Archive for December, 2020

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/மிகைப் பாடல்கள்-1-

December 30, 2020

1. கடல் காண் படலம்

530. மூன்றரைக் கோடியின் உகத்து ஓர் மூர்த்தியாய்த்
தான் திகழ் தசமுகத்து அவுணன், சாலவும்
ஆன்ற தன் கருத்திடை, அயனோடே மயன்
தோன்றுற நினைதலும், அவரும் துன்னினார். (11-1)

531. வந்திடும் அவர் முகம் நோக்கி, மன்னவன்,
‘செந் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெறத்
தந்திடும், கணத்திடை’ என்று சாற்றலும்
புந்தி கொண்டு அவர்களும் புனைதல் மேயினார். (11-2)

2. இராவணன் மந்திரப் படலம்

532. மின் அவிர் குழைகளும் கலனும் வில் இட,
சென்னியின் மணி முடி இருளைச் சீறிட,
அன்னபேர் அவையின் ஆண்டு இருந்த ஆண்டகை
முன்னியது உணர்த்துவான், முறையின் நோக்கினான். (6-1)

533. மோதரன் முதலிய அமைச்சர் தம் கணக்கு
ஓதும் நூறாயிர கோடியோரொடும்,
காது வெஞ் சேனையின் காவலோர் கணக்கு
ஓதிய வெள்ள நூறவர்கள்தம்மொடும். (10-1)

534. கும்பகம் மேவியோன், குறித்த வீடணத்
தம்பியர் தம்மொடும், தருக்கும் வாசவன்
வெம் புயம் பிணித்த போர் வீரன் ஆதியாம்,
உம்பரும் போற்றுதற்கு உரிய, மைந்தரும்,

535. மாலியவான் முதல் வரம்பு இல் முந்தையோர்
மேலவர் தம்மொடும், விளங்கு சுற்றமாம்
சால்வுறு கிளையொடும், தழுவி, மந்திரத்து
ஏலுறும் இராவணன் இசைத்தல் மேயினான்: (10-3)

536. பின்னும் ஒன்று உரைத்தனன்: ‘பிணங்கு மானிடர்
அன்னவர் அல்லர்; மற்று அரக்கர் என்பதற்கு
இந் நிலை பிடித்தனை; இறைவ! நீ’ எனா,
முன் இருபக்கன் ஈது உரைத்து முற்றினான். (21-1)

537. ‘எரி விழி நுதலினன், இசையும் நின் தவத்து
அருமை கண்டு, அளித்தனன் அழிவு இலாதது ஓர்
பெரு வரம் என்றிடின், பேதை மானிடர்
இருவரும் குரங்கும் என் செய்யல் ஆவதே?’ (26-1)

538. ‘கறை மிடற்று இறை அன்று; கமலத் தேவு அன்று;
நிறை கடல் துயில் பரன் அன்று; நின்று வாழ்
சிறு தொழில் குரங்கொடு சிறிய மானிடர்
உறு திறத்து உணர்ச்சியின் உறுதி யாவதோ?’ (40-1)

539. ‘ஓது பல் அருந் தவம் உஞற்றல் இலதேனும்,
கோதுறு குலச் சிறுமை கொண்டுடையதேனும்,
வாதுறு பகைத் திறம் மலிந்துடையதேனும்,
நீதியதில் நின்றிடின் நிலைக்கு அழிவும் உண்டோ? (52-1)

540. ‘உந்து தமரோடு உலகினூடு பல காலம்
நந்துதல் இலாது இறைவன் ஆயிட நயந்தோ,
சிந்தையில் விரும்புதல் மங்கையர் திறத்தோ,
புந்திகொடு நீ தவம் முயன்ற பொறை மேனாள்? (52-2)

541. ‘ஆசைகொடு வெய்தில் இரு மானிடரை அஞ்சி,
காசு இல் ஒரு மங்கையவளைத் தனி கவர்ந்தும்,
கூசியதனால் விளையவும் பெறுதல் கூடாய்,
வீசு புகழ் வாழ்வு வெறிதே அழிவது ஆமோ?

542. ‘நிரம்பிடுகில் ஒன்றுஅதை நெடும் பகல் கழித்தும்,
விரும்பி முயல்வுற்று இடைவிடாது பெறல் மேன்மை;
வரும்படி வருந்தினும் வராத பொருள் ஒன்றை
நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன், ஐயா! (52-4)

543. ‘ஆசு இல் பல அண்டம் உனதே அரசுஅது ஆக
ஈசன் முன் அளித்தது, உன் இருந் தவ வியப்பால்;
நீசர் தொழில் செய்து அதனை நீங்கியிடலாமோ?–
வாச மலரோன் மரபில் வந்த குல மன்னா! (52-5)

544. ‘ “ஆலம் அயில்கின்றவன் அருஞ் சிலை முறித்து,
வாலியை வதைத்து, எழு மராமரமும் உட்க,
கோல வரி வில் பகழி கொண்டுடையன்” என்றார்;
சீலம் உறு மானிடன் எனத் தெளியலாமோ? (52-6)

545. ‘ஆதிபரனாம் அவன் அடித் துணை வணங்கி,
சீதையை விடுத்து, “எளியர் செய் பிழை பொறுக்க” என்று
ஓதல் கடனாம்’ என ஒருப்பட உரைத்தான்;
மூதுரை கொள்வோனும், ‘அதுவே முறைமை’ என்றான். (52-7)

546. என்று அவன் உரைத்திட, இராவணனும், நெஞ்சம்
கன்றி, நயனத்திடை பிறந்தன கடைத் தீ;
‘இன்று முடிவுற்றது உலகு’ என்று எவரும் அஞ்ச,
குன்று உறழ் புயக் குவை குலுங்கிட நகைத்தான். (52-8)

547. நகைத்து, இளவலைக் கடிது நோக்கி, நவில்கின்றான்;
‘பகைத்துடைய மானுடர் வலிச் செயல் பகர்ந்தாய்;
திகைத்தனைகொலாம்; எனது சேவகம் அறிந்தும்,
வகைத்திறம் உரைத்திலை; மதித்திலை;
என்?–எம்பி! (52-10)

548. ‘புரங்கள் ஒரு மூன்றையும் முருக்கு புனிதன்தன்
வரங்களும் அழிந்திடுவதோ? மதியிலாதாய்!

தரம்கொடு இமையோர் எனது தாள் பரவ, யான்
என்
சிரம்கொடு வணங்குவதும், மானுடன் திறத்தோ? (52-10)

549. ‘பகுத்த புவனத் தொகை எனப் பகர் பரப்பும்,
மிகுத்த திறல் வானவரும், வேத முதல் யாவும்,
வகுத்து, அரிய முத்தொழில் செய் மூவரும் மடிந்தே
உகுத்த பொழுதத்தினும், எனக்கு அழிவும்
உண்டோ? (52-11)

550. ‘நிறம்தனில் மறம் தொலைய, நீ துயில் விரும்பி,
துறந்தனை, அருஞ் சமரம்; ஆதல், இவை
சொன்னாய்;
இறந்துபட வந்திடினும், இப் பிறவிதன்னில்
மறந்தும் உளதோ, சனகன் மங்கையை விடுத்தல்?’ (52-12)

551. எனக் கதம் எழுந்து அவன் உரைக்க, இளையோனும்,
நினைத்தனன், மனத்திடை நிறுத்து உறுதி சொல்ல;
‘சினத்தொடும் மறுத்த இகழ்வு செய்தனன்; இது
ஊழின்
வினைத் திறம்; எவர்க்கும் அது செல்வது அரிது
அன்றே!’ (52-13)

552. கறுத்து அவன் உரைத்திடு கருத்தின் நிலைகண்டே,
‘பொறுத்தருள் புகன்ற பிழை’ என்று அடி வணங்கி,
உறுத்தல் செய் கும்பகருணத் திறலினோனும்,
‘மறுத்தும் ஒரு வாய்மை இது கேள்’ என
உரைத்தான்: (52-14)

553. ‘ஏது இல் கருமச் செயல் துணிந்திடுதல் எண்ணி,
தீதொடு துணிந்து, பினும் எண்ணுதல் சிறப்போ?
யாதும் இனி எண்ணியதில் என்ன பயன்? ஐயா!
போதியது நம் அரசு, பொன்ற வரு காலம்.

554. என, அவன் அடித் துணை இறைஞ்சி, வாய்
புதைத்து,
இனிய சித்திரம் என ஏங்கி நின்று, தான்
நனை மலர்க் கண்கள் நீர் சொரிய, நல் நெறி
வினை பயில் வீடணன் விளம்பல் மேயினான்: (74-1)

555. ‘சானகி, உலகு உயிர் எவைக்கும் தாய் எனல்
ஆனவள், கற்பினால் எரிந்தது அல்லது,
கோ நகர் முழுவதும் நினது கொற்றமும்,
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ?’ (74-2)

556. ‘ஈசன்தன்வயின் வரம் கொளும்முன்னம், யான்
அவனை
வீசும் வான் சுடர் வரையொடும் விசும்பு உற
எடுத்தேன்;
ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து
ஊன்றக்
கூசி, என் வலி குறைந்திலென், பாதலத்து
அமர்ந்தேன்; (116-1)

557. ‘அமர்ந்து, நீங்குதற்கு அருமை கண்டு, “அவன் பதம்
அகத்தே
சுமந்து, நீ தவம் புரிக!” எனச் சுக்கிரன் உரைப்ப,
தமம் திரண்டு உறும் புலப் பகை சிமிழ்திதிடத்
தருக்கி
நிமிர்ந்து நின்றனென், நெடும் பகல் அருந் தவ
நிலையின் (116-2)

558. நின்று பல் பகல் கழிந்திட, நிமலன் நெஞ்சு உருகி,
“நன்று, நன்று!” என நயந்து, எனை வரும்படி
அழைத்து,
“ஒன்றினாலும் நீ அழிவு இலாது உகம் பல கழியச்
சென்று வாழுதி எனத் தந்த வரம் சிதைந்திடுமோ? (116-3)

559. ‘கார்த்தவீரியன், வாலி என்று அவர் வலி கடக்கும்
மூர்த்தம் என்னிடத்து இல் எனக் கோடலை; முதல்
நாள்
சீர்த்த நண்பினர் ஆயபின், சிவன் படை உவர்மேல்
கோத்து, வெஞ் சமம் புரிந்திலென், எனது உளம்
கூசி. (116-4)

560. ‘இந்த மெய்ம்மை நிற்கு உரைப்பது என்? இவ் வரம்
எனக்குத்
தந்த தேவனுக்குஆயினும் என் வலி தவிர்த்துச்
சிந்த ஒண்ணுமோ? மானிடர்திறத்து எனக்கு அழிவு
வந்தது என்று உரைத்தாய்; இது வாய்மையோ?–
மறவோய்! (116-5)

561. ‘ஆயது ஆக, மற்று அந்த மானுடவரோடு அணுகும்
தீய வான் குரங்கு அனைத்தையுஞ் செறுத்து,
அற நூறி,
தூய வானவர் யாரையும் சிறையிடைத் தொடுத்துக்
காய்வென்’ என்று தன் கண் சிவந்து இனையன
கழறும். (116-6)

3. இரணியன் வதைப் படலம்

562. ‘ஓதும் ஆயிர கோடியின் உகத்து ஒரு முதல் ஆய்,
தாது உலாவிய தொடைப் புயத்து இரணியன்
தமரோடு
ஆதி நாள் அவன் வாழ்ந்தனன்; அவன் அருந்
தவத்துக்கு
ஏது வேறு இல்லை; யார் அவன்போல் தவம்
இழைத்தார்?

(இப் படலத்தின் தொடக்கச் செய்யுளாக, ‘வேதம் கண்ணிய’
எனத் தொடங்கும் பாடலின் முன்னர். அமைந்துள்ளது)

563. ‘இந்த இந்திரன் இமையவர் அவனுக்கு ஓர்
பொருளோ?
உந்தும் அண்டங்கள் அனைத்தினும் உள்ள
இந்திரரும்
அந்த நான்முகர் உருத்திரர் அமரர் மற்று எவரும்,
வந்து, இவன் பதம் முறை முறை வணங்கிட
வாழ்ந்தான். (2-1)

564. ‘திருமகட்கு இறை உலகினும், சேண்படு புரம் மூன்று
எரிபடுத்திய ஈசன்தன் பொருப்பினும், ஏகி,
சுரர் எனப்படும் தூயவர் யாவரும் தொழுது, ஆங்கு
“இரணியாய நம!” என்று கொண்டு ஏத்தல்
கேட்டிருக்கும். (5-1)

565. ‘ “ஓம் அரியாய நம!” என ஒழிவுறாது ஓதும்
நாம நான் மறை விடுத்து அவன்தனக்கு உள்ள
நாமம்,
காமமே முதல் குறும்பு எறி கடவுளர் முனிவர்-
ஆம் அது ஓதுகில், அவன் தனக்கு ஒப்பவர் யாரோ? (9-1)

566. ஆலும் வெவ் வலி அவுணர் கோன் அருந் தவப்
பெருமை
ஏலுமோ, எமக்கு இயம்பிட? இறைவ! மற்று அவன்
பேர்
மூல மா மறை இது என, மூஉலகு உள்ளோர்
தாலமே மொழிந்திட்டது சான்று எனத் தகுமால். (10-1)

567. ‘குனிப்பு இலாத பல் ஆயிர கோடி அண்டத்தின்
நுனிக்கும் வானவர் முதலிய உயிர்த் தொகை
நோக்கில்,
அனைத்தும் அன்னவன் ஏவலைத் தலைக்கொண்டு,
அங்கு அவன் பேர்
நினைத்து வாழ்த்திட, மூவர்போல் ஒரு தனி
நின்றான். (18-1)

568. ‘அன்னவன், புகழ், சீலம், நல் அறம், தனி மெய்ம்மை,
உன்னும் நான் மறையோடு அருள் நீதியும்
பொறையும்
இன்ன யாவும் மற்று உருவு கொண்டுளது என
உவந்தே,
மன்னுயிர்த் தொகை மகிழ்ந்திட, ஒரு தனி
வாழ்ந்தான் (19-1)

569. ‘நடுங்கி அந்தணன், நாப் புலர்ந்து அரும் புலன்
ஐந்தும்
ஒடுங்கி, உள்ளுயிர் சோர்ந்து, உடல் பதைத்து, உளம்
வெருவி,
“அடங்கும், இன்று நம் வாழ்வு” என அயர்ந்து
ஒருபடியாய்ப்
பிடுங்கும் மெல் உரை, புதல்வனுக்கு இனையன
பேசும். (23-1)

570. ‘என்று, அவ் வேதியன் இவை இவை இயம்பலும்,
இது கேட்டு,
ஒன்று மெய்ப்பொருள் உணர்ந்துள சிறுவனும்,
“உரவோய்!
நன்று நீ எனக்கு உரைத்தது?” என்று, இன் நகை
புரிந்து, ஆங்கு,
“இன்று கேள் இதின் உறுதி” என்று எடுத்து இவை
உரைப்பான்: (24-1)

571. ‘என்னும் வாசகம் கேட்டலும், எழுந்து நின்று,
இறைவன்
பொன்னின் வார் கழல் பணிந்து, வாய் புதைத்து,
அரும் புதல்வன்,
“மன்னர் மன்ன! யான் பழுது ஒன்றும்
உரைத்திலென்; மரபால்
உன்னும் உண்மையை உரைத்தனென்;கேள்”
என உரைப்பான். (39-1)

572. ‘அழிவு இல் வச்சிர யாக்கை என் அருந் தவத்து
அடைந்தேன்;
ஒழிவு இல் ஆயிர கோடி கொள் உகம் பல கழியத்
தெளிவு பெற்று, இறை பூண்டுளேன்; யான் அலால் தெய்வம்,
மொழி இல் மூடரும், வேறு உளது ஆம் என்று
மொழியார். (55-1)

573. ‘உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை, பார்
அயிர்க்குறும் நேயர் தம் செயலில் காண்டல்போல்,
பயிர்ப்பு உறும் அதனிலே பாசம் நீக்கி, வேறு
அயிர்ப்பு அறும் அறிவினில் அறிவர், சீரியோர். (67-1)

574. ‘நான்முகத்து ஒருவனும், நாரி பாகனும்,
தான் அகத்து உணர்வதற்கு அரிய தத்துவத்-
தோன் இகத்தொடு பரம் இரண்டும் எங்குமாய்,
ஊனகத்து உயிரகத்து உலவும் மூர்த்தியான். (67-2)

575. ‘வையமேல் இனி வரும் பகை உள எனின்,
வருவது ஒன்று என்றாலும்,

“உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென்”
என்று என் முன் உரைசெய்தாய்;

செய்ய வேண்டுவது என் இனி? நின் உயிர்
செகுக்குவென்; சிறப்பு இல்லாப்

பொய்யிலாளனைப் பொருந்திய பெரும் பகை
போய பின், புகழ் ஐயா!

(79-1)

576. ‘ “இவனை ஏழ் நிலை மாளிகை உம்பர்மேல் ஏற்றிப்
புவனம் தன்னிலே நூக்கும்” என்று அவுணர் கோன்
புகல,
புவனம் உண்டவன் கழல் இணைப் புண்ணியன்
தன்னைப்
பவனன்தன்னிலும் வெய்யவர் பற்றியே எடுத்தார். (98-1)

577. ‘உற்று எழுந்தனர், மாளிகை உம்பர்மேல் கொண்டு,
கற்று அறிந்தவர்க்கு அரசனைக் கடுந் திறல்
அவுணர்
பற்றி நூக்கலும், பார் மகள் பரிவுடன், நார் ஆர்
நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண்
நயந்தாள். (98-2)

578. ‘ஓதத்தில் மிதந்து ஓடிய கலமேல்
தீது அற்றே தெளிவோடு திகழ்ந்தான்;
வேதத்து உச்சியின் மெய்ப் பொருள் நாமம்
ஓதிப் பின்னும் உரைப்பதை உற்றான்: (103-1)

579. ‘கயம் மேவும் இடங்கர் கழற் கதுவ,
பயம் மேவி அழைத்தது பன்முறை உன்
நயம் மேவிய நாமம்; மதக் கரி அன்று
உயுமாறு உதவுற்றிட, வந்திலையோ? (112-1)

580. ‘வேதன் சிரம் ஒன்றை வெறுத்தமையால்,
காதும் பிரமக் கொலை காய, உலைந்து,
ஓது உன் திரு நாமம் உரைத்த சிவன்
ஏதம் கெட வந்து, இரவு ஓட்டிலையோ? (112-2)

581. ‘அது கண்டு, அடல் வஞ்சகர், அப் பொழுதில்,
கதம் மிஞ்சிய மன்னன் முனே கடுகி,
“புதல்வன் இறவாது பொருப்பு முநீர்
மிதவைப்பட மேவினன்” என்றனரால். (113-1)

582. ‘மிடல் கொண்டு அவர் வீசு கரம் பொடிபட்டு
உடல் சிந்திட, உட்கினர்; “மற்று அவனுக்கு
ஒடிவு ஒன்று இலது” என்று அவர் ஓதும் முனம்,
விடம் அஞ்ச எழுந்தனன், வெய்யவனே. (116-1)

583. ‘நாணி நின் எதிரே ஆண்டு நடுவதாயினது ஓர்
செம் பொன்
தூணில் நின்றனனே அன்றி, தோன்றியது இலது’
என்று ஒன்ற,
வேணுதண்டு உடையோன் வெய்ய வெள்ளியே
விளம்ப, வெள்ளி
காண வந்து அனைய சீயம் கணத்திடைக் கதிர்த்தது
அம்மா! (128-1)
584. ‘ஈது அவன் மகிழ்தலோடும், இரணியன் எரியின்
பொங்கி,
“சாதலை இல்லா என் முன் தருக்குறு மாயம்
எல்லாம்
போதும்; ஓர் கணத்தில் இன்னே போக்குவேன்
போக்குவேன்” என்று
ஓதினன், அண்ட கோளம் உடைந்திட உருத்துச்
சொல்வான். (128-2)

585. அப் புறத்து அளவுஇல் கோடி அண்டங்கள்
அனைத்து உள்ளாக,
வெப்புறும் அனந்த கோடி வெள்ளம் என்று உரைப்பர்,
மேலாம்
துப்புடைக் கனகன் சேனைத் தொகை; அவை
அனைத்தும் செந் தீ
ஒப்புற நகைத்து, நீறாய் எரித்தது, ஓர் கடவுள் சீயம். (142-1)

586. ‘இத் திறம் அமரின் ஏற்று, ஆங்கு இருவரும்
பொலிந்தகாலை,
பொய்த்திறற் கனகன் வேண்டும் போர் பல இயற்றி,
பின்னும்,
எத்தனை கோடி கோடி மாயங்கள் இயற்ற, நோக்கி,
முத்தனும் முறுவல்கொண்டு, ஆங்கு அவை எலாம்
முடித்து நின்றான். (149-1)

587. நெருப்பு எனக் கனகன் சீறி, நிலம் முதல் புவனம்
அஞ்ச,
பொருப்பு இனம் எவையும் சிந்திப் பொடிபடக்
குதித்து, போர் வாள்
தரிப்புறச் சுழற்றித் தாக்க வருதலும், தரும மூர்த்தி
பருப்பதம் கடந்த தோளான் பதம் இரண்டு ஒரு கை
பற்றா, (149-2)

588. ‘அழிவு இலான் வயிர மார்பத்து, அமலன் மானுடம்
ஆம் சீய
எழில் உலாம் உருவு கொண்டு, ஆங்குஇரு கையின்
உகிர் வாள் ஓச்சி,
கழியவே, பிளத்தலோடும், கனக மா மேரு விண்டு
கிழியவே, குருதி ஓதம் கிளர்ந்தபோல் கிளர்ந்தது
அம்மா! (153-1)

589. ‘இரணியன் வயிர மார்பும் இரு பிளவாகக் கீறிக்
கரை அறும் அவுண வெள்ளப் படை எலாம் கடிதின்
மாய்த்து,
தரை முதல் ஆன அண்டப் பரப்பு எலாம் தானே
ஆகி,
கருணை கொள் அமலன் பல்வேறு உயிர் எலாம்
காத்து நின்றான். (153-2)

590. ‘மங்கை ஒரு பாகன் முதல் அமரர், மா மலர்மேல்
நங்கைதனை ஏவுதலும், நாராயணக் கடவுள்
சிங்கல் இலா மானுடம் ஆம் சீய உருவம் போக்கி,
பொங்கு பரஞ் சுடராய் எங்கும் பொலிய நின்றான். (164-1)

591. ‘ஈது ஆங்கு அமலன் இயம்ப, எழிற் புதல்வன்
நாதாங்கு அரு மறையும் நாடற்கு அரிய செழும்
பாதாம்புய மலரில் பல் முறையும் தான் பணிந்து,
‘வேதாந்த மெய்ப்பொருளே!’ என்று விளம்பலுற்றான். (168-1)

592. ‘ “சீலம் உறுவோய்!’ உனக்குச் செப்பும் திருநாமம்
மேலோர் புகழ் பிரகலாதன்” என, விரும்பி,
நால் வேத வாய்மை நனி மா தவத்தோரும்,
மேலாம் அமரர்களும், யாரும், விளம்ப’ என்றான். (173-1)

4. வீடணன் அடைக்கலப் படலம்

593. சிரத்தொகை அனைத்தையும் துளக்கி, தீ எழக்
கரத்தொடு கரம் பல புடைத்து, ‘காளை! நீ
உரைத்திடும் உறுதிகள் நன்று, நன்று!’ எனாச்
சிரித்தனன், கதம் எழுந்து இனைய செப்புவான்: (1-1)
594. ‘அன்று வானரம் வந்து, நம் சோலையை அழிப்ப,
“கொன்று தின்றிடுமின்” என, “தூதரைக் கோறல்
வென்றி அன்று” என விலக்கினை; மேல் விளைவு
எண்ணித்
துன்று தாரவன்-துணை எனக் கோடலே துணிந்தாய். (6-1)

595. ‘நேர் வரும் உறுதியின் நிலை உரைத்தனென்;
சீரிது என்று உணர்கிலை; சீறிப் பொங்கினாய்;
ஓர்தரும் அறிவு இலார்க்கு உரைக்கும் புந்தியார்,
தேர்வுறின், அவர்களின் சிறந்த பேதையோர்.’ (11-1)

596. ‘மற்று ஒரு பொருள் உளது என்? நின் மாறு இலாக்
கொற்றவ! சரண்’ எனக் கூயது ஓர் உரை
உற்றது, செவித்தலத்து; ஐயன் ஒல்லென
நல் துணைவரை முகம் நயந்து நோக்குறா, (33-1)

597. ‘ “எந்தையே இராகவ! சரணம்” என்ற சொல்
தந்தவர் எனைவரோ? சாற்றுமின்!’ என,
மந்தணம் உற்றுழீஇ, வய வெஞ் சேனையின்
முந்தினர்க்கு உற்றதை மொழிகுவாம்அரோ: (33-2)

598. ‘மேலைநாள், அமுதமும் விடமும் வெண்கடல்
மூலமாய் உதித்தன; முறையின் முற்றுதல்
சாலுமோ, ஒன்று எனக் கருதல் தக்கதோ–
ஞால நாயக!–தெரிந்து எண்ணி நாடிலே? (86-1)

599. ‘ஒருவயிறு உதித்தனர், அதிதி, ஒண் திதி,
இருவர்; மற்று அவரிடத்து எண்ணில், எம்பிரான்!
சுரரொடு சுடு சினத்து அவுணர் தோன்றினார்;
கருதின் மற்று ஒன்று எனக் கழறலாகுமோ? (86-2)

600. ‘எப்பொருள்? ஏவரே? உலகின் ஓர் முறை
ஒப்பினும், குணத்து இயல் உணரின், பேதமாம்
அப் பொருள் நலன் இழிவு இரண்டும் ஆய்ந்து,
அகம்
மெய்ப் பொருள் கோடலே விழுமிது’ என்பரால். (86-3)
601. ‘ஆவலின் அடைக்கலம் புகுந்துளான் கருத்து
ஓவலின் இவர் தமக்கு உணர ஒண்ணுமோ?
தேவர்கள் தேவன் நீ; தெளியின், அன்னவர்க்
கூவி, இங்கு அறிவது கொள்கை ஆகுமால். (91-1)

602. மோதி வந்து அடரும் சீய முனிவினுக்கு உடைந்து,
வேடன்
மீது ஒரு மரத்தில் சேர, வேண்டு உரை அரிக்குச்
சொல்லி,
பேதம் அற்று இருந்தும், அன்னான் பிரிந்த
வஞ்சத்தை ஓர்ந்தும்,
காதலின் கனி காய் நல்கிக் காத்ததும் கவியது
அன்றோ? (116-1)

603. என்ன முன் பருதிமைந்தன் எழுந்து அடி வணங்கி,
‘எந்தாய்
சொன்னதே துணிவது அல்லால், மறுத்து ஒரு
துணிவும் உண்டோ?
உன் உளத்து உணராது ஏது? உனக்கு அரிது
யாதோ?’ என்னாப்
பன்னி, மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து
உரைக்கலுற்றான். (117-1)

604. வானவர் இதனைக் கூற, வலங்கொடு தானை
வைப்பை,
தானை அம் தலைவரோடும் சார்ந்த வீடணனும்,
‘தாழாது
ஊனுடைப் பிறவி தீர்ந்தேன்’ என மனத்து உவந்து,
ஆங்கு அண்ணல்
தேன் உகு கமல பாதம் சென்னியால் தொழுது
நின்றான். (151-1)

5. இலங்கை கேள்விப் படலம்

605. திரு மறு மார்பனை இறைஞ்ச, செல்வனும்,
அருள் சுரந்து, அரக்கனை அருகு இருத்தியே,
‘அரு வரை அனைய தோள் அறிஞ! நீ புகல்
பொருள் உளது எமக்கு; அது புகலக் கேட்டியால். (14-1)

606. மருக் கிளர் தாமரை வாச நாள்மலர்
நெருக்கிடு தடம் என இருந்த நீதியான்.
திருக் கிளர் தாமரை பணிந்த செம்மலை,
‘இருக்க, ஈண்டு எழுந்து’ என இருந்தகாலையில். (14-2)

607. ‘வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு,
இலங்குறு மலர் அயன் எண் இல் யோசனைத்
தலம் கொடு சமைத்து, நல் நகரும் தந்து, இதற்கு
“இலங்கை” என்று ஒரு பெயர் ஈந்த மேலைநாள். (18-1)

608. ‘ஆய இந் நகரிடை, அரக்கர் ஆகிய
தீயவர் தொகையினைத் தெரிக்கின், எண் இல் நாள்
போயிடத் துணிந்து, அவை புந்தி ஓரினும்
ஓயுமோ? அறிந்தவை உரைப்பென், ஆழியாய்! (19-1)

609. ‘பேயர்கள் என்ன யான் பிதற்ற, பேர்கிலா
மா இரும் புற மதில் வகுத்த மாப் படை
ஏயின நாள் எலாம் எண்ணும் பித்தர்கள்
ஆயிர வெள்ளமே அறிந்தது, ஆழியாய்! (28-1)

610. ‘ஈங்கு இவை அன்றியும், ஏழு தீவினும்,
ஓங்கு பாதலத்தினும், உயர்ந்த வானத்தும்,
தாங்கிய சக்கர வாளச் சார்பினும்,
ஆங்கு அவன் படைதனக்கு அளவை இல்லையால். (30-1)

611. ‘ஆயவர் அளவிலர், அறத்தை நுங்கிய
தீயவர், தேவரைச் செறுத்து, தேவர் ஊர்
காய் எரி படுத்திய கடுமையார்களில்,
நாயக! அறிந்தமை நவிலக் கேட்டியால். (32-1)
612. ‘இன்னும் மைந்தர்கள் இயம்பின், மூவாயிர கோடி
என்ன உண்டு; அவர் இரதமும், கரிகளும், பரியும்,
துன்னும் ஆள் வகைத் தொகுதியும், செறிந்திட,
மேல்நாள்
பன்னகாதிபன் உலகினைப் பரிபவப் படுத்தோர். (51-1)

613. கோ…ன் குடைப்பரா கடு களிற்றை மீக்கொள்ளா
வாடலிந்திர……ளடைவர வமரிற்
கோடி வெங்கரி கோள் அரி கண்டெனக் குலையா
ஓடினான் தரு முதலியர் பிற விழுந் துருகி. (56-1)

614. ‘பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன்
கொடுக்கும்
திண் திறல் பெறும் வானகத் தேர் ஒன்றின்
இவர்ந்தே,
அண்ட கோடிகள் எவற்றினும் புகுந்து, அரசுரிமை
கொண்டு மீளுவான் ஒரு கணத்து இலங்கையில்,
கொடியோன். (58-1)

615. ‘சுற்று தன் கிளைப் பரப்பொடும் தொலைவு இன்றி
வாழ்தற்கு
உற்ற மூன்றரைக் கோடியின் உகம் அவன் தவத்தின்
பெற்றனன், சிவன் கொடுத்திடப் பெரு வரம்;
பெரியோய்!
இற்று அவன் செயல்’ என்று கொண்டு இனையன
உரைப்பான்: (58-2)

616. “ஈது நிற்க, மற்று எந்தை! நீ ஏவிய தூதன்
மோது வாரிதி கடந்து, ஒரு கணத்தினில் முடுகி,
ஆதி நாயகிதன்னைக் கண்டு, அணி நகர் அரணும்,
காது வெஞ் சினத்து அரக்கர்தம் வலிமையும்,
கடந்தான். (59-1)

617. மழுவும் ஈட்டியும் தோட்டியும் முசலமும் மலையும்
தழுவு மாப் படை முடிவு இலாது அதனொடும் தாமும்,
எழுவர் சூட்சியின் தலைவர்கள், கிளர் ஒளி இரவிக்
குழுவின் வாய்ப்படு புழு என, வழுவுறக் குறைந்தார். (63-1)

618. ‘இலங்கை வெந்தது; வேறு இனி இயம்புவது
எவனோ?
அலங்கலோடு செஞ் சாந்தமும், அன்று தான்
அணிந்த
கலன்களோடும் அச் சாத்திய துகிலொடும், கதிர்
வாள்
இலங்கை வேந்தனும் விசும்பிடை ஏழு நாள்
இருந்தான். (65-1)

6. வருணனை வழி வேண்டு படலம்

619. என்று உரைத்து, இன்னும் சொல்வான்; ‘இறைவ!
கேள்; எனக்கு வெய்யோர்
என்றும் மெய்ப் பகைவர் ஆகி, ஏழு பாதலத்தின்
ஈறாய்
நின்றுள தீவின் வாழ்வார், நிமல! நின் கணையால்,
ஆவி
கொன்று எமைக் காத்தி!’ என்றான்; குரிசிலும்
கோறலுற்றான். (78-1)

7. சேது பந்தனப் படலம்

620. சாற்று மா முரசு ஒலி கேட்டு, தானையின்
ஏற்றமோடு எழுந்தனர், ‘எறி திரைக் கடல்
ஊற்றமீது ஒளித்து, ஒரு கணத்தில் உற்று, அணை
ஏற்றதும்’ எனப் படைத் தலைவர் யாருமே. (4-1)

621. வல் விலங்கு வழாத் தவர் மாட்டு அருள்
செல் வலம் பெறுஞ் சிந்தையின் தீர்வரோ?
‘இவ் விலங்கல் விடோம் இனி’ என்பபோல்,
எல் வயங்கும் இரவி வந்து எய்தினான். (25-1)
622. தம் இனத்து ஒருவற்கு ஒரு சார்வு உற,
விம்மல் உற்று, விடாது உறைவோர்கள்போல்,
செம்மை மிக்க குரக்கினம் சேர்க்கையால்,
எம் மலைக் குலமும் கடல் எய்துமே, (29-1)

623. இன்னவாறு அங்கு எழுபது வெள்ளமும்,
அன்ன சேனைத் தலைவரும், ஆழியைத்
துன்னி நின்று, விடாது இடை தூர்த்தலால்,
பொன் இலங்கை தொடுத்து அணை புக்கதே. (65-1)

8. ஒற்றுக் கேள்விப் படலம்

624. என்று, நளனைக் கருணையின் தழுவி, அன்பாய்
அன்று வருணன் உதவும் ஆரமும் அளித்து
துன்று கதிர் பொற்கலனும் மற்றுள தொகுத்தே,
‘வென்றி, இனி’ என்று, படையோடு உடன்
விரைந்தான். (4-1)

625. இறுத்தனன்–ஏழு-பத்து வெள்ளமாம் சேனையோடும்,
குறித்திடும், அறுபத்தேழு கோடியாம் வீரரோடும்,
பொறுத்த மூ-ஏழு தானைத் தலைவர்களோடும்,
பொய் தீர்
அலத்தினுக்கு உயிராய் என்றும் அழிவு இலா
அமலன் அம்மா! (13-1)

(நளனுக்கு முடி சூட்டு படலம்)

626. என்று மகிழ் கொண்டு, இரவி மைந்தனை இராமன்,
‘வன் திறலினான் நளன் வகுத்த அணை, மானக்
குன்றம் நெடுநீரின்மிசை நின்று இலகு கொள்கை
நன்று என முயன்ற தவம் என்கொல்?நவில்க!’ என்றான். (13-2)

627. நவிற்றுதிர் எனக் கருணை வள்ளல் எதிர் நாமக்
கவிக்கு இறைவன் எய்தி, இரு கை மலர் குவித்தே,
‘புவிக்கு இறைவ! போதின் அமர் புங்கவனிடத்தே
உவப்புடன் உதித்தவர்கள் ஓர் பதின்மர் என்பார். (13-3)

628. ‘மலரவனிடத்தில் வரு காசிபன், மரீசி,
புலகனுடன் அத்திரி, புலத்தியன், வசிட்டன்,
இலகு விசுவன், பிருகு, தக்கன், இயல்பு ஆகும்
நலம் மருவு அங்கிரவு எனப் புகல்வர் நல்லோர். (13-4)

629. ‘மக்கள்தனில் ஒன்பதின்மர் வானம் முதலாக
மிக்க உலகைத் தர விதித்து, விசுவப் பேர்
தொக்க பிரமற்கு ஒரு தொழில்தனை விதித்தான்
அக் கணம் நினைத்தபடி அண்டம் முதல் ஆக. (13-5)

630. ‘அன்ன தொழிலால் விசுவகன்மன் எனல் ஆனான்,
பொன்னுலகை ஆதிய வகுத்திடுதல் போல,
நென்னல் இகல் மாருதி நெருப்பினில் அழிந்த
நன் நகரம் முன்னையினும் நன்கு உற அளித்தான். (13-6)

631. ‘மூ-உலகின் எவ் எவர்கள் முன்னு மணி மாடம்
ஆவது புரிந்து, மயன் ஆகவும் இருந்தான்;
தேவர் இகல் மா அசுரர் சொற்ற முறை செய்தற்கு
ஆவளவில் வானவர்கள் தச்சன் எனல் ஆனான். (13-7)

632. ‘அன்னவன் இயற்கை அறிதற்கு அரிய; மேல்நாள்
பன்னு மறை அந்தணன் விதித்தபடி, பார்மேல்
மன்னும் இறையோர் எவரும் வந்தபடி தானே
உன்னும் அவன் மைந்தன் நளன் என்றிட (13-8)
உதித்தான்.

633. ‘தாயரொடு தந்தை மகிழும் தனையன், வானின்
மேய மதி போல வளர் மெய்யின் மணி மாட
நாயகம்அது ஆன திரு வீதியில் நடந்தே
ஏய சிறு பாலருடன் ஆடி மனை எய்தும். (13-9)

634. ‘சிந்தை மகிழ் இல்லில் விளையாடு சிறுவன், தேர்
தந்தை வழிபாடுபுரியும் கடவுள்தன்னை
வந்து திகழ் மா மணி மலர்த்தவிசினோடே
கந்த மலர் வாவியினிடைக் கடிதின் இட்டான். (13-10)

635. ‘மற்றைய தினத்தின் இறை எங்கு என மருண்டே
பொற்றொடி மடந்தையை விளித்து, “உரை” என,
போய்
நல் தவ மகச் செயல் நடுக்கி, அயல் நண்ணிச்
சொற்றனள் எடுத்து; வழிபாடு புரி தூயோன். (13-11)

636. ‘பூசனை புரிந்தவன் வயத்து இறை புகாமே
கோசிகம் அமைத்து, மணி மாடம்அது கோலி,
நேசம் உற வைத்திடவும், நென்னல் என ஓடி
ஆசையின் எடுத்து, அவனும் ஆழ்புனலில் இட்டான். (13-12)

637. ‘இப்படி தினந்தொறும் இயற்றுவது கண்டே
மெய்ப் புதல்வனைச் சினம் மிகுத்திட வெகுண்டும்,
அப்படி செய் அத்திறம் அயர்த்திலன்; “இவன்தன்
கைப்படல் மிதக்க” என ஓர் உரை கதித்தான். (13-13)

638. ‘அன்று முதல் இன்னவன் எடுத்த புனல் ஆழா
என்று அரிய மாதவர் இசைத்தபடி இன்னே
குன்று கொடு அடுக்க, நிலைநின்றது, குணத்தோய்!
என்று நளன் வன்திறம் எடுத்துமுன் இசைத்தான். (13-14)

639. சொற்றவை அனைத்தையும் கேட்டு, தூய் மறை
கற்றவர் அறிவுறும் கடவுள், ‘இத் தொழில்
முற்றுவித்தனை உளம் மகிழ, மொய்ம்பினோய்!–
மற்று உனக்கு உரைப்பது என், முகமன்?
வாழியாய்!’ (13-15)

640. ‘ஐயன் நல் இயற்கை, எப் பொருளும் அன்பினால்
எய்தினர் மகிழ்ந்திட ஈயும், எண்ணினால்;
செய் தொழில் மனக்கொள, செய்த செய்கை கண்டு
உய் திறம் நளற்கும் அன்று உடைமை ஆதலான். (13-16)
641. ‘இத் திறம் புரி நளற்கு இன்பம் எய்தவே
வித்தக இயற்றிட வேண்டும்’ என்றனன்;
உத்தமன் உரைப்படி உஞற்றற்கு எய்தினார்
முத் திறத்து உலகையும் ஏந்தும் மொய்ம்பினார். (13-17)

642. இங்கு இவை தாதையை எண்ணும் முன்னமே
அங்கு அவன் வணங்கினன், அருகின் எய்தினான்;
‘புங்கவ நின் மகற்கு இனிய பொன் முடி
துங்க மா மணிக் கலன் தருதி, தூய்மையாய்!’ (13-19)

643. என்றலும், மணி முடி, கலன்கள், இன் நறாத்
துன்று மா மலர்த் தொடை, தூய பொன்-துகில்,
குன்று எனக் குவித்தனன்; கோல மா மலர்
மன்றல் செய் விதானமும் மருங்கு அமைத்து அரோ. (13-19)

644. முடி புனை மண்டபம் ஒன்று முற்றுவித்து,
இடி நிகர் பல் இயம் இயம்ப, வானரர்
நெடிய வான் கங்கையே முதல நீத்த நீர்
கடிது கொண்டு அணைந்தனர் கணத்தின் என்பவே. (13-20)

645. நளன்தனை விதிமுறை நானம் ஆடுவித்து,
இளங் கதிர் அனைய பொன்-துகிலும் ஈந்து, ஒளிர்
களங்கனி அனையவன் ஏவ, கண் அகல்
வளம் திகழ் மண்டப மருங்கின் எய்தினான். (13-21)

646. ஆனதோர் காலையின் அருக்கன் மைந்தனும்
ஏனைய வீரரும் இலங்கை மன்னனும்
வானரர் அனைவரும் மருங்கு சூழ்வர,
தேன் நிமிர் அலங்கலும் கலனும் சேர்த்தியே, (13-22)

647. பொலங்கிரி அனைய தோள்-தம்பி போந்து, ஒளி
இலங்கிய மணி முடி இரு கை ஏந்தினான்,
அலங்கல் அம் தோள் நளற்கு அன்பின்
சூட்டினான்–
‘குலங்களோடு இனிது வாழ்க!’ என்று கூறியே. (13-23)
648. இளையவன் திரு மலர்க் கையின் ஏந்திய
ஒளி முடி புனைந்திட உலகம் ஏழினும்
அளவு இலா உயிர்த்தொகை அனைத்தும் வாழ்த்தியே
‘நளன் இயற்றிய தவம் நன்று’ என்று ஓதினார். (13-24)

649. முடி புனை நளன் எழுந்து, இறைவன் மொய் கழல்
அடிமிசை வணங்கிட, அவனுக்கு அந்தம் இல்
படி புகழ் ஆசிகள் பகர்ந்து, ‘பார்மிசை
நெடிது உற நின் குலம்!’ என நிகழ்த்தினான். (13-25)

650. மற்றையர் அனைவரும் அருள் வழங்கவே
பொன்-திரள் மணி முடி புனைந்த போர்க் களிறு
உற்று, அடி வணங்கிட, உவந்து தாதையும்,
பெற்றனன் விடை கொடு, பெயர்ந்து போயினான். (13-26)

651. இன்னணம் நிகழ்ந்தபின், இனிதின், எம்பிரான்
தன் நிகர் சேதுவை நோக்கி, தையலாள்
இன்னல் தீர்த்திட எழுந்தருள எண்ணினான்;
பின் அவண் நிகழ்ந்தமை பேசுவாம்அரோ. (13-27)

652. கேட்டலும், நளன் என்று ஓதும் கேடு இலாத் தச்சன்,
கேள்வி
வாட்டம் இல் சிந்தையான், தன் மனத்தினும் கடுகி,
வல்லே
நீட்டுறும் அழிவு இல்லாத யோசனை நிலையதாகக்
காட்டினன், மதிலினோடும் பாசறை, கடிதின் அம்மா! (14-1)

653. போயினன், அமலன் பாதம் பொருக்கென வணங்கி,
‘இன்னே
ஆயினது அணி கொள் பாடி நகர் முழுது, அமல!’
என்றான்;
நாயகன்தானும், வல்லே நோக்கினன் மகிழ்ந்து,
‘நன்று!’ என்று
ஏயினன், எவரும் தம்தம் பாசறை இருக்க என்றே. (16-1)
654. அவ் வகை அறிந்து நின்ற வீடணன், அரியின்
வீரர்க்கு
ஒவ்வுற உருவம் மாறி அரக்கர் வந்தமை அங்கு ஓத,
செவ்விதின் மாயச் செய்கை தெளிந்திடுமாறு, தாமே
கைவலியதனால் பற்றிக் கொண்டனர், கவியின் வீரர். (25-1)

655. என அவர் இயம்பக் கேட்ட இறைவனுக்கு, இலங்கை
வேந்தன்
தனது ஒரு தம்பி, ‘அன்னோர் சாற்றிய வாய்மை
மெய்யும்
எனது ஒரு மனத்தில் வஞ்சம் இருந்ததும், இன்னே
காண்டி;
நினைவதன்முன்னே விஞ்சை நீக்குவென்’ என்று
நேர்ந்தான். (29-1)

656. ஆங்கு அவர் புகலக் கேட்ட ஐயனும், அவரை நோக்கி,
‘ஈங்கு இது கருமமாக எய்தினீர்என்னின், நீர் போய்,
தீங்கு உறும் தசக்கிரீவன் சிந்தையில் தெளியுமாறே
ஓங்கிய உவகை வார்த்தை உரையும்’ என்று
ஓதலுற்றான். (32-1)

657. இன்னவாறு இவர்தம்மை இங்கு ஏவிய
மன்னர் மன்னவன் ஆய இராவணன்
அன்ன போது அங்கு அளவு இல் அமைச்சரோடு
உன்னும் மந்திரத்து உற்றதை ஓதுவாம்: (38-1)

658. சொல்லும் மந்திரச் சாலையில், தூய் மதி
நல் அமைச்சர், நவை அறு கேள்வியர்,
எல்லை இல்லவர் தங்களை நோக்கியே,
அல் அரக்கர் பதியும் அங்கு ஓதுவான். (41-1)

659. ‘ஈது எலாம் உரைத்து என் பயன்? இன்று போய்க்
காதி, மானுடரோடு கவிக் குலம்
சாதல் ஆக்குவென், தான் ஓர் கணத்து’ எனும்
போதில், மாலியவானும் புகலுவான்: (46-1)

660. என்னும் வாய்மை இயம்புறு போதினில்,
முன்னமே சென்ற ஒற்றர் முடுகி, ‘எம்
மன்னவர்க்கு எம் வரவு உரைப்பீர்!’ எனா,
துன்னு காவலர்தம்மிடைச் சொல்லினார். (52-1)

661. வருணன் அஞ்சி, வழி கொடுத்து ‘ஐய! நின்
சரணம்’ என்று அடி தாழ்ந்து, அவன் தன் பகை
நிருதர் வெள்ளம் அனந்தம் நிகழ்த்து முன்,
திரிபுரச் செயல் செய்தது, அங்கு ஓர் கணை. (60-1)

662. செவித் துளை இருபதூடும், தீச் சொரிந்தென்னக்
கேட்டு
புவித்தலம் கிழிய, அண்டம் பொதிர் உற, திசையில்
நின்ற
இபத் திரள் இரிய, வானத்து இமையவர் நடுங்க,
கையால்
குவித் தடம் புயமே கொட்டி, கொதித்து இடை
பகரலுற்றான். (66-1)

663. தானை அம் தலைவன் ஈது சாற்றலும், தறுகண்
வெம் போர்க்
கோன் அழன்று உருத்து, ‘வீரம் குன்றிய மனிதரோடு
வானரக் குழுவை எல்லாம் வயங்கும் என் கரத்தின்
வாளால்
ஊன் அறக் குறைப்பென் நாளை, ஒரு கணப்
பொழுதில்’ என்றான்! (70-1)

664. மன்னவர் மன்னன் கூற, மைந்தனும் வணங்கி,
‘ஐயா!
என்னுடை அடிமை ஏதும் பிழைத்ததோ? இறைவ!
நீ போய்,
“மன்னிய மனித்தரோடும் குரங்கொடும் மலைவென்”
என்றால்,
பின்னை என் வீரம் என்னாம்?’ என்றனன்,
பேசலுற்றான்: (70-2)
665. ‘இந்திரன் செம்மல் தம்பி, யாவரும் எவரும் போற்றும்
சந்திரன் பதத்து முன்னோன்’ என்றனர்; ‘சமரை
வேட்டு,
வந்தனர்; நமது கொற்றம் வஞ்சகம் கடப்பது என்னும்
சுந்தரன் அவனும் இன்னோன்’ என்பதும் தெரியச்
சொன்னார். (75-1)

666. எரி எனச் சீறி, இவ்வாறு உரைத்து, இரு மருங்கில்
நின்ற
நிருதரைக் கணித்து நோக்கி, ‘நெடுங் கரி, இரதம்
வாசி,
விருதர்கள் ஆதி வெள்ளப் படைத் தொகை
விரைந்து, நாளைப்
பொரு திறம் அமையும்’ என்னா, புது மலர்ச் சேக்கை
புக்கான். (88-1)

9. இலங்கை காண் படலம்

667. கண்டு அகம் மகிழ்ந்து, ஆங்கு அண்ணல், கடி நகர்
இலங்கை மூதூர்
விண்தலம் அளவும் செம் பொற் கோபுரம், விளங்கும்
வீதி,
மண்டபம், சிகர கோடி, மாளிகை, மலர்க் கா ஆதி
எண் திசை அழகும் நோக்கி, இளவலுக்கு இயம்பு
கின்றான். (6-1)

10. இராவணன் வானரத் தானை காண் படலம்

668. ‘ஏறிட்ட கல்லு வீழும் இடம் அற, எண்கினாலே
நாறு இட்டதென்ன ஒவ்வோர் ஓசனை நாலுபாலும்
சூறிட்ட சேனை நாப்பண் தோன்றுவோன் இடும்பன்
என்றே
கூறிட்ட வயிரத் திண் தோள் கொடுந் தொழில்
மடங்கல் போல்வான் (27-1)
669. ‘மற்று இவன் படையில் ஒன்னார் அன்றி,
வானவர்களே வந்து
உற்றனர் எனினும், பற்றி உயிர் உகப் பிசைந்திட்டு
ஊத,
கொற்றவன் அருளும் கொண்டோன்; குடாவடிக்கு
இறைவன்; கூற்றம்
பெற்றவன்; அடைந்தோர்தம்மை உயிர் எனப் பேணும்
நீரான். (27-2)

670. ‘ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடகக் குன்றம்
ஒன்றை
வாங்கு நீர் மகரவேலை வந்து உடன்
வளைந்ததென்ன
ஓங்கு மைம் முகத்தின் தானையுள் பொலிந்திடுவான்,
வெற்றி
ஓங்கிய குவவுத் திண் தோள் வினதன் என்று
உரைக்கும் வெய்யோன். (27-3)

671. ‘அன்னவன்தனக்கு வாமத்து ஐம்பது கோடி யூகம்
தன்னை வந்து இடையில் சுற்ற, தட வரை என்ன
நிற்பான்,
கொல் நவில் குலிசத்து அண்ணல் கொதித்து
எதிர்கொடுக்கு மேனும்,
வென்னிடக் குமைக்கும் வேகதெரிசி என்று
உரைக்கும் வீரன். (27-4)

672. பிளக்கும் மன்பதையும், நாகர் பிலனையும்; கிளக்கும்
வேரோடு
இளக்கும் இக் குடுமிக் குன்றத்து இனம் எலாம்
பிடுங்கி, ஏந்தி,
அளக்கர் கட்டவனும் மாட்டாது அலக்கணுற்றிட
விட்டு, ஆர்க்கும்
துளக்கம் இல் மொய்ம்பர் சோதிமுகனும் துன்முகனும்
என்பார். (27-5)
673. ‘குன்றொடு குணிக்கும் கொற்றக் குவவுத் தோள்
குரக்குச் சேனை
ஒன்று பத்து ஐந்தொடு ஆறு கோடி வந்து ஒருங்கு
சுற்ற,
மின் தொகுத்து அமைந்த போல விளங்கு எயிறு
இலங்க, மேருச்
சென்றென வந்து நிற்பான், திறல் கெழு
தீர்க்கபாதன். (27-6)

674. ‘நூற்றிரண்டாய கோடி நோன் கவித் தானை சுற்ற,
காற்றின் மா மகற்குக் கீழ்பால் கன வரை என்ன
நிற்பான்,
கூற்றின் மா மைந்தன்; கூற்றும் குலுக்கமுற்று
அலக்கண் எய்தச்
சீற்றமே சிந்தும் செங் கண் தெதிமுகன் என்னும்
சீயம். (27-7)

675. ‘நாடில், இங்கு இவர் ஆதியாய் நவின்ற மூ-எழுவர்
ஆடல் வெம் படைத் தலைவர்கள் ஆறு பத்து ஏழு
கோடி வீரர்கள், குன்று எனக் குவவிய தோளாய்!
கூடு சேனையும் எழுபது வெள்ளமாய்க் குறிப்பார். (33-1)

676. ‘அழிவு இலா வலி படைத்துள நம் படை அரக்கர்
ஒழிவு இலாத பல் ஆயிர வெள்ளத்துக்கு உறை ஓர்
துளியும் ஒவ்விடா எழுபது வெள்ளத்தின் தொகை
சேர்
எளிய புன் குரங்கு என் செயும்?’ என்றனன்,
இகலோன். (35-1)

11. மகுட பங்கப் படலம்

677. பிடித்தவன் விழித் துணை பிதுங்கிட நெருக்கி,
இடித்து அலம்வரக் கதறி எய்த்திட, இரங்காது
அடிக் கொடு துகைத்து அலை கடற்குள் ஒரு
கையால்
எடுத்து உக, இராவணன் எறிந்து, இகலின்
ஆர்த்தான். (22-1)
678. எறிந்திட விழுந்து, இரவி சேய் அறிவு சோர்வுற்று,
அறிந்ததொர் இமைப்பளவில் ஆகமது தேறி,
பிறிந்திலன் எனத் தொனி பிறந்திட, மருங்கில்
செறிந்து, ‘அமர் அரக்கனொடு செய்வென்!’ என
வந்தான். (22-2)

679. என இவை அமலன் கூற, இரு கையும் எடுத்துக்
கூப்பி,
மனம் மிக நாணி, ஒன்றும் வாய் திறந்து
உரைக்கலாற்றான்,
பனியினை வென்றோன் மைந்தன் பின்னரும்
பணிந்து நின்றே
அனகனுக்கு அன்பினோடும் அடுத்தமை
அறையலுற்றான். (38-1)

680. என்றனன்; என்றலோடும், இணை அடி இறைஞ்சி,
ஆங்கு,
குன்று உறழ் குவவுத் திண் தோள் கொற்ற வல்,
வீரற் காண,
தன் தனி உள்ள நாணால் தழல் விழிக் கொலை
வெஞ் சீயம்
நின்றென, எருத்தம் கோட்டி, நிலனுற நோக்கிக்
கூறும். (38-2)

681. ஏர் அணி மாட கூடம் இலங்கிய இலங்கை வேந்தை
காரணம் ஆக வாலால் கட்டிய வாலி, அன்றிப்
போரணம் ஆளும் அம்பால் புடைத்த மால் பாதம்
போற்றி
காரணச் சுடரோன் மைந்தன் தலைவனை
வணங்கிச் சொல்லும் (38-3)

682. இரவி போய் மறையும் முன்பு, அங்கு இராமனும்
இலங்கை நின்ற
வரை இழிந்து, அனைவரோடும் வந்து, தன்
இருக்கை எய்தி,
நிருதர்தம் குலத்தை எல்லாம் நீறு எழப் புரியுமாறே
பொரு திறம் முயன்ற செய்கை புகலுவான்
எடுத்துக்கொண்டாம். (49-1)

683. தெய்வத் தாமரையோன் ஆகி யாவையும் தெரியக்
காட்டி,
மெய் வைத்த அருளினாலே அவை எலாம் விரும்பிக்
காத்து
சைவத்தன் ஆகி, யாவும் தடிந்திடும் செயலின்
மேவும்
கை வைத்த நேமியோன்தன் கால் வைத்த
கருத்தமே, யாம். (49-2)

684. பூசலைக் குறித்து இராமன், பொரும் கவிச் சேனை
வெள்ளம்
மாசு அற வகுத்து, நாலு திக்கினும் வளையச்
செய்து,
பாசமுற்றுடைய நண்பின் படைத் துணை
யவர்களோடும்
பாசறை இருந்தான்; அந்தப் பதகனும் இழிந்து
போனான். (49-3)

12. அணி வகுப்புப் படலம்

685. இறைவன் மற்று இதனைக் கூற, எறுழ் வலி
அமைச்சர் பொங்கி,
‘பிறை முடிப் பரமனோடும் பெரு வரை எடுத்த
மேலோய்!
உறு சமர்க்கு எம்மைக் கூவி, ஏவிடாதொழிந்தாய்;
யாமும்
சிறு தொழில் குரங்கு அது என்ற திறத்தினும்
தாழ்த்தது என்றார். (11-1)

686. அமைச்சர் மற்று இதனைக் கூறி, ‘அரச! நீ
விடைதந்தீமோ?
இமைப்பிடைச் சென்று, வந்த குரங்குஇனப் படையை
எல்லாம்
கமைப்பு அறக் கடிது கொன்றே களைகுவம்’ என்ற
போதில்,
சுமைத் தட வரைத் தோள் கும்பகருணன்சேய்
நிகும்பன் சொல்வான்: (12-1)

687. எரி நெருப்பு என்னப் பொங்கி, இராவணன் என்னும்
மேலோன்
உரை செறி அமைச்சரோடும், உறு படைத்
தலைவரோடும்,
கரி, பரி, இரதம், காலாள், கணக்கு அறும் வெள்ளச்
சேனை
மருவுற, திசை நான்கு உம்பர் வகுத்து, அமர் புரியச்
சொன்னான். (17-1)

688. இம் முறை அரக்கர் கோமான் அணி வகுத்து
இலங்கை மூதூர்,
மும் மதில் நின்ற தானை நிற்க, மூதமைச்சரோடும்
விம்முறு சேனை வெள்ளத் தலைவர்க்கு விடையும்
நல்கி
கம்மெனக் கமழும் வாச மலர் அணை கருகச்
சேர்ந்தான். (22-1)

13. அங்கதன் தூதுப் படலம்

689. ‘சூளுறும் வஞ்சனாகத் தோன்றிய இலங்கை வேந்தன்
கோளுறும் சிறையை நீக்கி, குரை கழல் வணங்கும்
ஆகில்
வீழுறும் இலங்கைச் செல்வம் வீடணற்கு அளிப்பென்;
எம்பி
ஆளுறும் அயோத்திதன்னை இராவணற்கு
அளிப்பென்; என்றான். (7-1)

690. ‘தப்பு இல வீடணற்கு இலங்கை, தானமாச்
செப்பிய வாய்மைதான் சிதையலாகுமோ?
இப்பொழுது இராவணன் ஈங்கு வந்திடில்,
அப்பொழுது, அயோத்தி நாடு அளிப்பென்
ஆணையே.’ (7-2)

691. அரி முதல் தேவர் ஆதி அமரிடைக் கலந்த போதும்,
வரி சிலை இராமன் வாளி வந்து உயிர் குடிப்பது
அல்லால்,
புரம் ஒரு மூன்றும் தீயப் பொடி
செய்தோன்தன்னொடு, அந் நாள்,
அரு வரை எடுத்த வீரன் ஆண்மைக்கும் அவதி
உண்டோ? (17-1)

692. வந்தது என், குரங்கு? ஒன்று இல்லை, அடைத்தது
என், கடல் வாய்? மந்தி
சிந்தையின் களியால் என் பேர் தெரியுமோ?
தெரியாது ஆகில்,
இந்த எம் பதியைக் காக்கும் இறைவனோ? அறிதும்;
எங்கள்
விந்தை எம் பெருமான்! வாழி! வீடணன் என்னும்
வேந்தன். (19-1)

693. ‘முந்த ஓர் தசக்கிரீபன் ஆக்கையை மொய்ம்பால்
வீக்கும்
அந்த ஆயிரத்தோளானை அரக்கிய மழுவலாளன்
வந்து எதிர்கொள்ள, வீரச் சிலையும் வெவ் வலியும்
வாங்கும்
சுந்தரத் தோளன் விட்ட தூதன் நான்’ என்னச்
சொன்னான். (20-1)

694. ‘பசை அறு சிந்தையானைத் தமரொடும் படுத்த
போதும்,
இசை எனக்கு இல்லை அன்றே’ என்பது ஓர் இகழ்வு
கொண்டான்;
வசை அற இசைக்கும் ஊரை வளைக்கவும்
வந்திலாதான்,
திசையினை வென்ற வென்றி வரவரச் சீர்த்தது!’
என்றான். (36-1)
695. ஆதி அம் பரன், அங்கதன் ஓதல் கேட்டு,
‘ஈது அவன் கருத்து என்றிடின் நன்று’ எனா,
சோதியான் மகன் ஆதித் துணைவருக்கு
ஓதினான், அங்கு அமரர்கள் உய்யவே. (43-1)

14. முதற் போர் புரி படலம்

696. ஆதி நாயகன் அங்கு அது கூறுமுன்;
பாதமீது பணிந்து, அருள் பற்றியே,
காது வெம் படைக் காவலர் ஆதியோர்
மோது போரை முயலுதல் மேயினார். (3-1)

697. அந்த வேலை, அரக்கர் அழன்று கண்,
சிந்து தீயில் திசை எரி சேர்த்தவன்
முந்து உரைத்த முறைமையின் முந்துற
வந்து எதிர்த்தனர், வாயில்கள்தோறுமே. (15-1)

698. அன்ன போது அங்கு அரக்கர் பிரான் படை
உன்னும் ஆயிர வெள்ளம் உடன்று எழா,
கன்னி மா மதிலின் புறம் காத்து, உடன்
முன்னி வெஞ் சமர் மூண்டு எழுந்துற்றதே. (15-2)

699. ஆனை பட்ட; அடு பரி பட்டன;
தானை பட்ட, தார் இரதம்; கணை
சோனைபட்டது; துன் அரும் வானரச்
சேனை பட்டது; பட்டது செங்களம். (50-1)

700. ஆர்த்த போதில், அருந் திறல் சிங்கனும்,
சூர்த்த நோக்குடைச் சூரனும், துற்கனும்,
கூர்த்த வெங் கதிர்க் கோபனொடு ஆதியாய்,
வேர்த்து, அரக்கர் வியன் படை வீசினார். (55-1)

701. போர் செய் காலை, இடும்பனும் பொங்கி, அக்
கார் செய் மேனி அரக்கனைக் கைகளால்
மேருமீது இடி வீழ்ந்தெனத் தாக்கலும்;
சோர்வு இலாத அரக்கனும் துள்ளினான். (65-1)
702. வரு சுமாலி மகன் பிரகத்தன் அங்கு
இரதம் ஒன்றதின் ஏறினன்; பின்னரும்
வரி நெடுஞ் சிலை வேறு ஒன்று வாங்கியே,
சொரியும் மா மழைபோல், சரம் தூவினான். (72-1)

703. வால் அறுந்து, வயிறு துணிந்து, இரு
கால் அறுந்து, கழுத்து அறுந்து, அங்கம் ஆம்
மேல் அறுந்து விளிந்தன-வெஞ் சமர்
ஆலும் வானரச் சேனை அனேகமே. (72-2)

704. நீலன் நெஞ்சிடை அஞ்சு நெடுஞ் சரம்
ஆலம் அன்ன அரக்கன் அழுத்தலும்,
சால நொந்தனன்; நொந்து, தருக்கு அறா,
கால வெங் கனல்போல் கனன்றான் அரோ. (72-3)

705. கனலும் வெங் கண் அரக்கன், கடுஞ் சிலை
புனையும் தேர் பரி பாகொடு போய் அற,
நினைவதற்குமுன் நீலன் அங்கு ஓர் நெடுந்
தனி மராமரம்தான் கொண்டு, தாக்கினான். (72-4)

706. நிருதர் தானை உடைந்தது; நேர்கிலாத்
தரும கோபன், சதமகன், சண்டியோடு
எரிமுகன் இவர் ஆதி இராக்கதர்
செருவின், வெற்றி திகழ, வந்து எய்தினார். (79-1)

707. ஏவி, மற்று அயல் நின்ற அரக்கரை,
‘தா இல் என் ஒரு தேரினைத் தம்’ எனக்
கூவ, மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார்,
தேவர் ஆதியர் நெஞ்சம் திடுக்கென. (93-1)

708. ஆய்வு அருஞ் சத கோடி அடல் பரி
மாய்வு அருந் திரைபோல் வரப் பூண்டது;
தேயம் எங்கும் திரிந்தது; திண் திறல்
சாய, இந்திரனே பண்டு தந்தது. (93-2)

709. ஏறினான் இடத் தோள் துடித்தே; அறக்
கூறினான், ‘குரங்கோடு மனிதரை
நீறது ஆக்குவென்’ என்று, நெருப்பு எழச்
சீறினான், சிவன் போல அத் தேரின்மேல். (94-1)

710. ‘அண்ட கோடி அகிலமும் இன்றொடே
விண்டு நீங்குறும்’ என்று உயர் விண்ணவர்,
கொண்ட ஆகுலத்தால், மனம் கூசியே,
புண்டரீகன் பதியிடைப் போயினார். (99-1)

711. வெள்ளம் ஆங்கு அளப்பில; வெள்ளம், வாம் பரி;
கொள்ளை யார் அதன் கணக்கு அறிந்து கூறுவார்?
உள்ளம் ஆய்ந்து ஓது இரு நூறு வெள்ளம் ஆம்
கள்ள வாள் அரக்கர்கள் கடலின் சூழவே. (105-1)

712. நிருதர்கள் எவருமே நோக்கி நின்று போர்
பொருதனர், அயில் முதல் படைகள் போக்கியே;
மரமொடு மலைகளைப் பிடுங்கி, வானரர்
செருவிடைத் தீயவர் சிதறத் தாக்கினார். (119-1)

713. அண்ட கோளகை வெடித்து, அவனி கீண்டுற,
எண் திசாமுகங்களும் இடிய, ஈசனைக்
கொண்ட வான் கயிலையும் சிகர கோடிகள்
விண்டு நீங்கியதுஎனில், விளம்ப வேண்டுமோ? (123-1)

714. வச்சிர வரைப் புயத்து அரக்கன் வாங்கிய
கைச் சிலை நாண் ஒலி கலந்த காலையில்,
அச்சம் இல் புரந்தரன் ஆதி தேவர்கள்,
உச்சிகள் பொதிர் எறிந்து, உரம்
மடங்கினார். (123-2)

715. இப் புறத்து உயிர்கள் எல்லாம் இரிந்திட, அரக்கர்
கோமான்
கைப் படு சிலையை வாங்கி, கால மா மழையும்
எஞ்ச,
முப் பறத்து உலகம் எல்லாம் மூடியது என்ன, மூளும்
அப்பு மா மாரி சிந்தி, அண்டமும் பிளக்க ஆர்த்தான். (127-1)
716. ஆர்த்தவன் பகழி மாரி சொரிந்து, அரிச் சேனை
எல்லாம்
தீர்த்து, ஒரு கணத்தில் போக்க, செங் கதிர்ச்
சிறுவன் தானும்
பார்த்து, உளம் அழன்று பொங்கி, பரு வலி
அரக்கனோடும்
போர்த் தொழிற்கு ஒருவன் போலப் பொருப்பு ஒன்று
ஆங்கு ஏந்திப் புக்கான் (127-2)

717. அலக்கணுற்று அனுமன் சோர, அங்கதன் முதலாம்
வீரர்
மலைக்குற மரங்கள் வாங்கி வருதல் கண்டு,
அரக்கன், வாளி
சிலைக்கிடை தொடுத்து, அங்கு ஏந்து மா மலை
சிதைத்திட்டு, அன்னோர்
கலக்கமுற்று இரிய, ஒவ்வோர் பகழியின் காய்ந்து
கொல்வான். (138-1)

718. நகைத்து, ‘இது புரிந்தான்கொல்லோ?’ என்பதன்
முன்பு, நாண்வாய்த்
துகைத்து ஒலி ஒடுங்காமுன்னம், சோனை அம்
புயலும் எஞ்ச,
மிகைப் படு சரத்தின் மாரி வீரனுக்கு இளையோன்
மேவும்
பகைப் புலத்துஅரக்கன் சேனைப் பரவைமேல்
பொழிவதானான். (143-1)

719. எரி முகப் பகழி மாரி இலக்குவன் சிலையின்
கோலிச்
சொரிதர, களிறு, பொன் தேர், துரங்கமோடு
இசைந்த காலாள்
நிருதர்கள் அளப்பு இல் கோடி நெடும் படைத்
தலைவர், வல்லே
பொரு களமீதில் சிந்திப் பொன்றினர் என்ப
மன்னோ. (153-1)
720. எதிர் வரும் அரக்கர் கோமான் இலக்குவன்தன்னை
நோக்கி,
‘மதியிலி! மனிதன் நீயும் வாள் அமர்க்கு ஒருவன்
போலாம்!
இது பொழுது என் கை வாளிக்கு இரை’ என
நகைத்தான்; வீரன்
முதிர்தரு கோபம் மூள, மொழிந்து அமர்
முடுக்கலுற்றான் (156-1)

721. அரக்கன் மனம் கொதித்து, ஆண்தகை
அமலன்தனக்கு இளையோன்
துரக்கும் பல விசிகம் துகள்பட நூறினன்; அது
கண்டு,
அருக்கன் குல மருமான், அழி காலத்திடை எழு
கார்
நெருக்கும்படி, சர தாரையின் நெடு மா மழை
சொரிந்தான். (158-1)

722. ‘மாயத்து உரு எடுத்து, என் எதிர் மதியாது, இது
பெரிது என்–
றே இத் தரை நின்றாய்; எனது அடல் வாரி
சிலையிடையே
தீ ஒத்து எரி பகழிக்கு இரை செய்வேன் இது
பொறுத்தேன்;
ஞாயத்தொடும் ஒரு குத்து அமர் புரிதற்கு எதிர்
வரும் நீ. (171-1)

723. கல் தங்கிய முழுமார்பிடைக் கவியின் கரம்அதனால்
உற்று ஒன்றிய குத்தின் வலிஅதனால் உடல்
உளைவான்,
பற்று இன்றிய ஒரு மால் வரை அனையான், ஒரு
படியால்
மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தாலென
உய்ந்தான். (179-1)
724. கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடுங் கரம்
ஒன்றதின் வலியால்
மதித்தான் நெடு வய மாருதி மார்பத்திடை வர, மேல்
புதைத்து ஆங்குறும் இடிஏறு எனப் பொறி சிந்திய
புவனம்;
விதித்தான் முதல் இமையோர் உளம் வெள்கும்படி
விட்டான். (184-1)

725. உருத்து, வெஞ் சினத்து அரக்கன் அங்கு ஒரு
கையின் புடைப்ப,
வரைத் தடம் புய மாருதி மயங்கியது அறிந்து, ஆங்கு
இரைத்த திண் பரித் தேர்நின்றும் இரு நிலத்து
இழியச்
சரித்து, வானரம் மடிந்திட, சர மழை பொழிந்தான். (186-1)

726. உருத்து இலக்குவன் ஒரு கணத்து அவன் எதிர்
ஊன்றிக்
கரத்தின் வெஞ் சிலை வளைக்குமுன், கடுஞ்
சினத்து அரக்கன்
சிரித்து, வெம் பொறி கதுவிட, திசைமுகம் அடையப்
பொருத்தி, வெஞ் சரம் பொழிந்து, ‘இவை விலக்கு’
எனப் புகன்றான். (200-1)

727. பண்டை நாள் தரு பனித் திரைப் புனல் சடை
ஏற்றுக்
கொண்ட தூயவன், கொடுந் தொழில் நிருதர்கள்
குழுமி
மண்டு வாள் அமர்க் களத்தில், அம் மலர்க் கழல்
சேறல்
கண்டு, கூசலன் நிற்கும் என்றால், அது கடனே? (216-1)

728. அனைய கண்டு, இகல் அரக்கருக்கு இறைவன், அப்
பொழுதில்,
மனம் நெருப்பு எழக் கொதித்து, ‘ஒரு மனிதன் என்
வலியை
நினையகிற்றிலன்; நெடுஞ் சமர் என்னொடும்
துணிந்த
வினையம் இன்றொடும் போக்குவென்’ என விழி
சிவந்தான். (225-1)

729. அடுக்கி நின்றிடு பகிரண்டப் பரப்பு எலாம் அதிர,
துடிக்கும் நெஞ்சகத்து இமையவர் துளங்குற, கூற்றும்
நடுக்கம் உற்றிட, நல் அறம் ஏங்கிட, கயிலை
எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை
நாண்எறிந்தான் (225-2)

730. எறிந்து அடல் சிலை வளைத்து, ஒரு கணத்திடை
எரியின்
நிறம் தகும் பல நெடுஞ் சுடர்ப் பகழிகள், நெறியின்
அறிந்திடற்கு அரிது ஆகிய அளப்பு இல் பல் கோடி
செறிந்திட, திசை வானகம் வெளி இன்றிச்
செறித்தான். (225-3)

731. ஐயன் நோக்கினன், ‘நன்று!’ என நகைத்து, அவன்
சிலைவாய்
எய்த வெஞ் சரம் பொடிபட, யாவையும் முருக்கி,
வெய்தின் அங்கு அவன்மேற் செல, எழு கணை
விடுத்தான்;
கைதவன், கணை ஏழு கொண்டு, அக் கணை
கடிந்தான். (225-4)
732. எய்து வெள்ளம் நூற்று-இரண்டு எனத் திரண்ட
கால் வயவர்,
மொய் கொள் சேனை அம் தலைவர்கள், முரண்
கரி, பரி, தேர்,
வெய்ய வீரர்கள், அளப்பிலர் கோடியர், விறல் சேர்
ஐயன் வெஞ் சரம் அறுத்திட, அனைவரும்
அவிந்தார். (236-1)

733. அறுத்த வில் இழந்து அழியுமுன், ஐ-இரு கரத்தும்
பொறுத்து வெஞ் சிலை, நாண் ஒலி புடைத்து, அடற்
பகழி
நிறுத்தி வீசினன்–நெடுந் திசை விசும்பொடு
நிமிரக்
கறுத்த வான் முகில் கல் மழை பொழிதரும்
கடுப்பின். (240-1)

734. நிரைக்கும் ஐ-இரு சிலையிடைச் சர மழை நிருதன்
துரக்க, மாருதி, உடல் உறு குருதிகள் சொரிந்த;
குரக்கு வான் படை குறைந்தன; கூசி வானவர்கள்
இரக்கமுற்று உலைந்து ஓடினார்; இருண்டது எவ்
உலகும். (240-2)
735. எறுழ் வலிப் புயந்து இராகவன் இள நகை எழும்ப,
முறுவலித்து, அவன் பகழிகள் யாவையும் முருக்கி,
பிறை முகச் சரம் ஐ-இரண்டு ஒரு தொடை பிடித்து,
ஆங்கு
உறுதி அற்றவன் சிலை ஒரு பத்தையும்
ஒறுத்தான். (240-3)

736. ‘வளைத்த வில்லும் இரதமும் மற்றும் நின்
கிளைத்த யானையும் சேனையும் கெட்டது; இங்கு
இளைத்து நின்றனை; இன்று போய் நாளை வா,
விளைக்கும் வெஞ் சமர் செய் விருப்பு உள்ளதேல்’. (255-1)

737. என்று இராமன் இயம்ப, இராவணன்
ஒன்றும் ஓதலன்; ‘உள்ளத்தின், என் வலி
நின்ற நேர்மை நினைத்திலன், மானிடன்;
நன்று சொன்னது!’ என நகைத்து ஏகினான். (255-2)

15. கும்பகருணன் வதைப் படலம்

738. என்று எடுத்து உரைத்தோன், பின்னும் உளம்
கனன்று, இனைய சொல் வான்;
‘வன் திறல் மனிதன் வெம் போர் எவரினும்
வலியனேனும்,
பொன்றுதல் இல்லா என்னைப் போர் வெலற்கு
எளிதோ? காலம்
ஒன்று அல; உகங்கள் கோடி உடற்றினும்,
ஒழிவதுஉண்டோ? (31-1)

739. ‘மானிடன் என்றே நாணி, கடவுள் மாப் படைகள்
யாதும்
யான் எடுத்து ஏகல் விட்டேன்; இன்றை வெஞ்
சமரம் போக,
தான் அமர் அழிந்தேன் என்னத் தக்கதோ?’
என்றான், அந்த
மானம் இல் அரக்கன்; பின்னர், மாலியவானும்
சொல்வான்: (31-2)

740. ‘ “முப்புரம் எரிந்தோன் ஆதி தேவரும்
முனிவர்தாமும்,
தப்பு அற உணர்தற்கு எட்டாத் தருமமே, கை வில்
ஏந்தி,
இப் பிறப்பு இராமன் என்றே, எம்மனோர் கிளையை
எல்லாம்
துப்பு அற, முருக்க வந்தான்” என்ற சொல்
பிழைப்பது உண்டோ? (31-3)

741. ‘ஆதலின் இறைவ! கேட்டி; அவன் பெருந் தேவி
ஆன
மாதினை விடுத்து, வானோர் முனிவரர் வருந்தச்
செய்யும்
தீதினை வெறுத்து, தேவர் தேவனாம் சிலை இராமன்
பாதமே பணியின், நம்பால் பகை விடுத்து, அவன்
போம்’ என்றான். (33-1)

742. ‘என்றும் ஈறு இலா அரக்கர் இன்ப மாய வாழ்வு
எலாம்
சென்று தீய, நும் முனோன் தெரிந்து தீமை
தேடினான்;
இன்று இறத்தல் திண்ணமாக, இன்னும் உன்
உறக்கமே?’
அன்று அலைத்த செங் கையால் அலைத்து
அலைத்து, உணர்த்தினார். (45-1)

743. சாற்றிய சங்கு தாரை ஒலி அவன் செவியில் சார,
ஆற்றலின் அமைந்த கும்பகருணனுக்கு அதுவும்
தாராட்டு
ஏற்றதுஒத்து, அனந்தல் முன்னர்க்கு இரட்டி
கொண்டு உறங்க, மல்லர்,
கூற்றமும் குலைய, நெஞ்சம் குறித்து இவை
புரியலுற்றார். (51-1)

744. அன்னவர் உரைப்பக் கேளா, அரசன் மோதரனை
நோக்கி,
‘மின் எனும் எயிற்று வீர எம்பியைக் கொணர்தி!’
என்ன,
‘இன்னதே செய்வென்’ என்னா, எழுந்து அடி
வணங்கிப் போவான்,
பொன் என விளங்குவான் போய்த் தன் பெருங்
கோயில் புக்கான். (54-1)

745. இனைய கும்பகருணன், இராக்கதர்
தனை முனிந்து இடிஏறு எனச் சாற்றினான்;
‘எனை நெடுந் துயில் போக்கியது என்?’ என,
மனம் நடுங்கினர், வாய் புதைத்து ஓதினார். (69-1)

746. வட்ட விண்ணையும் மாதிரம் எட்டையும்
கட்டி, வீரம் கணிப்பு அரும் காவலான்
தொட்ட பல் கலனும் சுடர் மௌலியும்
தெட்ட சோதி திளைப்ப நின்றான் அரோ. (76-1)

747. என்ற போதில் எறுழ் வலிச் செம் மணிக்
குன்றம் ஐ-இரண்டு ஏந்திக் குல வரை
சென்றது என்னத் திரிந்து உலகு யாவையும்
வென்ற வீரன் இனைய விளம்பினான். (77-1)
748. அக் கணத்து அரக்கர் கோன், ‘அளப்பு இல் யானை,
தேர்
மிக்க வான் புரவி, கால் வயவர் வெள்ளமோடு,
ஒக்க வான் படைப் பெருந் தலைவர் ஒன்று அறப்
புக்குமின், இளவலைப் புறத்துச் சூழ்ந்து’ என்றான். (99-1)

749. வெள்ளம் நூறு இரதம்; மற்று இரட்டி வெங் கரி;
துள்ளு வான் பரி அதற்கு இரட்டி; தொக்குறும்
வெள்ளி வேல் அரக்கர் மற்று இரட்டி; மேம்படும்
கொள்ளை வான் படைப் பெருந் தலைவர்
கோடியால். (102-1)

750. அன்ன போது இராவணற்கு இளவல் ஆகிய
மின்னு வேல் கும்பகன் என்னும் மேலையோன்,
துன்னு போர் அணிகலம் யாவும் சூடியே,
தன் ஒரு தேரினைத் தொழுது தாவினான். (103-1)

751. தொண்டகம், துடி, கன பேரி, துந்துமி,
திண்டிமம், படகம், மா முரசு, திண் மணிக்
கண்டைகள், கடையுகத்து இடிக்கும் ஓதையின்
எண் திசை செவிடு எறிதரச் சென்று உற்றதால். (106-1)

752. எழு கருங் கடல் கரை எறிந்திட்டு, ஊழி நாள்,
முழுது உலகு அடங்கலும் மூடும் தன்மையின்
தழுவியது என, தசமுகன் தன் ஆணையால்,
கிளர் பெரும் படைக் கடல் கெழுமிப்
போந்ததால், (106-2)

753. இரைக்கும் மும் மதம் பொழி தறுகண் யானையின்,
நெருக்கமும், நெடுங் கொடித் தொகையின் தேர்க்
குலப்
பெருக்கமும், புரவிகள் பிறங்கும் ஈட்டமும்
அரக்கர்தம் பெருக்கமும், ஆயது எங்குமே. (106-3)
754. நாற்படை வகை தொகை நடக்க, தூளிகள்
மேற்பட, விசும்பகம் மறைந்த; வெண் திரைப்
பாற்கடல் எனப் பொலி கவிப் பெரும் படை
காற் படு கதியினின் கரந்தது, ஓடியே. (108-1)

755. குரக்கினப் பெரும் படை குலைகுலைந்து போய்
வெருக் கொள, விசும்பிடை வெய்ய மாயையின்
அரக்கன் இன்று அமைத்தது ஓர் உருக்கொலாம்? நினது
உருக் கொடே கரிய குன்று உற்றவேகொலாம்? (111-1)

756. ஏழு யோசனைக்கு மேலாய் உயர்ந்திடும் முடி
பெற்றுள்ளான்;
சூழி வெங் கரிகள் தாங்கும் திசை எலாம் சுமக்கும்
தோளான்;
தாழ்வு அறு தவத்தின் மேலாம் சதுமுகன்
வரத்தினாலே
வீழ் பெருந் துயிலும் பெற்றான்-வெங் கடுங் கூற்றின்
வெய்யோன். (114-1)

757. சிலை பொழி பகழி, வேல், வாள், செறி சுடர்க்
குலிசம், ஈட்டி,
பல வகைப் படைகள் வாங்கி, நிருதர்கள் பல் போர்
செய்தார்;
மலையொடு மரங்கள் ஓச்சி, வயிரத் தோள்
கொண்டு, மாறாக்
கொலை அமர் எடுத்து, வாகை குரங்குகள் மலைந்த
அம்மா. (172-1)

758. பற்றினன் வசந்தன்தன்னை, பனைத் தடங்
கைகளாலே;
எற்றினன், ‘இவனை மீள விடவொண்ணாது’ என்று
சொல்லி,
‘கொற்றமும் உடையன்’ என்னா, குழம்பு எழப்
பிசைந்து கொண்டு
நெற்றியில் திலதமாக இட்டனன்-நிகர் இலாதான். (177-1)
759. அளப்பு இல் வெங் கரிகள், பூதம், அளி, வெம்
பரிகள் பூண்டு, ஆங்கு
இழுப்ப வந்து உடைய தேர் விட்டு, இரு நிலத்து
இழிந்து, வெம் போர்க்
களப் படக் கவியின் சேனைக் கடல் வறந்து உலைய,
‘கையால்
குளப் படுக’ என்று வெய்யோன் குறித்து, உளம்
கனன்று புக்கான். (177-2)

760. நிகர் அறு கவியின் சேனை நிலை கெட, சிலவர்
தம்மைத்
துகள் எழக் கயக்கி ஊதும்; சிலவரைத் துகைக்கும்,
காலின்;
தகர் படச் சிலவர்தம்மைத் தாக்கிடும், தடக்
கைதன்னால்;
புகவிடும் சிலவர்தம்மை, விசும்பிடைப் போக,
வெய்யோன். (177-3)

761. வலிதினின், சிலவர்தம்மை வன் கையால் பற்றிப்
பற்றி,
தலையொடு தலையைத் தாக்கும்; சிலவரைத் தனது
தாளால்
நிலமதில் புதைய ஊன்றி மிதித்திடும்; சிலவர்
நெஞ்சைக்
கொலை நகப் படையின் கீறி, குருதி வாய்மடுத்துக்
கொள்ளும். (177-4)

762. கடும் பிணக் குவையினூடே சிலவரைப் புதைக்கும்;
கண்ணைப்
பிடுங்குறும் சிலவர்தம்மை; சிலவரைப் பிடித்து,
வெய்தின்
கொடுங் கொலை மறலி ஊரில் போய் விழக் குறித்து
வீசும்;
நெடும் பெரு வாலின் பற்றிச் சிலவரைச் சுழற்றி
நீக்கும். (177-5)
763. பருதி மண்டலத்தில் போகச் சிலவரைப் பற்றி வீசும்;
குருதி வாய் பொழியக் குத்திச் சிலவரைக்
குமைக்கும்; கூவித்
திரிதரத் தேவர் நாட்டில் சேர்த்திடும் சிலவர்தம்மை;
நெரிதரச் சிலவர்தம்மைக் கொடுங் கையின்
நெருக்கும் அன்றே. (177-6)

764. ஆயிர கோடி மேலும் அடல் குரங்குஅதனை வாரி,
வாயிடைப் பெய்து மூட, வயிற்றிடைப் புகுந்து, வல்லே
கூய் உளம் திகைத்து, பின்னும் கொடியவன்
செவியினூடே,
போயது வெளியில் மீண்டும், புற்றிடைப் பறவை
என்றே. (179-1)

765. அவ் வழி அரியின் சேனை அதர்பட வசந்தன்
என்பான்
தவ் அழி வீரன் நாலு வெள்ளத்தின் தலைவன்
என்றான்;
எவ் வழி? பெயர்ந்து போவது எங்கு? என இரு
குன்று ஏந்தி,
வெவ் வழிஇசை அக் கும்பகருணன்மேல் செல்ல
விட்டான். (180-1)

766. விசைந்திடு குன்றம் நின்ற விண்ணவர் இரியல்
செல்ல,
இசைந்திடு தோளின் ஏற்றான், இற்று நீறு ஆகிப்
போக;
வசந்தனைச் சென்று பற்றி வாசம் கொண்டுவந்து
கையால்
பிசைந்து சிந்தூரமாகப் பெரு நுதற்கு அணிந்து
கொண்டான். (180-2)

767. நீலனை அரக்கன் தேரால் நெடு நிலத்து இழியத்
தள்ளி,
சூலம் அங்கு ஒரு கை சுற்றி, ‘தொடர்ந்திடும்
பகைஞர் ஆவி
காலன் ஊர்தன்னில் ஏற்றி, கடிதில் என் தமையன்
நெஞ்சில்
கோலிய துயரும்தீர்ப்பென்’ எனக் கொதித்து, அமரின்
ஏற்றான். (186-1)

768. செய்துறு பகையை வெல்வார், நின்னைப் போல்
அம்மை செய்து,
வைதுறு வந்த போது, வலுமுகம் காட்டி, யாங்கள்
தகைதுறு வினையை வென்று கடன் கொள்வார்
மார்க்கமுள்ளார்;
எய்துறும் இதற்கு என் போல் உன் தகை சிலை
உதவி என்றான். (193-1)

769. மாருதி போதலோடும், வயப் படைத் தலைவர், மற்று
ஓர்
மாருதம் என்னப் பொங்கி, வரையொடு மரங்கள்
வாரி,
போர் எதிர் புகக் கண்டு, அன்னோர் அனைவரும்
புரண்டு போரில்
சோர்தர படைகள் வாரிச் சொரிந்து, அடல் அரக்கன்
ஆர்த்தான். (203-1)

770. மழுவொடு கணிச்சி, சூலம், வாள், மணிக் குலிசம்,
ஈட்டி,
எழு, அயில், எஃகம் என்று இப் படை முதல்
எவையும் வாரி,
மழை எனப் பொழிந்து, நூறு யோசனை வரைப்பில்
மேவும்
அளவு அறு கவியின் சேனை அறுத்து, ஒரு
கணத்தில் வந்தான். (203-2)

771. இலக்குவன் கொடுமரத்திடை எறியும் வெம் பகழி
கலக்கம் அற்றிடும் அரக்கர்தம் கரங்களைக் கடிந்தே.
முலைக்குவட்டு, அவர் கன்னியர், முன்றிலின் எறிய,
விலக்க அரும் விறலாளி கண்டு, அவர் உயிர்
விளிந்தார். (226-1)
772. வடி சுடர்ப் பெரும் பகழிகள் ஏற்றின வதனத்து
அடல் அரக்கரும் சிலர் உளர்; அவர் தலை அறுத்து,
ஆங்கு
உடன் எடுத்து, அவர் மனையினுக்கு உரிய
கன்னியர்பால்
இட, உவப்பொடும் புழுக்கினர், ஊன் இவை
அறியார். (226-2)

773. குஞ்சரத் தொகை, தேர்த் தொகை, குதிரையின்
தொகை, மேல்
விஞ்சு வாள் எயிற்று அரக்கர்தம் தொகை எனும்
வெள்ளம்
பஞ்சினில் படும் எரி என, இலக்குவன் பகழி
அஞ்செனப் படு கணத்து, அவை அனைத்தையும்
அழித்த. (227-1)

774. வந்து அம் மாப் படை அளப்பு இல வெள்ளங்கள்
மடிய,
அந்தி வான் எனச் சிவந்தது, அங்கு அடு களம்;
அமரில்
சிந்தி ஓடிய அரக்கரில் சிலர், ‘தசமுகனுக்கு
இந்த அற்புதம் உரைத்தும்’ என்று ஓடினர், இப்பால் (227-2)

775. உரைத்து, நெஞ்சு அழன்று, ‘ஒரு கணத்து இவன்
உயிர் குடித்து, என்
கருத்து முற்றுவென்’ எனச் சினம் கதுவிட, கடுந்
தேர்
பரித்த திண் திறல் பாகரை, ‘பகைவனுக்கு எதிரே
பொருத்தும்’ என்று அடல் கும்பகன் பொருக்கெனப்
புகன்றான். (228-1)

776. நாண் தெறித்தனன், பகிரண்டப் பரப்பொடு நவை
போய்
மாண்ட விண்ணவர் மணித் தலை துளங்கிட, வயப்
போர்
பூண்ட வானரம் நின்றதும் புவியிடை மறிய,
தூண்டி, மற்று அவன் இலக்குவன்தனக்கு இவை
சொல்வான்: (233-1)

777. அது கண்டார் அடல் வானவர், ஆசிகள் கூறித்
துதி கொண்டார்; அடல் அரக்கனும் துணை விழி
சிவந்து ஆங்கு,
‘இது கண்டேன்; இனிக் கழிந்தது, உன் உயிர்’ எனக்
கனன்றே
கொதி கொண்டான், அடல் சிலையினைக் குழைவுற
வளைத்தான். (240-1)

778. புக்க போதில், அங்கு இலக்குவன் பொருக்கெனத்
துயர் தீர்ந்து,
அக் கணம்தனில் அரக்கர்தம் பெரும் படை அவிய,
மிக்க வார் சிலை வளைத்து, உரும் ஏறொடு
விசும்பும்
உட்க, நாண் எறிந்து, உக முடிவு என, சரம்
பொழிந்தான். (248-1)

779. ‘காய் கதிர்ச் சிறுவனைப் பிணித்த கையினன்,
போயினன் அரக்கன்’ என்று உரைத்த போழ்தின்வாய்,
நாயகன் பொருக்கென எழுந்து, நஞ்சு உமிழ்
தீ அன வெகுளியன், இனைய செய்தனன். (272-1)

780. ஆயிரம் பேய் சுமந்து அளித்தது, ஆங்கு, ஒரு
மா இருங் கேடகம் இடத்து வாங்கினான்;
பேய் இரண்டாயிரம் சுமந்து பேர்வது ஓர்
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான். (299-1)

781. வீசினன் கேடகம்; விசும்பின் மீன் எலாம்
கூசின; அமரரும் குடர் குழம்பினார்;
காய் சின அரக்கனும் கனன்ற போது, அவன்
நாசியும் செவியும் வெங் குருதி நான்றவே. (299-2)

782. கும்பகன் கொடுமையும், குலைகுலைந்து போம்
வெம்பு வெஞ் சேனையின் மெலிவும், நோக்கிய
நம்பனும் அரக்கன் கை நடுவண் பூட்டுறும்
செம் பொனின் கேடகம் சிதைத்து வீழ்த்தினான். (301-1)

783. ஆயிரம் பெயரவன் அறுத்து மாற்றுறப்
போயின கேடகம் புரிந்து நோக்கினான்;
பேய் இரண்டாயிரம் சுமக்கப் பெற்றுடை
மா இருங் கேடகம் கடிதின் வாங்கினான். (301-2)

784. போயின கேடகம் போக நோக்கினன்,
ஆயிரம் பெயரவன், அறியும் முன்பு; அவன்
பேய் இரண்டு ஆயிரம் பேணும் கேடகம்
‘ஏ’ எனும் அளவினில் எய்தச் சென்றதால். (301-3)

785. ஆலம் உண்டவன் முதல் அளித்தது, அன்னவன்
சூலம் உண்டு; அளப்பு இல கோடி பேய் சுமந்து,
ஓலம் இட்டு அமரர்கள் ஓட, ஊழியில்
காலன் ஒத்தவன் கரத்து அளித்தது, அக் கணம். (310-1)

786. பிடித்தனன் வலக் கையில் சூலம், பெட்பொடு;
முடித்தனன், பூசனை மனத்தின் முன்னியே;
விடுத்தனன், ‘பகைவனை வென்று மீள்க’ எனா;
தடுப்ப அரிது எனத் தளர்ந்து, அமரர் ஓடினார். (315-1)

787. சூலம் அங்கு அது வரும் துணிவை நோக்கியே,
ஞால நாயகன், அரிக் கடவுள் ஏந்திய
கால வெங் கனல் படை கடிதின் ஏவி, அச்
சூலம் அற்று இரண்டு எனத் துணித்து வீழ்த்தினான். (315-2)

788. அழிந்தது சூலம்; அங்கு அமரர் யாவரும்
தொழும் தகை அமலனைப் புகழ்ந்து துள்ளியே,
‘கழிந்தது, எம் மனத் துயர்’ என்று கண்ணன் மேல்
பொழிந்தனர், அவன் பெயர் புகன்று, பூமழை. (315-3)
789. வந்த வெஞ் சேனைகள் வளைந்த எல்லையில்
இந்திரன் முதலினர் ஏத்த, வள்ளலும்
சுந்தர நெடுங் கணை மாரி தூவினான்;
சிந்தியது, அப் பெருஞ் சேனை வெள்ளமே. (315-4)

790. இரண்டு பத்து நூறு எனும் படை வெள்ளம்
மற்று இன்றொடு முடிவு எய்திப்

புரண்டு தத்துறப் பொழிந்தனர், இருவர் தம்
பொரு சிலைக் கணை மாரி;

இருண்டது எத்திசை மருங்கினும், பறவையின்
இனம் பல படி மூடி;

திரண்ட வச்சிரக் கதை கரத்து எடுத்தனன்,
கும்பகன் சினம் மூள.

(321-1)

791. என்ற போதில், அரக்கனும் நோக்கினன்,
‘எம்பிரான் நுவல் மாற்றம்

நன்று, நன்று!’ எனா, சிரம் துளக்கினன்,
நகைத்து, இவை இவை நவில்கின்றான்;

‘வென்றி தந்து, தம் புறம் கொடுத்து ஓடிய
விண்ணவர் எதிர் போரில்

பொன்றுமாறு இளைத்து, இன்று போய் வருவெனேல்,
புகழுடைத்தது போலாம்.’

(324-1)

792. இனைய திண் திறல் அரக்கனுக்கு அவ் வழி
இதயத்தில் பெரு ஞான

நினைவு எழுந்தது; ‘இங்கு இவன் பெருங் கடவுள்;
மற்று இவன் பத நிழல் காண

வினை அறுந்தது; வேறு இனிப் பிறப்பு இலை’
என்று, தன் மன வேகம்-

தனை மறந்தனன்; மறந்து அவன் தன்மையை
நினைந்தனன், கருத்தோடும்.

——————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உ .வே -ஆசுகவி வில்லூர் ஸ்வாமிகள் அருளிச் செய்த சதுஸ் ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்–

December 29, 2020

ஸ்ரீ உ .வே -ஆசுகவி வில்லூர் ஸ்வாமி இயற்றிய சதுஸ் ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்-
ஸ்ரீ. உ. வே. திருக்குடந்தை வெங்கடேஷ் ஸ்வாமிகள் -திருப்பாவை உபந்யாஸத்தில் மேற்கோள் காட்டப்பட்டது,
ஸ்வாமி இளைய வயசிலே நோய்வாய் பட கைங்கர்யங்கள் செய்து வாழவே பிரார்த்திக்க அருளிச் செய்த ஸ்லோகம்
சீதா பிராட்டி பிரிவை நேராக சொல்லாமல் -சொல்லி இருந்தால் -அத்துடன் ஆச்சார்யர் திருவடி சேர்ந்து இருந்தால் –
பிரிந்த வ்ருத்தாந்தத்துடன் போக திரு உள்ளம் இல்லாமல் -திருவடி அடையாளம் சொல்லும் முகத்தால் அருளிச் செய்துள்ளார் –
ஸ்ரீ சீதா பிராட்டி ராவணன் பிரிந்ததை சொல்லாமல் சிறை இருந்தவள் பற்றி ஸ்ரீ திருவடி மூலம் அறிந்து கொண்டான்
என்று மங்கள கரமாக அருளிச் செய்கிறார்
வைரஸ் தொற்றுகளிலிருந்து காக்க வல்லது-

1.ஸ்ரீ ராம: கௌசிகம் அன்வகாத் பதி முனே: வாசாவதீத் தாடகாம்
ஸத்ரம் தஸ்ய ரரக்ஷ தேன கதிதா: சுச்ராவ தாஸ்தா: கதா:
கத்வாதோ மிதிலாம் விதாய த்ருஷதம் யோஷின்மணிம் ஸன்முனே:
பங்க்த்வா தூர்ஜடி சாபம் ஆப ரமணீம் ஸீதாபிதானாம் அபி

2.ஸ்ரீ ஸீதாயா: கரலாலனேன ஸக்ருதீ ஜித்வா முனிம் பார்கவம்
ஸாகேதம் தரஸா ப்ரவிச்ய ஜனனீம் ஆனந்தயன் மத்யமாம்
ஆஸீத் யோ விபினே சதுர்தச ஸமா ரக்ஷன் முனீன் ஆனதான்
ரக்ஷஸ்ஸங்கம் அதாவதீத் அகடயத் ராஜ்யம் ச ஸூர்யாத்மஜே

3. வாயோராத்ம புவா ததோ ஹநுமதா பாதோதி பார ஸ்திதாம்
ப்ராணேப்யோபி கரீயஸீம் ப்ரியதமாம் விஜ்ஞாய ரக்ஷோஹ்ருதாம்
ஸேதும் வாரிநிதௌ விதாய விவிதானந்தாக வித்வம்ஸனம்
லங்காயாம் விலுலாவ ராவண சிரோ ப்ருந்தானி வந்தேய தம்

4. ஆருஹ்யாத விபீஷணேன ஸுபகம் பக்த்யா ஸமாவேதிதம்
மான்யம் புஷ்பகம் அஞ்ஜஸா நிஜபுரீம் ஆகத்ய மித்ரைர்வ்ருத:
ஆனந்தாய வஸிஷ்ட காச்யப முகை: பட்டாபிஷிக்தோ விபு:
தஸ்மின் ஜாக்ரதி ஜானகீ ப்ரியதமே கா நாம பீதிர்மம

தனுஷ்கர சதுச்லோகீ தனுஷ்புர கவீரிதா
மாரீகாதர சித்தானாம் மா ரீதிம் இதராம் திசேத்-

ஸ்ரீ வில்லி-வில் பிடித்தவன் பற்றிய ஸ்ரீ வில்லூர் ஸ்வாமி நான்கு ஸ்லோகங்கள் மாரி -viras -விலகி போவதாக பலன்

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ. உ. வே. திருக்குடந்தை வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே -ஆசுகவி வில்லூர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

சங்க கால மலர்கள் –கபிலர் குறிஞ்சி பாட்டில் –96-பூக்கள் –

December 29, 2020

குறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்-

பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு.
கபிலர் என்னும் புலவர் பாடியது இப்பாடல். 261 அடிகளாலான இப் பாடல் அகப்பொருளில்
குறிஞ்சித்திணைப் பண்பாட்டை விளக்கும் பாடலாகும்-

குறிஞ்சி பாட்டு

வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், கள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,

கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை,

ஞாழல், மெளவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,

அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,
மால், அங்கு, உடைய மலிவனம் மறுகி,
வான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ.

————

அ வரிசை
அடும்பு
அதிரல்
ஆம்பல்
அவரை
அனிச்சம்
ஆத்தி
ஆரம்
ஆவிரை
இருள்நாறி
இலவம்
ஈங்கை
உந்தூழ்
எருவை
எறுழம்

————-

க வரிசை

கண்ணி
கரந்தை
கருவிளை
காஞ்சி
காந்தள்
காயா
காழ்வை
குடசம்
குரலி
குரவம்
குருக்கத்தி
குருகிலை
குருந்தம்
குவளை
குளவி
குறிஞ்சி
கூவிரம்
கூவிளம்
கைதை
கொகுடி
கொன்றை
கோங்கம்
கோடல்

—————

ச வரிசை
சண்பகம்
சிந்து
சுள்ளி
சூரல்
செங்கொடு
வேரி
செம்மல்
செருந்தி
செருவிளை
சேடல்

———–

ஞ வரிசை

ஞாழல்

———-
த வரிசை
தணக்கம்
தளவம்
தாமரை
தாழைமலர்
தில்லை
திலகம்
தும்பை
துழாஅய்
தோன்றி (மலர்)

————-

ந வரிசை
நந்தி (மலர்)
நரந்தம்
நறவம்
நாகம்
நாகம் (புன்னாகம்)
நெய்தல்

————-
ப வரிசை

பகன்றை
பசும்பிடி
பயினி
பலாசம்
பாங்கர்
பாதிரி
பாரம்
பாலை
பிடவம்
பிண்டி
பித்தி
கம்பீரம்
புன்னை
பூளை
போங்கம்

———–

ம வரிசை
மணிச்சிகை
மராஅம்
மருதம்
மா
மாரோடம்
முல்லை –
கல் இவர் முல்லை
முல்லை
மௌவல்

————

வ வரிசை

வகுளம்
வஞ்சி
வடவனம்
வழை மரம்
வள்ளி
வாகை
வாரம்
வாழை
வானி
வெட்சி
வேங்கை
வேரல்
வேரி

———-

அகில் – Eaglewood Tree
அதவம், அத்தி – Fig Tree
அரச மரம் – Pipal Tree
ஆசினி – Breadfruit Tree
ஆத்தி – Bauhinia racemosa
ஆலமரம் – Banyan Tree

இகணை
இரவம், இருள்மரம்
இருப்பை, இலுப்பை, வஞ்சி – Indian Butter Tree
இற்றி – White Fig
இலந்தை, இரத்தி, Jujube
இலவம், பூளை – Silk Cotton Tree
இல்லம் – Clearing Nut Tree

பசுமை நாயகன்ஈத்து, ஈந்து – Date Palm
உகா, உகாய், உவா – Toothbrush Tree
உடை – Umbrella-thorn babul
உந்தூழ் – Large Bamboo
உன்ன மரம்
எறுழ் மரம் – Alstonia scholaris

ஓமை- Dillenia indica
கடம்பு, மரவம் – Kadamba Oak
கமுகு – Betelnut Tree
களா மரம் – Corinda Tree
கள்ளி – Cactus
கவிர், முருக்கு – Coral Tree, Palaus Tree
பசுமை நாயகன்காஞ்சி – Portia Tree

காயா – Ironwood Tree
குன்றி முத்து – Crab’s Eye Tree
குமிழ் மரம்
குரவம், குரவு – Bottle Flower Tree
குருந்தம், குருந்து – A citrus Tree
குளவி – பன்னீர் பூ மரம்
கூதளி, கூதாளம்
கூவிரம்
கூவிளம் – வில்வம் – Bael Tree

கொன்றை, கடுக்கை – Laburnum
கோங்கம் – Cochlospermum gossypium
http://www.thagavalthalam.comசந்தனம், ஆரம் – Sandalwood Tree
சிலை மரம்
செங்கருங்காலி, மோரோடம் – Red Catechu
செயலை, பிண்டி – Asoka Tree
செருந்தி
ஞாழல்
ஞெமை
தடா மரம்

தாழை – Fragrant Screw Pine
தில்லை – Blinding Tree
துடரி – மலை இலந்தை
தென்னை – Coconut Tree
தேக்கு – Teak Tree
நரந்தம் – Bitter Orange
நாவல் – Syzygium cumini – Jamun tree-
நுணவம், நுணா மரம் – Morinda tinctoria
நெல்லி – Gooseberry Tree
நொச்சி – Chaste Tree
பசும்பிடி – Mysore Gamboge
பனை – Palmyra Palm
பலா – Jackfruit Tree
பாங்கர் – Tooth-brush tree
பாதிரி – Yellow Flower Trumpet Tree
பாலை – Ivorywood Tree
பிடவம், பிடவு
புங்கம், புன்கு – Indian Beech
புன்னை, நாகம் – Laurel Tree
புளிய மரம் – Tamarind Tree
போங்கம், சிவப்பு குன்றி – Red Wood Tree
பசுமை நாயகன்மகிழம், இலஞ்சி – Pointed-leaved Ape Flower Tree
மருதம் – Arjuna Tree
மாமரம் – Mango Tree
முருக்க மரம்
முருங்கை மரம்
மூங்கில், உந்தூழ், கழை – Bamboo
யா மரம்
வகுளம் – Bakul Tree
வன்னி – Indian Mesquite
வழை, சுரபுன்னை
வாகை, உழிஞ்சில் – Sirissa Tree
வாழை – Banana Tree
விடத்தேரை – Ashy babool
விளா – Wood Apple Tree
வெள்ளோத்திரம்
வேங்கை – Kino Tree
வேம்பு – Neem Tree
வேலம், வெள்வேலம் – Panicled Babool

———————-

வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், (3)
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, (6)
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, (9)
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், (11)

எரி புரை எறுழம், கள்ளி, கூவிரம், (14)
வடவனம், வாகை, வான் பூங் குடசம், (17)
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, (20)
பயினி, வானி, பல் இணர்க் குரவம், (23)
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, (26)
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், (29)
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, (31)
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், (34)
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, (37)
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், (40)
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, (43)
தில்லை, பாலை கல்லிவர் முல்லை (46)
குல்லை பிடவம், சிறுமாரோடம், (49)
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், (52)
தாழை, தளவம், முள் தாள் தாமரை, (55)

ஞாழல், மெளவல், நறுந் தண் கொகுடி, (58)
சேடல், செம்மல், சிறுசெங்குரலி, (61)
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, (64)
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், (67)
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், (70)

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, (73)
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, (76)
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, (79)
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், (82)
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, (85)

நந்தி, நறவம், நறும் புன்னாகம், (88)
பாரம், பீரம், பைங் குருக்கத்தி, (91)
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, (94)
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, (96)
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், (98)

அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன், (99)
மால், அங்கு, உடைய மலிவனம் மறுகி,
வான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ.

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கம்ப ராமாயணம்-ஸ்ரீ ஸூந்தர காண்டம்-மிகைப் பாடல்கள்–

December 25, 2020

1. கடல் தாவு படலம்

383.
சென்றனன்,இராமன் பாதம் சிந்தையில் நிறுத்தி-
திண் தோள்
வன் திறல்அனுமன்-வாரி கடக்குமாறு உளத்தின்
எண்ணி,
பொன் திணிசிகர கோடி மயேந்திரப் பொருப்பின்
ஏறி,
நின்றிடும்தன்மை எம்மால் நிகழ்த்தலாம்
தகைமைத்து ஆமோ ?

அனுமன்இராமபிரானின் திருவடியை மனத்திலே தியானித்து கடலைக்
கடக்க எண்ணி மகேந்திர மலையில் நிற்கும் தன்மை எம்மால் கூறும் தன்மை
உடையதோ.

384.
இமையவர்ஏத்த வாழும் இராவணன் என்னும்
மேலோன்
அமை திரு நகரைச்சூழ்ந்த அளக்கரைக் கடக்க,
வீரன்,
சுமை பெறு சிகரகோடித் தொல் மயேந்திரத்தின்,
வெள்ளிச்
சிமையமேல்நின்ற தேவன் தன்மையின், சிறந்து
நின்றான்.

மகேந்திர மலையில்நிற்கும் அனுமன் கயிலை மலையில் நிற்கும்
சிவபெருமான் போன்றான். அளக்கர் – கடல் வெள்ளிச்சிமயம் – கயி்லை.
இவ்விரண்டு பாடல்கள் இப்படலத்தின் முன்னர் உள்ளன. இவற்றொடு
கிட்கிந்தா காண்டம் மயேந்திரப்படல இறுதி நான்கு பாடல்களும்
வரிசைமுறைமாறிக் கலந்துள்ளன.

385.
பெருஞ் சிலம்பு அறையின் வாழும் பெரு வலி
அரக்கர் யாரும்
பொரும் சின மடங்கல் வீரன் பொதுத்திட
மிதித்தலோடும்
அருஞ் சினம்அடங்கி, தம்தம் மாதரைத் தழுவி,
அங்கம்
நெரிஞ்சுற,கடலின் வீழ்ந்தார், நெடுஞ் சுறா மகரம்
நுங்க

அனுமன் திருவடி ஊன்றநிலை குலைந்த அரக்கர் தம்மாதரைத்
தழுவிக்கடலில் விழுந்தனர். பொதுத்திட – துளை உண்டாக. நுங்க – உண்ண.
நெரிஞ்சுற – சிதைவுற. (7-1)

386.
விண்ணோர்அது கண்டனர், உள்ளம் வியந்து
மேல்மேல்
கண் ஓடியநெஞ்சினர், காதல் கவற்றலாலே,
எண்ணோடு இயைந்துதுணை ஆகும் இயக்கி ஆய
பெண்ணோடு இறைஇன்னன பெற்றி
உணர்த்தினாரால்.

தேவர்கள்,அனுமன் செல்வதைக் கண்டனர். சுரசையைப் பார்த்து
கூறினர். கண் ஓடிய – இரக்கமுற்ற. (64-1)

387.
பரவுக் குரல், பணிலக் குரல், பணையின் குரல்,
பறையின்
விரவுக் குரல்,சுருதிக் குரல், விசயக் குரல், விரவா,
அரவக் குலம்உயிர் உக்கு உக, அசனிக் குரல் அடு
போர்
உரவுக் கருடனும் உட்கிட, உயிர்க்கின்றன-ஒருபால்.

பல ஒலிகள்உண்டாகின்றன. பணிலம் – சங்கு. பணை – முரசம்,
அசனி- இடி. உயிர்த்தல் – ஒலித்தல். (74-1)

388.
வானோர் பசுந் தருவின் மா மலர்கள் தூவ,
ஏனோரும் நின்று,‘சயம் உண்டு’ என இயம்ப,
தான் ஓர் பெருங்கருடன் என்ன, எதிர் தாவிப்
போனான்,விரைந்து, கடிதே போகும் எல்லை.

பசுந்தரு -கற்பகம். (74-2)

389.
என்று தன் இதயத்து உன்னி, எறுழ் வலித் தடந்
தோள் வீரன்
நின்றனன், நெடியவெற்பின்; நினைப்ப அரும்
இலங்கை மூதூர்

ஒன்றிய வடிவம்கண்டு, ஆங்கு, உளத்திடைப்
பொறுக்கல் ஆற்றான்;
குன்று உறழ்புயத்து மேலோன் பின்னரும்
குறிக்கலுற்றான்.

எறுழ் – மிக்க. வீரன்- அனுமன், வெற்பு – மகேந்திரமலை (94-1)

2. ஊர் தேடு படலம்

390.
‘ஊறு மிகவேஉறினும், யானும் அமர் தேரேன்,
தேறல் இல்அரக்கர் புரி தீமை அது தீர்வுற்று,
ஏறும் வகை எங்குள? இராமனிடை அல்லால்,
மாறும் மதி வேறுபிறிது இல்’ என மதித்தான்.

கடல் தாவு படலம் 88ஆம்பாடலின் (கம்ப. 4828) மறுபதிப்பு.
(73-1)

391.
‘கண்டவனப்பான், மேனி கரக்கும் கருமத்தான்,
கொண்டல்செறிப்பான், வானரம் என்றும் கொளல்
அன்றே;
அண்டம்அனைத்தும் பூரணன் ஆகும் அவன்
ஆகும்;
சண்டைகொடுத்தும் கொள்வன்’ எனத் தான் சலம்
உற்றாள்.

அனுமனை இறைவனாகஇலங்கைமாதேவி கருதுதல். சலம் – கோபம்.
(86-1)

392.
ஆயவன்அருளால், மீட்டும் அந்தரி அறைந்தாள்,
‘முன் நாள்
மாய மா நகரம்தன்னை வகுத்து, அயன் என்னும்
மேலாம்
தூயவன் என்னைநோக்கி, “சுந்தரி ! காப்பாய்”
என்று, ஆங்கு,
ஏயினன், இதற்குநாமம் இலங்கை என்று எவரும்
போற்ற.

அந்தரி -இலங்கைமாதேவி (93-1)

393.
இத் திறம்அனந்த கோடி இராக்கதக் குழுவின்
உள்ளார்
தத்தம செய்கைஎல்லாம் தனித் தனி நோக்கி,
தாங்காது,
‘எத் திறம்இவர்தம் சீரை எண்ணுவது ?’ எனவே,
அண்ணல்
உத்தமன்தேவிதன்னை ஒழிவு அற நாடிப் போனான்.

இராக்கதரை எண்ணல்அரிது என்ற அனுமன் நினைவு. (120-1)

394.
கிடந்தனன்,வடவரை கிடந்தபோல்; இரு
தடம் புயம்திசைகளை அளக்கத் தாங்கிய
உடம்பு உறுமுயற்சியின் உறங்கினான், கடை
இடம் பெறுதீவினை யாவும் ஏத்தவே.

வடவரை – மேருமலை. (123-1)

395.
குடம் தரும்செவிகளும், குன்றம் நாணுறத்
தடந் தருகரங்களும், தாளும், தாங்குறாக்
கிடந்தது ஓர்இருள் எனக் கிடந்துளான்தனை
அடைந்தனன்,அஞ்சுறாது-அனுமன் ஆண்மையான்.

கும்பகர்ணனைக் கிடந்தஇருள் என்றார். (130-1)

3. காட்சிப்படலம்

396.
எயிலின்உட்படு நகரின் யோசனை எழு-நூறும்
அயிலினின் படர்இலங்கை மற்று அடங்கலும்
அணுகி,
மயல் அறத் தனிதேடிய மாருதி, வனசக்
குயில் இருந்தஅச் சோலை கண்டு, இதயத்தில்
குறித்தான்.

எயில் – மதில்.மயல் – மயக்கம். வனசக் குயில் – தாமரைக் குயில்
சீதையைக் குறித்தது. (1-1)

397.
அஞ்சனத்துஒளிர் அமலனை மாயையின் அகற்றி,
வஞ்சகத்தொழில் இராவணன் வவ்வினன்
கொடுவந்து,
இஞ்சி உட்படும்இலங்கையின் சிறையில் வைத்திட,
ஓர்
தஞ்சம் மற்றுஇலை; தான் ஒரு தனி இருந்து
அயர்வாள்.

இஞ்சி- மதில். தஞ்சம் – ஆதரவு. (2-1)

398.
கண்ணின்நீர்ப் பெருந் தாரைகள் முலைத் தடம்
கடந்து
மண்ணின்மீதிடைப் புனல் என வழிந்து அவை ஓட,
விண்ணைநோக்குறும்; இரு கரம் குவிக்கும்; வெய்து
உயிர்க்கும்;
எண்ணும் மாறுஇலாப் பிணியினால் இவை இவை
இயம்பும்

சீதையின் அவலம்கூறப்பெறுகிறது. (10-1)

399.
‘மாய மானின்பின் தொடர்ந்த நாள், “மாண்டனன்”
என்று
வாயினால் எடுத்துஉரைத்தது வாய்மை கொள்
இளையோன்
போய், அவன்செயல் கண்டு, உடல் பொன்றினன்
ஆகும்;
ஆயது இன்னது என்றுஅறிந்திலேன்’ என்று என்றும்
அயர்வாள்.

மாயமானின் பின்போய் இருவரும் இறந்தனரோ என்ற ஐயம் சீதைக்கு
எழுகிறது. (16-1)

400.
இன்னஎண்ணி, இடர் உறுவாள் மருங்கு,
உன் ஓர் ஆயிரகோடி அரக்கியர்
துன்னு காவலுள், தூய திரிசடை
என்னும் மங்கைதுணைஇன்றி, வேறுஇலாள்.

உன் – நினைக்கப்படும். (29-1)

401.
தரும நீதிதழுவிய சிந்தை கொண்டு
உரிய வீடணன்தந்தருள் ஒண்டொடி,
திரிசடைக்கொடி, நாள்தொறும் தேற்று சொல்
அருளினால், தனதுஆவி பெற்று உய்ந்துளாள்.

வீடணன் மகள் திரிசடைதேற்றப்பிராட்டி உய்ந்தாள். (29-2)

402.
அன்னள் ஆயஅருந்ததிக் கற்பினாள்
மன்னு சோலையில்மாருதியும் வர,
தன் இடம் துடித்துஎய்துற, சானகி
என்னும் மங்கை,இனிது இருந்தாள் அரோ.

அனுமன்வர சானகிக்குஇடம்துடித்தது. (29-3)

403.
‘தாட்சிஇன்று’ என, திரிசடையும், ‘சாலவும்
மாட்சியின்அமைந்தது, மலர் உளாள் தொழும்
காட்சியாய் !இக் குறி கருதும் காலையில்,
ஆட்சியே கடன்என அறிந்து நல்குவாய்.

மலர் உளாள் -இலக்குமி. இக்குறி – நிமித்தம். (32-1)

404.
மீட்டும்,அத் திரிசடை என்னும் மென் சொலாள்,
‘தோள் தடம்பொரு குழைத் தொண்டைத்
தூய்மொழி
கேட்டி; வெங் கடுஎனாக் கிளர் உற்பாதம்ஆய்,
நாட்டினை;யாவரும் நடுக்கம் காண்டுமால்.

தொண்டை -தொண்டைக்கனி போன்ற வாய். கடு – விடம். உற்பாதம்
-துர்நிமித்தம். (53-1)

405.
சிரம் ஒருமூன்றினார்; திருக்கு மூன்றினார்;
கரம் ஒருமூன்றினார்; காலும் மூன்றினார்;
உரம் உறு வனமுலை வெரிநின் மூன்று உளார்;
பொரு அரும் உலகையும் புதைக்கும் வாயினார்.

திருக்கு – கண்கள்.வெரிந் – முதுகு. (55-1)

406.
என்னவாழ்த்திய மாருதி, ‘ஈது நாம்
இன்னும்காண்டும்’ என, மறைந்து எய்தினான்;
சொன்ன வாள் அரக்கன் சுடு தீச் சுடும்
அன்னை வைகுறும்அவ் இடத்து ஆயினான்.

அரக்கன் -இராவணன். (101-1)

407.
‘இன்று நாளைஅருளும் திருவருள்
என்று கொண்டு,இதனால் அழிவேனை நீ
கொன்று இறந்தனைகூடுதியோ ? குழை
தின்று உறங்கிமறம் தவாச் செல்வியே !

காட்சிப்படலம்102ஆம்பாட்டை (கம்ப. 5171) தழுவியது. (103-1)

408.
என்றனன்,எயிறு தின்னா, எரி எழ விழித்து நோக்கி
நி….லத் தாவிநிலன் ஒளி கலனில் தோய,
மின்தனை மின்சூழ்ந்தென்ன அரம்பையர் சூழ,
மெல்லச்
சென்று,அவன்தன்னைச் சார்ந்தாள், மயன் அருள்
திலகம் அன்னாள்.

மயன் அருள் திலகம் -மண்டோதரி. (149-1)

409.
பொருக்கெனஅவனி…க…கொடி முறுவல் பூப்ப,
அரக்கர்கோமகனை நோக்கி, ‘ஆண்மை அன்று;
அழகும் அன்றால்
செருக்கு உறுதவத்தை, கற்பின் தெய்வத்தை,
திருவை இன்னே
வெருக் கொளச்செய்வது ! ஐயா !’ என, இவை
விளம்பலுற்றாள்;

அரக்கர் கோமகனை -இராவணனை. இங்கே ஐந்து பாடல்கள் 408
முதல் 412 வரை. மண்டோதரி இராவணனை நோக்கிப் பேசியதாகவருவன. இத்ததைய குறிப்பு கம்பர் வேறெங்கும்
அமைத்ததாக இல்லை. (149-2)

410.
‘செம் மலர்த் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம்
அன்னார்,
வெம்மை உற்றுஉன்மேல் வீழ்வார், வெள்கியே நகை
செய்து ஓத,
தம் மனத்து ஆசைவேறோர் தலைமகற்கு உடையாள்
தன்னை
அம்மலற்றுஇறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது
அன்றே.

நகை செய்து -இகழ்ந்து. இறைஞ்சும் வேட்கைதான் உள்ளதே அன்றி
வேறு பயன் இல்லை என்பதாம். (149-3)

411.
புலத்தியன்மரபின் வந்து புண்ணியம் புரிந்த
மேன்மைக்
குலத்து இயல்புஅதனுக்கு என்றும் பழி அன்றோ ?
என்றும் கொள்ளாய் !
வலத்து இயல்ஆண்மைக்கு ஈது மாசு’ மதிப்பி…….
…………………………………………………………………………….

வலத்து இயல் ஆண்மை -சென்ற போர் தொறும் வென்றியே
புனையும்வல்லமையாம். (149-4)

412.
வாச மென்குழலினாரால், மண்ணினில், வானில்,
யார்க்கும்
நாசம் வந்துஏன்று… மறைகளே நவிலும் மாற்றம்
பூசல் வண்டுஉறையும் தாராய் ! அறிந்தும் நீ,
புகழால், பொற்பால்,
தேசுடையவளோ, என்னின், சீதையும் ?……….

புகழ் பொற்பு தேசுஆகியவற்றில் யானும் சீதையும் ஒன்றே என்பது
மண்டோதரி வார்த்தை. (149-5)

413.
என்றார்;இன்னும் எத்தனை சொல் கொண்டு இதம்
மாறக்
கன்றாநின்றார்,காலும் எயிற்றார், கனல் கண்ணார்;
ஒன்றோ ?மற்றும் ஆயிர கோடி உளர் அம்மா !
பொன்றா வஞ்சம்கொண்டவர் இன்னும்
புகல்கின்றார்;

அரக்கியர் சீதையைமனங்கொளத் தேற்ற வெருட்டி உரப்பியவாறு
சொல்லப் பெறுகிறது. (156-2)

414.
தீயோர்செய்கைதானும், இராமன் ஒரு தேவித்
தாயாள் துன்பும்,மாருதி கண்டே தளர்வு எய்தி,
மாயாது ஒன்றேஅன்றி, மனத்தே மலி துன்பத்து
ஓயாது உன்னிச்சோர்பவன் ஒன்று அங்கு
உணர்வுற்றான்.

தாயாள் – சீதை.மனத்தே மிக்க துன்பத்தால், சலியாது கருதிச்
சோர்பவன் ஆயினன் அனுமன். (159-1)

4. உருக் காட்டுபடலம்

415.
சுற்றிய கொடி ஒன்றைத் துணிந்து, தூயள், ஓர்
பொன் தடங்கொம்பினில் பூட்டி, ‘பூமியே !
நல் தவம்உடையள் யான்ஆகின், நாயகன்
வெற்றி சேர்திருவடி மேவுவேன்’ என்றாள்.

ஒரு கொடியை வெட்டிக்கொம்பில் பூட்டித் தற்கொலைக்கு
முயற்சித்தாள் பிராட்டி. (21-1)

416.
என்றுஅருந்ததி, மனத்து, எம்மை ஆளுடைத்
துன்ற அருங் கற்பினாள், சுருதி நாயகன்
பொன் தரு மலர்ப் பதம் வழுத்தி, பூங் கொடி
தன் தனிக்கழுத்திடைத் தரிக்கும் ஏல்வையின்.

சுருதி நாயகன் -இராமன், ஏல்வை – பொழுது. (21-2)

417.
எய்தினள்,பின்னம் எண்ணாத எண்ணி, ‘ஈங்கு
உய் திறம்இல்லை !’ என்று ஒருப்பட்டு, ஆங்கு ஒரு
கொய்தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே தலை
பெய்திடும்ஏல்வையில், தவத்தின் பெற்றியால்.

மேற்பாட்டு போன்றதே இதுவும். (21-3)

418.
தோன்றினன், தனது உருக் காண; தூயவள்
மூன்றுஉலகினுக்கும் ஓர் அன்னை, மொய்ம் மலர்
தேன் திகழ்திருவடி சென்னியால் தொழுது
ஆன்ற பேர் அன்புகொண்டு, அறைதல்மேயினான்;

அனுமன் சீதையைக் கண்டுதிருவடி தொழுதல். (22-1)

419.
நோக்கினேன்; அரக்கியர், நுனிப்பு இல் கோடியர்
நீக்கினர்துயிலினை; நின்னைக் காணுதற்கு
ஆக்கிய காலம்பார்த்து, அயல் மறைந்து, பின்
தாக்கு அணங்குஅவர் துயில் கண்டு, சார்ந்துளேன்.

நுனிப்பு – கணக்கு.தாக்கு அணங்கு அவர் – தீண்டி வருத்தும்
தெய்வம்போன்றலர் அரக்கியர். (23-1)

420.
‘நிலை பெற,அயன் இருந்து, இயற்று நீலத்தின்
சிலை மணிவள்ளமும் உவமை சேர்கல;
“அலவன், அது” என்பரால், அறிவு இலோர்; அவர்
உலைவு அறு திருமுழங்காலுக்கு ஒப்பு உண்டோ ?

இராமன் முழங்காலுக்குஒப்பு பிரமன் செய்த நீலமணியால் ஆகிய
வள்ளம். நண்டு என்பன பொருத்தமற்றன என்பது இப்பாடல் கருத்து. (43-1)

421.
‘எள்ளற்கு அரிய நிலை ஆகி, இயைந்து தம்மில்
இணை உர ஆய்
தள்ளப்படாத தகைஆகி, சார் கத்திரிகை வகை
ஒழுகா,
அள்ளற் பள்ளத்துஅகன் புனல் சூழ் அகன்ற
வாவிக்குள் நின்ற
வள்ளைத் தண்டின்வனப்பு அழித்த, மகரம்
செறியாக்குழை’ என்றான்

குண்டலம்அணியாச் செவிகளின் உவமை – கத்திரிக்கோலின் காது,
வள்ளைத் தண்டு. (49-1)

422.
தவம் தந்தநெஞ்சின் தனது ஆர் உயிர்த்
தம்பியோடும்
நவம் தந்தகுன்றும், கொடுங் கானமும், நாடி ஏகி,
கவந்தன்தனது ஆவிகவர்ந்து, ஒரு காலும் நீங்காச்
சிவம் தந்து,மெய்ம்மைச் சபரிக்குத் தீர்ந்து வந்தான்.

கவந்தனுக்கு சிவம்தந்தான் – சிவம் – மங்கலம். தீர்ந்து வந்தான் –
முடிபாகி வந்தான் என்று சாம்யப் பொருள் உரைக்கலாம். (88-1)

423.
‘சென்றேன்அடியேன், உனது இன்னல் சிறிதே
உணர்த்தும் அத்துணையும்
அன்றே, அரக்கர்வருக்கம் உடன் அடைவது;
அல்லாது, அரியின் கை
மன்றே கமழும்தொடை அன்றே, நிருதர் குழுவும்
மாநகரும்
என்றே இறைஞ்சி,பின்னரும், ஒன்று இசைப்பான்
உணர்ந்தான் ஈறு இல்லான்.

அனுமன், நான்இராமன்பால் சென்று தெரிவிக்கும் அளவுதான்
தாழ்த்தது. தெரிவித்தவுடன் அரக்கரும் இலங்கையும் ‘குரங்கின் கைப் பூமாலை
போல்’ ஆகிவிடும் என்று பிராட்டியை வணங்கி, பிறகும் ஒன்று சொல்ல
மனத்தில் உணர்ந்தான் ஈறு இல்லான் – அனுமன். சிரஞ்சீவி என்னும் பொருள்.
(117-1)

5. சூடாமணிப்படலம்

424.
‘சேண் தவாநெறி செல் பகல் தீங்கு அற,
மீண்டு,தம்பியும் வீரனும் ஊர் புக,
பூண்ட பேர்அன்பினோருடன் போதியால் !
ஈண்டு யான் வரம்வேண்டினென், ஈறு இலாய் !’

ஈறு இலாய் – முடிவுஇல்லாத அனுமனே ! ஊர் -அயோத்தி. (31-1)

425.
என்றுஉரைத்திடுதி; பின், அயோத்தி எய்தினால்,
வென்றி வெஞ்சிலையினான் மனம் விழைந்திடாது;
அன்றியே, மறைநெறிக்கு அருகன் அல்லனால்;
பொன் திணிமௌலியும் புனைதல் இல்லையால்.

இராமனோடு நான்அயோத்தி வந்தாலும் மறைநெறி இயற்றும் தகுதியும்,
முடிபுனையும் தகுதியும் எனக்கு இல்லை என்று தன்மனம் நொந்து பிராட்டி
கூறினாள். (38-1)

426.
“கொற்றவன்சரத்தினால் குலைகுலைந்து உக,
இற்றது இவ்இலங்கை” என்று, இரங்கி ஏங்கவே,
மற்று ஒரு மயன்மகள் வயிறு அலைத்து உக,
பொற்றொடி ! நீயும் கண்டு, இரங்கப் போதியால்

அனுமன் சீதையைத்தேற்றியது, கொற்றவன் – இராமன். பொற்றொடி –
சீதை. மண்டோதரி வயிற்றில் அடித்து அழ அதுகண்டு சீதை வருந்துவாள்
என்பதாம். (65-1)

427.
அங்கு, அதுஅஞ்சி நடுங்கி, அயன் பதி அண்மி,
“இங்கு நின் வரவுஎன்னை” எனக் கனல்வு எய்த,
மங்கை பங்கனொடுஎண் திசையும் செல, மற்றோர்
தங்கள் தங்கள்இடங்கள் மறுத்தமை தைப்பாய்.

அது – சயந்தன் ஆகியகாகம். மங்கைபங்கன் -சிவபிரான்.,

இதுமுதல் 5 பாடல்கள்5421 எண்ணுள்ள பாடலிற்கண்ட கதையின்
விரிவாகும். (77-1)

428.
‘இந்திரன்தரும் மைந்தன் உறும் துயர் யாவும்
அந்தரத்தினில்நின்றவர் கண்டு, “இனி, அந்தோ !
எந்தைதன் சரண்அன்றி, ஓர் தஞ்சமும் இன்றால்;
வந்து அவன் சரண்வீழ்க !” என உற்றதும்
வைப்பாய்.

மைந்தன் – சயந்தன்.எந்தை – இராமபிரான். (77-2)

429.
“ஐய நின்சரணம் சரண் !” என்று, அவன் அஞ்சி,
வையம் வந்துவணங்கிட, வள்ளல் மகிழ்ந்தே,
வெய்யவன் கண்இரண்டொடு போக !” என, விட்ட
தெய்வ வெம் படைஉற்றுள தன்மை தெரிப்பாய்.

அவன் – சயந்தன்.வள்ளல் – இராமன் “கண் இரண்டொடு போக”
சயந்தன் ஆகிய காகத்துக்கு இரண்டு கண்களை மட்டும் போக்கியது, ஆகும்.
தெய்வ வெம் படை – “அயல் கல் எழு புல்லால் வேக வெம்படை” என்று
(5421) முன்பு கூறப்பட்டது. (77-3)

430.
“எந்தை,நின் சரணம் சரண் !” என்ற இதன்னால்,
முந்தை உன்குறையும் பொறை தந்தனம்; முந்து உன்
சந்தம் ஒன்றுகொடித் திரள் கண்கள்தமக்கே
வந்து ஓர் நன்மணி நிற்க !” என, வைத்ததும்
வைப்பாய்.

காகம்எல்லாவற்றிற்கும் இரண்டு கண்களுக்கும் ஒரு மணி (ஒரு
பார்வை) நிற்க என வைத்து கூறப்பெறுகிறது. (77-4)

431.
‘வேகம் விண்டு சயந்தன் வணங்கி, விசும்பில்
போக, அண்டர்கள் கண்டு, அலர் கொண்டு
பொழிந்தார்;
நாக நம்பன்இளங் கிளை நன்கு உணராத,
பாகு தங்கியவென்றியின், இன் சொல் பணிப்பாய்.

இளம் கிளை -இலக்குவன். உணராத என்னாது ‘நன்கு உணராத’ என்ற
சொல்லாட்சி கருதுக. இதனைப் ‘பாகு தங்கிய வென்றி’ என்றது தன்னால்
மட்டுமே நுகர்ந்து இன்புறும் வெற்றியாதலின். தனக்காகத் தன் நாயகன்
மேற்கொண்ட செயல் ஆதலின் சீதை நினைந்து இன்புறற்கு ஏதுலாயிற்று.(77-5)

6. பொழில்இறுத்த படலம்

432.
எனப் பதம்வணங்கி அன்னார் இயம்பிய வார்த்தை
கேளா,
கனக் குரல் உருமுவீழ, கனமலை சிதற, தேவர்
மனத்து அறிவுஅழிந்து சோர, மாக் கடல் இரைப்புத்
தீர,
சினத்து வாய்மடித்து, தீயோன், நகைத்து, இவை
செப்பலுற்றான்.

அனுமனால் சோலைஅழிந்தது கேட்ட இராவணன் சீறிய படி இதில்
சொல்லப் பெறுகிறது. தீயோன் -இராவணன். (57-1)

7. கிங்கரர்வதைப் படலம்

433.
ஓசையின்இடிப்பும் கேட்டு, ஆங்கு உருத்து எழு
சினத்தன் ஆகி,
‘ஈசன் மால் எனினும் ஒவ்வாது, ஈது ஒரு குரங்கு
போலாம் !
கூசிடாது இலங்கைபுக்கு, இக் குல மலர்ச்
சோலையோடு
மாசு அறு நகரைமாய்க்கும் வலிமை நன்று ! என்ன
நக்கான்.

இராவணன் நக்கான்என்க. (1-1)

434.
என்றலும்,இரு கை கூப்பி, இரு நிலம் நுதலில்
தோய,
சென்று அடிபணிந்து, ‘மண்ணும் தேவரும் திசையும்
உட்க,
வென்றி அன்றுஎனினும், வல்லே விரைந்து நாம்
போகி, வீரக்
குன்று அனகுரங்கைப் பற்றிக் கொணர்தும்’ என்று
இசைத்துப் போனார்.

‘வென்றி அன்று’ என்றதுகுரங்கினை வெல்வது ஒரு வெற்றியாகக்
கருதப்படாது என்றதாம். (2-1)

435.
அதுபொழுது, அவர் அது கண்டார்; அடு படை
பலவும் எறிந்தார்;
கதிகொடு சிலவர்தொடர்ந்தார்; கணை பலர்
சிலைகள் பொழிந்தார்;
குதிகொடு சிலவர்எழுந்தே குறுகினர்; கதைகொடு
அறைந்தார்;
மதியொடு சிலவர்வளைந்தார்; மழு, அயில், சிலவர்
எறிந்தார்.

கதி – வேகச்செலவு. கதை – தண்டு. (24-1)

436.
அனுமனும்,அவர் விடு படையால், அவர் உடல்
குருதிகள் எழவே,
சின அனல் எழ,ஒரு திணி மா மரம்அதில் உடல்
சிதறிடவும்
தனுவொடு தலைதுகள்படவும், சர மழை பல
பொடிபடவும்
தினவு உறு புயம்ஒடிபடவும், திசைதிசை ஒரு தனி
திரிவான்.

அவர் படையால் அவர்உடல் குருதி எழச் செய்தான். (24-2)

437.
உரைத்தஎண்பதினாயிர கோடி கிங்கரரோடு
இரைத்த வந்தமாப் பெரும் படை அரக்கர்
எண்ணிலரைத்
தரைத்தலத்தின்இட்டு அரைத்து, ஒரு தமியன்
நின்றது கண்டு,
உருத்து அவ்எண்பதினாயிர கோடியர் உடன்றார்.

எண்பதாயிரம் கோடிகிங்கரரோடு வந்த அரக்கர் மடிந்தனர். (39-1)

438.
சினந்துமற்று அவர், தீ எழப் படைக்கலம் சிதறி,
கனம் துவன்றியதுஎன, கரு மலை என, கடல் போல்
அனந்தனும் தலைதுளக்குற, அமரர்கள் அரவின்
மனம் துளக்குற,வளைத்தனர்,-எண் திசை மருங்கும்.

கனம் துவன்றியது -மேகம் நெருங்கியது. அனந்தன் – ஆதிசேடன்.
(39-2)

439.
எடுத்துஎறிந்தனர் எழு மழுச் சிலர்; சிலர் நெருக்கித்
தொடுத்துஎறிந்தனர் சூலங்கள்; சுடு கதைப்
படையால்
அடித்து நின்றனர்சிலர்; சிலர் அருஞ் சிலைப் பகழி
விடுத்துநின்றனர்-வெய்யவர் விளைந்த வெஞ்
செருவே.

கதை -தண்டு. (39-3)

440.
ஒழிந்திடும்கடை உகத்தினில் உற்ற கார்இனங்கள்
வளைந்து பொன்கிரிமேல் விழும் இடி என,
மறவோர்
பொழிந்த பல்படை யாவையும் புயத்திடைப்
பொடிபட்டு
அழுந்த,மற்றவரோடும் வந்து அடுத்தனன், அனுமன்.

பொன் மலை மேல்விழும் இடி – அனுமன் புயத் திடைப்பட்ட
படைகள். அனுமன் – பொன்மலை. (39-4)

441.
‘கட்டும்’ என்றனர்; ‘குரங்கு இது கடிய கைப்
படையால்
வெட்டும்’என்றனர்; விழி வழி நெருப்பு உக,
விறலோர்
கிட்டி நின்றுஅமர் விளைத்தனர்; மாருதி கிளர் வான்
முட்டும் மா மரம்ஒன்று கொண்டு, அவருடன்
முனைந்தான்.

கிட்டி நின்று -நெருங்கி. வான்முட்டும் மாமரம் – மாமரம் என்றும்
பெரிய மரம் என்றும் கூறலாம். (39-5)

442.
தலைஒடிந்திட அடித்தனன், சிலர்தமை; தாளின்
நிலை ஒடிந்திடஅடித்தனன்; சிலர்தமை; நெருக்கிச்
சிலை ஒடிந்திடஅடித்தனன், சிலர் தமை; வயப்
போர்க்
கலை ஒடிந்திடஅடித்தனன், அரக்கர்கள் கலங்க.

போர்க்கலை ஒடிந்திட- எதிர்ந்தார் கற்று வைத்திருந்த போர்த்திற
அறிவு இல்லையாம்படி. (40-1)

443.
என்றலும்அரக்கர் வேந்தன் எரி கதிர் என்ன
நோக்கி
கன்றிய பவழச்செவ் வாய் எயிறு புக்கு அழுந்தக்
கவ்வி,
ஒன்றுஉரையாடற்கு இல்லான், உடலமும் விழியும்
சேப்ப,
நின்ற வாள்அரக்கர்தம்மை நெடிதுற நோக்கும்காலை.

வாய் எயிறு புக்குஅழுந்தக்கவ்வலும், உடலமும் விழியும் சிவத்தலும்
இராவணன் சினத்தின் மெய்பாடுகள். (61-1)

8. சம்பு மாலிவதைப் படலம்

444.
அது கண்டுஅரக்கன் சினம் திருகி, ஆடற் பகழி
அறுநூறு
முதிரும் வயப்போர் மாருதிதன் புயத்தில் மூழ்க
விடுவித்தான்;
புதையுண்டு உருவிப்புறம் போக, புழுங்கி அனுமன்
பொடி எழும்பக்
குதிகொண்டு,அவன் தேர் விடும் பாகன் தலையில்
சிதறக் குதித்தனனால்

அரக்கன் – சம்புமாலி.600 அம்புகளும் அனுமன் புயத்தில் புதைந்து
உருவிப் புறம் போயது. (45-1)

9. பஞ்சசேனாபதிகள் வதைப் படலம்

445.
என்று அவர்ஏவு சரங்கள் இறுத்தே,
‘பொன்றுவிர்நீர், இது போது’ என, அங்கு ஓர்
குன்று இரு கைக்கொடு எறிந்து, அவர் கொற்றம்
இன்று முடிந்ததுஎனத் தனி ஆர்த்தான்.

பொன்றுவிர் -அழிவீர். கொற்றம் – வெற்றி. (57-1)

446.
அப்பொழுதுஅங்கு அவர் ஆயிர கோடி
வெப்பு அடை வெஞ்சரம் வீசினர்; வீசி,
துப்புறுவெற்புஅதனைத் துகள் செய்தே;
மெய்ப்படுமாருதிமேல் சரம் விட்டார்.

வெப்பு அடை – வெம்மைபொருந்திய. துப்பு – வலிமை. (57-2)

447.
விட்டசரத்தை விலக்கி, அ(வ்) வீரன்,
வட்ட விசும்புறுமா மரம் வாங்கித்
தொட்டுஎறிதற்கு மு(ன்)னே, துகளாகப்
பட்டிட,வெய்யவர் பாணம் விடுத்தார்.

பாணம் -அம்பு. (57-3)

10.அக்ககுமாரன்வதைப் படலம்

448.
தடுவையின்மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க
உடுஇனம் ஆனதுஎல்லாம் உதிர்ந்த, பூ உதிர்ந்தது
என்ன;
அடு புலி அனையவீரர் அணிகல ஆர்ப்பும், ஆனை
நெடு மணிமுழக்கும், ஓங்கி, மண்ணுலகு அதிர்ந்தது
அன்றே.

இப்பாடலை 5737 ஆம்பாடலோடு ஒப்பிடுக. (12-1)

449.
பத்தியில்தேர்கள் செல்ல, பவளக் கால் புடைகள்
சுற்ற,
முத்தினில்கவிகை சூழ, முகில் என முரசம் ஆர்ப்ப,
மத்த வெங்கரிகள் யாவும் மழை என இருண்டு
தோன்ற
தத்திய பரிகள்தன்னின் சாமரை தழைப்ப,-போனான்.

இப்பாடலை 5729 ஆம்பாடலோடு ஒப்பிடுக. (15-1)

450.
தீய வல்அரக்கர்தம்மில் சிலர் சிலர் செம் பொற்
சின்னம்
வாயின் வைத்துஊத, வீரர் வழி இடம் பெறாது
செல்ல,
காயும் வெங்களிறு, காலாள் கடும் பரி, கடுகிச்
செல்ல
நாயகன்தூதன்தானும் நோக்கினன்; நகையும்
கொண்டான்

இப்பாடலை, 5731 ஆம்பாடலோடு ஒப்பிடுக. (16-1)

451.
புலிப் போத்தின் வயவர் எல்லாம்-பொரு கரி, பரி,
தேர், பொங்க.
கலித்தார்கள்உம்பர் ஓட, கடையுகத்து எறியும்
காலின்
ஒலித்து, ஆழிஉவாவுற்றென்ன உம்பர் தோரணத்தை
முட்ட
வலித்தார் திண்சிலைகள் எல்லாம்; மண்டின
சரத்தின் மாரி.

இப்பாடலை. 5736ஆம் பாடலோடு ஒப்பிடுக. (23-1)

452.
எடுத்தனன்எழு ஒன்று; அங்கை எடுத்து இகல்
அரக்கர் சிந்தப்
பொடித்தனன்;இரதம், வாசி, பொரு களிறு, இதனை
எல்லாம்
முடித்தனன்,நொடிப்பில்; பின்னும், மூசு போர்
அரக்கர் வெள்ளம்
அடுத்து அமர்கோல, மேன்மேல் அடு படை தூவி
ஆத்தார்.

வாசி -குதிரை. (24-1)

453.
செறி நாண்உரும் ஒலி கொண்டான்; ஒருபது
திசைவாய்கிழிபட அழல்கின்றான்;
‘இறுவாய், இதுபொழுது’ என்றான்; எரி கணை
எழு கார்மழை பொழிவது போல,
பொறிவாய் திசைதொறும் மின் தாரையின் நிலை
பொலியச்சினமொடு பொழிகின்றான்;
உறு மாருதி உடல்உக வெங் குருதிகள்
ஒழியாது,அவனொடு மலைவுற்றான்.

ஒருபது திசை -எண்திசையோடு மேல், கீழ் சேர்ந்து பத்து எனல்
வழக்கு. (32-1)

454.
மலைபோல்உறு புய வலி மாருதி சினம்
வந்துஏறிட, எந்திரமும் தேர்த்
தொலையாது அவன்விடு சர மாரிகள் பல
துண்டப்படும் வகை மிண்டி, தன்
வலி சேர்கரம்அதில் எழுவால் முழுவதையும்
மண்டித்துகள் பட மடிவித்தான்;

புலிபோல் அடு சின நிருதன் கண்டு அழல்
பொங்கிப்பொரு சிலை விளைவித்தான்.

மிண்டி – நெருங்கி.நிருதன் – அக்ககுமாரன். (32-2)

455.
‘மாய்ந்தான், மாருதி கையால், அகிலமும்
உடையான்மகன்’ என வானோர் கண்டு,
ஓய்ந்தார்இலர்,குதி கொண்டார்; உவகையின்
ஒழியா நறுமலர் சொரிகின்றார்;
சாய்ந்தார்நிருதர்கள் உள்ளார் தமர் உடல்
இடறித்திரைமிசை விழ ஓடித்
தேய்ந்தார்சிலர்; சிலர் பிடரியில் குதியடி
பட ஓடினர்;சிலர் செயல் அற்றார்.

அகிலமும் உடையான் -இராவணன். அவன் மகன் அக்ககுமாரன்.
பிடரியில் குதிபடல் – ஓட்டத்தின் விரைவைக் குறிக்கும் வழக்குச்சொல். (38-1)

456.
இன்னனநிகழ்வுழி, இராக்கதக் குழாம்
மன்னியசோதியும், அரக்கன் மைந்தனும்,
தன் நிகர்அனுமனால் இறந்த தன்மையை
முன்னினர் சொல,அவன் முன்பு கேட்டனன்.

மன்னிய சோதி -படைத்திரள் குறிக்கும் சொல் போலும். (47-1)

457.
அவ் வகைகண்டவர் அமரர் யாவரும்,
‘உய்வகை அரிது’என ஓடி, மன்னவன்
செவ்அடிஅதன்மிசை வீழ்ந்து செப்பினார்,
எவ் வகைப்பெரும் படை யாவும் மாய்ந்ததே.

மன்னவன் – இராவணன் -அமரர் – பருவத்தேர். (47-2)

458.
ஈது மற்றுஇசைவுற, இது கண்டு ஏங்கியே
மா துயரத்தொடுமறுகு நெஞ்சுடைத்
தூதர் உற்றுஓடினர்; தொழுது, மன்னனுக்கு
ஓதினர்; ஓதல்கேட்டு, உளம் துளங்கினான்.

தூதர் – பருவத்தேவர்.மன்னன் – இராவணன். (47-3)

459.
நாடினார்;நாடியே, நனை வரும் கொம்பு அனார்
வாடினார்; கணவர்தம் மார்பு உறத் தழுவியே
வீடினார்; அவ்வயின், வெருவி விண்ணவர்கள்தாம்
ஓடினார்;அரசன்மாட்டு அணுகி நின்று உரை
செய்வார்;

விண்ணவர் -பருவத்தேவர் நனைவரும் கொம்பு – அரும்பு தளிர்க்கும்
கொம்பை ஒத்தவர் (47-4)

.460.
“மைந்தனைமடித்தது குரங்கு” என்று ஓதவும்
வந்தது போலும்,நம் வாழ்வு நன்று !’ எனா,
சிந்தையின்அழன்று, எரி விழித்து, ‘சென்று, நீர்
இந்திரன்பகைஞனைக் கொணருவீர்’ என்றான்.

மைந்தன் -அக்ககுமாரன். இந்திரன் பகைஞன் – இந்திரசித்து. (49-1)

461.
என்றலும்,ஏவலுக்கு உரியர் ஓடியே
சென்று, மற்றுஅவன் அடி பணிந்து, தீமை வந்து
ஒன்றியதிறங்களும் உரைத்து, ‘நுந்தையும்
இன்று உனைக்கூவினன்’ எனவும் சொல்லினார்.

ஏவலர் -இந்திரசித்தை அழைத்தபடி. (49-2)

11.பாசப்படலம்

462.
என்றே,‘இவன் இப்பொழுது என்கையினால்
மடிந்தால்
நன்றே மலர்மேல்உறை நான்முகன் ஆதி தேவர்,
“பொன்றோம் இனி என்றும்; இருந்து உயிர்
போற்றுதற்கு
நின்றே துயர்தீர நிறுத்தினன்” என்ப மன்னோ.’

இவன் -இந்திரசித்து. ‘என்கையால் மடிந்தால் பிரமன் முதலிய
தேவர்கள் நம்துன்பம் நீங்கச் செய்தான் என்று சொல்வர்’ என்று அனுமன்
நினைத்ததாம். (50-1)

463.
எழுந்தான்;எழுந்த பொழுது, அங்கு அரக்கரும்
எண்இல் கோடி
பொழிந்தார்படைகள்; அவை யாவையும் பொடிந்து
சிந்திக்
கழிந்து ஓடிட,தன் கை மராமரம் கொண்டு வீசி,
செழுந் தார்ப்புயத்து அண்ணல் செறுத்து, உடன்
மோதலுற்றான்.

செழுந்தார்ப்புயத்துஅண்ணல் – அனுமன். பெயராய் நின்றது. (53-1)

464.
செறுத்துஎழுந்திடும் அரக்கர்கள் திசை திசை
நெருக்கி,
மறித்து வெஞ்சமர் மலைதலும், மாருதிக் கடவுள்
கறுத்து வஞ்சகர்சிரத்தொடு கரம் புயம் சிதறிப்
பொறித்தெறித்திடப் புடைத்தனன், பொரு பணை
மரத்தால்.

பொறி தெறித்திட -நெருப்புப் பொறி பறக்க. (59-1)

465.
புகைந்து அரக்கர்கள் விடும் கொடும் படைகளைப்
பொறியின்
தகைந்து, மற்றுஅவர் உடல்களைத் தலைகளைச்
சிதறி,
மிகும் திறல்கரி, பரி, மணித் தேர், இவை விளிய,
புகுந்துஅடித்தனன், மாருதி; அனைவரும் புரண்டார்.

பொறியின் தகைந்து -கலை வன்மையால் தடுத்து. (59-2)

466.
எடுத்து நாண்ஒலி எழுப்பினன்; எண் திசைக்
கரியும்
படித் தலங்களும்வெடி பட, பகிரண்டம் உடைய,
தொடுத்த வானவர் சிரதலம் துளங்கிட, சினம்
கொண்டு
அடுத்து, அம்மாருதி அயர்ந்திட, அடு சரம்
துரந்தான்

இந்திரசித்துவின்செயல் (71-1)

12. பிணி வீட்டுபடலம்

467.
இனையனபற்பலர் இசைப்ப, வெந் திறல்
அனுமனை அமர்க்களம்நின்று, வஞ்சகர்
புனை திருநகரிடைக் கொண்டு போதலை
நினையினர்,நெடிதுற நெருக்கி நேர்ந்துளார்.

வஞ்சகர் அனுமனைப்பிணித்து நகர்க்குக் கொண்டு செல்லுதலை
நினைந்து நெருக்குகிறார்கள். (17-1)

468.
என்னக்கேட்ட அரக்கனுக்கு ஈறு இலாத்
தன் ஓர்ஆற்றலின் மாருதி சாற்றுவான்;
‘என் ஓர்நாயகன் ஏவலின், வாரிதி-
தன்னைத் தாண்டிவந்தேன், உனைக் காணவே.’

வாரிதி – கடல்.உனை – இங்கு இராவணனை. (108-1)

469.
தன் உறைக்குஉறுகண் வெய்யோர்தாம் இயற்றலும்
கேட்டு, ‘இன்னே,
அன்னவர்க்குஇறுதி ஆக, அணி நகர் அழிப்பல்’
என்னா,
செந் நிறச்சிகைய வெம் போர் மழு, பின்னர்ச்
சேறல் ஓக்கும்-
அல் நிறத்துஅண்ணல் தூதன் அனல் கெழு
கொற்ற நீள் வால்.

தன் இறை – இராமன்.உறுகண் – துன்பம். அனுமன் வால். மழு
பின்னால் செல்வது போன்றது. மழு – நெருப்புப்படை. அனுமன் வாலில்
நெருப்பு வைத்தபடியால் அது திருமாலின் மழு போன்றதாயிற்று. (135-1)

470.
உகக் கடை, உலகம் யாவும் உணங்குற, ஒரு தன்
நாட்டம்
சிகைக் கொழுங்கனலை வீசும் செயல் முனம்
பயில்வான் போல,
மிகைத்து எழுதீயர் ஆயோர் விரி நகர் வீய; போர்
வால்-
தகைத்தல் இல்நோன்மை சாலும் தனி வீரன்-
சேணில் உய்த்தான்.

உகக்கடை – ஊழிமுடிவு.உணங்குற – காய. தனிலீரன் – அனுமன்.
(136-1)

13. இலங்கைஎரியூட்டு படலம்

471.
தெய்வநாயகி கற்பு எனும் செந் தழல்
பெய்து மாருதிவாலிடைப் பேணியே,
பொய் கொள் வஞ்சகப் புல்லர் புரம் எலாம்
வெய்தின் உண்டதகைமை விளம்புவாம்.

சீதையின் கற்பு எனும்நெருப்பு மாருதி வாலிடைப் பாதுகாக்கப்பட்டு
வஞ்சகப் புல்லர் நகரை அழித்தது என்றார்.

(முதற்செய்யுள்)

472.
தேர்எரிந்தன; எரிந்தன திரள் பரி எவையும்;
தார் எரிந்தன;எரிந்தன தருக்கு உறு மதமா;
நீர் எரிந்தன;எரிந்தன நிதிக் குவை; இலங்கை
ஊர் எரிந்தன;எரிந்தன அரக்கர்தம் உடலம்.

தார் – மாலை. நீர்எரிதல் தீயின் மிகுதியால். (37-1)

473.
எரிந்தமாளிகை; எரிந்தன இலங்கு ஒளிப் பூண்கள்
எரிந்த பூந்துகில்; எரிந்தது முரசுஇனம் முதலாய்;
எரிந்த மாமணிப்பந்தர்கள்; எரிந்தது கடிகா;
எரிந்த சாமரை;எரிந்தது வெண்குடைத் தொகுதி.

கடி கா – காப்பமைந்த சோலை. (37-2)

474.
ஆடு அரங்குகள் எரிந்தன; அரக்கியர் சிறுவ-
ரோடு எரிந்தனர்; உலப்பில் பல் கொடிகளும் எரிந்த;
தேடு அரும் மணிச்சிவிகையோடு அருந் திறல்
அரக்கர்
வீடு எரிந்தன;எரிந்திடாது இருந்தது என், வினவில் ?

சிவிகை – பல்லக்கு.உலப்பு இல் – வற்றுதலற்ற. (37-3)

475.
இனையகாலையில் மயனும் முன் அமைத்தற்கு
இரட்டி
புனைய, மாருதிநோக்கின், இன்னன புகல்வான்;
‘வனையும் என்உருத் துவசம் நீ பெறுக’ என,
மகிழ்வோடு
அனையன்நீங்கிட, அனலியும் மறுபடி உண்டான்.

மயன் – தெய்வத்தச்சன். மயனுக்கு மிகுதி கூறியதாகிய செய்தி
புலப்படவில்லை. அனலி – தீ. (37-4)

476.
‘தா இல்மேலவர்க்கு அருந் துயர் விளைத்திடின்,
தமக்கே
மேவும், அத்துயர்’ எனும் பொருள் மெய்யுற,
மேல்நாள்
தேவர்தம்பதிக்கு இராவணன் இட்ட செந்
தழல்போல்,
ஓவிலாது எரித்துஉண்டமை உரைப்பதற்கு எளிதோ ?

அழகான கருத்து.‘மேலோர்க்குத் துன்பம் செய்தால் அத்துயர் தமக்கே
வரும்’ என்பதற் கிணங்க. அமராவதிக்கு இராவணன் இந்திரசித்து மூலமாக
இட்ட நெருப்பு இலங்கையை எரி்த்தது என்பதாம். (43-1)

477.
மற்று ஒருகோடியர் வந்தார்;
உற்று எதிர் ஓடிஉடன்றார்;
கற்று உறு மாருதிகாய்ந்தே,
சுற்றினன்வால்கொடு, தூங்க.

உடன்றார் -சீறினார். (58-1)

478.
உற்றவர் யாரும் உலந்தார்;
மற்றுஅதுபோதினில் வானோர்
வெற்றி கொள்மாருதிமீதே
பொன் தரு மா மலர் போர்த்தார்.

உலந்தார் -வற்றினார். பொன்தரு – கற்பகம். (60-1)

479.
வன் திறல்மாருதி கேண்மோ !
நின்றிடின், நீபழுது; இன்றே
சென்றிடுவாய் !’என, தேவர்
ஒன்றிய வானில்உரைத்தார்.

தேவர் அனுமனைச்செல்லப் பணித்தனர். (60-2)

480.
விண்ணவர்ஓதிய மெய்ம்மை
எண்ணி, ‘இராமனைஇன்றே
கண்ணுறலே கடன்’என்று, ஆங்கு
அண்ணலும் அவ்வயின் மீண்டான்,

கண்ணுறல் -சந்தித்தல். (60-3)

481.
வாலிதின்ஞான வலத்தால்,
மாலுறும் ஐம் பகைமாய்த்தே,
மேல் கதிமேவுறும் மேலோர்
போல், வயமாருதி போனான்.

வாலிதின் -தூய்மையான. ஐம்பகை – ஐம்பொறிகளாய பகை. மேல்கதி
செல்லும் மேலோர் போல் அனுமன் வானவழியில் இலங்கையினின்று
சென்றான். (63-1)

14. திருவடி தொழுதபடலம்

482.
போயினர்களிப்பினோடும், புங்கவன் சிலையின்
நின்றும்
ஏயின பகழி என்னஎழுந்து, விண் படர்ந்து, தாவி,
காய் கதிர்க்கடவுள், வானத்து உச்சியில் கலந்த
காலை,
ஆயின வீரரும்போய், மதுவனம் அதில் இறுத்தார்.
வானரர் இராமன்அம்பு போல் சென்றனர்; நன்பகலில் மதுவனம்
சேர்ந்தார். (11-1)

483.
“ஏத நாள்இறந்த சால” என்பது ஓர் வருத்தம்
நெஞ்சத்து
ஆதலான், உணர்வுதீர்ந்து வருந்தினம், அளியம்;
எம்மைச்
சாதல் தீர்த்துஅளித்த வீர ! தந்தருள் உணவும்’
என்ன,
‘போதும் நாம்,வாலி சேய்பால்’ என்று, உடன்
எழுந்து போனார்.

இப்பாடலை 6018ஆம்பாடலுடன் ஒப்பிடுக. வீர ! – அனுமனே. வாலி
சேய் – அங்கதன். (11-2)

484.

அங்கதன்தன்னை அண்மி, அனுமனும் இரு கை
கூப்பி
‘கொங்கு தங்குஅலங்கல் மார்ப ! நின்னுடைக்
குரக்குச் சேனை,
வெங் கதம்ஒழிந்து சால வருந்தின, வேடை ஓடி;
இங்கு, இதற்குஅளித்தல் வேண்டும், இறால் உமிழ்
பிரசம்’ என்றான்.

கதம் – கோபம்.இங்கே வேகம் எழுச்சி எனலாம். வேடை களைப்பு.
(11-3)

485.
‘நன்று’ என,அவனும் நேர்ந்தான்; நரலையும் நடுங்க
ஆர்த்து,
சென்று, உறுபிரசம் தூங்கும் செழு வனம்
அதனினூடே,
ஒன்றின் முன்ஒன்று, பாயும்; ஒடிக்கும்; மென்
பிரசம் எல்லாம்
தின்றுதின்றுஉவகைகூரும்-தேன் நுகர் அளியின்
மொய்த்தே.

நரலை – கடல். மதுவனம்அழித்தல். (11-4)

486.
ஒருவர் வாய்க் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு
ஒழிவர்; உண்ண
ஒருவர் கைக்கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு
ஓடிப் போவர்;
ஒருவரோடு ஒருவர் ஒன்றத் தழுவுவர்; விழுவர்; ஓடி
ஒருவர்மேல்ஒருவர் தாவி ஒல்லென உவகை
கூர்வார்.

மதுவனத்தில்குரங்குகளின் கூத்தாட்டம். (11-5)

487.
இன்னனநிகழும்காலை, எரி விழித்து, எழுந்து சீறி,
அந் நெடு்ஞ்சோலை காக்கும் வானரர் அவரை
நோக்கி,
‘மன் நெடுங்கதிரோன் மைந்தன் ஆணையை
மறுத்து, நீயிர்,
என் நினைத்துஎன்ன செய்தீர் ? நும் உயிர்க்கு
இறுதி’என்ன.

மதுவனக் காவலர்அச்சுறுத்தல் (11-6)

488.
‘முனியுமால் எம்மை, எம் கோன்’ என்று, அவர்
மொழிந்து போந்து,
‘கனியும் மாமதுவனத்தைக் கட்டழித்திட்டது, இன்று,
நனி தரு கவியின்தானை, நண்ணலார் செய்கை
நாண;
இனி எம்மால்செயல் இன்று’ என்னா, ததிமுகற்கு
இயம்பினாரே.

ததிமுகன் – மதுவனக்காவல் தலைவன்; இவன் சுக்கிரீவன் ஏவலால்
மதுவனம் காக்கும் வானரன். (11-7)

489.
கேட்டவன்,‘யாவரே அம் மதுவனம் கேடு
சூழ்ந்தார் ?
காட்டிர்’ என்றுஎழுந்தான்; அன்னார்,‘வாலி சேய்
முதல கற்றோர்
ஈட்டம் வந்துஇறுத்தது ஆக, அங்கதன் ஏவல்
தன்னால்,
மாட்டின,கவியின் தானை, மது வளர் உல வை
ஈட்டம்.

மதுவளர் உலவை -தேன்கூடு. (11-8)

490.
‘உரம் கிளர் மதுகையான்தன் ஆணையால், உறுதி
கொண்டே,
குரங்கு இனம்தம்மை எல்லாம் விலக்கினம்;
கொடுமை கூறி;
கரங்களால் எற்றநொந்தேம்; காலலோய் !’
என்னலோடும்,
‘தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தநயன்
போலும்.’

தாதை – வாலி – தநயன்- அங்கதன். (11-9)

491.
என உரைத்து,அசனி என்ன எழுந்து, இரைத்து,
இரண்டுகோடி
கனை குரல்கவியின் சேனை ‘கல்’ எனக் கலந்து
புல்ல,
புனை மதுச் சோலைபுக்கான்; மது நுகர் புனிதச்
சேனை,
அனகனைவாழ்த்தி, ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த.

அசனி – இடி. அனகன் -இராமன். (11-10)

492.
‘இந்திரன்வாலிக்கு ஈந்த இன் சுவை மதுவின்
கானம்;
அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணை
தன்னைச்
சிந்தினை;கதிரோன் மைந்தன் திறலினை அறிதி
அன்றே ?
மந்தரம் அனையதோளாய் ! இற்றது உன் வாழ்க்கை
இன்றே.

ததிமுகன்அங்கதனை நோக்கிக் கூறியது. (11-11)

493.
‘மதுவனம்தன்னை இன்னே மாட்டுவித்தனை, நீ’
என்னா,
கதுமென வாலிசேய்மேல் எறிந்தனன், கருங் கற்
பாறை;
அதுதனைப்புறங்கையாலே அகற்றி, அங்கதனும் சீறி,
ததிமுகன்தன்னைப்பற்றிக் குத்தினன், தடக்
கைதன்னால்.

ததிமுகன் அங்கதன் போர். (11-12)

494.
குத்தினன்என்னலோடும், குலைந்திடும் மெய்யன்
ஆகி,
மற்று ஒருகுன்றம்தன்னை வாங்கினன்,
மதுவனத்தைச்
செற்றனன்மேலேஏவிச் சிரித்தனன், ததிமுகன்தான்;
‘இற்றனன், வாலிசேய்’ என்று இமையவர் இயம்பும்
காலை,

செற்றனன் -அங்கதன். (11-13)

495.
ஏற்று ஒருகையால் குன்றை இருந் துகள் ஆக்கி,
மைந்தன்
மாற்று ஒருகையால் மார்பில் அடித்தலும்,
மாண்டான் என்ன,
கூற்றின் வாய்உற்றான் என்ன, உம்பர் கால்
குலையப் பானு
மேல் திசைஉற்றான் என்ன, விளங்கினன், மேரு
ஒப்பான்.

பானு- சூரியன் (11-14)

496.
வாய் வழிக்குருதி சோர, மணிக் கையால் மலங்க
மோதி,
‘போய் மொழி, கதிரோன்மைந்தற்கு’ என்று, அவன்
தன்னைப்போக்கி,
தீ எழும் வெகுளிபொங்க, ‘மற்று அவன்
சேனைதன்னை,
காய் கனல்பொழியும் கையால் குத்துதிர், கட்டி’
என்றான்.

ததிமுகனை அடித்துசுக்கிரீவன் பால் சென்று சொல்க என்று அங்கதன்அனுப்புதல். (11-15)

497.
பிடித்தனர்;கொடிகள் தம்மால் பிணித்தனர்; பின்னும்
முன்னும்
இடித்தனர், அசனிஅஞ்ச, எறுழ் வலிக் கரங்கள்
ஓச்சி;
துடித்தனர்,உடலம் சோர்ந்தார்; ‘சொல்லும் போய்
நீரும்’ என்னா,
விடுத்தனன்,வாலி மைந்தன்; விரைவினால் போன
வேலை,

ததிமுகன்சேனையினரை அங்கதன் சேனையைச் சேர்ந்தவர்
செய்தபடியைக் கூறியது. (11-16)

498.
அலை புனல் குடையுமாபோல், மதுக் குடைந்து ஆடி,
தம்தம்
தலைவர்கட்குஇனிய தேனும் கனிகளும் பிறவும்
தந்தே,
உலைவுறு வருத்தம்தீர்ந்திட்டு, உபவனத்து இருந்தார்;
இப்பால்
சிலை வளைத்துஉலவும் தேரோன் தெறும் வெயில்
தணிவு பார்த்தே.

மாலை நேரம் வருவதுபார்த்து மதுவுண்டு தேன், கனி, பிறவற்றைத்
தலைவர்களுக்குத் தந்து அங்கதன் சேனையினர் இருந்தபடி. 11-1 (482) முதல்
11-16 (498) வரை உள்ளபதினேழு பாடல்கள் வானரவீரர்கள் மதுவனம்
அழித்தமை கூறியது. (11-17)

499.
‘சேற்று இளமரை மலர்த் திருவைத் தேர்க !’ எனக்
காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை,
நாற்றிசைமருங்கினும் ஏவி, நாயகன்-
தேற்றினன்இருந்தனன்-கதிரின் செம்மலே.

மரை – தாமரை;முதற்குறை, கதிரின் செம்மல் – சுக்ரீவன். (12-1)

500.
நோக்கின்தென் திசை அல்லது நோக்குறான்,
ஏக்குற்றுஏக்குற்று இரவி குலத்து உளான்,
‘வாக்கில் தூயஅனுமன் வரும்’ எனா,
போக்கிப்போக்கி, உயிர்க்கும் பொருமலான்.

இராமன் அனுமனை ஏவிஎதிர்பார்த்து இருந்தவாறு கூறியது. (14-1)

501.
என்றுஉரைத்து, இடர் உழந்து இருக்கும் ஏல்வையின்
வன் திறல்ததிமுகன் வானரேசன் முன்,
தன் தலைபொழிதரு குருதிதன்னொடும்,
குன்று எனப்பணிந்தனன், இரு கை கூப்பியே.

மதுவனக் காவலன்ததிமுகன் சுக்ரீவனைக் காணல். இது முதல் இருபது
பாடல்கள் ததிமுகன் வருகையால் வானரர் சீதையைக் கண்டு இனிது திரும்பிய
படியைக் குறிப்பால் அறிந்தது கூறப்பெறுகிறது. (19-1)

502.
எழுந்துநின்று, “ஐய ! கேள், இன்று நாளையோடு
அழிந்தது மதுவனம்அடைய’ என்றலும்,
வழிந்திடுகுருதியின் வதனம் நோக்கியே,
‘மொழிந்திடு,அங்கு யார் அது முடித்துளோர் ?’ என,

ததி முகன்கூற்று. (19-2)

503.
‘நீலனும், குமுதனும், நெடிய குன்றமே
போல் உயர்சாம்பனும், புணரி போர்த்தென
மேல் எழுசேனையும், விரைவின் வந்து உறா,
சால்புடைமதுவனம்தனை அழிப்பவே.

நீலன், குமுதன்,சாம்பன், வானர சேனைகள் மதுவனம் அழித்தார்
என்று ததிமுகன் கூறல். (19-3)

504.
தகைந்த அச்சேனையைத் தள்ளி, நின்னையும்,
இகழ்ந்துஉரைத்து, இயைந்தனன் வாலி சேய்;
மனக்கு
உகந்தன புகன்றஅவ் உரை பொறாமையே,
புகைந்து, ஒருபாறையின் புணர்ப்பு நீக்கியே,

அங்கதன் செயல்கூறியது (19-4)

505.
‘இமைத்தல்முன், “வாலி சேய், எழில் கொள்
யாக்கையைச்
சமைத்தி” என்றுஎறிதர, புறங்கையால் தகைந்து,
அமைத்தரு கனல்என அழன்று, எற் பற்றியே
குமைத்து, உயிர்பதைப்ப, “நீ கூறு போய்” என்றான்.

அங்கதன் என்னை அடித்து‘நீ போய் கூறு’ என அனுப்பினான் என்று
ததிமுகன் கூறல். (19-5)

506.
‘இன்று நான்இட்ட பாடு இயம்ப முற்றுமோ ?’
என்று உடல்நடுக்கமோடு இசைக்கும் ஏல்வையில்,
அன்று அவன்உரைத்தல் கேட்டு, அருக்கன்
மைந்தனும்
ஒன்றியசிந்தையில் உணர்ந்திட்டான் அரோ.

ததிமுகன்கூற்றால் சுக்ரீவன் உணர்தல். (19-6)

507.
ஏம்பலோடுஎழுந்து நின்று, இரவி கான்முளை,
பாம்பு அணைஅமலனை வணங்கி, “பைந் தொடி
மேம்படுகற்பினள்” என்னும் மெய்ம்மையைத்
தாம்புகன்றிட்டது, இச் சலம்’ என்று ஓதினான்.

ததிமுகனுக்கும் வானரவீரர்க்கும் நிகழ்ந்த இச்சண்டை ‘பிராட்டி
மேம்படு கற்பினள்’ என்பதை நமக்குத் தெரிவிக்கிறது என்று சுக்ரீவன்
இராமனிடம் கூறல். (19-7)

508.
‘பண் தரு கிளவியாள்தன்னைப் பாங்குறக்
கண்டனர்; அன்னதுஓர் களிப்பினால், அவர்
வண்டு உறைமதுவனம் அழித்து மாந்தியது;
அண்டர் நாயக !இனி அவலம் தீர்க’ என்றான்.

சீதையைக் கண்டமகிழ்ச்சியால் வானரர் ‘மதுவனம் அழித்து மாந்தியது’
என்று சுக்ரீவன் உணர்த்துதல். (19-8)

509.
‘வந்தனர்தென் திசை வாவினார்’ என,
புந்தி நொந்து,‘என்னைகொல் புகலற் பாலர் ?’ என்று
எந்தையும்இருந்தனன்; இரவி கான்முளை,
நொந்த அத்ததிமுகன்தன்னை நோக்கியே.

சுக்ரீவன் ததிமுகனை வினாவுதல். (19-9)

510.
‘யார் அவண்இறுத்தவர், இயம்புவாய் ?’ என,
‘மாருதி, வாலிசேய், மயிந்தன், சாம்பவன்,
சோர்வு அறுபதினெழுவோர்கள் துன்னினார்,
ஆர்கலி நாணவந்து ஆர்க்கும் சேனையார்.’

ததிமுகன்பதில் (19-10)

511.
என்று,அவன் உரைத்த போது, இரவி காதலன்,
வன் திறல்ததிமுகன் வதனம் நோக்கியே,
‘ஒன்று உனக்குஉணர்த்துவது உளது; வாலி சேய்,
புன் தொழில்செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால்.

அங்கதன்நல்லவனே என்று ததிமுகனுக்குச் சுக்ரீவன் கூறுதல்.
(19-11)

512.
‘கொற்றவன்பணி தலைக்கொண்டு, தெண் திரை
சுற்றிய திசைஎலாம் துருவி, தோகையைப்
பற்றியபகைஞரைக் கடிந்து, பாங்கர் வந்து
உற்றனர்; அவரையாம் உரைப்பது என்னையோ ?

அரசுப்பணி மேற்கொண்டு திரும்பியவர்களைக் கடிதல் ஒல்லாது என
சுக்ரீவன் உணர்த்தல். (19-12)

513.
‘அன்றியும், வாலி சேய் அரசு அது; ஆதலின்,
பின்றுதல்தீதுஅரோ; பிணங்கும் சிந்தையாய் !
ஒன்றும் நீஉணரலை; உறுதி வேண்டுமேல்,
சென்று,அவன்தனைச் சரண் சேர்தி, மீண்டு’
என்றான்.

அங்கதன் இளவரசன்ஆகவே அவனையே சரணமாக அடை என்று
ததிமுகனுக்குச் சுக்ரீவன் கூறுதல். (19-13)

514.
என்ற அத்ததிமுகன் தன்னை, ஏனைய
வன் திறல் அரசுஇளங் குரிசில் மைந்தனைப்
பின்றுதல் அவனைஎன் பேசற் பாற்று நீ;
இன்று போய்,அவன் அடி ஏத்துவாய்’ என்றான்.

இதுவும்அது. (19-14)

515.
வணங்கியசென்னியன்; மறைத்த வாயினன்;
உணங்கியசிந்தையன்; ஒடுங்கும் மேனியன்;
கணங்களோடு ஏகி,அக் கானம் நண்ணினான்-
மணம் கிளர்தாரினான் மறித்தும் வந்துஅரோ.

மீண்டும் ததிமுகன்மதுவனம் வருதல். (19-15)

516.
கண்டனன்வாலி சேய்; கறுவு கைம்மிக,
‘விண்டவன், நம்எதிர் மீண்டுளான்எனின்,
உண்டிடுகுதும்உயிர்’ என்ன, உன்னினான்;
‘தொண்டு’ என,ததிமுகன், தொழுது தோன்றினான்.

அங்கதன் கோபிக்கவும்ததிமுகன் அவன் அடி பணிதலும். (19-16)

517.
‘போழ்ந்தனயான் செய்த குறை பொறுக்க !’ எனா,
வீழ்ந்தனன்அடிமிசை; வீழ, வாலி சேய்,
தாழ்ந்து, கைப்பற்றி, மெய் தழீஇக்கொண்டு,
‘உம்மை யான்
சூழ்ந்ததும்பொறுக்க !’ எனா, முகமன் சொல்லினான்.

ததிமுகனும் அங்கதனும்ஒருவர்க்கொருவர் மன்னி்ப்புக் கேட்டு
சமாதானம் அடைதல். (19-17)
‘யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே
ஏமுற, துயர்துடைத்து, அளித்த ஏற்றம்போல்,
தாமரைக்கண்ணவன் துயரம் தள்ள, நீர்
போம்’ என,தொழுது, முன் அனுமன் போயினான்.

அனுமனை முன்னர்இராமனிடம் அனுப்பல். (19-18)

519.
‘வன் திறல்குரிசிலும் முனிவு மாறினான்;
வென்று கொள்கதிரும் தன் வெம்மை ஆறினான்’
என்றுகொண்டு,யாவரும், ‘எழுந்து போதலே
நன்று’ என,ஏகினார், நவைக்கண் நீங்கினார்.

அனைவரும் மாலையில்மதுவனத்திருந்து புறப்படுதல். (19-19)

520.
இப்புறத்துஇராமனும், இரவி சேயினை
ஒப்புற நோக்கி,‘வந்துற்ற தானையர்;
தப்பு அறக்கண்டனம் என்பரோ ? தகாது
அப்புறத்துஎன்பரோ ? அறைதியால் !’ என்றான்.

இராமன் சுக்ரீவனைப்பார்த்து வினாவுதல். இதுவரை மதுவன
நிகழ்ச்சிக்குப் பின் நடந்தவை கூறப்பெற்றன. (19-20)

521.
வனை கருங்குழலியைப் பிரிந்த மாத் துயர்
அனகனுக்கு அவள்எதிர் அணைந்ததாம் எனும்
மன நிலை எழுந்தபேர் உவகை மாட்சி கண்டு,
அனுமனும்அண்ணலுக்கு அறியக் கூறுவான்;

இராமன் மகிழ்ச்சியும்அனுமன் கூற்றும். (23-1)

522.
மாண்பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால்
வைத்த
சேண் பிறந்துஅமைந்த காதல், கண்களின் தெவிட்டி,
தீராக்
காண்பிறந்தமையால், நீயே, கண் அகன் ஞாலம்
தன்னுள்,
ஆண் பிறந்துஅமைந்த செல்வம் உண்டனையாதி
அன்றோ ?

‘கற்பிற் சிறந்த ஒருபெண்ணின் உயரிய காதலை அப்பெண் தன்
கண்களில் திரட்டி வைத்துக் கொண்டு உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும்
செல்வம் பெற்ற நீயே உலகில் ஆடவராய்ப் பிறந்தவர் பெற வேண்டிய
செல்வத்தை முழுதும் பெற்றவனாக ஆனாய்’ என்று அனுமன் இராமனைப்
பாராட்டிய இப்பாடல் உயர்ந்த கருத்துடையதாகும். (35-1)

523.
‘அயிர்ப்பு இலர், காண்பார்; முன்னும் அறிந்திலர்
எனினும், ஐய !-
எயில் புனைஇலங்கை மூதூர் இந்திரன் யாக்கைக்கு
ஏற்ற
மயில் புரைஇயலினாரும், மைந்தரும், நாளும் அங்கே
உயிர்ப்பொடும்,உயிரினோடும், ஊசல் நின்று
ஆடுவாரும்.’

இலங்கையில் ஆடவரும்மகளிரும் நுகர்ந்து நிற்கும் தன்மை கூறியது.
(35-9)

524.
ஆயிடை,கவிகளோடும், அங்கதன் முதலினாயோர்
மேயினர்,வணங்கிப் புக்கார், வீரனை, கவியின்
வேந்தை;
போயின கருமம்முற்றிப் புகுந்தது ஓர் பொம்மல்
தன்னால்,
சேயிரு மதியம்என்னத் திகழ்தரு முகத்தர் ஆனார்.

அங்கதன் முதலியோர் வருகை. (47-1)

525.
நீலனை நெடிதுநோக்கி, நேமியான் பணிப்பான்;
‘நம்தம்-
பால் வரும்சேனைதன்னைப் பகைஞர் வந்து அடரா
வண்ணம்,
சால்புறமுன்னர்ச் சென்று, சரி நெறி துருவிப் போதி,
மால் தரு களிறுபோலும் படைஞர் பின் மருங்கு
சூழ.’

இராமன் நீலனைநோக்கிச் சேனைகளை அழைத்துக் கொண்டு நேர்
வழியை ஆராய்ந்து செல்க எனப் பணித்தல். (49-1)

என்று உரைத்து எழுந்த வேலை, மாருதி இரு கை
கூப்பி,
‘புன் தொழில்குரங்கு எனாது என் தோளிடைப்
புகுது’ என்னா,
தன் தலை படியில்தாழ்ந்தான்; அண்ணலும், சரணம்
வைத்தான்;
வன் திறல் வாலிசேயும் இளவலை வணங்கிச்
சொன்னான்;

இராமன் அனுமன் மேல்வீற்றிருத்தல். (49-2)

527.
‘நீ இனிஎன்தன் தோள்மேல் ஏறுதி, நிமல !’ என்ன,
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை
நோக்கி,
நாயகற்கு இளையகோவும். ‘நன்று’ என அவன்தன்
தோள்மேல்,
பாய்தலும், தகைப்பு இல் தானை படர் நெறிப் பரந்தது
அன்றே.

இலக்குவன்அங்கதன் தோள் மேல் ஏறுதல். (49-3)

528.
கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்ப,
காலின்
அருள் தரு குமரன்தோள்மேல், அங்கதன் அலங்கல்
தோள்மேல்,
பொருள் தரும் வீரர் போத, பொங்கு ஒளி விசும்பில்
தங்கும்
தெருள் தகு புலவர்வாழ்த்திச் சிந்தினர், தெய்வப்
பொற் பூ.

திருமாலும்,சிவபெருமானும் போல இராமலக்குவர்; கருடனும், விடையும்
போல அனும அங்கதர் தோள் மேல் ஏறிப் புறப்படுதல். (49-4)

529.
‘வையகம் அதனில் மாக்கள் மயங்குவர்,வய வெஞ்
சேனை
எய்திடின்’என்பது உன்னி, இராகவன் இனிதின் ஏவ,
பெய் கனி,கிழங்கு, தேன் என்று இனையன
பெறுதற்கு ஒத்த
செய்ய மால்வரையே ஆறாச் சென்றது, தகைப்பு
இல் சேனை.

நாடுவழியாகச்சென்றால் மக்கள் மயங்கி வருந்துவர் என்று கருதிய
இராமன் ஏவ, வானர சேனை கனி, கிழங்கு, தேன் பெறுவதற்கு ஒத்த மலை
வழியாகத் தெற்கு நோக்கிச் சேறல். (49-5)

——————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சங்ஷேப ராமாயணம் —

December 25, 2020

ஸ்ரீ கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

ஸ்ரீ வால்மீகேர் முனிஸிம்ஹஸ்ய கவிதா வனசாரிண:
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராங்கதிம்

ய: பிபன் ஸததம் ராம சரிதாம்ருத ஸாகரம்
அத்ருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸ மகல்மஷம்

கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம்
ஸ்ரீ ராமாயண மஹாமாலா ரத்னம் வந்தே(அ) நிலாத்மஜம்

அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீசோக நாசனம்
கபீச மக்ஷஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்8

ஆஞ்ஜனேய மதிபாடலாலனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

க்யாத: ஸ்ரீராமதூத: பவனதனுபவ: பிங்கலாக்ஷ: சிகாவான்
ஸீதா சோகாபஹாரீ தசமுக விஜயீ லக்ஷ்மண: ப்ராணதாதா
ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கனே தீக்ஷிதோ ய:
வீர: ஸ்ரீமான் ஹனூமான் மம மனஸி வஸன் கார்யஸித்திம் தநோது

தூவரிக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி:
தாரித தசமுக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:

ஸ்ரீ வால்மீகி கிரிஸம்பூதா ராமஸாகர காமினீ
புனாது புவனம் புண்யா ராமாயண மஹாநதீ

ஸ்ரீ வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ரசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா

வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்த்யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ப்ய: பரம்
வ்யாக்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்

நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை
நமோ(அ)ஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ப்யோ
நமோ(அ)ஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ப்ய:

————

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||

————

வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதாத்மஜே |
வேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||

வேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியிலே ஸ்ரீ ராமனாக அவதாரம் பண்ண உடனே,
வேதம், ஸ்ரீ வால்மீகி முனிவர் வழியாக ஸ்ரீ ராமாயணமாக வெளிவந்துவிட்டது

———

ஸ்ரீ ராமம் ரகு குல திலகம்
சிவ தனு சாக்ரிஹத ஸீதா ஹஸ்த கரம்
அங்குல்யா பரண ஸோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய ஆஸ்ரயம்
வைதேஹி மநோ ஹரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கள கார்ய அநுகூலம்
ஸததம் ஸ்ரீ ராமசந்த்ர பாலயமாம்

—————-

தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம்
நாரதம் பரிப்ரக்ஷூச்சா வால்மீகி முனி புங்கவம் –1-

தபோ நிரதம்’, ‘ஸ்வாத்யாய நிரதம்’, ‘வாக் விதாம்வரம்’ ‘முனிபுங்கவம்’, என்று
ஸ்ரீ நாரத மகரிஷிக்கு நாலு அடைமொழி கொடுத்து, இந்த ஸ்ரீ நாரத மகரிஷியிடம்,
ஸ்ரீ வால்மீகி பகவான் ஒரு விஷயத்தை கேட்கிறார் என்று ஆரம்பிக்கிறது.

தபோ நிரதம்’ – தபஸில் ஈடுபட்டவராய் இருக்க வேண்டும்.
‘ஸ்வாத்யாய நிரதம்’ – தனது படிப்பில் திரும்பத் திரும்ப மனசை செலுத்துவதில் விருப்பம் உள்ளவரை இருக்க வேண்டும்.
‘வாக் விதாம் வரம்’ – வாக்கிற்கு என்ன பிரயோஜனம்? பகவானை பற்றி பேசிக் கொண்டிருப்பது. அதைச் செய்து கொண்டிருப்பவர்.
‘முனி புங்கவம்’ – மௌனமாய் இருக்ககூடிய முனி புங்கவருக்குள் ஸ்ரேஷ்ட்டர்.

த‌ப‌:ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம் த‌ப‌ஸ்வீ வாக்விதாம் வ‌ர‌ம்|
நார‌த‌ம் ப‌ரிபப்ர‌ச்ச‌ வால்மீகி முநிபுங்க‌வ‌ம்||” (வா.ரா. பா.கா. ச‌ரு 1 சுலோ 1)

“த‌ப‌சு, வேத‌வேதாந்த‌ங்க‌ள் இவைக‌ளைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ரும், உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ரும்,
முனி ஶ்ரேஷ்ட‌ருமான‌ நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, த‌வ‌த்தோடுகூடிய‌ வான்மீகி முனிவ‌ர் தெண்ட‌ம் ச‌ம‌ர்ப்பித்து வினாவினார்.”

இது இராமாய‌ண‌த்தின் முத‌ல் சுலோக‌ம். இத‌னால் குரு சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகிற‌து.

1) த‌போநிர‌த‌ம் :– த‌வ‌த்தைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ர் என்ற‌தினால் அவ‌ர் ச‌ர்வ‌ச‌க்தி வாய்ந்த‌வ‌ர் என்ப‌து ஸூச‌க‌ம்.
“ய‌த்துஸ்த‌ர‌ம் ய‌த்துராப‌ம் ய‌த்துர்க‌ம் ய‌ச்ச‌துஷ்க‌ர‌ம்|
தத் ஸ‌ர்வ‌ம் த‌ப‌ஸாஸாத்ய‌ம் த‌போஹி துர‌திக்ர‌மம் ||”
“எது க‌ட‌க்க‌முடியாததோ, எது பெற‌ முடியாததோ, எது செய்ய‌முடியாததோ அதெல்லாம் த‌வ‌த்தால் சாதிக்க‌முடியும்.
ஆகையால் த‌வ‌த்தை வெல்வ‌த‌ரிது.”
“வேண்டிய‌ வேண்டியாங் கெய்த‌லாற்செய்த‌வ‌ மீண்டு முய‌ல‌ப் ப‌டும்.
கூற்ற‌ங் குதித்த‌லும் கைகூடு நோற்ற‌லி னாற்ற‌ ற‌லைப்ப‌ட் ட‌வ‌ர்க்கு” (திருக்குற‌ள்) என்ற‌ ஆதார‌ங்க‌ள் நோக்க‌த்த‌க்க‌ன‌.

2) ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம்:– வேத‌வேதாந்த‌ங்க‌ளைப் பூர்ண‌மாக‌ அடைந்த‌வ‌ர், என்ற‌தினால்
நார‌த‌ர் சொல்வ‌தெல்லாம் த‌ரும‌த்தோடு பொருந்திய‌ வ‌ச‌ன‌ம் என்ப‌து ஸூச‌க‌ம்.

3) வாக்விதாம்வ‌ர‌ம் :– உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ர், என்ற‌தினால் சிற‌ந்த‌ போத‌னாச‌க்தி வாய்ந்த‌வ‌ரெனவும்,
வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ச‌க‌ல‌சாஸ்திர‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ அறிந்த‌வ‌ரென‌வும் பொருள்ப‌டும்.

4) முனிபுங்க‌வ‌ம்:– முனிஶ்ரேஷ்ட‌ர் என்ற‌தினால் இந்திரிய‌ நிக்கிர‌க‌முள்ள‌வ‌ர் என்ப‌தும்,
ப‌க‌வ‌த்யான‌த்தோடு கூடிய‌வ‌ரென்ப‌தும், திரிகால‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிய‌க்கூடிய‌வ‌ரென்ப‌தும் , ஸ‌தா ஜ‌பப‌ரரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

5)நார‌த‌ம்:– நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, என்ற‌தினால், நார‌ம் – ஜ்ஞான‌ம், அதைக் கொடுக்கக் கூடிய‌வ‌ர் என்ப‌தும்,
நார‌ம் – அஜ்ஞான‌ம், அதை நிவ‌ர்த்தி செய்ய‌க்கூடிய‌வ‌ ரென்ப‌தும், த்ரிலோக‌ ஸ‌ஞ்சாரியான‌ப‌டியால்,
மூன்று லோக‌த்திலுள்ள‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிப‌வ‌ரென்ப‌தும், பிர‌ம்ம‌ புத்திரரான‌ப‌டியால் உத்த‌ம‌ குல‌த்தைச் சேர்ந்த‌வ‌ரென்ப‌தும் ஸூசக‌ம்.

ஆக‌வே, இந்த‌ ஐந்து ப‌த‌ங்க‌ளினால், ஆசார்ய‌ன் பூர்ண‌மான‌ த‌ப‌ஸை யுடைய‌வ‌ராக‌வும்,
வேத‌வேதாந்த‌ங்க‌ளையும் வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ஸ‌க‌ல‌ ஶாஸ்திர‌ங்க‌ளையும் உண‌ர்ந்த‌வ‌ராக‌வும்,
ப‌க‌வ‌த் ப‌க்தியுட‌ன் அந‌வ‌ர‌த‌ ஜ‌பப‌ரராக‌வும் சிஷ்ய‌னுடைய‌ அஜ்ஞான‌த்தைப் போக்கி, ஜ்ஞான‌த்தைக் கொடுத்துப்
ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்தை உப‌தேசிக்க‌வ‌ல்ல‌வ‌ராக‌வும், ஜிதேந்திரிய‌ராக‌வும், உத்த‌ம‌ குல‌த்த‌வ‌ராக‌வுமிருக்க‌வேணும்
எனறு ஆசார்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

“குஶ‌ப்த‌ஸ் த்வ‌ந்த‌கார‌ஸ்யாத் ருகார‌ஸ்த‌ந் நிவ‌ர்த‌க‌:|
அந்த‌கார‌ நிரோதித்வாத் குருரித்ய‌பி தீய‌தே||”

“கு என்ப‌து அஜ்ஞான‌த்தையும், ரு என்ப‌து அத‌ன் நிவ‌ர்த்தியையும் சொல்லுகிற‌ ப‌டியால்
ம‌ன‌தின் க‌ண்ணுள்ள‌ அஜ்ஞான‌மாகிற‌ இருளை நீக்கி மெய்ஞ்ஞான‌மாகிற‌ பிர‌காச‌த்தைத் த‌ருவ‌தால் குரு வென‌ச் சாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

குல‌ன‌ருள் தெய்வ‌ங்கொள்கை மேன்மை
க‌லைப‌யில் தெளிவு க‌ட்டுரை வ‌ண்மை
நில‌ம‌லை நிறைகோல் ம‌ல‌ர் நிக‌ர் மாட்சியும்
உல‌கிய‌ல‌றிவோ டுய‌ர்குண‌ மினைய‌வும்
அமைப‌வ‌ன் நூலுரையாசிரிய‌ன்னே.” என்ற‌ ந‌ன்னூல் இங்கு நோக்க‌த் த‌க்க‌து.

சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்

1) த‌ப‌ஸ்வீ: – என்ற‌தினால் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌த்தை அறிய‌ ஆவ‌ல்கொண்டவ‌ரென்ப‌தும்,
ப‌ல‌ விர‌த‌ங்க‌ளை அனுஷ்டித்த‌வ‌ரென்ப‌தும், ஶ‌ம‌த‌மாதி ஸ‌ம்ப‌ந்த‌ங்க‌ளை அடைந்த‌வ‌ரென்ப‌தும்,
ஜீவ‌காருண்ய‌முடைய‌வ‌ரென்ப‌தும், க‌ள‌ங்க‌ம‌ற்ற‌ இருத‌ய‌முடைய‌வ‌ரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

“உற்ற‌நோய் நோன்ற‌லுயிர்க்குறுக‌ண் செய்யாமை
ய‌ற்றே த‌வ‌த்திற்குரு” (திருக்குற‌ள்)

2) ப‌ரிபப்ர‌ச்ச‌ – என்ற‌தினால் விதிவ‌துப‌ஸ‌ந்ந‌: என்ப‌து பொருள். அதாவ‌து,
உப‌தேச‌ம் பெற்றுக் கொள்ள‌, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதி ப்ர‌கார‌ம் கேட்க‌வேண்டுமென்ப‌து

தத்வித்தி ப்ர‌ணிபாதேந‌ ப‌ரிப்ர‌ஶ்நேந‌ ஸேவ‌யா|
உப‌தேக்ஷ்ய‌ந்தி தே ஜ்ஞான‌ம் ஜ்ஞாநிந‌ஸ் தத்வ‌த‌ர்ஶிந‌: ||

“அந்த‌ ஆத்ம‌ ஜ்ஞான‌த்தை, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதிப்ர‌கார‌மான‌ கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ள‌க் க‌ட‌வாய். தத்வ‌ம‌றிந்த‌ ப‌ண்டித‌ர்க‌ள் உன‌க்கு ஜ்ஞான‌த்தை போதிப்பார்க‌ள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த‌ ஸ்ரீகிருஷ்ண‌ ப‌க‌வானுடைய‌ வ‌ச‌ன‌ம் இங்கு க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

ஆக‌வே, த‌ப‌ஸ்வீ, ப‌ரிப்ர‌ச்ச‌ என்ற‌ ப‌த‌ங்க‌ளினால் சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஸ‌த்புத்திஸ் ஸாதுஸேவீ ஸ‌முசித‌ச‌ரித‌ஸ் தத்வ‌போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ்த்ய‌க்த‌மாந‌: ப்ர‌ணிப‌த‌ந‌ப‌ர‌: ப்ர‌ஶ்ந‌கால‌ப்ர‌தீக்ஷ‌:||
ஶாந்தோதாந்தோ ந‌ஸூயுஸ்ஸ‌ர‌ண‌முப‌க‌த‌ஸ் ஶாஸ்த்ர‌ விஶ்வாஸ‌ஶாலி|
ஶிஷ்ய‌:ப்ராப்த‌: ப‌ரீக்ஷாங் க்ருத‌வித‌பிம‌த‌ம் தத்வ‌த‌ஸ் ஸிக்ஷ‌ணீய‌:

“ந‌ற்புத்தியுட‌ன் ஸாதுஸேவை உடைய‌வ‌னாகி, ந‌ன்ன‌ட‌த்தை உடைய‌வ‌னும், உண்மை ஞான‌த்தை அறிவ‌தில்
அபிலாஷை உடைய‌வ‌னும், ப‌ணிவிடைக்கார‌னும், மானாவ‌மான‌ மென்ப‌த‌ற்ற‌வ‌னும், ப்ர‌ஶ்ந‌ கால‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌னும்,
சாந்த‌னும், அஸூயை இல்லாத‌வ‌னும், ச‌ர‌ணாக‌திய‌டைந்த‌வ‌னும், சாஸ்திர‌ விஶ்வாச‌முடைய‌வ‌னுமே
சிஷ்ய‌னாக‌ அங்கீக‌ரிக்க‌த் த‌குந்த‌வ‌ன்” என்ப‌து நோக்க‌த்த‌க்க‌து.

வால்மீகி ப‌க‌வான் ப்ருகு வ‌ம்ச‌த்தில் அவ‌த‌ரித்த‌வ‌ர். இவ‌ர் (வ‌ல்மீக‌ம் = புற்று) புற்றிலிருந்து வெளிவ‌ந்ததினால்
வால்மீகி என்று பெய‌ர். இவ‌ர்க்கு “ப்ராசேத‌ஸ‌ர்” (அதாவ‌து வ‌ருண‌னுடைய‌ புத்திரர்) என்னும் பெய‌ருண்டு.

——–

கோனு அஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் வீர்யவான் |
தர்மக்ஞ்ச: க்ரிதஞ்ச: சத்யவாக்ய: த்ரிடவிரத: ||–2-

அஸ்மின் லோகே – இந்த உலகத்தில்
சாம்ப்ரதம் லோகே – தற்காலத்தில்
தர்மக்ஞஸ்ச’ – தர்மங்களை அறிந்தவர்.
‘க்ருதக்ஞஸ்ச’ – செய்த நன்றியைப் பாராட்டுபவர்.
ஸத்யவாக்ய:’ – பொய்யே பேசாதவர். எப்பொழுதும் மனோ, வாக், காயத்துனால உண்மையே பேசுபவர்.

———

சாரித்ரேண ச கோ யுக்த: சர்வ புதேஷு கோ ஹித: |
வித்வான் க: க: சமர்தஸ்ச: ஏக பிரிய தர்சன: ||–3-

——–

ஆத்மவான் ஜிதக்ரோத: த்துதிமானு அன் அசூயக: |
கஸ்ய பிப்யதி தேவா: ச ரோஷஸ்ய சங்க்யுகே ||–4-

கஸ்ய பிப்யதி தேவா: ச ரோஷஸ்ய சங்க்யுகே–யுத்தத்தில் எவர் கோபம் கொண்டால் தேவர்கள் கூட
பயப்படுவாளோ அப்பேற்பட்ட பராக்கிரமம் – சமுத்திர ராஜனே பயந்தான் அன்றோ !

———–

ச்ருத்வா சைதத் த்ரிலோகக்ஞோ வால்மீகேர் நாரதோ வச: |
ச்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் ||–6-

‘ச்ருத்வா ஏதத் வால்மீகேர் வச:’ – இந்த வால்மீகியுடைய வார்தையைக் கேட்டு,
‘த்ரிலோகக்ஞ: நாரத:’ – மூவுலகையும் அறிந்த, எல்லாம் அறிந்த நாரத பகவான் சொல்ல
ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத்’ – அவரும் ரொம்ப சந்தோஷமா சொல்ல ஆரம்பிக்கிறார்.

———-

பஹவோ துர்லபாஸ்சைவ யே த்வயா கீர்திதா குணா: |
முநே லக்ஷ்யாம்யஹம் புத்தவா தைர்யுக்த: ச்ரூயதாம் நர: ||–7-

————

இக்ஷ்வாகு வம்ஸ பிரபாவோ ராமோ நாம ஜநை: ச்ருத: |
நியதாத்மா மஹாவீர்யோ த்யுதிமான் த்ருதிமாந்வசீ ||–8-

இக்ஷ்வாகு வம்ஸ பிரபாவ:’ – இக்ஷ்வாகு வம்சத்தில ஒளியோடு விளங்குபவன்
த்யுதிமான்’ – ஒளி மிகுந்தவன்–தேஜஸோட இருப்பான்.
‘த்ருதிமாந்’ – தைர்யசாலி.
‘வசீ’ – இந்திரியங்களைத் தன் வசத்தில் வைத்திருப்பவன்.

—————

புத்திமாந் நீதிமாந் வாக்மீ ஸ்ரீமாஞ்சத்ருநிபர்ஹண: |
விபுலாம்ஸோ மஹாபாஹு: கம்புக்ரீவோ மஹாஹநு: ||–9-

வாக்மீ’ – நல்ல வாக்கு. பேச்சு ‘மதுராபாஷி
விபுலாம்ஸ:’ – பரந்த தோள்கள்.
கம்புக்ரீவ:’ – கழுத்து சங்கு போல இருக்கும்.
‘மஹாஹநு:’ – ‘ஹநுமான்’னு கூட சொல்லுவோம் இல்லையா ‘ஹநு’ன்னா தாடை. பெரிய தாடை.

——–

மஹோரஸ்கோ மஹேஷ்வாஸோ கூடஜத்ருரரிந்தம: |
ஆஜாநுபாஹு: ஸு சிரா: ஸுலலாட: ஸுவிக்ரம: ||–10-

‘மஹோரஸ்க:’ – ‘விபுலாம்ஸ:’ன்னா பரந்த தோள்கள். ‘மஹோரஸ்க:’ பெரிய மார்பு.
‘மஹேஷ்வாஸ:’ – பெரிய வில்லை வெச்சிண்டிருக்கறவன்
கூடஜத்ரு:’ – நல்ல சதைப்பற்றுள்ள collar bones தோள்களெல்லாம் இருக்கிறவர்
அரிந்தம:’ – எதிரிகளை தபிக்கப் பண்ணுபவர்.
ஆஜாநுபாஹு:’ – ‘ஜாநு’ன்னா முட்டி. முட்டி வரைக்கும் நீண்ட கைகள்.
‘ஸு சிரா:’ – அழகான தலை.
‘ஸுலலாட:’ – பெரிய பரந்த நெற்றி.
‘ஸுவிக்ரம:’ – மிகுந்த பராக்ரமம் கொண்டவர்.

———

ஸமஸ் ஸமவிப4க்தாங்க3: ஸ்நிக்3த4வர்ண: பிரதாபவாந் |
பீந வக்ஷா விஶாலாக்ஷோ லக்ஷ்மீவாந் ஶுப4லக்ஷண: || 11 ||

ஸம:’ரொம்ப குள்ளமும் கிடையாது, ரொம்ப உயரமும் கிடையாது, சமமான உயரம்!
‘ஸமவிப4க்தாங்க3:’ – ! சமமா ‘விப4க்தம்’ – சமமா பிரிக்கப்பட்ட அங்கங்கள்.
‘ஸ்நிக்3த4வர்ண:’ – ரொம்ப குளுமையான ஒரு வர்ணம். கருப்பு அப்படீன்னாக் கூட, ஒரு attractiveவான ஒரு கருப்பு!
‘பிரதாபவாந்’ – ரொம்ப powerful, ரொம்ப சக்திமான்!
‘பீநவக்ஷா:’ – அழகான மார்பு. நல்ல பரந்து விரிந்த, நன்னா அமைந்த ஒரு மார்பு ‘வக்ஷஸ்’.
‘விஶாலாக்ஷ:’ – விசாலமான கண்கள், தாமரை போன்ற கண்கள். பெரிய கண்.
‘லக்ஷ்மீவாந்’ – அவருடைய உறுப்புகள் எல்லாமே மங்களகரமா இருந்தது! .
‘ஶுப4லக்ஷண:’ – லக்ஷ்மீகரமா இருந்ததோட, இந்த ஸாமுத்ரிகா லக்ஷண -சக்கரவர்த்திக்குரிய எல்லா லக்ஷணங்களும் இருந்தது!

———–

த4ர்மஜ்ஞஸ் ஸத்ய ஸந்த4ஶ்ச ப்ரஜாநாம் ச ஹிதே ரத: |
யஶஸ்வீ ஜ்ஞான ஸம்பந்ந: ஶுசிர் வஶ்யஸ் ஸமாதி4மாந் || 12 ||

‘த4ர்மஜ்ஞ:’ – எல்லா தர்மங்களும் அறிந்தவர்!
‘ஸத்ய ஸந்த4ஶ்ச’ – சத்தியத்தை காப்பாற்றுபவர்!
‘ப்ரஜாநாம் ச ஹிதே ரத:’ – ‘ரஞ்சயதே இதி ராஜ’ –
யஶஸ்வீ ‘ – ரொம்ப புகழ் படைத்தவர்
ஜ்ஞான ஸம்பந்ந:’ – ஞானம் படைத்தவன்.
‘ஶுசி:’ – தூய்மையானவன்.
‘வஶ்ய:’-குணத்துனால வசியம் பண்ணி-அவன் எல்லாருக்கும் வசப்பட்டு-
‘ஸமாதி4மாந்’-தீர்க்க யோஜனை பண்றது

கௌசல்யா தேவியும் காட்டுக்கு கிளம்பும்போது,
யம் பாலயஸி தர்மம் த்வம் த்ருத்யா ச நியமேன ச |
ஸவை ராகவ ஸார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||

————–

ப்ரஜாபதி ஸமஶ் ஸ்ரீமாந் தா4தா ரிபுநிஷூத3ந: |
ரக்ஷிதா ஜீவலோகஸ்ய த4ர்மஸ்ய பரிரக்ஷிதா ৷৷ 13 ৷৷

‘ப்ரஜாபதி ஸம: ஸ்ரீமாந்’ – மங்களங்களை கொண்டவர்களுக்குள் பிரஜாபதியைப் போல இருப்பவர்!
‘தா4தா’ – எல்லா உலகத்தையும் எல்லாருக்கும் கொடுப்பவர், எல்லாரையும் காப்பாற்றுபவர்.
‘ரிபுநிஷூத3ந:’ – எதிரிகளை கண்டிப்பவர், தண்டிப்பவர்.
‘ரக்ஷிதா ஜீவலோகஸ்ய’ – உயிர்குலங்களை எல்லாம் காப்பாற்றுபவர்.
‘த4ர்மஸ்ய பரிரக்ஷிதா

———-

ரக்ஷிதா ஸ்வஸ்ய த4ர்மஸ்ய ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா |
வேத3வேதா3ங்கதத்த்வஜ்ஞோ த4நுர்வேதே3 ச நிஷ்டித: ৷৷ 14 ||

‘ரக்ஷிதா ஸ்வஸ்ய த4ர்மஸ்ய’ – தன்னுடைய தர்மங்களை எல்லாம் காப்பாத்தறார்.
‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’ – தன்னுடைய ஜனங்களையும் காப்பாற்றுபவர்.
“அபராத3 சஹஸ்ர பா4ஜனம் பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே
அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு”
‘அபராத3 சஹஸ்ர பா4ஜனம்’ – நூத்துக் கணக்கான, ஆயிரக் கணக்கான தப்புகள் பண்ணி,
‘பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே’ – இந்த பயங்கரமான பவக் கடல்ல விழுந்திருக்கேன்!
‘அக3திம்‘ – எனக்கு வேற கதி தெரியலை!
‘சரணாக3தம்’ – உன்னை வந்து சரணாகதி பண்றேன்!
‘அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு’ – கிருபையினால உன்னை சேர்ந்தவனா என்னை நினைச்சுக்கோன்னு சொல்றவாளை,
‘ஸ்வஜந:’ – தன் ஜனங்களா நினைச்சு எல்லா விதத்திலேயும் காப்பாற்றுபவர்! – ‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’
‘வேத3வேதா3ங்கதத்த்வஜ்ஞ:’ – வேதம், வேதாந்தங்கள் -அதன் உட்பொருளையும் உணர்ந்தவர்!
‘த4நுர்வேதே3 ச நிஷ்டித:’ – ‘தான் க்ஷத்ரியன்’ங்கிறதுனால அந்த தனுர் வேதத்துல ரொம்ப உறுதியோட இருக்கார்.

———–

ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ: ஸ்ம்ருதிமாந் பிரதிபா4நவாந் |
ஸர்வலோகப்ரியஸ்ஸாது4: அதீ3நாத்மா விசக்ஷண: ৷৷ 15 ৷৷

‘ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ:’ – சாஸ்திரங்களுடைய உண்மை பொருளை, தர்ம சூக்ஷ்மங்களை அறிந்தவர்!
‘ஸ்ம்ருதிமாந்’ – நல்ல ஞாபக சக்தி!
‘பிரதிபா4நவாந்’-சரியான நேரத்துல சரியான விஷயம் ஞாபகம்
‘ஸர்வலோகப்ரிய:’ – எல்லா உலகத்துக்கும் பிரியமானவர்!
ஸாது4-ஸாது குணங்கள் நிறைந்தவர்!

———–

ஸர்வதா3பி4க3தஸ்ஸத்3பி4ஸ்ஸமுத்3ர இவ ஸிந்து4பி4: |
ஆர்யஸ் ஸர்வஸமஶ்சைவ ஸதை3கப்ரியத3ர்ஶந: ৷৷ 16 ৷৷

‘ஸர்வதா3பி4 க3த: ஸத்3பி4: ஸமுத்3ர இவ ஸிந்து4பி4:’ – சமுத்திரத்தை நோக்கி எப்படி நதிகள் போகுமோ
அந்த மாதிரி சாதுக்கள் எப்பவும் ராமர் கிட்ட வருவர்
ஆர்ய:-பிறப்புலேயும் அவரோட நடத்தைலேயும் எல்லாத்துலயுமே ராமர் noble
ஸர்வஸமஶ்சைவ’ – எல்லார் கிட்டயும் சமமா இருப்பார்
ஸதை3கப்ரியத3ர்ஶந:’ – எப்பவும் பார்க்கறத்துக்கு ப்ரியமா இருப்பார்.

வாலி – ‘ப்ரதித: ப்ரியத3ர்ஶந:’‘ரஞ்சனீயஸ்ய விக்ரமை:’ ‘ராம கமலபத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோகர:’.

———

ஸ ச ஸர்வகு3ணோபேத: கௌஸல்யாநந்த3வர்த4ந: !
ஸமுத்3ர இவ கா3ம்பீ4ர்யே தை4ர்யேண ஹிமவானிவ ৷৷ 17 ৷৷

‘ஸ ச ஸர்வகு3ணோபேத:’ – எல்லா குணங்களையும் பொருந்திய அந்த ராமன்,
‘கௌஸல்யா நந்த3வர்த4ந:’ – கௌசல்யையுடைய ஆனந்தத்தை மேலும் மேலும் வளர்ப்பவன்.
‘ஸமுத்3ர இவ கா3ம்பீ4ர்ய’ – கம்பீரத்துல சமுத்திரம் போன்றவன்-சுகதுக்கத்துனால மாற்றம் அடையாம இருக்கறதுக்கு கம்பீரம்னு பேர்.
‘தை4ர்யேண ஹிமவானிவ’ – ஹிமவானைப் போல தைர்யம்!

—————-

விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே ஸோமவத்ப்ரிய த3ர்ஶந: |
காலாக்3நிஸத்3ருஶ: க்ரோதே4 க்ஷமயா ப்ருதி2வீஸம: ৷৷ 18 ৷৷

‘விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே’ – வீரத்துல விஷ்ணுவைப் போன்றவர்.
‘ஸோமவத்ப்ரிய த3ர்ஶந:’ – பாக்கறதுக்கு சந்திரனைப் போல குளுமையானவன்!
‘காலாக்3நி ஸத்3ருஶ: க்ரோதே4‘-ஆனா கோபம் வந்தா காலாக்னிப் போல கோபம்!
‘க்ஷமயா ப்ருதி2வீ ஸம:’ – பொறுமையில பூமியைப் போன்றவன்-

————

த4நதே3ந ஸமஸ்த்யாகே3 ஸத்யே த4ர்ம இவாபர: |
தமேவம் குணஸம்பந்நம் ராமம் ஸத்யபராக்ரமம் ৷৷ 19 ৷৷

‘த4நதே3ந ஸமஸ்த்யாகே3 ‘ – த்யாகத்துல குபேரனைப் போல.
‘ஸத்யே த4ர்ம இவாபர:’ – ஸத்யத்ல அவன் தர்ம ராஜாவைப் போல இருக்கான்.
‘தம் ஏவம் குண ஸம்பந்ந:’ – இப்பேற்பட்ட எல்லா குணங்களும் நிரம்பினவனான தர்ம ஜ்யேஷ்டனான ராமனை,
‘ஸத்ய பராக்ரமம்’ –வீண் போகாத பராக்கிரமம் கொண்டவன்.

———–

ஜ்யேஷ்ட2ம் ஶ்ரேஷ்ட2கு3ணைர்யுக்தம் ப்ரியம் த3ஶரத2ஸ்ஸுதம் |
ப்ரக்ருதீநாம் ஹிதைர்யுக்தம் ப்ரக்ருதி ப்ரிய காம்யயா ৷৷ 20 ৷৷

‘ஜ்யேஷ்ட2ம்’ – மூத்த பிள்ளை
‘ஶ்ரேஷ்ட2கு3ணைர்யுக்தம்’ – எல்லா ஶ்ரேஷ்ட குணங்களும் நிரம்பின ,
‘ப்ரியம்’ – தனக்கு ரொம்ப ப்ரியமான,
‘ஸுதம்’ – பிள்ளையை,
‘த3ஶரத2:’ – தசரத மஹாராஜா ,
‘ப்ரக்ருதீநாம் ஹிதைர் யுக்தம்’ – ஜனங்களுடைய ஹிதத்தில் எப்பவும் நாட்டமாக இருப்பவனுமான அந்த ராமனை ,
‘ப்ரக்ருதி ப்ரிய காம்யயா’ – அந்த ஜனங்களும் இவன் ராஜா ஆகணும்னு ரொம்ப காத்துண்டு இருக்கா! அப்பேற்பட்ட ராமனை,

——————–

ஸ்ரீ ஸங்க்ஷேப ஸுந்தரகாண்டம்

ததோ ராவணநீதாயா: ஸீதாயா: சத்ரு கர்சன:
இயேஷ பதமன் வேஷ்டும் சாரணாசரிதே பதி –1.1 / 19

யதா ராகவ நிர்முக்த: சர: ச்வஸனவிக்ரம
கச்சேத்தத்வத் கமிஷ்யாமி லங்காம் ராவணபாலிதாம் –1.39 / 20

ப்ரவிச்ய நகரீம் லங்காம் கபிராஜ ஹிதங்கர:
சக்ரே(அ)த பாதம் ஸவ்யஞ்ச சத்ரூணாம் ஸ து மூர்த்தனி – 4.3 / 21

ப்ரவிசந் நிஷ்பதம்ச்சாபி ப்ரபதந்நுத் பதந்நபி
ஸர்வமப்யவகாசம் ஸ விச்சார மஹாகபி: — 12.1 / 22

த்ருஷ்டமந்த: புரம் ஸர்வம் த்ருஷ்டா ராவண யோஷித:
ந ஸீதா த்ருச்யதே ஸாத்த்வீ வ்ருதா ஜாதோ மம ச்ரம: –12.6 / 23

அசோகவநிகா சேயம் த்ருச்யதே யா மஹாத்ருமா
இமாமகமிஷ்யாமி ந ஹீயம் விசிதா மயா — 13.55 / 24

அசோகவநிகாயாம் து தஸ்யாம் வானரபுங்கவ:
ததோ மலினஸம்வீதாம் ராக்ஷஸீபி: ஸமாவ்ருதாம் — 15.18 / 25

உபவாஸக்ருசாம் தீனாம் நி:ச்வஸந்தீம் புன: புன:
ததர்ச சுக்லபக்ஷாதௌ சந்த்ரரேகாமிவாமலாம் — 15.19 / 26

தாம் ஸமீக்ஷ்ய விசாலாக்ஷீ மதிகம் க்ருசாம்
தர்க்கயாமாஸ ஸீதேதி காரணை ருபபாதிபி: –15.26 / 27

அஸ்யா தேவ்யா மனஸ்தஸ்மிம் ஸ்தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்ட்டிதம்
தேநேயம் ஸ ச தர்மாத்மா முஹூர்த்தமபி ஜீவதி– 15.51 / 28

ஏவம் ஸீதாம் ததா த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட: பவனஸம்பவ:
ஜகாம மனஸா ராமம் ப்ரசசம்ஸ ச தம் ப்ரபும் — 15.54 / 29

ராஜா தசரதோ நாம ரத்குஞ்ஜர வாஜிமான்
தஸ்ய புத்ர: ப்ரியோ ஜ்யேஷ்ட ஸ்தாராதிப நிபானன — 31.2-6 / 30

ராமோ நாம விசேஷஜ்ஞ: ச்ரேஷ்ட: ஸர்வ தனுஷ்மதாம்
தஸ்ய ஸத்யாபிஸந்தஸ்ய வ்ருத்தஸ்ய வசனாத் பிது:
ஸபார்ய: ஸஹ ச ப்ராத்ரா வீர: ப்ரவ்ராஜிதோ வனம் –31.6-8 / 31

ததஸ்த்வமர்ஷாபஹ்ருதா ஜானகீ ராவணேன து
ஸ மார்க்கமாணஸ் தாம் தேவீம் ராம: ஸீதா மநிந்திதாம்
ஆஸஸாத வனே மித்ரம் ஸுக்ரீவம் நாம வாரணம் — 31.10-11 / 32

ஸுக்ரீவேணாபி ஸந்திஷ்டா ஹரய: காமரூபிண:
திக்ஷு ஸர்வாஸு தாம் தேவீம் விசின்வந்தி ஸஹஸ்ரச:– 31.13 / 33

அஸ்யா ஹேதோர் விசாலாக்ஷ்யா: ஸாகரம் வேகவான் ப்லுத:
யதா ரூபாம் யதா வர்ணாம் யதா லக்ஷ்மீஞ்ச நிச்சிதாம்
அச்ரௌஷம் ராகவஸ்யாஹம் ஸேயமாஸாதிதா மயா — 31.14-15 / 34

ஜானகீ சாபி தச்ச்ருத்வா விஸ்மயம் பரமம் கதா –31.16
ஸா ததர்ச கபிம் தத்ர ப்ரச்ரயம் ப்ரியவாதினம் –32.2 / 35

தாமப்ரவீன் மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜ: — 33.2
அஹம் ராமஸ்ய ஸந்தேசாத் தேவி தூதஸ்தவாகத: — 34.2 / 36

வைதேஹி குசலீ ராமஸ்த்வாம் ச கௌசலமப்ரவீத்
லக்ஷ்மணச்ச மஹாதேஜா பர்த்துஸ்தே(அ)னுசர: ப்ரிய: — 34.4 / 37

ஸா தபோ குசலம் தேவீ நிசம்ய நரஸிஹ்மயோ
ப்ரீதி ஸம்ருஷ்ட ஸர்வாங்கீ ஹனுமந்த மதாப்ரவீத் — 34.5 / 38

கல்யாணீ பத காதேயம் லௌகிகீ ப்ரதிபாதி மா
ஏதி ஜீவந்த மானந்தோ நரம் வைஷ சதாதபி — 34.6 / 39

பூய ஏவ மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜ:
அப்ரவீத் ப்ரச்ரிதம் வாக்யம் ஸீதாப்ரத்யய காரணாத்
ராம நாமாங்கிதஞ்சேதம் பச்ய தேவ்யங்குலீயகம்
ப்ரத்ய யார்த்தம் தவாநீதம் தேந தத்தம் மஹாத்மனா — 36.1-3 / 40

க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர்த்து: கரவிபூஷணம்
பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜானகீ முதிதா (அ)பவத் –36.4 / 41

ததோ வஸ்த்ரகதம் முக்த்வா திவ்யம் சூடாமணிம் சுபம்
ப்ரதேயோ ராகவாயேதி ஸீதா ஹனுமதே ததௌ –38.6-7 / 42

ததஸ்து ஹனுமான் வீரோ பபஞ்ஜ ப்ரமதாவனம்
தாஸோ(அ)ஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மண:
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
அர்த்தயித்வா புரீம் லங்கா மபிவாத்ய ச மைதிலீம்
ஸம்ருத்தார்த்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் — 43.9-11 / 43

வேஷ்டயந்தி ஸ்ம லாங்கூலம் ஜீர்ணை: கார்ப்பாஸகை: படை:
தைலேன சாபிஷிச்யாத தே(அ)க்னிம் தத்ராப்யபாதயத் — 53.7 / 44

தீப்யமானே ததஸ்தஸ்ய லாங்கூலாக்ரே ஹனூமத:
ராக்ஷஸ்யஸ்தா விரூபாக்ஷ்ய: சம்ஸுர் தேவ்யாஸ்ததப்ரியம் — 53.23 / 45

மங்கலாபிமுகீ தஸ்ய ஸா ததாஸீன்மஹாகபே:
உபதஸ்தே விசாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹனம்
யத்யஸ்தி பதி சுச்ரூஷா யத்யஸ்தி சரிதம் தப:
யதி வாப்யேகபத்னீத்வம் சீதோ பவ ஹனூமத: — 53.26-27 / 46

ஹனூமதா வேகவதா வானரேண மஹாத்மனா
லங்காபுரம் ப்ரதக்தம் தத் ருத்ரேண த்ரிபுரம் யதா– 54.32 / 47

ஏவமாச்வாஸ்ய வைதேஹீம் ஹனுமான் மாருதாத்மஜ:
கமனாய மதிம் க்ருத்வா வைதேஹீமப்ப்யவாதயத்
தத: ஸ கபிசார்த்தூல: ஸ்வாமி ஸந்தர்சனோத்ஸுக:
ஆருரோஹ கிரிச்ரேஷ்ட மரிஷ்ட மரிமர்த்தன –56.25 / 48

நிபபாத மஹேந்த்ரஸ்ய சிகரே பாதபாகுலே –57.29
த்ருஷ்டா ஸீதேதி விக்ராந்த: ஸம்க்ஷேபேண ந்யவேதயத் — 57.35 / 49

ப்ரீதிமந்தஸ்ததஸ்ஸர்வே வாயு புத்ர புரஸ்ஸரா:
மஹேந்த்ராத்ரிம் பரித்யஜ்ய புப்லுவு: ப்லவகர்ஷபா: — 61.2 / 50

நிபேதுர் ஹரிராஜஸ்ய ஸமீபே ராகவஸ்ய ச — 64.38

ஹனுமாம்ச்ச மஹாபாஹு: ப்ரணம்ய சிரஸா தத:
நியதா மக்ஷதாம் தேவீம் ராகவாய ந்யவேதயத் — 64.39 / 51

தௌ ஜாதாச்வாஸௌ ராஜபுத்ரௌ விதித்வா தச்சாபிஜ்ஞானம் ராகவாய ப்ரதாய
தேவ்யா சாக்க்யாதம் ஸர்வ மேவானுபூர்வ்யாத் வாசா ஸம்பூர்ணம் வாயுபுத்ர: சசம்ச:–65.26 / 52

———-

ஸ்ரீ ராமபட்டாபிஷேகம்

வஸிஷ்டோ வாமதேவச்ச ஜாபாலிரத காச்யப:
காத்யாயனோ கௌதமச்ச ஸுயஜ்ஞோ விஜயஸ்ததா
அப்யஷிஞ்சந் நரவ்யாக்க்ரம் ப்ரஸன்னேன ஸுகந்தினா
ஸலிலேன ஸஹஸ்ராக்ஷம் வஸவோ வாஸவம் யதா –53

ஆயுஷ்ய மாரோக்யகரம் யசஸ்யம் ஸௌப்ராத்ருகம் புத்திகரம் சுபம் ச
ச்ரோதவ்ய மேதந்நியமேன ஸத்பிராக்க்யான மோஜஸ்கரம் ருத்திகாமை:54

பாராயண ஸமர்ப்பணம்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ப்ய: பரிபாலயந்தாம் ந்யாய்யேன மார்க்கேண மஹீம் மஹீசா:
கோப்ராஹ்மணேப்ப்ய: சுபமஸ்து நித்யம் லோகா: சமஸ்தா: ஸுகினோ பவந்து –55

ஸ்ரீ ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: –56

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி –57

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ –58-

———–

ஸ்ரீ எனும் திருநாமம் ஶ்ருணாதி என்பதைக் காட்டும்.
இங்கே ஹிம்ஸை என்ற சொல் போக்குதல் அல்லது அழித்தல் என்ற அர்த்தத்தில் வந்துள்ளது.
அதனால், ஶ்ருணாதி என்பது அழிக்கிறாள் – அதாவது எல்லா குற்றங்களையும் போக்குகிறாள் என்பதைக் காட்டுகிறது.
ஶ்ரூ-விஸ்தாரே என்பது மிகுதிப்படுத்துகிறாள் என்பதைச் சொல்லுகிறது.
இதிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ எனும் திருநாமம் ஶ்ரூணாதி என்பதைக் காட்டும்.
ஶ்ரூணாதி என்பது விஸ்தரிக்கிறாள் – அதாவது நல்ல குணங்களை அதிகரிக்கச் செய்கிறாள் என்பதை காட்டுகிறது.

பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே |

அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஶ்ச தே ||

——–

மார்க்கா லதா கண்டக ஸம்பூர்ணா: – அதாவது,
காடென்பது செடிகளும் முட்களும் நிறைந்த பாதையைக் கொண்டது.
அங்கிருப்பது துக்கமுடைத்து (அத: வநம் துக்கம்), என்று சொல்லி அவளைத் தடை செய்யும் போது,
பிராட்டியின் வார்த்தை:
“ஓ! இராமனே! நான் வனத்தில் உன் முன்னே நடந்து செல்வேன் – தே கமிஷ்யாமி அக்ரத:.”
அது மட்டுமல்ல. அப்படிச் செல்லும் போது அந்தப் பாதைகளில் உள்ள புற்களையும் முட்களையும்
தலைமிதி யுண்ணும்படி செய்து (குஶ கண்டகாந் ம்ருதந்தி) உன் திருவடிகளுக்கு நான் வழி வகுப்பேன் என்றாள்.

அவள் சொன்ன பாதையும் சாதாரண காட்டு வழியன்று.
அவள் பாதையென்று கூறியது தர்மத்தின் வழி.
அதில் இராமனுக்கு அவள் என்றும் துணையாய் இருப்பாள் என்பதை ஸஹ தர்மசரீ தவ என்றானிறே ஜனகனும்.
இராமாயணத்தில் தொட்டவிடமெங்கும் எம்பெருமான் காட்டும் தர்மம் சரணாகதி தர்மம் என்று
ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
ஆக பிராட்டி அவனுடன் காட்டுக்குச் சென்றது அந்தச் சரணாகதி தர்மத்தைக் காப்பாற்றவே.

அதைக் கொண்டு நோக்கும் போது, முன்னே சென்று அதைக் கடைப்பிடிப்பேன் என்றதையே
செய்திருக்கிறாள் என்பது தெளிபு.
தனிச்சிறையில் விளப்புற்ற கிளிமொழியாள் என்றார் ஆழ்வார்.
சிறை இருந்தவள் என்றார் பிள்ளை உலகாரியனும்.
அதற்காக, இராமனுக்கும் முன்னாக இலங்கைக்குச் சென்றதையே அவள் உமக்கு முன் நான் நடப்பேன் என்றது.
அப்படி அவள் எம்பெருமானுடைய தர்ம மார்க்கத்தில் போகும் போது, இடையில் இருக்கும்
முள்ளும், புல்லும் அவன் திருவடிக்கு – அதாவது அவன் திருவடியில் செய்யும் சரணாகதிக்கு
தடையாம்படி இருக்கும் என்றும், அதை தலை மடியச் செய்வதே தன் கார்யம் என்றும் சொன்னாள்.

இங்கே புல்லும், முள்ளுமாய் இருப்பது என்று அவள் சொன்னது அந்த ராவணப் பயலையன்றோ.
ராவணன் இவ்வுலகிற்கு ஒரு முள்ளாய் இருந்தான் என்று வேண்டித் தேவர் இரக்கவும், அவனும் விரும்பிப் பிறந்ததுவும்.
அவன் புல்லாயும் இருக்கிறான் என்பதாலேயே பிராட்டி த்ருணம் அந்தரத: என்று அவனுக்கும் தனக்கும் இடையே ஒரு புல்லை இட்டுப் பேசியது.
த்ருணமந்தர: க்ருத்வா என்று அஜ்ஞனாயிருக்கிற உன்னை, த்ருணமிவ லகு மேநே என்று
இத்ருணத்தோ பாதியாக நினைத்திருப்பது என்று பொகட்டாளாகவுமாம் என்றார் பெரியவாச்சான் பிள்ளை.

இப்படி புல்லாயும், முள்ளாயும் இருக்கும் அவனையும் அவன் அஹங்காரத்தையும் தலை மடியச் செய்து
அவனை இராமனின் திருவடியில் சேர்ப்பித்து, அத்திருவடிகளுக்கு ஒரு நோவும் வாராதபடி,
அதாவது நிறம் பெறச் செய்வேன் என்று பிராட்டி எம்பெருமானுக்கு உரைத்தாள்.
அப்படியே சிறை இருந்தும், மித்ரம் ஔபயிகம் கர்த்தும் என்றும்
தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி என்றும் உபதேசித்தும் தலைக்கட்டினாள்.
ஆனால் அவன் திருந்தாதொழிந்தது அவனுடைய பாபப்ராசுர்யமிறே என்றார் பிள்ளை லோகாசார்யர்.

இப்படி இலங்கைக்கு முன்னே நடந்து சென்றது மட்டுமன்று.
பெருமாள் “நாம் அதிகரித்த கார்யத்துக்கு ஸஹகாரியாக வேணுமே” என்ன,
அதிலும் அநுஷ்டானத்திலும் முற்பாடை என்கிறான் (ஜனகன்) என்றார் பெரியவாச்சான் பிள்ளை.
அவனுடைய தர்மத்துக்கு அவள் ஸஹகரிக்கையாவது, சரணாகத ரக்ஷணத்வத்தில்
அவனைக் காட்டிலும் முன்னிற்பவளாய் இருப்பாள் என்றது.

மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந என்றவனைக் காட்டிலும்,
முன்னின்று
பாபாநாம் வா ஶுபாநாம் வா என்று சரணம் அடையாத ராக்ஷஸிகளையும் ரக்ஷித்தவள் பிராட்டி.
இதை ஸ்ரீகுணரத்நகோசத்தில், பட்டரும்
மாதர் மைதிலி என்ற ஶ்லோகத்தில் அபராதம் செய்த கை உலராமலிருந்த ராக்ஷஸிகளை ரக்ஷித்த
உன்னால் சரணம் என்று சொன்ன பின் ரக்ஷித்த ராம கோஶ்டி சிறிதாக்கப்பட்டது என்றார்.

இதுவே அவள் காட்டிலே எம்பெருமானுக்கு முன்னே நடந்த நடையும், நடந்து கொண்டமையுமாம்.

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ காயத்ரி ராமாயணம்–

December 25, 2020

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி

———–

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியாதாக்கும் வேரி யங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேதன நீறு பட்டுழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கு

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டு எழுத்தினால்

ஆபதாம் அபஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

———–

ஸ்ரீ கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

ஸ்ரீ வால்மீகேர் முனிஸிம்ஹஸ்ய கவிதா வனசாரிண:
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராங்கதிம்

ய: பிபன் ஸததம் ராம சரிதாம்ருத ஸாகரம்
அத்ருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸ மகல்மஷம்

கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம்
ஸ்ரீ ராமாயண மஹாமாலா ரத்னம் வந்தே(அ) நிலாத்மஜம்

அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீசோக நாசனம்
கபீச மக்ஷஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்8

ஆஞ்ஜனேய மதிபாடலாலனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

க்யாத: ஸ்ரீராமதூத: பவனதனுபவ: பிங்கலாக்ஷ: சிகாவான்
ஸீதா சோகாபஹாரீ தசமுக விஜயீ லக்ஷ்மண: ப்ராணதாதா
ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கனே தீக்ஷிதோ ய:
வீர: ஸ்ரீமான் ஹனூமான் மம மனஸி வஸன் கார்யஸித்திம் தநோது

தூவரிக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி:
தாரித தசமுக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:

ஸ்ரீ வால்மீகி கிரிஸம்பூதா ராமஸாகர காமினீ
புனாது புவனம் புண்யா ராமாயண மஹாநதீ

ஸ்ரீ வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ரசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா

வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்த்யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ப்ய: பரம்
வ்யாக்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்

நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை
நமோ(அ)ஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ப்யோ
நமோ(அ)ஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ப்ய:

————

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||

————

வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதாத்மஜே |
வேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||

வேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியிலே ஸ்ரீ ராமனாக அவதாரம் பண்ண உடனே,
வேதம், ஸ்ரீ வால்மீகி முனிவர் வழியாக ஸ்ரீ ராமாயணமாக வெளிவந்துவிட்டது

———

ஸ்ரீ ராமம் ரகு குல திலகம்
சிவ தனு சாக்ரிஹத ஸீதா ஹஸ்த கரம்
அங்குல்யா பரண ஸோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய ஆஸ்ரயம்
வைதேஹி மநோ ஹரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கள கார்ய அநுகூலம்
ஸததம் ஸ்ரீ ராமசந்த்ர பாலயமாம்

—————-

ஸ்ரீ காயத்ரி -சந்தஸாம் மாதா -இதிஹாச ஸ்ரேஷிடம் ஸ்ரீ ராமாயணம் –

ஒவ்வொரு ஆயிரமாகப் பிரித்து முதல் ஸ்லோகமாக எடுத்து வந்த ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ காயத்ரி ராமாயணம்

இந்த ஸ்ரீ காயத்ரி ராமாயணத்தை படிப்பதால் ஸ்ரீ காயத்ரி ஜபம் செய்த புணயமும்
ஸ்ரீ ராமாயணம் முழுவதும் படித்த பலனையும் பெறலாம்

———–

தபஸ் ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்
நாரதம் ப்ரிபப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம் -1-

மகா முனிவர் வாலிமிகி நாரதரிடம் , “யார் தவம் செய்து வேதம்
ஓதுகிறார்கள் , யார் ஒரு சிறந்த முனிவர், வார்த்தைகளில் வல்லுநர்” என்று கேட்டார்.

வேத வேதாங்காதி ஸகல வித்யா பாராங்கதராய்
விரத நியம ஜபாதி அநுஷ்டான ஸம்பன்னராய்
வேதார்த்த வித்துக்களில் சிறந்தவராய்
முனி ஸ்ரேஷ்டரான நாரதரைக் குறித்து
உயர்ந்த தவமுடைய வால்மீகி மஹரிஷி ப்ரஸ்னம் பண்ணினார்

நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்

தும்புரு நாரதர் புகுந்தனர்

பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்

தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா

தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று

தபோ நிரதம்’ – தபஸில் ஈடுபட்டவராய் இருக்க வேண்டும்.
‘ஸ்வாத்யாய நிரதம்’ – தனது படிப்பில் திரும்பத் திரும்ப மனசை செலுத்துவதில் விருப்பம் உள்ளவரை இருக்க வேண்டும்.
வாக் விதாம் வரம்’ – வாக்கிற்கு என்ன பிரயோஜனம்? பகவானை பற்றி பேசிக் கொண்டிருப்பது. அதைச் செய்து கொண்டிருப்பவர்.
‘முனி புங்கவம்’ – மௌனமாய் இருக்ககூடிய முனி புங்கவருக்குள் ஸ்ரேஷ்ட்டர்.

“த‌ப‌சு, வேத‌வேதாந்த‌ங்க‌ள் இவைக‌ளைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ரும், உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ரும்,
முனி ஶ்ரேஷ்ட‌ருமான‌ நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, த‌வ‌த்தோடுகூடிய‌ வான்மீகி முனிவ‌ர் தெண்ட‌ம் ச‌ம‌ர்ப்பித்து வினாவினார்.”

1) த‌போநிர‌த‌ம் :– த‌வ‌த்தைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ர் என்ற‌தினால் அவ‌ர் ச‌ர்வ‌ச‌க்தி வாய்ந்த‌வ‌ர் என்ப‌து ஸூச‌க‌ம்.
“ய‌த்துஸ்த‌ர‌ம் ய‌த்துராப‌ம் ய‌த்துர்க‌ம் ய‌ச்ச‌துஷ்க‌ர‌ம்|
தத் ஸ‌ர்வ‌ம் த‌ப‌ஸாஸாத்ய‌ம் த‌போஹி துர‌திக்ர‌மம் ||”
“எது க‌ட‌க்க‌முடியாததோ, எது பெற‌ முடியாததோ, எது செய்ய‌முடியாததோ அதெல்லாம் த‌வ‌த்தால் சாதிக்க‌முடியும்.
ஆகையால் த‌வ‌த்தை வெல்வ‌த‌ரிது.”
“வேண்டிய‌ வேண்டியாங் கெய்த‌லாற்செய்த‌வ‌ மீண்டு முய‌ல‌ப் ப‌டும்.
கூற்ற‌ங் குதித்த‌லும் கைகூடு நோற்ற‌லி னாற்ற‌ ற‌லைப்ப‌ட் ட‌வ‌ர்க்கு” (திருக்குற‌ள்) என்ற‌ ஆதார‌ங்க‌ள் நோக்க‌த்த‌க்க‌ன‌.

2) ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம்:– வேத‌வேதாந்த‌ங்க‌ளைப் பூர்ண‌மாக‌ அடைந்த‌வ‌ர், என்ற‌தினால்
நார‌த‌ர் சொல்வ‌தெல்லாம் த‌ரும‌த்தோடு பொருந்திய‌ வ‌ச‌ன‌ம் என்ப‌து ஸூச‌க‌ம்.

3) வாக்விதாம்வ‌ர‌ம் :– உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ர், என்ற‌தினால் சிற‌ந்த‌ போத‌னாச‌க்தி வாய்ந்த‌வ‌ரெனவும்,
வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ச‌க‌ல‌ சாஸ்திர‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ அறிந்த‌வ‌ரென‌வும் பொருள்ப‌டும்.

4) முனி புங்க‌வ‌ம்:– முனிஶ்ரேஷ்ட‌ர் என்ற‌தினால் இந்திரிய‌ நிக்கிர‌க‌முள்ள‌வ‌ர் என்ப‌தும்,
ப‌க‌வ‌த்யான‌த்தோடு கூடிய‌வ‌ரென்ப‌தும், திரிகால‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிய‌க்கூடிய‌வ‌ரென்ப‌தும் , ஸ‌தா ஜ‌பப‌ரரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

5)நார‌த‌ம்:– நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, என்ற‌தினால், நார‌ம் – ஜ்ஞான‌ம், அதைக் கொடுக்கக் கூடிய‌வ‌ர் என்ப‌தும்,
நார‌ம் – அஜ்ஞான‌ம், அதை நிவ‌ர்த்தி செய்ய‌க்கூடிய‌வ‌ ரென்ப‌தும், த்ரிலோக‌ ஸ‌ஞ்சாரியான‌ப‌டியால்,
மூன்று லோக‌த்திலுள்ள‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிப‌வ‌ரென்ப‌தும், பிர‌ம்ம‌ புத்திரரான‌ப‌டியால் உத்த‌ம‌ குல‌த்தைச் சேர்ந்த‌வ‌ரென்ப‌தும் ஸூசக‌ம்.

ஆக‌வே, இந்த‌ ஐந்து ப‌த‌ங்க‌ளினால், ஆசார்ய‌ன் பூர்ண‌மான‌ த‌ப‌ஸை யுடைய‌வ‌ராக‌வும்,
வேத‌வேதாந்த‌ங்க‌ளையும் வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ஸ‌க‌ல‌ ஶாஸ்திர‌ங்க‌ளையும் உண‌ர்ந்த‌வ‌ராக‌வும்,
ப‌க‌வ‌த் ப‌க்தியுட‌ன் அந‌வ‌ர‌த‌ ஜ‌பப‌ரராக‌வும் சிஷ்ய‌னுடைய‌ அஜ்ஞான‌த்தைப் போக்கி, ஜ்ஞான‌த்தைக் கொடுத்துப்
ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்தை உப‌தேசிக்க‌வ‌ல்ல‌வ‌ராக‌வும், ஜிதேந்திரிய‌ராக‌வும், உத்த‌ம‌ குல‌த்த‌வ‌ராக‌வுமிருக்க‌வேணும்
எனறு ஆசார்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

“குஶ‌ப்த‌ஸ் த்வ‌ந்த‌கார‌ஸ்யாத் ருகார‌ஸ்த‌ந் நிவ‌ர்த‌க‌:|
அந்த‌கார‌ நிரோதித்வாத் குருரித்ய‌பி தீய‌தே||”

“கு என்ப‌து அஜ்ஞான‌த்தையும், ரு என்ப‌து அத‌ன் நிவ‌ர்த்தியையும் சொல்லுகிற‌ ப‌டியால்
ம‌ன‌தின் க‌ண்ணுள்ள‌ அஜ்ஞான‌மாகிற‌ இருளை நீக்கி மெய்ஞ்ஞான‌மாகிற‌ பிர‌காச‌த்தைத் த‌ருவ‌தால் குரு வென‌ச் சாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

குல‌ன‌ருள் தெய்வ‌ங்கொள்கை மேன்மை
க‌லைப‌யில் தெளிவு க‌ட்டுரை வ‌ண்மை
நில‌ம‌லை நிறைகோல் ம‌ல‌ர் நிக‌ர் மாட்சியும்
உல‌கிய‌ல‌றிவோ டுய‌ர்குண‌ மினைய‌வும்
அமைப‌வ‌ன் நூலுரையாசிரிய‌ன்னே.” என்ற‌ ந‌ன்னூல் இங்கு நோக்க‌த் த‌க்க‌து.

தப -என்று
பாபத்தைப் போக்கி ஊணை வாட்டி இந்திரியங்களை வசமாக்கிக் கொடுக்க வல்ல க்ருச்ரம் சந்த்ராயணம் முதலிய கர்மத்துக்கும்
யம நியம ஆஸன பிராணாயாம ப்ரத்யாஹார தாரண தியானங்களை அங்கங்களாக யுடைய ஸமாதி என்கிற யோகத்திற்கும்
வேதத்துக்கும்
பர ப்ரஹ்மத்திற்கும்
தபோ விசேஷமான ந்யாஸத்திற்கும் பெயர்

ஸ்வாத்யாயம் -என்று
வேதத்திற்கும் ஜெபத்திற்கும் பெயர்

வாக் என்று
வியாகரணம் சிஷை சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு அங்கங்களும்
வித்யா சாமான்யத்திற்கும்
அந்த வந்த சமயத்துக்கு வேண்டும் அர்த்தங்களை போதிக்க வல்ல சப்தத்துக்கும்
ஸரஸ்வதிக்கும் பெயர்

முனி என்று
மனனம்-அதாவது த்யானம் பண்ணுகிறவர்களுக்குப் பெயர்

நார என்று
ப்ரஹ்மத்தையும்
அஞ்ஞானத்தையும் சொல்லும்

ஆக
தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் — முனி புங்கவம்-என்கிற பதங்களினால்
ஆச்சார்யன்
கர்மயோக ஞானயோக பக்தி யோகங்களிலும் ப்ரபத்தியிலும் ஊற்றம் யுடையவனாய்
வேத வேதாங்களையும் அங்கங்களையும் நியாய மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ரங்களையும் சம்ஸயம் விபர்யயம் அற உணர்ந்தவனாய்
அனவ்ரத ஜெப பரனாய்
ஸிஷ்யனுடைய சம்சயம் அறும் படி உபதேசிக்க வல்லனாய்
ப்ரஹ்ம வித் அக்ரேரராய்
அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லனாய்
ஜிதேந்த்ரியனாய்
ஸத் குல ப்ரஸூதனாய்
ஸ்ரவண மனன நிதித்யாஸன தத் பரனாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறது –

நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்

தும்புரு நாரதர் புகுந்தனர்

பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்

தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா

தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று

——–

சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்

1) த‌ப‌ஸ்வீ: – என்ற‌தினால் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌த்தை அறிய‌ ஆவ‌ல்கொண்டவ‌ரென்ப‌தும்,
ப‌ல‌ விர‌த‌ங்க‌ளை அனுஷ்டித்த‌வ‌ரென்ப‌தும், ஶ‌ம‌த‌மாதி ஸ‌ம்ப‌ந்த‌ங்க‌ளை அடைந்த‌வ‌ரென்ப‌தும்,
ஜீவ‌காருண்ய‌முடைய‌வ‌ரென்ப‌தும், க‌ள‌ங்க‌ம‌ற்ற‌ இருத‌ய‌முடைய‌வ‌ரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

“உற்ற‌நோய் நோன்ற‌லுயிர்க்குறுக‌ண் செய்யாமை
ய‌ற்றே த‌வ‌த்திற்குரு” (திருக்குற‌ள்)

2) ப‌ரிபப்ர‌ச்ச‌ – என்ற‌தினால் விதிவ‌துப‌ஸ‌ந்ந‌: என்ப‌து பொருள். அதாவ‌து,
உப‌தேச‌ம் பெற்றுக் கொள்ள‌, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதி ப்ர‌கார‌ம் கேட்க‌வேண்டுமென்ப‌து

தத்வித்தி ப்ர‌ணிபாதேந‌ ப‌ரிப்ர‌ஶ்நேந‌ ஸேவ‌யா|
உப‌தேக்ஷ்ய‌ந்தி தே ஜ்ஞான‌ம் ஜ்ஞாநிந‌ஸ் தத்வ‌த‌ர்ஶிந‌: ||

“அந்த‌ ஆத்ம‌ ஜ்ஞான‌த்தை, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதிப்ர‌கார‌மான‌ கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ள‌க் க‌ட‌வாய். தத்வ‌ம‌றிந்த‌ ப‌ண்டித‌ர்க‌ள் உன‌க்கு ஜ்ஞான‌த்தை போதிப்பார்க‌ள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த‌ ஸ்ரீகிருஷ்ண‌ ப‌க‌வானுடைய‌ வ‌ச‌ன‌ம் இங்கு க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

ஆக‌வே, த‌ப‌ஸ்வீ, ப‌ரிப்ர‌ச்ச‌ என்ற‌ ப‌த‌ங்க‌ளினால் சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஸ‌த்புத்திஸ் ஸாது ஸேவீ ஸ‌முசித‌ ச‌ரித‌ஸ் தத்வ‌ போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ் த்ய‌க்த‌மாந‌: ப்ர‌ணி ப‌த‌ந‌ ப‌ர‌: ப்ர‌ஶ்ந‌ கால‌ ப்ர‌தீக்ஷ‌:||
ஶாந்தோ தாந்தோ ந‌ஸூயுஸ் ஸ‌ர‌ண‌முப‌க‌த‌ஸ் ஶாஸ்த்ர‌ விஶ்வாஸ‌ஶாலி|
ஶிஷ்ய‌:ப்ராப்த‌: ப‌ரீக்ஷாங் க்ருத‌வி த‌பிம‌த‌ம் தத்வ‌த‌ஸ் ஸிக்ஷ‌ணீய‌:

“ந‌ற்புத்தியுட‌ன் ஸாது ஸேவை உடைய‌வ‌னாகி, ந‌ன்ன‌ட‌த்தை உடைய‌வ‌னும், உண்மை ஞான‌த்தை அறிவ‌தில்
அபிலாஷை உடைய‌வ‌னும், ப‌ணிவிடைக்கார‌னும், மானாவ‌மான‌ மென்ப‌த‌ற்ற‌வ‌னும், ப்ர‌ஶ்ந‌ கால‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌னும்,
சாந்த‌னும், அஸூயை இல்லாத‌வ‌னும், ச‌ர‌ணாக‌தி ய‌டைந்த‌வ‌னும், சாஸ்திர‌ விஶ்வாச‌முடைய‌வ‌னுமே
சிஷ்ய‌னாக‌ அங்கீக‌ரிக்க‌த் த‌குந்த‌வ‌ன்” என்ப‌து நோக்க‌த் த‌க்க‌து.

தபஸ்வீ-என்று சிஷ்ய லக்ஷணம் சொல்கிறது
அதாவது
பரமாத்ம ஞான சாதனமான உயர்ந்த தபஸ்ஸையும்
வேதத்தில் கர்ம காண்டங்களை பரிசீலித்து ஸ்வர்க்காதி ஷூத்ர பலன்களில் வைராக்யம் யுடையவனாய்
மோக்ஷத்தில் அபிருசி யுடையவனாய்
ஜிதேந்த்ரியனாய்
சாந்தனாய் –இருக்க வேண்டும் என்று சொல்கிறது
இதனால் ஆச்சார்யாத் தைவ வித்யா விதி தாஸாதிஷ்டம் ப்ரபாத் –என்று
சதாச்சார்யன் இடத்தில் நின்றும் நியம பூர்வகமாகக் கற்ற வித்யையே மோக்ஷ உபயோகியாம் என்னுமது வெளியிடப்பட்டது-
ஆச்சார்யன் உபதேசம் அவரது ஆச்சார்யருக்கு ப்ரீதிக்கு உறுப்பாக என்று மேல் மேல் ஸ்ரீ லஷ்மீ நாதன் பர்யந்தம் போகுமே

வால்மீகி ப‌க‌வான் ப்ருகு வ‌ம்ச‌த்தில் அவ‌த‌ரித்த‌வ‌ர். இவ‌ர் (வ‌ல்மீக‌ம் = புற்று) புற்றிலிருந்து வெளி வ‌ந்ததினால்–வால்மீகி என்று பெய‌ர். இவ‌ர்க்கு “ப்ராசேத‌ஸ‌ர்” (அதாவ‌து வ‌ருண‌னுடைய‌ புத்திரர்) என்னும் பெய‌ருண்டு.

இவர் ஓர் இடத்தில் சரியாமல் உடகார்ந்து மெய் மறந்து தபஸ்ஸு பண்ணிக் கொண்டு இருக்கையில் இவர் மேல் புற்று மூடிப் போய் விட்டது
வருண தேவன் மழை பொழிந்து அப் புற்றைக் கரைத்து விட அங்கு நின்றும் புறப்பட்டார்
ஆகவே வால்மீகி புற்றில் நின்றும் வெளிப்பட வருணன் காரணமானதால் ப்ராசேதனர் -வருண புத்ரன் என்றும் செல்லப்படுகிறார்

—————

ஸ ஹத்வா ராக்ஷஸாந் ஸர்வான் யக்ஞக்நான் ரகுநந்தன:
ரிஷிபி: பூஜித: ஸம்யக் யதேந்த்ரோ விஜயீபுரா –-2-

ரகு குலத்தின் மகன் அனைத்து ராட்சசர்களையும் கொன்று, நெருப்பு வேள்விகளைப் பாதுகாத்து முனிவர்களால் வணங்கப்பட்டான், வெற்றி பெற்றபோது இந்திரனைப்
போலவே 

முன்பு தேவாஸூர யுத்தத்தில் அஸூரர்களை வெல்லும் போது இந்திரன் அஸூரர்களைக் கொன்றது போலே அந்த சித்தாஸ்ரமத்தில் விச்வாமித்ரருடைய யாகத்தை அழிக்க வந்த அரக்கர்கள் அனைவரையும் ஸ்ரீ ராகவன் கொன்று ருஷிகளினால் பூஜிக்கப் பட்டார்

———-

விஸ்வாமித்ரஸ்து தர்மாத்மா ஸ்ருத்வா ஜனகபாஷித:
வத்ஸ ராம் தனு: பஸ்ய இதி ராகவம்ப்ரவீத் -3-

தர்மத்தின் உருவகமான விஸ்வாமித்திரர் , ஜனகர்
சொன்ன வார்த்தைகளைக் கேட்ட பிறகு , “குழந்தை ராமா , தயவுசெய்து இந்த வில்லைப் பார்” என்றார்.

இந்த வில்லை ஒருவராலும் நாண் ஏற்ற முடியாது என்று ஜனக மஹாராஜர் மொழிந்தத்தைக் கேட்டு தர்மாத்வாகிய விச்வாமித்ரர் இராகவனைப் பார்த்து குழந்தாய் ஸ்ரீ ராகவ அந்த வில்லை நீர் பாரும் என்று பணித்தார்

———–

துஷ்டாவாஸ்ய ததா வம்ஸம் ப்ரவிஸ்ய ஸ விஸாம்புதே
ஸயநீயம் நரேந்த்ரஸ்ய ததாசாத்ய வ்யதிஷ்டத -4

பின்னர் அவர்  ராஜாவின் படுக்கையறையை அடைந்து, அருகில் சென்று வெளியே நின்று பாராட்டி, ராஜாவின் விரிவான வம்சாவளியைக் கூறினார்.

ஸூ மந்த்ரர் என்பவர் தசரத மஹா ராஜருடைய அரண்மனையில் நுழைந்து சயன க்ருஹத்தை அடைந்து நின்று அப்பொழுது அந்த தசரத மஹாராஜருடைய வம்ஸா வழியைச் சொல்லி ஸ்துதித்தார்

————–

வனவாசம் ஹி ஸங்க்யாய வாஸாம்ஸ்யாபரணானி ச
பர்தாரமனுகச்சந்த்யை சீதாயை ஸ்வஸுரோ ததௌ -5-

சீதை காட்டில் வசிக்க வேண்டிய ஆண்டுகளின் அடிப்படையில், அவள் தன் கணவனுடன் செல்லும்போது, அவளுடைய மாமனார் அவளுக்குப் போதுமான ஆடைகளையும் ஆபரணங்களையும் கொடுத்தார்

இராகவனுடன் கூட வனவாஸம் போக நிச்சயித்துத் தன் பார்த்தாவைப் பின் சென்று போகிற சீதாப் பிராட்டியாருக்கு மாமனாராகிய தசரத மஹா ராஜர் வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் கொடுத்தார்

————–

ராஜா ஸத்யம் ச தர்ம்ஸ்ச ராஜா குலவதாம் குலம்
ராஜா மாதா பிதா சைவ ராஜா ஹிதகரோ ந்ருணாம் -6-

ராஜா என்பவர் உண்மையும் தர்மமுமாவார் , நல்ல குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் இறைவன் அவரே, தாயும் தந்தையும் அவரே, மக்களுக்கு நன்மை செய்பவரும் அவரே.

உலகத்தில் சத்தியத்தையும் தர்மத்தையும் நடப்பிக்க வைப்பவன் அரசன்
நற் குலத்தில் பிறந்தவர்களுடைய குலாச்சாரத்தையும் நடப்பிக்க வல்லவன் அரசன்
ஜனங்களுக்குத் தாயும் தந்தையும் ஹிதம் செய்பவன் அரசனே என்று பரதன் சொல்லுகிறான்

—————-

நிரீக்ஷ்ய ஸ முஹூர்த்தம் து ததர்ஸ பரதோ குரும்
உடஜே ராம மாசீனம் ஜடாமண்டல தாரிணம் -7-

ஒரு நல்ல நேரத்திற்காகக் காத்திருந்த பிறகு, பரதன் தனது குருவான ராமரைக் கண்டார் , அவர் மந்தமான கூந்தலுடன், மரத்தாலான துணியை அணிந்திருந்தார்.

பரதன் சித்ர கூடத்தில் பர்ண சாலையில் ஜடையைச் சக்ராதாரமாகக் கட்டிக் கொண்டு வீற்று இருக்கும் ஸ்ரீ ராமனைப் பார்த்து ஜடாதாரியாகிற இம் மஹாநுபாவன் யாராய் இருக்கலாம் -என்று சிறிது நேரம் நிதானித்துப் பார்த்துப் பின்பு இவர் நம் குருவாகிய ராகவன் என்று அறிந்தார்

—————-

யதி: புத்தி: த்ருஷ்டும் அகஸ்த்யம் தம் மஹாமுனிம் அத்யைவகமனே புத்திம் ரோசயஸ்வ மஹாயஸ:-8-

இதயமே அனைத்து ஞானத்திற்கும் ஆதாரம்-ஐயா, நீங்கள் மகஸ்தி மற்றும் சிறந்த மனிதர், அகஸ்திய முனிவரைப் பார்க்க விரும்பினால், அதைச் செய்யத் தொடங்க விரைவில் முடிவு செய்யுங்கள்.

பெரும் புகழ் படைத்த ஸ்ரீ ராகவனே நீர் முனி ஸ்ரேஷ்டராகிய அகஸ்திய மஹ ரிஷியைப் பார்க்க விரும்பினீராகில் இப்பொழுதே அவருடைய ஆஸ்ரமத்தைக் குறித்துச் செல்ல மனம் வையும் என்று ஸூ தீஷ்ணர் சொன்னார்

————–

பரதஸ் யார்ய புத்ரஸ்ய ஸ்வ ஸ்ரூணாம் மம ச ப்ரபோ ம்ருகரூபமிதம் வ்யக்தம் விஸ்மயம் ஜனயிஷ்யதி-9-

பாரதம் ஆரியபுத்திரம், என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்,-ஐயோ கடவுளே, மிகவும் அழகாக இருக்கும் இந்த மான், பரதனுக்கும், உங்களுக்கும், என் மாமியாருக்கும், ஒரு பெரிய அதிசய உணர்வை உருவாக்கும்

ஓ ஸ்வாமீ அதி விசித்ரமாகிய இந்த மான் உமக்கும் பரதனுக்கும் என் மாமிமார்களுக்கும் எனக்கும் வெகு ஆச்சர்யத்தை உண்டு பண்ணுமாகையாலே இதைப் பிடித்துத் தாரும் என சீதாப்பிராட்டியார் வேண்டுகிறார்

———-

கச்ச ஸீக்ரமிதோ ராம ஸுக்ரீவ.ந்தம் மஹாபலம் வ்யஸ்ய.ந்தம் குரு க்ஷிப்ரம் இதோ கத்வாத்ய ராகவ: -10-

ஓ ராமா, இங்கிருந்து உடனடியாகப் போய், மிகவும் வலிமையான சுக்ரீவனிடம், ஓ ராகவா, அவனை உன் நெருங்கிய நண்பனாக்கிக் கொள்

ரகுகுல நாதனாகிய ஓ இராமனே நீர் இங்கு நின்றும் சீக்கிரம் புறப்பட்டுப் போய் மஹா பலசாலியாகிய ஸூக்ரீவன் என்கிற வானர அதிபதியான அக்னி ஸாக்ஷிகமாக ஸ்நேஹன் ஆக்கிக் கொள்ளும் என்று கபந்தன் சொன்னான்

———–

தேஸகாலௌ ப்ரதீக்ஷஸ்வ சமமாண: ப்ரியாப்ரியே ஸுகது:க்கஸஹ: காலே ஸுக்ரீவவஸகோ பவ:-11-பஜஸ் வாத்ய –-பாட பேதம்

காலத்தையும் இடத்தையும் புரிந்துகொண்டு, விருப்பு வெறுப்புகளைப் பொறுமையாகக் கருதி, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதி, சுக்ரீவனுக்குக் கீழ்ப்படிந்து வாழுங்கள்..

அப்பா அங்கதனே இனி நீ தேச காலங்களை ஆலோசித்து –இந்த தேசத்தில் இந்தக் காலத்தில் இம் மாதிரி இருக்க வேண்டும் மற்றப் பொழுது மற்றப் படியாக இருக்க வேண்டும் என்று விசாரித்து அநிஷ்டம் நேர்ந்ததாகில் அதை இஷ்டம் போலவும் துக்கம் நேர்ந்தால் அதை ஸூகம் போலவும் பாவித்துப் பொறை -பொறுமை அடக்கம் யுற்றவனாய்க் கொண்டு
ஸூ க்ரீவனுக்கு அதீனமாக இருக்கக் கடவாய் என்று வாலி சொன்னான் –

———

வந்த்யாஸ்தே து தபஸ்ஸித்தாஸ்தாபஸா வீதகல்மஷா: ப்ரஷ்டவ்யா சாபி சீதயா: ப்ரவ்ருத்திர்வினையான் விதை:-12-

தவம் செய்யும் சித்தர்கள் வணக்கத்திற்குரியவர்கள், ஏனெனில் அவர்கள் செய்த தவத்தால் நீங்கள் பாவங்களிலிருந்து விடுபட்டவர்கள், அவர்களிடம் சீதையின் தற்போதைய நிலையை மிகுந்த பணிவுடன் விசாரிக்கலாம்

ஓ வானர வீரர்களே தபஸ்ஸினால் பாபம் அற்றவர்களாய் அதனால் அணிமாதி ஸித்தியை அடைந்து இருக்கிற அந்த மஹரிஷிகளை நீங்கள் பணிந்து விநயத்துடனே சீதா தேவி இருக்கும் இடத்தை அவர்களைக் கேளுங்கோள் என்று ஸூக்ரீவன் சொன்னான்

—————–

ஸ நிர்ஜித்ய புரீம் ஸ்ரேஷ்டாம் லங்காம் தாம் காம்ரூபிணீம் விக்ரமேண மஹா: தேஜா: ஹநுமான் மாருதாத்மஜ:-13-

காற்றின் மகனான அனுமன் , வீரமும் பிரகாசமும் கொண்டவன், நகரத்தின் தெய்வமான லங்காவை வென்றவன், தான் விரும்பும் எந்த உறுதியையும் எடுக்கக்கூடியவன்.

வாயு புத்ரராய் மிக்க தேஜஸ்ஸை யுடையவைராக்கிய அந்த ஹனுமான் வேண்டும் உருவம் கொள்ள வல்லவனாய் சிறந்த அந்த லங்கா புரிக்கு தேவதையாகிய இலங்கியை பராக்ரமத்தினால் வென்றார்

————

தன்யா தேவா: ஸகந்தர்வா: ஸ்த்தாஸ்ச பரமர்ஷய: மம பஸ்யந்தி யே நாதம் ராமம் ராஜீவலோசனம்-14-

தாமரை போன்ற அழகான கண்களைக் கொண்ட, கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் முனிவர்களால் பார்க்கப்படும் என் ஆண்டவரான ராமரை நான் காண்கிறேன் , அது அவர்களின் அதிர்ஷ்டத்தின் எழுச்சி போல.

என்னைப் பிரிந்த சோகத்தினால் தேவ லோகத்தை அடைந்த என்னுடைய பர்த்தாவாகிய செந்தாமரைப் பூ போன்ற கண்களை உடைய இராகவனை அங்குள்ள எந்த தேவர்களும் கந்தர்வர்களும் சித்தர்களும் மஹ ரிஷிகளும் பார்க்கிறார்களோ அவர்கள் மஹா பாக்யம் செய்தவர்கள் என்று ஸீதா தேவி சொல்கிறார்

———–

மங்களாபிமுகே தஸ்ய ஸா ததாஸீன்மஹாகபே உபதஸ்தே விஸாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹனம்-15-

மங்களகரமான முகத்தைக் கொண்ட அந்தப் பெண், பெரிய குரங்கை ஆசீர்வதிக்க முடிவு செய்து, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்ட பிறகு , நெருப்புக் கடவுளை வணங்கி பிரார்த்தனை செய்தாள் .

அப்பொழுது பரந்த கண்களை யுடைய அந்த ஸீதா தேவி வாநரோத்தமனாகிற அந்த ஹநுமானுக்கு வாலில் நெருப்புச் சுடாமல் இருக்க வேண்டும் என்ற ஸ்ருதி பரிசுத்தையாய்க் கொண்டு அக்னியைக் கிட்டிப் பிரார்த்தித்தாள்

————

ஹிதம் மஹார்த்தம் ம்ருதுஹேதுஸமிதம் வ்யதீதகாலாயதிஸம்ப்ரதிக்ஷமம் நிஸம்ய தத்வாக்யமுபஸ்திதஜ்வர ப்ரஸங்கவானுத்தரமேததப்ரவீத்-16-ம்ருது ஹேது –பாட பேதம்

நன்மைக்காகக் கூறப்பட்ட சிறந்த பலன்களைத் தரும், இனிமையான,
தர்க்கரீதியான மற்றும் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற அந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு, ராவணன் மிகுந்த கோபத்துடன் இவ்வாறு பதிலளித்தான்.

பிற் காலத்தில் நன்மையை விளைக்குமதாய் அக்கணமே ஸூக ஜனகமாய் யுக்தி யுக்தமாய் பூத பவிஷ்யத் வர்த்தமாநங்கள் என்கிற மூன்று காலங்களுக்கும் உரியதாய் நல் வார்த்தையாய்ச் சொன்ன விபீஷணன் சொல்லைக் கேட்டு தன் கோரிக்கையில் பிடிவாதம் உடைய இராவணன் சினம் உள்ளவனாய்க் கொண்டு இதை மேற் கூறியபடி உத்தரம் பதில் சொன்னான்

————–

தர்மாத்மா ரக்ஷஸாம் ஸ்ரேஷ்ட: ஸம்ப்ராப்தோsயம் விபீஷண: லங்கைஸ்வர்யம் த்ருவம் ஸ்ரீமா நயம் ப்ராப்நோத்யகண்டகம்-17-

தர்மத்தின் உருவகமான விபீஷணன் என்ற அந்தப் பெரிய ராட்சசன் வந்து என்னுடன் சேர்ந்தான், சந்தேகமே இல்லாமல், அவன் இலங்கையின் செல்வத்தை அடைவான்.

தர்ம சிந்தை யுடையவனாய் ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான இந்த விபீஷணன் என்னை அடைந்தான் ஆகையால் இவ்வளவு அனுகூல்யமுடைய இந்த விபீஷணன் இப்பொழுதே தடையின்றி இலங்கையினுடைய ஐஸ்வர்யத்தை அடையப் போகிறான் என்று இராகவன் பணித்தார்

———-

யோ வஜ்ரபாதாஸனிஸன்னிபாதாத் ந சுக்ஷூபே நாபி ச்சால ராஜா ஸ ராமபாணார்பிஹதோ ப்ருஸார்த்த: சசாலசாபம் ச முமோச வீர:-18-

வஜ்ராயுதனின் தாக்குதலுக்கும், இடி முழக்கத்திற்கும் ஒருபோதும் கவலைப்படாத அந்த மன்னன் இப்போது ராமனின் அம்பினால் தாக்கப்பட்டான். அந்த வீரன் அதிர்ச்சியால் சோகமடைந்து, மிகவும் பதட்டமடைந்தான். நடுங்கத் தொடங்கினான், அவன் கைகளில் இருந்து வில் நழுவியது.

எந்த இராவணன் முன்பு இந்திரனுடைய வஜ்ர ஆயுதத்தினாலும் அடி உண்டவனாய்க் கொண்டு ஆனால் ஒரு வருத்தத்தையும் யடைய வில்லையோ சலிக்கவும் கூட வில்லையோ
அந்த ராவணன் இராகவனுடைய பாணத்தினால் அடிக்கப் பட்டவனாய்க் கொண்டு அதனால் மிக வருத்தம் உள்ளவனாய் நடுங்கினான் கையிலிருந்து வில்லையும் நழுவ விட்டான்

———

யஸ்ய விக்ரமமாஸாத்ய ராக்ஷஸா நிதனம் கதா: தம் மந்யே ராகவம் வீரம் நாராயணம்னாமயம்-19-

அவரது புகழால் ஈர்க்கப்பட்டு, பல ராட்சசர்கள் இறந்தனர், மேலும் அந்த வீரம் மிக்க ராமரை,
உண்மையான கடவுள் நாராயணனாக நான் கருதுகிறேன்.

எந்த இராகவனுடைய பராக்ரமத்திற்கு முன்னே நின்று அரக்கர்கள் மாண்டு விட்டார்களோ அந்த வீரனாகிய இராகவனை நான் ஒரு பத்திரமற்ற நாராயணனாக எண்ணுகிறேன் என்று இராவணன் சொன்னான்

———–

ந தே தத்ருஸிரே ராமம் தஹந்தமரிவாஹினீம் மோஹிதா: பரமாஸ்த்ரேன காந்தர்வேண மஹாதமனா-20-

அந்த ராட்சசர்களால், எதிரிகளின் படையை எரித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமரைப் பார்க்க முடியவில்லை , ஏனெனில் அவர்கள் பெரிய ராமரால் அனுப்பப்பட்ட கந்தர்வன் என்ற பெரிய அம்பினால் தங்கள் உணர்வுகளை இழந்தனர் .

இராகவன் பிரயோகித்த பெரும் தன்மையை யுடைய சிறந்த அந்த காந்தர்வம் என்கிற அஸ்திரத்தினால் அரக்கர்கள் மோஹம் அடைந்தவர்களாய் சத்ரு ஸைன்யத்தை பாணத்தினால் கொளுத்துகிற இராகவனை காணாதவர்கள் ஆனார்கள்

———–

ப்ரணம்ய தேவதாப்யஸ்ச்ச ப்ராஹ்மணே ப்யஸ்ச மைத்லீ பத்தாஞ் ஜலிபுடா சேதமுவாசாக்.நிஸமீபத:-21-

பிராமணர்களுக்கும் தேவர்களுக்கும் வணக்கம் செலுத்திய பிறகு , மைதிலி கைகளை உயர்த்தி, நெருப்பின் அருகே சென்று சொன்னாள்.

மிதிலேசனுடைய பெண்ணான ஸீதா தேவி அக்னி ப்ரவேஸ காலத்தில் தேவர்களையும் ப்ராஹ்மணர்களையும் நமஸ்கரித்து கையைக் கூப்பிக் கொண்டு நெருப்பின் அருகில் நின்று இதை மேற் கூறியபடி மொழிந்தாள்

———–

சலநாத் பர்வதே.ந்த்ரஸ்ய கணா தேவாஸ்ச கம்பிதா: சசால பார்வதீ சாபி ததாஸ்லிஷ்டா மஹேஸ்வரம்-22-

மலைகளின் ராஜா நகர்ந்தபோது சிவனின் கணங்களும் தேவர்களும் நடுங்கினர். பார்வதி தேவி கூட நடுங்கி, விரைந்து சென்று மகா கடவுளைத் தழுவிக் கொண்டார்.

இராவணன் கைலாஸ மலையை அசைக்கும் போது அங்குள்ள மஹா தேவனுடைய பரிவார கணங்கள் எல்லாம் நடுங்கிப் போயின -பார்வதியும் நடுக்கம் உற்றவளாய் அப்பொழுது
தன் பதியாகிய மஹா தேவனைத் தழுவிக் கொண்டனள்

———

தாரா: புத்ரா: புரம் ராஷ்ற்றம் போகாச்சாதனபாஜனம் ஸர்வமேவாவிபக்.நம் நோ பவிஷ்யதி ஹரீஸ்வர:-23-

ஓ குரங்குகளின் ஆண்டவரே, இன்றிலிருந்து வயல்கள், குழந்தைகள், நகரங்கள், நாடுகள்,
ஆடம்பரங்கள், உணவுகள் மற்றும் வயல்கள் எங்கள் பொதுவான சொத்தாக மாறி,
எங்களுக்குள் சமமாகப் பகிரப்படட்டும்.

ஓ வானர உத்தமனாகிற வாலியே இது முதல் உனக்கும் உனக்கும் பெண்டாட்டிகள் பிள்ளைகள் நகரம் இராச்சியம் கந்த கு ஸூ மாதிகள் ஊண் உடை ஆகிய இவைகளில் ப்ரீதி பேதம் இன்றி நடக்க வேண்டும் இதில் சம்சயம் இல்லை என்று இராவணன் சொன்னான்

——–

யாமேவ ராத்ரிம் ஸத்ருக்ன: பர்ணஸாலாம் ஸமாவிஸத் தாமேவ ராத்ரிம் சீதாபுஇ ப்ரஸூதா தாரகத்வயம்-24-

சத்ருக்னன் ஆசிரமத்தில் தங்கியிருந்த இரவில், சீதை இரண்டு மகன்களைப் பெற்றெடுத்தாள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்

லவணாசுரனுடைய வாதார்த்தமாகப் போம் போது எந்த ராத்திரியில் சத்ருக்கனன் வால்மீகி மஹ ரிஷியினுடைய ஆஸ்ரமத்தின் பர்ண சாலையைப் பிரவேசித்தாரோ அந்த ராத்திரியிலே ஸீதா தேவியும் இரண்டு குழந்தைகளைப் பெற்றனள்

——–

இதம் ராமாயணம் க்ருத்ஸ்னம் காயத்ரீபீஜஸம்யுதம் த்ரிஸந்த்யம் ய: படே.ந்நித்யம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே

இந்த ராமாயணத்தை , காயத்ரி மந்திரத்துடன், தினமும் விடியற்காலை, நண்பகல் மற்றும் அந்தி வேளையில் பாராயணம் செய்தால் , செய்த அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடலாம்.

காயத்ரியின் பீஜ அக்ஷரங்களோடு கூடிய இந்த காயத்ரி ராமாயணத்தை முழுதும் யாவன் ஒருவன் மூன்று ஸந்த்யா காலங்களிலும் தினம் தோறும் பாடம் செய்கிறானோ
அவன் எல்லாப் பாபங்களிலும் இருந்தும் விடப்பட்டவன் ஆவான் –

ஸ்ரீ காயத்ரீ ராமாயணம் ஸம்பூர்ணம்

————-

‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி.’தன்னை ஓதுபவரைக் காப்பது காயத்ரி.

ஓம் பூர்புவஸ் ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத் |–இது தான் காயத்ரி மந்திரம்.

ஓம் பூர், புவ, ஸுவ: – உடல், ஆன்மீக, தெய்வீக வாழ்வுக்குரிய ஸவிதுர் – உலகங்களுக்கு மூலாதாரமாக உள்ள வரேண்யம், தேவஸ்ய – போற்றுதலுக்குரிய , யாவரிலும் மேலான, தெய்வீக மெய்ம்மையின் பர்கோ – தெய்வீகப் பேரொளி மீது தீ மஹி – நாம் தியானிக்கின்றோம் தத் – நாம் மேலான உண்மையை உணரும்படி அந்த மேலான தெய்வம் நஹ – நம் தியோ – அறிவுக்கு ப்ரசோதயாத் – ஒளி ஊட்டட்டும் அறிவைத் தரும் ஆற்றலினைத் தருகிறது காயத்ரி.

அத்தோடு காயத்ரி மந்திரம் சர்வ ரோக நிவாரணி. எல்லா நோய்களையும் போக்க வல்லது. சர்வ துக்க பரிவாரிணி காயத்ரி! அது அனைத்து துன்பங்களையும் கவலைகளையும் போக்குகிறது. சர்வ வாஞ்சா பலஸ்ரீ காயத்ரி. அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவது காயத்ரி.

அக்ஷரங்களின் பயன்! ஒவ்வொரு அக்ஷரமும் ஒவ்வொரு பயனைத் தரும். தத் என்பது ப்ரஹ்ம ஞானத்தையும் ‘ஸ’ என்பது சக்தியை நல்வழியில் பயன்படுத்தலையும், ‘வி’ என்பது நல்ல வழியில் செல்வத்தைப் பயன்படுத்தலையும், ‘து’ என்பது தைரியத்தையும், ‘வ’ என்பது பெண்மையின் சிறப்பையும், ’ரே’ என்பது வீட்டிற்கு வரப் போகும் இல்லத்தரசியையும் அவள் குடும்பத்திற்கு கொண்டு வரும் நலனையும், ‘ண்யம்’ என்பது இயற்கையை வழிபடுதலையும், ‘பர்’ என்பது நிலையான மனத்தின் கட்டுப்பாட்டையும், ‘கோ’என்பது ஒத்துழைப்பு மற்றும் பொறுமையையும், தே என்பது எல்லாப் புலன்களும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதையும், ‘’ என்பது தூய்மையான வாழ்க்கையையும், ‘ஸ்ய’ என்பது மனிதன் இறைவனுடன் ஒன்றுபடுவதையும், ‘தீ’ என்பது எல்லாத் துறைகளிலும் எல்லாவித வெற்றி பெறுதலையும், ‘ம’ என்பது இறைவனது நீதி மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும் ‘ஹி’ என்பது நுண்ணறிவையும், ‘தி’ என்பது வாழ்க்கை மற்றும் மரணத்தையும், ‘யோ’ என்பது தர்ம நெறிப்படியான வாழ்க்கையைப் பின்பற்றுவதையும், ‘யோ’ என்பது வாழ்க்கை சேமிப்பையும் ‘நஹ’ என்பது எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பையும், ’ப்ர’ என்பது நடக்கப்போவதை அறிவது மற்றும் நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதையும், ‘சோ’ என்பது அறநெறி நூல்களைப் படிப்பதையும் மகான்களின் தொடர்பு ஏற்படுதலையும் ‘த’ என்பது ஆன்மாவை அறிதல் மற்றும் ஆத்மானந்தத்தையும் ‘யா’ என்பது சத் மக்கட்பேற்றையும் ‘த்’ என்பது வாழ்க்கையில் உள்ள ஒழுக்கக்கட்டுப்பாட்டையும் ஒத்துழைப்பையும் குறிக்கிறது.

காயத்ரி மந்திர தேவதைகள்! ஆக்னேயம், பிரஜாபத்தியம், ஸௌம்யம், ஸமானம், சாவித்திரம், ஆதித்யம், பார்ஹஸ்பத்யம், மைத்ராவருணம், பகதெய்வதம், ஆர்யமைஸ்வரம், கணேசம், துவாஷ்ட் ரம், பௌஷ்ணம், ஐந்திராக்னம், வாயவ்யம், வாமதேவ்யம், மைத்ராவருணி, வைஸ்வதேவம், மாத்ருகம், வைஷ்ணவம், வததெய்வம்ஸும், ருத்ரதெய்வதம், கௌபேரம், ஆஸ்வினம் ஆகியவை காயத்ரி மந்திரத்திற்குள்ள 24 தேவதைகள்.

தேவி பாகவதத்தில் பன்னிரெண்டாம் ஸ்கந்தத்தில் முதல் அத்தியாயத்தில் தரப்படும் அபூர்வமான விவரங்களாகும்.

————

காயத்ரி மந்திரம் கீழ்க்கண்ட சொற்களைக் கொண்டது:

­­­­“ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.”

இதன் பொருள்:

மண்ணுலகம், விண்ணுலகம், சொர்க்கம் ஆகிய மூன்றையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை, நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர, அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

காயத்திரி மந்திரத்தின் பொருளைப் மகாகவி பாரதியார் தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் பின்வருமாறு பாடியுள்ளார்.

செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்

அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக”

 நல்லனவெல்லாம் எத்திசையிலிருந்து வந்தாலும், எம்மொழியிலிருந்து வந்தாலும் அவற்றை ஏற்று நாம் பயன் பெறுவோமாக

ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்

இதுவே காயத்ரீ மந்திரம். இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும். பூர்ப்புவஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும். தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.

தத் – என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள்.

ச – என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள்.

வி – என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள்.

துர் – என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள்.

வ – என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள்.

ரே – என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள்.

ணி – எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவாள். செல்வம் வழங்குவாள்

யம் – ஞானாம்பிகையைக் குறிக்கும். அழகை அளிப்பாள்.

பர் – கார்கவியைக் குறிக்கும். இவள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாள்.

கோ – கோமதி ஆவாள். இவள் நல்ல அறிவையும், ஞானத்தையும் தருவாள்.

தே – தேவிகாவைக் குறிக்கும். இவள் தீய சக்திகளை அழிப்பாள்

வ – வராகியைக் குறிக்கும். தவயோகம் தருவாள்.

ஸ்ய – சின்ஹனியைக் குறிக்கும். இருப்பதை காக்கும் சக்தி படைத்தவள்.

தீ – தியானாம்பிகையைக் குறிக்கும். இவள் நீண்ட ஆயுளைக் கொடுப்பவள்.

ம – மர்யாதா என்ற அம்பிகை ஆவாள். இவள் புலனடக்கம் அளிப்பாள்.

ஹி – ஸ்புட நாயகியைக் குறிக்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவள்.

தி – மேதா அம்பிகையைக் குறிக்கிறது. இவள் வருங்காலத்தை உணர்த்துவாள்

யோ – யோகமாயா ஆவாள். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவாள்.

யோன – யோனியைக் குறிக்கும். உணவு உற்பத்தியையும், விவசாய விருத்தியையும் கவனிப்பாள்.

நஹ் – தாரணியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு அளிப்பாள்.

ப்ர் – ப்ரபவா என்ற அம்பிகை ஆவாள். குறிக்கோளை அடைய உதவுவாள்.

சோ – ஊஷ்மா தேவியைக் குறிக்கும். இவள் அச்சத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பாள்.

த் – த்ரஷ்யா என்ற அம்பிகை ஆவாள். இவள் நல்லறிவு, விவேகம் தருவாள்.

யாத் – நிரஞ்சனா தேவியைக் குறிக்கும். இவள் தொண்டு செய்யும் மனதை தருவாள்.

இந்த மகத்தான மந்திரத்தை ஜபித்து அனைவரும் பலன் பெறலாம்.

————

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோ ந: ப்ரசோதயாத் ||

ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.

இது பிரம்ம காயத்ரீ அல்லது சூரிய காயத்ரீ. இதுவே நம் தேசியப் பிரார்த்தனை. இதுவே நம் தேசிய மந்திரம். பல்லாயிரம் ஆண்டுகளாகக் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இது கையாளப் பட்டு வந்துள்ளது.

ஓம் அல்லது ஓங்காரம் ஓசைகள் அனைத்துக்கும் முதல் காரணம். இது நாதப் பிரம்மம் என்று இயம்பப் பெறுகிறது. பரவஸ்து ஓசை வடிவத்தில் இலங்குகிறது. அகிலாண்டத்தின் இயக்கம் ஓசையை உண்டுபண்ணுகிறது. அந்த ஓசையே ஓங்காரம். ஓங்கார ஓசை இயற்கை முழுவதிலும் ஓவாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ஓவாத சத்தத்து ஒலியே போற்றி” என்று இது போற்றப் படுகிறது. ஓம் என்பது பீஜ மந்திரம். இதன் திரிவுகளாக ஏனைய மந்திரங்கள் வந்துள்ளன. ஓங்காரத்தை உச்சரிப்பதற்கு ஏற்ப மனிதன் மேன்மையுறுகிறான். இயற்கை முழுதுக்கும் பொதுவாக அண்டமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இம்மந்திரத்தை யாரோ சிலர் தான் உச்சரிக்க வேண்டும் என்னும் கட்டுப்பாடு எதற்காக? சுவாசிக்கும் காற்று எல்லார்க்கும் பொதுவாக இருப்பது போன்று இந்த ஓசையும் பொது.

ஓங்காரத்தை உச்சரித்த பிறகே ஏனைய மந்திரங்களை உச்சரிப்பது ஐதிகம். ஏனென்றால் மந்திரங்கள் அனைத்திற்கும் மூலமந்திரமாக அல்லது பீஜமந்திரமாக இருப்பது ஓங்காரம்.

பூ: , புவ:, ஸுவ: ஆகிய மூன்று சொற்கள் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்க்கம் எனப் பொருள்படுகின்றன. இம்மூவுலகங்கள் அகத்திலும் இருக்கின்றன, புறத்திலும் இருக்கின்றன. பண்பாடு அடையாதவர்களுக்கு அம் மூவுலகும் புறத்தில் உள என்னும் கொள்கை ஏற்புடையதாகிறது. அகத்திலேயே அம்மூன்றும் அமைந்துள்ளன என்னும் கொள்கை சிறிது பரிபாகம் அடைந்தவர்களுக்கே விளங்குகிறது.

நம்மிடையே இம்மூவுலகங்களும் எப்படி அமைந்திருக்கின்றன என்று பார்ப்போம். ஜாக்ரதாவஸ்தை, சொப்பனாவஸ்தை, சுஷுப்தி அவஸ்தை ஆகிய மூன்று அவஸ்தைகளும் (நிலைகள்) நம்மிடத்து மாறி மாறி அமைகின்றன. மக்கள் மட்டும் அல்லர்; பறவைகளும், விலங்குகளும் இந்த மூன்று நிலைகளை அனுபவிக்கின்றன.

நனவு அல்லது விழித்திருந்து புறவுலகோடு இணக்கம் வைப்பது ஜாக்ரதாவஸ்தை. நனவு நிலையில் உடல், உள்ளம் ஆகிய இரண்டும் வேலை செய்கின்றன. கனவு என்பது சொப்பனாவஸ்தை. கனவு நிலையில் புறவுலகோடு தொடர்பு வைப்பதில்லை. ஸ்தூல சரீரத்துக்கும் அங்கு வேலையில்லை. அகக் கரணமாகிய மனதே கற்பனையில் ஸ்தூல சரீரத்தையும், புறவுலகத்தையும், அதிலுள்ள உயிர்வகைகளையும் கற்பனை பண்ணிக் கொண்டு வியவகாரம் பண்ணுகிறது. அந்நிலையில் இருக்கின்ற பொழுது அது யாண்டும் ஜாக்ரதாவஸ்தைக்கு நிகராகத் தோன்றுகின்றது. கனவற்ற உறக்கம் சுஷுப்தி அவஸ்தை எனப்படுகிறது. அந்த அவஸ்தையில் அகவுலகம் இல்லை; புறவுலகம் இல்லை. மனதும் செயலற்றுக் கிடக்கிறது. பிரக்ஞை மட்டும் தமோகுணத்தால் [மூவகைக் குணங்களில் ஒன்றான இருள் இயல்பு] மூடப்பட்டிருப்பது போன்று தன்மயமாய் எஞ்சியிருக்கிறது.

இம்மூன்று அவஸ்தைகளிலும் நாம் மாறிமாறி இருக்கின்றோம். இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் இந்த மூன்று உலகங்களிலும் சற்று ஏறத்தாழ வசித்து வருகிறோம். இந்த மூன்று அவஸ்தைகளே பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் என்று இயம்பப் பெறுகின்றன. நாம் எந்த அவஸ்தையில் இருந்தாலும் சரி, அதாவது எந்த லோகத்தில் இருந்தாலும் சரி, இந்த காயத்ரி மந்திரத்தினுடைய கருத்தையுணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொண்டு வருகிற அளவு ஆன்மிகத் துறையில் முன்னேற்றமடைகிறோம்.

விழித்திருக்கின்ற பொழுது நாம் சுவாசிக்கின்றோம்; கனவு காண்கின்ற பொழுதும் சுவாசிக்கின்றோம்; கனவற்ற உறக்கத்திலும் சுவாசிக்கின்றோம். சுவாசிப்பதை நிறுத்துவதில்லை. நிறுத்தினால் ஒழிந்துபட்டுப் போவோம். நிர்விகல்ப சமாதியில் (அனைத்து உணர்வுகளும் ஒடுங்கும் ஒருமை நிலை) இருப்பவர்கள் மட்டும் சுவாசிக்காதும், அழிந்துபட்டுப் போகாமலும் இருக்கின்றனர். மூன்று அவஸ்தைகளிலும் நிறுத்தாது நாம் சுவாசித்து வருவது போன்று மூன்று அவஸ்தைகளிலும் காயத்ரியில் அடங்கியிருக்கிற கருத்துக்கேற்ப நம்முடைய மனத்தைப் பெரிய நிலையில் வைப்போமானால் அதற்கேற்றவாறு ஆத்ம பரிபாகம் நமக்கு வாய்க்கிறது.

சுஷுப்தி அவஸ்தையில் தமோகுணம் ஆதிக்கம் செய்கிறது. தமோகுணத்தில் மூன்று நிலைகள் உண்டு – தமஸில் தமஸ், தமஸில் ரஜஸ், தமஸில் சத்துவம் என அம்மூன்று நிலைகள் விளக்கப் படுகின்றன. ஆத்ம பரிபாகம் அடைந்தவர்கள் தமஸில் சத்துவத்துக்கு மேலோங்க முடியும். அது அறிதுயில் அல்லது யோகநித்திரை எனப்படுகிறது. அந்நிலையை எட்டுகிறவர்கள் காயத்ரீ தத்துவத்தைக் கையாண்டவர்கள் ஆகின்றனர். அந்நிலையை எட்டுவதே குறிக்கோள்.

இனி, ஜாக்ரதாவஸ்தையிலேயே பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் நமக்கு நாம் அமைத்துக் கொள்ள முடியும். உடல் வாழ்க்கையை ஒழுங்காக நடத்துவது பூலோக வாழ்க்கையாகிறது. உள்ளத்தை மேலான எண்ணங்களில் செலுத்துவது புவர்லோகமாகிறது. எண்ணத்தைக் கடவுள் பால் செலுத்துவது ஸ்வர்க்கலோகமாகிறது. அதிகாலையில் எழுந்திருந்து இரவு படுக்கப் போகும் வரையில் வாழ்வாங்கு வாழ்கிற மனிதன் மூவுலகிலும் முறையாக வாழ்ந்தவன் ஆகின்றான்.

இந்த மூன்று லோகங்களிலும் அல்லது மூன்று அவஸ்தைகளிலும் பாரமார்த்திகப் பெருநிலையிலேயே இருந்து பழகுபவன் இரண்டாவது பிறப்பெடுத்தவன் ஆகின்றான்.  இருபிறப்பாளன் அல்லது துவிஜன் யாண்டும் போற்றுதலுக்குரியவன் ஆகின்றான்.

செய்யுள் மயமாக அமைந்துள்ள காயத்ரியில் உள்ள பதங்களை இப்பொழுது உரைநடைக்குரிய பதங்களாகப் பிரித்து அமைப்போம் –

ஓம் தத் ஸவிது: வரேண்யம் பர்க: தேவஸ்ய தீமஹி |திய: ய: ந: ப்ரசோதயாத் ||

य: ய: – யார், न: ந: – நம்முடைய, धिय: திய: அறிவை, प्रचोदयात् ப்ரசோதயாத் – தூண்டுகிறாரோ, तत् தத் – அந்த, देवस्य தேவஸ்ய – சுடருடைய, सवितु: ஸவிது: கடவுளின், वरेण्यम् வரேண்யம் – மேலான, भर्ग: பர்க: – ஒளியை, धीमहि தீமஹி – தியானிப்போமாக.

ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.

சரியாக அமைந்துள்ள காயத்ரி மந்திரத்தில் பரம்பொருளின் சொரூபத்தை விளக்குவதற்கான பதங்கள் மூன்று அமைந்திருக்கும். ஜீவப் பிரயத்தனத்தையும், தெய்வத்தின் அருளையும் விளக்குவதற்கென்று அமைந்துள்ள வினைச்சொற்கள் மூன்று இருக்கும். இப்பேரியல்புகள் காயத்ரீ மந்திரங்கள் அனைத்துக்குமே பொதுவானவைகள்.

இம்மந்திரத்தில் பரம்பொருளுக்கு விளக்கமாக அமைந்துள்ள மூன்று சொற்களை எடுத்துக் கொள்வோம். ஸவிது: என்னும் சொல் ஸவித்ரு என்னும் சொல்லின் ஆறாம் வேற்றுமையாகும். ஸவித்ரு என்னும் சொல் உயிர்தருகிற, உற்சாகம் ஊட்டுகிற, வாழ்வைச் செப்பனிடுகிற பொருள் என்று சொல்லப் படுகிறது. உலக நடைமுறையில் சூரியன் இச்சொல்லுக்கு இலக்காகிறது. பரதத்துவத்தில் பரமாத்மாவுக்குப் பொருந்தியதாக இப்பதம் அமைகிறது. ஸவித்ரு என்னும் சொல்லைப் பெண்பால் ஆக்குகின்ற பொழுது, அது ஸாவித்ரீ என்று சொல்லப் படுகிறது. காயத்ரீ, ஸாவித்ரீ ஆகிய இரண்டு பெயர்களும் சக்தி தெய்வத்துக்கு உரியவைகள் ஆகின்றன. இந்த இரண்டு பெயர்களுள் ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றை மொழியுமிடத்து அது இழுக்கு ஆகாது.

வழிபடுகின்றவர்களுடைய வசதிக்காக ஒரு தெய்வம் ஆண்பாலாகவோ, பெண்பாலாகவோ கருதப் படுகிறது. சிவ என்பது ஆண்பால்; சிவா என்பது பெண்பால். ஸவித்ரு என்பது ஆண்பால்; ஸாவித்ரீ என்பது பெண்பால். ஆணாகவோ, பெண்ணாகவோ, அலியாகவோ எப்படி வைத்துக் கொண்டாலும், அது உயிர்க்கு உயிராய் இருக்கின்ற பரம்பொருள் ஆகிறது

பிரபஞ்சத்துக்கும், ஜீவகோடிகளுக்கும் ஆதாரமாகவும், மூலப் பொருளாகவும், முதல் காரணமாகவும் இருப்பது பரம்பொருள். பரம்பொருளுக்குப் புறம்பாக ஜீவர்களுடைய ஜீவ வியக்தி இல்லை. ஜகத்துக்குத் தோற்றம் என்பது இல்லை. கடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன. (: தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல், தன்னுளே திரைத்தெழுந்தடங்குகின்ற தன்மை போல் – நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும், நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே : திருமழிசையாழ்வார், நாலாயிர திவ்யப் பிரபந்தம்).

ஆக, ஜகத்துக்கும் ஜீவனுக்கும் தூண்டுதல் அளிக்கும் பாங்கில் இருக்கிற பரவஸ்து (பரம்பொருள்) ஸவித்ரு என்று சொல்லப் படுகிறது. கட்புலனாகிற சூரியன் இச்செயலைப் பிரபஞ்ச நிலையில் செய்து வருவதால் சூரிய நாராயணனும் ஸவித்ரு என்று சொல்லப் படுகிறார். ஆனால் இதன் லட்சியார்த்தம் (குறியீட்டுப் பொருள்) பரமாத்மாவையே குறிக்கிறது.

பரம்பொருளை விளக்குவதற்கு அமைந்துள்ள இரண்டாவது சொல் தேவ: என்பதாகும். தேவஸ்ய என்பது இதன் ஆறாம் வேற்றுமை. தேவ: என்னும் சொல் திவ்யமானவன், பிரகாசமானவன், மேலாம் நிலையில் இருப்பவன் என்றெல்லாம் பொருள் படுகிறது. பிரகாசத்தோடு கூடியிருப்பது மூலநிலை, யதார்த்த நிலை. பிரகாசத்தை இழந்த நிலை கீழ்மைக்கு வந்துள்ள நிலையாகும். ஜகத்தில் ஜடமாய் இருப்பதெல்லாம் மூலநிலையை விட்டு வழுவிக் கீழ்நிலைக்கு வந்தவைகளாம்.

சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். சூரியன் சுயப்பிரகாசம் வாய்ந்தவன். சூரியனிடமிருந்து சிதறி வந்துள்ள பூமியும், சந்திரனும் சுயப்பிரகாசத்தை இழந்தைவைகள். இந்த இரண்டு கோளங்களையும் எடுத்து மீண்டும் சூரியனுள் போட்டால் முன்னிருந்தபடி இவைகளுக்குச் சுயப்பிரகாசம் வந்துவிடும். ஜகத் (பருப்பொருள் உலகம்) ஜடமயமாக இருக்கிறது. ஜீவர்களோ ஜடம், சேதனம் (உணர்வு) ஆகிய இரண்டும் கலந்தவைகளாக இருக்கின்றன. பின்பு பரமனோ தனது சுயப் பிரகாசத்தை இழந்துவிடாது யாண்டும் பூரணமாகவே இருப்பவன். தேவ: என்னும் சொல் இப்பேருண்மையை விளக்குகிறது. பரம்பொருள் யாண்டும் சுயம்ஜோதி என்பது இதன் பொருள்.

இனி, பரவஸ்துவைக் குறிக்கின்ற மூன்றாவது பதம் பர்க: என்பதாகிறது. பர்க: என்பது ருத்ரனுக்கும், சிவனுக்கும் அமைந்த மற்றொரு பெயர். ருத்ரனாகக் கருதுமிடத்து அழுகையின் வாயிலாக அழுக்கைப் போக்கக் கூடியவன் என்று பொருள்படுகிறது. சிவனாகக் கருதுமிடத்து ஞானப் பிரகாசத்தின் வாயிலாக அக்ஞான இருளைப் போக்குபவன் என்று பொருள்படுகிறது. பரம்பொருளின் சொரூபத்தை ஜீவர்கள் கிரகித்துக் கொள்வதற்கே இந்த அடைமொழி வந்துள்ளது. ஸ்தூல உலகில் சூரியன் தான் இருக்குமிடத்தைத் தானே விளக்குகின்றான். தன் வெளிச்சத்தைக் கொண்டு ஏனைய பொருள்களையும் விளக்குகின்றான். அங்ஙனம் ஞான சொரூபியாகிய பரமாத்மா தன்னைத் தானே விளக்குகின்றான். அவனுடைய சன்னிதானத்தின் விசேஷத்தால் ஜகத்தும், ஜீவர்களும் ஞானக்காட்சிக்கு இலக்காகின்றன.

இங்ஙனம் ஸவித்ரு, தேவ:, பர்க: ஆகிய மூன்று சொற்களையும் நாம் உச்சரிக்கின்ற பொழுது, அச்சொற்களுக்கு இலக்காக இருக்கிற பரமாத்மாவையே பாவனை பண்ண வேண்டும். . பரமனைப் பற்றிய பதங்களைப் பேசுகின்ற பொழுது, அப்பதங்களின் அடிப்படைக் கருத்து உள்ளத்தில் உதயமாக வேண்டும். அப்பொழுது தான் உச்சரிக்கின்ற மந்திரத்துக்கு வலிவு வருகிறது.

காயத்ரீக்கு இன்றியமையாத மூன்று வினைச்சொற்களை இனி ஆராய்வோம். வரேண்யம் என்பது வர்ணித்தல் எனும் வினையின் விகாரமாம். வரேண்யன் என்னும் சொல் போற்றுதற்குரியது என்றும், வர்ணிப்பதற்குரியது என்றும், விளக்குதற்குரியது என்றும் பொருள்படுகிறது. தங்கம், வெள்ளி முதலிய தாதுக்களை விளக்க விளக்க அவைகள் சுடர்விடுகின்றன. பரமனை விளக்குவதற்கு ஏற்ப ஜீவாத்மனிடம் ஞானச் சுடர் வளருகிறது. பரமனை விளக்குதலே ஆராதனையாகிறது. பரமனைப் பற்றிய விளக்கத்தைப் “பொருள்சேர் புகழ்” என்று பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர் போற்றுகிறார். நரஸ்துதி பொருள் சேராத புகழ். பரம்பொருளைப் பற்றிய ஸ்துதி பொருள் சேர்ந்த புகழ். ஆயிரம் ஆயிரமாக சொற்களை வாரிக் கொட்டிப் புகழ்ந்து கொண்டு போனாலும் அதனுடைய புகழுக்கு முடிவில்லை. பரமனை இடையறாது புகழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்னும் கோட்பாட்டை வரேண்யம் என்னும் பதம் விளக்குகிறது.

வினைச்சொல் தீமஹி. தியானிப்போமாக என்பது இதன் பொருள். ஆத்ம சாதனங்களுள் இது தலை சிறந்தது. அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது அங்கமாக இருப்பது தியானம். இது முதிர்ந்தால் சமாதியாகப் பூர்த்தியாகிறது. காயத்ரி மந்திரத்தைப் பயன்படுத்துகிற பொழுது சிறிது நேரம் தியானம் பண்ணுவது அவசியமாகிறது.

தியானத்துக்காக நிமிர்ந்து உட்காரவேண்டும். சிரசு, கழுத்து, நெஞ்சு ஆகியவை நேராக இருக்கவேண்டும். உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது. இங்ஙனம் ஐந்து நிமிஷத்துக்குக் குறையாமல் அரைமணி நேரம் வரையில் தியானத்தில் அமர்ந்திருக்க வேண்டும். தியானம் நமது தேசியப் பண்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக பரதகண்டத்துப் பெருமக்கள் காலையிலும், மாலையிலும் சந்தியா நேரங்களில் ஆழ்ந்து தியானத்திலிருந்து பழகி வந்திருக்கிறார்கள். இந்தப் பண்பில் ஊறியிருப்பதற்கேற்ப ஆன்மிகம் மக்களிடத்து ஓங்குகிறது.

ஈண்டு இயம்பியுள்ள இரண்டு நல்வினைகளுள் ஒன்று நாவால் போற்றுவது; மற்றது மனத்தால் எண்ணுவது. ஜீவாத்மன் செய்கின்ற செயல்களுள் இவையிரண்டும் பாரமார்த்திகப் பண்பாட்டுக்கு உரியவைகள். ஆத்ம சாதகன் இவ்விரண்டையும் ஊக்கத்தோடு அனுஷ்டுக்கக் கடமைப் பட்டிருக்கிறான்.

ப்ரசோதயாத் என்னும் வினைச்சொல் மூன்றாவதாக வந்தமைகிறது. தூண்டுகிற என்பது இதன் பொருள். இச்செயல் ஜீவாத்மனுடையதன்று. உள்ளத்தினுள்ளே வீற்றிருக்கின்ற பரமாத்மனுடைய செயல் ஆகின்றது இது. ஜீவாத்மனுடைய செயலுக்குத் துவக்கமும், முடிவும் உண்டு. ஆனால் பரமாத்மனுடைய செயலுக்கோ ஆதி அந்தம் இல்லை. இச்செயலைத் தான் ஆன்றோர்கள் அருள் என்று அழைக்கின்றனர். அருளின் பாங்கு சர்வகாலமும் உள்ளத்தினுள்ளே நிலைபெற்றிருக்கிறது. ஆத்ம போதத்தில் விழிப்படைந்து வருகிறவர்களுக்கு அது விளங்குகிறது. அருளின் பாங்கை உள்ளத்தினுள்ளே உணர்பவனைத் தான் இருபிறப்பாளன் என்று சொல்லவேண்டும். வெறும் உபநயனச் சடங்கால் இந்த உணர்வு உருவெடுக்காது. பரிபாகத்தின் விளைவாகவே இது உருவெடுக்கிறது.

இந்தக் காயத்ரீ மந்திரத்தில் இறைவனுடைய அருளும், ஜீவப் பிரயத்தனமும் இடம் பெற்றிருக்கின்றன. இவ்விரண்டையும் ஒன்று படுத்துவது தான் யோகம். ஆக, பாரமார்த்திகப் பெருவாழ்வுக்குத் தகுதியுடையவர்களே காயத்ரீ மந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வல்லவர்கள் ஆகின்றார்கள்.

காயத்ரீ மந்திரத்தில் மெய்யெழுத்தை நீக்கிவிட்டு உயிரெழுத்தும், உயிர்மெய் எழுத்தும் சேர்ந்து இருபத்து நான்கு அக்ஷரங்கள் இருக்கும். இவை மூன்று வரிகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு வரியிலும் எட்டு எழுத்துக்கள் அமையப் பெற்றிருக்கும். இதுவே காயத்ரீ அமைப்பின் முறைமையாகும். இம்முறைமை வேதங்களில் முக்கிய இடம் பெறுகிறது.

வேதங்களின் உட்கருத்துக்களெல்லாம் காயத்ரீயில் அடங்கியிருக்கின்றன என்பது ஐதிகம். காயத்ரீயில் அடங்கியிருக்கிற கருத்து யாது என்று ஆராய்ந்து பார்க்குமிடத்து, பரம்பொருளுக்கும், ஜீவாத்மனுக்கும் இடையில் உள்ள இணக்கத்தை அது ஞாபகமூட்டுகிறது. ஜீவாத்மனைப் பரமாத்மன் மயமாகப் பண்படுத்துதற்கு அது வழிகாட்டித் தருகிறது. ஆக, ஜீவாத்மன் பரிணமித்து மேலோங்கி வந்து பரமாத்மனைச் சேர்வது குறிக்கோள். இது வேதங்களின் திட்டம். மானுட வாழ்க்கையின் முடிந்த நோக்கம் இதுவேயாம். இந்த நோக்கத்தைச் சுருக்கமாக காயத்ரீ மந்திரம் தெளிவுபடுத்துகிறது. ஆதலால் தான் காயத்ரீ மந்திரத்தை வேதங்களின் சாரம் என்று சான்றோர் சாட்டியிருக்கின்றனர்.

———

ஸ்ரீராம காயத்ரி ஓம் தாசரதாய வித்மஹே சீதா வல்லபாய தீமஹி தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே ராமப்ரியாய தீமஹி தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ஸ்ரீராம பாத காயத்ரி ஓம் ராமபாதாய வித்மஹே ஸ்ரீராமபாதாய தீமஹி தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத் –

விபீஷண காயத்ரி மந்திரம்.. “ஓம் ராம பக்தாய வித்மஹே சர்வாஸ்ரயாய தீமஹி தந்நோ விபீஷண ப்ரசோதயாத்”

—————

அனாயேனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யா அபயம் மம: விபீஷனோவா சுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் ||– வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம்

சிவனும் அம்புய மலரில் அயனும் இந்திரை கொழுநன் அவனும் வந்திட உதவும் அரி எனும் பிரமம் அது துவளும் அஞ்சன உருவு தொடரு செங் கமல மலர் உவமை கொண்டு இதில் ஒருவன் உலகில் வந்ததுகொல~ கம்பராமாயணம், அனுமபடலம்

————–

ஆயுர்வேத, சித்த மருந்துகள் மட்டும் அல்லாது ஆங்கில மருந்துகளை ஏற்போரும் மருந்துகளை விழுங்கும் முன்னால், ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் பாஹிமாம் ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ரக்ஷமாம் —என்று ஓதி மருந்துகளை, மாத்திரைகளை, டானிக்குகளை உட்கொள்வதால் அந்த மருந்துகளின் முழுப் பலனையும் பெற்று உடனடி நிவாரணம் பெறலாம்.

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ த்யான ஸ்லோகங்கள் —

December 25, 2020

ஸ்ரீ ஹயக்ரீவர் மூலமந்திரம்
உத்கீத ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோசிந்த்ய
ஸர்வம் போதய போதய

ஸ்ரீ ஹயக்ரீவர் காயத்ரீ
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரசோதயாத்

ஸ்ரீ ஹயக்ரீவர் தியான ஸ்லோகம்
1. ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே
2. சங்க சக்ர மஹாமுத்ரா
புஸ்தகாட்யம் சதுர்புஜம் சம்பூர்ணம்
சந்த்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே

ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ
ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்
ஓம் வாக் தேவீ ச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்

ஸ்ரீ சரஸ்வதி தியான ஸ்லோகம்
1. ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
2. ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை
3. சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்
வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்
4. பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன
5. சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்
6. பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம
7. பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ
மம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா
8. சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ
ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே
9. பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி
அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே
10. தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச
ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம்

——-

ஸ்ரீ வித்யாரூபிணி
ஸரஸ்வதி
சகலகலாவல்லி
சாரபிம்பாதரி
சாரதாதேவி
சாஸ்திரவல்லி
வீணாபுஸ்தக தாரிணி
வாணி
கமலபாணி
வாக்தேவி
வரதாயகி
புஸ்தக ஹஸ்தே நமோஸ்துதே

————–

ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார் மந்திரம்
வெற்றியைக் கொடுக்கும். நோய் நீக்கும். பயம் விலக்கும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய-கோவிந்தாய கோபீ ஜநவல்லபாய-பராய பரம புருஷாய
பரமாத்மநே-பரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத-விஷ ஆபிசார
அஸ்த்ர ஸஸ்த்ரான் ஸம்ஹர ஸம்ஹர-ம்ருத்யோர் மோசய மோசய.
ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே ஜ்வாலா பரீதாய-ஸர்வதிக்
க்ஷபண கராய ஹும் பட் பரப்ரஹ்மணே-பரம் ஜ்யோதிஷே
ஸ்வாஹா.
ஓம் நமோ பகவதே ஸுதர்ஸநாய-ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-மஹாசக்ராய-மஹா
ஜ்வாலாய-ஸர்வரோக ப்ரஸமநாய-கர்ம-பந்த-விமோசனாய
பாதாதி-மஸ்த பர்யந்தம் வாதஜநித ரோகாந், பித்த-ஜநிதி-ரோகாந், ஸ்லேஷ்ம ஜநித ரோகாந்,
தாது-ஸங்கலிகோத்பவ-நாநாவிகார-ரோகாந் நாஸய நாஸய, ப்ரஸமய ப்ரஸமய,
ஆரோக்யம் தேஹி தேஹி, ஓம் ஸஹஸ்ரார ஹும் பட் ஸ்வாஹா.

ஸ்ரீ சுதர்சன காயத்ரி
ஸுதர்ஸநாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ர: ப்ரசோதயாத்

ஸ்ரீ சுதர்சன மூல மந்திரம்
ஓம், ஸ, ஹ, ஸ்ரா, ர, ஹும், பட்.

——–

ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரங்கள் (பஞ்சமுக ஆஞ்சநேயர்)
கிழக்கு முகம்-ஹனுமார்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே
ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.
தெற்கு முகம்-நரஸிம்மர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத,
துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷ?ண முகே
கரால வதனாய நிருஸிம்ஹாய
ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.
மேற்கு முகம்-கருடர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள்,
விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம
முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா
வடக்கு முகம்- வராஹர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே
ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.
மேல்முகம்-ஹயக்ரீவர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில்
முன்னேற்றம் ஏற்படும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே
ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.

———

ஸ்ரீ கிருஷ்ண மந்திரங்கள்
1. க்லீம் க்ருஷ்ணவே கோவிந்தாய கோபிஜன வல்லபாய ஸ்வாஹா
2. க்ல்யௌம் க்லீம் நமோ பகவதே நந்த புத்ராய பாலவபுஷே கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
3. ஓம் நமோ க்ருஷ்ணாய தேவகீ புத்ராய ஹும் பட் ஸ்வாஹா
4. கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
5. க்லீம் க்ருஷ்ணாய ஸ்வாஹா
6. ஓம் க்லீம் தேவகீஸுத கோவிந்த
வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம்
க்ருஷ்ண த்வாமஹம் சரணம் தத: தேவதேவ
ஜகன்னாத கோத்ர வ்ருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்
7.க்லீம் ஹ்ருஷீகேசாய நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
8. ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
9. ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா
10. க்லீம் கோவல்லபாய ஸ்வாஹா
11. க்லீம் க்ருஷ்ண க்லீம்

ஸ்ரீ சகாதேவன் இயற்றிய ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்ய சித்யந்த ஹேதவே
விஹ்வேஸ்வராய விஸஅவாய
கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய
பரமானந்த ரூபிணே
கிருஷ்ணாய கோபிநாதாய
கோவிந்தாய நமோ நமஹ

——-

ஸ்ரீராமர் மந்திரம்
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம்
பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம்
ராமச்சந்த்ரம் நமாம்யஹம்
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

ஸ்ரீ ராம மந்திரம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
இந்த மந்திரம் பதின்மூன்று எழுத்துக்களைக் கொண்டது. ராம த்ரயோதஸூக்ஷரி மந்திரம் எனப்படும்.
இந்த மந்திரத்தை ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் தொடர்ந்து கூறி
ஸ்ரீராம பிரானின் தரிசனம் பெற்றார். இவர் க்ஷத்திரபதி சிவாஜி மன்னரின் குரு.

ஏகஸ்லோக ஸ்ரீ ராமாயணம்
எல்லாவித காரிய சித்திகளும் பெறவும், மங்களம் உண்டாகவும் இந்த
ஸ்ரீ இராமாயண ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யவும்.
ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

ஒரே சுலோகத்தில் ஸ்ரீ சுந்தரகாண்டம்
யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே
இதை தினமும் காலையிலும், மாலையிலும் கூறிவந்தால் சுந்தர காண்டத்தை முழுவதுமாகப்
பாராயணம் செய்ததற்கு ஈடாகும்.

க்ருத வீர்ய சுதோ ராஜ சகஸ்ரபுஜ மண்டல:
அவதாரோ ஹரே சாக்ஷõத் பாவயேத் சகலம் மம
கார்த்த வீர்யாஜுனோ நாமா ராஜா பாஹு ஸகஸ்ரகவாத்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண நஷ்டத்ரவ்யம் ச லப்யதே
இழந்த செல்வம் மீண்டும் பெறவும், திருடு போன பொருள் தானாக வந்தடையவும்,
வரவேண்டிய பண பாக்கி வரும், கடன் தொல்லை தீரும்.

———

ஸ்ரீ அகஸ்தியர் அருளிய ஸ்ரீ சரஸ்வதி ஸ்தோத்திரம்

யா குந்தேந்து துஷார ஹாரதவளா
யா சுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வரதண்ட மண்டிதகரா
யாச்வேதபத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி:
தேவைஸ் ஸதா பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ
நிச்சேஷ ஜாட்யாபஹா
தோர்ப்பிர்யுக்தா சதுர்ப்பி:
ஸ்படிக மணிநிபை: அக்ஷமாலாம் ததானா
ஹஸ்தேநைகேன பத்மம் ஸிதமபி ச
சுகம் புஸ்தகஞ் சாபரேண
பாஸா குந்தேந்து சங்க ஸ்படிகமணி நிபா
பாஸ மானா(அ) ஸமானா
ஸாமே வாக்தேவதேயம் நிவஸது
வதனே ஸர்வதா ஸூப்ரஸன்னா
ஸூராஸூரஸேவித பாதபங்கஜா
கரே விராஜத் கமநீய புஸ்தகா
விரிஞ்சிபத்னீ கமலாஸன ஸ்த்திதா
ஸரஸ்வதீ ந்ருத்யது வாசி மே ஸதா
ஸரஸ்வதீ ஸரஸிஜ கேஸரப்ரபா
தபஸ்வினீ ச்ரிதகமலாஸன ப்ரியா
கனஸ்தனீ கமலவிலோல லோசனா
மனஸ்வினீ பவது வரப்ரஸாதினீ
ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா
ஸரஸ்வதி நமஸ்துப்யம்ஸர்வதேவி நமோ நம:
சாந்தரூபேசசிதரே ஸர்வயோகே நமோ நம:
நித்யானந்தே நிராதாரே நிஷ்களாயை நமோ நம:
நவித்யாதரே விசாலாக்ஷ?யை சுத்தஜ்ஞானே நமோ நம:
சுத்தஸ்ப்படிகரூபாயை ஸுக்ஷ?மரூபே நமோ நம:
சப்தப்ரஹ்மி சதுர்ஹஸ்தே ஸர்வஸித்யை நமோ நம:
முக்தாலங்க்ருத ஸர்வாங்க்யை மூலாதாரே நமோ நம:
மூலமந்த்ரஸ்வரூபாயை மூலசக்த்யை நமோ நம:
மனோன்மனி மஹாயோகே வாகீச்வர்யை நமோ நம:
சக்த்யை வரதஹஸ்தாயை வரதாயை நமோ நம:
வேதாயை வேதரூபாயை வேதாந்தாயை நமோ நம:
குணதோஷ விவர்ஜின்யை குண தீப்த்யை நமோ நம:
ஸர்வஜ்ஞானே ஸதா நந்தே ஸர்வரூபே நமோ நம:
ஸம்பன்னாயைகுமார்யை ச ஸர்வஜ்ஞேதே நமோ நம:
யோகாநார்ய உமாதேவ்யை யோகானந்தே நமோ நம:
திவ்யஜ்ஞான த்ரிநேத்ராயை திவ்யமூர்த்யை நமோ நம:
அர்த்தசந்த்ர ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:
சந்த்ராதித்ய ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:
அணுரூபேமஹாரூபே விச்வரூபே நமோ நம:
அணிமாத்யஷ்டஸித்தாயை அனந்தாயை நமோ நம:
ஜ்ஞானவிஜ்ஞானரூபாயை ஜ்ஞானமூர்த்யை நமோ நம:
நானா சாஸ்த்ர ஸ்வரூபாயை நானாரூபே நமோ நம:
பத்மஜா பத்மவம்சாச பத்மரூபே நமோ நம:
பரமேஷ்ட்யை பராமூர்த்யை நமஸ்தே பாபநாசினீ
மஹாதேவ்யை மஹாகாள்யை மஹாலக்ஷ?ம்யை நமோ நம:
ப்ரஹ்மவிஷ்ணு சிவாயை ச ப்ரஹ்மநார்யை நமோ நம:
கமலாகர புஷ்பாயை காமரூபே நமோ நம:
கபாலீ கரதீப்தாயை காமதாயை நமோ நம:

———

ஸ்ரீ நரசிம்ம மந்திரம்

அஸ்யஸ்ரீ ந்ருஸிம்மாநுஷ்டுப் மஹா மந்த்ரஸ்ய
ப்ரும்மா ருஷி: அநுஷ்டுப்ச்சந்த்:
ஸ்ரீ லக்ஷ?மீ ந்ருஸிம்மகோ தேவதா-ஸ்ரீ லக்ஷ?மீ
ந்ருஸிம்ம ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:
உக்ரம் வீரம் – அங்குஷ்டாப்யாம் நம
மஹா விஷ்ணும்-தர்ஜனீப்யாம் நம
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்-மத்ய மாப்யாம் நம
ந்ருஸிம்மம் பீஷணம்-அநாமிகாப்யாம் நம
பத்ரம் ம்ருத்யூம்ருத்யும்-கநிஷ்டிகாப்யாம் நம
நமாம்யஹம்-கரதலகரப்ருஷ்டாப்யாம் நம
உக்ரம் வீரம்-ஹ்ருதயாய நம
மஹாவிஷ்ணும்-சிரஸே ஸ்வாஹா
ஜ்வலந்தம் ஸர்வ தோமுகம்-சிகாயை வஷட்
ந்ருஸிம்மம் பீஷணம்-கவசாய ஸும்
பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும்-நேத்ராத்யாய வெளஷட்
நமாம்யஹம்-அஸ்த்ராய பட்
ஓம் பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

————

ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா

ஸ்ரீ தன்வந்திரி ஸ்லோகம்
சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

——–

ஸ்ரீ மஹா சுதர்ஸன மஹாமந்திரம்
ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் ÷க்ஷõபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் –

December 25, 2020

ஸ்ரீ ஆழ்வார்
1-அடியார்
2-அடியார்
3-அடியார்
4-தம் அடியார்
5-தமக்கு அடியார்
6-அடியார்
7-தம் அடிகளே
என 7வது திருவடி சம்பந்தத்தை விசேஷித்து கொண்டாடியுள்ளார்.

இப்பொழுது ஸ்ரீ கண்ணபிரான் திருவடியான ஸ்ரீ சடகோபரிடம் இருந்து
1-ஸ்ரீ மதுரகவிகள்
2-ஸ்ரீ நாதமுனிகள்
3-ஸ்ரீ உய்யக்கொண்டார்
4-ஸ்ரீ மணக்கால் நம்பி
5-ஸ்ரீ ஆளவந்தார்
6-ஸ்ரீ பெரிய நம்பி
7-ஸ்ரீ உடையவர்
என ஸ்ரீ உடையவர் 7வது சம்பந்தத்தால் ஏற்றம் பெற்று
ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஆனாப் போலே,

ஸ்ரீ இராமானுசன் தாளான
1-ஸ்ரீ எம்பார்
2-ஸ்ரீ பட்டர்
3-ஸ்ரீ நஞ்சீயர்
4-ஸ்ரீ நம்பிள்ளை
5-ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை/ பிள்ளை லோகாச்சாரியர்
6-ஸ்ரீ திருவாய்மொழி பிள்ளை
7-ஸ்ரீ மணவாள மாமுனிகள்
இந்த விசேஷ சம்பந்தம் இருப்பதினால் தான், நமது ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயதவர்கள் அனைவரும்
“ஸ்ரீ இராமானுச தாசன்” என சொல்லி கொண்டாலும்,
ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஒருவர் மட்டுமே ஸ்ரீ யதீந்திர ப்ரவணர் என போற்றப்படுகிறார்.

ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திரு அவதார நோக்கமானது ஸ்ரீ எம்பெருமானரை போற்றுவதே ஆகும்.
மற்றும் அவரது பெருமைகளை உலகோர்க்கு பறை சாற்றி, ஸ்ரீ எம்பெருமானாரே நமக்கெல்லாம்
ப்ராப்ய பிராபக பூதராய் விளங்குகிறார் என்பதையும் நன்கு விளங்கச்செய்வதே ஸ்ரீ ஸ்வாமி மணவாள மாமுனிகளின்
திரு அவதாரத்தின் சீரிய நோக்கம் ஆகும்.

ஸ்ரீ ஸ்வாமி திருவவதாரம் செய்தது ஸ்ரீ ஆழ்வார் திருநகரியிலே.
ஸ்ரீ உடையவருக்கு பிராண பூதரான ஸ்ரீ நம்மாழ்வார் அவதரித்த இடம் என்பதினாலும்,
ஸ்ரீ சடகோப தாசர் என்னும் ஸ்ரீசைலரான ஸ்ரீ திருவாய்மொழி பிள்ளையை ஆஸ்ரயிப்பதாலும்,
ஸ்வாமி ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளையை ஆஸ்ரயித்திருந்த காலத்தே, பவிஷ்யதாசார்யன் சந்நிதியிலே
ஸ்ரீ உடையவருக்கு நித்ய திருவாராதனாதிகள் நடத்தினார் என்பதாலும்,
ஸ்ரீ ரகஸ்ய த்ரயத்தினாலும் அறுதியிடப்படும் பொருள் ஆசார்யனே – உடையவரையே என்பதை
விளக்கும் பொருட்டு 20 ச்லோகங்களினால் ஸ்ரீ யதிராஜ விம்சதி அருளியது!!
(ரகஸ்யங்களினுடைய பத எண்ணிக்கை 20- திருமந்தரம் – 3; த்வயம் – 6 சரம ஸ்லோகம் – 11)
ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் எனும் அற்புத கிரந்தம் அருளிச்செய்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகம்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடி நிலைகளே என நிலை நாட்டியது,
(ரகஸ்யங்களினுடைய அக்ஷரங்கள் எண்ணிக்கை 60- திருமந்தரம் – 8; த்வயம் – சரம ஸ்லோகம் – )

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் –
வாழி என வாழ்த்துவார் வாழி என
வாழ்த்துவார் தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை.

ஸ்ரீ எம்பெருமானார் நியமனமான 74 சிம்மாசனாதிபதிகள் குறிக்கும் பொருட்டு 74 வெண்பாக்களால்
ஸ்ரீ உபதேச ரத்தினமாலை அருளியது,
(ஸ்ரீ ஸ்வாமியின் இந்த சங்கல்பம் தெரிந்து இதில் ஸ்வாமியின் பிரச்தாவம் இல்லாது இருக்க கூடாது என விரும்பிய
ஸ்ரீ எறும்பி அப்பா, ஸ்ரீ நம்பெருமாளை 73 வெண்பாக்களுடன் இந்த பிரபந்தம் முடியும் படி பிரார்த்தித்து, 74 வது பாசுரமாக
மன்னுயிர்காள் இங்கே…. சேர்த்தருளினார்),
ஸ்ரீ ஸ்வாமி தனது ஆர்த்தி பிரபந்தத்தில், ஸ்ரீரெங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ உடையவர் திருமேனியின் மீது
தமது ஆதராதிசதியத்தை வெளியிட்டருளியது ஆகியவை கொண்டு இவர்த்தம் அறுதியிடலாம்.

இவை எல்லாம் தாண்டி, ஸ்ரீரங்கத்திலும், ஸ்ரீ ஆழ்வார் திருநகரியிலும் ஸ்ரீ ஸ்வாமியின் திருமேனியை சேவிக்கும் கால்,
ஒரு விஷேஷ பரமானந்தம் ஏற்படுகின்றது. இவ்விரு திவ்ய தேசங்களிலும், ஸ்ரீ ஸ்வாமி உற்சவ காலங்களில்
வாஹன புறப்பாடு கண்டருளுவது இல்லை, மற்றும் திருஅத்யயன உற்சவத்திற்கு எழுந்து அருளுவதும் இல்லை
(ஸ்ரீ ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீ ஸ்வாமி சாற்றுமுறை அன்று மட்டும் எழுந்தருளுகிறார்).
இவ்விரு திவ்ய தேசங்களிலும் அனைத்து பெருமைகளும் ஸ்ரீ நம்மாழ்வாருக்கும், ஸ்ரீ உடையவருக்குமே
உண்டாகவேண்டும் என ஸ்ரீ ஸ்வாமி தமது திருமேனியை ஸ்ரீ வாமனன் போல் சுருக்கி கொண்டார்!

ஆகையால் அன்றோ, ஸ்ரீ எம்பார், ஸ்ரீ பட்டர், ஸ்ரீ வடுக நம்பி, ஸ்ரீ நம்பிள்ளை என பல மகாசார்யர்கள் இருந்தும்,
ஸ்ரீ மணவாள மாமுனிகள் “ஸ்ரீ யதீந்திர ப்ரவணம் வந்தே” என ஸ்ரீ நம்பெருமாளால் கொண்டாடப் பட்டார்.
அதனால் அன்றோ ஸ்ரீ நம்பெருமாள் இவருக்கு ஆச்சார்ய ஸ்தானத்தையும் கொடுத்து,
ஸ்ரீ ஆதி சேஷ பர்யங்கத்தையும் கொடுத்தான்!

ஸ்ரீ ஸ்வாமி அதனைக் கீழ்க்கண்டவாறு வளர்த்தருளினார்.
1-பல பிரதிகள் ஏட்டில் அருளுவது.
2-ஈட்டிற்கு பிரமாணத் திரட்டு அருளிச் செய்தது.
3-ஈடு அர்த்தமாகும்படி கூட்டி பிரதிகள் ஏறி அருள நியமித்தருளியது.
4-ஈட்டிற்கு அரும்பதம் எழுதும் படி நியமித்தருளியது
5-ஈடு சிம்மாசனத்தில் ஸ்ரீ கந்தாடை அண்ணனை அபிஷேகித்தருளியது.
6-ஸ்ரீ நம்பெருமாளுக்கே ஈடு உபன்யசித்தது
ஸ்ரீ ஸ்வாமிக்கு ஈட்டின் மீது உள்ள இத்தகைய அசாத்ய உற்றத்தை பற்றியே,
ஸ்ரீ ஸ்வாமிக்கு உபய பாஷா ப்ராவண்யம் இருக்கச் செய்தேயும்,
“வாழி அவன் மாறன் திருவாய்மொழிப்பொருளை மாநிலத்தோர் தேறும்படி உரைக்கும் சீர்” என
வாழி திருநாமம் ஏற்பட்டுள்ளது.

————-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி வைபவத்துக்கு சில துளிகள் –

“வைகல் திரு வண் வண்டூர் வைகும் இராமனுக்கு என்
செய்கை தனை புள்ளினங்காள் செப்புமென – கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின்”

இங்கு ஸ்ரீ இராமன் என்பது உயிரான வார்த்தை ஆகும்.
ஸ்ரீ திருவண்வண்டூரில் சேவை சாதிக்கும் பெருமான் ஸ்ரீ இராமபிரான் அல்லவே!
இங்கு ஸ்ரீ இராமபிரானைக் குறித்து தூது விடுவது பொருந்துமோ என்னில்,
ஸ்ரீ ஈட்டில் இந்த திருவாய்மொழி பதிகத்திற்கு தூது விஷயம் ஸ்ரீ இராமபிரான் (விபவம்) என நிர்ணயிக்கப் பட்டு உள்ளது .
ஸ்ரீ ஆழ்வாரும், இந்த பதிகத்தில் “மாறில் போரரக்கன் மதிள் நீறெழ செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு ” என்றோ தெரிவித்துள்ளார்.
இதற்க்கு வியாக்யானம் செய்த ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயரும்,
“இரண்டாம் தூதுக்கு விஷயம் விபவமிறே” என்றோ வ்யாக்யானித்துள்ளர்!

ஸ்ரீ ஈட்டின் அர்த்த விசேஷங்கள் ஸ்வாமியின் திருஉள்ளத்தில் அலை எடுத்ததாலன்றோ
இத்தகைய ஸ்ரீ ஸூக்தி வெளிப்பட்டது!
“முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் – பின்னோர்ந்து தாம் அதனை பேசுவதற்கு” இது ஒரு சிறிய உதாரணம்.

———

“வேய் மரு தோளிந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை
தான் மருவாத் தன்மையினால்* தன்னை இன்னம் – பூமியிலே
வைக்குமென சிந்தித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறனெங்கள் சார்வு ”

இங்கு ஆய்ச்சிகளை பற்றிய ப்ரஸ்தாவமோ, குறிப்போ ஈஷத்தும் கிடையாது.
இதுவும் ஸ்ரீ ஈட்டை அடியொற்றியே சாதித்ததாகும். இங்கு ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி அவதாரிகை –
“அநாதியாய் வருகிற அசித் சம்சர்கத்தை அனுசந்தித்து அஞ்சின அத்தாலும்,
ஈஸ்வர ஸ்வாதந்தரியத்தை அனுசந்தித்து அஞ்சின படியாலும் – அதாவது
சிசுபாலனுக்கு தன்னைக் கொடுத்து ஸ்ரீ பரதாழ்வானுக்கு மறுத்து போன ஸ்வாதந்தரியமிறே……”

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார், ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மொழியினை வெளியிட்டருளியதை
குறிக்குமிடத்து, “நீர் பால் நெய் அமுதாய் நிரம்பின ஏரி நெளிக்குமா போலே” என அருளியுள்ளார்.
(ஏரியில் நீர் நிரம்பினால் தன்னடையே மதகுகள் வழியே வெளியேறுமா போலே,
ஸ்ரீ ஆழ்வார் திருஉள்ளத்தில் தேங்கி உள்ள பகவத் அனுபவமாவது திருவாய்மொழியாக வெளிப்பட்டது!).
இதே போன்று ஸ்ரீ ஸ்வாமியின் ஸ்ரீ ஈடு அனுபவமே ஸ்ரீ திருவாய்மொழி நூற்றந்தாதியாக வெளிப்பட்டது!

இதைக் கருத்தில் கொண்டு அன்றோ, இவ்வருளிச் செயலுக்கு தனியனிட்ட ஆச்சார்யர்களும்
“சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான்” என உரைத்தனர்!
ஆனது பற்றியே இது “அல்லும் பகலும்” அனுபவிக்க வேண்டியதாயிற்று!

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர், யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில், ஸ்ரீ மணவாள மாமுனிகளை பற்றி குறிப்பிடும் பொழுது
“ஈடு முப்பத்தாறாயிரப்படி பெருக்கர்” என அடைமொழி இட்டு அழைக்கிறார்.

—————

ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளி ஸ்ரீ பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்வதற்கு
செல்லும் முன்பு நடந்தவைகளாக ஸ்ரீ யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில் இருந்து அறியப்படுபவை –
“அக்காலத்திலே கோயிலதிபதியாய் இருந்த ஸ்ரீ திருமாலை தந்த பெருமாள் பட்டருடைய அனுமதிக்காக
அவர் திருமாளிகையிலே எழுந்தருள, அவரும் அப்ப்யுத்தான பிரணாமாதிகள் தொடக்கமான உபசாரங்களை பண்ணி
ஆசனத்திலே எழுந்தருளி வைத்து “தேவரீரை சேவிக்கப் பெற்றோமே”” என்று பெரிய ப்ரீதியோடே ஆதரித்து
“திருவாய்மொழி ஒரு பாட்டுக்கு அர்த்தம் அருளிச் செய்ய வேணும்” என்ன,
ஸ்ரீ நாயனாரும் ஆழ்வாருடைய வைபவத்தை இதிஹ்யமாக பாட்டை எடுத்து உபன்யசித்தருள
ஸ்ரீ பட்டரும் போர வித்தராய் , “இவர் ஈடு முப்பத்தாறாயிரப்படி பெருக்கர்” என்று மிகவும் உபலாளித்து …..””

மேலும் ஸ்ரீ ஜீயர் கிடாம்பி நாயனார் பக்கலிலே ஸ்ரீ பாஷ்யம் அதிகரிக்க எழுந்து அருளியதை விவரிக்குமிடத்து,
“இப்படி ஸ்ரீ ஜீயர் உருத்தொரும் ஈடு முப்பத்தாறாயிரப்படியை சொல்லிக் கொண்டு போகிறதைக் கண்டு ஆச்சர்யப்பட்டு,
ஒருவரும் அறியாமல் ஏகாந்தத்திலே சென்று “முப்பத்தாறாயிரப்படி பெருக்கர்” என்று உமக்கு திருநாமம் சாத்தினது வெறுமனன்று …..”
என பொறித்து வைத்துள்ளார்.

ஸ்ரீ ஸ்வாமி மணவாள மாமுனிகள் தமது ஆசார்யரிடம் செய்த பிரதிஞ்ஞை காரணமாக
ஸ்ரீ திருவாய்மொழியின் மீதும் ஸ்ரீ ஈட்டின் மீதும் இத்தகைய அசாதாரணமான பக்தி கொண்டிருந்தார் என்பது,
அவரது ஸ்ரீ ஸூக்திகளில் இது நன்கு புலப்பட்டிருக்க வேண்டும்.

———–

ஸ்ரீ அரங்கன். அவதரிக்கச் செய்தவன்
அவதரித்தது ஸ்ரீ ஆதிசேஷன்.
உறங்குவான் போல் யோகு செய்த அரங்கன் ஜகத்ரக்ஷண சிந்தையையுடையவனாய்
ஸ்ரீ உடையவரைப் போன்று லோகமெங்கும் உஜ்ஜீவிக்கும்படி, தம் பிரபாவத்தினை உலகறிய,
ஒரு விஷயத்தினை உண்டாக்கிட தீர்மானித்தவன், ஸ்ரீ திருவநந்தாழ்வானேயே மீண்டும் கடாக்ஷிக்கின்றான்.
ஸ்ரீ அனந்தன் நம்மை உஜ்ஜீவிக்க அவதரிக்கின்றான்.

யஸ்மிந்ஸ்வபாதபத்மேந பஸ்பாஸ ப்ருதிவீமிமாம்
கலிஸ்ச தத்க்ஷணேநைவ துத்ருவே தூரஸ்தராம்
(எப்போது அவர் தமது திருவடித் தாமரைகளால் இந்த பூமியைத் தொட்டாரோ
அப்போதே கலி புருஷனும் வெகுதூரம் ஓடி விட்டான்.)

இவரது கால் கண்ட கலியின் கொடுமை பறந்தோடியது.
ஸ்ரீ திருவரங்கத்தினை பீடித்த பீடையும் ஒழிந்தது.

திகழ்கிடந்தான் திருநாவீறுடையபிரான் தாதரண்ணன் தம்முடைய குமாரருக்கு பத்து நாளும் கடந்த
இரண்டாம் நாள் திருவிலச்சினையை பிரஸாதித்து,

(முன் காலத்தில் குழந்தை பிறந்து புண்யாஹம் ஆனவுடன்
”புஷ்ப ஸமாஸ்ரயணம்” என்ற ஸம்ஸ்காரத்தினைச் செய்து வந்தார்கள்.
சக்ர முத்ரையினையும், சங்கு முத்திரையினையும் அக்னி சம்மந்தம்
இல்லாமல் திருமண் ஸ்ரீ சூர்ணத்தினைக் குழைத்து இவ்விரு முத்ரைகளையும் அதில் நினைத்து
குழந்தையின் இரு தோள்களிலும் ஒத்துவது அனுஷ்டானம் )

அழகிய மணவாளன் என்று திருநாமத்தினை தம் குமாரருக்குச் சாற்றி மகிழ்ந்தார்.
தம்முடைய தாய்வழி ஊரான சிக்கில் கிடாரத்தில் அழகியமணவாளன் வளர்ந்தார்.

பரபக்தி: பரஜ்ஞாநம் பரமாபக்திரித்யபி
வபுஷாவர்த்தமாநேந தத்தஸ்ய வவ்ருதேத்ரயம்
(அந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருடைய வளரும் தேஹத்துடனே
பரபக்தி, பரஜ்ஞானம், பரமபக்தி என்னும்படியான மூன்றும் வளர்ச்சியடைந்தன. )

——–

மணவாள மாமுனிகள் ‘நமக்கெல்லாம் நற்சீவனமான நம்பெருமாளை
சேவித்து மங்களாஸாசனம் பண்ணிக்கொண்டு இவ்வுயிர் நிலைத்திருக்கும் வரை அங்கே யிருக்கை யன்றோ
நமக்குப் ப்ராப்தம்” என்று ஒரு உறுதியான எண்ணம் கொண்டார். ஆச்சார்யனின் கட்டளையும் இதுவே யானதால்,
திருநகரியிலே ஆழ்வாரின் திரு முன்பே சென்று சேவித்து,
”நண்ணாவகரர் நலிவெய்த நல்லவரமரர் பொலிவெய்த,
எண்ணாதனகளென்ணும் நன்முனிவரின்பம் தலை சிறப்ப,
பண்ணார் நம்பெருமாளுடைய ப்ரதிபக்ஷங்களெல்லாம் நிரஸ்தமாய்,–என்று பாடி வேண்டுகின்றார்.

”தேவரீர் மங்களாஸாசனம் செய்தருளுகையாலே பண்டு போல அனைத்தழகும் கண்டருளுகின்றார்.
அடியேன் பெருமாளை சேவிக்க விடை பெறுகின்றேன்” என்று விண்ணப்பம் செய்கின்றார்.

ஆழ்வாரும் மணவாளமாமுனியினை ஆசீர்வதித்து விடை கொடுக்கின்றார்.

இந்த மண்ணுய்ய மணவாளமாமுனிகள் மாதவம் செய்த காவிரியின்
படுகை அரங்கம் நோக்கி தொழுது பயணிக்கின்றார்.

முதலில் ஆழ்வார் திருநகரியிலிருந்து,

தேவஸ்ய மஹிஷீம் திவ்யாம் ஆதௌ கோதாமுபாஸதத்
யந் மௌலி மாலிகா மேவ ஸ்வீகரோதி ஸ்வயம் ப்ரபு:
எந்த ஆண்டாளுடைய திருக்குழலில் சாத்தினை திருமாலையையே
ஸ்வாமியான அழகிய மணவாளன் அன்போடு ஏற்று சாத்திக் கொள்கிறானோ,
அந்த அழகிய மணவாளனுடைய திவ்யமஹிஷியான கோதையை நமஸ்கரிக்கின்றேன்.
என்கிறபடி சூடிக் கொடுத்த சுடர் கொடியின் தாள் பணிகின்றார்.
அங்கிருந்து திருமாலிருஞ்சோலை யடைந்து கருணைக் கடலான அழகனிடத்து பிரார்த்திக்கின்றார்.

விஞ்ஞாபநம் வநகிரிஸ்வரா! ஸத்ய ரூபா மங்கீகுருஷ்வ கருணார்ணவ மாமகீநாம் !
ஸ்ரீரங்கதாமநி யதாபுரமேஷஸோஹம் ராமானுஜார்யவஸக: பரிவர்த்திஷீய !!
கருணைக்கடலான திருமாலிருஞ்சோலையழகரே! யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தை திருவுள்ளம் பற்றியருள வேணும்.
அது ஏதெனில், அடியேன் முன்பு போலத் திருவரங்கம் பெரிய கோயிலிலே எம்பெருமானாருடைய திருவடிகளிலே சேர்ந்து
வாழ்வேனாம்படி அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றார்.

அங்கிருந்து கிளம்பி ஸ்ரீரங்கத்தின் காவிரிக் கரையினை அடைகின்றார்

——–

அழகிய மணவாளன் தம் தந்தை பரமபதித்தவுடன், சிக்கில் கிடாரத்திலிருந்து கிளம்பி
ஆழ்வார் திருநகரியினை யடைகின்றார். அங்கு ஸ்ரீவைஷ்ணவ தர்ஸந ப்ரவர்த்தகராயிருந்த திருமலையாழ்வார்
என்கிற திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகளிலே ஆஸ்ரயிக்கின்றார்.

திருவாய்மொழிப்பிள்ளை தமது சீடரான அழகிய மணவாளனை மிகவும் உகந்து திவ்யபிரபந்தங்களின் தாத்பர்யங்களையும்,
ஸம்ஸாரத்தை யறுப்பதான எல்லா அருளிச் செயல்களின் தாத்பர்யங்களையும் உபதேசிக்கின்றார்.

அழகிய மணவாளன் இவ்வருளிச் செயல்களில் ஆழ்கின்றார்.
உடையவரின் திருவடிகளை இறுக்கப் பற்றுகின்றார்.
உடையவருக்கு தமது ஆச்சார்யனின் பரிபூர்ண கிருபையினாலும், தயவினாலும் ஒரு தனிக்கோவில் ஸ்தாபித்து,
இராமானுஜ சதுர்வேதி மங்கலம் என்கிற திருவீதிகளையும் உண்டாக்கி,
யதிராஜ விம்சதி என்னும் அற்புத பாமாலையையும் சமர்ப்பிக்கின்றார் அழகிய மணவாளன்.

அழகிய மணவாளனின் இராமானுஜ பக்தியை மெச்சிய திருவாய்மொழிப்பிள்ளை ஒரு அற்புத அரிய இராமானுஜரின்
திருமேனியை அவருக்கு அருளுகின்றார். இந்த இராமானுஜ திருமேனி மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் கட்டளைப்படி
தாமிரபரணி நீரை காய்ச்சிய போது முதலில் அவதரித்த திருமேனியாகும்.
ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரின் திருமேனி, உலுக்கான் படையெடுப்பின் போது, வலசையாக எழுந்தருளியபோது,
இதனை அங்கிருந்த திருப்புளிஆழ்வார் மரத்தினடியில் புதைத்து வைத்து பின்னர் திருவாய்மொழிப் பிள்ளையால் கண்டெடுக்கப்பட்டதாகும்.

அளவிலா ஆனந்தம் அழகிய மணவாளனுக்கு!. எம்பெருமானாரையே பரதெய்வமாக நித்யமாய் ஆழ்வாருக்கும்,
எம்பெருமானாருக்கும் கைங்கர்யமே புருஷார்த்தமாகக் கொண்டு திருநகரியிலே கைங்கர்யஸ்ரீயுடன் வாழ்ந்தருளினார்.

உத்தமனே! உலகாரியனே! மற்றொப்பாரையில்லா
வித்தகனே! நல்ல வேதியனே! தண்முடும்பை மன்னா!
சுத்த நன்ஞானியர் நற்றுணையே! சுத்த சத்துவனே!
எத்தனை காலமிருந்து உழல்வேன் இவ்வுடம்பைக் கொண்டே?

என்று பிள்ளைலோகாச்சாரியாரிடத்து திருமேனியோட்டை அறுதியிட்டு, திருவாய்மொழிப்பிள்ளை, தமக்கு விமோசனத்தினை வேண்டுகின்றார்.

அந்த சமயம் திருவாய்மொழிப்பிள்ளை தம் அந்திம காலம் நெருங்குவதையறிந்து அழகிய மணவாளனை அழைக்கின்றார்.
”காலம் கலிகாலமாகையாலே ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளான அருளிச்செயலிலே ருசியும், விசுவாசமும் கொண்டு
இத்தை வளர்த்துப்போவார் யார்?” என்று மிகவும் க்லேசமுடையவராய் கேட்கின்றார்.
அழகிய மணவாளனுக்கு உள்ளுணர்வு உணர்த்துகின்றது. தம்மை மனதில் வைத்துதான் பிள்ளைக் கேட்கின்றார் என்று.
திருவடி பணிந்து ‘அடியேன் அப்படியே செய்கிறேன்” என்கின்றார் குரு உகக்கும் வண்ணம்.
பிள்ளை ”கேவலம் வார்த்தை போராது” என்கிறார்.
குருவின் திருவடிகளைப் பிடித்து சபதம் செய்கின்றார்.
குருவும் இந்த தீவிரமான சிந்தையைதானே எதிர்பார்த்திருந்தார்!
அந்த தாக்கத்தினை ஏற்படுத்திய மகிழ்வோடு அழகிய மணவாளனுக்குச் சில கட்டளையிடுகின்றார்.

” ஸ்ரீபாஷ்யத்தினைக் கற்று ஒரு முறை அனைவருக்கும் காலக்ஷேபம் செய்யவும்.

ஸம்ஸ்கிருத சாஸ்திரங்களிலே பல காலும் கண் வையாமல், நமக்கும் எம்பெருமானாருக்கும் ப்ரியமான
திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களிலே அநவரதமும் பரிசீலனைச் செய்து, அனைவருக்கும் அதன் உட்பொருளை பிரஸாதிக்கவும்.
பூர்வர்களைப் போல மங்களாசாஸன பரராய் ஸ்ரீரங்கத்தில் நித்ய வாஸம் செய்து, கைங்கர்யங்களை செய்து வரவும்.”
என்று நியமிக்கின்றார்.
அங்கு கூடியிருந்தோர் அனைவரிடத்தும் இவரிடத்துக் காட்டிக் கொடுத்தருளி,
”இவரை சாதாரணமாக நினைக்காதீர்கள். இவர் ஒரு அவதார விசேஷம். ஆதரித்து போருங்கள்” என்று அருளுகின்றார்.

வைணவ தர்ஸனத்திற்கு ஒரு அவதார புருஷர் கிடைத்ததை யெண்ணி பெருமிதத்துடன், நிறைவுடனே எந்த கவலையுமின்றி,
‘மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனமேகமென்னும்” என்கிறபடியே தம் ஆச்சார்யன் பிள்ளைலோகாச்சாரியாரின்
திருவடிகளைக் கண்மூடி தியானிக்கின்றார்.

————

தனது 74 வது வயதில் 1444ம் ஆண்டு ருத்ரோத்காரி என்ற தமிழ் வருஷத்தில்,
மாசி மாதத்தில்,திருவோண நக்ஷத்ரம், சனிக்கிழமை, கூடிய கிருஷ்ணபக்ஷ த்வாதசி அன்று திருநாடு எய்தினார்.

மாசில்லாத மணவாள மாமுனிகள் மாசி கிருஷ்ணபக்ஷம் துவாதசியன்று திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

அவர் வசித்துவந்த திருமலையாழ்வார் கூடம் நிரம்பி வழிந்தது. உத்திர வீதிகளெங்கும் நெற்றியில் பளீரென
திருமண், திருச்சூர்ணம் துலங்க ஸ்ரீவைஷ்ணவர்கள் அலைப் பொங்கியது.

ஜீயர் நாயனார் மன்னுலகு சிறக்க வந்த மாமுனிகளின் சரம கைங்கர்யத்திற்கு பொறுப்பேற்கின்றார்.

சீடர்கள் குழாமுடன் திருக்காவேரி எழுந்தருளி நீராடி பெரிய திருமஞ்சனக் குடத்தில் கங்கையிற் புனிதமான
காவிரியின் நன்னீர் சேந்தி சகலவிதமான மங்கள வாத்யங்கள் முழங்க, அலங்காரமாக திருமஞ்சன குடத்தினைக் கொண்டு வருகின்றனர்.

ஜீயரின் விமல சரம திருமேனியினை திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளப் பண்ணுகின்றனர்.

நான்கு உத்திரவீதிகளிலும் அலைப்போன்று ஆர்ப்பரித்து நின்ற ஸ்ரீவைணவர்கள் புருஷசூக்தத்தினை
தழுதழுத்தக் குரலுடன் பாராயணம் செய்கின்றனர்.

அந்த சந்தர்ப்பத்திற்கேற்ப வானம் மூட்டமிட்டு கதிரவன் சற்றே மறைந்து மெல்லிதாக பூமாரி பொழிகின்றது.

திருமஞ்சனம் முடிந்து திருவொற்றுவாடையினால் திருமேனியை ஒரு குழந்தை குளித்து முடித்தபின்பு
துவட்டுவது போன்று கவனமாக ஒத்தி ஒத்தி துவட்டுகின்றனர்.

திருப்பரிவட்டம் சாற்றுகின்றனர்.

த்வாதசோர்த்வ புண்டரங்களை திருமேனியில் சாற்றுகின்றனர். காந்தி வீசும் விசாலமான நெற்றியில்
விசாலமான அத்திருமண்காப்பும். ஸ்ரீசூர்ணமும் தேஜஸ்ஸோடு விளங்கியது.

ஜீயரை திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்தருளப் பண்ணுகின்றனர். அனைத்து ஸ்ரீவைணவர்களும்
‘எம்பெருமானாரை சேவியாத குறையெல்லாம் இவரையடைந்து தீர்ந்தோம் நாம்! இப்போது இவ்வவதாரமும் தீர்த்தம் பிரஸாதித்துப் போவதே!”
என்று மிகவும் துக்கித்து கண்ணீர் மல்க கதறுகின்றனர்.

ஒவ்வொருவராக அவர்தம் திருவடியினை தம் தம் சிரஸ்ஸிலும் நெஞ்சிலும் ஒற்றிக் கொள்கின்றனர்.

‘அத்தன் மணவாள யோகி அடியிணையைச் சித்தப் பெருங்கோயில் கொண்டருளி” என்றபடி
அவரது திவ்யமங்கள சொரூபத்தினை தம் தம் திருவுள்ளங்களில் கடைசிமுறையாக தேக்கிக் கொண்டு
வைத்தக் கண் வாங்கதே விமல சரம விக்ரஹ அனுபவத்திலே விக்கித்தவாறு இருக்கின்றனர்.

உத்தமநம்பி மூலமாக அரங்கன், ‘தாம் அரைச்சிவக்கச் சாற்றிக் கழித்த பீதகவாடையான சிகப்புப் பட்டினையும்,
அவன் திருமார்பணிந்த வனமாலையையும்’ ஒரு பொற் தட்டிலே வைத்து கோயில் மரியாதையுடனே,
சகல வாத்ய கோஷங்களுடனே, சகல பரிகரர்களையும் உடன் அனுப்பி, மடத்து வாசலுக்கு அனுப்பி,
கோயிலின் மூலஸ்தானத்தில் தான் மட்டும் தனித்திருந்து துக்கித்து அதனால் அவனது திருமேனி கறுத்து வாடியபடியிருக்கின்றான்.

மாமுனிகளின் மடத்து வாசலில் ஜீயர் நாயனார் உட்பட அனைத்து முதலிகளும் அரங்கனிடமிருந்து வந்த
கோயில் மரியாதையினை எதிர்கொண்டு, சாஷ்டாங்கமாக வீழ்ந்துசேவித்து அங்கீகரித்து
‘உடுத்து களைந்த பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்துழாய் மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டரான
ஜீயருக்கு அவற்றைச் சூட்டி அலங்கரிக்கின்றனர்.

கோயிலார்கள் அனைவருமே சோகார்த்தராய் ஜீயரை சேவிக்கின்றனர்.

திருச்சூர்ண பரிபாலனம் நடக்கின்றது.

பின்பு எண்ணெய் சுண்ணங்கொண்டாடுகின்றனர். (சிறிது எண்ணெய் அவரது சிரஸ்ஸில் தேய்த்து, தேய்த்த கையிலுள்ள
மீதமுள்ள நல்லெண்ணையை கொப்பரையிலுள்ள எண்ணெயோடு கலந்து அனைவருக்கும் பிரஸாதிப்பது)

நறுமணம் வீசும் அனைத்து ஜாதி புஷ்பங்களினாலும் பல்லக்கை அலங்கரித்து அதனில் அவரது திருமேனி ஏறியருளப் பண்ணுகின்றனர்.
அரங்கனது ஸ்ரீமாந்தாங்குவோர் அனைவரும் காவிவண்ண ப்ரபன்னபாகையுடன் கவனமுடன் பல்லக்கினை எழுந்தருளப் பண்ணுகின்றனர்.

சத்ர, சாமர, தாள வ்ருந்தாதிகள் பணிமாற, மத்தளங்கள், சங்க, காஹள பேரிகள் தொடக்கமான ஸகல வாத்யங்களும் ஒரு சேர முழங்க,

பொய்யில்லாத பெரிய ஜீயர் – கர்வம் அறியாத கர்மவீரன் – சாத்வீகமே உருவெடுத்த சத்தியன் –
அரங்கனே அடியவனாய் வந்தும் அகங்காரம் சற்றும் கொள்ளாத அழகிய மணவாளன் – கைங்கர்யத்திற்காகவென்ற
சம்ஸாரம் துறந்து சந்நியாசம் மேற்கொண்ட ஸௌம்ய ஜாமாத்ரு முனி, பூவுலகு நீங்கி புறப்படுகின்றார்.
அவரது விமல சரம திருமேனி வருகையையொட்டி உத்திர வீதி, சித்திரை வீதியெங்கும் கொடிகள் அழகாக
ஒரு சீரான க்ரமத்தில் நாட்டப்பட்டு நடுநடுவே மகரதோரணம் போன்று தோரணங்கள் கட்டப்பட்டு, வீதியெங்கும் நீர் தெளித்து,
சுத்தமாக மொழுகி, கோலமிடப்பட்டு, நடுநடுவே புஷ்பங்களை சொரிந்து, அங்காங்கு கமுகு, குலையுடன் கூடிய வாழைமரங்கள் நட்டு,
மஹாஞானியின் கடைசி வருகைக்காகக் காத்திருந்தது.

அடியார்கள் சூழ அரங்கநகரே பிரிவாற்றமையினால் அழுதது. மாமுனிகளின் புஷ்பகவிமானம் ஊர்ந்தது.

பின்னால் ஸ்ரீவைணவர்கள் அனைவரும் கையில் கரும்புடன் இராமானுஜ நூற்றந்தாதி முதலாக அனுசந்திக்கின்றனர்.
ஜீயரின் திருமேனி முன் பொரியும் புஷ்பமும் சிதறுகின்றது. ‘தர்ஸநத்திலே மணவாளமாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளினார்;”
என்று ஒற்றை திருச்சின்னம் பணிமாற, ஸூமங்கலிகள் அனைவரும் கையில் மங்கள தீபமேந்தி நிற்க,
எட்டு திருவீதிகளிலும் மாமுனிகள் கடைசியாக அனைவருக்கும் ஸேவை தந்து வலம் வருகின்றார்.

வடக்கு வாசல் வழியே தவராசன் படுகையிலே ‘மகிழாதிகேசவன் தன்னடிக் கீழாக” என்கிறபடியே
அங்குள்ள ஆதிகேசவ பெருமாளின் திருவடிக் கீழாக தென்பாலில், ஆளவந்தார், இராமானுஜர் ஆகியோருக்கு
செய்த கிரமம் போன்று யதி ஸம்ஸ்கார விதி யடங்க திருப்பள்ளிப்படுத்துகின்றனர்.

பூமிதேவியானவள் ஜனகனின் திருமகளான சீதையை தம் மடியிலே வைத்து அணைத்துக் கொண்டு ஆதரித்தாற்போன்று,
மாமுனிகளான இவரையும் தம் மண்ணால் மூடி தம் மடி மீது கிடத்தி அணைக்கின்றாள்.

சீயரெழுந்தருளி விட்டார் செகமுழுதும்
போயிருள் மீளப் புகுந்ததே தீய
வினைநைய வெம்புலனா வீடழிந்து மாய்வோ
ரனைவார்க்குமேதோ வரண்?

என்று சிஷ்யர்கள் அனைவரும் மிகவும் துக்கித்து, தங்களுடைய திருமுடியினை விளக்குவித்துக் (தலைச்சவரம்) கொண்டு,
வடதிருக்காவிரியில் நீராடி மீண்டும் மடத்துக்கு எழுந்தருளுகின்றனர்.

நம்மாழ்வார் மோட்சம் முடிந்து நம்பெருமாள் ஆஸ்தானம் அடைந்த பின் வெறிச்சோடும் திருமாமணி மண்டபம் போன்று,
ஜீயரின்றி வெறித்துப் போய் கிடந்த திருமலையாழ்வார் கூடம் கண்டு மீண்டும் அழுகின்றனர்.

நானெதென்னும் நரகத்திடையழுந்திப்
போனவிந்த காலமெல்லாம் போதாதோ? – கானமலர்
மாலையணிதிண்டோன் மணவாள மாமுனியே
சால நைந்தேன் உன் பாதம் தா!–என்றும்

புண்ணாராக்கை தன்னுள் புக்குழலும் தீவினையேன்
தண்ணாருமென் கமலத்தாளணைவதென்று கொலோ
பண்ணரு நால்வேதம் பயின்றுய்யும் பண்டிதனே
மண்ணாள வந்த மணவாள மாமுனியே–என்றும்
மண்ணுலகம் சிறக்க வந்த மாமுனிகளை நினைத்து நினைத்து திருமிடறு தழுதழுப்ப விண்ணப்பஞ்செய்து,
தமக்குத் தானே ஒருவாறு தேறி ஜீயரின் திருவத்யனன கைங்கர்யத்தினைப் பெருக்கச் செய்கின்றனர்.
தீர்த்த பிரஸாதங்களை ஸ்வீகரித்து ஜீயர் அவரவர்க்கிட்ட பணி செய்ய திரும்புகின்றனர் அனைவரும்.

பெரியபெருமாள், ஜீயர் நாயனாருக்கு தீர்த்தம் பிரஸாதம் திருப்பரிவட்டம் ஸ்ரீசடகோபம் எல்லாம் சாதித்து,
ஜீயர் நாயனாரை ”ஸ்ரீரங்கராஜரையும் மடத்தையும் நோக்கிக்கொண்டு போரும்” என்று நியமிக்கின்றார்.

இத்தைக் கண்டு ஜீயருடைய அபிமாந அந்தர்பூதரெல்லோரும் சற்றே ஆறுதலடைந்தவர்களாய், ஜீயர் நாயனாரை
பெரிய ஜீயரைக் கண்டாற் போல கண்டு அநுவர்த்தித்து, ஆஸ்ரயித்து ஸேவித்துக் கொண்டிருந்தார்கள்.

———————-

ஜயது யஶஸாதுங்கம் ரங்கம் ஜகத் த்ரய மங்களம்
ஜயது ஸுசிரம் தஸ்மிந் பூமா ரமாமணி பூஷணம்
வரத குருணா ஸார்த்தம் தஸ்மை ஶுபாந்யபி வர்த்தயந்
வரவரமுநி: ஸ்ரீமாந் ராமாநுஜோ ஜயதுக்ஷிதௌ

பெருமையினால் உயர்ந்து மூவுலகுக்கும் மங்களாவஹமான ஸ்ரீ திருவரங்கமானது பெருமையுற்று விளங்க வேணும்;
அத்திருப்பதியிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீ கௌஸ்துபத்தையும் திவ்யாபரணமாக உடைய ஸ்ரீ எம்பெருமான்
பல்லாண்டு பல்லாண்டாக விளங்க வேண்டும்;
அந்த ஸ்ரீ ரங்கநாதனுக்காக ஸ்ரீ வரதகுருவான அண்ணனுடன் மங்களங்களை மேலும் மேலும் உண்டாக்குபவரான
ஸ்ரீ ராமாநுஜரின் அபராவதாரரான ஸ்ரீ மணவாளமாமுனிகள் இப்புவிதனில் விளங்க வேண்டும்.

“சேற்றுக் கமல வயல் சூழரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப் பூதலத்தே
மாற்றற்ற செம் பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே ”

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண்தமிழ் நூல் வாழ – கடல் சூழ்ந்த
மனனுலகம் வாழ மணவாள மா முனியே !
இன்னுமொரு நூற்றாண்டிரும்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீபாஞ்சராத்ரம்–ஸ்ரீ ரெங்க பங்கஜம் –ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள்–

December 25, 2020

ஸ்ரீபாஞ்சராத்ரம்

நமஸ் ஸகல கல்யாண தாயிணே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரண ஹேதவே!
நமஸ் சாண்டில்ய குரவே சனகாயன நமோ நம:
ஔபகாயண சாண்டில்ய பாரத்வாஜஸ்ச கௌசிக:
மௌஜ்யாயநஸ்ச பஞ்சைதே பாஞ்சராத்ர ப்ரவர்த்தகா:
தீக்ஷாச்சார்ய: ஜகத் ப்ரக்ஞா: திசந்து ஞானமத்புதம்

இது ஸ்ரீரங்கதிவ்ய க்ஷேத்திரத்திலே நம்பெருமாளின் அர்ச்சகர்கள் அநுதினமும் அநுசந்திக்கும் ஸ்ரீபாஞ்சராத்ர தியான ஸ்லோகம்.

என்ன சொல்லி துதிக்கின்றது இந்த ஸ்லோகம்..?

உன்னை ஆராதிக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும், ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர்
ஆகிய ஐந்து ரிஷிகளுக்கும் போதித்து அவர்களை பாஞ்சராத்ர ப்ரவர்த்தகளாகவும், இந்த ஜகத்திற்கே பிரகாசம் அளிக்கக் கூடியவர்களாக்கி,
அத்புதமான ஞானத்தினை அவர்களுக்கு அருளிய சகலவிதமான கல்யாண குணங்களையும் உடைய,
சக்கரத்தினை கையில் தரித்துள்ள ஸ்ரீமந் நாராயணனை வணங்குகின்றேன்.
சாண்டில்ய மகரிஷியினையும், சனகரையும் வணங்குகின்றேன்!

இந்த ஸ்லோகத்தில் “சக்ரபாணயே“ என்று துதிப்பதற்கு என்ன காரணம்..? யார் இந்த ஐந்து ரிஷிகளும்..?
ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் ஆகிய இந்த ஐந்து ரிஷிகளுமே பஞ்சாயுதங்களின் அம்சம்!
இதில பிரதானமானது ஸ்ரீசுதர்ஸனர்!.
இந்த ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரிகளில் பகவான் தனித்தனியே தன்னை ஆராதிக்கும் முறையை கற்பித்தான்.
ஐந்து ராத்ரிகளில் இது உபதேசிக்கப்பட்டமையால் இது பாஞ்சராத்ரம் என்றழைக்கப்படுகின்றது.

விஹகேந்திர ஸம்ஹிதை என்றவொரு க்ரந்தமானது, அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனர், பிரம்மா, சிவன் ஆகிய
ஐவருக்கும் முறையே ஐந்து ராத்ரிகளில் உபதேசித்தார், என்கிறது.

பாரத்வாஜ ஸம்ஹிதை என்கின்ற க்ரந்தமானது வேறொரு விதமாக பாஞ்சராத்ரத்தினை கூறுகின்றது.

நாம் இங்கு ஸ்ரீரங்கத்தில் எது பிரமாணமாக உள்ளதோ, ஸ்ரீரங்கத்தில் வழக்கத்தில் உள்ள தியான ஸ்லோகத்திலுள்ளபடி எடுத்துக் கொள்வோம்.

“ராத்ரி” என்றால் “இருள்” இந்த இருள் அறியாமையைக் குறிக்கும்.

“பாஞ்ச” என்றால் சூரியன் என்ற ஒரு பொருளுண்டு.

இந்த சூரியன் அறியாமையாகிய இருளை விரட்டவந்தபடியால் “பாஞ்சராத்ரம்”.

எது அறியாமை..?

எது முக்யமாக அறியப்பட வேண்டுமோ அதனை அறியாதது அறியாமை..!

எது முக்யமாக அடையப்பட வேண்டுமோ அதனை விடுத்து மற்றவற்றையெல்லாம் அடைதல், அடைய ஆசைப்படுதல் அறியாமை..!

பாஞ்சராத்ரம் சொல்கின்றது..

“யஸ்மின்யுக்தம் வாஸூதேவனே சாக்ஷாத்
ஞானம் யோக: கர்ம பக்தி: விபுக்தி:
ஏதத் ஞாத்வா ப்ரம்மபூதோ மஹாந்த:
தத்வத் சாஸ்த்ரம் பாஞ்சராத்ரம் ப்ரபத்யே..”

”பரம்பொருள் சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனே.
நாம் ஞானத்தினாலோ, யோகத்தினாலோ, கர்மங்களினாலோ அடையப்பட வேண்டியவன் இவனே“ என்கின்றது.

மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலா மானிடங்காள்*
உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்*
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவனல்லால் தெய்வமில்லை*
கற்றினம் மேய்ந்த எந்தை கழலிணை பணிமின்நீரே !

பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் கூட எளியவனாய் இருக்கும் இந்த கண்ணனின், நம்பெருமாளின் பொற்பாதங்களை பணிமின்!
இவனைத் தவிர ”நானே ஈஸ்வரன்” என்று சொல்லிகொண்டிருக்கும் தெய்வங்கள் பல உண்டானாலும்,
இவனல்லால் வேறு தெய்வமில்லை..! இந்த பரமபருஷனிடத்து, அபயமளித்துக் காக்கும் எளியவனிடத்து அன்பில்லாது
மதிகெட்டு நிற்கும் மானிடர்காள்! உற்ற போது வரும்வரை இவனை நீங்கள் உணரமாட்டீர்கள்!
ஸர்வேஸ்வரனான இவன் ஒருவனால் மட்டுமே நமக்காக அவதரித்து, தம் நிலை தாழநின்று தன்னைப் பற்றினார்காக
தன்னோடு ஒத்த போகத்தினைத் தர காத்திருப்பவன்!.

———-

“ஸ்வேத த்வீபம்” என்பது திருப்பாற்கடலுக்கருகில் உள்ள ஒரு “வெள்ளைத் தீவு”.
பெரிய பெருமாளுக்கு நித்ய திருவாராதனம் செய்யும் அர்ச்சகர்கள் இங்கிருந்து வந்தவர்கள் என்பது
நம்மில் பலரும் அறியாத ரகசியம். அரங்கனை ஆராதிக்கும் இவர்கள் ஆழ்வாருக்கு ஒப்பானவர்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.

——-

பாஞ்சராத்ரமானது “ஏகாயன வேதம்” என்றும் அழைக்கப் பெறுகின்றது.
“சாந்தோக்ய உபநிஷத்“ என்று ஒரு உபநிஷத். இதில் நாரதரும் சனகரும் இருவரும் தம்தம் கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளும் ஒரு பகுதி
இதில் “ருக்வேதம் பகவோத்யேபி, யஜூர் வேதம், சாமவேதம், ஹ்யதர்வணம், வாகோவாக்யம், ஏகாயனம்…“என்று
பாஞ்சராத்ரத்தினை ஏகாயனம் என்று குறிப்பிட்டு ஒரு சொற்றொடர் வருகின்றது.
இதன் மூலம் நாரதர் பேசுவதாக வரும் ”சாந்தோக்ய உபநிஷத்“ தின் காலத்திற்கு பலகாலம் முன்பே உள்ள
பாஞ்சராத்ரத்தின் அருமையினை தெரிந்து கொள்ளலாம்.
(இந்த பாஞ்சராத்ர ஆகமத்தினை பகவான் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்து பிரம்மாவினால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்டு
பின்னர் நாரதர் ஐந்து ரிஷிகளிடத்தும் உபதேசித்தாகவும் ஒரு கருத்துண்டு..!)

——–

நிகமம் என்பது நான்கு வேதங்கள், வேத ஸம்ஹிதைகள், உபநிஷத்துக்கள்,
உபவேதங்கள் (தனுர் வேதம், ஆயுர் வேதம் முதலானவைகள்) ,
ஜோதிடம், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிஹாசங்கள் முதலானவைகள். இவைகளனைத்தும் நிகமம் என்றழைக்கப்படும்.

ஆகம ரஹஸ்யம் என்னும் க்ரந்தத்தில்,

”ஆகதம் சிவ்வக்த்ரேப்யோ, கதஞ்சவ கிரிராஜாஷ்ருதௌ! மதம் ஸ்ரீவாஸூதேவஸ்ய தஸமாத் ஆகம உச்சேய்தே!“

– வாசுதேவரை பற்றி பேசும் ஆகமங்கள், சிவன் சொல்ல பார்வதி கேட்டதாக பேசபடுகிறது.

ஸ்ரீவாசஸ்பதி மிஸ்ரா என்பவர்,

ஆகச்சந்தி புத்திமாரோஹந்தி யஸ்மாத் அப்யுதயநி: ஷ்ரேயஸோபாயா: ஸ ஆகம:”

இந்த ஆகமங்கள் மூலமாக ஒருவன் மோட்ஷத்திற்கான உபாயாத்தை அறிந்து கொள்கிறான்.

வராஹி தந்தரம் என்னும் க்ரந்தம் ஆகமத்தினை ஏழு தலைப்புகளாகப் பிரிக்கின்றது.

1. படைத்தல்: இந்த தலைப்பில் படைத்தல் மற்றும் காத்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

2. அழித்தல்: இந்த தலைப்பில் அழித்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

3. வழிபாடு : இந்த தலைப்பில் வழிபடுதல் முறைகள் பற்றி விளக்கப்பட்டு உள்ளது.

4. தெய்வீக காரியங்கள் : பகவத் ஆராதனமாக செய்யும் கைங்கர்யங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

5. புரஸ்சரண் : மந்திரங்கள் மற்றும் அதனை உச்சரிக்கும் முறைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

6. வினை : அந்தணர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஆறு தொழில்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

7. தியானம் : நான்கு வகை தியானங்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

எல்லா ஆகமங்களும் மேற்ச் சொன்ன வரையரைக்கு உட்பட்டு இல்லாத போதிலும், பொதுவாக ஆகமம் என்பது
வழிபாட்டு வகைகளையும் அதன் முறைகளையும் எடுத்துரைக்கும் நூலாகவே கொள்ளப்படுகிறது.
ஆனால், ஸ்ரீபாஞ்சராத்ரம் இந்த ஏழு வரையரைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இது ஒரு தனி சிறப்பு.

——-

அர்ச்சை நிலைக்குக் கைங்கர்யம் செய்தல்–ஸ்ரீரகஸ்யத்ரய ஸாரம்-

மூலம் – அப்போது,
நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் என்றும்,
யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: என்றும்
சொல்லுகிறபடியே ஓர் அதிகாரி விசேஷத்துக்காக ஸாந்நித்யாதிகளைப் பண்ணிப் பரமைகாந்தியான தன்னையுகந்து வந்து
அர்ச்சாவதாரம் பண்ணியிருக்கிற எம்பெருமான் பக்கலிலே
ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: என்கிற பூர்த்தியையும்,
ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் என்கிற பாவநதமத்வத்தையும்,
ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் என்கிறபடியே
ப்ரத்யக்ஷாதி ப்ரமாணத்ரயத்திலும் ஹேதுபலபாவத்தாலே வரும் மதிமயக்குகளெல்லாவற்றுக்கும் மருந்தாய் இருக்கிற படியையும்,
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் என்றும்,
“தமருகந்தது எவ்வுருவம்” என்கிற பாட்டிலும் சொல்லுகிறபடியே அவாங்மனஸாபரிச்சேத்யமான ஆச்ரித பாரதந்த்ர்யத்தையும்,
“கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா” என்கிற ஆகர்ஷகத்தையும் அநுஸந்தித்து,

ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம்
ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம்
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா
பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ:
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம்
யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத்
யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம்–என்கிறபடியே
அவ்வோ ஸம்பந்தவர்க்க பரத்வ ஸௌலப்யாதிகளுக்கு அநுரூபமான வ்ருத்தியைப் பண்ணவும்.

பௌஷ்கர ஸம்ஹிதை –
நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் –
எப்போதும் நிலையாக உள்ள ஸர்வேச்வரனின் திருமேனி குறித்தும்,
அவன் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்பது குறித்தும்
யார் மனதில் உள்ளதோ அவன் அருகில் ஸர்வேச்வரன் எப்போதும் வருவான் – என்றும்,

பௌஷ்கர ஸம்ஹிதை –
யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: –
கடலில் உள்ள நீரைப் பருகிய மேகங்களால் மழையாகப் பொழியப்பட்ட பின்னர்,
அந்தக் கடல்நீரே அனைவராலும் பருகும்படியாக உள்ளது;
இது போன்று எம்பெருமான் அர்ச்சையாக நின்ற பின்னர் அனைவராலும் கைங்கர்யம் செய்து,
அனுபவிக்கும்படியாக உள்ளான் – என்றும் கூறியது காண்க.

விஷ்வக்ஸேந ஸம்ஹிதை –
ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: –
மந்த்ரங்களில் காணப்படும் எம்பெருமானின் ஞானம் உள்ளிட்ட ஆறு குணங்களானவை அர்ச்சையாக உள்ள
அவனது வடிவத்தில் காணப்படுகின்றன – என்பதன் மூலம் பூர்ணமாக உள்ளது கூறப்பட்டது.

சாண்டில்ய ஸம்ஹிதை (2-89) –
ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் –
அர்ச்சையாக நிற்கின்ற புருஷோத்தமின் ரூபத்தை திருவடிப்பீடம் தொடங்கி திருமுடிவரை காண்பவனின்
அனைத்துப் பாவங்களும் உடனே அழிந்துவிடும், இப்படி உள்ளபோது சிறு பாவங்கள் குறித்துக் கூறவேண்டுமா –
என்பதன் மூலம் அவனது அர்ச்சை ரூபமானது அனைத்து பாவங்களையும் நீக்கவல்லது என்பதை அறியலாம்.

பௌஷ்கர ஸம்ஹிதை (1-31-32) –
ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் – மதிமயக்கம் கொண்டவர்கள் அர்ச்சையாக நிற்கும்
எம்பெருமானின் ரூபத்தைத் தற்செயலாக வணங்கினாலும் அவர்களது தீயவாஸனை, வஞ்சனைகளின் தொகுப்பு,
தீய காரணம், தீய எண்ணங்கள் மற்றும் நாஸ்திகத்தன்மை ஆகியவை அழிந்துவிடும் – என்றது.
இப்படியாக அறிவு தடுமாற்றம் என்னும் நோய்க்கு ஏற்ற மருந்தாக அர்ச்சாரூபம் உள்ளது.

மனம் மற்றும் வாக்கால் அளவிட இயலாதபடி உள்ள எம்பெருமான், தனது அடியார்களின் பொருட்டு,
அவர்களுக்காகத் தன்னையும் கொடுத்தபடி நிற்கும் நிலையை எண்ணி த்யானித்தல் வேண்டும்.
இதனை – கீதை (4-11) –
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் – என்னை அடைய விரும்புகிறவர்கள் எந்த வடிவில்
என்னை அமைக்கின்றனரோ, அந்த வடிவிலேயே நான் என்னை அவர்களுக்குக் காண்பிக்கிறேன் – என்றும்,

முதல் திருவந்தாதி (44) – தமருகந்தது எவ்வுருவம் – அடியார்கள் அந்த உருவத்தை விரும்புகின்றனரோ – என்றும்
கூறியது காண்க. மேலும்

அமலனாதிபிரானில் (10) – கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா – என்னும்படியாக அவனது அர்ச்சா ரூபத்தில்
உள்ள ஈர்ப்பை அனுபவிக்க வேண்டும். அடுத்து அவனது எளிமை மற்றும் எஜமானத் தன்மை
ஆகியவற்றுக்கு ஏற்றபடி கைங்கர்யம் செய்தல் வேண்டும்.

கீழே உள்ள பல வரிகள் காண்க:

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-37) –
ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம் ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம் –
உண்மையான மனைவி தனது கணவனையும், பெற்ற தாய் தனது குழந்தையையும், சிஷ்யன் தனது ஆசானையும்,
நண்பன் தனது நண்பனையும் உபசரிப்பது போன்று ஸர்வேச்வரனை உபசரிக்க வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-38) –
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ: –
மஹாலக்ஷ்மியைத் தரித்த எம்பெருமானை எப்போதும் எஜமானன், நண்பன், ஆசார்யன், தந்தை, தாய்
என எண்ணியபடி இருத்தல் வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-31) –
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம் யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத் –
இளவரசன் மற்றும் மதம் கொண்ட யானை ஆகியவர்களை எவ்விதம் பயந்து உபசரிப்போமோ,
அது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும். இதே போன்று வீட்டிற்கு வந்த விருந்தினரை
மகிழ்வுடன் உபசரிப்பது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும்.

• யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம் –
தனக்குப் பிரியமான குழந்தையைக் கொண்டாடுவது போன்று எம்பெருமானைக் கொண்டாட வேண்டும்.

ஸர்வசக்தி படைத்த அவன் சக்தியேயில்லாத ஒரு குழந்தை போல மாறி அர்ச்சகரை எதிர் பார்த்திருப்பது தான்!.

ததிச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல
ஸ்நானம் பாநம்ததா யாத்ராம் குருதே வை ஜகத்பதி:
ஸ்வதந்த்ரஸ் ஸஜகந்நாதோ ப்யஸ்வதந்த்ரோயதாததா
ஸர்வசக்தி: ஜகத் தாதாப்ய சக்த இவசேஷ்டதே-விஷ்வக்ஸேன ஸம்ஹிதை-

ஸ்வதந்தர ஸஜகந்நாதோ – ஸர்வ சுதந்திரம் பெற்றவனாயிருக்கும் இந்த ஜகத்திற்கே அதிபதியான ஜகந்நாதன் –

ப்யஸ்வதந்த்ரோயதாததா – ஸ்வதந்தரம் இல்லாதவன் எப்படியிருப்பானோ அம்மாதிரியாக மாறி

த்திச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல – அடியார்களது குற்றங்களை பொருட்படுத்ததாது அந்த
பரம்பொருள் தன்னை ஆஸ்ரயித்தவர்களின் விருப்பப்படி உண்கின்றான்!

ஸ்நானம் பானம்த்தா யாத்ராம் குருதே ஜகத்பதி: – தன்னை ஆராதிப்பவர்களுடைய விருப்பத்தின்படி நீராடலையும்,
நீர் பருகுதலையும், புறப்பாடு(யாத்ரை) கண்டுருளுதலையும் செய்கின்றான்!

ஸர்வசக்தி: ஜகத் தாதாப்யசக்த இவசேஷ்டதே – எல்லா சக்திகளையும் அடைந்தவனாயிருந்தும்,
சக்தியில்லாதவனைப் போன்று நடிக்கின்றான்!

தான் நினைப்பதற்கு அரியவனாயிருப்பின் தன்னுடைய சொத்து தன்னை விட்டு விலகிவிடுமோ என்ற அச்சத்தினாலேயே,
நம்மை தடுத்து ஆட்கொள்ள அந்த அரியவனாகிய ஹரி எளியவனாய் அர்ச்சையில் தாமே வந்து அகப்பட்டு கொள்கின்றான்!

ஆழ்வார் சொல்கின்றார், ”இந்த அர்ச்சாவதாரத்தினை நான் ரஸித்து பருக வேண்டிய அமுதமாக இருக்க,
அதற்கு மாறாக இவன் என்னை முழுவதுமாய் பருகிவிட்டானே“ என்கிறார்.

தன்னழகைக் காட்டி நம்மை ஆட்கொள்ளத்தானே அவன் அர்ச்சையாய் அவதரிக்கின்றான்!

தானேயாகி நிறைந்து எல்லாவுலகும் உயிரும் தானேயாய் *
தானேயானென்பானாகித் தன்னைத்தானே துதித்து* எனக்கு
தேனே பாலே கன்னலேயமுதே திருமாலிருஞ்சோலை *
கோனேயாகி நின்றொழிந்தான் என்னைமுற்றும் உயிருண்டே!-திருவாய்மொழி 10-7-2

“ வாரிக்கொண்டு ன்னை விழுங்குவான் காணில்“ என்று *
ஆர்வுற்ற என்னை யொழிய – என்னில் முன்னம் பாரித்து * தான் என்னை முற்றப் பருகினான் *
காரொக்கும் காட்கரை யப்பன் – கடியனே -திருவாய்மொழி 9-6-10

———

பாஞ்சராத்ர ஆகமங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது மூன்று ஆகமங்கள் ஆகும். அவைகள்
ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் ஆகியவையாம். இவைகள் “ரத்னத்ரயம்“ என்றழைக்கப்படுகின்றது.

இந்த மூன்றுக்கும் உப ப்ரஹ்மணங்களாக, அதாவது விவரணமாக
ஸாத்வதத்த்திற்கு -ஈஸ்வர ஸம்ஹிதையும்,
பௌஷ்கரத்திற்கு – பாரமேஸ்வர ஸம்ஹிதையும்,
ஜயாக்யத்திற்கு – பாத்ம ஸம்ஹிதையும் உள்ளன.

இம்மூன்றும் மூன்று முக்கிய திவ்யதேசத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
மேல்கோட்டையில் ஈஸ்வர ஸம்ஹிதையும், ஸ்ரீரங்கத்தில் பாரமேஸ்வரமும், காஞ்சியில் பாத்மமும் அனுஷ்டானத்தில் உள்ளன.

நாம் இனி இங்கு ஸ்ரீரங்கத்தில் அனுஷ்டானத்திலுள்ள பாரமேஸ்வர ஸம்ஹிதையிலிருந்து முக்யமானவற்றைக் காண்போம்.!

பாரமேஸ்வர ஸம்ஹிதையின் முதல் ஸ்லோகமே
“நமஸ் ஸகல கல்யாண தாயிநே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரணஹேதவே”
என்று தொடங்குகிறது
.
”ஸகல கல்யாண தாயிநே” என்றால் என்ன..? “ஸகல கல்யாண குணங்களும் நிரம்பிய“ என்று பொருள்!

”திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும்,
ஆஸந பத்மத்திலே யழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்” (முமுக்‌ஷுப்படி-142).
குற்றங்கண்டு வெருவாமைக்கு வாத்ஸல்யம் – கார்யஞ்செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
ஸ்வாமித்வம் கொண்டு அகலாமைக்கு ஸௌசீல்யம் – கண்டு பற்றுகைக்கு ஸௌலப்யம் –
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள்” (முமுக்‌ஷுப்படி-138).
இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம்”

——–

தோதாத்ரி மலை…! தற்போது வானமாமலை என்றழைக்கப்படும் மிக உன்னதமான க்ஷேத்திரம்.!
இங்கு தேவர்களும் கந்தர்வர்களும் இங்குள்ள பெருமாளை அனு தினமும் ஸேவித்தவாறு இருக்கின்றார்கள்.
பல புண்ய தீர்த்தங்கள் இந்த புனிதமான இடத்தினுள் உள்ளது. அனைத்து வகை ஜாதிபுஷ்பங்களும் பூத்து குலுங்குகின்றது.
பலவிதமான ஆஸ்ரமங்கள் அமையப் பெற்றது, அதில் பல தப ஸ்ரேஷ்டர்கள் வசித்து வருகின்றார்கள்.
வேதம் மற்றும் வேதாந்தாத்தில் நாட்டமுடைய அறிஞர்களும், தவத்தில் நாட்டமுடைய முனிவர்களும், சாங்க்ய சித்தாந்தத்தில்
(இது கபில மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம்) சிறந்தவர்களும், யோக சித்தாந்தாத்தில்
(இது பதஞ்சலி மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மார்க்கம்) ஈடுபட்டுள்ளவர்களும்,
இதிஹாஸ புராணங்களில் வல்லுனர்களும், தர்ம சிந்தனையுடையோர்களும் நிரம்பி வழிந்துள்ள ஒரு
அற்புதமான க்ஷேத்திரம்! தேவரிஷிகள் மற்றும் ராஜரிஷிகளும் அங்கு காணப்படுகின்றனர்.
மந்த்ர சித்தியடைந்த மஹான்கள் பலர் உள்ளனர்!

”தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர் * ஏற வீற்றிருந்தாய்!
உன்னை எங்கெய்த கூவுவனே”-திருவாய்மொழி 5-7-4

இத்தகைய பலரது இருப்பினால் “இருப்பிடம் வைகுந்தம்” ஆன இந்த புண்யமான மலையினில் பிரும்மாவினுடைய
புத்ரர் ஆன “சனகர்“ என்பவர் பரம்பொருளை அடைய விரும்பி கடுமையான தபஸ் செய்கின்றார்!

ஒரிரு வருடங்கள் அல்ல..! நூறு வருடங்கள் காம க்ரோதங்கள், இந்திரியங்களை அடக்கி அந்த
பரம்பொருளான பகவானைக் குறித்த கோரத்தவம்..!

இவ்வளவு புனிதமான அதிர்வலைகள் கூடிய ஒரு புண்யமான இடத்தில் சிந்தை கலையாமல்
சிரீவரமங்கையில் தவமிருந்தும் பகவான் அவருக்குக் காட்சி தரவில்லை!

அந்த தபஸ்ரேஷ்டர் தவித்துப் போனார்..! சோகம் அவரைத் தொற்றிக் கொண்டது..!
தீடிரென்று அவர் தபஸ் செய்த இடமே பிரகாசமானது..!
அந்த புருஷோத்தமன், சாதாரண பக்தன் தவித்தாலே பொறுக்காத அந்த பக்தவத்ஸலன், அசரீரியாய் அந்த
சனகரிடத்து பேச ஆரம்பித்தான்..!

நூறு வருடங்கள் கடுமையான தபஸ்ஸின் பயனோ, அல்லது ஒரு சில நிமிடங்கள் பகவானைக் காணாது
சனகர் தவித்த தவிப்பு, சோகம் முதலானவற்றால் ஏற்பட்ட பரிவோ, ஸ்ரீவாஸூதேவன் அவரிடத்து பேச ஆரம்பித்தார்.

”ஹே! தவ உத்தமரே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்!
இதே மலையில் மற்றொரு இடத்தில் சாண்டில்யர் என்னும் ஒரு மஹாதபஸ்வி உள்ளார். நீ உடனடியாக அவரை ஆஸ்ரயிப்பாயாக!
உண்மையான பகவத் தர்மத்தை, இம்மையிலும், மறுமையிலும் செம்மை தரும் வழியினை,
என்னை அடையும் மார்க்கத்தினை அவர் உனக்கு உபதேசிப்பார்“ என்று ஆசீர்வதித்தது அந்த அசரீரி!

சனகர் அந்த தோதாத்ரி மலையில் சாண்டில்யரைத் தேடி வலம் வரலானார். ஒரிடத்தில் அழகிய தாமரைத் தடாகத்தினைக் கண்டார்.
ஒவ்வொரு ருதுக்களிலும் மட்டும் பூக்கும் புஷ்பங்கள் அங்கு ஒரு சேர பூத்து குலுங்குவதை கண்ணுற்றார்.
பல தபஸ்விகள் அந்த இடத்தில் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர். மஹா தேஜஸ்வியாய் அவர்களில் நாயகனாய்
சாண்டில்யர் விளங்கக் கண்டார். அவரைப் பணிந்து வீழ்ந்து வணங்கினார்.

சனகரை பார்த்தவுடனேயே சாண்டில்யர் உணர்ந்து விட்டார். சனகரை ஆசீர்வதித்தார். ”தபோ சிரேஷ்டா!
உண்மையான பகவத் தர்மத்தை நாடி நீ இங்கு வந்துள்ளாய்! நான் பல ஆண்டுகள் இதனைப் பெற கடுமையான தவம் செய்தேன்!
அப்போது அச்சுதன் தோன்றி எனக்கு வேதங்களை உபதேசித்தான். இந்த வேதங்கள் அனைத்துமே எம்பெருமானே பரம்பொருள்
என்று சில பாகங்களில் மட்டுமே சொல்லி பெரும்பாலான இடங்களில் இதர தெய்வங்களையும்
போற்றுவதாகயுள்ளது. ஆகவே எனக்கு இந்த வேத அறிவு நிறைவுத் தரவில்லை.

“யஸ்து சர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தர:
வாஸூதேவஹை நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:
தத்திஞ்ஞாஸ்ச்சா பலவதி ததாத் வாவி ரபூந் மம
ததோத்ர பர்வத ஸ்ரேஷ்டே தபஸ்த்தத்வம் மஹோத்தமம்
அநேகாணி சஹஸ்ராணாம் வர்ஷணாம் தபோஸோன் தத:
த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதௌ கலியுகஸ்யச
சாக்ஷாத் சங்கர்ஷணாத் வ்யக்தாத் ப்ராப்தயேஷ மஹத்தர:
ஏஷ ஏகாயனோ வேத: ப்ரக்யாத சாத்வதோ விதி:
துர்விக்ஞயோ துஷ்கரஷ்ச ப்ரதிபுத்யேர் நிஷ்வ்யதே
மோக்ஷாயனாய வைபந்தா: ஏத தன்யோ ந வித்யதே“

”எது உண்மையான பரம பகவத் தர்மம்? பொய்யான அறிவு விடுத்து எது உண்மையான ஞானம்?
இதர தெய்வங்களை நாடாது பரம்பொருளான வாஸூதேவனை மடடும் அடையச் செய்யும் மார்க்கம் எது?
இது குறித்து இந்த உன்னதமான மலையிலே நான் மேலும் பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்தேன்!
இந்த தவத்தின் பயனாக சாக்ஷாத் சங்கர்ஷணனே என் முன் தோன்றி “ஏகாயன வேதம்” என்றழைக்கப்படும்
இந்த பாஞ்சராத்ரத்தினை எனக்கு உபதேசித்தான். இது பகவானை அடையவேண்டும் என்ற
ஒரே சிந்தையுள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும்!
துர்சிந்தனையுள்ளவர்களுக்கும், வேறு தெய்வங்களை நாடுபவர்களுக்கும் உபதேசிக்கவே கூடாது!.
மோக்ஷத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த உபாயம், வித்யை இதுதான்..” என்று கூறுகின்றார்

சாண்டில்யர் தொடர்கின்றார் “இந்த பாஞ்சராத்ரமானது
வேதமாகிய மரத்திற்கு வேர் போன்றது..! எம்பெருமான் ஒருவனைப் பற்றிச் சொல்வதையே குறிக்கோளாய் கொண்டது.!
சந்தேகமேயில்லாதபடி எம்பெருமானைப் பற்றித் தெள்ளத் தெளிவாகச் சொல்லி அஞ்ஞானமாகிய இருட்டினை
அகற்றக் கூடியது, இந்த உயர்ந்த பகவத் சாஸ்திரம்..! “

இதனை பகவான் வைஸ்வமனுவிற்கு உபதேசித்துள்ளான். ஸ்வேத த்வீபத்தில் (திருப்பாற்கடலினை ஒட்டியுள்ள கரையோரம்.!)
நாரதருக்கு உபதேசிக்கப்பட்டது. நாரதருடன் கூட
ஸநத் சுஜாதர், ஸனந்தனர், ஸனத்குமாரர், கபிலர் முதலிய மஹாஞானிகள் இதனை அத்யயனம் செய்து வந்தனர்.

மரீசி, அத்ரி, அங்கீரஸர், புலஸ்யர், புலஹர், க்ரது, வஸிஷ்டர் மற்றும் ஸ்வாயம்புவ மனு ஆகிய
எட்டு மஹரிஷிகளும் இந்த பாஞ்சராத்ரத்தில் கூறியுள்ளபடி பகவானை வழிப்பட்டனர்.

இந்த அற்புதமான சாஸ்திரமானது அவ்வளவு எளிதில் கிட்டியதில்லை. பல ஆயிரக்கணக்கான தவத்தின் பயனாய் எனக்குக் கிடைத்தது.
பல லக்ஷக்கணக்கான ஸ்லோகங்களைக் கொண்டது.
இதனைப் பிரித்து ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என பல ஸம்ஹிதைகளாகச் செய்தனர்.

மனு முதலானவர்கள் “மனு ஸ்மிரிதி“ பண்ணினார்கள்.
இதுவே எல்லா சாஸ்திரங்களுக்கும் ஆதாரம்..!
இதில் தர்மார்த்த காம மோக்ஷங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!
அஸ்வமேதம் முதலான யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.!
எம்பெருமானுக்கே உண்டான பல அரிய மந்த்ரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!
“உபரி சரஸ்“ என்ற வசுக்களின் அரசன் ஸவர்க்கத்தினை அடைய அஸ்வமேதம் முதலாக யாகங்களை
இதில் கூறியபடி அனுஷ்டித்து அடைந்தான்.!
இதனை நான், சுமந்து, ஜெய்மினி, ப்ருகு, ஓளபகாயநர் மற்றும் மௌஜ்யாயனர் ஆகியோருக்குச் சொல்லிக் கொடுத்துள்ளேன்..!

லோகத்திற்கு நன்மையைச் செய்யும் பொருட்டு, பத்ரிகாஸ்ரமத்தில். ஸ்ரீமந் நாராயணன், இதில் சொல்லப்பட்டுள்ள
மூலமந்திரத்தினை, நரனுக்கு உபதேசம் செய்துள்ளார்.

க்ருத யுகத்தில் இந்த தர்மமானது எல்லாராலும் ஒரே மனதாக அனுஷ்டிக்கப்பட்டு எல்லோரும் உயர்ந்த கதியினையடைந்தனர்.
த்ரேதா யுகத்தில் மக்கள் பல ஆசைகளைக் கொண்டவர்களாய் மாறி சில தேவதாந்திர வழிபாட்டில்
(எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து இதர தெய்வ வழிபாடு.) ஈடுபாடு காட்டினர்.
அப்போது இந்த உயர்ந்த பகவத் தர்மமானது மறையத் தொடங்கியது. பகவான் யார் உண்மையான தாபத்துடன் உள்ளனரோ,
யார் உரிய யோக்யதாம்சங்களுடன் விளங்குகின்றனரோ அவர்களுக்கு மட்டுமே இந்த பகவத் தர்மத்தினை வெளிப்படுத்தினான்..!
அப்படிப்பட்ட எம்பெருமானிடமிருந்து நானும் இதனை கடும் தவத்தின் பயனாய் கைவரப் பெற்றேன்.
இதைத் தவிர இரண்டு விதமான ஞானம், 13 விதமான கர்மாக்கள், 12 விதமான வித்யை ஆகியவனவும் அடையப்பெற்றேன்
(இதில் சாண்டில்யர் குறிப்பிட்டுள்ள ஞானங்கள், கர்மாக்கள் மற்றும் வித்யைகள் எவை எவை யென்று இந்த
பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கான வியாக்யனம் ஏதும் கிடைக்காதப்படியினால் அறிய முடியவில்லை..!)” என்று சொல்லி
சனகரிடத்து இந்த பாஞ்சராத்ரமாகிய ஏகாயன வேதத்தினை உபதேசிக்கின்றார். பல ஆண்டுகள் உபதேசம் ஆகின்றது.

முடிவில் சனகர், சாண்டில்யரிடத்து கேட்கின்றார், ”தேவரீருடைய பரம அனுக்கிரஹத்தினால் மோக்ஷத்தினைத் தரக்கூடிய
இந்த உயர்ந்த தர்மமானது அடியேனால் அறியப்பட்டது. தபஸ்விகளான நமக்கே பல லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட
இந்த தர்மத்தினை அறிய பல ஆண்டுகள் ஆகும் போது, பாவம்..! இந்த ஸம்சாரிகள் எவ்விதம் அறிவது..?
எப்படிக் கடைத்தேறுவது..? என்று, நமக்காக பரிவுடன் வினவுகின்றார் !

சாண்டில்யர் சனகரிடத்து கூறுகின்றார், “உம்மைப் போலவேதான் நானும் சங்கர்ஷணரிடத்து சாமானிய மக்களும்
கடைத்தேற வேண்டி இந்த ஏகாயனசாகையினை எளிமையாகத் தரக் கோரினேன்.
அதற்கு சங்கர்ஷணரும் இரங்கி, இந்த லக்ஷம் ஸ்லோகம் கொண்ட ஏகாயனசாகையிலிருந்து 16000 ஸ்லோகம்
மட்டிலும் கொண்ட மிகச் சிறந்ததான இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதையினை எனக்கு அருளினார்.
இதனை திருப்பாற்கடலில் திருமாலிடமிருந்து நாரத மஹரிஷியும் கேட்டறிந்துள்ளார்..“ என்று கூறி
ஸ்ரீபாரமேஸ்வர ஸம்ஹிதையினை சனகருக்கு உபதேசிக்கின்றார் சாண்டில்யர்!

இதில் எம்பெருமானின் திவ்யாத்ம ஸ்வரூபங்களும், கல்யாண குணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதை, ஞான காண்டம், க்ரியா காண்டம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஞான காண்டத்தில் எம்பெருமானின் ஆறு குணங்கள்,
திவ்யமங்கள விக்ரஹம் சிறப்பு, விபவ அவதாரம்,
லக்ஷ்மி, புஷ்டி (ஸ்ரீதேவி, பூதேவி) இருவரின் சிறப்பு,
திவ்யாயுதங்கள், கருடன் முதலான நித்யசூரிகள், பரமபதம், வ்யூக மூர்த்திகள், அவர்களது ஸ்தானங்கள்,
பரமபதத்தில் உள்ள சாலைகள், அதன் அழகு மற்றும் அளவுகள், ஜீவாத்மா ஸ்வரூபம், முக்தன் – பத்தன்,
முக்திக்குண்டான மார்க்கம், பகவத் மந்த்ரங்கள், முத்ரைகள், யோகங்கள் முதலானவைகள்
விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார் சாண்டில்யர்.

நம்முடைய துரதிர்ஷ்டம் – இந்த பல அரிய சூக்குமமான விஷயங்கள் கொண்ட, 8000 ஸ்லோகங்கள் கொண்ட,
இந்த ஞானகாண்டம், இதனுடைய முதல் அத்யாயத்தினைத் தவிர இதர பாகங்கள் கிடைக்கவேயில்லை..!

சுமார் 200 வருடங்களுக்கு முன் ஸ்ரீநாராயண சூரி என்பவர் இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கு வியாக்யானம் செய்துள்ளார்.
அவருக்கே இந்த ஞான காண்டம் கிடைக்கவில்லை என்கிறார். ஆக 200 வருடங்களுக்கு முன்பே இதனுடைய
ஞான காண்டம் மறைந்து விட்டது (ஸ்ரீநாராயண சூரியின் வியாக்யானம் எவரிடமாவது உள்ளதா..? என்று தெரியவில்லை..!)
1953ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீ உ.வே. கோவிந்தாச்சாரியார் என்னும் மஹா பண்டிதரின் கடும் உழைப்பின் பயனாய்
நாம் இன்று இப்போது நாம் படிக்கும் “க்ரியா காண்டம்“ கிடைத்துள்ளது.

—-

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

பகவானை ஆராதனம் செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை நியமங்களை
இந்த இரண்டாம் அத்யாயத்தில் விவரிக்கின்றார் ஸ்ரீசாண்டில்ய மஹரிஷி..!

ஆராதகன் பிரம்ம முஹூர்த்தத்தில் (அதிகாலை -சூரியன் உதிக்கும் முன்பு) எழவேண்டும்.
படுக்கும் போதும், எழும் போதும்

“ஓம் நமோ வாஸூதேவாய நம: சங்கர்ஷணாய தே (ச)|
ப்ரத்யும்னாய நமஸ்தேஸ்து – அனிருத்தாய தே நம: ||–என்றும்

“நமோ நம: கேசவாய, நமோ நாராயணாய ச
மாதவாய நமஸ்ச்சைவ, கோவிந்தாய நமஸ்தத:
விஷ்ணவே த நமஸ்குர்யாத் நமஸ்தே மதுசூதன
நமஸ் த்ரிவிக்ரமாயத, வாமனாய நமஸ்தத:
ஸ்ரீதராய நமஸ்ச்சாத, ரிஷிகேசாய ஓம் நம:
நமஸ்தே பத்மநாபாய, நமோ தமோதராய ச” என்று
மேலே சொல்லப்பட்ட பகவானின் 16 நாமாக்களையும் (முதல் ஸ்லோகத்தில் நான்கு நாமாக்கள் – இரண்டாவது ஸ்லோகத்தில் 12 நாமாக்கள்)
மற்றும் எம்பெருமானின் தச அவதாரங்களின் நாமாக்களையும், சொல்லியபடியே படுக்க வேண்டும் – எழ வேண்டும்.

இந்த நாமாக்களை மனதிற்குள்ளே சொல்லக் கூடாது.
உரத்த குரலில் சந்துஷ்டியுடன் சொல்ல வேண்டும்.
கீர்த்தனையைப் போல உரத்து பாடவும் செய்யலாம்.
(இவ்வாறு சொல்வதால் நாம் மட்டுமின்றி அருகில் இருப்பவரும் இந்த பகவானின் நாமாக்களைக் கேட்பார்கள் –
அவர்கள் மனதிலும் பதியும் அல்லவா…?)

படுக்கையிலிருந்து எழும் போது, “ஹரி.., ஹரி…,“ என்று சொல்லியபடியே எழ வேண்டும்.

அவ்வாறு எழும் போது, “நம: க்ஷிதிதராய“ என்று சொல்லிக் கொண்டு முதலில் இடது காலை பூமியில் பதித்து எழுதல் வேண்டும்..“

இதன் பிறகு “சௌச ப்ரகாரம்“ (மலங்கழித்தல், சுத்தம் செய்தல்) சொல்கின்றார். இதனை விவரணமாக எழுதுதல் என்பதும் கடினம் –
கடைப்பிடித்தல் என்பது ஏறத்தாழ தற்கால சூழ்நிலைக்கு இயலாத ஒன்று – அந்த காலத்தில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துள்ள
ஒரு காலகட்டத்தில் இதனையெல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்துள்ளனர் நம் பெரியோர்கள். ஒரு சிறிய உதாரணம் சொல்கின்றேன்.
மலத்தினை நேரடியாக பூமியின் மீது கழித்தல் கூடாது என்கின்றார்.
புற்செடிகளைப் பிடுங்கி பூமி மீது பரப்பி அதன் மீது கழிக்கச் சொல்கிறார்..

—–

எந்த நதியானது சமுத்திரத்தில் சென்று கலக்கின்றதோ அந்த நதி மிகச் சிறந்த புண்ய நதியாம்!
இதில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பிரவாகம் எடுத்து ஓடும் நதி மிகமிகச் சிறந்த புண்ய நதியாம்!
இவற்றில் எந்த பக்கத்து நதிக்கரை நித்ய அனுஷ்டானம் பண்ணுவதற்கு ஏற்றது..?
கிழக்கு நோக்கி ஓடும் நதிகளின் தென்கரை வடக்குக் கரையினைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தது.
வடக்கு நோக்கி ஓடும் நதிகளுக்குக் கிழக்குக் கரை நல்லது!
இதில் ஒவ்வொன்றைக் காட்டிலும் சிறந்தவற்றில் 10 மடங்கு பலன் அதிகமாம்!
நம் பூர்வாச்சார்யர்களை நாம் தற்சமயம் நினைவு கூறுவோம்..!

ஸ்ரீரங்கத்தில் ஓடும் இரு நதிகளுமே வடக்கிலிருந்து கிழக்கு நோக்கித்தான் பாய்கின்றது. அதில் நம் பூர்வாச்சார்யர்கள்
அனைவருமே கொள்ளிடக்கரையின் தென்கரையில் தற்சமயம் சிதிலமடைந்து காணாமலே போய்விட்ட
ஆதிகேசவ பெருமாள் சன்னிதியினைச் சுற்றியுள்ள (மணவாள மாமுனிகள் திருவரசு இருந்த இடம்.!)
சதுர்வேதி மங்கலத்தில் அன்றாட அனுஷ்டானங்களுக்கு ஏதுவாக வசித்து வந்துள்ளார்கள்!
அவர்கள் எவ்வளவு தெளிவான வாழ்க்கை வந்துள்ளனர் என்பதினை நினைக்கும்போது மனம் பூரிப்படைகின்றது..!

———-

தியான ஸ்நானம்
மேற்கூறியவாறு செய்து முடித்தவுடன் ஆகாயத்தில் மந்த்ரமூர்த்தியாய் இருக்கும் ஸ்ரீமந் புண்டரீகாக்ஷனை
“ஓம் புண்டரீகாக்ஷாய நம:” என்று தியானித்து தேஜோமயமான அவனது திருவடிகளில் இருந்து தீர்த்தம் பெருகி
நமது சிரஸ்ஸின் பிரும்மரந்தரத்தின் வழியே நமது சரீரத்தினுள் அந்த புண்ணிய தீர்த்தம் விழுவதாக மனதினால் பூரணமாக தியானிக்கவும்.
இது தீர்த்த ஸ்நானம், மந்த்ர ஸ்நானத்தினைக் காட்டிலும் மிக மிக உயர்ந்தது. ஒரே ஒரு விஷயம் நம் மனம் ஒருநிலைப்பட்டு,
வேறெந்த சிந்தனையுமில்லாது ஆத்மார்த்தமாக செயல்படுதல் மிக முக்கியம்.

திவ்ய ஸ்நானம்
சூர்யனின் கிரணங்களோடு கூடிய மழையில் ஸநானம் செய்வது.

பஸ்ம ஸ்நானம்
கோமயம், ஸமித்துக்களால் எரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தூய வெண்மையான பஸ்மத்தில், நெற்றி முதலான அங்கங்களில்
அந்தந்த ஸ்தானத்திற்குரிய மந்திரங்களைச் சொல்லி ஊர்த்வ புண்டரமாக இட்டுக் கொள்ளுதல்.
(சாண்டில்யரின் காலத்தில் நாம் இப்போது இட்டுக் கொள்ளும் திருமண் என்பது வழக்கத்தில் இல்லை..!)

வாயவ்ய ஸ்நானம் அல்லது கோதூளி ஸ்நானம்
கோமாதா செல்லும் போது அதன் குளம்பிலிருந்து கிளம்பும் கோதூளிகள்(மண் துகள்கள்) நம் சரீரத்தில் படுவது.

பார்த்திவ ஸ்நானம்
உயர்ந்த மலையுச்சி, புண்ணிய க்ஷேத்திரங்கள் முதலான இடங்களில் பெறப்பட்ட வெண்மையான மண்ணினால்
கேசவாதி நாமங்களைச் சொல்லி நம் அங்கங்களில் ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொள்ளுதல்.
இது அனைத்து பாவங்களையும் போக்கக் கூடியது.

இந்த ஏழு விதமான ஸ்நானங்களில் ஏதாவது ஒன்றை அவஸ்யம் செய்யவேண்டும்.

——

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

ஊர்தவ புண்டரம் இட்டு கொள்ள உதவும் மண் எங்கிருந்து எடுக்கலாம்…..?

கீழ்கண்ட இடங்களிலிருந்து சேகரித்துக்கொள்ளலாம்..!

1) புண்ய க்ஷேத்திரம்
2) மலையுச்சி
3) நதிக் கரை
4) சமுத்திரக் கரை
5) புற்று
6) துளசிச் செடி அடிப்பாகத்திலுள்ள மண்

மண் எந்த நிறத்தில் எல்லாம் இருக்கலாம்..?

1) சிகப்பு
2) மஞ்சள்
3) கருப்பு
4) வெண்மை – ஆகிய நிறங்களில் இருக்கலாம்.

எந்தெந்த நிறத்திற்கு என்ன பலன்கள்..?

1) சிகப்பு :: அனைவரையும் வசப்படுத்த விரும்புபவன்
2) மஞ்சள் :: தனத்தை அடைய விரும்புபவன்
3) கருப்பு :: மன அமைதி அடைய விரும்புபவன்
4) வெண்மை :: மோக்ஷத்தினை விரும்புபவன்

இந்த ஊர்த்வபுண்டரமானது எந்த வடிவினில் இருக்க வேண்டும்..?

1) திரியில் பிரகாசிக்கக்கூடிய தீபம் போன்றோ..
2) மூங்கில் இலை போன்றோ..
3) தாமரை மொட்டு போன்றோ..
4) அல்லி மொட்டு போன்றோ
5) மீன் அல்லது ஆமைப் போன்றோ..
6) சங்கு போன்றோ…

மேற்கூறிய ஆறு அம்சங்களில் ஏதேனும் ஒன்று போன்று தரித்துக் கொள்ள வேண்டும்.

———

நான்கு பட்சமாக ஊர்த்வ புண்டரம் இட்டுக் கொள்வோமேயானால்

நெற்றியில் – ஸ்ரீவாஸூதேவனையும்,
ஹ்ருதயத்தில் – ஸ்ரீசங்கர்ஷணனையும்
வலதுதோள் – ஸ்ரீப்ரத்யும்னனையும்
இடது தோளில் – ஸ்ரீ அநிருத்தனையும்

தியானித்தவண்ணம் இட்டுக் கொள்ளவேணும்.

12 பட்சத்தில்

நெற்றி – கேசவன்
உதரம் – நாராயணன்
ஹ்ருதயம் – மாதவன்
கண்டம் – கோவிந்தன்
வலதுபக்க உதரம் – விஷ்ணு
வலது தோள் – மதுசூதனன்
வலது கழுத்து – த்ரிவிக்ரமன்
இடது உதரம் – வாமனன்
இடது தோள் – ஸ்ரீதரன்
இடது கழுத்து – ரிஷிகேசன்
பின்புறம் பிருஷ்டபாகத்திற்கு மேல் – பத்மநாபன்
கழுத்து பின்புறம் – தாமேதரன்.
சிரஸ்ஸின் மேல் – ஸ்ரீவாஸூதேவன்
(இது சம்ஹிதையில் சொல்லப்படவில்லை ஆனால் சிலர் அனுஷ்டானத்தில் தற்சமயம் உள்ளது).

யக்ஞம், தானம், தபஸ், ஹோமம், போஜனம், பித்ரு கர்மாக்கள் இவையனைத்தும் ஊர்த்வபுண்டரம் இன்றி
செய்வோமாயின் பலனற்றதாகிவிடும். ஆகையினால் அனைத்து சித்தியையும் கொடுக்கக்கூடியதான
ஊர்த்வ புண்டரத்தினைச் சிரத்தையுடன் தரிக்கவேண்டும்.

ஊர்த்வபுண்டரங்கள் தரித்து அனுஷ்டானங்கள் முடிந்தவுடன் இரண்டு கைகளிலும் மோதிரவிரலில் பவித்ரம் தரித்துக் கொள்ளவேண்டும்.
(தற்சமயம் எல்லா அர்ச்சகர்களும் ஒரு கையில் (வலது கை) மட்டும் பவித்ரம் தரித்துக் கொள்கின்றனர்.
ஒருசிலர் தங்கத்தினிலான பவித்ரமோதிரம் மட்டும் தரித்துக்கொள்கின்றனர்.
மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் மட்டுமே இன்று வரை அர்ச்சகர்கள் இரு கைகளிலும் பவித்ரம் தரித்துத்
திருவாரதனம் முதலானவற்றைச் செய்து வருகின்றார்கள்). பவித்ரம் அணியாமல் பெருமாளுக்குச் செய்யப்பட்ட
ஸ்நானம், நைவேத்யம், அர்ச்சனம், நாம் செய்யக்கூடிய தானம், ஜபம், ஹோமம், பித்ருதர்ப்பணம் இவையெல்லாம் பயனற்றது.
ஆகையினால் இக்காலங்களில் அவசியம் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டும்.

———-

திருபள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சியின் போது துதிப் பாடகர்களலோ அல்லது அங்கு குழுமியுள்ள பாகவதர்களோ
“ஜய ஜய” என்று ஒருமித்த உரத்தக் குரலில் கோஷமிடவேண்டும்.

சங்கநாதம் ஒலிக்க வேண்டும்.

சுப்ரபாத (ப்ரபோத) சுலோகங்களைச் சொல்லி எம்பெருமானை பள்ளியெழுப்ப வேணும்.

த்வாரம் அருகே சென்று தசதிக்பந்தனம்
(8 திக்குகள்+ஆகாயம்+பூமி) செய்து தர்ஜனி விரலால்(ஆட்காட்டி விரல்) அவகுண்டனம் செய்து,
கவச மந்திரத்தினை உச்சரித்தவாறு, கருடன் முதலிய பரிவாரத்தோடு கூடிய ஏம்பெருமானை ப்ரணவம்,
நமஸ்ஸூக்களாலே புஷ்பங்களைக் கொண்டு “ஸமஸ்த பரிவாராய அச்சுதாய நமோ நம:“ என்று துதிக்க வேண்டும்.

பிறகு யதாக்ரமம் ‘வாஸ்து புருஷன்’ தொடங்கி அர்ச்சிக்க வேண்டும்.

ந்யாஸங்களோடோ அல்லது ந்யாஸங்கள் இல்லாமலோ, மூலமந்திரத்தினைச் சொல்லி, மூன்று தடவை “தாளத்ரயம்“ செய்யவேண்டும்.

மூல மந்திரத்தினை உச்சரித்தவாறு திருக்கதவுகளைத் திறக்கவேண்டும்.

——-

நாடிகளைப் பற்றி விரிவாக கூறுகின்றார் சாண்டில்ய மஹரிஷி..!

இந்த நாடிகள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானம் “கந்த நாடி“ என்றும்

(கந்தம் = ஹ்ருதயம்..? ). நமது தேஹம் முழுவதும் 14000 நாடிகள் வியாபித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.

இதில் மேலே போகக்கூடிய நாடிகள் “ஆக்நேய“ நாடிகளாகும்.

கீழே போகக்கூடிய நாடிகள் “ சௌம்ய“ நாடிகளாகும்.

குறுக்கே போகக்கூடிய நாடிகள் “சௌம்யாக்நேய“ நாடிகளாகும்.

இந்த 14000 நாடிகளில் மிக முக்யமானவை 10 நாடிகளாகும்.

அவைகள்

(1) இடா (2) பிங்களா (3) மேலே செல்லக்கூடிய “சுழும்னா“

(4) காந்தாரி (5) ஹஸ்திஜிஹ்வா (6) பூஷா (7) யஸஸ்வினி

(8) அலம்புஸா (9) குஹூ (10) கோசினி.

இந்த நாடிகள் நமது தேஹத்தில் எங்கெங்கு உள்ளன..?

“சுழும்னா” என்கிற மத்ய நாடி கந்தபாகத்திலிருந்து மேல்நோக்கிச் செல்கின்றது.

இந்த “சுழும்னா“ நாடியின் இடது புறம் “இடா“ என்கிற நாடியும்
வலது புறம் “பிங்களா“ என்ற நாடியும் நமது மூக்குவரை வியாபித்துள்ளது.
இந்த “சுழும்னா“ நாடிக்கு முன்புறம் “காந்தாரி” என்கிற நாடி நமது இடது கண் வரையிலும்
”ஹஸ்திஜிஹ்வா” என்னும் நாடி வலது கண் வரையிலும் வியாபித்துள்ளது. கந்த பாகத்திலிருந்து மேல் நோக்கிய வண்ணம்

இரு காதுகள் வரை ’பூஷா“ மற்றும் “யஸஸ்வினி” ஆகிய இரு நாடிகளும் உள்ளன.
கந்தபாகத்திலிருந்து, பாதம் வரை உள்ளது “அலம்புஸா“ என்கிற நாடி. இரகஸ்ய பிரதேசம் வரை உள்ளது “குஹூ“ நாடி.

கால் கட்டைவிரலில் “கோசினி“ என்னும் நாடி உள்ளது.

இந்த நாடிகளின் நிறங்கள்…

இடா – வெள்ளை

பிங்களா – சிகப்பு

காந்தாரி – மஞ்சள்

ஹஸ்திஜிஹ்வா – கருப்பு

பூஷா – கருமஞ்சள்

யஸஸ்வினி – பச்சை

அலம்புஸா – சிகப்பரக்கு (Redish Brown)

குஹூ – இளஞ் சிகப்பு

கோசினி – கருப்பு

இவைகள் பிரதானமாக விளங்கும் 10 நாடிகளாம்.

இந்த 10 நாடிகளிலும் விளங்கும் 10 வாயுக்கள்.

இடா – பிராணன்

பிங்களா – அபானன்

அலம்புஸா – சமானன்

குஹூ – வ்யானன்

சுழும்னா – உதானன்

பிங்களா – நாகன்

பூஷா – கூர்மன்

யஸஸ்வினி – க்ருகரன்

ஹஸ்திஜிஹ்வா – தேவதத்தன்

கோசினி – தனஜ்ஜயன்

இந்த வாயுக்களின் நிறம்

பிராணன், நாகன் – பவள நிறம்

கூர்மன், அபானன் – இந்திர கோபன்

சமானன், க்ருகரன் – ஆகாய நிறம்

தேவதத்தன், உதானன் – தாமரை மகரந்த நிறம்

தனஜ்ஜயன், வ்யானன் – கடல்நுரை போன்ற நிறம்.

இவ்வளவு விவரங்களையும் தெளிவாகச் சொல்லிவிட்டு “ப்ராணயாம“த்தினைப் பற்றி விளக்குகின்றார் சாண்டில்ய மஹரிஷி.

———

ப்ராணயாமம் என்பது சுவாசத்தினைக் கட்டுப்படுத்துவது.

சுவாசம் என்பது மூன்று செயல்பாடுகள் உடையது.

வெளிக்காற்றின் உபயோகத்தோடு மூக்கினால் காற்றை உள்ளே இழுத்துக் கொள்வது – இது “நிஷ்வாஸம்“ எனப்படும்.

உள்ளேயிருக்கும் காற்றினை வெளியேற்றுதல் “ உச்வாஸம்“ எனப்படும்.

இதன் இரண்டிற்கும் நடுவே சிறிது நேரம் மூச்சுக்காற்றை நிலைநிறுத்துதல் “ஸ்தம்பனம்“ எனப்படும்.

இதில் நிஷ்வாஸம் – “ரேசகம்“ என்றும்
உச்வாஸம் – “பூரகம்“ என்றும்
ஸ்தம்பனம் “கும்பகம்“ என்றும் அழைக்கப்படுகின்றது.

இதில் “ரேசகம் “ – அதமம் என்றும்,
“பூரகம்“ – மத்திமம்“ என்றும்
“ஸ்தம்பனம்“ – உத்தமம் என்றும் சொல்கின்றார் சாண்டில்யர்.

(இது இப்போது விஞ்ஞானப்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேகவேகமாக சுவாசத்தினை
உள்ளிழுத்தலும் வெளியேற்றுதலும் ஆயுளைக் குறைக்கும் என்றும் எவ்வளவுக்கெவ்வளவு உள்ளிழுத்த மூச்சுக்காற்றினை நிறுத்தி
நிதானமாக சுவாசிக்கின்றோமோ ஆயுள் விருத்தி என்பதனை யோகம் கற்பிக்கின்றவர்களும்,
ஆழ்நிலை தியான பயிற்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.
நமது ஆயுளானது நாம் விடும் சுவாசித்தினைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது.)

சரி..! எந்தளவு காற்றினை உள்வாங்கலாம்.., அடக்கலாம்.., வெளியிடலாம்..?

இது தெரிந்து கொள்வதற்கு ஒரு கால அளவு உள்ளது. அது “மாத்திரை“ எனப்படும்.

இதனை எப்படி கணக்கிடுவது…?

உங்களது முழங்காலைச் சுற்றி வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இன்றி நிதானமாக
உங்கள் கைவிரல்களால் ஒரு சொடுக்குப்போடும் காலத்தின் அளவே ஒரு மாத்திரையாகும்.

இப்போது சுவாசத்திற்கு வருவோம்.

ரேசகம் – 12 மாத்திரை அளவு
பூரகம் – 24 மாத்திரை அளவு
கும்பகம் – 36 மாத்திரை அளவு.

இந்த கணக்கின்றி வெறுமனே காற்றினை உள்வாங்கி வெளியிடுவதற்கு “ரேசகம்“ அதாவது “அதமம்“ என்றே பெயர்.

பிராணனை அடக்க விரும்புவன் இந்த மாத்திரைகளை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும்.
மாத்திரைகள் மாறினாலோ அல்லது குறைந்தாலோ அது பயன் தராது. அது அதமம்.

ரேசகம் செய்யும்போது வலதுகை விரல்களாலே இடது நாசிகா துவாரத்தினை மூடிக்கொண்டு நாபிதேசத்தில்
இருக்கக்கூடிய “ஸ்ரீமந் நாராயணனை“ மூலமந்திரத்தினால் தியானம் செய்தவண்ணம் குறிப்பிட்ட மாத்திரையளவு காற்றினை உள்வாங்கவேண்டும்.

இந்த ப்ராணயாமம் இரு வகைப்படும்.
அவை (1) அகர்ப்பம் (2) சுகர்ப்பம்.

ஜபம் மற்றும் தியானம் ஆகிய ஏதும் இல்லாது செய்யும் ப்ராணயாமம்
“அகர்ப்பம்“ – இவைகளை உடையது “சுகர்ப்பம்“.

அகர்ப்ப ப்ராணயாமத்தினைக் காட்டிலும் “சுகர்ப்ப“ ப்ராணயாமம் நூறு மடங்கு உயர்ந்தது.

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ரெங்க மஹிமை -ஸ்ரீ முரளீ பட்டர்-

December 25, 2020

ஸ்ரீ ரங்க விமானத்தின் மேல் மண்மூடி காடாய் போன-ஒரு கிளி ஒன்று விடாமல்

“காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ வாஸுதேவோ ரங்கேஸ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்!
விமாநம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாஸக: !!”

ஸ்ரீ வைகுந்தத்தில் ஓடுகின்ற விரஜை நதிதான் காவேரீ! ஸ்ரீ ரங்கவிமானமே வைகுந்தமாம்!
ஸ்ரீ வாஸுதேவனே ஸ்ரீ அரங்கன்! ப்ரணவமே விமாநம்! விமானத்தின் நான்கு கலசங்கள் நான்கு வேதங்கள்!
உள்ளே கண்வளரும் ஸ்ரீ அரங்கனே ப்ரணவத்தினால் விவரிக்கப்படும் பரம்பொருள்

என்று சொன்னதையே எப்போதும் சொல்லிக் கொண்டிருந்ததாம். அப்போது அரசாண்ட சோழ மன்னன் கவனத்திற்கு இது வந்து,
அதே சமயம் ஸ்ரீ அரங்கன் தான் இங்கு பள்ளி கொண்டிருப்பதை அவனுக்கு உணர்த்த, ஸ்ரீரங்கம் மீண்டும் மகோன்னதமானது.
கிளியினால் இது உணர்த்தப் பெற்றமையினால் இன்றும் அரங்கன் திருமுற்றத்தில் ஒரு மண்டபத்திற்கு “கிளி மண்டபம்” என்றே பெயர்.

—————

திருக்கமலபாதம்’ என்பதை மூன்றாகப் பிரிக்கின்றார்.

1. திருப் பாதம்: ‘துயரறு சுடரடி” இது துயர் போக்கும் பேரருளாளன் காஞ்சி வரதனைக் குறிக்கும்.

2. கமலப் பாதம்: ”பூவார் கழல்கள்” – புஷ்பம் போல் தரிசித்த மாத்திரத்தில் மனதிற்கு ஹிதத்தைத் தரக்கூடிய
திருவேங்கடமுடையானுடைய கமலப்பாதம்.

3. திருக்கமலப்பாதம்: ”பொது நின்ன பொன்னங்கழல்’
சமஸ்த லோகத்திற்கும், அனைவரையும் உஜ்ஜீவிக்கச் செய்யக் கூடியதான, எல்லாருக்கும் பொதுவான பாதங்கள்.
இது ஸ்ரீரெங்கநாதனுடையது!

———

‘பஸூர் மநுஷ்யா பக்ஷீவாயேச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா:
தேநைவதே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்”

”நாற்கால் விலங்காயினும் மனிதனாயினும் பறவையாயினும் இவை ஒரு வைஷ்ணவனைச் சார்ந்தனவாயின்
அந்த வைஷ்ணவ சம்பந்தத்தாலே அந்த விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடைகின்றன” என்கிறது பாரத்வாஜ ஸ்மிருதி.

”யம்யம் ஸ்ப்ருஸதி பாணிப்யாம் யம்யம் பஸ்யதி சக்ஷூஷா
ஸ்தாவராண்யபி முச்யதே கிம்புநா பாந்தவாஜநா:”

”பாகவதன் தனது கரங்களால் எதை எதைத் தொடுகின்றானோ, எதை எதைக் கண்களால் பார்க்கின்றானோ,
அவைகள் நிலையியற்பொருள்கள் ஆயினும் மோக்ஷத்தையடைகின்றன. அப்படியிருக்க,
அவனுக்கு உற்றாரைப்பற்றி கூறவும் வேண்டுமோ?” என்கிறது பராசரஸ்மிருதி.

————

தினசரி சாயங்காலம் க்ஷீரான்னத்தின் போது அரங்கன் 108 சரமாலைகள் சாற்றிக்கொள்வான்.
அதற்கும் மேல் வெள்ளை மாலை அதற்கும் மேல் வர்ணமாலை. இதற்கு ‘தர்பார் ஸேவை’ என்று பெயர்.
எதனால் இந்த பெயர்? தர்பார் என்றால் பல முக்யமான பேர்கள் கூடும் சபை.
இந்த க்ஷீரான்னத்தின் போது 108 திவ்யதேச பெருமாள் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் வந்து அரங்கனுடன் ஐக்யமாகி விடுவார்களாம்.
இந்த நேரத்தில் அரங்கனை ஸேவி்ப்பது 108 பெருமாளையும் ஸேவித்த பலன்!.

————–

ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பெரியாழ்வாருடனும், சகல பரிஜனங்களுடன் வந்துறங்கிய இடம் இன்றும்
மேல அடையவளைஞ்சான் தெருவில் ‘வெளி ஆண்டாள்’ ஸந்நிதியாகயுள்ளது.
இங்கு ஆண்டாள் மூலவர் விக்ரஹம் கம்பீரமாக அமர்ந்த கோலம்.
இவள் வரப்பிரஸாதி. அரங்கனும் சரி ஆண்டாளும் சரி! இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பு அலாதியானது.
ஸ்ரீரெங்கநாயகித் தாயாருடனும் உறையூர் கமலவல்லியிடனும் அவரவர் சேர்த்தி தினத்தில் வருடத்திற்கொரு முறைதான்
மாலை மாற்றிக் கொள்கிறார்.. ஆனால் ஆண்டாளுடன் அவள் ஸந்நிதி வழியே செல்லும் போதெல்லாம் மாலை மாற்றிக் கொள்கின்றார்

—————

தும்மினாலும், இருமினாலும், கேவினாலும், வழுக்கினாலும், தடுக்கினாலும், கொட்டாவி வந்தாலும்
‘ரங்கம், ரங்கம்” என்றே கூறுவர். அந்தளவுக்கு இவன் எல்லாருக்கும் ‘அந்தரங்க’னாகின்றான்.

” ரங்கம் ரங்கம் இதி ப்ரூயாத் க்ஷுதப்ரஸ்கலநாதிஷு
விஷ்ணு லோகம் அவாப்நோதி ஸத்ய: பாபக்ஷயாந்தர:”

தும்மல் வந்தாலும், இருமல் வந்தாலும், தடுக்கினாலும், அழுதாலும், கேவினாலும், கொட்டாவி வந்தாலும்
“ரங்கம், ரங்கம்” என்றே கூறவேண்டும். இவ்விதம் கூறினால், பாவங்கள் அழிவதுடன், அதனால் விஷ்ணுலோகம் கிட்டுகிறது.

——————

ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு இடத்தில் அரங்கன் மிக மிக ஸர்ந்நித்யத்துடன் இருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
அர்ச்சுன மண்டபம் கூட அர்ச்சுனால் ஸ்தாபிதம் செய்யப்பட்டதாகக் கூறுவர்.

ஸ்ரீமத் பாகவதம் (ஸ்கந்தம் 10: அத்யாயம் 79: ச்லோகம் 14)

காமகோஷ்ணீம் புரீம் காஞ்சீம் காவேரீம் ச ஸரித்வராம்
ஸ்ரீரங்காக்யம் மஹாபுண்யம் யத்ர ஸந்நிஹிகோ ஹரி:

(பலராமன்) காமகோடி எனப்படும் புண்ணிய நகரான காஞ்சீபுரத்தையும், நதிகளில் சிறந்த காவேரியையும்,
எங்கு ஸ்ரீஹரி மிகவும் ஸாந்நித்யமாக உள்ளானோ அந்த மஹாபுண்ய க்ஷேத்ரமான ஸ்ரீரங்கத்தையும் அடைந்தார்.

————-

குருரேவ பரம ப்ரஹ்ம குருரேவ பரம் தனம்
குருரேவ பர:காமோ குருரேவ பராயணம்
குருரேவ பராவித்யா குருரேவ பரா கதி:
யஸ்மாத் தது தேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு:

குருவே மேலான ப்ரஹ்மம். குருவே மேலான தனம். குருவே மேலான காமம். குருவே மேலான ப்ராப்யம்.
குருவே மேலான கல்வி. குருவே மேலான ப்ராவகம். அப் பரம் பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர்.

ஆச்சார்யஸ்வ ஹரி சாக்ஷாத் சர ரூபி ந ஸம்ஸய:
ஆச்சார்யனே நேரே நடமாடும் பரமபுருஷன். இதில் ஐயமில்லை.

—————-

ஸ்ரீரங்கமதுலம் க்ஷேத்ரம் ஸ்ரியா ஜூஷ்டம் சுபாஸ்பதம்
யத் கத்வா ந நரோ யாதி நரகம் சாப்யதோகதிம்
(செல்வம் நிறைந்ததாய், மங்களங்களுக்கு இருப்பிடமான ஸ்ரீரங்கம் ஒப்பற்ற க்ஷேத்ரமாகும்.
அதையடைந்த மனிதன் நரகத்தையும் தாழ்ந்த கதிகளையும் அடைவதில்லை)

———–

ஸ்ரீரங்கத்திலிருந்து இளையாழ்வாரை வைணவத் தலைமைப் பொறுப்பேற்று நடத்துமளவுக்கு தகுதியுள்ளவராக்கி
அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வரவேண்டும் என்கிற ஒரு ஆவலோடு பெரியநம்பியும் அவரது மனைவியும் கச்சி நோக்கி புறப்படுகின்றனர்.

இவர்கள் இருவரும் மதுராந்தகத்தில் ராமர் ஸந்நிதியில் தரிசனத்திற்காக சென்றபோது சந்திக்கின்றனர். பேரானந்தப்படுகின்றனர்.
இளையாழ்வார் பெரியநம்பிகளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து தன்னை அவரது சீடராக்கி ப
ஞ்ச சம்ஸ்காரம் செய்து வைக்கும்படி பிரார்த்திக்கின்றார். பெரியநம்பிகள் ஆளவந்தாரையே குருவாக தியானிக்கும்படியும்,
தாம் ஒரு கருவியே என்றும், ஆளவந்தாரை தியானித்தபடியே மதுராந்தகத்திலேயே இளையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் நடக்கின்றது.
இளையாழ்வாருக்கு அப்போது வயது 27. தாரண ஆண்டு ஆவணி வளர்பிறை பஞ்சமி.
இந்நாளை கொண்;டாடும் வகையில் இன்றும் த்வயம் விளைந்த பூமியான மதுராந்தகத்தில் ‘பஞ்சசம்ஸ்கார உற்சவம்’ நடந்து கொண்டிருக்கின்றது.

————

இருள்தருமாஞாலத்திலே கலியும் கெடும் கண்டுகொள்மின் என்கின்றபடியே கலியிருள் நீங்கி பேரொளி பெருகும் வண்ணம்,
ஆதி சேஷனின் அம்சமாக ஒரு தெய்வீகக் குழந்தை கலியுகம் 4119 பிங்கள சித்திரை 12ம் நாள் வளர்பிறை பஞ்சமி
வியாழக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தன்று (04.04.1017) ஆஸூரி கேசவப்பெருமாளுக்கு தேசமெல்லாம் உகந்திடவே
ஒரு திருமகன் அவதரித்தார். பெரிய திருமலை நம்பிகள் குழந்தையை உச்சி முகர்ந்து குளிர கடாக்ஷிக்கின்றார்.
காந்தியுடன் கூடிய அந்த தேஜோமயத்தினைப் பார்க்கின்றார்.

‘உலகெல்லாம் துதிக்கும் கருணைக்கடலோ! ஓங்கும் ஆனந்த மாக்கடலோ !
அலகிலா இன்ப அமுதமாக் கடலோ? ஆசறு கமையருள் கடலோ?
மலமிலா நிலைசேர் போதவான் கடலோ? என்றென்று மதலையைக் கண்டார்
பலபல பகரப் பாலனாய் கிடந்தான் பங்கயக் கண்ணனுக்கு இளையான்” -வடிவழகிய நம்பிதாஸர் ஸ்ரீராமானுஜ வைபவம் – 272-

பெரியதிருமலைநம்பியின் இளைய சகோதரி பெரியபிராட்டியாருக்கும் கமலநயனபட்டருக்கும்
குரோதன வருஷம் தைமாஸம் பெளர்ணமி திங்கட்கிழமை புனர்வசு நட்சத்திரத்தில் ஒரு குழந்தை
மலர்ந்த தாமரை போன்ற அழகுடன், தேஜஸூடன் பிறந்தான். அக்குழந்தைக்கு ‘கோவிந்தன்’ என்று திருநாமமிட்டு மகிழ்ந்தார்.

————-

வடுகநம்பி, நம் பாவங்கள் தொலைய, மோட்சமாகிய பேரின்பத்தினைப் பெற ஒரு எளிய உபாயத்தினைக் கூறுகின்றார்.

ஆசிலாசாரிய பதந்தான் தனியே ஒன்றாம் ஆங்கதுதான்
தேகப் பொலிந்த எதிராசர்க்கன்றி எவர்க்கும் சேராதால்
நேசத்துடனத் திறமறிந்து நின்று கடந்து கிடந்திருந்து
பேசப்படுநும் உரையெல்லாம் இராமாநுசர்பேர் பிதற்றுதரேல் -ஸ்ரீஇராமானுஜ வைபவம்: வடிவழகிய தாஸர்-

குற்றமற்ற ஆச்சார்யனது திருவடிதான் ஒப்பற்ற ஒன்றாகும். அங்கே அதுவும்தான்
ஒளி பொருந்திய எதிராசர்க்கு அல்லாமல் வேறு எவருக்கும் பொருந்ததாகும். பக்தியுடன் அத்தன்மையையறிந்து
நிற்கும் போதும், நடக்கும் போதும், படுக்கும் போதும், உட்காரும் போதும், பேசப்படுகின்ற உங்கள் வார்த்தையெல்லாம்
இராமானுசர் பெயரையே சொல்லவேண்டும்!.

————–

அர்ச்சைத் திருமேனி ‘தானுகந்த திருமேனி’ என்ற புகழ்பெற்றது. கி.பி.1136 நள ஆண்டு தைமாதம்
புஷ்ய நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டைச் செய்யப்பட்டது.
(இந்த பிரதிஷ்டைச் செய்யப்பட்டவுடனேயே உடையவருக்கு திருமேனியில் தளர்ச்சி ஏற்பட்டது என்று சிலர் கூறுவர்).

————-

”பரத்வம் நாமே! பேதமே தர்ஸநம்! உபாயமும் ப்ரபத்தியே! அந்திம ஸ்ம்ருதியும் வேண்டா!
சரீராவஸாநத்திலே மோக்ஷம்! பெரியநம்பி திருவடிகளிலே ஆஸ்ரயிப்பது!”

1. நாமே பரம்பொருள்
2. ஜீவாத்மா வேறு. பரமாத்மா வேறு.
3. என்னை சரணடைவதே முக்திக்கு வழி
4. என்னை சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்க தேவையில்லை.
5. என் அடியார்களுக்கு சரீர முடிவில் மோக்ஷம் கொடுப்பேன்
6. மஹா பூரணராம் பெரியநம்பிகளைக குருவாகக் கொள்.–என்று கூறினார்.

”செப்புகின்ற பரத்துவமும் யாமேயென்ன செப்புதி வேறு
ஒப்பிலாதாய்! தரிசனமும் பேதம் என்றே உரைத்திடுக!
தப்பிலாத உபாயமதும் பிரபத்தியென்றே சாற்றிடுக!
அப்ப! புகல்க இவையன்றி நினைவும் வேண்டா! அந்திமத்தில்
இந்த சரீர அவதானம் தன்னிலிசையும் மோக்கமது!
அந்தமில்லாக் குணத்தினனுக்கு ஆசார்யனும் பெரியநம்பி!
சிந்தையுள்ளே இவையெல்லாம் தெளிந்து நோக்கி இளையாழ்வான்
முந்த நினைத்தான் இவை இவையே மொழிந்து வருக போயென்றான்” -வடிவழகிய தாஸர்-ஸ்ரீராமானுஜ வைபவம்-

————

‘ஆராமஞ்சூழ் ரங்கர்தமை மலர்மாமகளையடியிறைஞ்சித்
தாரீர் சரணந்தனையென்னத் தந்தோமெனலு மெதிராசன்,
பாரோர் பரவும் பாகவதர் பிரிவால் பரிவில் படர்கூரச்,
சீரார் திருநாடடைந்திருந்த சீடனுடனே சேர்ந்தனனால்”–என்றபடியே

ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸூகேநேமாம் ப்ரக்ருதிம் ஸ்தூலஸூக்ஷமரூபாம் விஸ்ருஜ்ய”
ஸ்தூலசரீரமாகவும் சூக்கும ஸரீரமாகவுமிருக்கும் ப்ரகிருதியை – பழைய வஸ்திரத்தினைக் கழிக்குமாபோலே சிரமமில்லாமல் விட்டு
என்றபடியே ஒருவித சிரமமும் படாமல் தமது திருமேனியிலிருந்து தம் உயிரினை மண்ணுலம் வருந்த, விண்ணுலகம் மகிழ, பிரிக்கின்றார்

தமது 120வது வயதில் (கி.பி. 1137) தாம் அவதரித்த அதே பிங்கள ஆண்டில் மாசி மாதம் வளர்பிறை தசமிதிதியில்,
திருவாதிரை நட்சத்திரத்தில், சனிக்கிழமை நண்பகலில், பகவத் சாயுஜ்யம் அடைகிறார் உடையவர்.

—————

நம்பெருமாள் (கி.பி.1371ல்) ஆஸ்தானம் எழுந்தருளிய போது மூலஸ்தானம் முழுதுமாக பாழ்பட்டு கிடந்தது.
வெயிலிலும் மழையிலும் மூலவர் ரங்கநாதர் காய்ந்தும் நினைந்தும் கிடந்திருக்கின்றார்.
ஆதிசேஷனின் சேஷபடம் அவரது திருமுகத்தினை மட்டும் பாதுகாத்தபடியிருந்திருக்கின்றது.

சுந்தர பாண்டியனால் வேயப்பட்ட தங்க விமானம், தங்கத்தினால் ஆனக் கொடிக்கம்பம், தங்கத்தினால்
செய்த சேரகுலவல்லி, அணிகலன்கள், சிம்மாசனங்கள் அனைத்தும் சுத்தமாக கொள்ளை யடிக்கப் பட்டிருந்தன.
இந்த சமயத்தில் உத்தம நம்பி வம்சத்தரான கிருஷ்ணராய உத்தம நம்பி செய்த கைங்கர்யங்கள் முக்யத்துவமானது.
மகத்தானது. இவர் வீரகம்பண்ண உடையாரையும், அவரது உறவினரான விருப்பண உடையாரையும் விஜயநகரம் சென்று
ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
கம்பண்ண உடையாருடன் அவரது மனைவி கங்காதேவியும் உடன் வந்துள்ளாள்.
இவள் வடமொழியில் சிறந்த பாண்டித்யம் உடையவள். தாம் கண்ட நிலைமையனைத்தையும் ‘மதுரா விஜயம்’ என்று தொகுத்துள்ளாள்.
இதிலிருந்து அன்றைய ஸ்ரீரங்கத்தின் நிலைமையை நாம் தெளிவாக அறிய முடிகின்றது. அதில் அவள் குறிப்பிடுகின்றாள்.

கோயில் மண்டபங்களில் செடிகள் முளைத்து மரக்கதவுகளைக் கரையான் தின்கின்றன.
இனிமையான மிருதங்க ஒலி கேட்டவிடமெல்லாம் ஊளையிடும் நரிகள் உலா வருகின்றது.
அணைகளும் கரைகளும் உடைந்து ஊரே வெள்ளக்காடாகயுள்ளது.
அக்ரஹாரங்களில் உள்ள யாக குண்டங்களில் முகமதியர்களால் மாமிசம் சுட்டெரிக்கப்பட்டு அதனுடைய துர்கந்தம் வீசுகின்றது.
தென்னைஞ்சோலைகள் மறைந்து கழுமரங்கள் கட்டப்பட்டு அதில் மனிதர்களை கொன்று மனிதர்களின் மாமிசம்
அக்கழுமரங்களில் ஆங்காங்கே திட்டுதிட்டாய் காணப்படுகின்றது.
இவ்வாறு பலவற்றைக் குறிப்பிடுகின்றாள்.

கம்பண்ணரும், விருப்பண்ண உடையாரும் திருவிடையாட்டமாக பல கிராமங்களை கோவிலுக்கென்று அர்ப்பணித்து
திருப்பணி வேலைகளை மேற்கொள்கின்றனர்.
கோவிலின் ஸ்தலத்தார்களும், உத்தமநம்பிகளும், கோவிலார்களும் வெகுவாக அரசர்களுடன் சேர்ந்து பாடுபட்டு
ஸ்ரீரங்கத்தினை புனர்நிர்மாணம் செய்கின்றனர்.
சித்திரையில் விருப்பண உடையார், கோவிலின் நிதிநிலைமையை சீர்செய்யும் பொருட்டும், கோவிலில் ஆராதனைகள்
சீராக நடைபெறுவதற்கு தானியங்களை பெருக்குவதற்கும் அருகிலுள்ள அனைத்து கிராம மக்களையும் அரவணைத்து
அன்போடு அழைத்து, அரங்கனுக்கு ஒரு தேரோட்டத்துடன் பிரம்மோற்சவம் ஒன்றை கொண்டாடுகின்றார்.
கிராமத்து மக்கள் அனைவரும் தாங்கள் விளை நிலங்களில் விளைந்த தானியங்களை அரங்கனுக்குக் காணிக்கையாக்கி
உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
அரங்கனது நித்யபடி பூஜைகளுக்குக் குறைவின்றி தான்யங்கள் குவிந்தன.
அன்று தொடங்கிய இவ்விழா இன்றும் அன்று போன்றே குறைவற நடந்து வருகின்றது.
இந்த விழாவிற்கு ‘விருப்பண் திருநாள்” என்று பெயர்

————

அரங்கன் 1371ம் ஆண்டு வைகாசி மாதம் 17ம் தேதி (ஜூன் மாதம்) ஏறத்தாழ 59-1/2 ஆண்டுகளுக்குப் பிறகு
திருவரங்கத் திருப்பதியினில் மீண்டும் கால் பதிக்கின்றார்.

அழகிய மணவாளன் கோயிலிலிருந்து வெளிச்சென்று ஏறத்தாழ 60 வருடங்களானபடியாலும், இந்த
காலக் கட்டத்தில் நம்பெருமாளோடு நெருக்கமாயிருந்த அனைவருமே பரமபதித்த படியாலும், அரங்கனது
அர்ச்சாத் திருமேனியை ஸேவித்து அறியாதவர்களே ஸ்ரீரங்கத்தில் இருந்தனர்.

அரங்கனின் ஈரவாடை தீர்த்தம் வண்ணானுக்கு அருளப்பட்டது.

பல வருடங்களாய் சுவைத்து, நடுவில் 60 வருடங்களாய் இத் தெய்வீகச் சுவை விடுபட்டு, ஏங்கியிருந்த
அவன் நாவு இந்த அமிர்தத்தை யுணர்ந்தது!
நாவின் உணர்வு நரம்புகள், உடலில் மின்சாரம் போன்று பாய்ந்தது!
உணர்வு பிழம்பானான் வண்ணான். ஆர்ப்பரித்தான்!

‘இவரே நம் பெருமாள்! இவரே நம்பெருமாள்” என்று கதறியழுதான்!.
கண்களில் கண்ணீர் பெருக்க மூர்ச்சையானான். தெளிந்தான்! மீண்டும் அழுதான்! மீண்டும் மயக்கமடைந்தான்!

கொடவரும் உணர்வுகள் கொந்தளிக்க, ‘ரங்கா! ரங்கா!’ என்று கதறியழுதார்.
அழகிய மணவாளன் வண்ணானால் ‘நம்பெருமாள்” ஆனான்!.

நம்பெருமாள் என்ற பெயர் – அந்த வண்ணான் வைத்தப் பெயர் தான், இன்றும், அவனுக்கும் நமக்கும் உகப்பாகயிருக்கின்றது!.
அவன் நம்மோடு கலந்தவன்! நம்மோடு நம்பக்கம் இருப்பவன்!. நம்மை உகப்பவன்!. நம்மை காப்பவன்!.
நம் நலம் விரும்புபவன்!. நம் வீட்டுப் பிள்ளை!. நம் குழந்தை!. நம் ஜீவன்!. நம்மை ஆள்பவன்!.

இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகுற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான்! உன்னை – இனியறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ – நற்கிரிசை
நாரணன் நீ நன்கறிந்தேன் நான்.—நான்முகன் திருவந்தாதி-96-

அரங்கன், தனியொருவராக தம்மை ஆராதித்து பாதுகாத்த வ்ருத்தரான அந்த கொடவரை அருகில் அழைக்கின்றான்.
அவரை ‘திருத் தாழ்வாரை தாஸர்” என்று அருளப்பாடிட்டு உகக்கின்றான்.
வண்ணானுக்கு ‘ஈரங்கொல்லி” என்று அருளப்பாடிட்டு அழைத்து, மன்னன் மூலமாக பஹூமானங்கள் பல செய்து கௌரவிக்கின்றான்!
அரையருக்கு ‘இசையறியும் பெருமாள் கூட்டத்தார்” என்று அருளப்பாடிட்டு கௌரவிக்கின்றான்

ஸ்ரீரங்கத்திலிருந்து சுல்தான் தளபதியை கண்ணனூருக்கு அழைத்துச் சென்று, ஸ்ரீரங்கத்திற்கு மேலும் சேதம் வராமல்
தம் கற்பைக் கொடுத்துக் காப்பாற்றிய தாஸியினை அழைக்கின்றார்.
போர உகந்தருளி ”உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று திருவாய் மலர்கின்றார்.

தாஸி ஒரு வரம் கேட்கின்றாள். ‘தம்முடைய வர்க்கத்தார்களில் யாரேனும் திருநாடு அலங்கரிப்பாராகில் (இறப்பார் ஆகில்)
நம் கோவில் திருமடைப் பள்ளியிலிருந்து தாங்களை தகனம் செய்வதற்கு நெருப்பும், திருக்கொட்டாரத்திலிருந்து வாய்க்கரிசியும்,
அரங்கனது திருமாலையும், எந்த காலத்திலும் சாதிக்க வேண்டும்” என்று தனக்காக ஏதும் வேண்டாது,
தன்னலம் கருதாது தம் வர்க்கத்தார்களின் நலத்திற்காக அரங்கனிடத்து யாசித்தாள்.
அரங்கன் உளம் குளிர்ந்து ‘அப்படியே ஆகட்டும்” என்று ஆசீர்வதிக்கின்றான்.

(இந்த வரத்தால் 1953ம் ஆண்டு தாஸிகள் ஒழிப்புச் சட்டம் அமுல் படுத்திய நாள் வரை, திருவரங்கத்து தாஸிகள்
யாரும் பரமபதிப்பார்களாகில், இந்த மரியாதைகள் செவ்வனே நடைபெற்று வந்தது)

அரங்கன் அன்றிரவு சோழ மன்னனின் கனவில் தோன்றி, நடந்த வ்ருத்தாந்தங்களை சாதித்தருளினான்.

—————–

உன்னிகிருஷ்ணன் பணிக்கர் பிரஸன்னம் சொல்லும் போது, ”இந்த கோவிலிலும் நவக்கிரஹங்கள் இரண்டு இடத்தில் உள்ளன” என்றார்.
எங்களுக்குப் புரியவில்லை.
ஆர்யபடாள் வாசலில் நிலைப்படிக்குக் கீழேயும், நாழிகேட்டான் வாசல் நிலைப்படிக்குக் கீழேயும் 12 இராசிகள் பொறிக்கப்பட்டிருந்தன.
”இதைத்தான் அந்தந்த இராசிக்கு சொந்தமான கிரஹங்கள் சூக்குமாக இந்த சின்னங்கள் மூலமாய் குடி கொண்டுள்ளன” என்றார்.
எதற்காக…..? என்று வினவியபோது
‘அவைகள் அனைத்தும் தம் பாவங்களைத் தொலைத்துக் கொள்ள பரம ஸ்ரீவைணவர்களின் ஸ்ரீபாததுளிகள்
தம் தலை மேல் விழுவதற்காக வணங்கி காத்திருக்கின்றன’ என்றார்.
உண்மைதான். ஸ்ரீவைணவரின் பாதத்துளி எல்லாவற்றையும் ஸ்ரேஷ்டமானதுதான்!.

———

காவேரீ வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ:
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம் -ஸ்ரீராமாயண பாராயணக்ரமம்-

திருக்காவேரியானது (பயிர்களுக்கு) வேண்டிய காலங்களில் பெருகட்டும். வேண்டிய காலங்களில்
இந்திரன் மழை பொழியட்டும். ஸ்ரீரங்கநாதன் வெற்றிபெற்று வாழட்டும். திருவரங்கச் செல்வம் வளரட்டும்!

————–

ஸவஸ்தி ஹஸ்திகிரி மஸ்தஸேகரஸ் ஸந்தநோது மயி ஸந்ததம் ஹரி: !
நிஸ்ஸமாப்யதிகமப்யதத்தயம் தேவமௌபநிஷதீ ஸரஸ்வதீ !!–வரதராஜஸ்தவம

உபநிஷத் வாக்கானது எந்த தேவனை ஒக்காரும் மிக்காரும் இல்லாதவனாக ஓதுகின்றதோ,
அத்திகிரியின் சிகரத்திற்கு ஆபரணமான அந்த ப்ரணதார்த்திஹர வரதன் அடியேனுக்கு எப்போதும் நன்மையை மிகுதியாக அருளுவானாக!.

நீலமேகநிபமஞ்ஜநபுஞ்ஜ ஸ்யாம குந்தலமநந்தஸயம் த்வாம் !
அப்ஜபாணிபதமம்புஜ நேத்ரம் நேத்ரஸாத்குரு கரீஸ ஸதாமே!!

அத்திகிரியப்பனே! கருமுகில் போன்றவனாய், மைவண்ண நறுங்குஞ்சிக்குழலையுடையவனாய்,
திருவனந்தாழ்வான் மீது சயனிப்பவனாய், தாமரைப் போன்ற திருக்கைகளையும், திருவடிகளையும் உடையவனாய்,
தாமரைப்போன்ற திருக்கண்களையுடையவனான உன்னை எப்போதும் என் கண்ணுக்கு இலக்காக்குவாயாக!.

————-

‘நான் பெற்ற பெருஞ்செல்வம் நாலூரான் பெறும் வரம் வேண்டும்
ஊன் பெற்றுக் கிடைத்த பலம் அடியேனுக்குறுதி நின்னைத்
தான் பெற்றேன் இனிப் பேறு வேறுண்டோ தனிமுதலே
தேன் பெற்ற துழாய் மாலை வேண்டி விரும்பி அணிபவனே திருமாலே!
என்று அழகாய் வர்ணிக்கின்றார் ஸ்ரீராமானுஜ வைத்தில் ஸ்ரீவடிவழகிய நம்பி தாஸர்.

————-

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை!
தம் ஹ தேவமாத்ம புத்திப்ரகாசம்
முமுக்ஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே !!
(எவன் ப்ரம்மனை முன் படைத்தானோ, எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேசித்தானோ, அப்படிப்பட்ட தேவனும்,
தன் விஷயமான ஞானத்தினைப் பிரகாசிப்பிப்பவனுமான பரம புருஷனை, மோக்ஷமடைய விரும்பும் நான் சரணமடைகின்றேன்.)

தஸ்மாந் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹூ:
ஆகையால் ந்யாஸத்தை(சரணாகதியை) இந்த தபஸ்களுள் மேலானதாகச் சொல்லுகிறார்கள்

—————

ஆனைமலைத் தொடரின் கிழக்கு அடிவாரத்திலுள்ள ஏகாந்தமான ஒருவிடத்தில் அரங்கன்,
ஸ்ரீரங்கத்திலுள்ள அகண்ட திருமண்டபங்களையெல்லாம் மறந்து, ஒரு சிறு குகையினுள் தங்குகின்றான்
பிள்ளைலோகாச்சாரியார் திருமலையாழ்வாரின் திருத்தாயாரை அழைத்து “நம்பெருமாளுக்கு வியர்க்கும் விசிறி கொண்டு விசிறி விடு” என்கிறார்.
திருமலையாழ்வாரின் தாயார் விசிறி கொண்டு அருகில் சென்ற போது, அரங்கனின் அருள்முகத்தில்
அரும்பரும்பாய் வியர்வைத்துளிகள். அதிர்ந்தாள் அவ்வம்மை.
”ஸ்வாமி! திவ்யமான திருமேனியும் புழுங்குமோ?” என்று வினவுகின்றார்.
பிள்ளைலோகாச்சாரியார், ஆழ்வார் திருமகளாம் ஆண்டாளின் நாச்சியார் திருமொழியை (12-6)
”வேர்த்து பசித்து வயிறசைந்து” எனும் பாசுரத்தினை மேற்கோள் காட்டி,
அம்மையே புழுங்கும் காண் – ஆண்டாளும் ஓதினாள் காண்” என்றருளுகின்றார்.
திருமலையாழ்வாரின் திருத்தாயார் சற்றே விசிறியவுடன் நம்பெருமாளின் வியர்வையும் அடங்கியது.
இதனைக் கண்ட அவ்வம்மையார் பரவசமடைந்து பலமணி நேரம் தன்னிலை மறந்தாள்.

———–

ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரம்படி, 32000படி, என்கின்றோமே, இந்த ‘படி’ என்றால் என்ன?

படி என்றால் அளவு. உயிர்மை எழுத்து உயிரெழுத்து ஆகிய இரண்டும் சேர்த்து 32 அட்சரம் கொண்டது ஒரு க்ரந்தம்.
ஒரு க்ரந்தம் என்பது தமிழில் ஒரு படி.
6000 க்ரந்தம் கொண்டது விஷ்ணு புராணம்.
குருபரம்பரை ஆறாயிரப்படியும், விஷ்ணுபுராணமும் ஏட்டில் சம அளவில் இருந்தமையால் ‘குருபரம்பரை ஆறாயிரப்படி ‘ என்றழைக்கப்பெற்றது.
இதே போன்று இராமாயணம் 24000 க்ரந்தம். இதுவும் பெரியவாச்சான் பிள்ளை 24000 படியும் சம அளவில்
இருந்ததால் பெரியவாச்சன் பிள்ளை 24000படி என்றழைக்கப்பெற்றது.
சுதப்பிரகாசிகை 36000 க்ரந்தம். இதுவும் ஸ்ரீபாஷ்யமும் ஒரே அளவில் இருந்தமையால் ஸ்ரீபாஷ்யம் ஈடு 36000படி என்றழைக்கப்பெற்றது.

—————

இனி ஸ்ரீரங்கத்தில் நாம் நிம்மதியாக வாழமுடியாது என்றெண்ணிய மீதமுள்ள வைணவக் குடும்பங்கள்
ஸ்ரீரங்கத்தினை விட்டு, தோழப்பர் என்ற ஒரு ஆச்சார்யனைத் தலைமையாகக் கொண்டு அருகிலுள்ள
கிராமங்களான பாச்சூர், கோவர்த்தனக்குடி (தற்போது கோவத்தக்குடி என்றழைக்கப்படுகின்றது),
திருவரங்கப்பட்டி, கோபுரப்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கலாயினர்.
இவர்களால் பெரியபெருமாளையும், நம்பெருமாளையும் விட்டு பிரிந்து வாழ முடியவில்லை.
அருகிலுள்ள கண்ணனூர் எனும் சமயபுரத்தில் ஹொய்சாள சிற்ப கலைஞர்கள் நிறைய வாழ்ந்து வந்தனர்.
உலுக்கானின் படையெடுப்பு இவர்களையும் பாதித்தது. இவர்களும் தப்பிப்பிழைத்து இந்த கிராமங்களில் குடியேறினர்.

இவ்விரு குழுவினரும் சேர்ந்து ஒரு அழகான ரங்கநாதர் கோவிலைக் கோபுரப்பட்டியில் கி.பி 1323ம் ஆண்டு கட்டத்தொடங்கினர்.
கோபுரப்பட்டியும் ஒரு புறம் பெருவள வாய்க்கால், மறுபுறம் கம்பலாறு ஆகிய இரு நீரோட்டத்திற்கு நடுவே
ஸ்ரீரங்கத்தினை நினைவுப்படுத்துவது போலிருந்தது சற்றே இவர்களுக்கு ஆறுதலையளித்தது.
இருக்கின்ற குறைந்தபட்ச நிதிஆதாரங்களினால் இந்த கோவில் அஸ்திவாரமே அமைக்கப்படாமல் கட்டப்பட்டது.
(இது தற்சமயம் இக்கோவிலில் புனருத்தாரணம் செய்து வருவதால் தெரியவருகின்றது).
இக்கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டு இக்கோவிலை ‘புதுக்கிடக்கை‘ என்று குறிப்பிடுகின்றது.
இதன்மூலம் பழைய கிடக்கை ஸ்ரீரங்கம் என்பதனை அறிவிக்கின்றனர். ஹொய்சாள சிற்பக் கலைஞரின்
அற்புத கைவண்ணத்தினால் சிறப்புறக் கட்டப்பெற்று வழிப்பட்டு வந்தனர்.
இங்குள்ள பெரியபெருமாளின் மூலவிக்ரஹம் ஹொய்சாளர்களின் சிற்பக்கலையின் உன்னதமாகும்.
இங்குள்ள அனைத்து வைணவர்களும் ஸ்ரீரங்கத்தில் இறந்த 12000 பேர்களுக்கும் திதி, தர்ப்பணம் முதலானவைகளை
பெருவளவாய்கால் கரையில் செய்துள்ளனர். ஆடி அமாவாசை வழிபாடு சிறப்புற நடந்திருக்கின்றது.
இதனை இந்த கோவிலின் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
கி.பி 1342ம் ஆண்டு ஒரு முறையும், கி.பி1498ல் இலங்கைஉலகன் என்று அறியப்பட்ட தோழப்பன் என்பவரால்
மறுமுறையும் திருப்பணி நடந்து குடமுழுக்கு நடைபெற்றதையும் விவரிக்கின்றது இக்கோவிலுள்ள கல்வெட்டுகள்.

———–

ஐந்து ஆயுதங்களும், ஓளபகாயணர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஞ்சாயனர் என்று
ஐந்து ரிஷிகளாக அவதரித்து ஐந்து ராத்ரிகளில் ரங்கநாதனை ஆராதிக்கும் முறையினை பகவானாலேயே
உபதேசிக்கப் பெற்று ‘பாஞ்சராத்ரம்” என்னும் ஆகம முறையினைத் தோற்றுவித்தனர்.

பின்னர் இந்த ஐந்து ஆயுதங்களும் ஆழ்வார்களாகவும் அவதரிக்கப் பெற்று பெருமாளின் புகழைப் போற்றிப் பரவினர்.

———-

ஜயதுயஸஸாதுங்கம்ரங்கம் ஜகத்த்ரயமங்களம்
ஜயதுஸூசிரம் தஸ்மிந்பூமா ரமாமணி பூஷணம்
வரதகுருணார்த்தம் தஸ்மை ஸூபாந்யபிவர்த்தயந்
வரவரமுநி: ஸ்ரீமாந்ராமானுஜோ ஜயதுக்ஷிதௌ

பெருமையினால் உயர்ந்து மூவுலகுக்கும் மங்களாவஹமான திருவரங்கமானது பெருமையுற்று விளங்கவேணும்.
அத்திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீகௌஸ்துபத்தையும் திவ்யாபரணமாகவுடையனான எம்பெருமான்
பல்லாண்டாக விளங்கவேணும். அவ்வெம்பெருமானின் பொருட்டு வரதகுருவுடன் மங்களங்களை
மேலும் மேலும் உண்டாக்குபவரான ஸ்ரீராமானுஜர் அவதாரமான மணவாளமாமுனிகள் இப்புவியில் விளங்கவேணும்.

————

வரவரமுநி: பதிர்மே தத்பதயுகமேவ சரணமநுரூபம்
தஸ்யைவ சரணயுகளே பரிசரணம் ப்ராப்யமிதி நநுப்பராப்தம்

மணவாளமாமுனிகளே அடியேனுக்கு ஸ்வாமி.
அவருடைய திருவடித் தாமரைகளே பேற்றுக்கநுருபமான உபாயம்.
அவருடைய திருவடித் தாமரைகளில் கைங்கர்யமே மேலான உபேயம்.
-எறும்பியப்பா.

அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ – கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே!
இன்னுமொரு நூற்றாண்டிரும்!.

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே
ஸ்ரீரங்க வாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்ய மங்களம்.

————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-