மீன், ஆமை, கோலம், நெடு நரசிங்கம், ஆகி;
நிலம் விரகால் அளந்த குறளாய்;
ஆனாது சீறும் மழு, வல் வில்லும், வெல்லும் முனை அலம்,
உற்ற செங் கையவராய்;
வான்நாடர் வந்து தொழ, மண்நாடர் யாவரையும் மடிவிக்க
வந்த வடிவாய்;
நானா விதம் கொள் பரி ஆள் ஆகி நின்று அருளும்
நாராயணாய நமவே!கடவுள் வாழ்த்து
இது-காப்புச்செய்யுள்; இதனால், தாம் எடுத்துக்கொண்ட சருக்கம்
இடையூறில்லாமல் இனிது முடியும்பொருட்டு உயர்ந்தோர் வழக்கத்தின்படியே
கவி கடவுள்வாழ்த்துக் கூறுகிறார். கடவுள் வணக்கம், வழிபடுகடவுள்
வணக்கமென்றும், ஏற்புடைக்கடவுள் வணக்கமென்றும், இரண்டு
வகைப்படும்; இவ்வாழ்த்து தமக்கு வழிபடுகடவுளும், எடுத்துக்கொண்ட
இதிகாசத்துக்கு ஏற்புடைக் கடவுளுமாகிய திருமாலைப் பற்றியதென அறிக.
கண்ணபிரான் இந்நூலுக்கு ஏற்புடைக்கடவுள் என்பது – இந்நூலாசிரியர்
தற்சிறப்புப் பாயிரத்தில் “முன்னுமாமறைமுனிவருந் தேவரும் பிறரும்,
பன்னுமாமொழிப் பாரதப்பெருமையும்பாரேன், மன்னுமாதவன்
சரிதமுமிடையிடை வழங்கு, மென்னுமாசையால் யானுமீதியம்புதற்கிசைந்தேன்”
எனக்கூறியதனாற் பெறப்படும்.
(இதன்பொருள்.)மீன் – மீனும், ஆமை – ஆமையும், கோலம் –
பன்றியும், நெடு – பெரிய, நரசிங்கம் – மனிதவடிவங்கலந்த சிங்கமும், ஆகி –
(என்னும் இவற்றின்) வடிவமாய், நிலம் – உலகத்தை, விரகால் – தந்திரத்தால்,
அளந்த – அளவிட்ட, குறள் ஆய் – குறுகிய வடிவமாய், ஆனாது –
தணிவடையாமல், சீறும் – மேனமேற்கோபிக்கிற, மழு – கோடாலியும்,
வல்வில்லு – வலியவில்லும், வெல்லும் முனை அலம் – பகை வெல்லுதற்குரிய
கூர்நுனியையுடைய கலப்பையும் உற்ற – (என்னும் இவை முறையே)
பொருந்தின, செம் கையவர் ஆய் – சிவந்தகையையுடையமூன்று இராமர்களின்
வடிவமாய், வான்நாடர் வந்து தொழ – விண்ணுலகத்தவரான தேவர்கள் வந்து
வணங்க, மண்நாடர் யாவரையும் – நிலவுலகத்தார் பலரையும், மடிவிக்க –
அழித்தற்கு, வந்த – தோன்றின, வடிவு ஆய் – (கண்ணனது) வடிவமாய்,
நானா விதம் கொள் – பலவகைப்பட்ட நடைவகைகளைக் கொண்ட, பரி –
குதிரைவடிவங் கலந்த, ஆள் ஆகி – மனிதனது வடிவமாய், நின்று –
திருவவதரித்து நின்று, அருளும்- (எல்லாவுயிர்களிடத்துங்) கருணைசெய்யும்,
நாராயணாய – ஸ்ரீமந்நாராயணமூர்த்திக்கு, நம – நமஸ்காரம்; (என்றவாறு).
மத்ஸ்யம்கூர்மம் வராகம் நரசிம்மம் வாமநன் பரசுராமன் தசரதராமன்
பலராமன் கிருஷ்ணன் கல்கி என்ற பத்துத்திருவவதாரங்களை
உரியசமயங்களிற்செய்து நல்லோரைப் பாதுகாத்து அல்லோரையழிக்கிற
திருமாலுக்கே நான் அடிமை, இங்ஙனங்கொடியவரைக்கொன்று
அடியவரையளித்தருளுகிற ஆதிதேவன் விஷயமான வணக்கங் கூறியதனால்,
கவி தானெடுத்துக்கொண்ட காரியம் இடையூறின்றி இனிது முடியுமென்பது
கருத்து. இப்பத்து அவதாரங்களுள் முதல் ஒன்பது அவதாரங்களும்
முன்புநடந்தவையென்பதும், இறுதியவதாரம் இனி நடப்பதென்பதும்
தோன்றும்பொருட்டு, மற்றையவதாரங்களுக்கு ‘ஆகி’, ‘ஆய்’ என இறந்த
காலச்சொற்கொடுத்தவர், கற்கியவதாரத்துக்கு ‘ஆகி நின்றருளும்’ என
எதிர்காலச்சொற்கொடுத்தனரென நுட்பமுணர்க.
1. முன்னொருகாலத்தில் பிரமதேவன் கண்துயில்கையில், சோமக
னென்னும் அசுரன் வேதங்களையெல்லாங் கவர்ந்துகொண்டு கடலினுள்
மறைந்துசெல்ல, பிரமன் முதலிய தேவர்களின் வேண்டுகோளால் திருமால்
ஒருபெருமீனாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப்
பிடித்துக்கொண்டு, அவன் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து,
அன்னவடிவமாய் அவற்றைப் பிரமனுக்கு உபதேசித்தருளினன்.
2. துருவாசமுனிவரதுசாபத்தாற் கடலினுட்புக்கு ஒளித்த
சுவர்க்கலோகத்துச் செல்வங்களையெல்லாம் மீளவும் பெறும் பொருட்டு
இந்திரன் முதலிய தேவர்கள் திருமாலின் நியமனப்படி அசுரர்களுடன்
கூடிச்சென்று மந்தர மலையை மத்தாகநாட்டி வாசுகியென்னும்
பெரும்பாம்பைக்கடை கயிறாகப் பூட்டித் திருப்பாற்கடலைக்
கடைந்தபொழுது, அம்மந்தரகிரிகடலினுள்ளே சென்று அழுந்திவிடாதபடி
எம்பெருமான் மகாகூர்மரூபத்தைத்தரித்து அதற்கு ஆதாரமாக
எழுந்தருளியிருந்தான்.
3. ஒருகாலத்தில் பூமியைப்பாயாகச்சுருட்டி யெடுத்துக் கொண்டு
கடலில் மூழ்கிப்போன இரணியாக்கனைத் திருமால் தேவர்முனிவர்
முதலியோரது வேண்டுகோளால் மகாவராகரூபமாகத் திருவவதரித்துக்
கொன்றுபூமியைக் கோட்டாற் குத்தியெடுத்துக் கொண்டுவந்து பழையபடி
விரித்தருளினன்.
4. தேவர்மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும், ஐம்பெரும்
பூதங்களாலும் ஆயுதங்களாலும் தனக்குமரணமில்லாதபடி அளவற்ற
வரங்களைப்பெற்றுத் தேவர்முதலியயாவர்க்குங் கொடுமையியற்றித்
தன்னையேகடவுளாகவணங்கச்செய்தவனும் இரணியாக்கனது
உடன்பிறந்தவனுமானஇரணியன், தன்புத்திரனும் மகாவிஷ்ணுபக்தனுமான
பிரகலாதாழ்வான்தன்பெயர்சொல்லிக் கல்விகற்காமல் நாராயணநாமஞ்
சொல்லிவரவே,அவனைக் கொல்லுதற்கு என்ன உபாயஞ்செய்தும் அவன்
பகவானருளால்இறந்திலனாக, இரணியன் மகனைநோக்கி ‘நீ சொல்லும்
நாராயணனென்பான்எங்குஉளன்? காட்டாய்’ என்ன, அப்பிள்ளை
“சாணினுமுளனோர்தண்மையணுவினைச் சதகூறிட்ட, கோணினுமுளன்
மாமேருக்குன்றினுமுளன்,இந்நின்ற, தூணினுமுளன் நீசொன்ன
சொல்லினுமுளன், இத்தன்மைகாணுதிவிரைவின்” என்று சொல்ல, உடனே
இரணியன் நன்றென்று சினந்து’இங்கு உளனோ?’ என்றுசொல்லி
எதிரிலிருந்ததொரு தூணைப்புடைக்க,அதனினின்றும் பகவான்,
அப்பொழுதே, மனிதரூபமுஞ் சிங்கவடிவமுங்கலந்தநரசிங்கமூர்த்தியாய்த்
தோன்றித் திருக்கைந்நகங்களால் அவன் மார்பைப்பிளந்து அழித்திட்டனன்.
5. மகாபலியென்னும் அசுரராசன் தன்வல்லமையால் இந்திரன்
முதலியயாவரையுஞ்சயித்து மூவுலகங்களையுந் தன்வசப்படுத்தி அரசாண்டு
செருக்குக்கொண்டிருந்தபொழுது, அரசிழந்த தேவர்கள் திருமாலைச்
சரணமடைந்துவேண்ட, அப்பெருமான் குள்ளவடிவமான
வாமனாவதாரமெடுத்துக் காசியபமுனிவனுக்கு அதிதி தேவியினிடந்
தோன்றின பிராமணப் பிரமசாரியாகி,வேள்வியியற்றி யாவர்க்கும்வேண்டிய
அனைத்தையுங் கொடுத்துவந்த அந்தப்பலியினிடஞ்சென்று, தவஞ்செய்தற்குத்
தன் காலடியால் மூவடிமண் வேண்டிஅதுகொடுத்தற்கிசைந்து
அவன்தத்தஞ்செய்த நீரைக் கையிலேற்று, உடனேதிரிவிக்கிரமனாக
ஆகாயத்தை அளாவிவளர்ந்து ஓரடியால் மண்ணையும்ஓரடியால்
விண்ணையும் அளந்து மற்றோ ரடியால் அவனையும்பாதாளத்திலழுத்தி
அடக்கினன்.
6. உலகத்திலே எவரும் அழிப்பவரில்லாமையால் கொழுத்துத்
திரிந்துகொடுமையியற்றிவந்த க்ஷத்திரிய வம்சங்கள் பலவற்றை நாசஞ் செய்யும்
பொருட்டு நாராயணமூர்த்தி ஜமதக்நிமுனிவனது மனைவியான
ரேணுகையினிடம் ராமனாய்த் திருவவதரித்து, பரசு என்னுங்
கோடாலிப்படையையே ஆயுதமாகக்கொண்டு, தனது தந்தையின்
ஓமதேனுவைக்கவர்ந்து அவனைக் கொன்றிட்டதுகாரணமாகக் கார்த்த
வீரியார்ச்சுனனையும் அவனது குமாரர்களையுங் கொன்று அழித்து,
அதனாலேயே க்ஷத்திரியவமிசம் முழுவதன் மேலுங் கோபா வேசங்கொண்டு,
உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத் தொருதலைமுறை பொருது
ஒழித்திட்டான்.
7. ஒருகாலத்தில் தேவர்களெல்லாரும் இராவணன் முதலிய
ராக்ஷசர்களின் உபத்திரவம் பொறுக்கமாட்டாமல் ஸ்ரீமகாவிஷ்ணு
வைச்சரணமடைந்துவேண்ட அப்பிரான் தசரதசக்கரவர்த்தி
குமாரனாய்ஸ்ரீராமனாகத் திருவவதரித்து அரக்கர்கள் அனைவரையும்
அழித்துநல்லோரைக்காத்தருளினன்.
8. 9.துஷ்ட அசுரர்கள்பலரும் கெட்ட அரசர்கள் பலரும் ஒருங்கே
கூடிவசிப்பதனாலுண்டான பூமிபாரத்தை நிவிருத்தி செய்யும்பொருட்டு
அப்பூமிதேவியின் பிரார்த்தனையின்படி தேவர்கள் வேண்டியதனால் திருமால்
வசுதேவகுமாரராய்ப் பலராமகிருஷ்ணர்களாகத் திருவவதரித்தான்.
10. கலியுகத்தின் இறுதியில் முழுவதும் அழிகிற தருமத்தை
நிலைநிறுத்தும் பொருட்டுத் திருமால் சம்பளமென்னுங்கிராமத்தில் ஓரந்தணன்
மகனாய்க் குதிரைவடிவங்கலந்த மனிதவடிவமாய்த் தோன்றி வேதவடிவமான
குதிரையின் மேலேறிக் கையில்வாட்கொண்டு கொடுங்கோல்
மன்னரனைவரையுங் கொன்று தருமத்தை நிலைநிறுத்துவன்.
இரணியன்வரம்பெற்றிருந்ததற்குஏற்ப அவனைக்கொல்லுதற்கு மாயவன்
மனிதத்தன்மையும் விலங்கின்தன்மையுங் கலந்ததொரு வடிவத்தை
எடுத்தருளினான், ‘நெடுநரசிங்கம்’ என்றது, அவ்வடிவத்தின் அளவிறந்த
வளர்ச்சியைக் கருதி. பரசுராமன் க்ஷத்திரிய வம்சத்தின் மேற்கொண்ட
தீராக்கோபத்தை, அவன் பகையழிக்கும் போர்க்கருவியான கோடாலியின்
மேல்ஏற்றி ‘ஆனாதுசீறுமழு’ என்றார். திருமாலுக்கு மற்றும்பற்பல
அவதாரங்கள்நூல்களிற் கூறப்படினும் இப்பத்தும் முக்கியாவதாரங்களாமென
உணர்க.
குதிரைக்குப்பலவகைநடைமல்லகதி, மயூரகதி, வியாக்கிரகதி, வாநரகதி
விருஷபகதி முதலியன. திர்யக்சாதியிற்சேர்ந்த நான்கு அவதாரங்களையும்
ஒன்றாகவும், தேவசாதியிற்சேர்ந்த அவதாரத்தை ஒன்றாகவும்,
மனுஷ்யசாதியிற்சேர்ந்து ஒவ்வொரு ஆயுதத்தைத் தமக்கு நிரூபகமாகக்கொண்டு
ஒரேபெயர்பெற்ற மூன்று அவதாரங்களை ஒன்றாகவும், பாரத
கதாபுருஷர்களுள் தலைமைபூண்டு அக்காலத்தில் பூமிபாரநிவிருத்தி செய்து
கொண்டு நின்ற பிரதான அவதாரத்தை ஒன்றாகவும், இனி நடக்கவிருக்கும்
அவதாரத்தை ஒன்றாகவும் பிரித்துக் காட்டுபவராய், ஆங்காங்கு ‘ஆகி’,
‘ஆய்’என்ற சொற் கொடுத்தார். நாராயணனென்ற திருநாமம் – நாரஅயந
எனப்பிரிந்து, சிருஷ்டிப்பொருள்களுக்கெல்லாம் இருப்பிடமானவ னென்றும்,
பிரளயப் பெருங்கடலை இருப்பிடமாக வுடையவனென்றும் மற்றும்பலவாறும்
பொருள்படும்.
இப்பாட்டு- மொழிமாற்று முதலியன இன்மையால், யாற்று
நீர்ப்பொருள்கோள். குறள் – குறுகிய வடிவம்: இரண்டடியளவுள்ள வடிவம்
குறளெனப்படும். வில்லு, உ – சாரியை. இராமன்வில் – கோதண்டமெனப்
பெயர் பெறும். நாராயணாய – வடமொழியில் நான்காம் வேற்றுமைவிரி.
இதுமுதற்பத்துக் கவிகள் – பெரும்பாலும் முதலைந்துசீரும்
காய்ச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள்.
சிதையத் தன் மைந்தனை அடும் தன்மை கண்டும்,
ஒரு செயல் இன்றி, நீடு துயர் கூர்
இதையத்தன் ஆகி, அகல் பகலோன், மறித்து,
அவுணர் எதிர் அஞ்சுமாறு பொருதான்-
உதையத் தடங் கிரியும் ஒளிர் பற்பராக கிரி ஒப்பாக, வீசு கதிரின்
புதையப் பரந்த அகல் இருளும் துரந்து, உரகர் புவனத்தினூடு புகவே2.-சூரியோதயவருணனை.
தன் மைந்தனை – தனது குமாரனான கர்ணனை, சிதைய –
அழியும்படி, அடும் – (அருச்சுனன்) கொன்ற, தன்மை – தன்மையை, கண்டும்
– பார்த்தும், ஒரு செயல் இன்றி – (அதற்குப் பரிகாரமாகத் தான்
செய்யத்தக்க)ஒரு செயல் இல்லாமல், நீடு துயர் கூர் – பெருந்துன்பம் மிக்க,
இதயத்தன்ஆகி – மனத்தையுடையவனாய், அகல்-நீங்கிச்சென்ற, பகலோன்-
சூரியன், வீசுகதிரின்-வெளிவீசுகிற (தனது) கிரணங்களால்,-தடஉதயம்
கிரியும் – பெரியஉதயபருவதமும், ஒளிர் பற்பராக கிரி ஒப்பு ஆக –
விளங்குகிறபதுமராகரத்தினமயமான தொருமலைபோலாகவும்,-புதைய பரந்த
அகல்இருளும் – (நிலவுலகம்) மறையும்படி பரவிய மிக்க இருட்டும், துரந்து-
துரத்தப்பட்டு, உரகர் புவனத்தினூடுபுக – நாக சாதியாரது
பாதாளலோகத்தினுட்செல்லவும்,-மறித்து – மீண்டுவந்து, – அவுணர் எதிர்
அஞ்சும் ஆறுபொருதான் – அசுரர்களெதிரிலே (அவர்கள்) அஞ்சும்படி
போர்செய்தான்; (எ- று.)
பதினேழாநாட்போரில்தன்மகனை அர்ச்சுனன் கொன்றதைத்தான்
பிரதியக்ஷமாகப்பார்த்திருந்தும் அதற்கு யாதொன்றும் எதிர்
செய்யும்விதமில்லாமல் புத்திரசோகத்தோடு மறைந்துசென்ற சூரியன்,
மறுநாளுதயத்தில், மிக்கவிளக்கத்தோடுகூடி, தனக்குத் தொன்றுதொட்டுப்
பகையாகவுள்ள இருளைத்தனதுஒளியால் அழித்துக்கொண்டும்,
என்றுந்தீராப்பகைவரான மந்தேகரென்னும் அசுரரை அஞ்சுவித்து
எதிர்த்துக்கொண்டும்வந்து சேர்ந்தனன் என்பதாம். “வினைவலியுந்
தன்வலியும் மாற்றான்வலியும், துணைவலியுந்தூக்கிச் செயல்” என்றபடி
தன்வலிமையையும் எதிரிகள் வலிமையையுஞ் சீர்தூக்கிப்பார்த்து, எதிரிகளின்
வலிமை மிக்கிருந்ததாயின் தான் அடங்கியொழிதலும், தன்வலிமை
மிக்கிருந்ததாயின் மிக்க ஊக்கத்தோடு எதிர்த்துச்சென்று பொருது
பகைவெல்லுதலும் ஆகிய இராசதருமத்தைச் சூரியன்மேலேற்றிக்
கூறினரென்க. மந்தேகாருணமென்னுந் தீவில்வாழும் அரக்கர்கள்
உக்கிரமானதவத்தைச்செய்துபிரமனிடத்துவரம்பெற்று அதனாற் செருக்கி
எப்பொழுதுஞ்சூரியனைவளைந்துஎதிர்த்துத் தடுத்துப் போர் செய்கின்றன
ரென்றும், அந்தணர்கள்சந்தியாகாலங்களில் மந்திர பூர்வமாகக்
கையிலெடுத்துவிடும்அர்க்கியதீர்த்தங்கள் வச்சிராயுதம் போலாகி
அவர்கள்மேல் விழுந்துஅவர்களை அப்பால்தள்ளிச் சூரியனது
சஞ்சாரத்துக்குத் தடையில்லாதபடிசெய்கின்றனவென்றும், அப்படி
அந்தணர்கள் செலுத்தும் அர்க்கியத்தின்ஆற்றலால் சூரியமண்டலத்தின்
இடையேஒரு செந்தீ எழுந்து சொலிக்கஅத்தீயில் அவ்வசுரர்கள் விழுந்து
ஒழிகின்றன ரென்றும் நூல்கள் கூறும். ‘அவுணரெதி ரஞ்சுமாறு பொருதான்’
என்றது, அந்தணர்கள் அர்க்கியப்பிரதாநஞ்செய்ய அதன்வல்லமையால்
தன்னிடத்து எழுந்து விளங்கும்பெரியசுவாலையைக் கண்டு அசுரர்கள்
அஞ்சத் தோன்றின னென்றவாறு. தனது மிகச் சிவந்த கிரணங்கள்
மிகுதியாக அடுத்துப் பரவுதலால்உதயபருவதம் மிகச்செந்நிறமடைந்து
சிவந்தபதுமராகரத்தின மலைபோலாகவென்பது, மூன்றாமடியின் கருத்து.
பதுமராகமென்றஇரத்தினப்பெயர் – செந்தாமரை போலுஞ்
செந்நிறமுடையதெனக் காரணப்பொருள்படும். துரந்து –
செயப்பாட்டுவினைப்பொருளில் வந்த செய்வினை.
கண் துஞ்சல் இன்றி, இரவு இரு கண் இலான் மதலை கண்ணீரில்
மூழ்கி, ‘எவரைக்
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது’ என்று உயர் சகுனியோடும்
எண்ணி, இருள் போய்,
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு,
ஞிமிறும்
வண்டும் சுரும்பும் அரவிந்தத் தடத்து வர, வருவோனை வந்தனை
செய்தான்.3.-துரியோதனன் இரவிலே ஆலோசித்தமையும்உதயத்தில்
சூரியனைத்தொழலும்.
இரு கண் இலான் மதலை – இரண்டுகண்களுமில்லாத
(பிறவிக்குருடனான) திருதராட்டிரனது புத்திரனாகிய துரியோதனன்,-கண்
நீரில்மூழ்கி – (தனதுபிராணசிநேகிதனான கர்ணன் இறந்ததனாலாகிய
சோகத்தாற்)கண்ணீர்வெள்ளத்திலே முழுகி, இரவு – இராத்திரி முழுவதும்,
கண் துஞ்சல்இன்றி – கண்மூடித்தூங்குதலில்லாமல், உயர் சகுனியோடும் –
(சதியாலோசனையிற்) சிறந்தசகுனியுடனே, இங்கு – இப்போது,எவரைக்
கொண்டு-, எடுத்தவினை – (பகைவரையொழிக்கவேணும் என்று)
மேற்கொண்ட செயலை, முடிப்பது – நிறைவேற்றுவது, என்று எண்ணி –
என்றுஆலோசித்து,-(பின்பு), இருள் போய் – இருட்டு நீங்க,- ஞிமிறுஉம்
வண்டு உம்சுரும்புஉம் – பலசாதிவண்டுகளும், உண்டும் சுகித்தும் மலர் –
(தாம்தேனைக்)குடித்தும் இனிமையாகத்தங்கியும் மகிழ்தற்கிடமான, மது
ஒன்று -தேன்பொருந்தின, சாதிமுதல் ஒள் போது – ஜாஜீமுதலிய
சிறந்தமலர்களை,விட்டு – நீங்கி, அரவிந்தம் தடத்துவர – தாமரைத்
தடாகங்களிலேவந்துசேரும்படி, வருவோனை – உதிப்பவனான சூரியனை,
வந்தனைசெய்தான்- நமஸ்கரித்தான்; (எ – று.)
கீழ்ச்சருக்கத்தின்முடிவில் “பைவரு மாசுணத் துவசப் பார்த்திவனைக்
கொண்டே தம்பாடி புக்கார், தைவருதிண்சிலைத்தடக்கைச் சகுனிதனை
முதலான தரணிபாலர்” என்று கூறினவர் அவ்விரவு முழுவதும்
வருத்தத்தாலும்கவலையாலுந் தூங்காமல் துரியோதனன் சகுனியோடு
ஆரைச் சேனாபதியாகக்கொண்டுபகை வெல்லும்செயலை முடிப்பதென்று
ஆலோசனைசெய்திருந்துஇரவு கழியுமளவில் சூரியனுதிக்கக்கண்டு
வணங்கினமையை இதிற்கூறினார்.ஒருவர் செல்வமுடையராயிருந்த காலத்தில்
அவரிடஞ்சேர்ந்து அவரன்னத்தையுண்டு அவர்பக்கல் இனிது வாழ்ந்திருந்து
அவர்க்குச்செல்வக்குறைவுவந்தஅளவிலே நன்றியறிவின்றி அவரைக்
கைவிட்டு வேறு செல்வமுடையாரைத் தேடிச்செல்லும் குணக்கேடர்போல,
இரவில் ஜாதிமுதலிய சினைப்பூக்கள் தேனோடுகூடிச்செழித்திருக்கையில்
அவற்றைச்சார்ந்து தேனுண்டு அங்குத்தங்கிக் கூடிக்குலாவி
இன்புற்றவண்டினம்சூரியோதயத்தில் அம்மலர்கள் பொலிவிழந்த வளவிலே
அவற்றைவிட்டுஅக்காலத்துமலர்கிற தாமரையைநாடி விரைந்துசேரும்படி
வருபவன்சூரியனென்க. என்றது, தாமரைமலரச் சூரியன் உதித்தான்
என்றவாறு.”நிறைந்தோர்த் தேருநெஞ்சமொடு குறைந்தோர்ப், பயனின்
மையிற் பற்றுவிட்டொரூஉம், நயனின் மாக்கள் போல வண்டினம், சுனைப்பூ
நீத்துச் சினைப்பூப்படர” என்று அகநானூற்றில் சூரியாஸ்தமனத்தை
வருணித்தது இங்குஒப்புநோக்கத்தக்கது.
உண்ணல்- பொதுவினை. ஞிமிறு – மிஞிறு என்பது எழுத்து நிலை
மாறியது. ஞிமிறு முதலியன – வண்டின் சாதிபேதம். ஞிமிறு –
பொன்வண்டு. வண்டு – கருவண்டு. சுரும்பு – பொறிவண்டு. மலர் போது-
வினைத்தொகை, இடப்பெயர் கொண்டது. இரண்டாம் அடியில் ‘கொண்டுஞ்
செகுத்து முனை’ என்றும் பாடம்.
தொல் ஆண்மை எந்தை முது தந்தைக்கும், மைந்து உறு
துரோணற்கும், மண்ணில் நிகர் வேறு
இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும், உடன்
எண்ணத் தகும் திறலினான்;
வில் ஆண்மையாலும், வடி வாள் ஆண்மையாலும், அயில் வேல்
ஆண்மையாலும், அவனே
அல்லாது, வேறு சிலர் இலர் என்று, சல்லியனை அதி
ஆதரத்தொடு அழையா,4.-இதுமுதல் மூன்றுகவிகள் -குளகம். துரியோதனன்
சல்லியனைச் சேனாபதியாக்குதல் கூறும்.
தொல் – பழமையான, ஆண்மை – பராக்கிரமத்தையுடைய,
எந்தை முது தந்தைக்கும் – எனது தந்தையின் பெரிய தந்தையான
வீடுமனுக்கும், மைந்து உறு – வலிமை மிக்க, துரோணற்கும் –
துரோணனுக்கும், மண்ணில் வேறு நிகர் இல்லாத – (தனக்குத் தானேயன்றி)
உலகத்தில் வேறு உவமைபெறாத, வண்மை – ஈகைக்குணத்தை, புனை –
அழகிதாகக்கொண்ட, வெயிலோன் மகற்கும் – சூரியனது குமாரனான
கர்ணனுக்கும், வில் ஆண்மையாலும் – வில்லின் திறமையாலும், வடிவாள்
ஆண்மையாலும்-கூரிய வாளாயுத்தின்திறமையாலும், அயில் வேல்
ஆண்மையாலும் -கூரிய வேலாயுதத்தின் திறமையாலும், உடன் எண்ணத்தகும் –
சமமாக மதிக்கத்தக்க, திறலினான்-வல்லமையையுடையவன், அவனே
அல்லாது- சல்லியனேயல்லாமல், வேறு சிலர் இலர் – வேறு
ஒருவருமில்லை, என்று-என்று எண்ணி [அல்லது என்று சொல்லி],
சல்லியனை – அந்தச்சல்லியனை,அதி ஆதரத்தொடு – மிக்க அன்புடனே,
அழையா – அழைத்து,- (எ – று.)-இக்கவியில் ‘அழையா’ என்றது,
அடுத்தகவியில் ‘புகழா’ என்றதைக்கொள்ளும்.
கீழ்ச்சேனைத்தலைவர்களாயிருந்த வீடுமன் துரோணன் கர்ணன்
என்னும் இவர்க்குப் பலபடியாலும் சமமாகஉடன்வைத்து எண்ணத்
தக்கவன் சல்லியனையன்றி வேறு யாருமில்லை யென்று நிச்சயித்துத்
துரியோதனன் அவனை அருகில் வரவழைத்தன னென்பதாம். திருதராட்டிரன்
பாண்டு இவர்களது தந்தையான விசித்திரவீரியனுக்குத் தமையனாதலால்,
வீடுமன், கௌரவபாண்டவர்க்குப் பெரியபாட்டனாவன்.
ஆண்மை-பௌருஷம். வெயிலோன் – உஷ்ணகிரணமுடையவன்.
வடித்தல்-கூராக்கப்படுதல் செய்யுளாதலின், ‘அவன்’ என்ற சுட்டுப்பெயர்
முன்வந்தது; [நன் – பொது – 43.]
நீயே எனக்கு உயிரும்; நீயே எனக்கு உளமும்; நீயே எனக்கு நிதியும்;
நீயே துணைப் புயமும்; நீயே விழித் துணையும்; நீயே
அனைத்து நிலையும்;
நீயே முனைச் செருவில் அதிரதரின் மாரதரின் நிகர் அற்ற கோவும்;
அதனால்,
நீயே முடித்தி எனது எண்ணத்தை’ என்று உவகை நிகழா,
வியந்து புகழா,
நீயே -, எனக்கு-, உயிரும்-; நீயே,-எனக்கு-, உளமும் –
மனமும்: நீயே-, எனக்கு-, நிதியும் – பொருட்குவியலும்: நீயே-,
துணைபுயமும்-(எனக்கு) இரண்டுதோள்களும்: நீயே-, விழி துணையும்
(எனக்கு)இரண்டுகண்களும்:நீயே- அனைத்து நிலையும் (எனக்கு)
எல்லாவலிமைகளும்; நீயே-, செரு முனையில் – போர்க்களத்தில்,
அதிரதரில்மாரதரில் நிகர் அற்ற – அதிரதர்களுள்ளும் மகாரதர்களுள்ளும்
ஒப்பில்லாத,கோவும் – அரசனும் ஆகிறாய்; அதனால் – ஆதலால், நீயே -,
எனதுஎண்ணத்தை (பகையழித்தலாகிய) என்கருத்தை, முடித்தி-
நிறைவேற்றுவாய்,என்று-, உவகை நிகழா வியந்து புகழா-உற்சாகம்
பொருந்திவியப்புக்கொண்டுதுதித்து-(எ – று.) -இப்பாட்டில் ‘புகழா’ என்றது.
அடுத்த பாட்டில்’உகந்தனன்’ என வரும் வினைமுற்றோடு முடியும்.
எனக்குஉயிர்போல இன்றியமையாதவனும், மனம்போலச் சிறந்த
அகத்துறுப்பாகுபவனும், பொருட்குவியல்போலப் பலவகை
நன்மைகளையுந்தருபவனும், தோள்போல உற்றவிடத்து உதவும் நற்றுணையும்,
கண்போலச் சிறந்த புறத்துறுப்பாகுபவனும், எல்லா வகைவலிமைகளுக்குங்
காரணமாகுபவனும், சமரதனாயிருப்பினும் போர்த்திறத்தில்
அதிரதமகாரதர்களினும் மேம்பட்டவனும் நீயேயாதலால், இனி நீ
சேனைத்தலைவனாயிருந்து என் கருத்தை முடிப்பாயென்று தனது உவகையும்
வியப்புந்தோன்றத் துரியோதனன் சல்லியனைப் புகழ்ந்தன னென்பதாம்.
அதிரதர்,மகாரதர், சமரதர், அர்த்தரதர் எனத் தேர்வீரர்
நால்வகைப்படுவர், அதிரதர்முழுத்தேரரசர்; அவராவார் – ஒருதேரில் ஏறி
நின்று தம் தேர் சாரதிகளுக்கு அழிவுவாராமற்காத்துப் பலவாயிரந்தேர்
வீரரோடுஎதிர்த்து வேறுதுணையில்லாமலே போர்செய்து வெல்லும் வல்லமை
யுடையார்.அவரிற் சிறிது தாழ்ந்தவர் – மகாரதர்; இவர் பதினோராயிரந் தேர்
வீரரோடுபொருபவர். சமரதர்-ஒரு தேர்வீரனோடு தாமும் ஒருவராய்
எதிர்க்கவல்லவர். அர்த்தரதர் – அவ்வாறு எதிர்க்குமளவில் தம் தேர்
முதலியவற்றை இழந்து போம்படியானவர்;இவர் இருவர் சேர்ந்தால்,
ஒருசமரதனுக்கு ஒப்பாவர்.
மன் பட்டவர்த்தனரும் மணி மகுடவர்த்தனரும் முறையால் வணங்க,
ஒளி கால் நல் பட்டமும் தனது கையால் அணிந்து, ‘படை நாலுக்கும்
நாயகம்’ எனா,
மின் பட்ட ஓடை நுதல் இபராசன் வன் பிடரின்-மிசை வைத்து,
உகந்தனன்அரோ; என் பட்டது
அப்பொழுது குரு சேனை, மெய்ப் புளகம் எழ, ஒண் கண் முத்தம்
எழவே!
மன் – பெரிய, பட்டவர்த்தனரும் – பட்டந்தரித்து
அரசாளும்அரசர்களும், மணி மகுடவர்த்தனரும் – அழகிய கிரீடந்தரித்து
அரசாளும்அரசர்களும், முறையால் வணங்க – முறைப்படி வணங்கும்படி,
படைநாலுக்கும் நாயகம் எனா-நால்வகைச் சேனைக்கும் (இவனே)
தலைமைபூண்பவனென்று சொல்லி, ஒளி கால் நல் பட்டமும் தனது கையால்
அணிந்து – ஒளியை வீசுகிற அழகிய (சேனாபதிக்கு உரிய)
பொற்பட்டத்தையும்தனதுகையால் (அவனது நெற்றியிலே) கட்டி, மின் பட்ட
ஓடை நுதல் இபராசன் வல் பிடரின் மிசை வைத்து-மின்னல் போன்ற
ஒளிபொருந்தியபொற்பட்டத்தையணிந்த நெற்றியையுடைய சிறந்த
பட்டத்துயானையின்வலியபிடரியிலே (சல்லியனையேறி) வீற்றிருக்கச்செய்து,
உகந்தனன் -(துரியோதனன்)மகிழ்ச்சிகொண்டான்; அப்பொழுது-,
குருசேனை-கௌரவசேனை, மெய் புளகம் எழ – உடம்பில் மயிர்ச்சிலிர்ப்பு
உண்டாகவும்,ஒள்கண் முத்தம் எழ – விளங்குகிற (தமது) கண்களில்
ஆனந்தக்கண்ணீர்தோன்றவும், என் பட்டது – என்னமகிழ்ச்சி யடைந்தது!
[மிக மகிழ்ந்ததென்றபடி;] (எ – று.)-அரோ – ஈற்றசை.
இனிஎல்லாவீரரும் சல்லியனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி
துரியோதனன் அவனைச் சேனைத்தலைவனென்று சொல்லிப் பட்டங்கட்டிப்
பட்டத்து யானையின்மே லேற்றி மகிழ, அவனது சேனையிலுள்ளார் யாவரும்
மிகவும் மகிழ்ச்சிகொண்டன ரென்பதாம். பட்டவர்த்தனர் – கிரீடமில்லாமல்
நெற்றிப்பட்டம் மாத்திரந்தரித்து அரசாளுபவர். மகுடவர்த்தனர் –
கிரீடந்தரித்து அரசாளுபவர். படைநால் – யானை தேர் குதிரை
காலாளென்னுஞ் சதுரங்கம். சிறந்ததை அரசனென்றல் மரபாதலின்,
‘இபராசன்’என்றார்; உயர்திணை யாண்பாலாற் கூறியதும் சிறப்பையே
காட்டும். குருஎன்பவன் – சந்திர குலத்திற் பிரசித்திபெற்ற ஓர் அரசன்;
அவனால் அக்குலம்குருகுலமென்றும், அந்நாடு குருநாடென்றும்,
அக்குலத்தவர் கௌரவரென்றும்பெயர்பெறுதல் காண்க. இங்கே,
அக்குலத்தாரான கௌரவரது சேனை,குருசேனை யெனப்பட்டது.
பாண்டவரும் குருகுலத்தாராயினும், குருநாட்டின்அரசுரிமை
பெற்றுள்ளவன்துரியோதனனாதலால், குருசேனை யென்றது அவன்
சேனையேயாம். நாயகம் – நடுநாயகமணிபோலச் சிறந்தவ
னென்றவாறுமாம்.
ஓடை -யானையின் நெற்றிப்பட்டம்: முகபடாம், சூழியெனப்படும்.
முத்தம் – முத்துப்போன்ற நீர்த்துளிக்கு உவமவாகுபெயர்.
சேனாபதிக்கு வரிசைகள் யாவும் நல்கி, உயர் தெய்வீகமான புனலில்
தூ நானம் ஆடி, மறைவாணர்க்கு அநேக வித தானம் சொரிந்து, துகிலும்
தேன் ஆர் அலங்கல் பல கலனோடு அணிந்து, பொரு தேரில்
புகுந்தனன்-வழா
வான் ஆளும் நாதன் அதிர் முகிலில் புகுந்தது என, வன்போடு
மன்னர் தொழவே.7.- துரியோதனன் காலைக்கடன்முடித்துத் தேரேறுதல்.
சேனாபதிக்கு – சேனைத்தலைவனான சல்லியனுக்கு,
வரிசைகள் யாவும் நல்கி – உரியசிறப்புக்களையெல்லாங் கொடுத்து,- உயர்
தெய்வீகம் ஆன புனலில் – சிறந்த தெய்வத்தன்மையுடையதான புண்ணிய
தீர்த்தத்தில், தூ நானம் ஆடி – பரிசுத்தமான ஸ்நானஞ்செய்து,- மறை
வாணர்க்கு – அந்தணர்களுக்கு, அநேகவித தானம் சொரிந்து –
பலவகைப்பட்ட தானங்களை மிகுதியாகக் கொடுத்து,- துகிலும் –
ஆடைகளையும், தேன் ஆர் அலங்கல்-தேன் நிறைந்த பூமாலையையும்,
பலகலனோடு – பல ஆபரணங்களுடனே, அணிந்து – தரித்து,- வழா வான்
ஆளுநாதன் – தவறாமல் தேவலோகத்தை அரசாளுகிற தலைவனான
இந்திரன்,அதிர் முகிலில் புகுந்தது என – இடிமுழங்குகிற (தனது வாகனமான)
மேகத்தில்ஏறியமைபோல, வன்போடு மன்னர் தொழ-வலிமையோடு
அரசர்கள் வணங்க,பொரு தேரில் புகுந்தனன் – போர்செய்தற்குஉரிய
தேரின் மீது ஏறினான்; (எ- று.)
செல்வச்சிறப்புமிக்குப்பலவகையின்பம் நுகர்கின்ற துரியோதனனுக்குத்
தேவேந்திரனும், அவன் ஏறிய ஆரவாரத்தோடு விரைந்து செல்லுந் தேருக்கு
இந்திரனுக்கு வாகனமான மேகமும் உவமை; உவமையணி, புனலுக்குத்
தெய்வத்தன்மை – தன்னில்மூழ்கினாரது தீவினையை யொழித்தல். வரிசைகள்
– பிருது குடை கொடி சாமரம் மோதிரம் முதலியன.
கிருபாரியன், கடவுள் மருகன், திகத்த பதி, சாலுவன், கிருதன், முதலோர்
இரு பாலும் மன்னர் வர, முனிவு ஆர் பெருஞ் சேனை எங்கணும்
சூழ வரவே,
நிருபாதிபன் தனது சேனாதிபன்தனொடு நீள் களம் புக்கனன்-‘அரும்
பொரு பாரதச் சமரம் இன்றே முடிப்பல்!’ எனும் எண்ணத்தினோடு
பொரவே.8.-துரியோதனன் சல்லியனுடன்போர்க்களஞ் சேர்தல்.
கிருபாரியன் – கிருபாசாரியனும், கடவுள் மருகன் –
தெய்வத்தன்மையுள்ள (அவனது) மருமகனான அசுவத்தாமாவும், திகத்தபதி-
திரிகர்த்த தேசத்தரசனான சுசர்மாவும், சாலுவன் – சாலுவதேசத்தரசனும்,
கிருதன் – கிருதவர்மாவும், முதலோர் – முதலியவர்களாகிய, மன்னர் –
அரசர்கள், இருபாலும் – (தனது) இரண்டுபக்கங்களிலும், வர – வரவும்,-
முனிவுஆர் பெரு சேனை – கோபம்மிக்க பெரியசேனைகள், எங்கணும் சூழ
வரவே-எவ்விடத்துஞ் சூழ்ந்துவரவும்,-நிருப அதிபன் – அரசர்களுக்கு
அரசனானதுரியோதனன், தனது சேனாதிபன்தனொடு – தனது
சேனைத்தலைவனானசல்லியனுடனே, அரு பொரு பாரதம் சமரம் இன்றே
முடிப்பல் எனும்எண்ணத்தினோடு – அருமையாகக் கைகலந்துசெய்யும் பாரத
யுத்தத்தைஇன்றைக்கே முடிக்கக்கடவேனென்னும் எண்ணத்தோடு, பொர –
போர் செய்யும்பொருட்டு, நீள் களம் புக்கனன் – பெரிய (குரு
க்ஷேத்திரமாகிய)போர்க்களத்தை யடைந்தான்; (எ – று.)
சிவாநுக்கிரகத்தாற் பிறந்தவனாதலால், ‘கடவுள்மருகன்’ எனப்பட்டான்.
கிருதவர்மா என்ற பெயர் கிருதனென விகாரப்பட்டு நின்றது; வடமொழியில்
‘நாமைகதேசே நாமக்ரஹணம்’ எனப்படும். இவன் – துரியோதனன்
கண்ணனைப் படைத்துணையழைக்கப்போனபொழுது அவ்வெம்பிரானால்
அவனுக்குத் துணையாகக்கொடுக்கப்பட்ட யாதவசேனைக்குத் தலைவனாக
அனுப்பப்பட்டவன். துரியோதனனுக்கு “ராஜ ராஜன்” என்று
ஒருபெயராதலால், ‘நிருபாதிபன்’ எனப்பட்டான்.
தாமன் தராதிபர்கள் பலரொடும் வலப்புடை சலிப்பு இன்றி அணிய,
விறல் கூர்
மாமன் தராதிபர்கள் பலரொடும் இடப்புடை வகுப்பொடு அணிய,
தினகரன்
கோ மைந்தன் மைந்தன் இருவோரொடும் சேனையைக் கொண்டு
உற அணிந்தனன்-இகல்
சாமந்தர் மண்டலிகர் முடி மன்னர் சூழ்வர, தரணி பதி பின்
அணியவே.9.-சல்லியன் தன்பக்கத்துச்சேனையை அணிவகுத்தல்.
தாமன் – அசுவத்தாமன், தராதிபர்கள் பலரொடும்-
பூமிக்குத்தலைவரான அரசர்கள் பலருடனே, வலம் புடை – வலப்பக்கத்தில்,
சலிப்புஇன்றி – நிலைகுலைதலில்லாமல், அணிய – அழகிதாய்நிற்கவும்,-
விறல் கூர் -வெற்றிமிக்க, மாமன் – சகுனியும், தராதிபர்கள் பலரொடும் –
பலஅரசர்களுடனே, இடம்புடை – இடப்பக்கத்தில், வகுப்பொடு அணிய –
ஒழுங்கோடு அழகிதாய் நிற்கவும், – தினகரன் கோ மைந்தன் மைந்தன் –
சூரியனது சிறந்தகுமாரனான கர்ணனது புத்திரனான சித்திரசேனன்,
இருவோரொடும் – (தனது) உடன்பிறந்தவரான (சூரியவர்மா
சித்திரகீர்த்தியென்னும்) இரண்டு பேருடனே, சேனையை கொண்டு-(தனது)
சேனையை உடன்கொண்டு, உற – முன்னே செல்லவும்,- இகல் –
வலிமையையுடைய, சாமந்தர் – சாமந்தரென்னும் அரசர்களும், மண்டலிகர் –
மண்டலாதிபதிகளான அரசர்களும், முடி மன்னர் – கிரீடந்தரித்து அரசாளும்
மகுட வர்த்தனராசர்களும், சூழ்வர – சுற்றிலும்வரவும் -, தரணிபதி-
பூலோகத்துக்குத் தலைவனான துரியோதனன், பின் அணிய – பின்வகுப்பில்
நிற்கவும்,-அணிந்தனன் – (சல்லியன் சேனையை) அணிவகுத்தான்; (எ – று.)
கர்ணன்புத்திரர்மூவர் பெயரை 34 – ஆம் செய்யுளால் அறிக;
அம்மூவருள் சித்திரசேனன் பிரதானனாதலால், ‘அவன் மற்றை இருவரோடும்
சேனையைக்கொண்டுற’ என்றார்; 34-ஆங் கவியிலும் அவனையும் மற்றை
யிருவரையும் வேறுபாடுதோன்றக் கூறுமாற்றை உணர்க. ஆதலால்,
‘கோமைந்தன் மைந்தரொடு மூவரொடு சேனையுங்கொண்டு’ என்றபாடம்
சிறவாது. ஒருபேரரசனுக்குக் கீழ்ப்பட்டு அவனுடைய நாட்டின்
கடைக்கோடியை ஆளுஞ் சிற்றர சர்க்கு ‘ஸாமந்தர்’என்று பெயர்; வடசொல்.
மண்டலீகர் – நாற்பது கிராமம் ஆள்பவர். [ஒருகோடிகிராமம் ஆள்பவன்
மகுடவர்த்தனனென்றும், மகுடவர்த்தனர் நாலாயிரவரை வணக்கியாள்பவன்
மண்டலீக னென்றும், மூன்றுலக்ஷமளவுங் கப்பங்கட்டுபவர் சாமந்தரென்றும்
கூறுவர் ஒருசாரார்.]
ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் மத்திரன் புத்திரனை
உரக துவசன்
பொரு படை முனைக்கு உரிய சேனாபதிப் பெயர் புனைந்தமை
புகன்றனம். இனி,
குருகுலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள் இரவி குமரனைக்
கொன்ற இரவில்
பருவரல் மிகுந்து உளம் இனைந்ததும், பாசறை முனைந்ததும்
வியந்து பகர்வாம்10.-இனிப் பாண்டவர்செய்திகூறத்தொடங்குதல்: கவிக்கூற்று.
ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் – ஒருவரும் எனக்கு
(உலகத்தில்) ஒப்பில்லை யென்று செருக்குக்கொண்ட, மத்திரன் புத்திரனை –
மத்திரராசனது குமாரனான சல்லியனை, உரகதுவசன் – பாம்பின்
வடிவமெழுதிய கொடியையுடைய துரியோதனன், பொரு படைமுனைக்கு உரிய
சேனாபதி பெயர் புனைந்தமை – தாக்கிச்செய்யும் போர்த்தொழிற்குஉரிய
சேனைத்தலைவனென்ற பெயரைச் சூடினமையை, புகன்றனம் – கீழ்க்
கூறினோம்; இனி – இனிமேல்,- குரு குலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள்-
குருவென்னும் அரசனது குலம் பிரசித்தியடையும்படி (அதில்) தோன்றிய
குந்தியின் புத்திரராகிய பாண்டவர்கள், இரவி குமரனைக் கொன்ற இரவில் –
சூரியன்மகனான கர்ணனைக் கொன்ற (பதினேழாம்போர்நாளின்) இரவிலே,
பருவரல் மிகுந்து உளம் இனைந்ததும் – துன்பம்மிக்கு மனம் வருந்தியதையும்,
பாசறை முனைந்ததும் – (தமது) படைவீட்டில் யுத்தாலோசனை செய்ததையும்,
வியந்து பகர்வாம் – கொண்டாடிக் கூறுவோம்; (எ – று.)- இனிப் பகர்வாம்
என இயையும். பாசறை புகுந்ததும் என்றும் பாடம்.
மாதுலனென்றசொல்வடமொழியில், தனக்கு ஒப்பில்லாதவனென்றும்
ஒருபொருள்படுதலால் அத்தன்மையைக்கருதி, ‘ஒருவருமெனக்கு
நிகரில்லையெனு மத்திரன் புத்திரன்’ என்றனரென்க; என்றது, மாதுலனான
சல்லியனென்றவாறு. மத்திரனென்றது, சல்லியன் தந்தையை
செவ் இரவி திருமகனை, செகம் புரக்கும் காவலனை, இரவலோருக்கு
எவ் இரவும் விடிவிக்கும் இரு கரத்து வள்ளலை, இன்று இழந்தோம்!’
என்று
விவ் விரவு நறு மலர்த் தார்த் தருமன் முதல் ஐவரும்,
தம் விழி நீர் சோர,
அவ் இரவில், இமைப்பொழுதும் தரியாமல், அழுது அரற்றி
அலமந்தாரே.11.-கர்ணன் இறந்ததற்குப்பாண்டவர் புலம்பல்.
செவ் இரவி – செந்நிறமுடைய சூரியனது, திருமகனை –
சிறந்தகுமாரனும், செகம் புரக்கும் – பூமி முழுவதையும் ஆளுதற்குஉரிய,
காவலனை- அரசனும், இரவலோருக்கு – யாசகர்க்கு, எ இரவும் விடிவிக்கும்-
எந்தயாசகத்தையும் ஒழிவிக்கிற, இரு கரத்து – இரண்டுகைகளையுடைய,
வள்ளலை-தானகுணமுடையவனுமான கர்ணனை, இன்று – இன்றைக்கு,
இழந்தோம் -இழந்து விட்டோம், என்று-என்றகாரணத்தால்,-வி விரவு நறு
மலர் தார் தருமன்முதல் ஐவரும் – வண்டுகள் நெருங்கிமொய்க்கும்
வாசனையுடையபூமாலைகளைத் தரித்த தருமபுத்திரன் முதலிய ஐந்துபேரும்,
தம் விழி நீர்சோர – தங்கள் கண்களினின்று நீர் பெருக, அ இரவில்-அந்த
இராத்திரியில்,இமைப்பொழுதும் தரியாமல் – ஒரு நொடிப்பொழுதேனும்
பொறுத்திராமல்,அழுது – புலம்பி, அரற்றி-கதறி, அலமந்தார் –
வருந்தினார்கள்; (எ – று.)
தங்களுக்குத் தமையனென்று தங்களால் முன்பு அறியப்படாதவனான
கர்ணன்தங்களிலொருவனான அருச்சுனனாற் போரிற் கொல்லப்பட்டபிறகு
குந்திதேவிஅவன்மேல் விழுந்து அழுததனாலும், பின்பு கண்ணன்
சொன்னதனாலும்தங்களுக்கு முன்பிறந்தவனென்று அறிந்ததனால்,
பாண்டவர்கள் இங்ஙனம்சோகிப்பாராயினர். மகனை, காவலனை, வள்ளலை
என்ற மூன்றும் -ஒருபொருளின்மேல் வந்த பலபெயர்கள்; இவை
‘இழந்தோம்’ என்னும் ஒருவினை கொண்டன: [நன்-பொது 61.]
துரியோதனாதியரினும் மூத்தவனானதருமனுக்கும் முன்பிறந்தவனாதலால்
நீதிநூல் முறைப்படி நிலவுலகமுழுவதையும் ஆளுதற்குஉரியவன்கர்ணனே
யென்பார்,’செகம்புரக்குங்காவலன்’ என்றார்; கீழ்ச்சருக்கத்தில் “கொற்ற
வேந்தாய்,வீற்றிருந்திங் கைவேமுமடிவருடப் புவியாள விதியிலாதாய்”
என்றதுங் காண்க.கர மென்கிற சொல்லுக்கு-வடமொழியில் கிரணமென்றுங்
கையென்றும்பொருள்களுள்ளதனாலும், இரவு என்கிற தமிழ்மொழி –
இராத்திரியென்றும்இரத்தலென்றும் பொருள் படுதலாலும், விடிதலென்ற
வினை-உதித்தலென்றும்ஒழிதலென்றும் பொருள்படுதலாலும், இச்சொற்களில்
சமத்காரங்கற்பித்து,தந்தையாகிய சூரியன் தனது ஆயிரங் கரங்களால்
[கிரணங்களால்] இரவைவிடிவிக்குமாறு போல, மைந்தனான கர்ணன்
பலவகையிரவுகளையும் தனதுஇருகரங்களைக் கொண்டே விடிவிப்பவன்
என்றகருத்தைக் குறிப்பாற்புலப்படுத்துமாறு ‘இரவலோருக்கு எவ்விரவும்
விடிவிக்கும் இருகரத்து வள்ளல்’என்றாரென்க; இதனால், “பிதுச் சதகுணம்
புத்ர:” என்றபடி தந்தையினும் பலமடங்குசிறந்தவன் கர்ணனென்பதும்,
கர்ணன் வேண்டினவர்களுக்குவேண்டியதை யெல்லாம் தவறாமல்
இருகைகளாலும் எடுத்துக் கொடுத்துஅந்தயாசகர்கள் மீண்டும் ஓரிடத்து
இரத்தற்குச் செல்ல வேண்டாமல் செல்வம்நிரம்பியவராய்த்
திருப்தியடையும்படி கொடுக்கும் உதாரகுணமுடையவனென்பதும் இதில்
விளங்கும். கர்ணனுக்குச் சூரியனைஉபமானமாகக் கூறத் தொடங்கி,
சூரியனைக் காட்டிலும் உபமேயமாகியகர்ணனுக்கு உயர்வு கற்பித்துக்
கூறியதனால், இது – சிலேடைமூலமான ஒற்றுமை நயத்தை அங்கமாகக்
கொண்டு வந்த வேற்றுமையணி.
செவ்விரவி என்பதில், செம்மை – இனம் விலக்கவந்ததல்லாமல்
இயற்கைபற்றி வந்த அடைமொழி: [நன் – பொது.50] சகம் என்பது
மோனைநோக்கிச் செகம் எனத் திரிந்தது. காவலன்-காத்தலில் வல்லவன்.
இரவலோர் – இரத்தலில்வல்லவர். இரவு – இராத்திரியைக் குறிக்கையில்,
இராஎன்னுங் குறியதன்கீழ் ஆ குறுகி உகரமேற்றதும், இரத்தலைக்
குறிக்கையில்தொழிற்பெயருமாம். வள்ளல் – வண்மையை யுடையவன்.
பறவைப்பொதுப்பெயராகிய ‘வி’ என்ற வடசொல்-இங்குச் சிறப்பாய்,
வண்டைக் குறித்தது; [பொதுப்பெயர் சிறப்புப்பொருளை யுணர்த்துதலும்,
சிறப்புப்பெயர் பொதுப்பொருளை யுணர்த்துதலும், ஒருவகைப் பாஷை நடை].
இந்த ‘வி’ என்ற சொல்லே நீண்டு தமிழில் ‘வீ’ என்றும் நிற்கும்.
ஓசையின்பத்திற்காக ‘விவ்வரவு’ என உயிர்முன் இடையெழுத்து இரட்டிற்று.
தருமத்தினின்றும் தவறினவர்களுக்குத் தக்க தண்டனைசெய்து தருமத்தைக்
காத்தலால், யமனுக்குத் தருமனென்று பெயர்; ‘தந்தையே மைந்தனாகிறான்’
என்னும் நூல் வழக்குப்பற்றி, தருமபுத்திரனை ‘தருமன்’ என்றது. அலமந்தார்,
அலமா – பகுதி.
இதுமுதல் ஒன்பது கவிகள்-முதல்நான்குசீரும் காய்ச்சீர்களும், மற்றை
யிரண்டும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரிய
விருத்தங்கள்.
சாயை வெறுத்தனள், அவளின் தலத் தேவி மிக வெறுத்தாள்,
‘தபனன் ஈன்ற
சேயை வெறுத்து, உயிர் கவர்ந்தான் உறவு அறியான், தெயித்தியர்
போர் செயித்தான்’ என்று,
மாயை வெறுத்திட விளைத்த மாயோனை வெறுத்தனன்;
வன் மனத்தி ஆன
யாயை வெறுத்தனன்; பின்னை விதியை வெறுத்தனன்-வீமற்கு
இளைய கோவே.12.-கர்ணனைக் கொன்றதனால்அருச்சுனன்
கொண்ட சோகம்.
தெயித்தியர் போர் செயித்தான் – அசுரர்களுடைய போரை
வென்றவனான அருச்சுனன், உறவு அறியான் – (தங்களுக்குங் கர்ணனுக்கும்
உள்ள) உறவுமுறைமையை அறியாதவனாய், தபனன் ஈன்ற சேயை-சூரியன்
பெற்ற குமாரனான கர்ணனை, வெறுத்து உயிர் கவர்ந்தான் – பகைத்துக்
கொன்றான்’, என்று – என்றகாரணத்தால், சாயை வெறுத்தனள் –
(சூரியன்மனைவியான) சாயாதேவி வெறுப்புக்கொண்டாள்; அவளின்-
அவளைக்காட்டிலும், தலம் தேவி-பூமிதேவி, மிக வெறுத்தாள்-மிகவும்
வெறுப்புக்கொண்டாள்; வீமற்கு இளைய கோ – வீமனுக்கு அடுத்ததம்பியான
அருச்சுனன்,- வெறுத்திட மாயை விளைத்த மாயோனை-(பலரும்)
வெறுக்கும்படிமிகுதியாக வஞ்சனையைச்செய்த கிருஷ்ணனை, வெறுத்தனன்
– வெறுத்தான்:வல் மனத்தி ஆன – கடினசித்தமுடையவளான, யாயை –
தன்தாயானகுந்தியை, வெறுத்தனன்-; பின்னை – பின்பு, விதியைவெறுத்தனன்
– (எல்லாவற்றுக்கும் முக்கியகாரணமான தனது) ஊழ்வினையைத்தானே
வெறுத்துக்கொண்டான்;
கண்ணனையுங்குந்தியையும் வெறுத்தது, இவ்வுறவுமுறைமையை
அவர்கள் முன்னமே அறிந்திருந்தும் தங்களுக்கு வெளிப்படுத்தாமையால்,
கண்ணனை வெறுத்த விதத்தைக் கீழ்ச்சருக்கத்தில் “பேயுரைத்துத் தாலாட்ட
முலைப்பாலோ டுயிருண்டபித்தா ஈண்டை, நீயுரைத்தபிறகறிந்தோ
மெம்முனையின் றெமைக்கொண்டே நேர் செய்தாயே” என்றது
முதலியனகொண்டும், தாயை வெறுத்த விதத்தை ‘கன்னியிளம்
பருவத்திலரியமாவெனுங்கடவுள் காதல் கூர, மன்னிய மந்திர மெமக்கு
மின்றளவுமுரைத்திலையால் மறந்தாய் கொல்லோ, பின்னிய
செஞ்சடைக்குழலா யீதென்னபேரறிவுபெற்றதாயின், அன்னியம்
நன்றாயிருந்தது இப்படியேபிழைப்பிப்பதறிந்திலோமே” என்றது
முதலியனகொண்டும் அறிக. ‘மாயைவெறுத்திட விளைத்தமாயோன்’
என்றதனால், கண்ணன் தனதுபஞ்சப்பிராணன்களுக்குச் சமானரான பஞ்ச
பாண்டவர்க்கும் இவ்வுண்மையைக்கூறாமல் பூமிபாரநிவிருத்தியாகிய தனது
அவதார காரியத்தையேமுக்கியமாகக்கொண்டு இதனை அதிரகசியமாக
மறைத்துவைத்த தந்திரம்விளங்கும். ‘வன்மனத்தியான யாய்’ –
எப்படிப்பட்ட இரகசியத்தையும்ஒளித்துவைத்தற்கு உரியரல்லாத தன்
அருமைமக்களுக்கும் இதனைக் கூறாமல்மனத்திலேயே அடக்கி வைத்து
அதனால் கர்ணனுக்கு அழிவும்பாண்டவர்க்குப் பழியும் விளையப்
பார்த்திருந்த கல்நெஞ்சினள் என்றவாறு:இப்படி அவள் மறைத்துவைத்ததன்
காரணம், கண்ணபிரான் தூதுவந்தபொழுதுசொன்ன சூழ்ச்சியால் குந்தி
கர்ணனைத் தன்மகனென்று அறிந்து அவனிடஞ்சென்று நாகாஸ்திரத்தை
அருச்சுனன்மேல் இரண்டாம் முறை விடாதபடியும்,மற்றநால்வர்
பாண்டவரையும் அவன் சொல்லாதபடியும் வரம்வேண்டிப்பெற்றபொழுது
அவன் “உய்வருந்திறல் வெம்போர் முடிப்பளவும் உமக்கு
நான்மகனெனுந்தன்மை, ஐவரும் அறியாவண்ணம் நீர்காப்பீர்” என்று
எதிர்வரங்கேட்டதற்கு இவள் உடன்பட்டு வந்தமை.
சாயைவெறுத்தது – சூரியபுத்திரனான கர்ணனிடம் தான்
புத்திரவாற்சல்லியம்வைத்திருந்ததனா லென்றும், பூமிதேவி மிகவும்
வெறுத்தது-தன்னை அரசாளுதற்கு இயல்பில்உரியவனான கர்ணன்
கொல்லப்பட்டதனாலுமென்க.
தைத்தியர்போர்சயித்தானென்ற விவரம்:- அருச்சுனன்,
வனவாசத்தொடக்கத்தில் கைலாசத்திற்சென்று தவமியற்றிப் பரமசிவனிடத்தில்
பாசுபதம் முதலியன பெற்றபின்பு அங்குவந்து தன்னையழைத்துப்போன
தந்தையாகிய இந்திரனுடனே தேவலோகஞ் சேர்ந்து அங்குத் தேவர்களது
வேண்டுகோளின்படி அவர்கட்குப் பகைவராய்ப் பலநாளாகப்
பெருந்துன்பமியற்றிவந்த (கடலிடையிலுள்ள தோயமாபுரவாசிகளான)
நிவாதகவசரென்னும் அசுரர் மூன்று கோடிபேரையும், (அந்தரத்துள்ள
இரணியபுரவாசிகளான) காலகேயரென்னும் அசுரர் அறுபதினாயிரவரையும்
ஆங்காங்குச் சென்று போர்செய்து அழித்து ஒழித்தன னென்பதாம்.
தபநன்- உஷ்ணகிரணங்களால் தபிப்பவன். பீமன் –
(பகைவர்களுக்குப்) பயங்கரனானவன். தெயித்தியர், செயித்தான் – அகரம்
எகரமானது, மோனைத்தொடைக்காக. சேய் – ஆண்பாற் சிறப்புப்பெயர்:
செம்மை யென்னும் பண்புப்பெயர், ஈறுபோய் ஆதிநீண்டு
முன்நின்றமகரமெய்யகரமாத்திரிந்து, சேய்என நின்றது; இந்த நிறத்தின் பெயர்
– முதலில் செந்நிறமுடைய முருகக்கடவுளுக்குப் பண்பாகுபெயராய், அது
பின்புஅவன்போலப் பலபராக்கிரமங்களிற் சிறந்த இளவீரனுக்கு (க் குமார
னென்றவடசொற் போல) உவமையாகுபெயராய் வழங்கும்:
இருமடியாகுபெயர்
அற்றை இரா விடிவு அளவும் தனித்தனியே ஆகுலமுற்று,
அனிலன் மைந்தன்,
மற்றை நால்வரும், மாலும், மன்னவரும், வரூதினியும், மருங்கு சூழ,
‘இற்றை நாள் வஞ்சினத்தின் குறை முடிக்க வேண்டும்’ எனும்
இதயத்தோடும, பிற்றை நாள் முரசு
அதிர, வளை முழங்க, களம் புகுந்தான், பிதாவைப் போல்வான்..-சூரியனுதித்தவுடன் வீமன்போர்க்களஞ்சேர்தல்.
அற்றை இரா – அந்தப்பதினேழாநாளின் இரவு, விடிவு
அளவும் – கழியுமளவும், (பாண்டவர்ஐவரும்), தனித்தனியே ஆகுலம்உற்று –
தனித்தனியே விசனமடைந்து, (அதன்பின்),- பிற்றை நாள் – அடுத்த தினமான
பதினெட்டாநாளில்,-பிதாவைப் போல்வான் – தன் தந்தையான வாயுவை
யொப்பவனான, அனிலன் மைந்தன் – வாயுகுமாரனான வீமன்,-
‘வஞ்சினத்தின்குறை-(முன்பு செய்த) சபதத்தின் குறையை, இற்றை நாள் –
இன்றைத்தினத்திலே, முடிக்கவேண்டும் – (நான்) முடித்துவிடவேண்டும்’,
எனும்- என்று எண்ணுகிற, இதயத்தோடும் – மனத்துடனே, மற்றை
நால்வரும் -(தன்னுடன் பிறந்தவரான தருமன் முதலிய) மற்றைப்பாண்டவர்
நான்குபேரும்,மாலும் – கண்ணபிரானும், மன்னவரும் – மற்றை அரசர்களும்,
வரூதினியும் -சேனையும், மருங்கு சூழ – பக்கங்களில் சுற்றிலும்வரவும்,-முரசு
அதிர -யுத்தபேரிகைகள் ஆரவாரிக்கவும், வளை முழங்க – சங்கங்கள்
ஒலிக்கவும்,களம்புகுந்தான் – போர்க்களத்திற் சேர்ந்தான்; (எ – று.)
‘உற்று’என்ற செய்தெனெச்சத்தை ‘உற’ எனச் செயவெனெச்சமாகத்
திரித்து, ‘புகுந்தான்’ என்ற முற்றோடு முடித்தல், இலக்கண நடைக்கு
ஒத்ததாம். வஞ்சினமென்றது, திரௌபதியைத் துகிலுரிந்தகாலத்தில் வீமன்
‘துரியோதனாதியர் நூற்றுவரையும் யானே கொல்வேன்’ என்று
பிரதிஜ்ஞைசெய்து போந்தது. அந்தச்சபதத்தின்படி கீழ்ப் பதினேழு
போர்நாள்களில் நூற்றுவருள் தன்னாற்கொல்லப்பட்டவ
ரொழிந்தமற்றையோரைஇன்று கொன்றுதீர்க்கக் கருதினனென்க. இங்ஙனம்
சபதம் முடிக்கவிரைந்தமைபற்றியே, இங்கு இவனைத் தலைமையாக்கிக்
கூறினார்.
அன்று,இன்று என்ற மென்றொடர்க்குற்றியலுகரங்கள் வன்றொடராய்
ஐகாரச்சாரியைபெற்று அற்றை, இற்றை என நின்றன.
இற்றைநாள்- இன்றாகியநாளென இருபெயரொட்டு. பிற்றை – பின்
என்ற இடைச்சொல்லின்மேல், து ஐ – சாரியைகள். வளை –
உட்சுழிவுடையது. வேண்டும் – ஒருவகை வியங்கோள்.
விம்மு பெரும் பணை ஒலியால் விண்டதுகொல் அண்டம்!’
என விண்ணோர் அஞ்ச,
கைம் முக மா முதலான கடுஞ் சேனைப் பாஞ்சாலன் காதல் மைந்தன்
எம் முகமும் தான் ஆகி, இரதம் ஊர்ந்து, அணி வகுக்க,
இளையோர் யாரும்
தம்முனை வந்து அடி வணங்கி, புடை சூழ்ந்தார், சிறிதும் மனம்
சலிப்பு இலாதார்.14.-யாவரும் போர்க்களஞ்சேர்ந்துதருமனை யடுத்தல்.
விம்மு – ஆரவாரஞ்செய்கிற, பெரு பணை ஒலியால் –
பெரியவாத்தியங்களின் ஓசையால், அண்டம் விண்டதுகொல் என –
அண்டமுகடுஅதிர்ந்து பிளந்திட்டதோவென்று, விண்ணோர் அஞ்ச –
தேவர்கள் பயப்பட,கை முகம் மா முதல் ஆன – துதிக்கையையுடைய
முகத்தையுடைய யானைமுதலிய, கடு சேனை – கொடிய
சேனைக்குத்தலைவனான, பாஞ்சாலன்காதல்மைந்தன் – பாஞ்சால
தேசத்தரசனாகிய துருபதனது அன்புள்ள புத்திரனானதிட்டத்துய்மன், எ
முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து – எல்லாப்பக்கங்களிலும்
தானேயாகும்படி நாற்புறமும் விரைந்து தேரைநடத்தி,அணிவகுக்க –
(தன்சேனையைப்) படைவகுக்க,-சிறிதும் மனம் சலிப்பு இலாதார்
-சற்றும் மனந்தளர்தலில்லாதவர்களான, இளையோர் யாரும் – தம்பியரான
(வீமன் முதலியோர்) எல்லாரும், வந்து – (அருகில்) வந்து, தம் முனை –
தங்கள் தமையனான தருமனை, அடி வணங்கி – பாதங்களில் விழுந்து
நமஸ்கரித்து, புடை சூழ்ந்தார் – பக்கங்களிற் சூழ்ந்துநின்றார்கள்; (எ – று.)
முதலடி- அதிசயோக்தி: வாத்தியகோஷத்தின் மிகுதியை விளக்கும்.
துதிக்கையுள்ள முகமுடைய விலங்கு எனவே, யானையாயிற்று. ஆகி – ஆக
என எச்சத்தைத் திரிக்க. தம்முன் என்பதில், முன் என்றது-முன்னே
பிறந்தவனுக்குக் காலவாகுபெயர்.
அத்திரயூகம்அது ஆக அரும் பெருஞ் சேனையை வகுத்து,
ஆங்கு அதிபன் ஆகி,
மத்திர பூபதி நின்ற வலியினைக் கண்டு, அதிசயித்து,
மாலை நோக்கி,
‘இத் திறம் ஆகிய படையோடு எப்படி நாம் சில படைகொண்டு
எதிர்ப்பது?’ என்றான்-
குத்திரம் ஆகிய வினைகள் ஒருகாலும் திருவுளத்தில் குடிபுகாதான்.15.-சல்லியன் அத்திரயூகம்வகுத்தமையும், தருமன்
கண்ணனை வினாவலும்.
ஆங்கு – எதிர்ப்பக்கத்தில், மத்திர பூபதி – மத்திர தேசத்து
அரசனான சல்லியன், வரும் பெரு சேனையை – (தன்னிடம்) வந்த பெரிய
சேனையை, அத்திரயூகமது ஆக வகுத்து – அஸ்திரமெனும் வியூகமாக
அணிவகுத்து, அதிபன் ஆகி நின்ற – சேனைத்தலைவனாய்நின்ற, வலியினை
-வலிய நிலைமையை, கண்டு – பார்த்து, அதிசயித்து- ஆச்சரியப்பட்டு, –
குத்திரம் ஆகிய வினைகள் திருஉளத்தில் ஒருகாலும் குடி புகாதான் –
வஞ்சனையாகிய செயல்கள் தனது சிறந்த மனத்திலே ஒருபொழுதும்
வந்துதங்கப்பெறாத தருமபுத்திரன், – மாலை நோக்கி – கண்ணபிரானைப்
பார்த்து, ‘இ திறம் ஆகிய படையொடு – இப்படி வலிமையாக
அணிவகுக்கப்பட்ட பகைவர் சேனையுடன், நாம்-, சில படை கொண்டு –
குறைவான (நமது) சேனையைக்கொண்டு, எதிர்ப்பது – எதிர்த்துப்
போர்செய்யும்விதம், எப்படி – எவ்வாறு?’ என்றான் – என்று வினாவினான்;
(எ – று.)
வ்யூஹமென்ற வடசொல், யூகமெனத் திரிந்தது; அதாவது –
படைவகுப்பு: சேனை ஒருவடிவமைய ஒழுங்குபட நிறுத்தப்படுவது.
சேனைகளை அணிவகுக்கிற உத்தேசம், கண்டபடி தனித்தனிப்பிரிந்து
பரவியிருத்தலினும் ஒருவடிவமையத் திரண்டு நிற்கையில்
வெல்லுதற்கரியதாய்ப்பகைவரை எளிதில் அழிக்கு மென்பது.
இச்செய்யுளினால், சல்லியன் அன்றுஅணிவகுத்த சிறப்பு விளங்கும்.
சர்வதோபத்ரம் என்னும் வியூகம்வகுக்கப்பட்டதென்று முதனூல் கூறும்.
‘படைகொண்டு’ என்பதில், கொண்டு -மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு,
தருமன் கள்ளங்கபடமற்ற சுத்தசித்தமுடையவனென்பது, நான்காம் அடியில்
வெளியாம். மால் – பெருமைஅன்பு மாயை என்பவற்றை யுடையவன்.
முதலடியில், அரும் என்றும்எடுக்கலாம்.
வீடுமனை, சிலைக் குருவாம் வேதியனை, நும்முனை,
முன் வீடு சேர்த்த
நீடு மணிப் பொலங் கழலோர் நின் அருகே நிற்கின்றார்;
நிகர் இலாய்! கேள்!
ஆடு திரைக் கடல் நீந்தி ஏறினர்க்குக் கழி கடத்தல்
அரியது ஒன்றோ?
தோடு அவிழ் தார்ச் சல்லியனுக்கு இளைப்பரோ?’ என மொழிந்தான்,
துளப மாலே.16.-தருமன் வினாவிற்குக் கண்ணன்ஏற்ற விடை கூறல்
நிகர் இலாய் – ஒப்பில்லாதவனே! கேள் – (யான்
சொல்வதைக்) கேட்பாயாக:- வீடுமனை – பீஷ்மனையும், சிலை குரு ஆம்
வேதியனை – வில் வித்தையில் ஆசிரியனான துரோணனையும், நும் முனை-
உங்கள் தமையனான கர்ணனையும், முன் – முன்பு, வீடு சேர்த்த –
அழிவடைவித்த, நீடு மணி பொலம் கழலோர் – நீண்டதும் இரத்தினங்கள்
பதித்ததும் பொன்னினாலாகியதுமான வீரக் கழலையுடைய வீரர்கள், நின்
அருகே நிற்கின்றார் – உன்பக்கத்திலே நிற்கிறார்கள்; (ஆதலால்),-ஆடு திரை
கடல் நீந்தி ஏறினர்க்கு – எழுந்தசைகிற அலைகளையுடைய கடலை
நீந்திக்கடந்து கரையேறினவர்களுக்கு, கழி கடத்தல் அரியது ஒன்றோ –
(அதற்கு அப்பாலுள்ளதொரு) கழியைத் தாண்டுதல் அரியதொரு காரியமோ?
(அவ்வாறே), தோடு அவிழ் தார் சல்லியனுக்கு இளைப்பரோ – (வீடுமன்
முதலிய மகாவீரர்களை வென்றபின்பு) பூவிதழ்கள் மலர்ந்த மாலையையுடைய
சல்லியனுக்காக மனஞ்சலிப்பவருண்டோ? என-என்று, துளபம் மால்-
திருத்துழாய் மாலையையுடைய கண்ணன், மொழிந்தான் – கூறினான்;
(எ – று.)
‘மகாபலபராக்கிரமசாலிகளாகப்பிரசித்திபெற்ற வீடுமனையுந்
துரோணனையுங் கர்ணனையும் போரில் முறையே ஒழித்திட்ட சிகண்டியும்
திட்டத்துய்மனும் அருச்சுனனும் ஆகிய வீரர்கள் உன் அருகில் நிற்கையில்
நீஅஞ்சுவானேன்? அத்துணைவல்லோரை வென்றபின் சல்லியனொருவனை
வெல்லுதல் எளிதன்றோ’ என்று கண்ணன் தைரியங் கூறினான். அளவற்றதாய்
நிலை கொள்ளாததாய் அலைவீசி அச்சந்தருவதாயுள்ள கடலை நீந்திக்
கரையேறினார்க்குக் கழியைக் கடத்தல் அரியதன்றே யென்ற பொருளைத்தரும்
உபமான வாக்கியத்துக்கும், வீடுமன் முதலியோரை வென்றவர்க்குச்
சல்லியனைவெல்லுதல் அரியதன்றே யென்றபொருளைத்தரும் உபமேய
வாக்கியத்துக்கும்இடையில் உவமவுருபுகொடாமற் கூறியது,
எடுத்துக்காட்டுவமையணி.
வீடுமன் – பீஷ்மனென்ற வடசொல்லின் திரிபு: இப்பெயர்க்கு –
பயங்கரனானவனென்று உற்பத்தியருத்தம்: பயங்கரமானவிரத
முடையவனென்றுகருத்து. இவன், தனது தந்தைக்கு யோசநகந்தியை
இரண்டாவது மணஞ்செய்வித்தற்கு அவளை வளர்த்ததந்தையான
செம்படவன் இசைதற்பொருட்டுமூத்தவனாய்ப் பட்டத்துக்குரிய தனது
இராச்சியத்தையும் மற்றையெல்லாச்செல்வங்களையும் தனக்குச் சிறியதாயாக
வருமவளுக்குப் பிறக்கும்பிள்ளைக்கே கொடுப்பதாகவும், தான்
மணஞ்செய்துகொள்வதில்லை யென்றும்,இங்ஙனம், ஒழித்தற்கரிய மண்ணாசை
பெண்ணாசை பொன்னாசை யென்னும்மூவகையாசையையும் இளமையிலே
யொழித்துக் கேட்போரஞ்சும் படியானசபதத்தைச் செய்ததனால், இவனுக்கு
இப்பெயர்; தேவர்களுக்குமுன்னிலையில் இவ்விரதத்தை
ஏற்படுத்திக்கொண்டதனால் தேவவிரதனென்றும், சந்தநு மைந்தனாதலால்
சாந்தநவ னென்றும், கங்கைகுமாரனாதலால் காங்கேய னென்றும் இவனுக்குப்
பெயர்களுண்டு.
குரு என்றசொல் – (அஜ்ஞாநமாகிற) மனவிருளை யொழிப்பவனென்று
காரணப்பொருள்படும்; வேதியன் – வேதங்களை ஓதுதலும் ஓதுவித்தலு
முடையவன். பொன் + கழல் = பொலங்கழல்; இப்புணர்ச்சிக்கு விதி –
“பொன்னென்கிளவி யீறுகெட முறையின், முன்னர்த்தோன்றும் லகார மகாரம்,
செய்யுள் மருங்கிற் றொடரியலான” என்னுந் தொல்காப்பியச்சூத்திரம்.
பிற்காலத்தார், பொலம் என்றே பொன்னுக்கு ஒருபெயர் கூறுவர். கழல் –
வீரர்காலணி. துளபம் – திருமாலுக்கும், அப்பெருமானது திருவவதார
மூர்த்திகளுக்கும் உரியது.
வில்லியரில், வேலாளில், வாள் எடுத்தோர்-தம்மில் ஒரு
வேந்தர் ஒவ்வார்;
செல் இயல் வெங் கரி ஆளில், தேர் ஆளில், பரி ஆளில், சிலர்
வேறு ஒவ்வார்; மல் இயல்
பொன்-தோள் வலிக்கும், தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே?
சல்லியனுக்கு ஒப்பார் நின் தம்பியரில் இலர்’ என்றும் சாற்றினானே.17.-இதுமுதல் மூன்று கவிகள் -கண்ணன் தருமனை
நோக்கிக் கூறுவன.
வில்லியரில் – வில்வீரர்களிலும், வேலாளில் –
வேல்வீரர்களிலும், வாள் எடுத்தோர்தம்மில் – வாள்வீரர்களிலும், ஒரு
வேந்தர்- ஓரரசரும், ஒவ்வார் – (சல்லியனுக்கு) ஒப்பாகமாட்டார்: வேறு –
மற்றும்,செல் இயல் – (அழகிதாகச்) செல்லுந்தன்மையுள்ள,
வெம்வேகத்தையுடைய, பரி- குதிரைமேலேறிய, ஆளில் – வீரர்களிலும், கரி
ஆளில் – யானை வீர்களிலும்,தேர் ஆளில் – தேர்வீரர்களிலும், சிலர்
ஒவ்வார் – எவரும் (அவனுக்கு)ஒப்பாகமாட்டார்: மல் இயல் – பலம்
பொருந்தின, பொன்-அழகிய, தோள்-புயங்களின், வலிக்கும்-வலிமையாலும்,
தண்டுக்கும்-கதாயுதத்தாலும், எதிர்ந்துபொர வல்லார் – (சல்லியனை)
எதிர்த்துப் போர்செய்யவல்லவர், யாரே – எவர்உள்ளார்? [எவருமில்லை
யென்றபடி]; சல்லியனுக்கு ஒப்பார் – சல்லியனுக்குச்சமானமானவர்,
நின்தம்பியரில் இலர் – உனது தம்பிமார்களிலும் இல்லை,என்றும்
சாற்றினான் – என்றும் (கண்ணன்) கூறினான்;
புஜபலத்திலும் கதாயுதப் பயிற்சியிலும் சல்லியன்
மிகமேம்பட்டவனாதலால், அவனுக்குச் சமானமானவர் அறுவகைப்பட்ட
வீரரிலுமில்லை; மிகச் சிறந்த உனது தம்பிமாரும் அவனுக்கு ஒப்பாகார்
என்றனனென்பதாம். என்றது, நீயே அவனுக்குச் சமமானவனென்றவாறு;
அத்தன்மை,அடுத்த கவியால் விளங்கும். செல் இயல் – (விரைவில்)
மேகம்போன்றதன்மையுள்ள என்றும் உரைக்கலாம். மல் இயல் – மற்போரிற்
பயின்றஎனினுமாம். மல் – ஆயுதமில்லாமலே தேகபலத்தால்
உடம்பினுறுப்புக்களைக்கொண்டு எதிர்த்து மோதிச் செய்யும் போர்.
பொற்றோள் – பொன்னாபரணம்அணிந்த தோளுமாம்; பொன் –
கருவியாகுபெயர். ‘நின்தம்பியரில் இலர்’என்றது, அருத்தாபத்தியால், நீயே
ஒப்பவ னென்பதைக் காட்டிற்று.
பரி -(பாரத்தைப்) பரிப்பது; பரித்தல் – சுமத்தல். கரம் – கை;
இங்கே,துதிக்கை; அதனையுடையது கரீ: வடமொழிக்காரணப் பெயர்.
வலிக்கும்,தண்டுக்கும் – உருபுமயக்கம். தோள்வலிமையிலும்
கதைப்போரிலும்மிகச்சிறந்த வீமனும் தனியே சல்லியனோடு எதிர்த்துப்
போர்செய்துவெல்லவல்லவனல்ல னென்பது, மூன்றாமடியின் உட்கோள்.
வெங்கரியாளிற்றேராளிற் பரியாளில் என்று பாடாந்தரம்.
அரு வரை ஓர் இரண்டு இருபால் அமைந்தனைய தடம் புயம் கண்டு
அவனி வேந்தர்
வெருவரு போர் மத்திரத்தான், வேறு ஒருவர்மேல் செல்லான்,
நின்மேல் அன்றி;
இருவருமே முனைந்து முனைந்து இரவி கடல் விழும் அளவும் இகல்
செய்தாலும், ஒருவர்
ஒருவரை வேறல் ஒண்ணாது இன்று, உமக்கு’ என்றும் உரைசெய்தானே.
அரு – அழித்தற்கு அரிய, வரை ஓர் இரண்டு –
இரண்டுமலைகள், இருபால் – இரண்டுபக்கங்களிலும், அமைந்து அனைய-
பொருந்தினாற் போன்ற, தடபுயம் – பெரிய (தனது) தோள்களை, கண்டு –
பார்த்து, அவனிவேந்தர் – பூமியையாளுகிற அரசர்கள், வெருவரு –
அஞ்சும்படியாகவுள்ள, போர் மத்திரத்தான் – போரில்வல்லவனான சல்லியன்,
இன்று – இன்றைக்கு, நின்மேல் அன்றி – உன்மேலல்லாமல், வேறு
ஒருவர்மேல், செல்லான் – (போர்செய்தற்குச்) செல்லான்: இருவருமே –
நீங்கள் இரண்டு பேருமே, முனைந்து முனைந்து – மிகவும் உக்கிரங்கொண்டு,
இரவி கடல் விழும் அளவும் – சூரியன் மேல்கடலில்விழுந்து
அஸ்தமிக்கும்வரையிலும், இகல் செய்தாலும் – போர்செய்தாலும், உமக்கு –
உங்களுக்கு, ஒருவர் ஒருவரை வேறல் ஒண்ணாது – ஒருவர் மற்றொருத்தரை
வெல்லுதல் முடியாது, என்றும் உரைசெய்தான் – என்றுங் கூறினான்,
(கண்ணன்); (எ – று.)
உன்னாலும்தனியே சல்லியனை யெதிர்த்துப் பொருது
வெல்லமுடியாதென்பது, இதன் உட்கோள். வரை யென்னுங் கணுவின்
பெயர்,அதனையுடைய மூங்கிலுக்குச் சினையாகுபெயரும், அது பின்பு
மூங்கில்விளையும் மலைக்குத் தானியாகுபெயரு மாதலால், இருமடியாகுபெயர்.
தோளுக்கு மலையுவமை, பருமைக்கும், ஆயுதங்களால் அழித்தற்கு அரிய
வலிமைக்கு மென்க. முதலடி – உவமையணி. அவநி என்ற சொல் –
காக்கப்படுதற்குரிய தென்று காரணப்பொருள்படும். வெரு வரு – வெரு வா
என்ற இரண்டுபகுதிகளுஞ் சேர்ந்து ஒருசொல் தன்மைப்பட்ட வெருவா
என்பதன் விகாரம். இருவிர் என முன்னிலையாக் கூறவேண்டுமிடத்து
இருவர்எனப்படர்க்கையாக் கூறினது – இடவழுவமைதி. சூரியனாதியோரது
உதயஅஸ்தமனங்களைக் கீழ்க்கடலினின்று எழுந்து மேல்கடலில்
மூழ்குவதாகக்கூறுதல், கவிமரபு. வேறல் – தொழிற்பெயர்; வெல் – பகுதி.
ஒண்ணாது=ஒன்றாது; மரூஉ. அமைந்து – எச்சத்திரிபு. முனைந்து முனைந்து
– அடுக்கு, மிகுதிப்பொருளது.
பார்த்தன் ஒருவனும் சென்று பரித்தாமா-வுடன் மலைய, படைஞரோடு
மாத்திரி மைந்தரில் இளையோன் சௌபலனை வெல்ல,
இகல் மா வலோனும்,
மூத்தவன் மைந்தரை வெல்ல, முனைப் பவனன் மைந்தனொடு
மூண்டு வெம் போர்,
கோத் தரும! மத்திரத்தார் கோவை உயிர் கவர்தி!’ எனக்
கூறியிட்டான்.
கோ தரும – தருமராசனே! பார்த்தன் ஒருவனும் சென்று –
அருச்சுனனொருத்தன் மாத்திரம் தனியேபோய், பரித்தாமாவுடன் மலைய –
அசுவத்தாமாவுடன் போர்செய்ய,- மாத்திரி மைந்தரில் இளையோன் –
மாத்திரியின் புத்திரரிருவருள் இளையவனான சகதேவன், படைஞரோடும் –
சேனைவீரர்களுடனே (சென்று), சௌபலனை வெல்ல – சகுனியைச்சயிக்க,
இகல் மாவலோனும் – வலியகுதிரைத்தொழிலிலே வல்லவனான நகுலனும்,
மூத்தவன் மைந்தரை வெல்ல – (உங்கள்) தமையனான கர்ணனது
புத்திரர்களைச் சயிக்க,-(நீ), முனை பவனன் மைந்தனோடு –
போர்வன்மையுடைய வாயுகுமாரனான வீமனுடனே, (சென்று), வெம்போர்
மூண்டு – கொடிய யுத்தத்தை முயன்று செய்து, மத்திரத்தார் கோவை –
மத்திரநாட்டார்க்கு அரசனான சல்லியனை, உயிர் கவர்தி – கொல்வாய்,
என-என்று, கூறியிட்டான் – (கண்ணன்) சொல்லிமுடித்தான்; (எ – று.)
அருச்சுனன் முதலிய மூவரையும் வெவ்வேறுவீரர்களுடன் போர்செய்யச்
செலுத்திவிட்டு நீயும் வீமனும் ஒருங்கேசென்று சல்லியனை யெதிர்த்துப்
பொருது உயிர்வாங்கவெண்டு மென்றான். பார்த்தன் – பிருதையின் மகன்;
வடமொழி தத்திதாந்தநாமம்; (பிருதை யென்பது – குந்தியின் இயற்பெயர்:)
பார்த்தன் என்றது – சிறப்பாய், அருச்சுனனைக் குறிக்கும். பரி, அசுவம்
என்பன – குதிரையாகிய ஒருபொருளைக் குறிப்பன வாதலால்,
அசுவத்தாமாவைப் பரித்தாமா வென்றார். அசுவத்தாம னென்பது –
குதிரையைப் பிறப்பிடமாகவுடையவனென்று பொருள்படும். மாத்திரி –
மத்திரதேசத்து அரசன்மகள்; சௌபலன் – சுபலனென்னும் அரசனது
குமாரன். நகுலன் குதிரைத்தொழிலில் வல்லவனாதல், அஜ்ஞாதவாசத்திலும்
பிரசித்தம்.
கிருபையால் உயர் கேசவன் இங்கிதக் கேள்விகள் உணர்வுறக்
கேட்டு,
துருபதேயனும் தன் பெருஞ் சேனையைத் துன்றிய வியூகமாத்
தொடுத்து,
நிருபர் யாவரும் சூழ்வர, தாழ் சலநிதி என, விதி என, நின்றான்-
பொரு பதாகினி இரண்டினும் முனை உறப் போர் வலோர்
தூசிகள் பொரவே.20.-திட்டத்துய்மன் அணிவகுத்தலும்,இருசேனையும் போர்
தொடங்கலும்.
இதுவும், அடுத்தகவியும் – குளகம்.
(இ -ள்.) கிருபையால் உயர் – அருளினாற் சிறந்த, கேசவன் –
கண்ணபிரானது, இங்கிதம் கேள்விகள் – குறிப்பான உபதேச வார்த்தைகளை,
உணர்வுஉற கேட்டு – மனத்தெளிவோடு (தருமபுத்திரன்) கேட்டவுடன்.-
துருபதேயனும் – துருபதராச குமாரனான திருஷ்டத்யும்நனும், தன்பெரு
சேனையை – தன் பக்கத்துப் பெரிய சேனையை, துன்றிய வியூகம் ஆ
தொடுத்து – நெருங்கிய படைவகுப்பாக அணிவகுத்து, நிருபர் யாவரும்சூழ்வர
– அரசர்களெல்லோரும் (தன்னைச்) சுற்றிலும்வர, (அவர்கள் நடுவில்), தாழ்
சலநிதி என – ஆழ்ந்த கடல்போலவும், விதி என – பிரமன்போலவும்,
நின்றான் – (சிறப்பாக) நின்றான்; (பின்பு), பொரு பதாகினி இரண்டினும் –
போருக்குச்சித்தமான இரண்டுசேனைகளிலும், போர் வல்லோர் தூசிகள் –
போரில்வல்ல வீரர்களது முன்னணிச் சேனைகள், முனை உற பொர –
முற்படப் போர்செய்ய, (எ – று.)-மேல் ‘பூபதி தருமன் வந்தான்’ என
முடியும்.
எதற்குங்கலங்காதகம்பீரமான தோற்றத்துக்கு ஆழ்ந்த கடலையும்,
ஒழுங்காகப்படைவகுத்த திறமைக்குப் படைத்தற்கடவுளான பிரமனையும்
உவமை கூறினார். கேசவன் என்ற வடமொழித்திருநாமம் – பிரமனையும்
சிவனையும் தன் அங்கத்திற் கொண்டவனென்றும் [க – பிரமன், ஈச – சிவன்]
மயிர் முடியழகுடையவ னென்றும் [கேசம் – தலைமயிர்முடி] கேசியென்னும்
அசுரனைக் கொன்றவ னென்றுங் காரணப்பொருள்படும். பெருஞ்சேனை –
பெருமையையுடைய சேனை; அதிகமான சேனையெனின், பதினைந்தாஞ்
செய்யுளில் ‘சிலபடை’ என்றதோடு மாறுகொளக்கூறலாம். ஜலநிதி –
நீர்நிறையுமிடம். பதாகா – கொடி; அதனையுடையது, பதாகிநீ. ‘கேட்டு’
என்பதை, கேட்கவென, எச்சத்திரிபாக்கி ‘நின்றான்’ என்பதனோடு முடிக்க.
இதுமுதற்பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் ஈற்றுச்சீரும்
மாச்சீர்களும், மற்றையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்.
ஆய போதினில், குருபதி பதாகினிக்கு அதிபதி ஆய பூபதி, அம்
மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலைமேல்
விரைவுடன் வந்தான்;
காயும் வெங் கனல் கண்ணினன், செவி உறக் கார்முகம் குனித்த
செங் கரத்தான்,
தீய ஆகிய சிலீமுகம் உரன் உறச் சொரிதரு சிங்கஏறு அனையான்.21.-சல்லியன் தருமன்மேற்போருக்கு வருதல்.
ஆய போதினில் – இவ்வாறான அச்சமயத்தில், – குருபதி
பதாகினிக்கு அதிபதி ஆய பூபதி – குருகுலத்துக்குத் தலைவனான
துரியோதனனது சேனைக்குத் தலைவனாகிய சல்லியராசன்,-காயும் –
கொதிக்கிற, வெம் – கொடிய, கனல் – நெருப்பைச்சொரிகிற, கண்ணினன் –
கண்களையுடையவனும், செவி உற – தன்காதினை யளாவ, கார்முகம் குனித்த
-வில்லை வளைத்து நாணியையிழுத்த, செம் கரத்தான் – சிவந்த
கையையுடையவனும், தீய ஆகிய – கொடியவையான, சிலீமுகம் – அம்புகளை,
உரன் உற – வலிமை பொருந்த, சொரிதரு – மிகுதியாக எய்கிற, சிங்கம் ஏறு
அனையான் – ஆண்சிங்கம்போன்றவனுமாய்,- அ மாயவன் புகல் மொழிப்படி
தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான் – கண்ணன் கீழ்ச்சொன்ன
வார்த்தையின்படியே சிறந்த தருமபுத்திரன்மேல் துரிதமாக வந்தான்; (எ – று.)
பூபதி- பூமிக்குத் தலைவன். கார்முகம் என்றது – தொழிலிற் சிறந்த
தென்றும் [கர்மம் – தொழில்], சிலீமுகம் என்றது – கூர்மையை
நுனியிலுடையதென்றும் [சிலீ – கூர்மை] காரணப்பொருள்படும். வீரனுக்கு
ஆண்சிங்கம் – பலபராக்கிரமங்களாலும், நடையாலும், உவமம். தற்காலத்தில்
குருநாட்டையாள்பவன் துரியோதனனாதலால், குருபதி யெனப்பட்டான்.
எதிரி தேர் வரும் வன்மை கண்டு, இமிழ் முரசு எழுதிய கொடி
நராதிபனும்,
கதிரின் ஏழ் பரித் தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி,
முதிர மேல்வரும் கணைகளைக் கணைகளால், முனை கொடு முனை
கொள் கார் விசும்பில்
பிதிர் படும்படி தொடுத்தனன், தொடித் தடக் கையினில் பிடித்த
வில் குனித்தே.22.-தருமன் சல்லியனை யெதிர்த்துப்போர்தொடங்கல்.
எதிரி தேர்வரும் வன்மை கண்டு – (தன்னை)
எதிர்ப்பவனானசல்லியனது தேர் வருகிற வலிமையைப் பார்த்து,-இமிழ் முரசு
எழுதியகொடி நர அதிபனும் – பேரொலிசெய்கிற முரசவாத்தியத்தின்
வடிவத்தையெழுதிய கொடியையுடைய தருமராசனும், – கதிரின் ஏய் பரி
தேரினும் கடிய – ஏழுகுதிரைகளையுடைய சூரியனது தேரைக்காட்டிலும்
விரைவுள்ள, தன்கவனம்மான் தேர் – விரைந்த நடையையுடைய குதிரைகள்
பூட்டிய தனது தேரை, எதிர் கடவி – எதிரிலேசெலுத்தி,-தொடி தட
கையினில் பிடித்த வில் குனித்து – தொடியென்னும் வளையையணிந்த
பெரிய தனது கையிற்பிடித்த வில்லை வளைத்து,-முதிர மேல் வரும்
கணைகளை – மிகுதியாகத் தன்மேல் வருகிற (சல்லியனது) அம்புகளை,
கணைகளால் – (தனது) அம்புகளால், முனைகொடு முனை – நுனியால் நுனி,
கார் கொள் விசும்பில் பிதிர் படும்படி – கருநிறங் கொண்ட ஆகாயத்திலே
பொடியாய் விடும்படி, தொடுத்தனன்-; (எ – று.)
தனதுஅம்புகளால் எதிரியின் அம்புகளைத்தாக்கித் தனது
அம்புமுனையைக்கொண்டு எதிரியின் அம்புமுனையை வழியிடையிலேயே
பொடியாக்கும்படி அம்புசெலுத்தின னென்பதாம்.
கொடிஞ்சி மா நெடுந் தேர்களில் பூட்டிய குரகதக் குரம் படப் பட,
மண்
இடிஞ்சு, மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது;
அவ் இரவு
விடிஞ்சதாம் எனப் பரந்தது, அத் தேர்களின் மின்னிய மணிகளின்
வெயில்; போய்ப்
படிஞ்ச தூளி ஓர் நடம் பயில் அரங்கினில் பரப்பிய எழினி
போன்றதுவே.23.அவர்கள்தேர் நெருங்கியதைஇதில் வருணிக்கிறார்.
கொடிஞ்சி – கொடிஞ்சியென்னுமுறுப்பையுடைய, மால் –
பெரிய, நெடு – உயர்ந்த, தேர்களில் -(அவ்விருவருடைய) இரதங்களில்,
பூட்டிய – பூட்டப்பட்டுள்ள, குரகதம் – குதிரைகளின், குரம் – குளம்புகள்,
படபட – மேற்படுந்தோறும், மண் இடிஞ்சு – தரை இடிபடுதலால், மேல் எழு
-மேலே கிளம்புகிற, தூளி – புழுதி, முன் பகல் வரும் இரவினை நிகர்த்தது-
பகற்பொழுதுக்குமுன்னே வருகிற இராத்திரியைப் போன்றது; அ இரவு
விடிஞ்சது ஆம் என – அந்த இராப்பொழுது கழிந்து சூரியோதயமானது
போல, அ தேர்களின் மின்னிய மணிகளின் வெயில் – அந்தத்தேர்களிலே
விளங்குகிற இரத்தினங்களின் வெவ்விய ஒளி, பரந்தது – பரவிற்று; போய்
படிஞ்ச தூளி – (அவ்விரத்தினங்களின்மேற்) சென்றுபடிந்த புழுதி, ஓர் நடம்
பயில் அரங்கினில் பரப்பிய எழினி போன்றது – கூத்தாடுமிடத்திற்
பரப்பப்பட்டதொரு திரைச்சீலையை யொத்தது; (எ – று.)
முதல்வாக்கியத்தில்- இருட்சியையுண்டாக்கும் புழுதிக்கு
இருட்பொழுதான இராத்திரியையும், இரண்டாம் வாக்கியத்தில் –
அப்புழுதியின்அடர்த்தியாலான இருட்சி தேர்களின் இரத்தினகாந்தியால்
நீங்கினமைக்குச்சூரிய காந்தியால் இருள் ஒழிதலையும், மூன்றாம்
வாக்கியத்தில் – பின்புஅவ்விரத்தினங்களின் மேற்படிந்த புழுதிக்கு
நர்த்தனசாலையில் மறைவுக்காகஇடப்படும் கரியதிரைச் சீலையையும்
உவமைகூறினாரென அறிக. உவமையணி. கொடிஞ்சி – தேரினுறுப்பு.
குரகதம் – (ஒற்றைக்)குளம்புகளால் செல்வது.
தன் பெருந் தனிச் சங்கினை முழக்கினன், தருமன் மா மதலை,
வெம் போரில்;
வன் பெரும் பணைச் சங்கினை முழக்கினன், மத்திராதிபன்
திருமகனும்;
நன் பெருந் துளைச் சங்குகள் எழுப்பிய நாதம் வான் முகடு உற
நண்ணி,
மின் பெரும் புயல் ஏழும் ஒத்து அதிர்தலின், மிகு குரல் தனிதம்
ஒத்து உளதே.24.-இருவரும் சங்கநாதஞ்செய்தல்.
தருமன் மா மதலை – யமனது சிறந்த குமாரனான
யுதிட்டிரன், வெம்போரில் – கொடிய யுத்தத்தில், தன் பெரு தனி சங்கினை-
தனது பெரிய ஒப்பில்லாத சங்கத்தை, முழக்கினன் – (வாயில்வைத்துஊதி)
ஒலிப்பித்தான்; மத்திர அதிபன்திருமகனும் – மத்திரதேசத்தரசனது சிறந்த
புத்திரனான சல்லியனும், வல் பெருபணை சங்கினை – (தன்னுடைய) வலிய
பெருமையுள்ள பருத்த சங்கத்தை, முழக்கினன் – ஒலிப்பித்தான்; (இவ்வாறு),
நல் பெரு துளை சங்குகள் – அழகிய பெரிய உள்துளையுள்ள சங்கங்கள்,
எழுப்பிய – உண்டாக்கின, நாதம் – ஓசை, வான் முகடு உற – ஆகாயத்தின்
மேலிடத்தை யளாவ, நண்ணி – சேர்ந்து, மின் பெரு புயல் ஏழும் ஒத்து
அதிர்தலின் மிகு குரல் தனிதம் ஒத்து உளது – மின்னுகிற பெரிய எழுவகை
மேகங்களும் ஒருமித்து ஆரவாரித்தலால் மிக்க முழக்கத்தையுடைய இடியைப்
போன்றுள்ளது; (எ – று.)
கற்பாந்தகாலத்தில்ஏழுமேகங்களும் ஒருங்கேயெழுந்து ஒலிக்கிற
இடியின் முழக்கத்தைப் போன்றது, தருமன் சல்லியன் என்ற அவர்கள் செய்த
சங்கநாத மென்பதாம்: உவமையணி. வெற்றிக்கு அறிகுறியாகவும், போரில்
உற்சாகம் நிகழ்தற்பொருட்டும், சங்கத்தொனிசெய்தல், இயல்பு. புயல்ஏழ் –
சம்வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலாவர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி,
நீலவர்ணம் என்பன.
வில் எடுத்தனர், வலி உடை நிலையினர், வீக்கு நாண் விரல்களின்
தெறித்து,
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர், வடிக் கணை முனை
உற அடைசி,
செல் எடுத்த பேர் இடி என முறை முறை தொடுத்தனர்,
தேர்களும் செலுத்தி-
கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணிக் கழுத்து உடையவனுமே
அனையார்.25.-இருவரும் விற்போர்செய்தல்.
கல் எடுத்து – மலைகளைக் கையில் ஏந்திக்கொண்டு, எதிர்
மலைந்த – (ஒருவரோடு ஒருவர்) எதிர்த்துப் போர்செய்த, வாலியும் மணி
கழுத்து உடையவன்உம் ஏ – வாலிசுக்கிரீவர்களையே, அனையார் –
ஒத்தவராகிய தருமனும் சல்லியனும்,- தேர்களும் செலுத்தி – (தங்கள்)
தேர்களை (ஒன்றோடு ஒன்று நெருங்கச்) செலுத்திக்கொண்டு, வில் எடுத்தனர்
– (கையில்) வில்லை யேந்தியவர்களாய், வலி உடை நிலையினர் –
வலிமையுள்ள (விற்போர்க்குஉரிய) நிற்கும் நிலையையுடையவர்களாய், மல்
எடுத்ததோள் வலன் உற வளைத்தனர் – பலம்மிக்க தோள்களின் வலிமை
பொருந்த வில்லை வளைத்தவர்களாய், வீக்கும் நாண் – (வில்லிலே) பூட்டிய
நாணியை, விரல்களின் தெறித்து- கைவிரல்களால் தெறித்து ஓசையுண்டாக்கி,
வடிகணை முனைஉற அடைசி – கூரிய அம்புகளைப் போர்க்குப்
பொருந்துமாறு வில்முனையில்வைத்து, செல் எடுத்த பேர் இடி என –
மேகங்கொள்ளுகிற பெரிய இடியைப்போல, முறை முறை தொடுத்தனர் –
ஒருவர்மேல் ஒருவர் பிரயோகித்தார்கள்; (எ – று.)
நிலை- போரில்வில்வளைத்து அம்பினை யெய்வார்க்கு உரிய நிலை.
சாபத்தாற் பெண்வடிவமான ருக்ஷரஜஸ்என்கிற வானரராசனது வாலின்
அழகைக் கண்டு காதல்கொண்ட இந்திரனுக்கு அப்பெண் குரங்கினிடம்
பிறந்தவன் வாலி யென்றும், அவ்வாறே அதன்கழுத்தினழகைக்கண்டு காமுற்ற
சூரியனுக்கு அதனிடத்தில் தோன்றியவன் சுக்கிரீவனென்றும் உணர்க. வாலீ-
வாலில்வலிமையுடையவனென்று காரணப்பொருள்படும்; வாலிசுக்கிரீவர்
தம்முள்மாறு கொண்டு பொருதமை, இராமாயணத்திற்பிரசித்தம். சுக்கிரீவன்
என்ற பெயர் – அழகியகழுத்துடையவனென்று பொருள்படும்; அப்பெயரின்
பொருளை ‘மணிக்கழுத்துடையவன்’ என்றார் செல் – (விரைந்து)
செல்லுதல்பற்றி மேகத்துக்கு வந்த காரணப்பெயர். ஈற்றடி – உவமையணி.
எய்த அம்புகள் இருவர் மெய்யினும் படாது, இடை இடை
எஃகு உடைத் தலைகள்
கொய்த அம்புகள் ஆகியே முழுவதும் விழுந்தன; கூறுவது
எவன்கொல்!
கைதவம் புகலுதற்கு இலா எண்ணுடைக் கருத்தினர்,
திருத்தகு வரத்தால்
செய் தவம் புரை அறப் பலித்தனையவர், திருக் கணும் கைகளும்
சிவந்தார்.26.-இருவரும் சிறிதுபொழுதுசமமாகப் பொருதல்.
எய்த அம்புகள் – (இரண்டுபேரும்) செலுத்திய பாணங்கள்,
இருவர் மெய்யினும் படாது – இரண்டுபேருடைய உடம்பிலும் படாமல், இடை
இடை – நடுவிலே நடுவிலே, எஃகு உடை தலைகள்கொய்த அம்புகள் ஆகி –
கூர்மையுடைய நுனி துணி்பட்ட பாணங்களாகி, முழுவதும் விழுந்தன –
எங்குங் கீழ்விழுந்திட்டன; கூறுவது என் கொல் – (அவர்கள்)
போர்த்திறத்தைப்பற்றிச் சொல்லவேண்டுவதென்ன? கை தவம்புகலுதற்கு இலா
எண் உடை கருத்தினர் – வஞ்சனையுள்ளதென்று சொல்லுதற்குச் சிறிதும்
இடமில்லாத நல்லெண்ணமுடைய மனத்தையுடையவர்களும், திரு தகு
வரத்தால் – மேன்மைபொருந்திய வரங்களைப் பெறும்படி, செய் – செய்த,
தவம் – தபசு, புரை அற – பழுது படாமல், பலித்து அனையவர் –
பயன்பட்டாற் போன்றவர்களுமான அவ்விருவரும், திரு கணும் கைகளும்
சிவந்தார் – (யுத்தாவேசத்தால்) அழகிய (தங்கள்) கண்களும் கைகளும்
செந்நிறமடையப் பெற்றார்கள்; (எ – று.)
வஞ்சகமானஎண்ணம் சிறிதும் இல்லாதவர்களும், நற்றவப்பயன் சித்தி
பெற்றார்போலத் திறன்பெற்றவர்களுமான தருமனும் சல்லியனும்
மிக்ககோபத்தாற் கண்சிவந்து இடைவிடாது விற்பிடித்து அம்புதொடுத்தலாற்
கைசிவந்து பொருகையில் இருவரும் ஒருவர்மேலொருவர் எய்த
அம்புகளெல்லாம் அவர்கள்மீது படாமல் தம்மில் ஒன்றோடொன்று தாக்கி
அழிந்து இடையிற் கீழ்விழுந்திட்டன; இப்படிகுறிதவறாமல் எதிரெதிரே
அம்புதொடுத்துப் பொருதவியப்புக் கூறுதற்கு அரிது என்பதாம்.
கண்களும்கைகளும் சிவந்தார் – உயர்திணைதொடர்ந்த அஃறிணைச்
சினைப்பெயர் அவ்வுயர்திணைமுடிபையே கொண்ட திணைவழுவமைதி
கிரித் தடங் குவடு அணைந்த கேசரி நிகர் சல்லியன்-முரச கேதனன்தன்
பரித் தடந் தனித் தேர்
விடும் பாகனைப் பாணம் ஒன்றால் தலை துணித்து,
வரித் தடஞ் சிலை நாண் அறுத்து, ஒரு முனை வாளியால், வடிக் கணை
ஒன்றால், விரித்த வெண்
குடை மகுடமும் ஒடித்தனன்-வில் வலோர் எவரினும் மிக்கோன்.27.-சல்லியன் தருமனது பாகனையும்வில்லையும்
குடையையும் அழித்தல்.
(பின்பு),-வில் வலோர் எவரினும் மிக்கோன் – விற்போரில்
வல்லவர்யாவரினுஞ் சிறந்தவனாகிய, தட கிரி குவடு அனைய கேசரி நிகர்
சல்லியன் – பெரியமலைச்சிகரத்தையொத்தவனும் ஆண்
சிங்கம்போன்றவனுமான சல்லியன்,- முரசகேதனன்தன் – முரசவாத்தியத்தின்
வடிவமெழுதிய கொடியையுடைய தருமனது, பரி தட தனிதேர் விடும்
பாகனை- குதிரைகள் பூண்ட பெரிய ஒப்பற்ற தேரைச் செலுத்துஞ்
சாரதியை, பாணம்ஒன்றால் தலைதுணித்து – ஓரம்பினால் தலையை யறுத்து,-
வரி தட சிலைநாண் – கட்டமைந்த பெரிய வில்லின் நாணினை, ஒரு முனை
வாளியால் – கூர்நுனியையுடைய அம்பொன்றினால், அறுத்து-, வடி கணை
ஒன்றால் – கூரியஅம்பொன்றினால், விரித்த வெள்குடைமகுடமும்
ஒடித்தனன் -பரந்தவெண்குடையின் கலசத்தையுந்துணித்திட்டான்; (எ – று.)
‘கிரித்தடங்குவடனைய”கேசரிநிகர்’ என்ற இரண்டும் – சல்லியனுக்கு
அடைமொழி. சலிப்பில்லாத உறுதிக்கும் வலிமைக்கும் மலையையும், பல
பராக்கிரமங்களுக்கு ஆண்சிங்கத்தையும் உவமைகூறினார். கேஸரம் – பிடரி
மயிர்; அதனையுடையது கேஸரீ யெனக் காரணக்குறி.
வலவன் வீழ்ந்ததும், தனுவின் நாண் அற்றதும், மனத்து
அழுக்காறு இலா வாய்மைப்
புலவன் வெண் குடை ஒடிந்ததும், மேல் வரு போற்றலன்
ஏற்றமும் பொறாமல்,
குலவு திண் சிலைக் குரிசிலை, தம் முனைக் கொண்ட வீரியம்
எலாம் கொண்டான்-
கலவ மா மயில் ஒழித்து, பஞ்சானனம் எழுதிய தனிக் கொடிக் கந்தன்.28.-அதுகண்டு வீமன் வந்து சல்லியனுக்குமாறுசெய்தல்.
மனத்து அழுக்கு இலா – மனத்திலே களங்கமில்லாத, வாய்மை
– சத்தியத்தையுடைய, புலவன் – தேர்ந்த அறிவுடையவனானதருமபுத்திரனது,
வலவன் – தேர்ப்பாகன், வீழ்ந்ததும் – (சல்லியனம்புகளால்) தலையற்று
விழுந்ததையும், தனுவின் நாண் – வில்லின் நாணி, அற்றதும் –
அறுபட்டதையும், வெள் குடை – ஒற்றை வெண்கொற்றக்குடை, ஒடிந்ததும் –
ஒடிபட்டதையும், மேல் வரு – (மற்றும்தருமன்) மேல் எதிர்த்துவருகிற,
போற்றலன் – பகைவனான சல்லியனது, ஏற்றமும் – மேம்பாட்டையும்,
பொறாமல் – (பார்த்து) மனம் பொறுக்காமல்,-கலவம் மாமயில் ஒழித்து
பஞ்சானனம் எழுதிய தனிக்கொடி கந்தன் – தோகையையுடைய பெரிய
மயிலின் வடிவத்தை நீக்கிச் சிங்கத்தின் வடிவத்தையெழுதிய ஒப்பற்ற
துவசத்தையுடைய முருகக்கடவுள் போன்ற வீமன்,- குலவுதிண்சிலை
குரிசிலை – விளங்குகிற வலிய வில்லைக்கொண்ட வீரனானசல்லியனை, தம்
முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான் – தனதுதமையனான
தருமனிடத்தினின்று (சல்லியன்) கவர்ந்துகொண்ட சிறப்புக்களையெல்லாம்
தான் அவனிடத்தினின்றுமீண்டும் கவர்ந்து கொண்டான்;(எ – று.)
என்றது,தன்தமையனது பாகன் வில் குடை இவற்றை ஒழித்திட்ட
சல்லியனது தேர்ப்பாகனையும்வில்நாணையும்குடையையும் வீமன் தானெய்த
அம்புகளால் அழித்து எதிர்செய்தனன் என்றவாறாம்; சல்லியனால் தருமனுக்கு
உண்டாக்கப்பட்ட வலிமைக்குறைவு இங்ஙனம் தருமனுக்கு வீமன் துணைவந்து
சல்லியனுக்கு எதிர்செய்தலால் ஒழிதல் பற்றி ‘தம்முனைக்கொண்ட
வீரியமெல்லாங்கொண்டான்’ என்றார்: இனி, ‘கொடுத்தான்’ என்ற
பாடத்துக்கு,தருமனுக்கு வீமன் வேறுபாகனையும் வில்லையும் குடையையும்
கொண்டுவந்துகொடுத்தானென்று உரைத்தல் சிறப்பன்று; மேற்கவியில் வருகிற
“தனதுதிண்கையிற் சரத்தினும் தம்பிகைச்சரம் விரைந்துடற்றலின்” என்பதுங்
காண்க.வலவன் – தேர்ப்பாகன். அழுக்கு – தீயசிந்தை. சுப்பிரமணியமூர்த்தி
தனதுகொடியில் மயில்வடிவை யொழித்துச் சிங்கவடிவைக்கொண்டு
வந்தாற்போன்றவன் வீமனென்றார், வீமனுக்குச் சிங்கக்கொடியாதலின்;
இதனால், பலபராக்கிரமங்களில் வீமன் குமரக்கடவுள் போல்பவனென்பது
பெறப்படும். அவனது மயிற்கொடியினும் இவனது சிங்கக்கொடி
ஆற்றலுக்கேற்றதாமென்ற கருத்துந்தோன்றும். உபமானத்துக்கு உள்ள
மயிற்கொடியுடைமையினும், உபமேயத்துக்கு உள்ள சிங்கக்கொடியுடைமை
யாகிய உயர்வு தோன்றக் கூறியதனால், இது மிகையொற்றுமையுருவகவணியின்
பாற்படும். பஞ்சாநநம் – பஞ்ச-விரிவான, ஆநநம் – முகத்தையுடையது
என்றுசிங்கத்துக்குக் காரணப்பெயர். ‘மனத்தழுக்காறிலா, சிலைக்கணைசில,
வீரியமெலாங்கொடுத்தான், மயிலொழிந்து’ என்பன பாடபேதங்கள்.
தனது திண் கையின் சரத்தினும் தம்பி கைச் சரம் விரைந்து
உடற்றலின், தடக் கைக்
கன தனுத்தனை ஊன்றி நின்று, இருவரும் கணக்கு அற மலையுமா
கண்டான்-
‘எனது தோள்களில் இளையவன்தனக்கு வேறு யாது’ எனும்
எண்ணுடை மனத்தான்,
வினதை காளையோடு உவமை கூர் வலியினான், வேந்தர் யாரினும்
புகழ் மிக்கோன்.29.-வீமனும் சல்லியனும்பொருவதைத் தருமன் பார்த்து
நிற்றல்.
விநதை காளையோடு – விநதையின்மகனானகருடனோடு,
உவமைகூர்- ஒப்புமை மிக்க, வலியினான்-பலத்தையுடையவனும்,
வேந்தர்யாரினும் புகழ் மிக்கோன் – அரசர்களெல்லாரினுங் கீர்த்தி
மிக்கவனுமான தருமன்.- தனது திண்கையின் சரத்தினும்தம்பி
கைச்சரம்விரைந்து உடற்றலின் – தன்னுடைய வலியகையினா லெய்யப்பட்ட
அம்புகளினும் தனது தம்பியான வீமன் கையாலெய்யும் அம்புகள்
துரிதமாகச்சென்று இலக்கையழித்தலால்,-எனது தோள்களில் இளையவன்
தனக்கு வேறுயாது எனும் எண் உடை மனத்தான் – ‘எனது தோள்களினும்
எனது தம்பிக்கு வேறுபாடு என்ன?’ என்னும் எண்ணமுடைய
மனத்தையுடையவனாய்,- தடகை கன தனுத்தனை ஊன்றி நின்று – (தனது)
பெரிய கையிற் பிடித்துள்ள வலிய (நாணற்ற) வில்லின் தண்டத்தை
(ஊன்றுகோலாகக்கொண்டு) ஊன்றி நின்று, இருவரும் கணக்கு அற மலையும்
ஆ கண்டான் – இரண்டுபேரும் அளவில்லாமற் போர்செய்யும்
விதத்தைப்பார்த்தான்; (எ – று.)
கீர்த்திமிக்க தருமன், வலிமையிற் சிறந்தவனாயினும், தன்
கையம்புகளினும் வீமன் கையம்பு விரைந்துசென்று பகைவனது சாரதி
முதலியவற்றை அழித்தலால், தான் சல்லியனோடு மீண்டும் போர்செய்யத்
தொடங்காமல், தனதுகையிலுள்ள விற்கழுந்தை ஊன்றிக்கொண்டு நின்று,
வீமன்சல்லியனோடு சமமாகப் பொரும் விநோதத்தைப் பார்த்திருந்தான்.
இப்படிதன்னை யழித்தவனைத்தான் எதிர்த்து அழிக்கத் தொடங்காமல்
வேறொருவன்இடையில் வந்து தன் எதிரியோடு பொருதலைப் பார்த்துத்
தான் சும்மாஇருத்தல் தருமனது பலத்துக்கும் புகழுக்கும்
குறைவாகாதோவெனின்,- தனதுதோள்களோடு தம்பியோடு
வாசியில்லையென்று வீமனைத் தனதுதோளாகவேபாவித்து நிற்கும்
அபிமானமுடையவனாதலால், அவன் பொருதலைத் தனதுதோள்பொருவதாக
ஒற்றுமை நயம்படக் கருதிச் சும்மாவிருந்தமைபற்றி அதுகுறைவாகாது என்க.
“ராமஸ்ய தக்ஷிணோ பாஹு :” என்றதுங் காண்க. உறுப்பாகிய தோள்
போலவே தம்பி சிறந்த அங்கமாய்ச் சமயம் அறிந்துவிரைந்து உதவுந்
தகுதியுடையானென்க.
கருடன்- காசியபமுனிவனது மனைவிமார்களுள், விநதையினிடம்
பிறந்தவன். பக்ஷிராசனும், திருமாலுக்கு வாகனமுமாகிய கருடன் பலத்திற்
சிறந்தவனென்பது பிரசித்தம்.
எந்த எந்த வெஞ் சாயகம் மறையுடன் இமையவர் முனிவரர்
கொடுத்தார்,
அந்த அந்த வெஞ் சாயகம் அடங்கலும் அவர் அவர் முறைமையின்
தொடுத்தார்;
முந்த முந்த மற்று உள்ள ஆயுதங்களும், முடி முதல் அடி அளவாக,
உந்த உந்த, வெங் குருதியும் மூளையும் உக உக,
உடற்றினார்-உரவோர்.30.-வீமனும் சல்லியனும்சமமாகப் பொருதல்.
எந்த எந்த வெம் சாயகம் – எந்தெந்தக் கொடிய
அம்புகளை,மறையுடன் – வேதமந்திரத்துடனே, இமையவர் – தேவர்களும்,
முனிவரர் -சிறந்த இருடிகளும், கொடுத்தார் – (முன்பு தங்களுக்குக்)
கொடுத்துள்ளார்களோ, அந்த அந்த வெம் சாயகம் அடங்கலும் – அந்தந்தக்
கொடிய அம்புக ளெல்லாவற்றையும், அவர் அவர் – அவ்விரண்டுபேரும்,
முறைமையின் தொடுத்தார் – வரிசையாக (ஒருவர்மே லொருவர்)
பிரயோகித்தார்கள்; முந்த முந்த – ஒருவரினும் ஒருவர்முற்பட, மற்று உள்ள
ஆயுதங்களும் – (அம்பு தவிர) மற்றுமுள்ள ஆயுதங்களையும், முடிமுதல்
அடி அளவு ஆக – தலைமுதற் கால்வரையிலும், உந்த உந்த – மிகுதியாகத்
தாக்கவும், (அதனால்) வெம்குருதிஉம் மூளைஉம் உக உக – வெவ்விய
இரத்தமும் மூளையும் மிகுதியாகச் சிந்தவும், உரவோர் – வலிமையுடைய
அவ்விருவரும், உடற்றினார் – உபயோகித்துப் போர்செய்தார்கள்; (எ – று.)
இமையவர் – இமையில் (மூடாமையாகிய) விசேஷமுடையவர், முடி –
மயிர் முடியப்படுவதெனக் காரணப்பெயர்.
மத்திரப் பெயர்ச் சிங்கஏறு அனையவன் வன் கை வான்
படைகளின் மயங்கி,
பத்திரப் பெயர்ப் பருத்த கைச் சிறுத்த கண் பாய் மதப் பரூஉப்
பகடு அனையான்,
சித்திரக் கதிர் மணி முடிப் பீடிகைத் திண் திறல் திகிரி அம்
தேர்நின்று
அத்திரத்தை விட்டு, ஒரு தனிக் கதையுடன் அதிர்ந்து போய்,
அவனியில் ஆனான்.31.- வீமன் கலங்கிக் கதையுடன் தேரினின்று இறங்கல்.
பத்திரம் பெயர் – பத்திரமென்ற பெயரையும், பருத்த கை –
பருத்த துதிக்கையையும், சிறுத்த கண் – சிறிய கண்களையும், பாய் மதம் –
மிக்குவழிகிற மதநீரையுமுடைய, பரூஉ பகடு – பருத்த ஆண்யானையை,
அனையான் – ஒத்தவனான வீமன், மத்திரன் பெயர் சிங்கம் ஏறு
அனையவன் – மத்திரராசனென்னும் பெயரையுடைய ஆண்சிங்கத்தைப்
போன்ற வீரனது, வல் கை – வலிய கையால் வீசப்பட்ட, வான்படைகளின்
– சிறந்த ஆயுதங்களால், மயங்கி – சிறிது மனந்தடுமாறி,- அத்திரத்தை
விட்டு – அஸ்திரங்களைக்கொண்டு போர்செய்தலையொழிந்து, ஒரு
தனிகதையுடன் – ஒப்பற்ற தனது (சத்துருகாதிநியென்ற)
ஒருகதாயுதத்துடனே,- சித்திரம்-ஆச்சரியகரமான, கதிர் – ஒளியையுடைய,
மணி – இரத்தினங்களைப்பதித்த, முடி – சிகரத்தையும், பீடிகை –
அடிப்பீடத்தையும், திண் திறல் திகிரி – மிக்க வலிமையுடைய
சக்கரங்களையுமுடைய, அம் தேர்நின்று – அழகிய (தனது) தேரினின்று,
அதிர்ந்துபோய் அவனியில் ஆனான் – கர்ச்சித்துக்கொண்டு நிலத்தில்
இறங்கிச்சென்றான்; (எ – று.)
சல்லியனோடு அம்புகளைக்கொண்டு போர்செய்து வெல்லமுடியாதென்று
வீமன் உடனே தனக்குஉரிய கதாயுதத்துடன் தேரினின்று தரையில்
இழிந்தனனென்பதாம். கீழ்ப்பதினேழாங் கவியிற் கூறியபடி மிக வலிய
வீமனினும் மேம்பட்டவன் சல்லியனென்பது இங்கு விளங்குதலால் வீமனுக்கு
யானையையும், சல்லியனுக்குச் சிங்கத்தையும் உவமைகூறினார். பத்திரம்
என்பது – மூவகையானையுள் முதலதாய்ச் சிறந்தது: இதன் இலக்கணம் –
தேனின் நிறம்போன்ற நிறமுள்ள தந்தமும், மிக்க வலிமையும், ஒத்த
அவயவமும், வட்டமான வடிவமும், அழகியமுகமும், அவயவச்சிறப்பும்,
ஏழுமுழம் உயரமும் எட்டுமுழ நீளமும், பத்துமுழ வயிற்றுச் சுற்றளவும்,
பசுமையான மதநீரும் உடையதாமென்று யானைநூல் கூறும். பரூஉப்பகடு =
பருப்பகடு; குற்றெழுத்தளபெடை. சித்திரக்கதிர்மணியென்றது, பீடிகைக்கும்
அடைமொழி. பீடிகை – ஆசனம்.
பகைவன் ஏறிய தேர் விடும் வலவனும், திகிரியும், பாய் பரிமாவும்,
புகை எழும்படி இமைத்த கண் விழிக்கும் முன், பொடி எழ இடி
எனப் புடைப்ப,
வகை கொள் தார் முடி மத்திரத் தலைவனும் மா மறத் தோமரப்
படையால்,
மிகை கொள் வன் திறல் வீமனை நெற்றியில் எற்றினன்,
வெற்றி கூர்ந்திடவே.32.-வீமன்கதைகொண்டுதாக்கச் சல்லியன் தோமரத்தால்
மோதுதல்.
பகைவன் ஏறிய – எதிரியான சல்லியன் ஏறியுள்ள, தேர் –
தேரை, விடும் – செலுத்துகிற, வலவனும், – பாகனும், திகிரியும்-தேர்ச்
சக்கரங்களும், பாய் பரிமாவும் – பாய்ந்துசெல்லும்தன்மையுள்ள
தேர்க்குதிரைகளும், பொடி எழ – பொடியாய்ச் சிதறும்படி, (வீமன்), இமைத்த
கண் விழிக்கும் முன் – ஒருமாத்திரைப்பொழுதினுள், இடி என – இடிபோல,
புகை எழும்படி – புகை கிளம்பும்படி, புடைப்ப – (கதாயுதத்தால்) தாக்க,-
வகை கொள் தார் முடி மத்திரம் தலைவனும் – அழகுகொண்ட
போர்மாலையைச் சூடிய முடியையுடைய சல்லியனும், மா மறம் தோமரம்
படையால் – மிக்கவலிமையையுடைய தோமரமென்னும் ஆயுதத்தால், மிகை
கொள் வல் திறல் வீமனை – மிகுதியாகக்கொண்ட கொடிய
வலிமையையுடைய வீமசேனனை, வெற்றி கூர்ந்திட – (தனக்குச்)
சயம்மிகும்படி, நெற்றியில்எற்றினன் – நெற்றியில் தாக்கினான்; (எ – று.)
தோமரம் – இருப்புலக்கை; கைவேலுக்கும், பேரீட்டிக்கும் இப்பெயர்
உண்டு. இமைத்தகண் விழிக்குமுன் – ஒருகால் மூடிய கண்ணைத்
திறக்குமளவுக்குமுன். தார் – இங்கே, தும்பைப் பூமாலை.
தோமரம்தன்னால் வாயுசுதன் அமர் அழிந்த போதில்,
ஏ மரு வரி வில் தானை இரு பெருஞ் சேனையோரும்,
மா மரு தடந் தேர், வாசி, மத்த வாரணங்கள், ஊர்ந்து,
தீ மரு கானம் என்ன, தனித் தனிச் செருச் செய்தாரே.33.-வீமன் வலியழிதலும்,இருசேனையும் பொருதலும்.
தோமரந்தன்னால் – (சல்லியனது) தோமராயுதத்தால்,
வாயுசுதன் – வாயுகுமாரனான வீமன், அமர் அழிந்த போதில் – போரில்
வலிமையொழிந்த பொழுது, ஏ மரு வரிவில் தானை – அம்புகள் பொருந்திய
கட்டமைந்த விற்படையையுடைய, இரு பெரு சேனையோரும் – இரண்டு
பக்கத்துப் பெரிய சேனைவீரர்களும், மா மரு தடதேர் – குதிரைகள் பூண்ட
பெரிய தேர்களையும், வாசி – குதிரைகளையும், மத்த வாரணங்கள் –
மதயானைகளையும், ஊர்ந்து – செலுத்திக் கொண்டு, தீ மரு கானம் என்ன –
நெருப்புப்பற்றிய காடென்னும்படி (உக்கிரமாக), தனி தனி செரு செய்தார் –
தனித்தனியே (ஒருவரோடொருவர்) போர்செய்தார்கள்; (எ – று.)
மருவுஎன்பது, மரு என விகாரப்பட்டது, தானை – இங்கே, ஆயுதம்.
இதுமுதற் பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும்
நான்காஞ்சீரும் விளச்சீர்களும் மற்றநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்கு கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்; இவற்றில், நான்கு ஆறாஞ்சீர்கள்
தேமாச்சீர்களாகவே நிற்கும்.
தேரவன் மைந்தன் மைந்தர், சித்திரசேனன், ஏனைச்
சூரியவன்மன், சித்ரகீர்த்தி, முச் சுடரோடு ஒப்பார்,
வீரரில் வீரன் ஆன வெம் பரி நகுலனோடும்
போரில் வந்து எதிர்ந்து, தாதை போயுழிப் போயினாரே.34.-கர்ணன் புத்திரர்மூவரும் நகுலனோடு பொருது இறத்தல்.
முச் சுடரோடு ஒப்பார் – (சூரியன் சந்திரன் அக்கினி
யென்னும்) மூன்று சோதிகளோடு ஒப்பவர்களான, தேரவன் மைந்தன்
மைந்தர்- சிறந்த தேரையுடைய சூரியனது மகனான கர்ணனது
புத்திரர்களாகிய,சித்திரசேனன் ஏனை சூரியவன்மன் சித்ரகீர்த்தி –
சித்திரசேனனும் மற்றைச்சூரியவன்மன் சித்ரகீர்த்தியென்பவரும் ஆகிய
மூன்றுபேரும்,- போரில் வந்து-,வீரரில் வீரன் ஆன வெம்பரி நகுலனோடும்
– வீரர்களுட் சிறந்த வீரனானவெவ்விய குதிரைத்தொழிலில் வல்ல
நகுலனுடனே, எதிர்ந்து – எதிர்த்து,தாதை போயுழி போயினார் –
தங்கள்தந்தையான கர்ணன் சென்ற விடத்துக்குச்சென்றார்கள்; (எ – று.)
முந்தினநாளில் தந்தை யிறந்தாற்போல மறுநாளில் நகுலனாற்
கொல்லப்பட்டு மைந்தரும் இறந்து வீரசுவர்க்கஞ் சேர்ந்தன ரென்பதாம்.
மைந்தர் மரணமடைந்தார்களென்ற பொருளை ‘தாதைபோயுழிப் போயினார்’
என வேறொருவகையாற் கூறினதனால், பிறிதினவிற்சியணி. போயுழி – போய
வுழியென்பதன் தொகுத்தல்.
ஒற்றைத்தனியாழியையும் ஏழுகுதிரைகளையு முடையதாய் நாள்தோறும்
தவறாமல் உலகமுழுவதையுஞ் சுற்றிவருகிற வலியபெரிய சிறந்த
தேருடைமையால், சூரியன் ‘தேரவன்’ எனப்பட்டான்; அன்றி,
‘தேரவன்மைந்தன்’ என்பதற்கு – திருதராட்டிரனது தேர்ப்பாகனான
அதிரதனென்பவன் எடுத்து வளர்த்தமகனான கர்ணனென்றும்
பொருள்கொள்ளலாம். கர்ணபுத்திரர் மூவருள் சித்திரசேனன்
பிரதானனென்பதுதோன்ற, இடையில் ‘ஏனை’ என்ற சொற்கொடுத்துப்
பிரித்துக்கூறினார்; கீழ் 9-ஆம்கவியிலும் “தினகரன்கோமைந்தன்மைந்தன்
இருவோரொடுஞ் சேனையைக் கொண்டுற” என இவ்வேறுபாடு தோன்றக்
கூறியது காண்க. முறையே முச்சுடரை உவமைகூறியதில் முதற்சுடரான
சூரியன் இவனுக்கு உண்மையாக அமைகிற உயர்வையும் கருதுக. நகுலன்
குதிரையேறிப்பொருகையில் யாவரையும் வெல்லும் மகாவீரனாதலால் ‘வீரரில்
வீரனான வெம்பரி நகுலன்’ என்றார், முச்சுடருவமை – ஒளிமிகுதிக்கும்,
பகையிருளழித்தற்குமென்க. ‘சுடரோடொப்பார்’ – ஒப்புப்பொருள்
மூன்றனுருபுக்கு வந்தது, வேற்றுமைமயக்கம்.
தசை உற வளர்ந்த பொன்-தோள் சகுனியும், தனயர் ஆகி
இசையுடன் வளர்ந்த வீரர் இருவரும், இரத மேலோர்,
நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன,
விசையனது இளவலோடு செருச் செய்து, வெந்நிட்டாரே35.-சகுனியும்,அவன்மக்களிருவரும் நகுலனோடு பொருது
தோற்றல்.
தசைஉறவளர்ந்த – சதை மிகுதியாக வளரப்பெற்ற
பொன்தோள் – அழகிய தோள்களையுடைய, சகுனியும்-, தனயர் ஆகி –
(அவனது) புத்திரர்களாய், இசையுடன் வளர்ந்த – புகழோடு வளர்ந்த, வீரர்
இருவரும் – (உலூகன் சைந்தவன் என்ற) வீரர்களிரண்டுபேரும், இரதம்
மேலோர் – தேரின் மேலேறியவர்களாய், நிசை உறு மதம் மா நெருப்பு
எதிர்வந்து பட்டது என்ன – முகபடாம் பொருந்திய மதயானைகள்
நெருப்பெதிரிலேவந்து ஒடுங்கினாற்போல, விசையனது இளவலோடு செரு
செய்து வெந்இட்டார் – அருச்சுனனது தம்பியான நகுலனுடன் போர்செய்து
முதுகிட்டார்கள்;( எ – று.)
சகுனியின்மக்களை ‘இசையுடன் வளர்ந்த வீரர்’ என்றதனால், சகுனி
பழிப்புடன் வளர்ந்த போர்வீரனென்பது தொனிக்கும். நகுலனது ஆற்றல்
தோன்ற, ‘விசையனது இளவல்’ என்றார். விஜயன் என்ற பெயர் –
விசேஷமான வெற்றியையுடையவனென்று பொருள்படும்; தன்னைச்
சயிப்பவரெவருமில்லாதவ னென்று பொருள் கொள்ளுதலும் ஒன்று, என்ன-
உவமவுருபு.
புயங்க வெம் பதாகை நச்சுப் பொங்கு அழல் புங்கயம்
போல்வான்,
தயங்கு வெங் கழல் கால் கேதுதரன் எனும் தனு வலோனை,
வயங்கு வெஞ் சிறகர்ப் புங்க வயம் கொள் கூர் வாளி
ஒன்றால்,
‘இயங்குக, வானினூடு!’ என்று, இமையவன் ஆக்கினானே.36.-துரியோதனன்கேதுதரனென்ற வீரனைக்கொல்லுதல்.
புயங்கம் – பாம்பின் வடிவத்தையெழுதிய, வெம்-
பயங்கரமான,பதாகை – கொடியையுடைய, நஞ்சு பொங்கு அழல் புயங்கம்
போல்வான் -விஷத்தையும் சீறுகிற கோபத்தையுமுடைய பாம்பு
போல்பவனானதுரியோதனன்,-தயங்கு – விளங்குகிற, வெம் – (பகைவர்க்கு)
அச்சந்தருகிற,கழல் – வீரக்கழலையணிந்த, கால் – பாதத்தையுடைய,
கேதுதரன் எனும் -கேதுதரனென்கிற, தனுவலோனை – வில்லில்வல்ல
வீரனை,- வயங்கு -விளங்குகின்ற, வெம் – கொடிய, சிறகர் – இறகுள்ள,
புங்கம்-சிறந்த, வயம்கொள் – வெற்றியைக் கொண்ட, கூர் – கூர்மையுள்ள,
வாளி ஒன்றால்-ஓரம்பினால், வானினூடு இயங்குகஎன்று – சுவர்க்கலோகத்திற்
செல்வாயென்றுசொல்லி, இமையவன் ஆக்கினான் – தேவனாக்கினான்;(எ-று.)
என்றது, போரிலிறந்து வீரசுவர்க்கமடையும்படி செய்தனனென்றபடி:
கொன்றானென்ற பொருளை வேறுவகையாற் கூறியதனால், இதுவும் –
பிறிதினவிற்சியணி. ‘வானினூடு இயங்குக’ என்றது தனது ஆற்றலாற் கூறிய
வீரவாதம்.
புஜங்கம் – மார்பினாற் செல்வதென்றும், வளைந்து செல்வதென்றுங்
காரணப்பொருள் கொள்ளலாம். நஞ்சு – நச்சு எனவன்றொடராயிற்று. சிறகர்
– சிறகு என்னுங் குற்றியலுகரத்துக்கு, அர் – போலி. புங்கம்-அம்பின்
அடியுமாம்.
இரு பெருஞ் சேனையோரும் இப்படிச் செருச் செய் காலை,
தருமன் மா மதலைதன்மேல், சல்லியன்தானும், மீள,
பொரு பரித் தடந் தேர் உந்தி, புகை கெழு முனை கொள் வாளி
ஒரு தொடைதன்னில் ஓர் ஏழ் உரத்துடன் துரத்தினானே.37.-சல்லியன் மீண்டும்தருமன்மேற் போர்தொடங்கல்.
இரு பெரு சேனையோரும் – பெரிய இரண்டு
சேனையிலுள்ளவீரர்களும், இ படி செரு செய் காலை – இப்படி போர்செய்த
பொழுது,-சல்லியன் தானும் – சல்லியனும்,- மீள – மறுபடியும், பொரு பரி
தட தேர்உந்தி – போருக்குஉரிய குதிரைகள் பூட்டிய பெரிய தனது தேரைச்
செலுத்தி, -புகை கெழு முனை கொள் வாளி ஓர் ஏழ் – உக்கிரத்தாற்
புகையெழும்பும்நுனியைக்கொண்ட ஏழு பாணங்களை, ஒருதொடை தன்னில்-
ஒரேபிரயோகத்தில், தருமன் மா மதலைதன்மேல் – சிறந்த தருமபுத்திரன்
மீது,உரத்துடன் துரத்தினான் – வலிமையோடு செலுத்தினான்; (எ – று.)
ஒருதொடை தன்னில் – தொடுக்குந்தர மொன்றில்; ஒரே தொடர்ச்சியாய்
என்றபடி.
பின்னரும் விரைவினோடும் பெய் கணை மாரி சிந்தி,
முன்ன அரு முனையில் நின்றோர் முதுகிட முரண்டு சீறி,
துன்ன அருந் தடந் தேர் ஆண்மைச் சுமித்திரன் முதலா உள்ள
மன்னரை, இமைத்த கண்கள் மலரும் முன், மடிவித்தானே38.-சல்லியன், சுமித்திரன்முதலியோரைக் கொல்லுதல்.
பின்னரும் – பின்பும், (சல்லியன்), விரைவினோடும் –
வேகத்துடனே, பெய் கணை மாரி சிந்தி – மிகுதியாக எய்கிற அம்புகளை
மழைபோலச் சொரிந்து,- முன் அரு முனையில் நின்றோர் முதுகு இட –
நினைத்தற்கும் அருமையான போர் முனையில் தன்னையெதிர்த்து நின்ற
வீரர்கள் புறங்கொடுத்தோடும்படி, முரண்டுசீறி – (அவர்கள் மேல்)
மாறுபாடுகொண்டு கோபித்து, துன் அரு – (எவரும்) கிட்டுதற்கும்
அருமையான, தடதேர் – பெரிய தேரையும், ஆண்மை –
பராக்கிரமத்தையுமுடைய, சுமித்திரன் முதல் ஆ உள்ள மன்னரை –
சுமித்திரன்முதலாகவுள்ள அரசர்களை, இமைத்த கண்கள் மலரும் முன்
மடிவித்தான் -ஒருமாத்திரைப்பொழுதினுள்ளே அழித்திட்டான்; (எ – று.)
இமைத்தகண்கள் மலருமுன் – இயல்பில் ஒருகால் மூடினகண்களைத்
திறப்பதற்குமுன்: இது, விரைவுவிளக்கும். முரண்டு என்ற
இறந்தகாலவினையெச்சத்தில், முரண் – பகுதி.
தனக்கு எதிர் தானே ஆன சல்லியன்தானும், மீளச்
சினக் கனல் மூள, வாளச் சிலம்பு எனச் சிலையும் வாங்கி,
கனக் குலம் ஏழும் சேரக் கல்மழை பொழிந்தது என்ன,
முனைக் கடுங் கணையால் வீமன் வடிவு எலாம் மூழ்க, எய்தான்.39.-சல்லியன் வீமன்மேல்அம்பு சொரிதல்.
தனக்கு எதிர் தானே ஆன – (வேறு உவமை பெறாமையால்)
தனக்குத் தானே ஒப்பான, சல்லியன்தானும் – சல்லியனும், மீள – மறுபடி,
சினம் கனல் மூள – கோபாக்கினி (மனத்திற்) பற்றியெழ, வாளம் சிலம்புஎன
சிலையும் வாங்கி – சக்கரவாளமலை போல (வட்டவடிவமாம்படி)
வில்லைவளைத்து, கனம் குலம் ஏழும் சேர கல் மழை பொழிந்தது என்ன –
மேகவர்க்கமேழும் ஒருசேரக்கல்மழையைச் சொரிந்ததுபோல, முனை கடு
கணையால் – கூர்நுனியையுடைய கொடிய அம்புகளால், வீமன் வடிவு எலாம்
மூழ்க-வீமசேனனது உடம்புமுழுவதும் மறையும்படி, எய்தான் –
தொடுத்துப்போர்செய்தான்; (எ – று.)
முதலடியில், உபமானமும் உபமேயமும் ஒன்றேயாகக் கூறியது
இயைபின்மையணி, அவனுக்கு ஒப்பானவன் வேறு இல்லையென்பது கருத்து.
‘சினக்கனல்’ – உருவகம்: மற்றவை- உவமை. வாளம் – சக்ரவாள
மென்பதன்முதற்குறை: இது, பூமியைச் சூழ்ந்த கடலைச் சுற்றிலும்
கோட்டைமதில்போலச்சூழ்ந்துநிற்பதொருமலை. சிலையும் வாங்கியென்ற
உம்மை – பின்வரும்அம்பெய்தலை நோக்கிய எதிரது தழுவிய
எச்சப்பொருள தென்னலாம்;இசைநிறையுமாம். கன்மழை யென்ற விடத்து
‘கனன்மழை’ என்று பாடமோதி,நெருப்புமாரி யென்று உரைப்பாரும்
உளர்.
அறை கழல் வீமன்தானும், அங்கர்கோன் பாகன்தானும்,
முறை முறை புரிந்த வெம் போர் மொழிவதற்கு யாவர் வல்லார்?
நறை கெழு தும்பை மாலை நகுல சாதேவர் என்னும்
இறைவரும், செங் கண் மாயன் இளவலும், இவன்மேல் சென்றார்40.-வீமனும் சல்லியனும்பொருகையில் நகுலசகதேவரும்
சாத்தகியும் வருதல்.
அறை கழல் – ஒலிக்கிற வீரக்கழலையுடைய, வீமன் தானும்-
வீமனும், அங்கர்கோன் பாகன் தானும் – அங்கநாட்டிலுள்ளார்க்கு
அரசனாகியகர்ணனது சாரதியான சல்லியனும், முறை முறைபுரிந்த –
ஒருவரோடொருவர்செய்த, வெம்போர் – கொடிய போரை, மொழிவதற்கு –
சொல்வதற்கு, யாவர்வல்லார் – எவர் வல்லவர்? [எவரும் வல்லரல்ல
ரென்றபடி], (இங்ஙனம்இவ்விருவரும் மிக உக்கிரமாகப் பொருகையில்),- நறை
கெழு தும்பை மாலை-வாசனை வீசுகிற தும்பைப்பூமாலையையுடைய,
நகுலசாதேவர் என்னும்இறைவரும் – நகுலசாதேவரென்னும் அரசர்களும்,
செம்கண் மாயன் இளவலும்- சிவந்த திருக்கண்களையுடைய கண்ண
பிரானதுதம்பியான சாத்தகியும், இவன் மேல் சென்றார் – சல்லியன் மேல்
எதிர்த்துச்சென்றார்கள்; (எ – று.) ‘தான்’ இரண்டும் – அசை.
நறைகெழு – தேன் நிறைந்த எனினுமாம். தும்பைமாலை, போர்
செய்வார்க்கு உரியது.
யதுகுலத்தரசர்களுள் வசுதேவனுக்கு உடன்பிறந்த முறையாகிறவனும்
சிநியென்பவனது மகனுமாகிய சத்தியகனது குமாரனான சாத்யகி, பிராயத்தில்
கண்ணனினும் இளையவ னாதலால், கண்ணனுக்குத் தம்பிமுறையாவான்:
க்ருஷ்ணனிடத்து மிக்க அன்புடையவன். அன்றியும், இவன், அருச்சுனனிடம்
வில்வித்தையைக் கற்றறிந்த மாணாக்க னாதலால், ஆசிரியனாகிய
அருச்சுனனிடத்தும் அதுசம்பந்தமாக மற்றைப் பாண்டவரிடத்தும் நீதிமுறை
வழுவாமல் அன்போடு ஒழுகுபவன்.
சிவபிரானாலெரிக்கப்பட்ட மன்மதனது அங்கம் [உடம்பு] விழுந்த இடம்
ஆதலால் அங்கதேச மென்று பெயர். கீழ்ப் பதினேழாம் போர்நாளில்
கர்ணனதுவிருப்பத்தின்படி துரியோதனன் வேண்டவே, சல்லியன்
கர்ணனுக்குச்சாரதியாய் நின்று தேர் செலுத்தியதனால், ‘அங்கர்கோன்பாகன்’
எனப்பட்டான்.
சென்று, வெஞ் சிலைகள் கோலி, சிலீமுகம் உறுப்புத்தோறும்
ஒன்று என அநேகம் ஏவி, ஒரு முகமாகப் போர் செய்து,
‘இன்று இவன் ஆவி கோறும்!’ என்று, சல்லியன்மேல் தங்கள்
வன் திறல் யாவும் காட்டி, மாறு இல் போர் மலைந்திட்டாரே.41.-நகுலசகதேவரும்சாத்தகியும் சல்லியனொருவனோடு
பொருதல்.
(கீழ்க்குறித்த மூன்றுபேரும்), ‘சென்று – (சல்லியன்
மேலெதிர்த்துச்) சென்று, வெம் சிலைகள் கோலி – கொடிய தங்கள்
விற்களைவளைத்து, உறுப்புத் தோறும் – (இவனது) அவயவங்களிலெல்லாம்,
அநேகம் சிலீமுகம் – பல அம்புகளை, ஒன்று என ஏவி – ஒன்றுபோல
இடைவிடாது செல்லும்படி தொடுத்து, ஒரு முகம் ஆக போர் செய்து –
(நாமெல்லோரும் இவ்வொருவனுடன்) ஒரேமுகமாக நின்று யுத்தம்பண்ணி,
இன்று-இப்பொழுது, இவன் ஆவி கோறும்-இவனுடைய உயிரை
வாங்குவோம்’,என்று-என்று நிச்சயித்து, தங்கள் வல் திறல் யாவும் காட்டி-
தங்களுடையகொடிய வல்லமையெல்லாவற்றையும் உபயோகித்து,
சல்லியன்மேல்-, மாறு இல்போர் மலைந்திட்டார் – ஒப்பில்லாத போரைச்
செய்தார்கள்;
நித்தியமாய் என்றுமழியாத இயல்புள்ள உயிரைக் கொல்லுதலாவது,
உடம்பினின்று ஒழித்தல், கோறும் – கொல்வோம்: இவ்வினைமுற்றில், கொல்-
பகுதி, முதல்நீண்டது: றும் – தன்மைப்பன்மை வினைமுற்றுவிகுதி. ஏகம்-
ஒன்று, அதல்லாதது, அநேகம்: எனவே, பலவாம்; ந+ஏகம்=அநேகம்: ந-
எதிர்மறை குறிப்பது.
மதம் படு வேழம் அன்ன மத்திர ராசன்தானும்,-
விதம்படத் திரண்டு போர் செய் வீரர்தம் மெய்கள் எல்லாம்
சதம்படு பகழி ஓர் ஓர் தனுக்களின் உருவி ஓட,
இதம்பட எய்து, நக்கான்-ஏவினுக்கு இராமன் போல்வான்.42.- சல்லியன் மூவரையும்அம்பினால் துளைத்தல்.
ஏவினுக்கு – அம்புதொடுக்குந்தொழிலில், இராமன்
போல்வான்- ஸ்ரீராமன்போலச்சிறந்தவனாகிய, மதம் படு வேழம் அன்ன
மத்திரராசன்தானும் – மதம்பிடித்தயானைபோன்ற சல்லியனும், திரண்டு
விதம் பட போர்செய் வீரர்தம் மெய்கள் எல்லாம் – (தம்மில்) ஒருங்குகூடிப்
பலவகையாகப்போர்செய்கிற மூன்றுவீரர்களுடைய உடம்புகளிலெல்லாம்,
சதம் படு பகழி -நூற்றுக்கணக்கான அம்புகளை, ஓர்ஓர் தனுக்களின் உருவி
ஓட -ஒவ்வோருடம்பிலும் துளைத்துச்செல்லும்படி, இதம் பட எய்து –
எளிமையாகப்பிரயோகித்து, நக்கான் – (அவர்கள் தளர்ச்சியை நோக்கி
இகழ்ந்து) சிரித்தான்;(எ – று.)
வேறுதுணையில்லாமல் ஒருவனேயாய்நின்று பலருடன் ஏக காலத்தில்
அம்புதொடுத்துப் பொருது வெல்லுதல்பற்றி, சல்லியனுக்கு இராமபிரானை
உவமை கூறினார்; இராமன் அங்ஙனம் விற்றொழிலில் மிகவல்லவனாய்த்
தனியே அரக்கர்பலரை எளிதிலழித்தமை இராமாயணத்திற் பிரசித்தம். ஏவிற்கு
– உருபுமயக்கம். ராமனென்ற திருநாமம் – தன்னிடத்தில் யாவரும்
மனங்களித்திருக்கப்பெற்றவனென்று பொருள்படும்: சகலசற்குணங்களும்
பொருந்தினவனென்பது கருத்து.
தம்பியர் தளர்ச்சி கண்டு, சமீரணன் புதல்வன் சீறி,
தும்பை மா மாலை வேய்ந்து, தொடு கணை வலிதின் வாங்கி,
வெம்பு போர் மத்திரேசன் வியன் கொடி, பாகு, வாசி,
செம் புணீர் சொரி களத்தில் சிதறிட அறுத்து, வீழ்த்தான்.43.-அதுகண்டு வீமன்சல்லியனது கொடி
முதலியவற்றை யழித்தல்.
தம்பிமார் தளர்ச்சி கண்டு – தனது தம்பியான நகுல
சகதேவரும் கண்ணனது தம்பியான சாத்தகியும் என்னும் இவரது
தளர்ச்சியைப்பார்த்து, சமீரணன் புதல்வன் – வாயுபுத்திரனான வீமன், சீறி –
கோபித்து,தும்பை மா மாலை வேய்ந்து – (போருக்குரிய) சிறந்த தும்பைப்
பூமாலையைத்தரித்து, தொடு கணை வலிதின் வாங்கி – தொடுத்தற்குரிய
அம்புகளைவலிமையோடு பிரயோகித்து, வெம்பு போர் மத்திர ஈசன் –
உக்கிரங்கொண்டபோரையுடைய மத்திரதேசத்தரசனான சல்லியனது,
வியன்கொடி – பெரியதுவசத்தையும், பாகு – சாரதியையும், வாசி –
தேர்க்குதிரைகளையும், செம் புண்நீர்சொரி களத்தில் சிதறிட – சிவந்த
இரத்தம் பெருகுகிற போர்க்களத்திலேசிதறி விழும்படி, அறுத்து வீழ்த்தான்-
துணித்துத் தள்ளினான்;
ஸமீரணன் – நன்றாகச்சஞ்சரிப்பவனென்று காரணப்பொருள்படும். பாகு
– யானை தேர் குதிரைகளைச் செலுத்துந் தொழில்; இது – இலக்கணையாய்,
அத்தொழிலுடைய பாகனைக் குறித்தது.
உற்று, இரு புறத்தும், திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய
கொற்றவர் பலரும் வீழ, கொடி குடை கவரி வீழ,
சுற்றிய நேமி வாசி துளைக் கரக் கோட்டு நால்வாய்ப்
பொற்றைகள் துணிந்து வீழ, புங்க வாளிகளும் தொட்டான்.44.-சல்லியனதுதேர்க்காவலாளரையும் சேனையையும் வீமன்
அழித்தல்.
இரு புறத்தும் உற்று – (சல்லியனது) இரண்டு பக்கங்களிலும்
பொருந்தி, திண்தேர்க்கு – (அவனுடைய) வலியதேருக்கு, உரன் உற –
உறுதிபொருந்த, உதவி ஆய – துணையாகவுள்ள, கொற்றவர் பலரும் –
முன்புவெற்றியையுடைய பல அரசர்களும், வீழ-இறந்து
கீழ்விழும்படியாகவும்,-கொடி- (அவனுடைய) துவசமும், குடை – குடையும்,
கவரி – சாமரமும், வீழ -துணிபட்டுக் கீழ் விழும்படியாகவும், சுற்றிய –
(அவனைச்) சூழ்ந்துள்ள, நேமி -தேர்களும், வாசி – குதிரைகளும், துளை
கரம் – உள்துளையுள்ளதுதிக்கையையும், கோடு – தந்தங்களையும், நால்
வாய் – வெளியேதொங்குகிறவாயையுமுடைய, பொற்றைகள் –
மலைகள்போன்ற யானைகளும், துணிந்துவீழ- துண்டுபட்டுக்
கீழ்விழும்படியாகவும், புங்கம் வாளிகளும் தொட்டான் -(மற்றும்) சிறந்த
அம்புகளைப் பிரயோகித்தான், (வீமன்); (எ – று.)
நேமிஎன்னுஞ் சக்கரத்தின் பெயர் – சினையாகுபெயராய்த்தேரைக்
குறித்தது. நால்வாய்-வினைத்தொகை. பொற்றை என்ற மலையின் பெயர்,
யானைக்கு உவமவாகுபெயராம்.
துருபதன் முதலா உள்ளோர், சோமகர் முதலா உள்ளோர்,
நிருபர்தம் குலத்துள் ஏனை நிருபர்களாகி உள்ளோர்,
தருமன் மா மதலையோடும் தம்பியரோடும் கூடி,
ஒரு முகமாகி மேற்சென்று, உறு செருப் புரியும் வேலை,45.-அனைவரும் போர்செய்தல்.
இதுவும், அடுத்த கவியும் – குளகம்.
(இ -ள்.) துருபதன் முதல் ஆ உள்ளோர் – துருபதராஜன்
முதலாகவுள்ள அரசர்களும், சோமகர் முதல் ஆ உள்ளோர் – (அவன்
பிறந்த)சோமககுலத்தார் முதலாகவுள்ள அரசர்களும், ஏனை நிருபர் தம்
குலத்துள் -மற்றும் பல அரசர்கள் குலங்களில்தோன்றிய, நிருபர்கள்
ஆகியுள்ளோர் -அரசர்களும், தருமன் மா மதலையோடும் – சிறந்த
தருமபுத்திரனுடனும்,தம்பியரோடும் – (வீமன்முதலிய) தம்பிமார்களுடனும்,
கூடி – சேர்ந்து, ஒருமுகம் ஆகி – ஒரேமுகமாய், மேல் சென்று –
பகைவர்மே லெதிர்த்துப் போய்,உறு செரு புரியும் வேளை –
மிக்கபோரைச் செய்யும்பொழுதில், (எ – று.) – அருச்சுனன்
அசுவத்தாமனுள்ளவிடத்துச் சென்றான் என வருங் கவியோடு முடியும்.
துருபதன் – பாஞ்சாலதேசத்து அரசன்; திரௌபதியின் தந்தை:
இவனுக்குயாகசேனனென்றும் பெயர் வழங்கும்.
அறுதியாக இன்று அருஞ் சமர் முடித்தும்!’ என்று அறத்தின்
மைந்தனுக்கு அன்பால்
உறுதி கூறிய பாகன் வெவ் விரைவுடன் ஊர்ந்த வெம் பரித் தேரோன்,
‘பெறு தியாகம் மா தவம் புரி சிலை முனி பெற்ற வீரனுக்கு இன்றே
இறுதி நாள்’ என, ஆங்கு அவன் அணிந்த பேர் இகல்
அணியிடைச் சென்றான்.46.-அருச்சுனன் அசுவத்தாமனைநெருங்குதல்
அரு சமர் – அரிய போரை, இன்று – இன்றைக்கு, அறுதி
ஆக முடித்தும் – தீர முடித்துவிடுவோம், என்று -, அறத்தின் மைந்தனுக்கு-
தருமபுத்திரனுக்கு அன்பால் – அன்பினால், உறுதி கூறிய – துணிவு சொன்ன,
பாகன் – சாரதியான கண்ணன், வெம் விரைவுடன் – கொடிய வேகத்துடனே,
ஊர்ந்த – செலுத்திய, வெம் பரி – வேகமுள்ள குதிரைகள் பூண்ட, தேரோன்-
தேரையுடையவனாகிய அருச்சுனன்,- தியாகம் பெறு – தானம் பெறுதற்கு
உரியவனும், மா தவம் புரி-மிக்க தவத்தைச் செய்தவனுமான, சிலை முனி –
வில்வித்தையில்வல்ல அந்தணனான துரோணன், பெற்ற – (புதல்வனாகப்)
பெற்ற, வீரனுக்கு – வீரனான அசுவத்தாமனுக்கு, இன்றே இறுதி நாள் –
இன்றையதினமே அழியுந்தினமாம், என – என்று (கண்டவர்) சொல்லும்படி,
ஆங்கு – எதிர்ப்பக்கத்தில், அவன் அணிந்த – அவ்வசுவத்தாமன்
ஒழுங்காய்நின்ற, பேர் இகல் அணியிடை – பெரிய வலிய
படைவகுப்பினிடத்து,சென்றான் – போனான்;
பதினெட்டாநாளோடு போர்முடிந்திடு மென்று கண்ணன் தருமபுத்தி
ரனுக்குத் தைரியங் கூறினதை, கீழ்ச்சருக்கத்தில் வந்த “இத்தின மிரவி
சிறுவனும் விசய னேவினா லிறந்திடும் நாளைத், தத்தின புரவித்
தேர்ச்சுயோதனனுஞ் சமீரணன் தனயனால் மடியும், அத்தினபுரியு மீரிருகடல்
சூழவனியும் நின்னவா மென்றான், சித்தின துருவா யகண்டமுந் தானாஞ்
செய்யகட் கருணையந்திருமால்” என்றதனால் அறிக. ஓதல் ஓதுவித்தல்
வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்ற அந்தணர்க்குஉரிய அறுதொழில்
களுள் ஏற்றலும் ஒன்றாதலால், ‘பெறுதியாகம்’ என்ற அடைமொழியைத்
துரோணனுக்குக் கொடுத்தார்; என்றது, அறிவொழுக்கங்களிற் சிறந்தவனாய்த்
தானம்பெறுதற்குரிய சறபாத்திர மாகுபவ னென்றவாறு.
‘பெறுதியாகமாதவம்புரிசிலைமுனி’ என்றதனால், துரோணன் அரசர்க்குரிய
படையுரிமையைப் பெற்றுஅரசரையடுத்து அவர்க்குப்படைக்கலம்பயிற்றிப்
போர்த்தொழில் நடத்திநின்றவனாயினும் அந்தணர்க்குரிய நல்லொழுக்கங்களிற்
குறைவிலா னென்பது விளங்கும்.
இதுமுதற் பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும் முதற்சீர்மாச்சீரும்
ஈற்றுச்சீர் மாங்காய்ச்சீரும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்கு கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள்
சென்று போர் புரி அளவையின், அருச்சுனன் செழு மணி முழு நீலக்
குன்றுபோல் நிறம் பவள வான் குன்று எனக் குருதியின் சிவப்பு ஏற,
ஒன்று போல்வன பிறைமுகக் கடுங் கணை ஒருபது தொடுத்திட்டான்-
வென்று போர் புரி அவுணர் ஊர் நீறு செய் வீரன் மைந்தனை
ஒப்பான்.47.-அசுவத்தாமன்அருச்சுனன்மேல் அம்பு தொடுத்தல்.
சென்று போர் புரி அளவையின் – போய்ப் போர்
தொடங்கியவளவில்,- அருச்சுனன் – அருச்சுனனது, செழு முழு நீலம் மணி
குன்றுபோல்நிறம் – சிறந்தபெரிய நீலரத்தினமயமானதொரு மலைபோன்ற
மார்பு, பவளம்வான் குன்று என – பவழமயமான பெரிய மலைபோல,
குருதியின் – இரத்தப்பெருக்கால், சிவப்பு ஏற – செந்நிறம்மிகும்படி,- வென்று
போர்புரி அவுணர்ஊர் நீறு செய் வீரன் மைந்தனை ஒப்பான் –
வெற்றிகொண்டு போரைச்செய்கிறஅசுரர்களுடைய திரிபுரத்தைச்
சாம்பலாக்கின பராக்கிரமமுள்ள சிவபிரானதுகுமாரனான
சுப்பிரமணியமூர்த்தியை யொப்பவனான அசுவத்தாமன்,-ஒன்றுபோல்வன
பிறைமுகம் கடு கணை ஒருபது-ஒன்று போலுள்ள கொடிய பத்து
அர்த்தசந்திர பாணங்களை, தொடுத்திட்டான் – ஒரு பிரயோகத்தில்
எய்தான்;(எ – று.)
அருச்சுனன் – வெண்ணிறமுடையவ னென்று பொருள்: இது – முதலில்
இந்நிறமுடைய கார்த்தவீரியமகாராசனுக்குப் பெயராயிருந்து, பின்பு,
அவனைப்போன்ற சௌரிய தைரியங்களையுடைய இப்பார்த்தனுக்கு இட்டு
வழங்கப்பட்டது. இது உவமவாகுபெயரின் பாற்படும். பார்த்தன்
கருநிறமுடையவனாதலால், அருச்சுனனென்பது – நிறம்பற்றி வந்த
பெயரென்றல் பொருந்தாது. இனி, “குருச்சுடர் மணிசெய்பச்சைக்
கொழுந்துடற்பொலிவு நோக்கி, யருச்சுனனென்ப ரீதென்னரும்பெயர் வந்த
பான்மை”என்னும் நல்லாப்பிள்ளைபாரதச் செய்யுளைக்கொண்டு,
அருச்சுனனென்பது -பசுமை நிறம்பற்றிவந்த பெயரென்றலும் ஒன்று;
ஈற்றடியிற்குறித்த வரலாறு வருமாறு :- தாரகாசுரனது புத்திரர்களாகிய
வித்யுந்மாலி தாரகாட்சன் கமலாட்சன் என்னும் மூவரும் மிக்க தவஞ்செய்து
மயனென்பவனால் சுவர்க்க மத்திய பாதாளமென்ற மூன்றிடங்களிலும்
முறையேபசும்பொன் வெண்பொன்கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு
ஆகாயமார்க்கத்திற் சஞ்சரிக்குந்தன்மையுடைய மூன்று பட்டணங்களைப்
பெற்று, மற்றும்பல அசுரர்களோடு அந்நகரங்களுடனே தாம் நினைத்த
இடங்களிற் பறந்து சென்று பல இடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்
பத்தைப்பொறுக்கமாட்டாததேவர்முனிவர் முதலியோரது வேண்டுகோளால்,
சிவபெருமான் பூமியைத் தேராகவும், சந்திரசூரியரைத் தேர்ச்சக்கரங்களாகவும்,
நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும்,
மகாமேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், விஷ்ணுவை
வாயுவாகிய சிறகமைந்து அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும்,
மற்றைத்தேவர்களைப் பிறபோர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு
யுத்தசன்னத்தனாய்ச் சென்று போர் செய்ய யத்தனித்துப் புன்சிரிப்புச்செய்து
அவ்வசுரரனை வரையும் பட்டணங்களோடு எரித்தருளின னென்பதாம்
தொடுத்த அம்பினை அம்பினால் வானிடைத் துணித்து, இடை
நணித்து ஆக
விடுத்த அம்பினால், மருவலன் பாகனும், வெம் பரிகளும், வில்லும்,
நடுத் தறிந்திட, மார்பினும் தோளினும் நால்-இரு கணை எய்தான்;
எடுத்த வெஞ் சிலை தறிதலும், அவனும் மா இரதம் விட்டு,
இழிந்தானே.48.-அருச்சுனன் அசுவத்தாமனதுசாரதி குதிரை
முதலியவற்றை அழித்தல்.
தொடுத்த அம்பினை – அசுவத்தாமன் (தன்மேற்)
பிரயோகித்தஅம்புகளை, அம்பினால் – (தான்எய்யும்) எதிரம்புகளால்,
வானிடை துணித்து -வானத்திலே [தன்னை நெருங்குதற்கு முன்
இடைவெளியிலேயே] துண்டித்து,இடை நணித்து ஆக விடுத்த –
அவனிடத்திலே சமீபித்ததாம்படி (மற்றும்தான்) செலுத்தின, அம்பினால் –
பாணங்களால், மருவலன் – எதிரியானஅவ்வசுவத்தாமனது, பாகனும் –
சாரதியும், வெம் பரிகளும் – வெவ்வியதேர்க்குதிரைகளும், வில்லும் -, நடு
தறிந்திட – இடையிலே துணி படும்படி,(செய்து), மார்பினும் தோளினும் –
(அவனுடைய) மார்பிலும் தோள்களிலும்,நால் இரு கணை எய்தான் – எட்டு
அம்புகளைத் தொடுத்தான்; அவனும் -அந்த அசுவத்தாமனும், எடுத்த வெம்
சிலைதறிதலும் – கையிற்பிடித்த கொடியவில் முறிந்தவளவிலே, மா இரதம்
விட்டு இழிந்தான் – பெரிய (தனது)தேரைவிட்டு இறங்கினான்;
இழிந்து, மீளவும் வேறு ஒரு வில் எடுத்து, எரி முனை புகை காலப்
பொழிந்த வாளி ஓர் அளவு இல; அவற்றையும் பொடி படுத்தினன்,
பார்த்தன்;
‘கழிந்த நீர்க்கு அணை கோலி வந்து எதிர்ந்து, தன் கார்முகக் கட்டு
ஆண்மை
அழிந்து போயினன், முனி மகன்’ என எழுந்து ஆர்த்தது,
பெருஞ் சேனை.49.-மீண்டும் பொருதஅசுவத்தாமனை அருச்சுனன்
வெல்லுதல்.
இழிந்து – (அசுவத்தாமன் தேரைவிட்டு) இறங்கி, வேறு ஒரு
வில் எடுத்து-, எரி முனை புகை கால – நெருப்பையும் உக்கிரமான
புகையையும் வெளிப்படுத்தும்படி, மீளவும் – மறுபடியும், பொழிந்த –
(அருச்சுனன் மேற்) சொரிந்த, வாளி – அம்புகள், ஓர் அளவு இல –
கணக்கில்லாதனவாம்; அவற்றையும் – அவையனைத்தையும், பார்த்தன் –
அருச்சுனன், பொடிபடுத்தினன் – (தனது அம்புகளால்) பொடிபடச்
செய்திட்டான்; (அதனால்), ‘முனிமகன் – துரோணபுத்திரனான அசுவத்தாமன்,
கழிந்த நீர்க்கு அணை கோலி . கடந்துசென்ற நீர்ப்பெருக்கைத்தடுப்பதற்கு
அணையிடமுயல்பவன் போன்று, வந்து எதிர்ந்து – (அருச்சுனனை)வந்து
எதிர்த்து, தன் கார்முகம் கட்டு ஆண்மை அழிந்து போயினன் –
தனதுவலியவிற் போர்த்திறமழிந்திட்டவனானான்’ என – என்று, பெரு சேனை
-பெருமையுள்ள (பாண்டவ) சேனை, எழுந்து ஆர்த்தது –
உற்சாகங்கொண்டுஆரவாரித்தது; (எ – று.)
பெருகிச்சென்று தீர்ந்த வெள்ளத்துக்குப் பின்பு தடுத்து
வைத்தற்பொருட்டு அணைகோலுதலிற் சிறிதும் பயனில்லாமை போல்,
மிகமேலிட்ட அருச்சுனனை அசுவத்தாமன் மீண்டும் எதிர்த்தல் சிறிதும்
பயன்படாது முடிதலால், ‘கழிந்தநீர்க்கு அணைகோலி’ என்றார், “கழிந்தநீர்க்
கணைகோலுவான் கண்ணெதிருறச் சென்றான்” என்றதும் காண்க.
தன்கார்முகக்கட்டாண்மை யழிந்து போயினன் – வில்லைக்கொண்டு
அம்புதொடுத்து எதிர்க்குந்திறமை நீங்கினா னென்க. முனைதல் –
உக்கிரமாதல்.
செருப் புலக் கையாம் உரலிடை, விருதராம் தினைக் குரல்களைச் சேர,
மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெஞ் சின மன மத்த வாரணம்
அன்னான்,
பொருப்பு உலக்கையுற்று அலமர அரிந்தவன் புதல்வன்மேல், ஒரு பார
இருப்பு உலக்கை கொண்டு எறிந்தனன்; அவனும், அஃது எண் முறி
பட எய்தான்.50.-அசுவத்தாமன்வீசியஇருப்புலக்கையை அருச்சுனன்
துணித்தல்.
செரு புலம் கை ஆம் – போர்க்களத்தின் அணிவகுப்பாகிய,
உரலிடை – உரலிலே, விருதர் ஆம் – வீரர்களாகிய, தினைகுரல்களை –
தினைக்கதிர்களை, சேர – ஒருசேர, மருப்பு உலக்கை கொண்டு – (தனது)
தந்தங்களாய உலக்கைகளால், இடிக்கும் – இடிக்கிற, வெம்சினம் மனம் –
கடுங்கோபமுள்ள மனத்தையுடைய, மத்தம் வாரணம் – மதம்பிடித்த
யானையை, அன்னான் – ஒத்தவனான அசுவத்தாமன்,- பொருப்பு-மலைகள்,
உலக்கை உற்று – அழிதலையடைந்து, அலமர – வருந்தும்படி, அரிந்தவன் –
(அவற்றைச்) சிறகறுத்தவனான இந்திரனது, புதல்வன்மேல் – குமாரனான
அருச்சுனன்மேல், ஒரு பாரம் இரும்பு உலக்கைகொண்டு எறிந்தனன் –
கனமான ஓர் இரும்புலக்கையை எடுத்துவீசினான்; அவனும் – அருச்சுனனும்,
அஃது எண்முறி பட – அவ்வுலக்கை எட்டுத்துண்டுபடும்படி, எய்தான் –
அம்புதொடுத்தான்; (எ – று.)
புலம்- இடம். கை – படைவகுப்பு. குரல் – தானியம். முதலிரண்டடி
உருவகத்தை அங்கமாகக்கொண்டு வந்த உவமையணி: உரலில் தினையை
உலக்கையால் இடிப்பதுபோலப் போர்க்களத்தில் வீரரைத்தந்தத்தாற் குத்தும்
யானை யென்க. தனது தந்தையை எதிரிகள் கொன்றதனாலாகிய கோபத்தை
அசுவத்தாமன் மனத்திலே மாறாமல் வைத்துக்கொண்டு அதற்குப்பிரதிசெய்யுங்
கருத்துடையவனாதலால் ‘வெஞ்சினமனமத்தவாரணமன்னான்’ என்றது.
அசுவத்தாமனது மிக்கவலிமைக்குமுன் பலவீரர்களுஞ் சிறுமைப்படுந்
தன்மையைக் கருதி, அவர்களிடத்துச் சிறுதானியமான தினையின்
தன்மையையேற்றிக் கூறினார்.
முன்பொருகாலத்தில் மலைகளெல்லாம் பறவைகள் போல்
இறகுடையனவாயிருந்து அவற்றால் உலகமெங்கும் பறந்துதிரிந்து பல
இடங்களின் மேலும் உட்கார்ந்து அவ்விடங்களையெல்லாம் பிராணிகளுடனே
அழித்துவர, அதனை முனிவர்முதலியோராலறிந்த தேவேந்திரன்
சினந்துசென்றுதனதுவச்சிராயுதத்தால் அவற்றின் இறகுகளை யறுத்துத்
தள்ளிவிட்டனனாதலால், ‘பொருப்பு உலக்கையுற்று அலமரவரிந்தவன்’
என்றார். மூன்றாமடியில், உலக்கை – உலத்தல்: தொழிற்பெயர்.
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின், ஒரு தனித் தண்டு கொண்டு,
உயர் கேள்வி
அலக் கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன்
தடந் தோளாம்
இலக்கை உற்றிட எறிந்தனன்; எறிதலும், இவன் அவன் எறி தண்டை
வலக் கையின் தொடு கணைகளால், பல துணி ஆக, வில் வளைத்தானே.51.-பின்பு அசுவத்தாமன்எறிந்த கதாயுதத்தை அருச்சுனன் துணித்தல்.
உலக்கை எட்டு உறுப்பு ஆனபின் – உலக்கை எட்டுத்
துண்டுகளானபின்பு, (அசுவத்தாமன்), ஒரு தனி தண்டுகொண்டு –
ஒப்பற்றதொருகதாயுதத்தை எடுத்து,- உயர் கேள்வி – சிறந்த நூற்கேள்வியை
யுடைய, அலம் கை வித்தகன் இளவல் – கலப்பையை ஆயுதமாக ஏந்திய
கைகளையுடைய வல்லமைசாலியான பலராமனுடையதம்பியானகண்ணன், தேர்
விட-(தனக்குப் பாகனாய் நின்று) தேர்செலுத்த, வரும் – வருகிற, அருச்சுனன்
– அருச்சுனனது, தட தோள் ஆம் – பெரிய தோளாகிய, இலக்கை – குறியை,
உற்றிட – அடையும்படி, எறிந்தனன் – வீசினான்; எறிதலும் – வீசியவுடனே,
இவன் – அருச்சுனன், அவன் எறி தண்டை – அந்த அசுவத்தாமன் வீசிய
கதாயுதத்தை, வலக்கையின் தொடு கணைகளால் – (தனது) வலக்கையாலும்
தொடுக்கும் அம்புகளால், பல துணி ஆக – அநேகந்துண்டாகும்படி, வில்
வளைத்தான் – வில்லை வளைத்துப் பொருதான்;
அருச்சுனன் வில்லைவளைத்து வலக்கையால் அம்புதொடுத்து
அசுவத்தாமனது கதைப்படையைப் பல துண்டாக்கின னென்பதாம்.
அருச்சுனன் மற்றையோர்போல வலக்கையினால் மாத்திரமே யன்றி இடக்
கையாலும் அம்பு தொடுக்கவல்லவனாய்ச் சவ்வியசாசியென்று ஒருபெயர்
பெற்றுள்ளதறிக. உயர்கேள்வி – வினைத்தொகை. ஆகவே, ‘வலக்கையில்
தொடு’ என்றது’ இங்கு – பிறிதினியைபுநீக்கிய விசேஷணம்
பூத்த பைங் கொடி அனைய மெய்ப் பூண் அணி பொதுவியர்
தனம் தோயும்
தூர்த்தன் வெம் பரித் தேர் விடும் அளவும், இச் சுரபதி மகனோடும்
கோத்த அம்பினில், பல படைகளில், அமர் கொளுத்துதல்
அரிது!’ என்று,
பார்த்தன் முன்பு நின்று அமர் புரிந்திலன்-கடல்-பார்
புகழ் பரித்தாமா.52.-பின்பு அசுவத்தாமன்வெறுத்துப் புறங்கொடுத்தல்.
பூத்த பைங்கொடி அனைய – நிறையமலர்பூக்கப்பெற்ற பசிய
பூங்கொடியை யொத்த, பூண் அணி மெய் – பல ஆபரணங்களை யணிந்த
உடம்பையுடைய, பொதுவியர் – கோபஸ்திரீகளுடைய, தனம் – கொங்கைகளில்,
தோயும் – கலக்கிற, தூர்த்தன் – விடனான கண்ணன், வெம் பரி தேர்விடும்
அளவும் – வெவ்விய குதிரைகள் பூண்ட தேரை (இவனுக்குச்) செலுத்து
மளவும், இ சுரபதி மகனோடும் – தேவராசனாகிய இந்திரனது குமாரனான
இவ்வருச்சுனனுடனே, கோத்த அம்பினில் – தொடுக்கும் அம்புகளாலும், பல
படைகளின் – மற்றும் பல ஆயுதங்களாலும், அமர்கொளுத்துதல் – போரை
மூண்டு செய்தல், அரிது – முடியாது, என்று – என்று நிச்சயித்து,- கடல் பார்
புகழ் பரித்தாமா – கடல்சூழ்ந்த நிலவுலகத்திலுள்ளார் யாவரும் புகழப்பெற்ற
அசுவத்தாமன், பார்த்தன் முன்பு நின்று அமர் புரிந்திலன் –
அருச்சுனனெதிரில்நின்று போர்செய்யாதொழிந்தான்; (எ – று.)
புறங்கொடுத்தன னென்பதாம்; அடுத்த கவியில் “மற்றவன் தனை
முதுகுகண்டு” என வருதல் காண்க. பலபராக்கிரமங்களில் அதிபிரசித்தனான
அசுவத்தாமன் அருச்சுனன்முன் இங்ஙனமானது, அவனுக்கு உள்ள
கிருஷ்ணசகாயத்தினாலே யென்பது இதில் விளங்கும்.
ஆயர்மகளிரது மெல்லியதாய் ஒல்கியொசியும் உடம்பு – கொடியையும்,
அதில் நிறைய அணிந்த சிறந்த ஆபரணங்கள் – கொடியிற் பூத்த
மலர்களையும் போலுதலால், ‘பூத்தபைங்கொடியனையமெய்ப்பூணணி
பொதுவியர்’என்றார், பொதுவியர் – பொதுவ ரென்பதன் பெண்பால்.
தூர்த்தன் -வஞ்சகனான காமுகன்; கண்ணன். ஆயர் மங்கையர்பலரிடத்தும்
ஒருங்குகாதலுடையனாதலை கீழ் மூன்றாம் போர்ச்சருக்கத்திலும்
‘விரவுகோவியர்தூர்த்தன்’ என்றார்.
தருமத்தை ஸ்தாபிக்க அவதரித்த எம்பெருமான் தருமவிரோதமாக
இங்ஙனஞ்செய்வது ஒக்குமோ? அப்பெண்களுக்கும் இதனால்
பாதகமுண்டாகாதோ? எனின்,- அவ்வெம்பெருமான் தன்னைச்
சேர்ந்தவர்களுடைய சகலபாவங்களையும் போக்கடிக்கும்படியான
பரிசுத்தமுடையவனாகையாலும், அம்மங்கையர் வேதாந்த நிர்ணயத்தின்படி
அன்புசெலுத்து மிடத்திலேயே அன்பைச் செலுத்தினார்க ளாகையாலும்,
அவர்களுக்குச் சகலபாவநிவிருத்தியேயல்லாது பாவமுண்டாவதில்லை;
எம்பெருமானுக்கோ, சீவாத்மாவுக்கு உண்டாவதுபோலே பாபபந்த
முண்டாகாது;ஏனெனில்,-பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்கிற
பஞ்சபூதங்கள்எப்படி எல்லாப்பிராணிகளிலும் வியாபித்திருக்குமோ,
அப்படியே, சுவாமிஅந்தப் பெண்களிலும் அவர்களுடைய பர்த்தாக்களிலும்
மற்றுமுள்ளஆத்மகோடிகளிலும் வியாபித்திருக்கும் பரமாத்துமாவாகையாலே,
அவனுக்குப்புதிதாக ஒருசம்பந்தம் வந்ததில்லையென்ப. இன்னும்
பலவகையாகவும் ஏற்றசமாதானங் கூறப்பட்டு வழங்கும்.
மற்று அவன்தனை முதுகு கண்டு, அவன் திரு மாதுலன் கிருபப்
பேர்க் கொற்றவன் புறம் தர
மலைந்து, ஏனை வெங் கொடுஞ் சிலைக் குல வேந்தர்
முற்றும் வெந்நிடப் பொருது, சல்லியனொடு முனைபட எதிர் மோதி,
செற்ற வன்புடை அன்புடைத் தம்முனை, தெம் முனை
கெடச் சேர்ந்தான்.53 – அருச்சுனன் கிருபனையும்மற்றும்பலரையும் வென்று
வீமனைச்சேர்தல்.
(இவ்வாறு அருச்சுனன்), – அவன்தனை முதுகு கண்டு –
அவ்வசுவத்தாமனைப் புறமிடக் கண்டு [சயித்துஓட்டி யென்றபடி],-மற்று –
பின்பு,- அவன் திரு மாதுலன் – அவனது சிறந்த மாமனாகிய, கிருபன்
பேர்கொற்றவன் – கிருபனென்னும் பெயரையுடைய வெற்றிவீரன், புறம் தர –
முதுகு கொடுக்கும்படி, மலைந்து – போர்செய்து,-ஏனை – மற்றுமுள்ள, வெம்
கொடு சிலை குலம் வேந்தர் முற்றும் – கொடிய வளைந்த வில்லையுடைய
உயர்குலத்துத் தோன்றிய வீரர்களெல்லோரும், வெந் இட –
முதுகுகொடுக்கும்படி, பொருது – போர்செய்து,- சல்லியனொடு முனை பட
எதிர் மோதி செற்ற வன்பு உடை அன்பு உடை தம்முனை – சல்லியனுடன்
உக்கிரமாக எதிரிலே போர்செய்து (அவனை) வென்ற வலிமையையுடையவனும்
(தன்னிடத்து) அன்புள்ளவனுமாகிய தனக்கு அடுத்த தமையனான வீமனை,
தெவ் முனை கெட – பகைவர் போரழியும்படி, சேர்ந்தான்-; (எ – று.)
வீமன்சல்லியனை வென்றதைக் கீழ் – 43-ஆங் கவியிற்காண்க.
முதுகுகண்டு, புறந்தர, வெந்நிட என்றவற்றில் ஒருபொருளே மீண்டு
வந்ததனால்,பொருட்பின்வருநிலையணி. கொடுமை – வளைவாதலை,
‘கொடுமரம்’ என்றவில்லின்பெயரிலுங் காண்க. தெவ் + முனை =
தெம்முனை;”தெவ்வென்மொழியே தொழிற்பெயரற்றே, மவ்வரின் வஃகான்
மவ்வுமாகும்”என்னுஞ் சூத்திர விதி. ஈற்றடியில் பிராசம் காண்க.
தயங்கு வெண்குடைச் சல்லியன் தண்டுடைச் சமீரணன்
மகன்தன்னால்,
உயங்கு வெம் பரி, பாகு, தேர், வரி சிலை, உயர்த்த வண் கொடி,
அற்று,
தியங்குகின்ற பேர் இறுதி கண்டு, உயங்குதல் சிந்தையில் சிறிது
அற்ற
புயங்க கேதனன், கண்ணினுக்கு இமை எனப் பொரு படையுடன்
சேர்ந்தான்.–54.-வீமனால் தோற்றசல்லியனுக்குத் துரியோதனன்
உதவியாதல்.
தயங்கு – விளங்குகின்ற, வெள் குடை –
வெண்கொற்றக்குடையையுடைய, சல்லியன்-, தண்டு உடை –
கதாயுதத்தையுடைய, சமீரணன் மகன் தன்னால் – வாயுகுமாரனான வீமனால்,
உயங்கு வெம் பரி – வருத்தமடைகிற கொடியகுதிரைகளும், பாகு – சாரதியும்,
தேர் – தேரும், வரி சிலை – கட்டமைந்த வில்லும், உயர்த்த வள் கொடி –
உயரநாட்டிய அழகிய கொடியும், அற்று – துணிபடப்பெற்று, தியங்குகின்ற
பேர்இறுதி – சோர்கின்ற மிக்க தோற்ற நிலையை, கண்டு – பார்த்து,
உயங்குதல்சிந்தையில் சிறிது அற்ற புயங்க கேதனன் – மனத்திற் சோர்வு
சிறிதுமில்லாத பாம்புக் கொடியனானதுரியோதனன், கண்ணினுக்கு இமை
என – கண்ணுக்கு இமை பாதுகாவலாதல்போல, பொரு படையுடன்
சேர்ந்தான் – போர்செய்யவல்ல சேனையுடனே (சல்லியனுக்குஉதவியாய்)
வந்து சேர்ந்தான்; (எ – று.)
ஏதேனும் இடையூறு நேருஞ் சமயத்து விரைந்து அடுத்து நின்று
பாதுகாத்தல்பற்றி, ‘கண்ணினுக்கிமையென’ என்று உவமை கூறினார்.
‘பேருறுதி’ என்ற பாடத்துக்கு, அது இகழ்ச்சிக் குறிப்பு.
சாத்தகிப் பெயரவன், சமீரணன் மகன், நகுலன், வெஞ் சாதேவன்,
பார்த்தன், என்று இவர் அனைவரும், இவர் பெரும் படைத்
தலைவனும், சேர
ஆர்த்து எழுந்து மேல் வருதல் கண்டு, அணி கழல் ஆளி ஏறு
அனையானும்,
பேர்த்தும் முந்துறத் திருகினன், அரசொடும் பெரும் படையொடும்
அம்மா.55.-சல்லியன் மீளவும்போர்க்குச் சித்தனாதல்.
சாத்தகி பெயரவன் – சாத்தகியென்னும் பெயரையுடையவனும்,
சமீரணன் மகன் – வீமனும், நகுலன் – நகுலனும், வெம்சாதேவன்-
(பகைவர்க்குக்) கொடிய சகதேவனும், பார்த்தன் – அருச்சுனனும், என்ற-,
இவர் அனைவரும் – இவர்களெல்லோரும், இவர் பெரு படை தலைவன்உம்-
இவர்களுடைய பெரிய சேனைத்தலைவனும், சேர – ஒருசேர, ஆர்த்து
எழுந்து- ஆரவாரஞ்செய்து கிளர்ந்து, மேல் வருதல் – தன்மேல்வருதலை,
கண்டு-,அணி கழல் ஆளி ஏறு அனையானும் அணிந்த வீரக்கழலையுடைய
ஆண்சிங்கம் போன்ற சல்லியனும், அரசொடும் – துரியோதனராசனுடனும்,
பெருபடையொடும் – பெரிய சேனைகளுடனும், பேர்த்தும் – மீளவும்,
முந்துஉறதிருகினன் – (போருக்கு) முற்படத் திரும்பிவந்தான்; (எ – று.)-
அம்மா -ஈற்றசை; வீமனாற் பலவாறு அழிந்தவன் மீண்டுந் துணிவுகொண்டு
போருக்குவந்த உறுதியை விளக்கும் வியப்பிடைச்சொல்லுமாம்.
படைத்தலைவன் – திட்டத்துய்மன். படைத்தலைவரும் என்ற
பாடத்திற்கு – திட்டத்துய்மனும் அவனுக்கு உள்ளடங்கிய சேனாபதிகளும்
என்க. ‘அரசொடும்’ என்பதற்கு – அரசர்களுடனே யென்றும்
பொருள்கொள்ளலாம்; அப்பொருளில், அரசு – சாதிப்பெயர்.
தண் துழாய் முடி மாயவன் தம்பியை, சாயகம் பல கோடி
கொண்டு, தேர் முதல் யாவையும் அழித்து, மெய் குலைந்திடும்படி
மோதி;
மண்டு பாய் பரி நகுலனை அன்புடை மருகன் என்று எண்ணாமல்,
கொண்டல்வாய் இடி நெருப்பு எனச் சிற் சில கூர வாளிகள்
எய்தான்.56.-சல்லியன்சாத்தகியையும் நகுலனையும் வெல்லுதல்.
(சல்லியன்), தண் – குளிர்ச்சியான, துழாய் – திருத்துழாய்
மாலையைச் சூடிய, முடி – முடியையுடைய, மாயவன் – கண்ணனது, தம்பியை
– தம்பியான சாத்தகியை, பல கோடி சாயகம் கொண்டு – அநேக
கோடிக்கணக்கான அம்புகளைக்கொண்டு, தேர் முதல் யாவையும் அழித்து –
தேர் முதலிய எல்லா உபகரணங்களையும் அழியச்செய்து, மெய்
குலைந்திடும்படி – உடம்பு நடுங்கும்படி, மோதி – தாக்கி,- மண்டு பாய்பரி
நகுலனை – உக்கிரமான பாய்கிற குதிரையையுடைய நகுலனை, அன்பு உடை
மருகன் என்று எண்ணாமல் – அன்புக்குரிய தன்மருகனென்று நினையாமல்,
கொண்டல்வாய் இடி நெருப்பு என – மேகத்தினிடத்துத் தோன்றுகிற
நெருப்புமயமான இடி போல, சிற் சில கூர வாளியின் – கூர்மையையுடைய
சிலசில அம்புகளால், எய்தான்-; (எ – று.)
மாமனுக்கும் மருகனுக்கும் பரஸ்பரம் இயல்பான அன்புடைமை விளங்க
‘அன்புடை மருகன்’ என்றார்; “மாமனும் மருகனும்போலுமன்பின” என்ற
சிந்தாமணி இங்கு அறியத்தக்கது. அன்புடை மருகனென்று எண்ணாமல் –
பட்சபாதஞ் செய்யாமல் என்றபடி. கொண்டல் – நீர்கொண்ட மேகத்துக்குத்
தொழிலாகுபெயர்; இதில் கொள் – பகுதியும், தல் – தொழிற் பெயர்விகுதியும்,
ளகரதகரங்கள் முறையே ணகரடகரங்களானது சந்தியுமாம். கூர –
குறிப்புப்பெயரெச்சம்; கூர் – பகுதி. கூர்வாளிகளெய்தான் என்றும்
பாடம்.
ஒரு கொடுங் கணை தொடுத்தலும், வெந் கொடுத்து ஓடினன்,
சாதேவன்;
இரு கொடுங் கணைக்கு இலக்கம் ஆயினன், மருத்து ஈன்றவன்,
இரு தோளும்;
பொரு கொடுங் கணை மூன்றினால், அருச்சுனன் புயமும் மார்பமும்
புண் செய்து,
அருகு ஒடுங்குற, நுதலின்மேல், அம்பு நான்கு அறத்தின் மைந்தனை
எய்தான்.57.-சல்லியன் சகதேவனைவென்று வீமனையும்
அருச்சுனனையும் தருமனையும்எதிர்த்தல்.
(சல்லியன்), ஒரு கொடு கணை – ஒரு கொடிய அம்பை,
தொடுத்தலும் – பிரயோகித்தவுடனே, சாதேவன் – சகதேவன், வென்
கொடுத்துஓடினன் – முதுகுகொடுத்துத் தோற்றோடினான்; மருத்து ஈன்றவன்
-வாயுபெற்ற பிள்ளையான வீமன், இரு கொடுகணைக்கு இருதோளும்
இலக்கம்ஆயினன் – (சல்லியனெய்த) இரண்டுகொடிய அம்புகளுக்குத்தனது
இரண்டுதோள்களும் லக்ஷ்யமாகப்பெற்றான்; (பின்பு சல்லியன்), பொருகொடு
கணைமூன்றினால் – போருக்குரிய கொடிய மூன்று அம்புகளால், அருச்சுனன்
புயமும் மார்பமும் புண்செய்து – அருச்சுனனது தோள்களிரண்டையும்
மார்பையும் புண்படுத்தி, அருகு – சமீபத்திலுள்ள, அறத்தின் மைந்தனை –
தருமபுத்திரனை, ஒடுங்குற – ஒடுங்கும்படி, நுதலின்மேல் – நெற்றியின்மேல்,
நான்கு அம்பு எய்தான் – நான்கு அம்புகளைத் தொடுத்தான்; (எ – று.)
சல்லியன் ஓரம்பினால் சகதேவனை வென்று இரண்டு அம்புகளை
வீமனது தோளிரண்டிலுஞ் செலுத்தி மூன்று அம்புகளை அருச்சுனனது
இருதோள் மார்பு என்ற மூன்று உறுப்புக்களிலுந் தைக்குமாறு எய்து பின்பு,
தருமபுத்திரனது நெற்றியில் நான்கு அம்புகளைப் பிரயோகித்து அதனால்
அவனை ஒடுங்கச் செய்பவனாயினனென்பதாம். ஒன்று முதல் நான்குவரை
தொடர்ச்சிப்படக் கூறிய நயம்காண்க. கொடுங்கணை என்றும், நாணத்தின்
என்றும் பாடம்.
அறத்தின் மைந்தனது ஆனனம் குருதியால் அருக்கன்
மண்டலம் போல
நிறத்த ஆறு கண்டு, அருகுறக் கதைகொடு நின்ற வாயுவின்
மைந்தன்,
மறத் தடம் புய வரி சிலைச் சல்லியன் மணி முடி கழன்று ஓடிப்
புறத்து வீழ்தர எறிந்தனன்; எறிந்தமை புயங்க கேதனன் கண்டான்.58.- அதுகண்டு வீமன்சல்லியனை மகுடபங்கஞ் செய்தல்.
அறத்தின் மைந்தனது – தருமபுத்திரனது, ஆனனம் – முகம்,
குருதியால் – இரத்தத்தினால், அருக்கன் மண்டலம் போல –
சூரியமண்டலம்போல, நிறத்த – செந்நிறமடைந்த, ஆறு-விதத்தை, கண்டு –
பார்த்து,- அருகு உற கதை கொடு நின்ற வாயுவின் மைந்தன் – (அவனது)
சமீபத்திலே பொருந்தக் கதாயுதத்தைக் கையிலேந்திக்கொண்டுநின்ற
வாயுகுமாரனான வீமன்,-மறம் தட புயம் – வலிமையையுடைய பெரிய
தோள்களையும், வரி சிலை – கட்டமைந்த வில்லையுமுடைய, சல்லியன் –
சல்லியனது, மணி முடி – இரத்தின கிரீடம், கழன்று ஓடி புறத்து வீழ்தர –
கழன்றுசென்று பின்னே விழும்படி, எறிந்தனன் – (தனதுகதையினால்)
தாக்கினான்; எறிந்தமை – அவ்வாறு தாக்கியதனை, புயங்க கேதனன்
கண்டான்- பாம்புக்கொடியனான துரியோதனன் பார்த்தான்; (எ – று.)
சல்லியனெய்த நான்கு பாணங்களால் தருமனது முகம் புண்பட்டு
இரத்தஞ்சொரிந்ததைப் பார்த்த வீமன் சல்லியனைக் கதைகொண்டு தாக்கி
அவனது கீரிடம் கீழேவிழும்படி செய்திட்டதை அச்சல்லியனுக்குப்
பாதுகாவலாக வந்துள்ள துரியோதனன் பார்த்தனனென்பதாம்.
தன் படைத் தலைவனைத் தண்டினால் எறி
வன்புடைத் தடம் புய மருத்தின் மைந்தன்மேல்,
மின் படைத்து ஒரு கணை விசையின் ஏவினான்-
புன் படைப்பினில் அயன் படைத்த பூபனே.59.-வீமன்மேல் துரியோதனன்ஓரம்பு தொடுத்தல்.
தன் படை தலைவனை – தனது சேனைத்தலைவனான
சல்லியனை, தண்டினால்எறி – கதாயுதத்தால்தாக்கின, வன்புஉடை
தடபுயம்மருத்தின் மைந்தன்மேல் – வலிமையையுடைய பெரிய
தோள்களையுடைய வாயுகுமாரனான வீமன்மேல்,-புன் படைப்பினில் அயன்
படைத்த பூபன் – இழிவான சிருஷ்டிவருக்கத்திலே பிரமனால்
சிருஷ்டிக்கப்பட்ட அரசனான துரியோதனன்,-மின் படைத்து ஒளிர் கணை –
மின்னல்போன்ற ஒளியைப்பெற்று விளங்கும் ஓரம்பை, விசையின் ஏவினான் –
வேகத்தோடு தொடுத்தான்; (எ – று.)
அசுராம்சமாய்த் தோன்றித் தீக்குணந் தீச்செயல்களையுடையராய்
உலகத்துக் கொடுமைவிளைத்துப் பூமிக்குப் பாரமாய் நின்ற பாதகர்களுள்
துரியோதனன் ஒருவனாதலால், ‘புன்படைப்பினில் அயன்படைத்த பூபன்’
எனப்பட்டான். பூபன் – பூமியைக்காப்பவன். ‘படைத்தொரு’ என்றும் பாடம்.
இதுமுதல் ஆறுகவிகள் – மூன்றாஞ்சீர்ஒன்று மாச்சீரும், மற்றை மூன்றும்
விளச்சீர்களுமாகிய அளவடி நான்குகொண்ட கலிவிருத்தங்கள்
காமனைச் சம்பரன் கனன்ற போர் என,
வீமனைப் போர் செய்து வெல்ல முன்னிய
தீ மனத்து அரசனைச் சிலீமுகங்களின்
மா முனைப் படுத்தினன், மறித்து வீமனே60.-வீமன் துரியோதனன்மேல்அம்பு தொடுத்தல்
காமனை – மன்மதனை, சம்பரன் – சம்பராசுரன், கனன்ற –
கோபித்து எதிர்த்துச்செய்த, போர்என – போர்போல, வீமனை போர்செய்து,
வீமசேனனையெதிர்த்து யுத்தஞ்செய்து, வெல்ல முன்னிய – சயிக்கநினைத்த,
தீமனத்து அரசனை – கொடிய எண்ணத்தையுடைய துரியோதனராசனை,
வீமன்-, மறித்து – தடுத்து, சிலீமுகங்களின் – (தனது) அம்புகளால், மாமுனை
படுத்தினன் – பெரிய போருக்கு உள்ளாக்கினான்; (எ – று.)
சம்பரன் என்னும் அசுரன் மன்மதனிடத்துப் பகைமைகொண்டு அவனை
யெதிர்த்துப் பலமுறைபொருது தோற்றதுமன்றிப் பின்பு அம்மன்மதனது
அமிசமாகத் தோன்றிய பிரத்யும்நனை யெதிர்த்துப்போரிட்டு அவனால்
அழிவடைந்தன னென்பது சரித்திரம். இவனைக்கொன்றதனால் மன்மதனுக்கு
‘சம்பராரி’ என்று ஒரு பெயர். இங்கு வீமனை யெதிர்த்துப் போர்தொடங்கிய
துரியோதனனுக்குக் காமனை யெதிர்த்துப்பொருத சம்பரனை உவமை கூறியது,
வெல்லக்கருதிய கருத்துச் சிறிதும் நிறைவேறாமல்எளிதிலழிதலை விளக்குதற்
கென்க. காமன் – (யாவர்க்குங்) காமத்தை விளைப்பவன்
யாளிகள் இரண்டு எதிர்ந்து இகலுமாறுபோல்,
மீளிகள் இருவரும் குனித்த வில் உமிழ்
வாளிகள் இருவர்தம் வடிவில் பாயும் முன்,
தூளிகள் பட்டன, துணிந்து வானிலே.61.-மூன்றுகவிகள் -துரியோதனனும் வீமனும்செய்யும்
தொந்தயுத்தம்.
யாளிகள் இரண்டு – இரண்டு சிங்கங்கள், எதிர்ந்து –
(ஒன்றோடொன்று) எதிர்த்து, இகலும் ஆறு போல்-போர் செய்யும்
விதம்போல,மீளிகள் இருவரும் – பலசாலிகளான (துரியோதனன் வீமன்என்ற)
இரண்டுபேரும், குனித்த- வளைத்த, வில்-விற்களினின்று, உமிழ் –
வெளிப்படுத்தப்பட்ட, வாளிகள் – அம்புகள், இருவர்தம் வடிவில்பாயும்முன்-
இவ்விருவருடைய உடம்புகளிற் பாய்தற்குமுன்னமே, வானிலே துணிந்து –
ஆகாயத்தில்தானே துணிபட்டு, தூளிகள் பட்டன – பொடியாய்ச் சிதறின;
(எ -று.)
குறித்த இலக்கிற் படுமுன்னமே இடையிலே எதிரம்பு தாக்குதலால்
இருவரம்புகளும் ஒன்றாலொன்று துணிபட்டுச் சிதறினவென்பதாம்.
தாள் முதல் முடி உறச் சரங்கள் ஏவியும்,
வாள் முதல் படைகளால் மலைந்தும், மற்று அவர்
தோள் முதல் உறுப்பு எலாம் சோரி காலவே,
நீள் முதல் தீபமே நிகரும் ஆயினார்
தாள் முதல் முடி உற – கால்முதல் தலைவரையிலும்,
சரங்கள்ஏவியும் – (ஒருவர்மேல் ஒருவர்) அம்புகளைச் செலுத்தியும், வாள்
முதல்படைகளால் – வாள் முதலிய ஆயுதங்களால், மலைந்தும் –
போர்செய்தும்,அவர் – அவ்விரண்டுபேரும், தோள்முதல் உறுப்பு
எலாம்சோரி கால – தோள்முதலிய அவயவங்களிலெல்லாம் இரத்தம் வழிய,
நீள் முதல் தீபமே நிகரும் ஆயினார்-நீண்டபிழம்பையுடைய
விளக்குப்போன்றவர்களுமானார்கள்;(எ -று.)
செந்நிறம்பற்றிய உவமை. இனி, நான்காமடிக்கு – நீண்ட
அடியையுடைய சோதிவிருட்சம் போன்றனரென்றுமாம். அது, இரவில்
விளக்கொளிபோல் விளங்குதலால், இரவெரிமரமெனவும் படும். இனி, ‘நீபம்’
எனப் பாடங்கொண்டு, நீண்ட தண்டையுடைய செங்கடப்ப மரம்
போன்றனரெனினுமமையும். பதினான்காம்போர்ச்சருக்கத்தில் “நீப மெங்கு
மலர்ந்தென மண்டு செந்நீர் பரந்திட நின்று முனைந்தெழு, பூபர்
தங்களுடம்புசிவந்தனர்” என்று வந்தது, இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
சொரிவதுசோரியெனக் காரணக்குறி.
வன் பரி, பாகு, தேர், மதி நெடுங் குடை,
மின் பொழி கணை உமிழ் வில், விலோதனம்,
என்பன யாவையும் இற்று வீழுமாறு,
ஒன்பது படி அமர் உடற்றினான்அரோ.63.-வீமன் துரியோதனனதுகுதிரை முதலியவற்றை யழித்தல்.
(துரியோதனனது), வல் – வலிய, பரி – தேர்க்குதிரைகள்
நான்கும், பாகு – சாரதியும், தேர் – தேரும், மதி நெடு குடை – சந்திரன்
போன்ற பெரிய குடையும், மின் பொழி கணை உமிழ் வில் – மின்னல்
போன்றஒளியை மிகுதியாக வெளிப்படுத்துகிற அம்புகளைச் சொரிகிற
வில்லும்,விலோதனம் – கொடியும், என்பன யாவையும் – என்ற ஒன்பது
பொருள்களெல்லாம், ஒன்பது படி – ஒன்பதுவிதமாக, இற்று வீழும் ஆறு –
துணிபட்டுக் கீழ்விழும்படி, அமர் உடற்றினான் – போர் செய்தான், (வீமன்);
(எ – று.) -அரோ-ஈற்றசை.
இப்பாட்டுக்கு எழுவாய் வீமனென்பது, வருங்கவியின்
முன்னிரண்டடியால் விளங்கும். ஒன்பதுபட என்றும் பாடம்.
இரண வித்தகன் இவன் எறிந்த வேலினால்,
முரண் உடைச் சுயோதனன் முதுகு தந்த பின்,
அரணுடைப் படைக்கு அரசு ஆன மத்திரன்,
‘மரணம் இப்பொழுது’ என, வந்து மேவினான்.64.-துரியோதனன் தோற்கச்சல்லியன் போர்க்கு வரல்.
இரண வித்தகன் இவன் – போரில் வல்லவனான இவ்வீமன்,
எறிந்த – (மற்றும் துரியோதனன்மேல்) வீசின, வேலினால் – வேற்படையால்,
முரண் உடை சுயோதனன் – வலிமையையுடைய துரியோதனன், முதுகு
தந்தபின் – தோற்றுப் புறங்கொடுத்தபின்பு,- அரண் உடை படைக்கு அரசு
ஆன மத்திரன் – பாதுகாப்பையுடைய சேனைக்குத் தலைவனான மத்திர
நாட்டரசனாகிய சல்லியன், மரணம் இப்பொழுது என வந்து மேவினான் –
மரணம் இப்பொழுதேயென்னும்படி வந்து (போர்க்கு) நெருங்கினான்;(எ-று.)
‘மரணம் இப்பொழுதென’ என்பது, இவன்வருகிற யுத்தாவேசத்தைப்
பார்த்தவர்கள் எதிரிக்கு இவனால் தப்பாமல் மரணம் நேரு மென்று
கருதும்படியென்றவாறு. சுயோதனன் – சு – நல்ல, யோதநன் –
போரையுடையவனென்றுபொருள்படும்.
நேர் இலாத கிருபப் பெயர் விறல் குருவும், நீடு சாலுவனும், மற் புய
மணிச் சிகர வீரன் ஆன
சகுனிப் பெயர் படைத்தவனும், வீறு சால் கிருதபற்பனும்,
எனப் புகலும்
ஆர மார்பினர் முதல் படைஞரில் தலைவர் ஆன வீர துரகத்தினர்,
களிற்றினர்கள்,
ஊரும் ஊரும் இரதத்தினர் எனைப் பலரும், ஓத வாரி என,
மத்திரனொடு ஒத்தனரே.65.-பல வீரர்கள் வந்துசல்லியனுக்குத் துணையாதல்.
நேர் இலாத – ஒப்பில்லாத, கிருபன் பெயர் –
கிருபனென்னும்பெயரையுடைய, விறல் குருவும் – வெற்றியையுடைய
ஆசாரியனும், நீடு -பெரிய, சாலுவனும் – சாலுவதேசத்தரசனும், மணி –
அழகிய, சிகரம் -மலைபோன்ற, மல் புயம் – வலிமையையுடைய
தோள்களையுடைய, வீரன்ஆன – வீரனாகிய, சகுனி பெயர் படைத்தவனும்-
சகுனியென்றபெயரைக்கொண்டவனும், வீறு சால் – (வேறொருவர்க்கில்லாத)
சிறப்பு மிக்க,கிருதபற்பனும் – கிருதவர்மாவும், என – என்று, புகலும் –
சொல்லப்படுகிற,ஆரம் மார்பினர் – ஆரங்களையணிந்த மார்பையுடைய
வீரர்கள், முதல் -முதலாக, படைஞரில் தலைவர் ஆன சேனை
வீரர்களுட்சிறந்தவராகவுள்ள,வீரதுரகத்தினர் – வலியகுதிரைகளை
யுடையவர்களும், களிற்றினர்கள் -யானையையுடையவர்களும், ஊரும்
ஊரும் இரதத்தினர் – வேகமாகச்செல்லுந்தேரையுடையவர்களுமாகிய, எனை
பலரும் – மற்றும் பலவீரர்களும், ஓதம்வாரி என – அலைகளையுடைய
கடல்போல, மத்திரனொடு ஒத்தனர் -(கூட்டமாகத்திரண்டுவந்து)
சல்லியனோடு சேர்ந்தார்கள்; (எ – று.)
மணிச்சிகரம் – இரத்தின மலையுமாம். கிருதவன்மாவை, ‘கிருதபற்பன்’
என்றது: கிருதவற்பன் என்றும்பாடம். ஊரும் ஊரும் – அடுக்கு, விரைவை
விளக்கும்: வாரி-கடலுக்கு இலக்கணை.
இதுமுதல் எட்டுக்கவிகள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் தேமாச்சீர்களும்
மற்றையாறும் கூவிளங்காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட
எண்சீராசிரியச் சந்த விருத்தங்கள். தானதானனனதத்தனன தத்தனன தான
தானனன தத்தனன தத்தனன என்பது, இவற்றிற்குச்சந்தக்குழிப்பாம்.
வீமசேனனும், அவற்கு இளைய பச்சை மயில் வேளின் வானவர்
குலப் பகை தொலைத்தவனும்,
ஏம கூடம் நிகர் உத்தம வயப் புரவி ஏறு வீரனும், அவற்கு
இளைய வித்தகனும்,
நாமம் ஆயிரம் உடைக் கடவுளுக்கு இளைய ஞாயிறோடு உவமை
பெற்று ஒளிர் நிறத்தவனும்,
நேமி சூழ் தரணி பெற்றிட நினைத்து அமர் செய் நீதிமான் அருகு
சுற்றினர், துணை செயவே.66.-பல வீரர்கள் வந்துதருமனுக்குத் துணையாதல்
வீமசேனனும்-, அவற்கு இளைய-அவனுக்கு அடுத்த
தம்பியான, பச்சை மயில் வேளின் வானவர் குலம் பகை தொலைத்தவனும் –
பசுநிறமுள்ள மயிலைவாகனமாகவுடைய முருகக்கடவுள் போலத்தேவர்கள்
கூட்டத்துக்குப் பகைவரான அசுரர்களை அழித்தவனாகிய அருச்சுனனும்,
ஏமகூடம் நிகர் – ஏமகூடமலையையொத்த, உத்தமம் வய புரவி –
நல்லிலக்கணமமைந்த வலிய குதிரையின்மீது, ஏறு – ஏறுகிற, வீரனும் –
வீரனான நகுலனும், அவற்கு இளைய வித்தகனும் – அவனுக்கு
இளையவனானதத்துவஞானமுள்ள சகதேவனும், நாமம் ஆயிரம் உடை
கடவுளுக்கு -ஆயிரந்திருநாமங்களையுடைய கிருஷ்ணபகவானுக்கு, இளைய-
தம்பியான,ஞாயிறோடுஉவமை பெற்று ஒளிர்நிறத்தவனும்-சூரியனோடு
ஒப்புமைபெற்றுவிளங்குகிற நிறத்தையுடைய சாத்தகியும்,-நேமி சூழ்தரணி
பெற்றிடநினைத்து அமர் செய் நீதிமான் அருகு – கடல்சூழ்ந்த
நிலவுலகத்தை(த்தன்னுடையதாக)ப் பெறுதற்கு எண்ணிப் போர்செய்கிற
நீதியுள்ளவனானதருமனது சமீபத்தில், துணை செய சுற்றினர் – (அவனுக்கு)
உதவிசெய்யும்பொருட்டு வந்துசூழ்ந்தார்கள்;(எ – று.)
வீமசேனன் – வலியசேனையையுடையானென்று பொருள். தேவர்கள்
வேண்டுகோளின்படி சிவபிரானாற் பெறப்பட்ட குமாரக் கடவுள் தேவர்களை
வென்றிட்டவர்களான சூரபதுமன் முதலிய மிகப்பல அசுரர்களை வென்று
தேவர்களுக்கு உதவின னாதலால் அவனை, தேவர்களை வென்ற
நிவாதகவசர்காலகேயர் முதலிய அசுரர்களைத் தனியே சென்று எதிர்த்துப்
பொருதுஅழித்துத் தேவர்க்கு உதவிசெய்த அருச்சுனனுக்கு உவமை
கூறினார்.ஹேமகூடம் – பொன்மயமான சிகரமுடையதென்று காரணப்
பொருள்படும்:ஹேமம் – பொன், கூடம் – சிகரம். குலபர்வதங்களுள்
ஒன்றாதலால்,இதனையெடுத்துக் கூறினார். சகதேவன்
தத்துவஞானமுடையவனாதல்,பாரதத்திற் பலவிடங்களில் விளங்கும்: பழம்
பொருந்து சருக்கம், கிருட்டிணன்தூதுசருக்கம், முகூர்த்தங்கேள் விச்சருக்கம்
என்பவற்றிற் காணலாம்: மேல் 92- ஆங்கவியில் “மதி கொள் ஞானி” என
இவன் கூறப்படுமாறும் உணர்க.நாமமாயிரம் – ஸஹஸ்ரநாமம். நேமி –
சக்ரவாள மலையுமாம். முருகக்கடவுளால் வேல்கொண்டு பிளக்கப்பட்ட
சூரபதுமனது உடம்பின் கூறுஇரண்டும் மயில்வடிவமும் கோழிவடிவமும்
பெற்று அக்கடவுளருளால்அப்பிரானுக்கு வாகனமுங் கொடியுமா யமைந்த
சிறப்பைக் கருதி, ‘மாமயில்’ என்றார்.
‘வேளின்’ இன் – ஒப்புப்பொருளது. பகை – பகைவர்க்குப்
பண்பாகுபெயர்.
ஆடல் மாவும், மலை ஒப்பன மதக் கரியும், ஆழி சேர் பவனம்
ஒத்த இரதத் திரளும்,
நாடு போரில் அரி ஒத்த அனிகத் திரளும், நாலு பாலும் எழ,
ஒத்து அமர் உடற்றினர்கள்;
ஓடி ஓடி எதிர் உற்றவர் முடித் தலைகள் ஊறு சோரி உததிக்கிடை
விழுத்தினர்கள்;-
கோடி கோடி தமரப் பறை முழக்கினொடு கோடு கோடுகள் குறித்த
இரு பக்கமுமே.67.-இருதிறத்துச்சேனையும்பொருதல்
ஆடல் மாவும் – போர்வெற்றிக்கு உரிய குதிரைகளும், மலை
ஒப்பன் – மலைபோல்வனவான, மதம் கரியும் – மதயானைகளும், ஆழி சேர்
பவனம் ஒத்த இரதம் திரளும் – சக்கரங்கள் பொருந்திய காற்றுப் போன்ற
தேர்களின் கூட்டங்களும், நாடு போரில் அரி ஒத்த – (பகைவரைத்) தேடிச்
சென்று செய்யும் போரிற் சிங்கங்களைப் போன்ற, அனிகம்திரளும் – காலாட்
சேனைக்கூட்டமும், (ஆகிய நால்வகைப்படைகளிலு முள்ளவர்கள்), நாலு
பாலும் எழல் உற்று – நான்குபக்கங்களிலும்எழுந்து, அமர்உடற்றினர்கள் –
போர்செய்தார்கள்; (செய்து), ஓடி ஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் –
மிகுதியாய் ஓடி வந்து எதிர்த்த வீரர்களது கிரீடமணிந்த தலைகளை, ஊறு
சோரி உததிக்கு இடை விழுத்தினர்கள் – பெருகுகிற இரத்தக்கடலுக்கு
இடையிலே துணித்துத் தள்ளினார்கள்; (அப்பொழுது), கோடி கோடி –
மிகப்பலகோடிக்கணக்கான, தமரம் பறை – ஆரவாரத்தையுடைய
போர்ப்பறைகளின், முழக்கினொடு – பேரொலியுடனே, கோடு கோடுகள் –
வளைந்த சங்குகள், இரு பக்கமும் குறித்த – இரண்டு பக்கங்களிலும்
ஊதப்பட்டன; (எ – று.)
தேர்ச்சக்கரங்களோடு விரைந்துசெல்லுதலால், அதற்கு, சக்கரங்கள்
பொருந்தியதொரு காற்றை இல்பொருளுவமையாகக் கூறினார். பவனம்
என்பதற்கு – பூமி எனக்கொண்டு, தட்டின்பரப்பாற் பூமியையொத்த
இரதத்திரள்என்றாருமுளர். இனி, ‘ஆழிசேர்’ என்றதை இரதத்துக்கு
அடைமொழியாக்கலும் ஒன்று, உததி – நீர்தங்குமிடமெனக் காரணப்
பொருள்படும்; உதம் = உதகம்: ஜலம். கோடிகோடி – மிகப்பல என்ற
மாத்திரமாய் நிற்கும். கோடுகோடு – வினைத்தொகை: கோடுதல் –
வளைதல். அலையொப்பன எனப் பிரித்து, அலைபோல்வன என்று
உரைத்துக் குதிரைக்குஅடைமொழியாக்கினும் அமையும்
ஆன போது இரு தளத்தினும் மிகுத்த விறல் ஆண்மை வீரர்
ஒருவர்க்கு ஒருவர், மெய்க் கவசம்
மானமே என நினைத்து, வரி பொற் சிலையும், வாளும் வேலும் முதல்
எத் திற விதப் படையும்,
மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது;
எப்படி மலைத்தனர்கள்,
தான வானவர்கள் யுத்தமும், அரக்கரொடு சாகை மா மிருக யுத்தமும்,
நிகர்த்தனவே.68.-அப்போரின் சிறப்பு.
ஆன போது – இவ்வாறாகிய அப்பொழுது, இரு
தளத்தினும் -இரண்டுபக்கத்துச் சேனைகளிலும், மிகுந்த விறல் ஆண்மை
வீரர் – மிக்கபலத்தையும் பராக்கிரமத்தையுமுடைய வீரர்கள், மெய் கவசம்
மானமே எனநினைத்து – தங்களுடம்பைக் கவசம்போலப் பாதுகாப்பது
மானமே யென்றுஎண்ணி, வரி பொன் சிலைஉம் – கட்டமைந்த அழகிய
வில்லும், வாளும்-,வேலும்-, முதல் – முதலிய, திறம் – வலிமையுடைய, எ
விதம் படையும் -எல்லாவகைப்பட்ட ஆயுதங்களும், மேனி யூடுஉருவ –
(எதிரியின்) உடம்பில்ஊறு படுத்தும்படி, ஒருவர்க்கு ஒருவர்-, வெட்டிய –
தாக்கிப் போர்செய்த,நிலைக்கு – நிலைமைக்கு, வேறு உவமை கூற –
வேறுஒப்புமை சொல்ல, இலது- வகை இல்லை: தான வானவர்கள் –
அசுரர்களும் தேவர்களும், எப்படிமலைத்தனர்கள் – தம்மில்மாறுபாடு
கொண்டு எப்படிப்பொருதார்களோ,(அப்படியே பொருதார்கள்: அப்போது
நடந்த), உயுத்தமும் – போரும்,அரக்கரொடு – இராக்கதர்களுடனே, மாசாகை
மிருகம் – சிறந்தகுரங்குப்படைக்கு நேர்ந்த, யுத்தமும்-போரும், நிகர்த்தன –
(இப்போருக்கு)ஒப்பாயின; (எ – று.)
அப்பொழுது கௌரவபாண்டவசேனைகள் எதிர்த்துச்செய்த போர்க்குத்
தேவாசுரயுத்தமும் ராமராவணயுத்தமுமே ஒப்பாகு மென்பதாம். மானம் –
மனவுயர்வு. இதனையே பிரதானமாகக்கொண்டு என்பது, ‘மெய்க்கவசம்
மானமேயென நினைத்து’ என்பதன்கருத்து. இருகளத்தினும்என்ற பாடம்,
இருதிறத்துப் போர்முனையிலும் என்றுபொருள்படும். ‘தானவ வானவர்’
என்பது, தானவானவரெனத் தொக்கது. மரக்கிளைகளிற் சஞ்சரிக்கும்
விலங்காதலால், சாகாமிருகமென்று குரங்குக்குப் பெயர்; சாகா – கிளை.
தேவாசுரயுத்தம், பாற்கடல்கடைந்து அமிருதமெடுத்த காலத்தும் மற்றும் பல
சமயங்களிலும் நிகழ்ந்தது. இராவணனாற் சிறைகொள்ளப்பட்ட சீதையை
மீட்டற்பொருட்டு ராமன் சுக்கிரீவனோடு நட்புக்கொண்டு அவனது
எழுபதுவெள்ளம் சேனைகளுடனே சென்று பொருது அரக்கரை அழித்தமை
பிரசித்தம்.
வீமசேனனொடு அருச்சுனன், வயப் புரவி வீர மா நகுலன், நட்பின்
அவனுக்கு இளைய
தாம மீளி, அளி மொய்த்த துளவப் புதிய தாரினான் அநுசன், விற்
குருவை முன் பொருத
சோமகேச பதி மெய்ப் புதல்வன், மற்றும் உள சூரர் ஆனவரை
முற்றுற விலக்கி, எதிர்,
மாமன் ஆகியும் மிகைத்து வரு மத்திரனை, ‘வா!’ எனா, அமர்
தொடக்கினன், உதிட்டிரனே69.-தருமன் யாவரையும்விலக்கிச் சல்லியனைத் தான்
எதிர்த்தல்.
வீமசேனனொடு – வீமசேனனும், அருச்சுனன் –
அருச்சுனனும், வய புரவி – வலிய குதிரைத்தொழிலில் வல்ல, வீர மா
நகுலன்- வீரத்தன்மையையுடைய சிறந்தநகுலனும், அவனுக்கு இளைய –
அந்நகுலனுக்குத்தம்பியான, நட்பின் – சிநேக தருமத்தையுடைய, தாமம்
மீளி -போர்மாலையையுடைய பலசாலியான சகதேவனும், அளிமொய்த்த –
வண்டுகள்மொய்க்கப்பெற்ற, துளவம் – திருத்துழாயினாலாகிய, புதிய
தாரினான் – புதியமாலையையுடைய கண்ணனது, அநுசன் – தம்பியான
சாத்தகியும், வில் குருவை – வில்லாசிரியனானதுரோணனை, முன் பொருத
– முன்பு (பதினைந்தாநாட் போரிலே) போர்செய்து கொன்ற, சோமகேசபதி
மெய் புதல்வன் – சோமகுலத்துத்தலைவர்களுக்குத் தலைவனான துருபதனது
உண்மைப்புத்திரனானதிட்டத்துய்மனும், மற்றும் உள சூரர் ஆனவரை –
மற்றும் உள்ள வீரர்களும்ஆகிய எல்லோரையும், முற்றுற விலக்கி –
முழுவதும் விலக்கி, உதிட்டிரன் -தருமபுத்திரன், மாமன் ஆகியும் எதிர்
மிகைத்து வரு மத்திரனை -(தங்களுக்கு) மாமனாகஇருந்தும்
(சோற்றுக்கடன்முறையால்) எதிரிலேசெருக்கிவருகிற சல்லியனை, வா எனா –
‘வா’ என்று உற்சாகத்தோடு சொல்லி, அமர்தொடங்கினன் – (அவனோடு)
போரைத் தொடங்கினான்; (எ – று.)
அநுசன்- பின்பிறந்தவன். யுதிஷ்டிரன் என்ற பெயர் – யுதிஸ்திரன்
எனப் பிரிந்து, போரிற் பின்வாங்காதுநிற்பவ னென்று பொருள்படும். தனது
தம்பியருள் நகுலசகதேவர்க்கு மாமனாதலையே ஒற்றுமை நயத்தால் இங்ஙனம்
எடுத்துக்கூறினார்; அன்புக்கு உரியவனாயிருந்தும் அவனைவிட்டுப்
பகைகொண்டா னென்க.
வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து, எதிர் கொள் வேக சாயக
விதத் திறம் எனைப் பலவும்,
மார சாயகம் என, சிகர மற் புயமும், மார்பும் மூழ்க, உடல்
முற்றும் முனையின் புதைய,
ஈரம் ஆன குருதிப் பிரளயம் எப் புறமும் யாறுபோல் பெருக,
எற்றுதலும், வெற்றி புனை
சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என
வியப்புடைய மத்திரனே,70.-தருமன் சல்லியன்மேல்அம்புதொடுத்தல்.
இதுவும், அடுத்த கவியும் – குளகம்.
(இ -ள்.) (தருமன்), வீர சாபம் – வலிய வில்லை, ஒர் இமைப்பினில்
வளைத்து – ஒருநொடிப்பொழுதிலே வளைத்து, எதிர் கொள் – (பகையை)
எதிர்த்தற்குஉரிய, வேகம் – விரைவுள்ள, சாயகம்விதம் திறம்எனை பலஉம் –
மிகப்பலவகைப்பட்ட பாணவர்க்கங்களெல்லாம், மார(ன்)சாயகம் என –
மன்மதபாணம்போல, சிகரம் மல் புயமும் – மலைச்சிகரம்போன்ற
வலிமையையுடைய (சல்லியனது) தோள்களிலும், மார்பும் – மார்பிலும், மூழ்க –
அழுந்தும்படியாகவும், உடல் முற்றும் – அவனுடம்புமுழுவதும்,
முனையின்புதைய – அம்புமுனைகளால் மறையும்படியாகவும், ஈரம் ஆன
குருதி பிரளயம் – ஈரமுள்ள இரத்தவெள்ளம், எ புறமும் –
எல்லாப்பக்கங்களிலும், யாறுபோல் பெருக – நதிபோலப் பெருகும்படியாகவும்,
எற்றுதலும் – தாக்கினவளவிலே,- வெற்றி புனை சூரர் யாரினும் மிகுத்து –
சயங்கொண்ட வீரர்களெல்லோரினும் மேம்பட்டு, இருள் முடிக்க வரு சூரன்
ஆம் என – இருளை யழித்தற்கு வருகிற சூரியன் போல்வா னென்று
கூறும்படி, வியப்பு உடைய-(யாவரும்) அதிசயிக்கத்தக்க குணமுள்ள, மத்திரன்
– மத்திரநாட்டரசனான சல்லியன், (எ – று.)-‘கணைகள் ஏவினான்’ என
வருங்கவியில் முடியும்.
மன்மதன் எய்யும் அம்புகள்போலக் குறித்த இலக்குத்தவறாமற்பட்டுத்
துளைக்குந் தரும னம்புகளென்பார், அவற்றை உவமை கூறினார், இமைப்பு,
வியப்பு – இமைப்பொழுதுக்கும், வியக்கத் தக்க குணத்துக்குந்
தொழிலாகுபெயராய் நின்றன. மாரன் – (பிராணிகளைக் காமநோயால்)
மரணவேதனைப்படுத்துபவன்; காரணப் பெயர், மிக்க இருளைத் தவறாமல்
எளிதில் அழிக்குஞ் சூரியன்போல மிக்க பகையைத் தவறாமல் எளிதில்
அழிப்பவன் சல்லிய னென்றார். மிகுந்து என்பது, சந்தவின்பம் நோக்கி
‘மிகுத்து’ எனவலித்தது. தாமரைமலர், அசோக மலர், மாமலர், மல்லிகைமலர்,
நீலோற்பலமலர் என்னும் ஐந்தும், மன்மதனது பஞ்சபணங்களாம். ‘யாறு
போல் பெருக’ என்பதில், சந்தவின்பத்துக்காக லகரம் இயல்பாய் நின்றது
ஆரவார முரசக் கொடி உயர்த்தவனது ஆகமீது அணி மணிக் கவசம்
அற்று விழ,
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய, ஓடு வாசி தலை அற்று
இரு நிலத்து உருள,
நேர் இலா வலவன் நெற்றி துளை பட்டு உருவ, நீடு நாணொடு பிடித்த
குனி வில் துணிய,
ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடிக் கணைகள் ஏவினான், ஒரு
நொடிக்குள் எதிர் அற்றிடவே.71.- சல்லியன் தருமனது கவசம்முதலியவற்றைத் துணித்தல்.
ஆரவாரம் – பெருமுழக்கத்தையுடைய, முரசம் – பேரிகை
வாத்தியத்தின் வடிவத்தையெழுதிய, கொடி – துவசத்தை, உயர்த்தவனது –
உயரநாட்டியுள்ளவனான தருமனது, ஆகம்மீது-உடம்பின்மேல், அணி
-அணியப்பட்டுள்ள, மணி கவசம் – இரத்தினம்பதித்த கவசம், அற்று விழ –
துணிபட்டு விழும்படியாகவும், ஊரும் – உருண்டுசெல்கிற, நேமி –
சக்கரங்களையுடைய, இரதத்து – தேரினுடைய, வயிர் அச்சு – உறுதியான
அச்சாணி, உடைய – துணிபட்டு உடையவும், ஓடு வாசி – விரைந்துவருந்
தேர்க்குதிரைகள், தலை அற்று – தலையறுபட்டு, இரு நிலத்து உருள –
பெரியபூமியிலே உருளவும், நேர் இலா – ஒப்பில்லாத, வலவன் – சாரதி,
நெற்றி-, துளை பட்டு உருவ – (அம்பினால்) துளைக்கப்பெற்று
ஊடுருவிப்படவும், (தருமன்), பிடித்தகுனி வில்-கையிற்பிடித்துள்ள வளைந்த
வில், நீடு நாணொடு – நீண்டநாணியுடனே, துணிய – துணிபடவும், –
(சல்லியன்), ஒரு நொடிக்குள் – ஒருநொடிப்பொழுதினுள்ளே, எதிர் அற்றிட
– (தனக்கு) எதிரில்லாதபடி, – ஈர-(குறித்த இலக்கைத் தவறாது)
பிளத்தலையுடைய, முனை வாய் – கூரிய நுனியினின்று, நெருப்பு உமிழ் –
நெருப்பைச் சொரிகிற, வடிகணைகள் – கூரிய அம்புகளை, ஏவினான் –
செலுத்தினான்; (எ-று.)
நாணொடுவில்துணிய – நாணியும் வில்லும் துணிய என்க.
வீரமெனப்பதம்பிரித்து வலிய என்று உரைத்தல், மோனைத்தொடைக்கு
முரணாம், நொடி – கைந்நொடிப்பொழுது.
வீறு சால் அருள் அறத்தின் மகன், அப்பொழுது, வேறு ஒர்
தேர்மிசை குதித்து, இமய வெற்பினிடை
ஏறு கேசரியொடு ஒத்து, உளம் நெருப்பு உமிழ, ஈறு இலார் புரம்
எரித்தவன் நிகர்க்கும் என,
மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து, நெடு வாயு ஆகும் என
விட்டனன்; இமைப்பொழுதில்
ஆறு பாய் அருவி முக் குவடு இறுத்த செயல் ஆனதால், முனை
கொள் மத்திரன் முடித் தலையே.72.-தருமன் வேறுதேரேறி வேலினாற் சல்லியனைக் கொல்லுதல்
வீறு சால் – (வேறொருவர்க்கில்லாத) சிறப்பு மிக்க,
அருள்-கருணையையுடைய, அறத்தின் மகன் – தருமபுத்திரன், அப்பொழுது
-, வேறு ஒர் தேர்மிசை குதித்து – வேறொரு தேரின்மேற் பாய்ந்து ஏறி,
ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என – அழிவற்றிருந்த அசுரர்களது
முப்புரத்தையெரித்திட்ட சிவபிரான் (தனக்கு) ஒப்பாவனென்னும்படி, இமயம்
வெற்பினிடை ஏறு கேசரியொடு ஒத்து – இமயமலையின்மேல் ஏறிய
சிங்கத்தைப் போன்ற, உளம் நெருப்பு உமிழ – மனம் கோபாக்கினியை
வெளியிட, மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து – ஒப்பில்லாததொரு
வேலாயுதத்தை யெடுத்து, நெடு வாயு ஆகும் என – பெரிய
காற்றாகுமென்னும்படி, விட்டனன் – வேகமாகவீசினான்: (அதனால்) இமை
பொழுதில் – ஒருமாத்திரைப்பொழுதிலே, முனை கொள்மத்திரன்
முடிதலை-முதன்மைகொண்ட சல்லியனது கிரீடமணிந்த தலை, ஆறு பாய்
அருவி முக்குவடு இறுத்த செயல் ஆனது – நதிகளாகப்பெருகுகிற
அருவிகளையுடைய மேருமலையின் மூன்றுசிகரம் (வாயுவினால்)
ஒடிக்கப்பட்ட விதம் போன்றது; (எ-று.)-ஆல் – ஈற்றசை.
முக்குவடிறுத்த கதை: முன்னொரு காலத்தில் வாயுதேவனுக்கும்
ஆதிசேஷனுக்கும் தமக்குள் யார் பலசாலியென்று விவாதமுண்டாக,
அதனைப்பரீக்ஷித்தறியும்பொருட்டு வாயுதேவன் மேரு மலையின் சிவரத்தைப்
பெயர்த்துத் தள்ளுவ தென்றும் ஆதிசேஷன் அதுபெயரவொட்டாமற்
காத்துக்கொள்வதென்றும் ஏற்பாடு உண்டாகி, அங்ஙனமே இருவரும்தேவர்
முதலியோரது முன்னிலையில் தத்தம் வலிமையைக் காட்டத்தொடங்கிய
பொழுது, ஆதிசேஷன் தனது ஆயிரம்படங்களாலும் மேருமலையின்
ஆயிரஞ்சிகரங்களையும் கவித்துக்கொண்டு பெயரவொட்டாமல்
வெகுநேரங்காக்க, பின்பு வாயுதேவன் தன்வலிமையால் அம்மலைச்
சிகரங்களில் மூன்றைப் பெயர்த்துக் கொண்டுபோய்த் தென்திசையில்
தள்ளிவிட்டனன் என்பதாம்.
இமயம் – பனிமலை, இது மலையரசனாதலாலும், எல்லாமலைகளினும்
உயர்ந்ததாதலாலும், இதனை யெடுத்துக்கூறினார். தேர்க்கு மலையும்,
தருமனுக்குச் சிங்கமும் உவமை. எளிதிற்பகையழித்தற்குச் சிவபிரானை
உவமை கூறினார், மாறு – எதிருமாம்
தொட்ட வரி சிலைத் தடக் கை இராமன் என்ன, தொடுத்த கணை
தப்பாமல், தொழாத வேந்தர்
இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர், எடுத்தது ஒரு வடி
வேலால், இளையோன் என்ன,
மட்டு அவிழும் தும்பை அம் தார்த் தருமன் மைந்தன் வாகு
வலியுடன் எறிய, மத்திரேசன்
பட்டனன்’ என்று, அணி குலைந்து முதுகிட்டு ஓடி, படாது பட்டது,
உயர்ந்த பணிப் பதாகன் சேனை.73.- சல்லியன் இறந்ததனால்கௌரவசேனை நிலைகுலைதல்.
தொட்ட – ஏந்திய, வரி – கட்டமைந்த, சிலை –
(கோதண்டமென்னும்) வில்லையேந்திய, தட – பெரிய, கை – கையையுடைய,
இராமன் என்ன – இராமன்போல, தொடுத்த கணை தப்பாமல் – எய்த அம்பு
குறிதவறாதபடி, தொழாத வேந்தர் இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் –
வணங்காத பகையரசர்கள் தரித்துள்ள கவசத்தையும் மார்பையும் (அம்புகளாற்)
பிளந்தபின்பு,- எடுத்தது ஒரு வடிவேலால் – கையிலெடுத்ததொரு
கூரியவேலாயுதத்தால், இளையோன் என்ன – முருகக்கடவுள்போல, மட்டு
அவிழும் அம் தும்பை தார் தருமன் மைந்தன் – வாசனை வீசுகிற அழகிய
தும்பைப்பூமாலையையுடைய தருமபுத்திரன், வாகு வலியுடன் எறிய –
தோள்வலிமையோடு வீச, (அதனால்), மத்திர ஈசன் – மத்திர நாட்டரசனான
சல்லியன், பட்டனன் – இறந்தனன், என்று – என்ற காரணத்தால், உயர்த்த
பணி பதாகன் சேனை – உயரநாட்டிய பாம்புக் கொடியையுடைய
துரியோதனதுசேனை, அணிகுலைந்து – அணிவகுப்பின் ஒழுங்கு கெட்டு,
முதுகுஇட்டு ஓடி -தோற்று ஓடி, படாது பட்டது – படாதபாடுபட்டது; (எ-று.)
வேலினாலெறிதற்கு வேலனான முருகனை உவமைகூறினார்.
சுப்பிரமணியன் சிவபிரானது இளையகுமார னாதலால்,
இளையோனெனப்பட்டனன். இனி. ‘இளையோனென்ன’ என்பதற்கு –
இராமன் தம்பியான இளையபெருமாள் [லக்ஷ்மணன்] போல என்று
உரைப்பாருமுளர். படாதுபட்டது – ஒரு நாளும் படாத மிக்கபாடு பட்டது.
இதுமுதற் பதினான்கு கவிகள் – பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து
ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எண்சீராசிரியவிருத்தங்கள்
மதி கண்ட பெருங் கடல்போல், குந்தி மைந்தர் வன் சேனை
ஆர்ப்பதுவும், மன்னன் சேனை
நுதி கொண்ட கனல் கொளுத்தும் இராம பாணம் நுழை கடல்போல்
நொந்ததுவும், நோக்கி நோக்கி,
கதி கொண்ட பரித் தடந் தேர்ச் சல்லியன்தன் கண் போல்வார்
எழு நூறு கடுந் தேர் ஆட்கள்,
விதி கொண்ட படைபோல் வெம் படைகள் ஏவி, வெம் முரசக்
கொடி வேந்தன்மேல் சென்றாரே.74.-சல்லியனைச் சேர்ந்தஎழுநூறுவீரர்கள் தருமனை
யெதிர்த்தல்.
மதி கண்ட பெரு கடல் போல்-சந்திரனைக் கண்ட பெரிய
கடல் பொங்குவதுபோல, குந்தி மைந்தர் வன்சேனை ஆர்ப்பதுவும் –
பாண்டவர்களது வலிய சேனை (தருமன் வெற்றியைக் கண்டு மகிழ்ந்து)
ஆரவாரிப்பதையும், மன்னன் சேனை – துரியோதனனுடைய சேனை, நுதி
கொண்ட கனல்கொளுத்தும் இராமபாணம் நுழைகடல்போல் –
கூர்மையைக்கொண்டதும் நெருப்பை மூட்டுவதுமான இராமனது அம்பு
தொடுக்கப்பெற்ற கடல்போல, நொந்ததுவும் – (சல்லியனிறந்தசோகத்தால்)
வருந்தியதையும், நோக்கி நோக்கி – பார்த்துப் பார்த்து,- கதி கொண்ட பரி
தடதேர் சல்லியன்தன் கண்போல்வார் – பலவகைநடைகளைக்கொண்ட
குதிரைகளைப் பூட்டிய பெரிய தேரையுடைய சல்லியனுக்குக் கண்போல்
இன்றியமையாத அங்கமாயுள்ள, எழுநூறு கடு தேர் ஆட்கள் – கொடிய தேர்
வீரர் எழுநூறு பேர், விதிகொண்ட படைபோல் வெம் படைகள் ஏவி –
பிரமாஸ்திரம்போலக் கொடிய ஆயுதங்களைப் பிரயோகித்துக்கொண்டு,
வெம்முரசம் கொடிவேந்தன் மேல் சென்றார் – பயங்கரமான
முரசக்கொடியையுடைய தருமராசன்மேல் (போர்க்குச்) சென்றார்கள்; (எ-று.)
சந்திரன் எதிர்ப்பட்டவளவிலே கடல் பொங்குதல், இயல்பு. ‘மதிகண்ட
பெருங்கடல்’ என்றவிடத்து ‘கண்ட என்பது – காணாததைக் காண்பதுபோலச்
சொன்ன மரபுவழுவமைதி. நகுலசகதேவர், மாத்திரியின் மக்களாயினும்,
குந்தியால் வளர்க்கப்பட்டதனாலும், குந்தியாலுபதேசிக்கப்பட்ட
மந்திரத்தின்பலத்தால் மாத்திரியினிடம் பிறந்தவராதலாலும், ‘குந்திமைந்தர்’
எனஅடக்கப்பட்டனர். தேராட்கள் – தேர்க்காவலராய் நின்ற ஆட்களுமாம்.
விதிகொண்ட படை – பிரமனைத் தெய்வமாக்கொண்ட அஸ்திரம். படை-
படுத்தற்குக் கருவியானது; படுத்தல்-அழித்தல்: ஐ-கருவிப்பொருள்விகுதி.
இராவணனாற் கவர்ந்துபோகப்பட்ட சீதாபிராட்டி இலங்கையிலிருக்கிற
செய்தியை அநுமான்சென்று அறிந்துவந்து சொன்ன பின்பு இராமபிரான்
வானரசேனையுடனே புறப்பட்டுச்சென்று கடற்கரையையடைந்து,
கடலைக்கடக்கஉபாயஞ்சொல்ல வேண்டுமென்று வருணனைப்பிரார்த்தித்து
அங்குத் தருப்பசயநத்திலே படுத்து ஏழுநாள் வரையில் பிராயோபவேசமாகக்
கிடக்க, கடலரசனாகிய வருணன் அப்பெருமானது மகிமையை யறியாமல்
உபேட்சையாயிருக்க, சக்கரவர்த்தித்திருமகனார் அதனைக்கண்டு
கோபங்கொண்டு, வாநரர் நடந்துசெல்லும்படி கடலைவற்றச்செய்வே னென்று
ஆக்கினேயாஸ்திரத்தைத்தொடுக்கத்தொடங்கவே, வருணன் அஞ்சிநடுங்கி
யோடிவந்து அப்பெருமானைச் சரணமடைந்து கடல்வடிவமான தன்மேல்
அணைகட்டுதற்கு உடன்பட்டு ஒடுங்கி நின்றானென்பது, இராமாயண கதை
அவர் அளவோ, அரவு உயர்த்த அரசன்தானும், ஆகுலத்தோடு
அருஞ் சமரில், அரி ஏறு என்னக்
கவரி புடை பணிமாற, தவளக் கொற்றக் கவிகை ஒரு தனி நிழற்ற,
கரை காணாத
உவரி நிகர் பெருஞ் சேனை வெள்ளம் சூழ, உயிர் அனைய
துணைவருடன் மாமன் சூழ,
தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு
நிருபன்தன்னைச் சார்ந்தான்.75- துரியோதனன்சகுனிமுதலானாருடன் தருமனை
யெதிர்த்தல்.
அவர் அளவோ – அவ்வெழுநூறுபேர் மாத்திரமோ, அரவு
உயர்த்த அரசன்தானும் – பாம்புக்கொடியை உயரநாட்டிய துரியோதனராசனும்,
ஆகுலத்தோடு – வருத்தத்துடனே, அருசமரில்-அரிய போரில், அரி ஏறு
என்ன – ஆண்சிங்கம்போல, கவரிபுடை பணி மாற-சாமரங்கள் பக்கங்களில்
வீசவும், ஒருதனி தவளம் கொற்றம் கவிகைநிழற்ற – ஒப்பற்ற ஒற்றை
வெண்கொற்றக்குடை நிழலைச்செய்யவும், கரை காணாத உவரி நிகர் பெரு
சேனை வெள்ளம் சூழ-கரைகாணவொண்ணாத கடல்போன்ற பெரிய
சேனைத்தொகுதி சூழ்ந்துவரவும், உயிர் அனைய துணைவருடன் மாமன்சூழ –
தனது உயிர்போன்ற தம்பிமார்களுடன் மாமனான சகுனியும் சுற்றிலும் வரவும்,
தவர் முதல் ஆம் படைகளொடு – வில்முதலிய ஆயுதங்களுடனே,
தன்னைவென்று தரணி கொள வரும் நிருபன்தன்னை சார்ந்தான் – தன்னைச்
சயித்துப் பூமியைப்பெற்றுக் கொள்ளுதற்கு வருகிற தருமராசனை
நெருங்கினான், (எ – று.)
அரவுபாம்பின்வடிவ மெழுதிய கொடிக்கு, இருமடியாகுபெயர், கவிகை-
கவிந்துள்ளது. அரியேறென்னச் சார்ந்தானென இயையும், வெள்ளம்-
ஒருபெருந்தொகை, தவர்-வில்.
வீமன் முதல் தம்பியரும், பொரு இலாத வெஞ் சேனைத் தலைவரும்,
போர் வென்றி கூரும்
சோமகரும் முதலாய தறுகண் வீரர், தும்பிகளை அரி இனங்கள்
துரக்குமாபோல்,
தாமம் மணித் தடஞ் சிகரத் தோளும் மார்பும் சரம் முழுகத் தனு
வணக்கி, சாய்ந்த சோரி
பூ முழுதும் பரந்து வர, பொருத வீரம் புலவோர்க்கும் அதிசயித்துப்
புகலல் ஆமோ?76.- வீமன் முதலியோர்பகைவர்களை யெதிர்த்தல்.
வீமன் முதல்-வீமசேனன் முதலான, தம்பியரும்-(தரும
புத்திரனது) தம்பிமார் நால்வரும், பொருவு இலாத – ஒப்பிலாத, வெம்
சேனைதலைவரும் – கொடிய சேனைத்தலைவர்களான திட்டத்துய்மன்
முதலியோரும்,போர் வென்றி கூரும் – போரில் வெற்றி மிகுகிற, சோமகரும்-
சோமககுலத்துவீரர்களும், முதல் ஆய – முதலான, தறுகண் வீரர் –
அஞ்சாமையையுடைய வீரர்கள், தும்பிகளை அரி இனங்கள் துரக்கும் ஆ
போல் – யானைகளைச்சிங்கக்கூட்டங்கள் ஓடச்செல்லும்விதம்போல,
(பகைவரையெதிர்த்து),- தாமம்-(போர்) மாலையை யணிந்த, மணி-அழகிய,
தட – பெரிய, சிகரம்-மலைச்சிகரம் போன்ற, தோளும் – அவர்கள்
தோள்களிலும், மார்பும் – மார்பிலும், சரம் முழுக-அம்புகள் தைத்து
அழுந்தும்படி, தனு வணக்கி-வில்லை வளைத்து, சாய்ந்த சோரி பூ முழுதும்
பரந்துவர – (அவர்களுடம்பு) சொரிந்தஇரத்தம்பூமிமுழுவதிலும்பரவிவரும்படி,
பொருத – போர் செய்த, வீரம் – வீரத்தன்மை, புலவோர்க்கும் அதிசயித்து
புகலல் ஆமோ-விசேஷஞானமுடைய தேவர்களும் கொண்டாடிச் சொல்லக்
கூடியதோ? [அன்று என்றபடி]: (எ – று.)
பேரறிவுடைய தேவர்களும் வருணித்துச் சொல்லலாகாதவண்ணம் மிக்க
வீரங்காட்டிப் பொருதன ரென்பதாம். மிக்க அறிவுடைமைபற்றி, தேவர்க்கு
வடமொழியில் விபுதரென்று ஒரு பெயர். இனி, கல்வித்திறமுடைய
வித்வான்களுக்கும் வருணித்துச்சொல்லக்கூடிய அளவினதன்றென்று
உரைப்பினும் அமையும். சோமகர்-துருபதனது குலத்தார். தாமம் மணி தட
சிகரம் தோள் – ஒளியையுடைய இரத்தினங்களையுடைய பெரிய மலைகள்
போன்ற தோள்களென்றலும் ஒன்று. பூ – பூமியைக் குறிக்கையில், வடமொழி.
‘தும்பிகளை அரியினங்கள் தொடருமாபோல்’ என்றும்பாடம். உவமையணி
தன் தமையன்தனைப் பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு
ஆக்கி தரணி ஆளும்
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர்
எழுவரையும் புவிமேல் வீழ்த்தி,
‘இன்று அமையும் சமரம், இனிக் காண்டல் பாவம்’ என்று இமையோர்
அதிசயிப்ப, இமயம் போல
நின்றமை கண்டு, ஆனிலனை மகிழ்ந்து நோக்கி, நெஞ்சுற, அன்று என்
செய்தான், நெடிய மாலே!77.-துரியோதனன் தம்பியருள்எழுவரை வீமன் கொல்லுதல்.
தன் தமையன்தனை – தனது தமையனான தருமனை,
பொருது- எதிர்த்துப்போர்செய்து, வெல்ல வந்த – சயிப்பதற்கு வந்த, தானை
எலாம் -பகைவர் சேனைகளையெல்லாம், நீறு ஆக்கி – பொடிபடுத்தி,-தரணி
ஆளும்புன் தமையன் எதிர் – பூமியை அரசாளுகிற அற்பகுணமுள்ள
தமையனானதுரியோதனது எதிரிலே, பொரவந்தோர் அவனுக்கு இளையவீரர்
எழுவரையும்- (தன்னுடன்) போர்செய்ய வந்தவர்களான அவனது தம்பிமார்
ஏழுபேரையும்,புவி மேல் வீழ்த்தி – தரையிலே இறந்துவிழச்செய்து,- சமரம்
இன்று அமையும்- ‘போர் இன்றைநாளோடு போதும், இனிகாண்டல் பாவம்-
இனிமேலும்(இப்படிப்பட்ட கொடும்போரைப்) பார்த்தல் பாவமாம்,’ என்று
இமையோர்அதிசயிப்ப – என்று தேவர்கள் கொண்டாட,-இமயம் போல
நின்றமை -இமயமலைபோல (வீமன்) சலியாது நின்றதை, கண்டு – பார்த்து,
நெடியமால் -பெருமைக்குணமுள்ள திருமாலின் அவதாரமான கண்ணபிரான்,
ஆனிலனை -வாயுகுமாரனான அவ்வீமனை, நெஞ்சு உற – மனங்களிக்க,
மகிழ்ந்து நோக்கி- மகிழ்ச்சி கொண்டு பார்த்து, அன்று – அப்பொழுது, என்
செய்தான் – யாதுசெய்தான்? [மிக்க ஆனந்தமடைந்தனன் என்பதாம்];
(எ – று.)
துரியோதனனுக்கு உதவியாய்த் தருமனைச் சயிக்கும்பொருட்டு வந்த
சேனைகளை வீமன் சாம்பராக்கித் துரியோதனன் கண்ணெதிரிலே அவன்
தம்பிமார் ஏழுபேரையுங்கொன்று மிகஉக்கிரமாகப் போர்செய்து சிறிதும்
சலிப்பில்லாது நின்ற திறத்தைக் கண்ணன் பார்த்து மனப்பூர்வமாய்
அளவில்லாத ஆனந்தத்தை அடைந்தனன் என்பதாம். தனது
திருவவதாரத்தின் காரியமான பூபாரநிவிருத்தி வீமனால் நிறைவேறிவருதலை
நோக்கி எம்பெருமான் திருவுள்ளமுவந்தனனென்க. ‘புன்தமையன்’
என்றவிடத்து, தமையன் என்றது, வீமனுக்குத் துரியோதனன் முந்திப்பிறந்தவ
னென்பதை விளக்கும்; வீமன் பிறந்த நாளுக்கு முதல்நாளிரவிற் பிறந்தவன்
துரியோதனன். காணுதற்கரிய அப்போரின் மிக்கஉக்கிரத் தன்மையை
விளக்குவார் ‘இன்றமையுஞ் சமர மினிக் காண்டல் பாவ
மென்றிமையோ ரதி சயிப்ப’ என்றார். ஆநிலன் – வாயுபுத்திரன்: அநிலன் –
வாயு. ‘பொர வந்தோர்’ என்றவிடத்தில் ‘போர்வேந்தர்’ என்றும்
பாடமுண்டு.
செயகந்தன், செயவன்மன், செயசேனன், சேனாவிந்து, செய்த்திரதன்,
திறல் ஆர் விந்து,
வயம் ஒன்று விக்கிரமன், என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின்,
மதங்கள் ஏழும்
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்னக் களித்து, வலம்புரி வீமன்
முழக்கக் கண்டு, அங்கு
அயல் நின்ற வலம்புரித் தார் அண்ணல் சோர்ந்தான்;- அநுசர்மேல்
அன்பு எவர்க்கும் ஆற்றல் ஆமோ?78.-தம்பியர் இறந்ததற்குத்துரியோதனன் சோகமடைதல்.
செயகந்தன் – ஜயகந்தன், செயவன்மன் – ஜயவர்மா,
செயசேனன் – ஜயஸேநன், சேனாவிந்து – ஸேநாவிந்து, செயத்திரதன் –
ஜயத்ரதன், திறல் ஆர் விந்து – வெற்றிபொருந்திய ஜயவிந்து, வயம் ஒன்று
விக்கிரமன் – சயம்பொருந்திய சயவிக்கிரமன், என்போர் – என்னும்
ஏழுபேருடைய, ஆவி – உயிர், வான் நாடு புகுந்த தன்பின் – இறந்து
வீரசுவர்க்கமடைந்த பின்பு,-கயம். ஒன்று – ஒரு யானை, மதங்கள் ஏழும்
சொரிய – எழுவகைமதங்களும் பொழிய, எதிர் நின்றது என்ன – எதிரிலே
நின்றது போல, வீமன்-, களித்து-களிப்படைந்து (எதிரில்நின்று),
வலம்புரிமுழக்க- (வெற்றிக்குஅறிகுறியாகத் தனது) சங்கத்தை வாயில்வைத்து
ஊதிஆரவாரிக்க, கண்டு – பார்த்து, அங்கு அயல் நின்ற வலம்புரி தார்
அண்ணல்- அவ்விடத்தில் அருகிலே நின்ற நஞ்சாவட்டைப்பூமாலையணிந்த
அரசனானதுரியோதனன், சோர்ந்தான் – மனந்தளர்ந்தான்: அநுசர்மேல்
அன்புஎவர்க்கும் ஆற்றல் ஆமோ – தம்பியர்பக்கல் உள்ள அன்பு
யாருக்கும்அடக்கமுடியுமோ? [முடியாது என்றபடி];
தம்பிமார் இறந்ததற்குத் துரியோதனன் சோகித்தா னென்ற
சிறப்புப்பொருளை, தம்பியர்பக்கல் அன்பு யார்க்குந் தணிக்கலாகாது என்ற
பொதுப்பொருள்கொண்டு விளக்கியதனால், வேற்றுப்பொருள் வைப்பணி.
திறல் ஆர் விந்து – திறலென்னுஞ்சொல்லின் பொருள் கொண்டதொரு
பரியாயநாமம் முந்தியமையப்பெற்ற விந்து வென்னும் பெயருடையா னென்க;
இங்ஙனமே வயமொன்று விக்கிரமன் – வயமென்னுஞ்சொல்லின் பரியாயநாமம்
முன் அமைந்த விக்கிரமனென்னும் பெயருடையா னென்க. வலம்புரிச்சங்கு
இடம்புரியினும் ஆயிரமடங்குசிறந்ததாம். கவி பட்சபாதமில்லாமல் வீமன்
துரியோதனன் என்ற இருவர்க்கும் வலம்புரி கூறுவார்போன்று சமத்காரத்தால்
‘வலம்புரி வீமன்முழக்க, வலம்புரித்தாரண்ணல்’ என்றார். முதலடியில்
‘செயசேனன்சே னாவிந்து’ எனச் சீர்பிரிக்க. மாற்றலாமோ என எடுத்து
உரைத்தல்,மோனைக்குச் சிறவாது.
தனக்கு நிகர்தான் ஆன கிருத்தவன்மன், தம்பியர்கள் எழுவர் படத்
தம்முன் பட்ட
மனக் கவலை அறிந்து, பெருஞ் சேனையோடும் மற்று அவன்
தம்பியர் ஐவரோடும் வந்து,
சினக் கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி, செருச்
செய்தான்; இமைப்பு அளவில் திருகி ஓட,
எனக்கு இவரே அமையும் எனப் புறக்கிடாத இளையவர்மேல்,
கடுங் கணை ஐந்து ஏவினானே.79.-வீமன் மற்றும்துரியோதனன் தம்பியரைவரை
யெதிர்த்தல்.
தம்பியர்கள் எழுவர் பட-தம்பிமார் ஏழுபேர் இறக்க,
தம்முன்பட்ட – தமையனான துரியோதனன் அடைந்த, மனம்கவலை-
மனக்கலக்கத்தை, அறிந்து – உணர்ந்து,- தனக்கு நிகர் தான் ஆன
கிருதவன்மன் – (வேறு ஒப்புமையில்லாமையால்) தனக்குச்சமானம்
தானேயாகிய கிருதவர்மன்,- பெரு சேனையோடும் – பெரிய சேனையுடனும்,
மற்று அவன் தம்பியர் ஐவரோடும் – அத்துரியோதனன் தம்பிமார் வேறு
ஐந்துபேருடனும், வந்து-, சினம் கதிர்வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி
– கோபத்தையும் ஒளியையுடைய வேலாயுதத்தையுமுடைய வீமனது உயிரைத்
தொலைக்க நினைத்து, செரு செய்தான் – போர்செய்தானாய், (அப்பொழுது
வீமன் எதிர்த்துப்போர் செய்யவே.) இமைப்பு அளவில் – கண் இமைக்குங்
காலத்திற்குள், திருகி ஓட – (தன் சேனையுடன்) புறமிட்டோட, புறக்கு
இடாதஇளையவர்மேல் – புறங்கொடாதுநின்ற துரியோதனன்தம்பியர்
ஐவர்மேல்,எனக்கு இவரே அமையும் என – எனக்கு இவர்களே
போதுமென்று, கடுகணை ஐந்து ஏவினான் – கொடியஐந்து அம்புகளைச்
செலுத்தினான்; (எ – று.)
நூற்றுவருள் முந்தினநாள்களில் இறந்தவர் போக மற்றையோரை
யெல்லாம் அன்றைக்கே கொன்றொழித்துத்தனது சபதத்தை
நிறைவேற்றிவிடவேண்டு மென்பது வீமன்கொண்ட சங்கற்பமாதலால், அதற்கு
ஏற்ப, எனக்கு இவரேயமையுமென இளையவர்மேற்கணையேவினான். இந்த
ஐவர் பேர், அடுத்தகவியில் விளங்கும், இவரேயமையும் என்பதற்கு –
இவர்களைக் கொல்லுதலே போதுமென்று இலக்கணையாற் பொருள்கொண்டு
கூறினுமாம். கதிர் – கூர்நுனியுமாம்.
சித்திரவாகுவி”னாடு, பெல”சனன், “பார்ச் செயசூரன், சித்திரன்,
உத்தமவிந், என்”ற அத்திர வில்
ஆண்மயினில் திகழாநின்ற ஐவர் இவர், யாவர”ம் அடர்ப்பான்
வந்”தார்,
சத்திரம் யாவ”ம் ஏவி, சங்கம் ஊதி, சமர் விளத்தார், நெடும்
பொழு; சமீரணன்தன்
புத்திரனால் முன் சென்ற எழுவ”ராடும் பொன்னுலகம் குடி
புகுந்தார், புலன்கள் “பால்வார்.80.-அவ்வைவரும் வீமனால்இறத்தல்.
சித்திரவாகுவினோடு – சித்திரவாகுவும், பெலசேனன் –
பலசேநனும், போர் – போரில்வல்ல, செயசூரன் – ஜயசூரனும், சித்திரன் –
சித்திரனும், உத்தமவிந்து – உத்தமவிந்தும், என்று – என்று பெயர் பெற்று,
அத்திரம் வில் ஆண்மையினில் திகழாநின்ற – அஸ்திரங்களைப்
பிரயோகித்தற்கு உரிய வில்லின்திறத்தில் சிறந்து விளங்குகிற, புலன்கள்
போல்வார்ஐவர் இவர் – ஐம்புலன்கள்போல் அடக்கவொண்ணாதவர்களான
இவ்வைந்துபேரும், யாவரையும் அடர்ப்பான் வந்தோர்-எல்லோரையும்
(போரில்) அழிக்க வந்து, சத்திரம் யாவையும் ஏவி-
ஆயுதங்களையெல்லாம்செலுத்தி, சங்கம்ஊதி – சங்கத்தை முழக்கி, நெடு
பொழுது சமர் விளைத்தார் -வெகுநேரம் போர்செய்து, (பின்பு), சமீரணன்தன்
புத்திரனால் -வாயுகுமாரனான வீமனால், முன் சென்ற எழுவரோடும் பொன்
உலகம் குடிபுகுந்தார்-முன்னேசென்ற ஏழு உடன்பிறந்தாருடனே தாங்களும்
பொன்மயமானவீரசுவர்க்கத்துக்குச் சென்று சேர்ந்தார்கள் [இறந்தன
ரென்றபடி]; (எ – று.)
அத்திரம்-அம்பு முதலிய கைவிடுபடை, சஸ்திரம்-வாள் முதலிய
கைவிடாப்படை யென்ப; இனி, மந்திரத்தோடு ஏவுவது – அத்திரம்; அஃது
இன்றிச் செலுத்துவது சத்திர மென்றும் கூறுப. புலனைந்தும் பிராணிகளுக்கு
இன்றியமையாத உறுப்பாயிருத்தல்போலத் துரியோதனனுக்குத் தம்பியரைவர்
இன்றியமையாச் சிறப்பின ரென்பார். ‘புலன்கள்போல்வார்’ என உவமை
கூறினார்.
ஏற்றிடை வெங் கனல் நுழைந்தது என்ன, முன்னம் எழுவருடன்
தனக்கு இளையோர் ஐவர் சேரக்
கூற்றிடை ஏகுதலும், மிகக் கொதித்து, நாகக் கொடி வேந்தன்,
முடி வேந்தர் பலரும் சூழ,
நால்-திசையும் எழுந்து பெருங் கடலை மோதி நடு வடவைக்
கனல் அவித்து நடவாநின்ற
காற்று எனவே, பாண்டவர்தம் உடலம்தோறும் கணை முழுக,
வில் விசயம் காட்டினானே.81.-அதுகண்டு சீறித்துரியோதனன் போர் தொடங்கல்.
ஏற்றிடை – ஆயுதம்பாய்ந்த புண்ணிலே, வெம் கனல் –
கொடிய நெருப்பு, நுழைந்தது என்ன – நுழைந்ததுபோல, முன்னம்
எழுவருடன்- முன் (இறந்த) ஏழுதம்பிமாருடனே, தனக்குஇளையோர் ஐவர்-
தனக்குத்தம்பியரான வேறுஐவரும், சேர-ஒருசேர, கூற்றிடை ஏகுதலும் –
யமனிடத்திற்குச் சென்றவுடனே [இறந்தவுடனே], மிக கொதித்து-
மிகவுஞ்சீற்றங்கொண்டு, நாகம் கொடிவேந்தன் – பாம்புக்கொடியையுடைய
துரியோதனராசன், முடிவேந்தர் பலரும் சூழ – கிரீடாதிபதிகளான
அரசர்கள்பலரும் (தன்னைச்) சூழ்ந்துவர, நால்திசையும் எழுந்து பெரு கடலை
மோதி நடுவடவை கனல் அவித்து நடவாநின்ற காற்று எனவே –
நான்குத்திக்குக்களிலும் (ஏககாலத்திற்) கிளம்பிப் பெரியகடலைத் தாக்கி
அதன்நடுவிலுள்ள படபாமுகாக்னியைத் தணித்துநடப்பதொருகடுங்காற்றுப்
போல[மிகவும்உக்கிரமாக], பாண்டவர்தம் உடலம் தோறும் கணை முழுகவில்
விசயம் காட்டினான் – பாண்டவர்களுடைய உடம்புகளிலெல்லாம் அம்புகள்
பாய்ந்து அழுந்தும்படி (தனது) விற்போர்த்திறத்தைக் காட்டினான்;
சிறப்பாக அம்புகளைச் சொரிந்தன னென்பதாம்.
‘மருமத்தினெறிவேல்பாய்ந்த புண்ணி லாம் பெரும்புழையிற் கனல்
நுழைந்தாலென,” என்றதனோடு ‘ஏற்றிடைவெங்கனல் நுழைந்ததென’
என்பதைஒப்பிடுக: இது, வருத்தத்தின்மேல் வருத்தம் விளைதற்கு உவமை.
ஏறு என்பது- ஆயுதம்பாய்ந்த புண்ணாதலை ‘வாளேறு’, ‘வேலேறு’
என்பவற்றிலுங் காண்க: அதன்மேல் இடை – ஏழனுருபு. ஓர் – அசை.
‘தம்பியரோரைவர்’ என்றும்பாடமுண்டு. கடலினிடையிலே யுள்ள தொரு
பெண்குதிரையின் முகத்தில் எப்பொழுதும் தீ மூண்டுஎரிகிற தென்றும்,
அது மழை நீர்முதலியவற்றால் கடல்நீர் மிகாதபடி அதனை உறிஞ்சிநிற்ப
தென்றும் நூற்கொள்கை.
தன் கரத்தில் வில் துணிய, வேறு ஓர் வில்லால் சாதேவன்
வலம்புரிப் பூந் தாம வேந்தன்
வன் கரத்தும், மார்பகத்தும், முகத்தும், சேர வை வாளி
குளிப்பித்தான்; மற்றும் மற்றும்
முன் களத்துள் எதிர்ந்துளோர் இரு சேனைக்கும் முன்
எண்ணும் திறலுடையோர் மூண்டு மூண்டு,
பின் களத்தைச் சோரியினால் பரவை ஆக்கி, பிறங்கலும்
ஆக்கினர் மடிந்த பிணங்களாலே.82.-சகதேவன்துரியோதனனையும், இவன்பக்கத்தார்
அவன்பக்கத்தாரையும் வெல்லுதல்.
தன் கரத்தில் வில் – தன் கையிலுள்ள வில், துணிய –
(துரியோதனனெய்த அம்பினால்) துணிபட, வேறு ஓர் வில்லால் – வேறொரு
வில்லைக்கொண்டு, சாதேவன் – சகதேவன், வலம்புரி பூ தாமம் வேந்தன் –
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனராசனது, வல் கரத்தும் –
வலியகைகளிலும், மார்பு அகத்தும் – மார்பிலும், முகத்தும் – முகத்திலும்,
சேர -ஒருசேர, வை வாளி – கூரிய அம்புகளை, குளிப்பித்தான் –
முழுகச்செய்தான்;மற்றும் மற்றும் – மேலும்மேலும், களத்துள்
முன்எதிர்ந்துள்ளோர் -போர்க்களத்தில் முற்பட்டு எதிர்த்துள்ளவர்களான,
இரு சேனைக்கும் முன்எண்ணும் திறல் உடையோர் – இரண்டுசேனைகளிலும்
முதன்மையாய்எண்ணத்தக்க வல்லமையுடைய பாண்டவசேனையார், மூண்டு
மூண்டு -மிகஉக்கிரங்கொண்டு, பின் களத்தை – பின்னிடும்படியான
கௌரவசேனையுள்ள இடத்தை, சோரியினால் பரவை ஆக்கி –
இரத்தப்பெருக்காற்கடலாகச்செய்து, மடிந்த பிணங்களால் பிறங்கலும்
ஆக்கினர் – இறந்தஉடம்புகளால் மலைகளையும் உண்டாக்கினார்கள்;
பிறங்கலாக்கினர் – மலைபோலக் குவித்தன ரென்பதாம், முன்களம் –
சகதேவன் சேனை, பின்களம் – துரியோதனன் சேனை.
காந்து கனல் உமிழ் சின வேல் கைக் காந்தாரர் காவலனாம்
சகுனியும், தன் கனிட்டன் ஆன
வேந்தனும், மன்னவனுடன் பல் வேந்தரோடும், வெம் பனைக்
கைப் பல கோடி வேழத்தோடும்,
ஏந்து தடம் புயச் சிகரி வீமன்தன்னோடு இகல் மலைந்து,
தொலைந்து இரிந்தார்; இவரை அல்லால்,
ஊர்ந்த மணிப் பணிக் கொடியோன் இளைஞர் மீள ஒன்பதின்மர்
அவனுடன் வந்து, உடற்றினாரே.83.-பிறர் பின்னிட,துரியோதனன்தம்பியர் வீமனை
யெதிர்த்தல்.
காந்து – மூண்டெரிகிற, கனல் – நெருப்பை, உமிழ் –
வெளிப்படுத்துகிற, சினம் – உக்கிரத்தன்மையையுடைய, வேல்-வலையேந்திய,
கை – கையையுடைய, காந்தாரர் காவலன் ஆம் சகுனியும் –
காந்தாரதேசத்தார்க்கு அரசனானசகுனியும், தன்கனிட்டன் ஆன
வேந்தனும் – அவனுக்குத் தம்பியான அரசனும், மன்னவனுடன் –
துரியோதனராசனோடும், பல்வேந்தரோடும் – மற்றும் பல அரசர்களுடனும்,
வெம்பனை கை பல கோடி வேழத்தோடும் – கொடிய பனைமரம்போன்ற
துதிக்கையையுடைய அநேககோடி யானைகளுடனும் கூடி, ஏந்து தட புயம்
சிகரி வீமன்தன்னோடு இகல் மலைந்து – உயர்ந்தபெரிய மலைகள்போலுந்
தோள்களையுடைய வீமசேனனோடு போர்செய்து, தொலைந்து இரிந்தார் –
தோற்றுஓடினார்கள்; இவரை அல்லால் – இவர்களையன்றி மணி ஊர்ந்த
பணிகொடியோன் இளைஞர்ஒன்பதின்மர் – மணியையுடைய ஊர்ந்துசெல்லும்
பாம்பின் வடிவை யெழுதிய அழகிய கொடியையுடைய துரியோதனனது
தம்பிமார் ஒன்பதுபேர், மீள – மறுபடி, வந்து அவனுடன் உடற்றினார் –
வந்துஅவ்வீமனோடு போர் செய்தார்கள்; (எ – று.)
துதிக்கைக்குப் பனைமரம் உவமை, திரண்டுஉருண்டு, நீண்ட கரிய
பெரியவடிவிற்கு. புயச்சிகரி யென உருவகம்போலக் கூறினும், சிகரிப்புயம்
எனஉவமையாக்கி யுரைத்தலே தகுதி, தொடர்ச்சிதோன்றக் கூறாமையின்,
சிகரீ -சிகரமுடையது எனப் பொருள். ஒன்பதின்மர் பெயர், அடுத்தகவியில்
விளங்கும். ‘பணியணிக்கொடியோன்’ என்றும் பாடம்.
பிறங்கிய உத்தமன், உதயபானு, கீர்த்தி, பெலவன்மன், பெலவீமன்,
ப்ரபலதானன்,
மறம் கிளர் விக்ரமவாகு, சுசீலன், சீலன், வரு பெயர் கொள்
ஒன்பதின்மர் வானில் ஏற,
திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய,
சிலை கால் வாங்கி,
கறங்கு எனவே சூழ்வந்து பொருதான்; வீமன் கட்டாண்மைக்கு இது
பொருளோ, கருதுங்காலே?84.-துரியோதனன் தம்பியர்ஒன்பதின்மரை வீமன்
கொல்லுதல்.
பிறங்கிய -விளங்குகிற, உத்தமன் -, உதயபானு -, கீர்த்தி-,
பெலவன்மன் – பலவர்மா, பெலவீமன் – பலபீமன், பிரபலதானன் –
ப்ரபலதாநன், மறம் கிளர் – பராக்கிரமம்மிக்க, விக்கிரமவாகு – விக்கிரமபாகு,
சுசீலன் – ஸு சீலன், சீலன்-, வரு – என்று சொல்லப்பட்டு வருகிற, பெயர் –
பெயரை, கொள்-கொண்ட, ஒன்பதின்மர் – ஒன்பதுபேர், வானில் ஏற –
வீரசுவர்க்கத்திற் சென்றேறும்படியாகவும், திறம் கொள் – வலிமைகொண்ட,
கசரததுரக பதாதி – யானை தேர் குதிரை காலாட்கள், கோடி –
கோடிக்கணக்கானவை, சேர-ஒருசேர, ஒரு கணத்து அவிய –
ஒருக்ஷணப்பொழுதிலே அழியும்படியாகவும், வீமன் -, சிலை கால் வாங்கி –
வில்லை வளைத்து, கறங்கு என சூழ் வந்து – காற்றாடி போலச் சுழன்றுவந்து,
பொருதான் – போர் செய்தான்; கருதுங்கால் – ஆலோசிக்குமிடத்து, கட்டு
ஆண்மைக்கு – (வீமனது) உறுதியான போர்த்திறமைக்கு, இது பொருளோ –
இங்ஙன் பொருதது ஒருபொருளாவதோ? (எ – று.)
வீமனதுஅதிபலபராக்கிரமத்துக்கு இவை ஒருபொருளாகாஎன்றதைப்
பொதுப்பொருளாகவும்மற்றதைச்சிறப்புப் பொருளாகவும்நிறுத்திக்
கூறினதனால், வேற்றுப்பொருள்வைப்பணி. கஜரததுரகபதாதி – பன்மை
விகுதிபெறாத அஃறிணையும்மைத்தொகை. சிலைகால்வாங்குதல் –
வில்லைக்கோடிகள் வளையச்செய்தல். இனி, கால் – உபசர்க்கமுமாம். கறங்கு
– சுழல்வது.
பாண்டவரில் வீமன் கைப் படையால் முன்னம் பட்டு ஒழிந்தோர்
ஒழிந்தோர்கள் பலரும் கூடி,
காண் தகைய கேசரி வெஞ் சாபம் அன்னார், கண்இலான்
மதலையர், அக் களத்தில் அன்று
மூண்டு பெரும் பணித் துவச முன்னோன் காண, முனைந்து
அமர் செய்து, அவனியின்மேல் முடிகள் வீழ,
தீண்ட அரிய திருமேனி தேரில் வீழ, சேண் அடைந்தார்,
அரம்பையர்கள் சிந்தை வீழ.85.-எஞ்சிநின்றதுரியோதனன்தம்பியரும் வீமனால் இறத்தல்.
பாண்டவரில் – பாண்டவர்களுள், வீமன் – வீமசேனனது,
கை- கையினாற் பிரயோகிக்கப்பட்ட, படையால் – ஆயுதத்தால், முன்னம்
பட்டுஒழிந்தோர் – முன்புஇறந்தொழிந்தவர்கள், ஒழிந்தோர்கள் –
நீங்கலாகவுள்ளவர்களான, காண்தகைய வெம் கேசரிசாபம் அன்னார் –
காணுதற்குத் தகுதியுள்ள உக்கிரத்தன்மையுள்ள சிங்கக்குட்டிகளைப்
போன்றவர்களான, கண்இலான் மதலையர் பலரும் . பிறவிக்குருடனான
திருதராட்டிரனது புத்திரர்கள் [துரியோதனன் தம்பிமார்] பலபேரும், கூடி-
ஒருங்குசேர்ந்து, அ களத்தில் – அந்தப் போர்க்களத்தில், அன்று –
அப்பொழுது, மூண்டு பெரும் பணி துவசம் முன்னோன் காண –
உக்கிரங்கொண்டு பெரிய பாம்புக்கொடியையுடைய தங்கள் தமையனான
துரியோதனன் பார்க்க, முனைந்து அமர் செய்து – (வீமனோடு) முயன்று
போர்செய்து, அவனியின்மேல் முடிகள் வீழ – தரையில் தங்கள் தலைகள்
விழவும்,தீண்டரிய திருமேனி தேரில் வீழ – தொடுதற்கும் அருமையான
[மிக்கவலிமையுள்ள] அழகிய தங்கள் உடம்பு தேர்களில் விழவும்,
அரம்பையர்கள் சிந்தைவீழ – தேவமாதர்களது மனம் தங்களை விரும்பவும்,
சேண் அடைந்தார் – வீரசுவர்க்கஞ்சேர்ந்தார்கள்; (எ – று.)
போரிலிறந்து வீரசுவர்க்கஞ்சேர்பவரைத் தேவமாதர்மணத்தல்
இயல்பாதலின், ‘சேணடைந்தார் அரம்பையர்கள்சிந்தைவீழ’ என்றார். வீழ்தல்
என்பது – விரும்புதலென்னும் பொருளதாதலை “தாம்வீழ்வார்
மென்றோட்டுயிலின்” என்ற திருக்குறளிலுங் காண்க. இனி, சிந்தை வீழ –
மனம்தம்மிடத்துப் பதிந்தழுந்த என்னலுமாம். காண்டரிய என்றும் பாடம்.
தீண்டு-முதனிலைத் தொழிற்பெயர். சாபம் என்று குட்டிக்குப்பெயர்; இது –
இளமைப்பெயராவதொருவடசொல் என்று அறியாது, வெம்சாபம் கேசரி
அன்னார் என மொழிமாற்றி, கொடிய வில்லையுடைய சிங்கம் போன்றவர்கள்
என்று நலிந்து பொருள் கொண்டு இடர்ப்படுவாருமுளர். சேண் – வானம்:
சுவர்க்கத்துக்கு இடவாகுபெயர்.
தனக்கு இளையோர் தொண்ணூற்று ஒன்பதின்மர்தாமும் சய வீமன்
சரத்தாலும், தண்டினாலும்,
கனக் குடிலில் குடியேறக் கண்டு கண்டு, கை சோர, மெய் சோர,
கண்ணீர் சோர, எனக்கு உறுதி
உரைத்தவர்தம் உரை கேளாமல் என் செய்தேன்! எப் பொருளும்
இழந்தேன்!’ என்று,
மனக் கவலை உறும் மன்னன்தன்னை நோக்கி, மாமனும், மற்று ஒரு
கோடி மாற்றம் சொன்னான்:86.-அதனாற் சோகித்ததுரியோதனனுக்குச் சகுனி
தைரியங்கூறல்.
தனக்கு இளையோர் தொண்ணூற்றொன்பதின்மர் தாமும் –
தனது தம்பிகள் தொண்ணூற்றொன்பது பேரும், சயவீமன் –
வெற்றியையுடையவீமனது, சரத்தாலும் – அம்புகளாலும், தண்டினாலும் –
கதையினாலும், கனம் குடிலில் குடி ஏற – மேகங்களுக்குமேலுள்ளதான
வீரசுவர்க்கத்திற்சென்றுசேர, கண்டு கண்டு – பார்த்துப் பார்த்து, (அதனால்)
கைசோர – கைகள் சோர்வடையவும், மெய் சோர – உடம்பு சோர்வடையவும்,
கண் நீர் சோர – கண்ணீர்வழியவும், ‘எனக்கு உறுதி உரைத்தவர்தம் உரை
கேளாமல் – எனக்கு நன்மொழி கூறினவர்களது வார்த்தையைக்கேட்டு
அதன்படி நடவாமல், என் செய்தேன் – என்ன காரியஞ்செய்தேன்? எ
பொருளும் இழந்தேன் – எல்லாப்பொருள்களையும் இழந்துவிட்டேனே,’
என்று- என்று கழிவிரக்கங்கொண்டு, மனம் கவலை உறும் – மனத்திற்
கவலையடைந்த, மன்னன் தன்னை நோக்கி – துரியோதனராசனைப் பார்த்து,
மாமனும் – மாமனான சகுனியும், மற்று-பின்பு, ஒருகோடி மாற்றம் சொன்னான்
– ஒருகோடி வார்த்தைகளை (த்தேறுதலாக)க் கூறுபவனானான்; (எ – று.)-
அவற்றில் இரண்டொன்றை அடுத்த கவிகளிற் காட்டுகிறார்.
மேலுலகிலுள்ள தங்குமிட மென்ற பொருளை ‘கனக்குடில்’ என்ற
சொல்லால் விளக்கினார்; (வீரசுவர்க்கத்துப்) பொன்மயமான குடிசை என்றலும்
ஒன்று. உறுதியுரைத்தவர் – வீடுமன் துரோணன் விதுரன் கண்ணன்
முதலியோர் பற்பலர். ஒன்பது + பத்து – தொண்ணூறு: “ஒன்பதனொடு
பத்தும்” என்னுஞ் சூத்திர விதி.
அருகு சாயைபோல் வாழும் அனுசர் யாரும் வான் ஏற
உருகி மாழ்கி நீ சோகம் உறினும் மீள வாரார்கள்;
மருக! வாழி! கேள்: போரில் மடிவுறாத பூபாலர்
முருகவேளையே போல்வர்; முரண் அறாத கூர் வேலோய்!87.-இதுவும், அடுத்த கவியும்- சகுனி துரியோதனனுக்குத்
தைரியங் கூறுதல்.
மூன்று கவிகள் – ஒருதொடர்.
(இ – ள்.) அருகு – (உனது) அருகிலே, சாயை போல் – நிழல் போல,
வாழும் – பிரியாதுவாழ்ந்திருந்த, அனுசர் யாரும் – தம்பிமாரெல்லோரும்,
வான் ஏற – வீரசுவர்க்கத்திற்குச் செல்ல, (அதனால்), நீ உருகி மாழ்கி
சோகம் உறினும் – நீமனமுருகிமயங்கி விசனப்பட்டாலும், மீள வாரார்கள் –
(இறந்த அவர்கள்) மறுபடி திரும்பிவர மாட்டார்கள்; மருக – மருமகனே!
வாழி – வாழ்வாயாக; கேள் – (யான் சொல்லும் வார்த்தையைக்) கேட்டு
நடப்பாயாக; முரண் அறாத கூர்வேலோய் – வலிமைநீங்காத
கூரியவேலாயுதத்தை யுடையவனே! போரில்மடிவுறாத பூபாலர் – யுத்தத்தில்
(இறந்தவர் போக) இறவாமலுள்ள அரசர்கள், முருக வேளையே போல்வர் –
(பலபராக்கிரமங்களிற்) குமாரக்கடவுளையே போல்வார்கள்; (எ – று.)
முன்னிரண்டடி – “ஆண்டாண்டுதோறு மழுதுபுரண்டாலும், மாண்டார்
வருவரோ மாநிலத்தீர் – வேண்டா” என்ற உலகவியல்பையும், பின்னிரண்டடி-
எஞ்சியுள்ள அரசர்களது பகையழிக்கும் வன்மையையுங்கூறியன. ‘வாழி’ என
மாமன் மருமகனை வாழ்த்தினான். வேள் என்ற சொல் – விரும்பப்படுபவ
னென்று பொருள்படும்; அழகியவனென்று கருத்து. காமவேளைவிலக்குதற்கு,
‘முருகவேள்’ என்றார். முருகு – அழகு இளமை தெய்வத்தன்மை;
அவற்றையுடையவன் முருகன்.
இதுமுதற் பதினொரு கவிகள் – முதற்சீரும் நான்காஞ்சீரும்
புளிமாச்சீர்களும், இரண்டாஞ்சீரும் ஐந்தாஞ் சீரும்தேமாச்சீர்களும்,
மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் தேமாங்காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரியச்சந்த விருத்தங்கள். தனன தான தானான தனன
தானதானான – என்பதுஇவற்றிற்குச் சந்தக் குழிப்பாம்.
கிருத நாமன், நால் வேத கிருபன், ஆதியோரான
நிருபர் சேனை சூழ் போத, நிமிர ஓடி, மாறாது
பொருது, சீறி மேல் மோது புலியின் ஏறு போல்வாரை
முரசகேதுவோடு ஓட, முரணு போரில் மூள்வோமே!’
கிருத நாமன் – கிருதவர்மா வென்னும் பெயருடையவனும்,
நால் வேத கிருபன் – நான்குவேதங்களையும் அறிந்த கிருபாசார்யனும்,
ஆதியோர் ஆன – முதலியோராகிய, நிருபர் – அரசர்களும், சேனை –
சேனைகளும், சூழ் போத – சூழ்ந்துவர, (நாம்), நிமிர ஓடி – நெருங்கச்
சென்று, மாறாது பொருது – இடைவிடாமற் போர் செய்து,- சீறி மேல் மோது
புலியின் ஏறு போல்வாரை – கோபங்கொண்டு பிறர்மேல் தாக்குகிற
ஆண்புலிபோல்பவரான பகைவர்களை, முரச கேதுவோடு ஓட –
முரசக்கொடியையுடைய யுதிட்டிரனுடனே ஓடிப்போம்படி, முரணு –
வலிமையாகச் செய்கிற, போரில் – போர்த்தொழிலில், மூள்வோமே –
முயல்வோமே; (எ – று.)
ஈற்றுஏகாரம் – தேற்றவகையால், வலியப்போர்தொடங்கிச் செய்து,
பகைவரையோட்டுதல் எளிதென்ற கருத்தைக்காட்டும். முரசகேது –
வேற்றுமைத்தொகையன்மொழி.
என, மகீபன் வாடாமல் இனிய வாய்மையே கூறி,
அனிக ராசியோடு ஏகி, அமரில் வீமன்மேல் மோத,
முனைகொள் வீமன், ஆம் ஆறு, முறுவல் வாள் நிலா வீச,
மனனில் ஓடு தேர் மாறி, வலி கொள் பாரில் ஆனானே.89.- சகுனி வீமனையெதிர்க்க, வீமன் தேரினின்று இழிதல்.
என – என்று, மகீபன் வாடாமல் – துரியோதனராசன்
வாட்டமொழியும்படி, இனிய வாய்மையே கூறி – இனிமையான
வார்த்தைகளையே சொல்லி, (சகுனி). அனிகம் ராசியோடு ஏகி-
சேனைத்தொகுதியுடனே சென்று, அமரில் – போர்க்களத்தில், வீமன் மேல்
மோத -வீமன்மீது தாக்க,- முனை கொள் வீமன்- உக்கிரங் கொண்ட வீமன்,-
முறுவல் வாள் நிலா வீச – (தனது) புன்சிரிப்பு ஒளியையுடைய
சந்திரகாந்திபோன்ற காந்தியை வெளிவீச,-ஆம் ஆறு – சமயத்துக்கு ஏற்றபடி,
மனனில் ஓடு தேர்மாறி வலி கொள்பாரில் ஆனான் – மனம்போல விரைந்து
செல்லுகிற தேரைவிட்டு வலிமைகொண்ட தரையில் இறங்கினான்; (எ – று.)
வில்முதலிய படைக்கலங்களைக் கொண்டன்றித் தன்கைவலிமை
கொண்டேபோர்செய்து விரைவிற் பகையழிக்கக் கருதினனாதலால், அதற்கு
ஏற்குமாறு தேரினின்று நிலத்திற் குதித்தனனென்பார், ‘ஆமாறு தேர்மாறிப்
பாரிலானான்’ என்றார். சிரிக்குங்காலத்துப் பற்களின் வெள்ளொளி
வெளித்தோன்றுதலை ‘முறுவல்வாணிலா வீச’ என்றது, நினைத்த
மாத்திரத்தில்மனம் எவ்வளவுதூரத்திலுள்ள பொருளினிடத்துஞ்சென்று
சேர்தலால்,மனோவேகம் எல்லாவேகத்தினுஞ் சிறந்த உவமையாம். வாய்மை
யென்பதில்,வாய் என்பது – சொல்லுக்குக் கருவியாகுபெயராம்; அதன்மேல்
‘மை’ விகுதி -வேறு பொருளுணர்த்தாமையால், பகுதிப்பொருள்விகுதியாம்.
அமர் -போர்க்களம்: தானியாகுபெயர்.
தரணி தாழுமா போது சகுனி சேனை வான் ஏற,
முரணு வாகுவால் மோதி, முடுகு நீள் கதாபாணி
அரணி ஆகவே, ஏனல் அடவி ஆனதால்-நீடும்
இரண பூமி மால் யானை, இரதம், வாசி, காலாளே.90.- சகுனியின் சேனைவீமனால் அழிதல்.
தரணி தாழும் ஆ(று) – பூமி குழிபடும்படி, போது –
திரண்டுவருகிற, சகுனிசேனை – சகுனியின்சேனை, வான்ஏற-இறந்து
வீரசுவர்க்கஞ்சேரும்படி, முரணு வாகுவால் மோதி – வலிமைகொண்ட
தோள்களால் தாக்கி, முடுகும் – நெருங்கிச்செல்லுகிற, நீள் கதாபாணி –
நிண்ட கதையைக் கையிலுடையவீமன், அரணி ஆக –
தீக்கடைகோல்போல்ஆக,-நீடும் இரணிபூமி – நீண்டபோர்க்களத்திலுள்ள,
மால் யானை இரதம் வாசி காலாள்- பெரிய யானைகளும் தேர்களும்
குதிரைகளும் காலாள்களுமாகியஎதிர்ச்சேனை, ஏனல் அடவி ஆனது –
தினைகாடுபோலாயிற்று; (எ – று.)-ஆல் – ஈ.ற்றசை.
மலைச்சாரல்களிலுள்ள காடுகளில் சிலமரங்கள் உராய்தலால் உண்டாகும்
நெருப்பிற் பட்டுத் தினைக்கொல்லை எளிதில் அழிதல் போல, வீமன்
கைப்பட்டுப்பகைச்சேனை எளிதில் அழிந்த தென்பதாம். போதுசகுனிசேனை,
நீள்கதாபாணி-வினைத்தொகைகள். கதாபாணி-வேற்றுமைத்தொகையன்மொழி.
உருவகவணி.
அலகு இல் வேலைபோல் சேனை அதிபன் ஆவி போமாறு,
பலம்அது ஆக மேல் மோது படைஞர் சாயவே, நாமும்
இலகு வாளம், வேல், நேமி, எவரும் ஏவுவேமாக!
தலைவ! கேள்’ எனா, வீர சகுனி கூறினான், மீள.91.- சகுனி மீளவும்துரியோதனனுக்குத் துணிவுகூறல்.
இதுவும், அடுத்த கவியும் – குளகம்.
(இ -ள்.) ‘அலகு இல் – அளவில்லாத, வேலை போல் – கடல்
போன்ற, சேனை – (நமது) சேனைக்கு, அதிபன்-தலைவனயிருந்த சல்லியனது,
ஆவி – உயிர், போம் ஆறு-நீங்கும்படி, பலரும் ஆகி-பலரும்
ஒருங்குதிரண்டு,மேல் மோது – மேலே தாக்கின, படைஞர் – (எதிர்ப்பக்கத்து)
வீரர்கள், சாய -அழிந்திடும்படி, நாமும் எவரும்-நாமெல்லோரும்
(ஒருங்குசேர்ந்து), இலகு-விளங்குகிற, வாளம்-வாளாயுதத்தையும், வேல் –
வேலாயுதத்தையும், நேமி -சக்கரத்தையும், ஏவுவேம் ஆக – (அவர்கள்மேற்)
செலுத்துவோமாக; தலைவ -தலைவனே! கேள் – (யான் சொன்னதைக்)
கேட்பாய்;’ எனா – என்று,(துரியோதனனைநோக்கி), வீரசகுனி-வீரனாகிய
சகுனி, மீள கூறினான்-மீண்டும்உறுதி கூறினான்; (எ – று.)
காலையிற் போர்தொடங்கியபொழுது நம்மினும்தொகையிற் குறை
பட்டிருந்த எதிர்ப்பக்கத்தார் பின்பு ஒருங்கு சேர்ந்து பொருததனாலாகிய
ஒற்றுமைவலியால் நம்மை வென்றிட்டார்க ளாதலால், இப்பொழுது
தொகைகுறைந்துள்ள நாமும் அவ்வழியை அனுசரித்து ஒருங்குதிரண்டு
பொருதால் அவர்களை வென்றிடலா மென்று, சகுனி, துரியோதனனுக்குத்
தைரியங்கூறினானென்றவாறு. கூறினான்மூளஎன்றும் பாடம்.
விரகு அறாத சூது ஆடு விடலைமீது சாதேவன்
இரதம் ஏவி, ஓர் வாளி எழில் கொள் மார்பில் ஏவா முன்,
மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில்
உருவ வீசினான், மாமன் உதவியா, ஒர் கூர் வேலே92.- சகுனியை யெதிர்த்தசகதேவன்மேல் துரியோதனன்
வேலேவுதல்.
விரகு அறாத – வஞ்சனை நீங்காத, சூது ஆடு விடலை மீது
-சூதாடுதலில் வீரனான சகுனியின்மேல், சாதேவன் – சகதேவன், இரதம் ஏவி
-(தனது) தேரைச் செலுத்தி, எழில் கொள்மார்பில் – அழகுகொண்ட
(அவனது)மார்பிலே, ஓர்வாளி ஏவாமுன் – ஓரம்புதொடுத்தற்குமுன்னே,-
மருகன் ஆனபூபாலன் – (அந்தச்சகுனியின்) மருமகனான துரியோதனராசன்,
மாமன் உதவி ஆ – தன்மாமனானசகுனிக்குச்சகாயமாக (வந்து), மதி கொள்
ஞானி பூண் மார்பில் – (யாவரும்) மதித்தலைக்கொண்ட
தத்துவஞானமுடையவனான சகதேவனது ஆபரணங்களையணிந்த மார்பிலே,
உருவ – ஊடுருவிச்செல்லும்படி, ஒர் கூர் வேல் வீசினான்-கூரியதொரு
வேலாயுதத்தை யெறிந்தான்; (எ – று.)
‘விரகறாத’ என்றது, விடலைக்கு அடைமொழி; சூதுக்குந் தகும்.
எழில் -வளர்ச்சியுமாம்.
எதிர் இலாத தோள் ஆண்மை இளவல் தேரின்மேல் வீழ,
உதவியாக வேல் ஏவும் உலகு காவலான் மார்பில்
முதுகில் ஓடவே நூறு முழுக ஏவினான் வாளி,
அதல பூமியூடு, ஆழி அமுதம் ஆரும் வாயானே.93.- அதுகண்டு வீமன்துரியோதனன்மேல்
அம்புதொடுத்தல்.
எதிர் இலாத – ஈடில்லாத, தோள் ஆண்மை-புயவலிமையை
யுடைய, இளவேல் (சகதேவனான தனது) தம்பி, தேரின்மேல் வீழ –
(மூர்ச்சித்துத்) தேர்மேல் விழ,- (அங்ஙனம்விழும்படி), உதவி ஆக வேல்
ஏவும்- (சகுனிக்குச்) சகாயமாக வேற்படையை யெறிந்த, உலகு காவலான்-
நிலவுலகாள்பவனான துரியோதனராசனது, மார்பில்-மார்பிலே,- ஆழி அமுதம்
அதல பூமியூடு ஆரும் வாயான் – பாற் கடலினின்று தோன்றிய
தேவாமிருதத்தைப் பாதாளலோகத்திலே (சென்று) பருகிய வாயையுடைய
வீமன்,-முதுகில் ஓட – (ஊடுருவி) முதுகுவழியிலேசெல்லும்படியும், முழுக –
தைத்து அழுந்தும்படியும், நூறு வாளி ஏவினான் – நூறு அம்புகளைச்
செலுத்தினான்; (எ – று.)
சகுனிக்குப் பரிந்துவந்து துரியோதனன் சகதேவன்மேல்
வேலெறிந்ததனால் அவன் மூர்ச்சித்துத் தேரில்விழ, அதுகண்டு பரிந்துசென்று
வீமன் துரியோதனன்மேற் பல அம்புதொடுத்தன னென்பதாம். எதிர் – ஈடும்,
எதிரியும். அதலபூமி – அதலமாகிய உலகமென இருபெயரொட்டு.
நான்காமடியிற் குறித்த கதை:- பாண்டவரிடத்து இளமைப்
பருவத்திலேயேபங்காளிக்காய்ச்சல்கொண்ட துரியோதனன் மிக்கபலசாலியான
வீமனிடத்துஅதிக விரோதங்கொண்டு அவனைக் கொல்லும்பொருட்டுச் சகுனி
முதலானாரோடு ஆலோசித்து ஒருநாள் வீமனுக்கு விருந்துசெய்விப்பதென்று
வியாசம் வைத்துச் சமையற்காரரைக்கொண்டு மிக்க விஷங்கலந்த உணவைக்
கொடுத்து உண்பித்து அதனால்மயங்கியிருக்கிற சமயத்தில் அவனைக்
கயிற்றால்கட்டிக் கங்கைநீரிலே போகட்டுவிட, அதில் வீழ்ந்து
பிலத்துவாரவழியாய்ப் பாதாளஞ்சேர்ந்த அவ்வீமனை அங்குள்ள சிறுநாகங்கள்
கடிக்க, முந்தினவிஷம் இவ்விஷத்தால் நீங்கினவளவிலே, கயிற்றுக் கட்டையும்
மெய்வலியால்துணித்திட்ட அவனுக்கு, வாயுகுமாரனென்ற அபிமானத்தோடு
வாசுகி மிக உபசரித்து ஆங்குள்ள அமிருதகல சங்களிற்சிலவற்றை யுண்பிக்க,
வீமன் உண்டு அதனால் முன்னினும் மிக்க வலிமைகொண்டு மீண்டன
னென்பதாம்.
சமரில் வீமன் ஏவோடு தலைவன் வீழவே, பூமி
அமரனான தாமா ஒர் அயிலை வீமன்மேல் ஏவ,
‘எமர்கள் ஆவி போல்வானொடு இகல் செயாமல் ஈசான
குமரன் ஆவி போமாறு குடைதும் நாம்’ எனா, வீரன்.94.-வீமன்மேல் வேலேவியஅசுவத்தாமனைச் சோழன்
தாக்குதல்.
இதுவும், அடுத்த கவியும் – குளகம்.
(இ -ள்.) சமரில் – போர்க்களத்திலே, வீமன் ஏவோடு – வீமன்
பிரயோகித்த பாணங்களுடனே, தலைவன் – முதல்வனான துரியோதனன்,
வீழ- கீழ் விழுந்திட, (அதுகண்டு), பூமி அமரன் ஆன தாமா –
பூதேவனாகிய[அந்தணனான] அசுவத்தாமா, ஒர் அயிலை –
ஒருவேலாயுதத்தை, வீமன்மேல்-,ஏவ – செலுத்த, (அதுகண்டு), ‘எமர்கள்
ஆவி போல்வானொடு இகல்செயாமல் – எமக்கெல்லாம்
உயிர்போல்பவனாகிய துரியோதனனுடன் போர்செய்யாமல், ஈசான குமரன்
ஆவி போம் ஆறு – சிவ குமாரனானஅசுவத்தாமனதுஉயிர் நீங்கும்படி,
நாம்குடைதும் – நாம் (அவனைஅம்புகளால்) துளைப்போம்’, எனா – என்று
சொல்லிக்கொண்டு, வீரன் -வீரனான சோழன், (எ – று.)-இக்கவியில், ‘வீரன்’
என்றதை, அடுத்த கவியில்வரும் ‘மனுகுலேசன்’ என்பதற்கு
அடைமொழியாக்கி, என்று சொல்லிப்போர்செய்த வீரனான சோழனது
வில்வலிமை கூறவொண்ணாததென்று முடிவுகாண்க.
நம்மைப்போல அரசகுலத்திற்பிறந்தவ னென்ற அபிமானத்தால் சோழன்
வீமனம்பால் விழுந்துகிடக்கிற துரியோதனன்மேற்பரிவுகொண்டு, அவன்மேல்
அடுத்துப் பொருதலை விலக்கி, ‘போருக்குத் தகுதியில்லாத அந்தணனாய்
உறவுமுறையில்லாத அயலானுமாயுள்ள அசுவத்தாமனை அழிப்போம்’
என்றான்.
பூமியில் தேவர்போலச்சிறப்புறுதலால் அந்தணர் பூசுரரெனப்படுதல்
பற்றி,’பூமியமரனான தாமா’ என்றார். தாமா – முதற்குறையாகிய பெயர்.
தனுவின் வேத நூல் வாசிதனயனான தாமாவை
முனை கொள் மார்பின்வாய் மூழ்கி முதுகில் ஓடவே, ஏழு
வினை கொள் வாளி மேல் ஏவி, விதமது ஆகவே போர் செய்
மனு குலேசன் நீள் சாப வலிமை கூற வாராதே.
தனுவின் வேதம் – தனுர்வேதமாகிய வில்வித்தையையும்,
நூல்- மற்றைய நூல்களையும் அறிந்த, வாசி தனயன் ஆனதாமாவை –
குதிரையினிடம் பிறந்த குமாரனான அசுவத்தாமனை, முனை கொள்
மார்பின்வாய் மூழ்கி – வலிமைகொண்ட மார்பிலே அழுந்தி, முதுகில் ஓட-
ஊடுருவி முதுகுவழியே யோடும்படி, வினைகொள் ஏழு வாளி –
போர்த்தொழிலைக்கொண்ட ஏழு அம்புகளை, மேல் ஏவி – அவன்மேற்
செலுத்தி, விதமது ஆகவே போர் செய் – பலவகையாக எதிர்த்துப்போர்
செய்த, மனுகுல ஈசன் – மனுவின்குலத்துக்குத் தலைவனான சோழனது, நீள்-
நீண்ட, சாபம் – வில்லினது, வலிமை-, கூற வாராது – (யார்க்கும்)
சொல்லமுடியாது; (எ – று.)
தநுர்வேதமாவது – பகைவெல்லுதற்குரியபடைக்கலங்களிற் பயிலும்
வகையையும், அஸ்திரசஸ்திரங்களைப் பிரயோகிக்கும்வகை முதலியவற்றையும்
அறிவிக்கும் நூல்; இங்கே, நூல் என்றது, மற்றைய வேதசாஸ்திரங்களை.
சோழன் சூரியகுலத்து மனுசக்கரவர்த்தியின் மரபில் உதித்தவனாதலால்,
‘மனுகுலேசன்’ எனப்பட்டான். பதினேழாம்போர்ச்சருக்கத்திலும்
“மனுகுலசோழன்” என்றமைகாண்க. இங்ஙனம் ஒருசோழராசன்
பாண்டவர்க்குத் துணைவந்து பதினெட்டாநாட்போரளவும் இறவாதிருந்து
பகைவென்று உதவியமை “தாங்கள் பாரதமுடிப்பளவு நின்று தருமன்தன்
கடற்படைதனக் குதவிசெய்தவவனும்” என்று கலிங்கத்துப்பரணியிலும்
புகழப்பட்டவாறு உணர்க.
மருகன் வீழவே, சாப மறை வலானும், ஆர் மாலை
விருதனோடு போராடி, வெரிநிடா விடாது ஓட,
அருகு சூழும் மா சூரர் அடைய ஓட, ஓடாது
திருகினான், அரா ஏறு திகழ் பதாகையான் மாமன்.96.-கிருபன் சோழனுக்குத்தோற்க, சகுனி போருக்கு மீளல்.
மருகன் – (தனது) மருமகனாகிய அசுவத்தாமன், வீழ –
(சோழனெய்த அம்புகளால் மூர்ச்சித்துக்) கீழேவிழுந்திட, (அதுகண்டு), சாபம்
மறைவலானும் – வில்தொழிலிலும் வேதங்களிலும் வல்லவனான கிருபனும்,
ஆர் மாலை விருதனோடு போர் ஆடி – ஆத்திப்பூமாலையையுடைய
வீரனானசோழனுடனே எதிர்த்துப்போர்செய்து, வெரிந் இடா விடாது ஓட –
முதுகுகொடுத்து இடைவிடாது ஓடிச்செல்ல, (அதனால்), அருகு சூழும் மா
சூரர்அடைய ஓட – அருகிற்சூழ்ந்துள்ள சிறந்த வீரர்களெல்லோரும்
ஓடிச்செல்ல,(அப்பொழுது), அரா ஏறு திகழ் பதாகையான் மாமன் – பாம்பின்
வடிவம்ஏறிவிளங்குகிற கொடியையுடைய துரியோதனனது மாமனாகிய சகுனி,
ஓடாதுதிருகினான் – தான் ஓடாமல் (போருக்கு) மீண்டான்; (எ – று.)
மரத்தின் பெயர் – இங்கே, அதன் பூவுக்கு முதலாகுபெயர். சோழனுக்கு
ஆத்திமாலை அடையாளப் பூமாலையாதலால் ‘ஆர்மாலை விருதன்’ என்றார்;
விருது – அடையாளம். அருகு – அசுவத்தாமன், கிருபன் என்னும்
இவர்களினருகில். சோழனுக்கு முன் எதிர்ப்பக்கத்து வீரர் பலரும்
நிற்கமாட்டாமல் ஓடிப்போனதை மேல் 106-ஆங் கவியிலும் “மதவெங்கயப்
போர்வளவற்கு முதுகு தந்த, விதமண்டலீகர் புலிகண்ட மிருகமொப்பார்”
எனக்கூறுமாறு காண்க.
சகுனி ஆவி போமாறு, சபத வாய்மை கோடாமல்,
மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட,
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை
இகலொடு ஏவினான், வீமன் இளவலான போர் மீளி.97.-சகதேவன் சகுனிமேல்வேலெறிதல்.
வீமன் இளவல் ஆன போர் மீளி – வீமனது தம்பியான
போரில் வலிய சகதேவன்,- சகுனி ஆவி போம் ஆறு – சகுனியின் உயிர்
நீங்கும்படி, சபதம் வாய்மை கோடாமல் – (தான் முன்பு கூறியுள்ள)
சபதவார்த்தை தவறாமல்,- மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல்-(கீழ்த்)
துரியோதனராசன் (தன்மேல்) எறிந்த வேலாயுதம்போலக் கொல்லுதல்
தவறாமல், மேல் ஓட – மேலே விரைந்து பாயும்படி, உகவையோடு மா
மாயன்உதவு கூர நீள் வேலை – மகிழ்ச்சியுடனே சிறந்த கண்ணன்
(தனக்குக்)கொடுத்ததொரு கூர்மையுடைய நீண்ட வேலாயுதத்தை, இகலொடு
ஏவினான் -வலிமையோடு செலுத்தினான்; (எ – று.)
(கீழ்92, 93 – கவிகளிற் கூறியபடி) சகுனிக்குப் பரிந்துவந்த
துரியோதனன் சகதேவன் மேல் எறிந்த வேல் அவனுக்கு மூர்ச்சை
மாத்திரத்தை விளைத்துக் கொல்லாதுவிட்டமைபோல, இப்பொழுது
சகதேவன்சகுனிமேலெறியும் வேல் அவனைக் கொல்லாமல் விடுதலில்லை
யென்பது,’மகிபனேவு வேல்போல வழுவுறாமல் மேலோட’ என்பதனால்
விளக்கப்பட்டது. உகவை – உகத்தல்: தொழிற்பெயர்: உக – பகுதி, வை –
விகுதி. திரௌபதியைத் துகிலுரிந்த காலத்தில் சகதேவன் தான் சகுனியைக்
கொல்வதாகச் சபதஞ்செய்துள்ளதனால் அதைத் தவறாது நிறைவேற்றுமாறு
வேலெறிந்தனனென்பார், ‘சபதவாய்மைகோடாமல்’ என்றார். “சகுனிதனை
யிமைப்பொழுதிற் சாதேவன் துணித்திடுவேன் சமரிலென்றான்” எனக் கீழ்ச்
சூதுபோர்ச்சருக்கத்தில் வந்தமை யுணர்க.
தாவிய வெம் பரிமா இரதத்திடை, சாதேவன்
ஏவிய வேலொடு சௌபல ராசன் இறந்தான்’ என்று
ஓவியது எங்கணும், வெஞ் சமர்; பார் முழுது உடையானும்,
ஆவி அழிந்த உடம்பு என, வன்மை அழிந்தானே.98.-சகுனி யிறந்ததனால்போரொழிந்து துரியோதனன்
கலங்கல்.
சாதேவன் ஏவிய வேலொடு – சகதேவன் எறிந்த
வேலாயுதத்துடனே, சௌபலராசன் – சகுனி, தாவிய வெம் பரி மா
இரதத்திடை- தாவிச்செல்லும் வேகமுள்ள குதிரைகள் பூட்டிய தேரிலே,
இறந்தான் -,என்று – என்ற காரணத்தால், எங்கணும் – எவ்விடத்தும், வெம்
சமர் -கொடிய போர், ஓவியது – ஒழிந்தது: பார் முழுது உடையானும் –
பூமிமுழுவதையுந் தன்தாகக்கொண்டு ஆளுகிறதுரியோதனனும், ஆவி
அழிந்தஉடம்பு என – உயிர்நீங்கிய உடல்போல, வன்மை அழிந்தான் –
வலிமைகெட்டான்; (எ – று.)
வேலொடுஇறந்தான் – வேல்பட்டமாத்திரத்தில், அதனோடுகீழ் விழுந்து
இறந்தானென்க. இனி, ‘வேலொடு’ என்றதிலுள்ள ‘ஒடு’ என்னும்
மூன்றனுருபைக் கருவிப்பொருளில் வந்ததெனக்கொண்டு, வேலினால் என்று
உரைப்பினும் அமையும். நான்காமடியிற்கூறிய உவமையால், உடம்பு
தொழில்செய்தற்கு உயிர் இன்றியமையாச்சிறப்பினதாயிருத்தல் போலத்
துரியோதனனது செய்கைகளுக்கெல்லாம் சகுனியே மூலகாரணமென்பது
நன்குவிளங்கும்.
இதுமுதல் ஆறு கவிகள் – ஈற்றுச்சீரொன்று மாங்காய்ச்சீரும்’
மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய நெடிலடி நான்குகொண்ட கலித்துறைகள்;
காப்பியக்கலித்துறை: விருத்தக்கலித்துறை யென்பதும் இது.
தும்பியில், வாசியில், நீடு இரதத்தில், ஓர் துணை இன்றி,
பம்பிய சேனை அழிந்து வரும்படி பாராதான்,
தம்பியர் யாவரும், மாதுலனும், பல தமரும் போய்,
அம்பி இழந்த பெருங் கடல்வாணரின் அலமந்தான்.99.-துரியோதனன்நிலைகலங்குதல்
தும்பியில் – யானைகளிலும், வாசியில் – குதிரைகளிலும்,
நீடுஇரதத்தில்-உயர்ந்ததேர்களிலும், ஒர் துணை இன்றி – (தனக்குத்)
துணையாவதுஒன்றுமில்லாமல், பம்பிய சேனை அழிந்து வரும்படி – நிறைந்த
(தனது)சேனை அழிந்து மீளும் விதத்தை, பாராதான் – (ஒருகாலும்)
பார்த்திராததுரியோதனன்,-தம்பியர் யாவரும் – (தனது) தம்பிமாரெல்லோரும்,
மாதுலனும் -மாமனான சகுனியும், பல தமரும்-(தனது) சுற்றத்தார்கள் பலரும்,
போய் -ஒழிந்ததனால், அம்பி இழந்த பெரு கடல் வாணரின் –
மரக்கலத்தையிழந்தபெரிய கடற்பிரயாணிகள்போல, அலமந்தான்
மிகவருந்தினான்; (எ – று.)
உவமையணி. ‘பாராதான்’ என்றது, இதுவரையில் ஒருநாளும்
இப்படிப்பட்ட தன்சேனையழிவைப் பார்த்திராதவ னென்ற பொருளோடு,
இப்படி தனக்கு ஒருகால் நேருமென்று எதிர்பாராதவனென்ற கருத்தையும்,
இன்று நேர்ந்த அழிவைப் பார்த்துப் பொறுக்கமாட்டாதவனாயினா னென்ற
கருத்தையும் விளக்கும். போய் – போக என எச்சத்திரிபாக்குக;
[நன்-வினை-27.]பலதமர்-சைந்தவன் வீடுமன் முதலிய உறவினர்களும்,
கர்ணன் பகதத்தன்முதலிய நண்பர்களும்.
ஒரு மதி வெண் குடை, இரு கவரிக் குலம், ஊரும் சீர்
இரதம், மதங் கயம், இவுளி, பணிக் கொடி, முதலான
அரசர் பெருந்தகை, அரசு அடையாளம் அனைத்தும் போய்,
திரு நயனங்களினும் பத மலர்கள் சிவப்பு ஏற,100.-இதுமுதல் மூன்றுகவிகள் -குளகம்: துரியோதனன்
ஒருமந்திரபலத்தால் தன்பக்கத்தவரில் இறந்தவரையெல்லாம்
பிழைப்பித்துப் போர்செய்யக் கருதிச் செல்லுதலைக் கூறும்
மதி – சந்திரமண்டலம்போன்ற, ஒரு வெள் குடை –
ஒற்றைவெண்கொற்றக்குடையும், இரு கவரி குலம் – இரண்டு
சாமரைக்கற்றையும், ஊரும் – ஏறிநடத்தப்படுகிற, சீர் – சிறப்பையுடைய,
இரதம்மதங்கயம் இவுளி – தேரும் யானையும் குதிரையும், பணிகொடி –
பாம்புக்கொடியும், முதல் ஆன – முதலாகிய, அரசு அடையாளம்
அனைத்தும்- (தனக்குஉரிய) இராசசின்னங்க ளெல்லாம், போய் – நீங்க,-திரு
நயனங்களினும் – அழகிய (தனது) கண்களினும், பதம் மலர்கள் –
தாமரைமலர்போன்ற கால்கள், சிவப்பு ஏற – செந்நிறம் மிகப்பெற,- அரசர்
பெருந்தகை – அரசர்களுக்கெல்லாம் அரசனான துரியோதனன், (எ – று.)-
போய், ஏற என்ற எச்சங்கள் 102 – ஆங் கவியில் வரும் ‘சென்றான்’ என்ற
முற்றைக் கொள்ளும். ‘அரசர் பெருந்தகை’ என்பதை, அக்கவியில் வருகிற
‘தராபதி’ என்பதற்கு அடைமொழியாக்குக.
நான்காமடியில், கோபத்தாலுள்ள கண்செம்மையை யெடுத்துக்காட்டி
அதனினுங் கால்கள் மிகச்சிவக்க என்றது, தேர்முதலிய வாகனமொன்றுமின்றிக்
கால்களால் விரைந்து நடந்து சென்றானென்பதைவிளக்கும். அரசர்
பெருந்தகை – ராஜராஜன். போய் = போக; எச்சத்திரிபு. முதலடியில் ஒரு
இரு என மாறுபட்ட சொற்கள் வந்தது முரண்தொடையின்பாற்படும். பதமலர்
= மலர்ப்பதம்: முன்பின்னாகத்தொக்க உவமத்தொகை.
அயனிடை அசுரர் குருப் பெறலுற்றது, அவன்பால் முன்
கய முனி பெற, இமையோர் குரு விரகொடு கைக் கொண்டு,
பயம் உற மா முனிவர்க்கு உரைசெய்தது, பார்மீதே
உயர் மறை ஒன்று உளது; அம் மறை ஒரு முனி உரைசெய்தான்.
[இறந்தவரைப் பிழைப்பிக்கும் மந்திரத்தின் வரன்முறை, இது.]
(இ -ள்.) அயனிடை – பிரமனிடத்து, அசுரர் குரு – அசுரர்களுக்குக்
குருவான சுக்கிராசாரியன், பெறல் உற்றது – பெற்றதும், – அவன்பால் –
அந்தச்சுக்கிரனிடத்து, முன் – முன்பு, கயமுனி – கசனென்னும் முனிவன்,
பெற- பெற்றுக்கொள்ள, இமையோர்குரு – தேவகுருவாகியபிருகஸ்பதி,
விரகொடுகைக்கொண்டு – (தான்) தந்திரமாகக் கைக்கொண்டு, பயம் உற –
பயனடையும்படி, மாமுனிவர்க்கு – சிறந்த முனிவர்களுக்கு, உரைசெய்தது –
சொன்னதுமாகிய, உயர்மறை ஒன்று – சிறந்த மந்திரமொன்று, பார்மீதே –
உலகத்திலே, உளது – உண்டு; அ மறை – அந்த மந்திரத்தை, ஒரு முனி –
ஒரு முனிவன், உரைசெய்தான் – (எனக்குக்) கூறியுள்ளான்; (எ – று.)- இக்கவி
– துரியோதனனது உட்கோளாய் அடுத்த கவியோடு தொடரும்.
முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரும்போர்
நடந்தபொழுது அசுரர்களுக்குக் குருவும்புரோகிதனும் சேனாதி
பதியுமானசுக்கிராசாரியன் தன்பக்கத்தில் தேவர்களாற் கொல்லப்பட்டவ
ரனைவரையும் தான் பிரமனிடமிருந்து பெற்றுள்ள சஞ்சீவிநியென்ற
மந்திரத்தாற்பிழைப்பித்துவிட தேவர்களுக்குக்குருவும்புரோகிதனும்
சேனாதிபதியுமானபிருகஸ்பதி அம்மந்திரத்தைத் தான் அறியாமையால்
தம்பக்கத்தில்அசுரர்களாற் கொல்லப்பட்டவர்களை அங்ஙனம்
பிழைப்பிக்கமாட்டாதுநின்றான். ஆகவே, தேவர்கள் துன்பமும் அச்சமும்
உற்றுப் பிருகஸ்பதியின்மூத்த குமாரனான கசனைச் சரணமடைந்து
‘சுக்கிரனிடமுள்ள வித்தையைஅறிந்து வந்து உதவி எங்களைப்
பாதுகாக்கவேண்டும்’ என்று வேண்ட,அவ்வேண்டுகோளுக்கு இரங்கிய
அவன் சுக்கிரனிடஞ் சென்று சிஷ்யனாய்அமர்ந்து அந்தக்குருவினுடைய
மனத்திற்கு விசேஷதிருப்தியைஉண்டாக்கும்பொருட்டு அவனது
அருமைமகளான தேவயாநியையும் மலர் கனிமுதலியவற்றால் மகிழ்வித்துவர,
அவ்விளமங்கைக்கு அவ்விளமகனிடம் அன்புநிகழ்ந்தது. இப்படி நெடுநாள்
கழிந்தபின் அசுரர்கள் கசனை இன்னானென்றும்சஞ்சீவிநி மந்திரத்தை
வஞ்சனையாற் கற்றுக்கொள்ளவந்தவனென்றும் அறிந்துஅவனைப்
பசுமேய்த்துக்கொண்டிருக்கையிற் கொன்று அவனுடலைச்சின்னபின்னமாக்கிச்
செந்நாய்களுக்கு உணவாகக் கொடுத்திட்டார்கள். அதனையறிந்த தேவயானி
மிக்க வருத்தத்தோடு தந்தையைப் பிரார்த்திக்க,சுக்கிரன் தன்மகளின்
விருப்பத்தின்படி அவனைச் சஞ்சீவிநிமந்திரங்கூறிஅழைக்க, அவன்
உடனேபிழைத்துச் செந்நாய்களின் உடம்பைப்பிளந்துகொண்டு வந்து
பழையவடிவத்தோடு நின்றான். பின்பு அவன்,ஒருகால் குருகன்னிகைக்குப்
புஷ்பங்கொணரச் சென்றபோது அசுரர்கள்அவனைக்கொன்று அவனுடலைப்
பிசைந்து கடலிற் போகட்டுவிட்டார்கள். உடனே மகளின் வேண்டுகோளால்
சுக்கிரன் கசனை மறுபடி பிழைப்பித்தான். அதன்பின்பு அசுரர்கள் ஒருநாள்
அவனைக் கொன்று அவனுடம்பையெரித்துப் பொடியாக்கி அப்பொடியை
மதுவிற் கலந்து சுக்கிரனுக்கே கொடுத்துஉண்பித்துவிட, பின்பு மகளின்
நிர்ப்பந்தத்தின்படி சுக்கிரன் அவனைமந்திரஞ்சொல்லியழைத்தபொழுது
அவன் சுக்கிரனது வயிற்றினின்று ஒலிகாட்ட,அதுகண்டு சுக்கிரன்
மகளைநோக்கி ‘யான்வயிறு பிளந்து இறந்தாலொழியக்கசன் பிழைக்கும்வழி
யில்லையே’ என்றுசொல்ல, அவள் ‘எவ்வுபாயத்தாலாவதுஇருவரும்
இறவாதபடி செய்யவேண்டும்’ என்று பிரார்த்திக்க, சுக்கிரன்தன்வயிற்றில்
வடிவுநிரம்பி உயிர்பெற்ற சிஷ்யனுக்கு அம்மந்திரத்தைஉபதேசித்து ‘நீ
என்வயிற்றைப் பிளந்து வெளி வந்தவுடன் என்னைப்பிழைப்பிக்கவேண்டும்’
என்று கட்டளையிட, அங்ஙனமே அவன்அவ்வித்தையைக்
கற்றுக்கொண்டவுடன் சுக்கிரன் வயிற்றைப்பிளந்துகொண்டுவெளிவந்து
அம்மந்திரபலத்தால் அக்குருவைப் பிழைப்பித்தான். அப்பொழுது
சுக்கிரன் மதுபாநத்தை நிந்தித்து அசுரர்களையும் வெறுத்தனன். பின்பு
நெடுங்காலங்கழிந்தபின் கசன் சுக்கிரனிடம் விடைபெற்றுச் செல்லும் பொழுது
தேவயாநி அவனைத் தன்னை மணம்புணரும்படி வெகுவாக நிர்ப்பந்திக்க,
அவன் உடன்படாமல் ‘குரு புத்திரியாகிய உன்னை நீ இருந்த வயிற்றினின்றே
வெளிவந்த காரணத்தால் உனக்குஉடன்பிறந்த முறையை யடைந்த நான்
மணஞ்செய்தல் தருமமன்று’ என்றுகூறி மறுத்துவிட, அவள் கோபங்கொண்டு
‘உனக்குச் சஞ்சீவிநிவித்தை பலிக்காமற்போகக்கடவது’ என்று சபிக்க, இவனும்
‘அதருமமாகக் காமத்தாற் கோபித்து என்னைச்சபித்த உன்னை
முனிவனெவனும் மணஞ்செய்யாதொழிக; எனக்கு அவ்வித்தை
பலிக்காமற்போயினும் என்னிடங்கற்றுக்கொள்வார்க்கு அது பலிக்காமற்போகாது’
என்று கூறிவிட்டுத் தேவலோகஞ் சென்றான். பின்புகசனிடம் தேவகுருவான
பிருகஸ்பதியும் தேவர்களும் அம்மந்திரத்தை உபதேசம்பெற்று மீண்டும்
அசுரரை யெதிர்த்து வெல்வாராயினர். அம்மந்திரத்தைப் பிற்காலத்தில்
தேவர்களிடமிருந்து முனிவர்கள் தெரிந்துகொள்ள, ஒருமுனிவனிடமிருந்து
துரியோதனன் பெற்றன னென வரலாறு உணர்க.
இச்செய்யுளில் ‘விரகொடுகைக்கொண்டு’ என்றதன் விவரம்,
கீழ்க்காட்டியவாற்றால் வெளியாம். மூன்றாம் அடியில் ‘பயமுற’ என்றது,
அம்மந்திரம் கசமுனிவனிடம் பயன்படாது நின்றமையைக் குறிப்பிக்கும்.
அந் நெடு மா மறையால் அமரத்திடை அழி சேனை
இன் உயிர் பெற்றிடும் வகை கொடு மீளவும் இகல்வேன்’ என்று,
உன்னி, உளம் தெளிவுற்று, ஒருவர்க்கும் இஃது உரையாதே,
தன் ஒரு வெங் கதையோடு தராபதி தனி சென்றான்.
அ நெடு மா மறையால் – அந்தச் சிறந்த மகாமந்திரத்தின்
வலிமையால், அமரத்திடை அழி சேனை இன் உயிர் பெற்றிடும் வகை
கொடு -போரில் அழிந்த (எனது) சேனைகள் யாவும்
இனியஉயிரைப்பெற்றெழும்படிசெய்துகொண்டு, மீளவும் இகல்வேன் –
மறுபடியும் போர்செய்வேன், என்று -,உன்னி – எண்ணி, உளம் தெளிவு
உற்று – மனம்தேறி, ஒருவர்க்கும் இஃதுஉரையாதே – ஒருவர்க்கும்
இக்கருத்தைக் கூறாமலே, தன் ஒரு வெம்கதையோடு – தனது ஒரு கொடிய
கதாயுதமாத்திரத்துடனே, தராபதி -பூமிக்குத்தலைவனான துரியோதனன்,
தனிசென்றான்-தனியே போனான்;(எ -று.)
வீமன்போலத் தானும் கதாயுதவுரிமையுடையவனாதலால், பின்பு
அவனோடு போர்செய்தற்கு உபயோகப்படுமாறு தனதுகதையைக்கையிற்
கொண்டே சென்றா னென்க.
தூய நலம் தரு கங்கை எனப் பல சுரரும் தோய்
பாய தடம்தனில் மூழ்கினன், ‘அம் மறை பயில்வேன்’ என்று
ஆயும் மனம்கொடு, சேவடி முன் பினதா ஏகி,
சேயவன் வெண் திரை வாரியில் மூழ்கிய செயல் ஒத்தான்.103.-சென்ற துரியோதனன்ஒருகுளத்தின் நீரினுள்ளே
முழுகுதல்.
தூய – பரிசுத்தியுடையதும், நலம் தரு – எல்லா
நன்மைகளையுந் தருவதுமான, கங்கை என-கங்காநதிபோல, பலசுரரும் தோய்
– தேவர்கள் பலரும்வந்து நீராடப்பெற்ற, பாய – பரவியுள்ள, தடந்தனில் –
ஒருதடாகத்தில், மூழ்கினன் – மூழ்கிநின்று, அ மறை பயில்வேன் என்று –
அந்த மந்திரத்தை ஜபிப்பேனென்று, ஆயும் – ஆராய்கிற, மனம் –
எண்ணத்தை, கொடு – கொண்டு, சே அடி முன் பினது ஆ ஏகி – சிவந்த
தன்கால்களை முன்பின்னாக மாற வைத்துச் சென்று வெள் திரை வாரியில்
சேயவன் மூழ்கிய செயல் ஒத்தான் – வெண்மையான அலைகளையுடைய
கடலிலே சிவந்த ஒளியையுடைய சூரியன் முழுகின செய்கையைப் போன்றான்
[ஒரு தடாகத்தின் நீரினுள்ளே மூழ்கி மறைந்தா னென்றபடி]; (எ – று.)
எவரும்அறியாமல் ஒரு குளத்தினுள்ளே மூழ்கி மறைந்து நின்று அந்த
மந்திரத்தை உருவிட்டு ஜபித்து அதன் சித்தியைப் பெற்று மீண்டு அதனால்
யாவரையும் பிழைப்பிப்பேனென்று ஒரு குளத்தினுள்ளே இறங்கினன்
துரியோதனனென்பதாம். மனிதசஞ்சாரம் இல்லாததொரு
வனதடாகத்தினுள்ளேதான் இறங்கியிருத்தலைப் பின்பு பகைவர்கள்
தனதுஇறங்குமுகமாயுள்ளகாலடிகளின் அடையாளத்தால் அறிந்திடக்
கூடுமென்பதை ஆலோசித்து,அங்ஙனம் அறியலாகாதபடி
வஞ்சிக்கும்பொருட்டுத் துரியோதனன் ஏறுமுகமாகஅமையும்படி தன்
கால்களை முன்பின்னாகத் திருப்பி வைத்துக்கொண்டு பின்முன்னாக நடந்து
சென்று அந்நீர்நிலையினுள் இறங்கினா னென்ற கருத்தை’சேவடி
முன்பினதாவேகி’ என்பதனால் வெளியிட்டார்; மேல் 116-ஆங்கவியில்
“ஏறிய பாதம்போல விறங்கிய பாதம் நோக்கி” எனவருவதுங் காண்க.
இதனால், துரியோதனனது வஞ்சனைக் கருத்தும் வெளியாம். நான்காமடியிற்
கூறிய உவமையால், துரியோதனனுடம்பில் விளங்குகிற க்ஷத்திரியதேஜசின்
மிகுதியோடு அந்நீர்நிலையின் பரப்பும் ஆழமும் நன்கு விளங்கும்.
பாய -பரவிய; இப்பெயரெச்சத்தில், பாவு – பகுதி, அது ஈறு தொக்கது;
ய் – காலமுணர்த்தும் இடைநிலை, அ – விகுதி. சேயவன் –
செந்நிறமுடையவன். வாரி – நீர்: கடலுக்கு இலக்கணை
கம்பித்து வந்த புலன் ஐந்தும் கலக்கம் மாற,
வெம் பித்து அடங்கி, மனம் சித்தொடு மேவல் கூர,
தம்பித்த தோயத்திடை, வாயுத் தசமும் ஒக்கக்
கும்பித்து, ஞானப் பெருந் தீபம் கொளுத்தினானே.104.-இதுவும், அடுத்தகவியும்- துரியோதனன் தவஞ்
செய்யும்வகை.
கம்பித்து வந்த – (இவ்வளவு நாளாய்ப் பல விஷயங்களிலும்)
சலநமடைந்துவந்த, புலன் ஐந்தும் – ஐம்பொறிகளும், கலக்கம் மாற –
(இப்பொழுது) கலக்கமொழியவும், – வெம்பித்து அடங்கி –
பிரபஞ்சத்திலுண்டாகிய கொடிய மயக்க மொழிந்து, மனம் -, சித்தொடு
மேவல்கூர – அறிவுடன் பொருந்தவும்,- தம்பித்த தோயத்திடை –
தம்பிக்கப்பட்ட நீரினிடையிலே,-வாயுவும் தம்பம் ஆக கும்பித்து – (தனது)
பிராணவாயுவையும் அசையாமல் அடக்கிக்கொண்டு,- ஞானம் பெரு தீபம்
கொளுத்தினான் – ஞானமாகியபெரிய விளக்கை யேற்றினான்; (எ – று.)
புலனையும் பொறியையும் ஒன்றுக்கொன்றாக மாறவைத்துக் கூறுதல்,
ஒருவகை உபசாரவழக்கு.
முதலடியினால், இவ்வளவுகாலமாய்க் கண்டபடி பலகொடிய
விஷயங்களிலுஞ் செலுத்திவந்த பஞ்சேந்திரியங்களை இப்பொழுது அடக்கின
அருமை தோன்றும். ‘வெம் பித்து’ என்றது, கண்ட விஷயங்களையுங்
காதலிக்கும் மனத்தின் கொடிய ஆசையையாம். நீர்தளும்பி
அசையவொட்டாதபடி மந்திரபலத்தால் துரியோதனன் ஜலஸ்தம்பநம்
செய்துகொண்டு நீர்நிலையினுள் மூழ்கியிருந்த தன்மையை
‘தம்பித்ததோயத்திடை’ என்றதனாலும், தனதுசுவாசத்தை
ரேசகபூரககும்பகங்களால் அமைத்துப் பிராணாயாமஞ் செய்த விதத்தை
‘வாயுவுந் தம்பமாகக் கும்பித்து’ என்றதனாலும் விளக்கினார். இவன் அங்கு
ஜலஸ்தம்பஞ்செய்திருந்த தன்மை, 114-115 கவிகளில் நன்கு வெளியாம்.
(மூச்சை வெளிவிடுதல் – இரேசகம், உள்வாங்குதல் – பூரகம், கும்பகம் –
பிராணவாயுவைச்சமப்படுத்திய யடக்கல்.) தம்பித்தல் – அசைவற்றிருத்தல்.
கும்பித்தல் – வாயுவைப்போக்குவரவில்லாமல் நிறுத்தல். ஞானப்பெருந்தீபங்
கொளுத்துதல் – சிறந்த அறிவின் சுடர்விளங்கச்செய்தல்; நல்லஞானம்
பெறுதல். மூன்றாமடியில் ‘வாயுத்தசமுமொக்கக்கும்பித்து என்று பாடம்கூறி,
வாயுத்தசமுமொக்கக் கும்பித்து – வாயுத்தசமும்ஒக்க அடக்கிக்கொண்டு
என்க:இங்ஙனம்கூறினும் உச்சுவாசநிச்சுவாசம் இரண்டையும் அடக்கிச்
சுழுமுனாமார்க்கத்திற்பிராணவாயுவை நிறுத்தி என்பதைக் கருத்தாகக்கொள்வர்
ஒருசாரார். அந்தப் பாடத்தில் தசவாயுவாவன – பிராணன், அபானன்,
உதானன். வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன்,
தனஞ்செயன் என்பனவாம்.
இதுமுதற் பத்துக் கவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
புளிமாங்கனிச்சீரும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய நெடிலடி
நான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.
பல் நாளும் யோகம் பயில்வோரின் பதின் மடங்கா,
தன் ஆகம் முற்றும் மெலிவு இன்றித் தயங்குமாறு,
நல் நாள மூல நளினத்தை மலர்த்தி, நாவால்
உன்னாமல் உன்னும் முறை மந்திரம் ஓதினானே.
பல் நாளும் யோகம் பயில்வோரின் – பலநாள்களாக
யோகாப்பியாசஞ்செய்து பழகியவர்களினும், பதின் மடங்கு ஆ – பத்து
மடங்குமேலாக, தன் ஆகம் முற்றும் மெலிவு இன்றி தயங்கும் ஆறு – தனது
உடம்பு முழுவதும் இளைப்படையாமல் விளங்கும்படி, -நல் நாளம்மூலம்
நளினத்தைமலர்த்தி – நல்ல நாளத்தோடுகூடிய (எல்லாவற்றுக்கும்)
மூலாதாரமான (தனது இதயத்) தாமரையை மலரச்செய்து,- நாவால் –
நாக்கினால், உன்னாமல் உன்னும்முறை மந்திரம்ஓதினான் – வெளிப்படையாக
உச்சரியாமல் அந்தரங்கமாக ஜபஞ்செய்யும் முறைமையையுடைய
மந்திராட்சரத்தை ஜபித்தான்;
சிரத்திற் பிங்கலை யிடை நாடிகளுக்குநடுவே புருவமத்தியிலே சிந்தும்
அமுதத்தை யோகவகையால் உட்கொண்டு அதனால் உடம்பின் தாபம்
ஒழியும்இயல்பை ‘தன்னாகமுற்றுமெலிவின்றித்தயங்குமாறு’ என்பதனாற்
குறித்தார்;இதயம் தாமரைமலர்வடிவானதொரு மாம்சாகாரமாய் இருத்தலாலும்,
அம்மனம்எல்லாச் செயல்களுக்கும் முக்கிய காரணமாதலாலும் ‘மூலநளினம்’
எனப்பட்டது. நாளம்-உள்துளையுள்ள பூந்தண்டு; இது நளினத்துக்கு
அடைமொழி. குவிந்துகவிந்துள்ள இதயகமலத்தைநிமிர்த்து மலரச்செய்ய
வேண்டுதலால், ‘நளினத்தை மலர்த்தி’ என்றார். முதலடியால், இவன் இன்று
புதுமையாக யோகஞ்செய்யத் தொடங்கினாலும் அதனை மரபுமுறைபிறழாமல்
ஒழுங்குபடச்செய்த அருமையைத் தெரிவித்தார். உன்னாமலுன்னுதல் –
ஒலிவெளிப்படாதபடி அகத்திலே ஜபித்தல். யோகம் – சிலநியமங்களோடு
செய்யுந் தவம். இனி, தன்னாகமுற்றும்….மலர்த்தி – தனது தேகத்தினுள்,
முற்றிலும் வாட்டமின்றிவிளங்கும் ஆறு வகையான நல்லநாளத்தையுடைய
மூலாதாரம் முதலான ஆதாரநளினங்களை மலரச்செய்து; இனி,
ஆதாரமலர்களைமலர்த்தி எனவே, அவற்றி னரும்பொருளையுணர்ந்து
மேற்சென்று பிரமரந்திரத்தில் சகஸ்ரதளதாமரையை மலரப்பண்ணி,
அதிலிருக்கிற சந்திரமண்டலத்தின் அமிருதத்தை மூலாக்கினியாலிளகப்பண்ணி
அதனைச் சர்வநாடி வழியாக உடலிலே நிரப்பி அதனாலாகிய சுகோதயத்தால்
பூரணசோதனையைப் பாவித்து எனப்பொருள் விரிப்பர் ஒருசாரார்.
இதயம் சிறிதும் கலங்காத இறைவன், இவ்வாறு
உதகம்தனில் புக்கு, உயர் மந்திரம் ஓதும் வேலை,
மத வெங் கயப் போர் வளவற்கு முதுகு தந்த
வித மண்டலீகர் புலி கண்ட மிருகம் ஒத்தார்.106.-முன்பு சோழனுக்குமுதுகிட்ட வீரர்களின் நிலைமை.
இதயம் சிறிதும் கலங்காத – (எப்படிப்பட்ட ஆபத்திலும்)
மனம் சிறிதுங் கலங்குதலில்லாத, இறைவன் – துரியோதனராசன், இஆறு –
இப்படி, உதகந்தனில் புக்கு – நீரிலே புகுந்து, உயர் மந்திரம் ஓதும்
வேலை -சிறந்த மந்திரத்தை ஜபித்துக்கொண்டிருக்கும்பொழுது,-மதம் –
மதத்தையுடைய,வெம் – கொடிய, கயம் – யானையையும், போர் –
போர்வல்லமையையுடைய,வளவற்கு – சோழனுக்கு, முதுகு தந்த –
புறங்கொடுத்த, விதம் மண்டலீகர் -பலவகைப்பட்ட அரசர்கள், புலிகண்ட
மிருகம் ஒத்தார் – புலியைக் கண்டுஅஞ்சியோடும் மான்போன்றார்கள்;
(எ – று.)-உவமையணி.
இக்கவி – கீழ் 95, 96-ஆம் கவிகளின் தொடர்ச்சியுடையது. வளவன்-
மிக்கவளமுடையவன்.
பர பாவகமாம் பரித் தாமனும், பாய் பரித் தேர்க்
கிருபாரியனும், கிருதப் பெயர்க் கேடு இலோனும்,
ஒரு பால் இறைகொண்டு ஒழி சேனையும் தாமும் மீண்டு,
பொரு பாரதப்போர் புரி சௌபலன் பொன்றல் கண்டார்.107.-அசுவத்தாமன்முதலியோர் வந்து சகுனியிறந்தமை
காணுதல்.
பர பாவகம்ஆம் – பகைவர்களுக்கு அக்கினிபோன்றவனான,
பரித்தாமனும் – அசுவத்தாமாவும், பாய் பரி தேர் – பாய்ந்து செல்லுங்
குதிரைகள் பூண்ட தேரையுடைய, கிருப ஆரியனும் – கிருபாசாரியனும்,
கிருதன் பெயர் – கிருதவர்மனென்னும் பெயரையுடைய, கேடு இலோனும் –
அழிவில்லாத அரசனும், (ஆகிய இவர்கள்),- ஒரு பால் இறை கொண்டு –
ஒருபக்கத்தில் ஒதுங்கித் தங்கி, ஒழி – இறவாது நின்ற, சேனையும் –
சேனைகளும்,தாமும் – தாங்களுமாக, மீண்டு – திரும்பிவந்து, பொரு
பாரதம் போர் புரிசௌபலன் பொன்றல் கண்டார் – தாக்கிச் செய்த
பாரதயுத்தத்தைமூட்டிவிட்டவனான சகுனி இறந்துகிடத்தலைப் பார்த்தார்கள்;
(எ – று.)
பரபாவகமாம் பரித்தாமன் – அகப்பட்ட பொருள்களைத் தீ அழித்தல்
போலப் பகைவர்களைத் தவறாமல் அழிக்கும் அசுவத்தாமனென்க. பரபாவகம்
– பரர் – பிறர், பாவகம் – பரிசுத்தமாகச் செய்வது. தேவர்களை
இருதிணையாலுஞ் சொல்லலாமாதலால், ‘பாவகம்’ என்று
அஃறிணையாகக்கூறினார். இனி, ‘பரபாவகமாம்’ என்பதற்கு –
பரம்பொருளினிடத்தில் மனஞ் செலுத்துதலையுடைய என்று உரைப்பாரு
முளர்.பாவகம் – பாவனை. ஒரு பால் இறை கொண்டொழி சேனை –
ஏதோஒருமூலையில் ஓடிப்பதுங்கிக்கிடந்து அரிதில் உயிர்தப்பிய சிறுசேனை
யென்க.இறை – இறுத்தல்; தங்குதல். துரியோதனனுக்குப் பலசமயங்களிற்
பலவகையாகத் துர்ப்போதனை செய்து மகாபாரத யுத்தத்தை மூட்டி
விட்டவனாதலால், சகுனியை ‘பொருபாரதப் போர்புரி’ என்றது.
கண்டார், மிகவும் பரிவோடு கலக்கமுற்றார்;
‘தண் தாரகை தோய் விசும்பு ஒத்த சமர பூமி
கொண்டான் முரசக் கொடியோன்’ எனக் கோபம் மிஞ்சி,
விண்டார், மிகவும் வியந்தார் அவர் வீரம் அம்மா!108.-கண்ட அவர்கள்கலக்கமும் வியப்பும் அடைதல்.
கீழ்க்கூறியவர்கள்), கண்டார் – (சகுனியிறந்ததைக்) கண்டு,
பரிவோடு கலக்கம் மிகவும் உற்றார் – விசனத்தையுங் கலக்கத்தையும்
மிகுதியாக அடைந்தார்கள்; தண் தாரகை தோய் – குளிர்ச்சியான
(ஒளியையுடைய) நக்ஷத்திரங்கள் நிறைந்த, விசும்பு – ஆகாயத்தை, ஒத்த –
போன்ற, சமரபூமி – யுத்தகளத்தை, முரசம் கொடியோன் –
முரசக்கொடியையுடைய தருமன், கொண்டான் – (வென்று) கைக்கொண்டான்,
என – என்று, கோபம் மிஞ்சி விண்டார் – கோபம் மிக்கு
(ஒருவரோடொருவர்) வாய்விட்டுச் சொல்லிக்கொண்டு, அவர் வீரம் –
அந்தப்பாண்டவர்களது பராக்கிரமத்தை, மிகவும் வியந்தார் – மிகவும்
அதிசயித்துக் கொண்டாடினார்கள்; (எ – று.)- அம்மா – ஈற்றசை, பகைவருங்
கொண்டாடும்படியான பாண்டவர்களது பராக்கிரமத்தை விளக்கும்
வியப்பிடைச்சொல்லுமாம்.
பலவீரர்களும் நிறைந்திருக்கும் விசாலமான யுத்தகளத்துக்கு,
நஷத்திரக்கூட்டம் நிறைந்த ஆகாயம் உவமை, சமரபூமிகொண்டான் –
போர்க்களத்தில் வெற்றிகொண்டானென்றபடி.
பூண் ஆர மார்பின் வலத்தே புரி பூந் தண் மாலைக்
கோண் ஆர் சிலைக் கைந் நெடு நாகக் கொடி கொள் வேந்தைக்
காணார் களத்தில் ஒரு பாலும், கருகி உள்ளம்,
வாள் நாடு அருக்கன் குடிபோம் அகல் வானொடு ஒத்தார்109.- எங்குந்துரியோதனனைக் காணாமல் அவர்கள்
பொலிவிழத்தல்.
ஆரம் பூண் – இரத்தினமாலைகளைத் தரித்த, மார்பின் –
மார்பினிடத்து, வலத்தே புரி பூ தண் மாலை – நஞ்சாவட்டை மலர்களாலாகிய
குளிர்ந்த மாலையையுடையவனும், கோண் ஆர் சிலை கை – வளைவு மிக்க
வில்லை யேந்திய கையையுடையவனுமாகிய, நெடு நாகம் கொடி கொள்
வேந்தை – நீண்ட சர்ப்பக்கொடியைக் கொண்ட துரியோதனராசனை,
களத்தில்ஒருபாலும் காணார்- போர்க்களத்தில் ஒருபக்கத்திலும்
காணாதவர்களாய்,உள்ளம் கருகி-மனந்தவித்து, வாள் நாடு அருக்கன்
குடிபோம் அகல்வானொடு ஒத்தார் – ஒளிபொருந்திய சூரியன் தங்காது
நீங்கப்பெற்ற பரந்தஆகாயத்தோடு சமமானார்கள் [பொலிவிழந்தன
ரென்றபடி]; (எ – று.)
வலத்தேபுரிபூ = வலப்பக்கமான இதழ்முறுக்குள்ள மலரென்க.
உவமையணி.
தனி வந்து தோன்றுதலும், சஞ்சயன் என்னும் வேத
முனிவன்தனைக் கண்டு, இரு தாளில் முடிகள் சேர்த்தி,
‘அனிகம் கெழும் போர் அரசன்தனை, அங்கை நெல்லிக்
கனி கண்டனையாய்! எவண் காண்குதும்? காட்டுக!’ என்றார்.110.- அசுவத்தாமன்சஞ்சயனைக் கண்டு விசாரித்தல்.
சஞ்சயன் என்னும் வேதம் முனிவன் – சஞ்சயனென்னும்
பெயரையுடைய வேதப்பொருள்வல்ல முனிவன் – தனி வந்து தோன்றுதலும்-
தனியேவந்து எதிர்ப்பட்டவளவிலே, தனை கண்டு – அவனைப்பார்த்து,
(அசுவத்தாமன் முதலியோர்), இரு தாளில் முடிகள் சேர்த்தி -(அவனுடைய)
இரண்டு பாதங்களிலும் தங்கள் தலைகளைவைத்து வணங்கி, (அவனை
நோக்கி),- ‘அம் கை நெல்லிகனி கண்டனையாய் – உள்ளங்கையிலுள்ள
நெல்லிப்பழத்தைக்காணுதல்போல (எல்லாப்பொருளையுங்) கண்டறிந்தவனே!
அனிகம் கெழும் போர்அரசன் தனை – சேனைத்தொகுதியுடனே மிகுதியாகச்
செய்யும்போரையுடைய துரியோதனராசனை, எவண் காண்குதும் –
எவ்விடத்தில் (நாங்கள்) பார்க்கப் பெறுவோம்: காட்டுக – காண்பிப்பாயாக’
என்றார் – என்று சொன்னார்கள்; (எ – று.)
சஞ்சயன் – திருதராட்டிரனுக்கு மிகவும் இஷ்டனான நண்பன்; இவன்
போரில் நாள்தோறும் நிகழுஞ் செய்திகளை இரவிற்சென்று
திருதராட்டிரனுக்குக்கூறிவந்தான். இவன் வியாசமுனிவனது அருளால்
அம்முனிவனிடம்தத்துவப்பொருள்களைக் கேட்டுணர்ந்த ஞானியாதலால்,
‘வேதமுனிவன்’என்றும், ‘அங்கை நெல்லிக்கனி கண்டனையாய்’ என்றுஞ்
சிறப்பித்துக்கூறப்பட்டான். இரு தாளின் முடிகள்சேர்த்தி –
சாஷ்டாங்கமாகத் தண்டனிட்டு.அங்கை நெல்லிக்கனி – எளிதில் நன்றாய்
அகமும் புறமும் முழுவதும்அறியப்படுதற்கு உவமம்.
இவ்வோர் விரைவின் இவன்தன்னை வினவ, ‘அஞ்சல்!
அவ்வோன் உயிருக்கு அழிவு இல்லை; அமரில் மோதி
வெவ் ஓடை யானை விறல் மன்னவர் வீய, யாரும்
ஒவ்வோன், மறித்தும் அமர் மோத உணர்தலுற்றான்.111.-இதுமுதல் மூன்றுகவிகள் -குளகம்: சஞ்சயன் கூறும் விடை.
இவ்வோர் – (அசுவத்தாமன் முதலிய) இவர்கள்,
விரைவின் -விரைவாக, இவன் தன்னை – இந்தச் சஞ்சயனை வினவ .
(இவ்வாறு) வினாவ,-(அதற்கு), இன்னோன் – இச் சஞ்சயன்,-அவ்வோன்
உயிருக்கு -அந்தத்துரியோதனனுயிருக்கு, அழிவுஇல்லை – (இப்பொழுது)
அபாயமில்லைஅமரில் மோதி – போரில் தாக்கி, வெம்ஓடை யானை விறல்
மன்னவர் -கொடுமையையும் நெற்றிப்பட்டத்தையுமுடைய
யானைச்சேனையையுடையவலிமையுள்ள அரசர்கள், வீய – இறக்க, யாரும்
ஒவ்வோன் – எவரும்(தனக்குச்) சமமாகப் பெறாத துரியோதனன், மறித்தும்
அமர் மோத உணர்தல்உற்றான் – மீண்டும் (பாண்டவரோடு) போர்செய்ய
ஆலோசித்தான்; (எ – று.)-இக்கவியில், ‘வினவ’, என்றது, 113 – ஆங்
கவியில் ‘என’ என்றவினையெச்சத்தைக்கொள்ளும்.
அமரில் மோதி மன்னவர் வீய – போரில் தாக்கிப் பல
துணையரசர்களும்இறந்தபின்பு என்றபடி; இனி, போரில் தாக்கப்பட்டுப்
பாண்டவர்கள்இறக்குமாறு என்றுமாம். இவ்வோர், அவ்வோன் என்பவை –
இ அ என்னுஞ்சுட்டடியாப் பிறந்த பெயர்கள்; ‘வினவவஞ்சன்’ என்றும்
பாடம்.
ஈண்டுச் சமரின் இறந்தோர்கள் எவரும் இன்றே
மீண்டு உற்பவிக்க, விடுவித்து விரகினோடும்,
பாண்டுப் பயந்தோர் படை யாவும் மடிய மோதப்
பூண்டு, உத்தமம் ஆம் மறை கொண்டு, அகன் பொய்கை புக்கான்.
(இங்ஙனம் ஆலோசித்து),-ஈண்டு இவ்விடத்தில் [குருக்ஷேத்
திரத்தில்], சமரின் இறந்தோர்கள் எவரும் – போரில் இறந்த
தன்பக்கத்தாரெல்லோரும், இன்றே – இன்றைத் தினத்திலேயே, மீண்டு
உற்பவிக்க – மறுபடி பிழைத்தெழும்படி, விரகினோடும் விடுவித்து –
தந்திரமாக(அவர்கள் மரணத்தை) நீக்கி, பாண்டுபயந்தோர்படையாவும் –
பாண்டுமகாராசன் பெற்ற குமாரர்களான பாண்டவர்களது சேனைகளெல்லாம்,
மடிய – அழியும்படி, மோத – (தான் மீண்டும்) தாக்குவதாக, பூண்டு –
நிச்சயம்செய்து கொண்டு, (துரியோதனன்), உத்தமம் ஆம் மறை கொண்டு –
மிக மேலானதொரு மந்திரத்தை உதவியாகக்கொண்டு, அகல் பொய்கை
புக்கான்-விசாலமானதொரு தடாகத்திற் பிரவேசித்தான்; (எ – று.)
‘விரகு’ என்றது, மந்திரபலத்தை, இறந்தவரைப் பிறப்பித்தலினும்
மேம்பட்டது வேறு இல்லையாதலால், ‘உத்தமமாம்மறை’ எனப்பட்டது; 106 –
ஆங் கவியில், ‘உயர்மந்திரம்’ என்றதுங் காண்க. பாண்டுப்பயந்தோர் –
உயர்திணைப்பெயரின்முன் வலிமிக்கது, ஓசையின்பம்நோக்கி யென்க.
என்னைத் துருபன் மகன் ஆதியர் கோறல் எண்ண,
பின்னைக்கு வாய்த்தோன் பிழைப்பித்தனன்; யானும் வந்தேன்;
தன் ஐக்கு மூழ்கத் தடம் வாய்த்தமை, தந்தையோடும்
அன்னைக்கு உரைப்பேன்’ எனப் போயினன், அந்தணாளன்.
என்னை-, துருபன் மகன் ஆதியர் – துருபதராசன் மகனான
திட்டத்துய்மன் முதலியோர், கோறல் எண்ண – கொல்லுதற்கு
எண்ணங்கொள்ள, பின்னைக்கு வாய்த்தோன் பிழைப்பித்தனன் –
நப்பின்னைப்பிராட்டிக்கு (ஏற்ற கொழுநனாக) வாய்த்த கண்ணபிரான் உயிர்
தப்புவித்தான்; (அதனால்), யானும் வந்தேன் – நானும் பிழைத்துவந்தேன்;
தன்ஐக்கு – தன் அரசனான துரியோதனனுக்கு, மூழ்க – முழுகும்படி, தடம்
வாய்த்தமை – தடாகம்நேர்ந்தமையை, தந்தையோடும் அன்னைக்கு
உரைப்பேன் – (அவனது) தந்தையான திருதராட்டிரனுக்கும் தாயான
காந்தாரிக்கும் சொல்லுவேன், என – என்றுசொல்லி, அந்தணாளன் –
முனிவனான சஞ்சயன், போயினன் – சென்றான்; (எ – று.)
பின்னை – ஓர் இடையர்தலைவன் மகள்: இவள் கண்ணபிரானது
திருவுள்ளத்துக்கு மிகவுகப்பாக இருந்தன ளாதலால், ‘பின்னைக்கு
வாய்த்தோன்’ என்றார். பிழைப்பித்தனன் – ஒற்றரையும், முனிவரையும்,
போர்க்கு வாராதாரையுங் கொல்லலாகாதென்று நீதிகூறிப்பிழைப்பித்தான்
என்க.’என்னை’ என்பது கோறல், பிழைப்பித்தனன் என்ற இரண்டுக்கும்
செயப்படுபொருள்.
தன் ஐ- தன் அரசன்: இனி, தன்னை – தாய்: இங்குத்தாய்
போன்றவன்என்பாருமுளர். தனக்கும் திருதராஷ்டிரனுக்குங் காந்தாரிக்கும்
துரியோதனனிடத்து உள்ள அருமை யன்பை விளக்குவான், சஞ்சயன்
அவனை’தன்னை’ என்றானென்ப. மூழ்கத்தடம் வாய்த்தமை – தடாகத்தில்
வாய்ப்பாகமுழுகியமை.
வேதியன் வாய்மை கேட்ட வேதியன் மகனும், மற்றை
ஓதிய கிருபன் ஆதி உள்ளவர் தாமும், எய்தி,
மா துயர் அகற்றும் மற்ற வாய்மை கேட்டு, அங்கு ஞான
ஊதியம் பெற்றால் என்ன ஒடுங்கிய ஓடை கண்டார்.114.-அசுவத்தாமன்முதலியோர் அந்த நீர்நிலையை
அடைதல்.
வேதியன் வாய்மை கேட்ட – வேதப்பொருள் வல்லவனான
சஞ்சயமுனிவனது வார்த்தையைக் கேட்ட, வேதியன் மகனும் – வேதம் வல்ல
துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனும், மற்றை ஓதிய கிருபன்
ஆதிஉள்ளவர்தாமும் – (முன் சொல்லப்பட்ட) கிருபன் முதலாக மற்றும்
உள்ளவர்களும், எய்தி – சென்றுசேர்ந்து, அங்கு – அவ்விடத்தில், மா துயர்
அகற்றும் வாய்மை கேட்டு ஞானம் ஊதியம் பெற்றால் என்ன ஒடுங்கியஓடை
கண்டார் – மிக்க துன்பத்தை நீக்கும்படியான உபதேசத்தைக் கேட்டு
(அதனால்) ஞானலாபத்தைப் பெற்றாற்போல ஒடுங்கியிருந்த தடாகத்தைப்
பார்த்தார்கள்; (எ – று.)-மூன்றாமடியில், மற்று, அ – அசைகள்.
துரியோதனன் ஜலஸ்தம்பஞ் செய்திருத்தலால் அப்பொய்கை நீர்
அசையப்பெறாமல் அடங்கியிருந்த தன்மைக்கு, நல்லஉபதேசமொழிகளைச்
சிறந்த ஆசிரியர்பக்கல்கேட்டு அதனால் தத்துவஞானம் உண்டாகப்பெற்றவர்
மனமும் பொறியு மொடுங்கியிருக்குந்தன்மையை உவமைகூறினார்.
அவ்வோடை யொடுங்கிய நிலைமை அடுத்தகவியில் விவரிக்கப்படும்.
உவமையணி.
இதுமுதற் பதினேழு கவிகள் – இச்சருக்கத்தின் முப்பத்து மூன்றாங்
கவிபோன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.
புள் இயல் அரவம் காணார்; பொருது எறி தரங்கம் காணார்;
துள்ளிய மீனம் காணார்; சூழ்வரும் அனிலம் காணார்;
ஒள்ளிய மலர்கள் எல்லாம் உறங்குதல் அன்றி, மன்றல்
வள்ளிய தோடுதோறும் மது நுகர் வண்டும் காணார்.115.-அங்கு ஜலஸ்தம்பத்தால்ஆகிய நிலையை அவர்கள்
காணல்.
(அசுவத்தாமன் முதலியோர் அக்குளத்தில்), புள்இயல்
அரவம்- நீர்ப்பறவைகளாலாகும் ஓசையை, காணார் – காணாதவரானார்கள்:
பொருதுஎறி தரங்கம் – (ஒன்றோடொன்று) மோதி வீசுகிற அலைகளை,
காணார்-;துள்ளிய மீனம்-துள்ளுகிறமீன்களை, காணார்-; சூழ்வரும் அனிலம்
– சுற்றிவீசுகிற காற்றை, காணார்-; ஒள்ளிய மலர்கள் எல்லாம் –
ஒளியையுடையநீர்ப்பூக்கள்யாவும், உறங்குதல் அன்றி – குவிந்து
கிடத்தலேயல்லாமல், மன்றல்வள்ளிய தோடு தோறும் –
பரிமளமுள்ளவளப்பமுடைய பூவிதழ்களிலெல்லாம், மது நுகர் –
தேனைக்குடிக்கிற, வண்டும் – வண்டுகளையும், காணார் -; (எ – று.)
புள்ளியலரவம்காணார் – பறவை யொலியைக் கேளாரென்றபடி; ஒரு
புலனை மற்றொருபுலனாகக் கூறிய உபசாரவழக்கு. ரவம் – ஒலி யுணர்த்தும்
வடசொல்; அது முதலில் அகரம் பெற்றது. அங்குக் காற்றெழாமையும்,
ஜலஸ்தம்பத்தின் காரியம்; அன்றி, கீழ் 104 – ஆங்கவியில் “வாயுவுந்
தம்பமாகக் கும்பித்து” என்றதன் குறிப்பால், வாயுஸ்தம்பநமுந்
துரியோதனனாற்செய்யப்பட்டதென்றலும் ஒன்று. தன்மைநவிற்சியணி
ஏறிய பாதம் போல இறங்கிய பாதம் நோக்கி,
சாறு இயல் இரதம் மிஞ்சும் தடம் புனல் அடங்க நோக்கி,
மாறு இயல் வேந்தர் தம்மில் வாள் முகம் நோக்கி நோக்கி,
கூறிய அரசன்தன்னைக் கூவினர், அழைக்கலுற்றார்.116.-அவ்விடத்து நிலைகண்டவர்கள் துரியோதனனைக்
கூப்பிடத் தொடங்கல்.
ஏறிய பாதம்போல – (நீரினின்று கரையின்மேல்) ஏறிய
அடிவைப்புக்கள்போல, இறங்கிய -(துரியோதனன் கால்களை
முன்பின்னாகமாறவைத்துக்கொண்டு நீரில்) இறங்கிய, பாதம் – அடி
வைப்புக்களை, நோக்கி – பார்த்தும், சாறு இயல் – கருப்பஞ்சாற்றையொத்த,
இரதம் – இனியநீர், மிஞ்சும் – மிகுதியாகப்பொருந்திய, தடம் –
அத்தடாகத்தின், புனல் – நீர், அடங்க – அடங்கியிருக்க, நோக்கி –
(அதனைப்) பார்த்தும், மாறு இயல் – மனம் மாறுபடுதல் பொருந்திய,
வேந்தர்- அரசர்கள்,-தம்மில் வாள் முகம் நோக்கி நோக்கி –
தங்களுக்குள்ளே ஒருவர்ஒருவருடைய ஒளியுள்ள முகத்தைப்
பார்த்துக்கொண்டு, (பின்பு), கூறிய அரசன்தன்னை கூவினர் அழைக்கல்
உற்றார் – கீழ்க்கூறப்பட்ட துரியோதனராசனைக்கூவியழைக்கத்
தொடங்கினார்கள்; (எ – று.)- அதனை, அடுத்த ஐந்துகவிகளிற் காண்க.
அத்தடாகத்தில் சலம் அசையாமல் தம்பித்திருத்தலையும், அதில்
ஒற்றையடிவைப்புவரிசை நீரினின்று துரியோதனன் கரையேறிவெளியே
சென்றிட்டானென்று தோன்றும்படி முன்பின்னாக அமைந்திருத்தலையும்
கண்டுஅசுவத்தாமன் முதலிய சிறந்த வீரர்கள் பலவகையாகக் கவலை
கொண்டுஅக்கவலையால் ஒருவர் முகத்தை யொருவர் பார்த்துப் பின்பு
எல்லோருமாகக்கரையில் நின்று சில வார்த்தைகள் சொல்லி உரத்த
குரலோடு துரியோதனனைஅழைப்பவரானார்கள் என்பதாம். சாறியலிரதம்
என்பதற்கு -கருப்பஞ்சாற்றின் தன்மையைக்கொண்ட நீரென்றும் பதவுரை
கூறலாம்.’அடங்கனோக்கி’ என்ற பாடமும் பொருந்தும். மாறியல்வேந்தர்
என்பதற்கு -துரியோதனனது பாதங்கள் ஏறுதலும் இறங்குதலுமாக
மாறுபட்டியலுதலைவஞ்சனைக்காகச் செய்ததென்று அறிந்துகொண்டவேந்தர் என்னலாம்.
நின் கிளை ஆகி வந்த நிருபரும், துணைவர் யாரும்,
வன் களிறு, இவுளி, பொன்-தேர், வாள் முதல் படைகள் யாவும்
புன் களம்அதனில் சேரப் பொன்றின, இம்பர், அன்றோ;
என் கருதினைகொல்? ஐயா! என் பெறற்கு என் செய்தாயே!117.-இதுமுதல் ஐந்துகவிகள் -அவர்கள் துரியோதனனை
யழைத்தல்.
இம்பர் – இவ்வுலகத்தில், நின் கிளை ஆகிவந்த – உனக்கு
உறவினராய்ப் பொருந்திய, நிருபரும் – அரசர்களும், துணைவர் யாரும் –
(உனது) நண்பர்களெல்லோரும், வல் – வலிய, களிறு – யானைகளும்,
இவுளி -குதிரைகளும், பொன் தேர் – அழகிய தேர்களும், வாள் முதல்
படைகள்யாவும் – வாள் முதலிய எல்லா ஆயுதங்களும், புல் களமதனில் –
துன்பத்துக்கிடமான போர்க்களத்தில், சேர் – ஒருசேர, பொன்றின அன்றோ-
அழிந்திட்டனவன்றோ; ஐயா – ஐயனே! என் கருதினை கொல் – என்ன
நினைந்தாயோ? என் பெறற்கு – யாது பெறுதற்கு, என்செய்தாய் –
என்னகாரியஞ் செய்தாய்? (எ – று.)-ஈற்று ஏகாரம் – இரக்கம்.
இந்தமுதற்கவி, துரியோதனனது பந்துவர்க்கம் சிநேகிதவர்க்கம்
சேனைவர்க்கம் ஆயுதவர்க்கம் என்றயாவும் அழிந்திட்டதைப் பற்றி இரங்கிக்
கூறியவாறு. பகைவரான பாண்டவர்களைப்போரில் வென்றொழிக்குமாறு
எண்ணிச்செய்த முயற்சியில் இப்படிப்பட்ட துன்பம் நேர்ந்ததனால், ‘என்
கருதினைகொல் ஐயா என்பெறற்கு என் செய்தாயே’ என்றார்; அன்றி,
உன்னைச்சேர்ந்தவர் யாவரும் உனக்காகப் போர்செய்துஇறந்துபோய்விட, நீ
போரினின்று ஓடிவந்திட்டமை மிக்க அவமானந்தருவ தாதலால், யாது
பெறும்பொருட்டு யாது நினைந்து இங்ஙனஞ்செய்தனையோ என்ற கருத்தாற்
கூறினாருமாம். துணைவர்யாரும் என்பதற்கு – தம்பிமார்களெல்லாரும்
என்றும் உரைக்கலாம். ‘புன்களம்’ என வெறுத்துக் கூறியவாறு.
வீரியம் விளம்பல் போதாது ஆயினும், விளம்புகின்றேன்;
போர் இயல் அமரில் என் நேர் பொரு சிலை எடுத்து நின்றால்,
தேர் இயல் விசயனோடு நால்வரும் சேர என் கை
மூரி வெங் கணைகளாலே முடித் தலை துணிவர் கண்டாய்.118.-இதுவும் அடுத்தகவியும் -அசுவத்தாமனொருவனது
வார்த்தை.
வீரியம் விளம்பல் போதாது – (தனது) பராக்கிரமத்தைத்
தானே யெடுத்துச்சொல்லுதல் (யார்க்கும்) தகுதியன்று; ஆயினும் – ஆனாலும்,
விளம்புகின்றேன் – சொல்லுகின்றேன்: போர் இயல் அமரில் யுத்தம்
பொருந்திய களத்தில், என் நேர் – எனது எதிரில், பொரு சிலை எடுத்து
நின்றால் – போருக்கு உரிய வில்லையேந்தி நிற்பரானால், தேர் இயல்
விசயனோடு – தேரிற் பொருந்திய வீரனானஅருச்சுனனுடன், நால்வரும் –
மற்ற நான்கு பாண்டவர்களும், (ஆக ஐவரும்), சேர – ஒருசேர, என் கை
மூரி வெம் கணைகளாலே – எனது கையாலெய்யப்படும் வலிய கொடிய
அம்புகளாலே, முடி தலை துணிவர் – கிரீடத்தையணிந்த தங்கள்தலை
அறுபடுவார்கள்; (எ – று.) – கண்டாய் – தேற்றம்.
இதுவும், அடுத்தகவியும் – அசுவத்தாமனொருவனது வார்த்தை.
என்னிடத்து நம்பிக்கை வைத்து என்னை நீ சேனாபதியாக்காததனால்
இப்படிப்பட்ட எனது திறமையை யான் காட்டுதற்கு இடமில்லாமற்
போயிற்றென்பது, உட்கோள். இப்படிப்பட்ட திறமை அசுவத்தாமனுக்கு
இருத்தலை, “ஆசாரியன் புதல்வ னச்சுவத்தார்கோமாற்குச்,
சேனாபதிப்பட்டஞ்சேர்த்தினால் – மீதவனை, வெல்லப் போர்செய்வகைக்கு
வெண்டலையிலூணுகந்த, செல்வற்குந் தானரிதே செப்பு” என்ற
பெருந்தேவனார்பாரதத்தாலும்அறிக. “தோன்றாதோற்றித்
துறைபலமுடிப்பினுந், தான்தற்புகழ்தல்தகுதியன்றே”என்ற பொதுவிதிக்கு,
‘தன்னுடைஆற்றலுணராரிடையில் தன்னைப்புகழ்தலுந்தகும் வல்லோர்க்கு’
என்ற விலக்கு உள்ளதனால், ‘வீரியம் விளம்பல் போதாதுஆயினும்
விளம்புகின்றேன்’ என்றான்; இனி, என்திறமை சொல்லிமுடியுந்தரத்ததன்று,
ஆயினும் ஒருவாறு சொல்லுகிறே னென்றும்பொருள்கொள்ளலாம். ‘யான்
அவர்கள் தலையைத்துணிப்பேன்’ என்றுவினையைத் தன்மேலேற்றாமல்
‘அவர்கள் தலைதுணிபடுவார்கள்’ என்றுஅவர்கள்மேல் ஏற்றிக் கூறியது,
அலட்சியத்தைக் காட்டும்.
‘எல்லவன் வீழும் முன்னம், யாரையும் தொலைத்து, வேலைத்
தொல்லை மண் அளித்திலேனேல், துரோணன் மா மதலை அல்லேன்;
வில் எனும் படையும் தீண்டேன்; விடையவன் முதலோர் தந்த
வல்லிய கணையும் பொய்த்து, என் மறைகளும் பொய்க்கும்மாதோ!119.-அசவத்தாமன் செய்தசபதம்.
எல்லவன் வீழும் முன்னம் – சூரியன் அஸ்தமித்தற்கு
முன்னே, யாரையும் தொலைத்து – பகைவர்களெல்லோரையும் ஒழித்து,
வேலைதொல்லை மண் – கடல்சூழ்ந்த பழமையான நிலவுலகமுழுவதையும்,
அளித்திலேன்ஏல் – (உனக்கு நான்) கொடேனாயின், (யான்), துரோணன் மா
மதலை அல்லேன் – துரோணனது சிறந்த குமாரனல்லேன்; (அன்றியும்), வில்
எனும் படையும் தீண்டேன் – வில்லென்ற ஆயுதத்தையும் தொடேன்:
(மேலும்),விடையவன்முதலோர் தந்த – விருஷபவாகனத்தையுடைய
சிவபிரான்முதலானதேவர்கள் (எனக்குக்) கொடுத்துள்ள, வல்லிய கணையும் –
வலிய அம்புகளும்,பொய்த்து – வீணாய்விட, என் மறைகளும் பொய்க்கும் –
எனக்குரியவேதங்களும் பொய்யாய்விடும்; (எ – று.)-வல்லிய – வலிய
என்பதன் விரித்தல். பொய்த்து – பொய்க்கவென எச்சத்திரிபு.
மோது மோகரப் போர் வென்று முடித்துமோ, ஒன்றில்? ஒன்றில்
சாதுமோ? இரண்டும் அல்லால், தரணிபர்க்கு உறுதி உண்டோ?
யாதுமோ தெளிதி; நின்போல் ஏற்றம் உள்ளவர்க்கு இவ்வாறு
போதுமோ? பூண்ட பூண்ட புகழ் எலாம் போய்விடாதோ?
ஒன்றில் – ஒருபக்ஷத்தில், மோதும் மோகரம் போர் –
தாக்கிச்செய்யும் உக்கிரமான யுத்தத்தில், வென்று முடித்துமோ (பகைவரைச்)
சயித்துஒழிப்போமோ? (அன்றி), ஒன்றில் – மற்றொரு பக்ஷத்தில், சாதுமோ –
(அப்போரிற் பகைவரால் அடிபட்டு) இறப்போமோ? இரண்டும் அல்லால் –
இவ்விரண்டுவிதமு மல்லாமல், தரணிபர்க்கு – அரசர்களுக்கு, உறுதி
உண்டோ- துணியத்தக்க விதம் வேறுஉளதோ? [இல்லை யென்றபடி];
யாதுமோ தெளிதி- [இவ்விரண்டுவிதத்தில்] எதையாயினும் ஒன்றை
நிச்சயிப்பாய்; நின்போல்ஏற்றம் உள்ளவர்க்கு – உன்னைப்போல மேன்மை
யுள்ளவர்களுக்கு, இ ஆறுபோதுமோ – (ஓடியொளிதலாகிய) இந்தவிதம்
தகுமோ? [தகாதுஎன்றபடி];பூண்ட பூண்ட புகழ் எலாம் – (நீ இதுவரையிலும்)
அழகிதாக மிகவும்அடைந்த கீர்த்திமுழுதும், போய் விடாதோ –
அழிந்துபோய்விடாதோ? (எ -று.)
-புகழெலாம் போய்விடாதோ – ஒருமைப்பன்மைமயக்கம், போய்
விடாதோ – போய்விடுமன்றோ; இரண்டு எதிர்மறை உடன்பாடு உணர்த்தித்
தேற்றத்தை விளக்கும்.
பாண்டவர் முடிய வென்று, இப் பார் எலாம் உனக்கே தந்தால்,
மாண்டவர்தம்மை நின் வாய் மறைமொழிதன்னைக் கொண்டு
மீண்டவர் ஆக்கி, பின்னை வேறு ஒரு பகையும் இன்றி,
ஆண்டவர் இவரே என்னத் துணைவரோடு ஆளலாமே.’
பாண்டவர் முடிய வென்று – பாண்டவர் இறக்கும்படி
(அவர்களைச்) சயித்து, இ பார் எலாம் உனக்கே தந்தால் –
இந்தப்பூமிமுழுவதையும் உனக்கே (நாங்கள்) கொடுத்தால், (அதன்பின்பு நீ),
மாண்டவர் தம்மை நின்வாய் மறைமொழிதன்னை கொண்டு மீண்டவர்
ஆக்கி- (போரில்) இறந்த உன்பக்கத்தவரையெல்லாம் உனது வாயிலுள்ள
வேதமந்திரத்தால் பிழைத்தவராகச்செய்து, பின்னை பிறகு, வேறு ஒரு
பகையும்இன்றி ஆண்டவர் இவரே என்ன – ஒரு பகையுமில்லாதபடி
(உலகத்தை)அரசாண்டவர் இவர்களேயென்று (கண்டோர்) கொண்டாடும்படி,
துணைவரோடுஆளல்ஆமே-(உனது)தம்பிமார்களுடன் கூடி அரசாட்சி
செய்யலாமே; (எ -று.)
நின்வாய் மறைமொழி – உனக்குச் சுவாதீனமாய்த் தெரிந்துள்ள
இரகசியமான மந்திர மென்க. மாண்டவர், மாள் – பகுதி.
என்று இவை போல்வ பல் நூறு இயம்பவும், இராசராசன்
ஒன்றினும் கவலை செல்லா உணர்வுடை உளத்தன் ஆகி,
அன்று இகல் வருணன் கூறும் ஆகும் என்று அறிஞர் சொல்ல,
துன்றிய வடிவத்தோடும் அடங்கினான், தோயத்தூடே.122.-அவைகேட்டுஞ் சலியாமல்துரியோதனன்
தவநிலைநிற்றல்.
என்று இவை போல்வ – என்ற இவைபோல்வனவாகிய, பல்
நூறு – பலநூறுவார்த்தைகளை, இயம்பவும் – (அசுவத்தாமன் முதலியோர்)
கூறவும், இராசராசன் – அரசர்க்கரசனான துரியோதனன், ஒன்றினும்கவலை
செல்லா உணர்வு உடை உளத்தன் ஆகி – ஒருவிஷயத்திலும் கவலை
செல்லாத அறிவையுடைய மனத்தையுடையவனாய், அன்று – அப்பொழுது,
இகல் வருணன் கூறுஉம்ஆகும் என்று அறிஞர் சொல்ல – வலிமையுடைய
வருணனது அமிசமுமாவன் இவனென்று அறிவுடையார் சொல்லும்படி,
துன்றியவடிவத்தோடும் தோயத்தூடே அடங்கினான் – பொருந்திய
வடிவத்துடன்நீரினுள்ளே ஒடுங்கியிருந்தான்; (எ – று.)
வேறுபாடுதோன்றாதபடி யாதொரு துன்பமுமின்றி நீரில் ஒன்றி
நின்றனனென்பார், இங்ஙனங்கூறினார்; ‘வருணன் கூறுமாகும்’ என்ற
உம்மை -திருமாலினமிசமேயன்றி என்றபொருளைத் தருதலால், இறந்தது
தழுவிய எச்சம்:அரசன், திருமாலின் அம்சமென்பது, நூல்களில் பிரசித்தம்.
வருணன் -மேற்குத்திக்குப்பாலகன்; நீர்க்கடவுள். மடங்கினான் என்றும்
பதம்பிரிக்கலாம்.
உரைத்தன உரைகட்கு எல்லாம் உத்தரம் உரைசெய்யாத
வரைத் தடந் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி,
நிரைத்த வெங் கதிர் கொள் வாளி நெடுஞ் சிலைத் துரோணன்
மைந்தன்,
விரைத் தொடைக் கிருதனோடும், மாதுலனோடும், மீண்டான்.123. பின்பு அசுவத்தாமன்முதலியோர் மீளுதல்.
உரைத்தன உரைகட்கு எல்லாம் – (இவ்வாறு)
சொன்னவையான வார்த்தைகளுக்கெல்லாம், உத்தரம் உரை செய்யாத –
மறுமொழி கூறாத, வரை தட தோளான் – மலைபோன்ற பெரிய
தோள்களையுடைய துரியோதனனது, நெஞ்சின் வலிமையை – மனத்தின்
உறுதியை, வலிதின் எண்ணி – நன்றாகநினைத்து,- நிரைத்த – வரிசைப்பட்ட,
வெம் – கொடிய, கதிர் கொள்வாளி-கூர்நுனியைக்கொண்ட அம்புகளை
யெய்கிற, நெடு சிலை – நீண்டவில்லையுடைய, துரோணன் மைந்தன் –
துரோணனது புத்திரனான அசுவத்தாமன், விரை தொடை கிருதனோடும் –
நறுமணத்தையுடைய பூமாலையைத் தரித்த கிருதவர்மாவினுடனும்,
மாதுலனோடும் – தன்மாமனான கிருபாசாரியனுடனும், மீண்டான் –
திரும்பிச்சென்றான்; (எ – று.)
எண்ணிமீண்டா னென இயையும்.
மற்று அவர் மீண்ட பின்னர், மா தவக் குந்தி ஈன்ற
கொற்றவர்தாமும், சேனைக் குழாத்தொடும் தங்களோடும்
செற்றவர்தம்மை எல்லாம் சேண் உலகு ஏற ஏற்றி,
பொன்-தவர் இராசராசன் புக்குழி அறிவுறாமல்124.-இனிப் பாண்டவர்செய்தி கூறுவார்:- பாண்டவர்
துரியோதனன் சென்றவிடத்தை யறியாமை.
அவர் – அந்த அசுவத்தாமன் முதலியோர், மீண்ட
பின்னர் -திரும்பிச்சென்றபின்பு, மா தவம் குந்தி ஈன்ற கொற்றவர் தாமும்-
மிக்கதவத்தையுடைய குந்தி பெற்ற குமாரர்களான வெற்றியையுடைய
பாண்டவர்களும்,- சேனை குழாத்தொடும் தங்களோடும்
செற்றவர்தம்மைஎல்லாம் – தங்கள் சேனைக்கூட்டத்துடனும் தங்களோடும்
பகைத்துப் போர்செய்த எதிர்ப்பக்கத்தாரையெல்லாம், சேண் உலகு ஏற ஏற்றி-
வீரசுவர்க்கத்திற் சென்றேறும்படி செலுத்திவிட்டு [கொன்றொழித்து], பொன்
தவர் இராசராசன் புக்க உழி அறிவுறாமல் – அழகிய வில்லையுடைய
அரசர்க்கரசனான துரியோதனன் போயொளித்த இடத்தை யறியாமல்,
(எ -று.)-‘நின்றபொழுதினில்’ என வருங் கவியோடு தொடரும்;
‘மீண்டபின்னர்’என்பதும் அதனோடு தொடர்தற்கு உரியதே. மற்று-அசை.
“என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப் பெற்றவயிறுடையாள்”,
‘செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவ முடைய ளென்பார்” என்றபடி மிக்க
தவப்பயனாலன்றி இப்படிப்பட்ட சிறந்த புத்திரரைப்பெறுதல் இயலாதென்பார்,
‘மாதவக்குந்தி’ என்றார்.
பாடியும், களமும், சூழ்ந்த பாங்கரும், அங்கும் இங்கும்,
தேடியும் காண்கிலாத சிந்தை ஆகுலத்தர் ஆகி,
நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில், நிகழும் வேட்டை
ஆடிய வலைஞர் கண்டோர் ஆனிலற்கு உரைசெய்வாரே:125.-எங்குந்தேடுகையில்வேடர் சிலர் வீமனிடம் செய்தி
கூறத்தொடங்கல்.
பாடியும் – படைவீட்டிலும், களமும் – போர்க்களத்திலும்,
சூழ்ந்த பாங்கரும் – சுற்றிலுமுள்ள இடங்களிலும், அங்கும் இங்கும் –
பலவிடங்களிலுமாக, தேடியும் – தேடிப்பார்த்தும், காண்கிலாத – (எங்குந்
துரியோதனனைக்) காணாமையாலாகிய, சிந்தை ஆகுலத்தர் ஆகி –
மனக்கவலையுடையவர்களாய், நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில் –
மிகுதியாகப் பெருமூச்சுவிட்டு நின்றபொழுதில்,-நிகழும்வேட்டை ஆடிய
வலைஞர் – பொருந்தியவேட்டையாடிய வேடர் சிலர், மீண்டோர் –
(துரியோதனன் சென்ற வனத்தினின்று) திரும்பிவந்தவர்கள், ஆனிலற்கு –
வாயுகுமாரனான வீமனுக்கு, உரை செய்வார் – (துரியோதனன் ஒளித்துள்ள
விடத்தைக்) கூறுபவரானார்கள்: (எ – று.)-அதனை அடுத்தகவியிற்காண்க.
“வினைபகை யென்றிரண்டி னெச்சம் நினையுங்கால், தீயெச்சம்
போலத்தெறும்” என்றபடி சத்துருசேஷம் அக்கினிசேஷம்போலப்பின்பு
வளர்ந்து அழிவுசெய்யக்கூடிய தாதலின், அதனை மிச்சமாக
விடக்கூடாதென்பதுபற்றியும், வீமனது சபதம் ஒருபகுதி நிறைவேறாமற்
குறைபடுதல்பற்றியும், இங்ஙனம் மிக்க கவலைகொள்வாராயினர்.
“வேட்டையாடிய வலைஞர்” என்பதற்கு – வலைவிசிமீன்
வேட்டையாடும்செம்படவரென்று உரைத்தல் பொருந்தாது. 127 –
ஆங்கவியில் “மிருகமாக்கள்” எனவருதல் காண்க. மீண்டோர்-பெயர்.
ஆநிலன் -அநிலன் மகன்.
துவம் மிகு முனிவரோடு சுரர்களும் தோயும் நல் நீர்த்
தவம் முயல் பொய்கைதன்னில் தண்டுடைக் கையன் ஆகி,
புவி முழுது ஆண்ட வேந்தன் புக்கனன்; கண்டோம்’ என்றார்,
கவலை இல் மனத்தனான காற்று அருள் கூற்று அனாற்கே.126.-துரியோதனன் செய்தியைவேடர்கள் வீமனுக்குக் கூறல்.
கவலையின் மனத்தன் ஆன – (தனக்குப் பழம்பகைவனான
துரியோதனனுள்ளவிடம் தெரியவில்லையேயென்று) கவலையையுடைய
மனத்தையுடையவனாகிய, காற்று அருள் கூற்று அனாற்கு – வாயுவினாற்
பெறப்பட்ட யமன்போன்ற வீமனுக்கு, (அவ்வேடர்கள்), ‘துவம் மிகு
முனிவரோடு – சத்துவகுணம் மிக்க முனிவர்களும், சுரர்களும் –
தேவர்களும்,தோயும் – நீராடப்பெற்ற, நல் நீர் – புண்ணிய
தீர்த்தத்தையுடைய, தவம் முயல்பொய்கைதன்னில் – தவஞ்செய்தற்குரிய
தடாகத்தில், புவி முழுது ஆண்டவேந்தன் – பூமி முழுவதையும் அரசாண்ட
துரியோதனராசன், தண்டு உடைகையன் ஆகி – கதாயுதத்தையுடைய
கையையுடையவனாய், புக்கனன்-பிரவேசித்தான்: கண்டோம் – (நாங்கள்)
பார்த்தோம்,’ என்றார் – என்றுசொன்னார்கள்; (எ – று.)
துவம்- சத்துவம் என்பதன் முதற்குறை. ஞானம் அருள் தவம்
பொறுமை, வாய்மை, மேன்மை, மௌனம் ஐம்பொறியடக்கல் என்பன,
சத்துவகுணவகைகளாம்: (துவம் = த்ருவம், அசையாநிலையென்று பொருள்
கூறுதலும் உண்டு.) கவலை இல் எனப்பிரித்து கவலையில்லாதமனத்தை
யுடையவனென்று உரைப்பது கீழ்க்கவியோடு மாறுகொளக் கூறலாம்.
வாயுகுமாரனாதலாலும், பகைவரைத்தவறாதுஅழித்தலில் யமன்போலுதலாலும்,
வீமனை ‘காற்றருள் கூற்றனான்’ என்றார்; சூரியனது குமாரனாகவுள்ள யமன்
போலவன்றி வீமன் வாயுவினாற் பெறப்பட்ட ஒரு புதிய யமன் போல்வா
னென்பதும் தோன்றும்.
கரு முகில் அனைய மேனிக் கண்ணனும், பவள மேனித்
தருமனும், எவரும் கேட்ப, தாம வேல் வீமன் சொன்னான்,-
‘ ‘பொரும் அரவு உயர்த்தோன் இன்று ஓர் பொய்கையில்
புகுந்தான்” என்று
தெருமரு மிருக மாக்கள் செப்பினர்’ என்று கொண்டே.127.-அச்செய்தியை வீமன்கண்ணன் முதலியோர்க்குக் கூறல்
கரு முகில் மேனி – காளமேகத்தை யொத்த கரிய
திருமேனியையுடைய, கண்ணனும் – கிருஷ்ணபகவானும், பவளம் மேனி –
பவழம்போலச் சிவந்த உடம்பையுடைய, தருமனும் – தருமபுத்திரனும்,
எவரும் -மற்றும் எல்லோரும், கேட்ப-கேட்கும்படி,- தாமம் வேல்வீமன் –
ஒளியையுடைய வேலாயுதத்தையுடைய வீமசேனன்,- பொரும் அரவு
உயர்த்தோன் – போர்செய்யவல்ல பாம்பின் வடிவ மெழுதிய கொடியை
உயரவெடுத்தவனான துரியோதனன், இன்று – இப்பொழுது, ஓர் பொய்கையில்
புகுந்தான் – ஒரு தடாகத்தினுட் பிரவேசித்துள்ளான், என்று-, தெருமரு
மிருகம் மாக்கள் – (எங்குந்) திரியுந்தன்மையுள்ள விலங்கு
வேட்டைக்காரர்கள் செப்பினர் – சொன்னார்கள், என்று கொண்டு – என்று,
சொன்னான்-; (எ – று.)
விவேகத்திற்குறைவுபட்டவரை மாக்களென்றும், அதில் மிக்கவரை
மக்களென்றும் கூறுதல், மரபு. தெருமா – பகுதி; தெருமரல் – சுற்றியலைதல்.
‘என்றுகொண்டு’ என்பதில், கொண்டு – அசை. தாமவேல் –
போர்மாலையைத்தரித்த வேல் எனினுமாம்.
என்றலும், தன்னைச் சேர்ந்தோர் இடுக்கணும் இளைப்பும் மாற்ற
நின்ற எம் பெருமான் நேமி நெடியவன் அருளிச்செய்வான்:
‘அன்று அயன் முகத்தினால் பெற்று, அநேக மா முனிவர்தம்பால்
நின்ற மந்திரம் ஒன்று உண்டு; நிகர் அதற்கு இல்லை, வேறே.128.-இதுவும் வருங்கவியும் -குளகம்: கண்ணன்
ஊகித்துக்கூறுதல்.
என்றலும் – என்று (வீமன்) கூறியவளவிலே,- தன்னை
சேர்ந்தோர் இடுக்கணும் இளைப்பும் மாற்றநின்ற எம்பெருமான் – தன்னைச்
சரணமடைந்தவர்களது துன்பத்தையும் மனச் சோர்வையும் நீக்குதற்பொருட்டு
நின்ற எமது தலைவனான, நேமி நெடியவன் – சக்கராயுதத்தையுடைய
பெரியோனான கண்ணபிரான், அருளிச்செய்வான் – கூறியருள்வான்:
(எங்ஙனமெனின்),-அன்று – அக்காலத்தில் [முன்னாளி லென்றபடி], அயன்
முகத்தினால் பெற்று – பிரமன்மூலமாகப் பெறப்பட்டு, அநேக மா முனிவர்
தம்பால் – சிறந்த பல முனிவர்களிடத்தில், நின்ற – தங்கிய, மந்திரம் ஒன்று-
ஒரு மந்திரம், உண்டு-உளது; அதற்கு நிகர் வேறு இல்லை – அதற்குச்
சமானம் (அதுவேயல்லாது) வேறு இல்லை; (எ – று.)
துன்பம் நேருங்காலத்துக் கண் மலர்ச்சியின்றி இடுங்குதலால்,
துன்பத்துக்கு இடுக்கணென்று பெயர்; இடுங்குகண் என்பது இடுக்கணென
விகாரப்பட்டதென்க. எம் என்ற பன்மை – எல்லாவுயிர்களையும்
உளப்படுத்தியது. திருமாலினது சக்கரத்துக்குச் சுதர்சநமென்று பெயர்.
உண்டு,இல்லை, வேறு – இருதிணையைம்பால் மூவிடத்துக்கும் பொது.
வெஞ் சமர் இறந்தோர் எல்லாம் மீண்டு உயிர் பெறுவர்; அந்த
வஞ்சக மறை முன் பெற்றான் வலம்புரித் தாரினானும்;
நெஞ்சு அமர் வலிமையோடு நீரிடை மூழ்கி, நீங்கள்
துஞ்சிடப் பொருவான் இன்னம் சூழ்ந்தனன் போலும்!’ என்றான்.
வெம் சமர் இறந்தோர் எல்லாம் – கொடிய போரில்
இறந்தவர்யாவரும், மீண்டு உயிர் பெறுவர் – (அம்மந்திர பலத்தால்)
மறுபடியும் உயிர்பெறுவார்கள்; அந்த வஞ்சகம் மறை – அந்த
ரகசியமானமந்திரத்தை, முன்பெற்றான் – முன்பு பெற்றுள்ளானான, வலம்புரி
தாரினானும் – நஞ்சாவட்டைப் பூமாலையையுடைய துரியோதனனும், நெஞ்சு
அமர் வலிமையோடு – மனத்திற் பொருந்திய உறுதியுடனே, நீரிடைமூழ்கி –
நீரினுள்ளே முழுகி (மறைந்துநின்று அதனை ஜபித்து இறந்தவர்களைப்
பிழைப்பித்து), நீங்கள் துஞ்சிட இன்னம் பொருவான் – நீங்கள் இறக்கும்படி
இன்னமும் போர்செய்தற்கு, சூழ்ந்தனன் போலும் – ஆலோசித்தான்
போலும்,என்றான் – என்று சொன்னான், (கண்ணன்); (எ – று.)
போலும் என்றது – ஒப்பில்போலியாய், ஊகித்தற்பொருளில் நின்றது.
நெஞ்சமர்வலிமை – மநோதைரியம். நீர் என்ற முன்னிலைப்பன்மைப்பெயர்,
நீம் எனத் திரிந்து, ‘கள்’ என்னும் விகுதியோடு சேர்ந்து, நீங்கள் என்று
வழங்கும். இறத்தலைத் துஞ்சுதலென்பது, மங்கல வழக்கு: மீள எழுந்திராத
பெருந்தூக்கமென்க. வஞ்சகமென்றதற்கு – இங்கே சந்தருப்பத்திற்கு ஏற்ப,
இரகசியமெனப்பொருள்கொள்ளப்பட்டது; இனி, (பகைவரை) வஞ்சித்தற்குரிய
எனினும் அமையும்
மாயவன் உரைத்த மாற்றம் மாருதி கேட்டு, தந்தை
ஆயவன்தன்னைப் போல அப் பெரும் பொய்கை எய்தி,
தூய தண் துளவினானும் துணைவரும் சூழ்ந்து நிற்ப,
தீ எனத் தீய நெஞ்சன் செவி சுட, சில சொல் சொல்வான்:130.-வீமன்அக்குளத்தையடைந்து சிலகூறத்தொடங்கல்.
மாயவன் உரைத்த மாற்றம் கேட்டு – மாயையில்வல்ல
கண்ணபிரான் சொன்ன அவ்வார்த்தையைக்கேட்டு, மாருதி – வாயு
குமாரனானவீமன், தந்தை ஆயவன் தன்னை போல – தனதுபிதாவான
வாயுபகவானைப்போல [வெகுவிரைவாக], அ பெரு பொய்கை எய்தி –
அந்தப் பெரியதடாகத்தையடைந்து,- தூய தண் துளவினானும் துணைவரும்
சூழ்ந்து நிற்ப-பரிசுத்தமான குளிர்ந்த திருத்துழாயையுடைய கண்ணனும்
தன்னுடன் பிறந்தவர்நால்வரும் (அக்குளத்தைச்) சூழ்ந்துநிற்க, தீ
எனதீயநெஞ்சன் செவி சுட சிலசொல் சொல்வான் – நெருப்புப்போலக்
கொடியமனமுடையவனானஅத்துரியோதனனது காதுகள் வருந்தும்படி
சிலவார்த்தைகளைக்கூறுபவனானான்; (எ – று.)- அவற்றை, அடுத்த
ஏழுகவிகளிற் காண்க.
‘கங்கை மகன் முதலாகக் காந்தாரன் முடிவாகக் களத்தில்
வீழ்ந்த
துங்க மணி முடி வேந்தர் சொல்லி முடிப்பதற்கு அடங்கார்;
துரக மாவும்,
செங் கனக மணிக் கொடிஞ்சித் திண் தேரும், பெரும்
பனைக்கைச் சிறுத்த செங் கண்
வெங் கயமும் ஏறாமல், வீழ் கயத்தில் ஏறினையோ?-வேந்தர்
வேந்தே!131.-ஏழுகவிகள் -துரியோதனனைக்குறித்து வீமன் கூறும்
வார்த்தை.
வேந்தர் வேந்தே – இராசராசனே! கங்கை மகன்முதல்
ஆக-வீடுமன்முதலாக, காந்தாரன் முடிவு ஆக-காந்தாரதேசத்தரசனாகிய
சகுனிஈறாக, களத்தில் வீழ்ந்த – போர்க்களத்தில் அழிந்துவிழுந்த, துங்கம்
மணி முடிவேந்தர் – சிறந்த இரத்தின கிரீடத்தையுடைய அரசர்கள், சொல்லி
முடிப்பதற்குஅடங்கார் – (இன்னாரின்னாரென்றும் இத்தனைபேரென்றும்)
விவரஞ்சொல்லிமுடித்தற்கு அடங்கார்கள் [எண்ணிறந்தவர்களென்றபடி:]
(அவர்கள் அங்ஙனமாக, நீ) துரகம் மாவும் – குதிரையின்மேலும், செம்கனகம்
மணி கொடிஞ்சி திண் தேரும் – செம்பொன்னினாற் செய்யப்பட்டு
இரத்தினங்கள் பதித்த கொடிஞ்சியென்னும் உறுப்பையுடைய
வலியதேரின்மேலும், பெரு பனை கை சிறுத்த செம் கண் வெம் கயமும் –
பெரிய பனைமரம்போன்ற துதிக்கையையும் சிறிய சிவந்த
கண்களையுமுடையவெவ்விய யானையின் மேலும், ஏறாமல் –
ஏறுவதையொழித்து, வீழ் கயத்தில்ஏறினையோ – வீழ்தற்குரிய தடாகத்திற்
பாய்ந்திட்டாயோ? (எ – று.)
கயம்என்ற சொல் – யானையென்றுங் குளமென்றும், ஏறுதல் என்ற
சொல் மேலேறுதலென்றும் உட்செல்லுதலென்றும் பொருள்படுதலால், அச்
சொற்களில் சமத்காரங்கற்பித்து, ‘வெங்கயமுமேறாமல்
வீழ்கயத்திலேறினையோ’என்றானென்க. இதில் மடக்கு என்னுஞ்
சொல்லணியமைந்திருத்தல் காண்க. துரகமா – குதிரையாகிய விலங்கு.
பெரும்பனைக்கைச் சிறுத்தசெங்கண் -முரண் தொடை.
கங்கைமகனென்ற விவரம்:- முன் ஒருகாலத்தில் தேவர்கள்
யாவருங்கூடிய பிரமதேவனது சபையிற்சென்று கங்காநதியின் பெண்தெய்வம்
வணங்கியபொழுது, அங்குவந்திருந்த வருணன், அவளழகை உற்றுநோக்கிக்
காதல்கொண்டான்; கங்கையும், அவன் மீது காதல்கொண்டு
எதிர்நோக்கினாள்;அதனையறிந்த நான்முகக்கடவுள், வருணனைப்பூமியில்
மானுடப்பிறப்பெடுக்கவும், கங்கையை மானுடமகளாய் அவனைச்சிலநாள்
மணந்திருக்கவுஞ் சபித்திட்டான்; அங்ஙனமே வருணன் குருகுலத்திற்
சந்தனுவாய்ப் பிறந்தான்; கங்கையும் ஓர் மனிதமகளாகி ‘யான் எந்தத்
தீச்செயல்செயினும் மறுக்கலாகாது’ என்னும்ஏற்பாட்டினோடு அவனை
மணஞ்செய்து கொண்டாள். இது நிற்க; பிரபாசனென்னும் வசு தன்
மனைவியின் சொல்லைக் கேட்டு வசிட்டனிடமுள்ள காமதேனுவைக்
கொள்ளை கொள்ள எண்ணினான்; மற்றையேழு வசுக்களும் அவனுக்கு
உதவிசெய்யவே, எண்மரும் இரவிற்சென்று பசுவைக்கவர்ந்தனர்; அதனையறிந்தவசிஷ்டமகாமுனிவன், அஷ்ட வசுக்களையும்
மானுடசன்மமெடுக்கவும்,அவர்களுள் மனைவிசொற்கேட்ட பிரதானனான
பிரபாசனைப் பூமியிற்பலநாள்வாழ்ந்து பெண்ணின்பமற்றிருக்கவும்சாபங்
கொடுத்தான்;எட்டுவசுக்களும் சந்தனுவுக்குக் கங்கையின் வயிற்றிற்
பிறந்தனர். முதலிற்பிறந்த ஏழு குழந்தைகளையும் தாய் பிறந்த அப்
பொழுதேகங்காநதியில் எடுத்தெறிந்துவிட்டாள். எட்டாவது பிள்ளை
பிறந்தவுடனே தந்தை ‘இக்குழந்தையைக் கொல்லலாகாது’ என்றுமறுக்க,
கங்கைகணவனைவிட்டு நீங்கினள். அவ்வெட்டாவது மகனே, இவ்வீடுமன்.
இதுமுதற் பதின்மூன்றுகவிகள் – இச்சருக்கத்தின் பதினோராங்கவி
போன்றஅறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தங்கள்.
‘நெஞ்சு அறிய நீ எமக்கு நிலை நின்ற பழியாக நெடு
நாள் செய்த
வஞ்சகமும், பொய்மொழியும், மனு நீதி தவறியதும்,
மறந்தாய்கொல்லோ?
துஞ்சிய நின் சேனையெல்லாம் மீண்டு வர நீ அறையும்
சுருதி, இற்றை
வெஞ் சமரம் முடித்து அன்றோ, அறைவது? இவை
வீரருக்கு வீரம் ஆமோ?
நிலை நின்ற பழி ஆக – (எந்நாளும் அழியாமல்) நிலை
நிற்குந்தன்மையதான பழிப்பு உண்டாம்படி, நெஞ்சு அறிய – மனப்பூர்வமாக,
நீஎமக்கு நெடு நாள் செய்த-நீ எங்களுக்கு வெகுநாளாகச்செய்துவந்த,
வஞ்சகமும் – வஞ்சனையையும், பொய்மொழியும் – (நீகூறிய)
பொய்வார்த்தைகளையும், மனு நீதி தவறியதும் – மனுதர்மசாஸ்திரத்தில்
சொல்லப்பட்ட நீதியினின்று (நீ) வழுவியதையும், மறந்தாய் கொல் ஓ –
மறந்துவிட்டாயோ? துஞ்சிய – இறந்த, நின் சேனை எல்லாம் – உனது
சேனைகள் யாவும், மீண்டுவர – உயிர்பெற்றுத் திரும்பிவரும்படி, நீ அறையும்
– நீ உச்சரிக்கிற, சுருதி – வேதமந்திரம், இற்றை வெம் சமரம் முடித்து
அன்றோ – இன்றைய தினத்தின் கொடியபோரை முடித்தபின்பல்லவோ,
அறைவது – உச்சரிக்க வேண்டுவது? (அங்ஙனம் இருக்க), இவை – (நீ
செய்யும்) இச்செயல்கள், வீரருக்கு வீரம் ஆமோ – சுத்த வீரர்களுக்கு உரிய
பராக்கிரமச் செயலாகுமோ? [ஆகாது என்றபடி]; (எ – று.)
இவை -முதலிற் பல தீங்குகளைச்செய்தலும், அவற்றிற்காக நேர்ந்த
போரில் முன்நிற்கமாட்டாமல் ஓடியொளித்துத் தவந்தொடங்குதலும். ‘எமக்கு
நிலைநின்ற பழியாக’ எனஎடுத்து, எங்களுக்கு என்றும் நிலைப்பட்டபழி
யுண்டாம்படி யென வுரைப்பினும் அமையும். துரியோதனன்
பாண்டவர்க்குச்செய்தவஞ்சகமும், கூறிய பொய்மொழியும்மிகப்பல; வீமனுக்கு
நஞ்சு ஊட்டியமை, அரக்குமாளிகையில் தீவைத்தமை, சூதாட்டம், வனவாச
அஞ்ஞாதவாசங்களின் பின் கொடுப்பேனென்று வாக்குத்தத்தஞ்செய்த
இராச்சியத்தை மீண்டுகொடாமை முதலாக நூல்முழுவதிலுங் காண்க. நீதி
தவறியது – “மூத்தானிருக்க இளையா னரசாடல் கோத்தருமமன்று” என்ற
இராசநீதி தவறித் தருமனினும் இளையவனான தான் அரசுபெற்று
ஆளுதல்.
அடி மாறி நீரிடைப் புக்கு, அரு மறை நீ புகன்றாலும், அரவப்
பைம் பொன்
கொடி மாறி, குருகுலத்தார் கோவே! நின் பேர் மாறி, குலவும் மாலை
முடி மாறி, ஒரு தனி மா முத்த நெடுங் குடை நிழற் கீழ் ளும் முந்நீர்ப்
படி மாறி ஒழிய விடேன்; புறப்படாய், மறைபட இப் பகல்
போம் முன்னே.
குரு குலத்தார் கோவே – குருவமிசத்து அரசர்களுக்கு
அரசனே! நீ- , அடி மாறி – அடிகளைமாற்றிவைத்து, நீரிடைபுக்கு –
நீரினுள்ளேபுகுந்து, அரு மறை புகன்றாலும் – அருமையான மந்திரத்தை
ஜபித்துக் கொண்டிருந்தாலும்,-நின் – உன்னுடைய, அரவம் பைம் பொன்
கொடி – பாம்பின் வடிவமெழுதிய பசும்பொன்னினாலமைந்த
தண்டத்தையுடையதுவசம், மாறி-ஒழிந்து, பேர் மாறி – (உனது) பெயர்
ஒழிந்து, குலாவும்மாலைமுடி மாறி-விளங்குகிற மாலையைத் தரித்த தலை
துணிபட்டொழிந்து, ஒரு தனிமா முத்தம் நெடுகுடை நிழல் கீழ் ஆளும்
முந்நீர் படி மாறி ஒழிய – ஒப்பற்றதனித்த சிறந்த முத்துக்களாலமைத்த
பெரிய ஒற்றைவெண்கொற்றக்குடையின்நிழலிலிருந்து அரசாளுகிற
கடல்சூழ்ந்த (உனது) இராச்சியமும் (உன்னைவிட்டு) நீங்கினாலொழிய,
விடேன் – (உன்னை நான்) விடமாட்டேன்;(ஆதலால்), இ பகல் மறைபட
போம் முன்னே – இந்தப்பகற் பொழுதுமறையச்செல்லுதற்குமுன்னே,
புறப்படாய் – வெளிப்பட்டு வருவாயாக; (எ – று.)
சூரியன் அஸ்தமிக்குமுன்னே யென்றகருத்தை, ‘மறைபட இப்பகல்
போமுன்னே’ என்று குறித்தார். நீர்சூழ்ந்த நிலவுலகை விட்டு நீ
தொலைந்தாலொழிய உன்னை விடக்கடவேனல்லாத நான் நீரிற் புகுந்த
மாத்திரத்தால் விட்டிடுவேனோ வென்பான், ‘நீரிடைப்புக்கு அருமறை
புகன்றாலும்’ என்றும், ‘முந்நீர்ப்படிமாறி யொழிய விடேன்’ என்றுங்
கூறினனென்க. புகன்றாலும் விடேன் என இயையும். அரவம், அம் –
சாரியை. பொன் – பொற்காம்புக்குக் கருவியாகுபெயர். முந்நீர் –
உலகத்தைப்படைத்தல் காத்தல் அழித்த லென்னும் மூன்று
நீர்மையையுடையது; கடல்:பண்புத்தொகையன்மொழி.
ஓதப் பைங் கடல் புடை சூழ் உலகு ஆளும் முடி வேந்தர் உறு
போர் அஞ்சிப்
பாதத்தில் வீழ்வரோ? பார் அரசர் கேட்டாலும், பழியே அன்றோ?
மேதக்க அரமகளிர் கைப் பிடிக்க, இந்திரனும் விண்ணோர்தாமும்
காதத்தில் எதிர்கொள்ள, கற்பக நீழலில் வைப்பன்; கலங்கல்,
அம்மா!
ஓதம் – அலைகளையுடைய, பைங் கடல் – பசிய கடலினால்,
புடை சூழ் – எல்லாப்பக்கங்களிலுஞ் சூழப்பட்ட, உலகு – பூமியை, ஆளும்
-அரசாளுகிற, முடி வேந்தர் – கிரீடாதிபதிகளான அரசர்கள், உறு போர்
அஞ்சி- மிக்க போருக்குப் பயந்து, பாதத்தில் வீழ்வரோ – காலில் [நீரில்]
விழுவார்களோ? பார் அரசர் கேட்டாலும் – (உன்னைப் போலப்] பூமியை
ஆளுகிற அரசர் செவியுற்றாலும், பழியே அன்றோ – (இது)
பழிப்பேயாகுமன்றோ? மேதக்க – மேன்மைபொருந்திய, அரசமகளிர்-
தேவமாதரது, கை – கையை, பிடிக்க – (நீ) பிடிக்கும்படியாகவும், இந்திரனும்
விண்ணோர்தாமும் காதத்தில் எதிர்கொள்ள – தேவேந்திரனும் தேவர்களும்
காததூரத்தில் (உன்னை) எதிர்கொண்டு வந்து அழைத்து
உபசரிக்கும்படியாகவும், கற்பகம் நீழலின் வைப்பன் – (உன்னைக்)
கல்பகவிருட்சங்களின் நிழலில் வைப்பேன்; கலங்கல் – (நீ)
கலக்கமடையாதே;(எ – று.)-அம்மா – ஈற்றசை.
பாதம்என்ற சொல் – காலென்றும், நீரென்றும் பொருள்படுதலால்,
அச்சொற்சிலேடைகொண்ட சமத்காரங் கற்பித்தவாறு. போருக்குஅஞ்சிப்
பாதத்தில் விழுதல் அரசர்க்குப்பெரும்பழிப்பாதலால் நீவெளிப்பட்டு வந்து
என்னோடு போர்செய்து பழிப்புக்கிடமின்றி வீரசுவர்க்கம்பெறுவாயென்றான்.
நிலவுலகத்து அரசாட்சியையிழந்து ஒழிந்துவிடுகிறோமேயென்று கலங்காதே;
இதனினுஞ் சிறந்த விண்ணுலகத்திற் செலுத்துவேனென்பான், ‘கலங்கல்’
என்றான்: இது, செருக்குமொழி. அரமகளிர்கைப்பிடிக்க – தேவமாதர்களை
அங்கு நீ மணஞ்செய்துகொள்ள என்றபடி. விவாக காலத்தில் கணவன்
தனதுவலக்கையால் மனைவியின் இடக்கையைப்பிடித்தல் மரபு; அதனால்,
விவாகத்துக்கு, ‘பாணிக்கிரகணம்’ என்று ஒருபெயர் வழங்கும். இனி,
‘கைபிடிக்க’ என்றும் பாடமுண்டு. தேவமாதர்கள் வேட்கைமிகுதியோடு வந்து
உன்கையை வலியப்பற்ற வென்று உரைத்தலுமொன்று. கற்பகநீழலில்
வைப்பன் – வீரசுவர்க்கத்திற் செலுத்துவேன் என்றபடி. கற்பகம் –
வேண்டுவார்க்கு வேண்டினவற்றைக் கற்பித்தலால், வந்த பெயர்: கல்பித்தல் –
உண்டாக்கிக் கொடுத்தல். சந்தாநம்,பாரிஜாதம், மந்தாரம், கல்பகம்,
அரிசந்தநமெனக் கற்பகவிருட்சம் ஐந்தாம். தேவலோகத்தில்
கற்பகவிருட்சத்தின் நிழல் இந்திரன் அரசாட்சிசெய்யுமிடமாதலை “கற்பக
நறுந்தேனிடைதுளிக்கு நிழலிருக்கை” என்ற கம்பராமாயணத்தாலும் அறிக.
அரமகளிர் – அமரமகளிர், அல்லது அரம்பைமகளிர் என்பதன் விகாரம்.
காதம் – இங்கு, நெடுந்தூரமென்றபடி.
ஓதம்- வெள்ளமுமாம். பசுமையையுங் கருமையையும் சிறிது
வேறுபாடுகருதாதுஅபேதமாகக்கூறுதல் கவிசமயமாதலால், கருங்கடல்
பைங்கடலெனப்பட்டது: இனி, பசுமை குளிர்ச்சியுமாம். உறு – உரிச்சொல்.
“அம்ம கேட்பிக்கும்” என்ற தொல்காப்பியத்தின்படி யான் கூறுகின்றதனைக்
கேளென்று பொருள்பட்டு உரையசையாய் நிற்கும்.
களந்தனில் எத்தனை கவந்தம் கண் களிக்கக் கண்டனை நீ;
கைத் தண்டோடு இக்
குளந்தனில் இக் கவந்தமும் கண்டு ஏகுதற்குப் புகுந்தனையோ?
கொற்ற வேந்தே!
வளந்தனில் இக் கோபமும் என் வஞ்சினமும் போகாது; வந்து
உன் பாவி
உளந்தனில் இக் கவலையை விட்டு, உடற்றுதல் அல்லது, மற்று
ஓர் உறுதி உண்டோ?
கொற்றம் வேந்தே – வெற்றியையுடைய அரசனே! களந்தனில்
– போர்க்களத்தில், எத்தனை கவந்தம் – எத்தனை கவந்தங்களை [தலையற்ற
உடற்குறைகளை], நீ -, கண் களிக்க கண்டனை – கண்களிக்கப்பார்த்தாய்: இ
குளந்தனில் – இக்குளத்திலேயுள்ள, இ கவந்தமும் – இந்தக் கவந்தத்தையும்
[நீரையும்], கண்டு ஏகுதற்கு – பார்த்துச்செல்லுதற்கு, கை தண்டோடு
புகுந்தனைஓ – கையிலுள்ள கதாயுதத்தோடு இதனுட் பிரவேசித்தாயோ?
வளந்தனில் – மிகுதியாகவுள்ள, இ கோபமும் – இந்த (எனது) கோபமும்,
என்வஞ்சினமும் – எனது சபதமும், போகாது – வீண்போகாது: உன் –
உனது ,பாவி உளந்தனில் – தீவினைக்கிடமான மனத்திலுள்ள, இ
கவலையை -இந்தக்கவலையை, விட்டு – ஒழித்து, (நீ), வந்து – வெளிப்பட்டு
வந்து, உடற்றுதல்அல்லது – போர்செய்தலே யல்லாமல், மற்று ஓர் உறுதி
உண்டோ- (உனக்கு) வேறொரு நன்மையுள்ளதோ? எதுவுமில்லை;
“புனலுஞ் செக்கும் புகன்றிடு கடியும், தலைக்குறைப்பிணமும்
கவந்தமாகும்” என்றபடி ‘கவந்தம்’ என்ற சொல் – உடற்குறை யென்றும்,
நீரென்றும் பொருள்படுதலால், அப்பலபொருளொரு சொல்லின் உதவியாற்
சமத்காரங் கற்பித்தவாறு. கோபமும் வஞ்சினமும் போகாது – இரண்டு
ஒருமைச்சொற்கள் ஓர் ஒருமை முற்றைக் கொண்டுமுடிந்தன:
தனித்தனிபோகாது எனக் கூட்டிப்பொருள்காண்க. இனி, போகாது
என்பதற்கு- போகாமல் என வினையெச்சமாகப் பொருள்கொள்ளுதலும்
ஒன்று. பாவியுளம் – தீயசிந்தனைகளையே எண்ணும் மனம்.
இனத்திடை நின்று ஒருபதின் மேல் எழு நாளும் ஒருவருடன்
இகல் செய்யாமல்,
தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரைப்போல், மதத்துடனே
தருக்கி வாழ்ந்தாய்;
சினத்திடை வெம் பொறி பறக்கச் செயிர்த்து, இரு கண் சிவப்பு
ஏறச் செருச் செய்யாமல்,
வனத்திடை சென்று ஒளிப்பரோ, மண் முழுதும் தனி ஆளும்
மன்னர் ஆனோர்?
ஒருபதின் மேல் எழுநாளும் – (கீழ்ப் போர்நடந்த)
பதினேழுநாள்களிலும், (நீ), ஒருவருடன் இகல் செய்யாமல் – ஒருத்தருடனும்
தனியேஎதிர்த்து உக்கிரமாகப் போர்செய்யாமல், இனத்திடை நின்று –
கூட்டத்தினிடையிலே கலந்துநின்று, தனத்திடை நின்று உளம் மகிழும்
புல்லரைபோல் – செல்வத்தினிடையே நின்று மனங்களிக்கிற நீசரைப்போல,
மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய் – கொழுப்புடனே கர்வித்துவாழ்ந்துவந்தாய்:
மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர் – பூமி முழுவதையுந் தனியே
அரசாளும் அரசராயுள்ளோர், சினத்திடை வெம்பொறி பறக்க –
கோபத்தினால்வெவ்வியநெருப்புப்பொறி பறக்க, செயிர்த்து –
வலிமைகொண்டு, இருகண்சிவப்பு ஏற – இரண்டுகண்களும் (மிக்க
கோபத்தால்) செந்நிறம்மிக, செருசெய்யாமல் – போர் செய்யாமல்,
வனத்திடை சென்று ஒளிப்பரோ – காட்டிலே[நீரினுள்ளே] போய்
மறைவார்களோ? (எ – று.)
செல்வத்தினிடையிலே யிருந்துகொண்டு அதன்வளத்தால் தங்களுக்குப்
பிறரெவராலும் யாதொருதீங்கும் நேரிடாதபடி செய்து கொண்டு செருக்கி
வாழும் அற்பர்போல, நீ இனத்திடையிலேயிருந்துகொண்டு அதன்வளத்தால்
உனக்குப் பிறரெவராலும் யாதொருதீங்கும்நேரிடாதபடி செய்துகொண்டு
இவ்வளவுநாளும் செருக்கிவாழ்ந்தா யென்றான். இதனால், அவனது
போர்த்திறமையை யெடுத்துக்காட்டி யிகழ்ந்தவாறு. “வனமே நீர் மிகுதி
நாடு”என்ற நிகண்டினால், வனமென்பது காட்டையும் நீரையும்
உணர்த்துதலை யறிக.
திரிபுவனங்களும் சேரச் செங்கோன்மை செலுத்திய நின் சீர்த்தி,
இந்த
விரி புவனம்தனில் ஒளித்தால் மிகு வசையாய்ப் போகாதோ?
வெருவலாமோ?
புரி புவனம் உண்டு உமிழ்ந்தோன் பொன் இலங்கை வழி காணப்
பாருத வாளி
எரி புவனம் நுகர்ந்ததுபோல், இத் தடமும் புகையாமுன்
எழுந்திராயே!’
திரிபுவனங்களும் – மூன்று உலகங்களிலும், சேர – ஒருசேர,
செங்கோன்மை செலுத்திய – ஆளுகையை நடத்திய, நின்சீர்த்தி-உனது மிக்க
புகழ், இந்த விரி புவனந்தனில் ஒளித்தால் – இந்தப் பரவியநீரிலே (நீ)
ஒளித்துக்கொண்டதனால், மிகுவசை ஆய் போகாதோ –
மிக்கபழிப்பாய்விடாதோ? வெருவலாமோ – (இவ்வாறு நீ) அஞ்சலாமோ?
புரிபுவனம் உண்டு உமிழ்ந்தோன்- (தான்) படைத்த உலகங்களை
விழுங்கியுமிழ்ந்தவனாகிய திருமால் [இராமபிரான்], போர் இலங்கை வழி
காண- போர்செய்தற்குரிய இலங்கைக்குச் செல்லும்வழியைக்
காணும்பொருட்டு,பொருத – (சமுத்திரராசன் மேற்) செலுத்திய, வாளி எரி –
ஆக்கினேயாஸ்திரம்,புவனம் நுகர்ந்ததுபோல் – (அக்கடலின்) நீரை
உறிஞ்சத் தொடங்கியதுபோல,இ தடமும் புகையாமுன் – இந்தத் தடாகமும்
(என் அஸ்திரத்தால்) புகைந்துஎரிந்துபோவதற்குமுன்னமே, எழுந்திராய் –
வெளிப்பட்டு வருவாய்; (எ – று.)
நீஇப்பொழுது விரைவில் வெளிவாராயாயின் இராமபிரான்,
ஆக்கிநேயாஸ்திரப்பிரயோகஞ்செய்து கடலை வற்றச்செய்யலுற்றாற்போல
யான்இப்பொய்கையை நீர்வற்றச்செய்து அதனுட் கிடக்கும் உன்னை
யொழிப்பேனென்பதாம். இராமபாணம் கடலை வெதுப்பிய வரலாறு, கீழ்
74 -ஆங் கவியிற் கூறப்பட்டது.
த்ரிபுவநம் – சுவர்க்கம் பூமி பாதாளம் என்பன; ‘திரிபுவனங்களுஞ்
சேரச்செங்கோல்செலுத்திய’ என்றது சீர்த்திக்கு அடைமொழி; மூவுலகத்திலும்
தடையறப் பரவிய புகழென்றபடி. இங்கே, செங்கோன்மை செலுத்துதல் –
தடையறச்சென்று நிலைபெறுதல். “சீர்த்திமிகுபுகழ்” என்ற
தொல்காப்பியத்தால்,சீர்த்தி யென்பது பெரும்புகழையுணர்த்துவதோர்
உரிச்சொல்லா மென்றும்,புகழ்மாத்திரத்தை யுணர்த்தும் கீர்த்தியென்னும்
சொல்லின் திரிபன்றென்றுங்கொள்க. ‘புவனம் உலகும் புனலும் புவியுமாம்”
என்ற பிங்கலந்தையினால்,புவனமென்பது – உலகும் நீருமாதலையறிக
பாவனன் இப்படி உரைத்த பழி மொழியும் தனது செவிப் பட்ட
காலை,
சீவனம் முற்றையும் விடுவோன் இருக்குமோ? மறை மொழியும்
சேர விட்டான்;-
ஆவன மற்று அறியாமல், அழிவன மற்று அறியாமல், அடுத்தோர்
ஆவி வீவன மற்று அறியாமல்,
நினையும் நினைவினுக்கு உவமை வேறு இலாதான்.138.-அவைகேட்டுத்துரியோதனன் நீரினின்று வெளியெழுதல்.
பாவனன் – வாயுகுமாரனான வீமன், இ படி உரைத்த –
இவ்வாறுசொன்ன, பழி மொழியும் – நிந்தனைச்சொற்கள்யாவும், தனது செவி
பட்ட காலை – தன்னுடையகாதிற்பட்டபொழுது, ஆவனஅறியாமல் – (தனக்கு)
நன்மைவிளைப்பவை இன்னவையென்று அறியாமலும்,அழிவன அறியாமல் –
(தனக்குத்) தீமைவிளைப்பவை இன்னவையென்று அறியாமலும், அடுத்தோர்
ஆவி வீவன அறியாமல் – தன்னைச் சார்ந்தவர்களது உயிர்கள் அழிந்து
விடுவனவென்பதையும் அறியாமலும், நினையும் – (தான்மனத்திலே மிகுதியாக)
எண்ணுகிற, நினைவினுக்கு – தீயசிந்தனைகளுக்கு, வேறு உவமை இலாதான் –
வேறு ஒப்புமை பெறாதவனான துரியோதனன், – மறையுடனே சேர விட்டான்
– மந்திரஜபத்துடனே (நீரையும்) ஒரு சேர விட்டிட்டான்; சீவனம் முற்றையும்
விடுவோன் இருக்குமோ – சீவனம் முழுவதையும் விட்டொழியுமவன்
(அச்சீவனத்தினுள்ளே) இருப்பானோ? [இரானென்றபடி]; (எ – று.)
‘ஜீவநம்’ – உயிர்வாழ்க்கையென்றும் நீரென்றும் பொருள்படுதலால்,
அச்சொல்லில் சமத்காரங்கற்பித்து, ‘சீவனம் முழுதையும் ஒழியுமவன்
அச்சீவனத்தின் ஒரு பகுதியிலே ஒளித்திருப்பானோ?” என்று சிலேடையால்
நயம்படக்கூறினான். பாவநன் – பவநனது குமாரன்; பவநன் – வாயு.
பின்னிரண்டடிகளில், துரியோதனனது அவிவேகத்தையும்
வரும்பொருளாராய்ச்சி யின்மையையும், அவன் குணத்தையும்,
தீயசிந்தனையையும் வெளியிட்டார்.
நாள மலர்ப் பொய்கையின்நின்று எழுவான், மெய்ச் சுருதி மறை
நவிலும் நாவான்,
காள நிறக் கொண்டல், பெருங் கடல் முழுகி வெள்ளம் எலாம்
கவர்வுற்று அண்ட
கோளம் உறக் கிளர்ந்ததுபோல், தோன்றினான், மணி உரகக்
கோடியினானே.
யாரொடு பொருவது?’ என்று, துரியோதனன் வினாவுதலும்,
கண்ணன் ‘வீமனோடு139.-துரியோதனன்நீர்நிலையினின்று வெளியெழுதலைப்
பற்றிய வருணனை.
மெய் சுருதி மறை – சத்தியமான வேதமந்திரத்தை,
நவிலும் -உச்சரிக்கிற, நாவான் – நாக்கையுடையனாயிருந்த, மணி உரகம்
கொடியினான்- மாணிக்கத்தையுடைய பாம்பின் வடிவமெழுதிய கொடியுடைய
துரியோதனன்,-நீளம் உற – நீட்சிமிகவும், பரவை உற – பரப்பு மிகவும்,
வாளம் உற -வட்டவடிவம் பொருந்தவும், கரை பரந்து நிமிர்ந்த நீத்தம் –
கரையின்மேற்பரவியெழுந்து வழிகிற வெள்ளத்தையுடைய, நாளம் மலர்
பொய்கையினின்று – உட்டுளையுள்ள தண்டையுடைய தாமரைநிறைந்த
தடாகத்தினின்று, எழுவான் – மேலெழுபவன்,- பெருகடல் முழுகி – பெரிய
கடலினுள்ளேமூழ்கி, வெள்ளம்எலாம் கவர்வுற்று – நீரைநிரம்பக்கிரகித்து,
அண்ட கோளம் உற – ஆகாய முகட்டையளாவ, கிளர்ந்தது –
மேலெழுந்ததான, காளம் நிறம் கொண்டல் போல் – கருநிறமுடைய
மேகம்போல, தோன்றினான் – காணப்பட்டான்; (எ – று.)
அக்குளத்தின் நீட்சி பரப்பு ஆழம் வட்டவடிவம் நீர்மிகுதி
யென்பவையும் துரியோதனனது கருநிறமும் தோன்ற, துரியோதனன்
அக்குளத்தினின்று வெளியெழுந்ததற்கு, காளமேகம் கடலினின்று
வெளியெழுதலை உவமை கூறினார். உவமையணி. மெய்ச்சுருதி மறை –
பயன்தவறாத வேதமந்திர மென்க. இங்கே அண்டகோளமென்றது, உலக
வுருண்டையின் மேலிடத்தை, உரகம் – (காலின்றி) மார்பினாற் செல்வதென்று
காரணப் பொருள்படும்; உரஸ் – மார்பு.
தோன்றி, நெடுங் கரை ஏறி, கரை முழுதும் நெருக்கம் உறச்
சூழ்ந்து நின்ற
தேன் திகழ் தார் ஐவரையும், செந் திருமாலையும் நோக்கி,
சேனையோடும்,
மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர்; வலி
கூர் என் கை
ஊன்றிய தண்டுடன் நின்றேன்; ஒரு தமியேன் எப்படியே
உடற்றும் ஆறே?140-இதுமுதல் நான்குகவிகள் -ஒருதொடர்: இப்பொழுது
போர்செய்யும்விதம் எப்படியென்று துரியோதனன்
வினாவுதலும், கண்ணன் மறுமொழி கூறுதலும்
(துரியோதனன்), தோன்றி – (நீரினின்று) வெளித்தோன்றி,
நெடுகரை ஏறி – பெரிய அக்குளத்தின்கரைமேல் ஏறி, கரை முழுதும்
நெருக்கம்உற சூழ்ந்து நின்ற – அந்தக் கரைமுழுவதிலும் நெருக்கமாகச்
சூழ்ந்து நின்ற,தேன் திகழ் தார் ஐவரையும் – தேன்விளங்கும்
மாலையையுடைய பஞ்சபாண்டவரையும், செம் திருமாலையும் –
செந்நிறமுடைய திருமகளிடத்துஆசைப் பெருக்கமுடையவனான
கண்ணபிரானையும், நோக்கி – பார்த்து,-(நீங்கள்), சேனையோடும் –
சேனைகளுடனும், மான் திகழ் தேர் முதலானவாகனங்களொடும் –
குதிரைகள் விளங்கப்பெற்ற தேர் முதலியவாகனங்களுடன், நின்றீர் –
நின்றுள்ளீர்; ஒரு தமியேன் – (வேறுதுணையில்லாத) தனிப்பட்ட
யானொருவனே,-வலி கூர் – வலிமை மிக்க, என்கை ஊன்றிய தண்டுடன்-
எனது கையிற்கொண்ட கதையுடனே, நின்றேன் -நின்றுள்ளேன்; உடற்றும்
ஆறு எப்படி – (இப்பொழுது நாம்)போர்செய்யவேண்டும் விதம் எவ்வாறு?
(எ – று.)
பலவகைவாகனங்களுடனும் பலவகைச் சேனையுடனும்
பலவகையாயுதங்களுடனும் பலராய்த் திரண்டுநின்ற உங்களோடுவாகன
மொன்றுமின்றித் துணை யாவருமின்றி வேறுபடைக்கலமு மின்றிக்
கதாயுதமொன்றோடு தனியே நிற்கும் நான் போர் செய்யவேண்டும் வகை
எப்படி? என்று வினாவின னென்க. இக்கவியில் ‘நோக்கி’ என்பது,
அடுத்தகவியில் ‘என’ என்பதைக் கொண்டு முடிந்து, குளகமாம்
ஐவரினும் இப்பொழுது இங்கு ஆர் என்னோடு அமர் மலைவார்?
அறுகால் மொய்க்கும்
கொய்வரு தார்ப் புய வீரர்! கூறும்’ என, திருநெடுமால் கூறல்
உற்றான்:
‘செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா! செருச்
செய்வான், இம்
மெய் வரு சொல் தவறாத வீமசேனனை ஒழிந்தால், வேறும்
உண்டோ?
ஐவரினும் – பாண்டவர் ஐந்துபேருள்ளும், இப்பொழுது-,
இங்கு – இவ்விடத்தில், என்னோடு அமர் மலைவார் – என்னுடன் போர்
செய்பவர், ஆர் – எவர்? அறுகால் மொய்க்கும் – வண்டுகள் மொய்க்கின்ற,
கொய்வரு தார்-மலர்களைப் பறித்துவந்து தொடுத்ததனாலாகிய (போர்)
மாலையைத் தரித்த, புயம் – தோள்களையுடைய, வீரர் – வீரர்களே! கூறும் –
சொல்வீராக’, என – என்று (துரியோதனன்) வினாவ,-திரு நெடு மால் –
சிறந்தபெரிய கண்ணபிரான், கூறல் உற்றான் – (அதற்குவிடை)
கூறத்தொடங்கினான்;(எங்ஙனமெனில்) – செய் வரு – கழனிகளிற்
பொருந்திய, சேல் – சேல்மீன்கள்,இளம் பூகம் மடல் ஒடிக்கும் – இளம்
பாக்குமரங்களின் பாளைகளை (த்தாம்துள்ளி யெழுந்து பாய்தலால்) ஒடிக்கிற,
திரு நாடா – அழகிய குருநாட்டையுடையவனே! செரு செய்வான் –
(உன்னோடு) போர்செய்வதற்கு உரியவன்,மெய்வரு சொல் தவறாத –
உண்மைமொழியில் தவறுதலில்லாத, இவீமசேனனை ஒழிந்தால் – இந்த
வீமசேனனையன்றி, வேறும் உண்டோ -மற்றுமொருவன் உளனோ?
[இல்லையென்றபடி]: (எ – று.)
ஒருதொடராகிய நான்கு கவிகளில், கீழ்க்கவியும், இக்கவியின்
முன்னிரண்டடியும் – துரியோதனன் வினா வென்றும், இக்கவியின்
பின்னிரண்டடியும் அடுத்த இரண்டுகவிகளும் – கண்ணபிரான்
விடையென்றுங்காண்க.
‘நானேஉன்னைக் கொல்வேன்’ என்று சபதஞ்செய்துள்ள வீமன்
தானேஅச்சபதத்தை நிறைவேற்றும்பொருட்டு இப்பொழுது உன்னோடு போர்
செய்வானென்றான். கழனியை ‘செய்’ என்பது – அருவாநாட்டில் வழங்குந்
திசைச்சொல். நீர்வளமிகுதியால் கழனிகளிலுள்ள மீன்கள் அந்நீர்ச்
செழுமையாலாகிய கொழுமையால் துள்ளி நெடுந்தூரந்தாவிப் பாக்குமரத்தின்
மடலை ஒடிக்கின்றனவென நாட்டுவளத்தை வருணித்தார்.
இளம் பருவம் முதல் உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு எண்ணில்,
எண் ஒணாதால்;
உளம் புகல, அரசவையில் வஞ்சினமும் பற்பல, அன்று,
உரைத்தே நின்றான்;
களம் புகுந்து நின் ஒழிந்த துணைவரையும் தனது தடக்
கையால் கொன்றான்;
விளம்புவதோ? வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ?
வேந்தர் வேந்தே!
வேந்தர் வேந்தே – அரசர்க்கு அரசனே! இள பருவம்
முதல்- இளமைப்பிராயம் முதலாக, உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு –
உனக்கும்இவனுக்கும்உள்ள வயிரச்செயல், எண்ணில் – ஆலோசிக்குமிடத்து,
எண்ஒணாது – கணக்கிட முடியாததாம்;(அன்றியும்) அன்று – திரௌபதியை
மானபங்கஞ் செய்யக்கருதிய அக்காலத்து, உளம்புகல-மனம் ஊக்கந்தூண்ட,
அரசு அவையில் – இராச சபையில், பற்பலவஞ்சினமும் – பலவான
சபதங்களையும், உரைத்தே நின்றான் – கூறி நின்றான்; (மேலும்), களம்
புகுதும்- போர்க்களத்துக்கு வந்த, நின் ஒழிந்த துணைவரைஉம் –
நின்னையொருவனை யொழிய மற்றுமுள்ள (உனது) தம்பிமா ரெல்லோரையும்,
தனது தட கையால் – தன்னுடையபெரிய கையினால், கொன்றான் –
கொன்றிட்டான்; (ஆதலால்), வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ –
(இவனை யொழிய) வேறொருவர் உன்னுடன் (இப்பொழுது) போர்செய்தற்கு
உரியரோ? [அல்லரென்றபடி]; விளம்புவதோ – இதைப்பற்றிச் சொல்லவும்
வேண்டுமோ? (எ – று.) ஆல் – அசை.
முதலடியிற் கூறியது, துரியோதனன் வீமனுக்கு நஞ்சூட்டியதும்,
அவனைக் கயிறுகளாற் கட்டிக்கங்கையிலெறிந்ததும், கழுவேற்றத்
தொடங்கியதும் முதலியவற்றையென்க. ‘எண்ணில் எண்ணொணாது’
என்பதற்கு – கணக்கினால் அளவிட முடியாதென்றும், மனத்தில்
நினைத்தற்குங்கூடாதபடி மிகக் கொடியதென்றும் பொருள் கொள்ளலாம்.
ஒணாது -ஒன்றாது என்பதன் மரூஉ. புகுதும் என்ற பெயரெச்சத்தில்,
து-சாரியை.உரையா – உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம்.
‘வில்லாலும், வாளாலும், வேலாலும், பரி நெடுந் தேர்
வேழத்தாலும்,
தொல் ஆண்மை தவறாமல் செரு மலைந்தோர் சான்றாகச்
சூழ்ந்து நிற்ப,
புல்லாரைப் புறங்காணும் போர் வேலோய்! இருவரும் நீர்
பொருது, நும்மில்
வல்லார்கள் வென்றி புனைந்து, அவனிதலம் பெறும் இதுவே
வழக்கும்’ என்றான்.
புல்லாரை – பகைவர்களை, புறம் காணும் – வென்று
முதுகுகாணவல்ல, போர்வேலோய் – போர்த்தொழிற்குரிய வேல்
வல்லமையுடையவனே! வில்லாலும்-வில்லைக்கொண்டும், வாளாலும் –
வாளைக்கொண்டும், வேலாலும் – வேலைக்கொண்டும், பரி நெடு தேர்
வேழத்தாலும் -குதிரையும் பெரியதேரும் யானையும் என்னும்
இவற்றைக்கொண்டும், தொல்ஆண்மை தவறாமல் – தொன்று தொட்டுவருகிற
(தமது) பராக்கிரமந் தவறாமல்,செரு மலைந்தோர் – போர்செய்த வீரர்கள்,
சான்று ஆக-சாட்சியாக, சூழ்ந்துநிற்ப-சுற்றி நிற்க, நீர் இருவரும் – நீங்கள்
இரண்டுபேரும், பொருது -போர்செய்து, நும்மில் வல்லார்கள்
வென்றிபுனைந்து – உங்களுள் வல்லவர்கள்வெற்றியை யடைந்து,
அவனிதலம் பெறும் – பூமியைப் பெற்றுக்கொள்ளுதலாகிய, இதுவே –
இச்செயலே, வழக்கும் – நீதியுமாம், என்றான் -என்று (கண்ணன்) கூறினான்;
(எ – று.)
இன்னார் வெல்பவரென்பது துணியலாகாதென்னுங் கருத்துப்பட
‘வல்லார்கள் வென்றிபுனைந்து’ எனப் பன்மையாக் கூறினான். முதலடி –
அறுவகைத் தானையையுங் கூறியது, ‘நீர் இருவரும்’ என்றது,
முன்னிலைப்படர்க்கை வழுவமைதி; ‘நீரிருவிரும்’ என்பது வழாநிலையாம்.
துரியோதனனுக்குப் போரில் உற்சாகத்தை மூட்டும் பொருட்டு ‘புல்லாரைப்
புறங்காணும் போர்வேலோய்’ என்றும், ‘இருவருநீர் பொருது
நும்மில்வல்லார்கள் வென்றிபுனைந்து அவனிதலம் பெறுமிது’ என்றுங்
கூறியருளினான்; ‘பொருது வென்றிபுனைந்து அவனிதலம் பெறு மிதுவே
வழக்கும்’ – இது வரையில் நீ வல்லடி வழக்காய் அரசுமுழுவதுங் கைப்பற்றி
யாண்டு வந்தது அநீதி என்றபடி.
கொண்டல் நிகர் திருமேனிக் கோபாலன் இவை உரைப்ப,
வண்டு படி வலம்புரித் தார் வய வேந்தன் மனம் களித்து,
திண் திறல் வீமனை நோக்கி, ‘சிலை முதல் ஆம் படை கொண்டோ?
தண்டு எனும் நின் படை கொண்டோ? சமர் விளைப்பாய்’ சாற்று’
என்றான்.144.-வீமனை நோக்கித்துரியோதனன் ‘எந்த ஆயுதத்தாற்
போர்செய்யவேண்டும்?’ என்றல்.
கொண்டல்-நீர்கொண்ட காளமேகத்தை, நிகர்-போன்ற,
திருமேனி – திருவடிவத்தையுடைய, கோபாலன் – கண்ணபிரான், இவை
உரைப்ப -இவ்வார்த்தைகளைச் சொல்ல,-வண்டு படி – வண்டுகள் படிந்து
மொய்க்கிற,வலம்புரி தார் – நஞ்சாவட்டை மலர்மாலையையுடைய,
வயவேந்தன் -வலிமையுள்ள துரியோதனராசன், மனம் களித்து – மனத்தில்
உற்சாகங்கொண்டு, திண் திறல் வீமனை நோக்கி, மிக்கவல்லமையுடைய
வீமனைப்பார்த்து, ‘சிலை முதல் ஆம் படை கொண்டோ – வில்முதலான
ஆயுதங்களினாலோ, தண்டு எனும் நின் படை கொண்டோ – உனக்குரிய
கதையென்னும் ஆயுதத்தினாலோ, சமர்விளைப்பாய் – (இப்பொழுது) போர்
செய்வாய்? சாற்று – சொல்,’ என்றான் – என்று வினவினான்; (எ – று.)
திண்திறல் – ஒருபொருட்பன்மொழி, வீமன் எல்லாவாயுதங்களினும்
கதாயுதத்தில் மிகப்பயின்றவனாதலால், ‘தண்டெனும் நின் படைகொண்டு’
என்றான்.
இதுமுதல் இருபத்திரண்டுகவிகள் – பெரும்பாலும் நாற்சீர்களும்
காய்ச்சீர்களாகிய அளவடி நான்குகொண்ட கலிவிருத்தங்கள்; இவற்றை
நாற்சீர் நாலடித்தரவு கொச்சகமென்றலு மொன்று
நின கரத்தின் மிசை ஏந்தி நின்றது நீள் கதையாகில்,
என கரத்தில் தண்டுகொண்டே யானும் உடற்றுவன்’ என்றான்-
தனகரற்கும், குமரற்கும், தண் துழாய் முடியவற்கும்,
தினகரற்கும், மேலான சிந்தையுடன் செருச் செய்வோன்.145.-வீமன் கதாயுதத்தால்போர்செய்ய வேண்டுமென்றல்.
தனகரற்கும்-குபேரனுக்கும், குமரற்கும் – முருகக்
கடவுளுக்கும்,தண் துழாய் முடியவற்கும் – குளிர்ந்த திருத்துழாய்
மாலையைச் சூடியதிருமுடியையுடைய கண்ணனுக்கும், தினகரற்கும் –
சூரியனுக்கும், மேலான -நன்குமதிக்கத்தக்க, சிந்தையுடன் –
மனவுறுதியுடனே, செருசெய்வோன் – போர்செய்பவனாகிய வீமன்,
(துரியோதனனை நோக்கி), ‘நின கரத்தின் மிசை -உன்னுடைய கையிலே,
ஏந்தி நின்றது – தரிக்கப்பட்டுள்ளது, நீள் கதை ஆகில்- நீண்ட
கதாயுதமேயாதலால், என கரத்தில் தண்டு கொண்டே – என்னுடைய
கையிலுள்ள கதாயுதத்தைக்கொண்டே, யானும் உடற்றுவன் – நானும் போர்
செய்வேன்,’ என்றான் – என்று விடை கூறினான்; (எ – று.)
வீமன்புஷ்பயாத்திரையாக அளகாபுரிக்குசென்று அங்குப்
பூஞ்சோலைக்குக் காவலாகவுள்ளவரும் தன்னையெதிர்த்துப் போர்
செய்தவர்களுமான யக்ஷர் வித்தியாதரர் அரக்கர் முதலிய பல
தேவசாதியாரைத் தான் தனியேபொருது அழித்து வென்றிட்டபொழுது
அவனதுபலபராக்கிரமங்களைக் குறித்து யக்ஷராசனான குபேரன்
மிக்கவியப்படைந்தனனாதலாலும், அசுரர்களைக் கொல்லுவதற்கென்றே
தேவர்களின் வேண்டுகோளால் சிவகுமாரனாய்த் திருவவதரித்து அங்ஙனமே
சூரபதுமன் முதலிய அசுரர்களையெல்லாம் அழித்த முருகக்கடவுளும்
வியக்கும்படி வீமன் தவறாது எளிதிற் பகையழித்துவருதலாலும், வீமன்
அலட்சியமாகச்செய்த சராசந்தவதம் முதலியவற்றை அருகிலிருந்து கண்டும்
சடாசுரன்வதை மணிமான்வதை கீசகன்வதை முதலியவற்றைக் கேட்டும்
கண்ணபிரான் வீமனது பலபராக்கிரமங்களைக் குறித்து மிகவும்
ஆனந்தமடைதல் பற்றியும், கருமசாக்ஷியும் உலகத்துக்கெல்லாம்
கண்ணுமானஇருட்டொகுதியையழிக்கின்ற சூரியனும் அதிசயிக்கும்படி
அவனினுஞ்சிறப்பாகவீமன் பகையிருளை வேரற ஒழித்துவந்தமைபற்றியும்,
‘தனகரற்குங் குமரற்குந்தண்டுழாய் முடியவற்குந் தினகரற்கு மேலான
சிந்தையுடன் செருச்செய்வோன்’என்றார். தநகரன் – பொருளைச்
சேர்ப்பவனெனக் காரணப்பொருள்படும்.
எவ் இடை வீமனும் யானும் இகல் புரிதற்கு இடம்?’ என்று,
பொய் விடை ஏழ் அடர்த்தோனைப் புயங்ககேதனன் கேட்ப,
மெய் விடை ஆன் நிரைப் பின்போய் வேய் ஊதும் திரு நெடுமால்,
அவ் இடை, ஆங்கு, இருவருக்கும் ஆம் பரிசால் அருள் புரிந்தான்146.-எங்குப்போர்செய்வதென்று துரியோதனன் கேட்கக் கண்ணன்
விடைகூறத் தொடங்கல்.
வீமன் யானும் -, இகல் புரிதற்கு – போர் செய்தற்கு,
இடம் -உரிய இடம், எ இடை – எந்த இடம்?’ என்று -, புயங்ககேதனன்-
பாம்புக்கொடியையுடைய துரியோதனன், பொய் விடை ஏழ் அடர்த்தோனை-
வஞ்சனையமைந்த எருதுகளேழைப் பொருது அழித்தவனான கண்ணபிரானை,
கேட்ப – கேட்க, – மெய் விடை ஆன் நிரை பின்போய் – உண்மையான
எருதுகளோடு கூடிய பசுக்கூட்டங்கள் என்னுமிவற்றின் பின்னே சென்று,
வேய்ஊதும் – புள்ளாங்குழலை ஊதின, திரு நெடு மால் – சிறந்த பெரிய
கண்ணபிரான், ஆங்கு – அப்பொழுது, இருவருக்கும் ஆம் பரிசால் –
(துரியோதனன் வீமன் என்ற) இரண்டுபேருக்கும் இசையும்விதமாக, அ
இடை -(போருக்குரிய) அந்த இடம் இன்னதென்பதைக்குறித்து, அருள்
புரிந்தான் -சொல்லியருள்பவனானான்; (எ – று.)
மாயையால் அசுரர்கள் ஆவேசிக்கப்பெற்ற எருதுகளாதலின்,
‘பொய்விடையேழ்’ என்றார். சிலவற்றை ‘பொய்விடை’ என்னவே, பிறவற்றை
‘மெய்விடை’ என்னவேண்டிற்று.
விடையேழடர்த்த விவரம் – கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத்
திருமணஞ் செய்துகொள்வதற்காக, அவள் தந்தையி னேற்பாட்டின்
படியாவர்க்கும் அடங்காத அசுராவிஷ்டமான ஏழெருதுகளையும்
ஏழுதிருவுருக்கொண்டு சென்று வலியடக்கித் தழுவினனென்பதாம்.
இவ்வரலாற்றால், கண்ணனது துஷ்டநிக்கிரகசக்தி விளங்கும். கண்ணன்
இளமையில் கன்று காலைகளை மேய்த்துச் செல்லும்பொழுது அவற்றை
உத்ஸாகப் படுத்தும் பொருட்டும், ஒருங்குசேர்த்தற்பொருட்டும் வேய்ங்குழ
லூதிவந்தமை, பிரசித்தம்.
அரும் பெறல் ஆயோதனம் மற்று அவன் உரைக்கும்
வேலையினில்,
இரும் புனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் வந்து
அவண் எய்த,
கரும் புயலே அனையானும், காவலரும், கண் களித்து,
விரும்பி மனம் களி கூர, மேதகவே எதிர்கொண்டார்.147.-அப்பொழுது அங்குப்பலராமனும் விதுரனும் வருதல்.
பெறல் அரு – கிடைத்தற்கு அருமையான [மிகச் சிறந்த
என்றபடி], ஆயோதனம் – போர்செய்தற்கு உரியஇடத்தை, அவன் –
அந்தக்கண்ணபிரான், உரைக்கும் வேலையினில் – சொல்லத்தொடங்குஞ்
சமயத்தில்,-இருபுனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் அவண் வந்து எய்த
– பெரிய[சிறந்த] புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் பொருட்டு
(த்தீர்த்தயாத்திரை)சென்றுள்ளவரான (விதுரன் பலராமன் என்ற)
இரண்டுபேரும் அவ்விடத்தில்வந்து சேர,-கரு புயல் ஏ அனையானும் –
காளமேகத்தையே ஒப்பவனாகியகண்ணனும், காவலரும் – (மற்றும்
பாண்டவர் முதலிய) அரசர்களும், கண்களித்து – (அவர்களைப்
பார்த்ததனால்) கண்கள் ஆனந்தமடையப்பெற்று, மனம்விரும்பி களிகூர –
மனம் மகிழ்ந்து களிப்புமிக, மேதக எதிர்கொண்டார் -மேன்மைபொருந்த
எதிர்சென்று அழைத்து உபசரிப்பவரானார்கள்; (எ – று.) -மற்று – அசை.
பலராமன் – கண்ணனுக்குத் தமையன்; இவனிடத்துத் துரியோதனனும்
வீமனும் கதாயுதப் பயிற்சியை விசேஷமாகக் கற்றுக் கொண்டபொழுது
தேகபலத்தில் மிக்க வீமனினும் துரியோதனன் தொழில்வகையில்
சிறந்துநின்றதனால், இவனுக்குத் துரியோதனனிடம் மிக்க அன்பு நிகழ்ந்தது.
அங்ஙனமிருந்தும் பாண்டவ சகாயனான கண்ணனுக்கு மாறாகத் தான்
எதிர்ப்பக்கத்தில் இருந்து போர் செய்தல் தகாதென்றும், துரியோதனன்
அழிதலைத் தான் அருகிலிருந்து கண்ணாற்பார்க்க மனமில்லாமலும்
புறப்பட்டுத்தீர்த்தயாத்திரை போய்விட்டனன் இவனென்க.
விதுரன் – பாண்டவர்க்கும் துரியோதனாதியர்க்கும் சிற்றப்பன்
முறையாகிறவன்; வீமன் அருச்சுனன்முதலிய சிறந்த வீரர் பலரையும்
ஒருங்கேஎதிர்த்து வெல்லலாம்படி வில் முதலிய படைத்தொழில்களில்
மற்றையாவரினும் மிக வல்லவன். கண்ணன் பாண்டவர்க்குத்
தூதாய்வந்தமைபற்றிஅவனையும், அவனுக்குத் தன்வீட்டில் இடங்கொடுத்து
விருந்து செய்துஉபசரித்தமைபற்றி விதுரனையும் துரியோதனன் பலவாறு
இராசசபையிற்பழிக்க,விதுரன் கடுங்கோபங்கொண்டு ‘பாதகனாகிய உன்
பொருட்டுப்போர்செய்யேன்; இத்தனை நாளாய் உன்சோற்றையுண்டமைபற்றி,
உனக்குஎதிராகப் பாண்டவ ரோடுசேர்ந்தும் பொரேன்’ என்று சொல்லித்
தனது வில்லை இரண்டு துண்டாக முறித்துப் போகட்டுவிட்டுப் பாரதயுத்தம்
நடக்கையில் அங்கு இராமல் பலராமனுடன் தீர்த்தயாத்திரை
சென்றிட்டனனென்க. மேதக எதிர்கொள்ளுதல் – மிக்கமரியாதையுடன்
விசேஷ உபசாரங்களைச் செய்து எதிர்கொள்ளுதல்.
மதுரை நகர்க்கு அரசான மாயனும் தம்முனை வணங்கி,
விதுரனையும் மெய் தழுவ, வேல் வேந்தர் அனைவோரும்
கதிரவர் ஓர் இருவரையும் கண்டு களிப்பவர் போல,
எதிர் எதிர் போய்க் கை தொழுதார், இகல் ஆண்மைக்கு
எதிர் இல்லார்.148.-கண்ணனும் மற்றையோரும்அவர்கள் வரவைப்
பாராட்டுதல்.
மதுரை நகர்க்கு அரசு ஆன – மதுராபுரிக்குத்தலைவனான,
மாயவனும் – கண்ணபிரானும், தம் முனை வணங்கி – தனது தமையனான
பலராமனை நமஸ்கரித்து, விதுரனையும் மெய் தழுவ – விதுரனை உடம்பை
ஆலிங்கனஞ் செய்தருள, இகல் ஆண்மைக்கு எதிர் இல்லார் – பல
பராக்கிரமங்களில் தமக்குச் சமமில்லாதவர்களாகிய, வேல் வேந்தர்
அனைவோரும் – வேல்முதலிய ஆயுதங்களில் வல்ல அரசர்களெல்லோரும்,
கதிரவர் ஓர்இருவரையும்கண்டு களிப்பவர்போல – ஒளியையுடையவரான
(சந்திரன் சூரியன் என்ற) இரண்டு பேரையும் பார்த்து மகிழ்பவர்போலப்
பலராமனையும் விதுரனையுந் தரிசித்ததனால் மனமகிழ்ந்து, எதிர் எதிர்
போய்கைதொழுதார் – (தாம்தாம்) எதிர்கொண்டு சென்று கைகூப்பி
வணங்கினார்கள்;
இங்கேமதுரை யென்றது, வடமதுரையை. அதில் அரசாண்டு நின்ற
கம்சனைக் கொன்று கண்ணன் அந்நகர்க்குத் தலைமைபெற்றனனென அறிக.
மது என்பவனால் ஏற்படுத்தப்பட்டதனாலும், அழகியதாயிருத்தலாலும்,
அந்நகர்க்கு, ‘மதுரா’ என்று பெயர்; அது மதுரையென ஈறுதிரிந்தது. விதுரன்
– ஞானமுடையவ னென்று காரணப்பொருள்படும். தம்மினும் மேலோரை
வணங்குதலும், கீழோரை ஆசீர்வதித்தலும், சமமானவரைத்
தழுவியணைத்தலும், மரியாதை.
அன்று முதல், ஏகிய நாள் அளவாக, இருவோரும்
குன்று இடமும், கடல் இடமும், குறித்த நதிகளின் இடமும்,
சென்று, சுரரும் படியும் தீர்த்தங்கள், திசைதோறும்
ஒன்றுபட மகிழ்ந்து ஆடி, மீண்டவாறு உரைசெய்தார்.149.-தீர்த்தயாத்திரைவரலாற்றை அவ்விருவருங் கூறுதல்.
அன்று முதல் – (பிரயாணம் புறப்பட்டுச்சென்ற) அந்நாள்
முதல், ஏகிய நாள் அளவு ஆக, மீண்டுவந்த இந்நாள் வரையிலும்,
திசைதோறும் – ஒவ்வொருதிக்கிலும், குன்று இடமும் –
மலைகளினிடங்களிலும்,கடல் இடமும் – கடல்களினிடங்களிலும்,
குறித்தநதிகளின் இடமும் -(சிறந்தவையென்று) குறிக்கப்பட்ட
நதிகளினிடங்களிலும், சென்று – போய்,சுரரும் படியும் தீர்த்தங்கள் –
மேலுலகிலுள்ளதேவர்களும்வந்துநீராடப்பெற்ற புண்ணிய தீர்த்தங்களில்,
ஒன்றுபட – ஒருசேர, மகிழ்ந்து ஆடி – மனமகிழ்ச்சியோடு நீராடி, மீண்ட
ஆறு – திரும்பிவந்த வரலாற்றை, இருவோரும் – அவ்விரண்டு பேரும்,
உரைசெய்தார் – (மற்றையோருக்கு) எடுத்துக்கூறினார்கள்;
இங்கேதொகுத்துக் கூறப்பட்ட தீர்த்தயாத்திரைவரலாறு,
வியாசபாரதத்தில் இருபது அத்தியாயங்களில் வெகு அழகாகவும்
விரிவாகவுங்கூறப்பட்டுள்ளது. சுரரும், உம் – உயர்வுசிறப்பு
அறன் தரு காளையும் முகுரானனன் தரு காளையும் புரிந்த
மறம் தரு போர் வெங் களத்து, மன்னவர்கள் அனைவோரும்
இறந்த நிலையும், தினங்கள் ஈர்-ஒன்பானிலும், தோன்ற
மறம் திகழ் தோள் இருவருக்கும், மா மாயன் கட்டுரைத்தான்.150.-பதினெட்டுநாளைப்போர் வரலாற்றைக் கண்ணன்
அவ்விருவர்க்குங் கூறல்.
அறம் தரு காளையும் – தருமதேவனான யமன் பெற்ற
பிள்ளையாகிய யுதிஷ்டிரனும், முகுர ஆனனன் காளையும் – கண்ணாடி
போலும் முகமுடைய திருதராட்டிரனது பிள்ளையாகிய துரியோதனனும்,
புரிந்த-செய்த, மறம் தரு போர் வெம் களத்து – கொலைநிகழ்தற்குஉரிய
கொடியபோர்க்களத்தில், தினங்கள் ஈர்ஒன்பானிலும் –
பதினெட்டுநாள்களிலும்,மன்னவர்கள் அனைவோரும் – அரசர்கள் பலரும்,
இறந்த நிலையும் – மரித்ததன்மையையும், மாமாயன் – சிறந்த மாயையுடைய
கண்ணபிரான்,மறம்திகழ்தோள் இருவருக்கும் – வலிமைவிளங்குந்
தோள்களையுடைய(பலராமன் விதுரன் என்ற) அவ்விரண்டுபேருக்கும்,
தோன்றகட்டுரைத்தான் -தெளிவாகக்கூறினான்.
‘முகுரவானனன்’ என்றது – கண்ணாடி தான் பிறராற் காணப்பட்டுப்
பிறரைத் தான்காணும் உணர்ச்சி யில்லாததுபோல தான் பிறராற்காணப்பட்டுப்
பிறரைத் தான் காணாதமுகத்தையுடையவனென்றவாறு; பிறவிக்குருடனென்பது
கருத்து. இனி, கண்ணாடி போல விளக்கமுடைய முகமுடையவ னென்பாரு
முளர். அன்றியும், கண்ணாடிபுறங்காட்டாதவாறுபோல வீரத்தால்
முதுகுகாட்டாத முகமுடையவ னென்றலும் ஒன்று; திருதராட்டிரன் அங்ஙனந்
தேர்ந்தவீரனாதலைச் சம்பவச்சருக்கத்தால் அறியலாம். இனி, பிறவிக்
குருடனைக் கண்ணாடிபோலு முகமுடையானென இகழ்ச்சிபற்றிய
பெயருமாம்
கேட்டருளி நெடுந் தால கேதனன் மா மனம் தளர்வுற்று,
‘ஆட்டு அரவம் உடையவற்கோ, அழிவு வருவது போரில்?
நாட்டம் இனி ஏது?’ என்று நராந்தகனை வினவுதலும்,
மீட்டும் அவற்கு உரைசெய்தான், விரி திரை நீர் மறந்தோனே151.-பலராமன் இரக்கத்தோடு’இப்பொழுது என்ன
உத்தேசம்?’ என்றல்.
நெடு தால கேதனன் – நீண்ட பனைமரத்தின்
வடிவத்தையெழுதிய கொடியையுடைய பலராமன், கேட்டு அருளி –
(கண்ணன்கூறிய போர் வரலாறுகளைக்) கேட்டு, மா மனம் தளர்வுற்று –
(தனது)சிறந்தமனம் தளர்ந்து, ‘ஆட்டு அரவம் உடையவற்கோ போரில்
அழிவுவருவது – படமெடுத்தாடுந் தன்மையுள்ள பாம்பின் வடிவ மெழுதிய
கொடியையுடைய துரியோதனனுக்கோ யுத்தத்தில் அழிவு உண்டாவது! இனி-
இப்பொழுது, நாட்டம்ஏது – குறிக்குந்தொழில் யாது? என்று-, நராந்தகனை
வினவுதலும் – கண்ணபிரானை வினாவிய வளவிலே,-விரி திரை நீர்
மறந்தான்- பரவுகிற அலைகளையுடைய திருப்பாற்கடலில் யோகநித்திரை
செய்தலைவிட்டு இங்குத் திருவவதரித்த – திருமாலாகிய கண்ணபிரான்,
மீட்டும்அவற்கு உரை செய்தான் – மறுபடியும் அந்தப் பலராமனுக்குக்
கூறுபவனானான்; (எ – று.)
‘ஆட்டரவமுடையவற்கோ அழிவுவருவது போரில்’ என்று தனது
சிறந்தமாணாக்கனுக்கு அழிவு நேர்வதுபற்றி, பலராமன் மனந்தளர்ந்தன
னென்க. நாட்டம் – ஆகுபெயராய், உத்தேசிக்கப்பட்ட காரியத்தைக்
குறிக்கும்.நராந்தகன் – நரகாந்தகன் என்பதன் விகாரம்.
நரகனைக்கொன்ற கதை:- திருமால்வராகாவதாரஞ்செய்து பூமியைக்
கோட்டாற் குத்தியெடுத்தபொழுது அத்திருமாலினது பரிசத்தாற்
பூமிதேவிக்குக்குமாரனாய்ப்பிறந்தவனும், அச்சமயத்திற்
சேர்ந்துபெறப்பட்டவனாதலால்அசுரத்தன்மைபூண்டவனுமானநரகனென்பவன்,
பிராக்சோதிஷமென்னும்பட்டணத்திலிருந்துகொண்டு, சகல பிராணிகளையும்
மிக உபத்திரவித்து, தேவர்சித்தர் கந்தருவர் முதலானவர்களுடைய
கன்னிகைளையும் ராஜாக்களுடையகன்னிகைகளையும் பலாத்காரமாய்
அபகரித்துக்கொண்டுபோய்த் தான்மணம்புணர்வதாகக் கருதித் தன்
மாளிகையிற் சிறைவைத்து, வருணனுடையகுடையையும் மந்தரகிரிச்சிகரமான
ரத்தினபருவதத்தையும் தேவர் தாயானஅதிதிதேவியின் குண்டலங்களையுங்
கவர்ந்து போனதுமன்றி,இந்திரனுடையஐராவதயானையையும் அடித்துக்
கொண்டு போகச் சமயம்பார்த்திருக்க, அஞ்சிவந்து பணிந்து முறையிட்ட
இந்திரனது வேண்டுகோளால்,கண்ணபிரான், கருடனை வரவழைத்து,
பூமிதேவியமிசமான சத்தியபாமையுடன்தான் கருடன் மேலேறி, அந்நகரத்தை
அடைந்து, சக்கராயுதத்தைப்பிரயோகித்து, அவன் மந்திரியான முரன்
முதலிய பல அசுரர்களையும்இறுதியில் அந்நரகாசுரனையும் அறுத்துத்
தள்ளியழித்திட்டனன் என்பதாம்.
‘விரிதிரைநீர்மறந்தான்’ என்றது, திருப்பாற்கடல்நாதனாகிய திருமால்
தேவர்களின் வேண்டுகோளால் அங்குநின்று கண்ணனாக வந்து
தோன்றினனாதலின்; இங்ஙனங்கூறினது, உபசாரவழக்கு. நீர் – கடலுக்கு
இலக்கணை. பாற்கடல் நீரெனப்படுதலை “தாழிதரையாகத் தண்டயிர் நீராக”
எனப் பிறவிடத்துங் காண்க.
“வீமனுக்கும், வீமனுடன் வெகுண்டு அமர் செய் வலம்புரிப் பூந்
தாமனுக்கும், அமர் புரியும் தலம் ஏது?’ என்று உயாவுகின்றோம்;
நீ மனத்தின் நிகழ்ந்தபடி நிகழ்த்துக!’ என, நிலவு ஒளியால்
சோமனுக்கு நிகர் ஆனோன், இளவலை, ‘நீ சொல்!’ என்றான்152.-அதற்குக் கண்ணன் கூறும்விடை.
வீமனுக்கும்-, வீமனுடன் வெகுண்டு அமர் செய் –
வீமனோடுகோபித்துப் போர்செய்யும், வலம்புரிப்பூ தாமனுக்கும் –
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனனுக்கும், அமர் புரியும் –
போர்செய்யத்தக்க,தலம் – இடம், ஏது – எது? என்று – என்பதைக்குறித்து,
உயாவுகின்றோம் -ஆராய்ச்சிசெய்கிறோம்; நீமனத்தில் நிகழ்ந்தபடி
நிகழ்த்துக – (அதைக்குறித்து)உன்மனத்திலுள்ள கருத்தை நீ கூறுவாய்,’
என – என்று (கண்ணன் பலராமனைநோக்கிக்) கூற, – நிலவு ஒளியால்
சோமனுக்கு நிகர் ஆனோன் – விளங்குகிற(தனது வெண்ணிறமான)
தேககாந்தியால் சந்திரனுக்கு ஒப்பான பலராமன்,இளவலை – (தனது)
திருத்தம்பியான கண்ணபிரானை நோக்கி, நீ சொல்என்றான் – நீயே
(உன்கருத்தின்படி) கூறுவாயென்றான்; (எ – று.)
பலராமன் வெண்ணிறமுடையனாதலால், ‘நிலவொளியாற் சோமனுக்கு
நிகரானோன்’ என்றார்; அவன் வெள்ளைநிறமுடைமை பிரசித்தம்.
உயாவுதல்=உசாவுதல்.
தாவு எழு மா மணி நெடுந் தேர்த் தபனன் நிகர் மழுப் படையோன்
மூ-எழு கால் முடி வேந்தர் அனைவரையும் முடிப்பித்து,
நா எழு பான்மையின் உடையோன் களிக்க, நரமேதம் செய்
பூ எழு தீவினும் சிறந்து, பொன்னுலகோடு ஒத்துளதால்153.-இதுவும், அடுத்தகவியும்-குளகம்; கண்ணன்
போர்க்களங்குறித்தல்.
தாவு – தாவிச்செல்லுகிற, எழு மா – ஏழுகுதிரை பூண்ட,
மணிநெடு தேர் – அழகிய பெரிய தேரையுடைய, தபனன் – சூரியனை,
நிகர் -ஒத்து விளங்குகிற, மழு படையோன் – கோடாலியை
ஆயுதமாகவுடையபரசுராமன், மூ எழு கால் – இருபத்தொருதலை முறை,
முடி வேந்தர்அனைவரையும் – கிரீடாதிபதிகளான அரசர்களெல்லாரையும்,
முடிப்பித்து -அழியச்செய்து, நாஎழு பான்மையின் உடையோன் களிக்க –
நாக்கைஏழுபகுதியாகவுடைய அக்கினி தேவன்மகிழும்படி, நரமேதம்செய்-
நரமேதம்பண்ணின, பூ – இடம், எழு தீவினும் சிறந்து – ஏழுதீவுகளுள்ளுஞ்
சிறப்புற்று, பொன் உலகோடு ஒத்து உளது – சுவர்க்கலோகத்தோடு
ஒத்துள்ளது;
சந்திரவமிசத்துப்பிறந்த அரசனும் பலபராக்கிரமங்களிற்சிறந்தவனும்
ஆயிரந்தோள்களுடையவனும் இராவணனைஒருகால்வென்றிட்டவனுமான
கார்த்தவீரியார்ச்சுனன் ஜமதக்நிமுனிவனது ஓமதேனுவைக் கவர்ந்தது
காரணமாக அம்முனிவனது குமாரனான பரசுராமன்
அக்கார்த்தவீரியார்ச்சுனனைக் கொன்றுவிடவே, அவனது குமாரர்கள்
பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்று நிச்சயித்துப் பரசுராமன் இல்லாத
சமயம்பார்த்துப் பர்ணசாலையினுட்சென்று சமதக்நிமுனிவனைத்
தலைதுணித்துப்போக, பின்பு வந்த பரசுராமன் பெருஞ்சினங்கொண்டுசென்று
அவ்வருச்சுனகுமாரர்களையும் உலகத்திலுள்ள செருக்குக்கொண்ட
அரசர்கள்பலரையும் அழித்தொழித்துச் சகலக்ஷத்திரியவம்ச விநாசகாரண
னாயினன். ஜமதக்நி முனிவனது தலையைக் கார்த்தவீரியார்ச்சுனகுமாரர்
துணித்திட்டபோது, அவனது மனைவியான ரேணுகாதேவி இருபத்தொருமுறை
தன் மார்பில் அடித்துக்கொண்டு புலம்பினதுபற்றி அரசர்களை இருபத்தொரு
தலைமுறைபரசுராமன் ஒழித்திட்டா னென்றும், பரசுராமன் தான் முதலில்
வீரவாதமாகப் பிரதிஜ்ஞைசெய்தபடி அவ்வரசர்களது இரத்தவெள்ளத்தால்
ஸ்யமந்தபஞ்சகமென்ற ஐந்து தடாகங்களை யேற்படுத்தி அவற்றில் தந்தைக்கு
ஜலதர்ப்பணஞ் செய்திட்டானென்றும், தன்னாற் கொல்லப்பட்ட
அரசர்களதுதலைகளை ஆகுதியாக நெருப்பிற்பெய்து ஒரு வேள்விச்சடங்கை
முடித்து அவ்யாகத்தின் முடிவில் தனக்குச் சுவாதீனமாகவுள்ள
பூமிமுழுவதையுங் காசியபமுனிவனுக்குத் தானஞ்செய்துவிட்டு
மகேந்திரமலைக்குச் சென்றிட்டானென்றும் வரலாறு உணர்க. நரமேதம் –
மனிதரைக் கொன்று செய்யும் யாகம். அக்கினிக்கு உள்ள ஏழுசுவாலைகளை
ஏழுநாக்குகளாகக் கூறுதல் மரபாதலின், ‘நா வெழுபான்மையினுடையோன்’
என்றார்.
‘தபனனிகர்’ என்ற அடைமொழி – மழுவுக்கும், பரசுராமனுக்கும்
பொருந்தும். மூவெழுகால் – பண்புத்தொகை. ஏழுதீவு – ஜம்பூ, பிலட்சம்,
குசம், கிரௌஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம் என்பன. பொன்னுலகு –
பொன்மயமாயுள்ள உலகம்.
அந் நிலமே இருவருக்கும் அமர் புரியல் ஆன இடம்;
மன்னவர்தம் உடல் சோரி வழிந்து சமந்த பஞ்சகம் ஆம்
என்ன நிலைபெற்ற தடங்களும் அங்கங்கே உண்டு;
உன்னில் எதிர் இல் அதனுக்கு, ஒலி கடல் சூழ் நிலத்து’ என்றான்.
அ நிலமே – (பரசுராமன் நரமேதஞ்செய்த) அந்த இடமே,
இருவருக்கும் – இவ்விரண்டுபேருக்கும், அமர் புரியல் ஆன இடம் –
போர்செய்தற்குத் தக்க இடமாம்: மன்னவர்தம் – (பரசுராமனாற்
கொல்லப்பட்ட)அரசர்களுடைய, உடல் சோரி-உடம்பின் இரத்தம், வழிந்து –
பெருகியதனால்,சமந்த பஞ்சகம் ஆம் என்ன நிலைபெற்ற –
ஸ்யமந்தபஞ்சகமென்றுபிரசித்தமாக நிலைபெற்றுள்ள, தடங்களும்-(ஐந்து)
தடாகங்களும், அங்கேஅங்கே உண்டு – அவ்விடத்தில் அடுத்தடுத்து
உள்ளன; உன்னில் -ஆலோசிக்குமிடத்து, ஒலி கடல் சூழ்நிலத்து –
ஒலிக்கின்ற கடல்சூழ்ந்தநிலவுலகத்தில், அதனுக்கு – அந்த இடத்துக்கு,
எதிர் இல் – ஒப்பான இடம்வேறில்லை, என்றான்-என்று (கண்ணன்)
கூறியருளினான்; (எ – று.)
வழிந்து – வழிய என்னும் எச்சத்தின் திரிபு.
அத் தலத்தின் திசை நோக்கி அனீகினியும், அனைவோரும்,
முத்த நெடுங் குடை நிழற்ற, மூவகை வாகனம் ஏறி,
கொத்துடனே நெறி படர, கொற்றவர் கொற்றவன்தானும்
கைத்தலமும் தண்டமுமாக் கால் வேகம் உறச் சென்றான்.155.-கண்ணன் கூறியவுடன்யாவரும் அவ்விடஞ் செல்லுதல்.
அ தலத்தின் திசை நோக்கி – அந்த இடமுள்ள திக்கைக்
குறித்து, அனீகினியும்-சேனைகளும், அனைவோரும் – (பாண்டவர் முதலிய
அரசர்கள்) எல்லோரும், முத்தம் நெடு குடை நிழற்ற – முத்துக்களாலாகிய
பெரிய வெண்கொற்றக்குடைநிழலைச்செய்ய, மூவகை வாகனம்ஏறி-(யானை
தேர் குதிரை என) மூன்றுவகைப்பட்ட வாகனங்களிலேறிக்கொண்டு,
கொத்துடனே நெறி படர-கூட்டமாக வழிச்செல்ல, கொற்றவர் கொற்றவன்
தானும் – இராசராசனான துரியோதனனும், கைத்தலமும் தண்டமும்
ஆ-கையுங்கதையுமாக, கால் வேகம் உற சென்றான்-கால்களால் வேகமாக
நடந்துசென்றான்; (எ – று.)
துரியோதனனுக்குச் சேனையுந் துணையும் வாகனமு மில்லாமை,
நான்காமடியில் விளங்கும். ‘கால்வேகமுற’ என்பதற்கு – காற்றின் வேகமாக
என்றும் பொருள்கொள்ளலாம்.
தம்பியர்கள் புடை சூழ, தருமன் மகன், பல் இயமும்
பம்பி எழ, நடக்கின்ற பரிசுதனை முகம் நோக்கி,
‘எம்பியரும், எம் கிளையும் இறக்க இருந்தனம்!’ என்றே,
வெம்பி மனம் மிகத் தளர்ந்தான், விதிதனக்கும் விதி போல்வான்.156.-தருமனைப்பார்த்துத்துரியோதனன் பொறாமைப்படுதல்.
தம்பியர்கள் புடை சூழ – தம்பிமார்நால்வரும்
பக்கங்களிலேசூழ்ந்துவரவும், பல் இயமும் பம்பி எழ-பலவகைப்பட்ட
வாத்தியங்களும்நெருங்கி மிக்கொலிக்கவும், தருமன் மகன் – தருமபுத்திரன்,
நடக்கின்ற -சிறப்பாகச்செல்லுகிற, பரிசுதனை – விதத்தை, முகம் நோக்கி –
எதிரிலேபார்த்து, – விதிதனக்குவிதி போல்வான் – ஊழ்வினைக்கும்
ஓர்ஊழ்வினைபோல்பவனான துரியோதனன்,-‘எம்பியரும் – எமது
தம்பிமார்களும், எம்கிளையும் – எமது பந்துவர்க்கமும், இறக்க-,
இருந்தனம்- (நாம் மாத்திரம்தனித்து) நின்றோம்’ என்றே – என்று
எண்ணியே, மிக மனம் வெம்பிதளர்ந்தான் – மிகவும் மனந்தவித்துத்
தளர்ச்சியடைந்தான்; (எ – று.)
‘விதிதனக்கும் விதிபோல்வான்’ என்றது, ஊழ்வினையின்படிதான்
தொழில்செய்கின்றனனென்பதின்றித் தனது செயலின்படி ஊழ்வினை நிகழ்வ
தென்னும்படி தான் நினைத்தவாறெல்லாம் இது வரையில் தொழில் செய்து
தடையற முடித்துவந்தவனென்றவாறு; அன்றி, யாவரையும் வருத்துகிற ஊழும்
அஞ்சத்தக்க தீச்செயலையுடையவனென்பாருமுளர். ‘விதி தனக்கு’ என்பதில்
உயர்வுசிறப் பும்மைவிகாரத்தால் தொக்கது; அது, அதனது தவறாத உறுதி
நிலையை விளக்கும். ‘முகநோக்கி’ என்பதற்கு – கண்ணாற்பார்த்து என்று
கூறி, முகம் என்றதை இடவாகுபெயரென்றலும் ஒன்று.
முடிக் குல மன்னவர் தம்தம் முடிகளினால் சிவக்கின்ற
அடிக் கமலம் நடந்து சிவப்பு ஆவதே!’ என இரங்கி,
கொடிக்கண் முரசு எழுதிய அக் கோவேந்தன் கொடித் தேர்விட்டு,
இடிக்கும் முரசு எனப் புகல்வான், இராசராசனுக்கு அம்மா!157.-தருமன்துரியோதனனுக்குச் சில கூறத்தொடங்கல்.
முடி – கிரீடத்தையுடைய, குலம் மன்னவர்தத்தம்-சிறந்த
குலத்துஅரசர்களுடைய, முடிகளினால் – கிரீடங்கள்படுவதனால், சிவக்கின்ற-
செந்நிறமடைகிற, அடி கமலம் – (துரியோதனனது) தாமரை மலர்போன்ற
பாதம், நடந்து சிவப்பு ஆவதே – நடந்து அதனால் செந்நிறமடைவதா?”
எனஇரங்கி – என்று எண்ணி (மனத்தில்) இரக்கங்கொண்டு,-கொடிக்கண்
முரசுஎழுதிய அ கோ வேந்தன் – தனது துவசத்தில் முரசவாத்தியத்தின்
வடிவத்தையெழுதியுள்ள அந்தச் சிறந்த அரசனான தருமபுத்திரன், கொடி
தேர் விட்டு -கொடிகட்டிய தனதுதேரைவிட்டு இறங்கி(ச்சென்று),
இராசராசனுக்கு – அரசர்க்குஅரசனான துரியோதனனுக்கு, இடிக்கும் முரசு
என புகல்வான் – முழங்குகிறமுரசவாத்தியம் போல (க்
கம்பீரமானகுரலுடன் சிலவார்த்தை) கூறுவான்; (எ -று.)-அவற்றை, அடுத்த
இரண்டு கவிகளிற் காண்க.
அரசர்கள்பலரும் தங்களுக்கு அரசனான துரியோதனனது கால்களில்
தம்தமது தலைபடும்படி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கும்பொழுது
அவர்களது கிரீடம் படுதலால் இவனதுகால் சிவக்குமென்க. ஆவதே என்ற
ஏகாரம் – இரக்கத்தை விளக்கும். மிகக்கொடிய அளவிறந்த தீங்குகளைத்
தங்களுக்குச் செய்துவந்த பகைவனான துரியோதனன்பக்கல் தருமனுக்கு
இங்ஙனம் இரக்கம் நிகழ்ந்ததென்பதனால், அவனது மிக்ககருணை புலப்படும்.
அம்மா – தருமனது கருணையை வியந்தவாறு.
என் துணைவருடன் யானும் ஏவிய நின் தொழில் புரிந்து,
வன் துணையாய்ச் சேவிப்ப, மடங்கல் ஆசனம் ஏறி,
“இன் துணைவர் குருகுலத்தார்” எனும் இசை போய்த் திசை ஏற,
நல் துணைவா! ஆளுதியால், ஞாலம் எலாம் நின் குடைக்கீழ்.158.-தருமன் துரியோதனனுக்குஅரசுகொடுப்பேனென்றல்.
நல் துணைவா – நல்ல தம்பியே! என் துணைவருடன் –
எனதுதம்பிமார்களுடன், யானும் – நானும், ஏவிய நின் தொழில் புரிந்து –
உன்னாற்கட்டளையிடப்படுங் குற்றேவல்களைச் செய்து கொண்டு, வல்
துணை ஆய் சேவிப்ப – வலிய துணைவீரராய் (உனக்கு) ஊழியஞ்செய்ய,
மடங்கலஆசனம் ஏறி – (நீ) சிங்காசனத்தில் ஏறி வீற்றிருந்து, குரு குலத்தார்
இன் துணைவர் எனும் இசை போய் திசை ஏற -குருகுலத்தில் தோன்றிய
அரசர்கள் (ஒருவர்க்கொருவர்) இனியதுணைவராயினா ரென்னும் புகழ்
சென்று எல்லாத்திக்குகளிலும் மிக்குப்பரவ, ஞாலம் எலாம் – பூலோகம்
முழுதையும், நின்குடைக்கீழ் – உனதுஒற்றைவெண்கொற்றக்குடையின்கீழ்,
ஆளுதியோ – ஆளுவையா? (எ – று.)
போரையொழித்துப் பகைமையின்றிச் சமாதானத்தில் மீண்டும்
அரசுபெற்றுவாழ உனக்குப் பிரியமா? என்று வணங்காமுடிமன்னனைக்
கருணைவள்ளல் வினாவினான்.
தப்பாது, என் மொழி’ என்று தருமன் மா மதலை, முகில்
ஒப்பன திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக,
செப்பாத வாய்மை எலாம் செப்பினான்; செப்பவும், அக்
கைப்பான வல் நெஞ்சக் கடுங் கண்ணான் கண் மறுத்தான்.159.-தருமன் கூறினபேச்சுக்குத் துரியோதனன்
உடன்படாமை.
என் மொழி தப்பாது – யான்சொன்ன இவ்வார்த்தை
தவறாது,என்று-, தருமன் மா மதலை – சிறந்த தருமபுத்திரன், முகில் ஒப்பு
ஆனதிருமேனி உம்பர் பிரான் சான்று ஆக – மேகத்துக்குச் சமானமான
கரியதிருமேனியையுடைய தேவாதிதேவனான கண்ணபிரான் சாட்சியாக,
செப்பாதவாய்மை எலாம் செப்பினான் – (இதுவரையில் எவரும் என்றும்)
சொல்லியிராதஉறுதிவார்த்தைகளையெல்லாம் கூறினான்: செப்பவும் –
அவ்வாறு சொல்லவும்,அ கைப்பு ஆன வல் நெஞ்சம் கடு கண்ணான் –
வெறுப்புக்கு உரிய வலியமனத்தையும் கொடிய தன்மையையுமுடைய
அந்தத் துரியோதனன்,கண்மறுத்தான் – (உடன்படாமல்) தாட்சிணியமின்றித்
தடுத்திட்டான்; (எ – று.)
என்மொழிதப்பாது, அங்ஙனமே நிறைவேற்றுவேன் என்று
கிருஷ்ணசாட்சியாகத் தருமன் பலவாறு பிரமாணங்கூறினானென்பது,
முதல்வாக்கியத்தின் கருத்து. கண்மறுத்தான் –
கண்ணோட்டமில்லாதவனானான்; அன்றி, கண் என்பதை உபசர்க்கமாகக்
கொள்ளினும் அமையும்.
எம் கிளைஞர், எம் துணைவர், எம்பொருட்டால் இறந்து ஏக,
உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர்வாழ்வின் இனிது அன்றோ-
அங்கம் எலாம் வேறுபட, ஆறுபடு குரிதியின்வாய்,
கங்கமும் காகமும் கொத்த, களத்து அவிந்தான் எனும் பெயரே?’160.-துரியோதனன் கூறும்விடை.
எம் கிளைஞர் – எமதுசுற்றத்தார்களும், என் துணைவர் –
எனது தம்பிமார்களும், என்பொருட்டால் – எனக்காக, இறந்துஏக –
மாண்டுஒழிய, உங்கள் அருள்பெற்று இருக்கும் – உங்கள் கருணையைப்
பெற்றுஅதனால்நான் வாழும்,உயிர் வாழ்வின்- உயிர் வாழ்க்கையைக்
காட்டிலும்,- அங்கம் எலாம்வேறு பட – உடம்பினுறுப்புக்களெல்லாம்
தனித்தனிதுணிபடவும், ஆறுபடு குருதியின் வாய் – ஆறாக இரத்தம்
பெருகும்புண்வாயில், கங்கமும் காகமும் கொத்த – கழுகுகளும்
காக்கைகளும்மூக்கினாற் கொத்திக்கிளறவும், களத்து அவிந்தான் –
போர்க்களத்தில்இறந்திட்டான், எனும் பெயர் – என்கிற
பிரசித்தியையடைதல், இனிது அன்றோ- இனிமையானதன்றோ?
எனத் தருமன் வார்த்தைதனக்கு இசையாமல் அவன் ஏக,
அனைத்து வரூதினிகளொடும், ஐவரும் ஆங்கு உடன் ஏக,
கனத்தில் வடிவு உடையோனும், கைலை வடிவு உடையோனும்,
வினைத் தடந் தேர் விதுரனொடும் விரைவுடன் ஏகினர் அம்மா161.-பின்பு பலரும் விரைந்துசெல்லுதல்.
என – என்று சொல்லி, தருமன் வார்த்தை தனக்கு
இசையாமல் – யுதிஷ்டிரனது வார்த்தைக்கு இணங்காமல், இவன் ஏக –
துரியோதனன் செல்ல,-அனைத்து வரூதினிகளொடும் –
எல்லாச்சேனைகளுடனும், ஐவரும்-பஞ்சபாண்டவர்களும், ஆங்கு உடன்
ஏக -அவ்விடத்திற் கூடச்செல்ல, கனத்தில் வடிவு உடையோனும் –
மேகம்போலத்திருமேனியையுடைய கண்ணனும், கைலைவடிவுடையோன்
உம்-வெள்ளிமலையான கைலாசம் போன்ற வெண்ணிறமுடைய பலராமனும்,
வினைதட தேர் விதுரனொடும் – தொழில்முற்றிய பெரிய தேரையுடைய
விதுரனுடன்,விரைவுடன் ஏகினர் – துரிதமாகச்சென்றார்கள்; (எ – று.)-
அம்மா-ஈற்றசை.
‘காதலுறு முன்னோனும்’ என்றும் பாடம். சிறந்த தேர்வீரன்
[அதிரதாதிபன்] என்பதுதோன்ற, ‘வினைத்தடந்தேர் விதுரன்’ என்றார்
கலங்கள் பல இனம் ஏறி, காளிந்திக் கரை ஏறி,
தலங்களில் நல் தலமான சமந்தபஞ்சகம் எய்தி,
வலம் கொள் படைத் தலைவர் எலாம் வளைத்த கடல் என, வாள
விலங்கல் என, சூழ் நிற்ப, வெஞ் சமரம் தொடங்கினரே.162.-யமுனை கடந்து சமந்தபஞ்சகஞ்சேர்ந்து போர்தொடங்கல்.
பல இனம் கலங்கள் ஏறி – பலவகைப்பட்ட
மரக்கலங்களிலேறி, காளிந்திகரைஏறி-யமுனாநதியைக் கடந்து அதன்
அக்கரையில் ஏறி, தலங்களில் நல் தலம் ஆன சமந்தபஞ்சகம் எய்தி –
புண்ணிய ஸ்தலங்களுள் சிறந்த தலமான சியமந்தபஞ்சகத்தை யடைந்து,-
வலம்கொள் படை தலைவர் எலாம்-வலிமைகொண்ட
சேனைத்தலைவர்களெல்லோரும், வளைத்த கடல் என – (பூமியைச்)
சூழ்ந்துள்ள கடல் போலவும், வாளம்விலங்கல்என – (அக்கடலைச்
சூழ்ந்துள்ள) சக்கர வாளகிரிபோலவும், சூழ் நிற்ப – சூழ்ந்து நிற்க, வெம்
சமரம் தொடங்கினர் – (துரியோதனனும் வீமனும்) கொடியபோரைச் செய்யத்
தொடங்கினார்கள்; (எ – று.)
சூழ்நிற்ப என்பதில், சூழ் என்ற பகுதியே சூழ்ந்து என
வினையெச்சப்பொருள்பட்டது: இனி, நில் என்பதைத் துணைவினையெனக்
கொண்டு, சூழ்நிற்ப – சூழ எனினுமாம். கலங்கள் பல இனம் – பெரும்
படகுசிறுபடகு தோணிமுதலியன. காளிந்தி – களிந்த மென்னும்
மலையினின்றுஉண்டாவது எனக் காரணப்பொருள்படும். வலம் –
வெற்றியுமாம். படைத்தலைவர் – திட்டத்துய்மனாதியர் – சக்கரவாளம்
என்பது, வாள மெனமுதற்குறையாய்நின்றது.
பூங் கவசத்துள் புகுந்து, பூண் அனைத்தும் திருத்தி, மணி
ஓங்கல்இவை இரண்டு உயிர் பெற்று உடற்றுகின்றது’ என உரைப்ப,
வாங்கிய தண்டமும், தோளும், மலர்க் கரமும் வலி கூர,
ஆங்கு உலகு செவிடுபட, அடல் அரிநாதமும் செய்தார்.163.-இருவரும் போர்க்குச்சித்தராய்ச் சிங்கநாதஞ் செய்தல்.
பூங்கவனத்துள் புகுந்து – (அங்குள்ளதொரு) பூஞ்சோலை
யினுள்ளே சென்று, பூண் அனைத்தும் திருத்தி – (தந்தமது) ஆபரணங்களை
யெல்லாம் ஒழுங்குபட அமைத்துக்கொண்டு, மணி ஓங்கல் இவை இரண்டு
உயிர்பெற்று உடற்றுகின்றது என உரைப்ப – அழகியமலைகளிரண்டு
உயிர்பெற்றுப் போர்செய்கிற விதமென்று உவமைகூறும்படி, வாங்கிய
தண்டமும் தோளும் மலர் கரமும் வலி கூர – கைக்கொண்ட கதாயுதமும்
தோள்களும் தாமரைமலர்போன்ற கைகளும் வலிமைமிக, ஆங்கு –
அப்பொழுது, (அவ்விருவரும்), உலகு செவிடுபட – உலகமுழுதும்
(ஒலிமிகுதியைப் பொறுக்கமாட்டாமற்) செவிடாம்படி, அடல்அரி நாதமும்
செய்தார் – வலிமைக்குரிய சிங்கநாதத்தையுஞ் செய்தார்கள்; (எ – று.)
பூண்திருத்துதல், போர்செய்கையில் தடையாகாமைப் பொருட்டென்க.
பூங்கவனம் – பூங்காவன மென்பதன் குறுக்கல்.
கந்த நறு மலர்க் கூந்தல் காந்தாரி புதல்வனை அக்
குந்தி மகன் முகம் நோக்கி, கொடுஞ் சொற்கள் சில சொல்வான்:
‘கந்தருவர் அன்று உன்னைக் கட்டிய தோள் வலி கொண்டோ,
சிந்தைதனின் வலி கொண்டோ, செருச் செய நீ புகுந்தாயே?164.-இதுவும், அடுத்த கவியும்- வீமனது வீரவாதம்.
கந்தம் – இயற்கைமணமுள்ளதும், நறு மலர் – பரிமளமுள்ள
பூக்களைச் சூடியதுமான, கூந்தல் – தலைமயிரையுடைய, காந்தாரி –
காந்தாரியினது, புதல்வனை – புத்திரனான துரியோதனனை, அ குந்திமகன்-
குந்திதேவியின்குமாரனான அவ்வீமன், முகம் நோக்கி – முகத்தைப் பார்த்து,
கொடு சொற்கள் சில சொல்வான் – கொடிய சிலவார்த்தைகளைக் கூறுவான்;
(அவையாவையெனில்),-அன்று – முன்னொரு சமயத்தில், உன்னை-, கந்தருவர்
– (சித்திரசேனன் முதலிய கந்தர்வர்கள், கட்டிய கயிறுகொண்டு கட்டின தோள்
வலி கொண்டோ – தோள்களின் வலிமையைக் கொண்டுதானோ, (அன்றி),
சிந்தைதனின் வலி கொண்டோ – மனத்திலுள்ள துணிவு கொண்டுதானோ,
நீ செரு செய புகுந்தாய் – நீ (என்னோடு) போர்செய்யத் தொடங்கினாய்?
(எ – று.)
எம்மால் எளிதில் வெல்லப்பட்ட சித்திரசேனன் முதலியோரால்
எளிதிற்கட்டப்பட்ட தோள்களையுடையை யாதலால், நீ என்னோடு போர்
செய்தற்குஏற்ற புஜபல முடையாயல்லை; ஆராய்ச்சியில்லாத உன்மனத்தில்
விடாப்பிடியாகக்கொண்டுள்ள துணிவினாலேயே போர்தொடங்குகின்றாய்
போலுமென இகழ்ந்தவாறு. காந்தாரி – காந்தார தேசத்து அரசன் மகள்.
மூன்றாமடியிற் குறித்த கதை.-பாண்டவர் வனவாசஞ்செய்கையில்
ஒருநாள், துரியோதனன் தன்பெருமையைக் காட்டிப் பாண்டவரை
அழுங்கச்செய்யவேண்டு மென்று தீயசிந்தனை கொண்டு வெகு
ஆடம்பரத்துடனே குடும்பத்தோடுஞ் சென்று அவர்கள்வசிக்கிற இடத்துக்கு
அருகில் ஒருகுளத்தின்கரையிலே தங்கி உண்ணுதல் பூசுதல் ஆடல்
பாடல்களைநடப்பித்தல் முதலியபலவிளையாட்டுக்களைச்செய்துகொண்டு
களித்திருந்தபோதுஇந்திரனேவலால் சித்திரசேனனென்னுங் கந்தருவராசன்
மற்றும்பலதேவசாதியருடனே வந்து துரியோதனனைக் கயிற்றாற்கட்டி
வானத்தில்தூக்கிக்கொண்டு போகப் பிரயத்தனப்பட, அப்பொழுது கர்ணன்
முதலாயினார்எதிர்த்துப்பொருது தோற்றுஓட, பின்பு துரியோதனனது
பரிதாபமானநிலைமையை அவனது பரிவாரத்தால் அறிந்த தருமபுத்திரனது
கட்டளையால்வீமன் அருச்சுனனோடு சென்று கந்தருவரைவென்று
துரியோதனனை மீடடு்க்கட்டவிழ்த்து விடுவித்தனன் என்பது
ஆரணியபருவத்து வரலாறு.
இடிப்பதும் இன்று இரு கதையும்; என் கதையால் இடியுண்டு,
துடிப்பதும், இன்று உன் உடலம், உயிர் துறக்கம் குடியேற;
முடிப்பதும் இன்று, அழல்-பிறந்தாள் முகில்ஓதி; முகில் பொழி நீர்
குடிப்பதும் இன்று, ஒருவேன் நின் குருதி நீர் குடித்தாலே.’
இரு கதையும் – (நம் இருவரது கையிலுள்ள) கதாயுதங்கள்
இரண்டும், இடிப்பதும் – தாக்குவதும், இன்று – இன்றைக்கே: என் கதையால்
இடியுண்டு – எனதுகதையினால் தாக்கப்பட்டு, உயிர் துறக்கம் குடி ஏற –
(உனது) உயிர் வீரசுவர்க்கத்தில் ஏறிச்செல்ல, உன் உடலம் துடிப்பதும் –
உனதுஉடம்பு துடிப்பதும், இன்று – இன்றைக்கே; அழல் பிறந்தாள் –
யாகாக்கினியினின்று தோன்றியவளான திரௌபதி, முகில் ஓதி –
மேகம்போலக்கரிய கூந்தலை, முடிப்பதும் – முடித்துக்கொள்வதும், இன்று –
இன்றைக்கே; ஒருவேன் – ஒப்பற்றவனான நான், நின் குருதி நீர் குடித்தாலே-
உனது இரத்தப்பெருக்கைக் குடித்தபின்பே, முகில் பொழி நீர் குடிப்பதும் –
மேகம் பொழிகிற தண்ணீரைக் குடிப்பதும், இன்று – இன்றைக்கே; (எ – று.)
திரௌபதியை ‘அழற்பிறந்தாள்’ என்ற விவரம்:-
அங்கிவேசமுனிவனிடத்தில் துரோணாசாரியனுடன் வில்வித்தையைக் கற்று
வந்தபொழுது ‘எனக்கு இராச்சியங்கிடைத்தபின் பாதி உனக்குப் பங்கிட்டுக்
கொடுப்பேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தஞ்செய்திருந்த
பாஞ்சாலராசனாகிய துருபதன், பின்பு ஒருகாலத்தில் அவன் வந்து
தன்குழந்தைக்குப் பாலுக்காகப் பசுவேண்டுமென்று கேட்டபொழுது,
முகமறியாதவன்போல ‘நீ யார்?’ என்று வினவிச் சில
பரிகாசவார்த்தைகளைச் சொல்லிச் சபையிற்பங்கப்படுத்த, அப்பொழுது,
துரோணன் ‘என் மாணாக்கனாகிய இராசகுமாரனைக்கொண்டு உன்னை
வென்று கட்டிக்கொணரச்செய்து உன் அரசையுங் கைக்கொள்வேன்’ என்று
சபதஞ்செய்துவந்து, பின் அங்ஙனமே அருச்சுனனைக்கொண்டு பங்கப்படுத்தி
அப்பிரதிஜ்ஞையை நிறைவேற்றிவிட துருபதன் துரோணன்மீது
மிகக்கறுக்கொண்டு, அவனைக்கொல்லும்பொருட்டு ஒரு புத்திரனும்,
அருச்சுனனது பலபராக்கிரமங்களைக்கண்டு மகிழ்ந்து அவனுக்கு
மணஞ்செய்துகொடுக்கும்பொருட்டு ஒரு புத்திரியும் உதித்தல்
வேண்டுமென்றுபுத்திரகாமயாகஞ்செய்விக்க, அவ்வோமத்தீயினின்று
திருஷ்டத்யும்நனும்திரௌபதியும் தோன்றினரென்பதாம்.
இனி விடு மேன்மேல் உரைக்கும் வாசகம்; எனது உயிர் நீ கோறல்,
இற்றை நாளிடை,
உனது உயிர் வான் ஏற விட்டு, நான் உலகு ஒரு குடை மா நீழல்
வைத்தலே துணிவு;
அனிகமும், மாயோன் நடத்து தேருடை அநுசனும், வாள் ஆண்மை
மற்றை மூவரும்
நினைவுடனே காண, வச்ர ஆயுதம் நிகர் கதை, வீமா! எடுத்தி நீ’ என,166.-துரியோதனன் வீமனைப்போர்தொடங் கென்றல்.
இது முதல் மூன்று கவிகள் – குளகம்.
(இ -ள்.) ‘வீமா – வீமனே! இனி – இனிமேல், மேல் மேல்
உரைக்கும்வாசகம் – மிகுதியாகச்சொல்லும் வீரவாதங்களை, விடு – விட்டு
விடு;இற்றை நாளிடை – இன்றைத்தினத்திலே, எனது உயிர் நீ கோறல் –
என்னுடைய உயிரை நீ கொல்லுதல், (அல்லது), நான் -, உனது உயிர் வான்
ஏற விட்டு – உன்னுடையஉயிரை வீரசுவர்க்கத்தின்மீது ஏறிச்செல்லுமாறு
அனுப்பிவிட்டு [உன்னைக்கொன்று என்றபடி], உலகு – பூலோக
முழுவதையும்,ஒரு குடை மாநீழல் – (எனது) ஒற்றைவெண்கொற்றக்குடையின்
பெரியநிழலில்,வைத்தலே – வைத்தல் (ஆகிய இரண்டிலொன்று), துணிவு –
நிச்சயம்;அனிகமும் – (உனது) சேனையும், மாயோன் நடத்து தேர் உடை
அநுசனும் -மாயவனான கண்ணனாற் செலுத்தப்படுந் தேரையுடைய உன்
தம்பியானஅருச்சுனனும், வாள் ஆண்மை அற்ற மூவரும் – ஆயுதத்தேர்ச்சியில்லாத(தருமன் நகுலன் சகதேவன் ஆகிய
உன்னுடன்பிறந்தவர்) மற்றை மூன்றுபேரும், நினைவுடனே காண –
(யாவர்வெல்வரோ வென்னுஞ்) சிந்தையுடனேபார்க்க, வச்ர ஆயுதம்
நிகர்கதைநீ எடுத்தி – வச்சிராயுதத்தையொத்தகதாயுதத்தை நீ
(போர்செய்தற்கு) எடுத்துக்கொள்வாய்,’ என – என்று(துரியோதனன்)
சொல்ல; (எ – று.)
மூன்றாமடியில், துரியோதனன் பஞ்சபாண்டவருள் வீமனையொழிய
மற்றையோரை ஒருபொருளாகச் சிறிதும்மதியாமை நன்குவெளியாம்; இது
பற்றியே, வீமனை்கொன்றமாத்திரத்தால்பிறரையழித்துஅரசுரிமை முழுவதும்
பெறுதல் எளிதென்பதுபட இரண்டாமடியிற் கூறியது. உன் உடன்பிறந்தார்
நால்வருள் அருச்சுனனிடத்து மதிக்கப்படுகிற சிறிது பலபராக்கிரமமும்
அவனுக்கு இயல்பாய் அமைந்ததன்று; கண்ணன் தேர் செலுத்துதலாலாகிய
செயற்கை யாற்றலேயாம். அந்தக்கண்ணன்தானும் நேர்படநின்று
வெற்றிகாட்டுந் திறமுடையானல்லன்; மாயையை மேற்கொண்டேதொழில்
செய்யுந் தரமுடையா னென்று பழிப்பான், ‘மாயோனடத்து தேருடையநுசன்’
என்றான்.
உலகுஒருகுடைமாநீழல் வைத்தல் – பூமிமுழுவதையுந் தனியே
அரசாளுதல். வாளாண்மை – ஆயுதங்களாற் செய்யுந் திறமை; வாள் –
இங்கே, ஆயுதப்பொது. மூவர் – தொகைக்குறிப்பு.
இதுமுதற் பன்னிரண்டு கவிகள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
கருவிளச்சீர்களும், இரண்டாஞ்சீரும் ஆறாஞ்சீரும் தேமாச்சீர்களும்,
மூன்றாஞ்சீரும், ஏழாஞ்சீரும் புளிமாச்சீர்களும், நான்காஞ்சீரும்,
எட்டாஞ்சீரும்கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட
எண்சீராசிரியசந்தவிருத்தங்கள்.
தனதனதானா தனத்த தானன தனதன தானா தனத்த தானன
என்பது,இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம்.
நடை ஒழியாதோன் விறல் குமாரனும், நயனம் இலாதோன் முதல்
குமாரனும்,
அடலொடு கார் வான் இடிக்குமாறு என அதிர்வு உறவே கூறி, மத்த
வாரணம்,
விடை, அரிமாஏறு, என ப்ரதாபமும், விசயமும் மேன்மேல் மிகுத்து,
மேலிடு
கடையுகநாள் வாயு ஒத்து நீடிய கதை கெழு போர் ஆதரித்து,
மூளவே,167.-இருவரும் போர்தொடங்கல்.
நடை ஒழியாதோன் – (எப்பொழுதும்) சஞ்சரித்தல்
இடையறாதவனான வாயுதேவனது, விறல் குமாரனும் – வெற்றியையுடைய
மகனான வீமசேனனும், நயனம் இலாதோன் – கண்களில்லாதவனான
திருதராட்டிரனது, முதல் குமாரனும் – முதல்மகனான துரியோதனனும்,-
அடலொடு கார் வான் இடிக்கும் ஆறு என – வலிமையோடு
கார்காலத்துமேகம் இடியிடிக்கும் விதம்போல, அதிர்வு உற –
அதிர்ச்சியுண்டாக, ஓடி – விரைந்து வந்து நெருங்கி,-மத்தம் வாரணம்
(என) -மதயானைகள்போலவும், விடை (என) – விருஷபங்கள் போலவும்,
அரி மாஏறு என – ஆண்சிங்கங்கள் போலவும், ப்ரதாபமும் விசயமும்
மேல் மேல்மிகுத்து – பராக்கிரமமும் வெற்றியும் மேன்மேல்
அதிகமாகப்பெற்று,-யுகம்கடை நாள் மேல் இடுவாயு ஒத்து –
கற்பாந்தகாலத்தில் மிகுதியாக வீசுகிறஊழிப்பெருங்காற்றைப் போன்று [மிக
உக்கிரமாய்], நீடிய கதை கெழு போர்ஆதரித்து மூள – நீண்ட
கதாயுதங்களைக்கொண்டு செய்யும் போரைவிரும்பிமுயல; (எ – று.)
மத்தவாரணம், ப்ரதாபம் – வடசொற்கள்.
ஒரு தமனீயாசலத்தினோடு எதிர் ஒரு முழு மா நீல வெற்பு
நீடு அமர்
புரிவதுபோல், மேல் விசைத்து, மீமிசை பொறி எழ மாறாமல்
எற்றி, வீரர்கள்
இருவரும், ஆகாயம் முட்ட, நாகர்கள் இறைகொள, நால் நாலு
திக்கு நாகரும்
வெருவர, நீள் நாகர் உட்க, வீசினர்- விசையுடனே போர்
விறற் கதாயுதம்.168.-இனி ஐந்துகவிகள் -இருவருஞ் செய்யும்
கதைப்போர்த்திறம்.
ஒரு தமனீய அசலத்தினோடு – ஒரு பொன்மலையுடனே,
எதிர்- எதிரில், ஒரு முழுமா நீலம் வெற்பு – பெரியசிறந்த
நீலரத்தினமயமானமற்றொருமலை, நீடு அமர் புரிவது போல் –
மிக்கபோரைச் செய்வது போல,-மாறாமல் ஒத்த வீரர்கள் இருவரும் –
மாறுபடாமல் (ஒருவரையொருவர்வலிமையால்) ஒத்த வீரர்களாகிய (வீமன்
துரியோதனன் என்ற) இரண்டுபேரும், போர் விறல் கதா ஆயுதம் –
போருக்குரிய வலிமையையுடைய தங்கள்கதாயுதங்களை, மீமிசை பொறிஎழ
மேல்விசைத்து – ஆகாயத்தின்மேல்நெருப்புப் பொறி பறக்கும்படி
மேலெடுத்து விசையாகச்சுற்றி,-ஆகாயம் முட்ட -மேலுலகத்தைத்
தாக்கும்படியாகவும், நாகர்கள் இறை கொள – (அங்குள்ள)தேவர்கள்
சிதறும்படியாகவும், நால் நாலுதிக்கு நாகரும் வெருவர – எட்டுத்
திசையிலுள்ள (திக்குப்பாலகர்களாகிய) தேவர்களும் அஞ்சும்படியாகவும், நீள்
நாகர் உட்க – நீண்ட பாதாளலோகத்தார் அஞ்சும்படியாகவும், விசையுடனே
வீசினர் – வேகத்தோடு சுழற்றினார்கள்; (எ – று.)
‘ஒருமணிநீளாசலத்தினோடு’ என்றுபாடமோதி, நீண்ட ஒரு
மாணிக்கமலையினோடு என்று உரைப்பாருமுளர்; அப்பொழுது,
அசலமென்பதுஆசலமென நீட்டல் விகாரம்பெற்றதென்க.
‘ஒருமணிநீலாசலத்தினோடு’என்றும் பாடம் வழங்குகின்றது. முழுநீலம் –
உத்தம இலக்கணம் முழுவதும்அமைந்த நீலரத்தினம். நீலமென்பது
நீலநிறமுள்ள இரத்தினத்தைக்குறிக்கும்போது, பண்பாகுபெயரென்பது,
தமிழர்கொள்கை. வடநூலின்படி அதுஆகுபெயரன்றி, உரியபெயரேயாம்.
இருவரும் பதினாயிரம்யானைபலங்கொண்ட குருகுலத்து அரசர்களாதலால்,
‘மாறாமலொத்தவீரர்கள்’என்றார். நானாலு – உம்மைத்தொகை; நாலும்
நாலும். அஷ்டதிக்பாலகர் -கிழக்குமுதலாக முறையே, இந்திரன், அக்கினி,
யமன், நிருருதி, வருணன், வாயு,குபேரன், ஈசானன் எனக் காண்க
உகவையினாலே சிரிப்பர்; நீள் சினம் உறுதலினாலே மடிப்பர்,
வாய் மலர்;
புகை எழவே தீ விழிப்பர்; மார்பொடு புனை கிரி போலே தடிப்பர்,
தோள் இணை;
இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர்;
வட்டம் ஆகுவர்;
முகடு உற மீதே குதிப்பர்; பார்மகள் முதுகு இற நேரே
குதிப்பர், மீளவே.
(இரண்டுபேரும்), உகவையினாலே – (போர்செய்தலிலுள்ள)
உற்சாகத்தினாலே, சிரிப்பர் – சிரிப்பார்கள்; நீள் சினம் உறுதலினாலே –
மிக்ககோபம்பொருந்துதலினாலே, வாய் மலர் மடிப்பர் – தாமரைமலர்போன்ற
தங்கள் வாயிதழ்களை மடிப்பார்கள்; புகை ஏழ – புகைகிளம்பும்படி, தீ
விழிப்பர் – நெருப்புப் புறப்பட உக்கிரமாகக்கண்விழித்துப் பார்ப்பார்கள்;
புனை கிரிபோலே – அழகிய மலைகள் போலுள்ள, மார்பொடு – மார்பும்,
தோள் இணை – இரண்டு தோள்களும், தடிப்பர் – பருத்துப் பூரிப்பார்கள்;
இகல் புரி நூலோடு – போர் செய்யும் வகையைக் கூறுகிற நூல்களின்படி,
கற்ற – தாம் பயின்ற, சாரிகை – சஞ்சாரக்கிரமத்தால், இடம் வலமே போவர்
– இடசாரியும் வலசாரியுமாகச் செல்வார்கள்; வட்டம் ஆகுவர் -மண்டலமாகச்
சுழன்று வருவார்கள்; முகடு உற – ஆகாயமுகட்டையளாவ, மீதே குதிப்பர் –
மேலெழும்புவார்கள்; பார் மகள் முதுகு உற – பூமிதேவியினது முதுகு
வருந்தும்படி, மீள – மீண்டும், நேரே குதிப்பர் – நேராகவே குதிப்பார்கள்;
(எ – று.)
வாய்க்குத்தாமரைமலர், செம்மைமென்மை யழகுகளால் உவமம். இனி,
மலர் – ஆம்பல்மலருமாம்; அதனையும் வாய்க்கு உவமைகூறுதலுண்டு.
மார்பொடு தோளிணை தடுப்பர் – “உயர்திணைதொடர்ந்த
பொருள்முதலாறும்,அதனொடுசார்த்தின் அத்திணை முடிபின” என்றபடி
உயர்திணையைச் சார்ந்தஅஃறிணையாகிய சினைப்பெயர்
அவ்வுயர்திணைமுடிபையேகொண்டதிணைவழுவமைதி. சாரிகை –
நடைவிகற்பம். வலசாரி – வலப்புறமாகச்செல்லுதல். இடசாரி –
இடப்புறமாகச் செல்லுதல், வட்டம் – மண்டலமாகச்சுற்றிவருதல்
ஒரு கையினாலே சுழற்றி, வான் முகடு உடைபட மேலே கிளப்பி,
நீள் கதை,
இரு நில மீதே மறித்து வீழு முன், எறி கையினாலே தரிப்பர்;
மேல் அவர்
விரைவுடனே தாளம் ஒத்தி ஓடுவர்; விசையுடனே கால் ஒதுக்கி மீளுவர்;
பரிதிகள் போலே விருத்தம்
ஆம் முறை பவுரி கொளா வீசி நிற்பர், வீரரே.
வீரர் – அவ்விரண்டு வீரர்களும், நீள் கதை –
நீண்டகதாயுதங்களை, ஒரு கையினாலே சுழற்றி – ஒருகையாற் சுற்றி, வான்
முகடு உடைபட மேலே கிளப்பி – அண்டகோளத்தின் மேல்முகடு
உடைபடும்படி அதனை மேலேவீசி, இரு நிலம் மீதே மறித்து வீழுமுன் –
பெரிய தரையின்மேல் மீண்டு விழுவதற்குமுன்பே, இரு கையினாலே
சார்பொடுதரிப்பர் – (தமது) இரண்டு கைகளாலும் ஆதாரமாக
ஏந்திக்கொள்வார்கள்;விரைவுடனே – வேகத்தோடு, தாளம் ஒத்தி –
தாளவடைவு போட்டுக்கொண்டு,ஓடுவர் – விலகியோடுவார்கள்:
விசையுடனே – வேகத்துடனே, கால் ஒதுக்கி -கால்களை
ஒதுங்கவைத்துக்கொண்டு, மீளுவர் – திரும்புவார்கள்; பரிதிகள்போலே –
பரிவேஷங்கள் போல, விருத்தம் ஆம் முறை -வட்டமாகிய
நிலைமையுண்டாம்படி, பவுரிகொளா – சுழற்சியைக்கொண்டு, வீசி
நிற்பர் – (கதைகளைச்) சுழற்றிக்கொண்டு நிற்பார்கள்; (எ – று.)
பவுரிகொள்ளுதல் – தாம்சுழலுதல். பரிதி – சூரியனைச்சூழ்ந்து
அருகில்தோன்றும் வட்டம்; ஊர்கோளெனப்படும். சுழன்று
கொண்டேகதையைச்சுழற்றும்போது கதைச்சுழற்சியின் வட்டத்துக்குப்
பரிவேஷமும், சுழற்றும்வீரனுக்குச் சூரியனும் உவமையெனக் காண்க.
பரிதி – சூரியமண்டலமுமாம். இரண்டாமடியில் ‘எறிகையினாலே
தரிப்பர்மேலவர்’ என்றும் பாடம்.
மலர் அடி, தாள், ஊரு, வட்டம் ஆர் தனம், வயிறு, மனோராக பற்பம்,
மார்பொடு, குல கிரி நேர்
தோள், கழுத்து, நீடு அணல், குறுநகை, கூர் வாய், கதுப்பு, வார் குழை,
இலகு புரூர் பாகம், நெற்றி, ஆனனம், என அடைவே கூறு உறுப்பு
யாவையும்
உலைவுற, மேன்மேல் மிகுத்து, மூளையும் உதிரமும் மாறாது உகுக்க,
மோதியே,
மலர் அடி – தாமரைமலர்போன்ற பாதங்களும், தாள் –
கால்களும், ஊரு – துடைகளும், வட்டம்ஆர்தனம் – வட்டவடிவாயமைந்த
தனப்பிரதேசமும், வயிறு-வயிறும், மனோகர பற்பம் – அழகியதாகவுள்ள
நாபீகலமமும், மார்பொடு – மார்பும், குல கிரி நேர் தோள் –
குலபருவதங்களையொத்த புயங்களும், கழுத்து – கழுத்தும், நீடு அணல் –
நீண்டகீழ்வாயும், குறுநகை கூர் வாய் – புன்சிரிப்பு மிக்க வாயும், கதுப்பு –
கன்னமும், வார்குழை -தொங்குகிற குண்டலத்தையடைய காதுகளும்,
இலகுபுரூர் பாகம் விளங்குகிறபுருவமும், நெற்றி – நெற்றியும், ஆனனம் –
முகமும், என – என்று, அடைவேகூறு – முறையே சொல்லப்பட்ட, உறுப்பு
யாவையும் – உறுப்புக்களெல்லாம்,உலைவு உற – சிதைவடையவும், மேல்
மேல் மிகுத்தமூளையும் – மேலும்மேலும் அதிகப்பட்டமூளைநிணமும்,
உதிரமும் – இரத்தமும், மாறாது உகுக்க -இடையறாது சிந்தவும், மோதி –
(கதாயுதத்தால்) தாக்கி;
‘இருவரும் போர்செய்தார்கள்’ எனச் சொல் வருவித்த முடிக்க.
மனோகரம் – (அழகினால்) காண்பவரின் மனத்தைக் கவர்வது, பற்பம் –
தாமரைமலர். குலகிரி – சிறந்தமலைகள்; அவை – இமயம், மந்தரம்,
நிஷதம்,விந்தியம், ஹேமகூடம், கைலை, நீலம், கந்தமாதநம் என்பன.
வார்குழை -அடையடுத்த தானியாகுபெயராகவாவது,
வினைத்தொகையன்மொழியாகவாவதுகாதைக்குறிக்கும். மூன்றாமடியில்
‘இலகுபுரூர நனெற்றி’ என்று சில பிரதியிற்காணப்படுகிறது
கதை கதையோடே அடிக்கும் ஓதைகொல்’ கதை உடையோர்தாம்
நகைக்கும் ஓதைகொல்’
எதிர் மொழி ஓவாது இசைக்கும் ஓதைகொல்’ இணை உடலூடே
இடிக்கும் ஓதைகொல்’
பத யுகம் மாறாடி வைக்கும் ஓதைகொல்’ பணை பல சூழ்போத
எற்றும் ஓதைகொல்’-
திதியொடு வானூடு செற்றும் வானவர் செவி செவிடு ஆமாறு
அதிர்க்கும் ஓதையே!
திதியொடு – நிலையாக, வானூடு – மேலுலகில், செற்றும் –
நிறைந்துள்ள, வானவர்-தேவர்களுடைய, செவி – காதுகள், செவிடு ஆம்
ஆறு- செவிடுபடும்படி, அதிர்க்கும் – ஆரவாரிக்கிற, ஓதை – ஓசை,-கதை
கதையோடே அடிக்கும் ஓதைகொல் – ஒருகதை மற்றொரு கதையோடு
தாக்குதலா லாகும் ஓசையோ, கதை உடையோர் தாம் நகைக்கும்
ஓதைகொல் -கதையையுடையவராகிய இருவீரரும் சிரித்தலாலாகும்
ஓசையோ? ஓவாதுஎதிர்மொழி இசைக்கும் ஓதைகொல் – இடைவிடாமல்
(ஒருவர்க்கொருவர்)எதிரிலே வீரவாதமான வார்த்தைகளைக் கூறுதலாலாகும்
ஓசையோ? இணைஉடலூடே இடிக்கும் ஓதைகொல் – இரண்டு
உடம்புகளிலும் தாக்குதலினாலாகியஓசையோ? பத யுகம் மாறாடி வைக்கும்
ஓதைகொல் – இரண்டு கால்களையும்ஒன்றுமாறியொன்று அடைவுபட
வைத்தலாலாகும் ஓசையோ? பலபணைசூழ்போத எற்றும் ஓதைகொல் –
பலவகை யுத்த வாத்தியங்கள் சுற்றிலும்அடிக்கப்படுதலாலாகிய ஓசையோ?
(எ – று.)
இங்ஙனம் ஐயவணிபட விகற்பித்துக் கூறினராயினும், ‘கதை
கதையோடேயடிக்கு மோதை’ முதலிய ஓசைகளெல்லாம் அங்குத் தேவர்
செவிகளும்செவிடாம்படி மிக்கு முழங்கினவென்றே கருத்துக் கொள்க.
இங்குக்கூறியநகை, வீரத்து எழுந்த வெகுளி நகை. ‘சூழ் போதமொத்தும்’
என்றும் பாடம்.
அரி வய மாஏறு உயர்த்த சூரனும், அழல் விட நாகேறு
உயர்த்த வீரனும்,
இருவருமே வாலி சுக்கிரீவர்கள் என அமர் மோதா இளைத்த
காலையில்,
வரை முடி மேனாள் ஒடித்த காளைதன் மதலையை, ஏழ்
பார் படைத்த கோமகன்
உரை தடுமாறா, உயிர்த்து, ‘நீ உனது உயிர்நிலை கூறாய்,
எனக்கு’ எனா முனம்173.-துரியோதனன் வீமனை’உனது உயிர்நிலை கூறு’
என்றல்.
இதுவும், அடுத்த கவியும் – குளகம்.
(இ -ள்.) வய – வலிமையையுடைய, அரிமா ஏறு – ஆண்
சிங்கவடிவமெழுதிய கொடியை, உயர்த்த – உயரநாட்டியுள்ள, சூரனும் –
வீரனான வீமனும், அழல் – நெருப்புப்போலக் கொடிய, விடம் –
விஷத்தையுடைய, நாக ஏறு – சிறந்த பாம்பின் வடிவமெழுதிய கொடியை,
உயர்த்த – உயரநாட்டியுள்ள, வீரனும் – வீரனான துரியோதனனும்,
இருவரும்- ஆகிய இரண்டு பேரும், வாலி சுக்கிரீவர்கள் என – வாலியும்
சுக்கிரீவனும்போல, அமர்மோதா – தாக்கிப் போர் செய்து, இளைத்த
காலையில் – இளைப்படைந்த சமயத்தில், ஏழ் பார் அடர்த்த கோமகன் –
ஏழுதீவுகளாகவுள்ள பூமி முழுதையும் வென்ற அரசனான துரியோதனன்,
உரைதடுமாறா – சொற்குழறி, உயிர்த்து – பெருமூச்சுவிட்டு, வரை முடி
மேல்நாள்ஒடித்தகாளைதன் மதலையை – மேருமலைச் சிகரத்தை
முன்பொருகாலத்தில்முறித்தெறிந்தவீரனான வாயுவினது குமாரனாகிய
வீமனை நோக்கி, உனதுஉயிர்நிலை நீ எனக்கு கூறாய் எனாமுனம்-
‘உன்னுடைய உயிர் பிரதானமாகநிற்குமிடமான மர்மஸ்தாநத்தை நீஎனக்குச்
சொல்வாய்’ என்று வினாவுமுன்னே,(எ – று.)- ‘வீமன் சிரத்திலேயென
வுரைத்தபோது’ என்று வருங்கவியோடுதொடரும்.
துரியோதனன் வினாவியவுடனே சிறிதுங் காலதாமதஞ் செய்யாமல்
வீமன்விடை கூறினானென்பதை நன்குவிளக்குதற்கு ‘என்று வினவாத
முன்னே’என்றார். இப்படிகாரியவிரைவைக் காட்டும் பொருட்டுக்காரணத்தைப்
பின்னும்காரியத்தை முன்னும் நிகழ்ந்தனவாக, காரணகாரியங்களின்
முன்பின்நிகழ்தலாகிய முறையில் முறைபிறழ்வை யேற்றிக்கூறுதல்,
மிகையுயர்வுநவிற்சியணியாம். உயிர்நிலை – எந்த இடத்தில் தாக்குண்டால்
உயிர் நிலைகுலையுமோ அப்படிப்பட்ட முக்கியத்தான மென்றபடி,
உரைதடுமாறியதும், உயிர்த்ததும், போரிளைப்பால், நாகேறு – நாகவேறு
என்பதன்தொகுத்தல் வாலிசுக்கிரீவர்- பன்மைவிகுதிபெற்ற
உயர்திணையும்மைத்தொகை. வாலி சுக்கிரீவர் அமர்மோதியவரலாறு
25-ஆங் கவியிலும், வரைமுடியொடித்த வரலாறு 72- ஆங் கவியிலும்
கூறப்பட்டன.
இரு வினை கூறா அறத்தின் மா மகன் இளவல், விதாதாவொடு
ஒத்த கேள்வியன்,
உரை தவறாதான் மறைக்குமோ’ ‘எனது உயிர், துணைவா! கேள்,
சிரத்திலே’ என
அரி மகவு ஆனோன் உரைத்தபோது, இவன் அவன் முடிமேலே
புடைக்க, வீமனும்
உரும் உறும் மா மேரு வெற்புஅதுஆம் என உரை தடுமாறா,
உழற்றினான்அரோ.174.-வீமன் உயிர்நிலைகூறஅதில் துரியோதனன் தாக்கல்.
இரு வினை கூறா – மாறுபட்ட தொழிலை வாயாற்
சொல்லுதலுமில்லாத, அறத்தின் மா மகன் – சிறந்த தருமபுத்திரனது,
இளவல் -தம்பியும், விதாதாவொடு ஒத்த கேள்வியன் – பிரமதேவனுக்குச்
சமமானநூற்கேள்விகளை யுடையவனும், உரை தவறாதான் –
வாய்மைதவறாதவனும்ஆகிய, அரி மகவு ஆனோன் – வாயுகுமாரனான
வீமன், மறைக்குமோ -(உண்மையை) மறைப்பானோ? (மறையான்; ஆதலால்),
‘துணைவா -உடன்பிறந்தவனே! கேள் – (யான் சொல்லுகிறேன்) கேட்பாயாக;
எனது உயிர்சிரத்திலே – என்னுடைய உயிர்நிலை எனது தலையிலேயாம்,’
என-என்று,உரைத்தபோது – சொன்னபொழுது, இவன் – துரியோதனன்,
அவன்முடிமேலே புடைக்க – வீமனது சிரசின்மேல் தாக்க, (அதனால்),
வீமனும்-,உரும் உறும்மா மேரு வெற்பு அது ஆம் என – இடிவிழப்பெற்ற
மகாமேருமலைபோல, உரை தடுமாறா உழற்றினான் – சொற்குழறிச் சுழன்று
விழுந்தான்; (எ -று.)-அரோ-ஈற்றசை.
இருவினை – ‘மனம்வேறு சொல்வேறு மன்னுதொழில்வேறு’ ஆனவை.
விதாதா-விதிக்குங்கடவுள். கேள்வி-கேட்டற்கு உரிய நூற்பொருள்களை
அறிந்தார்கூறக் கேட்டல், தருமோபதேசம் பெறுதல்; இது கல்வியினும்
மேம்பட்டதாதலின், தலைமையாக எடுத்துக் கூறப்பட்டது. ஆதிகாலத்தில்
திருமால் அன்னவடிவங்கொண்டு அருமறைகளை உபதேசிக்க, பிரமன்
கேட்டறிந்த மாட்சிமையுடையானாதலின், அவனை நூற்கேள்விக்கு
உவமையெடுத்துக் கூறினரென்க. வீமன் வாய்மை தவறாதவனென்பதை,
“தெம்முனாயினுஞ் செவ்விமென்தேகமாமகளிர், தம்முனாயினுநாத்தவறாவடல்
வீமன்” என்று கீழ்ப் புட்பயாத்திரைச் சருக்கத்துக் கூறியதனாலும் உணர்க.
வீமன் துரியோதனனுக்கு உள்ளபடி உயிர்நிலையைக் கூறினானென்ற
சிறப்புப்பொருளை ‘இருவினை கூறாவறத்தின்மாமகனிளவல்
விதாதாவொடொத்தகேள்வியன் உரைதவறாதான் மறைக்குமோ’ என்ற
பொதுப்பொருள்கொண்டு விளங்கவைத்ததனால் வேற்றுப்பொருள்
வைப்பணி. உள்ளத்திலொன்றும் உதட்டிலொன்றுமாகக் கூறாத
யுதிஷ்டிரனதுதம்பி, பிரமதேவன்போல நூற்கேள்வியிற் சிறந்தவன்,
எப்படிப்பட்ட அரியசமயத்திலும் சொல்தவறாதவன் என்ற விசேஷண
வாக்கியங்கள் வீமன்உண்மை மறைக்க உரியனல்லனென்னுங் கருத்தை
விளக்கின.
மகிதலம்மேல் வீழ்தல் உற்றும், மீளவும், வலியுடனே போர்
குறித்து மேல்வரு
பகைவனை, ‘நீ ஆவி நிற்பது ஓர் நிலை பகர்’ என, மாறாடு
சர்ப்பகேதுவும்,
‘இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர்’ என, மதியாதே உருத்து,
வீமனும்,
உகுதரு சேய் நீர் பரக்க மோதினன், உயர் கதையாலே,
சிரத்தின்மேலுமே.175.-வீமன் துரியோதனனைஉயிர்நிலைவினாவ அவன்
மாற்றிக்கூறல்.
மகிதலம்மேல் வீழ்தல் உற்றும் – தரையிற்சுழன்று
விழுந்தும்,மீளவும்-பின்பு, வலியுடனே போர் குறித்து – (சிறிது
இளைப்புத்தீர்ந்து)வலிமையுடனே போர்செய்யக்கருதி, வீமனும் -, மேல் வரு
பகைவனை -தன்மேல் எதிர்த்து வருகிற பகைவனான துரியோதனனை
நோக்கி, நீ ஆவிநிற்பது ஓர் நிலை பகர் என -‘உனது உயிர்
நிலைத்தானத்தை நீ சொல்வாய்’என்று சொல்ல,-மாறாடுசர்ப்பகேதுவும் –
உண்மைதவறுந்தன்மையுள்ளபாம்புக்கொடியனான துரியோதனனும், எனக்கும்
ஆர்உயிர் இகல்நுதலூடேஎன – ‘எனக்கும் அரியஉயிர்நிலைவலிய
நெற்றியினிடத்தே’என்றுசொல்ல, மதியாதே – (அதைப் பொய்யென்று)
கருதாமலே [நம்பிஎன்றபடி] (வீமனும்), உருத்து – உக்கிரங்கொண்டு,
உகுதருசெந்நீர்பரக்க -சிந்துகிற இரத்தம் எங்கும்பரவும்படி, உயர்
கதையாலே – சிறந்த தனதுகதாயுதத்தால், சிரத்தின்மேலும் மோதினன் –
(அவனது) தலைமேல்தாக்கினான்; (எ – று.)
துரியோதனன் பொய்ம்மைபேசுபவ னென்பது பிரசித்தம்;
“பொய்வளர்ந்த மொழிமன்னன்” என்றார், கீழ் உத்தியோகபருவத்திலும்.
தனது உயிர்நிலை தொடையிலாகவும் அதனைமறைத்துத் துரியோதனன்
மாறுபாடாக நெற்றியிலென்றுபொய்கூறியதனால், ‘மாறாடுசர்ப்பகேது’ என்றார்.
இவனது உயிர்நிலைதொடையிலென்பதை 182-ஆங் கவியாலும் உணர்க.
‘மாறாடு சர்ப்பகேது’ என்ற தொடரில், தனக்குக் கொடியில்
அடையாளமாகவிருக்கும் பாம்புபோலவே துரியோதனன் நாவிரண்டுடையா
னென்ற கருத்துத்தொனிக்குமாறு உணர்க. வீமன் கபடமற்றவ னாதலால்,
தன்னைப் போலப் பகைவனையும் உண்மைகூறியவனாகக் கருதின
னென்பதை’மதியாதே’ என்பதனாலும் விளக்கினார்; அவன்சொன்னது
உண்மையோஅன்றோ என்று ஆராய்ச்சி செய்யாமலே யென்றவாறு.
‘குறித்து’ என்றவினையெச்சம் ‘என’ என்பதைக் கொள்ளும்
உரிய கதாபாணியர்க்குள் ஒத ஒர் உவமை இலாதான்
அடித்தபோது, உயர்
சிரம் முடியூடே பிளக்க, நால்-இரு திசையினும் வார்
சோரி கக்கி வீழ்தர,
இரு நிலமீதே பதைத்து வீழ்தலும், இரிதர மோதாமல் விட்டு, ‘
நீ இனி
விரைவுடன் ஆறு ஆறு!’ எனத் தன் ஆண்மையை விருதர் முன்,
மேன்மேல் விளக்க வீமனே,176.-துரியோதனன் போரில்நிலைகுலைய, வீமன்
‘இளைப்பாறு’ என்றல்.
இதுமுதல் மூன்று கவிகள் – குளகம்.
(இ -ள்.) உரிய கதாபாணியர்க்குள் – (போருக்கு) உரிய கதாயுதத்தை
யேந்திய கையையுடைய வீரர்களுள், ஓத – எடுத்துச்சொல்லுதற்கு, ஓர்
உவமைஇலாதான் – ஓர்ஒப்புமையில்லாதவனான வீமன், அடித்த போது –
(கதைகொண்டு) தாக்கியபொழுது, உயர்சிரம்-உயர்ந்த தலை, முடியூடே
பிளக்க- உச்சியிலே பிளவுபட, நால் இரு திசையினும் – எட்டுத்
திக்குக்களிலும், வார்சோரி – மிக்க இரத்தம். கக்கி வீழ்தர –
வெளிப்பட்டுவழிய, இருநிலம்மீதேபதைத்து வீழ்தலும் – பெரிய தரையிலே
(துரியோதனன்) துடித்துவிழுந்தவளவிலே, வீமன்-, இரிதர மோதாமல்
விட்டு -அழியும்படி (அச்சமயத்துத்)தாக்காம லொழிந்து, நீ இனி விரைவுடன்
ஆறு ஆறு என – ‘நீ இப்பொழுதுவிரைவாக இளைப்பாறு இளைப்பாறு’
என்று பலமுறைகூறி, தன் ஆண்மையைவிருதர்முன் மேல்மேல்விளக்க –
தனது பராக்கிரமத்தை வீரர்கள்முன்னிலையிலே மிகுதியாக விளங்கச் செய்ய,
(எ – று.) – ‘வருகளையாறா’என வருங் கவியோடு தொடரும்.
துரியோதனன் இளைப்புற்ற நிலையில் வீமன் அவனைத் தாக்கிக்
கொன்றிடாமற் போரைநிறுத்தி ‘நீ விரைவில் இளைப்பாறு’ என்று கூறினது.
தழிஞ்சி யென்னும் புறப்பொருள் துறையின்பாற்படும்; அது, சாய்ந்தவர்மேற்
செல்லாமல் தழுவுவது; இது, வஞ்சியென்னும் புறப்பொருள் திணைக்குஉரிய
துறைகளில் ஒன்று: இராவணன் முதல்நாட்போரில் தன்சேனை முழுதும்
அழியப் படைக்கலமும்ஒழிந்து நின்ற நிலைமையை நோக்கி இராமபிரான்
‘இன்றுபோய் நாளை நின் சேனையோடு போர்க்கு வா’ என்று கூறிவிட்டதும்
இது. இளைத்து விழுந்த சமயத்தில் மேலும் அடிக்காமல் இப்படி
கூறியதனால்வீமனது போர்த்திறமை நன்குவிளங்குதல்பற்றி, ‘எனத்தன்
ஆண்மையைவிருதர்முன் மேன்மேல் விளக்க வீமன்’ என்றார். வீமன்
ஒப்பில்லாதவனெனவே, உயர்வில்லாதவ னென்பது தானே பெறப்படும்.
இரிதர, தா – துணைவினை
வரு களை ஆறா, உயிர்ப்பு உறா, விழி மலர் திறவா,
நா வறட்சி போய், உகு
குருதி உகாமே துடைத்து, வீழ்தரு குருகுல பூபாலன்
உக்ர வேகமொடு
உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி, மனோவீரம் உற்று,
மீளவும்
அருகு ஒருபால் மேவி நிற்கும் வீமனை அடு கதையால்,
ஓடி முட்டி மோதவே,177.-துரியோதனன் சிறிதுதெளிந்து வீமனைத் தாக்கல்.
வீழ்தரு – (வீமன்கதையால் அடிபட்டுக்) கீழேவிழுந்த,
குருகுலபூபாலன் – குருகுலத்து அரசனாகிய துரியோதனன், வருகளை
ஆறா -உண்டாகிய மூர்ச்சை தணிந்து, உயிர்ப்பு உறா – மூச்சு
விடுதலையடைந்து, விழிமலர் திறவா – தாமரைமலர்போன்ற கண்களைத்
திறந்து, நா வறட்சி போய் -நாக்கு வறண்டுபோகுந்தன்மை நீங்கி [நாவில்
நீர்சுரக்கப்பெற்று], உகு குருதிஉகாமே துடைத்து – பெருகுகிற இரத்தத்தை
வழியாதபடி துடைத்துக்கொண்டு,உக்ரவேகமொடு – கொடிய வேகத்துடனே,
உரும் எறி மா மேகம் ஒத்தகாயமும் உதறி – இடியிடிக்கிற கரிய
காளமேகத்தை யொத்த தனது உடம்பையும்உதறிக்கொண்டு, மனோ வீரம்
உற்று – மனத்தைரியத்தையடைந்து, மீளவும் – மறுபடியும், அருகு ஒரு பால்
மேவி நிற்கும் வீமனை – சமீபத்தில் ஒருபக்கத்திற் பொருந்தி நிற்கிற
வீமசேனனை, அடு கதையால் – கொல்லுதற்குரிய கதாயுதத்தினால், ஓடி
முட்டி மோத – விரைந்து சென்று நெருங்கித் தாக்க, (எ – று.) –
‘அமராடினர்’ என வருங் கவியோடு முடியும்.
உகாமே- ‘மே’ விகுதிபெற்ற எதிர்மறை வினையெச்சம். உதறுதல் –
சிதற அசைத்து வீசுதல். மாமேகமொத்தகாயம் – நிறத்தில் உவமம்.
‘வரட்சி’என்றும், ‘அருகொருபார்மேவி’ என்றும் பாடம்: பொருள்
அதுவே.
ஓம உண்டி கொள் பேர் அழலோடு அடல் ஊதை வெஞ் சமர்
ஆடியவாறு என,
ஆ மரங்களினால் மதியாது அமர் ஆடுகின்ற நிசாசரர் ஆம் என,
வீமனும், துரியோதன நாமனும், வேகம் ஒன்றிய வீரியராய், அடு
சேம வன் கதையால் அமர் ஆடினர், தேறி நின்றவர்
வாள் விழி மூடவே.178-இருவரும் கடும்போர்செய்தல்.
ஓமம் உண்டிகொள் – (மந்திரபூர்வகமாக) ஓமஞ்
செய்யப்படும்(ஹவிஸ் ஆகிய) உணவை உட்கொண்டு வளருந்தன்மையுள்ள,
பேர்அழலோடு – பெரிய நெருப்புடனே, அடல் ஊதை – வலிமையையுடைய
காற்று, வெம் சமர் ஆடிய ஆறு என – கொடிய போரைச்
செய்தாற்போலவும்,-மதியாது-லட்சியஞ்செய்யாமல் [அலட்சியமாக], ஆ
மரங்களினால் அமர் ஆடுகின்ற – ஆச்சாமரங்களைக்கொண்டு போர்
செய்கிற,நிசாசரர் ஆம் என – அரக்கர்கள் போலவும்,-வீமனும் துரியோதன
நாமனும்-வீமசேனனும் துரியோதனனென்னும் பேரையுடையவனும், வேகம்
ஒன்றியவீரியர் ஆய் – உக்கிரம் பொருந்திய பராக்கிரமமுடையவராய், தேறி
நின்றவர்வாள் விழி மூட – பார்த்துக்கொண்டுநின்ற வீரர்கள்
(காணுதற்குக்கூசி)ஒளியுள்ள தங்கள் கண்களை மூடிக்கொள்ளும்படி, அடு
சேமம் வல் கதையால்அமர் ஆடினர் – பகையழிப்பனவும்
காவலாகவுள்ளனவுமான வலியகதாயுதங்களாற் போர் செய்தார்கள்; (எ – று.)
நெருப்புங் காற்றும் ஒன்றோடொன்று போர்செய்தாற்போல என்பது,
முதலடியின் பொருள். ஓமவுண்டி – நெய்முதலிய தேவருணவுகள். ஓமம் –
மந்திரஞ் சொல்லி நெருப்பிலிடப்படுவது. பெரியமரமாதலின்,
ஆச்சாமரத்தைக்கூறினார். ஆம் மரங்களினால் எனப் பதம் பிரித்து,
கிடைத்தமரங்களைக்கொண்டு என்று உரைத்தலும் ஒன்று. நிசாசரர் –
இரவில் (வலிமைகொண்டு) சஞ்சரிப்பவர்; அரக்கர்க்குப்பகலினும் இரவில்
வலிமைமிகுதியாதலின், இப்பெயர். தேறிநின்றவர் – சாட்சியாகப்பார்த்து
நின்றகண்ணன் பலராமன் முதலியோர்.
இதுமுதல் எட்டுக்கவிகள் – முதற்சீர் தேமாச்சீரும், இரண்டு மூன்று
நான்காஞ்சீர்கள் கூவிளச்சீர்களுமாய் நேரசை முதலதாதலின் ஒற்றொழித்துப்
பதினோரெழுத்துப் பெற்றுவந்தது அரையடியாகவும்,அஃது இரட்டி கொண்டது
ஓரடியாகவும் நின்ற கழிநெடிலடி நான்குகொண்ட சந்தக்கட்டளைக்
கலிப்பாக்கள். கீழ்வந்த 166 – ஆம் கவி முதலியன, இங்ஙனமே நிரையசை
முதலதாய் அரையடிக்கு ஒற்றொழித்து எழுத்துப்பன்னிரண்டு பெற்று
வந்தனவாயினும் முதலில் மாச்சீர்பெற்றுவாராமையால்கட்டளைக்
கலிப்பாவாகக் கொள்ளப்படாமல் எண்சீராசிரிய விருத்தமாகக்
கொள்ளப்பட்டன வென்க.
தானதந்தன தானன தானன தான தந்தன தானன தானன-என்பது,
அவற்றிற்குச் சந்தக்குழிப்பாம்.
மேவு சிங்க, வியாள, விலோதனர் வீசுகின்ற கதாரவம் மேலிட,
வாவு வெம் பரி ஆதபனும் தடு- மாறி நின்றனன்; வானவர், தானவர்
நா அடங்கினர்; மா முனிவோரொடு நாகர் அஞ்சினர்;
நான்முகன் ஆதிய
மூவரும் செயல் ஏது என நாடினர்; மோழை கொண்டது, மூடிய கோளமே.179.-அந்தஉக்கிரயுத்தத்தால் உலகத்திலுண்டான குழப்பம்
மேவு – பொருந்திய, சிங்க வியாள விலோதனர் –
சிங்கத்தின்வடிவத்தையும் பாம்பின்வடிவத்தையும் முறையே எழுதிய
கொடியையுடையவீமனும் துரியோதனனும், வீசுகின்ற – வீசித்தாக்குகிற,
கதா-கதாயுதங்களின்,ரவம் – ஓசை, மேல்இட – அதிகப்படுதலால்,-வாவு
வெம்பரி ஆதவனும் -தாவிச்செல்கிற வெவ்விய தேர்க்குதிரைகள் பூண்ட
சூரியனும், தடுமாறிநின்றனன் – தடுமாற்றமடைந்து நின்றான்; வானவர்
தானவர் – தேவர்களும்அசுரர்களும், நா அடங்கினர் – பேச்சு
ஒடுங்கினார்கள்; மா முனிவோரொடு -சிறந்த முனிவர்களும், நாகர் –
பாதாளலோகத்தவரும், அஞ்சினர் -பயப்பட்டார்கள்; நான்முகன் ஆகிய
மூவரும் – பிரமன் முதலியதிரிமூர்த்திகளும், செயல் ஏது என நாடினர் –
செய்தற்குரியது யாதென்றுஆலோசித்தார்கள்; மூடிய கோளம் –
(உலகத்தைக்) கவிந்துமூடியுள்ளஅண்டகோளம், மோழை கொண்டது –
(ஒருபுறத்தில்) வெடிப்பையடைந்தது; (எ – று.)
தாநவர் – தநுவின்மக்கள். நான்முகன் – நான்குதிசையையும்
நோக்கியநான்குமுகமுடையவன். மூவர் – பிரமவிஷ்ணுருத்திரர், செயல்
இதற்குப்பரிகாரமாகச் செய்யுந்தொழில். இனி, செயல் ஏது என நாடினர் –
இங்ஙனம்குழப்பமுண்டாதற்குக் காரணமானசெய்கை யாதென்று
நோக்குவாராயினர்எனினுமாம். மோழைகொண்டது – உடைந்தது என்றபடி.
முனிவர் -முனிவோர் என, ஈற்றயல் அகரம் ஓகாரமாயிற்று. இது,
உயர்வுநவிற்சியணி.
தார் வலம்புரியானொடு போர் அழி தாழ்வு கண்டனன் வீமனை,
வாசி கொள்
தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன், ‘
மாருதி
நேர் தளர்ந்தனன்; யாதுகொலோ செயல்’ நீ மொழிந்தருள்வாய்!’ என,
வானவர்
ஊர் புரந்தவன் ஓத, முராரியும் ஓதினன், பரிவோடு அவனோடு இவை:180.-துரியோதனனைக்கொல்லும் வகை யாதென்று
அருச்சுனன் கண்ணனை வினாவல்
தார் வலம்புரியானொடு – நஞ்சாவட்டைப்
பூமாலையையுடையதுரியோதனனோடு செய்கிற, போர் – யுத்தத்தில், வீமன் –
வீமசேனன், அழி -வலிமைகுறைகிற, தாழ்வை – சிறுமையை, கண்டனன் –
பார்த்து, வானவர் ஊர்புரந்தவன் – தேவர்களுடைய உலகத்தைப்
பாதுகாத்தவனான அருச்சுனன்,வாசி கொள் தேர் விடும் திருமால் அடி நீள்
முடி சேர நின்று – குதிரைகள்பூண்ட தனது தேரைச் செலுத்தும் சாரதியான
கண்ணபிரானது திருவடிகளிலேநீண்ட (தனது) கிரீடம் படும்படி
(சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து) நின்று, உரைஆடினன் – பேசுபவனாய்,
‘மாருதி நேர் தளர்ந்தனன் – வாயுகுமாரனானவீமன் துரியோதனனெதிரில்
நிற்கத் தளர்ந்தான்; செயல் யாதுகொலோ(இப்பொழுது) செய்தற்கு உரியது
யாதோ? நீ மொழிந்தருள்வாய்-நீகூறியருளுவாய், ‘என-என்று, ஓத-சொல்ல,-
முராரியும் – கண்ணனும்,பரிவோடு – அன்புடன், அவனோடு –
அவ்வருச்சுனனோடு, இவை -இந்தவார்த்தைகளை, ஓதினன் – சொன்னான்;
தார்வலம்புரியான் – வலம்புரித்தாரான் எனச் சொல்மாறுக. வீமனை
யழிதாழ்வுகண்டனன் – வீமன் அழிதாழ்வைக் கண்டனன் என உருபு
பிரித்துக்கூட்டப்பட்டது. அக்கினிபகவானால் அருச்சுனனுக்குக்
காண்டவதகனகாலத்திற்கொடுக்கப்பட்ட சிறந்த தேர் அந்தத் தேவனாற்
கொடுக்கப்பட்டதெய்வத்தன்மையுள்ள நான்கு வெள்ளைக் குதிரைகள்
பூண்டமேன்மையுடையதாதலின், ‘வாசிகொள்தேர்’ எனப்பட்டது.
வினாவடியாப்பிறந்த’யாது’ என்னுங் குறிப்பு முற்றின்மேல், கொல் ஓ
அசைகள். இந்திரன் முதலியதேவர்களால் வெல்லமுடியாத நிவாதகவசர்
காலகேயரென்னும் அசுரர்களைஅருச்சுனன் பொருது அழித்துத்
தேவர்களைச் சுவர்க்கத்தில் இடையூறின்றிஇனிதுவாழ வைத்தன னாதலாலும்,
அப்பொழுது அருச்சுனன் தேவலோகத்திற்சென்று இந்திரனால்
அருத்தாசனங்கொடுக்கப்பட்டு அதில் வீற்றிருந்துதேவலோகத்து இளவரசுமுடி
சூட்டப்பெற்றவ னாதலாலும், ‘வானவரூர்புரந்தவன்’ எனப்பட்டான். முராரி
யென்ற திருநாமம் – முர + அரிஎனப்பிரிந்து, முரனென்னும் அசுரனுக்குப்
பகைவனென்று பொருள் படும்:இவ்வசுரன், நரகாசுரனுக்கு மந்திரி;
இவனைக்கண்ணபிரான் கொன்றதும்அவனைக் கொன்ற காலத்திலேயாம்:
வரலாறு, 151 – ஆங்கவியிற் கூறப்பட்டது.
நீ நயந்தனை கேள்: உறு போரிடை நேர் மலைந்திடுவோர்
இருவோரினும்,
ஆனிலன் பெலவான்; அதிலே முகு-ரானனன் தரு சேய் வினை ஆதிகன்;
நான் இயம்பல் தகாது;
இவர் ஆயிரம் நாள் மலைந்தனர் ஆயினும், வீவொடு
வான்அகம் புகுதார் இருவோர்களும்;- வாசவன் தரு பூண்
அணி மார்பனே!181.-துரியோதனனைக்கொல்லும் வகையைக் கண்ணன்
கூறல்.
இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர்.
(இ -ள்.) வாசவன் தரு – இந்திரன் கொடுத்த, பூண் – ஆரமாகிய
ஆபரணத்தை, அணி – அணிந்த, மார்பனே – மார்பையுடையவனே!
நீநயந்தனை கேள் – (நான் சொல்வதை) நீ விரும்பிக்கேள்: உறு
போரிடை – நேர்ந்துள்ள போரிலே, நேர் மலைந்திடுவோர் – எதிர்த்து
நின்றுபோர் செய்பவர்களான, இருவோரினும் – இரண்டு வீரர்களுள்ளும்,
ஆநிலன் -வாயுகுமாரனான வீமன், பலவான் – பலசாலி; முகுர ஆனனன்
தரு சேய் -திருதராட்டிரன் பெற்ற புத்திரனான துரியோதனன், அதிலே
வினை ஆதிகன் -வீமசேனனுடைய தனினும் போர்த்தொழிற்றிறம்
மேம்பட்டவன்: நான் இயம்பல்தகாது – நான் ஒன்றையுஞ் சொல்லுதல்
தகுதியன்று: இவர் இருவோர்களும் -இவ்விரண்டு பேரும், ஆயிரம் நாள்
மலைந்தனர் ஆயினும் – மிகப்பல நாள்போர்செய்தாராயினும், வீவொடு –
மரணத்தோடுகூடி, வானகம் புகுதார் -சுவர்க்கலோகத்தைச் சேரார்; (எ-று.)
வாஸவன் – அஷ்டவசுக்களுக்குத் தலைவனென்றும், ஐசுவரியமுடையவ
னென்றும் (வசு – செல்வம்) காரணப்பொருள்படும். இந்திரன் அருச்சுனனைத்
தன்னுலகத்துக்கு அழைத்துப்போனபொழுது அவனுக்கு ஆரம் முதலிய
ஆபரணங்களைக் கொடுத்ததை “ஆடையுங் கலனு மந்த்ரத்துடனடற்படையு
நல்கி, யேடவி ழலங்கலானோராசனத் திருத்தியென்றும், தேடுதற்கரிய
தூயவமுதுசெம்பொற்கலத்திற், கூடவுண்டமரர்க்கெல்லாங் குரிசிலாஞ் சிறப்புச்
செய்தான்” என்று கீழ் நிவாதகவசர் காலகேயர்வதைச் சருக்கத்தில்
வந்ததனால் உணர்க. இரண்டுவீரர் எதிர்த்துத் தெரிந்தயுத்தஞ்செய்கையில்
மத்தியஸ்தராய் நிற்பாருள் ஒருவன் இடையில் ஒன்றைச்சொல்லுதல்
அநீதியென்பான், ‘நானியம்பல்தகாது’ என்றான். வீவு – தொழிற்பெயர்; வு-
விகுதி; உ – விகுதியெனின், வ் – எழுத்துப்பேறு
மாறு கொண்டவர் ஆவி கொள் நீள் கதை மாருதன் சுதனோடு இவண்
ஓர் உரை கூறல்
இங்கிதமே அல; ஓர் உரை கூறில், வஞ்சகம் ஆம்;
இவன் ஆண்மையின்
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை
ஆர் உயிர்
ஈறு கண்டிடலாம், அவன் ஊருவை ஏறு புண்படவே எதிர் மோதிலே.’
மாறுகொண்டவர் – பகைமைகொண்டவர்களது, ஆவி –
உயிரை, கொள் – வாங்குகிற, நீள் கதை – நீண்ட கதாயுதத்தையுடைய,
மாருதன் சுதனோடு – வாயுகுமாரனான வீமனுடன், இவண் – இவ்விடத்தில்
[அல்லது இப்பொழுது], ஓர் உரை கூறல் – (நான்) ஒரு வார்த்தை
சொல்லுதல்,இங்கிதமே அல – இனிமையானதன்று; ஓர் உரை கூறில் –
(அன்றி) ஒருவார்த்தையைச் சொன்னாலோ, வஞ்சகம் ஆம் – (அது)
வஞ்சனைக்குஇடமாம்; இவன் – வீமன், ஆண்மையின் – (தனது)
பராக்கிரமத்தால், அவன்ஊருவை – துரியோதனனது தொடையை, ஏறு புண்
பட – மிக்கவிரணப்படும்படி, எதிர் மோதில் – எதிரிலே தாக்கினால், நூறு
மைந்தரின்ஆதிபன் ஆகிய – (திருதராட்டிர) குமாரர் நூற்றுவருள்
தலைவனான, நூல்நலம் திகழ் மார்பனை – சாமுத்திரிகசாஸ்திரத்திற்கூறிய
நல்லிலக்கணம்விளங்கும் மார்பையுடைய துரியோதனனை, ஆர் உயிர் ஈறு
கண்டிடல் ஆம் -அரிய உயிர் அழியச் செய்திடலாம்; (எ – று.)
வீமன்கதைக்குரிய சத்துருகாதினியென்ற பெயரின் பொருளை
விவரித்து’மாறுகொண்டவராவிகொள்நீள்கதை’ எனப்பட்டது. இங்கு இதம்
என்றுபிரித்து, இப்பொழுது நன்மையன்று என்று உரைப்பினுமாம். அல –
அல்லவென்பதன் தொகுத்தல்; அது-வேறு இல்லை உண்டு என்பன போல
ஐம்பால் மூவிடத்துக்கும் பொதுவான குறிப்புமுற்று: இங்குப்
படர்க்கையொன்றன்பாலுக்கு வந்தது. ஆதிபன் – அதிபனென்பதன் நீட்டல்.
நூனலம் – உத்தமவிலக்கணமாகிய மூன்று இரேகை முதலியன. இனி, ‘நூல்
நலந்திகழ் மார்பன்’ என்பதற்கு – முப்புரி நூல் நன்குவிளங்கும்
மார்பையுடையவனென்று உரைப்பாரு முளர். கண்டிடலாம் என்பதில்
காணுதலென்பது – செய்தலென்னும் பொருளில் வந்தது. இவண் ஓர் உரை
கூறல் – இப்பொழுது ஒருவார்த்தை சொல்லுதல், இங்கிதமே அல –
குறிப்பினாற் செய்யத்தக்கதேயன்றி, ஓர் உரை கூறில் – (வெளிப்படையாக)
ஒருவார்த்தை யெடுத்துச்சொன்னால், வஞ்சகம் ஆம் வஞ்சனையாய் முடியும்
என்று உரைப்பாரும் உளர். இங்கிதம் – குறிப்பால்நிகழும் உறுப்பின்
தொழில்;கண் கை கால் முதலிய உறுப்புக்களின் சைகையால் ஏதேனும் ஒரு
கருத்தைப்பிறர்க்குத்தெரியாதபடி அவனுக்குக் குறிப்பாகப் புலப்படுத்திற்
படுத்தலாமேயன்றி, வாயால் ஒன்றும் வெளிப்படையாக்கூறுதல் தகுதியன்
றென்பது, உட்கோள்.
ஏழ் பெருங் கடல் சூழ் புவி பாரமும் ஏதமும் கெட, ஏதம்
இல் ஐவரும்
வாழ, அன்று உயர் நாரணனார் திரு-வாய் மலர்ந்த சொலால் மகிழா மிக,
‘ஊழினும் புரி தாள்
வலிதே’ என, ஊருவின் புடை சேர் கர நாள்மலர்,
காழ் நெடுங் கிரியே அனையான் விழி காண, நின்றனன்,
வான் அரி காளையே.183.-அருச்சுனன் வீமனுக்குக்குறிப்பால் உபாயம் உணர்த்தல்.
ஏழ் பெரு கடல் சூழ் – ஏழு பெரிய கடல்களாற் சூழப்பட்ட,
புவி – பூமியினது, பாரமும் – சுமையும், ஏதமும் – (அதனாலாகிய) துன்பமும்,
கெட – அழியும்படியாகவும், ஏதம் இல் – குற்றமில்லாத, ஐவரும் –
(பாண்டவர்) ஐந்துபேரும், வாழ – உயிர்வாழும்படியாகவும், அன்று –
அப்பொழுது, உயர் நாரணனார் – (யாவரினுஞ்சிறந்த) கண்ணபிரான்,
திருவாய்மலர்ந்த – அழகிய வாய்மலரைத் திறந்து கூறிய, சொலால் –
வார்த்தையினால், மிக மகிழா – மிகவும் மகிழ்ந்து, வான் அரி காளை –
தேவலோகத்தையாளுகிற இந்திரனது புத்திரனான அருச்சுனன், புரி தாள்
ஊழினும் வலிதே என – செய்யும் முயற்சி விதிப் பயனினும்
வலிமையுடையதேயாமென்று எண்ணி, ஊருவின் புடை சேர் கரம் நாள்
மலர் -(தனது) தொடையினிடத்துவைத்தஅன்றுமலர்ந்த தாமரைப்பூப்போன்ற
(தனது)கையை, காழ் நெடுகிரியே அனையான் விழி காண – வலியபெரிய
மலையையே யொத்த வீமனது கண்கள் காணும்படி, நின்றனன் – நின்றான்;
(எ- று.)
துரியோதனனைக் கொல்லும் உபாயத்தைக் கண்ணன் கூறியவுடனே
கேட்டு மகிழ்ந்து, அருச்சுனன், முயற்சி வீண்படாதாதலின் அதனை நாம்
செய்ய வேண்டுவதென்று துணிந்து, வீமன் கண்காணும்படிதனது தொடையிற்
கைவைத்துநின்றன னென்பதாம். கண்ணன்கூறிய உபாயத்தை அருச்சுனன்
இங்கிதத்தால் வீமனுக்குப் புலப்படுத்தின னென்க. கொடியதுஷ்டனான
துரியோதனனது நாசம் பூமிபாரந்தீர நிவிருத்தியாதற்கும், பாண்டவரது
வாழ்க்கைக்கும் காரணமாதலால்,’புவிபாரமும்ஏதமுங்கெட ஏதமில்ஐவரும்
வாழத்திருவாய்மலர்ந்த சொல்’எனப்பட்டது. ஊழினும் என்ற உம்மை –
உயர்வுசிறப்பு: அது “ஊழிற்பெருவலியாவுள மற்றொன்று,
சூழினுந்தான்முந்துறும்” என்றபடிஊழ்வினைக்குள்ள தவறாத உறுதிநிலையை
விளக்கும். ‘ஊழினும் புரிதாள்வலிதே’ என்பதை “ஊழையு முப்பக்கங்
காண்ப ருலைவின்றித்,தாழாதுஞற்றுபவர்” என்ற திருக்குறளினாலும் அறிக;
‘ஊழ் ஒருகாலாகஇருகாலாக அல்லது விலக்கலாகாமையின், பலகால்
முயல்வார் பயனெய்துவர்;தெய்வத்தான் இடுக்கண்வரினும் முயற்சி
விடற்பாலதன்று’ என்ற அதன்உரைவாக்கியங்கள் உணரற்பால.
ஏழ்கடல் – உவர்நீர், கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர்
என்னும் இவற்றின் மயமானவை. நாரணன் – நாராயணனென்பதன் விகாரம்:
‘ஆர்’ என்ற பலர்பால்விகுதி, உயர்வுப்பொருளில் வந்தது. கூறியென்ற
பொருளில், ‘திருவாய்மலர்ந்து’ என்பது, உபசாரம். பின்னிரண்டடிகளுக்கு –
ஊழ்வினையினும் முயற்சியே வலிமையுடையது என்று வாயாற் சொல்லிக்
கையால் தொடையைத் தட்டினான் என்று உரைப்பாருமுளர்; ஊழினும்
புரிதாள்வலிதே’ என்றது, முயற்சியைக் கைவிடாது மேன்மேலும் போர்செய்
என்றுவீமனுக்கு உறுதி கூறியவாறு.
ஞான பண்டிதன் வாயு குமாரனும், நாரணன் பணியால்
இளையோன் மொழி
மோன வண் குறி தான் உணரா, எதிர் மோதினன் கதை,
பூபதி ஊருவின்;
மான கஞ்சுகன் ஆறு அடி ஏழ் அடி மாறி நின்றிடவே
பிழைபோதலின்,
மேல் முழங்கின வானவர் தூரியம்; மேல் விழுந்தது
பூ மழை சாலவே.184.-அதனையறிந்து வீமன்துரியோதனன் தொடையில்
தாக்கல்.
ஞான பண்டிதன் – அறிவுவல்லவனான வாயு குமாரனும் –
வாயுவின் மகனானவீமனும், நாரணன் பணியால் இளையோன் மொழி மோனம்
வண்குறி தான் உணரா – கண்ணபிரானது வார்த்தையினால் தனது தம்பியான
அருச்சுனன் தெரிவித்த மௌனமான நல்லகுறிப்பைத் தான் அறிந்துகொண்டு,
பூபதி ஊருவின் – துரியோதனராசனது தொடையிலே, கதை –
தனதுகதாயுதத்தால், எதிர் மோதினன் – எதிர்த்துத்தாக்கினான்; (தாக்கவே),
மான கஞ்சுகன் – மானத்தையேகவசமாகக்கொண்ட துரியோதனன், ஆறு
அடிஏழு அடி மாறி நின்றிட – ஆறு அல்லது ஏழடிதூரம் கால்கள்
நிலைபெயர்ந்துபின்னிட்டு நிற்க, பிழை போதலின் – (உறுதிநிலை)
தப்பிப்போனதனால்,வானவர் தூரியம் – தேவதுந்துபிவாத்தியங்கள், மேல்
முழங்கின – வானத்தில்மிக ஒலித்தன; பூமழை – (தேவர்கள்சொரிந்த)
புஷ்பவர்ஷம், சால – மிகவும், மேல் விழுந்தது – வீமன்மேலே விழுந்தது:
(எ – று.)
கண்ணன்சொற்படி அருச்சுனன் காட்டிய குறிப்பையுணர்ந்த வீமன்
துரியோதனனது உயிர்நிலைத்தானமான தொடையிலே தாக்கவே, அவன்
அத்தாக்குதல்பொறாமற் பின்னிட்டனனாக, அது கண்ட தேவர்கள் இவன்
அழிதலும் பாண்டவர் வெல்லுதலும் தவறாவென்று கருதிக் களித்துத் துந்துபி
முழக்கித் தேவலோகத்துக் கற்பகமலர்களை வீமன்மேல் மழைபோல
மிகுதியாகச் சொரிபவராயினர்என்பதாம். சமயத்திற் குறிப்பறிந்துகொண்ட
நுட்பத்தைப் பாராட்டி, ‘ஞானபண்டிதன்’ எனக் கொண்டாடினார்.
மொழிமோன வண்குறி – வாயினாற்பேசாமல் தெரிவித்த நல்ல குறிப்பு.
மொழி- பேசாதது பேசினது போலச் சொல்லப்பட்டது; மரபுவழுவமைதி;
[நன் -பொது. 58] “முன்னம் முகம்போல முன்னுரைப்பதில்” என்ற
விடத்தில்,’உரைப்பது’ என்பதற்குப் போல, இங்கே ‘மொழி’ என்றதற்கு –
தெரிவித்தஎன்று பொருள். மௌநம் – வடசொல்; மோனம் என
விகாரப்பட்டது:கௌசிகன் – கோசிகன், கௌதமன் – கோதமன்,
கௌசல்யை – கோசலை,மௌலி – மோலி என்பனபோல. துரியோதனன்
மானத்தையே தனதுஉயிர்க்காவலாகப் பாவித்து அதனைக் கைவிடாது
நின்றதனால், ‘மானகஞ்சுகன்’எனப்பட்டான்.
மாறி நின்ற சுயோதனன் மீளவும் வாயு மைந்தனை வாகுவும்,
மார்பமும்,
நீறு எழும்படி சாடியபோது, அவன் நீள் நிலம்தனில் ஓடி
விழாது, தன்
ஊறு மிஞ்சிய பேர் உடலோடு எதிர் ஓடி, வன் தொடை கீறிட,
மாறு அடும்
வீறு கொண்ட கதாயுதம் வீசினன், வீரன் அம் புவிமீது
உற வீழவே.185.-மீண்டும் வீமன்துரியோதனனது தொடையில் தாக்கல்.
மாறி நின்ற – (ஆறு ஏழு அடி பின்னிட்டு) நிலைமாறி
நின்ற,சுயோதனன் – துரியோதனன், மீளவும் – மறுபடியும், வாயு
மைந்தனை -வீமனை, வாகுவும் மார்பமும் நீறு எழும்படி சாடியபோது –
தோள்களும்மார்பும் பொடிபடும்படி தாக்கியபொழுது, அவன் – வீமன், நீள்
நிலந்தனில்ஓடி விழாது – நீண்ட நிலத்தில் ஓடி விழாதபடி (அரிதில் நின்று),
தன் – தனது,ஊறின் மிஞ்சிய பேர் உடலோடு – வலிமையால் மிக்க பெரிய
உடம்புடன்,எதிர்ஓடி – எதிரில் ஓடிவந்து, வல்தொடை கீறிட –
(துரியோதனனது)வலியதொடை பிளக்கும்படியாகவும், வீரன் அம் புவிமீது
உறவீழ – வீரனானதுரியோதனன் அழகிய தரையிலேபொருந்த
விழும்படியாகவும், மாறு அடும்வீறு கொண்ட கதா ஆயுதம் –
பகைவரையழிக்கும் மேன்மையைக் கொண்டதன் கதாயுதத்தால், வீசினன் – தாக்கினான்; (எ – று.)
சுயோதநன் – நல்ல போரையுடையவனென்று பொருள்படும்; வெற்றி
நிகழும்படி போர்செய்ய வல்லவனென்க. ‘ஊறின்மிஞ்சிய பேருடல்’
என்பதற்குத் துரியோதனன் தாக்கியதனாலாகிய தழும்புகளால் மிக்கபெரிய
உடம்பு என்று பொருளுரைப்பினுமாம். மாறு – மாற்றார்க்குப் பண்பாகுபெயர்.
அம்புவியென்று பூமிக்குப் பொலிவுடைமைகூறினார், அது பாரந்தீர்ந்து
இன்பமுறுஞ் சமயமாதலின், இங்ஙனம்கண்ணபிரான் கூறியருளிய
குறிப்பைக்கொண் டன்றி வீமனால் நேரிற்கொல்லலாகாத துரியோதனனது
ஆற்றலை விளக்க ‘வீரன்’ என்றார்.
அரிப் பதாகன் உரகப் பதாகனை அதிர்த்து, மேல் உற
அடர்த்து, நீடு
உருப்பினோடு அதிசயிக்க ஊருவை ஒடிக்கவே, அவன் உடற்றலும்;
நெருப்பு உறா விழி சிவத்து, வார் கடை நிமிர்ப்பு உறாத புருவத்தனாய்,
மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து, மார்பமிசை குத்தினான்.186.-வீமன் துரியோதனனை நெருக்கி மார்பில் குத்தல்.
அரி பதாகன் – சிங்கக்கொடியுடையவனான வீமன், உரகம்
பதாகனை – பாம்புக்கொடியுடையவனான துரியோதனனை, அதிர்த்து –
அதட்டி, மேல் உற அடர்த்து – மேற்கொண்டு நெருக்கி, நீடு
உருப்பினோடு -மிக்க கோபத்துடனே, அதிசயிக்க – (கண்டவர்)
வியக்கும்படி, ஊருவைஒடிக்கவே – தொடையை முறிக்கவே,- அவன் –
அத்துரியோதனன்,உடற்றலும் – பெருங்கோபங்கொண்டு மீட்டும்
போர்தொடங்கியவளவில்,-(வீமன்), விழி சிவத்து நெருப்புஉறா –
கண்கள்சிவந்து நெருப்பின்தன்மையடையப்பெற்று, வார் கடை நிமிர்ப்பு
உறாத புருவத்தன் ஆய் – நீண்டகோடிகள் வளைவுமாறாத
புருவங்களையுடையவனாய், மருப்பு நால் உறு மதத்தமா என – நான்கு
தந்தங்கள் பொருந்திய மதம்பிடித்த ஐராவதயானை போல,மதத்து –
கோபாவேசங்கொண்டு, மார்பின்மிசை குத்தினான் – (துரியோதனனது)
மார்பின்மேற் குத்தினான்; (எ – று.)
அதிசயிக்க – அதிசயமென்னும் சொல்லினடியாப் பிறந்த
செயவெனெச்சம். சிவத்து – சிவந்து என்பதன் வலித்தல். கடை
நிமிர்ப்புறாதபுருவத்தனாய் – புருவத்தை நெறிவுபட வளைத்தவனாய்.
‘மருப்புநாலுறுமதத்தமா வென மதத்து’ என்றது, வீமனுக்குச் சேரும்; அன்றி,
ஐராவதயானை போலும் வலிமையுடைய மார்பின் மேல் என்று மார்புக்கு
அடைமொழியாக்கலும்ஒன்று; “மதவேமடனும் வலியு மாகும்” என்ற
தொல்காப்பியத்தால், மதவென்பது – வலிமை யுணர்த்துவதோர்
உரிச்சொல்லாதலறிக; அதன்மேல் அத்துச்சாரியைவருகையில்,
நிலைமொழியீற்றுஅகரத்தின்முன் சாரியைமுதல் அகரம் கெட்டது;
[நன் – உருபு – 13.]
இதுமுதல் ஐந்துகவிகள் – பெரும்பாலும் முதற்சீர் புளிமாச்சீரும்,
மூன்றுஐந்தாஞ் சீர்கள் தேமாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள்
கூவிளங்காய்ச்சீர்களும், ஏழாஞ்சீர் கூவிளச்சீருமாகிய
கழிநெடிலடிநான்குகொண்ட எழுசீராசிரியச்சந்த விருத்தங்கள்.
தனத்ததானனன தத்த தானனன தத்த தானனன தத்தனா – என்பது,
இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம்.
கதுப்பும் வாயும் நெரிய, கதாயுத கரத்தினால் நனி கலக்கினான்,
எதிர்த்த யானையை அடர்த்த கேசரி எனப் பொன் மௌலியை
இருத்தினான்,
உதைத்து மேல் இரு பதத்தினால், அவன் உரத்தை வாகுவை
ஒடித்து, நீள்
விதத்தினால் இரு நிலத்துமீது உடல் விதிர்த்து வீழ்தர
விழுத்தினான்.187.-வீமன் துரியோதனனைச்சிதைத்து வீழ்த்துதல்.
கதுப்பும் – (துரியோதனனது) கன்னமும், வாயும் -,
நெரிய -நொருங்கும்படி, (வீமன்), கதாயுத கரத்தினால் –
கதாயுதத்தையேந்திய (தனது)கையால், நனி கலக்கினான் – மிகவுங்கலங்கச்
செய்து,- எதிர்த்த யானையைஅடர்த்த கேசரி என – எதிர்த்துநின்ற
யானையை நெருங்கிப் பொருதழிக்கிறசிங்கம்போல, பொன் மௌலியை –
பொன்மயமான (அவனது) கிரீடத்தை,இருத்தினான் – தரையிலே
அழுந்தப்பண்ணி,-மேல் – மேலே, இரு பதத்தினால்- (தனது)
இரண்டுகால்களாலும், உதைத்து-, அவன் – அத்துரியோதனனுடைய,
உரத்தை – மார்பையும், வாகுவை – தோள்களையும், ஒடித்து – முறித்து, நீள்
விதத்தினால் – மிக்கபலவகைகளால், உடல் விதிர்த்து – அவனுடம்பை உதறி,
இரு நிலத்தின் மீது – பெரியதரையிலே, வீழ்தரவிழுத்தினான் – விழுமாறு
செய்தான்; (எ – று.)
நனி -மிகுதிப்பொருளுணர்த்தும் விசேடித்த உரிச்சொல். சிங்கம்
யானையை மத்தகத்திற் பாய்ந்து அழித்தல் இயல்பாதலின், வீமன்
துரியோதனனது முடியை யழுத்துதற்கு உவமைகூறப்பட்டது. விதிர்த்து
வீசினன்வியக்கவே என்றும் பாடம்.
நிறத்த நீல கிரி ஒக்கவே இரு நிலத்தின் வீழ் குரு குலத்தினோன்,
உறைத்து மீளவும் உயிர்த்து, மாயனொடு உருத்து வாசகம்
உறச் சொல்வான்;
‘குறிப்பினால் விசயனைக் கொடு ஆர் உயிர் குறிக்கும் மா
மதி கொளுத்தினாய்;
அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆ188.-இதுவும், அடுத்தகவியும்- துரியோதனன் கண்ணனைப்
பழித்தல்.
இதுமுதல் மூன்று கவிகள் – ஒரு தொடர்.
(இ -ள்.) நிறத்த – நிறம்விளங்கப்பெற்ற, நீல கிரி ஒக்க –
நீலரத்தினமயமானதொரு மலைபோல, இரு நிலத்தின் வீழ் –
பெரியதரையிலேவிழுந்திட்ட, குரு குலத்தினோன் – குருவம்சத்து அரசனான
துரியோதனன்,மீளவும்-பின்பு, உறைத்து – உறுதிபெற்று, உயிர்த்து –
பெருமூச்சுவிட்டு, உருத்து- கோபங்கொண்டு, மாயனொடு –
கண்ணபிரானுடன், வாசகம் -வார்த்தைகளை, உற சொல்வான் –
அதிகமாகப்பேசுபவனானான்;(அவை யாவையெனின்):- (நீ), குறிப்பினால் –
குறிப்பாக, விசயனை கொடு -அருச்சுனனைக்கொண்டு, ஆர் உயிர் குறிக்கும்
மாமதி கொளுத்தினாய் -(எனது) அரிய உயிரைக்குறிக்கும் [என்னுயிர்
உடம்பினின்று நீங்குமாறு](வீமனுக்குச்) சிறந்த அறிவை உண்டாக்கினாய்;
அறத்தினால் அடல் -தருமத்தோடு போர்செய்கிற, மறத்தின்-
பராக்கிரமத்தின், நீர்மையினை – தன்மையை, அவித்தை ஆயரும் –
அறிவில்லாத இடையர்களும், அளப்பரோ – அறியமாட்டுவர்களோ?
[அறியமாட்டார்க ளென்றபடி] (எ – று.)
நீக்ஷத்திரியசாதியிற் பிறந்தவனாயினும் அச்சாதியாரிடத்தில்
வளராமல்இழிவான இடையர்கள் குழாத்தில் வளர்ந்தவனாதலால்,
தருமயுத்தஞ் செய்யும்முறைமையின் பெருமையைச் சிறிதும் அறியாய்.
ஆனதுபற்றி, யானும் வீமனும்எதிர்த்துச் சமமாகத் தொந்தயுத்தஞ்
செய்கையில் இங்ஙனம் வஞ்சனையாகஅருச்சுனனைக்கொண்டு, வீமனுக்கு
எனது உயிர்நிலையைப் புலப்படுத்திஎன்னை யழித்தாயென்று இகழ்ந்தான்.
உயர்ந்த சந்திரகுலத்தில்வசுதேவகுமாரனாய்த் தேவகிவயிற்றிற்
பிறந்திருந்தும் தாழ்ந்தஇடையர்குலத்தில் யசோதைமகனாய்
நந்தகோபன்மனையில் வளர்ந்ததுமாத்திரத்தைக்கொண்டு கண்ணனைத்
துரியோதனன் இடையனென இகழ்ந்தான். வடமதுரையில் வசுதேவனும்
தேவகியும் கம்சனாற்சிறையிலிருத்தப்பட்டுத்தளைபூண்டிருக்கையில், திருமால்
தேவகியினிடம் எட்டாவது கருப்பத்தில்கண்ணணாய் அவதரிக்க,
அக்குழந்தையைக் கம்சன் முன்னையகோட்பாட்டின்படி கொன்றுவிடுவனே
யென்கிற அச்சத்தால் தாய் தந்தையர்அத்தெய்வக்குழவியின் அனுமதி
பெற்று அந்தச்சிசுவை அது பிறந்தநடுராத்திரியிலேயே கோகுலத்திலே
நந்தகோபனது கிருகத்திலேஇரகசியமாகக்கொண்டு சேர்த்துவிட்டு அங்கு
அப்பொழுது யசோதைக்குமாயையின் அம்சமாய்ப் பிறந்திருந்ததொரு
பெண்குழந்தையையெடுத்துக்கொண்டு வந்துவிட, அது முதல் கம்சனைக்
கொல்லுகிறவரையில்இளம்பருவத்திலெல்லாம் கண்ணபிரான்
அவ்வாய்ப்பாடியிலேயே பலவகைத்திருவிளையாடல்கள் புரிந்து வளர்ந்தன
னென்பது வரலாறு.
ஆயர்- பசுக்களையுடையவரென இடையர்க்குக் காரணப்பெயர்;
ஆ -பகுதி, அர் – விகுதி, ய் – எழுத்துப்பேறு. துரியோதனனுக்கு நீலகிரி
-நிறத்திலும் பருமை வலிமைகளிலும் உவமம். கொளுத்துதல் –
கொள்ளச்செய்தல்; இங்கே, கொளுத்து – கொள் என்பதன் பிறவினை,
இதில்,உ – சாரியை, து – பிறவினைவிகுதி; தீப்பற்றவைத்தலென்ற
பொருளில்,கொளுந்து என்ற தன்வினைப்பகுதி மெல்லொற்று
வல்லொற்றாகிய பிறவினை.’அற்பராயரறிகிற்பரோ’ என்றும் பாடம்.
மலைத்த போர்தொறும் எனக்கு நீ செய் பிழை மற்றுளோர்
செய நினைப்பரோ’
குலத்திலே இழிகுலத்தர் ஆனவர் குறிப்பு இலாது, இவை பிறக்குமோ’
சலத்தினால் வினை இயற்றுவார் முடி தரித்த காவலரொடு ஒப்பரோ’
நிலத்தில் வாழ்வு அவர் பெறக் கொடாய், இனி; நினைத்த
காரியம் முடித்தியே!’
மலைத்த போர் தொறும் – எதிர்த்துச்செய்த யுத்தந்தோறும்,
எனக்கு நீ செய் பிழை – எனக்கு நீ செய்த துரோகங்களை, மற்று உளோர்-
பிறர், செய நினைப்பரோ – செய்யக்கருதுவார்களோ [கருதார் என்றபடி];
குலத்திலே இழி குலத்தர் ஆனவர் குறிப்பு இலாது-குலங்களுள்
இழிகுலத்திற்பிறந்தவர்களது இங்கிதக்குறிப்பு இல்லாமல், இவை பிறக்குமோ
– இப்படிப்பட்ட அக்கிரமச்செய்கைகள் உண்டாகுமோ? [உண்டாகா என்றபடி];
சலத்தினால் வினை இயற்றுவார்-வஞ்சனையாகத் தொழில் செய்பவர்கள்,
முடி தரித்த காவலரொடு ஒப்பரோ-கிரீடந்தரித்து அரசாளும் சிறந்த
அரசர்களுக்குச்சமானமாவர்களோ? [ஆகார் என்றபடி]; இனி – (இங்ஙனம் நீ
பற்பல துரோகங்கள் செய்த) பின்பு, நிலத்தில் வாழ்வு அவர் பெற கொடாய்
– இந்த நிலவுலகத்தில் அரசுபெற்றுவாழும் வாழ்க்கையைஅந்தப்
பாண்டவர்கள் பெறும்படி கொடுத்திடு; நினைத்த காரியம் முடித்தி –
நீஎண்ணிய காரியங்களை முடித்துக்கொள்; (எ – று.)
முதல்மூன்றடிகளிற் கூறியது நிந்தைவார்த்தையும், நான்காமடியிற்
கூறியதுநிட்டூரவார்த்தையுமாம். இப்படி பிழைசெய்தாலொழிய என்னைக்
கொன்றுபாண்டவர்க்கு வாழ்வைக்கொடுக்கவும், நீ எண்ணிய காரியத்தை
முடிக்கவும்ஆகாதென்னுங் கருத்துத்தோன்ற, ‘நிலத்தில் வாழ்வு அவர்
பெறக்கொடாய்,இனி நினைத்த காரியம் முடித்தி’ என்றான்.
‘நினைத்தகாரியம்’ என்றது,துரியோதனாதியர் நூற்றுவரையும்
பற்றறத்தொலைத்தல்: பூமிபாரநிவிருத்தியுமாம்.
போர்தோறும் கண்ணன் துரியோனனுக்குச் செய்த பிழையாவன:-
போர்த்தொடக்கத்தில் துரியோதனனுக்குப் போர்ப்பலியாதற்கு
உடன்பட்டிருந்தஇராவானைப் பாண்டவர்க்குப் போர்ப்பலியாகுமாறு
செய்தமை, துரியோதனன்போர்ப்பலிசெலுத்துதற்கு நாட்கொண்டிருந்த
அமாவாசையை முந்தினநாளிலேயே வருவித்து அதிற் பாண்டவர்
போர்ப்பலிசெலுத்தச்செய்தமை,மூன்றாம்போரில் எதிர்ப்பவரில்லையாம்படி
கடும்போர்செய்த வீடுமனையழித்தற்குச் சக்கரமேந்திக்கொண்டு சென்றமை,
பத்தாம்போரில் வீடுமன்முன்சிகண்டியைக்கொண்டு நிறுத்தி அவனெய்யும்
அம்புகளுடன் அருச்சுனனையும் அம்புசெலுத்தச்சொல்லி அவற்றால்
வீடுமனைச் சிதைத்தமை,பன்னிரண்டாம்போரில் பகதத்தன் அருச்சுனன்மேல்
எறிந்த தனதுவேற்படையைத் தான் முன்னின்று மார்பிலேந்திப்
பயன்படாதாக்கினமை,பதின்மூன்றாம் போர்நாளிரவில் மறுநாட்
செய்யவேண்டும் சைந்தவவதத்திற்காகஅருச்சுனனைக் கயிலைக்கு
அழைத்துக்கொண்டுபோய்அவனுக்குச்சிவபிரானைக்கொண்டு சிறந்த பல
ஆயுதங்களைக்கொடுப்பித்தமை, பதினான்காம்போரில் சுதாயுஅருச்சுனன்
மேலெறிந்த வரம்பெற்றகதாயுதத்தை நிராயுதனாகியதான் மார்பிலேற்று
அதனால் அவனைக்கொல்வித்தமை, அருச்சுனனுக்கு ஒருமந்திரமுபதேசித்து
அதன் பலத்தால்அவன் ஆயிரவாகுவைக் கொல்லச்செய்தமை, அருச்சுனன்
போர்செய்தற்குச்சோரும் சமயத்தில் தான் பாஞ்சசன்னியமென்னுஞ்
சங்கத்தை வாயில்வைத்துஊதி அதன்பெருமுழக்கத்தாற் சேனையை
மூர்ச்சிக்கச்செய்தமை,சூரியாஸ்தமனத்துக்கு முந்தியே சூரியனைச்சக்கரத்தால்
மறைத்து அப்பொழுதுவெளிப்பட்ட சயீத்திரதனையும் அவன் தந்தையையும்
ஒருங்கேஅருச்சுனனைக்கொண்டு கொல்வித்தமை, பதினைந்தாம்போரில்
அசுவத்தாமாஇறந்ததாகத் தருமனைக் கொண்டுகற்பனை வார்த்தை கூறுவித்து
அதுகேட்டதனால் துரோணன் படைக்கலமொழிந்து அழியச் செய்தமை,
தந்தையிறந்ததனால் அசுவத்தாமன் கோபங்கொண்டு தவறாத
நாராயணாஸ்திரத்தைப் பிரயோகித்தபொழுது பாண்டவரைநிராயுதராய்
வாகனமொழிந்து கீழ்நின்று வணங்கச்செய்து அதனினின்றுங் காத்தமை,
பதினேழாம்போரில் கர்ணன் நாகாஸ்திரம் பிரயோகித்தபொழுது
அருச்சுனனது தேரைப் பன்னிரண்டு அங்குலம் நிலத்திலழுந்தும்படி
அழுத்திஅதனால்அது அருச்சுன்ன் தலையாகிய இலக்கைத் தவறி அவனது
கிரீடத்தையிடறிய மாத்திரத்தோடு செல்லச் செய்தமை முதலியன காண்க.
இங்கே, ‘இழிகுலம்’ என்றது, இடைச்சாதியை. சந்திரகுலத்தில்
நகுஷனதுகுமாரனான யயாதி சுக்கிரசாபத்தால் கிழத்தனமடைந்து தனது
மூத்தகுமாரனான யதுவையும் அடுத்த குமாரர்களான துர்வசு துர்க்கியு அநு
என்பவர்களையும் தனித்தனி ‘உன் இளமையைக்கொடுத்து என்முதுமையைக்
கைக்கொள்’ என்று வேண்டி, அவர்கள் அதற்கு உடன்படாதொழிந்தபின்
கடைசிக்குமாரனான பூருவை வேண்ட, அவன் அதற்கு இணங்கி
மூப்பைப்பெற்றுக்கொண்டு யௌவநத்தைக் கொடுத்ததனால், அரசன்
மகிழ்ந்துதன் கருத்துக்கு இசையாத யது முதலிய மூத்தமக்கள் நால்வர்க்கும்
முடிசூடிஅரசாளுஞ் சிறப்பு இல்லையாகச்செய்து சிற்றரசாக்கி இளைய
மகனானபூருவைச் சகல பூமண்டலத்துக்கும் அதிபதியாக நிறுத்தி
முடிசூட்டிப்பட்டாபிஷேகஞ் செய்து வைத்திட்டான்; அக்குமாரர்களுள்
மூத்தவனாய்த்தனக்குரிய அரசாட்சியைத் தந்தையின் சாபத்தால் இழந்த
யதுவின் குலத்திற் பிறந்தவன் கிருஷ்ணன். இளையவனாய்த்
தனக்குரியதல்லாத அரசாட்சியைத் தந்தையின் அனுக்கிரகத்தாற் பெற்ற
பூருவின் குலத்திற் பிறந்தவன், துரியோதனன்; ஆகவே, முடிதரித்தரசாளுஞ்
சிறப்புத் துரியோதனன் குலத்தார்க்கு உண்டு: அச்சிறப்பு கண்ணன்
குலத்தார்க்கு இல்லை; இந்த உயர்வுதாழ்வுகளை உள்ளத்தில் கொண்டு,
‘சலத்தினால் வினையியற்றுவார் முடிதரித்தகாவலரொ டொப்பரோ’ என்றான்.
நீசெய்தாற்போலப் பிறர்செய்யா ரென்பதேயன்றிச் செய்ய
நினைக்கவும்மாட்டாரென அந்தத் துரோககாரியங்களின் இழிவை
விளக்கினான். கொடாய்,முடித்தி – ஏவலொருமை முற்றுக்கள்.
எனச் சில் வாசகம் மிழற்றி, மீளவும் எதிர்ப்பதாக எழல் உற்றபோது,
அனல் சகாயன் முன் அளித்த
காளை தன் அடல் சரோருக பதத்தினால்,
‘உனக்கு வாழ்வு இனி எனக் கொல் ஆம்” என உதைத்து,
மௌலியை உடைக்கவே,
சினத்து அலாயுதன் நிறத்த வாள் விழி சிவக்க, வாய்மை சில செப்புவான்:190.-வீமன் துரியோதனனைஉதைக்கப் பலராமன் சீறுதல்.
என-என்று, சில் வாசகம் – சிலவார்த்தைகளை, மிழற்றி –
வாய்குழறச்சொல்லி, (துரியோதனன்), மீளவும் எதிர்ப்பது ஆகி எழல்
உற்றபோது – மறுபடியும் (வீமனைத்தான்) எதிர்த்துப்பொருவதாகக் கருதி
யெழுந்திருக்கத் தொடங்கிய பொழுது,- அனல் சகாயன் முன்அளித்தகாளை
– அக்கினிக்குத் துணைவனான வாயுதேவன் முன்புபெற்ற புத்திரனான வீமன்,
இனி உனக்கு வாழ்வு என கொல் ஆம் என- இன்னமும் உனக்கு வாழ்க்கை
என்னோ? என்று (துரியோதனனை நோக்கிச்)சொல்லி, தன் அடல் சரோருக
பதத்தினால் – வலிமையையுடையதும்(செம்மையிலும் மென்மையிலும்) தாமரை
மலர் போல்வதுமான தனதுகால்களால், உதைத்து-, மௌலியை உடைக்க, –
தலையை உடைக்க,(அப்பொழுது), சினத்து அலாயுதன் – கோபகுணமுடைய
பலராமன், நிறத்தவாள் விழி சிவக்க – நிறத்தையுடைய ஒளியுள்ள கண்கள்
(கோபத்தால்)சிவக்க, சில வாய்மை செப்புவான் – சிலவார்த்தைகளைக்
கூறுபவனானான்;
மிழற்றுதல் – நிரம்பாதசொற்கூறுதல். காற்றையும்நெருப்பையும்
ஒருவர்க்கொருவர் நண்பராகக்கூறுதல், மரபு. சரோருகமென்றது – குளத்தில்
முளைப்பதென்று காரணப்பொருள்படும்; தாமரைக்குக் காரணவிடுகுறிப்பெயர்.
ஹல + ஆயுதன் = ஹலாயுதன்; கலப்பையைப்படைக்கலமாகவுடையவன்.
எவன் என்ற அஃறிணைப்பொது வினாவினைக்குறிப்புமுற்று, வகரம்கெட்டு
அகரச்சாரியைபெற்று ‘என்ன’ என நிற்கவேண்டுவது தொகுத்தலாய்,
எனவெனநின்றது. அதன் மேல் ‘கொல்’ என்ற அசைநிலையிடைச்
சொல்லின் முதல்வலி ‘எனக்கொல்’ என இரட்டிவந்தது, சந்தவின்பம்
நோக்கிய விரித்தல்விகாரத்தினாலாம்.
எம் பிரானை, முராரியை, மாயனை, இம்பர் ஏழ் கடல் சூழ்
புவிமேல் ஒரு
தம்பியா உடையான், அவனோடு எதிர் சந்தியா, வெகுளா,
விழி தீ எழ,
‘நம்பி! கேள்: அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர்
முன்னே, உடல்
கம்பியா விழ, ஊருவின் மோதுதல் கண்ட போது, எனது ஆர்
உயிர் போனதே.191.-பலராமன் கோபித்துக்கண்ணனோடு சிலகூறுதல்.
இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர்.
(இ -ள்.) எம் பிரானை – எமக்கெல்லாந் தலைவனும், முர
அரியை -முரனென்னும் அசுரனுக்குப் பகைவனானவனும், மாயனை –
மாயையையுடையவனுமான கண்ணபிரானை, ஏழ் கடல் சூழ் புவிமேல் –
ஏழுவகைக் கடல்களாற் சூழப்பட்ட பூலோகத்தில், இம்பர் – இத்
திருவவதாரத்தில், ஒருதம்பி ஆ உடையான் – ஒப்பற்ற தம்பியாகப்
பெற்றுள்ளவனான பலராமன், அவனோடு – அக்கண்ணபிரானுடனே, எதிர்
சந்தியா – எதிரிலே சமீபித்து, விழி தீ எழ வெகுளா – கண்களில்
நெருப்புப்பொறி கிளம்பக் கோபித்து,- நம்பி கேள் – தம்பீ! (நான்
சொல்வதைக்) கேட்பாயாக; அரியோடு உடன்மேவிய – பாம்புடன் கூடவே
பொருந்திய, நஞ்சு போலும் – விஷம்போன்ற, நரேசர் முன்னே –
அரசர்களுக்கு எதிரிலே, உடல் கம்பியா விழ -உடம்பு துடித்து விழும்படி,
ஊருவில்மோதுதல் – (வீமன் துரியோதனனைத்) தொடையிலே தாக்கியதனை,
கண்டபோது – பார்த்தபொழுது, எனது ஆர் உயிர் போனது – எனது அரிய
உயிர் (உடம்பைவிட்டு) நீங்கும் நிலையடைந்தது; (எ – று.) – ஈற்று ஏகாரம்-
தேற்றத்தோடு இரக்கம். அக்கவியில் உடையான் சந்தியாவெகுளா என்ற
சொற்கள், அடுத்கவியில் வரும் ‘ஓடினன்’ என்ற முற்றைக்கொண்டு முடியும்.
கொடியஅக்கிரமச் செய்கையைக் கண்ணெதிரிற் கண்டால் பெரியோர்
மனம் பொறாராதலாலும் அது மரண வேதனைக்குச் சமானமான வருத்தம்
விளைக்கு மாதலாலும், ‘எனது உயிர் நீங்கினாற்போலாயிற்று’ என்றான்.
அரியோடுடன் மேவிய நஞ்சுபோலும் நரேசர் – பகையழித்தலில் தவறாத
பராக்கிரமத்தாற் கொடியவரென்றபடி; யாவரிடத்தாயினும் குற்றம்கண்டபோது
கண்ணோட்டமின்றித் தண்டிப்பதில்கடியவரென்றவாறுமாம். அரி – ஹரி;
அகப்பட்ட பொருளையழிப்பது. எம்பிரானை, முராரியை, மாயனை என்ற
ஒருபொருட் பலபெயர்கள் – ‘உடையான்’ என்ற ஒரு முடிக்குஞ் சொல்லைக்
கொண்டன. திருமாலினது அம்சமும் ஆதிசேஷனது அம்சமுங்கூடிப் பிறந்த
பலராமன், பரமபதத்தில் எம்பெருமானது திருமேனியில் ஐக்கியமும்,
அப்பெருமானுக்குச் சகலவிதகைங்கரியங்களையுஞ்செய்யும்
நித்தியத்தொண்டனா யிருந்த நிலைமையும், இதற்கு முந்தியதான
ராமாவதாரத்தில் அப்பெருமானுக்குத் தான் தம்பியாகப் பிறந்திருந்த
தன்மையும்போலன்றி, இப்பிறப்பில் தமையனாகத் தோன்றியுள்ள
சிறப்புடையவனென்பார்’மாயனையிம்ப ரேழ்கடல் சூழ்புவி
மேலொருதம்பியாவுடையான்’ என்றார். சந்தியா – அருகில் வந்து, நம்பி –
அண்மைவிளி; ஆதலின், இயல்பாய்நின்றது;[நன் – பெயர் 56.] நம்பி –
ஆண்பாற் சிறப்புப்பெயர்: ஆடவரிற்சிறந்தவனென்று பொருள்: இதற்கு –
‘நம்முதனிலையாக நமக்குஇன்னானென்னும் பொருள்பட வருவதோர்
உயர்ச்சிச்சொல்’ என்று பொருளும்இலக்கணமுங்கூறியுள்ளார் ஆசிரியர்
நச்சினார்க்கினியர்: இப்பொருளில், பி -முறைப்பெயர் விகுதி. இனி,
யாவராலும் நம்பிச்சரணமடையத்தக்கவ னென்றும்பொருள்கொள்ளலாம்;
இப்பொருளில், இ – செயப்படுபொருள்விகுதி. இச்சொல்லுக்கு –
பூரணனென்று பொருள் கூறுதல், சம்பிரதாயம். நரேசர் – நர +
ஈசர்; மனிதர்க்குத் தலைவர். கம்பியா – கம்பமென்னும்வடமொழிப்
பெயரினடியாப்பிறந்த இறந்தகாலவினையெச்சம்; நடுங்கி யென்றுபொருள்.
இச்செய்யுள் – கீழ் 178 – ஆங் கவிபோன்ற கட்டளைக்கலிப்பா, தந்த
தானன தானன தானன தந்த தானன தானன தானன – என்பது இதற்குச்
சந்தக்குழிப்பு.
கதை எடுத்து உடற்றும் ஆடவர்கள் கடிதடத்தினுக்கு
மேல் ஒழிய,
அதிர்வு உறப் புடைப்பரோ, தொடையில்’ அடிபடத் துகைப்பரோ,
முடியில்’
எதிரியைச் சலத்தினால் என் விழி எதிர் வழக்கு அழித்த
பாவனனை
முதுகிடப் புடைப்பல் யானும்’ என, முசல கைத்தலத்தொடு
ஓடினனே.192.-பலராமன் வீரவாதங்கூறிவீமனோடு போர்செய்யத்
தொடங்குதல்.
கதை எடுத்து – கதாயுதத்தையேந்தி, உடற்றும் – போர்
செய்கிற, ஆடவர்கள் – வீரர்கள், கடிதடத்தினுக்கு மேல் ஒழிய இடைக்கு
மேல் அடிப்பதேயல்லாமல், தொடையில் -, அதிர்வு உற துடிப்புண்டாம்படி,
புடைப்பரோ – அடிப்பார்களோ? [அடியார் என்றபடி]; (அன்றியும்), முடியில்-
தலையில், அடி பட – கால்படும்படி, துகைப்பரோ – உதைப்பார்களோ?
[உதையார்என்றபடி]; (அங்ஙனமன்றி இப்பொழுது தொடையிலடித்தும்
முடியில்உதைத்தும்), எதிரியை – தன்பகைவனான துரியோதனனை,
சலத்தினால் -மாறுபாடுகொண்ட வயிரத்தால், என் விழி எதிர் – எனது
கண்ணெதிரிலே,வழக்கு அழித்த – நீதியின்றி அழித்திட்ட, பாவனனை –
வாயுகுமாரனானவீமனை, முதுகு இட யானும் புடைப்பல் –
புறங்கொடுக்கும்படி நான்தாக்குவேன், என – என்று சொல்லி, (பலராமன்),
முசல கைத்தலத்தொடு -உலக்கையை ஆயுதமாக ஏந்திய கையுடன்,
ஓடினன் – (வீமன்மேல்) விரைந்துசென்றான்; (எ – று.)
பலராமனுக்குக் கலப்பையேயன்றி உலக்கையும் உரிய
ஆயுதமெனவுணர்க. ஆடவர் – ஆண்மையையுடையவர். அதிர்வுற –
நடுங்க. அடி பட – ஊறுபட எனினுமாம். வழக்கழித்த – யுத்ததருமத்தை
அழியச்செய்த. எதிரி – எதிர்த்தவன்; இ – கருத்தாப்பொருள் விகுதி.
இச்செய்யுள் – முதற்சீரும் நான்காஞ்சீரும் கருவிளச்சீர்களும்,
இரண்டாஞ்சீருங் ஐந்தாஞ்சீரும் புளிமாச்சீர்களும், மூன்றாஞ்சீரும்
ஆறாஞ்சீரும்கூவிளங்காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
அறுசீராசிரியச்சந்தவிருத்தம்.-தனனனத் தனத்த தானனன தனனனத் தனத்த
தானனனஎன்பது, அதற்குச் சந்தக்குழிப்பு.
மதி இரவியோடு போர் செயுமாறு என, வலிய திறல் வீமன்மேல்
இவன் ஓடலும்,
இதய மலர்தோறும் மேவரு நாயகன் இவனை விரைவோடு போய்
விலகா, இரு
பதுமம் நிகரான தாள் பணியா, ‘மிகு பரிவினொடு சீறும் ஆண்மை
தகாது’ என,
அதி மதுர வாய்மையால், வெகுளாவகை, ‘அடிகள்! இவை கேண்மினோ!’
என, ஓதினான்:193.-பலராமனுக்குக் கண்ணன்சமாதானங் கூறத்
தொடங்கல்.
மதி – சந்திரன், இரவியோடு – சூரியனுடனே, போர் செயும்
ஆறு என – போர் செய்யச்செல்லும்விதம்போல, இவன் – பலராமன்,
வலியதிறல்வீமன்மேல் – வலிய வெற்றியையுடைய வீமன் மீது, ஓடலும் –
(போர்செய்தற்கு) விரைந்து நடந்தவளவிலே,- இதயம்மலர் தோறும்
மேவருநாயகன் – (பிராணிகளுடைய) உள்ளத்தாமரைமலர்களிலெல்லாம்
பொருந்தியுள்ள தலைவனான கண்ணபிரான், விரைவோடு போய் –
துரிதமாகச்சென்று, இவனை விலகா – இந்தப்பலராமனைத் தடுத்து,
பதுமம்நிகர் ஆனஇரு தாள் பணியா – தாமரைமலருக்கு ஒப்பான இரண்டு
பாதங்களிலும் விழுந்து நமஸ்கரித்து, வெகுளா வகை – (அவன்)
கோபங்கொள்ளாதபடி, அதிமதுரம் வாய்மையால் – மிகவும் இனிமையான
வார்த்தைகளால், மிகு பரிவினொடு சீறும் ஆண்மை தகாது என –
‘(துரியோதனன் பக்கலுள்ள) மிக்க அன்போடு ‘நீ கோபங் கொள்ளுந்திறம்
தகுதியன்று’ என்று சொல்லி, அடிகள் இவை கேண்மினோ என –
பெரியோய்! இவற்றைக்கேளும்’ என்றுங்கூறி, ஓதினான் – (சில)
சொல்பவனானான்; (எ – று.)
பலராமனது வெண்ணிறமும், அவனினும் வீமன் மிக்கவலிமை
யுடையானென்பதும் தோன்ற, பலராமன் வீமனொடுபோர் தொடங்குதற்குச்
சந்திரன் சூரியனோடு போர்தொடங்குதலை உவமைகூறினார்;
இல்பொருளுவமை. இதயமலர் – ஹ்ருதயகமலம்; “மலர்மிசை யேகினான்”
என்றபடி எல்லோருள்ளத்திலும் எம்பெருமான் குடிகொண்டிருப்பவ னென்க.
விலகா = விலக்கா; பிறவினைப்பொருளில் வந்த தன்வினை. மிகுபரிவு –
வரம்புகடந்த அன்பு. மிகுபரிவினோடு சீறும் என இயையும்.
மிகுபரிவினோடுஓதினான் என இயைத்துப் பாண்டவர்பக்கல்
மிக்ககருணையுடனே கண்ணன்கூறினானெனினும் அமையும். பத்மம்,
அதிமதுரம் – வடசொற்கள். வாய்மை- உண்மையான சொல். அடிகள் –
பாதா: என்னும் வடசொல்லின்மொழிபெயர்ப்பாய் நின்று பெரியோரைக்
குறிக்கும். அடிகள் கேண்மின்என்றது, உயர்வுப்பன்மை.
இச்செய்யுள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் கருவிளங்காய்ச்சீர்களும்,
இரண்டாஞ்சீரும் ஆறாஞ்சீரும் தேமாச்சீர்களும், மற்றைநான்கும்
கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்டஎண்சீராசிரியச்
சந்தவிருத்தம். தனனனன தான தானன தானன தனனனன
தான தானன தானன – என்பது, இதற்குச் சந்தக்குழிப்பு.
முகுரானனன் மைந்தனும் வீமனுமே முடியாத பெரும்
பகையாளர்கள் காண்;
மகிபாலர் திருந்து அவையூடு உரையா வழுவாதன வஞ்சினம்
ஓதி, நனி
இகல்வார்; சிலையின் குரு ஆனவர்தாம் இடு சாபமும் உண்டு;
திரௌபதியார்
பகர் சாபமும் உண்டு; அதனால், எதிரே படுமே, இவன் வெங்
கதையால் அவனே.194.-இதுவும், அடுத்த கவியும்- கண்ணன்கூறும்
சமாதானவார்த்தைகள்.
முகுர ஆனனன் மைந்தனும் – கண்ணாடிபோலும்
முகத்தையுடையவனான திருதராட்டிரனதுபுத்திரனாகிய துரியோதனும்,
வீமனும்-,(ஆகிய இருவரும்), முடியாத பெரு பகையாளர்கள் காண் –
(ஒருவரோடொருவர்) முடிவில்லாத மிக்க பகையையுடையவர்களன்றோ?
(அன்றியும்), மகிபாலர் திருந்து அவையூடு – அரசர்கள் அழகிதாகக்கூடியுள்ள
சபையிலே, உரையா – சொல்லுதற்கு அரிய, வழுவாதன – தவறாதவையான,
வஞ்சினம் – சபதவார்த்தைகளை, நனி – மிகுதியாக,ஓதி – (வீமன்)
கூறியுள்ளதனால், இகல்வார் – (இவ்விரண்டு பேரும்)
மாறுபட்டுப்பொருவார்கள்: (அன்றியும்), சிலையின் குரு ஆனவர்தாம் –
வில்வித்தையில்தேர்ந்த ஆசிரியரான மைத்திரேயர், இடு – (துரியோதனனுக்கு)
இட்ட, சாபமும்-, உண்டு – உள்ளது; (அதுவுமல்லாமல்), திரௌபதியார்
பகர்சாபமும் உண்டு – திரௌபதிதேவி கூறியுள்ள சாபமும் உள்ளது;
அதனால்- ஆதலால், இவன் வெம் கதையால் – இவ்வீமனது கொடிய
கதாயுதத்தால்,அவன் – துரியோதனன், எதிரே படுமே – எதிரிலே
இறந்தேதீர்வான்;(எ – று.)
துரியோதனனும் வீமனும் இளமைதொடங்கி ஒருவர்க்கொருவர்
தீராதவைரமுடையவ ரென்பது பிரசித்தமென்பதை முதலடி விளக்கும். காண்
என்ற ஏவலொருமைமுற்று, இடைச்சொல் தன்மைப்பட்டுத் தேற்றப்பொருளை
விளக்கும் குசீலவமுனிவரது குமாரரும் பராசரமுனிவரது மாணாக்கருமான
மைத்திரேயமுனிவர் பாண்டவர்கள் காமியவனத்தில் வசித்தபொழுது
அவர்களிடத்தினின்று வந்து துரியோதனனுக்கு இதோபதேசஞ்செய்ய,
அவன்அதனைக் கேளாமல் அவரைப் பரிகசித்தனனாதலால், அவர்
மிகவுங்கோபித்து’வீமனுடைய கதையினடியால் தொடை முறிந்து இறப்பாய்’
என்றுசபித்துச்சென்றனரென்பது வரலாறு. துரோணர் கிருபர் பரசுராமர்
என்பவர்போல இம்முனிவர் வில்வித்தையில் தேர்ந்தவ ரென்பது விளங்க,
‘சிலையின்குரு’ எனப்பட்டார். அன்றி, துரோணர் சபித்ததாகவும்
கூறுவதுண்டு. ஆனவர் – முதல்வேற்றுமைச்சொல்லுருபு. இடுசாபம்,
பகர்சாபம் -இறந்தகால வினைத்தொகைகள்.
இச்செய்யுள் – எல்லாச்சீர்களும் புளிமாச்சீர்களாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எண்சீராசிரியச் சந்தவிருத்தம். தனனா தனதந்தனனா
தனனாதனனா தனதந் தனன தனனா என்பது, இதற்குச் சந்தக்குழிப்பு.
அடியினிறுதியிலுள்ள குற்றெழுத்தை நெட்டெழுத்தாகவும் கொள்ளலா
மென்பதுயாப்புநூலார் கொள்கையாதலால், இரண்டாமடியில் ‘திநனி’ என
வந்தது. இனி,இதனை முதற்சீரும் நான்காஞ்சீரும் புளிமாங்கனிச்சீர்களும்,
இரண்டாஞ்சீரும்ஐந்தாஞ்சீரும் கூவிளச்சீர்களும், மூன்றாஞ்சீரும்
ஆறாஞ்சீரும் கூவிளங்காய்ச்சீர்களுமாகக்கொண்ட அறுசீராசிரியச்
சந்தவிருத்தமாக்கி, தனனானன தந்தனதானனனா தனனானன தந்தன
தானனனா எனச் சந்தக்குழிப்புக் காட்டுதலும்ஒன்று.
“முகுரானனன்மைந்தனும் வீமனு முடியாதபெரும்பகையாளர்கள்,மகிபாலர்
திருந்தவையூடுரைவழுவாதவன்வஞ்சினமோதினன்,இகல்வார்
சிலையின்குருவானவனிடுசாபமுமுண்டு திரௌபதி,பகர்சாபமு
முண்டதனாலெதிர் படுமேயவன்வெங்கதையாலிவன்” என்பது
சங்கப்பிரதியின் பாடம்: இதற்குச் சந்தக்குழிப்பு – தனனானன தந்தன
தானனதனனானன தந்தன தானன என்பது; அப்போது
அறுசீராசிரியச்சந்தவிருத்தமென்க.
வெஞ் சிலை விதுரன்அவனும் நீவிரும் மிஞ்சிய புனல்கள்
படிய ஏகினிர்;
பஞ்சவர்களொடு வயிரியாய் ஒரு பண்பு அற வினை செய் சமர
பூமியில் வஞ்சனை வழியில்
ஒழிய, நேர்பட வன்பொடு மறமும் அறமது ஆம் வகை,
எஞ்சிய பதினெண் வகைகொள் நாளினும், இன்று, அமர் பொருதது,
உரக கேதுவே.’
வெம் – (பகைவர்க்குக்) கொடிய, சிலை வில்லில் தேர்ந்த,
விதுரனவனும் – விதுரனும், நீவிரும் – நீரும், மிஞ்சிய புனல்கள் படிய –
மிக்கபுண்ணிய தீர்த்தங்களிலே ஸ்நாநஞ்செய்வதற்கு, ஏகினிர் – சென்றீர்கள்;
(இங்கு), பஞ்சவர்களொடு – பஞ்சபாண்டவர்களுடன், வயிரி ஆய் –
தீராப்பகைமை கொண்டவனாய், ஒரு பண்பு அற – தகுதி சிறிது மில்லாமல்,
வினைசெய் – போர்த்தொழிலைச் செய்த, சமர பூமியில் – யுத்தகளத்தில்,
உரககேது – பாம்புக்கொடியனான துரியோதனன், வஞ்சனை வழியில் ஒழிய-
வஞ்சகவழியினாலல்லாமல், நேர்பட – நேராக, வன்பொடு – வலிமையோடு,
மறமும் – பராக்கிரமமும், அறமது ஆம் வகை – தருமமாக அமையும்படி,
அமர் பொருதது – போர்செய்தது, எஞ்சிய பதினெண்வகை கொள் நாளினும்-
கழிந்த பதினெட்டு நாள்களுள்ளும், இன்றே – இப்பொழுதேயாம்; (எ – று.)
“விதுரனும் நீரும் இங்குப் போர்க்குநில்லாமல் தீர்த்தயாத்திரைசென்று
இப்பொழுதே மீண்டுவந்தீர்கள்” என்றதனால், இவ்வளவு நாளாய் இங்குநடந்த
போர்வகைகளின் நிலைமையை நீங்கள் அறியீர்; இங்கு உடனிருந்து கண்ட
நானே அறிவேன் என்றவாறு. இப்பொழுது உங்கள் கண்காணத்
துரியோதனன்செய்த போரொன்றொழிய இதுவரையிலும் பதினெட்டு
நாள்களிலும் அவன்செய்தும் செய்வித்தும் வந்த போர்களெல்லாம் அநீதி
நிறைந்தனவேயெனக்கூறிக் கண்ணன் பலராமனைச்
சமாதானப்படுத்துபவனானான். இவ்வளவு நாளாய் அவன்செய்த
அக்கிரமங்கள்பலவற்றையும் நோக்குமிடத்துஇவ்வளவு நாளாய்த்
தருமயுத்தமே செய்துவந்த பாண்டவருள் வீமன் இன்றுஒருபொழுது சிறிது
முறைபிறழச் செய்த இது பெரும்பிழையாகப்பாராட்டற்பாலதன்று என்பதாம்.
செய்யுளிறுதியிலுள்ள பிரிநிலையேகாரம்,பிரித்து ‘இன்று’ என்ற
இடைச்சொல்லோடு கூட்டப்பட்டது. இனி, ‘இன்று’என்பதை எதிர்மறை
யொன்றன்பாற் குறிப்புமுற்றாக்கொண்டு, துரியோதனன்பதினெட்டு
நாள்களிலுந் தருமயுத்தஞ்செய்ததில்லை யென்று உரைத்தல்,அத்துணையாச்
சிறவாது.
விதுரனவன், அவன் – முதல்வேற்றுமைச் சொல்லுருபு. நீவிர் – முதல்
வேற்றுமையில் மாத்திரமே வரும் முன்னிலைப்பன்மைப்பெயர்; [நன் –
பெயர்- 37.] விதுரனும் நீவிரும் ஏகினிர் – “முன்னிலைகூடிய படர்க்கையும்
முன்னிலை” என்றபடி வந்த இடவழுவமைதி. பஞ்சவர் – பஞ்ச என்னும்
வடசொல்லினடியாப் பிறந்த பலர்பாற்பெயர்; இங்கே, தொகைக் குறிப்பு:
பஞ்ச -ஐந்து. வயிரி – முதற்போலி. திருக்குறளில் பரிமேலழகர்
‘பண்பாவது -பெரும் சான்றாண்மைகளில் தாம் வழுவாதுநின்றே
எல்லாரியல்புகளும் அறிந்துஒத்து ஒழுகுதல்’ என உரைத்தது, இங்கு
அறியத்தக்கது. உரககேது -வேற்றுமைத்தொகையன்மொழி.
இச்செய்யுள் – ஒன்று நான்கு ஐந்து எட்டாஞ்சீர்கள் கூவிள்சீர்களும்,
மற்றைநான்கும் புளிமாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எண்சீராசிரியச்சந்தவிருத்தம். தந்தன தனன தனன தானன தந்தன தனன
தனன தானன – என்பது, இதற்குச் சந்தக்குழிப்பாம்.
வெற்றி புனை பலபத்ரராமனும் மெய்த் துணைவன் இவை
சொற்ற காலையில்,
மற்றை அநுசனொடு உற்ற நீள் களம் வட்டம் இட ஒர்
இமைப்பின் ஏகினன்;
அற்றை அடல் அமரில் சுயோதனன் அற்ப உயிர் நிலை நிற்ப,
நீடு உடல்
முற்றும் உகு குருதிக்கண் மூழ்குற, மொய்த்த கழுகின்
நிழற்கண் மேவினன்.196.-பலராமன் செல்ல,துரியோதனன் குற்றுயிராய்க் கிடத்தல்.
வெற்றிபுனை – சயத்தை அழகிதாகக்கொண்ட,
பலபத்ரராமனும்- பலராமனும், மெய் துணைவன் இவை சொற்ற காலையில் –
உண்மையன்புடைய தம்பியான கண்ணன் இவ்வார்த்தைகளைச்
சொன்னவளவில், மற்றை அநுசனொடு – மற்றொருதம்பியான சாத்தகியுடனே,
உற்ற நீள் களம் வட்டம் இட ஒர் இமைப்பின் ஏகினன் –
பொருந்தியபெரியபோர்க்களமாகிய அந்தச் சமந்தபஞ்சகத்தைப்
பிரதக்ஷிணஞ்செய்யுமாறு ஒருமாத்திரைப்பொழுதிலே சென்றான்; அற்றை
அடல்அமரில் – அன்றைத்தினத்தில் நடந்தவலியபோரில், சுயோதனன் –
துரியோதனன், அற்பம் உயிர்நிலை நிற்ப – தனது உயிர் உடம்பிற்
சிறிதளவேநிலைபெற்றிருக்க, நீடு உடல்முற்றும் – நீண்ட உடம்புமுழுவதும்,
உகுகுருதிக்கண் மூழ்குற – பெருகுகிற இரத்தத்திலே முழுகும்படி, மொய்த்த
கழுகின் நிழற்கண் – (அங்கு வந்து) சூழ்ந்த கழுகுகளின் நிழலிலே, மேவினன்
– கிடந்தான்; (எ – று.)
சிறந்த புண்ணியக்ஷேத்திரமாதலின், சியமந்தபஞ்சகத்தை வலஞ் செய்து
சென்றன னென்க. பலபத்ர னென்ற திருநாமம் – வடமொழியில்,
வலிமையினால் விளங்குகிறவ னென்று காரணப்பொருள்படும்.
இச்செய்யுள் – ஒன்று மூன்று ஐந்து ஏழாஞ் சீர்கள் தேமாச்சீர்களும்,
இரண்டு ஆறாஞ் சீர்கள் கருவிளச்சீர்களும், நான்கு எட்டாஞ்சீர்கள்
கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்டஎண்சீராசிரியச்
சந்தவிருத்தம். தத்த தனனன தத்ததானன தத்த தனனன தத்த
தானன – என்பது, இதற்குச் சந்தக்குழிப்பாம்.
மைந்தினால் பெரியோன் எனும் வாயுவின் மைந்தனால்
துரியோதனன் மா முடி
சிந்த, ஆர்த்தனர், நீள் திசை காவலர்; சிந்தி வாழ்த்தினர், பூமழை
தேவர்கள்; முந்த ஓட்டிய
தேரொடு காய் கதிர் மொய்ம்பன் மேல் கடல் மூழ்கினன்;
மாலை கொள்
அந்திவாய்த் தம பாசறை மேவினர், ஐந்து
பார்த்திவர்ஆனவர்தாமுமே.197.-சூரியன்அஸ்தமித்தலும், பாண்டவர் படைவீட்டுக்கு
மீளுதலும்.
மைந்தினால் பெரியோன் எனும் – வலிமையினாற்
பெரியவனென்று சொல்லப்படுகிற, வாயுவின் மைந்தனால் – வாயு குமாரனான
வீமனால், துரியோதனன் மா முடி சிந்த – துரியோதனனது பெரியதலை
சிதைய,(அதுகண்டு), நீள் திசை காவலர் – நீண்டதிக்குக்கள்தோறும் நின்று
காவல்செய்கிற திக்பாலகர்கள், ஆர்த்தனர் – மகிழ்ந்து ஆரவாரித்தார்கள்;
தேவர்கள்-, பூ மழை சிந்தி வாழ்த்தினர் – (வீமன்மேற்) பூமாரி சொரிந்து
வாழ்த்துக்கூறினார்கள்; காய் கதிர் மொய்ம்பன் – தபிக்கிற கிரணங்களின்
வலிமையையுடையசூரியன், முந்தஓட்டியதேரொடு – விரைந்து செலுத்துந்
தேருடனே, மேற்கு கடல் முழுகினன் – மேற்குக்கடலில் முழுகினான்
[அஸ்தமித்தானென்றபடி]; மாலை கொள் அந்திவாய் – அந்த அந்தி
மாலைப்பொழுதில், ஐந்து பார்த்திவர் ஆனவர்தாமும் – பாண்டவரைவரும்,
தமபாசறை மேவினர் – தமது படைவீட்டுக்குத் திரும்பிவந்தனர்;
பாசறை- பகைமேற்சென்றோர் உறையுமிடம்; பாடிவீடெனவும்படும்.
வீமன் பதினாயிரம் யானை பலங்கொண்டவ னாதலால், ‘மைந்தினாற்
பெரியோனெனும்’ என்ற அடைமொழி அவனுக்குக் கொடுக்கப்பட்டது;
அன்றி,இவ்வடைமொழி, கீழ் 181-ஆங் கவியில் “ஆநிலன் பலவான்”
என்றதைக்குறிப்பதுமாம். இவ்வடைமொழி, வாயுவோடு இயைத்தற்குந்தகும்.
முச்சுடர்களுள் முதற்சுடராகிய சூரியன் மற்றை இருசுடராகிய சந்திர
அக்கினியர்போலப் பதினாறு ஏழுகிரணங்களையே யுடையனாகாமல்
ஆயிரங்கிரணங்களோடுங் கூடி அவற்றுட் சிலவற்றை அவ்விருசுடர்க்குங்
கொடுத்து வாங்குந் தன்மையனாய்ச் சிறத்தலால், “காய்கதிர்மொய்ம்பன்”
எனப்பட்டான். மேற்கு + கடல் = மேல்கடல், “திசையொடு திசையும்”
என்னுஞ் சூத்திர விதி. சிலப்பதிகாரத்தில் ‘அந்திமாலைச் சிறப்புச்
செய்காதை’என்றாற்போல, ‘மாலைக்கொளந்தி’ என்றார்; அங்கு அந்திமாலை
என்பதற்கு -‘அந்திக்காலத்துமாலை’ என்று பொருள்கூறியுள்ளார்
அடியார்க்குநல்லார்.மாலையென்ற சிறப்புப் பெயர் முன்வந்ததனால், பின்
வந்த அந்திஎன்றசிறப்புப்பெயரைப் பொதுப்பெயர்ப்பொருளதாய்க்
காலமென்பது மாத்திரமாக்கிமாலைப்பொழுதெனப் பொருளுரைக்க,
‘மாலைகொளந்தி’ என்பது இனம்விலக்கவந்த அடைமொழி யென்றல், நேர்.
வாய் – ஏழனுருபு. தம, அ -ஆறனுருபு; “ஆறனொருமைக்கு அதுவும்
ஆதுவும், பன்மைக்கு அவ்வும்உருபாம்” என்ற வரையறை நியதியன்
றாதலால், இங்கு அகரவுருபு,பாசறையென வருமொழி ஒருமையாயிருக்கையில்
வந்தது; இனி இங்கு, அ -சாரியையென்றலும் ஒன்று, பிருதிவி – பூமி;
பிருதுவென்னும் அரசனாற்சீர்திருத்தப்பட்டது; பார்த்திவர் –
பிருதிவியையாள்பவர்.
இச்செய்யுள்-கீழ் 178-ஆங் கவிபோன்ற சந்தக்கட்டளைக்கலிப்பா.
தந்ததாத்தன தானன தானன தந்த தாத்தன தானன தானன – என்பது,
இதற்குச்சந்தக்குழிப்பு.
மிடல் மிஞ்சு மேவலர் வானிடை போதர, வினை வென்ற காவலர்
பாசறை சேருதல் கடன் அன்று’
எனா, முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு
அறியாவகை,
அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற, அவர் ஐந்து
வீரருமே வரவே, ஒரு
புடை தங்கு கானிடை போயினனால், நனி பொழி கொண்டல்போல்
திரு மேனி முராரியே.198.-பாண்டவர்களைக்கண்ணன் வேறு இடத்திற்கு
அழைத்துச் செல்லுதல்.
‘மிடல் மிஞ்சு – வலிமை மிக்க, மேவலர் – பகைவர்கள்,
வானிடை போதர – விண்ணுலகத்திலே செல்லும்படி
[இறந்துவீரசுவர்க்கமடையும்படி] வினை வென்ற – போர்த்தொழிலில் வெற்றி
கொண்ட, காவலர் – அரசர்கள், பாசறை சேருதல் – (அன்றைத்தினத்தில்)
படைவீடுசேர்ந்து அங்கு வசித்தல், கடன் அன்று – முறைமையன்று,’ எனா –
என்றுகூறி,- நனிபொழி கொண்டல் போல் திருமேனி முராரி – மிகுதியாக
மழைபொழிகிற நீர்கொண்ட காளமேகம் போன்ற அழகிய வடிவத்தையுடைய
கண்ணபிரான்,-மாமுனி மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு
அறியாவகை – சிறந்த துரோணகுமாரனான அசுவத்தாமனது வாட்படையின்
வலிமையைத்தான் சிந்தித்தறிந்த தனது தன்மையைப் பிறரெவரும்
அறியாதபடி(மறைத்து),-அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வு
உற -வெற்றிகொண்ட சேனைகள் யாவும் அப்பாசறையினிடத்தே
தங்கியிருக்க, அவர்ஐந்து வீரருமே வர – அந்தப் பாண்டவ வீரரைவர்
மாத்திரமே (தன்னோடு)வர, புடை தங்கு ஒரு கானிடை போயினன் –
பக்கத்திலே பொருந்தியதொருகாட்டினிடத்துச் சென்றான்; (எ – று.) –
ஆல்-ஈற்றசை.
துரியோதனன் தொடைமுறிந்து விழுந்து கிடப்பதைக் கண்டு இரங்கும்
அசுவத்தாமன், மனம் மிகக்கொதித்து, சூரியோதயத்துக்கு முன் பாண்டவர்
பாசறையிற்புகுந்து அவர்களையும் அவர்களைச் சேர்ந்தவ ரனைவரையும்
அழித்து மீள்வேனென்று துரியோதனனெதிரில் வீரவாதங்கூறிக்
கிருபாசாரியனையுங் கிருதவர்மாவினையுந் துணையாகக்கொண்டுசென்று தான்
சிவபெருமானிடம் பெற்றதொரு வாட்படையால் அனைவரையும் கொல்லக்
கருதுவான்; அதனைத் தனதுதெய்வத்தன்மையால் முந்தியுணர்ந்த கண்ணன்
பூமிபாரநிவிருத்திக்காக மற்றையோரையெல்லாம் அழிக்கவும் தனது பஞ்ச
பிராணன்களுக்கீடான பாண்டவ ரைவரைமாத்திரமே அழியாது மிகுத்தவும்
திருவுள்ளங்கொண்டவனாதலால், அந்த அசுவத்தாமன் செய்தியை
எவர்க்குங்கூறாமலே மறைத்துவிட்டுத் தான் வேறு வியாஜங்கூறிப்
பாண்டவரை மாத்திரம்பிறிதிடத்திற்கு அழைத்துச் சென்றன னென்பதாம்.
இங்ஙனம் பாண்டவர்பக்கல்வரம்புகடந்த திருவருளுடைமையும் விளங்க,
‘நனிபொழி கொண்டல்போல்திருமேனி முராரி’ என்றார்.
மேவலர் – விரும்பிச் சேராதவர்; எதிர்மறை வினையாலணையும்
பெயர்;மேவு – பகுதி, அல் – எதிர்மறையிடைநிலை, அர்-பலர்பால் விகுதி.
‘ஐந்துவீரருமே’ என்பதில், உம்மை – முற்றுப்பொருளது; ஏகாரம் – பிரிநிலை.
வீரரும் மேவர எனப்பதம் பிரித்து, வீரர்களுந்தன்னோடு பொருந்திவர என்று
உரைக்கவும் இடமுண்டு.
இச்செய்யுள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் புளிமாங்காய்ச்சீரும்,
மற்றையாறும் கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எண்சீராசிரியச்சந்தவிருத்தம்: தானன தனதந்ததானன தானன என்பது,
இதற்குச் சந்தக் குழிப்பு.
ஆன கமல மலர் வாவியிடையே முழுகி, ஆவி உதவு மறை யோக
பரன் ஆகி மொழி மான
கவச வர ராச துரியோதனனை, வாயு குமரன் முதிர் போரில் எதிர்
வீழும்வகை தான கரட
கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான்’ எனும் முன்,
வேகம் உற,
ஞான சரித குருவாகிய துரோணன் மகன் நாடு களம் அணுகினான்,
ஒரு விநாழிகையில். .199.-அசுவத்தாமன்துரியோதனனுள்ளவிடஞ் சார்தல்.
ஆன அழகியவையான, கமலம்-தாமரைகள், மலர்
மலரப்பெற்ற, வாவியிடையே – தடாகத்திலே, முழுகி -, யோக பரன்ஆகி-
யோகப்பயிற்சியில் ஊன்றியவனாய், ஆவி உதவு மறை – (இறந்தவர்க்கு
மீண்டும்) உயிரைத்தருகிற சஞ்சீவிநிமந்திரத்தை, மொழி – ஜபித்த, மான
கவசவரராச துரியோதனனை – மானத்தையே (தன்னைப்பாதுகாக்குங்)
கவசமாகக்கருதுகிற சிறந்த அரசனாகிய துரியோதனனை, முதிர் போரில் –
மிக்கபோரிலே,எதிர் வீழும் வகை – எதிரில் வீழ்ந்திடும்படி, தான கரடம்
கரிமாவை அரிமாபொருத தாயம் என – மதசலத்தையுடைய
கன்னங்களையுடைய யானையைச்சிங்கம் எதிர்த்தழித்தவகைபோல, வாயு
குமரன் – வீமன், உழறினான் -கலக்கினான், எனும் முன் – என்று (சிலர்)
சொல்லுமுன்னே,-வேதம் முனி ஞானசரித குரு ஆகிய துரோணன் மகன் –
வேதம் வல்ல முனிவனும்தத்துவஞானத்தையும் நல்லொழுக்கத்தையுமுடைய
வில்லாசிரியனுமானதுரோணனது புத்திரனாகிய அசுவத்தாமன், ஒரு
விநாழிகையில் -ஒருவிநாழிகைப் பொழுதிலே, நாடு களம் அணுகினான் –
ஆராய்ந்துகுறிக்கப்பட்ட அப்போர்க்களத்தை யடைந்தான்;
சிங்கம் வீமனுக்கும், யானை துரியோதனனுக்கும் உவமை; எளிதில்
அழித்தலும் அழிக்கப்படுதலுமாகிய இயல்பை விளக்கும். துரியோதனன்
நிலைமையைக் கேட்டவுடனே சிறிதுங்கால தாமதஞ் செய்யாமல் ஓடிவந்து
அவ்விடஞ் சேர்ந்தன னென்பதை அக்கிரமாதிசயோக்தி
[முறையிலுயர்வுநவிற்சி] யலங்காரவகையால், ‘உழறினானெனுமுன் நாடுகளம்
அணுகினான்’ என்றார். இப்பொழுது போர் செய்தற்குரிய இடம் யாதென்று
துரியோதனன் வினாவக் கண்ணன் ஆராய்ந்து கூறிய சிறந்த இடமாதலின்,
சியமந்தபஞ்சகம் ‘நாடுகளம் எனப்பட்டது. விநாழிகை –
ஒருநாழிகைப்பொழுதின் அறுபதில் ஒருபங்கு: காலநுட்பத்தைக் காட்டுதற்கு,
இதனை யெடுத்துக் கூறினார். “நிச்சயமெனுங் கவசந்தான் நிலைநிற்பதன்றி,
யச்சமென்னுமீ தாருயிர்க் கருந்துணையாமோ” என்றாற்போல இவன்
மானத்தையே எல்லாவற்றினும் முக்கியமாகக்கொண்டுள்ள இராசராசனாதலால்,
‘மானகவச வரராச துரியோதனன்’ என்றார், ‘வேதமுனி’ என்பது, துரோணன்
மகனுக்குஞ் சேர்க்கத்தகும். உழறினான் = உழற்றினான்; தன்வினை
பிறவினைப் பொருளில்வந்தது; சுழற்றி வருத்திப் புரட்டினா னென்றபடி.
இச்செய்யுள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் தேமாச்சீர்களும்
இரண்டாஞ்சீரும் ஆறாஞ்சீரும் கருவிளங்காய்ச்சீர்களும், மற்றை நான்கும்
கூவிளங்காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியச்
சந்தவிருத்தம். தான தனனனன தானனன தானனன தான தனனனன
தானனனதானனன என்பது, இதற்குச் சந்தக்குழிப்பாம்.
உரக துவசன் அயர்கின்ற ஆவியின் உணர்வொடு துயில்வது கண்டு,
பேர் உடல்
கரதல மலர்மிசை கொண்டு, வார் புனல் கலுழ்தரு விழியினன்,
நண்பினால், அமர்
பொரு களனிடை தன தந்தை வீடிய பொழுதினும் மனம் மிக
நொந்துளான், உயர்
சுரர்களும் உருக இரங்கினான், வரி தொடு சிலை விசைய
துரங்கதாமனே.200.-அசுவத்தாமன்துரியோதனனைக் கண்டு எடுத்துச்
சோகித்தல்.
உரக துவசன் – பாம்புக்கொடியனான துரியோதனன்,
அயர்கின்ற ஆவியின் – தளர்கின்ற உயிருடனே [குற்றுயிரோடு],
உணர்வொடுதுயில்வது-சிறிது அறிவோடு உறங்குவதை, கண்டு – பார்த்து,-
வரி தொடுசிலை விசய துரங்க தாமன் – கட்டமைந்த அம்பு தொடுத்தற்குரிய
வில்லின்தொழிலில் வெற்றியையுடைய அசுவத்தாமன்,-பேர் உடல் -(அவனது)
பெரியஉடம்பை, கரதலம் மலர்மிசை – தாமரைமலர்போன்ற தனது
கைகளினால்,கொண்டு – ஏந்திக் கொண்டு,-வார் புனல் கலுழ்தரு விழியின் –
மிக்கநீர்பெருகுகிற கண்களை யுடையவனாய்,- நண்பினால் -(அவனிடத்து
உள்ள) சிநேகத்தால், அமர் பொரு களினிடை தன் தந்தை வீடிய
பொழுதினும் மனம் மிக நொந்துளான் – போர்செய்யுங் களத்திலே
தன்னுடையதந்தையாகிய துரோணன் இறந்தபொழுது தான் அடைந்த
வருத்தத்தினும்அதிகமாக இப்பொழுது மனம் வருந்தியவனாய், சுரர்களும்
உயிர்உருகஇரங்கினான் – (காண்கிற) தேவர்களும் உயிர் கரையும்படி
அழுதான்; (எ – று.)
துயில்வது – மூர்ச்சித்துக்கிடப்பது என்றபடி; இது மங்கல
வழக்கின்பாற்படும். நண்பினால் மனம்மிக நொந்துளானென இயையும்.
இச்செய்யுள் – ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ் சீர்கள் கருவிளச்சீர்களும்,
மூன்று ஏழாஞ்சீர்கள் தேமாச்சீர்களும், நான்கு எட்டாஞ்சீர்கள்
கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியச்சந்த விருத்தம். தனதன தனனன தந்த தானன தனனன தனனன
தந்த தானன – என்பது, இதற்குச் சந்தக்குழிப்பாம்.
முனைத்தலை அழிந்து உடல் சோரவும், ‘யான் வினை முடிப்பன்!’
எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை,
அனைத்து உலகினும் குரு ஆன சராசனன் அளித்த முனி அன்புற
மார்பு தழீஇயினன்,
‘நினைத்த நினைவின்படியே மிகு போர் செய்து, நினக்கு அவனி தந்திட,
நீ தலைநாளினில்
எனைத் தனி தெளிந்திலை, யாதவன் மாயையின்!’ என, பரிவு கொண்டு,
சில் வாய்மைகள் கூறியே,201.-இதுமுதல் மூன்று கவிகள்- குளகம்: பாண்டவரை
இன்றிரவிற் கொல்வேனென்றுகூறி அசுவத்தாமன்
துரியோதனனிடம் விடை பெறுதல்.
முனைத்தலை – போர்க்களத்திலே, உடல் அழிந்து
சோரவும் -உடம்பு சிதைந்து தளரவும், யான் வினை முடிப்பன் எனும் –
‘நான் கருதியதொழிலை [பாண்டவரைக்கொல்லுதலை] நிறைவேற்றக்கடவேன்’
என்றுஎண்ணுகிற, நெஞ்சு உடை – வன்மனத்தையுடைய, வாள் வய வீரனை
-ஆயுதவலிமையையுடையவீரனான துரியோதனனை, அனைத்து உலகினும்
குருஆன சராசனன் அளித்த முனி – எல்லாவுலகங்களிலும் குருவென்று
பிரசித்திபெற்ற வில்வித்தையில் வல்லவனாகிய துரோணன் பெற்ற
புதல்வனானஅசுவத்தாமன், அன்பு உற – அன்புமிக, மார்பு தழீஇனன் –
மார்பிலேஅணைத்துக்கொண்டு, ‘நினைத்த நினைவின்படியே – நீ எண்ணிய
எண்ணத்தின்படியே, மிகு போர்செய்து – மிக்கபோரைச் செய்து, நினக்கு
அவனிதந்திட – உனக்கு (நான்) பூமி முழுதையும் உரியதாகக்
கொடுத்திடும்படி,நீ-, தலைநாளினில் – முற்காலத்தில், எனை – என்னை,
யாதவன் மாயையின் -கண்ணன்செய்த மாயையால், தனி தெளிந்திலை –
தனியே நம்பினாயில்லை’என – என்று, பரிவுகொண்டு சில் வாய்மைகள்
கூறி – அன்பு கொண்டு சிலவார்த்தைகள் சொல்லி, (எ – று.)-‘கூறி’ யென்ற
வினையெச்சம், 203-ஆங்கவியில் மூன்றாம் அடியில் வரும் ‘என’ என்ற
வினையெச்சத்தைக்கொள்ளும்.
அசுவத்தாமனைத் துரியோதனன் சேனாபதியாக்கினால்
அவனையழித்தல்எவராலுமாகாதே யென்று பாண்டவர் கவலைப்பட்டதைத்
திருவுளத்திற்கொண்டு, கண்ணன், துரியோதனனிடம் தூதுசென்று
மீளும்பொழுது, (விசுவரூபத்தின்பின்), சபையாரனைவருங்காண
அசுவத்தாமனைத் தனியேயழைத்துச் சென்று அவனோடு சில
பேசிக்கொண்டிருக்கையில் தனது கைம்மோதிரத்தைக் கீழே நழுவவிட,
அதனை அவன் எடுத்துக்கொடுக்கையில் கண்ணன் ‘சூரியனைப் பரிவேஷம்
சூழ்ந்துள்ளதுபார்’ என்று சொல்லி அவன் சூரியனைப் பார்த்தபின்
மோதிரத்தை வாங்கிக் கொண்டான்; இதனால், பிறன் கைம்மோதிரத்தைத்
தான் வாங்கிப் பூமியைத்தொட்டு ஆகாயத்தை நோக்கிச் சூரியன் சாட்சியாகச்
செய்துகொடுப்பதாகிய ஒரு பிரதிஜ்ஞையை அசுவத்தாமன்கண்ணனுக்குச்
செய்துகொடுத்ததாகப் பார்ப்பவர்க்குத் தோன்றிற்று; அதனால்,
துரியோதனாதியர் யாவர்க்கும் அசுவத்தாமனிடத்தில் நம்பிக்கை
போய்விட்டது. இங்ஙனம் கண்ணன் அப்பொழுது செய்த சூழ்ச்சியைக்
குறித்து இங்குஅசுவத்தாமன் ‘நீ தலைநாளினில் எனைத்தனிதெளிந்திலை
யாதவன்மாயையின்’ என்றான். “தனிவந் தகலுந் தூதனைப் போய்த் தானே
யணுகித்தடஞ்சாப, முனிவன் புதல்வன் மோதிரந் தொட்டருஞ்சூள்முன்னர்
மொழிகின்றா, னினிவந் துறவாய்நின்றாலு மெங்ஙன் தெளிவதிவனையெனத்,
துனிவந் தரசர்முகநோக்கிச் சொன்னா னிடியேறன்னானே”என்ற கிருட்டிணன்
தூதுசருக்கத்துச் செய்யுள் இங்கே காணத்தக்கது. நீஎன்னிடத்து
நம்பிக்கைகொண்டு என்னைச் சேனாதிபதியாக்கியிருந்தால் நான்எனது
திறமைமுழுதையுங் காட்டி மிக்க ஊக்கத்தோடு பெரும்போர்செய்துயாவரையும்
அழித்து அரசாட்சி முழுவதையும் உனக்கேநிலைநிறுத்தியிருப்பேன் என்று
கூறினான். பரிவு – கழிவிரக்கமுமாம். முதலடியால், துரியோதனனது
தீராப்பகைமையும் அடங்காத்துணிவும் விளங்கும்.
சராஸநம் – சர அஸநமெனப் பிரிந்து அம்புகளைத்தள்ளுவதென்றும்,
சரஆஸந மெனப் பிரிந்து அம்புகளுக்கு இடமாவதென்றுங் காரணப்
பொருள்படும். தழீஇனன் – தழுவினன் என்பதன் அளபெடை; சொல்
விகாரப்பட்டு அளபெடுத்ததனால், இது சொல்லிசையளபெடை.
இச்செய்யுள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் கருவிளங்காய்ச்சீர்களும்,
மற்றையாறும் கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எண்சீராசிரியச்சந்தவிருத்தம். தனத்தனன தந்தன தானன தானன
தனத்தனனதந்தன தானன தானன – என்பது இதற்குச் சந்தக்குழிப்பாம்
“அருள் உற வழக்கு அழிவு உறாததொர் மாற்றமும், அறனுடன்
அழுக்கறல் அணுகுறா ஏற்றமும்,
இரு நிலம் மதித்திட, இனிது கோல் ஓச்சுதல் இயல்பு நிருபர்க்கு”
எனும் முறைமையோ பார்த்திலை;
நரை கெழு முடித் தலை என் பிதா, மீப் படு நதி மகன், முறித்த
வில் விதுரனேபோல் பல
குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை; குரு மரபினுக்கு ஒரு
திலகமாம் மூர்த்தியே!
குரு மரபினுக்கு – குருகுலத்துக்கு, ஒரு திலகம் ஆம் – ஒரு
திலகம்போல அழகுசெய்துசிறக்கிற, மூர்த்தியே – பெருமையுடையவனே!
அருள் உற – கருணை பொருந்த, வழக்கு அழிவு உறாதது – இராசநீதி
அழியப்பெறாததான, ஓர் மாற்றமும் – ஒப்பற்ற சொல்லையும், அறனுடன் –
தருமத்தோடுகூடி, அழுக்காறு அணுகுறா – பொறாமைஅணுகப்பெறாத,
ஏற்றமும் – உயர்வையும், இரு நிலம் மதித்திட – பெரிய உலகத்திலுள்ளார்
கொண்டாடும்படி, இனிது கோல் ஓச்சுதல் – (யாவர்க்கும்) இனிமையாகச்
செங்கோல் செலுத்தல், நிருபர்க்கு இயல்பு – அரசர்களுக்குரிய இயற்கை,
எனும் – என்கிற, முறைமையோ – ஒழுங்கையோ, பார்த்திலை – சிறிதும்
நோக்கினாயில்லை; நரை கெழு முடி தலை – நரைத்தல்பொருந்திய
மயிர்முடியையுடைய தலையையுடைய, என் பிதா – எனது தந்தையான
துரோணனும், மீ படு நதி மகன் – மேலுலகத்திற் பொருந்திய
ஆகாசகங்காநதியின் குமாரனான பீஷ்மனும், முறித்த வில் விதுரனே –
ஒடித்தெறிந்த வில்லையுடைய விதுரனும், போல் – என்னும் இவர்போன்ற,
பல குரவரும் – மற்றும் பலபெரியோர்களும், உரைத்த – சொன்ன, சொல்
உறுதி – உறுதிமொழிகளை, நீ கேட்டிலை – நீ கேட்டு அவற்றின்படி
நடந்தாயில்லை; (எ – று.)
அருள்நீதி முறைமை இன்சொல் அறம் என்னும் இவை அடைதற்கு
உரியவை என்றும், கடுஞ்சொல் அதருமம் பொறாமை கொடுங்கோன்மை
என்னும் இவை அடைதற்குரியவையல்ல என்றும் சிறிதும் உணராமல், நீ
அருளின்றி நீதியழிந்து கடுஞ்சொற்கூறி அறத்தைக் கைவிட்டுப் பொறாமை
பூண்டு பழிப்படைந்து கொடுங்கோல் செலுத்தினாய்; இங்ஙனம்
தானறியாமையோடு அறிவுடைய பெரியோர் பலர் நீதிபோதிக்கக் கேட்டு
அவற்றின்படி நடவாமல் அவற்றை யிகழ்தலுஞ்செய்தாய்; ஆதலின்,
இப்படிப்பட்ட இழிவான நிலைமையை யடைந்தாயென்றபடி. அறிவினாலும்
ஒழுக்கத்தாலுமாகிய முதிர்ச்சியோடு பிராயமுதிர்ச்சியையு முடைமையைக்
காட்டுவான், ‘நரைகெழுமுடித்தலை’ என்ற அடைமொழிகொடுத்தான். இந்த
அடைமொழி, துரோணன் வீடுமன் விதுரன் என்ற மூவர்க்கும் உரியது.
அருளாவது – தொடர்புபற்றாது இயல்பாக எல்லாவுயிர்களின் மேலும்
செல்வதாகிய கருணை. வழங்குவது வழக்கு என ஏதுப்பெயர். அழுக்காறு
எனினும், அழுக்கறுத்தலெனினும் ஒக்கும்; அழுக்காறு – அழுக்கறு என்ற
முதனிலை திரிந்ததொழிற்பெயர். அழுக்கறு – ஒருசொல்; அழுக்கு அறு
எனப்பிரித்து, குற்றத்தை நீக்குதலெனப் பொருள்தரக்கூடிய இது –
குற்றமுடையனாதலென்ற பொருளை யுணர்த்துதலை எதிர்மறையிலக்கணை
யென்றலுமுண்டு. “கொடுப்பதழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ, முண்பதூஉ
மின்றிக் கெடும்” என்றபடி அழுக்காறு தன்னையுடையாரையேயன்றி அவரைச்
சார்ந்தாரையும் அழிக்கும் மிக்ககொடுங்குணமாதலால், இது சமீபத்திலும்
வரவொட்டாதபடி அஞ்சப்படுவ தென்பது தோன்ற, ‘அழுக்காறணுகுறா
வேற்றம்’ எனப்பட்டது. நிலம் – இடவாகுபெயர். அரசனாற் செய்யப்படும்
நிஷ்பட்சபாதமான முறைமை ஒருபாற் கோணாது செவ்வியகோல்போலுதலால்,
கோலென்றும், செங்கோலென்றுங் கூறப்படும். முறைமையோ, ஓ – உயர்வு
சிறப்போடு, கழி விரக்கம். நரை – மயிர்வெளுத்தல், முதனிலைத்
தொழிற்பெயர் முறித்தவில் விதுரன் – வில்முறித்த விதுரன். குரவர் – குரு
என்பதன் பன்மையானகுரவ: என்னும் வடசொல்லின் திரிபு. சொல் உறுதி –
சொற்களிலுள்ள நல்ல நீதி. திலகம் – நெற்றிப் பொட்டு. திலகமாம்
மூர்த்தி -திலகரூபமாயிருப்பவனென்க.
இச்செய்யுள் – நான்காஞ்சீரும் எட்டாஞ்சீரும் கூவிளச்சீர்களும்,
மற்றையாறும் கருவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட
எண்சீராசிரியச்சந்தப்போலிவிருத்தம்.
தனனனதனத்தன தனனனா தாத்தன தனனன தனத்தன தனனனா
தாத்தன – என்ற சந்தக்குழிப்பு. ‘உறாததோர்’, ‘அழுக்காறு’, ‘என்பிதா’
என்றஇடங்களில் ஒத்துவராததால், இது சந்தமாகாகது சந்தப்போலியாயிற்று.
‘உறலிலோர்’, ‘அழுக்கறவணுகுறா’, ‘எனபிதா’ என்று பாடங்கொள்ளின்
சந்தத்துக்கு ஒக்கும்.
இடி இடித்திடு சிகரிகள் ஆம் என எறி மருச்சுதன் முதல்
இகலோர் தலை
துடிதுடித்திட, அவர் அவர் சேனைகள் துணிபடப் பொருது,
எழு புவி நீ பெற,
விடிவதற்கு முன் வருகுவன் யான்’ என, விடை கொடுத்தனன்,
அரவ விலோதனன்,
முடிமிசைத் தனது உடைய சிகாமணி முனிமகற்கு இனிது அருள்
செய்து, மீளவே.203.-அசுவத்தாமன்சபதஞ்செய்யத் துரியோதனன்
சிகாமணியளித்தல்.
இடி இடித்திடு சிகரிகள் ஆம் என – இடிவிழப்பெற்ற
மலைகள்போல, எறி மருத் சுதன் முதல் இகலோர் தலைதுடிதுடித்திட –
கதாயுதங்கொண்டு தாக்குகிற வாயுகுமாரனான வீமன் முதலிய
பகைவர்களுடைய தலைகள் பதைபதைத்துவிழும்படியாகவும், அவர் அவர்
சேனைகள் துணிபட – அந்தந்தப் பகைவீரர்களுடைய சேனைகள்
துண்டுபடும்படியாகவும், எழு புவி நீ பெற – ஏழுதீவுகளாகவுள்ள பூமி
முழுவதையும் நீ பெறும்படியாகவும், விடிவதற்கு முன் – இவ
விரவுகழிவதற்குமுன்னே, பொருது – போர்செய்து, யான் வருகுவன் – நான்
மீண்டுவருவேன், என – என்று (அசுவத்தாமன்) சொல்ல,- அரவம்
விலோதனன் – பாம்புக்கொடியையுடையவனான துரியோதனன், தனது
உடையமுடி உடைசிகாமணி – தன்னுடைய கிரீடத்தின் மேலணிவதான
சிரோரத்தினத்தை, முனிமகற்கு – துரோணபுத்திரனான அசுவத்தாமனுக்கு,
இனிது அருள் செய்து – மகிழ்ச்சியோடு கொடுத்து, மீள விடை கொடுத்தனன்
– (போய் வெற்றியோடு) திரும்பி வரும்படி அனுமதிகொடுத்தனுப்பினான்;
(எ -று.)
இவ்விரவு கழிவதற்குமுன் நான் சென்று போர்செய்து பகைவர்
யாவரையும் அழித்துப் பாண்டவர் தலையைக் கொய்துவருவேன்; நீ
பின்பு நிலவுலகமுழுவதையும் தனியரசாட்சி செய்யலாம் என்று
அசுவத்தாமன்கூறக்கேட்டுத் துரியோதனன் மகிழ்ச்சிகொண்டு தனது
தலையிலணிவதொரு சிறந்த இரத்தினாபரணத்தை அவனுக்கு வெகுமதியாகக்
கொடுத்து அனுப்பினனென்பதாம். சிகரம் – உச்சி; அதனையுடையது, சிகரீ.
மருத்ஸு தன் என்ற வடசொல், திரிந்தது.
இச்செய்யுள் – முதற்சீரும் ஐந்தாம்சீரும் புளிமாச்சீர்களும்,
மூன்றாஞ்சீரும் ஏழாஞ்சீரும் கருவிளச்சீர்களும், மற்றைநான்கும்
கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்டஎண்சீராசிரியச்
சந்தவிருத்தம். தனன தத்தன தனனன தானன தனன தத்தன
தனனன தானன – என்பது, இதற்குச் சந்தக்குழிப்பு.
பூசுரர் பெருந் தகை பரித்தாமா, இரியல் போன கிருபன், கிருதபத்மா,
மூவரும், முன்
வாசவன், விரிஞ்சன், உமை பத்தா, மாயன், முதல் வானவர் வழங்கிய
வயப் போர் வாளிகளின்,
ஆசுகன் மகன்தனையும், அப்போதே, துணைவர் ஆனவரையும் தலை
துணிப்பான் நாடி, அவர்
பாசறை புகுந்தனர், பரித் தேர் யானையொடு, பாரதம் முடிந்த
பதினெட்டாம் நாள் இரவே.204.-அசுவத்தாமனும் கிருபனும்கிருதனும் பாண்டவர்
பாசறை சேர்தல்.
பூசுரர் பெருந்தகை – அந்தணர் தலைவனான, பரித்தாமா-
அசுவத்தாமனும் இரியல் போன – (முன்பு பகைவர்க்குத்) தோற்றோடின,
கிருபன் – கிருபாசாரியனும், கிருதவன்மன் – கிருதவர்மாவும், மூவரும் –
ஆகிய மூன்று பேரும்,- முன் – முன்பு, வாசவன் – இந்திரனும், விரிஞ்சன்-
பிரமனும், உமை பாகன் – உமாதேவியை இடப்பக்கத்திலுடைய சிவபிரானும்,
இவர் முதல – (என்னும்) இவர்கள் முதலிய, வானவர் – தேவர்கள்,
வழங்கிய- கொடுத்துள்ள, விதம் – பலவகைப்பட்ட, போர் வாளிகளின் –
போர்செய்யவல்ல அம்புகளால் [அஸ்திரங்களால்], ஆசுகன் மகன்தனையும்-
வாயுகுமாரனான வீமனையும், துணைவர் ஆனவரையும் – (அவனது) உடன்
பிறந்தவரான மற்றைய பாண்டவர்களையும், அப்போதே – அப்பொழுதே,
தலைதுணிப்பான் – தலையறுத்து விடுமாறு, நாடி – எண்ணி, பரிதேர்
யானையொடுபாரதம் முடிந்த பதினெட்டாம் நாள் இரவு – குதிரைகள்
தேர்கள் யானைகள்என்பவைகளோடு பாரதயுத்தம் முடிந்த பதினெட்டாம்
போர் நாளின்இராத்திரியில், அவர் பாசறை புகுந்தனர் – அந்தப்
பாண்டவர்களுடையபடைவீட்டைச் சேர்ந்தார்கள்; (எ – று.)
‘பரித்தேர் யானையொடு பாரதம் முடிந்த பதினெட்டா நாளிரவு’
என்றதனால், அப்பொழுது பாண்டவர் பக்கத்தில் கசரததுரகங்களாகிய
சேனைகள்யாவும் ஒழிந்திட வீரர்கள் மாத்திரமேசிலர் மிச்சமாயுள்ளாரென
விளங்கும். விரிஞ்சி – பஞ்சபூதங்களையும் படைப்பவனென்றும்,
அன்னப்பறவையாற் சுமக்கப்படுபவனென்றும் அவயவப் பொருள்படும்.
பார்வதீதேவி ஐந்து பிராயமானவுடனே பரமசிவனை
மணஞ்செய்வதற்குத்தவஞ்செய்யவிரும்பியவளாய்த் தன் கருத்தைப்
பெற்றோருக்குத்தெரிவிக்கையில் இமயமலை யரையனும் அவன் மனைவியான
மேனையுமாகியஅத்தந்தைதாயர்களால் மறுக்கப்பட்டதனால், அவளுக்கு
உமையென்று ஒருபெயருண்டாயிற்று; உ, மா என்பதற்கு – அம்மா,
வேண்டாம் என்று பொருள். முதலடியில் கிருதபத்மா என்றும்,
இரண்டாமடியில் ‘உமைபத்தாமாயனிவர்,’வயப்போர்’ என்றும்,
மூன்றாமடியில், ‘தலை துணிப்பமென’ என்றும் பாடம்.
இச்செய்யுள் – பெரும்பாலும் மூன்றாஞ்சீரும் ஏழாஞ்சீரும்
மாச்சீர்களும்,மற்றையாறும் காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்டஎண்சீராசிரியச் சந்தப்போலிவிருத்தம். தானனன தந்தனன தத்தா
தானனனதானனன தந்தனன தத்தா தானனன-என்ற சந்தக்குழிப்பு
பெரும்பாலும் ஒத்துச்சிறுபான்மை ஒவ்வாமையால், இது சந்தமாகாது
சந்தப்போலியாம்.
வேல் அமர் தடக் கை வீரர் இப் பாடி- வீடு சென்று அணைதலும்,
புறத்து ஓர் ஆல் அமர்
சினையில் பல் பெருங் காகம் அரும் பகல் அழிந்த கூகையினால்,
சாலவும் இடருற்று அலமரக்
கண்டு, தம்மிலே முகம் முகம் நோக்கி,
‘காலமும் இடனும் அறிந்து அமர் செகுத்தல் கடன்’ எனக்
கருதினர் அன்றே.1.-அசுவத்தாமன் முதலியமூவரும் காலமறிதல்.
வேல் அமர் – வேலாயுதம் பொருந்திய, தட கை – பெரிய
கையையுடைய, வீரர் – வீரர்களான அசுவத்தாமன் முதலியோர், இ பாடி வீடு
சென்று அணைதலும் – பாண்டவர்களுடைய படை வீட்டைப் போய்ச்சேர்ந்த
வளவிலே,-புறத்து – (அப்படைவீட்டுக்கு) வெளியில், ஓர் ஆல் அமர்
சினையில் – ஒரு ஆலமரத்திற் பொருந்திய கிளையிலே, பல் பெரு காகம் –
பல பெரிய காக்கைகள், அரு பகல் அழிந்தகூகையினால் – பகற் பொழுதில்
வருந்திய கோட்டானினால், சாலவும் இடர் உற்று அலமர – மிகவுந்
துன்பமடைந்து வருந்த, கண்டு – (அதனைப்) பார்த்து,-தம்மிலே முகம் முகம்
நோக்கி – தங்களுள்ளே (ஒருவர் ஒருவருடைய) முகத்தைப் பார்த்துக்
கொண்டு,காலமும் இடனும் அறிந்து அமர் செகுத்தல் கடன் என கருதினார்
-‘காலத்தையும் இடத்தையும் அறிந்து போரிற் பகையழித்தல் கடமை’ என்று
அறிந்துகொண்டார்கள்; (எ – று.) – அன்றே – ஈற்றசை; அப்பொழுதே
எனினுமாம்.
இரவில் தாங்கள் செல்லும் வழியில் ஒருமரத்தின்மேல் பல
காக்கைகளைக் கோட்டான் காலமறிந்து அழித்தலைக் கண்ணுற்று அதனால்,
பகைவெல்லும் வீரர்க்கு அதற்கேற்ற காலம் இன்றியமையாதென்பதை
மனத்திற்கொண்டன ரென்பதாம். காக்கை தன்னினும் வலிய கோட்டானுக்குப்
பகற்பொழுதில் கண்தெரியாதாதலால் அச்சமயம்நோக்கி வெல்லுதலும்,
காக்கைக்கு இரவிற் கண்தெரியாதாதலால் அச்சமயம் நோக்கிக் கோட்டான்
காக்கையை வெல்லுதலும் இயல்பு; “பகல் வெல்லுங் கூகையைக் காக்கை
இகல்வெல்லும், வேந்தர்க்கு வேண்டும் பொழுது” என்ற திருக்குறள் இங்கு
அறியத்தக்கது. இனமாதலின், இடமறிதலும் உடன் கூறினார். பகைவர்
யாவரும்சிந்தையின்றித் துயிலும் இரவில் அவர்களைப்படைவீட்டிலேயே
அழித்திடுதற்குத் துணிந்தன ரென்றவாறு. கூகை -கூஎன்று கூவுவது; கூக
என்பதன் திரிபு, என்பர் ஒருசாரார்.
இதுமுதற் பதினேழு கவிகள் – பெரும்பாலும் இரண்டு நான்கு
ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கு விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்.
உரத்து வாரணங்கள் மதம் மிகுத்தென்ன ஊக்கமோடு
ஒன்றையும் மதியார்,
புரத் துவாரத்துப் புகுதலும், வெகுண்டு, பொங்கு அழல் போல்வது
ஓர் பூதம்,
பரத்துவாசனையும், மாதுலன் கிருத-பன்மன் என்று இவரையும்,
முனைந்து,
கரத்து வார் சிலையும், கணைகளும் முறித்து, கடவு திண்
தேர்களும் கலக்கி,2.-ஒருபூதம் இவர்களைவலியழித்துத் தடுத்துவிடுதல்.
இதுவும், அடுத்த கவியும் – குளகம்.
(இ -ள்.) உரத்து – (இயல்பில்மிக்க) வலிமையையுடைய, வாரணங்கள்-
யானைகள், மதம் மிகுத்து என்ன – மதம்மிகப்பெற்றாற்போல, ஊக்கமோடு-
மிக்கபோர்க்களிப்புடன், ஒன்றையும் மதியார் – யாதொன்றையும்
லக்ஷ்யஞ்செய்யாதவர்களாய், (அசுவத்தாமன் முதலிய மூவரும்), புரம்
துவாரத்துபுகுதலும் – அப்படைவீட்டின்வாயிலிலே நுழையுமளவில்,-பொங்கு
அழல்போல்வது ஓர் பூதம் – தாவியெரிகிற நெருப்புப் போல்வதொரு
[மிகக்கொடிய]பூதமானது, வெகுண்டு – கோபங்கொண்டு (வந்து),
பரத்துவாசனையும் -பரத்துவாசகுலத்துப் பிறந்தவனான அசுவத்தாமனையும்,
மாதுலன் கிருதபன்மன்என்ற இவரையும் – (அவனது) மாமனான கிருபன்
கிருதவர்மா என்றஇவர்களையும், முனைந்து – எதிர்த்துப்பொருது, கரத்து –
அவர்கள்கைகளிலுள்ள, வார் – நீண்ட, சிலையும் – விற்களையும்,
கணைகளும்- அம்புகளையும், முறித்து – ஒடித்தெறிந்து, கடவு திண்
தேர்களும் -(அவர்கள்) ஏறி்ச்செலுத்திவந்த வலிய தேர்களையும், கலக்கி –
நிலைகுலையச்செய்து [சிதைத்து], (எ – று.) – ‘மலைந்து’ என அடுக்க
கவியோடு இயையும்.
அகப்பட்டதைத் தவறாது அழித்தற்கு, அழலுவமைகூறினார். புரம் –
சேனை தங்குமிடம்.
முன் புகு விசய முனி மகன்தன்னை முரண் நெடுந்
தோள்களும், உரனும்,
என்புடன் நிணமும், தசைகளும், சிந்த, இணைக் கருஞ் சிறு
குறுங் கரத்தால்
வன் புகை எழுமாறு உள் உற மலைந்து, மற்றுளோர்
கொற்றமும் அழித்து,
பின் புகல் அறுமா துரந்தது; அப் பூதப் பெருமை யாம்
பேசுறும் தகைத்தோ?
முன் புகு – (அம்மூவரில்) முந்தி வந்து (பாசறையினுள்)
நுழையலுற்ற, விசயம் முனி மகன் தன்னை – போர் வெற்றியையுடைய
துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனை, முரண் நெடு
தோள்களும் -வலிமையையுடைய நீண்ட தோள்களும், உரனும் – மார்பும்,
என்புடன்நிணமும் தசைகளும் சிந்த – எலும்பையும் கொழுப்பையும்
சதைகளையும்வெளிச்சிந்தும்படி இணை கரு சிறு குறு கரத்தால் – கரிய
சிறுத்த குள்ளமான (தனது) இரண்டு கைகளாலும், வல் புகை எழும் ஆறு –
(உக்கிரத்தால்) மிக்க புகை கிளம்பும்படி, உள் உற மலைந்து – ஊக்கத்தோடு
எதிர்த்துப்போர்செய்து, மற்று உளோர் கொற்றமும் அழித்து –
மற்றையிருவருடைய திறமையையும் அழியச்செய்து, பின் புகல்அறும் ஆ
துரந்தது – பின்பு உட்செல்லுதலொழியும்படி துரத்திவிட்டது; அ பூதம்
பெருமையாம் பேசுறும் தகைத்தோ – அந்தப்பூதத்தினது மகிமை நாம்
சொல்லக்கூடியதன்மையையுடையதோ? [அன்றென்றபடி]; (எ – று.)
‘அப்பூதப்பெருமை யாம் பேசுறுந் தகைத்தோ’ என்றது, கவிக்கூற்று;
பூதமாதலின், ‘கருஞ்சிறுகுறுங்கரம்’ என்றார். ‘முரணும்’ என்ற பாடத்துக்கு-
வலிமையுமென்க. அசவத்தாமன் தலைமையான வீரனென்பது தோன்ற,
அவனுக்கு ‘விசயம்’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
மாதவன் விதியால், அகன் பெரும் பாடி மா நகர் காவல்
கொண்டு உற்ற
பூதமே பொருது துரத்தலின், மீண்டு போய், வட தரு
நிழல் புகுந்து,
பேதுற வெருவோடு இருந்தனர்; கரிய பெரிய அக்
கங்குலில், துரோண
சாதனன் மதலை, ‘என் செய்தும்!’ என்னத் தன் மனத்து
எத்தனை நினைந்தான்.4.-மூவரும் மீண்டு ஆலமரத்தினடியிற் சேர்தல்.
மாதவன் விதியால் – கண்ணபிரானது கட்டளையால், அகல்
பெரு பாடி மா நகர் காவல் கொண்டு உற்ற – பரந்த பெரிய சிறந்த
படைவீட்டைக் காவல்செய்யுந்தொழிலை ஏற்றுக்கொண்டு பொருந்திய,
பூதமே -பூதந்தானே, பொருது துரத்தலின் – போர்செய்து
துரத்திவிட்டதனால்,(அம்மூவரும்), மீண்டு போய் திரும்பிச் சென்று, வட
தரு நிழல் புகுந்து -ஆலமரத்தின்நிழலிலே சேர்ந்து, பேது உற –
மனக்கலக்கமுண்டாக,வெருவோடு – அச்சத்தோடு, இருந்தனர் –
இருந்தார்கள்; கரிய பெரிய அகங்குலில் – (இருளினாற்) கருமைநிறமுடைய
பெரிய அவ்விராத்திரிகாலத்திலே,துரோணசாதனன் மதலை –
துரோணாசாரியனது குமாரனான அசுவத்தாமன்,என் செய்தும் என்ன தன்
மனத்து எத்தனை நினைந்தான் – ‘இனி என்னசெய்வோம்’ என்று
தன்மனத்தில் எவ்வளவோ நினைத்தான் [மிகப்பலவாறுசிந்தித்தனன்];
(எ – று.)
மாதவனென்ற பெயர் – மா – இலக்குமிக்கு, தவன் – கணவன் என்று
பொருள்படும். காவல் – தொழிற்பெயர். ஸாதநம் – பயிற்சி: கல்விப்பயிற்சி
செய்விப்பவனாதலால், சாதனனென்று ஆசிரியனுக்குப்பெயர்: அன்றி,
எத்தொழிலையும் நினைத்தபடி சாதிக்கவல்லானென்னும் பொருளதுமாம்
எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி, “இவ் இரவு அகல்வதன்
முன்னர்
வெஞ் சினம் உறச் சென்று, உன் பகை முடித்து மீளுதும்!” எனப்
பல படியும்
வஞ்சினம் உரைத்து வந்தனம்; இன்னம் வன் குறள்
பாரிடம்தன்னால்,
துஞ்சினம் எனினும் அமையும்!’ என்று எண்ணி, துணிந்தனன்,
துயில் அறு கண்ணான்.5.-அசுவத்தாமனது சிந்தை.
இ இரவு அகல்வதன் முன்னர் – இந்த இராத்திரி கழிவதன்
முன், வெம் சினம் உற சென்று – கொடிய கோபம் மிகப்போய், உன் பகை
துணித்து – உனதுபகைவர்களை யொழித்து, மீளுதும் – திரும்பிவருவோம்,’
என – என்று, பல படியும் – பலவகைகளாலும், வஞ்சினம் உரைத்து –
சபதவார்த்தைகளைக்கூறி, எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி –
வலியொடுங்கிய துரியோதனராசனது உயிரை ஒழியாதுநிற்கச்செய்து,
வந்தனம் -வந்தோம்; (ஆதலால்), இன்னம் – இனி, வல் குறள்
பாரிடந்தன்னால் – வலியகுறுகிய வடிவமுடைய பூதத்தால், துஞ்சினம்
எனினும் – நாம்இறந்துவிட்டோமாயினும், அமையும் – தகுதியாம், என்று-,
துயில் அறுகண்ணான் – தூக்கமொழிந்த கண்களையுடையவனாய்,
(அசுவத்தாமன்),எண்ணம் துணிந்தனன் – மனத்தில் நிச்சயித்தான்; (எ-று.)
பொழுதுவிடிவதற்குள் பகையழித்து மீள்வதாகத் துரியோதனனெதிரிற்
பலசபதங்களைச்சொல்லி அவனுக்கு ஆசையைமூட்டி அதனால் அவன்
அரிதில் உயிர்தரித்திருக்குமாறு செய்துவந்த நாம் சும்மாவிருத்தல் சிறிதுந்
தகுதியன்றாதலின், மீண்டுஞ்சென்று பாசறையுள் நுழையமுயல்வோம்: அங்கு
அப்பூதத்தால் முன்போல ஊறுபட்டுமீளாமல் இனி இறக்க நேரினும் நேர்க
என்று அசுவத்தாமன் இரவிற் கண்ணுறக்கமின்றிச் சிந்தித்தன னென்பதாம்.
செய்த சபதத்தை நிறைவேற்றாது உயிர்வாழ்தலினும் இறத்தலே தகுதியென்று
கருதின னென்க.
எண்ணிய கருமம் முடியினும், முடியாது ஒழியினும், ஈசனைத்
தொழுதல்
புண்ணியம் எனுமாறு உன்னி, ஆங்கு ஒரு தண் பொய்கையின்
புனல் படிந்து ஏறி,
பண் இயல் இசையின் படிவமாம் தெரிவை பங்கனைப் பங்கய
மலர் கொண்டு,
அண்ணிய கருத்தில் இருத்தி, அஞ்சு-எழுத்தால் ஆகமப்படி
அடி பணிந்தான்.6.-அசுவத்தாமன் சிவபூசைசெய்தல்.
எண்ணிய கருமம் முடியினும் – நினைத்த காரியம்
(நினைத்தபடியே) முடிவதனாலும், முடியாது ஒழியினும் – (அது அப்படி)
முடியாமற் போவதானாலும், ஈசனை தொழுதல் புண்ணியம் – சிவபிரானைப்
பூசித்தல் நற்றொழிலேயாம், எனும் ஆறு உன்னி – என்ற விதத்தை
ஆலோசித்து, ஆங்கு ஒரு தண் பொய்கையில் புனல் படிந்து ஏறி –
அவ்விடத்திலுள்ளதொரு குளிர்ந்த தடாகத்தில் நீராடிக் கரையேறி, பண்
இயல்இசையின் படிவம் ஆம் தெரிவை பங்கனை – சுவரங்களின்
வடிவமாயமைந்தசங்கீதத்தின் சொரூபமாகிய உமாதேவியை இடப்பக்கத்தில்
உடையவனானசிவபிரானை, அண்ணிய கருத்தில் இருத்தி – பொருந்திய
தன்மனத்திலேநாட்டி, பற்பலமலர்கொண்டு – பலவகைமலர்களை
(அருச்சனைப்பொருளாக)க்கொண்டு, அஞ்சு எழுத்தால் – பஞ்சாக்ஷர
மகாமந்திரத்தைச்சொல்லிக்கொண்டு, ஆகமம்படி – சைவாகமப்படி, அடி
பணிந்தான் -திருவடிகளில் விழுந்து வணங்கினான்; (எ – று.)
இம்மையில் நினைத்தகாரியத்தை முடித்தலாகிய காமியபல சித்தி,
அழித்தற்கரிய பிராரப்தகருமத்தால் ஒருகால்தடைப்படினும் மறுமையில்
பேரின்பமனுபவித்தலாகிய பயன் தவறாதாதலின், கடவுளைப் பூசித்தல்
தகுதியேயென்று கருதின னென்க. கருத்தில் இருத்தி – மனத்தில் தியானித்து
என்றபடி. ஆகமம் – ஒருகாலத்தில் சிவபிரானது திருமுகத்தினின்று
தோன்றியவையும், சிவபிரானைப் பூசித்தல் முதலிய விதங்களை விவரமாகக்
கூறுபவையும் ஆன காமியம் முதலிய இருபத்தெட்டுநூல்கள்
‘பங்கயமலர்கொண்டு’ என்றும் பாடம்.
அன்று அவன் மறையின் முறையினால் புரிந்த அருச்சனைதனை
உவந்தருளி,
நின்றனன், விழியும் இதயமும் களிப்ப நீறுடை ஏறுடைக் கடவுள்.
வல் திறல் முனிவன் மதலையும் விதலை மாறி, ‘மாறு அடர்ப்பது
ஓர் படை நல்கு!’
என்றனன்; என்ற உரை முடிவதன்முன், ஏதி ஒன்று ஈசனும் ஈந்தான்7.-சிவபிரான் பிரசன்னமாய்அவனுக்கு ஆயுதமளித்தல்.
அன்று – அப்பொழுது, அவன் – அசுவத்தாமன், மறையின்
முறையினால் – வேதங்களிற்கூறியுள்ள முறைமைப்படி, புரிந்த – செய்த,
அருச்சனைதனை – பூசையை, நீறு உடை ஏறு உடை கடவுள் – விபூதியை
யுடையவனும் ரிஷபத்தையுடையவனுமான சிவபிரான், உவந்து அருளி –
ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து கருணை கொண்டு, விழியும் இதயமும் களிப்ப
நின்றனன் – (அசுவத்தாமனது) மனமும் கண்களும் களிப்படையும்படி
(அவனுக்குத் தரிசனந்தந்து) நின்றான்; (அப்பொழுது), வல் திறல் முனிவன்
மதலையும் – கொடிய வலிமையையுடைய அந்தணனாகிய துரோணாசாரியனது
குமாரனான அசுவத்தாமனும், விதலை மாறி – மனக்கலக்க மொழிந்து, மாறு
அடர்ப்பது ஓர் படை நல்கு என்றனன் – ‘பகைவர்களைத் தவறாமல்
அழிப்பதொரு ஆயுதத்தை (எனக்குக்) கொடுத்தருள்வாய்’ என்று
வேண்டினான்; என்ற உரை முடிவதன் முன் – என்று இங்ஙனம்
பிரார்த்தித்தவார்த்தை முடிவதற்குமுன் [உடனே என்றபடி], ஈசனும் –
சிவபிரானும், ஏதிஒன்று – ஓராயுதத்தை, ஈந்தான் – கொடுத்தருளினான்;
(எ – று.)
சிவபிரான் தரிசனந்தந்தமாத்திரத்தில்தான் அப்பிரானருள் பெற்றுத்
தனதுசபதத்தை நிறைவேற்றிவிடலாமென்று தைரியங்கொண்டமை தோன்ற,
‘விதலைமாறி’ என்றார். மாறு – மாற்றார்க்குப் பண்பாகுபெயர். குமாரனான
பக்தனது வேண்டுகோளின்படி கடவுள் கருணைசெய்த விரைவை விளக்குவார்,
‘என்ற வுரை முடிவதன்முன் ஈந்தான்’ என்றார். சிவபிரானுக்கு நீறு,
தரிக்கப்படும் பொருள்; ஏறு, வாகனம்.
பாதி மெய் நீலம் ஆகிய பவளப் பருப்பதம் விருப்புடன் அளித்த
ஏதி பெற்று, உவகையுடன் இமைப்பு அளவின், இருந்த அவ்
வீரரும் தானும்
வீதி கொள் பாடி வீடு உற, பூதம் மீள வந்து அடர்த்து,
இவன் கரத்தில்
ஆதி நல்கிய வெம் படையினால் அஞ்சி, ஆவி கொண்டு
ஓடியதுஅன்றே.8.-பின்பு பூதம்அசுவத்தாமனுக்குத் தோற்றல்.
பாதி மெய் – பாதிவடிவம் [இடப்பக்கம்], நீலம் ஆகிய –
நீலநிறமடைந்துள்ள, பவளம் பருப்பதம் – பவளமயமான மலை போன்ற
சிவபிரான், விருப்புடன் அளித்த – அன்போடு தந்தருளிய, ஏதி –
ஆயுதத்தை,பெற்று – பெற்றுக்கொண்டு, (அசுவத்தாமன்), உவகையுடன் –
மகிழ்ச்சியுடனே,இமைப்பு அளவின் – ஒருமாத்திரைப்பொழுதிலே, இருந்த
அ வீரரும் தானும் -தன்வரவை எதிர்பார்த்து இருந்த அந்த வீரர்களான
கிருபனும் கிருதவர்மாவும்தானுமாக, வீதி கொள் பாடி வீடு உற –
நெடுந்தெருக்களைக்கொண்டபடைவீட்டை மீண்டும்சேர, – பூதம் – (அங்குக்
காவலாய் நின்ற) பூதம்,மீளவந்து அடர்த்து – மறுபடிவந்து போர் செய்து,
இவன் கரத்தில் ஆதிநல்கிய வெம் படையினால் அஞ்சி – இவன் கையில்
தலைவனான சிவபிரான்கொடுத்துள்ள கொடிய ஆயுதத்தைக் கண்டு
அதனாற் பயந்து, ஆவிகொண்டுஓடியது – அரிதில் உயிர்பிழைத்து
ஓடிப்போயிற்று; (எ – று.) – அன்றே-ஈற்றசை.
சிவபிரானது அர்த்தநாரீசுவரவடிவத்திற் பார்வதீரூபமான இடப்பக்கம்
நீலநிறமாயிருக்க, சிவரூபமான வலப்பக்கம்மாத்திரமே தனக்குரிய
செந்நிறத்தோடு இருத்தலாலும், கம்பீரமான தோற்றமும்பற்றி, ‘பாதிமெய்
நீலமாகிய பவளப்பருப்பதம்’ என்றார்; சிவபிரானை ‘பருப்பதம்’ என்றது –
உவமவாகுபெயர். சிவபிரான் பூதநாதனாதலால், அவன் படைக்கலத்துக்குப்
பூதம் அஞ்சிற்று; இத்தன்மையை ‘ஆதி’ என்ற சொல்லின் குறிப்பினாற்
புலப்படுத்தினார். ஓடிச்செல்லாமல் உறுதிகொண்டு முன்னே நின்று பொருதால்,
உயிர் அழிந்திடும்; அங்ஙனமன்றி உயிர்தப்பியோடிய தன்மை
விளங்க,’ஆவிகொண்டோடியது’ என்றது.
பருவரல் அகற்றி, இருவர் வீரரையும் பாசறை வாயிலில் நிறுத்தி,
மரு வரும் கமல மாலையான் கடப்ப மாலையான் என மனம் களித்து,
பொரு வரு முனைக்குக் குரிசிலாய், எல்லாப் போரினும்
புறமிடாது அடர்த்த
துருபதன் மதலை வரி சிலைத் திட்டத் துய்மனை மணித்
தலை துணித்தான்.9.-அசுவத்தாமன்படைவீட்டினுள் திட்டத்துய்மனைத்
தலைதுணித்தல்.
பருவரல் அகற்றி – (பூதத்தின் தடையினாலாகிய துன்பத்தை
(இவ்வாறு) நீக்கி,- இருவர் வீரரையும் – (கிருபன் கிருதன் என்ற) இரண்டு
வீரர்களையும், பாசறை வாயிலில் நிறுத்தி – அப்படைவீட்டின் வாயிலிலே
நிற்கவைத்து,- மரு வரும் கமல மாலையான் – வாசனை பொருந்திய
தாமரைமலர்மாலையையுடைய அசுவத்தாமன், கடப்பம் மாலையான் என –
கடப்பம்பூமாலையையுடைய முருகக்கடவுள்போல, மனம் களித்து – மனத்தில்
உற்சாகங்கொண்டு, (படைவீட்டினுள்ளே தான் சென்று),- பொருவருமுனைக்கு
குரிசில் ஆய் – எதிர்த்துப் போர்செய்து வந்த பகைவர் சேனைக்குத்
தலைவனாய், எல்லாப் போரினும் புறம் இடாது அடர்த்த-பதினெட்டு
நாட்போர்களிலும் முதுகுகொடாமல் நெருக்கிப்போர் செய்துவந்த, துருபதன்
மதலை – துருபதராசனது குமாரனாகிய, வரி சிலைதிட்டத்துய்மனை –
கட்டமைந்த வில்லையுடைய த்ருஷ்டத்யும் நனை, மணி தலை துணித்தான் –
அழகிய தலையை அறுத்திட்டான். (எ-று.)
தனதுதந்தையான துரோணனைக் கொன்றவனாகிய திட்டத்துய்மன்
மேல்அசுவத்தாமன் கறுக்கொண்டு அவனைத்தூங்கிக் கொண்டிருக்கையில்
முதலில்தலை துணித்துப் பழிதீர்த்துக்கொண்டனன் என்பதாம்.
படைவீட்டினுள்ளேயுள்ளவர்கள் வெளிச்சென்று தப்பிஉய்ந்து போகாத
வண்ணம்தடுத்தற்பொருட்டு இருவரையும் வாயிலிற் காவலாகநிறுத்தினனென்க.
தாமரைமலர்மாலை அந்தணர்க்கு உரியதாதலால், ‘கமலமாலையான்’ என்றார்;
இனி,தாமரை மணிமாலையுமாம். கடப்பமலர்மாலை முருகனுக்கு
அடையாளப்பூமாலை யாதலால், அவனுக்கு ‘கடம்பன்’ என்று ஒருபெயர்
வழங்கும்.
கயில் புரி கழற் கால் தந்தையைச் செற்ற காளையைப்
பாளையத்திடையே,
துயில் புரி அமையத்து, இமைக்கு முன், சென்னி துணித்தனன்
சுதன்’ எனக் கலங்கி,
வெயில் புரிவதன்முன் வல் இருளிடையே உணர்ந்தவர்
வெருவுடன் அரற்ற,
பயில் புரி சிலைக் கைச் சிகண்டியை முதலோர் பலரும்
வந்தனர்கள், பாஞ்சாலர்.0.-அதனையறிந்து பாஞ்சாலர்பலர் அசுவத்தாமனை
யெதிர்த்தல்.
கயில் புரி – கயிலென்னும் உறுப்பு அமைந்த, கழல் –
வீரக்கழலையணிந்த, கால் – பாதத்தையுடைய, தந்தையை – தனது
தந்தையானதுரோணனை, செற்ற – கொன்ற, காளையை – இளவீரனான
திட்டத்துய்மனை,பாளையத்து இடையே – படைவீட்டினுள்ளே, துயில் புரி
அமையத்து -தூக்கங்கொண்டிருக்குஞ் சமயத்தில், இமைக்கு முன் –
நொடிப்பொழுதினுள்,சுதன் – துரோணபுத்தினான அசுவத்தாமன், சென்னி
துணித்தனன் -தலையறுத்திட்டான், என – என்று அறிந்து, கலங்கி –
மனங்கலங்கி,வெயில்புரிவதன் முன் வல் இருளிடைய உணர்ந்தவர் –
சூரியனுதிப்பதன்முன்வலிய இருட்பொழுதிலேயே தூக்கம்விழித்துள்ளவர்கள்,
வெருவுடன் -அச்சத்தோடு, அரற்ற – கதறியொலிக்க, – பயில் புரி சிலை
சிகண்டியைமுதலோர் – பழகுதல் பொருந்திய வில்லையேந்திய
கையையுடைய சிகண்டிமுதலானவர்களான, பாஞ்சாலர் பலரும் – பாஞ்சால
தேசத்து அரசர்கள்பலரும், வந்தனர்கள் – (அவனையெதிர்த்து) வந்தார்கள்;
(எ – று.)
இயல்பாக நடுராத்திரியில் தூக்கம்விழித்துள்ளவர்கள் சிலர்
அசுவத்தாமன்திட்டத்துய்மனைத் தலை துணித்ததைக்கண்டு நிலைகுலைந்து
அஞ்சிஆரவாரஞ்செய்ய, அத்திட்டத்துய்மனது உடன் பிறந்தவரான சிகண்டி
முதலியபாஞ்சாலதேசத்து வீரர்கள் அநேகர் அசுவத்தாமனை வந்து
எதிர்த்தார்கள்என்பதாம். கயில் – ஆபரணக்கடைப்புணர்வு.
வெயில்புரிவதன் முன் -வெயில்புறப்படுவதன்முன் என்றபடி. சிகண்டி –
துருபதனது குமாரரில்ஒருவன்; தன் தம்பிக்கு மணஞ் செய்விக்கும்பொருட்டுக்
காசிராசன் மகளிர் மூவரையும்வீடுமன் வலியத் தேரேற்றிக் கொண்டு
செல்லுகையில், அரசர்கள் பலர் வந்து பொருது தோல்வியடைய, அவர்களுள்
சிறிது போரில் முன்னிட்ட சாலுவனிடத்து அம்பையென்பவள் மனத்தைச்
செலுத்தி வீடுமனினின்று நீங்கிச் சாலுவனிடம் சென்று சேர அவன் ‘பகைவர்
கவர்ந்துபோன உன்னை யான் தொடேன்’ என்று மணம் மறுத்துவிட்டதனால்,
அவள் வனஞ்சென்று தவஞ்செய்து வரம்பெற்று அவ்வீடுமனைக் கொல்லுமாறு
சிகண்டி யென்னும் அலிவடிவாகத் துருபதனிடத்துப் பிறந்து அங்ஙனமே
பத்தாநாட்போரில் வீடுமன் அழிதற்குக் காரணமாய் முன் நின்றமை அறிக.
உத்தமோசாவும், உதாமனும், முதலிட்டு உள்ளவர் யாவரும், பிறரும்,
தம்தம் ஓகையினால் வந்து எதிர் மலைந்தோர் தலைகளால் பல
மலை ஆக்கி,
மெத்த மோகரித்து, பாரதம் முடித்த வீரரைத் தேடி, மேல் வெகுளும்
சித்தமோடு எங்கும் திரிந்துளான், அவர்தம் சிறுவர் ஐவரையும்
முன் சேர்ந்தான்.11.-அசுவத்தாமன் பலரையுங்கொன்று உபபாண்டவரை
யடுத்தல்.
உத்தமோசாவும் – உத்தமௌஜஸ் என்பவனும், உதாமனும் –
யுதாமந்யு என்பவனும், முதல் இட்டு – முதலாக, உள்ளவர் யாவரும் –
உள்ளபாஞ்சாலராசர்க ளெல்லோரும், பிறரும் மற்றும் பலவீரர்களும்,
தத்தம்ஓகையினால் வந்து எதிர்மலைந்தோர் – தம் தமது ஊக்கத்தோடு
வந்து எதிரிற்போர் செய்தனராக அவர்களுடைய, தலைகளால் – தலைகளைத்
துணித்துத்தள்ளி அவற்றால், பல மலை ஆக்கி – அநேக மலைகளை
உண்டாக்கி, மெத்தமோகரித்து – மிகவும் வீராவேசங்கொண்டு,- பாரதம்
முடித்த வீரரை தேடி -பாரதப்போரை முடித்த வீரர்களான பாண்டவர்களைத்
தேடிக் கொண்டு, மேல்வெகுளும் சித்தமோடு – மேன்மேற் கோபங்
கொள்ளும் மனத்துடனே, எங்கும்திரிந்துளான் – அப்படைவீடு முழுவதிலும்
திரிந்து வருபவனானஅசுவத்தாமன், (அங்கொருபக்கத்தில் படுத்துள்ள),
அவர்தம் சிறுவர்ஐவரையும் முன் சேர்ந்தான் – அப்பாண்டவர்களுடைய
புத்திரர்கள் ஐந்துபேரையும் எதிரிற்கண்டு சமீபித்தான்; (எ – று.)
உத்தமோஜா – உத்தம ஓஜஸ் எனப்பிரிந்து, மேலான ஒளியுடையா
னெனப் பொருள்படும். இவன்பெயர் உத்தமபானுவென்று வழங்குதலும்
உண்டு; பொருள் இதுவே. உதாமன் – போரிற்கோபமுடையானென்று
பொருள். இவ்விருவரும், துருபதனுக்கு உறவினரான பாஞ்சாலராசர்:
பாஞ்சாலவீரரிற்சிறந்தவர். பஞ்சபாண்டவர்க்குத் திரௌபதியினிடம் பிறந்த
குமாரரைவரும்உபபாண்டவரெனப்படுவர். இவர்கள் பெயர் – முறையே
விந்தன், சோமன்,வீரகீர்த்தி, புண்டலன், சயசேனன் என்பன; பிரதிவிந்தியன்,
சுதசோமன்,சுருதகீர்த்தி, சதாநீகன், சுருதசேனன் என்று பெயர் வழங்குதலும்
உண்டு. இவர்கள் வடிவத்தில் தம்தம் தந்தையை முற்றிலும் ஒத்திருப்பர்.
பூதலம் முழுதும் கவர்ந்த தந்தையர்கள் புறத்திடைப்
போயதும், துயின்ற
மாதுலன் முனிவன் மதலை கைப் படையால் மடிந்திடத்
தடிந்ததும் உணரார்,
தாது அலர் அலங்கல் சமர வாள் முனியைத் தழலிடை வரு
பெருந் தையல்
காதல் அம் புதல்வர், கண் துயில் புரிவோர், கனவு கண்டனர்
எனக் கண்டார்.12.-உபபாண்டவர்கள்அசுவத்தாமனைக் காணுதல்.
பூதலம் முழுதும் கவர்ந்த – நிலவுலகமுழுவதையும்
(தங்களுடையதாகக்) கைப்பற்றிய, தந்தையர்கள் – (தங்கள்) தகப்பன் மாரான
பாண்டவர்கள், புறத்திடை போயதும் – (படைவீட்டினுள் இல்லாமல்
கண்ணபிரானுடன்) வெளியிலே சென்றதையும் – துயின்ற மாதுலன் –
தூங்கிக்கொண்டிருந்த (தங்கள்) மாமனான திட்டத்துய்மன், முனிவன் மதலை
கை படையால் மடிந்திட – துரோணபுத்திரனான அசுவத்தாமனது கையிலுள்ள
ஆயுதத்தால் இறக்கும்படி, தடிந்ததும் – (திட்டத்துய்மனை அசுவத்தாமன்)
தலையறுத்திட்டதையும், உணரார் – அறியாதவர்களாய், கண் துயில்
புரிவோர்- கண்மூடித்தூக்கங்கொண்டிருந்தவர்களான, தழலிடை வரு பெரு
தையல்காதல் அம் புதல்வர் – (துருபதராசனது) ஓமாக்கினியிலே தோன்றிய
சிறந்தமகளான திரௌபதியின் அன்புக்குரிய அழகிய பிள்ளைகளான
உபபாண்டவர்கள், தாது அலர் அலங்கல் சமரம் வாள் முனியை –
பூவிதழ்கள்மலர்ந்த போர்மாலையைத் தரித்த போருக்குரிய
வாளாயுதத்தையேந்தியஅந்தணனான அசுவத்தாமனை, கனவு கண்டனர்
என கண்டார் -கனாக்கண்டாற்போலத் தூக்கத்திற்சிறிது கண்டார்கள்;
(எ – று.)
பூதலமுழுதுங் கவர்ந்த – பகைவரை முற்றிலும் வென்று
அவர்களுடையஇராச்சிய முழுவதற்கும் உரிமைபூண்ட. திரௌபதி
பஞ்சகன்னிகைகளுள்ஒருத்தியென்னும்படி அடைந்துள்ள சிறப்புத்
தோன்றவும், அவள் மற்றைச்சாதாரண மனிதர்போல ஒருதாயின்
கருப்பத்தின் வாய்ப்பட்டுப் பிறவாமல்பரிசுத்தமான அக்கினியினின்று
வரமாகத்தோன்றிய உயர்வு விளங்கவும்,’பெருந்தையல்’ என்றார்
கண்டவர் தம்தம் படை எடுப்பதன் முன், ‘காசினி முழுவதும் வென்று
கொண்டவர் இவர்’ என்று எண்ணியே, சுடரில் கொளுத்திய
சுடர் அனையாரை,
திண் தவர்தமக்குச் சிகாமணி அனையான் சினத்து உறக் கலங்கி,
வண் தேறல்
உண்டவர்தமைப்போல், மதத்தினால், வாளால், ஒரு நொடியினில்
தலை துணித்தான்.13.-அவர்களைப்பாண்டவர்களென்று கருதி அசுவத்தாமன்
அழித்தல்.
கண்டவர் – (இங்ஙனம்) பார்த்த பாண்டவகுமாரர்கள், தம்
தம்படை எடுப்பதன்முன் – (போர்செய்தற்குத்) தம்தமக்கு உரிய ஆயுதத்தை
யெடுத்துக் கொள்வதன்முன், சுடரில் கொளுத்திய சுடர் அனையாரை –
ஒருவிளக்கினின்று ஏற்றிய மற்றொரு விளக்குப்போல விளங்குகிற அவர்களை,
திண் தவர் தமக்கு சிகாமணி அனையான் -வலிய தவத்தையுடைய
முனிவர்களுக்குத் தலையிலணியும் இரத்தினம்போலச்சிறந்தவனாய்விளங்குகிற
அசுவத்தாமன்,- காசினிமுழுவதும் வென்று கொண்டவர் இவர் என்று
எண்ணிஏ – பூலோக முழுவதையும் சயித்துத் தங்களுடையதாக்கிக் கொண்ட
பாண்டவர்கள் இவர்களேயென்று நினைத்து, சினத்துடன்கலங்கி –
சீற்றத்தினாற் கலக்கமுற்று, வள் தேறல் உண்டவர்தமைபோல் – முதிர்ந்த
கள்ளைக் குடித்தவர்போல, மதத்தினால் – களிப்புமயக்கங்கொண்டு அதனால்,
வாளா – வீணாய், ஒருநொடியினில் – ஒருகைந்நொடிப்பொழுதிலே, தலை
துணித்தான் – தலையறுத்திட்டான்; (எ – று.)
பாண்டவர்களைக் கொன்றிருந்தால் இவனது சபதம் நிறைவேறுதல்
மாத்திரமாவது நிகழக்கூடும்; உபபாண்டவரைக் கொன்றிட்டது அங்ஙனமும்
உதவாமல் அவர்கள் குலத்தை நாசம்பண்ணுவதாய் முடிந்து பெரிய
பழியையும்பாவத்தையுமே தருகிற கொடுமை விளங்க, ‘வாளா
தலைதுணித்தான்’ என்றார்.’தந்தையரொப்பர் மக்கள்’ என்றபடி
தந்தையரோடு மைந்தர் வடிவத்திற்சிறிதும் வேறுபாடின்றி விளங்குதற்கு
‘சுடரிற்கொளுத்திய சுடரனையார்’ எனஉவமைகூறினார். தவத்துக்குத்
திண்மை – மனநிலை கலங்காமை.முன்னொருகாலத்திற் பரசுராமரால்
கசியபமுனிவர்க்குத் தானஞ்செய்யப்பட்டமைபற்றி, பூமிக்குக் காச்யபீ என்று
ஒருபெயர்: அது காசினிஎனத் திரிந்ததென்ப.’சிக்குறக்கலங்கி’ என்றும்
பாடமுண்டு.
துருபதன் மைந்தர் அனைவரும், பஞ்சத் திரௌபதேயரும்
துயில் பொழுதில்,
புரவிஅம்தாமா நினைவு அறப் புகுந்து, பொன்றுவித்தனன்’
எனப் புலம்ப,
‘இரவிடை அமர் மற்று என்னைகொல்?’ என்னா, இரவிதன்
திருக்குலத்து இறைவன்,-
பெருமையோடு எழுந்தான், பகைவன்மேல் – அவன் முன் பின்னிடப்
பொருதிடும் பெரியோன்.14.-அப்பொழுது சோழன்அசுவத்தாமன்மேற் போருக்கு
எழுதல்.
துருபதன் மைந்தர் அனைவரும் – துருபதராசனது
புத்திரர்களெல்லோரும், பஞ்சதிரௌபதேயரும் – திரௌபதியினிடத்திற்
பிறந்தஉபபாண்டவர்களைந்துபேரும், துயில் பொழுதில் – தூங்கும்பொழுதில்,
அம்புரவி தாமா – அழகிய அசுவத்தாமன், நினைவு அற புகுந்து –
நினைத்தற்கும்இடமில்லாமல் (படைவீட்டினுள்) நுழைந்து, பொன்றுவித்தனன்
– (அவர்களை)அழித்திட்டான், என – என்று, புலம்ப – (கண்டவர் யாவரும்)
கதறியழ,(அதுகேட்டு),- இரவிடை அமர் என்னை கொல் என்னா –
‘இராத்திரியிற் போர்என்னடா?’ என்றுசொல்லி யதட்டிக்கொண்டு, அவன்
முன் பின்னிடபொருதிடும்பெரியோன் – அந்த அசுவத்தாமன் முன்பு
தோல்வியடையும்படி போர்செய்தபெருமையையுடையவனாகிய, இரவிதன்
திரு குலத்து இறைவன் – சூரியனதுமேலான குலத்தில் தோன்றிய அரசனான
சோழன், பெருமையோடு -பராக்கிரமத்துடனே, பகைவன் மேல் –
பகைவனான அந்த அசுவத்தாமன்மேல், எழுந்தான் – (போர் செய்யப்)
புறப்பட்டான்; (எ – று.) – மற்று – வினைமாற்று.
இப்படிஒருசோழன் பதினெட்டுநாட்போரிலும் இறவாமல்
பாண்டவர்க்குஉதவிசெய்த சிறப்பை “தாங்கள் பாரதமுடிப்பளவு நின்று
தருமன் தன்கடற்படைதனக் குதவிசெய்த வவனும்” என்று
கலிங்கத்துப்பரணியில்இராசபாரம்பரியத்துக் கூறியமைகொண்டும் உணர்க.
இச்சோழன்அசுவத்தாமனை முன்பு வென்றிட்டதை இச்சருக்கத்தின் 95 –
ஆங்கவியிற்காண்க. ‘திரௌபதீயர்’ என்றுசிலர். ‘புரவியந்தாமா’ அம் –
சாரியையென்னலாம்
பொன்னி நல் நதியும் நேரி அம் பொருப்பும் புகார் எனும்
நகரியும் படைத்த
சென்னியும், அவன் தன் சேனையின் விதமும், சேனை
மண்டலீகரும், சேர,
முன்னிய சிலைக் கை முனிமகனுடன் போய், மோதிய
ஏதியால் மடிந்தார்;-
பின்னிய சடையோன் வழங்கிய படைமுன், பிழைத்தவர்
யாவரே, பிழைத்தார்?15.-சோழன் பரிவாரத்தோடுஅசுவத்தாமனால் இறத்தல்.
பொன்னி நல்நதியும் – சிறந்த காவேரி நதியையும், நேரி
அம்பொருப்பும் – நேரியென்னும் அழகிய மலையையும், புகார் எனும்
நகரியும்- காவிரிப்பூம்பட்டினமென்ற நகரத்தையும், படைத்த – தனக்கு
உரியனவாகக்கொண்ட, சென்னியும் – சோழனும், அவன் தன் சேனையின்
விதமும் -அவனுடைய சேனையின் வகைகளும், சேனை மண்டலீகரும் –
அச்சேனையிலுள்ள மண்டலாதிபதிகளான அரசர்களும், சேர – ஒருசேர,
முன்னிய சமரின் முனி மகனுடன் போய் – (யாவரும்) கருதிக் கொண்டாடுகிற
போரில் துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனோடு (போர்செய்யச்)
சென்று, மோதிய ஏதியால் மடிந்தார் – அவன் தாக்கிய ஆயுதத்தினால்
இறந்தார்கள்; பின்னிய சடையோன் வழங்கிய படைமுன் – திரித்துவிட்ட
சடையையுடைய சிவபிரான் கொடுத்த அந்த ஆயுதத்திற்கு முன், பிழைத்தவர்
யாவரே பிழைத்தார் – (முன்பு போரில்) உய்ந்த வீரருள் எவர்தாம்
தப்பிப்பிழைத்தவர்? [எவருமிலர் என்றபடி]; (எ – று.)
பதினெட்டுநாட்போர்களிலும் தமது திறமையாற் பகைவென்று தாம்
இறவாது உயிர்வாழ்ந்தவீரர் யாவரும் அழித்தல்தொழிற்கடவுளான சிவபிரான்
தந்த ஆயுதத்தால் இறந்தொழிந்தார்கள் என்ற பொதுப்பொருளைக்கொண்டு
சோழனும் அவன் சேனையோரும் அசுவத்தாமனால்
கொல்லப்பட்டார்களென்றசிறப்புப்பொருளைச்சாதித்தலால்,
வேற்றுப்பொருள்வைப்பணி. பொன்னைக்கொழித்துக் கொண்டு
வருதலால், காவேரிக்குப் ‘பொன்னி’ என்று பெயர்.சென்னி – தலை;
உத்தமாங்கமாகிய தலைபோல யாவரினுஞ் சிறப்பவனென்ற
பொருளால், சோழனுக்குச் சென்னியென்று பெயர். சென்னியும்,
சேனையின்விதமும், மண்டலீகரும் மடிந்தார் – சிறப்பினாலும் மிகுதியாலும்
உயர்திணைமுடிபை யேற்ற திணைவழுவமைதி; ‘முன்னியசிலைக்கை’
என்றும்பாடம்.
புகல் அரும் பதினெண் பூமி முற்று உடைய பூபதிகளும்,
அவர் படைத்த
இகல் அருந் தந்தி, தேர், பரி, காலாள், என்பன யாவையும், சேர,
பகல் அருஞ் சமரில் பதின்மடங்கு ஆகப் பாதி நாள்
இரவினில் படுத்தான்,
தகல் அருங் கேள்வித் தாமனே-தாமச் சடையவன் தனயன்
ஆதலினால்.16.-அசுவத்தாமன் தனியேஅனைவரையும் அழித்த திறமை.
தகல் அரு கேள்வி – தகுதியான அரிய
நூற்கேள்விகளையுடைய, தாமனே – அசுவத்தாமனொருவனே,-(தான்), தாமம்
சடையவன் தனயன் ஆதலினால் – (கொன்றை) மாலையைத் தரித்த
சடையையுடைய சிவபிரானது குமாரனாதலால்,-புகல் அரு பதினெண் பூமி
முற்று உடைய பூபதிகளும் – வருணித்துச் சொல்லுதற்கரிய பதினெட்டுவகை
நாடுகள் முழுவதையுந் தமதாகவுடைய அரசர்களையும், அவர் படைத்த –
அவர்கள் (தமதாகப்) பெற்றுள்ள, இகல் அரு தந்தி தேர் பரி காலாள்
என்பனயாவையும் – எதிர்த்தற்கு அரிய யானைகள் தேர்கள் குதிரைகள்
பதாதிகள்என்னும் நால்வகைச் சேனைகளெல்லாவற்றையும், சேர-ஒருசேர,
பகல் அருசமரில் பதின்மடங்கு ஆக – பகற்பொழுதில் நடந்த
அரியபோரினும்பத்துமடங்கு அதிகமாக, பாதிநாள் இரவினில் – அந்நாளின்
நடுராத்திரியிலே,படுத்தான் – அழித்திட்டான்; (எ – று.)
அழித்தற்றொழிற்கடவுளான சிவபிரானது குமாரனாதலால்,
அசுவத்தாமனொருவன்தானே மிகப் பலவீரர்களையும் அவர்களுடைய
அளவிறந்த சேனைகளையும் அழித்திட்டன னென்பதாம். கீழ்நடந்த
பதினெட்டுநாட் பகற்போர்களிலும் பலபகைவர் திரண்டு கூடிப்பொருதும்
அழித்திடப்படாதவரை அன்றையொருநாளிரவின் ஒருபகுதியில் ஒருவன்
அழித்த திறத்தை மூன்றாமடியாற் குறித்தார். பதினெண்பூமி – சிங்களம்
சோனகம் சாவகம் சீனம் துளுவம் குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம்
தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கடாரம் கௌடம் கோசலம்
திரவிடம் என்பன.
உள்ளியபடியே கடுஞ் சினம் கன்றி, உள்ளவர் யாரையும் முருக்கி,
துள்ளிய விடைபோல் செருக்கி, அப் புரத்தின் துவாரம்
நின்றவரையும் கூட்டி,
தெள்ளிய குமரர் சென்னி ஐந்தினையும் தேவரும் திகைத்திடத் தூக்கி,
வெள்ளிய குரு வந்து எழு
முனே, குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான்.17.-அசுவத்தாமன்உபபாண்டவர் தலைகளுடன்
துரியோதனனை யடைதல்.
(அசுவத்தாமன்), உள்ளியபடியே – தான் நினைத்தபடியே,
கடுசினம் கன்றி – மிக்க கோபம் வெதும்பப்பெற்று, உள்ளவர் யாரையும்
முருக்கி – (அப்படைவீட்டில்) உள்ளாரெல்லாரையும் அழித்து, துள்ளிய
விடைபோல் செருக்கி – துள்ளிக் குதிக்குந்தன்மையுள்ள காளையெருது
போலக்களிப்புக்கொண்டு, அ புரத்தின் துவாரம் நின்றவரையும் கூட்டி –
அந்தப்படைவீட்டின் வாயிலிற்காத்து நின்றுள்ளகிருபனையும் கிருதனையுங்கூட
அழைத்துக்கொண்டு, தெள்ளிய குமரர் சென்னி ஐந்தினையும் – தெளிவுள்ள
பாண்டவகுமாரர்களுடைய தலைகளைந்தையும், தேவரும் திகைத்திட தூக்கி –
தேவர்களுங் கண்டு பிரமிக்கும்படி (கைகளால்) தூக்கிக்கொண்டு, வெள்ளி
அம் குரு வந்து எழுமுனே – அழகிய (அசுர) குருவான சுக்கிரன் வந்து
உதிக்கும் முன்னே [இரவில் நடுப்பொழுதிலேயே], குருவின் மிகு குலம்
வேந்தை – குருவென்னும் அரசனது சிறப்பு மிக்க குலத்திலே பிறந்த
துரியோதனராசனை, வந்து அடைந்தான் – வந்து சேர்ந்தான்; (எ – று.)
அசுவத்தாமன் தான் பாண்டவர் தலைகளைக் கொய்திட்டதாகக்
கருதிக்களிப்புறுந்தன்மை விளங்க, ‘உள்ளியபடியே கடுஞ்சினங்கன்றியுள்ளவர்
யாரையும் முருக்கித் துள்ளியவிடைபோற் செருக்கி’ என்றார்.
வெண்ணிறமுடைமையால், சுக்கிரனுக்கு வெள்ளி யென்று பெயர். கிழக்கில்
சுக்கிரனது தோற்றம் இரவின் இறுதிப்பாகத்திலே உளதாவது
வந்தனேன்- ஐய! மாதவன் ஏவலால்
முந்து பூதம் முதுகிட, மா முடி
சிந்த, யாரையும் செற்று, அகன் பாசறை
ஐந்து வீரர்தம் ஆவியும் கொண்டுஅரோ.18.-அசுவத்தாமன் தனதுதிறமையைக் கூறுதல்.
ஐய – தலைவனே! மாதவன் ஏவலால் – கண்ணனுடைய
கட்டளையால், முந்து – முற்பட்டுப் போருக்கு வந்த, பூதம் – பூதமானது,
முதுகு இட – புறங்கொடுக்கும்படி (செய்து), அகல் பாசறை –
பரந்தபடைவீட்டினுள்ளே, மா முடி சிந்த – பெரிய தலைகள் சிதறும்படி,
யாரையும் செற்று – யாவரையுங் கொன்று, ஐந்து வீரர்தம் ஆவியும்
கொண்டு -பஞ்சபாண்டவர்களது உயிர்களையுங் கவர்ந்து கொண்டு,
வந்தனேன் – இதோவந்து சேர்ந்திட்டேன், (நான்); (எ – று.)-அரோ –
ஈற்றசை; தேற்றமுமாம்.
இங்ஙனம் தான் துரியோதனன் முன்னிலையிற் சபதஞ் செய்தபடி
அவனது தொன்றுதொட்ட பகைவர்களை வேரறத் தொலைத்து வந்த
களிப்பைஅசுவத்தாமன் அவனெதிரிற் கூறி அவனுக்கு மகிழ்ச்சியை
விளைப்பவனானான். வந்தனேன். அன் – சாரியை.
இதுமுதற் பதின்மூன்று கவிகள் பெரும்பாலும்
முதற்சீரொன்றுமாச்சீரும்,மற்றைமூன்றும் கூவிளச்சீர்களுமாகிய
அளவடிநான்குகொண்டகலிவிருத்தங்கள்.
சொன்ன சிங்கத் துவசனை ஆதியா
மன்னர் ஐவரும் மாண்டனர்; மற்று அவர்
சென்னி’ என்று, சிறுவர்தம் சென்னியை
முன்னர் வைத்தனனால், முனி மைந்தனே.19.-அசுவத்தாமன்தான்கொணர்ந்த தலைகளைத்
துரியோதனனுக்குக் காட்டல்.
சொன்ன சிங்கம் துவசனை ஆதி ஆ – (யாவராலுஞ்
சிறப்பித்துக்) கூறப்பட்ட சிங்கக்கொடியையுடைய வீமனை முதலாகவுள்ள,
மன்னர் ஐவரும் – பாண்டவராசர்கள் ஐந்துபேரும், மாண்டனர் –
இறந்தொழிந்தார்கள்; அவர் சென்னி – அவர்களுடைய தலைகளாகும்
(இவை),என்று – என்று சொல்லி, முனி மைந்தன் – துரோணபுத்திரனான
அசுவத்தாமன், சிறுவர்தம் சென்னியை – அவர்கள் குமாரர்களுடைய
தலைகளை, முன்னர் வைத்தனன் – துரியோதனனெதிரிலே வைத்தான்;
(எ -று.)-மற்று, ஆல் – அசைகள்.
சொன்ன – உனக்குப் பழம்பகைவ னென்று சொல்லப்பட்ட
எனினுமாம்.
வைத்த சென்னியை நோக்கி, வயா உறு
சித்தம் மன்னவன் தேறி, ‘சிறார் முகம்;
தம்தம் அன்புடைத் தந்தையர் வாள் முகம்
ஒத்த ஆகும்; இஃது உண்மை’ என்று ஓதினான்.20.-துரியோதனன் அவற்றைநோக்கிப் பாண்டவர் தலைகளல்ல
எனல்.
வயா உறு சித்தம் – ஆசைமிக்க மனத்தையுடைய,
மன்னவன்- துரியோதனன், தேறி – (அசுவத்தாமன் வார்த்தையைக்
கேட்டவுடனே சிறிது)தேறுதலடைந்து, வைத்த சென்னியை நோக்கி –
(அவன் தன் எதிரிலே)வைத்த தலைகளைப் பார்த்து, (உடனே அவனை
நோக்கி), சிறார் முகம் -(இவை அப்பாண்டவர்களுடைய)
புத்திரர்களின்முகங்களே; தத்தம் அன்புஉடை தந்தையர் வாள் முகம் ஒத்த
ஆகும் – தந்தமது அன்புள்ளதகப்பன்மார்களது ஒளியுள்ள முகங்களைப்
போன்றுள்ளனவாம்; இஃதுஉண்மை – இது மெய், என்று ஓதினான் – என்று
சொன்னான்; (எ – று.)
துரியோதனன் உயிர்போகுமளவும் தனியரசாட்சிச் செய்வதில் மிக்க
விருப்பங் கொண்டிருந்தமையும், அப்படி தணியாத பேராசையுடையவன்
அசுவத்தாமன் வார்த்தையைக்கேட்டு மரணவேதனையிலுஞ்சிறிது
தேறுதலடைந்தமையுந் தோன்ற, ‘வயாவுறுசித்த மன்னவன் தேறி’ என்றார்.
ஓதும் வேந்துக்கு ஒரு மொழியும் சொலான்,
வேத பண்டிதன் நிற்க, அவ் வீரனை,
‘பாதகம் செய்கை பார்ப்பன மாக்களுக்கு
ஏதம், ஏதம்; இது என் செய்தவாறுஅரோ!’21.-இதுமுதல் ஐந்து கவிகள் -துரியோதனன் இரங்கல்.
ஓதும் வேந்துக்கு – (இவ்வாறு உண்மையை எடுத்துக்) கூறின
துரியோதனராசனுக்கு, ஒரு மொழியும் சொலான் – யாதோர் எதிர்மொழியுஞ்
சொல்லமாட்டாதவனாய், வேதபண்டிதன் நிற்க – வேதங்களில் வல்லவனான
அசுவத்தாமன் மௌனமாய்நிற்க, அ வீரனை – அந்தவீரனான
அசுவத்தாமனைப் பார்த்து, ‘பாதகம் செய்கை – தீவினைசெய்தல்,
பார்ப்பனமாக்களுக்கு – அந்தணர்களுக்கு, ஏதம் ஏதம் – மிக்ககுற்றமாம்;
(அங்ஙனமாக), இது செய்த ஆறு என் – (நீ) இதனைச் செய்தவிதம்
என்னே?’எனா – என்று சொல்லி, – (எ – று.) – ‘எனா’ என்றது, மேல்
230-ஆம்கவியில் ‘என்று பன்மொழி கூறி’ என்று முடியும்: ஆதலால்; இவை
குளகம்.’என் செய்தவாறே’ என்றும் பாடம்.
பார்ப்பனமாக்கள் – பார்ப்பாராகிய மனிதரென இருபெயரொட்டு.
ஏதம்ஏதம் – அடுக்கு, மிகுதிவிளக்கும் இது – குமாரரைக் கொன்றது.
தூங்கிக்கொண்டிருக்கையில் கொன்றிட்ட வீரமிலாதானை வீரனென்றது,
இகழ்ச்சியென்னலாம். வீரனை எனா என்று இயையும்.
துன்னு பாரதம் தோன்றிய நாள் முதல்,
மன்னர் ஓட மலைந்தனை, வாளியால்;
சொன்ன பாலர் மகுடம் துணித்தது இன்று
என்ன வீரியம்! என் நினைந்து, என் செய்தாய்!
துன்னு – நெருங்கிய, பாரதம் – பாரதயுத்தம், தோன்றிய
நாள்முதல் – தொடங்கியநாள் முதலாக [பதினெட்டு நாள்களிலும்], மன்னர்
– (பலவகை) அரசர்கள், ஓட – தோற்று ஓடும்படி, வாளியால் –
அம்புகளால்,மலைந்தனை – போர்செய்தாய்; (அப்படிப்பட்ட நீ), இன்று –
இன்றைத்தினத்தில், சொன்ன – கீழ்க்குறிக்கப்பட்ட, பாலர் -பாண்டவகுமாரர்களின், மகுடம் – தலையை, துணித்தது – அறுத்திட்டது,
என்ன வீரியம் – என்ன பராக்கிரமம்? என்நினைந்து என் செய்தாய் –
என்னஎண்ணம் எண்ணி என்ன காரியஞ் செய்தாய்? (எ – று.)
அசுவத்தாமனது பலபராக்கிரமங்களை யெடுத்துக் கூறி அவனைப்
புகழ்ந்து நீ செய்த காரியம் பாலஹத்திதோஷமாக முடிந்ததேயென்றவாறு.
என் நினைந்து என்செய்தாய் – தொன்றுதொட்டுத் தீராப்பகைவராயுள்ள
பாண்டவரைக் கொல்வதாகக் கருதி யாதொரு களங்கமுமில்லாத
அவர்மக்களைக் கொன்றிட்டாயே! என்று இரங்கினான். மகுடம் –
தானியாகுபெயராய்த் தலையைக் குறித்தது.
இரு குலத்தில், எமக்கும் அவர்க்கும் இங்கு
ஒரு குலத்தினும் உண்டு என இல்லையால்;
குருகுலத்தின் கொழுந்தினைக் கிள்ளினை-
வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே!
இரு குலத்தில் – (திருதராட்டிரகுமாரர் பாண்டுகுமாரர்
என்கிற)இரண்டு மரபுகளுள், எமக்கும் – (திருதராட்டிர குமாரராகிய)
எங்களுக்கும், அவர்க்கும் – (பாண்டுகுமாரராகிய) அவர்களுக்கும், ஒரு
குலத்தினும் – ஒருவமிசத்திலும், இங்கு – இம்மையில் [இவ்வுலகத்தில்],
உண்டுஎன – அடையாளமுண்டென்று சொல்லும்படி, இல்லை – (சந்ததி)
இல்லையாயிற்று; வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே – பிறந்து வளர்ந்த
குலத்திலே ஒருகுற்றமுமில்லாத குமாரனே! குருகுலத்தின் கொழுந்தினை –
குருவமிசத்தின் இளமூளையை, கிள்ளினை – கிள்ளிவிட்டாயே; (எ – று.)
‘மாசறுமைந்தனே’ என்ற விளி, மாசுறுஞ் செயலைச் செய்யலாமோ
என்றகுறிப்பினது. குருகுலமே அடியோடு அழிவதுகுறித்து வருந்தியமை
இங்குவெளியாம். ‘குருகுலத்தின்கொழுந்து’ என்றது, உபபாண்டவரை.
‘வருகுலம்’எனப்பட்டது, துரோணனது பரத்துவாசகுலம். ‘மைந்தனீ’ என்றும்
பாடம்.
ஆற்றின் நீர் விளையாடிய நாள்முதல்,
காற்றின் மைந்தனொடு எத்தனை கன்றினேன்!
சாற்றின், என் வினைதான் என்னையே சுட,
கூற்றின் வாய்ப் புகுந்தேற்கு என்ன கூற்று? ஐயா!
ஐயா – ஐயனே! ஆற்றின் நீர் விளையாடிய நாள் முதல் –
கங்காநதியின் சலத்திலே விளையாடின நாள் முதற்கொண்டு, காற்றின்
மைந்தனொடு எத்தனை கன்றினேன் – வாயுகுமாரனான வீமனுடன் எவ்வளவு
வயிரங்கொண்டேன்! சாற்றின் – ஆராய்ந்து கூறுமிடத்து, என் வினைதான்
என்னையே சுட – யான்செய்த தீவினையே என்னை வருத்த, கூற்றின்வாய்
புகுந்தேற்கு – யமனுடைய வாயில் நுழைந்திட்ட எனக்கு, என்ன கூற்று –
(சொல்லத்தக்க) வார்த்தை என்ன இருக்கிறது? (எ – று.)
துரியோதனாதியரும் பாண்டவரும் இளம்பிராயத்தில் ஒருநாள்
கங்கையில்நீர்விளையாடி அதன்துறையில் ஒருசார் இன்னுணவுண்டு களித்துக்
கண்டுயில,அவ்விரவில் துரியோதனன் வீமனைக் கொல்லும்பொருட்டுச்
சகுனிமுதலானாரோடு ஆலோசித்து அவனை வலியகயிறுகளாற்
கைகால்களைக்கட்டி அப்பெருநதியில் எறிந்து விட்டதும், அதில் விழுந்து
துயிலுணர்ந்தவீமன் தன் உடல் வலிமையால் அக்கட்டுக்களைத் துணித்துக்
கொண்டுகரையேறிப் பிழைத்ததனை யறிந்து மற்றொருநாள் கங்கைத்துறையில்
எஃகினாலும் இரும்பினாலும் செம்மரத்தாலும் கூரிய பலகழுக்களை நீரின்மேல்
தோன்றாதபடி நாட்டச்செய்து வீமனை ‘நீரில் விளையாட வா’ என்று
வஞ்சனையாக அழைத்துப் போய் ‘இங்கிருந்து நீ நீரில் குதிக்கின்றாயா,
பார்ப்போம்’ என்று சொல்லி அவனை அதிற் குதிக்கும்படி தூண்டியதும்,
அப்பொழுது கண்ணன் கருவண்டின் உருவங்கொண்டு கழுமுனைதோறும்
உட்கார்ந்திருக்க, வீமன் அதனை நோக்கி ‘இது என்ன? நீரோட்டத்தில்
வண்டுகள் உட்கார்ந்திருக்கின்றனவே’ என்று உற்றுப்பார்க்கும்போது மூன்று
அங்குலத்தின்கீழ் வசிகள் நாட்டியிருக்கக்கண்டு தன்சங்கேதப்படி அவை
நாட்டியிராத இடம் பார்த்துக் குதித்துக் கரையேறி மீண்டிட, அதுகண்டு
துரியோதனன் வேறொருநாள் வீமனுக்கு விருந்து செய்விக்கிற வியாசமாகச்
சமையற்காரரைக்கொண்டு விஷங்கொடுத்து உண்பித்து அதனால் மயங்கிய
அவனைக்கட்டிக் கங்கையிற் போகட, அவன் பாதாளஞ்சேர்ந்து நாகங்களின்
உதவியாற் பிழைத்து மீண்டமையும் ஆகிய இளம்பிராயத்துச்செய்திகளைக்
கருதிக் கழிவிரக்கங்கொண்டு, துரியோதனன், ‘ஆற்றினீர்விளையாடிய
நாள்முதல்,காற்றின்மைந்தனொ டெத்தனை கன்றினேன்’ என்றான்.
பணை நெடுங் கைப் பகட்டு வெஞ் சேனை சூழ்
இணைதரும் சொல் கிளைஞர்கள் யாரையும்,
துணைவர் யாரையும், தோற்று நின்றேன்; எனக்கு
இணையர் பார்மிசை யார் உளர். எண்ணிலே!’
பணை – பருத்த, நெடு – நீண்ட, கை –
துதிக்கையையுடைய,பகடு – ஆண்யானைகளையுடைய, வெம் – கொடிய,
சேனை – சேனைகள்,சூழ் – சூழப்பட்ட, இணைதரும் சொல் – பொருந்திய
புகழையுடைய,கிளைஞர்கள் யாரையும் – உறவினர்களெல்லோரையும்,
துணைவர் யாரையும் -நண்பர்களெல்லோரையும், தோற்று நின்றேன் –
(போரில்) இழந்து நின்றேன்,(யான்); எண்ணில் – ஆலோசிக்குமிடத்து,
பார்மிசை – பூமியில், எனக்குஇணையர் யார் உளர் – எனக்கு ஒப்பானவர்
எவர் இருக்கின்றார்?[யாருமில்லை]; (எ – று.)
பகடு -யானையின் ஆண்பாற்பெயர். இணைதரும், தா – துணை
வினை. சொல் – புகழாதலை “சொன்மாண்பமைந்த குழு” எனச்
சிந்தாமணியிலுங் காண்க. இனி, ‘இணைதருஞ்சொல்’ என்பதற்கு – எனக்கு
அனுகூலமாக இணங்கிப்பேசும் பேச்சையுடையஎன்றும் உரைக்கலாம்;
‘கிணைதருஞ்சொல்’ என்ற பாடத்துக்கு – முரசவாத்தியத்தின் ஒலியை
யொத்துக் கம்பீரமாக ஒலிக்கிற சொற்களையுடைய என்க. துணைவர் –
தம்பிமாருமாம்.
என்று பல் மொழி கூறி, இம் மைந்தரைக்
கொன்று வந்த குமரனை, ‘போர்தொறும்
நின்ற தீவினை நீங்கிட, நீ தவம்
ஒன்றி வாழ்க!’ என்று, உயர் விடை நல்கினான்.26.-துரியோதனன்அசுவத்தாமனுக்கு விடைகொடுத்து
அனுப்புதல்.
என்று பல்மொழி கூறி – என்று இவ்வாறு பல
வார்த்தைகளைச் சொல்லி, இ மைந்தரை கொன்று வந்த குமரனை –
இப்பிள்ளைகளை [உப பாண்டவரை] வதைத்துவந்த துரோணகுமாரனான
அசவத்தாமனை, (நோக்கி), ‘போர் தொறும் நின்ற தீவினை நீங்கிட –
போர்களில் நின்றதனாலாகிய பாவம் நீங்கும்படி, நீ தவம் ஒன்றி வாழ்க –
நீதவத்திற்பொருந்தி வாழ்வாயாக,’ என்று – என்று சொல்லி, உயர் விடை
நல்கினான் – சிறந்த அனுமதியை (அவனுக்குக்) கொடுத்து அனுப்பினான்;
(எ -று.)
அரசர்க்குப்போல அந்தணர்க்குப் படைக்கல மேந்திப் போர்செய்தலும்,
அதில் பற்பலரையழித்தலும் சாதிதருமமல்லவாதலால் ‘போரில்வந்த
பாவந்தொலையத் தவஞ்செய்து உய்ந்திடுவாய்’ என்று உறுதிமொழி கூறினான்.
இங்ஙனங் கூறியதனால், துரியோதனனுக்கு அந்திமதசையிலுண்டான
நல்லெண்ணம் வெளியாம். உயர்விடை நல்குதல் – மரியாதையோடு
அனுமதிகொடுத்து அனுப்புதல்.
வெஞ் சராசன வீரனும், மாமனும்,
நெஞ்சம் மாழ்குற நின்றவர் போனபின்,
கஞ்ச நாள் மலர்க் கண் புனல் சோர்தரும்
சஞ்சயாரியன்தன்னொடு கூறுவான்:27.-கிருதனும் கிருபனும்சென்றபின் துரியோதனன்
சஞ்சயனோடு பேசுதல்.
வெம் சராசன வீரனும் – கொடிய வில்லில்வல்ல வீரனான
கிருதவர்மாவும், மாமனும் – (அசுவத்தாமனது) மாதுலனான கிருபாசாரியனும்,
நெஞ்சம் மாழ்குற நின்றவர் – மனங்கலங்க நின்றவர்களாய், போனபின் –
(அவ்விடம்விட்டுச்) சென்றபின்பு, – நாள் கஞ்சம் மலர் – அன்று மலர்ந்த
[புதிய] தாமரைமலர்போன்ற, கண் – கண்களினின்று, புனல் சோர்வரும் –
நீர்பெருகப்பெற்ற, சஞ்சய ஆரியன் தன்னொடு – சஞ்சய முனிவனுடனே,
கூறுவான் – (துரியோதனன் சிலவார்த்தை) சொல்பவனானான்; (எ – று.)
கீழ்க் கவியினால் அசுவத்தாமன் துரியோதனனிடம் விடைபெற்றுச்
சென்றமை பெறப்பட்டதனால், மற்றைய கிருதனும் கிருபனும் சென்றதனை
இதிற் கூறினார். கீழ்க்கவியில் அசுவத்தாமனது பிரஸ்தாபம் வந்ததனால்,
இக்கவியில் ‘மாமன்’ என்றது, அவனுடைய மாமன்மேல் நின்றது. இனி
‘வெம்சராசனவீரன்’ என்பதற்கு – அசுவத்தாமனென்றே உரைத்து,
கிருதவர்மாவை உபலட்சணத்தாற் பெறவைத்தலும் உண்டு.
யாயொடு எந்தை இரக்கம் உறாவகை
ஆய இன் சொலினால் துயர் ஆற்றிட,
நீ எழுந்தருள்; நின் மொழி வல்லபம்
தூய சிந்தைச் சுரர்களும் வல்லரோ?28.-இரண்டு கவிகள் -சஞ்சயனை நோக்கித் துரியோதனன்
கூறியன
யாயொடு – (எனது) தாயும், எந்தை – (எனது) தந்தையும்,
இரக்கம் உறா வகை – (யாங்கள் இறந்ததனால்) விசனம் மிகாதபடி, ஆய
இன்சொலினால் – பொருந்திய இனிய வார்த்தைகளால், துயர் ஆற்றிட –
(அவர்களுடைய) துன்பங்களைத் தணிப்பதற்கு, நீ எழுந்தருள் – நீ
சென்றருள்வாயாக; நின் மொழி வல்லபம் – பேசுவதில் உனக்குள்ள
வல்லமையை, தூய சிந்தை சுரர்களும் வல்லரோ – பரிசுத்தமான
மனத்தையுடைய தேவர்களும் உடையரோ? [அல்லரென்றபடி]; (எ – று.)
யாய்- காந்தாரி, எந்தை – திருதராஷ்டிரன், ஆய இன்சொல் –
பயனில்நன்மையானவையும் சமயத்துக்கு ஏற்றவையும் கேட்பதற்கு
இனியவையுமானவார்த்தைகள். பின்னிரண்டடி – விசேஷஞானமுடைய
தேவர்களும் உன்னைப்போலப்பேசுவதில் தேர்ந்தவர்களல்லரென்று
கொண்டாடியவாறு.
யானும் எம்பியரும் இறந்தோம் எனும்
மான பங்கம் மறந்து, தன் நெஞ்சினுக்கு
ஆன தம்பி அளித்தவர்தம்மொடும்,
கோன் நிலம் புரக்கும்படி கூறுவாய்!’
யானும் – நானும், எம்பியரும் – (எனது) தம்பிமார்களும்,
இறந்தோம் – இறந்துவிட்டோம்’, எனும் – என்ற காரணத்தாலாகிய,
மானபங்கம்- அவமானத்தை, மறந்து -, தன் நெஞ்சினுக்கு ஆன தம்பி
அளித்தவர்தம்மொடும் – தனது மனத்துக்குப் பிரியனாயிருந்த தம்பியான
பாண்டுவினாற்பெறப்பட்ட தருமன் முதலியோருடனே, கோல் நிலம்
புரக்கும்படி -செங்கோல்கொண்டு இராச்சியம் ஆளும்படி, கூறுவாய் –
(திருதராட்டிரனுக்குநீ) சொல்லியருள்வாய்;
‘தன்நெஞ்சினுக்கான தம்பி’ என்றதனால், திருதராட்டிரனுக்கும்
பாண்டுவுக்கும் இருந்த ஒற்றுமை விளங்கும்.
என்ன, அம் முனிதன் இணைத் தாள்மலர்
சென்னிமீதும், விழியினும் சேர்த்திடா,
உன்னில், ஆண்மைக்கு உவமை இல்லாதவன்
பொன்னிலத்தின் உணர்வொடும் போயினான்.30.-சஞ்சயனையனுப்பிவிட்டுத்துரியோதனன் உயிர்நீத்தல்.
உன்னில் – ஆலோசிக்குமிடத்து, ஆண்மைக்கு உவமை
இல்லாதவன் – பராக்கிரமத்தில் (தனக்கு) ஒப்பில்லாதவனான துரியோதனன்,-
என்ன – என்று சொல்லி, அ முனிதன் – அந்தச் சஞ்சயமுனிவனது, இணை
தாள் மலர் – தாமரை மலர்போன்ற உபயபாதங்களை, சென்னிமீதும்
விழியினும்சேர்த்திடா – (தனது) தலையின் மேலும் கண்களிலுங் கொண்டு
[தனது முடிஅவனடியிற்படும்படி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து
அவனதுபாதங்களைத் தனது கண்களில் ஒற்றிக்கொண்டு], (பின்பு),
உணர்வொடும் -நல்லறிவுடனே, பொன் நிலத்தின் போயினான் –
பொன்மயமானவீரசுவர்க்கத்திற்சென்றான் [இறந்தான் என்றபடி];(எ-று.)
வயிரம் செறிதரு மனனும், வாய்மையும், வலியும், பொரு படை
வினையின் மேல் வரு
செயிரும் திகழ் குருகுல மகீபதி, திறல் வெஞ் செரு முனை
அதனில், மேதகும்
அயிர் நுண் குழல் அரமடநலார் பலர் அளி கொண்டு எதிர்கொள,
அமரன் ஆனபின்,
உயிர் கொண்டது, சுரர் உறையும் வானுலகு; உடல் கொண்டது,
தனதுடைய பூமியே!31.-துரியோதனனது மரணம்.
வயிரம் செறிதரு – தீராப்பகைமை பொருந்திய, மனனும் –
எண்ணமும், வாய்மையும் – (அதற்கு ஏற்ற) சொற்களும், வலியும் – பலமும்,
பொரு படை வினையும் – போர்செய்தற்கு உரிய ஆயுதங்களின் தொழிலும்,
மேல் வரு செயிரும் – மேன்மேற் பொங்கிவருகிற கோபமும், திகழ்தரு –
விளங்கப்பெற்றுள்ள, குலமகீபதி (குருவென்னும் அரசனது சிறந்த) குலத்திற்
பிறந்த அரசனான துரியோதனன், திறல் வெம் செரு முனையதனில் – பல
பராக்கிரமங்களுக்கு உரிய கொடிய போர்க்களத்தில், மேதகும் அயிர்
நுண்குழல் அர மட நல்லார் பலர் அளிகொண்டு எதிர் கொள – மேன்மை
பொருந்திய நுண்மணல்போல மெல்லியனவாயுள்ள கூந்தலையுடைய
மடமைக்குணமுள்ள தேவமாதர்கள் பலர் அன்புகொண்டு எதிர்கொண்டு
உபசரிக்க, அமரன் ஆன பின் – (இறந்து) தேவனானவுடன், உயிர் –
(அவனுடைய) உயிர், சுரர் உறையும் வான் உலகு கொண்டது – தேவர்கள்
வசிக்கும் சுவர்க்கலோகத்தைச் சேர்ந்தது; உடல் – அவனுடம்பு,
தனதுஉடையபூமியே – அவனுக்கு உரியதாயிருந்த நிலவுலகத்தை,
கொண்டது -சேர்ந்தது; (எ – று.)
நித்தியமாய் என்றும் அழியாததான உயிரை வேற்றுலகங்கொள்ள
அவனுக்கு வெகுநாளாய்ச் சொந்தமாயிருந்த இவ்வுலகம் நிலையற்றதும்
பயனில்லாததுமான உடம்பை மாத்திரமே கொண்டதென்க. உயிர்
வீரசுவர்க்கஞ் செல்ல, உடல் கீழ்க்கிடந்திட்டது என்றபடி. உயிரை
வானுலகம்கொண்டது, உடலைப்பூமிகொண்டது என்று பதவுரை கூறினுமாம்.
‘வயிரஞ்செறிதரு’ என்ற அடைமொழியை வாய்மைக்குக் கூட்டுக.
வாய்மையென்பதற்கு – சத்தியமென்று உரைத்தல், இங்குப் பொருந்தாது,
துரியோதனன் பொய்யனாதலால், வலி – தேகபலம் ஆயுதபலம் சேனாபலம்
புத்திபலம் மனோபலம் முதலியன, அயிர்க்குழல் – உவமைத்தொகை.
இச்செய்யுள் – ஒன்று மூன்று ஐந்து ஏழாஞ் சீர்கள் புளிமாச்சீர்களும்
இரண்டு ஆறாஞ்சீர்கள் கருவிளச்சீர்களும், நான்குஎட்டாஞ்சீர்கள்
கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியச்
சந்தவிருத்தம்.
தனதந்தனனன தனன தானன தனதந் தனனன தனன தானன –
என்பது இதற்குச் சந்தக்குழிப்பு. ‘குருகுலமகிபதி’ என்றும் பாடம்.
கிடந்த உடல் வானவர்தம் கிளை சொரிந்த பூ மழையால்
கெழுமுற்று ஓங்க,
நடந்த உயிர் புத்தேளிர் அரமகளிர் விழி மலரால் நலன்
உற்று ஓங்க,
அடர்ந்து அளிகள் மொகு மொகு எனும் ஆமோத வலம்புரித் தார்
அண்ணல், யாரும்
மிடைந்து மிடைந்து எதிர்கொள்ள, வீரர் உறை பேர் உலகம்
மேவினானே.
கிடந்த உடல் – (போர்க்களத்திலே) விழுந்துகிடந்த உடம்பு,
வானவர்தம் கிளை சொரிந்த பூ மழையால் – தேவர்களுடைய கூட்டம்
பொழிந்த புஷ்பவர்ஷத்தால், கெழுமுற்று ஓங்க – நிறைந்து உயரவும்,- நடந்த
உயிர் – மேற்சென்ற உயிர், புத்தேளிர் அரமகளிர் விழிமலரால் –
தேவசாதியரான அப்ஸரஸ்ஸ்திரீகளின் மலர்போன்ற கண்களின் நோக்கத்தால்,
நலன் உற்று ஓங்க – இன்பமடைந்து சிறக்கவும்,- அளிகள் அடர்ந்து
மொகுமொகு எனும் ஆமோதம் வலம்புரி தார் அண்ணல் – வண்டுகள்
நெருங்கி மொய்த்து மொகுமொகென்று ஒலிக்கப்பெற்ற மிகுமணமுள்ள
நஞ்சாவட்டைப் பூமாலையையுடைய துரியோதனன்,- யாரும் மிடைந்து
மிடைந்து எதிர்கொள்ள – (தேவர்களும் தேவமாதர்களுமாகிய) எல்லோரும்
நெருங்கி நெருங்கி வந்து எதிர்கொண்டுஉபசரிக்க, வீரர்உறை பேர் உலகம்
மேவினான் – (போரிற்பின்னிடாது இறந்த) வீரர்கள் வசிக்குமிடமான பெரிய
வீரசுவர்க்கலோகத்தை யடைந்தான்; (எ – று.)
முதலிரண்டடிகளில் உடல் உயிர் என்ற இரண்டுக்கும் ஒருங்கே மலர்
மேல்விழப்பெறுதல் கூறினார். ஆமோதம் – மிக்கவாசனை.
இதுமுதல் நூல்முடியுமளவும் பதினைந்து கவிகள் – இச்சருக்கத்தின்
பதினோராங்கவிபோன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள்.
கேள்வியுடை வரி சிலைக் கை முனி மகனும், மாதுலனும்,
கிருதன் என்னும்
வாள் விறல் கூர் நரபதியும், குருபதிதன் வாய்மையினால்
மாழ்கி ஏகி,
வேள்வி அருங் கனல் மூன்றும் ஒரு வடிவாய்ப் பிறந்தனைய
வியாதற்கு, ஐவர் தோள் வலியும்,
தம் செயலும், தொழா முடியோன் துஞ்சியதும், தொழுது
சொன்னார்.33.-அசுவத்தாமன் முதலியோர்வியாசரைக் கண்டு செய்தி
கூறல்.
கேள்வி உடை – நூற்கேள்விகளையுடையவனும், வரிசிலை
கை- கட்டமைந்த வில்லை யேந்திய கைகையுடையவனுமான, முனி மகனும்-
துரோணனது புத்திரனான அசுவத்தாமனும், மாதுலனும் – அவன் மாமனாகிய
கிருபனும், கிருதன் என்னும் – கிருதவர்மா என்ற, வாள் விறல் கூர் நரபதியும்
– ஆயுத வலிமை மிக்க அரசனும், – குருபதி தன் வாய்மையினால் –
குருகுலத்தலைவனான துரியோனனது வார்த்தையால், மாழ்கி ஏகி –
வருத்தப்பட்டுக்கொண்டு சென்று,- வேள்வி அரு கனல் மூன்றும் ஒரு வடிவு
ஆய் பிறந்து அனைய வியாதற்கு – யாகத்துக்குரிய அருமையான மூவகை
அக்கினிகளும் ஒரு முனி வடிவங்கொண்டு பிறந்தாற்போன்ற வேதவியாச
முனிவனுக்கு,- ஐவர் தோள் வலியும் – பாண்டவர்களுடைய புயபலத்தையும்,
தம் செயலும் – தங்கள் செய்கையையும், தொழா முடியோன் துஞ்சியதும் –
(எவரையும் எக்காலத்தும்) வணங்காத முடியையுடைய மன்னனான
துரியோதனன்இறந்ததையும், தொழுது சொன்னார் – வணங்கிக் கூறினார்கள்;
(எ – று.)
குருபதிதன்வாய்மை – 224 -ஆங் கவிமுதல் ஆறு கவிகளிற் கூறியவை.
அக்கினியிற் பிரிவு, இடவேற்றுமையாலும் மந்திரபேதத்தாலும் தொழில்
வகையாலும் நிகழ்வதென்க. மிக்க பரிசுத்தியுடையவனான வியாசன்
ஒப்புயர்வற்ற திவ்வியவொளியையுடையவனாயிருத்தலால், அத்தன்மையை
விளக்குதற்கு, மூவகையக்கினிகளும் ஒரு வடிவாய்ப்பிறந்தாற்
போன்றவனென்றார். வியாஸன் – (பலவாறாகக் கலந்து கிடந்த வேதங்களை
இருக்கு முதலிய நான்குவகையாக) வகுத்தவனென்று காரணப்பொருள்படும்;
வ்யஸ் – பிரித்தல். தம் செயல் – பகைவர் பலரைத் தூங்குகையிற்
கொன்றமைமுதலியன.
புரி தவத்திற்கு ஆன வனம் கிருபனுக்கும், துரோணமுனி
புதல்வன் ஆன
துரகததாமனுக்கும் அமைத்து, ‘இவ்வுழி நீர் இருத்திர்’ எனச்
சொன்ன பின்னர்,
கிருதனுக்கு விடை கொடுத்தான்; இவரும் அவன் மொழிப்படியே,
கிரி சூழ் கானில்,
தரு நிலத்தோர் அதிசயிப்ப, சிவபெருமான்- தனை நினைந்து,
தவம் செய்தாரே.34.-வியாசன் மூவருக்கும்விடை கொடுத்து அனுப்புதல்.
(வேதவியாச மகாமுனிவன்), கிருபனுக்கும் –
கிருபாசாரியனுக்கும், துரோணமுனி புதல்வன் ஆன துரகததாமனுக்கும் –
துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனுக்கும், புரி தவத்திற்கு ஆன
வனம் – தவஞ்செய்வதற்குத் தக்கதான அரணியத்தை, அமைத்து –
(இன்னதென்று) நியமித்து, இ உழி நீர் இருத்திர் என சொன்ன பின்னர் –
இவ்விடத்தில் நீங்கள் (தவஞ்செய்து கொண்டு) இருப்பீர்களென்று சொன்ன
பின்பு, கிருதனுக்கு விடைகொடுத்தான் – கிருதவர்மாவுக்கு (த்தன்ஊர்க்குச்
செல்லும்படி) அனுமதி கொடுத்தனுப்பினான்; இவரும் – (கிருபன்
அசுவத்தாமன் என்ற) இவ்விருவரும், அவன் மொழி படியே –
அம்முனிவனதுசொல்லின்படியே, கிரிசூழ் கானில் – மலை சூழ்ந்த காட்டில்,
தரு நிலத்தோர்அதிசயிப்ப – (கற்பக) விருட்சங்களையுடைய இடமான
சுவர்க்கலோகத்திலுள்ளதேவர்கள் ஆச்சரியப்படும்படி, சிவபெருமான்தனை
நினைந்து தவம் செய்தார்- சிவபிரானைத் தியானித்துத் தவஞ்
செய்பவரானார்கள்; (எ – று.)
‘கிரிசூழ்கான்’ என்ற தொடர் – மலையைச்சூழ்ந்த காடென்றும்,
மலையாற்சூழப்பட்ட காடென்றும் இருவகையாகப் பொருள்படும்.
நாடிய சொல் சுருதி நிகழ் நாவினான் சஞ்சயனும், நள்ளென் கங்குல்
ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன்முன், விலோசனம் நீர்
உகுப்ப எய்தி,
ஆடிமுகத்து அரசினுக்கும், ஐ-இருபது அரசரையும் அளித்து, வாழ்ந்து,
வாடிய மெய்ச் சவுபலைக்கும், உற்றது எல்லாம் வாய்மலர்ந்தான்,
வாய்மை வல்லான்.35.-திருதராட்டிரனுக்கும்காந்தாரிக்கும் சஞ்சயன்
செய்திகூறல்.
நாடிய சொல் – ஆராய்ந்து அறியத்தக்க சொற்களையுடைய,
சுருதி – வேதங்கள், நிகழ் – பொருந்திய, நாவினான் – நாக்கையுடையவனும்,
வாய்மை வல்லான் – உண்மையையே பேசுபவனும் ஆகிய, சஞ்சயனும் -,
நள் என் கங்குல் – நடுராத்திரியில், ஓடி – விரைந்துசென்று, – ஒளித்திடு
கதிரோன் உதிப்பதன் முன் – அஸ்தமித்த சூரியன் மீண்டும் உதயமாவதன்
முன், விலோசனம் நீர் உகுப்ப எய்தி – கண்கள் நீர்சொரிய அருகிற்சேர்ந்து,-
ஆடிமுகத்து அரசினுக்கும் – கண்ணாடிபோலும் முகத்தையுடைய
திருதராஷ்டிரராசனுக்கும், ஐயிருபது அரசரையும் அளித்து வாழ்ந்து வாடிய
மெய்சவுபலைக்கும் – (துரியோதனன் முதலிய) நூறு அரசர்களையும் பெற்று
வாழ்ந்து மெலிந்த உடம்பையுடைய சுபலராசன் மகளான காந்தாரிக்கும்
உற்றது எல்லாம் வாய்மலர்ந்தான் – நடந்தவையெல்லாங்கூறினான்; (எ – று.)
நள்ளென் கங்குல் – நள்ளிரவு; நள் – நடு. இங்கே ‘நள்ளென்கங்குல்’
என்றது, பொழுது விடிதற்கு முந்தியே யென்றவாறு; 240 – ஆங் கவியில்
‘பானாள்’ என்பதும் இப்படியே. ஒளித்திடுகதிரோன் உதிப்பதன்முன் –
“விழுந்த ஞாயிறு எழுவதன்முன்”. சௌபலை யென்ற பெயர் –
சவுபலையெனப் போலிபெற்றது. காந்தாரி கருவுற்றிருக்கையில் குந்திக்குத்
தருமபுத்திரன் பிறந்த செய்தியை யறிந்து பொறாமை கொண்டு உடனே
கல்லினால் தன்வயிற்றை யிடித்துக்கொள்ள, அதனால் கருப்பம் குழம்பிப்
பலகூறுகளாகி வெளிவிழுந்திட, வியாசமுனிவர் வந்து அனுக்கிரகஞ்செய்து
அக்கருப்பிண்டக்கூறுகள் நூறையும் நூறுகுடங்களிலும் எஞ்சிய சிதறலைச்
சேர்த்து ஒரு குடத்திலுமாக வைத்து அடைகாத்துவரச்சொல்ல, பின்பு
அவற்றினின்று துரியோதனாதியர் நூற்றுவர்மைந்தரும், துச்சளையென்னும்
மாதும் தோன்றினரென வரலாறு உணர்க. இப்படி அருமையாக வருந்தி
நூறுமக்களைப் பெற்றும் அத்தனைபேரையும் இழந்த இரங்கற்பாடு தோன்ற,
‘ஐயிருபதரசரையு மளித்து வாழ்ந்த வாடிய மெய்ச் சவுபலை’ என்றார்.
சுருதிநிகழ்நா – வேதம்பயின்ற நா.
சேனாவிந்துவை முதலாம் திரு மைந்தர் ஐவரும் வான் சென்ற
நாள் தொட்டு,
ஆனாமல், சொரி கண்ணீர் ஆறு பெருங் கடலாக அழுது சோர்வாள்,
பால் நாள் வந்து, அருள் முனிவன் பகரும் மொழி விடம் செவியில்
பட்ட காலை,
தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வதுபோல், வீழ்ந்து அழுதாள்,
சுபலன் பாவை.36.-துரியோதனன்இறந்தமையறிந்து காந்தாரி வருந்துதல்.
சேனாவிந்துவை முதல் ஆம் திரு மைந்தர் ஐவரும் வான்
சென்ற நாள் தொட்டு – சேனாவிந்து என்பவனை முதலாகவுடைய சிறந்த
தனது புத்திரர்கள் ஐந்து பேரும் இறந்து மேலுலகத்துக்குச் சென்றதினம்
முதற்கொண்டு, ஆனாமல் சொரி கண்ணீர் ஆறு பெரு கடல் ஆக அழுது
சோர்வாள் – (புத்திரசோகத்தால்) அடங்காமல் மேன்மேல்வழிகிற
கண்ணீர்ப்பெருக்குப் பெரிய கடல் வெள்ளம்போலாம்படி புலம்பித்
தளர்ந்துவருபவளான, சுபலன் பாவை – சுபலராசனது மகளான காந்தாரி,
பால்நாள் வந்து அருள் முனிவன் பகரும் மொழி விடம் செவியில்பட்டது
ஆக -பாதியிரவில் வந்தருளிய சஞ்சயமுனிவன் கூறிய வார்த்தையாகிய
விஷம்காதிற்பட்ட வளவில், தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வதுபோல் –
நல்ல பாம்புஇடியோசையைக் கேட்டுத் தளர்வது போல, வீழ்ந்து அழுதாள்
– கீழ் விழுந்து புலம்பினாள்; (எ – று.)
துரியோதனாதியருள் சேநாவிந்து சுதக்கணன் பிங்கலசன் சலாசந்தன்
வீமவாகு என்ற ஐவர் பாரதயுத்தம்நடந்த பதினெட்டுநாள்களுள்
நான்காம்போர்நாளில் வீமனாற் கொல்லப்பட, அதனாற் காந்தாரி அன்றைய
தினம் புதிதாகப்புத்திரசோகத்தை யடைந்தாளென்றும், அதுமுதற்
பலபோர்நாள்களில் பலகுமாரர்கள் இறந்து வர அவற்றால் நாள்தோறும்
மேன்மேல் அச்சோகம்மிகப்பெற்று வந்தாளென்றும் உணர்க.
துரியோதனனது மரணத்தைத்தெரிவிக்கிற கடுஞ்சொல் மிக்க வருத்தந்
தந்ததை விளக்குவார்’முனிவன்பகரும்மொழிவிடம்செவியிற்பட்டதாக’
என்றார். இடியொலிகேட்டுஅஞ்சி யொடுங்குவது நாகத்தின் இயல்பு.
பாவை – உவமவாகுபெயராம்.
மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன்
கைத் தண்டால்,
உருத்து, அமரின் உடன்று, உம்பர் ஊர் புகுந்தான், வாள் அரவம்
உயர்த்தோன்’ என்று,
வருத்தமுடன் உயங்கி, மிக மயங்கி, நில-மிசை வீழ்ந்து, வயிரம் ஆன
கருத்தினுடன் அலமந்தான், அழுது பெரும் புனல் சொரிய,
கண் இலாதான்.37.-திருதராட்டிரனது சோகம்.
வாள் அரவம் உயர்த்தோன் – கொடிய
பாம்பின்வடிவமெழுதிய கொடியை உயர நாட்டிய துரியோதனன், உருத்து
அமரின் உடன்று – கோபித்துப்போரில் பகைத்து, மருத்தின் மகன் எனும் –
வாயுவின் குமாரனான வீமனென்கிற, சண்ட மருத்து அனைய புயம்
வலியோன்- கடும்பெருங்காற்றையொத்த தோள்வலிமையையுடைய வீரனது,
வல் கைதண்டால் – வலிய கையிலுள்ள கதாயுதத்தால், உம்பர் ஊர்
புகுந்தான் -வீரசுவர்க்கஞ் சேர்ந்தான், என்று – என்று கேட்டு, கண்
இலாதான் -திருதராட்டிரன், வருத்தமுடன் – சோகத்துடனே, உயங்கி –
தளர்ந்து, மிகமயங்கி – மிகவும் மூர்ச்சைகொண்டு, நிலமிசை வீழ்ந்து –
தரையில் விழுந்து,வயிரம் ஆன கருத்தினுடன் – பகைமைகொண்ட
மனத்துடனே, அழுது -புலம்பி, பெரு புனல் சொரிய – மிக்ககண்ணீர்
பெருக, அலமந்தான் -கலங்கினான்; (எ – று.)
திருதராட்டிரனது வைரமான கருத்தின் தன்மை, மேலே 249 – ஆங்
கவியில் நன்குவிளங்கும்.
இப்பால், மற்று இவர் இரங்க, எப் பாலும் இருள் ஒளிப்ப,
இரவி பானுத்
துப்பு ஆர் செங் கொடிகள் என உதயகிரி-மிசைப் படர்ந்து
தோற்றம் செய்ய,
தப்பாமல் நிலமடந்தைதன் பாரம் அகற்றுவித்த சார்ங்கபாணி
அப் பால் அப் பாண்டவர்கள் ஐவரொடும் புரிந்த செயல்
அறைதும் அம்மா:38.-சூரியோதயமும்,பாண்டவர் செய்திகூறத் தொடங்குதல்.
இப்பால் – இந்தப்பக்கத்தில், இவர் – திருதராட்டிரனும்
காந்தாரியும், இரங்க – விசனப்பட, எ பாலும் இருள் ஒளிப்ப – எவ்விடத்தும்
இருள்விலகிச் செல்லும்படி, இரவி – சூரியனுடைய, பானு – கிரணங்கள், துப்பு
ஆர் செம் கொடிகள் என உதயகிரிமிசைபடர்ந்து தோற்றம் செய்ய –
பவழமயமாயமைந்த சிவந்த கொடிகள் போல உதயபருவதத்தின் மேல்
பரவித்தோன்ற, – அப்பால் – அந்தப்பக்கத்தில், நிலமடந்தைதன் பாரம்
தப்பாமல் அகற்றுவித்த சார்ங்கபாணி – பூமி தேவியின் பாரத்தைத்
தவறாமல்தீர்த்திட்ட சார்ங்கமென்னும் வில்லையேந்திய கையையுடைய
கண்ணபிரான், அபாண்டவர்கள் ஐவரொடும்புரிந்த செயல் –
அப்பஞ்சபாண்டவர்களுடன்செய்த செய்கையை, அறைதும் –
இனிக்கூறுவோம்; (எ – று.) – அம்மா -ஈற்றசை. மற்று – அசை.
இச்செய்யுள் – கவிக்கூற்று.
தப்பாமல் – பூமிதேவியின் வேண்டுகோளும், தேவர்களின்
பிரார்த்தனையும், தனது சங்கல்பமும் தவறாமல்; பூமிபாரமாய் நின்ற
கொடியவர்களுள் ஒருவரும் தப்பியுய்ந்திடாமல். சார்ங்கம் – திருமால் வில்.
முதலடியில் இரவியான் என்ற பாடத்துக்கு – இரவி யென்ற பொதுப்
பெயரோடு’ஆன்’ என்ற ஆண்பால் விகுதி சேர்ந்து அதனை
உயர்திணையாக்கிற்று. பவழக்கொடி – சூரியகிரணத்துக்கு நிறத்தில் உவமம்.
படிமிசைப் படிந்தும்என்றும் பாடம்.
ஐந்து பெரும் பார்த்திவரோடு ஆரணியம் புகுந்த பிரான்
அரிய கங்குல்
சிந்து தினகரன் உதயம் சேரும் முனம், பாசறையில் சென்று நோக்க,
இந்திரனே நிகர் நிருபர் முடித் தலைகள் வெவ்வேறாய் இடையே சிந்த,
மைந்தர் உடற் குறை
தழுவி, ஆகுலித்து, மெலிந்து, அரற்றும் மானைக் கண்டார்.39.-வெளித்தங்கியபாண்டவர் படைவீடு சேர்ந்து
செய்தியையறிதல்.
அரிய கங்குல் – (தப்பிப்பிழைத்தற்கு) அரிய (அப்பதி
னெட்டாநாள்) இரவிலே, ஐந்து பெரு பார்த்திவரோடு – பெருமையையுடைய
பாண்டவர்களாகிய ஐந்து அரசர்களுடன், ஆரணியம் புகுந்தபிரான் –
(அருகிலுள்ளதொரு) வனத்திற் சேர்ந்து தங்கிய கண்ணபிரான், சிந்து
தினகரன்உதயம் சேருமுனம் – (கீழ்) கடலிற் சூரியன் உதித்தலையடையுமுன்
[சூரியனுதிக்கு மளவிலே யென்றபடி], பாசறையில்சென்று நோக்க – (தமது)
படைவீட்டிற்போய்ப்பார்க்க, (அங்கு), இந்திரனே நிகர் நிருபர் முடி தலைகள்
-தேவேந்திரனையேபோன்ற சிறந்த அரசர்களுடைய கிரீடமணிந்த
தலைகள்,வெவ்வேறு ஆய் இடையே சிந்த – தனித்தனி துணிபட்டு
இடந்தோறுஞ்சிந்திக்கிடக்க, மைந்தர் உடல்குறைதழுவி – (தனது) புத்திரர்
ஐவரது தலையற்ற உடல்களைத் தழுவிக்கொண்டு, ஆகுலித்து – அழுது,
மெலிந்து – வருந்தி, அரற்றும் – கதறுகிற, மானை – மான் பார்வை
போலுங்கண்பார்வையையுடைய திரௌபதியை, கண்டார் – (பாண்டவரும்
கண்ணனும்)பார்த்தார்கள்; (எ – று.)
பாண்டவர் கண்ணனுடன் அங்குச்சேருமுன்னமே திரௌபதி
செய்தியறிந்து அங்குவந்து புலம்பலானாளென இதனால் விளங்கும்.
உபபாண்டவர்தலைகளை அசுவத்தாமன் கைக்கொண்டு சென்றதனால்,
அதில்லாத கவந்தங்களே அங்குக் கிடந்தன. அரியகங்குல் சிந்து தினகரன்
என எடுத்து, அழித்தற்கரிய இரவினிருளைச் சிதறடிக்குந் தன்மையனான
சூரியனெனினுமாம்; முந்தினபொருளில், ஸிந்து – வடமொழிப்பெயர்;
இப்பொருளில், சிந்து – தமிழ்வினைப்பகுதி: சிந்து தினகரன் –
வினைத்தொகை. ஆரணியம் – அரண்யமென்றதன் விகாரம். திநகரன் –
பகலைச் செய்பவன்.
கண்டவுடன், மனம் மெலிவுற்று, ‘இவ்வண்ணம் எவன்கொல்?’
என, கரிய மேனிக்
கொண்டல் உரைத்தனன், துரகதாமாவின் வினைகள் எலாம்,
கூற்றும் உட்க,
அண்ட முகடு அதிர உருத்து, அருச்சுனனும், மாருதியும்,
‘அவன்தன் ஆவி
உண்டு அலது தவிரோம்’ என்று உரைத்து ஓட, மால் தடுத்தே,
உரைக்கும்அன்றே.40 – சீற்றங்கொண்டவீமனையும் அருச்சுனனையும்
கண்ணன் தடுத்தல்.
கண்ட உடன் – திரௌபதியின் (நிலைமையைப்)
பார்த்தவுடனே, (பாண்டவர்கள்), மனம் மெலிவுற்று – மனந்தளரப்பெற்று,
இவண்ணம் எவன்கொல் என – இவ்வாறு எதனாலாகியதென்று (கண்ணனை)
வினாவ,-கரிய மேனி கொண்டல் – கருநிறமுடைய நீர்கொண்ட மேகம்
போன்றகண்ணபிரான், துரகதாமாவின் வினைகள் எலாம் – அசுவத்தாமனது
செயல்களையெல்லாம், உரைத்தனன் – கூறினான்; (அதுகேட்டு),
அருச்சுனனும்-, மாருதியும் – வாயுகுமாரனான வீமனும், கூற்றும் உட்க –
யமனும் அஞ்சும்படியாகவும், அண்டம் முகடு அதிர – அண்டகோளத்தின்
மேல்முகடும் அதிர்ச்சியடையும்படியாகவும், உருத்து – கோபித்து, அவன்
தன்ஆவி உண்டு அலது தவிரோம் என்று உரைத்து – ‘அவ்வசுவத்தாமனது
உயிரைக் கவர்ந்தன்றி விடோம்’ என்று வீரவாதங்கூறி, ஓட – விரைந்து
செல்ல,(அப்பொழுது), மால்தடுத்து உரைக்கும் – கண்ணபிரான்
(அவர்களைத்) தடுத்துக் கூறுவான்; (எ – று.) -அன்று, ஏ -ஈற்றசை.
பாரிடம் ஒன்றினை, ‘புரத்தி பாசறையை’ எனப் புகன்று,
பரிவின் சென்றேம்;
வீரருக்கு முனைத் தாமன் சுயோதனற்குச் சூள் உரைத்து
மீண்டான், ‘ஐவர்
ஆர மணி முடி கொய்து, தரணி எலாம் உன் குடைக்கீழ்
அமைப்பன் இன்றே;
கார் இருக்கும் மலர் அளகக் காந்தாரி சுத! உள்ளம்
களித்தி’ என்றே.41.-இதுமுதல் மூன்று கவிகள் -கண்ணன் சமாதானங் கூறல்.
இதுமுதல் ஐந்து கவிகள் – குளகம்.
(இ -ள்.) பாரிடம் ஒன்றினை – ஒரு பூதத்தை (நோக்கி), பாசறையை
புரத்தி என புகன்று – ‘படைவீட்டைப்பாதுகாப்பாய்’ என்று சொல்லிவிட்டு,
பரிவின் சென்றேம் – விருப்பத்தோடு (யாம் வேறிடத்திற்குப்) போனோம்;
வீரருக்கு முனை தாமன் – போர்வீரர்களுக்கு முன்நிற்பவனான
அசுவத்தாமன்,(துரியோதனனை நோக்கி), கார் இருக்கும் மலர் அளகம்
காந்தாரி சுத -கருநிறந்தங்கியதும் பூக்களைச்சூடியதுமான கூந்தலையுடைய
காந்தாரியின்குமாரனே!
இன்றே -இப்பொழுதே, (யான்சென்று), ஐவர் ஆரம் மணி முடிகொய்து –
பஞ்சபாண்டவர்களுடைய முத்தும் இரத்தினங்களும் பொருந்திய கிரீடத்தைத்
தரித்த தலைகளைத் துணித்து, தரணி எலாம் உன்குடைகீழ் அமைப்பன் –
பூமிமுழுவதையும் உனது ஆளுகையின் கீழ் வைத்திடுவேன்; உள்ளம்
களித்தி -மனங் களிப்பாய், என்று – என்று சொல்லி, சுயோதனற்கு சூள்
உரைத்து -அத்துரியோதனனுக்குச் சபதஞ்செய்து கொடுத்து, மீண்டான் –
இங்கு வந்தான்;(எ – று.)
திருகு சினத்தொடும் கடுகி, பாசறையில் புகுதலுமே, செங்
கண் பூதம்
பெருகு விழி நீர் சொரிய அடர்த்தலும், பின்னிட்டு, அரனைப்
பெட்பின் போற்றி,
முருகு இதழிச் சுடர் அருளும் படைக்கலம் பெற்று, இவ்வண்ணம்
முடித்தான் அம்மா!
குருகு கிரி எறிந்தோனை நிகர்த்தவன்தன் விறல் எவர்க்கும்
கூறல் ஆமோ?’
(இவ்வாறு துரியோதனனெதிரில் உறுதிமொழி கூறிய
அசுவத்தாமன்), திருகு சினத்தொடும் – உக்கிரங்கொண்ட கோபத்துடனே,
கடுகி- விரைந்து, பாசறையில்புகுதலுமே – (நமது) படைவீட்டில்
நுழையுமளவிலே,செம் கண் பூதம் – (அதற்குக் காவலாக நம்மால்நிறுத்தப்
பட்ட கோபத்தாற்)சிவந்த கண்களையுடைய பூதம், விழி பெருகு நீர்
சொரிய – கண்களினின்றுமிக்கநீர்வழியும்படி [மிக்கவருத்தமுண்டாகும்படி],
அடர்த்தலும் – நெருக்கிப்பொருத வளவிலே, (அசுவத்தாமன்), பின் இட்டு –
புறங்கொடுத்து, (பின்பு),அரனை பெட்பின் போற்றி – சிவபிரானை
அன்போடு பூசித்து, முருகுஇதழிசுடர் அருளும் படைக்கலம்பெற்று –
வாசனையையுடையகொன்றைப்பூமாலையையுடைய சோதிவடிவமான
அப்பரமசிவத்தாற்கொடுத்தருளப்பட்ட ஆயுதத்தைப் பெற்று, இ வண்ணம்
முடித்தான் -(அவனுதவியால் யாவரையும்) இவ்வாறு அழித்தல்
செய்திட்டான்; குருகுகிரிஎறிந்தோனை நிகர்த்தவன்தன் விறல் –
கிரௌஞ்சமலையை வேல் கொண்டுபிளந்தவனான முருகக்கடவுளை
யொத்தவனான அசுவத்தாமனது வல்லமை,எவர்க்கும் கூறல் ஆமோ –
யாவருக்குஞ் சொல்லி முடிக்கக்கூடியஅளவினதோ? [அன்றென்றபடி];
(எ – று.)
அசுவத்தாமனது செய்வினைத்திறத்தையும், ஆற்றலையும் வியந்தவாறு.
முருகு – தேனும், தெய்வத்தன்மையுமாம். இதழி – கொன்றை; அதன்
பூமாலைக்கு, இருமடியாகுபெயர். குருகு என்ற தமிழ்மொழியும்
கிரௌஞ்சமென்ற வடமொழியும் பரியாயநாமமாதலால், கிரௌஞ்சமலையை,
‘குருகுகிரி’ என்றார். சிவகுமாரனாதலால், அசுவத்தாமனுக்கு முருகக்கடவுள்
உவமை.
குருகுகிரி யெறிந்த கதை:-சிவபிரான் இளையகுமாரனாய்த்
தேவர்கள்வேண்டுகோளால் அசுரர்களை யொழித்தற்குத் தேவசேனாபதியாம்
பொருட்டுஅவதரித்த முருகக்கடவுள் சூரபதுமனைப்பொருது அழித்தற்குச்
செல்லும்வழியிடையே பெரிய மலைவடிவங்கொண்ட கிரௌஞ்ச னென்னும்
அசுரன்அவனை நலியக்கருதிப்பலவிதமாயைசெய்ய, அதன்மேல்
அப்பெருமான் தனதுதெய்வத்தன்மையுள்ள வேற்படையை யேவி
அதனைப்பிளந்து அழித்திட்டனனென்பதாம். பரசுராமனும் சுப்பிரமணியனும்
பரமசிவனிடம் வில் முதலிய ஆயுதப் பயிற்சியைச் செய்துமுடித்தபின்பு
இவர்களுள் உயர்வு தாழ்வு அறியும்பொருட்டுச் சிவபிரான் உமாதேவியின்
முன்னிலையிலே இவர்களுக்குக் கிரௌஞ்சமலையைச் சுட்டிக்காட்டி,
‘இதனிடத்து உங்கள் படைக்கலத்திறத்தைக்காட்டும்’ என்று நியமிக்க,
பரசுராமபிரான் அம்பெய்து அதனைத் துளையிட்டுத் தனது விற்றிறத்தைக்
காட்ட, முருகக்கடவுள் வேலாயுதத்தை வீசி அம்மலையைப்பிளந்து தனது
வேற்றிறத்தைக் காட்டின னென்றும் கதை கூறப்படும்.
என்று, பினும், ‘அபாண்டவியம் எனும் படையும் துரந்தால், மற்று
எவரே காப்பார்?
அன்று, ‘நுமது உயிர் ஐந்தும் அளிப்பன்’ எனும் வாய்மையினால்,
அகன்றேன்; இன்னும்
வென்றி உமதுழி அடைவின் சேர்ப்பவன், யான்; விடுமின்’ என,
மின் அனாளைத்
துன்றி, ‘விதியினை எவரே வெல்பவர்?’ என்று எடுத்தருளி,
சூழ்ச்சி வல்லான்,
சூழ்ச்சி வல்லான் – தந்திரங்களில் வல்லவனான கண்ணன்,
என்று – என்று சொல்லி, பினும் – மற்றும், அபாண்டவியம் எனும்
படையும்துரந்தால் – அபாண்டவமென்ற அஸ்திரத்தையும் (அசுவத்தாமன்)
எய்வானானால், காப்பார் எவரே – (அதினின்றும் உங்களைப்) பாதுகாப்பார்
யாவர்? [எவருமில்லை யென்றபடி]; அன்று – அந்நாளில் [முற்காலத்தில்],
நுமது உயிர் ஐந்தும் அளிப்பன் எனும் – ‘உங்கள் ஐந்துபேருடைய
உயிரையும்பாதுகாப்பேன்’ என்று வாக்குத்தத்தஞ்செய்த, வாய்மையினால்
உண்மைமொழியின்படி, அகன்றேன் – (உங்களைப் பாதுகாக்கும்பொருட்டு
நேற்றிரவு உங்களை அழைத்துக் கொண்டு) பிறிதிடஞ் சென்றேன்; இன்னும்-
இன்னமும், வென்றி – வெற்றி, உமது உழி அடையின் – உங்களிடத்து
நிலையாகச் சேர்ந்திட்டால், சொல்வன் யான் -(அப்பொழுதே) நான்
நம்பிக்கையாகச் சொல்வேன்; (இங்ஙனமாதலால்), விடுமின் (அசுவத்தாமனைத்)
தொடராமல் விட்டிடுங்கள்,’ என – என்றும் சொல்லி, மின் அனாளை துன்றி-
மின்னல் போல மெல்லியளாய் விளங்குகின்றவளான திரௌபதியையடைந்து,
விதியினை வெல்பவர் எவரே என்று – ‘விதியை வெல்வார் யார் உளர்?
[எவருமில்லை]’ என்று சொல்லி, எடுத்து அருளி – (கீழ் விழுந்து புரளுகிற
அத் திரௌபதியைக்) கருணையோடு எடுத்து, (எ – று.)-‘எனத்துயரந்தவிர்த்து’
என அடுத்த கவியோடுதொடரும்.
இனிநீங்கள் அசுவத்தாமனை எதிர்த்துப் போர்செய்வீரானால்
அப்பொழுது அவன் உங்கள்மேல் அபாண்டவாஸ்திரத்தைச்செலுத்தினால்
அதனைத் தடுத்து உங்களைக் காத்தல் அரிதாதலின், அது உங்களைத்
தவறாமல் அழித்திடக் கூடு மென்றும், உங்களை நான் பாதுகாப்பதாக
முந்திக்கூறியுள்ளபடி தந்திரமாக வேற்றிடத்திற்கு அழைத்துக்கொண்டுபோய்
வைத்துக்கொண்டிருந்ததாலன்றோ நீங்கள் ஐவர் மாத்திரமேனும்
உயிர்பிழைத்தீர்கள் என்றும், நீங்கள் இப்பொழுது வெற்றியடைந்திட்டதாகச்
செருக்குக்கொள்ள வேண்டா; அவவெற்றி அசுவத்தாமனையெதிர்ப்பின்
ஒழியினுமொழியு மென்றும் நயபயங்களாகத் தந்திரவார்த்தைகள்
கூறிக்கண்ணன் பாண்டவரைச் சமாதானப்படுத்தின னென்பதாம்.
அபாண்டவத்தைக் கண்ணன் தடுத்துக் காத்ததை நினைவுகூர்க. “மலர்ந்த
செங்கதிர் மாமணியிழந்தவன் மலர்விழிசிவப்பூர, அலர்ந்த தாமரைப்
பொகுட்டுறை யயன்படையபாண்டவமெனத்தூண்ட, வுலங்கலந்ததோ
ளைவர்தமுயிர்பிழிந்துண்ண வந்துறல்பாரா, விலங்கு மாழியை நோக்கினன்
மறைமுதலிரிந்ததப்படைமாதோ” என்பர் பாகவதத்தும். அபாண்டவியம் –
அபாண்டவம்; பாண்டவரைக்கருவறுப்பது; இதனைப் பிரமசிரோஸ்திர
மென்றும்,ஐஷீகாஸ்திரமென்றுங் கூறுவர்.
கண்ணன் தூதுசெல்வதற்குமுன் பாண்டவரைவரையுஞ் சபைகூட்டித்
தனித்தனி ‘உங்கள் கருத்ததைக் கூறுங்கள்’ என்று சொல்லி அவரவர்
கருத்தைக் கேட்டுவரும்போது, சகதேவன் தனது தத்துவஞானத்தைப்
புலப்படுத்த, அதுகண்டு கிருஷ்ணன் திருவுள்ளமுவந்து ‘வேண்டிய வரம்
கேள்’என்று நியமிக்க, சகதேவன் ‘எங்களைவரையும் போரிற் பாதுகாக்க
வேண்டும்’என்று வேண்ட, அவ்வரத்தை எம்பெருமான் கொடுத்தருளினான்.
இதனை”வன்பாரதப்போரில் வந்தடைந்தே மைவரையும், நின்பார்வையாற்
காக்கவேண்டு நெடுமாலே”, “என்றென்றிறைஞ்சியிருதாமரைத்தாளில்,
ஒன்றுங்கதிர்முடியாற் கோமென் றுரைத்தருளி” என்ற கிருட்டிணன்
தூதுசருக்கத்துச்செய்யுளால் அறிக. அத்தன்மையே இங்கு ‘அன்று
நுமதுயிரைந்துமளிப்பனெனும் வாய்மையினால்’ என்று கண்ணபிரானாற்
குறிக்கப்பட்டது.விதியினை எவரே வெல்பவர் – “ஊழிற் பெருவலி
யாவுளமற்றொன்று,சூழினுஞ் தான்முந்துறும்” எனக் காண்க.
மைந்தர் உயிர்க்கு இரங்குவது என்? மலர்க் குழலாய்! உன்
கொழுநர் வாழ்தற்கு யான் செய்
தந்திரம் மற்று ஒரு கோடி; உரைக்கு அடங்கா’ எனத் துயரம்
தவிர்த்து, தன்மன்
கொந்து அலரும் முகம் நோக்கி, ‘கன்னன் முதல் யாவருக்கும்
குலவும் ஈமத்து
அந்தம் உறு கடன் கழித்தி’ என, உலுகன் சொற்படி நின்று
அளித்த பின்னர்,44.-கண்ணன் திரௌபதியைத்தேற்ற, தருமன் இறந்தார்க்குக்
கிரியை செய்தல்.
மலர் குழலாய்’ – பூக்களைச்சூடிய கூந்தலையுடையவளே!
மைந்தர்உயிர்க்குஇரங்குவது என் – (உனது) புத்திரர்களுடைய உயிர்
ஒழிந்ததற்காக நீ விசனப்படுவது என்னே? உன் கொழுநர் வாழ்தற்கு –
உனதுகணவர்கள் இறவாது உயிர் வாழும்பொருட்டு, யான் செய் – நான்
செய்த,தந்திரம் – தந்திரங்களோ, ஒரு கோடி – மிகப்பலவாம்; உரைக்கு
அடங்கா -(அவை) சொல்லுக்கு அடங்குவனவல்ல,’ என – என்று சொல்லி,
துயரம்தவிர்த்து – (திரௌபதியினுடைய) துன்பத்தைத் தணித்து,
(கண்ணபிரான்),தன்மன் கொந்து அலரும் முகம் நோக்கி – தருமபுத்திரனது
மலர்போலமலர்ச்சி பெற்றுள்ள முகத்தைப் பார்த்து, கன்னன் முதல்
யாவருக்கும் -கர்ணன் முதலிய எல்லோருக்கும், குலவும் ஈமத்து அந்தம்
உறு கடன் கழித்திஎன – பொருந்திய மயானசம்பந்தமான கடமையாகச்
செய்யவேண்டியஅந்திமக் கிரியைகளைச் செய்துமுடிப்பாயென்றுசொல்ல,
உலுகன் சொல்படி நின்று – உலூகனென்னும் அந்தணன் கூறிய முறைப்படி
நின்று, (தருமன்), அளித்த பின்னர் – (அக்கடமைகளை இறந்தார்க்குச்)
செலுத்தியபின்பு; (எ – று.) – ‘கண்ணன் பாண்டவர்களுடன்
அத்தினாபுரிசென்று’ என வருங்கவியோடு தொடரும்.
கற்புடைமங்கையர்க்கு மக்களினுங் கணவரே முக்கியமென்பது
நூற்கொள்கை யாதலால், நீ உன் கணவர் வாழ்ந்ததற்காக மகிழ
வேண்டுமேயன்றி மைந்தர் இறந்ததற்காக வருந்தலாகா தென்பான், இங்ஙனங்
கூறினான். கொந்து – கொத்து; ஆகுபெயராய் மலரையுணர்த்திற்று. இனி
கண் செவி வாய் மூக்கு என்ற உறுப்புக்கள் ஒவ்வொன்றும்
மலர்போலிருத்தலால், அவற்றையுடைய முகம் பூங்கொத்துப் போன்றதெனக்
கூறப்பட்டதென்பாருமுளர். ‘தன்மன் கொந்தலருமுகம்’ என்றதனால்,
கண்ணன்கூறிய சமாதான வார்த்தையைக் கேட்டுத் தருமபுத்திரன் சோகந்
தணிந்தனனென விளங்கும். இனி தருமன்
வினைப்பயனையுணர்ந்தவனாதலால்,எப்பொழுதும் முகமலர்ச்சி
கொண்டிருந்தன னென்பதை விளக்குவதுமாம்.
கன்னன் – கர்ணன்; இப்பெயர் கர்ணகுண்டலங்களோடு பிறந்தமை
பற்றியது: காதின்வழியே பிறந்ததனால் வந்தபெயரென்றுங்கூறுவர்;
ஆதவனிட்டபெயருமாம். கர்ணம் – காது. அந்தமுறுகடன் –
அந்திமக்கிரியை. ‘கழித்தும்’ என்றும் பாடமுண்டு. உலூகன் –
ஒருபுரோகிதன்; பாண்டவர்களால் துரியோதனாதியரிடம் முதலில் தூதனாக
அனுப்பப்பட்டவன்.
அத்தினாபுரி அதனில் ஐவருடன் சென்று, அரியும், அந்தன்
முன்னர்ப்
பத்தியினால் இறைஞ்சிட, மற்று ‘எவர்கொல்?’ என, ‘தருமன் முதல்
பாலர்’ என்ன,
வித்தகனும், ஆசி சொற்று, ‘சதாகதி சேயினைத் தழுவ
வேண்டும்’ என்ன,
அத்தன் அத் தூண் அளித்தருள, தழுவி நெரித்தனன்; துகள்கள்
ஆயது அம்மா!
அரியும் – கண்ணபிரானும், ஐவருடன் – பஞ்சபாண்டவர்
களுடனே, அத்தினாபுரியதனில் சென்று – அஸ்திநாபட்டணத்திற்போய்,
அந்தன் முன்னர் – பிறவிக்குருடனான திருதராட்டிரன் முன்னிலையில்,
பத்தியினால் இறைஞ்சிட – பக்தியோடு வணங்க, (அப்பொழுது
திருதராட்டிரன்), எவர் கொல் என – (வணங்குபவர்) யாவரென்றுவினாவ,
தருமன் முதல் பாலர் என்ன – (அதற்குக் கண்ணன்) ‘தருமபுத்திரன் முதலிய
குமாரர்கள்’ என்றுகூற, வித்தகனும் – சதுரனான திருதராட்டிரனும், ஆசி
சொற்று – (அவர்களுக்கு) ஆசீர்வாதஞ்சொல்லி, சதாகதி சேயினை
தழுவவேண்டும் என்ன – ‘வாயுகுமாரனான வீமனை (யான்)
கட்டிக்கொள்ளவேண்டும்’ என்று சொல்ல, அத்தன் – (யாவர்க்குந்)
தலைவனான கண்ணன், அ தூண் அளித்தருள – பெரியதோர்
இருப்புத்தூணைக் கொணர்ந்துகொடுத்தருள, தழுவி நெரித்தனன் –
(அதனைத்திருதராட்டிரன் வீமனென்று கருதி) அணைத்து நொருக்கினான்;
(அம்மாத்திரத்தால்), துகள்கள் ஆயது – (அத்தூண்) பொடியாய்விட்டது;
அம்மா – ஆச்சரியம்! (எ – று.)
திருதராட்டிரனது மிக்கவலிமையையும், அதிகவைரத்தையும்,
கோபாவேசத்தையும் வியந்தார். “கராசலம் பதினாயிரம்
பெறுவலிக்காயமொன்றினிற் பொற்றோ, ளிராசகுஞ்சரம் பிறந்திடும்
விழிப்புலனில்லை மற்றதற் கென்றான்” என்றபடி திருதராட்டிரன் பதினாயிரம்
யானைபலங்கொண்டவ னாதலாலும், கோபாவேசத்தாலும், இருப்புத் தூணைத்
தழுவி நெரிப்பவனானான். பாண்டவர் கண்ணனுடன் திருதராட்டிரனைச்
சேர்ந்து வணங்கியபொழுது, தன்புத்திரரைக் கொன்ற அவர்களிடத்து
உள்வயிரமுடைய திருதராட்டிரன் அவர்களை அன்போடு தழுவுவான்போல
அருகிலழைத்து முதலில் தருமபுத்திரனையணைத்து நல்வார்த்தை கூறிவிட்டு
உடனே வீமனைக் கொல்லுங்கருத்தோடு அவனை அழைக்க, அப்பொழுது
முழுதுணர்கடவுளான கண்ணன் அவனுடைய உட்கருத்தை யறிந்து வீமனைத்
தடுத்து வீமன்வடிவமுடையதோர் இரும்புமயமானபிரதிமையைக்கொணர்ந்து
செலுத்த, திருதராட்டிரன் அதனை வீமனென்றே கருதிவலியத்தழுவியதனால்,
அந்த இருப்புருவம் பொடிப்பொடியாய்விட, பின்பு திருதராட்டிரன்
கண்ணனால்உண்மைகூறி நல்லறிவு புகட்டப்பட்டவுடன்
கோபசாந்தியையடைந்து பிறகுவீமன் முதலிய நால்வரையுந்தழுவினனென
விவர முணர்க. துரியோதனன்வீமனிடத்துள்ள விரோதத்தால் தனது
மாளிகை வாயிலில் அவன் போன்ற ஒருஇருப்புப்பாவையை அமைத்து
நிறுத்தி அதனைப்பலவாறு விகாரமாகஅலங்கரித்து அதன் தலையின்மேல்
தான் உபரிகையினின்று எச்சிலுமிழ்ந்துஇங்ஙனம் தன்பகைமையையுங்
கொடுமையையும் வெளிக்காட்டிவந்தனனென்றும், அந்தப்பிரதிமையே
இங்குக்கண்ணனாற் கொணர்ந்துகொடுக்கப்பட்டதென்றும் அறிக: ஆனது
பற்றியே, ‘அத்தூண்’ எனச் சுட்டிக்கூறினார். தூண் – தூண்போல நீண்ட
பெரியவடிவமென்க. “முன்னர்மேவுமா றுணர்ந்தமூலகாரணன்பகுத், தன்ன
வீமனுக்கு வேறமைத்தபஞ்சலோகமொன், றுன்னு முன்னர் கொணருவித்
துடனடந்து நேர்புக” என்றுநல்லாப்பிள்ளை பாரதத்துக் கூறியவாறும்
உணர்க.
ஹஸ்தினாபுரி – ஹஸ்தீ என்ற சந்திரகுலத்தரசனால் அமைக்கப்பட்ட
நகர மென்றும், யானைகளை மிகுதியாகவுடைய நகர மென்றும் காரணப்
பொருள்படும். ஹஸ்தம் – கை, இங்கே துதிக்கை; அதனையுடையது ஹஸ்தீ
என யானைக்குக் காரணக்குறி. தான் கொண்ட மனுஷ்யாவதாரத்துக்கு ஏற்ப,
கண்ணனும் பாண்டவருடன் திருதராட்டிரனை அன்போடு
வணங்குபவனானான். வித்தகன் – தந்திரம் வல்லவன்; வஞ்சக னென்றபடி.
அதிக பலபராக்கிரமசாலிகளான தன்மக்கள் நூற்றுவரையுந் தனியேயழித்
திட்டவலிமையைக்கொண்டாடுவான் போன்று, திருதராட்டிரன், வீமனை
‘சதாகதிசேய்’ என்றான். வேண்டும் – உம்விகுதிபெற்ற ஒருவகை வியங்கோள்.
இனி ஊழி வாழ்திர்!’ என, இளைஞர் ஒரு நால்வருடன்
அறத்தின் மைந்தன்-
தனை இருத்தி, ‘மீள்வல்’ எனச் சாத்தகியும் அலாயுதனும்
தன்னைச் சூழ,
வினை அகற்றும் பசுந் துளவோன் துவரை நகர்த் திசை நோக்கி
மீண்டான்; சீர்த்திக்
கனை கடல் பார் அளித்து, அவரும் அந் நகரின் அறநெறியே
கருதி வாழ்ந்தார்.46.-கண்ணன் தருமனுக்குஅரசளித்துத் துவாரகை சேர்தல்.
வினை அகற்றும் – (தன்னைச் சார்ந்தவர்களது)
தீவினைகளைஒழிக்கின்ற, பசு துளவோன் – பசுமை நிறமுடைய திருத்துழாய்
மாலையையுடைய கண்ணபிரான்,- இனி ஊழி வாழ்திர் என – ‘இனி
நெடுங்காலம் அரசாண்டு வாழ்வீர்கள்’ என்று சொல்லி, அறத்தின்
மைந்தன்தனை – தருமபுத்திரனை, இளைஞர் ஒரு நால்வருடன் – (வீமன்
முதலிய) நான்கு தம்பிமார்களுடனே, இருத்தி – (அஸ்தினாபுரியிலே)
தாபித்து,மீள்வல் என – யான் என் ஊர்க்குச் செல்வேனென்று சொல்லி,-
சாத்தகியும்அலாயுதனும் தன்னை சூழ – சாத்தகியும் பலராமனும்
தன்னையடுத்துவர,-துவரை நகர் திசை நோக்கி மீண்டான் – துவாரகாபுரியின்
எல்லையை நோக்கிமீண்டு வந்தருளினான்; அவரும் –
அப்பாண்டவர்களும், சீர்த்தி -மிக்கபுகழுடன், கனை கடல் பார் அளித்து –
ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்டபூமியைப் பாதுகாத்து, அறம் நெறியே கருதி-
தருமமார்க்கத்தையே சிந்தித்து,அ நகரின் – அந்த அத்தினாபுரியிலே, வாழ்ந்தார்-;
(எ – று.)
கீழ்96 – ஆங் கவியில் பலராமனும் சாத்தகியும் சென்றமை கூறியவர்
இங்கு ‘சாத்தகியு மலாயுதனுந் தன்னைச் சூழ’ என்றதனால் மீண்டும்
அவ்விருவரும் தருமனது பட்டாபிஷேகத்தின்பொருட்டு வந்தனரென வுணர்க.
பூமிபாரத்தைத் தொலைத்தமைதோன்ற, ‘வினையகற்றும் பசுந்துளவோன்’
என்றார். சீர்த்தியென்பது மூன்றாம் வேற்றுமைத்தொகையாய் ‘அளித்து’
என்பதனைக் கொள்ளும். இனி, பாருக்கு அடைமொழியாக்கி,
பாரந்தீர்ந்ததனாற் புகழ்பெற்ற பூமியெனினுமாம்.
“மலைதரு திணிதோள் மன்னர் மணிமுடி துகளதாகச், சிலைகடை
குழைத்த பார்த்தன் செழுமணித்தடந்தேர்ப் பாகன், பலர்புகழ் தருமன்
றன்னைப் பகர்பெருந் தாதை சொல்லா, லலர்தலை யவனிகாப்ப வரியணை
யிருத்தி னானால்”, “மழைவளஞ்சிறந்தன வளங்கள் மிக்கன, குழைவொடு
பிணிகளுங் குலைந்து சாய்ந்தன, விழைவொடு நல்லறம் வேர்படைத்தன,
தழைபுக ழொடுபுவி தருமன் காக்கவே”, “நான்மறையாளர்வாழ்த்த நகுமுடி
யரசர் தாழ, மீனுயர் கொடியோனாதி வெந்திறற் குமர ரெல்லாந், தானையோ
டிறைஞ்சா நிற்பத்தாமரை மலரின் வாழுந், தேனவாந் தெரியல் மார்பன்
திருநகர் சென்று புக்கான்” என்ற பாகவதச்செய்யுள்கள் இங்கு
நோக்கற்பாலன.
——————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்