தேன் பயிலும் தாரான் எதிராசன் சேவடி மேல்*
தான் பரமபத்தி தலை எடுத்து* – மாந்தர்க்கு
உணவாக ஆர்த்தியுடன் ஒண் தமிழ்கள் செய்தான்*
மணவாள மாமுனிவன் வந்து–ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் அருளிச் செய்த தனியன் –
மணவாள மாமுனிகள் யதிராஜரான எம்பெருமானாரின் தேன் பெருகும் திருவடி மேலே
பரமபக்தி என்று சொல்லப்படும் அளவிறந்த அன்பால், அந்த எம்பெருமானாரைப் பிரிந்து வாடும் வாட்டத்தை
வெளியிட்டுக் கொண்டு, அறிவில் குறைந்தவர்களின் ஆத்மாவுக்கு அந்த எம்பெருமானாரிடத்தில்
பக்தியை வளர்க்கும் உணவாக, அழகிய தமிழ் ப்ரபந்தமாக இந்த ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செய்துள்ளார்.
———–
வம்பவிழ்தார் வண்மை மணவாள மாமுனிகள்*
அம்புவியில் கால் பொருந்தா ஆர்த்தியினால்* – உம்பர் தொழும்
விண்ணுலகில் செல்ல விரைந்து எதிராசன் பதங்கள் *
நண்ணி உரைத்தார் நமக்கு-–
தேன் பெருகும் மாலையை அணிந்து, வள்ளல் தன்மையுடன் இருக்கும் மணவாள மாமுனிகள்
யதிராஜரான எம்பெருமானாரைப் பிரிந்து இந்த நிலவுலகில் வாழ முடியாத ஆற்றாமையினால்,
நித்யஸூரிகள் நித்யமாக எம்பெருமானைத் தொழும் பரமபதத்தில் உள்ள எம்பெருமானாரின் திருவடிகளை
விரைந்து சென்றடைய வேண்டும் என்று ஆசைப்பட்டதை நம்மைப் பார்த்து உபதேசிக்கிறார்.
———–
வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் வாழியென
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை–1-
எம்பெருமானாருக்கு மங்களா ஸாஸனம் செய்பவர்கள் யவரோ
அவர்களுக்கும் மங்களா ஸாஸனம் செய்பவர்கள் யவரோ
அவர்களுக்கும் மங்களா ஸாஸனம் செய்பவர்கள் யவரோ
அவர்கள் நித்ய ஸூரிகளால் கொண்டாடப்படுபவர்கள் என்கை
———
இராமாநுசாய நம என்று சிந்தித்திரா
மாநுசரோடு இறைப் போழ்து இராமாறு
சிந்திப்பார் தாளிணையில் சேர்ந்திருப்பார் தாளிணையை
வந்திப்பார் விண்ணோர்கள் வாழ்வு–2-
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -என்று அநவரதம் சிந்தித்து இருக்கை ப்ராப்தம்
அங்கனம் சிந்தித்து இருக்க இயலா விடிலும் அங்கனம் சிந்தித்து இருக்ப்பாருடைய ஸஹ வாஸமாவது செய்யப் பெறுவது ப்ராப்தம்
அப்படிப்பட்ட அத்யவசாயம் யுடையவர்கள் விண்ணோரிலும் மேம்பட்டவர் என்றதாயிற்று
இரா இராமல் -மாறு சிந்திப்பார் எனவுமாம்-
———
தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம்*
என் தனக்கு நீயே எதிராசா!* இந்நிலைக்கு
ஏராத இவ்வுடலை இன்றே அறுத்தருளப்*
பாராதது என்னோ? பகர்–3-
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நலமக்களும் மேலாத் தாய் தந்தையரும் அவரே யினி யாவாரே -என்று நம்மாழ்வார் எம்பெருமானையே எல்லாமுமாகக் கொண்டவர்
மாதா பிதா யுவதஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ -என்று நம்மாழ்வாரையே எல்லாமுமாகக் கொண்டவர் ஆளவந்தார்
அப்படி அன்றிக்கே எம்பெருமானாரையே எல்லாமுமாகக் கொள்ள வேண்டும் என்பதே மா முனிகளின் அத்யவசாயம்
ஆனாலும் இந்த அத்யவசாயத்திற்கு இந்த ப்ராக்ருத தேஹத்தோடு இருப்பு பிரதிபந்தகமாய் இருத்தலால் இதனை உடனே தவிர்த்து அருள வேணும் என்று இரக்கிறார்
———
இந்த உடல் சிறை விட்டு எப்பொழுது யானேகி*
அந்தமில் பேரின்பத்துள் ஆகுவேன்* – அந்தோ
இரங்காய் எதிராசா! என்னை இனி உய்க்கை*
பரங்காண் உனக்கு உணர்ந்து பார்–4-
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமான நிலைமை சிறைக்கூடத்திலே இருந்து துவழ்வது ஒக்கும்
இப்படிப்பட்ட சிறையில் நின்றும் விடுபட்டு -அந்தமில் பேர் இன்பத்து அடியரோடு இருந்தமை -என்னும்படியான பேற்றை அடியேன் எப்போது பெற்றவனாவேன்
எதிராசர் தேவரீர் திரு உள்ளம் இரங்கா விடில் இப்பேறு அடியேனுக்குக் கிட்டுமோ
அடியேனுடைய உஜ்ஜீவனம் உன் அதீனம் அன்றோ என்கிறார் ஆயிற்று
இரங்காய்-இரங்கி அருள வேணும் என்றுமாம்-
————-
தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால்*
இன்புறுமோ? தந்தை எதிராசா! * – உன் புதல்வன்
அன்றோ உரையாய் யான் ஆதலால்* உன் போகம்
நன்றோ? எனை ஒழிந்த நாள்–5-
தேசாந்த கதனான புத்ரன் பக்கலிலே பித்ரு ஹ்ருதயம் கிடக்குமா போலே -என்ற ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தியைத் திரு உள்ளம் பற்றி முன்னடிகள் அருளிச் செய்த படி –
ஸம்பன்னனான பிதாவானவன் புத்ரனோடு கூடி அன்றோ போகங்களைப் புசித்து மகிழ்வன் –புத்ரனை விட்டுப் பிரிந்து தான் தனியே ஒரு போகம் புசித்து மகிழ மாட்டான் அன்றோ
அது போல் ஸ்வாமிந் உனக்குப் புத்ரனாகிய அடியேனை விட்டுத் தேவரீர் தனியே -கட்டெழில் வானவர் போகம் உண்பாரே -என்னுபடியான போகத்தை அனுபவித்துக் களித்து இருக்கப் ப்ராப்தி உண்டோ -என்னையும் கூட்டிக்கொண்டு குண அனுபவம் செய்வது அன்றோ பாங்கு என்றார் ஆயிற்று –
———–
வேம்பு முற்றக் கைப்பு மிகுவது போல் வெவ் வினையேன்
தீம்பு முற்றும் தேகமுற்றிச் செல்லுங்கால் ஆம் பரிசால்
ஏற்கவே சிந்தித்து எதிராசா! இவ் வுடலைத்
தீர்க்கவே ஆன வழி செய்–6-
ஸ்வாமிந் வேம்பு முற்ற முற்றக் கசப்பு முற்றுவது போல் அடியேனது தேஹமும் முற்ற முற்றப் பாபங்களே முற்றி வாரா நின்றன –
இது அஸஹ்யமாய் இருத்தலால் இவ்வுடல் தீர்க்கும் உபாயம் தேவரீரே செய்து அருளத் தக்கது
——–
அன்னை குடி நீர் அருந்தி முலையுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ? என்னே
எனக்கா எதிராசா! எல்லாம் நீ செய்தால்
உனக்கது தாழ்வோ? உரை–7-
ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகத்தில்-பூயோ பூய த்வயி ஹித பர அபி உத்பத அநாத்மநீந ஸ்ரோத மக்நாந் அபி பத நயந் த்வம் துராசா வஸேந ருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி தத் தத் வர்ண ஆஸ்ரம விதிவச க்லிஸ்யஸே ரங்க ராஜ –உத்தர சதகம்-45-
ருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி–தன் குழந்தை நோயாளியாய் இருக்கும் போது-அது குடிக்க வேண்டிய கஷாயத்தை தாயான தானே குடிக்குமா போலே
த்வம் தத் தத் வர்ண ஆஸ்ரம விதி வச க்லிஸ்யஸே –அந்த அந்த வர்ணாஸ்ரம ஆசாரங்களை நியமிக்கும் சாஸ்திரத்துக்கு வசப் பட்டவராய் பல பல கார்யங்களை அனுஷ்டித்துக் கொண்டு வருந்துகின்றீர்-ராமனாகவும் கிருஷ்ணனாகவும் -பிறந்து -கர்ம வசப் படாமல் இருந்தும் வர்ணாஸ்ரமம் அனுஷ்ட்டித்து —-தாய்ப் பால் பருகும் குழந்தைக்கு உண்டான நோயைத் தீர்க்கும் விதமாக தாயானவள் கசப்பான மருந்தை குடிப்பது போன்றது-பர துக்க அஸஹிஷ்ணுதையால் கரண களேபரங்களைக் கொடுத்து அருளியும்-சேதனர் விஷயாந்தர ப்ரவணராய் ஸாஸ்த்ர நிஹிதங்களையே செய்து போந்து நிற்க – அவர்கள் நல் வழி வருவார்களோ என்னும் பேராசையால் – ஸ்தநந்த்ய பிரஜை ரோக பீடிதையாக-தான் ஒளஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே-ராம கிருஷ்ண அவதாரங்களையும் பண்ணி அதுகளில் வர்ணாஸ்ரம விதி பரதந்த்ரராய் நாட்டில் பிறந்து மனுஷர் படாதன பட்டு கிலேசிக்கிறது என்கிறார்
இவற்றை அடி ஒற்றி முன்னடிகள் அருளிச் செய்தபடி
தனது குழந்தையின் நோய் தீருவதற்காகத் தாய் தானே காஷாயம் முதலியன குடித்தலாகிற ஒவ்ஷதை சேவை பண்ணுவது என்கிற முறை உண்டாம்
அதே போல் இப்பிறவி என்னும் நோயாலே அகப்பட்டு துடிக்கின்ற எனக்கு இந்நோய் தீரத்தக்க உபாயங்களைத் தேவரீர் அனுஷ்ட்டித்து அடியேனை நோய் தீர்த்தவனாகச் செய்தால் இது முறையாகாதோ
என்னைக் குழந்தையாகக் கொண்டு இருக்கிற உமக்கு இதுவன்றோ உற்றது என்றார் ஆயிற்று
குடிநீர் -கஷாயம்
———-
தன் குழவி வான் கிணற்றைச் சார்ந்திருக்கக் கண்டிருந்தாள்
என்பதன்றோ அன்னை பழி ஏற்கின்றாள் நன்குணரில்
என்னாலே என்னாசமேலும் எதிராசா!
உன்னாலே ஆமுறவையோர்–8-
பிரஜையை கிணற்றின் கரையின் நின்றும் வாங்காது ஒழிந்தால் – தாயே தள்ளினாள் என்னக் கடவது -இறே –சூரணை -371-அடி ஒற்றி முன்னடிகள்
கிணற்றின் கரையிலே குணந்தை இருக்கின்றதைக் கண்ட தாயானவள் அப்போதே ஓடிச்சென்று கிணற்றின் கரையில் நின்றும் அக்குழந்தையை அப்பால் படுத்திற்றிலள் ஆகில் குழந்தை கிணற்றிலே விழுந்த அளவிலே தாய் அப்போதே சென்று எடுத்து இருந்தால் குழந்தை விழுந்து இருக்குமோ -கிணற்றின் கரஒயில் இருப்பை இவள் அனுமதி பண்ணி இருக்கையால் அன்றோ விழுந்தது ஆனபின்பு இவளே அன்றோ தள்ளினாள் என்று லோகம் பழி சொல்லும் அந்தத்தாய் தானும் தானே அன்றோ தள்ளினேன் என்று சொல்லிக் கதறுவாள்
ஆகவே ஸ்வாமிந் என்னுடைய நாஸத்தை நானே விளைத்துக் கொண்டேன் எனினும் உமக்கும் நமக்கும் உண்டான உறவை ஆராய்ந்து பார்க்கும் இடத்து எனது நாசத்திற்குத் தேவரீரே காரணம் என்னும்படி பழி உமது தலையிலே ஆகும் அன்றோ –
அங்கனம் ஆகாதபடி பார்த்துக் கொள்ளீர் என்றார் ஆயிற்று –
———–
கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த அன்னை போல் பாபத்தால்
யான் பிறப்பேனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை உய்ப்பதா–9-
இந்த ஸம்ஸாரக்கடலில் கிடந்தது துவள்கின்ற யும்மைக் கரையேற்ற வேணுமாகில் இந்த ஸம்ஸாரத்தில் பிறந்த ஒருவர் அதற்கு ஸக்தராக வேணுமே யல்லது உம்மைப்போலவே ஸம்ஸாரக்கடலிலே ஒருகால் விழுந்து துவண்டரான ஸ்ரீ ராமானுஜர் உம்மைக் கரையேற்ற எங்கனம் ஸக்தராவார் என்று சிலர் கேட்பதாகக் கொண்டு அதற்கு இதில் விடை அளிக்கிறார்
கிணற்றில் விழுந்த குழந்தையை எடுத்துக் பிழைப்பித்தற்காக தாயும் உடன் குதித்தால் அந்தக்குதிப்பு எதற்க்காக என்று நோக்க வேண்டாமோ
குழந்தையும் கிணற்றில் விழுந்தது தாயும் விழுந்தாள் என்ன வாசி என்று சொல்லுவார் உண்டோ -அதே போல் பாபத்தினால் இப்பிறவிக்கடலில் விழுந்த விழுகின்ற விழப்போகும் என்போல்வாரை உத்தரிப்பிக்கை காக வன்றோ எதிராசர் தாமும் ஒக்கக் குதித்தது என்கிறார்-நமது பிறவி கர்மத்தால் அவரது பிறவி கருணையினால் -என்றவாறு-
—————
பூமகள் கோன் தென்னரங்கர் பூங்கழற்குப் பாதுகமாய்
தாம் மகிழும் செல்வச் சடகோபர் தேமலர்த் தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமாநுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே! வாழ்–10-
எம்பெருமானுடைய திருவடி நிலையான நம்மாழ்வாருக்குத் திருவடி நிலையான எம்பெருமானாரை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்குமாறு நெஞ்சு போல்வாரான தொண்டரை விளித்து அருளிச் செய்தாராயிற்று-
——
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்றறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா! எந் நாளும்
உன் தனக்கே ஆட்கொள் உகந்து–11-
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இரு கரையர் என்பர் -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள் -ஆழ்வார் திருவடிகளில் மதுரகவிகள் போல் வடுக நம்பிகள் பிராப்ய ப்ராபகங்கள் இரண்டுமே எம்பெருமானார் திருவடிகளே என்று இருப்பர் என்பது ப்ரஸித்தம் -கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் எம்பெருமானார் திறத்தில் மிகவும் பிரவணராய் இருந்தார்களே யாகிலும் அவர்களும் சில சமயம் பெருமாள் பக்கலிலும் சென்று பல் காட்டுவதும் ப்ரவணராய் போருமதுவையே கொண்டு அவர்களையும் வடுக நம்பி குறைகூறுவாராம் -ஆகவே வடகநம்பியின் சரம பர்வ நிஷ்டை அத்விதீயம் என்பது நாடு அறிந்தது – அவருடைய நிஷ்டா விசேஷம் தமக்கும் உண்டாகும்படி விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளப் பிரார்திக்கிறார் இதில் –
—–
தேசந் திகழும் திருவாய்மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை நேசத்தால்
எப்படியே எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசா!
அப்படியே நீ செய்தருள்–12-
ஸ்ரீ மத் யதீந்த்ர தவ திவ்ய பாதாப்ஜ ஸேவாம் ஸ்ரீ சைல நாத கருணா பரிணாம தந்தரம் -ஸ்ரீ எதிராஜ விம்சதி ஸ்லோகமும் இத்துடன் சேர அனுசந்தேயம்
தேவரீருடைய திருவடிகளை அடியேன் நேராகக் கண்டிலேன் -அடியேன் ஆச்சார்யர் காட்டிக்கொடுக்கக் கண்டேன் அத்தனை -காட்டிக் கொடுத்தவருடைய திரு உள்ளம் தேவரீர் அறியாதது அன்று -அது நிறைவேறுமாறு தேவரீர் கடாக்ஷித்து அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்-
தேசம் -தேஜஸ் -தேஜஸ்வியான திருவாய் மொழிப்பிள்ளை-
——–
எதிராசன் வாழி எதிராசன் வாழி
எதிராசன் வாழி என்று ஏத்திச் சதிராக
வாழ்வார்கள் தாளிணைக் கீழ் வாழ்வார்கள் பெற்றிடுவர்
ஆழ்வார்கள் தங்கள் அருள்–13-
எம்பெருமானார் திருவடி ஸம்பந்தம் பெற்றாருக்கு அல்லது ஆழ்வார்களின் திருவருள் பலியாது என்கை-
———
அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ?
அதிகாரம் இல்லாதார்க்கன்றோ எதிராசா!
நீ இரங்க வேண்டுவது? நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம்!–14-
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவருக்கு வானம் கொடுப்பது மாதவன் என்று எம்பெருமான் யோக்யருக்கு அருள் செய்பவன் என்று சொல்லி இராமானுசன் தன்னை எய்தினாருக்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்து -என்று எம்பெருமானாருடைய கிருபா மாத்ரா ப்ரஸன்னாச்சார்யத்வம் அழகாகப் பேசப்பட்டது –
அதைத் திரு உள்ளம் பற்றி இப்பாசுரம் அருளிச் செய்துள்ளார் -அடியேன் போன்ற அநதிகாரிகளுக்கும் தேவரீர் அருள் செய்தால் அன்று எம்பெருமானில் காட்டில் தேவரீருக்கு ப்ரஸித்தமாயுள்ள வை லக்ஷண்யம் தேறுவது என்றார் ஆயிற்று –
என் செய்வோம் யாம் -இனிமேல் அதிகாரம் சம்பாதித்துக் கொள்ள என்னாலாகுமோ -என்றபடி – தேவரீரை விட்டு வேறு ஒருவரை ஆஸ்ரயிக்கத் தான் ஆகுமோ -என்றபடியுமாம்-
————-
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
என்பதுவே நா உரைக்கும் இத்தால் என்? அன்பவர் பால்
இப்போதளவும் யான் ஒன்றும் காண்கின்றிலேன்
எப்போது உண்டாவது இனி?--15
கீழ்ப்பாட்டில் அதிகாரம் இல்லாதவராகத் தம்மைச் சொல்லிக் கொண்டாரே அத்தை நிலை நாட்டுகிறார் இதில் -எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று ஓய்வின்றி சொல்லிக் கொண்டே இருக்கின்றீரே -இத்தை விட வேறே அதிகார ஸம்பத்து வேணுமோ -நீர் அதிகாரியே யாவீர் -அநதிகாரி அல்லீர் –என்று சிலர் சொல்ல அதற்கு விடை அருளுகிறார் இதில் –
பொரி புறம் தடவின யுக்தி மாத்ரமே என் பக்கல் உள்ளது -ப்ரேமம் கனிந்து சொல்லுகின்றேன் அல்லேன் – அப்படிச் சொன்னால் அன்றோ அதிகார ஸம்பத்து உள்ளது – இதுகாறும் ப்ரேமம் உண்டானதாகத் தெரியவில்லை இனி மேலா அது உண்டாகப்போகிறது -இல்லை ஆகவே அநதிகாரிகள் இடத்தே செல்லக்கூடிய தேவரீருடைய கருணையைச் செலுத்தி அருளுவதே நன்று என்கிறார் இதில் –
————
ஆகாதது ஈது என்றறிந்தும் பிறர்க்கு உரைத்தும்
ஆகாததே செய்வன் ஆதலால் மோகாந்தன்
என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா!
என்று உன் அடி சேர்வன் யான்?–16-
இன்னது செய்யத் தகுந்தது இன்னது செய்யத் தகாதது என்று அடியேன் விவேகித்து அறிந்து -அத்தை பிறருக்கும் உபதேஸித்தப் போகின்றேன் ஆகிலும் ஸ்வ அநுஷ்டானத்தில் வந்தவாறே பிசகிப் போகின்றேன் -ஆகையால் இவன் மோஹாந்தன் என்று தேவரீர் கைவிடப் போதுமான நிலைமை என் பக்கலிலே உளதாயினும் அங்கனம் கைவிடலாகாது என்றவாறே-கைவிடுவேன் அல்லேன் என்று எம்பெருமானார் பணிக்க -எப்போது அடியேனைத் திருவடி சேர்த்துக் கொல்வதாக திரு உள்ளம் பற்றி இருப்பது என்று அருளிச் செய்கிறாராயிற்று
மோகாந்தன் –விஷயாந்தர மோகத்தால் கண் தெரியாதவன்-
————
பொல்லாங்கு அனைத்தும் பொதிந்து கொண்டு நன்மையில் ஒன்று
இல்லா எனக்கும் எதிராசா! நல்லார்கள்
நண்ணும் திருநாட்டை நான் தருவேன் என்ற நீ
தண் என்றிருக்கிறது என் தான்?–17-
எனக்கும் திரு நாட்டை நான் தருவேன் என்ற நீ -என்று இப்பாசுரத்தில் அருளிச் செய்து இருப்பதால் எம்பெருமானார் மணவாள மா முனிகளை நோக்கி ப்ரதிஜ்ஜை செய்து அருளினதாகத் தெரிய வருகின்றது -எம்பெருமானார் திருவடி ஸம்பந்தம் பெற்றாருக்கு எல்லாம் முக்திக் செல்வம் குறையற்றது என்று ஸரணாகதி அநுஸந்தானத்தின் அன்று தொடங்கி ஒரு ப்ரஸித்தி இருப்பதால் அது கொண்டே இங்கனம் பணிக்கிறார் என்றும் கொள்ளலாம்-
—————-
என்று விடிவது எனக்கு எந்தாய் எதிராசா!
ஒன்றும் அறிகின்றிலேன் உரையாய் குன்றாமல்
இப்படியே இந்த உயிர்க்கு என்றும் இருளே விளைக்கும்
இப் பவமாம் நீண்ட இரவு–18-
இந்த ஸம்ஸாரம் என்னும் காளராத்ரியானது அகவிருளை வளர்வித்துக் கொண்டு ஒய்வின்றிச் செல்கின்றதே -ஒரு நாளும் பொழுது விடியும் நாள் இல்லையா -அது எந்நாள் என்று அறிகின்றிலேன் -இன்ன நாள் என்று தேவரீரே குறிப்பிட்டால் ஆறி இருப்பேன் என்கை பவம் -ஸம்ஸாரம் -வடசொல்-
அல்லும் பகலும் யான் ஆக்கை வழி உழன்று
செல்லுமது உன் தேசுக்குத் தீங்கன்றோ? நல்லார்கள்
தந்தனயர் நீசர்க்கு ஆட்செய்யச் சகிப்பரோ?
எந்தை எதிராசா! இசை–19-
பெரியாழ்வார் -உனக்குப் பணி செய்து இருக்கும் தவமுடையேன் இனிப்போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் -என்று அருளிச் செய்த புடையில் இப்பாசுரம் அருளிச் செய்தபடி –ஸ்வாமிந் தேவரீருக்குத் தொண்டு செய்து திரியக் கடமைப்பட்டு இருக்கும் அடியேன் இப்பொல்லா வாக்கைக்கு அடிமை செய்து திரிவேனாயின் இது எனக்குத் தகும் எனினும் தேவரீருடைய தேஜஸ்ஸுக்கு அவித்யகரமாய் முடியும் அன்றோ -ராஜபுத்ரன் நீசருக்கு ஆட்ச்செய்து இருக்கும் இருப்பை மஹா ராஜன் பொறுத்து இருக்க வல்லவனோ -இத்தை ஆராய்ந்து அடியேனைக் கைக் கொண்டு அருள வேணும் என்கிறார் யாயிற்று –
—————-
போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை ஆற்றில்
நாம் மூழ்கி மலம் அற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலந்திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சற்கரிப்ப மாமணி மண்டபத்துச் சென்று
மாமலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே–20-
ஒழிவு ஓன்று இல்லாத –போம் வழியைத் தரும் நாங்கள் வானவர் ஈசனை —3-9-3- என்று பரமபதத்தைத் தரும் என்னாமல் போம் வழியைத் தரும் என்கையாலே பரமபத ப்ராப்தியில் காட்டிலும் அர்ச்சிராதி கதியே பரம பிரயோஜனம் என்றும் அந்த ஆனந்தமே மிகப்பெரியது என்றும் காட்டி அருளினார் ஆயிற்று –அப்படிப்பட்ட இன்பம் எல்லாம் புசித்துக் கொண்டே அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று விரஜா நதியில் குடைந்தாடி பிராகிருத தோஷங்கள் எல்லாவற்றையும் கழித்து திருநாட்டைக் கிட்டி திவ்ய தேஹத்தைப் பெற்று அவ்விடத்து ஸத்காரங்களை எல்லாம் லபித்து எம்பெருமான் மடி மீது ஏறி வாழப்பெறுவதே ஸ்ரீ வைகுந்தப் பெரும் செல்வமாகும் – இச்செல்வம் எம்பெருமானார் திருவருள் அடியாகவே கிடைப்பது ஒன்றாயிற்று என்றார் ஆயிற்று – ஸ்வாமிந் இச் செல்வத்தை தேவரீரே அருளிச் செய்ய வேணும் என்கை –
———————–
திருமலை ஆழ்வார் திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளால்
தரு மதி கொண்டவர் தம்மை உத்தாரகராக எண்ணி
இரு மனமே! அவர்க்கா எதிராசர் எமைக் கடுகப்
பரமபதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே?–21-
நெஞ்சே நமக்கு என்று வகுத்த ஆச்சார்யர் திருவாய் மொழிப்பிள்ளை ஆவார் -அவரது திருவருளால் பெற்ற ஞானத்தைக் கொண்டு அவருடைய அபிமானமே உத்தாரகம் என்று நீ அத்யவசாயம் கொண்டு இரு – அவருக்காக எம்பெருமானார் பேறு தந்து அருளுவர் என்று நாம் கவலையற்று ம் இருக்கப் ப்ராப்தம் என்கிறார் ஆயிற்று –
———-
தீதற்ற ஞானத் திருவாய்மொழிப் பிள்ளை சீரருளால்
ஏதத்தை மாற்றும் எதிராசர் தம் அபிமானம் என்னும்
போதத்தை ஏறிப் பவமாம் புணரி தனைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையைக் குறுகுவனே–22-
அஸ்மதாச்சார்யருடைய நிர்ஹேதுக கிருபையாலே எம்பெருமானாருடைய அபிமானத்திற்கு இலக்காகி எம்பெருமான் அடி சேரப் பெறுவது திண்ணம் என்றதாயிற்று
———
அடியார்கள் குழாங்கள் அழகோலக்கம் இருக்க
ஆனந்த மயமான மாமணி மண்டபத்து
படியாதுமில் படுக்கையாய் இருக்கும் அனந்தன்
பணா மணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மாமலராள் வலவருகும் மற்றை
மண்மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்றிருக்கும் நாரணனைக் கடுக
நான் அநுபவிக்கும் வகை நல்கென் எதிராசா!–23–
ஆழ்வார் அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று பாரித்து அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை என்று அடியார் குழாங்களிடையே இருக்கப் பெற்றதையே பரம புருஷார்த்தமாக அருளிச் செய்தததால் இங்கு அடியார்கள் குழாங்கள் அழகோலக்கம் இருக்க-என்று முந்துற அருளிச் செய்கிறார் -திரு நாட்டில் திவ்யாஸ்தான மண்டபத்தில் திவ்ய ஸிம்ஹாஸனத்திலே திவ்ய மஹீஷீ பரிவ்ருதனாய் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வைகுந்தநாதனை கடுக அடியேன் அநுபவிக்கும் படி செய்து அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார் ஆயிற்று-
————–
இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மாமண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா!--24-
சரீரத்தை விட்டு ஆத்மா உத்க்ரமித்த காலம் தொடங்கிப் பரமபுருஷார்த்த பர்யந்தமான பேற்றின் வரிசைகள் இப் பாசுரத்தில் அருளிச் செய்யப்பட்டன -இத்தகைய பேறுகளை விரைவில் அடியேன் பெறுமாறு அருள் புரியு வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று-
———
என்று நிரேதுகமாக என்னை அபிமானித்து
யானும் அது அறிந்து உனக்கேயாய் இருக்கும் வகை செய்தாய்
அன்று முதல் இன்றளவும் அநவரதம் பிழையே
அடுத்தடுத்துச் செய்வது அநுதவிப்பது இனிச் செய்யேன்
என்று உன்னை வந்து இரப்பதாம் என் கொடுமை கண்டும்
இகழாதே இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்
இன்று திருநாடும் எனக்கு அருள எண்ணுகின்றாய்
இனிக் கடுகச் செய்தருள வேண்டும் எதிராசா!–25-
ஸ்வாமிந் அடியேனைத் தேவரீர் அங்கீ கரித்து அருளின அன்று தொடங்கி இன்று அளவும் நான் பிழை செய்வதும் -அநு தபித்து க்ஷமை வேண்டுவதும் -மீண்டும் பிழை செய்வதும் -அநு தபித்து க்ஷமை வேண்டுவதுமாய் இருந்து வருகின்றேன் -இப்படி இருந்தும் என்னைக் கொண்டு பல கைங்கர்யங்களைச் செய்வித்துத் கொண்டு அருளினீர் -இவ்விபூதியில் கைங்கர்யமே அன்றி அவ்விபூதியிலும் நித்ய கைங்கர்யமம் கொண்டு அருளத் திரு உள்ளம் பற்றி இருக்கின்றீர் என்பதையும் அறிவேன் -அதில் கால விளம்பம் வேண்டாம் என்று பிரார்த்திக்கிறேன் அத்தனை என்கிறார் இதில் –
———–
தென் அரங்கர் தமக்காமோ? தேவியர்கட்காமோ?
சேனையர் கோன் முதலான சூரியர்கட்காமோ?
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ?
மற்றும் உள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ?
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்?
எதிராசா! உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே–26-
மஹா கிருபாக்களாகப் புகழ் பெற்ற வர்களான எம்பெருமான் பிராட்டிமார்கள் நித்ய ஸூரிகள் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஆகிய இவர்களில் ஒருவருக்கும் பொறுக்க ஒண்ணாத படி அபராதங்களை அளவறச் செய்து இருக்கும் அடியேனை ஸ்வாமிந் தேவரீரே உமது க்ஷமா திருக்கல்யாண குணத்துக்கு இலக்காக்கிப் பர பக்தி பர ஞான பரம பக்தியாதிகளையும் விளைத்து கால தாமதம் இன்றி த் திருநாடு சேர்த்து அருள வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று –
———–
இவ்வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே!
இரவு பகல் எதிராசர் எமக்கு இனிமேல் அருளும்
அவ்வுலகை அலர்மகள் கோன் அங்கு இருக்கும் இருப்பை
அடியார்கள் குழாங்கள் தமை அவர்கள் அநுபவத்தை
இவ்வுயிரும் அதுக்கிட்டுப் பிறந்து இழந்து கிடந்தது
என்னும் அத்தை என்றும் அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்
வெவ்வினையால் வந்த உடல் விடும் பொழுதை விட்டால்
விளையும் இன்பம் தன்னை முற்றும் விடாமல் இருந்து எண்ணே–27-
நோ பஜநம் ஸ்மரத் இதம் ஸரீரம் -என்று உபநிஷத்தில் ஓதினபடியே இவ்வுலகில் சரீர அநு பந்தியான ஒன்றையும் சிந்தை செய்யாமல் பரமபத அனுபவங்களையே சிந்திக்குமாறு தமது திரு உள்ளத்துக்கு உரைத்தார் ஆயிற்று –
————-
பண்டு பலவாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல கலைகள் தம்மை
கண்டதெல்லாம் எழுதி அவை கற்றிருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவொன்றும் இன்றிப் பொருந்தி இங்கேயிருந்தேன்
எண் திசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பே அன்றி இப்போது என் மனம் எண்ணாதே–28–
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -என்று திருமழிசைப்பிரான் அருளிச் செய்தபடியே பூர்வாச்சார்யர்களுடைய கிரந்தங்களைக் கொண்டே பலபடியாலும் போது போக்கி இருந்தேனாதலால் -இச்சுவை தவிர யான் போய் இந்த்ர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்றே இதுகாறும் இருந்தேன் -இப்போது திருநாட்டில் அனுபவங்களுக்கு ஆசைப்படுமாறு எம்பெருமானாரது அருளைப் பெற்றேன் என்றார் ஆயிற்று –
———
சாருவாக மதம் நீறு செய்து சமணச் செடிக்கனல் கொளுத்தியே
சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக் கிரி முறித்திட
மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்தற மிகுத்து மேல்
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த எதிராசனார்
கூறும் மாகுரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதம் அவற்றின் மேல்
கொடிய தர்க்க சரம் விட்ட பின் குறுகிய மாய வாதியரை வென்றிட
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்
மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே–29-
அநேக துர் மதங்களை ஒழித்து துர்வாதிகளை வென்றவரான எம்பெருமானார் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக விளங்க வேணும் என்று மங்களா ஸாஸனம் பண்ணினார் யாயிற்று –
குருமதம் என்பது ப்ரபாகரர் மதம்
குமரிலன் மதம் பாட்ட மதம்-
——-
சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவர் ஆடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே–30-
ஆச்சார்யன் சிச்சன் ஆர் உயிரைப் பேணுமவன் -தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை ஆசையுடன் நோக்குமவன் –என்று உபதேச ரத்னமாலையில் அருளிச் செய்த படியே ஆச்சார்யனுடைய திவ்ய மங்கள விக்ரஹமே அஸ்மதாதிகளுக்கு பரம உத்தேச்யமாதலால் நமக்கு நித்ய அநுசந்தேயமாக எம்பெருமானாருடைய திவ்ய அவயவங்களுக்கு மங்களா ஸாஸனம் செய்து அருளினார் ஆயிற்று –
———–
அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறன் உரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறம் மிகு நற்பெரும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே–31-
எம்பெருமானாருடைய திவ்ய சேஷ்டிதங்களுக்கு மங்களா ஸாஸனம் செய்து அருளுகிறபடி -சாக்ய உலூக்ய அக்ஷபாத ஷபண கபில பதஞ்சலி மதங்கள் ஆறும் அறு சமயங்கள் எனப்படும் -வேறு வகையாகவும் சொல்லுவதும் உண்டு -வேதங்களைப் பிரமாணமாக ஒப்புக் கொண்டே அவற்றில் அபார்த்தம் செய்கிறவர்கள் குத்ருஷ்டிகள் ஆவார் -மறையதினில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தது வேதார்த்த ஸங்க்ரஹம் ஸ்ரீ பாஷ்யம் முதலிய திவ்ய கிரந்தங்களாலும் உபதேஸ முகத்தாலும்
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேலான்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் என்றதை அடி ஒற்றி மாறனுரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் என்றது –
———
சங்கர பாற்கர யாதவ பாட்ட பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி இங்கு இனி வீறு நமக்கிலை என்று மிகத் தளர்நாள்
மேதினி நம் சுமையாறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடுநாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே–32-
சங்கராதி மதாந்தஸ்தர்களின் அபார்த்தங்களைக் கண்டித்து வேதாந்த ஸ தர்த்த ஸ்தாபனம் பண்ணுகைக்காகவும் கலி புருஷ ஸாம்ராஜ்யத்தை சிதைப்பதற்காகவும் பூ பாரமாய் இருக்கின்ற துஷ்டர்களை எல்லாம் ஸஜ்ஜனமாக்கிப் பூ தேவியை மகிழ்விப்பதாகவும் -பராங்குச பரகாலாதிகளான ஆழ்வார்களின் அருளிச் செயல்களை மிக வளர்த்து அவர்களை உகப்பிக்கைக்காகவும் திவ்ய தேசம் உத்தாரத்திற்காகவும் எம்பெருமானார் திருவவதரித்தார் என்றதாயிற்று-
——–
இன்னம் எத்தனை காலம் இந்த உடம்புடன் யான் இருப்பேன்?
இன்ன பொழுது உடம்பு விடும் இன்ன படியதுதான்
இன்ன இடத்தே அதுவும் என்னும் இவையெல்லாம்
எதிராசா! நீயறிதி யான் இவை ஒன்று அறியேன்
என்னை இனி இவ்வுடம்பை விடுவித்து உன் அருளால்
ஏராரும் வைகுந்தத்து ஏற்ற நினைவுண்டேல்
பின்னை விரையாமல் மறந்து இருக்கிறதென்? பேசாய்
பேதைமை தீர்த்து எனை அடிமை கொண்ட பெருமானே!–33-
இவ்விபூதியில் அடியேன் இன்னமும் இருக்கக் கூடிய நாள் இவ்வளவு என்றும் இன்னபோதிலே இன்னவிடத்திலே இன்னபடியாக அடியேனுக்கு தேஹ அவசானம் ஆகும் எண்டும் எல்லாம் தேவரீர் அறிய வல்லீர் – அடியேனுக்கு இவை ஒன்றுமே தெரியாது -இவ்வழக்கு உடம்பைப் போக்கித் திருவடி சேர்த்துக் கொள்ள திரு உள்ளம் உண்டாகில் உபேக்ஷித்துக் கால தாமதம் செய்வது என்னோ என்றார் ஆயிற்று-
——-
முன்னை வினை பின்னை வினை ஆரத்தம் என்னும்
மூன்று வகையான வினைத் தொகை அனைத்தும் யானே
என்னை அடைந்தோர் தமக்குக் கழிப்பன் என்னும் அரங்கர்
எதிராசா! நீ இட்ட வழக்கன்றோ? சொல்லாய்
உன்னை அல்லது அறியாத யான் இந்த உடம்போடு
உழன்று வினைப் பயன் புசிக்க வேண்டுவது ஒன்று உண்டோ?
என்னுடைய இருவினையை இறைப் பொழுதில் மாற்றி
ஏராரும் வைகுந்தத்தேற்றிவிடாய் நீயே–34-
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற சரம ஸ்லோகத்தில் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்றதில் விவஷிதமானதை ஒன்றரை அடிகளில் அருளிச் செய்கிறார் -முன்னை வினையாவது பூர்வாகம் – முன்னே அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் -பின்னை வினையாவது உத்தராகம் – ஆஸ்ரயித்த பிறகு ப்ராக்ருத வாஸனையால் ப்ராமாதிகமாக நேரும் பாவங்கள் -ஆர்த்தமாவது ப்ராரப்த கர்மம் -பலன் கொடுக்க ஆரம்பித்த கருமங்கள் என்றபடி –என்று இப்படி மூவகைப்பட்ட தீ வினைகளையும் என்னடியாருக்கு நானே தவிர்ப்பேன் என்று சரம ஸ்லோக முகத்தாலே அருளிச் செய்தவர் திருவரங்க நாதர் – அவர் தேவரீருக்கு ஸர்வாத்மநா விதேயர் என்பது ப்ரஸித்தம் -அப்படி இருக்க தேவரீரே புகல் என்று பற்றின அடியேன் இன்னமும் கர்ம பலன்களை அனுபவித்துக் கொண்டு இருக்க தேவரீர் பார்த்துக் கொண்டு இருப்பது தகுதியோ – ப்ராப்ய பூமியில் அடியேனைக் கொண்டு சேர்த்து அருள வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று
ஸ்ருத்யக்ரவேத்யநிஜதிவ்யகுணஸ்வரூப: ப்ரத்யக்ஷதாமுபகதஸ்த்விஹ ரங்கராஜ: |
வஸ்யஸ்ஸதா பவதி தே யதிராஜ தஸ்மாச்சக்த: ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் || (17)
பதவுரை:- யே யதிராஜ – வாரீர் யதிராஜரே, ஸ்ருத்யக்ரவேத்ய – வேதாந்தங்களின் வாயிலாக (ஆசார்யர்களிடமிருந்து) கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்குத் தக்கவைகளாகிய, நிஜதிவ்யகுணஸ்வரூப: – தனக்கேயுரியவைகளாய், அநுபவிக்கத்தக்க ஜ்ஞானம், ஸக்தி முதலிய குணங்களென்ன, எல்லாரையும் உட்புகுந்து நியமிக்கும் தன்மை அல்லது தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குப் பரதந்த்ரனாயிருக்கும் தன்மையாகிய ஸ்வரூபமென்ன இவற்றையுடையவனாய், இஹ து – இப்பூமண்டலத்திலோ என்னில், ப்ரத்யக்ஷதாம் உபகத: – எல்லாருடைய கண்களுக்கும் இலக்காயிருக்குந் தன்மையை அடைந்த, ரங்கராஜ: – ஸ்ரீரங்கநாதன், தே – தேவரீருக்கு, ஸதா – எப்போதும், வஸ்ய: – சொன்ன காரியத்தைத் தவறாமல் செய்யுமளவுக்கு வஸப்பட்டவனாய், பவதி – தான் ஸத்தைபெற்றவனாகிறான்.(தேவரீர் சொன்ன காரியத்தை நிறைவேற்றுவதனால் தான் தானிருப்பது பயனுடையதாகிறதென்று நினைக்கிறான்.) தஸ்மாத் – அவன் அப்படி வஸப்பட்டவனாக இருப்பதனால், ஸ்வகீய – தேவரீருடைய அடியவர்களின், ஜந – தாஸஜநங்களினுடைய, பாபவிமோசநே – பாவத்தை விடுவிப்பதில், த்வம் – தேவரீர், ஸக்த: பவஸி – ஆற்றல் படைத்தவராக ஆகிறீர்.
கருத்துரை:- ஸப்தாதி விஷயாநுபவத்தில் ஆசையைப் போக்கடிப்பதும், இராமாநுசரடியார்களில் எல்லை நிலத்திலேயிருக்கிற அடியவர்க்கு அடிமை செய்வதொன்றிலேயே ஆசையைப் பிறப்பிப்பதுமாகிய முன் ஸ்லோகத்தில் கூறிய தமது காரியத்தைச் செய்வதற்கு உறுப்பாக இராமாநுசரிடமுள்ள தயையை அதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களால் குறிப்பிட்டு, இந்த ஸ்லோகத்தினால் தமது காரியம் செய்வதற்குத் தக்க ஆற்றல் (ஸக்தி) அவரிடம் இருப்பதை மூதலிக்கிறார். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இப்பூமியில் எல்லார் கண்களுக்கும் தென்பட்டுக்கொண்டிருக்கும் தன்மையின் வைலக்ஷண்யத்தை (சிறப்பை) ‘உபகதஸ்து இஹ’ என்றவிடத்திலுள்ள ‘து’ என்பதனால் காட்டுகிறார். பரத்வமும், வ்யூஹமும் (பரமபதநாதனும், க்ஷீராப்தி நாதனும்) மிகவும் தூரதேஸத்திலுள்ளவர்களாகையாலே இங்குள்ள நம் கண்களுக்கு இலக்காகார். இராமபிரான் கண்ணபிரான் முதலிய விபவாவதார மூர்த்திகள் முன்யுகங்களில் (காலாந்தரத்தில்) இருந்தவர்களாகையால் பிற்காலத்தவரான நம்மால் காணமுடியாதவர்களாகிறார். அந்தர்யாமியான எம்பெருமானோ யோகாப்யாஸம் செய்யும் யோகிகளுக்கு மட்டுமே மனத்திற்கு விஷயமாகி நம் ஊனக்கண்களுக்கு இலக்காகமாட்டான். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இந்த தேஸத்தில், இந்தக்காலத்தில், யோகம் செய்து ஸ்ரமப்படாமலேயே எல்லார்க்கும் ஊனக்கண்களுக்கு இலக்காகிறான் என்பதே அர்ச்சாவதாரத்தின் வைலக்ஷண்யமாகும். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் ராமாநுஜமுனிவரிட்டவழக்காக இருப்பதனால் அவனிடம் பரிந்துரைத்து அவனைக்கொண்டு நம்கார்யம் செய்து தலைக்கட்டுவரென்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து. கர்மயோகம், ஜ்ஞானயோகம், பக்தியோகம், ப்ரபத்தியோகம் என்ற மோக்ஷோபாயங்களைக் காட்டிலும் வேறுபட்டு ஐந்தாம் உபாயமான ஆசார்யனாகிய எம்பெருமானாருடைய உபாயத்வமானது – புருஷகாரத்வத்தின் எல்லைநிலமாந்தன்மையே என்பது நிஸ்சயிக்கப்பட்டதாகிறது. இந்த ஸ்லோகத்தினால் – என்று வ்யாக்யாதா அருளிச்செய்கிறார். பாபவிமோசநம் ஏற்படுமாகில் பரமபதத்தில் பகவதநுபவகைங்கர்யங்கள் கிடைப்பது உறுதியாகையால் பாபவிமோசநம் மட்டுமே சொல்லப்பட்டது என்க.-
—————
அருளாலே அடியேனை அபிமானித்தருளி
அநவரதம் அடிமை கொள்ள நினைத்து நீயிருக்க
மருளாலே புலன் போக வாஞ்சை செய்யும் என்றன்
வல்வினையை மாற்றி உன் பால் மனம் வைக்கப் பண்ணாய்
தெருளாரும் கூரத்தாழ்வானும் அவர் செல்வத்
திருமகனார் தாமும் அருளிச் செய்த தீமைத்
திரளான அத்தனையும் சேர உள்ள என்னைத்
திருத்தி உய்யக் கொள்ளும் வகை தேரும் எதிராசா!–35–
கூரத்தாழ்வான் பட்டர் முதலானோர் தங்களுடைய ஸ்தவங்களிலே அபரிதமாக நைச்ய அநுஸந்தானம் செய்து கொண்டு இருக்கிறார்கள் – ஆனால் அந்த நைச்யம் அவர்களிடத்தில் சிறிதுமே கிடையாது -அவர்கள் தாம் ஏறிட்டு அனுசந்தித்திக் கொண்ட அந்த நைச்யம் எல்லாம் வடிவு எடுத்தவன் அடியேனே -இப்படிப்பட்ட அடியேனை தேவரீர் ஏற்கனவே அபிமானித்து அருளி அத்தாணிச் சேவகம் கொள்ளத் திரு உள்ளம் பற்றி இருந்தும் அடியேன் பிராகிருத போகங்களிலேயே ஈடுபட்டு இருக்கும் படியான பாவியாய் இரா நின்றேன் இந்நிலையை மாற்றி அருள வேணும் என்று பிரார்த்தித்து அருளுகிறார் ஆயிற்று – பின்னடிகளுக்குச் சேட்டை யதிராஜ விம்சதி ஸ்லோகம் அனுசந்தேயம்
வாசாமகோசரமஹாகுணதேஸிகாக்ர்ய கூராதிநாதகதிதாகிலநைச்யபாத்ரம் |
ஏஷோஹமேவ ந புநர்ஜகதீத்ருஷஸ்தத் ராமாநுஜார்ய கருணைவ து மத்கதிஸ்தே || (14)
பதவுரை:- ஹே ராமாநுஜார்ய – வாரீர் ராமாநுஜாசார்யரே, வாசாம்அகோசர மஹா குண – இத்தனை தானென்ற அளவில்லாமையால் வாய்கொண்டு வருணிக்கமுடியாதனவும், ஒவ்வொரு குணமே எவ்வளவு அநுபவித்தாலும் அநுபவித்து முடிக்கமுடியாத பெருமையை உடையனவுமாகிய நற்குணங்களையுடைய, தேஸிகாக்ர்ய கூராதிநாத – ஆசார்ய ஸ்ரேஷ்டராகிய கூரத்தாழ்வானால், கதித – தம்முடைய பஞ்சஸ்தவீ முதலிவற்றில் கூறப்பட்ட, அகில நைச்ய பாத்ரம் – எல்லாவித நீசத்தன்மைக்கும் கொள்கலமானவன், ஏஷ: அஹமேவ – இந்த அடியேனொருவனே ஆவேன், ஈத்ருஸ: புந: – இத்தகைய மற்றொருவனோவென்னில், ஜகதி – உலகில், ந (அஸ்தி) – இல்லவேயில்லை. தத் – அக்காரணத்தினால், தேது – கருணைபுரியும் விஷயத்தில் நிகரற்ற தேவரீருடைய, கருணா ஏவ – கருணையே, மத்கதி: – (எல்லாரையும் விடக்குற்றவாளியான) அடியேனுக்கு உய்வு பெறுவிக்கும் உபாயமாக, பவதி – ஆகிறது.
கருத்துரை:- இவ்வளவு தம்முடைய தோஷங்களை விண்ணப்பித்த போதிலும், உள்ளவற்றில் சிறிதளவும் சொல்லப்பட்டதாகாதென்று நினைத்து, பூர்வாசார்யர்கள் தம்முடைய நூல்களில் தம்மிடமிருப்பதாகக் கூறிக்கொண்ட தோஷங்கள் அனைத்தும் தம்மிடமேயுள்ளதாக விண்ணப்பிக்கிறார். கூரத்தாழ்வானுக்கு ‘வாசாமகோசரமஹாகுண’ என்று விசேஷணமிட்டருளியது – ‘உண்மையில் அவர்தம்மிடம் எந்த தோஷமுமில்லை’ என்பதை நமக்கு அறிவிப்பதற்காகவே என்க. எந்த தோஷமும் அவரிடத்தில் இல்லையேல் அவையத்தனையும் எங்குள்ளனவென்னில் – தம்மிடமே உள்ளதென்பதை ‘அகிலநைச்யபாத்ரம் அஹமேவ’ என்று குறிப்பிட்டருளினார். தேஸிக-அக்ர்ய – வேதாந்த ஸாஸ்த்ரத்தை ப்ரவசனம் செய்வதற்காக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர்களில் தலைவர் கூரத்தாழ்வான் என்றபடி. ‘ஆத்யம் யதீந்த்ரஸிஷ்யாணாம் அக்ர்யம் வேதாந்தவேதிநாம்’ (யதிராஜருடைய ஸிஷ்யர்களில் முதல்வரும், வேதாந்தமறிந்தவர்களில் முக்யமானவருமான கூரத்தாழ்வானை த்யானிக்கிறோம்) என்ற ஸ்லோகம் நினைக்கத்தக்கது. கூரத்தாழ்வான் தமது ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் (84) ‘ஸ்வாமீ எம்பெருமானே! ஐயோ ஐயோ நான் கெட்டேன், நான் மிகவும் துஷ்டன், மேலும் கெடுவன். நீசவிஷயங்களில் மிகவும் மோஹங்கொண்ட நான் பகவானான உன் விஷயத்தில் பற்றுடையவன் போல் வாயினால் என்னென்ன சொல்லிவிட்டேன். என்னைப் போன்ற பாபத்திரள், குற்றமின்றிக் குணம் நிறைந்த உன்னை நினைக்கவும் கூடத்தகுதிபெற்றதன்றே’ என்று தொடங்கி தம்மிடமுள்ளதாக விண்ணப்பித்த குற்றங்களை இங்கு நினைத்தல் தகும்.-
—————
வாசனையில் ஊற்றமோ? மாளாத வல்வினையோ?*
ஏதென்று அறியேன் எதிராசா! தீதாகும்
ஐம்புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை
வன்புடனே தான் அடரும் வந்து–36–
இந்திரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரதிஸபம் மன -என்கிற கீதா ஸ்லோகம் -சார்பாகப் பின்னடிகள் முதலடியில் வாதனை பாடபேதம்-
———
இன்றளவும் இல்லா அதிகாரம் மேலும் எனக்கு
என்று உளதாம்? சொல்லாய் எதிராசா! – குன்றா
வினைத் தொடரை வெட்டி விட்டு மேலை வைகுந்தத்து
எனைக் கடுக ஏற்றாதது என்?–37-
அடியேனை திரு நாட்டிலே ஏற்றுகைக்கு ஈடான அதிகார ஸம்பத்து இதிகாறும் இல்லாதது இனி ஒருகால் விளையைப் போகிறது என்று நினைக்கப் ப்ரஸக்தி தானும் இல்லை -ஆகவே விரோதி பாப வர்க்கங்களைத் தேவரீர் தாமே நிர்ஹேதுக கிருபையினாலே வெட்டிக்களைந்து வீடு பெறுவிப்பது நலம் என்றார் ஆயிற்று-
———
அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாம் அறியார்
என் சொல் எனக்கோ? எதிராசா! – நெஞ்சம்
உனதாள் ஒழிந்தவற்றையே உகக்க இன்றும்
அநுதாபம் அற்று இருக்கையால்–38-
அஞ்சிலே அறியாதார் ஐம்பதிலும் அறியாதாரே -என்ற ஒரு பழ மொழி உண்டு – அதற்குத் தாமே இலக்கு என்று நைச்ய அநுசந்தானமாக அருளிச் செய்கிறபடி – அடியேனுக்கு இத்தனை வயதாகியும் செய்த குற்றங்களுக்கு அநுதாபமும் தோன்ற வில்லையே என்கிறார் –
————-
வேம்பு கறியாக விரும்பினார் கைத்தது என்று
தாம் புகடாதே புசிக்கும் தன்மை போல் தீம்பன் இவன்
என்று நினைத்து என்னை இகழார் எதிராசர்
அன்று அறிந்து அங்கீகரிக்கையால்–39-
வேம்பையே கறியாகச் சமைத்து உண்ணுமவர்கள் அதன் கைப்பையே பரம போக்யமாகக் கொள்பவர்களே யன்றி ஐயோ கைக்கின்றதே என்று வெறுக்குமவர்களே அல்லரே -அதே போல் அடியேனுடைய தோஷங்களையே பரம போக்யமாகக் கொண்டு அங்கீ கரித்து அருளின தேவரீர் இந்து தீம்பு கண்டு இகழ்வது தகுதி என்றே என்றார் ஆயிற்று –
——–
அவத்தே பொழுதை அடியேன் கழித்து இப்
பவத்தே இருக்கும் அது பண்போ? திவத்தே யான்
சேரும் வகை அருளாய் சீரார் எதிராசா!
போரும் இனி இவ்வுடம்பைப் போக்கு–40-
சீர்மை பொருந்திய எம்பெருமானாரே -தேவரீருடைய குண அனுபவங்களுக்கு இட்டுப் பிறந்த அடியேன் பொழுதைப் பாழாகிப் போக்கி இந்த ஸம்ஸாரத்திலேயே கிடப்பது தகுதியோ – அடியேன் திருநாடு சேரும்படி அருள் புரிய வேணும்இதுவரை ஸம்ஸாரத்தில் சிறை இருந்தது போதுமே -இனி இவ்வழக்கு உடம்பைத் தவிர்த்து அருள வேணும் –
———–
எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ?
உனைப் போல் பொறுக்க வல்லார் உண்டோ? அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மாமுனிவா!
ஏழைக்கு இரங்காய் இனி–41-
உலகம் எல்லாம் உஜ்ஜீவிப்பதற்கு என்றே திருவாவதரித்த எம்பெருமானாரே இந்நில உலகில் அடியேனைப் போலெ தீர அபசாரப்பட்டவர்கள் யாரேனும் உளரோ -தேவரீரைப் போலே அந்த அபராதங்களை ஷமிக்க வல்லவர் வேறே யாரேனும் உளரோ -இனி ஏழையான அடியேன் மீது இரங்கி அருள வேணும்-
———-
ஐம்புலன்கள் மேல் இட்டு அடரும் பொழுது அடியேன்
உன் பதங்கள் தம்மை நினைந்து ஓலம் இட்டால் பின்பவைதாம்
என்னை அடராமல் இரங்காய் எதிராசா!
உன்னை அல்லால் எனக்கு உண்டோ?–42-
எம்பெருமானாரே பஞ்ச இந்திரியங்கள் அடியேனை ஆக்ரமித்துக் கொள்ளும் போது அவற்றுக்கு ஆற்றாத அடியேன் தேவரீருடைய திருவடிகளைச் சிந்தித்து கூப்பிட்டால் அதன் பிறகும் அந்த இந்த்ரியங்களானவை அடியேனை மேலிடாதபடி கிருபை செய்து அருள்கின்றீர் இல்லையே -எனக்குத் தேவரீரை ஒழிய வேறே ரக்ஷகர் உளரோ-
————–
இந்த உலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த உலகில் போக ஆசையில்லை இந்த நமக்கு
எப்படியே தான் தருவர் எந்தை எதிராசர்
ஒப்பில் திருநாடு உகந்து–43–
த்யாஜ்ய பூமியில் ஜிஹாஸையும் ப்ராப்ய பூமியில் பிராவண்யமும் இல்லாத அடியேனுக்கு எம்பெருமானார் தான் என் செய்வர் என்று ஒருவாறு ஸமாஹிதர் ஆகிறார் –
———-
மாகாந்த நாரணனார் வைகும் வகை யறிந்தோர்க்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை மோகாந்தர்
இவ்விடம் ஏகாந்தம் இருள் என்று பயம் அற்றிருந்து
செய்வார்கள் தாம் பாவத்திறம்–44-
இப்பாசுரத்தில் எம்பெருமானாருடைய திரு நாமம் ஸ்பஷ்டமாக இல்லை யாயினும் முன்னடிகட்க்கு எம்பெருமானாரும் அவருடைய திருவடி பணிந்தவர்களுமே விஷய பூதராவார்கள் -எம்பெருமான் எங்கும் உளனாய்க் கொண்டு எதையும் எளிதில் உணர்கிறான் என்கிற தெளிவுடையவர்கள் -இது ஏகாந்தமான இடம் இது இருள் செறிந்த இடம் என்று ஓர் இடத்திலும் ஒரு பாபச் செயலும் செய்யத் துணியார்கள் -அப்படிப்பட்ட தெளிவில்லாத அவிகேகிகள் தாம் ஸர்வேஸ்வரனுடைய ஸர்வ வியாபகத்தை அறிய மாட்டாதே அவனையும் வஞ்சித்து விடலாம் என்று எண்ணி ஏகாந்த ஸ்தலங்களிலும் இருள் மிக்க இடங்களிலும் பாவங்களை செய்து போருவர்கள் என்ற இது -எம்பெருமானாருடைய திருவருளால் எம்பெருமானுடைய ஸர்வ வ்யாப்தியை அறிந்தவர்களே -நீங்கள் ஏகாந்தத்தில் பாவச் செயலை செய்யாது இருக்க வேணும் என்று ஹித உபதேசம் செய்து அருளிய படி-
——–
நாராயணன் திருமால் நாரம் நாம் என்னும் உறவு
ஆராயில் நெஞ்சே! அநாதி அன்றோ? சீராரும்
ஆசாரியனாலே அன்றோ? நாம் உய்ந்தது என்று
கூசாமல் எப்பொழுதும் கூறு–45-
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -என்றும்
நன்றாக நான் உனை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி இலை என்றும் சொல்லுகிறபடியே எம்பெருமானுக்கும் சேதனர்களுக்கும் உண்டான உறவு அநாதியே யாயினும் இந்த உறவை அறிவித்து மஹா உபகாரம் செய்தவர் ஆச்சார்யரே யாதலால் அந்த ஆச்சார்யர் பக்கலிலே நாம் செய்நன்றி குன்றாது இருக்க வேணும் என்றார் ஆயிற்று –
—————
திருவாய்மொழிப் பிள்ளை தீவினையோம் தம்மை
குருவாகி வந்து உய்யக் கொண்டு பொருவில்
மதி தான் அளித்தருளும் வாழ்வன்றோ? நெஞ்சே!
எதிராசர்க்கு ஆளானோம் யாம்–46-
பகவானோடு உண்டான உறவை அறிவதில் காட்டிலும் ஆச்சார்ய சம்பந்தத்தை அறிவதே சிறந்தது -ஆச்சார்யர் என்கிற சொல்லுக்கு எம்பெருமானார் தான் இலக்கு – அப்பரமாச்சார்யாரோடு நமக்கு உண்டான யுறவை அறிவித்த மஹா உபகாரகர் திருவாய் மொழிப்பிள்ளை என்று ஸ்வ ஆச்சார்யர் பக்கலிலே பெரு நன்றி பாராட்டினார் ஆயிற்று-
———–
இராமாநுசாய நம என்று இரவும் பகலும் சிந்தித்திரா
மாநுசர்கள் இருப்பிடம் தன்னில் இறைப் பொழுதுமிரா
மாநுசர் அவர்க்கு எல்லா அடிமையும் செய்ய எண்ணி
இரா மாநுசர் தம்மை மாநுசராக என் கொல் எண்ணுவதே?–47-
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்க வேண்டியது கடைமை -அப்படிஇருக்க கில்லாதவர்கள் எங்கு வர்த்திக்கின்றார்களோ அங்கு நொடிப்பொழுதும் தங்கலாகாது -அப்படி தங்காமல் இருப்பவர்களுக்கே நாம் ஸகல வித கைங்கர்யங்களையும் செய்யத்தகும் அங்கனம் செய்யாதவர்கள் மானிடரே அல்லர் என்றே கொள்ளத்தக்கவர் என்கிறார் யாயிற்று-
——-
எண்ணாது என் நெஞ்சம் இசையாது என் நா இறைஞ்சாது சென்னி
கண்ணானவை ஒன்றும் காணலுறா கலியார் நலிய
ஒண்ணாத வண்ணம் உலகளித்தோன் எதிராசன் அடி
நண்ணாதவரை அரங்கேசர் செய்த நலம் நமக்கே–48-
ஸ்ரீ ரெங்கநாதர் நமக்கு ஒரு பெரு நன்மை செய்து அருளி இருக்கின்றார் -அஃது என்ன வென்னில் எம்பெருமானார் பக்கலிலே விமுகராய் உள்ளவர்களை நெஞ்சால் நினையாமல் வாயால் சொல்லாமலும் தலையால் வணங்காமலும் கண்ணால் காணாமலும் இருக்கின்றோமே -இது தான் -கலியார் என்றது கோபத்தினாலகிய சொல் வடிவம் –
————
நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நானிலத்தீர்!
எந்தாதையான எதிராசனை நண்ணும் என்றும் அவன்
அந்தாதி தன்னை அனுசந்தியும் அவன் தொண்டருடன்
சிந்தா குலம் கெடச் சேர்ந்திரும் முத்தி பின் சித்திக்குமே–49–
ஸம்ஸார பந்தம் அடியோடு வேர் அறுவதற்கு மூன்று உபாயங்கள் அருளிச் செய்கிறார் இதில் -எம்பெருமானாரைப் பணிதல் அவர் விஷயமான ப்ரபந்ந காயத்ரி என்ற ப்ரஸித்தமான நூற்றந்தாதியை சிந்தனை செய்தல் ஸ்ரீ ராமானுஜ பக்தர்களுடன் ஸஹ வாஸம் செய்தல் –
—-
அவத்தே அருமந்த காலத்தைப் போக்கி அறிவின்மையால் இப்
பவத்தே உழல்கின்ற பாவியர்காள்! பல காலம் நின்று
தவத்தே முயல்பவர் தங்கட்கும் எய்த ஒண்ணாத அந்தத்
திவத்தே உம்மை வைக்கும் சிந்தியும் நீர் எதிராசன் என்றே–50-
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -என்று திரு மழிசைப் பிரானும் -முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம் முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம் -என்று மேலே தாமும் பணித்த படியே காலத்தைப் போக்க வேண்டி இருக்க அநர்க்கமான காலத்தைப் பழுதே போக்கி அறிவு கெட்டு இந்த ஸம்ஸாரக் கடலிலே மாறி மாறி பல பிறப்பும் பிறந்து திரிகின்ற பாவிகளே ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து தாம் வாட வாடத் தவம் செய்வாருக்கும் பெறுதற்கு அறியதான பரமபதத்தை எம்பெருமானார் ஒருவரே அளித்து அருள வல்லவர் என்பதை அறிந்து அவரது திருநாமத்தையே சிந்தித்து வாழ்ந்து போங்கோள் என்று அருளிச் செய்கிறார் –
————-
என்று உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம்
இன்றளவாகப் பழுதே கழிந்தது இருவினையால்
என்று இழவின்றி இருக்கும் என் நெஞ்சம் இரவு பகல்
நின்று தவிக்கும் எதிராசா! நீ அருள் செய்த பின்னே–51-
எம்பெருமானாரே -எம்பெருமான் என்று முதலாக உள்ளானோ அன்று முதலாகவே ஜீவாத்மாவும் உண்டு -இவ்வநாதி காலம் எல்லாம் இப்போது அளவும் பிரபல கருமத்தினால் வீணாகவே கழிந்து போயிற்று என்கிற அனுதாபமும் கூட இல்லாமல் இருக்கின்ற என் மனமானது தேவரீர் கிருபை செய்து அருளினது முதலாக இரவும் பகலும் இடைவிடாது அனுதாபம் கொள்ளா நின்றது –
———
கனக கிரி மேல் கரிய முகில் போல
வினதை சிறுவன் மேற்கொண்டு தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என்பால்
வாரா முன் நிற்பர் மகிழ்ந்து–52-
சரம ஸமயத்தில் வாய்க்கக் கூடிய பரம லாபத்தை மநோ ரதிக்கிறார் இப்பாடத்தில் -காய்ச்சின பறவை யூர்நது பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல் என்ற திருவாய் மொழியை அடி ஒற்றியவை முன்னடிகள் -நநு -வடச்சொல் -வாரா செய்யா என்னும் வாய்ப்பாட்டு இறந்த கால வினை எச்சம்-
—
இதத்தாலே தென்னரங்கர் செய்கின்றது என்றறிந்தே
இருந்தாலும் தற்கால வேதனையின் கனத்தால்
பதைத்து ஆ ஓ என்னும் இந்தப் பாவ உடம்புடனே
பல நோவும் அநுபவித்து இப்பவத்து இருக்கப் போமோ?
மதத்தாலே crவல்வினையின் வழி உழன்று திரிந்த
வல்வினையேன் தன்னை உனக்கு ஆளாக்கிக் கொண்ட
இதத் தாயும் தந்தையுமாம் எதிராசா! என்னை
இனிக் கடுக இப்பவத்தினின்றும் எடுத்தருளே–53-
ஹரிர் துக்காநி பக்தேப்யோ ஹித புத்த்யா கரோதி வை -என்றும்
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் -என்றும் சொல்லுகிறபடியே மருத்துவர்கள் செய்யும் ஹிம்சைகள் போல் எம்பெருமான் செய்யும் ஹிம்சைகளும் ஹித புத்தியினாலேயே செய்யுமவை என்று சாஸ்த்ரார்த்தம் தெளிந்த இருந்தாலும் இந்த ஸம்ஸார மண்டலத்தில் படும் துக்கம் பொறுக்க ஒண்ணாமையாலே தாம் பதறுகிறபடியே விண்ணப்பம் செய்தார் யாயிற்று-
———–
இன்னம் எத்தனை நாள் இவ்வுடம்புடன்
இருந்து நோவு படக் கடவேன் ஐயோ!
என்னை இதினின்றும் விடுவித்து நீர்
என்றுதான் திருநாட்டினுள் ஏற்றுவீர்?
அன்னையும் அத்தனும் அல்லாத சுற்றமும்
ஆகி என்னை அளித்தருள் நாதனே!
என் இதத்தை இராப் பகல் இன்றியே
ஏகம் எண்ணும் எதிராச வள்ளலே!–54-
மாதா பிதாக்களாயும் மற்றும் உண்டான உறவுகளாயும் இருந்து கொண்டு என்னை ரக்ஷித்து அருளா நின்ற ஸ்வாமியே -இரவு பகல் என்ற வாசி இல்லாமல் எப்போதும் என்னுடைய ஹிதம் ஒன்றையே சிந்திக்கிற மஹா உதாரரான எம்பெருமானாரே தேவரீருக்கு ஆட் பட்ட பின்பும் எவ்வளவு காலம் இந்தப் பொல்லாத தேஹத்தோடே இருந்து துன்பப்படுவேன் அந்தோ பரம காருணிகரான தேவரீர் இந்த ஸம்ஸாரத்தில் நின்றும் என்னை முக்தனாம்படி பண்ணி என்றைக்கு பரமபதத்தில் சேரச் செய்து அருள்வீர்-
————
தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஒன்று தனில் நெஞ்சு பேராமல் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-
மா முனிகள் தம்முடைய பெருமைகளைத் தாமே வெளியிட்டு அருளும் பாசுரம் இது -ஆச்சார்யர் திருவருளால் பெற்ற பேற்றுகளை வாய் விட்டுப் பேசி வெளியிடுவது க்ருதஜ்ஜையின் பரிவாஹமே யாதலால் தற்புகழ்ச்சி அன்று -பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப்புண்டரீகம் தம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம் ஒருவர் நம் போல் வரும் கேழ்பவர் உளரே -போன்று நம்மாழ்வாரும் அனுசந்தித்த கட்டளையே இதுவும்
தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெறுகை யாவது -தம்மை அவ் வெம்பெருமான் ஆச்சார்யர் பதவியில் அமர்த்தித்த தான் ஸிஷ்யனாக இருந்தது -தேவனுறை திருப்பதியே -பாட பேதம் -மதுரகவி சொல் படியே நிலையாக பெற்றோம் என்கிற இதில் -உண்ட போது ஒரு வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார் -என்று தொடங்கி அருளிச் செய்த ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள் அனுசந்தேயம் -தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசைப் பாடித் திரிவேனே போன்ற திட அத்யவசாயம் உடைமை சொல்லிற்று ஆயிற்று
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே-என்னும் இப்பேறு மிகவும் சாரமானது -முமுஷுப்படியில் இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும் –என்கிற இடத்தில் வியாக்யானத்தில் கீழ்ச் சொன்னவை எல்லாம் உண்டானாலும் உண்டாக அரிதாய் இருபத்தொரு ஓன்று இறே இது -என்று மா முனிகள் தாமே அருளிச் செய்தது கொண்டு இப்பேற்றின் அருமை பெருமைகளை யுணரலாமே –
———-
உந்தன் அபிமானமே உத்தாரகம் என்று
சிந்தை தெளிந்திருக்கச் செய்த நீ அந்தோ!
எதிராசா! நோய்களால் என்னை நலக்காமல்
சதிராக நின் திருத்தாள் தா–56-
ஸ்ரீ வசன பூஷணத்தில் சரம பர்வா நிஷ்டா நிரூபண ப்ரகரணத்தில் -ஆச்சார்யனையும் தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பமாகையாலே காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் – என்று அருளிச் செய்தபடியே தம்முடைய அத்யவசாயம் வாய்ந்து இருக்கிறபடியை முன்னடிகளாலே அருளிச் செய்தாராயிற்று-
———
தேசிகர்கள் போற்றும் திருவாய்மொழிப் பிள்ளை
வாசமலர்த் தாள் அடைந்த வத்துவென்னும் நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசரே! அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து–57-
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்று அருளிச் செய்தது போல உள்ளது இப்பாசுரம்-
———
எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால்
உந்தன் உறவை உணர்த்தியபின் இந்த உயிர்க்கு
எல்லா உறவும் நீ என்றே எதிராசா!
நில்லாதது உண்டோ என் நெஞ்சு?–58-
எமக்கு பரம உபகாரகரான திருமலை யாழ்வார் தேவரீருக்கும் அடியேனுக்கும் உண்டான ஒழிக்க ஒழியாத உறவைத் தெளிவித்து அருளின நாள் முதலாக -மாதா பிதா யுவதயா இத்யாதி ஸ்லோகத்தின் படியே அடியேனுக்கு எல்லாவகையான உறவுமுறையும் தேவரீரே என்று திடமாகக் கொண்டேன் என்று அருளிச் செய்கிறார் யாயிற்று –
——
எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல்
வந்து முகம் காட்டி வழி நடத்த சிந்தை செய்து இப்
பொல்லா உடம்பு தனைப் போக்குவது எந்நாள் கொலோ?
சொல்லாய் எதிராசா! சூழ்ந்து–59-
எம்பெருமான் பெரிய திருவடியின் மீது எழுந்து அருளி ஸேவை சாதித்தலும் இவ்வழக்கு உடம்பை விட்டு நீங்கப் பெறுவதும் என்றைக்கோ -என்று அருளிச் செய்கிறார்
———–
இந்த அரங்கத்து இனிதிரு நீ என்று அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் சிந்தை செய்யில்
நம்மதன்றோ? நெஞ்சமே! நல்தாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ? தாயமுறை தான்–60-
இந்த ஆர்த்திப் ப்ரபந்தம் மா முனிகள் தமது சரம தசையில் அருளிச் செய்தது என்றும் திருமேனியில் நோவு சாத்தியிருந்தது தத் அஸஹிஷ்ணுதையாலே அருளிச் செய்தது என்றும் சிலர் சொல்லிப் போருவது தத்வம் அன்று –
நம்மாழ்வார் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை யாமுறைமை என்றும்
எண்ணாராத் துயர் விளைக்குமிவை என்ன உலகியற்கை –பணி கண்டாய் சாமாறே -என்றும்
இருள் தரும் மா ஞாலத்து இனிப்பிறவி யான் வேண்டேன் -என்றும்
இங்கனே பல பாசுரங்கள் அருளிச் செய்தது எப்படி ப்ரக்ருதி மண்டலத்திலே ஜிஹாஸையினாலோ அப்படியே தான் மணவாள மா முனிகளும் இப்பிரபந்தம் அருளிச் செய்தது -திருநாட்டுக்கு எழுந்து அருளுவதற்கு பல ஆண்டுகள் முன்னமே இத்தை அருளிச் செய்தார் இப்படி இவர் திரு நாடு செல்லப் பதறினாலும் எம்பெருமான் இவர் தம்மை இன்னமும் சிலகாலம் இவ்விபூதியிலே இருத்தி இவரைக் கொண்டு விலக்ஷண லோக உபகாரகங்கள் செய்விக்க வேணும் என்று கருதி முன்பு எம்பெருமானார்க்கு அத்ரைவ ஸ்ரீ ரெங்க ஸூக மாஸ்வ என்று திவ்ய நியமனம் செய்து இவருக்கும் அங்கனமே திருவாணை இட அதனை ஒருமுகமாக அனுசந்தித்து உள்ளம் தேறி இப்பிரபந்தத்தைத் தலைக்கட்டி அருளினார் யாயிற்று
———————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்