தண்ணார் தமிழ் வளர்க்கும் தனிப் புகழாளர் பலர் தோன்றிய திருநெல்வேலிச் சீமையில், தென்காசிக் கருகில் அமைத்த வீர கேரளம் புதூரில் குடிக் கொண்ட நவநீத கிருட்டிணப் பெருமாளைக் கலம்பக
இலக்கியத்தாற் புலவர் கோமான் தண்டபாணி சுவாமிகள் வனப்புறப் பாடி மகிழ்கிறார்-ுமார்நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பெற்ற இம் மூலநூல் இப்பொழுதுதான் உரையுடன் வெளிவருகின்றது.
ஸ்ரீ திருவரங்க திருவாயிரம் -ஸ்ரீ திருமால் ஆயிரம் -போன்ற கிரந்தங்களையும் அருளிச் செய்துள்ளார்-இவர் திருமால் மீது ஈடுபாடு கொண்டு பாடிய பாடல்கள் பலவாம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மீது திருஎழுகூற்றிருக்கை, திருவரங்கன் பேரில் திருவரங்கத் திருவாயிரம், திருவயிந்திரபுரம் பெருமாள் பதிகம் திருவனந்தபுரம் யமக அந்தாதி, திருக்கண்ணபுரம் பெருமாள் பதிகம். விஷ்ணுபுரம் ஒருபது கூற்றிருக்கை, அரி ஏகபாதத்தந் தாதி, திருமாலந்தாதி, திருமகளந்தாதி எனப் பல அரிய இலக்கியங்களை இவர் படைத்தளித்துள்ளார். இவையேயன்றி திருமால் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று அங்கு எழுந் தருளியுள்ள பெருமாள், இலக்குமி, அனுமார் ஆகியோர் பெயரில் பதிகம், திருப்புகழ், வெண்பா, அந்தாதி, வகுப்பு போன்றவற்றையும் பாடியுள்ளார்.
மண்ணினிற் பிறந்த பயன் மிகப் பெற்றே மதி யுடன் வாழ்ந்திடற் காக
வண்ண நற் றமிழில் எண்ணரு பனுவல் வழங்கிய தண்டணி சாமி
கண்ணனைப் போற்றிக் கழறிய வீரைக் கலம்பக நூற்குரை வகுத்து,
கண்ணினைக் கருத்தைக் கவர்ந்திடு மாறு கவின் மிகு புத்தகம் பதித்தான்–எழுசீர் ஆசிரிய விருத்தம்-சிறப்புப் பாயிரம் –
அன்னவன் யாரோ என்றிடிற் புகழ்வேன். அறிவுசால் கலைபல வல்லோன்;
என்னவன் என்றே நல்லவர் நாடும் இனியநற் பண்புள சீலன்;
முன்னமும் பலவா முத்தமிழ் நூல்கள் முறையுடன் பதித்தவன்; நாளும்
பொன்னவிர் வேலூர் மாதவன் என்னப் புகழ்நிலை பெற்றவன் தானே.
கலம்பகப் பாக்கள் கருதிய பொருளைக் கற்பவர் எளிதினில் உணர்ந்தே
நலம்பெற, சீர்த்த உரையினைத் தருங்கால் நயமொடு தக்கமேற் கோள்கள்
நிலம்புகழ் நாலா யிரத்தினிற் காட்டி நெஞ்சினில் நிலைக்கவைத் திட்டான்-
வலம்படை ஐந்து வயங்கெழிற் பாணி- மாலருள் பெற்றுவா ழியவே!
திவ்வியப் பிரபந்தத்தின் திருப்பள்ளியெழுச்சியில் ‘கலம்பகம் புனைந்த விலங்கலத்தொடையல்’ எனும் தொடர் இச் சொல்லின் முதல் ஆட்சியைத் தருகின்றது. தொண்டரடிப்பொடியாழ்வாரின் இவ்வாட்சி, பல்வகை மலரும் கலந்து தொடுக்கப்பட்ட மலர்மாலையைச் குறித்தலால், கலவை எனும் அடிப்படைப் பொருண்மையின் சார்புடன் கலம்பகம் அமைந்தமை விளங்கும்.-தமிழில் முதன்முதலாக வைணவக் கடவுள்மீது எழுந்த முதற்கலம்பகம் திருவரங்கக் கலம்பகமே.-ி.பி.17ஆம் நூற்றாண்டில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய இலக்கலம்பகத்தின் தொடர்ச்சியாகத் தமிழில் பல கவம்பசு நூல்கள்
எழுந்துள்ளன.
சமய நூல்களைக் கற்குமிடத்து நம்மாழ் வாரின் திருவாய்மொழியின் சிறப்பைப் படித்தறிந்த பின்பே வைணவ சமயத்தின் பெருமையை உணர்ந்தார் எனக் கூறுவர் .
இவருடைய குருபர தத்துவம் என்னும் நூலில் இருபத்து நான்காம் சருக்கமாகிய விட்டுணு தரிசனச் சருக்கத்தில் இதை இவரே கூறக் காணலாம்.
விண்டு தூடணைக் கொடியரில் ஒருவனா விளங்கிய எனை அன்னோன்
பண்டு செய்தவப் பயனகொடோ அல்லது பழுதில்தன் ணருளாலோ
தொண்டு செய்பவர் அடியவர்க் காளெனும் துணிவுடைக் குருகூரான்
கண்டு கூறிய தமிழ்மறைப் பொருள்கொடு களிப்புறப் புரிந்தானே. (1)எனத் திருவாய்மொழியின் சிறப்பை எடுத்துக் கூறித் திருமால் வடிவமே செப்பும் எத் தெய்வமும் எனத்தாம் தெளிவுற்றதையும் பின் வருமாறு கூறுகின்றார்-
சேய வார்சடைச் சிவனென, அயனெத் தேவர்கோன் எனமற்றும்
ஆய பல்பொரு ளெனத்திரு மால்உறும் அதிரக சியந்தன்னைத்
தூய சீர்ச்சடகோபன் முன் வெளிப்படச் சொல்லியும்.துயரெய்தித்
தீயர் பால்இது பரம்அது பரம்எனச் செயும் சமர்க் கிசையேனே. (3) என்னும் பாடலால் தம்முடைய மனத் தெளிவைப் புலப்படுத்துகிறார். காக்கும் கடவுளாகிய திருமாலே வாழ்நாளில் பரம் என்பதைத் தாம் உணர்ந்தவாறு தெளிவு படுத்துகின்றார்.
வியாச மா முனி சங்கர மா முனி ஆகிய மேலோரும்
தயா நிதித் திரு மால்பதம் போற்றிய சாத்தியம் தெரிந்து அப்பாற்
கயானனற் தொழும் ஒளவை சொல்லிய விதி கண்டு, நாரணற்கன்பு
செயார்கள் வீடு பெற்றுய்ந்திடா ரென மிகச் செப்பிடத் துணிந்தேனே. (8)
நவநீதகிருட்டிணன் கலம்பகம் காப்புச் செய்யுள் இரண்டு,-அவையடக்கம் ஒன்று, நூல் 100 பாடல்கள், நூற்பயன் ஒரு பாடல் ஆக மொத்தம் 104 செய்யுட்களானியன்றது. நூல், ‘திருமகள் பூமகளொடு’ எனத்தொடங்கி அந்தாதித் தொடை பெற்று நடந்து இறுதிப்பாடல் ‘திருமாலே’ என மண்டலித்து
முற்றுப்பெறுகிறது. இது பொருள்தொடர் நிலைச் செய்யுள், சொல்தொடர் நிலைச் செய்யுள் என்னும் இரு வகைகளில் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.-இந்நூலில், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களும் பாவினங்களுமாக முப்பத்தைந்திற்கும் மேற் பட்ட தமிழ் யாப்பு வகைகள் இடம்பெற்றுள்ளன.
நந்தமிழ் நாட்டின் ஒண்முகமே போன்று ஒருக்கால் உற்றார்க்கும் தீவினை தீர்த்து ஒழுகு புனற் பெயருக்கு ஓவாச் சிற்றாற்றின் வட பாலில் திகழ் வீரை நகர் என முதற்பாடலிலேயே இத்தலத்தின் இருப்பிடத்தை விவரிக்கும் ஆசிரியர், இத்தலத்தின் இயற்கை எழிற்சிறப்பைப் பலபடப் பாராட்டுவர்.
இத்தலத் திறைவனாம் கண்ணபிரானின் திருப் பெயர்களை ஆசிரியர் பலவாறு எடுத்துரைக்கின்றார். எடுத்துக் காட்டாக, அஞ்சனன்-26.
அச்சுதநாதன்- 100,
அட்டாக்கரன்- 5, 63,
அண்டர் நண்பன்- 26,
அப்பன் – 50,
அம்மான்-94.
ஆதிமால்- 26.
எம்பெருமான்கா. 3, 20.
ஐயன்- 50.
ஒய்யாரன்-39,
கண்ண பிரான்-75,82,
கண்ணன்- கா. 1,18, 28, 30, 33. 54, 55,56,
67, 69, 84,
கரியவன்- 53.
கள்ளன்-29,
காகுத்தன்-55,
கிட்டிணன்-63,
கிரி-69.
குழகன்- 88,
கொண்டல்-23,
கோபாலன்-6,
சீதரன்- 12,
சீலன் 69,
சூதன்-19,25,
ஞானகுருபரன்- 16,
திருமால்-24, 45, 100,
தீரன்-69,
தொல்லோன்- 21,
நவநீதகிட்டிணன்-16,16,100,
நாரணன் -14, 16, 32, 38, 43, 49.
நெடுமால் -22, 27,
நெடியோன் 7,3, 89,
நேமியான்-95.
பவபயங்கரன்- 26
பிரான்-96,
புண்ணியன்- 36,81,
புருடோத்தமன்- 10, 66,
புனிதன்-23,
பெருமாள்- 19, 84.
மணிவண்ணன் -69,
மறைமூலன் -69,
மாதவன் – 25, 70,
மாயன்- 57,
முகுந்தன்-44,
முதல்வன்-17,
முதற்தேவு- 97.
வரதன்-97,
வள்ளல்-29,
விகிர்தன்-41 எனத் திருமாலின் திருப் பெயர்கள் பலவும் கூறக் காணலாம்.
கண்ணபிரானின் திருவுருவச் சிறப்பு, குணநலன்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுமிடங்கள் பலவாகும்.
காசைமென்பூந்துணர் வண்ணன்- 55, காயாமலர்த் துணர் போல் நின்றெறிக்கும் கண்ணபிரான் -75, பொன்னிகர் பூவான்-85. மணிக்குன்ற வண்ணன்-28, கொண்டல் மேனியன்-49, கருமுகில்-16. புயல் புரையும் நெடுமேனிப் புனிதன்-67.
புயல்நேரு மேனிப் புருடோத்தமன்-11,வானேய்த்த மேனி
முகுந்தன்-76, மைக்கனமே நிகர் கிட்டிணன்-33, நீலமால்
வரை-7, பச்சை நெடுமேனி அம்மான் -94. காரமர் நெடியமேனிக் கருணை மால்வரை -40, தளஞ்செறிபூங் கண்ணன் 2,
செங்கண்நெடுமால் – 30. மலர்ச்செங் கண்ணன்-94,மலர்க்கண்
அமுது- 41. பூ அனைய திருத்தாளன்-59, நான்முகனைப் பயந்த வுந்தி நளினத்தான்- 43, அந்தணன் குடிகொள் உந்தி கொண்ட
முகில்- 26, ஆரணஞ் செப்புநர் பலர்வரலான நாபியன் – 58.
செந்திருவை மார்பினிடத் தமைத்தோன்-93, ஐம்பெரும் படை கொள் ஆதிமால்- 26, சங்காழிப் படைக்கை மால்- 43.
சுகம் ஒன்று ஊர்ந்து விண்வழி வரும் நாரணன்- 32.
என இவ்வாறு சுண்ணபிரானின் திருவுருவைப் பலவாறு விளக்கும் ஆசிரியர் அக் கண்ணபிரானின் குணநலன்களைச் சுட்டியும் அவரை விளிக்கின்றார்.
திருமறு மார்பன் திகழ்சரிதந் தன்னைத் தெளிந்தாய்ந்த
மருளறு ஆழ்வார் மொழிதமிழா மென்றே மதித்தந்நாள்
குருவருள் பெற்றுயர் தண்டபாணிப் பாவலன் கூறுஞ்சீர்
அருள்நவ நீதன் கலம்பகத் திற்குரை யான்தரலே.–1-கட்டளைக் கலித்துறை
பொய்கை பூதம் பேய்உரைத்த பொருளில் தமிழும், புத்தூரில்
ஐயன் விஷ்ணு சித்தன்முனம் அறைந்த தமிழும், கலிகன்றி
செய்ததமிழும், மழிசைக்கோன் செப்பும் தமிழும், ஒப்பிலா
மெய்யன்தொண்ட ரடிப்பொடிமுன் விரித்த தமிழும்,
கொல்லிக் கோன் செப்பும் தமிழும், திருப்பாணன் செய்ததமிழும், புதுவைநகர்
ஒப்பில் கோதை அன்புரையால் ஓதும் தமிழும்,அவரவரைத்
தப்பொன் றின்றிப் பதிகத்துச் சாற்றும் பெயரும் தாமோதித்
தெப்பம் பிறவிக் கடற்கென்னத் தாம் செய்தசெழுந்தமிழ்கள் (ஸ்ரீராமானுஜ வைபவம் 1:57,58-வடிவழகிய நம்பிதாசர்)
பொய்யில் பரம கவிகளால் புகலப்பட்ட தமிழிவைகள்
ஐய தெய்வ நன்மாலை அதனால் இதனை நாமெல்லாம்
தெய்வ கானத் தியலிசையில் சேர்த்துக் கலியால் தீதுற்று
நையும் உலகில் பரத்தியிட வேண்டும் என்றான் நாதமுனி. (ஸ்ரீ ராமானுஜ வைபவம் 1-67)
கழறிடு மன்பர்க் கருளுங் கருணைமால் காப்பதுவாய்க்
குழறிடு மென்னுரைப் புன்மையுங் காக்கும் குறையிலவே:
பழமறை யாதியாம் மாதவன் சேய்மகிழ்ப் பாமகளே!
தொழவருள் வாணியே! சொற்பொருள் வாக்கருள் சொல்மகளே! 2—மாதவன் சேய்-என்றது திருமாலின் குழந்தை யான பிரமனைக் குறித்தது. மாதவன் என்றது உரையாசிரியர் பெயரையும் குறித்தது.
–
சீரைத் திருவைச் செழிப்பைப் பொழிற்பெருக்கைக்
காரைப் பொருந்திக் களிகாட்டும்- வீரைக்
கலம்பகம்பு கன்றுகண்ணன் கான்மலரிற் சூட்ட
அலம்பகம்பு கானைதுணை யாம்.–1-காப்பு-நேரிசை வெண்பா
சீரை திருவை செழிப்பைப் பொழிற்பெருக்கை- பேரழகும்.தெய்வீகமும்,செல்வச் செழிப்பும், மிகுதியான பொழில்களும் நிறைந்து
காரைப் பொருந்தி களி காட்டும்- எப்பொழுதும் நீர் கொண்டமேகங்கள் சூழ்ந்து மகிழ்ச்சியைத் தருகின்ற
வீரைக் கலம்பகம் புகன்று – வீரை என்னும் வீரகேரளம்புதூரில் கோவில் கொண்டெழுந்தருளியுள்ள நவநீத கிருட்டிணன் மீது இக்கலம்பக நூலை மொழிந்து
கண்ணன் கால்மலரில் சூட்ட- கண்ண பெருமானின் திருவடித் தாமரையில் சேர்ப்பிக்க
அலம்பு அகம் புகு ஆனை துணை ஆம் – -அலம்பு அகம்- (அன்பால்) கழுவப்பட்ட உள்ளம்; தூய
உள்ளம்.-தூய உள்ளங்களில் குடி யிருக்கும் விநாயகர் துணையாவார்.
நிலம்பகச் சம்மதி யாதார் நெருங்கும் நெடுங்களத்தில்
இலம்பகம் ஈரொன்ப தால்தன்னில் வேறில்லை என்றுணர்த்தி
வலம்பகப் பார்த்தனை யாண்டானை வீரையில் வாழ்த்துதமிழ்க்
கலம்பக நூற்குநம் மாழ்வார்முன் னாம்பலர்காவலுண்டே. 2-கட்டளைக் கலித்துறை
நிலம்பகச் சம்மதியாதார்-பாண்டவர்களுக்குச் சேரவேண்டிய நாட்டைப் பகிர்ந்தளிக்க மறுத்த துரியோதனாதிகள்
நெருங்கும் நெடுங்களத்தில்- நெருங்கியிருக்கும் பெரிய போர்க் களத்தில்
இலம்பகம் ஈரொன்பதால்- பதினெட்டு அத்தியாயங்களை யுடைய கீதையை உபதேசித்து
தன்னில் வேறு இல்லை என்று உணர்த்தி- உலகத்தில் இறைவனாகிய தன்னைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை என்பதை எடுத்துக்காட்டி
வல் அம்பு அக பார்த்தனை ஆண்டானை – வெற்றிச் சிறப்பும் வலிமையுமிக்க அம்பு எய்வதில் பெருமிதம் கொண்ட அருச்சுனனைக் காத்தருளிய கண்ணபெருமானை
வீரையில் வாழ்த்து தமிழ்க் கலம்பக நூற்கு- வீரகேரளம்புதூரில் வாழ்த்தி வணங்கும் இத் தீந்தமிழ்க் கலம்பகமாகிய இலக்கி யத்திற்கு
நம்மாழ்வார்முன்னாம்பலர் காவல் உண்டே- சடகோபராகிய நம்மாழ்வாரும் மற்ற ஆழ்வார்களும் ஆசாரியர் அனைவரும் காவலாக இருப்பார்கள் என்பது உறுதி. ஏகாரம்-தேற்றம்.
நம்மாழ்வாரை முதலிற் கூறியது, திருத்துழாய் அங்குரிக்கும் போதே பரிமளத்தோடு தோற்றுதல் போல ஞானமாகிய பரிமளத்தோடு திருவவதரித்து மற்றை ஆழ்வார்களினும் மேம்படுதலாலென்க. பலர் என்றது ஆழ்வார்களைத் தொடர்ந்து வந்த வைணவ ஆசாரியர் பலரும் என்னும் பொருளிலாகும்.
ஆழ்வார்-பகவானுடைய மங்கள குணங்களாகிய அமுத வெள்ளத்திலே முழுகி மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுபவர்.
எம்பெருமான் அருளாலோ, திருவுந்தித் தாமரைமீ திருப்பான் சேர்வென்
கொம்பெழிற்கட் கடையாலோ, எனதுமனக்களிப்பாலோ, கொடியார் கூட்டத்து
அம்பெயுங்கைச் சிலைஇருத யாலயப்பேர்மகிபாலன் அதிட்டத் தாலோ
கம்பெகினத் தொடுமயங்கும் வயல்வீரைக் கலம்பகநூல் கலிக்கு மாறே. 3–(அவையடக்கம்) அறுசீர் ஆசிரிய விருத்தம்-
எம்பெருமான் அருளாலோ -திருமாலின் திருவருள் காரண மாகவோ
திரு உந்தித் தாமரை மீதிருப்பான்சேர்வெண்கொம்பு எழில்கண் கடையாலோ-திருமாலின் திருவுந்தித் தாமரையில் வீற்றிருக்கும் நான்முகனின் தேவியாகிய கலைமகளின் அழகிய கடைக்கண்பார்வையின் காரணமாகவோ.
எனது மனக் களிப்பாலோ-(கண்ணன் திருஅவதாரச் சிறப்பையும் பேரருளையும் நினைந்து நினைந்து அகம்மிக மகிழ்ந்த) அடியேனுடைய உள்ள மகிழ்ச்சியின் காரண மாகவோ
கொடியார் கூட்டத்து அம்பு எய்யும் கைச்சிலை இருதயலாயப் பேர் மகிபாலன் – (நீதியும் நேர்மையும் தவறிய) தீயோர் கூட்டத்தின்மீது அம்புகளைப் பொழியும் வில்லினைக் கையிலேந்திய இருதயாலய மகிபாலன் என்னும் மன்னனின்
அதிட்டத்தாலோ- நல்வினையின் காரணமாகவோ.
கம்புஎகினத்தொடு மயங்கும் வயல் வீரை- சங்கும் அன்னமும் அருகருகே பொருந்தி வாழும் வயல்கள் நிறைந்த
வீரகேரளம்புதூர் (மாநகரில் கோவில் கொண்டுள்கண்ணபெருமானுக்குரிய)
கலம்பக நூல்-இக் கலம்பக இலக்கியம்
கலிக்குமாறே- ஒலிக்கத் தொடங்குகிறது
விண்டுதூடனைக் கொடியரின் ஒருவனா விளங்கியஎனை, அன்னோன்
பண்டு செய்தவப் பயன்கொடோ அல்லது பழுதில் தண் அருளாலோ,
தொண்டு செய்பவர் அடியவர்க் காளெனும் துணிவுடைக் குருகூரான்
கண்டு கூறிய தமிழ்மறைப் பொருள்கொடு களிப்புறப் புரிந்தானே.
–
திருமகள்பூ மகளொடுதன் சேவடிப்பூக் களைத் தமது
மருமலர்க் கையால் வருட மாசுணப்பாயலின் மீது
பாற்கடலிற் பொய்த் துயில் கூர் பான்மையைப் பல் வானவரும் தோற்க அடர் வார்க்கறுவும் தொழில்நிமித்தம் விடுத்தெழுந்து
தேவகி தன் மகவாகித் தீதில் அருட் தாதை கையால் பாவமும் கண்டு ஒல்க மிகப் பழுத்த இருட் பா நாளில்
ஆயர் தம் ஊ ரிடை எய்தி. யசோதை யென்னும் அருந்தவத்து ஓர் தாயகமிக் குவப்பெய்தத் தவழ்ந்தினீதுஆடிய பருவத்து
இருமருதுஅட்ட டமைகருதி எண்ணின்மருது ஏற்று அவற்றின் திரு நிழல் வேட் டுற்றஅரன் சிந்தைநைதல் தீர்க்கினன்றி
முன்னாள் பிச் சொழித்தாண்ட முதுக்குறைக்கோர் குறையென்ன
உன்னாநந் தமிழ்நாட்டின் ஓண் முகமே போன்று ஒருக்கால்
உற்றார்க்கும் தீவினை தீர்த்து ஒழுகுபுனற் பெருக்கு ஓவாச்
சிற்றாற்றின் வடபாலில் திகழ்விரை நகர்நாப்பண்
அருள்மலி கண் ஆதியவாம் அவயவம் தோய் தருமருதின்
பெருநிழற்பால் நின்றருள் எம் பெருமானே பேசக்கேள்!–மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
திருமகள் பூமகளொடு – பெரிய பிராட்டியாகிய இலக்குமி மற்றும் பூமிப்பிராட்டியாரோடு
தன் சேவடிப் பூக்களை-செந்தா மரை மலர் போன்ற சிவந்த திருவடிகளை
தமது மருமலர்க் கையால் வருட தமது மணம் மிக்க மலர் போன்ற திருக்கைகளால் தடவும்படி
மாசுணப்பாயலின் மீது – ஆதிசேடனாகிய படுக்கையின் மேலே
பாற்கடலில் பொய்த்துயில் கூர் பான்மையை – திருப்பாற்கடலின் நடுவிலே அறிதுயிலாகிய யோசு நித்திரை கொள்ளும் தன்மையை
பல்வானவரும் தோற்க அடர்வார் -தேவர்கள் பலரும் தோற்கும்படியாக நெருங்கும் அசுரர்களை
கறுவும் தொழில் நிமித்தம் – அழியச் செய்வதற்காக விடுத்தெழுந்து விட்டு எழுந்து
தேவகி தன் மகவாகி- தேவகியின் பிள்ளையாகத் தோன்றி
தீதில் அருட் தாதை கையால்-குற்றமற்ற மெய்ஞ்ஞான முடையவராகிய வசுதேவர் கையால் ஏந்த
பாவமும் கண்டு ஒல்க மிகப்பழுத்த இருட்பா நாளில்- மகா பாவங்களும் சுண்டு நாணமுறும்படி மிகக் கருமையான இருள்சூழ்ந்த இரவில்
ஆயர்தம் ஊரிடை எய்தி- இடையர்கள் வாழும் ஆயர்பாடி யாகிய கோகுலத்தை அடைந்து
யசோதை யென்னும் அருந்தவத்து ஓர் தாய் அகம் மிக்குவப் பெய்த- (இடையர் தலைவனாகிய நந்தகோபனுடைய மனைவியாகிய) யசோதை என்னும் அருமைத்தாயின் உள்ளம் மகிழும்படியாக
தவழ்ந்தினிது ஆடிய பருவத்து – அவளிடையே தவழ்ந்து விளையாடிய காலத்தில் (உரலில் கட்டியபொழுது )
இருமருது அட்டமை கருதி-இரண்டு மருத மரங்களை ஒடித்து வீழ்த்தியதைக் கருத்தில்கொண்டு
எண்ணின் மந்து ஏற்று பல தலங்களில் மருதமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு
அவற்றின் திருநிழல் வேட்டுற்ற அரன்- அவற்றின் நிழலில் விரும்பித் தங்குகின்ற சிவ பெருமான்
சிந்தை நைதல் தீர்க்கினன்றி- தன் மனவருத்தத்தைத் தீர்க்காவிடில்
முன்னாள் பிச்சொழித்தாண்டமுதுக்குறைக்கோர் குறை என்ன உன்னா- முற்காலத்தில் இரந்துண்ட இழிநிலையை நீக்கிய பேரறிவின் அருளிற்குக் குறைவு உண்டாகும் என நினைத்து
நம் தமிழ்நாட்டின் ஒண்முகமே போன்று- நம்முடைய தமிழ கத்தின் ஒளிமிக்க முகமே போல
ஒருக்கால் உற்றார்க்கும் தீவினை தீர்த்து- ஒருமுறை வந்து அடைந்தவர்க்கும் பாவங்களை ஒழித்து
ஒழுகுபுனல் பெருக்கு ஓவாச் சிற்றாற்றின்-வற்றாத நீர்ப் பெருக்கினை எப்பொழுதுமுடைய சிற்றாற்றுக்கு (சித்ராநதிக்கு)
வடபாலில் திகழ் வீரை நகர் நாப்பண்-வடக்கே திகழும் வீரைஎன்னும் நகரத்தின் நடுவே
அருள்மலி கண் ஆதியவாம் அவயவம் தோய்தரு மருதின் பெரு நிழற்பால் நின்றருள் -அருள் நிறைந்தும், கணு முதலிய உறுப்புக்கள் பெற்றும் விளங்கும் மருத மரத்தின் பெரிய நிழலிலே எழுந்தருளியுள்ள
எம்பெருமானே- எங்கள் இறைவரே!
பேசக்கேள்- அடியேன் விண்ணப்பிப்பதைக் கேட்டருள்வீராக
அருமறை முதலிய பலகலை நுவலென அயனைமுன் அலர்மகள் அயர்வுற அருளினை,
தெருள்மலி தருசிவன் முதலிய கடவுளர் செயசெய எனவழி படமிக நிலவினை,
ஒருபொருள் இருபொருள் பலபொருள் எனஇக லுறுபல சமயமும் அருள்பொது நிலையினை,
கருமுகில் மிசைவரு மகபதி முதலினர் கடலமு துணமகள் உருவமும் மருவினை–இவை நான்கும் ஈரடி அராகங்கள்-
அருமறை முதலிய பலகலை நுவலென-கற்பதற்கு அரிய வேதம் முதலான பல கலைகளையும் சொல் என்று
அயனை முன் அலர்மகள் அயர்வுற அருளினை – முற்காலத்தில் திருமகள் தன் வழியாகப் பிள்ளைப்பேறு வாய்க்க வில்லையே என வருத்தமுறும்படி பிரமனைப் பெற்
றெடுத்தீர்
தெருள்மாலிதரு சிவன் முதலிய கடவுளர்- தெளிவு மிக்க சிவபெருமான் முதலான கடவுளர் யாவரும்
செயசெய என வழிபட மிக நிலவினை- வெற்றி வெற்றி என (உம்மைத் துதித்து) வழிபடும்படியாகப் புகழ் பெற்று விளங்குகின்றீர்
ஒருபொருள் இருபொருள் பலபொருள் என இகலுறு பல சமயமும்- உள்பொருள் ஒன்று. இரண்டு,பல எனத் தமக்குள்ளே வாக்குவாதம் செய்யும் பல சமயங்களையும்
அருள்பொது நிலையினை-அடியவர்களின் பக்குவநிலைக் கேற்ப வழங்குகின்ற பொது நிலையை உடையவராக விளங்குகின்றீர்
கருமுகில் மிசைவரு மகபதி முதலினர் – மேகத்தை வாகனமாக உடைய இந்திரன் முதலான தேவர்கள்
கடல் அமுது உண – திருப்பாற்கடலிலே கடைந்த அமுதத்தை அடையும்படியாக
மகள் உருவமும் மருவினை-மோகினி என்னும் பெண்ணுருவமும் கொண்டருளினீர்.
ஆனையொன்று மூலமென அந்நாள் அழைத்திடப்போய்
ஏனை விண்ணோர் நாண இடங்கர்நெடு நாவறுத்தாய்!
தந்தைசெய்யுந் தீமையிடைத் தட்டழிந்த தானவச்சேய்
சிந்தைகளி கூரவொரு சீயமாச்சென் றளித்தாய்!
பொல்லார்தம் புன்சபையிற் புண்படும்ஓர் பூவைஉய்ய
எல்லாரும் கண்டுமெச்சும் எண்ணில்கலைப் பேறீந்தாய்!
கார்கடல்நீர் முற்றும்அறக் கைச்சிலைஒன் றாற்கணக்கில்
வார்கணைமா மாரிபெய்தும் வல்லரக்கர் வாழ்வழித்தாய்!
ஆன்அனந்தம் இன்பமுற அந்தரத்து ஆர்த் துப்பொழிந்த
வானமுற்றும் நாணமெய்த மாமலையொன் றேந்திநின்றாய்!
மீனாமை ஏனமுதல் வெவ்வே றுருச்சமைந்துற்று
ஆனாத கீர்த்தி அளவிறந்த கோடிகொண்டாய்!
ஆனை யொன்று மூலமென அந்நாள் அழைத்திடப் போய்-கஜேந்திரனாகிய ஒப்பற்ற யானை ‘ஆதி மூலமே’ என ழிஅழைக்க அன்று உடனே சென்று
ஏனை விண்ணோர் நாண- மற்றுமுள்ள தேவர்கள் எல்லாம் நாணமுறும்படியாக
இடங்கர் நெடுநாவறுத்தாய் முதலையினுடைய நீண்ட வாயை அறுத்தெறித்தீர்
தந்தை செய்யுந் தீமையிடை -இரணியகசிபன் என்னும் தகப்பன் செய்யும் கொடுமைகளால்
தட்டழிந்த நிலை குலைந்த
தானவச் சேய்-அசுரர்குலக் கொழுந்தான பிரகலாதன்-
சிந்தைகளிகூர -மனம் மகிழும்படியாக
ஒரு சீயமாச் சென்று அளித்தாய்- நரசிங்கத் திரு வுருவாய்ச் சென்று ஆட் கொண்டருளினீர்
பொல்லார் தம் புன் சபையிற்-துரியோதனன் முதலிய பொல்லாதவர்கள் நிறைந்த குற்றம் நிறைந்த சபையில்
புண்படும் ஓர் பூவை உய்ய – ஆடை குலைந்து அவமானத்நால் நெஞ்சம் புண்பட்ட திரெளபதி என்னும் ஒருபெண் தப்பும் படியாக
எல்லாரும் கண்டு மெச்சும்- அங்கிருந்த சபையோரே அன்றி விண்ணொரும் மற்ற எல்லாரும் கண்டு போற்றும்படியாக
எண்ணில் கலைப்பேறு ஈந்தாய்-கணக்கற்ற ஆடைகளை யளித்து அருளுனீர்
கார்கடல்நீர் முற்றும் அற – கரிய கடல் நீர் அனைத்தும் வற்றும் படியாக
கைச்சிலை ஒன்றால்- கையிலேந்திய ஒற்றை வில்லால்
கணக்கில் வார் கணைமா மாரி பெய்தும் கணக்கற்ற அம்புகளைப் பெருமழை போல் பொழிந்தும்
வல்லரக்கர் வாழ்வழித்தாய் – இராவணன் முதலான வலிய அரக்கர்களின் உயிரினைப் போக்கினாய்
ஆன் அனந்தம் இன்பமுற பசுக்களின் கூட்டம் எல்லாம் மகிழ்ச்சி கொள்ளும் படியாகவும்
அந்தரத்து ஆர்த்துப் பொழிந்த -ஆகாயத்தில் பேரொலியுடன் பொழிந்த
வாணம் முற்றும் நானமெய்து- -மேகக் கூட்டங்கள் முழுவதும் தோற்று நாணும்படி
மாமலை பொன்றேந்தி நின்றாய் கோவர்ந்தன கிரி என்னும் பெரு மலையை ஒரு விரலால் ஏந்தி நின்றீர்
மீன் ஆமை ஏனம் முதல் வெவ்வேறு உருவச் சமைந்து உற்று- மச்சாவதாரம் கூர்மாவதாரம் வராக அவநாரம் என வேறு வேறு உருவங்களைக் கொண்டு
ஆனாத கீர்த்தி அளவிறந்த கோடி கொண்டாய்- குறையாத பெரும் புகழை அளவில்லாது பெற்றீர்.
இராகவன் என்னும் உழவன் கடலாகிய வனத்தைப் பாணமாகிய அழலினாலே திருத்தி, வயல் உண்டாக-அதனிடத்துச் சேதுவாகிய வரம்யையும் கூட்டி, இராக்கதர் இரத்தமாகிய ஏரிநீரை நிறைவித்து, இலங்கையாகிய பெரிய வயலைச் செறிந்து, இராவணனுடைய பல முடிகளாகிய
களைகளைப் பறித்து விபீடணன் என்றும் பயிரையுண்டாக்கி அப்பபிருக்கு நல்லருள் ஆகிய நீரைவிட்டு, சூரியன் முதலான பல கதிர்கள் முற்றும்படி விளைவித்தான்
பொதுவமி னார்தரு போகம் ஆர்ந்தனை!
கதுமென மாதொடுகாடு சேர்ந்தனை!
அதுஇதுஎ னாதவர் ஆவி ஆர்ந்தனை!
மதுமுத லோர்நெடு மார்பு வார்ந்தனை!–நாற்சீர் அம்போதரங்கம்
பொதுவமினார் தரு போகம் ஆர்த்தனை- -பொதுவ மினார் – பொதுவர் மின்னார்-ஆயர்பாடியிலுள்ள கோபியர்கள் கொடுத்த இன்பத்தைத் துய்த்தீர்
கதும் என மாதொடு காடு சேர்ந்தனை-கைகேயி கேட்ட வரத்திற்கு வாக்களித்த தந்தையின் சொல்லைக் காப்பதற்காக- சீதையுடன் விரைந்து காட்டைச் சென்று அடைந்தீர்
அது இது எனா தவர் ஆவி ஆர்த்தனை-(இறைவன்மீது பக்தி இல்லாமல்) பரம் பொருள் அத்தகையது, இத்தகையது என்று வீணே அரற்றித் திரியாமல் உண்மையாகத் தவத்தில் ஈடுபடும் அடியார்களுடைய உயிரையே தமக்கு இடமாகப் பொருந்தி இருக்கிறீர்கள்
மது முதலோர் நெடு மார்பு வார்ந்தனை- மது, கைடபன் போன்ற பல அசுரர்களின் வலிமை பொருந்திய பெரிய மார்புகளைக் கிழித்தீர்
ஆர ணத்தொகை நாட்டினை;
கார ணத்தனி வீட்டினை;
அன்பர் தம்புடை மேயினை;
இன்ப துன்பமும் ஆயினை;–முச்சீர் அம்போதரங்கம்
ஆரணத் தொகை நாட்டினை-பற்பல வேதங்களை உலகில் நிலை நிறுத்தினீர்
காரணத் தனி வீட்டினை- மூலமாகிய பரமபதமென்னும் தனியான இன்பப்பெரு வீட்டினைக் கொண்டீர்
அன்பர் தம் புடை மேயினை – பரம பாகவதர்களாகிய அடியவர் பக்கமாகவே சேர்ந்தீர்
இன்ப துன்பமும் ஆயினை – உலகிலுள்ள எல்லா உயிர்களிடத்தும் இன்ப துன்பங்களுக்கெல்லாம் காரணமாக உள்ளீர்
உளவ றிந்தனை;
துளவ ணிந்தனை;
உண்மை உற்றனை;
திண்மை பெற்றனை.--இருசீர் அம்போதரங்கம்
உளவறிந்தனை-மாற்றாரின் உட் கருத்தை அறிந்தீர்
துளவு அணிந்தனை-பரிசுத்தமான துளசி மாலையை எப்பொழுதும் சூடியுள்ளீர்
உண்மை உற்றனை- எப்பொழுதும் சத்தியத்தின் பக்கமே சார்ந்திருப்பீர்
திண்மை பெற்றனை-(இத்தனைக் காரணங்களால் எப்பொழுதும்) மெய்ம்மையாகிய வண்மையை யுடையீர்.
எனலால்–தனிச்சொல்
(“அருமறை முதலிய’ என்பது தொடங்கி திண்மை பெற்றனை என்பது முடிய) இதுகாறும் பலவாறாகக் கூறப் பட்டவாறு.)
நின்மாட் டொன்று நெடிதுஇரக் கின்றேன்
என்மாட் டுன்னருள் இன்றுகொல்? உண்டுகொல்?
உன்னுருக் கொண்டென் உள்ளகத்து ஒருபொருள்
பன்னும் மாற்றம் பல உள ஆயினும்
ஒன்றும்இவ் வுலகத்து ஒளிரக் காண்கிலன்;
என்றும்அன் னவைபொய்த்து ஏகினும் ஏகுக!
மாதவப் பயிர்பொதி வன்களை யென்ன
ஏதமிக்காற்றும் இருங்கலிக் கஞ்சிப்
பரந்தநீர்ப் புணரிப்பார்மிசை பலவாறு
இரந்தலைந் தேங்கி இடையா வண்ணம்
பன்முனை வயிரப் படையான் பயந்த-
வின்மகன் ஆளென வெள்காது ஓதி
நின்ற ஊரில் நீயும் நானும்
நன்றறிந் துய்ந்த நடுவர்பற் பலரும்
அறிதர நிகழ்ந்தபோராடல்
நெறிவழி பிழையா நிசப்பட விளக்கே.--ஆசிரியச் சுரிதகம்
நின்மாட்டு ஒன்று நெடிது இரக்கின்றேன் – உம்மிடத்தில்(அடியேன்) ஒரு வரத்தைப் பெரிதும் வேண்டுகிறேன்
என் மாட்டு உன்னருள் இன்று கொல்? உண்டு கொல்?- அடியேனிடத்தில் உம்முடைய அருள் உண்டா? இல்லையா?
உன் உருக்கொண்டு என் உள்ளகத்து ஒரு பொருள் பன்னும் மாற்றம் பல உள- உம்முடைய திருவுருவத்தை ஏற்று
அடியேனுடைய தியானத்தில் பரம் பொருள் கூறி யருளிய சொற்கள் பலவாகும்.
ஆயினும் -இருப்பினும்
ஒன்றும் இவ்வுலகத்து ஒளிரக் காண்கிலன்-இந்த உலகத்தில் அவ் வுரைகள் எதுவும் பலிக்கக் காணவில்லை.
என்றும் அன்னவை பொய்த்து ஏகினும் ஏகுக-ஒருநாளும் நிறைவேறாமல் அவை பொய்யாகிப் போனாலும் போகட்டும்
மாதவப் பயிர் பொதி வன்களை என்ன- பெருந்தவமாகியபயிரிடையே மறைந்திருக்கும் கொடிய களை போன்று
ஏதம் மிக்கு ஆற்றும் இருங்கலிக்கு அஞ்சி- கொடுமை மிகப்புரியும் வறுமைக்கு அஞ்சி
பரந்த நீர்ப் புணரிப் பார்மிசை-பரந்து பட்ட அலை கடலால் சூழப்பட்ட இப் பூமியில்
பலவாறு இரந்து அலைந்து ஏங்கி இடையா வண்ணம்-பலவிதமாகக் கையேந்தி அலைந்து அடியேன் வசங்கெடாதவாறு
பன்முனை வயிரப்படையான் பயந்த- பல முனைகளைக் கொண்ட வச்சிராயுதப் படையுடைய இந்திரனின் மகனாகிய
வில் மகன் ஆள்என வில்லுக்குரிய அருச்சுனனின் அம்சமாகிய அருணகிரி நாதரின் அடியான் இவன் என்று
வெள்காது ஓதி நின்ற ஊரில்- சற்றும் வெட்கப்படாமல்(அடியேன்) சொல்லி நின்ற நகரில் நீயும் நானும் நன்று அறிந்து உய்ந்த நடுவர் பலரும் -தேவரீரும் அடியேனும் ஐயந் திரிபற நன்கு கற்றறிந்த நடு நிலையாளர்கள் பலரும்
அறிதர நிகழ்ந்த பேராடல்- நேரில் அறியும்படியாக நடை பெற்ற திருவிளையாடலை
நெறிவழி பிழையா நிசப்பட விளக்கே- உண்மைக்குப் புறம் பாகாதவாறு உடன் (அனைவருக்கும்) தெரிவிப்பீராக!
இவர் முற்பிறப்பில் அருணகிரியாக யிருந்ததை வேறு பல நூல்களிலும் குறிப்பர். இப்பிறப்பில் சைவக்கோலம் பூண்டவராயினும் திருமால் பக்தி மிக்கவர் என்பதால் இவர் திருவரங்கத்
திருவாயிரம் போன்ற நூல்களை அக்கோயிலிலேயே பலர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தபொழுது, திருமாலே நேரில் வந்து திருவிளையாடல் புரிந்ததை இவர்தம் வரலாற்றில் காணலாம்.
—
விளங்கனிமேற் கன்றெறிந்தாய்! விண்ணுமண்ணும் தாளால்
அளந்தறிந்தாய்! யாவையுந்தா னானாய்!- தளஞ்செறிபூங்
கண்ணா! தென் வீரைநகர்க் காவலா! கத்தும் என் சொல்
நண்ணாதென் கொல்லோ நவில்–2-நேரிசை வெண்பா-2-இது, மலர்என்னும் வாய்பாட்டால் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா.
விளங்கனிமேற் கன்றெறிந்தாய்- உம்மைக் கொல்லும் பொருட்டுக் கன்றின் வடிவங் கொண்டு வந்து வத்சாசுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச்சுழற்றி, விளாமரத்தின் மேல் எறிந்து, அம் மரவடிவாய் வந்த கபித்தாசுரனையும் கொன்றீர்
விண்ணும் மண்ணும் தாளால் அளந்தறிந்தாய்-திருவிக்கிரமாவதாரமாய்த் தோன்றிய போது நின் திருவடி கொண்டு விண்ணையும் மண்ணையும் அளந்தறிந்தீர்
யாவையும் தான் ஆனாய்-எல்லாம் நீரே ஆனீர்
தளஞ்செறிபூங்கண்ணா – அழகிய இதழ்கள் செறிந்து தாமரையை யொத்த கண்களை உடையவரே
தென் வீரை நகர்க் காவலா -அழகிய தெற்கே யுள்ள வீரைநகரின் தலைவரே!
கத்தும் என் சொல் நண்ணாது என் கொல்லோ நவில்- ஓயாமல் பாடிக் கதறும் அடியேன் சொற்கள் நின் செவிகளை வந்து அடைய வில்லையா? சொல்வீராக.
நவில்பூம் புளிநிழல் ஆழ்வானை நாடிமுன் நான்பகர்ந்த
கவிவாஞ்சை யாலவன் சொன்னசொற் போற்பயன் காண்பதென்றோ
செவிதூங்கும் வேழம் பலஆர்க்கும் வீரைத் திருநகரில்
புவிமான் களிப்பும் மலர்மான் சிறப்பும் பொலிதெய்வமே.–3-கட்டளை கலித்துறை
செவி தூங்கும் வேழம் பல ஆர்க்கும்-தொங்குகின்ற செவிகளையுடைய பல யானைகள் பேரொலி செய்கின்ற
வீரைத் திரு நகரில்-(வளமை மிக்க) வீர கேரளம்புநூரில்
புவிமான் களிப்பும் மலர்மான் சிறப்பும் பொலி தெய்வமே -பூதேவியின் உவகையும் திருமகளின் அன்பும் பெற்று விளங்கும் பெருமாளே-புவிமான்- பூதேவி. மலர்மான்- திருமகள்-
நவில் பூம் புளிநிழல் ஆழ்வானை நாடி -திருப்புளியமர நிழலில் எழுந்தருளியுள்ள நம்மாழ்வாரைப் போற்றி
முன் நான் பகர்ந்த கவி வாஞ்சையால் அவன் சொன்ன சொல் போல் பயன் காண்பது என்றோ – முன்னர் அடியேன் ஆசையுடன் பாடிய பாடல்கள் எல்லாம், அவ்வாழ்வார் பாசுரங்களை நீவிர் சூடியது போன்று சூடும் பெருமையை அடியேன் எப்பொழுது அடைவேனோ அறியேன்.
தெய்யஎன்னும் இடைச்சொல்லின் திருட்டறியாப் புலவோரும்
வையஎன்னைத் துயர்செய்தாய் மனமிரங்கும் கணம்யாதோ?
பையரவின் மிசையாடிப் பசியமயில் இறகணிந்து
செய்யநிறத் தமிழ்வீரைத் திருக்கோயி லமர்வானே.–4-கொச்சகக் கலிப்பா-
பையரவின் மிசை ஆடி–காளிங்கன் என்னும் கொடிய பாம்பின் மீது நடனம் ஆடியும்
பசிய மயில் இறகு அணிந்து -பச்சைநிற மயிலின் இறகினைச்சூடியும்
செய்யநிறத் தமிழ்வீரைத் திருக்கோயில் அமர்வானே-செந்தமிழ் வளங்கொழிக்கும் வீரகேரளம்புதூரில் கோயில் கொண்டெழுந்தருளியிருப்போரே!
தெய்ய என்னும் இடைச்சொல்லின் திருட்டறியாப் புல வோரும்- தெய்ய என்னும் இடைச்சொல்லின் திருட்டு அறியாது இளம்புலவர்களும்
வைய என்னைத் துயர் செய்தாய்-அடியேனை ஏசும்படியாகத் துன்புறுத்துகின்றாய்
மனம் இரங்கும் கணம் யாதோ(அடியேனின் துயர் தீரும்படி )உள்ளம் இரங்கும் காலம் எப்பொழுது வருமோ? (கூறுவீராக)
அமர ருந்தெரி யாதவ ரோதையா ஆன்பு ரக்கும்மெ யாதவ ரோதை பா
சமர சத்தர் மதிக்குமட் டாக்கரா சலதி தன்னைம திக்குமட் டாக்கரா
விமல ஞானக் குருகைய னையனே வெள்ளை மாதுக் குருகை யனையனே
கமல வாவிகொள் வீரையின் மாயனே காத்தி யேல்மயல் வீரையின் மாயனே.–5-கட்டளைக் கலிப்பா-மடக்கு-
அமரரும் தெரியாத வரோதயர்-தேவர்களாலும் அறிய முடியாதபடி மிகச் சிறந்த அவதாரங்களை எடுத்தவரே!-வர + உதயா = வரோதயா வடமொழி குணசந்தி
ஆன் புரக்கும் மெய் யாதவர் ஓது ஐயா- பசுக் குலங்களைப் பாதுகாக்கின்றவர்களும் பொய்மை யற்றவர்களுமாகிய முல்லைநில மக்களால் புகழப் படுகின்ற தலைவரே!
சமரசத்தர் மதிக்கும் அட்டாக்கரா -சமய பேதமற்ற ஞானி களால் போற்றப்படுகின்ற திருவெட்டெழுத்தின் மெய்ப் பொருளாக விளங்குபவரே!
சலதி தன்னை மதிக்கும் மட்டாக்கரா –திருப்பாற்கடலைக் கடைகின்ற (வலிமையில்) குறையாத திருக்கரங்களை உடையவரே!-பாற்கடலைக் கடைந்த தேவர், அசுரர் ஆகிய ஒவ்வொருவருள்ளும் அந்தர்யாமியாக நின்று அச்செயல் புரிந்ததும் திருமாலே ஆதலின் “மட்டாக்கரா’ என்பதற்கு அளவற்ற கைகளை உடையவரே’-
விமல ஞான குருகையன் ஐயனே- குற்றமற்ற மெய் ஞானியாகியவரும் திருக்குருகூரருமாகிய நம்மாழ்வாரால் வணங்கப் பெறும் தெய்வமே!
வெள்ளை மாதுக்கு உருகு ஐயன் ஐயனே- வெண்மை நிறத்தினளாகிய கலைமகளின் மேல் அன்பு கொண்டுள்ள பிரம தேவனின் தந்தையே!
கமல வாவிகொள் வீரையின் மாயனே- தாமரைத் தடாகங்கள் நிறைந்த வீரகேரளம்புதூரில் எழுந்தருளியுள்ள திருமாலே!
காத்தியேல் மயல் வீரையில் மாயனே- (தேவரீர் அருள் கூர்ந்து அடியேனை) பாதுகாத்தருளுவீராகில் நான் மாயையாகிய கடலில் வீழ்ந்து வீணே இறக்க மாட்டேன். உமது ஒப்பற்ற திருவடிகளை அடைந்து உய்வேன் என்றபடி.
–
மாயவுல கிடைநிகழும் மனிதர்விலங்கு ஆதியபல் வகைக்கும் வேண்டும்
நேயவழி உணவூட்டும் நீயெனைஏன் அதிற்பெரிதும் நிர்ப்பந் தித்தாய்?
தீயவரைச் செகுக்கமுயன் றுள்ளேன்மீது உன்றன்உளத் திருத்தி யின்றோ?
வேயணிகைக் கோபாலா! வியன்வீரைப் பதிபுரக்கும் விகிர்த மாலே.–6-அறுசீர் ஆசிரிய விருத்தம்
வேய் அணி கைக்கோபாலா -குழலினைக் கையிலேந்திய இடையர் குலத்தரசே!
வியன் வீரைப்பதி புரக்கும் விகிர்த மாலே-பெருமை மிக்க வீர கேரளம்புதூரைக் காக்கும் நட்புடைய திருமாலே!
மாய உலகிடை நிகழும் மனிதர் விலங்கு ஆதிய பல்வகைக்கும்-தேவரீரின் மாயத்தின் விளைவாகிய இப் பூமியில் தோன்றும் மக்கள், விலங்குகள் முதலான பற்பல உயிரினங்களுக்கும்
நேய வழி வேண்டும் உணவு ஊட்டும் நீ அன்பு வழியிலே அவற்றிற்கு இன்றியமையாததாகிய போகப் பொருள்களை வழங்கிக் காப்பாற்றுகின்ற தாங்கள்
எனை ஏன் அதில் பெரிதும் நிர்ப்பந்தித்தாய்- அடியேனை ஏனோ அப் போகப் பொருள்கள் பெறுவதற்காகவே அலையுமாறு விட்டீர்
தீயவரைச் செகுக்க முயன்றுள்ளேன் மீது உன்றன் உளத்திருத்தி இன்றோ (உயிர்க் கொலை போன்ற பாவங்களைச் செய்யும்) கொடியவரை அழித்து ஓடுக்க முயன்றுவரும் அடியேன் செயல் கண்டும் இன்னும் உம் உள்ளம் நிறைவு அடைய வில்லையா? கூறியருளுவீராக.
மால லாற்பிறிது ஒருபரம் இன்றெனும் வயிணவ நெறிசார்ந்த
சீலர் தங்களிற் பிரிந்திகல் கொடிதறத் தீர்ப்பதே விழைகின்றேன்;
கால வாதனைக் கடற்சுழி கடந்துயக் கடைக்கணித் தருளாயோ?
நீல மால்வரை யெனத்தமிழ் வீரையில் நிலவிய நெடியோனே.–7-எழுசீர் ஆசிரிய விருத்தம்
நீல மால்வரை எனத் தமிழ் வீரையில் நிலவிய நெடியோனே–நீல நிறமுடைய பெரிய மலை போன்று, தமிழ்ச் சான்றோர் நிரம்பிய வீர கேரளம்புதூரில் கீர்த்தி பெற நிற்கும் திரிவிக்கிரமனானவரே!
மால் அல்லால் பிறிது ஒருபரம் இன்று எனும் வயிணவ நெறி சார்ந்த சீலர் – திருமால் ஒருவரைத் தவிர வேறொரு பரம் பொருள் இல்லை என்னும் நெறியைக் கொண்ட நற்குணச் சான்றோர்களாகிய வைணவப் பெருமக்கள்
தங்களில் பிரிந்து இகல் கொடிது அறத் தீர்ப்பதே விழை கின்றேன்-தங்களுக்குள்ளேயே (வடகலை, தென்கலை)இரு பிரிவினராகப் பிரிந்து நின்று வாதஞ் செய்யும் கொடுமையை முற்றிலும் தேவரீர் நீக்கி யருள வேண்டுமென அடியேன் விரும்புகின்றேன்
கால வாதனைக் கடற்சுழி கடந்து உய்யக் கடைக் கணித்து அருளாயோ-கலி காலமாகிய துன்பந் தருகின்ற கடற் சுழற்சியிலிருந்து விடுபட்டு உலகம் ஈடேறும்படியாக நீவீர் கிருபை செய்து அருள்புரிய மாட்டீரோ? அருள்வீராக.
நெடியவனைச் செஞ்சிறைப்புட் பரிமேற் செம்பொன் நேரிழையோடு உன்னியுன்னி நிகம கோடி)
முடிவில்நுவல் எட்டெழுத்தும் மொழிந்தெட் டான முறையுணர்ந்து மெய்ஞானம் முழுகும் மேலோர்
அடியவர்தம் வேடமொரு சிறிதும் இல்லாரானாலும் அவர்பதத்தூள் அணிவேன் கண்டீர்!
கடிமதிற் தென் வீரைநகர்ப் புலவீர்! உள்ளக் கருத்தறிவான் வள்ளல்என்சொல் கடைப்பாற் றன்றே.–8-எண்சீர் ஆசிரிய விருத்தம்
கடிமதில் தென்வீரைநகர்ப் புலவீர்- காவற் சிறப்புள்ள மதில்களையுடைய தென் வீரை நகரத்து அறிஞர்களே!
நெடியவனைச் செஞ்சிறைப் புட்பரிமேல் செம்பொன் நேரிழையோடு உன்னி உன்னி-சிவந்த இறகுகளையுடைய கருட வாகனத்தின் மேலே திருமகளுடன் வீற்றிருக்கும் நெடுமாலின் திருக் கோலத்தை இடைவிடாது தியானித்தும்
நிகம் கோடி முடிவில் நுவல் எட்டெழுத்தும் மொழிந்து -பல வேதங்களும் தமது முடிந்த முடிபாகச் சொல்லுகின்ற அட்டாட்சரமாகிய விஷ்ணு மந்திரத்தையே ஜபித்தும்
எட்டான முறை உணர்ந்து- அட்டமா சித்திகள் கை வரப்பெற்று
மெஞ்ஞானம் முழுகும் மேலோர் – உண்மையான ஆன்ம ஞானம் அடையப் பெற்ற பெரியோர்கள்
அடியவர் தம் வேடம் ஒரு சிறிதும் இல்லார் ஆனாலும் – (வெளித் தோற்றத்தில்) திருமாலடியார்கள் போன்று கோலங்கள் கொண்டிருக்காவிடினும்
அவர் பதத்தூள் அணிவேன் கண்டீர்- அவர்களுடைய திருவடி பட்ட மண்ணையும் திருமண் ஆக அடியேன் அணிவேன்; இது உறுதி!
உள்ளக் கருத்தறிவான் வள்ளல்- அடியேன் உள்ளத்தே உறைந்திருக்கும் இவ் வுண்மையை அந்தக் கண்ணனும் அறிவார்
என் சொல் கடைப்பாற் றன்றே- அடியேன் மொழிகள் வீணானவை யல்ல என்பதை அறிவீராக.
(இக் கலம்பக நூலில் ஆறு, ஏழு. எட்டு ஆகிய செய்யுட் களை முறையே ஆறுசீர், ஏழுசீர், எண்சீர் ஆசிரிய விருத்தங்க ளாலேயே அமைத்திருப்பதும் ஒரு சிறப்பாகும்.)
அன்று வந்தென்மன மாம்வெளி யிடைநீ அஞ்சல் அஞ்சலென ஓதிய அருள்நீர்
இன்று குன்றியது போல்வதென்? அடியேன் இந்த வெந்துயரில் மூழ்குதல் முறையோ?
மன்றுள் ஒன்றுபல காவலர் எதிரே வம்பு விண்டவனும் வாழ்வுறல் படிறோ!
கன்று டன்பசுவெ லாமகிழ் வுறுசீர் கண்ட பைம்பொழில்கொள் வீரையின் அரசே.--9—தந்த தந்ததன தானன தனனா’ என்னும் சந்தஸ்ஸித்தில் அமைந்த எண்சீர் வண்ண விருத்தம்.
கன்றுடன் பசுவெலாம் மகிழ்வுறு சீர்கண்ட பொழில்கொள் வீரையின் அரசே – (அன்று) ஆயர்பாடியில் கன்றுடன் பசுக் கூட்டமெல்லாம் மகிழும்படியாகக் காத்தருளி இன்று இந்தச் சோலைகள் நிறைந்த வீரை நகருக்குத் தலைவராக வீற்றிருப்பவரே!
அன்று வந்த என் மனமாம் வெளியிடை- முன்பொரு நாள் வந்து என் மனக் காட்சியில் தோன்றி
நீ அஞ்சல் அஞ்சல் என ஓதிய அருள்நீர் – நீ அச்சமடையாதே அச்சமடையாதே என்று கூறிக் கிருபை செய்த நீவிர்
இன்று குன்றியது போல்வது என்- இப்பொழுது பாராதிருப்பது ஏனோ?
அடியேன் இந்த வெந்துயரில் மூழ்குதல் முறையோ? – அடியவனாகிய நான் இவ்வாறு துன்பத்தில் அழுந்தியிருப்பது முறைமை தானா?
மன்றுள்ஒன்று பல காவலர் எதிரே வம்பு விண்டவனும் வாழ்வுறல் படிறோ? -சபையில் பல காவலர் முன்பு தீச் சொல் சொல்லியவனும் பிழைத்திருப்பது வஞ்சகம் தானோ? கூறுவீராக.(நீதிமன்றத்தில் பொய்ச் சாட்சி சொல்பவரும் இக் காலத்தே நன்றாக வாழ்கின்றனரே, இது உம் ஆட்சியின் குறையோ எனினுமாம்.)
அரசாளு மிக்கதிரு வுடையாரில் நற்குணர்தம் அரணாமெ னப்பெரிது சுற்றிப் புரந்தவே;
அரவேறு கத்திகையன் நிகர்பாத கத்தர்குடை அழிவாகி டத்தகும்வி தத்தைச் செய்கின்றவே;
அனல்போல்வி ழித்துநெடு மலைபோலு றுக்கிவரும் அடல்வேழம் ஒற்றையின்ம ருப்பைக் கவர்ந்தவே;
அனையோடு தித்தகொடி யவன்ஏவ லிற்தொடரும் அசுராதி யர்க்கொலைசெய் மற்பெற் றெழுந்தவே;
இரவேயெ னக்ககன நிறைவாய்அ றற்பொழியும் எழுமேகம் வெட்குறஓர் வெற்பைச்சு மந்தவே;
இடிநேர்தொ னிந்தவள வளையோடு சக்கரமும் இசைவாய்என் உட்கனவில் உறறுக் கவீன்றவே
எமகால னைச்சடையின் மிசைமோ தருச்சுனன்இரதமாவி னைக்கடவும் நட்பிற் பொலிந்தவே;
இடைநோவு றப்பலபல் கிரிபோல் எழுச்சியுறும் எழில்மாமு லைத்தொகுதி முட்டக் கிடந்தவே;
பரலோக நட்பர் உணர் புகழ்மாறன் முற்பதின்மர் பகர்பாடல் கட்டுளவம் ஓக்கப் புனைந்தவே;
பனிநீர்ம கட்கினிய மகன்ஆர்வ மிக்குறஓர் படையேவு தற்பொருதி ருட்டைப் புரிந்தவே;
பலவாம்உ றித்தயிர்கொள் விளையாட லைச்சொல்பவர் பகைபாவ முற்றறஓ ழிக்கத் துணிந்தவே;
பணிவான்உ யிர்க்கிறுதி மருவாது அருக்கன்உறு பகலூடி ருட்டைவரு விக்கத் தெரிந்தவே;
நரகாதி பத்தியம்எய்து ஒருபாவி முத்திபெற நகுபாசி லைச்சிறிய தட்டிட் டெறிந்தவே;
நலமேமி குத்தபசு வினம்வாழ் வுறத்திகிரி நடுவேது ளைத்தகுழல் வைத்துப் பயின்றவே;
நகர்மாசு ணத்திறைவர் பலர்வாய் உரைத்திடினும் நசையார்பு கழ்க்குமுடி வற்றுப் படர்ந்தவே;
நளிர்வீரை யிற்குலவும் இதயா லயற்கினிய நவநீத கிட்டிணர்தம் வெற்றிப் புயங்களே.(பதினாறு கலைகளைக் கொண்ட புய வகுப்புப் பாடல்–தனதான தத்ததன தனதான தத்ததன தனதான தத்ததன தத்தத் தனந்தனா)–
இப்பாடலுள், பதினாறாங்கலையில் உள்ள வெற்றிப் புயங்கள்’ என்னும் எழுவாய் முதற்கலையில் உள்ள புரந்தவே முதல் பதினைந்தாங் கலையிலுள்ள படர்ந்தவே’ முடிய உள்ள பதினைந்து பயனிலைகளைத் தனித்தனியே பெற்று முடிந்தது. இதனை இறுதிநிலைத் தீபக அணி என்பர்
நளிர் விரையில் குலவும் இதயாலயற்கு இனிய- பெருமை மிக்க வீரை நகரில் மகிழ்வுடன் வீற்றிருக்கும் இருதயாலய மருதப்ப தேவர் என்றும் இன்பமுடன் போற்றி வணங்குகின்ற,
நவநீத கிட்டிணர் தம் வெற்றிப் புயங்கள்- நவநீத கிருட்டிணனுடைய வெற்றி மிகுந்த திருத் தோள்கள்.
அரசாளும் மிக்க திருவுடையாரில்-அரசாட்சி செய்யும் மேன்மை மிக்கோருள்,
நற்குணர் தம் அரண் ஆம் என-(பாண்டவர்கள் போன்ற நல்ல குணங்களை உடையவர்களுக்குக் காவலாகும் என்னும் படியாக
பெரிது சுற்றிப் புரந்தவே – அவர்களைச் சுற்றியிருந்து காப்பாற்றுவன;
அரவு ஏறு கத்திகையன் நிகர் பாதகத்தர் -பாம்புக் கொடியை யுடைய துரியோதனன் போன்ற தீயவர்கள்,
குடை அழிவாகிடத்தகும் விதத்தைச் செய்கின்றவே – குடை(ஆட்சி) ஒழியும் படியான செயல்களைப் புரிந்தன;
அனல்போல் விழித்து நெடுமலைபோல் உறுக்கிவரும்-நெருப்பைப் போன்ற கண்களுடன் பெரிய மலை போன்று குதித்துக்கொண்டு மிக்க கோபத்துடன் வருகின்ற,
அடல்வேழம் ஒற்றையின் மருப்பைக் கவர்ந்தவே- வலிமை பொருந்திய குவலயாபீடமென்னும் மதயானையின் தந்தங்களைப் பறித்து எறிந்தன;
அனையோடு உதித்த கொடியவன் ஏவலில் தொடரும் – தன் தாயொடு பிறந்த மிகக் கொடியவனான கம்சன் தூண்டி அனுப்பியதால் தொடர்ந்து வருகின்ற,
அசுராதியர்க் கொலைசெய்மற்பெற்று எழுந்தவே-(சாணூரன்,முஷ்டிகன் ஆகிய) அசுரர்கள் பெரு மல்லர்களாக வந்து பெரும் போர் செய்த போது அவர்களை அப்பொழுதே கொன்று வெற்றி பெற்றன ;
இரவே எனக் ககனம் நிறைவாய் அறற் பொழியும் – சூரிய ஒளியே தெரியாதவாறும் இரவு என்று சொல்லும்படியாகவும் இருள் சூழ்ந்து, ஆகாயம் முழுவதும் நீர் நிறைந்து, கல் மழையாகப் பொழிகின்ற,
எழுமேகம் வெட்குற ஓர் வெற்பைச் சுமந்தவே- புஷ்கலா வர்த்தகம் முதலிய ஏழு மேகங்களும் வெட்கப்படும்படியாகக்
கோவர்த்தனம் என்னும் மலையைக் குடையாகப் பிடித்து ஏழுநாள் சுமந்தன
இடிநேர் தொனித்த வள வளையோடு சக்கரமும் – இடியோசை போன்று ஒலிக்கும் மாட்சிமை கொண்ட சங்கும் சக்கரமும்
இசைவாய் என் உட்கனவில் உற்றுக் கவின்றவே – திருக்கரங்களில் பொருந்தி அடியேனுடைய உள்மனத்துள் அழகுற நிறைந்தன;
எமகாலனைச் சடையின் மிசைமோதும் அருச்சுனன்-கால காலனாகிய சிவபெருமானை வெல்லும் அருச்சுனனுடைய
இரத மாவினைக் கடவும் நட்பிற் பொலிந்தவே -தேரின் குதிரைகளைச் செலுத்தும் செயலினைக் கொண்டு பொலிவடைந்தன;
இடைநோவுறப் பலபல் கிரிபோல் எழுச்சியுறும்- (ஆயர் குலப்பெண்களின்) மெல்லிய இடுப்பு வருந்தும்படியாக உயர்ந்த மலைகளைப் போலப் பூரித்துக் கிடக்கும்.
எழில்மா முலைத்தொகுதி முட்டக் கிடந்தவே- இளமையும் அழகும் மிக்க மார்பகங்கள் யாவும் நெருங்கி அணையுமாறு விளங்கின,
பரலோக நட்பர் உணர் புகழ்மாறன் முற்பதின்மர்- வைகுந்தத்தை விரும்புபவர்களாலேயே உணரத் தகும் பெரும் புகழ் படைத்த சடகோபாழ்வார் முதலான பத்து ஆழ்வார்கள்,
பகர் பாடல்கள் துளவம் ஒக்கப் புனைந்தவே-சொல்லுகின்ற திவ்வியப் பாசுரங்களையெல்லாம் துளசி மாலையை மகிழ்ந்து அணிவது போன்று அணிந்தன;
பனிநீர் மகட்கு இனிய மகன் ஆர்வம் மிக்குற – கங்கையின் மைந்தனாகிய பீமர் மனம் மகிழ்ச்சியடையும்படி,
ஓர் படை ஏவுதற் பொருதிட்டைப் புரிந்தவே- ஒப்பற்ற சக்ராயு தத்தை ஏவுவதைப் போலப் பாசாங்கு செய்தன;
பலவாம் உறித்தயிர்கொள் விளையாடலைச் சொல்பவர்–(ஆயர்பாடியில்) பல இல்லங்களிலும் மகளிர் உறிகளில் வைத்திருந்த தயிர், வெண்ணெய் ஆகியவற்றைத் திருடி உண்டதைப் புகழ்ந்து துதிப்போரின் (கண்ணனின் பால லீலைகளைக் கூறுவோருக்கு)
பகை பாவம் முற்றற ஒழிக்கத் துணிந்தவே – இன்னல்களை யெல்லாம் அழிக்க முற்பட்டன;
பணிவான் உயிர்க்கு இறுதி மருவாது-தன்னை எப்போதும் வணங்குபவனாகிய அருச்சுனன் உயிர்க்குத் தீங்கு ஏற் படாதவாறு.
அருக்கன்உறு பகலூடு இருட்டை வருவிக்கத் தெரிந்தவே- சூரியன் பிரகாசிக்கின்ற பகற்பொழுதிலேயே (தன் சக்கரப் படை கொண்டு மறைத்து)போர்க்களத்தில் இருளை வரவழைத்துக் காட்டின
நரகாதிபத்தியம் எய்து ஒருபாவி முத்திபெற -நரர்களுக்குத் தலைமை ஏற்றுத் துன்புறுத்தி வந்த தீயோன் ஒருவன் முத்தி அடையும்படி
நகு பாசிலைச் சிறிய தட்டிட்டு எறிந்தவே – பச் சிலையைச் சிறிய தட்டிலிட்டு வீசின;
நலமே மிகுந்த பசுவினம் வாழ்வுற – மன்னுயிர்கட்கெல்லாம் பயன் மிக அளிக்கும் பசுக்கூட்டங்கள் மகிழும்படியாக ;
திகிரி நடுவே துளைத்த குழல் வைத்துப் பயின்றவே – மேலே துளை செய்யப்பட்டுள்ள இசையெழும் மூங்கிற் குழலைத் தாங்கின;
நகர் மாசுணத் திறைவர் பலர் வாய் உரைத்திடினும் ஊர்ந்து செல்கின்ற பாம்புகளின் தலைவனாகிய ஆதிசேடன் போல ஆயிரம் வாய் படைத்தவர்கள் பலர் கூடிப் போற்றிப் புகழ்ந்திடினும்;
நசை ஆர் புகழ்க்கு முடிவற்றுப் படர்ந்தவே – விருப்பம் மிக்க கீர்த்திக்கு எல்லையே இல்லாமல் நிறைந்தன.
புயல்நேரு மேனிப் புருடோத் தமனைக்
கயல்நீர்க் கழனிவளங் காணும் -வியனார்ந்த
வீரைப் பதியில் விரும்புநலம் பெற்றபின்மற்
றாரைப் பொருட்படுத்தலாம்?–11-நேரிசை வெண்பா
புயல் நேரும் மேனிப் புருடோத்தமனை–நீல மேகம் போன்ற நிறத்துடன் கூடிய மேனி கொண்ட திருமாலை,
கயல் நீர்க் கழனி வளம் காணும் கயல் மீன்கள் நிறைந்து காணும் நீர்வளம் மிக்க வயல்களை யுடைய,
வியனார்ந்த வீரைப்பதியில்- பெருமை மிக்க வீரகேரளம் புதூரில் (கோயில் கொண்டு எழுந்தருளி யுள்ளவாறு),
விரும்பு நலம் பெற்றபின் – யான் விரும்பிய வண்ணம் கண்டு களித்ததன் பின்பு,
மற்று ஆரைப் பொருட் படுத்தலாம்- அடியேன் இனி யாரை ஒரு பொருட்டாகக் கருதுவேன்? (கருத மாட்டேன் என்பதாம்)
ஆம்பலன் றோலிடச் சென்றளித் தாய்என் றறைதலினால்
நோம்பல வாதனை யுந்தவிர்ப்பாய்என்ன நோக்குகின்றேன்|
வேம்பல என்சொல் அறிந்தே மிகவும் விரும்புகின்றாய்
தேம்பலம் தீர்த்தருள் வாய்வீரை மேவிய சீதரனே--12-கட்டளைக் கலித்துறை
வீரை மேவிய சீதரனே-வீர கேரளம் புதூரினை வந்தமர்ந்திருக்கும் திருமகள் மகிழ் மார்பா,
விரும்பி ஆம்பல் அன்று ஒலிடச் சென்று அளித்தாய்என்று அறைதலினால்- கசேந்திராழ்வான் அன்று முதலை வாயினில் அகப்பட்ட பொழுது ஆதிமூலமே என்று கூவி அபயமிட்டு அழைத்தவுடன் சென்று காத்தீர் எனப் பலரும் கூறுவதால்,
நோம்பல வாதனையும் தவிர்ப்பாய் என்ன நோக்குகின்றேன்- அடியேனுக்குற்ற பல பெருந் துன்பங்களை யெல்லாம் தீர்த்தருள்வீர் என்றே உம்மை நோக்கி யுள்ளேன்.
வேம்பல என்சொல் அறிந்தே மிகவும் விரும்புகின்றாய்- என்னுடைய பாடல்கள் அனைத்தும் இனியவை என்பதையும் மிகுதியாகவே தெரிந்து வைத்துள்ளீர்!
தேம்பு அலம் தீர்த்து அருள்வாய்-மெலிதலைத் தருகின்ற சஞ்சல மெல்லாம் ஒழித்துக் காப்பீராக!
சீதளநீர்ப் பதத்தானே சீதளநீர்ப் பதத்தானே
நாதருக்கார் தம்மானே நாதருக்கார் தம்மானே
காதலறத் தடுப்பானே காதலறத் தடுப்பானே
வீதனையூர் வீரையனே வீதனையூர் வீரையனே.–13-கொச்சகக் கலிப்பா-அடிமடக்கு-இப்பாடலில் பாடகமடக்கு என்னுஞ் சொல்லணி பயின்றது.
சீதள நீர் பதத்தானே – தாமரையின் தன்மையைப் பெற்ற திருவடிகளை உடையவரே!
சீதள நீர் பதத்தானே-குளிர்ச்சி மிக்க பாற்கடலாகிய இடத்தை உடையவரே!
நாத ருக்கார் தம்மானே-ஒலிச்சிறப்பு மிக்க வேதங்களை ஓதும் அந்தணர்களின் தலைவரே!
நாதருக்கு ஆர்த்து அம்மானே-ஞானிகளுக்குத் தம்மையே அநுபவிக்கும்படி அருளும் தலைவரே!
காது அல் அற தடுப்பானே -கொல்வதைப்போல் துன்புறுத்துகின்ற அறியாமையாகிய இருட்டு நெருங்காதபடித் தூரத்தே விலகச் செய்பவரே!
காதல் அறத்து அடுப்பானே- விரும்பத்தக்க தரும நெறியில் ஒழுகுபவர் மாட்டுத் தாமே வந்து பொருந்துபவரே!
வீதனை ஊர் வீர ஐயனே – கருடனாகிய பறவையைச் செலுத்துகின்ற வீரமிக்க தலைவரே!
வீதல் நை ஊர் வீரையனே – வறுமையை வருத்துகின்ற ஊராகிய வீரகேரளம்புதூரின் இறைவனே!
ஐயமுற்றுத் தவமெதுவோ என்றேங்கித் தடுமாறும் அறிவி வீர்காள்
செய்யநிறப் புட்பரிமேல் திருவொடுநாரணனிருந்த தீர்க்கம் நாடிக்
கையறவில் லார்வளர்சீர் வீரைமுதல் ஊர்தோறும்போய்க் கவிகள் பாடித்
துய்யருக்குஆ ருயிராகித் துட்டருக்கோர் எமனாகித் துணிதல் தானே.–14-அறுசீர் ஆசிரிய விருத்தம்
ஐயமுற்றுத் தவம் எதுவோ என்று ஏங்கி- இறைவனைச் சென்றடைய முடியுமோ முடியாதோ என உள்ளத்தில் மிக்க சந்தேகத்துடன், உலக பந்தங்களை யெல்லாம் நீக்கியும் அவை நீங்காது தவம் என்பது எதுவாக யிருக்கும் என்று பலவாறு ஏக்கமுற்று,
தடுமாறும் அறிவிலீர்காள் – மனங்கலங்கும் அறிவற்ற மூடர்களே!
செய்ய நிறப் புட்பரிமேல் திருவொடு நாரணன் இருந்த தீர்க்கம் நாடி-சிவந்த வண்ண இறகுகளுடன் கூடிய கருட வாகனத்தின் மேலே இலக்குமி தேவியுடன் நாராயணன் வீற்றிருக்கும் பரிபூரண கோலத்தை மனத்தில் விரும்பி யிருந்து,
கையறவு இல்லார் வளர் சீர்வீரைமுதல் -ஒழுக்கமின்மை என்பதே இல்லாத செயலோங்கு தன்மை மிக்க பல பெரியோர்கள் வாழ்கின்ற பெருமையுடன் கூடிய வீரகேரளம்புதூர் முதலான, ஊர்தோறும் போய்க் கவிகள் பாடி- திருமால் உறையும் திவ்வியத் தலங்களுக்கெல்லாம் சென்று பாசுரங்களை இசைத்து மகிழ்ந்து,
துய்யருக்கு ஆருபிர் ஆகி – மனம் மொழி மெய்யினில் மிகவும் பரிசுத்தமான வர்கட்கெல்லாம் பெருந்துணையாக இருந்து,
துட்டருக்கோர் எமன் ஆகித் துணிதல் தானே – தீயவர்கட்கெல்லாம் ஒரு காலனைப் போல அழிக்கும் துணிச்சலுடன் செயல்படுவதே பெருந் தவமாம்
துணிவொரு கோடி பொருந்தினும், முதுநூல் சொல்லற முழுதியற் றிடினும்
அணி நகைத் துவர்வாய் அரம்பையர் வலிதுற்று அணைதலா தியநலம் பெறினும்
பணியணைத் திருப்பாற் கடல்விடுத் தெழுந்து பார்புகழ் வீரையம் பதியில்
மணிமுகில் எனநின் றருள்செய்வான் மலர்த்தாள் மறந்தவர் பிறந்துழல் வாரே.–15-எழுசீர் ஆசிரிய விருத்தம்
துணிவு ஒருகோடி பொருந்தினும்-இவ் வுலகச் செயல்களில் முழுவதுமாக ஈடுபட்டுப் பொருந்தினாலும்
முது நூல் சொல்லற முழுது இயற்றிடினும்-பழமையான நன் மொழிகள் நிறைந்த நூல் பல எழுதினாலும்
அணி நகைத் துவர்வாய் அரம்பையர் வலிது உற்று அணைதல் ஆதிய நலம் பெறினும் – அழகு மிக்கதும் செம் பவள நிறத்துடனும் விளங்கும் புன்னகை யிதழ்களை யுடைய தேவலோகக் கன்னியர் வலிய வந்து அணைக்கும் சுகமே அடைந்தாலும்
பணி அணைத் திருப்பாற்கடல் விடுத்து எழுந்து – திருப்பாற் கடலில் ஆதிசேடன் மீது அறி துயில் கொண்டிருப்பதை விட்டு எழுந்து
பார்புகழ் வீரையம் பதியில்- இப்பூவுலகே போற்றி செய்யும் வீரகேரளம்புதூர் என்னும் திருத்தலத்தில்
மணிமுகில் என நின்று அருள் செய்வான் – அழகுமிக்க கருமேகம் போன்று கோலங்கொண்டு காத்தருள்கின்ற கண்ண பெருமானின்
மலர்த் தாள் மறந்தவர் பிறந்து உழல்வாரே-தாமரையை யொத்த திருவடிகளைத் தொழுது போற்றி செய்யாதவர் இவ் வுலகில் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் துன்பமே பெறுவர்.
வாரணமும் இரணியன்தன் மதலையும்பாண் டவரோர் மனைவியும்போற் தாம்வாழ்வான் வருத்திடினும் அருள்நீ
ஆரணத்தேர டாகமங்கட்கு உயிராய பசுமுற்று அலமராவா றயர்வேற்கு அருள்புரியா தேனோ?
பாரணங்கும் சீரணங்கும் பரிசுகுன்றி லாரோ? பரிதிமதி ஒளியுமட்கப் பாவமிகல் படிறோ?
நாரணப்பேர்க் கருமுகிலே! வீரைநகர்க் கோயில் நவநீத கிருட்டிணனாம் ஞானகுரு பரனே.–16-எண்சீர் ஆசிரிய விருத்தம்–
நாரணப்பேர்க் கருமுகிலே-எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாகிய நீரையே இடமாகக் கொண்டு நாராயணன் என்ற திருநாமத்துடன் விளங்கும் நீலமேக வண்ண முடையோரே!
வீரைநகர்க் கோயில் நவநீதகிருட்டிணன்ஆம் ஞான குரு பரனே – வீரகேரளம்புதூரிலே கோயில் கொண்டெழுந் தருளியுள்ள நவநீத கிருட்டிணன் கோலத்துப் பரமகுருவே
வாரணமும் இரணியன் தன் மதலையும் பாண்டவர் ஓர் மனைவி யும் போல்- கசேந்திரனும் பிரகலாதனும் திரௌபதையும் போன்று
தாம் வாழ்வான் வருத்திடினும் அருள்நீ- உள்ளத்தால் நினைத்து வருந்தி யழைத்தவுடனே சென்றருளும் நீவீர்
ஆரணத்தோடு ஆகமங்கட்கு உயிர்ஆய பசு முற்று அலமராவாறு அயர்வேற்கு- வேதாகம சாத்திரங்களுக்கெல்லாம் ஆதார நிலை போல்வதான பசுக்கள் கொலை யுண்டு துன்பப் படாதவாறு தடுக்க முயன்று வாடி வருந்தும் அடியேனுக்கு
அருள் புரியாதது ஏனோ?- (உலகில் பசுக் கொலைகளைத்nதடுத்து) இன்னும் கிருபை செய்யாதிருப்பது ஏன் என்று கூறுவீராக!
பார் அணங்கும் சீர் அணங்கும் பரிசு குன்றிலாரோ – பூமி தேவியும் சீதேவியும் நீவீர் அருளுவதைத் தடுக்கின்றார்களோ?
பரிதி மதி ஒளியும் மட்கப் பாவம் மிகல் படிறோ- சூரியனும் சந்திரனும் மறைய ஒளி மழுங்கி இருளே பரவும் என்பது பொய்யோ? கூறுவீராக.
ஞான குருவென நிற்கும்நின் நிலைதேர் வீரகேரளம்புதூர் ஞாய மருவியும் இப்படி யடியேன்
மான மறதியு றத்தகு சிறியோர் வாயும் நகமெலி வுற்றிடல் முறையோ?
கான மலிகுழல் வைத்தகை அமுதே! காம னுடன்அய னைத்தரு முதல்வா!
மீன உருவொட ளக்கரும் அளைவாய் வீரை நகர்மரு தற்கினி யவனே.–17-(தான் தனதன தத்தன தன்னா)எண்சீர் வண்ண விருத்தம்–
கானம் மலி குழல் வைத்த கை அமுதே – இனிய இசையைப் பொழியும் குழலினைக் கையில் ஏந்தியிருக்கும் அமுத மயமானவரே!
காமனுடன் அயனைத் தரும் முதல்வா-எல்லா வுயிர்களுக்கும் பொதுவான மன்மதனையும் எல்லாவுயிர்களையும் படைத் தருளும் பிரமனையும் படைத்தளித்த முழுமுதற் கடவுளே!
மீன உருவொடு அளக்கரும் அளைவாய்- மச்சாவதாரத்தில் கடலைக் கலக்கியவரே, அளவிடவியலாத வெண்ணெய் உண்ட வாயனாய் விளங்கும் நவநீதகிருட்டிணரே!
வீரைநகர் மருதற்கு இனியவனே – வீரகேரளம்புதூரினை விளங்க வைக்கும் மருதப்பனாகிய இருதயலாயருக்கு இன்பம் அளிப்பவரே!
ஞான குரு என நிற்கும் நின் நிலை தேர் ஞாயம் மருவியும்- அன்று அருச்சுனனுக்காகப் போரில் பகவத்கீதையை அருளி அனைவருக்கும் ஞான குருவாய் நின்ற உம்முடைய பேரருளை நன்குணர்ந்து தெளிந்த பின்பும்,
இப்படி அடியேன் மானம் மறதி உறத்தகு சிறியோர் வாயும் நக மெலிவுற்றிடல் முறையோ- எளியேனாகிய நான், அவமானத்திற்கெல்லாம் அஞ்சாத கீழ்மக்களின் ஏளனத்திற்கு ஆளாகித் தவிப்பது நியாயந்தானோ? கூறுவீராக.
இனியுனக் கொருகுறையும் இல்லைமுக் காலும்நிம் என்றுநம் புன்றன் ஆணை
இப்பொழுது தான்மலைவி டுத்துவந் தோம்முன்னம் எண்ணில்கல கத்தி ருந்தோம்
பனிமலர்க் கொம்பைக்கொ ணர்ந்துன துகையிற் பளிச்செனத் தரவும் வல்லோம்
பன்னீரண் டாயசம யத்தும்க லந்துரிமை பலபேசி உறவு செய்வோம்
நனிவருந் தாதுவகை ஐந்துமறி வோம்பெருக நல்லரச மும்கு டிப்போம்
நாகங்க ளைந்தரித் தகமொடு புறத்துமிக நடமாடு வோம்ந மக்குக்
கனிகிழங் கன்றிஉண வெய்தவிலை, இன்றுநாம் கழறுணவு முழுதும் அருள்வாய் |
கண்ணனைத் தென்அளகை நிகர்வீரை நகரூடு கருதும்ஒரு சித்தர் யாமே--18–இரட்டையாசிரிய விருத்தம்-
இனி உனக்கு ஒரு குறையும் இல்லை–இதன் பிறகு உங்களுக்கு எவ்விதமான குறையும் இருக்காது
முக்காலும் நிசம் என்று நம்பு- இறப்பு எதிர் நிகழ்வு ஆகிய மூன்று காலங்களிலும் உண்மை என்றே நம்புவீராக!
உன்றன் ஆணை- உம்மீதே இது சத்தியம்!
இப்பொழுதுதான் மலை விடுத்து வந்தோம்-சிறிது முன்புதான் நாங்கள் எங்கள் இருப்பிடமாகிய மலையை விட்டுக் கீழே வந்தோம்
முன்னம் எண்ணில் கல் அகத்து இருந்தோம்-இதற்கு முன்பு பல்வேறு மலையிடங்களிலும் குகைகளிலும் வாழ்ந்திருந் தோம்
பனிமலர்க் கொம்பைக்கொணர்ந்து உனது கையில் பளிச்செனத் தரவும் வல்லோம்- பனிப்பூக் கொம்பைக் (பார்வதியைக்) கொண்டு வந்து உம் கைபிசில் விரைவில் தருவதில் யாம் வல்லமை யுடையோம்
பன்னிரண்டு ஆய சமயத்தும் கலந்து உரிமை பல பேசி உறவு செய்வோம் -சொல்லப் பெறும் பன்னிரு சமயங்களிடத்தும் கலந்து அவற்றின் பொதுவானவற்றைக் கூறி அவற்றிடையே இணக்கம் ஏற்படுத்துவோம்
நனி வருந்தாது வகை ஐந்தும் அறிவோம் – பொன் முதலான ஐந்து வகைத் தாதுக்களையும் மாற்ற வல்லோம்
பெருக நல்ல ரசமும் குடிப்போம்-அத்தகைய உயரிய இரசவாதங்களையும் செய்வோம்
நாகங்களைத் தரித்து அகமொடு புறத்தும் மிக நடமாடுவோம்-உடலெங்கும் நாகங்களை ஆபரணமாகப் பூண்டு உள்ளும் வெளியேயும் உலா வருவோம்
நமக்குக் கனி கிழங்கு அன்றி உணவு எய்தவில்லை–எங்களுக்குப் பழங்கள் கிழங்குகள் தவிர வேறு உணவு கிடைக்கப் பெறவில்லை
இன்று நாம் கழறு உணவு முழுதும் அருள்வாய் – இன்று நாங்கள் கேட்கும் உணவு வகைகளையெல்லாம் கொடுத்து மகிழ்விப்பீராக!
கண்ணனைத் தென் அளகை நிகர் வீரைநகர் ஊடு கருதும் ஒரு சித்தர் யாமே-தெற்குப் பகுதியில், குபேரனுடைய ஊர் போல விளங்கும் வீரகேரளம்புதூரில் வீற்றிருக்கும் கண்ண பிரானையே அநு தினமும் போற்றி வாழும் சித்தர் நாங்களே!
சித்தம் அறிய விளையாடல் செயும்நீ உலகத் தினர் காணச் சிறியேன் நிமித்தம் செயில் அமரர் சிரிப்பார் என நா ணுதியோ முன்
பத்தர் விடும் ஓர் தூதாகிப் பரிதூண்டிடும்சூ தனும்ஆன பழைய மொழிஈ ரேழுலகும் பரந்து முழங்கல் படிறாமோ?
சுத்த வெளிற்றுக் கவியொன்று சொன்னா னுடன்போய் மீண்டுவரும் தொன்மைக் குணம்இன் றிலைகொல்லோ, துயர்மிக் குழன்றேன் அருள்சுரந்துஆள்
சத்த மறைஓ லிடும்வீரைத் தலத்தில் அடியார் பலர்போற்றத் தமிழும் தனமும் கனமுமலர்ச் சரணுந்தரும்ஓர் பெருமாளே–19-தாழிசை-
சத்த மறை ஒலிடும் வீரைத்தலத்தில்-வேத ஒலிகள் எப்பொழுதும் முழங்கிக் கொண்டிருக்கும் வீரகேரளம்பு தூர் என்னும் திருநகரில்
அடியார் பலர் போற்றத் தமிழும் தனமும் கனமும் மலர்ச் சரணும் தரும் ஓர் பெருமாளே -தொண்டர்களெல்லாம் போற்றும்படியாக நல்ல தமிழ்ப் புலமையையும், செல்வத்தையும், பெருமையையும் நாடினோருக்கெல்லாம் அடைக்கலமாகத் திருமலரடிகளையும் அளித்துதவுகின்ற ஒப்பற்ற பரம்பொருளே!
சித்தம் அறிய விளையாடல் செய்யும் நீ – அடியேன் உள்ளம் உணரும்படியாகத் திருவிளையாடல்களைப் புரியும் நீவிர் உலகத்தினர் காணச் சிறியேன் நிமித்தம் செய்யில் அமரர் சிரிப்பார் என நாணுதியோ?-இவ்வுலக மக்களெல்லாம் பார்க்கும்படியாக, எளியவனான அடியேன் பொருட்டு நேரில் வந்து ஆடல் புரிந்தால் தேவர்கள் ஏளனம் செய்வார்கள் என்று வெட்கப்படுகிறீரோ?
முன் பத்தர் விடும் ஓர் தூதாகி-முன்பு தொண்டர் அனுப்பும் ஒரு தூதனுமாகி
பரி தூண்டிடும் சூதனும் ஆன – (அருச்சுனனின்) தேர்க் குதிரைகளைச் செலுத்தும் பார்த்தசாரதியும் ஆனீர்
என்னும் பழையமொழி ஈரேழு உலகும் பரந்து முழங்கல் படிறாமோ- தொன்மை வரலாறுகள் பதினான்கு உலகெங்கும் பேசப் பெறுதல் பொய்யாகுமோ?
சுத்த வெளிற்றுக் கவி ஒன்று சொன்னான் உடன்போய் மீண்டுவரும் தொன்மைக் குணம் இன்று இல்லை கொல்லோ-ஒரே ஒரு வெண்பாப் பாடல் புகன்ற திருமழிசையாழ்வார்பின் போய் வந்த அந்தப்பழைய இயல்புகூட இப்பொழுது தேவரீரிடம் இல்லை போலும்!
துயர் மிக்கு உழன்றேன், அருள் சுரந்து ஆள்-துன்பமே மிகுந்து மனம் கலங்கி வாடுகின்றேன், காத்தருள்வீராக.
பெருமலர்ப் பொகுட்டுப் பீடம் நீத்துக் கருமணி வரையெனக் காண்குநர் கருத
வீரை நகரில் மிளிரும்எம் பெருமான் மாரை நீங்கா வாழ்வுறு மங்காய்!
நின்னருட் துளியால் நிலவணி சடையான் அன்ன வாகனன் அம்பொனூர்க் கிழவன்
ஆதிய கடவுளர் அகமிக மகிழ்ந்தனர் மாதிரம் புகழ்வாள் மருதன் ஆதிய
காவலர் தாமும் களிமிகப் பெருகினர் நாவலந் தீவின் நரர்சிலர் செருக்கினர் அன்னர்வாழ்வு அடியேற்கு அருளினும் அணியேன் இன்னல் கூர்ந்து இராவது ஏற்பவர்வேட்கை அருள்நலம் பொருத்தின் அதுமதி; அருளாது இருள்கலிப் பேயால் இடர்படக் கண்டாய் கொண்கன்ஆங் கியற்றக் கூறிய பின்அவ்
வண்கவின் தரச்செயல் மாண்பன்று, அவன்நின் தகையறிபொருட்டே சாற்றிலன் போலும்
மிகைபடும் உரித்தென் மீதுஅவன் கொளல்சான்று அன்றிசை முனிமுதல் அரனார் அறியத்
தன்திருக் கரத்தாற் தமனியச் சிமிழுள் காட்டிய பொருளைக் கடைய னேன்தலை| சூட்டிய வாறாம் சுடரறிந் துளதே.–20-நிலைமண்டில ஆசிரியப்பா
பெருமலர்ப் பொகுட்டுப் பீடம் நீத்து- சிறப்பு மிக்க தாமரை மலர் இருக்கையை விட்டு எழுந்து
கருமணி வரை எனக் காண்குநர் கருத -நீல மணிக்குன்றோ எனப் பார்ப்பவர்களெல்லாம் வியக்கும்படியாக
வீரைநகரில் மிளிரும் எம்பெருமான் மாரை நீங்கா வாழ்வுறு மங்காய்- வீரகேரளம்புதூரில் ஒளிவீசி நிற்கும் எங்கள் தலைவராகிய திருமாலின் மார்பகத்தை அடைந்து. எப்பொழுதும் நீங்காது இருக்கும் இலக்குமியே!
நின்னருட் துளியால்- உம்முடைய கிருபையின் காரணமாக
நிலவு அணி சடையான் அன்ன வாகனன் அம்பொனூர்க்கிழவன் ஆதிய கடவுளர் அகம்மிக மகிழ்ந்தனர் – பிறைச் சந்திரனைத் தலையிலே சூடிய சிவபெருமானும், அன்னப் பறவையை வாகனமாகக் கொண்ட பிரமனும், தேவ லோகத்திற்குத் தலைவனான இந்திரனும், மற்றுமுள்ள கடவுளர் அனைவரும் உள்ளம் நிறைய இன்புற்றனர்
மாதிரம் புகழ் வாள் மருதன் ஆதிய காவலர் தாமும் களி மிகப் பெருகினர்- வெற்றிச் சிறப்பும் வீரமும் பொருந்திய மருதப்பன் முதலான மன்னர் பலரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.
நாவலந் தீவின் நரர் சிலர் செருக்கினர்- நாவலந்தீவிலுள்ள சில மக்களும் களிப்புற்றனர்
அன்னர் வாழ்வு அடியேற்கு அருளினும் அணியேன் – அவர்களுடைய இன்ப வாழ்க்கையெல்லாம் எனக்கு அளித்தாலும் நான் ஏற்பதாகயில்லை
இன்னல் கூர்ந்து இரவாது-துன்பப்பட்டு யாசிக்காமல்
ஏற்பவர் வேட்கை அருள்நலம் பொருத்தின்- பெறுவோரின் தேவை யறிந்து கொடுக்கும் நன்மையை அடியேனுக்குக் கூட்டினால்
அது மதி -அதுவே போதுமானது
அருளாது – இந்த வரத்தை வழங்காமல்
இருள்கலிப் பேயால் இடர் படக் கண்டாய்-கொடிய வறுமை யென்னும் பேயால் அடியேன் துன்பமடைய விட்டீர்
கொண்கன் ஆங்கு இயற்றக் கூறிய பின்-உம்முடைய கணவ ராகிய திருமால் அவ்விடத்து நின்னருளைக் காட்டுமாறு சொல்லிய பிறகு
அவ்வண் கவின் தரச்செயல் மாண்பு அன்று- அவ்வாறு நல்குவது ஒன்றும் பெருமையல்ல
அவன் நின் தகை அறிபொருட்டே சாற்றிலன் போலும்- அவரும் உம்முடைய ஈகைத் தன்மையை நன்கு அறிந்ததனாலேயே இன்னும் அவ்வாறு கூறியருளவில்லை என எண்ணுகிறேன்
மிகைப்படும் உரித்து என் மீது கொளல் சான்று- அடியேன் மேல் அவர் கொண்டுள்ள பேரன்பிற்குச் சாட்சியமும் உள்ளது
அன்று இசைமுனி முதல் அரனார் அறிய- அன்றொருநாள் இசைமுனி முதலாக சிவபெருமானும் அறியும்படியாக
தன் திருக்கரத்தால் தமனியச் சிமிழுள் காட்டிய பொருளை- தம்முடைய திருக்கைகளால் பொற்சிமிழுள் காட்டிய பொருளை
கடையனேன் தலை சூட்டிய வாறாம் – எளியேனாகிய அடியேன் தலையில் அணிவித்தபடியாம்
சுடர் அறிந்துளதே விளக்கம்-பெற்றதென்பதை அறிவீராக.
சுடர்போமுன் வீரைநகர்த் தொல்லோன்முன் போயென்
இடர்யாவும் நன்றா யியம்பிப் படர்மார்பிற்
பூண்டதுழாய் வாங்கிவரப் போதாய்; புதுப்பூந்தேன்
வேண்டளியே நொந்தேன் மிக.–21-வண்டுவிடுதூது–நேரிசை வெண்பா-
புதுப்பூந்தேன் வேண்டு அளியே – புத்தம் புதிதாக மலர்ந்திருக்கும் மலரையே நாடித் திரிந்து மயக்கந்தரும் மதுவை அருந்தும் வண்டே!
நொந்தேன் மிக – நான் என் தலைவனைப் பிரிந்த வேதனையால்மிக வாடுகிறேன்
சுடர் போம்முன் வீரைநகர்த்தொல்லோன் முன்போய்- சூரியன் மறைவதற்கு முன்பாக வீரகேரளம்புதூரில் கோயில் கொண்டுள்ள கண்ணபிரான் முன்னே சென்று
என் இடர் யாவும் நன்றாய் இயம்பி-நான் அவரைப் பிரிந்து வாடும் துன்பங்களை யெல்லாம் எடுத்துச் சொல்லி
படர்மார்பில் பூண்ட துழாய் வாங்கி வரப்போதாய் -பரந்து விரிந்த அவர்தம் மார்பகத்தே அணிந்திருக்கும் துளப மாலை வாங்கி வரச் செல்வாயாக!
மிகநொந்த மங்கையர் சொற்றூது போதற்கு மேகமும்சில்
ககமும் கழிவென்னத் தேர்ந்து அனை யாரையும்கைத்துஎனதுள்
அகமென்ற பாவியை விட்டேன் அதுவும் அருட்புலவோர்
புகழும்தென் வீரை நெடுமால்முன் போயது போயதுவே.–22-இதுவுந்தூது–கட்டளைக்கலித்துறை,-
மிக நொந்த மங்கையர் சொல் தூது போதற்கு-கண்ணபிரானுடைய பிரிவுத் துயரத்தால் மிக வாடும் அடியேனுடைய துன்பத்தை எடுத்துக் கூறுமாறு தூது அனுப்புவதற்கு
மேகமும் சில் ககமும் கழிவு என்னத் தேர்ந்து -முகிலும் வண்டும் பறவையும் பொருத்தமற்றவை என்பதை அறிந்துணர்ந்து
எனது உள் அகம் என்ற பாவியை விட்டேன்- எப்பொழுதும் வாராத தலைவனுக்காக வருந்தித் தவிக்கும் அடியேனுடைய உள்ளமாகிய நெஞ்சத்தை அவர்பால் தூதாக விடுத்தேன்-
அதுவும் அருட்புலவோர் புகழும் வீரை நெடுமால் மூன்போயது போயதுவே- (அடியேன் முன்பு அவர் பாலனுப்பிய மேகமும் வண்டும் பறவையும் போலவே) அந்நெஞ்சமும் பாகவதர் போற்றும் வீரைநகர் நெடியோனாகிய கண்ண பிரானிடம் போய்ச் சேர்ந்தது சேர்ந்தது தான்! இன்னும் திரும்பவே
யில்லை.
அதுலன்பன் மறையுஞ்சொல் புனிதன்தண் அருள்விஞ்சும் அகநீர்மையோன்
மதுரங்கு லவுசெஞ்சொல் வனைதொண்டரொடு சென்று வரநாணிடான் |
விதுரன்தன் மனையுண்டி யினிதென்று நுகர்கொண்டல் மிகவாழும்ஊர்
எதுஎன்கில் மருதன்தன் மரபென்றும் வளர்துங்கம் இசைவீரையே.–23-கலிநிலை வண்ணத்துறை-( தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தனதானனா)
அதுலன்- ஒப்பில்லாதவர்
பன்மறையும் சொல் புனிதன் – வேதங்கள் பலவற்றையும் அருளும் பரிசுத்த மானவர்,-பல வேதங்களாலும் புகழப்படும் தூயவர் எனினுமாம்
தண்அருள் விஞ்சும் அக நீர்மையோன்-எப்பொழுதும் உள்ளங்குளிர்ந்த அருளையே மிகுதியாகக் கொண்டிருக்கும் குணம் பொருந்தியவர்
மதுரம் குலவு செஞ்சொல் வனை தொண்டரொடு சென்று வர நாணிடான்- இனிமை நலம் பொருந்திய மதுர கானம் தரும் திருமழிசையாழ்வார் பின் சென்று வரவும் தயங்காதவர்
விதுரன் தன் மனை உண்டி இனிது என்று நுகர் கொண்டல்-பாண்டவருக்குத் துணையான விதுரன் இல்லத்துச் சென்று அவனளித்த உணவை இனிதென உண்டு களிப்புற்ற மேக வண்ணர்
மிக வாழும் ஊர் எது என்கில்- உளம் மகிழ்ந்து விருப்பமுடன் வாசம் செய்கின்ற தலம் எங்குள்ளது என்று கேட்பீராயின்
மருதன்தன் மரபு என்றும் வளர் துங்கம் இசை வீரையே -மருதப்பனுடைய குலத்தினர் எபபொழுதும் சிறப்புடன் வாழ்ந்து பெருமை மிகக் கூடி நிற்கும் வீரகேரளம்புதூரே ஆம் –
இசைப்பார் இசைக்கும் நலமு ழுதும் இயங்கும் வீரைப் பதித்திருமால்
நசைப்பால் அரங்கம் திருவயிந்தை நாகை வடவேங் கடம்குடந்தை
கசைப்பாங் கவிரூர் கண்ணபுரம் காஞ்சி அனந்தை முதற்பலவூர்
திசைப்பா லனரும் தொழவுளவாம் சேட னாலும் செப்பரிதே.–24-இதுவுமது-அறுசீர் ஆசிரிய விருத்தம்
இசைப்பார் இசைக்கும் நலம் முழுதும் இயங்கும்- எம்பெருமானுடைய திவ்ய நாமங்களையே பாடும் பரம பாகவதர்கள் விரும்பிக் கேட்கும் நன்மைகளை யெல்லாம் கொடுத்தருளுகின்ற
வீரைப்பதித் திருமால் நசைப்பால்- வீரகேரளம்புதூரில் உறைகின்ற எம்பெருமான் விரும்பும் திருப்பதிகள்
அரங்கம் திருவயிந்தை நாகை வடவேங்கடம் – திருவரங்கம், திருவகிந்திரபுரம், நாகப்பட்டினம், வேங்கடமாமலை
குடந்தை கசைப்பு ஆங்கு அவிர் ஊர்-கும்பகோணம்,திருவல்லிக்கேணி|கண்ணபுரம், காஞ்சி, அனந்தை முதற் பல ஊர்- திருக்கண்ணபுரம், காஞ்சிபுரம்,திருவனந்தபுரம் முதலான பல தலங்கள்
திசைப்பாலனரும் தொழ உளவாம் – ஆட்டதிக்குப் பாலகர்களும் வணங்கும் படியாகச் சிறப்புற்றுள்ளன
சேடனாலும் செப்ப அரிதே- (அத்திருத்தலங்களின் பெருமைகளை யெல்லாம்) ஆதிசேடனாலும் விளக்குவது அருமையாம்.-
செப்ப மார்புகழ் மிக்குளான் நலம்
செப்ப மார்பிடை சிந்தியான்
தீய தானவர் வேர்கெல்வான் மதி
தீய தாம்நவை தீர்க்கிலான்
கைப்ப ருங்கதை ஒன்றினான் அனம்
கைப்ப ருங்களி செய்கிலான்
காம ராயனை நல்கினான் என்மெய்க்
காம ராய விழைந்திலான்
துப்ப லங்கிதழ் தந்திலான் பலர்
துப்ப லங்கமென் றேவினான்
சூத னாப்பரி தூண்டினான் கொடுஞ்
சூத னாஎனை மால்செய்தான்
மைப்ப கட்டைவ தைத்துளான் விழி
மைப்ப கட்டைம திக்கிலான்
மாத வன்தமிழ் வீரைமா நகர்
மாத வன்தனி வஞ்சனே .–25-மடக்கு–இரங்கல் தாழிசை–
செப்பம் ஆர் புகழ் மிக்குளான் -சிறப்புப் பொருந்திய கீர்த்தி மிக்கவர் (ஆனால்)
நலம் செப்ப மார்பிடைச் சிந்தியான்- (அவர் பிரிவால் வருந்தும் எனக்கு) இன்சொல்சொல்லி, ஆட்கொள்ள நெஞ்சாலும் நினைக்காதவராக இருக்கிறார்
தீய தானவர் வேர் கெல்வான்—கொடிய அரக்கரை அடியோடு இல்லாமல் ஒழித்தருளுவார் (ஆனால்)
தீ அது ஆம் நவை தீர்க்கிலான்-(துன்புறுத்துவதில்)நெருப்பைப் போன்று விளங்கும் (பிரிவுத் துயராகிய) குற்றத்தைப் போக்கியருள மறுக்கிறார்
கை பரும் கதை ஒன்றினான்- தன் திருக்கரத்தில் பெரிய கதாயுதம் ஒன்றைத் தாங்கியுள்ளவர் (ஆனால்)
அனக் கைப்பு அறும் களி செய்கிலான்- உணவை வெறுக்கச் செய்யும் பிரிவுத்துயரை இல்லாமற் செய்யும் மகிழ்ச்சியை அளிக்காமலிருக்கிறார்
காம ராயனை நல்கினான்- மன்மதனைப் பெற்றேடுத்தார் (ஆனால்)
என் மெய் காமர் ஆய விழைந்திலான்-என்னுடைய உடலின் அழகை ஆராய்ந்து துய்க்க விருப்பமில்லாதவராக இருக்கிறார்
துப்பு அலங்கு இதழ் தந்திலான்- பவளத்தைப் போல ஒளிரும் இதழ்களை முத்தமிடத் தந்தருள மாட்டார் (ஆனால்)
பலர் துப்பு அலம் கம் என்று ஏவினான்-பலராலும் இகழப்படுகின்ற துன்பத்தை மேகத்தைப் போன்று (என்மாட்டு உண்டாக்கினார்
சூதனா பரி தூண்டினான்-அருச்சுனனுக்குத் தேர்ப்பாகனாகக் குதிரைகளைச் செலுத்தினார்.(ஆனால்)
கொடும் சூதனா எனை மால் செய்தான்- தீமை மிக்க வஞ்சகராகி என்னை மயங்க வைத்தார் ( ஆனால். என்மீது அன்பு காட்டவில்லை)
மை பகட்டை வதைத்துளான் கரிய குவலயாபீடமாகிய-யானையைக் கொன்றிருக்கிறார் (ஆனால்)
விழிமை பகட்டை மதிக்கிலான் – (என்) கண்களின் அஞ்சனப் பூச்சின் கவர்ச்சிக்கு ஆளாகமலிருக்கிறார்
ஓதருஞ்சீர் வீரைநகர் உற்றநெடு மால்ஒருவன்
வேதனரன் இந்திரற்கும் மேலானான் அம்மானை
வேதனரன் இந்திரற்கு மேலானான் ஆமாகில்
பூதலத்துஏ னத்திற் புகுவானேன் அம்மானை
போதகனா வைத்துப் புரந்தான்காண் அம்மானை.–27-(கலித்தாழிசை)
ஓத அருஞ்சீர் வீரை நகர் உற்ற நெடுமால் ஒருவன்- சொற்களால் சொல்லுதற்கு அரிதான சிறப்புடைய வீரகேரளம்பு தூரினை அலங்கரிக்கின்ற விட்டுணு ஒருவரே
வேதன் அரன் இந்திரற்கும் மேல் ஆனான்- பிரமன், சிவபெருமான், இந்திரன்ஆகியோர்களுக்கெல்லாம் மேலான கடவுள் ஆவார் (இது. முதற்பெண் கூற்று)
வேதன் அரன் இந்தி அரற்கும் -கடவுள், எப்பொருட்கு மிறைவன், இலக்குமி. அநந்தன் போன்றவர் ஏவல் ஆனான் ஆமாகில்- பணிவிடை செய்ய ஏற்பவர் என்றால்
பூ தலத்து ஏனத்தில் புகுவான் ஏன்- நிலவுலகில் பன்றியின் உருவம் பெற்றது எதற்காக? (இது. இரண்டாவது பெண்ணின் வினா)
போதகனா வைத்துப் புரத்தான் காண்-குழந்தையை எடுத்துக் காப்பது போன்று காப்பாற்றினார் என்பதை அறிவாயாக (இது மூன்றாம் பெண் இருவர் கொண்ட பொருளுக்கும் பொருந்துமாறு விடை கூறுவது- இறுதிப் பகுதி)
அம்மானை யைப்பொற் கழங்கைத்தொடாள்முச்சி லதைநாடிடாள்
அவிர்தூசு குருகாழி அமையப்பெறாள்பாலொடு அமுதுண்டிடாள்
மெய்ம்மானு டைத்திங்கள் வருமென்றுயிர்ப்பாள்மை விழிமூடிடாள்
வீரைப்பி ரான்என் றிரங்குங்கொலோ என்றும் விள்வாள்ஐயோ!
இம்மாதி னைப்பெற்றே டுக்கச்செய்தவமுற்றும் அறியாய்கொலோ
இன்னம்து ழாய்நல்கி டாதுற்றி|டேல்கொச்சை இடைமாதர்தம்
கைம்மாமு லைப்போர்வி ழைந்தெண்ணில்வடிவிற்க ணந்தோறும்வாழ்
கண்ணா! மணிக்குன்ற வண்ணா!பழுத்துள்ள கள்ளத்தனே!–28-(நற்றாயிரங்கல்)தாழிசை
அம்மானையைப் பொன் கழங்கைத் தொடாள்- (என் மகள் தான் காதலிக்கும் உம்மையே நினைந்து நினைந்து) அம்மானை, பொன்னாலான கழங்கு ஆகியவற்றைக் கையில் எடுப்பதுமில்லை
முச்சிலதை நாடிடாள் அவிர்தூசு குருகு ஆழி அமையப் பெறாள்- அவிழ்ந்த கூந்தலையும் முடிவதில்லை, ஒளிவீசும் ஆடை,கைவளை, மோதிரம் ஆகிய அணிகலன்களையும் அவள் அணிவதில்லை
பாலொடு அமுது உண்டிடாள் -பாலும் சோறும் அவள் உண்பதேயில்லை
மெய்ம் மானுடைத் திங்கள் வரும் என்று உயிர்ப்பாள்-தலைவன் வரும் காலம் வருமென்றே நம்பிஉயிர் வாழ்ந்திருக்கின்றாள்
மை விழி மூடிடாள் – கண் உறங்குவதுமில்லை
வீரைப் பிரான் என்று இரங்கும் கொலோ என்றும் விள்வாள்- வீரகேரளம்புதூர்த் தலைவராகிய நீவிர் எப்பொழுது மனமிரங்குவீரோ என அடிக்கடிப் பெருமூச்சுவிடுவாள்
ஐயோ, இம் மாதினைப் பெற்றெடுக்கச் செய்த தவம் முற்றும் அறியாய் கொலோ -இப்படிப்பட்ட பெண்ணை நான் ஈன்றெடுக்க என்ன தவம் செய்தேனோ தெரியவில்லையே!
இன்னும் துழாய் நல்கிடாது உற்றிடேல் – (என் மகளைப் பற்றி இவ்வளவு கூறியும்) இப்பொழுதும் கூட உம் திருமாலையை அளித்தருளாமல் இருக்காதீர்
கொச்சை இடை மாதர்தம் கைம்மா முலைப்போர் விழைந்து -ஆயர்குலப் பெண்களை மருவி அவர்களுடைய மார்பில் அணைய விரும்பி
எண்ணில் வடிவில் கணந்தோறும் வாழ்கண்ணா -(கோபியர் இல்லந்தோறும்) கணக்கற்ற உருவங்களை (அவர்கள் விரும்பிய பொழுதெல்லாம்) எல்லாக் காலங்களிலும் பெற்று வாழும் கண்ணனே!
மணிக்குன்றவண்ணா! பழுத்துள்ள கள்ளத்தனே!- நீலமலை போன்ற நிறத்தவரே! தீர்ந்த திருட்டுத்தன முடையவரே! (என் மகளின் பிரிவுத் துயரைத் தீர்த்தருள்வீராக)
கள்ளன்என ஏசினர்க்கும் காதலறத்தீர்த்தருளும் வள்ளல் ஒருவன்றி மற்றில்லை-அள்ளற்
கடல்வளை துவரைக் காவல் நீத்து மிடலினர் பலர்புகழ் வீரைத் தடமதிற்கோயிற் தங்கினன் அவனே.--29-மருட்பா
கள்ளன் என ஏசினர்க்கும் (ஆயர்பாடியில்) பல இல்லங்களில் திருடியவன் என்று பழிபடத் தூற்றினவர்க்கும்
காதலறத் தீர்த்து அருளும் வள்ளல் ஒருவன் அன்றி மற்று இல்லை-ஆசை தீர அவர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் கொடையாளி அக் கண்ணன் அல்லது வேறு யாருமில்லை
அள்ளல் கடல் வளை துவரைக் காவல் நீத்து- நெருங்கிய அலைகளோடு கூடிய திருப்பாற் கடலிடத்தையும், துவாரகாபுரி அரண்மனையையும் விட்டுவிட்டு,
மிடலினர் பலர்புகழ் வீரைத் தடமதில் கோயில் தங்கினன் அவனே- வலிமை மிக்கோர் பலருடைய போற்றுதலுக்குக் காரணமான மலை போன்ற அரண்களையுடைய வீரகேரளம்புதூர்க் கோயிலில் வந்து தங்கியுள்ள எம்பெருமான் அவரே.
தங்கம்வெள்ளி யாதியவே தஞ்சமென்பார் போற்தமியேன்
பங்கமுற இன்னம் படுத்தா தருள்புரிவாய்;
செங்கணெடு மாலே! திருவீரைக் கோயிலிடத்
தெங்கள்குரு வானகண்ண னே!–30-இன்னிசை வெண்பா-
செங்கண் நெடு மாலே-சிவந்த தாமரை மலர் போன்ற கண்களையுடைய நெடியோனாகிய திருமாலே!
திருவீரைக் கோயிலிடத்து எங்கள் குரு ஆன கண்ணனே-செல்வமகள் குடி கொண்டிருக்கும் வீரகேரளம்புதூர்க் கோயிலில் எங்களுக்கெல்லாம் ஞானாசிரியனாக அருளுகின்ற கண்ண பெருமானே!
தங்கம் வெள்ளி ஆதியவே தஞ்சம் என்பார் போல்- பொன்னாபரணங்கள், வெள்ளியாலான பொருள்கள் போன்ற வற்றையே செல்வமெனத் விழைவார்கள் போல.துணையாகக் கொள்ள
தமியேன் பங்கம் உற இன்னம் படுத்தாது அருள்புரிவாய்- வறியவனாகிய அடியேன் ஈனமடையும்படித் துன்புறாமல் கிருபை செய்வீராக.-
கண்ணும்கருத் தும்கொடுத் துன்உருக் காணுமாறே
எண்ணும்துணி வும்கொடுத் தாய்பிறி தென்செய் வேன்யான்?
விண்ணும்புவி யும்துணைத் தாள்கவர் வென்றி யோர்ந்தே
நண்ணும்பெரி யோர்மலி வீரை நகர்ப்பி ரானே.–31-கலிநிலைத்துறை-
விண்ணும் புவியும் துணைத்தாள் கவர் வென்றி ஓர்ந்தே-தேவ லோகமும் பூலோகமும் எம்பெருமானாகிய உம் மலரடிகளால் அ ள ந்து திரிவிக்கிரமனாய் நின்ற காரணத்தை நன்கு ஆராய்ந்தே!
நண்ணும் பெரியோர் மலி வீரைநகர்ப் பிரானே – (உம்மிடம் விரும்பி வந்து) சேரும் ஆன்றோர்கள் நிறைந்த வீரகேரளம்புதூர் வாழ் இறைவரே!
கண்ணும் கருத்தும் கொடுத்து உன் உருக்காணுமாறே-காணும் விழியிரண்டும் ஆழ்ந்துணரும் உள்ளமும் அளித்து உம்முடைய பேரெழிலைக் காணும் வண்ணம்!
எண்ணும் துணிவும் கொடுத்தாய்-நினைக்கும் தெளிவினையும் அளித்துள்ளீர்!
பிறிது என்செய்வேன் யான்- (இப்படி உம்மையே எண்ணிப் பாடாமல்) நான் வேறு என்ன செய்வேன் கூறுவீராக.-அவனருளால் அவன்தாள் வணங்கும் பேறும் பெற்றபின் அவனையே பாடிப் பரவுவதே அடியார் தொழிலாம். அதையே அடியேனும் செய்கின்றேன். பிறிதென் செய்வோன் யான் என்கிறார்–
நகமன் றேந்தியும் ஆனனம் புரந்தநீ நல்லோர்
இகழ்பொல் லார்அவற் றினைக்கொலப் பார்ப்பதென் றிழப்பாய்?
ககம் ஒன் றூர்ந்துவிண் வழிவரும் நாரணா! கமல
மகள்கொண்கா ! வள வீரையில் மருவுவா னவனே.-32-கலித்துறை-
ககம் ஒன்று ஊர்ந்து விண்வழிவரும் நாரணா -கருடப் பறவை மீதேறி ஆகாய மார்க்கமாக வந்தருளும் நாராயணரே!
கமலமகள் கொண்கா-தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் கணவரே!
வள வீரையில் மருவு வானவனே- எல்லாச் செல்வங்களும் பொருந்திய வீரகேரளம்பு தூரில் வாழ்கின்ற தேவபிரானே!
நகம் அன்று ஏந்தியே ஆன்இனம் புரந்தநீ -(கோவர்த்தன) மலையை அன்றொருநாள் ஒரு விரலால் தூக்கிப் பிடித்துப் பசுக் கூட்டங்களை யெல்லாம் காத்த நீவிர்.
நல்லோர் இதழ் பொல்லார் அவற்றினைக் கொல்லப் பார்ப்பது என்று இழப்பாய்- உயிர்களிடத்து அன்பு கொண்ட நல்லவர்கள் தூற்றும் படியாக உயிர்க்கொலை புரிவோர் அப் பசுக்களைக் கொல்வதைப் பார்த்துக் கொண்டிருப்பதை என்று நிறுத்துவீரோ? (தெரிய வில்லையே) விரைந்து வந்து காப்பீராக.
வான கத்துமென் தேவ ரல்லர்யாம் மலையில் உற்றவன் மறவர் காண்மகத்து
ஊன ருந்தியும் பெண்கள் நல்கிடேம் உயிரின் மானமிக்கு உயர வைத்துளேம்
ஆன தன்மைநின் அரச றித்திடா ததும ணஞ்செயற்கு ஆதல் நிம்பமே
கான வேயிசைக் கண்ணன் வீரையூர் கருதும் வீரவேல் மருதன் ஆணையே.–33-எண்சீர்த் தாழிசை-
வானகத்து மென் தேவர் அல்லர் யாம் (தூதனே!) விண்ணுல கிலிருக்கும் வலிமை யில்லாத தேவர்கள் அல்ல நாங்கள்
மலையில் உற்ற வன்மறவர் காண்- குன்றுகளையே இருப்பிடமாகக் கொண்ட வலிமை மிக்க வேடர்கள் என்பதை அறிவாயாக
மகத்து ஊன் அருந்தியும் பெண்கள் நல்கிடேம் -பெரிய இறைச்சி உணவினை உண்போமானாலும் மகளிரை (உன் மன்னனுக்கு) அளிக்க மாட்டோம்
உயிரின் மானம் மிக்கு உயர வைத்துளேம்- உயிரை விட மானத்தையே பெரிதாகக் கருதுபவர்கள் நாங்கள் ஆன தன்மை நின் அரசு அறிந்திடாதது-(என்னும்) இக்குலப் பெருமையை உன் மன்னன் அறிய மாட்டான்
மணம் செயற்கு ஆதல் நிம்பமே- அரசு (மரம்) மணக்க வேண்டியது வேம்பையே
கானவேய் இசைக் கண்ணன் வீரையூர் கருதும் வீரவேல் மருதன் ஆணையே -குழலூதும் புகழ் மிக்க நெடுமால் வாழும் வீர கேளம்புதூரில் வெற்றிச் சிறப்புடன் விளங்கும் மருதப்பன் ஆணை இது என்பதை நீயும் அறிவாயாக.
ஆண்மகனே! உனைத்தூதிங் கனுப்பு மன்ன னானால்வந்து அமர்புரிந்துஎம் அயிலால் மாய்ந்து சேண் மடவார் முலைபுணர்வான்; எங்கள் பெண்கள் சிவனிடத்தும் குகன்வலத்துந் திகழ்கின் றார்பார்! மாண்மலிகங் கையும்மகவான் மகளும் அஞ்சி வாழ்க்கைகுன்றிப் படும்பாடு மதித்தோர் முன்னைக் கோண்மறைத்தான் தனைவீரை நகரிற் பல்கால் கும்பிட்டெம் குலராயே கொண்டார் அன்றே.–34-எண்சீர் ஆசிரிய விருத்தம்-
உன்னைத் தூது இங்கு அனுப்பும் மன்னன் ஆண்பிள்ளை யானால்- உன்னை இவ் விடத்தில் (பெண் கேட்டுத்)தூதாக அனுப்பி யிருக்கும் அரசனானவன் உண்மையிலேயே வலியவனானால்
வந்து அமர் புரிந்து எம் அயிலால் மாய்ந்து- வேண்டுமானால் இங்கு வந்து எம்முடன் போரிட்டு, எம்முடைய வேலால் உயிர் துறந்து
சேண் மடவார் முலை புணர்வான்- வீர சுவர்க்கம் புகுந்து தேவ லோகப் பெண்களை அடைவானாக
எங்கள் பெண்கள் சிவன் இடத்தும் குகன் வலத்தும் திகழ்கின்றார் பார்- எங்கள் வேடர் குலப் பெண்கள் சிவ பெருமானின் இடப் பக்கத்திலும் அறுமுகப் பெருமானின் வலப் பக்கத்திலும் சிறப்புற்று விளங்குவதைக் காண்பாயாக
மாண்மலி கங்கையும் மகவான் மகளும் அஞ்சி- மாட்சிமை நிறைந்த கங்கா தேவியும் இந்திரன் மகளும் பயந்து
வாழ்க்கை குன்றிப் படும்பாடு மதித்தோர்- தம் வாழ்வு குலைந்து படுகின்ற நிலையை யுணர்ந்தவர்கள் (அவர்கள் படும் பாட்டினை ஆராய்வாயாக)
முன்னைக் கோள் மறைத்தான் தன்னை-முன்பு சூரியனைச் சக்கரத்தால் மறைத்தவரை
வீரை நகரில் பலகால் கும்பிட்டு எம் குலராயே கொண்டார் அன்றே- வீர கேரளம்புதூரில் பல காலங்களிலும் வணங்கி எங்களுடைய குடும்ப விளக்கே எனக் கொண்டாடினர் காண்.-
கொண்டல் வண்ண மேனியும் குவிந்த பொற்கி ரீடமும் கோவை வாயும் முண்டகம் குலாவு கண்க ளும்திருத்
துண்ட மும்செவிக் கணிந்த குண்ட லங்க ளும்கையிற் சோதி ஆழி சங்கமுற் சொலும்பல் சீரும் என்னுளே
அண்ட ரும்பொ றாமைஎய்த வந்த துண்டு பொய்சொனால் ஆயி ரம்பி றப்பில்நீசம் ஆவ துண்டு அவர்வரக்
கண்ட தில்லை எத்தவத்தில் என்ன பாவ முற்றதோ? காமர் வீரை யூரிலென் கவிக்க வாவும் நேயரே!–35-பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்-
கொண்டல் வண்ண மேனியும் குவிந்த பொற்கிரீடமும்-கார்மேகம் போன்ற உடலும் அழகு மிக்க பொன்னாலான திருமுடியும்
கோவை வாயும் முண்டகம் குலாவு கண்களும் -கோவைப் பழம் போன்று சிவந்த வாயும், தாமரை மலரை யொத்த விழிகளும்
திருத் துண்டமும் செவிக்கு அணிந்த குண்டலங்களும்-(ஒளி வீசுகின்ற) திருமுகமும், காதில் பூண்ட குண்டலங்களும்
கையில் சோதி ஆழி சங்கம் முதற் சொல்லும் பல்சீரும்- திருக்கரங்களில் ஒளி பரப்பும் சக்கரமும் சங்கும் எனச் சொல்லப்பட்ட சிறப்பியல்புகளை
என்னுளே அண்டரும் பொறாமை எய்த வந்தது உண்டு-(ஒருங்கே காட்டி யருளும் திருக் கோலமுடன்) தேவர்கள் எல்லாம் பொறாமையால் எரிச்சலடையும்படியாக
அடியேன் அகத்தில் (கண்ணன் அன்றொருநாள்) வருகை புரிந்தது உண்மை பொய் சொன்னால் ஆயிரம் பிறப்பில் நீசம் ஆவது உண்டு-(அவ்வாறு அவர் வந்தாரில்லை எனப்) பொய் பேசினால் ஆயிரம் பிறவிகளிலும் ஈனமே உண்டாகும்
அவர் வரக்கண்டது இல்லை- (அன்று வந்தவர்) இன்னும் அத்தகையவர் அடியேன் முன் பலரறியத் தோன்ற வில்லை
எத்தவத்தில் என்ன பாவம் உற்றதோ – அடியேன் முற்பிறப்பில் செய்த தவத்தில் எப்படிப்பட்ட குறை சேர்ந்ததோ?(தெரியவில்லை)
காமர் வீரை ஊரில் என் கவிக்கு அவாவும் நேயரே- அலங்கார அழகு மிக்க வீரகேரளம்புதூரில் என்னுடைய பாடலை விரும்பும் அன்பரே! ( அவர் நேரில் வந்து காட்சியளித் தருளுவாரென்றே காத்திருக்கிறேன் என்பதாம்)-
நேயமோர் சிறிதும் நெஞ்சிற் குறியார்
வாயல் கண்டு மறுகுறப் படுத்தும்
பாழ்த்ததீவினைப் படுதுயர் களைந்திட்டு
ஆழ்த்தமெய் உணர்வார் அடியரிற் கூட்டிப்
பார்த்தன் தன்பாற் படிநலங் குறிக்கும்
நீர்த்தவர் பெருமை நிகழ்த்திய மாற்றம்
மெய்ப்படக் காட்டி விடாய்அற மாற்றிப்
பொய்ப்படா நினது பூம்பதம் புகுத்தாய்!
நின்னிறை வுணரார் நெறியிடைப் பழகி
அன்னியம் வகுத்திட்டு அகமிகச் செருக்கி
அந்த வண்ணம் அயர்தரும் என்னை
இந்த வண்ணம் இயக்கிய கருணை
உலகமுற் றுணராது ஒழிதல்நன் றல்ல
திலக வாணுதற் சேயிழை மடவார்
ஆதி யேடணைக்காட்டு அலையினும் அருட்பெரு
நீதிவேட் டுளஎன் நெஞ்சமுற் றறிவாய்!
எவ்வகைப் பொருளும் இயலும்எட் டெழுத்தில்
தவ்வரு முதலைத் தணவுந ரேனும்
ஆருயிர்க் கோறல் அழிதசை யருந்தல்
தீருமாண் பினரேல் சிதடர்அன் றென்னக்
கோடல்மட் டாண்டும் கொழிதமிழ்ப் பனுவல்
பாடல்மிக் கேற்றும் பரிசுநல் கிலையே!
விண்மரு புளிக்கீழ் வீற்றிருந் தானும்
மண்மகள் தன்னை வளர்த்தளித் தானும்
வருதமிழ்ப் பாண்டி வதனம் போலும்
திருமலி வீரையில் தேவரும் பிறரும்
வழிபடக் கருமுகில் மானப்
பொழியருள் விளக்கிப் பொலிந்தபுண் ணியனே.–36-நேரிசை ஆசிரியப்பா-
விண்மரு புளிக்கீழ் வீற்றிருந்தானும்-விண்ணோர் புகழும் புளிய மரத்தடியில் அமர்ந்திருந்த சடகோபாழ்வாரும்
மண்மகள் தன்னை வளர்த்து அளித்தானும்-(இப்பூவுலகில் தோன்றி யருளிய ) பூமாதேவியாகிய ஆண்டாளைக் கண்டெடுத்து வளர்த்து ஆளாக்கி (கண்ணபிரானுக்கு)அர்ப்பணம் செய்த பெரியாழ்வாரும்
வருதமிழ்ப் பாண்டி வதனம் போலும் திருமலி வீரையில்–வாழ்ந்து புகழ் பெற்றுவரும் செந்தமிழ் நாடாகிய தென் பாண்டியின் முகமே போன்று செல்வங் கொழிக்கும் வீரகேரளம்பு தூரில்
தேவரும் பிறரும் வழிபடக் விண்ணுலகத்தவர்களும் மண்ணுல கத்தவரும் போற்றிசைக்கும்படியாக
கருமுகில் மானப்பொழியருள் விளக்கிப் பொலிந்த புண்ணியனே–நீர்கொண்ட மேகம் போன்று கருணையைப் பொழிவித் தருளும் பரிசுத்தமானவரே!
நேயம் ஓர் சிறிதும் நெஞ்சில் குறியார் வாயல் கண்டு-1 (அடியேன் உள்ளத்தே யிருக்கும்) அன்பினைப் பற்றிக் கொஞ்சமும் நினைக்கத் தெரியாதவர்கள் மூலமாக
மறுக்குறப்படுத்தும் பாழ்த்த தீவினைப் படும்துயர் களைந்திட்டு- மனங்குழம்பச் செய்யும் கொடுமைகளை யெல்லாம் விலக்கி விட்டு
ஆழ்த்த மெய் உணர்வார் அடியரில் கூட்டி- ஆழமான உண்மைகளை அறிந்தவர்களாசிய பாகவதர்களுடன் சேர்த்து
பார்த்தன் தன்பால் படிநலம் குறிக்கும் – (பாரதப் போரில்) அருச்சுனன் பக்கம் அறவழி நிற்சின்ற
நீர்த்தவர் பெருமை நிகழ்த்திய மாற்றம் -குற்றமற்ற குணங்களையுடைய பெரியோர்களின் சிறப்புகளை (எடுத்துக்காட்டிச்) செய்த மாறுபாடுகளை
மெய்ப்படக் காட்டி விடாய்அற மாற்றி- உண்மை விளங்கும்படி (இப்போது) செய்தளித்து, ஆசை அற்றுப் போகும்படி மாறுதல் செய்து
பொய்ப்படா நினது பூம்பதம் புகுத்தாய்- (எக்காலத்தும்) பூரண நிலை பெற்று விளங்கும் உமது திருமலரடிகளை அடையச் செய்வீராக!
நின் நிறை உணரார் நெறியிடை பழகி- உம்முடைய பூரண நிலையை அறியாதவர்களாகிய பிறசமயத்து வழிகளிலேயே சென்று பழக்கப்பட்டு
அன்னியம் வகுத்திட்டு அகம் மிகச் செருக்கி-வேற்றுமை பாராட்டி, உள்ளத்தில் அகங்காரம் கொண்டு
அந்த வண்ணம் அயர்தரும் என்னை- அவ்வாறே வருத்தம் கொள்ளும் அடியேனை
இந்த வண்ணம் இயக்கிய கருணை உலகம் முற்றும் உணராது ஒழிதல் நன்று அல்ல- இப்படி ஆட்கொண்ட விதத்தை உலகமக்கள் எல்லோரும் அறியும்படியாகச் செய்யாது(அவர் முன்தோன்றாது) இருப்பது நல்லதல்ல
திலக வாள்நுதல் சேயிழை மடவார் ஆதி ஏடணைக் காட்டும் அலையினும் – திலகமுடன் ஒளிவீசும் நெற்றியினையுடைய பெண்கள் முதலான ஆசைகளையே (திரும்பத் திரும்ப) காண்பிக்கும் (இவ்வுலக வாழ்க்கையாகிய துன்பக் கடல்) அலைகளைக் காட்டிலும்
அருட்பெரு நீதி வேட்டுள என் நெஞ்சம் முற்றும் அறிவாய்— (உம்முடை திவ்விய அவதார) அருளிச் செயலென்னும் உண்மை நிலையையே வேட்கை கொண்டுள்ள அடியேனுடைய உள்ளத்தை முழுவதுமாக உணர்வீராக!
எவ்வகைப் பொருளும் இயலும் எட்டெழுத்தில்- (வேதத்தி|னுடைய) எல்லாப் பொருள்களும் கூடியதான விட்டுணு மந்திரத்தில்
தவ்வரு முதலைத் தணவுநரேனும் -தோன்றும் முதல்நிலையை நீங்கியவராலும்
ஆருயிர்க் கோறல் அழிதசை அருந்தல் தீரும் மாண்பினரேல்- பசுக்கொலை ஊண் உண்ணல் இவற்றைத் தீர்க்கும் மாட்சிமை யுடையவரானால்
சிதடர் அன்று என்னக் கோடல் மட்டு ஆண்டும் -அறிவில்லாத வர்கள் அல்லர் என உணரும் அளவில் ஆட்கொண்டும் –கொழிதமிழ்ப் பனுவல் பாடல் மிக்கு ஏற்றும் பரிசு நல்கிலையே-(சொற்பொருள்வளம்) கொழிக்கும் பாசுரங்களை அளவில்லாது யான் பாடி நீவிர் ஏற்று அருள்புரியவில்வையே (ஏனென்று கூறி யருள்வீராக)-
புண்ணருந்தச் சம்மதியோம் போதப் புதுமலர்த்தீம்
கண்ணசையுள் ளோம்பொய் கழிறிடோம்- விண்ணவரில்
சூரனிடம் வீரையில் மால் தொட்டவளை விட்டதன்றோ
பாரதம்நன் றாயுணர்ந்து பார்.–37-நேரிசை வெண்பா-
புண்அருந்தச் சம்மதியோம் – பிற உடல்களின் புண் ஆகிய புலாலை உண்ண ஒருப்பட மாட்டோம்
புதுமலர் தீம் கள் நசை போது உள்ளோம் – அன்றலர்ந்த பூக்களில் உள்ள இனிய தேனின் மேல் நிரம்பிய விருப்பம் உடையேம்
பொய் கழறிடோம் – நாங்கள் இல்லாத ஒன்றைக் கூற மாட்டோம்
விண்ணவரில் சூரனிடம்-தேவர்களுக்குள்ளே ஒருவனாகிய சூரியனின் பால்
வீரையில் மால் தொட்ட வளை -வீரையில் எழுந்தருளியுள்ள நவநீத கிருட்டிணப்பெருமாள் தான் ஏந்தியுள்ள சக்ராயுதத்தை
விட்டதன்றோ பாரதம்- (சயத்திரதனை விசயன் கொல்ல வாய்ப்பாகச் சூரியனை மறைக்குமாறு) செலுத்திய வரலாறு பாரதம் அல்லவா?
நன்றாய் உணர்ந்து பார் – சொல்லையும் பொருளையும் நன்கு சிந்தித்துப் பார்ப்பாயாக.
பாரணைந் தான்திங்கள் என்றூழ்பைங் கிள்ளைப் பறவைநட்டான்
காரமுற்றாள்கம லத்திரு மாதெண்கரப்பிரமன்
ஊரன்னத் தாசைவைத் தான்மதன் கால்வையம் ஒன்றச்சென்றான்
நாரணன் வீரைப் புலவீர்பொய் யன்று மெய் நம்மொழியே.–38-
திங்கள் பார் அணைந்தான்- சந்திரன் உரோகிணியை (மிக விரும்பிப்) புல்லினான்
என்றூழ் பைங்கிள்ளைப் பறவை நட்டான்- சூரியன் பசிய குதிரைகள் (கட்டிய தேரில்) பறப்பதை மிக விரும்பினான்;
கமலத் திருமாது காரம் உற்றாள்-தாமரையில் உள்ள இலக்குமி பொன் எனப் பெற்றாள்
எண்கரப் பிரமன் ஊர் அன்னத்து ஆசை வைத்தான்- எட்டுக் கைகளை உடைய பிரமதேவன் தான் இவர்ந்து செல்லும் அன்னப் புள்ளை மிக நேசித்தான்
மதன் கால் வையம் ஒன்றச் சென்றான்- மன்மதன் (தென்றல்) காற்றாகிய தேரில் மனமொத்து உலாவினான்
நாரணன் வீரைப் புலவீர்-திருமால் எழுந்தருளியுள்ள வீர கேரளம்பு தூரில் வாழும் அறிஞர்களே!
நம்மொழி பொய்யன்று, மெய்யே.-
மொழியொ ணாத முதற்பதம் நல்கும்நீ
பழியில் ஆண்மைப் பயன்தரல் பாவமோ?
பொழில்வ ளம்பொலி புண்ணிய வீரையூர்
உழியொர் புள்ளில் உலாவும் ஓய் யாரனே!–39-கலிவிருத்தம்-
பொழில் வளம் பொலி புண்ணிய வீரையூர்உழி – சோலைகள் நிறைந்து அழகு மிக்கு விளங்கும் மங்களகரமான வீர கேரளம்புதூரில்-
புள்ளில் உலாவும் ஓய்யாரனே- கருடப் பறவையின் மேலேறிப் பொழுதினைக் கழிக்கும் அலங்கார மோகம் கொண்டவரே!
மொழி ஒணாத முதல் பதம் நல்கும் நீ-(உம்மை அடைந்தவர்க்கு) சொல்லுவதற்கு அரிதான வீடு பேற்றினை அளிக்கும் நீவிர்
பழிஇல் ஆண்மைப் பயன் தரல் பாவமோ- (இம்மையில்)குற்றமற்ற மெய்ம்மைப் பயன் அளித்தால் குறை யுண்டாகுமோ? கூறுவீராக.
ஆரணம் பயந்த துண்டேல் அவன்விதி பழுதா னாலும்
தீரம்நன் றருள வல்லாய் என்னவே சிந்திக் கின்றேன்
காரமர் நெடிய மேனிக் கருணைமால் வரையே காமர்
மாரனைப் பழியார் வீரை வளநகர் வாழ்வன் னானே.–40-அறுசீர் அசிரிய விருத்தம்-
காரமர் நெடிய மேனிக் கருணை மால் வரையே -நீர் மேகம் போன்ற உடல் வண்ணமும் நெடுங்குன்றம் போன்ற உருவமும் கருணையுள்ளமும் கொண்ட திருமாலே!
காமர் மாரனைப் பழியார் வீரை வளநகர் வாழ்வு அன்னானே-பேரழகு மிக்க மன்மதனைப் போன்ற அழகு மிக்கோர் வாழ்கின்ற வீரகேரளம்புதூரில் இருப்பவரே!
ஆரணர் பயந்தது உண்டேல் -(தாமோதரனாகிய உமது கொப்பூழ்க் கொடியில்) பிரமனைப் பெற்றது என்பது உண்மையானால்
அவன் விதி பழுது ஆனாலும் – அப் பிரமனுடைய எழுத்தில் (அடியேன் தலையெழுத்தில்) குற்றம் ஏற்பட்டாலும் –தீரம் நன்று அருள வல்லாய் எனவே சிந்திக்கிறேன்- மனத்திடமும் அறிவும் வலிமையும் (அடியேனுக்கு) அருளுவீர் என்றே எண்ணியிருக்கின்றேன் காத்தருள்வீராக.
நானென் றெழுந்த இருளைத் தடிந்துன்| நளினப் பதங்கள் கருதித்
தேனென் றினித்த அருளின் பம்உண்டு திகழ்கின்ற நாளும் வருமோ?
மீனென் றளக்கரிடை சென்றும் அன்று வேதம் புரந்த விகிர்தா!
ஆனென் றும்இன்பம் உறும்வீரை யாளும் அரசே! மலர்க்கண் அமுதே!–41-எழுசீர் ஆசிரிய விருத்தம்
மீன் என்று அளக்கர் இடை சென்றும் அன்று வேதம் புரிந்த விகிர்தா (அசுரன் வேதங்களை ஒளித்த பொழுது) மீன் உருவம் எடுத்துக் கடலிடத்தே போய் வேதங்களை மீட்டுmவந்த தலைவரே!
ஆன்என்றும் இன்பம் உறும் வீரை ஆளும் அரசே- பசுக்கூட்டங்கள் எப்பொழுதும் (உம் கிருபையால்) மகிழ்ச்சியுடன் உலாவும் வீரகேரளம்புதூரினை ஆட்சி புரிகின்ற மன்னவரே!
மலர்க்கண் அமுதே – தாமரை மலர் போன்ற அழகிய விழிகளை யுடைய அமுத மயமானவரே!
நான் என்று எழுந்த இருளைத் தடிந்து-யான், எனது என்னும் அஹங்கார மமகாரமாகிய மயக்கத்தை (அடியேனிடமிருந்து) அறுத்து
உன் நளினப் பதங்கள் கருதி உமது தாமரைத் திருவடிகளையே நினைந்திருந்து
தேன் என்று இனித்த அருள் இன்பம் உண்டு- தித்திக்கும் தெவிட்டாத அமுதம் என்னும்படியான உமது கிருபையைப் பெற்று விளங்கும்
திகழ்கின்ற நாளும் வருமோ -ஒளி பொருந்திய காலமும் (அடியேனுக்கு) வரக் கூடுமோ? கூறுவீராக.
அமுதமுன் அமரர்க் களித்த வானவனே அளவறக் களித்த வானவனே
அம்புயப் பொகுட்டா தனத்திரு வினனே ஆன்செய் வந்தனத் திருவினனே
குமுதம்நேர் வாயாற் சங்கம் ஆர்த்தவனே கோபியர் சங்கம் ஆர்த்தவனே
குஞ்சரம் புரப்பவி ரைந்தமா திரனே கோவென விரைந்த மாதிரனே
சமுசயம் அறுக்கு மந்திரத் தவனே தாழ்வில்எண் மந்திரத் தவனே
தானவர்க் கஞ்சா தரித்தவம் மானே சட்டுவந்தரித்தவம் மானே
திமுதநீர்க் கரந்து மீண்டுவந் தானே சீரற மீண்டுவந் தானே
திரைமலி தவளவீ ரைநா ரணனே செழும்பொழில் வீரைநா ரணனே.–42-பதினான்கு சீர்த் தாழிசை-மடக்கு-இது, ஒவ்வோர் அரையடியிலும் வந்த சொற்களே மீண்டும் வந்து இருபொருள் தரும் மடக்கணியின்பாற்படும்.
அமுதம் முன் அமரர்க்கு அளித்த வானவனே- (பாற்கடலில் தோன்றிய) அமுதத்தை முற் காலத்தில் தேவர்கட்கு (மட்டும்) பங்கிட்டுக் கொடுத்த பெருமையை உடையவரே!
அளவு அற களித்த வானவனே-கணக்கற்ற (பகைவர்களாகிய அசுரர்களை ஒழித்ததால்) பெருமிதங்கொண்ட தேவரே!
அம்புயப் பொகுட்டு ஆதனத் திருவினனே-செந்தாமரை மலரின் நடுப்பாகமாகிய இருக்கையை உடைய இலக்குமியைத் தேவியாகப் பெற்றவரே!
ஆன் செய் வந்தனத் திருவினனே -பசுக் கூட்டங்களால் (கோவர்த்தன கிரி கொண்டு காத்ததால்) செய்யப்படுகின்ற வணக்கங்களாகிய மேன்மையை உடையவரே!
குமுதம் நேர் வாயால் சங்கம் ஆர்த்தவனே-அல்லி மலரைப் போன்ற வாயில் பாஞ்சசன்னியமாகிய சங்கை வைத்து முழங்கியவரே!
கோபியர் சங்கம் ஆர்த்தவனே-ஆயர் மகளிர் கூட்டத்தால் நன்கு அனுபவிக்கப் பெற்றவரே! (கோபியர் ஆடைகளை ஒளித்து வைத்தவரே! எனினும் ஆம்)
குஞ்சரம் புரப்ப விரைந்த மா திரனே – (ஆதி மூலமே எனக் கூவியழைத்த) கசேந்திரனைக் காக்க வேகமாகச் சென்ற வலிமையை உடையவரே!
கோ என இரைந்த மாது இரனே -கோவிந்தா! கோபாலா! என்று ( துரியோதனன் சபையில்) அரற்றி ஒலித்து அழைத்த திரௌபதியின் வேண்டுகோளை ஏற்றவரே!(ஏற்று அவளுக்கு ஆடை நல்கி மானங்காத்தவரே!)
சமுசயம் அறுக்கும் அம் திரத்தவனே- (ஆன்மாக்களுக்கு உய்யும் நெறியில் ஏற்படும்) ஐயங்களைப் போக்கியருளும் அழகையும் நிலை பேற்றையும் உடைய பரம் பொருளே!
தாழ்வு இல் எண் மந்திரத்தவனே- குறைவற்ற திருவெட்டெழுத்தாகிய அருமறையின் பொருளாயிருப்பவரே!
தானவர்க்கு அஞ்சாது அரித்த அம்மானே- அசுரர்களுக்குப் பயப்படாமல் அவர்களை ஒழித்தருளிய தலைவரே!
சட்டுவம் தரித்த அம் மானே(திருப்பாற் கடலில் தோன்றிய அமுதத்தைத் தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்க) அகப்பையை ஏந்திய அழகிய (மான் போன்றவளாகிய) மோகினி யானவரே!
திமுதநீர்க் கரந்து மீண்டு வந்தானே- (சோமுகனென்னும்அசுரன் வேதங்களைந் திருடிக் கடலில் ஒளித்துப் போக, தேவலோகத்தளவுஞ் சென்று கடல் வெள்ளம் பரந்த காலத்தில்) கடல் வெள்ளம் முழுவதையும் தமது உடலின் ஒருபுறத்திலே அடக்கவல்ல மிடுக்கையுடைய மீன் வடிவம் எடுத்து அசுரனைத் தேடிக் கொண்டு வேதங்களை மீட்டுக் கொணர்ந்தவரே!
சீர் அறம்ஈண்டு உவந்தானே சிறப்புப் பொருந்திய தருமத்தை இவ் வுலகில் நிலைநிறுத்த விரும்புபவரே!
திரைமலி தவள வீரை நார் அண் அனே-அலைகள் நிறைந்ததும் வெண்மை நிறமுடையதுமாகிய (திருப்பாற்) கடலினிடத்து விருப்பம் பொருந்திய தாயனையவரே!
செழும் பொழில் வீரை நாரணனே- வளமை மிக்க சோலைகளால் சூழப்பட்டுள்ள வீர கேரளம்புதூரில் திருக்கோயில் கொண்டுள்ள திருமாலே!
நாரணனே! சங்காழிப் படைக்கை மாலே!
நான்முகனைப் பயந்தவுந்தி நளினத் தானே!
வாரணமுன் சென்றாங்குஎன் முன்னும் இன்னே
வருகவெனச் செந்தமிழால் வாழ்த்து வார்க்குச்
சீரணம் தவிர்நலம் திகழ்ந்த வீரையிற்
பூரணத் திருவருட் பொலிவுண் டாகுமே.–43-வேற்றொலி வெண்டுறை–
நாரணனே சங்கு ஆழிப் படைக்கைமாலே- நாராயணா!-சங்கமும் சக்கரமும் (தீமையை யழிக்கக்) கையில் ஏந்தியிருக்கும் திருமாலே! (சங்கு சக்கர தாரியே!)
நான்முகனைப் பயந்த உந்தி நளினத்தானே – பிரமனைப் பெற்றெடுத்த தாமோதரனே!
வாரணம் முன் சென்றாங்கு என் முன்னும் இன்னே வருக எனச் செந்தமிழால் வாழ்த்துவார்க்கு- (ஆதிமூலமே என அழைத்த) கசேந்திரன் முன்பு சென்று காத்தது போல,(எமது துன்பங்களைப் போக்க) எங்கள் முன்னாலும் இப்பொழுதே வந்துகாத்தருள்வீராக என்று சிறப்பு மிக்க பாசுரங்களால் போற்றுபவர்கட்கு
சீரணம் தவிர் நலம் திகழ்ந்த வீரையில்-பழ வினைகளை யெல்லாம் போக்கும் சிறப்பு மிக்க வீரகேரளம்புதூரில் பூரணத் திருவருள் பொலிவு உண்டாகுமே (கோயில் கொண்டு விளங்கும் கண்ணபிரானின், முழுமையான கருணை யழகு தோற்றமாகும்.
உண்டுண் டுறங்கி உறங்கி ஒளிவளையார்
தொண்டுண்ட ணைந்தணைந்து சோர்ந்தாலும் வண்டுண்ட
செங்கமலத் தாள் முகுந்ததற் தென்வீரை யூரினீற்கண்டு
அங்கமலத் தாழ்வொழிக்கலாம்–44-நேரிசை வெண்பா-
உண்டு உண்டு உறங்கி உறங்கி – இவ் வுடலைப் பாதுகாப்பதற்காக இதுவரையில் தினமும்) திரும்பத் திரும்ப உணவு அருந்தியும், பெரும்பாலும் தூக்கத்திலேயே காலம் கழித்தும்
ஒளிவளையார் தொண்டு உண்டு அணைந்து அணைந்து சோர்ந்தாலும் – மின்னுகின்ற வளையல்களை அணிந்த பெண்களின் பணிவிடைகளை ஏற்று அவர்களை அடிக்கடி மருவிப் புணர்ந்தும் (இவ்வுடலும் வாழ்க்கையும் கசந்து) சாலிப்படைந்து மெலிந்தாலும் (பரவாயில்லை. இனி)
வண்டு உண்ட செங்கமலத்தாள் முகுந்தரைத் தென் வீரை ஊரினில் கண்டு-(எப்பொழுதும் அடியார் கூட்டம் போன்று) வண்டுகள் மொய்த்திருக்கும் சிவந்த தாமரை மலரைப் போன்ற திருவடிகளை யுடைய திருமாலைத் தென் தமிழகத்திலுள்ள வீரகேரளம்புதூரில் வந்து தரிசித்தால்
அங்கம் மலத் தாழ்வு ஒழிக்கலாம் –இவ் வுடலால் ஏற்படுகின்ற குற்றங்களையும் கீழ்மையான இழிவுத் தன்மைகளையும் அறவே தீர்க்கலாம்.
ஒழிக்கரும் ஆணவப் பேய்தலைக் கேறலின் ஓகைமிஞ்சிக்
கழிக்கரு வாதனைக் காளா யுளீர்சகம் காக்குமலர்
விழிக்கரு ணைத்திரு மாலென்னும் வாழ்வெற்றி வீரைநகர்
உழிக்கரு டப்பரிச் சேவைகண் டேத்தி உருகுமினே.–45-கட்டளைக் கலித்துறை
ஒழிக்க அரும் ஆணவப்பேய் தலைக்கு ஏறலின்- (எத்தனை முறை யுணர்ந்து தவிர்த்தும்) அழிப்பதற்கு அரிதான (நான் பெரியன் என்கிற) அஹங்கார குணம் உச்சிவரை நிறைந்திருப்பதால்
ஓகை மிஞ்சி- நெஞ்சம் முழுவதும்) உவகை மிகுதியாகி
கழிக்க அரும் வாதனைக்கு ஆளாய் உள்ளீர்-போக்கு தற்கரிய துன்பத்திற்கு ஆட்பட்டு இருக்கின்றீர்கள் (மீண்டும் மீண்டும் கருவில் பிறந்திறக்கும் துன்பத்திற்கு ஆளாக இருக்கின்றீர்கள்)
சகம் காக்கும் மலர்விழிக் கருணைத் திருமால் என்றும் வாழ் வெற்றி வீரை நகர் உழி – உலகத்தையே (தம் அருட் பார்வையால் காத்தருளும் தாமரைக் கண்ணனாகிய எம்பெருமான் அனு தினமும் கோலங் கொண்டிருக்கின்ற வீரச் சிறப்பு மிக்க வீரகேரளம்பு தூரினிடத்தே
கருடப் பரிச்சேவை கண்டு ஏத்தி உருகுமினே- திருமால் கருடன் மீது உலா வரும் அற்புதக் காட்சியைத் தரிசித்துப் போற்றி அகம் மகிழ்வீராக.-
உருவென் றருவென்று உழல்புன் சமயத்து
இருள்துன் றியிடைந்து அழும்ஏழ் மையீர்!
விருதொன் றுதென்வீ ரையின்மால் ஒருதூண்
வருபண் பைமதிக் கின்மயக் கறுமே.–46-கலிவிருத்தம்-
உரு என்றும் அரு என்றும் உழல் புன் சமயத்து இருள் துன்றிஇடைந்து அழும் ஏழ்மையீர் – இறைவனுக்கு உருவம் உண்டு என்றும் (அரு சமயம் என்றும்), இறைவன் உருவம் இல்லாதவன் என்றும் (சமணம் போன்றதென்றும் ) உலைந்து திரிந்து, அற்பமான கொள்கைகளை யுடைய சமயங்களின் மயக்கங்கள் நெருங்கித் தம் வசங்கெட்டுப் புலம்பும் பேதைமை யுடையோரே!
விருது ஒன்று தென் வீரையின்மால் ஒருதூண் வரும் பண்பை மதிக்கின் மயக்கு அறுமே -வெற்றிச் சிறப்பு மிக்க வீரகேரளம்புதூரில் கோயில் கொண்டிருக்கும் திருமால்
(அன்றொருநாள் பிரகலாதனுக்காக) ஒரு தூணிலிருந்து வெளிப்பட்டு (நரசிங்கமாய்) காட்சியளித்தருளிய இறை குணத்தை உணர்வீராயின் (சமயங்கள் என்று வேறுபாடு காட்டும்) மயக்கநிலை ஒழியுமே (காண்பீராக)
மயன் வியக்கும் மணிமாட மறுநார்தண் டமிழ்வீரைப்
புயல்புரையும் நெடுமேனி ப் புனிதா நீ புளி நிழல்
இயல் முநிவன் ஒரு பதிகம் இசைத்தானும் கினிதருளும்
பயனெனக்கேன் அருள்கில்லாய் பல பாடல் நேர்ந்தேநே .–47-கொச்சகல் கலிப்பா-
மயன் வியக்கும் மணிமாட மறுநார்தண் டமிழ்வீரை–(சிற்பக்கலையில் வல்லவனான) மயன் என்னும் தேவ லோகச் சிற்பி வியக்கும்படியான (உயர்ந்த சிறந்த) மணிமாடங்களும் தெருக்களும் நிறைந்து, தமிழ்ச்சிறப்பு மிக்க வீர கேரளம்புதூரில்
வலியம் யாம் எனச் செருக்குபுன் குணத்தோர் வான நாட்டிடை வாழ்துந ரேனும்
புலிமுற் போய மான் கன்றெனத் தகாரப் புரிந்துன் மெய்யருட் புகழ் சொலல் விழைந்தேன்
கலியிற் புண்படக் காண்பது முறையோ?கருத்துள் வந்து அந்நாள் கழறல் பொய் மொழியோ-
குலிசன் ஊரிளை நகத்தகும் வீரைக் கொற்ற வாசினைக் கொண்டல் மேனியனே–49-எண் சீர் ஆசிரிய விருத்தம்-
குலிசன் ஊரிளை நகத்தகும் வீரைக் கொற்ற வாசினைக் கொண்டல் மேனியனே–இந்திரனுடைய தேவ லோகத்தை விஞ்சப்படியான அழகும் வளமும் மிக்க வீரகேரளம்புதூரின் வீரத் தலைவரெ! இத் திருத்தலத்தில் வாசஞ் செய்யும் கார்மேக வண்ணா!
வலியம் யாம் எனச் செருக்குபுன் குணத்தோர் வான நாட்டிடை வாழ்துந ரேனும்-எல்லோரையும் காட்டிலும் வல்லமை மிக்கவன் என்று இறுமாப்புடைய இழி யுள்ளம் கொண்டவர்கள் தேவ லோகத்தில் வசிப்பவர்களே யாயினும் -அவர்கள் –
புலிமுற் போய மான் கன்றெனத் தகாரப் புரிந்துன் மெய்யருட் புகழ் சொலல் விழைந்தேன்– புலியின் எதிரே சென்ற மான் கன்று போல நடுக்கமுறுமாறு செய்து உம்முடைய உண்மையான அருளிச் செயல்களைப் பாட ஆவல் கொண்டேன்.
கலியிற் புண்படக் காண்பது முறையோ?- (அடியேன்) வறுமையிலும் சிறுமையிலும் உழன்று வேதனைப்படுதல் முறையாகுமோ?
கருத்துள் வந்து அந்நாள் கழறல் பொய் மொழியோ- அடியேன் மனக்காட்சியில் அன்றொரு நாள் தோன்றி யுரைத்த மொழிகளெல்லாம் உண்மையில்லையோ ? (எல்லாம் பொய் தானோ? மொழிந்தருள்வீராக)
மேனி முற்றும் நீற ணிந்து உருத்தி ரக்கணங் கள்போல் |
மின்னு மென்னை நின்ன ருட்கண் வேட்கை யெய்த விட்ட
நானி லத்தோர் எட்பொ ரப்பு னைந்து லாவுவார் கள்தம்
நாறல் வாயும் ஏசல் காணல் ஞாய மென்க லாகுமோ?
வேனில் வேள்வி ழாவ றாத வீரை யூரில் நாரணா!
வேலை சுற்று பார ளந்து விண்ண ளந்துமா வலிக்கு
ஆனி யற்ற மெய்ப்ப தம்கொடுத்த ளித்த ஐயனே!
அஞ்சல் அஞ்சல் என்ற நாள்ர் ஆனை முன்செல் அப்பனே!–50-பதினான்குசீர்த் தாழிசை-
மேனி முற்றும் நீறு அணிந்து – உடல் முழுவதும் திருநீறு பூசி உருத்திரக் கணங்கள் போல் மின்னும் என்னை-சிவகணங்களைப் போல ஒளி வீசும் அடியேனை
நின் அருட்கண் வேட்கை எய்த விட்ட நீ – உம்முடைய திருவருள் பார்வையைப் பெற வேண்டுமென்ற தீராத விருப்பத்தை(அடியேனுள்ளே ) ஏற்படுத்தி யிருக்கும் நீவீர்
நால் நிலத்தோர் எட்பொரப் புனைந்து உலாவுவார்கள்தம்-இவ் வுலகத்தவர்கள் அனைவரும் இகழும்படியாகக் கற்பனை செய்துரைத்துத் திரிவார்களுடைய
நாறல் வாயும் ஏசல்காணல் ஞாயம் என்கல் ஆகுமோ -(கூடுசொற்களே பேசும்) தீ மணம் வீசும் வாய்கள் பழிப்பதைப் பார்த்து வாளாயிருப்பது முறையாகுமோ?
வேனில் வேள் ‘விழா அறாத வீரையூரில் நாரணா-வேனில்விழா, வேள் விழா போன்று பல விழாக்கள் மலிந்த வீர கேரளம்புதூரில் கோலஞ் செய்யும் நாராயணரே!
வேலை சுற்று பார் அளந்து விண் அளந்து மாவலிக்கு ஆனி அற்ற மெய்ப்பதம் கொடுத்து அளித்த ஐயனே!- (வாமன அவதாரமெடுத்து)உம் திருவடியால் இக்கடல்சூழ் மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் அளந்து எல்லையில்லாத இன்பம் நல்கும் (உம் திருவடிகளை யுடையும்)
வீடு பேற்றினை மாபலிச் சக்கரவர்த்திக்கு அருளிய இறைவரே!
அஞ்சல் அஞ்சல் என்று அந்நாள் ஓர் ஆனைமுன் செல் அப்பனே-(ஆதி மூலமே என ஓலமிட்டழைத்த போது) பயங்கொள்ளாதே என (இதோ வந்தேன் என) அன்றொரு நாள் கசேந்திராழ்வார் முன்னே சென்ற எந்தையே! (அடியேனுக்கும் காட்சி தந்து அவ் வண்ணம் மொழிந்தருள்வீராக.)
அப்பணி சென்னியன்அனையார் பத்தி ஓர்கால் அம்புயப்பூ வினன்போல்வார் கருமம் ஓர்கால்
முப்பழச் சாறுஒல்குதமிழ்ச் சடகோ பாழ்வான் முதலினர்மெய் ஞானம்விட்டம் மொழியா மோன
மெய்ப்பல கைஎட்டெழுத்தும் உடங்க ளாக வீரைநகர் வாழ்பெருமாள் ஆடீர் ஊசல்
செப்பரும் சீர்த்திருவும் நிலமகளும் சேரத் தேவகியார் செல்வர்இருந்து ஆடீர் ஊசல்–51-எண்சீர் ஆசிரிய விருத்தம்-
அப்பு அணி சென்னியன் அனையார் பத்தி ஓர்கால்–கங்கையாதிய நீரினைத் தலையிலே சூடிக் கொண்டிருக்கும் சிவபெருமான் போன்ற தேவர்களின் அன்பு வழிபாடு ஒரு காலாகவும்
அம்புயப் பூவினன் போல்வார் கருமடம் ஓர்கால்- (உம்முடைய உந்திக் கமலத்தில் வீற்றிருக்கும் பிரமம் போன்றவர்களின்ஆக்கல் போனற தொழில்கள் ) ஒரு காலாகவும்
முப்பழச் சாறு ஒல்கு தமிழ்ச் சடகோபாழ்வான் முதலினர் மெய்ஞானம் விட்டம் – மா.பலா,வாழை என்னும் பழங்களைக் குழைத்துச் செய்யப் பெற்ற மதுரம் போன்ற பாசுரங்களை இசைக்கும் சடகோபாழ்வார் ஆகிய பெரியோரின் மெய்ஞானமே உத்திரமாக
மொழியா மோனம் மெய்ப்பலகை சொல்லு தற்கரிய மௌனமே மெய்ப் பலகையாக
எட்டெழுத்தும் வடங்கள் ஆக- நாராயணாய என்னும் விட்டுணு மந்திரமே கயிறு ஆக (அமைத்து ஊஞ்சலாக்கி அதில்)
வீரை நகர் வாழ் பெருமாள் ஆடீர் ஊசல் – வீரகேரளம்புதூரில் வாசஞ்செய்கின்ற கண்ண பெருமானே! ஊசலாடுவீராக
செப்ப அரும் சீர்த் திருவும் நிலமகளும் சேரத் தேவகியார் செல்வர் இருந்து ஆடீர் ஊசல்-தேவகி மைந்தரே!-சொல்லுதற்கு அரிதான சிறப்புகளுடன் கூடிய பெரிய பிராட்டியாரோடும் பூமிப் பிராட்டியாரோடும் சேர்ந்திருந்து ஊசல் ஆடுவீராக!
ஊசலென வேதிரியும் உள்ளத்தேன் ஓர்மையின்றிப்
பேசலும் கேட் டின்பம் பெருக்குமோ-வாசத்
துளவனணி வீரையர்கோன் தொல்லாயர் பாடிக்
களவனணி தண்டைக் கழல்.–54-நேரிசை வெண்பா–
ஊசல் எனவே திரியும் உள்ளத்தேன்-(அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டு) ஊஞ்சலைப் போலவே அலைந்து திரியும் நெஞ்சத்தை யுடையேன் (அடியேன்)
ஓர்மை இன்றிப் பேசலும் கேட்டு இன்பம் பெருக்குமோ-துணிவில்லாமல் பிதற்றுவதைச் செவியுற்ற பின்பு (உம் உள்ளத்தில்) மகிழ்ச்சி மேலிடுமோ?
வாசத் துளவன் அணி வீரையர்கோன் தொல்லாயர் பாடிக் களவன் அணி தண்டைக் கழல்- நறமணம் பொருந்திய திருத்துழாய் மாலையை அணிந்தவரே! பெருமை மிக்க வீரையூரின் தலைவரே! தொன்மைச் சிறப்பு மிக்க ஆயர் பாடியிலுள்ள கோபியர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவரே! (வெண்ணெய் திருடியவரே) அழகு பொருந்திய தண்டையைத் திருவடிகளிலே அணிந்தவரே!
(என அனைவரும் புகழத் தக்கவரே அடியேன் மீது இரக்கம் கொள்ளலாகாதோ? அருள்வீராக-
கழல்வேட்டுன் மெய்ப்புக ழேபகராதருங் கானகத்தில்
விழல்வாய்ப்ப நீ இறைப் பாரென்னவேபைம்பொன் வெஃகி நொந்தேன்
அழல்வாட்டு மென்மெழு காகாமுன்ஆண்டருள் அங்கையில்வேய்ங்
குழல்கேட்கும் மால்மிக்கு ளாய்வீரை மேவும் குணக்கொண்டலே.–53-கட்டளைக் கலித்துறை
அங்கையில் வேய் குழல் கேட்கும் மால் மிக்குளாய் வீரை மேவும் குணக் கொண்டலே – அழகிய கையில் புல்லாங்குழலை மிக்க விருப்பமுடன் இசைப்பவரே! வீரகேரளம்புதூரில் விரும்பி வாழும் பெருங்குணமுடைய மேகம் வண்ணமுடையவரே!
கழல் வேட்டு உன் மெய்ப்புகழே பகராது -(அழியாப் பேரின்ப வீட்டை நல்கும் உம்முடைய) திருவடிகளை வேண்டி உம்முடைய திருப்புகழை ஓதாமல்
அருங் கானத்தில் விழல் வாய்ப்ப நீர் இறைப்பர் என்னவே பைம்பொன்வெஃகி நொந்தேன்–அருமையான குறிஞ்சி நிலத்தில் புன்மையான புற்கள் வளரும்படியாகத் தண்ணீரை இறைத்துக் கொட்டுபவர்களைப் போலவே (அடியேனும்) பசும் பொன் போன்ற செல்வத்தையே விரும்பியிருந்து (இதுகாறும்) துன்பப்பட்டேன்
அழல் வாட்டும் மென் மெழுகு ஆகா முன் ஆண்டு அருள்– (அடியேன்) தீயினால் உருகும் மெழுகாய்க் கரைந்து அழியும் முன்பாக வந்து ஆட்கொள்வீராக!
குணங்கும் மாதர்தம் குயத்துமால்கொளும்
சுணங்கல் போலுமென் தொழும்பும் கொள்வையோ?
அணங்கு மாய்அமு தளித்து வானவர்
கணங்கொள் வாய்திரு வீரையிற் கண்ணனே.–54-கலி விருத்தம்
அணங்குமாய் அமுது அளித்து வானவர் கணம்கொள் வாய் திருவீரையில் கண்ணனே-மோகினியாக வந்து தேவர்களுக்கு அமுது அளித்து. செல்வச் சிறப்பு மிக்க வீரகேரளம்புதூரில்வாழும் கண்ணபிரானே!
குணங்கும் மாதர் தம் குயத்து மால் கொளும் (வயது செல்லச்செல்ல இயற்கையில்) வளைந்து மெலிந்து வற்றிப் போகும் பெண்களுடைய நகில்கள் மீது விருப்பம் கொள்கின்ற
சுணங்கல் போலும் என் தொழும்பும் கொள்வையோ-மெலிந்தவனாகிய அடியேனுடைய அடிமைப் பணியையும் (உம் திருவுள்ளத்தில்) ஏற்று அருள்வீர்களோ? கூறுவீராக.
கண்ண னைக்கரு ணைக்கட லேநிகர் காகுத்தன்தனைக் காசைமென் பூந்துண
வெண்ண னைத்தனீ வீரையில் மேவிய மாய னைத்தினம் வாழ்த்தெடுக் கின்றவர்
எண்ண முற்றுப் பெறாதெனச் சொல்லன் ஏழை மானீடர் காள்ஒரு பாடலால்
அண்ண லம்திருக் கச்சியிற் செய்தபேராடல் பாரில் அனேகர் சொல் வார்களே.–55-கட்டளைக் கலிப்பா–
ஏழை மானிடர்காள்- அறியாமையை உடைய மாந்தர்களே!
கண்ணனை, கருணை கடலே நிகர் காகுத்தன் தன்னை-கண்ணபெருமானை, கருணைக் கடல் போன்ற இராமனை
காசை மென் பூந்துணர் வண்ணனை, தனி வீரையில் மேவிய மாயனை – காயா மலர்ப்பூங்கொத்து போன்ற நீல வண்ணரை, சிறப்பு மிக்க வீரையூரினில் விரும்பி வாழும் மாயோனை
தினம் வாழ்த்தெடுக்கின்றவர் எண்ணம் முற்றுப் பெற தென சொல்லன்மின் -நாள் தோறும் ஸ்திதித்துப் போற்றி செய்பவர் விண்ணப்பங்கள் நிறைவேறாது எனக்கூறாதீர்
ஒரு பாடலால் அண்ணலம் திருக்சச்சியில் செய்து பேராடல் பாரில் அனேகர் சொல்வார்களே – திருமழிசையாழ்வார் மணி கண்ணன் போகின்றான் ‘ என்னும் ஒரு வெண்பாவால் காஞ்சி வரதர் சொன்ன வண்ணம் செய்த பெருமாளாக திருவிளையாடலைப் பலரும் கூறுவார்களே. (அவற்றையெல்லாம் கேட்டறிந்தாலும் உம்முடைய இழி குணத்தை விட்டொழிப்பீராக.)
களங்கமற்ற மெய்ஞ்ஞானக் கண்ஈந் தாளும் கண்ணனைத்தென் வீரைநகர்க் கண்ணே கண்டு
விளங்கனியிற் கன்றெறிந்த தாதி யான விளையாடல் களைத்தமிழால் விளம்பப் பெற்றேன்
அளங்கருதிப் பானையினை வியந்து பேசா தனவாய பொருளைவிளித்து அகம்ஓல் காமல்
இளங்கவிஞர் மதிப்பதெண்ணிப் புலம்ப மாட்டேன் யானடைந்தஅநுபூதிக்கு எண் இன்றாமே.–56-எண்சீர் ஆசிரிய விருத்தம்–
களங்கம் அற்ற மெய் ஞானக்கண் ஈந்து ஆளும் கண்ணனை-குற்றமில்லாத மெய்ஞானவுணர்வு நல்கி (அடியேனை )ஆட்டுவிக்கின்ற கண்ணபெருமானை
தென்வீரை நகர்க் கண்ணே கண்டு-தென்திருப்பதியாம் வீரகேரளம்புதூரிலே தரிசித்து
விளங்கனியில் கன்று எறிந்தது ஆதியான விளையாடல்களைத் தமிழால் விளம்பப் பெற்றேன் – கண்ணன் விளவெறிந்தது முதலான பேராடல்களை (திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களாகிய ஆழ்வார்களின்) தமிழ்ப் பாடல்களால் சொல்லக் கேட்டு அடியேனும் பாடினேன்-
அளம் கருதி பானையினை வியந்து பேசாது-(கண்ணனின் பேராடல்களின் பெருக்கம் காரணமாக (ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என) முழுவதையும் விளக்கிச் சொல்லாது
அனவாய பொருளை விளித்து அகம் ஒல்காமல் -அத்தகைய உட்பொருள்களை மட்டுமே கூறி, மனம் தளராமல்
இளம் கவிஞர் மதிப்பது எண்ணிப் புலம்பமாட்டேன் – சிறு புலவர்கள் (அடியேனை)பாராட்ட வேண்டுமென்பதற்காக வீணாகப் பாடமாட்டேன்
யான் அடைந்த அநுபூதிக்கு எண் இன்று ஆமே-(கண்ணால் ஆட்கொள்ளப் பெற்று)அடியேன் பெற்ற பேரின்பத்திற்கு (தானே கண்டறிந்ததும் பிறர்க்குச் சொல்ல இயலாததுமான பேரின்பத்திற்கு) அளவே கிடையாது.
இன்றுடன் போன நாள்களும் வந்திடுந்தேதி யோடுசொல்1 என்றும்நின் பாரம் நானென நாடும்நீர்
ஒன்றுதந் தாய்பொ லார்உதி ரந்திரண் டாழிதோயஓருங்கடுந் தீரா! வீரமும் ஈவதேன்?
நன்றுபண்பி யாவும் நீதரல் என்கைவம் போதென்வீரையில்நந்துதண் டாழி வாள்சிலை யோடுளாய்!
மன்றுள்நின் றாடி னான்அயன் இந்திரன் தேவர் மானிடர்மண்கலுழ்ந்தான்எ னாநிகழ் மாயனே!–57-பதின்சீர் வண்ண விருத்தம்–( தந்தனந் தான தானன தந்தனந் தான தானன
தந்தனந்தான தான்ன தானனா)
இன்றுடன் போன நாள்களும் வந்திடும் தேதி யோடுசொல்-(அடியேன் பலவாறு போற்றிப் பாடியும் ) இந்நாள் வரையும் இனி வரப் போகும் நாள்களையும் கூட்டியுரைப்பீராக
என்றும் நின் பாரம் நான் என நாடும் நீர் ஒன்று தந்தாய்-எக் காலத்தும் உன்னுடைய துன்பச் சுமைகளை யெல்லாம் நானே சுமப்பேன் என்று அடியேனை நாடி வந்த நீவீர் எல்லாம் ஒன்று என அருளினீர்கள்
பொலார் உதிரம் திரண்டு ஆழி தோய ஒருங்கு அடும் தீரா-தீக்குணமுடைய அசுராதிகள் ( முற்றிலும் அழிந்ததால் அவர்களுடைய ) இரத்த ஆறு பெருகி கடலைச் சென்றடையுமாறு போரிட்டழிக்கும் வெற்றிச் செல்வரே!
வீரமும் ஈவது ஏன்- (அடியேனுக்கு) வலிமையை அளிப்பது எதற்காகவோ?
நன்று பண்பு யாவும் நீ தரல் என்கை வம்போ-நல்லவை எல்லா வற்றையும் நீரே அருளுகிறீர் எனக் கூறுதல் பொய்யோ
தென் வீரையில் தந்து துண்டு ஆழி வாள் சிலையோடு உள்ளாய் வீரகேரளம்புதூரில் சங்கு, தண்டம், சக்கரம், வாள். வில் என்னும் பஞ்சாயுதபாணியாய் விளங்குகின்றவரே!.
மன்றுள் நினறு ஆடினான் அயன் இந்திரன் தேவர் மானிடர் மண்கலுழ்ந்தால்ஏனை நிதழ் மாயனே- சபைகள் தோறும் காலைத் தூக்கி நின்று ஆடும் சிவபெருமான், பிரமன்,தேவேந்திரன், தேவலோகத்தவர் மற்றும் மண்ணுலக மக்கள் எல்லாம் (நீவீர்) மண்ணுலகில் வந்து கலங்கி அழுதீர் என்று சொல்லும்படியாகக் கண்ணன் அவதாரமாய் நின்ற மாயக் கண்ணபிரானே! (திருவாய் மலர்ந்தருளுவீராக.)
மாயன் ஆரணஞ் செப்புநர் பலர்வரலான நாபியந் தக்கரி யவன் அடல்
வாணன் ஆணமைகுன் றப்பொரு சிலைவலி யுற்றோன் ஓர்
பாய வானவெங் கட்கடு அரவணைஓவி வீரையின் கட்குடி கொளும்அரி
பாலெ னாதுநெஞ் சத்துயர் முழுதும்உரைப்பாரார்?
கார னானமுன் ஒஞ் சத்தகு தகையதுநாரை மீன்அருந் தித்திரி பிழையது
காமர் ஓதிமம் தத்தைஅ னவன்மகன் நட்டூர்ஆன்ஈர மீறிஅங் குற்றுள மகிழ்வன
தோழி மார்மயங் கிப்புணர் பவர்அனை ஏகி டாள்சினர் தெட்டுணை யுரிமையும் விட்டாளே.–58-பதின்மூன்றுசீர் வண்ண விருத்தம்)-(தான தந்தனந் தத்தன தனதன தான தானனந் தத்தன தனதன
தான தானனந் தத்தன தனதன தத்தானா)
மாயன் ஆரணம் செப்புநர் பலர் வரல் ஆன நாபி- மாயவன்,வேதத்தைச் சொல்பவர்கள் பல பேர் தோன்றுவதற்குக் காரணமான (பிரமனை உந்திக் கமலத்திலே தோற்றுவித்த )பத்மநாபன்
அந்தக் கரியவன் அடல் வாணன் ஆண்மை குன்றப் பொருசிலை வலி உற்றோன்- நீலமேக வண்ணன், போரிட வந்த வாணாசுரனின் ஆண்மை கெடும்படியாகச் சண்டையிட்ட வில் வலிமை யுடையோன்
ஓர் பாயல் ஆன வெம்கண் கடு அரவணை ஓவி- வெம்மையான நஞ்சினையுடைய (ஆதிசேடன் என்னும்) பாம்பாகிய படுக்கையை விட்டு (எழுந்து வந்து)
வீரையின் கண் குடி கொள்ளும் அரி பால்-வீரகேளம்புதூர் கோயிலிலே வாசங்கொண்டிலங்கும் (என் தலைவனாகிய) திருமாலினிடத்தே எனது நெஞ்சத்துயர் முழுதும் உரைப்பார் யார்-(தலைவனை
விட்டுப் பிரிந்துழலும்) என்னுடைய உள்ளத்துத் துன்பத்தை யெல்லாம் சென்று சொல்லி வருவார் யார் இருக்கிறார்கள்? (யாரும் இல்லையே)
கார் அனான் முன் ஒஞ்சத் தகு தகையது- மேகமானது (என் தலைவனாகிய நீலமேக வண்ணனின் மேனி நிறத்தைக் கண்டு) அன்னவர் முன்னே செல்லவும் வெட்கப்படும் தன்மை யுடையது
நாரைமீன் அருந்தித் திரி பிழையது-நாரையானது மீன்களை நீரில் பிடித்துத் தின்னும் குற்றமுடையது (என் தலைவன் மீன் அவதாரம் செய்தவன், நாரைக்கு அவனுருவம் மீன் போன்றே தோன்றும் ஆகையால் அதுவும் பொருந்தாது)
காமர் ஓதிமம் தத்தை அனவன் மகன் நட்டு ஊர் ஆன் உற்று உளம் மகிழ்வன – அழகிய அன்னமும் கிளியும் அத்தகையவரின் (என் தலைவனின்) மக்களாகிய பிரமனும் ஏறச் செலுத்தும் ஊர்திகள்; மேலும், வீர கேரளம்புதூரின் சோலையின் வனப்பைக் கண்டு அங்கேயே தங்கி நெஞ்சம்
நிறைவன (ஆகையால் அவையும் பொருத்தமில்லை)
தோழிமார் மயங்கிப் புணர்பவர்- (என்னைச் சுற்றி யிருக்கும் என்னுடைய)தோழிப் பெண்களோ (என் தலைவனைப் போன்ற ஆண்மை மிக்கவர்களைக் கண்டாலே) மயக்கம் கொண்டு அணையும் இயல்பினர் (எனவே அவர்களும் தூதாகச் செல்லத் தகுதியற்றவர்)
அனை ஏகிடாள் சினந்து எத்துணை உரிமையும் விட்டாளே- அன்னையோ (நான் சொன்னாலும் ) போக மாட்டாள்.-என் மீதும் கோபங்கொண்டு எள்ளளவு கூட அன்பில்லாதவளாக மாறிவிட்டாள்!
இது, தலைவனிடம் தூது அனுப்பத்தக்க தூதுப் பொருள் அமையாது வருந்தும் தலைவி இரங்கிக் கூறியதாகும்.–
ஆளாவார் சென்னி அணிபூ வனையதிருத்
தாளா! நம் வீரைநகர்த் தாடாளா!
தேளாம் மிடியொழித்துச் சித்தியெட்டும் நல்கியென்றும்
மீளாக்கதியில் விடு.–59-சவலை வெண்பா-
ஆளாவார் சென்னி அணி பூ அனைய திருத்தாளா -தேவரீருக்கு அடியாரான பாகவதர்கள் தலையில் சூடும் தாமரை போன்ற திருவடிகளை உடையவரே!
நம் வீரை நகர்த் தாடாளா -எங்கள் வீரகேரளம்புதூரில் வாழுபவரே!
தேள்ஆம் மிடி ஒழித்து சித்தி எட்டும் நல்கி என்றும் மீளாக் கதியில் விடு-தேன் போன்று துன்பத்தைத் தரும் என் வறுமையை நீக்கி அட்டமாசித்தி என்பன வற்றை யெல்லாம் தந்து, எப்பொழுதும் நீங்காத பேரின்ப வீட்டை அருளுவீராக!
விடுக்கும் தழையன்றி மாலையொன் றீயும்பொய் வேட்கையன்அன்று
எடுக்கும்குன் றாற்பசுக் காத்தான்தென் வீரை யிடத்தினிது
கொடுக்கும் துழாயலங் கற்சீர் இரண்டும் குலாவுவதால்
‘படுக்கும் கொடுமை யலார்க்கரு ளோகைபப் பாதியன்றே.–60-கட்டளைக் கலித்துறை-
விடுக்கும் தழை அன்றி மாலை ஒன்றுஈயும் பொய் வேட்கையன் அன்று- (உம்முடைய தலைவர்) கையுறையாகத் தந்தனுப்பியுள்ள இத் தழை மட்டுமல்லாமல் மாலை ஒன்றையும் அளித்துள்ளார் என்பதால் அவர் விருப்பத்தில் ஐயங்கொள்ளாதே. அவர் பொய் வேடதாரி அல்லர்
அன்று எடுக்கும் குன்றால் பசுக்காத்தான்- கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்பாடியிலுள்ள பசுக் கூட்டங்களை யெல்லாம் காப்பாற்றியவர் அவர்
தென் வீரை இடத்து இனிது கொடுக்கும் துழாய் அலங்கல் சீர் இரண்டும் குலாவுவதால் படுக்கும் கொடுமை – வீரைநகரில் மகிழ்ந்து கொடுத்த இத் திருத்துழாய் மாலையில் தளிராகிய தழை என்பதும் உண்டு, அதுவே பூமாலையாக ஆவதும் உண்டு. இவ்விரண்டு சிறப்புகளை உடையதாகையால் இதைப் பெற்றவர் துன்பங்கள் எல்லாம் தீரும்
அயலார்க்கு அருள் ஓகை பப்பாதி அன்றே-(தீமை புரியும் கொடுஞ்செயல் புரிபவர் அல்லாத) நல்லோருக்கெல்லாம் அவர் அருளும் உவகை பாதிபாதி என்று தவறாக எண்ணாதே. (அவர் அருள் முழுமையானதே) இதை ஏற்றுக் கொள்வாயாக.-
பாதிக் கலைவாண் மதிநுதற்பொற் பாவை யனையீர் எனதுமகள்
பலவா மகளிர் விளையாட்டிற் பழகும் வீரைப் பதிமாலை
வீதிக் கருடன் மிசைகண்டே மெலிந்து பலகோ ரணிசெய்து
வீழ்ந்தே கிடந்தாள் அன்றொருநல் விறலி கொணர்ந்த விரைத்துளவால்
சோதிக்கமல முகமலர்ந்து சொற்சோர் வின்றி ஆன்பாலும்
சோறும் அருந்தி வளைகலன்பொற் சுண்ணம் களபம் தொடுத்தணிந்து
மாதிக்கறிய இன்றென்பால் வருவான் கலக்கஎ னச்செருக்கி
மலரால் அரங்கும் அலங்கரித்து வளஞ்சேர் துதிசொற்றிருந்தாளே.–61-பன்னிருசீர்த்தாழிசை-இதுவுமது-
பாதிக் கலை வாள் மதி நுதல் பொற்பாவை அனையீர்-பிறைச் சந்திரனைப் போலவும் ஒளி வீசுவதுமான நெற்றியையுடைய தங்கப் பதுமையைப் போன்ற பெண்களே!
எனது மகள் பல ஆம் மகளிர் விளையாட்டில் பழகும் வீரைப்பதி மாலை-என்னுடைய பெண்ணானவள் (அன்று ஆயர்பாடியில்) எண்ணற்ற கோபியர்கள் இடையே பற்பல ஆடல்களில் மூழ்கித் திளைத்த வீரகேரளம்புதூர்த் தலைவரான திருமாலானவர்
வீதிக் கருடன் மிசை கண்டேமெலிந்து பல கோரணி செய்து வீழ்ந்தே கிடந்தாள்-தெருவில் கருடப்பறவை மீது அமர்ந்து வந்ததைப் (கருட சேவையினை) பார்த்து (அவர் மீது காதல் கொண்டு) உடல் மெலிவுற்று, சொல்லு தற்கரிய பலவித நோய்கள் பெற்று (பேச்சு மூச்சின்றி) தரையில் படுத்திருந்தாள்-
அன்று ஒரு நல் விறலி கொணர்ந்த விரைத் துளவால் சோதிக் கமல முகம் மலர்ந்து- அத்தகைய ஒருநாளில் இளம் பருவத் தோழி ஒருத்தி (தலைவரிடத்திருந்து) கொண்டு வந்த
நறுமணம் கமழும் திருத்துழாயால் (அவள் மயக்கம் தீரும்படியாக) அவள் நிலையை ஆராய்ந்த பொழுது (அது வரையில் சோர்ந்து காணப்பட்ட அவள்) அத் துழாயால் ஒளி வீசும் தாமரை மலர் போன்று முகமலர்ச்சி யுண்டாகி
சொல் சோர்வு இன்றி ஆன் பாலும் சோறும் அருந்தி-(ஆனந்த மேலீட்டினால், வாயில் படபடவென சொற்கள் தடுமாற்றமின்றி வெளி வரவும், பசுவின் பாலும் சோறும் உண்டு
வளை கலன் பொற்சுண்ணம் களபம் தொடுத்து அணிந்து- கையில் வளையல்களையும் உடல் முழுவதும் ஆடை அணி கலன்களையும் பொற் கண்ணமும் நறுமண மிக்க சாந்தினையும் மிகப் பலவாக அணிந்து கொண்டு
மா திக்கு அறிய இன்று என்பால் வருவான் கலக்க எனச் செருக்கி- ( அழகும் சிறப்பும் பொருந்திய) தாயே! எல்லாத் திசை யிலுள்ளவர்களும் அறியும்படியாக (என் இறைவர்) இன்றைய தினம் என்னிடம் வருவார், வந்து என்னை அணைப்பார் என்று மிக்க களிப்புடன்
மலரால் அரங்கும் அலங்கரித்து வளம்சேர் துதி சொற்றிருந் தாளே- பூக்களால் சபையைச் சிங்காரித்த வண்ணம்,
(நலம் தருகின்ற நாராயணா என்னும் படியான) பல போற்றிப் பாசுரங்களை அவள் வாயில் சொல்லிக் கொண்டே யிருந்தாள் (என்னே அவள் மகிழ்ச்சி!)-
இருந்தமிழ்ச்சொல் மழைபொழியும் புலவீர்! செஞ்சொல் ஏற்றமெல்லாம் மருதனைப்போல் இனிது தேறும்
அருந்தகைய மன்னர்களே! வயிரம் குன்றா அன்பர்காள்! வீரையின்மால் அடியார்பாதம்
தருந்தரும வடிவான துகளைச் சென்னி தாங்கியபின் என்மனத்திற் தானாத் தோன்றும்
பெருந்தனத்துப் பனுவல்கள் எத்தனையோ சற்றே பேசுகின்றேன் இதுபகர்தல் பெருமைக் கன்றே.–62-எண்சீர் ஆசிரிய விருத்தம்-
இருந்தமிழ்ச் சொல் மழை பொழியும் புலவீர்-(பல்லாயிரம் ஆண்டுகளாகியும் இன்னும் இளமையோடு இருக்கும்)சிறந்த தமிழ் மொழியால் எண்ணற்ற பாசுரங்களைப் பாடும் புலமையுடையோரே!
செஞ்சொல் ஏற்றம் எல்லாம் மருதனைப் போல் இனிது தேறும்- (நீவிர் சொல்லும்) செம்மை மொழியின் பெருமை யனைத்தும் மருதப்பனைப் போன்றே ஏற்றம் பல பெறும்
அருந்தகைய மன்னர்களே வயிரம் குன்றா அன்பர்காள்-நற்குணமும் பெருமையும் மேன்மையும் மிக்க அரசர் பெரு மக்களே! வலிமை மிகப் பெற்ற அன்புடையவர்களே!
வீரையின் மால் அடியார் பாதம் தரும் தரும வடிவான துகளைச் சென்னி தாங்கிய பின்- வீர கேரளம்புதூரில் கோயில் கொண்டுள்ள கண்ணபெருமானின் தொண்டர்தம் காலடிகள் அளிக்கும் அறத்தின் சின்னமான துகங்களை(அடியேனுடைய) தலையில் அணிந்த பின்பு என் மனத்தில் தானாத் தோன்றும் பெருந்தனத்துப் பனுவல்கள் எத்தனையோ – அடியேனுடைய உள்ளத்தில் இயல்பாக உண்டாகும் சிறப்புடைய பாடல்கள் கணக்கற்றன-
சற்றே பேசுகின்றேன் இது பகர்தல் பெருமைக்கு அன்றே(அப் பனுவல்களில்) சிலவற்றை மட்டுமே இப்பொழுது பாடுகின்றேன். இவ்வாறு பாடுவது அடியேன் புலமைச் சிறப்பைக் காட்டுவதற்காக அல்ல என்பதை அறிவீராக.(எம்பெருமானின் திருப் புகழைப் பரப்பவே அடியேன் பாடுகிறேன்.)
மைக்கன மேநிகர் கிட்டிணன் வானவர் மட்குமுன் வாழ்வருள் பெட்பினான்
அக்கர மாவன எட்டுடை யான்அரு மைத்திரு வாய்மொழி கற்றுளார்
பக்கம்வி டாதவி ருப்பினன் வீரையர் பற்பல நாளும்வ ழுத்துகோ
செக்கரை நேர்சிவன் முற்சில ரேயுணர் சித்துடை யானெனல் மெய்ச்சொலே.–63-எழுசீர் வண்ண விருத்தம்-( தத்தன தானன தத்தன தானனதத்தன தானன தத்தனா )
மைக்கனமே நிகர் கிட்டிணன் வானவர் மட்கும் முன் வாழ்வு அருள் பெட்பினான்- (அடர்ந்த மை போன்ற கருமேகமே போன்ற கண்ண பெருமானானவர் தேவர்கள் அழியும் முன்பாக அவர்களுக்கு அபயம் அருளிய பெருமைக்குரியவர்
அக்கரம் ஆவன எட்டு உடையான்- (ஓம் நாராயணாய நம என்னும்) திருமந்திரவெழுத்து எட்டின் வடிவாக இருப்பவர்
அருமைத் திருவாய்மொழி கற்று உளார் பக்கம் விடாத விருப்பினன்- (ஆழ்வார்களிற் சிறந்தோராகிய) நம்மாழ்வார் இயற்றியருளிய திருவாய்மொழியைப் படித்துணர்ந்தோர் அருகேயே தங்கியிருக்கும் ஆவலுடையவர்
வீரையர் பற்பல நாளும் வழுத்தும் கோ- வீரைநகர அன்பர்கள்-அனு தினமும் போற்றிப் பரவும் தலைவர்!
செக்கரை நேர் சிவன் முதல் சிலரே உணர் சித்து உடையான் எனல் மெய்ச் சொல்லே-செவ்வானம் போன்று செம்மை நிறமான சிவபெருமானை யொத்த ஒரு சிலர் மட்டுமே அறியக் கூடிய மாயவித்தைகளை யெல்லாம் (சித்து விளையாடல்களை யெல்லாம்) செய்ய வல்லவர் என்று பலரும்
கூறுவது உண்மையே யாகும் (அடியேனும் கண்டு கொண்டேன்).
சொலபமல ஓர்பெரிய தவமுளது லோகரெதிர் சொலினுமதி யார்களிது சரதமெழில் வீரையூர்
நலமருவ ஓர்கையிடை புனையும்வ நீதமிக நகநிலைகொள் வானை அவன் அடியவர்கள் பாடலால்
மலநிகள மானதடை முறியநனி பேசிஇகல் வலியதகு வேசர்முடி இடறலும்அ வாவியே
தலமகள்அ கோவெனம னியகொடிதெ லாமும்அழிதலின்முயல் ஓர்பாகவ தனதுபிறகு போதலே.--64-எண்சீர் வண்ண விருத்தம்-(தனனதன தான தன் தனன தன தானதன தனனதன் தானதன் தனனதன தானனா)
லோகர் எதிர் சொல்லினும் மதியார்கள் -மெய்யறிவு இல்லாத உலக மக்கள் எம்பெருமானே நேரில் வந்து வாக்கருளினாலும் உணர மாட்டார்கள் (அத்தகைய அஞ்ஞானம் மிக்கவர்கள் அவர்கள்)
இது சரதம்- இதுவே உண்மை நிலையாகும்
எழில் வீரையூர் நலம் மருவ ஓர் கையிடை புனையும் நவநீதம் மிக நகம் நிலைகொள்வானை-அழகுமிக்க வீரகேரளம்புதூர் என்னும் நகர் சிறக்கும்படியாக, தம்முடைய ஒரு கரத்திலே வெண்ணெயை ஏந்தி இப்பூமியில் வந்து தங்கிய எம்பெருமானாகிய கண்ணபிரானை
அவன் அடியவர்கள் பாடலால் மலம் நிகளமான தடை முறிய நனிபேசி- அவருடைய திருவருள் பெற்ற அடியவர்களாகிய ஆழ்வார்கள் போன்றோரின் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களால். அறியாமை,வினைகள் ஆகிய விலங்குகள் அகலும்படியாகப் போற்றியும்-
இகல் வலிய தகுவேசர் முடி இடறலும் அவாவியே -பகை யுணர்ச்சி மிக்க கொடிய அரக்கர்களின் தலைகள் கவிழும் படியாக விரும்பியும்
தலமகள் அகோ என மன்னிய கொடிது எல்லாமும் அழிதலில் முயல்- பூமாதேவி வருந்தும்படியாக நிலைபெற்ற கொடுமைகள் அனைத்தும் ஒழியும் படியாகவும் அரும் பணியாற்றுகின்ற
ஓர் பாகவதனது பிறகு போதலே – ஒப்பற்றதொரு அடியாரது நெறியைப் பின்பற்றுகின்ற ஓர் பெரிய தவம் உளது -ஓர் உன்னதமான தவம் இருக்கின்றது(இதை உணர்வீர்களாக)
சொல்அபம் அல- (அடியேனுடைய மொழியில் வேறுபாடு எதுவுமில்லை (அறவீர்களாக.)
போதனைப் பலகோடி புவனமொடு தரவுந்தி பூத்தநெடு மால்புரக்கும்
புனிதவீ ரைப்பதிப் புலவீர்என் மொழிகளிற் பொய்யின்று, சிறிதுகேண்மோ
ஆதவர்க ளொடுகூடி விளையாடினேன் செறுவில் அண்டாரைவேர்கெல்லினேன்
அம்புயம் தடமலை யசைத்திடக் கண்டேன் அரக்கர் உருளச்சிரித்தேன்
காதகத்தொழிலோரை மிகமதித்தேன் சிறிது கடலைக் கடைந்தும் உண்டேன்
கன்னியரை அன்னைய ரென த்தக்கபே ரொடும் கலகங்கள் பெரிதுசெய்தேன்
பூதம்ஒன் றைப்பதத்தால் மிதித்தேன்; பெரும் புற்றினைக் கொண்டுவந்தேன்.
புண்ணியம் பேசினேன் அகளங் கரச புஞ்சபூர ணத்துற வெய்தியே.–65-இரட்டையாசிரிய விருத்தம் )சம்பிர தம்-இது இருபொருள் பயப்பதாக அமையும்.
போதனைப் பல கோடி புவனமொடு தர உந்தி பூத்த நெடுமால் புரக்கும் புனித வீரைப்பதிப் புலவீர் -எண்ணற்ற அண்டங்களைப் படைப்பதற்காகத் தம்முடைய உந்திக் கமலத்தில் பிரமனைத் தோற்றுவித்த திருமால் ஆகிய கண்ணபிரான் காத்தருளும் புண்ணிய நகராகிய வீரகேரளம்புதூரில் விளங்கும் சான்றோர்களே!
என்மொழிகளில் பொய் இன்று சிறிது கேண்மோ- அடியேனுடைய கூற்றுகளில் பொய் ஒன்றுமில்லை (எல்லாம் மெய்யே) சற்றுச் செவி மடுத்துக் கேட்பீராக!
சம்பிரதப் பொருள்-
ஆதவர்களோடு கூடி விளையாடினேன் – பல ஸூரியங்களுடன் சேர்ந்து ஆடல் புரிந்தேன்
செருவில் அண்டாரை வேர் கெல்லினேன்- போரிட வந்த பகைவர்களை வேரோடு கிள்ளி (தோண்டி) எறிந்தேன்
அம்புயம் தடமலை அசைத்திடக் கண்டேன்-வலிமை மிக்க தோள்கள் பெருங் குன்றுகளை அசைப்பதைப்பார்த்தேன்
அரக்கர் உருளச் சிரித்தேன்- அசுரர்கள் தோல்வி யுற்று மடிந்து உருண்டு விழுமாறு அவர்களைப் பார்த்து நகைத்தேன்
காதகத் தொழிலோரை மிக மதித்தேன்-கொலைகள் செய்வோரை நன்கு போற்றினேன்
சிறிது கடலைக் கடைந்தும் உண்டேன் -சிறிதளவு கடல் நீரைக் கடைந்தும் சாப்பிட்டேன்.
கன்னியரை அன்னையர் எனத் தக்க பேரோடும் கலகங்கள் பெரிது செய்தேன் – மணமாகாத பெண்களைத் தாயானார்கள் எனச் சொல்லுமாறு குழப்பம் பல புரிந்தேன்
பூதம் ஒன்றைப் பதத்தால் மிதித்தேன்- கொல்ல வந்த பூகம் ஒன்றைக் காலால் நசுக்கிக் கொன்றேன்
பெரும் புற்றினைக் கொண்டு வந்தேன் – பெரிய பாம்பினைக் கொணர்ந்தேன்
புண்ணியம் பேசினேன்- வேதங்களிலும் மேலான ஞானத்தைப் பற்றியே எடுத்துரைத்தேன்
அகளங்க ரச புஞ்ச பூரணத் துறவு எய்தியே- அகளங்க அரச புஞ்ச பூரணத் துறவு எய்தியே (இவற்றை யெல்லாம் செய்தேன்)
இயற்கைப்பொருள்
ஆதவர்களோடு கூடி விளையாடினேன் – இடையர்களாகிய யாதவர்களுடன் சேர்ந்து ஆடல் புரிந்தேன்
செருவில் அண்டு ஆரை வேர் கெல்லினேன்- வயலில் முளைத்த ஆரைச் செடியின் வேர் எடுத்தேன்.-
அம்புயம் தடமலை அசைத்திடக் கண்டேன்- தாமரையைத் தண்ணீர் அலைகள் அசைத்திடக் கண்டேன்
அரக்கர் உருளச் சிரித்தேன்- சாராயம் குடித்தவர்கள் புரண்ட போது நகைத்தேன்
காதகத் தொழிலோரை மிக மதித்தேன்- காத்தல் தொழில் புரியும் (அதகரை) மருத்துவரை மிகவும் மதித்தேன்
சிறிது கடலைக் கடைந்தும் உண்டேன்- கொஞ்சம் கடலைப்பருப்பைக் கீரையோடு சேர்த்துக் கடைந்தும் சாப்பிட்டேன்.
கன்னியரை அன்னையர் எனத்தக்க பேரொடும் கலகங்கள் பெரிது செயதேன்- இளம்பெண்கள், ஆயர்குலத் தாய்மார்கள் ஆகியோருடன் கூடி விளையாடி பேரொலி எழுப்பினேன்
பூதம் ஒன்றைப் பதத்தால் மிதித்தேன்-பூமியைக் காலால் மிதித்துக் கொண்டே இருக்கிறேன்
பெரும் புற்றினைக் கொண்டு வந்தேன்- பெரிய புல்லை உடைய தினையை எடுத்து வந்தேன்
புண்ணியம் பேசினேன்- தூய்மையே பேசினேன்
அகளங்க ரச புஞ்ச பூரணத்து உறவு எய்தியே – குற்ற மற்றதும் இனிமையின் திரட்சியினதுமாகிய முழு முதற் பொருளான இறைவனின் துணை கொண்டே-
துறவாது வேடமிட்டுத் தொண்டரொடு கூடி
அறமலிதற் காவனசெய் யாமல் பிறவிப்
பிணிமலிதற் கான பிழையனந்தம் செய்தேன்
அணிதமிழ்க்கும் வேட்கையுற்றா யன்றோ!-பணிலமொடு
சக்கரமும் ஏந்தித் தமியேன் மனவெளியூடு
அக்கனவில் வந்ததுபொய் யாகாமே- திக்கறியப்
பட்டப் பகலிற் பறவையர சேறிவந்தென்|
இட்டப் படியருட்பே றீந்தருள்வாய்-துட்டர்களைக்
கொல்வதஞ்சிப் பேடிக் குணங்காட்டி னற்றிருத்தி
வில்வலிமைக் கீர்த்தி மிகக்கொடுத்தாய்-கல்வரை ஒன்று
ஏந்திப் பசுக்காத்திட்டு இந்திரனும் வானவரும்
காந்தியநெஞ் சேங்கி ஒல்கக் கண்டுவந்தாய்-நீந்திக்
கரையேற வல்லார் கருத்துங் கலங்கத்
திரைவீசும் வாவியிலோர் தீக்கண்- வரைபோலும்
பாம்பிற்கும் அம்பொற் பதஞ்சூட்டி னாய்எனையோர்
வேம்பிற் கசந்து வெறுத்துவிடேல்-கோம்பிக்கு
உருகும யில்போற்பொன் உள்ளவரை நாடி
அருகுமிழி வாற்தளர்ந்தேன் அந்தோ ஒருகுறையும்
இல்லாத ருள்வதனுக் கேதேனும் ஓர்தடைநின்
கூத்துள் அடக்கமெனக் கோடாநு கோடிமறை
ஏத்தும் உலவா இசைபொய்யோ- ஆத்துமப்பேர்
ஆனந்தத் தாசை அணுவுமரு வாக்கவிஞர்
போனதற் கஞ்சிப் புழுங்குகின்றேன்- தானம்
தராவிடினும் என்சொற்தமிழ்விலைப் பொன்தந்தால்
கராசலம்போன் றுய்ந்துகொள்வேன் கண்டாய்- குராவினையும்
கையாற் தழுவக் கருத்தொவ்வாக் கற்பினர்தம்
ஓய்யாரத் துப்பால் உயர்வீரை- எய்யாப்
புகழ்பொருந்தக் காக்கும் புருடோத் தமனே
இகழ்சிலர்க்கும் பேறளித்தோனே.–66-நேரிசைப் பஃறொடை வெண்பா-
குராவினையும் கையால் தழுவக் கருத்து ஒவ்வாக் கற்பினர் தம் ஓய்யாரத் துப்பால் உயர் வீரை எய்யாப் புகழ் பொருந்தக் காக்கும் புருடோத்தமனே-குரா மரத்தினையும் தம் கரங்களால் தொட விரும்பாத கற்பு நலம் மிக்கவர்கள்
வாழும் அழகும் மேன்மையும் மிக்க வீரை நகரை(இதுகாறும் எந்த நகரும் அடையாத )பெருஞ்சிறப்புடன் வாழ்வித்தருளும் ஆண்மையில் சிறந்த அரசரே!
இகழ் சிலருக்கும் பேறு அளித்தோனே- (உம்மை) வெறுத்துப் பேசியவர்களுக்கும் வீடுபேறு நல்கியவரே!
துறவாது வேடம் இட்டுத் தொண்டரோடு கூடி – மண், பெண்.பொன் என இவ்வுலக ஆசைகள் ) எதையும் துறக்காமல், வெறும் வேடதாரியாகி, அடியார் கூட்டத்தில் சேர்ந்து
அறம் மலிதற்கு ஆவன செய்யாமல் பிறவிப்பிணி மலிதற்கான பிழை அனந்தம் செய்தேன்-தருமம் தழைப்பதற்கு வேண்டியதைச் செய்யாது, (மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழலும்) பிறவி நோய் உண்டாவதற்கான குற்றங்களை யெல்லாம் அளவில்லாமல் புரிந்தேன்
அணி தமிழ்க்கும் வேட்கை உற்றாய் அன்றோ-(ஆழ்வார்களின்) பெருமை மிக்க திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களுக்கு ஆசை கொண்டீர் அல்லவா?
பணிலமொடு சக்கரமும் ஏந்தி தமியேன் மனவெளி ஊடு அக்கனவில் வந்தது பொய் ஆகாமே – சங்குடன் சக்கரமும் கையில் ஏந்திக் கொண்டு வறியவனாகிய அடியேனுடைய உள்ளத்தின் கண்ணே அன்றொரு நாள் கனவில் (நீவிர்) வந்து காட்சியருளியது பொய்யாகி விடாமல்
திக்கு அறியப் பட்டப் பகலில் பறவை அரசு ஏறி வந்து என் இட்டப்படி அருள் பேறு ஈந்து அருள்வாய்-எல்லாத் திசைகளும் பார்க்கும்படியாக, ஸூரியன் ஒளி வீசும் பகற் பொழுதில் கருடன் மீதமர்ந்து எழுந்தருளி அடியேனுடைய விருப்பத்திற்கேற்பப் பெறுதற்கரிய பேரின்ப வீட்டினை அளிப்பீராக!
துட்டர்களைக் கொல்வது-அஞ்சிபேடிக்குணம் காட்டிநர் திருத்தி வில் வலிமைக் கீர்த்தி மிகக் கொடுத்தாய்-கொடியவர்களைக் கொல்லப் பயந்து ஆண்மையின்மையைக் காட்டியவனைத் (அருச்சுனனைத்) திருத்தி அவனுடைய கை வில்லின் பேராற்றலைக் காட்டினீர்)
கல் வரை ஒன்று ஏந்திப் பசு காத்திட்டு இந்திரனும் வானவரும் காந்திய நெஞ்சு ஏங்கி ஒல்கக் கண்டு உவந்தாய் (கோவர்த்தன கிரி என்னும்) பெருங்கல் மலையை ஒரு விரலால் தாங்கி நின்று பசுக் கூட்டங்களைக் காப்பாற்றி,) இந்திரனும் தேவர்களும் பொறாமையால் மனம் வெதும்பி ஏக்கமுற்று மெலிவதைப் பார்த்து மகிழ்ந்தீர்-
நீந்திக் கரை ஏற வல்லார் கருத்தும் கலங்கத் திரை வீசும் வாவியில் ஓர் தீக்கண் வரை போலும் பாம்பிற்கும்
அம்பொற் பதம் சூட்டினாய்- (பாவங்களே நிறைந்த பிறவியாகிய துன்பக் கடலை) நீந்திக் கடக்க வல்லவர்களின் (ஞானிகளின்) நெஞ்சமும் நடுக்கும்படியாக (தீமையே நிறைந்த) அலைகள் வீசும் நீர்ப் பரப்பில் தோன்றிய பெருந்தீப்பிழம்பைக் கண்களால் பொழிந்து கொண்டுடிருக்கும் மலை போன்ற (காளிங்கன் என்னும்) பாம்புக்கும் (அதன் தலை மீது ஏறி நடனம் செய்து) உம்முடைய திருவடிகளை அளித்தீர்கள்!என்னை ஓர் வேம்பில் கசந்து வெறுத்து விடேல்-அடியேனை வெறுக்கத் தக்க ஒருவனாக எண்ணத் தள்ளிவிட வேண்டாம்
கோம்பிக்கு உருகும் மயில் போல் பொன் உள்ளவரை நாடி அருளும் இழிவால் தளர்ந்தேன் அந்தோ- பச்சோந்திக்காக மயக்கம் கொள்ளும் மயிலைப் போன்று, செல்வம் உடையவர்களைத் தேடிச் சேர்ந்து இரந்து இழிந்து மெலிந்தேன், என்னே என் நிலை!
ஒரு குறையும் இல்லாது அருள்வதனுக்கு ஏதேனும் ஓர் தடை நின் வல்லாண்மையில் பெரிதாய் வந்து உள்ளதோ-(துன்பப்பட்டு வருந்திச் சரணடைவோருக்கு உடன்அருளாமல்) உம்முடைய குறைவில்லாத கிருபையை நல்கும் வல்லாண்மையில் என்ன தடை ஏற்பட்டதோ அறியேன்! (ஏதாகிலும் தடை உள்ளதா எனத் தெரிவிப்பீராக) எல்லாம் நின் கூத்துள் அடக்கம் எனக் கோடாநு கோடி மறை ஏத்தும் உலவா இசை பொய்யோ -அண்ட சராசரங்கள் அனைத்தும் இயங்கும் இயக்கம் எல்லாம் உம்முடைய பேராடலில் அடங்கும் என்று வேதங்களெல்லாம் புகழ்ந்து ஏத்துவது பொய்யாகுமோ?
ஆத்துமப் பேரானந்தத்து ஆசை அணுவும் மருவாக் கவிஞர்|-போனதற்கு அஞ்சிப் புழுங்குகின்றேன்- இவ்வுலகில் புழங்கும் சீவாத்துமாக்கள் பரமாத்மாவாகிய உம்மைச் சரணடைதல் வேண்டும் என்னும் பேரவாவை ஒரு சிறிதும் கருதிக் கைவரப் பெறாத போலிப் புலவர்களின் இழி தன்மைக்கு அஞ்சி மனம் வெதும்புகின்றேன்–தானம் தரா விடினும் என் சொல் தமிழ் விலைப் பொன் தந்தால் கராசலம் போன்று உய்ந்து கொள்வேன் கண்டாய்-(நீவீர்) தருமமாக எதையும் அடியேனுக்கு அளிக்க வேண்டாம்.(உம்மைப் புகழ்ந்து பாடும் பாடலுக்கேற்ப) அடியேனுடைய மொழிக்குத் தக்க மதிப்பாகப் (பேரின்பத்தினை)பொன்னை அளித்தால் போதும்.யானையைப் (கசேந்திரனைப்) போன்று அடியேனும் பேறு பெற்றவனாவேன்.காண்பீராக.
அளிக்கொந் தளகமின் னார்தம்மை நாடி அகம்பெரிது
களிக்குங் தமியனை ஆண்டால்நின் மெய்ப்புகழ்க் காமர்குன்றாது
ஒளிக்கும்ப மென்முலைக் கோபியர் கூட்டம் ஒருங்கணைந்தாய்
துளிக்குஞ்செர் தேன்பொழில் சூழ்வீரை காக்கும் தொழிற்கண்ணனே.–67-கட்டளைக் கலித்துறை-
ஒளிக்கும்ப மென்முலைக் கோபியர் கூட்டம் ஒருங்கு அணைந்தாய்- அழகிய கச்சினகத்தே யானையின் மத்தகம் போன்று குவிந்ததும் மென்மை யானதுமான நகில்களையுடைய ஆயர்குலப் பெண்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் கூடியின்புற்று இருந்தவரே!
துளிக்கும் செந்தேன் பொழில் சூழ் வீரை காக்கும் தொழில் கண்ணனே – இனிக்கும் தேனைத் தம்மகத்தே கொண்ட பூக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற வீரைநகரை காப்பதே தொழிலாகக் கொண்ட கண்ண பெருமானே!
அளிக்கொந்தளகம் மின்னார் தம்மை நாடி அகம் பெரிது களிக்கும் தமியனை ஆண்டால் நின் மெய்ப்புகழ்க்காமர் குன்றாது – வண்டுகள் மொய்க்கும் மணம் மிக்க அழகிய கூந்தலை யுடைய மகளிரை விரும்பிச் சேர்ந்து களித்திருக்கும் அடியேனை ஆட்கொள்வதால் உம்முடைய
பெரும் புகழுக்கு இழுக்கு ஒன்றும் ஏற்படாது (அதனால் விரைந்து வந்து அருள் புரிவீராக )
தொழிலற் றொருதுன் பமும்இன்ப மும்அற்று
அழிவற் றபதத்து உறுமா றருள்வான்
விழியிற் றமிழ்நா டுணர்வீ ரையின்மேய
வழிபட் டனர்வாழ் வுறழ்மா யவனே.–68-கலிவிருத்தம்-
தொழில் அற்று ஒரு துன்பமும் இன்பமும் அற்று அழிவு அற்ற பதத்து உறுமாறு அருள்வான்- (இவ்வுலகப் பற்றுக்களினாலுண்டாகும்) செயல்களெல்லாம் ஒழித்து எவ்வகைத் துயரமோ மகிழ்ச்சியோ நம்மை அண்டாமல், என்றும் அழிவில்லாத திருவடிப் பேற்றினை அடையுமாறு அருள்பவர்(யார் என வினவு வீராயின்)
வழியில் தமிழ்நாடு உணர் வீரையின் மேய வழிபட்டவர் வாழ்வு உறழ் மாயனே-(ஞான நூலோர்களில்) குறைவற்ற தமிழ் நாட்டினர் நன்குணர்ந்த வீரைநகரின் கண் கோயில் கொண்டுள்ள இறைவரைப் போற்றிச் செய்தவர்களைக் காத்தருளும் மாயோனாகிய திருமாலே ஆவார்!
அவமேயுழல் பவவேர்கெலும் அட்டாக்க ரம்நட்டாய்
அவனானபின் அவளானதென் றரியாரு ணர்கிரியே
கவலைக்கடல் சுவறப்பொரு கண்ணாமணி வண்ணா
கவளங்கொள்ஓர் குவடன்றடர் கையா அருள்மெய்யா
சிவனா தியர்தவ நாடியசீலா மலைமூலா
திவவூடிருள் நவலீலைசெய் தீரா முதல்வீரா
உவரிப்பொருள் கவர்வீரையில் உற்றாய் பலநற்றாய்
உவலைப்பழி நுவலாதெனை ஒருவேளை யில்மருவே.–69-எண்சீர்க்கட்டுத் தாழிசை-
அவமே உழல் பவ வேர் கெல்லும் அட்டாக்கரம் நட்டாய்-இவ் வுலகத்தில் வீண் செயல்களிலேயே சிக்கித் தவிப்பவர்களின் பாவங்களை அடியோடு போக்குவிக்கும் விட்டுணு மந்திரமாகிய என் எழுத்துக்களின் விளக்கமானவரே!
அவன் ஆன பின் அவள் ஆனது என்று அறியார் உணர் கிரியே -ஆண் பெண் ஆனது (தேவகி மைந்தனாகப் பிறந்து யசோதையின் பெண் குழந்தை யிடத்தில் மாறிச் சென்று வளர்ந்தது) என்பதைத் தெளிந்து அறியாதவரும் உணருமாறு (கம்சன் உணருமாறு)செய்த மலையோனே!
கவலைக் கடல் சுவறப்பொரு கண்ணா! மணிவண்ணா!- பிறவித்துன்பமாகிய கடலை வற்றச் செய்யும்படிப் போரிடும் கண்ண பெருமானே! நீல நிறத்தவரே!
கவளம் கொள் ஓர் குவடு அன்று அடர் கையா! அருள்மெய்யா! குவலயாபீடமாகிய யானையைக் கொன்ற கரத்தரே!-மெய்யருளை நல்கும் இறைவரே!
சிவன் ஆதியர் தவம் நாடிய சீலா! மறை மூலா- (முப்புரங்களை வென்ற) சிவபெருமான் முதலானவர்கள் தவம் இருந்து அருள் பெற விழையும்படியான பெருமை பெற்ற நற்குண நலம் மிக்கவரே! வேதங்களுக்கெல்லாம் மூலகாரண மானவரே!
திவம் ஊடு இருள் நவ லீலை செய்தீரா! முதல் வீரா!-(பாரதப் போரில் அருச்சுனனைக் காப்பாற்ற) பகலிலேயே இரவை உண்டாக்கி (சக்கராயுதத்தால் ஸூரியனை மறைத்து)புதியதோர் பேராடலைப் புரிந்த வலியவரே! தலை சிறந்த வெற்றி யுடையவரே!
உவரிப் பொருள் கவர் வீரையில் உற்றாய்-பல கடல் பொருள்கள் பல விளங்கும் வீரகேரளம்புதூரில் பல விளையாடல்கள் புரிந்து விளங்குபவரே!
நற்றாய் உவலைப் பழி நுவலாது என்னை ஒருவேளையில் மருவே-(என்னைக் காக்கும்) நற்றாய் முதலானவர்கள் அலர் கூறாதவாறு ஒரு பொழுதாகிலும் வந்து என்னை அணைப்பீராக!
மருமலிபூங் குழல்மதங்கி ஒருத்தி வீரை மாதவன்சீர் வீணைதொட்டு வாசித் திட்டாள்
அருகிலுற்றார் அனைவரும்ஓ வியமே போன்றார் அணிநார தாதியர்மிக் கழுக்கா றுற்றார்
பொருவில்கலை மகள்உவகைப் பொலிவு கொண்டாள் பூதரம்புள் விலங்குமுதற் புகல்வ எல்லாம்
உருகினதோற் பறையறைந்திட்டு அசுணம் கொல்வார் உலோபிகள்போற் துயர்மிகப் பெற்றொடுங்கினாரே.–70-எண்சீர் ஆசிரிய விருத்தம்-இக் கலம்பக உறுப்பு மதங்கு என்றும்,
மதங்க மென்றும், மதங்கியா ரென்றும் வழங்கப்பெறும்.
மரு மலி பூங்குழல் மதங்கி ஒருத்தி வீரை மாதவன் சீர் வீணை தொட்டு வாசித்திட்டாள்- நறுமணம் மிக்க பல மலர்களைத் தன் கூந்தலிலே சூடிய மதங்கி என்னும் இளம் பெண்,வீரகேரளம்புதூரில் வாசம் செய்யும் கண்ணன் திருப் புகழைச் சொல்லி வீணையையும் சேர்த்து இசைத்தாள்
அருகில் உற்றார் அனைவரும் ஓவியமே போன்றார்- (அவளுடைய இசையைக் கேட்ட) அருகிலிருந்தோர் எல்லாம் தம்மை மறந்து (ஆடாமல் அசையாமல்) சித்திரத்தை யொத்துக் காணப்பட்டனர்
அணி நாரத ஆதியர் மிக்க அழுக்காறு உற்றார் – (இசைக்கலையில் வல்லவரான) சிறப்புடைய நாரதர் முதலானவர்களும்(அம்மதங்கி மீது) பொறாமை அடைந்தனர்
பொருவு இல் கலைமகள் உவகைப் பொலிவு கொண்டாள்-(இசைக் கலைக்குத்தெய்வமான ) ஒப்பற்ற சரசுவதி தேவி மகிழ்ச்சியால் பூரிப்படைந்தாள்
பூதரம் புள் விலங்கு முதல் புகல்வன எல்லாம் உருகினமண்ணுலகிலுள்ள மலைகள், பறவைகள், மிருகங்கள் ஆகிய சொல்லப்பெறுவன அனைத்தும் (அவள் இசைத்த இசையினைக் கேட்டு) மயக்கம் கொண்டன
தோல் பறை அறைந்திட்டு அசுணம் கொல்வார் உலோபிகள் போலத் துயர் மிகப் பெற்று ஒடுங்கினாரே-(பசு போன்றவிலங்குகளின்) தோலால் செய்யப்பட்ட பறைகளை ஒலித்து அசுணம் முதலானவற்றைக் கொலை செய்கின்றவர் அவை கிடைக்காது வருந்தி, பொய் வேடதாரிகளைப் போன்று துன்பமுற்றுச் செயலற்றுப் போனார்கள்.-
நாரியர்க்கெ லாமும்வெட்கம் நல்குபொற்பொ டுற்றஇந் நன்மதங்கி வீரை மேவும் நாரணற்பு கழ்ந்துளாள்|
ஆரியன் தன் நாவிலுற்ற மங்கையோ! அவன்கையால் அன்றுதான வர்ச்செகுத்தி டப்படைத்த பெண்கொலோ!
காரினங்கள் சென்றுகண்டு ணப்படாத பாற்கடற் கண்பிறந்த நங்கைமார்க ளிற்சிறந்த யாவளோ?
பாரினிற்சொல் ஓசைபாவ ராகதாளம் ஓர்கிலார் பஞ்சமத்தி என்னவும் பழிக்க அஞ்சி லார்களே!–71–எண்சீர்த் தாழிசை-இதுவுமது-
நாரியர்களுக்கு எல்லாமும் வெட்கம் நல்கு பொற்போடு உற்ற இந்த நல்ல மதங்கி வீரை மேவும் நாரணரைப் புகழ்ந்து உள்ளாள்- (தேவலோகப்) பெண்கள் அனைவரும் வெட்கித் தலை குனியும் படியான அழகோடு விளங்கும் இச்சிறப்பு மிக்க மதங்கியானவள் வீரைநகரை விரும்பி வாழும் கண்ண பெருமானைப் போற்றி யிசைத்து இருக்கின்றாள்
ஆரியன் தன் நாவில் உற்ற மங்கையோ -(அம் மதங்கி) நான்முகன் நாக்கில் வாழும் கலைமகளோ!
அவன் கையால் அன்று தானவர் செகுத் திடப் படைத்த பெண் கொல்லோ- சந்தோப சந்தவர்களை அழிப்பதற்காகப் பிரமனால் உண்டாக்கப்பட்டதிலோத்தமையோ!
கார் இனங்கள் சென்று கண்டு உண்ணப்படாத பாற்கடல் கண்ணே பிறந்த நங்கைமார்களில் சிறந்த யாவளோ-
கருமேகங்கள் அலைந்து திரிந்தும் வற்றாத திருப்பாற் கடலிலே தோன்றிய அரம்பையர்களுள் ஒருத்தி ஆவாளோ இவள்!
பாரினில்சொல் ஓசை பாவம் ராகம் தாளம் ஓர்கிலார் பஞ்சமத்தி எனவும் பழிக்க அஞ்சி இலார்களே-இவ்வுலகில், பாடலாகிய (அவளுடைய) மொழியையும் அதன் ஒசையையும், பாவத்தையும், அதற்குரிய ராகம், தாளம் ஆகிய ஐந்தினையும் ஆராயாதவர்கள் கூட (அவளை) பஞ்சமத்தி வல்லபம் மிக்கவள் எனத் துதிக்க அஞ்ச மாட்டார்கள்-
அஞ்சி லம்பணி வார்தரு மாலினான் அஞ்சி லம்பணி வார்தரு மாலினான்
நஞ்சி றைக்கும் பலவாய வார்வனே நஞ்சி றைக்கும் பலவாய வார்வனே
கஞ்சி யாதிய கோவில னேகத்தே கஞ்சி யாதிய கோவில னேகத்தே
வஞ்சி யொல்குதென் வீரையின் மன்னனே வஞ்சி யொல்குதென் வீரையின் மன்னனே.–72-கட்டளைக் கலிப்பா–அடிமடக்கு-
அம் சிலம்பு அணிவார் தரும் மாலினான்- அழகிய சிலம்பு புனைகின்ற கோபியர் அளிக்கும் மயக்கத்தை யுடையவர்
அஞ்சி அலம் பணிவார் தரும் மாலினான்- தீமையைக் கண்டு அஞ்சி, சஞ்சலத்தோடு தஞ்சமடையும் அடியவர்களுக்குத் தம்முடைய இன்னருளைத் தந்தருளும் பெருமையை உடையவர்
நம் சிறைக்கும் பலவாய வார்வனே- நமக்குண்டாகும் காமம் போன்ற தடைகளை முறியடிக்கத் தக்க வலிமையைத் தரும் அன்புடையவர்
நஞ்சு இறைக்கும் பலவாய வார்வனே- விடத்தைப் பொழியும் பல வாயையுடைய ஆதிசேடனுக்கும் நாயகர்
கஞ்சி ஆதிய கோவில் அனேகத்தே-காஞ்சிபுரம் முதலான திருத்தலங்கள் பலவற்றிலும் எழுந்தருளியிருப்பவர்
கம்சி யாதிய கோவிலான் ஏகத்தே- கம்சன் போன்ற கொடியவர்களைத் தனியொருவராயிருந்து வென்ற இடையனானவர் (ஆகிய இவர் யாரெனின்)
வஞ்சி ஒல்கு தென் வீரையின் மன்னனே-வஞ்சிக் கொடி போன்ற மெல்லியலார் நிறைந்த வீரகேரளம்பு தூரின் தலைவரே
வஞ்சி ஒல்கு தென் வீரையின் மன்னனே- தரும தேவதையானவள் அகங்குழைந்து வீற்றிருக்கும் வீரகேரளம்புதூரின் தலைவரே ஆவார் (அவரைப் பணிவீராக.)-
மன்னர் மன்னவர் போற்றுசீர் மருதன் வீரையின் மாயவன்
பன்னகப் பகையேறியேறியே பவனி வந்ததைப் பார்த்ததால்
இன்ன மையல்இத் தையல்கொண் டேங்கு கின்றனள் பாங்குளீர்
அன்ன வன்துளவ னுப்புவான் அப்போதென் குறி அவிருமே.–73-அறுசீர்த் தாழிசை-
பாங்கு உள்ளீர் – அழகு பொருந்திய தாயே (குறி கூறக் கேட்பீராக)
மன்னர் போற்று சீர் மருதன் வீரையில்- அரசர் களுக்கெல்லாம் அரசராக விளங்குபவர் பாராட்டும் மேன்மையைப் பெற்ற மருதப்பன் அரசாட்சி செய்யும் வீரகேரளம்புதூரில்
மாயவன் பன்னகப்பகை ஏறி ஏறியே பவனி வந்ததைப் பார்த்ததால் இன்ன மையல் இத்தையல் கொண்டு ஏங்குகின்றனள்-கண்ணபிரானானவர் பாம்புக்குப் பகையாகிய கருட வாகனத்தில் ஆடம்பரமாக உலா வந்ததை இப் பெண்ணானவள் நேரில் கண்டதாலேயே இத்தகைய மயக்கத்தை அடைந்து ஏக்கமிட்டுள்ளாள்
அன்னவன் துளவம் அனுப்புவான் அப்போது என் குறி அவிருமே – (அவ்வாறு உலா வந்து தலைவியின் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்ட அத்தலைவன்) அத்தகைய கண்ணபிரானே விரைவில் தம் திருத்துழாய் மாலையைக் கையுறையாக அனுப்பி வைப்பார். அவ்வேளையில் நான் சொன்ன குறி எத்தகையது என்பதை நீங்களே நன்கு புரிந்து கொள்வீர்கள்-
என்குறியை ஈனமென்று தள்ளிடாதே கையில் எழுநெற்கை ஒன்றியதில் ஏது சூதே
நின்குணத்தை நானறிவேன் என்னையறிவாய் வீரை நீலவண்ணன் ஆள்வானென்று நெஞ்சிற் குறியாய்
புன்குலத்தர் நிந்தைநாளைத் தீரும்பாரம்மே வேண்டும் பொன்னும் நெல்லும் தந்துகஞ்சி போத வாரம்மே
வன்குறப்பெண் ஆனநான் பொய்விண்டிடேனே எங்கள் வள்ளிகண்முன் வந்துசெவ்வேள் கொண்டு ளானே.–74-எண்சீர்க் கட்டுத்தாழிசை-இதுவுமது-
என் குறியை ஈனம் என்று தள்ளிடாதே- குறத்தியாகிய நான் சொல்லும் குறிச் சொல்லை இழிவு என எண்ணி விலக்கா திருப்பாயாக (தாயே!)
கையில் ஏழு நெல்கை ஒன்றியதில் ஏது சூதே – என்னுடைய கையில் ஏழு நெல் இருந்தது. அதில் கை பொருந்தி யிருந்ததில் சூழ்ச்சி எதுவும் இல்லை-
நின் குணத்தை நான் அறிவேன். என்னை அறிவாய்- உம்முடைய (தலைவிக்காக ஏங்கும்) நல்ல உள்ளத்தை நான் நன்கு உணர்ந்தவள். அவ்வாறே (நானும் உண்மையானவள் என்பதை) நீங்களும் என்னை நன்கு உணர்வீர்கள்
வீரை நீலவண்ணன் ஆள்வான் என்று நெஞ்சில் கு றியாய்- வீர கேரளம்புதூரில் விரும்பி வாழ்கின்ற மணி நிறத்து மாயவனாகிய கண்ணன் வந்து (உம் மகளை மணம் புரிவார்) ஆட் கொள்வார் என்பதை உள்ளங்கொள்வீராக
புன்குலத்தர் நிந்தை நாளை தீரும் பார் அம்மே தாயே!-(அலர் பரப்பு) இழிகுணத்தோரின் இகழ்ச்சியான பேச்சுக்களெல்லாம் நாளையே ஒழியும் காண்பீராக
வேண்டும் பொன்னும் நெல்லும் தந்து கஞ்சி போத வார் அம்மோ -தாயே! எனக்கு நிறையத் தங்கமும், சோறாக்கத் தானியங்களும், இப்பொழுது குடிப்பதற்குக் கஞ்சியும் கொடுத்து உதவுவீராக
வன் குறப்பெண் ஆன நான் பொய் விண்டிடேனே – வலிமை பொருந்திய குறவர் மரபில் வந்தவளான நான் ஒரு நாளும் பொய் சொல்ல மாட்டேன்
எங்கள் வள்ளி கண்முன் வந்து செவ்வேள் கொண்டு உள்ளானே -எங்களுடைய குறக்குலப் பெண்ணான வள்ளி என்பவளுக்கும் (என்னைப் போன்ற குறப்பெண் தான் குறி கூறினாள்) குறத்தி குறி சொன்னவாறே அவள் காதலித்த முருகப்பெருமான் அவள் எதிரில் தோன்றி அவளை மணந்துகொண்டு இப்பொழுதும் கொலு வீற்றிருக்கிறான் என்பதை அறிவீராக. (எனவே. உங்கள் மகளையும் விரைவில் கண்ணன் மணம் முடிப்பான் என மகிழ்வீராக.)
உளங்கலந்த காட்சிதந்தாய் ஊரறிய ஓர்சீர்
களங்கமற நல்கக் கருதாய்விளங்கனியிற்
கன்றெறிந்த வீரையினிற் காயா மலர்த் துணர்போல்
நின்றெறிக்கும் கண்ணபிரானே.–75-நேரிசை வெண்பா-
விளங்கனியில் கன்றெறிந்த வீரையினில் காயாமலர்த்துணர்போல் நின்று எறிக்கும் கண்ணபிரானே – (கம்சனால் ஏவப்பட்ட கபித்தாசுரன் மற்றும் வத்சாசுரன் ஆகிய இருவரையும் கொல்ல அவர்கள் கொண்ட உருவமாகிய) விளா மரத்தினையும் கன்று வடிவத்தினையும் ஒருசேரஅடித்து எறிந்து கொன்றவரும் வீரகேரளம்புதூரில் காயா பூங்கொத்தினைப் போன்ற நீல நிறத்துடன் காட்சி நல்கிடும் தீமையெல்லாம் அறுத்தெறிகின்ற கண்ண பெருமானே!
உளம் கலந்த காட்சி தந்தாய்- (அன்று அடியேன் மனம் மகிழும்படியாக சங்கு சக்கரதாரியாய்) கனவில் வந்து காட்சி யருளினீர்!
ஊர் அறிய ஓர் சீர் களங்கம் அற நல்கக் கருதாய்- (அவ்வாறு நீர் காட்சி தந்தது பொய் என்று பிறர் நகைக்காமல் )அத்தகைய பெருமைக்குப் பங்கம் ஏற்படாதவாறு ஊரார் அறியும்படி இப்பொழுது நேரில் பலர் அறிய வந்து அருள்வீராக.-
ஆனேங் குறுங்கொடுங் காலத்தில் முற்றும் அதைமறந்து
தானேற்றம் எய்த முயலாமல் ஆண்டமின் தண்ணருளுக்கு
ஏனேனித் தாமதம் ஈதுநின் பாரமன் றென்குதியோ
வானேய்த்த மேனி முகுந்தாதென் வீரையில் வாழண்ணலே,–76-கட்டளைக் கலித்துறை-
வான் ஏய்த்த மேனி முகுந்தா! தென் வீரையில் வாழ் அண்ணலே- நீலமேக வானம் போன்ற நிறங்கொண்ட முகுந்தா ! வீரைநகரில் கோயில் கொண்டுள்ள அன்பிற் சிறந்தவரே!
ஆன் ஏங்குறும் கொடுங் காலத்தில் முற்றும் அதை மறந்து தான் ஏற்றம் எய்த முயலாமல்-(ஆயர்பாடியில் இந்திரன் கோபத்தினால் கல் மழை மொழிந்த போது) பசுக்கூட்டங்கள் உம்மை நாடிக் காப்பாற்ற அழைத்த பொழுது, அவற்றை அசட்டை செய்யாமல் (நாம் எல்லாவற்றினும் மேலானவர் எனக் கருதி வாளா இருக்காமல்) நம்முடைய நலமே பெரிதென எண்ணாது
ஆண்ட நின் தண் அருளுக்கு ஏன் இனி இத்தாமதம் -(உடனே கோவர்த்தனகிரியைக் கையால் குடையெனத் தாங்கிப்பிடித்து) அப் பசுக் கூட்டங்களைக் காத்த உம்முடைய அகங்குளிர்ந்த அன்பு (இப்பொழுது அடியேன் அழைக்கவும் வாராதிருக்க) ஏனோ இன்னும் அடியேனுக்குக் கிட்ட விடாமல் தாமதம் செய்கின்றீர்?ஈது நின்பாரம் அன்று என்குதியோ – (அடியேனுக்கு அருளுவது) இது உம்முடைய கடமையல்ல என்று சொல்லுகின்றீரோ! (அதையும் நேரில் வந்துரைப்பீராக!)
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
