இராமாயணம் ஆரம்பம்! – வனபர்வம் பகுதி 272-ராமன் மற்றும் சீதையின் பிறப்பு; ராவணனின் மூதாதையர் பற்றிய அறிமுகம்; குபேரன் பிறப்பு; குபேரன் பெற்ற நன்மைகள் ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, {தசரத ராமனே} ராமனே கூட இணையற்ற துயரத்தைச் சந்தித்தான். ராட்சச மன்னனான தீய மனம் கொண்ட ராவணன், ஏமாற்றைக் {மாயையைக்} கைக்கொண்டு, ஜடாயு என்ற கழுகை வீழ்த்தி, அவனது {ராமனின்} மனைவியான சீதையை, அவனது {ராமனின்} ஆசிரமத்தில் இருந்து பலவந்தமாகக் கடத்திச் சென்றான். பிறகு உண்மையில், சுக்ரீவனின் உதவியைப் பெற்று, கடலில் பாலத்தைக் கட்டி தனது கூர்முனை கொண்ட கணைகளால் லங்கையை எரித்து, சீதையை மீட்டான்”
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ராமன் எந்தக் குலத்தில் பிறந்தான். அவனது பலம் மற்றும் பராக்கிரமத்தின் அளவு என்ன? ராவணன் யாருடைய மகன்? எதன் பேரில் அவன் ராமனுடன் முரண்பட்டான்? ஓ சிறப்புமிக்கவரே {மார்க்கண்டேயரே}, அனைத்தையும் விவரமாக எனக்குச் சொல்லும்; பெரும் சாதனைகள் கொண்ட ராமனின் கதையை நான் கேட்க மிக ஆவலாக உள்ளேன்” என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குல இளவரசே {யுதிஷ்டிரா}, இந்தப் பழைய வரலாற்றை அது நடந்தவாறே சரியாகக் கேள்! தனது மனைவியுடன் சேர்ந்து ராமன் அனுபவித்த துன்பம் அனைத்தையும் நான் உனக்குச் சொல்கிறேன். இக்ஷவாகு குலத்தில் உதித்த அஜன் என்ற பெரும் மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு {அஜனுக்கு}, வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்து, எப்போதும் சுத்தமாக இருந்த தசரதன் என்ற பெயர் கொண்ட மகன் ஒருவன் இருந்தான். அந்தத் தசரதனுக்கு, அறநெறிகளையும், பொருளையும் அறிந்த ராமன், லட்சுமணன், சத்ருக்னன் மற்றும் பலம்பொருந்திய பரதன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர்.
ராமனுக்குக் கௌசல்யை என்ற தாயும், பரதனுக்குக் கைகேயி என்ற தாயும் இருந்தனர். எதிரிகளுக்குக் கசையாக இருந்த லட்சுமணனும், சத்ருக்னனும் சுமித்திரையின் மகன்கள். ஜனகன் விதேக நாட்டின் மன்னாக இருந்தான். சீதை அவனது மகளாக இருந்தாள். அவளை {சீதையை} ராமனின் அன்பிற்குரிய மனைவியாக்க விரும்பிய தஷ்திரி {பிரம்மன்} தானே அவளைப் படைத்தான். ராமன் மற்றும் சீதையின் பிறப்பு குறித்த வரலாற்றை இப்போது நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.
இப்போது, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் ராவணனின் பிறப்பைக் குறித்து உரைக்கிறேன். அனைத்து உயிர்களின் தலைவனும், அண்டத்தைப் படைத்தவனும், பெரும் தவத்தகுதி படைத்த தேவனும், சுயம்புவுமான பிரஜாபதியே {பிரம்மனே} ராவணனின் பாட்டனாவான். புலஸ்தியருக்கு, பசுவிடம் பெறப்பட்ட வைஸ்ரவணன் {குபேரன்} என்ற பெயரில் அழைக்கப்பட்ட பலம்பொருந்திய மகன் ஒருவன் இருந்தான். ஆனால் அவரது {புலஸ்தியரின்} மகன் {வைஸ்ரவணன்}, தன் தந்தையை {புலஸ்தியரை} விட்டுவிட்டு, தன் பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றுவிட்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதனால் கோபமடைந்த அவனது {வைஸ்ரவணனின்} தந்தை {புலஸ்தியர்}, தன்னிடமிருந்து இரண்டாவதாக ஒரு சுயத்தைப் படைத்தார். தன் சுயத்தின் மறுபாதியின் மூலமே அந்த மறுபிறப்பாளர், வைஸ்ரவணனிடம் கொண்ட கோபத்தைத் தீர்க்க விஸ்ரவஸ் என்றவனைப் பிறப்பித்தார்.
ஆனால் வைஸ்ரவணனிடம் {குபேரனிடம்} மனநிறைவு கொண்ட பெரும்பாட்டனோ {பிரம்மனோ}, அவனுக்கு {வைஸ்ரவணனுக்கு} இறவாமையையும், அண்டத்தில் உள்ள அனைத்துச் செல்வங்களின் மீது ஆட்சி அதிகாரத்தையும், திசைப்புள்ளிகளில் ஒன்றுக்குப் பாதுகாவலன் என்ற பொறுப்பையும், ஈசானனின் நட்பையும், நளகுபேரன் என்ற மகனையும் கொடுத்தான். அவன் {பிரம்மன்}, ராட்சசக் கூட்டத்தால் பாதுகாக்கப்பட்ட, அவனது தலைநகரான இலங்கையையும், செலுத்துபவன் விருப்பதிற்கேற்ப நினைத்த இடம் எங்கும் செல்லும் திறன் கொண்ட புஷ்பகம் என்று அழைக்கப்பட்ட தேரையும் {விமானத்தையும்} கொடுத்தான். யக்ஷர்களுக்கு மன்னனாகவும், மன்னர்களை ஆள்பவனாகவும் அவனை {வைஸ்ரவணனை} நியமித்தான்.”
ராவணன் பெற்ற வரம்! – வனபர்வம் பகுதி 273-ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கரன், சூர்ப்பனை பிறப்பு; அவர்கள் வைஸ்ரவணனிடம் கொண்ட பொறாமை; அவர்களின் கடுந்தவம்; தனது தலையை வெட்டி வேள்வி நெருப்பில் இட்ட ராவணன்; அவர்களுக்கு பிரம்மன் அருளிய வரம்; விபீஷணன் இறவாமை பெற்றது ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “புலஸ்தியரின் பாதி ஆன்மாவாக இருந்த விஸ்ரவஸ் என்ற பெயர் கொண்ட முனிவன், பெரும் கோபத்துடன் வைஸ்ரவணனைப் பார்க்க ஆரம்பித்தான். ஆனால், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் மன்னனான குபேரன், தன்னிடம் தன் தந்தை {விஸ்ரவஸாக இருந்த புலஸ்தியர்} கோபமாக இருப்பதை அறிந்து, அவனை எப்போதும் ஆறுதல் படுத்த எண்ணினான். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}. மனிதர்களின் தோள்களில் சவாரி செய்து இலங்கையில் வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுக்கு மன்னன் தனது தந்தைக்காகக் காத்திருப்பதற்காக மூன்று ராட்சசப் பெண்களை அனுப்பி வைத்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, புஷ்போத்கதை, ராகை, மாலினி என்பது அவர்களது பெயர்களாகும். பாடுவதில் ஆடுவதிலும் திறமை பெற்ற அவர்கள், எப்போதும் அந்த உயர் ஆன்ம முனிவரை சிரத்தையுடன் கவனித்து வந்தனர்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த முனிவரை மனநிறைவு கொள்ளச்செய்ய அந்தக் கொடியிடை மங்கையர் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். அந்த உயர் ஆன்மா கொண்ட வணங்கத்தக்கவர்கள் அவர்களிடம் மனநிறைவு கொண்டு, அவர்களுக்கு வரங்களை அருளினார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப இளவரசர்கள் போன்ற மகன்களைக் கொடுத்தார். இவ்வுலகில் நிகரற்ற பராக்கிரமத்தைக் கொண்ட ராட்சசர்களில் முதன்மையான கும்பகர்ணன் மற்றும் பத்துத் தலை கொண்ட ராவணன் ஆகிய இரு மகன்களும் புஷ்போத்கதைக்குப் பிறந்தனர். மாலினி விபீஷணன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றாள். ராகை என்பவள் கரன் மற்றும் சூர்ப்பனகை என்ற இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றாள்.
அவர்கள் அனைவரிலும் விபீஷணன் மிகுந்த அழகைக் கொண்டிருந்தான். அந்த அருமையான மனிதன் பக்திமானாகவும், சிரத்தையுள்ளவனாகவும் இருந்து அறச் சடங்குகள் அனைத்தையும் செய்து வந்தான். அவன் அறம் சார்ந்தவனாக, சுறுசுறுப்புள்ளவனாக, பெரும் பலமும் பராக்கிரமமும் கொண்டவனாக இருந்தான். அவர்களில் ராட்சசனான கும்பகர்ணனே போர்க்களத்தில் பெரும் பலம் உள்ளவானாக இருந்தான். முரட்டுத்தனமும் பயங்கரமும் கொண்ட அவன் அனைத்து மாயக் கலைகளிலும் நிபுணனாக இருந்தான். கரண் விற்கலையில் நிபுணனாக இருந்தான். அவன் அந்தணர்களின் எதிரியாக இருந்து, {அவர்களது} இறைச்சியை உண்டு வாழ்ந்தான். கடுமை நிறைந்த சூர்ப்பனகை துறவிகளுக்கு எப்போதும் தொல்லை கொடுத்து வந்தாள்.
வேதங்களைக் கற்று, சடங்குகளில் விடாமுயற்சியுடன் இருந்த அந்த வீரர்கள் அனைவரும் தங்கள் தந்தையுடன் கந்தமாதனத்தில் வாழ்ந்தனர். அங்கே அவர்கள் செல்வத்தின் தலைவனான, மனிதர்களின் தோள்களில் பயணிக்கும் வைஸ்ராவணன் {குபேரன்} தங்கள் தந்தையின் அருகே அமர்ந்திருப்பதைக் கண்டனர். பொறாமையால் பீடிக்கப்பட்ட அவர்கள், தவங்கள் பயிலத் தீர்மானித்தனர். தங்கள் கடும் தவத்தால் அவர்கள் பிரம்மனை நிறைவடைய வைத்தனர். காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த பத்து தலை ராவணன், ஐந்து புனித நெருப்புகள் சூழ தியானத்தில் மூழ்கி, ஆயிரம் வருடங்களுக்கு ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தான். உண்ணாதிருந்து தலைகீழாக நின்று கொண்டிருந்த கும்பகர்ணன், தனது தவத்தில் உறுதியாக இருந்தான். ஞானமும் மேன்மையும் மிக்க விபீஷணன் உண்ணா நோன்புகள் நோற்று, காய்ந்த இலைகளை உண்டு, தியானத்தில் ஈடுபட்டு, நீண்ட காலத்திற்குத் தவம் இருந்தான். அவர்கள் இப்படித் தவம் செய்து கொண்டிருந்த போது, கரணும், சூர்ப்பனகையும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருந்தனர்.
ஆயிரம் வருடங்கள் முடியும் நெருக்கத்தில், பத்துத் தலை கொண்டவன் {ராவணன்}, தனது தலைகளை {ஒவ்வொன்றாக} வெட்டி வேள்வி நெருப்பில் காணிக்கையாக இட்டான். அவனது இச்செயலால் அண்டத்தின் தலைவன் {பிரம்மன்} நிறைவு கொண்டான். பிறகு பிரம்மன் நேரடியாக அவனிடம் வந்து, தவத்தைக் கைவிடுமாறும், அவர்கள் அனைவருக்கும் வரங்களை அருள்வதாகவும் உறுதி கூறினான். அந்த வணங்கத்தக்க பிரம்மன், “பிள்ளைகளே, நான் உங்களிடம் நிறைவு கொண்டேன்! தவத்தை நிறுத்துங்கள்; என்னிடம் வரங்களைக் கேளுங்கள்! இறவாமை தவிர்த்து, நீங்கள் கேட்கும் எந்த விருப்பங்களும் உங்களுக்குக் கிடைக்கும். பெரும் குறிக்கோளுடன், நீ காணிக்கையாக இட்ட உனது தலைகள், நீ விரும்பியபடி முன்பு போலவே உனது உடலை அலங்கரிக்கும். உனது உடல் உருகுலையாது. நீ விரும்பிய உருவம் எடுக்கவல்லவனாகவும், போர்க்களத்தில் எதிரிகளை வெல்பவனாகவும் இருப்பாய். இதில் சந்தேகமில்லை” என்றான் {பிரம்மன்}. அதற்கு ராவணன், “கந்தர்வர்கள், தேவர்கள், கின்னரர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள் மற்றும் அனைத்து பிற உயிரனங்களிடமும் நான் தோல்வியடையாமலிருப்பேனாக!” என்றான். பிரம்மன், “மனிதர்கள் தவிர்த்து, நீ பெயரிட்டுச் சொன்னவர்கள் மூலம் உனக்கு எப்போதும் அச்சம் இருக்காது (அச்சமேற்படும் சந்தர்ப்பம் உனக்கு வாய்க்காது). உனக்கு நன்மை உண்டாகட்டும்! அப்படியே நான் உனக்கு விதித்திருக்கிறேன்!” என்றான்.
மார்க்கண்டேயர், “இப்படிச் சொல்லப்பட்ட பத்துத்தலையன் {தசக்கிரீவன்} {இராவணன்} மிகவும் மன நிறைவு கொண்டு, அவனது வக்கிரபுத்தியின் காரணமாக, மனிதர்களை உண்ணும் அவன் மனிதர்களை அலட்சியமாக எண்ணினான். பிறகு அந்தப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, முன்பு போலவே {ராவணனிடம் கேட்டது போலவே} கும்பகர்ணனிடமும் கேட்டான். இருளால் மூடப்பட்ட அறிவு கொண்ட அவன் நீண்ட தூக்கத்தைக் கேட்டான். “அப்படியே ஆகும்” என்று சொன்ன பிரம்மன் விபீஷணனிடம், “ஓ என் மகனே {விபீஷணா}, நான் உன்னிடம் மிகவும் நிறைவு கொண்டேன்! நீ விரும்பும் எந்த வரத்தையும் கேள்!” என்று கேட்டான். அதற்கு விபீஷணன், “பெரும் ஆபத்திலும் நான் நேர்மையில் இருந்து வழுவாமல் {அதர்மம் செய்யாமல்} இருக்க வேண்டும். நான் அறியாமையில் இருப்பதால், ஓ வணங்கத்தக்க ஐயா, தெய்வீக ஞான ஒளி எனக்குள் ஒளிர வேண்டும்” என்று கேட்டான். பிரம்மன், “ஓ ஏதிரிக்குத் தீமை விளைவிப்பவனே {விபீஷணா}, உன் ஆன்மா அறமின்மையை விரும்பாதாதல், நீ ராட்சசனாகப் பிறந்திருந்தாலும், உனக்கு இறவாமையை அருள்கிறேன்” என்றான் {பிரம்மன்}”
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்த வரத்தைப் பெற்றுக் கொண்ட பத்து தலை ராட்சசன் {ராவணன்}, போரில் குபேரனை வீழ்த்தி, இலங்கையின் ஆட்சியுரிமையை அவனிடம் இருந்து அடைந்தான். கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கின்னரர்கள் ஆகியோர் தன்னைத் தொடர இலங்கையை விட்டகன்ற அந்தப் போற்றுதலுக்குரியவன் {குபேரன்}, கந்தமாதன மலையில் வாழ்வதற்குச் சென்றான். அவனிடம் {குபேரனிடம்} இருந்த தெய்வீகத் தேரான புஷ்பகத்தையும் பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டான். இதனால் வைஸ்ரவணன் அவனிடம், “இந்தத் தேர் உன்னைச் சுமக்காது; போர்க்களத்தில் உன்னைக் கொல்வனை இது சுமக்கும்! உன் அண்ணனான என்னை நீ அவமதித்ததால்,விரைவில் நீ சாவாய்!” என்று சாபமிட்டான்.
பக்திமானான விபீஷணன், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்தவர்களும், பெரும் புகழ் கொண்டவர்களும் தொடரும் பாதையில் நடந்து, குபேரனைத் தொடர்ந்து சென்றான். போற்றுதலுக்குரிய அந்தச் செல்வத்தலைவன் {குபேரன்}, தன் தம்பிகளிடம் மிகவும் மனநிறைவு கொண்டு யக்ஷ, ராட்சசக் கூட்டத்திற்குத் தலைவனாக்கினான். மறுபுறம், மனிதர்களை உண்ணும் வலிமைமிக்க ராட்சசர்களும், பிசாசங்களும் ஒன்று கூடி பத்து தலை ராவணனிடம் தங்கள் ஆட்சியுரிமையைக் கொடுத்தார்கள். நினைத்த வடிவம் கொள்பவனும், பயங்கரப் பராக்கிரமம் கொண்டவனும், காற்றில் செல்பவனுமான அந்த ராவணன், தேவர்களையும், தைத்தியர்களையும் தாக்கி, அவர்களது மதிப்புமிக்க உடைமைகளை அவர்களிடம் இருந்து கவர்ந்தான். அனைத்து உயிர்களையும் நடுங்கச் செய்ததால் அவன் ராவணன் என்று அழைக்கப்பட்டான். எந்த அளவு சக்தியையும் திரட்டும் வல்லமை பெற்ற ராவணன், தனது பயங்கரத்தால் தேவர்களின் மனதிடத்தையே அகற்றினான்”
மந்தரை என்ற கூனி ! – வனபர்வம் பகுதி 274-ராவணன் செய்யும் தீமைகளைப் பொறுக்காத அக்னி, ராவணனின் அழிவைக் குறித்துப் பிரம்மனிடம் கேட்பது; பிரம்மன் முக்கியமான தேவர்கள் அனைவரையும் பூமியில் குரங்குகளாகவும், கரடிகளாகவும் பிறக்கச் சொன்னது; குரங்குகள் மற்றும் கரடிகளில் முதன்மையான தங்கள் மனைவியரிடம் தேவர்கள் பிள்ளைகளைப் பெறுவது; பூசல்களை உருவாக்க பிரம்மன், துந்துபி என்ற கந்தர்வியை, பூமியில் கூனியான மந்தரையாகப் பிறக்கச் செய்தது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பின்னர்ப் பிரம்ம முனிவர்கள், சித்தர்கள், தேவமுனிவர்கள், ஆகியோர் ஹவ்யவாகனனை {அக்னியைத்} தங்கள் பேச்சாளனாகக் கொண்டு பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள். அக்னி {பிரம்மனிடம்}, “விஸ்ரவசின் சக்திமிக்க மகனான பத்துத் தலையனை {ராவணனை}, உமது வரத்தின் காரணமாகக் கொல்ல முடியவில்லை. பெரும் பலம் கொண்ட அவன் {ராவணன்} பூமியில் உள்ள உயிரினங்களை ஒடுக்குகிறான். ஓ! போற்றுதலுக்குரியவரே! எனவே எங்களைக் காப்பாற்றும்! எங்களைக் காப்பாற்ற உம்மைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று சொன்னான்.
பிரம்மன் {அக்னியிடம்}, “ஓ! அக்னி, தேவர்களாலோ அசுரர்களாலோ அவனை {ராவணனை} போர்க்களத்தில் வெல்ல முடியாது! அந்நோக்கத்திற்குத் தேவையானதை நான் ஏற்கனவே விதித்துவிட்டேன். உண்மையில் அவனது மரணம் அருகிலிருக்கிறது! எனது தூண்டுதலின் பேரில் நான்கு தலை கொண்ட தெய்வம் அக்காரணத்திற்காகவே அவதரித்துவிட்டான். அடிப்பவர்களில் முதன்மையான விஷ்ணு அந்நோக்கத்தைச் சாதிப்பான்” என்றான் {பிரம்மன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்தப் பாட்டன் {பிரம்மன்} அவர்களுக்கு மத்தியில் சக்ரனிடம் {இந்திரனிடம்}, “தேவர்களுடன் சேர்ந்து நீயும் பூமியில் பிறப்பாயாக! குரங்குகளும், கரடிகளும் விஷ்ணுவின் கூட்டாளிகளாவதற்காக நினைத்த உருவம் கொள்ளக்கூடிய பெரும் பலம் கொண்ட உங்கள் மகன்களாக அவர்களைப் பெறுவீர்களாக” என்று சொன்னான். இதனால், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் தானவர்கள் ஆகியோர் விரைவாகக் கூடி தாங்கள் எவ்வாறு பிறக்க வேண்டும் என்பதை ஆலோசித்து, அவரவர்க்கு உரிய தன்மையுடன் பூமியில் பிறந்தார்கள். வரங்களை அருளும் தேவன் {பிரம்மன்}, அவர்கள் முன்னிலையிலேயே துந்துபி என்ற பெயர்கொண்ட கந்தர்வியை அழைத்து, “நோக்கம் நிறைவேற நீ அங்குச் செல்!” என்றான். பாட்டனின் {பிரம்மனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட துந்துபி, மனிதர்களின் உலகில் கூன்முதுகு கொண்ட மந்தரையாகப் பிறந்தாள்.
சக்ரனோடு {இந்திரனோடு} கூடிய முக்கியமான அனைத்து தேவர்களும் குரங்குகள், கரடிகள் ஆகியவற்றில் முதன்மையான தங்கள் மனைவியரிடம் தங்கள் வாரிசுகளைப் பெற்றார்கள். அந்த மகன்களும் பலத்திலும் புகழிலும் தங்கள் தந்தைகளுக்கு ஈடாக இருந்தனர். அவர்கள் மலைச்சிகரங்களைப் பிளக்கவல்லவர்களாக இருந்தார்கள். கற்களும் ஆச்சா மரங்களும் {சால மரங்களும்}, பனை மரங்களும் {தால மரங்களும்} அவர்களது ஆயுதங்களாக இருந்தன. அவர்களது உடல்கள் உறுதி மிக்கதாவும் கடுமை நிறைந்ததாகவும் இருந்தன. அவர்கள் பெரும் பலம் கொண்டவர்களாக இருந்தார்கள். போரில் வல்லவர்களாகவும், விருப்பத்திற்கேற்ற ஆற்றலைத் திரட்டும் திறன் அவர்களுக்கு இருந்தது. பலத்தால் அவர்கள் ஆயிரம் யானைகளுக்கு நிகராக இருந்தார்கள். வேகத்தால் அவர்கள் காற்றுக்கு ஈடாக இருந்தனர். சிலர் தாங்கள் விரும்பிய இடங்களிலெல்லாம் வசித்தார்கள், அதே வேளை மேலும் சிலர் கானகத்தில் வாழ்ந்தார்கள். அண்டத்தைப் படைத்த போற்றுதலுக்குரியவன் {பிரம்மன்}, இவ்வனைத்தையும் விதித்து, மந்தரை {கூனி} என்ன செய்ய வேண்டும் என்பதை அவளுக்கு உரைத்தான். மனோவேகம் கொண்ட மந்தரை, அவனது வார்த்தைகள் அனைத்தையும் புரிந்து கொண்டு, இங்கும் அங்கும் சென்று பூசல்களைத் தூண்டுவதில் ஈடுபட்டாள்”
காட்டுக்குச் சென்ற ராமன்! – வனபர்வம் பகுதி 275-ராமனுக்குப் பட்டம் சூட்ட தசரதன் தீர்மானம்; ராமனைக் காட்டுக்கு அனுப்பி, பரதனை நாடாள வைக்க வேண்டும் என்ற வரத்தைக் கைகேயி தரசதனிடம் கேட்டல்; ராமன் காட்டுக்குச் செல்வது; கரன் தூஷணனைக் கொல்வது; அங்கம் பழுதான சூர்ப்பனகை ராவணனிடம் சென்று தனது நிலையைத் தெரியப்படுத்துதல்; கோபம் கொண்ட ராவணன், ராமனை அழிப்பதற்குத் திட்டம் தீட்டி மாரீசனை அணுகுதல்…
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ஓ! போற்றுதலுக்குரியவரே {மார்க்கண்டேயரே}, ராமன் மற்றும் பிறரின் பிறப்பு வரலாற்றை நீர் எனக்கு விவரமாகச் சொன்னீர். நான் அவர்களது வனவாசத்திற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, தசரதன் மகன்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய சகோதரர்கள், மிதிலை இளவரசியுடன் {சீதையுடன்} காட்டுக்கு ஏன் சென்றார்கள் என்பதை உரைப்பீராக” என்று கேட்டான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “பக்திமானான மன்னன் தசரதன், எப்போதும் பெரியவர்களைக் கவனிப்பவனாகவும், அறச்சடங்குகள் செய்வதில் சிரத்தையுள்ளவனாகவும் இருந்தான். அவன் {தசரதன்} தனக்குப் பிறந்த மகன்களைக் குறித்துப் பெரும் மனநிறைவு கொண்டான். அவனது மகன்கள் பலத்திலும் வேதங்களிலும், அதன் புதிர்களிலும், ஆயுத அறிவியலிலும் படிப்படியாக வளர்ந்தனர். தங்கள் பிரம்மச்சரிய நோன்பை நிறைவேற்றிய அந்த இளவரசர்களுக்குத் திருமணமும் நடந்தது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியும் உயர்ந்த மனநிறைவையும் கொண்டான். அவர்கள் அனைவரிலும் மூத்தவனான புத்திகூர்மை கொண்ட ராமன், தனது அழகான நடத்தையால் மக்களைப் பெரும் மனநிறைவு கொள்ளச் செய்து, தன் தந்தைக்குப் பிடித்தமானவனாக ஆனான்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தன் வயது முதிர்வை கவனத்தில் கொண்ட அந்த ஞானமுள்ள மன்னன் {தசரதன்}, தனது அமைச்சர்களிடமும், ஆன்ம ஆலோசகரிடமும் {வசிஷ்டரிடமும்}, ராமனைத் தன் பேரரசின் பிரதிநிதியாக {பட்டத்து இளவரசனாக} நியமிக்க ஆலோசனை செய்தான். அந்தப் பெரும் அமைச்சர்கள் அனைவரும், அதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை ஏற்றனர். ஓ! குருகுலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, கௌசல்யையின் மகிழ்ச்சியைப் பெருக்குபவனும், கண்கள் சிவந்தவனும், தசை பொருந்திய கரங்கள் கொண்டவனுமான தன் மகனைக் {ராமனைக்} கண்ட மன்னன் தசரதன் பெரிதும் மனம் நிறைந்தான் . அவனது {ராமனின்} நடை காட்டு யானையைப் போல இருந்தது. அவன் {ராமன்} நீண்ட கரங்களும், உயர்ந்த தோள்களும், சுருண்ட கரிய தலைமுடியும் கொண்டிருந்தான். வீரனாகவும். பிரகாசம் கொண்டவனாகவும், போர்க்களத்தில் இந்திரனுக்கு எந்தவிதத்திலும் தாழாதவனாகவும் அவன் {ராமன்} இருந்தான். புனித ரித்துகள் அனைத்தையும் அறிந்த அவன் {ராமன்}, ஞானத்தில் பிருஹஸ்பதிக்கு இணையானவனாக இருந்தான். அனைத்து மக்களின் அன்புக்கு ஒரு பொருளாக இருந்த அவன் {ராமன்}, அனைத்து அறிவியலிலும் திறன்வாய்ந்தவனாக இருந்தான். புலன்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அவனைக் கண்ட அவனது எதிரிகளே கூட அவனைக் கண்டதும் அவனிடம் {ராமனிடம்} மனநிறைவு கொண்டார்கள். தீயவர்களுக்குப் பயங்கரனாகவும், அறம்சார்ந்தவர்களைப் பாதுகாப்பவனாகவும், அவன் {ராமன்} இருந்தான். புத்திகூர்மையும், கலங்கடிக்கப்பட முடியாதவனாகவும் இருந்த அவன் {ராமன்}, அனைவரையும் வெல்பவனாகவும், எவ்வழியிலும் வீழ்த்தப்பட முடியாதவனாகவும் இருந்தான்.
ஓ! குருக்களின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, கௌசல்யையின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான தனது மகனை {ராமனைக்} கண்ட மன்னன் தசரதன் மிகவும் மகிழ்ந்தான். ராமனின் நற்பண்புகளை நினைத்துப் பார்த்த சக்திமிக்கவனும் பலமிக்கவனுமான மன்னன் {தசரதன்}, மகிழ்ச்சியோடு தனது குடும்பப் புரோகிதரிடம் {வசிஷ்டரிடம்}, “ஓ! அந்தணரே, நீர் அருளப்பட்டிரும். இன்று இரவு பூச நட்சத்திரம், வெகு மங்களமான சேர்க்கையைக் கொண்டுவருகிறது. எனவே, அனைத்துப் பொருட்களும் சேகரிக்கப்படட்டும், ராமனும் அழைக்கப்படட்டும். இந்தப் பூச நட்சத்திரம் நாளை வரை நீடிக்கிறது. எனவே, ராமன் எனது குடிமக்களின் பட்டத்து இளவரசனாக என்னாலும், எனது அமைச்சர்களாலும் நியமிக்கப்பட வேண்டும்” என்றான்.
அதே வேளையில், (கைகேயியின் பணிப்பெண்ணான) மந்தரை, மன்னனின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, தனது தலைவியிடம் {கைகேயி} சென்று சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசினாள். அவள் {மந்தரை}, “ஓ! கைகேயி, உனது பெரும் தீயூழை {துரதிர்ஷ்டத்தை} இந்நாளில் மன்னர் {தசரதர்} பிரகடனம் செய்திருக்கிறார்! ஓ! பேறிலியே {துரதிர்ஷ்டசாலியே}, கோபம் மிகுந்த கரும்பாம்பு மறைந்திருந்து உன்னைக் கடிக்கிறது. தன் மகன் அரியணையில் நிறுவப்பட இருப்பதால், உண்மையில் கௌசல்யையே பேறு பெற்றவளாவாள். உன் மகன் {பரதன்} நாட்டை அடையாத போது, உனக்குச் செழிப்பு எங்கே இருக்கும்?” என்று கேட்டாள்.
தன் பணிப்பெண்ணின் {மந்தரையின்} வார்த்தைகளைக் கேட்ட, அழகிய கொடியிடை கொண்ட அந்தக் கைகேயி, தன் ஆபரணங்கள் அனைத்தையும் பூண்டுகொண்டு, தனது கணவனைத் தனிமையில் நாடினாள். மகிழ்ச்சியான இதயத்துடன், இனிமையாகப் புன்னகைத்து, அனைத்து பசப்புநயமான காதல் வார்த்தைகளுடன் சேர்த்து, “ஓ! மன்னா {தரசரதரே}, நீர் என்றும் உமது உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருப்பீர் {என்று நம்புகிறேன்}. முன்பே நீர் எனது விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தீர். அந்த உறுதிமொழியை இப்போது நிறைவேற்றும். வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஏற்படும் பாவத்தில் இருந்து உம்மைக் காத்துக் கொள்ளும்!” என்று சொன்னாள். அதற்கு மன்னன் {தசரதன்-கைகேயியிடம்}, “நீ என்ன விரும்பினாலும் கேள், நான் உனக்கு அவ்வரத்தைத் தருவேன். கொல்லத்தகாத எந்த மனிதன் இன்று கொல்லப்பட வேண்டும்? கொல்லத்தகுந்த எவன் இன்று விடுதலை பெற வேண்டும்? யாருக்கு இன்று நான் செல்வம் அளிக்க வேண்டும்? யாருடைய செல்வத்தை இன்று பறிமுதல் செய்ய வேண்டும்? அந்தணர்களின் உடைமைகளைத் தவிர இவ்வுலகத்தில் உள்ள எந்தச் செல்வமானாலும், அது எனதே! நான் இந்த உலகத்தில் உள்ள மன்னர்களுக்கெல்லாம் மன்னனும், நால்வகை மனிதர்களின் பாதுகாவலனுமாவேன்! ஓ! அருளப்பட்ட மங்கையே {கைகேயி}, எந்தப் பொருளின் மீது உன் இதயம் நிலைத்திருந்தாலும், அதை விரைவாக என்னிடம் சொல்!” என்று கேட்டான்
மன்னனின் {தசரதனின்} வார்த்தைகளைக் கேட்டு, அவன் மீது தான் கொண்ட ஆளுமையை அறிந்து, அவன் கொடுத்திருந்த வாக்குறுதியில், அவனை உறுதி கொள்ள வைக்க முயன்று, அவள் {கைகேயி} அவனிடம் {தசரதனிடம்}, ராமனுக்காக நீர் வடிவமைத்த பதவியேற்பைப் பெறுபவனாகப் பரதன் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். சடாமுடி தரித்து, மரவுரியும், மான்தோலும் அணிந்து, தண்டகவனத்தில் பதினான்கு {14} வருடங்களுக்கு ராமன் வனவாசம் செய்யட்டும்” என்றாள். ஏற்கத்தகாத இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {தசரதன்}, ஓ! பாரதக் குல தலைவா {யுதிஷ்டிரா}, மிகவும் துன்புற்றுப் பேச்சற்றவனானான்!
ஆனால் வலிமையும் நல்லொழுக்கமும் கொண்ட ராமன், {கைகேயியால்} தன் தந்தை இப்படி வேண்டிக்கொள்ளப்பட்டதை அறிந்து, தன் தந்தை கொடுத்த உறுதிமொழி களங்கமடையாமல் இருக்கக் காட்டுக்குச் சென்றான். {யுதிஷ்டிரா} நீ அருளப்பட்டிரு, வில்லாளிகளில் முதன்மையான {தம்பி} லட்சுமணனும், விதேகநாட்டு இளவரசியும், ஜனகனின் மகளும்,அவனது மனைவியுமான சீதையும் அவனைப் {ராமனைப்} பின்தொடர்ந்தார்கள். ராமன் காட்டுக்குச் சென்றதும், காலத்தின் நிலைத்த விதிக்குக் கட்டுப்பட்டு மன்னன் தசரதன் தனது உடலைத் துறந்தான். ராமன் அருகில் இல்லாததையும், மன்னன் {தசரதன்} இறந்துவிட்டதையும் அறிந்த கைகேயி, தன் முன்னே பரதனை அழைத்து வரச் செய்து, அவனிடம் {பரதனிடம்} “தசரதர் சொர்க்கம் சென்றுவிட்டார். ராமனும் லட்சுமணனும் காட்டில் இருக்கின்றனர்! குந்தகம் விளைவிக்க எந்தப் பகைவரும் அற்ற இந்த அகன்ற அரசை {நாட்டை} நீ எடுத்துக் கொள்” என்றாள் {கைகேயி}.
நல்லொழுக்கமுடைய பரதன் அவளுக்கு {கைகேயிக்கு} மறுமொழியாக, “செல்வத்தில் மட்டுமே மோகம் கொண்டு, உன் கணவரைக் கொன்று, குடும்பத்தை அடியோடு அழித்து, தீச்செயலைச் செய்தாய்! ஓ! எம்குலத்தில் சபிக்கப்பட்டவளே, ஓ தாயே, நீ என் தலையில் புகழ்க்கேட்டைச் சுமத்தி, உனது இந்த நோக்கத்தை அடைந்தாய்” என்றான். இப்படிச் சொன்ன அந்த இளவரசன் {பரதன்} உரக்க அழுதான். அந்நாட்டுக் குடிமக்கள் அனைவரின் முன்பும் தன் களங்கமின்மையை மெய்ப்பித்து நிறுவி, ராமனைத் திரும்ப அழைக்க விரும்பி, அவனைத் {ராமனைப்} பின்தொடர்ந்து சென்றான். பிறகு, வரிசையாக உள்ள தனது வாகனங்களில், கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோரை ஏற்றி, சத்ருக்னனுடன் கனத்த இதயத்தோடு முன்னேறினான்.
ராமனைத் திரும்ப அழைக்க விரும்பிய அவன் {பரதன்}, வசிஷ்டர், வாமதேவர் மற்றும் பிற ஆயிரக்கணக்கான அந்தணர்கள், நகரங்கள் மற்றும் மாநிலங்களின் மக்கள் ஆகியோருடன் சென்றான். பிறகு அவன் {பரதன்}, கையில் வில்லுடனும், துறவிகளின் ஆபரணங்கள் பூண்டும் சித்திரகூட மலைகளில் வாழ்ந்து வந்த ராமனை, லட்சுமணனுடன் சேர்ந்திருக்கக் கண்டான். எனினும், தந்தையின் {தசரதனின்} வார்த்தைகளுக்கிணங்க செயல்படத் தீர்மானித்திருந்த ராமன், பரதனை திருப்பி அனுப்பினான். இப்படித் திரும்பிய பரதன், தன் அண்ணனின் {ராமனின்} மரக்காலணிகளைத் {பாதுகைகளைத்} தன் முன்பு வைத்து, நந்திகிராமத்தில் இருந்து ஆட்சி செய்தான்.
அயோத்தியின் மக்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள் என்ற அஞ்சிய அவன் {ராமன்}, சரபங்கர் ஆசிரமம் இருக்கும் பெருங்காட்டுக்குள் நுழைந்தான். சரபங்கருக்குத் தனது மரியாதைகளைச் செலுத்தி, தண்டகக் காட்டுக்குள் நுழைந்த அவன் {ராமன்}, அழகிய கோதாவரி ஆற்றங்கரையில் தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான். அங்கே வாழ்ந்து கொண்டிருந்த போது, சூர்ப்பனகையின் காரணமாக, ஜனஸ்தானத்தில் வசித்த கரனிடம் அவன் {ராமன்} பகைமை கொள்ள நேரிட்டது. துறவிகளைப் பாதுகாப்பதற்காக, அந்த ரகு குலத்தின் நல்லொழுக்கம் கொண்ட வழித்தோன்றல் {ராமன்}, பூமியில் இருந்த பதினாலாயிரம் ராட்சசர்களைக் கொன்றான். கரன், தூஷணன் என்ற பெரும்பலமிக்க ராட்சசர்களைக் கொன்ற, ஞானமிக்க ரகுவின் வழித்தோன்றல் {ராமன்}, அந்தப் புனிதமான காட்டை மீண்டும் ஆபத்தற்றதாக்கினான்.
அந்த ராட்சசர்கள் கொல்லப்பட்ட பிறகு, மூக்கும், உதடுகளும் அறுபட்டிருந்த சூர்ப்பனகை, தனது அண்ணனின் {ராவணனின்} வசிப்பிடமான இலங்கைக்குச் சென்றாள். துன்பத்தால் உணர்வற்று, முகத்தில் காய்ந்த ரத்தக்கறையுடன் ராவணன் முன்பு சென்ற அந்த ராட்சசப் பெண் {சூர்ப்பனகை}, அவனது {ராவணனின்} காலில் விழுந்தாள். இப்படிக் கடும் சேதத்திற்குள்ளாகியிருக்கும் அவளை {சூர்ப்பனகையைக்} கண்ட ராவணன் கோபத்தால், பற்களைக் {நறநறவெனக்} கடித்து, தனது இருக்கையை விட்டு எழுந்தான். பிறகு தன் அமைச்சர்களை அனுப்பிவிட்டு, அவளிடம் {சூர்ப்பனகையிடம்} தனிமையில், “அருளப்பட்ட தங்கையே {சூர்ப்பனகையே}, என்னை மறந்து, என்னை அவமதிக்கும்படி, உனக்கு இப்படிச் செய்தவன் எவன்? கூரிய ஈட்டியைத் தனது உடலில் தேய்த்துக் கொள்பவன் எவன்? தலைக்கருகே நெருப்பை வைத்துவிட்டு, பாதுகாப்பாக உணர்ந்து மகிழ்ச்சியுடன் தூங்குபவன் எவன்? பழியுணர்வும் கடும்நஞ்சும் கொண்ட பாம்பை மிதித்தவன் எவன்? பிடரிமயிர் கொண்ட சிங்கத்தின் வாய்க்குள் கையைத் திணித்துக் கொண்டு நிற்பவன் உண்மையில் எந்த மனிதன்?” என்று கேட்டான்.
பிறகு, நெருப்பில் இருக்கும் மரங்களின் துவாரங்களில் இருந்து வெளிப்படும் சுடர்களைப் போல, அவனது உடலில் இருந்து கோபம் எனும் சுடர் வெடித்தது. அவனது தங்கை {சூர்ப்பனகை}, ராமனின் பராக்கிரமத்தைக் குறித்தும், கரன் மற்றும் தூஷணனைத் தலைமையாகக் கொண்ட ராட்சசர்களின் தோல்வி குறித்தும் சொன்னாள். தன் உறவினர்கள் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன், விதியால் உந்தப்பட்டு, ராமனைக் கொல்வதற்காக மாரீசனை நினைவுகூர்ந்தான். தான் பின்பற்ற வேண்டிய வழியைத் {திட்டத்தைத்} தீர்மானித்து, தனது தலைநகரை ஆள ஏற்பாடுகள் செய்துவிட்டு, தன் தங்கைக்கு {சூர்ப்பனகைக்கு} ஆறுதலளித்து, ஒரு வான்வழிப் பயணத்தை மேற்கொண்டான். திரிகூடம் மற்றும் கால மலைகளைத் தாண்டிய அவன், மகரங்களின் வசிப்பிடமான ஆழம்நிறைந்த நீரின் அகன்ற கொள்கலனைக் {கடலைக்} கண்டான். பிறகு அந்தக் கடலைக் கடந்த பத்து தலை ராவணன், திரிசூலம் ஏந்திய சிறப்புமிக்கத் தேவனுக்கு {சிவனுக்குப்} பிடித்த ஓய்விடமான கோகர்ணத்தை அடைந்தான். அங்கே, ராமன் மீது கொண்ட பயத்தின் காரணமாகத் துறவு வாழ்வை மேற்கொண்டிருந்த தனது பழைய நண்பனான மாரீசனை ராவணன் கண்டான்.
சீதையைக் கடத்திய ராவணன்! – வனபர்வம் பகுதி 276-மாரீசன் ராவணனுக்குப் புத்தி சொல்வது; ராவணன் மாரீசனை மிரட்டுவது; மாரீசன் மானுரு கொண்டு சீதைக்கு ஆசை காட்டுவது; ராமன் மானைத் துரத்துவது; ராமனால் அடிக்கப்பட்ட மாரீசன் ராமனின் குரலில் கதறுவது; அச்சமுற்ற சீதை ராமனைத் தேடி லட்சுமணனைப் போகச் சொல்வது; போகாத லட்சுமணனை சீதை நிந்திப்பது; லட்சுமணன் சென்றதும் ராவணன் வந்து சீதையைத் தூக்கிச் செல்வது..
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ராவணன் வருவதைக் கண்ட மாரீசன் அவனை மரியாதையுடன் வரவேற்று, அவனுக்குப் பழங்களும் கிழங்குகளும் கொடுத்தான். ராவணன் இருக்கையில் அமர்ந்து சற்று ஓய்வெடுத்த பிறகு, பேச்சில் வல்லவனான மாரீசன், ராவணன் அருகில் அமர்ந்து, பேச்சில் சொல்திறனுடன் அவனிடம் {ராவணனிடம்}, “உன்னுடைய நிறம் இயற்கைக்கு மாறான சாயலைக் கொண்டிருக்கிறதே, ஓ! ராட்சச மன்னா {ராவணனா}, உன் நாட்டில் அனைத்தும் சரியாக இருக்கிறதா? எது உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது? உனது குடிமக்கள் முன்பு போலவே உன்னிடம் பற்றுறுதியுடன் இருக்கிறார்களா? என்ன காரியம் உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது? அது {அக்காரியம்} சாதிப்பதற்கு எவ்வளவு கடினமானதாக இருப்பினும் அதை நிறைவேறிவிட்டதாக அறி” என்றான்.
கோபத்தாலும் அவமானத்தாலும் கொந்தளித்த இதயம் கொண்ட ராவணன், ராமனின் செயல்களைக் குறித்தும், இனி செய்ய வேண்டியவை குறித்தும் அவனிடம் சுருக்கமாகச் சொன்னான். அவனது கதையைக் கேட்ட மாரீசன், “நீ ராமனைத் தூண்டக்கூடாது. நான் அவனது சக்தியை அறிவேன். அவனது கணைகளின் வேகத்தைத் தாங்கும் திறன்மிக்க மனிதன் எவன்? அந்தப் பெரும் மனிதனே {ராமனே}, எனது தற்போதைய துறவு வாழ்க்கைக்குக் காரணமானவன். உனக்குச் சிதைவையும், அழிவையும் தரும் இத்திட்டத்தைத் தீட்டிய தீய மனம் கொண்டவன் எவன்?” என்று சுருக்கமாகவே கேட்டான். அதற்கு ராவணன் கோபத்துடன் மறுமொழி கூறி, நிந்தித்து {மாரீசனிடம்}, “நீ எனது கட்டளைகளுக்குக் கீழ்படியவில்லையென்றால், நிச்சயம் என் கைகளால் இறப்பாய்” என்றான் {இராவணன்}.
பிறகு மாரீசன் {ராவணனிடம்}, “மரணம் தவிர்க்க முடியாதது எனும்போது, மேன்மையானவன் கையால் இறப்பதே சிறந்தது. எனவே, நான் இவன் கேட்டதைச் செய்வேன்” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். பிறகு அவன் {மாரீசன்}, ராட்சசர்கள் தலைவனிடம் {ராவணனிடம்}, “என்னால் முடிந்த உதவியை நான் உனக்கு நிச்சயம் செய்வேன்” என்றான். பிறகு, அந்தப் பத்துத்தலை ராவணன் அவனிடம் {மாரீசனிடம்}, “தங்கக் கொம்புகளும், தங்கத் தோலும் கொண்ட அழகிய மானின் வடிவம் தாங்கிச்சென்று சீதைக்கு ஆசை காட்டு. அப்படி இருக்கும் உன்னைக் காணும் சீதை, உன்னை வேட்டையாட நிச்சயம் ராமனை அனுப்பிவிடுவாள். பிறகு சீதை எனது ஆளுகையின் கீழ் நிச்சயம் வருவாள். நான் அவளைப் பலவந்தமாகத் தூக்கிச் செல்வேன். பிறகு, தனது மனைவியின் இழப்பால் வருந்தும் தீய ராமன் நிச்சயம் இறப்பான். இவ்வழியில் நீ எனக்கு உதவி செய்!” என்றான்.
இப்படிச் சொல்லப்பட்ட மாரீசன், (எதிர்நோக்கியிருக்கும்) தனது ஈமச்சடங்குகளை முடித்துக் கொண்டு {எள்ளும் தண்ணீரும் இறைத்துவிட்டு}, தனக்கு முன் சென்ற ராவணனைத் தொடர்ந்து சோகமான இதயத்துடன் சென்றான். பிறகு, கடும்சாதனைகள் செய்திருந்த ராமனின் ஆசிரமத்தை அடைந்து, இருவரும் முன்பே தீர்மானித்து வைத்திருந்தபடி செயல்பட்டனர். கமண்டலமும் திரிதண்டமும் தரித்த ராவணன், துறவியின் கோலத்தில் மழித்த {மொட்டைத்} தலையுடன் தோன்றினான். மாரீசன் மானின் வடிவம் கொண்டான். அந்தக் கோலத்தில் மாரீசன் விதேக இளவரசியின் {சீதையின்} முன் தோன்றினான். விதியால் உந்தப்பட்ட அவள், மானுக்குப் பின்னே ராமனை அனுப்பிவிட்டாள். அவளை மனநிறைவு கொள்ளச் செய்யும் நோக்கத்துடன், விரைவாகத் தனது வில்லை எடுத்துக் கொண்ட ராமன், அவளை {சீதையைப்} பாதுகாப்பதற்கு லட்சுமணனை விட்டுவிட்டு, மானைத் துரத்திச் சென்றான்.
வில், அம்பறாத்தூணி மற்றும் கூன்வாள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, உடும்புத் தோலாலான உறையை விரல்களுக்கு அணிந்த ராமன், நட்சத்திர மானைத் [1] தொடர்ந்த ருத்திரனைப் போல, அந்த மானைத் தொடர்ந்து சென்றான். ஒருநேரம் தோன்றுவதும், மறுநேரம் அவனது பார்வையில் இருந்து மறைவதுமாக, அந்த ராட்சசன், வெகுதூரத்திற்கு ராமனைக் கவர்ந்திழுத்துச் சென்றான். கடைசியில், ராட்சசனே மான் என்பதை ராமன் அறிந்த போது, ரகு குலத்தின் அந்தச் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, தவறாத கணையொன்றை எடுத்து, மானின் உருவம் கொண்டு வந்த அந்த ராட்சசனைக் {மாரீசனைக்} கொன்றான். ராமனின் கணையால் அடிக்கப்பட்ட அந்த ராட்சசன் {மாரீசன்}, ராமனின் குரலைப் பிரதிபலித்து, பெருந்துக்கத்துடன் அழுது, சீதையையும், லட்சுமணனையும் அழைத்தான்.(தார்த மிருகம் – முன்பொரு சமயம், பிரஜாபதி, மானின் உருவம் கொண்டு காமத்தால் தனது மகளைத் தொடர்ந்தார். திரிசூலம் கொண்ட ருத்திரன், பிரஜாபதியைத் தொடர்ந்து சென்று, அவன் தலையை அடித்தான் {துண்டித்தான்}. பிரஜாபதியின் அந்த மான் தலை உடலில் இருந்து அறுக்கப்பட்டு, மிருகசீரிஷம் {மிருகத்தின் அறுக்கப்பட்ட தலை} என்றழைக்கப்படும் நட்சத்திரமாகவோ, விண்மீன்கூட்டமாகவோ மாறியது)
அந்தத் துன்பக் குரலை விதேக இளவரசி {சீதை} கேட்ட போது, அந்தக் குரல் வந்த பகுதியை நோக்கி லட்சுமணனை விரையச் சொல்லி வலியுறுத்தினாள். பிறகு, லட்சுமணன் அவளிடம் {சீதையிடம்}, “அச்சமுள்ள பெண்ணே, நீ அஞ்சக் காரணமேதுமில்லை. ராமனை அடிக்கும் அளவு சக்தியுள்ளவன் எவன்? ஓ! இனிய புன்னகை கொண்டவளே {சீதை}, ஒரு நொடியில் நீ உனது கணவனைக் காண்பாய்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கற்புடைய சீதை, பெண்களுக்கே இயற்கையான அச்சத்துடன், புனிதமான லட்சுமணன் மீது சந்தேகம் கொண்டு, உரக்க அழுத் தொடங்கினாள். பிறகு கணவனுக்கு {ராமனுக்குத்} தன்னை அர்ப்பணித்திருந்த அந்தக் கற்புடைய மங்கை {சீதை}, “ஓ! மூடனே {லட்சுமணா}, உனது இதயத்தில் நீ கொண்டிருக்கும் நோக்கம் எப்போதும் ஈடேறாது! ஆயுதம் கொண்டோ, மலைமேல் இருந்து குதித்தோ, சுடர்விட்டெரியும் நெருப்புக்குள் புகுந்தோ என்னை மாய்த்துக் கொள்வேனேயன்றி, என் கணவர் ராமரைப் புறக்கணித்து, நரியின் பாதுகாப்பில் இருக்கும் பெண்புலியைப் போல, உன்னைப் போன்ற இழிந்தவனுடன் நான் வாழ மாட்டேன்” என்று சொல்லி கடுமையாக ஏசினாள் {சீதை}.
தன் அண்ணனை மிகவும் விரும்புபவனும், நல்ல இயல்பு கொண்டவனுமான லட்சுமணன், இவ்வார்த்தைகளைக் கேட்டு, தனது காதுகளைப் (தன் கைகளால்) பொத்தி, ராமன் சென்ற பாதையில் சென்றான். கோவைப்பழம் {Bimba Fruit} போலச் சிவந்து மென்மையாக இருக்கும் உதடுகளைக் கொண்ட அந்த மங்கையை {சீதையை} ஒரு முறையும் {திரும்பிப்} பாராமல் லட்சுமணன் சென்றான். அதே வேளையில், இதயத்தில் தீமையுடன் இருந்தாலும், மரியாதையான தோற்றத்தை அணிந்திருந்த அந்த ராட்சசனான ராவணன், சாம்பற்குவியால் மூடப்பட்ட நெருப்பு போல இருந்து, தன்னை வெளிப்படுத்தினான். களங்கமற்ற குணம் கொண்ட அந்த மங்கையைப் {சீதையைப்} பலவந்தமாகத் தூக்கிச் செல்ல அவன் துறவியின் கோலத்தில் அங்கே தோன்றினான்.
அவன் {துறவியின் வேடத்திலிருந்த ராவணன்} வருவதைக் கண்ட நல்லொழுக்கம் கொண்ட ஜனகனின் மகள் {சீதை}, கனிகளும், கிழங்கும், இருக்கையும் கொடுத்து அவனை {ராவணனை} வரவேற்றாள். இவற்றையெல்லாம் அலட்சியம் செய்து, தன் சுயஉருவம் கொண்ட அந்த ராட்சசர்களில் காளை {ராவணன்}, விதேக இளவரசியிடம் {சீதையிடம்}, “ஓ! சீதை, ராவணன் என்ற பெயரில் அறியப்படும் நான், ராட்சசர்களின் மன்னனாவேன். இலங்கை என்ற பெயரில் அறியப்படும் காண்பதற்கினிய என் நகரம், பெருங்கடலைத் தாண்டிய அக்கரையில் இருக்கிறது! அங்கே அழகிய பெண்களுக்கு மத்தியில் என்னுடன் நீ ஒளிர்வாய்! ஓ! அழகிய உதடுகள் கொண்ட மங்கையே {சீதையே}, துறவியான ராமனைப் புறக்கணித்து, என் மனைவியாவாயாக!” என்ற வார்த்தைகளைச் சொன்னான்.
இவற்றையும், இதே வகையான வேறு வார்த்தைகளையும் கேட்ட அழகிய உதடுகள் கொண்ட ஜனகனின் மகள் {சீதை}, தனது காதுகளைப் பொத்திக் கொண்டு, அவனிடம் {ராவணனிடம்}, “அப்படிச் சொல்லாதே! நட்சத்திரங்களுடன் கூடிய வானம் இடிந்து விழலாம், இந்தப் பூமித் தூள் தூளாக உடைந்து போகலாம், நெருப்பும் தனது இயல்பை விட்டுக் குளுமையடையலாம், இருப்பினும் என்னால் ரகுவின் வழித்தோன்றலைக் {ராமரைக்} கைவிட முடியாது! யானைக்கூட்டத்தில், நெற்றிப்பொட்டில் {temple} மதம் பெருகும் தலைமை யானையுடன் வாழ்ந்த பெண் யானை எப்படி அதைக் கைவிட்டு காட்டுப்பன்றியுடன் {hog} வாழும்? தேன் அல்லது {இலுப்பை} மலர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட இனிய மதுவை ஒரு முறையே சுவைத்த ஒரு பெண், அரிசியில் தயாரிக்கப்பட்ட இழிந்த சாராயத்தை எப்படி விரும்பி அருந்துவாள்?” என்றாள்.
இந்த வார்த்தைகளைச் சொன்ன அவள் {சீதை}, கோபத்தால் உதடுகள் நடுங்க, உணர்ச்சி வசப்பட்டதால் கரங்கள் இங்கும் அங்கும் ஆட, அந்தக் குடிசைக்குள் நுழைந்தாள். எனினும், அங்கே அவளைத் தொடர்ந்து சென்ற ராவணன், மேலும் முன்னேறுவதில் இருந்து அவளை {சீதையை} இடைமறித்தான். முரட்டுத்தனமாக அந்த ராட்சசனால் வசைபாடப்பட்ட அவள் {சீதை} மயக்கமடைந்தாள். ஆனால் ராவணன் அவளது தலை முடியைப் பற்றிக்கொண்டு காற்றில் எழும்பினான். பிறகு {பிரஸ்ரவணம் என்ற} மலைச்சிகரத்தில் வாழும் ஜடாயு என்ற பெயர் கொண்ட ஒரு பெரிய கழுகானவன், இப்படி ராவணனால் தூக்கிச் செல்லப்படும் போது, அழுது கொண்டும், பெருந்துயரத்துடன் ராமனை அழைத்துக்கொண்டுமிருந்த ஆதரவற்ற அந்த மங்கையை {சீதையைக்} கண்டான்.
கவந்தன் வதம்! – வனபர்வம் பகுதி 277-சீதையை ராவணன் கடத்திச் செல்வதைத்தடுத்துப் போராடிய ஜடாயு; ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்துவது; ராமனும் லட்சுமணனும் ஜடாயுவைக் காண்பது; ராவணன் சென்ற திக்கை ஜடாயு குறிப்பால் உணர்த்துவது; கவந்தனிடம் லட்சுமணன் சிக்குவது; கவந்தனின் இரு கைகளை ராமனும் லட்சுமணனும் வெட்டுவது; கவந்தன் ராமனை சக்ரீவனோடு நட்பு கொள்ளச் சொல்வது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சம்பாதியைத் தனது உடன்பிறந்த அண்ணனாகவும், அர்ஜுனனைத் {அருணனைத்} தனது தந்தையாகவும் கொண்ட வீரமிக்கக் கழுகு மன்னனான ஜடாயு, தசரதனின் நண்பனாவான். தனது {தன் நண்பனின்} மருமகளான சீதை, ராவணனின் மடியில் இருப்பதைக் கண்ட அந்த விண்ணதிகாரி, அந்த ராட்சச மன்னனை {ராவணனை} எதிர்த்துக் கோபத்துடன் விரைந்தான். அந்தக் கழுகானவன் {ஜடாயு} ராவணனிடம், “மிதிலை இளவரசியை {சீதையை} விடு, அவளை விடு என நான் சொல்கிறேன்! ஓ ராட்சசா, நான் உயிருடன் இருக்கும்போது நீ எப்படி அவளைக் கடத்த முடியும்? நீ எனது மருமகளை {சீதையை} விடவில்லையெனில், என்னிடம் இருந்து நீ உயிருடன் தப்ப மாட்டாய்!” என்று சொன்னான். இந்த வார்த்தைகளைச் சொன்ன ஜடாயு, தன் நகங்களைக் கொண்டு அந்த ராட்சச மன்னனைக் {ராவணனைக்} கிழிக்கத் தொடங்கினான். அவனது உடலின் நூற்றுக்கணக்கான வெவ்வேறு பகுதிகளில் தனது அலகாலும், சிறகுகளாலும் அடித்து, அவனைச் சின்னாபின்னமாய்ச் சிதைத்தான். மலையின் ஊற்றில் இருந்து நீர் வடிவது போல, ராவணனின் உடலில் இருந்து இரத்தம் திரளாகப் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.
ராமனுக்கு நன்மை செய்ய விரும்பிய கழுகால் {ஜடாயுவால்} இப்படித் தாக்கப்பட்ட ராவணன், தனது வாளை எடுத்து அந்தப் பறவையின் {ஜடாயுவின்} இரு சிறகுகளையும் அறுத்தெரிந்தான். மேகங்களுக்கு மேலே காட்சித் தரும் பெரும் மலைச்சிகரம் போல இருந்த அந்தக் கழுகு மன்னனைக் {ஜடாயுவைக்} கொன்ற அந்த ராட்சசன் {ராவணன்}, மடியில் சீதையை வைத்துக் கொண்டு காற்றில் உயர எழும்பினான். எங்கெல்லாம் துறவிகளின் ஆசிரமங்கள், தடாகம், ஆறு, குளம் எங்கெல்லாம் தென்பட்டனவோ, அங்கெல்லாம், அந்த விதேக நாட்டு இளவரசி {சீதை}, தனது ஆபரணங்களில் ஒன்றை வீசி எறிந்தாள். ஒரு மலையின் மேல் குரங்களில் முதன்மையான ஐந்து குரங்குகள் இருப்பதைக் கண்ட அந்தப் புத்திக்கூர்மை கொண்ட மங்கை {சீதை}, தன் விலையுயர்ந்த ஆடையில் இருந்து ஒரு பெரும் துண்டை அவர்களுக்கு மத்தியில் வீசி எறிந்தாள். மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த அழகிய துணித்துண்டு, அந்தக் குரங்குகளில் முதன்மையான ஐவர் மத்தியல், மேகத்தில் இருந்து வரும் மின்னல் போலக் காற்றில் படபடத்துக் கொண்டு வந்தது. அதற்குள் அந்த ராட்சசன் {ராவணன்}, காற்றில் {விரைவாகச்} செல்லும் பறவை போல, வானத்தில் வெகு தொலைவு கடந்து சென்றுவிட்டான். விரைவில் அந்த ராட்சசன் {ராவணன்}, உயர்ந்த சுவர்களைக் கொண்டு அனைத்துப் பக்கங்களில் சூழப்பட்டதும், பல வாயில்களைக் கொண்டதும், விஸ்வகிரீத்தால் {விஸ்வகர்மாவால்} கட்டப்பட்டதுமான காண்பதற்கினிய தனது அழகிய நகரத்தைக் கண்டான். பிறகு அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, இலங்கை என்று அழைக்கப்பட்ட தனது நகரத்திற்குள் சீதையுடன் நுழைந்தான்.
இப்படிச் சீதைக் கடத்திச் செல்லப்பட்ட வேளையில், அந்தப் பெரும் மானைக் {மானுருவில் இருந்த மாரீசனைக்} கொன்ற புத்திக்கூர்மை கொண்ட ராமன், திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, (வழியில்) தன் தம்பி லட்சுமணனைக் கண்டான். தன் தம்பியைக் {லட்சுமணனைக்} கண்ட ராமன், “ராட்சசர்கள் நடமாடும் ஒரு காட்டில், விதேக இளவரிசயை {சீதையை} விட்டு விட்டு, நீ எப்படி இங்கே வரலாம்? என்று சொல்லிக் கடிந்து கொண்டான். மான் தோற்றத்தில் வந்த ராட்சசன் தன்னை நெடுந்தூரம் இழுத்துச் சென்றதையும், (சீதையை ஆசிரமத்தில் தனியாக விட்டுவிட்டு வந்த) தன் தம்பியின் வருகையையும் நினைத்துப் பார்த்த ராமன், வேதனையால் நிரம்பினான். லட்சுமணனைக் கடிந்து கொண்டே, அவனை நோக்கி விரைவாக முன்னேறிய ராமன், “ஓ! லட்சுமணா, விதேக இளவரசி {சீதை} இன்னும் உயிருடன் இருக்கிறாளா? அவள் இனி இல்லை என நான் அஞ்சுகிறேன்!” என்றான்.
பிறகு லட்சுமணன் சீதை சொன்ன அனைத்தையும், குறிப்பாகத் தகாத இழிவான மொழிகளை அடுத்தடுத்துச் சொன்னான். எரியும் இதயத்துடன் ராமன் ஆசிரமத்தை நோக்கி ஓடினான். வழியில் மரண வேதனையில் பெரும் மலைபோல் கிடந்த ஒரு பெரிய கழுகைக் கண்டான். அவன் {ஜடாயு}, ஒரு ராட்சசனாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்த காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்}, பெரும் சக்தியுடன் தனது வில்லை வட்டமாக வளைத்து, தன் தம்பி லட்சுமணனுடன் அவனை {ஜடாயுவை} நோக்கி விரைந்தான். எனினும் அந்தப் பெருங்கழுகானவன் {ஜடாயு}, அந்த இருவரிடமும், “அருளப்பட்டிருப்பீர்கள், நான் கழுகுகளின் மன்னனும், தசரதனின் நண்பனுமாவேன்” என்றான். அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட ராமன் மற்றும் அவனது தம்பி ஆகிய இருவரும் தங்கள் அற்புதமான வில்லை ஒதுக்கி வைத்துவிட்டு, “நம் தந்தையின் பேரை இக்கானகத்தில் சொல்லும் இவன் யார்?” என்றனர்.
பிறகு அவர்கள் அந்த உயிரினத்தை {ஜடாயு என்ற கழுகை}, இரண்டு சிறகுகளும் அற்ற பறவை எனக் கண்டார்கள். அந்தப் பறவையானவன் {ஜடாயு}, சீதைக்காக {போராடி}, ராவணன் கையால் தான் வீழ்ந்ததைச் சொன்னான். பிறகு ராவணன் போன வழியைக் குறித்து ராமன் அந்தக் கழுகிடம் {ஜடாயுவிடம்} விசாரித்தான். அக்கழுகானவன் {ஜடாயு} தனது தலையசைவின் மூலம் பதிலளித்துத் தனது கடைசி மூச்சை விட்டான். ராவணன் தென் திசையில் சென்றான் என்ற அந்தக் கழுகின் குறிப்பைப் புரிந்த கொண்ட ராமன், தன் தந்தையின் நண்பருக்கு {ஜடாயுவிற்கு} அஞ்சலி செலுத்தி, அவனது {ஜடாயுவின்} ஈமச் சடங்குகளை முறைப்படிச் செய்தான்.
பிறகு எதிரிகளைத் தண்டிப்பவர்களான ராமனும் லட்சுமணனும், விதேக இளவரசி {சீதை} கடத்தப்பட்டதால் பெருந்துக்கத்தில் மூழ்கி, தண்டக வனம் செல்லும் தென் பாதையில் பயணித்தனர். அப்படி அவர்கள் போகும் வழியில், தர்ப்பை ஆசனங்கள் சிதறி, நீர்க்குடங்கள் உடைந்து, இலைகளைக் குடைகளாகக் கொண்டிருந்த துறவிகளின் பல ஆசிரமங்கள் ஆளற்று இருப்பதையும், நூற்றுக்கணக்கான நரிகள் அங்கு நிறைந்திருப்பதையும் கண்டனர். சுமித்திரையின் மகனுடன் {லட்சுமணனுடன்} சென்ற ராமன், அந்தப் பெரும் கானகத்தில், அனைத்துத் திசைகளிலும் ஓடிக்கொண்டிருக்கும் மான்கூட்டங்களைக் கண்டான். விரைவாகப் பரவும் கானக நெருப்பின் போது {காடு எரியும்போது} கேட்கப்படும் ஒலியைப் போலப் பல்வேறு உயிரினங்களின் ஒலியைக் கேட்டான். விரைவில் அவர்கள் கொடூரமான முகத்தோற்றம் கொண்ட தலையில்லாத ராட்சசன் ஒருவனைக் கண்டனர். மேங்களைப் போலக் கருமையாகவும், மலையைப் போலப் பெரிதாகவும் இருந்த அந்த ராட்சன் சால {ஆச்சா} மரத்தைப் போல அகன்ற தோள்களும், பெரும் கரங்களையும் கொண்டிருந்தான். அவனது மார்பில் இரண்டு பெரிய கண்கள் இருந்தன. வாயின் திறப்பு அவனது அகன்ற தொந்தியில் இருந்தது.
அந்த ராட்சசன் {கவந்தன்} தன் கரம் கொண்டு லட்சுமணனை எந்தச் சிரமமும் இல்லாமல் {எளிதாகப்} பிடித்தான். ராட்சசனால் பிடிக்கப்பட்ட அந்தச் சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, முற்றிலும் குழம்பிப் போய் ஆதரவற்றவனானான். ராமனை நோக்கித் தன் பார்வையைச் செலுத்திய அந்தத் தலையில்லாத ராட்சசன் {கவந்தன்}, தன் உடலில் வாயிருக்கும் பகுதியை நோக்கி லட்சுமணனை இழுக்க ஆரம்பித்தான். அப்போது லட்சுமணன் துயரத்துடன் ராமனிடம், “என் அவலநிலையைப் பாரும்! உமது நாட்டை இழந்தீர், பிறகு நமது தந்தை இறந்தார், சீதை அபகரிக்கப்படாள், இறுதியாக இந்தப் பேரழிவு என்னை அடைந்திருக்கிறது! ஐயோ, விதேக இளவரசியுடன் {சீதையுடன்} கோசலத்துக்கு நீர் திரும்புவதையும், மூதாதையர் வழி வந்த அரியணையில் அமர்ந்து நீர் முழு உலகையும் ஆளப்போவதையும் என்னால் காண முடியாதே! தர்ப்பைப் புற்களாலும், நெற்பொரிகளாலும் {fried paddy}, கருப்புப் பட்டாணிகளாலும் {வன்னித்துளிர்களாலும்} சுத்தப்படுத்தப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்ட நீரில் பட்டமேற்புக்கான குளியலை முடித்து, மேகங்களில் இருந்து வெளிப்படும் சந்திரனைப் போல இருக்கும் உமது முகத்தை, பேறுபெற்றவர்களால்தானே காணமுடியும்!” என்றான் [1]. புத்திகூர்மை கொண்ட லட்சுமணன் இதையும், இதுபோன்ற வார்த்தைகளையும் இதே போன்ற தொனியில் சொல்லிப் புலம்பினான்.
அவ் வழி, இளையவன் அமர்ந்து நோக்கியே,
‘வெவ்வியது ஒரு பெரும் பூதம், வில் வலாய்,
வவ்விய தன் கையின் வளைத்து, வாய்ப் பெயும்;
செய்வது என் இவண்?’ என, செம்மல் சொல்லுவான்:
தோகையும் பிரிந்தனள்; எந்தை துஞ்சினன்;
வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென்;
ஆகலின், யான், இனி, இதனுக்கு ஆமிடம்;
ஏகுதி ஈண்டுநின்று, இளவலே!’ என்றான்.–கம்பனின் ராமகாதையில், ராமன் புலம்புவதாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்த அழகிய வரிகள்.
எனினும் காகுஸ்த குலத்தைச் சேர்ந்த அந்தச் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, ஆபத்துக்கு மத்தியில் அச்சமற்றவனாக இருந்து, லட்சுமணனிடம், “ஓ! மனிதர்களில் புலியே {லட்சுமணா}, துயருக்கு வழி கொடுக்காதே! நான் இங்கு இருக்கும்போது உன்னை இது {இந்த அசுரன்} என்ன செய்யும்? இவனது வலக்கரத்தை நீ வெட்டு, நான் இவனது இடக்கரத்தை வெட்டுகிறேன்” என்றான். ராமன் இப்படிப் பேசிக் கொண்டே, அந்த அரக்கனின் இடக்கரத்தை, கூர்மையான தனது கூன்வாள் கொண்டு, எள்ளுக்கட்டைக் வெட்டுவதுபோல வெட்டினான். தன் அண்ணன் தன் முன் நிற்பதைக் கண்ட சுமித்திரையின் பலம் பொருந்திய மகன் {லட்சுமணன்}, தன் வாளைக் கொண்டு, அந்த ராட்சசனின் வலக்கரத்தையும் துண்டித்தான். பிறகு அந்த லட்சுமணன், அந்த ராட்சசனை விலாப்புறத்தில் தொடர்ந்து அடிக்கவும் ஆரம்பித்தான். பிறகு தலையில்லாத அந்தப் பெரும் அரக்கன் தரையில் விழுந்து விரைவாக அழிந்தான்.
அப்போது அங்கே அந்த ராட்சசன் உடலில் இருந்து ஒரு தெய்வீக மனிதன் வெளிப்பட்டான். அவன் ஒரு நொடி வானத்தில் நின்று, ஆகாயத்தில் இருக்கும் ஒளி பொருந்திய சூரியனைப் போல அந்தச் சகோதரர்களுக்குக் காட்சியளித்தான். பேச்சில் வல்லவனான ராமன், அவனிடம், “நீ யார்? உன்னை விசாரிக்கும் எனக்குப் பதில் சொல்? எப்படி இது போன்ற ஒன்று நடக்கக்கூடும்? அனைத்தும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றன!” என்றான். ராமனால் இப்படிக்கேட்கப்பட்ட அவன் {ராட்சசன்}, “ஓ! இளவரசே {ராமா}, நான் விசுவாவசு என்ற பெயர் கொண்ட கந்தர்வனாவேன். ஒரு அந்தணரின் சாபத்தால் நான் ராட்சசனின் உருவத்தையும் இயல்பையும் அடைந்தேன். உன்னைப் பொறுத்தவரை, ஓ! ராமா, இலங்கையில் வசிக்கும் மன்னன் ராவணனால் சீதை பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டாள். உனக்குத் தனது நட்பைத் தரும் சுக்ரீவனிடம் செல். ரிஷ்யமூகச் சிகரத்திற்கு மிக அருகே புனிதமான நீரும், கொக்குகளும் நிறைந்த பம்பை என்ற பெயர் கொண்ட ஒரு தடாகம் இருக்கிறது. அங்கே பொன் மாலைத் தரித்த குரங்கு மன்னன் வாலியின் தம்பியான சுக்ரீவன், தனது நான்கு ஆலோசகர்களுடன் வசித்து வருகிறான். அவனிடம் சென்று உனது துயரத்தைச் சொல். உன்னைப் போலவே அவல நிலையில் இருக்கும் அவன், தனது உதவியை உனக்கு அளிப்பான். இதைத்தான் {இவ்வளவுமட்டும்தான்} நாம் சொல்ல முடியும். சந்தேகமற நீ ஜனகனின் மகளைக் {சீதையைக்} காண்பாய்! ராவணனையும், பிறரையும் குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்} அறிந்திருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை!” என்றான் [2]. இந்த வார்த்தைகளைக் சொன்ன அந்தப் பெரும் ஒளி கொண்ட தெய்வீகமனிதன் தன்னைப் பார்வையில் இருந்து மறைத்துக் கொண்டான். ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய அந்த இரு வீரர்களும் இதனால் {இக்காட்சியினால்} மிகவும் ஆச்சரியப்பட்டனர்.
கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை
எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின் ஈண்ட,வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது’ என்றான்,–அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே அமைவது ஆனார்.–கவந்தன் ராமனை சுக்ரீவனோடு நட்பு கொள்ளச் சொல்வது :கம்பனின் மொழியில்
ராமனும், சீதையும் கொண்ட நட்பு! – வனபர்வம் பகுதி 278-சுக்ரீவனோடு நட்பு கொண்ட ராமன் வாலியைக் கொன்றது; கிஷ்கிந்தையில் ராமன் நான்கு மாதங்கள் இருந்தது; அசோகவனத்தில் ராட்சசிகள் பாதுகாப்புடன் சீதையை வைத்த ராவணன்; திரிஜடை சீதையைத் தோழி என்று அழைத்தது; அவிந்தியன் சொன்னது; சீதைக்குத் திரிஜடை நம்பிக்கையூட்டியது..
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சீதை கடத்தப்பட்ட துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த ராமன், பல்வேறு வகையான தாமரைகள் நிறைந்திருந்த பம்பை என்ற தடாகத்தை வெகு தூரம் செல்வதற்கு முன்னரே அடைந்தான். காட்டிலிருந்து வீசிய இனிய, நறுமணமிக்க, குளிர்ந்த காற்றால், திடீரென ராமன் தனது அன்பிற்குரிய மனைவியை {சீதையை} நினைவுகூர்ந்தான். ஓ! பலமிக்க ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, தன் அன்பிற்குரிய மனைவியை {சீதையை} நினைத்துப் பார்த்த அவன் {ராமன்}, அவளது பிரிவின் நினைவால் மிகவும் துன்பப்பட்டுப் புலம்பி அழுதான். பிறகு சுமித்திரையின் மகன் {லட்சுமணன்} அவனிடம் {ராமனிடம்}, “ஓ! தகுந்தவர்களுக்கு முறையான மரியாதையளிப்பவரே, முறையான வாழ்வு வாழும் முதிர்ந்த மனிதனை நோய் அண்டுவதில்லை. எனவே, இது போன்ற {நோய் போன்ற} மனத்தளர்ச்சி உம்மை அண்டுவதற்கு விடாதீர். ராவணன் குறித்தும், விதேக இளவரசி {வைதேகி, சீதை} குறித்தும் நீர் தகவலைப் பெற்றீர்! இனி உமது முயற்சியாலும், புத்திக்கூர்மையாலும் அவளை விடுவியும்! இப்போது, நாம் மலையின் மேல் இருக்கும் குரங்குகளில் முதன்மையான சுக்ரீவனை அணுகலாம்! உமது சீடனும், அடிமையும், கூட்டாளியுமான நான் உம் அருகில் இருக்கிறேன் {என்பதை மறவாதீர்}. எனவே உம்மை ஆறுதல் படுத்திக் கொள்ளும்” என்றான் {லட்சுமணன்}.
லட்சுமணனால் சொல்லப்பட்ட இவையும், இவைபோன்ற வேறு வார்த்தைகளையும் கேட்ட ராமன் தனது இயற்கையான தன்மையை {இயல்பை} அடைந்து, காரியத்தைச் செய்யத் தொடங்கினான். பம்பையின் நீரில் குளித்து, தன் முன்னோர்களுக்கு நீர்க்காணிக்கைகள் செலுத்திய ராமன், லட்சுமணன் ஆகிய அந்த இரு வீரச் சகோதரர்களும் (ரிஷ்யமுகத்திற்கு) கிளம்பினார்கள். கனிகளும், கிழங்குகளும், மரங்களும் நிறைந்த ரிஷ்யமுகத்தை அடந்தை அந்த வீரர்கள், மலைச் சிகரத்தின் மேலே ஐந்து குரங்குகளைக் காண்டார்கள். அவர்கள் {அந்தச் சகோதரர்கள்} தங்களை அணுகுவதைக் கண்ட சுக்ரீவன், இமய மலை போன்ற பெரிய உருவம் படைத்த தனது ஆலோசகனான {அமைச்சனான} புத்திக்கூர்மை கொண்ட ஹனுமானை அவர்களை வரவேற்க அனுப்பினான். முதலில் ஹனுமானிடம் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்ட அச்சகோதரர்கள், {பின்பு} சுக்ரீவனை அணுகினார்கள். பிறகு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ராமன் சுக்ரீவனைத் தனது நண்பனாக்கிக் கொண்டான். ராமன் தன் மனதில் இருந்த நோக்கத்தைச் சுக்ரீவனிடம் சொன்ன போது, ராவணனால் தூக்கிச் சொல்லப்படுகையில், குரங்குகளுக்கு மத்தியில் சீதை வீசிய துணித்துண்டை சுக்ரீவன் அவனுக்குக் {ராமனுக்குக்} காட்டினான். அந்தச் சான்றுகளை அவனிடம் {சுக்ரீவனிடம்} இருந்து பெற்றுக் கொண்ட ராமன், பூமியில் உள்ள குரங்குகளுக்கு மன்னனாகச் சுக்ரீவனை நிறுவினான். மேலும் ராமன் போரில் வாலியைக் கொல்வதெனப் பற்றுறுதியை ஏற்றுக்கொண்டான்.
பிறகு ஒரு புரிதலை அடைந்து, ஒருவருக்கொருவர் முழு நம்பிக்கைவைத்த அவர்கள் அனைவரும் (வாலியுடன்) போரிட விரும்பி கிஷ்கிந்தைக்குச் சென்றார்கள். கிஷ்கிந்தையை அடைந்ததும், சுக்ரீவன், மலைவீழாறு போல ஆழ்ந்த கர்ஜனையை உரக்க எழுப்பினான். இந்த அறைகூவலைத் தாங்கிக் கொள்ளாத வாலி, வெளியே வந்தான். (ஆனால் அவனது மனைவி) தாரை அவனது வழியில் நின்று, “பெரும்பலத்தோடு கூடி சுக்ரீவர் கர்ஜிக்கும் முறை, அவர் ஏதோ துணையை அடைந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது என நான் கருதுகிறேன். எனவே நீர் வெளியே செல்வது தகாது!” என்றாள். அவளால் {தாரையால்} இப்படிச் சொல்லப்பட்ட குரங்குகள் மன்னனும், தங்க மாலை அணிந்திருந்தவனும், நாநயமிக்கவனுமான வாலி, நிலவு போன்ற அழகு முகம் கொண்ட தாரையிடம், “அனைத்து உயிரினங்களின் குரலையும் நீ புரிந்து கொள்கிறாய். {எனவே}, பெயரளவுக்கே எனது தம்பியான இவன் {சுக்ரீவன்}, யாருடைய உதவியைப் பெற்றிருக்கிறான் என்பதைச் சிந்தித்துச் சொல்!” என்றான்.
அவனால் {வாலியால்} இப்படிச் சொல்லப்பட்டவளும், சந்திரனின் பிரகாசத்தைக் கொண்டவளும், ஞானமுள்ளவளுமான தாரை, ஒரு நொடியே சிந்தித்த பிறகு தனது தலைவனிடம் {வாலியிடம்}, “ஓ! குரங்குகளின் ஏகாதிபதியே, கேளும்! வில்லாளிகளில் முதன்மையானவனும், பெரும் வலிமை படைத்தவனும், தன் மனைவியை இழந்தவனும், தசரதன் மைந்தனுமான ராமன், தாக்குதலுக்காவும், தற்காப்புக்காகவும் சுக்ரீவருடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறான். சுக்ரீவரின் நோக்கம் வெல்வதற்காகச் சுமித்திரையின் வீழ்த்தப்பட முடியாத மகனும், வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனுமான லட்சுமணனும் அவன் {ராமன்} அருகில் நிற்கிறான். மயிந்தன் {Maind}, திவிவிதன் {Dwivida}, பவனனின் மகனான ஹனுமான் {ஹனுமான்} மற்றும் கரடி மன்னனான ஜாம்பவான் (Jamvuman} ஆகியோர் சுக்ரீவரின் அருகில் ஆலோசகர்களாக {அமைச்சர்களாக} இருக்கிறார்கள். இந்தச் சிறப்புமிக்கவர்கள் அனைவரும், பெரும் பலமும், புத்திக்கூர்மையும் கொண்டவர்களாவர். இவர்கள் அனைவரும் ராமனின் வலிமையையும் சக்தியையும் நம்பி, உம்மை அழிக்கத் தயாராக இருக்கின்றனர்!” என்றாள் {தாரை}.
தன் நன்மைக்காகச் சொல்லப்பட்ட அவளது {தாரையின்} வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குரங்குகளின் மன்னன் {வாலி}, அவை அனைத்தையும் மொத்தமாக அலட்சியப்படுத்தினான். பிறகு பொறாமையால் நிறைந்த அவன், சுக்ரீவன் மீது அவள் {தாரை} இதயத்தை நிலைக்க வைத்திருக்கிறாள் எனச் சந்தேகப்பட்டான்! பிறகு தாரையிடம் கடும் வார்த்தைகள் பேசிவிட்டு, குகையை விட்டு வெளியேறி, மால்யவாத மலைகளின் {Malyavat} அருகில் நின்று கொண்டிருந்த சுக்ரீவனின் முன்பு வந்து, “முன்பு என்னால் அடிக்கடி வீழ்த்தப்பட்ட நீ, உனது உயிரை விரும்பியதால், என்னுடன் நீ கொண்ட உறவு முறைக்காக, {உயிருடன்} தப்பிச் செல்ல என்னால் அனுமதிக்கப்பட்டாய். இவ்வளவு விரைவாக உன்னை மரணத்தை விரும்ப வைத்தது எது?” என்று கேட்டான்.
வாலியால் இப்படிச் கேட்கப்பட்ட எதிரிகளைக் கொல்பவனான சுக்ரீவன், என்ன நடந்தது என்பதை ராமனுக்குச் சொல்வது போல, தன் அண்ணனிடம் {வாலியிடம்} “ஓ! மன்னா, உன்னால் மனைவியையும், நாட்டையும் இழந்த நான், உயிர் வாழ வேண்டிய தேவை என்ன இருக்கிறது? அதற்காகவே {மனைவிக்காகவும், நாட்டுக்காகவுமே} நான் வந்திருக்கிறேன் என்பதை அறி!” என்ற சிந்தனைக்குரிய வார்த்தைகளைப் பேசினான். பிறகு, இது போலவும், வேறு வார்த்தைகளாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட வாலியும், சுக்ரீவனும் மோதலுக்கு விரைந்தனர். பிறகு அவர்கள் ஆச்சா மரங்கள், பனை மரங்கள் மற்றும் கற்களைக் கொண்டு போரிட்டுக் கொண்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பூமியில் அடித்துக் கீழே வீழ்த்தினர். காற்றில் உயர குதித்த அவர்கள், தங்கள் கை முட்டிகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். தங்கள் நகங்களையும் பற்களையும் கொண்டு ஒருவரையொருவர் சிதைத்துக் கிழித்தனர். அவர்கள் இருவரும் ரத்ததால் மூடப்பட்டிருந்தனர் {ரத்தத்தில் நனைந்தனர்}.
அவர்கள் இருவரும் பூத்திருக்கிற புரசமரம் {Kinshuka} போல அப்போது விளங்கினார்கள். அவர்கள் அப்படி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது (தோற்றத்தில்) அவர்களிடையே ஒரு வேற்றுமையும் காணப்படவில்லை. பிறகு ஹனுமான், சுக்ரீவனின் கழுத்தில் மலர்களால் ஆன மாலையை அணிவித்தான். பிறகு அந்த வீரன் {சுக்ரீவன்}, வரிசையான மேகங்களுடன் கூடிய மால்யா {மால்யாவாதம்} எனும் பெரும் சிகரத்தைப் போல அழகாக, கழுத்திலிருந்த அந்த {மலர்} மாலையால் ஒளிர்ந்தான். அந்தக் குறிப்பால் சுக்ரீவனை அடையாளம் கண்ட ராமன், விற்களில் முதன்மையான தனது பெரும் வில்லை எடுத்து, தனது இலக்காக வாலியைக் குறிவைத்தான். ராமனின் வில்லில் இருந்து புறப்பட்ட அந்த நாணொலி, பொறியைப் {இயந்திரத்தைப்} போல ஒலி பெருக்கியது. அக்கணையால் மார்பில் துளைக்கப்பட்ட வாலி, அச்சத்தில் நடுங்கினான். இதயம் துளைக்கப்பட்ட வாலி ரத்தம் கக்க ஆரம்பித்தான். பிறகு தன் முன் நின்ற ராமனையும், அவன் {ராமனின்} அருகில் நின்ற சுமித்திரையின் மகனையும் {லட்சுமணனையும்} கண்டான். காகுஸ்த குலத்தவனை {ராமனை} ஏசிய வாலி தரையில் விழுந்து உணர்வற்றவன் ஆனான். சந்திரனைப் போன்ற பிரகாசமுடைய தனது தலைவன் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைத் தாரைக் கண்டாள். இப்படி வாலி கொல்லப்பட்ட பிறகு, சுக்ரீவன் கிஷ்கிந்தையையும், அதனுடன் சேர்த்து அழகிய நிலவு போன்ற முகம் கொண்ட தாரையையும் மீண்டும் அடைந்தான். பிறகு மால்யவாதமலையின் அழகிய மார்பில் நான்கு மாதங்கள் வசித்த புத்திக்கூர்மை கொண்ட ராமன், சுக்ரீவனால் எப்போதும் சரியான முறையில் வழிபடப்பட்டான்.
அதே வேளையில், காமத்தால் உந்தப்பட்ட ராவணன், தனது நகரான இலங்கையை அடைந்ததும், அசோகங்களின் {அசோகர மரங்கள் நிறைந்த} காட்டில், நந்தனத்தை ஒத்திருக்கும் வசிப்பிடத்தில், துறவிகளின் ஆசிரமம் போல இருக்கும் ஒரு ஆசிரமத்தில் சீதையை அமர்த்தினான். அகன்ற கண்கள் கொண்ட சீதை, கனிகளையும், கிழங்குகளையும் கொண்டு வாழ்ந்து, துறவியின் ஆடை (குறிப்பிட்ட வகை ஆடை) உடுத்தி, உண்ணா நோன்புகளுடன் கூடிய தவங்களைப் பயின்று, தனது கணவனின் பிரிவை எண்ணி நாளுக்கு நாள் மெலிந்து, தனது நாட்களைத் துன்பகரமாகக் கழித்தாள். ராட்சசர்களின் மன்னன் {ராவணன்}, சீதைக்குப் பாதுகாவலாகப் பராசங்களையும், வாள்களையும், சூலங்களையும், போர்க்கோடரிகளையும், தண்டாயுதங்களையும், எரிகொள்ளிகளையும் தாங்கிய பல ராட்சசிகளை நியமித்தான். அவர்களில் சிலர் இரண்டு கண்களுடனும், சிலர் மூன்றுடனும் இருந்தனர். சிலருக்கு நெற்றியில் கண்கள் இருந்தன. சிலருக்கு நீளமான நாக்கும், சிலருக்கு நாக்கு இல்லாமலும் இருந்தது. சிலருக்கு மூன்று கொங்கைகளும், சிலருக்கு ஒரே காலும் இருந்தன. சிலருக்குத் தலையில் மூன்று சடைகள் இருந்தன. சிலர் ஒரே கண்ணைக் கொண்டிருந்தனர். இவர்களும், சுடர்மிகும் கண்கள் கொண்ட பிறரும், ஒட்டகத்தின் முடி போல மேல்நோக்கிய முடி கொண்டவர்களும், சீதையின் அருகில் நின்று கொண்டு, இரவும் பகலும் கவனமாக அவளைச் சூழ்ந்திருந்தனர். பயங்கரக் குரலும் கொடூரத் தன்மையும் கொண்ட அந்தப் பெண்பிசாசங்கள், அந்த அகன்ற கண் கொண்ட மங்கையிடம் {சீதையிடம்} கடுமையான தொனியிலேயே பேசினார்கள். அவர்கள் {அந்தப் பிசாசுகள்}, “நமது தலைவனை அவமதித்து இங்கே வசிக்கும் இவளைத் தின்றுவிடுவோம், இவளைச் சிதைப்போம், இவளைத் துண்டு துண்டாகக் கிழிப்போம்” என்றனர்.
தன் தலைவனின் பிரிவால் துன்பம் நிறைந்த சீதை ஆழமான பெருமூச்சுவிட்டு, அந்த ராட்சசிகளிடம், “மரியாதைக்குரிய மங்கையரே {ராட்சசிகளே}, தாமதமில்லாமல் என்னை உண்ணுங்கள்! நீலநிறத்தவரும், அலைபாயும் கூந்தல் கொண்டவரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்கள் கொண்டவருமான எனது கணவர் {ராமர்} இல்லாது நான் வாழ விரும்பவில்லை! உணவருந்தாமல், உயிர்மேல் கிஞ்சிற்றும் ஆசையில்லாமல், வேல மரத்திற்குள்ளிருக்கும் பெண் பாம்பு (ஒடுங்கி) {பனிக்ககாலத்தில் ஓய்வெடுக்கப் பாம்பு மரப்பொந்துக்குள் உறங்குதல்} போல இருந்து, என் அங்கங்களை மெலியச் செய்வேன். ரகு குல வழித்தோன்றலைத் {ராமரைத்} தவிர நான் வேறு எந்த மனிதனின் பாதுகாப்பையும் எப்போதும் நாடமாட்டேன் என்பது அறியுங்கள். இது நிச்சயம். இதை அறிந்த பிறகு, தகுந்ததென்று நீங்கள் நினைப்பதைச் செய்யுங்கள்!” என்றாள். அவளது வார்த்தைகளைக் கேட்ட கரடுமுரடான குரல் கொண்ட அந்த ராட்சசிகள் ராட்சசர்களின் மன்னனிடம் {ராவணனிடம்} சென்று அவள் {சீதை} சொன்னது அனைத்தையும் சொன்னார்கள்.
இப்படி அந்த ராட்சசிகளை அனைவரும் சென்ற பிறகு, அவர்களில் {ராட்சசிகளில்} ஒருத்தியும், அறம்சார்ந்த, ஏற்புடைய பேச்சு கொண்டவளும், திரிஜடை என்ற பெயரால் அறியப்படுபவளுமான ராட்சசி, விதேக இளவரசிக்கு {சீதைக்கு} ஆறுதல் கூறத் தொடங்கினாள். அவள் {திரிஜடை}, “ஓ! சீதையே கேள்! நான் உனக்கு ஒன்றைச் சொல்கிறேன்! ஓ தோழி, நான்சொல்வதை நம்பு! ஓ! அழகிய இடை கொண்டவளே, உனது அச்சத்தை விலக்கி, நான் சொல்வதைக் கேள். புத்திக்கூர்மை கொண்டவனும், ராட்சசர்களின் முதிய தலைவனுமான ஒருவன் அவிந்தியன் என்ற பெயரில் அறியப்படுகிறான். அவன் {அவிந்தியன்}, ராமனின் நலத்தை எப்போதும் நாடுபவனாவான். அவன் {அவிந்தியன்}, உனக்காக என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.
{அவிந்தியன்} “என் பெயரைச் சொல்லி சீதைக்கு நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டி, நான் சொன்னதாக, “உனது கணவனான வலிமைமிக்க ராமன் நன்றாக இருக்கிறான். அவனை லட்சுமணன் காக்கிறான். ரகுவின் அருளப்பட்ட அந்த வழித்தோன்றல் {ராமன்} ஏற்கனவே குரங்குகள் மன்னன் சுக்ரீவனின் நட்பைப் பெற்று, உனக்காகச் செயல்படத் தயாராக இருக்கிறான். மேலும், ஓ! அச்சம் கொண்ட மங்கையே, முழு உலகும் நிந்திக்கும் ராவணனைக் கண்டு அச்சத்தை வளர்த்துக் கொள்ளாதே. ஓ! மகளே, அவன் {ராவணன்} நளகூபரனிடம் {நளகுபேரனிடம்} பெற்ற சாபத்தின் காரணமாக நீ பாதுகாப்பாகவே இருப்பாய். உண்மையில், இந்தப் பாவி {ராவணன்}, தனது மருமகளான ரம்பையைக் களங்கப்படுத்தியதால் முன்பே சபிக்கப்பட்டிருக்கிறான். இந்தக் காமாந்தகப்பாவி {ராவணன்}, எந்தப் பெண்ணையும் பலவந்தமாக அடைவதற்கு சக்தியுடையவனல்ல. சுக்ரீவனால் பாதுகாக்கப்பட்டு, புத்திக்கூர்மையுள்ள சுமித்திரையின் மகனால் {லட்சுமணனால்} பின்தொடரப்பட்டு விரைவாக வரும் உனது கணவன் {ராமன்}, உன்னை மிக விரைவில் மீட்டுச் செல்வான் என்று சொல்” என்றான் {அவிந்தியன்}.
ஓ! மங்கையே {சீதையே}, தீய சகுனமாக, புலஸ்திய குலத்தின் தீய மனம் கொண்ட பாவியின் அழிவைக் குறிக்கும் மிகப் பயங்கரக் கனவொன்றை நான் {திரிஜடை} கண்டேன். இழிந்த செயல்கள் புரியும் இரவு உலாவியான இவன், உண்மையில் மிகத் தீயவனும் கொடூரனுமாவான். தனது இயல்பின் குறைபாடுகளால் அவன் {ராவணன்} தீய நடத்தையையும், பயங்கரங்களையும் மேற்கொள்கிறான். விதியால் தனது அறிவை இழந்த அவன் {ராவணன்}, தேவர்களுக்கே அறைகூவல் விடுகிறான். அவனது வீழ்ச்சியைக் குறிக்கும் அனைத்து குறியீடுகளையும் நான் எனது பார்வையில் {அந்தக் கனவில்} கண்டேன். தலைகள் மழிக்கப்பட்ட அந்தப் பத்துத் தலையன் {the Ten-headed} {தசக்ரீவன்}, உடலெங்கும் எண்ணெய் பூசி, சகதியில் மூழ்கினான். அடுத்த நொடியில் கழுதைகளால் இழுக்கப்பட்ட வாகனத்தில் கூத்தாடினான். முழுவதும் நிர்வாணமாக, தலை மழிக்கப்பட்டவர்களாக, சிவப்பு மலர்மாலைகள் தரித்து, களிம்பு சிவப்பு மேற்பூச்சு} பூசியிருந்த கும்பகர்ணனும், மற்றவர்களும், தென்திசை நோக்கி ஓடினார்கள்.
தலைக்கு மேல் குடையுடனும் தலைப்பாகை அணிந்து, வெண்மாலைகள் தரித்து, களிம்பு {வெண்சந்தனம்} அணிந்திருந்த விபீஷணன் மட்டுமே, வெண்மலையின் உச்சியில் ஏறியதை நான் கண்டேன். வெண்மாலைகள் தரித்து, களிம்பு {வெண்சந்தனம்} அணிந்திருந்த அவனது நான்கு ஆலோசகர்களும் {அமைச்சர்களும்} அவனுடன் உச்சிக்கு ஏறுவதையும் நான் கண்டேன். எதிர்வரும் பயங்கரத்தில் இவர்கள் மட்டுமே காக்கப்படுவார்கள் என்பதையே இது குறிக்கிறது. ராமனின் கணைகளால், இந்தக் கடல் சூழ்ந்த பூமி மறைக்கப்படுப்போகிறது. ஓ! மங்கையே, உனது கணவன் {ராமன்}, தனது புகழால் இந்த முழு உலகையும் நிறைப்பான். (தனது கணைகளால்), லட்சுமணன் அனைத்துப் புறங்களையும் எரிப்பதையும், எலும்புக்குவியல் மீது ஏறி தேனும், கண்ணமுதும் பருகுவதையும் கண்டேன். ஓ! மங்கையே, அழுது கொண்டு, இரத்தத்தால் நனைந்து, ஒரு புலியால் பாதுகாக்கப்பட்ட நீ, வடதிசை நோக்கி ஓடுவதையும் கண்டேன்! ஓ! விதேக இளவரசியே, ஓ! சீதை, தம்பியின் துணையுடன் இருக்கும் ரகு குல வழித்தோன்றலான உனது கணவனுடன் {ராமனுடன்} மீண்டும் சேர்ந்து, நீ விரைவில் மகிழ்ச்சியை அடைவாய்!” என்றாள் {திரிஜடை}.
இளமான்களின் கண்களைக் கொண்ட அந்தப் பெண் {சீதை}, திரிஜடையின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தன் தலைவனுடன் சேரும் நம்பிக்கையை மீண்டும் வளர்க்க ஆரம்பித்தாள். கடுமையும் கொடுமையும் நிறைந்த பிசாசங்களான {ராவணனிடம் சென்ற} அந்தப் பாதுகாவலர்கள், திரும்பி வந்த போது, முன்பு போலவே திரிஜடையுடன் அமர்ந்திருக்கும் அவளைக் {சீதையைக்} கண்டனர்.”
சீதையை அணுகிய ராவணன்! – வனபர்வம் பகுதி 279-அசோக வனத்தில் சோகமாக இருக்கும் சீதையை அணுகி, தன்னைக் கணவனாக ஏற்கும்படி ராவணன் கேட்பது; சீதை ராவணனை அவமதிப்பது; ராவணன் அங்கிருந்து மறைந்து, தான் விரும்பிய இடம் சென்றது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தன் தலைவனை {ராமனைப்} பிரிந்த துயரத்தால் தாக்கப்பட்டு, எளிய ஆடை (குறிப்பிட்ட வகையிலான துணி) உடுத்தி, (மணிக்கட்டில் அணியும் திருமண நூல் {தாலியில்} கோர்க்கப்பட்டிருந்த) ஒரே ஒரு நகை மட்டும் அணிந்தபடி அங்கே {அசோக வனத்தில்} வசித்துவந்த கற்புடைய சீதை, ஒரு கல்லில் அமர்ந்து கொண்டு இடைவிடாமல் அழுது கொண்டிருந்தாள். அப்படி அமர்ந்திருந்த அவளுக்காக ராட்சசிகள் காத்திருந்தனர். அப்போது, காம தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்குண்ட ராவணன் அங்கே அவள் முன்னிலையில் வந்து நின்றான். போர்க்களத்தில், தேவர்களாலும், தானவர்களாலும், கந்தர்வர்களாலும், யக்ஷர்களாலும், கிம்புருஷர்களாலும் வெல்லப்பட முடியாத அவன் {ராவணன்}, ஆசையில் எரிந்தான். தெய்வீக ஆடைகள் உடுத்தி, அழகிய அம்சங்களுடன், ரத்தினம் பொருந்திய காதுகுண்டலங்களும், அழகிய மாலையும், மகுடமும் தரித்து, இளவேனிற்காலத்தின் {வசந்த காலத்தின்} உருவகமாக அசோக வனத்துக்குள் அவன் {ராவணன்} நுழைந்தான். கவனமாக {அழகாக} உடுத்தியிருந்த ராவணன், இந்திரனின் நந்தவனத்தில் உள்ள கல்ப மரத்தைப் {கற்பகவிருக்ஷம்} போல இருந்தான். ஆனால், அனைத்தையும் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், கல்லறைக்கு மத்தியில் இருக்கும் அழகிய ஆல மரத்தைப் போலவே, அவன் {ராவணன்}, அவளுக்குப் {சீதைக்குப்} பயத்தை ஏற்படுத்தினான். இரவு உலாவியான அவன், அந்தக் கொடியிடை மங்கையின் {சீதையின்} முன்னிலையை அடைந்து, ரோகிணியின் {ரோகிணி நட்சத்திரத்தின்} முன்பு நிற்கும் சனிக்கிரகம் போல இருந்தான்.
பூக்களைத் தனது சின்னமாகக் கொண்ட தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்குண்ட அவன் {ராவணன்}, பெண் வெள்ளாடு போல அச்சத்துடன் இருந்த அழகிய இடை கொண்ட அந்த ஆதரவற்ற மங்கையை {சீதையை} அணுகி, “ஓ! சீதை, உன் தலைவனை {ராமனை} நீ வெகுவாக மதிக்கிறாய்! ஓ! மென்மையான உறுப்புகள் கொண்டவளே {மென்மையானவளே}, என்னிடம் கருணை காட்டு. {இந்தப் பணிப்பெண்கள்} இப்போது உன் மேனியை அழகூட்ட அனுமதி கொடு. ஓ! அருமையானவளே, என்னை உன் தலைவனாக ஏற்றுக் கொள். ஓ! மிக அழகான நிறம் கொண்டவளே, விலையுயர்ந்த ஆடை ஆபரணகளைத் தரித்து, எனது வீட்டின் பெண்கள் அனைவரிலும் முதன்மையான இடத்தைப் பெறு. நான் கொண்டிருக்கும் அவர்களில் பலர், தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் மகள்களாவர். நான் பல தானவ மற்றம் தைத்திய மங்கையருக்குத் தலைவனாக இருக்கிறேன். பதினான்கு கோடி {14,00,00,000_One hundred and forty million} பிசாசங்களும், அதைவிட இரண்டு மடங்கு மனிதனை உண்ணும் பயங்கர ராட்சசர்களும், அதைவிட மூன்று மடங்கு யக்ஷர்களும் என் உத்தரவுக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களில் சிலர் கரூவலத்தலைவனான {குபேரனின்} என் அண்ணனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். ஓ! அழகிய தொடைகள் கொண்டவளே {சீதை}, என் மதுபான கூடத்தில் {Drinking Hall}, கந்தர்வர்களும் அப்சரசுகளும், என் அண்ணனுக்காகக் காத்திருப்பது போலவே எனக்காகக் காத்திருக்கின்றனர். மேலும், மறுபிறப்பாள {பிராமண} முனிவரான உயர்ந்த தவத்தகுதி படைத்த விஸ்வரசின் மகன் நான். நான் இந்த அண்டத்தின் ஐந்தாவது ஆட்சியாளனாக {லோகபாலகனாக} புகழ்பெற்றிருக்கிறேன். ஓ! அழகிய மங்கையே {சீதையே}, நான் தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல மிகச்சிறந்த உணவும் பானமும் கொள்கிறேன். காட்டு வாழ்வின் தொடர்ச்சியாக உனக்கு ஏற்பட்ட தொல்லைகள் எல்லாம் நின்று போகட்டும். ஓ! அழகிய இடை கொண்டவளே {சீதை}, மண்டோதரியைப் போலவே, நீ எனது ராணியாகு” என்ற வார்த்தைகளைக் கூறினான் {ராவணன்}.
அவனால் {ராவணனால்} இப்படிச் சொல்லப்பட்ட விதேகத்தின் அந்த அழகிய இளவரசி {சீதை}, அப்புறம் திரும்பிக்கொண்டு, புல்லைவிட இழிந்தவனாக அவனை {ராவணனைக்} கருதி, அந்த இரவு உலாவிக்கு மறுமொழி கூறினாள். விதேக இளவரசியான அந்த அழகிய இடை கொண்ட பெண் {சீதை}, தொடர்ந்து அழுததால் ஏற்பட்ட மங்கலமற்ற கண்ணீர், அவளது பருத்த கச்சிதமான மார்புகளை அந்நேரத்தில் நனைத்தது. தன் கணவனைத் தேவனாகக் {தெய்வமாகக்} கருதிய அவள் {சீதை}, அந்த இழிந்த பாவியிடம் {ராவணனிடம்}, “ஓ! ராட்சசர்களின் மன்னா {ராவணா}, சுத்தமாகப் பேறு இல்லாததாலேயே உன்னால் பேசப்படும் இத்தகு துக்ககரமான வார்த்தைகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. ஓ! சிற்றின்பத்தை விரும்பும் ராட்சசா {ராவணா}, என்னிடம் இருந்து உனது இதயத்தை விலக்கு. நீ அருளப்பட்டிருப்பாயாக! நான் வேறு ஒருவரின் மனைவி; கணவருக்கே என்னை எப்போதும் அர்ப்பணித்திருக்கிறேன். எனவே, நான் உன்னால் அடையத்தகாதவள்! ஆதரவற்ற மானுடப் பெண்ணான நான், உன் மனைவி ஆவதற்குத் தகுந்தவளல்ல! விருப்பமில்லாத பெண்ணை வன்முறையால் அடைவதால், நீ அடையப்போகும் மகிழ்ச்சிதான் என்ன? உனது தந்தை ஒரு ஞானமுள்ள அந்தணர்; பிரம்மனுக்குப் பிறந்தவர்; படைப்புத் தலைவனுக்கு {பிரம்மனுக்கு} நிகரானவர்! எனவே, அண்ட ஆட்சியாளனுக்கு {லோகபாலனுக்கு} நிகரான நீ ஏன் அறத்தைக் கடைப்பிடிக்கக்கூடாது? மகேஸ்வரனுக்கு {சிவனுக்கு} நண்பனும், யக்ஷர்களின் மன்னனும், கருவூலத் தலைவனுமான உனது அண்ணனை {குபேரனை} அவமதித்துவிட்டு, நீ எப்படி வெட்கப்படாமல் இருக்கிறாய்?” என்று கேட்டாள்.
இந்த வார்த்தைகளைச் சொன்ன சீதை, ஆடையால் தனது கழுத்தையும் முகத்தையும் மூடிக் கொண்டு, கலக்கத்தால் தன் மார்புகள் நடுங்க அழத்தொடங்கினாள். அழுது கொண்டிருந்த அந்த மங்கையின் {சீதையின்} தலையில் இருந்து விழுந்த, நன்றாகப் பின்னப்பட்ட, மிகக் கருமையான, பளபளப்பான நீண்ட சடை பார்ப்பதற்குக் கருநாகம் போல இருந்தது. சீதையால் சொல்லப்பட்ட இந்தக் கொடுஞ்சொற்களைக் கேட்ட அந்த முட்டாள் ராவணன், இப்படி அவளால் {சீதையால்} நிராகரிக்கப்பட்டாலும், அவளிடம் {சீதையிடம்} மீண்டும், “ஓ! மங்கையே, மகரத்தைச் சின்னமாகக் கொண்ட தேவன் என்னைச் சுட்டெரிக்கட்டும். இருப்பினும், ஓ! இனிய புன்னகையும், அழகிய இடையும் கொண்டவளே {சீதை}, விருப்பமற்ற உன்னை நான் எக்காரணம் கொண்டும் அணுக {அடைய} மாட்டேன். எங்களுக்கு உணவாக இருக்ககூடிய மனிதனான ராமனை இன்னும் உயர்வாகக் கருதும் உன்னை நான் என்ன செய்யக்கூடும்?” என்று சொன்னான். களங்கமற்ற மங்கையிடம் {சீதையிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்ன ராட்சச மன்னன் {ராவணன்}, பார்த்துக் கொண்டிருக்கும்போதே காட்சியில் இருந்து மறைந்து, தான் விரும்பிய இடத்திற்குச் சென்றான். ராட்சசிகளால் சூழப்பட்டிருந்த சீதை, திரிஜடையால் மென்மையாக நடத்தப்பட்டு துயரத்துடன் அங்கு வசிக்கத் தொடங்கினாள்.
கண்டேன் சீதையை ! – வனபர்வம் பகுதி 280-கோபம் கொண்ட ராமன், லட்சுமணனை சுக்ரீவனிடம் அனுப்பியது; சுக்ரீவனின் முன்னேற்பாடுகளை லட்சுமணன் அறிந்து கொள்வது; சீதையைக் கண்டு திரும்பிய ஹனுமான்; ஹனுமான் இலங்கையில் தான் கண்டதை ராமனிடம் விளக்கியது; சீதை கொடுத்தனுப்பிய மணியைப்பற்றி ராமனிடம் ஹனுமான் சொன்னது…
மார்க்கண்டேயர் {{யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதேவேளையில், ரகுவின் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, சுக்ரீவனால் விருந்தோம்பலுடன் நடத்தப்பட்டு, தினமும் தெளிந்த நீல வானத்தைக் கண்டபடி, மால்யவாத மலையின் மார்பில் தன் தம்பியுடன் தொடர்ந்து வசித்து வந்தான். ஒரு நாள் இரவில், மேகங்களற்ற தெரிந்த வானத்தில் கோள்களாலும், விண்மீன் கூட்டத்தாலும் சூழப்பட்ட பிரகாசமான சந்திரனை மலை மேல் இருந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, தாமரை, அல்லி மற்றும் அதே வகையைச் சார்ந்த மலர்களின் நறுமணத்தைச் சுமந்த வந்த குளுமையான தென்றலால் அந்த எதிரிகளைக் கொல்பவன் {ராமன்} திடீரென எழுச்சியடைந்தான்.
பிறகு அறம்சார்ந்த ராமன், சீதை சிறைபிடிக்கப்பட்டு ராட்சசனின் வசிப்பிடத்தில் இருப்பதை நினைத்து மனச்சோர்வடைந்து, வீரனான லட்சுமணனிடம் காலையில், “லட்சுமணா போ. ஓ! ரகு குலத்தை நிலைநிறுத்துபவனே {லட்சுமணா}, சொந்த நலன்களை மட்டுமே நன்கு புரிந்து கொள்பவனும், இப்போது சிற்றின்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவனும், என்னால் அரியணையில் அமர்த்தப்பட்டவனும், தன் குலத்தின் இழிந்த மூடனும், {கொண்டை முசுறுகள்}, குரங்குகள், கரடிகள் ஆகியற்றால் முழு மனதுடன் நம்பப்படுபவனுமான நன்றிமறந்த அந்தக் குரங்குகள் மன்னனைத் {சுக்ரீவனை} தேடி கிஷ்கிந்தைக்குச் செல். ஓ! லட்சுமணா, துயரத்தில் மூழ்கியிருக்கும் என்னை அந்த இழிந்தவன் மறந்துவிட்டான். அதனால்தான், அந்தக் குரங்குகளில் இழிந்தவன் {சுக்ரீவன்} நன்றி மறந்திருக்கிறான் என்று கருதுகிறேன். மந்த புத்தியினால், தனக்கு இத்தகு சேவை செய்தவனை {என்னை} அவமதிக்கும் வகையில், தான் ஏற்ற உறுதியைச் செய்வதற்கு விருப்பமில்லாமல் இருக்கிறான் என நினைக்கிறேன். மந்தமாக, புலனின்பங்களில் அவன் உருண்டு கொண்டிருப்பதை நீ கண்டால், அனைத்து உயிர்களின் பொது இலக்குக்கு {யமலோகத்துக்கு}, வாலி சென்ற பாதையில் நீ அவனை {சுக்ரீவனை} அனுப்பி வைக்க வேண்டும்! மறுபுறம் அந்தக் குரங்குகளில் முதன்மையானவன் {சுக்ரீவன்}, நம் காரியத்தைச் செய்வதில் மகிழ்ச்சி கொண்டிருந்தானானால், ஓ! காகுஸ்தன் வழித்தோன்றலே {லட்சுமணா}, நீ அவனை {சுக்ரீவனை} என்னிடம் அழைத்து வா! விரைந்து செல். தாமதிக்காதே!” என்றான் {ராமன்}.
மூத்தோர் நலனில் அக்கறையிலும் அவர்களின் கொடுக்கும் உத்தரவுகளிலும் எப்போதும் கவனமாக இருப்பவனான லட்சுமணன் தனது அண்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், கைகளில் நாணுடன் கூடிய அழகிய வில்லுடனும், கணைகளுடனும் கிளம்பிச் சென்றான். கிஷ்கிந்தையின் வாயிலை அடைந்து, யாராலும் தடுக்கப்படாமல் அந்நகருக்குள்ளே நுழைந்தான். அவன் {லட்சுமணன்} கோபமாக இருப்பதை அறிந்த குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்}, அவனை வரவேற்பதற்காக முன் சென்றான். குரங்குகள் மன்னனான சுக்ரீவன் தனது மனைவியுடனும், எளிய இதயத்துடனும், மகிழ்ச்சியுடனும், உரிய மரியாதைகள் செய்து அவனை {லட்சுமணனை} வரவேற்றான். அந்த அச்சமற்ற சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ராமன் சொன்னதை அவனிடம் {சுக்ரீவனிடம்} சொன்னான். ஓ! பலமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அனைத்தையும் விவரமாகக் கேட்ட குரங்குகள் மன்னன் சுக்ரீவன், தனது மனைவியுடனும், பணியாட்களுடனும் கரங்கள் கூப்பி, மனிதர்களில் களிறான லட்சுமணனிடம் மகிழ்ச்சியாக, “ஓ! லட்சுமணா, நான் தீயவனோ, நன்றிகெட்டவனோ, அறமற்றவனோ கிடையாது! சீதை சிறைசெய்யப்பட்டிருக்கும் இடத்தை அறிய நான் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளைக் கேள்! விடாமுயற்சி கொண்ட குரங்குகளை நான் அனைத்து திசையிலும் அனுப்பியிருக்கிறேன். அவர்கள் அனைவரும் ஒரு மாதத்திற்குள் திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்திருக்கிறேன். ஓ! வீரா {லட்சுமணா}, காடுகள், மலைகள், கடல்கள், கிராமங்கள், நகரங்கள், பட்டணங்கள், சுரங்கங்கள் நிறைந்த முழு உலகத்தையும் அவர்கள் தேடுவார்கள். ஒரு மாதம் முடிய இன்னும் ஐந்து இரவுகளே இருக்கின்றன. பிறகு, ராமனோடு சேர்ந்த நீ பெரிய மகிழ்ச்சியான செய்தியைக் கேட்பாய்!” என்றான்.
புத்திக்கூர்மையுள்ள குரங்குகள் மன்னனால் {சுக்ரீவனால்} இப்படிச் சொல்லப்பட்ட, உயர் ஆன்ம {மகாத்மாவான} லட்சுமணன் அமைதியடைந்து, பதிலுக்குச் சுக்ரீவனை வழிபட்டான். பிறகு சுக்ரீவனையும் அழைத்துக் கொண்டு, மால்யவாத மலையின் மார்பில் இருந்த ராமனிடம் திரும்பினான். அவனை {ராமனை} அணுகிய லட்சுமணன், தங்கள் காரியத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டிருப்பவை குறித்துத் தெரிவித்தான். விரைவில் வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளைக் கவனமாகத் தேடிப் பார்த்துவிட்டு, ஆயிரக்கணக்கான குரங்கு தலைவர்கள், திரும்பத் தொடங்கினார்கள். ஆனால் தெற்கே சென்றவர்கள் யாரும் திரும்பவில்லை. ஏற்கனவே திரும்பி வந்தவர்கள், தாங்கள் கடல்களை இடைக்கச்சையாக அணிந்த முழு உலகத்தையும் தேடியும் தங்களால் விதேக இளவரசியையோ {சீதையையோ}, ராவணனையோ காண முடியவில்லை என்று சொன்னார்கள். இதனால் காகுஸ்தன் குல வழித்தோன்றல் {ராமன்} இதயம் தாக்கப்பட்டாலும், தெற்கே சென்ற பெரும் குரங்குகளின் மீது கொண்ட நம்பிக்கையால் (சீதையைக் குறித்த செய்திகளை அறிவோம் என்ற நம்பிக்கையால்) உயிரை விடாதிருந்தான்.
இரண்டு மாதங்கள் கழிந்ததும், சுக்ரீவனின் முன்னிலைக்கு விரைந்து வந்த பல குரங்குகள், “ஓ! மன்னா {சுக்ரீவா}, குரங்குகளில் முதன்மையானவர்களான பவனனின் மகனும், வாலியின் மகனான அங்கதனும், தென்திசைக்கு நீர் அனுப்பி வைத்த இன்னும் பிற பெரும் குரங்குகளும் திரும்பிவிட்டார்கள். அவர்கள், வாலியின் பாதுகாவலர்களாலும், உம்மாலும் எப்போதும் காக்கப்பட்டு, மதுவனம் என்ற பெயரால் அழைக்கப்படும் அற்புதமான பெரும் பழத்தோட்டத்தைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பணியாட்களே இதைப் போலச் செயல்பட முடியும் என்பதால், தங்கள் பங்குக்கு இவ்வளவு சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளும் அவர்களது செயல்பாட்டைக் கேட்ட சுக்ரீவன் அவர்களது பணி வெற்றியடைந்திருக்கிறது என்பதை அனுமானித்தான். குரங்குகளில் புத்திசாலியும் முதன்மையானவனுமான அவன் {சுக்ரீவன்}, தனது சந்தேகங்களை ராமனுக்குத் தெரிவித்தான். இதனால், மிதிலையின் இளவரசி {சீதை} காணப்பட்டாள் என்று ராமனும் ஊகித்தான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அனுமானின் நடைபாணியையும், அவனது முகத்தின் நிறத்தையும் கண்ட ராமன், ஹனுமான் உண்மையில் சீதையைக் கண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையில் உறுதி கொண்டான். பிறகு ஹனுமானின் தலைமையில் வெற்றி பெற்ற குரங்குகள் ராமனையும், லட்சுமணனையும், சுக்ரீவனையும் முறைப்படி வணங்கினார்கள். பிறகு தனது வில்லையும் அம்பறாத்தூணியையும் எடுத்துக் கொண்ட ராமன் அக்குரங்குகளிடம், “நீங்கள் வெற்றியடைந்தீர்களா? நீங்கள் என்னை உயிரடையச் செய்வீர்களா? போர்க்களத்தில் எனது எதிரியைக் கொன்று ஜனகனின் மகளை {சீதையை} மீட்டு, அயோத்தி திரும்பி நான் மீண்டும் ஆட்சி செய்யச் செய்வீர்களா? விதேக இளவரசியை {சீதையை} மீட்காமல், எதிரியைப் போர்க்களத்தில் கொல்லாமல், மனைவியையும் மதிப்பையும் இழந்து நான் உயிர்வாழத் துணிய மாட்டேன்” என்றான்.
ராமனால் இப்படிச் சொல்லப்பட்ட பவனனின் மகன் {ஹனுமான்}, அவனிடம் {ராமனிடம்}, “ஓ! ராமா, நான் உனக்கு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன்; கண்டேன் ஜனகனின் மகளை {கண்டேன் சீதையை}. மலைகள், காடுகள், சுரங்கங்கள் ஆகியவற்றைக் கொண்ட தென் பகுதியை சில காலம் தேடிக் களைப்படைந்தோம். பிறகு ஒரு பெரும் குகையைக் கண்டோம். அதைக் கண்டபிறகு, பல யோஜனைகள் நீண்டிருந்த அந்தக் குகைக்குள் நுழைந்தோம். அது இருளடைந்து, மரங்கள் அடர்ந்து, புழுக்களில் தொல்லை நிறைந்து இருந்தது. அந்தப் பெரும் வழியில் நீண்ட தூரம் சென்ற பிறகு, நாங்கள் சூரியனின் வெளிச்சத்தையும், அழகிய அரண்மனை ஒன்றையும் கண்டோம். ஓ! ராகவா {ராமா}, அது தைத்தியன் மயனுடைய வசிப்பிடமாகும். அங்கே தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் துறவியான பிரபாவதியைக் கண்டோம். அவள் எங்களுக்கு உணவும், பலவகைப்பட்ட பானங்களையும் கொடுத்தாள். இதனால் உற்சாகமடைந்து, எங்கள் பலத்தை மீண்டும் அடைந்து, அவள் காட்டிய வழியில் மேலும் தொடர்ந்து சென்றோம்.
கடைசியாக நாங்கள் அந்தக் குகையை விட்டு வெளிய வந்து, உப்புக் கடலையும், அதன் கரைகளில் இருந்த சஹ்யம், மலயம், பெரும் தர்துரம் என்ற மலைகளையும் கண்டோம். பிறகு மலய மலையில் ஏறி அகன்ற கடலைக் கண்டோம் [1]. அதைக் கண்ட நாங்கள் மனதால் மிகவும் துயரப்பட்டோம். மனச் சோர்வடைந்து, வலியால் தாக்கப்பட்டு, பசியும் பட்டினியுமாக, உயிருடன் திரும்புவதில் ஆசையற்றவர்களானோம். திமிங்கலங்கள், முதலைகள், பிற நீர்வாழ்விலங்குகள் நிறைந்து பல நூற்றுக்கணக்கான யோஜனைகள் பரந்திருக்கும் பெரும் கடலைக் கண்களால் கண்ட நாங்கள் வருத்தமடைந்து ஆர்வமற்றுப் போனோம். பிறகு நாங்கள் ஒன்றுகூடி அமர்ந்து, பட்டினி கிடந்துச் சாவது என்று தீர்மானித்தோம். அப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, நாங்கள் கழுகான ஜடாயு குறித்துப் பேச நேர்ந்தது. அப்போதுதான், பயங்கர உருவமும், காணும் அனைத்து இதயத்துக்குப் பயங்கரத்தை உணரச் செய்பவனும், வினதையின் இரண்டாவது மகனைப் போல [2] இருந்தவனும், மலை போலப் பெரிதாக இருந்தவனுமான ஒரு பறவையானவனை நாங்கள் கண்டோம்.
திகைப்பூட்டும் விதத்தில் எங்களை விழுங்க வந்த அவன், “என் தம்பி ஜடாயுவைக் குறித்து இப்படிப் பேசுபவர்களான நீங்கள் யார்? நான் அவனது அண்ணன், என் பெயர் சம்பாதி, நான் பறவைகளின் மன்னனாவேன். ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் விஞ்ச எண்ணிய நாங்கள் இருவரும் சூரியனை நோக்கி முன்னேறினோம். எனது சிறகுகள் எரிந்து போயின. ஆனால் ஜடாயுவுக்கு எரியவில்லை. என் ஆருயிர் தம்பியும், கழுகுகளின் மன்னனுமான ஜடாயுவை நான் கடைசியாகக் கண்டது அப்போதுதான். எனது சிறகுகள் எரிந்ததும், நான் இப்போது இருக்கும் இதே பெருமலையில்தான் விழுந்தேன்” என்றான் {சம்பாதி}. அவன் பேச்சை நிறுத்தியதும், நாங்கள் அவனது தம்பியின் இறப்பைக் குறித்துச் சில வார்த்தைகள் பேசிவிட்டு, உனக்கு நேர்ந்த பெரும் தீங்கையும் சொன்னோம். ஓ! மன்னா {ராமா}, இந்தத் துன்பகரமான செய்தியைக் கேட்ட பலமிக்கச் சம்பாதி பெரும் துன்பமடைந்து, எங்களிடம், “யாரிந்த ராமன்? சீதை ஏன் கடத்தப்பட்டாள்? ஜடாயு எப்படிக் கொல்லப்பட்டான்? குரங்குகளின் முதன்மையானவர்களே, நான் அனைத்தையும் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்று மீண்டும் விசாரித்தான்.
பிறகு நாங்கள் உனக்கு ஏற்பட்ட துயர் அனைத்தையும் சொல்லி, அதன் காரணமாக, பட்டினி கிடந்து சாகப் போகும் எங்கள் நோன்பு குறித்தும் சொன்னோம். பிறகு அந்தப் பறவைகளின் மன்னன் {சம்பாதி} (எங்கள் நோன்பைக் கைவிட வலியுறுத்தி), “உண்மையில், ராவணனை நான் அறிவேன். இலங்கையே அவனது தலைநகரம். திரிகூட மலைகளின் பள்ளத்தாக்கில், கடலின் மறுபுறத்தில் நான் அதைக் {இலங்கையைக்} கண்டிருக்கிறேன். சீதை அங்குத் தான் இருக்க வேண்டும். இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை” என்று சொன்னான். இந்த வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் விரைந்து எழுந்து, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ராமா}, கடலை கடப்பது எப்படி என்று ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்தோம்! யாரும் அதைக்கடக்கத் துணியவில்லை. என் தந்தையின் {வாயுத்தேவனின்} உதவியைப் பெற்ற நான், நூறு யோஜனைகள் அகன்ற அந்தப் பெரும் கடலைக் கடந்தேன். நீரில் இருந்த ராட்சசிகளைக் கொன்று, ராவணனின் அந்தப்புரத்தில், தவம் நோற்று, தன் தலைவனைக் காணும் அவலுடன், தலையில் ஜடை தரித்து, உடலில் புழுதி படிந்து, மெலிந்து போய், துன்பத்துடன் ஆதரவற்ற நிலையில் இருந்த கற்புடைய சீதையை நான் கண்டேன்.
வழக்கத்திற்கு மாறான அவளது குறிப்புகளைக் கண்டு, அவளே சீதையென உணர்ந்து, தனியாக இருந்த அந்த வழிபடத்தக்க மங்கையை அணுகி, “ஓ! சீதை, நான் ராமனின் தூதுவன்; பவனனால் பெறப்பட்ட குரங்கு [3]. உன்னைக் காண விரும்பியே, வானத்தில் பயணித்து இங்கே வந்திருக்கிறேன். (பவனன் என்றால் வாயுத்தேவன் )குரங்குகளின் ஏகாதிபதியான சுக்ரீவனால் பாதுகாக்கப்பட்ட அரசச் சகோதரர்களான ராமனும் லட்சுமணனும் அமைதியாக இருக்கிறார்கள். ஓ! மங்கையே, ராமனும், சுமித்திரையின் மகனும் {லட்சுமணனும்} உனது நன்னிலை குறித்து விசாரித்து அனுப்பினார்கள்! (ராமன் மற்றும் லட்சுமணனுடன் கொண்ட) நட்பின் காரணமாகச் சுக்ரீவனும் உனது நன்னிலை குறித்து விசாரித்து அனுப்பினான். அனைத்து குரங்குகளாலும் தொடரப்படும் உனது கணவன் விரைவில் இங்கு வருவான். ஓ! புகழத்தக்க மங்கையே, நான் ஒரு குரங்குதான்; ராட்சசனில்லை. என்னில் நம்பிக்கை கொள்” என்றேன்.
என்னால் இப்படிச் சொல்லப்பட்ட சீதை, ஒருக்கணம் தியானிப்பது போலத் தெரிந்தது, பிறகு, “அவிந்தியனின் வார்த்தைகளால் நீ ஹனுமான் என்பதை அறிந்தேன்! ஓ! பலமிக்கவனே, அவிந்தியன் முதிர்ந்த மதிக்கத்தக்க ராட்சசனாவார்! அவர், உன்னைப் போன்ற ஆலோசகர்களால் {அமைச்சர்களால்} சுக்ரீவன் சூழப்பட்டிருப்பதாகச் சொன்னார். நீ இப்போது செல்லலாம்” என்று சொல்லி இந்த மணியை ஒரு நற்சான்றாக அளித்தாள். உண்மையில், இந்த மணியின் காரணமாகவே களங்கமற்ற சீதை உயிர் தாங்க முடிந்திருக்கிறது. ஓ! மனிதர்களில் புலியே {ராமா}, மேலும் அந்த ஜனகனின் மகள் {சீதை}, அவளது அடையாளத்தைத் தெரிவிப்பதற்காக, சித்திரக்கூடம் என்ற பெயரால் அறியப்படும் பெரும் பலம் வாய்ந்த மலையின் மார்பில் நீ இருந்த போது (மந்திரங்கள் ஊட்டப்பட்டு, உயிர்க்கொல்லி ஆயுதமாக மாற்றப்பட்ட) ஒரு புல்லால் ஒரு காக்கையை அடித்ததாகச் சொன்னாள். நான் அவளைச் சந்தித்தற்கும், அவள்தான் உண்மையான விதேக இளவரசிதான் என்பதற்கும் சான்றாக இதைச் சொன்னாள். பிறகு ராவணன் படைவீரர்கள் பிடிக்குமாறு, நான் அவர்களுக்கு அகப்பட்டு, இலங்கை என்ற அந்த நகரத்திற்குத் தீ மூட்டினேன்” என்றான் {ஹனுமான்}.
இலங்கையை அடைந்தான் ராமன்! – வனபர்வம் பகுதி 281-குரங்குத் தலைவர்கள் ராமனையும், சுக்ரீவனையும் வந்து அடைவது; அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, ராமன் கடற்கரையை அடைவது; அங்கே ராமனும் லட்சுமணனும் தர்ப்பை புல் விரித்துப் படுப்பது; கனவில் வந்த பெருங்கடலரசன், குரங்குப் படையில் இருக்கும் நளனைக் கொண்டு பாலம் அமைக்கச் சொன்னது; தன்னைத் தஞ்சமடைந்த விபீஷணனுக்குப் பட்டம் சூட்டிய ராமன், இலங்கையை அடைந்தது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதே மலையின் {மால்யவாத மலையின்} மார்பில், குரங்குகளில் முதன்மையானவர்களுடன் ராமன் அமர்ந்திருந்த போது, சுக்ரீவனின் கட்டளையின் பேரில் குரங்குகளின் பெருந்தலைவர்கள் அங்கே ஒன்றுகூட ஆரம்பித்தனர். வாலியின் மாமனாரான சிறப்புமிக்கச் சுஷேணன், ஆயிரம் கோடி {1000,00,00,000} சுறுசுறுப்பான குரங்குகளுடன் ராமனிடம் வந்தான். குரங்குகளில் முதன்மையானவர்களான கயன் மற்றும் கவ்யன் [1] ஆகிய பலமிக்க சக்தி கொண்ட இருவரும், ஆளுக்கு நூறு கோடி {2 X 100,00,00,000} குரங்குகளுடன் அங்கே காட்சியளித்தனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கடுமை நிறைந்த முகமும், மாடு போன்ற வாலும் கொண்ட கவக்ஷயன், அறுபதாயிரம் கோடி {60000,00,00,000} குரங்குகளைச் சேகரித்து அங்கே தோன்றினான். கந்தமாதன மலையில் வசிக்கும் புகழ்பெற்ற கந்தமாதனன் {என்ற குரங்கு}, நூறாயிரம் கோடி {100,000,00,00,000} குரங்குகளைச் சேகரித்தான். பனசன் என்ற பெயரில் அறியப்பட்ட புத்திசாலியும் பலசாலியுமான குரங்கானவன் ஐம்பத்திரண்டு கோடி {52,00,00,000} குரங்குகளைத் திரட்டினான் [2]. குரங்குகளில் சிறப்புமிக்க, முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான ததிமுகன் என்பவன், பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பெரிய குரங்குகள் படையைத் திரட்டினான். பயங்கரச் செயல் புரிபவையும், முகத்தில் திலகக் குறி கொண்டவையுமான [3] நூறாயிரம் {100,000} கருங்கரடிகளுடன் ஜாம்பவான் தோன்றினான்.
இவர்களும், இன்னும் பிற குரங்குத் தலைவர்களுக்குத் தலைவர்களும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ராமனின் காரியத்தில் உதவுவதற்காக எண்ணிலடங்காதபடி அங்கே வந்தனர். மலைச்சிகரங்களைப் போன்ற பெரிய உடல் படைத்த அவை, சிம்மங்களைப் போன்று கர்ஜித்தன. அந்த உரத்த கர்ஜனையைக் கேட்ட குரங்குகள், ஓய்வில்லாமல் இடத்திற்கு இடம் மாறி ஓடிக் கொண்டிருந்தன. அவற்றில் சில {குரங்குகள்} பார்ப்பதற்கு மலைச்சிகரங்களைப் போல இருந்தன. சில எருமைகளைப் போல இருந்தன. சில இலையுதிர்கால மேகங்களின் நிறம் கொண்டிருந்தன. சில குங்குமத்தைப் போன்ற {ஜாதிலிங்கம் போல} சிவந்த நிறத்தில் இருந்தன. சில உயர எழுந்தன, சில கீழே விழுந்தன, சில மொட்டுகளை வெட்டிக் கொண்டும், சில புழுதியைக் கிளப்பிக் கொண்டும், பல திசைகளில் இருந்து வந்து ஒன்றுதிரண்டிருந்தன.
அலைகள் நிறைந்த கடலைப் போல, அகன்ற அந்தக் குரங்குப்படை, சுக்ரீவனின் உத்தரவின் பேரில் அங்கே இருப்பிடத்தை அமைத்துக் கொண்டது. அனைத்துத் திசைகளில் இருந்தும் அந்தக் குரங்குகளில் முதன்மையானவர்கள் திரண்ட பிறகு, சுக்ரீவனை அருகில் கொண்ட ரகுவின் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, அதிர்ஷ்டமான நட்சத்திர சேர்க்கை கொண்ட ஒரு மிக அற்புதமான நாளில், மங்களகரமான தருணத்தில் அணிவகுக்கப்பட்ட அந்தப் படையைக் கொண்டு, அனைத்து உலகங்களையும் அழிக்கும் காரியத்திற்குப் புறப்பட்டதுபோலப் போர்க்களத்திற்குக் கிளம்பிச் சென்றான். வாயுத்தேவனின் மகனான ஹனுமான், அந்தப் படையின் முன்னணியில் இருந்தான். அதே நேரம் படையின் பின்புறம் அச்சமற்ற சுமித்திரையின் மகனால் {லட்சுமணனால்} பாதுகாக்கப்பட்டது. கைவிரல்களுக்கு உடும்புத் தோலாலான கையுறைகளைத் தரித்தக் கொண்டு, குரங்குத் தலைவர்கள் சூழ சென்ற அந்த ரகுவீட்டு இளவரசர்கள் {ராமனும், லட்சுமணனும்}, கோள்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனும், சந்திரனும் போல ஒளிர்ந்தார்கள்.
கற்கள், ஆச்சா {சால} மரங்கள் மற்றும் பனை {தால} மரங்களை ஆயுதமாகக் கொண்ட அந்தக் குரங்குப் படை, காலை சூரியனுக்குக் கீழே இருக்கும் மிக நீண்ட சோள {செந்நெல் – வேறு பதிப்பு} வயல் போல இருந்தது. நளன், நீலன், அங்கதன், கிராதன், மைந்தன், துவிவிதன் ஆகியோரால் பாதுகாகப்பட்ட அந்தப் பலம்பொருந்திய படை, ராகவனின் காரியத்தை நிறைவேற்றுவதற்காக அணிவகுத்துச் சென்றது. பழங்கள், கிழங்குகள், நீர், தேன், இறைச்சி ஆகியவை நிறைந்த, பரந்த மற்றும் ஆரோக்கியமான நிலப்பரப்புகளிலும், பள்ளத்தாக்குகளிலும், எவ்வகையான இடையூறுகளும் இன்றித் தங்கிச் சென்ற அந்தக் குரங்குகள் படை, கடைசியாக உப்புக்கடலின் கரையை அடைந்து, அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்தது.
பிறகு தசரதனின் சிறப்புவாய்ந்த மகன் {ராமன்}, அனைத்து குரங்குகளிலும் முதன்மையான சுக்ரீவனிடம் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசினான். அவன் {ராமன்}, “இந்தப் படை மிகவும் பெரிதாக இருக்கிறது. கடலும் கடப்பதற்குக் கடினமானது. எனவே, கடல் கடந்து செல்வதற்குப் பாராட்டுக்குரிய என்ன திட்டம் உன்னிடம் இருக்கிறது?” என்று கேட்டான். இந்த வார்த்தைகளுக்கு, வெட்டிப் பெருமை பேசும் {பகட்டான} குரங்குகள், “நாங்கள் கடலைக் கடப்பதற்கு முழுமையான திறன் பெற்றிருக்கிறோம்” என்றன. எனினும், அனைவராலும் அதைச் செய்ய முடியாதாகையால், இப்பதில், அதிகப் பலனைக் கொடுக்க முடியவில்லை. சில குரங்குகள் கடலைப் படகுகளில் கடக்கலாம் என்றும், சில குரங்குகள் பலவிதமான தெப்பங்களிலும் கடக்கலாம் என்றும் முன்மொழிந்தன.
இருப்பினும் அவர்கள் அனைவரையும் இணக்கப்படுத்திய ராமன், “இது முடியாது. இங்கே இருக்கும் கடல் நூறு யோஜனைகள் அகன்றிருக்கிறது. வீரர்களே, அனைத்துக் குரங்குகளும் இதைக் கடக்க இயலாது. எனவே, நீங்கள் செய்திருக்கும் இந்த முன்மொழிவுகள் அறிவுக்கு ஒத்திசைபவையாக இல்லை. மேலும் நமது துருப்புகள் அனைத்தையும் சுமந்து செல்லத் தேவையான எண்ணிக்கையில் படகுகள் நம்மிடம் இல்லை. மேலும், நம்மைப் போன்ற ஒருவன், வணிகர்களின் பாதையில் எப்படி இத்தகு தடைகளை எழுப்புவான்? நமது படை மிகவும் பெரியது. ஒரு துளை {ஓட்டை} கண்டுபிடிக்கப்பட்டாலும், எதிரி, பெரும் அழிவைச் ஏற்படுத்துவான். எனவே, படகுகளிலும், தெப்பங்களிலும் கடலைக் கடப்பது என்பது எனக்கு ஏற்புடையதல்ல. இருப்பினும், தேவையான வழிகளுக்காகப் பெருங்கடலை நான் வேண்டிக் கொள்வேன். உணவைக் கைவிட்டு, நான் இந்தக் கரையில் படுத்துக் கொள்வேன். நிச்சயம் அவன் {பெருங்கடலரசன் = சமுத்திர ராஜன்} எனக்குக் காட்சிக் கொடுப்பான். அவன் எனக்குக் காட்சிக் கொடுக்கவில்லை என்றால், நெருப்பைப் போன்று பிரகாசிக்கும் கலங்கடிக்கப்படாத எனது பெரும் ஆயுதங்களைக் கொண்டு நான் அவனைத் தண்டிப்பேன்!” என்றான்.
இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு ராமனும், லட்சுமணனும் நீரைத் தொட்டு [4], அந்தக் கடற்கரையில் தர்ப்பைப் படுக்கையில் தங்களைக் கிடத்திக் கொண்டனர். ஆண் நதிகளுக்கும், பெண் நதிகளுக்கும் {நதங்கள் மற்றும் நதிகள் என்கிறார்கள்} தலைவனாக இருந்த அந்தத் தெய்வீகமான, சிறப்புமிக்கப் பெருங்கடலரசன் {சமுத்திர ராஜன்}, நீர்வாழ் விலங்குகள் சூழ, ராமனின் பார்வைக்குக் காட்சி கொடுத்தான். அந்தப் பெருங்கடலின் அதிமேதாவி {சமுத்திர ராஜன்}, எண்ணிலடங்கா ரத்தினச் சுரங்கங்கள் சூழ ராமனிடம் வந்து இனிய உச்சரிப்புகளுடன், “ஓ! கௌசல்யை மகனே {ராமா}, என்னிடம் என்ன உதவி வேண்டும்! ஓ மனிதர்களில் காளையே, நான் உனக்கு அதைச் செய்வேன்! நானும் இக்ஷவாகு குலத்தில் உதித்தவன்தான் [5], எனவே நான் உனது உறவினனும் ஆவேன்” என்றான். அதற்கு ராமன், “ஓ!ஆண் நதிகளுக்கும் பெண் நதிகளுக்கும் {நதங்களுக்கும் நதிகளுக்கும்} தலைவா {பெருங்கடலரசனே}, புலஸ்திய குலத்தில் இழிந்த பாவியான பத்துத் தலையனைக் {ராவணனைக்} கொல்வதற்கு எனது துருப்புகள் செல்ல, எனக்கு வழி கொடுக்க வேண்டும் என நான் உன்னிடம் விரும்பிக் கேட்கிறேன்! நான் உன்னிடம் இரந்து கேட்கும் வழியை நீ கொடுக்கவில்லையென்றால், பிறகு நான் மந்திரங்களால் உந்தப்பட்ட எனது தெய்வீகக் கணைகளைக் கொண்டு உன்னை வற்ற செய்வேன்!” என்றான்.(இக்ஷவாகு குலத்தைச் சார்ந்த, மன்னன் சகரனின் மகன்கள், கடலைத் தோண்டினர் என்பது மரபு. எனவேதான் பெருங்கடல் சாகரம் என்று அழைக்கப்படுகிறது)
ராமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வருணனின் வசிப்பிடத்தில் இருக்கும் அதிமேதாவி {பெருங்கடலரசன்}, கரங்கள் கூப்பி, பெருந்துன்பத்துடன், “நான் உன் வழியில் எந்தத் தடையையும் இட விரும்பவில்லை. நான் உனது பகைவன் இல்லை! ஓ! ராமா, இந்த வார்த்தைகளைக் கேள். அதைக் கேட்டு எது சரியோ அதைச் செய்! உனது உத்தரவின் பேரில் நான் உனது இந்தப் படைக்கு வழியைக் கொடுத்தேனென்றால், பிறகு மற்றவர்களும், தங்கள் விற்களின் பலத்தால் இவ்வாறு கட்டளையிடுவர்! உனது படையில் நளன் என்ற ஒரு குரங்கானவன் இருக்கிறான். அவன் ஒரு தொழில்நுட்ப வல்லுனனாவான். பெரும் பலம் கொண்ட நளன், அண்டத்தின் தெய்வீக கைவினைஞனான தஷ்த்ரியின் {விஸ்வகர்மாவின்} மகனாவான். அவன் {நளன்}, என் நீருக்குள் எறிவது, கட்டையாகவோ, புல்லாகவோ, கல்லாகவோ இருப்பினும் நான் அவற்றை என் பரப்பின் மேல் தாங்குவேன். இப்படி (நீ கடந்து செல்வதற்கு) உனக்கு ஒரு பாலம் கிடைக்கும்!” என்றான்.
இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பெருங்கடல்மேதாவி {பெருங்கடலரசன்} அங்கேயே மறைந்து போனான். விழித்தெழுந்த ராமன், நளனை அழைத்து அவனிடம், “கடலின் மீது நீ ஒரு பாலத்தைக் கட்டுவாயாக! நீ மட்டுமே இதைச் செய்ய முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்!” என்றான். இப்படியே காகுஸ்த குலத்தின் வழித்தோன்றல் {ராமன்}, பத்து யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும் கொண்ட பாலத்தைக் கட்டச் செய்தான். இந்நாள் வரை அந்தப் பாலம் நளனின் பாலம் என்று அனைத்து உலகத்தாலும் கொண்டாடப்படுகிறது. பாலத்தை முடித்த மலை போன்ற பெரும் உடல் கொண்ட நளன் ராமனின் உத்தரவில் பேரில் அதை விட்டு வந்தான்.
ராமன், பெருங்கடலின் இக்கரையில் இருந்தபோது, ராட்சச மன்னனின் {ராவணனின்} தம்பியான அறம்சார்ந்த விபீஷணன், தன்னுடைய நான்கு ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} ராமனிடம் வந்தான். உயர் ஆன்ம {மகாத்மாவான} ராமனும் அவனை முறைப்படி நல்வரவு கூறினான். இருப்பினும், அவன் {விபீஷணன்} ஒற்றனாக இருக்கக்கூடும் என்று சுக்ரீவன் அஞ்சினான். அதே வேளையில் (விபீஷணனிடம்) பெரிதும் மன நிறைவு கொண்ட ராமன், அவனது செயல்களில் இருந்த நேர்மையையும், நன்னடத்தையின் பல குறிகளையும் அவனிடம் கண்டு, மரியாதையுடன் அவனை {விபீஷணனை} வழிபட்டான். பிறகு அவன் {ராமன்}, விபீஷணனை அனைத்து ராட்சசர்களுக்கு ஆட்சியாளனாக நிறுவி, அவனைத் {விபீஷணனைத்} தனக்கு இளநிலை ஆலோசகனாகவும் {இளநிலை அமைச்சனாகவும் = Junior Counsellor}, லட்சுமணனுக்கு நண்பனாகவும் செய்தான்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பெருங்கடலின் மேல் இருந்த பாலத்தின் வழியாக ராமன் தன் அனைத்துத் துருப்புகளுடன் விபீஷணனின் வழிகாட்டுதலின் படியே, ஒரு மாத காலத்தில் கடந்தான். பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைந்த ராமன், அதன் {இலங்கையின்} எண்ணிலடங்கா விரிவான தோட்டங்களைத் தனது குரங்குகளைக் கொண்டு பேரழிவுக்குள்ளாக்கினான். ராமனின் துருப்புகள் அங்கே இருந்த போது, ராவணனின் அமைச்சர்களும் அதிகாரிகாளுமான சுகன், சாரணன் என்ற இருவர், குரங்குகள் உருவம் கொண்டு ஒற்றர்களாக வந்த போது விபீஷணனால் பிடிக்கப்பட்டனர். அந்த இரவு உலாவிகள் தங்கள் உண்மை உருவான ராட்சச உருவை அடைந்த போது, ராமன் அவர்களுக்குத் தனது துருப்பைக் காண்பித்து, அவர்களை அமைதியாக அனுப்பிவைத்தான். அந்நகரத்தைச் {இலங்கையைச்} சூழ்ந்திருந்த வனத்தில் தனது துருப்புகளைத் தங்க வைத்த ராமன், பெரும் ஞானம் கொண்ட குரங்கான அங்கதனைத் தனது தூதனாக ராவணனிடம் அனுப்பி வைத்தான்.
இலங்கையில் அனைத்தும் இலக்கானது! – வனபர்வம் பகுதி 282-ராமனுடைய சொல்லை அங்கதன் ராவணனிடம் சொன்னது; ராமனின் கட்டளையின் பேரில் குரங்குகள் இலங்கையைச் சூறையாடி ராட்சசர்களோடு போர் புரிந்தது; நகரத்தில் இருந்த அனைத்தும் தங்கள் படைக்கு இலக்காகத் தெரியும்படி செய்த பிறகு ராமன் குரங்குகளைப் பின்வாங்கும்படி சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பழங்கள், கிழங்குகள் என உணவும், நீரும் நிறைந்திருந்த அந்தத் தோப்புகளில் தனது படையை நிறுத்திய பிறகு, காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்} அவர்களைக் கவனத்துடன் பார்த்துக் கொள்ளத் தொடங்கினான். மறுபுறம் ராவணன், இராணுவ அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு தனது நகரத்தில் பல கருவிகளைப் பொருத்தினான். அவனது நகரம் {இலங்கை}, பலம் வாய்ந்த மதில்களாலும், வாயில்களாலும் இயற்கையாகவே தாக்குதல்களுக்கு அசைந்து கொடுக்காததாக இருந்தது. ஆழமான, விளிம்பு நிறைந்த நீர் கொண்ட ஏழு அகழிகளில் மீன்களும், சுறாக்களும், முதலைகளும் குவிந்திருந்தாலும் கூரிய கருங்காலி முளைகளை {Stakes of Khadira woods} {அவ்வகழிகளில்} நிறைத்து மேலும் {தன் நகரத்தை} அசைந்து கொடுக்காததாக்கினான் {ராவணன்}. கற்கள் குவிக்கப்பட்டிருந்த மதில்களில் கவண் பொருத்தி {அம்மதில்களை} மேலும் அசைந்து கொடுக்காததாக்கினான். (சுவர்களைக் காத்த) போர்வீரர்கள் நஞ்சுகொண்ட பாம்புகள் நிறைந்த மண்குடங்களையும், பலவகையான விஷப்பொடிகளையும் வைத்திருந்தனர். அவர்கள் தண்டம், எரிகொள்ளி, கணைகள், சூலங்கள், வாள்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றையும் ஏந்தியிருந்தனர். மேலும் அவர்கள் சதாக்னிகளையும் [1], மெழுகில் ஊறிய தடித்த கதாயுதங்களையும் [2] வைத்திருந்தனர்.
நகரத்தின் {இலங்கையின்} அனைத்து வாயில்களிலும், எண்ணற்ற யானைகளாலும், குதிரைகளாலும் தாங்கப்படும் பெரும் எண்ணிக்கையிலான காலாட்படையைக் கொண்ட, அசையும் மற்றும் அசையாத முகாம்கள் {ஸ்தாவர குல்மங்களும் ஜங்கமகுல்மங்களும்[3]} அமைக்கப்பட்டன. நகரத்தின் வாயில்களை அடைந்த அங்கதன் தன்னை ராட்சசர்கள் அறியச் செய்தான். சந்தேகமோ, அச்சமோ இல்லாமல் அவன் அந்நகரத்திற்குள் நுழைந்தான். கணக்கற்ற ராட்சசர்கள் சூழ சென்ற அந்த வீரன் {அங்கதன்} மேகங்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போல அழகாகத் தெரிந்தான். தனது ஆலோசகர்களுக்கு மத்தியில் இருந்த புலஸ்திய குல வீரனை {ராவணனை} அணுகிய நாவன்மை மிக்க அங்கதன் அம்மன்னனை வணங்கி, ராமனின் செய்தியை வழங்கத் தொடங்கினான். அவன் {அங்கதன்}, “ஓ! மன்னா {ராவணா}, கோசலத்தை ஆள்பவனும், முழு உலகம் பரந்த புகழைக் கொண்டவனுமான ரகுவின் வழித்தோன்றல் {ராமன்}, இச்சூழலுக்குத் தகுந்த வார்த்தைகளைச் சொல்லி அனுப்பினான். அந்தச் செய்தியை ஏற்று, அதன்படி செயல்படு. {அது இதுதான்}, “தங்கள் ஆன்மாக்களைக் கட்டப்படுத்த திறனற்ற பாவி மன்னர்களின் தொடர்பின் விளைவால் மாநிலங்களும் {நாடுகளும்}, நகரங்களும் மாசடைந்து அழிவைச் சந்திக்கின்றன. சீதையைப் பலவந்தமாக அபகரித்ததால் நீ மட்டுமே என்னைக் காயப்படுத்தினாய்! எனினும், பல குற்றமற்ற மனிதர்களின் மரணத்திற்கு நீ காரணமாகிறாய். அதிகாரத்தாலும், கர்வத்தாலும், முன்பு நீ, காட்டில் வாழும் பல முனிவர்களைக் கொன்றாய்; தேவர்களையும் அவமதித்தாய். நீ பெரும் மன்னர்கள் பலரையும், அழுது கொண்டிருந்த பல பெண்களையும் கொன்றாய். அந்த உனது வரம்புமீறல்களுக்கான தண்டனை உன்னை மூழ்கடிக்கப்போகிறது! நான் உன்னை உனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} சேர்த்துக் கொல்வேன். போரிட்டு உனது வீரத்தைக் காட்டு [4]. ஓ இரவு உலாவியே, நான் அற்ப மனிதனாக இருப்பினும் எனது வில்லின் சக்தியைப் பார்! ஜனகனின் மகளான சீதையை விடுவி! நீ அவளை விடுவிக்கவில்லையெனில், நான் எனது கூரிய கணைகளால் இந்தப் பூமியை ராட்சசர்களற்றதாகச் செய்வேன்!” {என்று ராமன் சொன்னான்}” என்றான் {அங்கதன்}.
எதிரியின் இந்த இணக்கமற்ற வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ராவணன், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபத்தால் உணர்வற்றவனான். தங்கள் ஆசானின் அனைத்து குறிப்புகளையும் படிப்பதில் நிபுணர்களான நான்கு ராட்சசர்கள், நான்கு பருந்துகள் புலியைப் பிடிப்பது போலப் அங்கதனைப் பிடித்தனர். எனினும் தன்னை உறுதியாகப் பிடித்திருந்த அந்த ராட்சசர்களுடன் மேலே குதித்து அரண்மனையின் மொட்டைமாடியில் இறங்கினான். அப்படி அவன் பெரும் சக்தியுடன் குதித்த போது, அந்த இரவு உலாவிகள் {ராட்சசர்கள்} பூமியில் விழுந்து, அப்படிக் கடுமையாக விழுந்ததால் காயம்பட்டு, தங்கள் விலாக்களை {விலா எலும்புப் பகுதிகளை} உடைத்துக் கொண்டனர். பிறகு அவன் ஏறிய அந்தத் தங்க உப்பரிகையில் இருந்து கீழே குதித்தான். இலங்கையின் சுவர்களைத் தாண்டி குதித்து, தனது தோழர்கள் இருந்த இடத்தில் {சுவேல மலைக்கு அருகில்} இறங்கினான். பிறகு கோசலத் தலைவனின் {ராமனின்} முன்னிலையை அடைந்து, அவனிடம் அனைத்தையும் சொன்ன பெரும் சக்தியுடைய குரங்கான அங்கதன், உரிய மரியாதையுடன் ராமன் விடை கொடுத்ததும், ஓய்வெடுத்துப் புத்துணர்ச்சி பெறச் சென்றான்.
பிறகு, ரகுவின் வழித்தோன்றல் {ராமன்}, காற்றின் வேகம் கொண்ட அந்தக் குரங்குகளை ஒருங்கிணைந்து தாக்குதல் மூலம் இலங்கையின் மதில்களை உடைக்கச் செய்தான். பிறகு விபீஷணனுடனும், கரடிகளின் மன்னனுடனும் {ஜாம்பவானுடனும்} கூடிய லட்சுமணன், படையின் முன்னணியில் இருந்து, தாக்குதலுக்கு அசைந்து கொடுக்காத அந்நகரத்தின் தென்வாயிலைத் தகர்த்தெறிந்தான். பிறகு ராமன், போர்க்களத்தில் பெரும் நிபுணத்துவம் கொண்டவையும், இளம் ஒட்டகங்களைப் {கரபம் = இளம் ஒட்டகம்} போன்ற சிவந்த நிறம் கொண்டவையுமான நூறாயிரம் கோடி {100000,00,00,000} குரங்குகளுடன் இலங்கையைத் தாக்கினான். பொதுவாகத் தங்கள் அகன்ற இடுப்பின் மூலமே தங்களைத் தாங்கிக் கொண்டு, நீண்ட கரங்களும், கால்களும், பெரும் பாதங்களும் கொண்ட கோடிக்கணக்கான {3 கோடி என்கிறது கும்பகோணம் பதிப்பு} சாம்பல் நிற கரடிகள், அத்தாக்குதலுக்கு உதவியாக இருந்தன. அந்தக் குரங்குகள் மேலும் கீழுமாகவும், குறுக்கும் நெடுக்குமாகவும் குதித்தன் விளைவாக எழுந்த தூசியால், சூரியனின் பிரகாசமான வட்டு முழுவதும் நிழலால் கவ்வப்பட்டு மறைந்து போனது
நெற்கதிர்கள் போன்ற மஞ்சள் நிறத்திலும், வாகைப்பூக்களைப் {Shirisha flowers = சீரிதம்} போன்ற சாம்பல் நிறத்திலும், உதயசூரியனைப் போன்ற செந்நிறத்திலும், சணலைப் போல வெள்ளை நிறத்திலும் இருந்த குரங்குகளால் மூடப்பட்ட தங்கள் நகரத்தின் சுவர்கள் பழுப்பு நிறத்தை அடைந்திருப்பதை இலங்கையின் குடிமக்கள் கண்டனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் மனைவியரோடும் மூத்தவர்களோடும் இருந்த ராட்சசர்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்தனர். பிறகு அந்தக் குரங்குப் போர்வீரர்கள், விலையுயர்ந்த கற்களாலும் செய்யப்பட்ட தூண்களையும், உப்பரிகைகளையும், அரண்மனைகளின் உச்சிகளையும் இழுத்துப் போட தொடங்கினர். கவண்கள் மற்றும் பிற இயந்திரங்களின் விசைகளையும் சுக்குநூறாக உடைத்த அவர்கள், அவற்றை அனைத்துப் புறங்களிலும் தூக்கி வீசினர். வட்டுகள், தண்டங்கள், கற்களோடு கூடிய சதாக்னிகளைப் பெருத்த ஒலியுடனும், பெரும் சக்தியுடனும் கீழே இருந்த நகரத்தில் தூக்கி எறிந்தனர். அவற்றைப் பாதுகாப்பதற்காகச் சுவர்களில் இருந்த ராட்சசர்கள், அந்தக் குரங்குகளால் தாக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் சடுதியில் தப்பி ஓடினர்.
பிறகு கடும் முகத்தோற்றமும், நினைத்த உருவை அடைய வல்லவர்களுமான நூறாயிரம் ராட்சசர்கள் மன்னனின் {ராவணனின்} உத்தரவின் பேரில் வெளியே வந்தனர். சரியான கணை மழையைப் பொழிந்து, காட்டுவாசிகளை {குரங்குகளை} ஓட்டிய அந்தப் போர்வீரர்கள், தங்கள் பெரும் பராக்கிரமத்தைக் காட்டியபடி, மதில்களை அலங்கரித்தனர். விரைவில், சதைப் பிண்டமாக இருக்கும் அந்தக் கடும் முகம் படைத்த இரவு உலாவிகள் {ராட்சசர்கள்}, அக்குரங்குகளைச் சுவர்களில் இருந்து பலவந்தமாக விரட்டினர். எதிரிகளின் சூலங்களால் சிதைக்கப்பட்ட எண்ணற்ற குரங்குத் தலைவர்கள் மதில்களில் இருந்து கீழே விழுந்தனர். அப்படி அவர்கள் விழுவதால் நடுக்கப்பட்ட தூண்களும், வாயில்களும், எண்ணற்ற ராட்சசர்களும் கூட மீண்டும் எழாத படிக்கு கீழே விழுந்தனர்.
அந்தக் குரங்குகளும், எதிரியைத் தின்ன வந்த வீரமிக்க ராட்சசர்களும் தலைமுடிகளைப் பற்றி ஒருவரை ஒருவர் சிதைத்து, ஒருவரை ஒருவர் தங்கள் நகங்களாலும் பற்களாலும் கிழித்தெறிந்தனர். அந்தக் குரங்குகளும் ராட்சசர்கள் பயங்கரமாகக் கதறவும், கர்ஜிக்கவும் செய்தனர். இருதரப்பிலும் பலர் மீண்டும் எழாதபடிக்கு கீழே விழுந்து கொல்லப்பட்டாலும், எந்தத் தரப்பும் போட்டியைக் கைவிடவில்லை. அதே வேளையில் ராமன், மேகங்களைப் போல, தனது கணைகளை மழையாகப் பொழிந்து கொண்டிருந்தான். இலங்கையை மூழ்கடிக்கும்படி அவன் அடித்த கணைகள் ராட்சசர்களைப் பெரும் எண்ணிக்கையில் கொன்றன. போர்க்களத்தில் களைப்படையாத பலம் மிக்க வில்லாளியான சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, மதில்களில் நின்று கொண்டிருந்த குறிப்பிட்ட ராட்சசர்களைப் பெயர் சொல்லி அழைத்து, தன் துணிக்கோல் கணைகளைக் {clothyard shafts} கொண்டு அவர்களைக் கொன்றான். இலங்கையின் கோட்டைகளை உடைத்து, அந்த நகரத்திற்குள் இருக்கும் அனைத்துப் பொருட்களும் முற்றுகையிட்டிருந்த படைக்கு இலக்காகத் தெரியும்படி செய்த பிறகு, வெற்றி அடைந்த அந்தக் குரங்குக் கூட்டம் ராமனின் கட்டளையின் பேரில் பின்வாங்கியது.
ராமனுடன் மோதிய ராவணன்! – வனபர்வம் பகுதி 283-வானரப் படைக்குள் கண்களுக்குப் புலப்படாதபடி ராட்சசர்கள் ஊடுருவுதல்; அதைக் கண்டறிந்த விபீஷணன் அவர்களது மாய சக்தியை விலக்குதல்; ஊடுருவிய ராட்சசர்கள் கொல்லப்படுதல்; ராவணன் ராமனோடும், இந்திரஜித் லட்சுமணனோடும் மோதியது; கடுமையும் பயங்கரமும் கொண்ட போர் நடந்தது.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அந்தப் படைகள் (இவ்வாறு திரும்பி) தங்கள் இடங்களுக்குச் சென்று இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, ராவணனைத் தலைவனாகக் கொண்ட அற்ப ராட்சசர்களும் பிசாசங்களும், அவர்களுக்கு மத்தியில் ஊடுருவினர். அவர்களில் பர்வணன், பதனன், ஜம்பன், கரன், குரோதவாசன், ஹரி, பிரருஜன், அருஜன், பிரகாசன் ஆகியோரும் பிறரும் இருந்தனர். கண்ணுக்குப் புலப்படாத இந்தத் தீயவர்கள் (குரங்குப் படைக்குள்) ஊடுருவிய போது, இதைக் குறித்து அறிந்த விபிஷணன், அவர்களது {கண்ணுக்குப் புலப்படாமல்} மறைந்திருக்கும் சக்தியை உடைத்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பலமிக்கவர்களும், நீண்ட தூரம் தாவுபவர்களுமான அக்குரங்குகளுக்கு {அக்குரங்குகளின் கண்களுக்கு} அவர்கள் காணப்பட்டதும், அவர்கள் {ராட்சசர்கள்} கொல்லப்பட்டு, உயிரற்றவர்களாய் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தப்பட்டார்கள்.
இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ராவணன், அணிவகுத்திருந்த தனது துருப்புகளுக்குத் தலைமையேற்று புறப்பட்டான். இரண்டாவது உசானசைப் {சுக்கிராச்சாரியார்} போலப் போர் விதிகளை நன்கறிந்த ராவணன், ராட்சசர்களும் பிசாசங்களும் கொண்ட தனது பயங்கரப்படையால் சூழப்பட்டு, உசானசின் {சுக்கிரனின்} பெயராலேயே அழைக்கப்படும் வரிசையால் அணிவகுக்கப்பட்ட தனது படைகளை வெளியே அனுப்பினான். பிருஹஸ்பதியால் பரிந்துரைக்கப்பட்ட முறையைப் பின்பற்றிய ராமன், அந்த இரவு உலாவியை எதிர்த்து அணிவகுத்து, எதிர் வரிசையில் தனது படைகளை வெளியே அனுப்பினான். விரைவாக முன்னேறி வந்த ராவணன், ராமனுடன் போரிடத் தொடங்கினான். லட்சுமணன் இந்திரஜித்துடன் தனித்தும், சுக்ரீவன் விரூபாக்ஷனுடன் தனித்தும், நிகாவடன் தாரனோடும், நளன் துந்தனோடும் {பௌண்டரனோடும்}, படுசன் பனசனோடும் போரிட்டனர். தனக்கு ஒப்பானவன் என்று தான் கருதும் ஒருவனிடம் முன்னேறிய ஒவ்வொரு போர்வீரனும், தன் கரத்தின் பலத்தை நம்பி, போர்க்களத்தில் அவனோடு {தான் தேர்ந்தெடுத்த எதிரியோடு} போரிடத் தொடங்கினான். அச்சமுள்ளவர்களுக்கு அச்சமூட்டிய அது {மோதல்}, விரைவில் பயங்கரமானதாகவும், கடுமையானதாகவும், பழங்காலத்தில் நடைபெற்ற தேவாசுரப் போர் போலவும் மாறியது.
கணைகள், சூலங்கள், வாட்கள் ஆகியவற்றை மழையாகப் பொழிந்த ராவணன் ராமனை மறைத்தான். ராமனும், கூரிய முனை கொண்ட தனது இரும்புக் கணைகளால் ராவணனைத் துன்புறுத்தினான். அதே போல லட்சுமணனும் பெரும்பான்மையான உயிர்ப்பகுதிகளைத் துளைக்கும் வல்லமை கொண்ட தனது கணைகளால், தன்னுடன் மோதிய இந்திரஜித்தை அடித்தான். இந்திரஜித்தும் தனது கணை மழையால் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} அடித்தான். விபீஷணன் பிரஹஸ்தன் மீதும், பிரஹஸ்தன் விபீஷணன் மீதும், கூர் முனையும் இறகும் படைத்த தங்கள் கணைகளை அடர்த்தியாகப் பொழிந்தனர். இப்படியே அந்தப் பெரும் பலம் கொண்ட போர்வீர்ர்களுக்கு இடையில் பெரும் சக்தி கொண்ட தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட மோதல் உருவானது. இதனால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூன்று உலகங்களும் கடுந்துன்பத்தால் பாதிக்கப்பட்டன.
துயில்நீத்தான் கும்பகர்ணன்! – வனபர்வம் பகுதி 284-விபீஷணன் பிரஹஸ்தனைக் கொன்றது; ஹனுமான் தூம்ராக்ஷனைக் கொன்றது; வீரத்துடன் போராடிய குரங்குகள் ராட்சசர்களை இலங்கை நகரத்திற்குள் விரட்டியது; ராவணன் கும்பகர்ணனை எழுப்பியது; .
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “திடீரென விபீஷணனை நோக்கி முன்னேறி உரத்துக் கூவிய பிரஹஸ்தன், அவனைத் {விபீஷணனைத்} தனது கதாயுதத்தால் அடித்தான். பயங்கர சக்தியுடன் கதாயுதத்தால் அடிக்கப்பட்டாலும், வலிய கரமும், பெரும் ஞானமும் கொண்ட விபீஷணன், சற்றும் தடுமாறாமல் இமயத்தின் மலைகளைப் போல் அசையாமல் நின்றான். பிறகு விபீஷணன், நூறு மணிகளைக் கொண்டிருந்ததும், பெரியதும், பலம் வாய்ந்ததுமான ஒரு ஈட்டியை எடுத்து, மந்திரங்களால் அதற்கு ஊக்கமளித்து, தன் எதிரியின் { தலையை நோக்கி வீசினான். வஜ்ராயுதத்தின் சக்தியுடன் விரைந்த அந்த ஆயுதத்தின் மூர்க்கத்தால் பிரஹஸ்தனின் தலை துண்டிக்கப்பட்டது. அவன் {பிரஹஸ்தன்} காற்றில் முறிந்த மரம் போலத் தெரிந்தான்.
இரவு உலாவியான பிரஹஸ்தன் போர்க்களத்தில் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட தூம்ராக்ஷன், அந்தக் குரங்குக் கூட்டத்துக்கு எதிராக பெரும் வேகத்துடன் விரைந்தான். பயங்கரத் தோற்றம் கொண்ட மேகங்கள் போல முகத்தோற்றத்துடன் இருந்த தூம்ராக்ஷனின் படைவீரர்களை தங்களை நோக்கி விரைந்து வருவதைக் கண்ட குரங்குத் தலைவன் {சுக்ரீவனாக இருக்கும்} திடீரென {போரை} முறித்து {தவிர்த்து} ஓடினான். குரங்களில் முதன்மையானவன் திடீரென வழிவிடுவதைக் கண்ட குரங்குகளில் புலியான பவனனின் மகன் ஹனுமான் முன்னேறத் தொடங்கினான். பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்த குரங்குகள் அனைவரும், பவனின் மகன் {ஹனுமான்} போர்க்களத்தில் அசையாதிருப்பதைக் கண்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, விரைவாக {மீண்டும்} அணிவகுத்தனர். ராமனும், ராவணனும் ஒருவருக்கெதிராக ஒருவர் விரைவதைக் கண்டதன் விளைவாக இருதரப்பு வீரர்களுக்கு மத்தியில் பயத்துடன் கூடிய வலிய பெரிய கூச்சல் எழுந்தது. அந்தப் போரில் பயங்கர சேதத்தைக் கண்ட களம் விரைவில் ரத்தச்சேறானது.
தூம்ராக்ஷன், சிறகு படைத்த கணைகள் மூலம் அந்தக் குரங்குக் கூட்டத்தைத் துன்புறுத்தினான். பிறகு எதிரிகளை வெல்பவனான பவனனின் மகன் ஹனுமான், முன்னேறிக் கொண்டிருந்த அந்த ராட்சசத் தலைவனை {தூம்ராக்ஷனை} விரைந்து பிடித்தான். ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பிய அந்தக் குரங்குக்கும் {ஹனுமானுக்கும்}, அந்த ராட்சச வீரனுக்கும் {தூம்ராக்ஷனுக்கும்} நடைபெற்ற மோதல், (பழங்காலத்தில்) இந்திரனுக்கும் பிரஹலாதனுக்கும் இடையில் நடைபெற்றதைப் போல கடுமையாகவும் பயங்கரமாகவும் இருந்தது. அந்த ராட்சசன், அந்தக் குரங்கை தனது கதாயுதங்களாலும், பரிகங்களாலும் {#} அடித்தான். அதே வேளையில் அக்குரங்கு {ஹனுமான்}, வெட்டப்படாத கிளைகளுடன் கூடிய மரத்தின் தண்டைக் கொண்டு அந்த ராட்சசனை {தூம்ராக்ஷனை} அடித்தான். பிறகு பவனனின் மகனான ஹனுமான் பெருங்கோபம் கொண்டு, அந்த ராட்சசனையும், அவனது தேரோட்டி மற்றும் அவனது குதிரைகளையும் கொன்று, அவனது தேரைத் துண்டுகளாக உடைத்தெறிந்தான்.
ராட்சசர்களில் முதன்மையான தூம்ராக்ஷன் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்டக் குரங்குகள், தங்கள் அச்சமனைத்தையும் கைவிட்டு, அந்த ராட்சசப் படையை நோக்கி பெரும் வீரத்துடன் விரைந்தன. வெற்றிபெற்ற வலிமைநிறைந்த குரங்குகளால் பெரிய எண்ணிக்கையில் தங்கள் தரப்பில் கொல்லப்பட்டதால், அந்த ராட்சசர்கள் உற்சாகமிழந்து இலங்கைக்குள் ஓடினர். உயிருடன் மீந்த அந்தச் சேதமடைந்த ராட்சசப் படை, நகரத்தை அடைந்ததும், மன்னன் ராவணனிடம் நடந்தது அத்தனையும் தெரிவித்தனர். பிரஹஸ்தன், பலம்வாய்ந்த வில்லாளியான தூம்ராக்ஷன் ஆகிய இருவரும் தங்கள் படையினருடன் சேர்த்து அந்த வலிமைமிக்க குரங்குகளால் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன் நீண்டு பெருமூச்சு விட்டு, தனது அற்புதமான இருக்கையில் இருந்து எழுந்து “கும்பகர்ணன் செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று சொன்னான். இப்படிச் சொன்ன அவன் {ராவணன்}, பலதரப்பட்ட உரத்த ஒலியெழுப்பும் கருவிகளைக் கொண்டு, ஆழ்ந்த நீண்ட துயிலில் இருந்த தனது தம்பி கும்பகர்ணனை எழுப்பினான்.
பெரும் முயற்சி செய்து அவனை எழுப்பிய அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, துயரத்துடன் அந்த பலம்வாய்ந்த கும்பகர்ணனிடம் பேசினான். அவன் {கும்பகர்ணன்} தனது படுக்கையில் வசதியாக அமர்ந்து தன் சுயநினைவையும், தன்நிலைமையையும் அடைந்த பிறகு, “ஓ! கும்பகர்ணா உண்மையில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய். நமக்கு நேர்ந்திருக்கும் இந்தப் பயங்கரப் பேரிடரை உணராது, இடையூறற்ற ஆழமான இளைப்பாறுதலை நீ அடையக்கூடாது. தனது குரங்குப் படையுடன் பெருங்கடலைப் பாலமமைத்துக் கடந்து வந்திருக்கும் ராமன், நம் அனைவரையும் அவமதிக்கும்படி, (நமக்கெதிராக) பயங்கரப் போரைத் தொடுத்திருக்கிறான். ஜனகனின் மகளான அவனது {ராமனின்} மனைவி சீதையை கள்ளமாக {Stealthily} நான் கொண்டு வந்தேன். பெருங்கடலின் மீது பாலமமைத்து அவளை {சீதையை} மீட்பதற்காகவே அவன் {ராமன்} இங்கே வந்திருக்கிறான். பிரஹஸ்தன் மற்றும் பிறர் கூடிய நமது பெரும் இரத்த உறவுகள் அனைவரும் அவனால் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர். ஓ! உனது எதிரிகளை துன்புறச் செய்பவனே {கும்பகர்ணா}, உன்னைத் தவிர ராமனைக் கொல்ல வேறு யாராலும் முடியாது! எனவே, ஓ! வீரா, உனது கவசத்தை அணிந்து கொண்டு, ராமனையும், அவனைத் தொடர்பவர்களையும் அழித்தொழிக்கும் நோக்குடன் இந்த நாளே செல்வாயாக! தூஷணனின் தம்பிகளான வஜ்ரவேகனும், பிரமாதினும் தங்கள் படையினருடன் உன்னைச் சேர்வார்கள்” என்ற வார்த்தைகளைச் சொன்னான் {கும்பகர்ணனிடம் ராவணன்}. பலம்வாய்ந்த கும்பகர்ணனிடம் இதைச் சொன்ன அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, வஜ்ரவேகனிடமும், பிரமாதினிடம், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தினான். அவனது அறிவரையை ஏற்ற அந்தப் போர்க்குணமிக்கவர்களான தூஷணனின் இரு தம்பிகள், நகரத்தில் இருந்து விரைந்து, கும்பகர்ணனை முன் கொண்டு அணிவகுத்து சென்றனர்.
மீளாத்துயில்கொண்ட கும்பகர்ணன்! – வனபர்வம் பகுதி 285-கும்பகர்ணனைக் கொன்ற லட்சுமணன்; வஜ்ரவேகனைக் கொன்ற ஹனுமான்; பிரமாதியைக் கொன்ற நளன்…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பிறகு கும்பகர்ணன் தனது தொண்டர்களுடன் நகரத்தைவிட்டுக் கிளம்பினான். வெற்றி பெற்ற குரங்கு துருப்புகள் முற்றுகையிட்டிருப்பதை விரைவில் தன் முன் கண்டான். ராமனைத் தேடும் நோக்கத்தோடு அவர்களைக் கடந்து சென்ற அவன் {கும்பகர்ணன்}, கையில் வில்லுடன் தனது நிலையில் நிற்கும் சுமித்திரையின் மகனைக் {லட்சுமணனைக்} கண்டான். பிறகு அந்தக் குரங்கு போர்வீரர்கள், அவனை {கும்பகர்ணனை} நோக்கி விரைந்து, அனைத்து புறத்திலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு அவர்கள் எண்ணிலடங்கா பெரிய மரங்களைக் கொண்டு அவனை அடிக்க ஆரம்பித்தனர். அவர்களில் {குரங்குகளில்} பலர் அச்சமற்று, தங்கள் நகங்களைக் கொண்டு அவனது உடலைக் கிழிக்கத் தொடங்கினர். போர்க்கலை விதிகளால் அங்கீகரிக்கப்பட்ட பல வழிகளில் அந்தக் குரங்குகள் அவனுடனான தங்கள் போரைத் தொடங்கின. விரைவில் அவர்கள் அந்த ராட்சசர்களின் தலைவனை {கும்பகர்ணனை} பல வகைகளிலான பயங்கர ஆயுதங்களின் மழையால் மறைத்தனர்.
அவர்களால் இப்படித் தாக்கப்பட்ட கும்பகர்ணன், அவர்களைப் பார்த்துச் சிரிக்க மட்டுமே செய்து, அவர்களை உண்ண ஆரம்பித்தான். சலன், சண்டசலன், வஜ்ரபாகு என்ற பெயர்களால் அறியப்படும் குரங்குகளில் முதன்மையானவர்களை அவன் {கும்பகர்ணன்} விழுங்கினான். அந்த ராட்சசன் செய்த அஞ்சத்தக்க செயலைக் கண்ட பிற குரங்குகள் அச்சமடைந்தனர். அதனால் அவர்கள் அச்சமடைந்து உரத்த ஓலமிட்டனர். அந்தக் குரங்குத் தலைவர்களின் அலறலைக் கேட்ட சுக்ரீவன் துணிச்சலுடன் கும்பகர்ணனை நோக்கி முன்னேறினான். உயர் ஆன்மா கொண்ட அந்தக் குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்}, அந்த ராட்சசனை {கும்பகர்ணனை} விரைவில் அணுகி, ஆச்சா {சால} மரத்தின் தண்டைக் கொண்டு அவனது தலையில் கடுமையாக அடித்தான். எப்போதும் விரைந்து செயல்படும் உயர் ஆன்ம சுக்ரீவன், கும்பகர்ணனின் தலையில் அடித்து அந்த ஆச்சாமரத்தை ஒடித்தாலும், அந்த ராட்சசன் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தத் தவறினான். பின்பு, அந்த அடியால் மந்த நிலையில் இருந்து எழுந்தவன் போல இருந்த கும்பகர்ணன், தனது கரங்களை நீட்டி, தன் பலத்தை மட்டுமே கொண்டு சுக்ரீவனைப் பிடித்தான். நண்பர்களுக்கு மகிழ்வூட்டும் சுமித்திரையின் வீர மகன் {லட்சுமணன்}, அந்த ராட்சசனால் {கும்பகர்ணனால்} சுக்ரீவன் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டு, கும்பகர்ணனை நோக்கி விரைந்தான்.
எதிரி வீரர்களைக் கொல்லும் லட்சமணன், கும்பகர்ணனை நோக்கி முன்னேறியவாறு, தங்கப் புங்கங்கள் {#} கொண்ட பலமிக்க மூர்க்கமான கணையை அவனை {கும்பகர்ணனை} நோக்கி அடித்தான். அந்தக் கணை, அவனது கவசத்தைப் பிளந்து, அவனது உடலுக்குள் ஊடுருவி, அப்பட்டமாக அதைக் {அவ்வுடலைக்} கடந்து, அந்த ராட்சசனின் ரத்தக் கறையுடன் பூமியைப் பிளந்து நின்றது. அப்படி மார்பு துளைக்கப்பட்ட கும்பகர்ணன், குரங்குகளின் மன்னனை {சுக்ரீவனை} விடுவித்தான். ஒரு பெரும் பாறையைத் தன ஆயுதமாக எடுத்துக் கொண்ட அந்தப் பலமிக்க வீரனான கும்பகர்ணன், சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} இலக்காக வைத்து அவனை நோக்கி விரைந்தான். அப்படி அந்த ராட்சசன் {கும்பகர்ணன்} அவனை {லட்சுமணனை} நோக்கி விரைந்த போது, அவனது {கும்பகர்ணனின்} உயர்த்தப்பட்ட {இரு} கரங்களை, கத்தியைப் போன்றிருந்த தனது கூரிய முனை கொண்ட கணைகளால் லட்சுமணன் வெட்டி வீழ்த்தினான்.
ஆனால், அந்த ராட்சசனின் இருகரங்களும் அப்படி வெட்டப்பட்ட போது, அக்கரங்களின் எண்ணிக்கையைப் போல இருமடங்கு கரங்கள் அவன் மேனியில் தோன்றின. எனினும், சுமித்திரையின் மகன், தனது ஆயுத நிபுணத்துவத்தைக் காட்டி, அதே போன்ற கணைகளைக் கொண்டு, கற்களைக் கொண்டிருந்த அக்கரங்களையும் வெட்டி வீழ்த்தினான். இதனால், அந்த ராட்சசன் {கும்பகர்ணன்}, பல தலைகளும், கால்களும், கரங்களும் கொண்ட மிகப்பெரிய உருவமெடுத்தான். பிறகு, சுமித்திரையின் மகனான அந்த வீரன் {லட்சுமணன்}, மலைக்குவியலைப் போல இருந்த அவனை {கும்பகர்ணனை} பிரம்ம ஆயுதத்தினால் பிளந்தான். அந்தத் தெய்வீக ஆயுதத்தால் தாக்கப்பட்ட அந்த ராட்சசன் {கும்பகர்ணன்}, கிளைகள் விரித்த பெரும் மரம் ஒன்று, வானத்தின் இடியால் தாக்கப்பட்டு விழுவது போல, அந்தப் போர்க்களத்தில் விழுந்தான். அசுரன் விருத்திரனுக்கு ஒப்பானவனும், பெருஞ்செயல் புரியுபவனுமான கும்பகர்ணன் உயிரிழந்து போர்க்களத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்ததைக் கண்ட ராட்சச வீரர்கள் அச்சத்தால் பின்வாங்கி ஓடினார்கள்.
அப்படிப் போர்க்களத்தை விட்டு ஓடும் ராட்சச வீரர்களைக் கண்ட, தூஷணனின் தம்பி, அவர்களை அணிதிரட்டி, பெரும் கோபத்துடன் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} நோக்கி விரைந்தான். எனினும், சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, உரத்த கர்ஜனை செய்து, தனது இறகு படைத்த கணைகளைக் கொண்டு, தன்னை நோக்கி விரைந்து வரும் கோபக்கார போர்வீரர்களான வஜ்ரவேகனையும், பிரமாதினையும் வரவேற்றான். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு, தூஷணன் தம்பிகள் ஒரு புறமும், புத்திக்கூர்மை கொண்ட லட்சுமணன் ஒரு புறமும் எனக் காண்பவர்களுக்கு மயிர்க்கூச்சலை ஏற்படுத்தும் மிகக்கடுமையான போர் மூண்டது. லட்சுமணன், அந்த இரு ராட்சசர்களையும் கச்சிதமான தனது அம்பு மழையால் மூழ்கடித்தான். மறுபுறம் கோபத்தால் பரபரப்படைந்த அந்த இரு ராட்சச வீரர்களும், தங்கள் கணைகளால் கல்மாரி பொழிந்து லட்சுமணனை மறைத்தனர். வஜ்ரவேகன், பிரமாதின் ஆகியோருக்கும் வலிய கரங்கள் கொண்ட லட்சுமணனுக்கு இடையில் நடந்த அந்தப் பயங்கர மோதல் சிறிது நேரம் {ஒரு முகூர்த்த காலம்} நீடித்தது.
பவனனின் மகனான ஹனுமான் ஒரு மலைச்சிகரத்தை எடுத்துக்கொண்டு விரைந்து, அந்த ஆயுதத்தால் {மலைச்சிகரத்தால}, அச்சகோதரர்களில் ஒருவனான ராட்சசன் வஜ்ரவேகனின் உயிரைப் பறித்தான். பலமிகுந்த குரங்கான நளனும் {நீலன் என்கிறது கும்பகோணம் பதிப்பு}, ஒரு பெரும் பாறையைக் கொண்டு, தூஷணனின் தம்பியான பிரமாதினை நசுக்கினான். எனினும், ஒருவருக்கொருவர் எதிர்த்து முன்னேறும் ராமன் மற்றும் ராவணனின் படைவீரர்களுக்கிடையேயான அந்தக் கொடிய போராட்டம், இதற்குப் பிறகும் ஒரு முடிவுக்கு வராமல், முன்பு போலவே உக்கிரத்துடன் நடந்தது. அந்தக் கானகவாசிகளால் {குரங்குகளால்} நூற்றுக்கணக்கான ராட்சசர்கள் கொல்லப்பட்டார்கள், அதே வேளையில் பல குரங்குகள் ராட்சசர்களாலும் கொல்லப்பட்டனர். எனினும், மரண இழப்பில் குரங்குகளை விட ராட்சசர்களுடைய இழப்பு மிக அதிகமாக இருந்தது.
ராமனைச் சாய்த்த இந்திரஜித்! – வனபர்வம் பகுதி 286-தன் மகன் இந்திரஜித்தை ராவணன் போருக்கு அனுப்பியது; இந்திரஜித்துக்கும் லட்சுமணனுக்கும் இடையில் நடந்த போர்; அங்கதன் அவர்களுக்கிடையே குறுக்கிட்டது; அங்கதனைக் கொல்ல இருந்த இந்திரஜித்தை லட்சுமணன் தடுத்தது; அங்கதன் இந்திரஜித்தின் குதிரைகளையும் தேரோட்டியையும் கொல்வது; மாயசக்திகளைப் பயன்படுத்தி இந்திரஜித் மறைந்திருந்து போர் தொடுப்பது; இதைக் கண்ட ராமன் தனது படையைக் காக்க அங்கே விரைவது; மறைந்திருந்து தாக்கிய இந்திரஜித் ராமனையும் லட்சுமணனையும் தரையில் விழச்செய்தது …
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தொண்டர்களுடன் {பின்தொடர்பவர்களுட்ன} கூடிய கும்பகர்ணனும், பெரும் போர்வீரனான பிரஹஸ்தனும், பெரும் சக்தி கொண்ட தூம்ராக்ஷனும் போர்க்களத்தில் விழுந்ததை அறிந்த ராவணன், தனது வீர மகன் இந்திரஜித்திடம், “ஓ! எதிரிகளைக் கொல்பவனே {இந்திரஜித்}, ராமன், சுக்ரீவன் மற்றும் லட்சுமணனை நீ கொல்வாயாக. எனது நன் மகனே, சச்சியின் தலைவனான, வஜ்ரத்தைத் தாங்கும் ஆயிரம் கண்கொண்டவனை {இந்திரனை} வீழ்த்தியதால், உன்னாலேயே எனக்கு இந்தப் பெரும்புகழ் கிடைத்தது. ஓ !எதிரிகளை அடிப்பவனே! உனது விருப்பத்துக்கேற்றவாறு தோன்றவும் மறையவும் கூடிய சக்தி கொண்ட நீ, (தேவர்களிடம்) வரமாகப் பெற்ற தெய்வீகக் கணைகளைக் கொண்டு எதிரிகளைக் கொல்வாயாக. உனது ஆயுதங்களின் சாதாரண ஸ்பரிசத்தையே ராமன், லட்சுமணன் மற்றும் சுக்ரீவன் ஆகியோரால் தாங்கிக் கொள்ள முடியாது. அப்படியிருக்கும்போது, அவர்களது தொண்டர்களைக் குறித்த நான் என்ன சொல்வேன்? ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {இந்திரஜித்}, பிரஹஸ்தனாலோ, கும்பகர்ணனாலோ எந்தப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லையோ, அது உன்னால் முடியட்டும். ஓ! மகனே {இந்திரஜித்}, உனது கூர்முனை கணைகளால், எனது எதிரிகளையும், அவர்களது படையினரையும் கொன்று, நீ முன்பொரு முறை வாசவனைக் கொன்று எனது மகிழ்ச்சியை எப்படி அதிகரிக்கச் செய்தாயோ, அப்படி இன்று செய்வாயாக” என்றான் {ராவணன்}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவனால் {ராவணனால்} இப்படிச் சொல்லப்பட்ட இந்திரஜித், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, கவசம் பூண்டு தனது தேரில் விரைந்து ஏறி, போர்க்களத்தை நோக்கி முன்னேறினான்.
பிறகு அந்த ராட்சசர்களில் காளை, {இந்திரஜித் என்ற} தனது பெயரை உரக்கக் கூறி, ஒற்றைக்கு ஒற்றைப் போர் புரிய {to a single combat}, நற்குறிகள் கொண்ட லட்சுமணனுக்கு அறைகூவல் விடுத்தான். இப்படிச் சவால்விடப்பட்ட லட்சுமணன், தனது வில் மற்றும் கணைகளை எடுத்துக் கொண்டு, அந்த வில்லின் நாணைத் தோல் உறை பூண்ட, தனது இடது கையால் சுண்டிவிட்டு, எதிரிகளின் இதயம் பயங்கரத்தை உணரச்செய்யும் வகையில், அந்த ராட்சசனை {இந்திரஜித்தை} நோக்கி விரைந்தான். தெய்வீக ஆயுதங்களை அறிந்த அந்த இரு வீரர்களுக்கிடையில், ஒருவருக்கொருவர் தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தி, ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி நடைபெற்ற அந்த மோதல் பயங்கரத்தின் எல்லையைக் காட்டுவதாக இருந்தது. ஆனால், தனது கணைகளால் எதிராளி {லட்சுமணன்} மீது எந்த ஆதிக்கத்தையும் தான் பெற முடியாது என்பதைக் கண்டறிந்த வலிமைமிக்க வீரர்களில் முதன்மையான ராவணனின் மகன் {இந்திரஜித்}, தனது ஆற்றல்கள் அனைத்தையும் திரட்டினான். பிறகு, இந்திரஜித் பெரும் சக்தி கொண்ட எண்ணற்ற எறிவேல்களை {#} லட்சுமணனின் மீது வீசத் தொடங்கினான். எனினும், சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, தனது கூர்முனை கொண்ட கணைகளால், அவற்றை வெட்டிச் சிதறடித்தான். லட்சுமணனின் கூர்முனைக் கணைகளால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அந்த எறிவேல்கள் தரையில் விழுந்தன.
பிறகு வாலியின் மகனான அழகான அங்கதன், ஒரு பெரிய மரத்தை எடுத்து இந்திரஜித்தை நோக்கி மூர்க்கமாக விரைந்து, அதைக் கொண்டு அவனது தலையில் அடித்தான். இருப்பினும் அச்சமற்றிருந்த அந்த வலிமைமிக்க இந்திரஜித் சூலத்தைக் கொண்டு அங்கதனை அடிக்க முயன்றான். எனினும், சரியாக அந்நேரத்திலேயே, ராவணன் மகனால் {இந்திரஜித்தால்} எடுக்கப்பட்ட அந்தச் சூலத்தை லட்சுமணன் துண்டு துண்டாக வெட்டிப் போட்டான். பிறகு ராவணனின் மகன் கதாயுதத்தை எடுத்து, தன் அருகில் இருந்த அந்தக் குரங்குகளில் முதன்மையானவனும் வீரனுமான அங்கதனின் இடது விலாவில் அடித்தான். வாலியின் பலமிக்க மகனான அங்கதன், அந்த அடியை ஒரு பொருட்டாக எண்ணாமல், இந்திரஜித்தின் மேல் ஒரு பெரும் ஆச்சாமரத் தண்டை வீசினான். இந்திரஜித்தை அழிப்பதற்காகக் கோபம் கொண்ட அங்கதனால் வீசப்பட்ட அந்த மரம், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, குதிரைகள் மற்றும் தேரோட்டியோடு கூடிய இந்திரஜித்தின் தேரை அழித்தது. பிறகு குதிரைகளற்ற, தேரோட்டியற்ற தேரில் இருந்து குதித்த ராவணனின் மகன் {இந்திரஜித்}, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தனது மாய சக்திகளின் துணை கொண்டு, காட்சியில் இருந்து மறைந்தான்.
அபரிமிதமான மாய சக்திகளைக் கொண்ட அந்த ராட்சசன் {இந்திரஜித்}, திடீரென மறைந்ததைக் கண்டு, அந்த இடத்தில் ராமன் முன்னேறி வந்து, தனது துருப்புகளைக் கவனமாகக் காக்க ஆரம்பித்தான். எனினும், இந்திரஜித், தேவர்களின் வரங்களால் {தான்} அடைந்த கணைகளைக் கொண்டு, ராமன், பலமிக்க லட்சுமணன் ஆகிய இருவரது உடல்களின் அனைத்துப் பாகங்களையும் துளைக்க ஆரம்பித்தான். பிறகு, தனது மாய சக்திகள் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு போரிட்ட ராவணனின் மகனுக்கு எதிராக, வீரர்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும், தங்கள் கணைகளைக் கொண்டு தொடர்ந்து போராடினர். ஆனால் அந்த மனிதர்களில் சிங்கங்கள் மேல் முழுவதும் தனது கூர்முனை கொண்ட கணைகளை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தொடர்ந்து அடித்தான். தொடர்ச்சியாகத் தனது கணைகளைப் பொழிந்து கொண்டிருந்த மறைந்திருந்த அந்த வீரனை {இந்திரஜித்தை}, கற்குவியல்களை ஏந்திய குரங்குகள், ஆகாயத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேடின. எனினும், அவர்களையும் {குரங்குகளையும்}, அந்த இரு சகோதரர்களையும், மறைந்திருந்த அந்த ராட்சசன் {இந்திரஜித்}, தனது கணைகள் மூலம் துன்புறுத்தத் தொடங்கினான். உண்மையில் அந்த ராவணனின் மகன், தனது மாய சக்திகளைக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு, அந்தக் குரங்குப் படையைப் பெருஞ்சீற்றத்துடன் தாக்கினான். இப்படி உடல் முழுவதும் அவனது {இந்திரஜித்தின்} கணைகளால் துளைக்கப்பட்ட வீர சகோதரர்களான ராமனும் லட்சுமணனும், ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனையும், சந்திரனையும் போலத் தரையில் விழுந்தனர்.
மாயையை வென்ற மாயநீர்! – வனபர்வம் பகுதி 287-ராமலட்சுமணர்களின் உணர்வை மீட்ட விபீஷணனும், சுக்ரீவனும்; குபேரன் ராமனுக்காகக் கைலாசத்தில் இருந்து நீர் கொடுத்தனுப்பியது; அந்நீரால் கண்களை அலம்பிக் கொண்ட ராமனும் மற்றவர்களும் மறைந்திருக்கும் அனைத்தையும் தங்கள் கண்களால் காண முடிந்தது; லட்சுமணன் இந்திரஜித்தை கொன்றது; சீதையைக் கொல்ல விரும்பிய ராவணன்; ராவணனின் கோபத்தைத் தணித்த அவிந்தியன்; போருக்குத் தயாரான ராவணன்…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சகோதரர்களான ராமனும், லட்சுமணனும் நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் கிடப்பதைக் கண்ட ராவணனின் மகன் {இந்திரஜித்}, தான் வரங்களாகப் பெற்றிருந்த கணைகளால் வலை செய்து அவர்களைக் கட்டினான். இப்படி இந்திரஜித்தின் அம்புகளாலான வலையால் போர்க்களத்தில் கட்டப்பட்ட மனிதர்களில் வீரப்புலிகளான அவர்கள், சிறையிலடைபட்ட இரு பருந்துகளைப் போலத் தெரிந்தனர். அந்த வீரர்கள் நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டுத் தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைக் கண்ட சக்ரீவன், எல்லாப்புறங்களிலும் அனைத்துக் குரங்குகளும் சூழ நின்றான். சுஷேணன், மைந்தன், துவிவிதன், குமுதன், அங்கதன், ஹனுமான், நீலன், தாரன், நளன் ஆகியோருடன் அந்தக் குரங்குகளின் மன்னன் {சுக்ரீவன்} அங்கு நின்று கொண்டிருந்தான். களத்தின் வேறொரு பகுதியில் வெற்றியடைந்த விபீஷணன், விரைவில் அந்த இடத்திற்கு வந்து, பிரக்ஞம் [1] என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, உணர்வற்றிருந்த அந்த வீரர்களை {ராமன் மற்றும் லட்சுமணனை} {நினைவடையும்படி} எழுப்பினான்.
பிறகு சுக்ரீவன் விரைவாக அவர்களது உடலில் இருந்து அம்புகளைப் பிடுங்கினான். பிறகு, தெய்வீக மந்திரங்களுடன், மிகவும் பயனளிக்கக்கூடிய விசல்யை [2] எனும் மருந்தைப் {சுக்ரீவன்} பூசியதும், அந்த மனித வீரர்கள் {ராமனும், லட்சுமணனும்} தங்கள் சுயநினைவை அடைந்தனர். தங்கள் உடல்களில் இருந்து அம்புகள் அகற்றப்பட்டதும், அந்தப் பலமிக்கப் போர்விரர்கள் தங்கள் வலி மற்றும் சோர்வு ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, தங்கள் மயக்கநிலையில் இருந்து ஒரு கணத்தில் எழுந்தனர். இக்ஷவாகு குலத்தின் வழித்தோன்றலான ராமன், துன்பம் நீங்கியவனாக இருப்பதைக் கண்டதும், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இரு கரங்கள் கூப்பிய நிலையில் இருந்த விபீஷணன் அவனிடம் {ராமனிடம்}, “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, குஹ்யர்கள் மன்னனின் {குபேரனின்} உத்தரவின் பேரில், வெண்மலைகளிலிருந்து நீரை [3] எடுத்துக் கொண்டு ஒரு குஹ்யன் {யக்ஷன்} இங்கு வந்திருக்கிறான். ஓ! பெரும் மன்னா {ராமா}, அந்த நீர் குபேரன் உனக்குக் கொடுத்தனுப்பியிருக்கும் பரிசாகும். அதனால், மறைந்திருக்கும் அனைத்து உயிரினங்களும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ராமா}, உனக்குக் காட்சியளிக்கும்! இந்த நீரைக் கொண்டு கண்களை அலம்பினால் மறைந்திருக்கும் அனைத்து உயிரினங்களும் உனக்குக் காட்சியளிக்கும். இதை {இந்த நீரை} நீ யாருக்குக் கொடுக்கிறாயோ அவர்களுக்கும் காட்சியளிக்கும்” என்றான் {விபீஷணன்}
(விசல்யை என்பது வெட்டுகள் மற்றும் காயங்களைக் குணப்படுத்தும் ஒரு மருத்துவத் தாவரமாகும். இது இன்றும் வங்காளத்தின் பகல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இந்த எழுத்தாளரின் {கங்குலியின்} மருத்து நண்பர் ஒருவர், இப்பெயரில் இருக்கும் ஒரு தாவரத்தின் திறனைச் சோதித்துப் பார்த்தார். அப்போது அது, இரத்தத்தை உரையவைக்கும் காலிக் அமிலம் {gallic acid} அல்லது டேனிக் அமிலம்{tannic acid} ஆகியவற்றைவிடப் பெரும் வீரியம் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். என்கிறார் கங்குலி–இந்து தொன்மவியலில் {புராணங்களில்} குஹ்யர்கள் என்பவர்கள் தேவர்களுக்கு அடுத்த நிலையிலும், தெய்வீக ஆடல் பாடல் நிபுணர்களான கந்தர்வர்களை விட மேம்பட்டவர்களாகவும் சொல்லப்பட்டுள்ளது. சிவனின் வசிப்பிடத்தைக் கொண்டிருக்கும் கைலாசத்தின் மறுபெயரே வெண்மலை என்பதாகும் என்கிறார் கங்குலி.)
“அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன ராமன் அந்தப் புனித நீரைப் பெற்றுக் கொண்டு, அதைக் கொண்டு தனது கண்களைச் சுத்தப்படுத்தினான். உயர்ந்த மனம் படைத்த லட்சுமணனும் அதையே செய்தான். சுக்ரீவன், ஜாம்பவான், ஹனுமான், அங்கதன், மைந்தன், துவிவிதன், நீலன் மற்றும் குரங்குகளில் முதன்மையான பலர், தங்கள் கண்களை அந்நீர் கொண்டு அலம்பினர். அதன் பிறகு, அனைத்தும் விபீஷணன் சொன்னவாறே சரியாக நடந்தன. ஓ! யுதிஷ்டிரா, விரைவில் அவர்கள் அனைவரின் கண்களுக்கும், துணையில்லா கண்களால் காணமுடியாத பொருட்களைக் காணும் திறன் பெற்றன.
அதேவேளையில், தான் பெற்ற வெற்றிக்குப் பிறகு இந்திரஜித் தனது தந்தையிடம் சென்றான். தான் செய்த செயல்களை அனைத்தையும் சொன்ன அவன் களத்திற்கு விரைந்து வந்து, படையின் முன்னணியில் தன்னை நிறுத்திக் கொண்டான். பிறகு விபீஷணனின் வழிகாட்டுதல்படி, சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, திரும்பி வந்துகொண்டிருக்கும் கோபக்கார ராவணனின் மகனை {இந்திரஜித்தை} நோக்கி, அவனைத் தாக்குவதற்காக விரைந்தான். விபீஷணனிடம் இருந்து ஒரு துப்பைப் {குறிப்பைப்} பெற்ற லட்சமணன், உக்கிரமடைந்து, தனது தினசரி வேள்வியை அன்று செய்து முடிக்காத இந்திரஜித்தைக் கொல்ல விரும்பி, வெற்றியைப் பெற எரிந்து கொண்டிருக்கும் அந்த வீரனைத் {இந்திரஜித்தைத்} தனது கணைகளால் அடித்தான். ஒருவரை ஒருவர் வீழ்த்த எண்ணி, அவர்களுக்கிடையில் நடைபெற்ற அந்த மோதல், {பழங்காலத்தில்} தேவர்களுக்கும் பிரகலாதனுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போல அற்புதமாக இருந்தது. உயிர் நிலைகளைத் துளைக்கும் கணைகளால் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} துளைத்தான் இந்திரஜித். சுமித்திரையின் மகனும் {லட்சுமணனும்}, ராவணனின் மகனைக் கடும் சக்திகள் கொண்ட தனது கணைகளால் துளைத்தான். லட்சுமணனின் கணைகளால் துளைக்கப்பட்ட ராவணனின் மகன் {இந்திரஜித்} கோபத்தால் உணர்வற்றுப் போனான். பிறகு அவன் {இந்திரஜித்}, லட்சுமணனை நோக்கி, நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற எட்டு கடும் கணைகளை அடித்தான்.
ஓ! யுதிஷ்டிரா, சக்தியும், பிரகாசமும், மூன்று சிறகுகளும் கொண்ட கணைகளால் சுமித்திரையின் வீர மகன் {லட்சுமணன்}, தனது விரோதியின் {இந்திரஜித்தின்} உயிரை எப்படி எடுத்தான் என்பதை இப்போது நான் சொல்கிறேன் கேள். அவற்றில் {அந்த அம்புகளில்} ஒன்றைக் கொண்டு வில்லைப்பிடித்திருந்த இந்திரஜித்தின் கரங்களை உடலில் இருந்து துண்டித்தான். இரண்டாவதைக் கொண்டு, கணைகளைப் பற்றியிருந்த மற்றொரு கரமும் தரையில் விழும்படி செய்தான். கூரிலும் கூரானதும் பிரகாசமானதுமான மூன்றாவதைக் கொண்டு, அழகிய மூக்காலும், பிரகாசமான காது குண்டலங்களாலும் அலகங்கரிக்கப்பட்டிருந்த அவனது {இந்திரஜித்தின்} தலையை அறுத்தெரிந்தான். கரங்களும், தலையும் அற்ற அவனது உடல் காண்பதற்குப் பயங்கரமாக இருந்தது. எதிரியைக் கொன்ற பிறகு, பலமிக்க மனிதர்களில் முதன்மையானவனான அவன் {லட்சுமணன்}, தனது கணைகளைக் கொண்டு, தனது எதிரியின் தேரோட்டியைக் கொன்றான். பிறகு குதிரைகள் வெறும் தேரை நகரத்திற்குள் இழுத்துச் சென்றன.
ராவணன், தனது மகன் இல்லாது திரும்பிய தேரைக் கண்டான். தனது மகன் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன், இதயம் நிறைந்த துன்பத்தால் பாதிக்கப்பட்டான். எல்லையில்லா துயரம் மற்றும் பாதிப்பில் மூழ்கிய அந்த ராட்சசர்களின் மன்னன் {ராவணன்}, திடீரென மிதிலையின் இளவரசியைக் {சீதையைக்} கொல்ல விரும்பினான். தனது வாளை எடுத்துக் கொண்ட அந்த ராட்சசன் {ராவணன்}, அசோக வனத்தில் தனது தலைவனைக் காண்பதற்காகக் காத்திருந்த மங்கையை நோக்கி விரைந்தோடினான். அந்த இழிந்த பாவியின் பாவம் நிறைந்த காரியத்தைக் கண்ட அவிந்தியன் அவனது கோபத்தைத் தணித்தான்.
ஓ! யுதிஷ்டிரா, அவிந்தியன் சொன்ன காரணங்களைக் கேள்! அந்த ஞானம் கொண்ட ராட்சசன் {அவிந்தியன்}, “ஒரு வல்லரசின் சுடர்மிகும் அரியணையில் அமர்ந்திருக்கும் நீ, ஒரு பெண்ணைக் கொல்வது தகாது! அதுபோக, உன் சக்தியைக் கொண்டு இவள் சிறைபிடிக்கப்பட்டதைக் கருதினால், இந்தப் பெண் ஏற்கனவே கொல்லப்பட்டவளே. இவளது உடல் மட்டும் அழிவதால் இவள் கொல்லப்பட்டவள் ஆக மாட்டாள் என்று நான் நினைக்கிறேன். இவளது கணவனைக் கொல்! அவனைக் கொன்றால், இவளும் கொல்லப்பட்டவளே! உண்மையில் நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} கூடப் பராக்கிரமத்தில் உனக்கு நிகரானவனல்ல! இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் உன்னால் மீண்டும் மீண்டும் போர்க்களத்தில் அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்!” என்று சொன்னான். மேலும் இது போன்ற வார்த்தைகளால் இதற்கு ஒப்பான இதே போன்ற பல வார்த்தைகளாலும், ராவணனைத் தணிப்பதில் வெற்றிக் கொண்டான் அவிந்தியன். உண்மையில் பின்னவன் {ராவணன்}, தனது ஆலோசகனின் {அமைச்சனின்} பேச்சைக் கேட்டான். பிறகு அந்த இரவு உலாவி, தானே போரில் ஈடுபடத் தீர்மானித்து, வாளை உறையில் இட்டு, தனது தேரைத் தயாராக நிறுத்த ஆணைகள் பிறப்பித்தான்.”
ராவணன் எரிந்தான்! – வனபர்வம் பகுதி 288-ராமனை எதிர்த்து வந்த ராவணன் ; ராவணனின் படைவீரர்களை மரத்தண்டுகள் கொண்டு தாக்கி குரங்குகள் வீழ்த்துவது; மாயை வெளிப்படுத்திய ராவணன்; மாயையால் உண்டான வீரர்களைக் கொன்ற ராமன்; ராமனையும் லட்சுமணனையும் போன்ற தோற்றம் கொண்ட வீரர்களை ராவணன் உண்டாக்குவது; ராமன் அவர்களையும் கொல்வது; மாதலி ராமனைச் சந்தித்து, இந்திரனின் தேரில் பயணிக்குமாறு வற்புறுத்துவது; பிரம்மாயுதம் கொண்டு ராமன் ராவணனை வீழ்த்துவது..
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தனது அன்பிற்குரிய மகனின் {இந்திரஜித்தின்} மரணத்தால் ஏற்பட்ட கோபத்தால் உந்தப்பட்ட பத்து கழுத்தோன் {ராவணன்}, தங்கத்தாலும், ரத்தினத்தாலும் இழைக்கப்பட்டிருந்த தனது தேரில் ஏறினான். பல வகையான ஆயுதங்களைக் கையில் கொண்டிருந்த பயங்கர ராட்சசர்கள் சூழ இருந்த ராவணன், எண்ணிலடங்கா குரங்கு தலைவர்களுடன் சேர்ந்து போரிட்டுக் கொண்டிருந்த ராமனை நோக்கி முன்னேறினான். கோபம் கொண்ட அவன் {ராவணன்} குரங்குப்படையை நோக்கி விரைவதைக் கண்ட மைந்தன், நீலன், நளன், அங்கதன், ஹனுமான் மற்றும் ஜாம்பவான ஆகியோர் தங்கள் துருப்புகள் அனைத்துடன் அவனைச் {ராவணனைச்} சூழ்ந்தனர். குரங்குகளிலும், கரடிகளிலும் முதன்மையான அவர்கள், பத்துக்கழுத்தோனின் (ராவணனின்) படை வீரர்களை அவன் {ராவணன்} பார்வைக்கெதிரிலேயே மரத்தின் தண்டுகளைக் கொண்டு பூண்டோடு அழிக்கத் தொடங்கினர். எதிரி தனது துருப்புகளைக் கொன்றொழிப்பதைக் கண்ட பெரும் மாய சக்திகள் கொண்ட ராட்சச மன்னனான ராவணன், தனது மாயையைப் பயன்படுத்தத் தொடங்கினான். கைகளில் கணைகளும், சூலங்களும், இருபுறக்கூர் கொண்ட வாள்களையும் {ரிஷ்டிகளையும்} கொண்ட ராட்சச வீரர்கள் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவனது {ராவணனின்} உடலில் இருந்து வெளிப்பட்டனர்.
இருப்பினும் ராமன் தனது தெய்வீக ஆயுதத்தைக் கொண்டு அந்த ராட்சசர்கள் அனைவரையும் கொன்றான். ராட்சசர்களின் மன்னன் {ராவணன்} மீண்டும் ஒருமுறை தனது மாயசக்தியை வெளிப்படுத்தினான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் பத்து முகத்தோன் {ராவணன்} தனது உடலில் இருந்து ராமனையும், லட்சுமணனையும் போன்ற எண்ணிலடங்கா போர்வீரர்களை உற்பத்தி செய்து அந்த இரு சகோதரர்களை நோக்கி விரைந்தான். பிறகு, ராமனுக்கும், லட்சுமணனுக்கும் எதிரியான அந்த ராட்சசர்கள், விற்களையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு ராமனை நோக்கி விரைந்தனர். அந்த ராட்சசர்கள் மன்னனால் {ராவணனால்} பிரயோகிக்கப்பட்ட மாயையின் சக்தியைக் கண்ட இக்ஷவாகு குல வழித்தோன்றலான சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ராமனிடம், “உமது தோற்றத்தில் இருக்கும் இந்த இழிந்த ராட்சசர்களை நீரே கொல்லும்” என்ற வீர வார்த்தைகளைச் சொன்னான். அதன் பேரில் ராமன், தனது உருவத்தில் இருந்தவர்களையும் மற்ற ராட்சசர்களையும் கொன்றான்.
அந்த நேரத்தில், பழுப்பு நிற {tawny hue = கபில நிறம், மஞ்சட்பழுப்பு நிறம்} {பச்சை நிறம் என்கிறது கும்பகோணம் பதிப்பு} குதிரைகள் பூட்டப்பட்டு, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட தேரில் இந்திரனின் தேரோட்டியான மாதலி அந்தப் போர்க்களத்துக்கு வந்து ராமனை அணுகினான். மாதலி, “ஓ! காகுஸ்த குலத்தின் மகனே {ராமா}, ஒரு ஜோடி பழுப்புக் குதிரைகள் பூட்டுப்பட்டு, வெற்றிவாகை சூடும் இந்த அற்புதமான தேர் தேவர்கள் தலைவனுக்குச் சொந்தமானது! ஓ! மனிதர்களில் புலியே, இந்த அற்புதத் தேரில் இருந்தே நூற்றுக்கணக்கான தைத்தியர்களையும், தானவர்களையும் இந்திரன் போர்க்களத்தில் கொன்றான்! எனவே, ஓ! மனிதர்களில் புலியே, என்னால் செலுத்தப்படும் இந்தத் தேரில் பயணித்து விரைவாகப் போர்க்களத்தில் ராவணனைக் கொல்! இதைச் சாதிக்கத் தாமதிக்காதே!” என்றான் {இந்திரனின் தேரோட்டி மாதலி}.
எனினும், இப்படி அவனால் {மாதலியால்} சொல்லப்பட்ட ரகு குல வழித்தோன்றல் {ராமன்}, இதுவும் ராட்சசர்களின் மாயை என்று நினைத்து, மாதலியின் உண்மை நிறைந்த வார்த்தைகளில் சந்தேகங்கொண்டான். அப்போது விபீஷணன், “ஓ! மனிதர்களில் புலியே {ராமா}, இது தீய ராவணனின் மாயையன்று! ஓ! பெரும் பிரகாசமிக்கவரே, இந்திரனுக்குச் சொந்தமான இந்தத் தேரில் விரைவாக ஏறு!” என்றான். இதனால் மகிழ்ச்சி கொண்ட காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்}, விபீஷணனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, அத்தேரில் ஏறி ராவணன் மேல் கோபம் கொண்டு விரைந்தான்.
ராவணனும் தனது எதிரிக்கு எதிராக விரைந்த போது, பூமியில் இருந்த உயிரினங்கள் உரத்து அலறின, அதே நேரத்தில், சொர்க்கத்தில் இருந்த தேவர்கள், படக {#படகம்} ஒலியுடன் கூடிய சிம்ம கர்ஜனை புரிந்தனர். பிறகு பத்து கழுத்தோனான ராவணனுக்கும், ரகு குலத்தின் இளவரசனுக்கும் {ராமனுக்கும்} இடையில் தொடங்கிய மோதல் கடுமையாகவும், தீவிரமாகவும் இருந்தது. உண்மையில், அவர்களுக்கு இடையில் நடந்த போருக்கு வேறு எங்கும் இணையே கிடையாது. அந்த ராட்சசன் {ராவணன்} ராமனை நோக்கி, உச்சரிக்கப் போகும் நிலையில் இருக்கும் அந்தணரின் சாபம் போன்றதும் [1] {பிரம்ம தண்டம் போன்றதும்}, இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்றதுமான எறிவேலை {#} {சூலம்}எறிந்தான். இருப்பினும் ராமன் தனது கூரிய கணைகளால் அந்த எறிவேலை துண்டு துண்டாக அறுத்துப் போட்டான்.(வியாசர் மற்றும் வால்மீகி ஆகிய இருவரின் படியும், பிராமணச் சாபத்தைவிடக் கடுமையானது எதுவுமில்லை. இந்திரனின் வஜ்ராயுதமே பிராமணச் சாபத்துடன் ஒப்புநோக்கும்போது பலவீனமானதே. காரணம் தெளிவானது. வஜ்ராயுதம் யாரை நோக்கி ஏவப்படுகிறதோ அந்தத் தனிநபரையே அடிக்கும். பிராமணச் சாபமோ மொத்த குலத்தையும், மொத்த தலைமுறையையும், முழு நாட்டையுமே அடித்துவிடும்.)
செய்வதற்கு அரிதான அச்செயலைக் கண்ட ராவணன் அச்சத்தால் தாக்கப்பட்டான். ஆனால், விரைவில் கோபம் தூண்டப்பட்டுப் பத்து கழுத்து வீரன் {ராவணன்}, ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும், எண்ணிலடங்காதவாறும் ஏவுகணைகளையும் {புசுண்டி}, எறிவேல்களையும், தண்டங்களையும், போர்க்கோடரிகளையும், பலவிதமான கணைகளையும், சதாக்னிகளையும், கல்லில் கூராக்கப்பட்ட அம்புகளையும், மேலும் பலவகையான ஆயுதங்களையும் ராமன் மீது பொழிந்தான். பயங்கர உருவைக் காட்சிப்படுத்திய பத்து கழுத்து ராட்சசனின் {ராவணனின்} மாயையைக் கண்ட குரங்குகள் அச்சப்பட்டு அனைத்து திசைகளிலும் ஓடின.
பிறகு அந்தக் காகுஸ்தனின் வழித்தோன்றல் {ராமன்}, தனது அம்பறாத்தூணியில் இருந்த, அழகிய சிறகுகளும், தங்க இறகுகளும், பிரகாசமான, அழகிய தலை கொண்ட ஓர் அழகிய அம்பை எடுத்து பிரம்மாயுத {பிரம்மாஸ்திர} மந்தரத்துடன் சேர்த்து வில்லில் பொருத்தினான். இந்திரனைத் தலைமையாகக் கொண்டு தேவர்களும், கந்தர்வர்களும், சரியான மந்திரங்களால் பிரம்மாயுதமாக ராமனால் மாற்றபட்ட அற்புத கணையைக் கண்டு மகிழ ஆரம்பித்தனர். தேவர்களும், தானவர்களும் கின்னரர்களும் பிரம்மாயுதத்தின் அக்காட்சியால், எதிரியான ராட்சசனின் {ராவணனின்} உயிருக்கு முடிவு நெருங்கியது என்றே கருதத் தலைப்பட்டனர். பிறகு, ஒப்பற்ற சக்தி கொண்டதும், ராவணனின் மரணத்தை ஏற்படுத்த போவதும், உச்சரிக்கப்படும் நிலையில் இருக்கும் அந்தண சாபத்தைப் போன்றதுமான அந்தப் பயங்கர ஆயுதத்தை ராமன் அடித்தான்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, வில்லை வட்டமாக வளைத்து ராமனால் அக்கணை {பிரம்மாயுதம்} அடிக்கப்பட்டதும், தேர், தேரோட்டி, குதிரைகளுடன் கூடிய ராட்சச மன்னன் {ராவணன்} எல்லாப் பக்கங்களிலும் பயங்கர நெருப்பால் சூழப்பட்டு எரிக்கப்பட்டான். புகழ்பெற்ற சாதனையைச் செய்த ராமனால் ராவணன் கொல்லப்படுவதைக் கண்ட தேவர்களும், கந்தர்வர்களும் சாரணர்களும் மிகவும் மகிழ்ந்தனர். பிரம்மாயுதத்தின் ஆற்றலால் அண்ட மேலாட்சியை இழந்த சிறப்பு வாய்ந்த ராவணனை ஐங்கூறுகளும் {ஐம்பூதங்களும்} கைவிட்டன. ராவணனின் உடல் சார்ந்த மூலப்பொருட்கள் அனைத்தும் அந்தப் பிரம்மாயுதத்தால் எரிக்கப்பட்டன. அவனது சதை, குருதி ஆகியவை சாம்பல் கூடக் காணக்கிடைக்காதவாறு ஏதுமற்றவையாகக் குறைக்கப்பட்டன.
நான் பாவமிழைத்தவளானால்…! – வனபர்வம் பகுதி 289அ-ராமனிடம் சீதையை அவிந்தியன் அழைத்து வந்தது; ராமனின் கடுஞ்சொற்களைக் கேட்ட சீதை பூமியில் விழுந்தது; வாயு, அக்னி, வருணன், பிரம்மன் தசரதன் ஆகியோர் சீதையை ஏற்றுக் கொள்ளும்படி ராமனிடம் கேட்டது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அற்பனும், தேவர்களுக்கு எதிரியுமான ராட்சசர்கள் மன்னனை {ராவணனைக்} கொன்ற பிறகு தனது நண்பர்களுடனும், சுமித்திரையின் மகனுடனும் {லட்சுமணனுடனும்} ராமன் மிகுந்த மகிழ்ச்சியோடிருந்தான். அந்தப் பத்துக்கழுத்தோன் (ராட்சசன்) {ராவணன்} கொல்லப்பட்ட பிறகு, முனிவர்களைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள், வலிய கரங்கள் கொண்ட ராமனை வழிபட்டு, “ஜெயம்” என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் உச்சரித்து அருள் வழங்கினர். தேவர்கள் அனைவரும், கந்தர்வர்களும், தேவலோகவாசிகளும் தாமரை இதழ்களைப் போன்ற கண் கொண்ட ராமனை, தங்கள் பாடல்களாலும், பூமாரியாலும் மனநிறைவு கொள்ளச் செய்தனர். இப்படி ராமனை முறையாக வழிபட்ட அவர்கள் அனைவரும் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே திரும்பினர். ஓ! மங்காப் புகழ் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அப்போது வானத்தைப் பார்த்த போது, அங்கே ஏதோ பெரும் திருவிழா கொண்டாடப்பட்டது போல இருந்தது.
பத்து கழுத்து ராட்சசனைக் {ராவணனைக்} கொன்றபிறகு, உலகம் பரந்த புகழ் கொண்டவனும், எதிரி நகரங்களை வெல்பவனுமான தலைவன் ராமன், இலங்கையை விபீஷணனுக்கு அளித்தான். பிறகு முதிர்ந்த ஞானியான (ராவணனின்) ஆலோசகனான {அமைச்சனான} அவிந்தியன், சீதையைத் தனக்கு முன்னும், அதற்கு முன்னே நடந்து சென்ற விபீஷணனுக்குப் பின்னும் விட்டு, நகரத்தை விட்டு வெளியே வந்தான். பிறகு பெரும் பணிவு கொண்ட அவிந்தியன் காகுஸ்த குலத்தின் சிறப்புமிக்கவனிடம் {ராமனிடம்}, “ஓ! சிறப்புமிக்கவனே {ராமா}, அற்புதமான நடத்தை கொண்ட ஜனகனின் மகளான இந்தத் தேவியை ஏற்றுக் கொள்!” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட இக்ஷவாகு குலத்தின் வழித்தோன்றல் {ராமன்}, அற்புதமான தனது தேரில் இருந்து இறங்கி, கண்ணீரால் குளித்திருக்கும் சீதையைக் கண்டான்.
துயரத்துடனும், புழுதி படிந்த மேனியுடனும், தலையில் சடாமுடியுடனும், அழுக்கடைந்த ஆடை உடுத்தியும் தனது வாகனத்தில் {பல்லக்கில்} அமர்ந்திருந்த அந்த அழகான மங்கையைக் {சீதையைக்} கண்ட ராமன், தனது மதிப்புக்கு ஏற்படப்போகும் களங்கத்திற்கு அஞ்சி அவளிடம் {சீதையிடம்}, “விதேகத்தின் மகளே {சீதை}, நீ விரும்பிய இடத்திற்குச் செல். இப்போது நீ விடுபட்டாய்! நான் என்ன செய்ய வேண்டுமோ அது செய்யப்பட்டது! ஓ! அருளப்பட்ட மங்கையே, என்னைக் கணவனாகக் கொண்ட நீ, ஒரு ராட்சசனின் வசிப்பிடத்தில் கிடந்து முதிர்ந்து விடக்கூடாது! இதற்காகவே நான் அந்த இரவு உலாவியைக் கொன்றேன். ஆனால், அறநெறிகளின் அனைத்து உண்மைகளையும் அறிந்த எங்களைப் போன்ற ஒருவன், மாற்றான் கைகளில் விழுந்த ஒரு பெண்ணை எவ்வாறு ஒருக்கணமேனும் அணைக்க முடியும்? ஓ! மிதிலையின் இளவரசியே, நீ கற்புடையவளோ, கற்பற்றவளோ, நாயால் நக்கப்பட்ட வேள்வி நெய்யைப் போன்ற உன்னுடன் இன்பமாக இருக்க இனி நான் துணிய மாட்டேன்!” என்றான் {ராமன்}.
இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட அந்த வழிபடத்தக்க பெண் {சீதை}, இதயத்தில் ஏற்பட்ட துயரத்தால், வேர்களில் துண்டிக்கப்பட்ட வாழை மரம் போலத் திடீரெனக் கீழே விழுந்தாள். தான் அடைந்த மகிழ்ச்சியின் விளைவாக அவள் முகத்தை மூடியிருந்த நிறம், வாயிலிருந்து வெளிப்படும் மூச்சுக்காற்றால் ஊதப்படும் கண்ணாடியில் இருக்கும் நீர்த்துகள்கள் போல {கண்ணாடியில் ஊதினால் எப்படி அது மங்குமோ அதுபோல} விரைவில் காணாமல் போனது. ராமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அனைத்துக் குரங்குகளும், லட்சுமணனும் இறந்தவர் போல அசையாதிருந்தனர். பிறகு தெய்வீகமானவனும், புனித ஆன்மா கொண்டவனும், தாமரையில் இருந்து தானே உதித்த அண்ட படைப்பாளனும் நான்முகனுமான பிரம்மன், தனது தேரில் வந்து ரகுவின் மகனுக்குக் {ராமனுக்கு} காட்சி கொடுத்தான். சக்ரன் {இந்திரன்}, அக்னி, வாயு, யமன், வருணன், யக்ஷர்களின் சிறப்புமிக்கத் தலைவன், புனிதமான முனிவர்கள் மற்றும் மன்னன் தசரதனும் தங்கள் பிரகாசமான தெய்வீக உருவத்துடன், அன்னங்களால் இழுக்கப்பட்ட தேரில் காட்சி கொடுத்தனர். தேவர்களாலும் கந்தர்வர்களாலும் நிறைந்த ஆகாயம், நட்சத்திரங்களை ஆடையாகக் கொண்ட இலையுதிர்கால {சரதகால} வானம் போல இருந்தது.
பிறகு, தரையில் இருந்து எழுந்த அருளப்பட்டவளும், புகழ்பெற்றவளுமான விதேக இளவரசி {சீதை}, அங்கே இருந்தவர்களுக்கு மத்தியில் அகன்ற மார்பு கொண்ட ராமனிடம், “ஓ! இளவரசே, ஆண்களிடமும், பெண்களிடமும் எவ்வாறான நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் நீர். எனவே, எந்தத் தவறாலும் நான் உம்மைக் குற்றப்படுத்தவில்லை. ஆனால், எனது வார்த்தைகளையும் கேளும்! எப்போதும் நகரும் தன்மை கொண்ட காற்று {வாயு} அனைத்து உயிருக்குள்ளும் இருக்கிறது. நான் பாவமிழைத்திருந்தால், அவன் {வாயுத்தேவன்} எனது உயிர் சக்திகளைக் கைவிடட்டும் {எனது உயிரைப் பறிக்கட்டும்}. ஓ! நான் பாவமிழைத்திருந்தால், (நான் ஏற்கனவே அழைத்திருக்கும்) காற்றைப் {வாயுவைப்} போலவே, நெருப்பு {அக்னி}, நீர், ஆகாயம், பூமி ஆகியனவும் எனது உயிர்ச்சக்திகளைக் கைவிடட்டும். ஓ! வீரரே, நான் கனவிலும் வேறொருவனின் உருவத்தைக் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்பது உண்மையானால், முன்பு தேவர்களால் நியமிக்கப்பட்டது போலவே நீர் எனக்குத் தலைவராக இருப்பீராக!” என்றாள்.
சீதை பேசிய பிறகு, மொத்த பகுதிகளுக்கும் கேட்கும்படி, உயர் ஆன்மா கொண்ட குரங்குகளின் இதயத்தை மகிழ்விக்கும் வகையில் வானத்தில் ஒரு புனிதமான குரல் கேட்டது. “ஓ! ரகுவின் மகனே {ராமா}, சீதை உண்மையையே சொன்னாள்! நான் வாயுத்தேவன். மிதிலையின் இளவரசி பாவமற்றவள்! எனவே, ஓ! மன்னா, நீ உன் மனைவியைச் சேர்வாயாக!” என்று வாயுத்தேவன் சொன்னது கேட்டது. பிறகு, நெருப்பு தேவன் {அக்னி தேவன்}, “ஓ! ரகுவின் மகனே {ராகவா = ராமா}, நான் அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் வசிப்பவன்! ஓ! காகுஸ்தனின் வழித்தோன்றலே, மிதிலையில் இளவரசி {மைதிலி = சீதை} நுண்ணியத் தவறையும் செய்யாத குற்றமற்றவள் ஆவாள்!” என்றான். பிறகு வருணனும், “ஓ! ரகுவின் மகனே {ராமா}, “அனைத்து உயிர்களின் உடல்களில் உள்ள சுவைகள் {ரசங்கள் = ரசனைகள்}, என்னிடம் இருந்தே இருப்பை அடைகின்றன! நான் சொல்கிறேன், மிதிலையின் இளவரசியை ஏற்றுக் கொள்வாயாக!” என்றான்.
பிறகு பிரம்மன், “ஓ! காகுஸ்தனின் வழித்தோன்றலே {ராமா}, ஓ! மகனே, நேர்மையும், சுத்தமும், அரச முனிகளின் கடமைகள் அனைத்தையும் கொண்ட உனது இந்த நடத்தை விசித்திரமாக இல்லை {ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை}. இருப்பினும், எனது வார்த்தைகளைக் கேள்! ஓ! வீரா, தேவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யக்ஷர்கள், தானவர்கள் மற்றும் பெரும் முனிவர்களுக்கு எதிரியானவனை {ராவணனை} நீ கொன்றிருக்கிறாய். எனது அருளாலேயே அவன் {ராவணன்} இதுவரை எந்த உயிரினத்தாலும் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான். உண்மையில், ஒரு காரணத்திற்காகவே நான் அவனிடம் பொறுமை காத்து வந்தேன்! எனினும், அந்த இழிந்தவன் {ராவணன்} தனது அழிவிற்காகவே சீதையை அபகரித்தான். சீதையைப் பொறுத்தவரை, நளகூபரனின் சாபத்தினால் நான் அவளைப் பாதுகாத்தேன். பழங்காலத்தில், விருப்பமில்லாத பெண்ணை அவன் எப்போது அணுகினாலும் அவன் தலை நூறு துண்டுகளாகச் சிதறிப் போகும் என அவனே {நளகூபரனே} ராவணனைச் சபித்தான். எனவே, எந்தச் சந்தேகமும் கொள்ளாதே! ஓ பெரும் புகழ் கொண்டவனே, உனது மனைவியை ஏற்றுக் கொள்! ஓ! தெய்வீகப் பிரகாசம் கொண்டவனே, உண்மையில், தேவர்களின் நன்மைக்காகவே நீ இந்தப் பெரும் சாதனையைச் சாதித்திருக்கிறாய்!” என்றான் {பிரம்மன்}.
பின்பு அனைவரிலும் கடைசியாகத் தசரதன், “ஓ! குழந்தாய்! நான் உன்னிடம் நிறைவு கொண்டேன். நானே உன் தந்தையான தசரதன்; நீ அருளப்பட்டிருப்பாயாக! ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, உனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொண்டு, உனது நாட்டை ஆட்சி செய் என நான் உனக்கு உத்தரவிடுகிறேன்!” என்றான். அதற்கு ராமன், “ஓ! மன்னர்களுக்கு மன்னரே, நீர் எனது தந்தை என்றால், நான் உம்மை மதிப்புடன் வணங்குகிறேன். உண்மையில் நான், உமது உத்தரவின் பேரில் அழகிய நகரமான ஆயோத்யைக்குத் திரும்புவேன்” என்றான்.”
ஆட்சிக்கட்டிலில் ராமன்! – வனபர்வம் பகுதி 289ஆ-ராமன் தன் பரிவாரங்கள், லட்சுமணன் மற்றும் சீதையுடன் அயோத்திக்குப் புறப்பட்டது. வழியில் கிஷ்கிந்தையில் இறங்கி அங்கதனுக்குப் பட்டத்து இளவரசனாகப் பட்டம் சூட்டியது; நந்திகிராமத்தில் இருந்த பரதனிடம் ஹனுமானைத் தூதனுப்பியது; ராமனின் பட்டாபிஷேகம்; சுக்ரீவன், விபீஷணன் ஆகியோருக்குத் தகுந்த வெகுமதிகளை ராமன் கொடுத்தனுப்பியது; ராமன் கோமதியாற்றங்கரையில் பத்து குதிரை வேள்விகளைச் செய்தது…
“மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, விழியோரம் சிவந்த ராமன் இப்படிப் பதிலளித்ததும், மகிழ்ந்த அவனது தந்தை {தசரதன்} “அயோத்தி திரும்பி நாட்டை ஆட்சி செய்! ஓ! பெரும் புகழ்கொண்டவனே {ராமா}, உனது {வனவாசத்தின்} பதினான்கு {14} வருடங்கள் முடிவடைந்தன” என்றான். தசரதனால் இப்படிச் சொல்லப்பட்டு, ராமன் தேவர்களை வணங்கி, நண்பர்களால் வழிபடப்பட்டு, புலோமனின் மகளுடன் இணைந்த தேவர்கள் தலைவனைப் போலத் தனது மனைவியுடன் இணைந்தான். பிறகு அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் அவிந்தியனுக்கு ஒரு வரத்தைக் கொடுத்தான். திரிஜடை என்ற ராட்சச பெண்ணுக்கு செல்வங்களையும் மரியாதைகளையும் அளித்தான். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களுடன் இருந்த பிரம்மன், ராமனிடம், “ஓ கௌசல்யையைத் தாயாகக் கொண்டவனே {ராமா}, உனது இதயத்தில் இருக்கும் எந்த வரங்களை நாங்கள் கொடுப்பது?” என்று கேட்டான்.
அதன்பேரில் ராமன், அவர்களிடம், அறத்தில் உறுதியான பற்றும், எதிரிகளைப் பொறுத்தமட்டில் வெல்லப்பட முடியாதவனாக இருக்க வேண்டும் என்றும், ராட்சசர்களால் கொல்லப்பட்ட அனைத்துக் குரங்குகளும் உயிர் மீள்வதையும் வேண்டினான். “அப்படியே ஆகட்டும்’ என்று பிரம்மன் சொன்னதும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயிர்மீட்கப்பட்ட அந்தக் குரங்குகள் போர்க்களத்தில் இருந்து எழுந்து வந்தனர். பெரும் நற்பேறுபெற்ற சீதையும் ஹனுமானுக்கு ஒருவரம் அளித்தாள். “ஓ! மகனே {ஹனுமானே}, ராமரின் சாதனைகள் (புகழ்) நீடிக்கும் வரை உனது வாழ்வும் நீடிக்கட்டும்! மேலும், மஞ்சள் கண்களைக் கொண்ட ஹனுமானே, மேலும், தெய்வீக உணவுகளும், பானங்களும் எனது அருளால் உனக்கு எப்போதும் கிடைக்கட்டும்” என்றாள் {என்ற வரத்தை ஹனுமானுக்கு அளித்தாள் சீதை}.
பிறகு களங்கமற்ற சாதனைகள் செய்த அந்த வீரர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் மறைந்தனர். ஜனகனின் மகளுடன் {சீதையுடன்} ராமன் இணைந்திருப்பதைக் கண்ட சக்ரனின் {இந்திரனின்} தேரோட்டி {மாதலி}, மிகவும் மனம் நிறைந்து, நண்பர்களுக்கு மத்தியில், “ஓ! கலங்கடிக்கமுடியாத பராக்கிரமம் கொண்டவனே, தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், நாகர்கள், மனிதர்கள் ஆகியோரின் துயரங்களை நீ விலக்கியிருக்கிறாய். எனவே, இந்தப் பூமி ஒன்றாக நிலைத்திருக்கும் வரை, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள் ஆகியோர் உன்னைக் குறித்துப் பேசிக் கொண்டே இருப்பார்கள்” என்றான்.
இவ்வார்த்தைகளை ராமனுக்குச் சொன்ன மாதலி, அந்த ரகுவின் மகனை வழிபட்டு, ஆயுதம் தாங்குவோரில் முதன்மையான அவனிடம் {ராமனிடம்} விடைபெற்றுக்கொண்டு, சூரியப் பிரகாசம் கொண்ட அதே தேரில் சென்றான். சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, விபீஷணன், சுக்ரீவனைத் தலைமையாகக் கொண்ட குரங்குகளுடன் சீதையை முன்னிட்டுச் சென்ற ராமன், இலங்கையின் பாதுகாப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அதே பாலத்தின் வழியாகக் கடலை மீண்டும் கடந்தான். பயணிப்பவனின் விருப்பத்திற்கேற்ற இடத்திற்குச் செல்ல வல்ல புஷ்பகம் என்று அழைக்கப்பட்ட வானுறையும் அந்த அழகிய தேரில் அவன் பயணித்தான். ஆசைகளை அடக்கிய அவனை {ராமனை}, அவனது முதன்மையான ஆலோசகர்கள் முன்னுரிமை வரிசையில் சூழ்ந்திருந்தனர். ஏற்கனவே தான் படுத்திருந்த கடற்கரை பகுதிக்கு வந்த அந்த அறம்சார்ந்த மன்னன் {ராமன்} அனைத்துக் குரங்குகளுடன் தனது தற்காலிக வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.
பிறகு ரகுவின் மகன் {ராமன்}, உரிய நேரத்தில் குரங்குகளைத் தனது முன்னிலைக்கு அழைத்து, அவர்கள் அனைவரையும் வணங்கி, தங்கமும், ரத்தினங்களும் கொடுத்து மனநிறைவு கொள்ளச் செய்து ஒவ்வொருவராக அவர்களுக்கு விடை கொடுத்தான். குரங்குத் தலைவர்கள், கரடிகள் மற்றும் மாட்டுவால் கொண்ட குரங்குகள் அனைவரும் சென்ற பிறகு, ராமன் சுக்ரீவனும் கிஷ்கிந்தைக்குள் மீண்டும் நுழைந்தான். விபீஷணன் மற்றும் சுக்ரீவன் ஆகிய இருவருடன் புஷ்பகத்தேரில் கிஷ்கிந்தைக்குள் மீண்டும் நுழைந்த ராமன், வழியெங்கும் விதேக இளவரசிக்கு {சீதைக்கு} காடுகளைக் காட்டிக் கொண்டே வந்தான். பிறகு கிஷ்கிந்தையை அடைந்த அடிப்பவர்களில் முதன்மையான ராமன் வெற்றிபெற்ற அங்கதனை அந்த நாட்டின் பட்டத்து இளவரசனாக நிறுவினான்.
பிறகு சுமித்திரையின் மகனையும் {லட்சுமணனையும்}, அதே நண்பர்களையும் அழைத்துக் கொண்டு, தான் வந்த வழியிலேயே தன் நகரத்தை {அயோத்தியை} நோக்கி மீண்டும் சென்றான் ராமன். அயோத்தி நகரத்தை அடைந்ததும், அந்த மன்னன் {ராமன்} ஹனுமானைத் தூதுவனாகப் பரதனிடம் அனுப்பினான். வெளிப்புறக் குறிப்புகளைக் கொண்டு பரதனின் நோக்கங்களை உறுதி செய்து கொண்ட ஹனுமான், அவனுக்கு {ராமனின் வரவைக் குறித்த} நற்செய்தியைச் சொன்னான். அதன்பிறகு பவன குமாரன் {ஹனுமான்} திரும்பி வந்ததும், ராமன் நந்திகிராமத்திற்குள் நுழைந்தான். அந்த நகரத்திற்குள் நுழைந்த ராமன், புழுதி படிந்த தேகமும், கந்தலாடை உடுத்தியும், தன் முன்னிலையில் தனது அண்ணனின் {ராமனின்} பாதுகைகளை வைத்துக் கொண்டும் அமர்ந்து இருக்கும் பரதனைக் கண்டான். ஓ! பாரதக் குலத்தின் காளையே இப்படிப் பரதனுடனும், சத்ருக்னனுடனும் சேர்ந்த ரகுவின் பலம் வாய்ந்த மகன் {ராமன்}, சுமித்திரையின் மகனுடன் {லட்சுமணனுடன்} கூடி பெரும் மகிழ்ச்சி கொள்ள ஆரம்பித்தான். தங்கள் அண்ணனுடன் சேர்ந்த பரதனும் சத்ருக்னனும் சீதையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தனர். பிறகு, திரும்பி வந்த தனது அண்ணனை வழிபட்ட பரதன், மிகுந்த மகிழ்ச்சியுடனும் தன்னிடத்தில் புனிதமாக, அடைக்கலமாக வைக்கப்பட்டிருந்த நாட்டைத் திருப்பிக் கொடுத்தான். பிறகு வசிஷ்டரும், வாமதேவரும் சேர்ந்து, அந்த வீரனுக்குத் {ராமனுக்கு} திருவோணம் {சிரவண} நட்சத்திரத்தின் எட்டாவது முகூர்த்தத்தில் [1] (அயோத்தியின்} ஆட்சிக்கட்டிலில் அமர்த்திப் பட்டம் சூட்டினர். இப்படிப் பட்டம் நிறுவப்பட்ட பிறகு, மிகுந்த மனநிறைவோடிருந்த குரங்குகள் மன்னன் சுக்ரீவனுக்கும், அவனது தொண்டர்களுக்கும் மற்றும் புலஸ்திய குலத்தின் விபீஷணனுக்கும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்ல ராமன் விடை கொடுத்து அனுப்பினான்.(அபிஜித் முகூர்த்தமே {கிட்டத்தட்ட மதிய வேளை} ஒரு நாளின் எட்டாவது முகூர்த்தமாக இருக்கிறது. ஒரு முகூர்த்தம் என்பது 48 நிமிடங்களைக் கொண்டதாகும். ஒரு நாளுக்கு {அதாவது 24 மணி நேரம்} 30 முகூர்த்தங்களாகும். நீலகண்டரால் விளக்கப்பட்ட வைஷ்ணவ விண்மீன் அறிவியல் சிரவவம் என்று அழைக்கப்படுகிறது என்கிறார் கங்குலி.)
பலவகையான இன்பம்தரக்கூடிய பொருட்களைக் கொடுத்து அவர்களை வழிபட்டு, அந்த நேரத்திற்குத் தகுந்த அனைத்தையும் செய்து, துயரம் நிறைந்த இதயத்துடன் ராமன் தனது நண்பர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினான். பிறகு புஷ்பகத் தேரை வழிபட்ட ரகுவின் மகன் {ராமன்}, அதை மகிழ்சியுடன் வைஸ்ரவணனிடம் திருப்பிக் கொடுத்தான். பிறகு தெய்வீக முனிவரைத் {வசிஷ்டரைத்} துணையாகக் கொண்டு, அந்தணர்களுக்கு மூன்று மடங்கு கொடையளித்து, எத்தடையுமின்றிக் கோமதி ஆற்றங்கரையில் பத்து குதிரை வேள்விகளை நடத்தினான்.
துயர்களைந்த யுதிஷ்டிரன்! – வனபர்வம் பகுதி 290-ராமன் கதையைச் சொல்லிய மார்க்கண்டேயர், யுதிஷ்டிரனுக்குத் துணைவர்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டி அவனைத் தேற்றுவது…
“மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {யுதிஷ்டிரா}, இப்படியே அளவிலா சக்தி கொண்டவனான ராமன், வனவாசத்தின் விளைவாகப் பெரும்பேரிடரைப் பழங்காலத்தில் அனுபவித்தான். ஓ! மனிதர்களில் புலியே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, கவலைப்படாதே, நீ ஒரு க்ஷத்திரியன்! மேலும் நீயும் கரங்களின் வலிமையைச் சோதிக்கும் பாதையிலேயே சொல்கிறாய். அந்த வழி உறுதியாகப் பரிசுகளை ஏற்க இட்டுச் செல்லும். உன்னிடம் ஒரு துகள் அளவும் பாவமில்லை. இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், அசுரர்களும் நீ செல்லும் பாதையிலேயே செல்ல நேர்ந்தது! இது போன்ற துயரங்களுக்குப் பிறகுதான் வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்}, மருதர்களின் துணை கொண்டு விருத்திரனையும், ஒப்பற்ற நமுசியையும், நீண்ட நாக்குடைய ராட்சசியையும் {தீர்க்கஜிஹவை} கொன்றான். துணையுள்ளவன், தனது நோக்கங்களின் சாதனையை {நிறைவை} எப்போதும் ஈட்டுவான்!
தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தம்பியாகக் கொண்டவனால் {உன்னால்} போர்க்களத்தில் வெல்ல முடியாதது எது? பயங்கரப் பராக்கிரமம் கொண்ட இந்தப் பீமனும் பலம் நிறைந்த மனிதர்களில் முதன்மையானவனாக இருக்கிறான். இளைஞர்களும் வீரர்களுமான மாத்ரவதியின் {மாத்ரியின்} மகன்களும் {நகுலனும் சகாதேவனும்} பலமிக்க வில்லாளிகளாக இருக்கின்றனர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரா}, இப்படிப்பட்ட துணை கொண்ட நீ ஏன் விரக்தியடைகிறாய்? இவர்கள் மருதர்களின் துணை கொண்ட வஜ்ரம் தாங்குபவனின் {இந்திரனின்} படையை அழிக்கும் திறன் கொண்டவர்களாவர். தெய்வீக வடிவில் இருக்கும் இந்தப் பலமிக்க வில்லாளிகளைத் துணையாகக் கொண்ட நீ, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உனது அனைத்து எதிரிகளையும் போர்க்களத்தில் வெல்வாய் என்பது நிச்சயம்!
பலம் மற்றும் சக்தியில் கர்வமடைந்திருந்த தீய மனம் கொண்ட சைந்தவனால் {ஜெயத்ரதனால்}, துருபதனின் மகளான இந்தக் கிருஷ்ணை {திரௌபதி} பலவந்தமாக அபகரிக்கப்பட்ட போது, இந்தப் பலமிக்க வீரர்களின் பயங்கரச் சாதனைகளால் மீட்கப்பட்டாள் என்பதைப் பார். மன்னன் ஜெயத்ரதன் வீழ்த்தப்பட்டு, உனக்கும் முன்னால் சக்தியற்று கிடத்தப்பட்டான் என்பதைப் பார். கிட்டத்தட்ட எந்த உதவியுமற்று, பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பத்து கழுத்து ராட்சசனைப் {ராவணனைப்} போர்க்களத்தில் கொன்று, விதேக இளவரசி ராமனால் மீட்கப்பட்டாள்! உண்மையில், (அந்தப் போராட்டத்தில்) ராமனுக்குத் துணையாக இருந்தது, குரங்குகளும், கரிய முகம் கொண்ட கரடிகளுமே ஆவர். அவர்கள் மனிதர்கள் அல்லர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவை அனைத்தையும் உனது மனதில் நினைத்துப் பார்! எனவே, குருக்களில் முதன்மையானவனே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, (நடந்தது) அத்தனைக்கும் வருந்தாதே! உன்னைப் போன்ற சிறப்புமிக்க மனிதர்கள், ஓ! எதிரிகளை அடிப்பவனே {யுதிஷ்டிரா}, துன்பத்தில் நாட்டம் கொள்ளமாட்டார்கள்!” {என்றார் மார்க்கண்டேயர்}
வைசம்பயானர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படியே மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மார்க்கண்டேயர் ஆறுதலளித்தார். பிறகு, அந்த உயர் ஆன்மா கொண்டவன் {யுதிஷ்டிரன்}, தனது துயரங்களை விலக்கிவைத்து, மீண்டும் ஒரு முறை மார்க்கண்டேயரிடம் பேசினான்.”
——————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்