப நற்‌ றாரான்‌
புண்ட ரீகங் கொள்‌ ளடியினை போற்றிப் பொற் புறும் சுணங்கவிர்‌ நகில
மிண்டை கொண் டிலகுங்‌ கருங்குழல் மடவா ரெதிர்வியந் தினிது நின்றனரால்–46–

வந்து தன்‌ கமலமலரடி வணங்‌கி வணக்கமோ டெதிருறு மடவார்‌
இந்து நன் முகங்கண்‌ டிங்கெழுந் தடைந்த தென்ன கொல் விளம்பு திரென்ன
விந்தையி னிலகு மணிமுடி வழுதி வேந்தர் கோன்‌ வினவு தன் முன்னர்‌
அந்த மன்னனுக்‌ கவ்விடைக்‌ கருங் கூந்த லணங்கினர்‌ விளம்பலுற்றனரால்‌–47-

வெஞ்சமத்‌ திகலு மடையல ராவி வேலினிற்‌ பறித்திடு மிறையோய்‌
மஞ்செனக்கரிய மலர்க்குழன்‌ மடந்தை மணிவயிற்றிடையி னின்றின்றே
செஞ்சுடர்‌ விரித்து வான்முகட்டொளிருந் தினகரர் கோடி யென்‌ றுரைப்ப
அஞ்சுடர்விரிக்கு மாண் மகவாகி யகலிடத்‌ தினி துதித்த தம்மா–48-

கண்ணிணை சிறிதும்‌ விழித்திலை வாயங் காந்தினி தரற்றவுமில்லை
யண்ண லஞ்சுடரி னணிதிருமேனி யசைத்திலை யஞ்சனின்‌ மகவு
முண்ணிகழ்ந் தொளிரு மாவியினோடு முற்றுறைகின்றது வென்னா
வெண்ணிகர்‌ குமிழ்மூக்‌ கன்னிய ருரைத்தாங்‌ கேகினை ரிறைவனைத்‌ தொழுதே–49-

கொடியென நுடங்கு மிடைக்கனித்‌ துவர்வாய்ச்‌ கோதைய ராண்மகவெனுமுன்‌
படியொடு கனகமணியிழை வலையம் பரித்தெழு வெனத்‌ திரள் புயங்கள்‌
வடிவு மிக்குயர்ந்த மேரு வென்‌றுரை செய்வரையென மிக்கினிதுயரக்‌
கடியயிற்‌ படைகொ ளிறையவ னோகைக்‌ கடலிடையாழ்ந் தனனாகி–50-

காதல னில்லாத்‌ தன்மையிற்‌ றுயரகே கடலிடை யாழ்ந்துளம்‌ வருந்தி
யீதள வாகக்‌ காலம தகற்றி யிருந்துமிக்‌ குழலுறு மெம்பாற்‌
போதவு மொளிரு மாண்மக வீந்த புனிதமைம்‌ முகனிறத்‌ தாதி
நாதனிங்‌ கதற்குண்டாய செய்கைகளு நல்கிலா திருப்பவ னல்லன்–51-

அன்றிநந் தமக்கோரருங்‌ கொடுந் துயர்க ளடைந்திடி லன்னவ னல்லால்‌
சென்றினி தொழுக்குந் தன்மைய ருளரோ செறி திரைப்‌ பரவை சூழுலகில்‌ என்றொளி விரிக்கு மயிற்படை தரித்த வெழின் முடி மன்னவர்‌ வணங்கக்‌
குன்றெனப்‌ பணைத்த புய வலி படைத்த கோமகன்‌ நிருவுளத்‌ தெண்ணா–52-

அருமறைக்குரிய வேள்‌வி யந்தணர்களாசிகள்‌ பற் பல நவிலத்‌
திருமுடி தரிக்கு மன்னவர்‌ தாழ்ந்து திரண்டு நான்மருங்கினு மேக
மருமலர்க்‌ கூந்தற்குவளை யொண் கண்ணார்‌ வானிறக்‌ கவரிகா லசைப்ப
வுருமெனத்தவள வலம்புரிக்குலமு முயர்‌ முரசினங்களுங்‌ கறங்க–53-

மிடைந்தொளிர்‌ தரளமணி யெடுத்தெறியும்‌ வெண்டிரைக்‌ தாம்பரவன்னி
யடைந்தரும்‌ புனலி லாடியுள்‌ ளுகந்து தென்கலைப்‌ புண்டரமணிந்து
குடைந்து வண்டிமிரு மருமலர்த்‌ தொடையல்‌ கொண்டகன்‌ றொளிருமார்‌ பிறையோ
னடைந்தனன்‌ விரைவில்‌ லுதையனைப்‌ பொருந்த னையனற்றிருமுகங்‌ காண்பான்–54-

செப்பெனப்‌ பரந்து மார்பிடம்‌ கவர்ந்து திரண்முலை மடமினா ருகந்தங்‌
கொப்பருங்‌ குழவிதனை யெடுத்‌ தளிக்க வொன்னல ருடறடி யிறையோ
னப்பரன்‌ றனது திருவுருவனைத்து மன்பொடு கண்டு கண்டுருகித்‌
துப்புறுஞ்‌ சுடர்கொளுதையனைக்‌ கண்ட தூய செங்கமல மொத்தனனால்–55-

உருமினு மிரட்டி மும்முரசினமு முயரிய சங்கமும்‌ பிளிற
௮ருமறைக்கிழவர வாவின தளவா யகத்திடைப்‌ பெருங்களிதுளும்பப்‌
பொருவிலுன்‌ சனகப்‌ பொருப்பெனக்‌ குவித்து வித்தினற்றானமும்‌ மிமிரு
மிரு நிதிக் குவையு மெண்ணிலா நிரையுமிசை பெறப்‌ புனலொடு மளித்து–56-

மெய்வகையுணரு முழையரைக்‌ கூவி விளங்கு நம்மரபினுக்குரிய
தெய்வமா மாதி நாயகனமருந் திருத்தளியே முதலாய
பொய்‌ வகையொழி நன்னாட்டினிற்‌ சிறந்து பொலியுமால்‌ சன்னதி தோறும்‌
மெய்வகை இருத்தி யாடை பூணிதிய மிகுநில முதற் சிறப்‌ பளிமின்‌–57-

ஆனினமுதல பற்பல வுயிர்க ளருந்திமெய்‌ விடாயது தணிப்பா
னீனிறக்‌ கடலினிரட்டிய தடமும்‌ நிகமநற்‌ சாலையுஞ்‌ சிகரம்‌
போனிகழ்‌ தருமாலயங்களு மெவரும்‌ புகழ்தரு மன்ன சத்திரமும்‌
மானயிவ வகையி னாயபோ லினும்ப லாயிர வறத்துறை யிழைமின்‌–58-

சிறையது விடுமின்‌ சிறைக்கள மெடுமின்‌ றிகழ் முடி மன்னவரளக்கும்‌
இறை விடு மீரேழாண்டயனிதிய மீட்டு மாயத் துறை விடுமின்‌
குறைவிலா நிதியவரையது திறந்து கோதறப்‌ பலவரு மெழுநா
ணிறை தருமளவும்‌ வெறுத்திட வகத்துணோ்ந்தவை யெடுத் யெடுத்‌ தளிமின்–59-

நண்ணிய தடந்தோட்‌ கொற்றவ ரிழைத்த நவையெலாம்‌ பொறுத்துறப்‌ பிணித்த
திண்ணிய கழல்யாப்‌ பற விடுத்‌ தவர் தந்‌ திரு நக ரடை தரச்‌ செலுத்திப்‌
பண்ணியற்றமிழின்‌ வகை நல முணரும்‌ பான்மை நம்‌ பேரவைப்‌ புலவோர்‌
உண்ணனி மகிழத்‌ துன்னெனக்‌ கலையு முரையுடன்‌ பணிகளு மளிமின்‌–60-

வெண்டிரை கொழிக்கும்‌ கருங்கட லுடுத்த மேதினியதனிடைச்‌ சிறந்த
திண்டிறற் புயத்த மன்னவ ருணர்வான்‌ றிருமுகங்‌ கடிதினி லனுப்பிக்‌
கொண்டல் கண்‌ படுக்கு மாட மா நகரங்‌ கோதற வலங்கரித்திடுவான்‌
அண்டுறுமாந்த ரறிதரமுரச மறைதரச்‌ செய்மினென்‌ றரைத்தான்–61-

இடியெனக்‌ கறங்கு மணிமுரசோதை யெழினகர்‌ மாந்தர்தஞ்‌ செவியிற்‌
கடிதினிற்‌ படுமு னளவிலா வோகைக்‌ கடலிடை யாழ்ந்தன ராகி
வடிவுறு மயில் வேலனைய கண்‌ மடவார்‌ மைந்தரோ டிணைந்திர வகற்றும்‌
படிமருத்‌ தொடையும்‌ யாயொளி விரிக்கும்‌ பற்பல வணிகளுமகற்றி–62-

மங்கையர்‌ நகிலப்‌ பொருப்பினுக் கணிந்‌த வாச நற்‌ கலவையின்‌ றுகளும்‌
கங்குலிற்‌ கரிய கூந்தனின்‌ நிழிந்த கான் மகரந்தமு மடங்க
வங்கமுன்றி றொறுங் குங்குமச்‌ செழுஞ் சேறது கொடு வழுக்குறத்‌ தெளிப்பார்‌ பொங்கிய சுடர்வே லிறை மகன்றன்பாற்‌ புதல்வன் வந் துதித்திடு மதிழ்வால்–63-

பத்தி யினிவந்து விசும்பக டுரஞ்சும்பரூ௨ மணிமாட பந்தியினற்‌
பித்தியின்‌ புறத்து மகத்திலும்‌ புதுவெண்‌ மெய்யொளிச்‌ சுதைகள்‌ தீற்றிடுவார்‌
நித்தில முறுவற்‌ கமலைவா ழகல நிருமலன்‌ றிரு வவதாரச்‌
சித்‌திர வகையே முற்றிலு முவந்து தீட்டுவர்‌ கவின் பெறமாதோ–64-

வெண்ணில வெறிக்குங் கையிலையின்‌ கிரியின்‌ மிசைப்பலகதிரெழுவனபோல்‌
திண்ணிய மாடமுகட்டிடையனந்தஞ்‌ செறி சுடர்த்‌ தூபிக ணிரைப்பார்‌
நண்ணிய குலிசத்‌ துவசமு முழுவை நாடிய கொடிகளு நடுவார்‌
தண்ணியவிதை வித்தரிய பாலிகைகள்‌ சதிருற வயின்வயி னிறைப்பார்–65-

மங்கல மகலாமறுகிட மெங்கு மணிநடைக்‌ காவண மிடுவார்‌
துங்கமென்பாளைக்‌ கமுகொடு சுவை கொள்‌ கன்னலுமினிமையிற்‌ கனிந்த
செங்கனித்தாறு படு விரிதலையுஞ்‌ சேட்பட வெழுத்‌ தொறு மமைப்பார்‌
சங்கையின்‌ மகர தோரண நிரைப்பார்‌ தமனியப்‌ பாவைகள்‌ தொடுப்பார்–66-

தேனினமுரன்றிந்தள விசை பயில செழு மணித்‌ தாம நாற்றிடுவார்‌
வானில வெறிக் குமார வாரமுமொண்‌ மரகதக்‌ கோவையும்‌ தொடுப்பார்‌
ஆனிழு துறப்பெய்‌ தருஞ்‌ சுடர் தருமொ ணஞ்சர விளக்கினமிடுவார்‌
கானிடு மலருந் தண் பனி நீருங்‌ கலவையுங்‌ குழம்பொடு மிறைப்பார்–67-

கரிய சூன்முகி லனையமும்‌ மதம் பொழி கரிகட்‌ குரிய வோடையு மேற்றவிசையு முறவமைப்பார்‌
விரியும்‌ வான் முக டிடிதரத்‌ தாவியு மீளும்‌ பரிகள்‌ பல்லணங்‌ கால் கழுத்தணிகளும்‌ படுப்பார்–68-

திவிய மாமணி யணிபெறக்‌ குயிற்றிய திகழும்‌
சவி கொண்‌ மாவிரதங்க ளெண்ணில நிரை தயங்க
விவுளி சேர்த்திரு மறுகிடை நிரைப்பரா லிரும்பொன்‌
அவிரு மேருபல்‌ லொரு வழிச்‌ சேர்ந்தன வனைய–69-

தவள வானில வுமிழ்‌ மணிமாட மேற்றாவத்‌
துவளிலாநறு மதிற்புகை வயின்வயின்‌ றொகுப்பார்‌
பவள வாய்க்கொடி நுண்ணிடைப்‌ பனிமொழிக்‌ கரிய
குவளை யொண் கணார்‌ குரவையாட்‌ டயருவர் கூடி–70-

முருகு சேரு மாலதிக்கலிகைக்‌ கிணை மூரல்‌
குருகு சேருமால்‌ வரையெனப்‌ பொலி தரக்‌ குவிப்பார்‌
கருணையோடு மற்‌ றரிய நற்‌ கனிவருக்க முநேர்‌
௮ருகுதோறஞ்‌ சிற்குன்றென வமைப்பர்க ளன்றே–71-

இனியவாய முக்கனிகளு மிடையிடை நிறைப்பார்‌
புனிதவாதர நிறைந்த வுள்ளத்தினர்‌ பொருந்தி
தனிவிருந்தினர்க்‌ கெதிர்கொடு சென்று நற்றகையாய்‌
மனி யுமக்கெமக்‌ கென்றுத மகங்கொடு வருவார்–72-

சேயதேறலி னறுகெய்பால்‌ தயிருடன்‌ சேர்ந்து
தூயமாமறுகெங்கணுந்‌ தொனியுறத்‌ துதைந்து
பாயவென்ன று மாகனகக்‌ கலம் பரப்பி
யேய நாரண னடி யருக்‌ கின்னமு திடுவார்–73-

தழனிறத்த நற்‌ நிகிரியு மிவுளியுந்தான
மழவிருங்கரிகளு முலைத்‌ தவரவர்‌ வருவார்‌
பழமை யாய பொற்‌ கலன்களை வெறுத்தலைம்‌ பாலார்‌
௮ழகினீடிய கலன்களைப்‌ புனைகுவரன்றே–74-

ஊறு தேன் பொழி மாலிருஞ்‌ சோலை வெற்‌ புயிர்த்த
நாறு சந்தன வரியமென்‌ றேய்வையின்‌ றீய
சேறு நூலிடை தேம்புறப்‌ பணைத்தருஞ்‌ சிகர
வீறு வாய்ந்தணைக்‌ தடர் தரு முலை முகட்‌ டணிவார்–75-

ஓங்குமாமதி வடந்தனைப்‌ புனை குவ ரொழுகுந்
தேங்கொள்‌ வண்டின மலை தர வோச்சி நீர் செழுஞ்சூ
றாங்குமால் குழல்‌ திருத்தியத்‌ தலைப்பணி சாத்தி
பூங்கொண்‌ மாலதி செவந்திநற்‌ பிச்சியும்‌ பொறுப்பர்–76-

ஏர வாணுதற்‌ சுந்தரத்‌ திலகம்‌ திடுவார்‌
போர வானில வெறியுநித்‌ திலச் சுட்டி புனைவார்‌
சூரவேளி கரம்பகத் தஞ்சனந் தோய்ப்பார்
ஆரவாரவம்‌ புதிக்கிரு வரம்பிட லனைய–77-

பொய்யமைந்க நுண்ணிடைக்‌ கணிமேகலை புனைவார்‌
துய்ய நற்பசுங்‌ கழையெனத்‌ திரளுறுந் தோளிற்‌
செய்யமாமணி குயிற்றிய வொண்கலன்‌ றிருத்திப்‌
பெய்யுமம்பொனிற்‌ றொடிபல முன் கையிற்‌ பெய்வார்–78-

கடி தினிற்றழ னிறத்த நற்‌ றளிர்நிறங்‌ கவற்று
மடிமிசைச்‌ செழுஞ்செய்ய பஞ்சின்‌ குழம் பணிவார்‌
வெடி கொளம்புய மிசையனஞ் சிலம்புவ வனைய
படிவுறுஞ்‌ சிலம்பொலி தரப்‌ பதமிசை யணிவார்–79-

மாடகத்த நன்மகரயா ழெடுத்திசை வகுப்பார்‌
பாடகத்தொடும்‌ பரிபுரத்‌ தொலியெழப்‌ பதம்பேர்த்‌
தாடகக்குழை யலைதரத்‌ தனித்தனி யரிய
நாடகத்தொழில்‌ நலந்தெரி மடந்தையர்‌ நடிப்பார்–80-

அந்த மாடவின்‌ னெழினகர்‌ மாந்தறா மடர்ந்த
சந்த வார்முலை மாதரு மகங்களி ததும்ப
இந்த வாறியற்றிய பின்ன ரக்கொடி யிடையார்‌
விந்தையோடு பொற் சுண்ண நீராடுற விழைவார்–81-

சாடிகொப்பரி சாருங்‌ குழிசியிப்‌
பீடியற்கலம்‌ பெய்திடி லற்பமே
நாடுமென்ன நளியும்‌ பொழிபுனல்‌
ஓடிடாம லொருங்குறத்‌ தேங்கவே–82-

பண்ணுலாவிய பாவினு மின்‌மொழி
விண்ணுலாவிய மின்னிடை மாதரார்‌
எண்ணிலாதவரேர்‌ மறுகெங்கணும்‌
வண்ண நீடு வரம்புகள்‌ கட்டினார்–83-

தமனியத்திற்‌ சமைத்த தளங்களாற்‌ கமவசந்தக்‌ கலவைக்‌ குழம்பினோ
டிம நறும்புன னெய்நல்லெண்ணை சுணம்‌ அமரு மத்தர்‌ புனுகு மென்னானமே–84-

வண்ணமுற்ற பொற்சுண்ண வனநறுந் தண்ண நீரிற்‌ றகையன மட்டிலா விண்ணின் மா நகரெங்கும்‌ விடுத்தனர்‌ பண்ணினின்‌ சொற் பனிக்‌ குழன் மாதரே–85-

சத்தவார்கட றானொருங்‌ குற்றபோற்
சுத்த வீதிகடோறு நன் மஞ்சனம்‌
பத்தியோடு பொழிந்த பின்‌ பான் மொழிக்‌
கொத்தலர்க்‌ குழற்கோதையர்‌ கூடியே–86-

இழையினுண்ணிடை நீவியிறுக்கி மென்‌
றழைசுணங்கின்‌ றனங்கள்‌ குலுங்குறாப்‌
பிழையில்‌ வம்பு பிணித்து மழைக்கரும்‌
குழறிருத்திற் கொண்டை யணிந்தரோ–87-

தந்ததாரைக்‌ குழலுச்‌ தமனிய
விந்தை தேர்கட்‌ சிவிறியு மின்ன்போ
லந்தமில்‌ புனலாடுங்‌ கருவியோ
டிந்து வின்னுத லேழையர்‌ தோன்றினார்–88-

இடக்கை பேரிகை யேய்ந்திடு திண்டிம
முடுக்கை பம்பை யுறுமி முரசொடுந்
தடக்கு தோறவில்‌ தமரவலம்புரி
திடத் திருச்சினந்‌ தேதிகக் காளாமே–89-

கூறிவாச்சியங் கொண்டு குணில்களா
லேறு சூன்‌ முகிறன்னி லிரட்டியே
நாறிசைக் கணு நண்ணி முழக்கிடச்‌
சாறினோதியர் தாம்‌ புனலாடுவார்–90-

கள்ளலம்புங் கருங்குழன்‌ மாதரார்‌
உள்ளலம்பிய வோகை கிளர்ந்தெழ
வெள்ளிடற்கிடனின்‌ நி மறுகடர்ந்
தள்ளி யள்ளியவர்‌ புனலாடுவார்–91-

கூந்தல் சோரக்‌ கொடியிடை சோர்தர்க்‌
காந்தளென்னக்‌ கரஞ்சிவப்‌ பேறவே
சாந்தணிந்த தனங்கள்‌ குலுங்குற
வாந்துருத்தி கொண்டாடுவர்‌ நீரரோ–92-

கலை நெகிழ்ந்தது காண்கிலர் கச்சுமென் முலை நெகிழ்ந்தது மோர்கிலர்‌ மொய்யொளி
யலையு மார மகன்ற துணர் கிலார் தலைமை சேர் புன் லாடுந் தருக்கினால்–93-

அத்தர்‌ பன்னீர்‌ புனுனோ டாரரெய்‌
யொத்து வாரி யொருவ ரொருவர்மேல்‌
லத்த நற்குழ லாலினி தாடுவார்‌
புத்தகத்தின்‌ புறவடி மாதரே–94-

அருத்தி யோடொ ரரிவைநன்‌ னெய்யைமா றொருத்தி வாயி லொழுக்க வுமிழ்ந்திட
றிருத்தன்‌ வாயெனுஞ்‌ செவ்வித ழாம்பல் பெய்‌ மருத் தண்‌டேற றனை நிகர்‌ மானுமால்–95-

கூந்தன்மீதிற்‌ குழல்கொடு பிச்சுநீ
ரேந்தி ளந்தனற்‌ தன்னி லிழிதரல்‌
சேந்த மேருத்‌ திரியின்‌ மீமிசை
போந்து மேகம்‌ பொழிதலை மானுமால்–96-

மாதர்பல்லோர்‌ மடந்தையின்‌ வான்முக மீதருங்குழல்‌ கொண்டு வீடும் புன
லோது வானெழு மொண்மதி வீசிய சீத வெண் கதி ரென்னத்‌ திகழுமால்–97-

விடவெண்‌ பால் கொடோர்‌ மின்னிடை மாதின் மேல்‌ லுடல் வெழுப்பினை யுற்றுடன்‌ றீர்தலாற்‌ புடவி யிற்பசும்‌ பொன்னினற்‌ பாவையைப்‌ படம் படுத்து பறிப்பதை யொக்குமால்–98-

நெஞ்சினிற்‌ பொழி நீரிரு கொங்கைமே லெஞ்சலான தற்‌ றேயிழிந்‌ தோடுறல்‌ விஞ்சடர்ந்தெழு விண்டுவின்‌ மேல் வழி யுஞ்சிறுதண்‌ ணருவியை யொக்குமால்–99-

படைக்கண்மங்கை பனிமுகம்‌ வீசுநீர்‌ தடுப்பவங்கைத்‌ தலம்பொதி தன்மரை
யிடக்குள்வீழு வெமைவருகத் தேன்மதி யடைக்கலம்மென்‌ றடைதலை மானுமால்–100-

சோதிமாமணி மாடங்க டுன்றிய
வீதி தோறும்‌ விழைவி னடர்ந்து முப்‌
போதுமீரறு வைகல்‌ புனலிடை
மாதராடி. மனக்களி யுற்றபின்‌–101-

வண்ணமாமறு கெங்கும்‌ வதிந்தபொற்
சுண்ணநீர்‌ தலைப்பெய்து துவன்‌றியே
தண்ணரும்‌ பொருனாநதி சார்ந்திரும்‌
பண்ணைவாயிட மெங்கும்‌ பரந்து போய்–102-

நலிகொள்‌ வெண்டிரை நண்ணி யதினுள
புலவு நீக்கிப்‌ புதுமண மீந்தவன்‌
சுலவு மிப்பி சரிமுக முண்ணச் செய்‌
உலவுமார முயிர்த்திடச்‌ செய்யுமால்‌ –103-

திரு வவதாரப் படலம் முற்றும்

‌-

நாம தேயப்‌ படலம்‌

கற்றவ னீராடவெழ முதலியாண்டான்‌ கையும் பின்‌ வடுகநம்பி கரமென்போதும்‌
பற்றியெழற்‌ காண்டானுள்‌ வெதும்ப வத்தைப்‌ பரிகரிக்க வவர்க்‌கிருதாம்‌ பரச்செம்‌ பீந்தாங்‌
கற்றநதிப்புனல்‌ கொணர்வித்‌ தஃதா னம்பி யாந்தரிகப்‌ பத்தி வெளி யறியச்‌ செய்த
நற்றவனெம்‌ மெதிராச னடியை வாழ்த்தி நாமதேயப் படல நல்குவாமால்–1-

மீனவன்குல வேந்தன்‌ வியந்துபஃ றான மந்தணர்‌ தாமுகக்கக்கொடுத்‌
தானபின்‌ பேரவை யெழுந்தாக்கொளிர்‌ வானரியணை மன்னினன்‌ மாதரோ–2-

ஆரியர்க ளறிஞர்‌ கணிதநூ
லோருவோர்‌ மெய்யுறுதிகொ ளாரணஞ்‌
சோர்விலா துணர்‌ தூய்மறை யாளர்‌ மற்‌
றே ரறா தொளி ரேந்தலுழையரே–3-

மற்ற நுட்ப மதியின ரானிறை
வுற்ற சங்கத்‌ துறவிலர்‌ மெளலிதோய்‌
பொற்றிருக்கழற்‌ பூப னுவகையாற்‌
சொற்றிடுஞ்சில தூய்மொழி யன்றரோ-4-

மன்‌ றுளோரெம்‌ மனமரை யின்முகை
யின்றலர்ந்‌ தொளி யெய்திட வெல்லிளங்‌
கன்றை நேர் வருகான்‌ முளைக்கியாது நா
மின்று நாம மிடுத லியம்புவீர்‌–5-

கொக்குமீதுறு கோகிலவின்‌ சொலார்‌
செக்கர்மாடத்‌ திருக்குருகாபுரி
புக்க நும்மைப்‌ புரக்கும்‌ புயலுக்கு
மிக்க வாதிப்பிரான்‌ றளிமேவியே–6-

பரவை சூழுல கோரடி பற்றிடக்‌
கரவினாலளந் தின்பருள்‌ கான்மலர்‌
சிரமணிந்தவன்‌ சீரருட்‌ பெற்றுடன்‌
மரபினாமம்‌ வழங்குதன்‌ மாண்பரோ–7–

பாதுகாத்துயிர்ப்‌ பாலருள்‌ கூர்ந்து நன்‌ னீதியாலுலகோச்சு நிருப நின்‌
றீதிலாத திருவுரை யுட்கொடீ தோதனோ மற்றுளப்படி செய்குதி–8-

இவ்வண மன்றுளார்சொல்‌ லியல்பினை யிறைவ னுள்ளிற்‌
செவ்வியி னமைத்து நந்தஞ் செய்தவத்‌ துதித்த சேய்க்குக்‌
கொவ்வையின்‌ கனிவா யின் சொற் கோங்கரும்‌ பனைய கொங்கை
நவ்விநேர்‌ விழியாய்‌ யாது சாற்றலா நாமமென்றான்–9-

நம்மகவெனவுமன்ன னவின்றிடப்‌ பெற்றோமென்று
செம்மலங்‌ கடலுளாழ்ந்து திரு முக மலர்ந்து நீருண்‌
மைம் முகிற்‌ குழலி வேந்தன்‌ மலரடி பரவி யின்பம்‌
விம்மியாழ்‌ குழலே யின்சொல்‌ விளம்புவள்‌ சிலது மன்னோ–10-

புத்தெனுங்‌ கொடிய சேறிற்‌ புகுந்துழன்‌ றழலுகின்ற
தத்தினை யறுத்து நம்பாற்‌ றனய சம்பத்‌தை யிந்த
வித்தகன்‌ பொலிந்து நின்ற மெய்ப்பர னமரரஞ்ச
நத்தினை முழக்கு மாதி நாதர்‌ சன்னதி முன்‌ சென்றே–11-

வஞ்ச மற்றுள த்தை யைவர்‌ வழி செலுத்தாது வாழ்த்து
நெஞ்சினர்‌ நாற்பொருட்‌ குணினைத்த தங்குவந் தளிக்கும்‌
கஞ்சனன்‌ மலர்த்‌ தாட்‌கீழிக்‌ கான்முளை வணங்கச்‌ செய்து
விஞ்சுநம்‌ மரபினாமம்‌ விளம்பலே விதி யென்றாளே–12-

கொங்கலர்க்‌ கருத்து மைம்பாற்‌ குவளை வாண்‌ மதரரிக்கண்‌
நங்கையா ருரைத்த வாய்மை நங்கருத்தியைந்த தென்றப்‌
புங்கவ னமைச்சர்க்‌ கூவிப்‌ பொரு கடற்‌ றானை சூழ
விங்கடைந்‌ திடுவீர்‌ பூமா திறைவனைத்‌ தொழச்‌ செலற்கே–13-

ஆண்டகை யியம்பாமுன்ன மரும்பொருண்‌ முகத்தி னோக்காற்‌
காண்டக விரைவிற்‌ செய்யுங்‌ கருணை கூருழையர்‌ சேனை
யீண்டவந்‌ தறிக்கை செய்தவ்‌ வின்னடி பரவ வண்டு
பாண்டருற்‌ துளவினானைப்‌ பணிந்திடற்‌ கெழுச்சி யானான்–14–

தண்ணுமை படகம்‌ பிலி தக்கை திண்டிமறந் தடாரி
மண்ணமை முழவு கேட்போர்‌ வள்ளின முவந்து கீதக்‌
கண்ணுகர்ந்‌ திடுபன்‌ னாகசுரமோ டெக்காளஞ்‌ சின்ன
மெண்ணில்‌ பல்லி யங்களெங்கு மெறி திரைக்‌ கடலினார்ப்ப–15-

கருவிளை குமிழி னொண்பூக்‌ கயிரவ மலர்களுட்‌ கொண்‌
மருமலர்க்‌ கமலமோர்‌ பொன்‌ கொடி மிசை மலர்ந்த தன்ன
திருமுகத்‌ தரிவை மார்வெண்‌ கவரியின்‌ சிறு கால்‌ வீசக்‌
குருமணி நிலவு காலும்‌ குழுஉக்‌ கொள்‌ வெண்குடை நிழற்ற–16-

மட்டவிழ்‌ குமுத வேந்துள்‌ வதியிரு முயனீத்‌ தூர்வான்‌
விட்டதி வெளிவந்தாக மீ திரு கயல்‌ கடாங்கி
யிட்டமோடுல வலன்ன வெழின்முக மடவாரால
வட்டமீயோட்டிகொண் டுண் மகிழ்ந்தரு கசைப்பர் மன்னோ–17-

மாசுறுங்‌ கலியின்‌ றீயவலிகெடு மெனவே வெள்ளை
வீசு தலனைய வான்‌மீ வெண்டுகிற்‌ கொடிகளாட
வேசி விண்ண ரம்பை மாதர்க்கின்புறு பரதங்காட்டுந்
தாசியரிசையினேர்ப்‌ பச்சதியிடை யடிகள்‌ பேர்ப்ப–18-

தேங்கமழ்‌ கமலப்‌ புத்தேள்‌ சேணிறை கலச யோனி
யாங்கவிர்‌ வேத நாவரரசர்‌ முத்தமிழ்‌ தேர்‌ வாணர்‌
பாங்குட னருகிலாரப்‌ பரவு பொற்‌ சிவிகை பம்ப்
வீங்குதிண்‌ குவவுத்‌ தோளார்‌ கட்டிய மியம்ப மன்னோ–19-

கங்குல வயிற்கை யொன்னார்‌ கணங்களின்‌ வலி மலைக்குத்‌
தங்கிய குலிகத்திண்டோட்‌ டானை முன்‌ மிடைந்து செல்லப்‌
பொங்கு செந்துக ளிவர்ந்து புயலெனப்‌ படரத்‌ தீய்க்கும்‌
வெங்கதிரவிந்து வானஞ்‌ செக்கரில்‌ விளங்கித்‌ தோன்ற–20-

தூயதீப்‌ புடத்திற்‌ பல்காற்‌ சுட்டசெம்‌ பொன்னிலும்பர்‌
மேயயாணரினாற்‌.செய்ய வில்லுமிழ்‌ மணியிடைக்‌ கண்‌
ணேயவிட்‌ டடைத்த தொட்டி லேற்றி யக்குழவி சூழ்ந்தாங்‌
காய மிண்டேகலென்மு னம்புலிக்‌ கண நேராமல்–21–

கோதில்பூற்‌ தொட்டி லூடு குயிற்று செம்‌ மணிவிற்‌ றோற்றம்‌
மாதவ னரசன்‌ சேயா வந்தவா றறிந்து போற்றப்‌
பாதலத்‌ தனந்தன்‌ றன்மெய்ப்படிவத்தை மறைத்தீண்‌ டேகச்‌
சோதி கொள்‌ சுடிகைநாறு மாமணிச்‌ சுடரி னேர்த்த–22-

இன்னணங்‌ குழவி தன்னோ டிறைவனு மெழுந்து செங்காற்‌
பொன்னனந்‌ துயிலுஞ்‌ சேக்கைப்‌ பூம்பணைக்‌ குருகை மேவிக்‌
கொன்னவில்‌ படைக்கணார்தங்‌ குழற்கிடு புகையின்‌ வாச
மன்னிய மறுகி லூடுண்‌ மதிழ்த. வலம்‌ வந்தானால்–23–

கூன்சுரி முகங்க ளீனுங்‌ கோதினித்திலங்க ணாற்றித்‌
தேன்பயி லலரி னாற்றுஞ்‌ செழிய காவண முகப்பில்‌
வான்றட வரம்பை நாட்டும்‌ வாயினின்‌ றயினிநீரைக்‌
கான்படு மழலைத்‌ தீஞ்சொற்‌ கன்னியர்‌ சுழற்றினாரால்–24–

கருமணி குயிற்று செம்பொற்‌ றகட்டுறம்‌ கடிகொண்‌ மாத
ரிருவரோ ரிருவராய்த்‌ தம்மின்‌ முனந்திக்‌ காப்பிட்டுப்‌
பருகவின்‌ னமுதிற்‌ சேயின்‌ படிவத்தி னெழினோக்‌ காற்பின்‌
றிருமினார்‌ சிலர்‌ கர்ப்பூர வாரத்தி தெரியச்‌ செய்தார்–25-

ஆரண மொருநான்‌ கோது மயனன வ றிஞரெல்லாம்‌
நாரணனாம. நாவின வின்றிறா கரத்திற்‌ செம்பொற்‌
பூரண கும்பங்‌ கொண்டிப்‌ பூதலத்‌ துயிருயச்செய்‌
காரணன்‌ மகவிற்‌ றோன்றப்‌ பெற்ற காவலனைக்‌ கண்டார்–26–

மட்டலிழ்‌ நறவமாந்தி வண்டிமிர்ந்‌ தடரு மைம்பாற்‌
கட்டழ கரம்பை மாதர்‌ கடுப்பவரடிகள்‌ பேர்ப்பக்‌
கொட்ட மிட்டமர ரீட்டங்‌ குல்யவென றமுதைத்‌ தால
வட்டம்‌ வைத்திடு புட்டோன்றல்‌ வாகனன்றளிக்குட்‌ சென்‌றான்–27-

அத்தினா புரத்து வாழருச்சுனற்‌ கறத்தினூல்‌
தத்துவத்‌ தரும்பொருள்‌ ரதத்தினிற்‌ றெரித்தவன்‌
மெத்தவுட்‌ புறத்துறிக் கிடைச்‌சி வைத்த வெண்ணை பா
னத்தி யுண்ட பூரணத்தி தேச லோக நாதனே–28-

எருதோ ரேழடர்த்து மாதொருத்தி பாலிணங்கினாய்‌
மருதினூடு போயிறுத்து மாயமாய்‌ வருந்தினாய்
குருதி தோயிபப்‌ பதிக்கிழிந்த தூது கூறினாய்‌
கருதி நின்‌ குணத்தை யார்‌ கணிக்க வல்ல வல்லரே–29-

தாலமீது நாத கேதனன்‌ முனந்தளர்ந்த பாஞ்‌
சாலி நாணழிந்திடாது தானை முன்‌ னளித்தனை
சில வேத வாணனெஞ்சு தேற வாக மோடவன்‌
பாலனீ நினாது தன்மை பார்‌ மதிக்க வல்லதோ–30-

இச்சையா லுளங்கனிச்‌ தெழுந்த வன்பினோடு நீ
மெச்சவே சுவைத்தடுங்‌ கனிக்குளின்பு விஞ்சினா
லச்சுதற்‌ கெனப்புறத்‌ தமைத்த செளரி யங்களை
யெச்சிலுண்டு வானளித்‌ தெழுந்த புண்டரீனே–31-

இன்னணம்‌ பொலிந்து நின்ற வெம்பிரா னிணைப்பதஞ்‌
சென்னியிற்‌ புனைந்து பின்‌ றுதித்துளஞ்‌ சிறப்புறத்‌
தன்னருங்‌ குலப்பெருஞ்‌ சுடர்ச்சுதன்‌ றனைப்புவி
மன்னனுண்‌ மழ்ந்தவன பொலன் கழல்‌ வணக்‌கியே–32-

புத்தெனுந் நராலையைப்‌ புடைத்தெமைப்‌ புறந்த வேய்‌
முத்தனோ டயன்‌ பராவு மூர்த்தி யாதி மூலமென்‌
றத்தனைப்‌ பழிச்சி மன்னவன்‌ றிருவருட்‌ கொடுண்‌
ணத்தியே மகற்‌ குகந்து நாம மோத லாயினான்–33-

தங்குலப்‌ புரோகிதன்‌ றனைக்‌ கோடேத மின்றியா
றங்கமைந்து வேள்வி நான்‌ மறைக்குடே ரகங்கொணற்
புங்க வேத வாணர் கூய்ப்‌ பொலிந்த பின் விதிப்படி
மங்களத்தி யங்கறங்க மாதவர்க் களிப்பனால்–34–

செம்பொனே ரிலங்கு பூணிவர்ந்து விண்‌ செறிந்தவிற்‌
பம்பு மாட கூட மாளிகைச்‌ செடெற்‌ பணைத்தல்
மம்பரஞ்‌ சுவைப்பயஞ்‌ செழித்தவா னிதிக்‌ குவை
இம்பரைந் தருக்கு நேர பீட்ட தான மீந்தனன்–35-

பொங்குவெண்‌ முனூலிலங்கு பூ சுரர்க்களித்த போழ்‌
தங்கை விட்ட நீருகுந் துலாயியாறு பாய்ந்தவண்‌
எங்கணும்‌ பரந்து தாம்ப்ரவன்னி யாயிழிந்ததே
லங்கவன்‌ செய்தான நேரிதாகு மென்ன லாகுமே–36-

எண்ணிறான மாதவர்க்‌ களித்து லோப மொன்றிலா
துண்ணெகிழ்ந்து நீதி நாலிலோது நேம கப்படி
நண்ணியே சடங்கினை நடத்தியன்பின்‌ வந்தெழுந்‌
தண்ணளிக்‌ கடற்கு வள்ளல்‌ சாத கர்ம மாற்றியே–37-

எறெறெருத்த மீதுறீச னுக்கய னிழைத்ததத்‌
தூறரித்த மால்‌ பதத்தி லொண்டமிழ்ப்‌ புனைந்து நா
வீறனாகு மெய்ப் பரன்‌ றனக்கவன்‌ குலப்பெயர்‌
மாறனென்று நாமமன்‌ வரோ தயன்‌ வழங்கனான்–38-

அந்தரத்தி னன்பனா யம்புயத்‌ தவன்‌ மறை
யெந்தை தாளுறற்‌ கொணாம லின்னு மேத்த நின்றவன்‌
றந்தையாகி மன்னவன்‌ றனக்கு நாம்‌ முந்தரில்‌
விந்தை சேரவன்‌ புகழ்‌ விளம்ப யாவர்‌ வல்லரே–39-

இன்னண நராதிபன்‌ பொலிந்து நின்ற வெம்பிரான்‌
றன்னருட்‌ கொடேதமார்‌ சடத்தினைச்‌ சினந்த தீங்
கன்னலின்‌ சொனங்கை கான்முளைக்‌ க நாம மோது நாள்‌
பொன்னகர்க்கு ளோருகந்து பூவின்‌ மாரி பெய்தனர்–40-

மண்ட லேசுரன்‌ கனிந்து மாறனைத் த ழீ இயெணி
லண்ட முண்டு மிழ்ந்த மாயனம்‌ புயப்‌ பதம்பராய்‌
விண்டடைந்த மாடமார்த மாளிகைக்குண்‌ மேவியே
கெண்டை யொண்‌ கண்‌ மாதினோடு கேண்மை யுற்‌ றுறைந்தனன்–41-

நாமதேயப்‌ படல முற்றும்‌,

ஆதிமால்‌ தரிசனப்‌ படலம்‌

பொன்பதி யெனவாம்‌ கோட்டிப்‌ புங்கவ நம்பி பாலீ
ரொன்பது தடவைக்‌ கப்பா லோதியந்‌ நூலையார்க்கு
மின்புற வளித்து நாம மெம்பெருமானா ரானோன்‌
றன்பத மலரைச்‌ சூடித்‌ தரிசனப்‌ படலஞ்‌ சொல்வாம்–1-

இன்னண முவகை மீதூ ரேந்தறம்‌ சேமக்‌ கோயின்‌
மன்னியந்‌ தமரினோடு மறுவிலா தறு சுவைக்க
ணன்னய மூரலுண்‌ டனந்தர முடைய நங்கை
தன்னருஞ்‌ சுதனைத்‌ தொட்டி லிடுதரத்‌ தலைமை சான்றாள்–2-

கொண்டலிற்‌ சுருளும்‌ குஞ்சி நித்திலக்‌ கொண்டை சேர்த்துத்‌
துண்டவெண்‌ பிறைநுதன்மீத்‌ துராயொளி துலங்கச்‌ சாத்திப்‌
பண்டமார்‌ சுடிகை யோடைப்‌ பற்பல மணி யிழைத்த
குண்டலம்‌ பிடிகஞ்‌ சாத்திக்‌ குலவு கண்டிகையும்‌ பூட்டி–3-

அம்புயத்‌ தொளிரும்‌ வைரத்‌ தழுத்து மங்கதமுஞ்‌ சாத்தி
வம்புறு நிம்ப மாலை மார்பிடை மதாணி சாத்தி
பம்பு மொண்‌ கதிருலாய காஞ்சியும்‌ பரிவிற்‌ பூட்டிச்‌
சம்பய னறியாத்தாளிற்‌ பரிபுரச்‌ சதங்கை சாத்தி–4-

பாடகங்‌ கொலுசு பாதப்‌ பவளமென்‌ விரலின்‌ மிஞ்சி
யாடகத்‌ தமைத்துப்‌ பூட்டி யங்குலிக்‌ காழி சேர்த்துக்‌
கோடு புன்னகமுஞ்‌ சாத்திக்‌ குதலைக்‌ ண்ணிக்‌ காயொடு
நீடர வடமும்‌ பூட்டி நிலவ மண்‌ டிலத மிட்டு–5-

அஞ்சன மகன்‌று நீண்ட வையரி விழிமேற்‌ றீட்டிக்‌
கஞ்ச மெல்லடியிற்‌ செய்ய மஞ்சொளி கதுவக்‌ கோட்டி.
வஞ்சர்‌ கண்ணீறு தையா வகை வலக்கதுப்‌ பினீல
நஞ்சிலுங்‌ கரிய மையா னலம் பெறக்‌ குறி யொன்றிட்டு–6–

காசறொண்‌ பிரவாளத்தாற்‌ கவின்‌ பெறக்‌ கடைந்த காலுட்‌
டேசிகத் திடைசலாகை சேந்த மாமணி குயிற்றிப்‌
பாசொளி பரந்த சட்டம்‌ பணித்துமா மரகதத்தில்‌
வீசுவிற்‌ றொடரு நாற்றி வீசித்த பொற்றொட் டிலேற்றி–7–

பற்பல நிலவு காலுஞ்‌ சூரிய படத்திற்‌ செய்ய
விற்புனை யேழடுக்கு மெத்தை மேல்‌ விரித்‌து வெண்பட்‌
டற்புத மலர்களாற்செய்‌ தணிகொண்மே லாப் பமைத்துய்‌
பொற்புறு தொட்டி லேற்றிப்‌ பூவை தாலாட்டு வாளால்–8-

பண்ணைவாய்‌ வளையு குத்த பன்மணி நிலவு காலுங்‌
கண்ணகன்‌ றொளிரு கூடற்‌ கா வலன்‌ மரபுளோரை
நண்ணுதற்‌ கரிய வைதரணிக்‌ கரை கடத்த வென்றிம்‌
மண்ணிடை யுதித்த வென்கண்‌ மணியே தாலோ தாலேலோ–9-

உலைபடா தொளிருஞ்‌ செம்பொ னுதயனாற்‌ கருகாமாலை
யலைபடா வமுத மாலை யடைதரா வினிய கன்னல்‌
கலைபடா மதியம்‌ வண்டர்‌ கவர்ந்கடா திஸ்னிய செந்தேன்‌
விலைபடா மணியேர்‌ நந்தா விளக்கே தாலோ தாலேலோ–10-

கோடரங்‌ குழையிற்‌ பாயக்‌ கூனிருலுடையத் தேனூர்‌
மாடவிர்‌ முகடார்‌ மந்த மாருத வரையாள்‌ கோவே
நீடிய திரைவாய்‌ முத்தை நேமியம்‌ பறவை காக்குந்‌
தோடவிழ்‌ கமல வைகைத்‌ துறைவ தாலோ தாலேலோ–11–

அள்ளலங்‌ கருஞ்சே றுற்ற வகன்பணை யுழவின்‌ மள்ளர்‌
உள்ளடி யுறுத்த நீல முகுமதுக்‌ குருகூர்‌ நம்பி
வெள்ள நீர்க்‌ கயல்க ணாக மேய வைந்தருவைச்‌ சாடித்‌
துள்ளூநீர்ப்‌ பொருனற்‌ சங்கத்‌ துறைவ தாலோ தாலேலோ–12-

இருநிலத்தறு விசிட்டாத்‌ துவைத முற்றிட வுயர்ந்த
திருமிகு மகர கேதுச்‌ செல்வனே வாசு தேவ
தருநிழ லண்ட முற்றுந் தங்கிய தன்ன முன்னீர்‌
வருபுவி யோர் குடைக்கீழ்‌ வளர்க்க வந்தவ தாலேலோ–13-

வாட்டடமங் கண்ணி யிவ்வாறுல கெலாம்‌ வயிற்றடக்கி
மீட்டுமிழ்ற்‌ தளித்தழிக்கும்‌ விருப்பு மாத்திரத்தி லோரும்‌
பாட்டுடைப்‌ பரனை முன்னாட்‌ பயிற்றிடு தவத்தி னாற்றா
லாட்டியுள்‌ ளுவகை பொங்க வங்கையி லெடுத்துப்‌ பின்னர்–14-

முன்னுளபடி மலர்க்கண்‌ முகிழ்த்தி யாம்‌ வீட்ட வாறே
நன்னய வணைகிடந்து நகிலமு முண்ணா தங்கந்
தன்னிலே யசைவு மெய்யிற்‌ றளர்ச்சியோ டழுகையின்‌றி
மன்னுநம்‌ மதலை போலே வையகத்துளதோ வென்றே–15-

அம்மமுண்‌ ணெனவே யங்கை யனகனை கிடத்தி வார்கொள்‌
கொம்மை வெம்முலை பிடித்துக்‌ குமுத வாய்‌ பொருத்த வப்பால்‌
செம்மையங்‌ கடைவாய்‌ முன்போ லோடுறத்‌ திகைப்புற்‌ றந்தோ
மைம்முகி லளகத்‌திரீ தென்னென வருந்தா நின்றாள்–16-

சுவர்க்க பூதலத்திற்‌ றோன்றி தூம்பயல்‌ வளைந்த தன்ன
விவர்தரு திருத்தோணல்லீ ரென்ன காரண முனான் செய்‌
பவமதின்‌ குறையோ வன்றிப்‌ பயிற்றிய தவத்துட்‌ கோதோ
வவனிமீ திவ்வாறெச்ச மாரேனும்‌ பெற்ற துண்டோ -17-

சசியலை தரவே செய்வ தனமுறு மடவீர்‌ சற்றும்‌
பதியினா லழவு மின்றிச்‌ சேனையும்‌ பருகாதாகி
அசதியு மில்லா தங்க மதிவளம்‌ பெருக முன்னீர்‌
வசுந்தரை பிறந்த மாதர்‌ மக்களைப்‌ பெறலு முண்டோ–18-

மைப்படு குழலீ ராயு மலரணை மீதியானங்‌
கெப்படிக்‌ கிடத்தினேனோ விசைந்து நாளெட்டானாலும்‌
அப்படி யிருக்க லல்லா லங்கமொன்‌ றசைவ மில்லா
திப்படி மீது மாத ரிளமக வுயிர்த்த லுண்டோ–19-

இண்டை கொண்டிலகு மைம்பா லிழைநுசுப்‌ பரிவையீர்‌ பொற்‌
றண்டை கிண்கிணி கறங்கத்‌ தவழ்ந்தடு சிறுசே யென்னைக்‌
கண்டு முன்‌வர வன்போடு கைகொடுதழா௮ தழுக்கா
றுண்‌ டெரிசின முள்ளோங்க வுற்றெடா திஸ்ருந்திட்டேனோ–20-

பல்லமம்‌ பகமொண்‌ மெளவ்வற்‌ பசிய கோரக வெயிற்றீர்‌
தொல்லை நாளளவுஞ்‌ சேயாற்‌ றுன்புறப்‌ பின்‌ றவத்தான்‌
மல்லலங்‌ குழவி தந்த மாமகணேய னிவ்வா
றல்லலுற்‌ றழுங்கச்‌ செய்ய வடிமையிற்‌ பிழையென்‌ னோவால்–21-

ஒரு குறங்கணை வாய்‌ வைத்தாங்‌ கொரு குறுங்கணை நெரூ உடித்‌
திருமுக மலர நோக்கிச்‌ சிறு நகை புரியாச்‌ சேயைக்‌
குருமணி கொழிக்கு முன்னீர்‌ குலவு மானிலத்‌ துளோர்கண்‌
மருமல ரளகபார வனிதையீ ரறிந்த துண்டோ-22–

வண்டு நாணுடைய வீரன்‌ வாளிபாய்‌ செம்புணாரச்‌
செண்டு மாமுலை கொண்டொத்திச்‌ செழிக்க வன்பரைச்சேர்‌ நல்லீர்‌
யெண்டிசை யிடத்திலுள்ளே குழவிகட்‌ கென்சேய்‌ நோய்‌ போ
லுண்டு கொல்‌ யான்‌ செய்‌ பாவத்துறுதி கொலறைதி ரென்றாள்–23-

பொற்றொடி கறங்கு முன்கைப்‌ பூவை யீரரியின்றாளுட்‌
பற்று மிவ்வுலகர்‌ செய்ய பாலனில்லா தழுங்கிப்‌
பெற்ற பினுவகை கொள்வர்‌ பேதையே னளவுமச்சே
யுற்று நீயழுங்‌ கென்றெம்மா னுந்தி யோன்‌ வகுத்திட்டானோ–24–

தையலார்‌ முழுகு சீறு தைத்ததோ வன்றி வேலன்‌
வெய்ய கண்ணோக்கோ வத்தி மேய புட்‌ சீரோ வென்று
வையுற விதற்குமுன்‌ னிவ்வன்கறுப்‌ பாடினானோ
தொயயில்‌ வெம்முலையீ ருற்ற சூழ்ச்சியை யறிந்திலோமால்–25–

கொங்கையின்‌ பொறை கண்டேங்கு கொடியிடை மடவீர்‌ சற்றுஞ்‌
சங்கை வேறுளவென்‌ றெண்ணிற்‌ றனுவிடை வாட்ட மில்லை
யங்கை யுள்ளங்கால்‌ வெப்ப மாறிலைச்‌ சரந்தாழ்வில்லை
விங்குள முச்சி தாழ்வு மெய்தில தென்னோ வென்றாள்–26-

மெதகு முனிவன்‌ பின்பேர்ய்‌ விறல்‌ கொடா டகையும்‌ அம்மம்‌
போத வந்துதவு சீற்றப்‌ பூதனை யாளையும்‌ பார்த்‌
தேதிவர்‌ பெண்பா லென்றங்‌ கெண்ணிடா தவர்‌ கடுஞ்ச
மோதுகன்‌ மனனோ நங்கை மொழியினுக்‌ கிரங்குவானே–27-

இன்னண முடைய நங்கை யுண விலாதிளைப்‌ புற்றோர்க
ணன்னய மூர றீம்பா னண்ணியு முணற்‌ கில்லாயி
னன்னவ ருறுக ணெவ்வா றடைவரோ வஃதினொந்து
மன்னனுக்‌ குரைப்ப வன்னோன்‌ வருந்தி யீ துரை செய்வானால்–28-

கொந்தார்‌ குழலெழி றோடணி குழையாய்‌ கலை குறையா
விந்தார்‌ முக மகவார்கலி மிரு மானிலர்‌ முளை போற்‌
செந்தாமரை விழிவா யவிழ்‌ செயுமென றெணி யிதுநாள்‌
வந்தோமினி முனமீ பெருமானே சரணெனவே–29-

என்போடுள முலைவாய்‌ மெழுகெனவே கரை தரவுள்‌
ளன்போடவ னிணைமாமல ரடி மீதினி லமரப்‌
பொன்‌ போலொளி ரிளமாறனைப்‌ புகவித்தடி பரவி
மின்போதரு முரனே யெனவினை செய்தன முனமே–30-

அடியோ மிது தரமோ நினையருளார்‌ கலியெனவிப்‌
படியோ டமரரு மாமறை பகரும்‌ முரை கெடுமே
அடிவார்‌ மரையுறைவோன்கடுக்‌ களனோடடி யறியா
வடிவாகிய முதலேயறு மனமேவிய துயரே–31-

என்றே பல துதி செய்திடி லிம்மா முலுருவோன்‌
அன்றே யருள்‌ புரிவா னிதிலயமே தவனடி வாய்‌
சென்றே அயர்‌ களைவோ மெழு தெரிவாயென விறைவன்‌
மன்றேறியோ ரிரதங்கொடு வாரும்மென வுரைத்தான்–32-

என்றே பல துதி செய்திடி லிம்மா முலுருவோன்‌
அன்றே யருள்‌ புரிவா னிதிலயமே தவனடி வாய்‌
சென்றே அயர்‌ களைவோ மெழு தெரிவாயென விறைவன்‌
மன்றேறியோ ரிரதங்கொடு வாரும்மென வுரைத்தான்–33-

மெய்‌ யொன்றிய மதயோருளை வீறன்‌ மாவணி திகழும்‌
வையந்தனை மறி தெண்டிரை மடைநின்றெழு புனனேர்‌
மொய்யன்‌ புறுபடை பல்லிய முழவார்ப்‌ பெழவுதவ
வய்யன்மன மகிழாவவ ணடைவான் மிசை யேறி–34-

தனையன்‌ றனையி பவென்‌ கொடுதளிர்‌ மெல்லடி மடமான்‌
மனனம்‌ தணிகர நங்கையு மதமந்திரி யுடனே
கனமொன்‌ றயரணி மேடைகள்‌ கவினா ரெயில்‌ சிகரி
யினமொன்‌ நியமற: கோடிறை யெய்தாச்‌ சினகரமே–35-

திதி மைந்தரின்‌ வலியால்வரர்‌ சேணாடரசிழவா
விதியே வலினிவண்‌ வந்தடி மேவும்பொழு துருவா
யெதிர்‌ வந்தவர்‌ வலியொன்‌றிட வினல்‌ வென்றிட வருளும்‌
புதுமென்‌ மரை மலராளிறை முன் போய்த்‌ துதி புரிவான்‌–36-

கண்ணனின்‌ னருளா லென்றுய ரறமுன்‌ கான்முளை யளித்தனை யதுவிம்‌
மண்ணக மடவார்‌ சிறுவரிற்‌ கருணை வார்விழி யவிழ்‌ தரா தம்ம
முண்ணிலா தவயவங்களு மசையா தொளி கொள்‌ செம்‌ பவள வாய்‌ திறவா
தண்ணலிப்‌ புதுமை யெற்கென நினைந்தோ வருளினை கருணை வாருதியே–37-

பாட்டளிமுரலின்‌ றளவணி முறுவற்பாசிழைக்‌ கமலவீட்‌ டரசி
மோட்டிள நூலமுழுந்திரு வரைகொள்‌ மொய்ம்பநன்‌ மசுவருளென்‌று
வேட்டிடக்‌ களப குங்குமஞ்‌ சுமந்த வேசரி யாக்கனிற்‌ கறமோ
வோட்டரும்‌ பிரசத்‌ துளவணி புயவீண்‌ டுனையலாற்‌ களை க ண்வேறி லையே.–38-

செப்புறழ்‌ நகில முருந்திள முறுவற்‌ சேலிணைக் கண்டுடி யிடைகொ
ணப்பினை பொருட்டேழ்‌ விடையட ராதி நாதனே யருள்‌ மழை முகிலே
மைப்படு வரை செங்கதிர் மத யிருபால்‌ வயங்க நின்றது வனவுருவத்‌
தப்பனே களைக ணீயலா தெற்‌கீங் காருளார்‌ கருணை வாரிதியே–39-

கோதறு மறைகணான்கின மறியாக்‌ குணமிகும்‌ பரமதாய்‌ விழியின்‌
சோதியா லெவரு மறிவதற்‌ கரிதாய்த்‌ துளக்கறு மன த்தினுக்‌ கெளி தாய்‌
நீதிகொ ளதமா யவைசெயும்‌ பொருளாய்‌ நிறைதரும்‌ குணமழை முகிலே
ஆதியே களைக ணீயலா தெற்கிங் காருளார்‌ கருணை வாரிதியே–40-

அண்டமாயண்டத்‌ தயனரன்‌ குலிசத்‌ தரசனா யவனவனுலகாய்ப்‌
பிண்டமாய்‌ விரிவாய்ப்‌ புலனொடு நிலனாய்ப்‌ பிறங்கன லொலியொடு விசும்பாய்ப்‌
பண்டமா யணுவுக்‌ கணுவதா யிவரும்பருப்பத மதற்கத னுருவாய்‌
மண்டல முழுதும்‌ நிறை தரும் பொருளே மாயனே கருணை வாரிதியே–41-

கண்ணிலா னொருவன்‌ நின்னடி. நிழற் கீழ்க்‌ கடுந்தவமுஞ்ற்றியெற்‌ இருகண்‌
நண்ணிட வருளென்‌ நிறைஞ்சிட வுருக்க ணல்கிய தொளிகொடா தனைய
வண்ணனின்‌ னருள்கொ டுதவுநம்‌ மகவீண்‌ டனை யதாயு றிலெவ ணருள்வாய்‌
வண்ணமால்‌ வரைசெங்‌ கரநுதி பரித்த மாயனே கருணே வாரிதியே–42-

கண்ணகன்‌ ஞாலத்தொரு பொறியிலிமால் கருணையாற்‌ பசுங்கனி
டுண்ணு நாட்‌ சுவையில்‌ லாகிலாங்‌ கஅவுற்‌ றுளபயனெவணது சிவண கைக்கொண்
வெண்ணுதற்கரிய மாமையங்‌ குழவி யீண்டெனக்‌ களித்தையதினைய
வண்ணமுற்றிடி லென்‌ பயனதற்‌ கருள்வாய்‌ மாயனே கருணை வாரிதயே–43-

வட்டவா ௬லகத்‌ தொருபசுங்‌ கொடிபன்‌ மகவுயிர்த்தட வதிலொரு வன்
துட்டனாயிடினு மாங்கவற்‌ குறுகண்‌ டோன்றிமிக்‌ குழல்பொழு தனை நெஞ்
சொட்டுமோ கடிய வதுவியல்‌ பன்றியோதநீர்‌ வண்ண நின்‌ னடியை
யெட்டுணைப்பொழுது நயந்துள முன்னா திருந்தெனோ கருணை வாரிதியே–44-

புத்தமு தூறுங்‌ கூபமு மடவார்‌ புனிதமாங்‌ கற்பினின்‌ றகலாச்‌
சித்தமு மாலே பரமெனக்‌ கருதிச்‌ செபதப கோம கேமனமு
மத்தமும்‌ படையு மடல்கெழு புயமிக்‌ காண்மையும்‌ படைத்து நின்‌ னடி சேர்‌
பத்தர்கணிடை யூறளித்திடுங்‌ கொடிய பாகுபா டொன்று றுமதனால்–45-

இஞ்சிசூழவரை வெல்வதற்‌ கெணிநா மெதிருநில்‌ வல்லைநங்‌ கழல்‌ வாய்த்‌
தஞ்சமென்‌ றடைவ ரருள்செய வேண்டுஞ்‌ சரியல வாங்கவர்‌ செயலை
வஞ்சமா யழிவுசெய்ய வென்றுன்னி மாவுரு வெடுத்தமு தனைத்துந்‌
துஞ்சிடப்‌ பருக யாசதாய்‌ மடவார்‌ தூய கற்‌ பதனையு மழித்தே–46-

போதவோர்‌ புத்தனாயவர்‌ பக்தி போக்கி யிவ்‌ வுலகிரதமதாய்‌
ஆதவன்‌ மதியந்‌ திகிரியா யொருநான்‌ காரணம்‌ பரியதாய்ச்‌ சூதன்‌
வேதனா யரனு மெதிரியாய்‌ மேரு வில்லதாய்‌ நாணும்‌ வாசுகியாய்‌
தீதறுவாளி நீயதாய்‌ வென்ற தேவவென்‌ பிழையதிற்‌ கொடிதோ–

தனியாழி சூழ வனியாளு மெந்தை சர ராம னான பொழுதோர்‌
முனிவாலிலக்கு வனை நீ முகத்து முனிலேன்‌ முனங்குருகைபோ
யினிதாயடர்ந்த புளியாவை நின்க ணெழுவாம்பி னென்ற வுரையே
யுனிமாயனம்பொன்‌ னடிவாய்‌ கிடத்து மொளி சேய்‌ செய் வாய்மை யறைவாம்

ஆதிமால்‌ தரிசனப் படலம்‌ முற்றும்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ குருகை நாதனும் ஸ்ரீ கூரநாதனும்-ஸ்ரீ எம்பாருடைய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஸிம்ஹாநுபவம்-

January 29, 2026

ஆழ்வார் திறத்திலே கூரத்தாழ்வானுடைய ஈடுபாடு அபரிமிதம்.-ஆழ்வானுடைய பஞ்ச ஸ்தவம் முழுவதும் ஆழ்வாரருளிச் செயல் மயம். ஆயினும் அவருடைய இரண்டு ஸ்லோகங்கள் போதும்.

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –2-

ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தின் இரண்டாவது ஸ்லோகமிது. இதன் பொருள் வருமாறு-யாதொரு நம்மாழ்வார் திருவடி பிணையானது, பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமா யிருக்கின்றதோ, யாதொரு திருவடியிணையே ஸர்வ காலமும் ஸாத்விகர்களுக்கு ஸகலைஸ்வர்யமுமாக இருக்கின்றதோ, யாதொரு திருவடி யிணையே புகலொன்றில்லா தவர்களுக்குத் தஞ்சமா யிருக்கின்றதோ, அப்படிப்பட்ட பரம பாவநமான நம்மாழ்வாருடைய திருவடி யிணையை ஆஸ்ரயிக்கக் கடவோம்.-

தத்வகுளாபரணங்க்ரியுக்மம் ஸம்ச்ரயேம்]  மகிழ்மாலை மார்பினன் என்று தாமே பேசிக் கொள்ளலாம்படி வகுளமாலையை நிரூபகமாக வுடையரான நம்மாழ்வாருடைய அப்படிப்பட்ட திருவடித் தாமரை யிணையை ஆஸ்ரயிக்கக் கடவோம். எப்படிப்பட்ட தென்னில், சில விசேஷணங்களை யிட்டு அத் திருவடிகளின் அதிசயத்தை விளக்குகிறார்.

[யத்த்ரைவித்ய வ்ருத்த ஐநமூர்த்த விபூஷணம்] த்ரைவித்ய வ்ருத்தர்களாகிறார் ஸ்ரீ மதுரகவிகள் போல்வார். அவர்களுடைய சிரஸ்ஸுக்கு பூஷணமாக இருக்குமாய்த்து ஆழ்வார் திருவடிகள்;

மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே? என்றும் குருகூர் நம்பி! முயல்கின்றேனுன்றன் மொய்கழற் கன்பையே-என்றும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அத்திருவடிகளையே யிறே தங்கள் தலைக்கு அணியாகக் கொள்வது;

கோலமா மென் சென்னிக்கு உன் கமல்மன்ன குரைகழலே என்றும் –அரசமர்ந்தானடி சூடு மரசை யல்லால் அரசாக வெண்ணேன் மற்றரசு தானே என்றும் எம்பெருமானுடைய பாதார விந்தங்களை சிரோ பூஷணமாகக் கொள்ள நினைப்பாரிற் காட்டிலும் அந்த பகவத் பாதாரவிந்த ஸ்வரூபியான ஆழ்வாருடைய திருவடிகளை சிரோ பூஷணமாகக் கொள்ளுமவர்களிறே சீரியராவர்.

த்ரை வித்ய வ்ருத்த சப்தம் முக்கியமாக நம்மிராமாநுசனையே கருத்தில் கொண்டதாகும் . ருக் யஜூஸ் ஸாமங்களாகிற வேத வித்யா த்ரயத்திலும் வல்லவ ரென்றபடி –சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை யில்லா வறநெறி யாவும் தெரிந்த விராமாநுசனைப் போன்ற மஹநீயர்களைக்கொள்க.

[ஸாத்விக ஐநஸ்ய நித்யம் யதேவ ஸம்பந்] தனத்தாலு மேதுங் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று என்றிறே ஸாத்விகர்கள் அத்யவஸித்திருப்பது. லௌகிகர்கள் ஸம்பத்தாக நினைத்திருக்கும் வஸ்துவானது வஸ்து ஸ்திதியில் விபத்தாயிருக்கும்மாயிற்று. உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்ய முடையார் இட்ட வழக்காயிருக்குமென்கை.

* பொய்யில் பாடலாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள், வையம் மன்னி வீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடேக இந்யாதி. மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்’ என்றருளிச் செய்த ஆளவந்தார் போல்வாரை யாயிற்று இங்கு [ஸாத்விக ஐந மென்கிறது.

[நித்யம்] இந்த விபூதியில் உள்ள போதோடு அந்த விபூதியில் செல்லும் போதோடு வாகியற ஸர்வ காலத்திலு மென்றபடி.அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம் என்னுமா போலே

(யத்வா சரண்யம் அசரண்ய நஸ்ய] அநாதர்களுக்குப் புகலிடமாயிருக்கும்- ஆழ்வார் திருவடிகள். எம்பெருமான் தன்னாலும் திருத்த வொண்ணா தென்று கைவிடப் பட்டவர்களாயிற்று அசரண்யர்கள்; அப்படிப்பட்டவர்களையும் வலியப் பிடித்திழுத்துத் திருத்திப் பணி கொண்டவர் ஆழ்வாரே யிறே
[புண்யம்] புநாதீதி புண்யம். பரம பாவன மென்றபடி. *பொய் நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி ஸகலாத்மாக்களையும் பரிசுத்தமாக்க வல்ல தென்கை. புண்யம் ஸுந்தரமென்று பர்யாயமுமாகையாலே அழகிய திருவடிகளென்பாருமுளர். பாவநார்த்தகத்வமே பாங்கு. ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கினபடி சொல்லிற்றாயிற்று.

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா
–3-என்பது அந்யாத்ருசமான விந்யாஸம். இந்த ஸ்லோகம் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் மூன்றாவது ஸ்லோகமாகும்.

இந்த ஸ்லோகத்தாலே ஆழ்வார்க்கு மங்களாசாஸநம் பண்ணுகிறார் ஆழ்வான். ஆழ்வாரை ஒரு கடலாக ரூபணம் பண்ணிப் பேசுகிறாரிதில். பயோ நிதியாக ரூபணம் பண்ணுகைக்குப் பொருத்தமான ஒளசித்யங்களை நான்கு விசேஷணங்களினால் நிரூபிக்கிறார். பயோ நிதிக்கு இருக்கக் கடவ தன்மைகளெல்லாம் ஆழ்வார் பக்கலில் குறையற்றிருக்கிற படியை ஒவ்வொரு விசேஷணமும் மூதலிக்கின்றது.

(பக்திப்ரபாவ பவதத்புத பாவபந்த ஸந்துக்ஷித ப்ரணய ஸார ரஸௌகபூர்ண :] கடலானது ரஸெளக சப்த வாச்யமான ஜல ப்ரவாஹத்தாலே பரிபூர்ணமாயிருக்கும்; ஆழ்வாரோ வென்னில், ஸ்ருங்கார வீர கருணாத்புத ஹாஸ்ய பயாநக ரெளத்ர பீபத்ஸ பக்தி ரஸங்களாலே பரிபூர்ணரா யிரா நின்றார். இப்படிப்பட்ட ரஸ விசேஷங்கள் ஆழ்வார் பக்கலிலே விளைந்தமைக்கு நிதாநமே தென்னில், விலக்ஷணமான பக்தி விசேஷத்தாலே ஆச்சரியமான பாவ பந்தங்களுண்டாகி அந்த பாவ பந்தங்கள் தலை தலைத்து நாநா ரஸ பரிபாகங்களாயின வென்கிறார்.

[பக்தி ப்ரபாவ] ஆழ்வாருடைய பக்திக்கு ஒப்புச் சொல்லலாவதில்லை; *காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி யென்று முதலில் கடல் போலேயாய், பிறகு*கொண்ட வென் காத லுரைக்கில் தோ ! மண்டிணி ஞாலமு மேழ் கடலும் நீள் விசும்புங் கழியப் பெரிதால்‘ என்றாய், அநந்தரம் *சூழ்ந்ததனிற் பெரிய வென்னவா என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய் ஆக விப்படி மேன்மேலும் பெருகிச் செல்லு தான பக்தியின் ப்ரபாவத்தினாலே. (பவத் அத்புத பாவபந்த/ உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே. அதாவது – அந்த பக்தி தானே ஸ்ருங்கார வ்ருத்த்யா பரிணமித்து தலைமகள் பாசுரமாகவும் தாய் பாசுரமாகவும் தோழி பாசுரமாகவும் பேசும்படிக் கீடான பலவகைப்பட்ட ஆச்சர்ய பாவ பந்தங்களை யுண்டாக்கி நிற்கு மென்கை. [ஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌக பூர்ண:] அப்படிப் பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரஸத்தை வளரச் செய்யுமாயிற்று.

*உயர்வற வுயர் நலம் வீடுமின் முற்றவும் பத்துடை யடியவர்க் கெளியவன் பிறவித்துயரறம் பொருமாநீள்படை என்னுமிவைபோல்வனவான திருவாய்மொழிகளில் ஸாதாரண பக்தி ரஸம் விளங்கு மத்தனையல்லது ப்ரணய ரஸம் விளங்கமாட்டாதிறே.

*அஞ்சிறையமடநாராய் மின்னிடை மடவார்கள் * வேய்மருதோளிணை* முதலான திருவாய்மொழிகளிலே யாயிற்று அத்புத பாவபந்த ஸந்துக்ஷித ப்ரணய ஸாரம் விளங்குவது. அப்படிப்பட்ட ப்ரணயம் மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீஸூக்திகளில் நவ ரஸமும் பொலிய நிற்குமிறே.

நவரஸங்களுள் ஸ்ருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயானகம் சாந்தி (பக்தி) ஆகிற இந்த ரஸங்கள் ஒரோ திருவாய்மொழிகளில் பரதானமாகப் பொதிந்திருக்கும்; மற்ற ஹாஸ்ய பீபத்ஸ ரௌத்ரரஸங்கள் ஓரோவிடங்களிலே மறைய நின்று சிறிது சிறிது தலைகாட்டி நிற்கும்.

*வீடுமின்முற்றவும் சார்வேதவநெறிக்கு * கண்ணன் கழலிணை முதலான திருவாய்மொழிகளிலே பக்திரஸம் தலையெடுத்திருக்கும்.

மின்னிடை மடவார்கள் நங்கள் வரிவளை * வேய்மரு தோளிணை முதலான திருவாய்மொழிகளிலே ஸ்ருங்கார ரஸம் தலையெடுத்திருக்கும்.

மாயாவாமனனே புகழு நல்லொருவன் * நல்குரவுஞ் செல்வும் முதலான திருவாய்மொழிகளிலே அத்புதரஸம்.

உண்ணிலாவிய வைவரால் இத்யாதிகளிலே பயாநக ரஸம்.

* ஊரெல்லாந்துஞ்சி × வாயுந்திரை யுகளும் ஆடியாடி யகங்கரைந்து இத்தியாதிகளிலே கருணரஸம்.

குரவை யாய்ச்சியரோடு கோத்ததும் வீற்றிருந்தேழுலகும் * இத்தியாதிகளிலே வீரரஸம்,

ஆக இங்ஙனே நாநா ரஸங்கள் பொதிந்த ஸ்ரீஸூக்தி ராசிகளை யருளிச் செய்யும் முகத்தாலே ரஸௌக பரிபூர்ண ராயிருப்பராய்த்து ஆழ்வார்.

வேதார்த்த ரத்ந நிதி: கடல் ரத்நாகரமாகையாலே ரத்ந நிதியாயிருக்கும்.பராங்குச பயோ நிதியும் அப்படியே யிருக்கிறபடி ஓதம் போல் கிளர் வேத மென்றும்.ஸ்ருதி ஸாகர மென்றும் சொல்லுகிறபடியே கடல் போன்றுள்ள வேத சாஸ்த்ரங்களிலே அல்ப ஸாரமாயும் ஸாரமாயும் ஸார தரமாயு மிருக்கின்ற அர்த்தங்கள் போக ஸார தமங்களாகவுள்ள அர்த்தங்களே ரத்நமாகும்.

த்ரைகுண்ய விஷயா வேதா:என்கிறபடியே எல்லாம் கலந்த கட்டியாயிருக்கும் வேதங்கள். ஸத்வ ரஜஸ் தமோ குணங்களாகிற மூன்று குணங்களிலும் ஊன்றினவர்களுக்கு அபேக்ஷிதங்களான விஷயங்களை யெல்லாம் வெளியிடுமவையிறே வேதங்கள்,

மாற்றங்களாய்ந்து கொண்டு மதுசூதபிரானடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன சொற்களிலே ஸாரதமமான பொருள் தவிர வேறொன்றும் அவகாசம் பெறாமையாலே எல்லாம் ரத்னங்களாயிருக்கும். அப்படிப்பட்ட ரத்நங்களுக்கு நிதியாயிருப்பராய்த்து ஆழ்வார் *வேதத்தமிழ் செய்த மாறனிறே.

[அச்யுத திவ்யதாம மாலுங் கருங்கடலே! என்னோற்றாய்? வையக முண்டு ஆலினிலை துயின்ற வாழியான்-கோலக் கருமேனிச் செங்கண்மால் கண் படையுள், என்றுந் திருமேனி நீ தீண்டப் பெற்றும் (முதல் திருவந்தாதி) என்கிறபடியே எம்பெருமானுக்கு திவ்யாலயமாயிருக்கும் கடல்; ஆழ்வாரும் அப்படியேயாயிருப்பர்.

கல்லுங் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்றொழிந்தனகொல்-ஏபாவம்! வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்? கொண்டல் வண்ணன் சுடர்முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன் ஒண்சங்கதை வாளாழியா னொருவன் அடியேனுள்ளானே என்கிறபடியே ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாயிருப்பரிறே. இவையு மவையு முவையுமென்கிற திருவாய்மொழியிலே விசதமாகக் காணலாம்.

[அஸீம பூமா] ப்ருஹத்த்வ மென்றபடி. ஸ்ரீபாஷ்யத்தி லருளிச் செய்தபடியே ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமா யிருக்குமிறே ப்ருஹத்த்வம். பெரிய மலை. பெரிய குளம், பெரிய மாளிகை என்றால் அங்கே விவக்ஷிதமான பெருமை ஆகாரத்தி னாலாகும். பெரிய மனிசர் என்று சில மஹா புருஷர்களைச் சொல்லுவோமாகில் குணங்களினாலாகிய பெருமையே அங்கு விவக்ஷிதமாகும்.

ஆக இப்படி இருவகைப் பட்டபெருமையில் ஆகார ப்ரயுக்தமான பெருமை கடலுக்கு ஆனாப் போலே குண ப்ரயுக்கு மான பெருமை ஆழ்வார்க்காயிற்று. “அருள்கொண்டாயிர மின்தமிழ் பாடினானருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே என்னும்படியாய் எல்லை காண வொண்ணாத க்ருபாகுண மொன்றின் பெருமை போதுமே.

ஆக நான்கு விசேஷணங்களினால் நம்மாழ்வார்க்கும் கடலுக்கும் ஸாதர்மியம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று. இப்படிப்பட்ட பராங்குச பயோதி: ஜீயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணு மென்றதாயிற்று.

———-

ஸ்ரீ எம்பாருடைய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஸிம்ஹாநுபவம்

இராமாநுச நூற்றந்தாதியில் கலிமிக்க செந்நெல் என்னும் பாசுரத்தில் எம்பெருமானார் சீரிய சிங்கமாக அருளிச் செய்யப் பட்டுள்ளார். அதே போன்று எம்பார் தாம் பணித்த முக்தக ஸ்லோக மொன்றில் ஸ்வாமியைச் சிங்கமாக அநுபவித்துள்ளமை காட்டுதும்.

வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா ஸ்ரீசைல ஸ்ருங்கோல்ல ஸந்
மாயா கேஸரி மாநிதேந கஹந ந்யாயாட வீசாரினா
கம்பீரேண பராத்ம பேதந மஹா நாதேந் நாதேந மே
குப்தோஹம் யதி ஸார்வ பெளம ஹரிணா வர்த்தே ப்ரும் நிர்ப்பய .

இதில் ஸிம்ஹத்தோடே ஸ்வாமிக்கு ஸாம்யம் ஐந்து விசேஷணங்களினால் அற்புதமாக நிர்வஹிக்கப்படுகிறது.

[வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா] ‘மலை முழஞ்சில் மன்னிக்கிடந் துறங்கும் சீரிய சிங்கம்” என்ற திருப்பாவையின் படியே சிங்கம் பர்வத குஹைகளில் விஹரிக்கும். ஸ்ரீராமாநுஜ ஸிம்ஹமோ வென்னில்; வேதங்களாகிற பர்வதங்களின் உபநிஷத் பாகமாகிற குஹைகளில் விஹரிக்கும்.

தைத்திரியயர் ப்ராஹ்மண- காடகத்தில் “‘பரத்வாஜோ ஹ த்ரிபிராயுர்ப்பிர் ப்ரஹ்மசர்ய முவாஸ” என்று தொடங்கியுள்ள உபாக்கியானத்தில் தேவேந்திரன் பரத்வாஜ முனிவர்க்கு வேதங்களை மலைகளாகக் காட்டினனென்று ஓதி யிருக்கையாலே வேதம் மலையாகக் குறையில்லை. “தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயாம்” என்ற மஹாபாரத ஸ்லோகத்தின்படி தருட்பம் பொதிந்திருக்குமிடம் குஹையாகக் கருதப்படுகையாலே உபநிஷத் பாகங்களை குஹையாகக் கூறினது பொருத்தம். அதிலே விஹாரம் செய்கிறார் ஸ்வாமி யென்றது “க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம: பரமோ மத “ என்றும் ”சொல்லுமவிடு சுருதியாம்” என்றும் சொல்லுகிறபடியே விளையாட்டாகச் சொல்லும் வார்த்தையும் சிறப்புற்றிருக்கு மென்றவாறு.

(ஸ்ரீசைல ஸ்ருங்கோல்ல ஸந்மாயா கேஸரி மாநிதேந.) ஸிம்ஹத்தைக் கொண்டாட வல்லது ஸிம்ஹமே யாகும்.அப்படியே இந்த ராமாநுஜ ஸிம்ஹத்தைக் கொண்டாடவல்ல ஸிம்ஹம் திருவேங்கட முடையானாகிற ஸிம்ஹமேயாம். திருமங்கையாழ்வார்’ தூணாதனூடு அரியாய் வந்து தோன்றிப், பேணா வவுண்னுடலம் பிளந்திட்டாய், சேணார் திருவேங்கட மாமலை மேய, கோணாகணையாய்‘ என்கிற பாசுரத்தினால் திருவேங்கடமுடையானை ஸிம்ஹமாக வநுபவித்திருப்பது காண்க.அந்த ஸிம்ஹம் இந்த ஸிம்ஹத்தை அபிமானித்த விஷயம் ஸ்ரீ வேங்கடாசல் இதிஹாஸ மாலையில் பரக்கக் காணத் தக்கது.

(கஹந ந்யாயாடவீ சாரிணா] ஸிம்ஹம் பெருங் காட்டில் சஞ்சரிக்குமே யொழியச் சிறு காட்டில் காணக் கிடைக்காது. இந்த யதிராஜ ஸிம்ஹமோ வென்னில்; சாஸ்த்ரீய ந்யாயங்களாகிற அடவிகளிலே ஸஞ்சரிக்குமது. (கம்பீரேண]சிங்கத்தின் தோற்றம் அதிகம்பீர மென்னுமிடம் சொல்லவேண்டா.
ஸ்வாமியினுடைய காம்பீர்யம் ஸ்ரீஸுக்திகளிலும் திருவுருவத்திலுமாகும்.

(பராத்ம பேதநமஹா நாதே ) இந்த விசேஷணத்தில் சிலேடை அமைந்துள்ளது.ஸிம்ஹ பக்ஷத்தில் “பரேஷாம் ஆத்மானம் பிநத்தீதி பராத்ம பேத :; ததாவித:மஹாநாதோ யஸ்ய” என்கிற வ்யுத்பத்தி கொள்ளத் தக்கது. ஸிம்ஹத்தின் பெரு முழக்கம் இதர ஜந்துக்களின் உயிரை மாய்க்க வல்ல தென்கை. இனி யதிராஜ ஸிம்ஹ பக்ஷத்திலோவென்னில், “பரச்ச ஆத்மானச் ச பராத்மா ; தாந்பிநத்தீதி பராத்ம பேதந , ததாவிதோ மஹா நாதோ யஸ்ய” என்று வ்யுத்பத்தி கொள்ளக் கடவது. பரம புருஷனுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஐக்கியம் சொல்லுகிற விமத வாதிகளைக் கண்டித்து ஜீவ பர பேதத்தை ஸாதிக்க வல்ல திருமிடற்றோசையை யுடையவரன்றோ பகவத் ராமாநுஜர் ! நூற்றந்தாதியில் “உயிர்கள் மெய்விட்டா திப்பரனோடு ஒன்றாமென்று சொல்லுமவ்வல்ல லெல்லாம் வாதில் வென்றான் எம்மிராமா நுசன் மெய்ம்மதிக் கடலே” என்றருளியது இங்கு நோக்கத்தக்கது.

ஆக இத்தகைய பொருத்தங்களினால் ஸிம்ஹ மென்று போற்றத் தக்க எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கிடக்கிற நாம் நிர்ப்பயமான வாழ்ச்சியை யுடையோம் என்றதாயிற்று.

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆழ்வார்‌ கலித்துறை யந்தாதி என்று வழங்குகிற ஸ்ரீ சடகோபாரந்தாதி–

March 31, 2025

ஆழ்வார்‌ – கடவுளின்‌ நற் குணக் கடலில்‌ முழுகி அமுங்கி யிருப்பவர்
கலித்துறை – கலித்துறை யென்லும்‌ ஒரு வகைப் பாடலினாற்‌ செய்‌யப் பட்ட,
அந்தாதி என்று – ௮ந்தத்தை ஆதியாக வுடைய நூல் என்று
வழங்குகிற – சொல்லுகின்ற,
சடம்‌ – சடம்‌ என்‌னும் வாயுவை,
கோபர்‌ – கோபித்த இறைவரது என்பதாம்‌.

சடகோபரந்தாதி – சடகோபரைப்‌ பற்றிய அந்தாதி யெனவும்‌ சடகோபரது ௮ந்தாதி எனவும்‌ விரிக்கலாம்‌. இவற்றுள்‌, முன்னது இரண்டாம்‌ வேற்றுமை உருபும் பயனுமுடன்றொக்கத் தொகையும்‌ பின்னது ஆறாம் வேற்றுமைத்‌ தொகையுமாகச் கொள்ளலாம்‌.

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நா வலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.
-சிறப்புப் பாயிரம்-அபியுக்தர் ஒருவர் அருளிச் செய்த தனியன் இது-அடுத்த மூன்று செய்யுள்களும் அப்படியே –

தேவில்‌ – தெய்வங்களில்‌-சிறந்த
திருமாற்கு -திரு மகள் கணவனாகிய மாயோனுக்கு,
தக்க – தகுந்த,
தெய்வக் கவிஞன்‌- தெய்வத் தன்மை யுள்ள கவிபாட வல்லவர்‌,
பாவில்‌ சிறந்த – பாடல்களில் சிறந்த
திருவாய்மொழி – திருவாய் மொழிப்‌ பிரபந்தத்தை,
பகர்‌-பாடியருளிய,
பண்டிதனே – நல்ல பாண்டித்தியமுடைய நம்மாழ்வாரேயாம்‌;, (௮ப்படிப் போல), நாவில் சிறந்த – அப்படிப் பாடுதற்குரிய நாக்‌கினால் சிறந்த
௮ம் மாறற்கு – அந்த நம்மாழ்வாருக்கு, தக்க – தகுந்த
நல் நா வலவன்‌ – நல்ல கவிஞரானவர்‌, பூவில்‌ – உலகத்தில்‌, -சிறந்த-
ஆழ்‌வான்‌ – பக்தி வெள்ளத்தில்‌ மூழ்குபவராகிய,
கம்ப நாட்டு புலமையன்‌-கம்ப நாடரென்னும்‌ வித்துவானேயாம்‌;

எல்லாத் தேவரிலும்‌ சிறந்த மாயோனுடைய கீர்த்திகளைப்‌ பாடுதலில்‌ வல்லவர்‌ நம்மாழ்வாரேயாம்‌-௮ப்படிப் போல நம்மாழ்வாரைப்‌ பாடுதலில் சிறந்தவர்‌ கம்ப நாட்டாழ்வாரேயாமென்பதாம்‌-மற்றைத்‌ தேவர்களைப் போலாகாமல்‌ உயிர்களிடத்தில்‌ அந்தர் யாமித்‌துவமுடைமையால்‌ தேவிச் சிறந்த திருமாலென்றார்‌. சிவ பிரானிடத்தில்‌ உபதேசம் பெற்று அகத்தியர் எழதிய இலக்கணத்துத்குப்‌ பொருந்திய பாடல்‌களைப்‌ பாடப் பெற்றதனால்‌ தெய்வக்கவி யென்றார்‌. ஏனைய நூல்கள்‌ போலாகாது இருமைப் பயனுந் தருதலால்‌ பாவில் சிறந்த திருவாய் மொழி யென்றார்‌. பண்டிதன்‌ -ஞான பண்டிதருமாம்‌, மாறன்‌ – ஆழ்வார்‌-பிறந்த பொமுது அழுதல்‌, விம்முதல்‌, பால் குடித்தல்‌ முதலிய ஒரு தொழிலுஞ் செய்யாமல்‌ உலகியல்பிற்கு மாறாக இருந்ததினால்‌ மாறன்‌ என்று பெயர் பெற்றார்‌. பூவிற் சிறந்த கம்ப நாட்டு ஆழ்வானெனக் கூட்டலும்‌ அமையும்‌. கம்பநாடு – முதலில்‌ இது வெண்ணெயூர்‌ நாடாக விருந்து பின்‌பு கம்பர் காலத்தில்‌ அவர் பெயரால்‌ மாற்றப் பட்டமையால்‌ கம்பநாடென்றார்‌. பல வேறு வகைப்பட்ட நூலுணர்ச்சிகள் எல்லாம்‌ ஒரு சேரக் கொண்ட பேரறிவுடைமையால்‌ புலமையனென்றார்‌–கவிஞன்‌-ஞ்‌ -பெயரிடை நிலை. திருவாய்மொழி -சிறந்த வாயில் சொல்லாகிய நூல்‌ என்று பொருள் பட்டு ௮டையடுத்த கருவி யாகு பெயராயிற்று-ஏகாராமிரண்டும்‌ தேற்றம்‌.

———

ஆரணத்தின் சிர மீது உறை சோதியை ௮ந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருகூரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

ஆரணத்தின்‌ – வேதத்தின்‌,
சிரம்‌ மீது – முடிவிடத்‌திலே,
உறை : பொருந்தி யிருக்கின்‌ற,
சோதியை – சோதி வடிவனான மாயோனை,
௮ம்‌ – அழகிய,
தமிழால்‌ – தமிழ்ப் பாடல்களால்‌,
பாரணம்‌ செய்தவனை -பாடி மகிழ்ந்தவராகிய,
குருகூரனை – திருக் குருகூரிலவதரித்த
சடகோபரை,
பல்‌ பல ௮ – பலபலவகையாக ,
நாரணன்‌ ஆம்‌ என–இவர்‌ நாராயணனது அமிசமாவாரென்று,
ஏத்தி- துதித்து,
தொழ–வணங்கும் படியாக,
கவி- பாடல்களை,
கொடை – கொடுத்தற்குரிய பொருளாக
நல்கு – கொடுக்கின்ற,
காரணனை – தலைவராகிய,
கம்‌பனை – கம்பரென்னும்‌ புலவரை (யாம்‌,) உள்‌ – எமது மனத்தில்‌,
களிப்பு உற – மகிழ்ச்சி மிகும் படியாக, நினைவாம்‌ – கருதுவோம்‌;

வேதாந்தத்தின்‌ மேல்‌ விளங்குஞ்‌ சோதியாகிய மாயோனைத் துதித்த நம்மாழ்வாரைத் துதித்த கம்பரை யாம்‌ உள்ளங் களிக்கும்படி தியானிப்‌போம் என்பதாம்‌, உபநிஷத்துக்களிலும்‌ உத்தர மீமாம்சை யாகிய ப்ரஹ்ம ஸூத்திரத்திலும்‌-மாயோனைத் தலைவனாகக் கூறுதலால்‌ ஆரணத்தின் சிரமீதுறை என்றார்‌. எல்லாரிலும்‌ மேம்பட்ட சரீர காந்தி யுடைமையால்‌ சோதி யென்றார்‌, செய்யுளிடத்தன்றி உலக நடையில்‌ மாந்தர்‌க்குப்‌ பயன்படாமலும்‌ தமக்கென்று ஓர்‌ இடமில்லாமலும்‌ இலக்கணங்கள் அமையப் பெறாமலுமுள்ள ௮ன்னிய மொழிகளைப் போலாகாமல்‌ ௮வை யெல்லாமுடைமையால்‌ அந் தமிழ் என்றார்‌. திருமாலால்‌ அளிக்கப்படுவன யாவும்‌ தாமே கொடுக்கத் தக்கவராதல் பற்றிப்‌ பல முகத்தாலும்‌ இவர்‌ நாராயணனே யாவார் என்பதைக் கம்பர்‌ குறிப்பித்தமை இங்கு எடுத்துக் காட்டினது காண்க, ஆரணம்‌ – வேதத்திக்குச்‌ சினை யாகுபெயர்‌.
சோதி – உவமை யாகுபெயர்‌. யாம்‌ -தோன்றா எழுவாய்‌, நினைவாம்‌-பயனிலை-

———-

நம் சட கோபனைப் பாடினையோ?’ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித் துறை நூறும் தெரியும் வண்ணம்
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே

வேதம்‌ – வேதங்களின்‌ கருத்துக்களை, (எடுத்து ),
தமிழ்‌ -தமிழ்ப் பாடல்களாக , செய்த—-,
நின் மலனே – குற்றமற்றவரே !,
நம்‌ பெருமாள்‌ – எங்கட்கிறைவனாகிய மாயோன்‌,
விஞ்சிய – மிகுந்த,
ஆதரத்தால்‌ – அன்பினால்‌ (கம்பரை நோக்கி ),
நம்‌ சடகோபனை – நமது சடகோப முனிவரை,
பாடினையோ – நீ பாடித் துதித்தனையோ ??
என்று கேட்ப- என்று கேட்டவடன்‌, கம்பன்‌—-.-,
விரைந்து – விரைவாக,
உரைத்த – பாடிய,
செம்சொல்‌ -௮ழகிய தமிழ் சொற்களாலமைந்த,
௮ந்தாதி- அந்தாதி யென்னும்‌ நூலிலமைந்து கிடக்க ,
நூறு கலித்துறையும்‌ – நூறு கலித் துறைப் பாடல்களும்‌,
தெரியும்‌ வண்ணம்‌ – நான்‌ அறிந்து கொள்ளும் படியாக,
அடியேற்கு – உம்முடைய திருவடிகளில்‌ பற்றுள்ள எனக்கு,
நெஞ்சு-மனத்தினை,
அருள்‌-கொடுத்தருளுவீர்‌;

வேதத்தைத்‌ தமிழிற் செய்தருளிய நம்மாழ்வாரே ! பெருமாள்‌ சடகோபரைப் பாடினையோ வென்று கேட்டலும்‌ கம்பர் பாடிய அந்தாதியைத்‌ தெரிந்து கொள்ளும் வண்ணம்‌ அடியேனுக்கு மனத்தைக்‌ கொடுத்‌தருளுவீர் என்பதாம்‌. வேதம்‌ நான்கு;-இருக்கு , எஜூர்‌, சாமம்‌, அதர்வணம்‌. இந் நான்கின் கருத்தினை அடக்கித் தமிழில்‌ நம்மாழ்வார்‌ செய்த
பிரபந்தங்கள்‌ முற்கூறப்பட்டன., நம் சடகோபனென்றது மாயோன்‌ தான்‌ ஆழ்வார் மீது வைத்துள்ள அன்பின்‌ மிகுதியால்‌ தன்னொடு சேர்த்துக் கூறிய ஆர்வமொழி; இது பற்றியே யாவரும்‌ நம்மாழ்வாரெனக் கொண்டாடுவதுமென்றறிக-அரங்க நாதனுச்கு எல்லா வடியாரிடத்தும்‌ அன்பொத்திருக்கச்‌ சடகோபரை நம் சடகோபனை யென்று
விசேடித்ததும்‌ தம்மைக் கம்பர்‌ பாடி யிருக்கவும்‌ அவற்றால்‌ திருப்தி யுறாமல்‌ சடகோபனைப்‌ பாடினையோ வென்றதும் பற்றி விஞ்சிய ஆதரத்தாலென்றார்‌. பெருமாள்‌ – உயர்‌ திணை யிருபாற்‌ பொதுப் பெயர்‌, கம்பன்‌-சாதிப் பெயர்‌, உரைத்த அந்தாதி யெனக் கூட்டுக –

———–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளம் தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

ஒதரிய- சொல்லு தற்கரிய, (அளவினையுடைய),
வேதம்‌-வேதங்களை,
தமிழ்‌ செய்‌த-தமிழ்ப் பாடல்களாகப்‌ பாடி யருளிய,
மெய்ப்‌ பொருளே – தத்‌துவ ஞான மூர்த்தியே !
நாதன்‌ – தலைவனாக,
அரங்கன் – – திருவரங்கத்தெம்பெருமான்‌, (கம்பரை நோக்கி )
நயந்து – விரும்‌பி,
உரை யென்ன – ‘ சடகோபனைப் பாடு’என்று சொல்ல,
நல்‌ கம்பன்‌.-சிறந்த கம்பரென்னும் புலவர்‌, உன்‌ தன்‌ – உம்முடைய,
பாதம்‌ – திருவடிகளை,
பரவிய – துதித்துப் பாடிய,
பைந்தமிழ்‌ – பசுந்‌ தமிழ்ப் பாடல்‌கள்‌-நூறும்
பரிவுடன்‌ – (யான்‌) அன்போடு
ஒதும்படி – படித்து உய்யும்‌ வண்ணம்‌, எனக்கு—-உள்ளம்‌ தனை – மனத்தினை,
அருள்‌ – திருத்தி யருள வேண்டும்‌,
என்‌ – எனது ,
விண்ணப்பம்‌ – வேண்‌டு கோளானது ,
இது – ஈதொன்றேயாம்‌; –

வேதத்தினைச்‌ தமிழிற்‌ செய்த நம்மாழ்வாரே ! ௮ரங்க நாதன்‌ கட்‌டளையால்‌ கம்பர்‌ உம்மைத் துதித்த இவ் வந்தாதியைப்‌ படிக்கும்படி எனக்குக் கருணை செய்வீராக வென்பதாம்‌, அனந்தாவை வேதா : என்ற படி வேதங்கள்‌ அளவில்லாத பகுதியன ஆதலால்‌ ஓதரிய என்றார்‌-கேட்போருக்கு இன்பத்தையே தருதலால்‌ பாடலென்று கூறாமல்‌
இன்பமென்ற. பொருள் படும்‌ தமிழென்றார்‌-எல்லா வூழிகளிலும்‌ அழியாதிருத்தலால்‌ நாதனென்றார்‌. அப்படி யிருப்பதை அறியா , மனிதரும்‌ ௮றிந்து தர்ஸித்து நன்‌மை யடைய வேண்டி.-ஸ்ரீரங்கத்தில்‌ கோயில்‌ கொண்டெழுந்தருளினமையால்‌ அரங்கனென்றார்‌. எத்தனையோ புலவர்‌ தோன்றியிருந்தும்‌ இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும்‌ புண்ணியத்தை இவ்வொருவரே செய்து வந்தமையால்‌ நற்கம்பனென்‌றார்‌-இளமையர் மழலை செவிக்கு இன்பம் செய்வது போல இதுவும் இன்பந்‌ தருதலின்‌ பைந் தமிழ் என்றார்‌.; பசுமை – இளமை – பாராட்ட நானினியாளல்வவே பசுமென்குழவி” என்றார்‌ பிறரும்‌, கம்பன்‌ – அந்தச் சாதியர்க்குரிய பட்டப் பெயர்‌ – இயற் பெயர்‌ புலப்பட வில்லை ; பெரியோர்களின்‌ இயற் பெயர்களைக் கூற அஞ்சி மரியாதை தோன்‌ற அப் பட்டப்‌ பெயரால் அழைக்கப்படுவது தொன்று தொட்டு வந்த வழக்கம்‌- ‘ஐயரவர்‌கள் பிள்ளையவர்கள்‌, செட்டியாரவர்கள்‌’ என்கின்ற இம் மொழிகள் தமிழில் சிறந்த ஒவ்வொருவரைக் குறித்தல்‌ போல அக் காலத்திலிவரைக்‌ கம்பரெனக் கூறுதலுண்டென்‌றிந்து கொள்க. உரை –ஏவலொருமை-வினைமுற்று -ஆய் விகுதி புணர்ந்து கெட்டது உன்தன்‌, தன்‌- சாரியை-ஓதும்படி – படி ஈற்று வினை யெச்சம்‌.-ஓத அகரம் தொக்கது,

———-

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே
.–தற் சிறப்புப் பாசுரம்

——–

வேதத்தின் முன் செல்க மெய் யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே
.– 1-

தொல்லை – பழமையும்‌,
மூலம்‌ – எல்லாவற்றிற்கும் காரணமும்‌,
பரம்‌ – மேன்மையுமாகிய,
சுடர் – சோதி வடிவனாகிய மாயோன்‌,
வேதத்தின்‌ முன்‌ செல்க – வேதங்களின்‌ ௮ளவைக் கண்டது போவனென்‌றாலும்‌ போவானாக ;
மெய்‌ உணர்ந்தோர்‌ – உண்மை நிலையை அறிந்‌தவராகிய,
விரிஞ்சன்‌ முதலோர்‌ – பிரமா முதலான தேவருடைய,
கோது -குற்றம்‌
அற்ற – நீங்கிய,
ஞானம்‌ – ஞானத்தின்‌,
கொழுந்தின்‌ முன்‌-முடியைக் கடந்து போவனென்றாலும்‌,
செல்க – போவானாக ;
தென்‌-அழகிய,
குருகூர்‌ – குருகூரென்னும்‌ பதியிலவதரித்த,
குணம்‌ கடந்த -முக் குணங்களையுங் கடந்த,
போதம்‌ கடல்‌ – ஞான சாகரமாகிய,
எங்கள்‌ புனிதன்‌- எங்களுக்கு மேலாய்‌ விளங்குகிற நம்மாழ்வாரது,
கவி- பாடல்‌களின்‌,
ஓர்‌ பாதத்தின் முன்‌ – ஒரு அடிக்கு முன்னே,
செல்லுமே-போகும் தகுதி யுடையவனோ ? [எனவே போகானென்பதாம்‌];

திருமால்‌, வேதத்தினெல்லையையும்‌ அறிவுடையவர்‌ ஞான நிலையையையும் கடந்தவனென்றாலும்‌ சடகோபரது பாடலெல்லையைக் கடக்கும்‌ வலியிலனென்பதாம்‌. எனவே திருமாலின்‌ செயலினெல்லையைக் கடந்து ௮ப்பாலும் பரவி நின்றது இவர் பாடலென்க. த்ரை குண்ய விஷயா வேதா : என்றபடி மூன்று குணமுடையோர்க்கும்‌ வேண்டுவன உணர்த்தும்‌ வேதத்தில் பரமாத்துமாவைக் கூறாத பாகமுமிருப்பதால்‌ வேதத்தின்‌ முன்‌ செல்க வென்றும்‌ குணாதிதரான நம்மாழ்வார்‌ பாடலில்‌ அங்ஙனம்‌ ஒரு பாதமுமில்லாமையால்‌ பாதத்தின்‌ முன் செல்லுமே யென்றுங்‌ கூறினா.தவம் முதவியவற்றால் பெற்ற அறிவினை யுடைய பிரம்மா முதலானோர்‌ ஞானத்துக்கும்‌ முதலடியிலேயே மயர்வற மதி நலம்‌ அருளப் பெற்ற நம்மாழ்வார்‌ ஞானத்துக்கும்‌ மிகுந்த ஏற்றத் தாழ்வுண்‌டாதலால்‌ விரிஞ்சன்‌ முதலோர்‌ கோதற்ற ஞானக் கொழுந்தின்‌ முன்‌ செல்கவென்றும்‌ பாதத்தின் முன்‌ செல்லுமே யென்றுங்‌ கூறினார்‌, இது மெய் யுணர்ந்தோர்‌ என்‌றதனாலே தவத்தாற் பெற்ற அறிவுடையாரென்‌பது விளங்கும்‌, வேதம்‌ – மங்கலச்‌ சொல்லாதலின்‌ முதவிலெடுத்‌துக் கொண்டார்‌, இது விருத்தப் பொருத்தமாயினும்‌ பெரியோராட்சியிற்‌’குற்றமில்லையென்‌க -. மெய் யுணர்ந்தோர்‌– வியாஸ, அம்பரீஷ, சுக, செளனகாதியரெனினுமாகும்‌.-முதலோரென்‌றதனால்‌ இந்திராதியரையுங்‌ கொள்க – கோதற்ற ஞானம்‌ – ௮மல ஞானம்‌. குணங்கள்‌ தந்த எனப்‌ பிரித்‌துத்‌ திருவாய் மொழியைக் கற்றவர்களுக்கு நற்குணங்களைத்‌ தந்தருளுகின்ற என்றலுமாம்‌.-தென் குருகூர்‌ – தென்றிசைக் கண்ணுள்ளதாகிய குருகூரென்றலுமாகும்‌, எல்லோரிலுஞ்‌ சிறந்தவராதலால்‌ புனிதனென்றார்‌. முன்‌ – இடைச் சொல்‌ ; இடத்தின்மேலது – செல்க -வியங்கோள் வினை முற்று, உணர்ந்தோர்‌ – பெயரெச்சமுற்று, செல்‌லுமே, ஏ-எதிர்மறை, சுடர்‌ – உவமை யாகுபெயர்‌-

————-

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த்தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே.
2-

பண்டு- முற்காலத்தில்‌,
சுடர்‌ இரண்டே-சூரியனும்‌ சந்திரனுமாகிய இரண்டு சுடர்களென்றே நிலை யிடப்பட்டன;(இப்பொழுதோவெனில்‌),
எம்‌ பிறப்பை – எமது பிறவியை,
அடர்‌ – போக்கிய,
இரண்டு ஆம்‌ – இரண்டாகிய,
மலர்‌ தாள்‌, உடையான்‌ -தாமரை மலரை யொத்த திருவடிகளை யுடையவரும்‌, குருகைக்கு – குருகூருக்கு,
அரசன்‌ – தலைவரும்‌,
படர்‌ – பரவிய,
இரும்‌ – பெரிய,
கீர்த்தி பிரான்‌ – புகழை யுடையவருமாகிய நம்மாழ்வார்‌ (செய்தருளிய),
திருவாய்மொழி – திருவாய்‌ மொழி யென்னும்‌ பிரபந்தத்தினது ,
பாவொடும்‌ – பாடல்களுடனே(சேர்ந்து )
துகள் தீர்ந்து – குற்றமின்றி,
உலகத்து – உயிர்களிடத்தில்‌,
இரண்டு இடர்‌ஆய்‌ – இரண்டு வகைத் துன்பமாகி ,
வரும்‌ – வந்து பற்றிக்‌ கொள்கின்ற,
பேர்‌ இருள்‌ – பெரிய மயக்கம் பற்றி வருகிற இரு வினையாகிய இருளை,
சீப்பன – போக்குவனவாகி ,
மூன்று ஆயின – மூன்று சுடர்‌களென்று மேம் பட்டு விளங்கலாயின ;

முன்னாளில்‌ சூரியன்‌ சந்திரனென்னும்‌ இரண்டு சுடர்களே உலகத்தை விளக்கி வந்தன ; அவை புற விருளைக் கெடுப்பனவன்றி வேறு செய்யலாவன வின்மையால்‌, உயிர்களின்‌ மனத்திலுள்ள இருளைப் போக்‌க வேண்டிப்‌ பிரானது திருவாய்மொழிப்பாவொடு சேர்ந்து மனத்தெழுகின்ற இருளையும்‌ கெடுத்து முச் சுடராயின வென்பதாம்‌-உலகத்தின்‌
பேரிருளைக்‌ கெடுத்தற்குத்‌ திருவாய்மொழி வேண்டுமானாலும்‌ நம்மாழ்‌வார்‌ திருவடிகளில்‌ அன்பு பூண்ட தமக்கு ௮வர்‌ திருவடிகளே அமையுமென்பது தோன்ற எம் பிறப்பை அடரிரண்டா மலர்த் தாளுடையானென்றார் –பூவோடு நாரும்‌ மணம் பெறுதல் போலத்‌ திருவாய்மொழிப்‌ பாவொடு சுடர் சேர்ந்து மூன்றாயின வென்றார்‌-இனிச் சுடரிரண்டென்பதற்கு இராம கிருஷ்ணர்களென்று பொருள் கொண்டால்‌ அவ் விராமபிரான்‌ சுக்ரீவனை நோக்கி சரணாகதி தருமத்தை யளித்தமையாலும்‌ கண்ணபிரான்‌ அருச்சுனனை நோக்கிக்‌ கீதை யருளிச் செய்தமையாலும்‌ இங்கு-வீடுமின்‌ முற்றவும்‌!” என்று எல்லா வுயிர்களையும்‌ நோக்கி யருளிச் செய்‌தமையாலும்‌ இத் திருவாய்மொழியே ௮வரினும்‌ சிறப்புடைமையாவது அறிக,
வினைகளுள்‌ நல்வினை மீண்டும்‌ பிறவியைத் தருதலால்‌ இரண்டினையும்‌
சேர்த்து இடரென்றூர்‌ ; இருள்‌ என்பதும்‌ இக் கருத்துப் பற்றியேயாம்‌ :
‘* இருள் சேரிரு வினையும்‌”’ என்றார் பிரரும்‌. ஒருவன் செய்யும்‌ நன்மையால்‌ அவனைச்‌ சார்ந்த பலரும்‌ மேம் படுவாராதலால்‌ தாம்‌ ஒருவர் துதித்‌தலினால்‌ தம்மைச் சாரர்த பலர் பிறப்புக்களும்‌ நீங்குதல் பற்றி எம்‌ என்று தன்மைப் பன்மையாற்‌ கூறினார்‌. இரண்டே, ஏ- தேற்றம்‌, மலர்த்‌ தாள்‌ – உவமைத் தொகை, குருகை- மரூ௨,-இரும் கீர்த்தி – பண்புத்‌ தொகை,

————

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே
. 3–

குருகூர்‌. -திருக்குருகூர்ப் பதியிலே,
பூ – (ஆழ்வாரது திருவாய்‌) மலரில்‌,
ஒடுக்கும்‌ -அடக்கப் பெற்றிருந்ததான, அமுதம்‌ – அமிர்‌தம் போன்ற,
திரு ஆயிரம்‌ – சிறந்த ஆயிரம்‌ பாடல்களும்‌, போந்தன.-வெளி வந்தவைகள்‌ தாம்‌,
பா-செய்யுட்களின்- இலகணங்களை யெல்லாம்‌,
ஒடுக்கும்‌ – தம்முளடக்கிக் கொண்டு விளங்குவன –
நுண் -நுட்பமாக அறியத் தக்க,
இசை -இராகப் பகுதிகளெல்லாவற்றையும்‌,
ஒடுக்கும்‌—தம்முள் அடக்கிக் கொண்டு விளங்குவன
பலவும்‌ – வேறாகிய பலவற்றையும்‌, பறையும்‌ – மாறுபடக் கூறுகின்‌ற,
நா – புறச் சமயிகளின்‌ நாவினை,
ஓடுக்கும்‌ – அடக்கி விடும்‌ ;
நல்‌ ௮றிவு -நல்ல அறிவினை,
ஒடுக்கும்‌ – தன்னுள்ளடக்கி யிருக்கும்‌ ; மற்றும்‌ – அன்றியும்‌,
நாட்டப்பட்ட – (உலகத்தை) நிலை நிறுத்‌தப் பட்டுள்ள,
தே- -தேவனாகிய திருமால்‌,
ஒடுக்கும்‌ –தன்னுளடக்கிக் கொண்டிருக்கிற,
பரம்‌ – வேறாகிய (மதங்களின்‌),
வாதம்‌ – விவகாரத்‌தினாலாகிய,
செரு- போரை,
ஒடுக்கும்‌ – அடக்கி விடும்‌

பாடல்களினுறுப்பக்கள்‌ பலவற்றையும்‌ நிறையப் பெற்றிருப்பதனால்‌ பாவொடுக்கு மென்றார்‌-சிவபிரான்‌ திருக்கையிலேந்திய வெண்டலையால்‌ பாடப் பெற்ற தேவ கானமாகிய பதினெட்டுப்‌ பண்களின்‌ வழியில்‌ விரிந்த நூற்று மூன்று பகுதிகளையும்‌ பெற்றிருப்பதனால்‌ நுண்ணிசை யொடுக்குமென்றார்‌. நம்மாழ்வார்‌ கொண்ட கொள்கைச்கு மாறாகப்‌ பிதற்று்கின்றவர்‌ நாவினை அடங்கச் செய்தலால்‌ பலவும் பறையும் நா வொடுக்குமென்றார்‌; காலையில்‌ நறுமல ரொன்றக்‌ கட்டிய, மாலையினியல்‌
புரை சமய வாதியர்‌, சூலையின்‌ திருக்கலாற்‌ சொல்லுவோர்க்கெலாம்‌,
வேலையும்‌ திரையும் போல்‌ வேறு பாடிலான்‌ ” என்றபடி எல்லா மதத்தையும்‌ தன்னுளடக்கிக் கொண்டவனாதலால்‌ தேவொடுக்கும்‌ பரவாதமென்றார்‌. இறந்தாரைப் பிழைப்பிக்கும்‌ அமுதம் போலசத் தீவினையிலழிவார்‌ தாம்‌ நினைத்த மாத்திரையில்‌ அவரை அதினின்று நீக்குதலால்‌ இறந்தாரைப்‌ பிழைப்பிக்கும்‌ ௮முதத்தை அத்‌ திருவாய் மொழிக்கு உவமை கூறினார்‌.-இறைவனருளாற்‌ பாடியதன்றி ஆழ்வார்‌ தாமாகப் பாடினரில்லை யென்பது தோன்றப் போந்தன வென்றார்‌; முந்தை ஆயிரம்‌” என்‌ற் பாசுரப்படி, திருவாய் மொழி நித்தியமென்பதும்‌ நித்தியமான வேதத்தைப்‌ பிரமதேவர்‌ வெளியிட்டது போலத்‌ திருவாய்‌ மொழியையும்‌ ஆழ்‌வார்‌ வெளியிட்டனர் என்பதும்‌ இதனால்‌ விளங்கும்‌, ஒடுக்கும் நுண்ணிசை, பறையும் நா , ஒடுக்கும் நல்லறிவு, ஒடுக்கும் மற்று, ஒடுக்கும் மமுதம்‌ –
இவற்றிலுள்ள நகர மகரங்கள்‌ விரித்தல்‌ விகாரம்‌, பூ – உவமை யாகு பெயர்‌-

——–

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே
. 4-

தொல்லை- பழமையாகிய,
எர்‌- அழகிய,
வகுளம்‌ – மகிழம் பூக்கள்‌ தொடுத்த ,
வனம்‌ – குளிர்ந்த,
மாலை : மாலையை யுடைய
எம்‌பெருமான்‌ – எமது தலைவராக,
குருகூர்‌ மன்னன்‌ – குருகூரிலவதரித்‌த நம்மாழ்வாரது ,
வாய்‌ மொழி – திருவாயிலிருந்து வந்த பாடல்கள்
சிலர்க்கு, – சிற் சிலருக்கு,
தனம்‌ ஆம்‌-செல்வப் பொருளாகும்‌;
சிலர்‌க்கு— தவம்‌ ஆம்‌ – தவமே யாகும்‌; சிலர்க்கு–தருமம்‌ நிறை -புண்ணியமிகுந்த, கனம்‌ ஆம்‌ – பெரும் சிறப்புமாகும்‌ ;
சிலர்க்கு- ந அதன்‌-காரணம்‌ ஆம்‌-அப் பெருஞ்‌ சிறப்புக்குக் காரணமுமாகும்‌ ;
சிலர்‌க்கு –;.,ஆரணத்தின்‌ இனமாம்‌ -வேதத்தின்‌ பகுதியாகும்‌;
அதற்கு-அந்த வேதத்தின்‌ பகுதிகள் அனைத்துக்கும்‌,
எல்லையும்‌ – முடிவாய உப நிஷத்துக்களும்‌,
ஆம்‌ – ஆகும்‌;

குருகூர்‌ நம்மாழ்வார்‌ திருவாய் மொழி யானது செல்வம்‌ முதலியவற்‌றை வேண்டியவர்க்கு வேண்டிய படியே பயன்படத் தக்க தென்பதாம்‌.-திருவாய் மொழி தமிழ்ப்‌ பிரபந்தமாதலால்‌ அந்தத்‌ தமிழுக்குரிய தெய்‌வம்‌ தான்‌ ௮ந் நூலைப்‌ பாராயணஞ் செய்வார்க்கு வேண்டியதை வேண்டியபடியே கொடுக்குமென்பார்‌ -தனத்தை வேண்டு வார்க்குத்‌ தனமும்‌ தவத்‌தை விரும்பினவர்க்குத் தவமும்‌ பெருமையை விரும்பினவர்க்குப்‌ பெருமையும்‌ அதன்‌ காரண்முமாமென்றார்‌- அத் தெய்வமும்‌ வேறன்று வேதத்தினுள்‌ விளங்குவதென்பதை விளக்குவார்‌ ஆரணமாமென்றும்‌ வேதமும்‌ வேதாந்தமாகாது இது வேதாந்தமுமாகுமென்பார்‌ -அதன்‌ எல்லை யென்றும்‌ ஆரணம்‌ பழமை யுடையதே யென்பார்க்கு இதுவும்‌ பழமையே யெனக்‌ கூறுவாராகித் தொல்லை வாய் மொழி யெனறும் கூறினார்‌-அன்றியும்‌ உலகத்தில்‌ தனம்‌ இம்மையின்பத்திற்கே உரியது ; தவம்‌ -மறுமையின்‌பத்திற்க்கே யுரியது இம்மைக்குப்‌ பயன்படாது ; இத் திருவாய்மொழி அப்படி யன்றி இருமைப் பயனும் தருதலால்‌ தனமென்றும்‌ தவமென்றுங்‌ கூறினார்‌ என்றலுமாம்‌-

—————-

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே
–5-

குளிர்‌ – குளிர்ந்த,
நீர்‌- நீரை யுடைய,
பொருநை -தாமிரபருணி நதியானது ,
பல சுழியாய்‌- பற் பலவாசச்‌ சுழித்து, ஒழுகும்‌ – ஓடுகின்ற,
குருகூர்‌- குருகூர்‌ என்னும் பதியில்‌,
எந்தை- எமது தந்தை போல்வாராகிய -சடகோபர்
தோன்றலின் – அவதரித்தலால்‌,
பலவாயின – பற் பலவாகிய,
மொழி- பாஷைகளுக் கெல்லாம் ,
செப்பம்‌ – ஓழுங்‌கு,
பிறந்தது – உண்டாயிற்று ;
முத்தி- மோஷ வீட்டினை,
எய்தம்‌- ௮டைகின்ற,
வழி: மார்க்கங்கள்‌,
பல ஆய -பலவாயினவை யெல்லாம்‌,
விட்டு – ஒழிந்து, ‘
ஒன்று ஆயது – ஒருவழி யாயிற்று ;
வழுவா – நீங்காத,
நரகம்‌ குழி- நரகக் குழிகள்‌,
பல ஆயின – பல வாயின வெல்லாம்‌,
பாழ்‌ பட்டது – பாழாயிற்று-

குருகூரில்‌ நம்மாழ்வார்‌ ௮வதரித்தலால்‌ பாஷைகளில்‌ ஓழுங்கென்‌பது தோன்றிற்று -முத்தி மார்க்கம்‌ ஒழுங்காயிற்று, நரகு பாழாயிற்‌று என்பதாம்‌. செந்தமிழ் மொழியில்‌ மாறுபட்டுக் கிடந்த துறைகள்‌ பலவும்‌, சடகோபர்‌ திருவாய் மொழியை ஒழுங்கு படுத்தப்‌ பாடி யருளினது நோக்கி அவ் வழியே திருத்தப் பெற்றதனால்‌ செப்பம்‌ பிறந்ததென்றார்‌-வழுவா நரகம்‌.-.தீவினை செய்தாரைத் தப்பாமல்‌ விழுங்கும் நரகம் , அத் திருவாய்மொழியைப்‌ பாராயணஞ்செய்வோரும்‌ அப்படிச் செய்வோர் அருகலிருப்போரும்‌ கேட்போரும்‌ முத்தியையே – அடைதலால்‌ நரகக் குழி பாழ்பட்ட தென்றார்‌.-மொழி யென்பதற்குப்‌ பதமென்ற பொருள்‌ கொண்டு கட படாதி சப்தங்கள்‌. அவ்‌வப் பொருள்களையே யுணர்த்தின வாதலால்‌ மொழி பலவாயின தென்றும்‌ திருவாய் மொழியிலுள்ள எல்‌லாப்‌ பதங்களும்‌ அவ்‌வப் பொருள்களின் நினைவில்‌ நில்லாது எம்பெருமான்‌ வரையிற்‌ சென்றுணர்த்தினமையால்‌ செப்பம்‌ பிறந்தது என்றும் கூறினுமமையும்‌-இவ் வாழ்வாரவதரித்ததன்‌ பின்‌ பலலா யிருந்தன சுழிகளே யன்‌றிப்‌ பிறவில்லை யென்பார்‌ பொருநைச் சுழி பலவாயொழுகுமென்றார்‌. செப்பம்‌-பண்புப் பெயர்‌, ஆய-வினைப் பெயர்‌-

————–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே
. 6-

பல காலும்‌ : பல தரமும்‌,
தம்மில்‌ -தமக்குள்‌,
மூன்று ஆயினவும்‌ – மூன்‌று பகுதியாகி அமைந்தவற்றையும்‌,
நினைந்த—
ஆரணத்‌தின்‌ – வேதத்தினைப் போல, மும்மை – மூன்று கூறுபாடாகிய,
தமிழை -தமிழினில் ஆகிய பாடல்களை, ஈன்றான்‌ – அருளிச் செய்தவரும்‌,
குருகை -குருகூரிலவதரித்த,
பிரான்‌ – பெரியவரும்‌,
எம்பிரான்‌ – எம் தலைவருமாகிய நம்மாழ்வாருடைய,
இசை கவி இவை -பண்ணோடு பாட வல்ல இப்‌ பாடல்கள்‌,
தோன்றா- பலராலும்‌ ௮றியப் படாத உபநிடதம் பொருள்‌-உபநிஷதத்தின்‌ கருத்‌துக்களை,
தோன்‌றல்‌ உற்றார்‌ தமக்கும்‌ – அறியப்‌ பெற்ற பெரியோர்களுக்கும்‌,
சான்று ஆம்‌ – சாட்சியாகி விளங்கும்‌,
என்‌ற போது – என்று சொல்லிய காலத்தில்‌,
மற்று – வேறாகிய (சிறப்பு),
என்‌ -யாது வேண்டும்‌-

ஜீவ ஈஸ்வர ஜகத்தென்று மூன்‌று கூறுபடுத்‌திக் காட்டி யிருப்பதைத் தம்முள்‌ ஆராய்ந்து அதற்குத் தகும் படியாகக் குருகூர்‌ நம்மாழ்வாரால் பாடி யருளிய இப் பாடல்கள்‌ உப நிஷதத்தின்‌ கருத்தை அறிகிற பெரியோர்களுக்கு இடையில்‌ சந்தேகம் நேருமிடத்து இது சாட்சியாயிருக்து-அந்தச்‌ சந்தேகங்களை ஒழிக்குமானால்‌ இதன்‌ சிறப்பினை வேறு என்ன சொல்லுவதென்பதாம்‌. ௮ரிய தத்வ ஞானத்தைப்‌ பெறத் தக்க புண்‌ணிய முடையார்க்கன்‌றிப்‌ பிறர்க்கு வெளிப் படாமையால்‌ தோன்றா வுபநிடசப் பொருளென்றார்‌. தோன்‌றலுற்றார்‌-இங்கு மதுர கவியாரும்‌, நாத முனிகளுமாம்‌; எப்படி யெனில்‌? ஆழ்வாரைக்‌ கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற பிரபந்தம் அருளிச் செய்து வெளிட்டு அருளியவர் மதுரகவி. பிற் பட்டு நாத முனிகள்‌ உண்டாகி இக் கண்ணி நுண்‌ சிறுத் தாம்பு என்ற ப்ரபந்தத்தைப் பலதரம்‌-12000-தடவை ஒதினமையால்‌ முன்பு ஆழ்வார்கள் அருளிச் செய்த அனைத்து பிரபந்தங்களும் ஆழ்வாரது அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹம் அருளிச் செய்ய நாத முனிகளின்‌ மனத்தில்‌ தோன்‌ற- இவர்‌ தம் மனத்தில்‌. ‘தோன்றிய படியே அவற்றைத் ஏடுபடுத்தி ஆழ்வார்‌ பெயர்களுடன் வெளியிட்டு அருளினார் -முத் தமிழ்‌-இயற் றமிழ்‌, இசைத் தமிழ்‌, நாடகத் தமிழ்‌ ; இயற்றமிழ்‌ – இலக்கண அமைதியை
யுடைய தமிழ்‌, -இசைத் தமிழ்‌- இராக: அமைதியை யுடைய தமிழ்‌, நாடகத்‌ தமிழ்‌ வெளிப்படை, எம்பிரான்றன்‌, தன்‌-சாரியை,

———–

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே.
7-

கவி- பாடலாகிய,
பா- பரவிய,
௮முதம்‌ – உணவினை,
இசையின்‌ – இராகமாகிய,
கறியொடு- கறி முதலான விஞ்சனத்துடனே,
சண்ணன்‌ – கண்ணபிரான்‌,
உண்ண – உட்கொண்டருளும்படி,
குவிப்‌பான்‌ – சமைத்துச் குவிப்பவரும்‌, குருகை – குருகூரில்‌ அவதரித்த,
பிரான்‌ – பெரியோரும்‌,
சடகோபன்‌ – சடமென்னும் வாயுவை முனிந்து போக்கினவரும்‌,
குமிகொண்கன்‌ -குமரி நாட்டுக்குத் தலைவரும்‌,
புவி -பூமியிலுள்ள,
பாவலர்தம்‌ – வித்துவான்‌களுக்கு,
பிரான்‌ – தலைவருமாகிய நம்மாழ்வார் பாடிய, திருவாய்மொழி– ,
பூ சுரர் தம்‌-நிலத் தேவர்களாகிய பிராமணர்‌ களுடைய,
செவிப்பால்‌ – காதுகளின்‌ வழிகளிலே, நுழைந்து புக்கு-நுழைந்து புகுந்து, உள்ளத்து உள்ளே – மனத்‌தினிடத்திலே, நின்‌று – நிலை பெற்று நின்று,
தித்திக்கும்‌- இனிய சுவையை உண்டாக்கும்‌-

ஆழ்வார்‌, பாடலாகிய சோற்றினையும்‌ இசையாகிய கறி முதலியவற்‌றையும்‌ கண்ண பிரான்‌ உண்ணும்படி சமைத்துக் குவித்த திருவாய் மொழி யென்னுமுணர்வு ௮ந்தணர்‌ செவியின்‌ வழியே நுழைந்து தித்திக்கும் என்பதாம்‌. இப் பாடல் முழுவதம்‌ உருவகப் படுத்தினமையால்‌ முற்றுருவகம்‌. சிவ சச்தியாகிய குமரி யென்னும் தேவியைப்‌ பரசுராமன்‌ ஸ்தாபித்‌திப் பூஜித்தமை பற்றி இந்த இடத்திற்குக் கன்னியா குமரி யென்றும்‌ இது சூழ்ந்த நாட்டிற்குக்‌ குமரி நாடென்றும்‌ பெயராயிற்று-ஆழ்வார் பாடல்‌களையே புலவர்கள்‌ மேற் கோளாகக் கொள்கின்‌றமையால்‌ பாவலர்‌ தம்‌ பிரானென்றார்‌. புளியங்காடி யுண்பவருக்கு ௮முதம் கிடைத்தால் போல வேதாந்த நூலில் கிடந்து மனத்தை வருத்தும்‌ பூசுரரிதனை நோக்கி மகிழ்ந்து ஏற்றலின்‌ ௮வருள்ளத்‌துள்ளே தித்திக்குமென்றார்‌. அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமுமென்‌று இடையர்கள்‌ கண்ணன் உண்ணக் குவித்தாரேனும்‌ ௮ச்சோறு கண்ணனுக்கே யுரியதாயிற்று, இஃது. அது போலன்றிப்‌ பூசுரரும்‌ சுவைத்து மகிழ்வதாயிற்று-

மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்திரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தின் சுவை யமுதம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றிச் சன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே –

—————

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே.
8-

குருகை – குருகூரிலவதரித்த,
பிரான்‌ – சடகோபர்‌,
சொன்ன——, ஆயிரம்‌- திருவாய் மொழி ஆயிரம் பாடல்களும்‌,
தித்‌திக்கும்‌’- இனிமை செய்கின்‌ற
மூலம்‌ -(சாவாமைக்குக் ) காரணமாயிருக்கின்ற,
‘தெளி அமுதே – தெளிந்த ௮மிர்தமே யாம்‌; (அன்றியும்‌), தெய்‌வம்‌ உண்டு என்பார்‌ – தெய்வங்கள் இருக்கின்‌றன என்று சொல்லுவர்‌களுடைய,
பத்‌திக்கு மூலம்‌ – பக்திக்கும்‌ இதுவே காரணமாகும்‌
பனுவற்க்கும் – வரவாற்‌று முறையில் பாடுகின்ற நூல்களுக்கும்‌, மூலம்‌—-;
பவம்‌-பிறவியை,
அறுப்பார்‌ – போக்கத் துணிந்தவர்கள்‌, முத்திக்கும்‌ – முக்தி யடைவதற்கும்‌–மூலம்‌ முளரி கை – தாமரை மலர் போன்ற கைகளும்
வாள்‌ நகை -ஒளி பொருந்திய பற்களுமுள்ள,
மொய் குழலார்‌ -நெருங்கிய கூந்தலை யுடைய மாதர்களிடத்தாசையை, அத்திக்கும்‌-போக்‌குகைக்கும்‌, மூலம்‌ —;

அமிர்தின் மேற்பட்ட சிறந்த பொருளில்லை யாதலின்‌ அமுதத்தை உவமித்தார்‌. அன்றி ௮மிர்தமோ இதற்கு ஒப்பாவது என்று ஏகாரத்தை எதிர்மறை யாக்கி யுமுரைக்கலாம்‌. ௮ங்ஙனம்‌ ஆக்கவே தேவாமிர்தமானதை பத்திக்கும்‌ பனுவலுக்கும் மூலமாகாது. உடம்பைக் காத்‌து நிற்றலால்‌ முத்திக்கும் மூலமாகாது. ௮ரம்பையரைச் சேரச் செய்தலால்‌ மொய்‌
குழலார்‌ அத்திக்கு மூலமாகாது – அன்றியும்‌ பவம்றுப்பார்ச்கு அழியா முத்தியைக் கொடுக்கின்ற இத் திருவாய் மொழி போல அமிர்தம்‌ அழியா வின்பத்தைத் தர மாட்டாது அமிருதமுண்டவரும்‌ சிற் சில நாளில்‌ இறப்பதுண்டு -எல்லை மூவைந்து நாள்கள் உள வென விமைக்கும் கண்ணு, நல்லெழின்‌ மாலை வாடு நஞ்சுடை யமிர்துண்‌டாரில்‌, பல் பகற்‌
றுய்த்த வின்பம்‌ பழுதெனக்‌ கவல்ப கண்டாய்‌ ” என்பதனாலுமறிக-திருவாய் மொழி ஆயிரத்து நூற்றிரண்டு செய்யுட்களை ஆயிரமென்றது பெரும் பான்மை பற்றியே யாம்‌, அன்றியும்‌ நூறு பதிகத்திலுமுள்ள நூறு கடைக் காப்புச் செய்யுட்களைக் கழிக்க – ஆயிரத்திரண்டேயாமென்௧.

————

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே.
9-

தண்‌ – குளிர்ச்சியான,
அம்‌ – நீர் வளமுடைய,
குருகூர்‌ சேய்‌ – குருகூர்ப் பதியிலே குழந்தை வடிவாக அவதரித்தவரும்‌,
மா -சிறந்த,
இரு மரபும்‌ – (தாய் வழி தந்தை வழியாகிய) இரண்டு வழியும்‌,
செவ்‌வியான்‌ – சிறந்‌த மரபினருமாகிய சடகோபர்‌, செய்த—,
செய்யுட்கள்‌-பாடல்களானவை ,
ஆயிரம் மா மறைச்கும்‌ – சிறந்த ஆயிரமென்‌ற பகுதியுள்ள சாம சாகைகளுக்கெல்லாம்‌,
அலங்காரம்‌ – அழகு செய்வனவாகும்‌ ;
௮ரும்‌ தமிழ்க்கு – அரிய தமிழ்ச்கு,
பாயிரம்‌ – வரலாற்று முறையாகும்‌ ;
நாற் கவிக்கு- நான்கு வகைப் பட்ட கவிகளுக்கு,
படி சந்தம்‌ – ஒப்புக் காண்‌பதற்குரியனவாம்‌
பனுவற்கு எல்லாம்‌-எல்லா வகைப்பட்ட நூல்களுக்‌கும்‌ –
தாய்‌ -தன்னுட் கொண்டு தரும் தாய் போல்வனவுமாம்‌;
இரு நால்‌ திசைக்கும்‌ – எட்டுத் திக்குக்கும்‌,
தனி – ஒப்பற்று விளங்குகிற,
தீபம்‌ – விளக்குமாகும்‌;

குருகூராழ்வாரருளிய பாடல்கள்‌ சாம வேதத்துக்கு அழகு செய்‌வனவாம்‌.-தமிழுக்கு ௮ணிந்து கொண்டு அதற்குரிய பாயிரமாகும்‌ ; கவிகளுக்குப் படிச் சந்தமாம்‌; பனுவலுக்குத் தாயாகும்‌ ;எட்டுத் திக்குக்குக்‌ தீபமாகுமென்பதாம்‌. ஒரு பெண்ணுச்கு அவளைக் காமுகர்‌ விரும்புமாறு அணிகளால்‌ ௮ணியப் படுவன போல பொருள்‌ மறைந்து கிடந்த வேதங்களின் பொருள்களை மேற்கொண்டு யாவரும் விரும்பும்படி அழகு செய்தலால் மறைக்கு ௮லங்காரமென்றார்‌. சிவ பெருமான்‌ முருகக் கடவுள்‌ நிதியின்‌ கிழவன்‌ இந்திரன்‌ முதலாகிய தேவர்களும்‌, வான்மீகியார்‌ கெளதமர்‌ மார்க்கண்டேயனார்‌ ௮கத்தியனார்‌ முதலாகிய முனிவர்களும்‌ ஆராய்ந்த ௮ருமை தோன்ற அரும் தமிழென்றார் – நாற்கவி- ஆசு, மதுரம்‌, சித்திரம்‌, விஸ்தாரம்‌ என்பன-ஒருவன்‌ பாடுக வென்றவுடன்‌ பாடுதல்‌ ஆசு கவியாகும்‌; இனிய சுவைகள்‌ ஒன்பதும் தோன்‌றப் பாடுதல்‌ மதுர கவியாகும்‌.
மாலை மாற்று -சக்கரம் சுழி குளம்‌, ஏக பாத மெழுகூற்‌று இருக்கை நாதை கரப்பே கரந்துறை பாட்டே, தூசுங்‌ கொளவே வாவன்‌ ஞாற்று நாக பந்தம்‌’” முதலாகிய மிறைக் கவிகளைப் பாடுதல்‌ சித்திர கவியாகும்‌.-ஒரு பொருளை மேற் கொண்டு பலவகை வர்ணனைகளையும்‌ அமைத்து விரிவாகப் பாடுதல்‌ விஸ்த்தார கவியாகும்‌. பாயிரம்‌ — தமிழிலின்ன பொருள்கள் உளவென்று திருவாய் மொழியில் காட்டிதாம்‌, தமிழில்‌ இவ் வண்ணம்‌ பாட வேண்டுமென்ற கட்டளைக்கு உதாரணமாகப் பெரியோர் கொள்ள வைத்தலால்‌ படிச் சந்தமென்றார்‌. பனுவல்‌, பலவகைய ; ௮வை ;–அறநூல்‌, பொருள் நூல்‌, காமநூல்‌, வீட்டுநூல்‌ என்பன. இந் நான்கும்‌ திருவாய் மொழியில் பரக்கக் காணலாமாதலால்‌ தாயென்றார்‌, உபய
குலோத்தமரென்றதன் கருத்தாக இரு மா மராபுஞ் செவ்வியானென்றார்‌

குறு முனிவன் முத்தமிழும் -என் குறளும் -நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் –திருவள்ளுவர்

ஐம் பொருளும் நால் பொருளும் முப்பாலில் பெய்து அமைத்த செம்பொருளைத்
தண் குருகூர்ச் சேய் மொழியது என்பர் சிலர் யான் இவ்வுலகில்
தாய் மொழியது என்பேன் தகைந்து
–ஒவ்வையார்

சேய் மொழியோ தாய் மொழியோ செப்பில் இரண்டும் ஓன்று
அவ் வாய் மொழியை யாரும் மறை என்ப
வாய் மொழி போல் ஆய் மொழிகள் சால உள எனினும்
அம் மொழியின் சாய் மொழி என்பேன் யான் தகைந்து
–இடைக்காதர்

————–

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே
. 10-

அருவி – அருவி நீர்கள்‌,
செய்‌ – வயல்களில்‌,
ஓடு – ஓடிப் பாய்கின்ற,
குருகை பிரான்‌ – குருகூரில் வந்த பெரியோரான பராங்குசனை
திருமாலை – சிறந்த மாயோனை,
நங்கள்‌ – நம்முடைய,
கை – கையிலுள்ள,
ஓர்‌ கனி என – ஒரு பழமென்னும்படியாக , காட்டித் தந்தான் -குறித்துக் காட்டிக் கொடுத்தருளினார்‌ (அதனை அறிந்தும்‌), அவன் -௮ந்‌தப் பராங்குசருடைய,
கழற்கே – திருவடிகளிலே,
கமலம்‌ – தாமரை மலர்களை,
பெய்யோம்‌ – பூஜித்து அறியோம்‌
அவன்‌ புகழ்‌ – அவரது கீர்த்தியை
ஏத்தி – துதித்து,
பிதற்றி – பல காலும் சொலலி,
பித்தாய்‌ – பிறர்‌ நம்மை நோக்கிப் பைத்தியரென்று சொல்லும்படியாக, திரியோம்‌-திரிந்து அலைந்திலோம்‌; (அவன்‌) உபகாரத்தின்‌ – அவர்‌ நமக்குச் செய்‌த நன்றியின்‌,
ஆற்றலை – பெருமையை,
என்று அறிதும்‌ – எப்போது அறியப் போகிறோம்‌?
ஐயோ -ஐய ஓ ! என்னே!

திருக் குருகூர்‌ நம்மாழ்வார்‌ திருமாலைக் காட்டிக் கொடுத்தருளினார்‌; அப்படிப்பட்ட மகோபகாரிக்கு ஒருவிதத்‌ தொண்டும் செய்தறியோம்‌; அவருபகாரத்தின்‌ பெருமையை எப்பொழுது தானறியப் போகிறோமென்பதாம்‌ “கைத்தலத் தாமலகமெனக் கண்டு கொள்‌’”? என்றபடியே நமக்குக் காட்டிக் கொடுத்தும்‌ ‘“வாணார்‌ நுதலார்‌ வலைப்பட்‌ டடியேன்‌ பலவின்‌ கனி யீந்‌தது போல வதன் முன்‌ -என்றும் இன்கனி சுவருமந்தி கடுவனோடிரிய வோட்டி, நன் கனி சிலது உண்ண ’ என்கின்றபடியே அறிவின்மையால்‌’ எம்பெருமான்‌. நமக்குச் செய்யும்‌ பேரருளை யிகழ்ந்து பிறரனுபவிக்கப்‌ பார்த்துக்‌ ‘கைப்பழ மிழந்த மந்தி போல
ஏக்கற்று இருக்கிறோமென்று வெறுத்து ஐயோ வென்று இரங்கிக் கூறினார்‌.
அருவி நீர்‌ வயலில்‌ சென்று பாய்தல் போல்‌’ ஆழ்கார் கருணை அவரைத் துதிப்பவருள்ளத்தில் சென்று பரவுமென்பது தொகை மொழியின்‌ கருத்து –
மற்றும்‌ அருவி நீர்‌ வயல்களை விளையச் செய்வது போல்‌ ஆழ்வார்‌ மாயோனைக் காட்டிப்‌ பக்தியை விளையச் செய்தாரெனினும்‌ பொருந்தும்‌-குருகை – மரூவு . கழற்கு – உருபு மயக்கம்‌.-பெய்யோம்‌, திரியோம்‌-தன்மைப் பன்மை எதிர்மறை வினை முற்று, அறிதும்‌ – தன்மைப்‌ பன்மை எதிர்கால வினை முற்று,

———

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே
. 11-

ஆற்றில்‌ – பொருநை யாற்றில்‌,
பொதிந்த – தங்கி யுள்ள,
மணலின்‌ தொகை -மணவினளவை யொத்த,
மா – சிறந்த,
அரும்‌ மறைகள்‌ வேற்றில்‌ – பலவகைப் பட்ட அரிய வேதங்களில்‌,
பொதிந்த – மறைந்து கிடக் கின்ற,
பொருள்கள்‌ எல்லாம்‌ -எல்லாப் பொருள்களும்‌,
விழும்‌ – (யாவரும்‌) விரும்பத் தக்க ,
மா கமலம்‌ – சிறந்த தாமரைகள்‌,
சேற்றில்‌… பொதி அவிழ்க்கும்‌ – கட்டவிழ்த்து மலரப் பெற்ற,
குருகூரர்‌-குருகூர்ப் பதியிலுள்ள பராங்குசர்‌ செய்தருளிய,
செம்‌ சொல்‌ பதிகம்‌ நூற்றில்‌ – செந் தமிழ்ச் சொற்களாற் செய்த நூறு பதிகங்களிலும்‌, பொதிந்த – நிறைந்துள்ள,
பொருள்‌-பொருள்களில்‌,
ஒரு கூறும்‌-(நூற்றில்‌) ஒரு பகுதி யளவும்‌, நுலல்கில – சொல்லினவில்லை;

பலவாகிய வேதங்களெல்லாம்‌ ஆழ்வார்‌ திருவாய்‌ மொழியிற் கூறியவற்றில் நூறிலொருபங்‌களவும் கூடக்‌ கூறின வில்லை யென்பதாம்‌-அனந்தாவை வேதா: என்றதனால்‌ ஆற்றின்‌ மணலின்‌ தொகை மறைகளென்றார்‌-மிகுதியை விளக்க வேண்டி இப்படியே–நன்னீர்ப்‌ பக்றுளி மணலினும்‌ மலவே’? ”மிக்கு வரு மின்னீர்க் காவிரி, யெக்கரிட்ட மணலினும்‌ பலவே’” என்பன முதலாகப்‌ பிற சான்றோர்களும் கூறுதல்‌ காண்க. வேறு ஆவன:–இருக்கு, தைத்திரியம்‌, பெளடிகம்‌, தலவகாரம்‌, ௭சு , சாமம்‌, அதர்வணம்‌ என்பன,-திருமாலும் யீசனும்‌ பின் சென்றும் தூது செலத் துணிந்தும் வளர்த்த தமிழால் புனர்தமையால்‌ செஞ்சொலென்றார்‌. பத்துப் பாடலென்கின்ற நியமனத்தைக் கொண்டமையால்‌ பதிகம் என்றார் -நூற்றில்‌ என்பதனை ஒரு கூறு என் பதனோடும் கூட்‌டிப்‌ பொருள் கொள்ளுதல்‌ சிறப்பு- மாக் கமலம்‌ சேற்றில் பொதியவிழ்க்‌குமெனவே சேற்றில்‌ தாமரை மலர்‌தல் போல தகுதியில்லாத உயிர்‌கள்‌ உலக மயக்கத்‌தில் பட்டு வருந்துவதை யறிந்த ஆழ்வார்‌ மிகுந்த கருணையோடு அவர்களுக்கு அருளிச் செய்வாரென்பதாம்‌

——–

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே.
12-

பொருள் -அகப்பொருள்
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி- பாங்கற் கூட்டம்‌,
துறை–அஃது, இவ்விடத்‌து இவ்வியல் தென்றல்

பல – பற்பலவாகிய,
வேதமும்‌ – வேதத்தின்‌ ௧ருத்தை யெல்‌லாம்‌,
செம்‌ தமிழ்‌ சொற்களால்‌ – செவ்விய தமிழ்ச் சொற்களிளாலே,
மொழிந்தான்‌ – பாடி யருளிய பராங்குசர் அவதரித்த,
குருகூர்‌-குருகூர்ப் பதியிலே, (நண்பனே!), பதுமத்து – ஒரு தாமரை மலரிலே,
இதழ்‌-சில இதழ்கள்‌,
இலவே – நிறத்தில்‌ முள்ளிலவ மலரேயாம்‌; உள்‌ – அவ்விதழ்‌களுக்குள்ளே,
முல்லை – முல்லை யரும்புகளும்‌,
உளவே- சில உள்ளனவாம்‌;
௨ள் – அவைகளிலிருந்து ,
இயம்பும்‌ – சொல்லப்படுகின்‌ற,
மொழியும்‌ – வார்த்தைகளும்‌,
சிலவே – சிலவுண்டாம்‌;
அவை – அவ் வார்த்தைகள் தாம்‌,
செழும் தேன்‌ – செழுமையான தேனை, ஓக்கும்‌ – நிகர்க்கும்‌;
(இன்னும்‌ அத் தாமரை மலரிலே), இரண்டு சலம்‌ வேல்களும்‌ – கோபம் செய்வனவாகிய இரண்டு வேலாயுதங்களும்‌,
உளவே-உள்ளனவேயாம்‌;
௮து – ௮ம் மலரையுடைய வடிவம் தான்‌, என்‌ – எனது,
தனி – ஒப்பற்ற,
உயிரே – உயிரே யாகும்‌;
காண்‌ – நீ சென்று அதனைப் பார்‌;

நண்பனே! யான்‌ கருதிய தலைவியினிடம்‌ ஆழ்வார்‌ குருகூர்‌; அவளியல்பு இலவ மலர் போன்ற இதழும்‌ முல்லை யரும்பொத்த பற்களும்‌ தேனொத்த சொற்களும்‌ தாமரை மலர்போன்ற முகமும்‌ வேல் போன்ற கண்களுமாம்‌; ௮ந்தப் பெண்‌ என்னுயிரே யாவளென்பதாம்‌. அவள்‌ எவ்‌விடத்தில் இருக்கிறாள் என்றதற்கு இடம்‌ குருகூரென்றான்‌–இயல் எவ்‌வண்ணமென்பதற்கு இதழ் -இலவென்றான்‌. மொழி பெறாது வருந்‌திய தலைவன்‌ அவள்‌ வறிது நகைத்தலை இயற்கைப்‌ புணர்ச்சியிற்‌ கண்‌டனனாதலின்‌ இதழுள்‌ முல்லை யுளவென்றான்‌. அவள்‌ வழிபாடு மறுத்த பொழுது சில சொற் கூறி யதனைக் கேட்டவனாதலின்‌ சிலவே சொல் என்றான்‌. பிற்பாடு அச் சொல்லைப்‌ பெறாமையால்‌ சில வென்றான் எனினுமாம்‌. அருமையைச்‌ செய்தலால்‌ தேனொக்குமென்றான்‌. தன்‌
மனத்தை ௮வள்‌ வசப்படுத்தலால்‌ முகத்தைத் தாமரை மலர் என்றான் –
அவள்‌ விழிகள்‌ தன் மேற் பாய்ந்து துன்பஞ்செய்தலால்‌ சல வேல்களென்‌றான்‌. ௮வள்‌ இன்றியமையாமையின்‌ என்‌ உயிரென்றான்‌. கைகோள்‌-களவு, கூற்று – தலைவன் கூற்று, கேட்போர்‌ – பாங்கன்‌-இடம்‌-முன்னிலை–காலம்‌ – இறந்த காலம்‌, மெய்ப்பாடு – உவகை , பயன் -பாங்கற்குணர்த்தல்‌. இலவு, முல்லை – மலர்களுக்கு முதலாகு பெயர்‌கள்‌, இயம்பும்‌ மொழியும்‌ – விரித்தல் விகாரம்‌, உள-முதல்‌ விளக்காக இரண்டிடத்தும்‌ கூட்டப்பட்டது.

ஆழ்வாருடைய திரு முக மண்டல திவ்ய ஸுந்தர்யத்தையும் கூரிய ஞான விகாஸத்தையும்
திருவாய் மலரின் செவ்வியையும் அதன் அகத்தே விளங்கும் ஸூத்தமான தந்த பங்க்தியையும் தீம் சொற்களையும் கண்டு ஈடுபட்ட பாகவதர் உசாவியா அன்பர்களுக்கு எடுத்துக் கூறுவதே இதுக்கு ஸ்வா பதேசம் –

———-

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே
. 13

உருக்கும்‌ நெய்யொடு – உருக்குவதற்குரிய வெண்ணெயுடனே,
தயிர்‌- தயிரையும்‌,
திருடி திருடி-ஆயர்பாடியில்‌ எல்லா வீடு களிலும் சென்று திருடி,
உண்டான்‌ – விழுங்கிய கண்ண பிரானது, அடி -திருவடியைசத் தொழுபவராகிய, சடகோபன்‌ – சடகோபனென்னும்‌ பெயருடையவரும்‌,
சந்தோடு – சந்தன மரங்களுடனே,
அயிர்‌ – நுண் மணலையும்‌ கொணர்ந்து, உருக்கும்‌ – கரை யோரங்களில்‌ ஒதுக்கித் தள்ளுகின்ற,
பொருநல்‌ – பொருநை யென்னும் தாமிரபர்ணி நதியை யுடைய,
குருகூர்‌ – குருகூர்ப் பதியிலவதரித்தருளிய,
எந்தை – எந்தந்தை போல்‌வராகிய பராங்குசரது ,
அம் தமிழ்‌ – அழகிய தமிழ்ப் பாடல்கள்‌,. (படிக்‌கும் பொழுது ), உயிர்‌ உருக்கும்‌ – நம்‌ உயிரை உருகச் செய்யும்‌ ;
புக்கு -உள்ளே புகுந்து ,
உணர்வு – அறிவை, உருக்கும்‌:
உடலத்தில்‌ உள்ள – நம் சரீத்திலமைந்துள்ள,
செயிர்‌ – குற்றமே,
உரூ கொண்ட -வடிவமாகக்‌ கொண்டிருக்கிற,
நம்‌ தீங்கு உருக்கும்‌ – நம்முடைய தீ வினைகளெல்லாம்‌ போக்கும்‌;

குருகூர்‌ ஆழ்வார்‌ அருளிச் செய்த திருவாய் மொழியானது உயிரையும் உணர்வையும்‌ செயிரைக் கொண்ட தீங்கையும்‌ போக்குமென்பதாம்‌.படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும்‌ உயிரையும்‌ உணர்வையும் தன்‌ வசப் படுத்திக் கொள்ளுதலால்‌ உயிரும் உணர்வும் உருக்கும் என்றார்‌-தீங்கு -காமக் குரோத லோபாதிகள்‌; இவை வேண்டிய அளவு துன்புறுத்தி இம்மைக்குப் பழியும்‌ மறுமைக்கு நரகும் தருதலால்‌ செயிருருக்‌ கொண்ட தீங்கு என்றார்‌. கண்ண பிரான்‌ ஆயர் பாடியில்‌ வீதிகள் தோறும் புகுந்து தயிரையும்‌ வெண்ணெயையும்‌ திருடி யுண்டமை வெளிப் படை- மற்றைய மொழிகள்‌ போலாகாமல்‌ தனக்கு அரசு வீற்றிருத்தற்கு நாடுடைமையும்‌ இலக்கண வரம்புடைமையும்‌ நோக்கி ௮ந்தமிழ் என்றார்‌. பொருநை யெனினும்‌ பொருநலெனினும்‌ பொருந்தும்‌, உடலத்து, ௮த்து – சாரியை-

———

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே
. 14

ஆர்‌ – சுவை நிரம்பிய,
தமிழ் கவியின்‌ – தமிழ்ப் பாடல்கள்‌போல,
பந்தம்‌- க்ரமமாக,
விழா – உத்சவங்கள்‌,
ஒழுகும்‌ – நடந்தேறி வருகின்ற,
குருகூர் – குருகூர்ப் பதிபில்‌,
வந்த – அவதரித்த,
பண்ணவன்‌ – சிறந்தவரான சடகோபர்‌,
௮ந்தம்‌ இலா – முடிவில்லாத,
மறை ஆயிரத்து – ஸாம வேத சாசை ஆயிரத்திலும்‌,
ஆழ்ந்த – மறைந்து இருக்கிற
அரும் பொருளை – அருமையாகிய விஷயத்தை,
செம்தமிழாக – செவ்விய தமிழ்ப் பாடலாக , திருத்திலனேல்‌-திருத்தமமையப் பாடி யருளா விட்‌டால்‌,
நிலம்தேவர்களும்‌ – பூசுரராகிய பிராமணர்களும்‌,
தம் தம்‌ – அவரவர்கள்‌ கொண்டாடப் படுகிற,
விழாவும்‌ – உற்சவங்கழும்‌,
அழகும்‌ -அவர்களுள்‌ அமைதியும்‌,
என்னாம்‌ – எத் தன்மையவாய்‌ முடியும்‌?

குருகூராழ்வார்‌ வேதத்தைத் திருவாய் மொழியாக வெளிப் படுத்தா விட்டால்‌ பிராமணர்களும்‌, அவர்கள்‌ வேள்வி முதலிய விழாக்களும்‌ ௮ழகும்‌ என்ன பயன்படுமென்பதாம்‌. ‘“பரத்துவாஜோ அத்திரி? என்ற வாக்யத்தின் படி பரத்துவாச முனிக்கு இந்திரன்‌ வேதமாகிய நான்கு மலைகளைச் காட்டி ௮வற்றில்‌ ஒவ்வொரு பிடி யெடுத்துக்‌ கொடுத்தவையே வேதமாக வழங்கப் படுவன என்றிருத்தலால்‌ ௮ந்தமிலா மறை என்றார்‌.
ஆழ்ந்த அரும் பொருளாவது -நாராயணனுக்கே பரத்வம் கூறுதல்‌.இம் மொழியின்‌ சுவை யேற்றம்‌ நோக்கிச்‌ செந் தமிழ் என்றார்‌. ஆகாயத்தில்‌ தேவர்களைப் போலப்‌ பூமியில்‌ பெரும் சிறப்புஉடைமையால்‌ அந்தணர் நிலத் தேவர் என்ற பெயர் பெற்றார்‌ ; பூசுரர் என்பதன்‌ பொருளும் இதுவே. சுவை நிரம்பிய தமிழ்க் கவிகள்‌ படிக்கப் படிக்க இன்பம் தருதலால்‌ பார்க்கும் தோறும் மகிழ்ச்சி தருகின்ற விழாவினுக்கு உவமித்தார்‌. (இதனால்‌ ஆசிரியர்க்‌குள்ள இம் மொழியிடத்தன்பு விளங்குவதாயிர்று.) வைஷ்ணவ மதத்தை நிலை நிறுத்தியவராதலால் பண்ணவனென்றார்‌ – பண்ணவன்‌ – குரு. நிலத் தேவர்ர்களென்னுமுயர்‌ திணையோடு விழாவும்‌ அழகுமென்னும்‌ அஃறிணையைக் கூட்டி மிகுதி பற்றி அஃறிணை முடிபாற் கூறினர்‌- ,

மண்ணாடின சக்ய ஜலம் தோதவத்தி சங்கணி துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்
அந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே அல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி நன் ஞானத் துறை சேர்ந்து தெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது–
ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -71-

அறியக் கற்று வல்லார் வைஷ்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –

———–

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே
. 15-

இயலோடு – இயல் தமிழோடு,
இசையின்‌ – இசைத் தமிழுமாகிய,
வண்ணம்‌ – அழகிய,
படைக்கு – சேனைக்கு,
தனி – ஒப்பற்ற,
தலை வேந்தன் – தலைமை வாய்ந்த அரசரும்‌,
மலர்‌ உகுத்த – பூக்களிலிருந்து உதிர்க்கப்பட்ட,
சுண்ணம்‌ – மகரந்தங்கள்‌,
படர்‌ – பரவிய,
படப்பை – நீர் நாட்டூராகிய,
குருகூர்‌ வந்த – குருகூரில் அவதரித்த, சொல்‌ கடல்‌ : தமிழ் சொற் கடல்‌ போல்பவருமாகிய பராங்குசர்‌,
மறை-வேதங்கள்‌,
பண்ணப் படுவனவும்‌ – இனிப் புதியனவாகச்‌ செய்யப் படுபவைகளும்‌,
உளவோ என்று -இருக்கின்‌றனவோ வென்று,
பல்லோர்‌ – பல வகைப் பட்டவர்களும் , வண்ணம்‌ பட – தங்கள்‌ மனத்தில்‌ நினைக்கும்படியாக,
சொல்‌ – சொற்கள்‌,
திகழ – விளங்குமாறு,
செய்தான்‌ – பாடி யருளினார் –

குருகூரிலவதரித்த சொற் கடலாகிய நம்மாழ்வார்‌ வேதங்களில் இனிச்‌
செய்யப் படுவனவும்‌ முளவோ வென்று கூறும்படி திருவாய்‌ மொழியைப்‌ பாடி யருளினாரென்பதாம்‌. வேதத்திற்‌ கூறப் படும்‌ பொருள்‌ நிலைமையினும்‌ மேலான பொருளை வெளிப் படுத்தலால்‌ பண்ணப்படுவனவும்‌ உளவோ மறை யென்றார்‌ -இதனை “மிக்க விறை நிலையும் மெய்யா முயிர்‌ நிலையும் , தக்க நெறியு்‌ம் தடையாகித் தொக்கியலு மூழ் வினையும்‌ வாழ் வினையுமோதுங்‌ குருகையர் கோன்‌, யாழினிசை வேதத்‌தியல்‌’” என்பதானாலும் அறிக- கடல்‌ – உவமை யாகு பெயர்‌,

எங்களைப் பணி கொள் என்று அன்றோ தமிழ் சொற்கள் ஆழ்வாருக்கு கைங்கர்யம் செய்யப் பாரித்தன-சொல் இகழச் செய்தான் -பகவத் விஷயங்களை அருளிச் செய்து
விஷயாந்தரங்களை இகழப் பண்ணி அருளினான் –என்றும் உரைப்பார்-

—————-

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே.
16-

களித்தார்‌ – கட்குடியராகிய அசுரர்களுடைய,
குடலை கலக்கும்‌ – குடல்களெல்லாம் கலங்கச் செய்கின்ற,
குளிர் சங்கினான்‌ -குளிர்ச்சி பொருந்திய சங்கத்தை யுடைய மாயோனானவன்‌, கடலைச் கலக்கி – சமுத்திரத்தைக் கடைந்து,
அமுது – அதிலுண்டாகிய அமிருதத்தை , ௮மரர்க்கு – தேவர்களுக்கு,
அளித்தான்‌ – கொடுத்தருளினான்‌ ; (அப்படிப்‌ போல) நடலை- வஞ்சனையாகிய,
பிறப்பு அறுத்து – பிறவியைப் போக்கி ,
என்னையும்‌—, ஆட் கொண்ட -அடிமையாகச் கொண்டருளிய,
நாயகன்‌ – நம்மாழ்வாரானவர்‌,
குறையா – குறைவில்லாத,
மறையின்‌ – வேதங்களின்‌,
திடலைக் கலக்கி – பெரிய திடலாகிய முட்டுக்களை யிடித்தெறிந்து
திருவாய் மொழியெனும்‌ – திருவாய்மொழி யென்று சொல்லப்படுகிற,
தேனை—-தந்தான்‌-தந்தருளினார்‌ –

மாயோன்‌ சமுத்திரத்தைக் கடைந்து தேவர்களுக்கு அமிருதம் கொடுத்தருளினான்‌ ; அப்படிப் போல நம்மாழ்வார்‌ வேதங்களின்‌ முட்டுப்‌பாடுகளைப்‌ பெயர்த்தெடுத்துத்‌ திருவாய்மொழி பாடி. அடியார்களுக்குக் கொடுத்தருளினார் என்பதாம்‌. தவத்தால்‌ நீங்குவது போலத் தோற்றி மீண்டும் பற்றிக் கொள்ளுதலால்‌ நடலைப் பிறப்பென்றார்‌- தமிழில்‌ ஓப்பாரும் மிக்காரு மில்லாச் சிறப்புடைமையால்‌ நாயகனென்றார்‌… அடியார்க்கு மகிழ்ச்சி செய்தலால்‌ குளிர் சங்கு என்றார்‌. பரத்துவாசனுக்கு இந்திரன்‌ நான்கு வேத மலைகளைக் காட்டி. அவற்றில்‌ “ஒவ்வொரு பிடி யெடுத்துக் கொடுத்து உலகத்தில் பராவச் செய்த பெருமையால்‌ குறையா மறை என்றார்‌- கடலை வேதமாகவும்‌ அமுதத்தைத் தேனாகவும்‌ அமரர்‌ அடியராகவும்‌-சங்கினான்‌ நாயகனாகவும்‌ உவமித்தமை காண்க,-இது எடுத்துகாட்டு உவமை யணி. என்னையும்‌, உம்‌- இழிவு சிறப்பு.

———

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே
. 17–

பிறர்‌ கடை தோறும்‌ – அயலார்‌ வாயில்கள்‌ தோறும்‌,
நாய் போல்‌ நுழைந்து – நாயைப் போல உள்ளே புகுந்து ,
அவர்‌ எச்சில்‌ -அவர்களுடைய எச்சிலை,
நச்சி- விரும்பி,
பேய் போல்‌ – பிசாசைப்‌ போல,
திரியும்‌ – அலைகின்ற,
பிறவியினேனை – பிறப்புடையவனாகிய
என்னை,
பிறவி எனும்‌ – பிறப்பென்கிற,
நோய்‌ – பிணிகள்‌,
போம்‌ மருந்து என்னும்‌ – போகத் தக்க மருந்தென்று சொல்லப் படுகிற,
நுன் -உமது
திருவாய் மொழி- திருவாய்‌ மொழிப்‌ பிரபந்தத்தை,
நோக்குவித்து -யான் பார்க்கும் படி கருணை செய்து,
தாய் போல்‌ – பெற்ற தாயைப் போல,
உதவி செய்தாய்க்கு – உபசாரம் செய்த உமக்கு,
அடியேன்‌ – தொண்டனாகிய நான்‌,
பண்டு – முன்னாளில்‌,
என் சாதித்தது -என்ன உபகாரம்‌ செய்ததுண்டு?

நாய் போல நுழைந்து பேய் போலத்‌ திரியுமென்பால் வன்பு கூர்ந்து நுமது திருவாய் மொழியைப்‌ பார்த்‌துப்‌ பிறப்பறுக்கும்படி உதவி செய்த உமக்கு யான்‌ முன் செய்த நன்றி தான்‌ யாதோ ?என்றதாம்‌, தம்‌ தாழ்ச்சியைக் குறித்துக்‌ கடைப்பட்ட நாயை உவமித்தார்‌.-ஒயாமல்‌ பிரந்து உழலுதலால்‌ மாறாமல்‌ அலைகின்ற பேயை உவமிழத்தார்‌, எச்சில்‌ – எஞ்சியது ; மிச்சமானதென்பதாம்‌ -எஞ்சு பகுதி இல்‌ – பெயர் விகுதி, நோய் போம்‌ மருந்து என்பதில்‌ போம்‌ என்ற காரியப் பொருளாகிய பெயரெச்சம்‌ மருந்து என்னும்‌ காரணப் பெயரைக் கொண்டது. நுன்‌ – பெயர்த் திரி சொல்‌,

வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாடி யுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் அளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக்குக் கவி சொல்லும் ஞானக் கடலே –

———–

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத்து இருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே.
18–

எம்‌ கோன்‌ – எங்கள்‌ தலைவராகிய நம்மாழ்வாரது,
தமிழ்‌ சொல்‌ என – தமிழ்ப் பிரபந்தம் போல,
உங்கள் வேதம்‌ – உங்களுடைய வேதங்களெல்லாம்‌,
பர தத்துவத்தை – மேலான கடவுளின்‌ நிலைமை இன்ன தென்பதை ,
சாதிக்குமே – உறுதிப் படித்துமோ ?
சமயம்‌ திருக்‌கை – அன்‌னிய மதங்களின்‌ மாறு பாடுகளை,
சேதிக்குமே – அழிக்குமோ ?
ஒன்று சிந்திக்குமே – ஒரு பொருளை ஆராய்ந் தறியுமோ (அப்‌படி அறிந்தாலும்‌),
அதனை – அறிந்த அவ் விஷயத்தை,
தெரிய போதிக்குமே – பிறர்க்குத் தெரியும் படி உணர்த்துமோ?
எங்கும்‌ ஓங்கி – எவ்‌விடத்‌திலும்‌ சிறப்படைந்து
பொது நிற்கும்‌ – பொதுவாய்‌ நிற்கின்ற
மெய்யை – சத்தியத்தையும்‌,
பொய்யை – அதற்கு மாறான அசத்தியத்‌தையும்‌,
சோதிக்குமே – ஆராய்ந்தறியுமோ ?

நம்மாழ்வார்‌ பிரபந்தம் போல உங்கள்‌ வேதம்‌ பரம் பொருள்‌ நிலையை நிறுத்திக் காட்டுமோ ? புற மதங்களின்‌ மாறுபாட்டை அழிக்குமோ ? ஒன்றை ஆராய்ந்தறியுமோ ? தெரிந்தாலும்‌ பிறர்க்குச்‌ சொல்ல முடியுமோ ? மெய்யையும்‌ பொய்யையும்‌ பகுத்தறியுமோ ? இவை யொன்‌றும்‌ செய்ய இயலாது என்பதாம்‌. எல்லார்க்கும்‌ மேலானாரென்பது பற்றிக் கோன்‌ என்றார்‌, உங்கள்‌ என்றது புற மதத்தவரை என்க -,-வேதம்‌ ஆங்காங்கு எல்லாக் கடவுளருக்கும்‌ படிப் படியாகப்‌ பரத்‌துவஞ்‌ சொல்லுதலால்‌ திருவாய்‌ மொழி போல ஓரே கடவுளைக் குறிக்காமை பற்றிச் சாதிக்குமோ வென்று எதிர் மறையாகக் கூறினாரெனினுமாம்‌.-இப் பாடல்களிலுள்ள ஏகாரங்களெல்லாம்‌ வினாவாகச்‌ கூறி யிருப்பினும்‌ எதிர் மறைப் பொருள்‌ படுதல்‌ காண்க-

————–

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே.
19-

குருகூர்‌ – திருக் குருகூரிலுள்ள,
எம்பிரான்‌ – நம்மாழ்‌வார்‌,
சொன்ன – ௮ருளிச் செய்‌த,
மாலையை – பாடலாகிய மாலையை,
சொல்‌ என்கேனோ – இயல்பாகிய தமிழ்ச் சொல்லென்பேனோ ?
முழு வேதம்‌ – எல்லா வேதத்திலுமுள்ள, சுருக்கு என்கெனோ – சுருக்கமான
சாரமென்பேனோ?
எவர்க்கும்‌ – யாவருக்கும்‌,
நெல்‌ என்கெனோ -௨ணவுப் பொருளாகிய நெல்லென்கெனோ?
உண்ணும்‌ – பருகுகின்ற,
நீர்‌ என்கெனோ – நீரென்பேனோ ?
மறை – வேதங்களை,
நேர்‌ நிறுக்கும் -நேரே தராசில்‌ நிறுத்‌தப் பார்ப்பதற்குரிய
கல்‌ என்கெனோ- படிக்‌கல்லென்று சொல்லுவேனோ ?
ஞானம்‌ முதிர்‌ – ஞானமாகிய சுவை முற்றிய,
கனி என்கெனோ – பழமென்பனோ?
புகலவல்‌ என்கெனோ -பல விதமாகச்‌ சொல்லுவதற்கு எனக்கு வலிமை யுண்டென்‌பேனோ,

குருகூர்‌ நம்மாழ்வார்‌ பாடல்களைக்‌ தமிழ்ச் சொல்லென்‌பேனோ ?வேத சாரமென்பேனோ?உணவுப் பொருளென்பேனோ? நீரென்பேனோ? படிக்கல்லென்‌பேனோ ? பழமென்‌பேனோ? பலவிதமாகச்‌ சொல்‌ல வல்லமை யுண்டென்‌பேனோ ? என்ன சொல்லுவேனென்பதாம்‌. ஒன்‌றோடொன்று அந்தாதியான தொடர்புடைமையால்‌ மாலை யென்றார்‌-இது தமிழ்ச் சொல்லென்பார்க்கு இதுவே வேதச் சுவையைத் திரட்டிச்‌ சுருக்க வைத்திருத்தலால்‌ சொல்லென்‌பெனோ சுருக்கென்‌பெனோ என்‌று ஐயத்தாற்‌ கூறினார்‌. திருவாய்‌ மொழியின்‌ பொருளாலுலகு நன்மை பெறுவதை நோக்கி உள்ளரிசியாலுலகு பிழைத்தற்குரிய நெல்லை உவமித்‌தார்‌ -ஏனைய வெளிப்படை-பலபடியாக விகல்பித்துச் சொல்லும் படி அன்றோ ஆழ்வாரது பிரபாவம் –

———-

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே
. 20-

பொருள்‌-அகப் பொருள்‌.
திணை– பாலை,
கிளவி-கற்பொடு புணர்ந்த கௌவை.
துறை–கலந்துடன்‌ வருவோர்‌ புலம்பல்‌ தேற்றல்

மாலை – பூ மாலை யணிந்த,
குழலியும்‌ – கூந்தலை யுடைய உன்‌ மகளும்‌,
வில்லியும்‌ – கையில்‌ வில்லை யுடைய அவள் தலைவனும்
மாறனை – நம்மாழ்வாரை,
வாழ்த்தலர்‌ – துதியாதவர்கள்‌,
போம்‌ – செல்‌லத் தகுந்த,
பாலை கடம்‌ – பாலை நிலத்‌து வழியை, பகலே கடந்து ஏகி -இன்றைப்‌ பகலிலேயே தாண்டிச்‌ சென்று,
மருதத்துப் பணை- மருத நிலத்து வயல்களில்‌,
கரும்பின்‌ஆலை – விளைந்துள்ள கரும்புகளை ஆட்டுகிற ஆலைகளில்‌,
நரேல்‌ என்னும்‌ ஓசையை – நரேலென்று ஒலிக்கிற ஒலியைக் கேட்டு,
அம் பொன் சாலை – அழகிய பொலிவு பெற்ற வீடுகளில்‌ வளர்க்கிற,
கிளி – கிளிகள்‌,
௮ஞ்சி – பயந்து ,
உறங்கா – தூங்காத,
திரு நாட்டு இடம்‌ – சிறந்த எமது நாட்டினிடத்தை,
சார்வர்கள்‌ – அடைவார்கள்‌;

உன்‌ புதல்வியும்‌ ௮வள்‌ கணவனும்‌ நம்மாழ்வாரைத்‌ துதியாதவர்‌ போகின்ற கொடும் பாலை வழியைசத் தாண்டி இனித்‌ தமது நாட்டை யடைவார் களென்பதாம்‌-செவிலியைத்‌ தேற்றுபவராதலின்‌ அவள்‌ வருத்த மின்றிச்‌ சென்றாளென்பது தோன்ற மாலைக் குழலி யென்றார்‌; எனவே இடை வெயிலில்‌ தலைவியும்‌ தலைவனும்‌ உகந்து அலா் சூட்டி உள் மகிழ்ந்து இருக்து -புறப்பட்ட பிறகு இவர்கள்‌ கண்டாரென்றறிக-எதிர்த்து வந்த சிங்கத்தைக் கொன்று அவளுக்கு ௮ச்ச முண்‌டாகாதபடி வில்லின்‌ நாணேற்றிக் கையிலேந்திச்‌ செல்கின்‌றமையால் வில்லி யென்றார்‌,கிளவித் தலைவன்‌ பெயர்‌ கூறாமையால்‌ அகப் பொருளாயிற்று,-போக்கெல்லாம்‌ பாலை” ஆதலால்‌ திணை – பாலை. தலைவி கற்பு நிலை தவறாமல்‌ ஒருவனைக்‌ கைக் கொண்டபடியே சென்றதால் எழுந்த பழிச்‌ சொல்லாதலால்‌ கற்பொடு புணர்ந்த கெளயை யாயிற்று, தேடிச்‌ சென்ற செவிலியை எதிர்‌ வந்தோர்‌ கூறித் தேற்றுதல்‌ துறைக் கருத்து,-கைகோள்‌ – களவு, கூற்று . கண்டோர் கூற்று, கேட்போர்‌ – செவிலி, இடம்‌ – முன்னிலை, காலம்‌ -நிகழ் காலம்‌. மெய்ப்பாடு – பெருமிதம்‌, பயன்‌ – செவிலியை மீள வுரைத்தல்‌, ஆதலால்‌ நீ மீள்வாயாக என்ற சொல் எஞ்சி நின்றது –

திருவடி இணைகளை தமது சென்னியில் பொருத்தி அந்த ப்ரணாமத்தால் அவனை வஸீ கரித்து தம்மைப் போன்ற அடியார்கள் இடரைத் தீர்த்து ரக்ஷணத்துக்காக ஸ்ரீ கோதண்டம் எப்போதும் திருக்கையில் ஏந்தி உள்ள எம்பெருமானை தர்சித்து அவரைப்பிரிந்து தரிக்க மாட்டாதவராய் அவரைப்பின் தொடர்ந்து ஸம்ஸாரத்தை தத்வ ஞானத்தால் கடந்து நிரதிசய அந்தமில் பேரின்பம் தரும் ஸ்ரீ வைகுண்டம் அடைவார் என்று இவரது வை லக்ஷண்யம் கண்ட உலகத்தார் அவர் பக்கலில் பரிவையுடைய ஞானியருக்குக் கூறுவதே இதற்க்கு ஸ்வா பதேசம் –

———-

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே.
21–

பொருள்‌–அது,
திணை -குறிஞ்சி ,
கிளவி–வரைவு கடாதல்‌.
துறை–நெறி யருமை கூறி வரவு விலக்கல்‌,

குருகைப் பிரான்‌ – குருகூர்‌ நம்மாழ்வாரது , திரு ஆணை -சிறந்த ஆஜ்ஜை -(கட்டளை) கொண்டுள்ள,
மலையவனே – பொதியில்‌ மலை யிலிருக்கிற தலைவனே !
சாரல்‌-மலைச்சார்பாகிய,
குறிஞ்சி தழுவம்‌ -குறிஞ்சி நிலம் தழுவப் பட்ட,
பொழில்‌ – சோலையிலே,
தளிர் மெல்‌ அடி -தளிர் போன்ற மெல்லிய அடிகளையும்‌,
தண்‌ – குளிர்ந்த,
குறிஞ்சி மூரல்‌ நகை-குறிஞ்சி அரும்பு போன்ற பற்களையுமுடைய தலைவியினது
முகம்‌ நோக்கற்கு-முகத்தைப் பார்ப்பதற்கு, நீ—-, முடுகும்‌-விரைசந்து வருகிற,
சூரல்‌ – பிரப்பங்காடுகள்‌ நெருங்கிய,
குறிஞ்சி நெறி – மலை வழியை,
நினை தோறும்‌ – நினைக்கும் பொழுதெல்லாம்‌,
துணுக்கெனும்‌ ஆல்‌ – அவள் துணுக்கென்று நடுங்குவளாதலால்‌,
வாரல்‌ – நீ வாராது நீங்குவாய்‌.

நம்மாழ்வார்‌ ஆஜ்ஜையைச்‌ சிரத்தால்‌ வகிக்கும்‌ பொதியிவின்‌ தலைவனே ! சோலையில்‌ தலைவியானவள்‌ அவள்‌ முகத்தைப் பார்த்து மகிழ்தலுக்கு நீ விரைந்து வருகிற மலை வழியை நினைக்கும் தோறும்‌ துணுக்கென்று நடுங்குவளாதலால்‌ நீ வாராதொழிவாய்‌ -என்பதாம்‌. எனவே தலைவன்‌ ஆற்றாதானாயினான் ; பின்பு ஒரு வழியாக ஆற்றுவானாம்‌ எப்படியோ வெனில்‌, ‘ பிரான் திரு வாணையை உடையவனே ” என்றமையால்‌ அவ் வாணையை உடையார்க்கு ஊறுபாடுகள்‌ வாரா வென்று தோழி அறிந்திருந்தும்
என்னை வர வேண்டாமென்று கூறியது வேறு ஓன்றினை நினைத்தன்றோ? ௮து தானும்‌ நான்‌ அவளை மணஞ்செய்து கொள்ள வேண்டியே என்று மன வுறுதி கொண்டு மறு நாள்‌ மணஞ்‌ செய்யப்‌ புகுவானாம்‌, இங்கனம்‌ கூறுதல்‌ தலைவனை நன்கு மதியாமையான வழுவாயினும்‌ இருவரும்‌ மணஞ்செய்து கொள்ள வேண்டிச்‌ கூறும்‌ அன்பின்‌ மிகுதியால்‌ வழுவமைதி யாயிற்று, இப்படி யன்றித்‌ தலைவனை வர வேண்டாமென்று பிரான் மேல்‌ ஆணை யிட்டு மறித்தாளென்‌று உரைப்‌பின்‌ ஆணை யிட்டு மறித்ததனால்‌ தலைவன்‌ வாராதே யொழியவும்‌ அதனால்‌ தலைவி யிறந்து படவுஞ்‌ செய்தவளாம்‌. அங்ஙனஞ்‌ செய்யவே “ நாணவும் நடுங்கவும் நாடாள்‌ தோழி ” என்னுஞ்‌ சூத்திரத்துக்கு விரோதமாம்‌ ; ஆதலால்‌ இவ் விஷயங்களை கல்வி யறிவுடையோர்‌ ஆராய்ந்து அறிவாராக.’
தளிர் மெல்லடித் தண் மூரற் குறிஞ்சி நகை -௮ன்மொழித்‌ தொகை பன் மொழித் தொடர்‌, குறிஞ்சி மூரல்‌-மூரல்‌-அரும்புக்கு உமையாகு பெயர்‌, ** முல்லை, யாழ் கடற்றானை வேந்தே ! அணியெயி றீன்‌ற தன்றே’-என்ற சிந்தாமாணிச்‌ செய்யுளுரையை நோக்குக-துணுக்கெனல்‌ – ௮ச்‌சக் குறிப்பு, கைகோள்‌-களவு, கூற்று – தோழி கூற்று, கேட்போன்‌ -தலைவன்‌, இடம்‌ – முன்னிலை, காலம்‌- எதிர்காலம்‌,-மெய்ப்பாடு- அச்சத்தைச்‌ சார்ந்த பெருமிதம்‌, பயன்‌- வரைவு கடாதல்‌,

———–

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே.
22-

மலை- பொதியில்‌ மலையிலுள்ள,
ஆரமும்‌ – சந்தன மரமும்‌,
கடல்‌ ஆரமும்‌ – கடலிலுள்ள முத்துக்களும்‌, பல்‌ மா மணி குயின்‌ற -பலவாகிய சிறந்த ரத்னங்களால் இழைத்த
விலை ஆரமும்‌ – விலை பெற்ற மாலைகளும்‌,
விரவும்‌ – பொருந்தி யிருக்கிற,
திரு நாடனை – சிறந்த பாண்டி நாட்டிலுள்ளவராகிய,
வேலை – சமுத்திரத்தை,
கட்ட சிலை – அம்பு விட்‌டெரித்த கோதண்டமென்னும்‌ வில்லை யுடைய,
ஆர்‌ – அரிய,
௮முதின்‌-அருமருந்தன்ன இராம பிரானுடைய,
அடி – திருவடிகளில்‌ பற்றுள்ள,
சடகோபனை – நம்மாழ்வாரை,
சென்று இறைஞ்சும்‌ – போய்‌ வணக்குகின்ற,
தலையார்‌ – தலையை யுடையவர்‌,
௭வர் !-யாவரோ, அவரே.
எம்மை – எங்களை,
ஆளும்‌ – ஆண்டு கொள்ளுகின்ற, தபோதனர்‌-தவமாகிய செல்வத்தை யுடையவராவர்‌ ;

மூவகை ஆரங்களும்‌ பொருந்திய பாண்டி நாட்டிலுள்ளவரும்‌ இராம பிரானடித் தொண்டருமாகிய நம்மாழ்வாரை வணங்குபவர் யாவரோ அவரே எங்களுக்குத்‌ தலைவராவாரென்பதாம்‌, விலை யாரம்‌ இந்திரன்‌ கொடுத்த மாலையுமுடைய பாண்டி நாடென்றாகலுமொன்று ; அதற்கு “ கோவா மலையாரங்‌ கோத்த சடலாரம்‌. தேவர் கோன்‌ பொன்னாரம்‌ தென்னர் கோன்‌ மார்பினவே:? என்ற சிலப்பதிகாரத்தையும்‌ நோக்குக” இராமாமிருதமென்னும்‌ பெயருடைமையால்‌ அமுதென்றார்‌; அன்றி மனத்திற்‌ கொண்டாரை நிலை பெற வாழ்வித்தலாற்‌ கூறினார் என்றலுமாம்
வேலை சுட்டது :–இராமாவதாரத்தில்‌ இராம பிரான்‌ . தென்‌ கடலருகு வந்து இலங்கைக்குச்‌ செல்ல வழி வேண்டி வருணனை அழைத்‌தலும்‌ ௮வன்‌ வாராமையால்‌ சினங்கொண்டு ௮க்னியாஸ்திரத்தைப்‌ பிரயோகித்துக்‌ கடலை வற்றச் சுட்டு வருணன்‌ வந்து அடைக்கலம்‌ புகக்‌ காத்தருளினார் என்பதாம்‌. அமுது -உவமை யாகு பெயர்‌. குயின்ற-குயில்‌ – பகுதி, ௮வரே , ஏ- பிரிநிலை ,

தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே- தலையை யுடைய அவரே எம்மை அடிமை கொள்ளும் தவச் செல்வர் ஆவார்-ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் போல்வார்
கற்றார் பரவும் ராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவர் அவர் எம்மை
நின்று ஆளும் பெரியவரே -ராமானுஜ நூற்றந்தாதி பாசுரத்தை ஒட்டியே இப் பாசுரம் –

———–

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே.
23-

போந்து – எங்கள்‌ விமானத்தில் வந்து,
ஏறுக என்று-ஏறிக் கொள்ளுக வென்று,
இமையோர்‌ – தேவர்கள்‌,
புகலினும்‌ -சொன்‌னாலும்‌,
பூ – அழகிய,
தொழுவின்‌ – கொட்டிலினிடத்துள்ள,
வேந்து -தலைமை பெற்ற,
ஏறு – ஏழு காளை மாடுகளை,
அடர்த்தவன்‌ – அடக்கிய கண்ண பிரானது ,
வீடே பெறினும்‌ – பரம பதத்தை யடையப்‌ பெற்றாலும்
எழில்‌ குருகூர்‌ – அழகிய குருகூர்ப் பதியில்‌,
நாம் தேறிய – நாங்கள்‌ தெளிவடையச் செய்த,
அறிவன்‌ – பேரறிவாளராகிய நம்மாழ்வாரருளிச்‌ செய்த, திருவாய்மொழி —,
நாளும்‌ – தினமும்‌,
நல்கும்‌- கொடுக்கின்ற,
தீம்‌ தேறல்‌ – இனிய தேன் போன்ற சுவையை,
உண்டு உழலும்‌ – பருகி உலாவுகின்‌ற , சித்தியே-ஓப்பற்ற பயனே,
வந்து…-சித்திக்கும்‌-நான்‌ பெறும்படி எனக்குக் கை கூடா நிற்கும்‌;

என்னைத் தேவர் வந்து அழைத்தாலும் நான் பரம பதம் அடைந்தாலும் குருகூர்‌ நம்மாழ்வாரருளிச் செய்த திருவாய் மொழியின்‌ இனிய சுவையை உண்டு மகிழும் சித்தியே எனக்குக்‌ கை கூடி யிருக்கும்‌ என்பதாம்‌-இது ௮ப்பிரபந்தத்தின்‌ சுவை மிகுதியைத் துதித்தவாறு, ஆராயுங்காலத்‌திலே தெளிவடைந்த மகிழ்ச்சியால்‌ நாம்‌ என்று தன்மைப் பன்மையாற்‌ கூறினார்‌…படிக்கும் தோறுஞ்‌ சுவை தருதலால்‌ நாளும்‌ நல்குமென்றார்‌-ஏனைய பயன் போலாகாமல்‌ மேம் பட்டமையால்‌ சித்தி யென்றார்‌, ஏறு -விலங்கின் ஆண் பாற்‌ பெயர்‌ ; இங்குக் காளைக்காயிந்று, வீடே,-ஏ-தேற்‌றம்‌, தேறல்‌ – கள்ளின்‌ தெளிவுமாம்‌ ;௮தற்கேற்ப உண்டு உழலுமென்றதனால்‌ இத ஏக தேச வுருவக வணி. கண்ணன்‌ ஏறடர்த்தது: — நம்பினைப் பிராட்டியாரை மணஞ்செய்விக்க வேண்டி ௮வள்‌ தந்தை யானவன்‌ அசுர விவாகமாக நியமித்துத்‌ தன் தொழுவிலுள்ள கொழுத்த ஏழு காளைகளைப்‌ பிடித்‌துக் கட்டுபவனுச்கு என்‌ மகளைக்‌ கொடுப்பேனென்றதை யறிந்த கண்ண பிரான்‌ அங்ஙனமே அவற்றை யடக்கி ௮வளை மணம் புரிந்து கொண்டானென்பதாம்‌.

———-

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே.
24-

சடகோபன் – நம்மாழ்வார்‌ பாடி யருளிய,
மொழித் தொகை – பாடல்களின்‌ தொகுதியானது ,
சித்தர்க்கும்‌- எண் வகைச்‌ சித்தி யுடையவர்க்கும்‌,
வேதச் சிரம்‌ – வேதத்தின்‌ தலையாகிய வேதாந்தத்தை,
தெரிந்தோர்கட்கும்‌ – அறிர்தவர்களுக்கும்‌, செய்‌ தவர்க்கும்‌ – தவத்தைச் செய்பவர்க்கும்‌,
சுத்தர்க்கும்‌-பரி சுத்தமுடையவர்க்கும்‌, மற்றைத் துறை- வேறு மார்க்கங்களிலிருந்து ,
துறந்தோர்கட்கும்‌ – எல்லாப் பற்றும் விட்ட துறவிகளுக்கும்‌,
தொண்டு செய்யும்‌ – கடவளுக்கு அடிமை செய்கின்‌ற,
பத்தர்க்கும்‌ – அடியார்களுக்கும்‌,
ஞானப் பகவர்க்குமே அன்றி- ஞானமிகுத்த பெரியோர்களுக்குமே யல்லாமல்‌,
பண்டு – முன்னாளில்‌ சென்‌ற,
முத்தர்க்கும்‌- முத்தி பெற்றவர்களுக்கும்‌, இன்‌ ௮முதம்‌- இனிய ௮மிருதமேயாம்‌;

நம்மாழ்வார்‌ பாடல்கள்‌ சித்தர்‌ முதலாகிய எல்லார்க்கும்‌ இனிய அமிருதமாகவே யிருக்குமென்பதாம்‌, சித்தி எட்டாவன: —அணிமா,மகிமா, தெரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம்‌, ஈசத்துவம்‌, வசித்துவம் -என்பன. சுத்தர்‌- மனத்திற்‌ பரி சுத்தமுடையவர்‌. பகவர்‌ – வீரம்‌ கீர்த்தி வைராக்கியம்‌ இவற்றில்‌ மிக்கவர்‌, முத்தி யடைந்தவர்‌-பரம பதத்தில் தேவராயிருந்து இதனைக் கேட்டு மகிழ்வாராதலில்‌ அவர்க்கும்‌ இன்‌னமுதமென்றார்‌.-வேதாந்தமான உபநிஷத்துக்களை ஆராய்பவர்‌ அதனிலும்‌ இதன்‌ கருத்துத்‌ தெளிவாய்‌ விளங்குதலால்‌ அவர்க்கும்‌ அமுதென்றார்‌. இதிலுள்ள உம்மைகள்‌ எண்ணுப் பொருளன. பகவர்க்குமே, ஏ – பிரிநிலை,

———-

தொகை உளவாய பணுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே
. 25-

தொகை உள ஆய -சேர்க்கப் பட்டுள்ளனவாகிய,
பனுவற்கு எல்லாம்‌ -சாஸ்‌திரங்களிலெல்லாம்‌,
துறை தோறும்‌ – ஒவ்வொரு பகுதிகள் தோறும்‌,
தொட்டால்‌ – உற்று நோக்கினால்‌,
பகை உளவாம்‌ -ஒன்றற்கொன்று விரோதமுள்ளனவாம்‌ ;
மற்றும்‌ – மீட்டும்‌,
பற்றுளவாம்‌-தொடர்சி யுள்ளனவாகும்‌ :
பழ நால் மறையின்‌ – பழமையகிய நான்கு
வேதங்களின்‌,
வகை உளவாகிய- பகுதி யுள்ளனவாகிய,
வாது உளவாம்‌ -விரோதங்களுமுள்ளனவாகும்‌; (அப்படியன்றி,) குருகூர்‌ -திருக்குருகூரிலவதரித்த,
எம்பிரான்‌ தன்‌ – எங்களிறைவனாராகிய நம்மாழ்வாருடைய,
விழு தமிழ்க்கு-சிறந்த தமிழ்ப் பாடல்களில்‌,
வந்த வந்த இடத்து – பார்த்த பார்த்த இடங்களிலெல்லாம்‌,
ஏ- சிறந்த,
மிகை உளவாம்‌ -மேம் பாடுகள்‌ உள்ளனவாகின்றன ;

எல்லாச் சமய நூல்களிலும்‌ உற்று நோக்குமிடத்து ஒவ்வொன்றிலும்‌ முன்னுக்குப் பின்‌ விரோதமாகக் கூறுவன வுள்ளன ; ௮ப்படி யன்றிக்‌ குருகூர்‌ நம்மாழ்வார் பாடல்களில்‌ பார்க்குமிடம் தோறும்‌ சிறந்த மேம்பாடான பொருள்கள் அமைந்துள்ளன வென்‌பதாம்‌-நான்மறையின் வாது – வேதவிரோதம்‌; அஃதாவது, வேதத்திற் கூறும் பொருளுக்கு விரோதமாகக் கூறுவது-வந்த இடம்‌ -வந்திடம்‌ ;பெயரெச்ச விகுதி தொக்கது.
‘* ஏ பெற்றாகும்‌ ‘? என்றதனால்‌ ஏ என்னும்‌ ஓரெழுத்தொரு மொழி உரிச்‌ சொல்லாயமைந்த விடத்துப்‌ பெருமையை யுணர்த்தும்‌,

———

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே
26-

௮ரு வினைகாள்‌ -நீங்குவதற் கரிய வினைகளே!
இள நாகு சங்கம்‌- மிக்க இளைய சங்கங்களில்‌,
கொழு – உழுகின்ற கொழுவானது ,
பாய்‌ -பாயப் பெற்ற,
மருதம் சுலாம்‌- மருத நிலங்கள் சூழ்ந்துள்ள, குருகூர் ,
எம்‌ குலம்‌ – எம் போல்வாராகிய தொண்டர்‌ கூட்டங்களுக்‌கு,
கொழுந்து – கொழுந்து போல்வாராகிய,
ஒருவன்‌ – ஒப்பற்ற நம்மாழ்‌வார்‌,
உம்மை – உங்களை,
அப் புறத்தே – எங்கள் இடத்தில்‌ நெருங்க ஓட்‌டாமல்‌ அப்பால்‌,
இழுப்பான்‌ -இழுத்தெறிய வேண்டி, வந்து
இன்று – இப் பொழுது,
நின்றான்‌ – எம்‌ உள்ளத்தில்‌ எழுந்தருளி யிருக்கிறார்‌; (ஆதலால்‌,)
மெய் உற வந்து – மெய்யாகவே எங்களைக் கிட்டி வந்து,
அழுப்பாது – அப்பாமல்‌,
ஓழிமின்‌ – நீங்கி விடுங்கள்‌ ;
இனி – இனி மேல்‌,
எம்மை-எங்களை,
பிறவித் துயர்‌ – பிறவியாகிய துன்பத்தில்‌, விழுப்பார்‌ யார்‌ – தள்ளுபவர் யாவர்‌ இருக்கிறார்கள்‌ –

வினைகளே ! குருகூரிலவதரித்த ஒப்பற்ற நம்மாழ்வார்‌ உங்களை நீக்க வேண்டி எம்முள்ளத் தெழுந்தருளி யிருக்கிறார்‌-ஆதலால்‌ கிட்ட நெருங்காதீர்‌ ; ; இனி எம்மைப்‌ பிறவிபில்‌ தள்ளுபவர்‌ யாவர்‌ இருக்கிறார்கள்‌? என்பதாம்‌-ஆழ்வார்‌ மனத்திலிருப்பதைக் காட்டி அச்சுறுத்தி வினைகளை யொழித்து விட்டால்‌ இனிப்‌ பிறவியில்‌ புகாதிருத்தல்‌ நிச்சயமென்று கொண்டு விழுப்பார் யாரென்றார்‌. ஊர்ந்து வருகிற சங்குகளை உழுது வருகின்ற கொழுவானது வயிற்றில் குதித்துத் தள்ளுதல் போல, அடர்ந்து வரும் வினைகளை ஆழ்வார் கருணை சென்றழிக்குமென்பது தொகை மொழியின் கருத்து, இளநாகு- மீமிசைச் சொல்‌. கொழுந்து உவமை யாகு பெயர்‌ -ஆயர் குலக் கொழுந்து ?’ என்றார் பிறரும்‌. கொழு- கலப்‌பைப் படை வாள்‌ நுணியில் தைக்கும் இரும்பு.

பெற்றம் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்று இல்லை கண்டீர் நடமின் -என்றும்

திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் நம் மேல் வினை -என்றும்

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன் —
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு -என்றும்

இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் ஆறு வினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -என்றும்
உள்ள அருளிச் செயல்கள் இங்கே அனுசந்தேயம் –

———

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே.
27-

பொருள் –அகப் புறப் பொருள் ,
திணை –பெருந்துணை
துறை–மாலை பெறாமல்‌ வருந்தித் தலைமகளேங்கியது அறிந்த பாங்கி புலம்பல் –

கொழுந்தோடு – கொழுந்துகளும்‌, இலையும்‌, முகையும்‌- அரும்புகளும்‌, எல்லாம்‌ – மற்றுள்ள மலர் காய்களும்‌, கொய்யும்‌ கொய்‌ மகிழ்‌ கீழ்‌ – மிகக் கொய்யும் படியாகிய மகிழ மரத்தின்‌ கீழ்ச் சென்று,
விழுந்து ஓடுவது -அங்கே காற்றால் விழுவது ஓடுவதாகிய
ஓர்‌ சருகும்‌ பெறாள்‌ -ஒரு சருகேனும் பெற்றாளில்லை;
விறல்‌- வலிமை யுடைய,
மாறன்‌ என்றால்‌ – நம்மாழ்வாரென்று அயலர் கூறினால்‌,
அழும்‌ – அழுகின்றனள்‌;
தோள் தளரும்‌- சோள் தளர்ச்சி யடைவாள்‌;
மனம்‌ உருகும்‌-மனம் கரைவாள்‌ ;
குருகூர்‌ அறையில்‌ -குருகூரென்று சொன்னால்‌,
எழுந்து ஆடவும்‌- தான்‌ எழுந்‌து ஒடிச் சென்று அவ்வூரை யடையவும்‌,
இ-இந்த,
இளங்கொடிக்கு – இளமையான கொடி போன்ற பெண்ணுக்கு,
கருத்து உண்டு- நினைவு உண்டாயிருக்கிறது ;
கெட்டேன்‌ – நான் யாது செய்கேன்‌-கெட்டேன்‌ !

நம்மாழ்வாரைச் சேர விரும்பிய இப் பெண்‌ ௮வர்‌ வருவதற்கு அடையாளமாக முன்னாடியே அவர்மகிழ மாலையை வர விடுக்காமையால்‌ ௮ம்‌ மலரையாவது அணைத்துக் கொண்டு காமத்தைக் கழிக்கலாமென்று அம்‌ மரத்தடியிற் சென்றாலோ எல்லாம் கொய்யக் கூடிய அதன் சருகும்‌ பெற்‌றாளில்லை-௮வர் பெயரைச் சொன்னால்‌ அழுகின்றாள்‌ ;தளர்கின்றாள்‌ ;உருகுகின்றாள்‌ ; குருகூரென்றால்‌ அவட்கு ௮ங்கு ஓடவுங் கருத்துண்டு-ஆ ஆ ! கெட்டேன்‌ ! என்றாள்‌ என்பதாம்‌. காமத் தீக்கு ஆற்றாளென்பது தோன்ற இளங்கொடி யென்றார்‌. இவள்‌ இன்னும் காமத்தால்‌ மிக வருந்திப் புலம்புவள் போலுமென்பார்‌ எல்லாம் கொய்யக் கூடிய மகிழின்‌ சருகும்‌ பெற்றாளில்லை யென்றார்‌. ஆற்றாமை மிகுதியினால்‌ ௮ழுமென்றார்‌, அணைத்து மகிழ்வது தோளாதலால்‌ ௮து பெறாமை ஹேதுவாகத் தோள்‌ தளருமென்றார்‌, மனத்தை அவர் பால்‌ விடுத்தமையால்‌ உருகுமென்றார்‌. யாமிங்‌கு இருத்தலால் எழுந்தோடவில்லை கருத்து மட்டுமுண்டு என்‌றார்‌. தோழியாற் செய்யும் உபசாரமனைத்துஞ்‌ செய்தும்‌ பயன் படாமையால்‌ கெட்டேனென்றாள்‌. தோழி செய்யுமுபசாரமாவது மலரணையலும்‌ சந்திரகாந்தச்‌ சிலையிலும்‌ படுச்கச் செய்தல்‌ -கொங்கைகளில்‌ தளிர்களையும்‌ சந்தனத்தையும்‌ பிறவற்றையும்‌ அப்புதல்‌; பன்னீர் தூவுதல்‌ முதலியவாம்‌, இது கிளவித் தலைவனது இயற் பெயரைக் கூறினமையால்‌ ௮கப் பொருளாகாமல்‌ அகப் புறப் பொருளாயிற்று-கை யற்றுப் புலம்புதலால்‌ கந்தருவத்தின் வழுவிய பெருந் திணை யாயிற்‌று. தலைவன்‌ வருவதற்கு அடையாளமாக முன்னாடி மாலையை வர விடுக்க வில்லையே யென்று வருந்திய தலைவியின்‌ வருத்தம் கண்ட தோழி புலம்பினாள் என்பது துறையின் கருத்து.

தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
-என்றும்
சீரார் இதழ் பொழில் மாலிருஞ்சோலையில் செல்வர் செங்கண் போரார் தாள் புனை தழை தொடுத்த நாரார் இதாகில் பிழைப்பு அரிதாம் எங்கள் நன்னுதற்கே –என்றும்
உள்ள அருளிச் செயல்கள் அனுசந்தேயம் –

கம்ப நாட்டாழ்வார் ஆழ்வார் திருவடிகளில் சேர்ந்து இருக்கப் பெறாது வருந்தும் நிலையில்
அவருடன் நேராகவாவது இடையிட்டாவது சம்பந்தம் பெற்ற பொருள் யாதாயினும் ஒன்றை
அவருடைய பிரசாதமாகப் பெற்று ஆறி இருக்கக் கருதி வேண்டுதலையும் அங்கனம் ஒன்றும் அவருக்கு கிடைத்திடாமையும் ஆழ்வாருடைய திரு நாமத்தைச் சொல்லும் போது எல்லாம் பக்தி பரவசராய் அழுது உடல் சோர்ந்து மனம் தளர்தலையும் அவரது திவ்ய தேசத்துக்கு விரைந்து செல்ல விரும்புதலையும் அன்பர்கள் பாராட்டி இனி இவருக்கு என்னாகுமோ என்று இரங்கிக் கூறுதல் இதற்கு ஸ்வாப தேசம் –

———-

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே
. 28-

ஆரணத்தின் படி-வேதத்தைப் போல, -நான்‌கு பகுதியாக,
எடுத்துக் கொண்ட – தமிழில்‌ எடுத்‌துக் கொண்டு கூறிய,
மாறன்‌ என்‌றால்‌ – நம்மாழ்வார்‌ என்று யார் சொன்னாலும்‌,
பதுமக் கரங்கள்‌ – தாமரைப் பூப் போன்ற கைகளை,
முடி யெடுத்துக் கொண்ட – தலையில்‌ அஞ்‌சலி செய்து கொண்ட,
அந்தணர் – எல்லா வுயிர்களிடத்தும்‌ ௮ன்பு பொருந்திய மேலோர்களுடைய,
தாள்‌ – பாதங்கள்‌,
என் முடி என – எனது தலையிற்‌ சூடப் படுவன வென்று,
கொடி. எடுத்துக் கொண்டு நின்றேன்‌ -விருதுக் கொடி பிடித்‌துக் கொண்டு நிற்கின்றேன்‌ ; (அதலால்‌),
இனி -இனி மேல்‌,
கொடுங்கூற்றினுக்கு – கொடிய யமனுக்கு,
ஓர்‌ அடி எடுத்‌துக் சொண்டு – ஒரு காலை எடுத்துக் கொண்டு,
என்பால்‌ வரலாகும் கொல்‌-என்னிடத்தில்‌ வருதல்‌ கூடுமோ? |கூடாதென்பதாம்‌]

நம்மாழ்வாரென்று யார்‌ கூறினும்‌ ௮ன்பினால்‌ அஞ்சலி செய்கின்‌ற கருணை யாளர்களுடைய திருவடிகளே என் முடியிற்‌ சூடுவன வென்று விருதாக நான் கொண்டிருக்கின்‌றமையால்‌ கூற்றுவன்‌ அஞ்சாமல்‌ என்னிடத்து அடி யெடுத்‌து வைக்கக் கூடுமோ ? கூடாதென்பதாம்‌-நான்கு பிரபந்தங்களைச்‌ செய்தமையின்‌ ஆரணத்தின் படி யென்‌றார்‌. கரங்கள்‌ முடி யெடுத்‌துக் கொண்ட வென்றது அன்பு மேலீட்டினால்‌ என்க, ௮ந்தணர்‌ -௮ழகிய தண்மை யுடையார்‌ என்றதே பொருத்தமுடையது. ௮ந்தணர்‌. வைஷ்ணவப் பிராமணரென்றால்‌ குறைபாடு என்‌னை யெனின்‌ அதில்‌ தோன்றிய சிலர்‌ பொருளாசை மேலீட்டினால்‌ பிறர்‌ நூல்‌ உரை முதலியவரற்றை இகழ்ந்து கூறி நரகமே குடியாகக் கொள்ளுத லால்‌ முற்கூறிய அழகிய தண்மை யுடையார் என்பதே உரை யென்க ,

———-

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே.
29–

இராவணன்‌ தன்‌ – இராவணனுடைய,
பொன் முடியால்‌ -பொன்னாகிய கிரீடமணிந்த தலைகளைக் கொண்டு,
கடல் தூர்த்த – சமுத்‌திரத்தைகத் தூரச் செய்த,
வில்லான்‌ – கோதண்டமென்னும்‌ வில்லை
யுடையவனுடைய,
அவன்‌ – அந்த இராம பிரானுடைய,
இணை தாள்‌ கீழ்‌ -இரண்டு திழுவடிகளிலும்‌,
பொருநை துறைவன்‌ – தாமிரபருணை யாற்‌றம் கரையி லவதரித்த நம்மாழ்வார்‌,
தன்‌ முடியால்‌ – தம் தலையால்‌ வணங்கி ,
எ பொருளும்‌ – எல்லாப் பொருள்களையும்‌,
தழீஇ – ஒரு சேரச்‌ கொண்டு,
சொல்‌ முடியால்‌ – சிறந்த சொற்களாலமைந்த,
அமுதம்‌ -அமிர்தம் போன்ற,
ஆயிரம்‌ கவி- ஆயிரம்‌ பாடல்களை,
சூட்டினன்‌ -பாடிச் சேர்ப்பித்தனர்‌; (அவ் வாழ்வாரைத் துதிக்கின்ற), எனக்கு—-.
என்‌ முடியாது – என்ன காரிய முடிய மாட்டாது?
யாதே அரியது – எது தான்‌ அரியதாகும்‌? [எல்லாம்‌ முடியும்‌-௮ரிதொன்றுமில்லை யென்பதாம்‌]

இராவணனைக் கொன்ற இராம பிரான்‌ திருவடிகளில்‌ நம்மாழ்வார்‌ ஆயிரம் பாடல்‌ பாடிச் சூட்டினார்‌;-அவரடியனாகிய எனக்கு முடியாத காரியம் தான்‌ யாது? ௮ரியது தான்‌ யாது? [ஒன்று மில்லை] என்பதாம்‌, இராவணன்‌ -இலங்கைக் கிறையவன்‌ ; ஸ்ரீ கைலாஸ மலையைப்‌ பெயர்த்து அதன் கீழ்‌ ௮கப் பட்டுக் கொண்டு ஒயாமற்‌ கதறினமையால்‌ இப் பெயர் பெற்றனன்‌ ; இராவணம்‌ -அழுகை, ௮வன்‌ தன்‌ தலைகள்‌ வெட்டுண்டால்‌ மீள முளைக்கும் படி பிரமனிடத்தில்‌ வரம் பெற்றான்‌-பின்பு இராம பிரான்‌ போரில்‌ ௮வன் தலைகளை வெட்டிக்‌ கடலிற்‌ குவித்தனன்‌ ; வெட்ட வெட்ட முளைத்தமையால்‌ மார்பிலோரம்பெய்து ௮வனைக் கொன்றனன்‌. எப் பொருளும்‌ – முதல் கடவுளாகிய மாயோன்‌ நிலையும்‌, அக் கடவுளை யடையும்‌ நெறியும்‌, அடைதற்குரிய உயிர்களினிலையும்‌, அடைதலாற் பெறும்‌ பேறும்‌ பிறவுமாம்‌, எனக்கு – இடை நிலைத்‌ தீவகம்‌. தழீஇ – சொல்லிசை யளபெடை, ௮முதக் கவி -உவமைத் தொகை,-

——–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே
. 30–

சூட்டில்‌ – செற் போரில்‌,
குருகு – நாரை முதலிய பறவை,
உறங்கும்‌ – தூங்குகின்ற,
குருகூர்‌ – திருக் குருகூரையும்‌, தொழுதேன்‌-வணங்கினேன்‌ ;
வழுதி நாட்டில்‌ – பாண்டி நாட்டில்‌,
பிறந்தவர்க்கு-பிறந்தவராகிய இறைவனிடத்தில்‌ ௮ன்புடையவருக்கு,
ஆளும்‌ செய்தேன்‌ – அடிமையுமாயினேன்‌ ;
(ஆதலால்‌), மறை – வேதமான,
மெய்‌ எனில்‌, உண்மையா யிருக்குமானால்‌, என்னை- -,
நல்வினை ஆம்‌ நாட்டில்‌ -நல்ல தவஞ் செய்தலால்‌ மேன்மை யுற்ற நாட்டில்‌, புகுதவிட்டு – ,
உய்யக் கொள்‌ – பிழைக்கும்படி ௮ருள் செய்கின்‌ற ,
மாறன்‌ – நம்மாழ்வாருடைய,
கழல்‌ – பாதங்களை,
பற்றி போய்‌ – புணையாகக் கொண்டு சென்று,
வீட்டில்‌ புகுதற்கும்‌- மோட்சத்தை அடைதற்கும்‌,
குறை உண்டே – தடை யுண்டோ ? (இல்லை யென்றதாம்‌;)

யான்‌ அழ்வார்‌ அவதரித்த குருகூரை வணங்கினேன்‌ ; பாண்டி நாட்டிலுள்ள கடவள் பாலன்புடையவர்களுக்கும்‌ அடிமையாயினேன்‌ ; வேதம்‌ உண்மையா யிருக்குமானால்‌ நல் தவத்தில்‌ என்னை விட்டு ஆழ்வார்‌ பாதங்களே புணை யாகக் கொண்டு மோட்சத்திற்குச்‌ செல்லத் தடை யுண்‌டோ? என்பதாம்‌. தாம்‌ கவலை யற்று மோட்சதிற்குச் சென்று வசிக்கலா
மென்பதை உள்ளடக்கிப்‌ போரில்‌ நாரை கவலை யின்றி யுறங்கும் என்று உவமையால்‌ விளக்கினார்‌, இங்கனமே நாடுகளைச்‌ சிறப்பித்தல் பண்டை வழக்கு; * பொய்கை சாரை போரிற்‌ சேக்கும்‌ ” என்றார்‌ ஐங்குறு நூற்றிலும்‌. குருகு உறங்கும் குருகூர்‌ எனச் சொல்‌ நயம் தோன்றக் கூறியது காண்க ,-வழுதி – கொடை யுடையானுக்கும்‌ பெயராதலால்‌ வீடு வேண்டின்‌ மறாமல்‌ கொடுப்பாரென்று கொண்டு அப் பெயராற்‌ கூ.றினார்‌. ஆளும்‌, புகுதற்கும்‌ – உம்மைகள்‌ இறந்தது தழுவிய எச்சப் பொருளன, உண்டே-ஏ. எதிர்மறை,

—————

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே
. 31-

உறு வினையை – மிக்க தீவினைகளை,
கொய்யும்‌ – வெட்டி யழிக்கின்‌ற,
மெய்‌ – சத்தியமாகிய,
வாள் வலவன்‌ – வாள் யுத்தத்தில்‌ வல்‌லவரும்‌,
குருகைக்கு – குருகூர்க்கு,
அரசன்‌ – இறைவரும்‌,
புலமை செய்யும்‌ – தம்மை யடைந்தவர்களுக்கு உபதேசித்தருளுகின்‌ற,
ஐயன்‌ தனக்கே – தலைவருமாகிய நம்மாழ்வாருக்கே ,
தனி-ஒப்பற்ற,
தாள்‌-திருவடிகளுக்கு,
அன்பு செய்த பின்‌ – தான்‌ பக்தி செய்யத் தொடங்கிய பிற்பாடு,
மெய்யும்‌ – சத்துவப் பொருளெல்லாம்‌,
மெய்‌ ஆயது – உண்மையாக விளங்கிற்று;
பொய்யும்‌ – பொய்ப் பொருளும்‌,
பொய்‌ ஆயது – பொய்ப்‌ பொருளென்று தோன்ற விளங்கிற்று;
வேறு படுத்து – இங்கனம்‌ வேறாகப்‌ பகுத்‌துக் காட்டி,
உய்யும்‌ – பிழைப்பதற்குரிய,
மெய்‌ ஆய – உண்மையாகிய,
உபாயம்‌ -தந்திரமும்‌,
வந்து உற்றது – வந்து பொருந்திற்று,

நான்‌ நம்மாழ்வாருக்குத்‌ தொண்டு செய்யத்‌ தொடங்கிய பின்‌பு தான்‌ தத்‌துவ ஞானம்‌ உண்மையாக வெளிப்பட்டது ;அஞ்ஞானமும்‌ நீங்கிற்று ; இங்கனம்‌ பகுத்தறிந்து பிழைத்தற்குரிய தந்திரமும்‌ வந்து பொருந்தித்றென்பதாம்‌-உண்மை நிலை தெரியாமல்‌ அஞ்ஞானம்‌ மூடப்‌ பெற்றிருந்து பிறகு தெளிவடைந்ததனால்‌ மெய்யும்‌ மெய்யாயது என்‌றார்‌. ௮து மெய்யாதலும்‌ ௮தற்கு மறுதலையாகிய பொய்யும்‌ பொய்யாகிய தென்பது தானே இயையினும்‌ மகிழ்ச்சி மிகுதியால்‌ அதனையும்‌ உடன்‌ கூறினர்‌, பொய்ப் பொருள்‌ – தார புத்திர தனாதி ஏஷணாத் திரயங்கள்‌-பிழைத்தல்‌ -பரம பதத்தை நாடும்‌ வழி
கொய்தற்கேற்ப வினையைப்‌ பகை யென்னாமையால்‌ இது ஏக தேச வுருவக வணி. எல்லாரிலும் மேலானவனாதலால்‌ ஐயனென்றார்‌.

———-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே.
32–

திருமாலை – திரு மகள் கணவனாகிய மாயோனை,
செய்யன்‌(என) – சிவந்த நிறமுடையவனென்றும்‌,
கரியன்‌ என – கரிய நிறமுடையவனென்றும்‌,
தெரிந்து உணர – ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதற்கு,
வையம்‌ – உலகத்‌ துயிர்கள்‌,
கரி ௮ல்ல – பொருந்திய சாட்சியாக மாட்‌
டாவாம்‌;
மறை- வேதங்களும்‌,
மாட்டா – அறிய வல்லன அல்ல ;
(ஆதலால்‌), மதுரம்‌- இனிமை யாகிய, குருகூர்‌ – திருக் குருகூரில்‌ ௮வதரித்தருளிய,
ஐயன்‌ – நம்மாழ்வாருடைய,
கவி அல்லலேல்‌ – பாடல்‌கள்‌ அல்லா விட்டால்‌,
பிறவிக் கடல்‌ – பிறப்பாகிய சமுத்திரத்தில்‌,
ஆழ்‌வது அல்லால்‌ -அமுங்குவது ௮ல்லாமல்‌,
இ உயிர்களுக்கு – இந்த உயிர்‌களுக்கு, உய்யும் வகை – ஈடேறும்‌வழி,
ஒன்றும்‌ – ஒன்‌றினையும்‌,
யான்‌ -நான்‌,
கண்டிலேன்‌ -பார்த்தேனில்லை ;

மாயோன்‌ சிவந்த வடிவனோ கறுத்த வடிவனோ வென்று அறிவதற்கு உலகத்தாராலுமில்லை ; வேதங்களாலுமில்லை; ஆதலால்‌ உயிர்கள்‌ நம்‌மாழ்வார்‌ பாடலில்லாவிட்டால்‌ பிறவிக் கடலில்‌ அழுந்துவதே யல்‌லாமல்‌ அவ் வுயிர்கள்‌ ஈடேறும்‌ வழியை யான்‌ பார்த்தேனில்லை என்‌பதாம்‌. செய்யன்‌,கரியன்‌– சிவப்போ கறுப்போ என்னும்‌ உலக வழக்கை நோக்கிச்‌ கூறியவாம்‌. வையம்‌–இடவாகுபெயர்‌, தமிழ்க்‌ குருகூர்‌ என்பார்‌ – அதன்‌ மறு பெயராகிய மதரமென்னும்‌ மொழியாற்‌ கூறினார்‌. எல்லாருக்கும்‌ மேலாவான்‌ என்பது பற்றி ஐயன்‌ என்றார்‌. ஒரு நாளும்‌ முடிவு பெறாமையும்‌ கடத்த வருமையும்‌ நோக்கிப்‌ பிறவியைக் கடலென்றார்‌,

———–

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே.
33–

உயிர்த் தாரையில்‌ – உயிர் செல்லுன்ற வழியிலே,
புக்கு”-சென்று,
உறு – பொருந்துகின்ற,
ஒரு- ஒப்பில்லாத,
குறும்பு ஆம்‌ மூன்றனையும்‌ – காமம்‌ வெகுளி மயக்கமாகிய முக் குற்றங்களையும்‌,
செயிர்த்தார்‌ – கடிந்து விலக்கியவராகிய, குருகை வந்தார்‌-குரூகூரிலவதரித்த நம்மாழ்வாரது,
திருவாய்‌ மொழி -திருவாய் மொழி யென்னும்‌ பிரபந்தத்தினை,
செப்பல்‌ உற்றால்‌ – சொல்லத் தொடங்கினால்‌,
எங்கள்‌ அந்தணர்க்கு-தத்துவ நூல்‌ ஆராய்ச்சி யுடைய எங்கள் பெரியோர்களுக்கு,
மயிர்த்‌ தாரைகள்‌ பொடிக்கும்‌ – சரீரத்திலுள்ள்‌ மயிரொழுங்குகளெல்‌லாம்‌ சிலிர்க்கும்‌ ;
கண்கள்‌-கண்களில்‌,
நீர்‌ மல்கும்‌ – ஆனந்தக் கண்ணீர்‌ பெருகும்‌ ;
மா மறையுள்‌-சிறந்த வேதத்தின்‌ பொருள்களுள்‌,
அயிர்த்தார்‌-சந்தேகித்த வர்களுக்கு அயிர்த்த பொருள்‌ – சந்தேகித்த அர்த்தங்களெல்லாம்‌,
வெளியாம்‌ – நன்றாக விளங்கும்‌ ;

முக் குற்றமும் போக்கிய குருகூர் நம்மாழ்வார்‌ அருளிச் செய்த திருவாய் மொழியைச்‌ சொல்லத் தொடங்கினால்‌ அதனைக்‌ கேட்கும்‌ சத்துவ ஆராய்ச்சி யுடையவர்களுக்கு எல்லாம்‌ மயிர்‌ புளகிக்கும்‌ ; கண்ணீர்‌ வடி.யும்‌; ௮ன்றி வேதப் பொருளில்‌ சந்தேக முற்றவர்களுக்கு அந்தச்‌ சந்தேகமும்‌ நிவர்த்தியாகும்‌ என்பதாம்‌. என்றும்‌ நீங்கா இயல்பினவாதலால்‌ உயிர்த் தாரையிற்‌ பொருந்திய முக்குறும்பென்றார்‌. அவை தம்‌மை யடையாதபடி இருந்தமையால்‌ செயிர்த்தார்‌ என்றார்‌, மயிர்‌ புளகித்தலும்‌ கண்ணீர் விடுதலும்‌ பக்தியினால்‌ தோன்றிய புற மெய்ப்பாடு,-வேதாந்தத்தில்‌ பொருந்தி யிருத்தலால்‌ தத்வ ஆராய்ச்சி யுடையாரை அந்தணர் என்றார்‌,-உபநிடதப்பொருளை அறிந்து மகிழ்பவர்‌ ௮ந்தணராதலால்‌ ௮வ்வுபநிடதங்களிலும்‌ இது சிறந்ததாகக் கண்டு மயிர் புளகிக்‌கும்‌, கண்ணீர் மல்கும்‌ என்றுரைப்பினும்‌ அமையும்‌,

———-

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே.
34–

சுடர் தோய்‌ – சூரியனும்‌ சக்திரனுமாகிய இரண்டு சுடர்களும்‌ தவழப் பெற்ற, சந்தனம் சோலை – சந்தன மரச் சோலைகள்‌ சூழ்ந்த,
குருகை – திருக் குருகூரில்‌,
பிரான்‌ – நம்மாழ்வார்‌,
வந்து சந்தித்தது –
வந்து ௮வதரித்ததானது ,
அந்தணர்க்கோ – பிராமணர்களுக்காகவோ,
நல்‌ அரும்‌ தவர்க்கோ – நல்ல அரிய தவத்தைச் செய்கின்‌றவர்களுக்காகவோ, : அன்றி – அல்லாமல்‌,
யோகியராய்‌ வந்தவர்க்கோ – யோகம்‌
செய்பவராகி அவதரித் தவர்களுக்காகவோ,
மறவாதியர்க்கோ – மாறு பட்‌ட சமயங்களிலிருந்து வாதஞ் செய்கிறவர்களுக்காகவோ,
மகாம்‌ குழை சேர்‌ – காதிலணிந்த மகர குண்டலம் தாழப் பெற்ற,
சந்தரம் தோளனுக்கோ – ௮ழகிய தோள்களை யுடைய இறைவனுக்காகவோ, அவன் தொண்‌டர்கட்கோ-அவனுடையஅடியார் கட்காகவோ; (அறியோம்‌);

குருகூரில் நம்மாழ்வார் அவதரித்து அருளியது அந்தணர் முதலானவர்களுக்காகவோ என்பதாம் -வேதக் கடலில் புகுந்து நெறி தெரியாது மயங்காமல் அந்நெறியைத் தெரிவித்தலின் அந்தணர்க்கோ என்றார் -முதல் கடவுளை அறியாது பிற தெய்வங்களை விரும்பித் தவத்தில் உழல்வாரைத் தெளிவித்தலால் அரும் தவர்க்கோ என்றார் -யோகத்தால் அரிதின் அறியும் உண்மைப் பொருளைத் திருவாய் மொழியைக் கொண்டு எளிதில் உணரச் செய்ததினால் யோகியராய் வந்தவர்க்கோ என்றார் -புற மதஸ்தரை அடக்குதால் மற வாதியர்கோ என்றார் -மகரக்குழை -முதலை வடிவாகச் செய்த காதணி -சந்தனச் சோலை மிகவும் குளிர்ச்சி யுடைமையால் ஆழ்வார் பாடலும் அத்தன்மையது என்பதைக் குறிப்பால் உணர்த்திமை காண்க-ஓகாரங்கள் ஐயப் பொருளன-

இவர்களுக்கு எல்லாம் தனித்தனியே ப்ரயோஜன கரமாம் படி அன்றோ இவரது ஆவிர்பாவம்-எனவே இவ்வாறு விகல்பித்து அருளிச் செய்கிறார் –

————-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே
. 35–

சந்தியும்‌ – பதப் புணர்ச்சி யிலக்கணமும்‌,
சந்தி – அப்படிப்‌ புணர்கின்ற,
பதமும்‌- சொல்லிலக்கணமும்‌,
அவை தம்மிலே -அந்தச் சொற்களால்‌,.
தழைக்கும்‌ – அடுக்கப்பட்டுப் பெருகுகின்‌ற,
பந்தியும் -வரிசையான செய்யுளிலக்கணமும்‌,
பல்‌ அலங்காரம்‌ பொருளும்‌- பல வகைப் பட்ட அணி யிலக்கணப் பகுதிகளும்‌, பயிலுகிற்பீர்‌ – ‘கற்றறிகின்ற புலவர்களே ! (இவற்றால்‌’ முத்தி மார்க்கத்தை யறிய மாட்டீர்‌);
தென்குருகூர்‌- அழகிய திருச்குருகூரை,
சிந்தியும்‌ – நினையுங்கள்‌ ;
தேவரை – ௮தில் அவதரித்த நம்மாழ்வாரை
தொழுது – கை குவித்து, .
ஆள்‌ செய்யும்‌ -அவருக்கு அடிமை செய்யுங்கள்‌
வந்தியும்‌ – நமஸ்கரியுங்கள்‌ –
வந்திப்பவரை-அப்படி வணங்குபவரை யாவது,
வணங்கும் -நீங்கள் வணங்குங்கள்‌)
வகை – முக்தி மார்க்கத்தை
அறிவீர் -அறிந்து கொள்வீர்கள்

பஞ்ச லக்ஷணங்களும் படித்து உழல்கின்ற புலவர்களே -அவ்விலக்கணங்களால் முக்தி மார்க்கம் அறிய மாட்டீர் -குருகூரை மனத்தினால் நினையுங்கோள் -நம்மாழ்வாரை அஞ்சலி செய்து அவருக்கு அடிமை செய்யுங்கோள் -வணங்குங்கோள் -வணங்குவோரை வணங்குங்கோள்-நீங்கள் முக்தி மார்க்கத்தை அறிவீர்கள் என்பதாம் -அலங்காரப் பொருளும் என்றதுக்கு உவமை முதலிய அணியியல் பொருந்திய பொருள் இலக்கணமும் உண்டு என்றும் உரைப்பினும் அமையும் -பூ சுரராலும் வணங்கப் பெறுவதால் தேவர் என்றால் -அவர் அவதரித்த ஊராதலால் அழகிய குருகூர் என்றார் -நெடும்தூரத்தில் இருப்பவர் வருவதற்கு இசையாமலும் இருக்கக்கூடும் என்பதால் அங்கிருந்தே நினையுங்கோள் என்றார் -அவ்வூர் ஏனைய முக்தி நகரங்கள் போல் அல்லாமல் இருப்பதால் சிந்திக்கவே முக்தி தரும் என்பது துணிவு -ஆட் செய்யக் கிட்டாவிடினும் அடியாரைத் தரிசித்த இடத்தே அவற்றைத் வணங்குங்கோள் என்றார் -மற்ற நான்கைக் கூறிவிட்டதனால் உப லக்ஷணத்தால் பொருளையும் கூட்டி பஞ்ச லக்ஷணம் என்றுமாம் -வந்தியும் முதலிய உம்மைத் தொகை புதியன புகுதலால் ஏவலுக்கு வந்தமை அறிக-

———-

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே
. 36–

பொருள்‌–அகப் புறப்‌ பொருள்‌.
திணை-கந்தருவத்தின்‌ வழவிய பெருந் திணை,
கிளவி–அறத்தொடு நிற்றல்‌,
துறை -பாங்கி செவிலியர்க்கு அறத்தோடு நிற்றல்

நீங்கள்‌-தேவரை – தெய்வத்தை,
ஏறிய- ஆவேசமாகப்‌ பெற்ற
மூது அறிவாட்டியை – முதிர்ந்த அறிவை யுடையளான கட்டுவிக்கியை
சீர்‌ அழித்தீர்‌ – நிலை குலையச்‌ செய்தீர்கள்‌
பூ வரை – மலர்கள்‌ மட்டும்‌,
ஏறிய – சூட்டப் பெற்ற,
கோதை -கூந்தலை யுடைய தலைவியது ,
உள்ளம்‌ – மனத்தில்‌,
புகுந்தார்‌ – புகுந்து வருத்துகின்றவர்‌,
எவர்‌ என்று – எவர் தாமென்று,
ஏ- பெருமை மிக்க ,
வரை ஏறி-நம்‌ குறிச்சியில்‌ வந்து,
மொழிகின்ற போது – சொல்லுகின்ற காலத்தில்‌,
இறைவர்‌ – தலைவராகிய,
மூவரையோ – திரி மூர்த்திகளையோ ?
குரு கூரரையோ – அன்றிக்‌ குருகூர்‌ நம்மாழ்வாரையோ?
கூறிற்று -சொல்லியது
முந்து உற- முன்னதாக,
சொல்லும்‌ – சொல்லுங்கள்‌ ;

நீங்கள்‌ கட்டு விச்சியாகிய மூதறிவாட்டியின்‌ பெருமையைக்‌ கெடுத்து விட்டீர்கள்‌; நம்‌ தலைவியின்‌ மனத்திற்‌ புகுந்தார்‌ யாரெண்று வினாவுகின்‌ற பொழுது மூவர் புகுந்தாரென்றோ அல்லது குருகூர்‌ ஆழ்‌வார்‌ புகுந்தா ரென்றோ ௮வள்‌ கூறியது. அதனைச்‌ சொல்லுவீ ரென்பதாமாம்‌, கட்டு- ஒருவிதக் குறி : ; முறத்தில்‌ நெல்‌ மூதலியவற்றை வைத்து
அக்‌ கடவுளைப் பரவி அந்த நெல்லில்‌ ஒரு பிடியள வெடுத்துத்‌ தனியே வைத்து இந் நெல்‌ ஒற்றைப் பட்டால்‌ தெய்வத் தானாயிற்றென்றும்‌ இரட்டைப் பட்டால்‌ பிற நோய்‌ முதலிய வென்றும்‌ கூறுவதோர்‌ குறி யென்‌று சில நூல்களால்‌ தெரிகின்றது.-இக் குறி, கட்டு வைத்தல்‌, கழங்கு பார்த்தல்‌, கன்னமெடுத்தல்‌ எனப்‌ பலவகைப் படும்‌. கட்டு வைத்து
உரைப்பவள்‌ கட்டுவிச்சி -, அறிவுடைய மூதிர்ந்தவளாதலால்‌ மூதறிவாட்டி யென்றாள்‌. இவளுக்கு நோய்‌ வந்த மூலமறிந்து கூறாமல்‌ மாறாகக் கொண்டு குறி பார்க்கத்‌ தொடங்கியதனால் அவளைச்‌ சீர் அழித்தீர் என்றாள்‌-தெய்வத்தால்‌ தீண்டப்‌ பெற்றிலளென்பது தோன்றப்‌ பூவரை யேறிய கோதை யென்றாள்‌. தெய்வம் தீண்டப்‌ பெற்றால்‌ பூவைச் ரூடு மறிவு பெறாளென்று இங்கனம் கூறினளாம்‌. தலைவன்‌ பிரிந்ததனால்‌ வருந்திய மனத்தினளாய்‌ ௮ணி முதலிய அணிபப் பெறாமல்‌ பூ மட்டுஞ்சூடிய கோதை யெனினுமாம்‌. திரிமூர்த்திகளிலும்‌ மேலாக ஆழ்வாரை இவள்‌ மனங்கொண்டிருப்பதனால்‌ மூவரில்‌ யாரேனும்‌ இவள்‌ உள்ளம்‌ புகுந்தாருண்டோ என்று நகை யாடிக்‌ கூறினாள்‌. நம்மாழ்வாரையே இவள்‌ கருதி இருக்கிறாள் என்பதைக்‌ கொள்ஞங்களென்பாள்‌ அவரை ஈற்றில் கூறி முடித்தாள்‌. தலைவனது இயர்பெயர்‌ கூறுதல்‌ அகப் பொருள்‌ கந்தருவ வழக்க மில்லாமையால்‌ பின்னர்‌ நான்கும்‌ பெருந்திணை பெறுமே ? என்ற சிறப்புடைய பெருந் திணை யன்றிக்‌ கந்தருவத்தின்‌ வழுவிய பெருந் திணை யாயிற்று- அறத்தொடு நிற்றல்‌ – தலைவி தரும வழி தவறவில்லை யென்‌றதை நிலை நிறுத்துதல்‌, தலைவியின்‌ அபிப்பிராயத்தை யறிந்த தோழி தாய்மார்க் கறிவித்தல்‌ துறையின்‌ கருத்து. முதுமை யென்னும்‌ பண்புப்‌ பெயர்‌ ஈறு போய்‌ ஆதி நீண்டது. ஆட்டி – பெண்‌ பாற் பெயர்‌, “அன்ன பிறவு மவற்றொடு சிவணி, மன்னிய வினைய நிமித்த மென்ப” (தொல்‌ -பொரு – 287) என்ற சூத்திர வுரையில்‌ கைக் கிளைக்கும்‌ பெருந்‌ திணைக்கும்‌ மெய்ப்பாடு வரை யறை யின்றி வேண்டியவாறு வரப் பெறுமென்றதனால்‌ இதற்கு ஒன்றனை நிலையிட்டு உரைக்க வில்லை. பயனுமப்படியே கொள்க.

தேவு மற்று அறியேன் –மதுரகவி நிலையைப் பெற்ற கம்ப நாட்டாழ்வார்

————

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே.
37–

துறவாதவர்க்கும்‌ -இல்லறத்தி லிருப்பவர்க்கும்‌,
துறந்தவர்க்கும்‌ – துறவறத்தி லிருப்பவர்க்கும்‌,
சொல்லவே – சொல்லும் பொழுதிலேயே, சுரக்கும்‌ – கருணை யாகிய பாலைச் சுரக்கின்ற,
அறம்‌ – தரும வடிவமாகிய,
ஓ ஆயிரம்‌ ஆ அவை – ஒரு ஆயிரம்‌ பசுக்கள்‌,
இங்கு நிற்க – இவ் விடத்திருக்கையில்‌,
அந்தோ – ஐயோ !
சிலர் போய்‌ – சிலர் சென்று,
மறம்‌ வாதியர்‌ – மாறுபட்ட வாதங்களைச சொல்லுகின்ற புறச் சமயிசள்‌,
சொன்ன – சொல்லிய,
ஆசு – குற்றத்தை,
அகம்‌ ஆம்‌ -தன்‌னிடத்தில் கொண்ட நூல்களாகிய
மலடு ஆவைப்பற்றி – மலட்டுப் பசுக்களைப்‌ பிடித்துக் சொண்டு,
கறவா – கறந்து,
கிடப்பர்‌ – உழலுவார்‌ ;
அங்கு – அந்தப் பசுவினிடத்தில் ,
தங்கள்‌ கை வலிப்பே – அவர்கள்‌ கை
வருந்துவதானது ,
என்‌ பெறவோ -வேறு யாது பயனைப்‌ பெறுவதற்காகவோ?

யாவர்க்கும்‌ சொல்லின அளவிலே பயனைத் தருகின்ற காமதேனுவை யொத்த திருவாய்மொழி ஆயிரம்‌ பாடல்களுமிருக்க அவற்றை விட்‌டுப்‌ புறச் சமயிகள்‌ சொன்ன மலட்டுப் பசக்கள் போன்ற ‘நூல்களில் சென்று பயன் கருதி வருந்துவார்‌ அதனால்‌ தங்கள்‌ கை வருந்துவது வேறு யாது பயனைக்‌ கருதியோ !? ஒன்றுமில்லை யென்பதாம்‌. துறவாதவர்க்கு இருமைப் பயனையும்‌, துறந்தவர்க்கு மறுமைப் பயனையும்‌ தன்‌னை நினைத்தவுடனே கொடுத்தலாலும்‌ மற்றும்‌ வேண்டியவர்க்கு வேண்டிய படியே காம தேனுவைப் போலக் கொடுத்தலாலும்‌ திருவாய்மொழியைக் காமதேனுவாக உருவகப் படுத்திக்‌ கூறினார்‌. புறச் சமையத்தார்‌ நூல்கள்‌ மலட்டுப் பசுவைப் போலப்‌ பயன் கொடாதொழிவதன்றித்‌ தம்‌மைப்‌ படித்தவர்க்கு நரகத்கையும்‌ கொடுப்பதால்‌ குற்றம்‌ பொருந்திய மலட்டுப் பசு வென்றார்‌-மற வாதியரென்ற பன்மைப் பெயராற்‌ கூறினமையால்‌ ஆசுகளை அகத்‌திற் கொண்ட பல நூல்களே யென்பது வெள்ளிடை மலை போல
விளங்கிக் கிடக்க இதனை நன்கு ஓராமல்‌ எல்லாச் சமயத்தாராலும் புகழும்‌
-மாணிக்க வாசகர்‌ திருவாசக மென்று ஒன்றனைச் சட்டிக்‌ கூறி எரி வாய்‌ நரகிற்கு
ஆளாகின்றாரும் சிலர் உளர்‌. ஆ அவை, ௮வை- பகுதிப் பொருள்‌ விகுதி. ௮ந்தோ – இரக்கக் குறிப்பிடைச் சொல்‌ ; : தனித் தமிழ்‌ மொழி- அந்தீற்றோவும்‌”என்றதனா லறிக , ஆசகம்‌- அன்மொழித் தொகை ,-இப் பாடல்‌ உருவகவணி..

குரு பரம்பரை உள்ள ஸம்ப்ரதாயத்து பால் அன்றோ இது –

————

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே
. 38–

பொருள் –புறப் பொருள்‌.
திணை – பெருந் திணை
கிளவி : இரு பாலில்‌ பெண்பாமல் கூற்று,
துறை–தலைவி மடலூரத் தோழி சாற்றுதல் .

குருகூர்‌ என்னும்‌ ஆறு ௮றியா – குருகூரென்றும் சொல்லு வதற்கும் தெரியாத,
பைதலை-எந் தலை மகளை,
கோகு – தன்‌ தோள்களை ,
தட்டிட்டு-தட்டிக் கொண்டு,
ஏட்‌டில்‌- பனை மடலாலகிய குதிரையில்‌,
ஏற்றிய-ஏறும்படி செய்த,
பண்பனை-இயல்புடைய தலைவனை, (குறித்‌து ),
கை – கைகளை,
தலை பெய்து – தலைக்கு மேல்‌ தூக்கி , அரும்‌ பூசல்‌ இட்டு-பேரிரைச்சலிட்டு,
கவியால்‌ – செய்யுட்களால்‌,
உலகை – உலகத்திலுள்‌ள் உயிர்களை,
உய்தலைச் செய்ததும்‌ – ஈடேறும்படி. செய்ததும் ,
பொய்‌ என்றுமோ – பொய்யென்று சொல்லுவோமோ ?
சென்று-அந்தக் குருகூர் புகுந்து,
அவ் வூர்‌ அறிய – அவ்வூரார் அறியும் படி,–
வைது அலைத்து– துன்பப் படுத்தி,
ஏசுதுமோ – இகழ்வோமோ ?[யாது செய்வோம்‌?.]

குருகூர் என்றும் சொல்லவும் கற்றறியா எமது தலை மகளை இப்படி மடலூரும்படி செய்த நம்மாழ்வாரைச் சென்று பெரும் பூசலிட்டு நுமது பாடலாலுகத்தை வாழ்வித்தது பொய்யென்போமா ? அவ்வூரார்‌ அறியும்படி வைது அலையச் செய்து ஏசுமோமா?யாது செய்வோமென்பதாம்‌-தலைவி பால்‌ அண்பு மிகுதியால்‌ பெண் பாலை ஆண் பாலாகப்‌ பைதல் என்றாள் – ஆண் மகனில்‌ சிறுவனுக்கும்‌ துன்பத்திற்கும்‌ பெயர்‌,
‘பைத்தலை யாவெனக் கனன்று பைதலை, யித்தனை போது கொண்டிருப்ப தோவெனா ” இங்கு ஹனுமானைப்‌ பைதலென்‌றதும் , “பைதல வாகிப்‌ பசக்குவ மன்னோ… கண்‌! இங்குத்‌ துன்பத்துக்கும்‌ ஆயிபனமையுமறிக -ஆண்பாற்‌ குழந்தைகளைப் பிள்ளை யென்பதால் -கிளிப்பிள்ளை யென்னும்‌ வழக்குப் பற்றிக்‌ கிளிப் பைதல் என்றார் -ஆழ்வாரும்‌, கோகு தட்டுதல் – தோள் தட்டுதல்‌; கோகு கட்டிட்டு என்று பாடமோதி கோகு உகட்டிட்டு என்று பதம்‌ பிரித்தார்‌ பூர்வாச்சார்யர்- எனின்‌ அதுவும்‌ ஏட்டுப் பிரதியில்‌ தட்டென்பது கட்டென்று ப்‌றழ இருந்திருக்கக் கண்டு அங்கனமே வைத்து உரை யெழுதி யிருக்கலாமன்‌ றி உகட்டென்‌று வேறு ஓரு நூலிலும் காணப் படாப் பதம்‌ இவர்களுக்குத்‌ தோன்றிப்‌ பொருள் பட்டமை யிறும்‌பூதென்க.-பனை மடற் குதிரை- பனங்கருக்குக்களை வெட்டி. ஒரு குதிரை போலக் கட்டி அதன்‌ மேல் ஏறி நின்று இளையாரைக் கொண்டு. அப்பெண்‌ணிருக்கும் தெருவழியே மூன்று நாள்‌ வரையில் இழுக்கச் செய்து அந் நாட்களுக்குள்‌ ௮ப் பெண்ணைக் கொடா விட்டால்‌ நாலா நாள்‌ மலை மேலேறி விழுந்திருப்பது – ஆண்பால்‌ மடற் கூற்று, பெண் பால்‌ மடலேறுவதற்கு விதியில்லாமையால்‌ பொருந்தாதாயினும் பிற் காலத்தார்‌ இங்கனம் எழுதுதலால்‌ இது புறத் திணையில்‌ அடக்கலாயிற்று,

கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே-கம்ப நாட்டாழ்வாருக்கு ஆழ்வார் முதலிலே பக்தியை உண்டாக்கி -அதனை அபிவிருத்தியாம்படி செய்து – அவரை பிரபந்தம் பாடும்படி செய்வித்தது ஆழ்வாரது திரு அருளே – ஸாந்நித்யம் கால விளம்பம் பொறாமல் -இவ்வாறு கூறும் வகையால் அவரை ஆற்றுதல்

———–

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே
. 39–

மகிழ் மாறன்‌ – மகிழ மாலை யணிந்த நம்மாழ்வார்‌ பாடி யருளிய,
செய்யுள்‌ – பாடல்களை,
௭ண்ணும்‌-தியானிக்கின்ற,
தகைமைக்கு-தகுதிக்கு ,
உரிய – ஏற்ற,
மெய்‌ – உண்மையான,
யோகியர்‌ – யோக சாதனை யுள்ளவர்களுடைய,
ஞானம்‌ என்னும்‌ கண்ணும்‌- அறிவாகிய மனக் கண்ணும்‌,
மனமும்‌ – உள்ளமும்‌,
செவியும்‌- காதுகளும்‌,
தவஞ்செய்த-தவஞ்செய்‌தன :
காலத்திலே, பண்ணும்‌–குறிஞ்சிப் பண்‌ முதலிய இராகங்களும் –
தமிழும் -தமிழ் மொழியும்‌, தவம் செய்தன
பழ நால் மறையும் -பழைமையான நான்கு வேதங்களும்
மண்ணும் -பூ வுலகும்
விசும்பும்‌ – விண்ணுலகும்‌, தவம் செய்தன-

நம்மாழ்வார்‌ பாடி யருளிய பாடல்களைத்‌ தியானித்தற்குரிய யோகியர்களுடைய ஞானக் கண்‌ணும்‌ மனமும்‌ செவியும் தவஞ்செய்‌தன -காலத்திலே பண்களும் தமிழ் மொழியும்‌ மறையும்‌ மண்‌ணும்‌ விண்‌ணும்‌ தவம் செய்தன வென்‌ தாம்‌.-எனவே யோகியர்‌ இவர்‌ பாடல்களையே கருதுவார்கள் எனவும்‌ இப் பாடல்களுக்கு பண்கள்‌ இன்றியமையாதான எனவும்‌,-தமிழுக்கு இந்நூல் ஒரு ஏற்றமுடையது எனவும்‌, நான்‌கு மறையுமென்றதனால்‌ நான்கு வேதங்களின் சாரமே யிவர்‌ நூல்கள் எனவும் , மண்ணும்‌ விசும்புமென்‌றதனால்‌ இருமைப் பயனும்‌ இந்நூல் அளிக்கும் எனவும்‌ கூறினாராயிற்று, பண்‌ – முற் கூறப் பட்டது, மண்‌, விசும்பு-இட வாகு பெயர்கள்‌,

————-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே
. 40–

கடை நாள்‌ – உலகமொடுங்கும்‌ ஊழிக் காலத்தில்‌,
ஆலத்திலே – ஆலிலையிலே,
துயின்றோர்‌ – பள்ளி கொண்டருளிய வாசு தேவர்‌,
கொண்ட. – தாம்‌ எடுத்துக் கொண்ட, ஐயிரண்டாய்‌ அமைந்த -பத்தாக எண்ணப்பட்ட,
கோலத்திலே – வழிவங்களிலே,
முளைத்து – தோன்றி,
கொமுந்து ஓடி – மேலோங்கி வளர்ந்து குணம்‌ கடந்த – மிக்குணங்‌களுக்கும்‌ அப்பாற் பட்டு நின்ற,
மூலத்திலே செல்ல – காரணப் பொருளிடத்திலே செல்‌லும்படி ,,
மூட்டிய ஞானத்து – மெய்ஞானத்தை எமக்குத்‌ தந்தருளிய,
எம்‌ மூர்த்தியை – நம்மாழ்வாரை,
குருகூர்‌- அவர்‌ அவதரித்த திருக் குருகூரில்‌,
காலத்திலே புக்கு – உரிய காலத்திலே புகுந்து,
கைக்கொள்மின்‌ – தரிசித்து நற் பயனைக்‌ கைப் பற்றுங்கள்‌ ;

ஆலிலையில் பள்ளி கொண்ட மாயோனது தசாவதாரங்களில்‌ யீடுபட்டுக்‌ காரணப் பொருளாகிய அவ் வாஸூ தேவனிடத்துச்‌ செல்லும் படியான மெய்ஞ் ஞானத்தை நமக்குத் தந்தருளிய நம்மாழ்வாரை உரிய காலத்திலே சென்று வணங்கிப்‌ பிழையுங்கள்‌ என்பதாம்‌, எல்லாம்‌ அழிந்து முடிவிலும்‌ நிலை பெற்று விளங்குவதால் கடை நாள்‌ ஆலத்திலே துயின்‌றோர் என்றார் -பத்து அவதாரங்களும் கர்மவசம் அல்லாமல் தன்னிச்சையால் எடுத்தமையால் கொண்ட என்றார் -தனக்கு என ஓருபொருளைவிரும்பிலராதலால்‌ கொண்மினோ என்றார்‌. உலகெலாமொடுங்கும் கற்ப காலத்தில்‌ அவற்றை அழியாதபடி மாயோனானவன்‌ தனது திருவயிற்றில் அடக்கி ஆதி சேடன்‌ வடிவான ஆலிலையில்‌ யோக நித்திரை செய்தருளுவன் என்பராதலால்‌ கடைநாள்‌ ஆலத்திலே துயின்றோர் என்றார்‌. ஆலத்தில்‌, அத்து – சாரியை,

————-

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே
. 41–

முழு ஏழ்‌ உலகை – ஏழுலகம் முழுவதினையும்‌,
முழுகுகின்ற – படிகின்ற,
தீர்த்‌தத்தினை – பரிசுத்தரன கடவுள்‌நிலையையும்‌,
செய்ய – செவ்விய,
வேதத்தினை – வேதங்களையும்‌,
திருமால்‌ பெருமை – சிறந்த மாயோன்‌ பெருமையை,
பார்த்தற்கு – அருச்சுனனுக்கு,
அருளிய – சொல்லி யருளிய,
பாரதத்தை – கீதை யடங்கிய மகா பாரதத்தையும்‌,
பணித்‌தானும்‌ – வெளி யிட்டருளிய வியாஸ முனிவரும்‌,
நின்‌ற- நிலை பெற்ற,
வார்த்தை – திருவாய்‌ மொழியை யுடைய, குருகைப் பிரானும்‌ – குருகூர்‌ நம்மாழ்வாரும்‌, ஆகிய அவ் விருவருமே,
௮ம் மறைப்பொருள்‌-, அந்தப் மறைவா யுள்ள உண்மைப் பொருளை,
கண்டார்‌ – அறிந்தவராவார்கள்‌,

உயிர் நிலை, உலக நிலை, கடவுள் நிலை, என்னும்‌ மூவகை நிலைமைகளையும்‌ நான்கு வேதங்களையும்‌ ஐந்தாம் வேதமாகிய மகா பாரதத்தையும் வெளி யிட்டருளிய வியாஸ முனிவரும்‌ நிலை பெற்ற திருவாய்மொழியைப் பாடி யருளிய நம்மாழ்வாரும்‌ ஆகிய இவ் விருவருமே அந்த மறைவாயுள்ள உண்‌மைப் பொருளை யறிந்தவராவார்கள் என்பதாம்‌. மூவகை நிலையை வேதாந்த ஸூத்திரத்தால்‌ வெளியிட்டமை வெளிப்படை-வேதாந்த ஸூத்திரங்கள் அடங்கிய உதர மீமாம்சையும்‌ வேதமும் பாரதமும் கூறும் பொருள் எல்லாமே இந்தத் திருவாய்மொழி கூறுமெனவும்‌ அந்த வியாஸ முனி போல இந்த ஆழ்வார்‌ மகோபசாரியா யுலகத்துக்கு நன்மை செய்தவரெனவுங்‌ கொள்ளக் கிடந்தமை காண்க,

———

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே
. 42–

பொருள் –அகப் பொருள்‌.
திணை – பாலை.
கிளவி.-பொருள் வயிற் பிறிவு.
துறை–நெஞ்சோடு மறுத்தல்

(நெஞ்சமே!) குருகூர்‌ புனிதன்‌ -திருக் குருகூரிலவதரித்‌த பரிசுத்தரான நம்மாழ்வாருடைய,
அருளை – கருணையை,
சுமந்தவள்‌ -அடைந்தவளாகிய தலைவியின்‌,
கண்ணின்‌ கடை திறந்து – கடைக் கண்‌ணைத் திறந்து கொண்டு,
ஆறு பட்டு – ஒரு ஆறாகி ,
வெளி பரந்து – வெளியிற் பரவி,
குருளை சுமந்து – காட்டில்‌ விலங்கின்‌ குட்டிகளை அடித்துக் கொண்டு,
ஒட்டரும்‌ – ஓடி வருகின்‌ற,
கொள்ளை வெள்ளம்‌ – மிகுதியான கண்ணீர்‌ வெள்ளமானது ,
உருளை – சக்கரங்களை யுடைய,
மணி சுடர்‌ – இரத்தினங்கள்‌ பிரகாசிக்சின்ற,
தேரை – என்னுடைய தேரை ,
வந்து உதைக்கின்றதே -வந்து தடுக்கின்றதே;
அந்தோ. ஐயோ!
பொருளை… சுவை என்று -சிறப்புடையதென்று கொண்டு,
எங்கே போவது – எப்படி நான் போகலாகும்‌?

நெஞ்சமே நம்மாழ்வார்‌ அருள் பெற்ற நம் தலைவியின்‌ கடைக் கண்‌ணில்‌ நின்‌று வடிகின்ற கண்ணீர்‌ வெள்ளமானது நாம் போகும்‌ வழியில்‌ குறுக்கே வந்து தடுக்கின்றதே! ஐயோ ! நாம்‌ எப்படிப் பொருள்‌ சம்பாதிக்கப் போவது என்பதாம்‌.-குருகூர்ப் புனிதன்‌ அருளைச் சுமந்தவள்‌ கண்ணீர் வெள்ளமானதால்‌ அதற்குத் தப்பி எப்படிப் போவதென்று நெஞ்சத்தோடு கூறிச்‌ செல வழுங்கினான்‌- பிரிவாதலால் பாலை யாயிற்று, தாயத்தால் செய்தது தேவரும்‌ பிதிரரும் இன்புறார்‌? என்பது விதியாதலால்‌ தானே பொருள்‌ சம்பாதித்து அதனால்‌ அறம் செய்ய வேண்டி வேற்று நாடுகளை வென்று அவ் வரசரால் இடுகிற கப்பங்களைப் பெற்று வருதற்குப்‌ போனமையால்‌ பொருள் வயிர் பிரிவென்று பெயராயிற்று, மெய்ப்பாடு–அசைவு பற்றிய பெருமிதம்‌, பயன்‌ நெஞ்சொடு கூறி யாற்றுதல்‌, ஓட்டரும் – ஓட்‌டம் தருமென்பதன்‌ விகாரம்‌.

உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற -பெரியாழ்வார் – ஓட்டம் தந்து என்பதையே ஓட்டந்து என்று விகாரப்பட்டது

ஆழ்வார் கம்ப நாட்டாரை விஷயீ கரித்து திவ்ய தேச யாத்திரை செர்ல்ல யத்தனிக்க
அப்பிரிவை ஆற்றாது நின்ற நிலையை அன்பர்கள் ஆழ்வார் பக்கலிலே விண்ணப்பம் செய்தல் இதுக்கு ஸ்வா பதேசம் –

————

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே
. 43–

பொருள் -அகப் பொருள்
திணை குறிஞ்சி.
கிளவி-இருவரும் உளம் அழிய அவன் வரவு உணர்தல்
துறை -ஆடிடம் புகுதல்

மாறன்‌ – நம்மாழ்வார்‌ அவதரித்த,
குருகை -திருக்குருகூரில்‌,
வஞ்சி – இம்மாதின்‌, கொங்கைகள்‌-.—-.,
வந்து – தோன்றி,
அடி கொண்டன – மார்பில்‌ அடி பரந்து பெருத்தன ;
செம்தடித்து அன்ன – செவ்விய மின்னல் போன்ற,
மருங்கிற்கு- இடைக்கு,
நிற்‌கும்‌ – நிலை நிற்கக் கூடிய,
சிக்கனவு உண்டோ – அக் கொங்கைகளைத்‌ தாங்கும்
வவிமை யுண்டோ ? (இல்லை) ;
என்றால்‌ – கொங்கைப்‌ பெருமனும்‌ இடையின்‌ துவட்சியும்‌ இப்படி யென்றால்‌,
கொந்து – பூங்கொத்‌துக்கள்‌,
அடிக் கொண்ட – சூடப் பெற்ற,
குழலும்‌ – தலை மயிரும்‌,
கலையும்‌- இடையிற் கட்டிய சேலையும்‌,
குலைந்து – நிலை குலைந்து,
அலைய -சோர,
பந்து அடிக்கும் தொறும்‌ – இவள் பந்தடிக்கும் போதெல்லாம்‌,
நெஞ்சம்‌ – என் மனமானது,
பறை அடிக்கின்றது – துடிக்கின்றது

ஆழ்வார்‌. குருகூரில்‌ இம் மாதின்‌ கொங்கைகள்‌ பருக்கின்றன ;இடைக்கு அவற்றைத்‌ தாங்கும்‌ வலிமை யுண்டோ -(இல்லை 😉 இந் நிலைமையில்‌ இவள்‌ குழல் குலைந்து கலைய அலையப் பந்தடிக்கும் போதெல்லாம்‌ என்‌மனந் துடிக்கின்‌றதே யென்பதாம்‌.–இதில் கூறிய படியே : அடிக் கொண் டகுலவுக்‌ கொங்கை’* என்றார்‌ இராமாயணத்திலும்‌. மார்பிடமெலாம் கவர்ந்து வட்டமிட்டு அடி யிட்டு நாளுக்கு நாள்‌ மேல் வளர்தலால்‌ அடிக்‌ கொண்டன வென்றான்‌, வஞ்சி – ஒரு கொடி ; கொடி போன்ற இடை யுடையாளாதலால்‌ அப் பாரத்தை இடை தாங்காதென்னுங் குறிப்பால்‌ வஞ்சி யென்றான்‌. பின்னும்‌ ஆடுதல் நோக்கி ஆற்றாமையால்‌ உண்டோ சிக்கன வென்று வெளிப்படக் கூறினான்‌. பந்தாடுமிடத்திற்‌ புகுந்த தலை மகன்‌ தலைவி பந்தடிப்பதை நோக்கிக்‌ கூறினதாகத்‌ துறை கூறினமையில்‌ இது கிளவியில் அடங்க வில்லை யெனினும்‌ ஒன்றனுள்‌ அடக்க வேண்‌டி யிருத்‌தலால்‌ இருவருமுளவழி யவன் வர வுணர்‌தலின்‌ பாற் படுத்தலாம்‌, மெய்ப்‌பாடு- உவகை, பயன்‌-தலைமகளைச் சார்தல்‌.

இவரது பக்தி வளர்ச்சியும் ப்ராணாமம் முதலிய முயற்சிகள் நிலை குலையும்படி நேர்கிற
பிரபஞ்ச போக லீலைக்கு அவர் உரியர் அல்லாமையும்
அவரது வைராக்யத்தின் முதிர்ச்சியையும் பாராட்டிக் கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்

இடை அழகு -ஒன்றும் பொறாத வைராக்யத்தையே காட்டும்
வேறு ஒன்றின் தொடர்பு உண்டானால் இடையே இல்லாதபடி இடையறாத அன்பின் மிகுதியைக் காட்டும்
கொங்கை பக்தி -பகவத் பாகவத அனுபவ உபகரணம்
வந்து அடிக் கொள்ளுதல் –அதன் முதிர்ச்சி -பரம பக்தியாக பரிணமித்தல்
கொந்து அடிக் கொண்ட குழல் -விதி முறைப்படி செய்யும் பிரணாமம்

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே.
44–

கனவு ஆயினவும்‌- சொற்பன அவஸ்த்தையின்‌ பகுதிகளையும்‌,
துரியமும்‌ ஆயயையும்‌ – துரியாவஸ்தை முதலியவைகளையும்‌,
கடந்து -தாண்டி,
மனம்‌ வாசகங்களை -மநோ வாக்குகளையும்‌,
வீசிய- கடந்த,
மாறனை – மாறனென்னும்‌ பெயருடையவரும்‌,
மா மறையை- சிறந்த வேதங்களை, வினவாது உணர்ந்த- பிறர் பால்‌ ஒதாமல்‌ உணர்ந்த,
விரகனை -௮றிவுடையோரும்‌,
வெவ்வினையை – கொடிய தீச் செயல்களெல்லாம்‌,
தொலைத்த – போக்கிய,
சினம்‌- கோபத்தை யுடைய,
வாரணத்‌தை -யானை போன்றவரும்‌, குருகைக்கு அரசனை – திருக் குருகூர்க்குத்‌
தலைவருமாகிய நம்மாழ்வாரை,
சேர்ந்தனம்‌ – யாம்‌ சரணமாக அடைந்தோம்‌;

கனவு துரியம்‌ முதலிய ஐந்து ௮வஸ்தைகளையும்‌ தாண்டி எம் மனோ வாக்குக்கு எட்டாத மாறனென்பவரும்‌ ௮ரசனுமாகய நம்மாழ்வாரை நாம்‌ சரணமாக வடைந்தோம்‌ என்பதாம்‌-ஆயினவும்‌ என்பதனால்‌ கனவின்‌ முன்னுள்ள ஜாக்கிரத அவஸ்தையும்‌ பின்னுள்ள சுழுத்திய அவஸ்தையும் கொள்ளப் படும்‌, ஆயவையும்‌ என்பதனால்‌ துரியாதீத அவஸ்‌தையும்‌ கொள்க. அதன்‌ உட்‌ பகுதி பலவாதலால்‌ ஆயவை என்று பன்‌மையாற்‌ கூறினார்‌ ; எனவே ௮வத்தை ஐந்து என்றவாறாம்‌! அவையாவன:– ஜாக்கிரதம் , சொற்பனம்‌, சுழுத்தி, துரியம்‌, துரியாதீதம்‌ என்பன-இவற்றின்‌ பொருள்‌ முறையே விழித்திருத்தல்‌, கனா நிலை , அயர்ந்து தூங்குதல் -உயிர் ஒடுங்கி சமாதி யிருத்தல் கடவுளொடு கலத்தல்‌, என்‌பனவாம்‌. மனத்தால்‌ எண்ணுதற்கும்‌ வாயினால் சொல்லுதவற்கும்‌ எட்‌டாத நிலைமை யாராதலால்‌ மன வாசகங்களை வீசிய மாறனென்றார்‌,-“மயர்வற மதி நலம்‌’ அருளப்‌ பெற்றவராதலால்‌ வினவாது உணர்ந்த விரகனென்றார்‌. சடமென்னும் வாயுவைக் கோபித்தவராதலால்‌ வினை தொலைத்த சின வாராணமென்றார்‌. இது ஒரு பொருள் மேல்‌ பல பெயர்‌ வந்து சோரந்தனமென்ற ஒரு வினையைக் கொண்டது-. யாம்‌-தோன்‌றா எழுவாய்‌,

———-

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே
. 45–

அவ் வரியினுக்கு – அந்த மாயோனுக்கு,
வேதம்‌- வேதங்களால்‌,
செப்பும்‌- சொல்லப்படுகிற,
பேர்‌ ஆயிரம்‌ – திருப் பெயர்கள்‌ ஆயிரங்களாம்‌;
திண்‌ – வலிய,
பெரும்‌ புயம்‌ – பெரிய தோள்களும்‌, ஆயிரம்‌-ஆயிரங்களாம்‌;
துளவம்‌ பெய்‌- திருத் துழாய வைத்துத்‌ தொடுத்த,
தார்‌- மாலை,
ஆர்‌ – பொருந்திய,
முடி – திரு முடிகள்‌,
ஆயிரம்‌ – ஆயிரங்களாம்‌; (அப்படி யெல்லாம்‌ ஆயிரமாயமைந்தன போல,) குருகூர் – திருக் குருகூரிலவதரித்த ,
சடகோபன்‌ – நம்மாழ்வார்‌,
சொன்ன – சொல்லியருளிய,
ஆரா – தெவிட்டாத,
அமுதம் கவி- அமிர்தம்‌ போன்ற பாடல்‌கள்‌, ஆயிரம்‌ – ஆயிரங்களாம்‌ : (ஆதலால்‌;) பெருஞ்‌ செல்வர்க்கு – பெரிய அனுபோகப்‌ பொருளுடையார்க்கு,
சேராதன உளவோ – அடையப்‌ பெறாதேவைகளும் உண்டோ? -எல்லாம்‌ அடையும்‌ -என்றவாறு –

மாயோனுக்குத் திருப் பெயர்கள்‌ ஆயிரம்‌ ; தோள்களுமாயிரம்‌ ;முடிகளும்‌ ஆயிரம்‌ ; அப்படிப் போல நம்மாழ்வார்‌ பாடல்களுமாயிரம்‌ ;ஆதலால்‌ பெருஞ்‌ செல்வரை யடையப்‌ பெறாதவை யுமுண்டோ ?? எல்‌லாம்‌ அடையுமென்பதாம்‌, உலக குருவாகிய ஸ்ரீ சங்கராசாரியருரை
செய்தருளிய ஏற்ற முடைமையால்‌ ஸகஸ்ரநாமமென்னு நூலைக்‌ கூற வந்தவர் அதன்‌ தயிழ்‌ மொழியாகிய பேராயிரமென்றார்‌, புயமாயிரம்‌, முடியாயிரம்‌- இவற்றிலுள்ள ஆயிரங்கள்‌ மிகுதிப்‌ பொருளன-திண்‌ பெரும்‌ புயம்‌- பண்புத் தொகை ; பன் மொழித் தொடர்‌. இதன்‌ முதலடி. வேற்றுப்‌ பொருள் வைப்பணி –

———–

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே
. 46–

பொருள் – அகப்! புறப்‌ பொருள்‌. ்‌
திணை-நெய்தல்‌.
கிளவி -தூதில் பிரிவு.
துறை—காமக்‌ கிழத்தி காதல் நிலை கண்டு தாமக் குழிலி பாங்கி தளர்தல் .

முரி – வளைந்த,
வளை- சங்கு பெற்ற, –முத்தும்‌,
சினையும்‌ – அன்னப் பறவை ஈன்ற முட்டையும்‌,
மயங்க – வேறுபாடு தோன்றாமல்‌ கலந்திருக்க (அவற்றை யீன்ற),
வரி வளையும்‌ – கோடுகளுடைய சங்கும்‌,
அன்னமும்‌: அன்னப்‌ பறயையும்‌,
முறை செறுத்து – முறையே கோபிக்க,
தம்மிலே – தங்களுக்குள்ளே,
வழக்கு ஆட – விவகாரம்‌ பேச, (அப்பொழுது), வலம்புரி வளை – வலம் புரிச்‌ சங்கானது ,
ஊடு – அவ்விரண்டின்‌ நடுவிலே சென்று,
அறுக்கும்‌- அந்த வழக்கைத்‌ தீர்த்து விடுகிற,
குருகூர்‌ – திருக் குருகூரிலவதரித்த,
எம்‌ பூர்வலன் -எம்‌ இறைவன்‌,
அரி- வண்டுகள்‌,
வளை- வளைந்து மொய்க்கப்‌ பெற்ற,
பொன்‌ -பொன்‌ போன்ற,
மகிழ்‌ – தமது மகிழம்பூ மாலையை,
அந்தி வந்து – மாலைக்‌ காலத்தில்‌ வந்து, ஆயிழைக்கு – ஆராய்ந்து அணிந்த தணிர் ஆபரண்களை யுடைய தலைவிக்கு,
ஈயும் கொல்‌ – கொடுத்தருளுவானோ ?

குருகூரிலிருக்கும்‌ எம்‌ தலைவன்‌ ௮ந்திச்‌ காலத்தில்‌ வந்து எம்‌ தலைவிக்குத்‌ தன்‌ மகிழ மாலை அளிப்பானோ என்பதாம்‌.-முத்தும்‌ சினையும்‌ வேற்றுமை தெரியாமல்‌ ஒரு தன்மையா யிருக்கக்‌ கண்டு மாறுபாடாய்‌ ஒன்‌றனை ஒன்று எனது எனது என்று முத்தைப்‌ பெற்ற சங்கும் சினையைப்‌ பெற்ற அன்னமும்‌ வாது கூறலும்‌ இடையிலே வலம்புரி சென்று
விலக்கி விடும்‌ நாடெனவே இரண்டு அரசர்‌ தம்முள்‌ மாறுபட்டுப்‌ போர்‌ தொடங்க எத்தனித்த பொழுது இடையில்‌ இத் தலைவன்‌ இருவரையும்‌ சமாதானப் படுத்த வேண்டித்‌ தூதிற்குக்‌ சென்றானென்பதை உள்ளுறை யுவமையாற்‌ கூறியது காண்க, ”ஓதலுர்‌ தூதும் உயர்ந்தோர்‌ மேன *என்‌றமையால்‌ அரசர்க்குத்‌ தூது போகலுரித் தென்க.–தூதில் பிரிவு கற்பிற்‌ குரியதனால்‌ தலைவி மாலை வேண்டாளென்பது தெளிவாகும்‌; ஆகவே இங்குக்‌ காமக் கிழத்தியே மாலை வேண்டற்‌ குரியவளாவாள்‌,கிளவித் தலைவன்‌ மாலையைச்‌ சுட்டிக்‌ கூறினமையாலிது அகப் புறமாயிற்று,-இரங்குதலால்‌ திணை – நெய்தலாயிற்று, காமக் கிழத்தியாவாள்‌ – சேரிப் பரத்தையின்‌ மசளாகித்‌ தலைவனைத்‌ தானும் மணந்துகொண்டு வேறு ஓருவரையும்‌ விரும்பா நிலையி லிருப்பவளென்க

கம்ப நாட்டாழ்வாருக்கு மனக்கண்ணில் சேவை சாதித்து மறைந்த ஆழ்வார் இடம் பிரிவாற்றாமையாலே-அவர் ஸதா ஸாந்நித்யத்தை அபேக்ஷித்து ஆதாரத்தோடு கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்-அரிவளை பொன் மகிழ்–சார க்ராஹிகள் மிக விரும்பி விடாத தம் காட்சி இன்பம்-ஆயிழை -ஆத்ம பூஷணம் -ஸத்குணவாதி-அந்தி வருதல் -உரிய சமயத்தில் உபேக்ஷியாது வருதல் –

———–

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே.
47–

பொருள் -அகப் பொருள்
திணை – நெய்தல்‌.
கிளவி -ஒரு வழித் தணத்தல்
துறை –சென்றொன்‌ நீடலில் , காம மிக்க கழிபடர்‌ கிளவி ,

எம்‌- எம்முடைய,
உறு- மிக்க ,
துரை பிறவி- விரைந்து பற்றுகிற பிறவிகளை,
துடைத்து – போக்கி ,
ஆட் கொண்ட – என்னை அடிமையாகக் கொண்ட,
தொண்டர் பிரான் – அன்பர்களின்‌ தலைவரான நம்‌மாழ்வார்க் குரிய,
துறை நீர்‌ பொருநை -துறைகள் பொருந்திய நீரையுடைய தாமிரபருணி யாற்றின்‌,
கரை துடைக்கும்‌ – கரையை மோதுகின்ற,
கடலே- சமுத்திரமே!
புரைதுடைத்து – எனக்குள்ள காமமாகிய துன்பத்தைப்போக்கி ,
பெரும் பொய்யும்‌ துடைத்து – தாம் சொல்‌லும்‌ வார்த்தைகளில்‌ பொய்யில்லாத படி போக்கி,
பிறர் புகலும்‌- அயலார்‌ கூறுகின்ற,
உரை துடைத்து – பழிச் சொல்லுகளுக்கும்‌ இடங்கொடாமல் போக்கி ,
௮ங்கு- புன்னை மரச் சோலையாகிய அவ் விடத்தில்‌,
உள்ள -யாம் கட்டியுள்ள,
ஊசல்‌ – அறுந்து போனகொடி ஊஞ்சலை,
துடைத்த -மீட்டும் கட்டி. அதிலுள்ள வருத்தத்தைப் போக்கின,
அன்பர்‌ – எம்‌ தலைவருடைய.
கால் சுவடு – சேர்க்கால் சென்‌ற வழியை, துடையேல்‌ – அழித்து விடாதே கொள்‌;

கடலே! எம் தலைவர் வந்து சென்ற தேர்க் காலின்‌ சுவட்டைத் துடைக்‌காதே என்பதாம்‌–கைக்கிளையில்‌ தலைவனை நோக்கியவுடன்‌ தனக்குண்‌டாகிய காமத் துன்பத்தைத் தரிக்கினமையால்‌ புரை துடைத்தென்றாள்‌-கடல் தெய்வச்தைக் காட்டி உன்னைப் பிரியேன்‌ என்று சத்தியஞ் செய்ததினால் தான் வேறு கருதாதபடி மெய்யென்பாள்‌ பொய்யுந் துடைத்தென்றாள்‌-பிரிந்தால்‌ தலைவிக்கு வேறு பாடுண்டாகுமே- அதனைப்‌ பிறர் கண்‌டால்‌ பழிப்புக்கு இடமாகுமே யென்று பிரியாதிருந்தமை தோன்றப்‌ பிறர் புகலமுரை துடைத்தென்றாள்‌. ஊசல்‌ -அடும்பு முதலிய கொடிகளை ஒன்றாகத் திரித்து மரக்கிளைகளில் கட்டித் தொங்கவிட்டு அதிலே ஊஞ்சலாடுதல்‌ இக் காலத்திலுமுளது – இரங்கலால் நெய்தற்றிணை யாயிற்று,-தலைவியைப் புணர்ந்த பின்‌ தலைவன்‌ யாதேனும்‌ ஒரு காரியத்தின்‌ மேற் பிரிகின்றது ஒரு வழித் தணத்தலாம்‌-அங்கனம் பிரிந்த தலைவன்‌ குறித்த நாளில்‌ வாராமல்‌ தாமதித்ததனால்‌ தலைவி கடலை நோக்கிப்‌ புலம்புவது துறையின்‌ கருத்து – இது போல நேர்ந்த நம் காதலர்‌ நேமி நெடும் திண்டேர்‌,ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடலோதம்‌ ‘என்றார் பிறரும்‌-கை கோள்‌ – களவு,-கூற்று- தலைவி கூற்று, காலம்‌ -எதிர் காலம்‌, மெய்ப்‌பாடு- அழுகை. பயன்‌ – -கடலொடு புலம்பி யாற்றுதல்‌.

ஸம்ஸார ஆரணவத்தை நோக்கி கம்ப நாட்டாழ்வார் தமது மநோ ரதம் அழியாமல் இருக்க
பிரார்த்திப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –கடலில் நதி கலப்பது -ஆழ்வார் சம்பந்தத்தை இந்த லீலா விபூதிக்குக் காட்டி உறவு கொண்டாடின படி-

———-

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே
. 48–

பொருள் — அகப் பொருள்
திணை – நெய்தல்‌
கிளவி -ஒரு சார் பகற் பகுதி
துறை–பாங்கிபுலம்பல்

நங்காய்‌- பெண்ணே !
படர்‌ – துன்பத்தைச் செய்கின்‌ற
௮ந்தி – மாலை வேளையாகிய இப்பொழுது,
வானம்‌ – ஆகாயமெங்கும்‌,
இருள்கின்‌றதே – இருள் மூடுகின்‌றதே ; இரண்டு கவடு இற – தலையில்‌
கவையாயுள்ள இரண்டு கட்டுத் தறிகளையும்‌ ஒடியும் படியாக,
கட்டிய -கட்டி யிருக்ற,
பாசத்தளை – அன்பாகிப சங்கிலிகளை, கண்பரிந்து-அறுத்தெறிந்து,
தொடர்‌ – தன்னைத் தொடர்ந்த,
ஆசை களிற்றை-ஆசையாகிய யானையை, சுவடு இறக்க – ௮டிச் சுவடு தெரியாமல்‌ ஓடிப்‌ போம்படி,
தொடர்ந்து – பின் தொடர்ந்து வெருட்டி, சங்கம்‌ – தமிழ்ச் சங்கமாகிய
குவடு இற – மலையானது சிதறும்படி,
குத்திய – குத்திப் பெயர்த்த,
மாறப் பெயர்‌ -மாறனென்னும் பெயருடைய,
கொலை யானை -கொலை செய்ய வல்ல யானையானது, (இன்று),
இவள் திறத்து- இவள்‌ நிமித்‌தமாக, ஒன்றும்‌- வருமோ?

நங்கையே ! அந்தி வானமிருண்டு விட்டதே ; சுற்றத்தாரிடத் தெழுகின்ற ௮ன்பாகிய சங்கிலியை அறுத்தெறிந்து தன்னைத் தொடர்ந்த ஆசையாகிய யானையை அடி தெரியாமலோடிப் போம்படி வெருட்டி சங்‌கமாகிய மலையைக் குத்திப் பெயர்த்த மாறனாகிய கொலை யானை இவள் நிமித்தமாக இன்று வருமோ? என்பதாம்‌. பேருணவைக் கொள்கின்ற யானை போல பெரும் பொருளைப் பற்ற விரும்புவதனால்‌ ஆசையை யானையாக உருவகப் படுத்கினார்‌, இரண்டு கவடு இற -உட் பகை புறப் பகை யாகிய இரண்டு வஞ்சனையும்‌ அழிபட எனவுமாம்‌, சுற்றத்தை நீங்காமல்‌ பிணித் தலால்‌ அன்பைத் தளை யென்றார்‌. சினந்து மலையை முட்டிப் பெயர்த்தல்‌ யானைக்கியல் பாதலால்‌ ஆழ்வார்‌ பாடல்‌ – சிறு சங்கத்தவரை வென்றமை தோன்ற அதனை மலையாகக் கூறினார்‌. அன்னியமான பொய்ச் சமயங்களை அழித்தலினால்‌ ஆழ்வாரைக்‌ கொலை யானையாகக் கூறினார்‌ -எனவே இத் துறை முழுதும்‌ உருவகமாகச்‌ கூறினமையால்‌ முற்றுருவகமாயிற்று,-இரங்கலால்‌ திணை நெய்தலாயிற்று,இருவரையும்‌ மணஞ்செய்விக்க எண்‌ணிய தோழி அவ் விருவரையும்‌ குறியிடத்துச் சேர்ப்பியாமல்‌ தந்திரஞ் செய்தலால்‌ தலைவன் புலந்து அப்பால்‌ போதலும்‌ மற்றையோர் கூற்று நிகழ்‌தலின்‌ ஒரு சார் பகற் குறியாயிற்று.

ஆழ்வார் உரிய காலத்தில் வந்து கைக்கொள்ளுவார் என்பதே ஸ்வா பதேசம் –
கொலையானை -ராமானுஜ முனி வேழம் போல் -வி பக்ஷிகளை சித்ரவதை பண்ணவும்
தாம் பரிக்ரஹித்தவர்களை பட்டாபிஷேக யோக்யராம் படி பண்ணவும் வல்லவர் –
இந்த யானைக்கு மதம் -ப்ரஹ்மானந்தம்-சங்கக் குவடிறக் குத்திய மாறன் -சங்கப்பலகையில் கண்ணன் கழலிணை -ஏத்தி புகழ்ந்த ஐதிக்யம் அனுசந்தேயம்

————-

இருளாய்ப் பரந்த உலகங்களை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே
. 49–

இரவி அது தான்‌ – குரியனானது.
பொருள்‌ ஆய்‌ பரந்த -காணும்‌ பொருளாகி,
பொது நிற்றலின்‌ – பொதுவாய்‌ நிற்றலினால்‌,
இருள்‌ ஆய்‌ பரந்த – இருள்‌ மிகுத்துப்‌ பரவிய,
உலகங்களை – உலகங்களை யெல்லாம்‌,
விளக்கும்‌ – அவ விருளைப்‌ போக்கி விளங்கச்‌ செய்யும்‌ ;
அது போல்‌ – ௮தனைப் போல,
மருளாய்‌ – மனமயங்கும்படி,
பரந்த – பரவிய,
மயக்கம்‌- மாயையினது ,
துயக்கு அற்ற – துன்பம்‌ நீங்கப் பெற்ற
கோன்‌ மாறன்‌ – எங்கள்‌ தலைவரும்‌ மாறனென்னும்‌ பெயருடைய வருமாகிய நம்மாழ்வாருடைய,
அருளால்‌ – கருணையினால்‌,
சமயம்‌ எல்லாம்‌- எல்லாச் சமயமும்‌,
பரன்‌ உண்டு என்று – தங்களுக்கு நாராயணனே முதற் கடவுளாக உளனென்று,
அறிவு உற்றது – அறிந்து கொண்டது.

சூரியன்‌ தான்‌ பொதுவாய்‌ நின்று உலகத்தின்‌ இருளைப் போக்கிப்‌ பொருள்களை அறிவிக்கும்‌; அதே போல நம்மாழ்வார்‌ கருணை யானது எல்லாச்‌ சமயத்தவர் களிடத்திலுமுள்ள அஞ்ஞானத்தை நீக்கி மெய்ப்‌ பொருளைத் தெரிவித்தலால்‌ எல்லாரும்‌ நாராயணனே முதல் கடவுளாக உளன் என்றும் அறிந்து கொள்ளலாயிற் றென்பதாம்‌. எல்விதத்தாலும்‌ நீங்குதில௫மை நோக்கி மருளாய்ப்‌ பரந்த மயக்கென்றார்‌. பிறந்த பொழுதே பற்றின்றி நின்றமையால்‌ துயக்கற்ற மாறனென்றார்‌. விளக்கும்‌-மிகவும்‌- விரித்தல்‌ விகாரம்‌. அது – பகுதிப்‌ பொருள்‌ விகுதி, தான்‌-சாரியை, மற்று -அசை நிலை. எல்லாம்‌- தொகுதி யொருமை யாதலின்‌ ஒருமை முடிபு கொண்டது,–வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ

———-

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே
. 50–

மற்றை- வேத சம்பந்த மில்லாத,
ஆகம வாதியரை – ஆகம நூல்களைக் கொண்டு வாதம்‌ புரிவோரை,
செறிவேன்‌ என – யான்‌ அடைவேனென்று, ஒன்று – இவ்விஷயத்தினை
சிந்தை செய்யாது – கருதாமல்‌,
செய்தாரை இல்லா-ஒருவராலும்‌ செய்யப்படாத,
நெறி .-நல்ல வழி கூறுகின்ற,
வேதம்‌ – வேதத்தில்‌,
நின்ற- பொருந்தியுள்ள,
நிலை – தத்துவ நிலைகளை,
உணர்ந்தோன்‌ – ௮றிந்தவரான நம்மாழ்வார் அவதரித்த,
குரு கூர்‌ நிலத்தை – திருக்குருகூரென்னும்‌ திவ்விய தேசத்‌தை,
பிறிவேன்‌ எனவும்‌ – நான்‌ பிரிந்து போவேனென்றும்‌,
எண்ணாது-நினையாமல்‌,
என்னை— ௮ வீடு பெறுத்தினை -மோக்ஷத்தைப்‌ பெறச்‌ செய்தனை யாதலால்‌,
௮றிவே- எனது அறிவே !
உனை – உன்னை,
தொழுதேன்‌ – வணங்குகின்றேன்‌ ;

ஆகம வாதியரை நான்‌ சேர்வேனென்று நினையாமலும்‌ ஆழ்வார்‌ குருகூரைப்‌ பிரிவேனென்‌று எண்ணாமலும்‌ எனக்கு மோஷம் அடையச்‌ செய்தனை யாதலால்‌ ௮றிவே ! உனைத்‌ தொழுதே னென்பதாம்‌, மற்றை யாகம மென்றதனால்‌ அங்கம் , பூர்வம்‌, பகுசுருதி’ என்கின்‌ற சைனாகம் முதலியவற்றை என்க . வேதம்‌ அனாதி யாதவால்‌ செய்தாரையில்லா மறை யென்றார்‌, நின்ற நிலை- நாராயணனுக்‌கே பரத்வம் கூறிய நிலை. பிறிவேன்‌, பிறி- பகுதி,

நெஞ்சமே நல்ல நல்ல உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் போல் இங்கு தமது உணர்வைக் கொண்டாடுகிறார்

———

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே
. 51–

குறும்பு ஆக்கிய -பெரியோரால்‌ இவை குற்றமென்று நீக்கப் பட்ட,
முப்பகை தவிர்த்து – காமம்‌ வெகுளி மயக்கம்‌’ என்னும்‌ மூன்று உட் பகைகளைப் போக்கி,
ஆண்ட – அடிமை கொண்ட
குருகை மன்‌ -திருக் குருகூர்த் தலைவராகிய நம்மாழ்வார்‌,
பிறர் பால்‌ – அன்னியரிடத்‌தில்‌,
வெறும் பா கிளத்தி- பயனற்ற பாடல்கள் பாடி,
மெலிகின்ற என்னை – தளர்கின்றேனும்‌,
வினை – வினையானது.
கொடு போய்‌ – கொண்டு சென்று,
எறும்பு ஆக்கிய -எறும்பளவாகச் சிறுமைப் படுத்திய,
தமியேனை – தனிமையேனுமாகிய என்னை,
அமரர்க்கும்‌ – தேவர்களுக்‌கும்‌,
ஏற விட்டான்‌ -மேலாகச் செய்தருளிவிட்டார்‌ ; (ஆதாலால்‌), பெறும்‌ பாக்கியம்‌ உள்ள போதும்‌ -ஒருவர் பெறக்கூடிய செல்லமுள்ள காலத்தில்‌,
பிழைப்பும்‌ – அதற்கு ஒரு கெடுதியும்‌, உண்டே-உண்டாமோ? [இல்லை.].

குருகூர்‌ நம்மாழ்வார்‌ மெலிகின்றேனும்‌ தமியேனுமாகிய என்னை அமரரிலு மேலாகச் செய்து விட்டாராதலால்‌ ஒருவர்‌ பெறக் கூடிய செல்‌வமுள்ள காலத்‌தில்‌ அதற்கொரு கெடுதியமுண்டாமோ?இல்லை யென்பதாம்‌. பிறரைப் பாடி இம்மைப் பயன் சிறிது பெற்றாலும்‌ மறுமைக்குப்‌ பயன் படாமையால் வெறும் பா என்றார்‌. எறும்பு – சிறுமைப் பொருள் உணர்த்தற்குக் கூறினார்‌. தீ வினையில்‌ தனக்கு ஒத்தவரில்லை யென்பார்‌.
தமியேனென்றார்‌. அமரர்‌ – அமிருத முண்டு சரவாமலிருக்கப் பெற்றதனால்‌ அமரெனப் பட்டார்‌. காமம்‌ -வேறொரு பொருளின் மேல் செல்லும்‌ பற்றுள்ளம்‌, வெகுளி-கோபம்‌, மயக்கம்‌- ஒன்றனை வேறொன்றாகக்‌ க௫துதல்‌.-ஆளுகைக் குரியோர் அரசர் என்பது தோன்ற ஆண்ட மன்னென்‌றார்‌. போது -பொழுது என்பதன் மரூ௨. உண்டே, ஏ- எதிர்மறைப்‌ பொருள் பட நின்றது -கொடு -கொண்டென்பதன் தொகுத்தல் விகாரம்‌-அமரர்க்கும்‌ – ஜந்தனுருபு மயக்கம்‌; எல்லைப் பொருளது, மன்‌ -எழுவாய்‌,”விட்டான்‌ – பயனிலை, இதன்‌ முதலடி. வேற்றுப் பொருள் வைப்பணி,

விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -என்றுமாம் –

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

——–

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே.
52–

எம்மை- எங்களை,
உள்ளும்‌ சுற்றும்‌ – உள்ளேயும் சுற்றிக் கொண்டிருக்கிற,
கூர்‌ – மிக்க.
இருவினையும்‌ – நல்வினை தீவினையாகிய விரண்டும்‌,
௮றுத்து- போக்கி ,
இற பார்க்கும்‌- அவைகளழியும் படியாகப்‌.
பார்கின்‌ற,
இயற்கை- இயற்கையானது
குருகூர் நகர்‌- -திருக் குருகூரென்னும் பதியில்‌,
எம் பிரான்‌ – எழுந்தருளி யிருக்கிற தலைவரான ‘ நம்மாழ்‌வார்க்கு,
அடியாரொடு- தொண்டருடன்‌,
கூடி – சேர்ந்து
இன்புற்று -மகிழ்ந்து
ஒரு கூரையில்‌ — ஒரே விட்டினுள், உறைவார்க்கும்‌ – வசிக்கின்‌ எங்களுக்கும்‌,
உண்டு- உண்டாகும்‌) (அப்படீப்பட்ட இயற்கையானது ),
அவ் வூர்‌ அருகூர்‌- இந்த அடியாரிருக்கிற ஊருக்கு அருகிலுள்ள ஊரிலிருப்‌பார்கும்‌,
அருகுஇல்‌ – அவர் விட்டின்‌ சமீபத்திலுள்ள,
அயல் அயலார்க்கும் – – அயல் விட்டுக்கயல் வீட்டிலுள்ளவர்‌க்கும்‌,
அரியத்ன்று -அரியதொரு காரியமில்லை ;

எம்மைச் சூழ்ந்துள்ள இரு வினைப் பற்றை யொழிக்கு மியல்பானது நம்மாழ்வாரின் அடியவரோடு வாழ்கின்‌ற வெமக்குண்டு ;அவ் வியல்பானது அவ் வூருக்கு அயலூர்‌ அவ் வீட்டுக்கு அயல் வீடு இவற்றிலிருப்பவர்களுக்‌கும்‌ அரியதொரு காரியமில்லை என்பதாம்‌. உண்டே, ஏ-தேற்றம்‌. உள்‌ளும்‌, உம்‌- இறந்த தழுவிய வெச்சம்‌, இறப்பு ஆர்க்கும்‌ என்று பிரித்‌து
இரத்தலைச் செய்யும்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌, அவ் வூர்‌ – அடியாரிருக்கும்‌ ஊரென்பதே பொருந்திய வுரை,

அருகு ஊர் -நவ திருப்பதிகள்
அசலூர் -திரு வழுதி வள நாட்டில் உள்ளவை
அதன் அயலார் -ஆழ்வார் சம்பந்தம் உடையார் அனைவரும்
இரண்டு ஏவகாரங்களும் தேற்ற ஏவகாரம்-

——————–

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே
. 53–

பொருள்‌–அகப் புறப் பொருள்‌.
திணை–பெருந்திணை ,
துறை–மாலையால்‌ வந்த வருத்த முரைத்தல்‌.

அன்றாத- பகைமை கொள்ளாத, அன்றிலையும்‌ – அன்றிப் பறவைகளையும்‌,
அன்றுவித்து – பகைமை யாக்கி,
என்னை–அன்னையுடன்‌ – தாயோடு, பின்றாத வண்ணம்‌ எல்லாம்‌ -மாறுபடாத வகை யெல்‌லாம்‌,
பின்றுவித்து – மாறுபடச் செய்து, பிறைக்கொழுந்தை -இளமையாகிய சந்திரனை,
ஒன்றாத வண்ணம்‌ – என் மனத்தோடு பொருந்தாதபடி,
உபாயம்‌ இயற்றியது – தந்திரஞ்செய்தது , (யாதோம வெனில்‌?)
ஊழ் வினையை-பழ வினைத் தொடர்சியை,
வென்றான்‌- நீக்கினவராகிய,
குருகைப் பிரான்‌ -திருக் குருகூர் நம்மாழ்வாருடைய,
மகிழே௮ன்‌றி-மகிழ மலர் மாலையே அல்லாமல்‌,
வேறில்லை – வேறு ஓன்று மிப்படிச் செய்ய
வில்லை ;

தலைவனைப்‌ பிரிந்த தலைவிக்கு அன்‌றில் கத்தற வோசை செவியிற்‌ பட்டால்‌ விரகத்தை யதிகப்படுத்து மென்பது பற்றி அன்றிலை விரோதப்‌ படுத்தி என்றார்‌. தலைவனைப் பிரிந்திருக்கும் பொழுது உள்ளம்‌ தலைவனிடத்தே செல்லுமாதலால்‌ அப்பொழுது அருகிலிருந்த தாய்‌ கேட்பதற்குத் தக்க விடை கொடாமை பற்றி அன்னையுடன்‌ விரோதப் படுத்தி என்றார்‌. பிரிந்தார்க்கு நிலவு வருத்தத்தைச் செய்யுமாதலால்‌ அதனையும்‌ விரோதித்து என்றார்‌. ௮ன்றுதல்‌ – விரோதித்தல்‌; ௮ன்றுவித்‌து , வி -பிற வினை விகுதி, வென்றான் – வினைப் பெயர்‌, மகிழே, ஏ-தேற்றம்‌,-அன்றி. எதிர்மறை வினை யெசசம்‌. வேறு இல்லை – குறிப்பு முற்றுக்கள்‌.

ஆழ்வார் மனக் கண்ணில் தோன்றி பாஹ்ய ஸம்ச்லேஷம் பெறாமல் வருந்தி அருளிச் செய்யும் பாசுரம் இது –

———

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே
. 54–

செந் தமிழ்ப் புலவர்க்கு எறே – செவ்விய தமிழ் பயின்‌ற வித்‌துவான்களுள்‌ சிங்கம் போன்றவரே –
யெதிகளுக்கு-முற்றத்‌ துறந்த முனிவர்களுக்கெல்லாம்‌,
இன்‌ – இனிமையாகிய,
அமுதே – அமிர்தம் போன்றவரே ! எறிநீர்‌-௮லை வீசுகின்‌ற நீர்ப் பெருக்கை யுடைய,
பொருநை யாறே-தாமிர பருணி நதியானது ,
தொடர்‌ – தொடர்ந்து வரப் பெற்ற,
குருகூர்‌ -திருக் குருகூரிலுள்ள,
மறையோர்‌ – அந்தணர்கள்‌,
பெற்ற- ௮டையப்‌ பெற்ற,
ஆணிப் பொன்னே -மாற்றறியும் பொன் போன்‌றவரே !
‘இவன்‌-இந்தக் கம்பன்‌,
நமக்கு வேறே -நமக்கு ௮ன்னியனானவனே,
அன்‌புடை- அன்பு பொருந்திய,
மெய்யடியானென்று -உண்மையான அடியவனென்‌று
உள்ளம் தேறேன்‌ -நான் மனத்தில் தெளிய மாட்டேன்‌.’
எனல்‌ – என்‌று தள்ளாதொழிக;
௮து தேறத் தகும்‌- ௮து நம்ப வேண்டிய காரியமாகும்

ஏறே! ௮முதே ! குருகூர்ப் பொன்னே ! இவன் வேறானவனென்‌றும்‌ இவனைத் தெளிய மாட்டேனென்றும்‌ சொல்லா தருள்செய்க, அது நம்ப வேண்டிய காரியமாகுமென்பதாம்‌. எல்லாரிலும்‌ சிறந்தமை பற்றி ஏறென்றார்‌; அழியா வாழ்க்கை கொடுத்தல் பற்றி அமுதென்றார்‌ ; பிறர்‌ கவியின்‌ ஏற்றத் தாழ்வுகளை அறிதற்க்குத் தக்க பாடல்கள்‌ செய்தமையால்‌ வேறு பொன்னை யறியு மாற்றுப் பொன் என்றார்‌. இம் மூன்றும்‌ உவமை யாகு பெயர்‌, எனல்‌ – எதிர் மறை அல்லீற்று வியங்கோல் – தகும்‌ – இது தொழிற் பெயராய்த் தேற்றப்‌ பொருள் பட்டு நிற்கும் சொல்-

——

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே
. 55–

பெரும்‌ – பெரிய,
தண்‌ – நீர் வளமிக்க ,
குருகூர்‌ – திருக் குருகூரி லவதரித் தருளிய,
தென்‌ – சென் திசைக் கண்ண தாகிய,
ஐ- அழகிய,
உரைக்கும்‌ – தமிழ் மொழிக்கும்‌,
இயற்கும்‌ – ௮தன் பகுதியாகிய இலக்கணத்திற்கும்‌,
இசைக்கும்‌ – இசைத் தமிழ்க்கும்‌,
சிகா மணியே -சிரோ ரத்தினம்‌ போன்றவரே!
பொன்னை –உரைப்பது -உரைத்து மாற்றுப் பார்ப்பது,
௮ – அந்த, பொன்னொடு அன்றே – பொன்‌
னுடனே யல்லவோ ? (பார்ப்பது ),
புலமைக்கு – கல்வி யறிவிற்கு,
உயர்‌-உயர்ரந்த,
நாற் காவியும்‌-ஆசு மதுர சித்திர வித்தாரக கவிஞர்களையும்‌,
பின்னை-கடைசித்தரத்தில்‌,
உரைக்கப் பெறுவது அல்லால்‌ – சொல்லத் தக்கதே யல்லாமல்‌,
உன்னை உரைத்து – முதலில்‌ உம்மைக் கூறி,
உரைத்தற்கு-உமக்கு ஒப்பாக உரைப்பதற்கு,
ஒருவர்‌ – வேறொருவர்‌,
உளரோ -இருக்கிறார்களோ ?

குருகூர்ச் சிகா மணியே 1! பொன்னை மாற்றுப் பார்ப்பதென்றால்‌ பொன்னோ டன்றோ வுரைத்துப் பார்ப்பது; அதுபோல உம்முடைய பெருமையை அறிவதென்றால்‌ உம்மோடொத்த ஒருவரைக் காட்டி யன்றோ அறிய வேண்டும்‌ அப்படி யார் இருக்கிறார்கள்‌ ? ஒருவருமில்லையே யென்பதாம்‌. நாற்கவி -திரு மங்கை யாழ்வாருமாம்‌, புலமை- பல வேறு வகைப்பட்ட நாலுணர்ச்சி களெல்லாம்‌ ஒருங்கே கொண்ட பேரறி வுடமை, ஏனைய மொழிகளைப் போலாகாமல்‌ சிறந்த பொருளிலக்கணத்தைத் தன்னிடதில்‌ கொண்டிருத்தலால்‌ ஐயுரை யென்றார்‌, ஆழ்வார்‌ பிரபந்தத்தில்‌ இலக்கண அமைதி மிக்கிருத்தலாலும்‌ அப் பிரபந்தம்‌ பண்‌ணோடு’ பாட அமைந்திருத்தலாலும்‌ அவ் விடயங்களைச் கொண்டு இயற்‌கும்‌ இசைக்கும்‌ சிகாமணி யென்றார்‌,-இதன் முதலடி. எடுத்துக் காட்டு வமையணி,

தமிழுக்கு தென் மொழி -தென் சொல் -தென் காலை போல் தென்னுரை என்றும் உண்டே
ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திருமடல்-குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் -என்பதால் சிகாமணி-

———

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே.
56–

மறம்‌ – பல்வரிக் கூத்தில்‌ ஒன்று ; ௮து தான்‌ மறவரின்‌ மகளை விரும்‌பி விட்ட ௮ரசனது தூதனை நோக்கிக் கடிந்து மறவரியல்பு தோன்றக் கூறுவன, வரிக் கூத்து – நாடகத் தமிழ்‌ நூல்களிற்‌ காண்க,-பல்‌ வரிக்‌ கூத்திற்‌ சில வுறுப்புச்கள்‌ கலம்பக முதலியவற்றிற்‌ காணலாம்‌.

சுருதிப் பொருளை – வேத ப்பொருள்களை,
தமிழால்‌ – தமிழ்ப்‌ பாடல்களால்‌,
பணித்தான்‌ – பாடி யருளினவரும்‌,
எம்‌ – எம்முடைய,
வினையை – தீய வினைகளை, :
துணித்தான்‌ – போக்கின வருமாகிய,
குருகைப் பிரான்‌ – குருகூர்‌ நம்மாழ்வாரின்‌,
பணி அன்றெனில்‌ – கட்டளை யில்லை யென்றால்‌, (எம்‌ பெண்ணை விரும்பிய), மணித்தார்‌ – இரத்தின மாலைகளணிந்த, ௮ரசன்‌ தன்‌-௮ந்த அரசனது,
ஒலையை- திருமுகத்தை,
தூதுவன்‌ – அதனைக் கொணர்ந்த தூதுவனது ,
வாய்‌ வழியே திணித்து -வாயில் வைத்து நன்றாக அடைத்து ,
ஆசு – ‘பெண்ணைக் சொடு’ என்ற
குற்றமெல்லாம்‌,
அழிய – நீங்கும்படி,
தலையை – அத் தூதுவன்‌ தலையை,
சிதைமின்‌ – வெட்டி யெறியுங்கள்‌ ;
எம் பாவையை – எமது பாவை போல்‌வாளாகிய பெண்ணை,
கொள்ளும்‌ கொள்ளும்‌- நன்றாகச்‌ கொள்வானே போலும்‌

வாயைத் திறந்திருந்தால்‌ – பேரிரைச்சலிடு வானாதலின்‌ முதலில்‌ வாயை அடையுங்களென்றதாம்‌. ஆழ்வாருக்கு அடிமை யென்‌றறிந் திருந்தும்‌ பெண் கேட்க வந்தது குற்றமாதலின்‌ ஆசென்றதாம்‌; ** மாதரைக் கொன்றுளார் களுளரென வரினும்‌ வந்த, தூதரைசக் கொன்றுளார்கள்‌ யாவரே தொல்லை நல்லோய்‌” என்‌றபடி தூதரைக் கொல்லலாகாதே யெனின்‌ அது அறப் போர்க்கே யன்றி மறப் போர்க்கில்லாமையால்‌ வதைக்க அமையுமென்க . கொள்ளும்‌ கொள்ளும்‌ – வெகுளி பற்‌றி வந்த அடுக்கு, பாலை -உவமை யாகு பெயர்‌ : இது கொல்லி மலையில்‌ தேவரும்‌ முனிவருஞ்சேர்ந்து உறையும் காலத்து அங்கு வந்து துன்புறுத்‌திய ௮சுரரை மயக்க வேண்டித்‌ தேவ தச்சனால்‌ யந்திரத்தோடு செய்து வைத்திருந்ததொரு பெண் வடிவம்‌ ; இது அவ் வசுரரைக் கண்டால்‌ சிரித்‌து மயக்கிக் கொல்லுவது –

————

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே.
57–

திருவாய்மொழி பழத்தை -திருவாய்மொழி யென்னுஞ்‌ சுவை யுள்ள கனி போன்றதும்‌, பசுங்கற்பகத்தின்‌ – பசுமையாகிய கற்பக மரத்தினது,
பூவை – மலர் போன்றதும்‌,
பொருகடல்‌ – மோதுன்ற கடலில்‌ நின்றும்‌,
போதா – வாராத,
அமுதை – அமுதம் போன்றதும்‌,
பாவை-பாடலாகியுமுள்ள,
பொருள்‌ – நால் வகைப்பொருளையும்‌,
சுரக்கும்‌ – ஊற்று மாறாதே பெய்வதாகிய,
கோவை பணித்த – காம தேனுவை யொத்த,
எம்‌ கோவை – எங்களிறைவராகிய நம்மாழ்வாரை,
அல்லா -விரும்பாத,
என்னை–குற்றம்‌ சுண்டு -முன்னமே பாடாத குற்‌றத்தை யறிந்து,
மற்றை நா வலர்‌ –இனி வேறுள்ள புலவர்கள்‌,
என்‌ -எனது,
நாவை– நாக்கினை, –
பறிப்பினும்‌ – பிடங்கினாலும்‌,
நல்லர் அன்றோ – நல்லவரல்லரோ ? [நல்லவரே.]

திருவாய் மொழி பாடி யருளிய நம்மாழ்வாரை விரும்பாத என்னை ௮வரை முன்னமே படாதிருந்த குற்றத்திற்காக மற்றை நாவலர்‌ எனது நாக்கைப் பிடுங்கி விட்டாலும்‌ அது நல்லதே யாகுமென்பதாம்‌, எங்கும்‌ பரவி நிற்பதென்னும்‌ பொருளும் தோன்றப் பா வென்றார்‌, சுவை யறிவார்க்குச்‌ சுவை மிக்கிருத்தலினால்‌ பழமென்றார்‌. கேட்கக் குளிர்ந்திருத்‌தலின்‌ கற்பக மலரைக் கூறினார்‌. கடலில் தோன்றிய அமுதம்‌ எடுக்கக்‌ குறைந்தும்‌ உண்டதானால் எச்சிற் பட்டுமிருத்தலால்‌ போதாரவமுதென்றார்‌. நால் வகைப் பொருள்‌ அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு-நாவினால்‌ வருணித்துச்‌ சொல்லுஞ்‌ சொல்லில்‌ வல்லவராதலின்‌ நாவலர் எனப்பட்‌டார்‌, நல்லதன்றோ எனற பாடங்கொள்ளுதல்‌ நேர்‌. அன்றோ , ஓ – எதிர் மறை; இரண்டெதிர் மறை ஒரு உடன் பாட்டை யுணர்த்தியது,-இது ஒரு பொருள் மேல் பல பெயர் ஓடுக்கி வந்து முடிக்குஞ்சொல்‌ ஓன்றனைக் கொண்டது.-

பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அது குறித்து அனுதாபம் கொண்டு அக்கழிவு இரக்கத்தால் கூறியது இது – நாவலர் -கவனம் பிரசங்கம் போதனை முதலிய நாவின் வன்மை யுடையவர் என்றவாறு –

——-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே
. 58–

நாவல்‌ ௮ம்‌ தீவில்‌ – அழகிய ஜம்புத்தீவில்‌,
கவிகள்‌ எல்‌லாம்‌ – பிறர் பாடிய பாடல்களெல்லாம்‌,
சில நாள்‌ கழிய – சில நாட்கள்‌ சென்ற பின்‌, பூ- மலர்‌,
வலம்‌ – மணம் முதலிய வன்மைகள்‌,
தீவது போல்வ அல்லால்‌ – கெட்டழித்தல்‌ போல்வன வாகிக்‌ கெடுமே யல்லாமல்‌,
குருகூர்‌ – திருக் குருகூரில்‌ அவதரித்த,
புலவன்‌ – புலவரும்‌,
தீங்கு -உயிர்களின்‌ குற்றங்களை,
கேவலம்‌ – முழுவதும்‌,
அறுப்பான்‌ – ஒழிப்பவருமாகிய நம்மாழ்வாருடைய,
கவி போல்‌ – திருவாய்மொழிப்‌ பாடல்களைப் போல,
எங்கும் போய்‌ – எவ்விடத்‌தும் பரவி, கெழுமா – விளங்காதன வாகும்‌;
கூவல்‌ – கிணற்றிலுள்ள,
அம்தீம்புனலும்‌ – அழகிய இனிய நீரானதும்‌,
வெள்ளம்‌ – பெரு வெள்ளத்தை ,
கோள்‌ இழைத்துக் கொள்‌ளுமே – தாழ்மைப் படுத்தி மேற் கொள்ளுமோ ? [கொள்ளாது.]

உலகத்தில்‌ பிறர் பாடல்கள்‌ சிலகாலத்தில்‌ கெட்டழிந்து போகுமே யல்லாமல்‌ நம்மாழ்வார்‌ பாடல்கள் போல எங்கும்‌ போய்ப் பரவாவாம்‌ ;கிணற்று நீர்‌ பெரு வெள்ளத்தைகத் தாழ்மைப் படுத்‌த இயையுமோ -இயைதாதென்பதாம்‌, பூ.-மலர்ந்த வுடன்‌ மணம்‌ வீசிப் பின்‌ பூ இல்லாமற்‌ போவது போலப்‌ பிறர் கவிகள்‌ பாடும் பொழுது வெகு சிறப்புப் போலத்‌ தோன்றி பின்பு பயன்படாதெனக்‌ கொள்க,. நாவலம்‌, அம் -சாரியையுமாம்‌, தீவது -தொழிற் பெயர்‌, அறுப்பான்‌ -வினைப் பெயர்‌,கெழுமா. – எதிர் மறைப் பலவின் பால் முற்று, கொள்ளுமே, ஏ – எதிர் மறைப் பொருளில்‌ வந்தது , இதன் கடை யடி எடுத்துக் காட்டு உவமை யணி

கிணற்று நீர் -போல் அந்தர்யாமித்வத்தையும் விளக்கிக் காட்ட வல்லது -என்றபடி

————

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார்க்கும ரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே
. 59–

இழைத்தார்‌ – செய்தவர்‌,
ஒருவரும்‌ இல்‌லா-வேறு யாரு மில்லாத,
மறைகளை -வேதத்தின்‌ பொருள்களை,
இன் தமிழால்‌ – இனிய தமிழ்‌ மொழியினாலே,
குழைத்தார்‌ – செய்தருளியவரும்‌,
குமரித் துறைவர்‌ – கன்னியா குமரி யென்னும்‌ தீர்த்தத்தை யுடையவருமாகிய,
குருகையில்‌ – குருகூரில்‌,
கூட்டம்‌ கொண்டார்‌ – அடியார்‌ கூட்டத்தோடு எழுந்தருளி யிருக்கிற நம்மாழ்வார்‌,
வானின்‌ – பரம பதத்தினது .
வரம்பிடை நின்று – எல்லையினுள்ளிருந்து, மழைத்து – மேகத்தினது தன்மை,
ஆர- நிரம்பிய,
தடம்‌-பெரிய, கைகளால்‌—-,
என்‌னை அழைத்தார்‌-என்னை வா வென்றழைத்தார்‌ ; (அங்கனம்‌ அழைத்தன்றி),
அறிவும்‌ தந்தார்‌ – அங்கே செல்வதற்கு வேண்டிய அறிலையும்‌ கொடுத்தார்‌ ; (ஆதலால்‌ யான்‌),
அங்கும்‌ போய்‌ – அவ்விடத்துஞ்‌ சென்று,
அவர்க்கு – அந்த ஆழ்வாருக்கு,
ஆட்‌ செய்வன்‌-அடிமைத்‌ தொழில்‌ செய்வேன்‌ ;

வேதப்‌ பொருளைத்‌ தமிழில்‌ விரித்துரைத்த குமரித் துறைவராகிய குருகூர்‌ நம்மாழ்வார்‌ பரமபதத்தில் இருந்து தடக் கைகளால்‌ என்னை வா வென்று அழைத்தாராதலால்‌ நான்‌ அங்கும்‌ போய்‌ அவர்க்கு அடிமை செய்வேனென்பதாம்‌.-இழைத்தாரொருவரு மில்லா மறை யெனவே வேதம்‌ கடவளாலமைக்கப் பெற்ற தென்பதாம்‌. அளவிலாத இலக்கண
இன்பமுடைமையின்‌ இன்‌ தமிழென்றார்‌. கைமாறு கருதா அருள்‌ செய்‌யுங்‌ கைகளாதலால்‌ மேகத்தின்‌ தன்மை வென்றார்‌, அங்கும்‌, உம்‌.இங்குத் துதித்த தன்றியும்‌ என இறந்தது தழுவிய வெச்சப்‌ பொருளது,

——–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே.
60–

தண்‌ – குளிர்ந்த,
குருகூர்‌ – திருக் குருகூரில்‌ எழுந் தருளி யிருக்கிற,
செய்ய – சிவந்த
நாள்‌ பூ-௮ன்று பூத்த மகிழ மலர்களாலாகிய,
தொடை – மாலைகளை யுடைய,
மாறன்‌ என்பேன்‌ – நம்மாழ்வாரென்‌று கூறினேன்‌ ;
ஆள்‌ – அவர்க்கு ௮டிமையாக,
செய்யல்‌ ஆவது எல்லாம்‌ – என்னாற்‌ செய்யக் கடவதெல்லாம்‌ செய்து.
அடி அடைந்தேன்‌ – அவர்‌ திருவடிகளை யடைந்தேன்‌ ;
அது அன்றி- அதுவல்லாமல்‌,
செய்‌ய தாமரை தாள்‌ – செந்தாமரை போன்ற அவர்‌ திருவடிகளை,
என்தலை ஏற்றனன்‌ – என்‌ தலையில்‌ சூடிக் கொண்டேன்‌ ;
இனி – இனிமேல்‌,
நாள்‌ குறித்து – என்‌ வாழ் நாளை உத்தேசித்து,
என்‌ தன்‌ ஆர்‌ உயிர்‌ – எனது அரிய உயிரை,
கூற்றினுக்கு – யமனால்‌,
கோள்‌ செய்யலாவது – குற்றப் படுத்தற்காவது ,
உண்டே – உண்டாகுமோ? [உண்டாகாது];

யான்‌ குருகூரில்‌ நம்மாழ்வாரைத்‌ தியானித்து அடிமைத்‌ தொழில்‌ செய்து ௮வரடியை யடைந்து ௮ப் பாதங்களைச்‌ சிரத்திலணிந்து கொண்‌டேன்‌ ; இனி யமன்‌ என்னுயிரைக் கோளிழைக்க இயலுமோ வென்பதாம்‌. தாளாகிய தாமரை யென்று நேரினும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. அவரே தெய்வமென உறுதியாகக் கொண்டிருத்தலால்‌ ஆட்‌ செய்யலாலவது
எல்லாஞ்‌ செய்தேன் என்றார்‌. அன்றி-எதிர் மறைக் குறிப்பு வினையெச்சம்‌, உண்டே,-ஏ- எதிர்மறைப்‌ பொருள்‌ தோன்றி நின்றது,

உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா-

———-

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே.
61–

பொருள் –அகப் புறப் பொருள்‌.
திணை–பெருந்திணை
துறை–மாலை பெறாமல் வருந்துவ துரைத்தல்

கூறப்படா- ஒருவராலுஞ்‌ சொல்லப்படாத,
மறையின்‌ பொருள்‌ – வேதத்தின்‌ பொருள்களை,
கூறி- தமிழ்ப் பாடல்களால்‌ வெளிப் படுத்தி, குவலையத்தோர்‌ – உலகத்தவராலே,
மாறப் படா – நீக்கப்‌படாத,
வினை . தீவினைகளை,
மாற்றிய – போக்கி யருளிய,
மாறன்‌ – நம்‌மாழ்வருடைய,
மகிழ்‌ அலங்கல்‌ – மகிழ மலர்‌ மாலையானது ,
நாறப் படா நின்றபோத- மணம் வீசுகின்‌ற காலத்தில்‌,
அன்றில்‌ நஞ்சம்‌௮து -௮ன்‌றிலினுடைய விடத்தை யொத்த ஓசையானது,
அமுதாகும்‌- அமுதாக விருக்கும்‌;
மன்றல்‌ நாறும்‌ – மணம்‌ வீசுகின்ற,
தண்‌ தென்றலை – குளிர்ந்த தென்றல்‌ காற்றினையும்‌,
தேரப் படாது -நம்புவதற்கு இடமில்லை; கெட்‌டேன்‌ – இனி யான்‌ வாழ மாட்டேன்‌ ;

கூறப் படா மறை- மக்களால் கூறப் படாத வேதமென்க-இந்த வேளையில்‌ ௮ன்றிலோசை நஞ்சு போலிருத்தலால்‌ ஓசையை நஞ்‌சென்றார்‌-தீண்டப்‌ பெற்ற வுடன்‌ தலைக்கேறும்‌ விடம் போல அன்றிலோசை கேட்டவுடன்‌ விரகம் தலைக்கேறுதலால்‌ நஞ்சமென்றலுமாகும்‌.
கெட்டேன்‌ -இனி யான்‌ உண்ணா லும்‌ உண்ணேன் வாழலும்‌ வாழேன்‌ ” என்பதை யடக்கு ‘பசி யட நிற்றல்‌” என்ற மெய்ப்பாடு தோன்றி நின்றது – வேறு மெய்ப்பாடு கூறினும்‌ அமையுமேல் கொள்க-

லௌகிக பதார்த்தங்கள் ஆழ்வார் சம்பந்தத்தால் உபாதேயமாகவும்
இல்லையாகில் த்யாஜ்யமாகவும் இருப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –

——-

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே
. 62–

தென்‌ தலை தோன்றும்‌ – இவ் வுலகத்தின்‌ தெற்குத் திசையிலே உண்டாகிய,
உபநிடதத்தை – உபநிடதப்‌ பொருளாயும்‌,
என்‌ தீ வினையை – என்‌ தீவினைகளை,
நின்று-நிலை கொண்டு,
அலைத்து-போக்கி ,
ஓன்றும்‌- பொருந்திய,
நியாய நெறியை-நியாய மார்க்க முடையதாயும்‌,
நிறை – எல்லா வளங்களும்‌ நிறைந் துள்ள, குருகூர்‌ – திருக் குருகூரில் எழுந்தருளிய,
மன்‌ தலை- நம்மாழ்கார்‌ வாக்கில்‌,
தோன்றும்‌ – உண்டாகுகின்ற,
மதுரம்‌ கவியை- சொற் சுவை பொருட் சுவை யுடைய திருவாய்‌மொழிப் பாடல்களை,
மனத்துள்‌ – தங்கள்‌ மனத்திலே,
வைப்பார்‌- வைத்‌துக் கொண்டிருப்பவர்களே,
என்‌ தலை- என்னுடைய சிரத்தின்‌ மேலே,
தோன்றும்‌ – விளங்கிய திருவடிகளை யுடைய,
எம்பிரான்கள்‌ – எமது தலைவ ராவார்கள்‌;( அவர்களே),என்‌ நாவுக்கு-என்னுடைய நாவினால்‌ துதிப்பதற்கு, உரியவர்‌ – தக்கவராவார்‌ )

திருக் குருகூர்‌ நம்மாழ்கார்‌ பாடி யருளிய, திருவாய் மொழிப் பாடல்களை மனத்துள்‌ வைப்பவரே என்னால்‌ வணங்குவதற்கும்‌ துதிப்பதற்‌கும்‌ உரியவராவார்‌ என்பதாம்‌, தத்‌துவப்‌ பொருளை உள்ளடக்கிக் கொண்டமையின்‌ உபநிடச மென்றார்‌. தருக்க நியாயத்தால்‌ பரத்துவ நிர்‌ணயஞ்‌ செய்தலால்‌ நியாய நெறி யென்றார்‌.-வேதம் போலாகாது எல்‌லாச் சாதியாரும்‌ படித்த்துச் சுவை காணும் தன்மையினால்‌ மதுரகவி என்‌றார் -ஒன்று – ஒன்று, வென நீட்டல்‌ விகாரம்‌ பெற்றது. பிரான்‌ – என்னும்‌ னகர ஈறே யுடைமையின்‌ (கள்‌’ என்ற விகுதி பெற்றது.

அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர் மறுமையும் இம்மையும்
நம்மை அளிக்கும் பிராக்களே –ஆழ்வார் அடியார் அடியார் அடியோங்களே என்கிறார்

————

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே
. 63–

பிறர்‌ – அயலாருடைய,
புல்‌ கவி- புன்மையாகிய பாடல்‌கள்‌,
உரிக்கின்ற – இதழ் இதழ்களாகப்‌ பகுக்கப் படுகின்‌ற ,
கோடலின்‌ -வெண் காந்தள்‌ மலரினின்றும்‌,
உந்து – வீசுகின்ற,
கந்தம்‌ என – மணத்தைப் போல,
ஒன்றும்‌ இன்றி- சொல்‌ பொருள்‌ அணி முதலிய யாதொன்றுமில்லாமல்‌,
விரிக்குந் தொறும்‌ – பதங்களைப்‌ பிரித்தப்‌ பார்க்‌கும்‌ போதெல்லாம்‌,
வெறும்‌ பாழாய் விடும்‌- வீணே பயனற்றதாய்ப்‌ போய் விடும்‌;
மெய்‌ – கடவளின்‌ உண்மை நிலையை, தெரிக்கின்ற – யாவர்க்கும் தெரியச்‌ சொல்லுகின்ற,
கோ – இறைவராகிய,
சடகோபன்‌ தன்‌ – நம்மாழ்வாருடைய,
தெய்வக்கவி- தெய்வத் தன்மையுள்ள பாடல்‌கள்‌,
புவியில்‌ – பூமியில்‌,
தோண்ட – பறிக்கப்‌ பறிக்க,
சுரத்தலின்‌ -தண்ணீரூறுதலால்‌,
நுண் மணல்‌ – மிகச் சிறியனவாகிய மணல்களை,
சுரிக்‌கின்ற – சுற்றிலுமுடையதாய் இருக்கின்ற
ஊற்று-மணலூற்றினை,
ஓக்‌கும்‌- ஒத்திருக்கும்‌;

பிறர்கள்‌ பாடும்‌ பாடல்களெல்லாம்‌ மணமில்லாத கார்த்திகைப்‌ பூவை ஒத்திருக்கும்‌; நம்மாழ்வார்‌ பாடல்கள்‌ ஆராயும் தோறுஞ்‌ சுவை ஊருதலால்‌ தோண்டுந் தோறுஞ்‌ சுரக்கின்ற மணலூற்றினை யொத்திருக்கு மென்பதாம்‌. காந்தள்‌ – கார்த்திகை. இது கார்த்திகை மாதத்தில்‌ மலர்தலால்‌ இப் பெயர்‌ பெற்றதென்பர்‌ ; கார்த்திகை மலர்‌ பார்‌வைக்கு அழகாயிருத்தல்‌ போலப்‌ பிறர் கவி படிப்பதற்கு ஓசை முதவியவை குறையாதிருப்பினும்‌ ௮க்‌ கார்த்திகை மலர்‌ நறுமண மில்லாதது போல அப்‌ பிறர்‌ கவியும்‌ சொற் சுவை பொருட் சுவை நிரம்பாமையால்‌ பயன ற்றதாய்‌ விடுமென்றார்‌, கந்தம் மென, மகரம்‌ – விரித்தல்‌ விகாரம்‌ பெற்றது. தொறும்‌ இங்குத்‌ தொழிற்‌ பயில்வுப்‌ பொருளைத்‌ தந்தது. பாழாய் விடும்‌, விடு-துணிவுப் பொருள்‌ விகுதி, சுரத்தலின்‌ – மூன்றாம்‌ வேற்றுமை ஏதுப் பொருள்‌,

தொட்டனைத்து உறும் மணல் கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊரும் அறிவு-

——–

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே.
64–

திரக்கும் -முத்துக்கள் தெறித்து விழப் பெற்ற
கழை -கரும்புகளின்
நெடும்‌ தாளில்‌ – நீண்ட தூறுகளிலே, தொடுத்த – கட்டின,
செம்‌ தேன்‌ – சிவந்த சேனடைகளானவை, (பக்கத்திலுள்ள குளங்‌களிலிருக்கின்ற,) கயல்‌ குதிப்ப- கெண்டை மீன்கள்‌ துள்ளி மோதி விழுதலாலே,
உடைந்து – உடை.பட்டு,
பரக்கும்‌ – தேன்‌ பரவுகின்ற
பழன வயல்‌ – மிக்க வயல்கள்‌ சூழ்ந்த,
குருகூர்‌ – நம்மாழ்வாரவதரித்த திருக் குருகூரின்‌,
வளம்‌ – மகிமைகளை,
பாடுமின்‌ -பாடுங்கள்‌ ;(அப்படிப்‌ பாடினீர்களாயின்‌),
திருவும்‌ சுரக்கும்‌ -செல்வமும்‌ பெருகும்‌ ;
வறுமையும்‌ தீரும்‌ – தரித்திரமும்‌ நீங்கும் ;
இரு வினை – நல் வினை தீ வினை யாகிய இரண்டும்‌,
தொடக்கு விட்டு – தொடர்ச்சி நீங்கி ,
கரக்கும்‌- மறைந்து போகும்‌;
மேன்மையும்‌ காணும்‌ – மேலாகிய பரம பத தரிசனமுமாகும்‌,

ஐனங்களே ! நம்மாழ்வாரவதரித்த திருக் குருகூரின்‌ மகிமையைப்‌ பாடுங்கள்‌ ; செல்வமுண்டாகும்‌ -வறுமை நீங்கும்‌; இருவினைப் பற்றொழியும்‌; மேன்மை யுண்டாகு மென்பதாம்‌. திரக்குதல்‌ – தெறித்து விழுதல்‌. கயல்‌ குதித்தலால்‌ தேன்‌ உடைந்து வயல்களிற்‌ பாவுதல்‌ போலக் குருகூர்‌ மகிமையைக் கூறுதலால்‌ நம்மாழ்வாரின்‌ கருணை உங்களுக்கு நிரம்ப உண்டாகிப்‌ பரவும்‌ என்பது தொகை மொழியின்‌ கருத்தெனக் கொள்க. திரு முதலிய வற்றுள்ள உம்மைகள்‌ எண்ணுப்‌ பொருளன,. குதிப்ப- காரணப்‌ பொருளில்‌ வந்த செயவெனெச்‌ச வாய்பாடு, பழன வயல்‌ – இருபெயரொட்டு,

———-

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே
. 65–

பாடும்‌ – எப் பக்கங்களிலும்‌,
கறங்கும்‌ சிறை – சுழலுகின்‌ற சிறகுகளை யுடைய,
வண்டு – வண்டுகள்‌,
பாட -சப்த்தித்து நெருங்குதலால்‌,
பை தாள்‌ – பசுமையான தண்டுகளை யுடைய,
குவளை தோடும்‌ -நெய்‌தல்‌ மலரின்‌ இதழ்களும் (அவ் வண்டுகள்‌ வந்து மோதலுக்கு ஆற்றாமல் )
கறங்கும் – சுழலுகின்‌ற
குருகை – திருக் குருகூரிலுள்ள,
பிரான்‌ – மிக்க உபகாரமுடையவராய்‌,
இ -இந்த –
சுழல்‌ பிறவியோடும்‌ – சுழன்று வருகிற பிறப்பினுடன்‌,
கறங்கு அன்ன- காற்றாடி யொத்த,
வாழ்க்கையை -சரீர வாழ்லை,
நீக்கி – போக்கி விட்டு,
உணர்வு உதவி- நல்லறிவு தந்து ,
வீடும்‌ – பரம பதத்தையும்‌,
திறந்து தந்தானை – கதவு திறந்து தந்தருளினவரை,
எ நான்றும்‌ – எந்த நாளும் ,
விடகிலம்‌- யாம்‌ கை விட மாட்‌டோம்‌);

குருகூரிலவதரித்த மக்களின்‌ நிலை யற்ற வாழ்வைப்‌ போக்கி மோட்ச பதத்தினைத்‌ திறந்து தந்தருளிய நம்மாழ்வாரை நாம்‌ எந் நாளும்‌ விட மாட்டோம்‌ என்பதாம்‌. வண்டு பாடி நெருங்கக் கண்ட குவளை மலர்‌ சுழலாறு ஏற்றுக் கொள்ளுதல்‌ போல நம்மாழ்வார் பாடல்களை ௮ன்‌போடு யாவர்‌ பாடுகிறார்களோ ௮வர்களைப்‌ பரம பதமானது தட்டாமல்‌ ஏற்றுக் கொள்ளுமென்பது தொகை மொழியின்‌ கருத் தென்க-சிலர்‌ இதனையே உள்ளுறை யுவமை என்பர்‌, குருகை- மருஉ மொழி, பிற வி, வாழ்க்கை – தொழிற்பெயர்கள்‌,-தந்தான்‌ – வினைப் பெயர்‌, விடகிலம்‌, ௮, கு – சாரியைகள்‌, இல்‌ – எதிர் மறை இடை நிலை-

———–

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே.
66–

பொருள் –அகப் புறப் பொருள் ,
திணை -பெருந்திணை
துறை– வேலமர்‌ கண்ணி மாலை யம்‌ பொழுது கண்டு ஏங்கிய தறிந்த பாங்கி புலம்பல்‌.

வெம்‌ – கொடிய,
விடம்‌ -நஞ்சு போன்ற ,
அந்தகாரம்‌ பாலில்‌- இருட்டை யுடைய இராக் காலமாகிய பகுதியிலே, மெல்லியலுக்கு- மென்மையான சாயலை யுடைய எம்‌ தலைவிக்கு,
இடர்‌ வந்ததென்று- காமத்‌ துன்பஞ்‌ செய்கின்ற சந்திரன்‌ உதித்து வந்ததென்று,
இரங்கி -கருணை கூர்ந்து,
பராங்குசர்‌-நம்மாழ்வார்‌,
புணர்ந்திலர்‌-வந்து புணர்ந் தாரில்லை ; [இந்த வேளையில்‌], இன்று- இ அந்தி- இந்த மாலைக் காலமானது ,
வந்து பட – வந்‌து நீங்குதலும்‌,
௮ந்த காரம்‌ பெரும்‌ புகை – -பெரிய புகை போன்ற இருட்டானது
ஒடி – எங்குஞ்‌ சென்று,
பரக்கின்றது -பரவுகின்றது ; (இப்படி வந்த இருட்டானது ), இன்‌ உயிரை-எம்‌ தலைவியின் இனிய உயிரை ,
அட வந்த -கொல்லுவதற்கு வந்த
காலன்‌ கொலோ -யமன்‌ தானோ ? அறியேன் -யானறிந்திலேன்‌ ;

கொடிய இருள்‌ பரவிய இரவில்‌ என் தலைவிக்கித் துன்பமுண்டாயிற்றே யென்று இரங்கிப்‌ பராங்குசர் வந்து புணர்ந்தாரில்லை; இம் மாலைப்‌ பொழுதில்‌ இருள்‌ பரவா நின்றது தான்‌ உயிரைக் கொண்டு போகிற யமனோ? அறியேனென்பதாம்‌. விடம்‌ -இருளுக்கு நிறத்தாலுவமை. இடர்‌ -சந்திரனுக்கு ஆகு பெயர்‌, ஆல்‌ – அசை, காலன்‌ கொல்‌ – ‘இடைச் சொற்றொடர்‌ ) கொல்‌ – அசை நிலை யிடைச்சொல்‌.-ஓ – ஐயப் பொருளில்‌ வந்த இடைச் சொல்‌, மாலைப்‌ பொழுதின்‌ பின்‌ இருளைப்‌ பார்த்தலும்‌ தலைவி விரகங்கொண்டு சோகமுறக் கண்ட தோழி இருளை மேலிட்டு விடமாகா க் கூறினள்‌, வெம்மையை இடர்‌ என்பதனோடு கூட்டுக ., இன்னும்‌ தலைவர்‌ வந்திலாமையில்‌ இருள்‌ பரவுவதைக்‌ காலனோ வென்றாள்‌, பாரங்குசர்‌ – அயல்‌ மதங்களாகிய யானைகளை அடக்குகின்ற அங்குசம்‌ போவ்பவர்‌, இங்கும்‌ துன்பஞ்‌ செய்யுங்‌ காமனை யடக்குபவர் என்று எண்ணிப்‌ பராங்குசர் என்றாள்‌. காமன்‌ கொடுமைக்கு ஆற்றாளென்பது தோன்ற மெல்லியல் என்றாள் -தலைவியின்‌ துன்பத்தைக் கண்டு பொறாளாய்‌ வெளிப் படையாகப்‌ புணர்ந்‌திலர் என்று கூறினாள்‌. கிளவித் தலைவன்‌ பெயர்‌ கூறினமையால்‌ அகப் புறமாயிற்று, காமத்தை யாருமறியக் கூறிப் புலம்பினமையால்‌ நான்கு மணம்‌ பெற்ற பெருந் திணை யாகாமல்‌ கந்தருவத்தின்‌ வழுவிய பெருந்திணை யாயிற்று , பராங்குசர்‌ – தீர்க்க சந்தி, மெல்லியல்‌ – பண்புத் தொகைப்‌ புறத்துப்‌ பிறந்த ௮ன்மொழி,

——–

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே.
67–

பொருள் –அகப் பொருள்
திணை -பாலைத் திணை
கிளவி – உடன் போக்கு : உட் பகுதி -தேற்றல்‌.
துறை–(தலைவிக்குத் தலைவன்‌) தன்பதி யணுமை சாற்றல்‌,

சுரவாத – அறிவுடையோர்க் கன்‌றிப்‌ பிறருக்குப்‌ பொருள்‌’ வெளிப் படாதனவகிய, சுருதி பசுக்கள்‌ அவற்றை – வேதங்களாகிய அந்தப் பசுக்களை,
சுரப்பித்‌து – எல்லாருக்கும்‌ பொருள்‌ தோன்றச் செய்து ,
அவை -அந்த நாற் பகுதியாகிய பிரபந்தங்களும்‌,
சொரியும்‌ -கொடுக்கின்ற,
பொருள் பால்‌ – பொருளாகிய பாலை,
கரவாது – மறைக்‌காமல்‌,
உதவிய – கொடுத் தருளிய,
மாறன்‌ – நம்மாழ்வாருடைய,
கவி அனையாய்‌ – பாடல்களை யொத்த பெண்ணே !
இனி – இனி மேல்‌,
இப் புறம்‌ – இந்தப் பாலை நிலத்தின்‌ எல்லை யானது,
ஓர்‌ சரம் வாதம்‌- ஓர்‌ அம்பு வீழ்ச்சி யளவு தான்‌ ;
அப்புறம்‌-இதற்கு அப்பால்‌,
௮ தடம்பணை -அந்தக் குருகூரின்‌ எல்லை யுளகப்பட்ட அகன்ற வயல்களேயாம்‌;
காண்‌ – நீபார்‌;
ஆதலால்‌, பரவாது – உன்‌ மனத்தை அலைய விடாமல்‌,
கேட்டு- யான் சொல்லுகின்ற இதனைக் கேட்டு,
இனி – இப்பொழுது முதல்‌,
பைய – மெல்ல,
நட – நடப்பாயாக;

தலைவியை இருளிடை அழைத்து உடன் கொண்டு போகின்ற தலைமகன்‌ தன்‌ ஊர்‌ அருகில் இருப்பதனைக்‌ காட்டித்‌ தெரிவித்தனனென்‌க -, இணை – பாலை, கைகோள்‌ – களவு, கூற்று – தலைவன்‌கூற்று, கேட்‌போர்‌ – தலைவி இடம்‌ – முன்னிலை, காலம்‌ – ௭திர் காலம் , எச்சம்‌ -நீ என்பது எஞ்சி நின்றது,-மெய்ப்பாடு – உவகை. பயன்‌ – தலைவியைத் தேற்றல்‌. வேதத்தைப்‌ பசுவாகவும்‌ அதன் பொருளைப்‌ பாலாகவும்‌ அதனைச்‌ சுரப்பிக்கச் செய்தனரென உருவகஞ் செய்தமையின்‌ இதுஉருவக வணி. பெண்களிற்‌ சிறந்தமையின்‌ – எல்லாக் கவிகளுள்‌ளும் சிறந்த மாறன்‌ கவியோடு உவமித்தான்‌. இன்னம்‌ எவ்வளவு தூரமுளதோ வென்று கவலை கொண்டதனை அறிந்தனனாதலின்‌ பரவாது கேட்டு என்றான்‌. நெறி முழுதும்‌ இவ் வண்ணமேயாமெனக்‌ கொண்டு விரைந்து செல்லாதவாறு அப்பால்‌ தடம் பணை யுள்ளதனால்‌ பைய நட வென்றான்‌, இடையிலெதிர்த்த சிங்கம்‌ முதலியவற்றை ௮வன்‌ அம்பாலெய்‌ததனைத் தலைவி யறிந்துள்ளாளாதலின்‌ ௮வள்‌ அறிந்த அம்பின்‌ வீழ்ச்சியைக் குறித்துக் காட்டிச் சார வாதமென்றான்‌, ஆங்கே தடம் பணை ௮ருகில் இருக்கிறதாகக் கொண்டு காண்‌ என்றான்‌. அப்பால்‌ ஊர் போய்ச்‌ சேரும்‌ வரையில்‌ அந்தப் மருத நிலமே யென்பது தோன்றத் தடம் பணை யென்றான்‌.தடம்பணை -உரிச் சொற்றொடர்‌,

புணர்ந்து உடன் போந்த தலைமகன் நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப் பெய்தமை சொன்ன பாசுரம் –சம்சார மார்கத்தைக் கடந்து ஸ்ரீ வைகுண்டம் அழைத்துச் செல்லும் ஆழ்வார் அந்த ஸ்தானம் அணித்தமையைச் சொன்னவாறு –

———–

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே.
68–

பொருள் –அகப் புறப்பொருள்‌,
திணை–பெருந் திணை ,
துறை – பாகொத்த சொல்லி பைந்தொடை பெறாமல் மேகத்தைத் தூது போக விடுதல்‌

பனி – விடாமல்‌ மழை பெய்வதை ,
தோய்ந்திடும்‌ – மேற்‌ கொண்டுள்ள,
மேகங்களே – ஆகாயத்திற்‌ செல்கின்ற மேகங்களே!
தண்‌ பொருநை – சூளிர்ந்த தாமிரபர்ணி நதி சூழப் பெற்ற,
தடம்பணை -அகன்ற வயல்களை யுடைய,
குருகூரர்‌ – திருக் குருகூர்‌ நம்மாழ்வார்‌,
(தமது ), தகை – பெருமை யுடைய,
வகுளம்‌ வடம்‌- மதிழமலர் மாலையை,
பணை – பருத்த,
கொங்கையில்‌ – என்‌ கொங்கைகளில்‌, வைக்‌கின்‌றிலர்‌ –
ஓற்ற வைத்தருளுகின்றாரில்லை ;
(அதனையன்றி), மற்றை மாலை யெல்‌
லாம்‌ – பிற மாலைகளெல்லாவற்றையும்‌,
உடம்பு அணைக்குந் தொறும்‌ –
என்‌ உடம்பில்‌ சேர்த்து ஒற்றிக் கொள்ளும்‌ பொழுதெல்லாம்‌,
வெந்து – என்னுடம்பிலுள்ள சாமாக்கினியால்‌ வெந்து போய்‌,
உகும்‌ – உதிர்ந்து விடும்‌ ;
(௮ந்தக் காமத்தீயும்‌.) ஐந்து வெம்‌ பாம்பு -கொடிய ஐந்து பாம்புகள்‌, (ஒரு சேரச் கூடி ஒரே உடம்பில்‌ ஓரிடத்திலேயே கடித்து ),
உமிழ்ந்த – கடிவாயில்‌ கக்கின,
விடம்‌ – விடங்களானவை,
பணைக் கொண்டனவே -அதிகரித்தாற் போல்வனவேயாம்‌;

மேகங்களே ! குருகூராழ்வார்‌ தம்‌ வகுள மாலையை என்‌ கொங்கைகளில்‌ வைத்தருளு கின்றாரில்லை ; அதனை யன்றித் தோழியர்‌ கொண்டு வந்து சூட்டு கின்‌ற பிற மாலைகள்‌ காமாக்கினியால்‌ கருகி உதிர்வன ; ஒரு பாம்பு கடித்தாலே பிழைப்பரிது ; அந்தக்‌ காமாக்கினி ஐந்து பாம்பு கடித்த நஞ்சு பரக்கின்றால் போல்வன; இவ் விஷயத்தை ஆழ்வாருக்கு அறிவிப்பீராக வென்றாளென்பதாம்‌.-அகன்ற நீர் பாய் வயல்களும்‌ குளிர்ந்த
பொருநை யுமுடையவாதலால்‌ அவர்‌ மாலையும்‌ குளிர்ச்சியைச்‌ செய்யு மென்றாள்‌, உயிர்க்கு நன்மை செய்தலால்‌ தகை வகுளமென்றாள்‌,-பனி – குளிர்ச்சியுமாம்‌. நீங்கள்‌ மிருந்த குளிர்ச்சியான கருணை யுடையீ ராதலால்‌ பெண்ணென்றால் பேயும் இரங்கும் இயல்பன்றோ அதனால்‌ என்பாற்‌ கருணை யுடையீராகிச் சென்று அவர்க்கு அறிவிப்பீர்‌ என்பதனை யடக்கிப்‌ பனி தோய்ந்திடு மேகங்களே யென்ருள்‌. நீங்கள்‌ இங்கே
பொழிவதனால்‌ பயனில்லை அவருடைய மலையிலேறி மழை பொழியத்‌ தொடங்கினால்‌ அவர்‌ நம்மைக் கண்டவடன்‌ விரக மேலீட்‌டினால்‌ தாமே என்னிடம்‌ வந்தணைவார் எனக் கொண்டு மேகத்தை நோக்கிக் கூறினா ளென்றலுமாம்‌. ஐந்து பாம்பு – காமனம்பைக் குறித்ததுமாம்‌,

பொருள் ஈட்டி பின்பு கார் காலத்தில் மீண்டு வருவதாக சொல்லிப் போந்த தலைமகன் வாராமையாலே ஆழ்வாருக்கு போலியான மேகங்கள் இந்நிலையில் வருத்தத்தை மிகுவிக்கும் -போலி கண்டு அழிதல் –

———

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே
. 69–

பொருள் —அகப்பொருள் ,
திணை – முல்லை,
கிளவி- வரைவிடை வைத்துப்‌ பொருள் வயிற்‌ பிரிதல்‌,
துறை–தலைவன்‌, மேகம் தன்னொடும் சோகம் கொண்டவன்‌ சொல்லல்‌,

மேகத்தை – மேகமே! உங்களை,
ஆற்றில் கண்டேன்‌ என்‌று-வழியிலே கண்டு மார்க்கத்தைச் சொன்னேனென்று,
எண்ணாது – நினைக்‌காமல்‌, (நீங்கள்‌),
குருகூர்‌ மெய்யன்‌ -குருகூரிலுள்ள சத்‌துவ ருபியாகிய
நம்மாழ்வார் செய்தருளிய, பாகத்தை – செம்பாகமாகிய திருவாய்மொழியை,
ஆர்றும்‌ – ஒத்திருக்கின்‌ற,
சொல்லாளை – சொல்லை யுடைய என்‌ தலைவியை,
கண்‌ நீரின்‌ துளி பரந்த – கண்ணினின்று உண்டாகிய நீர்த் துளி மிக்குள்ள,
மோகத்தை – என்பாலெழுந்தா காம விரகத்தை,
ஆற்றிக்‌ கொண்டே – ஆற்றுவித்துக் கொண்டே,
கண்ட மாற்றம்‌ – என்னை நீங்கள்‌ வருகிற வழியிற் பார்த்ததான வார்‌த்தையை,
மொழிந்து -சொல்லி
சிந்தை -அவள் மனத்திலுண்டாகிய, சோகத்தை – சோர்வை,
ஆற்றிக் கொண்டே- சாந்தப் படுத்திக் கொண்டு
பிற்பாடு, தூளிதூவ – மழை பெய்ய, தொடங்‌குக-ஆரம்பிப்பீர்களாக ;

மேலோரை முன்னிலை மொழியாற்‌ கூறுதலினும்‌ படர்க்கை மொழியாற்‌ கூறுதல்‌ சிறப்புடைமை நோக்கி மேகமே!உங்களை என்று குறித்‌துக் கூறாமல்‌ படர்க்கைப் பெயரை யமைத்துக் கூறி நீங்களி ருக்குமிடம்‌ வந்து வழி மொழிந்து வேண்டுதலியல்பு – அங்ஙனமின்றி வழியிலே உங்களைப்‌ பார்த்து விட்டமையால்‌ இதனை நும்‌ வீட்டில் வந்து கேட்டுக்‌ கொண்டமையாகக் கருதுக வென்பது தோன்ற ஆற்றிர் கண்டேன்‌ என்று எண்ணாது என்று உபசாரம்‌ கூறினான்‌-ஏனைய மாதர்கள் போல்வாளல்‌லள்‌ என்பது தோன்றத்‌ திருவாய் மொழியோடு உவமித்ரான்‌, உங்களுக்கு ௮வள்‌ மறு மொழி கூறத் தொடங்கினால்‌ அவள் சொல்வே உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமென்பதனால்‌ சொல்லாளென்றான்‌. அவளைக் கண்டவுடன்‌ என்னை நீங்கள் பார்த்ததாகக் கூறினால்‌ உடனே அதிக மகிழ்ச்சி கொண்டு ஆவென்றலும்‌ ஏத முண்டாகுமோ வென்‌றஞ்சி முதலில்‌ மோகத்தை யாற்றிச்‌ சிறிது சிறியதாக என்னை வழியில் கண்டது உண்டென்று சொல்லுக வென்றான்‌, சொல்லிய வுடன்‌ சென்று விட்டால்‌ சோகமடைவளாதலால்‌ மீட்டும்‌ ௮வள்‌ மனத்திலுள்ள சோர்வை நீக்கிக் கொண்‌டென்றான்‌, பெரு மழை பெய்யத் தொடங்‌கினால்‌ குளிரில்‌ வருந்துவளாதலின்‌ சிறிது துளிகளைத் தூவுக வென்றான்‌. யான்‌ விரைவில் வந்து விடுவேனென்பது தோன்றத் தொடங்குக வென்றான்‌, திணை-முல்லை, கை கோள்‌-
களவு, கூற்று – தலைவன்‌ கூற்‌று. கேட்போர்‌ மேகத்தோடு கூறுவானாய்க்‌ கூறியது , இடம்‌ -முன்னிலை. காலம்‌ – எதிர் காலம்‌. எச்சம்‌- யான்‌ விரைவில்‌ வருவேனென்பது எஞ்சி நின்றது -. மெய்ப்பாடு -அலலம்‌. பயன்‌-மேகத்தோடு கூறிச் சிறிதாற்றுதல்‌, பொருள் கோள்‌-யாற்றுகீர்‌. மேகத்தை –இடவழுவமைதி,. எண்ணாது, – எதிர் மறை வினை யெச்சம்‌, பாகம்‌ -சுவையை யுடைய திருவாய்மொழிக்குப் பண்பாகுபெயர்‌. கண்ணீரின்‌ துளி-பிரிவாற்றாமை யென்னும்‌ மெய்ப்பாடு தோன்ற நின்றது,

மேகங்களை பாகவதர்களாக சொல்லத் தட்டில்லையே-ஆழ்வார் வரை அறிவித்து ஆஸ்வாசப்படுத்த சொன்னபடி

———

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே
. 70–

இது மதங்கி கூத்து-ஒருகூத்தாடிச்சி ஆடத் தொடங்கும் பொழுது ஒருவன்‌ சபையோரை நோக்கிக் கூறியது -. இதுவும்‌ முற்கூறிய பல்வரிக்‌ கூத்திலொன்று,

சபையீர் -சபையிலுள்ளவர்களே!
சொல்லுகின்‌றேன்‌ -இப்‌பொழுது உங்களுக்கு ஒரு விஷயம்‌ சொல்லுகின்றேன்‌ அதனைக் கேளுங்கள்‌,
மதங்க – பாடல் வல்ல இக் கூத்தாடிச்சி,
நடம் தொடங்குகின்றாள்‌-கூத்தாட எத்தனிக்கின்றாள்‌ ;
குருகூர்த் தொழா – திருக் குருகூரிலே எழுந்தருளிய நம்மாழ்வாரைத் தொழுது, மடங்குன்றாள்‌ – திரையினுள்‌ளேயே திரும்பிப் போகின்‌றாள்‌ ;
மண்டலம் சுற்றி – (அத்திரை யிடத்துள்‌ இருந்தாபடியே), மண்டலமாகச் சூழவந்து
ஆடுகின்றாள்‌-கூத்தாடுகின்றாள்
மதங்கி விடங்கு கண்டு -இந்த மதங்கியி னழகைக் கண்டால்‌,
பிழைப்‌பார்‌ ஆர் – இங்கே பிழைப்பவர் யாரிருக்கிறார்கள்‌ ?
இந்தப் படங்கு விண்‌டால்‌ – இந்தத் திரையை நீக்கி விட்டாலோ,
பின்னை – பிற்பாடு,
உம்‌ பதி களுக்கு – உங்களூர்களுக்கு,
போக ஒண்ணாது – போக முடியாது ; (ஆதலால் ) விரைந்து ஏகும்‌- சீக்கிரமாக ௮ப்பால் போய் விடுங்கள்‌ :

சபையிலிருப்பவர்களே ! உங்களுக்கு ஒரு விஷயம்‌ சொல்லுகேன்‌ கேளுங்கள்‌, பாடல் வல்ல இக் கூத்தாடிச்சி குருகூராழ்வாரை வணங்கிக்‌ கூத்தாடத் தொடங்குகிறாள்‌, இவளழகு கண்டால்‌ எல்லாரும்‌ மோகித்து வீழ்ந்து இறப்பார் -ஆதலால்‌ இப்பொழுதே விரைந்து உம்மூர்க்குப் போங்களென்பதாம்‌. பின்னை – இடைச் சொற் றிரிபு, எண்ணாது – ஒன்றாதென்‌பதன்‌ மரூஉ.

பக்தி அதிசயத்தைக் கண்டவர் இவர் பக்கல் ஈடுபடுவதை விட்டு பிரபஞ்ச விஷயங்களில் செல்ல இயலாமையைச் சொன்னவாறு-

———–

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே
. 71–

பொதியம்‌ – பொதிய மலையானது ,
தரும்‌ – கொடுக்கின்ற
அமுதம்‌ – நீர்ப் பெருக்கை யுடைய,
நதி – தாமிரபருணியாற்றருகிலுள்ள,
அம் -அழகிய,
குருகூர்‌ – திருக் குருகூரிலவதரித்த, –
எந்தை -எங்கள் இறைவரான ஆழ்வார்‌, பூசுரர்க்கு – பிராமணர்களுக்கு,
தமிழ் பதியம்‌ என்ன – தமிழில்‌ பதிகங்களென்‌னும் படியாகவும்‌,
நான்மறை என்ன – நான்கு வேதங்களென்பனவாகவும்‌,
இ பார்‌ – இந்த உலகத்தை
புரக்கும் – தன்‌ குளிர்ச்சியால்‌ காக்கின்ற,
மதி- சந்திரனை யொத்த,
அந்தமில்‌ – முடிவில்லாத,
ஒளி – பிரசாசத்தை யுடைய,
மாலைகள்‌ என்ன – மாலைகளென்‌னும் படியாகவும்‌,
மறை – வேதத்தை யொத்த,
தமிழின்‌ -தமிழ் மொழியில்‌,
௮தியம்‌ தரும்‌ – மிகுதியான பெருமையைத்‌ தருகின்ற,
ஆயிரம்‌’ கவி- ஆயிரம்‌ பாடல்களை,
செய்து – பாடி,
அளித்தான்‌– கொடுத்தருளினார்‌ ;

குருகூராழ்வார்‌ பிராமணர்களுக்குத் தமிழெனவும்‌, நான் மறை யென்னவும்‌ மாலை ளென்னவும்‌ ஆயிரம் பாடல்கள் பாடிச்‌ கொடுத்தருளினாரென்பதாம்‌.-பொதிய மலையில்‌ அகத்தியரிடத்தில்‌ பிறந்த தமிழிலக்கணம்‌ உலகத்தை வாழ்விப்பது போல தாமிரபருணி நதி பொதிய மலையில் சோன்றித்‌ தென்னாட்டை வாழ்விக்கும்‌ சிறப்புத் தோன்ற பொதியந் தரு நதி என்றார்‌.-பூசுரர்‌ – பூயியிலுண்டாகிய தேவரெனவே அந்தணர்க்காயிற்று, நம்மாழ்வார்‌ பிரபந்தம்‌ நான்‌கும்‌ நான்கு வேதங்‌கள்‌ போல்‌ கூறப்படுதலால்‌ நான்மறை என்றார்‌. பதிகம்‌ – பத்துப் பாடல்களை யுடைமையின்‌ பதிகமெனப் பட்டது, நினைக்கவும்‌, கூறவும்‌ குளிர்ச்சியைத் தருதலின்‌ மதியை யுவமித்தார்‌. ஒன்றோடொன்று தொடர்புடைமையின்‌ மாலைகளென்றார்‌. பதிகம்‌, அதிசம்‌ என்பன எதுகை நோக்கி, பதியம்‌, .அதியம்‌ என்றாயின. வேதப்‌ பொருளைக்‌ கண்டு மகிழ்பவர் அந்தணராதலால்‌ அவரே யிதன் பெருமையை யறிய வல்லவரென்று பூசுரர்க்கு அளித்தார்‌ என்க,

பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அருந்த நிறைப்பதற்கு அன்றோ அமுதமாய் அருளினான்-

—————-

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே
. 72–

பரவும்‌ – எல்லாராலும்‌ துதிக்கப் படுகின்‌ற , குருகூர்‌ -திருக் குருகூரில்‌,
வந்த – அவதரித்த,
கற்பகம்‌ – கற்பகத் தருவை யொத்த நம்மாழ்வார்‌,
பொய்ச் சமயப்‌ புலவர்க்கு – பொய்யாகக் கூறப்படுகிற(லோகாயிதம்‌ பெளத்தமென்னும்‌) புறச் சமயங்களிலுள்ள வித்வான்‌களுக்‌கும்‌,
பூட்சி கண்டீர்‌ -மேற்கொள்ளத் தகுவாரென்று தெரிந்து கொள்ளுங்‌கள்‌;
மற்றை – அவர்களை யல்லாத,
மாயத்து -வஞ்சனையை யுடைய,
அருகர்க்கு – சயினர்களுக்கு,
போக்கு – அவர்கள்‌ மாறு பாட்டைப்‌ போக்குவதாகிய,
வல்வாய்‌ – உறுதியான வாயை யுடைய, வாட்சி கண்டீர்‌ – வாள்‌ போல்வதென்று தெரிந்த கொள்ளுங்கள்‌ :
மன்‌ – நிலை பெற்ற,
உயிர்‌கட்கு – ஜீவ ராசிகளுக்கெல்லாம்‌,
ஆட்சி கண்டீர்‌ – நிலையான பொருளாவாரென்று தெரிந்து கொள்ளுங்கள்‌ ;
தொண்டர்க்கு – திருமாலின்‌ அடி.யவர்களுக்கு,
ஆனந்த வாரி கண்டீர்‌ – பேரின்பக்‌ கடல் போல்வாரென்று தெரிந்து கொள்ளுங்கள்‌
அறிவை – நம்முடைய அறிவுக்கு,
காட்சி கண்‌டீர்‌ – காண்பதற்குரிய பொருளாவார் என்று தெரிந்து கொள்ளுங்கள்‌,

குருகூரில் அவதரிதத கற்பகம் போன்ற நம்மாழ்வாரானவர்‌ பொய்‌யான சமயத்தருமேற்‌ கொள்ளத் தகுவார்‌ ;அருகர்க்கு வாள் போன்றவராவார்‌ ; மன்னுயிர்களை ஆளும் தன்மையராவர்‌ : தொண்டர்க்கு ஆனந்தக் கடலாவார்‌ ; அறிவுக்குரிய காட்சிப் பொருளாவாரென்பதாம்‌.-பிரத்தியஷப் பிரமாணம்‌ ஒன்றே யுடைய லோகாயிதரும்‌ காட்சி,அனுமானமாகிய இரண்டு பிரமாணங்களுடைய பெளத்தரும்‌ ஆழ்வார்‌ திருவாய் மொழியின்‌ கருத்தை மறுத்தற்கு இயலாதவராதலின்‌ அவராற்‌
பூணப்படுவாரென்றார்‌. வஞ்சனை யுடைய ஜைனர்‌ முற்கூறிய இரண்டினோடு ஆகமம்‌, அருத்தாபத்தி ஆகிய இரண்டனையுங்கூட்டி நான்கு பிரமாணங்களைக் கொண்டு எதிர்த்தும்‌ ஆழ்லார்‌ நூல்‌ அதன்‌ மேற் பட்டுள்ள பிரமாணங்களைக் கொண்டுள்ளதாதலின்‌ இதனை வெல்ல முடியாமையால்‌ அந்த அருகருக்கு வாள் போல்வர் என்றார்‌. தேவர்களுக்கு வேண்டுவன அளிக்கும் தருவைப் போல உலகத்தின்‌ மன்னுயிர்களுக்கு வேண்டியவற்றைத்‌ தரலிற்‌ கற்பகமென்றும்‌ அங்கனம் தருதலின் ஒன்றாகிய பேரின்பக் கடலைத்‌ தொண்டர்க்கே கொடுப்பரென்றும்‌ இங்கனம் இருந்தும்‌ மனத்தால்‌ நினைத்த மாத்திரத்தில் தர்சனம் கொடுத்தலில் காட்சி என்றும் கூறினார் -கற்பகம்‌ -உவமை யாகு பெயர்‌-

————-

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே.
73–

எம்மை – எங்களை,
விற்றும்- விலைக்‌கு விற்கவும்‌,
விலை கொள்ளவும்‌ – அந்த விலைப் பொருளைத் தாம்‌ பெற்றுக் கொள்ளவும்‌, உரியான்‌ உரியவரகிய,
மாறன்‌ – நம்மாழ்வார்‌ பாடி யருளிய,
கவி வெள்‌ளத்தை – பாடலாகிய பிரவாகத்தை,
யாம்‌ – நாம்‌,
நிதம்‌ – தினந்தோறும் ,
கற்றும்‌ – மூலத்தைக் கற்கக் கடவோம்‌; (௮ப்படிக் கற்ற பிற்பாடு),
செவிஉற கேட்டும்‌ – அதன் பொருளைக் காதில் நன்றாகக்‌ கேட்கக் கடவோம்‌ ; பருகி – குடித்து, களித்தும்‌ – மகிழ்வோம்‌ ; முற்றும்‌ – அந்தப்‌ பிரபந்த முழுவதும்‌, உள்ளே -எம் மனத்தினுள்ளே, ௨க – விழும்படி.,-பெய்தும்‌ – ஊற்றிக் கொள்வோம்‌ ; மூழ்கி – அந்த வெள்ளத்தில்‌ அழுங்க,-குடைதும்‌ – ஸ்நாநஞ் செய்வோம்‌ ; முகந்து கொடு – அள்ளி முகந்து எடுத்‌துக் கொண்டு,
நில உற – நிலை பெற்ற இடங்களிலே,
நிற்றும்‌ – நிற்போம்‌;
நீந்துதம்‌ – நிலை கொள்ளாத இடங்களில்‌ நீந்திச் செல்வோம்‌;

ஆழ்வார்‌ பாடலாகிய வெள்ளத்தைப் பற்றி வாயினாற் பேசுவோம்‌ ;பிறர் பாற்‌ கேட்போம்‌ ; உண்டு மகிழ்வோம்‌ ; எடுத்து உள்ளே ஊற்றிக் கொள்வோம்‌ ; அதில்‌ ஸ்நாநஞ் செய்வோம்‌ ; நிலை கொண்ட இடத்தில்‌ நிற்போம்‌; நிலை கொள்ளாத விடத்தில்‌ நீந்துவோம்‌ என்பதாம்‌, பருகும் போதெல்லாம்‌ தெவிட்டாது தித்தித்தலால் களித்துமென்றார்‌. முழுதுங்‌ கொள்ளுதற்கு எம்‌ அறிவாகிய கொள்கலம் பற்றாதாயினும்‌ வலிந்துஊற்றிக் கொள்வோமென்றார்‌. ஓயாமற்‌ பருக வேண்டியதனால்‌ முகந்துகொடு நிற்றுமென்றார்‌, யாம்‌ அவர்க்கு அடிமையாய் விட்டபடியால்‌ அவர்‌ என்னை விற்கவும்‌ பொருளைப் பெறவுமுரியரென்றார்‌. விற்றல்‌-அடியார்க்கு அடியனாகச் செய்தல்‌.விலை கொள்ளுதல்‌ – அவ்வடியாரையும்‌ தம்மடியாராக்குதல்‌, மாறன்‌ – ஆழ்வார்‌ திருப் பெயர்களுளொன்று.-கற்றும்‌ முதலியவை – தன்மைப்‌ பன்மை எதிர் கால வினை முற்று, திருவாய் மொழியை வெள்ளமாக்கி அதற்கேற்ப முமுவதும்‌ உருவகஞ்‌ செய்தமையால்‌ இது முற்று உருவக அணி’.

———–

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே.
74–

பொருள் -அகப்பொருள்
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –இடத் தலைப்பாடு,
துறை–கண்ணயந்‌துரைத்தல்‌.

கவிக்கு – செந்தமிழ்ப் பாடல்கள்‌ பாடுவதற்கு,
அரசன் -தலைவராகிய (நம்மாழ்வார் அவ தரித்த )
தெள்‌ – தெளிந்த,
அம்‌ – நீர்‌,
பரந்த – பரவிய,
வயல்‌ – கயல்கள் சூழ்ந்த,
குருகூர்‌ – திருக் குருகூரிலிருக்கிற ,
கொம்பின்‌ – அந்தப் பெண்ணினது ,
செம் முகத்து – சிவந்த முகத்தினிடத்தில்‌,
எம்‌ உள்ளம்‌ – எமது மனமானது ,
பரந் தனவயோ -இரண்டாகப்‌ பரவி இருக்கின்றனவோ
கமலத்து – தாமரை மலரில்‌,
வெள்ளம்‌ – பிரவாகமான கடல்கள்‌ தாம்‌,
பரந்தனவோ – பரவி யிருக்கின்‌றனவோ ? அன்றி- அல்லாமல்‌,
வெள்மதி மேல்‌ – வெண்மையாகிய சந்திரன்‌ மேலே யுள்ள,
முயல்‌ நீக்கி- களங்கமாகிய முயலை நீக்கி, கள்‌ளம்‌ – களவாகிய தொழிலொன்று தான்‌, பரந்தனவோ – இரண்டு வடிவாகி விளங்கு கின்றனவோ ?
கண்களோ – கண்கள் தாமோ ?
ஒன்றும்‌ ஒர்கிலோம்‌- ஒன்றாகத்‌ துணிந்து சொல்ல யாம்‌ ௮றிந்தோமில்லை.

ஆழ்வார்‌ குருகூரில்‌ எம்‌ தலைவியின்‌ முகத்திலுள்ளன கமலத்தில்‌ வெள்ளம்‌ பரந்தனவோ ? சந்தின் மேற்‌ களவுத் தொழில் தான்‌ பரந்னவோ? அல்லது என்‌ மனந்தான்‌ ௮ங்கனம்‌ பரந்தனவோ ? கண்கள்‌ தாமோ? ஒன்றும்‌ அறிந்தோமில்லை யென்பதாம்‌,-தலைவியைக் கண்ட பொழுது அவளுறுப்புக்கள் சில மலர்கள்‌ போலத்‌ தலைவனுக்குத்‌ தோன்றியதற்கு ஏற்ப இங்குக் கொம்பு என்றான் – கொம்பு-மலர் நிறைந்த கொம்பு, காம மயக்கத்சாலிருண்ட தன்‌ மனத்தை அவளுடைய இருண்டு விழியாகக்‌ கூறியது பண்பு பற்றி யென்க , இவன்‌ நெஞ்சம் அவள் விழியால்‌ தாக்கப்பட்டு அவ்விழி களிலே அடங்கிக் கிடந்ததனால் தன் மனமே அல்வடிவினது என்றான்‌.,அங்கனம்‌ கொண்ட மயலுச்கு எல்லை காணாமல்‌ ஆழ்ந்ததனால்‌ கரையிலாக் கடலே பரந்தனவோ என்றான்‌; இப்படியே கடலினும் பெரிய கண்கள் என்றார் இராமாயணத்திலும்‌, கொம்பு -உவமை யாகு பெயர்‌. வெள்ளம்‌, கள்ளம்‌, உள்‌ளம்‌ – பால் பகா அக்றினைப் பெயர்களாதலால்‌ பன்மை முடிபு கொண்டன.இத்துறை முற்றும்‌ ஐயவுவமை. குறிஞ்சிக்குரிய கருப்பொருளொன்று மில்லாமையால்‌ உரிப் பொருளைக் கொண்டு குறிஞ்சி யென்‌று கூ.றலாயிற்று,-இடந்தலைப்பாடு இயற்கைப் புணர்சசி துணிந்த தலை மகன்‌ மற்றை நாள்‌ முன்‌ கொடுத்த தெய்வம்‌ இன்னுங்‌ கொடுக்குமென்று அவ்விடஞ் செல்லுதல்‌. கை கோள்‌ – களவு, கூற்று -தலைவன்‌ கூற்று, மெய்ப்பாடு – பெருமிதம்‌ ; உவகையுமாம்‌. பயன்‌ -கண் சிறப்புரைத்தல்‌ ஹேதுவாகத் தலைவியைச் சார்தல்‌.

ஐய உவமை அணி
திரு உள்ளம் காம மயக்கத்தால் இருந்து அன்றோ போனது-தலைவன் நெஞ்சோடு கூறிக்கொண்டது-நலம் பாராட்டு துறை
கண் அழகு -ஞான வைலக்ஷண்யம்-இவருக்கு பேர் அறிவு ஆழ்வாரது சங்கல்பத்தாலே
இதயக் கமலத்திலே எழுந்து பொங்கும் ஞான வெள்ளத்தை -வெள்ளம் பரந்தனவோ கமலத்து என்கிறார் – இந்த தெளிந்த ஸூத்த ஞானம் பரமாத்மாவின் திரு உள்ளத்தையும் வசீகரிக்குமே -ஆகையால் வெண் மதி மேல் முயல் நீக்கிக் கள்ளம் பரந்தனவோ -என்கிறார்

————–

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே
. 75–

ஓரும் – ஆராய்‌ந்து அறிகின்ற
தகைமைக்கு – உயர்ந்த தன்‌மைக்கு,
உரியாரும்‌ – தகுந்தவர்களும்‌;
ஓங்கிய -உயர்ந்த,
ஞானியரும்‌ -ஞானமுடையவர்களும்‌,
சாரும்‌ – அடையப் பெற்ற,
தனி. ஒப்பற்ற,
தலைவன் – தலைவராகிய,
சடகோபன்‌ – சடகோபனென்‌னும் பெயருடைய நம்மாழ்வாரவதரித்த,
தட பதிக்கு – விசாலமான திருக் குருகூருக்கு,
வாரும்‌- வரக் கடவீர்கள்‌ ;
உமக்கு -உங்களுக்கு
ஒர்உறுதி – ஒரு உறுதிப்‌ பாட்டை,
சொன்னேன்‌ – இப்பொழுது சொல்லுகிறேன்‌; (அப்படி. வருவீரேல்‌,)
நும்‌- உங்களுடைய,
மயக்கம்‌ எல்லாம்‌ -விபரீதமுழுவதும்‌,
தீரும்‌: -நீங்கி விடும்‌ ;
திருக்கு அறும்‌ – மாறுபாடுகள் நீங்கி விடும்‌
தீங்கு -தீவினைகள் எல்லாம்‌,
அறும்‌ – நீங்கும்‌;
சிந்தை -உங்கள் மனமும்
செவ்வே நிற்கும் -கோணாமல் ஒரு தன்மையாக நிலை நிற்கும்

நீங்கள் ஆழ்வார் குருகூருக்கு வாருங்கள்‌ ; உங்களுக்கு ஓர் உறுதி சொல்லுகின்றேன்‌ ; உங்கள்‌ மயக்கம்‌ நீங்கும்‌ ; திருக்கு நீங்கும்‌; மனம்‌ ஒழுங்குபடும்‌ ; தீங்கறுமென் பதாம்‌. ஒர்தல்‌ – கடவுளியல்பை யறிதல்‌, ஓங்கிய ஞானம்‌ – கடவுளை அறியும் அறிவு – மயக்கம்‌ – ஒன்றை மற்றொன்றாகக்‌ கருதும் விபரிதம்‌: என்றது எங்கும் வியாபித்து இருப்பவன் நாராயணனென்‌பதை மறந்து மற்றத் தெய்வங்க௭ வியாபித்திருப்பதாகக் கருதுதல்‌, திருக்கு – மாறுபாடு, அதாவது கடவுளும்‌ அவர் போல்வாரும்‌ நியமித்த வழிக்கு விரோதமாக நிற்றல்‌, இவைகள் ஓழியவே மனம்‌ ஓரு, தன்மையாகவே நின்று கடவுளைத் துதித்துப் பரம பதத்தை அடைதல்‌ கூடிமென்பதாம்‌,-இவை யனைத்தும்‌ திருக் குருகூரை யடைந்த மாத்திரையே பெறலாகுமென்றதனால்‌ இது அப் பதியின்‌ சிறப்புக் கூறப்பட்டது, வாரும்‌ என்பதற்கு நீங்கள் என்பதை தோன்றா எமுவாயாக்கிக் கொள்க,சொன்னேன்‌-தெளிவினால்‌ வந்த கால வழு வமைதி,

———

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே.
76–

பொருள் —அகப் பொருள் .
திணை -மருதம்
கிளவி –பராத்தையிற் பிரிவு.
துறை–காமக் கிழத்தி மைந்தனை யெடுத்தல்‌.

அறு வகையாய் -ஆறு வகைப்பட்ட சமயமும்
சமய நூல்களும் ஐ வகைத்தாம்‌-ஐந்து வகைப் பட்டதாகிய,
புலனும்‌ உறுவகையால்‌-தன் மாத்திரைகளும்‌ கூடி யுள்ளவகையினால்,
சொன்ன – சொல்லிய,
ஓட்‌டம்‌எல்லாம்‌ – நீண்ட பொருள் விரிவு முழுவதும்‌,
ஒழிவித்து – போக்கி,
ஒருங்ககே – ஒரு சேர,
பெறு வகை ஆறு என – அடையும்படியான வழுி இது வென்று,
செய்த – பிரபந்த ரூபமாகச் செய்து காட்டி யருளிய,
பிரான்‌ -தலைவரும்‌,
குருகூர்‌ பிறந்த – குருகூரிலே அவதரித்‌தருளிய,
சிறு வகையார்‌ – சிறிய மனித வடிவினருமாகிய,
அவரை – அந்த நம்மாழ்வாரை,
தொழுதோம்‌ – யாம்‌ வணங்கினோம்(ஆதலால்‌) எம்மை
தீண்டுக- தொடுவாயாக;

சமய நூல்களில்‌ கூறிய மாறுபாடுகளை யெல்லாம்‌ போக்கி நல்வழி இதுவே யெனப்‌ பிரபந்த ரூபமாகக்‌ காட்டி யருளிய திருக் குருகூர்‌ நம்‌மாழ்வாரை யாம்‌ தொழுதோமாதலால்‌ மைந்தனே ! எம்மைத் தொடுவாயாக வென்பதாம்‌, பஞ்ச, தன் மாத்திரை: சுவை, ஒளி, ஊறு! ஒசை, நாற்றம்‌ எனபன, இவற்றாற் சொல்லிய ஓட்டம்‌ – அவ்வச்‌ சமய நால்களில்‌ கூறிய தத்துவ சாத்திரங்களாம்‌ ; எனவே அவற்றை யொழித்து நான்கு வேதங்களின்‌ பொருள்களாகிய கிருவாய்மொழி முதலிய நான்கு பிரபந்தங்களையும்‌ நிலையிட்டருளியபடி என்பதாம்‌, ஆய சமயம்‌ – இடைச்‌ சொற்றொடர்‌. ஒழிவித்து, வி- பிற வினை விகுதி. குரு கூர்ப்பிறந்த – எழாம்‌ வேற்றுமைத் தொகை.
தலைவன்‌ பரத்தையிற்‌ பிரிவில்‌ தலைவியின்‌ மைந்தன்‌ தெருவில்‌ விளையாடும் பொழுது அங்கு வந்த காமக் கிழத்தி தான்‌ தூய்மை யுடையவளென்று கூறி ௮ப் புதல்வனைத் தன் பாலழைத்தது இத் துறையின் கருத்து. தலைவன்‌ பரத்தையிற் பிரிதலும்‌ தலைவிக்கு ஊடல் தோன்றுதலின்‌ உரிப் பொருளால்‌ மருதமாயிற்று , மெய்ப்பாடு பெருமிதம்‌. பயன்‌-காமக் கிழத்தி மகிழ்தல்‌. கை கோள்‌ – கற்பு, கூற்று – காமக் கிழத்தி கூற்று,

சிறு மா மானிசராய்த் தோன்றி நம்மை ஆண்டு அருளிய ஆழ்வாரை வணங்கினோம்
ஐவகைத் தாம்புலனும் எம்மைத் தீண்டுகவே.–மெய் வாய் கண் மூக்கு செவி -ஐம் பொறிகளாலும் உண்டாகும் ஸ்பர்ச ரஸ ரூபம் கந்தம் ஸப்தம் போன்ற ஐந்து வகைப் புலன்களும் எம்மைச் சார்வனவாக –அவற்றைக் குறித்து அஞ்ச வேண்டாமே

சடகோபர் எம்மைத் தீண்டுகை என்று தலைமகள் பிரணய ரோஷம் அடைந்து
நீங்கப் பெற்றதாகவும் இதற்குப் பொருள் சொல்வர்

சிறு மா மானிடராய் ஆழ்வார் அடியார்களையும் சொன்னவாறு
வழுதி நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தேன்-என்றாரே –

————

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே
. 77–

அணி நீர்‌ -அழகிய பொருநை யாற்று நீர் பரந்த,
தமிழ்‌ -தமிழ் வளம் பொருந்திய,
திரு – அழகிய,
பாண்டி நாட்டு- தன் பாண்டி நாட்டிலே, உருக் காட்டிய – வடிவமெடுத்தருளின, பாவகற்கு – பரி சுத்தரான நம்மாழ்வாருக்கு,
அன்பனாய்‌ – தொண்டு செய்பவனாய் ,
ஆண்டில்‌ -அவ்விடத்‌தில்‌,
வீனையேன்‌ -தீ வினை யுடையவனாகிய நான்‌,
இவ் வெறும்‌ பிறவி – இப் பயனற்ற பிறப்பில்‌,
பிறந்த அக் காலத்திலே – பிறந்த அப்‌பொழுதே தானே.
தீண்டி- பரிசித்து .
திருவடியைப் பற்றிக் கொண்டு -ஆழ்வார்‌ திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, சிந்தித்ததை – மனத்தில் நினைத்ததனை, வேண்டிக் கொளப்‌ பெற்றிலேன்‌ – பிரார்த்தித்து அடையப்‌ பெற்றேன் இல்லை ;

நான்‌ பிறந்த பொழுதே நம்மாழ்வாருக்‌ கன்புடையோனாய்‌ அவர்‌ திருவடியைப் பற்றிக் கொண்டு நினைத்ததைப்‌ பிரார்த்தித்துப்‌ பெற்றுக்‌ கொண்டேனில்லை என்பதாம்‌. மற்றை நாட்டைக் காட்டிலும்‌ சிறப்புடைமை தோன்றம்‌ தமிழ்த் திருநாடு என்றார்‌.-பாவகன்‌ – அக்னி. அவனைப்‌ போலப் பரிசுத்த முடைமையால்‌ ஆழ்வாரை அவ்வாறு கூறினார்‌. இம்மைப்‌ பயனைத் தேடி உழலுதலால்‌ வெறும் பிறவி என்றார்‌. சிந்தித்தது – வீட்‌டின்பம்‌, பாவகன்‌- உவமை யாகு பெயர்‌, வெறம் பிறவி-பண்புத் தொகை நிலைத் தொடர்‌, சிந்தித்தது – வினைப்பெயர்‌,

மதுர கவி ஆழ்வார் இந்த தேஜஸ்ஸூ பார்த்தே இவரை வந்து சேர்ந்தார் அன்றோ
ஆதலால் அவருக்கு பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே-என்பது பொருந்துமே-தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் -அடையப் பெற்றேன் அல்லேன்

பழுதே பல பகலும் போக்கினேன் -அஞ்சி அழுகிறார்-வேண்டிய அனைத்தையும் தர வல்லவர் ஆழ்வார் என்பதாலேயே – சிந்தித்ததையே வேண்டிக் கொளப் பெற்றிலேன் -என்கிறார்-இங்கு சிந்தித்தது முக்தியையே இவருக்கு –

————–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே
. 78–

பாவகத்தால்‌ – அம்சத்தினால்‌,
தன்‌ – மாயோனானவன் தன்னுடைய,
திருஅவதாரம்‌ – சிறந்த அவதாரங்கள்‌, பதினொன்று என்‌று -பதினொன்றாகுமென்று,
இ பூவகச்தார்‌ – இந்த வுலகத்திலுள்ளவர்‌கள்‌,
அறியாத வண்ணம்‌ -அறிந்து கொள்ளாதபடி
தனையே புகழ்ந்து – தன்னைத் தானே கொண்டாடி,
நா ௮கத்தால்‌-தந் நாவினிடமாக,
ஆயிரம்‌ கவி பாடி -ஆயிரம் பாடல்கள் பாடி,
நடித்து- வேறாயுள்ளவரைப்‌ போலக் காட்டி, அளித்த -கொடுத்தருளிய,
கோ அகத்தாற்கு அன்றி-பரம பத நிலைமையை யுடையவராகிய நம்மாழ் வாருக்கே யல்லாமல்‌.
புறத்தார்‌-அன்னியர்களுக்கு,
செய்‌ – செய்கின்ற
குற்றேவல்கள் -சிறிய ஊழியங்கள்
என் –என்ன பயன் தரும்

நம்மாழ்வார் மாயோன் அம்சமாகப் பிறந்து அந்த மாயோனைத் துதித்தலால் தன்னையே புகழ்ந்து கொண்டவராய்‌ ஆயிரம் பாடல்கள் பாடி யருளினார்‌-௮ப்படிப் பட்டவர்ச்குத் தொண்டு செய்யாமல்‌ பிறருக்குச் செய்‌யும்‌ ஊழியத்தாலடைவன யாவை யென்பதாம்‌,-ஆழ்வார் திருமாலின்‌ அம்சமென்று கூறப்படுதலால்‌ அந்த மாயோனவதாரம்‌ பத்தன்றிப் பதினொன்றென்‌றார்‌. அக் காரணத்தால்‌ இவர்‌ மாயோனைப் புகழ்ந்ததும் தம்மைப் புகழ்ந்ததாயிற்று, நடித்தல்‌- மாயோன்‌ வேறு தாம் வேறு என்று உலகத்தாருக்குத் தோன்ற நடித்தல்‌-. பூ ௮கம்‌ -பூமியாகிய இடம்‌; இருபெயரொட்டு, தன்னையே, ஏ -பிரி நிலை, கோவகத்தான்‌ – மேலாகிய இடத்தை யுடையவன்‌, புறத்தார்ச் செய்‌- வேற்றுமைத் தொகை –

வங்கி புரத்து நம்பி -ஆழ்வார் ப்ரபாவத்தாலே எம்பெருமானே இவ்வாறு திரு அவதரித்தார் என்னலாம் படி என்று அருளிச் செய்வார்-

தானே யான் என்பானாகத் தன்னைத் தன்காண் துதித்து-யானாய்த் தன்னைத் தான் பாடி–நாராயணா அடியேன் நாடும் தமிழ் வேத பாராயணா சடகோபா -பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்–திருப்புளிய மரம் ஆதி சேஷன் அம்சம் தானே–அத்ரி ஜமதக்கினி -ப்ராஹ்மண -தத்தாத்ரேயர் -பரசுராமன் முதல் யுகத்தில்–சக்ரவர்த்தி திருமகன் க்ஷத்ரியர் அடுத்த யுகத்திலும்–வைஸ்ய யதுகுல கண்ணன் அடுத்தும்–கலியுகத்தில் ஆவேச அவதாரம் -வேத வியாசராய் வேதங்களை வெளியிட்டு அருளினால் போல் திவ்ய பிரபந்தங்களை வெளியிட்டு அருளவே அன்றோ இவர் திரு அவதாரம் –

———

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே
79–

குருகைப்‌ பிரான்‌ – திருக் குருகூரிலுள்ள இறைவராகிய,
எம்‌ பிரான்‌ தன்‌ – எங்கள்‌ நம்மாழ்வாருடைய,
இயல்‌ இசைக்கு – இலக்கணமும்‌ பண்ணும்‌ அமைந்த திவ்யப்‌ பிரபந்தங்களாலே. (யான்‌) குற்றேவலும்‌ செய்து – சிறிய வேலைகளும் செய்து ,
மெய் கண்டு – அப்பிரபந்தங்களின்‌ தத்துவார்த்தத்தைத் தெரிந்து கொண்டு,
கை கொண்டு கும்பிட்டு – எனது கைகளாலஞ்சலி செய்து.
அன்பு பெற்றேன்‌ – அவருடைய கருணையை யடையப் பெற்றேன் ;
என்‌ போல்‌- என்னைப் போல,
எவர்‌ – யாவர் தாம்‌,
பேறு பெற்றார்‌ – பயனடைந்து இருக்கிறார்கள்‌ ? (ஒருவருமில்லை என்றதாம்‌),
பின்னையே பிறந்து – பிற்பட்டு உண்டாகி,
வெற்று ஏவலில் நின்ற – பயனற்ற பணி விடைகளில்‌ நிலை நிற்கின்ற ,
பொய்‌ அன்பர்‌ தாங்களும்‌ – பொய்யாகிய வழிகளில் சென்று அன்பு செய்கின்றவர்களும்‌,
மெய்‌ – தத்துவ ஞானத்தை ,
உணர்ந்தார்‌ – அறிந்து கொண்‌டார்கள்‌ ; எறறு – இது எத்தன்மைத்தான வியப்புடையது

யான்‌ ஆழ்வார்‌ பிரபந்தத்தை ஆரியருக்கு ஏவல்‌ முதலியவற்றைச்‌ செய்து படித்து ௨ண்மைப் பொருளறிந்து அவர் அருள் பெற்றேன் – என்‌னைப் போல் பெற்றவர் யார்‌? ஆழ்வார்க்குப்‌ பிற் பட்ட பலர்களும்‌ இந்தப்‌ பிரபந்தத்தினால் தத்துவ ஞானம்‌ பெற்றார்கள்‌, ஈதென்ன வியப்பு ?என்பதாம்‌. இயல்‌, இசை – சினை யாகு பெயர்‌.-ஏவலும்‌, உம்‌. இறந்தது தழுவிய எச்சம்‌. எற்றே , எல்‌ – தே எனப் பிரித்து ஒளி பொருந்திய தெய்வமாகிய பிரானென்று கூட்டினும்‌ அமையும்‌. கைகொண்டு, கொடை-மூன்றாம் வேற்றுமைச்‌ சொல்லருபு, எற்று – குறிப்பு முற்று,

———

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–
80–

பொருள் –அகப் புறப் பொருள்‌,
திணை -கைக்கிளை
துறை–காட்சி; ஆண் பாற் கூறறு,

இயலை – இலக்கணங்களை,
தொடுத்து – திருவாய்மொழியி்‌ல் புகுத்தி,
இன்‌ இசையை- இனிய இராகங்களை.
புணர்த்து-கூட்டி,
எம்மை–, இ. இந்தா ,
பிறவி மயலை. – பிறப்பினால் உண்டாகிய மயக்கத்தை ,
துடைத்த – போக்கின,
பிரான்‌ – நம்மாழ்வாரவதரித்தருளிய,
குருகூர்‌ – திருக் குருகூரில்‌,
மதியைக் கொணர்ந்து- சந்திரனைப் பிடித்து வந்து ,
முயலை – அதிலுள்ள களங்கத்தை, துடைத்து – போக்கி , (அதனிடத்தில்‌),
தனுவைப் பதித்து – இரண்டு விற்களை அமைத்து ,
முத்தங் குயிற்றி – முத்துக்களைப்‌ பதித்து,
கயலை – இண்டு கயல் மீன்களை,
கிடத்தி- வைத்து,
சாளரத்தூடு – சன்னல்களுள்ளே வந்து,
கதவு இட்‌டதே கொல்‌ – கதவு தாழ் போடப் பட்டதோ ?

இலக்கண அமைதியும்‌ இசை அமைதியுமுள்ள பிர்பந்தஞ் செய்தருளின ஆழ்வாரது குருகூரில்‌ சந்திரனிடத்தில்‌ களங்கம் போக்கி விட்‌டும்‌ முத்தும்‌ மீனும்‌ அமைத்து பலகணியினூடு வைத்துக் கதவிடப் பட்‌டதோ வென்றான்‌ என்பதாம்‌.-எல்லா இலக்கணங்களுக்கும்‌ இலக்கியமாகக் கொள்ளுதலால்‌ இயலைத் தொடுத்தென்றார்‌ – இசையோடு கூறப்படுவதனால் இசையைப்‌ புணர்த்தென்றார்‌. படித்தலால்‌ பிறப்பின்‌
மயக்கம்‌ நீங்குதல் பற்றி மயலைத் துடைத்தென்றார்‌. களங்கம் துடைத்த
மதி – முகத்துக்கு உவமை. தனு-புருவத்துக்கும்‌, முத்துக்கள்‌. – பற்களுக்கும்‌; கயல்கள்‌ – கண்களுக்கும்‌ உவமை யாதலால்‌ இவை யனைத்தும்‌ உவமை யாகு பெயர்கள்‌. கொணர்ந்து , கொணா – பகுதி, கொல்லென்‌னும்‌ ஐய இடைச் சொல்‌ பிரித்துக் கூட்டிப் பொருள்‌ கொள்ளப்பட்டது -கைக் கிளை – ஒரு மருங்கு பற்றிய அன்பு; அதாவது ஒரு தலைக் காமம்‌;ஒப்பாரு மிக்காரு மில்லாத்‌ தலைவன்‌ வேட்டை மேலீட்டினால் சென்று ஒரு தலைவியை நோக்கி மயங்கிய சிறப்புடைக்‌ கைக்கிளை யன்றி அடியோர்‌
பாங்கினும்‌?? என்ற விதிப்படி யமைந்த அடியவன்‌ தலை மகனாய்த்‌ தெருவில் செல்பவன்‌ சாளரத்துள் ஓருத்தியைக் கண்டு இருவரும் மயங்கியவழித் தலைவன்‌ கூறியது, மெய்ப்பாடு -மருட்கை, பயன்‌ – வியப்பினாலுள்ள மகிழ்தல்-

————

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே.
81–

கேணியிலும்‌ – கிணறுகளிலும்‌,
பட்டத்திலும்‌ – பட்டக்‌ கால்களிலும்‌,
பைந்தடத்திலும்‌ – பசிய குளங்களிலும்‌,
ஓடை – நீரோடைகள்‌ சூழ்ந்த,
பழனத்திலும்‌ – பள்ளமாகிய வயல்களிலும்‌,
குட்டத்திலும்‌ – ஆழமான குட்டைகளிலும்‌,
கயல்பாய்‌ – கயல் மீன்‌ பாய்ந்து குதிக்கின்ற,
குருகூரர்‌ – குருகூரிலவதரித்த நம்மாழ்வாருடைய,
குணங்களுக்கு – நல்லொழுக்கம்‌ அமைந்த குணங்களைக் கண்டு,
இருப்பின்‌ கிட்டத்திலும்‌ வலியாரும்‌-இரும்புகளுருக்குகின்‌ற உருக்குக் கிட்டானைக்‌ காட்டிலும்‌ வலிய நெஞ்சுடையவரும்‌,
இட்டத்திலும்‌ _ கருத்துக்களைச்‌ சொல்லுமிடத்திலும்‌,
தம்தம்‌ உள்ளத்திலும்‌ – தங்கள்‌ தங்கள்‌ மனத்திலும்‌,
எண்ணிலும்‌ – நினைப்பினும்‌,
உருகுவர்‌ – கரைவார்கள்‌ ;

குருகூராழ்வாருடைய நல்லொழுக்கமமைந்த குணங்களைக் கண்டு கடின செஞ்சுடையவரும்‌ மனமுருகு வாரென்பதாம்‌, பட்டம்‌ – தண்‌ணீர்ப் பெருக்கும் காலத்‌தில் மட்டும்‌ ஏறிப் பாய்கிற மேட்டு நிலம்‌. நீர் வளத்‌தால்‌ மேடும்‌ பள்ளமான வயல்களிலும்‌ கிணறு குள முதலியவற்றிலும்‌ ஏற்றத் தாழ்வின்றி மீன்கள்‌ பாய்தல் போல ஆழ்வாரின்‌ குண விசேஷத்‌தால்‌ அறிந்தோர்‌ அறியாதோர் கொடிய நெஞ்சர்‌ முதலிய யாவரும்‌ உருகுவாரென்று தொகை மொழியாற்‌ கொள்க , இரும்பு – வன்றொடராயிற்‌
று. ஓடையாகிய பழனம்‌ என்றாக்கி இரு பெயரொட்டென்றலுமாம்‌’-இதற்கு நீண்ட வயலென்று பொருள் கொள்க -குட்டம்‌ – பண்பாகு பெயர்‌.

இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்-இரும்பாகில் அக்னியாலே நிமிர்த்துக் கொள்ளலாம்-இது ஒருபடியாலும் திருத்த ஒண்ணாது என்கை-கடின ஸ்தலத்தில் வர்ஷித்தால் காடின்யம் அடங்க நெகிழிச்சிக்கு -உறுப்பு ஆமாப் போலே
விஷயாந்தரத்தாலே மனஸூ அதி கடினமானாலும் சிதிலமாம்படி வயிர உருக்காய் இறே
பகவத் ப்ரபாவம் இருப்பது –-ஆழ்வாரது திரு அருள் பெருக்கால் -இடையறாத நீர்ப்பெருக்கால் மேடு பள்ளம் வாசி இன்றி
எங்கும் ஒக்கக் கயல் பாய்தல் போலே வலிய நெஞ்சினாரும் மெல் நெஞ்சினாரும் வாசி அற உருகுவார்களே –

————————–

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

பெரும்‌- பெரிய,
தண்‌ – குளிர்ந்த,
வகுளம்‌ மணம்‌ – மகிழ மலரின்‌ மணமானது ,
வேண்டும்‌ – விரும்பி யுறைகின்ற,
தண் தெரியல்‌ – குளிர்ந்த மாலை யுடைய,
பெருமான்‌ – நம்மாழ்வாரருளிச் செய்த,
செய்யுள்‌ – பாடல்களாகிய,
மா மணியின்‌ – சிறந்த இரத்தினங்களுடைய,
கணம்‌ -,கூட்டத்தை ,
வேண்டும்‌ என்று – கற்க வேண்டுமென்று,
அறிவாரை – அன்போடு படித்து அறிந்தவரை ,
கண்டால்‌ – தரிசித்தால்‌,
குணம்‌வேண்டுமே – அவர்களுக்கு நற் குணங்கள்‌ வேண்டுமோ? (வேண்டாம்‌)
நல்‌ குலம் வேண்டுமே – நல்ல குலமாயிருக்க வேண்டுமோ ? (வேண்டாம்‌)
௮ குலத்து ஒழுக்காம்‌ – அந்தக் குலத்‌துக்குரிய நடையாகிய, –
பிணம்‌-பயனற்ற பிணம் போல்‌வதும்‌. வேண்டுமே – வேண்டுமோ ? (வேண்‌
டாம்‌)
செல்வம்‌ பேய்‌ – பொருளாகிய பிசாசும்‌, வேண்டுமே – வேண்‌டுமோ ? வேண்டாம்‌
ஆதலால்‌, சென்று -உடனே அருகிற் சென்று,
கை தொழும்‌ – கை கூப்பி வணங்குங்கள்‌

நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழிப்‌ பிரபந்தத்தை அன்‌போடு படிப்பவரைக் கண்டால்‌ ௮வருடைய குணம்‌ குலம்‌ நடை பொருள்‌ யாவும்‌ பார்க்க வேண்டியதில்லை உடனே சென்று வணங்குங்கள்‌ -என்பதாம்‌. குணம்‌ – அன்பு. பொருள்‌, அடக்கம்‌ முதலியன. குலம்‌ – ௮ந்தணர்‌ முதலிய உயர்குலம்‌, நடை – அவர்கள்‌ தர்கள்‌ மதத்துக் ஏற்பக் கட்டியதானால்‌ பிணமென்றிகழ்ந்தார்‌. பேய்‌ – தான்‌ பிடித்தவரைத்‌ தன்‌ வசமாக்குதல்‌ போலப்‌ பொருளும்‌ விருமபினாரை வசமாக்குதலால் பேயென்றார்‌. மணிக்கு மேற் சிறந்த பொருள்‌ தோற்றத்தி லில்லை யாதலால்‌ மணியை உவமித்தார் -வேண்டுமே என்பவன வற்றிலுள்ள ஏகாரங்கள்‌ எதிர் மறைப் பொருளன.-செல்வப் பேய்‌ – இருபெயரொட்டு, பெருந் தண் வகுளம்‌- பண்புத் தொகை ; பன் மொழித் தொடர்‌:

அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இப் பத்து அறிந்தார் தொண்டர் வாழ்வது சூழ் பொன் விசும்பே -என்றவாறு-

———-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென்னாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே–
83-

தொழும்பு ஆக்கிய – என்னை அடிமையாகக் கொண்ட,
வினை – தீ வினை மிக்க,
தொல்லை – பண்டைக் காலம் தொட்டுள்ள,
பிறவி-பிறப்பாகிய, (கடலிலுள்ள), சுழியிடை நின்று – தண்ணீரின்‌ சுழலிருந்து
எழும்‌ – வெளியில்‌ வரும்படியாகிய, பாக்கியம்‌ – செல்வம்‌,
உடைத்து ஆக்கவும்‌ – எனக்கு உடையதாக்கவும்‌,
தென்‌ – அழகிய,
இயலோடு இசைந்து – இலக்கணத்துடனே பொருந்தி,
கெழும்‌ – விளங்‌கிய,
பா – பிரபந்தப் பாடல்களில்‌,
கெழுமிய – பொருந்திய,
கீர்த்தியை -கடவுளின்‌ குண விசேடங்களை,
நாளும்‌ கிளத்தி- தினந்தோறும்‌ சொல்‌லிச் சொல்லி,
என்‌ நா – எனது நாக்கில்‌,
தழும்பு ஆக்கவும்‌ – தழும்பு ஏறச் செய்யவும்‌, வல்ல கோ – வலியரான இறைவர்‌,
தயா பரன்‌ – கருணை யுடையவரான, சடகோபன்‌ – நம்மாழ்வாரேயாம்‌ ;

பிறவிப் பெருங் கடற்‌ சுழியில் அமுங்கிப்‌ போகாமல் எழுந்து மீண்டு வருந்‌ திறமை யுடையதாக்கவும்‌ திவ்வியப்‌ பிரபந்தங்களில் உள்ள கடவுளின்‌ மகிமையைத் தினந்தோறும்‌ கூறி எனது நாக்கில் தழும்பேறச்‌ செய்யவும் தகுதி யுள்ளவர்‌ நம்மாழ்வாரே யென்பதாம்‌. தீ வினை தான் செல்லும்‌ வழியே என்னை இழுத்தலால்‌ தோழும்பாக்கிய வினை யென்‌றார்‌. மாறாமல்‌ தொடர்ந்து வருதலால்‌ தொல்லைப் பிறவி யென்றார்‌.
இது பற்றியே தொல்லை நம்‌ பிறவி யெண்ணிற்‌றொடு கடல்‌ மணலுமாற்றா” என்றார்‌ திருத் தக்க தேவரும்‌, அதில்‌ நின்று மீண்ட வரருமையாதலால்‌ சுழி யென்றார்‌. ஏனை மொழி களுக்குச் சிறப்புடை யிலக்கணம்‌ அமையாமை நோக்கி அரிய பெரிய தெய்வத் தமிழுக்கு உரிய இலக்கணத்துக்குத் தென்னியல் என்றார் -தொல்லை – பண்புப் பெயர்‌, உடைத்து –
குறிப்பு முற்றெச்சம்‌. வல்ல – குறிப்புப் பெயர் எச்சம்‌, கோ ௭ன்னும்‌ எழுவாய்‌ ஆம்‌ என்னும்‌ ஆக்கத்தைக் கொண்டு முடிந்தது –

தயா பரன் -பரம தயாளு-முக்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரம் என்றாரே முன்னமே-செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத்துற்று-அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றி

——–

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே
.–84-

பொருள் -அகப் புறப் பொருள் .
திணை -பெருந்திணை
கிளவி -௮றத்தொடு நிற்றல்‌,
துறை– செவிலி நற்றாயத் தறத்தோடு நிற்றல்-நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

நங்காய்‌ – அன்னையே !
பரந்து – பரவி,
அலைக்கும்‌ – அலை மோதுகின்ற, பொருநை – தாமிரபர்ணி நதி சூழ்ந்த, குருகூர்‌ என்‌னில்‌ – திருக் குருகூர் என்று யாரேனும் கூறினால்‌,
உன்‌ மகள்‌ – உன்‌ புதல்வி,
கண் பனி மல்கும்‌ – கண்களில்‌ நீர்‌ பெருக்குவாள்‌ ;
கரம்‌ – கைகளை,
தலை கொள்ளும்‌ – தலையிற்‌ குவித்துக் கொள்ளுவாள்‌ :
கருத்து உள்‌ளும்‌ – மனத்தில்‌ தியானிக்கின்றாள்
(கருத்து ) உருகும் – மனம்‌ உருகுகின்றாள்
கவியால்‌ – பாடல்களால்‌,
உலகை – இந்தத்‌ தமிழ் நாட்டினை,
புரந்து – பாதுகாத்து,
அலைக்கும்‌ வினை – உயிர்களை வருத்துகின்ற தீ வினைகளை,
தீர்த்தான்‌ – நீக்கிய நம்மாழ்வார்‌.
புனை – ௮ணிந்து கொள்‌ளுகின்ற,
மகிழ்‌ பூவும்‌ ௮ன்றி- மகிழ மலரைச் சூடிக் கொள்ள விரும்புவதும் அல்லாமல்‌,
மரம்‌ தலைக் கொள்ளவும்‌ – ௮ந்த மகிழ மரத்தை அணைத்து மேற் கொள்ளவும்‌,
போதும்‌ – செல்லுகின்றனள் -இப்படி
யன்றி உன் மகள்‌ கருத்து இது என்று வருவித்து முடிப்பினுமையும்‌.

நங்காய்‌ உன்‌ மகள்‌ குருகூர் என்றவுடன்‌ கண்ணீர்‌ வடிக்கிறாள்‌ -கை கூப்புவாள்‌ ; கருத்தில்‌ நினைக்கிறாள்‌ மனம் கரைகிறாள்‌ ; அவ்வாழ்வார் சூடுகிற பூவை சூடிக் கொள்வதுமன்றி அந்த மகிழ மரத்தை அணைத்துக் கொள்ளவும்‌ செல்கிறாள்‌ என்பதாம்‌. நங்கை – எல்லாக்‌
குணங்களும்‌ நிறைந்தவள்‌. இதன்‌ ஆண்பால்‌ – நம்பி. கிளவித் தலைவன்‌ பெயர் கூறலின்‌ அகப்புறமாயிறறு, புறமெனவே அதன்‌ பகுதியாகிய பெருந் திணையாம்‌. தலைவனைப்‌ பிரிந்த தலைவியின்‌ சரீர வேறு பாட்டை யறிந்து இது தெய்வத்தினால் ஆயி்ற்று என்று அத் தெய்வத்துக்குச்‌ சிறப்புச்‌ செய்யப் புகுந்த பொழுது அதனை அறிந்த தலைவி அஞ்சித்‌ தோழியிடத்‌துத்‌ தன்‌ காம நிலையைக் கூறத்‌ தோழியாலறிந்த செவிலி யானவள்‌ பெற்ற தாய்க்கு நிகழ்ந்தமை வெளியிடுதல்‌ கிளவியின்‌ துறையாகும்‌-கண் பனி மல்குமெனவே அன்பும்‌ தலைக் கொள்ளுமெனவே ஆர்வமும்‌ உள்ளுமெனவே கூடற்குறிப்பும்‌ உருகுமெனவே இன்பத்தின்‌ மகிழ்ச்சியும் மரம் தலைக் கொள்ளப் போதுமெனவே பிறரைக் கூற ஏதம் பயத்தலையும் குறிப்பிட்டமை யறிக-

தாராயினும் தழை யதாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-ஆழ்வார் சம்பந்தத்தை நேராகவோ அடியார்கள் மூலமாகவோ பெற ஆசை விஞ்சி உள்ளபடி-ஆழ்வார் அடியார்கள் வாழும் இடங்களையும் தலை மேல் கொள்ளுகிறார் என்றபடி –

———–

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே
. 85–

பொருள்‌–அகப் பொருள்‌
திணை – உரிப் பொருளால் பாலை.
கிளவி -உடன்போக்கு ,
துறை – பாங்கி தலைவனை உடன் படுத்தல் .

(ஐயனே !) கருத்தில்‌ – உமது மனத்திலே,
கருணை வைத்‌து – அன்பு பாராட்டி,
இவளொடு – இத் தலைவியைக் கைக் கொண்டு,
ஏகும்‌ – செல்லக் கடவீர்‌ ;
இதுவும்‌ – இப்படி நீர் கைக் கொள்ளுதலும்‌,
கலை மறையோர்‌ – கல்வியில் சிறந்த அந்தணர்கள்‌,
திருத்திற்று – ஒழுங்கு பட அமைத்ததாகிய,
ஒரு மணம்‌ – எண் வகை மணத்து ளொன்றாகிய காந்தருவமேயாம்‌ ;
தினம்‌ மயல் தீரும்‌ – இதனால்‌ காள்தோறும்‌ உங்களுக்குண்டாகிய காம மயக்கமும்‌ நீங்கும்‌;
நீரில்‌ – தண்ணீரருகில்‌,
நிறை – முளைத்து நிறைந்துள்ள,
முருத்தின்‌ – வெண்மையான அடிக்‌ குருத்துக்களை யுடைய,
செருந்து – நெட்டிக் கோரைகளுச்கு,
அயலே -பக்கத்திலுள்ள,
கரும்பின்‌ – கரும்புகளைடைய,
குருத்தில்‌ – குருத்துக்‌களில்‌,
முயல்‌ – முயற்கூடாகிய சந்திரன் போல, பிரசம்‌ வைக்கும்‌ -தேனடைகள்‌ வைக்கின்‌ற,
குருகூர்‌ – அவ்வாழ்வார் அவரித்த திருக் குருகூரை
சென்று – போய்‌,
கூடுமின்‌ – அடையுங்கள்‌ ;

ஐயனே ! இவளைக் கைக் கொண்டு செல்வீராக; இப்படிச் செல்வதும் கந்தர்வ மணத்தின் பாற்படும்‌ ; உங்களுக் குண்டாகிய காம மயக்கமும் தீரும்‌; ஆதலால்‌ நீங்கள்‌ திருக் குருகரைப் போயடையுங்கள்‌ என்பதாம்‌, நீரில்‌ முளைத்த மெட்டிக் கோரையோடு தோன்றி விளங்கிய கரும்பில்‌ தேனடை வைப்பது போல இந்தக் குடும்பத்‌தில்‌ இருக்கிற தன்‌
னிற் சிறந்து விளங்கிய தலைவி யிடத்து அன்பு வைப்பீர்‌ என்று உள்ளுறை யுவமம் கொள்க , இதனுள்‌ நீர் தலைவியின்‌ குடியாகவும்‌ தோழி நெட்டிச்‌கோரை யாகவும்‌ தலைவி கரும்பாகவும்‌ தலைவனது அன்பு தேனடையாகவும்‌ உவமித்தமை காண்க. இவை முழுவதும்‌ முதாலொடு முதல் வந்த மெய் யுவமம்‌,-எண் வகை மணமான :– பிரமம்‌, பிராசாபத்தியம்‌,ஆரிடம்‌. தெய்வம்‌, காந்தருவம்‌, அசுரம்‌, இராக்கதம்‌, பைசாசம்‌ என்‌பன, தேனனடையைச் சந்திரனாக வுவமித்தல்‌ பண்டை வழக்கு, : அவனுந் தான்‌, ஏனலிதணச்‌ தடிற் புகை யுண்டி யங்கும் , வானூர்‌ மதியம்‌ வரை சேரினவ்வரைத்‌, தேனினிறாலென வேணி யிழைத்திருச்கும் கானக நாடன்‌ மகன்‌ ‘என்பதினாலுமறிக , தலைவன்‌ தலைவி சுரத்தில்‌ செல்லுதலால்‌ திணை -பாலை யாயிற்று , தலைவனுடன்‌ தலைவி செல்லுதலால்‌ உடன்போக்காயிற்று, இத் துறை- * போக்கும்‌ வரைவும்‌ மனைவிக்கட்‌
டோன்றும்‌ ” (தொல்‌ – பொரு – 225) என்ற வழுவமைதிக்கு மாறாகத்‌ தோழி கூற்றாற் கூறியது : ஒன்‌றித் தோன்றும்‌ தோழி மேன ”(தொல்‌ – பொரு – 19..) என்பதனாற்‌ கொள்க,

கரும்பினிடைத்தேறல் -கலியன்-சேஷி பேற்றுக்கு உகப்பானும் அவனே -ஆகவே இவருடைய மயலும் தீருமே –

————-

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே
. 86–

கூட்டங்கள்‌ தோறும்‌- தாம்தாம்‌ கூடுமிடங்களிலெல்‌லாம்‌,
குருகை பிரான்‌ – திருக் குருகூரிலவதரித்த நம்மாழ்வாருடைய
குணம்‌ -சிறந்த குணங்களை,
கூறும்‌ – சொல்லிப் புகழ்கின்ற,
அன்பர்‌ ஈட்‌டங்கள்‌ தோறும்‌ – அடியார்களின் கூட்டங்களிலெல்லாம்‌,
இருக்கப்‌ பெற்றோம்‌ – கூடி யிருக்கலாயினேம்‌;
இருந்து – அப்படிக் கூடியிருந்த,
எம்முடைய… நாட்டங்கள்‌ தோறும்‌ -இரண்டு கண்களிலும்‌,
புனல்‌ வந்து- கண்ணீர் பெருகி,
நாலப்‌ பெற்றோம்‌- வடியப் பெற்றோம்‌ ;
(ஆதலால்‌) இனி மேல்‌, வீட்டு- பரமபதத்தில்‌,
எங்கள்‌ தோழர்க்கு என்றே (உள்ளவர்கள்‌) தங்கள் நண்பர்‌களுக்கு வேண்டுமென்று அமைத்தலால்‌,
பெரும்‌ போகம்‌- பேரின்ப நலமானது, விளைகின்றது -(யாம் போகு முன்‌) உண்டா யிருக்கிறது –

கூடும் போதெல்லாம்‌ குருகூர்‌ நம்மாழ்வார்‌ குணங்களைப் புகழுகிற அடியார் கூட்டத்திற்‌ சேர்ந்து இருக்கப் பெற்றோம் – இருந்து அன்பினால்‌ கண்ணீர் பெருகப் பெற்றோம்‌ ; இனி மேல்‌ பரம பதத்திற்கு யாம் வருகிறோ மென்‌ றறிந்து அங்குள்ளார்‌ அமைத்தலால்‌ அங்கே எமக்குப்‌ பெரும்‌ போகம் விளைந்து கொண்டிருக்கிறது என்பதாம்‌. குணம்‌-பிறரை வாழ்‌விக்கக் கருதிய குணம்‌. கண்ணீர் வடிதல்‌ – அன்பு மிகுதி பற்றி, ஆழ்வாரைத்‌ துதித்தலால்‌ பிறவிப் பிணி நீங்குதலும்‌ பரம பதத்திலுள்ளார்‌ தங்கள்‌ நண்‌பரென்று அமைத்தலும்‌ பேரின்பம்‌ பெறுதலும்‌ இதனால் கூறப் பட்டது.அளவையில் இன்‌பம் தருதலால்‌ பெரும் போகமென்றார்‌. தோறும்‌- தொழிற் பயில்வுப் பொருளில் வந்த இடைச் சொல்‌,

————-

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே
. 87–

பொருள்‌. அகப் பொருள் .
திணை -குறிஞ்சி
கிளவி –வரைவுழடூக்கம்‌.
துறை–தினையோடு வெறுத்து வரைவு கடாதல்

கிளை- தோன்றுதலை யுடைய,
பிறவி தளை – பிறப்பாகிய பந்தத்தை,
ஆசு அழிய – விரைவில் கெடும்படியாக,
தடுத்து- போக்கி,
தென்‌ – தெற்கே செல்லுகிற,
பாலை வழி – பாலை நில வழியை,
தடுத்து -நீக்கி விட்டு,
களை – தீ வினைகளை,
ஆசு அற – அடியோடொழிய,
தடுத்து ஆண்டான்‌ -நீக்கி என்னை ஆண்டருளிய நம்மாழ்வாரது ,
குருகையில்‌ -குருகூரில்‌,
கார்‌ புனமே -பெரிய தினைக் கொல்லையே !
என் வினை.- என்‌னுடைய தீ வினையே, தினையின்‌ -தினைப் பயிர்களாக,
இளையா – முளைத்து,
கிளர -நன்றாக,
விளைகின்‌றது – முற்றிப் போகின்‌றது ; விளயாதொழிய…இப்படி முற்றாமல்‌ கதிர் பறிந்த படியே யிருக்க,
மருந்தும்‌ உண்டே – ஏதேனும்‌ மருந்தும் இருக்கிறதோ ? |(சொல்லுவாயாக,]

ஆண்டானது குருகூரிலுள்ள தினைக் கொல்லையே! எனது தீவினை தான்‌ உங்களிடத்தில்‌ தினைப் பயிராக முளைத்துக் கதிர் முற்றிப் போகிறது ; அப்படி முற்றாதிருக்க மருந்துமுண்டோ? உண்டாயிற்‌ சொல்லிக் காணா யென்பதாம்‌. திவ்வியப் பிரபந்தத்தைப் படித்தால்‌ யமனுக்குத் தப்பலாமென்பார்‌ தென் பாலை வழி தடுத்தென்றார்‌-பாலை வழி- நீருநிழலுமற்ற கொடிய வழி,-தினை முற்றினமையால்‌ தலைவியின் தமர்‌ அத் தினையைக்‌ கொய்து கொண்டு தங்களையும்‌ வீட்டிற்கு அழைதுப் போவார்‌ ; முற்றா திருப்பின்‌ தாங்கள்‌ அங்கே புனத்தைக் காத்திருச்கலாமென்பது பற்றி விளையாதொழிய மருந்துமுண்டோ வென்றாள்‌, இங்ஙனம்‌ பிரியச் செய்வது தீ வினையே யாதலால்‌ ௮துவே தினை வடிவமாகியும்‌ வந்து வருத்திற்று என்றாள்‌. கை கோள்‌ – களவு, கேட்போர்‌ – தலை மகன்‌ சிறைப்புறத்தானாக தினைப் புனத்தை நோக்கிச் சொல்லுவாளாய்‌ச் சொல்லியது, இடம்‌ -முன்னிலை, காலம்‌- இறந்த காலம்‌. மெய்ப்பாடு – அழுகை. பயன்‌ – பகற்‌ குறி விலக்கல்‌. ஒழிய, ஓழி-துணிவுப் பொருள் விகுதி. உண்டே, ஏ – வினா,-களையா – உடன்பாட்டு வினை யெச்சம்‌, ஆல்‌ – அசை, இளையாம்‌. ஆம்‌ -சாரியை, கருப் பொருளாகிய தினையைக் கூறுதலால்‌ திணை குறிஞ்சி யாயிற்று, களவில் புணர்ந்து ஓழுகினால்‌ புறத்தார்க்குக் தெரியுமே யென்றும்‌-அப்படித் தெரிந்ததனால்‌ தலைவனுக்கு ஊாறு நிகழமே யென்றும்‌ அஞ்சிப்‌ பல வழியாலும்‌ களவுப் புணர்ச்சி புணராதபடி விலக்கிக் கலியாணஞ் செய்‌யும்படி. முயற்சிப்பதால்‌ கிளவி வரைவு முடுக்கமாயிற்று, வரைவு – கலியாணம்‌. இங்கனம்‌ நாளும் தனியிடத்தில்‌ தலைவியைச் சேருதற்குச்‌ தகுதியான இத் தினைக் கொல்லையிலுள்ள தினையும்‌ கொய்யப் பட்டால்‌ தலைவியை வீட்டுக்கழைத்துப் போய் விடுவார்களே -இனிக் களவில் வராதபடி மண முடித்தால்‌ நலமாகுமே யென்று குறிப்பிற் கூறுதலால்‌ துறை – தினையொடு வெறுத்து வரைவு கடாதலாயிற்று,

நித்ய விபூதி அனுபவம் தந்து அருள வேண்டும் என்றவாறு –

———-

புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே
. 88–

பொருளும்‌, திணையம்‌ அவை. கினவி–பகற்குறியிடையீடு,
துறை–நெடுந்தகை, வறுங்கள நாடி மறுகல்‌.

வழுவா- நீங்காத ,
நரகத்து இனம்‌- நரகத்தின் தொகுதியை,
பாழ்படுத்த- அன்பர்களுக்கில்லாமலழித்த,
பிரான்‌ – தலைவரும்‌,
இன்னா – துன்பத்தைச் செய்கின்‌ற
கலியின்‌ சினம்‌ – கலியின்‌ கோபத்தை ,
பாழ்படுத்த – பாழாகச் செய்ய,
நின்றான் – அவதரித்த வருமாகிய,
சடகோபன்‌ -நம்மாழ்வாரது,
குன்று – மலையில்‌,
சூழ்கின்ற . சூழ்ந்து விளைந்த,
செந் தினையே – செவ்விய தினையே! புனம்‌ பாழ்‌ படுத்து – கதிர்‌ கொய்தலால்‌ கொல்லையைப் பாழாக்கி ,
புகழ் பாழ்படுத்தது அல்லால்‌ -உனக்குண்டாக்கிய கீர்த்தியையும் பாழாக்கினதல்லாமல்‌,
புகுந்து – என்‌னிடத்துச் சார்ந்து ,
என் மனம்‌ – எனது மனத்தையும்‌, பாழ்படத்தனை -பாழாக்கினை ;
வாழ்தி- நீ வாழ்வாயாக; ௮ன்று, ஏ அசைகள்‌.-வாழ்தி ௮ன்றே -இவ்வளவு கொடுமை செய்த நீ வாழ்வாயல்லவோ ?-எனிலும்‌ ௮மையும்‌-

நம்மாழ்வார் மலையிற்‌ சூழ்ந்த விளைந்துள்ள தினையே ! புனத்தைப்‌
பாழாக்கிப்‌ புகழைக் கெடுத்துக் கொண்டதன்றி என்‌ மனத்தையும் பாழாக்கினை -இப்படிப்பட்ட நீ வாழ்வாயாக என்பதாம்‌-முற்றுதலால்‌ குறவர்‌ கொய்து கொண்டு போனது நிமித்தமாகப்‌ புனம் பாழ்படுத்து என்றான்‌, ௮ப் புனத்துக்கு அணியாக விளங்கிய தலைவியை இல் வயிற் செறித்ததற்கு ஏதுப்பட்டதனால்‌ பனம் பாழ்படுத்து என்றானெனிலனுமாம்‌. தானும்‌ தலைவியும் கூடுதற்கு இடம் தந்ததனால்‌ பெற்ற பயன்‌ இழந்தமையாற் புகழ் பாழ்படுத்த என்றான்‌. மெய்ப்பாடு -அழுகை , பயன்‌ – ஆற்றாமை நீங்குதல்‌. பகலில்‌ தலைவியைத் தனியிற் சேர்தற்குத் தகுதியாயிருந்த இடம்‌ பாழாய்ப் போய்த்‌ தலைவியைச் சேர வழி யில்லாமையால்‌ கிளவி-பகற் குறியிடை யீடாயிற்று,-தலைவியை வீட்டுக் கழைத்துப் போன பின்‌ தலைவன்‌ அவளிருந்த தினைக் கொல்லைக்குப் போய்‌ அங்குத் தலைவியைக் காணாமையால்‌ ௮வ் விடத்தைக் கண்டு வருந்துதல்‌ துறையின்‌ கருத்து,

தூராத மனக்காதல் –பலவும் பாடி ஆறாத மனக்களிப்போடே -இருந்தமை-

————

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே.
89–

பொருள் –அகப் புறப் பொருள்‌.
திணை -பெருந் திணை
துறை–மை யுறு கண்ணி கை யற வெய்தக்‌ கண்ட தோழி யுட் கொண்டு புலம்புதல்

தினை ஓன்‌றிய – தினயினளவு பொருந்திய,
குற்றம்‌- பிழையும்‌,
அற்று – இல்லாமல்‌,
உணர்ந்தோர்‌ – ஞான நிலை யுணர்ந்தருளிய ஆழ்‌வாரது,
மகிழின்‌ திறத்தின்‌ – மகிழ மலர் மாலை நிமித்தமாக ,
மனை ஓன்றிய-வீட்டில்‌ வருந்தி யிருக்கிற,
கொடியாள்‌ – கொடி போன்‌ற இடையை யுடைய எங்கள்‌ தலைவி,
துயின்றாலும்‌ -தான் புலம்புவதின்‌று சிறிது நித்திரை செய்தாலும்‌, (தூங்க வொட்டாமல்‌),
தன்‌—-. வாய் அடங்கா – வாய்‌ ஓயாமல்‌,
வினை ஒன்றிய – கத்துதல் பொருந்திய,
அன்‌றிலுக்கு – அன்றில் பறவைக்கு,
இடம் காட்ட – இருக்குமிடம் கொடுக்க,
விரி தலைய – விரிந்த தலையை யுடைய,
பனை அன்றியும்‌ – பனை மரமல்லாமலும்‌,
தமியேற்கு -தனியான எனக்கு,
பழம் பகை – பழமையாகிய பகை மை,
உளதோ -வேறு என்று ஓன்றுண்டோ?

நம்மாழ்வார்‌ மகிழ மாலை வேண்டி நங்கள் தலைவி வருந்திச் சிறிது பொழுது தூங்கினாலும் தூங்க வொட்டாமல்‌ கத்துகிற அன்‌றித் பறவைக்கு இருக்கும் இடங் கொடுக்க விரிந்த தலையை யுடைய பனை மரமல்லாமலும்‌ எனக்கு வேறு பழம் பகை யொன்று உண்டோ-இல்லை யென்பதாம்‌. எந்‌தத் தேவரைக் குறிப்பினுங் காம முதலியன இல்லாதாரிலராதலின்‌ அவரினும் சிறந்தவரென்பது தோன்‌றத் தினை யொன்றிய குற்ற மற்றென்றார்‌.-அன்றிற் பறவை பனை மரத்திலேயே யிருப்பது பற்றி அதல்லாமல்‌ வேறு ஓரு பகை தனக்கில்லை யென்றாள்‌. ௮ன்றில் ஆண் பெண் பிரியாததொரு பறவை; அது ஒன்றனை ஒன்று புணர்ச்சி நிமித்தமாகவே யழைக்கும்‌ ) அங்‌கனம்‌ அழைக்கும் போது பிரிந்தவர்க்குக் காம மயக்கம்‌ அதிகரிக்குமென்‌பது பற்றி இங்கனம் கூறுதல்‌ வழக்கம்‌, இது கிளவித் தலைவன்‌ பெயர்‌ கூறுதலால்‌. அகப் புறமும்‌ கந்தருவத்தின்‌ வழுவிய பெருந் திணையுமாயிற்று-தலைவி வருந்துதலை நோக்கிய தோழி தனக்குப் பகை யாயிற்றென்றது (தாயத்தினடையா ”’ (தொல்‌ -பொ 221). என்ற விதி பற்றி யென்க , வாயடங்கா வினை -கத்துதல் -காட்ட என்னும் எச்சம் விரி என்னும் வினைப் பகுதி கொண்டது-ஓ எதிர் மறை-

————

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே
. 90–

பொருள் –அகப் பொருள்
திணை -குறிஞ்சி
கிளவி -பிரிவுழிக்‌ கலங்கல்‌.
துறை–கண்படை பெறாது கங்குல் நோதல்‌

பகையாய்‌ வருகின்ற- தமக்கு உட்பகையாகி வருகிற,
மூன்றையும்‌ – காமம்‌ வெகுளி மயக்க மென்னும்‌ முக் குற்றங்களையும்‌,
வேரினொடும்‌ – வேரோடும்‌,
பறித்து – பிடுங்கி எறிந்து
வகையாய்‌ – அதன்‌ பகுதியாய்‌,
வருவன – வருகின்ற,
யாவையும்‌ – ஆகாமிய சஞ்சித பிராரப்த கருமங்களெல்லாவற்றையும்‌,
மாற்றி- போக்கி
இ- இந்த,
வையம்‌ உய்ய – உலகத்தினுயிர்கள்‌ பிழைக்கும் படியாக,
தொகை – நூறு நூறாகத்‌ தொகுக்கப்பட்ட,
ஆயிரங்‌ கவி – ஆயிரம்‌ பாடல்களை,
சொன்‌னோன்‌ – சொன்னவரரகிய நம்மாழ்வாரது ,
பெயர்‌ சொல்ல – திருப் பெயரைத்
தியானிக்க வேண்டி,
சூழ்‌ பனியின்‌ புகை – புகை போலப்‌ பனி
பரந்து குழ்ந்திருக்க,
ஆம்‌ இரு ள்‌ – குளிர்சியோடு கூடிய இருட்டானது,
பின்னை – பிற்பாடு,
எந் நாள்‌ – எப்பொழுது,
கழிய புகுகின்றது -நீங்கப் போகின்றது ?

நம்மாழ்வாரைத்‌ தியானிக்க வேண்டிப்‌ புகை போலப்‌ பனி சூழ்ந்த இருட்டானது எப்பொழுது நீங்கப்‌ போகின்றதென்பதாம்‌.-காமம்‌ -பிற பொருளிச்‌ செல்லுகிற பற்றுள்ளம்‌. வெகுளி – சினம்‌. மயக்கம்‌ -நல்லது தீயதென்றறியா மயக்கம்‌. இவை நீ ங்கவே மனம்‌ தூய்மையாகு மென்பர்‌,-இவற்றின்‌ வகையாவது இவை காரணமாக வருகின்றவைகளை யென்க , ஆகாமியம்‌ – இனி வரப் போகும்‌ வினை,சஞ்சிதம்‌ -இது வரை சேர்த்து வைத்திருக்கும் வினை. பிராரரப்தம்‌ – அவற்றுள் பயன்களை கொடுத்துக் கொண்டிருக்கும் வினைகள்-தலைவியை -இயற்கைப்‌ புணர்ச்சிப்‌ பின் பிரிந்த தலை மகன்‌ இரவு மீட்டிப்பத்‌ துயிலப்‌ பெறாமல் அந்த இரவினைக் கடிந்து கூறுதல்‌ இத் துறையாகும்‌ இருளைக் கூறினமையால்‌, திணை – குறிஞ்சி, கைகோள்‌ – களவு.-கூற்று-தலைவன்‌ கூற்று, கேட்போர்‌ – இல்லை. இடம்‌ – தன்மை. காலம்‌ -நிகழ் காலம்‌. மெய்ப்பாடு – இளிவரல்‌. பயன்‌ -தன்‌ ஆற்றாமை நீங்குதல்‌. மூன்று- தொகைக் குறிப்பு. வையம்‌- இடவாகுபெயர்‌. பின்‌னை – இடைச்சொல் திரிபு

இருள் தரும் மா ஞாலத்தில் பிரிவாற்றாமையால் ஆற்றாமை விஞ்சி வாய் விட்டுக் கூறி அலற்றுகிறார் –

————-

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே.
91–

பொருள்‌–௮கப் பொருள்‌,
திணை –உரிப் பொருளால் நெய்தல்‌.
கிளவி -வரைவு கடாதல்‌
துறை -தலைவன் சிறைப் புறத்தானாகத் தோழி செப்புதல்

இருள்‌ புகுகின்‌றது – இருட்டானது வந்து கம்பிக் கொள்‌கின்றது
வண்ணம்‌ – இவளுடைய நல்ல நிறமும்‌,
போகின்றது -மாறுபடுகின்றது
பூவை இந்தத் தலைவியின்து
கண்‌ – கண்ணிலிருந்து,
நீர்‌ உகுகின்றது – நீரானது வடிகின்றது
என்று- என்பதாகக்‌ கருதி,
உயிர்‌ – என்னுடைய உயிரானது,
ஓய்கின்றது – சோர்வை யடைகின்‌றது ;
உலகு ஏழும்‌ – ஏழுலகங்களும்‌,
உய்ய – பிழைக்கும்படி,
தொகுகின்ற – பத்துப்‌ பத்துப்‌ பாடல்களாகச்‌ சேர்க்கப்‌ படுகின்ற,
ஆயிரம்‌ -ஆயிரம்‌ பாடல்களும்‌,
சொன்னோன்‌ – அருளிச்‌ செய்தவாரகிய நம்மாழ்‌வாரவதரித்த,
குருகை- திருக் குருகூருக்குரிய,
சொல்லால்‌ – கீர்த்தியால்‌,
விளங்கத் தகுகின்றனர்‌ – விளங்கத்‌ தக்க வராகிய,
மேல்‌ மேலும்‌ – மேலும்‌ மேலும்‌ ௮திகமாக, காதல்‌ தரும்‌ அவர்‌ – ஆசையைத் தருகின்ற தலைவர்‌,
அல்லர்‌ – தகுதி யுடையார் அல்லர்‌ ;

இருள்‌ வருகின்றது ; தலைவியின்‌ மாமை நிறம்‌ மாறுகின்றது ;இவள்‌ கண்ணீர்‌ வடிகின்றது ; இவற்றைப்‌ பார்த்து என்னுயிர்‌ சோர்வடைகின்றது ; இவளுக்கு இங்கனம்‌ காதலைக்‌ கொடுக்கின்றவர்‌ நம்‌மாழ்வாரது திருக் குருகூருக்குரிய கீர்த்தியினால்‌ விளங்கத் தக்கவரல்‌லர்‌ என்பதாம்‌. முந்திய நாள்‌ வரையிலும்‌ இரவில்‌ துன்புற்றவளாதலின்‌ இன்றைத் தினமும்‌ இரவு வந்தால் என் செய்வளோ வென்று அஞ்சிப் புகுகின்றது இருள்‌ என்றாள்‌. மாமை – மாந் தளிரின்‌ தன்மை, சிறிது சிறிதாக உயிரின்‌ வலிமை ஒடுங்குதலால் ஒய்கின்ற தென்று நிகழ் காலத்தாற்‌ கூறினள்‌. மெய்ப்பாடு -அழுகை, பயன்‌ – வரைவு கடாதல்‌. இரங்குதலால் திணை – நெய்தலாயிற்று, தலைவன்‌ ஒரு புறமாக வரும் பொழுது அறியாதவள்‌ போலத் தலைவியின்‌ துன்பத்தைச்‌ சொல்லுதலின்‌ தலைவன்‌ கேட்டு வரைவானாதலின்‌ கிளவி- வரைவு கடாதல் யாயிற்று, துறை யும் அதுவே யாகும்‌-

இன்னமும் பூர்ண கடாக்ஷம் பெறாத குறையால் அலற்றுகிறார்-

———–

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே
. 92–

இருமையும்‌ தீர்ந்த பிரான்‌ – யான்‌ எனது என்னும்‌ செருக்கு நீங்கிய தலைவராகிய,
சடகோபன்‌ தன்‌ – நம்மாழ்வாரது,
இன்‌௮ருள்‌ – இனிய கருணை யானது,
தருமமும்‌ – அறமும்‌,
காமமும்‌ – இன்பமும்‌,
தாவில்‌ அரும்‌ பொருளும்‌ – கெடாத அரிய செல்வமும்‌,
தணவாக் கருமம்‌ ஆகிய – நீங்காத செய்கை யுடையதாகிய,
காரணமும்‌ – காரணமாகிய வீடும்
கண்டு – செய்து,
அவக் காரணத்தின்‌ – பயனற்ற காரணங்களின்‌,
பெருமையும்‌ – பெருமைகளும்‌,
மாயப்‌ பிணக்கும்‌ – வஞ்சனைவுடைய மாறு பாடுகளும்‌,
தவிர்ந்து – நீங்கும் படியாக,
உறு பேதம்‌ செய்‌யும்‌ – மிக்க வேறு பாட்டைச் செய்யும்‌; உம்‌ – பிரித்துக் கூட்‌டப்பட்டது.,

நம்மாழ்வாருடைய கருணையானது தரும அர்த்த காம மோட்ச மென்னும்‌ நான்கும் தந்து பயனற்ற காரணங்களின்‌ பெருமையும்‌ பிணக்‌கும் நீங்கும்படியான நல்ல வேறு பாடுகளைச்‌ செய்யுமென்பதாம்‌. செய்யுளாதலால்‌ காமம்‌ பொருள்‌ என முன் பின்‌ மாற்றி வைத்தார்‌. தருமமும்‌,காமமும்‌ பொருளால் செய்யப்படுதலின்‌ அரும் பொருளென்றார்‌.
அறத்தால்‌ சேர்ப்பதே பொருளாமாதலால்‌ வருத்தமில்லாத என்றார்‌. பயனற்ற தொழிலின்‌ மூலங்களின்‌ பெருமையும்‌ பிணக்கும்‌ நீங்க எனவே நல்ல நெறியில்‌ சேர்க்கு மென்பது தானே பெறப்பட்டது. தவிர்ந்து என்பதனைத் தவிர எனத் திரித்திக் கொள்க. யானென தென்னுஞ்‌ செருக்கறுப்பான்‌ வானோர்க்‌, குயர்ந்த வுலகம்‌ புகும்‌” என்பதற்கு ஆழ்‌வாரே சாட்சி யெனக் கொண்டு இருமையும் தீர்ந்த பிரானென்றார் –

இவை பத்தும் வல்லார் உலகில் எனது பெரும் செல்வராய்த் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே-

———-

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே.
93–

பொருள்‌–அகப் புறப் பொருள்‌.
திணை -பெருந்திணை
துறை–இரவுறு துயர மிகுளை கூறல்‌.

இயலோடு – இலக்கணத்துடன்‌,
இசையின் பொருளில்‌ -இராகப்‌ பொருளிலும்‌,
சிறந்த —-அலங்கார வல்லியில்‌ – அலங்காரங்கள் அமையப் பெற்ற கொடி போலவும்‌,
போக்கு இல்‌ – நீங்காத,
உள்‌ளம்‌ – மனத்தால்‌,
தெருளில்‌ – ஆராயுமிடத்து,
கரும்பு ஓக்கும்‌ – கரும்‌பை ஓத்த,
ஆயிரம்‌ பர – ஆயிரம்‌ பாடல்களாலாகிய (திருவாய்மொழியை),
பண்டு – முன்னாளில்‌,
செய்தவர்‌ – செய்தருளிய நம்மாழ்வார்‌,
௮௫ளில்‌ – கருணையால்‌,
சில மகிழ்‌ – சிலவாகிய மகிழ மலர்‌ மாலையை,
ஆயிழைக்கு – ஆராய்ந்து அணிந்த ஆபரணங்களை யுடைய நமது தலைவிக்கு,
ஈவர்‌ கொல்‌ – கொடுத்தருளுவாரோ ?
அந்தி வந்த இருளில்‌ – மாலையில்‌ வந்த இருளைக் காட்டிலும்‌,
பிறிது துயரும்‌ உண்டோ -துன்பம் செய்ய வல்லது வேறு ஓன்றுண்டோ

முன்னம்‌ திருவாய்மொழி செய்தருளிய நம்மாழ்வார்‌ தமது மகிழ மலர்‌ மாலையை நம்‌ தலைவிக்காக் கொடுப்பரோ ? நேற்று இராத்திரி பட்‌ட துன்பத்திற்‌ கெல்லை யில்லை யாதலால்‌ அவ் விருளைக் காட்டிலும்‌ துன்பம் செய்வது வேறு ஓன்றுண்டோ ? என்பதாம்‌. தொடர்ச்சி பெறப்‌ பாடினமையால்‌ அலங்காரம்‌ அமைந்த கொடி யென்றார்‌. மனத்தால்‌
ஆராயும் தோறும்‌ சுவை மிகுதலால்‌ கரும்பொக்குமென்றார்‌. ஆயிழை – வினைத் தொகைப்‌ புறத்துப்‌ பிறந்த அன்மொழித் தொகை, துயரைச்‌ செய்கின்ற இருளைத்‌ துயர் என்றது குறிப்பு மொழி.

———–

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே.
94–

(உலகத்தின்‌ உயிர்கள்‌ தம் பிறப்புக்களை), படர்‌ – ஓடுகின்‌ற,
நீரின்‌ இட்ட – தண்ணீரிலெழுதப்பட்ட,
நவம்‌-புதிய,
ரேகை – எழுத்‌தை,
உட் கொள்ள – மனத்திற் கொள்ள,
செய்‌தாது ௮ல்லால்‌ – செய்ததே யல்லாமல்‌,
பவம்‌ – பிறப்பாகிய,
ரேகையில்‌ – வழியில்‌,
தம்‌ பணி-தங்கள்‌ தொழிலை,
கொள்ளுமோ- கொள்வனவோ ? (கொள்ள மாட்டா ஆதலால்‌),
நம்பி- மாயோன் அம்சமாகிய,
மாறனைப் போல்‌ – நம்மாழ்வாரைப்‌ போல,
மோஷ மாலை- மோட்ச மாலையாகிய,
திருவாயிரம்‌ – ஆயிரம் பாடலாலாகிய திருவாய் மொழியை,
இசைப்பவர்‌ – பாட வல்லவர்‌,
எவரே -யாவரிருக்கிறார்கள்‌ ?(ஒருவருமில்லை அதனால்‌,)
அயற்கும்‌ – பிரம தேவருக்கும்‌,
அரற்கும்‌ – சிவ பிரானுக்கும்‌,
அல்லா அமரர்க்கும்‌ – மற்றுமுள்ள தேவர்க்கும்‌,
எல்லாம்‌ – முழுவதும்‌,
அவரே – ௮ந்த மாயோனே சிறந்தவர் ஆவார்‌;

உலகத்திலுயிர்கள்‌ இத் திருவாய் மொழியைப் படித்‌துத் தம் பிறவியைநீர் மேலெழுத்தாக செய்து விடடனவன்‌றிப் பிறப்பிடத்தில்‌ நாடினவில்‌லை -ஆதலால்‌ மாயோன் வடிவமாகிய நம்மாழ்வாரைப் போல மோட்ச மாலை பாடினவர்‌ யாவருளர்‌? அதனால்‌ அந்த மாயோனே யாவர்க்கும் தலைவரென்பதாம்‌. நம்பி -எல்லாக் குணங்களும்‌ நிறைந்தவன்‌. மோட்ச மாலை – திருவாய் மொழிக்கு ஒரு பெயர்‌.

————

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே.
95–

மெய்யன்‌ – உண்மை ஞான மறிந்தவரும்‌,
குருகைப்‌ பிரான்‌ -திருக் குருகூரிலவதரித்தவரும்‌,
எம்மை – எங்களை,
இன்னம்‌-மறுபடியும்‌,
ஒரு பவம்‌ செய்கை – ஒரு பிறப்பில் தோன்றுவதை,
மாற்றிய – போக்கிய
பண்டிதன்‌ – பாண்டித்திய முடையவருமாகிய நம்மாழ்‌வாரது,
வள்‌ – வளம் பொருந்திய,
தமிழ்ப்‌ பாவும்‌ உண்டு – தமிழ்ப் பாடல்களு முள்ளன
௮வம்‌ செய்கை மாற்ற- பயனற்ற செய்கையை மாற்று வதற்கு
செவி உண்டு – காதுகள்‌ உள்ளன ;
நா உண்டு – படிப்பதற்கு நாக்கு உண்டு ;
அறிவும்‌ உண்டு – அவற்றின்‌ பயனை அறிவதற்கு அறிவுமுண்டு ; (இங்கனம் இருக்கையில்‌),
தம்மை ஒறுத்து – தங்களை வருத்திக்‌
கொண்டு,
தவம்‌ செய்வதும்‌ – தவங்களைச் செய்வதும்‌,
தழல்‌ – அக்னி முகமாக,
வேள்வி முடிப்பதும்‌ -யாகங்களைச் செய்வதும்‌,
எவன்‌ செய்‌யும்‌ – என்ன பிரயோஜனத்தைத் தரும்‌

நம்மாழ்வாருடைய பிரபந்தங்களும்‌ அவற்றை ஆசிரியர் முகமாகக்‌கேட்க நமக்குச்‌ செவிகளும்‌, படிப்பதற்கு நாவும்‌, பயனறிவதற்குப் புத்‌தியும்‌ உள்ளனவாயிருக்க அந்தப்‌ பிரபந்தங்களை ஆராய்ந்தடையும்‌ பயனைக் காட்டிலும்‌ தம்மை வருத்‌தித் தவங்களும்‌ யாகங்களும்‌ செய்வதனால்‌ என்ன பயன்‌ என்பதாம்‌,-உண்மையாகப் பயன்படும்‌ நூலைச்‌ செய்ததனால்‌ மெய்யனென்றார்‌. அவரைத் தியானித்ததனால்‌ தாமடைந்த பயனை
உலகத்தாருக்குக் காட்ட வேண்டி பவம் செய்கை மாற்றியவென்றார்‌.பிறிதொரு மொழிக்கு இவ்வளவு வளப்ப மில்லாமையால்‌ வண்டமிழென்‌றார்‌. எவன்‌ – குறிப்பு வினா வினை. மெய்யன்‌ – குறிப்பு முற்றுப் பெயரெச்சம்‌, உண்டு, என்பன – குறிப்பு முற்று,

நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உறையுண்டு மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவன் தீக்கதிக் கண் செல்லும் திறம் –பொய்கையார்-

———

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே
. 96–

பொருள்‌–அகப் பொருள்‌,
திணை -நெய்தல் ,
கிளவி–இடந்தலைப்பாடு ,
துறை–புகழ்தல் .

உண்டாட்டு – மகிழ்ச்சி கொண்டு திருக் கூத்துக்கள்‌ மூன்‌றனையும்‌,
இயலும்‌ -செய்தருளிய,
திருமால்‌ – திருமகள்‌ கொழுநனாகிய மாயோனுடைய,
உருவை – அவதாரங்களை,
உயர்த்து – உயர்வு செய்து,
உலகை – உலகத்தை,
தொண்டு ஆட்டிய – அடிமையாகச் செய்து கொள்ள,
வந்து தோன்றிய – அவதரித்த,
தோன்றல்‌ – நம்மாழ்வாரது,
குருகூர்‌ துறை-குருகூரெல்லை யிலுள்ள கடல்‌ துறை யிடத்து
நண்டு ஆட்‌டிய நங்கை – நண்டுகளைப் பிடித்து விளையாடுகிற தலைவி யினுடைய,
நாட்டங்களால்‌ – குறிப்புக்களால்‌,
இந்த நாட்டை யெல்லாம்‌ – இந்தஉலக முழுவதையும்‌,
திண்டாட்டிய – வருந்தச் செய்த,
கண்கள் போல்‌ -கண்களைப் போல,
கயல்‌- கயல்‌ மீன்கள்‌,
தீங்கு செய்யுமோ – தீமைகள்‌ செய்யுமோ ? [செய்யாவாம்‌.]

திருமாலின்‌ ௮வதார வடிவங்களை யுயர்த்திக் கூறி உலகத்தை அடிமையாகக் கொள்ள அவதரித்த நம்மாழ்வாரது குருகூர்க் கடல்துறைவாய்‌ தலைவியின்‌ குறிப்புக்களால்‌ இவ்வுலகை வருத்திய கண்களைப் போலக்‌ கயல்‌ மீன்கள்‌ தீங்கு செய்யுமோ? செய்யாவென்பதாம்‌.-திருக் கூத்துக்கள்‌ மூன்றாவன :– அல்லியம்‌, மல்‌, குடம்‌; அல்லியம்‌ – குவலையாபீடத்தின்‌ தந்தத்தை முறித்த பொழுது ஆடியது ;இயம்‌ அல்லாதது-வாத்தியமில்லாமல்‌ யாடியது அல்வியமாம்‌. மல்லாடல்‌ – ஆங்கு மல்லரைக் கொன்று ஆடியது -குடம்‌ – வாணாசுரனை வென்ற மகிழ்ச்சியால்‌ அவனது சோணித புரத்தின் தெருவில்‌ கையில்‌ குடமேந்தி ஆடியது, இவற்றின்‌ விரிவைச்‌ சுத்தானந்தப்‌ பிரகாச முதலிய வற்றிற் காண்க ;இவை புறக் கூத்தின்‌ பகுதி களாம்‌. கைகோள்‌ – களவு. கூற்று-தலைவன் கூற்று, கிளவி- முற் கூறப்பட்டது. கருப் பொருளால்‌ திணை நெய்தலாயிற்று, இடந் தலைப் பாட்டில் புணர்ந்த தலை மகன்‌ புணர்ச்சிக்குப்‌ பின்னும்‌ தனக்கு அவளிடத்திலுண்டாகிய அன்பின்‌ மிகுதியால்‌ புகழ்ந்தானென்பது துறையின்‌ கருத்து, மெய்ப்பாடு – உவகை. பயன்‌-புகழ்‌தல்‌,

ஞான விசேஷங்களையே திருக் கண்கள் என்பர்

———–

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே
. 97–

பொருள்‌ -அகப் புறப் பொருள் ,
திணை- பெருந்திணை ,
துறை–மாலை பெறாது வருந்திய தலைவி
காதல்‌ கைம் மிக்குக்‌ கையற வுரைத்தல்

இந்த, நுண் பிறவி – அற்பப்‌ பிறப்பாகிய,
மாயைக்‌ கிழியை – மாயா ரூபமான படத்தை,
இழித்து—எம்மை – எங்களை
வாங்கிட – தம்முடைய பாதங்களில்‌ சேர்த்துக் கொள்ள,
வல்லவர்‌- வல்‌லவராகிய நம்மாழ்வார்‌,
தீயை- நெருப்பை,
கிழித்து – துண்டாகக்‌ கிழித்தெடுத்து,
ஒரு திங்கள்‌ கொழுந்தென – ஒரு இளஞ்‌ சந்திரனாக,
செய்ததல்லால்‌ – செய்ததமன்றி,
அன்றில்‌ பனை… அன்றில்‌ பட்சிகள்‌
இருக்கின்ற பனை மரத்தை ,
பேயை கிழித்தென – பேயை இரண்டாகக் கிழித்தாற்போல்‌,
பிளவார்‌ – இரு பிளவாகச்‌ செய்தாரில்லை ; உளவாம்‌ நோயை – அவர்‌ நிமித்தமாக வுண்டாகிய காம நோயை,
இழிக்கும்‌-போக்கும் படியாகிய,
வகுளம்‌ – மகிழ மாலையை,
நல்கார்‌ – கொடுத்தாரில்லை

இந்தப்‌ பிறவியைப் போக்கி நம்மை யடிமை கொள்ளத் தக்க நம்மாழ்‌வார்‌ நெருப்பைத்‌ திங்களாகச் செய்து விடுத்ததுமன்றி அன்‌ றிலிருக்கும்‌ பனையைப் பிளக்காமலும்‌, அவர்‌ நிமித்தமாக வுண்டாகிய காம நோயைப்‌ போக்கத் தக்க மகிழ மாலையுங்‌ கொடுத்தாரில்லை என்பதாம்‌-காமநோய்‌ கொண்டார்க்கு நிலவு வெயில் போலச் சுடுதலால்‌ திங்களைத்‌ தீ யென்றார்‌. ஒன்றனை யொன்று புணர்ச்சிக்கு அழைக்கும்‌ ஓசை காமமுடையார்க்குத்‌
துன்பத்தைச்‌ செய்தலால்‌ அவ் வன்‌றிவிருக்கும்‌ பனை மரங்களை பிளந்திலர்‌ என்றாள்‌. பேய்க்குப்‌ பனையை யுவமித்தல்‌–கரு நெடும் பனங்காடு முழுமையும்‌ காலும்‌ கையுமுடையன போல்வன ” என்ற கலிங்கத்‌துப் பரணிச்‌ செய்யுளாலறிக, மெய்ப்பாடு – அழுகை. பயன் – ஆற்றாமை நீங்குதல்

——–

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே.
98–

பொருளும்‌, திணையும்‌, துறையும்‌ அவை.

அம்புலி – சந்திரனைப் போன்ற,
முகம்‌ வாயில்‌ – முகத்தின்‌ வாயிலுள்ள,
கரும்பின்‌ – கரும்பு போன்ற திவ்வியப்‌ பிரபந்தங்களால்‌,
மறு பிறப்பை – உயிர்களுக்குண்டாகிய பிறப்புக்களை,
சொல்‌ – சொல்ல வல்ல,
அம்‌ புலி- அழகிய புலி போன்ற நம்மாழ்வார்‌,
ஓர்‌ வகுளம்‌ கொடார்‌ – ஒப்பற்ற மகிழ மாலையைத் தந்தாரில்லை ;
இங்கு-இவ் விடத்தில்‌,
தாய்‌ என்ற – தாயென்று சொல்லப் படுகிற, ஓர்‌ இல்லம்‌ புலி – ஒரு வீட்டுப் புலியானது ,
கொடும்‌ கோகு தட்டி – வளைந்த தோள்‌களைத் தட்டிக் கொண்டு,
சல்லம்‌ புவி இட்டு – முள்ளம் பன்றி போலொத்‌து ,
எதிரிடப் பாய்வது உண்டு – நேரே வந்து என் மேற்றாவி விழுவது முண்டு ; (இது போதாமல்‌),
மீள – மறுபடியும்‌,
அம்புலி எழுகின்றது -சந்திரனாகத் தோன்றுகின்ற -உம்‌- அசை நிலை

தம்முடைய வாயிலுள்ள திவ்ய ப்ரபந்தத்தால்‌ ஐநங்களின்‌ மறு பிறப்பைப்‌ போக்குபவராகிய நம்மாழ்வார்‌ தாம்‌ இங்கு வருவதற்கு அடையாளமாக மாலை கொடுத்தாரில்லை ; தாய்‌ வீட்டிலுள்ள புவி போலப்‌ பாய்ந்து என்னை வருத்துகின்றாள்‌ ; இது போதாமல்‌ சந்த்ரனும்‌ உதயமாய் விட்டது – இனி மேல்‌ நான்‌ உயிர் பிழைப்பது எவ்விதமென்றாள்‌ என்பதாம்‌.-கரும்பு- உவமை யாகு பெயர்‌,-இரணடாமடியில்‌ புலி-உவமை யாகு பெயர்‌, மூன்றாமடியில்‌ புல்லி என்பது தொக்கு, தாயின்‌ கொடுஞ்சொல்‌ முட் போல தைத்தலால்‌ ௮வளை முட் பன்றியின்‌ தன்‌மையைக்‌ கொண்டென்றாள்‌. புலி போலக்‌ கறுவு கொண்டு பாய்தலால்‌ புலியை உவமித்தார்‌, இது உவமைக்கு உவமையின்‌ பாற் பட்டு வழுவாகாதவாறு எப்படி யென்றால்‌ தாயாகிய புலியானது முட் பன்றியின்‌ தன்மை யடைந்து என்றதனாலே உவமைக்கு உவமை யாகாமை வெளிப்படை. மெய்ப்பாடும்‌ பயனும்‌ அவை. இதில் புலி யென்று ஒரு சொல்லே யடுக்கி வந்தமையால்‌ சொற் பொருள் பின் வரு நிலை யணி- தாயைப்‌ புலி யென்றதற்கேற்பப்‌ பாய்கின்‌ற தென்‌றதனால்‌ உருவகவணி,-விரகங்கொண்டு, கலங்க விழுதலால்‌ தாய் புலி போலப்‌ பாய்கின்றாள் எனவும்‌, ௮வள்‌ வார்த்தை முள்ளம் பன்றியின்‌ முட்போலத் தைக்கின்ற தெனவும்‌, சந்திரனது நிலவைக் கண்டு விரகம்‌ ௮திகரித்தலால்‌ ௮துவும் தோன்‌றிற்று எனவும்‌ வருந்திக் கூறினாளாயிற்று-

சந்த்ர உதயம் அலாப தசையில் விவேகமும் பாதகமான படி –

———

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே
. 99–

புகழ் மெய்ப்‌ புலவோர்‌ – புகழுடைய உண்மையான கல்‌விமான்கள்‌,
தொழுது இயல்‌ – வணங்கி நடக்கப் பெற்ற,
நாயகன்‌ -தலைவரும்‌,
ஒதும்‌ – சொல்லப் பெற்ற,
கனல்‌ தறை – யாச நெறிகள்‌ மிக்க
நீர்ப் பொருநை – நீரை யடைய தாமிர பரணி சூழ்ந்த,
வழுதி நல்‌ நாடன்‌ – நல்ல பாண்டி நாட்டிலவதரித்த நம்மாழ்வாருடைய,
திருவாய்‌ மொழி எம்‌. மனத்தன – எம் மனத்திலே யுள்ளன; (ஆதலால்‌).
எழுதிய நாளும் – பிரமன்‌ எமக்கு எழுதி வைத்தால் ஆயுளும்‌,
வினையும்‌-பழ வினைத் தொடர்ச்சியும்‌, தொகுத்து – சேர வைத்து,
எம்மை – எங்களை,
இப்‌ பிறவி- இந்தப் பிறப்பாகிய,
புழுதியில்‌ நாற்று இட்டு – புழுதிக் காவில்‌ மாற்று விதைத்துப்‌ பயிராக்கி ,
வைப்பரிது – வைக்க முடியாததாகும்‌.

புலவோரால்‌ வணங்கப் படுபவராகிய நம்மாழ்வார்‌ அருளிய திருவாய்மொழி எம் மனத்திடத்தன வாதலால்‌ பிரம தேவர்‌ எமக்கு ஒரு ஆயுளைக் கற்பித்து அதற்கேற்பப்‌ பழ வினைகளும் சேர்த்துப்‌ புழுதியில்‌ நாற்றுப் பாவினது போல் இந்தப் பிறவியைச்‌ செய்ய முடியாது என்பதாம்‌. இம்மையி லனுபவிப்ப தெல்லாம்‌. பழ வினைத் தொடர்ச்சி யாதலால் -வினை -பழ வினை யென்க -நாற்று இட்டு நெற் பயன்‌ கொள்ளுதல் போல இப் பிறப்பால்‌ இன்னும்‌ வினையைச்‌ சேர்க்கச் செய்ய முடியாதென்று கொள்க-வழுதி-கொடை வள்ளலுக்கும்‌ பெயராதலால்‌ பரோபகாரி யாகிய ஆழ்வாரை வழுதி நன்னாடனென்றார்‌. வைப்ப – அகரம் தொக்கது -ஆல்‌ அசை-துறையை இடைநிலைத் தீபகமாக்கி பின்னும்‌
கூட்டி நீர்த் துறை யென்றும்‌ கொள்ளலாம்‌.

ஏதமிழ் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாறே
இப்பத்து அரு வினை நீறு செய்யுமே-

———

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள் விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள்
. 100–

மனையும்‌ – மனைவியும்‌, பெருஞ்செல்வமும்‌ – மிக்க பொருளும்‌,
மக்களும்‌ – புத்திராதிகளும்‌,
மற்றை வாழ்வும்‌ – மற்றுமுள்ள வாழ்வுகளும்‌,
தம்மை நினையும்‌ பதம்‌ என – வேண்டாதபடி தம்மையே தியானித் திருத்தலே நல்லதென,
நின்றபிரான்‌ – நிலையிட்ட தலைவராகிய,
குருகூர்‌ நிமலன்‌ – திருக் குருகூரில்‌ அவதரித் தருளிய குற்றமற்ற நம்‌மாழ்வார்‌,
புனையும்‌ – பாடி யருளிய,
தமிழ்க் கவியால்‌ – தமிழ்ப் பாடல்களால்‌, இருள்‌ நீங்கு – அஞ்ஞான இருள்‌ நீங்கிப் போய்‌,
பொருள்‌ விளங்‌கி – மெய்ப் பொருளான ஞானம்‌ தோன்றப் பெற்று,
வினையும்‌ – இரு வினைகளும்‌,
திரிவு உற்றன – அழிவடைந்தன ;
வேதங்கள்‌ குற்றம் நீங்கின – பொருள் விளங்காக் குற்றங்களெல்லாம்‌ நீங்கலாயின.

தார புத்திர தனாதி எஷணாத் திரயங்களும்‌ மற்றுமுள்ள வாழ்வுகளும்‌: தம்மைத்‌ தியானிக்கும்‌ பதமாக நின்ற நம்மாழ்வார்‌ தமிழ்ப் பாடல்களால்‌, அஞ்ஞானம் நீங்கி நன்‌ ஞானம்‌ பெற்று வினைகளும்‌ அழிந்தன-வேதங்களும் குற்றமற்று விளங்கின வென்பதாம்‌. தம்மை நினைத்‌தவர்கள்‌ எஷணாதிகளாலும்‌ பிற வாழ்‌வினாலும் அடையும்‌ மகிழ்ச்சியிலும்‌ மிகுத்துத் தம்மைத் தியானித்தலே மேற் கொள்ளுதலால்‌ தம்மை நினையும்‌ பதமென நின்ற வென்றார்‌. மற்றை வாழ்வு – சுற்றத்தார்‌ சேர்க்கை , எண்‌ வகைப் போகம்‌ தசாங்க முதலியனவுமாம்‌,

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேன மத அந்வயாநாம்
ஆத்யஸ்யன குல பதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இன் நீண் நிலத்தோர்
அறி தர நின்ற இராமானுசன்

————

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே –

முன் – முன்னாளில்‌,
மாறனை – நம்மாழ்வாரை,
மதுர கவிப் பெருமாள்‌ – மதுர கவி யாழ்வார்‌,
சென்று – அடைந்த ,
தென்‌ தமிழ்‌ தொடையால் – அழகிய தமிழ்ப் பாடலால்‌,
பதிகம்‌ ஒன்றே உரைத்து .
கண்ணி நுண்‌ சிறுத்தாம்பென்ற ஒரு பதிகம் பாடி,
அவன்‌ – அந்த மாயோனுடைய
பொன்‌ ௮டி -சிறந்த திருவடிகளை,
உற்று நின்றான்‌ என்றே-அடைந்து நிலை பெற்று வாழ்கின்‌றனர் என்பதாக எண்ணி
மன்று புகழும்‌-உலகம் எல்லாம்‌ புகழ் கின்ற
திரு வழுந்தூர் வள்ளல்‌ – திரு வழுந்தூரில் உலகுய்ய வந்த கம்ப நாடர்‌,
பதிகம்‌ – ஒரு பதிகம் போல,
பதிகம்‌ ௮து ஆக – பத்‌துப் பதிகமாக,
இசைத்தனன்‌ – பாடி யருளினார்‌ ;

முன்னாளில்‌ நம்மாழ்வாரை மதுர கவிப்‌ பெருமாள்‌ அடைந்து ஒரு பதிகம் பாடிப்‌ பரமபத முற்றாரென்று இந் நாளில்‌ கம்ப நாடர்‌ ௮வ்வொரு பதிகம் போலப்‌ பத்துப் பதிகம்‌ பாடி யருளினார் என்பசாம்‌. மன்று-சபையுமாம் -கம்பன் பிறந்த ஊர்‌ காவேரி தங்குமூர்‌, கும்ப முனி சாபங்‌ குலைந்த வூர்‌ ~ செம்பத்மத் தாதகத்து நான்முகனும் தந்தையும் காணா நான் மறையை யோதுவித்து வாழுமழுந்தூர்‌.” என்‌றதனால்‌ கம்பர்‌ திரு வழுந்தூரில் பிறந்தமை யறிக. தென் தமிழ்‌ நாடு என்னாளும் உய்ய இராமாயணம்‌ பாடிக் கொடுத்த பெருங் கொடையாளி யாதலால்‌ வள்ளலென்றார்‌, மதுர கவியார்‌ – நம்மாழ்வாரைத்‌ துதித்து முத்தி பெற்றவர்‌. பதிகம்‌ – பத்‌துப் பாடல்கள்‌ சேர்ந்துள்ள தென்ற ஒரு தொகைக் குறிப்புச் சொல்‌.
மன்றே, சென்றே ஏ- ௮சை நிலைகள்‌. ஒன்ற, ஏ- எண்‌, என்றே-ஏ தேற்றம்‌. பதிகமது, ௮து – பகுதிப் பொருள்‌ விகுதி,

இது திரு நாமப்பாட்டு –
மார்க்க தர்ஸீ மஹ ரிஷி –
இப்பாடலைப் பாடினவர்களும் ஓதினவர்களும் ஆழ்வாரது
பொன்னடி பேற்றைப் பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

சோழ நாட்டில்‌ மூவலூர்‌ ஆதித்தன் புதல்வரும்‌ திருவழுந்தூரிற்‌ பிறந்து உவச்சனெடுத்து வளர்க்க வளர்ந்தவருமாகிய இக் கம்பர்‌ கதிரா மங்கலத்தின்‌ கீழ்ப் பாதியாகிய வெண்ணெயூர் சடையப் பிள்ளை யிடத்து நட்புடையவராகி அவரால்‌ ஆதரிக்கப் பெற்று இதின்‌ வடபாலுள்ள தரணி என்னும் ஊரைத்‌ தமக்கு முற்றூட்டாக (முழுவனுபவமாக) ப்பெற்று அங்கு வசித்து வரு நாளில்‌ இவரது கவி பாடும் திறமை யறிந்த அரசர்‌ முதலாயினோர்‌ வட மொழி இராமாயணத்தைத்‌ தமிழில்‌ மொழி பெயர்க்கும்‌ படி கேட்க அப்படியே மொழி பெயர்த்துப்‌ பால காண்ட முதல்‌ யுத்தகாண்டம்‌ வரையிலுள்ள ஆறு காண்டங்களையும்‌ தமிழில்‌ செய்யுள் நடை யாகப் பாடி்‌ அரங்கேத்தத் தொடங்குகையில்‌ பலரும்‌ ஸ்ரீ ரங்கத்தில்‌ ௮ரங்க நாதன்‌ சன்னிதியில்‌ அரங்கேற்றுதல்‌ தகுதியாகுமென அப்படியே திருவரங்கம் சென்று அங்குள்ள கல்வி யறிவுடைய பலருக்குத் தெரிவித்து அரங்கேற்ற எத்தனித்திருக்கும் பொழுதில் ஒரு நாள்‌ இவரது கனவில்‌ அரங்கராதன் தோன்றி -நம் சடகோபனைப் பாடினயோ ?” என்று கூறி மறைந்தருளினார்‌. உடனே அஞ்சி நம்மாழ்வார்‌ மீது இந்தஅந்தாதியைப் பாடி அங்கு கூடிய அவைக் களத்தில்‌ இதனை முதலில்‌ அரங்கேற்றிப் பின்பு இராமாயணத்தை அரங்கேற்றினார் என்பதாம் –
இவர்‌ காளிதேவியாருச்கு அடிமை செய்பவராதலின்‌ இராமாயணம்‌ பாடும் பொழுது காளிதேவியாரைப்‌ பந்தம் பிடிக்கச் சொல்லியவெண்பா :–
ஒற்றியூர்‌ காக்க யுறைகின்ற காளியே
வெற்றியூர் காகுத்தன்‌ மெய்ச் சரிதை- பற்றியே
நந்தா தெழுது தற்கு நல்லிரவில்‌ மாணாக்கர்‌
பிந்தாமற்‌ பந்தம்‌ பிடி,

இக் கம்பரது இயற்பெயரின்னதென்று விளங்க வில்லை ; உவச்சரில்‌ மேளம் கொட்டுகிற பகுதியாருக்குக்‌ கம்பர் என்ற பட்டப் பெயருள்ளதென்று கல் வெட்டுக்களால்‌ தெரிகிறதனால்‌ இவரும்‌ அப் பகுதியாரென்‌று ஊூ்கிக்கப் படுகிறார்‌, இவரிருந்த நாட்டுக்கு வெண்ணெயூர் நாடென்ற பெயருளதா யிருந்தது – இவரின்‌ பெருமையை யறிந்த அரசாங்கத்தார்‌’அந்நாட்டினை இவர் பெயரால்‌ மாற்றி விட்டதனால்‌ கம்ப நாடென்று பெயராயிற்று, இங்கனமே முதலில்‌ நித்த வினோத வளநாடென்ற ஒன்றனைப்‌ பின்பு அருண் மொழித் தேவர்‌ வள நாடென்று பெயரிட்டமையும்‌ ௮றிக,
இன்னும்‌ இவர் சரித்திரம் ஆராய்சியில் இருப்பதால் பின்பு வெளியிடப்‌ படும்
இவர் காலம் -இற்றைக்கு ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்டது
இவற்றுடன் இருந்த புலவர்கள்‌ ஓட்டக் கூத்தர்‌, நேமிநாதர்‌, பேராசிரியர் ஒவ்வையார் புகழேந்தி முதலானோர்
இவர் செய்த நூல்கள்
கம்ப இராமாயணம்
சடகோபர் அந்தாதி
ஏர் எழுபது

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்மாழ்வார் மஹாத்ம்யம்

November 25, 2024

இன்றைய நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் திருக்குருகூர் என்று வழங்கப்பட்டு வந்தது. அவ்வூரில் வேளாளர் குலத்தைச் சேர்ந்த மாறன்காரி – உடைய நங்கை தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். உடைய நங்கையின் ஊர்திருவண் பரிசாரம். (இன்றைய திருப்பதிசாரம்). திருமணமான புதிதில் சில நாட்கள் நங்கை தன் சொந்த ஊரில் இருந்து வந்தார். மாறன்காரி அவரை அழைத்துக் கொண்டு குருகூருக்குத் திரும்பும் வழியில் திருக்குறுங்குடி தலத்தில் பெருமானைச் சேவித்து புத்திரப் பேறு அருளும்படி பிரார்த்தித்தனர்.அன்றிரவு தம்பதியினர் கனவில் குறுங்குடி நம்பி தோன்றி தாமே அவர்களுக்கு மகனாகப் பிறக்கப் போவதாக அருளினார். விடிந்ததும் தம்பதியினர் தாம் கண்ட கனவை கூறி மகிழ்ச்சி அடைந்தனர். பின்பு ஊருக்குத் திரும்பினர். சிறிது காலத்தில் உடைய நங்கை கருவுற்றார். ஆன்மாக்களின் உள்ளத்து இருள் நீக்கும் ஞான சூரியன் என நம்மாழ்வார் அவதரித்து அருளினார்.பெருமாள் முன்பு, “கலியுகத்திலே வடமொழி வேதங்களை தமிழில் உருவாக்க சடகோபன் என்ற பெயரில் அவதரிப்பேன்” என்று கூறியதுபோல, பாண்டியநாட்டில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் காரியர், உடையநங்கை தம்பதிகளுக்கு, அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, மகனாக வந்து அவதரித்தார்.
இந்நிகழ்வை ஆறாயிரப் படி குருபரம்பரைப் பிரபாவம் “எம்பெருமான் இவரிடத்திலே பாரெல்லாம் உய்யும் படி, சேனை முதலியாரை நம்மாழ்வாராக…….. நீங்காத உள்ளிருள் நீங்கிச் சோஷியாத பிறவிக்கடல் சோஷித்து விகசியாத போதிற் கமல மலரும்படி வகுளபூஷண பாஸ்கரோதயம் உண்டாய்த்து” என்று கூறும்.
பிறந்த நாள் முதல் சாதாரண மானிடக் குழந்தைகள் போல் ’முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை உண்ணாதே’ அவ்வாறு பிறந்த குழந்தை பாலுண்ணுதல், அழுதல் என எந்த இயற்கையான செயல்களையும் செய்யாமல்) இருந்தது. இந்தக் குழந்தை. விசித்திரமான இந்நிலையைக் கண்டு மனங்கலங்கிய பெற்றோர் குழந்தையை திருக்குருகூர் கோயில் கொண்டு வந்து, குருகூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆதிப்பிரான் சந்நிதி முன்பு குழந்தையை இட்டு வேண்டி நின்றனர். உலக இயல்புக்கு மாறாக இருத்தலால் குழந்தைக்கு ‘மாறன்’ என்றும் பாராங்குசன் என்றும் பெயரிட்டு பின்பு அக்கோயிலில் இருக்கும் ஆதிசேஷன் புளிய மரமாக உள்ளதிருப்புளிய மரத்தடியிலே பொன்னால் செய்த தொட்டிலில் கிடத்தி “எங்கள் குடிக்கரசே” என்று விசேஷ பிரதிபக்தி பண்ணிச் சேவித்துக் கொண்டு நின்றார்கள்

இந்நிலையில் சடகோபன் பிறப்பதற்கு முன்பாக, திருக்கோளூரில் பிறந்த மதுரகவி, திருமாலை வணங்கி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரது வயலில் மேய்ந்த பசு மாட்டினை மதுரகவி விரட்ட, அப்பசு ஓடிய வேகத்தில் கால் இடறி கீழே விழுந்து இறந்தது. தான் செய்த பாவத்திற்கு வருந்திய மதுரகவி, அப்பாவத்தைப் போக்க எண்ணி புனித நீராடும் பொருட்டு வடநாட்டுப் பக்கம் செல்லத் துவங்கினார். அவ்வாறு வடக்கில காசியில் தவம் இருந்த ஒரு இரவு நேரத்தில், வானத்தில் பேரொளியைக் கண்டார். அந்த ஒளி செல்லும் பாதையிலேயே பல நாட்கள் நடந்து வந்து கொண்டே இருந்தார். அந்த ஒளியானது திருக்குருகூர் வந்ததும் மறைந்து போனது. ஜோதியாக வந்து தன்னை ஆட்கொண்டது திருக்குருகூர் புளிய மரத்து ஆழ்வார்தான் என்பதை மதுரகவி கண்டுகொண்டார்.
கண்கள் மூடி மௌனத்தில் இருந்த ஆழ்வாரைக் கண்டு வியந்து, ஆழ்வார் முன் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டார். ஆழ்வார் கண்மலர்ந்து பார்த்தார். மதுரகவி அவரை நோக்கி”செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?”, இது வரை பேசாத ஆழ்வார் இவரின் வினாவிற்கு விடை யளிக்கும் வண்ணம் ” அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று இசைந்தார். மதுரகவி ‘இவரே நம்மை ஆளவந்த குருநாதர்’ என்று கருதி ’தேவு மற்றறியேன்’ என்று ஆழ்வார் திருவடியைச் சேவித்து நின்றார். ஆழ்வார் கூறிய பதில் சிறியதாக இருந்தாலும் அது அனைத்தயும் அடக்கிய தத்துவார்த்தமாக அமைந்திருந்தது. 

(மதுரகவிகள்-ஆழ்வார் உரையாடலின் பொருள் இது: அணு உருவாகிய ஆத்மா அறிவற்ற உடலில் கிடந்தால் எதை அனுபவித்து எங்கே கிடக்கும்?அந்த உடலிலேயே இருந்து இன்ப துன்பங்களை அனுபவித்து அங்கேயே கிடக்கும்.) மகான் மதுரகவி, தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி நம்மாழ்வாரை வேண்டினார். அவ்வாறே அவரை சீடராக ஏற்றுக்கொண்டு திவ்யப்பிரபந்தத்தை உபதேசித்தருளினார்.
அச்சமயம் நாராயணன் பிராட்டி உடன் பெரிய திருவடியாகிய கருடாழ்வார் மீது தோன்றி “தன்னுடைய ஸ்வரூப ரூபகுண விபூதி சேஷ்டி தங்களை எல்லாம் உகபதேசவ சாட்சாத்கரித்து அனுபவிக்கலாம்படி ஆழ்வார்க்கு மயர்வற மதிநலம் அருளினான்”. ஆழ்வாரும் பொன்னிலாமேனி மரகதத்தின் பொங்கிளஞ்சோதியாகிய பெருமானுடைய சகல கல்யாண குணங்களை அனுபவித்துமுடியாமல் அவன் அருளை அழகிய தமிழில் பாடி அருளினார்.

திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி இவற்றை ருக், யஜூர், சாமம், அதர்வணம் எனும் நால்வேதங்களின் சாரமாக அருளிச் செய்தார்.
எனவே சடகோபராகிய நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்ற புகழுக்கு உரியவரானார். அறிவாலும், ஞானத்தாலும், பக்தியாலும் சிறந்து விளங்கிய சடகோபரை அனைவரும் இவர் நம்மவர் என விரும்பி அழைக்க நம்மாழ்வார் என்ற பெயர் உருவானது. திருமால் இவருக்குத் தந்தருளிய மகிழமாலையை அணிந்திருந்த காரணத்தால், வகுளாபரணர் என்ற பெயரும் உண்டானது.

ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.

நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். 31 ஆண்டு காலம் இந்த புளிய மரத்தடியில் 36 பெருமாளைப் பற்றி பாடியதால் இந்த மரத்தினைச் சுற்றி 36 திவ்ய தேசப் பெருமாளின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. நம்மாழ்வார், தனது 35-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவரது பூத உடல் பள்ளிகொண்டுள்ள இடத்தில் திருக்கோயில் அமைத்து வைகாசித் திருவிழாக் கொண்டாடினார் மதுரகவி ஆழ்வார். வட மொழியில் நான்கு வேதங்கள் உள்ளது போல் தமிழில் நான்கு வேதங்களை உருவாக்கியுள்ளார் நம்மாழ்வார். இவர் இயற்றிய திருவாய் மொழிதிராவிட வேதம் என அழைக்கப்படுகிறது.
மதுரகவிகளும் ஆழ்வார் திருவாக்குகளை கற்று ஊரும் நாடும் உலகும் அறிய வெளிப்படுத்தினார். நம்மாழ்வார் மறைந்த பிறகு அவரது பூத உடலை திருப்புளியின் அடியில் பள்ளிப்படுத்தி (சமாதி செய்து) அவருக்கு விக்கிரகம் செய்து சந்நிதி உண்டாக்கி விழாக்கள் எடுத்து சிறப்பித்தார் மதுரகவிகள்.

ஆழ்வார் திருநகரி என்னும் திருக்குருகூரில் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் பிறந்தது முதல் குழந்தைக்குரிய அழுதல், தாய்ப்பால் குடித்தல் போன்ற செயல்கள் செய்யாது வாட்டமின்றி இருந்தார்.

எனவே பெற்றோர் அக்குழந்தை பிறந்து, பன்னிரண்டாம் நாள் திருக்குருகூர்ப்பிரான் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். உலக வழக்கத்திற்கு மாறாகக் காட்சி அளித்த அக்குழந்தைக்கு மாறன் எனத் திருநாமம் இட்டனர்.

திருவரங்கநாதன், நம் ஆழ்வார் என்று அழைத்ததால் நம்மாழ்வார் என்பர். பெருமாள் கொடுத்த மகிழம்பூ மாலையை அணிந்தவர் என்பதால் மகிழ்மாலை மார்பினர் ஆனார்.

புறச் சமயங்களாகிய யானையை அடக்கத் தம் அருளிச் செயல்களை அங்குசம் போலப் பயன்படுத்திக் கொண்டவர். ஆகையால் பராங்குசதாசர் எனப் போற்றினர். சடகோபர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. நம்மாழ்வார் அருளிய நான்கு திவ்வியப் பிரபந்தங்களும் நான்கு வேதங்களின் சாரம் என்பதால் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்றும் போற்றப்படுகிறார். இவர் ஸ்ரீ விஸ்வக்ஷேனாவின் அவதாரமவார்.

இவரின் ஆயுள் 32 ஆண்டுகள் என்றாலும், நான்கு வேதங்களை பற்றி எடுத்துரைக்கும் வண்ணம், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என நான்கு படைப்புகளை உருவாக்கினார். இதனால் இவரை ஜகத்குரு ஆசார்யன் ஸ்ரீ ராமானுஜர் “வேதம் தமிழ் செய்த மாறன்” எனப் பட்டம் சூட்டியுள்ளார். மேலும் நம்மாழ்வார் இயற்றிய ஸ்ரீ பகவத் விஷயம், சாம வேதத்தினை விளக்குவதாக உள்ளது. 

இவர் பெருமானின் மீது கொண்டிருந்த பக்தி, இவரை இவ்வாறு பாடவைத்ததோ?…

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் அயர்வுறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே” என்றும்.. 

திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசை படர்பொருள் முழுவதுமாய் அவை யவைதொறும் உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே” என்றும்… 

”கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே”என பரவசத்துடன் பாடி இறைவனடிக்கு சேவை புரிந்த இவர் ஸ்ரீ நாதமுனிக்கு நாலாயிரம் பாசுரமும் கிடைக்க வழி வகுத்தார்.

இயற்பெயர் : –

நக்ஷத்திரம் : விசாகம் 

மாதம் : வைகாசி 

சேக்ஷதிரம் : திருகுருஹூர் (ஆழ்வார் திருநகரி), 

திருநெல்வேலி – தமிழ்நாடு

பிரபந்தம் : திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி (பிற்காலத்தில் இவை அனைத்தும் சேர்த்து ஸ்ரீ பகவத் விஷயம் எனப்போற்றபட்டது)

ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!விசிஷ்டாத்வைதம் என இன்று வழங்கப்படும் வைணவம் ராமாநுஜரால் கட்டமைக்கப்பட்டதால் ‘எம்பெருமானார் தரிசனம்’ எனவும் ’ராமாநுஜ சித்தாந்தம்’ எனவும் போற்றப்படுகிறது. ராமாநுஜர் உருவாக்கிய வைணவ பக்தி மற்றும் தத்துவ இயக்கம் வடநாடு சென்று மாபெரும் பக்தி இயக்கமாக உருவெடுத்தது. நாமதேவர், சைதன்யர் என்று மகான்கள் பலர் தோன்றி அவ்வியக்கத்தை வளர்த்தெடுத்தனர். இம்மாபெரும் எழுச்சிக்கு வித்திட்ட ராமாநுஜர் விசிஷ்டாத்வைதத்திற்கான தத்துவக் கூறுகளை, ஆழ்வார்களில் தலையாயவரான நம்மாழ்வாரிடமிருந்தே பெற்றிருந்தார். வைணவ சமயத்தின் மூலமே நம்மாழ்வார் தான். எனவேதான் வைணவத்தில் அவருக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது. வைணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீ ரங்கம் தான். ஆழ்வார் என்றாலே நம்மாழ்வார் தான். அவர் பெயரால் தான் திருக்குருகூருக்கு ‘ஆழ்வார்திருநகரி’ என்ற பெயர் வழங்கி வருகிறது. இந்தப் பெருமை நம்மாழ்வாருக்கு மட்டுமே உண்டு. பொதுவாகப் பெருமாள் கோயில்களில் உள்ள திருவடிக்கு சடாரி எனப் பெயர். இது சடகோபன் என்ற நம்மாழ்வாரைக் குறிக்கும். ஆனால் நம்மாழ்வார் சந்நிதியில் உள்ள சடாரிக்கு ‘ராமாநுஜன்’ என்பது பெயர். இதை ராமாநுஜரே ஏற்படுத்தினார் என்பது வரலாறு. இதிலிருந்து நம்மாழ்வார் மீதான ராமாநுஜரின் அளப்பரிய பக்தி நமக்குப் புலப்படுகிறது.
நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். அவர் இருந்த திருப்புளியடியில் அம்மரத்தைச் சுற்றியுள்ள சுவரில் 36 திவ்ய தேச பெருமான்களின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன.
எல்லாத் திருக்கோயில்களிலும் வணங்கிய கைகளோடு இருக்கும் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் சின்முத்திரையோடு ஞான உபதேசம் பண்ணும் திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.
திருப்புளி காய்த்தாலும் பழுக்காமல் பிஞ்சிலேயே உதிர்ந்து விடுகிறது. இதன் இலைகள் இரவில் குவிவதில்லை. எனவே இது உறங்காப் புளி எனப்படுகிறது. இது பல கிளைகள் விட்டு பரவி நிற்பதனால் ‘பொந்தாயிரம் புளியாயிரம்’ எனும் பழமொழி எழுந்தது.
நவதிருப்பதிகளிலும் நம்மாழ்வாருக்கு தனிச் சந்நிதி கிடையாது

நம்மாழ்வாரின் பெருமை:

சைவத்தில் நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைத் தொகுத்தது போல வைணவத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் நாதமுனிகள். 

1. காட்டு மன்னார் கோயில் எனும் தலத்தில் நாதமுனிகள் இருந்த போது மேல் நாட்டிலிருந்து வைணவ அடியார்கள் சிலர் மன்னாரைச் சேவிக்க வந்தனர். அப்போது அவர்கள் நம்மாழ்வாரின் “ஆராஅமுதே அடியேன் உடலம்” எனும் திருக்குடந்தை பாசுரத்தைப் பாடி சேவித்தனர். அதன் இறுதியில் “குருகூர்ச்சடகோபன், குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்” என்ற அடிகளைக் கேட்ட நாதமுனிகள்அடியார்களிடம் ஆழ்வாரின் ஆயிரம் பாடல்கள் பற்றியும் கேட்டார்.
அவர்கள் அந்த பத்துப் பாசுரங்கள் மட்டுமே தமக்குத் தெரியும் என்றும் ஆயிரம் பாசுரங்களும் குருகூரில் மதுரகவிகள் வழி வந்த பராங்குச தாசரிடம் மற்ற விவரங்கள் தெரிய வரலாம் என்றும் கூறினர்.

நாதமுனிகளும் குருகூருக்குச் சென்று பராங்குச தாசரிடம் விசாரித்தார். அவர் ”தற்சமயம் மதுரகவிகள் அருளிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனும் பத்துப் பாசுரங்கள் மட்டுமே உள்ளன, மற்றைய ஆழ்வார் பாசுரங்கள் அழிந்து போயின” என்று கூறினார். மேலும் ”கண்ணிநுண் சிறுத்தாம்பு” பத்துப் பாசுரங்களை 12,000 முறை ஓதினால் நம்மாழ்வார் தோன்றி அருள்வார் என்றும் வழி கூறினார். நாதமுனிகள் திருப்புளியடியில் ஆழ்வார் சந்நிதியில் அமர்ந்து 12,000 முறை ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரங்களை ஓதினார். நம்மாழ்வார் அவர் முன் தோன்றி தாம் பாடிய பாடல்களையும் ஆழ்வார் பிறர் பாடிய பாடல்களையும் அவருக்கு அருளினார். நாலாயிரமும் நம்மாழ்வார் தந்ததுதான். எனவே தான் ஆழ்வாரின் தனியனில் “ நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே” என்று கூறியுள்ளனர்.

2. பன்னிரு ஆழ்வார்களுள் இவர் ஒருவரே ஆழ்வார் என்ற பெருமையையும், ஆசாரியர் என்ற பெருமையையும் உடையவர். வைணவ குருபரம்பரை திருமகள் கேள்வனாகிய திருமாலிடம் தொடங்குகிறது. திருமால், திருமகள், சேனைமுதலியார் ஆகிய மூவரும் பரமபதத்தில் இருப்பவர்கள். பூவுலகில் இப்பரம்பரை நம்மாழ்வாரிடம் இருந்தே தொடங்குகிறது. நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரியநம்பி, ராமாநுஜர் என்பது வைணவ குருபரம்பரை. ஸ்ரீவைணவத்தில் நம்மாழ்வாரே முதலும் முடிவுமாக இருக்கின்றார். இவர் ஆழ்வார்களுள் கடைசியும் ஆசாரியர்களுள் முதல்வரும் ஆவர்.
3. ஆழ்வார்கள் பிறரைப் போன்று தலயாத்திரை செய்யாமல் நம்மாழ்வார் தாமிருந்த திருப்புளியடியில் இருந்த படியே எல்லாத் திருப்பதி எம்பெருமான்களையும் பாடினார் என்பது வரலாறு. இவரது திருவாய்மொழி தனக்கு கிடைக்காதா என்று எல்லா தலத்து பெருமான்களும் ஏங்கினார்களாம். இதனை நம்மாழ்வார் தாலாட்டு எனும் நூல் “ சிலைக்கோல நெற்றித் திருமாது கேள்வர், இலைக்கொருவராக என்னைப்பாடு என்னைப்பாடு என்ன” என்று சிறப்பித்துக் கூறுகிறது.
4. வைணவம் அர்த்த பஞ்சகம் என்று 5 பொருளைக் கூறும். அவை: இறைநிலை, உயிர்நிலை, உபாயநிலை, விரோதிநிலை, புருடார்த்த நிலை என ஐந்து. இந்த ஐந்தையும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி கூறுகின்றது என்பது வைணவ மரபு. 1, 12, 18, 40 ஆகிய திருவாய்மொழிகள் இறைநிலையையும், 27, 38, 78, 79 ஆகியவை உயிர்நிலையையும், 2, 2, 331, 81 ஆகியன விரோதி சொரூபத்தையும், 47, 48, 49, 40 ஆகியன உபாய சொரூபத்தையும், 19, 23, 80, 93 என்னும் திருவாய்மொழிகள் புருடார்த்த நிலையையும் தெரிவிக்கின்றன.
வைணவத்தின் தத்துவக் கருத்துக்கள் ஆழ்வார்கள் பிறர் பாசுரங்களை விட நம்மாழ்வார் பாசுரங்களில் தான் அதிகம் காணப்படுகின்றன. இதிலிருந்துதான் ராமாநுஜர் விசிஷ்டாத்வைத தத்துவத்தை உருவாக்கினார். எனவேதான் ஆளவந்தார் நம்மாழ்வாரை “ குலபதி” என்று போற்றுகிறார். இதனையே பராசர பட்டர் ,

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்க நெறியும் தடையாகித் – தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்து இயல்
.-என்று ஏத்தினார்.
5. திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியன நம்மாழ்வார் அருளிச் செய்தவை. இவற்றுள் திருவாய்மொழி சாமவேத சாரமாகக் கருதப் படுவது. இதுவே ஆழ்வார் அருளியவற்றில் வைணவர்களால் உச்சிமேல் வைத்துக் கொண்டாடப்படுவது.

இத்திருவாய்மொழிக்கு மட்டும் கி. பி.12 ஆம் நூற்றாண்டு தொடங்கி 7 விதமானவியாக்கியானங்கள் (விரிவுரைகள்) தோன்றியுள்ளன. இவற்றுக்கு ‘ ஸ்ரீ பகவத் விஷயம்’ என்று பெயர். திருவாய்மொழியின் நுட்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கு இவ்வுரைகளே பெருந்துணை செய்கின்றன. திருவாய்மொழி ‘ திராவிட வேத உபநிஷத்’ என்றே போற்றப்படுகிறது. இதன் சிறப்பை ‘ திராவிட வேதோபநிஷத் சங்கதி’, ‘ திராவிட வேதோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற வடமொழி நூல்கள் எடுத்துரைக்கின்றன.

இத்திருவாய்மொழி வடமொழி, தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது .

திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களும் திருமாலின் ஆயிரம் திருப்பெயரையும் பத்துப் பத்துக்களும் அவனுடைய பத்து அவதாரங்களையும் நினைவூட்டுவன என்பர் பெரியோர் .

6. ஆழ்வார்களை எல்லாம் நம்மாழ்வாருக்கு அவயவங்களாக ( உறுப்புகளாக) அமைத்து ஆழ்வாரை அவயவியாகச் சொல்வது வைணவ மரபு. அதன்படி,

நம்பெருமாள் – ( நம்மாழ்வரின்) திருமுடி
பூதத்தாழ்வார் – சிரசு
பொய்கை, பேயாழ்வார்கள் – கண்கள்
பெரியாழ்வார் – முகம்
திருமழிசையாழ்வார் – கழுத்து
குலசேகரர், திருப்பாணாழ்வார் – கைகள்
தொண்டரடிப்பொடியாழ்வார் – மார்பு
திருமங்கைமன்னன் – நாபிக்கமலம்
திருவடிகள் – மதுரகவி, நாதமுனிகள்

என்பதாக அமைவர்.

7. நம்மாழ்வார் அருளியவை நால்வேதம் எனவும் திருமங்கையாழ்வார் அருளியவை அதற்கான ஆறங்கம் எனவும் மணவாள மாமுனிகள் போற்றுகிறார்.

8. நம்மாழ்வார் பாசுரங்களில் கூறப்பட்டுள்ள திருமாலின் பெயர்களே அந்தந்த திருப்பதி பெருமான்களுக்கு இன்றளவும் வழங்கப்படுகின்றன. ‘ ஒன்றும் தேவும்’ என்னும் குருகூர் பாசுரத்தில் ‘ ஆதிப்பிரான் , பொலிந்து நின்ற பிரான்’ என்ற ஆழ்வாரின் வாக்குகளே ஆழ்வார் திருநகரியில் உள்ள பெருமானுக்குப் பெயராயிற்று. இவ்வாறே பிற திவ்ய தேசங்களிலும் கண்டு கொள்ளலாம்.

9. ” வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைக்கின்ற நம்மாழ்வார் பாடல்கள் 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் , தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய நாடு முழுமையிலுமே முன்னென்றும் கண்டிராத ஒரு புதிய பக்தி வெள்ளமும் சமய தத்துவப் பிரவாகமும் தோன்றி வளர்வதற்கு மூலமாயிருந்தன. இது தமிழருடைய ஒரு பெரும் சாதனை.” என்பார் பேரறிஞர் மு. அருணாசலம்.

10. நம்மாழ்வார் பிறந்து வளர்ந்ததனாலேயே திருக்குருகூர் ‘ ஆழ்வார்திருநகரி’ எனப் புகழ் பெறுவதாயிற்று.

11. ஆழ்வார் மாறன், காரிமாறன், சடகோபன், பராங்குசன், மகிழ்மாறன், வகுளாபரணன், திருக்குருகூர் நம்பி, குருகைப் பிரான், வேதம் தமிழ் செய்த மாறன், திருவாய்மொழிப் பெருமாள், திருவழுதி வளநாடன், நாவீறுடையான் எனப் பல பெயர்களால் போற்றப்படுகிறார்.

12. இவர் உலகனைத்துக்கும் ஞான உபதேசம் செய்கின்ற ஆழ்வார் என்பதனால் ‘ நம்மாழ்வார்’ எனப் படுகின்றார். நம்பெருமாள் என்ற திருமாலின் அருமைத் திருநாமத்தைப் போல நம்மாழ்வார் என்ற பெயரும் அமைந்துள்ள சிறப்பை மணவாள மாமுனிகள் தமது உபதேச ரத்தின மாலையில்(50)

நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பது அவரவர்தம் ஏற்றத்தால்
“-என்று போற்றுகின்றார்.

உலக நடைக்கு மாறாக இருந்ததனால் ‘ மாறன்’ எனவும், மாறன் காரியார் புதல்வர் ஆதலின் ‘ காரிமாறன்’ எனவும், கர்ப்பத்திலிருக்கும்போது குழந்தைகளை அஞ்ஞானத்திற்கு ஆட்படுத்தும் சடம் எனும் வாயுவை கோபித்து ஓட்டியதால் ‘ சடகோபன்’ எனவும், குருகூர் பொலிந்து நின்ற பிரான் தந்தருளிய மகிழமலர் மாலையைத் தரித்ததனால் ’ மகிழ்மாறன்’,’ வகுளாபரணன்’ எனவும், பிற மதங்களாகிய யானைகளைத் தமது பிரபந்தங்களில் கூறிய தத்துவக் கருத்துக்கள் எனும் அங்குசத்தால் அடக்கியமையால் ‘ பராங்குசர்’ எனவும், பிரபக்தி மார்க்கத்தைப் பின்பற்றும் வைணவர் அனைவருக்கும் இவர் தலைவர் என்பதால் ‘ பிரபன்ன ஜன கூடஸ்தர்’ எனவும் போற்றப் பெறுகின்றார்.

13. மதுரகவிகள், திருவரங்கத்து அமுதனார், மணவாள மாமுனிகள், ஈசுவர முனிகள், சொட்டை நம்பி, அனந்தாழ்வான், பட்டர், அப்புள்ளார், வேதாந்த தேசிகர் முதலிய ஸ்ரீ வைணவப் பெரியோர்கள் நம்மாழ்வாரைப் பலபடியாகப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

14. கி. பி. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சடகோபர் அந்தாதி, நம்மாழ்வாரின் பெருமைகளை 100 பாடல்களில் எடுத்துரைக்கின்றது.

15. கி. பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஆழ்வார் பெயரால் மாறன் அலங்காரம், மாறன் அகப் பொருள், மாறன் பாப்பா இனம் என அணி, பொருள், யாப்பு இலக்கண நூல்களைச் செய்துள்ளார்.

16. வைணவராகிய பரிமேலழகர் தம் திருக்குறள் உரையில் இறைமாட்சி எனும் அதிகாரத்தின் அவதாரிகையில் ‘ திருவுடை மன்னரைக் காணில்’ என்றும், பற்றற்ற கண்ணே எனும் குறளுரையில் ’ அற்றது பற்றெனில்’ என்றும், ஆரா இயற்கை எனும் குறளுரையில் ’ களிப்பும் கவர்வு மற்றும்’ என்ற பாசுரக் கருத்தை ‘ களிப்புக் கவற்சிகளும் பிறப்புப் பிணி மூப்பிறப்புக்களும் முதலாயின இன்றி ‘ என்றும், ‘ நன்றாய் ஞானம் கடந்து போய்’ என்றும் திருவாய்மொழிப் பாசுரங்களை எடுத்துக் காட்டுகிறார்.

17. கி. பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் தமது மோகவதைப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, சிலேடையுலா ஆகியவற்றில் நம்மாழ்வாரைப் போற்றுகின்றார்.

அரையர் சேவையும் திருவாய்மொழியும்

ஆழ்வார்களின் பாசுரங்களை இசையுடன் பாடி அபிநயித்து அவற்றின் வியாக்கியானங்களை அழகுறப் பேசி நடிக்கும் கலைதான் அரையர் சேவை.
திருவரங்கத்தில் நம்பெருமாள் முன்பு ஒரு திருக்கார்த்திகைத் திருவிழாவின் போது திருமங்கையாழ்வார் தம்முடைய திருநெடுந்தாண்டகப் பாசுரங்களைப் பண்ணுடன் பாடி அபிநயித்தார். பின் பெருமாளிடம் அவர், “ மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று அத்யயன உற்சவம் நிகழும்போது நம்மாழ்வாரின் திருவாய்மொழியை வேதங்களுடன் கேட்டருளி வேத சாம்யமாக ஏற்றம் அருள வேண்டும்” என்று கேட்டார். பெருமாளும் சம்மதம் தந்தார்.

அன்று முதல் ஆழ்வார்திருநகரியிலிருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை மார்கழி மாத சுக்ல தசமியன்று திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள்வித்தனர். நம்மாழ்வாரின் பிரதிநிதியாக மதுரகவியாழ்வார் இருந்து திருவாய்மொழியைப் பண்ணுடன் இசைத்து அபிநயித்தார். இதற்காக அவருக்கு “ திருவாய்மொழி விண்ணப்பம் செய்வார்” என்ற விருதினை நம்பெருமாள் வழங்கினார். இவ்விருதுப் பெயர் நம்மாழ்வார் திருவிருத்தத்தில் வரும் ‘ அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்ற வாக்கிலிருந்து வந்திருக்கலாம்.

நாலாயிரத்தையும் நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற நாதமுனிகள் அதை இயலும் இசையுமாக வகுத்து தன் மருமக்கள் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் இருவருக்கும் கற்பித்தார். அவர்களைக் கொண்டே திருவரங்கத்தில் மீண்டும் அரையர் சேவை நடைபெறச் செய்தார்.

மார்கழி அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் பகலில் நடப்பது பகல்பத்து. இதில் பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, பெருமாள் திருமொழி, திருமாலை, கண்ணிநுண் சிறுத்தாம்பு, பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் அடங்கிய முதலாயிரம் பண்ணுடன் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும்.

திருமங்கையாழ்வாரால் முன்னமே ஏற்படுத்தப்பட்டு நின்று போயிருந்த திருவாய்மொழித் திருநாளை மீண்டும் நடத்தினார் நாதமுனிகள். இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி முதல் 10 நடைபெறும். இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பண்ணுடன் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும். இது 10 நாட்கள் இரவில் நடைபெறும். எனவே ’ இராப்பத்து’ எனப்படுகிறது.

இதுவே ’ அத்யயனத் திருவிழா’ எனப்படும். நம்பிள்ளை ஈட்டுரையில் ‘ திருவத்யயனம்’ என இவ்விழாவைக் குறிப்பிடுகிறார்.

ஆழ்வார்திருநகரி, திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 திருப்பதிகளில் மட்டுமே அரையர் சேவை இப்போது நடைபெறுகிறது.

ராமாநுஜரின் நம்மாழ்வார் பக்தி:
ராமாநுஜர் குருகூருக்கு அருகில் உள்ள திருப்புளிங்குடியில் பெருமானைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் அங்கு வட்டாடிக் கொண்டிருந்த அர்ச்சகர் பெண்ணிடம் “ இன்னும் குருகூர் எவ்வளவு தூரம்?” என்று கேட்டார். அவள், “ ‘ கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் வண்ணன் மேவி நன்கமர்ந்த வியன் புனல் வழுதி நாடன் சடகோபன்’ என ஆழ்வார் இவ்வூர்ப் பெருமானைப் பாடும் பொழுது சொல்லிய வண்ணம் கூப்பிடு தூரம்தான்” என்று சொன்னாள். இதைக் கேட்ட ராமாநுஜர் அவளை ஆழ்வாராகவே எண்ணி தரையில் வீழ்ந்து வணங்கினார்.

பின்பு குருகூரை நெருங்கிய போது ராமாநுஜர் தம்முடைய ஈடுபாட்டின் மிகுதியால் அதைப் பரமபதமாகவே கண்டு

இதுவோ திருநகரி ஈதோ பொருநல்
இதுவோ பரமபதத்தெல்லை – இதுவோதான்
வேதம் தமிழ்செய்து மெய்ப்பொருட்கும் உட்பொருளாய்
ஓதும் சடகோபன் ஊர்?-
என்று போற்றி மகிழ்ந்தனர்.

————–

நம்மாழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-16

1. ஸ்ரீவைகுண்டம் (அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில் (நவ திருப்பதி), ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி)

2. நத்தம் (அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் (நவ திருப்பதி), வரகுணமங்கை, நத்தம், தூத்துக்குடி

3. திருப்புளியங்குடி (அருள்மிகு காசினி வேந்தன் திருக்கோயில், (நவ திருப்பதி), திருப்புளியங்குடி, தூத்துக்குடி

4. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில் (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி (திருத்தொலைவில்லி மங்கலம்), தூத்துக்குடி
4. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு அரவிந்த லோசனன் திருக்கோயில், (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி,(திருத்தொலைவில்லி மங்கலம்), தூத்துக்குடி

5. பெருங்குளம் (அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில், (நவ திருப்பதி), பெருங்குளம், தூத்துக்குடி)

6. தென்திருப்பேரை (அருள்மிகு மகா நெடுங்குழைக்காதர் திருக்கோயில்(நவ திருப்பதி), தென்திருப்பேரை, தூத்துக்குடி)

7. திருக்கோளூர் (அருள்மிகு வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோயில்(நவ திருப்பதி), திருக்கோளூர், தூத்துக்குடி)

8. வானமாமலை (அருள்மிகு தோத்தாத்ரி நாதன் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி)

9. திருப்பதிசாரம் (அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருப்பதிசாரம், நாகர் கோவில், கன்னியாகுமரி)

10. திருவட்டாறு (அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி)

11. திருவனந்தபுரம் (அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம், கேரளா மாநிலம்)

12. ஆரம்முளா (அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில்,திருவாறன் விளை,பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்)

13. திருவண்வண்டூர் (அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)

14. திருக்கடித்தானம் (அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்,கோட்டயம், கேரளா மாநிலம்)

15. திருக்காக்கரை (அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)

16. திருச்செங்குன்றூர் (அருள்மிகு இமையவரம்பன் திருக்கோயில்,செங்கனூர், திருச்சிற்றாறு, ஆழப்புழா, கேரளா மாநிலம்)

——————–

நம்மாழ்வார் மற்ற ஆழ்வார்களுடன் சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-19

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் (5)

1. திருமோகூர் (அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை)
2. திருப்புலியூர் (அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில்,திருப்புலியூர், ஆழப்புழா, கேரளா மாநிலம்)
3. திருவல்லவாழ் (அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், வல்லப ÷க்ஷத்திரம், பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்
4. திருமூழிக்களம் (அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
5. திருநாவாய் (அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம், கேரளா மாநிலம்)

நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் (1)

1. ஆழ்வார் திருநகரி (அருள்மிகு ஆதி நாதன் திருக்கோயில், (நவ திருப்பதி), ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி)

நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் (1)

1. திரு விண்ணகர் (அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோவில், தஞ்சாவூர்)

நம்மாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. வெண்ணாற்றங்கரை (அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர்)

நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)

1. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்)
2. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.)

நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)

1. திருப்பேர் நகர் (அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்)
2. திருக்குறுங்குடி (அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி)

நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)

நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)

நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார் (1)

1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை

நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார் (1)

1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)

நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)

1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்

நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மாறன் பொன்னடி மேவுவோம் மெய்மையே-ஸ்ரீ வகுள மாலை–1937-May-June-

September 12, 2024

மறை நெறி தேறித் தூய மாறனார் பாத பற்பே
இறை எனும் முறைமை காக்கும் திறமையே தெரிக்கும் தீரர்
முறை முறை முழங்கி யாங்கே துறை துறை உயிர் அளிக்கும்
நிறை மொழி சொரிந்து யாண்டும் நிரம்பியது இயம்புவோமே

ஸாது
சந்திம் இச்சந்தி சாதவ -அன்பு பெருகும் சந்தியில் -நல்லன்பர் சாதுக்களாவார்
ஸத் -ஸந்தாதா -சந்திமான் -இவன் அவனது திருநாமங்கள்
பரனும் ஏனையரும் சந்தி செய்யும் நிலமே சடகோபர் தத்வம்
சடகோபன் பொன்னடி மேவினாரே சத்துக்கள் ஆவார்
ஸ்ரீ பாதுகை பெற்று மீண்ட பரதாழ்வானை பரத்வாஜர் -பேறு பெற்றீரோ -பரனை ஒன்றினீரோ -பரத்வாஜர் உசாவுகிறார்
ஆர்யம் மார்க்கம் ப்ரபந்நஸ்ய நாநுமந்யே தக புமான் –ஸ்ரீ வால்மீகி பகவான் புகழ்ந்தார்

ப்ரபந்ந ஐந கூடஸ்தர்
ஆத்யஸ்தன குல பதேர்
குல தனம்
குல தைவதம்
-என்று ஆர்ய ஜனங்கள் புகழ்ந்து போற்றுவதுக்கு மூலம் இவர் ஸ்ரீ ஸூக்தியே –

விண்ணுளார் போற்றித் தொழும் ஸ்ரீ வைகுந்தக் கோனுடைய திருப் பாதுகைக்கு ஸ்ரீ சட கோபன் என்று அன்றோ திரு நாமம் –
நிதி-பரன் என்பது பிரதம பர்வம் -சடகோபன் என்பது சரம பர்வம் –

தன் திருவடிகளுக்கு பிரதிநிதியான ஸ்ரீ சடகோபனை -அபய ப்ரதான ஸாரம்

ஸ்ரீ சடகோபன் நிற்கும் பாத பீடத்தளவும் சென்று -பரமபத ஸோபநம்

வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ
மந்திரம் கொள் மறை முனிவன் -காயத்ரி கண்ட -ருஷி விஸ்வத்துக்கு மித்ரர்
அதன் பொருளை விரித்து அருளியவர் வால்மீகி கவி 24 அக்ஷரங்கள் கொண்ட -காயத்ரியை விளக்கும் ஸ்ரீ ராமாயணமும் 24 ஸ்லோகங்கள் கொண்டது
ஸரணாகதி ஸாஸ்த்ரமும் அதுவே
ஸரணாகதி தர்மத்தை விளக்கும் மறைகளுக்கு எல்லாம் காயத்ரியே தாய்
அத்தாய் மந்த்ரம் கண்ட இவரே ரிஷி
அதன் அர்த்தம் விரித்து அருளிய இவரே கவி
காயத்ரியே விஸ்வ ஜநநீ
பக்தைர் பாகவத சஹா என்றது ஆழ்வார் ஆச்சார்யர்களையே

மறைச்சிரம் மருவும் ஆன்antrumஅன்று தொட்டு இன்று காறும்
அறை மறை செழித்த மாறனை அமிழ்தின் இணையடியே மூழ்கும்
முறைமையே பழகி வாழு மூதுவர் உலகு வாழ
நிறை யரித் திருவாய் ஓது நிதி எனும் நிலை விரித்தனமே

———

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ் என்பது ஓர் சிற்றின மரம் ஆகும்.இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர் புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும்.

மகிழம் பூ

இதன் பழம் சாப்பிட உகந்தவை. இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர்.

இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தியில் மணம் சேர்க்கவும், மண-எண்ணெய் மணப்பொடி முதலானவற்றைச் செய்யப் பயன்படுத்துகின்றனர்.

சங்க காலம்

குறிஞ்சி நிலத்து மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று வகுளம்[6]வையை ஆற்றங்கரையில் பூத்திருந்த மலர்களைப் பட்டியலிடும் பாடல் ஒன்று வகுளம் பூவையும் கூறுகிறது.சிலப்பதிகாரம் என்னும் நூலிலும் இந்த வையைக்கரை மலர்ப்பட்டியலில் வகுளம் பூ உள்ளது.காவிரிப்பூம்பட்டினத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களிலும் வகுளம் ஒன்று.

திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் இதனை மலைநிலத்தில் புதர் புதராகப் பூக்கும் பூ என்று குறிப்பிடுகிறது.

  • வகுளம் என்பது தலையில் சூடிக்கொள்ளும் ‘உச்சிப்பூ’ என்னும் அணிகலன். இதனைச் ‘சிந்தாமணி’ எனவும் கூறுவர். பாடினிக்குப் பரிசாக சங்ககால மன்னர்கள் வழங்கிய ‘அழல் அவிர் தாமரை’யை இதனோடு ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்.தலை உச்சியில் அணிந்த இந்த அணிகலன் இக்காலத்தில் நெற்றிச்சுட்டியாக மாறியுள்ளது.

இந்தப் பூவின் சிறிய உருவம் பற்றியும், மிகுந்த மணம் பற்றியும் நீதி நூல்கள் பாடிய ஔவையார் குறிப்பிட்டுள்ளார்.

பேரிலேயே-மகிழ்”ச்சி தரும் “மகிழ”ம்பூ

பண்ணும் தமிழும் தவம் செய்தன!  பழ நான் மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன! மகிழ்மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தமை செய்த காலத்திலே! – என்று மாறனை மகிழம்பூ மாறனாகவே கம்பன் பாடுகிறான்!

மகிழம்பூவுக்கு வடமொழியில் வகுளம்-ன்னு பேரு! வகுள மாலை!
வகுளாபரணன் (வகுள+ஆபரணன்)  என்று நம் மாறனுக்கு இன்னொரு பெயர்!

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி
ஸர்வம் யதேவ நியமேந மதந் வயாநாம்
ஆத் யஸ்ய ந:குலபதேர் “வகுளா பிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்னா!

திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் உள்ளம் உவந்து, பிரசாதித்தருளிய மகிழமலர் மாலையைத் தரித்ததனால் வகுளாபரணர் என்று பெயர் பெற்றார். பிறசமயத்தினராகிய யானைகளைத் தமது இனிய தமிழ் பாசுரத் தத்துவார்த்தங்களால் செருக்கை அடக்கி அவர்களுக்கு மாவட்டி என்னும் கருவிபோல் இருந்ததால் பராங்குசர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். எங்களுக்கு முதல் தெய்வம் சடகோபர் தான்!”

சேமம் குருகையோ? செய்யதிருப் பாற்கடலோ?

நாமம் பராங்குசனோ, நாரணனோ? – தாமம்

துளவோ, வகுளமோ? தோள் இரண்டோ, நான்கோ?

உளவோ பெருமான் உனக்கு?

கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர் கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து  அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கா லொசியு மிடைஇள மாஞ்சென்ற சூழ்கடமே.
என்ற பாசுரத்தில் தாய் தன் மகளைத் தான் பெற்ற அருமைப்பாட்டைக் கூறும் இடம்(நெடுங்காலம் பரவி பெற்ற – நீண்டகாலம் வழிபட்டுப் பெற்ற) ஆழ்வாரின் அவதாரச் சிறப்பு குறிப்பாக வெளியிடப் பெற்றுள்ளதாகப் பூர்வாசாரியார்கள் திருவுள்ளம். 

மகிழம் என்ற தமிழ்ச் சொல் வடமொழியில் வகுளம் என்று வழங்கப்படுகிறது. வகுள மாலையை ஆபரணமாக உடையவர் அதனால் வகுளாபரணர் என்று பெயர். நம்மாழ்வார் திருவாய்மொழியில் “வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” என்று கூறுவதே சான்று

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பராங்குச பரகால மஹாத்ம்யம்–

August 30, 2024

ஆனால் அந்த வேதத்துக்கு அங்க உபாங்கங்கள் உண்டானவோ பாதி
இதுக்கும் அவை உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-

வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்-
(இருமை -பெருமை -)

அதாவது
ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்
சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும்
மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே
(ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )
இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்
இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை
கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய
கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்
மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..

நன் மாலைகள் என்றது -நய நின்ற நன் மாலை-முதல் திருவந்தாதி -57- -என்று
முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து ..

(அங்க உபாங்க சேவை உண்டே -பவித்ர உத்சவம் பொழுது -ஜ்யேஷ்டாபிஷேகம் -அங்கங்கள் உப அங்கங்கள் சேவிக்கிறோம்
அத்யயன உத்சவம் தமிழர் திரு நாள் -247-பாசுரங்கள் மங்களா சாசனம் திருவரங்கத்துக்குத் தானே – )

1-பொய் நின்ற ஞானமும்-திருவிருத்தம் -1– –இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய்
வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே
பிரதமத்திலே -வாடினேன் வாடி–பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு
வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்
2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் –ப்ராவண்ய ப்ராஸூர்யம் – /
உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் /முலையோ முழு முற்றும் போந்தில -பால்யாத் ப்ராவண்யம் /
கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் /
அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்
3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்
செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –
அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
விபவம் பாடப் பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் /
காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் / மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே/
ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே
4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்
5-அந்ய உபதேச பேச்சும்
6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்
7-தூத ப்ரேஷணமும்
8-அநுகாரம்
9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –
10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்
இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் /
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்/
கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே /
பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு /
எங்கனே நீ லாவண்யம் அங்கு/இரண்டும் மகள் பாசுரங்கள்
13-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-
14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,
அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —
தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /
தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்
15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்/ உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் / பத்து தடவை இவர்
ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்
திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே
தேரெழுந்தூர் /திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /
16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்
மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –
17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே
மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..

———–

நம்மாழ்வார் விஸ்தரித்து அருளியதை திருமங்கை ஆழ்வார் சுருக்கி அருளும் இடங்கள்-

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –தாய்ப் பாசுரமாக நம்மாழ்வார் ஸர்வேஸ்வரனாக அநு கரித்து அருளிச் செய்த பதிகம் –5-6

திருமங்கை ஆழ்வார் –8-2-6-ஒரே பாசுரத்தில் அநு கரித்து அருளிச் செய்த பாசுரம்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யாம் என்று பேசினாள் –
இதுவும் தாய் பாசுரம்

——-

இதே போல் தூத ப்ரேஷணமும்
அஞ்சிறைய மடநாராய்
வைகல் பூங்கழிவாய்
பொன்னுலகு ஆளீரோ
எங்கானல் அகம் கழிவாய் -நான்கு பதிகங்களில் முழுவதும் அருளிச் செய்துள்ளார்

திரு மங்கை ஆழ்வாரோ
தூவிரிய மலருழக்கி -3-6-பதிகத்தில் தூது விடுவதில் இறங்கி -நான்கு பாசுரங்களே அருளிச் செய்தார்
இதே போல் -காவார் மடற் பெண்னை -9-4- பதிகத்தில் இரண்டே பாசுரங்களே தூது விடல் அருளிச் செய்தார்

——

சொன்னால் விரோதம் –3-9-பதிகம் முழுவதும் சோறு கூறைக்காக -நர ஸ்துதி பண்ணி ஸ்வரூபம் நாசமடையும் சம்சாரிகளை நோக்கி -நம்மாழ்வார் அருளிச் செய்துள்ளார்

திரு மங்கை ஆழ்வாரோ
ஒரே பாசுரத்தால் -1-1-7-கண்டவா தொண்டரைப் பாடும் சொற் பொருள் ஆளீர் -சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் நற் பொருள் காண்மின் பாடி நீர் உய்ம்மின் -நாராயணா என்னும் நாமம் -என்று அவற்றையே சுருக்கிப் பேசி அருளுகிறார்-

இதே போல் கொண்ட பெண்டிர் மக்களுற்றார் –9-1-sஆபாச பந்துக்களின் ஹேயத் தன்மைகளை விரித்து அருளிச் செய்துள்ளார் நம்மாழ்வார்
இவற்றையே-பெரிய திருமொழி-8–9-7-பெற்றாரும் சுற்றமும் என்றிவை பேணேன் நான் மாற்றாரும் பற்றிலேன் -என்று சுருக்கி அருளிச் செய்துள்ளார்

இதே போல் உயர் திண்ணன் அணைவது ஒன்றும் தேவும் -நான்கு பதிகங்களால் பரத்வத்தை அருளிச் செய்து இருப்பவற்றையே சுருக்கி
மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி –11-6-ஒரே பதிகத்தால் அருளிச் செய்துள்ளார்

———-

2-நம்மாழ்வார் சுருக்கமாக அருளிச் செய்தவற்றுக்கு திரு மங்கை ஆழ்வார் விஸ்தரித்து அருளிச் செய்தவை
மாசறு சோதி -5-3 பதிகத்தில் -குதிரியாய் மடலூர்துமே -என்றும்
யாம் மடலூர்ந்தும் எம் ஆழி யங்கையனைப் பிரானுடைத் தூ மடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் என்றும்
இரண்டு துண்டுகளால் மடலூர்தலைப் பிரஸ்தாபித்தார் –
இவ்வாறு சுருக்கி அருளிச் செய்தவற்றையே இரண்டு மடல்களாக விஸ்தரித்து அருளிச் செய்துள்ளார்

——–

நாராயண மந்திரத்தின் சிறப்பை
எண் பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10- என்றும்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே -10-5-1- என்றும்
சுருக்கமாக அருளிச் செய்தவற்றையே
பெரிய திருமொழியில்
வாடினேன் வாடி -1-1-என்றும்
கிடந்த நம்பி குடந்தை மேவி -6-10 என்றும்
இரண்டு பதிகங்களில்
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்றும்
நாமம் சொல்லில் நமோ நாராயணமே -என்றும்
ஒரு கால் சொன்னால் போல் ஒன்பதின் கால் அருளிச் செய்துள்ளார்

————-

தளிர் மதிச் சடையனும் நான் முகக் கடவளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா —ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
அகப்படக் கரந்துஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமோ –திருவாசிரியம் -7-
மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி பதிகம் -11-6–தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் யாவரையும்
ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன -நிகமனப் பாசுரம் –


இன்னமும் எம்பருமான் ஸம்ஸாரி சேதன ஸம் ரக்ஷணார்த்தமாக பல திரு அவதாரங்கள் செய்து அருளும்படியை
எந்நின்ற யோநியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா -திருவிருத்தம் -1- என்றும்
மீனாய் ஆமையுமாய் நரசிங்கமுமாய் குறளாய் கானோர் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே -5-1-10-என்றும்
சுருக்கமாய் அருளிச் செய்தவற்றை
வானோர் அளவும் முது முந்நீர் –8-8-என்றும்
நிலையிடம் எங்கும் இன்றி –11-4- என்றும்
இரண்டு பதிகங்களாலே மிக விஸ்தாரமாக அருளிச் செய்துள்ளார்

—————-

நம்மாழ்வாருக்கு அபிநிவேச அதிசயம் வராஹ அவதாரம் என்பதை
திருவிருத்தத்தின் முடிவிலே -ஏனத்துருவாய் இடந்த ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்றும்
திருவாய் மொழியின் முடிவிலும்-கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் -என்றும்
ஈடுபட்டு அருளிச் செய்தவற்றை ஒட்டியே
பெரிய திருமொழியின் தொடக்கத்திலேயே -பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே -என்று அருளிச் செய்துள்ளார்

———–

இதே போல் அர்ச்சாவதாரங்களில் திருக் குடந்தை யில் ஈடுபாட்டை
திருவாய் மொழியின் இறுதியிலும் -குடந்தை யங்கோவலன் குடி குடியார்க்கு தொடர்ந்து எங்கும் ஸ்தோத்திரம் சொல்லினர் -என்று அருளிச் செய்து
கோயில் திருமலை பெருமாள் கோயில் -எல்லாம் கிடக்க மூவரில் முதலான ஆராவமுத ஆழ்வாரின் மேல் ஈடுபாடு நாலாயிரமும் புனராவதாரம் செய்யப்பட்டு அருளப் போவதை ஸூசிப்பித்து அருளிச் செய்தவாறு
இந்த அபிநிவேச அதிசயத்தை உணர்ந்தே திருமங்கை ஆழ்வாரும்
சூழ் புனல் குடந்தையே தொழுது -1-1-2- என்றும்
சூழ் புனல் குடந்தையே தொழுமின் –1-1-7-என்றும் முதலிலேயே அருளிச் செய்து
சரம ப்ரபந்தமாகிய திருநெடும் தாண்டகத்திலும் -தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று நிகமித்தும் அருளிச் செய்துள்ளார் –

மேலும் அடுத்த பாசுரத்திலேயே
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை -என்று
நம்மாழ்வாருக்கு திரு நாட்டில் திருக்குடந்தை நினைவு வருவதற்கு உறுப்பான ஐதிக்யத்தையும் காட்டி அருளுகிறார்
நாத யாமுனர் போல்வாரை அன்னம் என்னும் -ஆச்சார்ய ஹ்ருதயம் -151-
அன்னமாயும் முனிவராயுமுள்ள நாதமுனிகளுடன் திருக்குடந்தை நிலத்தேவர்களான ஸ்துதிக்க –
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை-என்று நாதனுக்கு நாலாயிரமும் உரைத்தான் வாழியே –என்றபடி
அரும் தமிழ் மறையை வெளிப்படுத்தி அருளிய நம்மாழ்வார்
ஆராவமுதாழ்வாருக்கு பதிகம் அருளி சமர்ப்பித்த பின்னர் -தாமும் அவ்வாறு செய்யக் கூடாது என்று திரு உள்ளம் பற்றியே துணுக்குப் பாசுரங்கள் பரவி அருளிச் செய்துள்ளார்

———–

3- இருவரும் சமமாக அருளிச் செய்தவை –

3-1- ததீய சேஷத்வம்

பயிலும் சுடர் ஒளி -3-7- நெடுமாற்கு அடிமை -8-10-இரண்டு பதிகங்கள் திருவாய் மொழியில்
நண்ணாத வாள் அவுணர் -2-6-கண் சோர வெங்குருதி –7-4- இரண்டு பதிகங்கள் பெரிய திருமொழியில் –

3-2- தலைமகள் எல்லாம் இழந்தவற்றை அருளிச் செய்யும் அருளிச் செயல்கள்

மாலுக்கு வையம் அளந்த பதிகத்தில் -6-6–இழந்தது சங்கே -இழந்தது மாமை நிறமே -இழந்தது பீடே —இழந்தது கட்டே –என்று திருத்தாயார் பேச்சு
கரை எடுத்த சுரி சங்கு -பெரிய திருமொழி -8-3- பதிகத்தில் -இழந்ததேன் என் வரி வளையே -இழந்ததேன் என் கன வளையே
இழந்தேன் என் சரி வளையே –இழந்தேன் என் பெய் வளையே –என்று தன வாயாலே அருளிச் செய்கிறார்

3-3- திருத்தாயார் என் நினைந்து இருக்கிறாய்

கங்குலும் பகலும் -7-2- பதிகத்தில் இவள் திறத்து என் செய்கின்றாயே –இவள் திறத்து என் சிந்தித்தாயே –என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு
திவளும் வெண் மதி போல் திருவிடவெந்தை பதிகத்தில் -2-7- உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு

————————————————————————————————

4- கட்டுவிச்சி பேச்சு

தீர்ப்பாரை யாமினி -4-6-தேவதாந்திர கட்டுவிச்சி வந்து புகுந்தமை சொல்லிற்று
சிறிய திரு மடலிலும் திரு நெடும் தாண்டகத்திலும் வைஷ்ணவ கட்டுவிச்சியின் பேச்சு சொல்லிற்று

——————————————————————————————-

5- திருத் தாயாரை விட்டு செல்வது

உண்ணும் சோறு பதிகம் -6-7-பராங்குச நாயகி திருத் தாயாரை விட்டு தனியாகவே திருக் கோளூர் நோக்கி நடந்தமை சொல்லிற்று
கள்வன் கொல் பதிகம் -3-7-வயலாலி மணவாளன் வந்து பரகாலை நாயகியை திருத் தாயாரை விட்டு கூட்டிப் போனமை சொல்லிற்று ‘-

—————–

ஏவம் பூத பக்தி தசையில் இவர் பெண் பேச்சாக பேசும் இடத்தில் –
தோழி தாய் மகள் என்று த்ரி விதமாக பேசுகிற இதுக்கு கருத்து என் என்னும் அபேஷையில்
அத்தை பிரகாசிப்பிகிறார் மேல் —

சம்பந்த உபாய பலங்களில்
உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற
ப்ரஜ்ஞா அவஸ்தைகளுக்கு
தோழி தாயார் மகள் என்று பேர் —சூரணை -133-

(சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –
உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –
பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர் )

(ஞானத்தில் தம் பேச்சு வேதாந்தம் ஞானம் -என்றவாறு-திருமந்திர ஞானம் -பெண் பேச்சு
சம்பந்த ஞானம் -தோழி -/ உபாய அத்யாவசியம்–தாய் / பேற்றுக்கு த்வரிக்கை மகள்
பிரஞ்ஞா வேறே ஞானம் வேறே -எப்பொழுதும் உள்ள ஞானத்துக்கு பிரஞ்ஞா அவஸ்தை –
மூன்றுமே எப்பொழுதும் இருக்கும் -ஓன்று உந்த மூன்று அவஸ்தைகள்
நமக்கு முக்குணங்களும் இருந்து ஒவ் ஓன்று ஒவ் ஒரு காலத்தில் உயருமா போலே — )

சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –
அதாவது –
தோழி ஆவாள்-நாயக நாயகிகளை இணக்கிச் சேர்க்குமவள் ஆகையாலே –
திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தால் ஈஸ்வரனோடு ஆத்மாவுக்கு சொல்லப் பட்ட
அநந்யார்ஹ சேஷத்வாதி சம்பந்த ஞானமே -அவனோடு இந்த ஆத்மா சேருகைக்கு
ஹேது -சம்பந்தம்-ஆகையால்-அந்த சம்பந்த ஞானம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தோழி என்றும் –
(ஆதி -காரண கார்ய பாவம் -ரக்ஷக ரஷ்ய பாவம் -சேஷ சேஷி சம்பந்தம் இத்யாதிகள்)

உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –
அதாவது
தாயார் ஆவாள்-பெற்று வளர்த்த பெண் பிள்ளை ப்ராப்த யவ்வனையாய் நாயக விஷயத்திலே அதி மாத்திர ப்ராவண்யத்தாலே-
அவன் இருந்த இடம் ஏறப் போக வேணும் என்று பதறும் அளவிலும் – அவன்தானே வரக் கண்டு இருக்கை ஒழிய –
படி கடந்து புறப்படுகை குல மரியாதைக்கு போராது என்று நிஷேதித்து போருமவள் ஆகையாலே –
சித்தோ உபாயத்தை பற்றினவர்களுக்கு ப்ராப்தி விளம்ப ஹேது இல்லாமையாலே –
சீக்கிரமாக ப்ராப்யத்தை பெற வேணும் என்கிற அந்த த்வரையினுடைய உத்பத்தியாதிகளுக்கு பிரதம ஹேதுவாய் –
அந்த த்வரை பிராப்ய வைலஷண்ய தர்சனத்தாலே -க்ரம பிராப்தி பற்றாமல் முறுகி நடக்கும் அளவில் –
இது பிரபன்ன குல மரியாதைக்குச் சேராது என்று நிசேஷித்து –
சேஷியானவன் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டு இருக்க வேண்டும் என்று -இதின் துடிப்பை அடக்கப் பார்க்கிற
மத்யம பத பிரதிபாதித -உபாயத்யவசாயம் -ஆகிற -பிரஜ்ஞா அவஸ்தையை தாயார் என்றும்-

பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர்
அதாவது
தலை மகள் ஆவாள் –இயற்கையிலே புணர்ந்து நாயகனின் வைலஷண்யத்தில் ஈடு பட்டு –
குல மரியாதைகளையும் பாராதே கிட்டி அல்லாது தரியேன் என்னும் பதற்றத்தை உடையவள் ஆகையாலே
பிரதம மத்யம பதங்களால் அறுதி இடப் பட்ட சேஷியாய்-சரண்யன் ஆனவனுக்கு –
சரம பத ப்ரோக்தமான -ஸ்வரூப ரூப குண விபூதிகளால் வந்த வைலஷண்யத்தை அனுசந்தித்து –
தத் அனுபவ விளம்ப அஷமத்வத்தாலே-தத் ஏக உபாயத்வ அத்யாவசத்தையும் அதிக்ரமித்துக்
கிட்டி அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாதபடி நடக்கிற பிராப்ய த்வரை ஆகிற பிரஜ்ஞா அவஸ்தைக்கு
மகள் என்று பேர் இட்டு சொல்வது என்கை —

ஞான அவஸ்தைகள் என்னாமல் பிரஜ்ஞா அவஸ்தைகள் என்றது
திரிவித அவஸ்தையும் இவருக்கு சர்வ காலமும் உண்டு என்று தோற்றுகைக்காக–
பிரஜ்ஞா த்ரைகாலிகீ மதா – என்னக் கடவதிறே–பத த்ர்யார்த்த ஞானமும் திரு உள்ளத்தில்
எப்போதும் உண்டாய் இறே இருப்பது ..

——

இவ் அவஸ்தைகள் மூன்றும் இவர் பேச்சிலே தோன்றுமோ என்னும் அபேஷையிலே –
தோழி தாய் மகள் பேச்சான திரு வாய் மொழிகளிலே இவை தெரியும் என்னும் அத்தை
ஸூக்ரஹமாக வரைந்து அருளிச் செய்கிறார் மேல்–
(தோழி -கடகர் ஸமாச்ரயணம் -பிரணவார்த்தம் -ஆதாரம் –
அதுக்குத் தக்க உபாய அத்யாவசியம் -நமஸ் சப்தார்த்தம் -தாய் பாசுரம் –
ப்ராப்ய த்வரை தலைமகள் பாசுரம் -நாராயணாயா சப்தார்த்தம் )

சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து அறத்தொடு நின்ற மூன்றில்
அனந்யார்ஹத்வமும் —

வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டு இழந்து அகன்று
சார்வதே வலித்தமை ஸாதனம் ஆமோ என்று
மாதா அஞ்சி முறைப்பாட்டு முறை இடுகிற ஏழில் அத்யவசாயமும் –

புத்ரி பலகால் ஆள் விட்டு – ஆற்றாமை சொல்லி -கவராதமை விட்டு
இரைக்க மடல் எடுத்து – கண் புதைய போக்கற்று- உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
தாழ்ந்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று – சூழவும் பகை முகம் செய்ய- தடை நில்லாதே
புயக்கற்று – மாலையும் – காலையும் பூசல் இடுகிற பதினேழில் த்வரையும் தெரியும் —சூரணை -134-

சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து
அறத்தொடு நின்ற மூன்றில்-(தீர்ப்பாரை யாமினி- துவளில் மா மணி மாடம் – கரு மாணிக்க மலை )
அனந்யார்ஹத்வம்-சம்பந்த ஞானம் தெரியும்-
வெறி விலக்கி-
அதாவது
எம்பெருமானோடே இயற்கையில் புணர்ந்து பிரிந்து ஆற்றாமையால் –
மோகங்தையாகக் கிடக்கிற பிராட்டி தசையைக் கண்டு தாய் மார் கலங்கி –
இவள் நோயையும் அதுக்கு நிதானத்தையும் -பரிகாரத்தையும் அறியாதே –
பிரதிபன்ன பாஷிணியாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி சொல்லைக் கொண்டு –
இந்த நோய்க்கு பரிகாரமாகக் கருதி -வெறியாடல் உற –
இவள் பிரகிருதி அறியும் உயிர்த் தோழி அநந்யார்ஹையான இவளுக்கு அந்ய ஸ்பர்சம் சஹியாது-
நாம் இதை விலக்காது ஒழியில் -இவளை இழக்க வரும் என்று பார்த்து –
அப்போது நிரூபித்து அறிந்தாளாக இவள் நோவையும் -அதுக்கு நிதானத்தையும் அவர்களுக்கு சொல்லி –
தத் உசித பரிகாரங்களையும் விதித்து- அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின் -என்றும் –
உணங்கல் கெட கழுதை உதட்டாட்டம் கண்டு என் பயன் -இத்யாதிகளால் வெறியை விலக்கின பாசுரத்தாலே

(தலைமகள்) பிராப்ய த்வரை தசையில் அவசாதம் அடியாக – உபாயத்வ அத்யவாசம் ( தாயார் )கலங்கி-
தர்மேன பாபம் அபநுததி -தைத்ரியம் -–
( பலத்தில் விருப்பம் இல்லாமல் கர்மங்களை செய்வதனால் பாவத்தைப் போக்கடிக்கிறான் )என்கிறபடியே –
தர்ம அனுஷ்டானத்திலே துக்க ஹேதுவை போக்கலாம் என்பார் வார்த்தையைக் கொண்டு –
இவ் அவசாதத்தை பரிஹரிக்கலாமோ என்று தேவதாந்தர்யாமி பரமான கர்ம கபாலங்களிலே பிரவர்திக்கத் தேட –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் ஆனது ( தோழியானவள் )இவ் அவசதம் கர்ம பலம் அன்றிக்கே ஆகஸ்மிக பகவத் கடாஷம் பலமாக –
அசாதாராண விக்ரக விசிஷ்டனாவனை அனுபவிக்கையால் உண்டான பிராவண்யம் கார்யம் ஆகையாலே
இதுக்கு அது பரிஹாரம் அன்று – அநந்யார்ஹ சேஷத்வதுக்கு விருத்தம் ஆகையால் ஸ்வரூப நாசமுமாம் —
அந்ய ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த –தீர்ப்பாரை யாமினியும் –

ஆசை அறுத்து –
அதாவது
திரு துலைவில்லி மங்கலத்திலே அதி பிரவணையாய் இருக்கிற பெண் பிள்ளையை
மீட்கப் பார்க்கிற தாய்மாரைக் குறித்து தோழி யானவள்-
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை-என்று நீங்களே அன்றோ
திரு துலைவில்லி மங்கலத்தில் கொண்டு புக்கு இப் பிராவண்யத்தை விளைத்தீ கோள் –
இனி பிராப்த விஷய பிரவணையான இவளை உங்களால் மீட்கப் போகாது –
ஆன பின்பு- இவள் பக்கல் உங்களுக்கு ஆசை அற அமையும் என்ற பாசுரத்தாலே –

அர்ச்சாவதார சுலபமான விஷயமே உபாயம் ஆகையாலே எப்போதும் இதிலே நோக்காய் இருக்கும் அத்யாவசியம் –
அவ் விஷய வைலஷண்யத்தை விஷயீகரித்த பிராவண்ய கார்யமான த்வரை
உபாயத்திலே அன்வயிக்கிறதோ என்னும் அதி சங்கையால் – அத்தை நிவர்ப்பிக்கத் தேட –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் சேஷ வஸ்து கதமான இப் பிராவண்யம் சேஷி உகப்புக்கு
விஷயமாம் அல்லது உபாய கோடியில் அன்யவியாது —
பிராப்த விஷய வைலஷண்யம் அதீனமாக வந்தது ஆகையாலே நிவர்த்திக்கவும் போகாது —
இத்தை ஸ்வ நிவர்த்யமாக நினைத்து இருக்கிற ஸ்வாதந்த்ர்யம் அத்யந்த பாரதந்த்ரம் ஆகிற
ஸ்வரூபத்துக்கு விருத்தம் ஆகையாலே த்யாஜ்யம் என்று ஸ்வ ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த
துவளில் மா மணியும் —

அறத்தொடு நின்ற
அதாவது
தலைமகள் பருவத்தை கண்ட பந்து ஜனங்கள் ஸ்வயம் வரத்துக்கு ராஜ லோகத்தைத் திரட்டுகைக்காக மண முரசு அறைவிக்க-
திரு புலியூரிலே நாயனாரோடே இவளுக்கு கலவி உண்டாய்த்து என்னும் இடத்தை
இவள் வடிவிலும் பேச்சிலும் உண்டான வேறுபாட்டாலே அறிந்த உயிர் தோழி யானவள் –
இத் த்வனி பெண் பிள்ளை செவியில் படுமாகில்-மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய்
இருக்கிற இவளைக் கிடையாது — ஏற்க்கவே பரிக்ரஹிக்க வேணும் என்று இவள்
பந்து ஜனங்களைக் குறித்து இவளுக்கு திருப் புலியூரில் நாயனாரோடே சம்ஸ்லேஷம் ப்ரவ்ருத்தம் ஆயிற்று போலே இரா நின்றது –
தத் குண சேஷ்டிதங்களையே வாய் புலற்றா நின்றாள் –ஆன பின்பு நீங்கள் செய்கிறது தர்மம் அல்ல என்ன–
ஆகில் இவளுக்கு தக்க அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணங்கள் அவனுக்கு உண்டோ என்ன –

அவை எல்லாம் குறை இல்லை –அவை ஒன்றும் இல்லை யாகிலும் -இவள் அங்கே அநந்யார்ஹை ஆனமைக்கு
அடையாளம் ஸூ வ்யக்தமாக காணலாம் –ஆன பின்பு இத்தை தவிறுங்கோள் என்று
மத்யஸ்தையாய் நின்று தர்மம் சொல்லுகிறாளாய்-அந்த மணத்தை விலக்கின பாசுரத்தாலே பிராப்ய த்வரையின் உடைய பரிபாகத்தை
உபாயத்வ அத்யவசாய தசையில் நின்று தரிசித்த அநந்தரம் -அது பகவத் அநந்யார்ஹை ஆனமை அறியாதே –
அந்ய விஷயத்துக்கும் அர்ஹமோ என்று நிரூபிக்க –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் -இதுக்கு அந்ய சேஷத்வ பிரசங்கமும் ஸ்வரூப நாசகம் –
சேஷியானவனுடைய போக்யதையாலும் அது தன்னை ஒழியவும் நிருபாதிக சேஷத்வத்தாலும்
இவ் வஸ்து அவனுக்கு சேஷம் என்று அறுதி இட்ட –
கரு மாணிக்க மலை-8-9-யுமாகிற தோழிப் பேச்சான
இம் மூன்று திரு வாய் மொழியிலும் அனந்யார்ஹ சேஷத்வம் தோன்றும் என்கை —

ஆக இத்தால்
வெறி விலக்கியும் ,
ஆசை அறுத்தும் ,
அறத்தோடு நின்றும் –
இவ் வஸ்து -அந்ய சேஷமும் அன்று –ஸ்வ சேஷமும் அன்று -பகவத் ஏக சேஷம் என்று சொன்ன
இம் மூன்று திரு வாய் மொழியும் -சம்பந்த ஜ்ஞான தசையில் பேச்சு என்னும் இடம் சம்பிரதி பன்னம் என்பது ஆயிற்று —

வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டு இழந்து அகன்று சார்வதே வலித்தமை
ஸாதனம் ஆமோ என்று மாதா அஞ்சி முறைப்பாட்டு முறை இடுகிற ஏழில் அத்யாசசாயமும் –
அதாவது

1-வாடி –
ஆடி ஆடி– -யிலே– வாடி வாடும்-2-4-1– -என்று அடியார்கள் குழாங்களை உடன் கூடப்
பெறாமையாலே வந்த கிலேசத்தால் ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போல் வாடி–
( காசை இழந்ததுக்கும் மேலும் பொன்னை இழந்ததுக்கும் மேலே மணியை இழந்த தசை அன்றோ )

2-மெலிந்து
பாலனாய் ஏழ் உலகிலே- கண்ணன் கழல் துழாய் பென் செய் பூண் மென்முலைக்கு என்று மெலியும்-4-2-1-என்று
கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து-
(என்னுடை கோமளம் என் சொல்லும் என் வசமும் இல்லை நங்கைமீர் -உடல் மெலிய திருவடி மேலே சாத்திய
திருத்துழாய் கிடைக்காமல் -கை கழிந்தவற்றையும் ஆசைப்பட்டு -முடியானே -3-8-உடன் சங்கதி இதுக்கு –
இதில் பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம் –உலகமுண்ட பெரு வாயா போலே இங்கும் உண்டே -)

3-பித்தேறி –
மண்ணை இருந்து துழாவி- யிலே -என் பெண் கொடி ஏறிய பித்தே-4-4-1- -என்னும்படி
சத்ருச பதார்த்தங்களையும் -சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாக நினைத்து கிட்டும் படி பித்தேறி –
( ஏறிய பித்துடன் எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் -என்று சொல்லுவாள் -ஞானம் முற்றிய பித்து தானே இது
தேறியும் தேறாமல் மாயன் திறத்தனள் இவள் )

4-ஏறப்பேசி
கடல் ஞாலத்திலே -ஈசன் வந்து ஏறக் கொலோ -5-6-1–என்று ஆற்றமையாலே
அனுகரிக்கிரமை அறியாதே -ஈஸ்வரன் ஆவேசித்தானோ என்னும் படி அவனாகவே பேசி —
(திருக்குறுங்குடிக்கும் வானமா மாலைக்கும் தூரம் கடல் ஞாலம் உண்டே -சாடுவாகச் சொல்வர்
அநுகாரமும் ஆவேசமும் -கீழே தரிப்பும் தளர்வும் போலே )

5-கட்டு அழிந்து
மாலுக்கு வையத்திலே –கற்புடை யாட்டி இழந்தது கட்டே-6-6-1- -என்னும்படி
பகவத் அலாப கிலேசத்தாலே கட்டடங்க இழந்து —
(துவளில் மா மணி மாடம் ஆசை அறுத்து -அதில் இருந்து தாய் பாசுரம் -மாலுக்கு சென்றதுக்கு அவதாரிகை –
த்வரை மிக்கு அனுபவ அலாபம்–ஆற்றாமை முறுகி-தோழி தசையும் கலங்கி -சம்பந்த ஞானமும் தரிப்புக்கு உறுப்பாகாமல்
தளர்ச்சிக்கு உறுப்பாக -உபாய அத்யாவசாயம் இத்தனைக்கும் கலங்காமல் இருந்து –
மாலுக்கு பாரவஸ்யத்தால் எறாளும் வேண்டாம் என்று உபேக்ஷித்தவை தன்னடையே இழந்தவற்றை அன்றோ அருளிச் செய்கிறார் )

6-அகன்று –
உண்ணும் சோற்றிலே–இன்று எனக்கு உதவாது அகன்று-6-7-1- -என்று தன்னைப் பிரிந்து
கிலேசப் படுகிற இவ் ஆபத்து தசையிலே எனக்கு உதவாதே போனாள் என்னும் படி அகன்று —
(மூன்றாவது சேர்ந்தால் போலே பிரேம தசை திருவாய்மொழி
தன் சொத்தை பார்த்து போனவள் என் சொத்தையும் எடுத்து போக வேண்டுமோ –
கண்ணும் கண்ண நீருமான இவள் திரு முகம் தானே தாயாருக்கு சொத்து
தன் திருவும் என் திருவும் -திருமாலைத் தேடித் போனாள்-என் திருமகள் சேர் மார்பனே 7-2- )

7-சார்வதே வலித்தமை
கங்குலும் பகலிலே -சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையல்-7-2-1–என்னும் படி
அவனைக் கிட்டி அவன் சந்நிதியில் முடிய வேணும் என்று வியவசிதை ஆனமை
(வலித்தமை-அத்யாவசியம் -உறுதி உடைமை -சிக்கனவே -அவன் முன்னே முடியும் நிலை -பதினாறாயிரப்படி )
உபாசகருக்கு பரபக்தி தசையில் உண்டாகும்
க்லானி கார்ச்யாதிகள் (வாட்டமும் மெலிவும் -துரும்பாக இளைத்து போவது ) போல சாதனத்தில்
மூதலிடுமோ என்று மாதாவானவள் அஞ்சி – அவன் தன்னையும் வினவ வந்தவர்களையும்
குறித்து வாடா நின்றாள்- மெலியா நின்றாள் -என்றார் போலே முறைப் பட்டு –
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே–திருவிருத்தம் -62- என்று
( முகில் வண்ணன் -அரங்கன் -7-2-திருவாய் மொழிக்கும் இந்த திரு விருத்த பாசுரத்துக்கும் சம்பந்தம் உண்டே
உபாய அத்யாவசியம் ப்ராப்யம் அந்தர்கதம் ஒழிய உபாயாந்தரம் இல்லையே )
அத்தலையில் கிருபை ஒழிய இவள் பக்கல் உள்ளவை ஒன்றும் ஹேது இல்லை –
(பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு -இதுவே கிருபை -பக்தி உபாயம் இல்லை -)

ஆன பின்பு இவளை இப்படி துடிக்க விட்டு இருக்கை உம்முடைய கிருபைக்கும் ரஷகத்வதுக்கும்
போருமோ என்று கூப்பிடும் ஏழு திரு வாய் மொழிகளிலும் –
உபாயத்வ அத்யவாசம் தோன்றும் என்கை-
இத்தால் தாய் பேச்சான ஏழு திரு வாய் மொழியும்
உபாயத்வ அத்யாவசாய தசையில் பேச்சு என்னும் இடம் ஸ்பஷ்டம் என்ற படி —

புத்ரி பலகால் ஆள் விட்டு ஆற்றாமை சொல்லி கவராதமை விட்டு
இரைக்க மடல் எடுத்து -கண் புதைய போக்கற்று உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
தாழ்த்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று சூழவும் பகை முகம் செய்ய தடை நில்லாதே
புயக்கற்று மாலையும் காலையும் பூசல் இடுகிற பதினேழில் த்வரை யும் தெரியும் —
அதாவது –

1-2-3-4-புத்ரி பல கால் ஆள் இட்டு
தலைமகள் ஆனவள்-
அஞ்சிறை மடநாராய்-1-4-
வைகல் பூம் கழி-6-1–
பொன் உலகு ஆளீர்-6-8–
எம் கானல்-9-7–
என்கிற நாலு திரு வாய் மொழிகளிலும் க்ரம ப்ராப்தி பற்றாமல் தூது விட்டு —
( திருவாய் மொழி முழுவதுக்கும் மூன்று ஸங்க்ரஹம் -அதுக்கு முதல் மூன்று பாசுரங்கள் ஸங்க்ரஹம் –
அதுக்கு முதல் பாசுரம் ஸங்க்ரஹம் )

5-ஆற்றாமை சொல்லி –
வாயும் திரை உகளிலே –2-1-ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று சகல பதார்த்தங்களும்
பகவத் அலாபத்தாலே நோவு படுவதாக கருதி அவற்றை சம துக்கிகளாக கொண்டு அழுது-

6-கவராதவை விட்டு –
ஏறாளும் இறையோனில்-4-8– மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம்-என்று அவன் விரும்பாதவற்றை உபேஷித்து-
(ஏறாளும் இறையோனில்-4-8 -ஆத்மாத்மீயங்கள் வைராக்யம்
என்னையும் என் உடைமையையும் சக்கரைப்பொறி ஒற்றிக் கொண்டு-பெரியாழ்வார் –
மாம் மதியஞ்ச அகிலம் – -தேசிகன்-அனைத்தும் சேஷம் -இது இல்லை என்றால் வேண்டாமே ஆழ்வார்
லோக யாத்ரை வைராக்யம் கீழே-ஐஸ்வர்ய கைவல்யம் ஒரு நாயகம் )

7-இரைக்க மடல் எடுத்து –
மாசறு சோதியிலே-5-3- -நாடும் இரைக்கவே–நாம் மடலூர்த்தும் என்று ஜகத் ஷோபம் பிறக்கும் படி மடலூர்வன் என்று
(ஹஸ்திகிரி பிரதிவாதி பயங்கரம் அண்ணா-மா முனிகள் சார்பில் அவர் முன்னிலையில் -வேங்கடேச ஸூப்ரபாதம் – ஸ்தோத்ரம் –
மங்களம் இத்யாதி சமர்ப்பித்து -ஒன்றும் தேவும் பதிக வியாக்யானம் கேட்டு சமஸ்க்ருத பாண்டித்யம் அறிந்து அடி பணிந்தார் –
உபதேசம் கேட்டு பொலிக பொலிக பொலிக மங்களாசானம் -5-2-)

8-கண் புதைக்கப் போக்கற்று-
ஊர் எல்லாம் துஞ்சியிலே -5-4–பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன்னிற்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் -என்றே பிரேம வியாதியும் ,
ராத்ரியாகிற கல்பமும் கிருத சங்கேதிகளாய் சூழப் பொருகையாலே , போக்கடி அற்று –
( கிருஷ்ணை ரஷித்த இருள் அங்கு க்ருஷ்ண த்ருஷ்ண தத்துவத்தை சிஷித்த இருள் இங்கு-
பேர் அமர் காதல் பின்நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல் 5-3-/-4-/-5-மொத்தமான நாயகி –
பின்பு மொத்தமாக தானான தன்மையில் சரணாகதி -நாயகி பாவத்திலும் சரணாகதியும் உண்டே – )

9-உரு நெஞ்சு உள் எழ
எங்கனேயோ அன்னைமீர்காள் -திருவாய்மொழியிலே -5-5– -சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு
என் நெஞ்சுள்ளும் எழும் -என்று தேஜஸ் தரங்கம் மத்யே உன்நேயமான
அப்ராக்ருத விக்ரகம் பிரிதி அப்ரிதி சமமாம் படி உரு வெளிப்பாடே நெஞ்சில் பிரகாசிக்க –

10-கூடு நாள் தேடி
மானேய் நோக்கிலே-5-9- -திரு வல்ல வாழ் உறையும் கோனாரை அடியேன் கூடுவது என்று கொல் ?
என்று அவனை கூடும் நாளை பிரார்த்தித்து -இப்படி பிரார்தியா நிற்கவும் தாழ்ந்து வந்தவாறே –
( அடி பிரஸ்தாபம் ஏழு பாசுரங்கள் இந்த பதிகத்திலும் உண்டே )

11-தாழ்த்ததுக்கு ஊடி
மின்னிடை மடவாரிலே-6-2- -போகு நம்பீ -என்று பிரணய ரோஷத்தால் ஊடி
(தானான தன்மை -ஞானத்தால் சரணாகதியும் பண்ணி -பிரேமத்தால் நாயகி பாவத்தால் தூதும் விட்டு
சற்றே காலம் தாழ்த்து வந்ததால் பிரணாய ரோஷம் )

12-உசாத் துணை அற்று
வெள்ளை சுரி சங்கிலே -7-3–என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரை கொண்டு என் உசாகோ –
என்று அபஹ்ருத சித்தை ஆகையாலே உசாத் துணையும் இன்றி —

13-சூழவும் பகைமுகம் செய்ய
ஏழையர் ஆவியிலே –7-7 –கண்ணன் கோள் இழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றவே –
என்று உரு வெளிப்பாட்டாலே பாதக வர்க்கம் ஒருமுகமாய் நலிய –

14-தடை நில்லாதே –
நங்கள் வரி வளையிலே-8-2- -காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லை-
என்று ஹிதம் சொல்கிற தோழிமார் அன்னைமாரை அதிகிரமித்து –

15-புயக்கற்று
இன் உயிர் சேவலிலே–9-5 -இழை நல்ல வாக்கையும் பெய்யவே புயக்கற்றது –
என்று போலி கண்டு நொந்து முடிகையிலே வ்யவசிதையாய்

16-17- மாலையும் காலையும் பூசல் இடுகிற-
( முழு இரவு வியசனம் ஊரெல்லாம் துஞ்சி–5-4-இப்பொழுது மிகவும் தளர்ந்து அவ்வளவும் தங்க மாட்டாரே )
மல்லிகை கமழ் தென்றலிலே-9-9- -சந்த்யா காலத்தில் கிருஷ்ணனை பசுக்களின்
முற் கொழுந்தில் வரக் காணாமல் பாதக பதார்த்தங்களால் நலிவு பட்டு –
வேய் மரு தோள் இணையிலே-10-3- -பிராத காலத்தில் கிருஷ்ணன் பசு மேய்க்க
போனானாக அதி சங்கை பண்ணி -அவன் முகத்தை பார்த்து -நீ பசு மேய்க்கப் போனால்
நலியக் கடவ பாதக பதார்த்தங்கள் -நலியா நின்றது என்று கூப்பிடுகிற

பதினேழு திரு வாய் மொழிகளிலும் பிராப்யத் த்வரை தோன்றும் என்கை —
இத்தால் தலைமகள் பேச்சான பதினேழு திரு வாய் மொழிகளும்
பிராப்ய த்வரை தசையில் பேச்சு என்னும் இடம் வ்யக்தம் என்ற படி —

திருமங்கை ஆழ்வார் தலைமகள் திருத்தாயார் பதிகங்களும் 27 ஆகும்
மானமரும் மென்னோக்கி பதிகம் தோழிமார் இருவரும் பரஸ்பரம் ஸம்பாஷிக்கும் முகத்தாலே பரத்வ ஸுலப்யங்களை வெளியிட்டு அருளுகிறார் -அது தோழி பதிகம் அன்று –
திருத்தாயார் பதிகங்கள் ஒன்பது -அவை
1-திவளும் வெண் மதி போல்
2-கள்வன் கொல் நான் அறியேன்
3-கவள யானை கொம்பு ஒசித்த
4-வெருவாதாள் வாய் வெறுவி
5-சிலையிலங்கு பொன்னாழி
6-தெள்ளியீர் தேவருக்கும் தேவர்
7-மூவரில் முன் முதல்வன்
8-புள்ளுருவாகி நள்ளிருள் வந்த
9-திருநெடும் தாண்டகத்தில் பட்டுடுக்கும் பதிகம்

தலை மகள் பதிகங்கள் -18
1- திரிபுரம் மூன்று எரித்தானும்
2-தூ விரிய மலர் உழக்கி
3-தந்தை காலில் பெரு விலங்கு
4-கரையெடுத்த சுரி சங்கம்
5-விண்ணவர் தங்கள் பெருமான்
6- தந்தை காலில் விலங்கற
7-பொன்னிவர் மேனி மரகதத்தின்
8-தன்னை நைவிக்கிலென்
9-காவார் மடற் பெண்ணை
10-தவள விளம்பிறை துள்ளு
11-காதில் கடிப்பிட்டு
12-திருத்தாய் செம்போத்தே
13-குன்றம் ஓன்று எடுத்தேந்தி
14-குன்றம் எடுத்து மழை தடுத்து
15-மன்னிலங்கு பாரதத்து
16-சிறிய திருமடல்
17-பெரிய திருமடல்
18- திருநெடும் தாண்டகத்தில் மை வண்ண நறுங்குஞ்சி -பதிகம்
ஆக இரண்டும் சேர்ந்து -அந்யாபதேச பதிகங்கள் 27 ஆயிற்று
இவற்றின் ஸா தர்ம்ய வைதர்ம்யங்களைப் பார்ப்போம் –

திவளும் வெண் மதி போல் பதிகம் கங்குலும் பகலும் போல்
அவருடைய தாய்ப்பேச்சில் அது முடிவு பதிகம்
இவருடைய தாய்ப் பேச்சில் இது உபக்ரமம்
இவள் திறத்து என் செய்கின்றாயே -என்று வினவுதல் அங்கு
நின் தாள் நயந்திருந்த இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று வினவுதல் இங்கு
இவ்வினா பாட்டுத்தோறும் ஒக்கும்

கள்வன் கொல் யான் அறியேன் -உண்ணும் சோறு பருகும் நீர்
தாயை விட்டு மகள் பிரிந்து போதல் இரண்டிலும் உண்டு
திருக்கோளூரை வினவிக்கொண்டு தனியாகப் போனாள் பராங்குச நாயகி
வயலாலி மணவாளன் கொண்டு போகப் போனாள் பரகால நாயகி

கவள யானை கொம்பு ஒசித்த –ஆடியாடி அகம் கரைந்து
இரண்டிலும் இசை பாடிப்பாடி உருகுதல் ஒக்கும்
என் வள்ளலே கண்ணனே என்னும் என்றாள் பராங்குச ஜனனி
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணனே என்கிறாள் பர கால ஜனனி

வெருவாதாள் வாய் வெருவி திருமொழி –பாலனாய் ஏழுலகு திருவாய் மொழியைப் போலவே
என் செய்கேன் என்னுடைப் பேதை என் கோமளம் என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர்–என்றாள் பராங்குச ஜனனி
இதில் -தாய் வாயில் சொற் கேளாள் தன்னாயத் தோள் அணையாள் -என்கிறாள் பர கால ஜனனி

——-

சிலையிலங்கு திருமொழி–கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் திருவாய் மொழியைப் போலவே
அதில் ஈசன் வந்தேறக் கொலோ –பாட்டுத்தோறும்
இங்கு -கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ -பாட்டுத் தோறும்

தெள்ளியீர் தேவர்க்கும் திருமொழியும் கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் திருவாய் மொழியைப் போலவே
அதில் யானே யானே என்று எம்பெருமானுடைய தாதாத்ம்ய அநுஸந்தானம் பண்ணின படியைத் திருத்தாயார் அருளிச் செய்த படியே
இதில் -வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் -என்று தத் தாதாத்ம்ய அநுஸந்தானம் பண்ணின படியைத் திருத் தாயார் அருளிச் செய்கிறாள்

—-

மூவரில் முன் முதல்வன் திரு மொழியும் -மண்ணை இருந்து துழாவி திருவாய் மொழியும்
அதில் பிரான் கிடக்கும் கடல் என்னும்
இதில் முழங்கார் கடலுள் கிடந்தது
அதில் எல்லா வுலகு கண்ணன் படைப்பு என்னும்
இதில் பூவலருமுந்தி தன்னுள் புவனம் படைத்து -என்றும் மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னை –

புள்ளுருவாகி நள்ளிருள் திருவாய் மொழியிலும் -பட்டுடுக்கும் -திரு நெடும் தாண்டக பதிகத்திலும் பராங்குச ஜனனியின் பேச்சுக்களின் பிரபஞ்ச ப்ரணாளிகள் உய்த்து உணரத் தக்கது
திரு விருத்தத்தில் -அருளார் திருச்சக்கரத்தால் -என்னும் தாய்ப் பாசுரத்தில் -ஈங்கோர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ -என்ற வார்த்தையே
புள்ளுருவாகியில் ஒன்பது பழமொழிகளால் விஸ்தரிக்கப்பட்டு அருளிச் செய்கிறார்

பட்டுடுக்கும் பாசுரத்தில்
மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல் என்று பர கால நாயகி -வர்ணிக்கப் படுகிறாள்
நாம ஏகதேச க்ரஹண நியாயத்தாலே மணி வண்டு திருநாமம் ப்ரஸித்தம் ஆகிறது-
பெரிய திருமொழி-அம்பரமும் பெரு நிலமும் என்று தொடங்கும் திருநறையூர் பதிகத்தில் -6-6-
வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு -என்று மணி வண்டானது முந்துற செண்பகப் பூவை அநுபவித்து விட்டுப் பிறகு மகிழ மலரிலேயே படுகாடு கிடப்பதாகச் சொல்லப் படுகிறது
யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதஸ் வகுலா மோத வாஸிதம் –யதிராஜ ஸப்ததி -என்றபடி திருவாய் மொழி அனுபவத்திலேயே ஊன்றி இருப்பதைக் குறித்த படி
இவர் கடைக்குட்டி ஆழ்வாராகையாலே மற்றைய ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் அனுபவங்களில் -செண்பகத்தின் வாஸம் உண்டு -என்று முதலில் குறிப்பிட்டு பின்பு வகுளத்தின் மலர் மேல் வைகு -என்று திருவாய் மொழி அனுபத்திலேயே கால க்ஷேபம் செய்தமையைச் சொன்னவாறு
இங்கு மணி வண்டு -என்று தம்மையே அருளிச் செய்து கொள்கிறார்
இத்தை முன்னமே உணர்ந்து அறிந்த நம்மாழ்வார் திரு விருத்தத்தில்
வண்டுகளோ வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித்து உழல்வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய் மண் துகளாடி வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போல் விண்டுகன் வாரும் மலருளவோ நும்மியல் இடத்தே -என்று
வண்டுகளோ வம்மின் என்று திருமங்கை ஆழ்வாரையே விளித்து
நீர் உகந்து அருளின திருப்பதிகள் தோறும் உழல்கின்றீரே -திருவாய் மொழி போல் பரம போக்யமான பிரபந்தம் கடல் சூழ்ந்த மண்ணுலகம் எங்கேனும் கண்டதுண்டோ -என்ற வினாவுக்கு இவர் விடை இறுத்து அருளுகிறார் —
ஸ்வாமிந் கண்டதில்லை-ஆனது பற்றியே வகுளத்தின் மலர் மேலே தானே வைகிக் கிடக்கிறேன் -என்று
இதுவரை திருத்தாயார் பதிகங்களில் விசேஷப் பொருத்தங்களை அனுபவித்ததோம்

————–

மேல் விசேஷப் பொருத்தங்களைப் பார்ப்போம்

1-தைத்ரிய யஜுர் ப்ராஹ்மண்யத்தில் –கிருத்திகா ப்ரதமம் விசாகே உத்தமம் -என்று இவருடைய திருவவதார திரு நக்ஷத்ரங்களும் விசேஷித்து ஒதப்பட்டுள்ளது
2-பாஹ்ய குத்ருஷ்டிகளின் செருக்கை அடக்கும் திறமையினால் பரகாலன் என்றும் பராங்குசன் என்றும் திரு நாமங்கள்
3-அடியார்களை உகப்பிக்கும் திறமையினால் -இன்ப மாரி
என்றும் அருள் மாரி என்றும் திருநாமங்கள்
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -4-5-10-
அங்கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்ட முக்கி அடையார் சீயம் -3-4-10
ஆனந்த வர்ஷுகர்- -இன்ப மாரி
கருணா வர்ஷுகர்–அருள் மாரி
4-தன்னொப்பார் இல் அப்பன் -6-3-9-என்ற மங்களா ஸாஸனத்துக்கு ஏற்ப-ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா என்னப்பா -8–1-2-என்று அதற்குச் சேமக் காப்பு சாற்றி அருளினார்
5-திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே -என்னும் -4-4-8-என்று பகவத் பக்தர்களான அரசர்களை மதித்து அருளிச் செய்ததை அடியொற்றியே
தென்னன் தொண்டையர் கோன் -மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீண் முடிமாலை வயிர மேகன் -பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய் பல வேந்தர் வணங்கு கழற் பல்லவன்-துளங்கு நீண் முடி அரசர் தங்குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவன் செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில் —
இருக்கிலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வளச் சோழன்
என்று இப்படி பகவத் பக்தரான சில சக்ரவர்திகளைச் சிறப்பித்து அருளிச் செய்கிறார்
6-கண்ணபிரான் திருவாய்ப்படியில்
படலடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் களவு காணப் புகும் இடத்தில்
தன்னிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும் வெண்ணெய் இருக்கும் இடம் தெரியாமல் தடவா நிற்கையில் யாதிருச்சிகமாகக் கையிலே வெண்ணெய்த் தாழி தட்டின உவப்பினாலே பல்லைத் திறந்து சிரிக்க நேரும் -பூர்ண சந்த்ரனுடைய கிரணம் போலே திரு முத்துக்களின் ஒளி புறப்பட -அந்த ஒளியைக் கை விளக்காகக் கொண்டு வெண்ணெயை வாரி விழுங்குவான்
நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆனாயர் தாயவனே –3-8-3-
உறி யார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானே -2-10-6-
7-தீர்ப்பாரை யாமினி -7-6- தேவதாந்தர கட்டுவிச்சி
சிறிய திருமடலிலும் திரு நெடும் தாண்டகத்திலும் -பகவத் ப்ரவணை
8-முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூங்குழல் குறிய கலையோ வரையில்லை நாவோ குழறும் –திருவிருத்தம்
முள் எயிறு ஏந்தில கூழை முடி கொடா தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்
9-பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை போல் இவரும்
நண்ணாத வாள் அவுணரிலும் கண் சோர வெங்குருதியிலும் ததீய மஹாத்ம்யம்
10-ஊரெல்லாம் துஞ்சியிலே தனிமைக்கு வருந்தியது போல் இவரும்
தந்தை காலில் விலங்கற -திருக் கண்ணபுர பதிகத்தில் வருந்துகிறார்

11-ஒரு நாயகம் -பதிகம் ஐஸ்வர்யம் அல்பம் அஸ்திரம்
பாண்டேன் வண்டறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் அந்தோ -6-2-5- சுருக்கமாக அருளிச் செய்கிறார்
12-குரவை ஆய்ச்சியாரோடு -கிருஷ்ணாவதாரம் விரித்த பதிகம் போல் இவரும்
மானமுடைத்து உங்கள் ஆயர் குலம் -திருமொழியில் அருளிச் செய்கிறார்
13-இன்னுயிர் சேவலில் -என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவுகிலீர் -என்று இன்னாப்புடன் அருளிச் செய்தது
இவரும் திருத்தாய் செம்போத்திலே வெறுப்பின்றியே அநு நயமாக அருளிச் செய்கிறார்
14-மின்னிடை மடவார் ஊடல் ரஸம்
காதில் கடிப்பிட்டில் அதே ரஸம்
15-உண்ணிலாய ஐவரில் இந்திரியங்களுக்கு ஆற்ற உண்ணாமல் ஓலமிட்டபடியே திருவுக்கும் திருவாகிய திருமொழி
16-ஆழி எழ -திருவாய் மொழி போல் பல அவதான அனுபவ ரஸம் ஏழை ஏதலனிலும்
17- கடியன் கொடியன் நெடியமால் –ஆகிலும் கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்Kkruthamக்ருத தாஸ்யம் இன்றிக்கே ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யத்தை
வேம்பின் புழு வேம்பு அன்றி யுண்ணாது அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்று நயவேன் -என்று அருளிச் செய்கிறார்
18-சூட்டு நன் மாலைகள் –பாசுரத்தில் -கண்ணன் வெண்ணெய் தொடு உண்பதற்க்காகவே-திருவாய்ப்பாடியில் திருவாவதரித்தான் என்று அருளிச் செய்தது போல்
இவரும்-கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற வானாயன் -என்று அருளிச் செய்கிறார்
19- எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்று ஒருகால் சொல்லித் தரைப்பட்டார்
இவரோ அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டு இருந்தவனே -என்று ஒருகால் சொன்னால் போலே ஒன்பதின் கால் சொல்லித் தரைப்படுகிறார்
20- பக்தாம்ருதம் –நெஞ்சுக்கு இருள் கடி தீபம் -இரண்டு தனியன் களிலும் அமைந்த ஐந்து விசேஷணங்களும் தேனிலும் இனியவை
சீரார் சடகோபன் செந் தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெறவும்
பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த
மறை யாயிரம் அனைத்தும் தங்கு மனம் பெறவும்
இராமானுச முனியை வணங்கி வேண்டுதல் ஒக்கும்

சதுர் முக சமாக்கயாபி சடகோப முனவ் ஸ்திதா -ஸ்வ வாஸா மாத்ரு துஹித்ரு ஸஹி வாஸா ச வர்ணநாத்
தாஸத்வ தேஹத்வ சேஷத்வங்கள் போலவே ஸ்த்ரீத்வமும் ஸ்வா பாவிகமே -இயற்கையே -வந்தேறி அல்ல
பதி பத்நி பாவ சம்பந்தம் -ப்ரணவத்தில் உகாரத்தாலே அவதாரண அர்த்த்தாலே அவனுக்கே ஆட்ப்படும் அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –
கண்டார் இகழ் வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்-போல் இருக்க வேண்டும் அன்றோ
பின்னை கொல் நில மா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள் -6-5-10- தோழி பாசுரம்
பெரிய திருமொழியில்-காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் -திருத்தாயார் பாசுரம்
மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம் –

————————————————————————

மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில்
அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..

ஆக -சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே –
(சிஷை -வேத அங்கங்களில் எழுத்துக்களை உச்சரிக்கும் முறையும்
வியாகாரணத்தாலும் நிருத்தத்தாலும் பதங்களின் அறிவும்
சந்தஸ் -என்னும் வேத அங்கத்தில் காயத்ரி போன்ற சந்தஸ்ஸுக்களின் இலக்கணமும்
ஜ்யோதிஷத்தால் கர்மங்கள் செய்ய வேண்டிய காலமும்
கல்ப சங்கத்தால் கர்ம அனுஷ்டானங்களையும்
தர்க்க சாஸ்திரம் மீமாம்சைகளாலும் தெளிவான பொருள்களும்
புராணங்களாலும் ஸ்ம்ருதிகளாலும் கருத்துக் பொருள்களையும் சொல்லப்படுகின்றன
இந்த வேத அங்கங்களோடே வேதங்கள் தேவரீரைத் தேடுகின்றன -என்றவாறு )
அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே
இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்