Archive for the ‘-திரு வாய் மொழி நூற்று அந்தாதி’ Category

ஸ்ரீ திருவாய்மொழி நூற்றந்தாதி 

February 29, 2024

அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்
சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான் –நல்ல
மணவாளமாமுனிவன் மாறன் மறைக்குத்
தணவா நூற்றந்தாதி தான்

இரவும் பகலும், இனிய சொற்களையும் அவற்றின் பொருள்களையும் அறிய விரும்புபவர்களுக்காக, மணவாள மாமுனிகள் கருணையுடன் தமிழ் வேதமான திருவாய்மொழியின் அர்த்தங்களை, இச்சிறந்த ப்ரபந்தத்தில் நூறு பாசுரங்களாக அந்தாதி க்ரமத்தில் அருளியுள்ளார்.

மன்னுபுகழ்சேர் மணவாள மாமுனிவன்
தன் அருளால் உட்பொருள்கள் தன்னுடனே சொன்ன
திருவாய்மொழி நூற்றந்தாதியாம் தேனை
ஒருவாதருந்து நெஞ்சே! உற்று

நெஞ்சே! நித்யமான புகழை உடைய மணவாள மாமுனிகளால் திருவாய்மொழியின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளியிடுவதற்காகக் கருணையுடன் அருளப்பட்ட திருவாய்மொழி நூற்றந்தாதி என்கிற தேனைத் தொடர்ந்து பருகுவாயாக.

முதல் பாசுரம். (உயர்வே பரன் படி…) இதில், மாமுனிகள் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள், அதாவது எம்பெருமானின் மேன்மையை விளக்கி, “அவன் திருவடிகளில் பணிந்தால் உஜ்ஜீவனத்தை அடையலாம்” என்று சொல்லும் முதல் திருவாய்மொழி சேதனர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கவல்லது என்று அருளிச்செய்கிறார்.

உயர்வே பரன் படியை  உள்ளதெல்லாம் தான் கண்டு
உயர் வேதம் நேர் கொண்டுரைத்து மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு

மேன்மைகள் பொருந்திய ஸர்வேச்வரனின் தன்மைகளை முழுவதுமாக அநுஸந்தித்த ஆழ்வார், தலைசிறந்த ப்ரமாணமான வேதத்தின் க்ரமத்தில் அருளிச்செய்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் மனிதர்கள் சிறிதும் அஜ்ஞானம் இல்லாமல், உஜ்ஜீவனத்தைப் பெற்று, மோக்ஷத்தை அடைய வழிசெய்யும்.

இரண்டாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் ஸம்ஸாரிகளைத் திருந்துமாறும் தன்னுடைய ஹ்ருதயத்தைப்போலே துணையாக இருக்கும்படிக் கேட்பதையும் அனுபவித்து இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார்.

வீடு செய்து மற்றெவையும்   மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் – நீடு புகழ்
வண்குருகூர் மாறன்  இந்த மாநிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி அருள் பத்து

சிறந்த திருக்குருகூருக்குத் தலைவரான பெருமை பொருந்திய ஆழ்வார் மிகுந்த கருணையுடன் இந்தப் பரந்த உலகில் வாழ்பவர்களைத் திருத்த “எல்லாவற்றையும் விட்டு ஸ்ரீமந் நாராயணனின் மேன்மை பொருந்திய திருவடிகளைப் பற்றுங்கோள்” என்று அருளிச்செய்தார்.

மூன்றாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் பகவானின் ஸௌலப்யத்தை (எளிமையை) உபதேசித்த பாசுரங்களை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பத்துடையோர்க்கு என்றும்   பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மாநிலத்தீர்! மூண்டவன் பால் – பத்தி செய்யும்
என்றுரைத்த  மாறன் தனின் சொல்லால் போம்  நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை

ஆழ்வாரின் இனிய வார்த்தைகளான “ஸர்வேச்வரன் தன்னுடைய அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்; தன்னுடைய அவதாரங்கள் மூலமாக அவர்களுக்கு மோக்ஷத்தை அளிப்பவன்; இந்தப் பெரிய உலகில் வாழ்பவர்களே! கனிந்த அன்புடன் அவனிடத்தில் பக்தி செய்யுங்கோள்” என்பதை அனுஸந்திப்பவர்களுக்கு, நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் பிறவி என்னும் கட்டு விலகும்.

நான்காம் பாசுரம். மாமுனிகள், பறவைகளை எம்பெருமானிடம் தூதுவர்களாகப் போய், அவனுடைய அபராத ஸஹத்வம் (குற்றங்களைப் பொறுத்துக்கொள்ளுதல்) என்ற குணத்தை அறிவிக்குமாறு ப்ரார்த்திக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அஞ்சிறைய புட்கள் தமை ஆழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என இரந்து  – விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்

அழகிய சிறகுகளை உடைய பறவைகளைக் கண்ட ஆழ்வார், அவைகளிடம் “நீங்கள் சென்று என்னுடைய நிலைமையை திருவாழியை உடைய ஸர்வேச்வரனுக்குச் சொல்லுங்கோள்” என்று ப்ரார்த்தித்து, தன் சக்தியை இழந்து, எல்லா உலகிலும் எம்பெருமானைத் தேடி, கலக்கத்தை அடைந்தார். இதுவே ஆழ்வாருடைய பக்தியின் பெருமை.

ஐந்தாம் பாசுரம். மாமுனிகள், எல்லோரும் எம்பெருமானைப் புகலிடமாகக் கொள்ள உதவும் அவனுடைய ஸௌசீல்யம் (நீர்மை) என்கிற குணத்தை விளக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளம் உற்று அங்கூடுருவ ஓர்ந்து – தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடிலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து

மிகுதியான ஐச்வர்யத்தை உடைய எம்பெருமானுடைய பெருமையையும் தன்னுடைய தாழ்ச்சியையும் தன் நெஞ்சில் உணர்ந்த ஆழ்வார், அவற்றை நன்றாக ஆராய்ந்து, மிகவும் தளர்ந்து, எம்பெருமானை விட்டு விலக நினைத்தார்; ஸர்வேச்வரன் தன்னுடைய ஒளிவிடும் சீல குணத்தைக் கொண்டு, ஆழ்வாரை ஆனந்தமாக, ஸ்நேஹத்துடன் அணைத்தான்.

ஆறாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானை அடைவதும் தொழுவதும் அரிதன்று, எளிது என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கென்று  – உரிமையுடன்
ஓதி அருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு

எம்பெருமானிடம் நெருக்கமான பக்தியுடன் பேசிய ஆழ்வார், எல்லா தோஷங்களுக்கும் எதிர்த்தட்டான ஸர்வேச்வரனின் தன்மைகளை “பூர்ணனான ஸர்வேச்வரன், அவனுக்கு எதை ஸமர்ப்பித்தாலும் த்ருப்தியுடன் ஏற்றுக்கொள்வான்; மேலும் அவனை ஆராதிப்பது அரிய செயல் அன்று” என்று சொல்லி, இவ்வுலகில் அறிவற்ற மக்களுக்கு பிறவி முதலியவற்றை விலக்கியருளினார்.

ஏழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானிடத்தில் சரணடையும் இனிமையைக் கொண்டாடிச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பிறவி அற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் – அறவினியன்
பற்றுமவர்க்கென்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே! ஓடு

நெஞ்சே! “ச்ரிய:பதியான எம்பெருமான் தன்னிடம் சரணடைபவர்களை பிறவித்துயரில் இருந்து விடுவிக்கிறான்; மேலும் அவர்களுக்குப் பரமபதத்தில் உயர்ந்த ஆனந்தத்தை அளிக்கும் தன்மையுடன் இருக்கிறான்; அப்படி அவனிடம் சரணடைபவர்களுக்கு அவனே மிகவும் இனிமையானவன்” என்று அருளிச்செய்த ஆழ்வாரின் திருவடிகளையே சிறந்த துணையாகக் கருதி, அவரிடம் விரைந்து சென்று சரணடைவாயாக.

எட்டாம் பாசுரம். மாமுனிகள், நேர்மையுள்ளவர்களிடமும் நேர்மையற்றவர்களிடமும் எம்பெருமான் நேர்மையாகப் பழகுகிறான் என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஓடு மனம் செய்கை உரை ஒன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை  – நாடறிய
ஓர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை

நேர்மை இல்லாதவர்களை, அதாவது தங்கள் நிலையில்லாத மனம், உடம்பு மற்றும் வாக்கு ஆகிய கரணங்கள் ஒருமித்து இல்லாமல் இருப்பவர்களை, ஏற்றுக் கொள்வதாகிய ஸர்வேச்வரனின் குணத்தைப் பேசி எல்லோரும் உணரும்படி அருளிய ஆழ்வாரை அனுஸந்திப்பவர்களிடம் தங்கள் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த (கைங்கர்யச்) செல்வம் நிலைத்து நிற்கும்.

ஒன்பதாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் பொறுக்கப் பொறுக்க ஆனந்தத்தைக் கொடுக்கும் குணத்தைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இவை அறிந்தோர் தம் அளவில் ஈசன் உவந்தாற்ற
அவயங்கள் தோறும் அணையும் – சுவை அதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும்

ஸர்வேச்வரன் தன்னுடைய (சென்ற பதிகத்தில் வெளியிடப்பட்ட) நேர்மை போன்ற குணங்களை உணர்ந்தவர்களுடன் படிப்படியாக, அவர்களின் ஒவ்வொரு அவயவத்துடனும் ஆனந்தமாகக் கூடும் இன்பத்தைப் பெற்று அனுபவித்த ஆழ்வார், அதை மிகுந்த ஆனந்தத்துடன் அருளிச் செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளைச் சொல்லவே, ஸர்வேச்வரனின் திருவடிகள் நம் தலையில் வந்து சேரும்.

பத்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தன் எல்லா அவயங்களுடனும் கூடியதற்குத் தன்னிடத்தில் எந்தக் காரணமும் இல்லை என்பதை உணர்ந்து, த்ருப்தியுடன் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பொரும் ஆழி சங்குடையோன்  பூதலத்தே வந்து
தருமாறோர் ஏதுவறத்தன்னை – திரமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக என் சென்னி
வாழ்த்திடுக என்னுடைய வாய்

திருவாழியையும் ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் தன் திருக்கைகளில் கொண்டிருக்கும் எம்பெருமான், இவ்வுலகில் எந்தக் காரணமும் இல்லாமல் தன் நிர்ஹேதுக க்ருபையாலே அவதரித்து, தன்னை மற்றவர்களுக்குக் கொடுக்கும் தன்மயை நன்றாக அனுபவித்த ஆழ்வார், அதை அருளிச்செய்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் என் தலை வணங்கட்டும்; என்னுடைய வாய் அவருக்கு மங்களாசாஸனம் செய்யட்டும்.

பதினொன்றாம் பாசுரம். மாமுனிகள், எல்லாப் பதார்த்தங்களும் தன்னைப்போலே துன்புறுவதாகச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் – ஆய
அறியாதவற்றோடு அணைந்தழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து

தன்னடியார்களை அணுகும் ஸர்வேச்வரன் தன்னை மறைத்துக் கொள்ள, ஆழ்வாரின் சோகம் மிகவும் அதிகமாகி, விடாமல் அழும் நிலையை அடைந்தார்; தன் சோகத்தைப் புரிந்து கொள்ள அறியாத பதார்த்தங்களை கட்டிக்கொண்டு அழுதார்; இப்படிப்பட்ட ஆழ்வார் அடியார்களை தன்னுடைய கருணை மிகுந்த கண்களால் கடாக்ஷிப்பார்.

பன்னிரண்டாம் பாசுரம். மாமுனிகள், அவதாரங்களில் எம்பெருமானின் பரத்வத்தை, முன் பதிகத்துடன் தொடர்பில்லாமல், திடீரென்று நினைத்து, அதை மற்றவர்களுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி அவதாரத்தே நன்குரைத்த – வண்ணமறிந்து
அற்றார்கள் யாவர் அவரடிக்கே ஆங்கவர் பால்
உற்றாரை மேலிடாதூன்

திடமான எண்ணத்தை உடைய ஆழ்வார் ஸர்வேச்வரனின் பரத்வத்தை அவன் அவதாரங்களில் அருளிச்செய்ததை அறிந்து, அவ்வாழ்வார் திருவடிகளை அடைபவர்கள், இந்த சரீரத்துடன் இருக்கும் பந்தத்தால் ஜயிக்கப்பட மாட்டார்கள்.

பதிமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாருடன் ஏகதத்வம் (இருவரும் ஒருவரே) என்று எண்ணும்படிக் கூடின காலத்தில் தனக்குத் துணையாக இருந்து அனுபவிக்க மேலும் பலரைத் தேடிய ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஊனம் அறவே வந்து உள் கலந்த மால் இனிமை
ஆனது அனுபவித்தற்காம் துணையா – வானில்
அடியார் குழாம் கூட ஆசை உற்ற மாறன்
அடியாருடன் நெஞ்சே!  ஆடு

ஆழ்வார் அனுகூலர்களுடன் கூடி இருந்து, எந்தக்குறையும் இல்லாமல் தன்னுடன் வந்து கூடிய ஸர்வேச்வரனுடன் ஏற்பட்ட கூடலின் இனிமையை அனுபவிக்க, பரமபதத்தில் இருக்கும் அடியார் குழாங்களுடன் கூட ஆசைப்பட்டார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் அடியார்களுடன் வாழ ஆசைப்படு.

பதினான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் மற்றும் அவன் அடியார்களைப் பிரிந்து வாடும் ஒரு பெண்ணின் தாய் பாவனையில் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறை அதனால் – வாடி மிக
அன்புற்றார் தன் நிலைமை ஆய்ந்துரைக்க மோகித்துத்
துன்புற்றான் மாறன் அந்தோ!

ஆழ்வார் பரமபதத்தில் இருக்கும் அடியார்களுடன் கூடி அனுபவிக்கவும் அவர்களுடன் ஆடி மகிழவும் முடியாமல் மிகவும் வருந்தினார்; அவர் மனம் கலங்கி அவர் அருகில் இருக்கும் அவர் மீது மிகவும் அன்பு கொண்ட மதுரகவி ஆழ்வார் போன்றோர்களால் ஆராயப்பட்டு, பேசப்பட்டார்; அந்தோ!

பதினைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தன்னுடைய அடியார்களுடன் (திவ்ய ஆயுத மற்றும் ஆபரண வடிவில் இருக்கும் நித்யஸூரிகள்) வந்து, திருவாய்மொழி 2.4 “ஆடி ஆடி” பதிகத்தில் காட்டப்பட்ட வருத்தத்தைப் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அந்தாமத்தன்பால் அடியார்களோடு இறைவன்
வந்தாரத் தான் கலந்த வண்மையினால் – சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே!
வாய்ந்த அன்பை நாள் தோறும் வை

ஸர்வேச்வரன் ஸ்ரீவைகுண்டத்தில் தனக்கு இருக்கும் ஆசையை ஆழ்வாரிடம் கொண்டு, திவ்ய ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்கள் வடிவில் இருக்கும் நித்யஸூரிகளுடன் வந்து, உதாரகுணத்துடன் ஆழ்வாருடன் நன்றாகக் கலந்து ஆழ்வாரின் வருத்தத்தைப் போக்கினான். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் பொருத்தமான அன்பை எப்பொழுதும் வை.

பதினாறாம் பாசுரம். மாமுனிகள், ஈச்வரன் நம்மை “அப்பொழுதைக்கப்பொழுது என் ஆராவமுதம்” என்று அனுபவிக்கும் ஆழ்வார் தான் மிகத் தாழ்ந்தவர் என்று எண்ணி நம்மை விட்டுப் பிரிந்தால் என்ன செய்வது என்று தேவையில்லாமல் ஸந்தேஹப்பட, அந்த ஸந்தேஹத்தைப் போக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து – நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத்தான் விடேன் என்றுரைக்க
வன்மை அடைந்தான் கேசவன்

நித்யவிபூதிக்குத் தலைவனான ஸர்வேச்வரன் ஆழ்வாருடன் வந்து கலக்க ஆழ்வார் தம்மை தரித்துக் கொண்டார். ஆனால் அதன் பிறகு தன்னைப் பற்றித் தாழ்வாக நினைக்கத் தொடங்கினார்; அதைக் கண்டு வருந்தி மிகவும் உடைந்து போன எம்பெருமானைக் கண்ட ஆழ்வார், எம்பெருமானிடம் “நாம் உன்னைப் பிரிய மாட்டோம்” என்று சொல்ல, எம்பெருமான் தேறினான்.

பதினேழாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடன் இருக்கும் உறவால், தன்னுடைய முன்னோர்கள் மற்றும் பின்னோர்கள் பகவானுக்கு அடியவர்கள் ஆனதை ஆனந்தமாகப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசடைந்தார் என்று சிறந்துரைத்த – வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கெல்லாம் உய்கைக்கு
ஆறென்று நெஞ்சே!  அணை

ஆழ்வார் “நம்மைச் சேர்ந்தவர்கள், தங்களுடன் தொடர்புள்ள முன்னோர்கள் மற்றும் பின்னோர்களுடன் ஒளியைப் பெற்றனர்” என்று தெளிவாக அருளிச்செய்தார்; இவ்வாழ்வாருடைய பெருமை எல்லா இடங்களிலும் பரவியுள்ளது; நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே எல்லா ஆத்மாக்களுக்கும் மோக்ஷத்துக்கு உபாயமாகக் கொண்டு, அத்திருவடிகளில் சரணடைவாயாக.

பதினெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய தன்மையை உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட – இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலர் அடியே
வீசு புகழ் எம்மா வீடு

எம்பெருமான் தன்னைச் சரணடையும் நித்யஸம்ஸாரிகளை நித்யஸூரிகளுடன் சேர்க்கக்கூடிய மோக்ஷத்தைக் கொடுக்கிறான்; எம்பெருமானின் இத்தன்மையை ஆழ்வார் குற்றமற்ற உபதேசமாக அருளிச்செய்து இந்த ஸம்ஸாரிகளும் கண்ணனின் அருளைப் பெறும்படி செய்தார்; இப்படி எங்கும் பரவிய பெருமை வாய்ந்த ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே சிறந்த மோக்ஷ ஸ்தானம்.

பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், அடைய வேண்டிய குறிக்கோளை நிர்ணயிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எம்மா வீடும் வேண்டா என்தனக்கு உன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்துரைத்த – நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாள் இணை சூடிக்
கீழ்மையற்று நெஞ்சே!  கிளர்

ஆழ்வார் எம்பெருமானிடம் “எம்பெருமானே! தேவரீரின் திருவடிகளே எனக்குப் போதும்” என்றார்.  இப்படிச் சொன்ன ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே நம்முடைய ஸத்தைக்குக் காரணம். தாழ்ந்த விஷயங்களை விட்டு இவ்வாழ்வாரின் திருவடிகளை உங்கள் தலையில் வைத்துக் கொண்டால், நீங்கள் உயர்ந்த கதியை அடையலாம்.

இருபதாம் பாசுரம். மாமுனிகள், “திருமாலிருஞ்சோலை என்னும் திருமலையைப் புகலாகக் கொள்வதே பேற்றுக்கு வழி” என்று உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். அன்றிக்கே, மாமுனிகள் ஆழ்வார் திருமாலிருஞ்சோலை மலையையே சிறந்த குறிக்கோளாக அனுபவிப்பதை அருளிச்செய்கிறார் என்றும் சொல்லலாம்.

கிளரொளி சேர் கீழுரைத்த பேறு கிடைக்க
வளரொளி மால் சோலை மலைக்கே  – தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேருமெனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம் முடி

முன்பு அருளிச்செய்த, மிகவும் ஒளிவிடும் புருஷார்த்தத்தை அடைய, ஆழ்வார் எம்பெருமானின் இருப்பிடமான, வளர்ந்துவரும் ஒளிபடைத்த திருமாலிருஞ்சோலையை, தளராமல், மனதை வைத்து அடையுங்கோள் என்று அருளிச்செய்தார்; இத்தனை பெருமை பெற்ற ஆழ்வாரின் திருவடிகளில், நம் தலையை வைப்போம்.

இருபத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், திருமாலிருஞ்சோலை என்கிற திருமலையில் எழுந்தருளியிருக்கும் அழகர் எம்பெருமானின் வடிவழகை நன்கு அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் – வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படிகலனும்
முற்றும் அனுபவித்தான் முன்

முன்பு, ஆழ்வார் திடமாக இருந்து சிகரங்களை உடைய திருமலையை அனுபவித்து, அங்கே எழுந்தருளியிருக்கும் அழகர் எம்பெருமானின் திருமேனியை, அந்தத் திருமேனியில் அணிந்திருக்கும் திருவபிஷேகம் (கிரீடம்), சதங்கை மற்றும் ஏனைய ஆபரணங்களுடன் சேர்ந்து அனுபவித்தார்.

இருபத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், “என்னுடைய கரணங்களின் குறையால் எம்பெருமானின் குணங்களை அனுபவிக்க முடியவில்லை” என்று கலங்க அதை எம்பெருமான் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்னவளவென்ன எனக்கரிதாய்த் – தென்ன
கரணக் குறையின் கலக்கத்தைக் கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து

முன்பு, ஆழ்வார் அழகர் எம்பெருமானின் வடிவழகில் மூழ்கினார்; கரணங்களின் குறையால் ஏற்பட்ட அஜ்ஞானத்தால் “எனக்கும் கூட, எம்பெருமானின் அழகை இவ்வளவு என்று அளவுபடுத்தி அனுபவிக்க முடியவில்லையே!” என்ற ஆழ்வாரை ஸமாதானப் படுத்தி, எம்பெருமான் ஆழ்வாரின் கலக்கத்தைப் போக்கினான்.

இருபத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், கைங்கர்யம் செய்வதில் தனக்கு இருக்கும் ஆசையை வெளியிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழுவிலா ஆட்செய்ய மாலுக்கு – எழுசிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே!  புகழ்

நெஞ்சே! உயர்ந்த சிகரங்களையுடைய திருமலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடன் பிரியாமல் இருந்து எல்லாக் காலங்களிலும் குற்றமில்லாத கைங்கர்யங்களைச் செய்ய ஆசைப்பட்டு அதனால் பேரின்பத்தை அடைந்த ஆழ்வாரின் அழகிய திருவடிகளைக் கொண்டாடு.

இருபத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாரின் ப்ரார்த்தனைக்கு இணங்க எல்லாப் பொருட்களுக்கும் அந்தர்யாமியாக இருப்பதைக் காண்பிக்க, அதைக் கண்டு அனுபவித்து, வாசிக கைங்கர்யம் செய்யும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

புகழொன்று மால் எப்பொருள்களும் தானாய்
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க – மகிழ்மாறன்
எங்கும் அடிமை செய இச்சித்து வாசிகமாய்
அங்கடிமை செய்தான் மொய்ம்பால்

தகுந்த பெருமைகளை உடைய ஸர்வேச்வரன், தான் எல்லா பொருட்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கும் நேர்மை என்ற குணத்தை வெளிப்படுத்தினான். இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு எல்லா இடங்களிலும் கைங்கர்யம் செய்ய ஆசைப்பட்ட வகுளாபரணரான ஆழ்வார், மயர்வற மதிநலம் அருளப்பட்டதால் வந்த பெருமையுடன், வாசிக கைங்கர்யத்தைச் செய்தார்.

இருபத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுக்கு அடிமை செய்பவர்களைக் கொண்டாடியும், அப்படிச் செய்யாதவர்களை நிந்தித்தும் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மொய்ம்பாரும் மாலுக்கு முன் அடிமை செய்து உவப்பால்
அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் – அன்பிலா
மூடரை நிந்தித்தும் மொழிந்தருளும் மாறன்பால்
தேடரிய பத்தி நெஞ்சே!  செய்

நெஞ்சே! மிகவும் சக்தி பொருந்திய ஸர்வேச்வரனுக்கு அடிமை செய்த ஆனந்தத்தால், அவனிடத்தில் பக்தியுடன் தொண்டு செய்பவர்களைக் கொண்டாடியும் அது செய்யாத மூடர்களை நிந்தித்தும் பேசிய ஆழ்வாரிடம் உயர்ந்த பக்தியைக் கொள்.

இருபத்தஆறாம் பாசுரம். மாமுனிகள், அர்ச்சாவதாரம் வரை வந்துள்ள எம்பெருமானின் ஸௌலப்யம் (எளிமை) என்ற குணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்த்
துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் – எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று

சேதனர்களுடன் கூடி நன்றாக ஆராயப்படும் தமிழ் வேதத்தையே அடையாளமாகக் கொண்ட ஆழ்வார் “இவ்வுலகில் எம்பெருமானிடத்திலே சரணடைபவர்களுக்கு, உயர்த்தி பொருந்திய பரத்வம், சிறந்த வ்யூஹம், தூய்மையான அவதாரங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் எம்பெருமானின் அர்ச்சாவதாரமே அடைவதற்கு எளிது” என்று அருளிச்செய்தார்.

இருபத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் அடியார்களே விரும்பத்துகுந்த குறிக்கோள் என்று பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு – இயல்வுடனே
ஆளானார்க்காளாகும் மாறன் அடி அதனில்
ஆளாகார் சன்மம் முடியா

ஆழ்வார் ச்ரிய:பதியான எம்பெருமானின் திருவடிகளில் மனதை வைத்துத் தொண்டு செய்யும் அடியவர்களுக்குத் தொண்டு செய்ய ஆசைப்பட்டார். இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளுக்குத் தொண்டு செய்யாதவர்களுக்கு இவ்வுலகில் பிறவி முடியாமல் தொடரும்.

இருப்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், தானும் தன்னுடைய கரணங்களும் (எம்பெருமானை அனுபவிப்பதில்) மிகவும் ஆசையுடன் இருந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முடியாத ஆசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டு அவன் பால் படியா – ஒன்றொன்றின்
செயல் விரும்ப உள்ளதெல்லாம் தாம் விரும்பத்
துன்னியதே மாறன் தன் சொல்

ஆழ்வாரின் எல்லை இல்லாத அன்பு மேலும் பெருக, அவரின் எல்லாக் கரணங்களும் அடியார்களைவிட்டு ஸர்வேச்வரனை அடைந்தன; ஒவ்வொரு கரணமும் தன் அனுபவத்துக்கு மேல், மற்ற கரணங்களின் அனுபவத்தையும் ஆசைப்பட, ஆழ்வார் எல்லாக் கரணங்களின் அனுபவத்தையும் ஆசைப்பட்டார்; இவ்வாறு, ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் நன்கு செறிந்தன.

இருபத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், அடியார் அல்லாதவர்களுக்குத் தொண்டு செய்வது தாழ்ந்தது என்றும் எம்பெருமானுக்குத் தொண்டு செய்வது பொருத்தமானது என்றும் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சொன்னாவில் வாழ் புலவீர்! சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலால் – என்னாகும்?
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம்

நாக்கில் கவி பாடும் திறன் பெற்ற புலவர்களே! உணவு மற்றும் உடைக்காக, குறைந்த ஆயுளை உடைய மனிதர்களை உங்கள் கவிதைகளால் கொண்டாடுவதால் என்ன பயன்? எல்லோருக்கும் ச்ரிய:பதியைக் கொண்டாடும்படி உபதேசித்த திருக்குருகூரின் தலைவரான ஆழ்வாரின் அருளால், அவர்கள் பிறவி நீங்கும்.

முப்பதாம் பாசுரம். மாமுனிகள், “எம்பெருமானுக்காகவே என்னுடைய கரணங்கள் இருப்பதால் எனக்கு ஒரு குறையுமில்லை” என்ற ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சன்மம் பல செய்து தான் இவ்வுலகளிக்கும்
நன்மை உடை மால் குணத்தை நாள் தோறும் – இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை உலகீர்!
நாத்தழும்ப ஏத்தும் ஒரு நாள்

ஆழ்வார் “இவ்வுலகத்தில் வாழ்பவர்களே! பல அவதாரங்களைச் செய்து, இந்த உலகங்களைக் காக்கும் நன்மை உடைய ஸர்வேச்வரனின் கல்யாண குணங்களை எப்பொழுதும் கொண்டாடும் பேரானந்தத்தை இப்பிறவியில் பெற்றேன்” என்று அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரை ஒரு நாளாவது பாடி, உங்கள் நாக்கில் தழும்பேறும்படிச் செய்யுங்கள்.

முப்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், ஐச்வர்யம் முதலியவற்றின் தாழ்ச்சி மற்றும் அநித்யமாக இருக்கும் தன்மையினால் உள்ள தோஷங்களைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஒரு நாயகமாய் உலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி உய்க்கும் இன்பம் – திரமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மால் அடிமையே இனிதாம்
பன்னி இவை மாறன் உரைப்பால்

ஆழ்வார் 1) உலகத்துக்கு ஏக சக்ரவர்த்தியாய் இருந்து பெறும் இன்பம் நிரந்தரமன்று 2) பரந்த ஸ்வர்கத்தில் தேவர்கள் அனுபவிக்கும் இன்பமும் நிரந்தரமன்று 3) நித்யமாக ஆத்மா தன்னையே அனுபவிப்பதும் தீது மற்றும் 4) எம்பெருமானுக்கு அடிமை செய்வது மிகவும் இனியது ஆகியவைகளை ஆராய்ந்து அருளிச்செய்தார்

முப்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் வெவ்வேறு காலத்தில் ஏற்பட்ட பல அவதாரங்களை அந்தந்த இடம் மற்றும் காலத்தில் அனுபவிக்க ஆசைப்பட்டுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பாலரைப் போல் சீழ்கி பரன் அளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கை கழிந்த – சால
அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ

ஆழ்வார்திருநகரியில் அவதரித்த தலைவரான ஆழ்வார், எம்பெருமானிடத்தில் இருந்த அன்பால் அவனுடைய முற்காலத்து அவதாரங்களை அனுபவிக்க ஆசைப்பட்டு, அவை வேறு காலம் மற்றும் தேசத்தில் ஏற்பட்டதால், அது கிடைக்காமையால் குழந்தையைப் போலே சிணுங்கினார்; மேலும் அவனுக்குக் கைங்கர்யம் செய்ய மிகவும் ஆசைப்பட்டு (அது கிடைக்காமையால்), மிகவும் வருத்தமுற்றார்.

முப்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் எப்படி காலத்தால் இருந்த தடையை நீக்கி அனுபவத்தைக் கொடுத்தான் என்பதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கோவான ஈசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத்து உவாதிதனை – மேவிக்
கழித்தடையக் காட்டி கலந்த குண மாறன்
வழுத்துதலால் வாழ்ந்தது இந்த மண்

எல்லோருக்கும் தலைவனான எம்பெருமான் ஆழ்வாருடன் கூடி, காலம் கடந்திருந்தாலும், காலத்தால் வந்த தடையைப் போக்கி, தன்னுடைய பூர்வ சரித்ரங்களை ஆழ்வார் ஆசைப்பட்டபடி காட்டிக்கொடுத்து ஆழ்வாரின் துன்பத்தைப் போக்கினான்; இவ்வாறு ஆழ்வார் எம்பெருமான் தன்னுடன் கூடிய அந்த குணத்தைக் கொண்டாட, இவ்வுலகம் நிலை பெற்றது.

முப்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானைப் போன்று இருக்கும், மற்றும் எம்பெருமானுடன் தொடர்புடைய பொருட்களைப் பார்த்து, அவை எம்பெருமான் என்று ப்ரமித்து, அவைகளை எம்பெருமானாகப் பாடிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண் நிலைமையாய்க் காதல் பித்தேறி – எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை அவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு

எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தில் ஆழ்வாருடன் கலந்து பின்பு பிரிந்தான்; அதனால் ஆழ்வார் ஒரு பெண் தன்மையை அடைந்து, அவனிடத்தில் இருந்த பக்தியால், மிகவும் கலங்கி, அவன் விஷயமான பேரன்பால், அவனைப் போன்ற பொருட்களை அவனாகவே நிர்ணயித்துப் பாடினார்.

முப்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், திவ்ய ஸ்தானமான பரமபதத்தில் எம்பெருமானின் இருப்பைக் கண்டு அடைந்த பேரின்பத்தைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வீற்றிருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமை ஆனதெல்லாம் – தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்குகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து

பரமபதத்தில் வீற்றிருந்தருளும் எம்பெருமான், இங்கே வந்து, தன்னுடைய சிறந்த குணங்கள், திருமேனிகள் ஆகியவற்றைக் காட்டி ஆழ்வாரின் கலக்கத்தை நீக்கி, ஆழ்வாருடன் நன்றாகக் கலந்தான்; இப்படி ஸர்வேச்வரனைக் கண்ட ஆழ்வார், அவனை வணங்கி ஆனந்தத்தை அடைந்து, தன்னுடைய துன்பங்கள் நீங்கப் பெற்றதால், தன்னுடைய பெருமையைத் தானே அறிவித்தார்.

முப்பத்தாறாம் பாசுரம். ஆழ்வாரிடத்தில் மிகுந்த காதல் கொண்ட எம்பெருமானை நேரில் கண்டு அனுபவிக்க முடியாமையால் ஆழ்வார் மோஹித்தார்; ஆழ்வாரிடத்தில் அன்பு கொண்டவர்கள் இதற்கு ஒரு தீர்வு காண முற்பட, நல்ல ஞானம் உள்ள ஆழ்வாரின் நலம்விரும்பிகள் ஆழ்வாருக்குச் சேராத விஷயங்களையும், இந்நிலைக்குக் காரணத்தையும் தீர்வையும் விளக்கிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி மாமுனிகள் அருளிச்செய்கிறார்.

தீர்ப்பாரிலாத மயல் தீரக் கலந்த மால்
ஓர்ப்பாதும் இன்றி உடன் பிரிய – நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்

ஆழ்வாரின் தீர்க்கமுடியாத பேரன்பைத் தீர்க்க ஸர்வேச்வரன் ஆழ்வாருடன் கலந்து, ஆராயாமல் ஆழ்வாரை விட்டுப் பிரிந்தான்; இதைக் கண்ட உறவினர்கள், முன்பைவிட மிகவும் வருந்தி அறிவிழந்தார்கள்; எம்பெருமானுடைய திருநாமங்களைக் கேட்டு தன்னுடைய உணர்வை மீண்டும் பெற்றார்; இதுவே ஆழ்வாரின் தன்மை.

முப்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் திருநாமத்தைக் கேட்டுத் தன் உணர்வை மீண்டும் பெற்ற ஆழ்வார், அந்தத் திருநாமத்துக்கு உடையவனான எம்பெருமானை அனுபவிக்க முடியாமல் வாடிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சீல மிகு கண்ணன் திருநாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு – சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு

ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார், கல்யாண குணங்கள் நிறைந்த கண்ணனின் திருநாமங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்; உணர்ந்தபின் மிகவும் வருந்தி, கண்ணனின் திருமேனியைக் காண ஆசைப்பட்டு, அனுபவிப்பதற்காக அழைக்கிறார்.

முப்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தனக்கு உதவாததால், அவனுக்காக இல்லாத ஆத்மாவிலும் ஆத்மாவின் உடைமைகளிலும் தனக்கு இருக்கும் விரக்தியைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு
வேறு படில் என் உடைமை மிக்க உயிர் – தேறுங்கால்
என்தனக்கும் வேண்டா எனும் மாறன் தாளை நெஞ்சே!
நந்தமக்குப் பேறாக நண்ணு 

ஆழ்வார் “என்னுடைய ஆபரணங்கள் முதலியவையும் அவற்றைவிடச் சிறந்ததான ஆத்மாவும், பிராட்டி ஏறி வீற்றிருக்கும் திருமார்பை உடைய ஸர்வேச்வரன் திருவுள்ளத்துக்கு ஏற்புடையதில்லை என்றால், ஆராய்ந்து பார்த்தால், எனக்கும் அவை வேண்டாம்” என்று வெறுப்புடன் அருளிச்செய்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே சிறந்த குறிக்கோளாகக் கொள்.

முப்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், ஸம்ஸாரிகளின் அநர்த்தத்தைக் கண்டு வெறுத்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நண்ணாது மால் அடியை நானிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பம் உறும் இவ்வுயிர்கள் – தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை ஒன்று

இவ்வுலகில் தங்கள் பாபங்களினாலே எல்லையில்லாத துன்பங்களை அனுபவிக்கும் ஆத்மாக்களின் தாழ்ச்சியையும் அவர்கள் எம்பெருமானிடத்தில் சரணடையாமல் இருப்பதையும் கண்ட ஆழ்வார், ஆறியிருக்க முடியாமல், கண்ணீருடன் இருந்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் கருணையே நமக்குத் தகுந்த துணை.

நாற்பதாம் பாசுரம். மாமுனிகள், ஸம்ஸாரிகளும் சரணாகதி செய்வதற்கு ஸௌகரியமாகப் பரத்வத்துடன் இருக்கும் அர்சாவதாரத்தைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால்
அன்றி என ஆரும் அறியவே – நன்றாக
மூதலித்துப் பேசி அருள் மொய்ம்மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை

எல்லோரும் புரிந்து கொள்ளும்படி, “இவ்வுலகங்களைப் படைத்த ஸர்வேச்வரனைத் தவிர வேறு தெய்வம் இல்லை” என்று நன்றாக நிர்ணயித்து அருளிய வகுளாபரணரின் திருவடிகளுக்கு அஞ்ஜலி செய்வதையே என் கைகள் விரும்பும்.

நாற்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், தன்னை எம்பெருமான்  நிர்ஹேதுகமாக (ஒரு காரணமும் இல்லாமல்) ஏற்றுக் கொள்வதைக் கண்டு ப்ரமித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறன் உரைக்கு – மெய்யான
பேற்றை உபகரித்த பேரருளின் தன்மை தனை
போற்றினனே மாறன் பொலிந்து

ஆழ்வார் பொலிவுடன் “என்னிடத்தில் சிறிதளவும் பக்தி இல்லாதபோதும் நான் அவனை ஏமாற்றும் வகையில் பேசினாலும், அவன் பெரும் கருணையுடன் எனக்கு உயர்ந்த பலனைக் கொடுத்தான்” என்று அருளிச்செய்தார்.

நாற்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடைய ஒன்றும் தேவும் (திருவாய்மொழி 4.10) பதிகத்தைக் கேட்டுத் திருந்தியவர்களுக்கு மங்களாசாஸனமாகவும் திருந்தாதவர்களைத் திருத்தும் உபதேசமாகவும் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பொலிக பொலிக என்று பூமகள் கோன் தொண்டர்
மலிவுதனைக் கண்டுகந்து வாழ்த்தி – உலகில்
திருந்தாதார் தம்மைத் திருத்திய மாறன் சொல்
மருந்தாகப் போகும் மன மாசு

அடியார்களின் மிகப் பெரிய கோஷ்டியைக் கண்டு மகிழ்ந்த ஆழ்வார் “பொலிக! பொலிக!” என்றார். இவ்வுலகில் திருந்தாதவர்களைத் திருத்தினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை மருந்தாகக்கொண்டால், மனதில் இருக்கும் தோஷங்கள் நீங்கும்

நாற்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், முன்பு பேசிய எம்பெருமானின் வடிவழகை நேரில் அனுபவிக்க முடியாததால் மடல் எடுக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாசறு சோதி கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் – ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்

குற்றமற்ற ஒளியை உடைய எம்பெருமானிடம் தனக்கு ஏற்பட்ட அளவு கடந்த அன்பினால், எம்பெருமான் தன்னுடன் வந்து கலக்காததால், தனக்கு ஏற்படும் பழியையும் ஊராரின் நிந்தனைக்கு அஞ்சும் நிலையையும் கடந்து, தான் அவதரித்த ஊரில் மக்கள் நடுங்கும்படி இவ்வுலகில் மடல் எடுக்க முற்பட்டார் ஆழ்வார்.

நாற்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானைப் பிரிந்து இரவின் நீட்சியால் மிகவும் வருந்தும் நாயகியின் பாவனையில் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஊர நினைந்த மடல் ஊரவும் ஒண்ணாதபடி
கூரிருள் சேர் கங்குலுடன் கூடி நின்று – பேராமல்
தீது செய்ய மாறன் திரு உள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்ஙனேயோ?

ஐயோ! இருண்ட இரவும் அதன் துணைவர்களும் சேர்ந்து ஆழ்வாரை விடாமல் நலிந்து அவர் மடல் எடுக்க முற்படுவதைத் தடுப்பதையும், அவர் திருவுள்ளத்தை அடைந்த துன்பத்தையும் எவ்வாறு பேசுவது?

நாற்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், உருவெளிப்பாட்டைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எங்ஙனே நீர் முனிவது என்னை இனிநம்பி அழகு
இங்ஙனே தோன்றுகின்றது என் முன்னே – அங்ஙன்
உருவெளிப்பாடா உரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்

தமிழ் வேதமான ப்ரபந்தங்களை அருளிய ஆழ்வார், உருவெளிப்பாடு (மனக்கண்ணால் பார்த்து அனுபவிப்பது) என்னும் கவிதை முறையில் “என்னிடத்தில் நீங்கள் எல்லோரும் கோபம் கொள்ளலாமா? திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகு என் கண் முன்னே தோன்றுகின்றது” என்று அருளினார். இப்படிப்பட்ட ஆழ்வாரை த்யானிப்பவர்களுக்கு ஆழ்வாரே ஒரு ஆனந்தக் கடலாக இருப்பார்.

நாற்பத்தாறாம் பாசுரம். மாமுனிகள், அனுகாரத்தின் மூலம் தன்னை தரித்துக் கொண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கடல் ஞாலத்தீசனை முன் காணாமல் நொந்தே
உடனா அனுகரிக்கல் உற்று – திடமாக
வாய்ந்தவனாய்த் தான் பேசும் மாறன் உரை அதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார்

கடல் சூழ்ந்த இவ்வுலகில் எம்பெருமானை நேரில், தன் கண்ணால் கண்டு அனுபவிக்க முடியாமல் வருந்தி, எம்பெருமானை அனுகரித்து (அவனைப் போலே இருந்து), திட விச்வாஸத்துடன் அவனைப் பற்றிப் பேசினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளின் பெருமைகளை அறிந்து, அதை அனுஸந்திப்பவர்கள், ஆழ்வாருக்குத் தொண்டு செய்யும் தபஸ்ஸைச் செய்தவர்கள் ஆவர்.

நாற்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், வானமாமலை எம்பெருமானை அன்புடன் வணங்கியும் அவன் திருவடிகளில் சரணாகதி செய்தும் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நோற்ற நோன்பாதி இலேன் உன்தனை விட்டாற்றகில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன்தன் பேரருளே – சாற்றுகின்றேன்
இங்கென் நிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது

அழகை அடைந்த ஆழ்வார், உபாய விஷயமாக “எனக்கு மோக்ஷத்துக்கு வழியான கர்ம யோகம் முதலிய உபாயங்களில் எந்த ஈடுபாடும் இல்லை; உன்னைப் பிரிந்து என்னால் வாழ முடியவில்லை; என்னுடைய பேற்றுக்கு உன்னுடைய பெரிய கருணையே உபாயம்” என்று அருளிச்செய்தார். கருணை மிகுந்த இப்பாசுரங்களை அனுஸந்திக்க வல்லவர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகளுக்கு ஆராவமுதமாக இருப்பர்.

நாற்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடைய கைம்முதல் இல்லாத் தன்மையை அறிவித்து ஆராவமுதன் எம்பெருமானைச் சரணடைந்தும், எம்பெருமான் “இவர் நம் ஆழ்வார்” என்று தன் ஆசையை நிறைவேற்றாததால், கலங்கி வருத்தத்துடன் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக  – தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான்

ஆழ்வாரின் எதிர்பார்ப்பை ஆராவமுதன் கருணையுடன் நிறைவேற்றாததால் ஆழ்வார் நிறைவேற்ற முடியாத மிகவும் அதிகமான ஆசையை அடைந்து வருத்தமுற்றார். இப்படிக் கலங்கிய தன்னுடைய வருத்தத்தை வெளியிட்டார்; இப்படிப்பட்ட ஆழ்வாரே நம்முடைய குற்றமற்ற ஸ்வாமி.

நாற்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், திருவல்லவாழுக்குச் சென்று அதைச் சூழ்ந்திருக்கும் புறச்சோலைகளின் அனுபவத்தால் வருந்திப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாநலத்தால் மாறன் திருவல்லவாழ் புகப் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ்வூர் தன் அருகில் – மேல் நலங்கித்
துன்பம் உற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற

மிகவும் அன்புடன் ஆழ்வார் திருவல்லவாழ் திவ்யதேசத்தை நோக்கிச் சென்றார்; ஆனால் அதை அடைய முடியாமல், அதைச் சூழ்ந்திருக்கும் சோலைகளில், தளர்ந்து கீழே விழுந்தார்; மேலும் கலங்கி, வருந்தி இப்பாசுரங்களை அருளிச்செய்தார். இப்பாசுரங்களைக் கற்பவர்களுக்கு, அவற்றைக் கற்றபின், எம்பெருமானின் திருவடிகளுக்கு வெளிப்பட்ட பிறவிகள் கிடையாது.

ஐம்பதாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானிடத்தில் “உன்னுடைய அவதாரங்களில் செய்த லீலைகளை அனுபவித்து நான் தரித்திருக்கும்படி அனுமதிக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பிறந்து உலகம் காத்தளிக்கும் பேரருள் கண்ணாஉன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத் – திறம் தவிர்ந்து
சேர்ந்தனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே! வைகு

ஸ்ரீ நம்மாழ்வார், இவ்வுலகில் அவதரித்து எல்லோரையும் ரக்ஷிக்கும், மிகவும் கருணை பொருந்திய கண்ணன் எம்பெருமானிடத்தில் “கண்ணா! என் ஹ்ருதயத்தின் உருக்கத்தை நிறுத்தி, உன்னை அடைந்து, உன்னுடைய குணங்களை நினைத்து அனுபவிக்கும்படி அருளவேண்டும்” என்று ப்ரார்த்தித்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் வாழ்வாயாக.

ஐம்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், பிரிவாற்றாமையால் எம்பெருமானுக்குத் தூது விடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வைகல் திருவண்வண்டூர் வைகும் இராமனுக்கு என்
செய்கைதனைப் புள் இனங்காள்செப்பும் என – கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர்! நீர் வணங்குமின்

உலகத்தீர்களே! மிகவும் அன்புடன் “பறவைக் கூட்டங்களே! திருவண்வண்டூரில் நித்ய வாஸம் செய்தருளும் சக்ரவர்த்தித் திருமகனுக்கு என் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கோள்” என்று பறவைகளைத் தூது விடும் ஆழ்வாருடைய திருவடிகளை வணங்குங்கள்.

ஐம்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், ஊடலினால் எம்பெருமானைப் புறம் தள்ளும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன் நிலை போய்ப் பெண் நிலையாய்த் தான் தள்ளி – உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாள் தோறும் நெஞ்சமேநல்கு

ஆழ்வார் தன்னிலை மறந்து கோபிகைகளின் நிலையை அடைந்து, மின்னல் போன்ற இடையுடன் கூடிய பெண்களுடன் இருந்துவிட்டு நேரம் கழித்து வந்த கண்ணனிடம் கொண்ட ஊடலினால் “நான் உன்னுடன் கூட மாட்டேன்” என்று கூறிப் புறம் தள்ளினார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை தினமும் வணங்க நீ எனக்கு உதவி செய்.

ஐம்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் விருத்த விபூதியை (மாறுபட்ட செல்வங்களை) பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று – எல்லை அறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர்

முன்பு இருந்த விரோதிகளைப் போக்கும் கண்ணன், நம்முடைய ஊடலையும் போக்கி, அவனுடன் நாம் கூடும்படிச் செய்தான். அந்தக் கண்ணன் விருத்த விபூதியை உடையவன். இப்படிப்பட்ட கண்ணனை முடிவில்லாமல் வாழும் ஆழ்வார் கொண்டாடினார். தமிழ் மொழியில் மன்னரான இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளைப் பாடுபவர்கள், நித்யஸூரிகளுக்குத் தகுந்த தலைவர்களாக விளங்குவர்.

ஐம்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், கண்ணன் எம்பெருமானின் எல்லா லீலைகளையும் அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் – பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே! துவள்

நெஞ்சே! கண்ணன் எம்பெருமானின் ராஸக்ரீடை முதலிய திவ்ய லீலைகளை இரவு பகல் என்று பாராமல் கொண்டாடக்கூடிய நெஞ்சைக் கொண்டிருப்பதைப் பெருமையுடன் பேசிய ஆழ்வாரின் தேன் போன்ற இனிமையான ஸ்ரீஸூக்திகளில் எப்பொழுதும் மூழ்கி இரு.

ஐம்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், பகவத் விஷயத்தில் தனக்கிருக்கும் பெரிய காதலைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் – துவளறவே
முன்னம் அனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னும் உவப்பால் வந்த மால்

ஒரு தோஷமும் இல்லாமல் கல்யாண குணங்கள் நிரம்பிய எம்பெருமானைப் பொருந்தி அனுபவித்ததால் ஏற்பட்ட ஆனந்தத்தால், ஆழ்வார் ஒரு குற்றமும் இல்லாமல் முதலிலிருந்தே பகவத் விஷயத்தில் மூழ்கி இருந்தார். இப்படிப்பட்ட ஆழ்வார் இயற்கையான பக்தியால், பகவத் விஷயத்தில் தனக்கு எப்பொழுதும் இருக்கும் விருப்பத்தை வெளியிட்டார்.

ஐம்பத்தாறாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானிடத்தில் தான் எல்லாவற்றையும் இழந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன் உடைமை தான் அடையக் – கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனம் அறு சீர் நெஞ்சே! உண்

எம்பெருமானுடன் கூடியிருக்க முடியாததால், மிகவும் தளர்ந்த ஆழ்வார் “என்னுடைய ஆத்மாவையும், ஆத்மாவின் உடைமைகளையும் நான் விடுவதற்கு முன்பு, அவை என்னை விட்டு விலகின” என்று அருளிச்செய்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் குற்றமற்ற கல்யாண குணங்களை அனுபவி.

ஐம்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், திருக்கோளூரை நோக்கிச் செல்லத் தொடங்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

உண்ணும் சோறாதி ஒரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணிணைகள் – மண் உலகில்
மன்னு திருக்கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன் அடியே நந்தமக்குப் பொன்

ஆழ்வார், உண்ணும் சோறும் முதலிய தாரக, போஷக, போக்ய பதார்த்தங்கள் எல்லாம் எம்பெருமான் கண்ணனே என்று, தன் திருக்கண்களில் பெருகும் கண்ணீருடன், திருக்கோளூரில் பொருந்தி எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரனை நோக்கிச் செல்லத் தொடங்கினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளே நமக்கிருக்கும் ஒரே சொத்து.

ஐம்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், சோகத்தில் மூழ்கியதால் எம்பெருமானுக்குத் தூதுவிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பொன் உலகு பூமி எல்லாம் புள் இனங்கட்கே வழங்கி
என் இடரை மாலுக்கு இயம்பும் என – மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர்! போய் வணங்கும் நீர்

பறவைக் கூட்டங்களுக்கு நித்ய விபூதி (பரமபதம்) மற்றும் லீலா விபூதி (ஸம்ஸாரம்) ஆகியவற்றை முழுவதுமாக அளித்து “என்னுடைய துயரத்தை எம்பெருமானிடம் அறிவியுங்கோள்” என்று அருளிச்செய்த ஆழ்வார், ஸ்ரீவைகுண்டம் முதலிய ஸ்தலங்களுக்கு ஆசையுடன் செய்தி அனுப்பினார். பரந்த உலகத்தில் இருப்பவர்களே! இந்த ஆழ்வாரையே நீங்கள் சென்று வணங்குங்கோள்.

ஐம்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், கேட்பவர்களின் நெஞ்சை உருக்கும்படி எம்பெருமானைக் கூப்பிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பரிதா – ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஓதிடவே உய்யும் உலகு

ஸர்வேச்வரன் அழகிய பரமபதத்தில் இருக்கமுடியாதபடியும், கேட்பவர்களின் நெஞ்சை உருக்கும்படியும், ஆழ்வார் ஆராத காதலுடன் எம்பெருமானை அழைத்தார். இந்த ஸ்ரீஸூக்திகளைச் சொல்ல, உலகமே உஜ்ஜீவனத்தை அடையும்.

அறுபதாம் பாசுரம். மாமுனிகள், திருவேங்கடமுடையான் திருவடிகளில் சரணடையும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் – மலர் அடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாள் இணையே
உன் சரணாய் நெஞ்சமே! உள்

இவ்வுலகத்துக்கு உஜ்ஜீவனம் அளிப்பதற்காக ஸர்வேச்வரன் அழகிய, உயர்ந்த திருவேங்கட மலையில் எழுந்தருளியுள்ளான். ஆழ்வார், பெரியபிராட்டியார் புருஷகாரத்துடன் இப்படிப்பட்ட ஸர்வேச்வரனின் திருவடிகளைத் திடமாகப் பற்றினார். நெஞ்சே! இப்படிப்பட்ட வகுளாபரணரின் திருவடிகளையே உபாயமாகக் கொள்.

அறுபத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், க்ரூரமான இந்த்ரியங்களுக்கு அஞ்சும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

உண்ணிலா ஐவருடன் இருத்தி இவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன்புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக்கங்குல்

இனிய பெருமைகளை உடைய ஆழ்வார், எல்லையில்லாத ஆச்சர்யமான லீலைகளை உடைய ஸர்வேச்வரன், தன்னை இவ்வுலகில் தன்னுள்ளே இருக்கும் விரோதிகளான இந்த்ரியங்களுடன், இவ்வுலகில் தன்னை இருக்க வைத்ததை எண்ணிக் கதறினார். இப்படிப்பட்ட ஆழ்வாரை நினைக்கவே, இந்த ஸம்ஸாரம் என்னும் இருண்ட இரவு நீங்கும்.

அறுபத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், துயரத்தினால் அழும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகம் உற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து – இங்கிவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னும் நிலை சேர் மாறன்
அஞ்சொல் உற நெஞ்சு வெள்ளையாம்

இரவும் பகலும் துயரம் அதிகமான பராங்குச நாயகி மோஹித்தாள். ஆழ்வார், பராங்குச நாயகியின் தாயார் நிலையை அடைந்து ஸ்ரீரங்கநாதனை “இங்கு இந்தப் பெண்பிள்ளை விஷயமாக நீர் என்ன செய்ய எண்ணி உள்ளீர்?” என்று முறையிட்டார். இந்த ஸ்ரீஸூக்திகளை எண்ணினவாறே, நெஞ்சம் தூயதாகும்.

அறுபத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், தென்திருப்பேரில் தன் நெஞ்சை இழந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக – உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு
அற்றவர்கள் தாம் ஆழியார்

தன் தாயார் சொன்ன பகவானின் இனிய திருநாமங்களைக் கேட்ட ஆழ்வார், உணர்த்தி பெற்று, தன்னுடைய நெஞ்சமானது தென்திருப்பேர்நகரில் எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரன் விஷயமாக மிகவும் ஈடுபட்டு இருப்பதையும், அங்கே செல்லத் தொடங்குவதையும் அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாருக்காகவே இருப்பவர்கள், ஆழ்ந்த நெஞ்சை உடையவர்கள்.

அறுபத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் வெற்றிச் சரித்ரங்களைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஆழி வண்ணன் தன் விசயம் ஆனவை முற்றும் காட்டி
வாழ் இதனால் என்று மகிழ்ந்து நிற்க – ஊழில் அவை
தன்னை இன்று போல் கண்டு தான் உரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்

கடல்நிற வண்ணனான எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை ஆழ்வாருக்குக் காண்பித்து “இதை அனுபவித்து உம்மை தரித்துக் கொள்ளும்” என்று மகிழ்ச்சியுடன் இருந்தான். ஆழ்வார், முற்காலத்தில் நடந்த அந்த வெற்றிச் சரித்ரங்களை தற்போது நடப்பதுபோல் அனுபவித்து, அதற்கு வெளிப்பாடாக இப்பாசுரங்களை அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அனுஸந்திப்பவர்கள் உயர்ந்த வார்த்தைகளைச் சொன்னவர்களாகக் கருதப்படுவர்.

அறுபத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், “எம்பெருமானின் வெற்றிகளுக்குக் காரணமான எம்பெருமானின் திருவவதாரங்களில் ஜனங்களுக்கு ஏன் ஆசை இல்லாமல் இருக்கிறது?” என்று வருந்திப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை – உற்றுணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்துரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா

தசரதன், வஸுதேவன் முதலியவர்கள் சாஸ்த்ரத்தின் ஸாரத்தை உணர்ந்து, எம்பெருமானின் வெற்றிக்குக் காரணமான அவனுடைய விபவாவதாரங்களில் அன்பு செய்தார்கள். இதை ஆராய்ந்து அறிந்த ஆழ்வார், இவ்வுலகில் மக்கள் இந்த பகவத் விஷயத்தை இழப்பதைத் தகுந்த முறையில் அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் இனிய இசையை உடைய ஸ்ரீஸூக்திகள், தமிழில் அமைந்திருக்கும் சிறந்த சாஸ்த்ரம்.

அறுபத்தாறாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் குணங்களைச் சொல்லிக் கூப்பிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆம் அழகு வேண்டற்பாடாம் அவற்றை – தூ மனத்தால்
நண்ணி அவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்

இங்கே சொல்லப்பட்ட எம்பெருமானை நேரில் அடைந்து, காண ஆசைப்பட்ட ஆழ்வார், நன்றாக உருகி, “ஓ” என்று சொல்லிக் கதறி, சந்தத்துடன் கூடிய வேதத்தில் இருந்து, எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களை அவனுடைய அழகு மற்றும் மேன்மையுடன் பெற்று தன் மனக்கண்ணால் கண்டு அனுபவித்தார். இப்படிப்பட்ட ஸ்வாமியான ஆழ்வாரைச் சென்று அடையாதவர்கள், ஏழைகள் (அஜ்ஞானிகள்).

அறுபத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் திருமுகத்தின் அழகு தன்னை ஒருபடிப்பட்டு நலிவதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மால் அழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க – ஆழு மனம்
தன்னுடனே அவ்வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னும் அவர் தீவினை போம் மாய்ந்து

எம்பெருமானின் வடிவழகு நிலையில்லாத நெஞ்சைக்கொண்ட ஸம்ஸாரிகளை உருக்கும். அதே அழகு ஆழ்வாரைச் சூழ்ந்து, எல்லா இடமும் இருக்க, ஆழ்வாரின் நெஞ்சமும் துக்கக் கடலில் ஆழ்ந்தது. அந்த நெஞ்சத்துடன் கூடி அந்த அழகை அனுபவித்து அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாருடன் கூடியிருப்பவர்களின் பாபங்கள் அழிக்கப்படும்.

அறுபத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் விசித்ரமான (பரந்த, பலவிதமாக இருக்கும்) விச்வரூபத்தை அனுபவித்து ஆச்சர்யப்பட்டுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாயாமல் தன்னை வைத்த வைசித்திரியாலே
தீயா விசித்திரமாச் சேர் பொருளோடு – ஓயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளம் உரைத்த மாறனை நாம்
ஏய்ந்துரைத்து வாழு நாள் என்று?

ஆழ்வாரின் சேஷத்வத்தைக் காத்து, ஸர்வேச்வரன் தான் பரந்து, விரிந்து இருக்கும் தன்மையில், 1) தீ தொடக்கமான பஞ்ச பூதங்களுடனும், அவற்றின் பல்வேறுபட்ட உருவங்களுடனும் 2) பல்வேறுபட்ட சேதனர்களுடனும், அவற்றின் தோஷங்களைப் பார்க்காமல் கூடி இருந்தான். ஸர்வேச்வரனின் இப்படிப்பட்ட பரந்த சொத்துக்களை அருளிச்செய்தார் ஆழ்வார். எப்பொழுது நாம் ஆழ்வாரை அடைந்து அவரின் திருநாமங்களைச் சொல்லி வாழ்வோம்?

அறுபத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், தன்னை எம்பெருமான் திருவாய்மொழி பாடவைத்த செயலை மிகவும் ஈடுபட்டுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

என்தனை நீ இங்கு வைத்தது ஏதுக்கென மாலும்
என்தனக்கும் என்தமர்க்கும் இன்பமதா – நன்று கவி
பாடவெனக் கைம்மாறு இலாமை பகர் மாறன்
பாடணைவார்க்கு உண்டாம் இன்பம்

ஆழ்வார் எம்பெருமானிடம் “எனக்குப் பொருத்தம் இல்லாத இந்த ஸம்ஸாரத்தில் என்னை ஏன் வைத்தாய்?” என்று வினவ, எம்பெருமான் “எனக்கும் என் அடியார்களுக்கும் இன்பத்தைக் கொடுக்கும் பாசுரங்களைப் பாட” என்று பதிலுரைத்தான். எம்பெருமான் செய்த நன்மைக்குத் தான் எந்த ப்ரத்யுபகாரமும் செய்ய முடியாது என்று அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரை அடைபவர்கள் மிகவும் ஆனந்தமாக இருப்பர்.

எழுபதாம் பாசுரம். மாமுனிகள், திருவாய்மொழி பாடிக் கைங்கர்யம் செய்ய ஆசைப்படும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திருவாறன்விளையில் – துன்பம் அறக்
கண்டடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு

தன்னுடைய துன்பங்களைப் போக்கியருளுவதற்காக, தன்னை இனிய திருவாய்மொழியைப் பாடவைக்க, எம்பெருமான் பெரியபிராட்டியாருடன் திருவாறன்விளையில் ஆனந்தமாக எழுந்தருளியிருப்பதைக் கண்டு, அங்கே சென்று அவர்களுக்கு தொண்டு செய்ய ஏங்கினார். ஆழ்ந்த விச்வாஸத்தை உடையவர்களுக்கு, இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளே பரதெய்வம்.

எழுபத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் குணங்களையும் உண்மை நிலையையும் ஸந்தேஹப்பட்டு, அந்த ஸந்தேஹங்கள் தீரப்பெற்ற ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

தேவன் உரை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் – யாவையும்
தானாம் நிலையும் சங்கித்து அவை தெளிந்த மாறன் பால்
மாநிலத்தீர்! நங்கள் மனம்

திருவாறன்விளையில் இருக்கும் எம்பெருமானுடன் கூடி அவனுக்குத் தொண்டு செய்ய முடியாததால், எம்பெருமான் அடியார்களிடத்தில் அடிபணிந்திருக்கும் தன்மையையும், சேதனாசேதனங்கள் தான் என்று சொல்லும்படி இருக்கையையும், தேவையில்லாமல் ஸந்தேஹப்பட்ட ஆழ்வார், அந்த ஸந்தேஹங்கள் நீங்கப் பெற்றார். இப்பரந்த உலகில் வாழ்பவர்களே! நம் நெஞ்சம் அவ்வாழ்வாரிடத்தில் லயித்து இருக்கும்.

எழுபத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், ஆத்மா மற்றும் ஆத்மாவின் உடைமைகளில் தனக்கு ஆசை இல்லாததை அறிவித்த ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நங்கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய
இங்கிவற்றில் ஆசை எமக்குளதென்? – சங்கையினால்
தன் உயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான்
அந்நிலையை ஆய்ந்துரைத்தான் அங்கு

முற்றும் உணர்ந்த எம்பெருமான், ஆழ்வாரின் நெஞ்சை நன்றாக ஆராய, ஆழ்வாரும் தனக்கு இவ்வுலகில் ஈடுபாடு இருக்குமோ என்று தேவையில்லாமல் ஸந்தேஹப்பட்டு, தன்னைப்பற்றியும் தன் உடைமைகளைப்பற்றியும் நன்கு ஆராய்ந்து, தனக்கு அவற்றில் விருப்பம் இல்லை என்பதை உணர்ந்து, தான் உணர்ந்ததை அவனுக்கு அறிவித்து அருளிச்செய்தார்.

எழுபத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் எம்பெருமானுக்குப் பரிவுகாட்ட யாரும் இல்லை என்று வருந்த, எம்பெருமான் தனக்குப் பரிவு காட்டுபவர்கள் உள்ளனர் என்பதைக் காட்ட அதைக் கண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அங்கமரர் பேண அவர் நடுவே வாழ் திருமாற்கு
இங்கோர் பரிவரிலை என்றஞ்ச – எங்கும்
பரிவருளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்

மங்களாசாஸனம் செய்யும் நித்யஸூரிகள் நடுவில் பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் ச்ரிய:பதியான எம்பெருமானுக்கு இந்த ஸம்ஸாரத்தில் மங்களாசாஸனம் செய்பவர்கள் இல்லை என்று ஆழ்வார் பயந்தார். எம்பெருமான் “எனக்காகப் பரிவு காட்டுபவர்கள் எங்கும் உளர்” என்று சொல்ல, ஆழ்வாரின் பயம் நீங்கியது. வரிகள் பொருந்திய சதங்கைகளால் அலங்கரிக்கப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை அடைபவர்கள் உஜ்ஜீவனத்தை அடைவர்.

எழுபத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும் சாபம் மற்றும் அனுக்ரஹத்தைக் கொடுக்கக்கூடியவர்களுடன் சேர்ந்து இருக்கும் தன்மையையும் அவன் காட்டக் கண்டு, பயமற்றுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் – பாரும் எனத்
தான் உகந்த மாறன் தாள் சார் நெஞ்சேசாராயேல்
மானிடவரைச் சார்ந்தது மாய்

ஆழ்வாருக்கு இன்னமும் இருக்கும் பயத்தைப் போக்க ஸர்வேச்வரன் தன் வீரம் முதலிய குணங்களையும், தான் சிறந்த அடியார்களுடன் இருப்பதையும் “பாரும்” என்று சொல்லிக் காட்ட, அவற்றைக் கண்ட ஆழ்வார் மிகவும் மகிழ்ந்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை அடைவாயாக; அடையவில்லை என்றால், ஸம்ஸாரிகளை அடைந்து, நசித்துப் போ.

எழுபத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுடைய வடிவழகை அனுபவிக்கமுடியாமல் மிகவும் வருந்திப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாயன் வடிவழகைக் காணாத வல்விடா
யாய் அதற விஞ்சி அழுது அலற்றும் – தூய புகழ்
உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல்
அற்ற பொழுதானது எல்லியாம்

ஸர்வேச்வரனின் திருமேனி அழகைக் கண்டு அனுபவிக்க முடியாததால் மிகுந்த துயரத்தை அடைந்த ஆழ்வார், அந்த வருத்தம் மிகவும் அதிகமாகி, அழுது, எம்பெருமானை ஒரு க்ரமமில்லாமல் கூப்பிட்டார். இப்படிப்பட்ட பரிசுத்தமான பெருமைகளை உடைய ஆழ்வாருடன் கூடி இருக்கும்பொழுது அது பகல், இந்த அனுபவத்திற்குத் தடை வந்தால் அது இருண்ட இரவு.

எழுபத்தாறாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வாரின் துயரத்தைப் போக்க, எம்பெருமான் ஆழ்வாருக்கு மிக அருகில் வந்து ஆழ்வாருடன் கலந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என – நல்லவர்கள்
மன்னு கடித்தானத்தே மால் இருக்க மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து

ஸர்வேச்வரன் மெதுவே வந்து, பல இரவுகளும் பகல்களுமாக ஆழ்வாருக்கு இருந்த வருத்தத்தைப் போக்குவதற்காக, சிறந்த வைதிகர்கள் வாழும் திருக்கடித்தானத்தில் எழுந்தருளினான். அதைக் கண்ட ஆழ்வார் நிலைபெற்று, எம்பெருமானைப் பற்றி அருளிச்செய்தார்.

எழுபத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாரின் கருத்தைப் பின்பற்றி அவருடன் கலந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம்
திருந்த இவர் தம் திறத்தே செய்து – பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு

திருக்கடித்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரன் ஆழ்வார் இருப்பிடம் வந்து, ஆழ்வாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்து, கருணையைப் பொழிந்து ஆழ்வாருடன் ஒரு நீராகக் கலந்தான். அதன்பின் எம்பெருமான் ஆனந்தமாக இருப்பதைக் கண்ட ஆழ்வார் அதைப்பற்றி அருளிச்செய்தார்.

எழுபத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாருக்கு ஆத்ம ஸ்வரூபத்தின் பெருமையைக் காட்ட அதைக் கண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கலவி
திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து – தண்ணிதெனும்
ஆருயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்துரைத்தான்
காரிமாறன் தன் கருத்து

ஆழ்வாருடன் கலந்த எம்பெருமான், இந்தக் கலவி நிரந்தரமாக இருக்க ஆசைப்பட்டு, ஆழ்வாரின் கண்களை நிறைத்து இருந்து, அணு ஸ்வரூபத்தில் நுண்ணியதாய் இருக்கும் ஆத்மாவின் பெருமைகளைக் காட்டினான். அதை ஆராய்ந்த ஆழ்வார் தன் திருவுள்ளக் கருத்தை வெளியிட்டருளினார்.

எழுபத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், ஆத்மா எம்பெருமானைத் தவிர மற்றவர்களுக்கு அடிமைப்பட்டு இருப்பதை விலக்கிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன்
ஒருமா கலவி உரைப்பால் – திரமாக
அன்னியருக்கு ஆகாது அவன் தனக்கே ஆகும் உயிர்
இந்நிலையை ஓர் நெடிதா

ஆழ்வார் கண்ணனிடத்தில் ஈடுபாடு கொண்ட ஒரு பெண்ணின் (பராங்குச நாயகி) நிலையை அடைந்து, அவளின் தோழியின் பாவனையில் பராங்குச நாயகியின் திருமேனியில் கலவியின் அடையாளங்களைச் சொன்னாள். இந்நிலையில், ஆத்மாவின் நிலையை நன்கு ஆராய்ந்து, ஆத்மா எம்பெருமானுக்கே அடிமைப்பட்டவன் என்றும் அந்த சேஷத்வம் (அடிமைத்தனம்) தகுந்த தலைவனான எம்பெருமானுக்கு மட்டுமே, வேறு யவருக்கும் இல்லை என்றும் உணர்ந்துகொள்.

எண்பதாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுக்கே அடிமைப்பட்டிருப்பதன் உயர்ந்த நிலை பாகவதர்களுக்கு அடிமைப்பட்டு இருப்பது என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு
படுமா நிலை உடைய பத்தர்க்கு – அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது
கொல்லை நிலமான நிலை கொண்டு

ஆழ்வார் ஸர்வேச்வரனின் வடிவழகிலும் கருணை உள்ளம் ஆகிய சிறந்த குணத்திலும் ஈடுபட்டிருக்கும் பாகவதர்களிடம் அடிமை பூண்டிருந்தார். அது மட்டும் அன்று, எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருப்பதின் உயர்ந்த நிலையாக அவன் அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதைக் கருதினார். ஏனெனில் அதுவே உயர்ந்த குறிக்கோளாகையாலே.

எண்பத்தோறாம் பாசுரம். மாமுனிகள், மற்றவர்களைப் பார்த்து ஒரு காரணத்தின் அடியாக வரும் தேஹ பந்துக்களை விட்டு இயற்கையான பந்துவான எம்பெருமானைப் பற்றச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே அவரை விட்டு – தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்கும் இதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு

அஜ்ஞானிகளுக்கும் நன்மையே செய்யும் பெருமையை உடைய ஆழ்வார், கர்மம் என்னும் ஒரு காரணத்தின் அடியாக வந்த மனைவி மக்கள் முதலிய தேஹ பந்துக்களைவிட்டு, தன்னைச் சரணடைபவர்களைத் தன் அடியார்களுடன் சேர்க்கும் ச்ரிய:பதியிடம் சரணடையும்படி உபதேசம் செய்கிறார்.

எண்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுக்கு எல்லாவிதமான பந்துக்களும் செய்யும் செயல்களைச் செய்ய ஆசைப்படும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பண்டை உறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் – தண்டற நீ
செய்தருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையை
உய்துணை என்று உள்ளமே! ஓர்

தன்னுடன் நித்யமான உறவைக்கொண்ட எம்பெருமானைத் திருப்புளிங்குடியில் கண்டு வணங்கி “எல்லாவிதமான உறவுகளின் செயல்களையும் நான் இடைவிடாமல் செய்யும்படி அருளவேண்டும்” என்று ப்ரார்த்தித்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஸ்ரீ சடகோபரின் இரு திருவடிகளையும் நம் உஜ்ஜீவனத்துக்கு வழியாக நினை.

எண்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் சீலம் (எளிமை) என்னும் குணத்தில் மூழ்கியிருக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணனன்றோ நான் என்று – பேருறவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம் மனத்து மை

எம்பெருமான் “உம்முடைய ஆசைகளாக எவற்றை எல்லாம் நீர் ஆராய்ந்து வைத்துள்ளீரோ அவற்றை நான் நிறைவேற்றுகின்றேன். ஸர்வசக்தனான நாராயணன் அன்றோ நான்?” என்று சொல்லி ஆழ்வாருடன் தனக்கு இருக்கும் எல்லா உறவுகளையும் காட்டினான். ஆழ்வார் இப்படிப்பட்ட எம்பெருமானின் சீல குணத்தில் மூழ்கினார். ஆழ்வாரின் கருணை நம் மனத்தில் இருக்கும் அறியாமையைப் போக்கும்.

எண்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், சிறந்ததான வடிவழகை உடைய எம்பெருமானைக் காண ஆசைப்பட்டுக் கூப்பிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மையார் கண் மாமார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்குடனே காண எண்ணி – மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டுகந்த மாறன் பேர்
ஓத உய்யுமே இன்னுயிர்

கருநிற மையாலே அலங்கரிக்கப்பட்ட பெரிய பிராட்டியாரைத் தன் திருமார்பில் நிரந்தரமாக வைத்திருக்கும், திருக்கைகளிலே திருவாழி திருச்சங்கு ஆகியவைகளை வைத்திருக்கும் ச்ரிய:பதியை உண்மையான ஆசையுடன் கூப்பிட்டார் ஆழ்வார். தான் ஆசைப்பட்டபடி கண்ட ஆழ்வார் ஆனந்தத்தை அடைந்தார். இவ்வாழ்வாரின் திருநாமங்களைச் சொல்லவே சிறந்ததான ஆத்மா உஜ்ஜீவனத்தை அடையும்.

எண்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானை நினைவு படுத்தும் வஸ்த்துக்களால் தான் துன்புறுவதை அருளும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்றவனைக் காண எண்ணி ஆண் பெண்ணாய் – பின்னை அவன்
தன்னை நினைவிப்பவற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்

ஆழ்வார் தன்னை தரிக்கப் பண்ணும் ஸர்வேச்வரன் அவ்வாறே தன் நெஞ்சில் இருப்பதைக் கண்டு, நேரிலும் தன்னுடைய வெளிக் கண்களால் உடனே காண ஆசைப்பட்டு, ஆண் தன்மையை இழந்து பெண் தன்மையை அடைந்தார். மேலும் எம்பெருமானை நினைவுறுத்தும் மேகக் கூட்டங்கள் போன்ற வஸ்துக்களைக் கண்டு தளர்ந்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் க்ருபையை த்யானிப்பவர்களின் நெஞ்சம் உருகும்.

எண்பத்தாறாம் பாசுரம். மாமுனிகள், வருத்தத்துடன் எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களை த்யானிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

உருகுமால் என்னெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப் பேசி – மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்துரைத்த மாறன் சொல்
என்னாச் சொல்லாதிருப்பது எங்கு?

ஆழ்வார் “என் நெஞ்சம் உன்னுடைய லீலைகளை நினைத்து உருகும்; மேலும் என்னுடைய ஆசை மிகவும் அதிகமாக ஆனது” என்று வருத்தத்துடன், எம்பெருமான் காதலனாக இருக்கும் தன்மை, தன் நெஞ்சில் நிலைத்திருக்கும்படி அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை என்னுடை நாக்கு எவ்வாறு சொல்லாமல் இருக்கும்?

எண்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் வடிவழகை நம்பி எம்பெருமானுக்குத் தூதுவிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எங்காதலுக்கடி மால் ஏய்ந்த வடிவழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கவன் பால் – எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை அறுக்கும்

ஆழ்வார் “என்னுடைய காதலுக்குக் காரணம் ஸர்வேச்வரனின் இயற்கையான, தகுந்ததான வடிவழகு” என்று சொல்லி அந்நிலையில் அவனுடைய வடிவழகையே நம்பி, எங்கும் உள்ள பறவைக் கூட்டங்களைத் தூதுவராக அனுப்பினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை த்யானித்தவர்களின் தீமைகள் அழிக்கப்படும்.

எண்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், அனுப்பிய தூதுவர்கள் திரும்பி வரும் வரை பொறுக்க முடியாமல் “உடனே திருநாவாயைச் சென்று அடைய வேண்டும்” என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அறுக்கும் இடர் என்று அவன் பால் ஆங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் – அறப்பதறிச்
செய்ய திருநாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வறியாமல்

“அவன் நம் துயரங்களைப் போக்குவான்” என்று எம்பெருமானிடம் தூதுவர்களை அனுப்பினார் ஆழ்வார். ஆனால் அவருடைய திருவுள்ளமோ அந்தத் தூதுவர்கள் திரும்பி வரும் வரை பொறுக்க முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் கலங்கி, சிறந்ததான திருநாவாய்க்குச் செல்லலாம் என்று புறப்பட்டார்.

எண்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், மாலை வேளையில் தன் விருப்பத்தைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் – செல்கின்ற
ஆற்றாமை பேசி அலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என்தன் மால்

ஆழ்வார் ஸர்வேச்வரனை “நான் உனக்கு முழுமையாகக் கைங்கர்யம் செய்யும் நாள் என்று?” என்று கேட்டு, இயற்கையான பக்தியால், எம்பெருமானின் பதிலுக்குக் காத்திருக்க முடியாமல், தன்னுடைய தரியாமையைப் பேசி வருந்தினார். என்னுடைய அறியாமைக்கு நேர் எதிரான இவ்வாழ்வாரின் கருணையால், என்னுடைய அறியாமை நீங்கும்.

தொண்ணூறாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடைய மோக்ஷத்துக்கு நாள் குறிக்கப்பட்ட பின் மற்றவர்களுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னும் உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து – மேலவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நந்தமக்குத் தாள்

ஸர்வேச்வரன் “முழு மனதுடன், உம்முடைய விருப்பங்களை ஆத்மாவுடன் கூடியிருக்கும் இந்த சரீரத்தின் முடிவிலேயே நிறைவேற்றுவேன்” என்று ஆழ்வாருக்குச் சொல்ல, ஞானம் முதலிய குணங்களை உடைய ஆழ்வார், மிகவும் ஆனந்தித்து “திருக்கண்ணபுரம் சென்று அங்கிருக்கும் ஸர்வேச்வரனின் திருவடிகளைப் பணியுங்கோள்” என்றார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகள் நமக்குக் கருணையைப் பொழியாமல் இருக்குமோ?

தொண்ணூற்றொன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானால் நாள் குறிக்கப்பட்டு, எம்பெர்ருமானுடன் சேர்ந்து பரமபதத்துக்குச் செல்லத் தொடங்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தை கதியாக்கி – மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக எண்ணும் மாறன் என
கேதம் உள்ளதெல்லாம் கெடும்

தன் திருவடிகளில் சரணடைந்தவர்களுக்கு எம்பெருமான் தானே இறுதிப் பயணத்தில் துணையாக இருக்கிறான். ஆழ்வார் அந்தக் காளமேகம் எம்பெருமானையே வழித்துணையாகக் கொண்டு, திரும்பி வரும் குற்றம் இல்லாத பரமபதத்தைச் சென்றடைய எண்ணினார். இப்படிப்பட்ட ஆழ்வாரை நினைக்கவே எவையெல்லாம் துயரங்கள் என்று நினைக்கிறோமோ அவையெல்லாம் நசிக்கும்.

தொண்ணூற்றிரண்டாம் பாசுரம். மாமுனிகள், பரமபதத்தில் செய்யும் கைங்கர்யத்தைத் திருவனந்தபுரத்தில் செய்ய ஆசைப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கெடும் இடர் வைகுந்தத்தைக் கிட்டினாற்போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் – பட அரவில்
கண்துயில் மாற்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண்தனில் உள்ளோர் வியப்பவே

சிறந்த பரமபதத்தில் இருக்கும் நித்யஸூரிகள் வியக்கும்படி ஆழ்வார் பணங்களுடன் கூடிய ஆதிசேஷனில் சயனித்துக்கொண்டிருக்கும் எம்பெருமானுக்கு, பரந்த திருவனந்தபுரத்தில், துக்கமே இல்லாத பரமபதத்தை அடைந்து செய்யும் கைங்கர்யத்தைச் செய்ய ஆசைப்பட்டார்.

தொண்ணூற்றுமூன்றாம் பாசுரம். மாமுனிகள், தன்னை ஏன் தன் விருப்பத்து மாறாக ஸம்ஸாரத்தில் வைத்திருக்கிறான் என்ற ஸந்தேஹத்தை ஸர்வேச்வரன் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வேய்மரு தோளிந்திரைகோன் மேவுகின்ற தேசத்தைத்
தான் மருவாத் தன்மையினால் தன்னை இன்னும் – பூமியிலே
வைக்குமெனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு

ஸ்ரீமந் நாராயணன் வசிக்கும் திவ்ய லோகத்தை அடையாமல், பலம் வாய்ந்த மூங்கிலைப் போன்ற தோளை உடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வன், ஆழ்வாருக்கு ஏற்பட்ட தேவையில்லாத ஸந்தேஹமான “எம்பெருமான் இன்னும் என்னை ஸம்ஸாரத்தில் வைத்திருக்கிறானே” என்பதைப் போக்கினான். இப்படித் தகுந்த புகழை உடைய ஆழ்வாரே நமக்குப் புகல்.

தொண்ணூற்றுநான்காம் பாசுரம். மாமுனிகள், முன்பு உபதேசித்த பக்தி யோகம் தன் பலத்துடன் சேர்வதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சார்வாகவே அடியில் தான் உரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை – சோராமல்
கண்டுரைத்த மாறன் கழலிணையே நாள் தோறும்
கண்டுகக்கும் என்னுடைய கண்

எல்லோராலும் கைக்கொள்ள வேண்டிய, திருவாய்மொழி 1.2 “வீடுமின்” பதிகத்தில் ஆழ்வார் முன்பு அருளிச்செய்த பக்தியைப் பற்றித் தெரிந்து கொண்டு, அது ப்ரபத்தியான சிறந்த பலத்துடன் சேர்வதை ஒன்று விடாமல் அருளிச்செய்தார். ஒவ்வொரு நாளும், என்னுடைய கண்கள் இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே ஆனந்தத்துடன் காணும்.

தொண்ணூற்றைந்தாம் பாசுரம். மாமுனிகள், அடியார்கள் எம்பெருமானுடன் செய்யும் பரிமாற்றங்களைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கண்ணன் அடியிணையில் காதலுறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே – மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கைத் தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்

பெருமை படைத்த ஆழ்வார், தன்னுடைய கருணையால் அடியார்கள் எம்பெருமானின் திருவடிகளை நோக்கிச் செய்யும் செயல்களைச் சுருக்கமாக அருளிச்செய்து, அது இவ்வுலகில் உள்ள ஆத்மாக்களின் நெஞ்சில் நிலைபெற்றிருக்கும்படிச் செய்து, தான் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதை முடித்தருளினார்.

தொண்ணூற்றாறாம் பாசுரம். மாமுனிகள், தன் (ஆழ்வாரின்) ஆணைக்கிணங்கத் தன்னைப் பரமபதத்துக்கு அழைத்துச் செல்ல விரையும் எம்பெருமானைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அருளால் அடியில் எடுத்த மாலன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து – இருவிசும்பில்
இத்துடன் கொண்டேக இவர் இசைவு பார்த்தே இருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல்

முதலிலே தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே ஸர்வேச்வரன் ஆழ்வாரை ஸம்ஸாரத்திலிருந்து எடுத்தருளினான்; ஆழ்வாருடைய பரிசுத்தமான ஸ்ரீஸூக்திகள் அவருடைய அஜ்ஞானத்தால் நிறைந்த இந்தச் சரீரத்துடன் அழைத்துப் போக அவரின் அனுமதியை நோக்கிக் காத்திருக்கும் இப்படிப்பட்ட ஸர்வேச்வரனின் சுத்தியை வெளியிடும்.

தொண்ணூற்றேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தன் சரீரத்தில் ஆசைகொண்டதையும் “என்னை விரோதியான இந்தச் சரீரத்தில் இருந்து விடுவிக்கவும்” என்று இதில் ஆசையை விடும்படிச் செய்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

செஞ்சொற்பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சைதனின் – விஞ்சுதலைக்
கண்டவனைக் கால்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண்திறல் மாறன் நம் திரு

வேதத்தின் குறிக்கோளான, நேர்மையான பேச்சுக்களை உடைய பரமபுருஷன் ஞானம் முதலிய குணங்களால் நிறைந்த ஆழ்வாரின் திருமேனியின் மேல் மிகுதியான, கள்ளத்தனமான ஆசை கொண்டிருந்தான். இதைக் கண்ட, திடமான பலம் பொருந்திய ஆழ்வார், எம்பெருமானின் திருவடிகளைப் பிடித்து, தன் சரீரத்தை விடுவித்துக்கொண்டார். இப்படிப்பட்ட ஆழ்வாரே நம் செல்வம்.

தொண்ணூற்றெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானை “அநாதிகாலமாக என்னைக் கைவிட்ட நீ, இப்பொழுது என்னைக் கைக்கொண்ட காரணம் என்?” என்று கேட்க அதற்கு எம்பெருமான் பதிலற்று இருப்பதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

திருமால் தன் பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அருமாயத்து அன்று அகல்விப்பானென்? – பெருமால் நீ
இன்றென்பால் செய்வான் என்னென்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து

ஸ்ரீமந் நாராயணன் தன் விஷயத்தில் கொண்டிருக்கும் சிறந்த ஈடுபாட்டைக் கண்ட, மிகப் பெருமை வாய்ந்த ஆழ்வார் எம்பெருமானை “எம்பெருமானே! அநாதி காலமாக என்னை ஏன் ஸம்ஸாரத்தில் வைத்து உன்னிடமிருந்து தள்ளி வைத்திருந்தாய்? இப்பொழுது என்னிடம் இவ்வளவு அன்பு காட்டுவது ஏன்?” என்று கேட்க, இதற்குப் பதில் இல்லாத எம்பெருமான் வருத்தத்துடன் பவ்யமாக இருந்தான்.

தொண்ணூற்றொன்பதாம் பாசுரம். மாமுனிகள், அர்ச்சிராதி மார்க்கத்தில் தனக்குக் கிடைத்த வரவேற்பை எம்பெருமான் காட்டிக் கொடுக்க, அதை அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து – வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை உரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி

எம்பெருமான் ஆழ்வாரைச் சூழ்ந்து நின்று, பரமபதத்தை அடைவிக்கும் பழையதான அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்டிக் கொடுக்க, திருமுடியில் வகுள மாலையைச் சூடியிருக்கும் ஞான முனியான ஆழ்வார், அங்கே ஆனந்த ஸாகரத்தில் மூழ்கியிருந்ததை முழுவதும் அனுபவித்து, அங்கே ஆனந்தமாக ஒரு பாரமும் இல்லாமல் கருடர் விஷ்வக்ஸேனர் முதலிய அடியார்களுடன் வாழ்ந்ததை அருளிச்செய்தார்.

நூறாம் பாசுரம். மாமுனிகள், பரமபக்தியால் உயர்ந்த குறிக்கோளை அடைந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முனி மாறன் முன்பு உரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து – நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத் தாள் கோனை
ஒருமையுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து

முனிவரான ஆழ்வார், முன்பு கண்ட ஆனந்தங்களிலிருந்து விடுபட்டு, வருத்தத்துடன் தனியாக இருந்தார். நன்கு வளர்ந்த பரமபக்தியால் பரிபக்குவத்தை அடைந்து, ச்ரிய:பதியுடன் தன் திருவுள்ளத்தில் ஒன்றுபட்டு, நித்யஸூரிகளின் பெருமையை அதனால் அடைந்து, பிராட்டியும் எம்பெருமானும் ஆன சேர்த்தியை நேரில் கண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்யப் பெற்றார்.

———————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதியில் சொற்களுக்கும் ஸ்ரீ திருவாய் மொழியில் சொற்களுக்கும் ஸாம்யம் –இறுதி ஐந்து பத்துக்கள் —

March 28, 2023

ஸ்ரீ மா முனிகள் பிரயோகித்த ஆழ்வார் திரு நாம பதங்கள்

1-சடகோபன்-15-
2-குருகையர் கோன்–22-
3-குருகூரில் வந்துதித்த கோ–32–
4-தென் குருகூர் ஏறு–37–
5-மொய்ம்மகிழோன்–40-
6-காரி மாறன்–51-
7-குருகையர் கோன்–52–
8-பராங்குசன்–54-
9-சடகோபற்கு–63-
10-அண்ணலை–66-
11-சடகோபனை–75-
12-சடகோபர்–77-
13-காரிமாறன்–78–
14-ஞான முனி–99-
மாறன் -மற்ற அனைத்து -86-பாசுரங்களிலும் –

—————————-

அந்தாதி (12) 
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே - நாலாயி:151/4 
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை - நாலாயி:2382/3 
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின் - நாலாயி:2942/3 
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3063/3 
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் - நாலாயி:3074/3 
நிரை கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3373/3 
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இ பத்தால் - நாலாயி:3384/3 
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் - நாலாயி:3450/3 
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப்பேரெயில் மேய பத்தும் - நாலாயி:3593/3 
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் - நாலாயி:3692/3 
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3934/3 
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே - நாலாயி:4000/4

அந்தாதிகளால் (1)
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த – நாலாயி:4000/3

திருமொழி (2)
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/3

திருமொழி எங்கள் தே மலர் கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ – நாலாயி:1936/3
திருமொழியாய் (1)
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னை – நாலாயி:2245/3

------------------

அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்
சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான் –நல்ல
மணவாளமாமுனிவன் மாறன் மறைக்குத்
தணவா நூற்றந்தாதி தான்தனியன் 1

இரவும் பகலும், இனிய சொற்களையும் அவற்றின் பொருள்களையும் அறிய விரும்புபவர்களுக்காக,
மணவாள மாமுனிகள் கருணையுடன் தமிழ் வேதமான திருவாய்மொழியின் அர்த்தங்களை,
இச்சிறந்த ப்ரபந்தத்தில் நூறு பாசுரங்களாக அந்தாதி க்ரமத்தில் அருளியுள்ளார்.

மன்னு புகழ் சேர் மணவாள மாமுனிவன்
தன் அருளால் உட்பொருள்கள் தன்னுடனே சொன்ன
திருவாய்மொழி நூற்றந்தாதியாம் தேனை
ஒருவாதருந்து நெஞ்சே! உற்று-தனியன் 2

நெஞ்சே! நித்யமான புகழை உடைய மணவாள மாமுனிகளால்
திருவாய்மொழியின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளியிடுவதற்காகக் கருணையுடன் அருளப்பட்ட
திருவாய்மொழி நூற்றந்தாதி என்கிற தேனைத் தொடர்ந்து பருகுவாயாக.

————-

ஐம்பத்தொன்றாம் பாசுரம்.
மா முனிகள், பிரிவாற்றாமையால் எம்பெருமானுக்குத் தூது விடும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

வைகல் திருவண்வண்டூர் வைகும் இராமனுக்கு என்
செய்கைதனைப் புள் இனங்காள்செப்பும் என – கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர்! நீர் வணங்குமின்–51-

உலகத்தீர்களே!
மிகவும் அன்புடன் “பறவைக் கூட்டங்களே! திருவண்வண்டூரில் நித்ய வாஸம் செய்தருளும்
சக்ரவர்த்தித் திருமகனுக்கு என் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கோள்” என்று
பறவைகளைத் தூது விடும் ஆழ்வாருடைய திருவடிகளை வணங்குங்கள்.

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-

காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2-

திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்
கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3-

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–6-1-4-

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண் வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5-

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-

ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண் கிளியே!
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண் வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7-

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய்!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8-

அடிகள் கை தொழுது, அலர் மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே.–6-1-9-

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11-

————————-

ஐம்பத்திரண்டாம் பாசுரம்.
மா முனிகள், ஊடலினால் எம்பெருமானைப் புறம் தள்ளும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன் நிலை போய்ப் பெண் நிலையாய்த் தான் தள்ளி – உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாள் தோறும் நெஞ்சமேநல்கு–52-

ஆழ்வார் தன்னிலை மறந்து கோபிகைகளின் நிலையை அடைந்து,
மின்னல் போன்ற இடையுடன் கூடிய பெண்களுடன் இருந்துவிட்டு நேரம் கழித்து வந்த
கண்ணனிடம் கொண்ட ஊடலினால் “நான் உன்னுடன் கூட மாட்டேன்” என்று கூறிப் புறம் தள்ளினார்.
நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை தினமும் வணங்க நீ எனக்கு உதவி செய்.

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின் செய்ய
வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந் நாள்;
வேயிருந் தடந் தோளினார் இத் திருவருள் பெறுவார் எவர் கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–6-2-3-

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம் பரமே?
வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-

கழறேல் நம்பி! உன் கை தவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண் சக்கர
நிழறு தொல் படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5-

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில் என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடி பிணக்கே.–6-2-7-

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என் சொல்லார் உகவாதவரே?–6-2-8-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல் குரவே.–6-2-11-

————————

ஐம்பத்து மூன்றாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் விருத்த விபூதியை (மாறுபட்ட செல்வங்களை) பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று – எல்லை அறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர்–53-

முன்பு இருந்த விரோதிகளைப் போக்கும் கண்ணன்,
நம்முடைய ஊடலையும் போக்கி, அவனுடன் நாம் கூடும்படிச் செய்தான்.
அந்தக் கண்ணன் விருத்த விபூதியை உடையவன்.
இப்படிப்பட்ட கண்ணனை முடிவில்லாமல் வாழும் ஆழ்வார் கொண்டாடினார்.
தமிழ் மொழியில் மன்னரான இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளைப் பாடுபவர்கள்,
நித்ய ஸூரிகளுக்குத் தகுந்த தலைவர்களாக விளங்குவர்.

நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே.–6-3-5-

மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ் சுடரே.–6-3-6-

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே.–6-3-9-

நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே.–6-3-10-

காண்மின்கள் உலகீர்! என்று கண் முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-

—————–

ஐம்பத்து நான்காம் பாசுரம்.
மா முனிகள், கண்ணன் எம்பெருமானின் எல்லா லீலைகளையும் அனுபவித்துப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் – பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே! துவள்–54–

நெஞ்சே! கண்ணன் எம்பெருமானின் ராஸக்ரீடை முதலிய திவ்ய லீலைகளை
இரவு பகல் என்று பாராமல் கொண்டாடக்கூடிய நெஞ்சைக் கொண்டிருப்பதைப் பெருமையுடன் பேசிய
ஆழ்வாரின் தேன் போன்ற இனிமையான ஸ்ரீஸூக்திகளில் எப்பொழுதும் மூழ்கி இரு.

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ் வுலகம் நிகரே.–6-4-2-

நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக்கென் னினி நோவதுவே?–6-4-3-

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-

வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க் குலம் புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே?–6-4-5-

இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும் பல
அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப் பரிப்பே.–6-4-6-

மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-

நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து
வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால் வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே?–6-4-9-

மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-

நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்திப் பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11-

——————

ஐம்பத்தைந்தாம் பாசுரம்.
மா முனிகள், பகவத் விஷயத்தில் தனக்கிருக்கும் பெரிய காதலைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் – துவளறவே
முன்னம் அனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னும் உவப்பால் வந்த மால்–55-

ஒரு தோஷமும் இல்லாமல் கல்யாண குணங்கள் நிரம்பிய எம்பெருமானைப் பொருந்தி
அனுபவித்ததால் ஏற்பட்ட ஆனந்தத்தால், ஆழ்வார் ஒரு குற்றமும் இல்லாமல்
முதலிலிருந்தே பகவத் விஷயத்தில் மூழ்கி இருந்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வார் இயற்கையான பக்தியால், பகவத் விஷயத்தில் தனக்கு
எப்பொழுதும் இருக்கும் விருப்பத்தை வெளி யிட்டார்.

துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர் கொடாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவ பிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-

கரைகொள் பைம்பொழில் தண் பணைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர் மல்க நிற்குமே.–6-5-3-

நிற்கும் நான் மறை வாணர் வாழ் தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவுறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே.–6-5-4-

குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-

நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
நோக்கு மேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–6-5-6-

அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-

இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.–6-5-9-

பின்னை கொல்?நில மா மகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-

——————-

ஐம்பத்தாறாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானிடத்தில் தான் எல்லாவற்றையும் இழந்ததைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன் உடைமை தான் அடையக் – கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனம் அறு சீர் நெஞ்சே! உண்–56–

எம்பெருமானுடன் கூடியிருக்க முடியாததால், மிகவும் தளர்ந்த ஆழ்வார்
“என்னுடைய ஆத்மாவையும், ஆத்மாவின் உடைமைகளையும் நான் விடுவதற்கு முன்பு,
அவை என்னை விட்டு விலகின” என்று அருளிச்செய்தார்.
நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் குற்றமற்ற கல்யாண குணங்களை அனுபவி.

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-

சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2-

நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங்கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3-

பீடுடை நான்முகனைப் படைத் தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4-

பண்புரை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-

கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற் சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற் பல தாமரை நாண் மலர்க் கையற்கு என்
விற் புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6-

மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7-

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம் படப் பாலுண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே.–6-6-8-

மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9-

பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10-

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சட கோபன் சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே.–6-6-11-

———————

ஐம்பத்தேழாம் பாசுரம்.
மா முனிகள், திருக்கோளூரை நோக்கிச் செல்லத் தொடங்கும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

உண்ணும் சோறாதி ஒரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணிணைகள் – மண் உலகில்
மன்னு திருக்கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன் அடியே நந்தமக்குப் பொன்–57-

ஆழ்வார், உண்ணும் சோறும் முதலிய தாரக, போஷக, போக்ய பதார்த்தங்கள் எல்லாம்
எம்பெருமான் கண்ணனே என்று, தன் திருக்கண்களில் பெருகும் கண்ணீருடன்,
திருக்கோளூரில் பொருந்தி எழுந்தருளியிருக்கும் ஸர்வேஸ் வரனை நோக்கிச் செல்லத் தொடங்கினார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளே நமக்கிருக்கும் ஒரே சொத்து.

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3-

கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இள மான் செல்ல மேவினளே.–6-7-4-

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்த்
தென் திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனி மல்கவே.–6-7-6-

மல்கு நீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.–6-7-8-

காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங் கண் இள மான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத் தனையும் விடாள் அவன் சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10-

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-

—————-

ஐம்பத்தெட்டாம் பாசுரம்.
மா முனிகள், சோகத்தில் மூழ்கியதால் எம்பெருமானுக்குத் தூதுவிடும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

பொன் உலகு பூமி எல்லாம் புள் இனங்கட்கே வழங்கி
என் இடரை மாலுக்கு இயம்பும் என – மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர்! போய் வணங்கும் நீர்–58-

பறவைக் கூட்டங்களுக்கு நித்ய விபூதி (பரமபதம்) மற்றும் லீலா விபூதி (ஸம்ஸாரம்) ஆகியவற்றை
முழுவதுமாக அளித்து “என்னுடைய துயரத்தை எம்பெருமானிடம் அறிவியுங்கோள்” என்று
அருளிச் செய்த ஆழ்வார், ஸ்ரீவைகுண்டம் முதலிய ஸ்தலங்களுக்கு ஆசையுடன் செய்தி அனுப்பினார்.
பரந்த உலகத்தில் இருப்பவர்களே! இந்த ஆழ்வாரையே நீங்கள் சென்று வணங்குங்கோள்.

பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

மையமர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-

ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே.–6-8-3-

தூ மது வாய்கள் கொண்டு வந்து, என் முல்லைகள் மேல் தும்பிகாள்!
பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய் செய்தகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4-

நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கட் கரு முகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5-

என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்
சென்மின்கள் தீ வினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6-

பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான்
மாவை வல்வாய பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–6-8-7-

பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே.–6-8-8-

பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9-

வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர் மேல் அசையும் அன்னங்காள்!
என் திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின் என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே.–6-8-10-

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
தோற்றங்களாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே.–6-8-11-

——————

ஐம்பத்தொன்பதாம் பாசுரம்.
மா முனிகள், கேட்பவர்களின் நெஞ்சை உருக்கும்படி எம்பெருமானைக் கூப்பிடும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பரிதா – ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஓதிடவே உய்யும் உலகு–59-

ஸர்வேஸ்வரன் அழகிய பரம பதத்தில் இருக்க முடியாதபடியும்,
கேட்பவர்களின் நெஞ்சை உருக்கும்படியும்,
ஆழ்வார் ஆராத காதலுடன் எம்பெருமானை அழைத்தார்.
இந்த ஸ்ரீஸூக்திகளைச் சொல்ல, உலகமே உஜ்ஜீவனத்தை அடையும்.

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே.–6-9-2-

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே.–6-9-4-

விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5-

பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும்
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6-

உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
அலகில் பொலிந்த திசை பத்தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே.–6-9-7-

அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8-

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-

குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.–6-9-10-

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11-

——————

அறுபதாம் பாசுரம்.
மா முனிகள், திருவேங்கடமுடையான் திருவடிகளில் சரணடையும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளி செய்கிறார்.

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் – மலர் அடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாள் இணையே
உன் சரணாய் நெஞ்சமே! உள்–60-

இவ் வுலகத்துக்கு உஜ்ஜீவனம் அளிப்பதற்காக ஸர்வேஸ்வரன்
அழகிய, உயர்ந்த திருவேங்கட மலையில் எழுந்தருளியுள்ளான்.
ஆழ்வார், பெரிய பிராட்டியார் புருஷகாரத்துடன் இப்படிப்பட்ட
ஸர்வேஸ்வரனின் திருவடிகளைத் திடமாகப் பற்றினார்.
நெஞ்சே! இப்படிப்பட்ட வகுளாபரணரின் திருவடிகளையே உபாயமாகக் கொள்.

உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந் தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3-

ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4-

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8-

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11-

———————

அறுபத்தொன்றாம் பாசுரம்.
மா முனிகள், க்ரூரமான இந்த்ரியங்களுக்கு அஞ்சும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

உண்ணிலா ஐவருடன் இருத்தி இவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன்புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக்கங்குல்–61

இனிய பெருமைகளை உடைய ஆழ்வார்,
எல்லையில்லாத ஆச்சர்யமான லீலைகளை உடைய ஸர்வேஸ்வரன், தன்னை இவ்வுலகில்
தன்னுள்ளே இருக்கும் விரோதிகளான இந்த்ரியங்களுடன், இவ்வுலகில்
தன்னை இருக்க வைத்ததை எண்ணிக் கதறினார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரை நினைக்கவே, இந்த ஸம்ஸாரம் என்னும் இருண்ட இரவு நீங்கும்.

உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-

வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச்
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!–7-1-4-

தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ!–7-1-7-

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!–7-1-8-

குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11-

——————-

அறுபத்திரண்டாம் பாசுரம்.
மா முனிகள், துயரத்தினால் அழும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகம் உற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து – இங்கிவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னும் நிலை சேர் மாறன்
அஞ்சொல் உற நெஞ்சு வெள்ளையாம்–62-

இரவும் பகலும் துயரம் அதிகமான பராங்குச நாயகி மோஹித்தாள்.
ஆழ்வார், பராங்குச நாயகியின் தாயார் நிலையை அடைந்து ஸ்ரீரங்கநாதனை
“இங்கு இந்தப் பெண்பிள்ளை விஷயமாக நீர் என்ன செய்ய எண்ணி உள்ளீர்?” என்று முறையிட்டார்.
இந்த ஸ்ரீஸூக்திகளை எண்ணினவாறே, நெஞ்சம் தூயதாகும்.

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கை துழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில் வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்கும் மையாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!
அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய் தானே!–7-2-5-

‘மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னும்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-

‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட
கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-

‘கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக்
கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!
என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்;
‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;
‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;
‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10-

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-

————–

அறுபத்துமூன்றாம் பாசுரம்.
மா முனிகள், தென்திருப்பேரில் தன் நெஞ்சை இழந்ததைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக – உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு
அற்றவர்கள் தாம் ஆழியார்–63-

தன் தாயார் சொன்ன பகவானின் இனிய திருநாமங்களைக் கேட்ட ஆழ்வார்,
உணர்த்தி பெற்று, தன்னுடைய நெஞ்சமானது தென்திருப்பேர்நகரில் எழுந்தருளியிருக்கும்
ஸர்வேஸ்வரன் விஷயமாக மிகவும் ஈடுபட்டு இருப்பதையும்,
அங்கே செல்லத் தொடங்குவதையும் அருளிச்செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாருக்காகவே இருப்பவர்கள், ஆழ்ந்த நெஞ்சை உடையவர்கள்.

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே– .–7-3-1-

நானக் கருங்குழல் தோழிமீர் காள்!
அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்
என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2-

செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-

இழந்த எம்மாமைத் திறத்துப் போன
என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!
ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்--7-3-4-

முனிந்து சகடம் உதைத்து மாயப்
பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்!
முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே
காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5-

காலம் பெற என்னைக் காட்டுமின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான்
நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த
நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6-

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப்
பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ!
என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.–7-3-7-

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக்
கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும்
நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த
தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8-

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்!
அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர் வள ஒண் கழனிப் பழனத்
தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9-

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!
சிகர மணி நெடு மாட நீடு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்று வரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்
நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10-

ஊழிதோறு ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார்
அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11-

————–

அறுபத்துநான்காம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் வெற்றிச் சரித்ரங்களைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஆழி வண்ணன் தன் விசயம் ஆனவை முற்றும் காட்டி
வாழ் இதனால் என்று மகிழ்ந்து நிற்க – ஊழில் அவை
தன்னை இன்று போல் கண்டு தான் உரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்–64-

கடல்நிற வண்ணனான எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை ஆழ்வாருக்குக் காண்பித்து
“இதை அனுபவித்து உம்மை தரித்துக் கொள்ளும்” என்று மகிழ்ச்சியுடன் இருந்தான்.
ஆழ்வார், முற்காலத்தில் நடந்த அந்த வெற்றிச் சரித்ரங்களை தற்போது நடப்பதுபோல் அனுபவித்து,
அதற்கு வெளிப்பாடாக இப்பாசுரங்களை அருளிச் செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அனுஸந்திப்பவர்கள்
உயர்ந்த வார்த்தைகளைச் சொன்னவர்களாகக் கருதப்படுவர்.

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-

ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3-

நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4-

ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5-(அறை தட்டுதல் -எறி பாட பேதம் )

போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6-

மாறு நிரைத் திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7-

நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக் கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8-

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9-

மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10-

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11- .

———————

அறுபத்தைந்தாம் பாசுரம்.
மா முனிகள், “எம்பெருமானின் வெற்றிகளுக்குக் காரணமான எம்பெருமானின்
திருவவதாரங்களில் ஜனங்களுக்கு ஏன் ஆசை இல்லாமல் இருக்கிறது?” என்று வருந்திப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை – உற்றுணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்துரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா–65-

தசரதன், வஸுதேவன் முதலியவர்கள் சாஸ்த்ரத்தின் ஸாரத்தை உணர்ந்து,
எம்பெருமானின் வெற்றிக்குக் காரணமான அவனுடைய விபவாவதாரங்களில் அன்பு செய்தார்கள்.
இதை ஆராய்ந்து அறிந்த ஆழ்வார், இவ்வுலகில் மக்கள் இந்த பகவத் விஷயத்தை இழப்பதைத் தகுந்த முறையில் அருளிச்செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் இனிய இசையை உடைய ஸ்ரீஸூக்திகள், தமிழில் அமைந்திருக்கும் சிறந்த சாஸ்த்ரம்.

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2-

‘கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3-

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4-

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.–7-5-5-

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.–7-5-6-

கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்
இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7-

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரி யுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8-

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே –7-5-9-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-சேர்த்து-சேர்த்தி -பாட பேதம் –

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-

————-

அறுபத்தாறாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் குணங்களைச் சொல்லிக் கூப்பிடும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆம் அழகு வேண்டற்பாடாம் அவற்றை – தூ மனத்தால்
நண்ணி அவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்–66-

இங்கே சொல்லப்பட்ட எம்பெருமானை நேரில் அடைந்து, காண ஆசைப்பட்ட ஆழ்வார்,
நன்றாக உருகி, “ஓ” என்று சொல்லிக் கதறி, சந்தத்துடன் கூடிய வேதத்தில் இருந்து,
எம்பெருமானின் திருக் கல்யாண குணங்களை அவனுடைய அழகு மற்றும் மேன்மையுடன் பெற்று
தன் மனக் கண்ணால் கண்டு அனுபவித்தார்.
இப்படிப்பட்ட ஸ்வாமியான ஆழ்வாரைச் சென்று அடையாதவர்கள், ஏழைகள் (அஜ்ஞானிகள்).

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ! தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-

என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னைப்
பூத் தண் துழாய் முடியாய்! புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே! வந்து என் ஆருயிர் நீ ஆனால்
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப் பெய்வனே?–7-6-3-

எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4-

என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.–7-6-6-

என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7-

ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8-

காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-

ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11-

—————

அறுபத்தேழாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் திருமுகத்தின் அழகு தன்னை ஒருபடிப்பட்டு நலிவதைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மால் அழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க – ஆழு மனம்
தன்னுடனே அவ்வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னும் அவர் தீவினை போம் மாய்ந்து–67-

எம்பெருமானின் வடிவழகு நிலையில்லாத நெஞ்சைக் கொண்ட ஸம்ஸாரிகளை உருக்கும்.
அதே அழகு ஆழ்வாரைச் சூழ்ந்து, எல்லா இடமும் இருக்க, ஆழ்வாரின் நெஞ்சமும் துக்கக் கடலில் ஆழ்ந்தது.
அந்த நெஞ்சத்துடன் கூடி அந்த அழகை அனுபவித்து அருளிச்செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாருடன் கூடியிருப்பவர்களின் பாபங்கள் அழிக்கப்படும்.

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-

வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினை கொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-திசைகள் எல்லாம் பாட பேதம்

இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண்ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.–7-7-4-

என்று நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5-

உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே.–7-7-6-

காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–7-7-7-

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-

கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழை கொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9-

நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?–7-7-10-

கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11-

—————

அறுபத்தெட்டாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் விசித்ரமான (பரந்த, பலவிதமாக இருக்கும்)
விஸ்வரூபத்தை அனுபவித்து ஆச்சர்யப்பட்டுப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மாயாமல் தன்னை வைத்த வைசித்திரியாலே
தீயா விசித்திரமாச் சேர் பொருளோடு – ஓயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளம் உரைத்த மாறனை நாம்
ஏய்ந்துரைத்து வாழு நாள் என்று?--68-

ஆழ்வாரின் சேஷத்வத்தைக் காத்து, ஸர்வேஸ்வரன் தான் பரந்து, விரிந்து இருக்கும் தன்மையில்,
1) தீ தொடக்கமான பஞ்ச பூதங்களுடனும், அவற்றின் பல்வேறுபட்ட உருவங்களுடனும்
2) பல்வேறுபட்ட சேதனர்களுடனும், அவற்றின் தோஷங்களைப் பார்க்காமல் கூடி இருந்தான்.
ஸர்வேஸ்வரனின் இப்படிப்பட்ட பரந்த சொத்துக்களை அருளிச்செய்தார் ஆழ்வார்.
எப்பொழுது நாம் ஆழ்வாரை அடைந்து அவரின் திருநாமங்களைச் சொல்லி வாழ்வோம்?

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-

அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புகழாய்ப் பழியாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!-7-8-2-

சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3-வித்தகத்தால் பாட பேதம்

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4-

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-

மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னு நீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே.–7-8-6-

துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே.–7-8-7-

என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8-.

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-

இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம்
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே –7-8-10-

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11-

—————

அறுபத்தொன்பதாம் பாசுரம்.
மா முனிகள், தன்னை எம்பெருமான் திருவாய்மொழி பாடவைத்த செயலை மிகவும் ஈடுபட்டுப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

என்தனை நீ இங்கு வைத்தது ஏதுக்கென மாலும்
என்தனக்கும் என்தமர்க்கும் இன்பமதா – நன்று கவி
பாடவெனக் கைம்மாறு இலாமை பகர் மாறன்
பாடணைவார்க்கு உண்டாம் இன்பம்-69-

ஆழ்வார் எம்பெருமானிடம் “எனக்குப் பொருத்தம் இல்லாத இந்த ஸம்ஸாரத்தில் என்னை ஏன் வைத்தாய்?” என்று வினவ,
எம்பெருமான் “எனக்கும் என் அடியார்களுக்கும் இன்பத்தைக் கொடுக்கும் பாசுரங்களைப் பாட” என்று பதிலுரைத்தான்.
எம்பெருமான் செய்த நன்மைக்குத் தான் எந்த ப்ரத்யுபகாரமும் செய்ய முடியாது என்று அருளிச்செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரை அடைபவர்கள் மிகவும் ஆனந்தமாக இருப்பர்.

என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வந்து புகுந்து நல் இன்கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3-

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக் கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டே.–7-9-4-

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5-

இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6-

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7-

ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8-

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10-

இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11-

————–

எழுபதாம் பாசுரம்.
மா முனிகள், திருவாய்மொழி பாடிக் கைங்கர்யம் செய்ய ஆசைப்படும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திருவாறன்விளையில் – துன்பம் அறக்
கண்டடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு–70-

தன்னுடைய துன்பங்களைப் போக்கி யருளுவதற்காக, தன்னை இனிய திருவாய்மொழியைப் பாட வைக்க,
எம்பெருமான் பெரியபிராட்டியாருடன் திருவாறன்விளையில் ஆனந்தமாக
எழுந்தருளியிருப்பதைக் கண்டு, அங்கே சென்று அவர்களுக்கு தொண்டு செய்ய ஏங்கினார்.
ஆழ்ந்த விஸ்வாஸத்தை உடையவர்களுக்கு, இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளே பர தெய்வம்.

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கை தொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொலோ?–7-10-2-

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக் கண்டு கை தொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும் புகழ் நான் மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

மலரடிப் போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5-

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீ வினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-

நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன்
வாண புரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ் செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-

‘தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-

————–

எழுபத்தொன்றாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் குணங்களையும் உண்மை நிலையையும் ஸந்தேஹப்பட்டு,
அந்த ஸந்தேஹங்கள் தீரப்பெற்ற ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

தேவன் உரை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் – யாவையும்
தானாம் நிலையும் சங்கித்து அவை தெளிந்த மாறன் பால்
மாநிலத்தீர்! நங்கள் மனம்--71-

திருவாறன்விளையில் இருக்கும் எம்பெருமானுடன் கூடி அவனுக்குத் தொண்டு செய்ய முடியாததால்,
எம்பெருமான் அடியார்களிடத்தில் அடி பணிந்திருக்கும் தன்மையையும்,
சேதனாசேதனங்கள் தான் என்று சொல்லும்படி இருக்கையையும்,
தேவையில்லாமல் ஸந்தேஹப்பட்ட ஆழ்வார், அந்த ஸந்தேஹங்கள் நீங்கப் பெற்றார்.
இப்பரந்த உலகில் வாழ்பவர்களே! நம் நெஞ்சம் அவ்வாழ்வாரிடத்தில் லயித்து இருக்கும்.

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-

உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4-

ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ ! (சீரியரேயோ) மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே ! பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகணைப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

——————

எழுபத்திரண்டாம் பாசுரம்.
மா முனிகள், ஆத்மா மற்றும் ஆத்மாவின் உடைமைகளில் தனக்கு ஆசை இல்லாததை
அறிவித்த ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

நங்கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய
இங்கிவற்றில் ஆசை எமக்குளதென்? – சங்கையினால்
தன் உயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான்
அந்நிலையை ஆய்ந்துரைத்தான் அங்கு–72-

முற்றும் உணர்ந்த எம்பெருமான், ஆழ்வாரின் நெஞ்சை நன்றாக ஆராய,
ஆழ்வாரும் தனக்கு இவ்வுலகில் ஈடுபாடு இருக்குமோ என்று தேவையில்லாமல் ஸந்தேஹப்பட்டு,
தன்னைப்பற்றியும் தன் உடைமைகளைப்பற்றியும் நன்கு ஆராய்ந்து,
தனக்கு அவற்றில் விருப்பம் இல்லை என்பதை உணர்ந்து,
தான் உணர்ந்ததை அவனுக்கு அறிவித்து அருளிச் செய்தார்.

நங்கள் வரி வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-

ஆழி வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5-

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-

மாலரி கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே–8-2-8-

காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-

பாதமடைவதன் பாசத்தாலே
மற்ற வன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-

——————-

எழுபத்துமூன்றாம் பாசுரம்.
மா முனிகள், ஆழ்வார் எம்பெருமானுக்குப் பரிவுகாட்ட யாரும் இல்லை என்று வருந்த,
எம்பெருமான் தனக்குப் பரிவு காட்டுபவர்கள் உள்ளனர் என்பதைக் காட்ட
அதைக் கண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

அங்கமரர் பேண அவர் நடுவே வாழ் திருமாற்கு
இங்கோர் பரிவரிலை என்றஞ்ச – எங்கும்
பரிவருளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்–73-

மங்களாசாஸனம் செய்யும் நித்யஸூரிகள் நடுவில் பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ ய:பதியான எம்பெருமானுக்கு இந்த ஸம்ஸாரத்தில் மங்களாசாஸனம்
செய்பவர்கள் இல்லை என்று ஆழ்வார் பயந்தார்.
எம்பெருமான் “எனக்காகப் பரிவு காட்டுபவர்கள் எங்கும் உளர்” என்று சொல்ல, ஆழ்வாரின் பயம் நீங்கியது.
வரிகள் பொருந்திய சதங்கைகளால் அலங்கரிக்கப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை அடைபவர்கள்
உஜ்ஜீவனத்தை அடைவர்.

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல் படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2-

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழி யொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற் றாழும் கொடியேற்கே–8-3-4-

கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

பணியா வமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-கொண்டு அருளி -பாட பேதம் –

திருமால் ! நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கரு மா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

————

எழுபத்துநான்காம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும்
சாபம் மற்றும் அனுக்ரஹத்தைக் கொடுக்கக்கூடியவர்களுடன் சேர்ந்து இருக்கும் தன்மையையும்
அவன் காட்டக் கண்டு, பயமற்றுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை
அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் – பாரும் எனத்
தான் உகந்த மாறன் தாள் சார் நெஞ்சேசாராயேல்
மானிடவரைச் சார்ந்தது மாய்–74-

ஆழ்வாருக்கு இன்னமும் இருக்கும் பயத்தைப் போக்க ஸர்வேஸ்வரன் தன் வீரம் முதலிய குணங்களையும்,
தான் சிறந்த அடியார்களுடன் இருப்பதையும் “பாரும்” என்று சொல்லிக் காட்ட,
அவற்றைக் கண்ட ஆழ்வார் மிகவும் மகிழ்ந்தார்.
நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை அடைவாயாக;
அடையவில்லை என்றால், ஸம்ஸாரிகளை அடைந்து, நசித்துப் போ.

வார்கடா வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாட மீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர் கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-

எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2-

என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணி கொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே–8-4-3-

பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-

எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளி யம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக் கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத் திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-

திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர் கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-

படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9-

அமர்ந்த நாதனை யவரவராகி
அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம் பதி
அவனி தேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக் கண் அம்மானை
நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

——————

எழுபத்தைந்தாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானுடைய வடிவழகை அனுபவிக்க முடியாமல் மிகவும் வருந்திப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மாயன் வடிவழகைக் காணாத வல்விடா
யாய் அதற விஞ்சி அழுது அலற்றும் – தூய புகழ்
உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல்
அற்ற பொழுதானது எல்லியாம்–75-

ஸர்வேஸ்வரனின் திருமேனி அழகைக் கண்டு அனுபவிக்க முடியாததால் மிகுந்த துயரத்தை அடைந்த ஆழ்வார்,
அந்த வருத்தம் மிகவும் அதிகமாகி, அழுது, எம்பெருமானை ஒரு க்ரமமில்லாமல் கூப்பிட்டார்.
இப்படிப்பட்ட பரிசுத்தமான பெருமைகளை உடைய ஆழ்வாருடன் கூடி இருக்கும்பொழுது அது பகல்,
இந்த அனுபவத்திற்குத் தடை வந்தால் அது இருண்ட இரவு.

மாயக் கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே
ஒரு நாள் காண வாராயே-8-5-1-

காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால்
இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும்
கருமா மாணிக்கம்
நாள் நன் மலை போல் சுடர்ச் சோதி
முடி சேர் சென்னி யம்மானே–8-5-2-

முடி சேர் சென்னி யம்மா
நின் மொய் பூந்தாமத் தண் துழாய்
கடி சேர் கண்ணிப் பெருமானே
என்று என்றே ஏங்கி அழுதக்கால்
படி சேர் மகரக் குழைகளும்
பவள வாயும் நால் தோளும்
துடி சேரிடையும் அமைந்ததோர்
தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3-

தூ நீர் முகில் போல் தோன்றும்
நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலை தன் மேல்
வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே-8-5-4-

சொல்ல மாட்டேன் அடியேன்
உன் துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லையில் சீரிள நாயிறு
இரண்டு போல் என்னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு
உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுதுண்ட
மா நீர்க் கொண்டல் வண்ணனே-8-5-5-

கொண்டல் வண்ணா குடக்கூத்தா
வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்  தான்
விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண
ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-

வந்து தோன்றாயன்றேல்
உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7-

ஒக்கும் அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாணாளும்
தொக்கமே கப்பல் குழாங்கள்
காணும் தோறும் தொலைவன் நான்
தக்க வைவர் தமக்காயன்று
ஈரைம்பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர்ப் தனிப் பாகா
வாராயிதுவோ பொருத்தமே-8-5-8-

இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய்
ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே
என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை
உத்தர மதுரைப் பிறந்த மாயனே-8-5-9-

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா
நீ யின்னே
சிறந்த கால் தீ நீர் வான்
மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இறந்து நின்ற பெரு மாயா
உன்னை எங்கே காண்கேனே-8-5-10-

எங்கே காண்கேன்
ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்
எல்லியும் காலையே-8-5-11-

—————

எழுபத்தாறாம் பாசுரம்.
மாமுனிகள், ஆழ்வாரின் துயரத்தைப் போக்க, எம்பெருமான்
ஆழ்வாருக்கு மிக அருகில் வந்து ஆழ்வாருடன் கலந்ததைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என – நல்லவர்கள்
மன்னு கடித்தானத்தே மால் இருக்க மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து--76-

ஸர்வேஸ்வரன் மெதுவே வந்து, பல இரவுகளும் பகல்களுமாக ஆழ்வாருக்கு
இருந்த வருத்தத்தைப் போக்குவதற்காக, சிறந்த வைதிகர்கள் வாழும்
திருக்கடித்தானத்தில் எழுந்தருளினான்.
அதைக் கண்ட ஆழ்வார் நிலைபெற்று, எம்பெருமானைப் பற்றி அருளிச் செய்தார்.

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2-

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்
திரு வமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறைகின்ற மாயப் பிரானே–8-6-3-

மாயப் பிரான் என் வல் வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்
தேசத்தமர் திருக் கடித் தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே-8-6-4-

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-

கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை
ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–8-6-6-

கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே-8-6-7-

தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8-

தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத்தமரர் திருக்கடித் தானத்துள்
ஆயர்க்கதிபதி அற்புதன் தானே–8-6-9-

அற்புதன் நாரணன் அரி வாமனன்
நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
நற் புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக் கடித் தானமே-8-6-10-

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-

—————-

எழுபத்தேழாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமான் ஆழ்வாரின் கருத்தைப் பின்பற்றி அவருடன் கலந்ததைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம்
திருந்த இவர் தம் திறத்தே செய்து – பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு–77-

திருக்கடித்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஸர்வேஸ்வரன் ஆழ்வார் இருப்பிடம் வந்து,
ஆழ்வாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்து,
கருணையைப் பொழிந்து ஆழ்வாருடன் ஒரு நீராகக் கலந்தான்.
அதன்பின் எம்பெருமான் ஆனந்தமாக இருப்பதைக் கண்ட ஆழ்வார் அதைப் பற்றி அருளிச் செய்தார்.

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என் தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-8-7-4-

திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள்
திகழும் மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே–8-7-5-

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6-

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க் கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-

அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன்
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–

வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நின்ற ஒரு  மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே—8-7-9-

வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்தேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10-

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடி சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப் பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-

—————-

எழுபத்தெட்டாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமான் ஆழ்வாருக்கு ஆத்ம ஸ்வரூபத்தின் பெருமையைக் காட்ட
அதைக் கண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கலவி
திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து – தண்ணிதெனும்
ஆருயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்துரைத்தான்
காரிமாறன் தன் கருத்து–78-

ஆழ்வாருடன் கலந்த எம்பெருமான், இந்தக் கலவி நிரந்தரமாக இருக்க ஆசைப்பட்டு,
ஆழ்வாரின் கண்களை நிறைத்து இருந்து, அணு ஸ்வரூபத்தில் நுண்ணியதாய்
இருக்கும் ஆத்மாவின் பெருமைகளைக் காட்டினான்.
அதை ஆராய்ந்த ஆழ்வார் தன் திருவுள்ளக் கருத்தை வெளியிட்டருளினார்.

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே–8-8-1-

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-

யானும் தானாய் ஒழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4-

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5-

நன்றாய் ஞானம் கடந்து போய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை யற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே–8-8-6-

அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி
ஆதும் இலிகளா கிற்கில்
அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு எது இன்பம் என்று
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே–8-8-7-

எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று
இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்கத்
தாம் போகும் போது உன்
மத்தர் போல் பித்தே ஏறி
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ
டொத்தே சென்று அங்கு உள்ளம்
கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே–8-8-8-

கூடிற்றாகில் நல் உறைப்பு
கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி
எம்மாயனாவாத துவதுவே
வீடைப் பண்ணி யொரு பரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும்
உளரும் இல்லை அல்லரே–8-8-9-

உளரும் இல்லை அல்லராய்
உளராய் யில்லை யாகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து
என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும் போலே
அசைவும் ஆக்கமும்
வளருஞ்சுடரும் இருளும் போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே–8-8-10-

தெருளும் மருளும் மாய்த்துத்
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும்
நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-

—————

எழுபத்தொன்பதாம் பாசுரம்.
மா முனிகள், ஆத்மா எம்பெருமானைத் தவிர மற்றவர்களுக்கு அடிமைப்பட்டு இருப்பதை
விலக்கிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன்
ஒருமா கலவி உரைப்பால் – திரமாக
அன்னியருக்கு ஆகாது அவன் தனக்கே ஆகும் உயிர்
இந்நிலையை ஓர் நெடிதா–79-

ஆழ்வார் கண்ணனிடத்தில் ஈடுபாடு கொண்ட ஒரு பெண்ணின் (பராங்குச நாயகி) நிலையை அடைந்து,
அவளின் தோழியின் பாவனையில் பராங்குச நாயகியின் திருமேனியில் கலவியின் அடையாளங்களைச் சொன்னாள்.
இந்நிலையில், ஆத்மாவின் நிலையை நன்கு ஆராய்ந்து, ஆத்மா எம்பெருமானுக்கே அடிமைப்பட்டவன் என்றும்
அந்த சேஷத்வம் (அடிமைத்தனம்) தகுந்த தலைவனான எம்பெருமானுக்கு மட்டுமே,
வேறு யவருக்கும் இல்லை என்றும் உணர்ந்து கொள்.

கருமாணிக்க மலை மேல்
மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை
உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல்
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-

அன்னைமீரிதற் கென் செய்கேன்
அணி மேருவின் மீதுலவும்
துன்னு சூழ் சுடர் நாயிறும்
அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம்
பல்கலன் தானுடை யெம்பெருமான்
புன்னை பூம் பொழில் சூழ்
திருப் புலியூர் புகழும் இவளே–8-9-2-

புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க்
கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்ப
செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு
அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு
திருப் புலியூர் வளமே–8-9-3-

ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும்
பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட
நாட்டுத் திருப் புலியூர்
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்
தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்ததன்றிப் பேச்சு இலள்
இன்று இப் புனை இழையே–8-9-4-

புனையிழைகள் அணிவும்
ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று
இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும்
தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி
அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-

திருவருள் மூழ்கி வைகலும்
செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடை
யாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று
சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்
தது மெல்லியல் செவ்விதழே–8-9-6-

மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க
வீங்கிளந்தான் கமுகின்
மல்லிலை மடல் வாழை
ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு
காலுலவும் தண் திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள்
இம் மடவரலே–8-9-7-

மடவரல் அன்னை மீர்கட்கு
என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வடமொழி மறை வாணர்
வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்
தண் திருப் புலியூர்
படவர வணையான் தன் நாமம் அல்லால்
பரவாள் இவளே–8-9-8-

பரவாள் இவள் நின்று இராப்பகல்
பனி நீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி
வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும்தாமரைக்கயம்
தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ்
திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9-

அன்றி மற்றோர் உபாயம் என்
இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக்
கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம்
இவள் நேர் பட்டதே–8-9-10-

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்
நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்
தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை
ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார்
நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

——————-

எண்பதாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானுக்கே அடிமைப்பட்டிருப்பதன் உயர்ந்த நிலை
பாகவதர்களுக்கு அடிமைப்பட்டு இருப்பது என்று சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு
படுமா நிலை உடைய பத்தர்க்கு – அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது
கொல்லை நிலமான நிலை கொண்டு–80-

ஆழ்வார் ஸர்வேஸ்வரனின் வடிவழகிலும் கருணை உள்ளம் ஆகிய சிறந்த குணத்திலும்
ஈடுபட்டிருக்கும் பாகவதர்களிடம் அடிமை பூண்டிருந்தார்.
அது மட்டும் அன்று, எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருப்பதின் உயர்ந்த நிலையாக
அவன் அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதைக் கருதினார்.
ஏனெனில் அதுவே உயர்ந்த குறிக் கோளாகையாலே.

நெடுமாற்கு அடிமை செய்வன் போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே
கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ
வியன் மூ வுலகு பெறினுமே-8-10-1-

வியன் மூ வுலகு பெறினும் போய்த்
தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி
அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார்
திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ பாவியேனுக்கே–8-10-2-

உறுமோ பாவியேனுக்கு
இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த
எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார்
இங்கே திரியவே-8-10-3-

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச்
செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்
புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்
வழி பட்டு ஓட அருளிலே–8-10-4-

வழி பட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி
வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில்
பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம்
நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-

நுகர்ச்சி உறுமோ மூ வுலகின்
வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட
பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகரச் செம் பங்கி எரி விழிகள்
நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன்
பெரிய தனி மாப் புகழே–8-10-6-

தனி மாப் புகழே எஞ்ஞான்றும்
நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே
நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-

நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக்
காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே–8-10-8-

தமர்கள் கூட்ட வல்வினையை
நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள்
வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை
கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம்
சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-

வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்கு தோள்
பொன்னாழிக்கை என்னம்மான்
நீக்கமில்லா வடியார் தம்
அடியார் அடியார் அடியார் எம்கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்
நல்ல கோட்பாடே-8-10-10-

நல்ல கோட்பாட்டுலகங்கள்
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-

——————-

எண்பத்தோறாம் பாசுரம்.
மா முனிகள், மற்றவர்களைப் பார்த்து ஒரு காரணத்தின் அடியாக வரும் தேஹ பந்துக்களை விட்டு
இயற்கையான பந்துவான எம்பெருமானைப் பற்றச் சொல்லும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே அவரை விட்டு – தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்கும் இதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு–81-

அஜ்ஞானிகளுக்கும் நன்மையே செய்யும் பெருமையை உடைய ஆழ்வார்,
கர்மம் என்னும் ஒரு காரணத்தின் அடியாக வந்த மனைவி மக்கள் முதலிய தேஹ பந்துக்களை விட்டு,
தன்னைச் சரணடைபவர்களைத் தன் அடியார்களுடன் சேர்க்கும்
ஸ்ரீ ய:பதியிடம் சரணடையும்படி உபதேசம் செய்கிறார்.

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

துணையும் சார்வும் ஆகுவார் போல்
சுற்றத்தவர் பிறரும்
அணையவந்த வாக்கம் உண்டேல்
அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த
எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் பொருளே-9-1-2-

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில்
போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில்
என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் அரணே-9-1-3-

அரணம் ஆவர் அற்ற காலைக்கு
என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர்
இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் சதிரே–9-1-4-

சதிரமென்று தம்மைத் தாமே
சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே
வைகி மற்றொன்றுறுவர்
அதிர்கொள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ
உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர்
தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால்
மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம்
மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன்
வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல்
வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ
மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும்
புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில்
யாதுமில்லை மிக்கதே–9-1-8-

யாதும் இல்லை மிக்கதனில்
என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து
கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட
வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்
இல்லை கண்டீர் சரணே–9-1-9-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர்
சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே
வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல்
அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும்
அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-

ஆதும் இல்லை மற்று அவனில்
என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச்
சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை
ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை
ஆளுடையார்கள் பண்டே-9-1-11-

———–

எண்பத்திரண்டாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானுக்கு எல்லா விதமான பந்துக்களும் செய்யும் செயல்களைச்
செய்ய ஆசைப்படும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

பண்டை உறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் – தண்டற நீ
செய்தருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையை
உய்துணை என்று உள்ளமே! ஓர்–92-

தன்னுடன் நித்யமான உறவைக் கொண்ட எம்பெருமானைத் திருப்புளிங்குடியில் கண்டு வணங்கி
“எல்லா விதமான உறவுகளின் செயல்களையும் நான் இடைவிடாமல் செய்யும்படி அருளவேண்டும்” என்று ப்ரார்த்தித்தார்.
நெஞ்சே! இப்படிப்பட்ட ஸ்ரீ சடகோபரின் இரு திருவடிகளையும் நம் உஜ்ஜீவனத்துக்கு வழியாக நினை

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

குடிக் கிடந்து ஆக்கம் செய்து
நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த
நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்
சிவப்ப நீ காண வாராயே–9-2-4-

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண
வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண்
தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்
தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-

காய்ச்சினப் பறவை யூர்ந்து
பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று
அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே–9-2-6-

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே
இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து
நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள்
இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம்
இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்
தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்
திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள்
இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து
இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப்
புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும்
செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த
கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-

கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான்
அடி இணை யுள்ளத்தோர் வாரே–9-2-11-

————–

எண்பத்து மூன்றாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் சீலம் (எளிமை) என்னும் குணத்தில் மூழ்கியிருக்கும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்..

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணனன்றோ நான் என்று – பேருறவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம் மனத்து மை–83-

எம்பெருமான் “உம்முடைய ஆசைகளாக எவற்றை எல்லாம் நீர் ஆராய்ந்து வைத்துள்ளீரோ
அவற்றை நான் நிறைவேற்றுகின்றேன். ஸர்வசக்தனான நாராயணன் அன்றோ நான்?” என்று சொல்லி
ஆழ்வாருடன் தனக்கு இருக்கும் எல்லா உறவுகளையும் காட்டினான்.
ஆழ்வார் இப்படிப்பட்ட எம்பெருமானின் சீல குணத்தில் மூழ்கினார்.
ஆழ்வாரின் கருணை நம் மனத்தில் இருக்கும் அறியாமையைப் போக்கும்.

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-

மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே–9-3-5-

அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே–9-3-6-

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-

இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8-

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-

தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10-

சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11

————-

எண்பத்து நான்காம் பாசுரம்.
மா முனிகள், சிறந்ததான வடிவழகை உடைய எம்பெருமானைக் காண
ஆசைப் பட்டுக் கூப்பிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மையார் கண் மாமார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்குடனே காண எண்ணி – மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டுகந்த மாறன் பேர்
ஓத உய்யுமே இன்னுயிர்–84-

கருநிற மையாலே அலங்கரிக்கப்பட்ட பெரிய பிராட்டியாரைத் தன் திருமார்பில்
நிரந்தரமாக வைத்திருக்கும், திருக்கைகளிலே திருவாழி திருச்சங்கு ஆகியவைகளை வைத்திருக்கும்
ஸ்ரீ ய:பதியை உண்மையான ஆசையுடன் கூப்பிட்டார் ஆழ்வார்.
தான் ஆசைப்பட்டபடி கண்ட ஆழ்வார் ஆனந்தத்தை அடைந்தார்.
இவ்வாழ்வாரின் திருநாமங்களைச் சொல்லவே சிறந்ததான ஆத்மா உஜ்ஜீவனத்தை அடையும்.

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2-

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-

அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5-

கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6-

உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–9-4-7-

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10-

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-

————–

எண்பத்தைந்தாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானை நினைவு படுத்தும் வஸ்த்துக்களால் தான் துன்புறுவதை
அருளும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்றவனைக் காண எண்ணி ஆண் பெண்ணாய் – பின்னை அவன்
தன்னை நினைவிப்பவற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்–85-

ஆழ்வார் தன்னை தரிக்கப் பண்ணும் ஸர்வேஸ்வரன் அவ்வாறே தன் நெஞ்சில் இருப்பதைக் கண்டு,
நேரிலும் தன்னுடைய வெளிக் கண்களால் உடனே காண ஆசைப்பட்டு,
ஆண் தன்மையை இழந்து பெண் தன்மையை அடைந்தார்.
மேலும் எம்பெருமானை நினைவுறுத்தும் மேகக் கூட்டங்கள் போன்ற வஸ்துக்களைக் கண்டு தளர்ந்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் க்ருபையை த்யானிப்பவர்களின் நெஞ்சம் உருகும்.

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு
இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின்
குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை
நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்
இத்தனை வேண்டுமோ–9-5-1-

இத்தனை வேண்டுவது அன்று அந்தோ
அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும்
கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன்
அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர்
அவன் கையதே–9-5-2-

அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-

கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4-

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-9-5-9-

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே-9-5-11-

—————–

எண்பத்தாறாம் பாசுரம்.
மா முனிகள், வருத்தத்துடன் எம்பெருமானின் திருக் கல்யாண குணங்களை
த்யானிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

உருகுமால் என்னெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப் பேசி – மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்துரைத்த மாறன் சொல்
என்னாச் சொல்லாதிருப்பது எங்கு?–86-

ஆழ்வார் “என் நெஞ்சம் உன்னுடைய லீலைகளை நினைத்து உருகும்;
மேலும் என்னுடைய ஆசை மிகவும் அதிகமாக ஆனது” என்று வருத்தத்துடன்,
எம்பெருமான் காதலனாக இருக்கும் தன்மை, தன் நெஞ்சில் நிலைத்திருக்கும்படி அருளிச் செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை என்னுடை நாக்கு எவ்வாறு சொல்லாமல் இருக்கும்?

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-

திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

————–

எண்பத்தேழாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் வடிவழகை நம்பி எம்பெருமானுக்குத் தூது
விடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

எங்காதலுக்கடி மால் ஏய்ந்த வடிவழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கவன் பால் – எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை அறுக்கும்--87-

ஆழ்வார் “என்னுடைய காதலுக்குக் காரணம் ஸர்வேஸ்வரனின் இயற்கையான, தகுந்ததான வடிவழகு”
என்று சொல்லி அந்நிலையில் அவனுடைய வடிவழகையே நம்பி,
எங்கும் உள்ள பறவைக் கூட்டங்களைத் தூதுவராக அனுப்பினார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை த்யானித்தவர்களின் தீமைகள் அழிக்கப்படும்.

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-

தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-

தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6-

சுடர் வளையும் கலையும் கொண்டு-அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு-ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குருகினங்காள்-எனக்கு ஓன்று பணியீரே–9-7-7-

எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-9-7-8-

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக்  கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-

——————

எண்பத் தெட்டாம் பாசுரம்.
மா முனிகள், அனுப்பிய தூதுவர்கள் திரும்பி வரும் வரை பொறுக்க முடியாமல்
“உடனே திருநாவாயைச் சென்று அடைய வேண்டும்” என்று சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

அறுக்கும் இடர் என்று அவன் பால் ஆங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் – அறப்பதறிச்
செய்ய திருநாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வறியாமல்--88-

“அவன் நம் துயரங்களைப் போக்குவான்” என்று எம்பெருமானிடம் தூதுவர்களை அனுப்பினார் ஆழ்வார்.
ஆனால் அவருடைய திருவுள்ளமோ அந்தத் தூதுவர்கள் திரும்பி வரும் வரை பொறுக்க முடியாமல்,
என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் கலங்கி, சிறந்ததான
திரு நாவாய்க்குச் செல்லலாம் என்று புறப்பட்டார்.

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2–

எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9-

அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

————–

எண்பத் தொன்பதாம் பாசுரம்.
மா முனிகள், மாலை வேளையில் தன் விருப்பத்தைச் சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் – செல்கின்ற
ஆற்றாமை பேசி அலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என்தன் மால்–89-

ஆழ்வார் ஸர்வேஸ்வரனை “நான் உனக்கு முழுமையாகக் கைங்கர்யம் செய்யும் நாள் என்று?” என்று கேட்டு,
இயற்கையான பக்தியால், எம்பெருமானின் பதிலுக்குக் காத்திருக்க முடியாமல்,
தன்னுடைய தரியாமையைப் பேசி வருந்தினார்.
என்னுடைய அறியாமைக்கு நேர் எதிரான இவ்வாழ்வாரின் கருணையால், என்னுடைய அறியாமை நீங்கும்.

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பணி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த
எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ
யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ
அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்
எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என்
அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-

அவனுடை யருள் பெறும் போதரிதால்
அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெருமள வாவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை
சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்
ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ
பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8-

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

மாலையும் வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ
கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள்
மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11-

—————

தொண்ணூறாம் பாசுரம்.
மா முனிகள், தன்னுடைய மோக்ஷத்துக்கு நாள் குறிக்கப்பட்ட பின் மற்றவர்களுக்கு
உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னும் உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து – மேலவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நந்தமக்குத் தாள்–90-

ஸர்வேஸ்வரன் “முழு மனதுடன், உம்முடைய விருப்பங்களை ஆத்மாவுடன் கூடியிருக்கும்
இந்த சரீரத்தின் முடிவிலேயே நிறைவேற்றுவேன்” என்று ஆழ்வாருக்குச் சொல்ல,
ஞானம் முதலிய குணங்களை உடைய ஆழ்வார், மிகவும் ஆனந்தித்து
“திருக்கண்ணபுரம் சென்று அங்கிருக்கும் ஸர்வேஸ்வரனின் திருவடிகளைப் பணியுங்கோள்” என்றார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகள் நமக்குக் கருணையைப் பொழியாமல் இருக்குமோ?

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2-

தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3-

மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4-

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6-

மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே-9-10-7-

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-

—————-

தொண்ணூற்றொன்றாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானால் நாள் குறிக்கப்பட்டு, எம்பெருமானுடன் சேர்ந்து பரமபதத்துக்குச்
செல்லத் தொடங்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தை கதியாக்கி – மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக எண்ணும் மாறன் என
கேதம் உள்ளதெல்லாம் கெடும்–91-

தன் திருவடிகளில் சரணடைந்தவர்களுக்கு எம்பெருமான் தானே இறுதிப் பயணத்தில் துணையாக இருக்கிறான்.
ஆழ்வார் அந்தக் காளமேகம் எம்பெருமானையே வழித்துணையாகக் கொண்டு,
திரும்பி வரும் குற்றம் இல்லாத பரமபதத்தைச் சென்றடைய எண்ணினார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரை நினைக்கவே எவை யெல்லாம் துயரங்கள் என்று நினைக்கிறோமோ
அவையெல்லாம் நசிக்கும்.

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2-

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே-10-1-3-

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே-10-1-7-

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9-

நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-

————-

தொண்ணூற்றிரண்டாம் பாசுரம்.
மா முனிகள், பர பதத்தில் செய்யும் கைங்கர்யத்தைத் திரு வனந்த புரத்தில் செய்ய
ஆசைப் பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கெடும் இடர் வைகுந்தத்தைக் கிட்டினாற்போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் – பட அரவில்
கண்துயில் மாற்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண்தனில் உள்ளோர் வியப்பவே--92-

சிறந்த பரம பதத்தில் இருக்கும் நித்ய ஸூரிகள் வியக்கும்படி ஆழ்வார்
பணங்களுடன் கூடிய ஆதி சேஷனில் சயனித்துக் கொண்டிருக்கும் எம்பெருமானுக்கு,
பரந்த திரு வனந்த புரத்தில், துக்கமே இல்லாத பரம பதத்தை அடைந்து செய்யும்
கைங்கர்யத்தைச் செய்ய ஆசைப் பட்டார்.

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-

ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3-

பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6-

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8-

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-

————-

தொண்ணூற்றுமூன்றாம் பாசுரம்.
மா முனிகள், தன்னை ஏன் தன் விருப்பத்து மாறாக ஸம்ஸாரத்தில் வைத்திருக்கிறான்
என்ற ஸந்தேஹத்தை ஸர்வேஸ்வரன் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார் –

வேய்மரு தோளிந்திரைகோன் மேவுகின்ற தேசத்தைத்
தான் மருவாத் தன்மையினால் தன்னை இன்னும் – பூமியிலே
வைக்குமெனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு--93-

ஸ்ரீமந் நாராயணன் வசிக்கும் திவ்ய லோகத்தை அடையாமல்,
பலம் வாய்ந்த மூங்கிலைப் போன்ற தோளை உடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வன்,
ஆழ்வாருக்கு ஏற்பட்ட தேவையில்லாத ஸந்தேஹமான
“எம்பெருமான் இன்னும் என்னை ஸம்ஸாரத்தில் வைத்திருக்கிறானே” என்பதைப் போக்கினான்.
இப்படித் தகுந்த புகழை உடைய ஆழ்வாரே நமக்குப் புகல்.

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

தகவிலை தகவிலை யே நீ கண்ணா
தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-

வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3-

தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4-

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-

————-

தொண்ணூற்று நான்காம் பாசுரம்.
மா முனிகள், முன்பு உபதேசித்த பக்தி யோகம் தன் பலத்துடன் சேர்வதைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

சார்வாகவே அடியில் தான் உரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை – சோராமல்
கண்டுரைத்த மாறன் கழலிணையே நாள் தோறும்
கண்டுகக்கும் என்னுடைய கண்–94-

எல்லோராலும் கைக்கொள்ள வேண்டிய, திருவாய்மொழி 1.2 “வீடுமின்” பதிகத்தில்
ஆழ்வார் முன்பு அருளிச்செய்த பக்தியைப் பற்றித் தெரிந்து கொண்டு,
அது ப்ரபத்தியான சிறந்த பலத்துடன் சேர்வதை ஒன்று விடாமல் அருளிச்செய்தார்.
ஒவ்வொரு நாளும், என்னுடைய கண்கள் இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே ஆனந்தத்துடன் காணும்.

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-

நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5-

நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே-10-4-6-

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10-

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-

————

தொண்ணூற்றைந்தாம் பாசுரம்.
மா முனிகள், அடியார்கள் எம்பெருமானுடன் செய்யும் பரிமாற்றங்களைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கண்ணன் அடியிணையில் காதலுறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே – மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கைத் தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்–95-

பெருமை படைத்த ஆழ்வார், தன்னுடைய கருணையால் அடியார்கள் எம்பெருமானின்
திருவடிகளை நோக்கிச் செய்யும் செயல்களைச் சுருக்கமாக அருளிச்செய்து,
அது இவ்வுலகில் உள்ள ஆத்மாக்களின் நெஞ்சில் நிலைபெற்றிருக்கும்படிச் செய்து,
தான் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதை முடித்தருளினார்.

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-10-5-4-

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5-

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8-

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

—————

தொண்ணூற்றாறாம் பாசுரம்.
மா முனிகள், தன் (ஆழ்வாரின்) ஆணைக்கிணங்கத் தன்னைப் பரமபதத்துக்கு அழைத்துச் செல்ல
விரையும் எம்பெருமானைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

அருளால் அடியில் எடுத்த மாலன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து – இருவிசும்பில்
இத்துடன் கொண்டேக இவர் இசைவு பார்த்தே இருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல்–96-

முதலிலே தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே ஸர்வேஸ்வரன் ஆழ்வாரை ஸம்ஸாரத்திலிருந்து எடுத்தருளினான்;
ஆழ்வாருடைய பரிசுத்தமான ஸ்ரீஸூக்திகள் அவருடைய அஜ்ஞானத்தால் நிறைந்த இந்தச் சரீரத்துடன் அழைத்துப் போக
அவரின் அனுமதியை நோக்கிக் காத்திருக்கும் இப்படிப்பட்ட ஸர்வேஸ்வரனின் சுத்தியை வெளியிடும்.

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5-

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-

பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே-10-6-10-

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-

—————–

தொண்ணூற்றேழாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமான் தன் சரீரத்தில் ஆசைகொண்டதையும்
“என்னை விரோதியான இந்தச் சரீரத்தில் இருந்து விடுவிக்கவும்” என்று
இதில் ஆசையை விடும்படிச் செய்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை
அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

செஞ்சொற்பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சைதனின் – விஞ்சுதலைக்
கண்டவனைக் கால்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண்திறல் மாறன் நம் திரு–97-

வேதத்தின் குறிக்கோளான, நேர்மையான பேச்சுக்களை உடைய பரமபுருஷன்
ஞானம் முதலிய குணங்களால் நிறைந்த ஆழ்வாரின் திருமேனியின் மேல் மிகுதியான,
கள்ளத்தனமான ஆசை கொண்டிருந்தான்.
இதைக் கண்ட, திடமான பலம் பொருந்திய ஆழ்வார், எம்பெருமானின் திருவடிகளைப் பிடித்து,
தன் சரீரத்தை விடுவித்துக் கொண்டார்.-இப்படிப்பட்ட ஆழ்வாரே நம் செல்வம்.

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–9-7-2-

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

————-

தொண்ணூற்றெட்டாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானை “அநாதி காலமாக என்னைக் கைவிட்ட நீ, இப்பொழுது
என்னைக் கைக்கொண்ட காரணம் என்?” என்று கேட்க
அதற்கு எம்பெருமான் பதிலற்று இருப்பதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை
அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

திருமால் தன் பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அருமாயத்து அன்று அகல்விப்பானென்? – பெருமால் நீ
இன்றென்பால் செய்வான் என்னென்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து–98-

ஸ்ரீமந் நாராயணன் தன் விஷயத்தில் கொண்டிருக்கும் சிறந்த ஈடுபாட்டைக் கண்ட,
மிகப் பெருமை வாய்ந்த ஆழ்வார் எம்பெருமானை “எம்பெருமானே! அநாதி காலமாக என்னை
ஏன் ஸம்ஸாரத்தில் வைத்து உன்னிடமிருந்து தள்ளி வைத்திருந்தாய்?
இப்பொழுது என்னிடம் இவ்வளவு அன்பு காட்டுவது ஏன்?” என்று கேட்க,
இதற்குப் பதில் இல்லாத எம்பெருமான் வருத்தத்துடன் பவ்யமாக இருந்தான்.

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

———————

தொண்ணூற்றொன்பதாம் பாசுரம்.
மா முனிகள், அர்ச்சிராதி மார்க்கத்தில் தனக்குக் கிடைத்த வரவேற்பை எம்பெருமான் காட்டிக் கொடுக்க,
அதை அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து – வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை உரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி–99-

எம்பெருமான் ஆழ்வாரைச் சூழ்ந்து நின்று, பரமபதத்தை அடைவிக்கும் பழையதான அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்டிக் கொடுக்க,
திருமுடியில் வகுள மாலையைச் சூடியிருக்கும் ஞான முனியான ஆழ்வார்,
அங்கே ஆனந்த ஸாகரத்தில் மூழ்கியிருந்ததை முழுவதும் அனுபவித்து,
அங்கே ஆனந்தமாக ஒரு பாரமும் இல்லாமல் கருடர் விஷ்வக்ஸேனர் முதலிய
அடியார்களுடன் வாழ்ந்ததை அருளிச் செய்தார்.

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

———-

நூறாம் பாசுரம்.
மா முனிகள், பரம பக்தியால் உயர்ந்த குறிக்கோளை அடைந்ததைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

முனி மாறன் முன்பு உரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து – நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத் தாள் கோனை
ஒருமையுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து–100-

முனிவரான ஆழ்வார், முன்பு கண்ட ஆனந்தங்களிலிருந்து விடுபட்டு, வருத்தத்துடன் தனியாக இருந்தார்.
நன்கு வளர்ந்த பரம பக்தியால் பரிபக்குவத்தை அடைந்து, ஸ்ரீய:பதியுடன் தன் திரு வுள்ளத்தில் ஒன்று பட்டு, நித்ய ஸூரிகளின் பெருமையை அதனால் அடைந்து,
பிராட்டியும் எம்பெருமானும் ஆன சேர்த்தியை நேரில் கண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்யப் பெற்றார்.

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

———————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதியில் சொற்களுக்கும் ஸ்ரீ திருவாய் மொழியில் சொற்களுக்கும் ஸாம்யம் –முதல் ஐந்து பத்துக்கள் —

March 24, 2023

ஸ்ரீ மா முனிகள் பிரயோகித்த ஆழ்வார் திரு நாம பதங்கள்

1-சடகோபன்-15-
2-குருகையர் கோன்–22-
3-குருகூரில் வந்துதித்த கோ–32–
4-தென் குருகூர் ஏறு–37–
5-மொய்ம்மகிழோன்–40-
6-காரி மாறன்–51-
7-குருகையர் கோன்–52–
8-பராங்குசன்–54-
9-சடகோபற்கு–63-
10-அண்ணலை–66-
11-சடகோபனை–75-
12-சடகோபர்–77-
13-காரிமாறன்–78–
14-ஞான முனி–99-
மாறன் -மற்ற அனைத்து -86-பாசுரங்களிலும் –

—————————-

அந்தாதி (12) 
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே - நாலாயி:151/4 
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை - நாலாயி:2382/3 
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின் - நாலாயி:2942/3 
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3063/3 
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் - நாலாயி:3074/3 
நிரை கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3373/3 
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இ பத்தால் - நாலாயி:3384/3 
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் - நாலாயி:3450/3 
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப்பேரெயில் மேய பத்தும் - நாலாயி:3593/3 
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் - நாலாயி:3692/3 
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3934/3 
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே - நாலாயி:4000/4

அந்தாதிகளால் (1)
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த – நாலாயி:4000/3

திருமொழி (2)
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/3

திருமொழி எங்கள் தே மலர் கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ – நாலாயி:1936/3
திருமொழியாய் (1)
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னை – நாலாயி:2245/3

------------------

அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்
சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான் –நல்ல
மணவாளமாமுனிவன் மாறன் மறைக்குத்
தணவா நூற்றந்தாதி தான்தனியன் 1

இரவும் பகலும், இனிய சொற்களையும் அவற்றின் பொருள்களையும் அறிய விரும்புபவர்களுக்காக,
மணவாள மாமுனிகள் கருணையுடன் தமிழ் வேதமான திருவாய்மொழியின் அர்த்தங்களை,
இச்சிறந்த ப்ரபந்தத்தில் நூறு பாசுரங்களாக அந்தாதி க்ரமத்தில் அருளியுள்ளார்.

மன்னு புகழ் சேர் மணவாள மாமுனிவன்
தன் அருளால் உட்பொருள்கள் தன்னுடனே சொன்ன
திருவாய்மொழி நூற்றந்தாதியாம் தேனை
ஒருவாதருந்து நெஞ்சே! உற்று-தனியன் 2

நெஞ்சே! நித்யமான புகழை உடைய மணவாள மாமுனிகளால்
திருவாய்மொழியின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளியிடுவதற்காகக் கருணையுடன் அருளப்பட்ட
திருவாய்மொழி நூற்றந்தாதி என்கிற தேனைத் தொடர்ந்து பருகுவாயாக.

————-

முதல் பாசுரம். (உயர்வே பரன் படி…)
இதில், மாமுனிகள் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள், அதாவது
எம்பெருமானின் மேன்மையை விளக்கி, “அவன் திருவடிகளில் பணிந்தால் உஜ்ஜீவனத்தை அடையலாம்”
என்று சொல்லும் முதல் திருவாய்மொழி
சேதனர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்க வல்லது என்று அருளிச் செய்கிறார்.

உயர்வே பரன் படியை  உள்ளதெல்லாம் தான் கண்டு
உயர் வேதம் நேர் கொண்டுரைத்து மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு–1–

மேன்மைகள் பொருந்திய ஸர்வேச்வரனின் தன்மைகளை முழுவதுமாக அநுஸந்தித்த ஆழ்வார்,
தலைசிறந்த ப்ரமாணமான வேதத்தின் க்ரமத்தில் அருளிச் செய்தார்;
இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் மனிதர்கள் சிறிதும் அஜ்ஞானம் இல்லாமல்,
உஜ்ஜீவனத்தைப் பெற்று, மோக்ஷத்தை அடைய வழி செய்யும்.

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-

———————

இரண்டாம் பாசுரம்.
மாமுனிகள், ஆழ்வார் ஸம்ஸாரிகளைத் திருந்துமாறும்
தன்னுடைய ஹ்ருதயத்தைப்போலே துணையாக இருக்கும்படிக் கேட்பதையும்
அனுபவித்து இப்பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.

வீடு செய்து மற்றெவையும்   மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் – நீடு புகழ்
வண் குருகூர் மாறன்  இந்த மாநிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி அருள் பத்து–2-

சிறந்த திருக்குருகூருக்குத் தலைவரான பெருமை பொருந்திய ஆழ்வார்
மிகுந்த கருணையுடன் இந்தப் பரந்த உலகில் வாழ்பவர்களைத் திருத்த
“எல்லாவற்றையும் விட்டு
ஸ்ரீமந் நாராயணனின் மேன்மை பொருந்திய திருவடிகளைப் பற்றுங்கோள்” என்று
அருளிச் செய்தார்.

வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1-

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2-

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே –1-2-3–

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே –1-1-4-

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது கண்டு அடங்குக உள்ளே –1-2-7-

உள்ளம் உரை செயல் -உள்ள விம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கே –1-2-8-

ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப் பத்தே –1-2-11-

———–

மூன்றாம் பாசுரம்.
மாமுனிகள், ஆழ்வார் பகவானின் ஸௌலப்யத்தை (எளிமையை)
உபதேசித்த பாசுரங்களை அடியொட்டி அருளிச் செய்கிறார்.

பத்துடையோர்க்கு என்றும்   பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மாநிலத்தீர்! மூண்டவன் பால் – பத்தி செய்யும்
என்றுரைத்த  மாறன் தனின் சொல்லால் போம்  நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை-3-

ஆழ்வாரின் இனிய வார்த்தைகளான
“ஸர்வேச்வரன் தன்னுடைய அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்;
தன்னுடைய அவதாரங்கள் மூலமாக அவர்களுக்கு மோக்ஷத்தை அளிப்பவன்;
இந்தப் பெரிய உலகில் வாழ்பவர்களே!
கனிந்த அன்புடன் அவனிடத்தில் பக்தி செய்யுங்கோள்” என்பதை அனுஸந்திப்பவர்களுக்கு,
நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் பிறவி என்னும் கட்டு விலகும்.

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –-1-3-7-

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8-

வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–1-3-9-

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

————————

நான்காம் பாசுரம்.
மாமுனிகள், பறவைகளை எம்பெருமானிடம் தூதுவர்களாகப் போய்,
அவனுடைய அபராத ஸஹத்வம் (குற்றங்களைப் பொறுத்துக்கொள்ளுதல்) என்ற குணத்தை அறிவிக்குமாறு
ப்ரார்த்திக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

அஞ்சிறைய புட்கள் தமை ஆழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என இரந்து  – விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்-4-

அழகிய சிறகுகளை உடைய பறவைகளைக் கண்ட ஆழ்வார், அவைகளிடம்
“நீங்கள் சென்று என்னுடைய நிலைமையை திருவாழியை உடைய ஸர்வேச்வரனுக்குச் சொல்லுங்கோள்” என்று ப்ரார்த்தித்து,
தன் சக்தியை இழந்து, எல்லா உலகிலும் எம்பெருமானைத் தேடி, கலக்கத்தை அடைந்தார்.
இதுவே ஆழ்வாருடைய பக்தியின் பெருமை.

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-

என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4-

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-

அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே –1-4-7-

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9-

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் என்றாம் அளவே –-1-4-10-

அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11-

——————–

ஐந்தாம் பாசுரம்.
மாமுனிகள், எல்லோரும் எம்பெருமானைப் புகலிடமாகக் கொள்ள உதவும் அவனுடைய ஸௌசீல்யம் (நீர்மை)
என்கிற குணத்தை விளக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச் செய்கிறார்.

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளம் உற்று அங்கூடுருவ ஓர்ந்து – தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடிலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து–5-

மிகுதியான ஐஸ்வர்யத்தை உடைய எம்பெருமானுடைய பெருமையையும்
தன்னுடைய தாழ்ச்சியையும் தன் நெஞ்சில் உணர்ந்த ஆழ்வார்,
அவற்றை நன்றாக ஆராய்ந்து, மிகவும் தளர்ந்து, எம்பெருமானை விட்டு விலக நினைத்தார்;
ஸர்வேஸ்வரன் தன்னுடைய ஒளி விடும் சீல குணத்தைக் கொண்டு, ஆழ்வாரை ஆனந்தமாக, ஸ்நேஹத்துடன் அணைத்தான்.

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2-

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –1-5-4-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8-

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித் தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11-

———————

ஆறாம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமானை அடைவதும் தொழுவதும் அரிதன்று, எளிது என்று
சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச் செய்கிறார்.

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கென்று  – உரிமையுடன்
ஓதி அருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு–6-

எம்பெருமானிடம் நெருக்கமான பக்தியுடன் பேசிய ஆழ்வார்,
எல்லா தோஷங்களுக்கும் எதிர்த் தட்டான ஸர்வேஸ்வரனின் தன்மைகளை
“பூர்ணனான ஸர்வேஸ்வரன்,
அவனுக்கு எதை ஸமர்ப்பித்தாலும் த்ருப்தியுடன் ஏற்றுக் கொள்வான்;
மேலும் அவனை ஆராதிப்பது அரிய செயல் அன்று” என்று சொல்லி,
இவ் வுலகில் அறிவற்ற மக்களுக்கு பிறவி முதலியவற்றை விலக்கி யருளினார்.-

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகை யின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4-

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —1-6-5-

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6-

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8-

தரும வரும பயனாய –திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே –1-6-10–

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11-

———-

ஏழாம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமானிடத்தில் சரணடையும் இனிமையைக் கொண்டாடிச் சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

பிறவி அற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் – அறவினியன்
பற்றுமவர்க்கென்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே! ஓடு–7-

நெஞ்சே! “ச்ரிய:பதியான எம்பெருமான் தன்னிடம் சரணடைபவர்களை
பிறவித்துயரில் இருந்து விடுவிக்கிறான்;
மேலும் அவர்களுக்குப் பரமபதத்தில் உயர்ந்த ஆனந்தத்தை அளிக்கும் தன்மையுடன் இருக்கிறான்;
அப்படி அவனிடம் சரணடைபவர்களுக்கு அவனே மிகவும் இனிமையானவன்” என்று
அருளிச் செய்த ஆழ்வாரின் திருவடிகளையே சிறந்த துணையாகக் கருதி,
அவரிடம் விரைந்து சென்று சரணடைவாயாக.

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொரு வல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப் பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –-1-7-11-

—————

எட்டாம் பாசுரம்.
மாமுனிகள், நேர்மையுள்ளவர்களிடமும் நேர்மையற்றவர்களிடமும்
எம்பெருமான் நேர்மையாகப் பழகுகிறான் என்று சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஓடு மனம் செய்கை உரை ஒன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை  – நாடறிய
ஓர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை–8-

நேர்மை இல்லாதவர்களை, அதாவது
தங்கள் நிலையில்லாத மனம், உடம்பு மற்றும் வாக்கு ஆகிய கரணங்கள் ஒருமித்து இல்லாமல் இருப்பவர்களை,
ஏற்றுக் கொள்வதாகிய ஸர்வேஸ்வரனின் குணத்தைப் பேசி
எல்லோரும் உணரும்படி அருளிய ஆழ்வாரை அனுஸந்திப்பவர்களிடம்
தங்கள் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த (கைங்கர்யச்) செல்வம் நிலைத்து நிற்கும்.

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2-

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4-

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5-

கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6-

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7-

ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே –1-8-8-

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9-

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரானே —1-8-10-

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11-

—————–

ஒன்பதாம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமானின் பொறுக்கப் பொறுக்க ஆனந்தத்தைக் கொடுக்கும்
குணத்தைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீ ஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

இவை அறிந்தோர் தம் அளவில் ஈசன் உவந்தாற்ற
அவயங்கள் தோறும் அணையும் – சுவை அதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும்–9-

ஸர்வேஸ்வரன் தன்னுடைய (சென்ற பதிகத்தில் வெளியிடப்பட்ட) நேர்மை போன்ற
குணங்களை உணர்ந்தவர்களுடன் படிப்படியாக, அவர்களின் ஒவ்வொரு அவயவத்துடனும்
ஆனந்தமாகக் கூடும் இன்பத்தைப் பெற்று அனுபவித்த ஆழ்வார்,
அதை மிகுந்த ஆனந்தத்துடன் அருளிச் செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளைச் சொல்லவே,
ஸர்வேஸ்வரனின் திருவடிகள் நம் தலையில் வந்து சேரும்.

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2-

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4-

ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே –1-9-5-

மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே –1-9-6-

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7-

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8-

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10-

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-

—————–

பத்தாம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமான் தன் எல்லா அவயங்களுடனும் கூடியதற்குத் தன்னிடத்தில் எந்தக் காரணமும் இல்லை
என்பதை உணர்ந்து, த்ருப்தியுடன் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையைச் சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.-

பொரும் ஆழி சங்குடையோன்  பூதலத்தே வந்து
தருமாறோர் ஏதுவறத் தன்னை – திரமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக என் சென்னி
வாழ்த்திடுக என்னுடைய வாய்–10-

திரு வாழியையும் ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் தன் திருக் கைகளில் கொண்டிருக்கும் எம்பெருமான்,
இவ்வுலகில் எந்தக் காரணமும் இல்லாமல் தன் நிர்ஹேதுக க்ருபையாலே அவதரித்து,
தன்னை மற்றவர்களுக்குக் கொடுக்கும் தன்மயை நன்றாக அனுபவித்த ஆழ்வார், அதை அருளிச் செய்தார்;
இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் என் தலை வணங்கட்டும்;
என்னுடைய வாய் அவருக்கு மங்களாசாஸனம் செய்யட்டும்.-

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
ண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-

————–

பதினொன்றாம் பாசுரம்.
மாமுனிகள், எல்லாப் பதார்த்தங்களும் தன்னைப் போலே துன்புறுவதாகச் சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் – ஆய
அறியாதவற்றோடு அணைந்தழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து–11–

தன்னடியார்களை அணுகும் ஸர்வேஸ்வரன் தன்னை மறைத்துக் கொள்ள,
ஆழ்வாரின் சோகம் மிகவும் அதிகமாகி, விடாமல் அழும் நிலையை அடைந்தார்;
தன் சோகத்தைப் புரிந்து கொள்ள அறியாத பதார்த்தங்களை கட்டிக்கொண்டு அழுதார்;
இப்படிப் பட்ட ஆழ்வார் அடியார்களை தன்னுடைய கருணை மிகுந்த கண்களால் கடாக்ஷிப்பார்.

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-2-1-6-

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-

——————-

பன்னிரண்டாம் பாசுரம்.
மாமுனிகள், அவதாரங்களில் எம்பெருமானின் பரத்வத்தை, முன் பதிகத்துடன் தொடர்பில்லாமல்,
திடீரென்று நினைத்து, அதை மற்றவர்களுக்கு உபதேசிக்கும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி அவதாரத்தே நன்குரைத்த – வண்ணமறிந்து
அற்றார்கள் யாவர் அவரடிக்கே ஆங்கவர் பால்
உற்றாரை மேலிடாதூன்–12-

திடமான எண்ணத்தை உடைய ஆழ்வார்
ஸர்வேஸ்வரனின் பரத்வத்தை அவன் அவதாரங்களில் அருளிச் செய்ததை அறிந்து,
அவ் வாழ்வார் திருவடிகளை அடைபவர்கள்,
இந்த சரீரத்துடன் இருக்கும் பந்தத்தால் ஜயிக்கப்பட மாட்டார்கள்.

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2-

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3-

தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –-2-2-7-

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10-

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-

———————-

பதிமூன்றாம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாருடன் ஏகதத்வம் (இருவரும் ஒருவரே) என்று
எண்ணும்படிக் கூடின காலத்தில் தனக்குத் துணையாக இருந்து அனுபவிக்க
மேலும் பலரைத் தேடிய ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஊனம் அறவே வந்து உள் கலந்த மால் இனிமை
ஆனது அனுபவித்தற்காம் துணையா – வானில்
அடியார் குழாம் கூட ஆசை உற்ற மாறன்
அடியாருடன் நெஞ்சே!  ஆடு–13-

ஆழ்வார் அனுகூலர்களுடன் கூடி இருந்து, எந்தக் குறையும் இல்லாமல் தன்னுடன் வந்து கூடிய
ஸர்வேஸ்வரனுடன் ஏற்பட்ட கூடலின் இனிமையை அனுபவிக்க,
பரமபதத்தில் இருக்கும் அடியார் குழாங்களுடன் கூட ஆசைப்பட்டார்.
நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் அடியார்களுடன் வாழ ஆசைப்படு.

ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –-2-3-4-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –-2-3-5-

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6-

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8-

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-

————————

பதினான்காம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமான் மற்றும் அவன் அடியார்களைப் பிரிந்து வாடும்
ஒரு பெண்ணின் தாய் பாவனையில் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீ ஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறை அதனால் – வாடி மிக
அன்புற்றார் தன் நிலைமை ஆய்ந்துரைக்க மோகித்துத்
துன்புற்றான் மாறன் அந்தோ!–14-

ஆழ்வார் பரம பதத்தில் இருக்கும் அடியார்களுடன் கூடி அனுபவிக்கவும்
அவர்களுடன் ஆடி மகிழவும் முடியாமல் மிகவும் வருந்தினார்;
அவர் மனம் கலங்கி அவர் அருகில் இருக்கும் அவர் மீது மிகவும் அன்பு கொண்ட
மதுரகவி ஆழ்வார் போன்றோர்களால் ஆராயப் பட்டு, பேசப் பட்டார்;
அந்தோ!

ஆடி யாடி யகம் கரைந்து இசை
பாடிப் பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடி வாடும் இவ்வாணுதலே –2-4-1-

வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொடீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5-

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6-

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9-

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –-2-4-10-

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

——————

பதினைந்தாம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமான் தன்னுடைய அடியார்களுடன் (திவ்ய ஆயுத மற்றும் ஆபரண வடிவில் இருக்கும் நித்யஸூரிகள்) வந்து,
திருவாய்மொழி 2.4 “ஆடி ஆடி” பதிகத்தில் காட்டப்பட்ட வருத்தத்தைப் போக்கியதைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

அந்தாமத் தன்பால் அடியார்களோடு இறைவன்
வந்தாரத் தான் கலந்த வண்மையினால் – சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே!
வாய்ந்த அன்பை நாள் தோறும் வை–15-

ஸர்வேஸ்வரன் ஸ்ரீவைகுண்டத்தில் தனக்கு இருக்கும் ஆசையை ஆழ்வாரிடம் கொண்டு,
திவ்ய ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்கள் வடிவில் இருக்கும் நித்யஸூரிகளுடன் வந்து,
உதார குணத்துடன் ஆழ்வாருடன் நன்றாகக் கலந்து ஆழ்வாரின் வருத்தத்தைப் போக்கினான்.
நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் பொருத்தமான அன்பை எப்பொழுதும் வை.

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–

பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –-2-5-9-

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-

———————————–

பதினாறாம் பாசுரம்.
மாமுனிகள், ஈஸ்வரன் நம்மை “அப்பொழுதைக்கப்பொழுது என் ஆராவமுதம்” என்று அனுபவிக்கும் ஆழ்வார்
தான் மிகத் தாழ்ந்தவர் என்று எண்ணி நம்மை விட்டுப் பிரிந்தால் என்ன செய்வது என்று
தேவையில்லாமல் ஸந்தேஹப்பட, அந்த ஸந்தேஹத்தைப் போக்கும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து – நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத்தான் விடேன் என்றுரைக்க
வன்மை அடைந்தான் கேசவன்–16-

நித்ய விபூதிக்குத் தலைவனான ஸர்வேஸ்வரன் ஆழ்வாருடன் வந்து கலக்க
ஆழ்வார் தம்மை தரித்துக் கொண்டார்.
ஆனால் அதன் பிறகு தன்னைப் பற்றித் தாழ்வாக நினைக்கத் தொடங்கினார்;
அதைக் கண்டு வருந்தி மிகவும் உடைந்து போன எம்பெருமானைக் கண்ட ஆழ்வார்,
எம்பெருமானிடம் “நாம் உன்னைப் பிரிய மாட்டோம்” என்று சொல்ல, எம்பெருமான் தேறினான்.

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –-2-6-3-

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4-

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5-

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10-

கண்ணித்  தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11-

————————–

பதினேழாம் பாசுரம்.
மாமுனிகள், தன்னுடன் இருக்கும் உறவால், தன்னுடைய முன்னோர்கள் மற்றும் பின்னோர்கள்
பகவானுக்கு அடியவர்கள் ஆனதை ஆனந்தமாகப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசடைந்தார் என்று சிறந்துரைத்த – வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கெல்லாம் உய்கைக்கு
ஆறென்று நெஞ்சே!  அணை–17-

ஆழ்வார் “நம்மைச் சேர்ந்தவர்கள், தங்களுடன் தொடர்புள்ள முன்னோர்கள் மற்றும் பின்னோர்களுடன்
ஒளியைப் பெற்றனர்” என்று தெளிவாக அருளிச் செய்தார்;
இவ்வாழ்வாருடைய பெருமை எல்லா இடங்களிலும் பரவியுள்ளது;
நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே எல்லா ஆத்மாக்களுக்கும்
மோக்ஷத்துக்கு உபாயமாகக் கொண்டு, அத் திருவடிகளில் சரணடைவாயாக.

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –-2-7-9-

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே —2-7-12-

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-

————————-

பதினெட்டாம் பாசுரம்.
மாமுனிகள், எம்பெருமானின் மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய தன்மையை உபதேசிக்கும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட – இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலர் அடியே
வீசு புகழ் எம்மா வீடு–18-

எம்பெருமான் தன்னைச் சரணடையும் நித்ய ஸம்ஸாரிகளை
நித்ய ஸூரிகளுடன் சேர்க்கக்கூடிய மோக்ஷத்தைக் கொடுக்கிறான்;
எம்பெருமானின் இத் தன்மையை ஆழ்வார் குற்றமற்ற உபதேசமாக அருளிச் செய்து
இந்த ஸம்ஸாரிகளும் கண்ணனின் அருளைப் பெறும்படி செய்தார்;
இப்படி எங்கும் பரவிய பெருமை வாய்ந்த ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே சிறந்த மோக்ஷ ஸ்தானம்.

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன்  பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –-2-8-2-

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

———————————

பத்தொன்பதாம் பாசுரம்.
மாமுனிகள், அடைய வேண்டிய குறிக்கோளை நிர்ணயிக்கும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

எம்மா வீடும் வேண்டா என்தனக்கு உன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்துரைத்த – நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாள் இணை சூடிக்
கீழ்மையற்று நெஞ்சே!  கிளர்–19-

ஆழ்வார் எம்பெருமானிடம் “எம்பெருமானே! தேவரீரின் திருவடிகளே எனக்குப் போதும்” என்றார்.
இப்படிச் சொன்ன ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே நம்முடைய ஸத்தைக்குக் காரணம்.
தாழ்ந்த விஷயங்களை விட்டு இவ்வாழ்வாரின் திருவடிகளை உங்கள் தலையில் வைத்துக் கொண்டால்,
நீங்கள் உயர்ந்த கதியை அடையலாம்.

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-

யானே என்னை யறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-

————————

இருபதாம் பாசுரம்.
மாமுனிகள், “திருமாலிருஞ்சோலை என்னும் திருமலையைப் புகலாகக் கொள்வதே பேற்றுக்கு வழி” என்று உபதேசிக்கும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.
அன்றிக்கே,
மாமுனிகள் ஆழ்வார் திருமாலிருஞ்சோலை மலையையே சிறந்த குறிக்கோளாக
அனுபவிப்பதை அருளிச் செய்கிறார் என்றும் சொல்லலாம்.

கிளரொளி சேர் கீழுரைத்த பேறு கிடைக்க
வளரொளி மால் சோலை மலைக்கே  – தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேருமெனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம் முடி-20-

முன்பு அருளிச் செய்த, மிகவும் ஒளி விடும் புருஷார்த்தத்தை அடைய,
ஆழ்வார் எம்பெருமானின் இருப்பிடமான, வளர்ந்து வரும் ஒளிபடைத்த திருமாலிருஞ்சோலையை,
தளராமல், மனதை வைத்து அடையுங்கோள் என்று அருளிச் செய்தார்;
இத்தனை பெருமை பெற்ற ஆழ்வாரின் திருவடிகளில், நம் தலையை வைப்போம்.

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –-2-10-1-

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –-2-10-2-

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன் மலை யடைவது அது கருமமே –2-10-3-

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

——————

இருபத்தொன்றாம் பாசுரம்.
மாமுனிகள், திருமாலிருஞ்சோலை என்கிற திருமலையில் எழுந்தருளியிருக்கும்
அழகர் எம்பெருமானின் வடிவழகை நன்கு அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் – வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படிகலனும்
முற்றும் அனுபவித்தான் முன்—21-

முன்பு, ஆழ்வார் திடமாக இருந்து சிகரங்களை உடைய திருமலையை அனுபவித்து,
அங்கே எழுந்தருளியிருக்கும் அழகர் எம்பெருமானின் திருமேனியை,
அந்தத் திருமேனியில் அணிந்திருக்கும் திருவபிஷேகம் (கிரீடம்), சதங்கை மற்றும்
ஏனைய ஆபரணங்களுடன் சேர்ந்து அனுபவித்தார்.

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4-

வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5-

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7-

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10-

வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-

——————

இருபத்திரண்டாம் பாசுரம்.
மாமுனிகள், “என்னுடைய கரணங்களின் குறையால் எம்பெருமானின் குணங்களை
அனுபவிக்க முடியவில்லை” என்று கலங்க
அதை எம்பெருமான் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை
அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்னவளவென்ன எனக்கரிதாய்த் – தென்ன
கரணக் குறையின் கலக்கத்தைக் கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து–22-

முன்பு, ஆழ்வார் அழகர் எம்பெருமானின் வடிவழகில் மூழ்கினார்;
கரணங்களின் குறையால் ஏற்பட்ட அஜ்ஞானத்தால் “எனக்கும் கூட, எம்பெருமானின் அழகை
இவ்வளவு என்று அளவுபடுத்தி அனுபவிக்க முடியவில்லையே!” என்ற
ஆழ்வாரை ஸமாதானப் படுத்தி, எம்பெருமான் ஆழ்வாரின் கலக்கத்தைப் போக்கினான்.

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-

வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5-

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9-

தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10-

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11-

————————–

இருபத்து மூன்றாம் பாசுரம்.
மா முனிகள், கைங்கர்யம் செய்வதில் தனக்கு இருக்கும் ஆசையை வெளியிடும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச் செய்கிறார்.

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழுவிலா ஆட் செய்ய மாலுக்கு – எழுசிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே!  புகழ்–23–

நெஞ்சே! உயர்ந்த சிகரங்களையுடைய திருமலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடன்
பிரியாமல் இருந்து எல்லாக் காலங்களிலும் குற்றமில்லாத கைங்கர்யங்களைச் செய்ய ஆசைப்பட்டு
அதனால் பேரின்பத்தை அடைந்த ஆழ்வாரின் அழகிய திருவடிகளைக் கொண்டாடு.

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.–3-3-2-

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண் இல் தொல்புகழ் வானவர் ஈசனே. –3-3-3-

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-

சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-

வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-

வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11-

———————-

இருபத்து நான்காம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமான் ஆழ்வாரின் ப்ரார்த்தனைக்கு இணங்க எல்லாப் பொருட்களுக்கும்
அந்தர்யாமியாக இருப்பதைக் காண்பிக்க, அதைக் கண்டு அனுபவித்து,
வாசிக கைங்கர்யம் செய்யும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

புகழொன்று மால் எப்பொருள்களும் தானாய்
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க – மகிழ்மாறன்
எங்கும் அடிமை செய இச்சித்து வாசிகமாய்
அங்கடிமை செய்தான் மொய்ம்பால்–24-

தகுந்த பெருமைகளை உடைய ஸர்வேஸ்வரன்,
தான் எல்லா பொருட்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கும் நேர்மை என்ற குணத்தை வெளிப்படுத்தினான்.
இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு எல்லா இடங்களிலும் கைங்கர்யம் செய்ய ஆசைப்பட்ட
வகுளாபரணரான ஆழ்வார், மயர்வற மதிநலம் அருளப் பட்டதால் வந்த பெருமையுடன்,
வாசிக கைங்கர்யத்தைச் செய்தார்.-

புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—

கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2-

பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3-

சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.–3-4-4-

அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5—

பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ
வானவர் ஆதி யையே.–3-4-6-

வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!–3-4-7-

ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே.–3-4-8-

கண்ணனை மாயன் றன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே.–3-4-9-

யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே.–3-4-10-

கூடிவண்டு அறையும் தண் தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண் சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-

—————–

இருபத்தைந்தாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானுக்கு அடிமை செய்பவர்களைக் கொண்டாடியும்,
அப்படிச் செய்யாதவர்களை நிந்தித்தும் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மொய்ம்பாரும் மாலுக்கு முன் அடிமை செய்து உவப்பால்
அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் – அன்பிலா
மூடரை நிந்தித்தும் மொழிந்தருளும் மாறன்பால்
தேடரிய பத்தி நெஞ்சே!  
செய்–25-

நெஞ்சே! மிகவும் சக்தி பொருந்திய ஸர்வேஸ்வரனுக்கு அடிமை செய்த ஆனந்தத்தால்,
அவனிடத்தில் பக்தியுடன் தொண்டு செய்பவர்களைக் கொண்டாடியும்
அது செய்யாத மூடர்களை நிந்தித்தும் பேசிய ஆழ்வாரிடம் உயர்ந்த பக்தியைக் கொள்.

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்,
தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.–3-5-2-

மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்
தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3-

வம்பு அவிழ் கோதை பொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்க ளிடையே?–3-5-4-

சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?–3-5-5-

மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6-

நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய் வாரே!–3-5-7-

வார் புனல் அம் தண் அருவி
வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே.–3-5-8-

அமரர் தொழப் படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே .–3-5-9-

கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–3-5-10-

தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-

———————

இருபத்தாறாம் பாசுரம்.
மா முனிகள், அர்ச்சாவதாரம் வரை வந்துள்ள எம்பெருமானின் ஸௌலப்யம் (எளிமை)
என்ற குணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை
அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்த்
துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் – எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று–36-

சேதனர்களுடன் கூடி நன்றாக ஆராயப்படும் தமிழ் வேதத்தையே அடையாளமாகக் கொண்ட ஆழ்வார்
“இவ்வுலகில் எம்பெருமானிடத்திலே சரணடைபவர்களுக்கு,
உயர்த்தி பொருந்திய பரத்வம்,
சிறந்த வ்யூஹம், தூய்மையான அவதாரங்கள்
ஆகியவற்றைக் காட்டிலும் எம்பெருமானின் அர்ச்சாவதாரமே
அடைவதற்கு எளிது” என்று அருளிச் செய்தார்.

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-

மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத்
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை
எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ.–3-6-2-

பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அம
ருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முக
னும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-

தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6-

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7-

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-

—————-

இருபத்தேழாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் அடியார்களே விரும்பத்தகுந்த குறிக்கோள் என்று
பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு – இயல்வுடனே
ஆளானார்க்காளாகும் மாறன் அடி அதனில்
ஆளாகார் சன்மம் முடியா–27-

ஆழ்வார் ஸ்ரீய:பதியான எம்பெருமானின் திருவடிகளில் மனதை வைத்துத் தொண்டு
செய்யும் அடியவர்களுக்குத் தொண்டு செய்ய ஆசைப்பட்டார்.
இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளுக்குத் தொண்டு செய்யாதவர்களுக்கு
இவ் வுலகில் பிறவி முடியாமல் தொடரும்.

பயிலும் சுடர் ஒளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை
பயிலவினிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை
பயிலும் திருவுடையார் யவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை யாளும் பரமரே –3-7-1-

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னை
தோளுமோர் நான்குடைத் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறும் எம்மை யாளுடை நாதரே –3-7-2-

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய்ப்போதனை
பொன்னெடும் சக்கரத்து எந்தை பிரான் தன்னை
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடை தோறும் என்னை யாளுடையார்களே –3-7-3-

உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன்
புடையார் பொன்னூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்
நடையாவுடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே –3-7-4-

பெரு மக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய வப்பனை
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வறுமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே –3-7-5-

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னை
துளிக்கும் நறும் கணனித் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
ஒளிக் கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே –3-7-6-

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-

நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8-

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10-

அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த
நெடியோனை தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடியார்ந்த வாயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கிற்கில் சன்மம் செய்யாமை முடியுமே –3-7-11-

—————

இருப்பத்தெட்டாம் பாசுரம்.
மா முனிகள், தானும் தன்னுடைய கரணங்களும் (எம்பெருமானை அனுபவிப்பதில்) மிகவும் ஆசையுடன்
இருந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

முடியாத ஆசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டு அவன் பால் படியா – ஒன்றொன்றின்
செயல் விரும்ப உள்ளதெல்லாம் தாம் விரும்பத்
துன்னியதே மாறன் தன் சொல்–28-

ஆழ்வாரின் எல்லை இல்லாத அன்பு மேலும் பெருக,
அவரின் எல்லாக் கரணங்களும் அடியார்களை விட்டு ஸர்வேஸ்வரனை அடைந்தன;
ஒவ்வொரு கரணமும் தன் அனுபவத்துக்கு மேல், மற்ற கரணங்களின் அனுபவத்தையும் ஆசைப்பட,
ஆழ்வார் எல்லாக் கரணங்களின் அனுபவத்தையும் ஆசைப்பட்டார்;
இவ்வாறு, ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் நன்கு செறிந்தன.

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும் என் நெஞ்சமே.–3-8-1-

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2-

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-

கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5-

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6-

ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9-

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான்  –3-8-11-

—————–

இருபத்தொன்பதாம் பாசுரம்.
மா முனிகள், அடியார் அல்லாதவர்களுக்குத் தொண்டு செய்வது தாழ்ந்தது என்றும்
எம்பெருமானுக்குத் தொண்டு செய்வது பொருத்தமானது என்றும் சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

சொன்னாவில் வாழ் புலவீர்! சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலால் – என்னாகும்?
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம்–29-

நாக்கில் கவி பாடும் திறன் பெற்ற புலவர்களே!
உணவு மற்றும் உடைக்காக, குறைந்த ஆயுளை உடைய மனிதர்களை உங்கள் கவிதைகளால் கொண்டாடுவதால் என்ன பயன்?
எல்லோருக்கும் ஸ்ரீ ய:பதியைக் கொண்டாடும்படி உபதேசித்த திருக் குருகூரின் தலைவரான
ஆழ்வாரின் அருளால், அவர்கள் பிறவி நீங்கும்.

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2-

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.–3-9-5-

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6-

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7-

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8-

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-

——————–

முப்பதாம் பாசுரம்.
மா முனிகள், “எம்பெருமானுக்காகவே என்னுடைய கரணங்கள் இருப்பதால்
எனக்கு ஒரு குறையுமில்லை” என்ற ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை
அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

சன்மம் பல செய்து தான் இவ்வுலகளிக்கும்
நன்மை உடை மால் குணத்தை நாள் தோறும் – இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை உலகீர்!
நாத்தழும்ப ஏத்தும் ஒரு நாள்–30-

ஆழ்வார் “இவ்வுலகத்தில் வாழ்பவர்களே!
பல அவதாரங்களைச் செய்து, இந்த உலகங்களைக் காக்கும் நன்மை உடைய ஸர்வேஸ்வரனின்
கல்யாண குணங்களை எப்பொழுதும் கொண்டாடும் பேரானந்தத்தை
இப்பிறவியில் பெற்றேன்” என்று அருளிச் செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரை ஒரு நாளாவது பாடி, உங்கள் நாக்கில் தழும் பேறும்படிச் செய்யுங்கள்.

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1-

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–3-10-2-

முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.–3-10-3-

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-10-4-

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5-

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-

துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் உலகங்களுமாய்
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால்
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–3-10-7-

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8-

துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–3-10-9-

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10-

————————–

முப்பத்தொன்றாம் பாசுரம்.
மாமுனிகள், ஐஸ்வர்யம் முதலியவற்றின் தாழ்ச்சி
மற்றும் அநித்யமாக இருக்கும் தன்மையினால் உள்ள தோஷங்களைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஒரு நாயகமாய் உலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி உய்க்கும் இன்பம் – திரமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மால் அடிமையே இனிதாம்
பன்னி இவை மாறன் உரைப்பால்–31

ஆழ்வார்
1) உலகத்துக்கு ஏக சக்ரவர்த்தியாய் இருந்து பெறும் இன்பம் நிரந்தரமன்று
2) பரந்த ஸ்வர்கத்தில் தேவர்கள் அனுபவிக்கும் இன்பமும் நிரந்தரமன்று
3) நித்யமாக ஆத்மா தன்னையே அனுபவிப்பதும் தீது மற்றும்
4) எம்பெருமானுக்கு அடிமை செய்வது மிகவும் இனியது
ஆகியவைகளை ஆராய்ந்து அருளிச் செய்தார்-

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-

உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2-

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3-

நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலிற் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4-

பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5-

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6-

ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்கு ஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதி அம் சோதி குணங்களே.–4-1-7-

குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8-

படி மன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன் வென்று,
செடி மன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9-

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-

————————-

முப்பத்திரண்டாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் வெவ்வேறு காலத்தில் ஏற்பட்ட பல அவதாரங்களை
அந்தந்த இடம் மற்றும் காலத்தில் அனுபவிக்க ஆசைப்பட்டுப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அ யொட்டி அருளிச் செய்கிறார்.

பாலரைப் போல் சீழ்கி பரன் அளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கை கழிந்த – சால
அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ–32-

ஆழ்வார்திருநகரியில் அவதரித்த தலைவரான ஆழ்வார்,
எம்பெருமானிடத்தில் இருந்த அன்பால் அவனுடைய முற்காலத்து அவதாரங்களை அனுபவிக்க ஆசைப்பட்டு,
அவை வேறு காலம் மற்றும் தேசத்தில் ஏற்பட்டதால்,
அது கிடைக்காமையால் குழந்தையைப் போலே சிணுங்கினார்;
மேலும் அவனுக்குக் கைங்கர்யம் செய்ய மிகவும் ஆசைப்பட்டு (அது கிடைக்காமையால்),
மிகவும் வருத்தமுற்றார்.

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-

வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2-

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-

கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-

தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக்
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6-

மடந்தையை வண் கமலத் திரு மாதினைத்
தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல்
வடங்கொள் பூந் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.–4-2-7-

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8-

நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்?–4-2-9-

என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10-

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற் கோவையே.–4-2-11-

——————

முப்பத்து மூன்றாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமான் எப்படி காலத்தால் இருந்த தடையை நீக்கி
அனுபவத்தைக் கொடுத்தான் என்பதைப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கோவான ஈசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத்து உவாதிதனை – மேவிக்
கழித்தடையக் காட்டி கலந்த குண மாறன்
வழுத்துதலால் வாழ்ந்தது இந்த மண்–33–

எல்லோருக்கும் தலைவனான எம்பெருமான் ஆழ்வாருடன் கூடி,
காலம் கடந்திருந்தாலும், காலத்தால் வந்த தடையைப் போக்கி,
தன்னுடைய பூர்வ சரித்ரங்களை ஆழ்வார் ஆசைப் பட்டபடி காட்டிக் கொடுத்து
ஆழ்வாரின் துன்பத்தைப் போக்கினான்;
இவ்வாறு ஆழ்வார் எம்பெருமான் தன்னுடன் கூடிய அந்த குணத்தைக் கொண்டாட,
இவ் வுலகம் நிலை பெற்றது.

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-

பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.–4-3-3-

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–4-3-4-

கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா
எண்ணில் பல் கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–4-3-5-

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்று என்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6-

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே.–4-3-7-

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8-

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9-

யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-

—————————

முப்பத்து நான்காம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானைப் போன்று இருக்கும், மற்றும் எம்பெருமானுடன் தொடர்புடைய பொருட்களைப் பார்த்து,
அவை எம்பெருமான் என்று ப்ரமித்து, அவைகளை எம்பெருமானாகப் பாடிப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண் நிலைமையாய்க் காதல் பித்தேறி – எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை அவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு–34–

எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தில் ஆழ்வாருடன் கலந்து பின்பு பிரிந்தான்;
அதனால் ஆழ்வார் ஒரு பெண் தன்மையை அடைந்து, அவனிடத்தில் இருந்த பக்தியால், மிகவும் கலங்கி,
அவன் விஷயமான பேரன்பால், அவனைப் போன்ற பொருட்களை அவனாகவே நிர்ணயித்துப் பாடினார்.

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1-

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3-

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–4-4-4-

கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6-

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய் மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7-

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-

விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9-

அயர்க்கும்;சுற்றும் பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10-

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11-

———————–

முப்பத்தைந்தாம் பாசுரம்.
மா முனிகள், திவ்ய ஸ்தானமான பரமபதத்தில் எம்பெருமானின் இருப்பைக் கண்டு
அடைந்த பேரின்பத்தைப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளி செய்கிறார்.

வீற்றிருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமை ஆனதெல்லாம் – தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்குகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து–35-

பரம பதத்தில் வீற்றிருந்தருளும் எம்பெருமான்,
இங்கே வந்து, தன்னுடைய சிறந்த குணங்கள், திருமேனிகள் ஆகியவற்றைக் காட்டி
ஆழ்வாரின் கலக்கத்தை நீக்கி, ஆழ்வாருடன் நன்றாகக் கலந்தான்;
இப்படி ஸர்வேஸ்வரனைக் கண்ட ஆழ்வார், அவனை வணங்கி ஆனந்தத்தை அடைந்து,
தன்னுடைய துன்பங்கள் நீங்கப் பெற்றதால், தன்னுடைய பெருமையைத் தானே அறிவித்தார்.

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7-

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே.–4-5-11-

——————-

முப்பத்தாறாம் பாசுரம்.
ஆழ்வாரிடத்தில் மிகுந்த காதல் கொண்ட எம்பெருமானை நேரில் கண்டு அனுபவிக்க முடியாமையால் ஆழ்வார் மோஹித்தார்;
ஆழ்வாரிடத்தில் அன்பு கொண்டவர்கள் இதற்கு ஒரு தீர்வு காண முற்பட,
நல்ல ஞானம் உள்ள ஆழ்வாரின் நலம் விரும்பிகள் ஆழ்வாருக்குச் சேராத விஷயங்களையும்,
இந்நிலைக்குக் காரணத்தையும் தீர்வையும் விளக்கிப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி மா முனிகள் அருளிச் செய்கிறார்.

தீர்ப்பாரிலாத மயல் தீரக் கலந்த மால்
ஓர்ப்பாதும் இன்றி உடன் பிரிய – நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்–36-

ஆழ்வாரின் தீர்க்க முடியாத பேரன்பைத் தீர்க்க ஸர்வேஸ்வரன் ஆழ்வாருடன் கலந்து,
ஆராயாமல் ஆழ்வாரை விட்டுப் பிரிந்தான்;
இதைக் கண்ட உறவினர்கள், முன்பைவிட மிகவும் வருந்தி அறிவிழந்தார்கள்;
எம்பெருமானுடைய திரு நாமங்களைக் கேட்டு தன்னுடைய உணர்வை மீண்டும் பெற்றார்;
இதுவே ஆழ்வாரின் தன்மை.

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2-

இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4-

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5-

தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6-

அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள் குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7-

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–4-6-9-

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்க சீலம் இலர்களே.–4-6-11-

———————-

முப்பத்தேழாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் திருநாமத்தைக் கேட்டுத் தன் உணர்வை மீண்டும் பெற்ற ஆழ்வார்,
அந்தத் திருநாமத்துக்கு உடையவனான எம்பெருமானை அனுபவிக்க முடியாமல் வாடிப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

சீல மிகு கண்ணன் திருநாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு – சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு–37-

ஆழ்வார் திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்,
கல்யாண குணங்கள் நிறைந்த கண்ணனின் திருநாமங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்;
உணர்ந்த பின் மிகவும் வருந்தி, கண்ணனின் திருமேனியைக் காண ஆசைப்பட்டு,
அனுபவிப்பதற்காக அழைக்கிறார்.

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என் கண் காணவந்து ஈயாயே.–4-7-2-

ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண் பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-

அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–4-7-5-

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6-

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8-

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9-

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11-

—————–

முப்பத் தெட்டாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமான் தனக்கு உதவாததால், அவனுக்காக இல்லாத
ஆத்மாவிலும்
ஆத்மாவின் உடைமைகளிலும்
தனக்கு இருக்கும் விரக்தியைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீ ஸூக்திகளை
அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு
வேறு படில் என் உடைமை மிக்க உயிர் – தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா எனும் மாறன் தாளை நெஞ்சே!
நந்தமக்குப் பேறாக நண்ணு –38-

ஆழ்வார் “என்னுடைய ஆபரணங்கள் முதலியவையும் அவற்றைவிடச் சிறந்ததான ஆத்மாவும்,
பிராட்டி ஏறி வீற்றிருக்கும் திருமார்பை உடைய ஸர்வேஸ்வரன் திருவுள்ளத்துக்கு ஏற்புடையதில்லை என்றால்,
ஆராய்ந்து பார்த்தால், எனக்கும் அவை வேண்டாம்” என்று வெறுப்புடன் அருளிச்செய்தார்.
நெஞ்சே! இப்படிப் பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே சிறந்த குறிக்கோளாகக் கொள்.

ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1-

மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-

மட நெஞ்சால் குறையில்லா மகள் தாய் செய்து ஒருபேய்ச்சி
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பட நாகத்து அணைக் கிடந்த பருவரைத் தோட் பரம் புருடன்
நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–4-8-3-

நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-

தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5-

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-

கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த,
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7-

வரி வளையால் குறை யில்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த
தெரி வரிய சிவன் பிரமன் அமரர் கோன் பணிந்து ஏத்தும்
விரி புகழான் கவராத மேகலையால் குறையிலமே.–4-8-8-

மேகலை யால் குறை யில்லா மெலி வுற்ற அகல் அல்குல
போக மகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து
நாக மிசைத் துயில்வான் போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகு அணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9-

உடம்பினால் குறையில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம்
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல சடை முடியன் தனி ஒரு கூற மர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10-

உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11-

———————

முப்பத் தொன்பதாம் பாசுரம்.
மா முனிகள், ஸம்ஸாரிகளின் அநர்த்தத்தைக் கண்டு வெறுத்துப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

நண்ணாது மால் அடியை நானிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பம் உறும் இவ்வுயிர்கள் – தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை ஒன்று–39-

இவ் வுலகில் தங்கள் பாபங்களினாலே எல்லை யில்லாத துன்பங்களை அனுபவிக்கும்
ஆத்மாக்களின் தாழ்ச்சியையும்
அவர்கள் எம்பெருமானிடத்தில் சரணடையாமல் இருப்பதையும் கண்ட ஆழ்வார்,
ஆறியிருக்க முடியாமல், கண்ணீருடன் இருந்தார்;
இப்படிப்பட்ட ஆழ்வாரின் கருணையே நமக்குத் தகுந்த துணை.

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்து ஏங்க,
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

சாமாறும் கெடுமாறும் தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை?
ஆமாறு ஒன்று அறியேன் நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல் வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3-

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ் செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணி வண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4-

வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப் புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந் நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனை நீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5-

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11-

——————–

நாற்பதாம் பாசுரம்.
மா முனிகள், ஸம்ஸாரிகளும் சரணாகதி செய்வதற்கு ஸௌகரியமாகப்
பரத்வத்துடன் இருக்கும் அர்சாவதாரத்தைப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீ ஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால்
அன்றி என ஆரும் அறியவே – நன்றாக
மூதலித்துப் பேசி அருள் மொய்ம்மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை–40-

எல்லோரும் புரிந்து கொள்ளும்படி,
“இவ்வுலகங்களைப் படைத்த ஸர்வேஸ்வரனைத் தவிர வேறு தெய்வம் இல்லை” என்று
நன்றாக நிர்ணயித்து அருளிய வகுளாபரணரின்
திருவடிகளுக்கு அஞ்ஜலி செய்வதையே என் கைகள் விரும்பும்.

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9-

உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-

—————————–

நாற்பத்தொன்றாம் பாசுரம்.
மா முனிகள், தன்னை எம்பெருமான்  நிர்ஹேதுகமாக (ஒரு காரணமும் இல்லாமல்) ஏற்றுக் கொள்வதைக் கண்டு
ப்ரமித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறன் உரைக்கு – மெய்யான
பேற்றை உபகரித்த பேரருளின் தன்மை தனை
போற்றினனே மாறன் பொலிந்து–41-

ஆழ்வார் பொலிவுடன் “என்னிடத்தில் சிறிதளவும் பக்தி இல்லாத போதும்
நான் அவனை ஏமாற்றும் வகையில் பேசினாலும், அவன் பெரும் கருணையுடன்
எனக்கு உயர்ந்த பலனைக் கொடுத்தான்” என்று அருளிச் செய்தார்.

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4-

கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5-

புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6-

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7-

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே.–5-1-10-

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11-

———————-

நாற்பத்திரண்டாம் பாசுரம்.
மா முனிகள், தன்னுடைய ஒன்றும் தேவும் (திருவாய்மொழி 4.10) பதிகத்தைக் கேட்டுத்
திருந்தியவர்களுக்கு மங்களாசாஸனமாகவும்
திருந்தாதவர்களைத் திருத்தும் உபதேசமாகவும் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

பொலிக பொலிக என்று பூமகள் கோன் தொண்டர்
மலிவுதனைக் கண்டுகந்து வாழ்த்தி – உலகில்
திருந்தாதார் தம்மைத் திருத்திய மாறன் சொல்
மருந்தாகப் போகும் மன மாசு–42-

அடியார்களின் மிகப் பெரிய கோஷ்டியைக் கண்டு மகிழ்ந்த ஆழ்வார்
“பொலிக! பொலிக!” என்றார்.
இவ்வுலகில் திருந்தாதவர்களைத் திருத்தினார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை மருந்தாகக் கொண்டால்,
மனதில் இருக்கும் தோஷங்கள் நீங்கும்

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்ப தெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-

மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-

மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திரு மூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

—————

நாற்பத்து மூன்றாம் பாசுரம்.
மா முனிகள், முன்பு பேசிய எம்பெருமானின் வடிவழகை நேரில் அனுபவிக்க முடியாததால்
மடல் எடுக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மாசறு சோதி கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் – ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்–43-

குற்றமற்ற ஒளியை உடைய எம்பெருமானிடம் தனக்கு ஏற்பட்ட அளவு கடந்த அன்பினால்,
எம்பெருமான் தன்னுடன் வந்து கலக்காததால், தனக்கு ஏற்படும் பழியையும்
ஊராரின் நிந்தனைக்கு அஞ்சும் நிலையையும் கடந்து,
தான் அவதரித்த ஊரில் மக்கள் நடுங்கும்படி இவ் வுலகில் மடல் எடுக்க முற்பட்டார் ஆழ்வார்.

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என் செய்யுமே?–5-3-1-

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே.–5-3-2-

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ் வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-

ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத் தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5-

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

வலையுள் அகப்படுத்து என்னை நன் நெஞ்சம் கூவிக் கொண்டு
அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவுமாங் கொலோ? தையலார் முன்பே.–5-3-7-

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-

——————–

நாற்பத்து நான்காம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானைப் பிரிந்து இரவின் நீட்சியால் மிகவும் வருந்தும்
நாயகியின் பாவனையில் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச் செய்கிறார்.

ஊர நினைந்த மடல் ஊரவும் ஒண்ணாதபடி
கூரிருள் சேர் கங்குலுடன் கூடி நின்று – பேராமல்
தீது செய்ய மாறன் திரு உள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்ஙனேயோ?–44-

ஐயோ! இருண்ட இரவும் அதன் துணைவர்களும் சேர்ந்து ஆழ்வாரை விடாமல் நலிந்து
அவர் மடல் எடுக்க முற்படுவதைத் தடுப்பதையும்,
அவர் திருவுள்ளத்தை அடைந்த துன்பத்தையும் எவ்வாறு பேசுவது?

ஊரெல்லாம் துஞ்சி உல கெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல் வினையேன் ஆவி காப்பார் இனியே.–5-4-1-

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3-

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4-

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே.–5-4-5-

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் விடத்தே?–5-4-6-

காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என் செய்கேனோ?–5-4-7-

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே.–5-4-8-

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-

——————–

நாற்பத்தைந்தாம் பாசுரம்.
மா முனிகள், உருவெளிப் பாட்டைப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

எங்ஙனே நீர் முனிவது என்னை இனிநம்பி அழகு
இங்ஙனே தோன்றுகின்றது என் முன்னே – அங்ஙன்
உருவெளிப்பாடா உரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்–45-

தமிழ் வேதமான ப்ரபந்தங்களை அருளிய ஆழ்வார்,
உருவெளிப்பாடு (மனக்கண்ணால் பார்த்து அனுபவிப்பது) என்னும் கவிதை முறையில்
“என்னிடத்தில் நீங்கள் எல்லோரும் கோபம் கொள்ளலாமா?
திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகு என் கண் முன்னே தோன்றுகின்றது” என்று அருளினார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரை த்யானிப்பவர்களுக்கு ஆழ்வாரே ஒரு ஆனந்தக் கடலாக இருப்பார்.

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1-

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–5-5-3-

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4-

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5-

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6-

நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-

கை யுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8-

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீண் முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9-

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-

அறி வரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-

—————

நாற்பத்தாறாம் பாசுரம்.
மா முனிகள், அனுகாரத்தின் மூலம் தன்னை தரித்துக் கொண்டு பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீ ஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கடல் ஞாலத்தீசனை முன் காணாமல் நொந்தே
உடனா அனுகரிக்கல் உற்று – திடமாக
வாய்ந்தவனாய்த் தான் பேசும் மாறன் உரை அதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார்–46-

கடல் சூழ்ந்த இவ்வுலகில் எம்பெருமானை நேரில், தன் கண்ணால் கண்டு அனுபவிக்க முடியாமல் வருந்தி,
எம்பெருமானை அனுகரித்து (அவனைப் போலே இருந்து),
திட விச்வாஸத்துடன் அவனைப் பற்றிப் பேசினார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளின் பெருமைகளை அறிந்து, அதை அனுஸந்திப்பவர்கள்,
ஆழ்வாருக்குத் தொண்டு செய்யும் தபஸ்ஸைச் செய்தவர்கள் ஆவர்.

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ?
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-

கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2-

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே.–5-6-3-

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனி வாய் இள மான் திறத்தே.–5-6-4-

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே.–5-6-5-

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–5-6-6-

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக் கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7-

உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக் கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8-

கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9-

கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோல மில் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.–5-6-10-

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-

————-

நாற்பத்தேழாம் பாசுரம்.
மா முனிகள், வானமாமலை எம்பெருமானை அன்புடன் வணங்கியும்
அவன் திருவடிகளில் சரணாகதி செய்தும் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீ ஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

நோற்ற நோன்பாதி இலேன் உன்தனை விட்டாற்றகில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன்தன் பேரருளே – சாற்றுகின்றேன்
இங்கென் நிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது–47-

அழகை அடைந்த ஆழ்வார், உபாய விஷயமாக
“எனக்கு மோக்ஷத்துக்கு வழியான கர்ம யோகம் முதலிய உபாயங்களில் எந்த ஈடுபாடும் இல்லை;
உன்னைப் பிரிந்து என்னால் வாழ முடியவில்லை;
என்னுடைய பேற்றுக்கு உன்னுடைய பெரிய கருணையே உபாயம்” என்று அருளிச்செய்தார்.
கருணை மிகுந்த இப் பாசுரங்களை அனுஸந்திக்க வல்லவர்கள்
ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய ஸூரிகளுக்கு ஆராவமுதமாக இருப்பர்.

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–5-7-4-

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6-

வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.–5-7-7-

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணி மாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8-

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான் மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.–5-7-9-

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11-

—————

நாற்பத்தெட்டாம் பாசுரம்.
மா முனிகள், தன்னுடைய கைம் முதல் இல்லாத் தன்மையை அறிவித்து
ஆராவமுதன் எம்பெருமானைச் சரணடைந்தும்,
எம்பெருமான் “இவர் நம் ஆழ்வார்” என்று தன் ஆசையை நிறைவேற்றாததால்,
கலங்கி வருத்தத்துடன் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக  – தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான்–48–

ஆழ்வாரின் எதிர்பார்ப்பை ஆராவமுதன் கருணையுடன் நிறைவேற்றாததால்
ஆழ்வார் நிறைவேற்ற முடியாத மிகவும் அதிகமான ஆசையை அடைந்து வருத்தமுற்றார்.
இப்படிக் கலங்கிய தன்னுடைய வருத்தத்தை வெளியிட்டார்;
இப்படிப்பட்ட ஆழ்வாரே நம்முடைய குற்றமற்ற ஸ்வாமி.

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2-

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-8-5-

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-

அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7-

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9-

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-

————-

நாற்பத்தொன்பதாம் பாசுரம்.
மா முனிகள், திருவல்லவாழுக்குச் சென்று அதைச் சூழ்ந்திருக்கும்
புறச்சோலைகளின் அனுபவத்தால் வருந்திப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மாநலத்தால் மாறன் திருவல்லவாழ் புகப் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ்வூர் தன் அருகில் – மேல் நலங்கித்
துன்பம் உற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற–49-

மிகவும் அன்புடன் ஆழ்வார் திருவல்லவாழ் திவ்யதேசத்தை நோக்கிச் சென்றார்;
ஆனால் அதை அடைய முடியாமல், அதைச் சூழ்ந்திருக்கும் சோலைகளில், தளர்ந்து கீழே விழுந்தார்;
மேலும் கலங்கி, வருந்தி இப்பாசுரங்களை அருளிச்செய்தார்.
இப்பாசுரங்களைக் கற்பவர்களுக்கு, அவற்றைக் கற்ற பின், எம்பெருமானின் திருவடிகளுக்கு
வெளிப்பட்ட பிறவிகள் கிடையாது.

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்
தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.–5-9-2-

சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.–5-9-3-

நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே.–5-9-4-

நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.–5-9-5-

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-

பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.–5-9-7-

நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.–5-9-8-

கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9-

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11-

———–

ஐம்பதாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானிடத்தில்
“உன்னுடைய அவதாரங்களில் செய்த லீலைகளை அனுபவித்து நான் தரித்திருக்கும்படி
அனுமதிக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை
அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

பிறந்து உலகம் காத்தளிக்கும் பேரருள் கண்ணாஉன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத் – திறம் தவிர்ந்து
சேர்ந்தனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே! வைகு–59-

ஸ்ரீ நம்மாழ்வார், இவ்வுலகில் அவதரித்து எல்லோரையும் ரக்ஷிக்கும், மிகவும் கருணை பொருந்திய
கண்ணன் எம்பெருமானிடத்தில் “கண்ணா! என் ஹ்ருதயத்தின் உருக்கத்தை நிறுத்தி,
உன்னை அடைந்து, உன்னுடைய குணங்களை நினைத்து அனுபவிக்கும்படி
அருள வேண்டும்” என்று ப்ரார்த்தித்தார்.
நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் வாழ்வாயாக.

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனை என்று தலைப் பெய்வனே?–5-10-2-

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண் சுடரே!–5-10-6-

ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–5-10-7-

திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோருங் கண்ணீர் என் செய்கேன் அடியேனே.–5-10-8-

அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–5-10-9-

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10-

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —பத்தாம் பத்து–பாசுரங்கள்- 91-100-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில்-நாள் இடப் பெற்று-வழித் துணையோடு போக ஒருப்படுகிற ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
சரீர அவசானத்தில் பேறு-என்று-ஸ்ரீ சர்வேஸ்வரன் நாள் இட்டுக் கொடுக்கையாலே-போக்கிலே ஒருப்பட்டு
நெடும் காலம் முகம் பழகின சரீரத்தை விட்டு
ஹ்ருதய குகையில் நின்றும் வழி கண்டு மூர்த்தன்ய நாடியாலே சிர கபாலத்தை பேதித்துக் கொண்டு
ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தாலே-ஸ்ரீ பரம பதத்தே ஏறப் போம் இடத்தில்
கேட்ட போதே துளங்க வேண்டும்படியான யாம்ய மார்க்கத்திலே பட்ட இளைப்பு எல்லாம் ஆறும்படி
தன் கடாஷாம்ருத வ்ருஷ்டிகளாலே குளிர வழிய வார்த்து யம படருடைய சரவண கடுகமான கடும் சொற்களை
கேட்ட யுள் வெதுப்பு ஆறும்படி செவிக்கினிய செம் சொற்களாலே செந்தளிப்பித்தும்
உக்ரமான யம தர்சனத்தால் வந்த வெக் காயம் ஆறும்படி
தன்னுடைய சௌம்ய வர்ஷத்தை நிரந்தரம்-வர்ஷித்துக் கொண்டு வழியில் உண்டான இடையூறுகளையும்
திவ்ய ஆயுதங்களாலே இரு துண்டமாக விட்டு
நயாமி பரமாங்கதம் -என்கிற படியே-ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோள்களிலே வைத்துக் கொண்டு
ஆதி வாஹகரைக் காட்டாமல்
தானே கொண்டு போய்-ஸ்ரீ திரு நாட்டிலே விடுகைக்கு
வேடன் -வேடுவிச்சி -பஷி -குரங்கு -பிசாசம் -சராசரம்-18 நாடன் பெரும் கூட்டம் – முதலானாரை வருத்தம் அறக் கொண்டு போய்
ஸ்ரீ வைகுந்தத்து ஏற்றி அருளின-காளமேகமான ஸ்ரீ அரங்கத்து உறையும் இன் துணைவனை ஒழிய-வேறு ஒருவரும் இல்லை என்று
ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாகப் பற்றுகிற-தாள தாமரையில் அர்த்தத்தை
தாள் அடைந்தோர் தங்கட்கு -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என
ஏதம் உள்ளது எல்லாம் கெடும்—91-

————————————————————-

வியாக்யானம்–

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம் காளமேகத்தைக் கதியாக்கி –
சரணமாகும் தனதாள் அடைந்தார்கட்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்று
தன் திருவடிகளை உபாயமாக அடைந்தவர்களுக்கு தானே மார்க்க பந்துவாம் –
ஆதி வாஹிகர் கையிலும் காட்டிக் கொடாதே
துன்னு குழல் கரு நிறத்தன் என் துணையே -என்கிறபடியே
சுரி குழல் கமல கட்கனிவாய் காளமேகத்தை அன்றி மற்று ஒன்றிலம் கதியே -என்ற-ஸ்ரீ காளமேகம் தானே
நயாமியில் படியே -நடத்தும் –
தாள் அடைந்தோர் -என்கிற இதில் – தாமும் அந்தர்பூதர் – இறே –

காளமேகத்தை கதியாக்கி –
சாம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படி-சௌந்த்ர்ய அம்ருத வர்ஷியான ஸ்ரீ காளமேகத்தை
வழிக்கு ரஷகமான கதி ஆக்கி –
அதாவது –
அவன் நிழல் தடம் அன்றி அறியோமே -என்றும்
அண்ட மூ வுலகு அளந்தவன் -என்றும்
கூத்தன் கோவலன் திரு மோஹூர் ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றிலம் அரணே -என்றும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -என்றும்
மணித்தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய் அணிக்கொள்
நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன் -என்றும்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் -என்றும் –
இப்படி வழிக்கு வேண்டும்-நிழல் தடங்கள் முதலானவை எல்லாம்-தானே யானவன் -என்கை –

அக்ரத ப்ரய யௌ ராம -என்று அவர் முன்னே போக –
மன்னன் இராமன் வைதேவி என்று உரைக்கும் அன்ன நடைய அணங்கு
அவர் தோள் நிழலை அண்டை கொண்டு நடந்தால் போலே-நடக்கப் பாரிக்கிறார் இறே-

மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் –
குடி மன்னுமின் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் -என்னும்படி
மீளுதல் ஆகிற தோஷம் இன்றிக்கே-ந ச புனராவர்த்ததே -என்றும்
புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே -என்றும்
மீளாப் பொருவரிய விண்ணாடு -என்றும்
மீட்சி இல்லா நாடு -என்றும் சொல்லப்படுகிற-பரம வ்யோம சப்த வாச்யமான -பரமபதத்திலே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே -என்றும்
எழுந்து அருள மனனம் பண்ணுகிற மோஷ லஷ்மியை உடைய

மாறன் -என
ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –

கேதம் உள்ளது எல்லாம் கெடும் –
மனக்கேதம் சாரா -என்னும்படி-துக்கம் என்று பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும் –
பிராப்ய லாப துக்கம் எல்லாம்-நிவ்ருத்தமாம்-

———————————————————————————-

அவதாரிகை

இதில் – ஸ்ரீ பரமபதத்தில் செய்யும் அடிமையை ஸ்ரீ திருவனந்த புரத்திலே செய்யப் பாரிக்கிற ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
குறைவற ஸ்ரீ பரம பதத்தினில் போனால்- வானிளவரசான வைகுந்த குட்டனுக்குச் செய்யக் கடவ
வழு விலா அடிமைகளை-நித்ய சூரிகளில் தலைவரான ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வான் எடுத்துக் கை நீட்டும்படி
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவனந்த புரத்திலே ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் மேலே
பள்ளி கொண்டு அருளுகிற பரம பிராப்ய பூதரான ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே
அனுகூல ஜனங்களும் தாமுமாய் போய் அடிமை செய்ய வேண்டும் என்று மநோ ரதிக்கிற
கெடும் இடரில் அர்த்தத்தை-கெடும் இடர் வைகுந்தத்தை -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை-

——————————————————–

கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே—-92-

கெடும் இடர் வைகுந்தம் -துக்க ரஹிதமான பரம பதம் -வினைகள் போக்கி தானே -அங்கே போக முடியும் –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை பற்றி இடர் கெடும் சொல்ல வேண்டாமே –
அதனால் பலன் சொல்லாமல்- பாசுரம் சொல்லவே இடர் கெடுமே –

———————————————————–

வியாக்யானம்–

கெடுமிடர் வைகுந்தத்தைக் –
கைங்கர்ய சித்தியாலே நிவ்ருத்த துக்கராம்படி பண்ண வற்றான ஸ்ரீ வைகுண்டத்தை –
அன்றிக்கே –
துக்க ரஹிதமான ஸ்ரீ வைகுண்டத்தை என்னுதல்-
கிட்டினால் போல் – அத்தை பிராபித்து அடிமை செய்யப் பெற்றால் போலே

தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் –
ஏபிஸ் ச சசிவை -இத்யாதியாலே ஸ்ரீ பரத ஆழ்வான் பாரித்தால் போலே
தடமுடை அனந்த புரம் தன்னில்-படமுடை அரவில் பள்ளி பயின்ற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய அபேஷித்தார்-

அதாவது –
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே -என்றும்
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு-ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -என்றும்
அமரராய் திரிகின்றார்கட்கு -என்று தொடங்கி-நாமும் போய் நணுக வேணும் -என்றும்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ-நமர்கள் உள்ளீர் -என்றும் –
தாமும்-தம் திரு உள்ளத்தோடு ஒத்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் கூட அடிமை செய்த மநோ ரதித்த -என்கை –

படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் -மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே –
சர்வோத்தரமான பரம ஆகாசத்திலுள்ளராய்-ஸ்ரீ கோயில் கொள் தெய்வங்களான
ஸ்ரீ திருவடி-ஸ்ரீ திருவனந்த ஆழ்வான்-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமானவர்கள் –
நாம் தெளி விசும்பு திரு நாட்டில் இருந்து செய்யும் அடிமையை
இவர் – இருள் தரும் மா ஞ்லாலத்தில் இருந்து பாரிப்பதே -என்று விஸ்மயப்ப்படும்படி
ஸ்ரீ சேஷசாயியாய்-ஸ்ரீ யபதியான-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வ வித கைங்கர்யங்களையும்
செய்ய வாதரித்தார் ஸ்ரீ ஆழ்வார் – இவரும் ஒருவரே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது-
அங்கே செய்வதை விட இங்கே பாரிப்பது மேல் -ருசி வந்தால் தானே கிட்டும் –

———————————————

அவதாரிகை –

இதில் – யதா மநோ ரதம் பெறாமல் சம்சாரத்திலேயே ஸ்ரீ சர்வேஸ்வரன் வைக்க எண்ணினான் என்று சங்கிக்க
அவன் தெளிவித்த படியை அருளிச் செய்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
தம் மநோ ரத அனுகுணமாக அப்போதே அத்தேசத்திலே புக்கு அடிமை செய்யப் பெறாமையாலே-கலங்கி
பழைய படி நமக்கு சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடுகிறதோ -என்று
பிரகிருதி சம்பந்த்தத்தின் கொடுமை ஸ்ரீ ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம்
முதலான ஹேதுக்களால் தமக்கு பிறந்த அதிசங்கையை ஒரு படுக்கையிலே கூட இருக்கச் செய்தே
பண்டு பசு மயக்கப் போகிற ப்ரபாத காலம் வந்து
அக் காலத்துக்கு அடைத்த குயில் மயில் முதலானவற்றின் பாடல் ஆடல் முதலான
அடையாளங்களையும் காண்கையாலே
அவற்றையே கொண்டு ஸ்ரீ கிருஷ்ணன் பசு மேய்க்கப் போனான் -என்று அதி சங்கை பண்ணி
நோவு படுகிற இடைப் பெண்கள் பேச்சாலே அருளிச் செய்கிற-வேய் மரு தோளிணை யில் அர்த்தத்தை
வேய் மரு தோள் இந்த்ரிரை கோன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————-

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை
தான் மருவாத் தன்மையினால் தன்னை யின்னம் பூமியிலே
வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –93-

———————————————-

வியாக்யானம்–

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை –
வேய் போலும் எழில் தோளி பொருட்டா -பெருமாள் திருமொழி –என்னும்படி
அணைக்கைக்கு பணை போல் இருக்கிற தோளை யுடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்று ஸ்ரீ அனந்த சாயியாய்-
திரு மாற்கு அரவு -என்கிறபடி இருவருமாய்ச் சேர்த்தியாய் இருக்கிற தேசத்தை –
மாதவா என்ன -என்றார் இறே-

தான் மருவாத் தன்மையினால் –
நாமும் போய் நணுக வேணும் -என்னும் அபி நிவேசத்தை யுடைய தாம்
போய் புகப் பெறாத படியாலே –

தன்னை யின்னம் பூமியிலே வைக்கும் எனச் சங்கித்து –
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்று
தம்மை ஸ்வா தந்த்ர்யாதிகளாலே சம்சாரத்திலே இட்டு வைக்குமோ என்று சங்கித்துப் போர –

அதாவது –
இவர் உடைய ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு சௌஹார்த்த யுக்தன் ஆனவனும்
என் கை கழியேல் -என்னும்படி -பொருந்தி
பிரத்யஷ சாமானாகாரம் போலே இவர் கையிலே இருக்க-அத்தசையிலே
ஸ்வ ரஷணத்திலே கை வாங்கி இருக்குமவர்கள்-விஷயத்திலே ரஷணத்திலே அவன் மண்டி
அங்கே விச்லேஷிக்கும் காலத்தையும்
அவன் கை கழிந்தால்-சப்தாதிகள் பாதகமாகிற படியையும்
கால தைர்க்க்யா சஹதையையும்
ஆஸ்ரித ரஷணத்தில் அந்ய பரதையாலே அந்த ராயங்கள் புகும் படியையும்
அவனுக்கு அறிகிற பிரகாரத்தை-
வேய் மரு தோளிணை -என்று தொடங்கி -ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு-ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -என்றும்
தகவிலை தகவிலை இனி யுன்னை நீ பிரிவை யாமால் வீவ-நின் பசு நிரை மேய்க்கை போக்கு -என்றும்
வீவ நின் பசு நிரை மேய்க்கை போக்கு-சாவது இவ்வாய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த வித் தொழுத்தையோம் தனிமை தானே -என்றும்
நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து-எம்மை விட்டவை மேய்க்கப் போதி -என்றும்
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தின்றாலோ -என்றும்
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு -என்றும்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள்-தலைப்பெய்யில் யவம் கொல் ஆங்கே -என்றும்
அசுரர்கள் தலைப் பெய்யில்அவம் கொல் ஆங்கு என்று ஆழும்-என் ஆர் உயிர் பிரான் பின் போகல் நீ உகக்கும் நல்லவரோடு உழி தராயே -என்றும்
உகக்கும் நல்லவரோடு -என்று தொடங்கி-அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- என்றும்
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- திவத்திலும்-பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்றும்
இப்படி பஹூ முகமாக சங்கிக்க-

மால் தெளிவிக்கத் தெளிந்த –
அதாவது –
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் ஆனவனும் –என்றும்
முஹூர்த்தம் அபி ஜீவாவ -என்னும்படி
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லாதே -என்றும்
அவனோடு பிரிவதற்கு இரங்கும்படியான இவர்கள் பிரேம ஸ்வ பாவத்தைக் கண்டு
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு -என்னும்படி சவிலாத ஸ்மிதம் பண்ணி
அணி மிகு தாமரைக் கையாலே அஞ்சேல் என்று ஆச்வசிபபித்து
உம்முடைய அபேஷித்ததின் படியே செய்கிறோம் என்று அதி சங்கையைத் தீர்த்தான் ஆயிற்று
அதாவது
பசு நிரை மேய்ப்பு ஒழிகை -அத்தைப் பற்ற -தாமோதரன் -என்றார்–

மால் தெளிவிக்க தெளிந்த –
ஸ்ரீ கிருஷ்ணன் தெளிவிக்கத் தெளிந்த-கலங்கினவனை தேற்றுமவன் இறே

தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –
சங்கா ஹேது இன்றிக்கே-கூட இருக்கச் செய்தே சங்கிக்க சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சமாதானம் பண்ண
சமாஹிதராய்
அத்தாலே தமக்கு சத்ருசரான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் அநந்ய கதிகளான எங்களுக்கு அபாஸ்ரயம்-

—————————————

அவதாரிகை –

இதில்
அடியில் உபதேசித்த பக்தி-ஸ்வசாத்தியமான பலத்தோடே தலைக் கட்டினபடியை அருளிச் செய்த
திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
கீழ்-ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாக-
ஸ்ரீ தாள தாமரையிலே பற்றி போக்கிலே ஒருப்பட்டவர் ஆகையாலே-
ஸ்ரீ உயர்வற உயர் நலத்தில்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாக அறுதி இட்ட ஸ்ரீ பரத்வமே பரம பிராப்யமாகையாகவே
அந்த பிராப்ய வேஷத்தையும்-
பிராப்ய பலமான கைங்கர்யத்தையும்- ஸ்ரீ கெடும் இடரிலே அனுசந்தித்து-
அந்த பிராப்ய வேஷத்தை பெறுகைக்கு உபாயமாக-
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும்—ஸ்ரீ பத்துடை அடியவரிலும் தொடங்கின-பக்தியானது ஸ்வ சாத்தியத்தோடே பொருந்தின படியை சொல்லி
தமக்கு உபாயமாக
முதல் ஸ்ரீ திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியையும்-சொல்லித் தலைக் கட்டுகிற
ஸ்ரீ சார்வே தவ நெறியில் அர்த்தத்தை–சார்வாகவே அடியில் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் என்கை –

————————————————-

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை -சோராமல்
கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும்
கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-

—————————————————–

வியாக்யானம்–

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான் –
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும் ஸ்ரீ பத்துடை அடியவரிலும் பரோபதேச ரூபேண எல்லாருக்கும் அபாஸ்ரயமாக அருளிச் செய்த
பிரபத்தி யோடு விகல்பிக்கலாம் படியான பக்தி யானது தான்
சரண்ய -என்றத்தை- சர்வ லோக சரண்யாய -என்றும்-
பாதயோஸ் சரணான் வேஷீ நிபபாத -என்றும்
சாஷாத் பலத்தோடே தலைக் கட்டினால் போலே –

இவரும் –
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்மினே -என்றும்
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே -என்றும்
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே -என்றும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்றும்
அம்பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்றும்
நன்றென நலம் செய்வது -என்றும்
இப்படி அருளிச் செய்த பக்தி மார்க்கம் ஆனது-சாத்தியமான பலத்தோடே பொருந்தின படியையும்

சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்றும்
அருளினான் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே -என்றும்
வண் புகழ் நாரணன் திண் கழல் சேர் -என்றும்
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்றும்
அடியே தொடங்கி அருளிச் செய்து போருகிற-பிரபத்தி-ஸ்வ சாத்தியத்தோடு-பொருந்தினப டியையும் –

பண்டே பரமன் பனித்த பணி வகையே-
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாய வெல்லாம் -என்றும்-அருளிச் செய்து
மற்றும்
பக்தி-பிரபக்திக்கு-உக்தமான வற்றையும்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன் -என்றும்
திரு மெய் யுறைகின்ற செங்கண் மால் -என்றும்
மடப்பின்னை தன கேள்வன் தாள் கண்டு கொண்டு -என்றும்
தலை மேல் புனைந்தேனே -என்றும்
நச்சப்படும் நமக்கு -என்றும்
வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் -என்றும்-அருளிச் செய்தார் இறே-

ஏவம் விதமான வர்த்தங்களை –
சோராமல் கண்டுரைத்த மாறன் –
இவ் வர்த்தமானது வ்யர்த்தமே-நழுவிப் போகாமே-இஸ் ஸூஷ்ம அர்த்தத்தை தர்சிப்பித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –

கழல் இணையே நாடோறும் –
இப்படி-சூஷ்ம அர்த்த தர்சியான ஸ்ரீ ஆழ்வார்-சேர்த்தி அழகை யுடைய திருவடிகளையே –

கண்டு உகக்கும் –
சேவித்து-ஹ்ருஷ்டமாம் –

என்னுடைய கண் –
மே திருஷ்டி -என்னும்படியான-என் கண்கள் –

ஸ்ரீ தாமோதரன் தாள் யுடைய-ஸ்தானத்திலே-இவர்க்கு-ஸ்ரீ மாறன் தாள்-ஆயிற்று –

——————————————————————

அவதாரிகை –

இதில் பக்திமான்கள் பரிமாற்றத்தை சுருங்க அருளிச் செய்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் அது எங்கனே என்னில்
ஸ்ரீ ஈஸ்வரன் தம்மை ஸ்ரீ பரம பதத்திலே கொடு போகையிலே த்வரிக்கிற படியை கண்டு
இவர்களுக்கு இது ஓன்று குறை பட்டு கிடக்க ஒண்ணாது என்று பார்த்து
தம்முடைய பரம கிருபையாலே
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றுகையாலும் இவர்களுக்கு ஸூக்ரஹமாக வேணும் என்று பாசுரப் பரப்பு அறச் சுருக்கத்திலே
பக்திமான்கள் பரிமாற்றம் இருக்கும் படியை சம்சாரிகளுக்கு உபதேசித்து பரோபதேசத்தை நிகமிக்கிற
கண்ணன் கழலிணையில் அர்த்தத்தை-கண்ணன் அடி இணையாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————————

கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே -மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்–95-

————————————————————-

வியாக்யானம்–

கண்ணன் அடி இணையில்-
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளிலே

காதல் உறுவார் செயலை –
பக்தி உக்தராய் இருப்பார்-க்ருத்யத்தை –

திண்ணமுறவே –
த்ருடமாகவே-அதிலே-ஊன்றும்படி-

சுருங்கச் செப்பியே –
சங்க்ரஹமாக அருளிச் செய்து
யே -ஈற்றசை –

மண்ணவர்க்குத் –
பிருத்வியில் யுண்டான-சர்வாத்மாக்களுக்கும் –

தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் –
ஸ்ரீ பிராட்டி-விதித-சுந்தர 21-25- -இத்யாதி யாலே பரோபதேசத்தை முடித்தால் போலே
கீழே உபதேசித்துக் கொடு போந்த-பரோபதேசத்தை பரி சமாப்தி பண்ணி அருளினார்-பெரு மதிப்பரான ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ பகவத் பிரபாவம் ஸ்ரீ சீதை பிராட்டி சொல்லி நிகமிக்க பிராட்டி பாகவத பிரபாவம் சொல்லி இவர் நிகமிக்கிறார் –

ஆன புகழ் சேர் தன்னருள் –
ஸ்லாக்கியமான யசஸ் உடன் கூடின-தம்முடைய பரம கிருபையாலே-பரோபதேசத்தை தலைக் கட்டி அருளினார் –
நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -பிராட்டி ஆழ்வார் உடைய ஒரே க்ருத்யம்

ஆன புகழ்
உலகத்தார் புகழும் புகழ்

தன்னருள்
அருள் கொண்டாடும்படியான அருள்-

கண்ணன் அடி இணையில்
காதல் உறுவார் செயலை-சுருங்கச் செப்புகை யாவது –
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்-எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்றும்
நாரணன் எம்மான் -என்றும்
கோள் வாய் அரவணையான் தாள் வாய் மலரிட்டு-நாள்வாய் நாடீரே -என்றும்
நாடீர் நாடோறும் வாடா மலர் கொண்டு-பாடீர் அவன் நாமம் -என்றும்
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்-பேயார் முலை யுண்ட வாயான் மாதவனே -என்றும்
மாதவன் என்று என்றே ஓத வல்லீரேல் -என்றும்
பேரார் ஓதுவார் ஆரார் அமரரே -என்றும்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே -என்றும்
இப்படி-எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தை சப்தார்த்தங்களை சுருக்கி- ஸ்ரீ மாதவன் -என்று த்வயமாக்கி-
கரண த்ரய பிரயோஜன வ்ருத்தி சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்தபடி -என்கை-

—————————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ பரம பதத்தில் கொடு போகையில்-த்வரிக்கும் இடத்திலும் விதி பரதந்த்ரனாய் செய்கிறபடியை
பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இப்படி பரோபதேசம் தலைக் கட்டின பின்பு தம்மை அவன் ஸ்ரீ திரு நாட்டிலே கொடு போகிக்கு த்வரிக்கும் படியையும்
கொடு போகும் இடத்தில் தாம் நியமித்தபடி கொடு போக வேணும் என்று தமக்கு அவன் பரதந்த்ரனாய் நிற்கிறபடியையும்
தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் -தம்முடைய திரு உள்ளத்துக்குச் சொல்லி-இனியராய் பேசுகிற
அருள் பெறுவாரில் அர்த்தத்தை-அனுவதித்து அருளிச் செய்கிறார் அருளால் அடியில் -தொடங்கி -என்கை –

—————————————————————————

அருளால் அடியில் எடுத்த மால் அன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து -இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் —96-

த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -அடுத்த பதிகார்த்தம் –
பிரணவ பாரதந்தர்யம் -மோக்ஷ தானத்தில் -ஆஸ்ரித பாரதந்தர்யம் -இதில் –

————————————————————————–

வியாக்யானம்–

அருளால் அடியில் எடுத்த மால் –
கரண களேபரைர்க் கடயிதும் தயமா நாம நா -என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும்-அடியிலே எடுத்த படியால் –
அன்றிக்கே
மயர்வற மதிநலம் அருளினான் -என்று-கேவல நிர்ஹேதுக கிருபையாலே
அஜஞாநாவஹமான சம்சாரத்தில் நின்றும் அடியிலே எடுத்த சர்வேஸ்வரன்-என்றாதல்
அதுவும் அன்றிக்கே
மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் -என்னும்படி
அயோக்யா அனுசந்தானத்தாலே-அகன்று-முடியாத படி எடுத்த-என்றாகவுமாம் —

அன்பால் இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து –
அந்தாமத்து அன்பு செய்யும் அன்பாலே-
இருள் தரும் மா ஞாலத்தில் ‘ஜன்மம் ஆகையாலே-இருளார்ந்த தம் உடம்பை இச்சித்து
ஜ்ஞானப் பிரசுரமான-தம் தேஹத்தை-வாஞ்சித்து
அன்றிக்கே –
இருளார்ந்து தம்முடம்பை இச்சித்து -ராகாந்தனாய்
நெய்யூண் மருந்தோ மாயோனே -என்று
இவன் ஸ்ரீ திருவாய்ப் பாடியிலே வெண்ணெயை-ஆதரித்தால் போலே
ஜ்ஞான பரிமளம் விஞ்சின-சரம சரீரம் ஆகையாலே இவர் திரு மேனியை அவன் ஆதரிக்கப் புக்கான்-என்றாகவுமாம்-

இரு விசும்பில் –
பெரிய வானிலே

இத்துடன் கொண்டேக –
இவர் அஜஞாநாவஹம்-என்று அநாதரிக்கிற-இச் சரீரத்துடனே கொண்டு போக

இசைவு பார்த்தே யிருந்த சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் –
விதி பரதந்த்ரனாய்-
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா –இத்யாதிப் படியே
ஸ்ரீ பிராட்டி திரு உள்ளக் கருத்தைப் பின் சென்று செய்தாப் போலே
இவர் அனுமதி பார்த்து இருந்தவனுடைய-சுத்தியை சொல்லும் ஸ்ரீ ஆழ்வார் உடைய-ஸ்ராவ்யமான சப்தங்கள்-

அதாவது –
என் நெஞ்சத்து உள்ளிருந்து -என்றும்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் -என்றும்
என் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே -என்றும்
இகழ்வின்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே -என்றும்
நங்கள் குன்றம் கை விடான் -திருமால் இரும் சோலை கை விடாதவன் போல் இவர் திருமேனியையும் கை விடான் -என்றும்-
இப்படி இவர் திரு உள்ளத்தை விரும்பி –
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -என்றும்
இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே -என்றும்
இவர் தம் தேஹத்தை ஒழிய கொடு போக வேணும்-என்றபடியே
பரதந்த்ரனாய் நின்ற குணசுத்தியைப் பேசினபடி-என்கை –

விதி வகையே நடத்துமவனே உபதேச சத்பாத்ரம் என்ற-பாத்ர ஸூத்தி இறே-கரை ஏற்றுமவனுக்கு நாலாறும் உபதேசித்தார் –
இசைவு பார்த்தே இருந்த சுத்தி என்று -அவ்விருத்தாந்தத்தை பேசினபடி-என்றுமாம்-

————————————————

அவதாரிகை –

இதில்-அவன் தேக சபலனாய்-ஆதரிக்க-இவர் -விரோதியான சரீரத்தை விடுவி -என்று
விடுவித்துக் கொண்டமை பேசின பாசுரத்தை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம்மோடு வந்து கலந்து-தமக்கு பரதந்த்ரனாய் தம் திரு மேனியிலே அத்ய அபி நிவிஷ்டனாய்
திரு மேனியோடே தம்மை ஸ்ரீ திரு நாட்டில் கொடு போக வேணும் என்று
அவன் தம் திருமேனியில் மிகவும் பண்ணுகிற சாபலத்தைக் கண்டு
நம் பக்கல் ஆதர அதிசயத்தால் அன்றோ-இவன் நம் உடம்பை ஆதரிக்கிறது என்று பார்த்து
இதன் தோஷம் அறியாமல்-ராகாந்தனாய் இருக்கிற இவனுக்கு
இதன் தோஷத்தை யுணர்த்தவே இத்தை தவிரும் என்று நினைத்து-இதன் தோஷங்களை அவனுக்கு அறிவிக்க
அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே
அது தானே அவனுக்கு மேல் விழுகைக்கு உடலாக-எனக்கு இது மிகவும் அநபிமதமாய் இருக்கும்
ஆன பின்பு இத்தைக் கழிக்க வேணும் -என்று
இவர் அவன் திருவடிகளிலே தலையை மடுத்து சரணம் புக
இவர் விதி வகை பார்க்குமவன் ஆகையாலே
இவர்க்கு அநபிமதம் ஆகில்-வருந்தியும் நாம் இத்தை கழித்து கொடுக்கக் கடவோம்-என்று தலை துலுக்க
நம் சொலவைப் பரிபாலிப்பதே
இது ஒரு சீலம் இருந்தபடி என் –என்று தலை துலுக்குகிற-
செஞ்சொல் கவிகாள் லில் அர்த்தத்தை
செஞ்சொல் பரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————–

செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு—97-

———————————————————–

வியாக்யானம்–

செஞ்சொல் பரன் –
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகன் -என்கிறபடியே
செவ்விய சொல்லால் ஆன இத் திருவாய் மொழியால்-பிரதிபாதிக்கப் படுகிற
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
இது தான் செவிக்கு இனிய செஞ்சொல் இறே –

தனது சீராரும் மேனி தனில் –
தனிச் சிறையில் விளப்புற்று
அஸ்நாதையாய் இருந்த பிராட்டி வடிவைக் காண-ஆசைப் பட்டால் போலே
பிறவி அஞ்சிறையிலே
ஜ்ஞான பக்த்யாதிகள் விஞ்சி இருக்கிற-விக்ரஹத்திலே –

வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக் கண்டு –
அதாவது
வஞ்சக் கள்வன் ஆகையாலே
நெஞ்சும் உயிரும் அவை உண்டு-தானே யாகி நிறைந்தான் -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டே -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய வாக்கை யதனுள் புக்கு -என்றும்
என்கொல் அம்மான் திருவருள்கள் நன்கு என் உடலம் கை விடான் -என்றும்
திருமால் இரும் சோலை மலையே -என்று தொடங்கி-ஒரு மா நொடியும் பிரியான் -என்றும்
இப்படி இவர் திரு மேனியை மேல் விழுந்து-அத்யாதரம் பண்ணுகிற படியைக் கண்டு-
உடலும் உயிரும் மங்க வொட்டு -என்றும்
பொங்கு ஐம்புலனும் என்று தொடங்கி –மானாங்கார மனங்கள் மங்க வொட்டு -என்றும்
இதன் தோஷ தர்சன பூர்வகமாக
அவனைக் கால் கட்டி-தம் கால் கட்டை விடுவித்துக் கொண்டபடி –

கை விடுவித்துக் கொண்ட –
கை விடுவித்துக் கொள்ளுகை யாவது -அவன் காலைக் கட்டி
கை விடுவித்துக் கொண்டார்-என்றபடி –

கை விடுவித்துக் கொண்ட -திண் திறல் மாறன் –
சர்வ சக்தி-சரீரத்துடன் கொடு போக வேணும் என்று-கர க்ரஹணம் பண்ண
இவர்
சரண க்ரஹணம் பண்ணி-விடுவித்துக் கொண்ட த்ருடமான சக்தியை யுடைய-ஆழ்வார் –

நம் திரு –
சம்பச்ச சாத்விக ஜனச்ய -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வாரான ஸ்ரீ மாறன்-நம்முடைய சம்பத்து –

———————————————————

அவதாரிகை –

இதில்-இப்போது ஆதரிக்கிற தேவர்-அநாதி அநாதர ஹேது சொல்லும் என்று-மடி பிடித்துக் கேட்க
அவன் அதுக்கு ஒன்றும் சொல்லாமல்
நிருத்தனனான படியை அருளிச் செய்கிற ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
முதலிலே
அத்வேஷத்தைப் பிறப்பித்து-ஆபிமுக்யத்தை யுண்டாக்கி-ஆஸ்ரயண ருசியை விளைத்து
தானே யுபாயமாய்-தன் திருவடிகளிலே பிரேமத்தையும்-பரம பக்தி பர்யந்தமாக முற்றுவித்து
தன்னால் அல்லாது செல்லாதபடி பண்ணி
நாம் சொன்னபடியே செய்வானாக சமைந்து
நம்மை இவன் இப்படி தலையாலே-சுமவா நின்றதுக்கு அடி ஏது என்று அவனைக் கேட்க –
அவன் நிருத்தரனாய்-கவிழ் தலை இட்டு நிற்க
நிர்ஹேதுகமாகாதே -என்று ப்ரீதராய்
தம்மை அவன் அங்கீ கரித்த படியையும்
அங்கீகார ஹேதுவானவன் கிருபாதி குணங்களையும்-அனுசந்தித்து
இது ஒரு நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்தபடியே-என்று வித்தராகிற
திரு மால் இரும் சோலை மலை யில் அர்த்தத்தை
திருமால் தம்பால் -இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————-

திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ
இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து —98-

————————————————–

வியாக்யானம்–

திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு –
அதிகம் புரவா சாச்சம் மன்யே தவச தர்சநாத் -என்னும்படி-ஸ்ரீ யபதியானவன்
தம் விஷயத்தில்-அத்யாதாரம் பண்ணுகிற படியைக் கண்டு –
அதாவது
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
திருப் பேரான் அடி சேர்வது எனக்கு எளிதாயினவாறே -என்றும்
தெளிதாகிய தேண் விசும்பு தருவானே -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி
யூனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் -என்றும்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
உண்டு களித்தேற்கு -என்று தொடங்கி-கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலான் -என்றும்
கருத்தின் கண் பெரியன் -என்றும்
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே -என்றும்
இப்படி-மேல் மேல் என-அத்யாதாரத்தை பண்ணின படி என்கை –

ஏவம் வித நிர்ஹேதுக வ்யாமோஹத்தை தர்சித்து
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ இன்று என்பால் செய்வான் என் என்ன-
அன்று-அநாதி காலம்-துரத்யயமான பிரக்ருதியிலே இட்டு வைத்து அகற்றி விடுவான் என் –
இன்று நிர்ஹேதுகமாக-நிரவதிக வ்யாமோஹத்தை
சர்வஞ்ஞனாய் சர்வசக்தனாய் நிரஸ்த சமஸ்த ஹேயனான நீ
அஞ்ஞனாய் அசக்தனாய் ஹேய சம்சர்க்க அர்ஹனாய் இருக்கிற என் விஷயத்தில்
இப்படிச் செய்வான் என் என்று கேட்க
இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம போகப் புணர்த்தது என் செய்வான்
குன்றன்ன திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரா ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேன் –
என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி —

இப்படி அநாதி அநாதர ஹேது சொல் என்று மடியைப் பிடித்து கேட்க
அவனும் சில ஹேது பரம்பரைகளை இவர் உத்தரத்துக்கு பிரத்யுத்தரமாக சொல்லிக் கொடு போர
இவர் தம் நா வீருடைமையாலே அவனை நிருத்தனாம்படி பண்ண –

இடருற்று நின்றான் –
இப்படி இவர் அருளிச் செய்ய மேல் போக்கடி காணாமல்
தரைக் கீறி கவிழ தலை இட்டு ஸ்தப்தனாய் நின்றான்
இடராவது-அதிகோக்தி சொல்ல முடியாத ஆகுலம் –

துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து –
இது நிர்ஹேதுகமாகாதே -என்று அவன் விஷயீ காரத்திலே விக்ருதராய்
அத்தாலே வந்த சம்ருத்தமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வாரை –
அந்த யசஸ் ஸோபாதியாகத் தானும் சூழ்ந்து -இடருற்று நின்றான்
ஸ்ரீ சர்வஞ்ஞனும் நிருத்தனாய் நிற்பதே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது –

————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்க சத்காரத்தை அடையக் காட்ட அனுபவித்து அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில் –
இவரை அமர்ந்த நிலமான ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் வைத்து இவரும் தானுமாக அனுபவிப்பதாக ஸ்ரீ சர்வேஸ்வரன் விசாரித்து
இவருக்கு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தையும்-அங்கு உள்ளார் பண்ணும் சத்கார விசேஷங்களையும்
ஸ்ரீ பரமபத பிராப்தியையும் அங்கு உள்ளார் வந்து எதிர் கொண்டு சத்கரிக்கும் கட்டளைகளையும்
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் இவருக்கு கண்டு அனுபவிக்கலாம்படி
பர ஜ்ஞான தசையை பிறப்பித்துக் காட்டிக் கொடுக்க
இவரும் கட்டடங்க கண்டு அனுபவித்து
தாம் பெற்ற பேற்றை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற சூழ் விசும்பு அணி முகிலில் அர்த்தத்தை
சூழ்ந்து நின்ற மால் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

———————————————–

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து -வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி –99-

————————————————-

வியாக்யானம்–

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட –
கீழ் இவரைச் சூழ்ந்து கொண்டு நிவ்ருத்தனாய் நின்ற ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஏஷா சாத்ருச்யதே -இத்யாதி படியே- ஸ்ரீ பரம ஆகாசத்திலே தேஜக்ரச்சாச்வதே மதே -என்று
பூர்வ மார்க்கமான ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்ட
அமந்திர ஜோஸ்த்வ கோஷம் போலே ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற
மேக சமுத்திர பேரீ கீத காஹள சங்கா சீச்துதி-கோலாஹலம்-செவிப்படும் படியையும் –
அலங்கார விகிம்க்ருதச்னாம் காரயமாச வேசமான -என்கிறபடியே-அங்குள்ள ஆதிவாஹிக சத்கார க்ரமத்தையும்
மேல் ஸ்ரீ நித்ய சூரிகள் பிரத்யுக்தராய் சத்கரிக்கும் க்ரமத்தையும்
த்வாராத்ய ஷரர்சத்கரிக்கும் க்ரமத்தையும் திவ்ய அப்சரஸ் சத்கார க்ரமத்தையும்
ஸ்ரீ சர்வேஸ்வரனும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஆதரிக்கும் படியையும்
திவ்ய சூரி பரிஷத்தில் இருந்து ஆனந்த நிர்பரராய் அனுபவிக்கும் படியையும்
தொல்லை வழி காட்ட -என்ற அதிலே இவ்வளவும் அனுவர்த்தித்த படி –

ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து —
அதிலே ஆழம் கால் பட்டு-அவன் காட்டின எல்லாவற்றையும் கட்டடங்க அனுபவித்து
அதாவது –
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின-என்றும்
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்-பூரண பொற் குடம் பூரித்த உயர் விண்ணில் -என்றும்
தொழுதனர் உலகர்கள் -என்று தொடங்கி வழி இது வைகுந்ததற்கு என்று வந்து எதிர் எதிர் -என்றும்
எதிர் எதிர் இமையவர் என்று தொடங்கி-மது விரி துழாய் முடி மாதவன் தமர்கே-என்றும்
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் -என்று தொடங்கி-வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே -என்றும்
வேள்வியுள் மடுத்தலும் -என்று தொடங்கி -வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் -என்றும்
மடந்தையர் வாழ்த்தலும் -என்று தொடங்கி -குடந்தையன் கோவலன் குடி குடி யார்க்கே -என்றும்
குடியடியார் -என்று தொடங்கி-வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே -என்றும்
வைகுந்தம் புகுதலும் -என்று தொடங்கி-வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்றும்
விதிவகை -என்று தொடங்கி -மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -என்றும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி –பேரின்பத் தடியரோடு இருந்தமை -என்றும்
இப்படி-முழுவதும் அனுபவித்த படி -என்கை –

அனுபவித்து வாழ்ந்து –
இவ் வனுபவத்தை அடைவே அனுபவித்து க்ருதார்த்தராய் –

அங்கு அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான் –
ஸ்ரீ பரம பதத்திலே ஆனந்த மயமான ஸ்ரீ திரு மா மணி மண்டபத்திலே
ஸ்ரீ அனந்த ஸ்ரீ கருட ஸ்ரீ விஷ்வக் சேனர் பிரமுகராய் உள்ள-அடியரோடு
ஆனந்த நிர்பரராய் இருந்த பிரகாரத்தை அருளிச் செய்தார்

முடி மகிழ் சேர் ஞான முனி –
முடியுடை வானவரோடே கூடுகையாலே-முடியை யுடையராய் பிரபந்தம் தலைக் கட்டுகையாலே
ஸ்ரீ ஆழ்வாரும்-அளக பந்தத்திலே வகுள பந்தத்தை யுடையராய் தலைக் கட்டின படியை அருளிச் செய்கிறார் –
அவன் – மது விரி துழாய் மாதவன் –
இவர் -முடி மகிழ் சேர் ஞான முனி-பர ஜ்ஞானத்தை உடைய பராங்குச முனியானவர் –

அடியருடனே இருந்த வாற்றை யுரை செய்தான் –
சூழ் விசும்பு அணி முகில் தொடங்கி-அடியரோடு இருந்தமை என்னும் அளவும் அருளிச் செய்தார் –
எல்லாரும் விஸ்வசித்து உஜ்ஜீவிக்கைக்காக –

————————————————————————

அவதாரிகை –

இதில் – ஸ்ரீ பரம பத்தியாலே-பர ப்ராப்தியான படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் சூழ் விசும்பு அணி முகிலிலே ஸ்ரீ பரம பதத்திலே புக்கு நிரதிசய ஆனந்த உக்தராய்
நித்ய சூரிகள் திரளிலே இருக்கிறாராக-தம்மை அனுசந்தித்த இது
ஜ்ஞான அனுசந்தானம் மாத்ரமாய் பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே
மேரு சிகரத்திலே ஸூ கோத்ரமாக இருந்தவன்
பேர் ஆழமான பள்ளத்திலே தலை கீழாக தள்ளுண்டு-விழுந்து நோவு படுமா போலே
அனந்த கிலேச பாஜனமான சம்சாரத்தில்-தாம் இருக்கிற படியைக் கண்டு
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு
பண்டு போலே ஒரு குணாவிஷ்காராதிகளால் பரிஹரிக்க ஒண்ணாத படி ஆற்றாமை தலை எடுத்து
ஒரு தூத ப்ரேஷாணாதிகளால் இட்டு நீட்டுகையும் இன்றிக்கே
தாமே அவன் முகத்தைப் பார்த்து
தம்மால் இது பரிஹரித்துக் கொள்ளப் போகாது இருக்கிறபடியும்
சாதநாந்தரங்களை அனுஷ்டித்தாலும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கும் படியையும் சொல்லிக் கொண்டு
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டு-தடுத்தும்-வளைத்தும் அவனைப் பெற வேண்டும்படியான பரம பக்தி தலை எடுத்து
நிர்க்குணர் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும்
அவனுக்கும் தம் கார்யம் செய்து அல்லது ஸ்ரீ திரு நாட்டிலே குடி இருப்பு அரிதாம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தியோடே திருவடிகளிலே சரணம் புக
ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட இவர் அபேஷித்த படியே ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து தோற்றி
கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தையும் அறுத்து
ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய சூரிகளோடே ஒரு கோவை யாக்கி-நித்ய கைங்கர்யம் கொண்டருள-
அத்தாலே-தாம் நிரஸ்த பிரதிபந்தகராய் பிராப்த சமஸ்த மநோ ரதரான படியை-சொல்லித் தலைக் கட்டுகிற
முனிய நான் முகனே யில் அர்த்தத்தை
முனி மாறன் இத்யாதியாலே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் -என்கை –

————————————————-

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-

————————————————-

வியாக்யானம்–

முனி மாறன்
ஸ்ரீ சர்வேஸ்வரன் -முனியே -என்னும்படி சதவஸ்தமான சம்ஹ்ருதி சமயத்தில் சர்வ சேதன ரஷணத்திலே
த்யாநாந்தஸ்தனாய் இருக்குமா போலே
இவரும்
நித்ய சம்சாரிகளாய் சம்சாரித்து
அசித் ப்ராயரான ஆத்மாக்கள் விஷயத்திலும் ரஷண சிந்தை பண்ணிப் போருகையாலே முனி -என்கிறது –
அன்றிக்கே –
பகவத் விஷயத்தில்-எண்ணா தனகள் எண்ணும் நல் முனிவர்-என்னுதல் –
அன்றிக்கே
பிரக்ருததுக்குச் சேர-ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்-பரம பக்தி பர்யந்தமாக
நிரந்த சிந்தா உக்தராய் இருக்குமவர் -என்னுதல் –
இப்படி மனன சீலராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் —

முன்புரை செய் முற்றின்பம் நீங்கி –
அதாவது
களிதாகி சிந்தையனாய் களிக்கின்றேன் -என்றும்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே -என்றும்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை-மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லும் பெற்றேன் -என்றும்
கண்ணுள் நின்று அகலான் -என்றும்
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -என்றும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில்-பேரின்பத்து அடியரோடு இருந்தமை -என்றும்
இப்படி
முன்பு பேற்றை பெற்றதாக அருளிச் செய்த சமஸ்த ஆனந்தமும் நிரஸ்தமாய்ப் போய்
அது எல்லாம் மானச அனுபவ மாத்ரமாய்-பிரத்யஷ சாஷாத் காரத்திலே அபேஷை யுடையவராய்
அத்தை அப்போதே பெறாமல்
மீளவும் அஜஞாநாவஹமான சம்சாரத்த்லே இருக்கக் கண்டு
பூர்வத்தில் ஆனந்தமும் அபூர்வமாம்படி கழிந்தது -என்கை –

தனியாகி நின்று தளர்ந்து –
அந்தமில் பேர் இன்பத்து அடியாரான-ஸூரி சங்கங்கள் உடனே இருந்தும்
ஸ்வப்ன கல்பமாய் பழைய சம்சாரத்தில் தனிமையே சேஷித்து
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திரு அயோத்யையிலே ராவாணந்தகரான ஸ்ரீ பெருமாளை
பரமனும் தம்பி சத்ருக்னனும் இலக்குமனோடு மைதிலியும் -என்னும்படி சேர்த்தியாய் இருந்து அனுபவித்து
பின்பு பிரிந்து
காந்தார மத்யே விஜகே விஸ்ருஷ்டா பாலேவ கன்யா விலலாப சீதா -என்னும்படி
தனியே நின்று கூப்பிட்டாப் போலே
தனியேன் ஆர் உயிரே -என்று
தனியாகா நின்று தளர்ந்து மிகவும் அவசாதத்தை உடையவராய் தரைப்பட்டு-

அதாவது –
கனிவாய்த் தாமரை கட்கரு மாணிக்கமே –மாயம் செய்யேல் என்னை -என்றும்
மாயம் செய்யேல் என்று தொடக்கி –திரு வாணை நின் ஆணை-கண்டாய் –கூ விக் கொள்ளை வந்து அந்தோ -என்றும்
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அல்லால் அறிகின்றிலேன் நான் -என்றும்
உம்பர் பரம் தண் பாழேயோ–என்னைப் போற விட்டிட்டாயே -என்றும்
எனக்கு ஆரா வமுதானாயே -என்றும்
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுன்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய் -என்றும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ-உன்னைப் பெற்று இனி போக்குவேனோ -என்றும்
முதல் தனி உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் -என்றும்
இப்படி ஆற்றாமையாலே-அவசன்னராய்க் கூப்பிட்டு -என்கை –

நனியாம் பரம பக்தியால் நைந்து —
அதனில் பெரிய அவா -என்னும்படி
தத்வ த்ரயங்களிலும் பெரியதாய்-முடிந்த அவாவான பரம பக்தியாலே-பரிபக்வராய் –
நனி -பெருமை

அன்றிக்கே
பரம பக்தியால் அலைந்து -என்ற பாடமான போது
அவா வாகிற அமுத வெள்ளமான-ஆனந்த சாகரத்திலே மக்னராய் -அலைந்து -என்றுமாம் –

பங்கயத்தாள் கோனை –
அந்த பரம பக்திக்கு விஷயமான-ஸ்ரீயபதியை –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –
உன்னைப் பற்றி இனி போக்குவேனோ -என்று அருளிச் செய்தவனை
உத்தர வாக்யத்தில் கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஸ்ரீயபதியை –

ஒருமையுற்று
வீடு திருத்தி -என்றும்
விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னுள்ளே ஒட்டி -என்றும்
த்வரிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு உள்ளத்தோடு சேரும்படி
இவர் திரு உள்ளமும் த்வரித்து -ஒரு தளைத்து -என்னுதல்-

அன்றிக்கே
பர பக்தி
பர ஞான
பரம பக்தி
உக்தராய்-பேற்றுக்குத் த்வரித்து
அவாவாலே கூப்பிட்டுப் போந்த இவர் திரு உள்ளமும் –

முதித பரிஷச்வஜே -என்னும்படி
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று
இவர் அபி நிவேசம் தீரும்படி சம்ஸ்லேஷிக்கையாலே
அவா அற்று வீடு பெற்ற பிரகாரத்தை-ஆகவுமாம்-

பங்கயத்தாள் கோனை –ஒருமை யுற்று –உயர்ந்து -சேர்ந்தான் –
அதாவது
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்கிற-இழவு தீர
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-ஒரு தலைத்த பரமபக்தி உக்தராய்
அத்தால்
நித்ய சூரிகள் ஆச்சார்யத்தை-இங்கே யுடையராய்
பிரத்யஷ சாஷாத்காரமாம் படி கிட்டி-இருவருமான சேர்த்தியிலே
அடிமை செய்வார் திரு மாலுக்கே -என்னும்படி –
அடிமை செய்யப் பெற்றார் –
அங்கே
பரதமாரோப்ய முதித பரிஷச்வஜே -என்று-இவரைப் பெற்று ஹ்ருஷ்டனாக
இவரும்
அத்தலையில்-முகோல்லாசத்தைப் பெற்று -அனுபவித்து-ஹ்ருஷ்டரானார் –
அத்தை யாயிற்று-ஒருமை யுற்றுச் சேர்ந்தான் -என்கிறது –

இத்தால்
அவா அற்று
வீடு பெற்ற
குருகூர் சடகபன் –
என்றத்தை நினைக்கிறது-

சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து
திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று
கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு
அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே
பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து
தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் –

கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி
இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம்
முடிந்த அவா என்றது பரமபக்தி

இவை
ஞான
தர்சன
பிராப்தி
அவஸ்தைகள் -என்று
இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் —

ஏவம்விதமான
பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற
ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று —

————————————————————————————

உயர்வே பரன்படியை யுள்ளதேல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு

—————————————————————————–

மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/
சடகோபன் –15
மாறன் –16/17/18/19/20/21/
குருகையர் கோன் -22
மாறன் –23/24/25/26/27/28
குருகூர் மன்-29
மாறன் -30/31-
குருகூரில் வந்து உதித்த கோ -32
மாறன் -33/34/35/36
குருகூர் ஏறு -37
மாறன் -38/39
மொய்ம் மகிழோன் -40
மாறன் -41/42/43/44/45/46/47/48/49/50
காரிமாறன் -51
குருகையர் கோன் -52
மாறன் -53
பராங்குசன் -54
மாறன் -55/56/57/58
காரிமாறன்-59
மாறன் -60/61/62
சடகோபர் -63
மாறன் -64/65
அண்ணல் -66
மாறன் -67/68/69/70/71/72/73/74
சடகோபன் -75
மாறன் -76
சடகோபர் -77
காரிமாறன் -78
மாறன் -79/80/81/82/83/84/85/
மாறன் -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98
ஞான முனி -99
முநி மாறன் -100-

மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/-16/17/18/19/20/21/—-23/24/25/26/27/28–30/31—33/34/35/36–
-38/39—41/42/43/44/45/46/47/48/49/50–53–55/56/57/58—60/61/62–64/65–67/68/69/70/71/72/73/74–76-
–79/80/81/82/83/84/85/ -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98
சடகோபன் –15–75
குருகையர் கோன் -22–52
குருகூர் மன்-29
குருகூரில் வந்து உதித்த கோ -32
குருகூர் ஏறு -37
மொய்ம் மகிழோன் -40
காரிமாறன் -51–59-78
பராங்குசன் -54
சடகோபர் -63–77
அண்ணல் -66
ஞான முனி -99
முநி மாறன் -100

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —ஒன்பதாம் பத்து–பாசுரங்கள்- 81-90-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில் -சோபாதிக பந்துக்களை விட்டு நிருபாதிக பந்துவை பற்றச் சொல்லுகிற ஸ்ரீ ஆழ்வார்
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
தன்னைப் பற்றினாரை தனக்கு அபிமதரான பாகவதர்கள் திருவடிகளிலே சேர்த்து ரஷிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனே
பிராப்யமும்-பிராபகமும் சர்வ வித பந்துவும் – அல்லாதார் அடங்கலும் ஔபாதிக பந்துக்கள் – ஆன பின்பு –
அவனை ஒழிந்த ஔபாதிக பந்துக்களை விட்டு
பிராதா பார்த்தா ச பந்து ச பிதா ச மம ராகவா -என்னும்படி
நிருபாதிக-சர்வவித பந்துவுமாய் இருக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை புக்கு உஜ்ஜீவித்துப் போருங்கோள் என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிறரைக் குறித்து உபதேசிக்கிற கொண்ட பெண்டீரில் அர்த்தத்தை
கொண்ட பெண்டிர் தாம் முதலா -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே யவரை விட்டு -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு –81-

————————————————–

வியாக்யானம்–

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார்-
கையில் தனத்தை அழிய மாறிக் கொண்ட ஸ்திரீகள் கொண்ட -என்று
அதில் ஔபாதிகதவம் தோற்றுகிறது-
தான் என்று கொண்ட பெண்டீரில் ப்ராதான்யம் தோற்றுகிறது –
இப்படி களத்திர புத்ராதி யாகச் சொல்லப் படுகிற பந்து வர்க்கம் எல்லாம் –
கூடும் உற்றார் -என்ற பாடமான போது
ஆகந்துகமாக வந்து கூடினவர்கள் -என்றாகிறது –

கன்மத்தால் அண்டினவர் என்றே யவரை விட்டு –
கர்ம ஔபாதிகமாக அடைந்தவர்கள் என்றே-ஔபாதிக பந்து வர்க்கங்களை விட்டு –
கொண்ட பெண்டீர் மக்கள் உற்றார் -என்று தொடங்கி அருளிச் செய்ததை
அனுவதித்து அருளிச் செய்தபடி –

தொண்டருடன் சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் –
தன்னை ஆஸ்ரயித்தவர்களை தனக்கு சேஷ பூதர் ஆனவர்கள் உடன் சேர்க்கும்
ஸ்ரீ யபதியை ஆஸ்ரயுங்கோள் -என்றார் –

ஆர்க்குமிதம் பார்க்கும் புகழ் மாறன் பண்டு –
எத்தனை அறிவில்லாதவர்கள் விஷயத்திலும்
ஹிதத்தை தம்முடைய தீர்க்க தர்சிக்கும்-யசஸை உடையரான ஸ்ரீ ஆழ்வார்-முற் காலத்திலே-
இப்படி ஆத்மஹித தர்சியான இவரும் ஒருவரே -என்றபடி –

ஆர்க்கும் ஹிதம் பார்க்கை யாவது –
கொண்ட பெண்டீர் -என்று தொடங்கி-தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணை -என்றும்
துணையும் சார்வும் ஆகுவார் போல் -என்று தொடங்கி -புணை ஓன்று உய்யப் போகல அல்லால் இல்லை கண்டீர் பொருள் -என்றும்
பொருள் கை யுண்டாய் -என்று தொடங்கி -அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே -என்றும்
அரணாம் அவர் -என்று தொடங்கி -சரண் என்று உய்யப் போகில அல்லால் இல்லை கண்டீர் சதிரே -என்றும்
சதிரம் -என்று தொடங்கி -எதிர் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே -என்றும்
இல்லை கண்டீர் இன்பம் -என்று தொடங்கி -சொல்லி உய்யப் போகில அல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே -என்றும்
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் -என்று தொடங்கி வடமதுரை பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே -என்றும்
வாழ்தல் கண்டீர் குணம் இது -என்று தொடங்கி வீழ் துணையாப் போமிதினில் யாதும் இல்லை மிக்கதே -என்றும்
யாதும் இல்லை மிக்கு இதினில்-என்று தொடங்கி -தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே -என்றும்
கண்ணன் அல்லால் -என்று தொடங்கி -அவன் அன்றி மற்று இல்லை -என்றும்
இப்படி பஹூ முகமாக
சர்வர்க்கும்-சர்வ ஹிதங்களையும் உபதேசித்து அருளிற்று -என்கை-

இம் மட வுலகர் கண்டதோடு பட்ட-அபாந்தவ-அரஷக-அபோக்ய-அஸூக அநுபாய பிரதி சம்பந்தியைக் காட்டி -என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

————————————————————————————–

அவதாரிகை –

இதில் –
பந்து க்ருத்யம் எல்லாம் செய்ய வேணும் -என்று பேசின ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து-
அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் –
இப்படி நிருபாதிக பந்துவான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வவித பந்து க்ருத்யமும் செய்ய வேணும்-என்று
ஸ்ரீ திருப் புளிங்குடியிலே போய்ப் புக்கு-அங்கே ஸ்ரீ பிராட்டியாரோடு கூட-
பள்ளி கொண்டு அருளுகிற-ஸ்ரீ காய்ச்சின வேந்தைக் குறித்து –
திருப் பவளத்தைத் திறந்து ஒரு இன் சொல்லுச் சொல்ல வேணும் –
மா ஸூ ச -உபாயத்துக்கு சோகப்படாதே– க்ரியதாம் மாம் வத -கைங்கர்யம் –
திருக் கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி அருள வேணும்-
திருவடிகளைத் தலைக்கு அலங்காரமாக வைத்து அருள வேணும் –
ஸ்ரீ பிராட்டியும் ஸ்ரீ தேவருமாக திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி இருக்க வேணும்-
கண் முகப்பே நாங்கள் சசம்ப்ர்ம ந்ருத்தம் பண்ணும்படி உலாவி அருள வேணும்-என்றால் போலே
ஒரு கோடி வெள்ளங்களை-அவர் சந்நிதியிலே-அசல் அறியாதபடி- பிரார்த்திக்கிற பண்டை நாளில் -அர்த்தத்தை
பண்டை யுறவான இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————–

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே
உய்துனை என்று உள்ளமே ஓர்—82-

தண்டற -தடை இல்லாமல் –

——————————————————–

வியாக்யானம்–

பண்டை யுறவான பரனைப் –
உலகுக்கு ஓர் முந்தை தாய் தந்தையே முழு வேழு உலகுண்டாய் -என்றும்
தாய் இருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றில் இருத்தி உய்யக் கொண்டான் -என்னும்படியும்
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் -என்று
அநாதி சித்தமான சம்பந்தத்தை யுடைய-சர்வ ஸ்மாத் பரனை –
அன்றிக்கே –
கண்கள் சிவந்து -தொடங்கி -நடந்து வருகிற- ஸ்ரீ திரு மந்திர பிரதிபாத்யமான நவவித சம்பந்த யுக்தனான-
சர்வ ஸ்மாத் பரனை -என்றாகவுமாம்-

புளிங்குடிக்கே கண்டு –
ஸ்ரீ திருப் புளிங்குடி கிடந்தானே -என்னும் படி-ஸ்ரீ திருப் புளிங்குடியிலே கண்டு
என் மனக்கே -என்னுமா போலே ஸ்ரீ புளிங்குடிக்கே -என்று இருக்கிறது –

எனக்கு எல்லா வுறவின் காரியமும் –
குடி குடி வழி வந்து ஆட்செய்யும் தொண்டர் -என்றும்
வழி வருகின்ற அடியர் -என்றும்
தொல் அடிமை வழி வரும் தொண்டர் -என்றும்-சொல்லும்படியான எனக்கு
ப்ராதுஸ் சிஷ்யச்ய தாஸ்ய-என்னும்படி -சர்வவித பந்துத்வ காரியமும்-
விகல்பமாக -ஏதாவது ஒரு வழியில் -பரதன் பிரார்த்தனை -எல்லா உறவின் காரியமும் வேணும் -என்கிறார் ஸ்ரீ ஆழ்வார்
தாயே தந்தை என்றும் தாரமே மக்கள் என்றும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –1-9–

தண்டற நீ செய்தருள் என்றே யிரந்த –
தண்டு -விளம்பம்-விளம்பம் இன்றிக்கே -என்னுதல்
பரப்ரேரிதனாய் அன்றிக்கே -என்னுதல் –
இவற்றில் ஒன்றிலும்-இடை விடாமல்-தடை அற தேவர் நடத்தி அருள வேணும் என்று அர்த்தித்து -என்னுதல் –

அதாவது –
சோதிவாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -என்றும்
நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும்
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் இடம்கொள் மூ வுலகும் தொழ இருந்து அருளாய் -என்றும்
கனி வாய் சிவப்ப நீ காண வாராய் -என்றும்
நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய் -என்றும்
காய்சினப் பறவை ஊர்ந்து -காய்சின ஆழி சங்கு வாள் வில் தண்டு-ஏந்தி எம் இடர் கடிவானே -என்றும்
இம் மட வுலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே -என்றும்
இருந்திடாய் வீற்று இருந்து கொண்டே -என்றும்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும்
மெல்லடியைக் கொடு வினையேனும் பிடிக்க-நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -என்றும்
இப்படி
ஆத்ம தர்சன-பரமாத்மா -தர்சனம் –பல அனுபவ-பரம்பரையை கூவுதல் வருதல் என்று முடுக விட்ட படி -என்கை-
இப்படி செய்து அருள வேணும் -என்று அர்த்தித்த-

சீர் மாறன் தாளிணையே –
கைங்கர்ய சம்பத்தை -யுடையவர்-என்னுதல்
பக்த்யாதி குணங்களை யுடையவர்-என்னுதல் –
ஏவம் விதராண ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை –

உய்துனை என்று உள்ளமே ஓர்-
நாசத்தை விளைக்கும் துணை போல்-அன்றிக்கே-உஜ்ஜீவனத்தைப் பண்ணும் துணை என்று
மனசே-அனுசந்தித்துப் போரு-என்கிறார் –

————————————————————————

அவதாரிகை –

இதில்-சீல குணத்திலே ஆழம் கால் பட்டு ஸ்ரீ ஆழ்வார் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
உம்முடைய பேற்றுக்கு நீர் பிரார்த்திக்க வேணுமோ –நாமே பிரார்த்திதுச் செய்ய வேண்டும்படி அன்றோ
நமக்கு யுண்டான ஸ்ரீ நாராயணத்வ பிரயுக்தமான ரக்த ஸ்பர்சம் –
ஆன பின்பு நாமே உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்யக் கடவோம் -என்று
அவன் அருளிச் செய்ய
தனது பெருமை பாராதே-எனது சிறுமை பாராதே-இப்படி அருளிச் செய்வதே
இது ஒரு சீலம் இருக்கும் படியே -என்று அவனுடைய சீல குணத்திலே வித்தராகிற
ஓர் ஆயிரத்தில் அர்த்தத்தை-ஓரா நீர் வேண்டினவை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

—————————————————

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம்மனத்து மை–83-

—————————————————-

வியாக்யானம்–

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன் –
ஓரா -ஓர்ந்து-அது வேணும் இது வேணும் என்று ஆராய்ந்து – நீர் அர்த்தித அவை உள்ளதெல்லாம் என்னுதல்
அன்றிக்கே
நீர் அர்த்திதவற்றை எல்லாம்-இன்னது உபகரிக்க வேணும்-இன்னது உபகரிக்க வேணும் என்று நாம் நிரூபித்து -என்னுதல்
இப்படி பந்து க்ருத்யமாய் உள்ளவற்றை எல்லாம்-நாமே அர்த்திகளாய் செய்கிறோம் –

அதுக்கு உடலாக –
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக் காட்ட-
ஸ்ரீ ராமோ நாராயண ஸ்ரீ மான் -என்னும்படி சர்வ வித பந்துத்வமும் நடத்தும் படி
நான் ஸ்ரீ நாராயண சப்த வாச்யன் அன்றோ -என்று
அத்தாலே பெரிதான தன் சர்வ வித பந்துத்வத்தைக் காட்ட -அத்தை –
ஓர் ஆயிரம் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டதோர் பீடு உடையன்
ஸ்ரீ நாராயணன் நாங்கள் பிரான் அவனே –என்று அனுசந்தித்து –

அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள் –
அதாவது –
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே -என்றும்
அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -என்றும்
விண்ணுலகம் தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே -என்றும்
இனமேதுமிலானை அடைவதுமே-என்றும்
என் மனம் உடைவதும் அவர்க்கே ஒருங்காகவே -என்றும்
ஆகம் சேர் நரசிங்கமதாகி -என்றும்
நின்ற வேங்கடம் நீண் நிலத்து உள்ளது -என்றும்
தொழுது எழுதும் என்னுமிது மிகை -என்றும்
தாள தாமரையான் -என்று தொடங்கி-நாளும் என் புகழ் கோ சீலமே -என்றும்
சீலம் எல்லை இலான் -என்றும்
இப்படி குணவான் என்னும்படியான —சீல குணத்திலே ஆழம் கால் பட்டு அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் அருள் உண்டு – கிருபை –

அந்த கிருபை –
மாட்டி விடும் நம் மனத்து மை –
நம்முடைய அஞ்ஞானத்தை நிச்சேஷமாகப் போக்கும் –

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் -என்று பிற்காலிக்கிற கலக்கத்தை
சீல குண பிரகாசத்வத்தாலே சேஷியாதபடி நசிப்பிக்கும் –
சாமான்யமான அஞ்ஞானம் ஆகவுமாம்-

————————————————

அவதாரிகை –

இதில் -விலஷண விக்ரஹ உக்தனானவனை காண-ஆசைப்பட்டு கூப்பிடுகிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
கீழ் – சீலாதிகனாய் -அதுக்கு ஊற்றுவாயான ஸ்ரீ பிராட்டியோடு நித்ய சம்யுக்தனாய் –
இரண்டு இடத்திலும் அழகு பெற தரித்த ஸ்ரீ ஆழ்வார்களை யுடையனான-ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்க வேணும் என்று
தாமும் தம்முடைய கரண க்ராமங்களுமாக விடாய்த்துக் கூப்பிட தூணிலே தோற்றி சிறுக்கனுக்கு உதவினாப் போலே
மானசமாகத் தோற்றி தன் குணங்களை அனுபவிப்பிக்க
அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற -மையார் கரும் கண்ணியில் அர்த்தத்தை
மையார்கண் மா மார்பில் மன்னும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்கு டனே காண வெண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர்
ஓத வுய்யுமே இன்னுயிர்–84-

———————————————-

வியாக்யானம்–

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை –
அஸி தேஷணையான லஷ்மி-வஷஸ் ஸ்தலத்திலே நித்ய வாசம் பண்ணும்படியாக
அத்தாலே ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-

கையாழி சங்குடனே காண வெண்ணி –
அச் சேர்த்தியை காத்தூட்ட வல்ல ஸ்ரீ ஆழ்வார்கள் உடன் அனுபவிக்க எண்ணி –
இத்தால் – மையார் கரும் கண்ணி -என்று தொடங்கி-உன்னைக் காணக் கருதும் என் கண்ணே -என்று
முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி –
வைதேஹீம் லஷ்மணம் ராமம் நேத்ரைர நிமிஷை ரிவ-என்றும்
அவஷ்டப்ய சதிஷ்டந்தம் ததர்சத நுரூர்ஜிதம் -என்னும் படி-ஆயிற்றே அபேஷிததது

மெய்யான காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் –
யகாவத்தான பிரேமத்தோடே கூப்பிட்டு அப்படியே கண்டு ஹ்ருஷ்டரான –
அதாவது
கண்ணே உன்னைக் காணக் கருதி -என்று தொடங்கி -நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பன் -என்றும்
உகந்தே யுன்னை யுள்ளும் என் யுள்ளத்து -என்று தொடங்கி-நரசிங்கமகதாய உருவே -என்றும் –
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும்
கண்டு கொண்டு -என்று தொடங்கி -அண்டத்து அமரர் பெருமான் அடியேனே -என்றும்
உலகம் அளந்த அடியானை யடைந்தேன் அடியேன் உய்ந்த வாறே -என்றும்-
இவற்றாலே அவற்றை வெளி இட்டார் -என்கை-

மாறன் பேர் ஓத வுய்யுமே இன்னுயிர் –
இப்படி பகவத் விஷய பக்தியை உடைய ஸ்ரீ ஆழ்வார் திருநாமத்தை அனுசந்திக்கவே
உஜ்ஜீவிக்கும் -விலஷணமான ஆத்ம வஸ்து –

———————————————————

அவதாரிகை –

இதில் -ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்ட ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்ப் பிறந்த அனுபவம் மானஸ அனுபவம் ஆகையாலே-அவனை பாஹ்ய கரணங்களாலே அனுபவிக்க வேணும்
என்று ஆசைப் பட்டு-அப்போதே அது கிடையாமையாலே சிதில சித்தராய்
அவன் குண சேஷ்டிதாதிகளுக்கு ஸ்மாரகமான லௌகிக பதார்த்தங்களைக் கண்டு அவ்வழியாலே
ஸ்மார்யமாணமான அவன் குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமல் இப்படி ஸ்மாரக பதார்த்தத்தாலே தாம் ஈடுபட்டுச்-செல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற -இன்னுயிர் சேவலில் அர்த்தத்தை
இன்னுயிர் மால் இத்யாதியால் -அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் -பின்னையவன்
தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—85

——————————————————-

வியாக்யானம்–

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று –
கீழில் திருவாய் மொழியில் ஸ்ரீ நரசிங்கமதாய உருவே -என்றும்
உகந்தே யுன்னை யுள்ளும் என் யுள்ளத்து -என்றும்
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும்
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து -என்றும் அருளிச் செய்தவை –
மானஸ சாஷாத்காரம் மாத்ரமாய்-ப்ரத்யஷ சாஷாத்காரம் அல்லாமையாலே
இத்தசையில் எனக்குத் தாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சாஷாத் கரித்தது மானஸ ஞான விஷயம் என்று –

கண்ணால் அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் –
சஷூர் விஷயமாக அவனை தர்சிக்க எண்ணி அது லபியாமையாலே பும்ஸ்த்வம் குலைந்து
ஸ்த்ரீத்வ பத்தியைப் பஜித்து-

பின்னையவன் தன்னை நினைவிப்ப வற்றால் –
இப்படி-ஸ்த்ரீத்வ பத்தியை பஜித்த-அநந்தரம்-அவனை பிரணய கதகத ஸ்வரத்தாலும்
ரூபவத்தையாலும்-ஸ்மரிப்பிக்கும் அவற்றாலே-விகூ ஜக்பிர்வி ஹங்க மை -என்னும்படியான
பஷி சமூஹங்களாலும்-மேக சமூஹங்களாலும்-

தான் தளர்ந்த –
தான்யே வார மணீ யாநி -என்னும்படி-அசஹ்யமாய்-மிகவும் பாரவச்யத்தை அடைந்த –
அதாவது –
இங்கு எத்தனை என்னுயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடை காள்-என்றும்
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் -என்றும்
எவம் சொல்லிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே -என்றும் –
மேற் கிளைக் கொள்ளேல் மின் நீரும் சேவலும் கோழி காள்-ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே -என்றும்
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்-நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்மினோ -என்றும்
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே இன்குரல்-நீ மிழற்றேல்-நின் பசும் சாம நிறத்தனன் கூட்டுண்டு நீங்கினான் -என்றும்
கண்ணன் மாயன் போல் கோட்டிய வில்லோடு மின்னு மேகக் குழாங்காள்-காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலன் -என்றும்
குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்றும்
பண்புடை வண்டோடு தும்பிகாள் பண மிழற்றேன்மின்-புண்புரை வேல்கொடு குத்தல் ஒக்கும் நும் இன் குரல் -என்றும்
நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி -என்றும்
இப்படி
ரூப தர்சனத்தாலும்-நாம சங்கீர்த்தனத்தாலும்-பிரணய கூஜிதத்தாலும் மிகவும் தளர்ந்து
ஜீவநா த்ருஷ்டத்திலும் நசை அற்ற படி -என்கை –
இப்படி மிகவும் பாரவச்யத்தை அடைந்த –

மாறன் அருள் –
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே -என்னும்படியான ஸ்ரீ ஆழ்வார் கிருபையை –

உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்-
அனுசந்திக்கும் அவர்களுக்கு-மனஸ்ஸூ- நீராய் உருகும் —
இது ஒரு கிருபாதிக்யம் இருந்தபடியே என்று-ஹிருதயம் த்ரவ்ய பூதமாகும்

மாறன் உரை உன்னும் அவர்க்கு -என்ற பாடம் ஆன போது
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுசந்திக்கப் புக்கால்-இதுவும் ஒரு ஸ்ரீ ஸூக்தியே என்று
மனஸ்ஸூ த்ரவ்ய பூதமாம் –
இவை ஒன்பதனோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே -என்றத்தை பின் சென்ற படி என்றாகவுமாம் –

———————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ ஆழ்வார் உடைய அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தான வித்தராம் ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
ஸ்மாரக பதார்த்தங்களைக் கண்டு நோவு பட்டு செல்லா நிற்கச் செய்தே
இருந்ததும் வியந்தில் தடுமாறாகக் கலந்த கலவி ஸ்ம்ருதி விஷயம்மாக தரிக்க
அத்தாலே
பூர்வ சம்ச்லேஷ பிரகாரத்தை அனுசந்தித்து ப்ரீதராய்ச் செல்லுகிற -உருகுமால் நெஞ்சத்தில் -அர்த்தத்தை
உருகுமால் என் நெஞ்சம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————–

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப்பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு—86-

என்னால் -என் நா என்றுமாம்

———————————————-

வியாக்யானம்–

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி –
ஹ்ருதயா ந்யாமமன் தேவ ஜனச்ய குணவத்தயா-என்னும்படி உன்னுடைய தாழ்ந்த செயல்களை அனுசந்தித்து
என்னுடைய மனசானது த்ரவ்ய த்ரவ்யம் போல் உருகா நின்றது –

பெருகு மால் வேட்கை எனப் பேசி –
அதுக்கு மேலே-அபி நிவேசமும் மிக்குவாரா நின்றது என்று அருளிச் செய்து —

மருவுகின்ற இன்னாப்புடன் –
கீழே-ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்டு அந்த அனுவ்ருதமான வெறுப்போடு-

அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல் –
அவனுடைய-இருத்தும் வியந்திலே-அறியேன் மற்று அருள் -இத்யாதியாலே
அருளிச் செய்த பிரணயித்வ குணங்களை-திரு உள்ளத்திலே பொருந்த அருளிச் செய்த-

அதாவது –
உருகுமால் நெஞ்சம் -உயிர் பாட்டாய்
அத்தைப் பின் சென்று
நினை தொறும்-என்று தொடங்கி – நினைகிலேன் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே -என்றும்
நீர்மையால் கார் முகில் வண்ணன் தன் கலவம் அறிகிலேன் -என்றும்
அறிகிலேன் –சிறிய என் ஆர் உயிர் உண்ட திருவருளே -என்றும்
திருவருள் செய்பவன் போலே –கரு வளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே -என்றும்
என் கண்ணன் கள்வம் எனக்கு செம்மாய் நிற்கும் –என் கண்ணன் என்றவன் காட்கரை யேத்துமே -என்றும்
என் ஆர் உயிர் கோள் உண்டே –காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் -என்றும்
கோள் உண்டான் அன்றி ஆளன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே -என்றும்
தெய்வ வாரிக்கு இங்கு எனது உயிர் பட்டது அங்கு ஆர் உயிர் பட்டது -என்றும்
வாரிக் கொண்டு பருகினான் -கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே -என்றும்
இப்படி
அவன் தாழ நின்று பரிமாறின சீலாதி குணங்களிலே சிதில அந்த கரணராய் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தி -என்கை –

இப்படி ஈடுபாட்டை யுடையராய் அருளிச் செய்த இச் சொல்லை –
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு –
என்னுடைய நா வானது-எவ்விடத்து-சொல்லாது இருப்பது –

எல்லா விடத்திலும்-நாவினால் நவிற்று –ஸ்ரீ குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்னுதல் –

அன்றியே
என் நா சொல்லாது இருப்பது எங்கு -என்று பாடமாய் –
இதில்-ரசஞ்ஞனான என்னாலே-சொல்லப் படாது இருப்பது எத்தசையிலே எங்கனே-என்றது ஆகவுமாம் –
எல்லா தசையிலும் அனுசந்தியாது இருக்க ஒண்ணாது-என்றபடி –

—————————————————————————————————–

அவதாரிகை –

இதில் வடிவு அழகு பற்றாசாக தூது விட்டு அருளின திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானமாக மாத்ரமாக சென்ற இடத்தில் பாக்ய வைகல்யத்தாலே
குண அனுபவத்தால் வந்த ப்ரீதி கீழ்ப்பட்டு
அப்ரீதி அம்சமே தலை எடுத்து அவனுடைய சௌந்தர்யத்தாலே அபஹ்ருத சித்தராய்
அவ் வழகைக் கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் -என்று கண்ணால் கண்ட பஷிகளை தூது விடுகிற
எங்கானலில் அர்த்தத்தை-அருளிச் செய்கிறார் எம் காதலுக்கு அடி-இத்யாதியாலே -என்கை –

———————————————–

எம் காதலுக்கு அடி மால் ஏய்ந்த வடிவு அழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் -எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்–87-

——————————————–

வியாக்யானம்–

எம் காதலுக்கு அடி –
என்னுடைய பிரேமத்துக்கு ஹேது –

மால் ஏய்ந்த வடிவு அழகு என்று –
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஸ்வரூப அனுபந்தியாய் அனுரூபமான விக்ரஹ சௌந்தர்யம்-என்று –

அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் –
அத்தசையில் அவன் சௌந்தர்யமே பற்றாசாக -ஆலம்பனமாக – அவ்விடத்தில்
அவன் விஷயமாக ஸ்ரீ திரு மூழிக் களத்து உறையும் அவன் விஷயமாக

எங்கும் உள்ள புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன்-
யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்னும்படி சர்வ திக்குகளிலும் உண்டான பஷி சமூஹத்தை
தம்முடைய பிராண ரஷக அர்த்தமாக தூத பரேஷணம் பண்ணும் ஸ்ரீ ஆழ்வார் –

அதாவது –
செங்கால மட நாராய் -என்று தொடங்கி –
என் குடக் கூத்தர்க்கு என் தூதாய் -என்றும் அமர் காதல் குருகினங்காள் -என்று தொடங்கி
தமரோடு அங்கு உறைவாருக்கு தக்கிலமே கேளீரே -என்றும் –
தக்கிலமே கேளீர்கள் -என்று தொடங்கி-கொக்கினங்காள் குருகினங்காள் செக்கமலத் தலர் போலும்
கண் கை கால் செங்கனிவாய்-அக்கமலத்திலை போலும் திருமேனி யடிகளுக்கு -என்றும் –
திருமேனி யடிகளுக்கு என்று தொடங்கி -மாதரைத் தன மார்பகத்தே வைத்தார்க்கு -என்றும்
திரு மூழிக் களத்து உறையும் பங்கயச் சுடர் பவள வாயனைக் கண்டு -என்றும்
புனம் கொள் காயா மேனி பூம் துழாய் முடியார்க்கு -என்றும் –
பூம் துழாய் முடியார்க்கு -என்று தொடங்கி-தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீர் -என்றும்
என் அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கு -என்றும்
இப்படி
பூம் துழாய் முடியார்க்கு-என்னும் அளவும்
வடிவு அழகு பற்றாசாக பல பஷிகளைத் தூது விட்டார் -என்கை-

நம் பிழையும்-சிறந்த செல்வமும்-படைத்த பரப்பும்-தமரோட்டை வாசமும்
மறப்ப்பித்த
ஷமா-தீஷா-ஸாரஸ்ய சௌந்தர்யங்களை-யுணர்த்தும்
வ்யூஹ-விபவ-பரத்வத்வய-அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம் -என்று இறே-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

அபராத சஹத்வாச்ச விபோஸ் சம்பந்த வைபவாத் ஐகரச்யாச்ச சௌந்தர்யாத் கடக அனயாதசே முனி -என்று
இறே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரும் அருளிச் செய்தது

மாறன் தாள் உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்-
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் ஆனவை தன்னை மனசாலே அனுசந்தித்தவர்களுக்கு
பிரதிபந்தங்களை தானே சேதித்துப் போகடும் –
துடர் அறு சுடர் அடி -போலே –

——————————————————

அவதாரிகை –

இதில் தூதர் வரும் அளவும் பற்றாமல் ஸ்ரீ திரு நாவாயில் போய்ப் புக வேணும் என்று
மநோ ரதிக்கிற ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இப்படி விட்ட தூதர் அத்தலைப் பட்டு அவனுக்கு ஸ்வ தசையை அறிவித்து மீண்டு வருவதற்கு முன்னே
பிராப்ய த்வர அதிசயத்தாலே அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ திரு நாவாயிலே போய்ப் புக்கு
அவ்வோலகத்திலே அங்கு உள்ளவர்களோடு கூட சபத்நீகனான அவனைக் கண்டு அனுபவித்து
அடிமை செய்யப் பெறுவது எப்போதோ –என்று மநோ ரதிக்கிற
அறுக்கும் வினையில் -அர்த்தத்தை
அறுக்கும் இடர் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வது அறியாமல்—88-

————————————————–

வியாக்யானம்–

அறுக்கும் இடர் என்று –
நம்முடைய துக்கத்தை போக்கி அருளும் என்று -வினை காரணம் -இடர் கார்யம் –

பால் அங்கு விட்ட தூதர் –
ஸ்ரீ திரு மூழிக் களத்து யுறைவார் விஷயமாக அவ் விடத்திலே விட்ட தூதர் –

மறித்து வரப் பற்றா மனத்தால் —
திரும்பி மீண்டு வந்து மறுமாற்றம் சொல்ல பற்றாத திரு உள்ளத்தாலே –

அறப் பதறிச் –
மிகவும் த்வரித்து –
இதம் ப்ரூயாச்ச மே நாதம் ஸூரம் ராமம் புன புன -என்று
ஸ்ரீ திருவடியைத் தூது போக விட்ட-அநந்தரம்-ஸ்ரீ பிராட்டி பதறினால் போலே –

செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன் –
அழகிய ஸ்ரீ திரு நாவாயிலே எழுந்து அருளும்படி-எண்ணிய ஸ்ரீ ஆழ்வார் –

அதாவது –
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே -என்றும் –
திரு நாவாய் அடியேன் அணுகப் பெறுநாள் யவை கொலோ -என்றும்-
திரு நாரணன் சேர் திரு நாவாய் யவையுட் புகலாவதோர் நாள் அறியேனே -என்றும் –
திரு நாவாய் வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா –நாளேல் அறியேன்-என்றும்-
விண்ணாளன் விரும்பி யுறையும் திரு நாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொள் கண்கள் -என்றும்-
நாவாய் யுறைகின்ற என் நாரணன் நம்பி ஆவா அடியான் இவன் என்று அருளாயே -என்றும்-
தென் திரு நாவாய் என் தேவே அருளாது ஒழிவாய் -என்றும்-
திரு நாவாய் யாவர் அணுகப் பெறுவார் இனி யந்தோ -என்றும்-
திரு நாவாய் யுறைகின்ற எம்மா மணி வண்ணா அந்தோ அணுகப் பெறு நாள் -என்றும்-
இப்படி த்வர அதிசயத்தை பிரகாசிப்பித்தார் என்கை-

அது எத்தாலே என்னில் –
மையலினால் செய்வது அறியாமல் –
சௌந்தர்யத்தாலே அறிவு கலங்கி அத்தாலே பிராப்த அப்ராப்த விவேகம் இன்றிக்கே
விட்ட தூதர் வருவதற்கு முன்பே த்வரித்தார் –

இவர் பிரேம ஸ்வபாவம் இருந்த படி-என் -என்று-வித்தராய் – அருளிச் செய்கிறார் —

—————————————————————————–

அவதாரிகை –

இதில்-ஒரு சந்தையில் யுண்டான ஸ்ரீ ஆழ்வார் அபிசந்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
அறுக்கும் வினையில் பெரிய த்வரையோடே மநோ ரதித்தவர் த்வர அனுகுணமாக பிராப்ய பூமியிலே புக்கு
அவனை அனுபவிக்கப் பெறுவதற்கு முன்னே
தத் ப்ராப்தி ஸூசகமான அடையாளங்களைக் கண்டு
நோவு பட்டுச் செல்லுகிறபடியை பகல் எல்லாம் பசு மேய்க்கப் போன ஸ்ரீ கிருஷ்ணன்
மீண்டு வருவதற்கு முன்னே அவன் வரவுக்கு அடையாளமான
மல்லிகை கமழ் தென்றல் முதலான வஸ்துக்களைக் கண்டு ஸ்ரீ திரு ஆய்ப்பாடியில் இடைப் பெண்கள்
அந்த ஸ்ரீ கிருஷ்ண விரஹத்தாலே
சந்த்யா சமயத்திலே நோவு பட்டுச் செல்லுகிற துறை மேலே வைத்து அருளிச் செய்கிற
மல்லிகை கமழ் தென்றலில் அர்த்தத்தை-மல்லடிமை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

—————————————————

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி யலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என் தன் மால்–89-

மல்லடிமை – பூர்ண அனுபவம் –
மால் -மருட்சி அஞ்ஞானம்-
தொல் நலம் -ஸ்வாபாவக பக்தி – சஹஜ பக்தி –

————————————————

வியாக்யானம்–

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க –
மல்லடிமை -சம்ருத்தமான அடிமை –பரிபூரணமான கைங்கர்யம் –
அது செய்யும் காலம் எப்போதோ என்று ஸ்ரீ சர்வேஸ்வரனை கேட்க –
நாளேல் அறியேன் -எனக்கு உள்ளன -என்று கேட்க –

அவன் சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் –
அவன்-மாலை நண்ணியிலே-மரணமானால் -என்று நாள் அறுதி இட்டு அருளிச் செய்யும்
அத்தனையும் பற்றாத-ஸ்வா பாவிகமான பக்தியாலே —

செல்கின்ற ஆற்றாமை பேசி யலமந்த மாறன் –
தமக்கு நடந்து செல்லுகிற-தரியாமையை அருளிச் செய்து அலமாப்பை அடைந்த ஸ்ரீ ஆழ்வார் –
அதாவது –
மல்லிகை கமழ் தென்றல் -என்றும்
புலம்புறு மணி தென்றல் -என்றும்
தாமரைக் கண்ணும் கனி வாயும் -என்றும்
வாடை தண் வாடை -என்றும்
ஆ புகு மாலை -என்றும்
அவனுடை அருள் பெரும் போது அரிதால் -என்றும்
ஆர் உயிர் அளவன்றி கூர் த வாடை -என்றும்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை -என்றும்
ஊதும் அத்தீம் குழற்கே உய்யேன் நான் -என்றும்
மாலையும் வந்தது மாயன் வாரான் -என்றும்
இவை அடியாக-பாதக பதார்த்தங்களாய் உள்ள எல்லா வற்றாலும் நொந்து
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ ஸூக்ரீவ தர்சன அநந்தரம்- ஸ்ரீ மாருதி தர்சநாத் பூர்வம்
மத்யே ராவண ப்ரேரிரதான-ராஷசீ வசம் ஆபந்னையாய்-ஜீவிதத்தில் நசை ஆற்றாப் போலே
யாமுடைய ஆர் உயிர் காக்கும் ஆறு என் -என்கிறார்-
அதாவது –
புகலிடம் அறிகிலம் தமியமாலோ -என்றும்
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் -என்றும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ -என்றும்
ஆவியின் பரமல்ல வகைகளாலோ -என்றும்
யாமுடைய ஆர் உயிர் காக்கும் ஆறு என் -என்றும்
எவம் இனிப் புகுமிடம் எவம் செய்கேனோ -என்றும்
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னை மீர்காள் ஆர் உயிர் அளவன்றிக் கூர் தண் வாடை -என்றும் –
ஆய்ச்சியற்கே ஊதும் அத தீம் குழற்கே உய்யேன் நான் -என்றும்
யாதும் ஒன்றும் அறிகிலம் வம்ம -என்றும்
என் சொல்லி உய்கேன் இங்கு அவனை விட்டு -என்றும் –
அவனை விட்டு உயிர் ஆற்ற கில்லா -என்றும்
இப்படி ஆற்றாமையை அருளிச் செய்து-முன்னாடி தோற்றாமல் அலமந்து நிலம் துழாவின ஸ்ரீ ஆழ்வார் -என்கை-

இப்படியான
மாறன் அருள் மாற்றாகப் போகும் என் தன மால் –
அதாவது-அவனி யுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்மின் தொண்டீர் –என்று உபக்ரமித்த ஸ்ரீ ஆழ்வார் அருள் –
அஞ்ஞானத்துக்கு பிரதிபடமாக என்னுடைய அஞ்ஞானம் நிவ்ருத்தமாகும் –
பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்னக் கடவது இறே –
ஆ புகு மாலைக்கு அவனுடை அருள் பெறும் போது அரிதாயிற்று –
இங்கு-என் தன மால் மாறன் அருள் மாற்றாகப் போகும் -என்று நிச்சிதம் ஆயிற்று –

————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ ஆழ்வாருக்கு நாள் அவதி பிறக்க அத்தாலே அவர் பரோபதேசம் பண்ணின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
நாளேல் அறியேன் -என்று கேட்டவர்க்கு உம்முடைய த்வரை அனுகுணமாக உம்முடைய சரீர அவசானத்திலே
உம்மை ஸ்ரீ பரம பத்திலே கொடு போய் அடிமை கொள்ளக் கடவோம் –என்று நாளிட்டுக் கொடுக்க-
விலக்ஷணம் அதிகாரி -த்வரை மிக வேணுமே -ஆர்த்தி அதிகார பூர்த்தி வேணுமே —
அத்தாலே ஹ்ருஷ்டராய்-
அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நிற்கிறவன் திருவடிகளிலே
புஷ்பாத் உபகரண்ங்களைப் பணிமாறி பக்தியைப் பண்ணுங்கோள் –
அதுக்கு மாட்டாதார் –
இந்த பத்துப் பாட்டையும் பிரீதி பூர்வகமாம் படி அவன் திருவடிகளிலே வணங்குங்கோள் -என்று
சர்வரையும் தத் சமாஸ்ரயணத்தில்-அதிகார அனுகுணமாக மூட்டுகிற-மாலை நண்ணியில் அர்த்தத்தை
மால் உமது வாஞ்சை முற்றும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து -மேல் அவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நம்தமக்குத் தாள் –90-

————————————————

வியாக்யானம்–

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில் சால நண்ணிச் செய்வன் எனத் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உம்முடைய அபேஷிதங்கள் எல்லாம் ஆத்மாவுடன் பொருந்தி இருக்கிற
சரீரத்தின் உடைய வியோக அனந்தரத்திலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே மிகவும் கிட்டிச் செய்வன் -என்னுதல்
அன்றிக்கே
உம்மைக் கிட்டி-மிகவும் செய்வன்-என்னுதல் –
அங்கனும் அன்றிக்கே
அந்தக் கார்யத்திலே-மிகவும் உற்று -என்னுதல் —

இப்படி செய்வன் என்று
ஸ்ரீ கண்ணபுரம் ஓன்று உடையான் -என்று அருளிச் செய்ய – தான் உகந்து –அவனைக் கொண்டு
நாள் அவதி இட்டுக் கொண்ட தாம்-ஹ்ருஷ்டராய் –

மேல் அவனைச் சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன் –
நாள் அவதி இட்டுக் கொடுத்ததுக்கு மேலாக ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே வந்து
அத்யா சன்னனாய் இருக்கிறவனை –

மேல் அவனை -என்று
மேலான அவனை -என்றுமாம் –
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு-பூர்ணே சதுர்தசே வர்ஷே என்று நாள் அவதி இட்டுக் கொடுத்து
அவதி பார்த்துக் கொண்டு நின்றால் போலே நின்றபடி –

சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்-
ஐஸ்வர் யாதிகளும் – சீலாதி குணங்களும்-புற வெள்ளம் இடும்படியான ஸ்ரீ திருக் கண்ணபுரத்தில் நிலையில் –

சேரும் என சீர் மாறன்-
ஆஸ்ரயிங்கோள் என்று-அனைவரையும் குறித்து அருளிச் செய்யும்
ஜ்ஞானப் ப்ரேமாதி குணங்களை யுடைய–ஸ்ரீ ஆழ்வார்-
அதாவது –
திருக்கண்ண புரத்து ஆலில் மேலால் அமர்ந்தான் அடி இணைகளை
காலை மாலை கமல மலரிட்டு –மாலை நண்ணித் தொழுது எழுமினோ என்றும்
திருக்கண்ண புரம் உள்ளி -கள்ளவிழும் மலரிட்டு -நாளும் தொழுது எழுமினோ தொண்டீர் -என்றும் –
திருக்கண்ண புரத்து அண்ட வாணன் அமரர் பெருமானை
தொண்டர் நும் தம் துயர் போக -விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்றும்
வானை யுந்து மதிள் சூழ் திருக்கண்ண புரம் தான் நயந்த பெருமான் –
மடப்பின்னை தன கேள்வனைத் தேனை வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்றும் –
திருக்கண்ண புரத்து தரணியாளன்–சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -என்றும்
திருக் கண்ணபுரத்து இன்பன் -தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் அன்பனாகும் -என்றும்
செய்யில் வாளை யுகளும் திருக் கண்ணபுரத்து ஐயன் ஆகத்து அணைப்பார் கட்கு அணியனே -என்றும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் பணிமின் -என்றும்
வேத நாவர் விரும்பும் திருக் கன்னபுரத் தாதியானை-அடைந்தார்க்கு அல்லல் இல்லையே -என்றும்
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன் கல்லில் ஏய்ந்த மதிள் சூழ்
திருக் கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே என்றும் –
பாடு சாரா வினை பற்றற வேண்டுவீர் -இப்பத்தும் பாடி யாடிப் பணிமின் அவன் தாள்களையே -என்றும்
இப்படி
சர்வருக்கும்-சர்வாதிகராமாம்படி-சமாஸ்ரயணத்தை-அருளிச் செய்தார் -என்கை –

மற்று ஓன்று -என்றும்-கண்ணன் அல்லால் -என்றும்-வைகல் வாழ்தலான சித்த உபாயம் –
அதில் துர்பல புத்திகளுக்கு-
மாலை நண்ணி-காலை மாலை-விண்டு தேனை மலரிட்டு-அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு
தாள் அடையும் பிரபத்தி -அதில் அசக்தருக்கு-உச்சாரண மாத்ரம்-
சர்வ உபாய ஸூன்யருக்கு – இப் பத்தும் பாடிடும் தண்டன் -என்று-
ஸ்ரீ கீதாச்சார்யனைப் போலே-அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் -என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது-

ஏவம் வித வைபவ உக்தரான
சீர் மாறன் -தாரானோ -நம்தமக்குத் தாள் –
இப்படி உபதேசிக்கைக்கு உடலான-ஜ்ஞான ப்ரேமாதிகளை யுடைய ஸ்ரீ ஆழ்வார் நம்முடைய ஸ்வரூப அனுகுணமாக
திருவடிகளை உபாய உபேயமாக உபகரித்து அருளாரோ –

நம் தமக்கு –
தம்முடைய திருவடிகளிலே பிறந்து முற்றுண்டு பெற்று
முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -என்று ஆதரித்துப் போருகிற நமக்கு –

ஆகையால் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே நித்ய பிரார்த்யம் என்றபடி –

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —எட்டாம் பத்து–பாசுரங்கள்- 71-80-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில்
அவனுடைய குணங்களிலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கித்த அதி சங்கியைப் போக்கின படியை
பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இவர் மநோ ரதித்த படியே அத் தேசத்திலே புக்கு ஸ்ரீ திருவாய் மொழி கேட்ப்பித்து
அடிமை செய்யப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய் –
அவன் ஆஸ்ரித பர தந்த்ரன் –சர்வ நிர்வாஹகன் என்று இருந்தோம் இவையும் நம்மைத் தோற்றிப் பொய் ஆகிறதோ -என்று
இவர்-அவன் குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ண கீழ் தம்மைக் கொண்டு ஸ்ரீ திருவாய் மொழி பாடுவித்துக் கொண்ட
யுபகாரத்தை ஸ்மர்ப்பித்து அவன் தம் அதி சங்கையைப் போக்க அத்தை அனுசந்தித்து அதி சங்கை தீருகிற
தேவிமாரில் -அர்த்தத்தை-தேவனுறை பதியில் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————-

தேவனுறை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தா
னாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த மாறன் பால்
மா நிலத்தீர் நாங்கள் மனம் —-71-

——————————————————

வியாக்யானம்–

தேவனுறை பதியில் -சேரப் பெறாமையால்-
கீழே-தன்மை தேவ பிரான் அறியும் -என்னும்படியான-தேவர்க்கும் தேவன் ஆனவன்
ஸ்ரீ திவ்ய மஹிஷியோடு நித்ய வாசம் பண்ணுகிற-ஸ்ரீ திரு வாறன் விளையிலே
புக்குப் பாடி அடிமை செய்யப் பெறாமையாலே -என்னுதல் –
அன்றிக்கே
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ -மற்று அமரர் ஆட்செய்வார் -அப்பனே காணுமாறு அருளாய் –
என்று என்றே கலங்கி-என்று அவசன்னராய் -என்னுதல்-

மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தானாம் நிலையும் சங்கித்து –
தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற ததீய பரதந்த்ரனாம் நிலையிலும்
சேத அசேதனங்கள் எல்லாம் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படியான நிலையிலும் அதி சங்கை பண்ண –
அதாவது –
க்யாத ப்ராஜ்ஞ சங்கே மத்பாக்ய சங்ஷ்யாத் -என்னும்படி
உமருகந்த உருவம் நின்னுருவமாகி -என்று தொடங்கி-அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் -என்றும் –
இறந்ததும் நீயே -என்று தொடங்கி -அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் -என்றும் –
இப்படி-ஸ்வரூபத்திலும்-குணத்திலும்-அதிசங்கை பண்ணின படியை அடி ஒற்றின படி -என்கை –

தெளிந்த
இப்படி-ஆஸ்ரித பாரதந்த்ர்யத்திலும்-சர்வ நிர்வாஹகத்வத்திலும் பிறந்த இஸ் சங்கை நிவ்ருத்த மாம்படி
பூர்வ யுபகாரத்தை ஸ்மரிக்கும் படி –
மலரடிப் போதுகள் எந்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன்பு அருளிய -என்று
உபகரித்ததை ஸ்ம்ருதி விஷயமாம் படி பிரகாசி ப்பிக்க
அத்தை-தாள்களை எனக்கே தலைச் தலைச் சிறப்பத் தந்த பேருதவி என்று அனுசந்தித்து ப்ரீதராய் தெளிந்து -என்கை-

தெளிந்த மாறன் பால் மா நிலத்தீர் நாங்கள் மனம் –
இதர விஷயங்களிலே மண்டி இருக்கிற மகா ப்ருதிவியில் உள்ளவர்களே உங்களைப் போலே அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் நம்முடைய மனஸ்ஸூ — உங்களுக்கு இதர விஷயத்திலேயாய் இருக்கும்
ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்
உபய வ்யாவ்ருத்தரான எங்களுக்கு ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் மனஸ்ஸூ —

——————————————————————————————–

அவதாரிகை –

இதில் -ஸ்ரீ ஆழ்வார் ஆத்மாத்மீயங்களில் நசை அற்ற-நங்கள் வரிவளையை-அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்-அதிசங்கை தீர்த்த மாத்ரமாய்-ஸ்வ அபேஷிதமான பாஹ்ய சம்ச்லேஷம் பிறவாமையாலே கலங்கி
அவஸ்தாந்தரா பன்னராய்-ஸ்ரீ சர்வஞ்ஞனான அவன் அறிய-நாம் அறியாதே இருக்க
நமக்கு சம்சாரத்தில் நசையும் யுண்டாக வேனும என்று பார்த்து
ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற
நங்கள் வரிவளையில் அர்த்தத்தை-நம் கருத்தை -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை —

——————————————–

நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய
இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால்
தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான்
அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –72-

———————————————

வியாக்யானம்–

நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய –
நம்முடைய ஹ்ருதயத்தை நன்றாக ஆராய்ந்து போரும் மால் அறிய -என்னுதல்
நம்முடைய ஹ்ருதயத்தை நன்றாக விரும்பி வர்த்தித்துப் போரும் ஸ்ரீ சர்வேஸ்வரன் -என்னுதல் –
உள்ளத்தே உறையும் மால் -இறே –
இவர் கருத்தையும் வீற்று இருந்தாலும் – இப்படி சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் அறியும் படி

இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால் –
இந்த விபூதியிலே – பாசங்கள் நீக்கி -என்னும்படி-பண்டே
ஏறாளிலும்-
மாலுக்கு வையத்திலும் கை கழன்ற இவற்றில் ஆசை –
அவற்றை உபேஷித்து இருக்கிற நமக்கு-நாம் அறியாமல்-தான் அறிந்ததாக
சிறிது அபேஷை யுண்டு என்று-நினைத்து இருக்கிறான் என்கிற சங்கையினால்

தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான் அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –
ஆத்மாவிலும்-அதுக்கு அசலான ஆத்மீயங்களிலும் நசை அற்ற ஸ்ரீ ஆழ்வார்
அந்த ஸ்வபாவத்தை ஆராய்ந்து அருளிச் செய்தார் அத்தசையிலே —
அதாவது –
ஹன்யாமஹா மிமாம் பாபாம் –என்று-தாயோடு உறவு அறுத்து
ராஹ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்றும்
நைச்சத் ராஜ்ஜியம் -என்றும்-நசை அற்று
சித்ரகூடத்திலே சென்று-சிரஸா யாசித்து பாதுகைகளைப் பெற்றால் போலே
இவரும்-
வேங்கட வாணனை வேண்டிச் சென்று சங்கம் சரிந்தன சாயிழந்தேன் -என்றும்
கோல்வளையோடு மாமை கொள்வான் –என்றும்
கோல்வளை நெஞ்சத் துடக்கம் எல்லாம் பாடு அற்று ஒழிய விழந்து
வைகல் பல்வளையார் முன் பரிசு அழிந்தேன் -என்றும்
கோலம் பலன் என்றும் காண்பதர்னை யுங்களோடு எங்கள் இடை இல்லையே -என்றும்
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி யவனவை காண் கொடானே -என்றும்
நான் கொடுத்தேன் இனி என் கொடுக்கிறேன் -என்றும்
நின்னடையேன் அல்லேன் என்று நீங்கி -என்றும்
பாதமடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு என்றும் –இப்படி யாயிற்று
அந் நிலையை ஆராய்ந்து உரைத்த படி-

——————————————————

அவதாரிகை –

இதில்-பரிவர் இல்லை என்று கலங்க-பரிவர் உளர் என்று தேற்றின பாசுரர்த்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஒரு கோல நீல நன்னெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று கீழே
அனுசந்தித்த அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ வைலஷண்யத்திலே திரு உள்ளம் சென்று
இப்படி சௌந்தர்ய சௌகுமார்யங்களுக்கு கொள்கலமான இவ் வடிவோடே
பிரயோஜனாந்தர பரர்களான தேவர்கள் கார்யம் செய்கைக்காக
பிரதிகூலர் வர்த்திக்கிற இஸ் சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து சஞ்சரியா நின்றான்
எங்கே என்ன தீங்கு வரத் தேடுகிறதோ என்று -இவர் வயிறு எரிந்து பயப்பட
நமக்கு-முமுஷூக்களும்-நித்தியரும்-முக்தரும் உண்டு-
நாம் கடலை குளப்படி போலே கலக்க வல்ல பெறு மிடுக்கர் ஆகையாலே
நமக்கு ஒரு குறைகளும் இல்லை -என்று அவன் அருளிச் செய்ய
அச்சம் தீருகிற அங்கும் இங்கும் -அர்த்தத்தை
அங்கு அமரர் பேண -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————

அங்கு அமரர் பேண அவர் நடுவே வாழ் திரு மாற்கு
இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -எங்கும்
பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்–73-

—————————————————-

வியாக்யானம்–

அங்கு அமரர் பேண –
ஆங்கு ஆராவாரம் அது -என்னுமா போலே
தேசம் -அது–தேசிகர்கள் -அவர்கள-பரிவின் மிகுதி -அது
நித்ய விபூதியிலே பணியா அமரரான நித்ய சூரிகள் நித்ய மங்களா சாசனம் பண்ண
அவர்கள் நடுவே வாழ்கிற ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு
அப்படி -ஸ்ரீ பரமாத்துமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பலர் இருக்க

அவர் நடுவே வாழ் திரு மாற்கு-இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச
ஒருவரும் இல்லை என்று பயப்பட –
அதாவது –
அங்கும் இங்கும் -என்று தொடங்கி –
அங்கம் சேரும் பூ மகள் மண் மகள் ஆய்மகள் –சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே -என்றும்
கனலாழி யரணத்தின் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே —
மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம் -என்றும்
இச் சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணாதே

பரிவர் இல்லை என்று அஞ்ச
ஐஸ்வர்ய காமரும்-ஆத்மானுபவ காமருமாய் போருகையாலே
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வர் மற்று ஒருவரும் இல்லை -என்கிறது –

இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச –
அதாவது –
உன் கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கு -என்றும் –
திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே -என்றும்
கருமா மேனி அன்பன் என் காதல் கலக்கவே -என்றும்
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -என்றும்
தநுராதாய சகுணம்க நித்ரபிட காதர -என்றும்-ப்ருஷ்ட தஸ்துத நுஷ்பாணிர் லஷ்மணோ நுஜகாமாக -என்னும்படி
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கும் உம்மோடு ஒரு பாடு உழல்வான் அடியானும் உளன் என்றே -என்றும்
என் திறம் சொல்லார் செய்வது என் -என்றும்
என்றே என்னை உன் ஏரார் கோலத்து இருந்து அடிக் கீழ் நின்றே ஆட்செய்ய நீ கொண்டு அருள நினைப்பது தான் -என்றும்
மங்களா சாசன ரூப கைங்கர்யம் கொண்டருள-
நினைப்பிட்டு அருளுவது என்று அவனைக் கேட்டும்-இப்படி கலக்கத்தாலே அஞ்ச-

எங்கும் பரிவர் உளர் என்னப் –
இங்கும்-அங்கும்-எங்கும்-நமக்கு பரிவர் உளர் என –
அதாவது –
கலக்கமில்லா நல் தவ முனிவர் -என்று தொடங்கி -என் செய்வது உரையீரே என்று இப்படி
நம்மை பரிகைக்கு-முமுஷூக்களும்-நித்தியரும் -முக்தரும் உண்டு –
நாம் தாம் தரத்தைக் கொண்டு ஷீர சிந்துவை ஷூபிதமாம் படி
கடைந்த மகா பாஹூகம் என்று தன் மிடுக்கைக் காட்ட –

பயம் தீர்ந்த மாறன் வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார் –
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-பயமும்-பய நிவ்ருத்தியும் இன்றிக்கே ஸ்ரீ ஆழ்வார் உடைய
வரியை உடைத்தான வீரக் கழலோடு கூடின திருவடிகளைச் சேர்ந்தவர்கள்
நிர்ப்பயமாய் வாழப் பெறுவார்கள் —
ஸ்ரீ ஆழ்வார் இப் பாசுரத்தாலே பயம் தீர்க்கையாலே இவர்களுக்கு வாழ்வேயாய் இருக்கும் –

————————————————————

அவதாரிகை –

இதில் பயம் மறுவல் இடாதபடி தன் சௌர்ய வீர்யாதிகளையும்
சாபா நுக்ரஹ சமர்த்தர் சஹவாசத்தையும் காட்டக் கண்ட படி-பேசின ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
இன்னமும் இவருக்கு நம் பக்கல் பரிவின் கனத்தாலே பயம் மறுவல் இடக் கூடும் என்று விசாரித்து
ப்ரதிகூலர்க்கு கணிசிக்க ஒண்ணாத படி அரண் உடைத்தான ஸ்ரீ திருச் செங்குன்றூரிலே
ஸ்ருஷ்டி ஸ்திதியாதிகளை நிர்வஹிக்க வல்ல சக்திமான்களாய்-சாபா நுக்ரஹ ஸ்மர்த்தரான
மூவாயிரம் ப்ராஹ்மணர் பரிந்து நோக்க
அவர்களும் குழைச் சரக்காம் படி
பிசாசான் தானாவான் அங்குல் யக்ரேணதான் ஹன்யாமிச்சன் ஹரி கணேஸ்வர -என்று
சௌர்ய வீர்ய பராக்ரமாதிகளோடே தான் எழுந்து அருளி இருக்கும் நிலையை
ஸ்ரீ சர்வேஸ்வரன் காட்டிக் கொடுக்க -அத்தாலே அச்சம் கேட்டு அவன் வடிவு அழகிலே நெஞ்சை வைத்து
அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிற -வார்கடாவருயில் அர்த்தத்தை -வாராமல் அச்சம் இனி -என்று
தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் -பாரும் எனத்
தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே சாராயேல்
மானிடவரைச் சார்ந்து மாய்—74-

————————————————-

வியாக்யானம்–

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும் –
வார்கடா வருவி -என்று தொடங்கி —
கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் –என்னும் அளவும் சொன்ன
சௌர்ய வீர்யாதிகள் முதலான தன் சக்தி யோகத்தையும் –

சீரார் பரிவருடன் சேர்த்தியையும் –
அத்தாலே
அசுரர் வன்கையர் வெம் கூற்றத்தை -என்னும் தன் மிடுக்கையையும் –
நல்ல நான்மறையோர் -என்றும்
மனக் கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தான் ஒப்பார் வாழ -என்றும்
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதியவனி தேவர் வாழ்வமர்ந்த மாயோனை என்றும்
ஜ்ஞானாதி குண பரிபூர்ணராய் இருக்கிற மூவாயிரம் ப்ராஹ்மணர் பரிய இருக்கிற இருப்பையும் தர்சியும் என -தர்சித்து –
தேம் பணை புடை சூழ் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும்
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும் –
நல்ல நீண் மாடத் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும்
கனக் கொள் திண் மாடத் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும்
கூரிய இச்சையோடு ஒழுக்கம் நடைப் பலி இயற்கைத் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே என்றும்
இப்படி அரணை யுதைத்தான ஊரில் இருப்பையும் அனுசந்தித்து
நிர்ப்பயராய்
திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -அதனுள் கண்டவத் திருவடி -என்று தொடங்கி
திகழ என் சிந்தை  உளானே -என்னும்படி வடிவு அழகிலே நெஞ்சை வைத்து அனுபவித்து

ஹ்ருஷ்டராய்
தேனை நன்பாலை கன்னலை அமுதை -என்று அவன் ரச்யதையும் அனுபவித்து

தானுகந்த மாறன் –
நின் கோலம் கார் எழில் காணல் உற்று ஆழும் -என்று அழகிலே கலங்கினவர்
இப்போது அவ் அழகை அனுபவித்து ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார் –

தாள் சார் நெஞ்சே –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை அபாஸ்ரயமாக ஆஸ்ரயி-நெஞ்சே –

சாராயேல் –
ஆஸ்ரயியாது இருப்புதி யாகில் –

மானிடவரைச் சார்ந்து மாய் –
பிரகிருதி வச்யரான மனுஷ்யரை ஆஸ்ரயித்து நசித்துப் போ –

ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ஆஸ்ரயணம் உஜ்ஜீவன ஹேது
தத் இதர ஆஸ்ரயணம் நாச ஹேது-என்றது ஆயிற்று –

——————————————————

அவதாரிகை –

இதில் அவனுடைய வடிவு அழகை அனுபவியாமல் அழுத ஸ்ரீ ஆழ்வார்
ஆர்த்தி அதிசய ஸூசக ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
கீழே ப்ரஸ்துதமான அனுபவம் மானச அனுபவ மாத்ரமேயாய்
பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே-மிகவும் நோவு பட்டு
காட்டுத் தீ கதுவினால் போலே-பரிதப்த சித்த காத்ரராய்
அவயவ சோபை-ஆபரண சோபை-ஒப்பனை அழகு இவற்றுக்கு ஆஸ்ரயமான விக்ரஹம்
இவற்றின் உடைய வைலஷண்யத்தை பல படியாக வர்ணித்துக் கொண்டு
பெரும் கூப்பீடாக கூப்பிடுகிற மாயக் கூத்தனில் அர்த்தத்தை
மாயன் வடிவு அழகை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————–

மாயன் வடிவு அழகைக் காணாத வல் விடா
யாயது அற விஞ்சி அழுதலுற்றும் தூய புகழ்
உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல்
அற்ற பொழுதானது எல்லியாம்–75-

—————————————————

வியாக்யானம்–

மாயன் வடிவு அழகைக்-
சௌந்தர்ய-சீலாதிகளால்-ஆச்சர்யமான அவன்-விக்ரஹ சௌந்தர்யாதிகளை –
கர்மாபிதப்தா பர்ஜந்யம் ஹ்லாதயந்த மிவப்ரஜா -என்னும்படி அனுபவிக்க —

காணாத வல் விடாய்-
கனை கழல் காண்பது என்று கொல் கண்களே -என்றும்
மெய்க் கொள்ளக் காண விரும்பும் என் கண்களே -என்றும்
இப்படி பாரிப்பை யுடைய கண்களின் விடாய் தீரப் பருகப் பெறாமையாலே –
பிரத்யஷமாகக் காணப் பெறாமையாலே-மிக்க விடாயை யுடையராய் –

யது அற விஞ்சி –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து பசை அற்று –
கீழில் விடாய் -எல்லாம் குளப்படி -என்னும்படி
கடல் போலே அது அபி விருத்தமாய் –

அத்தாலே
அழுதலுற்றும் –
அழுது
அலற்றும் –
பிறந்த விடாய் தீர வந்து கலவாமையாலே
பாலரைப் போலே அழுது-அடைவு கெடக் கூப்பிடும் –
அதாவது –
வாசத் தடம் போல் வருவானை ஒரு நாள் காண வாராய் -என்றும்
கரு மா மாணிக்க நாள் நல் மலை போலே சுடர்ச் சோதி முடி சேர் சென்னி யம்மானே
இரங்கி ஒரு நாள் நீ அந்தோ காண வாராய் -என்றும்
முடி சேர் சென்னி யம்மா -என்று தொடங்கி பெருமானே என்று என்று ஏங்கி அழுதக்கால்-
படி சேர் மகரக் குழைகளும் -என்று தொடங்கி -தூ நீர் முகில் போல் தோன்றாயே-என்றும்
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்–தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே -என்றும்
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்றும்
நல் தேர் தனிப் பாகா வாராய் இதுவோ பொருத்தம் -என்றும்
இருஞ்சிறைப் புள்ளதுவே கொடியா உயரத்தானே –உன்னை எங்கே காண்கேனே -என்றும்
இப்படி-கதா த்ரஷ்யாமி ராமஸ்ய வதனம் புஷ்கரேஷணம் -என்னும்படி

அழுது அலற்றி -தூய புகழ் உற்ற –
சௌந்தர்யாதிகளை-அனுபவிக்கப் பெறாமையாலே
அழுது-அலற்றும் புகழை யுடையராய் –
இதர விஷய அலாபத்தாலே கிலேசிக்கை அயசஸ்சாய்-பகவத் அலாபத்தால் கிலேசிக்கை
ஸ்லாக்கியமான யசஸாய் இறே இருப்பது –

தூய புகழ் உற்ற –சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல் –
இப்படியான யசஸை யுடையரான ஸ்ரீ ஆழ்வாரை
நாம் அநந்ய பிரயோஜனராய் கிட்டி நின்று அனுபவிக்கும் காலம் பகலாய் இருக்கும் –
வகுள பூஷண பாஸ்கரர் -பராங்குச ஆதித்ய சந்நிதி -இறே

அற்ற பொழுதானது எல்லியாம்-
அவருடைய அனுபவ விச்சேத காலமானது சம்சாரம் ஆகிற காள ராத்ரியாம் –

———————————————————————

அவதாரிகை –

இதில் இவர் விடாய் தீர் அடுத்து அணித்தாய் வந்திருந்து பின்பு தம்முடனே கலந்தபடி பேசின
ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இவருடைய பெரு விடாய் கெடும்படி இவரோடு வந்து சம்ச்லேஷிக்கக் கோலி
அடுத்து அணித்தாக ஸ்ரீ திருக் கடித் தானத்திலே வந்திருந்து
தம் பக்கலிலே அத்ய அபி நிவிஷ்டனாய் இருக்கிறபடியை அவன் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டர் ஆகிற எல்லியும் காலையில் -அர்த்தத்தை
எல்லி பகல் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என -நல்லவர்கள்
மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து–76-

————————————————–

வியாக்யானம்–
எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு மெல்ல வந்து தான் கலக்க வேணும் என –
ராத்ரிந்திவம் அனுவர்த்தித்த-ஆர்த்தி சமிக்கைக்கு
மந்த கதியாய் வந்து அனுபவிக்க வேணும் என்று நினைத்து
முந்துற-பரத்வாஜ ஆஸ்ரமம் கத்வா -என்னுமா போலே –

நல்லவர்கள் மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு –
நற்புகழ் வேதியர் நான் மறை நின்று எதிர்-கற்பகச் சோலை திருக் கடித் தானம் -என்றும்
செல்வர்கள் வாளும் திருக் கடித் தானம் -என்றும்
தேசத் தமரர் திருக் கடித்தானம் -என்றும்
அங்குற்றைக்கு அனுகூலர் ஆனவர்கள்-நித்ய வாசம் பண்ணும் ஸ்ரீ திருக் கடித் தானத்திலே
தம்மை விஷயீ கரிக்க ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து இருக்க- அவ்விருப்பைக் கண்ட ஸ்ரீ ஆழ்வார் –

இந்நிலையைச் சொன்னான் இருந்து –
அதாவது –
திருக் கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் -என்றும்
உள்ளம் தோறும் தித்திப்பான் திருவமர் மார்வன்-திருக் கடித்தானைத்தை மருவி உறைகின்ற மாயப் பிரான் -என்றும்
தேசத் தமரர் வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே -என்றும்
நேசத்தினால் நெஞ்சு நாடு குடி கொண்டான் -என்றும்
கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை-கோயில் கொண்டான் அதனோடு என் நெஞ்சகம் -என்றும்
என் நெஞ்சும் திருக் கடித் தான நகரும் தனதாயப்பதியே -என்றும்
அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பது-கற்பகச் சோலை திருக் கடித் தானம்-மேவி இருப்பது என் நெஞ்சகம் -என்றும்
இப்படி
இங்குற்றை இருப்பு-தம்மை விடாய் கெட விஷயீ கரிக்கைக்காக என்றும்
இஸ் ஸ்வபாவத்தை பொருந்தி இருந்து-அருளிச் செய்தார் -என்கை
அவன் வரவாற்றாலே – மாயக் கூத்தனில் விடாய் தீர்ந்து- பொருந்தி இருந்து அருளிச் செய்தார் -என்கை

—————————————

அவதாரிகை –

இதில்-இவர் கருத்தைத் தான் கைக் கொண்டு இவருடனே கலந்த படியைப் பேசின ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில் –
இவர் -வெள்ளக் கேட்டாலே அழியாதபடி ஸ்ரீ திருக் கடித் தானத்தே இருப்பைக் காட்டி
சம்ஸ்லேஷ ரசத்தை சாத்மிப்பித்த –
அநந்தரம்-
ஸ்வ விஷயத்தில் அர்த்தித்வ பிரமுகரான இவர் மநோ ரதத்தை எல்லாம் தான்
இவர் பக்கலிலே பண்ணிக் கொண்டு-இவரோடு பூர்ண சம்ஸ்லேஷம் பண்ணி
அந்த சம்ச்லேஷ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே புதுக்கணித்த திவ்ய அவயவங்களையும்
நீல பர்வதம் போலே ஒளி இருக்கிற வடிவையும் இருக்கிறபடியை மண்டி அனுபவித்து
ஹ்ருஷ்டராய் செல்லுகிற -இருத்தும் வியந்தில் அர்த்தத்தை
இருந்தவன் தான் வந்து -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————–

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம்
திருந்த விவர் தம் திறத்தே செய்து -பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு –77-

———————————————

வியாக்யானம்–

இருந்தவன் தான் வந்து –
ஸ்ரீ திருக் கடித் தானத்திலே இருந்த தான் இவர் இருந்த அளவும் மெல்ல வந்து –

இங்கு இவர் எண்ணம் எல்லாம் திருந்த விவர் தம் திறத்தே செய்து —
இவர் எண்ணம் ஆவது –
என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் -என்று-தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்ற
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்தைத் தான் கைக் கொண்டான் -என்கை –
திருந்த விவர் தம் திறத்தே செய்து —
தனக்கு ஆஸ்ரித பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆகையாலே
நன்றாக இவர் விஷயத்திலே செய்து தன்னை முற்றூட்டாக அனுபவிக்கும் படி செய்து

பொருந்தக் கலந்து –
நாம் ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு அவ்வருகாய் இருப்புதோம் –
இவர் நித்ய சம்சாரிகளுக்கு இவ்வருகாய் எண்ணி இருப்பார் என்ற வாசி வையாமல்
சிறியேனுடைச் சிந்தையுள் -என்றும்
தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் -என்றும்
என்னும்படி ஒரு நீராகக் கலந்து –

இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
திகழு மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் -என்றும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்-திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே -என்றும்
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி யான் அறியேனே -என்றும்
இப்படி ஆயிற்று-பெறாப் பேறு பெற்றானாய் இனியனாய் இருந்தபடி -என்கை

கண்ட சடகோபர் –
இப்படி அவன் இனியனாய் இருந்த படியைக் கண்டு அனுபவித்த ஸ்ரீ ஆழ்வார் –

கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு
அவன் தம்முடனே வந்து கலந்தபடியை திரு உள்ளத்தாலே கண்டு அருளிச் செய்தார் –
கலக்கைக்கு அவன் கிருபையே உபாயம்-இத்தலையில் உள்ளது அனுமதி மாத்ரமே –
கலந்த நெறி கட்டுரைக்கை யாவது –
அந்யோந்யம் அபி வீஷந்தௌ-என்னும்படி
கண்டு கொண்டு –இருந்தான் -என்றும்
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேன் -என்றும்
கிந்துஸ் யாச்சித்த மோஹயம்-என்னும்படி-மருள் தான் ஏதோ -என்றும்
மாய மயக்கு மயக்கான் -என்றும்
திகழும் தன் திருவருள் செய்தே -என்றும் –
வெறிதே அருள் செய்வர் -என்றும் அருளிச் செய்தவை என்கை-

——————————————————

அவதாரிகை –

இதில்-ஆத்மஸ்வரூப வைலஷண்யத்தை எம்பெருமான் காட்டக் கண்டு பேசின ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இருத்தும் வியந்தில் -பெரிய ப்ரீதியோடு அனுபவிக்கிற அளவில்
சிறியேனுடைச் சிந்தையுள் -என்று நம் பெருமைக்கு எதிர்தட்டான தம் சிறுமையை அனுசந்தித்தார்-
இவர் இன்னம் வள வேழ் உலகு தலை எடுத்து நம்மை விட்டு அகலவும் கூடும்
அதுக்கு இடம் அறும்படி
ஜ்ஞானனந்த லஷணமாய் நித்யமாய் ஸ்ரீ ஸ்தனம் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும்
நமக்கு நித்ய போக்யமுமாய் காணும் இவ்வாத்மஸ்வரூபம் இருப்பது -என்று
ஆத்ம ஸ்வரூபம் வைலஷண்யம் அடியாக அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிற
கண்கள் சிவந்தில் அர்த்தத்தை கண் நிறைய இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

——————————-

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கல்வி
திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து –தண்ணிது எனும்
ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான்
காரி மாறன் தன் கருத்து —78-

——————————————

வியாக்யானம்–

கண் நிறைய வந்து கலந்த மால்-
கண்ணும் வாயும் துவர்ந்த-இவருடைய கண் நிறையும் வந்து சம்ஸ்லேஷித்த
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –

இக் கலவி –
இருத்தும் வியந்தில் இருந்த சம்ஸ்லேஷம் –

திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து —
திருட ஸ்வபாவத்தை யுடைத்தாக வேணும் என்று எண்ணி –

தண்ணிது எனும் ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட –
இவர் -சிறியேனுடைச் சிந்தையே -என்று அனுசந்தித்துப் போருகிற
ஆத்மாவின் உடைய பெருமையானதைக் காட்டி அருள –

ஆய்ந்து உரைத்தான் –
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை ஆராய்ந்து அருளிச் செய்தார் –
அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடினான் -உரைக்காமல்– ஆராய்ந்து உரைத்து –
பகவத் பிரகார தயா போக்யம் என்று அருளிச் செய்தார் –
அதாவது –
தாசஸ்து-என்றும்
தாசோஹம் -என்னும் படியும்
கண்கள் சிவந்து -என்று தொடங்கி -அடியேன் உள்ளான் -என்றும்
அடியேன் உள்ளான் -என்று தொடங்கி -உணர்வில் உம்பர் ஒருவனே -என்றும்
உணர்வில் உம்பர் ஒருவனே -என்று தொடங்கி -என் உணர்வினுள் இருத்தினேன் -என்று
இரண்டரைப் பாட்டாலும் தனக்கு
ஸ்ரீ கௌஸ்துபம் போலே சேஷமாய் இருக்கிற படியையும்
உணர்வைப் பெற ஊர்ந்து -என்றும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து என் உயிரினில் உணர்வினில் நின்ற
ஒன்றை யுனர்ந்தேனே -என்றும்
நன்றாய் ஞானம் கடந்தே -என்றும்
தெருளும் மருளும் மாய்த்தோமே -என்றும்
ஆத்மாவினுடைய பிரக்ருதே பரத்வமும்
ஜ்ஞாத்ருத்வாதிகளும்
போக்யதையும்
ஜ்ஞானானந் தத்வமும்-முதலாக அருளிச் செய்தவை -என்கை –

அது காட்ட -வாய்ந்து உரைத்தான் -காரி மாறன் தன கருத்து –
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை ஸ்ரீ எம்பெருமான் காட்ட அத்தை ஆராய்ந்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
தன் திரு உள்ளக் கருத்தாலே – என்னுதல் –
இப்படி ஸ்வரூப வை லஷண்யத்தை ஆராய்ந்து அருளிச் செய்யும்படி யாயிற்று
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்து – என்னுதல் –
அப்போது -ஆய்ந்து உரைத்த காரிமாறன் தன் கருத்து -என்றாகக் கடவது –

——————————————————

அவதாரிகை –

இதில்
ஆத்மாவின் உடைய அந்ய சேஷத்வ நிவ்ருத்தியை ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த படியை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இப்படி விலஷணமான ஆத்ம ஸ்வரூபம் தான் தனக்கும் உரித்தது அன்றிக்கே
அவனுக்கே -அனந்யார்ஹ -சேஷமாய் இருக்கும் படியை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற
கரு மாணிக்க மலையில் அர்த்தத்தை கருமால் திறத்தில் -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன்
ஒரு மா கலவி யுரைப்பால் -திறமாக
அன்னியருக்காகா தவன் தனக்கே யாகும் உயிர்
இந்நிலையை யோரு நெடிதா –79-

——————————————

வியாக்யானம்–

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன் –
நீல நிறத்தை யுடையவனாய்-ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்
அந்ய சேஷத்வம் இல்லாத கன்யா அவஸ்தையை பஜித்த ஆழ்வார் –
கரு மாணிக்க மலை -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி –

ஒரு மா கலவி யுரைப்பால் –
அத்விதீயமான விலஷணமான சம்ஸ்லேஷ லஷணங்களை தோழி பேச்சாலே அருளிச் செய்யப் புகுகையாலே –
அதாவது –
திருப் புலியூர் அருமாயன் பேர் அன்றி பேச்சிலள் -என்றும்
திருப் புலியூர் வளமே –புகழும் -என்றும் –
அப்பன் திருவருள் மூழ்கினள்–புனை இழைகள் அணிவும் ஆடையும் யுடையும்
புதுக் கணிப்பும் நினையும் நீர்மை யதன்று -என்றும்
திருவருள் கமுகு ஒண் பழத்து மெல்லியில செவ்விதழே
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள -என்றும்
இவற்றாலே
கண்ணன் தாள் அடைந்தாள் இம்மடவரல் -என்றும்
பட வரவணையான் தன நாமம் அல்லால் பரவாள் இவள் -என்றும் –
திருப் புலியூர் புகழ் அன்றி மற்று பரவாள் இவள் -என்றும் –
திருப் புலியூர் நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே –
அன்றி மற்று ஒரு உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் என்றும்
இப்படி கலவிக் குறிகளை கூறப் புகுகையாலே -என்கை-

திறமாக அன்னியருக்காகாதவன் தனக்கே யாகும் உயிர் இந் நிலையை –
கதம் நாமோ பதாஸ்யாமி புஜ மன்யச்ய கச்யசித் -என்கிறபடியே
நிச்சயமாக அந்யருக்கு சேஷம் ஆகல் ஆகாது –
பிராப்த சேஷி யானவனுக்கே சேஷம் ஆகிற ஆத்ம ஸ்வரூபத்தின் நிஷ்டையை

யோரு நெடிதா –
ஆராய்ந்து போருங்கோள் –
தீர்க்கமாக -என்னுதல் –
தீர்க்கமாக விசாரி என்று தன் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் -ஆதல்-

—————————————————————

அவதாரிகை –

இதில் அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு எல்லை ஸ்ரீ பாகவத சேஷத்வ பர்யந்தமாய் இருக்கும்
என்று ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
கீழே-ஆத்மாவுக்குச் சொன்ன ஸ்ரீ பகவத் அனந்யார்ஹ சேஷத்வம் தான் நிலை நிற்பது
ஸ்ரீ பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆனால் என்னும் இடத்தை அனுசந்தித்து
அவனுடைய சௌந்தர்ய சீலாதி குண சேஷ்டிதங்களிலே தோற்று அடிமை புக்கு இருக்கும்
ஸ்ரீ பாகவதர்களுக்கு சேஷமாய் இருக்கும் இருப்பே எனக்கு புருஷார்த்தம் –
ஐஸ்வர்ய-கைவல்ய-ஸ்ரீ பகவல் லாபங்கள் ஆகிற புருஷார்த்தங்கள்
நான் பற்றின ஸ்ரீ பாகவத சேஷத்வம் ஆகிற பரம புருஷார்த்ததுக்கு
தனித் தனியாகவும் திரளாகவும் ஒப்பாக மாட்டாது –
ஆன பின்பு எனக்கும் என்னுடையார்க்கும் இப் புருஷார்த்தம்
கால தத்வம் உள்ளதனையும் நித்ய சித்தமாகச் செல்ல வேணும் என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிரார்த்தித்துத் தலைக் கட்டுகிற நெடுமாற்கு அடிமையில் அர்த்தத்தை
நெடுமால் அழகு தனில் -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை –

————————————

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு
படுமா நிலை யுடைய பத்தர் அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது
கொல்லை நிலமான நிலை கொண்டு –80-

———————————–

வியாக்யானம்–

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு படுமா நிலை யுடைய பத்தர் –
அதாவது –
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத் தாள் -என்றும்
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய
செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் உறுமோ -என்றும்
தனி மா புகழே எஞ்ஞான்றும் –என்று தொடங்கி –
தனிமாத் தெய்வத் தளிர் அடிக் கீழ் புகுதல் அன்றி
அவன் அடியார் நனிமா கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கு -என்றும்
கோளுமுடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே நாளும் வாய்க்க நங்கட்கு -என்றும்
தமர்கள் கூட்ட வல் வினையே -என்று தொடங்கி-
கோதில் அடியார் தமர்கள் தமர்கள் தமர்கள் தமர்களாம்-சதிரே வாய்க்க தமியேற்கு -என்றும்
நீக்கமில்லா அடியார் தம் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்க்கே
குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடு வாய்க்க தமியேற்கே -என்றும்
இப்படி உத்துங்கத்வமான வடிவு அழகிலும்
தனி மா புகழே -என்கிற தீர்க்க சௌஹார்த்த குணத்திலும் ஈடுபட்டு இருக்கும் –

பத்தர் அடிமை தனில் எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் –
பக்தர்கள் திறத்தில் அடிமை யாம் அளவு அன்றிக்கே
அவ்வடிமையில்-சீமா பூமிதாம்படி அனுசந்தித்தார் ஸ்ரீ ஆழ்வார் –

அது கொல்லை நிலமான நிலை கொண்டு –
அந்த பாகவத சேஷத்வம்-சீமாதிலங்கியான உத்தம புருஷார்த்தம் என்கிற-நிஷ்டையைக் கொண்டு
எல்லை நிலம் தானாக எண்ணினான்
சத்ருனோ நித்ய சத்ருகன -என்கிறபடியே
வியன் மூ வுலகு பெறினும் -என்கிற ஐஸ்வர்யம்-ஆத்ம பிராப்தி அளவாய் இருக்கும் –
தானே தானே யானாலும் -என்கிற ஆத்மா பிராப்தி-
செந்தாமரைக் கண் திருக் குறளன் அறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் -என்கிற
பகவத் பிராப்தி -அளவாய் இருக்கும் –
இந்த பகவத் பிராப்தி பாகவத பிராப்தி சாபேஷமாய் இருக்கும்-
இந்த புருஷார்த்ததுக்கு மேல் எல்லை இல்லை -ஆகை இறே முழுதும் உறுமோ -என்றது –

————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —ஏழாம் பத்து–பாசுரங்கள்- 61-70-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில்-இந்த்ரிய பயாக்ரோசத்தை அருளிச் செய்த ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
உலகமுண்ட பெரு வாயனிலே ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே ஆர்த்தி பரவசராய்-பூர்ண பிரபத்தி பண்ணினவர்
தொடங்கின கார்யம் தலைக் கட்டினால் அல்லது கார்யம் செய்யோம் -என்று இருக்கும் நிரந்குச ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன்
பழையபடியே தம்மை சம்சாரத்திலே வைக்கக் கண்டு சம்சாரம் ஆகிற சிறைக் கூடத்திலே புண்ய பாபங்கள் ஆகிற இரு விலங்கை இட்டு
இந்த்ரியங்கள் ஆகிற படர் கையிலே கண் பாராமல் நலியுங்கோள் என்று காட்டிக் கொடுத்து
நம் எளிவு கண்டு சிரித்துக் கொண்டு
ஸ்ரீ திரு நாட்டிலே தானும் நித்ய சூரிகளுமாக இருக்கிறான் என்று அனுசந்தித்து
தம்முடைய ஆர்த்தி அதிசயத்தையும்-ரஷகத்வ உபாய யோகியானவன் குணங்களையும்
அவன் திரு முகத்தைப் பார்த்து சொல்லா நின்று கொண்டு கேட்டார்க்கு தரிப்பு அரிதாம் படி கூப்பிடுகிற
உண்ணிலாவிய -யின் அர்த்தத்தை உண்ணிலா ஐவர் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————–

உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன் புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக் கங்குல்—61-

——————————————————-

வியாக்யானம்–

உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில் –
இவ் வுலகில் -உண்ணிலா வைவருடன் யிருத்தி-இருள் தரும் மா ஞாலமான சம்சாரத்திலே ஆந்த்ர சத்ருக்களாய் வர்த்திக்கிற
ஐந்து இந்த்ரியங்களோடே இருக்கப் பண்ணி –
ஐம் புலன் இவை மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் -என்றத்தைப் பின் சென்ற படி –

எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான் –
எண்ணிலா மாயன்-இவ்வுலகில் -உண்ணிலா வைவருடன் யிருத்தி-எனை நலிய -எண்ணுகின்றான் –
அசங்க்யாதமான ஐஸ்வர்ய சக்தி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன்-தமோபிபூதமானஇவ் விபூதியிலே
அஹம் அர்த்தமான ஆத்மாவை-அறிவு அழியப் பண்ணுமதான ஐந்து இந்த்ரியங்களும்
ஆத்மானுபந்தி என்னலாம் படி பொருந்தி இருக்கும்படி ஆக்கி துர்பலனான என்னை
அவற்றைக் கொண்டு விஷயங்களிலே தள்ளி பாதிக்கைக்கு கார்ய விசாரம் பண்ணா நின்றான்-
அதாவது
உண்ணிலாவிய வைவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலா பெரு மாயனே -என்றும்
ஓர் ஐந்து இவை பெய்தி இராப்பகல் மோதிவித்திட்டு -என்றும்
ஐவரால் வினையேனை மோதுவித்து -என்றும்
ஓர் ஐவரைக் காட்டி -என்றும்
ஐவரை நேர் மருந்குடைத் தாவடைத்து -என்றும்
ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த -என்றும்
சுமடு தந்தாய் -என்றும்
அவன் இப்படி ஐவரைக் கொண்டு செய்வித்தான் என்று–அவன் மேலே பழி இட்ட படி -என்கை

எண்ணிலா மாயன் என்னை நலிய எண்ணுகின்றான் என்று நினைந்து –
சர்வஞ்ஞனாய்-சர்வசக்தியாய் இருக்கிற ஸ்ரீ ஈஸ்வரன்
அஜ்ஞனாய்-அசக்தனாய்-சரணம் புகுந்த என்னை நலிந்தது போராமல் இன்னும் நலிய எண்ணுகின்றான் என்று எண்ணி
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலா பெரு மாயனே -என்றத்தைக் காட்டுகிறது-

நலிய எண்ணுகின்றான் என்று நினைந்து ஓலமிட்ட –
ஸ்ரீ பரமபத யதாவானவன்-நிர்த்த்தயரைப் போலே தமிப்பிக்க யத்னம் பண்ணா நின்றான் என்று எண்ணி ஓலமிட்ட –
எண்ணிலா பெரு மாயனே -என்றும்
கார் முகில் வண்ணனே -என்றும்
சோதி நீண் முடியாய் -என்றும்
வினையேன் வினை தீர் மருந்தே -என்றும்
விண்ணுளார் பெருமானேயோ -என்றும்
பத்தியின் உள்ளாய் பரமீசனே -என்றும்
கொடியேன் பருகு இன்னமுதே -என்றும்
என் அம்மா என் கண்ணா -என்றும்
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்றும்
இப்படி இந்த்ரிய பயத்தாலே ரஷகத்வாதி குணங்களுக்கு வாசகமான அவன் திரு நாமங்களைச் சொல்லி –
சாகாம்ருகா ராவண சாயகர்த்தா -என்றும்
ஹா ராம சத்யவ்ரத தீர்க்க பாஹோ பூர்ண சந்திர ப்ரதிமா ந்வக்த்ர-என்றும்
சாகா மிருகங்களைப்போலே இவரும் கண்வாளிக்குடைந்தடைந்தும்-கண் என்னும் வாளி -அம்புக்கு உடைந்து அடைந்து
ம்ருகீ சிம்ஹை ரிவாவ்ருதா -என்னும்படி ம்ருகசாபாஷி யானவள் ராஷசிகள் மத்யம் அசஹ்யமாய்
அவர் குளிர்ந்த முகத்திலே விழிக்க ஆசைப் பட்டு கூப்பிட்டால் போலேயும் கூப்பிட்டபடி-

இன் புகழ் சேர் –
நாடடைய இந்த்ரிய கிங்கராய்-தத் லாபத்தாலே கூப்பிட
இவர் இந்த்ரிய பய குரோசம் பண்ணுகை யாயிற்று-இவருக்கு இன் புகழ் சேர்ந்தது
காமாத்மதகல்வபி நப்ரசச்தா -என்னக் கடவது இறே –

பாதம் அகலகில்லாத் தம்மை அகற்றுவற்றின் நடுவே இருத்தக் கண்டு -நலிவான் – சுமடு தந்தாய் -ஒ -என்று
சாதன பலமான ஆக்ரோசத்தோடே-பழி இட்டு – என்று இறே ஸ்ரீ அழகிய பெருமாள் நாயனார் அருளிச் செய்தது

இன் புகழ் சேர் மாறன் என –
கேட்க்கைக்கு இனியதாய் ஸ்லாக்கியமான யஸஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –

குன்றி விடுமே பவக் கங்குல் –
இவ் உக்தி மாத்ரத்தாலே-சம்சாரம் ஆகிற காளராத்ரி நசித்து விடும்
இது நிச்சயம் –

குன்றுதல் -குறைதல்
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்று கூப்பிடுகை அன்றிக்கே
அவர் திரு நாமத்தைச் சொல்லவே-விடியா வென்னரகான சம்சாரத்துக்கு விடிவு பிறக்கும் —

————————————————————————————–

அவதாரிகை –

இதில்-அரத்தியால் அலற்றின படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அதாவது
உண்ணிலாவியில் ஆர்த்தராய் கூப்பிடுகிற தம்மை பரிகரிக்கும் விரகு சிந்தித்துக் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் நினைவை அறிந்து
அவர் பரிஹரிக்கும் அளவும் ஆறி இருக்க வேண்டி இருக்க அவர் தம்மை உபேஷித்தாராய் கொண்டு
கலங்கி-மோஹித்து-இவர் கிடக்க-பார்ஸ்வத்தரான பரிவர் ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய
அசரண்ய சரண்யத்வாதி குணங்களை சொல்லிக் கொண்டு
இவர் திறத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிறபடியை
ஸ்ரீ பெரிய பெருமாளோடு கலந்து பிரிந்தாள் ஸ்ரீ ஒரு பிராட்டி ஆற்றாமையாலே
அழுவது
தொழுவது
விழுவது
எழுவது
அலற்றுவதாய்ப் படுகிற அரதியை-திருத்தாயார் அவர் திரு முகத்தைப் பார்த்து சொல்லி பிரலாபிக்கிற
பாசுரத்தால் அருளிச் செய்கிற-கங்குலும் பகலுமில் அர்த்தத்தை
கங்குல் பகலரதி -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து -இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன்
அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்—62-

அரதி -ஆற்றாமை
உற-அனுசந்திக்க-

தூய்மை உபாயாந்தர பிராப்யாந்த்ர சம்பந்தம் இல்லாமை -சுவீகாரமும் உபாயம் இல்லை
ஸ்வ போக்த்ருத்வ புத்தி இல்லாமல் -நான்கும் காட்டி அருளி -ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் போலே வெள்ளை ஆகுமே

—————————————————–

வியாக்யானம்–

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற –
அதாவது –
ப்ருசம் விசம்ஜ்ஞா கதா ஸூகல்பேவ-என்றும்
சிரேண சம்ஜ்ஞாம் பிரதிலப்யசைவ -என்றும்
ராமம் ரக்தாந்தனய நம பஸ்யந்தீ ஸூ துக்கிதா -என்றும் சொல்லுகிறபடியே
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -என்றும்
இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -என்றும்
சிந்திக்கும் திசைக்கும் -என்றும்-இத்யாதிப்படியே-திவா ராத்திரி விபாகம் அற
அழுவது
தொழுவது
மோஹிப்பது
பிரலாபிப்பது
அடைவு கெடப் பேசுவது
நெடு மூச்சு எறிவது-
அது தானும் மாட்டாது ஒழிவது-
ஸ்தப்தையாய் இருப்பது –இப்படி அரதி விஞ்சி மோஹத்தை பிராப்தையாக-

அங்கதனைக் கண்டு
தன் பெண் பிள்ளையின் இடத்தில் அத்தசையைக் கண்டு –

ஒர் அரங்கரைப் பார்த்து —
ஆர்த்தி ஹரதையிலே சிந்தித்துப் போருகிற அத்விதீயரான ஸ்ரீ பெரிய பெருமாளைப் பார்த்து –

இங்கு இவள் பால் –
இத்தசையில்-இவள்-இடையாட்டமாக –

என் செய்ய நீர் எண்ணுகின்றது –
ஆஸ்ரித ரஷண சிந்தை பண்ணுகிற ஸ்ரீ தேவர் ரஷக அபேஷை யுடைய இவள் திறத்து
எது திரு உள்ளம் பற்றி இருக்கிறது –
எடுக்கவோ
முடிக்கவோ-ஒன்றும் தெரிகிறது இல்லை
எல்லா தசையிலும் இவள் பேற்றுக்கு – உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே
அத்தலையில் நினைவே இறே உபாயம்
இத்தலையில் உள்ளது எல்லாம் ஆற்றாமையிலே முதலிடும் அத்தனை –
இவள் திறத்து என் செய்கின்றாயே –
இவள் திறத்து என் செய்திட்டாயே –
இவள் திறத்து என் சிந்தித்தாயே -என்றத்தை பின் சென்ற படி –

என் செய்ய நீர் எண்ணுகின்றது -என்னு நிலை சேர் மாறன் –
த்வர அஜ்ஞ்ஞானத்தாலே தலை மகள் என்ற பேரை யுடைய தாம் மோஹித்துக் கிடக்க –
இந்த மோஹாதிகளும் உபாயம் ஆகாமல்-அத்தலையில் நினைவே சாதனம் என்னும்
அத்யாவச்ய ஜ்ஞானத்தாலே திருத் தாயார் என்ற பேரை யுடையராய்
தெளிந்து இருந்து தெரிவிக்கும் தசையை அடைந்த ஸ்ரீ ஆழ்வார் யுடைய-

அஞ்சொலுற –
அஞ்சொல் உற-அழகியதான இத் திருவாய் மொழியை ஆதரித்து அனுசந்திக்க –

நெஞ்சு வெள்ளையாம் –
உபாயாந்தரமான விஷயமான-மநோ மாலின்யம் நிவ்ருத்தமாய்
தத் ஏக உபாயத்வ அனுசந்தானத்தாலே மனஸ் ஸூத்தி பிறக்கும் –

கங்குல் பகலரதி —இத்யாதி -வெள்ளையாம்
உபாயாந்தர விஷயமாக ஓர் ஸ்ரீ அரங்கரைப் பார்த்து-ஒருகிற ஸ்ரீ அரங்கரைப் பார்த்து
அதாவது –
உலகமுண்ட பெரு வாயனிலே -அகலகில்லேன் -என்று
பூர்ண பிரபத்தி பண்ணின இடத்திலும் பலித்ததில்லை என்று
உண்ணிலாவிலே
அப்பனே என்னை ஆள்வானே -என்று நின்ற இடத்தில் நிற்க ஒட்டாமல் கூப்பிட
ஸ்ரீ திருவேங்கடத்து என்னானை என் அப்பன் –
ஸ்ரீ அரங்கநகர் மேய அப்பனாய்-மந்தி பாய் -இத்யாதிப் படியே பைத்த பாம்பணையானவன்-
அரங்கத்து அரவின் இணை யானாய் –
பைகொள் பாம்பணையாய் இவள் திறத்து அருளாய் –
இவள் திறத்து என் சிந்தித்தாய் – என்று கேட்கும் படி
உறங்குவான் போல் யோகு செய்து யோக நித்தரை சிந்தை செய்து
இவர் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு
அறலைக்கக் கிடக்கிறவரை பார்த்து என்ற படி-
தொடங்கின கார்யம் தலைக் கட்டும் தனையும் பற்றாது போலே இருந்தது இவள் ஆற்றாமை
இதுக்கு என் செய்வோம் -என்று அவர் ஆராயப் புக்கார்-

அங்கு -அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றத்தை
இங்கு -என் திரு மகள் சேர் மார்பனே -என்றார் –
வண்ணமருள் கொள் அணி மேக வண்ணா -என்றத்தை
முகில் வண்ணன் -என்றார்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றத்தை
அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றார்
துளங்கு நீண் முடி -ஸ்ரீ திருவரங்க பாசுரம் -ஸ்ரீ திருவேங்கட சரித்திரம் சொல்லி –
துளங்கு நீண் முடி-என்று தொடங்கி ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்று இறே
ஐக்யமாக அருளிச் செய்தது
சென்னி யோங்கு தண் திரு வேங்கட முடையானே இறே
பொன்னி சூழ் திருவரங்கனாக கண் வளர்ந்து அருளுகிறது –

இவர் ரஷண சிந்தைக்கு பாங்கான தேசம்
ஸ்ரீ பாற்கடல் ஸ்ரீ அரங்கம் போலே –

———————————————

அவதாரிகை –

இதில்-ஸ்ரீ தென் திருப் பேரிலே அபஹ்ருத சித்தர் ஆனபடியை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
கீழ் –
தம் தசை தாம் வாய் விட்டு பேச மாட்டாதே மோஹித்துக் கிடந்தவர்
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு நாம பிரசங்கமே-சிசிரோப சாரமாக-அத்தாலே ஆஸ்வச்தராய் யுணர்ந்து
தத் வைலஷ்ய அனுசந்தானத்தாலே அப்ருஹ்ய சித்தராய்
ஸ்ரீ பெரிய பெருமாள் எழுந்து அருளி இருக்கிறது
ஸ்ரீ தென் திருப் பேரிலே போவதாகப் பதறிப் புறப்பட இப்படி பதறுகை நம் ஸ்வரூபத்துக்கு சேராது
அவர் தாமே வரக் கண்டு
நம் சேஷத்வத்தை நோக்கிக் கொண்டு-பாடாற்றிக் கொண்டு இருக்க வேண்டாவோ என்று பரிசர வர்த்திகள் நிவாரிக்க
சர்வதா நான் அங்கே போய் சேருகை தவிரேன் -என்று தம் துணிவை அவர்களுக்கு சொல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற-வெள்ளிச் சுரி சங்கில் அர்த்தத்தை
வெள்ளிய நாமம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக -உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு
அற்றவர்கள் தாம் ஆழியார் —63-

———————————————

வியாக்யானம்–

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் -மோகம் –
வெள்ளிய நாமம் கேட்டு -மோகம் -விட்டகன்ற பின் –
பாவநத்வ-போக்யத்வ-தாரகத்வாதி குணங்களை யுடைய முகில் வண்ணரான
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திரு நாமங்களை பாட்டுத் தோறும் திருத் தாயார் சொல்லக் கேட்டு
கீழில் மோஹமானது விட்டுப் போன பின்பு –

தெள்ளியமால் தென் திருப்பேர் சென்று புக –
ஆஸ்ரித ரஷணத்திலே விவேகஜ்ஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் வர்த்திக்கிற ஸ்ரீ தென் திருப் பேரிலே
தென் திருப் பேரையில் சேர்வன் நானே -என்றும்
திருப் பேரையில் சேர்வன் சென்றே -என்றும்-சென்று புகுவதாக ஒருப்பட இவ் வதிபிரவ்ருதியை
தாய் மாறும் தோழி மாறும் தடஸ்தராய் உள்ளாறும் கண்டு இப்படி சாஹசத்தில் ஒருப்படுகை உக்தம் அன்று
என்று நிஷேதிக்க –

உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் –
திரு உள்ளம் தம்மை ஒழியவும்-முந்துற்ற நெஞ்சாய்- வீற்று இருந்த இவ்விஷயத்தில்
மாறுபாடு உருவ ஊன்றி நின்ற ஸ்வபாவத்தை நிஷேதிப்பாருக்கு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –
அதாவது –
நானக் கருங்குழல் தோழி மீர்காள் அன்னைமீர்காள் அயர் சேரி யீர்காள்
நான் இத்தனை நெஞ்சம் காக்க மாட்டேன் -என்று தொடங்கி
கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே -என்றும்
செங்கனி வாயின் திறத்ததாயும்-என்று தொடங்கி –
நாங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே -என்றும்
இழந்த எம்மாமைத் திறத்து போன என் நெஞ்சினாறும் அங்கே ஒழிந்தார் -என்று தொடங்கி
அன்னையார்கள் என்னை என் முனிந்தே -என்றும்
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் —
காலம் பெற என்னைக் காட்டுமினே –
காலம் பெற என்னைக் காட்டுமின்கள் -என்றும்
பேரையிற்கே புக்க என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே -என்றும்
நெஞ்சு நிறைவும் எனக்கு இங்கு இல்லை -என்றும்
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே-என்றும்
இப்படி தாம் அங்கே பத்த பாவரான படியை-பத்தும் பத்தாக அருளிச் செய்தவை -என்கை –
அச்யா தேவயா மனஸ் தஸ்மின் -என்னக் கடவது இறே-
அன்றிக்கே
வெள்ளிய நாமம் கேட்டு விட்டு அகன்ற பின் மோகம் தெள்ளியமால் தென் திருப் பேர் சென்று புகுந்து
உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் -என்று ஏக வாக்யமாக யோஜிக்கவுமாம் –

உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு அற்றவர்கள் தாம் ஆழியார் –
இத் திருவாய் மொழி முகேன தம் திரு உள்ளம் ஸ்ரீ திருப் பேரில் இருப்பிலே அபஹ்ருதமான படியை அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே தேவு மற்று அறியேன் -என்றவர்கள்-

தாம் –
இப்படியான பெருமையை யுடைய தாங்கள் –

ஆழியார் –
அவர் அடிமைத் திறத்து ஆழியார் -என்னும் அவர்களிலும் இவர்களே அகாத பகவத் பக்தி சிந்துவான
ஸ்ரீ நாத முனிகளைப் போல மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருளை அறிய வல்லரான
அகாத ஜ்ஞான பிரேமங்களை யுடையார் –

—————————————————

அவதாரிகை –

இதில் -விஜய பரம்பரைகளைப் பேசின படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
பக்தி அதிசயத்தாலே அவசன்னரான இவர் தளர்த்தியை மாற்றித் தரிப்பைக்கு
பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -என்று பிரஸ்துதமான
அவதார சரிதமாய் யுள்ள ஸ்ரீ த்ரி விக்ரமணம் தொடங்கி ஸ்ரீ கோவர்த்தன உத்தாரணம் பர்யந்தமான விஜய பரம்பரைகளை
பத்தும் பத்தாக அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற
ஆழி எழ சங்கில் அர்த்தத்தை ஆழி வண்ணன் இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————–

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி
வாழிதனால் என்று மகிழ்ந்து நிற்க -ஊழிலவை
தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்——64-

—————————————————————

வியாக்யானம்–

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி வாழிதனால் என்று மகிந்து நிற்க –
அதாவது –
கீழ்-ஆழி நீர் வண்ணனை அச்சுதனை -என்று ஸ்ரமஹரமான வடிவை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்
தன் விஜய பரம்பரைகளான சர்வ சேஷ்டிதங்களையும் இவருக்கு விஷயமாம்படி காட்டி
ஏவம் விதமான இவற்றாலே ஹ்ருஷ்டராய் வாழும் என்று சொல்லி
அவ்வாகாரங்களைக் காட்டிக் கொடு நிற்க –

சிர நிர்வ்ருத்தம் அப்யே தத் ப்ரத்யஷம் இவ தர்சிதம் -என்னும்படியே
ஆழி எழ -என்று தொடங்கி-அப்பன் ஊழி எழ யுலகம் கொண்டவாறே -என்று ஸ்ரீ த்ரிவிக்ரமணத்தையும்-
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி-என்று தொடங்கி – அப்பன் சாறு பட வமுதம் கொண்ட நான்றே -என்று
அம்ருத மதன வைசித்ரதையும்
நான்றில வேழ் மண்ணும் -என்று தொடங்கி
அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே -என்று பூமி உத்தாரண சக்தியையும்-
நாளும் எழ -என்று தொடங்கி அப்பன் ஊழி எழ உலகம் உண்ட ஊனே -என்று ஜகன் நிகரணத்தையும்
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி -என்று தொடங்கி – அப்பன் காணுடைப் பாரதம் கையறப் போழ்தே -என்று-
பாரத சமர அத்புதத்தையும்
போழ்ந்து மெலிந்த புன் செக்கரில் -என்று தொடங்கி – அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே -என்று
ஹிரண்ய விதாரண க்ரமத்தையும்-
நேர் செரிந்தான் -என்று -தொடங்கி அப்பன் நேர் சேரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே -என்று
பாண பாஹூ வனச் சேதன சேஷ்டிதத்தையும் –
அன்று மண் நீர் எரி கால் -என்று தொடங்கி அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே -என்று
ஜகத் சமஷ்டி ஸ்ருஷ்டிதையும்
மேய நிரை கீழ் புக -என்று தொடங்கி அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே -என்று
ஸ்ரீ கோவர்த்தன உத்தரண சாமர்த்தியத்தையும்
கண்டு அனுபவித்து-குன்றம் எடுத்த பிரான் அடியோரோடும் ஒன்றி நின்ற சடகோபன் -என்று
மகிழ்ந்து கால் தரித்து நின்றார் ஆயிற்று –
நந்தாமி பஸ்யன் நபிதர்ச நேன -என்னக் கடவது இறே –

ஊழிலவை தன்னை –
பழையதாய் கழிந்த அந்த அபதானங்களை-

இன்று போல் கண்டு-
பிரத்யஷமாக இன்று போல் அனுபவித்து –

தானுரைத்த மாறன் சொல் –
தாம் அனுபவத்துக்கு-போக்குவீட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை –

பன்னுவரே நல்லது கற்பார் –
ஆராய்ந்து அனுசந்திக்கும் அவர்களே தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக
விலஷண சப்தங்களை அப்யசிப்பார் ஆவார் —
தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அறிந்து அனுசந்திக்குமவர்களே
எல்லாம் அறிந்து அனுசந்திக்குமவர்கள் -என்றது ஆயிற்று-

———————————————

அவதாரிகை –

இதில் விஜயங்களுக்கு அடியான விபவங்களை இழப்பதே என்று வெறுத்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அதாவது
கீழ்ச் சொன்ன விஜய பரம்பரைக்கு அடியான விபவ குணங்களை அனுசந்தித்து
படுக்கைக்கு கீழே தனம் கிடக்க கால் வீங்கிச் சாவாரைப் போலே
இம் மகா நிதி யுண்டாய் இருக்க இவர்கள் இத்தை இழந்து அனர்த்தப் படுவதே
என்று சம்சாரிகள் இழவுக்கு வெறுக்கிற கற்பார் ராம பிரானில் அர்த்தத்தை
கற்றோர் கருதும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————-

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா –65-

———————————————–

வியாக்யானம்–

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம் பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து –
அதாவது –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் கற்ற
ஸ்ரீ சக்கரவர்த்தி-ஸ்ரீ வசுதேவர் -ஸ்ரீ ஜாம்பவான்-ஸ்ரீ மகா ராஜர் -ஸ்ரீ திருவடி
முதலாய் உள்ள அவதார விஜய ஹர்ஷிகள் ஆனவர்கள் ஆதரிக்கும் விஜயங்களுக்கு எல்லாம்
ஆஸ்ரமாய் உள்ள அவதாரமான ஸ்ரீ விபவ குண ஸ்வ பாவங்களை —
அவதாரம் தோறும்-தத் அனுகுணமாக குணங்களும் இறே பேதித்து இருப்பது –
அவை தான் ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாகையாலே-அவற்றின் ஸ்வபாவத்தை உற்று உணர்ந்து
அவற்றின் படியை மேல் எழ அன்றிக்கே அந்தரங்கமாக ஆராய்ந்து –
அதாவது –
ராமோ ராமோ ராம இதி -என்றும்
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
நடந்தமை கேட்டும் நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும் –
தன்மை அறிவாரை அறிந்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பாரோ -என்றும்
தோற்றிய சூழல்கள் சிந்தித்து தன்மை அறிபவர் தாம் அவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
கேழல் திரு உருவாய் ஆயிற்று கேட்டும் உணர்ந்தவர்
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி ஆவரோ -என்றும்
கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டும் கேட்டும் உணர்ந்தவர்
கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
கொண்டு அங்கு தன்னோடும் கொண்டுடன் சென்றது உணர்ந்தும் கண்டும் தெளிந்தும்
கற்றார் கன்னற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
இரணியன் ஆகத்தை மல்லல் அரி உருவாய்ச் செய்த மாயம் அறிந்தும் செல்ல உணர்ந்தவர்
செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ -என்றும்
நடந்த நல் வார்த்தை அறிந்தும் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்று –மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
இப்படி பத்தும் பத்தாக ஆராய்ந்து -என்கை-

மண்ணில் உள்ளோர் தம் இழவை –
அவன் குணம் இப்படியாய் இருக்க இத்தை இழப்பதே -என்று
பூமியில் உண்டானவர்கள் உடைய ஸ்ரீ பகவத் குண அனுபவ அலாபத்தை –

வாய்ந்து உரைத்த மாறன் சொல் –
ஸூலபராய்க் கிட்டி நின்று அந்தரங்கமாக அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியானது-

பண்ணில் இனிதான தமிழ்ப் பா –
நட்ட ராகத்தோடு கூடி திராவிட சப்த ரூபமான சந்தஸ் ஸூ
இப்படி கானத்தோடு கூடின இதுவும் ஒரு சந்தஸ்ஸே என்று ஈடுபாடாய் இருக்கிறது-

—————————————————

அவதாரிகை –

இதில் எம்பெருமான் உடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கற்பாரில் – நிரவதிக போக்யங்களான கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ எம்பெருமான் உடைய
பிராப்யத்வம்-பிராபகத்வம்-விரோதி நிவர்த்தகம் ஆகிற இவ்வோ ஸ்வபாவங்களை அனுசந்தித்து
இப்படி குணாதிகன் ஆனவனை அனுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு கிடையாமையாலே
அம்பு பட்டாரைப் போலே கிடந்தது உழலுகின்ற -உழைக்கின்ற -தழைக்கின்ற –
பாமருவு மூவுலகில் அர்த்தத்தை-பா மருவு வேதம் இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————-

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்–66-

—————————————————-

வியாக்யானம்–

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன் ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை-
சந்தஸ்ஸூக்களுடன் கூடின வேதப் பிரதிபாத்யமான குணங்களோடு கூடி
நன்றான அழகு மேன்மை யானவற்றை –

தூ மனத்தால் நண்ணி –
மனசாது விஸூத்தேன -என்று-மானஸ சாஷாத் காரத்தாலே கிட்டு அனுபவித்து –

அவனைக் காண-
கீழ் உக்த குண விசிஷ்டன் ஆனவனை பிரத்யஷ அனுபவம் பண்ண வேணும் என்று இச்சித்து –

நன்குருகிக் கூப்பிட்ட –
நன்றாக உருகி-அந்த பிரேம அனுகூலமான உருகலோடே கூப்பிட்ட –

அண்ணலை நண்ணார் ஏழையர்-
அதாவது
வேதம் பகரும் ஸ்ரீ மால் குணங்கள் ஆவன – சர்வான் காமான் -என்கிற கல்யாண குணகங்கள் –
அவைதான் பிராப்யங்களாயும் பிராபகங்களாயும் இருக்கும் இறே
மோஷ தசையில் பிராப்யமுமாய்-முமுஷூ தசையில்
அனுபவிப்பார்க்கு அவதாராதிகளில் பிராப்யத்வ பிராபகதவம் ஆகிற
யுபகாரத்தையும் யுடைத்தாய் இருக்கும் –

பாமருவு மூவுலகும் படைத்த பற்ப நாவாவோ -என்று தொடங்கி
தாமரைக் கையாவோ யுன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
என்று கொல் சேர்வது அந்தோ -என்று தொடங்கி – நின் திருப் பாதத்தை யான் -என்றும்–பிராப்யத்வத்தையும்

காத எம் கூத்தாவோ -என்று தொடங்கி உன்னை எங்குத் தலைப் பெய்வனே -என்றும்
எங்குத் தலைப் பெயவன் நான் என்று தொடங்கி என்னுடைக் கோவலனே -என்றும்
என்னுடை ஆருயிரார் எங்கனே கொல் வந்து எய்துவரே -என்றும்
வந்து எய்து மாற்றியேன் -என்று தொடங்கி என் திரு மார்பனை -என்றும்
என் திரு மார்பன் தன்னை -என்று தொடங்கி -விசும்பு ஆளியைக் காணேனே -என்றும்
இப்படி அஞ்சு பாட்டாலே -அவனுடைய பிராபகத்வத்தையும்-

ஆளியைக் காண்பரியாய் -என்று தொடங்கி அடர்த்தானையும் காண்டும் கொலோ -என்றும்
காண்டும் கொலோ நெஞ்சம் -என்று தொடங்கி அமரர் அரி ஏற்றினையே -என்றும் –
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்தீற்று இளம் பிள்ளை -என்று
மோஷ பிரதத்வத்தையும் –

இப்படியான பகவான் ரூப கல்யாண குண-என்கிற இக் கல்யாண குணங்களோடு
நன்றான அழகையும் –
அதாவது –
பற்ப நாபாவோ -என்று -கொப்பூழில் எழு கமலப் பூ அழகையும்
பற்ப பாதாவோ தாமரைக் கண்ணாவோ தாமரைக் கையாவோ செய்ய திருப்பாதம் -என்று
திவ்ய அவயவ சௌந்தர்யத்தையும்
காத்த எம் கூத்தாவோ-என்று சமுதாய சோபையையும்
பூம் தண் துழாய் முடியாய் -என்று ஒப்பனை அழகையையும்
என் பொல்லாக் கரு மாணிக்கமே -என்றும்
செஞ்சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் -என்று வடிவு அழகையும்
என் திரு மார்பனையே -என்று ஸ்ரீ யபதியால் வந்த சேர்த்தி அழகையும்-

அத்தோடு வேண்டப்பாட்டையும் –
அதாவது –
மூ வுலகும் படைத்த -என்று ஜகத் ஸ்ருஷ்டத்வத்தையும்
மூ வுலகும் அளந்த -என்று ஸ்ருஷ்டமான ஜகத்தை தன் காலின் கீழே யாம்படி எல்லை நடந்து மீட்டியும்
அதுக்கு மேலே
தாமரைக் கண்ணாவோ -என்று புண்டரீகாஷத்தால் வந்த மேன்மையையும்
அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதம் -என்று சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
என் மலைமகள் கூறன் தன்னை என்றும்
என் நா மகளை அகம்பால் கொண்ட நான்முகனை நின்ற சசிபதியை
என்று அவர்களுக்கு அந்தர்யாத்மதயா நிர்வாஹகனான படியையும் –
இவற்றாலே பலித்த வேண்டப்பாடு இவை என்கை –

தூ மனத்தால் நண்ணி -இத்யாதி –
கீழே உக்தங்களான இவற்றைத் தூ மனத்தனனாய் என்கிற பரிசுத்தமான ஞான விஷயமாம்படி
அனுபவித்து
ஏவம் வித்னனவனை பிரத்யஷ சாஷாத்காரத்தாலே அனுபவிக்க இச்சித்து
பக்தி பாரவச்யரால் த்ரவீபூதராய்க் கூப்பிட்ட
பற்ப நாபாவோ -என்றும்
காத்த எம் கூத்தாவோ -என்றும்
விசும்பாளியைக் காணேனே -என்றும்-இப்படி விஷாத அதிசயத்தாலே கூப்பிட்ட

அண்ணலை நண்ணாதார் ஏழையர்–
இதர விஷயத்தில் சாபல்யராய்-தத் அலாபத்தாலே கூப்பிடுகிற சம்சாரிகள் நடுவே
ஸ்ரீ பகவத் அலாபத்தாலே கூப்பிடுகிற
சர்வாத்ம சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயியார்கள்-
அதுக்கு அடி இதர விஷய சாபல்யம் இறே-

இப்படி
ஸூலபராய் பிராப்த சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை லபியாதே இதர விஷய சாபல்யர் ஆவதே
என்று வெறுக்கிறார் –

———————————————————

அவதாரிகை –

இதில் அவனுடைய உத்தம அங்கத்தில் அழகு ஒரு முகமாய் நலிகிறபடியைப் பேசுகிற
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மல்கு நீலச் சுடர் தழைப்ப -என்று கீழே பிரஸ்துதமான
ஸ்ரீ எம்பெருமான் உடைய அழகு திரு உள்ளத்திலே ஊற்று இருந்து அத்தையே இடைவிடாமல் பாவித்து
பாவனா பிரகர்ஷத்தாலே அவ் வழகு பிரத்யஷ சாமானாகாரமாகத் தோற்றி
தனித் தனியாகவும் திரளாகவும் ஒரு முகம் செய்து நலிய தாம் நலிவு பட்டு செல்லுகிற படியை
உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி பாசுரத்தால் அருளிச் செய்கிற
ஏழையர் ஆவியில் அர்த்தத்தை-ஏழையர்கள் இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை –

———————————————–

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க -ஆழு மனம்
தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –67-

—————————————–

வியாக்யானம்–

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு –
சபலைகளான-அபலைகள் யுடைய மனசை த்ரவிப்பிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
ஸ்மயமான முகாம்புஜத்தில் நயன சௌந்தர்யம் –

சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க –
எங்கும் சூழ்ந்து-ஸ்ம்ருதி விஷயமாய் பாதகமாக இறே துக்கத்தை விளைப்பது –
அதாவது
வ்ருஷே வ்ருஷே ஹி பஸ்யாமி–பாச ஹஸ்த மிவாந்தகம்-என்னும்படி
ஏழையர் ஆவி யுண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன் -என்கிற முதல் பாட்டின் அடி ஒத்தின படி-

ஆழு மனம் தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த-
வெண்ணெய் யுண்டான் திரு மூக்கென தாவியுள்ளே மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் -என்றும்
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டை வாய் ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் -என்றும்
கண்ண பிரான் புருவம் அவையே என்னுயிர் மேலென வாயடுகின்றன வென்று நின்றே -என்றும்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் என தாவி யாடும் -என்றும்
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டல காதுகளே கை விடல் ஒன்றும் இன்றி அடுகின்றன -என்றும்
பெருமான் திரு நுதலே கோள் மன்னி ஆவி ஆடும் -என்றும்–இப்படித் தனித் தனியும் –

கோளிழைத் தாமரையும் -இத்யாதிப்படியே ஒரு முகமாயும்

அதுக்கு மேலே
செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டு போலே பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப -என்றும்
லலாட பர்யந்த விளம்பிதாலகம் -என்றும் சொல்லும்படியாய்
மாயன் குழல் விள்கின்ற பூம் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரை கள்கின்றவாறு-என்றும்
அருளிச் செய்த இவை என்கை –

இப்படி துக்க மக்னமான மனஸ் உடனே
அவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –
நிரவதிக போக்யமான அந்த உத்தம அங்கத்திலே சௌந்தர்யத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
விஷயத்திலே பொருந்தி இருக்குமவர்களுடைய பிரபல ப்ரதிபந்தகம் நசித்து நிச் சேஷமாகப் போம் –

தீ வினை -துஷ்கர்மம்
மாறன் சொல் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து-என்ற பாடம் ஆனபோது
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியை மனசிலே பொருந்தி
அனுசந்திக்குமவர்கள் பிரதிபந்தகம் நிச் சேஷமாகப் போம் -என்றபடி –

————————————————

அவதாரிகை

இதில் ஸ்ரீ எம்பெருமான் காட்டின விசித்திர ஜகதாகாரதையை அனுபவித்து
விஸ்மிதராய் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
ஏழையர் ஆவியில் உருவு வெளிப்பாட்டாலே நோவு படும்படி ஆற்றாமை கரை புரண்டு இருக்கச் செய்தேயும்
தம்மை அறியாத படி வைத்து நோக்கிக் கொண்டு போருகிற இவ் வாச்யர்த்தைக் கண்டு இவர் விஸ்மிதராக
இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மயப் படுகிறது என்று
தன்னுடைய ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க-அத்தை அனுபவித்து விஸ்மிதராக
இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மயப் படுகிறது
என்று தன் ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து விஸ்மிதர் ஆகிற
மாயா வாமானனில் அர்த்தத்தை-மாயாமல் தன்னை வைத்த இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————

மாயாமல் தன்னை வைத்த வை சித்திரியாலே
தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு ஆயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த மாறனை நாம்
ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று –68-

மாயாமல் தன்னை வைத்த-தம்முடைய சேஷத்வ ஸ்வரூபம் மாயாமல் தம்மை வைத்த

——————————————————

வியாக்யானம்–

மாயாமல் தன்னை வைத்த வைசித்திரியாலே-
அதாவது-சரண்யனான யுனக்கு அஞ்ஞான அசக்திகள் ஆகிற தோஷம் இன்றிக்கே
சர்வஞ்ஞதவாதி குணங்களும் உண்டாய் இருக்க
சரணாகதனான எனக்கு ஆகிஞ்சன்ய அனந்யகத்வம் ஆர்த்தியும் உண்டாகையாலே
அதிகாரி மாந்த்யமும் இன்றிக்கே இருக்க
வைத்த இதில் பொருந்தாத என்னை-வைத்து நடத்திக் கொண்டு போருகிறதுக்கு ஹேது என் என்று –
பாசங்கள் நீக்கி -என்று தொடங்கி மாயவனே அருளாய் -என்று அவன் தன்னைக் கேட்க
அவனும் அதுக்கு நிருத்தனாக
இது ஓன்று இருந்த படி என் –என்று-இவ் வாச்சர்யத்தில் இவர் விஸ்மிதர் ஆக
அவன் அவற்றைக் கண்டு வைத்து
இது ஓர் ஆச்சர்யமோ -என்று-தன் விசித்திர ஜகதாகாரயதையைக் காட்ட –

தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு-
மாயா வாமனனே -என்று தொடங்கி-இவை என்ன விசித்ரமே -என்றத்தை பின் சென்று அருளிச் செய்தபடி –
தீ யாதியாக பஞ்ச பூதங்களும்-ஒன்றின் கார்யம் ஒன்றுக்கு இன்றிக்கே விவிதாகாரமாய்
சேதன வர்க்கங்களும் அப்படியே விவிதாகாரம் ஆகையாலே விசித்திர மாயச் சேர்ந்த பதார்த்தங்களோடு –

ஆயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் –
அவற்றின் தோஷங்களை ஆராயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் –

ஓயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் -என்ற பாடமாம் போது
நிரந்தரமாகச் சேர்ந்து நிற்கும் -என்றாகவுமாம்–
பொருந்தி நிற்கும் ஆச்சர்ய சக்தி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
மாயா -என்றத்தைப் பேசின படி –

வளமுரைத்த –
விபூதி விச்தாரத்தை அருளிச் செய்த –
அதாவது –
புரா பூத்வாம்ரு துர்த்தாந்த நகரோ தவசமாபன்ன -என்னும்படி –
அம் கண் மலர்த்த்ண் துழாய் முடியானே அச்சுதனே அருளாய் —
பின்னும் வெம் கண் வெம் கூற்றமுமாய் இவை என்ன விசித்ரமே -என்றும்
சித்திரத் தேர் வலவா–வித்தகத்தால் நிற்றி நீ -என்றும்
கள்ளவிழ் தாமரைக் கண்ணனே -உள்ளப் பல் யோகு செய்தி -என்றும்
பாசங்கள் நீக்கி என்னை –இவை என்ன மயக்குகளே -என்றும்
மாயக்கா வாமனனே –இவை என்ன துயரங்களே -என்றும்
துயரங்கள் செய்யும் கண்ணா -இவை என்ன சுண்டாயங்களே -என்றும்
என்ன சுண்டாயங்களால் எங்கனே நின்றிட்டாய்–இவை என்ன இயற்கைகளே -என்றும்
என்ன இயற்கைகளால் நின்றிட்டாய் –உலப்பில்லை நுணுக்கங்களே -என்றும்
இல்லை நுணுக்கங்களே அச்சுதனே –அதுவே உனக்காம் வண்ணமே -என்றும்
இப்படி அவன் விசித்திர விபூதி விஸ்தார உக்தனாய் இருக்கிறபடியை அருளிச் செய்தவை-என்கை-

மாயன் வளம் உரைத்த மாறனை-
இப்படி விசித்திர ஜகதாகாரனானவன் சம்பத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வாரை –

நாம் ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று —
நாம் கிட்டி அவர் திரு நாமங்களைச் சொல்லி வாழும் காலம் ஆக வற்றோ-
அன்றும் ஒரு நாளாக ஆகவற்றோ -என்றபடி –

————————————————————

அவதாரிகை –

இதில் அவன் திருவாய் மொழியை பாடுவித்த படியை அனுசந்தித்து ஈடுபடுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்-
எனக்கு ருசி இன்றிக்கே இருக்க சம்சாரத்தில் என்னை வைத்ததுக்கு ஹேது என் என்று கேட்க –
உம்மைக் கொண்டு நமக்கும் நம்முடையாருக்கும் அனுபவிக்கலாம் படி விலஷணமான
ஸ்ரீ திருவாய் மொழி பிரபந்தத்தைப் பாடுவித்து கொள்ள வைத்தோம் காணும் -என்று
நேர் கொடு நேரான பரிஹரத்தை அவன் அருளிச் செய்ய –
ஸ்ரீ வேதங்கள் -ஸ்ரீ வ்யாசாதிகள்-ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் இவர்கள் யுண்டாய் இருக்க
அத்யந்த ஹேயனான என்னைக் கொண்டு
வேதங்களாலும் எல்லை காண ஒண்ணாத தன் வைபவத்ததுக்கு தகுதியாக
விலஷணமான திருவாய் மொழியை பாடுவித்துக் கொண்ட இந்த மகா உபகாரத்துக்கு
உபய விபூதியிலும் சத்ருசமாக செய்ய தக்கதொரு பிரத்யுபகாரம் இல்லை என்று தலை சீய்த்துப் படுகிற
என்றைக்கும் என்னையில் அர்த்தத்தை-என்தனை நீ -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————-

என்தனை நீ யிங்கு வைத்தது ஏதுக்கு என மாலும்
என்தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்றுகவி
பாட வெனக் கைம்மாறிலாமை பகர் மாறன்
பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் —69-

——————————————————-

வியாக்யானம்–

என்தனை நீ யிங்கு வைத்தது எதுக்கு என –
அவன் காட்டினதாகையாலே விசித்திர விபூதியை அனுபவித்து மீளவும் பூர்வ பிரக்ருதமான தம்முடைய சங்கையை
பாசங்கள் நீக்கி என்னை யுனக்கே அறக் கொண்டிட்டு நீ வாச மலர்த் தண் துழாய் முடியானே அருளாய் -என்று கேட்க –
என்தனை நீ –
சம்சாரத்தில் பொருந்தாத என்னை -நீ –
சம்சாரத்தில் பொருந்தாதாரை ஏற விடுகைக்கு சர்வ சக்தி உக்தனான நீ —

இங்கு –
இருள் தரும் மா ஞாலமான-இவ் விபூதியிலே

வைத்தது ஏதுக்கு என –
பிரயோஜன நிரபேஷமாய் இருக்க-என்ன பிரயோஜனத்தைப் பற்ற வைத்தது -என்ன –

மாலும் -என்தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்றுகவி பாட வெனக் –
ஸ்ரீ திருமாலான எனக்கு இனிதாகவும்
ஸ்ரீ திருமால் அடியாரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனிதாகவும்
விலஷணமாய்- கவி யமுதம் -என்னலாம் படியான இனிய கவிகளைப் பாட வைத்தோம் என்ன –
தன்னை கவி பாடுகைக்கு
ஸ்ரீ வேதங்களும் அத்தைப் பின் சென்ற வைதிகரான ஸ்ரீ வியாச ஸ்ரீ வால்மீகி பரபருதிகளான பரம ருஷிகளும்
செந்தமிழ் பாடுவாராய் பெரும் தமிழன் அல்லேன் பெரிது – -என்று
பிரசம்சிப்பாருமான ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் யுண்டாய் இருக்க –

கவி பாட என கைம்மாறிலாமை –
கவி பாட வைத்தோம் என்ற இந்த யுபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லாமையை –

பகர் மாறன் –
அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
அதாவது –
என்றைக்கும் –என் சொல்லி நிற்பேனோ -என்றும்
என் சொல்லி நிற்பன் –என் முன் சொல்லும் மூவுருவா முதல்வன -என்றும்
ஆ முதல்வன் இவன் என்று –என் வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ -என்றும்
செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டு —அப்பனை என்று மறப்பன் -என்றும்
சீர் கண்டு கொண்டு –பார் பரவின் கவி பாடும் பரமரே -என்றும்
இன்கவி பாடும் பரம கவிகளால் தன கவி தான் தன்னைப் பாடுவியாது -வன்கவி பாடும் என் வைகுந்த நாதனே -என்றும் –
வைகுந்த நாதான் -எந்நாள் சிந்தித்து ஆர்வனோ -என்றும்
ஆர்வனோ –சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே-என்றும்
திறத்துக்கு –உறப்பல இன் கவி சொன்ன உதவிக்கே -என்றும்
உதவிக் கைம்மாறு என்னுயிர் –எதுவும் ஒன்றும் செய்வது இல்லை இங்கும் அங்கும் -என்றும்
இப்படி உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே ஈடுபட்டு அருளிச் செய்தவை -என்கை —

என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற வதில்
உபகார ஸ்ம்ருதியோடே-என்று இறே ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

சதுர விம்சத் சஹஸ்ராணி ஸ்லோகா நாமுக்த வான்ருஷீ -என்னும்படி –
பாலோடு அமுதம் அன்னவான இங்கனே சொன்ன ஓர் ஆயிரமான
உறப்பல வின் கவிகளை பாடுவிக்கையாலே இவர்க்கு ஈடுபாடாய் இருக்கிறது –

கைம்மாறு இலாமை பகர் மாறன் -பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் –
இப்படி க்ருதஞ்ஞாரான ஸ்ரீ ஆழ்வார் பரிசர வர்த்திகளாம் படி கிட்டுவார்க்கு ஆனந்தம் யுண்டாம் –
எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே -என்கிற நிர்பந்தமும் வேண்டா
கேவலம் -கிட்டவே அமையும்-

————————————————

அவதாரிகை –

இதில்-திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பாரித்த ஸ்ரீ திவ்ய ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
தாம் பாடின ஸ்ரீ திருவாய் மொழியைக் கேட்கைகாக ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் பேர் ஒலக்கமாக
ஸ்ரீ திரு வாறன்விளையிலே அவன் வந்து எழுந்து அருளி இருக்கிற படியை அனுசந்தித்து
நாம் அங்கே சென்று ஸ்ரீ திருமாலவன் கவி -என்ற வாயோலைப் படியே அவனும் அவளுமான சேர்த்தியிலே
ஸ்ரீ திருவாய் மொழியை அவர்கள் இருவரும் உகந்து திருச் செவி சாத்தும்படி கேட்ப்பித்து
அடிமை செய்யப் பெறுவது எப்போதோ – என்று மநோ ரதிக்கிற -இன்பம் பயக்க -வில் அர்த்தத்தை
இன்பக் கவி பாடுவித்தோனை -என்று அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு —70-

————————————————-

வியாக்யானம்–

இன்பக் கவி பாடுவித்தோனை –
இன் கவி பாடிய ஈசனை -என்றும் –
இன்கவி என் பித்து -என்றும் –
என் நா முதல் வந்து புகுந்து நல் ஈன் கவி -என்றும்
திருந்து நல் ஈன் கவி -என்றும்
வண் தீன் கவி -என்றும்
சீர் பெற இன்கவி -என்றும்
உறப் பல இன் கவி -என்றும்
பதவியவன் கவி பாடிய வப்பன் -என்றும்
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவாய் மொழியை என்னைக் கொண்டு பாடுவித்த உபகாரகனை-

இந்திரையோடு அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட ஸ்ரீ திருவாய் மொழி கேட்கைக்கு பங்கான இடம் -என்று
அத்ய ஆதாரத்தைப் பண்ணி வாழ்ந்து கொடு போருகிற ஸ்ரீ திரு வாறன் விளையில்
அன்றிக்கே
இந்திரையோடு அன்புற்று -என்று ஸ்ரீ பெரிய பிராட்டியார் இடத்தில் ஸ்நிக்தனாய் -என்றுமாம் –
இத்தால் -இன்பம் பயக்க -என்கிற முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்த படி –
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-என்றும்
ராமஸ் சீதாம் -நுபிராப்ய ராஜ்ஜியம் புநரவாப்தவான் பிரஹருஷ்டம் உதித்தோ லோகே – -இறே-

திரு வாறன் விளையில் துன்பமறக் கண்டு –
ஏழையர் ஆவியில் துக்கம் எல்லாம் தீரக் கண்டு –

அடிமை செய்யக் கருதிய –
கண்டால் செய்யும் கார்யமான கைங்கர்யம் செய்கையிலே மநோ ரதிக்கிற –
அதாவது –
அன்புற்று அமர்ந்து வலம் செய்து கை தொழ நாள்களும் ஆகும் கொலோ -என்றும்
மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்து கை தொழக் கூடும் கொலோ -என்றும்
நீடு பொழில் திரு வாறன் விளை தொழ வாய்க்கும் கொள் நிச்சலுமே -என்றும்
வட மதுரைப் பிறந்த வாய்க்குல மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகள் எப்பொழுதும் மனத்து
ஈங்கு நினைக்கப் பெற வாய்க்கும் கொல் நிச்சலுமே -என்றும்
மதிள் திரு வாறன் விளை உலக மலி புகழ் பாட -என்றும்
திரு வாறன் விளை என்னும் நீண் நகரம் அதுவே -என்றும்
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றிலமே -என்றும்
திரு வாறன் விளை ஒன்றி வலம் செய்ய -என்றும்
திரு வாறன் விளை அதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனையே -என்றும்
திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின் சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாததன்மை –என்றும்
இப்படி யாயிற்று அவருக்கு இவ் விஷயத்தில் கைங்கர்ய மநோ ரதம் நடந்த படி -என்கை-

உபகார ஸ்ம்ருதியோடே தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க விருந்த
நிலத் தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் ஸ்ரீ தேவ பிரான் அறிய மறந்தவர்–என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனார் அருளிச் செய்தது –

கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே திண் திறலோர் யாவர்க்கும் தேவு –
தர்சன அனுபவ கைங்கர்ய அனுபவ மநோ ரதத்தை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே
திருட அத்யாவச்ய உக்தராய் உள்ளவர்க்கு எல்லாம் பர தேவதை –
ஸ்ரீ ஆழ்வாரும் வேண்டா – நமக்கு உத்தேச்யம் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே -அமையும்
அன்றிக்கே –
மாறன் கழல் சேர் திண் திறலோர் -உண்டு-திருட அத்யாவசாய உக்தரான ஸ்ரீ மதுரகவி ஸ்ரீ நாத முனி பரப்ரக்ருதிகளாய் உள்ளவர்கள் –
மற்றும் அத்யாவசாய யுக்தராய் உள்ளார் -எல்லாருக்கும் குல தைவம் என்றாகவுமாம் —
அவன் விட்டாலும் அவள் விடாள் -அவள் விட்டாலும் விடாத திண்ணிய கழல் –நமது ஆச்சார்யர்கள் –
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாருக்கும் -நம் போலே அத்யாவச்யம் இல்லாதவர்களுக்கும் –

————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —ஆறாம் பத்து–பாசுரங்கள்- 51-60-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில்-ஆற்றாமையாலே தூது விடுகிற ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அடி விடாமல்-நோற்ற நாலிலும் அமோகமாய் இருக்கிற சரண வரணம் ஆகிற ப்ரஹ்மாஸ்திரம் பண்ணி இருக்கச் செய்தேயும்
அவன் ஜகத் ரஷண ஹேதுவாக கார்யம் செய்யாது ஒழிய
அத்தாலே-தம் அபேஷிதம் கிடையாமையாலே
மிகவும் தளர்ந்து-ஆர்த்த ரஷணத்தில் தீஷித்து இருக்கிறவன் ஆகையாலே நம் ஆர்த்தியை அறிவிக்கவே தப்பாமல் நம் கார்யம் செய்யும்
ஸ்ரீ திரு வண் வண்டூரில் ஐஸ்வர்யத்தில் கால் தாழ்ந்து நம்மை மறந்தான் இத்தனை -என்று அனுசந்தித்து
கடகரை இட்டு
நத்யஜேயம் -என்ற ஸ்ரீ தசரதாத் மஜனுக்கு தம் தசையை அறிவித்துச் சொல்லுகிறபடியை
ஸ்ரீ நாயகன் வரும் அளவும் கண்டு ஆறி இருக்க மாட்டாமல் ஆற்றாமையாலே ஸ்ரீ நாயகனைக் குறித்து
தூது விடுகிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
வைகல் பூம் கழி வாயில் அர்த்தத்தை-வைகல் திரு வண் வண்டூர் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————–

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என்
செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த
காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின் —51-

————————————————-

வியாக்யானம்–

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு –
தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -என்றத்தை நினைக்கிறது
இரண்டாம் தூதுக்கு விஷயம் ஸ்ரீ விபவம் இறே
வ்யவசாயஞ்ஞர் ரஷணச்தைர்யம் பம்போத்தர தேசச்தம் –என்றார் இறே
ஸ்ரீ திரு வண் வண்டூரிலே பிற்பட்டாரை ரஷிக்கைக்கு சர்வ காலமும் நித்ய வாசம் பண்ணுகிற
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கு
ஜனக குல சுந்தரி ஜீவந்தீம் -என்று ஆள் விட்டதும்
பம்பா பரிசர பர்வதத்திலே வர்த்திக்கிறவரைக் குறித்து ஆயிற்று –
ஸ்தைர்யம் ஹிமவான் போலே -ஸ்ரீ ராமன் – உத்தர -கிஷ்கந்தை -அங்கு ஸ்ரீ சீதை ஆள்விட்டாள்

என் செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் –
என் தசையைப் பஷ பாதம் உடையவர்களே தாழாமல் சொல்லும் என
அதாவது –
குருகினங்காள் -வினையாட்டியேன் காதன்மையைக் கைகள் கூப்பிச் சொல்லீர் -என்றும்
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே -என்றும்
திறங்களாகி எங்கும் செய்கலூடு ழல் புள்ளினங்காள் -அடியேன் இடரை இறங்கி நீர் தொழுது பணியீர் -என்றும்
மட வன்னங்காள் உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே -என்றும்
உடன் மேயு மட வன்னங்காள் -அடியேனுக்கும் போற்றுமினே -என்றும்
புன்னை மேலுறை பூங்குயில்காள் மாற்றம் கொண்டு அருளி உரையீர் மையல் தீர்வது ஒரு வண்ணமே -என்றும்
அடையாளம் திருந்தக் கண்டு எனக்கு ஓன்று யுரை ஒண் கிளியே -என்றும்
கரும் திண் மா முகில் போல் திருவடிகளை –திருந்தக் கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய் -என்றும்
அடிகள் கை தொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள் கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் வேறு கொண்டே -என்றும்
இப்புடைகளிலே அத்யார்த்தியை அனைவருக்கும் அறிவித்தவை -என்கை –

கை கழிந்த காதலுடன் தூதுவிடும் –
என்னையும் உளன் என்மின்களே -என்று தாம் வந்து நோக்கா விடில் சத்தை இல்லை –
இப்போது வந்து நோக்குகைக்கு ஈடான சத்தா மாதரமும் கிடக்கிறது என்னுங்கோள் என்கையாலே
கை கழிந்த காதல் உடன் தூது விட்ட படி இது வாயிற்று —

காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே மேதினியீர் நீர் வணங்குமின் –
ஆற்றாமையோடு தம் பேற்றுக்கு கடகரை அர்த்திக்கிற ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை
உங்கள் பேற்றுக்கு பூமியில் உண்டானவர்களே நீங்கள் வணங்கி வழி படுங்கோள்
அவர் -மாநிலத்து எவ் உயர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் –என்னுமா போலே
இவரும் இருந்ததே குடியாக உபதேசிக்கிறார் –

———————————————————————————————-

அவதாரிகை –

இதில்
பிரணய ரோஷத்தாலே யூடின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம் ஆற்றாமையாலே-நோற்ற நாலிலும் சரணம் புக்கு-தூது விட்டு
இத்தனையும் செய்த விடத்தும் அவன் வரக் காணாமையாலே
பிரணய ரோஷம் தலை எடுத்து
அவன் வந்தாலும் இனி அவனோடு கலப்போம் அல்லோம் -என்று
பரிவார வர்திகளான ஸூக்ருத்துக்களோடு தாம் துணிந்து இருக்க
அவனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முதலான ஆஸ்ரிதர் ஆபத்தில் முற்பாடானாய் சென்று
ஆபத்தைப் போக்கி ரஷித்த நாம் -ஸ்ரீ ஆழ்வாருக்கு பிற்பாடர் ஆனோமே
என்று பிற்பாட்டுக்கு தாம் போர நொந்து-தம்முடன் கலப்பதாக பதறி-நடந்து வந்து
வடிவு அழகாலும்
சேஷ்டிதையாலும்
தன் செல்லாமையாலும்-தம்மூடலைத் தீர்த்து-தம்முடன் கலந்த படியை –
ஸ்ரீ கிருஷ்ணன் வரவு தாழ்க்கையாலே அவனோடு ஊடி
இனிக் கூடோம் என்று இருந்த இடைப் பெண்களை
தன்னுடைய சௌந்தர்யாதிகளாலும்
செல்லாமையாலும்-ஊடலைத் தீர்த்து ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடன் சேர்த்துக் கொண்ட
வ்ருத்தாந்தத்தின் மேல் வைத்து அருளிச் செய்த-மின்னிடை மடவாரில் அர்த்தத்தை
மின்னிடையார் சேர் கண்ணன் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

———————————————————

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன்னிலை போய்ப் பெண்ணிலை யாய்த் தான் தள்ளி -உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாடோறும் நெஞ்சமே நல்கு—52-

———————————————————–

வியாக்யானம்–

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
மின்னிடை மடவார் உடன் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் அங்குத்தையில் அந்ய பரதையாலே
ஆற்றாமைக்கு உதவ வராமல் ‘ மந்த கதியாய் வந்தான் என்று – அவன் தங்கள் இடத்தில் பண்ணும் அபி நிவேத்தை
அந்யதாகரித்து தங்கள் ஆற்றாமையாலே அவன் பதற்றத்தையும் அசத் கல்பம் ஆக்குகிற –
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் -என்றத்தை
கடாஷித்து அருளிச் செய்தபடி –

தன்னிலை போய்ப் பெண்ணிலையாய்த்-
அதாவது –
ஸ்ரீ குருகூர் சடகோபன் -என்கிற ஆகாரம் குலைந்து ஸ்ரீ கோபிமார் உடைய ஆகாரத்தை யுடையராய் –

தான் தள்ளி –
தங்கள் கழகம் இருக்கிற சங்கேத ஸ்தலத்திலே புகுருவதாக அவன் அருகே வர
போகு நம்பி -என்றும்
குழலூது போய் இருந்தே -என்றும்
போய் இருந்து உன் புள்ளுவம் அறியாதவற்கு உரை நம்பி -என்றும்
எம்மை நீ கழரேலே -என்றும்
எம் குழறு பூவையோடும் கிளியோடும் குழகேலே -என்றும்
கழகம் ஏறேல் நம்பி -என்றும் –
கன்மம் அன்று எங்கையில் பாவை பறிப்பது -என்றும்
உனக்கேலும் பிழை பிழையே -என்றும்-அவனுக்கு அவகாசம் அறும்படி
ப்ரண யாச்சா பீமா நாச்சா பரிசிஷே பராகவம் -என்று ஊடும் படியையும்-

அவனும்
உன் தாமரை புரை கண் இணையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய -என்றும்
நின் செய்ய வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள் -என்றும்
வன்மையே சொல்லி எம்மை நீ விளையாடுதீ -என்றும்
உகவையால் நெஞ்சமுள் உருகி உன் தாமரத் தடம் கண் விழிகளில்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் -என்றும்-என்னும்படி
ஸ்மித
வீஷணங்களாலும்
பாவ கர்ப்பமான யுக்திகளாலும்
சேஷ்டிதங்களாலும்- ‘ஊடலைத் தீர்த்து சேர விட்டு
கூத்த வப்பன் தன்னைக் குருகூர் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை -என்னும்படி
கூடின படியையும் அருளிச் செய்கையாலே –

உன்னுடனே கூடேன் என்று ஊடும் குருகையர் கோன் -என்று
அருளிச் செய்த இதிலே கூடின முடியும் இவர்க்கு விவஷிதம்
மேலே-நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் -என்று இறே அருளிச் செய்யப் புகுகிறது –
அதுக்குச் சேர இங்கே கூட வேணும் இறே

ஊடும் குருகையர் கோன் தாள் தொழவே நாடோறும் நெஞ்சமே நல்கு
அவன் அல்ப்பம் தாழ்த்துக் கூடும்படியான பிரேமத்தை உடைய ஸ்ரீ ஆழ்வார்
திருவடிகளை நித்ய சேவை பண்ணும் படி மனசே நீயும் நித்யமாக சஹகாரியாய் யுபகரி –

நல்குதல் -கொடுத்தல்
மன ஏவ – இறே –

—————————————————

அவதாரிகை –

இதில் விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழே
அல்லோம் -என்று இருந்த தம்மை ஆவோம் -என்னப் பண்ணினவனுடைய அகடிகதடநா சாமர்த்தியத்தை அனுசந்தித்து
விஸ்மிதரான இவருக்கு-இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மிதர் ஆகிறது
நாட்டில் தன்னில் தான் சேராத பதார்த்தங்கள் எல்லாவற்றையும் நம்முடனே சேர்த்துக் கொண்டு
ஸ்ரீ திரு விண்ணகரிலே நிற்கிற படி பாரீர்-என்று அவன் தன் வ்ருத்த விபூதி யோகத்தைக் காட்ட
அத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராய்ச் செல்லுகிற -நல் குரவும் செல்வமும் – அர்த்தத்தை
நல்ல வலத்தால் இத்யாதியால் அருளிச் செய்கிறார் –

——————————————————

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் —53-

——————————————————-

வியாக்யானம்–

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் –
அதாவது
லீலா உபகரணங்களை எடுத்தும்
பறித்தும்
கழகம் எறியும்
வழி மறித்தும்
சிற்றில் அழித்தும்
முற்றத்தூடு புகுந்து முறுவல் செய்து வார்த்தை சொல்லியும்-சங்கேத ஸ்தானம் இவள் முற்றம்
கிட்டே வந்து முகம் காட்டி -முறுவல் செய்து -சாவிக்கும் அந்தராத்மா -கட்டி முடித்த பின்பு அழித்த-
லோகவத்து லீலா கைவல்யம் –வீட்டைப் பண்ணி விளையாடும் -விமலன் தன்னை குற்றம் இல்லாதவன்
வைஷம்யம் நைர்குண்யம் இல்லாதவன் -அநாயாசேனே மோஷம் அளிப்பான் -இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்
பிரயோஜ நாந்தரம் போகக் கூடாதே என்றே அழித்தான்
இப்படி யாயிற்று
இவர் ஊடலைத் தீர்த்து கூட விட்டது –
இவர்
இது ஓர் அகடிதகடநா சாமர்த்திய சக்தி இருந்தபடி என்-என்று பார்த்து
முன்- நண்ணாரை வெல்லும் -என்று -அத்தை மூதலிக்கிறார்
அதாவது
பும்ஸாம் சித்த திருஷ்டி அபஹாரியாய் -சாஷான் மன்மத மன்மதனான தன் சந்நிதியிலே
கிட்டோம் -என்றிருந்த தம்மை-ஸ்த்ரீத்வ அபிமானத்தைக் குலைத்து ஊடுகையைத் தவிர்த்து கூடப் பண்ணின படி -என்கை-
முன் நண்ணாதாராய் -கிட்டா தாராய் இருக்கிற நம்மை நல்ல வலத்தால் சேர்த்தோன் -என்று அந்வயம் ஆகவுமாம்

அன்றிக்கே
முன் நண்ணாரை வெல்லும்- -என்று
பூர்வ சத்ருக்களாய்-அவர்களை நின்று இலங்கு முடியனா -இத்யாதிப்படியே வென்றால் போலே
நம்மை நல்ல வலத்தால் சேர்த்தது -என்றாகவுமாம்-

இப்படி சேராததைச் சேர்ப்பதே -என்று இவர் ஈடுபட இது ஓன்று கண்டோ நீர் ஆச்சர்யப் படுகிறீர்
லோகத்தில் பரஸ்பர விருத்தங்களாய் இருக்கிற விபூதியைச் சேர்த்துக் கொண்டு
ஸ்ரீ திரு விண்ணகரிலே நிற்கிற படியைப் பாரீர் -என்று விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைக் காட்ட –
விருத்த விபூதியன் என்று –
அதாவது –
நல் குரவும் செல்வும் –
கண்ட வின்பம் துன்பம் –
நகரமும் நாடுகளும் –
புண்ணியம் பாவம் –
கைதவம் செம்மை –
மூவுலகங்களும் அல்லனாய்-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய் –
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் –
நிழல் வெய்யில் – இத்யாதி பாட்டுக்களிலே
அக்னி கோப பிரசாதஸ்தே சோம -என்னும் படியான விருத்த விபூதிகத்வத்தைப் பரக்கப் பேசி-

எல்லை யறத் தான் இருந்து வாழ்த்தும் –
அதாவது –
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை -என்றும்
கண்டு கொள்வதற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் -என்றும்
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் புகர்கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியம் -என்றும்
கண்ண நின்னருளே கண்டு கொண்மின்கள் -என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் வரன் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரண்-என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பன் -என்றும்
என் அப்பன் எனக்காய் -என்று தொடங்கி –திரு விண்ணகர் சேர்ந்த என் அப்பன் தன் ஒப்பாரில் அப்பன்
தந்தனன் தான தாள் நிழல் -என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலோம் -என்றும்
இப்படி இதுக்கு என்று சமைந்து இருந்து நிரவதிக ஸ்தோத்ரங்களால் ஸ்துதித்து அருளும் –

தமிழ் மாறன் சொல் வல்லார் –
சர்வ ஸூலபமான திராவிட பாஷைக்கு தேசிகரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய்மொழியை
அப்யசிக்க வல்லார் –

வானவர்க்கு வாய்த்த குரவர்
அவனுடைய விபூதியை-ததீயத் ஆகாரண அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கு அவ் வநுபவ விஷயமான
இத் திருவாய்மொழியை இவர்கள் இங்கேயே இருந்து அனுசந்திக்கையாலே அவர்களுக்கு அனுரூபமான ஆதரணீயர் ஆவார் –

திரு விண்ணகர் பத்தும் வல்லார் கோணை இன்றி
விண்ணோர்க்கு என்றும் ஆவார் குரவர்கள் -என்றத்தை அருளிச் செய்த படி –

———————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிகில திவ்ய சேஷ்டிதங்களை அனுபவித்து
அருளிச் செய்த படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மாசறு சோதி
மானேய் நோக்கு
பிறந்தவாறு-என்கிற திருவாய் மொழிகளிலே
சேணுயர் வானத்து இருக்கும் –
நாராயணன் நாமங்களே தொல் அருள் நல் வினையால் சொலக் கூடும் கோல் –
உருக்கி உண்டிடுகின்ற உன் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய்–என்று
தூரஸ்தன் என்றும்
நா நீர வரத் திரு நாமம் சொல்லக் கூடவற்றே -என்றும்
தரித்து நின்று குண அனுபவம் பண்ண வல்லேனாம் படி பண்ண வேண்டும் என்றும்
தாம் ஆசைப் பட்ட வகைகள் எல்லாம் சித்திக்கும் படி தான் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திரு வவதரித்து
செய்து அருளின நிகில சேஷ்டிதங்களையும்-தத் ஹேதுவான திவ்ய குணங்களையும்
அனுபவ விஷயமாக காட்டிக் கொடுக்க-அவற்றைக் கட்டடங்க தரித்து நின்று மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற குரவை ஆய்ச்சியில் அர்த்தத்தை
குரவை முதலாம் இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————-

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே துவள் —54-

———————————————————

வியாக்யானம்–

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் –
அதாவது –
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் -என்றும்
கேயத் தீங்குழல் ஊதிற்றும் -என்றும்
நிகரில் மல்லரைச் செற்றதும் -என்றும்
நோவ ஆய்ச்சி உரலொடு ஆர்க்க இரங்கிற்றும் -என்றும்
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -என்றும்
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் -என்றும்
மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில்தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டதும் -என்றும்
நீணிலத் தொடுவான் வியப்ப நிறை பெரும் போர்கல் செய்து வாணனை ஆயிரம் தோள் துணித்ததும் -என்றும்
கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும் கழியக் கடாயுலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் -என்றும்
மண் மிசை பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாய பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்தது
முதலாக எல்லா வற்றையும் நினைக்கிறது
குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் -என்று

முந்துற குரவை முதலாகக் காட்டினது திருக் குரவையில்
ஆரவாரத்தை அனுபவித்து தரிக்கைக்காக –
வேண்டித் தேவர் இரக்க -வந்து பிறந்த வ்ருத்தாந்தத்தை
முந்துற முன்னம் காட்டாது ஒழிந்தது
பிறந்த வாற்றில் ஆழம் கால் பட்டு ஆறு மாசம் மோஹித்தால் போலே மோஹிப்பர் -என்று –

கண்ணன் கோலச் செயல்கள் –
ஸ்ரீ வால்மீகி -காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம்-என்று ஸ்ரீ ரகுவர சரித்ரத்தையே
முழுதும் அனுபவித்தால் போலே
இவரும் ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிகில -சேஷ்டிதங்களை அனுபவித்த படி –
ஸ்ரீ தேவக் கோலப் பிரான் -செய்கை -இறே-

இரவு பகல் என்னாமல் –
ராத்திரி பகல் என்னாமல்-கால நியதி இன்றிக்கே

என்றும் பரவு மனம் பெற்றேன் என்றே களித்துப் பேசும் –
சர்வ காலத்திலும் ஸ்துதிக்கும் படியான-மனசைப் பெற்றேன் என்று ஹர்ஷ பாரவச்யத்தாலே கர்வித்துப் பேசும் –
அதாவது
மாய வினைகளையே அலற்றி இரவும் நன் பகலும் தவிர்கிலம் என்ன குறை எனக்கே -என்றும்
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே -என்றும்
நுகர வைகல் வைக்கப் பெற்றேன் எனக்கு இனி நோவதுவே -என்றும்
மேவக் காலங்கள் கூடின எனக்கு என் இனி வேண்டுவதே -என்றும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உள்ளதே -என்றும்
பகல் இராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப்பரிப்பே -என்றும்
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே -என்றும்
என் அப்பன் தன் மாயங்களே காணு நெஞ்சுடையேன் இனி என்ன கலக்கம் உண்டே -என்றும்
மால் வண்ணனை மலைக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே -என்றும்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே -என்றும்–பேசின இவை -என்கை –

உருகாமல் தரித்ததும்-நண்ணி வணங்கப் பலித்தவாறே என்று இறே ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது-

களித்துப் பேசும் பராங்குசன் தன் –
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவையுடை மால் வண்ணனை மலைக்கு நா யுடையேன் -என்கையாலே
சர்வ ஸ்மாத் பரனை வசீகரிக்கும் அங்குசமாய் யுள்ளவர் என்கிறதைப் பற்றச் சொல்கிறது –
கவீசம் சக்ர ஹஸ்தேப சக்ரம் -என்றது இறே
ஸ்ரீ திரு நா வீறுடைய பிரான் தாசர் குமாரர் ஆகையாலே அடி அறிந்து ஸ்ரீ பராங்குசன் -என்கிறார் –

பராங்குசன் தன் சொல் தேனில் நெஞ்சே துவள் –
வால்மீகேர்வாத நாரவிந்த களிதம் ராமாணாக்யம் மது -என்றும்
ஸூ கமுகாதம்ருதத்ரவசம் யுதம்பிபாத பாகவதம் ரசம் -என்றும் சொல்லுமா போலே-
அமுத மென்மொழி யாகையாலும்- தேனே இன்னமுதே -என்று பேசப் படுமவன் விஷயம் ஆகையாலும்
தேன் போலே இனிதாய் இறே இத் திருவாய்மொழி தான் இருப்பது

மனசே
அல்ப சாரமானவற்றில் புக்கு அலமாவாதே-சார க்ராஹியாய்-சார தமமான இதில் சக்தமாய்ப் போரு
என் நெஞ்சம் என் பொன் வண்டு -என்னக் கடவது இறே-

—————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தை அருளிச் செய்த படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் தம்முடைய த்ருஷ்ணையாலே ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அனுபவிக்க புக்க இடத்தில்
குடிக்கின்ற தண்ணீர் விக்கிப் பாரவஸ்யத்தை விளைவிக்குமா போலே-அவை சைதில்யத்தை விளைக்க
அத்தாலே கலங்கி-அடியே பிடித்து-தமக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் கரண த்ரயத்திலும் யுண்டான
பிராவண்ய அதிசயத்தை-அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற-துவளில் மா மணி மாடத்தில் அர்த்தத்தை
துவளறு சீர் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

——————————————————

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் -துவளறவே
முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னு முவப்பால் வந்த மால்—55-

———————————————————–

வியாக்யானம்–

துவளறவே முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன்–மன்னு முவப்பால் வந்த மால்
துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்- என்று அந்வயம்

துவளறவே –
மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே –என்னுதல்
அந்ய பரதை யாகிற குற்றம் அறுகையாலே-என்னுதல் –

முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் -மன்னு முவப்பால் வந்த மால்
முந்துற முன்னம்
பொய் நின்ற ஞானம் தொடங்கி–இவ்வளவும் அனுபவத்தில் அவஹாகித்த ஸ்ரீ ஆழ்வார் –
அதாவது –
நிகரிலவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே -என்றும்
பரமன் பவித்திரன் சீர் செடியார் நோய்கள் கெட படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -என்றும்
சீரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று இராப் பகல் வாய் வெரீஇ -என்றும்
துயரமில் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் -என்றும்
வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன் -என்றும்
தக்க கீர்த்தி குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் -என்றும்
புகர் கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர வைகல் வைக்கப் பெற்றேன் -என்றும்
இப்படி யாயிற்று
அந்நாள் தொடங்கி இந்நாள் தோறும்–இணை அடிக்கே அன்பு சூட்டி-அன்பு பாலே போல் சீரில் பழுத்த படி –
இப்படி குண அனுபவத்தாலே தமக்கு–மாறும் நிகரும் இன்றி-நித்ய மத முதிதராய்-மால் ஏறி

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் –
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யம் ஆகையாலே–குற்றம் அற்று-ஹேய பிரத்ய நீகனான
கல்யாண குண யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்திலே ஸ்வாபாவிக பக்தியாலே –

நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்-
நாள் தோறும் தாம் அவ் விஷயத்தில் பிராவண்யத்தை உற்று இருக்கிற தம்முடைய ஸ்வபாவம் எல்லாம் அருளிச் செய்தார் –
ராமேதி ராமேதி சதைவ புத்யா விசிந்தய வாசா ப்ருவதீ -என்றும்
ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமமேவா நுபஸ்யதி -என்றும் சொல்லுமா போலே

தாமரைத் தடம் கண் என்றும் குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே -என்றும்
தேவ தேவ பிரான் என்றே நிமியும் வாயோடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே -என்றும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க கிற்குமே -என்றும்
கண்ணபிரான் என்றே ஒற்கம் ஒன்றுமிலள் உகந்து உகந்து உண் மகிழ்ந்து குழையுமே -என்றும்
அன்று தொட்டு மையாந்திவள் நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத்திசை நோக்கியே -என்றும்
வைகல் நாடொறும் வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர் –என்றும்
அவள் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே -என்றும்
இருந்து இருந்து அரவிந்தலோசன் என்று என்றே நைந்து இரங்குமே -என்றும்
துலை வில்லி மங்கலம் என்று தன் கரங்கள் கூப்பி தொழும்அவ் ஊர் திரு நாமம் கற்றதர் பின்னையே -என்றும்
துலை வில்லி மங்கலம் சென்னியால் வணங்கும் அவ் ஊர் திரு நாமம் கேட்பது சிந்தையே -என்றும்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும்தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூரவர் சடகோபன் -என்றும்
இப்படி இவருக்கு த்ரிவித கரணத்தாலும் யுண்டான-பிராவண்ய ஸ்வபாவத்தை எல்லாம் அருளிச் செய்தார் -என்கை –

இத் திருவாய்மொழி ஆழ்வார் பிரகிருதி சொல்கிறது என்று நம் முதலிகள் எல்லாரும் போர விரும்பி இருப்பார்கள் –என்று
இறே ஸ்ரீ ஈட்டிலே அருளிச் செய்தது –

————————————

அவதாரிகை –

இதில்-தமக்கு உள்ளது அடையக் கை விட்டு போன படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ் பிறந்த சம்ஸ்லேஷம் மானச சம்ஸ்லேஷ மாத்ரமாய்-பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -என்கிறபடி மிகவும் அவசன்னராய்
அத்தாலே மோஹித்துக் கிடக்க
ஏறாளும் இறையோனில் தாம் விடப் பார்த்த ஆத்மாத்மீய பதார்த்தங்கள் அடங்கலும் தன்னடையே விட்டுக் கழன்று
சிதிலமாய்ச் செல்லுகிறபடியை-திருத் தாயார் தன் மகள் வளையாதிகள் போயிற்று என்று
அவனுரிச் சூறை கொண்ட பிரகாரத்தை பேசின பாசுரத்தாலே சொல்லிக் கூப்பிடுகிற
மாலுக்கு வையத்தில் அர்த்தத்தை-மாலுடனே தான் கலந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————-

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன்னுடைமை தானடையக் -கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனமறு சீர் நெஞ்சே உண்—56-

தான் கோலி -அங்கே-ஏறாளும் இறையோனும் — -இங்கே -அவை முற்கோலி -தன்னடையே போயின –

———————————————–

வியாக்யானம்–

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்து சத்தை பெற்று உஜ்ஜீவியாமல்
கீழ்-அடிமை செய்வார் திருமாலுக்கு -என்றார் இறே-அத்தை அடி ஒற்றின படி

சால நைந்து –
மிகவும் அவசன்னராய் –தம் தசை தாம் பேச மாட்டாதே-திருத் தாயார் பேசும்படியாக தளர்ந்து –

தன்னுடைமை தானடையக் -கோலியே தான் இகழ வேண்டாமல் –
ஏறாளும் இறையோனில் அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத்மீயங்கள் அடையத் தாம் உத்யோகிக்க
வேண்டினால் போல் அன்றிக்கே

தன்னை விடல் சொல் மாறன் –
தன்னடையே அவை முற்கோலித்து- தம்மை கட்டடங்க விட்டகலும் படியை அருளிச் செய்த ஆழ்வார் –
அதாவது –
உத்தரீயம் தயாத்யக்தம் ஸூபாந் யாபரணான் யபி -என்னும் படி
ஏலக் குழலி இழந்தது சங்கே -என்றும்
என் மங்கை இழந்தது மாமை நிறமே -என்றும்
என் பிறங்கிரும் கூந்தல் இழந்தது பீடே -என்றும்
என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே -என்றும்
என் கண் புனை கோதை இழந்தது கற்பே -என்றும்
என் விற்புருவக் கொடி தோற்றது மெய்யே -என்றும்
என் தையல் இழந்தது தன்னுடைச் சாயே -என்றும்
என் வாசக் குழலி இழந்தது மாண்பே -என்றும்
என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே -என்றும்
என் கற்புடை யாட்டி இழந்தது கட்டே -என்றும்-அருளிச் செய்தவை என்கை –

தன்னை விடல் சொல் மாறன் –
கட்டெழில் தென் குருகூர் சடகோபன் சொல் -என்று அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் உடைய –

ஊனமறு சீர் நெஞ்சே உண் –
சீருக்கு ஊனம் ஆவது-ஸ்வாரத்தமாய் இருக்கை-
அப்படி அன்றிக்கே-பர அனுபவ யோக்யமாய் இருக்கை -ஊனம் அற்று இருக்கை –
இப்படி நிரவத்யமான கல்யாண குணத்தை நெஞ்சே உண் –

ஓவாத் தொழில் சாரங்கன் தொல் சீரை நன்னெஞ்சே
ஒவாத ஊணாக உண் -என்று ஸ்ரீ ஆழ்வார் அவன் குணங்களை புஜிககுமா போலே
நீயும் ஸ்ரீ ஆழ்வார் உடைய பக்த்யாதி குணங்களையே புக்தமாக புஜி-

—————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போனபடியை அருளிச் செய்ததை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
திருத் தாயார் –
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு -என்று தொடங்கி
பொற்பமை நீண் முடி பூம் தண் துழாயற்கு -என்று
ஆபாத மௌலி பர்யந்த பர்யவசிதங்களானவன் திரு நாமங்களைச் சொல்லிக் கூப்பிட்டு-பரவசையாய்க் கிடந்து உறங்க
ம்ருத சஞ்ஜீவிநீ யான திருநாமத்தைக் கேட்டு பெண் பிள்ளை யுணர்ந்து எழுந்திருந்து
அவன் இருக்கிற ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போக
அநந்தரம்
திருத் தாயார் உணர்ந்து பெண் பிள்ளையைப் படுக்கையிலே காணப் பெறாமையாலே
தன் வயிற்றில் பிறப்பாலும்-இவள் தன் ஸ்வபாவத்தாலும்-ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போனாள்-என்று
சோகிக்கிற அந்த திருத் தாயார் பாசுரத்தாலே ஸ்வ தசையை அருளிச் செய்கிற
உண்ணும் சோற்றில் அர்த்தத்தை உண்ணும் சோறாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை —

————————————————————

உண்ணும் சோறாதி யொரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் -மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன்னடியே நந்தமக்குப் பொன்–57-

————————————————————–

வியாக்யானம்–

உண்ணும் சோறு-பருகும் நீர்-தின்னும் வெற்றிலை-எல்லாம் கண்ணன்-என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
அத்தைப் பின் சென்று அருளிச் செய்தபடி –

உண்ணும் சோறாதி யொரு மூன்றும் –
அன்னாதியான தாரகாதி த்ரயமும்

ஒரு மூன்றும் –
அத்விதீயமாய் இருக்கிற மூன்றும் –

எம்பெருமான் கண்ணன் என்றே –
எனக்கு ஸ்வாமியான ஸ்ரீ கிருஷ்ணன் என்றே அனுசந்தித்து –

நீர் மல்கிக் கண்ணினைகள் —
பாவனா பிரகர்ஷத்தாலே கண் இணைகள் நீராலே நிறைந்து ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணை
ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்தாலே இறே சமிப்பது –

மண்ணுலகில் மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன் –
இவ் விபூதியிலே ஸ்ரீ திருக் கோளூரிலே நித்ய வாசம் பண்ணுகிற சௌந்தர்ய சீலாதிகளால்
ஆச்சர்ய பூதனான-வைத்திய மா நிதி பால் போம் ஸ்ரீ ஆழ்வார் –
இறந்தால் தங்குமூர் விண்ணூர் ஆகையாலே விசேஷிக்க வேண்டா
நாட்டார் பொருந்தி இருக்குமூர் இவருக்கு நெருப்பாய் இருக்கையாலே
மண்ணினுள் புகுமூர் திருக் கோளூர் -என்று இறே விசேஷிக்க வேண்டுவது –
சர்வான் போகான் பரித்யஜ்ய -இத்யாதிவத்
தான் உகந்த ஊர் இறே இவருக்கு மண்ணினுள் புகுமூர்
ஸ்ரீ திருக் கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டால் இறே-இவர் ஆவி உள் குளிருவது –
பாலை கடந்த பொன்னே –கண்ணன் வெக்காவுது –எப்பாலைக்கும் சேமத்ததே -என்னக் கடவது இறே

மன்னு திருக் கோளுரிலே மாயன் பால் போகையாவது –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே-அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற போரும் கொல் -என்றும்
திருமால் திரு நாமங்களே கூவி எழும் என் பாவை போய் -என்றும்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினாள் -என்றும்
ஆவியுள் குளிர எங்கனே உகக்கும் கொல் -என்றும்
தென் திசை திலதம் அனையத் திருக் கோளூர்க்கே சென்று -என்றும்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே ஒல்கி ஒல்கி நடந்து -என்றும்
கசிந்த நெஞ்சினளாய் கண்ணநீர் துளும்பச் செல்லும் கொல் -என்றும்
என் கண்ணனுக்கு என்றே யீரியாய் இருப்பாள் இதுஎல்லாம் கிடக்க இனிப் போய் -என்றும்
திருக் கோளூர்க்கே நேரிழை நடந்தாள் -என்றும்
மனைக்கு வான் பழியும் நினையாதே செல்ல வைத்தபடி இது வாயிற்று

இத்தால்
வழியில் உள்ளவர்களையும் வாழ்வித்து-அவனையும் வாழ்வித்து-தானும் வாழும்படி போனாள்
என்றது ஆயிற்று –

இப்படி எல்லாரையும் வாழ்வித்து ஸ்ரீ வைத்த மா நிதியை நாடி நடந்து போம்
ஸ்ரீ மாறன் பொன்னடியே நந்தமக்குப் பொன்
அவருக்கு ஸ்ரீ வைத்த மா நிதி அடியாய் இருக்கும்– நமக்கு வைத்த மா நிதி ஸ்ரீ ஆழ்வார் அடியாய் இருக்கும் –

கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் —என்று இறே
ஸ்ரீ ஆச்சார்யா ஹிருதயத்திலே ஸ்ரீ நாயானார் அருளிச் செய்தது –

——————————————————

அவதாரிகை –

இதில் ஆர்த்தி பாரவச்யத்தாலே தூது விட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
உண்ணும் சோற்றில் ஆற்றாமையோடு
ஸ்ரீ திருமாலான ஸ்ரீ வைத்தமா நிதி திருக் கண்ணும் செவ்வாயும் கண்டு அனுபவிக்க வேணும்
என்று த்வாரா பரவசராய்ப் புறப்பட்டு முட்டுப் போக மாட்டாமல்
எங்கனே புகும் கொல் -என்றதுவே பலித்து-விழுந்து நோவுபடுகிற தசையை
அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ பரம பதாதிகளிலே போய் அறிவியுங்கோள் என்று
பரிசர வர்த்திகளான கடகரை தாம் அர்த்திக்கிற பிரகாரத்தை
தூத பரேஷண வ்யாஜத்தாலே அருளிச் செய்கிற – பொன்னுலகு ஆளீரோவில் அர்த்தத்தை
பொன்னுலகு இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

——————————————————–

பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி
என்னிடரை மாலுக்கு இயம்பும் என -மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர் போய் வணங்கும் நீர்–58-

—————————————————

வியாக்யானம்–

பொன்னுலகு பூமி எல்லாம்- புள்ளினங்கட்கே வழங்கி
முதல் பாசுரத்தை முடியக் கடாஷித்து அருளிய படி –

பொன்னுலகு பூமி எல்லாம்-
கச்ச லோகன் -என்னும்படி-நித்ய விபூதி லீலா விபூதி எல்லாவற்றையும் –

புள்ளினங்கட்கே வழங்கி –
பஷ பாதமுடைய பஷி சமூஹங்களுக்கே தம்முடைய ரஷண அர்த்தமாக வுபகரித்து –
வண் சடகோபன் -ஆகையாலே-மோஷாதி புருஷார்த்தங்களை வழங்க வல்லராய் இருக்கை-

வழங்கி -என்னிடரை மாலுக்கு இயம்பும் என –
உபய விபூதியையும் உபஹார அர்த்தமாக உபகரித்து பிரிவால் உண்டான என்னுடைய பரிவை
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அறிவியுங்கோள் -என்று

என் இடரை –
என்னுடைய துக்கத்தை -அதாவது –
என்நிலைமை -என்றும்
மெய்யமர் காதல் -என்றும்
பாசறவெய்தி -என்றும்
பேர்த்து மற்று ஓர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றும் இலேன் -என்றும்
இன்னவாறு இவள் காண்மின் -என்றும்-சொன்ன இவை -என்கை –

என்னிடரை மாலுக்கு இயம்பும் என-
அதாவது –
எந் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை யுரைத்து -என்றும் –
மெய்யமர் காதல் சொல்லி -என்றும் –
யாமிதுவோ தக்கவாறு என்ன வேண்டும் -என்றும் –
எனக்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே -என்றும்
கற்பியா வைத்த மாற்றம் சொல்லி சென்மின்கள் -என்றும்
மது சூதற்கு என் மாற்றம் சொல்லி -என்றும்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனை கண்டு ஏசறு நும்மை அல்லால் மறு நோக்கிலள் என்று சொல் -என்றும்
விண்ணவர் கோனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் -என்றும்
மந்திரத்து ஓன்று உணர்த்தி உரையீர் -என்றும்-அருளிச் செய்தவை -என்கை –

மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் –
ஸ்ரீ திரு நாடு முதலா வது – மூன்றாம் தூதுக்கு விஷயம் பரத்வ த்வயம் -என்கையாலே
ஸ்ரீ திரு நாடும்-ஸ்ரீ நெஞ்சு நாடும்-விஷயம் –
மா மதுவார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு -என்றும்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு -என்றும்
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு -என்றும்
எனக்குச் சென்றிலும் கண்டு -என்றும்
ஸ்ரீ பரத்வ-ஸ்ரீ அந்தர்யாமித்வ-விஷய தூது ப்ரேஷணமாய் இருக்கும் -இத் திருவாய் மொழி –

தூது நல்கி விடுகை யாவது –
விருப்பத்தோடு விடுகை – தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -என்று
ஐக ரஸ்யம் பற்றாசாக விடுகை -என்றபடி-

மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் -மாறனையே –
நித்யமான ஸ்ரீ திரு நாடு முதலான ஸ்தலங்களிலே ஆதாரத்தோடு தூது விடும் ஸ்ரீ ஆழ்வாரையே –

நீடுலகீர் போய் வணங்கும் நீர் –
பிரவாஹ ரூபேண-நித்யமான சகத்திலே வர்த்திகிறவர்களே நீங்கள் தூது விடுகை ஆகிற வருத்தம் இன்றிக்கே
நீங்களே நடந்து போய் சேவியுங்கோள் –

ஸ்ரீ திருநாடு போலே நெடுகி இராதே
ஸ்ரீ திரு நாட்டில் ஸ்ரீ திரு நகரி கிட்டிற்றாய் இறே இருப்பது –
நீங்கள் புருஷகார நிரபேஷராக ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயிங்கோள் –

———————————————

அவதாரிகை –

இதில்-கேட்டார் அடைய நீராம்படி கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
தம் ஆர்த்த த்வனி கேட்டு கடகர் கால் நடை தந்து போக மாட்டாமல் தரைப் பட்டுக் கிடக்கிற படியைக் கண்டு
அறிவிலிகளான இவர்கள் ஈடுபட்ட படி கண்டால் ஸ்ரீ சர்வஞ்ஞன் கேட்டால் பொறுக்க மாட்டாமல்
சடக்கென வந்து முகம் காட்டும் -என்று அறுதி இட்டு
ஸ்ரீ திரு நாட்டு இருப்பும் அடி கலங்கும் படி முழு மிடறு செய்து கூப்பிடுகிற
நீராய் நிலனாயில் அர்த்தத்தை நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய -என்று தொடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————————–

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஒதிடவே யுய்யும் யுலகு—59-

—————————————–

வியாக்யானம்–

நீராகிக் கேட்டவர்கள் -நெஞ்சு அழிய-
கேட்டவர்கள் நீராய் -நெஞ்சு அழியும்படி யாகவும் அசேதனங்களோடு -சைதன்ய லேசம் யுடையாரோடு
பரம சேதனனோடு-வாசி அற கேட்டார் எல்லாம் நீர்ப்பண்டமாய்-நெஞ்சு அழியும்படியாக –

பாவைகளோடு – பஷிகளோடு – ரஷகனோடு வாசி அற-எல்லாரும் த்ரவ்ய த்ரவ்யமாய்
ஹ்ருதய சைதில்யம் பிறக்கும் படி –

மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதா –
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கும் அந்தாமமான ஸ்ரீ பரமபதத்தில் இருப்புப் பொருந்தாத படியாகவும்
விண் மீது இருப்பு அரிதாம் படி –

ஆராத காதலுடன் கூப்பிட்ட-
க்ரோசந்தீம் ராம ராமேதி -என்னும்படி-சமியாத அபி நிவேசத்துடன் ஆக்ரோசம் பண்ணின –
அதாவது –
வாராய் -என்றும்
நடவாய் -என்றும்
ஒரு நாள் காண வாராய் -என்றும்
ஒளிப்பாயோ -என்றும்
அருளாயே -என்றும்
இன்னம் கெடுப்பாயோ -என்றும்
தளர்வேனோ -என்றும்
திரிவேனோ -என்றும்
குறுகாதோ -என்றும்
சிறு காலத்தை உறுமோ யந்தோ -என்றும்-ஆர்த்தியுடன் கூப்பிட்டவை என்கை –

ஆராத காதலுடன் கூப்பிட்ட-காரி மாறன் சொல்லை –
அத்யபிநிவேசத்தாலே-ஆர்த்தியை தர்சிப்பித்த அபிஜாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தியை-

ஒதிடவே யுய்யும் யுலகு –
இத்தை அப்யசிக்கவே–ஜகத்து உஜ்ஜீவிக்கும்
ஜகத்தில் யுண்டான-சேதனர்களும் உஜ்ஜீவிப்பார்கள் -என்றபடி –

———————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புக்க பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
ஆர்த்தி பாரவச்யத்தாலே கூப்பிடுகிற இவர்-பிராப்யாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை காற்கடைக் கொண்டு
ஸ்ரீயபதிகளின் திருவடிகளிலே பண்ணும் அடிமையே பரம பிராப்யம் என்று அறுதி இட்டு
அந்த பிராப்யத்தை பெறுகைக்காக-தேச காலாதி விப்ர க்ருஷ்டங்களான ஸ்தலங்களை விட்டு
கானமும் வானரமும் வேடும் ஆனவருக்கு முகம் கொடுத்துக் கொண்டு
சௌலப்ய சாம்ராஜ்யம் பண்ணுகிற ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே
ச பிராது -இத்யாதிப் படியே ஸ்ரீ பிராட்டியை முன்னிட்டு
சரண்ய குண பூர்த்தியையும்-சரண வரண உத்யுக்தரான தம் வெறுமையையும் அனுசந்தித்துக் கொண்டு
பூர்ண பிரபத்தி பண்ணுகிற உலகமுண்ட பெருவாயனில் அர்த்தத்தை
உலகு உய்ய மால் நின்ற -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் -மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே
உன் சரணாய் நெஞ்சமே உள்—60-

——————————————————-

வியாக்யானம்–

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே –
சென்னி யோங்கு தண் திரு வேங்கடமுடையான் யுலகு தன்னை வாழ நின்ற நம்பி -என்று சொல்லுகிறபடியே
லோகமாக உஜ்ஜீவித்து வாழும்படி ஸ்ரீ சர்வேஸ்வரன் நின்று அருளின ஸ்ரீ திரு மலையிலே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே –என்றதிலே நோக்கு-

அலர் மகளை முன்னிட்டு –
திரு மா மகள் கேள்வா -என்றும்
அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை புருஷகாரமாக முன்னிட்டு-

அவன் தன் -மலரடியே –
ஸ்ரீ திரு வேங்கடத்தானானவன் பூவார் கழல்களான- நாண் மலர் அடித் தாமரையையே –
அதாவது –
குலதொல் அடியேன் உனபாதம் -என்றும்
ஆறாவன்பில் அடியேன் உட் அடி சேர் வண்ணம் -என்றும்
அண்ணலே உன் அடி சேர -என்றும்
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு -என்றும்
திண் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் -என்றும்
எந் நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே -என்றும்
உன பாதம் காண -என்றும்
நோலாதாற்றே னுன பாதம் -என்றும்
அந்தோ அடியேனுன பாதம் அகலகில்லேன் -என்றும்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும் இப்படி-அடியே தொடங்கி-அடியைத் தொடர்ந்த படி-

அவன் தன் மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த –
ஸ்ரீ திரு வேம்கடத்தனான-அவன் மலரடியே
இத்தால்
நிகரில் புகழாய் -என்று தொடங்கி அனுசந்திக்கிற வாத்சல்யாதிகளும் ஸூசிதம்

அவன் தன் மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த -மகிழ் மாறன் –
திரு வேங்கடத்தானே புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
தம் வெறுமையை முன்னிட்டு-அவன் திருவடிகளிலே நிரபேஷ உபாயமாக
ஸ்வீகரித்த ஸ்ரீ ஆழ்வார் உடைய திருவடிகளே உனக்கு உபாயமாக ஸ்வீகரீ –

அகலகில்லேன் என்று பூர்வ வாக்கியம் அனுசந்தித்தார்-என்னும்படி
சக்ரமமாக-சரண வரணம் பண்ணுகையாலே சாத்தின திரு மகிழ் மாலையும் சம்ருதம் ஆயிற்று –

சரண்யன்-தண் துழாய் விரை நாறு கண்ணியனாப் போலே
சரணாகதரான இவரும் மகிழ் மாலையினரானார்
அது சேஷித்வ உத்தியோகம்
இது சேஷத்வ உத்தியோகம்
அவர் பூம் துழாயன் அடியைச் சேர்ந்தால் போலே
இவரும்-மகிழ் மாறன் தாளிணையே உன் சரணாய் நெஞ்சமே உள்-என்கிறார்

நெஞ்சே
வகுளாபிராமமான திருவடிகளை உனக்கு உபாயமாக அத்யவசித்துப் போரு-என்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -ஐந்தாம் பத்து–பாசுரங்கள்- 41-50-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில் சம்சாரிகளையும் திருத்தும் படியாக ஸ்ரீ சர்வேஸ்வரன் பண்ணின நிர்ஹேதுக விஷயீ காரத்தாலே
வித்தராகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்வ பிராப்தி சாதனங்களில் இறங்காமல் துர் விஷயங்களிலே மண்டி இவ் வனர்த்தத்தை உணரவும் அறியாதே
அத்யந்தம் உபேஷ்யனாய்-சம்சாரிகளில் அந்ய தமனான வென்னை
இவை ஒன்றுமே பாராமல் நிர்ஹேதுகமாக அங்கீகரித்து-தன் திருவடிகளிலே சேஷத்வத்தையும் அறிவித்து
கைங்கர்யத்தால் அல்லாது செல்லாதபடி பண்ணி பிறரையும் திருத்தும்படியான சதிரையும் உண்டாக்கி
என் பக்கல் வ்யாமுக்தனாய் என்னோடு வந்து கலந்தான் என்று ப்ரீதர் ஆகிற
கையார் சக்கரத்து -அர்த்தத்தை
கையாரும் சக்கரத்தோன் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் என்கை –

———————————————–

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறனுரைக்கு -மெய்யான
பேற்றை யுபகரித்த பேர் அருளின் தன்மைதனை
போற்றினனே மாறன் பொலிந்து —–41-

———————————————–

வியாக்யானம்–

கையாரும் –
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே -என்று தொடங்கி
விதி வாய்க்கின்றது காப்பார் ஆர் -என்னும் அளவும்-கடாஷித்து அருளிச் செய்தபடி –

கையாரும் -சக்கரத்தோன் –
திருக்கை நிறையும்படி-திரு ஆழியை தரித்தது-அதுவே நிரூபகம் ஆனவன் –

காதல் இன்றிக்கே இருக்க –
ஸ்வ விஷய பக்தி இன்றிக்கே இருக்க –

கையாரும் -சக்கரத்தோன் -காதல் இன்றிக்கே இருக்க –பொய்யாகப் பேசும் புறனுரைக்கு –
சக்கரத்து உன்னையே அவி இன்றி ஆதரிக்கும் என் ஆவியே -என்னும்படி
தத் விஷயத்தில் ப்ரேமம் உண்டாக வேண்டி இருக்க
இவ் வழகைக் கண்டு இருக்கவும் தத் அனுகுணமான அக்ருத்ரும பிரேமம் இன்றிக்கே
க்ருத்ரிம பிரேமத்தாலே இவற்றைப் பேசி அனுபவிக்கிற படியை கண்டு
போட்கனாய் இருக்கிற மித்ர பாவத்தையே பார்த்து அந்த அஹ்ருத்யமான உக்திக்கு –

பொய்யாகப் பேசும் புறன் உரையாவது –
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே யாடி -என்றும்
என்று என்றே சில கூத்துச் சொல்ல -என்றும்
புறமே சில மாயம் சொல்லி -என்றும்
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் -என்றும்–இப்புடைகளிலே சொன்னவை –

ஏவம் விதமான-மித்ர பாவ-மாத்ர ஜல்பிதங்களுக்கு
மெய்யான பேற்றை யுபகரித்த-
யதா ஞானம் உடையார் பேறும் சத்யமான பேற்றை உபகரித்த – அதாவது –
மெய்யே பெற்று ஒழிந்தேன் -என்றும்
என்னாகி ஒழிந்தான் -என்றும்
உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் -என்றும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டு ஒழிந்தேன் -என்றும்
எம்பிரானும் என் மேலானே -என்றும்
மாலார் வந்து இன்னாள் அடியேன் மனத்தே மன்னினார் -என்றும்
அடியோனோடும் ஆனானே -என்றும்
ஆனான் ஆளுடையான் என்னை முற்றவும் தானான் -என்றும் -பேசும்படியான இப் பேற்றை என்றபடி –

இத்தை யுபகரிக்கை அடி என் என்னில்
பேர் அருள் -என்கிறது-அதாவது –
விதி வாய்க்கின்றது காப்பார் ஆர் -என்றும்
எம்மா பாவியேற்கும் விதி வாய்கின்று வாய்க்கும் -என்றும்
ஆவா வென்று அருள் செய்து -என்றும்
தானே இன்னருள் செய்து -என்றும்-அருளிச் செய்தவை-என்கை –

பேர் அருளின் தன்மைதனை -போற்றினனே மாறன் பொலிந்து-
அதாவது
இரும்பைப் பொன் ஆக்குவது போலே-நித்ய சம்சாரிகளுக்கும் நித்ய சூரிகள் பேற்றை உபகரிக்கும்
ஸ்ரீ எம்பெருமான் உடைய நிர்ஹஹேதுக கிருபா பிரவாஹத்தின் ஸ்வபாவத்தை
ப்ரீதியாலே அருளிச் செய்தார் -ஸ்ரீ ஆழ்வார் -என்கை
க்ருபயா பர்யபாலயத் -என்னுமா போலே-

———————————————————————————–

அவதாரிகை –

ஒன்றும் தேவில் -தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணியும்
திருந்தாதவரைத் திருத்தியும் செல்லுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் ஒன்றும் தேவிலே தாம் பண்ணின ஸ்ரீ பகவத் பரத்வ உபதேசத்தைக் கேட்டு
சம்சார பரமபத விபாகம் அறும்படி-நாடாக திருந்தின பாகவத சம்ருத்தியைக் கண்டு ஹ்ருஷ்டராய்
தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணியும்
திருந்துகைக்கு யோக்யதை யுடையாரை உபதேசித்துத் திருத்தியும்-திருந்தாதவரை உபேஷித்தும் செல்லுகிற
பொலிக பொலிக பொலிக – வில் அர்த்தத்தை -பொலிக பொலிக -என்று துடங்கி அருளிச் செய்கிறார் என்கை-

————————————————–

பொலிக பொலிக வென்று பூ மகள் கோன் தொண்டர்
மலிவு தானும் கண்டு உகந்து வாழ்த்தி -உலகில்
திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல்
மருந்தாகப் போகும் மனமாசு—42-

—————————————————–

வியாக்யானம்–

பொலிக பொலிக வென்று பூ மகள் கோன் தொண்டர் மலிவு தானும் கண்டு உகந்து வாழ்த்தி –
ஜெயத்பதி பலோ ராமோ லஷ்மணஸ் ஸ மஹாபலா
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணா பிபாலிதா -என்னும்படி
பூ மகள் கோன் தொண்டர் மலிவு தன்னைக் கண்டு உகந்து
பொலிக பொலிக என்று வாழ்த்தி –

பூ மகள் கோன் தொண்டர் மலிவாவது –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் மலியப் புகுந்து -என்றும்
மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடி -என்றும்
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து -என்றும்
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய் -என்றும்
இவ்வுலகத்து வைகுந்தன் பூதங்களேயாய் -என்றும்
பகை பசி தீயன வெல்லாம் நின்று இவ்வுலகில் கடிவான்
நேமிப்பிரான் தமர் போந்தார் ஞாலம் பரந்தார் -என்றும்
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே -என்றும்
இப்படி நித்ய சித்தர்–ஸ்வேததீப வாசிகள் முதலான ஸ்ரீ திருமால் அடியார்கள் எங்கும் திரண்ட சம்ருத்தி –
நித்ய சித்தருக்கும்-ஸ்வேத தீப வாசிகளுக்கும் சாமானராய்த் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள் -என்றுமாம்-

கண்டு –
தமர்கள் கூட்டம் நாளும் வாய்க்க நங்கட்கு -என்னும்படியாக-தம் கண்களாலே கண்டு

உகந்து –
கண்டோம் கண்டோம் கண்டோம்-கண்ணுக்கு இனியன கண்டோம் -என்று ஹ்ருஷ்டராய் –

வாழ்த்தி –
அந்த சம்ருத்திக்கு பொலிக பொலிக பொலிக -என்று மங்களா சாசனம் பண்ணி
உலகில் திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல் மருந்தாகப் போகும் மனமாசு-
ஒன்றும் தேவில் உபதேசத்தாலும் திருந்தாதே-ஒதுங்கி இருந்தவர்களைக் குறித்து
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றும்
எவ்வுலகும் தன மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே –என்றும்
ஒக்கத் தொழ கிற்றீர் ஆகில் கலி யுகம் ஒன்றும் இல்லையே -என்று
இப்படி பரத்வ உபதேசம் பண்ணி திருத்தியும்

அதிலும் திருந்தாதவர்களைக் குறித்து
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும் வகை இல்லை தொண்டீர்
உழி பேர்த்திடும் கொன்றே -என்று-தேடி தடவிப் பிடித்து
பிரத்யா புரச்சரமாய்த் திருத்தியும் சொல்லுகிற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி
ஔஷதம் அடியாக மநோ மாலின்யம் நிவ்ருத்தமாம் –
ஸ்ரீ வைஷ்ணவ சஜாதீய புத்தியும்
தேவ தாந்த்ரங்கள் இடத்தில் பரத்வ புத்தியும் இறே மநோ மாலின்யம் ஆவது
மனனகம் மலமறக் கழுவி -என்று இறே அருளிச் செய்தது –

விஷ வருஷ பலங்கள் கை கூடினவர் அடிமை புக்காரையும் -சம்சாரம் -விஷ வருஷம் -கேசவ பக்தியும் -பாகவத சமாப்தம்
அடிமை புக்காரையும் ஆட செய்வாரையும் காண
லோக த்வீ பாந்தரங்களில் நின்றும் போந்த தேவர் குழாம் களைக் கண்டு காப்பிட்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஸ்ரீ விபீஷணர் சொற் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரைத் தடவிப் பிடித்து
தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்டவர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள்
நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவனை மேவிப் பரவும் அவரோடு ஒக்கத் தொழில்
யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி பரராக்கிக் கண்ணுக்கு இனியன காட்டலாம்படி யானார்
கண்ணில் நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் அஞ்சாம் பத்தில்
என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது

————————————————

அவதாரிகை –

இதில் கீழ்-5-2- பிரஸ்துதமான வடிவு அழகை அனுபவிக்கப் பெறாமல் மடல் எடுக்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
இப்படி இவர் பிறரைத் திருத்தி-4-10–அவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணி-கை ஒழிந்த பின்பு-5-2-
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் -என்று அவன் சௌந்தர்யாதிகளை அனுசந்தித்து
பழைய தம் இழவு -ஏறாளும் இறையோன் -4-8-தலை எடுத்து
வழி அல்லா வழியில் இழிந்து-இரண்டு தலையையும் அழித்தாகிலும் அவனோடு கலக்கக் கடவோம்
என்று ப்ராப்ய ருசி பாரவச்யத்தாலே முன்னாடி தோற்றாமல் கண் கலங்கிச் செல்லும் தம் தசா விசேஷத்தை
அவனோடு கலந்து பிரிந்து
ஆற்றாமையாலே கண்ணான் சுழலை இட்டு நாடாகப் பழி சொல்லும்படி அவனுக்கு அவத்யம் விளைவித்து
என்று மடலூருகையில் ஒருப்பட்டு சொல்லுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி பேச்சாலே அருளிச் செய்கிற
மாசறு சோதி- யில் அர்த்தத்தை மாசறு சோதி கண்ணன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-

—————————————————————-

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் -ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்–43-

—————————————————————-

வியாக்யானம்–

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால் ஆசை மிகுந்து –
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் -என்றும்
என் செய்வாய் -மாசறு சோதி -மணிக்குன்றம் -என்றும்
எம் கண்ணன் -என்றும்
சொல்லும் படி அத்யாகர்ஷகமான வடிவைக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன் தன் ஸ்வரூபத்துக்கு சேர தானே மேல் விழுந்து வந்து
அநுபவிப்பியாமையாலே -அபி நிவேசம் அதிசயத்து -அதாவது –
பாசறவெய்தி -என்றும்
என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பூர்ந்த -என்றும்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி யோர் சொல்லிலேன் -என்றும்
காதல் கடல் புரைய விளைத்த -என்றும்
கொடிய வன்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்றும்
மணி வண்ணன் வாசுதேவன் வலை யுள் அகப்பட்டேன் -என்றும்
தலையில் வணங்க வுமாம் கொலோ -என்றும்
எந்நாள் கொலோ யாம் உறுகின்றது -என்றும்–அருளிச் செய்தவை -என்கை –

இப்படி ஆசை அதிசயிக்கையாலே – பழிக்கு அஞ்சாமல் -ஊரார் தாயார் தொடக்கமானவர்
இவள் மடலூர ஒருப்படுகிற தசையைக் கண்டு இது குடிப் பழியாய்த் தலைக் கட்டும் என்று நிஷேதிக்க
ஏவம் விதமான பழிக்கு பணையுமவள் ஆகையாலே அஞ்சாதே – அப் பழிச் சொல்லே தாரகமாக-அதாவது –
சீதே தஸ்மாத் துக்க மதோவ நம் -என்று வனத்தை நிஷேதித்து அருளிச் செய்ய
அக்ரதஸ் தேக மிஷ்யாமி -என்றும்
யான சக்யா புரா த்ரஷ்டும் போதை ராகாசகை ரபி தாமத்ய சீதாம் பஸ்யந்தி ராஜ மார்க்க கதா ஜனா -என்றும் சொல்லுகிறபடியே
ஊரவர் கவ்வை தோழி என் செய்யும் -என்றும்
என் செய்யும் ஊரவர் கவ்வை தோழி இனி நம்மை -என்றும் –
தீர்ந்த என் தோழி என் செய்யும் ஊரவர் கவவையே -என்றும்
ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் மடுத்து -என்றும்
அன்னை என் செய்யுமே -என்றும்
அன்னை என் செய்யில் என் – என் சொல்லில் என் தோழிமீர் -என்றும்-
அவர்கள் நிஷேத வசனங்களை ஒரு சரக்கு அறச் சொன்னவை -என்கை –

பழிக்கு அஞ்சாமல் ஏசறவே –
அபவாத பீதி இன்றிக்கே ஏசும் எல்லை கடந்து
அன்றிக்கே
எல்லாரும் துக்கிக்க -என்றுமாம் –
அன்றிக்கே
ஏசவே -என்ற பாடமான போது
பழி சொல்லவும் சொல்லி ஏச என்று ஆகவுமாம்-

மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான் உள் நடுங்கத் தான் பிறந்த ஊர் –
அதாவது
குதிரியாய் மடலூர்துமே -என்றும்
நாடுமிரைக்கவே –யாம் மடலூர்ந்தும் -என்றும்-ஜகத் ஷோபம் பிறக்கும்படி இஜ் ஜகத்திலே மடலூர ஸ்ரீ ஆழ்வார் ஒருப்பட்டார்
தாம் அவதரித்த இவ் ஊரில் உள்ளார் இச்சாஹாச பிரவ்ருதியைக் கண்டு ஹ்ருதயம் கம்பிக்கும்படியாக
இப்படி உத்யோகித்த இது ஏதாய் விளைகிறதோ -என்று தாமும் அவ் ஊரில் அவதரித்தவர் ஆகையாலே இவரும் தளும்புகிறார்-

—————————————————————

அவதாரிகை –

இதில்-இரவு நெடுமையாலே நோவுபடுகிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே பேசுகிறபடியை அனுவதித்து அருளிச் செய்கிறார்
இது எங்கனே என்னில்-
1-ஸ்வ பர ஸ்வரூபங்களை அந்யாகரித்து -வழி அல்லா வழியிலே இழிந்தும் அவனைப் பெற வேணும் என்னும்படி
2-முடுக வடியிடுகிற பிராப்ய த்வரையும்
3-கலங்கி-அவன் தான்பேற்றுக்குத் த்வரிக்க வேண்டும் -நம் பேற்றுக்குத் த்வரிக்கக் கூடாதே
ஸ்வ யத்ன ரூபமான உபாயாந்தரங்களிலே மூழுகைக்கு உறுப்பான
4-தெளிவை அமுக்கி
5-கிளருகிற அஞ்ஞானம் ஆகிற வல்லிருளிலே போக்கிட மற்றுத் தெகுடாடுகிற தம் தசையை
பிரிவாற்றாளாய் மடல் எடுக்கையில் உத்யோகித்த அளவிலே
தைவ யோகத்தாலே சூர்யன் அஸ்தமித்து மத்திய ராத்ரியாய் சப்தாதிகளிலே நெஞ்சு பாலிபாயாமையாலே
விஸ்லேஷ வ்யசனம் ஒருமடை செய்ய காலமும் விடியாது ஒழிய-மடல் எடுக்கை போய் — முடிகை தேட்டமான அளவிலே
அதுவும் கிடையாமையால்
இப்படி இரவு நெடுமையால் ஈடுபட்டுப் பேசுகிற ஸ்ரீ பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
ஊரெல்லாம் துஞ்சி -யில் அர்த்தத்தை–ஊர நினைந்த மடல் -இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் என்கை –

———————————————————

ஊர நினைந்த மடலூரவும் ஒண்ணாத படி
கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல்
தீது செய்ய மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்கனயோ—-44-

———————————————————-

வியாக்யானம்–

ஊர நினைந்த மடலூரவும் –
குதிரியாய் மடலூர்த்தும் என்று ஊர நினைந்த மடல் —

ஊரவும் ஒண்ணாத படி –
ஆதித்யனும் அஸ்தமித்து பிரியம் சொல்லுவார் ஹிதம் சொல்லுவார் பழி சொல்லுவார் எல்லாரும் உறங்குகையாலும்
இருள் வந்து மூடுகையாலும் மடலூர்வதும் கூடாத படியாக –

கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல் தீது செய்ய –
அதுக்கு மேலே அத்யந்த அந்தகாரத்தோடே ராத்ரியானது கூட்டுப் படையோடு கூடி நின்று இட்ட அடி பேராமல்
தீது செய்ய -பொல்லாங்கை உண்டாக்க –
அதாவது
ராவண மாயைக்கு அஞ்சி
சீதாதா வேண்யுத் க்ரதநம் க்ருஹீத்வா –என்றும்
விஷய தாதா நஹி மேஸ்தி கச்சிச் ச சத்ரச்ய வரவேஸ் நிராஷசய -என்றும் சொல்லுகிறபடியே
ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள்ளிரவாய் நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால் -என்றும்
மா விகாரமாயோர் வல்லிரவாய் நீண்டதால் -என்றும்
ஓயும் பொழுது இன்று ஊழியாய் நீண்டதால் -என்றும்
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் -என்றும்
முன்னிற்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் -என்றும்
கங்கிருளின் நுண் துளியாய் சேட்பால் அது ஊழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய் -என்றும்
ஓர் இரவேழு ஊழியாய் -என்றும்
வீங்கிருளின் உண்டுளியாய்-என்றும்
செல்கின்ற கங்குல் வாய் -என்றும் –
இப்படி தமஸ் உடன் கூடின ராத்திரி பேராமல் நின்று துக்கத்தை யுண்டாக்க -என்றபடி

இப்படி ஆகையாலே –
மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர் ஓதுவது இங்கு எங்கனயோ -என்கிறார் –

மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர்-ஆவது –
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே -என்றும்
ஆவி காப்பார் இனி யார் -என்றும்
நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே –மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தேன் -என்றும்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் யார் என்னையே -என்றும்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே -என்றும்
இந்நின்ற நீளாவி காப்பார் யார் இவ்விடத்தே -என்றும்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ -என்றும்
எனதாவி மெலிவிக்கும் -என்றும்
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார் நின்று உருகுகின்றேனே -என்றும்-அருளிச் செய்தவை ஆயிற்று –

ஆழ்வார் திரு உள்ளத்திலே அனுவர்த்தித்த துக்கம் அது தான் அவரே பேசி அல்லது அந்யருக்கு பேசி முடியாது இறே
அது தான் வாசோ மகோசரமாய் யாயிற்று இருப்பது
ஆகையால் பேசி முடியாததை எங்கனே பேசுவது என்று ஈடுபடுகிறார்
எங்கனயோ -என்று வார்த்தைப் பாடு ஆதல் –

——————————————

அவதாரிகை –
இதில்-உரு வெளிப்பாட்டாலே பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் -என்று ரஷகனுடைய குண ஞானத்தாலே மீளவும் தெளிவு குடி புகுந்து
நம்பியைத் தென்குருங்குடி நின்ற -1-10–என்று
முன்பு அனுபூதமான ஸ்ரீ நம்பி உடைய வடிவு அழகு நெஞ்சிலே ஒருபடிப்பட பிரகாசிப்பிக்கையாலும்
யதா மநோ ரதம் அவ் வடிவு அழகைக் கண்ணால் கண்டு
அனுபவிக்கப் பெறாமையாலும்
ப்ரீத்ய அப்ரீத்ய சமமாய் செலுகிற தம் தசையை ஸ்ரீ நாயகனோடு கலந்து பிரிந்து
உரு வெளிப்பாட்டாலே உருவ நோவுபட்டு செல்லுகிற ஸ்ரீ பிராட்டி பேச்சாலே அருளிச் செய்கிற
எங்கனயோ – வில் அர்த்தத்தை-எங்கனே நீர் முனிவது -என்று தொடக்கி அருளிச் செய்கிறார் -என்கை —
அது ஆண் தன்மையான அனுபவம் -இது பெண் தன்மையான அனுபவம் –
உரு வெளிப்பாடு –முன்பு அனுபூத அனுபவம் இருக்க ரசாந்த்ரம் தேடுவது அன்றோ –

————————————————–

எங்கனே நீர் முனிவது என்னை யினி நம்பி அழகு
இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன்
உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்—45-

—————————————————

வியாக்யானம்–

எங்கனே நீர் முனிவது என்னை –
இவ் வாற்றாமைக்கு ஊற்றுவாயான நீங்கள் இவ் வபிநிவேசம் உடைய என்னை பொடிவது எங்கனே –
எங்கனயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர் -என்றத்தை பின் சென்றபடி –

இனி -எங்கனே நீர் முனிவது –
ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் –இனி முனியக் கூடுமோ –
அதுக்கு முன்னே அன்றோ முனிய வேண்டுவது –
அதுக்கு மேலே
சந்திர காந்தாநனம் ராமம் அதிவ்ய பிரிய தர்சனம் -என்னும்படி-ருசி ஜனக லாவண்ய விபவமானது
அசௌ புருஷ ரிஷப ராம -என்னும் படி-உருவ வெளிப்பாடாய் –

ஸ்ரீ நம்பி அழகு இங்கனே தோன்றுகின்றது என் முன்னே –
குண விக்ரஹ சௌந்தர்யாதிகளால் பூரணரான ஸ்ரீ நம்பி யுடைய
திவ்ய ஆயுத
திவ்ய ஆபரண
திவ்ய அவயவ சோபைகள் ஆனது
அது கண்டு உகக்கிற என் முன்னே பிரத்யஷமாகத் தோன்றா நின்றது –
அதாவது –
சங்கினோடும் நேமியோடும் -என்றும்
மின்னு நூலும் குண்டலமும் -என்றும்
வென்றி வில்லும் தண்டும் வாளும் -என்றும்
பூம் தண் மாலை தண் துழாய் பொன் முடியும் வடிவும் -என்றும்
தொக்க சோதித் தொண்டை வாயும் -என்றும்
கோல நீள் கொடி மூக்கும் -என்றும்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும் -என்றும்
செய்ய தாமரைக் கண்ணும் -என்றும்
சென்னி நீண் முடி யாதியாய உலப்பில் அணி கலத்தன் -என்றும்
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் -என்றும்-இப்படி அடி தொடங்கி முடி அளவும் அனுபவித்த பிரகாரத்தை
அங்கன் உரு வெளிப்பாடா வுரைத்த –
அப்படியே-உரு வெளிப்பாடு என்கிற துறையிலே வைத்து அருளிச் செய்த –

தமிழ் மாறன் –
ஸ்ரீ திராவிட ப்ரஹ்ம தர்சியான ஸ்ரீ ஆழ்வார் -ஸ்ரீ நம்பி விஷயமாக எங்கனயோ -அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் -என்றபடி –

கருதும் அவர்க்கு இன்பக் கடல் –
அபிநிவேசத்துடன் அனுபவிப்பார்க்கு ஆனந்த சிந்துவாய் இருப்பார் –
சென்னி நீண் முடி யாதியாய வுலப்பில் அணி கலத்தன் கன்னல் பாலமுதாகி வந்து என்நெஞ்சம் கழியான்-என்று
ஸ்ரீ ஆழ்வார் தமக்கு அவ் வாகாரம் இனிதாய் இருக்குமா போலே
அவர் சம்பந்திகள் ஆனவர்களுக்கும் ஸ்ரீ ஆழ்வார் அப்படியே இருப்பார் -என்றபடி –

—————————————————

அவதாரிகை-

இதில் அனுகாரத்தாலே தரிக்கப் பார்க்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
எங்கனயோ -வில் பிரீதி அபரீதி சமமாய் சென்ற இடத்தில்
ப்ரீத்யம்சம் தலை எடுத்து தரிக்கைக்கு யோக்யதை உண்டாய் இருக்க
பாஹ்ய ஹானியாலே அப்ரீதியம்சமே தலை எடுத்து
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி-ஆற்றாமை கரை புரண்டு
ஸ்ரீ கோபிமார் ஸ்ரீ கிருஷ்ணனை அனுகரித்து தரித்தால் போலே இவரும் உபய விபூதி நாதனை அனுகரித்து
தரிக்கப் பார்க்கிற படியைக் கண்டு கண் கலங்கின பரிவர் சந்நிஹிதர்க்கு விலஷணராய் சொல்லிச் செல்லுகிற க்ரமத்தை
ஸ்ரீ நாயகனைப் பிரிந்த ஆற்றாமையாலே-தத் பிரகாரங்களை அனுகரித்து தரிக்கப் பார்க்கிற
தலைவி நிலையை வினவ வந்தவர்களுக்கு
ஸ்ரீ திருத் தாயார் -ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆவிஷ்டன் ஆனானோ -என்று
க்லேசத்தாலே சொல்லுகிற துறையிலே வைத்து அருளிச் செய்கிற -கடல் ஞாலத்தில் அர்த்தத்தை
கடல் ஞாலத்து ஈசனை -என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————-

கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே
உடனா வனுகரிக்கலுற்று திடமாக
வாய்ந்து அவனாய்த் தான் பேசும் மாறன் உரையதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார் –46-

5-2- உறுதி இருந்தது -5-3/5-4/5-5–தளர்ந்து போனாரே -மீண்டும் அவனை அனுகரித்து -அதனால் பெற்ற
-கொஞ்சம் உறுதி -தானாக பேசாமல் -திருத் தாயார் பேச்சாக –

————————————————–

வியாக்யானம்–

கடல் ஞாலத்து ஈசனை –
கடல் சூழ்ந்த பூமியில் உள்ளோர்க்கு நியந்தாவாய்-அத்தாலே சர்வ நிர்வாஹகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை

முன் காணாமல் நொந்தே –
பிரத்யஷ சாஷாத் காரம் பண்ணாமல் நொந்து -அதாவது –
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் -என்றும்
அறிவரிய பிரானை -என்றும்-அருளிச் செய்த மானஸ சாஷாத்கார மாத்ரம் ஒழிய
பிரத்யஷ சாஷாத்காரம் இல்லை -என்றபடி – அத்தாலே அவசன்னராய் –

உடனா வனுகரிக்கலுற்று –
அனந்தரமாக
ஸ்ரீ கோபிமார் ஸ்ரீ கிருஷ்ணனை அனுகரித்து தரித்த படியை ஆராய்ந்து தாமும் அனுகரித்து தரிப்பதாக
திரு உள்ளத்திலே உற்று –

திடமாக வாய்ந்து –
திருட அத்யாவச்ய யுக்தராய்-வாழ்ந்த வழுதி வள நாடன் -என்னும்படி-பாவ பந்தத்தோடு கிட்டி –

அவனாய்த் தான் பேசும் -அதாவது –
கடல் ஞாலம் -என்றும்
கற்கும் கல்வி என்றும்
காண்கின்ற -என்றும்
செய்கின்ற -என்றும்
திறம்பாமல் -என்றும்
இனவேய்-என்றும்
உற்றார்கள் என்றும்
உறைக்கின்ற -என்றும்
கொடிய வினை -என்றும்
கொலங்கொள் -என்றும்
கூந்தல் -என்றும்
என்கிற இவை ஆதியாக -பத்தும் பத்தாக –
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்கள்
சகல வித்யா வேதனமும்
வித்யா ப்ரவர்தகத்வாதிகளும்
காரணமான பூத பஞ்சகங்களும்
கால த்ரயத்தால் உண்டான க்ரியா ஜாதங்களும்
ஜகத் ரஷண பிரமுகமான சேஷ்டிதங்களும்
ஸ்ரீ கோவர்த்தன உத்தரணம் முதலான ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களும்
ஸ்ரீ எம்பெருமான் ஆஸ்ரித நாஸ்ரித விஷயங்களில் இருக்கும் இருப்பையும்
ஜகத் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதி பிரகாரித்வமும்
அகர்ம வச்யத்வ பிரமுகமானவை ஸ்வர்க்க ப்ரமுகவானவையாய்
இப்படி உக்தங்கள் ஆனவை எல்லாம் நான் இட்ட வழக்கு என்று
யானே என்னை ஆய்ந்து ஏறப் பேசி –ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் –என்றபடி
அவனாகவே அனுகரித்த பிரகாரத்தை அருளிச் செய்யும்-

மாறன் உரையதனை –
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியானத்தை –

ஆய்ந்துரைப்பார் –
ஆய்ந்த தமிழ் மாலை யாயிரத்து இவையும் ஓர் பத்து என்று
இதன் வைபவத்தை ஆராய்ந்து அனுசந்திப்பார் –

ஆட் செய்ய நோற்றார் –
ஸ்ரீ திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்கள் -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வாருக்கு அடிமை செய்ய நோற்றார் ஆவார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே-என்று இறே அவர் இருப்பது
அஹத்வா ராவணம் சங்க்யே ச புத்ரம் சஹ பாந்தவம்–
கொடியான் இலங்கை செற்றேனே -என்னக் கடவது இறே-

————————————————

அவதாரிகை –

இதில்-ஸ்ரீ வானமாமலை திருவடிகளிலே வணங்கி பிரவணராய் சரணம் புக்க படியைப் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
அப்ரீதியாலே அனுகரித்து தரிக்க வேண்டும்படி அபிநிவேசம் அதிசயித்து செல்லா நிற்கச் செய்தேயும்
ஸ்வ அபிமதம் பெறாமையாலே அவசன்னராய்-இப்படி அனுபவ ருசி ரூபமான
தம் அபிநிவேசத்தை சாதனமாகக் கருதி அது முற்றினவாறே கார்யம் செகிறோம் என்று
ஸ்ரீ ஈஸ்வரன் நினைத்து இருந்தானாகா கொண்டு பேற்றுக்கு உறுப்பாக சாஸ்திர சித்தமான
கர்மாத் யுபாயங்களிலே-தமக்கு மறந்தும் அந்வயம் இல்லாமையை சொல்லிக் கொண்டு
அவன் அடியிலே காட்டின உபாயம் ஒழிய வேறு ஒரு உபாயம் இல்லை -என்று
சம்சாரி சம்ரஷண அர்த்தமாக
ஸ்ரீ பிராட்டிமாரோடும்-ஸ்ரீ நித்ய பரிகரத்தோடும் கூட ஸ் ரீவர மங்கையிலே வந்து எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ வான மா மலை திருவடிகளிலே-வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிற
நோற்ற நோன்பில் – அர்த்தத்தை-அருளிச் செய்கிறார்
நோற்ற நோன்பாதியிலேன்-என்று தொடங்கி -என்கை-

———————————————————

நோற்ற நோன்பாதி யிலேன்  உன் தனை விட்டாற்ற கில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே -சாற்றுகின்றேன்
இங்கு என்னிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது—-47-

————————————————————

வியாக்யானம்–

நோற்ற நோன்பாதியிலேன் –
இத்தால்-மோஷ சாதனமாக-சாஸ்திர சித்தமான கர்மாதி உபாயங்களில் எனக்கு அந்வயம் இல்லை —
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராஷஸோ ராஷசேஸ்வரா
தச்யாஹம் அனுஜோ ப்ராதா விபீஷண இதி ஸ்ருத -இத்யாதிகளாலே
முன்னிட்டு சரணம் அடைந்தால் போலே
நோற்ற நோன்பிலேன் -என்கிற பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி –

உன் தனை விட்டாற்ற கில்லேன் –
தாரகனுமாய்-போக்யனுமாய்-இருக்கிற உன்னை விட்டு-தரிக்க மாட்டு கிறிலேன்-
இவ் வாற்றாமை எனக்கு ஸ்வரூபம் இத்தனை —

ஆனால் பேற்றுக்கு சாதனம் என் என்னில் –
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே –
மோஷ உபாயம்
அரவின் அணை ஏறி வீற்று இருந்து -என்றும் –
சீவர மங்கை வாணனாய்-என்றும்
கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாடனாய்-
இப்படி அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற தேவர் அடியிலே அருளின நிர்ஹேதுக கிருபையே –
அதாவது –
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்றும்
தமியேனுக்கு அருளாய் -என்றும்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட -என்றும்
அருளாய் உய்யுமாறு -எனக்கு -என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -என்றும் – அருளிச் செய்தவை-என்கை –

மற்றும் உண்டான பாட்டுக்கள் -அருளுக்கு அடியான அவன் படிகளையும்
அதுக்கு உடலாகத் தம் படிகளையும்-அருளிச் செய்தவையாய் இருக்கும் –
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே சாற்றுகின்றேன் –
ஆகையாலே அவன் நிர்ஹேதுக கிருபையே சாதனம் -என்னுமது எல்லாரும் அறியும்படி
பறை அறைந்து சாற்றுகின்றேன் -என்கிறார் –

இங்கு என்னிலை என்னும் –
இவ்விடத்தில்-இவ்வர்த்த விஷயத்தில் – என்னுடைய நிஷ்டை இது என்னும்
அத்தலையில் பூர்த்தியாலே-இத்தலையில் ஆகிஞ்சன்யத்தை முன்னிடுகை இறே
பரதந்த்ரனான ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்னும் –

எழில் மாறன் -சொல் வல்லார்
சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் ஆகிற ஆத்ம பூஷணத்தாலே அபிராமராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் உடைய
வுபாய நிஷ்கர்ஷகமான இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் –

அங்கு அமரர்க்கு ஆராவமுது –
அவ்விடத்தில்-அளப்பரிய ஆராமுதை அனுபவிக்கிற
ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு நித்ய அபூர்வமான அம்ருதமாகப் பெறுவார்
ஸ்ரீ சிரீவர மங்கை மேய பத்துடன் வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே -என்றத்தை அருளிச் செய்தபடி –

———————————————————

அவதாரிகை –

அகிஞ்சனராய்-ஆர்த்தியோடே பிரபத்தி பண்ணி இருக்கச் செய்தேயும் ஸ்ரீ ஆராவமுதாழ்வார்
இவர் ஸ்ரீ நம்மாழ்வார் -என்று அபிமானித்து அபேஷிதம் செய்யாமையாலே
அலமந்து ஆர்த்தராய் அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்ரீவர மங்கை வாணன் திருவடிகளிலே சரண் புக்க விடத்திலும் அங்கே தம் அபேஷிதம் கிடையாமையாலே
ஆஸ்ரித ரஷண தீஷிதனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நம் கார்யம் செய்யாமை இல்லை –
எங்கே கார்யம் செய்ய நினைத்து இருக்கிறான் என்று தெரியாது என்று ஸ்ரீ திருக் குடந்தையிலே ஸ்ரீ ஆராவமுதாழ்வார்
திருவடிகளிலே செல்லவே நம் அபிமதம் சித்திக்கும் என்று மநோ ரதித்து சென்ற இடத்தில்
அவர் எழுந்து இருத்தல்
இருத்தல்
உலாவி அருளுதல்
இன் சொல்லுச் சொல்லுதல்
குளிர நோக்குதல்
அரவணைத்தல்–செய்து அருளக் காணாமையாலே
ஸ்ரீ பிராட்டியும் அவனுமான சேர்த்தியும் யுண்டாய்–நமக்கு அபேஷையும் யுண்டாய் இருக்க
அபிமதம் பெறாது ஒழிவோமோ-என்று துடித்து இவ்வளவிலும் திருவடிகளே உபாயம் என்னும் துணிவு குலையாது ஒழியப் பெற்றோமே
என்று வருந்தி தரித்தாராய் தலைக் கட்டுகிற ஸ்ரீ ஆராவமுதத்தில் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
ஸ்ரீ ஆராவமுதாழ்வார் -என்று தொடங்கி -என்கை –

————————————————————–

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக -தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான் —48-

ஆராவமுதன் -ஆழ்வார் ஆதரித்த -என்று பிரித்தும் பொருள் உரைப்பார் உண்டு

——————————————————————

வியாக்யானம்–

ஆராவமுதாழ்வார் –
சஹபத்ன்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -என்று ‘கூட்டித் தேடி அனுபவிக்கும் படி
நிரதிசய போக்யராய் –
ஸ்ரீ மான் ஸூக ஸூபத -என்னும்படி- ஏரார் கோலம் திகழக் கிடந்த ஸ்ரீ ஆராவமுதாழ்வார் –

ஆதரித்த பேறுகளை -தாராமையாலே-
இவர் அபேஷித்த புருஷார்த்தங்களை – அதாவது –
கிடந்தாய் கண்டேன் -என்றும்
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே -என்றும்
காண வாராயே -என்றும்-அருளிச் செய்யும் இடங்களிலே
அபேஷிதம் ஆனததை-
ஸ்ரீ குடந்தையுள் கிடந்த வாறு எழுந்து இருந்து -என்கிறபடியே
எழுந்து இருக்க வேணும் -என்றும்
ஸ்ரீ குடந்தை திரு மாலான தேவர்
தாமரை மங்கையும் நீயும் -என்னும்படி
இருவரும் கூட இருந்து அருள வேணும் -என்றும்
தாமரைக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்றும்
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வர வேணும் -என்றும்
சில பரிமாற்றங்களை அபேஷிக்க-அப்போதே அது பெறாமையாலே –

தளர்ந்து மிக –
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவன் -என்னும்படி
அத்யவசன்னராய்- தீராத ஆசையுடன் -அபி நிவேசம் போவது அனுபவத்தாலே ஆகையாலே
அனுபவம் பேராமல் முடியாத வபி நிவேசத்தோடே –

ஆற்றாமை பேசி யலமந்தான் –
அதாவது –
அடியேன் உடலம் நீராய் யலைந்து கரைய உருக்குகின்ற -என்றும்
என்னான் செய்கேன் -என்றும்
உன்னைக் காண்பான் நான் அலப்பாய் -என்றும்
தூராக்குழி தூரத்து எனை எத்தனை நாள் அகன்றிருப்பன் -என்றும்
தரியேன் இனி -என்றும்
உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -என்றும்–பேசினவை என்கை –
இத்தசையிலும்
உன்தாள் பிடித்தே செலக் காணே -என்றும்
களை கண் மற்றிலேன் -என்றும்-இவர்க்கு அடியில் இப்படி அத்யாவசியம் இருக்கும்படி இது வாயிற்று –

மாசறு சீர் மாறன் எம்மான் –
இவ்வளவான தசையிலும்-உபாயாந்தரங்களில் கண் வைக்கை யாகிற மாசு இன்றிக்கே இருக்கிற
அத்யாவச்ய ஞானாதி குணங்களை யுடையரான ஸ்ரீ ஆழ்வார் தம்மை அடைந்து பிரபன்ன ஜனமான நமக்கு ஸ்வாமி-

அன்றிக்கே
ஆற்றாமை பேசி அலமந்தான் -என்று க்ரியை-

————————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ திரு வல்ல வாழ் ஏறச் செல்ல-புறச் சோலையில் போக்யதையால் நலிவு பட்டுப் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்-
பெரிய ஆற்றாமையோடு ஸ்ரீ திருக் குடந்தையிலே புக்க இடத்திலும் தம்முடைய அபேஷிதம் கிடைக்கப் பெறாமையாலே
அங்கு நின்றும் புறப்பட்டு திருவடிகளே உபாயம் –என்று துணிந்த துணிவு கை கொடுத்து நடத்த
ஸ்ரீ திரு வல்ல வாழ் ஏறப் போய்-முட்டப் போக மாட்டாமல் மிகவும் தளர்ந்து
ஊரில் புறச் சோலையில் கிடந்து-அங்கு உண்டான வாத்திய கோஷ-வைதிக கிரியா கோலாகலம் செவிப்பட
மது மல்லிகை தொடக்கமான போக்யதை அனுசந்திக்கையாலும்-உள்ளுப்புக்கு அனுபவிக்க பெறாமையலும்
தமக்கு உண்டான ஈடுபாட்டை ஸ்ரீ நாயகன் இருப்பிடத்தே செல்லுவதாக புபுறப்பட்டுப் போய்
கிட்டி அனுபவிக்கப் பெறாமையாலே நடுவே கிடந்தது நோவு பட்டு
அங்கே புக்கு அவனைக் கண்டு ஸ்தோத்ரம் பண்ண பெறுவது என்றோ நாம் -என்று
தன் தளர்த்தியை பாங்கிமாருக்கு உரைக்கிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
மானேய் நோக்கில் அர்த்தத்தை-மா நலத்தால் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்-என்கை –

——————————————————–

மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகழ் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித்
துன்புற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற—49-

———————————————–

வியாக்யானம்–

மா நலத்தால் மாறன்-
பெரிய பிரேமத்தாலே ஆழ்வார் –

திரு வல்ல வாழ் புகழ் போய் –
பிரேம ப்ரேரிதராய் பிரவேசிக்கைக்காக போய் –

தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் —
அவ் ஊர் தன் அருகில் -தான் இளைத்து -வீழ்ந்து-உள்ளே புக்கு அனுபவிக்க பெறாமால்
ஊரின் புறச் சோலையிலே
பல ஹானியாலும்-அங்குத்தை போக்யதையாலும்-நகர சம்ப்ரமங்களாலும்
கால் நடை தாராமல் தளர்ந்து வீழ்ந்து –

மேல் நலங்கித்-
அதுக்கு மேலே-தோழி மார் நிஷேத வசனங்களாலும் கலங்கி –

துன்புற்றுச் –
பகவத் அலாபத்தாலே மாறுபாடு உருவின துக்கத்தை யுடையராய் –

சொன்ன சொலவு –
அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள்-
அதாவது
பத்ம சௌ கந்திகவஹம் -என்றும்
பத்ம கேசர சம்ஸ்ருஷ்ட -என்றும் -இத்யாதிப் படியே
வைகலும் வினையேன் மெலிய வானார் வண் கமுகும்
மது மல்லிகை கமழும் தேனார் சோலைகள் சூழ் -என்றும்
பொன்றிதழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவித் தென்றல் மனம் கமழும் -என்றும்
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் -என்றும்
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழும் கானல் -என்றும்
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர் -என்றும்
மாடுறு பூம் தடம் -என்றும்
மழலை வரி வண்டுகள் இசை பாடும் -என்றும்
விஸ்லேஷ தசையில் அங்குத்தையில் பரிமளம் அசஹ்யமாய்-கால் கட்டுகிறபடியையும்
மற்றும் உண்டான போக்யதைகளும் அப்படியே யாகியும்
வினையேன் மெலியப் பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க என்றும்
மாடுயர்ந்த ஓமப் புகை கமழும் என்றும்
நல்ல அந்தணர் வேள்விப் புகை மை நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் -என்றும்
வேத வைத்திய க்ரியா கோலாஹலங்களுக்கும்
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம் -என்றும்
நரக சம் ப்ரமங்களும்
நாயகன் வேத பிரதிபாத்யன் ஆகையாலும் வைதிக கர்ம சாமாராத்யன் ஆகையாலும்
ஸ்மாரகத்வேன பாதகம் ஆயிற்று
நகர சம்ப்ரமம் தானும் சம்ப்ரமத்துடனே புகப் பெறாமையாலே பாதகம் ஆயிற்று

அதுக்கு மேலே
என்று கொல் தோழிமீர் காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ-என்றும்
நிச்சலும் தோழிமீர் காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ-என்றும் –
பிரிய பரைகள் ஹித பரைகளாய் நிஷேதிக்கை யாலும்
தனக்கு ஓடுகிற த்வரையாலே அதுவும் சைதில்ய ஜனகம் ஆயிற்று –
கோனாரை அடியேன் கூடுவது என்று கொலோ -என்றும்
நின்ற பிரான் அடி நீர் அடியோம் கொண்டு சூடுவது என்று கொல் -என்றும்
நீடுறைகின்ற பிரான் கழல் காண்டும் கொல் நிச்சலுமே -என்றும்
நம்பிரானது நன்நலமே -என்றும் –
எந்நலம் கொல் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே -என்றும்
மாண் குறள் கோலப் பிரான் மலர் தாமரைப் பாதங்கள் காண்பது எஞ்ஞான்று கொலோ -என்றும்
நிலம் தாவிய நீள் கழலை -நாடொறும் வீடின்றியே தொழக் கூடும் கொல் -என்றும்
யாம் கண்டு கை தொழக் கூடும் கொலோ -என்றும்
நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்கள்
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடும் கொல் -என்றும்
இப்படி திருவடிகளை தொழுகையும்-திரு நாமத்தாலே ஸ்துதிக்கையும்
பிரார்த்யம் ஆகையாலே சைதில்யம் மிக்கு இருக்கும் இறே-
இப்படி ஆகையாலே
மேல் நலங்கி-துன்பமுற்று சொன்ன சொல் இவை யாயிற்று –
இத்தசையிலும் -அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -என்று இறே
இவர் அத்யாவசியம் குலையாது இருக்கும் படி –

துன்பமுற்று சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு –
இப்படி விஸ்லேஷ வ்யசன உக்தராய் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தியான
இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லாருக்கு –

பின் பிறக்க வேண்டா –
இதன் அப்யாச அநந்தரம்-ஜன்மம் பரிக்ரஹம் பண்ண வேண்டா
ஜென்மத்தை முடித்தே விடும்
பிற -என்று அவ்யயம்
அன்றிக்கே
திருவடிகளுக்கு அசலான ஜன்மம் எடுக்க வேண்டா -என்றாகவுமாம் –

பின்பு கற்க வேண்டா பிற -என்ற பாடம் ஆன போது
இத்தை ஒழிய வேறு ஒன்றை அப்யசிக்க வேண்டா என்றபடி –

———————————————————

அவதாரிகை –

இதில்
அவதார சேஷ்டிதங்களை தரித்து நின்று அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும்
என்று பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்-ஸ்தான த்ரயத்திலும் தம் அபேஷிதம் கிடையாமையாலே ஸ்ரீ அர்ச்சா ஸ்தலங்களிலே
ஆஸ்ரிதர் நினைவுக்கு ஈடாக ஆலோக ஆலாப ஆலிங்கநாதிகளான அனுபவ விசேஷங்களை வுபகரித்து
அருளக் கடவோம் அல்லோம் -என்று அவன் சங்கல்ப்பித்து அருளுகையாலேயாய் இருக்கும்
நம் அபிமதம் சித்தியாது ஒழிந்தது-அவன் சங்கல்பம் குலையும்படி அங்கு நிர்பந்திக்கக் கடவோம் அல்லோம் –
ஆஸ்ரிதர் நினைவு அறிந்து முகம் கொடுத்த அவதாரத்தில் செல்லுவோம் -என்று
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலே அனுபவிப்பதாகச் செல்ல அதுவும் கை கழிந்து தாம் பிற்பாடராய் அத்தாலே நொந்து
அவ் வவதார குண சேஷ்டிதங்களை யாகிலும் அனுசந்தித்து தரிப்போம் என்று பார்த்த இடத்தில்
அதுவும் விஸ்லேஷ தசையில் அனுசந்திக்கையாலே சைதில்யத்தை விளைக்க
நான் தரித்து நின்று உன் குண சேஷ்டிதங்களை அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று
சரணம் புகுகிற -பிறந்த வாற்றில் அர்த்தத்தை
பிறந்து உலகம் காத்து அளிக்கும் -என்று அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————————

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா உன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து
சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே வைகு–50-

—————————————————————

வியாக்யானம்–

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா –
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்த பிறவியை-பிறந்தவாறும் -என்று ஈடுபடும்படி அவதரித்ததும்
மற்றும் —
கள்ள வேடத்தை கொண்டு போய்ப் புரம்புக்க வாறும் -என்றும்
சீரால் பிறந்து சிறப்பால் வளராதே அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அடியை மூன்றை இரந்த வாறும் –
அம்ருத மதன அர்த்தமாக ஆவிர்பவித்து கூடி நீரைக் கடைந்த வாறும் –
என்று இப்படி
பூ பார நிர்ஹரண அர்த்தமாகவும்-திரிபுர தஹன அர்த்தமாகவும்-த்ரைலோக்ய அபஹரண அர்த்தமாகவும்
அம்ருத மதன அர்த்தமாகவும் திருவவதரித்து ஜகத்தை ரஷித்து
நோக்கிப் போரும் நிரவதிக கிருபணா வானனான ஸ்ரீ கிருஷ்ணனே

கீழே
நல்லருள் நம்பெருமான் -என்றார் இறே
அப்படியே-நிரவதிக தயாவானவன் -உன் சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து –
உனக்கு அனுரூபமான கல்யாண குண அனுசந்தானத்தாலே த்ரவி பூதானாம் ஸ்வபாவ பிரகாரம் நிவ்ருத்தமாய் –

சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் –
உன்னைக் கிட்டி-அனுபவிக்கும் படியாக ஸ்தைர்யத்தைச் செய்து அருள வேணும் –
அதாவது –
பிறந்தவாறு -என்று தொடங்கி -நிறந்தனூடு புக்கென தாவியை நின்று நின்று உருக்கி உண்கின்றன -என்றும்
என்னை யுன் செய்கை நைவிக்கும் -என்றும் –
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே-என்றும்
வெள்ள நீர் சடையானும் -என்று தொடங்கி -என்னுயிரை உருக்கி உண்ணுமே -என்றும்
உண்ண வானவர் கோனுக்கு -என்று தொடங்கி –என் நெஞ்சு எரி வாய் மெழுகு ஒக்கு நின்றே -என்றும்
திஷ்டந்தம் – ஆஸி நம் – பிரதிசிஸ்யே -என்னும்படி நின்றவாறு -இத்யாதி
எங்கனம் மறந்து வாழ்கேன் என் செய்வேன் உலகத்தீரே -இத விஷயத்தில் நம்மைத் தானே கேட்க வேணும் –
நின்று நின்று நினைகின்றேன் உன்னை எங்கனம் நினைகிற்பன் -என்றும்
ஒண் சுடரோடு -என்று தொடங்கி -எண் கொள் சிந்தையுள் நைக்கின்றேன் -என்றும்
திருவுருவு கிடந்த வாறும் -என்று தொடங்கி — என் நெஞ்சம் நின்று நெக்கருவி சோறும் கண்ணீர் -என்றும்
அடியை மூன்றை இரந்த வாறும் -என்று தொடங்கி –
என் நெஞ்சம் நின்றனக்கே கரைந்து உகும் -என்றும்
கூடி நீரைக் கடைந்த வாறும் -என்று தொடங்கி -ஊடு புக்கு எனதாவியை உருக்கி யுண்டிடுகின்றன-என்றும்
சொல்லப் படுகிற இவை நிவ்ருத்தமாய்
உன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
உன்னை என்று தலைப் பெய்வனே -என்றும்
பாவியேற்கு ஓன்று நன்கு உரையாய் -என்றும்
என் செய்கேன் அடியேனே -என்றும்
கொடிய வல்வினையேன் உன்னை என்று கொல் கூடுவதே -என்றும்
நின் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே-என்று
தரித்து நின்று உன்னை அனுபவிக்கப் பெறுவேன் -என்றவை என்கை –

சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று
தாம் தரித்து நின்று அனுபவிக்கும் பிரகாரம் பண்ணி அருள வேணும் என்று
அர்த்தித்த-ஞானாதி குணங்களை யுடையரான-ஸ்ரீ ஆழ்வார் உடைய –

வாய்ந்த பதத்தே –
பரஸ்பர-சத்ருசமாய்-பொருந்தி இருக்கிற திருவடிகளிலே –

மனமே வைகு –
மனசே தங்கிப் போரு-

அவருக்கு
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஆனாப் போலே
உனக்கும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே பிராப்தம் என்று சென்று அங்கேயே தங்கிப் போரு-

————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —நாலாம் பத்து–பாசுரங்கள்- 31-40-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில் ஐஸ்வர்யாதிகளின் அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களை பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
சீர் பரவப் பெற்ற நான் -என்று-கீழ் ஸ்ரீ பகவத் அனுபவத்தாலே ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார்
அந்த ஹர்ஷத்தாலே இவ் விஷயத்தை ஒழிய ஐஸ்வர்யாதிகளிலே மண்டி இருக்கிறவர்களைக் குறித்து
மீளவும் இவற்றின் யுடைய அல்ப அஸ்திரத்வாதிகளாகிற தோஷங்களை அறியாதே
இவற்றிலே மண்டி இருக்கிறார்கள் என்று இவற்றின் தோஷங்களைப் பரக்க பேசா நின்று கொண்டு
பரம புருஷார்த்த பூதனான ஸ்ரீயபதியின் திருவடிகளை ஆஸ்ரயுங்கோள் என்று
பிறருக்கு உபதேசித்துச் செல்லுகிற -ஒரு நாயகத்தின் அர்த்தத்தை சங்க்ரஹித்து
ஒரு நாயகமாய் -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

ஒரு நாயகமாய் யுலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பம் -திறமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம்
பன்னியிவை மாறன் உரைப்பால் –31-

மாறன் உரைப்பால் போம் –உயற்பாலவே கிரியை வரவழைத்துக் கொள்ள வேண்டும் –
அறியப்பட்டன என்றுமாம்

—————————————————-

வியாக்யானம்–

ஒரு நாயகமாய் -என்று துடங்கி யுலகுக்கு -ஒரு நாயகமாய் – யுய்க்கும் இன்பமும்
வானோர் இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பமும் – திறமாகாது -என்கிறார் –
ஒரு நாயகமாய் ஓட வுலகு உடன் ஆண்டவர் -என்றத்தை நினைக்கிறது –
சார்வ பௌமராய்-பாண்டரச்யாதா பத்ரச்ய – என்று
ஏகாத பத்திரமாக நாட்டை நடத்துகிற வத்தால் வருகிற ஸூகமும்
எனைத்தோர் யுலகங்களும் இவ் வுலகாண்டு கழிந்தவர் –என்றும்
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பார் எனபது இல்லை -என்றும் சொல்லுகையாலே அஸ்த்ரமாய் இருக்கும் –

வானோர் இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பமும் -ஆவது
தேவர்களுக்கு வாசஸ் ஸ்தானமாய்-ஐஹிக போக விலஷணமான ஸ்வர்க்காதி அனுபவம்-அதுவும் திறமாகாது-
புக்த்வாஸ் ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யே மர்த்த்ய லோகம் விசந்தி –
என்கிறபடியே அஸ்திரமாய் இருக்கும்
குடிமன்னு மின் ஸ்வர்க்கமும் எய்தியும் மீள்வர்கள் -என்றத்தைப் பின் சென்றபடி –

இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பமும் -ஆவது-
ஸூக்ருத விசேஷத்தாலே ப்ராபித்தாலும் ஸ்திரமாகாது
இது ஆ ப்ரஹ்மபவனம் புனராவ்ருத்தி-என்பதுக்கும் உப லஷணம்-

மன்னுயிர்ப் போகம் தீது-
இறுகல் இறப்பு -என்று-சங்கோச ரூப மோஷம் ஆகையாலே அதுவும் தோஷ யுக்தமாய் இருக்கும் –

மன்னுயிர்ப் போகம்-என்கையாலே
நித்தியமான ஆத்மா அனுபவம்-கீழில் அவை போல் அஸ்தரம் போகம் ஆகை அன்றிக்கே
நித்ய போகமாய் இருந்ததே யாகிலும் ஸ்ரீ பர ப்ரஹ்ம அனுபவத்தைக் குறித்து சிற்றின்பமாய் இருக்கும்
ஆகையாலே -தீது -என்றது –

மாலடிமையே யினிதாம் -பன்னியிவை மாறன் உரைப்பால் –
பன்னியிவை மாறன் உரைப்பால் -மாலடிமையே யினிதாம்-
இவற்றின் அல்ப அஸ்த்ர த்வாதி தோஷங்களை ஆராய்ந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடைய தாச்யமே சரசமாய் இருக்கும்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ என்றும்
செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மினோ -என்றும்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ -என்றும்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ -என்றும்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ -என்றும்
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ -என்றும்
பணம் கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ -என்றும்
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ -என்றும்
மறுகலில் ஈசனைப் பற்றி விடா விடில் வீடு அக்தே -என்றும்
அக்தே உய்யப் புகும் ஆறு -என்றும்
அருளிச் செய்தவை எல்லாவற்றையும் நினைத்து மால் அடிமையே இனிதாம் -என்று அருளிச் செய்தது –

—————————————————————————

அவதாரிகை –

இதில்-தேச கால விப்ரக்ருஷ்டமான அவன் படிகளை-தம் தாம் தேச கால விசிஷ்டமாம் படி
அனுபவிக்க வேண்டும் என்று ஆதரித்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
மூன்று களையும் பறித்து சங்காயுமும் வாரின பயிர் சதசாகமாகப் பணைக்குமா போலே –
வீடுமின் முற்றவும்
சொன்னால் விரோதம் –
ஒரு நாயகம் – என்ற மூன்று திருவாய் மொழிகளிலே சம்சாரிகளைக் குறித்து உபதேசித்த இடத்தில்
அவ் உபதேசம் அவர்கள் திருந்துகைக்கு உடல் அன்றிக்கே
தமக்கு ரசாந்தரங்களாலே அபி பூதனாய்க் கிடந்த முடியானேயில் விடாய்க்கு உத்தம்பகமாய்
பக்தி சத சாகமாகப் பணைக்க-அத்தாலே தேச கால விபக்ரஷ்டமான அவன் படிகளை
இப்போதே கண்டு அனுபவிக்க வேண்டும் என்னும் அபேஷை பிறந்து-அபேஷித்த படியே அனுபவிக்கப் பெறாமையாலே
தாம் நோவு பட்டு சொல்லுகிற படியை அந்யாப தேசத்தாலே அருளிச் செய்த
பாலனாய் ஏழு உலகின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் -பாலரைப் போலே -இத்யாதியாலே -என்கை –

———————————————

பாலரைப் போல் சீழ்கிப் பரனளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கை கழிந்த -சால
அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ —32-

———————————————–

வியாக்யானம்–

பாலரைப் போல் சீழ்கிப் –
பிராப்த அப்ராப்த விவேகம் பண்ண அறியாத பாலர்
தேசத்தாலே விப்ரக்ருஷ்டமான அம்புலி யம்மானையும்-காலத்தாலே கை கழிந்து போன பலாதி வஸ்துக்களையும்
அப்போதே கொடு வந்து தர வேணும் -என்று
பாலச்ய ருதி தம்பலம் -என்னும்படி ரோதனத்தை முன்னிட்டு அபேஷிக்குமா போலே
இவரும் தேச கால விப்ரக்ருஷ்டமான பர அவஸ்தய தத் அனுபவங்களை அப்போதே பெற வேணும் என்று
அழுவன் தொழுவன் -என்னும்படி பாலர் செய்யுமத்தைச் செய்து
அபீ தாநீம் ச காலச்யாத் வநாத்பிரத்யா கதம்புன -என்று இறே
ஆசை யுடையார் பவிஷ்ய காலத்தை சம காலமாக அபேஷித்து இருப்பது
அப்படியே இறே இவர் பூத காலத்தில் படிகளை அபேஷிக்கிறார் –

பரனளவில் வேட்கையால் –
சர்வ ஸ்மாத் பரன் இடத்தில் பர பக்தியாலே –
பரன் -காலத்தால் தேசத்தால் கை கழிந்த –
பாதங்கள் மேல் அணி பைம் பொற்றுழாய் என்றே யோதுமால் எய்தினாள் -என்றத்தை நினைக்கிறது
தேச விபக்ருஷ்டமான பர வ்யூஹங்களும்
கால விபக்ருஷ்டமான விபவமும்
பர விஷய பக்தி ஏகதேசமாய்
ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் தாளினை மேல்
தண்ணம் துழாய் என்றே மாலுமால் -என்று துடங்கி
கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியும்-என்று
விபவ பிராவண்யம் இறே விஞ்சி அருளிச் செய்தது –
அவை ஆவன
குரவை பிணைந்தவர் நல்லடி -என்றும்
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடி -என்றும்
குடக் கூத்தனார் தாளிணை -என்றும்
அகலிடம் கீண்டவர் பாதங்கள் -என்றும்
திருமாதினைத் தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாள் -என்றும்
இலங்கை நகரம் பரி யுய்தவர் தாளிணை -என்றும்
கண்ணன் கழல் -என்றும்
இப்படி விபவத்தை அடி விடாமல் இருக்கிற படி -என்கை
ந்யக்ரோத சாயியையும் -ஆலிலை / பீயூஷ ஹாரியையும்–பீயூஷ -அமுதில் வரும் -பெண்ணமுதம்
நாயக்ரோத சாயீ பகவான் பீயூஷா ஹரணச்ததா -என்று விபவங்களோடே இறே சஹபடித்தது-
இங்கேயும்
மடந்தையை வண் கமலத் திரு மாதினை தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் -என்றும்
விண்ணவர் அமுது உண்ண அமுதினில் வரும் பெண் அமுதை ஸ்வீகரித்த படி சொல்லிற்று –

சால அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான் –
இப்படி தேச காலங்களால் கை கழிந்து இருக்கிறது
தத் கால வர்திகளுக்கும் தத்ரஸ்தராய் ஆனவர்களுக்குமே இறே அனுபாவ்யமாய் இருப்பது -என்று அறியாமல் –
அபி நிவேச அதிசயம் மாறுபாடுருவும்படி யாவகாடமாய்-அவகாடம் -ஆழ்ந்து அனுபவம் –
அத்தை அப்போதே பெறாமையாலே சிதிலர் ஆனால் –

இதுக்கடி
குருகூரில் வந்துதித்த கோ –
ஆகையாலே-ஸ்ரீ திரு அயோத்தியில் பிறப்பு ஸ்ரீ ராம பக்தியை ஜனிப்பிக்குமா போலே
ஸ்ரீ திரு நகரியில் பிறப்பும் பராபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் இறே

கோ
ராஜா
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் ராஜா என்றபடி –
இவ்விடம் அராஜாகமாய் ஆகாமைக்கு ஆயிற்று -ஸ்ரீ ஆழ்வார் அங்கு நின்றும் போந்து ஆவிர்பவித்தது –

———————————————

அவதாரிகை –

இதில் கால உபாதியைக் கழித்து அனுபவிப்பித்த படியை அருளிச் செய்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
இப்படி தேச கால விப்ரக்ருஷ்டங்களானதன் படிகளை அனுபவிக்க வேணும் என்று ஆசைப் பட்ட இவர்க்கு
கால சக்கரத்தான் ஆகையாலே கால உபாதியைக் கழித்து வர்த்தமான காலம் போலே யாக்கிக் கொடுத்து
இவர் சத்தையே தனக்கு எல்லாமாக இருக்கிற தன் பிரணயித்வ குணத்தையும்
அவன் அனுபவிப்பிக்கவே எல்லாம் பெற்றாராய் இந்த பிரணயித்வ குணத்தையும் அனுபவித்து
அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே அத்தையே பேசிச் செல்லுகிற கோவை வாயாளின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் -கோவான ஈசன் -இத்யாதியால் -என்கை –

———————————————–

கோவான வீசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத் துவாதிதனை -மேவிக்
கழித்தடையைக் காட்டிக் கலந்த குணம் மாறன்
வழுத்துதலால் வாழ்ந்துது இந்த மண் —33

ஸ்ரீ பட்டர் நிர்வாகம் -கால உபாதி நிரசன குணம் –

————————————————–

வியாக்யானம்–

கோவான வீசன்-
ஸ்ரீ ஆழ்வாரைத் தரிப்பிக்கவே ஜகத்து உஜ்ஜீவிக்கும் என்று சர்வ நிர்வாஹகனான
ஸ்ரீ சர்வேஸ்வரன் –
ஸ்ரீ ஆழ்வார் அழிந்தால் அவருக்குள் தானும் உளனே -மின்னு மா மழை தவழும் -ஆறு அங்கம் கூற
அவதரித்தவர்க்கு தன்னைக் காட்டி அருளினான்

குறை எல்லாம் தீரவே –
கீழில் திருவாய் மொழியில்-தேச காலாதித போக்ய வஸ்துவை அனுபவிக்கப் பெறாத
துக்கத்தால் வந்த சங்கோசம் எல்லாம் நிவ்ருத்தமாம்படி கால சக்கரத்தான் ஆகையாலே –

ஓவாத காலத் துவாதிதனை —
விச்சேதியாமல் நடந்து செல்லுகிற காலத்தில் அதீதமான உபாதியை –

மேவிக் கழித்து –
அகால பலின -என்னும்படி-இவரோடு சேர்ந்து-அந்த கால உபாதியைக் கழித்து –

அடைய காட்டிக் –
கீழே அபேஷித்த அவதானங்களைக் காட்டி -என்னுதல்-
அன்றிக்கே
பூசும் சாந்து – கண்ணி எனது உயிர் -இத்யாதிகளாலே –
கரணங்களும் கரணியான இவர் சத்தையும்
இவருக்கு அங்கராக ஆபரண அம்பராதிகள் ஆனபடியையும் காட்டினபடி-கீர்த்தி -ஆதி சப்தத்தில் ஆகவுமாம் –
உன்னாகம் முற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே -என்று
என் ஆவி நிர் துக்கமாயிற்று என்று அருளிச் செய்தபடி –

கலந்த குணம் –
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் என்ன வண்ணமே நின்றாய்
என்று உரைக்க வல்லனே -என்று இப்படி ஏக தத்வம் என்னலாம்படி

கலந்த குணம் –
சம்ஸ்லேஷித பிரணயித்வ குணத்தை –

மாறன் வழுத்துதலால் –
ஸ்ரீ ஆழ்வார் சத்தை பெற்று
யானும் எம்பிரானை ஏத்தினேன் யான் உய்வானே -என்று
இப்படி கீழ் வ்யசனம் தீர்ந்து ஸ்ரீ எம்பிரானை ஸ்தோத்ரம் பண்ணுகையால் –

வாழ்ந்துது இந்த மண் –
இந்த ஜகத்தில் உள்ளார் எல்லாரும் எல்லாம் சத்தை பெற்று வாழ்ந்தார்கள் –
வையம் மன்னி வீற்று இருந்து –என்று இறே பல சுருதி –
அன்றிக்கே
விஸ்வம் பரா புண்யவதீ-என்று ஸ்ரீ ஆழ்வார் கால் தரித்து இருக்கையாலே
பூமி பாக்யவதியாகி வாழ்ந்தது ஆகவுமாம்-

————————————————

அவதாரிகை –

இதில் சத்ருச பதார்த்தங்களையும் சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகவே பிரமித்து பேசின பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் அது எங்கனே என்னில் –
கீழ் – காதல் மையல் ஏறினேன் -என்று பிரணயித்வ குணத்தை அனுபவித்து விளைந்த
ப்ரீதி பிரகர்ஷம் ஆஸ்ரயத்தையும் அழிக்கும் படி கரை அழித்துப் பெருக
அத்தை அரை ஆறு படுத்துக்கைக்காக அவன் பேர நிற்க -பிரிந்தது அவனை ஆகையாலே அவசன்னராய்
ஸ்ரீ ராம குணங்களுக்கு இட்டுப் பிறந்த ஸ்ரீ பரத ஆழ்வான்-ஒரு வேடன் வாய் இட்டு
ஸ்ரீ ராம சரிதத்தைக் கேட்டு தரித்தால் போலே இவ் வாழ்வாரும் அவனோடு சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும் அவனே என்று பிச்சேறும் படி தமக்குப் பிறந்த அவஸ்தா விசேஷத்தை
அன்யாபதேசத்தாலே பேசின
மண்ணை இருந்து துழாவி -யின் -அர்த்தத்தை-மண்ணுலகில் -இத்யாதியால் -அருளிச் செய்தார் -என்கை –

——————————————————–

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண்ணிலைமை யாய்க் காதல் பித்தேறி -எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை யவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு—-34-

——————————————————–

வியாக்யானம்–

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் –
பூலோகமான இவ் விபூதியில் முன்னம்-கோவை வாயாளிலே பெறாப் பேறான சம்ஸ்லேஷத்தை யுண்டாக்கி
ஸ்ரீ சர்வேஸ்வரன் விச்லேஷிக்கையாலே –

மாறன் பெண்ணிலைமையாய்க் –
ஸ்ரீ ஆழ்வார் அபலையினுடைய அவஸ்தையை அடைந்து –

காதல் பித்தேறி –
என் கொடியே பித்தே -என்னும்படி பக்தியாலே காதல் பித்தேறி –
க்வசிதுத் பரமதே -இத்யாதிப்படியே சித்த விப்ரகம் பிறக்க –

எண்ணிடில்-
அந்த பித்தேறின பிரகாரத்தை நிரூபிக்கில் –

அன்றிக்கே –
பித்தேறி எண்ணிடில் –
பித்தேறின ஆகாரத்தோடே தாம் நிரூபிக்க புகில்

முன் போலி முதலான பொருளை யவனாய் நினைந்து –
அதாவது –
மண்ணை இருந்து தொடங்கி
அயர்க்கும் அளவும் பிரதிபாதிக்கப் படுகிற
முன் கண்ட சத்ருச பதார்த்தங்களையும் சம்பந்த பதார்த்தங்களையும் அவனாகவே பிரதிபத்தி பண்ணி -என்கை –

இது எத்தாலே என்னில்
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு
மையல் தனின் வீறு -மேல் விழுந்தான்-
வ்யாமோஹ அதிசயத்தாலே-அவற்றிலே அத்ய அபி நிவிஷ்டரானார்
இவருடைய அபி நிவிஷ்ட அதிசயம் இருந்த படி என் என்று
ஸ்ரீ ஜீயருக்கும் இது கண்டு சஹிக்க ஒண்ணாதபடி யாயிற்று —

சத்ருச பதார்த்தங்களும்-சம்பந்த பதார்த்தங்களும் ஆவன –
சத்ருச பதார்த்தம் –
விண்
கடல்
நாயிறு
செந்தீ
தண் காற்று
ஒன்றிய திங்கள்
நின்ற குன்றம்
நன்று பெய்யும் மழை
கூத்தர் நீறு செவ்வே இட
திரு வுடை மன்னர்
உரு வுடை வண்ணங்கள்
கருவுடைத் தேவில்கள்
விரும்பிப் பகவர்
கரும் பெரு மேகங்கள் —

சம்பந்தி பதார்த்தங்கள் ஆவன –
நாறு துழாய்
வாமனன் மண்
கோமள வான் கன்று

சம்பந்த பதார்த்த சத்ருசங்கள் –
போம் இள நாகம்
வாய்த்த குழலோசை
ஆய்ச்சியர் வெண்ணெய்
என்று விபஜித்து ஆயிற்று ஸ்ரீ ஆச்சான் அருளிச் செய்யும் படி-

—————————————

அவதாரிகை –

இதில்
அப்ராக்ருத விபூதியில்-அசாதாராண ஆகாரத்தைக் காட்ட அனுபவித்து ஹ்ருஷ்டராகிற படியைப் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் –
வல்வினை தீர்க்கும் ஸ்ரீ கண்ணனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சத்ருச சம்பந்த வஸ்துக்களையும் அவனாகவே
அனுசந்திக்கும்படி பிறந்த இவருடைய பித்து சவாசனமாகத் தீரும்படி
சர்வ தேவ நமஸ்காரம் ஸ்ரீ கேசவனுக்கு செல்லுமே -மழை நீர் அருவிகள் கடலுக்கு போவது போலே -சாதாராண ஆகாரம் சர்வாத்மகம்
அசாதாராண வடிவம் -சத்வாரகமாக அன்றி நேராக கூராழி வெண் சங்கு எனது வாராய் –
விலஷண ஸ்வரூப குண விக்ரஹ விபூஷண ஆயுத பத்னீ பரிசரண விசிஷ்டனாய்க் கொண்டு
ஸ்ரீ பரம பதத்திலே வ்யாவ்ருத்தி தோன்ற இருக்கிற மேன்மையையும்
லீலா விபூதியில் உள்ளார் எல்லாரையும் ஸ்ருஷ்ட்ய அனுபிரவேசாதிகளால் ரஷிக்கிற அளவன்றிக்கே
மனுஷ்யாதி ரூபேண வந்து அவதரித்து
ரஷித்துக் கொண்டு போருகிற படியையும் இவருக்குக் காட்டிக் கொடுத்து
ஸ்ரீ சர்வேஸ்வரன் இவரோடு வந்து பூர்ண சம்ச்லேஷம் பண்ணி அருள
அத்தைக் கண்டு-சூழ் விசும்பு அணி முகிலுக்கு மேலே அங்கே சென்றால் பண்ணுகிற மங்களா சாசனத்தை
இங்கேயே இருந்து அவனுடைய உபய விபூதி ஐஸ்வர்யத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி
க்ருத்க்ருத்யராய்-உபய விபூதியிலும் என்னோடு ஒப்பார் இல்லை -என்று
ஹ்ருஷ்டர் ஆகிற -வீற்று இருந்து ஏழ் உலகின் தாத்பர்யத்தை
அருளிச் செய்கிறார் -வீற்று இருக்கும் மால் விண்ணில் -இத்யாதியாலே -என்கை –

————————————————————-

வீற்று இருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து —35-

—————————————————————–

வியாக்யானம்–

வீற்று இருக்கும் மால் -விண்ணில்
விண்ணில்-வீற்று இருக்கும் மால்-
ஆசீன காஞ்சநே திவ்யேச ச சிம்ஹாச நே பிரபு -என்றும்
ராமம் ரத்ன மயே பீடே சஹ ஸீதம் ந்யவேசயத் -என்றும்
பரிவார்யா மஹாத்மானம் மந்த்ரினஸ் சமூபசிரே -என்றும்-சொல்லுகிறபடியே
வானக் கோனாய்-விண்ணோர் பெருமானாய் -மைய கண்ணாள் மலர் மேல் உறை மார்பனாய்
வீற்று இருந்து ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் –

மிக்க மயல் தன்னை –
ஸ்ரீ ஆழ்வார் உடைய அத்யந்த வ்யாமோஹத்தை-
மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே -என்று
பெற்றவர்களும் பேசிக் கை விடும்படியான மிக்க மயல் தன்னை

ஆற்றுதற்காத் –
கைபிடித்த தான் ‘இத்தை ஆற்றுதற்க்காக-

தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து –
கீழில் ப்ரமம் எல்லாம் ஆறும்படி –
பூவின் மிசை நங்கைக்கு இன்பன் –
தூவியம் புள்ளுடையான் அடலாழி அம்மான் தன்னை -என்று
ஸ்ரீ பிராட்டியாரோடும்
ஸ்ரீ நித்ய சித்தரோடும்
கூடி இருக்கிற இருப்பையும்
ஞாலத்தார் தமக்கும் வானவர்க்கும் பெருமானை -என்றும்
உபய விபூதி ஐஸ்வர்ய உக்தனாய் இருக்கிற படியையும்
வீவில் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை -என்றபடி
குண விக்ரஹாதி வைலஷண்யம் முதலான வைபவம் எல்லாம் பிரகாசிக்க இங்கே வந்து –

நன்று கலக்கப் –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் -என்னலாம்படி இவருடன் சம்ச்லேஷிக்க –

போற்றி நன்கு உகந்து –
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரனை கண்டு – போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
மங்களா சாசனம் பண்ணி

வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்நதன் மேவியே -என்று மிகவும் ஹ்ருஷ்டராய் –

அந்த ப்ரீதி உக்தியாலே
வீறு உரைத்தான் –
வானக் கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே -என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
தாம் உபய விபூதியிலும் வ்யாவர்த்தரான படியைப் பேசினார்

சென்ற துயர் மாறன் தீர்ந்து –
நிவ்ருத்த துக்கரான ஆழ்வார்
விஸ்லேஷ வ்யசனம் -என்னுதல்
வெய்ய நோய்கள் முழுவதும் வியன் ஞாலத்து வீயவே -என்றும்
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே -என்றும் சொல்லுமவை யாதல் –

சென்ற துயர் -தீர்ந்து – மாறன் -நன்கு -உகந்து -வீறு -உரைத்தான் –
நடந்து சென்ற துக்கம் தீர்ந்து ஸ்ரீ ஆழ்வார் அத்யந்த ப்ரீதராய் ப்ரீதி பிரகர்ஷத்தாலே
தம்முடைய பெருமையை தாமே பேசினார் -ஆயிற்று-

————————————

அவதாரிகை –

இதில் பிரணயித்வ குண விசிஷ்ட வஸ்துவை பிரத்யஷமாக அனுபவிக்கப் பெறாமல்
பிரகிருதி விக்ருதியாய் மோஹித்துக் கிடக்க –
பிரேம பரவசர் பிரதிகிரியை பண்ணத் தேட
அத்தை பிரபுத்த ஸூஹருத்துக்கள்-இது அநநுரூபம் -என்று
அறிந்து அனுரூபமான நிதானத்தையும் தத் பரிகாரத்தையும்
விதிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் –
கீழ் உண்டான அனுபவம் மானச அனுபவ மாத்ரமாய்-பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
தம் தசையைத் தாம் அறியாதபடி மோஹித்துக் கிடக்க
பரிசர வர்த்திகளான பரிவர்கள்-அத்தைக் கலங்கி
சர்வான் தேவான் நமஸ் -யந்தியின் படியே-பரிவின் கனத்தாலே பரிஹரிக்க ஒருப்பட
இவர் பிரகிருதி அறிந்த ஸ்ரீ மதுரகவி பிரக்ருதிகளான பிரபுத்த ஸூஹ்ருத்துக்கள் அத்தை விலக்கி
உசித பரிஹாரத்தை விதித்துச் சொல்லுகிறபடியை
கலந்து பிரிந்த தலைமகள் அறிவு அழிவு கண்டு கலங்கி-பரிவின் கனத்தாலே -தேவதாந்திர பரையாய்
பிரதிபன்ன பாஷிணியான கட்டுவிச்சி பாசுரம் கொண்டு
வெறி யாட்டாலே பரிஹரிக்க தேடுகிற தாய்மாரை நோக்கி
இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி யானவள்
நோயின் நிதானத்தை நிரூபணத்தாலே அறிந்தாளாய்க் கொண்டு
ஸ்ரீ கிருஷ்ணன் அடியாக வந்த நோவுக்கு அவனைக் கொண்டே பரிஹரிக்கும் அது ஒழிய
நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல
தேவதாந்த்ர ஸ்பர்சத்துக்கும் தத் சம்பந்தி ஸ்பர்சத்துக்கும்
தேர் பாகனாரான ஸ்ரீ வண் துவாராபதி மன்னனை ஆஸ்ரயித்து
மாயன் தமர் அடி நீர் கொண்டு அணியுங்கோள் என்று
வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிற-தீர்ப்பாரை யாமினி — யில் தாத்பர்யத்தை
தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-

——————————————————-

தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால்
ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய -நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்—-36-

சாத்மிக்க சாத்மிக்க கொடுப்பவன் உடனே பிரிந்தானே –
ஒர்ப்பாதும் இன்றி-அசங்க்யேவ சங்கதி

———————————————————————————

வியாக்யானம்–

தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால் –
மண்ணை இருந்து துழாவில் மயல் பெரும் காதலானது தீர
வீற்று இருந்து ஏழ் உலகில் கலந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் –

ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய –
பிரிகைக்கு ஹேது நிரூபணம் அத்யல்பமும் ஆராயாமல்
பெருக்காறு வற்றி அடி சுடுமா போலேயும்
அபிஷேக மகோத்சவம் குலைந்து அரண்ய பிரவேசம் ஆனால் போலேயும் உடனே பிரிய
பேதை நின்னைப் பிரியேன் -என்னுதல்
பொருட்கோ பிரிவென்-என்னுதல்-செய்யாமல்
கலந்த கலவி கனவு என்னலாம் படி அசங்கிதமாக அகல

நேர்க்க அறிவழிந்து –
சத்ருக்நோ நந்தாச்தித-என்னும்படி ஸ்ரீ பரத ஆழ்வான் நின்றால் போலே நில்லா
மோஹித்தால் போலே மோஹித்து –

நேர்க்க அறிவு அழிகை யாவது –
மண்ணை இருந்து துழாவியில் காட்டிலும்-அறிவு கலங்கி-அங்கு
காணவும்
கேட்கவும்
பேசவும்
பின் செல்லவும்-ஷமையாய் இருந்தாள்-
இங்கு-குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்து
மதி எல்லாம் உள் கலங்கி மயங்கி இறே கிடக்கிறது

உற்றாரும் அறக் கலங்க –
யேது ராமஸ்ய ஸூ ஹ்ருதயஸ் சர்வேதே மூட சேதச -என்னும்படி
அத்தைக் கண்ட அன்னையரும்-தோழியரும்-தொடக்க மானவரும் மிகவும் அறிவு கலங்கிக் கிடக்க
ஸ்ரீ கௌசல்யாரைப் போலே மங்களா சாசன பரையான மாதா
சர்வான் தேவான் நமஸ்யந்தி ராமச்யார்த்தேய யசச்வின- என்னும்படியே எத்தை யாகிலும் செய்து
இவளை மீட்கத் தேட –
அவ்வளவில் தேவ தாந்திர பரையாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி அதுக்குப் பரிஹாரமாக சொல்லுகிற
ஆடும் கள்ளும் இறைச்சியும் கரும் சோறும் செஞ்சோறும் ஆகிய நிந்த்ய த்ரவ்யங்களாலே
இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதைகளைக் கண்டு
இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி யானவள் அத்தை நிஷேதித்து
தேர்ப் பாகனாற்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே -என்று

பேர் கேட்டு அறிவு பெற்றான் மாறன் சீலம் –
நோய்க்கு நிதானத்தையும் அதுக்கு பரிஹாரமாக சங்கு சக்கரம் -என்று இசைக்கும் படியையும்
மாயப் பிரான் கழல் வாழ்துதலையும் பெரும் தேவன் பேர் சொல்லும் படியையும்
களிறு அட்ட பிரான் திரு நாமத்தால் தவளப் பொடி கொண்டு நீர் இட்டிடுமின் -என்றும்
மாயன் தமரடி நீறு கொண்டு அணிய முயலில் -என்றும்
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரை -என்றும் –
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் -என்றும்
வண் துவாராபதி மன்னனை ஏத்துமின் -என்றும்-சொன்ன படியைக் கேட்டு
தொழுது ஆடி-தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து
நோய் தீர்ந்த பிரகாரத்தை -பேர் கேட்டு அறிவு பெற்றேன் -என்கிறது –

மாறன் சீலம் –
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வபாவம் இது வாயிற்று –
செவிக்கு இனாத கீர்த்தியை கேட்டு சத்தயா பாதகமாகவும் –
செவிக்கு இன்பம் ஆவதும் செங்கண் மால் நாமம் -என்கிற
ஸ்ரீ கேசவன் கீர்த்தியைக் கேட்டு சத்தை பெறவுமே இறே இருப்பது-

————————————————————

அவதாரிகை –

இதில் திரு நாமத்தால் உணர்ந்தவர் நாமியான ஸ்ரீ நாராயணனை அனுபவிக்கப் பெறாமையாலே
அதி பிராலாபமாய் பிராலாபிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ் – வர்ஷேண பீஜம் பிரதிச்ஜ்ஞ ஹர்ஷா -என்னுமா போலே
தோழி சொன்ன ம்ருத சஞ்ஜீவியான-திரு நாம பிரசங்கமே சிசிரோபோபசாரமாக வாஸ்வச்தராய் உணர்ந்த அநந்தரம்
பிறந்த உணர்த்தி பேற்றுக்கு உடல் அன்றிக்கே கிலேச அனுசந்தானத்துக்கு உடலாய் அத்தாலே நோவு பட்டு
ஆபத் சகனாக-தந்நிதான பரிஹாரங்களை உள்ளபடி அறியும் சர்வஞ்ஞனாய்
கார்யம் செய்கைக்கு உறுப்பான உறவையும் உடையனாய் இருக்கிறவன்
ரஷியாது ஒழிகையாலே ஆர்த்தி நிரம்பின கடல் கை எடுத்துக் கூப்பிடுமா போலே
அவனைக் காண வேணும் என்று கேட்டார் அடைய நீர்ப் பண்டமாம்படி கூப்பிடுகிற
சீலமில்லா சிறியனில் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
சீலம் மிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து –இத்யாதியாலே -என்கை –

———————————————–

சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு—-37-

———————————————–

வியாக்யானம்–
சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து –
பிரணயிநிகளோடு கலந்த சீலாதிக்யத்தை யுடைய ஸ்ரீ கிருஷ்ணன் திரு நாமத்தை
வண்டுவராதிபதி மன்னன் -என்று தோழி சொல்லக் கேட்டு மோஹம் தெளிந்து –

மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு –
உணர்ந்த அநந்தரம் அவன் விக்ரஹத்தைக் கண்டு கிட்டி அனுபவிக்கைக்கு –
அதாவது
கோல மேனி காண -என்றும்
என் கண் காண -என்றும்
பாவியேன் காண வந்து -என்றும் –
உன் தோள்கள் நான்கையும் கண்டிட -என்றும்
உன்னைக் காண்பான் -என்றும்
நான் உன்னைக் கண்டு கொண்டே -என்றும்
கண்டு கொண்டு -என்றும்
எங்குக் காண்பன் -என்றும் –
தக்க ஞானக் கண்களால் கண்டு தழுவுவனே-என்று
இப்படி பத்தும் பத்தாக அபேஷித்து

சால வருந்தி –
மிகவும் வருந்தி -அதாவது
நாராயணா -என்றும்
கூவிக் கூவி -என்றும்
வையம் கொண்ட வாமனாவோ -என்றும்
தாமோதரா -என்றும் –
ஆணி செம்பொன் மேனி எந்தாய் -என்றும்
அப்பனே அடல் ஆழி யானே -என்றும்
நீக்க மின்றி எங்கும் நின்றாய் -என்றும்
நறும் துழாயின் கண்ணி யம்மா -என்றும்
வண்டுழாயின் கண்ணி வேந்தே -என்றும்
சக்கரத் தண்ணலே -என்றும்
இப்படி பஹூ பிரகாரமாக பிரயாசப் பட்டு –
ஹா ராமா ஹா லஷ்மணா -என்றும்
ந்சைவ தேவீ வீரராம கூஜிதாத் -என்னுமா போலே –

இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு இருந்தனனே தென் குருகூர் ஏறு –
காலம் தோறும் -என்றும்
நள்ளிராவும் நன்பகலும் நான் இருந்து ஓலமிட்டாள் -என்றும்
கூவிக் கூவி நெஞ்சு உருகி -என்றும்
சக்கரத் தண்ணலே என்று தாழ்ந்து -என்றும்
இப்படி திவா ராத்திரி விபாகம் அற
சர்வ காலத்திலும் கூப்பீடோவாமல் இருந்தார் ஸ்ரீ ஆழ்வார் –

இது என்னாகப் புகுகிறதோ என்று
இவர் நெஞ்சு உருகி நோவு பட்டு அருளுகிறார் –

தென் குருகூர் ஏறு –இருந்தனனே –
இனி ஸ்ரீ திரு நகரியில் ஸ்ரீ ஆழ்வார் பிரதான்யம் எங்கனே நடக்கக் கடவதோ
என்று சங்கிக்கும் படியாய் இருக்கிறது –

————————————————————

அவதாரிகை –

இதில் இவ் வாற்றாமைக்கு உதவாமையாலே அவனுக்கு உறுப்பு அல்லாத
ஆத்மா ஆத்மீயங்களில் தாம் நசை அற்ற படியைப் பேசின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் –கீழ் சீலமில்லாச் சிறியனில் ஓலம் இட்டு அழைத்த இடத்திலும்
வந்து முகம் காட்டக் காணாமையாலே
பிராப்தனாய்-சீலவானாய்-விரோதி நிரசன சமர்த்தனாய்
இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் இத்தசையில் முகம் காட்டாமைக்கு அடி இத்தலையை வேண்டாது ஒழிகை இறே –
அவனுக்கு வேண்டாத என் ஆத்மா ஆத்மதீயங்களால் எனக்கு ஒரு கார்யம் இல்லை -என்று
அவற்றில் நசை அற்ற படியை அன்யாபதேசத்தால் அருளிச் செய்து- திருவருள் செய்பவன் போல் —
உருவமும் ஆர் உயிரும் உடனே வேண்டான் -விருப்பட்ட வரிசைக் கிரமத்தில் இவர் அருளிச் செய்கிறார்
ஏறாளும் இறையோனில் அர்த்தத்தை-ஏறு திரு உடைய ஈசன் உகப்புக்கு -என்று துடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை-

————————————————–

ஏறு திருவுடையை ஈசன் உகப்புக்கு
வேறுபடில் என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா வெனு மாறன் தாளை நெஞ்சே
நம் தமக்குப் பேறாக நண்ணு —38-

ஏறு திருவுடையை ஈசன்-தன் திரு மார்பில் ஏறப் பெற்ற
ஸ்ரீ பெரிய பிராட்டியாரை உடையனான ஸ்ரீ சர்வேஸ்வரன்

——————————————————

வியாக்யானம்–
ஏறு திருவுடையை ஈசன் –
ஸ்ரீ பிராட்டி ஏகாநை யாகையாலே-நஹிமே ஜீவிதேன– இத்யாதியாலே
அத்தலைக்கு உறுப்பு அல்லாத ஆத்மா ஆத்மீயங்களில் நசை அற்ற படியைச் சொன்னாள்
இவர் மிதுநாயனர் ஆகையாலே –
திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் -என்றும்
மலர் மாதர் உறை மார்பன் -என்றும்
பட நாகத்தணைக் கிடந்த பரு வரைத் தோள் பரம் புருடன் -என்றும்
இப்படி ஸ்ரீ யபதியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய உகப்புக்கு புறத்தியான மாமை முதலான
உடைமையோடு உயிரோடு வாசி அற வேண்டா -என்கிறார் –

ஏறு திரு உடைய ஈசன் -என்று
ஸ்ரீயபதித்வத்தால் வந்த ஸ்ரீ சர்வேஸ்வரத்வம் சொல்லுகிறது

ஏறு திரு –
யவௌ வஷஸ் ஸ்தலம் ஹரே –என்று ஆரூட ஸ்ரீசன் இறே

ஏவம் விதனானவன் உடைய
உகப்புக்கு -வேறுபடில் – அதாவது
சந்தன குஸூம தாம்பூலாதிகளைப் போலே
அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹ்யமாய் இருக்கை அன்றிக்கே
ஸ்வார்த்தைக்கு உறுப்பாக இருக்குமாகில் அத்தை ஆயிற்று
தவ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் -என்றது –

என்னுடைமை -அதாவது
மணிமாமை
மட நெஞ்சால்
நிறைவினால்
தளிர் நிறத்தால்
அறிவினால்
கிளர் ஒளியால்
வரி வளையால்
மேகலையால்
உடம்பினால் -என்று ஆத்மாத்மீயங்களாய் உள்ளவை-

மிக்க உயிர்-
இவற்றில் விலஷணமாய் ஞானானந்த ஸ்வரூபமாய் ஸ்ரீ பகவத் சேஷமாய்
ஸ்ரீ ஸ்தனம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஸ்ரீ எம்பெருமானுக்கு அத்யந்த போக்யமாய்
இருப்பதொரு ஆத்ம ஸ்வரூபம் என்று-

தேறும் கால் –
பர ப்ரீதி விஷயமாகவே இருக்கிற ஆகாரத்தை நன்றாகத் தெளியுங்கால் –
நாரணன் தன வாடா மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்றது -என்றும்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்றும்
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -என்றும்
இப்படி தெளிய ஆராய்ந்தால் அத்தலைக்கு உறுப்பாகவே இருக்க வேணும் –

இப்படி அன்றிக்கே
வேருபட்டதாகில்
ஸ்வார்த்தைக்கு உருப்பாகில் என் தனக்கும் வேண்டா –
பரதந்த்ரனான எனக்கும் தான் வேண்டா –

எனும் மாறன் தாளை- நெஞ்சே -நமக்கு பேறாக நண்ணு –
என்று இப்படி அருளிச் செய்யும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை நெஞ்சே நமக்கு பிராப்யமாம்படி அடை
நமக்கு இந்த நிர்பந்தங்கள் ஒன்றும் வேண்டா ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே பிராப்யம் என்று பிராபி-

——————————————————

அவதாரிகை –

இதில் சம்சாரிகள் உடைய அனர்த்தத்தைக் கண்டு வெறுத்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்-கீழே ஆத்மாத்மீயங்களில் நசை அற்ற இடத்திலும்
அவை போகக் காணாமையாலே விரஹ வ்யசனம் அதிசயித்து
தம் இழவுக்கு கூட்டாவார் உண்டோ -என்று சம்சாரிகளைப் பார்த்த இடத்தில்
அவர்கள் ஸ்ரீ பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு
இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களே பேறும் இழவுமாய் நோவு படுகிற படியைக் கண்டு
அது பொறுக்க மாட்டாமல்
ஸ்ரீ சர்வேஸ்வரனை பார்த்து -ரஷகனான நீ உளனாய் இருக்க இவை நோவு படுகை போருமோ –
பிரானே என்று விஷண்ணராய் இவர்கள் நோவைப் போக்குதல்
இது கண்டு பொறுக்க மாட்டாத என்னை முடித்தல் செய்து அருள வேணும் -என்ன
இவர்களுக்கு இச்சை இல்லாமையாலே
உம்மோபாதி நாமும் நொந்து காணும் இருக்கிறது -என்ன
ஆனால் இவர்கள் நடுவில் நின்றும் என்னை வாங்க வேணும் -என்ன
இவர் கிலேசம் தீரும்படி
ஸ்ரீ பிராட்டியும் தானுமாக ஸ்ரீ திரு நாட்டில் இருக்கும் இருப்பை அவன் காட்டிக் கொடுக்க
அத்தைக் கண்டு அனுபவித்து க்ருதார்த்தர் ஆகிற
நண்ணாதார் முறுவலிப்ப -வில் அர்த்தத்தை
நண்ணாது மாலடியை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

——————————————————–

நண்ணாது மாலடியை நாநிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பமுறு மிவ்வுயிர்கள் -தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை யொன்று—39-

தாபஹர தேச வாசித்வம் -கல்யாண குணம் –

———————————————

வியாக்யானம்–

நண்ணாது மாலடியை –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயியாமல்-
ஆத்மாத்மீயங்களில் தாம் நசை அற்ற இடத்திலும் அவனைக் கிட்டப் பெறாமல்
சம்சாரிகளில் தம் இழவுக்கு கூட்டுவார் உண்டோ என்று பார்த்து

நாநிலத்தே வல்வினையால் -இத்யாதியாலே
வெறுத்து அருளிச் செய்கிறார் என்கிறார் –

நாநிலத்தே –
நாலு வகைப் பட்ட பூமியிலே-அதாவது
குறிஞ்சி நிலமான ஸ்ரீ திருமலைகளிலும்
முல்லை நிலமான ஸ்ரீ திருக் கோட்டியூர் ஸ்ரீ திரு மோஹூர் தொடக்கமான ஸ்தலங்களிலும்
மருத நிலமான ஸ்ரீ கோயில் ஸ்ரீ பெருமாள் கோயில் தொடக்கமான ஸ்தலங்களிலும்
நெய்தல் நிலமான ஸ்ரீ திரு வல்லிக் கேணி ஸ்ரீ திருப் புல்லாணி ஸ்ரீ திரு வல்லவாழ்
ஸ்ரீ திரு வண் வண்டூர் தொடக்கமான ஸ்தலங்களிலும்-ஸூலபனாய் இறே அவன் இருப்பது
அந்த சுலப்யமே ஹேதுவாக அவன் திருவடிகளை ஆஸ்ரயியாதே

நாநிலத்தே வல்வினையால் எண்ணாராத் துன்பமுறு மிவ்வுயிர்கள் –
இப்படி விலஷணமான பூமியிலே ஸ்ரீ பகவத் ஆஸ்ரயணீயம் பண்ணி உஜ்ஜீவியாமல்

மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பது இது வன்றே மேலைத் தாம் செய்யும் வினை –
என்னும்படி பிரபல கர்மங்களாலே
அசங்க்யாதமான துக்கத்தை மிகவும் அடைந்து பொறுக்கிற இவ்வாத்மாக்கள்
நந்தந்த் யுதித ஆதித்யே நந்தந்த் அஸ்தமிதே ரவௌ
ஆத்மா நோ நாவ புத்யந்தே மனுஷ்ய உஜ்ஜீவித ஷயம்-என்னும்படி

தண்ணிமையைக் கண்டிருக்க மாட்டாமல் –
இவர்கள் அனர்த்தத்தை கண்டு ஆற்ற மாட்டாமல் – அதாவது
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை –
ஏமாறி கிடந்தது அலற்றும் இவை என்ன உலகு இயற்கை –
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை –
தமமூடும் இவை என்ன உலகு இயற்கை –
ஈங்கு இதன் மேல் வெந்நரகம் இவை என்ன உலகு இயற்கை –
அறப் பொருளை அறிந்தோர் ஆர் இவை என்ன உலகு இயற்கை –
கொடு உலகம் காட்டேல் –
இத்யாதிகளாலே இவற்றின் கொடுமையை பல காலும் அருளிச் செய்து

கண் கலங்கும் மாறன் –
திருக் கண்களும்-திரு உள்ளமும் கலங்கிப் போகும் ஸ்ரீ ஆழ்வார் அதாவது
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேல்
வாங்கு எனை
கூட்டரிய திருவடிகள் எஞ்ஞான்று கூட்டுதியே —என்று கூப்பிட்ட பின்பு

ஸ்ரீ எம்பெருமானாலே கூட்டரிய திருவடிக் கண் கூட்டினை –
அடைந்தேன் உன் திருவடியை – என்னும்படி சமாஹிதராய்
சம்சாரிகள் நோவுக்கு நொந்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –

அருள் உண்டு நமக்கு உற்ற துணை யொன்று –
இப்படி ஸ்ரீ ஈஸ்வரனும் கூட கைவிட்ட சம்சாரிகளையும் அகப்பட விட மாட்டாமல்
ஸ்ரீ ஈச்வரனோடே மன்றாடும் ஆழ்வார் உடைய அருள் அந்தரங்கமான ரஷையாக நமக்கு ஓன்று உண்டு –
வேறு ஒரு ரஷகாந்தரம் தேட வேண்டா -தானே ரஷகமாய் இருக்கும்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்னக் கடவது இறே –

—————————————————

அவதாரிகை –

இதில் சம்சாரிகள் ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாக ஸ்ரீ அர்ச்சாவதாரே பரத்வத்தை அருளிச் செய்த
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
நண்ணாதாரில் -ஸ்ரீ ஈஸ்வரனும் கூட -திருத்த ஒண்ணாது -என்று
கை விட்ட சம்சாரிகளைத் திருத்த ஒருப்பட்டு ப்ரமாணாந்தர விலஷணமாய்
நித்ய -நிர்தோஷமான-வேதாந்த வாக்யங்களாலும்-சந்தம்ச நியாயங்களாலும்
இதிஹாசாதி சித்திதமான-ஜகன் நிதரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலும்
சம்சார பீஜமான தேவதாந்திர பரத்வ பிரதிபத்தியை அடி அறுத்து
ஸ்ரீ யபதியான நாராயணனே ஜகத் காரண பூதன் -என்று த்ருடதரமாக உபபாதித்து
இப்படி சர்வ ஸ்மாத் பரனான இவன் அரியன் -என்று கை வாங்க வேண்டாத படி
ஸ்ரீ திரு நகரியிலே வந்து சந்நிஹிதன் ஆன பின்பு–அவனை ஆஸ்ரயிங்கோள் என்று
பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிற-ஒன்றும் தேவில் அர்த்தத்தை
ஒன்றும் இலைத் தேவு -என்று துடங்கி அருளிச் செய்கிறார் என்கை –

—————————————————-

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால்
அன்றி என வாரும் அறியவே -நன்றாக
மூதலித்துப் பேசி யருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை—40-

—————————————————–

வியாக்யானம்-

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால் அன்றி என -இவ்வுலகம் படைத்த மால் அன்றி
தேவு ஒன்றும் இலை என- சர்வ ஸ்ரஷ்டாவான ஸ்ரீ சர்வேஸ்வரனை ஒழிய
கார்ய பூதரில் காரணத்வத்தால் வந்த புகரை உடையவர்கள் ஒருவரும் இல்லை என்று -அதாவது
ஒன்றும் தேவும் -என்று துடங்கி
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -என்றும்
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர் புகழ் ஆதிப் பிரான் -என்றும்
அருளிச் செய்த காரணத்வ பிரயுக்தமான சந்தைகளை கடாஷித்த படி -என்கை –

யாரும் அறியவே -நன்றாக மூதலித்துப் பேசி யருள் –
அதாவது
எத்தனையேனும் கல்வி அறிவு இல்லாத ஸ்திரீ பாலரும் அறியும் படி
தவம் அப்ரமேயச்ச –
தம்ஸ பரமோதாதா சங்க சக்ர கதா தர –என்று
தாரா அங்கதாதிகளும் அறியும்படி ஆனால் போலே
பரந்த தெய்வமும் -என்று துடங்கி -கண்டு தெளியகில்லீர்-என்றும்
பேச நின்ற சிவனுக்கும் -என்று துடங்கி -கபால நன் மோக்கத்து கண்டு கொண்மின் -என்றும்
இலிங்கத்திட்ட புராணத்தீரும் -என்று துடங்கி -பொலிந்து நின்ற பிரான் கண்டீர் -என்றும்
போற்றி மற்றோர் தெய்வம் -என்று துடங்கி -ஆற்றவல்லவன் மாயம் கண்டீர் -என்றும்
ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து -என்று துடங்கி -பல் படி கால் வழி ஏறிக் கண்டீர் -என்றும்
புக்கடிமையினால் நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே -என்றும்
விளம்பு ஆறு சமயமும் -என்று துடங்கி -உளம் கொள் ஞானத்து வைம்மின் -என்றும்
உறுவதாவது நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே -என்றும்
பேச நின்ற தேவதா ஜ்ஞான சக்தி சாபேஷத்வாதிகளையும்
இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டமையும் சொல்லி
ஓடி –கண்டீர் –
கண்டு –தெளிய கில்லீர் –
அறிந்து ஓடுமின்
ஆட்செய்வதே -உறுவதாவது -என்று
விரகத பூர்வகமாக-ஆஸ்ரயம் ருசிக்கும்படி அருளிச் செய்தவை -என்கை –
பரத்வ சங்கை தீர -இதுவே பரத்வத்தில் நாலாவது திருவாய்மொழி -மேலே பண்ண வேண்டாம் படி திருந்தினார்கள் –

மூதலித்து பேசி அருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே காதலிக்கும் என்னுடைய கை –
ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளுக்கு ஆட் சேர்த்து அருளுகையாலே
பகவத் கைங்கர்ய அதி சீதள அம்ருதமய தடாக அவகாகன
ஸூ பிரசன்ன ஆத்மா ஸ்வரூப காத்ர நிரதிசய ஸூகந்த விகசத் கேசர மால அலங்க்ருத
வஷஸ் ஸ்தலரான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை –
வகுளாபிராமம் ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா-என்று பஜிக்கையிலே பக்தி பண்ணா நின்றன
என்னுடைய ஹஸ்தங்கள் ஆனவை –

காதலிக்கை -கௌதூஹலிக்கை ஆகவுமாம்
முடியானிலே -கரணங்களின் படியே யாயிற்று –
தம் கரணங்கள் ஸ்ரீ குருகூர் நம்பி மொய் கழல்களிலே-காதலிக்கும் படியும் -என்கிறார் –
மானஸ வியாபாரத்தையும் ஸ்ரீ மா முனிகள் திருக்கரங்கள் ஆசைப்படுகின்றன –

இத்தால்
பரோபதேசம் பண்ணி உஜ்ஜீவிப்பிக்கும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே
பற்ற அடுப்பது – என்றதாயிற்று-

—————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-