ஸ்ரீ ஆசார்ய நூற்றந்தாதி-

April 25, 2026

Click to access 2015.295141.Alarmeil-Mang-kaiyan-thaatiyum.pdf

யாதும்‌ அறியேன்‌ அதையே அறிந்தன்று
போதரா யென்றே பொருளாக்கும்‌ – நீதியான்‌
ஆசையால்‌ தாளினையே காப்பா அறிந்தின்று
பேசுகின்றேன்‌ வாஞ்சை வரப்‌ பெற்று –காப்புச் செய்யுள்

உய்வு பேற்றுக்குரிய யாதொன்றும்‌ அறியாத அறிவிலி” என்று என்னையறிந்து, அதுவே காரணமாக அடியேனைத்‌ தன்பாலழைத்து மெய்யுணர்வு இன்மையால்‌ அசித்தைப்போல (அறிவற்ற ஜடப்பொருளைப்‌ போல) கிடந்தவனை, மெய்யுணர்வை முற்றும்‌ போதித்து பொருளல்லாத . என்னைப்‌ பொருளாக்கி, சத்தை-யுண்டாம்படி செய்த ஆசாரியன்‌ செயலை இன்றாக அறிந்து மிக்க பிரேமையுற்ற அடியேன்‌, ஆசாரிய நூற்றந்தாதி என்ற வெண்பா யாப்பினால்‌ வாஞ்சையே வடிவாக ஆசாரியன்‌ திருவடிகளை முன்னிட்டுக்‌ கொண்டு இந்நூலை இயற்றுகின்றேன் –

சீரார்‌ வநசச்‌ செழுங்கடல்‌ வந்தமுதின்‌
ஏரார்‌ நிறைபொருள்மார்‌ பேய்ந்துறையும்‌ – ஆரா
வமுத்‌ யமுதமே வேறன்‌ றயிந்தை
எமையாளும்‌ பாடியன்தாள்‌ இங்கு–1-

எம்பெருமான்‌ திருக்கண்‌ வளர்தலால்‌ செழுமையுற்ற பாற்‌ கடலில்‌, (மஹாலக்ஷ்மி) தான்‌ தோன்றுவதற்கேற்ற சிறப்புற்றத்‌ தாமரை மலரில்‌ அமுதத்தோடு வந்தவதரித்து, எல்லாவற்றாலும்‌ அழகுமிக்க ஒத்தார்‌ மிக்காரையில்லாத பரம்பொருளான திருமாலின்‌ திருமார்பில்‌ இறையும்‌ அகலாது. பொருந்தியுள்ள ரூபத்தாலும்‌ குணத்தாலும்‌ பேரழகு வாய்ந்த பெரியபிராட்டியார்‌, அழுதந்தவிர்த்தப்‌ பேறு என்னலாம் படி எம்மையாளும்‌ திருவயீந்திரபுரம்‌ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின் திருவடியையே பற்றுக்கோடாகப் பற்றி உய்யும்படி அடியேனுக்குப் பேர் அருள் செய்தான் –

இங்கே திரிந்தே எழு பிறப்பும்‌ தீர்ந்தொழிந்தேன்‌
சிங்கப்‌ பிரான் சீர்மை ஆய்ந்தறிந்தேன்‌ – பொங்கும்‌
கருணைக்‌ கடலமு துண்பேன்‌ அமிந்தைத்‌
திருவன்‌ திருவடி சேர்ந்‌ தின்று –2-

இருள்தரு மாஞாலமாகிய இவ்வுலகத்தில்‌ மனம்போனபடி திரிந்த அடியேன்‌ திருவயீந்திரபுரத்தில்‌ வாசஞ்செய்யும்‌ ஸ்ரீமத்‌ பகவத்‌ கைங்கர்யமாகிய செல்வம்‌ நிரம்பப்பெற்ற ஸ்ரீமத்‌ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ திருவடிகளை, அவரருளால்‌ இன்று சேர்ந்து தேவ, மனித, விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்‌ ஆகிய ஏழுவகைத்‌ தோற்றங்களாகப்‌ பிறக்கும்‌ பிறவியொழிந்து, சிங்கப்பிரான்‌ புகழை ஆராய்ந்தறிந்து ஸ்ரீவைகுண்டமாகிய திருநாட்டிற்‌ சேர்ந்து அளவில்லாமல்‌ பொங்கி வழியக்கூடிய பநப்தநாதனின்‌ கருணையை அநுபவிப்பேன் –

இன்றுநாளை யென்றறியேன்‌ கங்குல்
பொன்றுமுட லென்றுநா னென்றறியேன்‌ – பொன்றுவிக்கும்‌
தீதறியேன்‌ யாதறியேன்‌ தேரத்‌ தெரிந்தென்னை
ஒதுவித்த தொண்பொருள்‌ ஒன்று-3-

இன்றென்றும்‌ நாளையென்றும்‌ உலகத்தவம்‌ சொல்லும்‌ கால வேறுபாட்டையும்‌ இவற்றைச்‌ சார்ந்து நிகழும்‌ நிகழ்ச்சிகளின்‌ வேறுபாட்டையும்‌ இவ்வாறே இரவு பகலின்‌ வேறுபாட்டையும்‌ அறியேன்‌. எடுக்கும்‌ பிறவிகள்‌ தோறும்‌ அழிந்து படும்‌ உடல்கள்‌ அவ்வாறு அழியாத நிலை பெற்ற உயிர்களின்‌ நிலைகளையும்‌ அறியேன்‌. அழிவுக்குக் காரணமான அடியேனை நன்கறிந்து இந் நிலை போய்‌ எல்லாவற்றையும்‌ தெளிய அறியும்படி ஒப்பற்ற பொருள்‌ ஒன்று ஒதுவித்தது –

ஒன்றுதான்‌ போதமுநி வேதமுநி நாதமுநி நன்று நலந்தீதுங்‌ காட்டுமுநி – நன்றும்‌ சிவந்த வாய் செம்பவளம் கண் கமலம் ஒன்மை உவந்துளத்துப்‌ பாடியனென்‌ றோர் -4-

ஒதுவித்த அழகிய பொருள்‌ யாதெனின்‌? மனனஞ்‌ செய்து மெய்யுணர்வை நிரம்பப்‌ பெற்றதும்‌, இதைப் பிறருக்கு அறிவிப்பதையே தொழிலாக வுடையதும்‌, நல்லொழுக்கத்தில்‌ ஏவுவதும்‌ மற்றுள்ள நல்லதும்‌ தீயதும்‌ காட்டக்கூடிய நன்கு சிவந்த தாமரைப் போன்ற வாயையும்‌ தாமரைப்‌ போன்ற இதழ்களை யுடையதும்‌ அழகிய கைகளை யுடையதும்‌ எல்லார்‌ திறத்தும்‌ நன்மையே வேண்டுவதுமான பாஷ்யமா சாரியரே யாகுமாம் –

ஓரடி முந்தமற்‌ றோரடி முந்தவதின்‌
ஈரடியும்‌ சேர்ந்தென்னை ஏற்பதே? – ஈரடியக்‌
சேர்ந்திணைந்‌ தன்றன்றே சேமமாம் ஆறுபயன்‌
ஒர்ந்திணைந்‌ துள்ளதெம்‌ பால்‌–5–

அடியேனை ஏற்பதற்காக ஓரடிமுற்பட்டு வர, அதைக்காட்டிலும்‌ இன்னொரு திருவடி முற்பட, இப்படி ஈரடியும்‌ சேர்ந்தென்னை ஏற்றது வியப்பன்றோ? இதன்றி இந்த இரண்டு திருவடிகளும்‌ சேர்ந்தே சாதனமும்‌ பயனுமாகும்‌ என்பதை யானறியேன் –

எம்பெரு மானார்‌ இசைத்ததாக்‌ கேட்டதுண்டு
நம்பும்‌ படி யொன்றும்‌ நானறியேன்‌ – வம்பெதற்கு?
வீடில்நாள்‌ மூன்றில்‌ முமுச்சுபடி மெய்ப்பித்த
பாடியனே பெற்றேன்‌ பயன்‌–6-

உஜ்ஜீவனத்துக்‌ கேதுவாக எம்பெருமானார்‌ ஸ்ரீபாஷயம்‌ அருளிச்‌ செய்துள்ளதாகக்‌ கேளவிப்படுகிறோம்‌, அதை நேர் கண்டறிந்ததில்லை. ஸ்ரீபாஷ்யத்தில்‌ சீக்கிரமாகப்‌ பல ப்ராப்தி உண்டு, இல்லை யென்‌கிற வம்பெதற்கு? நிரந்தரமாக மூன்று நாட்களில்‌ முமுக்ஷுப்படி என்கிற திருமந்திரார்த்தத்தை உள்ளவாறு கேட்பித்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளையே அடியேற்குப்‌ பயனாகப்‌ பெற்றேன்‌-

பயனுற்ற தொன்றன்றே பாவிரித்தான்‌ மாறன்‌ உயர்வசந பூடணம்‌ ஓதி – நயந்துரைத்தான்‌ தத்துவ மூன்றின்‌ தகவனைத்தும்‌ தானோக்கி வித்தகன்நீ! யென்றான்‌ வியந்து–7-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளைப்‌ பயனாக மட்டுமோ பெற்றோம்‌? இவரால்‌ மாறன் கலையாகிற பகவத்‌ விஷயத்தை உரைக்கப் பெற்றேன்‌;ஸ்ரீவசன பூஷணம்‌ உரைக்கப்‌ பெற்றேன்‌; இங்ஙனே தத்வ த்ரயமும்‌ அருளப்‌ பெற்றேன்‌; இவற்றைக்‌ கேட்ட தன்மையைக்‌ கண்டு வியந்து ‘நீ வித்தகன்‌” என்று அவரால்‌ அருளப் பெற்றேன் –

வியந்தான்‌ உகந்தான்‌ விரிகமலம்‌ நோக்கி
பயந்தான்‌ பரன் தான்‌ பணியை – உயர்ந்தோர்‌
இணைந்தா மரைத்தாள்‌ இசைத்தான்தன்‌ பொன்தான்‌
பிணைத்தான்‌ பீழை தகர்த்து–8-

ஸ்ரீ பாஷ்யமாசாரியன்‌, அடியேனை வியந்தான்‌, உகந்தான்‌, தாமரைக் கண்களால்‌ விரியக்‌ கடாக்ஷித்தான்‌. அடியேன்‌ பாலுள்ள குறைகளைப் போக்கி உயர்ந்தவர்களான மெய்யடியார்‌ திருவடி யிணை யடியை வணங்கும்படி இசைவித்து, தன்‌ அழகிய திருவடிகளில்‌ இருத்திக்‌ கொண்டான்‌.

தகர்த்தேன்‌ மடமை வினைப்படலம்‌ தாக்கி
உகக்கடிந்தேன் ஊணைக் கமலம் புகுந்தேன்‌
நனியாக் கலவி இன்பம் நாளும் நுகர்வேன்
இனியனெனும் பாடியன் தாள் ஏய்ந்து –9

இனியவரான ஸ்ரீ பாஷ்யமாசரியன்‌ திருவடிகளைப்‌ பொருந்தியதால்‌ அறிவின்‌மையை அறத்தொலைத்து, அதன்‌ காரியமான பாப சமூகத்தையொழித்து, அதின்‌ கார்யமான உடல்‌ தொடர்பை யொழித்து, இறைவன்‌ திருவடிகளைப் பிரியா மெய்யடியார்‌ கூட்டத்து புகுந்து அளவிலா இன்பம்‌ நாளும்‌ நுகர்பவனாயினேன் —

ஏய்ந்த குருகூரன்‌ தன்தான்‌ இணையடியே வாய்ந்த சரணா வரித்தன்றே – நீந்திப்‌
பிறவிக்‌ கடல் கடந்தீர்‌ பேதை எனையும்‌ உறவைப்பீர்‌ உந்திருத்தாள்‌ உய்த்து–10–

பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! திருக் குருகூரில்‌ அவதரித்து பிறந்த பொழுதே துறவியான நம்மாழ்வாரின்‌ திருவடிகளிணையே தஞ்சமாகக்‌ கொண்டு, அவரருளால்‌ பிறவிக் கடல்‌ கடந்தீர்‌. அறிவிலியான அடியேனையும்‌ தேவரீர்‌ திருவடிகளில்‌ பொருந்தச் செய்து, அவ்வாறே பிறவி தொலைத்து பேரின்பமுற்று வாழும்படி செய்வீராக –

உய்த்தும்‌ கடைக் கணித்தும்‌ ஒப்ப நினைந்திட்டும்
எய்த்த இது தன்னைப் பற்றாச-மெய்த்த வுரை
எட்டு எழுத்தும் முப்பத்திரண்டு எழுத்தும் ஐயைந்தும்
தொட்டுரைத்த ஒன்றே துணை –11-

அடியேன்‌ அறிவிலியாய்‌ உய்யும் வழி யறியாமல்‌ பிறவிக் கடலில்‌ ஆழ, அதையே காரணமாகக் கொண்டு பாஷ்யமாசாரியர்‌ என்னை நினைத்து தன் முன்‌ நிறுத்தி, கருணைப் பூத்தக்‌ கண்களால்‌ நோக்கி, மெய்யடியார்‌ திரளில்‌ சேரும்படி செய்து, மெய்ப் பொருளான எட்டெழுத்துள்ள திருமந்திரம்‌, இருபத்தைந்து எழுத்தான த்வய மந்திரம்‌, முப்பத்திரண்‌ டெழுத்தான சரம ச்லோகம்‌ இவைகளின்‌ அர்த்தங்களைச்‌ சுட்டிக் காட்டி நெஞ்சில்‌ பதிய வைத்த அவரருளே அடியேனுக்கு உஜ்ஜீவனத்துக்குத்‌ துணை யாகும் —

துணைவனே துன்பப்‌ பிறவிக்‌ கடல்நீர்‌
புணைவனே பொய்ம்மை இருள்தீர்‌ – இணையில்‌
கதிரவனே பூரியர்‌ சுற்றங்‌ கழற்றும்‌
சதிரனே தந்தருள்வாய மறறு–12-

துணைவராயும்‌, துன்பமேயான பிறவிக் கடலைக்‌ கடத்தும்‌ நாவாய்‌ போன்றவராயும்‌, பொய்யறிவாகிய இருளை நீக்கும்‌ ஸூரியனாயும்‌, தகவு இல்லாதவர்களின்‌ உறவை நீக்கும்‌ சதுரராயும்‌ உள்ள தேவரீர்‌, உய்வு பேற்றுக்குத்‌ தக்கதை அடியேனுக்கு உகந்து அருள்‌ செய்வீராக –

மற்றோர்‌ பொருளுளதே? மாயை அறத் தொலைத்து
தெற்றத்‌ தெளிவித்துச்‌ சேம நல்கி – பிற்றைப்‌
பிறப்பொழித்துப்‌ பெம்மான்‌ கழலிணைத்து நாளும்‌
உறுமின்பம் உண்பிக்கவே–13-

ஆசாரியன்‌ அருளைக் காட்டிலும்‌ பிறிதொரு சிறந்த பொருள்‌ அடியேற்குளதோ? பிறவிக்‌ கேதுவான பிரகிருதி தொடர்பை நீக்கி,அறிவின்‌ மையாகிற மயக்கத்தைப் போக்கித் தெளிவைத்‌ தந்து,இவ்வளவிலேயே ஆனந்தமுறச்‌ செய்து முகுந்தனான இறைவன்‌ திருவடிகளில்‌ சேர்த்து மேலுள்ள காலமெல்லாம்‌ பேரின்பம்‌ நுகரும்‌ வாய்ப்பினை அடையும்படி செய்தார் –

உண்பித்தான்‌ ஒண்மை உலகார்யன்‌ ஓர்ந்தருள்செய்‌
விண்புகு விஞ்சுசுவை முத்தர்தம்‌ – பண்பிதனை
தக்கவாறுண்டு தரமுயர்ந்து நிற்கின்றேன்‌
மிக்கவா நான் எவ்வெவர்க்கும் மேல் –14-

உலகோர்க்கு உய்யும்‌ வழியைத்‌ தந்தவரான வள்ளல்‌ பிள்ளை லோகசாரியர்‌, தாம் மிக வுணர்ந்து அருளிச்‌ செய்த ஆகாசத்தைப்‌ போன்று உயர்ந்த சுவை யுடைய முத்தர்க்கு இன்பத்தை வழங்கக்‌ கூடியதான ஸ்ரீவசநபூஷணம்‌ என்ற நூலை அமுதாகக் தேர்ந்து அநுபவிக்கும்படி செய்தார்‌. பாஷியமாசாரியரும்‌ அதை அடியேனுக்கு உபகரித்தார்‌. அடியேனும்‌ அதன்‌ தரமறிந்து உள்ளத்திருத்தினேன்‌. இதனால்‌, நான்‌ உலகில்‌ எவருக்கும்‌ மேன்மையனாவேன் –

மேலா மிகு புகழ்ப் பாடியன் தன் மெய் வழி சால்
தோலா அருள்தந்த தொல்வழியில்‌ – நாலாம்‌
வழியே எளிய உரிய வழியா
அழிவிலா ஈரியல்புக்காம் –15-

மேலானார்‌ புகழும்‌ புகழ்களுக்கெல்லாம்‌ மேம்பட்ட புகழாலரான பாஷ்யமாசாரியர்‌, தம்‌ மெய்யுணர்வால்‌ ஆய்ந்து, முக்தி நெறியான நான்கில்‌ எல்லா நெறிகளைக் காட்டிலும்‌ மிக எளியதும்‌ அழிவற்ற ஆத்ம பரமாத்மாக்களுடைய உண்மை நிலைமைகளுக்குப்‌ பொருந்தியதும்‌ எவரும் மேற் கொண்டொழுகுவதற்கு உரியதாகிய மிகச்‌ சிறந்தது சரணாகதி உபாயமே யாகும்‌ என்றார் –

ஆமா றறிவுடைய ராவ தரிதன்றே
தேமா மலர்மா திருவருள்சார்‌ – நாமடந்தை
நாவன்‌ திருவயிந்தைப்‌ பாடியன்‌ நல்குதல் போல்‌
யாவனே ஆரியர்சார்‌ பின்று–16-

தன்னை யடைந்தாரை உய்விக்கத்தக்க அறிவுடையராக்குவது அரிதே யன்றோ இவ் வுலகின்‌ நிலை? இப்படி யிருக்க, தேனொழுகும்‌ தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய திருமகளின்‌ அருளைப் பெற்ற கலைமகள்‌ வாழும்‌ திருநாவை வுடையவரான திருவயீந்திரபுரம்‌ பாஷ்யமாசாரியரைப்‌ போல்‌ அடைந்தாரைக் காக்கும்‌ இயல்புடையவர்‌ எவரே உளர் –

இன்றே பிறந்தேன்‌ பழுதே யிழந்த நாள்‌
குன்றோ? மலையோ? கொழுங்கடலோ? – ஒன்றறியேன்‌
பாடியன்‌ வந்திலனேல்‌ பாழன்றே?
மேல் நாளும்‌ தேடிவந்தான்‌ ஏதிலருள்‌ செய்து–17-

மாறி மாறிப் பலப்‌ பிறவிகளை யடைந்து நின்ற கீழ்‌ நாள்களெல்லாம்‌ பல கல்பங்களாக கழிந்தது மட்டுமின்றி ஒரு குன்றினளவு, பெரியமலையளவு பெருங்கடலினளவு என்றளவிட முடியாதக்‌ காலமெல்லாம்‌ எனக்குப்‌ பழுதேயாயின. பாஷிய மாசாரியர்‌ காரணமற்ற கருணையால்‌ அடியேனைத்‌ தேடி வந்து, எனக்கருள்‌ செய்த இந்நாளே பயனுள்ள பிறவி யடைந்தேன்‌ என்றவாறு-

செய்த நலன்‌ ஈதென்று சிந்திக்க ஒல்லுமே?
மெய்யுணர்வின் மேம் பொருளைச் சேர் நெறியும் பொய்மையைப்
போக்குதலும் மெய்ம்மை மிக வுணர்த்தி பொன் கழலில்
வீக்கு மெய்ம்மைப்‌ பாடியன் மெய்‌ யின்று–18-

பாஷ்யமாசாரியர்‌ செய்த ஆனந்தத்துக்‌ கேதுவான நன்மைகளை மனத்தால்‌ நினைக்கவும்‌ முடியுமா? மெய்யுணர்வின்‌ தொடர்பால்‌ அடைதலுக்குரிய பரம் பொருளை அடையும்‌ வழியையும்‌, அதற்குத்‌ தடையானப்‌ பொய்யுணர்வைப்‌ போக்குதலும்‌, தன்னுடைய அழகிய திருவடிகளில்‌ சேர்த்துக்‌ கொண்டு மெய்யறிவை நன்கு உணர்த்தி அருள்‌ செய்த இவை யனைத்தும்‌ மெய்யேயாகும் –

இன்றன்றே யானும்‌ இலன் போய்‌ உளனானேன்‌
என்றடி யேனை இருந்துகேள்நீ – என்றதுமே
எண்பெருக்‌ கந்நலத்‌ தொண்பொரு ளாயினன்‌
திண்கழற்‌ பாடியற்‌ சேர்ந்து–19-

அடைந்தாரைக்‌ கைவிடாது எம்பெருமானிடத்தில்‌ சேர்க்கும்‌ திருவடி களையுடைய பாஷ்யபாசாரியர்‌, அடியேனை அழைத்து ௭திரிலிருத்தி முமுஷுப்படியைப்‌ போதித்தலுமே, எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட அளவிடமுடியாத ஆனந்தத்தை யுடைய இறைவனோடு சம தர்மத்தை அடையத் தக்க இன்றே, அசத்தாயிருந்த அடியேன்‌ சத்தானப்‌ பொருளானேன்‌ என்றவாறு –

சேர்ந்தேதி லின்னருளே பொய்ம்மையைத்‌ தீர்த்தருள
ஆர்ந்த மதிநலம்‌ அன்றடைந்து – ஓர்ந்தீங்‌
குபய விபூதி ஒழிவி லுடையான்‌
அபயமிங்‌ குற்றே னது–20-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ வேறு காரணமற்ற இன்னருளால்‌ அடியேனைத்‌ தன் பால்‌ சேர்த்து நிறைந்த பக்தியும்‌ அறிவும்‌ உண்டாகும்படி பண்ணி, ஒரு சிறு துணுக்கும்‌ தன்னை விட்டு நீங்காது இரண்டு விதமான உலகத்திலிருக்கும்‌ அனைத்தையும்‌ தனக்குடமைப்‌ பொருளாகக்‌ கொண்டிருக்கும்‌ எம்பெருமனால்‌ அஞ்சேல்‌ என்றருளப்‌ பெற்றேன்‌. ஈதன்றே அடியேனுடைய பாக்கியம் –

அதன்றே ஒழுக்கம் இலது உண்டறிதல்
அதன்றி மெய்ஞ்ஞானம் அறிதல் இதன்றே?
முழுமையன் பாடியன் முந்துற்ற என் போல்
விழுமயரின் மிக்கார் எவர் ? –21-

அறிவொழுக்கங்களால்‌ நிறைவுபெற்ற குருவை அடைவதே உய்வு பேற்றிற்குரியதாகும்‌. இதனை நாம்‌ அறிவது இயலாதே. இது உலகின்‌ நிலை. அப்படியிருக்க அறிவற்றவனான அடியேன்‌ இவற்றை எப்படி அறிவேன்‌? அறிவொழுக்கங்களால்‌ நிறைந்த பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே அடியேன்‌
இருக்குமிடம்‌ தேடிவந்து இன்னருளைச்‌ செய்தார்‌. இதனால்‌ அடியேனைப்போல்‌ சிறப்புடையாரின்‌ மிக்கவர்‌ எவர்-

எவரே? விடம்போல்‌ இருந்துடன்‌ நாளும்‌ பவரேகைப்‌ பண்ணும்‌ பரிசும்‌ – அவரே கழற்றுந்‌ திறனறிவார்‌ பாடியன்‌ தானே கழற்றுங்‌ கருணை மிகக்‌ கொண்டு –22-

தீய செயலைப்புரிவதற்குக்‌ காரணமான நம்முடைய உடலானது விஷம்போல்‌ நாள்‌ தோறுமிருந்து நம்மை நலிகின்றது. இப்படிப்பட்ட உடற்பிறவியை நீக்க வேண்டுமானால்‌ விரோதி ஸ்வரூபத்தை நன்றாசு அறியவேண்டும்‌. அவ்வாறு அறிந்து, அவ்விரோதியை பொக்குவதில்‌ வல்லவரான பாஷ்யமாசாரியர்‌, தன்‌ கருணையாலே அடியேனுடைய விரோதியை போக்கி என்னை ஆட்கொண்டர்‌-

கொண்டான்‌ நிரம்புங்‌ குறைக்கொள்ளி நானாவேன்‌
மண்டிய தீவினையேன்‌ மாலுடையேன்‌ – கொண்டான்‌
உலகில்‌ நிகரில்லாப்‌ பாடியன்‌ ஒன்றோ
அலகில்‌ அருளால்‌ அணைத்து–23

இவ்வுலகில் எல்லாவாற்றாலும்‌ நீசைதை நிரம்பிய குறைக்‌ கொள்ளியானக்‌ காரணத்தினால்‌ மொய்த்த தீவினையுடைய வனானேன்‌-இத்தகு தீவினையேனையும்‌ கைக்‌ கொண்டு ஒப்பற்றக்‌ கருணை யுடையவராக ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ அளவற்ற அருளால்‌ அடியேனை அணைத்துக் கொண்டார் –

அணைவான்‌ அணைத்தார்‌ பெரிய உடையார்‌
இணையில்லாச்‌ சீரார்‌ இறையை – அணைத்தான்‌
கருணைக்‌ கடல்போலுங்‌ கண்ணென்னுந்‌ தோளால்‌
பரிவுமிகும்‌ பாடியன்வந்‌ தின்று–24-

முத்தனாய்‌ வருமவனை அணைத்துக் கொள்ளும்‌ அளவற்ற கல்யாண குணங்கள்‌ நிரம்பிய ஒப்பற்றவனான சக்ரவர்த்தித்‌ திருமகனை (இராமனை) பெரியஉடையார்‌ என்ற ஜடாயு அளவற்ற ஆர்வத்தால்‌ அணைத்தார்‌. அது போல்‌, பெருங் கருணைக் கடலான பாஷ்யமாசாரியர்‌, பவித்திரத்தை உண்டாக்கும்‌ கண்ணென்னும்‌ தோளால்‌ அடியேனை அணைத்துக்‌ கொண்டார்‌.

இன்றன்‌ றிறைவன்பா லுள்ளவுற வொன்பதும்‌
ஒன்றும்‌ உணரோம்யாம்‌ தானறிவான்‌ – இன்றயிந்தை
பாடியன்பால்‌ சேர்த்தும்‌ பரிவின்‌ முழுக்களித்தான்‌
ஈடிலம்யாம்‌ என்றுலகின்‌ தேர்வு–25-

அநாதிகாலமாக எம்பெருமானுக்கும்‌ நமக்கும்‌ உள்ள உறவு ஒன்பதையும்‌ நாம்‌ அறியோம்‌. முற்றுணர்வினாகிய எம்பெருமான்‌ தானறிவான்‌. இத்தகு உறவின்‌ காரணமாக அடியேனை உய்வு பெற நினைத்து தகுந்தவரான பாஷ்யமாசாரியரிடம்‌ பரிவோடு சேர்த்து, மெய்யுணர்வை முழுக்க உண்டாக்கினான்‌. இதனால்‌, இன்று உலகவர்‌ இவன்‌ ஒப்பற்றவன்‌ என்று நிர்ணயிப்பதற்கு ஏதுவானேன்‌ – என்றவாறு –

தேர்வ லிதமென்னாச்‌ சிந்தியேன்‌ பாவியேன்‌
ஊரோ டுழல்வேனைப்‌ பாடியனாம்‌ – நாரணன்‌
மந்திரத்தின்‌ நுண்பொருளை மாட்டிச்‌ செவிவழியே
தந்தருள்‌ செய்தான்‌ நேர்ந்து–26-

ஆத்மாவாகிற நமக்கு நன்மையைச்‌ சிந்திக்காமல்‌ உண்டியே உடையே என்று உகந்தோடும்‌ ஊரவரோடு உழல்கின்ற பாவியான என்னை, பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ அடியேனுக்கு இதம்‌ செய்வதற்காக, என்னை வளைத்துப்பிடித்து நாரணன்‌ மந்திரமாம்‌ எட்டெழுத்தின்‌ உட்பொருளை செவியின்‌ மூலம்‌ உபதேசித்தருள்‌ செய்

நேர்ந்து நினைந்தும்‌ வணங்கி வழிபட்டும்‌
கூர்ந்துமிகும்‌ அன்பின்‌ குறிக்கொண்டும்‌ – தீர்ந்துநின்பால்‌
தஞ்சம்‌ அடைந்தனன்‌ பாடிய நின்‌ தாளிணையே
எஞ்சுத லில்லா அரன்‌–27-

பெருமான்‌ அருள்தமக்கு வேண்டுமென்று ஈடுபட்டு, வணங்கி வழிபாடுகளைச்‌ செய்யும்‌ மிகமிக அன்புடையவரான பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! தேவரீரையே தஞ்சமென்றடைந்தேன்‌. ஆதலின்‌, தேவரீர்‌ அடியேனுடைய உய்வு பேற்றிற்குக்‌ குறைவற்றக்‌ காப்பாளாராக ஆகக் கடவீர் –

அரணென்‌ றடைந்தனன்‌ ஆரியநின்‌ தாள்கள்‌
முரணும்‌ அழுக்குடம்பும்‌ ஞானம்‌ – முரணும்‌
ஒழுக்கமும் தெற்றென அற்றன தேர்ந்தேன்
விழுப்பொருள்‌ நீயா விழைந்–28-

ஆசாரிய ஸ்வாமிகளே! தேவரீர்‌ திருவடிகளே காப்பாகுமென்று தஞ்மென்று அடைந்தேன்‌. அடைந்த இம்மாத்திரத்‌ தாலேயே, தீயவிஷயத்தில்‌ ஈடுபாட்டை விளைவிக்கும்‌ அழுக்குடம்பு, அதன்காரணமான தீயவொழுக்கம்‌, அதன்காரணமான பொய்யறிவு இவையனைத்தும்‌ பறந்தோடின. இதனால்‌, தேவரீரே விழுமிய பொருளென்று உணர்ந்தேன் –

விழைந்தேன்‌ இனியதா வேகடஞ்செய்‌ நின்னை
விழைந்திலன்முன்‌ மாயவன்சேற்‌ றள்ளல்‌ – அழுந்தி
பல் பகல் பாழ் பட்ட மீட்பதினி யுண்டாயின்
நல் வகையில் நீ இனி நல்கு –29-

முன்காலமெல்லாம்‌ வலிய சேறாகிய இந் நிலவுலகில்‌ அழுந்தி உருப்படி யில்லாமல்‌ கிடந்தமையால்‌ இரும்பைப்‌ பொன்னாக்குவாரைப்‌ போல் இருக்கிற தேவரீருடைய ஸ்வபாவத்தை அறியாமல்‌ நீண்டகாலம்‌ பாழே போனேன்‌. இன்றாகத்‌ தேவரீரை அறிந்து அன்பு பூண்டேன்‌. ஆனால்‌, பாழே கழிந்த காலத்தை இனி மீட்பதொன்று உண்டே? தேவரீரே இதை யருளிச்‌ செய்ய வேணும்‌-

நல்கும்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ வேட்பன
அல்லனே தான் பொதுவன்‌ நீர்சிறப்பின்‌ – அல்லரே
ஏந்தூர்‌ சடகோபன்‌ வேட்பன ஈவதே
உந்தம்‌ சிறப்பினுக்‌ கொப்பு–30-

குருகூருக்குத்‌ தலைவரான நம்மாழ்வார்‌ எவ் வண்ணம்‌ எம்பெருமானை ஆசைப்படுவாரோ உபய விபூதிக்கும்‌ பொது நின்ற எம்பெருமான்‌ அவ் வண்ணமே நல்குவான்‌. எமக்கு ஆசாரியரான தேவரீரோ, உம்மைத் தஞ்சமென்று அடைந்தாரை அவர்கள்‌ விரும்பியது தரும்‌ சிறப்புடைய நியதி யுடையீர்‌. இத்தகைய நீர்‌, உம்மையே தஞ்சமாக அடைந்த ஏந்தூர்‌ சடகோபனாகிய அடியேன்‌ விரும்பியதைக்‌ கொடுப்பதே சிறப்பாகக்‌ காப்பவரான உமக்குத்‌ தகும்‌ என்று அடியேன்‌ விண்ணப்பம் –

ஒக்கும்‌ அடியேனைக்‌ கைக்கொளல்‌ உந்தமக்கே
ஒக்கும்‌ அடியேனும்‌ தாள்சாரல்‌ – தக்கதே
ஈடினை யில்லாப்‌ பெருமையீர்‌ நீரன்றே
ஈடினை யில்சின்ன வனான்‌–31-

சிறப்புடைய ஆசாரியரான உமக்கே அடியேனைக்‌ கைக்கொளல் தகும்‌. தேவரீரோ ஈடியிணையில்லாப்‌ பெருமை-யுடையவரெனத்‌ தக்கவராகையாலே, அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளைக்‌ சார்வதே ஒக்கும்‌. அடியேனோ சிறியவர்களில்‌ ஈடிணையில்லவன்‌ என்பதே உண்மையாகும்‌

நானென்‌ றெனதென்றும்‌ நான்பெரிய கோனென்றும்‌
வானொன்‌ றகங்காரத்‌ தியான்வளர்ந்தேன்‌ – தேனென்‌
றமுதென்றும்‌ மும்மநுப்பால்‌ ஆழ்ந்ததின்‌ ஆசான்‌
நமவென்‌ நலங்கொடுத்தனன்‌–3
2–

அடியேன்‌ கீழ்க்கழிந்த நாள்களிலெல்லாம்‌ நானென்றும்‌,எனதென்றும்‌, நானே பெரியவன்‌ என்றும்‌ இப்படி வானைவிட உயர்ந்தஅகங்காரத்தில்‌ முதிர்ந்தவனாய்‌ இருந்தேன்‌. இந்நிலையில்‌ ஆசார்ய சுவாமிகள்‌ அடியேனுக்கு மூன்று மந்திரங்களில்‌ முதல்‌ மந்திரமான திருமந்திரத்தில்‌ நடுவில்‌ பதமான நம: என்ற சொல்லை விவரித்து, தேனில்‌ இனியதும்‌ அமுதம்‌ போன்றதும்‌ மரண மற்றதுமான இந்த விஷேச அர்த்தங்களை உபதேசித்து அடியேனை உய்வித்தார் –

கொடுத்தான்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ ஈந்த
கொடுத்தான்‌ பதின்மர்‌ குறிக்கும்‌ மொழிகள்‌
கொடுத்தான்‌ கலம்பகம்‌ மற்றும்‌ அனந்தம்‌
மடுத்தேன்‌ மதுவெனப்‌ பெற்று–33-

உலகோர்‌ துன்பத்தைப்‌ போக்க திருநகரியில்‌ அவதரித்தவர்‌ நம்மாழ்வார்‌, அவர்‌ அருளிய பிரபந்தங்கள்‌, மற்றுள்ள ஆழ்வார்கள்‌ பிரபந்தங்களையும்‌ கொடுத்தார்‌. அடியேன்‌ பாஷ்யமாசாரியரை அடைந்ததே காரணமாக, அடியேனைக் கொண்டு திருவாய்மொழிக்‌ கலம்பகத்தையும்‌ இயற்றும்படி செய்து, மதுரமிக்க ஸம்பிரதாய அர்த்தங்களையும்‌ அடியேனை அநுபவிக்கச்‌ செய்தார் –

பெற்றேனின்‌ தாளிணையில்‌ பாமாலை பெய்கலையைக்‌
கற்றேன்‌ கடும்பிறவி காய்ந்தொழித்தேன்‌ – நற்றேன்‌
ஒழுகுநின்‌ கீர்த்தி நயந்துரைத்தேன்‌ ஓர்கால்‌
பழகு பரிந்துரைப்பால்‌ பட்டு–34-

ஆசாரியரே! மறு பிறப்பறுக்கும்‌ உமது தாளிணையே தஞ்சமாகப்‌ பெற்றேன்‌. நின்‌ திருவடி விஷயமான பாமாலையாகிற கலையைக்‌ கற்றேன்‌-இதனால்‌, துன்பத்துக்குக்‌ காரணமான பிறவி மீண்டும்‌ வாரா வண்ணம்‌ தேவரீர்‌ கீர்த்திகளை உலகறியச்‌ செய்தேன்‌.சில சமயம்‌ உலகோர்க்கு தேவரீர்‌ திருவடியை அடைய புருஷகாரமாகவும்‌ வாய்ப்பேன்‌ – என்றவாறு-

பட்டேன்‌ பருவரல்‌ பல்லூழிக்‌ காலமெல்லாம்‌
தொட்டேன்‌ பாடியன் தன்‌ தூமலர்த்தான்‌ – தொட்டதுமே
முன்ன வினை பின்ன வினை ஆரத்த மூன்று ஒழிந்த
என்னை நிகர் யாரே யினி –35-

கீழ்க் கழிந்த நாட்களிலெல்லாம்‌ பிறப்பிறப்புப்‌ பிணியால்‌ படாத பாடுபட்டேன்‌. காதாகித்கமாக பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ திருவடியைத்‌ தொட்டேன்‌-தொட்டதும் இப் பிறப்புக்கு முற்பட்ட பிறவிகளில்‌ செய்த வினைகள்‌, பிற்பட்ட வினைகள்‌ இவை யனைத்தும்‌ தீயினில்‌ தூசாகி கழிந்தொழிந்தன. இனி, வினை யற்றவர்களில்‌ எனக்கு நிகராக யவருமில்லை என்றவாறு–

இனியோர் குறை யுண்டோ பூதூரில் வள்ளல்
பனி மலர்த் தாளிணையே பற்றா -நனி விழையும்
சிங்களில் பாடியன் தன் செங்கமலத் தாளிணையே
துங்கமா தூய் மௌளிக் கொண்டு –36–

ஸ்ரீபெரும்புதூர்‌ யதிராசருடைய குளிர்ந்த தாமரை மலர்‌ போன்ற திருவடியினையே பற்றாக மிக விரும்பி, ஆறும்‌ பேறுமாகப்‌ பற்றிய பாஷ்யமாசாரியருடைய திருவடித்‌ தாமரையையே அடியேன்‌ உத்துங்கமான முடியாகக்‌ கொண்ட பிறகு, இனியும்‌ ஒரு குறையுள்ளதோ? எனக்கு –

கொண்டான்‌ வரமுநி கோயில்‌ உகந் தயிந்தை
கொண்டான் நல மந்தம் இல்லத–கொண்டோம்
உலகளந்தான்‌ பொன்னடியோம்‌ பாடியன் போல் யமும் ன்பம்‌
நிலமளந்தான்‌ சொம்மாயினோம் –37–

மணவாளமாமுநிகள்‌ திருவமீந்திர புரத்தையே தமக்குகந்த கோயிலாகக்‌ கொண்டார்‌. அதை யறிந்த பாஷ்யமாசாரியரும்‌ நலமந்தமில்லாததான அந்தக்‌ கோயிலையே தமக்கேற்ற வாச ஸ்தலமாகக்‌ கொண்டார்‌. இவர்‌ அபிமாநித்த சிஷ்யர்களாகிய யாமும்‌ உலகளந்தான்‌ பொன்னடியார்‌ ஆதலால்‌ நிலமளந்தவனுடைய சொத்தாக ஆயினோம் —

நேமிசங்கம்‌ கண்கைகால்‌ வாய்முகம்‌ நாபியணி
தாமரைகள்‌ தாங்கி கருணைக்‌ கண்ணோட்டம்‌
அயிந்தையில்‌ ஈருருவும்‌ ஆறு பயன்‌ ஆவதே!
நயந்தெரிந்து நானடைந்தேன்‌ நன்கு–38-

அடைந்தாரைக்‌ காப்பாற்ற வேண்டி பஞ்ச ஸம்ஸ்காரார்த்தமாகத் தரித்த திருவாழித்‌ திருச் சங்கமும்‌, தன்னை அடைந்தாரை நோக்கும்‌ மலர்ந்த திருக் கண்களும்‌, பிறவி போக்கும்‌ திருவடிகளும்‌, அஞ்சலென்ற திருக் கைகளும்‌, உபதேசம்‌ செய்யும்‌ திரு முகமும்‌, எம்பெருமான்‌ திருமேனிக்குப்‌ போலி யுருவான திரு நாபிக்‌ கமலமும்‌ ஆகிய இவைகளைத்‌ தாங்கி கருணைக்‌ கண்ணோட்டங்‌ கொண்டு எழுந்தருளி யிருக்கும்‌ ஸ்ரீமந்‌ மணவாள மாமுனிகளும்‌ அவரின்‌ நிழல்‌ என்னலாம்படியான பாஷ்யமாசாரியரும்‌ இவர்கள்‌ இருவரும்‌ ஈருருவோ? என்று நினைக்கலாம் படி யிருக்கும்‌ இருப்பை நினைத்து அவர்களையே தஞ்சமடைந்தேன்‌.

நன்றென்‌ றுளதேயோ? பொய்யறியா நானறிந்த
என்றென்றும்‌ யாண்டும்‌ இலதன்றே – குன்றாக்‌
கருணைக்‌ கடலே தான்‌ பாடியன்‌ வேறன்‌
றிருனிலத்தில்‌ பேரொளியே யின்று–39-

பொய்யென்ப தறியாத அடியேன்‌ அறிந்த தொன்றைச்‌ சொல்லுகின்றேன்‌. இருள் தரு மா ஞாலத்தில்‌ பேரொளிப்‌ பிழம்பாகத்‌ திகழும்‌ திருவயீந்திர புரம்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே ஆவர்‌. கருணைக் கடலான அவரைப்‌ போல்‌ நன்றான ஒரு பொருள்‌ இன்று எவ்விடத்திலாகிலும்‌ உளதோ? இல்லை யென்றபடி –

இன்றன்றே? என்றென்றும்‌ ஈடிணை யென்பதில்லை
பொன்றாப்‌ புகழோன்‌ சடகோபன்‌ – பொன்றாத
பேரறிஞன்‌ நாதமுநி யாமுநன்‌ பேராளன்‌
நேராவ ரென்பதிலை நேர்‌–40-

இன்றும்‌ முற் காலத்திலும்‌ மேல் வரும்‌ காலத்திலும்‌ என்றும்‌ அழியாத புகழை யுடைய நம்மாழ்வாருக்கு ஒப்பானவர்‌ எவருமில்லை எனலாம்‌. அவரை அடி பணிந்த குறை வற்ற போறிஞரான ஸ்ரீமந்‌ நாத முநிகள்‌, அங்ஙனமே யாமுந முளிகள்‌, திக்கெட்டும்‌ புகழ் பரவும்‌ பேராளரான ராமாநுஜர்‌ முதலான இவர்களுக்கும்‌ ஒப்பாகக்‌ கூடியவர்‌ ஒருவரும்‌ இலர்‌ எனலாம்‌. நன்மை யொன்று மில்லாத அடியேனை அங்கீகரித்தமையால்‌ பாஷ்யமாசாரியரை வேண்டுமானால்‌ அந்த பூர்வாசாரியர்களுக்கும்‌ ஒப்புச்‌ சொல்லலாம்‌ – என்றவாறு –

நேராவார்‌ யாரே? கருணை நிரம்பியதில்‌
நேரார்‌ நிகரில்‌ புகழொன்றில்‌ – நேராவார்‌
உண்டேயோ? பாடியற்குப்‌ பெம்மானும்‌ உள்ளதேல்‌?
புண்டரீகம்‌ வான்பூத்த போல்‌–41-

கருணை நிரப்பத்திலும்‌ வாத்சல்யாதி குணங்களிலும்‌ பாஷ்யகாரருக்கு நிகர்‌ ஒருவருண்டோ? எல்லா நற் பண்புகளால்‌ நிறைந்தவனான எம்பெருமானும்‌ அவருக்கு நிகராக மாட்டான்‌. உளர்‌ என்பீரேல்‌! ஆகாயத்தில்‌ பூத்தத்‌ தாமரைப்‌ போலாகும்‌ என்பேன் –

போலா மதுரகவி மாறன் தன்‌ பொன்னருளே
ஏலாரே? சான்றோ ரெனக் கொண்டு – மேலாத்‌
தகவுடைய தாய் தந்தை என்று நின்ற அஃதே
மிக விரும்பும்‌ பாடியனே மெய்‌–42-

மதுரகவியார்‌, தன்புன்மையைக்‌ கண்டால்‌ சான்றோர்‌ தன்னை ஏற்க மாட்டார்‌ என்று கருதியே அழகிய அருளை யுடைய ஸ்வாமி நம்மாழ்வாரையே தகவுடையதாய்‌, தந்தையான எல்லா வுறவுமாய்க்‌ கொண்டு தஞ்சமடைந்தார்‌. ஆழ்வாரும்‌ அவரை ஏற்றார்‌. அதைப் போலவே புன்மை யுடைய அடியேனை பாஷ்யமா-சாரியர்‌ ஏற்றுக்‌ கடைக் கணித்ததும்‌ மெய்யே யாகும்‌-

மெய்ம்மைத் திருவயிந்தை பாடியன் மேல் நாளில்
செம்மை யுறச் செய்யா திருப்பேனேல் -அம்மே
நலன் துறந்து நாண் துறந்து பாழ் படுவன் அன்றே
இலனாகி எய்த்து இருப்பன் இன்று –43-

பொய்யில்லா மணவாள மா முநிகள்‌ திருவயீந்திரபுரத்தில்‌ கோயில்‌ கொண்டதனால்‌ அத் தலம்‌ இன்று மெய்த்தல மாயிற்று. அத் தலத்தையே தனக்கு இருப்பிடமாகக்‌ கொண்டு ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியர்‌ முன் காலத்தில்‌ அடியேனை செம்மைப் படுத்தா திருப்பாரானால்‌, அம்மம்மே ! அடியேன்‌ எல்லா நலன்களையும்‌ துறந்து லஜ்ஜையும்‌ துறந்து அசத்தாகிப்‌ பாழ்பட்டிருப்பேன்‌ இன்று – என்றவாறு –

இன்றன்றே மாறன்‌ சடகோபன்‌ என்றென்று
நன்றானேன்‌ உண்ணாட்டுத்‌ தேசிதனை – நன்றா
குடிகஷணைன்‌ கோவிந்தன்‌ மாதவன்‌ அன்பர்‌
மடிவைத்து கந்தருள்வான்‌ மால்‌–44-

பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளால்‌ அடியேன்‌ செம்மைப்‌ பெற்றமையால்‌, இன்று மாறன்‌ என்றும்‌, சடகோபனென்றும்‌ உலகவர்‌ இயம்புகின்றதால்‌, அடியான்‌ தொண்டன்‌ என்ற உள் நாட்டுத்‌ தேஜஸ்ஸைத்‌ தரும்‌ பேர் பெற்றவனானேன்‌; கோவிந்தன்‌ குடியடியானென்றும்‌, மாதவன்‌ தமரென்றும்‌ சொல்லத்‌ தரமுடையவனானேன் . இதனால்‌ ஸ்ரீவைகுண்டத்தில் தேவிமாரோடு எழுந்தருளி யிருக்கும்‌ பர வாசுதேவன் இவனால்‌ அலம்பி லாபம்‌ பெற்றோம்‌ என்று உச்சி முகந்தருள்‌ செய்யும்‌ பாக்கியம்‌ பெற்றேன்‌ – என்றவாறு –

மாலே படைத்துக்‌ கடைக் கணித்தான்‌ மற்றுள்ள
ஏலா திருத்தான்‌ அன்றோ! – தோலாப்‌
புகழா இத்தைப் பாடியன் பூதூர்‌ முனிபோல்‌
மிகப் பரிந்தாட்‌ கொண்டான்‌ விழைந்து –45-

எம்பெருமான்‌ பிரளய காலத்தில்‌ இறகொடிந்த பக்ஷிகளைப்‌ போலான ஜீவாத்மாக்களைக்‌ கடைக் கணித்து, கை கால்‌ உறுப்புக்களோடுக்‌ கூடிய சரீரத்தைக்‌ கொடுத்து, அறிவைக்‌ கொடுத்து விட்டு விட்டான்‌. அயிந்தைப்‌ பாடியனோ ஸ்ரீபெரும்புதூர்‌ இராமாநுஜரைப்‌ போல்‌ ஜீவர்கள்‌ விஷயத்தில்‌ ஐயோ! ஐயோ! என்று மிகப்‌ பரிந்து அவர்களை விரும்பி அடிமை கொண்டான் –

விழையொழி யாதாயின்‌ வெந்துயரே வீவில்‌
விழைவுளதேல்‌ பாடியன் பால்‌ இன்பம்‌ – கழியும்‌?
விதிசூழ்ந்‌ திலனென்று வீறுசால்‌ தானே
பதிந்தான் தன்‌ பாலாம்பேரன்பு–46-

உலகியலில்‌ இருக்கும்‌ ஆசையை ஒருவன்‌ விடவில் யென்றால்‌, அவன்‌ பிறவித்‌ துன்பத்தில்‌ ஆழ்ந்து கிடக்க வேண்டியதே. ஆனால்‌, உத்தாரக ஆசாரியரான பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ திறத்து பேரன்பு உளதேல்‌, அந்தமில்‌ பேரின்பம்‌ நீங்குமா? நீங்காது. எம்பெருமான்‌ கருனை ஜிவர்களிடம்‌ ஏறிப்‌ பாயவில்லை என்று நினைத்து பாஷ்யமாசாரியர்‌ ஜீவர்கள்‌ தன் பால்‌ கொள்ள வேண்டிய பேரன்‌பை தாமே பதியும்படி செய்தார் –

அன்பின்‌ நிகரில்லா னாங்கே கருணையின்‌
இன்பி னிணையில்லான்‌ தோற்றத்தால்‌ – பொன் பிறங்கும்‌
மேரு மிசைப்‌ பூத்த செந்‌ தாமரையே ஒருருத்தாள்‌
கண் கை முகம் வாய்‌ மதி –47.

ஸ்ரீ பாஷ்யமாசாரியர்‌, எம்பெருமான்‌ திறத்தும்‌, தன்னை தஞ்சமென்றடைந்த சீடர்‌ திறத்தும்‌ அளவிலா அன்புடைமையின்‌ இன்புறுவதிலும்‌ இணையில்லாதவரே. இவர்‌ தோற்றத்தில்‌ பொன்னிறத்தால்‌ அழகிய திருமேனி, திருவடிகள்‌, திருக்கண்கள்‌, திருக்கைகள்‌, திருப்பவளம்‌, திருமுகம்‌ இவையனைத்தும்‌ அப்போதலர்ந்த செந்தாமரையொத்து பொன்மலையான மேருமலை௰ல்‌ பூத்தபல செந்தாமரைப் போல்‌ காட்சி யளிக்குமென்பதாம் –

மதியொன்றில்‌ மான்குறள்நேர்‌ மாயை கடிவில்‌
எதி சட கோப னிவனே – கதியில்லான்‌
என்போலும்‌ ஏழையைக்‌ கண்போலும்‌ காப்பவன்‌
விண்போகும்‌ சீர்பாடி யன்‌–48–

செயல்‌ செய்யச்‌ சிந்திப்பதில்‌ வாமந மூர்த்தி போலும்‌, மாயயைக்‌ கோபித்துப்‌ போக்குவதில்‌ முற்றுந் துறந்த சடகோபனே யாவான்‌. தன்‌ பாலீடுபாடு இல்லாத என்னைப்‌ போல்‌ அறிவிலியைக்‌ கண்‌ போலும்‌ சிறப்புறச்‌ செய்து காத்தருள்வார்‌ வானளாவிய கீர்த்தி வாய்ந்த பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌- என்பதாம்

பாடியனோ சானகியோ போல்வீர்நன்‌ குத்தமரில்‌
வீடில்சீர்‌ ஆழ்வான்‌ தனையடைந்தார்‌ – கோடல்‌
பதி பரவும்‌ பாங்கில்‌ கலியனோ டொப்பீர்‌ மதி நலத்தால்‌ மாறனே நீர்‌–49-

தான்‌ நரகமடைந்தாலும்‌ பரவாயில்லை. ஆனால்‌, ஆசை யுடையோர்‌ இழக்கலாகாது என்று எண்ணி ஆசாரியன்‌ ஆணையை மீறி திருமந்திரத்தை ஆசையுள்ள எல்லோருக்கும்‌ தூளி தானம்‌ செய்த எம்பெருமானாரைப்‌ போலவும்‌, தேவ மாதரை மீட்கத்‌ தான்‌ சிறையிருந்த சீதாப் பிராட்டியைப்‌ போலவும்‌, தரிசனத்தைக்‌ காக்க தன்‌ கண்ணை யிழந்த கூரத்தாழ்வானைப்‌ போலவும்‌, தன்னை அடைந்தாரைக்‌ கைக் கொண்டு திவ்விய தேசங்களை வாழ்த்திய திருமங்கை யாழ்வாரைப்‌ போலவும்‌, மயர்வற மதிலம்‌ அருளப்‌ பெற்றவர்களில்‌ தலைவரான நம்மாழ்வாரைப்‌ போலத்‌ திகழும்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! இவர்களில்‌ நீவீர்‌ எவரோடு ஒப்பாவீர்‌-

நீரே சயமே யடிமைத்‌ தலை நின்றீர்‌ நீரே அடிமையில்‌ நீக்கமிலீர்‌ – நீர்தாமே கோதிலடி யாருங்‌ குணந்திகழ்‌ கொண்டலும்‌ நீதி நெறி வித்தகரும்‌ நீர்‌–50-

பாஷ்யமாசாரியரே! பயனாகிற அடிமையில்‌ தலை நின்றவர்‌ நீரே; எம்பெருமானுக்‌ காற்றும்‌ தொண்டில்‌ பிரிவதில்லாதவரும்‌ நீரே; குற்றம்‌ யாதுமில்லாது அடிமையில்‌ தலை நின்ற தோடல்லாமல்‌ அடைந்தாரைக்‌ கைக் கொண்டு குணந் திகழ்‌ மேகத்தோடு ஒத்தவரும்‌ ஆவீர்‌. ஆத்ம பரமாத்மாக்களின்‌ நீதியை முற்றும்‌ அறிந்தவரும்‌ நீரே யாவீர் –

நீரே நிகரற்ற நீசனெனை கைக்கொண்டீர்‌
பாருடன்‌ நீரும்‌ பரிவுமிகு – ஊரவரும்‌
எக்காலத்‌ தெவ்வெவரும்‌ ஏற்பதொண்‌ றுண்டேயோ?
மிக்க புகழ் தத்துவமே –51–

நிகரற்ற நீசனான என்னை நீரே உகந்துக்‌ கைக் கொண்டீர்‌. நிலத் தேவரும்‌ ஸ்வேதத்‌ தீப வாசிகளும்‌, மங்களாசாஸனமே யாத்திரை யாயுள்ள நித்திய விபூதியிலுள்ளாரும்‌ முதலாக எக்காலத்திலும்‌ எவ்வுலகிலுள்ளாரும்‌ ஏற்பது என்பது இல்லை யேயாம்‌. மேலாம்‌ புகழே வடிவான தத்துவமே இதுவாகும்‌. தேவரீருடைய வாத்சல்ய குணம் –

மேதினியில்‌ ஐம்புல வாஞ்சை மிகவுடையன்‌
காதுங்‌ கடுநெஞ்சன்‌ தீச்செயல்கள்‌ – யாதும்‌
எனையன்றே அண்டி நிலை பெறுவ யாண்டும்‌
வினையமென்ப தொன்றும்‌ மிகை–52-

பாருலகில்‌ ஐம்புலன்‌ நுகரும்‌ விஷய விருப்பம்‌ மிக உடையவன்‌; கொலை செய்ததற்குரிய கடுமை மிக்க நெஞ்சினை யுடையவன்‌; கொடிய செய்கைகளை யுடைய இப்படிப்பட்ட யாவும்‌ என்னைச்‌ சேர்ந்தே நிலை பெறுவனவாம்‌. எம்பெருமான்‌ விஷயமாக அன்பின்‌ பட்டும்‌ அடக்கமென்பதே யில்லாதவனடியேன் –

மிகையனே மெய்யடியாா கூட்டத்து யானோ
தகையிலன்‌ சாது கோட்டி தம்மில்‌ – நகையிலன்‌
நள்ளருட்கண்‌ இங்கலம்போல்‌ நானொருவன்‌ உள்ளேன்பால்‌
உள்ளதெல்லாம்‌ தீய துள–53-

மெய்யடியார்‌ கூட்டத்து அதிகப்‌ படுவேன்‌ யானொருவன்‌ என்பதாகும்‌. சாது கோட்டிக்குரிய பண்பற்றவன்‌; பகவதநுபவ மில்லாதவன்‌; குதூகலமில்லாதவன்‌; நடுநிசியில்‌ அடுப்புக்கரிபோல்‌ ஒளியற்றவன்‌; இலனென்பாரில்‌ நானொருவன்‌ உளன்‌; என்னிடம்‌ உள்ளதெல்லாம்‌ தீயதே உள்ளதாம் –

உளதேயோ? நீர்செய்‌ செயலின்‌ தரந்தான்‌
உளதேயோ? எம்பெருமான்‌ செய்த – உளதே?
இருவீரும்‌ செய்தசெயற்‌ கொப்பறிவணர்‌ உண்டோ?
பெருமைமிகு பாடியனே! பேசு–54-

தேவரீர்‌ அடியேன்‌ திறத்துச்‌ செய்த செயலின்‌ தரமறிதலுண்டோ? தேவரீரை அடியேற்குத்‌ தந்த எம்பெருமான்‌ செய்த செயலுக்கு ஈடுண்டோ? தேவரீர்களிருவரும்‌ செய்த நல்லுதவிக்‌ கொப்புண்டோ? ஒப்பறிவாரிங்குளரோ? இவற்றை பெருமை மிகு பாஷ்யமாசாரியரே! நீரே அருளிச்‌ செய்ய வேணும் –

பேசுதல்‌ வல்லீரே? நீர்செய்த பேருதவி
பேசுந்‌ தரமுடைத்‌ தல்லவே – நீசனேனைக்‌
கைக்கொண்ட காரியமே எற்கறி வித்ததால்‌
இக் குறிப்பே கொண்டுரைத்தேன்‌ இங்கு–55-

ஆசாரிய ஸ்வாமிகளே! அடியேன்‌ திறத்து தேவரிர்‌ செய்த பேருதவியானது, தேவரீரே அருளிச்‌ செய்யும்‌ தரமற்றது. ஆதலினால்‌ பேசுதல்‌ வல்லீராக மாட்டீர்‌. உனக்கெப்படித்‌ தெரியும்‌ என்று கேட்பீரானால்‌, அடியேனோ நிகரற்ற நீசனானவனெனக்‌ கொண்டு செம்மை படுத்திய செயலே, அடியேற்கறிவித்தாகுமிதைக்‌ கொண்டே நிகரற்ற செயலென்கிறேனாகும் –

இங்கறிந்தேன்‌ இன்றாக எம்பெருமான்‌ செய்தநன்றி
துங்கமிகு பாடியனைத்‌ தோற்றுவித்தல்‌ – இங்கிலதேல்‌
தொல்லூழிக்‌ காலந்‌ தொலைந்தகீழ்‌ மேல்நாளும்‌
பல்லூழிக்‌ காலம்‌ பழுது –56-

எம்பெருமான்‌ அடியேனை உய்விக்க வேண்டியே பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளைத்‌ தோற்றுவித்தான்‌ என்பதனை இன்றாக அறிந்தேன்‌. அப்படி அவரைத்‌ தோற்றுவிக்க வில்லையானால்‌, அடியேற்கு கீழ் கழிந்த காலமும்‌ இனி மேல்‌ வருங்காலமும்‌ பழுதாய்‌ முடிந்திருக்கு மன்றோ –

பழுதாகா வண்ணம்‌ பாடியன்தன்‌ சீலம்‌
விழுமிதென்‌ றுள்ளில்‌ விரித்தான்‌ – கழிபேர்‌
கருணையான்‌ அவ்வளவே வேறன்று கொண்டு
சரணடைந்தேன்‌ பாடியன்தா ளின்று–57-

ஆசாரிய ஸ்வாமிகள்‌, பிறர்‌ நலமே பேணும்‌ மிக்கப்‌ பெருங் கருணையால்‌ தன்னைச்‌ சார்ந்தாரை உய்வு பெறுத்தலில்‌ மிகவும்‌ ஊற்றமுடையவர்‌ ஆவார்‌ என்பதனை அடியேன்‌ உள்ளத்தில்‌ மிக விரியக்‌ காட்டி யருளினார்‌. இவ்வளவிலேயே அடியேன்‌ நிர்ணயித்து, இவர்‌ திருவடிகளில்‌ தஞ்சமென்றடைந்தேன்‌. இதனால்‌, அடியேன்‌ வாழ் நாளைப்‌ பழுதாகா வண்ணம்‌ மேற் கொண்டேன்‌ இன்றெ என்பதாம் –

இன்றயிதை மாமுநிதன்‌ தாளில்‌ இருந்து தொண்டு
நன்றியற்றும்‌ பாடியன் தன்‌ நாண்மலர்த்தாள்‌ – குன்றாத
ஆறுடன்‌ பேறாக வானில்‌ அரியயயன்‌
வீறுடன்‌ பெற்றேன்‌ விரைந்து–.58-

இன்றாக திருவயிந்திரபுரத்தில்‌ கோயில்‌ கொண்டுள்ள மணவாளமாமுநிகள்‌ திருவடிகளில்‌ செய்யும்‌ தொண்டு நிலை நின்ற பேறென்றறிந்து தொண்டு செய்யும்‌, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய அன்று பூத்த தாமரை போன்ற அழகிய திருவடிகளையே அழிவற்ற ஆறுடன்‌ பேறாக வானில்‌ பெறும்‌ பயனின்‌ பெறுதற்கரிய பயனாக சிறப்புற்ற வகையில்‌ விரைந்து பெற்றேன்‌ என்பதாம் –

விரைந்து திருமலை யாழ்வார்‌ விரும்பி
வரமுநியை சீடராகக்‌ கொண்டார்‌ – வரமுநியும்‌
கோயில் அயிந்தை கொடு பாடியற் கொண்டார்
ஆய்விலடி யேற்கொண்டான்‌ ஆர்ந்து –59-

திருமலையாழ்வார்‌, தீவிரமாக மிக விரும்பி மணவாள மாமுனிகளை உபயாத்திரையும்‌ தமதாகக்‌ கொண்டு சிறப்பித்தார்‌. மணவாள மாமுனிகள்‌
திருவயிந்திபுரம்‌ விரும்பி கோயில்‌ கொண்டு ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளை உய்யும்படியே பெற்றார்‌. பாஷ்யமாசார்ய சுவாமிகளடியேனை அளவிடற்கரிய பேரன்பினில்‌ கைக் கொண்டார் —

ஆர்ந்தபுகழ்‌ அச்சுதனே வந்தான்‌ உலகார்யன்‌
தேர்ந்தறிய வல்லமே? தன்பெருமை – தேர்ந்தறிவ
தென்ப தொருபொருள்‌ நாடுறைவர்‌ யாரறிவார்‌?
பண்பனே பாடியற்குக் காப்பு –60-

நிரம்பிய புகழுடைய அடைந்தாரைக்‌ கைவிடாத எம்பெருமான்‌ பிள்ளை யுலகாசார்யராய்‌ வந்துதித் தருளுகையால்‌ இவர்‌ பெருமை நாமறியோ மென்பதொரு பொருளல்ல, உலகிலுள்ளார்‌ எவருமே அறிய முடியாத பெருமையாகக்‌ கருதக் கூடிய பண்புடையரான உலகா சாரியரே ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்குக்‌ காப்பாவார் –

காப்பு வடக்குதிரு வீதிப் பிள்ளை காத்திலரேல்‌
காப்பெவர்‌ வாய் மொழி ஈட்டுரைக்கு – காப்பன்றி
நுண் பொருள்‌ முற்றவும்‌ நோக்குவித்தான்‌ பாடியற்கு
பண்பினெற்‌ கீந்தான்‌ பயன்‌–61-

வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை நம்பிள்ளை சொன்னை திருவாய்மொழி ஈட்டின்‌ உரையைக்‌ காத்து எழுதவில்லையானால்‌, காப்பாவார்‌ யார்‌? இந்த வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை ஸ்ரீவைஷ்ணவத்தை காப்பது மட்டுமல்லாமல்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியருக்கு ஈட்டுரையை தன்னருளால்‌ இவரிடம்‌ வந்து சேரும்படி நோக்குவித்தார்‌. இந் நோக்கை பாஷியமாசாரியர்‌ தம் பரம கருணையாலே அடியேன்‌ திறத்தில்‌ பயனுறும்படி செய்தார் –

பயனாநம்‌ பிள்ளையின்றேல்‌ ஆழ்வார்கள்‌ பாக்கள்‌
பயனோயோ? உம்பர்‌ திவத்தொப்பாம்‌ – பயனுடைத்தே
ஈடின மில்லார் இறையின்பம் மில்லாதோர்
பாடியனே பெற்றான் தன்‌ சீர்‌–62-

உலகுக்குப்‌ பெரும்‌ பயனாக உயர்வற உயர்நலமுடையவனால்‌ மயர்வற மதிநலம்‌ அருளப்‌ பெற்றவர்களாழ்வார்கள்‌ பதின்மரும்‌, இப்படி இவர்களால்‌ இறை யனுபவம்‌ கரைந்து வழிந்தவாறே அருளிச்‌ செயல்கள்‌ தொண்டர்க்கமுத மாயமைந்தன அருளிச்செயல்கள்‌. நம்பிள்ளை என்ற ஸ்வாமிகள்‌ அவதரிக்கவில்லையானால்‌ இந்த அருளிச்செயல்‌ பயனுடையதாகாது. இதன்றி தாழ்த்திக்கு முடிந்த நிலமான இருள்தருமா ஞாலம்‌ உம்பர்‌ திவத்தொப்பாம்‌ பயனுடைத்‌ தாயிற்று. இத்தகு அனுபவம்‌ நம்பிள்ளைகளால்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்‌ சார்ய சுவாமிகளுக்கு அருளப் பெற்ற அவ் வனுபவம்‌ தம் பரம கருணையால்‌ எமக்குக்‌ கொடுத்தார் –

தஞ்சீரை ஞானியர்கள்‌ தாம்புகழும்‌ வேதாந்தி
நஞ்சீயர்‌ தாம்பட்டர்‌ நல்லருளால்‌ – எஞ்சாத
ஆர்வமுடன்‌ மாறன்‌ மறைப்பொருள்‌ நூறுரு
ஆர்ந்தெற்கீந்‌ தான்பா டியன்‌–63-

தம்‌ கீர்த்தியை மெய் ஞானியர்கள்‌ கொண்டாடும்‌ தரமுடைய நஞ்சீயர்‌ என்றும்‌ வேதாந்தி என்றும்‌ பெயருடையார்‌, பட்டர்‌ திருவருளால்‌ மாறன்‌ மறையாகிய திருவாய்மொழியின்‌ நுண்‌ பொருள்கள்‌ முற்றும்‌ தம்மைச்‌ சார்ந்தார்‌ தமக்கு நூறுருவமையைக்‌ கொடுத்ததை, ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய சுவாமிகள்‌ மேற்படியார்‌ அருள்களால்‌ தாம்‌ பெற்று தன் பேரருளால்‌ அடியார்க்கருளினார் –

அன்பின்‌ அலைகடல்‌ ஆயிரம்போக்‌ காழ்பொருள்‌
இன்பின்‌ இளங்குமரன்‌ எம்பிராற்‌ – கின்புருவன்‌
எட்டெழுத்‌ தெட்டுகாதை பண்ணின்‌ தனிச் சுவையன்‌
பட்டர்திருத்‌ தாள்பா டியன்‌–64-

எம்பெருமானார் திறத்தும்‌ மெய்யடியார் திறத்தும்‌ அலைகடலை யொத்த அன்புடையாரும்‌, இன்பம ளிக்கும்‌ இளங்குமரனும்‌, பிறவித்‌ துயரொழிய வேண்டுவார்க்கு துன்பமொழித்து எம்பிரான் பால்‌ சேர்த்து இன்பமளிக்கும்‌ எட்டெழுத்துக்கு அஷ்டச்லோகி என்ற நூலருளியவரும்‌ பண்ணின்‌ தனிக் கலைஞரும்‌ ஆயிர நாமத்துக்கு ஆழ் பொருளெல்லாம்‌ அருளிச்‌ செய்தவருமாகிய ஸ்ரீமத்‌ பட்டருடைய திருத் தாளை தஞ்சமடைந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய சுவாமிகளின்‌ திருவடிகளே அடியேற்குத்‌ தஞ்சமாகும் –

பாடியன்‌ எம்பார்‌ பதற்சேர்ந்‌ திதந் தெரிவான்‌
ஈடில்‌ சுவையன்‌ தமிழ் மறையின்‌ – நாடு புகழ்‌
நாலாயிரம் பாவில்‌ எம்பெருமானார் தாள் சேர்த்‌
தோலாத்‌ துணைச் சீட னாம்‌–65-

ஸ்ரீபாஷ்யமருளிச்‌ செய்த எம்ருமானார்‌ திருத்தாளினைச்‌ சேர்ந்து உய்யும்‌ இதந்தெரிந்தவரும்‌, தமிழ்‌ வேதமாகிய நாலாயிரம்‌ பாசுரங்களில்‌ ஈடிணை யில்லாச் சுவையுடைய பண்ணின்‌ தணிக் கலைஞருமாகியவரும்‌ உலகெல்லாம்‌ புகழும்படியான எம்பார்‌, சிஷ்யாச்சார்ய முறையில்‌ சிறிதும்‌ மாறுபடாதவராய்‌ எம்பெருமானாருக்கு துணைமிக்க சீடனுமாவார்‌. இவர்‌ திருவடிகளைப்‌ பற்றின ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யர்‌ அடியேனை ஏற்ற குருவாகும் –

சீடன்‌ பெரியநம்பி சேர்ந்தசீடர்‌ ஐவர்‌
சேடனிரா மானுசனா சீர் தரும் -பாடியற்கும்
எம்பெருமான் உட்பட இந் நிலத் தேவர்க்கும்
இம்பர் நலமந்தமில் –66-

அர்ச்சாவதார மூர்த்திகளாய்‌ கோயில்‌ கொண்டுள்ள எம்பெருமான்களுட்பட ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகளோடு நிலத் தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசி யற அனைவர்க்கும்‌ இவ் வுலகிலுள்ளவர்‌ கட்கும்‌ இங்குண்டான ஆநந்தம்‌ நிலைத்திருப்பதற்குக்‌ காரணம்‌, ஐவர்களான பெரிய நம்பி, திருக்கோட்டியூர்‌ நம்பி பெரிய திருமலை நம்பி, திருமலை யாண்டான்‌, திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ இவர்களுக்கு சிஷ்யராய்‌ திருவனந்தாழ்வான்‌ அம்சமாய்‌ இராமாநுசராய்‌ வந்தவதரித் ததாலாகும் –

இலரேல்‌ இருநூ றகவைகளும்‌ ஈங்கே
நலமொன்‌ றுளதேயோ? நாட்டில்‌ – பலவென்‌?
பரமன் படைப்போடு பாடியன் எற்கோடல்‌
தரமன்று சத்திய மீது–67-

எம்பெருமானாரும்‌ அவருடைய மறு அவதாரமான மணவாள மாமுனிகளும்‌ இருநூறு ஆண்டுகள்‌ இந்த நிலத்தின் கண்‌ எழுந்தருளி யிருக்க வில்லையே யானால்‌ இந்த நானிலத்தில்‌ ஆனந்த மென்பதொன்றும்‌ உண்டோ? இல்லையேயாம்‌. நிற்க. பல பேசி என்‌? பரமன் படைத்த படைப்பும்‌ ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ அடியேனைக்‌ கைக் கோடலும்‌ முதலானவை பயனற்றுப்‌ போயிருக்கும்‌ இது சத்தியம்‌.

இதுவொப்ப தின்பமில்லை யாமுநர்த்‌ தாள்கள்‌
கதி பெற்றூர்‌ யாமுநர்த்‌ தாதை – கதி பெற்றேன்‌
இவ் விருவர்‌ தாங்களே ஆறுடன்பே றென்றபடியேன்‌
செவ்வி யுறச்‌ சேர்ந்தூய்ந்த னன்‌-68

ஸ்ரீமத்‌ ஆளவந்தார்‌ திருவடிகளையே ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளும்‌, இவர்‌ திருக் குமாரரான யாமுநாசார்ய ஸ்வாமிகளும்‌ தமக்குக்‌ கதி என்று பெற்றிருந்த இந்த இரண்டு ஸ்வாமிகளுடைய திருவடிகளையே கதி யென்றும்‌ ஆறும்‌ பேறுமா செவ்வி யுறச்‌ சேர்ந்துய்ந்தே னென்பதில்‌ இது ஓப்பதின் இல்லையாம் –

சேர்ந்தூய்ந்தோன்‌ சீராமன்‌ பங்கயக்கண்‌ ணன்தாள்கள்‌
ஆர்ந்த புகழ்ப்‌ பாடிய னம்பொனடிச்‌ – சேர்ந்துய்ந்தேன்‌
இவ்வளவே பேற்றினுக்கு ஏய்ந்த யானும் பெற்றனன்
கவ்வை யென்பால்‌ காட்டா தலை–69-

அடியேன்‌ நிரம்பிய புகழாளரான ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌, மணக்கால்‌ நம்பி, உய்யக் கொண்டார்‌ இவ் விருவருடைய திருவடிகள்‌ அடைந்து உய்ந்தவர்‌. இந்த ஸ்வாமிகளின்‌ திருவடிகளே கதி யென்று சேர்ந்த இவ்வளவே பேறு பெறுதற்குரிய யாவும்‌ பொருந்தி விட்டன. ஆதலால்‌ துர் விஷயங்கள்‌ என்பால்‌ தலை காட்டாது –

தலைகாட்டாத்‌ தண்ணென்ற ஞானவவொழுக்‌ கங்கள்‌
தலைக்காட்டாத்‌ தண்ணென்ற முக்கும்‌ – நிலைநாட்டும்‌
வாள்நேர்‌ உயர்கதியும்‌ வள்ளலெனும்‌ பாடியன்தன்‌
தான்தர முந்தும்‌ தகவு–70-

மிகத்‌ தாழ்ந்தான பொய்யறியும்‌ தீயொழுக்கம்‌ அழுக்குடம்பும்‌ என்பாலும்‌ தலைக் காட்டாதவைகள்‌. ஒளி பொருந்திய நித்திய விபூதியாம்‌ உயர் கதி வள்ளலெனும்‌ ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய தயையால்‌ தானே முந்தும்‌.

தகவில்‌ உலகின்‌ தகவுடையீர்‌ நீரேதகவென்னும்‌ தத்துவம்‌ வேட்கும்‌ – தகையீர்‌
தகுதியில்‌ தத்துவம்‌ நாயேனைக்‌ கொண்டு தகும் கூட்டம்‌ தந்தளித்தீர்‌ நீர்‌–71-

பெருமை யென்பதறியாத உலகில்‌ பெருமை மிக உடையீர்‌ நீர்‌. தயை யென்ற தத்துவம் தானே விரும்பும்‌ தயை யுடையீர்‌ நீர்‌. தகுதி என்பது இல்லாத அடியேனான கீழோனைக்‌ கைக் கொண்டு நிலத்தேவர்‌ கூடத்திலடியேனை இருத்தினீர்‌. இவற்றை யெல்லாம்‌ அடியேனைக்‌ கைக் கொண்டவாற்றானே அறிந்தேன் –

நீர்தந்த சேமம்‌ நிமலனாம்‌ நாதமுநி
பார் நிரம்பும்‌ பல் புகழ்ப்‌ பாவினத்தை – சீருநவே .
மீள்வித்த விஞ்சுசுவைப்‌ பண்ணமர்நா லாலிரத்தால்‌
ஆள்வித்த பாடியனன்றோ–72-

மிக்க சுவை யுடையதும்‌ பண்ணமைந்ததும்‌ உலகம்‌ நிறைந்த புகழுடையதுமான நாலாயிரத்தில் திவ்ய ப்ரபந்த பாசுரங்களைக்‌ ‘குற்றமன்றிக் குணம்‌ மிக்கவரான ஸ்ரீமந் நாதமுநிகள்‌, மறைந்து போனதை மீள்வித்ததைக்‌ கொண்டு அடியேனை ஆள்வித்தீர்‌. ஆதலால்‌, இத்தகைய பாஷ்யமாசார்யரான நீர்‌, அடியேற்கு எல்லாச்‌ சேமமும்‌ நீரன்றோ –

அன்றே குருகூர்ச்‌ சடகோபன்‌ தாளிணையும்‌ பொன்றாப்‌ புகழ்நிரம்பும் வாய் மொழியும்‌ –
நன்றுதவி பொந்நிலத்தில்‌ பொன்னிலத்தில்‌ மன்னு புகழ்ப் பாடியன்
என்னை நிகர்‌ யானென்றனன்‌–73-

திருக்குருகூரிலவதரித்த நம்மாழ்வருடைய இரண்டு திருவடிகளையும்‌, அழிவற்ற இவரருளிச்‌ செயலாம்‌ திருவாய்மொழியும்‌ அடியேற்குய்யும்‌ வண்ணம்‌ உதவி, இருள்தருமாஞாலமாகிய இவ்வுலகிலும்‌ தெளிவிசும்பு திருநாடான பரமபதத்திலும்‌ நிரம்பப்‌ பொருந்தியுள்ள புகழாளரான ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ ‘உனக்கு நிகர்‌ நீதா னென்றார் –

என்றறிவேன்‌ என்னாயன்‌ செய்தநன்றி முற்றவும்‌
இன்றறிந்தேன்‌ ஓரளவே சேனையர் கோன்‌ – தன் திறத்தில்‌
அன்பின்‌ அளவில்யான்‌ அங்ஙனமே என்பாலும்‌
அன்பின்‌ அளவில்லான்‌ என்று–74-

அடியேற்கு வகுத்த ஸ்வாமியான ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ அடியேனை உய்வித்தல்‌ பொருட்டு, அடியேன் திறத்தில்‌ செய்த நலம்‌ முற்றவும்‌ என்றும்‌ அறியப் போகாது. ஆயினும்‌ இன்றாக ஓரளவே அறிந்து கொண்டேன்‌. ஸ்ரீவைஷ்ணவ சமயாசார்யர்களில்‌ முதல்வரான ஸ்ரீமத் விஷ்வக்சேனரிடத்தில்‌ தாழுய்யும்‌ பொருட்டும்‌ பிறரை உய்வித்தல்‌ பொருட்டும்‌ அளவிறந்த அன்புடையாரானார்‌. அதே நிலையில்‌ அடியேனை உய்வித்தல்‌ பொருட்டு அளவு கடந்த அன்புடையரானார் –

என்றும்‌ மறவேன்‌ மறந்தேன்‌ இனியுணர்ந்தேன்‌
குன்றேய் குணக் கொண்டல்‌ பாடி – நின்ற புகழ்‌
கேள்வன் பொன்‌னாகத்து நீங்காத்தாய்‌ தாள்கட்கு
ஆளென்று புக்கான்‌ தனை–75-

குன்று போல்‌ மிக்க குணங்களால்‌ நிறைவாளனும்‌, கொண்டல் மேகம்‌ போல்வானும்‌ குறையேது மின்றி நற்குணக் கடலாக நின்ற புகழாளனான இறைவன்‌ திருமார்பை இறையும்‌ அகலாத உலக மாதாவான திருமகள்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றும்‌ ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளை உணராமையால்‌ மறந்தேன்‌; அடியேன்‌ உணர்ந்தேன்‌; இனி மறவேன் –

கேள்வனாகம்‌ நீங்காத்தாய்‌ தாள்கள்‌ சிரங்கொண்டு
கேள்வனையே தஞ்சமென்று கொள்ளும்‌ – மீள்வில்சீர்‌
பாடியன் தன் ஆர்ந்த புகழ் எக்காலும் பண் தொடுத்து
பாடுதற்‌ குற்றதொரு பற்று–76-

உலக நாயகன் தன்‌ திருமார்பை இறையும்‌ அகலாத உலக மாதாவின்‌ திருவடிகளைச்‌ சிரத்திற்‌ கணியாகக்‌ கொண்டு இவளைப்‌ புருஷகாரமாக, எம்பிரான்‌ தன்‌ திருவடிகளையே தமக்குத்‌ தஞ்சமென்று கொள்ளும்‌, பழுதின்றி குணங்களால்‌ நிறைந்த புகழாளரான ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய கெளரவம்‌ மிக்க புகழை எக்காலத்தும்‌ பண்ணின்‌ இசையோட தொடுத்துப்‌ பாடுதற்குரிய தொரு உபாதானமாகும் –

பற்றோ சிறிதில்‌ பரன்சீர்க்‌ கடல்மூழ்கி
நற்றமிழ்நூல்‌ நான்களித்த இன்பமாரிப்‌- பெற்றியன்‌
வண்குருகை வந்தருளும்‌ மாறன்‌ மலரடியே
பண்புமிகும்‌ பாடியருக்‌ கின்பு –77

உலகியலில்‌ பற்று சிறிதுமின்றி பரனாம்‌ பெருமானுடைய குணக்கடலில்‌ மூழ்கி அந்த குணங்களையே உபாதாநமாகக்‌ கொண்டு, திருவாய்மொழி திருவிருத்தம்‌, பெரிய திருவந்தாதி, திருவாசிரியம்‌ என்கிற நான்குப்‌ பிரபந்தங்களளித்த வளமிக்க குருகூரில்‌ வந்தவதரித்த நற்குணக்கடலாகிய சடகோபருடைய திருவடிகளே ஸ்ரீமத்பாஷ்யமா சார்ய ஸ்வாமிகளுக்கு என்‌றும்‌ இன்பமேயாம் –

இன்புருவன்‌ பொய்கை எழிலியகல்‌ வார்கடல்நெய்‌
மின்சுடரா வேங்கடவற்‌ காட்டுமவன்‌ – பொன்னடிகள்‌
வன்சரணா வாழும்‌ அயிந்தைவரும்‌ பாடியன்தூள்‌
உன்சரணா நெஞ்சமே யுள்‌–78-

பகவதநுபவ இன்பமே வடிவான பொய்கையாழ்வார்‌, ஸ்ரீபூமியையே அகலாக, நிறைகடலை நெய்யாக விளக்கேற்றி இந்த ஒளிமிக்க விளக்கால்‌ திருவேங்கடத்தெம்பெருமானை உலகங்காணக்‌ காட்டும்‌ அவர்‌ திருவடிகளையே தமக்கு வாழ்வாக அவதரித்த, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமிகள்‌ திருவடிகளையே நெஞ்சமே! உனக்குத்‌ தஞ்சமாக நினைவில்‌ கொள்ளுவாயாக –

உள்ளிருள்‌ நீக்கும்‌ ஒளிவிளக்‌ கேற்றுதற்கு
தெள்ளுதமிழ்‌ தேர்ந்து துணைக்கோடும்‌ – விள்ளரிய
கீர்த்தியார்‌ பூதத்தார்‌ தாளினையே பாடியற்கு
சீர்த்த பயன்‌ எற்கிவனே வாழ்வு–79-

உலகவருடைய அகவிருளைப்‌ போக்குதற்கு உள்ளத்திலுண்டான கோணலைப்‌ போக்கும்‌ தெளிந்த தமிழ் பாசுரமே நம்‌ செயலுக்கேற்ற துணை என்று தேர்ந்து துணையாகக்‌ கொண்ட, எவராலும்‌ புகழ்ந்து சொல்லுதற்கரிய சிறப்பு வாய்ந்த பூதத்தாழ்வார்‌ திருவடிகளையே, தமக்குற்ற பயனாகக்‌ கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே, அடியேற்கேற்ற பேரின்ப வாழ்வாகும்‌ என்பதாம் —

வாழ்வான்‌ வலிய வழி கண்டேம்‌ நன்மைமிக்காள்‌
கேழில் திருக்‌ கண்ட பொன்‌ னாழி கண்ட – கீழ்வில்‌
தமிழ்த் தலைவன்‌ பொன்னடியே தன் சரண்‌ கொண்டான்‌
எமைக்காக்கும்‌ ஏற்ற வழி–80-

நலமந்தமில்லதொரு நாட்டில்‌ போய்‌ வாழ்ச்சி பெற, சிறப்புற்ற மார்க்கமொன்று நாம்‌ கண்டு கொண்டோம்‌. எல்லா நலன்களாலும்‌ மிக்காளரான திருக்கண்டதோடு பொன்னாழி கண்டேன்‌ என்று பாடிய எக்குறையுமற்ற பேயாழ்வாராகிய தமிழ்த்‌ தலைவன்‌ அழகிய திருவடிகளே தன்‌ சரண் என்று கொள்ளும்‌, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ எம்மைக்‌ காப்பதற்கு ஏற்ற வழியாகுமென்பதாம் –

வழியல்‌ வழி யனைத்தும்‌ வாள் கொண்டு வெட்டி
கழிய மிகு நல்வழியே காட்டும்‌ – பழுதில் புகழ்‌
பத்திசாரன்‌ தாளிணையே பாடியற்காம்‌ பரிசு
இத்தகையோன்‌ ஏற்ற பரிசு–81-

தேவதாந்தர சாதனாந்தர ப்ரயோஜநாந்தர முதலான வழியில்லா அல் வழிகள்‌ பலவும்‌, தம்‌ நாவென்னும்‌ வாளால்‌ அறத் தொலைத்து எம்பெருமான்‌ நாரணனே ஆறும்‌ பேறும்‌ என்பது முதலா மிக மிக நல்ல வழிகளனைத்தும்‌ தெளியக் காட்டி உலகவரை உய்வித்த திருமழிசைப்‌ பிரான் திருடியிணைகளே, ஏற்ற பயனாகக்‌ கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே எமக்குரிய எல்லாப்‌ பயனுமாவாரென்பதாம் –

பரிசறிவார்‌ பல்லோர்‌ பரிசறிவார்‌ ஈடே?
குருகை வரு வண்சட கோபன்‌ – திருவடியே
பாடியற்‌ கேற்ற நிதி பாடியன் சேர்ப்‌ பாடியனே
ஈடிணையில்‌ எந்தம்‌ நிதி–82-

உலகில்‌ உற்ற பயனறிவார்‌ தாம்‌ கண்டதுவே பயனென்பார்‌ பல்லோர்‌, ஆனால்‌ பாஷியமாசாரியர்‌ கண்ட பரிசே அனைவர்க்கும்‌ ஏற்ற பயனாகையால்‌ பயனறிவார்‌ இவர்க்கீடில்லை. திருக்குருகூரில்‌ அவதரித்த சடகோபன்‌ திருவடிகளே நிதி போன்ற கதியாகும்‌ என்றருளியவர் ஸ்வாமி ராமாநுஜர்‌. இந்த ராமாநுஜர்‌ திருவடியைச்‌ சாரும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமி ஈடும்‌ எடுப்புமில்லா நிதியாகும்‌ எம் தமக்கு –

நிதிகண்‌ டுரைசெய்தோன்‌ நீள்குன்றத்‌ தியாவும்‌
நிதியா அடியா ரடித்தூள்‌ – நிதியாக இன்பப்‌
பெருங்குழுசேர்‌ சேரலர்‌ கோனின்பம்‌
பாடியற்‌ கின்பமெற்‌ கு-83

திருவேங்கட மலையின்‌ தொடர்பே நிதி என்றும்‌, மெய்யடியார்‌ திருவடித் துகளே நிதியாகவும்‌, எம்பெருமானை நினைந் தின்‌புறும்‌ பெருங் குழுவே பேரின்பமாகச்‌ சேரும்‌ குலசேகரப்‌ பெருமானே ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கு இன்பம்‌. இந்த ஸ்வாமிகளே அடியேனுக்கு ஏற்ற ‘இன்பமென்பது –

எமக்குக்‌ கதியாவார்‌ பாடியரென்‌ போல்வார்‌
தமக்குங்‌ கதியாவர்‌ தாமே – குமைக்கும்‌ .
உலகென்று பல்லாண்‌டு ஓதும் விட்ணு சித்தர்‌
உலகிய லென்று பல்லாண்‌ டோதிய பட்டர் பிரான்‌– 84

இவ்வுலகின்‌ தன்மையால்‌ எம்பெருமான்‌ திருமேனிக்குக்‌ கண்ணேறு வரும்‌ என்று பல்லாண்டு பாடிய பட்டர்பிரான்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கும்‌ உற்ற காப்பாவார்‌. இத்தகு ஸ்வாமி எமக்குக்‌ கதியாவதன்றி, என் போல்வார்‌ கீழோர்‌ பலருக்குங்கதி தாமே யாவாரென்பதாம் –

உற்று நோக்கில் தேவியர் மூவர் உயர்ந்தோர் யார்
பற்றிப்‌ பரன் தாள்‌ உலகுய்ய – முற்றுணர்வை
ஒதியருள்‌ கோதை உயர் கதி கொள்‌ பாடியன் தாள்‌
மா துயர் மாய்க்கும் மருந்து–85-

எம்பெருமானுடைய தேவியார்‌ மூவராகும்‌. இவர்களில்‌ உலகவர்களுக்கு உபசரிப்பதில்‌ உயர்ந்தோர்‌ யாவரென உற்று நோக்கில்‌ உலகோர்‌ பரன் தாள்‌ பற்றி உய்வடைய இன்றியமையாச்‌ சாதனமான மெய் யுணர்வை இரண்டு ப்ரபந்தங்களில்‌ தெள்ளத்‌ தெளிய ஒதி யருளிய கோதை நாச்சியரே என்பது தேறும்‌. இத்தகு நாச்சியார்‌ திருவடிகளையே உயர்ந்த கதியாகப்‌ பற்றிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே பிறவித் துயர்‌ ஒழிக்கும்‌ மருந்தாகுமென்பதாம் –

மருந்தாய தொண்டர் தாள்‌ தொண்டர் தாள்‌ தூளே
பெருவடிவாப்‌ பேணிக் கொள்‌ பெம்மான்‌ திருவடி சேர்‌
பாடியன் தன் தாளிணையே ஒப்பில் பரகதிக்கு
ஈடில்லா நம்நல்‌ தவம்‌–86-

பிறவி நோய மாத்திரமன்று, அனைத்து நோய்க்கும்‌ மருந்தாவது தொண்டரடித் தூளே யாகும்‌. இத் தகுத்‌ தொண்டரடிப்‌ பொடியே தமக்கு மேம்பட்ட திருமேனியாக விரும்பிக்‌ கொண்டதையே நிரூபகமாக உடையவர்‌ தொண்டரடிப்‌ பொடியாழ்வாராகும்‌. இந்தப்‌ பெருமை யுடைய இவ் வாழ்வார்‌ திருவடிகளையே தமக்குத்‌ தஞ்சமாகச்‌ சேர்ந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய திருவடி-யிணையே ஒப்பற்ற நலமந்தமில்லதோர்‌ நாட்டிற்குப்‌ போவான்‌ ஈடிணை யில்லா நம்முடைய நல்ல தவமாகும்‌ என்பதாம் –

நற்றவம்‌ மொன்றுமிலேன்‌ நாரணன்‌ தாள் பணியேன்‌
உற்ற உறவறியேன்‌ ஊழ்வினையேன்‌ — பற்றி நின்‌
தாள்பணியேன்‌ தண் கழலே பொய்யன்‌ புறந் திரிவேன்‌
ஆள் கொண்டாய்‌ கொண்டதுவே மெய்‌–87-

நலமந்தமில்லாதோர்‌ நாடுபுகுவான்‌ பொருட்டு உலகவர்‌ செய்வதாகிய நல்ல தவங்களொன்றும்‌ செய்திலேன்‌. இதைத்‌ தருவானான நாராயணன்‌ திருவடிகளைப்‌ பணிவதும்‌ செய்திலேன்‌. இவைகளின்‌ காரணமாக ஊழ்வினை வயத்தவனாய்‌, மெய்யுணர்வு மறைக்கப்‌ பெற்றவனாய்‌ பரனுக்கும்‌ எனக்கும்‌ உள்ள உறவுகளை ஒன்றும்‌ அறியேன்‌. இந்தக்‌ குறைகளெல்லாம்‌ தீர்த்து தெளிய பரம காருணிகரான தேவரீர்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றி பணியேன்‌. இன்னும்‌ பொய்யனாய்‌ தேவரீரையும்‌, எம்பெருமானையும்‌ விட்டுப்‌ புறந் திரியுமவனான அடியேனை மேல்‌ விழுந்து அடிமை கொண்டதுமன்றி, மெய்யாம்‌ வகையில்‌ மேல்‌ செய்வனவற்றைச்‌ செய்து அருளினீர் –

மெய்யார்‌ திகிரியையும்‌ மேவார்‌ செருக்களத்தில்‌
உய்யா வகை முழங்கும்‌ ஒண்ணந்தும்‌ – மெய்யாரும்‌
எட்டெழுத்தும்‌ புண்டரமும்‌ இன்னருளே நாமமும் நின்‌
பட்டழுந்தும்‌ பங்கயமீந்‌ தாய்‌–88-

ஒளிப் பிழம்பாகத்‌ திகழும்‌ திருமேனியை யுடைய சுதரிசனாழ்வானையும்‌, விரோதிகள்‌ நிறைந்துள்ள யுத்தக் களத்தில்‌ புகுந்து, விரோதிகள்‌ குடல்‌ குழம்பும்படி முழுங்கும்‌ பாஞ்ச சந்நியாழ்வானையும்‌ முறையே வலது தோளிலும்‌ இடது தோளிலும்‌ பொறித்து உண்மை யறிவினை விளைப்பதற்கு இன்றியமையாத திருவஷ்டாக்ஷர மந்திர முதலான வற்றையும்‌ திருமண்‌ காப்பையும்‌ திருவாராதன தெய்வமான தேவரீருடைய திருவடி நிலையும்‌ ஈந்தருளினீர் –

(ஈந்த) அருளே அருள் தந்த அன்னே சுரக்கும்‌
பொருளே இணையடிகள்‌ பொன்னே – மருவார்கள்‌
அங்கம் அடரும் அயிந்தை வாழ் அண்ணலே
இங்கு இறைவர் ஆள்கவத்‌ தா–89-

இவையெல்லாம்‌ தந்த, அருளே ஒருவடி வென்னலாம்படியான ஸ்வாமிகளே! அடியேன்‌ கடைத்தேற அருளைத் தந்த இறைவன்‌ போன்றவரே! மிகவும்‌ சுரந்து மிக உண்டான செல்வமே! பொன் போலுமழகிய இணைந்த திருவடிகளை யுடையீரே! விரோதிகளைப்‌ பறிப்பது போல்‌ ஒழிக்கும்‌ திருவயிந்தையில்‌ கோயில்‌ கொண்டுள்ள உற்ற ஸ்வாமியே! மேன்மேலும்‌ இங்ஙனமே ஆள்வீராக!

நல்குங்‌ கமலநேர்‌ நாண்மலர்த்‌ தாள்தொடங்கி
பல்சுவைய மேனி பரியந்தம்‌ – பல்சுவையில்‌
பாடிப்‌ பரவிய பாணன்சேர்‌ பாடியனே
ஈடில்‌ கதியாம்‌ எமக்கு–91-

நலமனைத்தும்‌ நல்குந் திருமகள்‌ தோற்றத்துக் கேதுவாகிய அன்று பூத்த தாமரைப்‌ போன்ற திருவடி மலர்‌ தொடங்கி, மிக்க பேரழகுக்குக்‌ கொள்கலமாகிய திருமேனி பரியந்தமாக பல விதமான பாட்டுச்‌ சுவையுண்டாம்படி பாடிப் பரவிய திருப்பாணாழ்வாரைத்‌ தஞ்சமடைந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே! நீரே எந்தமக்கு ஒப்பற்ற கதியாகுமென்பதாம் –

எமக்குங்‌ கதியுண்டே எண் பதினாறு தலம்
தமை வாழ்த்தியதே தகும்பே றமைக்கும்
பரகாலன் தாளிணையே தஞ்சம் கொள் பண்பன்
அரவிந்த மன்ன திருத்தாள் –92-

திருமங்கையாழ்வார்‌ எண்பத்தியாறு திவ்விய தேசங்களை வாழ்த்தி, அதுவே பெறும்‌ பயனான நலமந்த மில்லாதொரு நாடென்றமைக்கும்‌ இவர் திருவடிகளே தஞ்சமென்று கொள்ளும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய தாமரை போன்ற திருவடிகளே ஏதிலனான அடியேற்கு கதியாகு மென்பதாம் –

தாளிணைகள்‌ தானவர்‌ தேவர்‌ தொழுதிறைஞ்ச
நாள்தொறும்‌ மாமுனி வாழ்த்துரைக்க – நாள்தொறும்‌
பாவியேனைக்‌ கைக்கொண்ட பாடியன்‌ நாவழுத்த
தேவனாதன்‌ சேரயிந்‌ தை–93-

திருவயீந்த்ர புரமானது தினந்தோறும்‌ தானவர்களும்‌ தேவர்களும்‌ வந்து வந்து தொழுதிறைஞ்சவும்‌, ஸ்ரீமன்‌ மணவாளமாமுனிகள்‌ நாள்தொறும்‌ வாழ்த்துரைக்கவும்‌, பாவியேனான அடியேனையும்‌ கைக்கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ நாவினால்‌ நாள் தொறும்‌ நவின்று வழுத்தவும்‌ தேவனாதன்‌ கோயில்‌ கொண்ட தலமாகும் –

அயிந்தையில்‌ பாடிய யாதறியா நாயேன்‌
கயவனெனைக்‌ கண்டுகந்‌ தன்பின்‌ – நயந்தழைத்த
நன்மைமுற்றும்‌ ஊட்டினையே! நாண் மூன்றில்‌ அன்றின்‌றும்‌
நன்மைமிகும்‌ பேறனைத்தும்‌ நல்கு–94-

திருவயீந்திரபுரத்தில்‌ நித்திய வாசம்‌ செய்யும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யாசார்ய ஸ்வாமிகள்‌, உண்மை உணர்வில்‌ ஒன்றும்‌ அறியாத கீழோனானக்‌ கயவனாகிற என்னைக்‌ கண்டு செளசீல்யத்தால்‌ உகந்தருகில்‌ அழைத்து நன்மை யென்பதனைத்திலும்‌ மேம்பட்ட நன்மையை முற்றூட்டாக மூன்று நாளில்‌ அக் காலத்து ஊட்டி யருளினீர்கள்‌. அது போல்‌ நன்மை மிகும்‌ பேறனைத்தும்‌ இன்று நல்குவீராக –

நல்கும்‌ நலமிக்க ஆசார்யர்க்‌ கெல்லைநீர்‌!
பல் புகழில்‌ மிக்‌க புகழ்ப் பாடியர் நீர் -அல்வழியில்‌
செல்வேன்‌ சிரத்தில்‌ அடி சூட்டிச் சீடர்களில்‌
எல்லையிவ லென்னும்‌ பேர் –95-

பல புகழில்‌ மிக்க புகழாளராம்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ நீராகும்‌. அதே நிலையில்‌ ஆசார்யரென்பவரில்‌ முடிவில்‌ உயர்ந்தவரெனத்‌ தக்கவர்‌ நீரே. அடியேனோ நன்மைக்கு மாறான அல் வழியிலேயே செல்பவன்‌. இத் தகு அடியேனுக்கு சிரோ பூஷணமாக தேவரீர்‌ திருவடித் தாமரைகளைச்‌ சூட்டி அலங்கரித்தருளி சிஷ்ய வர்க்கத்தில்‌ இவன்‌ முடிவானவனென்னும்‌ பேர்‌ நல்குவீராக –

போ் பிதற்றிப்‌ பெற்றேன்‌ பெறும் பரி சங்ஙனமே
சீர்ப் பாடிப்‌ பெற்றேன்‌ சிறப்பெல்லாம்‌ – காரேய்‌
கருணை தனைக்‌ கண்டு கலக்கங்கள்‌ தீர்ந்தேன்‌
இருணிலத்தில்‌ பாடியன்தாள்‌ ஏய்ந்து–96-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளின்‌ திருநாமத்தைக்‌ கண்டவாறு பிதற்றியும்‌ மெய்யடியார்‌ கூட்டத்துப்‌ பெற வேண்டிய பகவதனுபவ பயனைப்‌ பெற்றேன்‌. அவ்வாறே அவர்‌ சீர்களைப்‌ பாடி உய்வு பேற்றுக்குரிய சிறப்பெல்லாம்‌ பெற்றேன்‌. கைம்மாறு கருதாத கொண்டல்‌ முகில்‌ போல்‌ இந்த இருள் தரு மா ஞாலத்தில்‌ அவர் தம்‌ கருணைப்‌ பெருக்கத்தைக்‌ கண்டு உய்வகையில்‌ குறை யுண்டாக்கும்‌ கலக்கங்கள்‌ தீரப் பெற்றேன்‌. இவ்வளவும்‌ இவர்‌ தம்‌ திருவடிகளைப்‌ பொருந்தியதலாகும் –

ஏய்ந்த கருணைவடி வானோன்‌ இவனன்றே
வாய்ந்த ஒழுக்கநிலை நின்றோனே – மாய்ந்து
அறிவின்மை முற்றறிவின்‌ பாடியன்‌ மிக்கோன்‌
பிறிது பெறுவ தெவன்‌?–97-

ஒழுக்கத்திற்‌ காணுமிடத்து மிகப் பொருந்திய கருணையே வடிவானவர்களாகிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே யாவர்‌. இந்த கருணைக்கேற்ற ஒழுக்க மிக்காரும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யரே தான்‌. அறிவின்மை தொலைந்து முழு மெய்யுணர்வின்‌ மிக்கவரென்பதில்‌ குறை யேதுமில்லாதவர்‌. இத்தகு பண்புகளிருக்க இதில்‌ மிக்க பிரிதொரு பண்பு பெறுவதெது –

எவன்தான்‌? அயிந்தையில்‌ ஈடிணை யில்லான்‌
எவன்தான்‌? மதுரகவி நிட்டை – எவன்தான்‌?
வரயோகித்‌ தாள்சேர்ந்த தேவநாதன்‌ சேயாம்‌
பரனாம்‌ இவனெங்‌ கதி–98-

திருவயிந்திரபுரத்தில்‌ ஈடிணையில்லா ஆசார்யர்யவரே? மதுரகவி நிட்டையை மேற்கொண்டிருந்தவர்‌ யாவரே? ஸ்ரீமன்‌ மணவாள மாமுனிகளையே கதியென்று பற்றிய தேவனாதாசார்யர்‌ திருக்குமாரரென்ற சிறப்புற்றவர் யாவரே? இத்‌ தன்மைகளால்‌ மேன்மை யுள்ளவராகிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமிகள்‌ ஆகிய நீரே எங்களுக்குக்‌ கதி யாவீர் –

கதியொன்‌ நிலதென்போல்‌ காசினியில்‌ யாது?
மதிதான்‌ இலதில்‌ உலகில்‌ – எதுவொன்‌
றிதுவேயோ? பாடியற்குப்‌ பற்றுதற்‌கேது
இதுபோல்வார்‌ யாரே? இனி–99-

யாரும்‌ பற்றத் தகாத கதியற்றவன்‌ என்போல்வாருலகில்‌ யாவர்‌? அறிவின்மையில்‌ இந்நில உலகில்‌ என் போல்வார் யாரே? இனி இத்தகு நிராதீன நிலைகளே ஸ்ரீமத்பாஷ்யமாசார்யர்‌ தனக்குத்‌ தஞ்சமெனக்‌ கருதி கைக் கொள்வதற்குங்‌ காரணமாயினவாம்‌. இதனால்‌ ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கு உலகில்‌ நிகரில்லை யென்பதாம் –

இனிமறவேன்‌ செம்‌ ப்க்கொண்‌ டிசைத்து
வினவி முறுவல்‌ மிகப்பூத்து – நனிமகிழ்ந்து
செந்தா மரைக்கண்‌ கடைக்கணித்த சீர்மைதனை
அந்தோ யான்‌ உய்வழியீ தென்று–100-

அடியேனை ஒரு பொருளாக மதித்து எதிரிலமரச்‌ செய்து சிவந்த பவளம்‌ போன்ற செவ்வாய்க்‌ கொண்டு மந்திரார்த்தங்களைச்‌ சொல்லி வினாவுதல்‌ செய்து, தக்க விடையளிக்க வெண்முறுவல்‌ மலரச்‌ சிறு நகைபுரிந்து மிக்கபேருவகை கொண்டு செந்தாமரை யொத்த திருக்கண்கள்‌ கொண்டு கடைக்கணித்து உகந்த, இந்த கெளரவச்‌ செயலை அந்தோ! அந்தோ! இவைகளே அடியேற்கு உய்யும்‌ மாழ்க்கமென்று எக்காலும்‌ நினைவிற்கொண்டு இனி எக்காலும்‌ மறவேன்‌ என்பதாம் –

என்றும்நின்‌ தாளிணைக்கண்‌ சென்னி யிலக்காகும்‌
என்றும்‌ அருண்மொழியுள்‌ ளெஞ்சாது – நின்றருளும்‌
சேமத்‌ திருமேனி செவ்விக்கள்‌ ஈன்றிலகும்‌
யாமிழைத்த தென்ன தவம்‌? –101-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகளே! தேவரீருடைய திருவடித்‌ தாமரைகளே அடியேன்‌ சென்னிக்கு இலக்காக அமைந்துள்ளன. தேவரீர்‌ கருணை கொண்டு அருளிச்‌ செய்த அருள் மொழிகளே உள்ளத்தில்‌ குறைவற்று என்றும்‌ நின்‌று பிரகாசிக்கும்‌. தேவரீர்‌ திவ்ய மங்கள விக்ரஹமே அழகிய கண்களில்‌ விளங்கிக்‌ கொண்டிருக்கும்‌. இத்தகு, சீரிய பயன்களைக்‌ கொண்டிருக்க யாம்‌ எத்தகைய தவமியற்றினேனோ? தெரியாது.

தவமிழைத்தோர்‌ யாரே? தமியன்போல்‌ கல்லா
தெவையெனைத்தும்‌ கேட்டுத்‌ தெளிந்தார்‌? – யவரேயோ?
பாடியன்தன்‌ னின்னருளே யிங்கன்‌ பகர்வித்த
ஈடில்லா நீசனெனை ஏற்று–102–

தனித்து கதியற்று நிற்பவன்‌ யான்‌. இத்தகையன்‌ பெருந்தவம்‌ செய்த அடியனைப்‌ போல்‌ யாரே? இனி முறையாகக்‌ கல்லாமலே சீரிய நூல்களைக்‌ கேட்டுத்‌ தெளிந்தோர்‌ யார்‌? ஐயந் திரிபுகளாகிற குற்றங்களைந்து தெரியக் கற்பிக்கும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளருள்‌ ஈடில்லா நீசெனனை ஏற்று இவ் வண்ணம்‌ சொல்லும்படி செய்தது –

ஏற்றேன்‌ பிராட்டி திருவருளால்‌ எம்பிரானை
ஏற்ற னிவனருளால்‌ பாடியனை – ஏற்பதும்‌
ஏலாத தென்பதிலை பாடியன்தன்‌ இன்னருளால்‌
ஏலாவை குந்தமுத லேற்பு–103-

கருணை வடிவாயமைந்த பிராட்டி கடாக்ஷத்தால்‌ எம்பிரானை கதியாக ஏற்றேன்‌. இவன்‌ தன்னின்னருளால்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியனை கதியாக ஏற்கப்‌ பெற்றேன்‌. இவனருளால்‌ பேறு பெருவதெவையுளதோ அவைகளில்‌ இன்னது ஏற்க முடியும்‌ இன்னது ஏலாதது என்பதில்லை. ஏற்றரும்‌ வைகுந்த முதலாக வுள்ளதனைத்தும்‌ ஏற்கும்‌ வாய்ப்பினைப்‌ பெற்றோம்‌ என்பதாம்‌-

ஏற்பதே நின்‌ தாளின்றி என் சிரத்தால்‌ வேறொன்றை
ஏற்றறேல் நின்‌ சார்பன்‌ றயலொன்றை – ஏற்பதே?
தாளருமை கண்டேன்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌
ஆளுடையான்‌ கண்ட வாறு–104-

ஆசாரிய ஸ்வாமிகளே! அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளின்‌ அருமைப் பாட்டை அறிந்தவன்‌. எவ்வாறறிந்தேனென்னில்‌? திருக்குருகூரில்‌ அவதரித்த சடகோபனாம்‌ நம்மாழ்வாரை எம்பெருமான்‌ நோக்கி, நீர்‌ விலக்ஷணமான மோக்ஷமென்று அடிக்கடி சொல்வீரே அந்த மோக்ஷம்‌ தந்தோமென’ ‘அந்த மோக்ஷம்‌ வேண்டா, தேவரீர்‌ திருவடிகளை சிரசிலணிவித்தருள வேண்டு மென்றார்‌. அதைப் போல்‌ தேவரீர்‌ திருவடிகள்‌ சார்பன்றி வேறொள்றை ஏற்க மாட்டேன்‌ என்பதாம் –

ஆறும்பே றென்றறியார்‌ ஆசிரியா்‌ இந்நிலையில்‌
மாறில்‌ மறைமுற்றும்‌ ஐயபின்றித்‌ – தேறியநீர்‌
ஏதிலன்‌ என்னை இருயென்று முற்றுணாத்தும்‌
கோதிலருள்‌ உந்தங்‌ குணம்‌.–105-

உலகில்‌ ஆசாரியனென்று தம்மைச்‌ சொல்லிக்‌ கொள்ளுமவர்கள்‌ இன்னது சாதனம்‌, பயன்‌ இன்னது என்று வேறுபடுத்தி அறிய மாட்டார்கள்‌. இந்த நிலையில்‌ தேவரீர்‌ வேதங்களும்‌ இவைகளின்‌ சாரமான மந்திரங்கள்‌. இவைகளில்‌ பொருள்களை ஐயந் திரிபற நன்குணர்ந்தவர்‌ நீரே. இத்‌ தகுதி யுடைய நீர்‌ அடியேனோ மூடர்களில்‌ முதல்வன்‌. இத்தகைய அடியேனை எதிரிலிரு என்று இருத்தி அனைத்தும்‌ ஐயம்‌ திரிபற உணர்த்தினீர்‌. இதனால்‌ உந்தம்‌ குணம்‌ யாதுங்‌ குறைவில்லா அருளொன்றேயாக அறிகிறேன்‌.

குணந்திகழ் சீர்க்‌ கொண்டலே பாடியனே தூயோய்‌
மணமலிந்த தாமரைத்‌ தாளோய்‌! – குணமலிந்த
சீநிவாசன்‌ தாளிணையோய்‌! தேவநாதன்‌ கதனேயோ!
கோபாலன் சொல்லமுதக் கூட்டு -105-

குணங்களால்‌ கைம்மாறு கருதாது பெய்யும்‌ கொண்டல்‌ மேகம்‌ போன்ற ஸ்வாமிகளே! ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யர்‌ என்ற திருநாமமுடையவரே! மணமே உபாதாநமான தாமரையே போலுந்‌ திருவடிகளை யுடையீரே! அடைந்தாரை உய்விக்கும்‌ நற்பண்புகளே திருமேனியான ஸ்ரீநிவாச ஆசார்ய ஸ்வாமிகளின்‌ திருவடிகளாகவே இருப்பவரே! ஸ்ரீமத்‌ தேவநாதசார்ய ஸ்வாமிகளின்‌ திருக்குமாரரே! ஸ்ரீமத்‌ கோபாலாசார்ய ஸ்வாமிகளின்‌ சொல்லமுதமே திருமேனியாக வுடைய ஸ்வாமிகளே என்றவாறு.

கூட்டமு துள்ள தினிமையொருங்‌ கேக்கூட்டி
நாட்டும் தெளி யுணர்வை ஐயமின்றி – நாட்டிச்
சிரத்தில்‌ பரன் தாளும்‌ பாடியன் தாள்‌ சேர்க்கும்‌
வரமிக்க வைகுந்த வான்‌–107–

முன் தோன்றல்களான ஆழ்வாராசார்யர்களாகிய சான்றோர்களுடைய கூட்டமுதின்‌ இனிமையை அடியேனுள்ளத்‌ தொருங்கே கூட்டி இதன்‌ பயனான மெய்யுணர்வை ஐவந்திரிபின்றி நிலை நிறுத்தியும் இதன்‌ பயனாக திருமகள்‌ கேள்வன்‌ திருவடித் தாமரைகளையும்‌, ஸ்ரீமத் பாஷ்ய மாசார்ய ஸ்வாமிகளின்‌ திருவடித் தாமரைகளையும்‌ அடியேன்‌ சிரோ பூஷணமாக சேர்த்தது யாதோ எனின்‌? ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளின்‌ அபிமானம்‌ பெற்ற, இவனுக்கு நாம்‌ முற்பட்டோமாக வேண்டுமென்று சிறப்புக்களனைத்தும்‌ ஒருங்கே யுடைய வைகுந்தமென்கிற பரமபதமானது, ‘சிரோபூஷணத்‌ தோடு கூடிய இவனை நம்மிடத்தில்‌ நிறுத்திக்‌ கொள்ள வேண்டு” மென்ற அவாவோடு இருத்திக்‌ கொண்டது என்பதாம் –

வானாளும்‌ சீர்சீநி வாசன்‌ மலரடியைத்‌
தான்சேர்‌ தகவுடைய பாடியன்தன்‌ – தேன்பெருகு
செந்தா மரையிணையே சிந்திப்ப தென்பேறா
அந்தோ! அவனருளும்‌ சீர்‌–108-

வைகுந்த வானாட்டில்‌ ஆட்சி செலுத்தும்‌ சிறப்புகளனைத்தும்‌ ஒருங்கே பொருந்திய ஸ்ரீமத்‌ ஸ்ரீநிவாசாசார்ய ஸ்வாமிகள்‌ தாமரை போன்ற திருவடிகளைச்‌ சேர்ந்த கருணையே வடிவான ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய செந்தாமரை யொத்த திருவடி யிணையையே சிந்திப்பதையே அடியேனுடைய பரம பிரயோஜனமாக உடைய அடியேனை, ஆசார்ய ஸ்வாமிகள்‌ தம்‌ கருணையால்‌ ஐயோ!” என்றிரங்கி யருளும்‌ அருளையே அடியேன்‌ சிறப்பாக உடையவனாவேன்‌ – என்பதாம் –

இருள் தரு மா ஞாலத்து இயங்கும் உயிர்கள்
அருந்துயரில்‌ ஆழ்ந்தழுந்தல்‌ உண்மை -அருந்துயர்தீர்ந(து)
அந்தமில்பே ரின்பமுற ஆசார்ய னைத்துதி நூற்‌
றந்தாதி யன்றோ கதி.–நூற்‌ பயன்‌

இருள்தருமாஞாலமாகிய லீலா விபூதியில்‌ நிரந்தரமாக இயங்கிக்‌ கொண்டிருக்கும்‌ ஆத்மாவானது, எய்தற்கரிய நிரம்பிய துன்பத்தில்‌ அழுந்துதலென்பது உண்மை விஷயமாகும்‌. இந்த துன்பத்தில்‌ மீண்டு எல்லையில்லா இன்பமேயான பேரின்பமெய்த ஆசார்யனிடத்து தான்‌ பெற்றபேற்றினைஎண்ணித்‌ துதிப்பதேயாகும்‌–அதற்கு வழி ஆசார்ய நூற்றந்தாதியை இடைவிடாமல்‌ அநுசந்திப்பதே ஏற்ற கதியாகும்

சுபமஸ்து

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி சின்ன ஸ்வாமிகள்‌ வாழித் திருநாமங்கள்‌ –ஸ்ரீ க.கி. யாமுநாசார்ய ஸ்வாமிகள் –

ஆத்ரேய ராமாவரஜ குரோர்‌ புத்ரம்‌ ததாஸ்ரயம்‌
வேதாந்த த்வய ஸம்பந்தம் யாமுனம் ப்ரணமாம்யகம் –

மடஞ்சால்‌ மநனே வல் வினைகள்‌ சிந்தும்‌
உடைந்தோடும்‌ ஊழ் வினைசால்‌ சென்மம்‌-தடஞ் சூழ்ந்த
பூதூர் மன்‌ தன்னருளும்‌ பொன்னருளும்‌ நின்வயமாம்‌
யாதானும்‌ யாமுநனென்‌ றேத்து

சீராரும்‌ திருவயிந்தை திகழவந்தோன்‌ வாழியே
சேயாய்பா டியர்க்கவன்தன்‌ தாளடைந்தோன்‌ வாழியே
நீராரைப்‌ பசி உத்தி ராடத்தோன்‌ வாழியே
நீள்சரணா எதிபதிதன்‌ னிணையடியோன்‌ வாழியே.
பார் புகழும்‌ பூருவர் தாள்‌ பற்றுமவன்‌ வாழியே
பதின்மர் அருள் மொழி கோதை பரவுமவன் வாழியே
ஏரார்‌ உலகார்யன்‌ நூலுரைப்போன்‌ வாழியே
எஞ்ஞான்றும்‌ யாமுனன் தாள்‌ எம் கதியா வாழியே

வாழி திருப்பாடி யன்தன்சீர்‌ மல்கிய மாதகவால்‌
வாழும்‌ சிரீயா முநனென்‌ நிறைகுரவன்‌ – வாழியவன்‌
மாறன்‌ பிறைப்‌ பொருளும் ஆகமத்தின்‌ மான்‌ பொருளும்
தேறும்‌ படி யுரைக்கும்‌ சீர் –

சேவிப்போர்‌ பிறப்பறுக்கும்‌ திருவடிகள்‌ வாழியே
செம்பொன் செய்மலை வெயிலேய் செம்பட்டும் வாழியே
பூவியலும்‌ நாபியொடு புரிநூலும்‌ வாழியே
பொருவரிய தோளிணையும்‌ புரிகண்டம்‌ வாழியே
பாவியரும்‌ உய்யப் பணிக்கும்‌ பவள வாய்‌ வாழியே
பாண் மதிஏய்‌ திரு முகமும்‌ கருணை விழி வாழியே
நீவியெனும்‌ குரவரருண்‌ மொழி உளத்தோன்‌ வாழியே
நீள் புகழ் யாமுநன் தாள்‌ நினைப்போரும்‌ வாழியே

அடியார்கள் வாழ அரங்கம் முதல் வாழ சடகோபன்‌ தண்டமிழ்நூல்‌ வாழ-படியிலிரு
மன்னும்‌ மறைப் பயிற்றும்‌ யாமுனனென்‌ தேசிகனே! இன்னுமொரு நூற்றாண்‌ டிரும்‌.

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி யாமுநாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே சரணம்

ஸ்ரீ கச்சிக் கிடாம்பி பெரிய ஸ்வாமிகள்‌ வாழித் திருநாமங்கள்‌ -ஸ்ரீ க.கி. பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகள்‌

ஆத்ரேய ஸ்ரீநிவாசார்ய பதபங்கே ரூஹாஸ்ரயம்‌
தேவநாத குரோர்‌ ஸூனும்‌ ராமாநுஜ குரும் பஜே.

ஏங்கும்‌ மடநெஞ்சே! எம்பெருமான்‌ ஈந்தநிதி ஒங்கு புகழ்‌ பாடியன்தன்‌ ஒண்மலர்த்தாள்‌-தேங்கிய நீர்க்‌
கண்டா மரையிணைகள்‌ கைத்தாமரை யிணைகள்‌ உண்டாய் காலமெல்லாம் உள் –

அநவரதம்‌ தெளி சிங்கர்‌ அடிதொழுவோன்‌ வாழியே
அருள்ஸ்ரீ னிவாசார்யன்‌ அடைந்துயந்தோன்‌ வாழியே
அநகன் தேவ நாதாரயன்‌ அருஞ்சேயோன்‌ வாழியே
ஆதிரைநாள்‌ புரட்டாசி அவதரித்தோன்‌ வாழியே
அனைத்தறிந்த கோபாலர்‌ அடைந்தறிந்தோன்‌ வாழியே
அரங்கம் முதல் உகந்தருள்‌ மாநிலத் தன்பன்‌ வாழியே.
அநர்த்தமிலா(து) உலகார்யன்‌ நூலுரைப்போன்‌ வாழியே
அமிந்தைவர முனி தாள்சேர்‌ பாடியன் தாள்‌ வாழியே-

எதிபதிதன்‌ இணையடியே கதியுடையோன்‌ வாழியே
ஈடில்லா ஈடுதனை எடுத்துரைப்போன்‌ வாழியே
பதின்மருடன்‌ கோதைமொழி பரிந்து கற்றோன்‌ வாழியே
பார்புகழும்‌ பூருவர்தாள்‌ பற்றுமவன்‌ வாழி
மதுரகவி நிட்டையையே நிட்டை கொள்வோன்‌ வாழியே
வன்முடும்மை இருகுரவர்‌ மலரடியோன்‌ வாழியே
மதிமிகுந்த வரமுனிதாள்‌ வாழ்த்துமவன்‌ வாழியே
பாடிய ராமாநு சாரியன் தாள்‌ வாழியே

வாழிசிரீ நிவாசார்யன்‌ கோபாலன்‌ மாதகவால்‌
வாழும்சீ பாடிய மாசார்யன்‌ – வாழியவன்‌.
மாறன் மறைப்பொருளும் பாடியத்தின் மான் பொருளும்
தேறும்‌ படியுரைக்கும்‌ சீர்‌.

சென்மம்‌ தவிர்த்தருளும்‌ சேஷிகள்‌ வாழியே
சேமஞ்செய்‌ பொன்னாடைத்‌ திருநாபி வாழியே
தன்மம்‌ விரிந்தணைய திருமார்பும்‌ வாழியே
தரணிதனில்‌ அஞ்சலெனும்‌ கரதலமும்‌ வாழியே
நன்மருந்து பொழிமதிபோல்‌ திருமுகமும்‌ வாழியே
நளினஞ்செய்‌ கருணை மொழி கண்ணினையும்‌ வாழியே
மென்மை குவிந்தனைய திருமேனி வாழியே
மெய்மைஇரா மாநுசன்தாள்‌ மேன்மேலும்‌ வாழியே.

ததியர்கள்‌ வாழ தலநூற்‌(று) எண்வாழ
மதிநலஞ்சால்‌ மாறன்‌ மறை வாழ – பதியார்ந்த
மண்ணுலகும்‌ வாழ சிரீ பாடியமா தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டி டிரும்

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே சரணம் –

—-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சடகோப நான்மணிமாலை-

April 24, 2026

ஸ்ரீ சடகோப நான்மணிமாலை

நானிலத்‌ தேவரும்‌ மாமுடி கோளுறு நாறுமகிழ்‌
தேனலந்‌ தாரிதை மாமுடி கோளுறுந்‌ தேசிகன்தன்‌
நான்மணி மாலை உலகவ ருய்ய நவில்வதற்கு
மான்மறைச்‌ சீடன்‌ குருவவன்‌ காப்பாகு மாமுனியே –காப்புச்‌ செய்யுள்‌-

நால்வகைப்பட்ட நிலங்களிலுள்ள யாவருமே சடகோபன்‌” என்ற சொல்‌ கேட்டதும்‌ தங்கள்‌ திருக் கரங்களை சிறந்த முடி மேல்‌ கொள்ளுதற்கு உரியவரும்‌, பரிமளம்‌ மிகுத்து தேன்‌ வெள்ளமிடும்‌ மகிழ மலர்‌ மாலையை முடிமேல்‌ கொண்டுள்ளவருமான ஆதி குருவாம்‌ மாறன்‌ (நம்மாழ்வார்‌) விஷயமான நான்மணிமாலை என்ற நூலை உலகை உய்வித்தல்‌ பொருட்டு, திராவிடவேதத்தின்‌ பொருளை காலட்ஷேப ரீதியில்‌ நம்பெருமாளுக்குணர்த்தி அவனைச்‌ சீடனாக்கிக்‌ கொண்ட மணவாள மாமுனிகளே இதற்குக்‌ காப்பாகும்

வீறுசால்‌ தெய்வ வெறிகொள்‌ துழாய்கமழும்‌
நாறுநவ நீத முடைநாற்றம்‌ – நாறுமால்‌
மச்சகந்தம்‌ மாறன்கண்‌ ணன்வியாசன்‌ வந்தவிடம்‌
நச்சுவது யாரைநெஞ்சே நாம்‌?–1-

உலகிலுள்ள மற்ற மணங்கள்‌ தனக்கு ஒவ்வாத தெய்வத் தன்மை வாய்ந்த துழாய்‌ மணம்‌ கமழும்‌ குருகூர்‌ நம்பி அவதரித்த இடமும்‌, கண்ணன்‌ வந்தவதரித்த வெண்ணெய்‌ முடநாற்றம்‌ கமழும்‌ ஆயர்சேரியும்‌, வியாசன்‌ வந்தவதரித்த மச்சகந்தம்‌ நாறும்‌ புலைச்சேரியும்‌ இத்தகையவர்கள்‌ அவதரித்த இடம்‌ இத்தன்மையாதனால்‌ நெஞ்சே! இவர்களில்‌ நாம்‌ விரும்பித்‌ தொழுதற்குரியவர்‌ யார்‌? என்று சொல்வாயாக –

நாமே? யியம்புவ நானிலந்‌ தாழ்ந்த வருணமிதை
தாமேந்‌ துதற்கு வராககோ பாலராம்‌ தண்ணியராய்‌
ஆமா றுலகோர்‌ பிறவிக்‌ கடலாழ்ந்‌ தனத்தமுற
பூமா தவர்ச்செய மாறன்‌ புகுந்த வருணநான்கே–2-

ஒரு காலத்தில்‌ பிரளய வெள்ளத்தில்‌ அழுந்தித்‌ தாழ்ந்த உலகையும்‌, யயாதி சாபத்தால்‌ தாழ்ந்துபோன யது குலத்தையும்‌ மேல்‌ நோக்கி உயர்த்துவதற்கு வராக மூர்த்தியாகவும்‌, கோபால கிருஷ்ணனாகவும்‌, தாழ்ந்து வந்தவதரித்தாற்‌ போன்று, உலகத்தவர்கள்‌ பிறவிக் கடலில்‌ அழுந்திக்‌ கிடக்கின்றவர்களை மெய்யுணர்வைக்‌ கொடுத்து நிலத்தேவராக்குவதற்கு உயர்ந்த மாஞானியாகிய குருகூர்ச்‌ சடகோபன்‌, தாழ்ந்ததென்று உலகம்‌ நினைக்கும்‌ நான்காம்‌ வருணத்தில்‌ வந்தவதரித்த வியப்பை, நாம்‌ சொல்லும்‌ தரமுடையதன்றே? (நெஞ்சே நீ சொல்வாயாக )-

நான்முகன்‌ நான்மறை நாபியா றங்கம்‌ ஒருமுடி யிருகண்மூன்‌ றந்தாதி
நோன்புளம்‌ திருமொழிப்‌ பல்லாண்டு திருமொழி முகங்கழுத்‌ திருபது நூறோடும்‌
நான்கிரு பதினான்‌ கேழ்பதி னைந்துதோள்‌ நாற்பதைந்‌ தடித்தூள்‌ பத்தாகம்‌
வானிடந்‌ தோள்பத்‌ தடிஎதி மதுர கவியுடல்‌ உறுப்புபாங்‌ கந்தாமே–3–

நான்கு முகங்களாலே வேதங்களின்‌ கருத்தாக தமிழில்‌ திருவாய்மொழி பாடினவர்‌ நம்மாழ்வார்‌. இவருக்கு நாபியாக வந்தவதரித்தவர்‌ கலியன்‌. இவர்‌ வடமொழியிலுள்ள ஆறுஅங்கங்களையும்‌ தமிழில்‌ பாடிய பிரபந்தங்கள்‌. அதைப் போலவே வடமொழி வேதத்தை தமிழில் பாடியவர்களான பொய்கையாழ்வார்‌ நம்மாழ்வாருக்கு முடி– பூதத்தாழ்வாரும்‌ பேயாழ்வாரும்‌ இரண்டு திருக்கண்கள்‌– இவர்கள்‌ மூவரும்‌ பாடிய மூன்றந்தாதிகள்‌– நோன்பென்று நோற்ற திருப்பாவையும்‌ நாச்சியார்‌ திருமொழியும்‌ நம்மாழ்வாரின்‌ திருவுள்ளம்‌ ஆண்டாள்‌ பாடிய பிரபந்தம்‌. நம்மாழ்வாருக்கு திருமுகமாகிய பெரியாழ்வார்‌ பாடிய திருப்பல்லாண்டும் பெரியாழ்வார்‌ திருமொழி. இந்த நம்மாழ்வாருக்கு திருக் கழுத்தாக அவதரித்த திருமழிசை பிரான்‌ இவர்‌ பாடி யருளிய நூற்றிருபது திருச்சந்தவிருத்தம்‌ நான்முகந்திருவந்தாதி தொண்ணூத்தாறும்‌– நம்மாழ்வாரின்‌. திருத் தோளான குலசேகரப்‌ ‘பெருமாள்‌ பாடிய பெருமாள்‌ திருமொழி நூற்றைந்து. இவர்‌ திரு மார்பான தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ திருமாலை நாற்பத்தைந்து திருப்பள்ளியெழுச்சி பத்து. இவர்‌ இடது தோளான திருப்பாணாழ்வார்‌ பாடிய அமலனாதிபிரான்‌ பத்து-எம்பெருமானார்‌ இவர்‌ திருவடிகள்‌. இவர்‌ விஷயமாக பதினொரு பாசுரங்கள்‌ பாடியவர்‌ மதுரகவியாழ்வார்‌ இவர்‌ திருமேனி, நம்மாழ்வார்‌ தவிர்த்த மற்ற ஆழ்வார்கள்‌ பாடின பிரபந்தங்கள்‌ உபஅங்கங்களாகும்

தாயேத்‌ திரந்திடற்‌ குற்றவர்‌ தங்குரு ஆமா றறிந்துடன்‌ பயில்பவர்‌ சோத்தரி தங்கிளை மாணவர்‌ தாமிவர்‌ சேர்ப்பார்‌ பரிந்துரைத்‌ திரக்கும்‌ பராங்குச நாயகி பறவையாய்‌ பாவணை சிறையறி வொழுக்கும்‌ வீசுஞ்‌ சிறகீர்‌ விண்ணுமக்‌ கெளிதே அஞ்சிறை சேவலோ டாடுவென்‌ றருளீர்‌ கூட்பிகைச்‌ சொல்லீர்‌ குருகினத்‌ தவரே உணர்த்தல்‌ ஊடல்‌ உணர்ந்துறை அன்னம்‌ புணர்த்த பூந்‌ துழாய்முடி பெருமாற்‌ கண்டு புணர்த்தகை யடியேற்‌ பொருட்டுப்‌ போற்றுமின்‌ நன்னலப்‌ புள்ளினம்‌ நான்வினை யாட்டியேன்‌ இரந்தேன்‌ என்முல்லை மேல்சேர்‌ தும்பிகாள்‌ இதுவோ தக்கவா றென்னவே வேண்டும்‌ செங்கால நாராய்‌ குடக்கூத்‌ தென்துதாய்‌ நுங்கால்‌ நுமரோடென்‌ தலைமேல்‌ செழுமிரே கொக்கினங்‌ குருகினந்‌ தக்கிலங்‌ கேளிரே உடன்‌ மாணாக்கர்‌ கேண்மி ஸுயர்குரு இளங்கிளி சிறுபுவாய்‌ யான்வளர்‌ நீரலீர்‌ வினையேன்‌ வளர்சிறு பூவை மீர்காள்‌ இன்னமா ஸணாக்கர்‌ மக்கள்பா லிரந்து பிரிவின்‌ வேட்கை மிகுந்திடப்‌ பெருமான்‌ பால் அணைந்திடுமாப்‌ பரிந்‌துரை செய்மின்னென்‌(று) இரந்திடும்‌ பறவை தாள்‌ வீழ்த்து பரிந்தே–4–

பறவைகளைத்‌ தூதுவிடுவதற்கு உள்ளூறைப்பொருள்‌:-

குருகூர்‌ மாறன்‌ தான்‌ நாயகி பாவத்திலே களவில்‌ கூடி பழிக்கஞ்சி நாணத்தால்‌ பிரிந்து, பிரிவுத்துயர்‌ தாங்காது எம்பெருமான்‌ பக்கல்‌ தூதுவிடுகின்ற பராங்குசநாயகியுடைய சொற்கள்‌ இவைகள்‌. பராங்குச நாயகி நெய்தல்‌ நிறத்து மங்கையாய்‌ அங்குள்ள பறவைகளைக்‌ கண்டு பெருமானைப்‌ பிரிந்த பிரிவாற்றாமையால்‌ பறவைகளைத்‌ தூதுவிடுகின்ற பராங்குச நாயகி, தூது விடுதற்குற்றவர்‌ தனக்கு குருவாகவும்‌ தான்‌ பயிலும்‌ போது உடன்‌ மாணாக்காராகவும்‌ நினைத்து பெருமான் பால்‌ தூது விடுகிறார்‌. பெருமானிடத்தில்‌ செல்வதற்குப்‌ பறவைகளுக்கு இரண்டு இறகுண்டு என்று நினைத்து அவைகளைத்‌ தூது விட, தான்‌ தூது விடுபவர்களுக்கு ஞான ஒழுக்கங்கள்‌ உண்டு. அவை இறைவனை அடைதற்குச்‌ சாதனம்‌ எனக்‌ கருதி, ‘சிறகுகளலே ஆகாயத்தில்‌ பறந்து செல்கின்‌றவர்களே! பறவைகளாகிய நீங்கள்‌ எம்பெருமானிடத்தில்‌ செல்வது சுலபம்‌. சேவலோடு என்‌ துயரத்தைக்‌ கண்டு ஐயோ! என்று அருள வேண்டும்‌. ‘நீங்கள்‌ பெருமானிடத்தில்‌ சென்று கை கூப்பிச்‌ சொல்லுங்கள்‌ குருகினத்தாவர்களே! உணர்த்தல்‌ உடையவர்களாயும்‌ ஊடல்‌ செய்கின்றவராயும்‌ உணர்ந்து உறையும்‌ அன்னங்களே! தொடுக்கப்பட்ட திருத் துழாய்‌ மாலைகளை முடி மேல்‌ தரித்துக்‌ கொண்டிருக்கும்‌ பெருமானுக்கு அடியேன்‌ பொருட்டு புணர்த்த கையராய்‌ போற்றிச்‌ சொல்லுங்கள்‌. கூடியிருத்தலாலே மிக்க இன்பத்தை அடைந்திருக்கிற புள்ளினங்களே! நான்‌ வினை வயத்தால்‌ பிரிந்து வருந்துகிறேன்‌. ஆதலால்‌ உம்மை இரந்து கேட்கிறேன்‌, முல்லைகளின்‌ மீது சேர்ந்திருக்கும்‌ தும்பிகளே! என்னைப்‌ பெருமானைக்‌ கண்டு பிரிந்து வருந்தும்படி விட்டிருப்பது தக்கதோ? என்று பெருமானைக்‌ கேளுங்கள்‌, சிவந்த கால்களுடைய நாரைகளே! குடக்கூத்தாடிய பெருமானுக்கு காதலன்‌ காதலியின்‌ திறத்தில்‌ வேட்கை மிகுதியால்‌ அவள்‌ தன்‌ எச்சிலை ஆதராம்ருதம்‌ என்று விரும்புவது போல, இவ்வாழ்வார்‌ திறத்துண்டான ஞான பக்தி வைராக்கியங்களின்‌ மிகுதியால்‌ எம்பெருமான்‌ மிக விருப்பமுற்று இந்த ஞான பக்தி வைராக்கியங்கள்‌ வளர்வதற்குக்‌ காரணம்‌ திருமேனி சத்துவ குணத்தாலாயது என்று திருவுள்ளம்‌ பற்றி இவரை திருமேனியோடே திருநாட்டுக்கு எழுந்தருளப் பண்ண வேணும்‌ என்ற திரு உள்ளம்‌ உடையனாய்‌ எம்பெருமான்‌ இவருடைய திருமேனியிலே ஐம்பெரும்‌ பூதம்‌ சேர்க்கை என்ற நினைவில்லாதவனாய்‌, இவர்‌ திறத்துண்டான ப்ரேமையின்‌ மிகுதியால்‌ இவர்‌ திருமேனியில்‌ குரவை துவரைகளில்‌ பற்பல உருவம்‌ கொண்டு பரிமாறியது போலே இவ்வாழ்வார்‌ திருமேனியில்‌ உகந்தருளின நிலங்கள்‌ எல்லாவற்றிலும்‌ பண்ணும்‌ ஆதரத்தோடு வைகுந்த வள நாட்டில்‌ பண்ணும்‌ ஆதரத்தையும்‌ உடையவனாய்‌ இவர்‌ திருமேனியில்‌ புகுந்து, இவர்‌ திருமேனியோடே கொண்டு போக விரைவானாக திருக் கையைப்‌ பற்றி வாரும்‌ என்றழைக்க, ‘இங்குத்தான்‌ விலங்கென்றால்‌ அங்கும்‌ எனக்கு விலங்கா” என்று இவ்வாழ்வார்‌ அவன்‌ திருவடிகளைப்‌ பற்றிக்‌ கொண்டு தன்‌ திருமேனியில்‌ அவன்‌ பண்ணும்‌ ஆதரத்தை கைவிடும்படி விடுவித்துக்‌ கொண்டார்‌. இதனால்‌ பரமார்த்தனுடைய சரீரத்திலே எம்பெருமான்‌ பண்ணும்‌ வியாமோகம்‌ திருமாலிருஞ்சோலை மலையிலே தழைக்கும்‌. “தூது செல்லும்‌ பொருட்டு உமது திருவடிகளை நும்‌ இனத்தவரோ டென்‌ தலை மீதாக்குங்கள்‌. கொக்கினங்களே! குருகினங்களே! பெருமானைக்‌ கண்டு, ‘நான்‌ தகுதியற்றவளா’ என்று கேளுங்கள்‌. உயர்ந்த குருகுகளே நீங்களும்‌ (சப்ரம்மசாரிகளே) கேளுங்கள்‌ இளங்கிளிகளே! சின்னஞ்சிறு நாகனவாய்‌ பறவைகளே! என்னால்‌ வளர்க்கப்பட்ட நீங்களல்லையோ? வினையேன்‌ வளர்த்த சிறு பூவைகாள்‌! கேண்மின்‌” என்று இவ்வாறு மாணாக்கர் பாலும்‌ மக்கள்‌ பாலும்‌ பிரிவின்‌ வேட்கையால்‌ துயரமிகந்து ‘பெருமான்‌ என்பால்‌ அணைந்திடுமாறு பரிந்துறை செய்மின்‌” என்று பறவைகள்‌ தாள்களில்‌ வீழ்ந்து யாசிக்கிறாள் –

பரிந்திங்‌ கிருள்தரும்‌ பாருல குய்யப்‌
பொருந்துமா மேகம்‌ புகன்றான்‌ – பெருந்தவங்கள்‌
நீத்துக்‌ கலைதெளியக்‌ கண்டுரை ணவ
வாய்த்தகுரு கூர்வந்தவன்‌-5-

லீலா விபூதியான இருள்தருமா ஞாலத்தில்‌ உள்ள சேதநர்களை உய்விப்பதின்‌ பொருட்டு இரக்கங்கொண்டு உய்விப்பதற்குப்‌ பொருந்தியதான “மாமேகம்‌ சரணம்‌ வரஜ” என்றெம்‌ பெருமான்‌ சொன்ன வார்த்தைக்குப்‌ பொருந்த தாம்‌ முயன்று செய்யும்‌ (உபாயாந்தரங்களை அறக் கைவிட்டு ஆத்ம பரமாத்ம சொரூபங்களுக்கு) பொருந்தியதான சரணாகதி நிலையைக்‌ கண்டு சொன்ன நியதியை உடையவனானவன்‌ இதற்கு வாய்த்த குருகூர்‌ வந்த பராங்குசனாகும் –

வந்தவன்‌ வேதம்‌ மயக்கும்‌ பொருளைத்‌ தெளிவுறுத்த
அந்தமில்‌ சீரன்பர்‌ கூட்டுணும்‌ ஆயிரம்‌ பா வமுதைத்
தந்தவன்‌ மாலன்பர்‌ தம்படிச்‌ சாயைசார்‌ ஏழ்‌ கீழ்‌
சந்ததம்‌ நின்றவன்‌ தாளெம்மை என்றும்‌ விளைக்குமாலே–6-

வேதமானது சரீராத்ம சம்பந்த முதலிய காரணங்களால்‌ முரண்படுவது போல்‌ சொல்லும்‌. அர்த்தங்களைத்‌ தெள்ளத்‌ தெளிய சொல்ல வந்த எல்லை காண்பரிய நலமிக்க அன்பர்கள்‌ கூட்டம்‌ கூட்டமாகக்‌ கூடி அனுபவிக்கும்படியாக அமுதமயமான ஆயிரம்‌ பாக்களைத்‌ தந்தவன்‌ சடகோபனாவார்‌. அவர்‌, எம்பெருமானுடைய அடியார்களுக்கு அடியார்‌ என்ற முறையிலே ஏழு தலைமுறைக்கு கீழே போய்‌ நின்றவர் அவருடைய திருவடிகள்‌ என்றும்‌ எமக்கு வியாமோகத்தை உண்டாக்கும் –

மாலேழ்‌ கடலேழ்‌ மலையேழ்‌ உலகேழ்‌ நும்படைப்பு மற்றுளவும்‌
மாலே எவர்க்கும்‌ அழியக்‌ கடிவான்‌ தனக்குமொரு மால்விளைக்கும்‌
மாலே!நும்சீர்‌ பரவும்‌ கவியால்‌ நுமக்குமொரு
மால்விளைக்கும்‌ பாலேய் தமிழர் இசையர் பரவும் தமிழ் மறைப்‌ பூட்டினனே–7-

திருமகள்‌ கேள்வனே! தேவரீர்‌ உலகவர்‌ திறத்துண்டான கழிவிரக்கத்தால்‌ ஏழுகடல்களோடும்‌ ஏழுமலைகளோடும்‌ கூடிய ஏழ்‌ உலகங்களும்‌ மற்றும்‌ உண்டானவையும்‌, உங்களுடைய படைப்பு படைத்த உலகத்தில்‌ உண்டான உண்டியே உடையே என உகந்து ஒடும்படியான நீர்‌ விளைத்த மயக்கத்தை அழியும்படி போக்கும்‌ தன்மையுடையவன்‌ குரு கூர்ச்‌ கோபன்‌. இத்தகைய குருகூர்‌ சடகோபனுக்கும்‌ உம்முடைய சொருபம்‌, குணங்கள்‌, திருமேனி முதலாகிய செளந்தர் யத்தைக்‌ காட்டி வியாமோகத்தை விளைத்தீர்‌. இந்த குருகூர்ச்‌ சடகோபன்‌ பாலே போல்‌ இனிக்கும்‌ உன்‌ கீர்த்திகளைப்‌ பாடும்‌ கவிகளால்‌ இனிய இசையில்‌ வல்லவர்களுக்கும்‌ நுமக்கும்‌ இன்ப மயக்கத்தை விளைக்கும்‌ தமிழ்மொழியாம்‌ திருவாய்மொழியை புணைந்து கொடுத்தான் –

பூண்டநாள்‌ பொருவரு சீர்க்கடல்‌ உட்கொளும்‌
நீண்டதோள்‌ மால்துயில்‌ நீள்கடல்‌ தன்னின்‌
பூண்டநா ளெல்லாம்‌ நீராடப்‌ புகுமே
திருமால்‌ சீர்க்கடல்‌ உட்பொதி சிந்தையர்‌
நீலநன்‌ மேனி நின்றநன்‌ நிறமொத்து
திருமால்‌ திருமேனி யோகம்‌ ஒத்து
நினைஅடை முகில்வணன்‌ நிழலீட்‌ டாலே
தீர்த்த கரராய்த்‌ திரிந்துயி ரளிப்பான்‌
தீதில்‌ நன்னெறி காட்டித்‌ திரிந்து
ஞானமா மடுவை யுடையதும்‌ அன்றி
நீள நினைவுறு நீரை யுடையதும்‌
ஆசை வெறுப்பாம்‌ அழுக்ககற்‌ றுவ்தும்‌
ஆன மனத்தில்‌ உளவாம்‌ தீர்த்தத்து
ஆடுவான்‌ எவனவன்‌ மேற்கதி அடைவதும்‌
எம்பிரான்‌ இலங்கு குணநீர்‌ நிறைந்து
தீங்கின்றி வாழ உலகில்‌ பெய்து
கொடுத்த நினைந்திடா வள்ளல்‌ தன்மையுள்‌
வெட்கி வெறுத்து கொடுக்கப்‌ பெற்றிலம்‌
பிறர்தம்‌ நலமே தம்பேறாக
அன்பின்‌ நிறைந்த அன்பன்‌ பாலன்பு
கூறும்‌ அடியவர்‌ உறையில்‌ இடாதவர்‌புயல்கை மாரி குணந்திகழ்‌ கொண்டல்‌
போல்வார்‌ மேகம்‌ போல்‌ தந்திடுமே.
–8-(அகவற்பா)

பூண்ட நாள்‌ சீர்க்கடலை உட்கொண்டு மழை பெய்ய வேண்டிய காலங்களில்‌, கடலிலே புகுந்து அதில்‌ நீரைப்‌ பருகிப்‌ பொழியும்‌ மேகம்‌ போலே, பூண்ட நாளெல்லாம்‌ புகும்‌ என்றும்‌ திருமால்‌ சீர்க்கடலை உட்பொதிந்த சிந்தனையேன்‌’ என்றும்‌ சொல்லுகிறபடியே விடிந்த நாளெல்லாம்‌ அவன்‌ கண்வளர்ந்தருள்கிற கடலிலே புகுந்து திருமகள்‌ கேள்வனான அவனுடைய கல்யாண குணக்கடலை உள்ளே அடக்கிக்கொண்டு மேகமானது அவன்‌ திருமேனியோடு ஒத்த நிறத்தை யுடைதாயிருக்குமாப் போலே உள்ளே தியானிக்கப்படுகிற முகில்‌ வண்ணனுடைய நிழலிட்டாலே அவனோடு ஒத்த நிறத்தையுடையதாய்‌, மேகமானது மழை மூலமாக உயிர்களைப்‌ பாதுகாப்பதற்காக விரிந்திருக்கிற ஆகாசப்‌ பரப்பெங்கும்‌ சஞ்சரிக்குமா போலே, பிறப்பு இறப்புகளிலே உழலுகிற ஆன்மாக்களைப்‌ பாதுகாப்பதற்காக உலகத்தை தூய்மை செய்பவர்களாய்‌ உய்யும்‌ வழியைச்‌ காட்டுமவர்களாய்‌, எவ்விடத்தும்‌ திரிந்து கொண்டு ஞானமாசின்ற அறிவினையுடையதும்‌ தியானமாகிற நீரையுடையதும்‌ ஆசை துவேஷம் ஆகிற அழுக்கை யகற்றுவதும்‌ ஆன மனத்தில்‌ உறவாகிய தீர்த்தத்தில்‌ எவன்‌ ஆடுகிறானோ அவன்‌ உயர்ந்த கதியை அடைகிற நான்‌ என்று: மனத்திலுள்ள தீர்த்தத்தைச்‌ சிறப்பித்துச்‌ சொன்ன ஞானமாகிற மடுவைத் தாங்கள்‌ பெய்கிற பகவானுடைய குணங்களாகிற தண்ணீரால்‌ நிறைத்த தீங்கின்றி வாழ நிதி சொரிந்து “தீங்கின்றி நாடெல்லாம்‌ திங்கள்‌ மும்மாரி பெய்து” என்றும்‌, “வாழ உலகினில்‌ பெய்திடாய்‌” என்றும்‌, மத்த நிதி சொரிந்து” என்கிறபடியே கேடு சிறிதும்‌ இன்றியே வரும்படி பகவானுடைட குணங்களாகிற நீரைப்பொழிந்து பொழிந்து, கொடுத்தது நினையாதே வெட்கி வள்ளல் தன்மை மிகுதிபினாலே இன்னமும்‌ கொடுக்கப்‌ பெற்றிலோம் செய்தது போருமோ என்று வெட்கி வெளுத்துப்போய்‌ ஒளித்து மேகமானது :மழை பெய்யாத போது வெளுத்துப்‌ போய்க்‌ கண்களுக்கு புலப்படாமல் இருப்பது போலே ஆர்த்தவிசேடங்களை உபதேஸிக்கப் பெறாதே பேறாக போது உடம்‌பு மறைத்து வெளியே முகம்‌ காட்டாதவர்களாய்‌ கண்டு உவந்து பிறந்த பேறான, மேகமானது தனக்கு என்று காரியம்‌ செய்யாது பிறர்நலத்துக்‌காகவே கொடுப்பது போன்று, கொடுக்குமிடத்து சிஷ்யர்களின்‌ நிறைவினைக் கண்டு மகிழ்ந்து அந் நிறைவினையே தங்களுக்கு பயனாகக் கொண்டிருக்கும்படியான ஆங்கரும்பிச்‌ கண்ணீ சோர்ந்தன்பு கூ.றும்‌ அடியவர்களான முதலாழ்வார்கள்‌, உருவினா வாள்‌ உறையில் இடாதே முதல்‌ நடு இறுதிகளிலே மாறுபட்டவர்கள்‌ குறையினை கூறுதல்‌ முன்னாக எம்பெருமானுடைய முதன்மையை எடுத்துக்‌ கூறிய திருமழிசைப்பிரான்‌, வள்ளற்றன்‌மையினையுடைய மேகத்தைப்‌ போன்றவராய்‌ அருளைப்‌ பெய்யும்‌ திருமங்கையாழ்வார்‌, “குணம்‌ திகழ்‌ கொண்டல்‌ இராமானுசன்‌” என்று குணங்கள்‌ ஒளிவீசும்‌ மேகமாகச்‌ சொல்லும்‌ எம்பெருமானார்‌ போன்றவர்களை குணங்களின்‌ ஒப்புமைக்‌ கொண்டு மேகம்‌ என்று சொல்லும்‌ என்கை, பயனுக்குக்‌ காரணம்‌ இவர்களாகையாலே பயனில்‌ விரைவுத்‌ தோன்றப்‌ பலகாலும்‌ தூதுவிடுவர்‌ என்கை –

தந்திடும்‌ அற்ற களைகணார்‌ தங்கட்கு
அந்தமில்‌ ஆர்வம்‌ அடைந்திடத்‌ – தந்த
உடலம்‌ உருக பெருகும்‌ மதுரம்‌
குடமுக்கில்‌ வெள்ளங்‌ கொடு –9-

எம்பெருமானையன்றி வேறு கதியற்றவர்க்கு எல்லையில்லா ஆர்வம்‌ பெருகும்‌ வகையில்‌ தந்த உடலம்‌ உருகும்படியாக இனிமை பெருகும்‌ வண்ணம்‌ பேரார்வத்தை திருக்குடந்தையில்‌ பெருவெள்ளம்‌ பெருக தந்திடும்‌.

கொடுமை யுடைய விருத்தம்‌ இலதாக்கும்‌ எம்‌பெருமான்
கடுமை யுடன்‌ கழகம்‌ புகவேண்டா போகுநம்பி
திடமா யெதிர்த்திடு நாயகி ஊடல்‌ திருவடியால்‌
விடச் செய்து விண்ணகர்‌ கோயில் கொள்‌ அப்பனாம்‌ ஒப்பிலானே.
–10-கட்டளைக்‌ கலித்துறை

திருவிண்ணகர்‌ கோயில்‌ கொண்ட விருத்த விபூதியனான ஒப்பிலியப்பன்‌ வராமைக்‌ கண்டு, மின்னிடைமடவார்‌ என்ற திருவாய்‌ , மொழியில்‌ பராங்குசனாயகி வைகல்பூங்கழிவாய்‌ என்ற திருவாய்மொழியில்‌ நாயகனாம்‌ எம்பெருமானை குறித்து பிறிவாற்றாமை மீதுற பறவைகளைத்‌ தூதுவிட்டாள்‌. தூதுபோன பறவைகள்‌ போய்‌ சொல்லி அவன்‌ புறப்பட்டு வருவதற்குள்‌ வேட்கையின்‌ மிகுதியாலே பராங்குச நாயகி அவன்‌ திறத்து ஊடல்‌ கொண்டு, அவன்‌ இனி வந்தாலும்‌ அவன்‌ முகத்தில்‌ விழிப்பதில்லை என்று தன்‌ ஆற்றாமையை போக்குவதற்காக சிற்றிலமைத்து பராக்காக பொழுது போக்கும்‌ காலத்தில்‌ எம்பெருமான்‌ வந்தான்‌. வந்தவிடத்தில்‌ பராங்குசநாயகி முகம்‌ கொடாமலிருக்கக்‌ கண்டு, தன்பால்‌ சேர்த்துக்‌ கொள்ள பலவித உபாயங்களைச்‌ செய்தான்‌. அதில்‌ ஒன்று கூட்டமாகக்‌ கூடியிருந்த கழகத்தில்‌ உள்ளே நுழைந்தான்‌. அப்போது பராங்குச நாயகி ‘எங்கள்‌ கூட்டத்தில்‌ புகாதே வெளியேறு’ என்று கடிந்து சொல்ல, இவர்கள்‌ இழைத்து நின்ற கடுந்தன்மை நீங்கி அவனிடம்‌ கலந்துக்‌ கொண்டார்கள்‌. அனைவர்க்கும்‌ உபாயமான திருவடியே அவர்களோடு கூடுவதற்குத்‌ தனக்கும்‌ உபாயமாயிற்று. அஃதன்றி பராங்குசநாயகி ஊடே நின்றிருந்த கடுந்தன்மை நீங்கி இணைந்ததை வியப்பாகக்‌ கொண்டு விருத்த விபூதியனான எம்பெருமானை அடுத்த திருவாய்‌ மொழியில்‌ ஒப்பிலா அப்பனான அவனை மங்களாசாசனம்‌ பண்ணினார் –

ஒப்பில்பே ரன்புடையாள்‌ உடன்கூடி உலகிரைக்கும்‌ பழிக்கஞ்சி நாணமுற்றுப்‌ பிரிந்தாள் அந்தோ
இப்பரிசால்‌ ஆற்றாளாய்‌ இழிபுடைய மடப்பத்தால்‌ பறவைகளைத்‌ தூதுவிடற்‌ கிணக்க முற்றாள் செப்பரிய தம் பிழையும் சிறந்த செல்வம் படைப்பலுவல் தமர்கூட்டம்‌ மறப்பிக்க மறந்தா னன்றே
துப்புடைய பொறை விரதம்‌ சுவையமகு இருபரங்கள்‌ வியூகவிப வர்ச்செய்‌ இவை விடைய மன்றே–11-
-(எண் சீர் கழி நெடிலாசிரிய விருத்தம் )

ஒப்பற்றவளான பராங்குசநாயகி எம்பெருமான்‌ பக்கல்‌ பேரன்புடையவளாய்‌ காதாசித்கமாக அவனைக்‌ கிட்டி நின்றநுபவிக்க உலகவர்‌ பழித்துச் சொல்லும்‌ பழிக்கஞ்சி வெட்கமுற்றுப்‌ பிரிந்தான்‌. அந்தோ பாவம்‌! பிரிந்த இந்தக்‌ காரண த்தால்‌ ஆற்றாமை மீதூர்ந்து பெண்மையால்‌ இழிவுடைய மடப்பத்தால்‌ பறவைகள்‌ தூது செல்வதற்கு தகுமா? தகாதா? என்ற விவேகமின்றி ஆற்றாமை கை கொடுக்க பறவைகளை தூது விட்டாள்‌ இப்படி இவள்‌ தூது விட அந்தப் பெருமான்‌ இவளை மறந்திருந்தான்‌. அதற்குக் காரணம்‌ குறையுடைய நாயகி செய்யும்‌ பிழையை பொறுத்துக் கொள்ளும்‌ அபராத ஸஹத்வம்‌ என்ற குணம்‌ தனக்கிருப்பதை மறக்கையாலே நாயகியை மறந்தாள்‌. இது, வியூக மூர்த்தியின் பால்‌ அஞ்சிறையமட நாரையில்‌ தூதுக்கு விஷயம்‌. அடியார்களைக்‌ காக்கும்‌ விரதமுடையவனாகையாலே நாயகியை மறந்தான்‌. இது, “வைகல்பூங்கழிவாய்‌” என்ற பதிகம்‌ இரண்டாம்‌ தூதுக்கு விபவத்துக்கு விஷயம்‌ – “பொன்னுலகாளீரோ” என்ற திருவாய்மொழியில்‌ அந்தர் யாமித்வம்‌ பரத்வம்‌ நிலைகளுக்கு தூதுவிடும்படியாய்‌ அவன்‌ தன்‌ படைப்பின்‌ மீதாகிய ஈடுபாட்டில்‌ நாயகியை மறந்தான்‌. “எங்கானலங்கழிவாய்‌”” எனத் தொடங்கும்‌ திருவாய்மொழியில்‌ “திருவல்லவாழ்கோயில்‌ கொண்ட” என்ற அர்ச்சாவதார மூர்த்தி அடியார்கள்‌ கூட்டத்தின்‌ இனிமையாலே பாரங்குசநாயகியாகிற தலைவியை மறந்தான்‌. அந்தர்யாமித்வம்‌ பரத்வாமாகிற இவைகள்‌ மூன்று நான்கு தூதுக்கு விஷயம்‌ என்றவாறு –

விடுதற்‌ கரிய பேரழகின்‌ மிக்கவள்‌ புனிதாப்‌ பிரிந்து பொறுக்‌ கிலளாகி நினைவற்‌ றுணங்கினள்‌ தாயர்‌ நுணங்கினர்‌ கட்டுவிச்‌ சியரைக்‌ கதியெனக்‌ கொண்டு இனதென நோயும்‌ மருந்தும்‌ இனதெனீர்‌ முனநாள்‌ முருகற்‌ பற்றினில்‌ முடிக்கிலீர்‌ நீர்மறந்‌ திட்டால்‌ தான்மறந்‌ திடுமே வேலனைக்‌ குறித்து வெறியாடத்‌ தீர்மென மறந்தும்‌ புறந்தொழில்‌ மாய்வளே அந்தோ !
இழப்பர்‌ இதனை முந்துற விடுமின்‌
துலைவிலி மங்கலம்‌ துணைகொடு காட்டினீர்‌
வகுத்தவன்‌ வடிவில்‌ மயங்கினள்‌ மீள்வளோ?
இவள்விடாள்‌ தாயீர்‌ நீர்விடும்‌ ஆசை
மணமுரசு அறையீர்‌ செவிப்படின்‌ மாய்வள்‌
திருப்புலி யூரில்‌ நாயனார்‌ திறத்துக்‌
கலவி இவட்குள போலும்‌ காண்மின்‌
அந்தண்‌ துழாய்‌இவள்‌ கமழ்தலில்‌ அறிந்தனன்‌
,புனையிழை அணிவும்‌ புதுக்கணிப்‌ பறிமின்‌
அவைகளால்‌ பிறர்க்கும்‌ தனக்கும்‌ அல்லள்‌
வகுத்தவன்‌ திறத்துத்‌ தகுந்ததென்‌ றமைமின்‌
தோழிக்கூற்‌ நிஃதேல்‌ தாய்நிலை சொல்வதென்‌?
வாடி மெலிந்துபித்‌ தேறியும்‌ மற்றும்‌
ஏறப்‌ பேசி கட்டிழந்‌ தகன்றும்‌
சார்வதே வலித்தமை சாதன மென்று
அஞ்சி ஏழில்‌ அவனருள்‌ அல்லதோர்‌
நெறிபிற தில்லெனல்‌ நிச்சய மாமே?
மகள்பல்கால்‌ ஆள்விட்டு ஆற்றாமை சொல்லி

கண்புதையப்‌ போக்கற்‌ றுறுநெஞ்‌ சுள்ளெழ
கூடுநாள்‌ கூடித்‌ தாழ்த்ததுக்‌ கூடி
உசாத்துணை அற்று சூழவும்‌ பகைமுகம்‌
செயத்தடை நிலாது புயக்கற்‌ றதனொடும்‌
மாலையும்‌ காலையும்‌ பூசல்‌ பதினேழ்‌
விரைதலின்‌ விரைவு தெரிந்த தெளிவே–12( அகவற்பா)

விட்டுப்பிரிய முடியாத அப்பேர்பட்ட அழகின்மிக்கவனாய்‌, தூயவற்றுக்கெல்லாம்‌ தூயனாய்‌ மிக்க பேரழகனாய்‌, கல்வி செல்வம்‌ இவற்றால்‌ பூர்ணனாய்‌ திருமகள்‌ கேள்வனான எம்பெருமான்‌ ஒருக்கால்‌ தோழரோடு வேட்டையாடித்‌ தோழர்களைப்‌ பிரிந்து வந்தானாக. எல்லாவற்றிலும்‌ சிறந்தவளான பராங்குச நாயகி தோழியரோடு பறித்துக்‌ கொண்டிருந்தவள்‌ தெய்வகதியால்‌ தோழியரைப்‌ பிரிந்து தனித்த வந்தாளாக, இப்படித்‌ தனித்து வந்த இருவரும்‌ தெய்வயோகத்தால்‌ ஒருவரை ஒருவர்‌ கண்டு காதலுற்று கூடீன ர்கள்‌. இப்படிக்‌ கூடினவர்கள்‌ உலகவர்கள்‌ நகைப்பார்களே என்று அஞ்சி பிரிந்தார்கள்‌. பிரிந்தவர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ மறந்ததில்லை. பெரிய பேதமைச்‌ சின்மதிப்‌ பெண்பையாச்‌ பராங்குசநாயகி நினைவு முதிர்ந்து தந்நிலை இழந்து உணர்ச்சியந்றுச்‌ கிடக்கிறாள்‌.இப்படிக்‌ கிடந்த பராங்குச நாயகியை தோழியரும்‌ தாய்மார்களுப்‌ கண்டு ஒரு மகள்‌ தன்னையுடையவர்களாகையாலே திருமகள்‌ போ6 வளர்த்தவர்கள்‌ ஆற்றாமையால்‌ ஒன்றும்‌ தோன்றாமல்‌ கவலையுற்ற:£ கலங்கினார்கள்‌. அந்தத்‌ தாய்மார்களில்‌ ஒருத்தி குறி சொல்லுகிள்‌ கட்டுவிச்சியைக்‌ கண்டு இந்த நோயின்‌ தன்மை என்ன? இதற்குப்‌ பரிகார: என்ன?” என்று வினவியபோது அவள்‌ “நீங்கள்‌ முன்னொரு காலத்தி வேலனுக்கு ஏதேதோ செய்வதாக பிரார்த்தித்தீர்கள்‌. ஆனால்‌ அந்‌: பிரார்த்தனை செலுத்தவில்லை. கால நீட்டிப்பால்‌ மறந்து விட்டீர்கள்‌ அதனால்‌ கோபமுற்றவனாய்‌ இந்தப்‌ பெண்ணின்‌ பீதாவேசித்து இந்நின௦ யெய்தும்படி நேர்ந்தது. வேலனைக்‌ குறித்து பூஜை செய்கின்‌! வெறியாட்டக்காரை அரைத்து வெளியாட வேண்டும்‌; அர்‌: ர ர… ட்டம்‌ மதுவாராதனை பஸண்‌ஈ “வண்டு. இல ச்ச்‌ ளைக்‌ 0 ப்பு ண்ண மேளம்‌; அதல. ஐன்‌ மடம்‌ ஜ்‌ த. ந்நோயுக்கிடமில்வாதபடி செய்து னிதுகான்‌” என்ட்‌ கட்டுவிச்சிச்‌ ௦ சொன்னாள்‌. மகள்‌ நிமித்தமாக நீள உருகும்‌ சாய்மார்கு6 தங்கள்‌ குடிமரபின்‌ ஒழுக்கத்துக்கு மாறாக மறந்தும்‌ பறந்தெ:ழாத்தன்‌ ௮ விட்டு, மகளின்‌ நிமித்தமாக கட்டுவிச்சி சொன்ன துக்கிணங்க இசை நட்‌ வெறியாட இறைச்சி, கள்‌, மீன போன்றவற்றை வைத்து வெறியாட்ட।! நடத்தினார்கள்‌. இதை அந்தரங்கத்‌ தோழி கண்டாள்‌. “பெருந்தேவனா எ பெருமான்‌ திறத்தில்‌ ஈடுபட்ட இவளை, இவள்‌ நிலை இன்னதென்றறியா£ வைணவக்‌ குடும்பத்தைத்‌ தூஷிக்க வேண்டும்‌ என்று கட்டுவிச்‌ஈ சொன்னதை மெய்க்‌ கொண்டு நீங்கள்‌ ஆராயாமல்‌ செய்த இந்த செயலா? பராங்குச நாயகியை இழந்துவிடுவீர்‌” என்று தோழியானவள்‌ ஆராய்ந்‌ சொல்வது போலச்‌ சொன்னாள்‌. உலகொருங்காக உண்ட பெருந்தேவஃ திறத்தீடுபட்டு சித்தியாமையாலே உணர்ச்சியற்றுக்‌ கிடக்கின்ற பராங்கு, நாயகி உண்மை நிலைமை யுணர்ந்து வெறியாட்டம்‌, களியாட்டம்‌ நம்‌ மரபுக்‌ ஒவ்வாதென விளக்கிவிட்டாள இது, தீர்ப்பாரை என்று தொடங்கு: திருவாய்மொழியின்‌ சாரம்‌. அடுகதபடியாக “‘துவளில்‌ மணிமாடமோங்கும்‌ என்று தொடங்கும்‌ உரையிலே தோழியரும்‌ தாய்மாரும்‌ திருத்தொலைவில்‌ஈ மங்கலத்தை சேளித்தார்கள்‌. அரவிந்த லோசனஎனக்‌ கண்டபோச நெடுங்கண்‌ இளமானான பராங்குச நாயகி அவன்‌ அழகிலே ஈடுபட்டு அவனை விட்டுப்‌ பிரியமுடியாமல்‌ பேராசையுற்று அங்ஙனே நிற்கின்றாள்‌. தாய்மார்‌ அவளை மீட்கப்‌ பலகால்‌ முயன்றும்‌ முடியவில்லை. இதைக்கண்ட அந்தரங்கத்தோழி (“நலியக்கூடிய பொருள்கள்‌ நலியா நின்றன என்று கூப்பிட்டும்‌ போருகிற பதினேழில்‌ த்‌ வரையும்‌ தெரியும்‌”. மேற்கூறிய பதினேழு திருவாய்‌ மொழிகளிலே பேற்றிலே பதற்றம்‌. தோன்றும்‌ என்கை.) “சிறப்புடைய பேரழகனைக்‌ கண்டால்‌ இவள்‌ மீளமாட்டாள்‌ என்று நீங்கள்‌ குறிக்கொள்ளாது வலிய அழைத்து வந்து சேவிக்க வைத்துவிட்டீர்கள்‌. அவன்‌ அழகில்‌ ஈடுபட்டு அவனைவிட முடியாதபடி நிற்கிறாள்‌, நீங்கள்‌ இவள்‌ திறத்து ஆசையை துறக்க வேண்டுமே தவிர அவன்‌ திறத்து ஆசையை அவள்‌ துறக்கமாட்டாள்‌ என்றாள்‌. மற்றோர்‌ நிலையில்‌ குட்ட நாட்டுத்‌ திருப்புலியூர்‌ ஆயன்‌ விஷயத்தில்‌ மிக்க பேரழகுக்‌ கண்டு பேரன்புடையவளாகி ஈடுபாடு கொண்ட பருவம்‌ நிரம்பிய இவளை யாருக்கேனும்‌ மணமுடிக்க வேண்டும்‌ என்று சுயம்வரம்‌ கூட்ட மணமுற சறைவிக்க ஆரம்பித்தார்கள்‌. அந்தரங்கத்‌ தோழி, “இவள்‌ ஏற்கனவே குட்டநாட்டுத்‌ திருப்புலியூர்‌ ஆயன்‌ விஷயத்தில்‌ ஈடுபட்டவள்‌; அவனோடு கலவியுள்ளவன்‌; அதனால்‌ அவள்மேல்‌ திருத்துமாய்‌ மணம்‌ கவிழ்கின்றது; இவன்‌ பேசுகின்ற பேச்செல்லாம்‌ அவன்‌ திறத்ததுவே; அவனுக்கு நேராக வேண்டும்‌ என்று நினைத்து சிறந்த ஆடை அணிகலன்கள்‌ எல்லாம்‌ அணிந்து கொண்டு புதுக்களிப்புற்றிருக்கிறாள்‌; ஆதலால்‌ இவளை திருப்புலியூர்‌ ஆயன்‌ திறத்தில்‌ சேர்ப்பிப்பதுதான்‌ தர்மம்‌, அங்ஙனம்‌ இன்றி நீங்கள்‌ நினைப்பது செய்தால்‌ அது அதர்மம்‌” என்றாள்‌. கருமாணிக்க மலைமேல்‌ மணித்தடத்தாமரை என்று தொடங்கும்‌ திருவாய்மொழியில்‌ அனுபவம்‌. இது தோழி அறத்தொடு நிற்றல்‌ என்ற பிரணவத்தில்‌ ஜீவபரர்கள்‌ சம்பந்தம்‌ சொல்லும்‌ தோழி உரையைச்‌ சேர்ந்த கூற்று.

தாய கூற்று–தலைமகளின்‌ பதற்ற நிலை கண்டு இது சாதநத்தில்‌ மூளுமோ என்றஞ்சும்‌ நிலைதாய பேச்சாகும்‌. ஆடி ஆடி என்று தொடங்கும்‌ திருவாய்மொழியில்‌, வாடிவாடும்‌ என்கிறபடி அடியார்கள்‌ குழாங்களை உடன்கூட பையால்‌ வந்த துன்பத்தாலே கொம்பை இழந்த தளிர்போலே வாடி மெலிந்து என்றும்‌, “பாலனாய்‌ ஏழுலகு” என்று தொடங்கும்‌ திருவாய்மொழியில்‌, “கண்ணன்‌ கழல்‌ துழாய்‌ பொன்‌ செய்‌ பூண்மென்முலைக்கு ” என்கிறபடியே, கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து பித்தேரி என்றும்‌. “மண்ணை இருந்து துழாவி என்ற திருவாய்‌ மொழியில்‌, என்‌ பெண்கொடி ஏறிய பித்தே” என்கிறபடியே, ஒப்புமையுள்ள பொருள்களையும்‌ அவனாக நினைத்துக்‌ கிட்டும்படி, பித்தேறி ஏறப்பேசி என்றும்‌, “கடல்ஞானம்‌” என்ற திருவாய்மொழியில்‌, ஈசன்‌ வந்தேறக்‌ கொலோ என்கிறபடியே ஆற்றாமையாலே இறைவன்‌ ஆவேசித்தானோ-என்னும்படியும்‌ கட்டிழந்த மாலுக்குஎன்ற திருவாய்மொழியில்‌, கற்புடையாட்டி இழந்தது கட்டே என்று பகவானைப்‌ பிரிந்த க்லேசத்தாலே கட்டடங்க இழந்து அகன்று என்றும்‌, உண்ணுஞ்சோறு என்ற திருவாய்மொழியிலே, இன்றெனக்குதவாதகன்ற என்கிறபடி, தன்னைப்‌ பிரிந்து துன்பப்படுகின்ற இன்னிலையிலே எனக்கு உதவாதே போன என்‌ பெண்பிள்ளை என்னும்படியாகவும்‌, “கங்குலும்‌ பகலும்‌” என்ற திருவாய்மொழியிலே, “சந்தித்து உன்‌ சரணம்‌ சார்வதே வலித்த தையலை என்கிறபடி அவனைக்‌ கிட்டி அவன்‌ திருமுன்னரே முடிய வேண்டும்‌ என்று உறுதி பூண்டமை சாதனம்‌ ஆமோ? என்று உபாஸக பரபக்தி தசையில்‌ உண்டாம்‌ வாட்டம்‌ மெலிதல்‌ முதலிய போலே சாதனத்திலே முதலிடுமோ ? என்று மாதா அஞ்சி, அவனையும்‌ வினவ வந்தவர்களையும்‌ மயங்கா நின்றாள்‌. மெலியா நின்றாள்‌, “எந்தன்‌ கோவே” என்று முறையிடுகிற ஏழில்‌, “முறையோ அரவணை மேல்‌ பள்ளிகொண்ட முகில்‌ வண்ணனே ” என்கிறபடி “இவள்‌ பக்கல்‌ உள்ளவை ஒன்றும்‌ உபாயம்‌ அன்று ஆனபின்பு இப்படித்‌ துடிக்கவிட்டிருக்கை உம்முடைய கருணைக்கும்‌ பாதுகாக்கும்‌ தன்மைக்கும்‌ தகுமோ?” என்று கூப்பிடுகின்ற ஏழு திருவாய்மொழிகளிலும்‌ உபாயத்திலே உறுதி தோன்ற பேசும்‌ இது தாய்க்‌ கூற்று-

தெளிவுறுத்தி நான்முகற்கு தென்மறைமால்‌ சொன்னான்‌
தெளிவின்‌ றிருக்கவே சொன்னான்‌ – தெளிவின்றித்‌
தேக்கு வடவேதம்‌ தெளிவிக்கும்‌? தேர்த்தெளிவால்‌
காக்குமத்‌ தென்மறையே காண்‌–13-(வெண்பா)

எம்‌ பெருமானானவன்‌ ஒரு நான்முகற்கு (நம்மாழ்வாருக்கு) மயர்வற மதி நலமருளி தென்மொழியாகிற திருவாய்மொழி என்ற திராவிட வேதத்தை தான்‌ சொன்னான்‌. மற்றுமோர்‌ நான்முகனுக்கு மயர்வறமதி நலமருளி கீர்வாணவேதத்தை உபதேசித்தான்‌. இந்நிலையில்‌ பிரம்மாவுக்கு உபதேசித்த வடமொழி மறை உலகவரை தெளிவிக்குமா? என்பது ஐயம்‌. மயர்வற மதிநல மருளிச்‌ சென்ற திராவிட வேதமே உலகவருடைய அறிவின்மையைப்‌ போக்கி மெய்புணர்வை உண்டாக்கி இறைவனடியிலே சேர்த்துக்‌ காக்கும்‌ தன்மையுடையதாகும் –

காணத்‌ தடைசெய்‌ மயர்வைக்‌ கழித்து மதிநலமாப்‌
பூணும்‌ பொலன்முகம்‌ தன்முகம்‌ ஏழ்பத்து முப்பதிகம்‌
நாணும்‌ நலங்கொள்‌ மகள்முகம்‌ பத்துடன்‌ ஏழ்பதிகம்‌
தோணற்றாய்‌ தோழி இருமுகம்‌ வாய்மொழி ஏழுமூன்றே–14-
-(கட்டளைக்‌ கலித்துறை)

ஐம்பொருளையும்‌ காணவொட்டாமல்‌ தடை செய்கின்ற வினைவழி வந்த உடல்வயத்தால்‌ வந்த அறிவின்மையை எம்பெருமான்‌ கழித்து முழுமெய்ஞானமும்‌ முழுமையான பக்தியும்‌, விட்டு நீங்காதபடி 73 திருவாய்மொழிகள்‌ தோன்றின. நாணத்தை மிகவுடைய தலைமகள்‌ கூற்றாக 27-திருவாய்மொழிகள்‌ தோன்றின. தலைமகளை வலது தோளாக உடைய தாய்முகமாக ஏழுதிருவாய்மொழிகள்‌ தோன்றின. அந்தரங்கத்‌ தோழி முகமாக மூன்று திருவாய்‌ மொழிகள்‌ தோன்றின. ஆக, தன்‌ முகம்‌, தாய்‌ முகம்‌, தலைமகள்‌ முகம்‌, தோழி முகம்‌ ஆக நான்கு முகங்களாக நூறுதிருவாய்‌ மொழிகள்‌ தோன்றின-

மூன்றும்‌ ஐந்தும்‌ அறியா தவர்க்கு உய்யும்‌ வகையை முதலு ரைப்பர்‌
ஏன்ற குருவின்‌ இன்ன ருளால்‌ இக்கரை சார்ந்தார்க்‌ கின்ப வெள்ளம்‌
தோன்றா மடுவும்‌ மேடு காணும்‌ துவளறு சீல மாழங்‌ காணா
தான்றன்‌ னருளால்‌ கரை சேர்ப்பார்க்‌கு உடற்கு றைகாண்‌ சடகோபன்‌ னுண்டே–15-
(ஆசிரிய விருத்தம்‌)

தத்துவங்கள்‌ மூன்றென்றும்‌, முதல்‌ தத்துவம்‌ எம்பெருமான்‌ என்றும்‌, அர்த்த பஞ்சகத்தை அறியாதவர்கட்கு அவற்றை அறிவித்தும்‌, துன்பக்‌ கடலை நீந்தி இக்கரை ஏறி இளைத்திருப்பாருக்கு என்கிறபடியே, பிரபன்னனுக்கு உபாயம்‌ அவனே என்று துணிந்திருப்பார்க்கு க்ருதக்ருத்யனாகையாலே முகில்வண்ண வானத்தவர்‌ சூழ பேரின்ப வெள்ளத்தை முத்தர்க்கு அறிவித்தும்‌, பரமார்த்தனுடைய திருமேனியைவிட இசையாமல்‌ வியாமோகத்தாலே அங்கு கொண்ட போக நினைக்கும்‌ உபய விபூதி நாயகனுக்கு “‘மங்கவொட்டு உன்‌ மாமாயையை” என்ற பாசுரப்படியே விகாரமான தேகதோஷத்தை எம்பெருமானுக்கறிவித்தும்‌, நித்திய தொண்டாற்றும்‌ சுவை மிகுதியாலே எம்பொருமானுடைய ஆச்ரிய பாரதந்தரியத்தால்‌ சீலகுணத்தாலே பரிமாறும்‌ பரிமாற்றத்தாலே சீலகுணம்‌ ஆழங்கால்படுத்தும்‌ என்று நித்தியர்கட்கு அறிவித்தும்‌ போருவர்‌. முழுக்ஷுக்களுக்கு நிச்சயமாக எய்வது பேரின்ப வெள்ளம்‌ என்று உபதேசித்தும்‌, இப்படி நான்கு வித அதிகாரிகளுக்கும்‌ ஆழ்வார்‌ உபதேசம்‌ செய்வர்‌ என்றபடி –

உண்டே? ஆயிரம்‌ கவிகொள்‌ கீதையும்‌ ஆதித்தியன்‌ ஆயிரங்‌ கதிர்‌ பரப்பியும்‌ இராம திவாகரன்‌ இலங்கை யெரித்தும்‌ உள்ளிருள்‌ நீங்கிய தென்பதுளதே? ஊற்றாறா பிறவிக்‌ கடலும்‌ ஒய்ந்ததே? ‘குருகையில்‌ வருமோர்‌ கோதில்‌ வகுள பூடணபாற்‌ கரன்‌ உதிக்க அப்பொழுதே பிறவியாம்‌ பெருங்கடல்‌ இறையும்‌ இலதே போதிற்‌ கமலம்‌ புரையற மலர்ந்தே உள்ளிருள்‌ எனும்‌ அறிவின்மை உலர்ந்ததே இவ்வெலாம்‌ நேர்ந்த இல்‌ வுலகின்‌ புறவே-16-( ஆசிரியப்பா )

திருத்தேர்த்‌ தட்டில்‌ கண்ணன்‌ எம்பெருமான்‌ அருளிய கீதையெனும்‌ ஆயிரம்‌ கவி உதித்தும்‌, ஆதித்தியன்‌ ஆயிரம்‌ கிரணம்‌ பரப்பியும்‌. சக்கரவர்த்தி திருமகன்‌ என்னும்‌ திவாகரன்‌ இலங்கை தகிக்க ஆயிரம்‌ அம்பு எய்வித்தும்‌ உள்ளிருள்‌ என்னும்‌ அஞ்ஞானம்‌ நீங்கியதில்லை. மேன்மேலிருளைச்‌ சுரக்கும்‌ பிறவிப்‌ பெருங்கடல்‌ வற்றவில்லை. திருக்குரு கூரில்‌ வந்துதித்த குறை யாதும்‌ இலாது வகுள பூஷண பாஸ்கரன்‌ உதித்த அந்தக் கணமே பிறவியாம்‌ பெருங்கடல்‌ அல்பம்‌ இன்றி வற்றி இதய கமலம்‌ நன்கு மலர்ந்தது; உள்ளிருள்‌ என்பதான அறிவின்மை உலர்ந்து போயிற்று. இவை யெலாம்‌ நேர்ந்ததால்‌ இவ் வுலகம்‌ இன்புற்றது.

இன்பமாரி இன்பப்பா வீட்டின்பம்‌ இம்மூன்றுள்‌
பண்பறிவார்‌ யாரே! பயனறிவார்‌ – உண்மை
தரமுயர்‌ மாறன்‌ இசைவேதம்‌ அர்ச்சை
திரிபறிவார்‌ சேர்வர்‌ நரகு–17-
(வெண்பா)

இன்பமாரியாம்‌ குருகூர்ச்சட்கோபனையும்‌, இவர்‌ திருவாய்‌ மலர்ந்தருளிய திருவாய்‌ மொழியையும்‌, அர்ச்சாமூர்த்தியை உலோகங்களால்‌ புனையப்‌ பெற்றது என்றும்‌, நான்காம்‌ வர்ணத்தார்‌ என்றும்‌, தமிழ்பாக்கள்‌ என்றும்‌ பண்பறியார்‌ கூறுவர்‌. பண்பறிவார்‌, தொழுகுலத்தோன்‌ என்றும்‌,உயர்வேதமென்றும்‌, சுத்த ஸத்வ திருமேனி என்றும்‌ காண்பர்‌. இதற்கு மாறுபட அறிவர்‌ நரகம்‌ சேர்வர்‌ என்பதே-

நரகை யொழித்து நன்கழல்‌ சேர்க்கும்‌ அனந்தபுரம்‌
அருச்சித்‌ தமரர்‌ தலைவன்‌ அயனும்‌ நிலத்தேவர்‌
ஒருத்தர்‌ தவறா(து) ஒருங்குமூ வாசல்‌ கடைப்பிடித்து
திருத்தம்‌ உறவே சமமாகச்‌ சேவிக்கச்‌ சீர் கொளுமே-
-18-(கட்டளைக்‌ கலித்துறை)

மலைநாட்டு திருப்பதிகளில்‌ ஒன்றானது திருவனந்தபுரம்‌. அதில்‌ அமரர் கோனாகிய விஷ்வக்சேனர்‌, முதல் வாசல்‌ கடைபிடித்து திருமுடிபக்கம்‌ நின்று சேவித்தும்‌, எம்பெருமான் நாபியில்‌ தோன்றிய பிரமன்‌ இரண்டாம்‌ வாசல்‌ கடைபிடித்து திரு உந்திக் கமலம்‌ சேவித்தும்‌, நிலத் தேவர்கள்‌: மூன்றாம்‌ வாசல்‌ கடைபிடித்து திருவடிகளைச்‌ சேவித்தும்‌, இப்படிச்‌ சேவித்தாலும்‌ தன் பால்‌ வேற்றுமை இன்றி சமமாக சேவிக்கும்‌ வாய்ப்பினை உடையதாம் –

கொள்ளும்‌ எழுத்தொன்‌(று) இகுளைஎன உறவில்‌ உணர்த்திகுறை வில் பொருள்
விள்ளும்‌ நமம செவிலியென அருளே நெறிகொள்‌ மிக்கதிடம்‌
துள்ளும்‌ பதற்றம்‌ மகன்நான்கில்‌ துவளில்‌ போகத்‌ துறுவேட்கை
தெள்ளென்‌ ஞானச் சட கோபன்‌ தெறிக்கும்‌ நால்வர்‌ நான்முகத்தே–19-
(அறுசீர்க்‌ கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்‌)

பிரணவத்தின்‌ அர்த்தமான ஜீவபரர்கள்‌ சம்மந்தத்தைத்‌ தோழிக்‌ கூற்றாகச்‌ சொல்லும்‌. குறைவிலா நிறைபொருள்‌ தரும்படியான நமப்பதம்‌, எம்பெருமான்‌ அருளல்லது வேறு உபாயம்‌ இல்லை என்னுபடியான திட நம்பிக்கையை வலியுறுத்தும்‌ தாய்க்கூற்று. தலைமகனை சேர்ந்தல்லது தரிக்க முடியாத பதற்றமுடைய நாராயணாய என்ற நான்காம்‌ வேற்றுமைப்‌ பொருளைத்‌ தலைமகள்‌ கூற்றாகச்‌ சொல்லும்‌. இப்படித்‌ தோழி, தாயார்‌, தலைமகள்‌ மூன்றோடு பெண்‌ பேச்சாகவும்‌ பேசும்‌ ஆழ்வார்‌ தம்‌ பேச்சாக நான்கு அதிகாரிகளைப்‌ பார்த்து நான்கு முகமாக உபதேசிப்பர் –

என்பெறு தென்ன மலைக்கா துள்ளத்து ஊறிய மதுவிர தமாய்‌ தூமது வாய்கொள்‌ கொண்டு குழல்வாய்‌ வகுளத்தின்‌ சாரமுட்‌ கொண்டு தேனென என்று ஆளம்‌ வைத்துச்‌ சிறுகாலில்‌ லியம்போது குறிஞ்சி மருளறும்‌ காமரம்‌ கந்தாரம்‌ தகைவறப்‌ புக்கு வண்டொத்‌ திருண்ட குழலில்‌ சங்கையற மருவி யருளாத யாமென்‌ றோடிவந்து வாசமே ஊதி வண்டே கரியாய தெய்வ வண்டோடே சேர்விக்கும்‌ சேமம்‌ உடைய நாரதன்‌ முனிவா கனர்தம்‌ பிரான்மார்‌ போல்வார்‌ இவர்களை வண்டு தும்பியாம்‌ பொருளே--20-( அகவற்பா)

அழகிய மலரெலாம்‌ ஊதி நீ என்பெறுதி என்று மீட்க வேண்டும்படி தகாத பொருள்களை இனிய பொருள்களென்று மயங்காதே, இறைவனாகிய தன்னுடைய அழகு சீலம்‌ முதலியவைகளை நினைத்து உள்ளம்‌ கனிந்திருக்கும்‌ அடியார்களுடைய மனத்திலே பகவனாகியத்‌ தேனை விரும்பி அவனையே உணவாக உடைய வண்டு, தாமரை மலரில்‌ இருந்து கொண்டு அதனை விட்டு, அடைவதற்கே அரியதாய்‌ அடைந்தாலும்‌ நாவினை நனைப்பதற்கும்‌ போராதே, தேனை உடைய முள்ளிற்‌ பூவை கண்ணாலும்‌ பாராததைப்‌ போன்று, “தேவரீருடைய தேனே மலரும்‌ திருவடித் தாமரைகளுடைய இனிமையில்‌ மனம்‌ அழுந்திய ஒருவன்‌ மற்றொரு அற்ப இன்பத்தை விரும்ப மாட்டான்‌” என்கிறபடியே, மற்றொன்றினைப்‌ பிரித்து பாராதே இந்தத்‌ தேனை உண்ணுதலையே விரதமாக உடையராய்‌ பகவானாகிய இனிய பொருளை அனுபவிக்கும்‌ அனுபவத்தாலே பரிசுத்தமாய்‌ வகுள மாலையைத்‌ தரித்த ஆழ்வாருடைய இனிமை பரத்துவம்‌ முதலான வற்றின்‌ இனிமையும்‌ அளவிற்குட்பட்டது என்னும்படியான திருக்குழலில்‌ வைத்த ஒளிமா மலரான வகுளத்தின்‌ தரத்தை எடுத்து அவ்வழியாலே இத்தலையில்‌ இனிமையை அனுபவித்து, இப்படி பகவானுடையவும்‌ பாகவதருடையவும்‌ இனிமைகளை அனுபவித்த செருக்குக்குப்‌ போக்கு வீடாக ஆலத்தி வைத்து, காலங்கட்கு தகுதியான பண்களைப்‌ பாடி, திருவாசல்களிலே சேவிக்க வந்தவர்கள்‌ நிறைந்து தலைப்புகவொண்ணாதபடி நெருக்க தெருவாசல்‌ காப்பர்‌ திருக்கதவு திறக்க வேண்டும்‌ என்று விரும்பிக்‌ கேட்டு, கண்ணையும்‌ மனத்தையும்‌ கவருகின்ற திருவாசலில்‌ அழகில்‌ துவக்குண்ணாதே அதனைக்‌ கடந்து புகவேண்டுகையால்‌ தடையற பாடுவாராக இருக்கின்ற அந்தரங்கத்‌ தன்மையாலும்‌, ஒன்றிலேயே நோக்குடைய மனத்தினை உடைமையாலும்‌, தனக்கு ஒத்த விஷபமுள்ள இடத்திலே சேர்ந்து அச்சமில்லாமல்‌ அவனுடைய அண்மையில்‌ இருப்பவர்களாய்‌, இத்தலையில்‌ துன்பத்தை அவனுக்கு அறிவித்து அவனோடே கூடிவர இராதே முந்துறவே தேடிவர வேண்டும்‌ என்று விரும்பி விட்டபடியே இத்தலையில்‌ துன்பத்துக்குத்‌ தகுதியாக அவன்வரவினை அறிவிக்க, விரைந்து வந்து தங்கள்‌ வரவாலே இத்‌ தலையில்‌ பிறந்த செவ்வியை அனுபவித்து அத்தலையில்‌ தாங்கள்‌ அனுபவித்த இனிமையை தங்கள்‌ வரவாலே இத்தலைக்கு விளக்கிக்‌ கொண்டு தரிக்கச்‌ செய்து, வேத சாகைகளின்‌ மேலேயுள்ள சாரத்தை உட்கொள்ளும்‌ ஆறுபத நிஷ்டர்களாய்‌ இரண்டு சிறகுகளோடு கூடியிருப்பதாலே தடையின்றி எங்கும்‌ செல்லக்‌ கூடியவர்களை முன்னிட்டு அங்கீகரிக்கும்‌ அவனாய்‌, வேதாந்தங்களாலே அறியப்படுமவன்‌ என்று தோன்றும்படி கெருடவாகனனாய்‌ சாரத்தையே எடுக்கின்ற சர்வேச்வரனோடே சேர்விக்கும்‌ பிரம்மமாவனையாகிற சேமத்தையுடைய நாரதன்‌, பகவானுடைய குணங்களை அனுபவித்து போரானந்தமுடையவனாய்‌ அந்த ஆனந்தத்தில்‌ பாடிக்கொண்டும்‌, நடனம்‌ ஆடிக்கொண்டிருக்கும்‌ ஸ்ரீநாரதமாமுனி, லோக சாரங்கமாமுனிகளாலே தாங்கப்படுகையாலே முனிவரென்று கூறப்படுகின்ற திருப்பாணாழ்வார்‌, திருவாய்மொழி இசையினையே தங்களுக்கு இனிய பொருளாகக்‌ கொடுக்கின்ற தம்பிரான்மார்‌ போன்றவர்களை வண்டு தும்பி என்னும்‌ என்கிறபடி.

பொருளில்‌ அடிமையிற் புக்கிலர் ஞாநம்
இருந்தும்‌ இசையார்‌ அழுக்கை – விரும்பியும்‌
ஏற்பரோ? மாறன் பா மெய்யுணர்ந்தார் ஏலாரே
காற்கடை கொள்ளுவர் காண்
–21-(வெண்பா )

தடையற்ற சுவாதீனான பரம்‌ பொருளுக்கு ஆன்மா அடிமை என்பதையும்‌, அந்த அடிமைகளோட தொண்டாற்றுதலையும்‌ அறியாதவனானவனுடைய ஆன்மா அறிவு மயம்‌ ஆனந்த மயனானாலும் மாறன் பாவாகிய திருவாய்மொழி உணர்ந்தோர்‌ இவ் வாத்மாவை வேண்டுமென்றிசைய மாட்டார்கள்‌. இவ் வான்மாவால்‌ தரிக்கப்‌ பெறா அறிவில்லாப்‌ பொருளாம்‌ அழுக்குடம்பை ஏற்க மாட்டார்கள்‌ என்பதை சொல்ல வேண்டிடுமா? அவற்றைக்‌ காற்கடை கொள்வர் –

காண்மின்‌ உலகீர்‌ சனக தசரதர்‌ காசினியில்‌
பேணும்‌ பிறங்கொளி இலதாம்‌ நந்தன்‌ இவர்கள்குலம்‌
தோணும்‌ முதலும்‌ இடையும்‌ கடையும்‌ துலங்குவபோல்‌
நாணுறு நான்கினில்‌ மாறன்‌ எனவரு பாற்கரனே
–22-(கட்டளைக்‌ கலித்துறை)

உலகவர்களே! இந்த வியப்பைக்‌ காணுங்கள்‌. ஜனகர்‌ மூத்த மகளான சீதா பிராட்டியும்‌, தசரத சக்கரவர்த்தியுடைய நடுப்‌ பிள்ளையான பரதாழ்வானும்‌, உலகவர்‌ விருப்பத்துக்‌ குரித்தல்லாத குலத்தில் தோன்றிய நந்த கோபனுடைய கடைக்‌ கூற்றுப்‌ பிள்ளையான கண்ணனும்‌ தோன்றி,குலத்தை சார்ந்த குறைகளைப்‌ போக்கி புகழுண்டாக்கினது போல்‌ மாறன்‌ நான்காம்‌ வர்ணத்துத்‌ தோன்றி குலத்துக்குப்‌ புகழும்‌ உலகவருடைய பிறவிச் சிறையும்‌ அறுத்தார் –

பாற்கரன்‌ கதிரின்‌ ஞானமா ந்தம்‌ அடியவன்‌ பாலதோர்‌ நூல்களின்‌ நுகர்பவன் பகர்வே
நூற்களின்‌ சாரமாம்‌ நுவலரு மறையின்‌ உயிர்களாம்‌ நுவல்பர தந்திரன்‌ நுகர்பவன்‌ பரனே
பாற்படா பரன்தன்‌ தன்வழி நுவல்பவை முதற்கடை பகையிவை நான்கும்‌ நமவும்‌ பின்னவே
ஏற்ப திவ்வாறாம்‌ குறை யறக் காண்‌பார் பரனுயிர் இயல்பை அறிவெனும் கடலெனப் பெறுவரே -23-
(ஒன்பதின்‌ சீர்க்கழி நெடில்‌ ஆசிரிய விருத்தம் )

பகலவனுடைய பேரொளியைப்‌ போன்ற ஞான ஒளியும்‌, அவற்றின்‌ காரியமான ஆனந்தமும்‌ உடையவனான இந்த ஜீவன்‌, தான்‌ பரனுக்கு அடியவனாய்த்‌ தொண்டு செயது தொண்டினால்‌ வரும்‌ இன்பம்‌ தனதாகக்‌ கருதுபவன்‌ என்பது சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்டதாகும்‌. சாஸ்திரங்களின்‌ ஸாரமாய்‌ சொல்வதற்கரிய பெருமைகளைபுடையதான திருமந்திரத்தில்‌, சேதனனை பரதந்திரன்‌ என்றும்‌, இந்தப்‌ பரதந்திர இயல்புக்கு ஏற்ப ஜீவன்‌ செய்கின்ற தொண்டினால்‌ விளையும்‌ இன்பத்தை நுகர்பவன்‌ இறைவனென்றும்‌ சொல்வதாகும் –
நூல்களில்‌ சொன்ன ரீதியில்‌ பரனுக்கு ஜீவனானவன்‌ பரதந்திரன்‌ என்றும்‌ போக்யம்‌ என்றும்‌ கொள்ளாது, சேஷத்துவ போக்த்ருவத்தோடு கூடிய இவ்‌- விரண்டும்‌ அகங்காரத்தை ஏற்றிருப்பதால்‌ பரன்‌ திருவுளத்திற்கு மாறுபட்டவை. (அவன்‌ உகப்புக்கு மாறுபட்டவை) இவற்றைத்‌ திருமந்திரத்தில்‌ ப்ரணவத்தில்‌ முதல்‌ எழுத்தாகிய அகாரமும்‌ ஈற்றெழுத்தாகிய மகாரமும்‌ சொல்லியிருக்க, பின்வரும்‌ நாராயணாய என்று வரும்‌ நான்காம்‌ வேற்றுமையும்‌ இரண்டாம்‌ பதமான நமசும்‌ சேஷத்வ போக்த்ருத்வத்தை அறத்தள்ளி முதற்சொன்ன அகார மகாரங்களை விட்டு, பின்‌ சொன்ன நமபத ஆய பதங்கள்‌ பின்‌ வந்து பாரதந்த்ரிய போக்யதையை. சொல்லிற்று. இதில்‌ அகங்காரத்திற்கு யோக்யதை இல்லையாயிற்று. இவ்வாறாக பரமாத்மாவின்‌ இயல்பையும்‌ ஜீவாத்மாவின்‌ இயல்பையும்‌ மாறுபடக்‌ காணாது. மேற்சொன்ன ரீதியில்‌ யதார்த்தமாக காண்பவர்களை கண்ணனெம்‌ பெருமான்‌ “ஸமஹாத்மா” என்று சொன்னதாலே, மகாமதியுடைய வன்‌ என்பதால்‌ இவன்‌ கடல்‌ போன்ற பேரறிஞன்‌ எனப்படுவான்‌-இதை நம்மாழ்வாரும்‌ “தனைக்கேயாக எனைக்‌ கொள்ளுமீதே” என்ற ருளியிருக்கின்றார் -“சேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ போலன்றே பாரதந்தர்ய போக்யதைகள்‌” என்று தொடங்கும்‌ ஆசார்ய ஹ்ருதய ஸூத்திரத்தின்‌ அடிப்படையில்‌ அமைந்தவை இவை-

கடல்நீர்‌ உப்புநீர்‌ நித்தம்‌ காணலாம்‌ உவாவில்‌ அன்றித்‌ தொடற்‌ குதவாத போல்‌ நூற்கடல்‌ ஆங்கே கலங்குநீர்‌ நொய்யவாம்‌ தெளிவிலாக்‌ கலங்கல்‌ பருகத்‌ தெளிவிலாது ஐயத்‌ திரியறி வின்மையின்‌ ஆழ்ந்து வேண்டா நாற்ற மிகுமுடல்‌ முகந்து நானென தென்னும்‌ நலமி லுழல்வான்‌ இறையருள்‌ கடைக்கண்‌ இயங்கக்‌ குருகை நேர் வகுள பூஷணன்‌ பாற்கரன்‌ வந்து இன்ப மாரி இயந்ததோர்‌ ஞானத்து வீட்டின்ப வாரி தன்‌ குணநீர்‌ மிசைந் ஆயிரங்‌ கதிரா யிரங்‌ வியமுதின்‌ நிலத்தே யிவரால்‌ நிறைஞா னம்பெரும்‌ புகல்வதோர் புகழே மாறன் தன் வேதமே –-24-(ஆசிரியப்பா)

உப்புத்‌ தன்மை வாய்த்தாய்‌ அந்தக்‌ கடலுக்குள்‌ வசிக்கின்ற மீன்‌ முதலான பொருட்களுக்கொழிய, புறம்புள்ளார்க்கு உள்ளே புகுவதற்கும்‌ அரிதான பவுர்ணமி முதலிய பருவ காலங்களில்‌ ஒழிய ஏனைய காலங்களில்‌ தீண்டத்தகாது என்கையாலே முழுகுதற்குக்‌ கால நியதியை உடைத்தாய்‌ இருக்கிற கடல்‌ நீரானது, மேகம்‌ பருகி மழையாகப்‌ பெய்ய அம்மேகத்தின்‌ சம்பந்தத்தில்‌ கடல்நீரினது உப்புத்தன்மை நீங்கி எப்பொழுதும்‌ எல்லார்க்கும்‌ பயன்படுவத போன்று, வடமொழி மறையானது, பிராமணன்‌ ஆவணிமாதத்திலாவது புரட்டாசி மாதத்திலாவது சாஸ்திரத்தில்‌ சொல்லியபடி உபாகர்மங்களைச்‌ செய்யும்‌ நியமத்துடன்‌ கூடியவனாய்‌ நாலரை மாதங்களில்‌ வேதங்களை அத்யயனம்‌ செய்யக்கடவன்‌. இதற்குப்‌ பிறகு நியமத்துடன்‌ கூடியவனாய்‌ சுக்கில பட்சத்தில்‌ வேதங்களை ஒதக்கடவன்‌. 4 வேதம்‌ 6 அங்கங்கள்‌ உபநிடதங்களையும்‌ கிருஷ்ணபட்சத்தில்‌ நன்றாக அத்தியயனம்‌ செய்யக்கடவன்‌ என்கிறபடியே அத்தியயனம்‌ செய்வதற்கு கால நியதியும்‌, மேல்‌ மூன்று வர்ணத்தாரும்‌ ஒதற்கு அதிகாரிகள்‌ ஆகையாலே, அதிகாரி நியதியையும்‌ உடைத்தாயிருக்கிற நூற்கடல்‌ என்ற வேதம்‌, இவள்‌ வாயனகள்‌ திருந்தவே என்கிறபடியே நம்மாழ்வார்‌ திருவாக்காலே வெளிவந்து கால நியதி அதிகாரி நியதியை வேண்டாத பண்பை அடைந்து கட்டளைப்பட்டவாறே, பெண்களாலும்‌ நான்காம்‌ வர்ணத்தவர்களாலும்‌ அத்யயனம்‌ செய்யத்தக்கது. இதனை அத்தியயனம்‌ செய்யும்வாகட்கு மோக்ஷம்‌ கையில்‌ இருக்கும்படியே. ஒரு காலவரையின்றியே எல்லார்க்கும்‌ எல்லாக்‌ காலமும்‌ கற்பதற்குரியதாம்‌ இந்தத்‌ திருவாய்மொழி. இந்த மறையும்‌ இதன்‌ பயனும்‌ சிறப்புடைவனவாகும்‌. வடமொழி மறை முக்குணமான தோஷத்தைக்‌ குறிக்கொண்டதால்‌ அம்மறை பயின்றவர்கட்கு யதார்த்த ஞானம்‌ வருவது அருமை. ஐய உணர்வு, திரிபுணர்வு, அறிவின்மை இவைகளில்‌ ஆழ்ந்து இதனால்‌ பொல்லா ஒழுக்கு ஒழுகி துர்நாற்றமுடைய உடலெடுத்து, நான்‌ எனதென்னும்‌ அகங்காரமமகாரங்களால்‌ ஆனந்தம்‌ இல்லாத காட்டில்‌ உழல்வாருக்கு வேதம்‌ பிரமாணம்‌, இதைக்கண்ட இறைவன்‌ மனம்‌ வருந்தினவனாய்‌, சேதனர்பால்‌ அருள்‌ பெருகி உண்மை உணர்ந்த நல்லாள்‌ ஒருவனைத்‌ தோற்றி வைக்க வேண்டும்‌ என நினைத்து, அமலங்களால்‌ விழிக்கும்‌ தம்கடைக்‌ கண்களால்‌ நோக்க, அந்நோக்கம்‌ ஜாயமான காலத்தில்‌ அவதரிக்கப்பட்ட இனபமாரியாம்‌ ஆழ்வார்‌ என்ற முகிலானது அர்ச்சாவதாரத்தின்‌ குண நீரைப்பருகி, ஆயிரம்‌ கவியமுதமாக்கி, இதையுண்டவர்‌ நிலத்தேவராய்‌ நிறைஞானம்‌ பெற்று தாங்கள்‌ உய்ந்தார்கள்‌; உலகை உய்வித்தார்கள்‌. இதனால்‌ மாறன்‌ வேதம்‌ புகழ்வதற்கரியதோர்‌ புகழுடையது.

வேதங்கள் கற்றல் ஒழுகலில் விப்ரராய்
சாதியால் தாழ்த்தி உயர்த்திகள் -ஓதுவர் சந்தங்கள்‌ ஆயிரவர்‌ சாதி பிரித்தறியார்‌
வந்தனைக்காம்‌ வைணவன்‌ தான்‌
–25-(வெண்பா )

மறைகளை குருமுகமாகக்‌ கற்றறிந்து அறிந்ததின்‌ ஒழுக்கத்தை மேற்கொண்டொழுகலால்‌ பிராமணன்‌ என்ற தகுதியை பெறுவர்‌. இவர்‌, தன்‌ குலத்தை மேலாக மற்றது தாழ்வாகக்‌ கொள்வர்‌. குருகூர்‌ சடகோபன்‌ திருவாய்‌ மலர்ந்தருளிய சந்தங்கள்‌ ஆயிரத்தைக்‌ கற்று வல்லவரானால்‌ வைணவன்‌ என்ற தகுதி பெறுவான்‌. இவன்‌ ஆன்மாவின்‌ உண்மை அறிந்து அனைத்தும்‌ சமமே என்றொழுகுவான்‌-

தானே உயர் தின்னணை ஒன்று சாற்றினான்‌ நோற்ற நான்கில்‌
கானேய்‌ பயிலேறு கண்கரு வீடொருக்‌ கொண்ட சொன்னால்‌
தேனே எம்மா ஒழி வேய்‌ நெடு நான்கில்‌ தெரிபயனும்‌
ஊனேய்‌ தடைஉயிர்‌ ஆறெம்மான்‌ ஐம் பொருள்‌ ஓர்ந்துரைத்தே –26
–(கட்டளைக்‌ கலித்துறை)

மிக்க இறை நிலையும்‌ என்ற தனியனின்படி திருவாய்மொழியில்‌ அர்த்த பஞ்சகம்‌ உள்ளதென்பதை உயர்வற என்றும்‌, திண்ணன்‌ வீடு, அணைவதரவணை, ஒன்றும்‌ தேவு என்றும்‌ தொடங்கும்‌ நான்கு திருவாய்மொழிகளில்‌ பரத்வ தன்மை சொல்லியதாம்‌. பயிலும்‌ சுடரொளி, ஏறாளும்‌ இறையோனும்‌, கண்கள்‌ சிவந்து, கருமாணிக்கம்‌,என்று தொடங்கும்‌ திருவாய்‌ மொழிகளில்‌ ஆன்மாவின்‌ தன்மையும்‌, வீடுமின்‌, ஒரு நாயகம்‌, கொண்ட பெண்டீர்‌, சொன்னால்‌ விரோதம்‌ என்று தொடங்கும்‌ திருவாய்மொழியில்‌ இறைவனை அடையத்‌ தடை பண்ணும்‌ விரோதியின்‌ தன்மையும்‌ சொல்லிற்று. நோற்ற நோன்பு, ஆராவமுதே, மானேய்‌ நோக்கு நல்லீர்‌, பிறந்தவாறு என்று தொடங்கும்‌ நான்கு திருவாய்மொழியில்‌ பகவானை அடைவதற்கு சாதனத்‌ தன்மையும்‌ சொல்லிற்று. எம்மா வீடு, ஒழிவில்காலம்‌, நெடுமாற்கடிமை, வேய்மரு தோளினை என்று தொடங்கும்‌ திருவாய்‌ மொழிகளில்‌ பரன்‌ திறத்து அடைந்து பெரும்பயனைச்‌ சொல்லிற்று —

ஈதே முடிவில்‌ விடுமுடம்பில்‌ எச்சில்‌ உகக்கும்‌ காதலன்போல்‌
ஏதும்‌ உடம்பின்‌ குறைகாணான்‌ மாயஆக்கை இதில்‌ புகுந்து
யாதும்‌ உகந்த நிலமாக இவன்திரு மேனிவா னாட்டிருப்பா
பாதம்‌ பற்றி மங்கவொட்டுன்‌ மாயை எனவே விடுவிக்கும் –27-(
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்‌)

மாலையாக பிறக்கும்‌ பிறவிகளின்‌ உடம்பில்‌ இறைவனருளால்‌ வினைத்‌ தொடர்பு இல்லாததாக இதுதான்‌ கடைசி உடம்பு என்றும்‌, இணி, உடம்பின்‌ தொடர்பு இந்த ஆத்மாவிற்கு கிடையாது என்றும்‌, இந்த நிலையில்‌ இருக்கும்‌ ஆழ்வார்‌, இறைவன்‌ இடத்திலும்‌ அடியார்களின்‌ திறத்திலும்‌ மற்றும்‌ இறைவன்‌ சம்பந்தப்பட்ட எல்லைக்‌ காண்பரீய பிரேமையும்‌ மதிப்பும்‌ உடையவராக ஆகவும்‌, இதைக்கண்ட எம்பெருமான்‌ பல கல்பங்களாக படைத்துக்‌ கொண்டு வருகிற நிலைபில்‌ இந்த ஆழ்வாருடைய பண்புகளைக்‌ கொண்டு, இதுவரைக்கும்‌ படைத்த படைப்பில்‌ இப்படி ஒருவர்‌ இல்லை மேலும்‌ இருக்க முடியாது என்ற திருவுள்ளமுடையவனாய. இவர்‌ திருமேளியில்‌ வாஞ்சையறு, காதலியின்‌ அழுக்கை விரும்பும்‌ காதலன்‌ போல்‌ இவர்‌ திருமேனியில்‌ புகுந்திருந்து, இ வரை இந்தத்‌ திருமேனியோடு பரமபதத்திற்குக்‌ கொண்டு செல்ல வேண்டும்‌ என்று நினைத்து, “இந்த ஸ்தூல உடம்போடு கையைப்‌ பிடித்து அழைக்கின்றானே என்று இங்கு தான்‌ அருவருக்கத்தக்கப்‌ பிறவி என்ற சிறை என்றால்‌ அங்குமா?” என்று கலங்கி எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றிக்கொண்டு முக்குணத்தோடு கூடிய மாயையின்‌ பரிணாமமாகையாலே இதை விடுவிக்க வேண்டுமென்று ஆழ்வார்‌ பிரார்த்திக்க, திவ்யசூரிகளான இவர்களால்‌ வாழ்த்தப்‌ பெற்ற திவ்ய தேசங்கள்‌ தோறும்‌ செய்யும்‌ பிரேமையை இவருடம்பில்‌ செய்வானாக. இவர்‌ இசையாமல்‌ இறைவனைப்‌ பார்த்து, அருவருக்கத்தக்க மாயை காண்‌ இந்த அழுக்குடம்பு ஆதலால்‌ இதை விடுக்க வேண்டுமென்று திருவடிகளிலே மன்றாட எம்பெருமான்‌ ஆச்ரித பரதந்தரனாய்‌ இசைந்து விடுவித்தான்‌ என்பதாம்‌. இந்த குணம்‌ “மருள்கள்‌ கடியும்‌ மணிமலை திருமாலிருஞ்சோலைமலையே” என்ற பதிகத்தில்‌ காணலாம்‌.

என்றனை நீஇன்று ஒருபொரு ளாக்கி என்னுள்ளே நின்றனை வைத்தாய் அன்றெனை புறம் போகப்‌ புணர்த்த தென்செய்க? குன்றென திகழ் மாடங்கள் சூழ்ந்த திருப்பேரா ஒன்றெனக்‌ கருள்செய்‌ யுணர்த்த லுற்றேன்‌ என்றே மாறன்‌ நின்றே இயம்ப தலைநிலம்‌ கவிழ்ந்து தரையைக்‌ கீறி இறைவன்‌ இதற்கொரு மாற்றங்‌ காணா கடிமணக்‌ காட்சியில்‌ மந்திரம்‌ மறந்த மறையவன்‌ வாத்திய ஒலியை முழக்கி செய்யச்‌ செய்யும்‌ செய்கை போலே சூழ் விசும்‌ பணிமுகில்‌ தூரியம்‌ முழக்கம் முரசங்கள்‌ வலம்புரி முழக்கம்‌ செய்து அர்ச்சி ராதி கதியைக்‌ காட்ட அமானவர்‌ அடையும்‌ நிலையுங்‌. காட்டி அந்தமில்‌ பேரின்பத்‌ தடியரோ டிருந்தமை இவ்வெலாங்‌ காட்டி இறைவன் ஆழ்வாரை திசைதிருப்பிக்‌ கேட்ட கேள்வியை ‘ மறக்கச்‌ செய்வதில்‌ மாயன்‌ சதுரன்‌ மாறனே! வாரீர்‌ ஓங்காரத்‌ தேரில்‌ ர்‌ ஏறுமென இறைவன்‌ இதமொ ழிந்தானே--28-(ஆசிரியப்பா )

வைராக்கியங்களைக்‌ கண்டு எம்பெருமான்‌, ர அல்‌ கப்பன்‌ திருப்பாற்கடல்‌ முதலான திவ்ய தேசங்களில்‌ பண்ணும்‌ ஆதரத்தையும்‌, அன்பையும்‌ ஆழ்வார்‌ திருமேனி முதலான அவயங்கள்‌. – உறுப்புகள்‌ எல்லாவற்றிலும்‌ செய்து பஞ்ச பூதங்களினுடைய சேர்த்தியாலான ஆழ்வாருடைய திருமேனியை பரமபதத்திற்கு எடுத்துச்‌ செல்ல விரும்பி அவசரப்படுத்துவதைக்‌ கண்ட ஸ்வாமி நம்மாழ்வார்‌, எம்பெருமானைப்‌ பார்த்து ஒரு கேள்வி கேட்டார்‌. எம்பெருமானே! அடியேனை இன்று ஒப்பற்ற வஸ்துவாக்கி-பொருளாக்கி உபயவிபூதிக்கும்‌ நாயகனான உம்மை என்னிடத்தில்‌ இருத்தி, என்‌ இருதய கமலத்தில்‌ வீற்றிருந்து, இவ்வளவு பாரிப்புகளைச்‌ செய்து என்னைச்‌ சூழ்ந்து கொண்டு ஒரு நொடிப் போதும் என்னை விட்டகலாமல்‌ பேரருள்‌ செய்கிறீர்‌. அடியேனைக் கடந்த காலங்களில்‌ மாறிப்‌ மாறி பல பிறப்புகளை எடுத்து அனர்த்தப்படும்படி விட்டு வைத்தது எதுக்காக? இதை யருளிச்‌ செய்ய வேணும்‌’ என்றார்‌. அதற்கு எம்பெருமான்‌, இவர்‌ கேள்விகளுக்குப்‌ பதில்‌ சொல்ல ஆரம்பித்தால்‌, பிறகு வேறு ஒரு கேள்வியைக்‌ கேட்பார்‌. இதனால்‌ இவரிடமிருந்து தப்பிக்கவே முடியாது என அறிந்து, தலை கவிழ்ந்து பூமியை தனது பெரு விரலால்‌ கீற,கல்யாணத்தில்‌ மாங்கல்ய தாரணம்‌ செய்யும் போது சொல்லக் கூடிய மந்திரத்தை மறந்த புரோகிதனைப்‌ போல, திசைத்‌ திருப்புவதில சாதுரியமுடைய எம் பெருமான்‌. “சூழ்விசும்‌ பணிமுகில்‌” என்ற திருவாய்மொழியில் சொல்லப்பட்ட அரச்சிராதி கதியைக்‌ காட்டி ஆழ்வாருடைய கேள்வியை மறக்கச்‌ செய்தான் –

மொழிபல செப்பம்‌ பிறந்தது முத்தி
வழிபல வாயவிட்‌ டொன்றாம்‌ – சுழிபல
தாழ்த்தும்‌ பொருநைக்‌ குருகைச்‌ சடகோபன்‌ :
வாழ்த்துரைத்த வாய்மொழித்‌ தேன்‌–29-(வெண்பா )

உலகின்‌ பல மொழிகளும்‌ இயங்குவதால்‌ இறைவன்‌ தொடர்பின்‌ மையால்‌ செப்பமற்றன. திருவாய்‌ மொழி இறையனுபவத்தையே கொண்டிருத்ததலால்‌ மற்ற மொழிகளும்‌ இதைக்‌ கண்டே செப்பமுற்றன. முக்தி மார்க்கங்கள்‌ பலவாக நுல்கள்‌ கூறியதை, பரன் பால்‌ தஞ்சம்‌ அடைவதொன்றே முக்தி மார்க்கமென்று திருவாய்மொழி கூறும்‌. வெள்ளப் பெருக்கால்‌ சுழித்தோடும்‌ பொருனைத்‌ தென்கரையிலுள்ள திருக்குருகூரிலவதரித்த மாறனருளிய திருவாய்‌ மொழியின்‌ செப்பங்களிதுவாம்‌ –

தேனென்றி னிக்கும்‌ சொலக்கேட்க சென்மங்கள்‌ கைத்தழலும்
தானொன்றி தந்தான்‌ கவியா னமையின்‌ புளிகவாது
கானொன்று செவ்வாய்‌ துவர்ப்பாம்‌ கூடிக்‌ களிப்புறு மால்
வானொன்று சீர்த்திரு வாய்பொழித்‌ தேன்கொள்‌ கடலிதுவே-
-30-(கட்டளைக்‌ கலித்துறை)

சுவை மிக்கதும்‌ சிறப்பு மிக்கதுமான திருவாய்மொழி ஆறுசுவைகளைக்‌ கொண்டதொரு தேன் கடல்‌. “எங்ஙனே சொல்லினும்‌ இன்பம்‌ பயக்கும்‌” என்று சடகோபன்‌ வாய்மொழி பண்புரை சாமத்தின்‌ சதோக்யமாகையாலே சொன்ன மாத்திரத்திலேயே தேனுறலின்‌ இனிக்கும்‌. குருமுகமாகக்‌ கேட்கப்‌ பிறவிகளில்‌ விரத்தி யுண்டாக்கிப்‌ பிறவியைக் கடிந்து போக்கும்‌, எம்பெருமான்‌ “ஒன்றி ஒன்றி உலகம்‌ படைத்தான்‌ கவியாயினேன்‌ “என்பதனால்‌ உளதாய இன்பம்‌ உள்ளே நிரந்தரமாக நிரம்பி மிடைந்த சொல் தொடையா யிரமாக வழிந்து வந்ததாகையாலே, உள்ளே என்றும்‌ நிற்கும்‌ பராங்குச நாயகி எம்பெருமானைக்‌ கூடிக்களிப்புற்றதால்‌ எம்பெருமான்‌ திருவதரம்‌ துவர்த்துப்பாம்‌. இதில்‌ அறுசுவையும்‌ சொல்லப்பட்டது.-

கடலகடு வகிர்பொருநை காவிரியின்‌ கரையிகந்து கிளை கொண்டோடும்‌
உடனிகுளை கூறு பல உற்றதாய் பல் கூறுதலை மகள் பல் கூறா
படர் வேட்க்கை தன் கூறோ பல பல கால் விரித்து திருமகள் கேள்வாரி
குடைந்து புகும் குருகூரர் வாய் மொழியாம் குடைந்து பிறகுடைதல் தீர்ந்ததுவே –31–
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் )

கடலின்‌ வயிறு கிழியும்படியாக வேகமாகச்‌ சென்று சங்கமமாகம்‌ தாமிரபரணி, காவேரி என்ற நதிகள்‌ போலே திருவாய்மொழியாம்‌ பெரியதோர்‌ ஆறு கரை கடந்து தோழிக்கூற்று, தாய்க்கூற்று, தலைமகள்‌ கூற்று என்ற பல கிளைகளாலும்‌ பெருகியும்‌ தன்‌ கூற்றோடு சிதிதும்‌ குறையாது கம்பீரமான கடலைக்‌ கிழித்துக்‌ கொண்டு திருவாய்மொழி என்ற ஆறு திருமகள்‌ கேள்வன்‌ என்ற பெருங்கடலிலே சங்கமிக்கும்‌. இத்தகைய குணக்கடலாகிய திருவாய்மொழி என்றதோர்‌ பெரிய தோராற்றில்‌ படிந்து குடைந்து பெருமுத்தாபமும்‌ பிறவிக்கேதமும்‌ தணிந்து சந்ததம்‌ சுகித்துக்‌ கொண்டிருக்கிற யாம்‌, பிரிதொன்றில்‌ தொடர்புக்‌ கொள்ள மாட்டோம் –

வித்தைநல்‌ தாயெனக்‌ கொடுபெறு வித்து பாலும்‌ அமுதுமாம்‌ பரம்பரன்‌ பேர்கொடு வளர்த்தது திருமகள்‌ போன்றென வளர்த்த தஞ்சமாத்‌ தந்‌தை மற்றைப்‌ பேச்சன்றி
உபய விபூதி நாயகன்‌ நன்கொடு
நாலிரண்‌ டிழைசேர்‌ முப்புரி நாண்கொடு
பிரம சூத்திர பந்தம்‌ பிணைக்க
பரம்புரு டன்தான்‌ பாங்குடன்‌ கைக்கொள
நான்கினில்‌ புக்கு நடுக்கிடக்‌ கும்நாள்‌
நான்கினைக்‌ கழித்து சூழ்விசம்‌ பின்படி
உடன்வழி சென்று குடைந்துநீ ராடி
வியன்துழாய்‌ அஞ்சனம்‌ நீறுநா னப்பொடி
பீதக வாடை பல்கலன்‌ கொண்டு
நோக்‌கியர் அலங்கரித்துப் பல் லாண்டு
கவரிசெய்‌ நிறைகுட விளக்கம்‌ ஏந்தி
இளமங்‌ கையர்தாம்‌ வந்தெதிர்‌ கொள்ள
வைகுந்தம்‌ புக்‌கு வாய் மடுத்‌ துப்பெரும்‌
களிச்சியா வானவர்‌ போகம்‌ உண்டு
கோப்புடைக் கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து
ஆரோ கித்துப்‌ பரதன்‌ அக்ரூரன்‌
மாருதி இவர்களை அணைதிரு மார்பில்‌
குருமா மணியா அணையும்‌ பொருளிவள்
மணிவல்லிப்பேச்சி இவள் தன் பரமே –32
-(அகவற்பா)

பிரம்ம வித்தையாம்‌ திருமந்திரத்தை இலனென்பது போய்‌ உளனாம்‌ ஞாநப்பிறவியாகப்‌ பெற்று, பாலும்‌ அமுதுமான திருமால்‌ திருநாமங்‌ கொண்டு திருமகள்‌ போலவளர்த்தேன்‌ என்கிறபடியே திருமகளுக்கு ஒப்பாக வளர்த்த ஆசாரியனாகிய தஞ்சமாகிய தந்தையானவன்‌, வினைவழி வந்த பிறவி ஆகிய ஊணஜென்மத்துக்‌ காரணமாகிய தந்‌ைத போலன்றியே, உபய விபூதிக்கும்‌ தந்தையாயிருந்தும்‌ பந்த மோஷங்களின்ரண்டுக்கும்‌ காரணமான தந்தையைப்‌ போலுமன்றிக்கே ஞானசென்மத்தைக்‌ கொடுத்து மோஷத்துக்கே காரணனாகிய தந்தையாய்‌, எந்த நிலையிலும்‌ கைவிடாதவனாய்‌ உய்விப்பதையே நோக்குகிறவனாய்க்‌ கொண்டு ஆபத்துக்களில்‌ காப்பாற்றுபவனாம்‌ ஆசாரியனாகிய தந்தை. எம்பெருமான்‌ தவிர மற்றவர்க்குப பேச்சுப்படாமல்‌ பரம்புருடன்‌ உகந்து, கைக்கொண்டு போக, அகாரத்தில்‌ நான்காம்‌ வேற்றுமை வழியேயணைந்து இதற்கிடையூறாக ஆத்ம பரமாக்களுக்கு “நண்ணியும்‌ நண்ண கில்லேன்‌ “என்கிறபடியே நடுவே யோருடம்பிற்கிடக்கும்‌ நான்கு நாள்‌ கழித்து, சூழ்விசும்பிற்படியே உடன்வழி சென்று விரஜையில்‌ சென்று குடைந்தாடி என்கிறபடியே, “தெய்வத்தன்மை வாய்ந்த நூறு பெண்கள்‌ மாலைகளைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ அஞ்சனத்தைக்‌ கையில்‌ ஏந்தினவர்களாய்‌, நூறு பெண்கள்‌ வஸ்திரத்தைக்‌ கையில்‌ ஏந்தியவர்களாய்‌, நூறு பெண்கள்‌ ஸ்ரீசூர்ணத்தை கையில்‌ ஏந்தின வரகளாய்‌, நூறு பெண்கள்‌ திருவாபரணத்தைக்‌ கையிலேந்தியவர்களாய்‌ மானேய்‌ நோக்கியா ஆன தெய்வப்‌ பெண்கள்‌ எதிரே வந்து முத்தனைய பிரம்ம அலங்காரத்தாலே அலங்கரிக்கின்றார்கள்‌” என்கிறபடியே, சர்வேச்வரனுக்கு இனிதாம்படி அலங்கரித்து இவர்களிடத்தில்‌ அவர்களுக்குண்டான தொண்டு செய்வதில்‌ உண்டான இச்சைக்கேற்ப திரள நின்று போற்றி பணிமாற அங்குள்ள பெண்கள்‌ மங்கள தீபம்‌ முதலியவற்றை ஏந்திக்‌ கொண்டு எதிரே வந்து உபசரிக்குமாறு போலே புதிய இளமையினை எப்பொழுதுமே இயல்பாக உடையவர்களான வேறு தெய்வம்‌ பெண்கள்‌ சிலர்‌ எதிர்‌ கொள்ள, திருமகள்‌ கேள்வனுடைய பேரின்பத்திற்கு நிலைக்களமான வைகுந்தம்‌ அடைந்து அவனோடே கூடியிருந்து வாய்மடுத்துப்பெருங்களிச்சியாக அடைந்து அடியார்‌ குழாங்களும்‌ அவனுமாக இருக்கிற சேர்த்தியாக முழுமிடறு செய்து நித்திய சூரிகள்‌ அனுபவிக்கிற போகத்தை, ‘ முக்தன்‌ எல்லாக்‌ குணங்களையும்‌ பரமாத்மாவோடு அனுபவிக்கிறான்‌” என்கிறபடியே எல்லாப்‌ பொருள்கட்கும்‌ புகலிடமான தொன்மை பொருந்திய கட்டிலிலே பாத பிடத்திலே அடியிட்டேறி, பரத அக்ரூர மாருதிகளைத்தழுவிய மணிமிகு மார்பிலே ஸ்ரீபரதாழ்வானையும்‌ அக்ரூரனையும்‌ திருவடியையும்‌ ஆதரித்து அணைத்துக்கொண்ட கெளஸ்துபம்‌ நிறம்‌ பெறும்படியான அழகியதான திருமார்பிலே இறைமைத்‌ தன்மைக்கு அடையாளமாக ஸ்ரீகெளத்துபமணியைப்போன்று இனிய ஒளியுடையதாய்க்‌ கொண்டு அணைகிற ஆன்மாவிற்கு இனியதாய்‌ தனக்குத்தானே அழகியதாய்‌ கொள்‌ கொம்பு பிரியில்‌ தரைப்பட்டுக்கிடக்கும்‌ ‘கொடி போன்றவள்‌” என்கிற தன்‌ தன்மையோடு கூடியதாய்‌ வரும்‌ பேச்சு வந்தேறியன்‌ று இயல்பாகவே
அமைந்தது-

பரனும்‌ பிறனும்‌ உறைகோயில்‌ ஓங்காரம்‌
பிறனாக்‌ குருகூர்ப்‌ பிறந்தோன்‌ – பரனிவனில்‌
வேறிலன்‌ மெய்ம்மைப்‌ பொலிந்து நின்றாசனா
தேறுமெனத்‌ தக்கா னிவன்
–33-(வெண்பா )

பரன்‌ என்பது எம்பெருமான்‌, எம்பெருமானுக்கு பிரதியாய்‌ இருப்பவன்‌ ஜீவன்‌ (ஆன்மா). இந்த இருவருடைய பெயரான அகாரமும்‌ மகாரமும்‌ உகாரமும் அகாரத்தாலும்‌, உகாரத்தாலும்‌, சொல்லப்பட்ட பரனுக்கும்‌ பிராட்டிக்கு! மகாரத்தை பெயராக உடைய ஜீவன்‌ இருவருக்கும்‌ அடிமை என்‌ பொருளைத்‌ தருவதாய்‌, இந்த மூன்று எழுத்துக்களும்‌ சேர்ந்தே ப்ரணவம் ஆகையால்‌, திருக்குருகூரில்‌ ஆதிநாதப்‌ பெருமானும்‌ ஆதிநாத வல்லியும் ஆழ்வாரும்‌ ஆகிய மூவரும்‌ உறை கோயில்‌ திருக்குருகூர்‌. இதனால் திருக்குருகூரும்‌ ப்ரணவத்திற்கு நிகரானது. குருகூரில்‌ அவதரித்‌த நம்மாழ்வார்‌, பரனோடு சொத்தாக ஒத்திருப்பதால்‌ பொலிந்து நின்ற பிரானே ஈசன்‌ என்று ஆழ்வார்‌ அருளியுள்ளதால்‌ “ஈ சேசி தவ்ய” என்கிறபடி உடையவன்‌ உடமை என்று சம்பந்தத்தால்‌ வேறிலர்‌ என தேறுதல் தக்கதாம் –

வன்பெரு வான்முதல்‌ உய்ய உலகம்‌ இனிமையுற என்றும்‌ இவற்றில்‌ இவள்திறத்‌ தென்கோலோ நேர்வதென என்பிக்‌ கின்ற வியூகநட்‌ புண்மை முதன்மையிதே –34-(கட்டளைக்‌ கலித்துறை)

திருவரங்கத்‌ எம்பெருமானுடைய ஐவகை நிலைகளையும்‌ கண்‌ இந்த ஆழ்வார்‌, வடியுடை வானோர்‌ தலைவனே என்றும்‌, கடலிடங்கொண் கடல்வண்ணா என்றும்‌, கட்கிலி என்றும்‌, காகுத்தா கண்ணா என்று! திருவரங்கத்தானே என்றும்‌ ஐந்து நிலைகளை பேசியதி6 அர்ச்சாவதாரத்தில்‌ எல்லா குணங்களும்‌ பூர்ணமாக ஒளிவிடும்‌ என்‌! இருந்தாலும்‌ இவ்வாழ்வார்‌ இந்த மூர்த்தியிடத்தில்‌ வியூக செளகார்த்த0 (உலகை காத்தல்‌ பொருட்டு சிந்தனை செய்வது) பிரகாசிப்பதாக அருளி செய்கின்றார்‌. திரு வுள்ளம்‌ உகந்து, திருக்கண்‌ வளர்ந்து அருளுகி திருவாளனுடைய திருப்பதியான திருவரங்கம்‌ ஐவகை நிலைகளை வைத்துக்கொண்டு இவள்‌ திறத்து என்‌ சிந்தித்தாய்‌ என்று சொல்லும்ப உலகை காப்பதைப்‌ பற்றி சிந்தனை பண்ணும்‌ குணம்‌ முதன்மையுடையத என்கோலோ இவள்‌ திரத்து முடிகின்றது என்று பாற்கடலில்‌ யோக நித்திள செய்யும்‌ வியூகத்தின்‌ குணமான செளகார்த்தத்தை முதன்மையா உடைத்தாய்‌ இருக்கும்‌ (உடையதாய்‌ இருக்கும்‌) –

வாமணன்‌ வந்து கோயில்‌ கொண்ட குறியவன்தான்‌ குறுங்குடிக்கண்‌ நாமம்‌ வைணவ நம்பி என்று எதிவரனார்‌ இடப்பெற்று பூமி மூவடி வேண்டி நின்ற பேரழகின் பொலங்கழளால்
ஏமம் மிகுத்து நின்று இரந்த விபவம் இங்கு பூர்ணமே –
35-(அறுசீர்‌ ஆசிரியர்‌ விருத்தம் )

விபவ மூர்த்தியான வாமணன்‌ திருக்குறுங்குடியில்‌ அர்ச்சாவதாரமாகக்‌ கோயில்‌ கொண்டிருந்தான்‌. ஒருநாள்‌ உடையவர்‌ என்ற திருநாமம்‌ உடைய இராமாநுஜரைக்‌ கண்டு, “மண்மிசை பிறந்த நாம்‌ பெருக்க முயன்று திருத்த முடியாத இத்நிலவுலகத்தவர்களை எப்படி திருத்தினீர்‌?” என்று கேட்க, “கேட்கும்‌ கிரமத்தோடு கேட்டால்‌ நான்‌ சொல்லும்‌ கிரமத்தோடு சொல்கிறேன்‌ ” என்று இராமானுஜர்‌ சொல்ல, எம்பெருமான்‌ அவருக்கு ஒரு பீடம்‌ கொடுக்க, இராமாநுஜர்‌ அந்த பீடத்தின்‌ அருகில்‌ கீழ்நின்று தன்‌ வலக்கையை அதன்‌ மீது வைத்துக்கொண்டு பெரிய நம்பிகள்‌ உபதேசிப்பதாக பாவனை செய்து கொண்டு துயத்தை உபதேசஞ்செய்து வைஷ்ணவ நம்பி’ என்று தாஸ்யநாமம்‌ இட்டார்‌. அன்று முதல்‌ வைஷ்ணவ நம்பி என்று பெயர்பெற்றான்‌. அவனேவிபவ அவதாரத்தில்‌ மாபலி இடத்தில்‌ சென்று “என்‌ காலால்‌ மூவடி மண் தா”‘ என்று யாசித்து நின்ற பேரழைக்கண்டு அப்படியே தந்தேனென்று உதக பூர்வமாகக்‌ கொடுத்தான்‌ மாபலி என்பர்‌. இதனால்‌ இந்த விபவ அவதாரத்தில்‌ லாவண்யம்‌ பூர்ணம் –

பூரணம்‌ கண்வலைப்‌ பொருந்தாப்‌ போலிகள்‌ வளர்த்‌ தெடுப்பார்தம்‌ கையில்‌ இருந்து தயிர்நெய்‌ யமாபால்‌ அமுதமுண்‌ டேநீமீர்‌ போற்றி ஓர்வண்ணம்‌ திருந்த நுவலாது என்பிழைக்‌ கும்நீ யலையே நல்வளம்‌ துரப்பன்‌ என்னும்‌ அவற்றுக்கு முகந்து சொல்லை எடுத்துச்‌ சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றங்கள்‌ கூப்பி வணங்கப்‌ பாடி ஆலியா அழையா பராபி மானத்து ஒதுங்கின அன்றே நம்பிக்‌ கன்பர்‌ தலைமீ தடிப்பொடி உடையவர்‌ உடையார்‌ போல்வார்‌ தன்மை கிளியும்பூவை குயிலும்‌ மயில்‌ எனுமே –36-(அகவற்பா)

“மாதரார்‌ கயற்கண்‌ என்னும்‌ வலையில்‌ பட்டு” என்கிறபடியே பெண்களின்‌ கண்ணாகிற வலையில்‌ அகப்பட்டு அழிந்து போகாமல்‌; “தாமரைத்‌ தடங்கண்‌ விழிகளின்‌ அகவலைப்‌ படுப்பான்‌” என்று பூரணனான ஸர்வேச்வரனுடைய தாமரைப்‌ போன்ற திருக்கண்களின்‌ நோக்காகிற வலைக்குள்ளே அகப்பட்டு, இதற்குப்‌ பொருந்தாத மற்றவற்றைப்‌ பொருந்தாப்‌ போலிகளென விட்டு, “வளர்த்தனால்‌ பயன்‌ பெற்றேன்‌ மடக்கிளியை” என்று எடுத்து வளர்த்தவர்‌ கைகளிலிருந்து, “தயிர்ப்‌ பழம்‌ சோற்றொடு பாலடிசிலும்‌ தந்து” என்றும்‌, ‘நெய்யமரின்‌ னடிசில்‌” என்கிறபடி-உபதேக்ஷயந்திதே ஜ்ஞானம்‌” அவர்கள்‌ உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்‌ என்கிறபடியே காலத்துக்‌ கேற்றவாரும்‌, நிலைமைக்‌ கேற்றவாரும்‌ தாராளமாய்‌ அவர்களுக்கு பகவத்‌ குணங்களாகிற உணவை அநுபவிக்கும்படி செய்து, “போற்றி யானிரந்தேன்‌ புன்னை மேலுறை பூங்குயில்காள்‌” என்று அவர்களைப்‌ பல்லாண்டு பாடி அவர்களை ஆசாரியனாக பாவித்து, ஆதரித்தாலும்‌, “ஒருவண்ணம்‌ சென்று புக்கெனச்‌ கொன்றுரை யொண்கிளியே” என்று எனக்காக இறைவனிடம்‌ சென்று ஒருவழியாக என்‌ நிலைமையை அறிவி என்றால்‌ அறிவிக்காமல்‌, “என்பிழைக்கும்‌ நீயலையே-நுவலென்ன? நுவலாதே யிருந்தொழிந்தாய்‌” என்று ‘என்னுடைய ஆற்றாமையைப்‌ பெருமானிடம்‌ சீக்கிரமாய்‌ அறிவியென்றால்‌’ “சொல் பயிற்றிய நல்வளமூட்டினீர்‌ பண்புடையீரே” ‘எனக்குதவன்‌ பெயரைச்‌ சொல்லாதே என்றால்‌ “கண்ணன்‌ நாமமே குழறிக்‌ கொன்றீர்‌” என்கிறபடி எனக்கு உதவாத எம்பெருமானை எனக்கு ஞாபகமூட்டி துன்புறுத்துகிறீர்‌ உம்மை நான்‌ வளர்த்து நல்‌ விஷயத்தில்‌ ஈடுபடும்படி செய்த எனக்கு நல்ல உதவி செய்கிறீர்கள்‌, நல்ல பண்புதான்‌! என்று அவற்றைக்‌ கடிந்தும்‌,
“இன்று நாராயணனை வரக் கூவாயேல்‌ இங்குத்து நின்றும்‌ துரப்பன்‌ ” என்று தன்னை ஆதரித்த சமயத்திலும்‌ அநாதரித்த சமயத்திலும்‌ இன்சொற்களும்‌ வன்சொற்களும்‌ வகுத்த விஷயத்தில்‌ கோபமும்‌ அருளும்‌ பகவத்‌ விஷயத்தில்‌ விநியோகப்படுத்தலாம்‌ என்னும்‌ நினைவாலே உகந்து; சொல்லை எடுத்துத்தொடுப்பதற்கு இயலாமல்‌ சோர்ந்தவாறே- அதாவது, அவன்‌ திருநாமத்தை சொல்‌ என்றால்‌ நெஞ்சாழும்‌ கண்சுழலும்‌ என்றபடி சொல்ல பலமில்லாமையாலே துவள, ஏற்கனவே உமக்கு கற்பித்துள்ளேன்‌ அவற்றைச்‌ சொல்ல என்ன, அந்த கிளிகள்‌ இறைவன்‌ திருநாமத்தைச்‌ சொல்ல “மடக்‌ கிளியை கைகூப்பி வணங்கினாளே “‘ என்று அவற்றைப்‌ பராங்குச நாயகியான தான்‌ கை கூப்பி வணங்கி சந்தோஷ மிகுதியாலே பாடியும்‌ “ஆலியா அழையா” என்கிறபடி ஆனந்தத்தோடே போது போக்குபவர்களாய பராபிமானத்திலே ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கி “தென்குருகூர்‌ நம்பிக்‌ கன்பன்‌ ” என்‌ கிறபடி, ஸ்ரீமதுர கவிகள்‌ ஆசாரியரான நம்மாழ்வார்‌ விஷயத்தில்‌ அன்பே வடிவாக இருப்பர்‌ “நாவலிட்டுழி தருகின்றோம் நமன்‌ தமர்‌ தலைகள்‌ மீதே” என்று யமன்‌ போன்றோர்‌ தலைகள்‌ மீது காலடியிடும்படி செருக்கை யுடையராய்‌ பாகவதவர்களுக்குப்‌ பாத தூளி போலே நிரூபித்த தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌, ஆழ்வான்‌ ஆண்டான்‌, எம்பார்‌, அருளாளப்‌ பெருமாளெம்‌பெருமனார்‌ முதலானவர்களை குணத்தை யிட்டு, கிளி, பூவை, மயில்‌, குயில்‌ என்று சொல்லும்‌ என்றுபடி –

குயிலும்‌ மயிலையும்‌ தூதென்‌ றனுப்பி
அயர்வின்‌ விரோதம்‌ அழிக்கும்‌ – பயிற்சி
விருத்தம் ஒழிக்கும் கடனா சாமர்த்யம்
நன்னகரில்‌ வித்தீர்‌ ணம்‌–37–(வெண்பா)

பாரங்குச நாயகி குயில்‌ முதலான பறவைகளை தூதுவிட, அவைகள்‌ சென்று சொல்லி அவன்‌ வருமளவுக்கும்‌ பொறுக்காத ஆற்றாமை மிகுதியால்‌ பிரணய ரோஷம்‌ உண்டாகி, அவன்‌ வந்தாலும்‌ இனி வேண்டாம்‌ என்று ஊடல்‌ பண்ணி சிற்றிலிழைக்க, அவன்‌ வந்து இவர்களோடு கலப்பதற்குப்‌ பல உபாயம்‌ பண்ணியும்‌ முகம்‌ கொடாதிக்க, இவர்கள்‌ இழைத்த சிற்றிலை தன்‌ திருவடியால்‌ கலைத்தான்‌. அனைவர்க்கும்‌ உபாயமாயிருக்கும்‌ திருவடிகள்‌ தனக்கும்‌ உபாயமாய்‌ பாரங்குச நாயகி “எங்கள்‌ சிற்றிலும்‌ யாமடும்‌ சிறு சோறும்‌ கண்டு முறுவல்‌ செய்து நின்று அழித்தாயே”‘ என்று சொல்லி கூடுவாளாகி, நாம்‌ ஊடிய ஊடலைத்‌ தீர்த்த இவன்‌ முரண்பட்டவை எல்லாம்‌ பொருந்த விடுவான்‌ என்று நினைத்து, திருவிண்ணகர்‌ பெருமானை நல்குரவும்‌ செல்வம்‌ என்று தொடங்கும்‌ திருவாய் மொழியால் விரிவுற வாழ்த்தினார்-

கைய கழிந்தார்க்கு உணவுடன்‌ நீருக்குறு நிதியா
வெய்ய தோராபத்‌ துடன்‌ தோழனுமா விழையுமிவ
னொய்ய உறவினன்‌ தூய்மை நிகரில்‌ புகழுடையோன்‌
செய்ய நற் பண்புகள் திண்ணம்‌ புகுமூர்‌ பெருமையிதே ? –38-(கட்டளைக்‌ கலித்துறை)

பராங்குச நாயகி இறைவன்‌ திறத்தான விருப்ப மிகுதியால்‌ தன்கையகத்தி ருந்த மற்றைப்‌ பொருட்களெல்லாம்‌ கைகழிய, திருக்கோளூர்‌ வைத்தமாநிதி பெருமானே உண்ணுர் சோறும்‌ பருகும்‌ நீரும் தின்னும் வெற்றிலை எல்லாம்‌ கண்ணன்‌ என்று நிஷ்டை யுடையவளாக பராங்குச நாயகி, ஆபத்துக்குதவும்‌ உடன்‌ தோழனுமாய்‌ எல்லா உறவுகளை! முடையவனாய்‌ விருப்புற்று நிகரில புகழான வாத்சல்ய குணத்தை உடையவனுமாய்‌ உள்ள பெருமானைச்‌ சென்றடைவது என்று, தான்‌ தன் வழியே திருக்கோளூருக்குப்‌ போய்விட, தாயானவள்‌ இன்று எனக்குதவாதகன்றவள்‌ தின்ன மென்னிளமான்‌ புகுமூர்‌ திருக்கோளூரே என்று உலகவற்கு உரைக்கும்படியான பெருமை யுடையவள் –

பெரும்புறக்‌ கடலிது அலைத்தும்‌ ஆழ்ந்தும்‌ ஒடுமிவ்‌ விடங்களில்‌ பெறுவதற்‌ கியல்வில பேதுறுவார்‌
விருப்புறு விசும்பும்‌ பாற்கடல்‌ கரந்தசில்‌ லிடங்களோ டயோத்தியும்‌ காலமும்‌ தேசமும்‌ சேய்மைத்தே
பருகுபே ராவல்க ளுடையவர்க்‌ கவையிவை இயல்வில பயனில சாககண்‌ டத்துறு முலையேதான்‌
திருவுடைக்‌ குணங்களால்‌ நிரம்பிய மடுவொடு திருவுடை நிறை நூல்‌ இன்ப மாரி மான மேயம்‌ உயர்ந்ததே–39-(ஒன்பதின்‌ சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம் )

எம்பெருமான்‌ பர வாசு தேவனாக பரமபதத்தில்‌ இருக்கும்‌ நிலையை பெரும்புறக்‌ கடலென்பார்கள்‌. அந்த மூர்த்தியும்‌ பாற்கடலுள்‌ பள்ளி கொண்டுள்ள வியூக மூர்த்தியும்‌, சேதந அசேதநங்களனைத்திலுட்‌ அந்தர் யாமியாக உறைபவனும்‌, காகுத்தன்‌ கண்ணனாக வரும்‌ அவதார நிலையுமாகிய நான்கு நிலைகளிலும்‌ பகலோலக்‌ கமிருந்து காரியம் மந்திரிந்து கருப்புடுத்தி நகர சோதனை செய்து வேட்டையாடி (ஆராமங்களில் விளையாடும்‌ ராஜநீதி). இவற்றில்‌ பர வாசு தேவ மூர்த்தியும்‌ பாற் கடல்‌ மூர்த்தியும்‌ தூர தேசத்திலிருப்பவர்கள்‌. விபவ அவதார மூர்த்தியுடம் காலங்கடந்தது. அந்தர்யாமித்துவமோ எவராலும்‌ காண முடியாதநிலை. ஆக இந்த நான்கு மூர்த்தி இருந்தும்‌ உலகவர்க்கு காண இயலாது பயனற்றன முதுவேனில்‌ காலத்தில்‌ குளிர்ந்த மடுவில்‌ சம்சார தாபத்தால்‌ தவிக்கப் பெற்றவன்‌, நீர் நசை மிகுந்து பருகுவதற்கு நீரைக்‌ காணாது தவிக்கப்படுவது போன்றும்‌, ஆட்டின்‌ கழுத்தில்‌ உள்ள மூலைக்காம்புகள்‌ போல பயனற்றவை இந்‌ நிலையில்‌ கல்யாண குணங்களால்‌ நிரம்பிய பெருக்காற்று வெள்ளத்தில்‌ தேங்கிய மடுவோடு ஒத்தது அர்ச்சாவதாரம்‌. மேற்சொல்லப்பட்ட நான்கு மூர்த்திகளையும்‌ அறிவதற்குப்‌ பிரமாணமாயிருப்பது, பரவாசுதேவனைச்‌ சொல்லப்பட்டது வேதம்‌, வியூக மூர்த்தியைப்‌ பற்றி பேசுவத பாஞ்சராந்திரம்‌, விபவ அவதாரங்களைப்‌ பேசுவது இதிகாச புராணங்கள் -அந்தர்யாமியைப்‌ பற்றி பேசுவது மனுநீதி என்னும்‌ நூல்கள்‌. காணமுடியாததைப்‌ பற்றி பேசுவதால்‌ மேற்சொன்ன பிரமாணங்கள்‌ நான்கும்‌ குறைவுடையதே. தேங்கிய மடுக்களுக்கு ஈடாக சொல்லப்பட்ட குணங்களால்‌ பூர்ணமான அர்ச்சாவதாரத்தைப்‌ பற்றிப் பேசுவது திருவாய்‌ மொழியாம்‌. பிராமணம்‌ என்பது ஒரு விஷயத்தைச்‌ சான்று காட்டிப்‌ பேசும்‌ நூல்‌. பிரமேயம்‌ அந்த நூலால்‌ சொல்லப்பட்ட விஷயங்களாகும்‌. மேற்சொல்லப்பட்ட நான்கு பிரமாணங்களாலும்‌ பேசிய விஷயங்களை நான்கு மூர்த்திகளும்‌ குறைவுடையனவே. அஞ்சாம்‌ பிரமாணத்தால்‌ பேசப்பட்ட அர்ச்சாவதார மூர்த்தியே உயர்ந்தது. அதே போன்று அந்த மூர்த்தியைப்‌ பற்றி வாழ்த்தி பேசும்படியான திருவாய்மொழியும்‌ உயர்ந்தததேயாம்‌.

உயர்வற உயர்நலத்‌ தொண்பொருள்‌ பகலிடை அயர்வறும்‌ அமரர்கோன்‌ மூதுவர்‌ தியாகிகள்‌ கணாதிபர்‌ துவார பாலனர்‌ கணத்துடன்‌ சோர்வர செங்கோல்‌ செலுத்திரா சநீதி சனக சநாதி சீரியர்‌ கூட்டத்து காப்புடை காரியம்‌ மந்திரித்‌ தொழுங்குற ஓல்வன அல்லன காணுமி ராசநீதி சீரிய உபய விபூதியில்‌ செய்தியை கருப்புடை உடுத்தி ஒருவரும்‌ காணாது. , உழற்றுஉழன்று காணுமி ராசநீதி மீனம்‌ கூர்மம்‌ வராகம்‌ வீறுசால்‌ நார சிங்கம்‌ நன்மதி வாமனன்‌ மூவுரு வினிரா மன்கண்‌ ணன்கற்கி அரக்க ரசுரர்‌ நாத்திகர்‌ புறத்தோர்‌ வெறுப்பொடு வேட்டையா டுமிரா சந்தி பெருந்தே வுடையமூ வுலகில்‌ பெய்த காவெனும்‌ அரங்க முதலா ராமங்கள்‌ ஒண்டோடி யாளெனும்‌ திரும ளோடு விளையாடு வீவிலி ராச நீதிகள்‌ மனக்கண் கண்டு களிக்கும்‌ வாய்ப்புடை உம்பர் தம்‌ உலகு நமக்‌ கொப்புண்டே? வீவிலம்‌ மிராச நீதிவீ றுடையதே -40-( அகவற்பா)

கதிரவன்‌ ஒளிக்கு முன்‌ மற்றை ஒளிகள்‌ இருந்தும்‌ இல்லையாவது போல, உலகில்‌ மற்றுமுண்டான ஆனந்தமிருக்க இறைவனுடைய ஆனந்தத்திற்கு முன்‌ இல்லையாவது போல்‌ உயர்வற உயர்ந்த ஆனந்தமுடைய பரம்பொருளான பரவாசு தேவனுடைய பேரொளிப்பிழம்பான பரமபதத்தில்‌, அறிவின்மையின்‌ வாசனை கூட இல்லாது நிரந்தரமான பேரறிஞர்களான விஷ்வசேனர்‌ முதலிய நித்யசூரிகள்‌, சம்சாரத்தை அறத்துறந்து விட்டு வானோர்க்குலம்‌ புகுந்த முக்தர்கள்‌, கணாதிபர்‌, துவாரபாலகர்‌, கணம்‌ கணமாக வாழ்த்தி ஸேவிக்கும்படியாக செங்கோல்‌ செலுத்தும்படியான ராஜ நீதி ஒன்று. சனகாதிகள்‌ முதல்‌ ஸ்வேதத்தீப வாசிகள்‌ கூடியிருந்து வாழ்த்தும்படியான பாற்கடலில்‌ மந்திராலோசனை அதாவது ஜகத்‌ ரட்சனை சிந்தனை பண்ணுகின்ற வியூக மூர்த்தி ஒரு ராஜநீதி–கருப்புடை தரித்து நகரசோதனைச்‌ செய்யும்‌ அரசர்கள்‌ போல்‌, தன்னால்‌ வியாபிக்கப்பட்ட பொருளை மறைந்திருந்து நகர சோதனை பண்ணுகிற ஒரு ராஜ நீதி.-மச்சம்‌, கூர்மம்‌, வராகம்‌, நரசிங்கம்‌, வாமனம்‌, மூவுருவின்‌ ராமன்‌, கண்ணன்‌, கல்கி என அவதரித்து அரக்கர்‌, அசுரர்‌, நாத்திகர்‌ மற்றும்‌ புறத்தோர்‌ உலக நலத்தை பாழ்படுத்துவார்‌. இவர்களைச்‌ சினத்தோடு வேட்டையாடும்‌ ஒரு ராஜநீதி -“செய்த திண்மதில்‌ சூழ்‌ திருவிண்ணகர்‌ சேர்ந்தபிரான்‌ பெய்த காவு கண்டீர்‌ பெருந்தேவுடை மூவ்வுலகு” என்கிறபடி திருவரங்கம்‌ முதலான ஆராமங்களான பூஞ்சோலைகளில்‌ ஒண்டொடியாள்‌ திருமகளும்‌ தானுமாக விளையாடுவது ஒரு ராஜ நீதி. இந்த ராஜ நீதிகளை எல்லாம்‌ சான்றோர்கள்‌ அருளிய நுல்களைக்‌ கொண்டும்‌ ஆசாரியர்கள்‌ உபதேசங்களைக்‌ கொண்டும்‌ மளக்கண்ணால்‌ கண்டு களிக்கும்‌ முழுக்ஷுக்களாகிய எம்போல்வார்கள வாய்க்கப்‌ பெற்றவாகள்‌. இத்தகைய நாம்‌ இருக்கும்‌ இருள்தருமாஞாலத்திற்குத்‌ தெளிவிசும்பு திருநாடு ஈடாகாது என்னும்படியான வீறுடைய ராஜ நீதி ஒன்று –

திருமகள்‌ கேள்வன்‌ திருவருள்‌ நலத்தால்‌ மயர்வற மதிநல மருள
அரும்பொரு எனைத்தும்‌ ஒருங்குடன்‌ அமுத கடமென ஆயிரம்‌ விரித்தான்‌
குருகையில்‌ வருநல்‌ பிறவியில்‌ துறவிதன்‌ நான்மணி மாலையாம்‌ குளிகை
இருள்தரு ஞாலம்‌ தெருள்தரு விசும்பா வேகடம்‌ செய்வதொன்‌ றன்றே

திருமகள்‌ கேள்வனாகிய ஸ்ரீமந்‌ நாராயணன்‌ தன்‌ திருவருள்‌ வயப்பட்டு தென்‌ திசையில்‌ தன்‌ திருக்கண்‌ பார்வை செலுத்த, ஜாயமான காலத்தில்‌ குருகூர்‌ சடகோபன்‌ மேல்‌ வீழ்ந்து, அதனால்‌ அறிவின்மை அறத்தொலைந்து ப்ரீதி ரூபமான ஞானம்‌ உண்டாகப்‌ பெற்று, திருக்குரு கூரில்‌ வந்தவதரித்த பிறந்த போதே துறந்த சடகோபன்‌ விஷயமாக “நான்மணிமாலை” என்று சொல்லப்பட்ட, ரசகுளிகை இயல்பில்‌ இருந்து இருள்தருமாஞாலமான இந்த லீலாவிபூதியை தெளிவிசும்பாம்‌ நித்திய விபூதியாக மாற்றும்‌ தகுதியுடையதொன்றாதாகும் –


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அலர்மேல் மங்கை யந்தாதி-

April 23, 2026

ஸ்ரீ அலர்மேல்மங்கையந்தாதி
முதல் நூலான இந்நூல் கட்டளைக் கலித்துறையிலான பாயினத்தாலாயது.இஃது, நான்கு அடிகளையுடையதாய் அடிதோறும் ஐந்து சீர்களோடு கூடி, முதற்சீர் நான்கும் வெண்டளை பிறழாமல் இறுதிச்சீர் கூவிளங்காயும் கருவிளங்காயுமாக ஏதேனும் ஒன்றைப் பெற்று ஒவ்வொரடியும் முதற்சீர் நேரசையாயிருந்தால் ஒற்றெழுத்து நீங்கலாக பதினாறு எழுத்தும், நிரையசையாயிருந்தால் பதினேழ் எழுத்துக் கணக்கோடு ஈற்றடியின் இறுதிச்சீரின் ஈற்றசை ஏகாரம் பெற்று முடிதல் வேண்டும். உதாரணம்,
அடியடி தோறும் ஐஞ்சீ ராகி முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக் கடையொரு சீரும் விளங்கா யாகி நேர்பதி னாறே நிரைபதி னேழென்று ஓதினர் கலித்துறை ஓரடிக் கெழுத்தே.”என்பது இலக்கண விதியாகும்.

இங்ஙன்‌ கட்டளைக்‌ கலித்துறை என்ற நூறு பாக்களான்‌ அமைந்த அலர்மேல்மங்கை அந்தாதியின்‌ முதற்பா காப்புச்‌ செய்யுள்‌, நூல்‌ தடையின்றி இனிது நிறைவேறும்‌ பொருட்டு சுவாமி நம்மாழ்வாராகிற ஆசாரிய வணக்கமும்‌ செயப்படுபொருளும்‌ எய்த உரைக்கும்‌ தற்சிறப்புப்‌ பாசிரமாக அமைந்துள்ளது

இழைத்தா ரிலதா மறையின்‌ பொருள் சீர்த்த இன்தமிழால்‌
இழைத்தான்‌ இவனே சராசரம் முற்றும் நினைவகத்தே
இழைத்தான்‌ சிரம் தான்‌ குலுங்க ஓர்‌ ஆயிரம்‌ பாவிழைத்தான்‌
இழைத்தான்‌ அலர் மேல் மங்கை யந்தாதி க்கருள்‌ முற்றுறவே-
காப்புச் செய்யுள்

எவராலும்‌ செய்யாமல்‌ இயல்பாக தோன்றிய வேதங்களின்‌ பொருளை இனிய தமிழில்‌ ஆயிரம்‌ பாசுரங்களாகச்‌ சொன்ன குருகூர்‌ நம்பியே, அறிவுடை பொருள்கள்‌ அறிவில்‌ பொருள்கள்‌ இவைகளை நினைவாற்றலாலேயே தோற்றுவித்த இறைவன்‌, தன்‌ சிரத்தை குலுக்கி கேட்கும்படியாகத்‌ திருவாய்மொழி என்ற ஆயிரம்‌ சொன்னவனே-இந்த அலர்மேல்மங்கை அந்தாதிக்கு இடையூறின்றி நிறைவு பெரும்படி காப்பாக இருந்து தானே அடியேனுக்கு அருள்‌ செய்தான்-

உலகொருங்‌காக வணங்குதற்‌ காக உடையவன்தான்‌
உலகொருங்‌ காக உளப்படுத்‌தாகத்‌ தகலகில்லாள்‌
உலகொருங்‌காக உடையவளாகக்‌ கலைக்கு நில்லா
உலகொருங்‌காக உதவுவாளாகத்‌ தெழில் வணங்கே.

நெஞ்சே! எல்லா உலகும்‌ தன்னை வந்து வணங்குவதற்காக அவர்களுக்கு இறைவனிடத்தில்‌ பரிந்துரை கூறுவதற்காக அனைத்து சராசரங்களையம்‌ ஊழிக்‌ காலத்தில்‌ தன்‌ வயிற்றில்‌ கொள்ளும்‌ இறைவனுடைய திருமார்பை விட்டு அகலாதவளான திருமகள்‌, இறைவனையும்‌ அவன்‌ உடைமைகள்‌ ஆன உபய விபூதிகளும்‌ ஒருங்கு சேர்த்துப் பார்த்தாலும்‌. பிராட்டியின்‌ பேர்‌ அழகு பதினாறு கலைகளில்‌ ஒரு கலைக்கும்‌ போதாத பேரழகு உடைய பிராட்டியை வணங்குவாயாக —

வணங்குக நெஞ்சே! மதிமுகம்‌ தீஞ்சொல்‌ அமுதனையவ்‌ i
வணங்குக ளுத்தமை பங்கயத் தாள் தாள் பராபரர் நீர்
வணங்குக சென்னி மகரம்‌ அகரம்‌ சுதந்திரத்தை
வணங்குக நுஞ்சீர்ப்‌ பெறஇரு வீர்க்கொரு வாய்ப்பெனுமே–2-

நெஞ்சே! முழு மதி போன்ற முகமும்‌, இனிய சொற்களும்‌, அமுதம்‌ ஒத்த இனிமையும்‌ உடைய தெய்வ பெண்களுள்‌ மிக மேம்பட்ட பிராட்டியின்‌ திருவடி தாமரைகளை வணங்குக! பிராட்டியின்‌ தொடர்பால்‌ அகாரத்தை பேராக உடைய மேலார்க்கும்‌ மேலாலனாகிய எம்பெருமான்‌ தன்‌ சுதந்திரத்தை தளர்த்தி கொடுப்பானாக- மகாரத்தை பேராக உடைய ஆன்மாக்கள்‌ தங்கள்‌ சென்னிகளை வணங்குவாராக.- இவ்வாறு பிராட்டியின்‌ இருப்பு பெருமானுக்கும்‌, ஆன்மாக்களுக்கும்‌ சிறப்புப்‌ பெற உதவுவதாகும்-

வாய்த்தவத்‌ தாயவள்‌ சேர்த்தியின்‌றேல் வேத வேத்தியன் தான்‌
வாய்த்தவத்‌ தாவனே? காட்டியும்‌ ஊட்டி மறைத்திடுமவ்‌
வாய்த்தவத்‌ தாயவக்‌ காரியம்‌ சீரிய வாமதுவே
வாய்த்தவத்‌ தாயவச்‌ சேதநன்‌ சேர்ந்து நல்‌ வாழ்வுறுமே–3–

உலகங்களுக்குத்‌ தாயாக வாய்ந்த பிராட்டியின்‌ சேர்த்தி இல்லை யென்றால்‌, வேதங்களால்‌ பரம்‌ பொருளென்று போற்றப்‌ பெறும்‌ திருமாலும்‌, மெய்ப் பொருள்‌ ஆக முடியுமா? அவனால்‌ செய்யப்படும்‌ படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ என்ற செயல்களும்‌ சிறப்புற நிகழுமா? அநாதியான சீவான்‌ மாக்கள்‌ எம்பெருமானைச்‌ சேர்ந்து உய்வு பெறுமா-

வாழ்வது மாகம னுந்திரி யம்பகனும்‌ ககரன்‌
வாழ்வது மாகலை யாதிய மோன முனிக் கணமும்‌
வாழ்வது மாகமும்‌ தாரணி பூவிவ ரத்துயிர்கள்‌
வாழ்வது மாக முதல்தனி வாய்த்த கருணையினே–4-

எல்லா பொருள்களுக்கும்‌, தாயாய்‌ கருணையே வடிவெடுத்த பிராட்டி எம்பெருமான்‌ திருமார்பில்‌ வீற்றிருப்பதினாலேயே வானவர்‌ மன்னனாகிய இந்திரனும்‌, ககாரம்‌ என்ற பெயருடைய பிரமனும்‌, முக்கண்ணனாகிய உருத்திரனும்‌, மேம்பட்ட கலைகள்‌ முதலியனவும்‌ இடையறாத தவத்திலேயே ஈடுபட்டு இருக்கும்‌ முனிவர்‌ குழுவும்‌, பூமியும்‌, வானுலகும்‌, அவ்வுலகுகளில்‌ உள்ள ஜீவன்மாக்களும்‌ நல் வாழ்வு வாழ்கின்றன-

கருணைத்‌ திருவுரு காரணத்‌ தோருரு காவலன்தன்‌
கருணைத்‌ திருவுரு உள்ளங்‌ கசிவரக்‌ காகமொடு
கருணைத்‌ திருவுரு தானே யரக்கியீர்‌ காப்பெனென்ற
கருணைத்‌ திருவுரு உள்ளமன்‌றோ நமைக்‌ காப்பதுவே–5–

கருணையே வடிவு எடுத்தவனும்‌, உலக காரணனும்‌ பேரழகிய உருவினனும்‌, உலகைக்‌ காப்பவனும்‌ அழகிய பெருமானுடைய திருவுள்ளம்‌ பெருந் தவறு செய்த காக்கையின்‌ திறத்துக்‌ கருணையால்‌ உருகி அதனை கொல்லாது விடுத்தற்கும்‌, கருணையே வடிவெடுத்தவளாய்‌, தன்னை ஓயாது நலிவுறுத்திய அரக்கியரையும்‌, அனுமனால்‌ ஏதம்‌ வராது காப்பேன்‌’ என்ற பிராட்டியின்‌ கருணை வடிவான உள்ளம்‌ அன்றோ? காரணமாகும்‌. அந்தத்‌ திருவுள்ளமே வாழ்க்கையில்‌ பல தவறுகளையும்‌ செய்யும்‌ நம்மையும்‌ பாதுகாப்பதாகும் –

காப்பது நாம்தாங்‌ கருமமே முன்னா எவருமென்னின்‌
காப்பது நாம்தாமென் காப்பதா வைதிகச் சொல்வ தெவன்
காப்பது நாந்தாங்‌ கருமமே முன்னா அடைந்திவரை
காப்பதுங்‌ காசில்‌ குணத்தா லருள் வடைந்தவர்க்கே–6-

அவரவர்‌ செய்த நல் வினை தீ வினைகளுக்கு எற்‌ப நாம்‌ அவர்களைக்‌ காப்பாற்றுகிறோம்‌ என்று எம்பெருமான் திருவுள்ளம்‌ பற்றினால்‌ நீர்‌ பெருமானை நோக்கி உலகை காப்பதாக வேதம்‌ வல்லார்‌ கூறுவது பொருந்துமா? உங்களைச்‌ சரணாக அடையாதாரை அவர்கள்‌ வினைகளுக்கு ஏற்ப பயனளிப்பீர்‌; தன்னைச்‌ சாணாக அடைந்தவர்‌ திறத்து உம்முடைய வாத்சல்யாதி குணங்களால்‌ அவர்களை வினைகளை நோக்காது அருள் செய்யக்‌ கடவீர்‌”‘ என்பாள் –

அடைந்திடும்‌ ஏதெதோ நுந்தான்‌ அடையாத கல்வதுவே
அடைந்தில தாகா தெவரெவை தீவினை மாய்வதுவே
அடைந்தவை எவ்வெப்‌ பயனும்‌ அடையா திழக்குமதோ?
அடைந்திடு வாரும்‌ அடைகிலா தாரும்‌ உமது சேயே–7–

பிராட்டியே! உன் திருவடிகளை சரணாகப்‌ பற்றுபவரும்‌ பற்றாதவரும்‌ உன்‌ மக்களே. உன்‌ திருவடிகளைச்‌ சரணாகப்‌ பற்றாததனால்‌ பலவகை துன்பங்களும்‌ வந்து சேரும்‌; திருவடிகளைச்‌ சரணாக பற்றாமையால்‌ எந்த தீவினையும்‌ அழிய மாட்டா; திருவடிகளைப்‌ பற்றினவர்கள்‌ தாம்‌ கருதிய எவ்வெப்‌ பயன்களையும்‌ அடையாமல்‌ இழப்பதில்லை. இவ்வாறாக தாயாகிய உன்னைச்‌ சரணடையாமல்‌ பலர்‌ துன்பப்படுகிறார்கள்‌ என்பது குறிப்பாகும் –

உமது சேயாவா ரலாதார்‌ உளரே? கணிப்பதற்கும்‌
உமது சேயாவ சராசரம்‌ உள்ள அனைத்துமன்றோ!
உமது சேயாவ னலாதவன்‌ ஓர் பொருள்‌ நாரணனே
உமது சேய்க்கூட்டத்து அடியவன் ஓர் பொருள் கைவிடவே –8–

உம் மக்களல்லாதார்‌ என்று குறித்தறிவதற்கும்‌ சிலர்‌ உளரோ?-எல்லா இங்கியற்‌ பொருள்களும்‌ உமது குழந்தைகளே- உனக்கு வசப்படாத ஸ்வதந்திரப்‌ பொருள்‌ எம்பெருமான்‌ ஒருவனே- உம்முடைய மக்கள்‌ குழாத்தில்‌ அடியேனும்‌ ஒருவன்‌ ஆகலில்‌ அடியேனைக்‌ கைவிட்டு விடாதீர் –

கைவிடாக்‌ காப்ப தவனெனச்‌ சான்றோர்‌ பறையறைவர்‌
கைவிடாக்‌ காப்பவர்‌ நீரா அவனா எவரறிவார்‌?
கைவிடாக்‌ கொள்கை யனுமனைக்‌ கை விடச்‌ செய்தவர் யார்‌?
கைவிடாக்‌ காவல்‌ எழுநூ றரக்கியர்‌ கண்டதன்றே?–9-

எல்லா உயிர்களையும்‌ கைவிடாமல்‌ காப்பவன்‌ என்று சான்றோர்‌ பரக்கக்‌ கூறுவர்‌. அப்படிக்‌ கைவிடாமல்‌ காப்பவர்‌ நீரா? நும்‌ கணவராகிய எம்பெருமானா? என்பதனை உண்மையாகவா அறிகிறார்கள்‌? அரக்கியரை அழிக்க வேண்டும்‌ என்ற உறுதியான எண்ணத்தோடு வந்த அனுமனை, உம்மை விடாமல்‌ துன்புறுத்தி வந்த அரக்கியர்‌ எழுநூற்றுவரைப்‌ பாதுகாத்து, அனுமன்‌ எண்ணத்தைக்‌ கை விடச்‌ செய்த நும்‌ செயலை நோக்க, எல்லா உயிர்களையும்‌, கை விடாது காக்கும்‌ செயல்‌ உம்முடையதே என்று புலப்படுகின்றதன்றோ-

கண்ட அமுதம்‌ திசை திருப்பும் செயல் காப்பதற்கோ
கண்ட அமுதம் உமைக் குறிக்‌ கொண்டே கடல் கடைந்தான்‌
கண்ட அமுதச்‌ செயலில்‌ களவிதைக்‌ கண்டறிந்தீர்‌
கண்ட அமுதென வையகம்‌ காப்பதார் ? எய்துவதே–10-

தேவர்கள்‌ உள்ளத்தைத்‌ திசை திருப்பி அவர்கள்‌ நலன்‌ பெறுவதற்காகப்‌ பாற் கடல்‌ கடைந்து அமுதினைக்‌ கொண்ட எம்பெருமானுடைய செயல்‌ அவர்களை அமுதத்தால்‌ காப்பதற்காகவோ நிகழ்ந்தது? ஆய்ந்து கண்டால்‌ உண்மையான அமுதமாகிய உம்மைப்‌ பெற்ற பின்னரே எம்பெருமானுடைய உலகங்காத்தல்‌ தொழில்‌ சிறப்புற நிகழ்ந்து வருகிறது எனலாம்‌. ஆதலின்‌ உலகினை உண்மையாகக்‌ காப்பவர்‌ நீரே என்பது தேற்றம்‌–

எய்துவ துண்டே? அருளின்றி எம்மோய்‌ எனைத்தையுமே
எய்துவ துண்டே? சிவனயன்‌ இந்திரன்‌ தம் பதங்கள்‌
எய்துவ துண்டே?
அடியவன்‌ என்றென்‌ றிறைவனுமே
எய்துவ துண்டே? நுமநோக்‌ கிலதெனின்‌ முத்தியுமே–11-

அலர்மேல்‌ மங்கையீரே! தேவரீர்‌ அருளின்றி எந்தப்‌ பயன்களையும்‌ உலகவர்‌ எய்த இயலுமா? எம்பெருமானும்‌ தனக்கு அடியவன்‌ என்று எவனையும்‌ எய்துதல்‌ இயலுமா? பிரம்மன்‌, சிவன்‌, இந்திரன்‌ முதலியோரும்‌ தத்தம்‌ பதவிகளை அடைதல்‌ இயலுமோ? நும்‌ அருள்‌ நோக்கிலதெனின்‌ வீடு பேற்றினையும்‌ எய்த இயலுமா? என்றவாறு –

முத்தி யுளதென்‌ றளிப்பான்‌ முகுந்தன்‌ ஒருவனன்றே?
முத்தி யுளசுவைக்‌ கீடில்லை என்பதே முற்றுமுண்மை
முத்தி யுளசுவைக்‌ குற்றான்‌ முகுந்தன்‌ ஒருவனன்றே?
முத்தி யுளசுவை நீரின்றேல்‌ முற்றும்‌ பயனிலதே–12-

முத்தியை ஆன்மாக்களுக்கு வழங்குபவன்‌ முகுந்தனாகிய திருமாலே.-முத்திப் பேரின்பத்துக்கு இணையான இன்பம்‌ இல்லை என்பதே முழுமையான உண்மையாகும்‌. அம் முத்திச்சுவையை ஆன்மா பெறத்‌ திருமாலே காரணம்‌ ஆவான்‌ என்பதும்‌, அம் முத்திப்‌ பேரின்பம்‌ நல்கும்‌ என்பதும்‌, தாயாகிய நீர்‌ இல்லை யென்றால்‌ பயனிலவாகும் –

பயனற்‌ றிருப்பன உபய வி பூதிமான் பண்ணவனேல்‌
பயனற்‌ றிருப்பன்‌ நிகரில்‌ புகழ்சால்‌ பரமனேலும்‌
பயனற்‌ றிருப்பன்‌ தனிமாப்‌ புகழின்‌ படைப்பனேலும்‌
பயனற்‌ றிருப்பன்‌ அலர் மேல மங்கை தன்‌ பாலிலதே–13–

அலர்மேல்‌ மங்கை தன் பக்கம்‌ இல்லையாயின்‌, மண்‌ விண்‌ என்ற ஈருலகங்களுக்கும்‌ தலைவனாகத்‌ தான்‌ இருந்தாலும்‌, ஒப்பற்ற புகழை யுடைய பரம் பொருள்‌ என்ற நிலை இருந்தாலும்‌, ஒப்பற்ற மேம்பட்ட புகழுக்குரிய படைப்புச்‌ செயல்களைச்‌ செய்தாலும்‌ எம்பெருமான்‌ அவற்றால்‌ பயனற்றவனாகவே இருப்பான் –

பால தடைந்தனன்‌ பாதகத்‌ தாபமாழ்‌ தூறதனின்‌
பால தடைந்தனன்‌ பொய்ம் மதிப்‌ பற்றும்‌ ஒழுக்கமதின்
பால தடைந்தனன்‌ தீவினைப்‌ பாவிய காடதனின்‌
பால தடைதல்‌ கழிய நின்‌ பங்கயத்‌ தாளருளே–14-

அடியேன்‌ தீவினையாகிய வெப்பம்‌ சூழ்ந்துள்ள புதர்களில்‌ அகப்பட்டு அடைந்துள்ளேன்‌. அதனால்‌ பொய்யான அறிவைப்‌ பின்பற்றி ஒழுகும்‌ ஒழுக்கத்தை மேற் கொண்டேன்‌. இதனால்‌ தீவினை பரவிய காடாகிய உலக வாழ்க்கையில்‌ ஈடுபட்டேன்‌. அவ் வாழ்க்கையில்‌ ஈடுபடும்‌ அடியேனை மீட்டு பிறவித்‌ துயர்‌ சேர்வதில்‌ நின்றும்‌ நீங்குமாறு உன்‌ தாமரைப்‌ போன்ற திருவடிகளைச்‌ சேர்ப்பாயாக –

அருளால்‌ நிறைந்தொளிர்‌ கண்ணுடை அன்னைநீ, ஆதுவர்பால்‌
அருளால்‌ நிறைந்த அழகின்‌ இனியைநீ எம்பிரான்பால்‌
அருளால்‌ நிறைந்த அளியை நீ தேவர் தம்‌ மாததம்பால்‌
அருளால்‌ நிறைந்த அலர்மேல் மங்கை நீ ஆளெமையே–1
5-

அருளால்‌ நிறைந்த அலர்மேல்‌ மங்கையீர்‌ ! நீர்‌ பிறவிப்‌ பிணியால்‌ வருந்துவோர்பிணி தீர்க்க அருளால்‌ நிறைந்து விளங்கும்‌ அன்னையாய்‌ உள்ளீர்‌; அருளால்‌ நிறைந்த நீர்‌ எம்பெருமான்பால்‌ இனிய அழகிய உருவெடுத்து அமைந்துள்ளீர்‌, தேவ மாதர்‌ திறத்தில்‌ அருளால்‌ நிறைந்த இரக்கமே வடிவாக உள்ளீர்‌; அத்தகைய அருள்‌ வடிவாகிய நீர்‌ அடியேனையும்‌ ஆட்கொண்டு அருள்வீராக –

எமையாள வந்தே புணரி எழுந்தீர்‌ அமுதுடனே
எமையாள வந்தே துழாய் கமழ்‌ மார்பத்‌ ‘ தினிதிருப்பீர்‌
எமையாள வந்தநீர்‌ மங்கா புரத்தில்‌ இருந்தருள்வீர்‌
எமையாள வந்தெம்‌ மனத்தில்‌ இருப்பதும்‌ மாலுடனே–16–

எம்மை ஆட்கொள்வதற்காகவே திருமகளாகிய நீர்‌ அமுதத்தோடு அவதரித்தீர்‌; திருத்துழாய்‌ மணம்‌ கமழும்‌ திருமாலின்‌ திருமார்பில்‌ மகிழ்ச்சியாக இருக்கிறீர்‌; அலர்மேல்‌ மங்கா புரத்தை உகந்து அருளி வீற்றிருக்கின்றீர்‌; எம்மை ஆட்கொள்வதற்காக எம்பெருமானுடன்‌ சேர்ந்து எங்கள்‌ உள்ளத்தில்‌ அமர்ந்துள்ளீர் –

மாலுநும்‌ கூட்டும்‌ மலமற்‌(று) அமானவன்‌ பால்தருமே
மாலுநும்‌ கூட்டும்‌ மணிமண்‌ டபத்துட் புகுந்திடவே
மாலுநும்‌ கூட்டும்‌ மணிமண்‌ டபமேவி கேள்விகொள
மாலுநும்‌ கூட்டும்‌ மகிழ்ந்‌து அணைந்து உச்சி முகப்பதுவே ! –17–

எம்பெருமானுடன்‌ கூடிய தாங்கள்‌ சேர்ந்திருப்பது உலகம்‌ மாசற்று வீட்டுலகிற்கு அழைத்துச்‌ செல்லும்‌ அமானவன்‌ தொடர்பை உண்டாக்கும்‌; வைகுந்‌தத்திலிருக்கும்‌ திருமாமணி மண்டபத்தில்‌ புகும்‌ வாய்ப்பினை ஆன்மாக்களுக்கு நல்கும்‌; எம்பெருமான்‌ ‘நீ யார்‌ என்ன? நான்‌ ப்ரஹ்மம் ஆகிறேன்‌’ என்‌று ஜீவான்மா விடை கூறவும்‌, அவ்வான்மாவை மகிழ்வோடு தழுவி தாயன்பால்‌ உச்சி மோக்கும்‌ உயர்நிலையும் தரும் –

முகந்தருள்‌ நுந்தம்‌ கருணையின்‌ முன்னர்‌ இணையெதுவே?
முகந்தருள்‌ அண்ணல்‌ கருணை பிறிதின்‌ முனைந்ததுவே?
முகந்தருள்‌ மாறன்‌ அருள்நு மதருளின்‌ முன்வருமே?
முகந்தருள்‌ பூதார்‌ முனைவன்‌ அருளும்‌ இணையிலதே–18-

ஆன்மாக்களை விரும்பித் தழுவும்‌ எம்பெருமானுடைய கருணை இணையற்றதே? அத் தகைய செயலைச்‌ செய்யும்‌ மாறனுடைய கருணையும்‌ இணை யற்றதே? அதனை ஒத்த இராமாநுசர்‌ கருணையும்‌ ஈடு அற்றதே? என்பர்‌. இவற்றுக்கு எல்லாம்‌ காரணமாக அமையும்‌ தாயாராக அன்பு காட்டும்‌ உம்‌ அருளுக்கு முன்னர்‌ ஒப்பாகாது இவைகள்‌ குறைவடையும் –

இணையிலை என்பது நித்ய விபூதியி லெய்துமின்பம்‌
இணையிலை என்ப பிறவிக் கண்‌ ஆழ்வதில்‌ எய்துதுன்பம்‌
இணையிலை யென்ப திறைவன்‌ உயிர்கள்பால்‌ செய்யுமருள்‌
இணையிலை நும்மருட்‌(கு) இத்தனை சேரிலும்‌ ஒன்றினக்கே?-19-

நித்திய விபூதி என்னும்‌ பரமபதத்தில்‌ எய்தும்‌ இன்பம்‌ இணையற்றது; பிறவித் துயரில்‌ ஆழும்‌ துன்பமும்‌ இணையற்றது; இறைவன்‌ ஆன்மாக்கள்‌ பக்கம்‌ செலுத்தும்‌ அன்பும்‌ இணையற்றது; இவ்வளவும்‌ ஒன்று சேரினும்‌ தாயாராகிய நுமது அருளுக்கு நிகராக மட்டா –

ஒன்றினும்‌ ஒன்றா உலகியல்‌ பற்றைக்‌ களைவதற்கே
ஒன்றினும்‌ ஒன்றா உயர்பரன்‌ பால் நின்‌றகலகிலீர்‌
ஒன்றிலும்‌ ஒன்றாக்‌ கயவன்‌ சிறைநின்‌று பகரித்தீர்‌!
ஒன்றினும்‌ ஒன்றா உலைப்பும்‌ அரக்கியர்‌ நற்றமிதே–20-

தாழ்வில்லாத தனக்கு பிரிதொன்று இணையாகாத இவ் வுலக பற்றினை எம்மிடத்தில்‌ இருந்து போக்குவதற்காகவே, தன்னை ஓக்கும்‌ பொருள்‌ பிரிதொன்று இல்லாத மேம்பட்ட எம்பெருமான்‌ மார்பினில்‌ அகலாது தங்கி இருக்கின்றீர்‌. இழிவில்‌ தனக்கு ஒப்பவர்‌ இல்லாத இராவணனுடைய சிறையில்‌ இருந்து, அவனுக்கு உபதேசித்த நிலையிலும்‌ அரக்கியர்‌ ஈடு இணையில்லா தாழ்ந்த மொழிகளால்‌ அலைத்த நிலையிலும்‌ உம்‌ ஈடில்லா உபதேசத்தால்‌ அவர்களுக்கு நன்மையே புரிந்தீர் –

நற்றமாம்‌ நுந்தாள்‌ சரணா நணுகுவ தோர் செயலே
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகி இறை தாள்‌ நணுகுவதே
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகப்‌ பிறர் தாள்‌ நணுகுவதோ?
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகா திறைதாள்‌ நணுகுவதோ?–21-

நன்மையே தரும்‌ நும்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றுவதே மேம்பட்ட செயலாகும்‌. உம்‌ திருவடிகளை முதற்கண்‌ பற்றிட்ட பின்‌ எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றுவதற்குப்‌ பிறருடைய பரிந்துரைக்கு முயல்வது தேவையற்ற செயலாகும்‌. உம்‌ திருவடிகளைப்‌ பற்றாது எடுத்த எடுப்பிலேயே எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றுவது முறையல்லவே –

நணுகுவ துண்டே? அகப்புறப்‌ பற்றுசால்‌ நாகரீகம்‌
நணுகுவ துண்டே? பிறவித்‌ தொழுவினில்‌ நாலுசெயல்‌
நணுகுவ துண்டே? நமன்தமர்‌ சித்திர குத்தனாதி
நணுகுவ துண்டே? பரத்துவம்‌ நக்கனைப்‌ போல்பவர்க்கே–22-

உம்மைச்‌ சரணமடைந்தவர்களை யான்‌ எனது என்ற அகப்புறப்‌ பற்றுக்கள்‌ கொண்ட பண்பாடு அடையுமோ? பிறவியாகிய தொழுக்கட்டையில்‌ இயங்கும்‌ செயல்‌ அடையுமோ? இயமனுடைய ஏவலன்‌ சித்திரகுப்தனும்‌ நமனும்‌ நலிவதற்கு அணுகுவார்களா? உம்மைச்‌ சரணமடைவோருக்குச்‌ சிவன்‌ முதலான தேவர்களைப்‌ பரம்‌ பொருளாம் தன்மை உண்டென்ற நினைவு ஏற்படுமா-

கேதங்கள்‌ வாரா நமன்தமர்‌ கேள்விகொள்‌ தீயசொற்கள்‌
கேதங்கள்‌ வாரா பராசத்தி போல்பவர் கீழ் படிதல்‌
கேதங்கள்‌ வாரா புறசமயத்துறு கேடுசெயல்‌
கேதங்கள்‌ வாரா நும திருதாள் மலர் கிட்டுவார்க்கே –23-

உம்முடைய திருவடிகளிரண்டினையும்‌ சரணாகப்‌ பற்றுபவர்களுக்கு, யமனுடைய ஏவலர்‌ பழித்துக்‌ கூறும்‌ தீயசெயல்களைக்‌ கேட்கும்‌ தீவினையாகிய துயரங்கள்‌ வாரா. உமாதேவி முதலிய சிறுதெய்வங்களை வழிபாடு நிகழ்த்தும்‌ குறைபாடுவாரா. வேற்றுச்‌ சமயங்களைப்‌ பின்பற்றுவதாகிய தீயசெயல்களும்‌ ஏற்பட மாட்டாதென்பதாம் –

கிட்டுவ துண்டே? நுமதடி யாரெனும்‌ கேழில்பதம்‌
கிட்டுவ துண்டே? மிதுநநும்‌ கீழிருந்‌ தாற்றுதொண்டு
கிட்டுவ துண்டே? மிதுநநும்‌ கேழில புன்முறுவல்‌
கிட்டுவ துண்டே? மிதுநறும்‌ தாண்மலர்க்‌ கீழிருப்பே–24-

நும்முடைய அடியவரெனும்‌ ஒப்பிலாப்‌ பதவி எல்லோருக்கும்‌ கிட்டுமோ? பெருமானும்‌ நீருமாக இருக்கும்‌ இருவர்‌ திருவடிகளின்‌ கீழிருந்தாற்றும்‌ தொண்டு எல்லோருக்கும்‌ கிட்டுமோ? நும்மிருவருடைய ஒப்பற்ற புன்முறுவலைக்‌ காணும்‌ வாய்ப்புகள்‌ எல்லோருக்கும்‌ கிட்டுமோ? இருவருடைய திருவடித் தாமரைகளின்‌ கீழ்‌ என்றும்‌ இருக்கும்‌ இருப்பு எல்லோருக்கும்‌ கிட்டுமோ-

தாள்மலர்க்‌ கீழ்நின்‌ றிரப்பா தரணி புரப்பவரும்‌
தாள்மலர்க்‌ கீழ்நின்‌ றிரப்பார்‌ தமதியல்‌ பெய்துவாரும்‌
தாள்மலாக்‌ கீழ்நின்‌ றெனைவரும்‌ தாங்குவார்‌ மெய்யுணர்வே
தாள்மலாக்‌ கீழ்த் தொண்‌ டலர் மேல் மங்கை! தனமெமதே–25-

அலர்மேல்‌ மங்கையாகிய அன்னையே! இவ் வுலகைக்‌ காக்கும்‌ அரசர்களும்‌ உன்‌ திருவடித் தாமரைகளின்‌ கீழ்‌ நின்று வேண்டிய செல்வத்தை இரப்பர்‌. கைவல்ய இன்பம்‌ வேண்டுவாரும்‌, அந்தமில்‌ பேரின்பம்‌ வேண்டுவாரும்‌ இவற்றின்‌ காரணமாகிய மெய் யுணர்வு பெற விரும்புவாரும்‌ உன்‌ திருவடித் தாமரைகளைப்‌ பற்றியே இருப்பர்‌. உம்‌ திருவடிக் கீழ்‌ தொண்டே அடியேன்‌ வேண்டும்‌ செல்வமாகும்-

தனத்தவர்‌ தாய் நின கோட்டி தனி முதல் கோட்டியையும்
தனத்தவர்‌ நேர்மைத்‌ தனிமனந்‌ தன்னில்‌ நிறுத்தெடுத்து
தனத்தவர்‌ கெளரவத்‌ தாய்நின கோட்டி லகுமிகுத்த
தனத்தவர்‌ சாமிதன்‌ கோட்டி எனுநிலை தந்தனரே–26-

தாயே! ஸ்ரீயபதி. திருவடிகளில்‌ தொண்டு செய்தலையே தமக்குச்‌ செல்வம்‌ என்று கருதும்‌ அடியவர்‌, உமது குழாத்தின்‌ பெருமையையும்‌, ஒப்பற்ற முதற் பொருளாகிய எம்பெருமானுடைய குழாத்தின்‌ பெருமையையும்‌, தங்கள்‌ மனமாகிய தராசின்‌ இரு தட்டுகளிலும்‌ நிறுத்துப் பார்த்து தாயாகிய உங்கள்‌ குழாத்தின்‌ பெருமையே மதிப்புடையது எனவும்‌, எம்பெருமானுடைய குழாத்தின்‌ பெருமை சற்று மதிப்பு குறைந்ததுவே எனவும்‌ நிலைநாட்டி யுள்ளனர் –

தந்த மலைக்கும்‌ வினையர்‌ தகவிலர்‌ என்னநிரை
தந்த மலைக்குடை யான்தள்ளு மென்றும்‌ தருக்கியிகல்‌
தந்த மலைக்குமைத்‌ தான்திருத்‌ தாளிணைத்‌ தஞ்சமென்று
தந்த மலையவர்‌ மேல்மங்கை சற்றே தரிப்பதுண்டே–27-

பசுக்களையும்‌ ஆயர்களையும்‌ காப்பதற்காக கோவர்த்தன மலையை குடையாக எடுத்தவனும்‌, தன் மேல்‌ செருக்குற்று போர்‌ செய்யவந்த சாணுரன்‌, முஷ்டிகன்‌ என்ற மல்லர்களை அழித்தவனான எம்பெருமான்‌, வினைகளால்‌ துன்பத்தை யடைந்த அடியார்க்‌ தன்னை நேராக தஞ்சமடைந்தால்‌, இவர்கள்‌ நெடுநாள்‌ செய்த அபராதங்களைக்‌ கணக்கிட்டுச்‌ சீறுவான்‌ என்று நினைத்து, தேவரீர்‌ புருஷகாரமாகிய சிபாரிசு பண்ணி அடியார்களை எம்பெருமான்‌ திருவடிகளை அடையத்‌ தந்து, பெருமான்‌ அவர்களை ஏற்கும் வரையில்‌ ஆறியிராமல்‌ அடியார்களுக்காகப்‌ பதறுபவள்‌ அன்றோ நீர்‌-

உண்டே? திரிபோ டுனர்வின்மை ஐயம்‌ முதலதீர்தல்‌
உண்டே? இவற்றின்‌ ஒழிந்துப் பெறப்பெறு மெய்யுணர்வும்
உண்டே? பரனெனுந்‌ தாரக மாதியாம்‌ உச்சநிலை
உண்டே? உடையான்‌ குறைதீர்‌ வதின்றேல்‌ உமது நோக்கே.
–28-

அன்னையீர்‌! நுமது கடைக்கண்பார்வை எங்கள்‌ மேல்‌ பொருந்தாவிடில்‌ அறிவின்மை திரிபுணர்ச்சி, ஐயம்‌ என்ற குறைபாடுகள்‌ ஆன்மாக்களை விட்டு நீங்குமா? இவற்றின்‌ நீங்கிப்‌ பெறக்கூடிய மெய்யுணர்வு ஏற்படுமா? எம்பெருமானே தாரகம்‌, போஷகம்‌, போக்கியம்‌ என்ற மனநிலை ஏற்படுமா? ஆன்மாக்கள்‌ தன்னை கிட்டவில்லையே என்ற எம்பெருமானுடைய குறையும்‌ தீருமா?

உமதுநோக்‌ கன்றே? பலபல அண்டங்கள்‌ உள்ளவாதல்‌
உமதுநோக்‌ கிவ்வெலாம்‌ பாலநம்‌ செய்பொருள்‌ உள்ளதுவும்‌
உமதுநோக்‌ கின்றே? இவை தாம்‌ நிரல்பட ஊர்வதுவே?
உமது நோக்‌கா மாதின் ஒப்பின்ற அருளும் இவ்வின்பமிதே -29-

அம்மையீர்‌! உம்‌ கடைக்கண்‌ பார்வை செலுத்தப்படாவிடின்‌ எம்பெருமான்‌ பல அண்டங்களைப்‌ படைப்பதுவும்‌, அவனால்‌ காக்கப்பட்ட இவ் வண்டங்கள்‌ உளவாதலும்‌, இவற்றின்‌ செயல்கள்‌ நிரல்பட நிகழ்வதுவும்‌ ஒப்பற்ற வீட்டின்பத்தை இவ்வான்மாக்கள்‌ எய்தி வாழ்வதுவும்‌ நிகழற்பாலதா–

இன்பம்‌ உளதா எவரும்‌ மயங்கி விடமரத்தில்‌
இன்பம்‌ உளதா எவரும்‌ பறிப்பர்‌ விடக்கனிகள்‌
இன்பக்‌ கனிதான்‌ மிதுநநும்‌ பாலன்‌ பியைவதின்றி
இன்பக்‌ கனியாம்‌ நுமதடி யாரோ டிணங்குமிதே–30-

இன்பம்‌ உளதாகக்‌ கருதி மன மயக்கங்கொண்டு சிலர்‌, உலகியலாகிய விஷமேறிய மரத்தில்‌ தோன்றும்‌ விஷக் கனிகளைப்‌ பறிப்பர்‌. பிராட்டியும்‌ பெருமானும்‌ ஆகிய நும்‌ இருவரிடம்‌ அன்பு செய்வதன்றி இன்பமாகிய கனிதான்‌ வேறுளதோ? உங்கள்‌ அடியவரோடு இணங்கி வாழும்‌ வாழ்வே உண்மையான இன்பச்சுவை தரும்‌ பழமாகும் –

இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத்‌ திருந்திட லென்பதென்ன
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத்து இரானொரு தொண்டனாமே?
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டமே வானுலக இன்பமாமே
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத் திருந்திடச் செய்‌கெனையே — 31-

நும்மடியார்தம்‌ கூட்டத்தோடும்‌ கலந்து வாழ்தலென்பது ஒரு சாதாரணச்‌ செயலாகுமா? உங்கள்‌ அடியார்‌ கூட்டத்தின்‌ இணக்கம்‌ இல்லாதவனும்‌ தொண்டருள்‌ ஒருவனாவானா? நும்‌ தொண்டரோடு இயைந்து வாழும்‌ வாழ்வே வானுல கின்பமாகும்‌. ஆதலின்‌ அடியேனை நும்‌ அடியார்‌ நடுவின்‌ இருந்திடச்‌ செய்யும்‌ அருளினைச்‌ செய்வீராக –

எனைப்போல்‌ பிழைசெய்வார்‌ யாரே? உலகினில்‌ இல்லையென்றும்‌
எனைப்போல்‌ பிழை செய்யார்‌ யாரே? உலகினில்‌ இல்லையின்றும்‌ ்‌
எனைப்போல்‌ பிழையாமை செய்தொறும்‌ யானென தின்மையுண்டேல்‌
எனைப்போல்‌ பிழையாமை உம்மரு ளாலல்ல தில்லையன்றே–32-

என்னைப்போல்‌ தவறான செயல்கள்‌ புரிந்தவர்கள்‌ உலகில்‌ என்றுமில்லை, என்னைப்போல்‌ மனமொத்து பிழை செய்யாதவர்‌ உலகில்‌ யாருமில்லை. யானென்று அகப்பற்றும்‌ புறப்பற்றும்‌ கழிந்ததென்றால்‌ செயலில்‌ பிழையில்லையாம்‌. அத்தகைய அகப்புறப்‌ பற்றும்‌ நீக்கிச்‌ செயல்களைப்‌ பிழையறச்‌ செய்தல்‌ உம்மருளாலல்லது ஏற்படாது –

அன்றே மகரமும்‌ ஆமையுங்‌ கேழலுந்‌ சிங்கமாவான்‌
அன்றே சறையினான்‌ ஆன்மேய்க்‌ கரைசால்‌ துவருடையான்‌
அன்றே இரணியன்‌ ஊனுண்‌ டவனென அறிந்திலிரே?
அன்றே வனசத்‌ தமுதின்‌ அமுதுடன்‌ தோன்றினீரே–33-

ஒவ்வொரு காலத்தில்‌ மீனாகவும்‌, ஆமையாகவும்‌, பன்றியாகவும்‌, நரசிங்கமாகவும்‌ அவதரித்த எம்பெருமானே மாட்டாரங்கழியில்‌ தோல்பை தொங்க அழுக்குப்படிந்த செந்நிற ஆடையை அணிந்த ஆயனாகிய கண்ணனாவான்‌. அடியவனுக்கு தீங்கு செய்த இரணியனுடைய மார்பைப்‌ பிளந்த அவன்‌ உடலை உண்டவனும்‌ அப்பெருமானே யன்றோ? அன்று பாற்கடலில்‌ அமுதம்‌ தோன்றியபொழுது தாமரை மலரில்‌ தோன்றிய தாங்கள்‌ அவன்‌ மார்பில்‌ இணைந்திருக்கின்றீர்‌. அவனைத்‌ தாங்கள்‌ அறியவில்லையா

மறைதலும்‌ தோன்றலும்‌ உண்டே? உலகினில்‌ மானிடர்க்கும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ வாச வனாதியா தேவர்களும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ உண்டே? மலரயன்‌ சூலியொடும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ மங்கைநும்‌ ஆட்சிக்‌ கிலைகறங்கே–34-

அலர்மேல்‌ மங்கையீர்‌! உம்முடைய ஆளுகை நன்றன்றே! மறைதலும்‌ தோன்றலுமாகிய சுழற்சி இல்லை. ஆனால்‌ உலகில்‌ உள்ளமானிடர்‌ முதலியோருக்கும்‌ இந்திரன்‌ முதலிய தேவர்களுக்கும்‌ தாமரை மலரில்‌ தோன்றிய பிரமனுக்கும்‌ அவன்‌ தனயனாகிய சிவனுக்கும்‌ பிறப்பிறப்பாகிய தோன்றலும்‌ மறைதலும்‌ உண்டன்றோ-

கறங்குபு சக்கர கையன லதிலேன்‌ காசினியில்‌
கறங்குபு செல்வக்‌ றந்திலேன்‌ கல்விதனில்‌
கறங்குபு நெஞ்சின்‌ இளந்துணுக்‌ குற்றனென்‌ காத்திலையே
கறங்குங்‌ கரிசறத்‌ தேற்றந்‌ தருவித்தை நீயலையே? –35-

சுழலும்‌ சக்கரத்தை என்றும்‌ கையிலேந்திய திருமாலைப்‌ பற்றிய அடியேன்‌ வேறு தெய்வங்களை அறியேன்‌. மாறி, மாறி வரும்‌ செல்வமாகிய மாசு என்பக்கல்‌ வராதபடியானேன்‌. கல்வியைப்‌ பெற அற்பத்துணிவுடையேனாய்‌ முற்றப்பெறாத வனானேன்‌. நின்றவாநில்லா நெஞ்சின்‌ கரிசைப்‌ போக்கித்தெளிவைத்தரு வித்தை நீயாயிருந்தும்‌ கல்வியை முற்றநீர்‌ தந்திடவில்லையே –

நீயலை யேயணு வாயே விபுவின்‌ நிமிர்ந்துறைவாய்‌
நீயலை யேநிதி யாளி பெறுவதும்‌ நின்னிடமே
நீயலை யேயவன்‌ பாலநம்‌ நேருறச்‌ செய்வதுவே?

நீயலை யேழுத்தி இன்பம்‌ இணைந்திருந்‌ தாக்குவிப்பே–36-

அணுவளவாக இருந்தும்‌ நீர்‌, எங்கும்‌ வியாபித்துள்ள விபுவான பெருமானைப் போல்‌ சக்தி விசேஷத்தாலே கரந்தெங்கும்‌ பரந்தெங்கும்‌ உள்ளாய்‌ நீரன்றோ? செல்வத்துக்கு உரிய தெய்வம்‌ நீரல்லையோ? அனைவரும்‌ எல்லாச்‌ செல்வமும்‌ பெறுதல்‌ உமமிட மிருந்தன்றோ? எம்பெருமானுடைய காத்தல்‌ தொழிலை முறையாகச்‌ செய்பவரும்‌ நீயல்லையே? எம்பெருமானோட கூடியிருந்து புருஷகாரம்‌ செய்து அடியார்கள்‌ வீடு பேற்றின்பம்‌ அடைவதற்காக முயற்சி செய்பவள்‌ நீரன்றோ –

ஆக்கலுங்‌ காத்தல்‌ உமதுளத்து கப்பினுக்‌ கெம்பெருமான்‌
ஆக்கலுங்‌ காத்தலும்‌ ஆவவே? உந்தங்கண்‌ ணோக்கிலதேன்‌
ஆக்கலுங்‌ காத்தல்‌ அழிப்பதொன்‌ றன்றி நுமக்காக
ஆக்கலுங்‌ காத்தல்‌ அழித்தல்‌ ஆம்பயன்‌ சேதநனே–37-

எம்பெருமான்‌ படைத்தல்‌ காத்தல்‌ அழித்தல்‌ தொழில்களைச்‌ செய்வது உமக்கு இன்பத்தை அளிப்பதற்கே. உம்‌ பார்வையின்றேல்‌ பெருமானுடைய ஆக்கலுங்காத்தலு முறையாக நிகழா. எம்பெருமான்‌ முத்தொழிலும் செய்வது உமக்காக. இம் முத்‌ தொழில்களால்‌ ஆகும்‌ பயன்‌ சேதனனைத் தம்போடிணைத்துக்‌ கொள்வதற்காகவே-

உடனிருந்‌ தன்பர்போல்‌ ஊறுபல்‌ லாற்றற்‌ களவுமுண்டே?
உடனிருந்‌ தாக்கம் அறிவொடு வீக்கும் உணக்குவமே
உடனிருந்‌ தைம்பொறி ஊட்டும்‌ புலநலத்‌ தொன்றுவமே
உடனிருந்‌ துந்தம்‌ கடைக்கணின்‌ நோக்குவீர்‌ தீர்ந்திடவே–38-

ஐம்பொறிகள்‌ இவ்வுடம்பில்‌ ஆன்மாக்களோடு கூடியிருந்து ஆற்றும்‌ பலவகை இடையூறுகளுக்கு எல்லை யுண்டோ? அவை ஆன்மாவோடு தொடர்ந்திருந்தே பக்தி செல்வத்தையும்‌ ஞானத்தையும்‌ கெடுக்கிறது, அவை: போக்கும்‌ திறத்தை நாங்கள்‌ அறிவோமா? அவ்வாறு அறியாமல்‌ ஐம்பொறிகள்‌ உண்பிக்கும்‌ புலனின்பத்தில்‌ ஈடுபட்டுக்‌ காலங்கழிக்கின்றோம்‌. இத்தகைய அறியாமை எம்மை விட்டு நீங்குமாறு தாயாகிய நீர்‌ எம்‌ பக்கம்‌ இருந்து உமது கடைக் கண்ணால்‌ நோக்கி எமக்கு அருள்‌ செய்வீராக –

தீர்ந்திடச்‌ செய்தீர்‌ துருவனைச்‌ சிற்றனைச்‌ செய்கொடுமை
தீர்ந்திடச்‌ செய்தீர்‌ இரணியற்‌ கொன்றவன்‌ சேய்‌ கொலையைத்
தீர்ந்திடச்‌ செய்தீர்‌ சிறைப்படு மாதர்‌ பிறர்துயரும்‌
தீர்ந்திடச்‌ செய்வீர்‌ அடியேன்‌ படுங்கடுந்‌ தீமைகளே–39-

துருவன்‌ என்ற அரசிளங்குமரனுக்கு அவன்‌ சிற்றன்னையால்‌ ஏற்பட்ட துயரங்கள்‌ எம்பெருமானைக்‌ கொண்டு நீங்குமாறு செய்தீர்‌. இரணியனைக்‌ கொன்று அவன்‌ மகன்‌ பிரகலாதன்‌ கொலை செய்யப் படுதலை நீங்குமாறு செய்தீர்‌, இத்தகைய தாங்கள்‌ அடியவனாகிற நான்‌ படும்‌ கடுந்தீவினைகளும்‌ நீங்குமாறு செய்வீராக –

தீமைகள்‌ செய்வன ஐம்பொறி சேர்க்கும்‌ புலனலங்கள்‌
தீமைகள்‌ செய்வன பெண்ணெனும்‌ ஆணெனும்‌ ஈருடல்கள்‌
தீமைகள்‌ செய்வன ஒன்றினோடு ஓன்றுடன் சேர் பிணக்காம்
தீமைகள்‌ செய்வனடொன்‌ மேல்நலம்‌ சேரத்‌ தடைமிழைத்தே–40-

ஐம்பொறிகளால்‌ நுகரப்பெறும்‌ புலனின்பங்கள்‌ சேதநன்‌ எம்பெருமானை அடையாதபடி தீமைகள்‌ செய்கின்றன. பெண்ணுடல்‌ எனவும்‌, ஆணுடல்‌ எனவும்‌ பருத்து உலாவப்படும்‌ இருவகை உடல்களும்‌ தீமைகள்‌ தருவனவேயாம்‌. மேம்பட்ட வீட்டின்பம்‌ அடைய முடியாதபடி தீமை செய்யும்‌ இவற்றை அகற்றுவீராக –

இழைப்ப துலகென காப்ப தழிப்ப திவைசெயல்கள்‌
இழைப்பதற்‌ கோர்துணை இன்றித்‌ தனதிடத்‌ தாக்குமவன்‌
இழைப்பவன்‌ மார்வத்‌ திருந்துநீ ரீதின்‌ இகந்தெவையும்‌
இழைப் பவற் கொண்டே இணை இல் பேரின்பத்‌ திருத்துவீரே–41-

உலகங்களைப்‌ படைத்தலும்‌, காத்தலும்‌, அழித்தலும்‌ என்ற முத்தொழில்களையும்‌ பிறருதவியின்றி எம்பெருமான்‌ தானே தனதிடத்தே நிகழ்த்தும்‌ போது, தேவரீர்‌ திருமார்பில்‌ பிரியாமல்‌ உறைந்து கொண்டு முத்தொழில்களிலும்‌ தொடர்பின்றி, எல்லா உயிர்களும்‌ எம்பெருமானைக்‌ கொண்டே, இணையில்லாப்‌ பேரின்ப உலகமாகிய பரம பதத்தில்‌ சேர்வதற்கு ஆவன செய்கின்றீர் –

இருத்துவீர்‌ நான்முக னாதி எவரையும்‌ தம்பதத்தே
இருத்துவீர்‌; தாளடையாரை அவர்தம்‌ இருவினையில்‌
இருத்துவீர்‌; தத்தம்‌ வரம்புடை யார்தம்‌ இயல்பறிந்து
இருத்துவீர்‌; தஞ்சமா ஈரிணைத்‌ தாள்களில்‌ தொண்டுடனே–42-

நான்முகன்‌ முதலிய தேவர்களை அவரவர்‌ பதவிகளில்‌ நிலையாகப்‌ பலகாலம்‌ வரை இருக்கச்‌ செய்கின்றீர்‌. உம்மை வணங்காதவர்களை அவரவர்‌ நல்வினை தீவினைகளுக்கேற்பப்‌ பயன்‌ தந்து நுகரும்‌ வண்ணம்‌ வாழ்க்கையிலிருக்கும்படி காலம்‌ கழிக்க வைக்கின்றீர்‌. ஆன்மாநந்தமே போதும்‌ என்ற வரம்புடையவர்களை கைவல்யத்திருக்கச்‌ செய்கின்‌றீர்‌. உம்மையே தஞ்சமாக துடைந்த அடியார்களை நும்மிருவருடைய இணைந்துள்ள திருவடிகளில்‌ செய்யும்‌ திருத்தொண்டை நிலையாக ஈடுபடுத்துகின்றீர் –

தொண்டினை யன்றிச்‌ சுகமே? உலகொரு நாயகமே
தொண்டினை யன்றிச்‌ சுவர்க மெனுமோர்‌ தனிச்சுகமே?
தொண்டினை யன்றி உயிர்சுகத்‌ தாழ்தல்‌ ஒருசுகமே?
தொண்டினை யன்றிக்‌ குழாத்தொடும்‌ உந்தம்‌ தொண்டுமொன்நே? –43-

உமது திருவடிகளில்‌ தொண்டு செய்வதால்‌ ஏற்படும்‌ இன்பம்‌ உலகொரு நாயகமாக ஆளும்‌ தலைமையாலும்‌ கிட்டாது. இதனை ஒத்த இன்பம்‌ சுவர்கம்‌ முதலான எவ்வுலகத்திலும்‌ இல்லை. இதனை ஒத்த இன்பம்‌ ஆன்மா தன்னைத்‌ தானே அநுபவிக்கிற கைவல்யீத்திலும்‌ இல்லை. தங்கள்‌ திருவடிகளில்‌ அடியார்‌ குழாத்தொடும்‌ ஒன்றிச்‌ செய்யும்‌ தொண்டே பேரின்பம்‌ பயப்பது. தனித்துச்‌ செய்யும்‌ தொண்டு பேரின்பம்‌ பயவாது –

ஒன்றும்‌ அறிந்திலன்‌ ஒள்ளிய உம் தம் அருள் பெருக்கை
ஒன்றும்‌ அறிந்திலன்‌ எம்மான்‌ பரத்துவத்‌ துண்மைதனை
ஒன்றும்‌ அறிந்திலன்‌ அணுவில் விபூவினை உட்படுத்தல்
ஒன்றும றிந்திலன்யான்‌ எங்கும்‌ அணுநீர்‌ எனவொத்தே–44

மேம்பட்ட தாயாகிய உம்முடைய அருள் வெள்ளம்‌ பற்றி ஒன்றும்‌ அறியேன்‌ அடியேன்‌. அது போலவே எம்பெருமானுடைய மேலார்க்கும்‌ மேலானாகிய, உண்மையும்‌ அறியேன்‌. எங்கும்‌ பரந்திருக்கும்‌ தனித் தன்மையை உடைய எம்பெருமான்‌ அணுவளவினதாகிய ஆன்மாவுக்குள்‌ மறைந்திருப்பதையும்‌ அணு அளவு நுண்ணிய தாங்கள்‌ எங்கும்‌ பரவியிருக்கும்‌ விபுவாகிய எம்பெருமான்‌ அளவினை ஒத்திருப்பதனையும்‌ அறியேன்-

ஒத்திருப்‌ பீர்நீர்‌ உபேய நிலைதனக்கு எவ்வுயிர்க்கும்‌
ஒத்திருப்‌ பீர்நீர்‌ உபாய நிலையில்‌ புருடகாரம்‌
ஒத்திருந்‌ தேயுநீர்‌ காக்கும்‌ நிலையில்‌ உடனருள்வீர்‌
ஓந்திருந்‌து அண்மையில் நீக்கும்‌ தொழிலில்‌ உடன் இருப்பே-45-

எம்பெருமான்‌ எல்லா உயிர்களுக்கும்‌ சென்று சேரத்தக்க பயனாகிய நிலையில்‌ இருக்கும்போது உயிர்களுக்கு இன்பம்‌ அருளும்‌ நிலையில்‌ தாயாகிய நீங்கள்‌ எம்பெருமானை ஒத்திருப்பீர்‌. உயிர்‌ எம்பெருமானை அடையும்‌ உபாய நிலையில்‌ பரிந்துரைக்‌ கூறி, உயிர்களைப்‌ பாதுகாக்கும்‌ தொழிலில்‌ எம்பெருமானோடு உடனிருந்து செயல்படுகின்றீர்‌. அவன்‌ பக்கலில்‌ உடனிருந்தும்‌ அவன்‌ செய்யும்‌ அழித்தல்‌ தொழிலையும்‌ ஆமோதிக்கிறீர்-

ஒட்டிலிர்‌ எம்பிராற்‌ சேடம்‌ உளதன்றிப்‌ புன்னிமயொன்றும்‌
ஒட்டிலீர்‌ ஒன்றும்‌ சுதந்திரம்‌ இன்றன்றிப்‌ பண்பிலதில்‌
ஒட்டிலீர்‌ இவ்விரு தன்மையும்‌ இன்றி ஒருகுறையும்‌
ஒட்டிலீர்‌ உம்பர்கோன்‌ சேதநர்‌ பற்றருள்‌ மற்றவையே –46-

தாயாராகிய தாங்கள்‌ எம்பெருமானுக்கே யடிமையாயுள்ளீர்‌. மற்றவர்‌ திறத்து அடிமையாம்‌ கீழ்மை யன்றித்‌ தலைவியாக உள்ளீர்‌. தங்களுக்கு எம்பெருமானை விடுத்துச்‌ சுதந்திரம்‌ இல்லை.-எம்பெருமானுக்கு அடிமை-மற்றவருக்குத்‌ தலைமை. ஏனைய உயிர்‌ பண்புகள்‌ யாவுக்‌கும் நிபந்தனம்‌ என்ற இரு தன்மை அன்றி நுமக்கு குறை தரும்‌ பண்புகள்‌ எதன்‌ கண்ணும்‌ தொடர்பில்லை. எம்பெருமான்‌ திறத்துப்‌ பற்றும்‌ உயிரினங்கள்‌ திறத்தருளுவதன்‌றி மற்றைய கீழான பண்புகளோடு தொடர்புடையீ ரல்லீர் –

மற்றவை தாம்சுவை, யற்றவை மாயையை யாரறிவார்‌?
மற்றவை தாம்சுவை யுற்றவை யாமென மாலுமிதே
மற்றவை தாமற்ப சாரம்‌ உயிர்ச்சுவை மாரணமே
மற்றவை தீர்ந்தும்‌ தொண்டர்‌ குழுவுடன்‌ வாழ்சுவையே –47-

உம்‌ திருத்தொண்டு தவிர ஏனையவை சுவையற்றவையாகவும்‌,சேதனன்‌ அவற்றை சுவையுடையனவாகக்‌ கருதச்‌ செய்யும்‌ உமது மாயையின்‌ ஆற்றலை அறியவல்லவர்‌ யார்‌? மற்ற பொருள்கள்‌ சுவையுள்ளன என்று சேதனன்‌ கருதுதல்‌ மாயையின்‌ மயக்கமே. ஏனைய புலனின்பங்கள்‌ மிகக் குறைவான சுவை புடையனவே. மரணமாகிய கைவல்யம் முதலான இவற்றை விடுத்து நும்‌ தொண்டர்‌ குழாத்தொடும்‌ வாழும்‌ சுவையே மேம்பட்ட சுவையாகும் –

வாழ்சுவை மிக்கசீர்த்‌ தொண்டர்க்‌ கமுதெனும்‌ வாய்மொழியும்‌
வாழ்சுவைப்‌ பேருரை ஐவர்‌ வழங்கிய கோலமுடன்‌
வாழ்சுவை மிக்க கலியன் சொல்‌ மாலையா றங்கமுடன்‌
வாழ்சுவை வேரிமா மாறாத பூமேல்‌ இருப்பருளே–48-

மேம்பட்ட நறுமணம்‌ மாறாத தாமரை மேல்‌ இருக்கும்‌ பெருமாட்டியே! நல் வாழ்வுக்கு உரிய சுவை மிக்க சிறப்பினையுடைய தொண்டருக்கு அமுதம்‌ எனப்படும்‌ திருவாய்மொழியும்‌, இந்நூலுக்குத்‌ திருக்குருகைப்‌ பிரான்‌ பிள்ளான்‌, நஞ்சீயர்‌, வாதிகேசரி, பெரியவாச்சான்பிள்ளை, நம்பிள்ளை சொன்னதை ஏடுபடுத்திய வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை இவர்கள்‌ வழங்கிய ஐந்து உரைகளும்‌ ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்‌ னீராயிரப்படி, இருபத்திநாலாயிரப்படி, முப்பதாறாயிரப்படி என்று போற்றப்படும்‌ அழகிய ஐந்து உரைகளும்‌, மேம்பட்ட திருமங்கை மன்னன்‌ அருளிய பெரிய திருமொழி திருக்குறுந்தாண்டகம்‌, திருநெடுந்தாண்டகம்‌, சிறிய திருமடல்‌, பெரிய திருமடல்‌, திவெழுகூற்றிருக்கை என்ற பெயர்களையுடையதாய்‌ அருளிய சொல்‌ மாலைகளும்‌ உன்‌ அருளால்‌ ஏற்பட்டனவாகும் –

இருப்பதும்‌ வந்தும்‌ உறைவதும்‌ ஏற்றசீர்த்‌ தாமரையே
இருப்பதும்‌ நாச்சியார்‌ கோயிலும்‌ வெள்ளறை ஏருறையூர்‌
இருப்பதும்‌ எல்லா இதய கமலத்‌(து) இறைவனுடன்‌
இருப்பதும்‌ நித்திய ஸூரிகள்‌ வாழ்த்த இறையுடனே–49-

உனக்குப்‌ பொருத்தமான சிறப்பை யுடைய தாமரையே நீ காட்சி வழங்குமிடமும்‌ தோன்றுமிடமும்‌, நிலையாத்‌ தங்கி இருக்குமிடமும்‌, நீ கோயில்‌ கொண்டிருக்கும்‌ திருப்பதிகள்‌ திருநறையூர்‌, திருவெள்ளறை, திருஉறையூர்‌, முதலியனவும்‌. ஆன்மாக்களின்‌ இதய தாமரைகளும்‌ நித்திய ஸூரிகள்‌ வாழ்த்தும்படி இறைவனுடன்‌ வீற்றிருக்கும்‌ பரமபதமும்‌ உனக்கு நிலையான இருப்பிடங்களாகும் –

இறையுடன்‌ எவ்வெப்‌ பிறப்பினும்‌ தோன்றல்‌ இணக்கமுடன்‌
இறையுடன்‌ சேர்ந்திருந்‌ தெவ்வெவ்‌ வளத்தினு முந்துகிறீர்‌
இறையுடன்‌ சேர்ந்தே பரனெனும்‌ ஏற்றம்‌ விளைப்பதுவே
இறையுடன்‌ சேர்க்கவும்‌ இன்பநீர்‌ சேதனர்‌ ஏற்பதுவே –50-

எம்பெருமான்‌ எடுக்கும்‌ எவ்வெவ்வதாரத்திலும்‌ அவன்‌ திருவுள்ளத்துக்கு ஏற்பவே தோன்றுதலும்‌, எம்பெருமானுடன்‌ சேர்ந்திருந்தே எல்லா அறங்களிலும்‌ முற்பட்டு செயற்படுதலும்‌, எம்பெருமானை நீர்‌ சேர்ந்திருந்திருப்பதாலேயே அவனுக்கு எல்லாரிலும்‌ மேம்பட்டவன்‌’ என்று ஏற்றம்‌ விளைவிப்பதும்‌, எம்பெருமானுடன்‌ ஆன்மாக்களைச்‌ சேர்ப்பதும்‌, அவற்றை அவன்‌ ஏற்றுக்‌ கோடலும்‌ ஆகியவை அனைத்தும்‌ தாயாராகிய உங்களுக்கு மதிப்புடைய செயல்களாகும் –

ஏற்பதும்‌ எல்லா உலகும்‌ இணையில்‌ தனம்விரும்பி
ஏற்பதும்‌ ஞாநிகள்‌ எல்லாம்‌ பரனிடம்‌ சேர்ந்திடவே
ஏற்பதும்‌ நித்தரும்‌ முத்தரும்‌ தந்தொண்‌ டெழிலுறவே
ஏற்பதும்‌ எம்மான்‌ அகத்தெழில்‌ நீர்தாம்‌ முகத்தெளிவே–51-

எல்லா உலகத்திலுள்ளவர்களும்‌, ஒப்பற்ற செல்வத்தை விடும்‌ ஞாநிகள்‌ எல்லோரும்‌ தம்மை எம்பெருமானிடம்‌ சேர்ப்பிப்பதை விரும்பியும்‌, நித்தியசூரிகளும்‌, முத்தி பெற்றுப்‌ பரமபதத்திலுள்ளவர்களும்‌, தங்கள்‌ தொண்டுசிறக்க அவர்களால்‌ வழிபடப்படுகின்ற தாங்கள்‌ எம்பெருமான்‌ உள்ளத்தெய்தும்‌ உகப்பைக்‌ சுண்டு, அதனால்‌ ஏற்படும்‌ மகிழ்வால்‌ முகத்தின்‌ தெளிவான அழகைப்‌ பெற்றுள்ளீர்கள் –

முகத்தெளி வுள்ள தறிவிலார்க்‌ குத்தனம்‌ முந்துதலால்‌
முகத்தெளி வுள்ளதாம்‌ மூதறி ஞர்தமது மெய்யுணர்வால்‌
முகத்தெளி யுண்டாம்‌ பரனுக்குத்‌ தம்மை முகந்தளிப்பால்‌
முகத்தெளி வுண்டாம்‌ முகம்பரன்‌ சீர்தனைக்‌ கண்டுமக்கே–52-

அறிவில்லாதார்க்கு செல்வம்‌ மிகுதலினாலே முகத்தெளி வேற்படுகிறது. உண்மை யறிவுடையவர்களுக்குத்‌ தத்துவ ஞானத்தால்‌ முகத்தெளிவுண்டாகிறது. மெய்யடியார்கள்‌ தம்மை முற்றவும்‌ வழங்குதலால்‌ அப்பரனுக்கு உள்ளத்துகப்பால்‌ முகத்‌ தெளிவுண்டாகிறது. எம்பெருமான்‌ உகப்பைக்‌ கண்டு உகத்தலால்‌ தாயாராகிய உமக்கு முகத்தெளிவும்‌ மகிழ்ச்சியுமேற்படுகிறது –

உமக்கொரு பாதப்‌ பயனாம்‌ உலகோர்‌ செழிப்புறவே
உமக்கொரு பாதிப்‌ பயனாம்‌ சுவர்க துற்றிடுதல்‌
உமக்கொரு முக்கால்‌ பயனாம் தமதியல்பு ஊர் புகுதல்‌
உமக்கொரு முற்றாம் அடியார் குழுவில்‌ உடனிருப்‌பே –53-

உலகவர்‌ செழிப்புறும்‌ செயல்‌ எம்பெருமானுக்கும்‌, தாயாராகிய உமக்கும்‌ காற்பங்கு மகிழ்ச்சியாகிய பயனைத்‌ தருகிறது; ஆன்மாக்கள்‌ சுவர்க்க இன்பம்‌ அடைதலால்‌ உமக்கு அரைப்பங்கு மகிழ்ச்சியாகிய பயன்‌ கிட்டுகிறது; ஆன்மாக்கள்‌ வீட்டுலகம்‌ அடைந்து கைவல்லிய இன்பம்‌ நுகர்தலைக்‌ கண்டு உங்களுக்கு முக்காற்‌ பங்கு மகிழ்ச்சிப்‌ பயன்‌ ஏற்படுகிறது; அடியார்‌ குழாத்தில்‌ நடுவில்‌ நீவிர்‌ இருவரும்‌ இருப்பது உமக்கு நிறை மகிழ்ச்சியாகிய பயனை உண்டாக்குகிறது –

அடியார்‌ குழாங்களைக் காணுதல் வாய்ப்பென்‌ றறிவளித்திர்‌
அடியார்‌ குழாங்களைக் காணும்‌ பெரும்பயன்‌ ஆய்ந்தளித்தீர்
அடியார்‌ குழாத்தின்‌ அகத்துறை பேரின்பம்‌ ஈந்தநீரே
அடியார்‌ அடிசூடும்‌ பேரரசாள நினைப்பிரன்றே–54-

அடியார்‌ குழாங்களைக்‌ காணுதலே உண்மையான செயல்‌ என்ற அறிவைத்‌ தந்துள்ளீர்‌. அதனால்‌ ஏற்படும்‌ பெரும்‌ பயனை அடியேன்‌ பெறுமாறு என்‌ நிலையை ஆராய்ந்தருள்‌ செய்தீர்‌. அடியார்‌ குழாத்துள்‌ அடியேனும்‌ ஒருவனாக அவருடனே இணைந்து தங்கும்‌ வாய்ப்பினை நல்கிய தாங்களே, அடியேன்‌ அடியார்களுடைய திருவடிகளைத்‌ தலையில்‌ சூடி மகிழ்தலாகிய பெரிய அரசாட்சியை அருளுமாறு திருவுள்ளம்‌ பற்ற வேண்டும்‌-

நினைப்பதும்‌ எல்லா உயிர்களும்‌ உய்யுமா நீக்கமின்றி
நினைப்பதும்‌ எம்பிரான்‌ காப்பும்‌ நிகில செயல்நலங்கள்‌
நினைப்பதும்‌ தேவிகள்‌ மற்றவர்‌ நும்போல்‌ நினைவுகொள்ள
நினைப்பதும்‌ செவ்விதான்‌ நீள உபய விபூதியுமே –55-

எல்லா உயிர்களும்‌ எம்பெருமானும்‌ பிராட்டியுமாகிய நும்மை நீங்காமல்‌ பற்றிப்‌ பிறவித்‌ துயரிலிருந்து பிழைத்து வீடு பேறுஅடையுமாறும்‌, எம்பெருமானுடைய காத்தல்‌ செயலோடு ஏனைய செயல்களும்‌ முறையாக நிசுழுமாறும்‌, எம்பெருமானுடைய தேவியருள்‌ ஏனையராகிய மண்மகளும்‌, ஆயர்‌ மடமகளும்‌, நும்மைப்‌ போன்ற நினைவினையே கொள்ளுமாறும்‌, லீலா விபூதியும்‌ நித்திய விபூதியையும்‌ தொடர்ந்து எல்லா நலன்களும்‌ பெறுமாறும்‌ தாயாகிய நீங்களே திருவுள்ளம்‌ பற்றியுள்ளீர்கள் –

விபூதி விபூதிமான்‌ நும்நோக்கில்‌ உள்ளதும்‌ ஓர்பொருளே!
விபூதி விபூதிமான்‌ உந்தம்சீர்‌ சார்பன்றி உள்ளதாமே?
விபூதி விபூதிமான்‌ சீரலர்‌ மேல்மங்கை உம்மதாட்சி
விபூதி விபூதிமான்‌ உந்தம தேர்கடைக்‌ கண்ணதன்றே–56-

அலர்மேல்‌ மங்கையீரே! ஈருலகமும்‌ அவற்றையுடையானும்‌ நும்பார்வை தம்மேல்‌ பதிவதாலேயே ஒப்பற்ற பொருள்களாகின்றன. உம்‌ தொடர்பின்றேல்‌ உலகுகளுக்கும்‌ அவற்றை உடையானுக்கும்‌ நிறை நலம்‌ ஏற்படுமா? உலகுகளும்‌ உம்‌ அன்பிற்கு வசப்பட்ட உடையானும்‌ உம்‌ செல்வங்களாம்‌. எல்லா உலகுகளும்‌ உம்‌ கடைக்கண்‌ நோக்கினை எதிர்நோக்கி உள்ள பொருள்களே –

உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றயி ராணிதன்கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றே மலைமகள் கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றே கலைமகள் கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றதே தாமரையே –57-

உம்‌ கடைக்கண்ணின்‌ அருள்‌ நோக்கத்தின்‌ பல கூறுகளில்‌ ஒரு கூறு தம்மீது பொருந்தியதனால்‌ இந்திராணியும்‌, பார்வதியும்‌, நாமகளும்‌ சிறப்புறுகின்றனர்‌. அங்ஙனமே பெருமானுடைய தாமரைக்‌ கண்களும்‌ வீறுபெற்று விளங்குகின்றன-

தாமரைக்‌ கண்ணன்‌ தகவிலை அன்றே கதிர் முழக்கே
தாமரைக்‌ கையய யம்மேலும்‌ வீடணர்த்‌ தாழ்ததியதே
தாமரைத்‌ தாள்பிறப்‌ பீர்பதாச்‌ சொல்லுதல்‌ சொல்லளவே
தாமரைத்‌ தந்தநும்‌ மொக்கும்‌ உபய விபூதிவேந்தே–58-

எம்பெருமான்‌ தாமரைக்‌ கண்ணனாய்‌ இருக்கும்‌ செயல்‌ உன்னீடில்லாக்‌ கதிர்‌ முழக்குப்‌ போன்ற வெளி அழகு மாத்திரமே. எம்பெருமானுடைய தாமரைக்கை அபய முத்திரை உடையதேனும்‌ அவனைத்‌ தஞ்சமென்றடைந்த விபீஷணாழ்வானை ஐயுறச்‌ செய்தது. எம்பெருமானுடைய தாமரைத்‌ திருவடிகள்‌ அடியாருடைய பிறவிப் பிணியைப்‌ போக்குவன என்ற செய்தி அடியேங்கள்‌ பக்கல்‌ செயற்படுவதாகத்‌ தெரியவில்லை. தாமரையில்‌ தோன்றிய தாயாராகிய தங்களை ஈருலக வேந்தனாகிய எம்பெருமானும்‌ ஒப்பானோ-

வேந்தர்‌ தலைவன்‌ தயரதன்‌ மேலாம்‌ மருகிமானீர்‌
வேந்தர்‌ தலைவன்‌ சனகன்‌ விரும்பும்‌ திருமகள் நீர்‌
வேந்தர்‌ தலைவன்‌ இராமன்‌ வியத்தகு தேவியானீர்‌
வேந்தர்‌ தலைக்கடை வேசரி நாசமாக்‌ கண்டீர்‌ நீரே–59-

அரசர்‌ தலைவர்களாகிய தயரதற்கும்‌ சனகர்க்கும்‌, இராமபிரானுக்கும்‌ முறையே மருமகளும்‌, விரும்பி வளர்த்த செல்வமகளும்‌, வியத்தகு தேவியுமாகிய தாங்கள்‌, அரசருள்‌ கடைப்பட்ட கோவேறு கழுதை போன்ற இராவணனைப்‌ பூண்டோடு அழியுமாறு செய்தீர் –

நீரே பரம புருடன்‌ புருடனா நிரணமிப்பீர்‌
நீரே உயிர்கள்‌ உடையான்‌ அணையுமா நேர்ந்திடுவீர்‌
நீரே அடியான்‌ பணியவன்‌ உள்ளம்‌ நிலைக்கவைப்பீர்‌
நீரே இவன் செயும்‌ தொண்டை நினைத்து மகிழவைப்பீர்‌–60-

நீரே எம்பெருமானைக்‌ கணவனாகத்‌ தேர்ந்தெடுத்தீர்‌. நீரே ஆன்மாக்களை எம்பெருமான்‌ தன்னோடு பொருந்துமாறு ஏற்றுக்‌ கொள்ளுதற்குரிய பரிவுரை கூறிச்‌ சேர்த்து வைப்பீர்‌. நீரே அடியவன்‌ செய்யும்‌ திருத்‌ தொண்டினை எம்பெருமான்‌ உகந்தருளுமாறு அவன்‌ உள்ளத்தில்‌ நிலைபெறச்‌ செய்வீர்‌. நீரே அடியவன்‌ செய்யும்‌ தொண்டுகளை நினைத்து எம்பெருமான்‌ மகிழுமாறு செய்வீர் –

மகிழ்வீர்‌ மணாளன்‌ படைத்ததைக்‌ காத்திவை யீர்ப்பிதனை
மகிழ்வீர்‌ மணாளன்‌ சராசரம்‌ பந்தென ஆடுசெயல்‌
மகிழ்வீர்‌ மணாளன்‌ உலகம்‌ முறையுடன்‌ பாலடைதல்‌
மகிழ்வீர்‌ மணாளன்‌ வனமாலை சேர்திரு மார்பினையே–61-

நீரே உங்கள்‌ மணாளனாகிய எம்பெருமான்‌ உலகைப்‌ படைத்துக்‌ காத்து ஊழிக் காலத்தில்‌ அவற்றை வயிற்றினிட்டு மறைப்பதனையும்‌, இவ்வுலகத்து உயிர்களை அவன்‌ பந்து போல ஆட்டுவித்தலையும்‌, உலகத்துயிர்கள்‌ தத்தம்‌ பக்குவத்திற்கு ஏற்ப முன்னோ பின்னோ அவன்பால்‌ அடைதலையும்‌ கண்டு, மகிழ்தலோடு எம்பெருமானுடைய வனமாலை அணிந்துள்ள மார்பினை உங்கள்‌ இருப்பிடமாகக்‌ கொண்டு மகிழ்வீர் —

மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ மல்கிய வெண்மை முதலுகத்தும்‌
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ நீர்கொளும்‌ செம்மை மறுயுகத்தும்
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ மல்கிய சாமளம்‌ மூன்றினிலும்‌
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ கொள்‌ளுவான்‌ மாநிறம்‌ நான்கினி்‌லே -62-

அலர்மேல்‌ மங்கையீர்‌! நீர்‌ எம்பெருமான்‌ திருமார்பினை விடுத்துத்‌ தனியே ஊஞ்சலில்‌ ஆடும்‌ போது கொள்ளும்‌ வெண்ணிறத்தைக்‌ கிருத யுகத்தும்‌, பின்‌ ஒருகால்‌ செம்மை நிறத்தைத்‌ திரேதா யுகத்தும்‌, மீண்டும்‌ ஒருகால்‌ கொள்ளும்‌ நீல நிறத்தைத்‌ துவாபர யுகத்தும்‌, மறுபடியும்‌ ஊழியாகிய கலியுகத்தும்‌ எம்பெருமான்‌ கரு நிறமும் முறையே தனக்குரிய நிறங்களாக்‌ கொண்டுள்ளான்-

நான்கெனும்‌ வேதம்‌ நவில்வநுங்‌ கீர்த்தியே நானிலத்தே
நான்கெனுந்‌ தோளால்‌ நலனுற சார்வதே நாரணனாம்‌
நான்கெனுந்‌ தாளால்‌ நடையறம்‌ பெற்ற நுமதுநோக்கின்‌
நான்கெனும்‌ மார்க்கம் நலமிகு மார்க்கம் செலுத்துவீரே –63-

தாயீர்‌! நான்கு வேதங்களும்‌ கூறுவன இறைவன்‌ புகழே-நாரணனாகிய எம்பெருமான்‌ தன்‌ நான்கு தோள்களாலும்‌ மகிழ்வுறத்‌ தழுவவது உம்மையே- உம் பார்வையாலேயே அறம்‌ என்னும்‌ பசு நான்கு கால்களால்‌ நடக்கிறது-கர்ப்பம்‌, யாம்யம்‌, தூமம்‌, அர்ச்சிராதிகதி என்ற நான்கு கதிகளுள்‌ நன்மை மிக்க அர்ச்சிராதிகதி மார்க்கத்தில்‌ உம்‌ அடியார்களை எம்பெருமானைக் கொண்டு செலுத்துவீராக —

செலுத்தும்‌ வினைகளைத்‌ தீய்ந்திடச்‌ செய்யும்‌ உமதருளை
செலுத்தும்‌ படைப்புப்‌ பதம்பெறு வானுறும்‌ சீரருளே
செலுத்தும்‌ சதமகன்‌ மூவுல காட்சி நும்சீரருளே
செலுத்துநும்‌ நேர்மைசால்‌ சீர்மை உபய விபூதிமனே –64-

துயரத்தில்‌ செலுத்தும்‌ கரும பயன்களை உமது அருள்‌ அழித்து ஒழிக்கும்‌. பிரமன்‌ படைப்புத் தொழில்‌ செய்வதும்‌, இந்திரன்‌ மூவுலகம்‌ ஆளுவதும்‌, எம்பெருமான்‌ தன்‌ இரு செல்வங்களாகிய உலகங்களை ஆட்சி செய்வதும்‌ நும்‌ இச்சையின்‌ பொருட்டே –

விபூதி பெறுமே விலகி நும்‌ பார்வை தனதனேலும்
விபூதி நும் கூட்டின்றி வில்வமே யாயின்‌ விளைவதுண்டே?
விபூதிசால்‌ இந்திர போகம்‌ விளையுமே? வாசவற்கும்‌
விபூதி விளைக்கும்‌ அருளன்றி உண்டே? எவர் தமக்கே–65-

நும்‌ அருட்பார்வை விலகின்‌ செல்வத்துக்கு உரிய குபேரனும்‌ செல்வத்தைப்பெறுதல்‌ இயலுமா? வில்வத்தினால்‌ கூட உம்‌ தொடர்பில்லையேல்‌ செல்வம்‌ விளைத்தல்‌ இயலுமா? உம்‌ அருளினாலேயே இந்திரனுக்கும்‌ செல்வம்‌ மிக்க தேவ இன்பம்‌ விளைகிறது. செல்வத்தை நல்கும்‌ உம்‌ அருளன்றி ஒருவருக்கும்‌ எவ்வகைச்‌ செல்வமும்‌ கிட்டாது —

தன்னலம்‌ நீத்துப்‌ பிறர் நலம்‌ பேணுமித்‌ தாயினம்யார் ?
தன்னலத்‌ தாழ்வில்‌ தரிக்கிலர்‌ மூவராந்‌ தேவதேவர்‌
தன்னலத்‌ தாழ்விலர்‌ முப்பத்து முக்கோடி தேவர்தாமும்‌
தன்னலம்‌ நீத்தல்‌ உபய விபூதிக்கும்‌ தாயதாலே–66-

மூம் மூர்த்திகளும்‌ தன்னலம்‌ குறைந்தால்‌ அமைதி யுற மாட்டார்கள்‌-முப்பத்து மூவருடைய வரிசையில்‌ சேர்ந்த தேவர்களும்‌, தன்னலம்‌ தாழ்வதைப்‌ பொறுக்க மாட்டார்கள்‌. தன்னலத்தை விடுத்துப் பிறர்‌ நலத்துக்காகவே வாழும்‌ தாய்க் குலம்‌ உம்‌ அம்சமே. நீர்‌ ஈருலகங்களுக்கும்‌ தாயராக இருப்பதால்‌ தன்னலம்‌ நீத்துச்‌ செயல்‌ புரிகிறீர் —

தாயெனக்‌ கோடல்‌ சசியும்‌ உமையும்‌ கலைமகளும்‌
தாயெனச்‌ சித்திதே வானை பிடாரி குறமகளும்‌
தாயெனப்‌ பத்தினித்‌ தெய்வ மாச்சாற்றும்‌ மகளிரெல்லாம்‌
தாயெனும்‌ நீயெனும்‌ பொருளன்றி மற்றைத்‌ தகவுளதே–67-

உலகவர்‌ தாய்மார்‌ என்று போற்றும்‌ இந்திராணியும்‌, உமா தேவியும்‌, கலை மகளும்‌, சித்தி தேவியும்‌, தெய்வானை அம்மையாரும்‌. பிடாரியும்‌, வள்ளியும்‌, தாயார் என்று போற்றப்படும்‌ பத்தினிப்‌ பெண்டிரும்‌ உம்மைப்‌ போன்ற தாயாவார்களா? ஈருலகிற்கும்‌ தாயெனப்படும்‌ உன்னுடைய அம்சமே என்று கூறுவதைத்‌ தவிர வேறு பொருளுடைய சொற்றொடர்‌ உள்ளதோ?-

உளதே? கருணை சால்‌ சீலம்‌ உமதிரு பாலதன்றி
உளதே? உலகவர்‌ தாய்தந்தை மற்றுள உற்ற சுற்றம்‌
உளதே? அணுவும்‌ விபுவுமாய ஒன்றிலும்‌ நீக்கமின்மை
உளதே? உபாயமும்‌ பேறாம்‌ உயர்வுறு மிக்க பண்பே –68-

பெருமானும்‌ நீருமாகிய இருவர்‌ பக்கத்தலன்‌றி வேற்றுத்‌ தெய்வங்கள்‌ பால்‌ கருணையும்‌ அதற்கேற்ற செயலும்‌ உளவோ? மற்ற தெய்வங்கள்‌ உங்கள்‌ இருவரைப்‌ போல்‌ உலக மக்களுக்குப்‌ பெற்றோரும்‌ சுற்றமும்‌ ஆவாரோ? நீரும்‌ எம்பெருமானும்‌ அணுவும்‌ விபவுமாய்‌ இருந்து உடல் மிசை உயிர்‌ எனக் கலந்து பரந்திருக்கும்‌ செயல்‌, மற்ற தெய்வங்கள்‌ பால்‌ உண்டோ? வீட்டிற்கு நிமித்தப்‌ பொருளான உபாயமும்‌ உபயே யமுமாக இருக்கும்‌ உயர் தன்மை உங்கள்‌ இருவர் பால்‌ அன்றி மற்ற தெய்வங்கள்‌ பக்கம்‌ உள்ளதோ?

பண்பிவை நுந்தம்‌ பரனுக்‌ கடிமை பிறிதிலின்மை
பண்பிவை நுந்தம்‌ பரனருட்‌ சார்பன்றி சார்பிலதாம்‌
பண்பிவை நுந்தம்‌ பரனுகப்‌ பின்முகம்‌ பூப்பதுவே
பண்பிவை நீழல்‌ பரன்சார்‌ புளதில தோர் வழக்கே–69-

எம்பெருமானுக்கே அடிமையா யிருத்தலன்‌றிப் பிற தெய்வங்களுக்கு அடிமையா யிருக்கும்‌ பண்பு நும்மிடம்‌ இல்லை. எம்பெருமான்‌ அருளைச்‌ சார்தலன்றிப்‌ பிற சாதனங்களைப்‌ பின்பற்றாமை நும்‌ பண்பாகும்‌. எம்பெருமான்‌ உகப்பிணைக்கண்டு உகத்தலே நும்‌ பண்பு-எம்பெருமானுடைய நிழலாக அவனைப்‌ பிரியாது இருப்பதும்‌ நும்‌ பண்பு. இப் பண்புகள்‌ எம்பெருமான்‌ சார்பு உளதேல்‌ நும் பால்‌ உண்டு. இலதேல்‌ நம்பால்‌ இல்லை- எனவே, நீர்‌ என்றும்‌ எம்பெருமானைப்‌ பிரியாது இருக்கின்றீர் –

வழக்கோ நன்‌ மக்கள் பால்‌ தீர்ந்து புன்‌ மக்கள்பால்‌ சார்வதுவே
வழக்கோ? சிறைக்கண்யம் தேவ மகளிர் சிறை கழிப்பீர்
வழக்கோ? மண் மாதர்‌ சிறை எமைத் தீர்ப்பதை பார்த்திருப்பீர்‌
வழக்கோ? படு துயர் யாம் கண்டு கத்தல் மணாளனோடே –70-

தாயாராகிய தாங்கள்‌ நன் மக்கள்‌ பக்கலினின்று நீங்கிப்‌ புன் மக்கள் பக்கல்‌ சேர்வது முறையோ? அடியவராகிய நாங்கள்‌ பிறவிச்‌ சிறையில்‌ கிடக்கவும் சிறைப்பட்டுத் தேவ மகளிரைத் தாங்கள் சிறைவீடு செய்தமை முறையோ – பூ மடந்தை கோதை நாச்சியராக அவதரித்து எமக்கு மெய்யுணர்வு அளித்து எம்மைப்‌ பிறவிச் சிறையிலிருந்து விடு விப்பதனை நீங்கள்‌ பார்த்துள்ளீர்கள்‌. நாங்கள்‌ படுந்துயரைக் கண்டும்‌ அதனைப்‌ போக்க முயலாது தங்கள்‌ மணாளனாகிய எம்பெருமானுடன்‌ தாங்கள்‌ உகந்திருப்பது முறையோ

ஓடுங்‌ கறங்கன்ன ஊழ்வினைச்‌ சூழலில்‌ ஒத்திருப்போம்‌
ஓடுங்‌ கறங்கின்‌ உலகியல்‌ ஒன்றின்பின்‌ ஒன்றுறுவ
ஒடுங்‌ கறங்கின்‌ இறை நெறி ஆம்பரிசு ஊர்ந்தலைப்ப
ஓடுங்‌ கறங்கிவை வீடுசெய்‌ யுந்தங்கண்‌ நோக்கிலதே–71-

உம்முடைய கடைக்கண்‌ நோக்கம்‌ எம்மேல்‌ பதியாததால்‌ முன்செய்த வினைகளால்‌ காற்றாடிபோலச்‌ சுழற்றப்படுகிறோம்‌. உலகியல்‌ வாழ்வும்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாக எங்களைச்‌ சுழலச்‌ செய்கின்றன, பல தெய்வங்களையும்‌ வழிபடும்‌ ஆராதனைகள்‌, நெறிமுறைகள்‌ போல்வன எம்மை அணுகி சுழல்விக்கின்றன. இச் சுழற்சி களிலிருந்து எங்களை விடுவிக்கத்‌ தங்களாலேயே இயலும் –

நோக்கில தாயிடின்‌ உள்ளதோர்‌ நுண்ணறிவு யார்க்குளதாம்‌?
நோக்கில தாயின்‌ நுவலுமி யாவும்‌ நிலை பெறுமே?
நோக்கில தாயின்‌ நுவல்படைப்‌ பீர்ப்பதும்‌ ஆமதுவே?
நோக்கில தாயின்‌ உகந்தருள்‌ நோன்தலம்‌ புல்லெழுமே–72-

உங்களுடைய அருள் நோக்கு இல்லையேல்‌ ஒருவருக்கும்‌ மெய் உணர்வு ஏற்படாது. எம்பெருமானுடைய உடைமைகளாகிய இயங்கியற் பொருள்ளும்‌ நிலையியற்‌ பொருளும்‌ நிலையாக இருக்கமாட்டா. எம்பெருமானுடைய படைத்தல்‌, காத்தல்‌, முதலிய செயல்களும்‌ முறையாக நிகழா? எம்பெருமாள்‌ உகந்தருகின்ற திருப்பதிகள்‌ யாவும்‌ தரிசிப்பார் இன்மையால்‌ புல்‌ தோன்றி வளரும்‌ பாழிடங்கள்‌ ஆகும் –

புல்லெழும்‌ நும்சார்‌ பிலதென்ன புண்ணிய நோன்பிடங்கள்‌
புல்லெழும்‌ புண்ணிய கேத்திரம்‌ புண்ணிய தீர்த்தங்களும்‌
புல்லெழும்‌ முத்தி தருமென போற்று நும்‌ ஏழ்தலமும்‌
புல்லெழும்‌ வேங்கடம்‌ சோலை நல்‌ வான மலையதுவே–73–

நும்‌ தொடர்பு இல்லை யெனின்‌ அறச் செயல்கள்‌ செய்வதற்கு ஏற்றன என்று போற்றப்படும்‌ புண்ணிய பூமிகளும்‌, புண்ணிய திருத் தலங்களும்‌,புண்ணிய தீர்த்தங்களும்‌, முத்தி தரும்‌ திருப்பதிகளாகிய அவந்தி அத்தினாபுரி, துவாரகை முதலியனவும்‌, எம்பெருமான்‌ உகந்தருளி யிருக்கும் வேங்கடமலை, வானமாமலை முதலியனவும்‌, பயன்‌ கொள்ளும்‌ அடியவருடைய வருகை இன்மையால்‌ பாழ் பட்டுவிடும்

மலையுமால்‌ நெஞ்சும்‌ பொறியும்‌ புலனொடு மாறி மாறி
மலையுமால்‌ முன்முன்‌ வினையும்‌ சுவையொடு வாசனையும்‌
மலையுமால்‌ தாபக்‌ கனலும்‌ மறித்து வரு பிறப்பும்‌
மலையுமால்‌ ஈங்கிதின்‌ வைத்திருப்‌ பான்றனைக்‌ கேட்கிலீரே–74–

இவ் வுலக வாழ்க்கையில்‌, நும்‌ அடியார்களை நெஞ்சமும்‌ அறிவும்‌ பொறியும்‌ புலன்‌ நுகர்ச்சியும்‌ செயற்‌ பொறிகளும்‌ தனித்தும்‌ கிளர்ந்தும்‌ நலியும்‌. பண்டைய வினைகளும்‌ அவற்றின்‌ வழிவரும்‌ சுவைகளும்‌ அவற்றின்‌ சுவடுகளும்‌ நலிகின்றன. ஆதியாத்மிகம்‌, ஆதிதைவிகம்‌, ஆதிபெளதிகம்‌ என்று கூறப்படும்‌ இடுக்கண் தரும்‌ மூவகைத்‌ தீக்களும்‌, மாறிமாறித்‌ தோன்றும்‌ பிறவிப்‌ பிணியும்‌ நலிவுறுத்துகின்றன. அடியார்கள்‌ படும்‌ இத் துயர்களை இம் மண்ணுலகில்‌ அவர்களை வைத்து வருந்தச்‌ செய்யும்‌ செயல்‌ பற்றித்‌ தாங்கள்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ வினவ மாட்டீர்களா –

கேட்கிலீர்‌ ஆய்பாடி வெண்ணை கவர்ந்துண்ணும்‌ கேவலத்தை
கேட்கிலிர்‌ முன்பகை வாய் வந்த கேட்டவன்‌ மேனிகொண்டான்‌
கேட்கிலீர்‌ பாஞ்சாலி மூர்க்கர்‌ கிளரவைக்‌ கூக்குரலைக்‌
கேட்கிலீர்‌ நீருமே பல்லூழி யான்படுங்‌ கேடிதையே–75-

எம்பெருமான்‌ ஆயர்பாடியில்‌ வெண்ணையைக்‌ களவினால்‌ உண்ணலாகிய இழி செயல்‌ செய்தான்‌. தன்‌ கண் முன்‌ பகைவனாய்‌ வந்து தன்னோடு பொருது உயிர் நீத்த சிசுபாலனுக்குத்‌ தன்‌ திருவடிமில்‌ இடம்‌ அளித்தான்‌. அரசவையில்‌ பாஞ்சாலியைக்‌ கெளரவரும்‌ அவரைச்‌ சேர்ந்தவர்களும்‌ பழித்துப்‌ பேசினர்‌. இவற்றைக்‌ குறித்து எந்த வினாவும்‌ எழுப்பாத தாங்கள்‌, பல ஊழிக் காலமாக அடியேன்‌ அனுபவிக்கும்‌ கேடுகளையும்‌ பற்றி வினவாதிருப்பதில்‌ வியப்பு ஒன்றும் இல்லை –

கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ பிணைதலும்‌ கேழிலதே
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ உளத்துக்‌ கிளருமருள்‌
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ வடமறை நேருமொழி
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ உபதேசக்‌ கேள்வியதே–76-

எம்பெருமானும்‌ நீங்களும்‌ சேர்ந்திருக்கும்‌ சேர்த்தியும்‌ உங்கள்‌ உள்ளத்தில்‌ மேன்‌ மேலும்‌ பெருகும்‌ அருளும்‌, வேதத்தை ஒத்து இனிய நும்‌ மொழிகளும்‌, இரக்கத்தால்‌ நீங்கள்‌ பிறருக்கு வழங்கும்‌ நல்லுரைகளும்‌ என்றும்‌ அழிவில்லாத பெரும்‌ புகழுக்கு உரியனவாம் –

கேள்விகொள்‌ வீர்நும கேள்வி யவன்கொள வையமுய்யும்‌
கேள்விகொண்‌ டானலன்‌ கேடுவுந்‌ துற்றதால்‌ கெட்டொழிந்தான்‌
கேள்விகொள்‌ வீரே சிறைப்பட்ட ரக்கியர்கே ழில்நிந்தை
கேள்விகொள்‌ வீர்பிற மாதர்தம்‌ கேடு தவிர்ப்பதற்கே–77-

அடியார்களுடைய குறைகளைச்‌ செவி மடுக்கும்‌ தாங்கள்‌ எம்பெருமானுக்கு அவற்றைத்‌ தெரிவிப்பதனால்‌ உலகவராம்‌ அவர்கள்‌ ‘நன்மை அடைகிறார்கள்‌. தங்கள்‌ சொற்களைக்‌ கேளாததனால்‌ கேடுகளை அடைந்து இராவணன்‌ அடியோடு அழிந்தான்‌. சிறையிலிருந்து அரக்கியர்‌ கூறிய கடஞ்சொற்களைத்‌ தாங்கள்‌ செவி மடுத்தீர்கள்‌. ஏனைய தேவ மாதர் தம்‌ சிறையைத்‌ தவிர்ப்பதற்கே தாங்கள்‌ அவ் வரக்கியர்‌ கூற்றைப்‌ பொறுமையோடு செவி மடுத்தீர் —

தவிர்ப்பதும்‌ எம்பிரான்‌ சேதநர்த்‌ தள்ளும்‌ சுதந்திரத்தைத்‌
தவிர்ப்பதும்‌ சேதனர்‌ தம்பிழைக்‌ கண்டு நடுங்குமதைத்‌
தவிர்ப்பதும்‌ தம்ம தியல்பின்‌ முரண்பிறர்‌ சொல்லுமதைத்‌
தவிர்ப்பதும்‌ சார்வார்‌ மிதுநத்‌ திருப்பின்‌ தமபிறப்பே–78

பிராட்டியாரே! ஆன்மாக்களைப்‌ புறக்கணிக்கும்‌ எம்பெருமானுடைய சுதந்திரத்தைத்‌ தாங்களே பரிந்துரை கூறி நீக்குகிறீர்‌. ஆன்மாக்கள்‌ தம்‌ பிழைகளை நினைத்து நடுங்குவதைத்‌ தாங்கள்‌ கருணையால்‌ போக்குகிறீர்‌. ஆன்மாவின்‌ இயல்புக்கு மாறாகப்‌ பிறர்‌ பேசுவதைப்‌ போக்குவீரும்‌ நீர்‌. எம்பெருமானும்‌ நீரும்‌ இருக்கும்‌ இருப்பினைச்‌ சரணாகச்‌ சார்பவர்‌ தம்‌ பிறவியைப்‌ போக்குபவரும்‌ நீரே-

பிறப்பதற்‌ கோர்வினைக்‌ கட்டில்லை என்றும்‌ பிறந்தருள்வீர்‌
பிறப்பதற்‌ கும்மொரு தாய்தந்தை யில்லை பிறந்தருள்வீர்‌
பிறப்பது தாமரையாம்‌ பெற்றிக்கோ ருறுப்புமில்லை
பிறப்புத்‌ தவிரா(து) அவன்பிறப்‌ பொக்கப்‌ பிறக்குமதே–79-

உலகில்‌ பிறப்பதற்குரியதொரு வினையின்‌ தொடர்பு இல்லாமலேயே நீங்கள்‌ உலகில்‌ பிறப்பெடுக்கிறீர்கள்‌. தாய்‌ தந்தையர்‌ இல்லாமலே இயல்பாலேயே நீங்கள்‌ பிறவி எடுக்கிறீர்‌. தாங்கள்‌ பிறப்பிடமாகிய தாமரைக்குத்‌ தங்களைப்‌ பிறக்கச்‌ செய்யும்‌ உறுப்பு எதுவும்‌ இல்லை.
எம்பெருமான்‌ உலகில்‌ பிறவி எடுக்குந்‌ தோறும்‌ அவனுக்கு ஏற்க நீங்களும்‌ பிறவி எடுக்கின்றீர்‌-

பிறப்பதோ பெம்மான்‌ சுரர்குலம்‌ தாமும்‌ சுரர்குலமே
பிறப்பதோ பெம்மான்‌ மனிதனே தாழும்‌ மனிதகுலம்‌
பிறப்பதோ பெம்மான்‌ விலங்கது தாமும்‌ விலங்கினமே
பிறப்பதோ பெம்மான் தான்‌ தாவரம்‌ தாமுமோர்‌ தாவரமே ! –80–

பெருமான்‌ தேவனாகப்‌ பிறப்பின்‌ நீங்களும்‌ தேவியாகவும்‌,மனிதனாகப்‌ பிறப்பின்‌ பெண்மகளாகவும்‌, விலங்காகப்‌ பிறப்பின்‌ மறைந்து நின்‌று பெண்‌ விலங்காகவும்‌, தாவரமாகப்‌ பிறப்பின்‌ நீங்களும்‌ மறைந்து நின்று தாவரமாகவும்‌ பிறப்பெடுக்கின்றீர்‌. நும்‌ இணை பிரியாமை இருக்குமாறு என்னே? என்பது குறிப்பெச்சம் –

தாவி லருங்கலை நும்மருள்‌ கூட்டின்‌ தகவுடைத்தாம்‌
தாவி லருங்கலைக்‌ கற்றோன்‌ கதிரோன்முன்‌ சாயிழந்தான்‌
தாவி லருங்கலைக்‌ சாற்றற்‌(கு) அரியவன்‌ நும் வயமே
தாவி லருங்கலைக்‌ முற்றும்‌ இயல்பி னறி வரிதே? –81-

வருத்தமில்லாத அரிய கலைகள்‌ நும்‌ அருளொடு கூடியே பெருமை பெறுகின்றன. நீங்குதலில்லாத அரிய கலைகளைச்‌ ஸூரியனை அடுத்துச்‌ கற்ற அனுமனும்‌ நும்‌ சொற்களால்‌ தன்‌ எண்ணத்தைக்‌ கை விட்டு நும்மைச்‌ சூழ்ந்த அரக்கியரை நலியாது விடுத்தான்‌. நீங்குதலில்லாத பல கலைகளாலும்‌ உள்ளவாறு அறிய முடியாத எம்பெருமானும்‌ நுமக்கு வசப்பட்டவனே. நீங்குதலில்லாத அரிய கலைகளும்‌ உம்மை உள்ளவாறு அறிதல்‌ இயலாது–

அறிவி தேயலர்‌ மேல்மங்கை நுந்தரத்‌ தாயிரத்தொன்‌(று)
அறிவரி தேயயன்‌ நெற்றியில்‌ அங்கணன்‌ இந்திரனும்‌
அறிவரி தேஅயன்‌ தேவி அயிராணி பார்வதியும்‌
அரிவரி தேயுடன்‌ தேவியர்‌ நீரும்‌ அமலனுமே–82-

அன்னையார்‌! நும்‌ தகுதியின்‌ ஆயிரத்திலொரு கூறு கூட மற்றவர்‌ அறிதல்‌ இயலாது. பிரமன்‌, சிவன்‌, இந்திரன்‌ என்ற பெருந்தேவரும்‌ அவர் தேவியராகிய நா மகள்‌, பார்வதி, இந்திராணி என்பவரும்‌ கூட நும்‌ தகுதியை உள்ளவாறு அறிதல்‌ இயலாது. மற்றவரைக்‌ கூறுதல்‌ ஏன்‌? உம்முடன்‌ இருக்கும்‌ நில மடந்தையும்‌, ஆயர் குல மடந்தையும்‌ நீரும்‌ எம்பெருமானும் கூட நும்‌ பெருமையை அறிதல்‌ அருமையாகும் –

அமலன்‌ அமுதங்‌ கடைந்தான்‌ பிறர்க்கென்‌ றுமை யடைந்தான்‌
அமலன்‌ அனைத்தும்‌ இயக்கற்‌ குரியன்‌ நினைவினாலே
அமலன்‌ அனைத்தும்‌ தனதா உடையான்‌ இயல்புறவே
அமலன்‌ உடையன்‌ செயலன்‌ உமதவன்‌ மார்பி௫ப்பே –83-

களங்கமற்ற எம்பெருமான்‌ பிறருக்கு அமுதம்‌ கடைந்து கொடுப்பதான பொய்க் காரணம்‌ காட்டிக் கடல்‌ கடைந்த செய்கை உலகத்துக்‌ தாயாராகிய உம்மைப்‌ பெறவே, எல்லா உலகப்‌ பொருள்களையும்‌ ஆட்டுவிக்கும்‌ செயலையும்‌ யாவற்றையும்‌ தன்னை உடைமையாகப்‌ பெற்றிருக்கும்‌ சிறப்பினையும்‌ உடையவனாய்‌, அனனத்தையும்‌ உடையவனாகவும்‌ ஆள்பவனாகவும்‌ சிறந்து விளங்குகிறான்‌. இதற்குக்‌ காரணம்‌, நீர்‌ அவன்‌ மார்பிலிருந்து உற்சாகப் படுத்து வதலாலேயே –

இருப்ப திறையும்‌ பிரிவிலை மேன்மை பிரிவிலையே
இருப்பதும்‌ வில்வத்‌ திரிணியக்‌ கூட்டினும்‌ சேமமுற
இருப்பதும்‌ ஐயந்‌ திரிபறத்‌ தேர்ந்த தெளிவுணர்வின்‌
இருப்பதும்‌ மெய்யடி யார் தம்‌ குழுவில்‌ இறையுடனே–84-

ஒரு கண நேரமும்‌ பிரிவினை மேற் கொள்ளாது எம்பெருமான்‌ திரு மார்பில்‌ இருக்கும்‌ மேம்பட்ட நிலையை உடைய நீர்‌ பொற் குவியலிலும்‌ வில்வத்திலும்‌, ஐய உணர்வும்‌ திரிபுணர்வும்‌ நீங்குதலால்‌ தெளிவுடைய அடியாருடைய மெய்யுணர்வில்‌ வீற்றிருப்பதும்‌, மெய்யடியார்‌ குழுவில்‌ எம்பெருமானோடு தங்கியிருப்பதும்‌ ஆகிய உயரிய செயல்களைச்‌ செய்கின்றீர் —

உடனுறை யானென தென்பதின்‌ உற்ற கொடியதெது?
உடனுறை ஐம்பொறி கோட்புலன்‌ சார்தலின்‌ ஊனமுன்டே?
உடனுறை ஊழ்வினைக்‌ கட்டில்‌ வலிய பிரிப்புமுண்டே?
உடனுறைந்‌ தெம்மான்‌ உறுவன தீர்ப்புறும்‌ வேண்டுகோளே –85-

ஆன்மாக்கள்‌. உடலில்‌ தங்கியிருந்து ‘யான்‌’ என்று அகங்கரிக்கும் அகங்காரத்தை விடக்‌ கொடியது யாது உள்ளது? ஐம்பொறி புலன்களைச்‌ சார்ந்த சிற்றின்ப நுகர்ச்சியின்‌ குறைபாடுகளுடன்‌ கூடியது வேறு உண்டே? முன்‌ செய்த வினைகள்‌ இப் பிறப்பில்‌ நம்மைப்‌ பிணித்து இன்ப துன்பங்களை நுகர்விக்கும்‌ பிணைப்பை விட வலிய பிணைப்பு உளதோ? பெருமானுடன்‌ இருந்து ஆன்மாக்களின்‌ இத் தீமைகளைத்‌ தீர்க்குமாறு வேண்டுவதனையே நும்‌ பண்பாகக்‌ கொண்டுள்ளீர்‌–

வேண்டியார்‌ பாலும்‌ அரக்கியர்‌ தீமையை விள்ளகிலீர்‌
வேண்டிப்‌ பிறந்தகம்‌ புக்ககம்‌ விட்டோர்‌ கணம் விரும்பீர்
வேண்டி முயலீர்‌ சிறையிருள்‌ தீயின்‌ விடுதலையை
வேண்டிடில் எம்மான் அடைந்தவர் ஏற்குமா வேட்கையிதே –86-

அசோக வனத்தில்‌ அரக்கியர்‌ நுமக்கு இழைத்த கொடுமைகளை நும்‌ நெருங்கிய உறவினரிடத்தும்‌ நீர்‌ தெரிவிக்க வில்லை. புக்ககத்தை விடுத்துப்‌ பிறந்தகம்‌ சென்று வர ஒரு கணமும்‌ நீர்‌ விரும்பினீர்‌ அல்லீர்‌. தீயினும்‌ கொடிய சிறையினின்றும்‌ நும்‌ முயற்சியால்‌ விடுதலை பெற நீர்‌ முயன்றீர்‌ அல்லீர்‌. எம்பெருமானைச்‌ சரணம்‌ அடைந்த அடியவர்களை ஏற்குமாறு கொள்ளும்‌ விருப்பத்தையே நீர்‌ வேண்டி நிற்கிறீர் —

வேட்கை பரன்பால்‌ அடியான்‌ விரும்பி அடைந்திடவே
வேட்கை பிரியில்‌ அடியார்க்‌(கு) அனர்த்தம்‌ விளையுமென்றே
வேட்கை யிருளுமிஞ்‌ ஞாலம்‌ தெருளும்‌ விசும்புறவே
வேட்கை திரு மா மணி மண்டபம் என்னும் வேங்கடமே –87–

அடியவன்‌ எம்பெருமானை விரும்பிச்‌ சரண்புகும்‌ செயலொன்றே நும்‌ வேட்கையாகும்‌. அத்தகைய வேட்கையை நீர்‌ நீத்துவிட்டால்‌ அடியவருக்குத்‌ தீங்கே விளையும்‌. இவ்விருள்‌ தருமாஞாலமாகிய நிலவுலகைப்‌ பரமபதமொத்த துன்பக்‌ கலப்பில்லா இன்ப மயமாக்குவதே உம்முடைய ஆசை. நீர்‌ உகந்தருளி யிருக்க விரும்புமிடம்‌ நில வுலக வைகுந்தத்‌ திரு மா மணி மண்டபமாகிய திருவேங்கட மலையே —

வேங்கடம்‌ வேங்கட மேவாய்‌ வெருவி இருந்திடுவீர்‌
வேங்கடம்‌ கீழிருந்‌ தன்புப தேசம்‌ விரித்துரைப்பீர்‌
வேங்கட மார்பகம்‌ நீங்கா விழைந்தே அபயமீவீர்‌
வேங்கடற்‌ குற்றதோர்‌ தொண்டொன்று பத்தா விரிப்பது–88-

நீர்‌ பரகால நாயகியை ஆவேசித்து! வேங்கடமே! வேங்கடமே! என்று விருப்பத்தோடு பல நாளும்‌ தன்னை மறந்து கூப்பிடச்‌ செய்தீர்‌. வேங்கட மலையின்‌ கீழிருந்தவாறே எம்பெருமானுக்குச்‌ சேதனர்‌ பக்கல்‌ அன்பு காட்டுமாறு உபதேசிக்கின்றீர்‌. வேங்கடத்தான்‌ மார்பினைப்‌ பிரியாமலிருந்தே அடியார்க்கு அஞ்சற்க! என்ற அருளுரை வழங்குகின்றீர்‌. குறை காணாது அடியாரை ஏற்றுக்‌ கொள்ளுமாறு எம்பெருமானிடம்‌ பரிந்துரை கூறும்‌ திருப் பணியை அடியவர்‌ உய்வதற்கே விரிவாகச்‌ செய்கின்றீர் –

விரியத்‌ தமர்செய்‌ வினைதான்‌ கழிவ தவனருளால்‌
விரியு மியல்பாழ்‌ வினைநீங்க ஒங்க நிகரில்சீர்‌
விரியத்‌ தமா்பால்‌ குறைகாணான்‌ மேன்மேல்‌ அருளுமவன்‌
விரியுஞ்‌ செயலுகப்‌ பீரலர்‌ மேல்மங்கை உம் மியல்பே–89-

அலர்மேல்‌ மங்கையீர்‌! அடியார்கள்‌ மிகுதியாகச்‌ செய்யும்‌ வினைகள்‌ யாவும்‌ எம்பெருமான்‌ அருளால்‌ நீங்கற்பாலன. அப் பெருமானிடத்தில்‌ தவறு கண்டு புறக் கணிக்கும்‌ சுதந்திர உணர்வு நீங்கவும்‌, தவறுகளையும்‌ உகக்கும்‌ ஒப்பற்ற புகழுடைய தூயன்பு அவன் பால்‌ தழைக்கவும்‌, அவன்‌ அடியார்களிடத்துக்‌ குறை காணாது அவர்களுக்கு விரிவாக அருள் புரியும்‌ மேம்பட்ட செயலுக்காக அடியவர்‌ திறத்தப்‌ பரிந்துரை கூறுவது உம்‌ பணபாகும் –

இயல்பீ திருவரைக்‌ காணும்‌ மறைப்பது மெய்யுணர்வை
இயல்பிது முக் குணத் தேய்ந்து மயக்கம் விளைக்குமதாம்‌
இயல்பீ திருவினை பாசப்‌ பிணக்கின்‌ இயக்குமிதே
இயல்பீ திறையுடன்‌ சார்ந்திவை முற்று மகற்றுவீரே–90-

எம்பெருமானும்‌ நீருமாகிய இருவரையும்‌ மனத்தால்‌ காணும்‌ உண்மை யறிவை மறைப்பது இவ் வுடம்பின்‌ இயல்பாகும்‌. காமம்‌, வெகுளி, மயக்கம்‌ என்ற முப் பண்புகளுடன்‌ பொருந்தி மெய்ப் பொருளை உள்ளவாறு அறிய முடியாதபடி மறைத்து மயங்கச்‌ செய்வதும்‌ இவ் வுடம்பின்‌ இயல்பாம்‌. நல் வினை தீ வினைகளாகிய பற்றுக்களால்‌ ஆன்மாவை ஆட்டுவிப்பதும்‌ இவ் வுடம்பின்‌ இயல்பாம்‌. எம்பெருமானைச்‌ சார்ந்து நீங்கள்‌ உடல்‌ குற்றங்கள்‌ அனைத்தையும்‌ நீக்குகின்‌றீர்‌. இது உமக்கு இயல்பாக அமைந்த பண்பாகும்‌-

வீராங்‌ கனைநீர்‌ விமலன்‌ திறத்தாறு பண்புடையீர்‌
வீராங்‌ கனைகள்‌ உமைப்போல்‌ விரதியர்‌ யாவரேனும்‌
வீராங்‌ கனைகள்‌ விழுமத்‌ தொழுதெழு மூவியலார்‌
வீராங்‌ கனைகளை நீர்‌ தத்த மியலால்‌ விளைப்பீரே-91-

வீரம்‌ சான்ற பெண்மகளாராகிய தாங்கள்‌ எம்பெருமான்‌ ஞானம்‌, சக்தி பலம்‌, ஐஸ்வரியம்‌, வீரியம்‌, தேஜஸ் என்ற ஆறு பண்புடையனாதல்‌ போல அவன்‌ திறத்தில்‌ உசுப்பில்‌ உகத்தல்‌, நோவின்‌ நோதல்‌, ஒண்பொருள்‌ கொடுத்தல்‌, நன்கு இனிது மொழிதல்‌, புணர்வு நனிவேட்டல்‌, பிரிவு நனி இரங்கல்‌ என்ற ஆறு பண்புகளை உடையீர்‌. உம்மைப்போல்‌ விரதமுடையார்‌ யாவரும்‌ வீரப் பெண்களே. எம்பெருமானைத்‌ தொழுது எழும்‌ வீரப் பெண்கள்‌ எம்பெருமானே ஆண்டான்‌, அவனே ஆறு, அவனே பேறு என்ற மூன்று இயல்பு உடையவர்கள்‌ தம்‌ பண்புகளில்‌ நெகிழ்வில்லாதபடி வீராங்கனைகளைத்‌ தயாரிப்பவரும்‌ தாங்களே —

விப்பிர நாரா யணனொடும்‌ விஞ்சு சீர்‌ மாறனொடும்‌
விப்பிரத்‌ தோன்றலாம்‌ விட்டுசித்‌ தன்னொடு வீசு புகழ்‌
விப்பிர ஊர்தி வியன் தமிழ்ப்‌ பாணன்‌ பிறவி வெரு
விப்பிர புத்தி செய்‌ வேந்தன்‌ குலசே கரனொடுமே–92-

தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ ஆகிய விப்பிரநாராயணர்‌, மேம்பட்ட சிறப்பினை உடைய சடகோபர்‌, அந்தணருள்‌ மேம்பட்ட விட்டு சித்தர்‌, யோக சாரங்க முனிவர்‌ தோளில்‌ சுமக்கப்பட்டு எம்பெருமானைத்‌ தரிசிக்க வந்த திருப்பாணாழ்வார்‌, பிறவிப்‌ பிணிக்கு அஞ்சி விற்றுவக்‌ கோட்டம்மானைச்‌ சரண்‌ புகுந்த குலசேகரப்‌ பெருமான்‌ ஆகியவரும் –

ஒடுங்கலில்‌ சீரார்‌ முதல்வர்கள்‌ மூவராம்‌ ஒன்தமிழர்‌
ஒடுங்கலில்‌ ஞானமும்‌ பத்தி விரத்தியும்‌ ஒங்கு கோதை
ஒடுங்கலில்‌ யோகி மழிசை மன்‌ உற்ற மதுரகவி
ஓடுங்குலில்‌ வாழ்த்துக்‌ கலியன்‌ உதிப்பித்‌தும் மருளே –93-

மற்றும்‌ குறைவற்ற சிறப்புடைய முதலாழ்வார்கள்‌, மூவர்‌ ஞான பக்தி வைராக்கியத்தால்‌ மேம்பட்ட கோதையராகிய ஸ்ரீஆண்டாள்‌, யோகியாய்‌ வாழ்ந்த திருமழிசைப்‌ பிரான்‌ மதுரகவியார்‌, 86 திவ்விய தேசங்களைப்‌ ்‌ பாடியருளிய திருமங்கையாழ்வார்‌ முதலானாருடைய திருஅவதாரங்கள்‌ தாயாராகிய உமது முனைப்பினாலும்‌ எம்பெருமான்‌ அருளாலும்‌ இந்த பூலோகத்தில்‌ உண்டாயின–

உமதரு ளொன்றே உதவு மெய்‌ ஞானநீர்‌ வித்தையதால்‌
உமதருள்‌ சேதனர்‌ பாலதாம்‌ உற்ற நல்‌ தாயதனால்‌
உமதருள்‌ ஏற்பன் உலகுண் பரனின் இனியையதால்
உமதருள்‌ முற்றவும்‌ உற்றதே யாக்கும்‌ நெகிழ்தலிலே–94-

அன்னையாராகிய நீர்‌, வித்தையே வடிவினராய்‌ இருப்பதால்‌ உம்‌ அருளே மெய்யுணாவை உண்டாக்குவதாகும்‌. தாங்கள்‌ உலகின்‌ தாயாக இருப்பதனால்‌ தங்கள்‌ அருள்‌ இவ்வுலகினுள்ள உயிர்களின்‌ பக்கல்‌ பரவியுள்ளது. எம்பெருமான்‌ உகப்பிற்குரிய தேவியராக நீர்‌ இருப்பதால்‌ ஊழியில்‌ உலகை வயிற்றில்‌ வைத்துப்‌ பாதுகாக்கும்‌ எம்பெருமான்‌ உம்‌ அருள்செயல்களைத்‌ தானும்‌ இசைகிறான்‌. உம்‌ அருள்‌ செயல்களைக் குறைவுறாமல்‌ உயிர்களுக்கு ஏற்புடைய நன்மைகளையே உண்டாக்கும் —

நெகிழ்வதே உந்தம்‌ அருளிலர்‌ நேர்வது முற்றவுமே
நெகிழ்வதே இந்திரன்‌ நீடு சிவனயன்‌ நேர் பதங்கள்‌
நெகிழ்வதே ஓரிரு கோள்கதி யைம்பூத நேர்மையதும்‌
நெகிழ்வதில்‌ நித்த விபூதி நும்‌ சார்பில்‌ நிலைத்திடுமே-95-

உம்‌ அருள்‌ பெறாதார்‌ செய்யும்‌ செயல்கள்‌ முழுமையாக நிறைவேறாமல்‌ இடையிலேயே தடைபட்டு அழியும்‌. உம்‌ அருளின்‌றேல்‌ இந்திரன்‌, சிவன்‌, அயன்‌ என்பார்‌ பதவிகள்‌ நிலை பேறு அடைய மாட்டா, மேலும்‌, ஞாயிறு, திங்கள்‌ இயக்கமும்‌ ஐம் பூதப்‌ பண்புகளும்‌ நெகிழ்ந்து விடும்‌. அழிவில்லாத பரம பதமும்‌ உம்‌ தொடர்பினாலேயே நிலை பெற்றிருக்கும் —

நிலை நிற்கு மன்றோ கயவன்‌ சிறைவைத்த பாதகத்தை
நிலை நிற்கு மன்றோ நெருப்பிடை மூழ்க நீர்‌ நேர்ந்த செயல்‌
நிலை நிற்கு மன்றோ நிமலன் தன்‌ பள்ளி இருந்த செயல்‌
நிலை நிற்கு மன்றோ நிலத்தின்‌ புகு செயல்‌ மாதருக்கே–96-

இராவணன்‌ உங்களைச்‌ சிறை வைத்த நீசச்‌ செயல்‌ உலக மக்கள்‌ உள்ளத்தில்‌ துன்பத்தை உண்டு பண்ணும்‌. தாங்கள்‌ நெருப்பில்‌ மூழ்குவதற்கு ஈடுபட்ட செயலும்‌, வான்மீகியின்‌ ஆசிரமத்தில்‌ நீங்கள்‌ பல காலம்‌ இருந்த செய்தியும்‌, இறுதியில்‌ பூமிக்குள்‌ புகுந்து மறைந்த செயலும்‌ உலகவர்‌ உள்ளத்தில்‌ என்றும்‌ நிலை நிற்பனவாம் —

மாதா நுமதே அழகின்‌ சிகரமே மற்றுமுண்டே
மாதா நுமதே அருளின்‌ வடிவம்‌ பிறிதிலதே
மாதா நுமதே பிறர் நலம்‌ பேணும்‌ சிறப்புடைமை
மாதா நுமதே நிலை பிரி தொண்டர்‌ அடிப்படுத்தே–97-

அன்னையீர்‌! அழகின்‌ உயர்ந்த நிலையும்‌ அருளின்‌ வடிவமும்‌, பிறர்‌ நன்மையே வேண்டிச்‌ செயற்படும்‌ மாட்சிமையும்‌ உடைய நீங்கள்‌ அடியார்‌ தொண்டினை மிகைப்படுத்தி எம்பெருமானுக்குப்‌ பரிந்துரை கூறி, அவர்களை ஆட்கொள்வதற்காகப்‌ பெருமானைப்‌ பிரியாது இருக்கின்றீர் —

அடியனைக்‌ கொண்டதே யாவும்‌ அடைந்தது போலுமானீர்‌
அடியனில்‌ கீழ்மையோன்‌ முன்பின்‌ படைப்பிலும் யாருமுண்டே
அடியர்பால்‌ காணீர்‌ குறையடி யேன்கேட்‌ டறிந்ததுண்டு
அடியனின் தாழ்வையும் கொண்ட நீர் ஆய்ந்திடின் உண்மை யன்றே –98-

மிகக் கீழனோகிய அடியேனை ஆட் கொண்ட திறத்தால்‌ தங்கள்‌ விருப்பமெல்லாம்‌ நிறைவேறியது போன்ற நிறை மகிழ்வைப்‌ பெற்றுள்ளீர்‌. முன்‌ ஊழிகளிலும்‌ இனி வரும்‌ ஊழிகளிலும்‌ நிகழ்ந்த, நிகழ இருக்கின்ற படைப்புகளில்‌ அடியேனிலும்‌ கீழானோர்‌ இருக்க மாட்டார்கள்‌. தாங்கள்‌ அடியார்களுடைய குறைகளைப்‌ பொருட்படுத்த மாட்டீர்‌ என்று கேட்டறிந்ததுண்டு. தங்கள்‌ உயர்வையும்‌ அடியேன்‌ தாழ்வையும்‌ ஆராய்ந்தால்‌ தாங்கள்‌ அடியேனை ஆட் கொண்டது மெய்யான செயலேயாகும் –

உண்மைப் பொருள் அலர்மேல் மங்கை சேர்ந்து இங்கு உளன் ஒருவன்
உண்மைப் பொருள் பொறைத் தாயினை ஒக்கலை யேந்து கேழல்
உண்மைப்‌ பொருள்ளேழ்‌ விடை செற்று வந்து கொள்‌ பின்னை கேள்வர்
உண்மைப் பொருள் மூன்றே ஓர்த்துப் பொதுவுறக் காண்ப தென்றே –99-

மெய்ப்பொருளாம்‌ பெருமான்‌ அலர்மேல்‌ மங்கையுடன்‌ சேர்ந்து வேங்கட மலையில்‌ உள்ளான்‌. பொறுமைக்கு இருப்பிடமாகிய பூமித் தாயை தன்‌ இடையில்‌ வைத்துக்‌ கொணர்ந்த மகா வராக மூர்த்தியும்‌, அசுரா உட்புகுந்த ஏழு காளைகளை அழித்துப்‌ பின்னையை மணந்த கண்ணனும்‌, வேங்கடவனும்‌ ஒரே உண்மைப்‌ பொருளின்‌ அவதாரங்களே என்பதனைக்‌ காணலாம்‌

என்றலர்‌ மேல்மங்கை நின் தாள்சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்மங்கை மன் தாள்சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்மங்கை தொண்டர் சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்யங்கை போற்றும்‌ அருளென்கண்‌ பார்த்துலகே –100-

அலர்மேல்‌ மங்கைத்தாயே! என்னிடம்‌ உன்திருவுளச்‌ சார்பினை அருளுவது என்றோ? நீர்‌ எம்பெருமான்‌ திருவடிகளை அடியேன்‌ சாரும்‌ வாய்ப்பினை அருளுவது என்றோ? பிராட்டி பெருமாள்‌ என்ற இருவரையும்‌ சரணாகப்‌ பற்றிய தொண்டர்கள்‌ சார்பினை அடியேனுக்கு அருளுவது என்றோ? அடியேன்‌ மாட்டு அலர்மேல்‌ மங்கை பாலிக்கும்‌ அருளும்‌ எம்பெருமாள்‌ அடியேன் திறத்தில்‌ செய்யும்‌ அருளையும்‌ உலகவர் போற்று நாள்‌ என்று வருமோ?

அலர்மேல மங்கை நல்‌ தாய்திருத்‌ தாளன்ப ரும்பயனை
அலர் மேல மங்கையந்‌ தாதி தனையோதி ஆர்வமும
அலர்மேல மங்கை இணையடித்‌ தாமரை தம்மினெஞ்சம்‌
அலர்மே லமர்ந்துறை யன்னமாய்‌ நின்றன்பு பெற்றிடுமே –நூற்பயன்

நற்றாயாகிய அலர்மேல்‌ மங்கை திருவடிகளில்‌ அன்பு பெருகுதலாகிய அரிய பயனாய்‌, இந்த அலர்மேல்‌ மங்கையந்தாதியை ஆர்வத்தோடு ஒதுவதால்‌ நம்‌ நெஞ்சமானது, அப்பெருமாட்டியின்‌ திருவடித்‌ தாமரைகளில்‌ அன்னம்போல்‌ நீங்காதிருந்து தூய அன்பினைப்‌ பெற்றுச்‌ சிறந்து விளங்கும்-


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த சங்கல்ப ஸூர்யோதய நாடகம்–

April 21, 2026

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

யதி பக்தி ப்ரசயாத்மகே தினமுகெ த்ருஷ்டி ஷம ஷேத்ரிண
ஷிப்‌ரம் ஸம்ஸ்ருதி சர்வரீம் ஷிடதியத்‌ ஸக்கல்ப ஸூர்யோதய
தத் வைரஸ்‌த்‌ர விபூஷணை ரதிகத ஸ்வாதீன நித்யோன்னதி
ஸ்ரீமாநஸ்‌ துஸமே ஸமஸ்த விபதுத்தாராய நாராயண

நாடக பாத்திரங்கள்
ஸ்ரீ மஹாவிஷ்ணு ; ஸ்ரீதேவி; பூதேவி, நீளாதேவி–நாரதர்‌, தும்புரு-ஆசார்யன்‌, சிஷ்யன்‌ -ஹித்தாக்த வாதிகள்‌
ஸுத்ரதாரன்‌, நடி.
புருஷன்‌ (ஜீவாத்மா)
விவேகன்‌ – ராஜா
மஹா மோஹன்‌ — அஞ்ஞானம்‌
வ்யவஸாயன்‌ –விவேகனது ஸேனாதிபதி
தர்த்கன்‌ விவேகனது ஸாரதி
ஸம்ஸ்காரன்‌ -விவேகனது சில்பி த்ருஷ்டப்‌ரத்யயன்‌ -விவேகனது தூதன்‌
ஸங்கல்பன்‌, விஷ்ணு பக்தி –பகவானுடைய ஆட்கள்‌
விரக்தி, துஷ்டி, ௮தி௧ த்ருஷ்டி–வேலைக்காரிகள்‌–சாந்தி, ஸத்ருச த்ருஷ்டி–வேலைக்காரிகள்‌
காமன்‌ –மன்மதன்‌
வஸந்தன்‌ காமன்‌ நண்பன்‌
ராகன்‌, த்வேஷன்‌, க்ரோதன்‌, லோபன்‌, டம்பன்‌, தர்ப்பன்‌ (கர்வன்‌)–மஹா மோஹனது மந்திரிகள்‌
ஸம்வ்ருதி ஸ்‌த் யன்‌ -மஹாமோஹனுடைய தூதன் —

புத்தி -புருஷனுடைய பத்னி
ஸுமதி –விவேகனுடைய மனைவி விசாரணை –ஸுமதியின்‌ தோழி
முதிதா –ஸூமதியின்‌ தோழி
துர்மதி –மஹா மோஹனின்‌ மனைவி
ரதி –காமனின்‌ மனைவி
த்ருஷ்ணை ( ஆசை) -லோபனின்‌ மனைவி
குஹனை (வஞ்சனை) –டம்பனின்‌ மனைவி
அஸூயை –தர்ப்பனின்‌ மனைவி

இடம்‌ :–ஸ்வேத த்வீபம்‌.

ஸூத்ர தாரன்‌ பிரவேஸம் –

ஸ்ருங்காராதி ஸகல ரஸ ரூபங்களையும்‌ தன்னிடத்தேயே பூண்டதாயும்‌, மகா ஸ்லாக்யமுமான சாந்தி ரஸம்‌ ததும்ப, விவேகாதி மனுஷ்ய ஸ்வபாவங்கள் அனைத்தையும்‌ நாடக பாத்‌திரங்களாக அமைத்து, மாறி மாறிப்‌ பிறந்திறந்து கரை யறியாது உழன்று வரும்‌ பாமரர்களை ஸம்ஸார அந்தகாரத்தினின்றும்‌ மீட்க வல்லதான பகவத்‌ ஸங்கல்பமாம்‌ ஸுூர்யோதயத்தை வெளிப்படுத்த, யாவரையும்‌ நித்ய ஆனந்தத்‌திற்கு உள்ளாக்க வேண்டுமென்பது, சகல கலா வல்வைர்களும்‌ ஆசார்ய ஸ்ஷ்ரேடர்களுமான பெரியோர்களது ஆக்ஞை. ௮த்தகைய ௮ஞ்ஞான அந்த காரத்தைப்‌ பேதித்து, நித்யானந்த வெளிச்சத்தில்‌ நம்மைப்‌ புகுத்த வல்ல ௮ருணோதயமாகக்‌ கூடிய ஞான வொளியை அளிக்குமாறு ஆதி மூர்‌த்தியான ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தி ௮ருள்‌ புரிவாராக.

நடிப்‌பிரவேஸம்

ஸுத்ர.--ஆர்யே ! நமது நாடக பாத்திரங்கள்‌ தயாராயுள்ளனரா?

நடி.--ஆர்ய! எந்த க்ஷணத்தில்‌ எந்த நாடகத்தை நடித்துக்‌ காட்ட உத்திரவோ, ௮ந்த ஷணத்திலேயே அதற்காக. ஆயத்தமாகக்‌ கூடிய நடிகர்கள்‌ நம்மிடமிருக்கையில்‌ உமக்குச்‌ சிந்தையேன்‌ ? இப்பொழுது தாங்கள்‌ நடித்துக் காட்ட விரும்பும்‌ நாடகம்‌ யாதோ?

ஸூத்ர.–மனுஷ்ய ஸ்வபாவம்‌ ஒவ்வொன்றையும்‌ ௮தற்க்‌குரித்தான அபிமான தேவதையாக நடிக்கச்‌ செய்து விவேகனைக்‌ கதா நாயகனாக்‌கி ,-அன்னான்‌ தன்‌ வைரியாம்‌ மஹா மோகனை எதிர்க்குமிடங்களில்‌ யுத்த வீர ரஸத்தையும்‌, பரமாத்மா ஜீவனுக்காக வருந்தி இரங்கு மிடகளில்‌ தயா வீர ரஸத்தையும்‌, மற்றும்‌ ஞான வைராக்ய மடைந்த ஜீவாத்மாவை முக்தனாக்கு மிடங்களில்‌ சாந்தி ரஸ ஸ்வரூபத்தையும்‌ மிகுத்‌து , இதர ரஸ பாங்களை ஆங்காங்கே ஏற்றபடி அமையக் கொண்டதுமான ஸ்ரீ ஸங்கல்ப ஸூர்யோதயமென்னும்‌ தனக்கிணை யற்றத்‌ தனிப் பெரும்‌ நாடகத்தை நடித்துக்‌ காட்ட விரும்பி யுள்‌ளேன்‌– அர்ஜூனனை வியாஜ மாத்‌திரமாகக் கொண்டு கீதை என்கிற அமிர்தத்தைக்‌ கண்ணன்‌ உலகத்தோர்க்கு அளித்தருளினாப் போல லோகோத்தாரணார்த்தம்‌ ஓர்‌ வ்யாஜ மாத்‌திரமாக, கவி ஸ்ரேஷ்டரும்‌ ஆசார்ய ஸ்ரேஷ்டருமானவரால்‌- குணாகுணங்‌கலைப்‌ பிரித்துக்‌ காட்டி ஞானத்தை உண்டாக்குமாறு எழுதப்பட்டதாகும்‌ இந்த நாடக ரத்னம் –

நடி. -ஆச்சர்யம்‌! நம்மைக்‌ கெளரவிக்க வந்திருக்கும்‌ இச்‌ சபையோரது மட்டிலா மதிப்பைப் பெற்ற அந்நாடகத்‌தின்‌ ஆசிரிய ஸ்ரேஷ்டர்‌ யாவரோ

ஸுத்ர.–நீ அறியாயா ₹—தன்‌ தபோ பலத்‌தினால்‌ புதியதோர்‌ இந்திர லோகம்‌ படைத்த விஸ்வாமித்ரருடைய கோத்ர பரம்பரையினரும்‌, புண்டரீகாஷ ஸோமயாஜி யென்னப்‌ பட்டவரின்‌ புத்‌திரராம்‌ ௮நந்த ஸூரியென்னும்‌ வித்யா நிதியின்‌ திருக் குமாரருமான வேங்கடநாத னென்னும்‌ திருநாமங்‌ கொண்ட கவிதார்க்கிக ஸிம்ஹமே இந் நாடக ஆசிரியராவர்‌–கமலாஸனனால்‌ எம்பெருமானது திரு வாராதனக்‌ காலங்களில்‌ ௮ஸுர குல த்வம்ஸத் தொனி போல்‌ கண கணவென சப்‌திக்கும்‌ கண்டையின்‌ திருவவதாரமே யென சாஸ்திரஞ்ஞர்களால்‌ ஊகிக்கப்‌ பட்டவரும்‌, ஸ்ரீரங்ககாதனது நியமனத்தால்‌ வேதாந்தாசார்யனென்ற பிருது பெற்றவருமான ஸ்ரீ பாஷ்யகாரரின்‌ சிஷ்ய பரம்‌பரையை உடைய ௮ந்த உபய வேதாந்தப் பிரவர்த்தகரே பகவத்‌ பிரீதி கரமாக இவ்வஸாதாரண நாடகத்தை உலகோர்க்களித்‌தவர்‌ ! |

நடி- அவருடைய கருணாப்‌ பிரபாவம்‌ அளவிடத் தக்கதல்ல தான்‌. ஆயினும்‌, சாந்தி ரஸம்‌ நாடகத்திற்கு எடுக்கப்‌ பட்டத்ல்ல வென்று ஒரு வகுப்பார்‌ கூறுகிறார்களே-

ஸூத்ர-மஹா ஸ்லாக்யமான சாந்தி ரஸானுபவஞ் செய்ய வல்ல ்‌ சபையோரும்‌, சாந்தி ரஸ பாவங்களை நடித்‌துக் காட்ட வல்ல “நடிகர்களும்‌ கிடைப்பது துர்லபமான காரியமென்ற அபிப்பிராயத்தினாலேயே தான்‌ நாடக நூல்களில்‌ சாந்தி ரஸம்‌ எடுக்கப்படுவதில்லை. ஆகவே தான்‌ அதை ஸபைகளில்‌ ௮பிநபிப்பது ௮சக்யமென்று ஒரு தரப்பரால்‌ ஒதுக்கப் பட்டது, ஆனால்‌, உண்மையில்‌, நவ ரஸங்களிலும்‌ ஸ்லாக்யமானது இந்த சாந்‌தி ரஸமே. ஸ்ருங்கார ரஸத்தில்‌ சபைபில்‌ அபிநயிக்கத்‌ தகாத பாவங்கள்‌ உண்‌டாகக் கூடும்‌-வீர ரஸ அபிநயத்தில்‌ ஒருவர்‌ மற்றொருவரை அவமதிப்பதே மேம்படுகின்றது– அத்புக ரஸமோ நம்பத் தகாக பொய் மிகுந்த விஷயங்களையே எடுத்துக்‌ காட்ட வல்லது- இதர சாதாரண ரஸ பாவங்களும்‌ ௮ற்ப மானவையே. சாந்தி ரஸமோ மனோ துக்கங்களைப்‌ போக்கி உண்மையை வெளிப் படுத்திச்‌ சந்‌தோஷத்தைக் கொடுக்க வல்லது காண்‌.

நடி.-வாஸ்தவமே! ஆயினும்‌, ஸாதாரண ஜனங்களும் பார்தது அனுபவிக்க வேண்டிய நாடகங்களில்‌, இந்தப்‌ பரமோத்‌ திருஷ்டமான சாந்தி ரஸத்தை மிகுத்திக்‌ காட்டக்‌ கூடுமா வென்று தான்‌ எனக்குச்‌ சந்தேகமா யிருக்கிறது –
ஸுத்ர–பெண்ணே ! நாடகத்தின்‌ உண்மையான தத்வத்தை நீ பூர்ணமாய்‌ அறிந்திட்டாயில்லை போலும்‌. நாடகானு குணமாக உபயோகப் படுத்தக் கூடத சாஸ்‌திரங்கள சாஸ்‌திரங்களல்ல-வித்யைகள்‌ வித்யைகளல்ல-சித்திரங்கள்‌ சித்திரங்களல்ல, கலைகள்‌ கலைகளல்ல, யோகங்கள்‌ யோகங்களல்ல, ஞானமும்‌ ஞானமல்ல.
நடி.--எப்படியாபினும்‌, சபல சித்தம்‌ வாய்ந்த என்‌ பேதை மனத்துள்‌, தாம்‌ கைக் கொண்ட காரியம்‌ மகா பிரயாஸகரமானதாகவே படுகிறது-துவேஷ வசத்தினராகிய பண்டிதர்களது கண்டன மொழிகளைக்‌ குறித்தே அஞ்சுகிறேன்‌. ஸுத்‌ர. பேதாய்‌! இதற்கோ அஞ்சுவது ? பகவத்‌ ஸங்கற்ப மாத்‌திரமாய்‌ கல்விக் களஞ்சியத்தினின்றும்‌’ நமக்குக் கிடைத்த, தோஷ ரஹிதமான ரஸ பாவ ஸ்ரேந்த யஸ்‌ மிகுந்த இந்த நாடகத்தை, தேர்ந்த நடிகர்கள்‌, பஷபாதமற்ற மஹா பெரியோர்கள்‌ நிறைந்த இந்த ஸபையில்‌ நடித்‌துக்‌ காட்டுவதைக்‌ குறித்துமா நீ அஞ்சுவது? பெரியோர்‌கள்‌ மனத்தில்‌ ௮வர்களையுமறியாது ௮ஸுூயை உதித்‌தாலும்‌ ௮து மின்னல் போல்‌ ஷணத்திலேயே மறைந்து ஓழியக்‌ கூடியதாகும்‌. துவேஷ வசப்பட்டவர்‌, வெளிக்கு வெறுப்புக் காட்டிய போதிலும்‌, மனத்துள்‌ நம்‌ நாடகத்தைப்‌ புகழ்ந்தே மதிப்பார்கள்‌ என்‌பதை நம்‌பு -ஆகவே ஸபையோரின்‌ ஆதரவை மேற் கொண்டு அன்னாரது ௮னுக்‌ரகத்தை வேண்டிக்‌ குதாகலக்துடன்‌ நடிகர்களை வரச் செய்‌து நாடகத்தை ஆரம்பிக்கலாம்‌ வா. (போகிறார்கள்‌)

அங்கம்‌ 1-முதற்‌ காட்‌சி -இடம்‌ :–ஸ்ருங்கார வனம்‌-வஸந்தன்‌ தொடர, ரதியும்‌ காமனும்‌ குதூகலத்‌துடன்‌ பிரவேஸம் –
காமன்‌:–
வஸந்தா !. விவேகனது வீண்‌ ‘ ‘ஆரவாரத்தைப்‌ பார்த்தாயா ?. ஸ்திரிகளின்‌ புருவமாகிற தனுஸ்ஸினின்‌றும்‌- அவர்களது அகத்தின்‌ சஞ்சலத்தைப்‌ புறத்‌தே காட்டுவன போன்ற விழிகளாம்‌ புஷ்ப பாணங்களாகிற கடைக் கண்‌ நோக்கு வெளிப்படுமாயின்‌, இந்‌த விவேகன்‌ எந்தத்‌ திக்கில்‌, தான்‌ இருக்கக்‌ கூடுமென்பதை அறிவனா-

வஸந்‌.—வாஸ்‌தவமே !–நண்ப! நமது மகாராஜா மகாமோகனுக்கே மங்கள முண்டாகுமாறும்‌, விவேகளுக்குப்‌ பீதியை யுண்டாக்குமாறும்‌, மன்மத மகோத்ஸவமாம்‌ உனது திருவிழாவை இப்பொழுதே நான்‌ தொடங்கப்‌ போகிறேன்‌.

காமன்‌.–௮தவே ஸரி, விவேகன்‌ ஜெயிக்கப்படுவது திண்ணம்‌, |

ரதி.-நாதா! உத்ஸவம்‌ உண்மையில்‌ எனக்கு உத்ஸாகத்‌தைக்‌ கொடுக்க வில்லையே ! தடுத்தற்கரிகானதோர்‌ விதியினால்‌, வெல்லுதற்கரிதான விவேகன்‌, மகாராஜன்‌ மகா மோகனது ஜென்ம வைரியாக அமைந்ததை நினைக்க நினைக்க, எனக்கு மனவமைதி உண்டாக வில்லை!

காமன்‌.–பேதமை மிக்கவளே! சமமானதோர்‌ வீர வைரியை எதிர்த்‌து வெற்றியுடன்‌ வெளிவர வேண்டிய சந்தர்ப்பம்‌ நமக்குக்‌ கிடைத்ததைக் கண்டு மகிழ்வதை விட்டு, அவ்‌ விவேகனது வைபவத்தைப் பாராட்டி புகழ்வதுவோ முறை? ‘ஹ! ஹ! ஹ! மேருவையே தனுஸ்ஸாகக்‌ கொண்ட முக் கண்ணனும்‌ என்‌ கரும்பு வில்லின்‌ கணைக்‌குட்பட்ட வனல்லவா

வஸர்‌.–.ராணி யறியாத ரகஸ்யமல்லவே ௮து ! மன்மத ராஜனின்‌ மகிமை பண்டை பரம்பரையாய்ப்‌ பரவி வருவ தல்லவா ? பிரம்மனும்‌ பத்தினியை வேதமோதும்‌ தன்‌ நாவிலேயே வைத்து மகிழ்வதேன்‌ ? ருத்‌ர மூர்த்தியும்‌ தனது வாம பாகத்தையே ஓர்‌ மாதுவுக்கு, அர்ப்‌பணஞ்‌ செய்து விட்டதேன்‌ ? யாவராலும்‌ கொண்டாடப்படும்‌ அந்தப்‌ பரதத்வமும்‌ ஆய்‌ச்சியர்க்கே ௮தீனமாய்க் கிடந்ததேன் ? மும்மூர்‌த்திகளுமே காமன்‌ கணைக்‌கிலக்காகிக்‌ கலங்கிக்‌ கிடந்தனரென்றால்‌, விவேகனது கூட்டத்தாராம்‌ ௮ற்பர்களா மதன பாணாவஸ்தையை மீற வல்லவர்கள்‌ –

ரதி-எனினும்‌, வைராக்யமென்னும்‌ கோட்டைக்குள்‌, முன்‌னறிவு மித்க மந்திரிகளது உதவியும்‌ விடா முயற்சியுமுடையவனாகிய ௮ஸகாய ஸூரனான விவேகன்‌ நமக்கு எக்கணம்‌ யாது இன்னல்‌ விளைவிப்பனோ என்‌ற கலக்கம்‌ என் மனத்தை விட்டு ௮கலத் தான்‌ இல்லை.

காமன்‌. –௮டி. பயங்கொள்ளி ! ஸ்திரீகளுடைய சரீர ௮மைப்‌பையே ஓத்த இந்த வில்லும்‌ நாணும்‌ ௮ம்புமே, இப்‌ பிரபஞ்சமனைத்தையும்‌ ஜெயிக்க வல்ல உன்‌ பர்த்தாவின்‌ கொடி கணைகள்‌ ஆகும் காண்‌. மதுரச்‌ சொற்‌களை யுடைய ஸ்‌திரீகளது பெயரையே கேட்ட மாத்திரத்தில்‌ ஒருவனது விரக்தியாதி சகல நற் குணங்களும்‌ இருந்த விடரம் தெரியாது பறந்தோடிப் போய்‌ விடாதா !
வஸந்‌, -ஸ்திரிகளது, குணங்களைப் பற்றி யோசிப்பது இருக்கட்‌ டும்‌. அவர்களிடம்‌’ தோஷத்தை எண்ணுவதற்காக அவர்களை நினைப்பதே போதுமே வைராக்யத்தை விலகி நிற்கச் செய்ய ! ஹ! ஹ! மத யானையாம்‌ மனததைத் தன்‌ தைர்யத்தினால்‌ அடக்கப்‌ பார்ப்‌பது-ஐராவதத்‌தைத் க தாமரைத்‌ தநதுவினால்‌ கட்டச் சமைவது ஓக்கும்‌.

ரதி.–ஏன்‌ ?– புத்தியால்‌, மோஷ பர்யந்தமான யாவற்றையும்‌ ஒருவன்‌ ஸாதித்துக்‌ கொள்ளக்‌ கூடுமென்பது ப்‌ரஸித்த மல்லவா ?

காமன்‌.–(கோபச்‌ சிரிப்புடன்‌) என்ன ₹ நான்‌ இருக்குமிடத்‌திலுமா ஸ்‌திரபுத்‌தி நிலைக்கக்‌ கூடும்‌ -அத்துடன்‌ கூட, க்ரோதனும்‌ என்‌ துணைக்கு வருவானாகில்‌ எங்களை எதிர்க்க வல்லவருமுளரோ – கோபாதீநனானவன்‌ புத்‌தியை யிழந்து செய்ததை மறந்து செய்ய வேண்டுவனவற்றை விடுத்து அஞ்ஞாந அந்தகாரத்தில் ஆழ்ந்து நாசமடைவது நிச்சயமல்லவா ? ௮ச் சமயம்‌ விவேகனால்‌ அக் கோபரதீநனனை அணுகவும்‌ முடியுமோ? விவேகனாலும்‌ ௮வன்‌ மந்திரிகளாலும்‌ நமது ஸாகஸங்கள்‌ ஆகக் கூடியனவோ !

ரதி-௮துகிடக்‌ கட்டும்‌.–நாதா | விவேகனாதியோர்களுக்கும்‌ நம்‌ கக்ஷியாருக்கும்‌ இப்படி. வீர வைரம்‌ ஏற்படக்‌ காரணமென்ன ?
காமன்‌.—காரணமா !–ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ் என்று முக்‌குணங்கொண்ட ஜீவாத்மாவுடன்‌, புத்தியென்ற பத்னியின்‌ சேர்க்கையால்‌, அவ் வக்‌ குணங்கள் மிகுந்த காலத்‌திலுண்டாகிய முக்குலங்கள்‌ தோன்றின-இக் குலங்களே முறையே, விவேகன்‌, ராகன்‌, மோகன்‌ முதலியோரதாகும்‌. இவற்‌றுள்‌, ஸத்வ குண மிகுதியால்‌,, ஸம்ஸார சுக துக்கங்களை த்வேஷிக்கிற விவேகன்‌, விஷ.யாநுபவங்களில்‌ தோஷத்தை ௮றிபவளாம்‌ ஸூமதியை மணந்து, தன் குலத்திற்கு ராஜாவாகத்‌ தனித்து நிற்கிறான்‌. ரஜஸ்ஸும்‌ தமஸ்ஸும்‌ மிக்க மற்ற இரு குலத்தினரும்‌ ஒன்று சேர்ந்து, மகா மோகனைச்‌ சக்ரவர்த்‌தி யாக்கிக்‌ கொண்டு, மோஷத்தில்‌ தோஷத்தையே ஆராயுந்‌ தன்மை யுள்ள துர்மதியை அவனுக்கு மனைவியராக்கி மகிழ்ந்து பெருகி விளங்குகின்றனர்‌.

ரதி.--அப்படியா ?…பிறகு?

காமன்‌.–-இக்குலத்தோர்‌ யாவருக்கும்‌ பிதாவாகிய ஜீவாத்‌மாவும்‌ மாதாவாகிய புத்தியும்‌, தத் சமயம்‌ மகா மோகன்‌ கக்ஷியின் மீதே ௮பிமானம்‌ மிகுந்துள்ளார்‌.. இதைக்‌ கண்டு சகியாக விவேகனது கக்ஷியினர்‌ தம்‌ கக்ஷி’ க்ஷீணித்து நசிக்க யிருப்பதைக்‌ கவனியாது ஜீவாத்மா வின்‌ ஸம்ஸார சுக போகத்தையும்‌, அத்தகைய விஷயாதிகளை விருத்தி செய்‌.து வரும்‌ எங்கள்‌ கக்ஷியினரையும்‌ வேரறுக்கக்‌ கங்கணக்‌ கட்டியுளர்‌

ரதி –உம் –அப்புறம்
காமன்‌–குரங்குகளுக்கும் ரஷஸர்களுக்‌ கும்‌ அரசர்களாம்‌ சுக்ரீவ விபீஷணாதிகளைப்‌ பிரமாணமாகக் காட்டி, ப்‌ரக்ருதியினிடத்தில் ஜீவாத்மாவுக்கு விரக்தியை உண்டாக்‌கி அந்த ஜீவனை இந்த விவேகனாதியர்‌ பலவிதத்‌ தொல்லைகளுக்கும்‌ ௮வஸ்தைகளுக்கும்‌. ஆளாக்கி வருகின்றனர்‌. இதனால்‌ நம்‌ பிதா, பிறர்‌ குற்றத்தைக்‌ காண்பதில்‌ பிறவிக்‌ குருடனாகவும்‌, பர நிந்தை சொல்வதில்‌ ஊமையனாகவும்‌, அவற்றைப் பற்றிக்‌ கேட்பதில்‌ பிறவிச்‌ செவிடனாகவும்‌, பரஸ் ஸ்திரிகளை வசப்பித்துவதிலும்‌’ ௮வர்‌களால்‌ வச்யப் படுத்தப் படுவதிலும்‌ இந்திரிய வியாபாரங்‌களற்ற வராகவும்‌ நபும்ஸகனாகவும்‌ மாறி, பேராபத்திற்குள்ளாக இருக்கிறார்‌. இத்‌தகைய ஆபத்‌தினின்றும்‌ எம் தந்தையை மீட்பதற்காகவே, ப்ராத்ருஸ்‌ ஸ்நேகத்‌தைப்‌ பாராமலும்‌ நாங்கள்‌ விவேகனாதியாரை ஓழிக்க வேண்டி, ஓரே பிரம்மாவினால்‌ படைக்கப்பட்டவராயினும் தேவாசுரர்கள்‌ தீராப்‌ பகைவாராய் இருந்தது போலே ஒருவருக்கொருவர்‌ ஜென்ம வைரிகளாயிருக்கிறோம்‌.

ரதி-ஐயையோ ! பெற்றோரது பேரானந்தங்களைப்‌ பிள்ளைகளே போக்க வழி தேடுகிறார்களே ! நாதா!–ஸகோதரர்களாம்‌ உங்களுக்குள்‌ யுத்தமொழிந்து ஒற்றுமை ஏற்‌படும்‌ மார்க்கங்‌ கிடையாதா

காமன்‌.–பைத்தியமே!புலி பசித்தாலும்‌ புல்லைத்‌ தின்னுமா? அர்த்தம்‌,காமம்‌ இவைகளையே. மிகப்‌ போக்யமாகக்‌ கொண்ட எங்களுக்கும்‌, நாராயணனே பரம போக்யமெனப்‌ பாடுபட்டு வரும்‌ எமது விரோதிகளுக்கும்‌, கனவிலும்‌ சமாதான மேற்படுவது முடியாத காரியமாகும் எங்களுள்‌ வெற்றி பலிஷ்டருக்கே! மகா மோகன்‌ எக் காரணத்தாலும்‌ ஸமாதானத்தை வேண்டான்‌. நானும்‌ உடன்‌
படேன்‌-

ரதி, –குல நாசகர்களாகிய விவேகனாதயோர்‌ மகா பலிஷ்டர்க ளாம்‌ உங்களை நசிக்கச் செய்ய உத்தேசித்திருக்கும்‌ உபாயங்கள்‌ தாம்‌ யாவையோ ?
காமன்‌.–காமினி ! ௮து ஸ்திரீகளிடத்தில்‌ பிரஸ்தாபிக்கத்‌ தகாததோர்‌ ராஜ ரகஸ்யமாகும்‌–
ரதி –(மன்றாடு பவளாய்‌) நாதா! என்‌ மீதாணை ! ! உமது நண்‌பர்‌ மீதாணை ! ராஜ ரகஸ்யமாயிலும்‌ யதார்த்தத்தை என்‌ னிடம்‌ வெளியிடத்தான்‌ வேண்டும்‌.
வஸன் – (தனக்குள்‌ பெருமூச்செறிந்து) ஹும்‌ விதி வலிது!(வெளிப்படையாய்‌) ஸகே- மகர த்வஜ ! ‘விரோதிகளின்‌ ரஹஸ்யங்களை வெளிப்‌ படுத்‌துவதில்‌ யோசனையேன்‌ ? அது முறையே யன்றோ ?
காமன்‌.– வாஸ்‌தவந்தான்‌–பிரியே ! ! அவர்களின்‌ உபாயத்தை அறிவிக்கிறேன் கேள்‌ -ஓவ்வொரு கர்மங்களிலும்- கர்த்தா நானல்ல, பகவானே அவற்றைச்‌ செய்விக்கிறான் -என்று ௮னுஸந்திக்கும்‌ ௮கர்த்ருத்வாபிமானம்‌, ஸாத்விக த்யாகம்‌ முதலிய விபரீத ஞானங்களை உதவியாய்க் கொண்ட நிவ்ருத்தி தர்மங்களாம்‌ பெரும் பேய்‌ ஜீவன் மேல்‌ ஆவேசித்து, புத்தியின்‌ . சேர்க்கையால்‌ ௮ந்த ஜீவனிடத்தில்‌ நமது குலத்திற்கே வேர்ப்புழு போன்றவளாம்‌ சாந்தி ஸ்வரூபையாகிய பரபக்தி யென்‌னும்‌ ப்ரஹ்ம ராக்ஷஸியைப்‌ பிறப்பிக்கப் போகிறது -௮ப்‌பரபக்தி யென்பாள்‌, வைராக்யம்‌ மிக்கு, ஐம் புலன்களையு மடக்‌கி , மகா உக்ரமான தபஸ்‌ செய்யுங்காலத்தில்‌, பகவானுடைய கருணா ப்‌ரபாவத்தால்‌, கோடி கைடபாஸுரர்‌களுக்குச்‌ சமானமானதோர்‌ ௮ஸுரன்‌, அப் பர பக்திக்குச்‌ சகாயனாகத்‌ தோன்றுவான்‌,—மவ்னம்

வஸந்‌.-(மனத்துள்‌) ௮வன்‌ வருகையே, ‘நம்மை நிர்மூல மாக்கும்‌ பகவானது ஸங்கல்ப ஸூர்யோதயமாகும்‌ !-.. (வெளிப்படையாய்‌) அத்துடன்‌ நிறுத்துங்கள்‌-பிறகு நடக்கப்‌ போவதைச்‌ சொல்லத் தகாது
ரதி.–(பயத்தினால்‌ பரபரப்புடன்‌ காமனைக் கட்டிக்‌ கொள்‌கிறாள்‌). ஐயையோ ! நாதா ! என்னைக் காரும்‌ ! என்னைக்‌ காரும் –

காமன்‌,–( ஆலிங்கனத்தால்‌ ஆனந்த பரவசனாகி), பிரியே! , மகா மோக ராஜனது சேனாபதியின்‌ வீர பத்னியா இப்படிப்‌ பயப்படுவது? ஹ!ஹ!- நான்‌ கூறிய தவ்வளவும்‌ வேதாந்திகளென்‌னும்‌ வழி போக்கர்கள்‌, மாளா வழியில்‌ நடக்கும்‌ களைப்பு தெரியாதிருக்கும்‌ பொருட்டு கற்பனை செய்‌து சொல்லிக்‌ கொண்டே. போகும்‌” கட்டுக்‌ கதையே யாகும்‌,-அவ்வளவும்‌ இந்தரஜால வித்தை !’ ஹ! ஹ! ஹ! என்‌ கரும்பு வில்லின்‌ நாணொலி கிளம்பிய மாத்திரத்திலேயே விரக்தியின்‌ வீட்டை நாடுபவனுமுளனோ ? மகா மோகனை ஜெயிக்க வல்ல உபாயமுமுளதோ ?
ரதி–மகாராஜனுக்கு மங்களமுண்டாக வேண்டியதே என்‌ கோறிக்கை.
வஸந் –-அப்படியே ஆகுக: மகா மோகனாதியோர்‌ உயிர்த்திருக்கும்‌ வரை , ஜீவாத்மா மூல ப்ரக்ருதியை நாடி விரக்திக்கு ஆளாவதில்லை யென்பது நிச்சயமே.
காமன்‌.–ஆம்‌! விவேகன்‌ முயற்சிகள்‌ வீணே ! யுத்தத்தில்‌ இறந்தும்‌ பிமைத்தெழுந்த ஸுத்ரீவ ஸைன்யங்கள்‌ போல்‌, காமத்தின்‌ சச்தியால்‌ நம்‌ குலத்தவர்களும்‌ புத்‌துயர்‌ பெறுவார்களே –
(திரைக்குள் )

அடே துரா சாரா ! ! லோக நாடக அரங்கத்தில்‌, ஸம்‌ஸாரமென்னும்‌ நாடகத்தில்‌, ஜீவாத்மா ப்ரபன்னென்‌னும்‌ வேஷந்தரித்து நடித்த மாத்திரத்‌திலேயே ஸந்தோஷத்தை அடையப் பெற்ற பிரபுவாகிய ஸ்ரீமந் நாராயணன்‌ தனது ஸாம்யத்தை ௮ந்த ஜீவனுக்குக்‌ கொடுக்‌கக்‌ காத்திருக்கையில்‌, வீண்‌ பிதத்றலேன்‌ ? பகைவரை வென்ற. கீர்த்தியும்‌, பிதாவை ரஷித்தலாகிய தர்மமும்‌,எத்தனித்த எம்‌ காரியத்தை நிறைவேற்றிய தாலாகிய ஸந்தோஷமும்‌ இக் கணமே எங்களை வந்தடையப் போகிறது காண்‌.

காமன்‌-(பயத்‌துடன்‌, பேச்சை மறைக்க வெண்ணி )பிரியே ! ஸூமதியோடு விவேகன்‌ நம்மை எதிர்த்து வருகிறான்‌.இடம்‌, காலம்‌, வ்லிமைகளை ஓர்ந்தறிந்தே எதிரி முன்‌ தோன்றுவது வீர லக்ஷண மாதலால்‌, தனித்திருக்கும்‌ நாம்‌ இச் சமயம்‌ அவர்கள்‌ கண்களில் படாது மறைவோம்‌. வாருங்கள்‌.
(போகிறார்கள்‌)

இரண்டாங்‌ காட்சி – இடம்‌ :—ஓர்‌ நதிக்கரை –விவேக ராஜனும்‌ ஸூமதி ராணியும்‌ பிரவேஸம் –
விவேக.–
நம்மைக் கண்டு ௮ஞ்சியோடும்‌ ௮ந்தப்‌ பாப சாரப்‌ பேய்களைப்‌ பார்த்தனையா ? நம்மையே யன்றோ பாபிகளென்று தூஷித்துத்‌ திரிகிறார்கள்‌ ! மோக மென்னும்‌ மாயையின்‌ ஸ்வபாவம்‌ இது தான்‌ ! பிறரிடத்தில்‌ இருக்கும்‌ குணங்களை ஓர்ந்து அறியாது, ௮வரிடம்‌ இல்லாத குற்றங்களை இருப்பது போல்‌ காண்பிப்பதும் தன்னிடம்‌ இருக்கும்‌ குற்றங்களை தெளிந்தறியாது, இல்லாத குணங்கள் இருப்பது போல்‌ பிரசுரித்திக் கொள்‌வதுமே யன்றோ மாயை !
ஸூமதி.- ஆம்‌, நாதா ! குரூபிகள்‌ தம்‌ முகத்தைக்‌ கண்ணாடியில்‌ காண்பார்களாகில்‌, தமது விகாரத்தை அறிந்து கொள்ளாமல்‌ கண்ணாடியிலேயே, தோஷத்கைக்‌ கூறுகிறார் களல்லவா ₹
விவேகன் –நன்றாய் உரைத்தனை -சுருங்கச் சொல்லி விளங்க வைத்‌தனை தத் வார்த்தத்தை ! எனது தர்ம பத்னியாம்‌ உன்‌ உதவியைக்‌ கொண்டு நான்‌ நிறைவேற்ற வேண்‌டிய கர்ரியததை இதோ ‘ஸங்கல்பித்துக் கொண்டேன்‌-ஜீவனுக்கு உள்ளம்‌ புறமும்‌ ஸஞ்சரித்‌து , ஜீவனைப்‌ பீடிப்பதையே தமது விளையாட்டாக உடைய மகா மோகனாதி பகைவர்களை வென்று, ஜீவனை ஸமாதியில்‌ நிறுத்திப்‌ பரமாத்மாவை அடைந்து க்ருதார்‌தனாகச் செய்ய வேண்டிய நியமங்களைக்‌ கண்ணுகம் கருத்துமாய்ப்‌ பெருக்குவதே எனது ஸங்கல்பமாகும்-

ஸூமதி.–சித்தம்‌. . ஆயினும்‌, நித்தியன்‌, நிர்மலன்‌, ஸ்வயம்‌ பிரகாசன்‌, ,ஆனந்த ஸ்வரூபன்‌, என்றெல்லாம்‌ போற்றப்‌ படுகிற ஜீவாத்மா, மகா கொடூரமான துக்க ஸாகரத்துள்‌ எப்படி ௮கப்பட்டு ஏன்‌ பரிதவிக்க நேரிடுகிறது ?

விவேக.--ஏனா ?–ஆகமப்‌ பிரமாணத்தை நம்புவதே அதற்கான பிரதியுத்திரமாகும்‌.-ஜீவன்‌ நிர்மலனே : நித்யனே : ஸ்வயம்‌ பிரகாசனே : ஆயினும்‌, ௮நாதியான கர்ம உபாதியால்‌ பாதிக்கப்பட்டு, ௮ந்தக்‌ கர்ம சேர்க்கையால்‌ மகா மோகன்‌ வசப்பட்டு துக்க ஸாகரத்தில்‌ மூழ்க நேரிடுகிறது. அந்தக்‌ கர்மமென்னும்‌ உபாதி நீங்கும் காலத்‌தில்‌ ஜீவனும்‌ ஸ்வயம்‌ பிரகாசத்துடன்‌ ஆனந்த ஸ்வரூபனாய் நிர்மலனாகி நிதயனாகக்‌ காணப் படுகிறான்‌. ‘ இயற்கை ஸ்வபாவத்‌துடன்‌ செயற்கை காரணத்தின்‌ கூட்டுதலா லுண்டாகும்‌ மாறுதல்களை நாம்‌ ௮னுபவத்தில்‌ காண்பதில்லையா ? வெள்ளை ஸ்படிகத்கினுடன்‌ செம்பருத்திப்‌ பூவைச்‌ சேர்த்து வைத்தால்‌, ஸ்படிகமும்‌ ரக்த வர்ணமாகச்‌ சோபிக்கிற தல்லவா ? அப் பூவை அப்புறப் படுத்‌துவோமாகில்‌ அப்படிகமும்‌ ஸ்வயம்‌ பிரகாசத்துடன் விளகங்கு கிறதல்லவா ?
ஸூமதி.–உண்மை யறிந்தேன்‌. ஸர்வஞ்ஞ ஸர்வ சக்‌தனான. ஸ்ரீ லஷ்மீபதியாம்‌ பரம காருண்ய மூர்ததி, கர்ம சம்பந்தத்‌தால்‌ ௮வதிப்படும்‌ ஜீவாத்மாவை இது காறும்‌ ஏன்‌ உபக்ஷித்தார்‌ ? |
லிவேகன்‌.–இதை ௮றியாயா? லீலை–கருணை என்லும்‌ நேர்‌ முரண்பாடு கொண்ட தேவிகளை ௮ங்கீ கரித்துப்‌ பராதீனனாகப்‌ பரவசப்படும்‌ லீலா விநோதன்‌, எந்தக்‌ கர்மமென்‌னும்‌ பந்தத்‌தினால்‌ ஜீவாத்மாவை சுக துக்கமென்னும்‌ நேர்‌ முரண்பாடு கொண்ட பிரவாஹ மத்‌தியில்‌ ஆழ்த்திக்‌ கரை காண முடியாது தவிக்கச்‌ செய்து ஆனந்திக்கிறானோ அதே கர்மத்தின் பலனாகவே சுக்ருதமென்லும்‌ வியாஐத்தைக் கொண்டு அந்த ஜீவனைக்‌ கர்ம பந்தத்‌தினின்‌றும் விடுவித்து ஸ்வயம்‌ பிரகாசனாக்குவான் –

ஸூமதி..-இதுவரையிலும்‌ ஜிவாத்மாவைக்‌ கவனியாத பகவான்‌, இனி இப்படிச் செய்ய முன் வருவான் என்பது என்ன நிச்சயம்
விவேக.-பேதாய்‌!! உனக்குமா சந்தேகம் ஒவ்வொரு ஜீவனுக்கும்‌, அநாதியாகவும்‌ விசித்ரமாகவு மிருக்கின்‌ற கர்மம்‌, வாஸனை, ருசி , ப்‌ரக்ருதி ஸம்பந்தம்‌ என்னும்‌ சக்கரச் சுழல்‌ உண்டு என்பது யாவரும்‌ ஒப்புக் கொண்ட விஷயமே யல்லவா –அச் சுழலில்‌ கர்மம்‌, பரிபாகப் பட்டுப்‌ பக்குவ தசையை: அடைய முயலுகையில்‌, ஓர் அனுகூல பரிபாகத்‌தில்‌, ஓர்‌ வ்யாஜத்தினால் , ப்‌ரதம ஆசார்யனான பகவான்‌, ஜீவன் மீது அனுக்ரஹித்து அவனை மோஷ ஸாம்ராஜ்யத்திற்கு ஆளாக்குவான்‌-அதுவரை, தாண்டு வதற்கரிய சமுத்‌ர மத்தியிலுள்ள லங்கா த்விபத்தில்‌ தச கண்டனால்‌ சிறை வைக்கப்‌ பட்டிருந்த சீதையைப் போல்‌, கரை காண முடியாத பவ சாகரம் சூழ்ந்த. சரீரமென்னும்‌ த்வீபத்தில்‌ இந்த ஜீவாத்மாவும்‌, ஞானேந்திரிய கர்மேந்ரியக்களாகிய பத்துத்‌ தலைகளை யுடைய மனமென்னும்‌ ராக்ஷஸனால்‌ பீடிக்கப் பட்டவனாய்ச்‌ சிறை வாஸம்‌ செய்ய வேண்டியது தான்‌- ஆஞ்சநேயனை முன்னிட்டுத்‌ தனது சிறை மீட்‌ச்சிக்காகப்‌ பகவானது வருகையை எதிர் பார்த்து அழுது வருந்திக் கொண்டிருந்த அந்தச்‌ சீதையைப் போலே இந்த ஜீவனும்‌, தகுந்ததோர்‌. ஆசார்யானுக்ரகம்‌ பெற்று பரிபக்‌குவமடைந்து பகவானது கிருபா கடாக்ஷத்தால்‌ தானிருந்து வரும்‌ சிறைனின்றம்‌ மீட்கப்பட வேண்டிய காலத்தை எதிர்‌ நோக்கி வருந்த வேண்டியதே. ப்ரக்ருதி ஸம்பந்தத்தால்‌ ஒளியிழந்த ஜீவனது தேவியாம்‌ புத்தியும்‌, ஆசார்யோபதேச பாக்யம்‌ கிடைக்கும்‌ காலம்‌ வரை தானும்‌ சக்தி யற்றவளாகவே தான்‌ இருக்க வேண்டி வருகிறது.

ஸுமதி.–கொடிது ! கொடிது! புத்திபுடன்‌ கூடிய ஜீவாத்மா வுக்கு மோக்ஷஸாம்ராம்யம்‌ கிட்டுவது துர்லபம் என்றே எனக்குத்‌ தோன்றுகிறது. ்‌

விவேக.—அப்படி. எண்ணாதே | தோஷ ரஹிதனானதோர்‌ ஆசார்யனது கடாக்ஷமாகிய ௮மிர்தத்தால்‌ ௮பிஷேபிக்‌கப் பட்ட ஜீவனுக்கே, பாக்ய வசத்தால்‌ பரப்பிரம்ம விஷயத்தில்‌ பரபக்தி யென்பது கைகூடும்‌. சமம்‌ தமம்‌ முதலிய நற்குணங்களின்‌ உதவியால்‌ என்னையும்‌ உன்‌னையும் கொண்டு அந்தப்‌ பக்தி பரீ்ணாம ஸமயத்தில்‌ ஓர்‌ யஞ்ஞம்‌ நடந்தேறும்‌-௮ந்தத் காரணத்தால்‌, பத்த ஜீவனாகிய யாகப் பசு, கர்மமென்னும்‌ . பாசத்தை அறுத்துக்‌ கொண்‌டு ஸ்ரீ மந் நாராயணனிடம்‌ ஓப்படையும்‌. ரஷண பாரத்தைப்‌ பரமாத்மாவிடம்‌ ஓப்படைத்‌த க்ஷணத்திலேயே, லஷ்மீ பதியும்‌ சரணாகதனான அந்த ஜீவனுக்குப்‌ பற்றில்லாததோர்‌ நிலையைச் செய்‌ து கொடுக்கிறான்‌. மோக் ஷஸாம்ராஜ்யத்தை ஜீவன்‌ அக் கணத்திலேயோ அல்லது ஜென்மாந்திரத்தலேயோ கோறுகிறபடியே சரணாகத ரக்ஷகன்‌ லபிக்கச் செய்வான்‌-ஆகவே வேதாந்தமென்‌னும்‌ பட்டணத்தை அறிந்து சேர்ந்‌தவனே, பகவானுடைய தயா ரூபமான்‌ ஒற்றை யடிப் பாதை வழியாய்‌ மோஷமாகிற பட்டணத்தை யடையக் கூடியவனாவன்‌. எனவே ஜீவன்‌ மோஷ ஸாம்ராஜ்யத்தை அடைவது துர்லபமல்ல என்பதை அறிவாய்‌.

ஸூமதி.–பிரபோ ! -அழுகிற குழந்தைக்குப்‌ பழத்தைக் காட்டிச்‌ சமாதானப் படுத்‌துவது போல்‌, எனக்கு இவ்வார்த்‌கைகளைக்‌ கூறியதால் மட்டும்‌ தெளிவு ஏற்படுமா ?மோஷத்தில்‌ ஆசை யுடைய புருஷர்களால்‌. பல தேவதைகளும்‌ உபாஸிக்கப்படுகையில்‌, ஸ்ரீலக்ஷ்மீபதியே மோக்ஷத்‌திற்கு மூல காரணனென்று .நீர்‌ . எப்படிச்‌ சொல்லக்‌ கூடும்‌? அந்த மூல காரணனை அறியப்‌ பலரும்‌ பிரமிக்‌கையில்‌, தாங்கள்‌ ‘௮வனிடத்தில்‌ முடிவான நிச்சயம்‌ வைக்கக்‌ காரணமென்ன -இந்த வேதாந்தங்களின்‌ ஸாரார்‌த் தங்களை நான்‌ ௮றிந்து ஜீவாத்மாவுக்குத்‌ தெரிவிமாறு உபதேசம் செய்தருள்வீராக-

விவேகன் – அப்படியே சொல்‌லுகிறேன்‌ கேள்‌ : தாக விடாயைப்‌ போக்கப்‌ பனித்‌ துளிகளால்‌ ஆகுமோ-சித்திரத்‌தில்‌ எழுதப்பட்ட ஆயிரம்‌ ஸூரியர்கனை ஓன்று சேர்ப்பினும்‌ துளி இருட்டாவது அகலுமோ ? ௮து போலவே ஸ்ரீயபதி விஷயத்தில்‌ செய்யப் படுகின்ற பரமபக்தி தவிர்த்து, இதர தேவதைகள உபாஸிப்பதால்‌ ஸம்‌சாரத் துக்கமும்‌ பந்தமுமாகிற இருள்‌ நீங்குமோ ? அவ் விருளை நீக்க வல்லது ௮ந்தப்‌ பகவானுடைய ‘ஸங்கல்பமென்னும்‌ ஸூர்யோதயாமொன்றே ! உன் மீதும்‌ ஆஸ்திகத்தின்‌ மீதும்‌ ஆணை யிட்டுக்‌ கூறுகிறேன்‌ நம்பு : ௮ஹ்ங்கார மென்னும்‌ முதலையால்‌ பீடிக்கப்பட்டு வருந்திக் கதறும்‌ சரீரி யென்னும்‌ யானையை வெகு வேகமாய்க் காத்தனின்றுமே முராரியின்‌ கருணா பிரபாவம்‌ உனக்கு, விளங்க வில்லையா ?

ஆகவே ௮ந்த லக்ஷ்மீ பதியை ௮டையவல்ல மார்க்கங்கள்‌ பக்தியும்‌ பிரபத்தியுமே. பக்தியோகஞ்‌ செய்ய சிலருக்குத் தான்‌ ௮திகாரம்‌ உண்டு. பிரபத்தியோ ஜாதி மத வித்யாஸமும்‌, ஸ்திரீ புருஷ வித்யாஸமுமின்‌றி எல்லோராலும்‌ அனுஷ்டிக்கசக் கூடிய எளிதான மார்க்கமே யாகும்‌. இந்தப்‌ பிரபத்தியைத்‌ தானாகவும்‌ செய்யலாம்‌. ஆசார்யனையும்‌ தனக்‌காகச்‌ செய்யும்படிப்‌ – பிரார்த்‌திக்கலாம்‌. குறி வைத்து: அடிப்பதற்குப்‌ பழக்கம்‌ வேண்டுவது போல, தானாகவே: ௮னுஷ்டிப்பதற்குப்‌ பழக்கம் வேண்டும்‌. இந்தப்‌ பிரபத்தி ஒரு க்ஷண காலத்தில்‌ நடந்தேறக்‌ கூடிய காரியம்‌. அனுஷ்டானத்தில்‌ ஏதேனும்‌ குறைவு நேரிடினும்‌ ஸ்ரீமந் நாராயணனுடைய பரம காருண்யத்தினால்‌ குறைவு குன்றி நிறைவு ஏற்படக்கூடியது. ஆனால்‌ பக்‌தி மார்க்கமோ கஷ்டமும்‌. பொறுமையும்‌ கூடிய மார்க்கமாகும்‌. இந்திரியங்களை அடக்கி நிச்சல நிர்மல மனத்துடன்‌, சதா பரந்தாமனைக்‌ கோறி அனுஷடிக்க வேண்டிய யோகமாகும்‌. ஒரே ஜன்மத்தில்‌ முடியக்‌ கூடாது போயினும்‌ போகும்‌. ஆயினும்‌, ஜன்ம ஜென்‌மங்கங்களாக விட்ட இடத்தினின்றும்‌ தொட்டுப்‌ பிடித்துப்‌ பூர்த்தி செய்து கொள்ளக்‌ கூடியது. சரணமடைந்தவன்‌ எத்தகை யோனாயினும்‌ அவனை ரக்ஷிக்க வேண்டியதே முறை யென்பது தொன்று தொட்டு ஸ்தாபிக்கப்‌.பட்ட தருமமல்லவா – ஆகவே, பிரபத்தி செய்‌தோரைப்‌ புறக்கணிக்க மாட்டான்‌ பரமாத்மா : எனவே யாவரும்‌ அறியத்தக்க’ தத்வம்‌ அந்த ஸ்ரீமஹா விஷ்ணுவே ! அதற்குப்‌. பிரமாணங்கள்‌ வேத வாக்யங்களே -இதை அறிகின்றவர்‌ ஸத்வம் மிகுக்த ஜீவன்கனே ! *மூத்தோர்‌ சொல்‌ வார்த்தை ௮மிர்தம்‌ ‘ என்பதும்‌ பொய்யோ –

ஸூமதி–நாதா? தெளிவடைந்‌தேன்‌. ‘தன்னுடம்பிலுள்ள வியாதியைத்‌ தானே அறிந்து போக்கிக் கொள்ள வழி தேடாத மூடர்களைப் போலல்லவா ஜீவன்‌ பரிதபிக்கிறது

குளவயி மோக்கணுூ ஸவ மி யங்க கஹாசயியா
ணவ ஸம ரூ ஸூயாவிணய ஹோயிக யிந்த கடா –
தஹ்வி ஜுயந்த ஹோந்த தண யிண்ணுணி ஹக்கணி ஓ
கஹகஹ கோவி ஹந்தணி ஹினம் முஹளே யிணஹம்

விவேகன் – ப்ரியே! உன்னைத் துணையாகக் கொண்ட எனக்கு இனி. வெற்றி கிடைப்பது திண்ணமே. சத்ருக்களை ஜெயிக்க விரும்பும்‌ என்‌ ஆசையாகிய நீர்த்‌ திவலை, ஸ்ரீயபதியின்‌: காருண்யப்‌ பிரவாகத்தினால்‌ பெரு நதியாக, விடா முயற்சி யென்லும்‌ கற்பகத்‌ தருவை! நனைத்து வளர்த்து என்‌ இஷ்டத்தைப்‌ பூர்த்தி செய்விக்கப் போகிறது சத்யமே: ஆகவே இது காறும்‌ ஸ்வபஷ பெருமையை நிலை நிறுத்துவதிலேயே கருத்துக்‌ கொண்டிருந்த நாம்‌, இனி நிர்ப் பயமாய்‌ பர பக்ஷத்தை நிராகரிக்‌கப்‌ போக்க வேண்டிய வழிகளைத் தேடுலோம்‌. வா
(போகிறார்கள் )

மூன்றாம் காட்சி -இடம் -கங்கைக் கரை யோரம் -ஓர் பூஞ்சோலைக்கு எதிரில் —விசாரணையும் ஸ்ரத்தையும் ப்ரவேஸம்

விசாரணை –சகி -வேர்வையும் களைப்பும் காணப்பட்டும் உத்ஸாகம்‌ குறையாது விரைந்து செல்லும் உன் கார்யம் தான் யாதோ
ஸ்ரத்தை--வேதாந்த ஸித்தாந்தம் அல்லாதவற்றைக் களைந்தெறியக் கங்கணம் கட்டியிருக்கும் விவேக மஹா ராஜனது ப்ரதிஜ்ஜை பூர்த்தியாக வேண்டி, மகாராணி ஸூமதி தேவியார்‌ ஓர்‌ மங்கள விரதம்‌ கைக் கொண்டிருக்கின்றனள்‌. அதற்‌காக, ஸ்ரீலஷ்மீபதியின்‌ பாத பங்கயங்களை ௮ர்ச்சிக்கத் தகுந்த தாமரை மலர்களைக்‌ கொண்டு வர எனக்கு ஆஞ்ஜை – அவைகளைத் தேடிக்‌ கங்கையை நாடிச்‌ செல்கிறேன் இவ்வளவு ஸ்ரமப்பட்டுக் கொண்டு –

விசா. -கங்கையும்‌ அதோ நெருங்கி விட்டது -இந்தப்‌ பூஞ்‌ சோலையில்‌ சற்று இளைப்பாறிச்‌ செல்லலாமே-
ஸ்ரத்‌தை – செய்தால்‌ போகிறது . “நீ: இந்தப்‌ பிரதேசம்‌ வந்த காரணம் என்ன-
விசா-விவேக ராஜனின்‌ பிரதிஞ்ஞையைக்‌ ‘கேட்டறிந்த மகா மோகன்‌ கோபாதீனனாகி , ஜீவாத்மாவைப்‌ பல விதத்‌திலும்‌ பீடித்து, கபட யுக்திகள்‌ செய்து புத்தி மாறாட்‌டத்திற்கு ஆளாக்கி வருத்துவதற்கு ஏற்பாடு செய்து வருவது நம் ராணியாருத்துத் தெரிந்தது -தக்ஷணமே விரோதிகளது சூழ்ச்சிகளை சேனாபதியாகிய வ்யவசானனிடம் ஏகாந்தத்தில் தெரிவித்து வருமாறு ஸூமதி தேவியார் என்னை அனுப்பி இருக்கிறார்கள் –

ஸ்ரத்தை--பேய்களின் விவாகத்தில் கழுதைகள் படுவது போல் தான் மஹாமோஹன் பிரயத்தனத்தில் கபட வாதிகளின் கோலாகலம் -இவர்கள் கொள்கை நிலையற்றது -சாத்தியமே நித்யமானது -விவேக ராஜனே முடிவில் வெற்றி பெறுவார் காண் –
விசா -அப்படியே தான் ஆக வேண்டும்-நாழிகையாகிறது -நான் சேனாதிபதியை நாடிச் செல்ல வேண்டும் –
ஸ்ரத்தை–செய் -நானும் மலர்களைக் கொய்து செல்கிறேன் -சீக்கிரத்திலேயே இருவரும் அரண்மனையில் திரும்ப சந்திப்போம் –
(போகிறார்கள் )

நான்காம்‌ காட்சி -வாத மண்டபம் –விவேக ராஜனும் சேனாபதி வ்யவசாயனும் ப்ரவேஸம்

விவேக.–பாதகங்களைப்‌ பரவச் செய்யும் மஹா மோஹனே நிஷ்காரண த்வேஷம் கொண்டு கலகத்துக்காகவே கபட ஸித்‌தாந்‌திகளை ஏற்படுத்தி அன்னாரது சிஷ்ய வர்க்கங்களை விருத்தி செய்வித்து என்‌ அபிஷ்டத்தைக் கெடுக்கப் பார்க்கிறாய்‌–இதோ நானும் என் ஸித்தாந்திகளையும் சிஷ்யர்களையும் பரவச்செய்து மோஹித்த ஜீவனை விடுவிக்கிறேன் பார் அப்யாசங்களின் நின்றும் -என் கோறிக்கை நிறைவேற ஈடேற ஸ்ரீ ஹயக்ரீவர மூர்த்தி தான் அனுக்ரஹித்து அருள வேண்டும்(த்யானம் செய்கிறார்கள்)

ஸமாஹாரஸ் ஸாம்நாம்‌ ப்ரதிபதம்ரு சாந்தாம யஜுஷாம்‌
லய:ப்‌ரத்யூஹாநாம்‌ லஹரி விததிர் போத ஜலதே:
கதாதர் பஷுப் யத்ப்‌ரதி கதக கோலா ஹல பவம்‌
ஹாத்வந்தர் த்வாந்தம் ஹய வதந ஹேஷா ஹல ஹல

வ்யவ.–பிரபோ! வெற்றிக்குச்‌ சற்றும்‌ சந்தேகமில்லை, புருஷனுக்கு வேதாந்தத்தில்‌ உண்மையான ஞானம்‌ உம்மால்‌ உண்டாக்கப்பட்டு விட்டது. ஸ்ரத்தை குறைவு மாத்திரமே விலக்கப்‌ பட வேண்டியதாயிருக்‌கிறது -‘சத்ரு பக்ஷத்தைக்‌ களைவதற்காகத்‌ தம்மால்‌ நியமிக்கப்பட்ட வாதத்துடன்‌ வேதாந்த ஸித்தாந்தம் அடித்தார்‌ இதோ வருகிறார் பாரும் –
[அவ் விருவரும்‌ ஓர்‌ புறமாய்‌ நின்று கவனிக்க ஆசார்ய சிஷ்ய பாவனையுடன்‌ ஸித்தாந்தமும் வாதமும்‌ பிரவேசம்‌. ]

ஆசார்யர் -ஆயுஷ்மன்‌ ! பந்தக்காலை ௮சைத்தசைத்தே மணலிலிறக்கி உறுதி செய்வது போல சத்ருவாதிகளாகி ராஷஸர்களுக்கு ஹநுமானை யொத்த உன்னால்‌ நமது வேதாந்த தத்வார்‌த்தங்கள் திடமாக ஸ்தாபிக்கப்படும் என்று நம்புகிறேன்-

சிஷ்யர் -பகவன் –சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறார் –

உபிவீதி ந மூர்த்வ புண்ட்ர வந்தம் த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம்
சரணாகத ஸார்த்த வாஹ கந்த்வாம் சிகாய சேகர சாலிநம் பஜாமி –

ப்ரதிஷ்டாபி வேதாந்த ப்ரதி ஷிப்த பஹிர் மத
பூயாஸ்த்ரை வித்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம்

ஆசார் – ஆயுஷ்மன்‌ ! பரமத கண்டனஞ்‌ செய்து நிகமாந்த ஸித்தாந்தத்‌தை ஸ்தாபித்து ஸர்வ மங்களத்துடனும்‌ விளங்குவாயாக
(ஒரு திவ்ய பவித்ரத்தைக் கொடுக்கிறார் )
சிஷ்யர்
–பவித்ரத்தை வாங்கி சிரமேல் அணிந்து விரல்களில் அணிந்து கொள்கிறார் ) கேட்க யோக்யதை உள்ளவன் என்று கருதப்படுவேனாகில்‌ சில சந்தேகங்களைக்‌ கேட்டு நிவர்‌த்தித்திக்‌ கொள்ள ஆசைப்படுகிறேன்

ஆசார்யர் -ஸ்ரேயஸ் மிகுந்த சிஷ்யனுக்கு ஸம்ஸயம் வாய்த்த போது சொல்லத் தகாததும் உண்டோ -உன் ஸம்ஸயம் யாது –

சிஷ்யன் –பகவன் -வாதத்தில் வெற்றி பெற்றவர் ஸ்மஸாநத்தில் மலட்டு மரமாகப் பிறப்பார்கள் என்பது மஹ ரிஷிகளின் வாக்காயிற்றே -அப்படி இருக்க அடியேன் எதிரிகளை வாதித்து ஜெயிக்க வேண்டும் என்று எப்படி விரும்புவது –

ஆசார்யர் -பத்ர நன்றாய்க் கேட்டனை -விதி நிஷேதங்களாகிற செய்யத் தக்கனவும் செய்யத் தகதானவும் ஆகிற கார்யங்கள் யாவும் –வர்ணம் ஆஸ்ரமம் ஜாதி கோத்ரம் ப்ரவரம் குலம் சரணம் இடம் காலம் இவைகளைப் பொறுத்ததல்லவா -விச்வாமித்ரரது நியமனப்படி ஸ்ரீ ராகவன் யாக ரக்ஷணம் செய்தது போலே நீயும் என்னுடைய அதிகாரம் பெற்றவனாய் விரக்தர்களோடு பிரசங்கிக்கும் வேளை தவிர்த்து பிரதிவாதிகளை எதிர்க்கும் காலத்தில் பலை அதி பலை என்பதைக் போன்ற வீரவாதம் விதண்டா வாதங்களால் ஜெயிப்பாயாகில் இத்தகைய விலக்குகளுக்கு இலக்காக மாட்டாய் –

சிஷ்‌-பாக்யம்‌? எந்த ஸித்தாந்தத்தை ஆதாராமாக வைத்துக் கொள்ள வேண்டுமோ அதை அடியேனுக்கு அனுக்ரஹித்து அருள வேண்டும் –

ஆச்சார் -பத்ர ஸ்வ கோஷ்ட்டி வாதங்களில் இரு கக்ஷியினரும் ஒப்புக் கொண்ட ப்ரமாணத்திலேயே நிற்கக் கடவாய்–பராசரர் வியாசர் சுகர்‌, செளநகர்‌, போதாயனர்‌ முதலானோரது வழிகளைப் பற்நியதான நமது ஐந்தாறு கிரந்தங்கள்‌ இருக்கின்றன; அவைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு, நீ கூறும்‌ பிரமாணங்களும்‌ ‘ யுக்திகளும்‌ ஸபையோர்களது மனத்‌தில்‌ ௮ழுந்தி அவர்களை மகிழ்விக்கக்‌ கூடியனவா யிருத்தல்‌ வேண்டும்‌
சிஷ்யன் -ஒரு சம்சயம்

ஆசார்‌. என்ன

சிஷ்ய -தானே தர்ம உபதேசம் செய்து அதற்கு விரோதமாக ஜீவன்களை நடக்கும்படித் தானே நியமிக்கிற பகவானை எப்படி ஆப்தன் என்று சொல்லக் கூடும் –

ஆசார் -ஓ ஓ மிகவும் ஸூஷ்மமான அர்த்தத்தையே கேட்டனை

சிஷ் –மேலும் எப்பேர்க்கு ஒத்தவனுக்கும் சிற்சில காரணங்களினால் எதனாலும் தடுக்க முடியாததாக சம்பவிக்கக் கூடிய பாபங்களை விட்டுவிட வேண்டுமென்று விதித்திருக்கிறதே -அது எப்படி ஆகக் கூடியது –

ஆசார்‌. -௮தி ஸூஷ்மமான கேள்வியே இ து!

சிஷ் –தவிற தன்‌ நியமனத்தினுலே பாபாதிகளில்‌ பிரவேஸிக்கும்‌ ஜீவலுக்கும்‌, அந்தப்‌ பகவான்‌ தானே தண்‌டனைகள்‌ விதிப்பது எப்படி நியாயமாகும்‌?

ஆசார்‌.-நன்றாய்க்‌ கேட்டனை! ‘இவைகள்‌ எதிலும்‌ ஒருவித விரோதமுமில்லை.-ஏனெனில்‌, கர்மம்‌ என்னும்‌ ஒரு காரணமே இம் மூன்று கேள்விகளுக்கும்‌ ஏற்ற சமாதானமாகிறது. பகவானது இச்சை, ௮நாதியான கர்ம வாஸனையின்‌ காரணத்தால்‌ ஜீவ்னைத்‌ தடுக்க முடியாக பாபத்திற்‌குள்ளாக்குகிறது. அந்தக்‌ கர்ம வசமானவனுக்கும்‌, ஸுஹ்ருதம்‌ பரி பாகம்‌ ௮டையுங்‌ காலத்தில்‌, அந்தப்‌ பாபகங்களயும்‌ தடுக்க வல்ல கர்மங்களினாலேயே பாபங்களை நிவ்ருத்தி செய்யப்‌ பிரயத்தனம்‌ ஸம்பவிக்கும்‌. ௮ப்‌படிக்கல்லாதவனுக்கு, அவனவன்‌ கர்மானுஸாரமான பலம்‌ லபிக்க வேண்டியதே முறை. ஆதலால்‌, பகவான்‌ ஆப்‌தனென்பதிலும்‌, பாபம்‌ நிவ்ருத்‌திக்கக் கூடியதென்‌பதிலும்‌, தண்டனை ௮வஸ்யமே என்பதிலும் வேண்டல்‌ விரோதம் ஏதும் இல்லை யல்லவா –

சிஷ்யன் -(குதூகலத்துடன் ) தெளிந்தேன்‌ ‘தெளிந்தேன்‌ ‘- (திரும்பிப்‌ பார்த்‌து) ௮டே மூர்க்கர்களே ! எங்கள்‌ மதப்‌ பெருக்கைச்‌ சிறிய தென்றா ௮வமதிக்‌கிறீர்கள்‌? ௮நேகம்‌ கந்தைகளால்‌ முடிந்து ஒன்றாக்கப் பட்ட உங்கள்‌ ஸித்‌தாந்தங்கள்‌ யாவற்றினையும்‌ இதோ கிழித்தெறிந்து உதறி யெரிகிறேன்‌ காணுங்கள்‌?, என்ன ?…என்ன (செவி சாய்த்துக் கேட்டு) இது புது மதமா – ஹ ஹ ஹா ! (கை கொட்டிச்‌ சிரித்‌து) எந்தப் பொருளும் உண்டாகும் பொழுது புதியது தான்‌. நாளா விருத்தியில்‌ இந்தப்‌ புதியதே பழையதாக . விடுகிறது ! புதியதும்‌ பழையதுமா யிருத்தல்‌ குணத்தக்கும்‌ தோஷத்துக்கும்‌ காரணமாகாது. எது வஸ்துவின்‌ உண்மையை ௮னுஸரித்ததோ ௮துவே புத்திசாலிகளால்‌ நம்பத் தக்கதாகும்‌. எம்‌ மதமும்‌ புதிய தல்லவே !

ஆசார்‌.–பத்‌ர! கபட வாதிகளைப்‌ பேதித்தெறியக்‌ கூடிய யோக்யதை பெற்றுள்ள உனக்கேற்ற ஸபாத்யக்ஷரும்‌ ஸப்யரும்‌ இல்லையே என்று தான்‌ சிந்திக்கிறேன்‌.

விவேக. –(ஒரு புறமாய்‌: ஸேனாபதியுடன்‌) ஸேனாபதி! நாம் இவர்கள் முன்‌ தோன்ற இது தான்‌ ஸமயம்‌ (முன்‌ வந்‌து நமஸ்கரிக்கின்‌றனர்‌. )

ஆசார. -ஸர்வ மங்களானி பவந்து.! ஹே ராஜன்‌ ! கோமுக வியாக்ரர்களை நிக்ரஹிக்கும்‌ பகவான்‌, உம்மை ரக்ஷித்து வேதத்தை நிலை நிறுத்திக்‌ கொள்வாராக !
விவேக.–பாக்யம்‌ !
ஆசார்‌.–ராஜன்‌ ! நற் சமயத்தலேயே வந்தீர்கள்‌ !: உமது இஷ்ட பூர்த்தியை இந்தச்‌ சிஷ்யன்‌ மூலமாய்‌ ௮டைவீராக! உமது ஏவல்களைச்‌ செய்து முடிக்கச்‌ சித்தமாய்‌ உளன்‌ இவன்‌.

விவேக–நியமனம் -சிஷ்யனை நோக்கி -சவும்ய ! நீரே வாதிராஜனாகுவீர்‌! ஸாத்விகர்களது சேர்க்கையும்‌ அனுக்ரஹமும்‌ கிடைக்கும்படி நடந்து கொள்ளும்‌. பெரியோர்களது அனுஷ்டானத்தையே நிலை நிறுத்தும்‌. ப்ரஹ்ம வித்துக்களுடைய அபசாரம் பெறாதேயும் -ஸர்வாபசாரங்களையும்‌ பொறுக்க வல்லவனான ஸ்ரீமந்‌ நாராயணனிடத்திலேயே எல்லா பாரத்தையும்‌ ஒப்புவித்து, ௮வனது ஆஞ்ஞானுக்ஞா காரியங்களையே செய்து கொண்டிரும்‌. வேதாந்த வாக்யங்களையே சதா பரிசயம்‌ செய்து கொண்டிரும்‌. பெரியோர்களுக்கே சர்வதா சிச்ரூஷை செய்து கொண்டிரும்‌. வேதாந்த. விரோதிகளை திரஸ்காரஞ்‌ செய்யும்‌,

ஆசார.-ஆயுஷ்மந் ! ஸாவதானத்துடன்‌ கேட்டுக்‌ கொள்ளும்‌. அவ்வளவையும்

சிஷ்‌.–௮னுக்ரஹம்‌!

விவேக–ஓரு பானை சாதத்திற்கு ஒரு ௮விழே பதம்‌ போலவும்‌, மாற்றுப்‌ பார்க்கும்‌ நிமித்தம்‌ தங்கக் கட்டி பூறாவாகவும்‌ உரைக்கப்‌ படாதது போலவும்‌, ப்‌ரமாண மார்க்‌கத்தை விட்டு நழுவின முக்யாம்சங்களையே எடுத்து, கோடி. காண்பிப்பது போல, வாதிகளை வென்றால்‌ போதுமானது.

சிஷ்‌.–உத்திரவு -என்னுடன்‌ வாதத்தித்கு வருபவர்கள் வரட்டும்

ஜயதி ஸகல வித்யா வாஹிநீ ஜென்ம சைலோ
ஜனிபத பரிவிருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி ஸாகீ
நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூர்யோ
நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோய தீந்த்ர

(திரைக்குள்‌) ஸேது முதல்‌ ஹிமாசலம் வரையிலு முள்ள எந்த ஸித்தாந்த வாதிகளையும்‌ நாங்கள்‌ லக்ஷியஞ்‌ செய்ய மாட்டோம்‌.” ।
வ்யவ.–கேட்டீர்களா -கபட வாதிகளது வீர வாதத்‌தைக்‌ கேட்டீர்களா ? |

சிஷ்யன்–கேவலம் தமது உத்ஸாகத்தையே சாதனமாகக் கொண்ட கடட வாதிகள் எல்லோரும் ஏக காலத்தில் எதிர்த்தாலும் எனக்கு எதிர் நிற்க மாட்டுவரோ -குருடனுக்கு குருடன் கோல் கொடுக்கும் கதை யல்லவா இவர்கள் வாதம் – நம்‌ யதிராஜனால்‌ பிரகாசிக்கப்பட்டதும்‌, ௮ஞ்‌ஞானமென்னும்‌ இருட்டிற்கு விடியற்காலமானதுமாகிய சரீர சரீரி பாவமென்னும்‌ ப்‌ரதிதந்திரத்தை எவன்‌ அறின்றானோ, ௮நத மஹானைக் கண்ட மாத்திரத்திலேயே , தத்தம்‌ மதஸ்தாபனத்திலேயே குதாகலித்துத் துள்ளும்‌ கபடவாதமென்னும்‌ பெரு முழக்கம்‌ கணப்‌ பொழுதில்‌ விநாசமடையுமல்லவா –

வ்யவ.–நன்கு ‘கூறினீர்‌:! இனி, ப்‌ரதிவாதிகளது கொள்‌கைகளை ஒவ்வொன்றாகக்‌ கண்டனஞ்‌ செய்வோம்‌–.

சிஷ்‌ –அப்படியே ! !

ஆசார்‌--ஸவ்மய ப்‌ரகிருதியையும்‌ ஜீவாத்மாவையும்‌ பிரித்‌து விட்டு , பரபுருஷன்‌ என்ற ஒருவன்‌ இல்லை யென்னும்‌ சாங்கிய மதத்திற்கு. என்ன பதில்‌ சொல்லுவாய் ‘

சிஷ் -ஆசார்யரையும் சபையோரையும் வணங்கி — ப்ரக்ருதியும்‌ ஜீவாத்மாவும்‌ ஸ்ருதி பலத்தால்‌ இவர்களால் அங்கீகரிக்கப்‌படுமாயின்‌, ௮தே அநேகம்‌ ஸ்ருதிகளுக்கும்‌ நாதனான அந்தப்‌ பரமபுருஷன்‌ மாத்திரம்‌ ஏன்‌ கிடையாது? யோக சாஸ்‌திராப்பியாச காரணத்தால் , பரம புருக்ஷனுடைய ஐச்வரியத்தைப்‌ பிரதிபிம்பத்துக்குச்‌ சமானமாகக்‌ கூறுகிறார்களே இவர்கள்‌–ஈஸ்வரனுக்கு ஞானம்‌, சத்தி, பலம்‌ முதலிய குண ஐச்வர்யங்கள்‌ ஸ்வபாவமாகவே உண்டு என்கிற வேத-வாக்கிரங்களக்கு ஏன்‌ பதில்‌ சொல்ல வில்லை

வ்யவசா -நன்றாகக் கண்டனம் செய்தாய் -கணாநாதருடைய மதத்திற்குப் பதில் என்ன –

சிஷ் -பதிலா ?–. மோஷானுபவம்‌ ஆனந்தரூபமன்று என்றும்‌, ௮ஃது பாஷாணத்தை யொத்தது என்று மல்லவா கூறுகிறார்கள்‌ இந்த வாதிகள்‌ ? அப்படியாயின்‌, கும்பகர்ணனுடைய ௮னுபவமே பரம சுகமானதாகிறது இவர்கள்‌ வாதப்படி ! ௮வன்‌ தூக்கம்‌ சாபமல்ல, அநுக்ரஹமே ஆகிற தல்லவா இந்தக்‌ கக்ஷியின்படி.

வ்யவ.–ஒரே வார்த்தையில்‌ கண்டித்‌து விட்டீர்‌ -கணந தோறும்‌ ப்ரபஞ்சம்‌ நாசமடை தென்‌று வாதிப்‌போரை ௮டக்கும்‌ முறை?

சிஷ்ய –பலமற்ற அக் கஷியினோரைப்‌ பற்றியும்‌ பேச வேண்‌டுமோ ?. ஒருவரை யொருவர்‌ பொய்யனென்று சொல்‌லிக்‌ கொள்ளும்‌ பல பிரிவுகள்‌ கொண்ட இவர்கள்‌, தங்கள்‌ தங்கள்‌ வாதத்தை ௮றிந்து ஸ்‌திரப்படுத்தப்‌ பார்க்கிறார்களா, அல்லது, சொல்வதை அறிந்து கொள்‌ளாமிலேயே பொய்‌ என்று பிதற்றித்‌ திரிகிறார்களா –

வ்யவசா -ஸ்லாகையோடு. சுருக்கமமாயும்‌ : கம்பீரமாயும் இருக்கறது பதில்‌!–, ஆயினும்‌, உலகமே பொய்‌யென்று ஓரு சாரார்‌ வாதிக்கிறார்களே -அவர்களுக்கு என்ன பதில்‌ –

சிஷ் -தன்னைப் பெற்ற தாய் மலடி என்றும் வாதிப்போருடன் பிரதிவாதம் செய்து என்ன பலன் –
திரைக்குள் பிசாசுகள் பிசாசுகள் என்ற கூக்குரல்

வ்யாவ –அது ஒரு மதஸ்தர் கூக்குரல் -அவர்களையும் நிராகரிக்க வேண்டும் நாம்

சிஷ் –-தவறுதல்‌ தவிர்த்த வேறு விஷயம்‌ இவரிடம்‌ இடையாது, *உண்டு ” என்பதை *இல்லை’ யென்பார்கள்‌- இல்லை ” என்று கூறியதையே *உண்டு ‘ என்பார்கள்‌. முரண்பாடுகொண்ட இவர்கள்‌ வார்த்தைகளே இவர்‌கள்‌ மதத்தைக்‌ கண்டிக்கப்‌ போதுமானதாகும்‌. வேத மார்க்கத்தை இவர்கள்‌ தூஷித்ததால்‌, தேவதைகளை ‘ இவர்களுக்குத்‌ தகுந்த தண்டனை விதித்திருக்கிறா கள்‌. தங்கள்‌ தலைமயிரைத்‌ தாங்களே பிடுங்கிக்‌ கொள்ள விதிக்கப்பட்டிருக்கும்‌ இவர்களது ௮வஸ்யே இவர்‌களுக்குப்‌ போதுமான கண்டன தண்டனையாகும்‌.

(உள்ளே, பேரிரைச்சல்‌, இடி முழக்சம்‌, காரிருள்‌, கனத்த மழை )

வ்யவஸா – கேட்டீர்களா ! ஸூர்யஸ்தம்பநம்‌ முதலிய, செய்து வரும்‌ திகம்பரர்‌ நமது கண்டனத்தைக்‌ கண்டு சகியாது, வஞ்சனையால்‌ இந்த ௮கால மழையை உண்டாக்கி ஜனங்களை மருளச் செய்து தமது சித்தாந்தத்திலேயே நம்பிக்கை யுண்டாக்க முயல்இறார்‌கள் ! இவர்களை இக் கணமே கண்டித்தல்‌ வேண்டும்‌!

ஆசார்‌ -தன்னைச்‌ சரண மடைந்தவர்கள்‌ ௨ழன்று தவிக்கும்‌ ஸம்ஸார ஸாகரத்தைப்‌ பானஞ் செய்த, ஜீவனைக்‌ கரை யேற்றுவிப்பவனான ஸாக்ஷாத்‌ பகவான்‌, இவ் வஞ்சனைகளைத்‌ தானே கண்டனஞ் செய்யக்‌ காத்திருக்க, நாம்‌ கவலை கொள்வானேன்‌?

(இரைச்சலடங்‌க, மழை நின்று, வெளிச்சம்‌ பிரசாசிக்கிறது )
யாவரும்‌.-
ஆச்சர்யம்‌! ஆச்சர்யம்‌! பகவான்‌ பிரஸந்நனே – பிரஸந்நனே-

அங்கம் 1—நான்காம்‌ காட்சி

விவேக–குரோ தேவரீர்‌ சிஷ்யர் மற்றொரு வேத வ்யாஸர்‌ போல,பாஞ்சராத்‌ர மஹிமையைத்‌ தெளிவுற ஸ்தாபிததார்‌ ! கெளமாரில கக்ஷியாரது கொள்கையையும்‌ கண்டனம் செய்யும்‌ மார்க்கம்‌ கூறில்‌, நம்‌ சித்தாந்த வாதம்‌ பூர்ணமாகு மென்று நம்புவேன்‌,

ஆசார்‌-வேத ஸம்‌ரக்ஷகர்களாயும்‌, வேதாந்தத்தை விட்டவர்களாயு மிருக்கிற கெளமாரிலராதியோர்‌, சந்தோஷப்படுத்தவும் பயமுறுத்தப்படவும்‌ தக்கவர்‌களே.

சிஷ் –தலையில்லாத உடல்‌”. அவ்வளவே தான்‌ ௮வர்‌ கள்‌ சித்தாந்தம்‌.

விவேக-பாஷண்டிகளால் சூழப்பட்ட இந்தக் காலம்‌, மஹா ஸமர்த்த வாதியான உம்மால்‌ புண்யமடைந்ததாகவே ஆகிறது !

வ்யவ.–அரசே! இவருக்குத்‌ தகுந்ததோர் சம மானம் செய்தருள்வேண்டும்‌.

சிஷ்‌-.ஆசார்ய ஸ்ரேஷ்டரது அனுக்‌ரகமும்‌, இந்த மகாராஜனது கடாஷமும்‌ கிருபையுமே எனக்குப் போதுமான சம்மானமாகும் –

விவேக, பகவந்‌ ! சேனாபதி கூறியது நியாயமே–. ஸ்வாமின்‌! தாங்கள்‌ பூஜ்பரே ! சிஷ்ய.– ஆயின்‌, அடியேனது ஆசார்ய ஸ்ரேஷ்டரான இந்த பகவானே தமது பூஜைக்கு ௮ர்‌ஹராகிறார்‌-
ஆசரர்‌–என்‌ நியமனத்தால்‌ நீயும்‌ சம்மானிக்கத்‌ தகுந்தவனே!

விவேக..-பகவரந் ! தேவரீரது சிஷ்யர்‌ வேதாந்த ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்‌. இவரால்‌, தத்வ ஞ்ஞானம்‌ மிகவும்‌ உறுதியாக உண்டாக்கப் பட்டதென நகரத்தில்‌ தண்டோரா போடப்படட்டும்‌. இந்தக்‌ கடகத்தைத்‌ தன்‌ இடது காலில்‌ இந்த வாதி கேஸரி ௮ணிந்து கொள்ள வேண்டும்
(கடகத்தைக் கொடுக்கிறார் )
சிஷ்
–(ஆசார்யனை நோக்கிய வண்ணம்‌ மெளனம்‌)

ஆசார்‌..-ராஜாஞ்ஜை மீறத் தகாதது. அப்படியே செய்வாயாக!
சிஷ் . -நியமனப் படியே–(கடகத்தை வாங்கிக்‌ கொள்கிறார் )
ஆசார்‌-ஆயுஷ்மன்‌ ! இனி நீ செய்ய வேண்டிய கடமைகளைக்‌ கூறுறேன்‌ கேள்‌ –பணம்‌, கியாதி, பூஜை இவைகளை அடைவதில்‌ ஆசை வையாதே. உத்தம சிஷ்யர்கள்‌ கிடைக்குமிடத்து எவ்விதப்‌ பிரதி ப்ரயோஜனமும்‌ எதிர்பாராமல்‌ அவர்களுக்கு வேதாந்த சாஸ்‌திரப்‌ பரவசனம்‌ செய்வதையே விரதமாகக்‌ கொள்ள வேண்டும்‌;

சிஷ்‌-பகவந் நியமனப்படியே

விவேக-— தமது ஆஞ்ஜையை ஊக்கத்துடன் நிறைவேற்றுவிக்க இப்பொழுதே புறப்படும்‌-நாங்களும்‌ சத்ருக்களின்‌ சேனையை நாசம்‌ செய்வதற்காகப்‌ ப்ரயத்தனிக்க இதோ செல்கிறோம் (போகிறார்கள்‌-திரை விழுகிறது )

ஐந்தாம்‌ காட்சி–இடம்‌ :—ஓர்‌ காட்டுப் பாதை–ராகனும்‌, த்வேஷனும்‌. பிரவேஸிக்கிறார்கள்‌.]
ராகன்‌-
-நண்ப ! விவேகனது ‘வஞ்சனையினால்‌ மகா மோக ராஜன்‌. வளர்த்து வந்த பல்வேறு ஸித்தாந்தங்களெல்‌லாம்‌ தீவிரமாய்க்‌ கண்டிக்கப் பட்டன. இனி உன்‌ உதவியினால் தான்‌ நான்‌ மகா மோக ராஜ்யத்தைத் திரும்பவும்‌ நிலை நிறுத்த முயல வேண்டும்‌. நமது முதல்‌ முயற்சி விரக்தியையும்‌ விஷ்ணு பக்தியையும்‌ ஜீவனை ௮ணுகாதிருக்கச்‌ செய்வதே யாகும்‌. மாரீசன்‌ வஞ்சனையினால்‌ ராமனைச்‌ ஸீதையிடமிருந்து அகற்றினது போல, நானும்‌ விரக்தியை விரட்டி விடுகிறேன்‌. ராவணன்‌ ஸீதையை ௮பகரித்‌துச் சென்றது போலே நீயும்‌ ௮தே சமயம்‌ விஷ்ணுபக்தியைப்‌ பலாத்கரித்தேனும்‌ விலக்க வேண்டும்‌. தெரிந்ததா?
துவே –அப்படியே|

ராகன்‌. –அற்ப சுகத்தை இச்சிப்பவன்‌ ஆசைக் காரன்‌ எனப்‌படுவானாயின்‌, பேரின்பமென்பதைக்‌ கோறுபவன்‌ பேராசைக்‌காரனாகிறா னல்லவா – அன்னாக்கு விரக்தி எப்படி உண்டாகக்‌ கூடும்‌? தன்னைத் தானே ௮டைவது” என்‌றதே சுகமாகுமா? மற்றொன்றை அனுபவிப் பதினாலல்லவா சுக, மேற்படக் கூடும்‌–ஆகவே காமமே யன்றோ ப்ரஸித்தமான புருஷார்த்தமாகக் கூடியது

துவே. நன்றாய்‌ சொன்னாய்‌ -ஹ ஹ! இந்த உலகம்‌ பரமாத்மாவுக்குச் சரீரமாம்‌ ! உலகமோ துக்கம்‌ நிறைந்தது -ஆகவே பராமாத்மாவும்‌ துக்கத்தை அடைந்த வனல்லவா? பரமாத்மாவை அடைவதால்‌ துக்கம்‌ எப்படி நிவ்ருத்தியாகக் கூடும்‌ ? ௮ப்படிக்கின்‌றி , அடையப்படுவது நிர் விசேஷப்‌ ப்ரஹ்ம மானால்‌, ௮து ஸூக ரூபமாக ஆக மாட்டாதே! ஆகவே உபநிஷத்‌து வாக்கியங்கள்‌ கேவலம்‌ ஏட்டுச்‌ சரக்காய் தானே ஆகின்றன –

ராகன்‌–சபாஷ்‌! இந்த ஞானம்‌ ஜீவனுக்கு இருக்குமாயின்‌, விஷ்ணு பக்தி இருந்த இடம்‌ தெரியாமல்‌ ஓட்டம்‌ பிடிக்க வேண்டியது தான்‌ ! எந்த ஸ்‌தீரிகளது மோகத்தினின்றும்‌ ஜீவனை விடுவிக்க வேண்டுமென்று விவேகன்‌ முயற்சிக்கிறானோ ௮ந்த ஸ்‌த்ரீகளின்‌ குணங்களாலேயே இதே விவேகனே கட்டுப்படுகையில்‌, விரக்தி உலகில்‌ எப்படி உண்டாகக் கூடும்‌ நாம்‌ காம வலையைத் தீவிரமாய்‌ விசி வருவோமாகில்‌ பேரானந்த ௮னுபவங்களுக்குக்‌ காரணமான ௮ங்க ௮வயவங்களையுடைய ஸ்‌த்ரீகளை மாம்ஸ பிண்டங்களென்று வைதிகப்‌ பிசாசுகள்‌ மூடர்களை வஞ்சித்து வருகிறார்களே.! ஆயினும்‌ ௮ந்த யுவதிகளின்‌ நடை யென்னுங்‌ கதியைக்‌ கண்ட க்ஷணத்திலேயே, இவர்கள்‌ ஸ்மாதியின்‌ ௧கி ௮தோ கதி யடைந்து விடுறதல்லவா ! (உற்றுக்கேட்டு) இல்லையா ? ௮ந்தோ ! குருடனுக்கு? பாலின்‌ நிறத்தை எப்படிக் காட்டுவது –

துவேஷ- விவேகனை வெல்வோமாகில்‌ இந்த வைதீகப்‌ பேய்‌களனைத்தையும்‌ வென்றவராவோம் -நானே அக்காரியத்தை முடிக்க வல்லவன்‌ -ஹ! ஹ! ! ஹ! (உரக்கச்‌ சிரித்‌து ) எந்த உபநிஷத்தில்‌ விழுந்து புரண்ட போதிலும்‌, அழுக்கடைவதைத்‌ தவிர்த்து விவேகனால் ப்ரஹ்மத்தைக் கண்டு விட முடியுமோ நானிருக்கும்‌ வரை?
(திரைக்குள்‌: யார்‌ அப்படிக்‌ கூறுவது – அப்படிக்‌ கூறுவது யாரடா ? )

ராகன்‌. (பயத்‌துடனும்‌, பரபரப்புடனும்‌., ஐயையோ ! நாம்‌ எவ்வளவோ சிரமப்பட்டும்‌, விரக்தியும்‌ விஷ்ணு பக்தியும்‌ நம்‌ வலைகளைக் கடந்து ௮தோ வரும்‌ விவேகனையும்‌ ஸூமதியையும்‌ ௮ணுகுகிறார்களே ! நம்‌ மகாராஜனின்‌ உத்திரவை எப்படி நிறைவேற்றுவிக்கப்‌ போகிறோம்‌ ? நம்‌ ௮திர்ஷ்டம்‌ மாறி விட்டது போல்‌ காண்கிறதே -இச் சமயம்‌ நாம்‌ தனித்து இவர்களிடம்‌ அகப்பட்டு கொள்ளக் கூடாது! நம்‌ தோழர்களான காம க்ரோதாதியோரைக்‌ கலந்து யோஸித்தே. தகுந்த வழி செய்ய வேண்டும்
(ஒடி விடுகிறார்கள் )

ஆறாம் காட்சி -இடம்‌ :–ஸபா, மண்டபம் –விவேக்கும் ஸூமதியும்‌ பிரவேசம்‌. | விவேக –பெண்ணே ! இன்னமுமேன்‌ உனக்குப்‌ பயம்‌? எதிரி ஏவின சோரார்களிடமிருந்து தப்‌பி ) விரக்தியும்‌ . விஷ்ணு பக்தியும்‌ உன்னைத்‌ திரும்பவும்‌ அடைந்து விட்‌டார்களே!
ஸூமதி , (பெருமூச்செறிந்து ) ஆயினும்‌, எப்பொழுதும்‌ மறைவிலைேயே இருக்கும்‌ ராகனும்‌ துவேஷனும் எச்சமயம் என்ன தீங்கு செய்வார்களோ என்றே என் மனம் சலிக்கிறது

விவேக.--பேதாய்‌! அக்கவலை நீ கொள்ளத் தக்கதல்ல.கீதோபசேசம்‌ செய்த பகவான்‌, முடிவில்‌ கூறியதை மறந்தனையோ ? தன்னையே சரணமடைந்தோரைக்‌ காப்‌ பாற்றுவது ௮வன்‌ பொறுப்பே யல்லவா ? அப்படிச்‌ ச்ரணமடைந்த பிறகு ஜீவனுக்குப்‌ பயம்‌ ஏது?
ஸுுமதி. _-(துக்கத்‌துடன்‌) எனிலும்‌, . சுக துக்காதிகளில்‌ மாறி மாறிச்‌ சுழன்று வருந்தும்‌ ஜீவாத்மாவின்‌ கஷ்டங்களைக்‌ கண்டு ஸூகிக்க என்னால்‌ ஆக வில்லையே !
விவேக.–(அனுதாபத்துடன்‌)–. இனி வருந்துத லொழி! ஜீவனுடைய புண்ய விசேஷத்தால்‌ அவனது புத்தி பர ப்ரஹ்மத்தினிடத்தில் அவனுக்கு அளவில்லாத ஆசையை உண்டாக்குகிறது -சிற் சில ஸமயம்‌, புத்தி, மோகத்தால்‌ சலித்த போதிலும்‌ திரும்பவும்‌ ஜீவன சக்திக்‌ கேற்றாப் போல்‌, பக்‌தியிலோ பிரபத்தியிலோ வந்‌து நிலை நிறுத்தப்படுறது. “இந்தச்‌ சக்தி உண்டானதும்‌, ஸ்வர்க்க சுகத்தைத் கூட நரக வேதனையாய்‌ நினைத்துப் பரமாத்‌மாவின்‌ பாதார விந்தங்களிலே ஸ்‌திரப்பட்டு நிலைத்து விடுகிறான்‌. ௮ப்பொழுதே அவனக்கு மோக்ஷம்‌ ஸித்‌தம்‌ ௮த்தகைய உபாஸனை ஏற்படுங் காலத்திலேயே புருஷன்‌ மகானந்த ஸ்வரூபமான ப்ரஹ்ம அனுபவத்தில்‌ ஆசை, யுடையவனாகிப்‌ பேராநந்தத்தைப்‌ பெறுகிறான்‌ !

ஸுமதி -. நாதா! சந்திரனைப்‌ பிடிக்கக்‌ கை நீட்டும்‌ குழந்தை போல, ப்ரம்மாதி யோகிகளும்‌ சப்தாதி விஷயங்களில்‌ மயங்கும் போது , சாதாரண ஜீவனுக்கு. மோக்ஷம்‌. எப்‌படிக் கிடைக்கக்‌ கூடும் என்கிற சந்தேகம் என்னை விட்டபாடு இல்லை தான் –

விவேக,–பேதாய்‌! திடத்துடன்‌ மரத்திலேறிய சாமர்த்திய சாலிக்குக் கிடைக்காத கனிகள்‌, அசிரத்தையுடன்‌ , போய்க்‌ கொண்டிருக்கும்‌ வழிப் போக்கனுக்கு, அவனது புண்ய விசேஷத்தால்‌ கிடைப்பது சந்தேகமற்ற அனுபவமல்லவா?

ஸூமதி.-வாஸ்தவமே! என்‌ சந்தேகம்‌ தீர்ந்தது. ஆனாலும்‌ தங்களால்‌ கை கொடுக்கப்‌ பட்ட ஜீவன்‌, ஸம்ஸார ஸாகரத்தைத் தாண்டத்‌ தக்கவனானால்‌, இடையிடையே ஏன்‌ பயத்தினால்‌ பீடிக்கப் பட்டவனாகிறான்‌ ?
விவேக.–என்ன மயக்கம்‌ ! மோக்ஷத்தை அடையப் போகிறவனையும்‌ மோக்ஷத்தை அடைந்தவனாகவே பாவித்துப்‌ பேசுகிறாயே? மனஸ்‌ அஜாக்‌ரதையா யிருந்தால்‌ பயம்‌ உண்டாவது சகஜந்தானே ! வர்ணம்‌, ஆச்‌ரமம்‌, இடம்‌ காலம்‌ இவைகளுக்கு ஏற்ற சாஸ்‌திர நியமனப்படி நடந்தால்‌ எவ்வித பயமம்‌ உண்டாவதற்குக் காரணமே இல்லை –

ஸூமதி –பயத்திற்கு ஹேது இதுவானால் தியானம்‌ எவ்விதம் பூர்த்தி அடையக்‌ கூடியது ?

விவேக எவனொருவன்‌ மனத்தை வேறொன்நிலும்‌ செலுத்‌தாமல்‌, பகவத் கிருபை யொன்றையே ஆதாரமாக வைத்‌துக்‌ கொள்கிறானோ அவன்‌. த்யானம்‌ தடங்கலின்‌றி பூர்த்தி அடைவது நிச்சயம்‌.

ஸூமதி -சரிதான் -மஹா புருஷர்களுக்கும் கூட ஏன் மோக்ஷம் சீக்கிரத்தில் கிடைக்கிறதில்லை –

விவேக-மஹா ஸூஷ்மமான விஷயமாகும் இது -பாகவத அபசாரம் சகல புண்யங்களையும் போக்கடிக்க வல்லது -பாதகங்களிலும்‌ கொடியது செய்த நன்றியை மறப்பது-அதனினும்‌ கொடியது செய்யப்படுகிற நன்றியை மறப்பது. அதனினும்‌ கொடியதானது செய்யப் போகிற நன்றியை மறப்பது! ஆகவே சிறிது ௮ஜாக்ரதையும்‌ பெரிய ௮பசாரத்தை உண்டாக்குகிற தல்லவா-

ஸூமதி,–நாதா! பாகவதாபசாரக்‌ கொடுமையை அறிந்‌தேன்‌. அதற்குப்‌ பரிகாரம்‌ கிடையாதா ?

விவேக –திரும்பவும்‌ ௮தே பாகவதர்களைச்‌ சரணமடைந்து அவர்களது ௮நுக்ரஹத்தைப்‌ பெறுவதே அதற்கேற்ற பரிஹாரமாகும்‌. நீரின்றித்‌ தவிக்கும்‌ மீன்‌, மறுபடியம்‌ நீரினாலேயே பிழைத்து சந்தோஷமடைவது போலத் தான்‌ இதுவும்‌! இம்மாதிரி யோகத்திற்கு, விக்னங்கள்‌ ஸம்பவித்த பிறகு ௮வைகளை நிவர்த்தித்துக் கொள்ள வழி தேடுவதை விட, அவைகளை நெருங்க விடாமல்‌ ஆரம்பத்திலேயே தடுத்துக்‌ கொள்வதே மோஷாமடையச்‌ சிறந்த மார்க்கமாகும்
(ஓர் தூதன்‌ பிரவேசம்‌.]

தூதன்‌-–பிரபோ! ராஜாதி ராஜ -ராஜ மார்த்தாண்ட, ராஜ காம்பீர்ய, ‘ஸார்வ பெளம திவ்ய ரத்ன ஸிம்‌ஹாஸனாதி ரூட .மகாமோக மகா ராஜனின்‌ ‘தூதன்‌, ஸம்வ்ருதி ஸதயன்‌ நமஸ்கரிக்கிறேன்‌. (அஞ்சலி ஹஸ்‌தனாய்‌, ஒர்‌ பனை ஓலையைக் காட்டி,) எங்கள்‌ சக்ரவர்த்தியார் உத்திரவு இது –

விவேக (அலஷியத்தடன்‌)– நீயே படி

தூதன்‌. உத்திரவு (படிக்கிறான்‌)– எங்கள்‌ மகா மோக மஹா ராஜனின் உத்திரவு என்ன என்றால்

விவேக.–(வெளிக் கிளம்பிய சிரிப்பை அடக்கிக் கொண்டு) பிரியே! மோக ராஜன்‌ நமக்கு உத்திரவு இடுகிறானாம் !.பேஷ்‌! எதிரியின்‌ அபிப்ராயத்தை முற்றிலும்‌ கேட்டறிவோம்‌!– மேலே படி.

தூதன்‌.–(படிக்‌கிறான்‌) * ஜீவாத்மாவிற்குப்‌ பரப் ப்ரஹ்மத்‌தினிடம்‌ ஸ்ரத்தையை உண்டாக்கி விட்டாய்‌. அந்தஸ் ஸ்ரத்‌தை ஐஸ்வர்யாபேஷைக்காக மட்டிலும்‌ நிற்குமாக-அப்படியாயின்‌ நாமும்‌ உன்னை மன்னிப்போம்‌.”

விவேக, (அலக்ஷிய்ச்‌ சிரிப்புடன்‌)–பேஷ்‌. ! பிரம்மசாரிக்கு நிற்க இடம் கொடுத்த நியாயந்தான்‌ இது !–௨ம்‌– மேலே?

தூதன்‌.–* மீறி நடப்பாயாகில்‌, நமது சம்ஞ்ஞா மாத்‌திரத்‌திலேயே ஏவப்படும்‌ ‘ க்ரோதன்‌ முதலிய ஸேனுபதிகள்‌ உன்னைத்‌ த்வம்ஸம்‌ செய்து விடுவார்கள்‌, ஜாக்ரதை,.”

விவேக –சாபாஷ் -இவ்வளவு தானா ?. இன்னமும்‌ உண்டோ ௨த்திரவு –

தூதன்‌-காமக்ரோதாதி ஸேனாபதிகளின் திவ்ய பிரபாவம் எடுத்துக் காட்டப் படுகிறது –

விவேக. எங்கே , படி ?

தூதன் – ‘காமனுடைய ஒபில்லா ‘செளர்யத்தை வெல்ல” எ்வனாலாகும்‌?’ ‘கோபத்தணலாலுண்டாகிய ருத்ரனது: . மூன்றாவது கண்ணும்‌ மதனனது சிருங்காரத்‌தினால்‌ மயக்கமடைந்து சீதளமாகி விடவில்லையா –ஆதி பகவானும்‌ ராகத்‌ துவேஷாதிகளுக்கு ஆட்பட்டவனாகியே யன்றோ ஸ்ருவ்டி. ஸ்திதி ஸம்ஹாரமென்னும்‌ லீலைகளைப்‌ புரிந்து வருகிறான்‌ ! ஆசைக்கு ஆளாகாதவர்களும் அவனியில் உண்டோ

ஸூமதி -காமத்தின்‌ கொடுமை கணக்கிடக் கூடாததுதான்‌ !

விவேக-இந்த உளறல்‌களையா லக்ஷியம்‌ செய்வது ?–. தூதா! மீதி உளறல்கள்‌ ஏதேனுமுண்டோ?

தூதன் -க்ரோதன் மஹிமையைக் கேள் -கோபத்தை விலக்கும் பொருட்டுக்‌ குரோதத்தைக்‌ கோபிப்பது, கோபத்தை ஓழிப்பதாகுமா? கோபத்தை ஜெபிக்க எண்ணும்‌ பொழுதே க்ரோதம்‌ ஏற்படுகிறதல்லவா ?

ஸுமதி –ஐயையோ! காமனை விடக்‌ க்ரோதன்‌ வெல்வதற்‌ கரிதானவனா ! ்‌

விவேக.-இந்தப்‌ பிதற்றல்களுக்குக்‌ காது கொடாதே !–. உசிதமான. கால இடங்களில்‌ கோபம்‌ உண்டாக வேண்டியது கொண்டாடத் தக்கதே யொழிய குற்றமாகாது -ஹே தூத! அநங்கனாக்கப் பட்ட காமனையும்‌, யாவரும்‌ பரிஹஸித்து வரும்‌ க்ரோதனையுமே நம்பிக்‌கிடக்கும்‌ பேடியாம்‌ மகா மோகனை நான்‌ அழிக்கவே போகிறேன்‌ என்‌பதை என்‌ உத்திரவாக உனது அரசனிடம் தெரிவி போ

தூதன் -சரி -கொஞ்ச தூரம் சென்று திரும்பி -ப்ரபோ எங்கள் மஹா ராஜனும் தாங்களும் ஒரே குலம் -ஒரு குலத்தைக் காப்பாற்றுவதற்காக ஒருவனைப் பலி கொடுக்கலாம் என்ற நியாயத்தை மறக்கக் கூடாது –போய் வருகிறேன் -(போகிறான் )

ஸூமதி –நாதி முக்தி யுபாய ஆரம்பம் செய்ய இருக்கும் ஜீவாத்மா, மோகனால்‌ ஏவப்பட்‌ட காம க்ரோத மாச்சர்யங்களால்‌. பீடிக்கப்படுவானாகில்‌ உமது ப்ரதிஜ்ஜஞை எப்படிக்‌ கை கூடும் –

விவேக –ஏன்‌ சந்தேகம்‌?_-, தெளிந்த புத்தி யுடைய திடஞ்ஞானிகளை இம் மயக்கங்களால்‌ சற்றும்‌ சலிக்கச்‌ செய்ய முடியாது. ௮வன்‌ இடத்தைக்‌ கண்டதும்‌ இவை யாவும்‌ தாமே பறந்து விடும்‌! ஸுர்யாஸ்‌தமன காலம்‌ நெருங்கி ஸந்தியா காலம்‌ கிட்டி விட்டது! வர இருக்கும்‌ இருட்டே மோகனுக்கும்‌ காமனுக்கும்‌ வஸதியான காலம்‌. ௮தைத் தடுக்க நானும்‌ ஸந்த்ய அனுஷ்டானங்களை முடித்‌துக் கொண்டு ஜீவாத்மாவின்‌ பக்தியை ஸ்திரப்படுத்தச்‌ செல்கிறேன்‌. நீயும்‌ ஷமை சாந்தி முதலியவர்களுடன்‌ வேண்டிய மங்களாசாரங்களைக்‌ கைக் கொண்டு, அஞ்ஞானாந்தகாரத்தை விலக்கி ஞான விளக்கை ஏற்றி என்‌ வரவை எதிர்பார்த்திருப்பாயாக,

ஸூமதி -பாக்யம்
(இருவரும் செல்கிறார்கள்)

அங்கம்‌ -2-முதற்‌ காட்சி –இடம்‌ :—நந்தவனம்‌-[காமனும்‌ வஸந்தனும்‌ பிரவேசம்‌)
காமன்‌–
வஸந்தா ! என்னே என்‌ மஹி மையும்‌ என்‌ பாணங்க ளின்‌ பெருமையும்‌! மதுரமான கரும்பை வில்லாகவும்‌, சுகந்தமான புஷ்பங்களை பாணங்களாகவும்‌, ரீங்காரஞ்‌ செய்யும்‌ வண்டுகளை நாணாகவும்‌, ௮பலைகளாகிற சுந்தர யுவதிகளே சைன்யமாகவும்‌ கொண்ட நான்‌ சூலாயுத பாணியையே வெல்ல வில்லையா ?

வஸந் .–உன்‌ வீரம்‌ ௮ஸாதாரணமானது. அறிவாளிகள்‌ ஓரோர்‌ பயன்களை விரும்பி நன்மையோ தீமையோ செய்து ௮ரும் பெருமை யுள்ள உம்மிடத்தில்‌ **காமன்‌ செய்தான்‌, கோபம்‌ செய்தான்‌ – என்று தியாகம்‌ செய்‌கிறார்கள்

காமன்–நற்றாய்க் கூறினை–உன்னோடு கூடிய என்னாலேயே நமது மோகனுக்கு இனி வெற்றி நிலைக்கப் போகிறது !

வஸந் ,–ஸமாதி செய்வதில்‌ பிரயத்தனிக்கும்‌ புருஷன்‌ மனத்‌தை கலைக்க வேண்டிய ஸ்ருங்கார ரஸங்களை விருத்தி செய்ய வேண்டிய காரியத்தை நான்‌ செய்து முடிக்கிறேன்‌! அதற்கு ஆதாரமான ஆலம்பந விபாவங்களாகிற ஸ்‌திரீகள்‌ முதலியோரது சேஷ்டாதிகள்‌ உன்னால்‌ உண்டாக்கப்‌ படட்டும்‌ !

காமன்‌ -௮துவே ஸரி!–. ஹ! ஹ! பரப் ப்ரஹ்மமா எது ? பரப்‌ரம்மமா சுந்தர யுவதிகளே பரப்ரம்மம்‌ என்பதற்குமா சந்தேகம்‌.? ஸ்ருஷ்டிக்குக்‌ காசணமா யிருக்கற தல்லவா பரப்‌ரம்மம்‌! ஆனந்தத்தைக்‌ கொடுப்பதல்லவா பரப்ரம்மம்‌?–. ஸ்திகளேதான்‌ ஸ்ருஷ்டிக்‌குக்‌ காரணமாகுபவர்கள்‌ ! ௮வர்களே ஆனந்தத்தைக்‌ கொடுக்க வல்லவர்கள்‌ ! ஆகவே ஸ்‌திரீகளே பரப்ரம்ம மென்பதிலுமா சந்தேகம்‌ ?

வஸந் –உபநிஷத்துக்களும்‌ ஆமோதிக்கக் கூடிய வாக்யமே கூறியது! யோகியின்‌ புத்தியும்‌ ஸ்‌திரீகளைக்‌ கண்ட மாத்‌திரத்தில்‌ கலங்கயே விடுகிறது ! ஸ்திரீகளாகிற நம்‌ ஸேனை உயிரோடிருக்கும்‌ பொழுது இந்திரிய ஜயம்‌ செய்‌ய வேண்டு மென்ற ஆசை யுடையவனும்‌ உயிர்த்திருப்‌ பானா? புருஷனது தியானம்‌ அபாய கரமான ஸந்தேதேஹ ஸ்‌திதியிலேயே இருக்கிறது இப்பொழுது ! ஸம்ஸார கஷ்டங்களை வெறுக்கிறான்‌ ! ஸம்ஸார சுகங்களை விரும்புகிறான்‌! ௮தை விரும்புவதற்காக வெட்கப்படுகிறான்‌ ! வெட்கப்பட்டும்‌, அதையே திரும்வும்‌ விரும்புகிறான்‌ ! -ஆகவே, இதுவே நம்‌ ஸைன்யத்தைக் கொண்டு அவனை ஜயிக்க வேண்டிய தருணம்‌!

காமன்‌ -நன்றாயுரைத்தனை ! எவ்விதத்திலும்‌ அவ்விவேகன்‌ அவிவேகனே ! என்‌ ஸைன்யங்களின்‌ ப்‌ரபாவத்தை ௮றிந்தவனில்லை! ஹ! ஹ!–, இரு பக்கங்களிலும்‌ சுருக்கை ‘ யுடைய கயிற்றை யல்லவா கொண்டிருக்கிறான்‌. ஜீவாத்மா என்னிடம்‌ கோபம் கொள்‌வானிகில்‌, அக் கோபக்தினாலே2ய அவன்‌ ஜயிக்கட்பட்டவனாகிறான்‌ ! கோபம் கொள்ளாமல்‌ இருப்பானாகில்‌, என்னை எப்படி விலக்க முடியும்‌ ௮வனால்‌ ?

[பயங்கர ரூபத்துடன்‌ க்ரோதன்‌ (கோபன்‌) பிரவேசம்‌. ]

க்ரோத–.!விரைவுடன்‌ வந்து) மன்மத ராஜனே! விவேகனுடன்‌ சேர்ந்து காம க்ரோதாதிகள வெல்வதாகக்‌ கூறும்‌ விணன்‌ யாவன்‌ ? (ஆர்ப்பரித்து) ஹ.! ஹ!! ஹ!!! நானிருக்கையிலுமா விவேகனைப்‌ பற்றிய பிரஸ்‌தாபம்‌ –

காமன்‌ –உன் வரவு நல் வரவாகுக ! மஹாமோஹ மஹா ராஜனுக்கு ஜே-

வஸந்‌–ஜே!…நெருப்புப்‌ பிடித்ததும்‌ காற்றடிக்க ஆரம்பித்‌தது போலக்‌ காமனும்‌ க்ரோதனும்‌ சேர்ந்த பிறகு ஜீவன்‌ முக்‌தி யடைவதேது – இனித்‌ தைர்யமாய்‌ நம்‌ காரியத்தைச்‌ செய்ய ஆரம்பிப்போம்

காமன்‌ -எனக்கு ஸஹாயங்கள்‌ வெகு அ௩லமாகவே இச்‌ சமயம்‌! , சேர்ந்திருக்கின்றன- சந்திரன்‌ எனக்குப்‌ பிரியமான: ஸ்நேஹிதன்‌ ! ! நிலா எனக்கு இஷ்டையான தோழி-ஸ்ருவங்கார ஸ்ரஷ்டி கர்‌த்‌தாவாகிய வஸந்தன்‌ ஆத்ம பந்து ! மஹா வேகத்தையும்‌ பலத்தையுமுடைய க்ரோதன்‌ ஆபத்‌ பந்து !–. இத்தகைய ஸஹாயங்கொண்ட புஷ்பபாணனை உயிருடன்‌ எதிர்த்து நிற்க வல்வவனுமுளனோ –

க்ரோத.-இல்லவே யில்லை–… இருந்தால்‌ முன்‌ வரட்டும்‌ !

காமன்‌.–ஸமாதியை விரும்பும்‌ ஜீவனப் பிடிப்போம் வாருங்கோள்
ஆர்ப்பரிக்கின்றனர் –

வஸந்‌– அதோ பாருங்கள் விவேகனால்‌ பீடிக்கப்பட்ட ஜீவன்‌ ஊசலாடுவதை ! பயத்திற்குக்‌ காரணமான கிரந்தங்‌களைக் கவலையுடன்‌ பரிசீலனை செய்து கொண்டிருக்‌கிறான்‌ ! தேக போஷணத்தையும்‌ கைவிட மனமில்லை !
துக்க ஸாகரத்தை நிவ்ருத்‌தித்திக் கொள்ள ஆசைப்படுகிறான்‌–, ஸம்ஸார ஸுகங்களை அகற்றவும்‌ இஷ்டமில்லை! இப்படி ஊசலாடும்‌ இந்த ஜீவனை இப்பொழுதே நம்‌ வசமாக்கிக்‌ கொண்டால்‌ தான்‌ ! ஜயித்தோமாவோம்‌.

காமன்‌.-மமகாராதிகளான பழைய வாஸனை, கயிறு போலிருக்‌கிறது, நம் பக்கலிலேயே ஜீவனை இழுத்து விடும்‌ ஸந்தேஹமின்றி !

வஸந் -அப்படி. நம்பி அஜாக்ரதையா யிருக்கக் கூடாது ! இக்‌ கணமே க்ரோதன்‌ ஜீவனைப்‌ பிடித்‌துக் கொள்ள வேண்‌டும்‌. அதோ! அதோ! ஸதா பகவந் நாம ஸ்மரணத்துடனும் , குணானுபவத்துடனும்‌, அவனையே ஆராதித்துக்‌ கொண்டும்‌, விவேகனது கோட்டைக்குள்‌ புகுந்து விட்‌டான் -இனி ஜீவனை மீட்டு வர நம்மால்‌ முடியாது !

காமன்-(வெட்சத்துடன்‌ சிரித்‌து.) வஸந்தா ! என்ன வார்த்‌தை. “கூறினாய்‌ ?.ஸாமர்த்திய மில்லாதவனைப்‌ போல்‌,இந்த. ஸமயத்திலா பயமடைகிறாய்‌? ௮சுவத்தாமா முதலியோர்‌ – முன் காலத்தில்‌ செய்து காட்டிய வழி அடைக்கப் பட வில்லைேயே? நாமும்‌ எதிரிகள்‌ தூங்கும்‌ பொழுதே அவர்களை வதம்‌ செய்து வருவோம் காண்‌!

வசந் –அதுவும் முடியாத காரியமே இனி! ட்‌ அதோ ஜீவாத்மா பரமாத்மாவை சரணமாக அடைந்து விட்டானே -வீடு கொள்ளை போன பிறகு விழித்‌துக் கொண்ட. காவல்காரர்கள்‌ போலாகி விட்டோம்‌ நாம்‌ இப்பொழுது –

க்ரோ — (பரபரப்புடன்‌!) ஹ! ஹ!! ஹ!!! பயப்படாதீர்கள்‌ – எனக்கு எங்கும்‌ செல்வாக்குண்‌டு ! மஹா புருஷர்களும்‌, அவர்களுடைய கந்கைத் துணி, கமண்டலு, தாப்பாஸனம்‌ ஆகிய சிறிய வஸ்துக்களை அவர்கள்‌ அறியாது மறைத்து விடுவேனாகில்‌, அவர்கள்‌ ஒருவர்க்கொருவர்‌ கோபமும்‌ மனஸ்தாபமும்‌ கொண்டவராக, பொய்‌ சொல்லுதலும்‌, தோஷாரோபணம்‌ செய்வித்தலும்‌,கோட்‌ சொல்லிக் கொள்ளுதலுமாகிய சகல தோஷங்களும்‌ உடையவராய்‌, தியானத்தை இருந்‌தவிடந்தெரியாது மறந்து போகும்படிச் செய்து விடுவேன்‌ அவர்‌களிடமிருந்து

காமன்‌.-வாஸ்‌தவமே!

வஸந் .–காமனையும்‌ க்ரோதனையும் “வெல்வதரிது தான்‌-. யாரது வருவது ?… சபாஷ்‌! தர்ம த்வம்ஸி ‘லோபன்‌ த்ருஷ்ணா பத்னி ஸமேதராக எழுந்தருளுகிறார! நமது உதவிக்காக! கவனிப்போம்‌
(லோபனும் -பேராசையும் -திருஷ்ணையும் துராசையும் ஒரு புறமாய் பேசிய வண்ணம் பிரவேசம் )

லோபன் -என்னை திருப்தி செய்ய வல்லவரும்‌ உண்டோ -திருப்‌தி என்றால்‌. என்ன -த்ருஷ்ணே ! நீயே எனக்‌கேற்ற ஸஹ தர்மிணி! உன்‌ ௮ழகே அழகு! ஸ்‌திரீகளுக்‌கு இடை சிறியதாய் இருப்பது அழகாமே -உன் வயிற்றில் பிரபஞ்சத்தில் உள்ள பொன் வெள்ளி ரத்ன மயங்கள் அனைவற்றையும் மலை மலையாகக் கொட்டி நிரப்பினாலும் உன் இடை மட்டுமே மேன்மேலும் இளைத்ததாகவே காட்டுகின்றதே

திருஷ்‌.–நான்‌ அழகில் சிறந்தவளாயிருப்பது ஓர்‌ ஆச்சர்யமா? அதற்கேற்றதாக மூவுலகலிலுள்ளவர்களது பொன்‌ தனம்‌ எல்லாவற்றையும் கொண்டு வந்து எனக்குச்‌ சகல வித ஆபரணங்களும்‌ செய்து கொடுக்க வல்ல சாமர்தியம்‌ உங்களிட மிருந்தாலல்லவா என்‌ ௮ழகு சோபிக்‌கும்-

லோப.-௮து தானா பிரமாதம்‌ -என்னால்‌ ஆக்ரமிக்கப்‌ பட்டவர்களும்‌ என்னால்‌ வெல்லப்‌ படாதவர்களாவரோ? உமியையும் மேருவாக எண்ணிச்‌ சண்டையிட்டுச்‌ சாகிறார்களே ! குபேரனை நான்‌ படுத்தும்‌ பாட்டைக் கேள்‌ ! இருக்கும்‌ தனத்தை எவர்க்கும்‌ கொடுப்பது மில்லை- தானும்‌ திருப்‌தியாக அனுபவிப்பதுமில்லை-மேல்‌ ‘மேலும்‌ தனத்திலேயே – ஆசை கொண்டு, இருக்கும்‌ தனத்தைக்‌ காக்க வேண்டிய கவலையால்‌ நித்ரா ஸூகத்தையும்‌ இழந்தவனா யிருக்கிறான்‌ அக் குபேரன்‌ !–. மகா மோகனாஞ்ஜைப்படி விவேகனை வெல்வதற்காகக்‌ காத்‌திருக்கும்‌. காமக் க்ரோதர்களை, ஜீவன்‌ சாந்‌தி யடையுமுன்‌ கண்டு நம்‌ வெற்றிக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்‌.
(காம க்ரோதரர் முன் வர நமஸ்கரித்‌து ) தமையன்மார்களே !–அபிவாதயே–; ஸர்வ ருஷி ப்‌ரவராந்வித ஸர்வகோத்‌ர, ஸர்வ ஸூத்‌ர ஸர்வ வேதாத்யாயீ -லோப சர்மாநாமாஹம்‌ அஸ்மிபோ –

காம- க்ரோ .–தீர்க்காயுஸ்யமான் பவ லோப சர்மா
திருஷ்‌--நாட்டுப்பெண்‌ திருஷ்ணை இதோ நமஸ்கரிக்கிறேன்‌ !:
காம- க்ரோ….-தீர்க்க ஸுமங்கலி பவ ! (யாவரும்‌ ஒருவர்க்கொருவர்‌ ஆலிங்கனஞ்‌ செய்து கொள்கிறார்கள்‌,).
வஸந்‌.--மஹா அநந்த கரமான சேர்க்கை! பற்றி யெரியும்‌ கோடையில்‌, குடிக்கத் தண்‌ ணீரில்லாத இடத்‌தில்‌, நெருப்‌பு பிடித்துக் கொள்ளக் காற்றும்‌ சேரந்தாப்‌ போல நாம்‌ சேர்ந்த பிறகுமா விவேகன்‌ தலை நிமிர்த்தக் கூடும்‌ ?

காமன்‌ –புறப்படுவோம்‌ அணி வகுத்து ஜீவாத்மாவை: வெல்வ !–. முதலில்‌ நான்‌ போகிறேன்‌ -நீங்கள்‌ மூவரும்‌ த்ருஷ்ணையை நடுவில்‌ நிறுத்தி எனக்குப்‌ பின் பலமாகவும்‌ பக்க பலமாகவும்‌ வாருங்கள்‌—
(அப்படியே வ்யூஹம்‌ வகுத்து ஐந்தாறு அடி நடக்கிறார்கள்‌.)
காமன்‌.–
(இரண்டு மூன்று பாணங்களை : அதி வேகமாகத் தொடுக்கிறான்‌.)
வஸந்‌–ஜாக்ரதை ! ஜாக்ரதை : ! விவேகன்‌ ஏதோ ரகஸ்யமானதோர்‌ மந்திர உபேதேசம்‌ செய்கிறான் ஜீவாத்மாவுக்கு !
க்ரோ.-விவேசன்‌ என்ன செய்யுக் கூடும்‌ நம்மை ? ஜீவன்‌ இன்‌னமும்‌ காமன்‌ கணைகளைக்‌ கடக்க வல்லவனாக வில்லை அறிவாய்‌- |

வஸ்ந் . -நண்பர்களே ! சத்ரு மிகவும்‌ பலலான்‌ ! விண்‌ வீர வாதங்கள்‌ அவனெதிரில்‌ கூற வேண்டாம்

இரண்டாங்‌ காட்சி–இடம்‌ -கங்கையும்‌ யமுனையும்‌ சங்கமமாகுமிடம்‌ : டம்பன்‌ ஆஸ்ரமத்திற்‌ கெதிரில் ([டம்பனும்‌, வஞ்சனை (குஹனை) யும்‌ பிரவேசம்‌)

டம்பன்‌--ஹ!ஹ! ஹ!: ஹ!–. அடியே ! உன்னைத் தான்‌ – ப்ருஹஸ்பதிக்குக்‌ தாரை போல பர புருஷ ஸ்பர்ச மறியாத எனது இன்னுயிர்க்‌ காதலியாகத்‌ தர்மானுஷ்டானம்‌ செய்து வருகிறா யல்லவா நீ ?

வஞ்ச.–நல்ல உதாரணம்‌! வெட்கமாயிீருக்கிறது எனக்கே! வஸிஷ்டருக்கு அருந்ததி போல என்று சொல்லக்‌ கூடாதோ என்னை – பாருங்கள்‌,–எவ்வளவு சோரர்‌கள்‌, எவ்வனவு சூதாடுபவர்கள்‌, எவ்வளவு -கிராமாதிகாரிகள்‌, எவ்வளவு மந்திரி ஸ்ரேஷ்‌டர்கள்‌, எவ்வளவு பாஷாண்டிகள்‌ என்னைச்‌ சதா பிரார்த்தித்துக் கொண்டே காத்‌திருக்கின்‌ றனர்‌ பாருங்கள்‌ !. என்னைப்‌ பிரார்த்திக்கும்‌ அவ்வளவு பெயர்களையும்‌ அவர்கள்‌ பிரார்த்திக்கும்‌. பொழுதெல்லாம்‌ ௮வரவர்களை உங்களைப் போலவே பாவித்‌தல்லவா சேருகிறேன்‌

டம்பன்‌-(மனத்துள்‌ சிரித்துக் கொண்‌டு )_- நீயே நித்ய பதி விரதை! இதோ பார்‌–. என்னுடைய கார்ஹ்பத்‌யாக்னி அணைந்து போனல்‌ எந்த நெருப்பை யாவது கொண்டு வந்து போட்டு: எனது – அக்னி ஹோத்ரகம் குறைவுறாது செய்கிற யஞ்ஞ பத்னி நீயே. தீண்டாக் காலம்‌ கிட்டிய போதிலும்‌ வெளி யிட்டுக்‌ கொள்ளாது சர்வதா என்னுடனேயே யிருந்து கொண்டு என்னுடைய தர்ச பூர்ணமாஸ இஷ்டிகளையும்‌, பிண்ட தான ஸ்ரார்த்தம்‌ முதலிய கர்மாக்களையும்‌ குறைவறச்‌ செய்வித்‌து , ப்ராயச்‌ சித்தாதி உபத்ரவங்களுக்கு என்னை ஆளாக்காது, என்‌ பிராம்மண்யத்தை நிலை நிறுத்து கின்றனை! ஹ! ஹ! உன்‌ சாமர்த்தியம்‌ வேறு யாருக்கு வரும்‌-

வஞ்சனை–நாராயண ! நாராயண ! என்ன வார்த்தை நீங்கள்‌ சொல்வது ? நம்‌ க்ருஹத்தில்‌ என்றாவது அக்னி ௮ணைந்‌ததுண்டோ ? ருது தோஷமும்‌, தெய்வாதீனத்தால்‌, பர்வ ஸ்ரத்தாதி காலங்களில்‌ நேராது ஏற்படுகிறது ! அதற்‌கென்ன பிரமாதம்‌ !

டம்பன்‌ – அதைத் தான்‌ நானும்‌ சொல்கிறேன்‌- தப்பென்ன? ஆகவே தான்‌ உன்னை- ஸ்லாகித்துப்‌ போற்றுகிறேன்‌! ஏகாதசியில்‌ பட்டினி யிருப்ப.து போல்‌ பாவித்து வரும்‌ எனக்குப்‌ பூர்ணமாகப்‌ போஜனம்‌ பண்ணி வைத்‌தும்‌, ௮தை மறைத்து, துவாதசி யன்‌ று விடியுமுன்னமே பர பரப்புடன்‌ பாரணைக்குப்‌ பதார்த்தங்கள்‌ ௮க்கம்‌ பக்‌கத்‌தில்‌ ஸம்பாதிக்கப்‌ போகிறாயே !. ௮தனல்‌ என்‌ ஏகாதசி விரதமும்‌ உலகோர்க்குப்‌ பிரசுரிக்கப் படுவதுடன்‌, உண்மையான துவாதசிப்‌ பலனுமல்லவா எனக்கு லபிக்‌கச் செய்‌கிறாய்‌!– உன்னை ஸஹ தர்மிணியாயடைந்த என்‌ பாக்யமே பாக்யம்‌! ஒரு ரகஸ்யம்‌ ஞாபகத்திலிருக்கட்டும்‌’-என்‌னை விட்டு உன்னை எடுத்துச் செல்ல பலர்‌. சதி யாலோசனை செய்து வருகிறார்கள்‌. ஜாக்ரதையா யிருக்க வேண்‌டும்‌ நீ இதோ பார்‌!–. ஸ பதிகளாம்‌ நம்மை விவேகனைக்‌ கொல்ல வேண்டிய அபிசார யாகத்தை நிறை வேற்றி க் கொடுக்கும்படி. மகாமோக ராஜன்‌ தர்ம பத்னி தூர்மதி தேவி என்னை வேண்டிக் கொண்‌டு இருக்கிறார்கள்‌. நமது ஸ்லாக்யமான பிராம்மண்‌யமும்‌ இதிலிருந்தே பிரகாசிக்கிற தல்லவா! அவர்‌கள்‌ தாஷிண்யத்தை மீறாமல்‌. ஓத்துக் கொண்டு விட்டேன்‌. ‘இன்னதென்று தெரியாததோர்‌ தேவதையை நான்‌ ஆராதிக்க வேண்டும்‌-அதற்காக ஆகாச கங்கையில்‌ ௮னுஷ்டானம்‌ முடித்துப்‌ புனிதானாயிருக்கும்‌: தேவ குருவான பிருஹஸ்பதியால்‌ சேகரிக்கப்பட்ட கற்‌பக மலர்களையும்‌, கனிகனையும்‌ சீக்கிரத்திலேயே கொணர்‌வாயாக –

வஞ்-விவேகனை ௮பிசாரஞ்‌ செய்து கொல்ல முடியுமோ ? ௮வனைக்‌ கொல்லாவிட்டால்‌ ௮ந்தகத் தேவதை ௮பிசாரம்‌, செய்தவன் மீதே திரும்பு மல்லவா ?
டம்பன்‌–அடி அடே !”என்‌னுடைய மஹிமைஈய நீ இன்னமும்‌ வறியவில்லைபா? 18-வித்பைகளும்‌ 64-கலைகளும்‌ எளிதில்‌ ௮றிந்த என்‌ சாமர்த்யத்தால்‌, இம் மாதிரி ஆயிரக்கணக்கான யாகங்கள்‌ செய்து முடிக்கப் பட்டிருக்‌கின்றதல்லவா !. என்‌ வைராக்பம்‌ சாமான்யப்‌ பட்டதா? பூமண்டலம்‌ முழுவதையும்‌ ஜபித்த பரசுராமன்‌ ௮ம்மண்டலத்தைப்‌ பெற்றுக் கொள்‌ளும்படி என்னை மன்‌றாடியும்‌ மறுத்து விட்டேன்‌. அதைக் கண்டு ஆச்சர்யப்‌ பட்ட தேவாதி தேவர்கள்‌, ஸ்வர்க்கத்தைபும்‌, மோகத்‌தையும்‌ வருந்தி வருந்தி வேண்டிக்‌ கொடுக்கவந்தும்‌ அவற்றையும்‌ வேண்டாமென்‌று திரஸ்கரித்து விட்‌ டேனே! சாந்தியே எனது. ஐச்வர்யம்‌! ஓம்‌- சாந்தி சாந்தி சாந்தி?

வஞ்ச.–வாஸ்‌தவகம் தான்‌-அந்த யாகம்‌ ச்யேன யாகமா ? தங்கள்‌ தர்ம பத்னியாகிய என்க்கும்‌ காரியம்‌ அந்த யாகத்‌தில்‌ உண்டல்லவா—பைத்யமே! இதோ பார்‌; பரம ரஹஸ்ய மொன்று கூறுகிறேன்‌. ௨னது பரமாப்கைகளான திருஷ்ணை முதலியோருக்குக் கூட தெரியக் கூடாது இது – நான்‌ செய்யப் போவது யாகமமில்லை, ஹோமமுமில்லை–எந்‌த நல்ல காரியத்திலும்‌ டம்பனாகிய என்னுடைய ஸம்‌பந்தம்‌ ஏற்பட்ட மாகத்திரதிலேயே விவேகனுக்கு ௮பிசாரம்‌ ஏற்பட்டு விடிகிற தென்பதை ௮றிவாய்‌ : இதுதான்‌ ஸுஷ்மமான ரஹஸ்பம்‌.

வஞ்ச.–தெரிந்து கொண்டேன்‌. இந்த யாகத்தில்‌ உங்களுக்‌கும்‌ புரோஹிதர்‌ யாராவது உண்டோ?

டம்பன்‌--௮டி மூடாத்மா ! எனக்குமா புரோஹிதர்‌? எனக்கு சொல்லி வைக்கக் கூடிய ஒருவனுமா இருக்கிறான்‌ ?’ பண்டிதனென்று என்னப் படுபவர்கள்‌ ஓவ்‌வொருவரும்‌ என்னை யடைந்து உபதேசம் பெற்றுப்‌ போகிறார்களே- இருந்தபோதிலும்‌, லோக வியவஹாரத்திற்கேற்ப, கர்வனாகிய தர்ப்பன்‌ இந்த யாகத்திற்குப்‌ பேருக்கு ப்ரம்மாவாக யிருப்பன்‌.’ அவனை எதிர்பார்த்தே ஒன்பது தடவை புண்யாஹவாகனம்‌ செய்யப்பட்ட இந்த சித்தாச்ரமத்தில்‌ யாகத்‌துக்கான ஸகலத்தையும்‌ சேகரித்துக்‌ கொண்‌டு ஸப்த ரிஷிகளினாலும்‌ விரிக்கப்பட்ட இந்த தர்பாசனத்தில் உட்கார்க்திருக்கிறேன்‌ :–. அதோ அந்த மஹாத்மாவும்‌. வருகிறார் காண்‌ -நாம்‌ ஆஸ்ரமத்‌துள்‌ செல்வோம்‌–(ஆஸ்ரமத்துள்‌ போகிறார்கள்‌.)

[பெரிய பாதுகைகளை தரித்தவனாய்‌, கழுத்தில்‌ மாலைகளும்‌, கைகளை வீசிக் கொண்டும்‌, பெருந் தடியில்‌ கொடி போல்‌ பத்திரிகை கட்டிக் கொண்டும்‌ கர்வனாகிற தர்ப்பன்‌ பிரவேசம்‌. ]

கர்வ,–உத்தமர்களை நிந்திக்கும்‌ பொருட்டு மகா மோக ராஐனால்‌ நியமிக்கப்பட்ட நான்‌ சகல லோகங்களின்‌ தாரதம்‌யங்களைப்‌ பார்க்க உத்தேசித்து இப்பொழுது பாரத வர்‌ஷமடைந்திருக்கிறேன்‌. “சென்ற விடமெல்லாம்‌ என்ன சிறப்பு எனக்கு ! என்ன உபசாரம்‌! என்ன வரவேற்பு ! என்ன பகுமானம்‌ ! மற்றோர்‌ கொடுத்த பஹுமானங்களைவிட, ஸ்ரீமகா விஷ்ணுவுக்கு லக்ஷ்மியைக்‌ கொடுத்‌ தோனாம்‌ ஷீர ஸாகரனளித்த இந்த ரத்னஹாரத்‌தின்‌ காந்தியே என்‌ மதிப்பை பெருக்குகின்‌றது ! என்னைப்‌ பார்ப்பவர்‌ பலரும்‌ பதின்மூன்றாவது ஸூர்யனோ, பன்னிரண்டாவது ருத்ரனோ, ஒன்பதாவது வஸூவோ வென ஐயமுறுகிறார்கள்‌ ! | (சிறிது யோசித்‌து கோபச்‌ சிரிப்புடன்‌) :என்னே உலகின்‌ மடத்தனம்‌ ! நமது பரிசாரகர்களின்‌ பரம்பரையில்‌ சேர்க்கத் தக்க யோக்‌யதை யற்றவர்களு மல்லலா நமக்கு ஸமமானதது்‌ம் மேம்பட்டதுமான ஸ்தானத்தை வஹிக்க வீணாசை கொள்கிறார்கள்‌ ! ஸகல சாஸ்திர பண்டிதர்களையும்‌ வென்று ஆளாக்கிக் கொண்ட எனக்குமா இணை உண்டு – ஹ ஹ! ஹ. | சிஷை யாரிடத்திலா ? பாலினின்றும்‌ நீரைப்‌ பிரித்தப்‌ பாலையே பருக ஹம்ஸத்திற்கும்‌, சாகரம் அனைத்தையுமே ஒரே ஆசமனத்தில்‌ வற்றடிக்க அகஸ்தியருக்கும் யாரிடம் சிஷை என்‌ கல்விச் சிறப்பு ௮ப்படி யிருக்க, என்‌ குலச் சிறப்பு தானென்ன ? எமக்கு யாகஞ்‌ செய்விக்க யோக்யதை யுள்ளவர்‌ இல்லாத காரணத்தாலேயே மூல புருஷர் முதல்‌ எம்‌ குலத்தோர்‌ எவ்வித யஞ்ஞங்களும்‌ செய்ய வேண்டிய ஆவஸ்யகம் இன்றிக்கே இருக்கிறோம் ஆக்கும்‌! .ஹ! ஹ!! !ஹ! (வலது பக்கம்‌ பார்த்து) வஞ்‌சனையாலும்‌ கண்டறிய முடியாத யுக்திகளால்‌ உலகத்தை. வென்று வரும்‌ என்‌ சிஷ்யர்களின்‌ சாமர்த்‌தியம்‌ எவருக்‌கு வரும்‌ -பெளத்த மதத்தில்‌ 48 பிரிவுகளுண்டாக்கி ௮ந்த வைதிகர்களுடைய வித்யா கர்வத்தை ௮பஹரித்து விட்டேன்‌ !. மதவாதிகளைப்‌ பெருக்கி அவர்களுக்குள்‌ ஆக்‌ரஹத்தை ௮திகரிக்கச்‌ செய்து, அவர்களிடும்‌ சண்‌டைகளைக் கண்டு, மல்லர்கள்‌ செய்யும்‌ யுத்தத்தையும்‌ ஆடுகள்‌ இடும்‌ சண்டையையும்‌ கண்டானந்திப்பது போல்‌, வாத யுத்த ரசத்தை சதா அனுபவித்துக்‌ கொண்‌டே யிருக்கறேன்‌ !(மற்றோர்‌ பக்கம்‌ திரும்பிப்‌ பார்த்‌து ) அதோ! அதோ! கை நிறையப்‌ பவித்ரமும்‌ கட்‌ஷத்தில்‌ புஸ்‌தகக்‌ கட்டுமாக தாடி மீசை வளர்த்துக்‌ கொண்டு தம்மைப் பண்டிதனெனக்‌ கூறிக் கொண்டு சகலரையும்‌ ஏமாற்றிப்‌ போதனை செய்து. வருகிற நிரஷர குக்ஷிகள்‌ கூட்டமல்லவா அதோ அந்த மிலேச்ச தேசத்‌தில்‌ தென்படுவது ? (வடக்கு திக்கைப் பார்த்‌து )–.,ஐயா வடதேசத்தவரே ! துர்மதி தேவியின்‌ ஆஞ்‌ஜையால்‌ ஹிமவகத் பர்வதச்‌ சாரல்‌ சென்ற என்‌ பத்னிகள்‌ ௮ஸூயை, ஈர்ஷ்யை என்பார்களைக்‌ கண்டீரோ – (உற்றுக்‌ கேட்டு(–என்ன ஸுமதியின்‌ தோழிகளான “மைத்ரீ ,முதிதை, . கருணை, உபேஷை ஆதிகளால்‌ நிவ்ருத்தி மார்க்கமென்னும்‌ சுரங்கத்தில்‌ அடைபட்டு விட்டார்களா (கோபத்துடன்‌) பொய்‌! பொய்‌!-ஏ விதவாஸுதனே ! பிராம்மணப்‌ பைசாசமே ! என் பத்‌னிகளுக்கா ௮க்கதி வரக்கூடும்‌?…(உற்று?நோக்கி, ௮டடா! பழைய ஆசாமி தான்‌ இவன்‌ ! வைதீகனாகிய மித்யா சாரனல்லவா! இவனுடன்‌ பேசியதும்‌ தப்பு..

ஸ்வஸ்ரூரஸ்ய திகம்பர வ்‌ரவததீ ஸம்பந்தி நஸ்ஸெளகதா:
மாதா சாஸ்ய பிதா ச பாஸூபதிநெள வைஷஸேஷிகோ தேசிக |
ஜாயா திஷ்டதி ஸாங்க்ய யோக ஸமயே சார்வாக சிஷ்யஸ் ஸாகா
மித்யாசார ஸமாஹ்வய: ஸ்வயமஸெள விப்லாவகோ வைதிக –

(வேறு திக்கு நோக்கி) அதோ! வெளி வேஷத்தால்‌ மட்‌டும்‌ காப்பாற்றப்பட்ட வர்ணாஸ்ரம தர்மங்களை யுடைய பிராம்மணர்களின்‌ ௮க்‌ரகாரம்‌ ! உபநயநாதி ஸம்ஸ்காரங்கள்‌ கேவலம்‌ உத்ஸவார்த்தமாக நடத்தப்படுகின்றன ! ஸந்தியாவந்தனம்‌ ஓர்‌ விளையாட்டாகவும்‌ பொழுது போக்காகவும்‌ செய்யப்படுகிறது ! காயத்ரீ ஜபம்‌ ‘கோஷ்டியாகப்‌ பலர் கூடி. ஊர் வம்பளக்க வேண்டிய பிரக்ருதமாகக்‌ கொண்டாடப்படுகிறது! ஸுரதகேளி ௮க்னி ஹோத்ரம்‌ ஸாங்கோபங்கமாக ஸதா நடை பெறுகிறது ! அவ்வளவும்‌ மோஹ ராஜன்‌ வெற்றிக்கு அறிகுறியையே ஸூஸிப்பிக்‌கிற தல்லவா ! (வேறு பக்கம்‌ பார்த்‌த) அதோ! மடங்களின்‌ மூலைகளில்‌, மெளன ஸமாதியில்‌ இருப்பவர்கள்‌ யார்‌ ?–. வலதுகை விரல்கள்‌ நிறைய தர்ப்பம்‌! மூக்கை இறுக்கிப்‌ பிடித்திருக்கிறார்‌கள்‌ !–. ஹ!- ஹ! ஹ! (கை கட்டிக்‌ குதூகலித்து) பேசுந்திறனில்லாமையாலும்‌, ஆதரிப்‌பாரில்லாமையாலும்‌ மெளன விருதம்‌ கொண்டு குதிரைப்‌ ப்‌ரம்மசர்யம்‌ பூண்டு உஞ்ச விருத்தி செய்யும்‌ வேஷக்காரர்களல்‌லவா –. (வேறு பக்கம்‌ திரும்பி) பேஷ்‌ ! பிடிக்கடங்காத பூணூல்‌ வடம்‌! மூடிய கண்‌! ௮சக்கிய வாய்‌! கையில்‌ ஜெப மாலை ! வஸ்திரத்‌தின் மேல்‌ கிருஷ்‌ணாஜினம்‌! அதன் மேல்‌ தர்ப்பாஸனம்‌ !–பேஷ்‌ இவர்கள்‌ வேஷம்‌! மார்ஜார வ்ருத்தி! கொக்கின்‌ வாட்டம்‌ ! நல்ல் தபஸ்விகள்‌! காலடியில்‌ விழும் காசுகள்‌ தவிர்த்து வேறு எதின் பேரிலும்-கண்ணோட்டம் இருப்பதாகக்‌ காணோமே இந்த யோகிகளுக்கு!–, ஸ்வர்ண மலையை இச்சித்து ௮க்னிபில்‌ ஹோமம்‌ செய்கிறான்‌ ஒருவன்‌ ! கலி யுக ஸந்யாஸிகளின்‌ -வைராக்யம்‌ மெச்சத்‌ தக்கதே ! மடம்‌ கட்டுவதாயும்‌ கிரந்தங்கள்‌ பிரசுரிப்பதாயும்‌, பிஷையென்றும்‌, சிஷ்ய ரக்ஷணமென்றும்‌ பணம்‌ பறித்துப்‌ பிழைக்கிறார்‌களே இக்தக்‌ காஷாயதாரிகள்‌ ஸ்பாஷ் ! உலகம்‌ இப்படி இருக்கையில் மஹா மோஹ ராஜ்யம் நிலை நாட்டப்படுவதற்கா சந்தேகம் -விவேகனுக்கு இடமேது இனி இவ்வுலகில்‌?–அதோ காணப்படும்‌ ஆஸ்ரமம்‌ யாருடையது – தர்ப்பக்கட்டு–துளஸீ ! புஷ்பங்கள்‌ குவியல்‌ குவியலாக : ! ஸூர்யனுக்கு ஸூதனோ, ஜேஷ்‌டப் ப்ரதாவோ, பிதாவோ என்று ஐயுறும்படியான ஐவலிப்பு -உண்மையானதோர் முக்தன் தானோ -நெருங்கி –எனது வலது கண் துடிக்கிறது -என்ன ஆச்சர்‌யம்‌! இந்த சகுனத்திற்குப்‌ பத்னியின்‌ சேர்க்கை யல்லவா ஸம்பவிக்க வேண்டும்‌!-யோகி யாஸ்ரமத்தில்‌ இந்த விபரீதச்‌ சகுனமேன்‌ –அதோ! ஓர் யோகியார் வெளி வருகிறார் –மறைந்திருந்து கவனிப்போம் –
(ஸந்யாஸ வேஷ்த்‌துடன்‌ அஸூயை ப்ரவேசம்‌ )
அஸூயை –
-துர்மதி தேவியின் உத்தரவால் இத்தகைய கோலத்துடன் இவ் வீரேழு உலகிலுமுள்ள விவேகிகள் ஒவ்வொருவரிடம் தோஷ ஆரோபணம் செய்து -அவற்றையே பெரிதாக்கிப் பிரசுரித்தி வந்தேன் –தோஷமற்ற பெரியோரும் உளரோ -ஹ ஹ ஹ -ராமனையே எடுத்துக் கொள்வோம் –

நிரவதி குண க்ராமே ராமே நிராகஸி வாகஸி
ஸ்புரண முஷிசாலோகா லோகா வதந்தி ஸசந்திகே |
வரதநு ஹதிம்‌ வாலி த்ரோஹம்‌ மநாகப ஸர்பணம்‌
பரிமிதகுணே ஸ்பஷ்டாவத்யே முதா கிமுதாஸதே

ப்‌ரபஞ்சத்திலுள்ள தோஷங்களைப்‌ போக்கடிக்க வல்ல அந்தப்‌ பகவானிடமும்‌ தோஷத்தைக்‌ கூற வல்லேனல்லவா நான்‌ !–, (கர்வனைக்‌ கண்டு)அதோ ! ஸ்வர்ண குண்டலங்கள்‌ ! தண்ட கமண்டலு! இடையில்‌ தர்ப்‌பக் கயிறு, ! வயிறோ -அஷ்டகா ஸ்ராத்த போஜனத்தால்‌ பருத்த ஏற்றச்‌ சால்‌ !
(கர்வன்‌ முன்வர )
அடிக்கடி ஹுங்காரக்‌ கனைப்பு -இந்த ஆஸ்ரமத்துள்‌ நுழையப்‌ பார்க்கிறான்‌ போலும்‌ !–தடுத்து நின்று யாரென அறிகிறேன்‌|

கர்வன்‌.– (வணக்கத்துடன்‌) பகவதி? மகா யோக ஸித்தி பெற்றவளாய்த்‌ தோன்றும்‌ உனது ஊர் , குலம்‌, கோத்‌ரம்‌ முதலியனவற்றை நான்‌ அறிய விரும்புகிறேன்‌.

௮ஸுூ.–பிள்ளாய்‌! என் போன்ற இவ்வாஸ்ரமத்தில்‌ உள்‌ளவர்கள்‌ சொல்லக் கூடாத விஷயங்களை என்னைச்‌ சொல்‌லச் சொல்லுகிராய்‌ ? என்னை ஏன்‌ நமஸ்கரியாது தம்பம் போல்‌ நிற்கிறாய்‌ –

கர்வன்‌.–நீ ஆஸ்ரசமமொன்றில்‌ மட்டும்‌ பெரியவள்‌, நானோ வயது, கர்மம்‌, வித்யை எல்லாவற்றிலும்‌ உன்னை விடப் பெரியவனா யிருக்க, நான்‌ எப்படி. உன்னை நமஸ்‌கரிக்கக்‌ கூடும்‌ என்றுதான்‌ தயங்குகிறேன்‌.
௮ஸூ .—இந்த ஸந்தேகத்தை இந்த ஆஸ்ரமத்திலுள்ள பெரியாரைக்‌ கேட்டுத்‌ தெளிவோம்‌ முதலில்‌.

கர்வன் -சரி ஆயினும்‌.–. நீ இதற்கு முன்‌ என்னால்‌ அனுபவிக்கப்பட்டவளாகவே . காண்கிறாயே!—வேஷம்‌ மட்டும்‌ வேறாயிருக்கிறது !
அஸு,–நீயும்‌ பழைய பரிச்சயா முள்ளவனாகத் தான்‌ தோன்றுகிறாய்‌ ! இருந்த போதிலும்‌ உன்‌ ஸந்தேகத்தை ஆசஸ்ரமத்திலுள்ள பெரியாரிடம்‌ கேட்டு நிவர்த்தித்‌து பிராயச்சித்தாதிகளை முடித்‌து உன்னைப்‌ பரிசுத்தனாக்க வேண்டும்‌ முதலில்‌ !

கர்வன்‌.–(தனக்குள்‌) கொண்டிருக்கும்‌ வேஷத்தால்‌ தைரியமாய்ப்‌ பிதற்றுகிறாள்‌ ! (வெளிப்படையாய்‌), இந்த ஆஸ்ரமத்திலுள்ள பெரியார்‌ யார்‌

அஸு,—பார்த்கால்‌ தெரிய வரும்‌ ௮வர்‌ பெருமை.
(ஆஸ்ரமத்துள்‌ செல்கின்றனர்‌.)

மூன்றாம்‌ காட்சி- இடம்‌ :–டம்பன்‌ ஆஸ்ரமத்திற்குள்‌ [டம்பனும்‌, வஞ்சனையும்‌ –கர்வனும்‌, அஸூயையும்‌ வருவதைக் கண்டு டம்பன்‌ மெளன விரதம்‌ அபிநயித்து பத்னியை ஜாடையால்‌ ஏவுகிறான்‌.]

வஞ்சனை– ஜயா (பரபரப்புடன்‌)--. ஐயா பிராம்மணோத்தமரே ! அம்மா பகவதி! வெகு தூரம்‌ நடந்து வந்து ௮சுத்‌தமா யிருக்கும்‌ உங்கள்‌ நிழல் கூட மஹா யோகியாகிய இவர் மேல்‌ படக் கூடாது. : எட்டி நில்லுங்கள்‌.–கங்கா ஜலத்தையே மஹ ரிஷிகளே கொண்டு வந்தாலும்‌ அதையையும்‌ கையாலே நனைக்க மாட்டார்‌ என்‌ யஜமான் ! கிட்டி வராதேயுங்கள்‌ !

கர்வன்‌–அபூர்வ தம்பதிகள்‌ -நீங்கள்‌! கங்கா யமுனா ஸங்கமத்தில்‌ தீர்த்த மாடிய மஹாபரிசுத்தர்கள்‌ நாங்கள் -எங்கள்‌ தேஜஸ் என்ன ! கியாதியென்ன ! சூர்யனைப்‌ போல்‌ ஸ்வயம்‌ பிரகாசிகளான எங்கள்‌ நிழலும்‌ கீழே விழுமா ? ஸந்தேக நிவ்ருதயர்த்தம்‌ இங்கே வந்தால்‌, ௮திதி ஸத்காரம்‌ ஏதும் செய்யாததுடன் ௮நாதரவுமாகவும் செய்கிறீர்கள்‌? ஹ!ஹ! ஹ! தனது மூடத்தனத்தை மறைத்துக்‌ கொள்ள உனது யஜமானர்‌ மெளன விரதம்‌
கொண்டிருக்கிறாரோ ?

டம்பன்‌.--(புருவத்தை நெறித்து ஹுங்காரஞ்‌ செய்கிறான்‌)

வஞ்சனை, — (வேகத்துடன்‌ ௮ருகில்‌ சென்‌று வாயைப்‌ பொத்‌திய கையுடன்‌) மெளன விரதத்தை சாஸ்திரோக்தமாக முடித்துக் கொண்டு அதிதிகளுக்குப் பதில்‌ சொல்லலாம்‌–.

டம்பன்‌.–(உரத்‌து ஓமென்று ப்ராணாயாமம்‌ ௮பிநயத்‌து )-அடே வராத்யப்‌ பிராமணா ! மூட சிகாமணியே ! தபோ பலம்‌ குறையப் போகிறதே யென்று உன்னைச்‌ சபிக்காமல்‌ விட்டேன்‌ ! என்‌ சாபத்தினால்‌ சாம்பலானோரைக்‌ கணக்‌கிட முடியாது? போ இக் கணமே என்‌ எதிர்‌ நில்லாதே!
என்‌ நேத்ர ஜ்வாலை உன்னைப் பஸ்மப்படுத்து முன்‌ தப்பி மறை! |

கர்வன்‌.--(கோபத்‌துடன்‌) மூடா! ஜாத்யாபிமானத்தினால்‌, என்‌ பாதங்களால்‌ உன்‌ கபோலம்‌ அலங்கரிக்கப்படாது தப்பியது அறிவாய்‌ ! நான்‌ யார்‌ தெரியுமா –

துண்டீரம்‌ மண்டலம்‌ மே குலபதிரபி ச ஸ்கந்த பூபால வந்த்ய
க்ஷேத்ரம் ஸத்ய வ்‌ரதாக்யம்‌ க்ஷிதி தல திலகம்‌ ஷூத்ர காஞ்ச்யக்‌ரஹார
ப்ரக்யாதச்‌ சிஷ்ய பூம்நாதி சிதிசி பவதா கூப கூர்மோபமேக
ஸ்தாதாவா தாஹவேஷுஸ்‌தவிர !கதமஹம்‌ ந ஸ்ருதோநாபி த்ருஷ்ட-

(சிரித்து )–அடே டாம்பிகா! என்‌ ப்ரபாவம்‌ என்னைத்‌ தவிர வேறு எவரால்‌ ௮றிய வல்லது ? என்‌ யோக்யதைகளில்‌ லவ லேசமாவது மஹா யோகிகளுக்கும்‌ இருக்குமா- எனவேயன்றோ மூத்தோரையும்‌ என்‌ ஸேவைக்கு ௮ர்‌ஹரல்ல என்று கருதி நான்‌ ஸேவிப்பதுமில்லை –. என்‌ தர்ம அனுஷ்டான ஸ்ரத்தையை நீ ௮றிவாயோ? ஹ! ஹ! ஹூ ஊராரரால்‌ ஸம்சயிக்கப்பட்ட பந்து ஒருத்தி, தானாக வந்து என்‌ தாயாரிடம்‌ பேச யத்தனித்த நிமித்தத்தினால்‌, மஹா பதி வ்ரதா சிரோமணியான என்‌ தாய்‌ ௮னாசாரப் பட்டு விட்டதாக அவளையே துறந்தவனடா நான்‌ !
டம்பன்‌–ஹ! ஹ! நல்ல ப்‌ரம்ம பந்து தான்‌ நீ, அடே விநயமற்ற துராசார! இந்த ஸக்யாஸிநியை நீ நமஸ்கரிக்க வில்லை ! போகட்டும்‌–மஹா கியாதி வாய்ந்த பெரியவனான என்னையும்‌, யாவரும்‌ ௮ஞ்சி வணங்கும்‌ என்‌ பத்னியையும்‌ நீ நமஸ்கரியாத காரணம்‌ யாது?

கர்வன்‌.-௮டே ஆத்ம ஸ்தோத்திரஞ்‌ செய்து கொள்ளும்‌ பாலி! மஹா பூஜ்யனான என்னைப்‌ பூஜியாத தோஷத்‌தால்‌ நீ நாய்‌ ஜென்மமோ சண்டாள ஜென்மமோ அடையப்‌ போகிறாய்‌ :
வஞ்சனை.–௮ம்மா ஸந்யாஸிநி ! இந்த நீசப்‌ பிராமணன்‌ இந்த மஹரிஷியை நிந்திப்பதால்‌ நாசமடையப்‌ போகிறான்‌ பார்‌ !
௮ஸூ.–௮திதிகளை ஆராதிக்கும்‌ யோக்யதை யற்ற தார்மிக பத்னியின்‌ நிந்தனை வெகு நன்றா யிருக்கிறது !.

டம்ப–(கோபத்‌துடன்‌) அடே! காக்கையைப் போல வீணில்‌ கத்துகிறவனே ! நீ தான்‌ நாய் மாதிரி ஊரூராய்த் திரிந்து வருபவன்‌ ! மூடு வாயை –

கர்வ.–(கை கொட்டிச்‌ சிரித்து) ஹ! ஹ! உள்ளதைச்‌ சொன்‌னால்‌ கோபம் தான்‌ வரும்‌! ஏனடா குரங்கைப் போல்‌ அப்படிக்‌ கோபித்துக்‌ கொக்கரிக்கிறாய்

டம்ப -தூணைப் போல்‌ பருத்‌திருக்கிறாயே யொழிய லோக . வ்யவஹாரம்‌ ஒன்று மறியாதவனாகக்‌ காண்‌கிறாய்‌ நீ ! ப்‌ரம்மாவே தன்‌ ஹஸ்‌தங்களினால்‌ எனக்கு அர்க்ய மளித்‌திருக்கிறார்‌! இவர்‌ பரம்பரையில்‌ பிறந்த பலரும்‌ இன்றும்‌ கிருதார்த்தர்களாக வேண்டி. ‘எனது ஸ்ரீபாத தீர்த்‌தத்‌தினால்‌ ப்ரோக்ஷிக்கப்‌ படுகின்றனர்‌ காண்‌!

வஞ்சனை-ஸ்வாமிகள்‌ ஸாதித்தருளிய தவ்வளவும்‌ யதார்த்தமே! ஸஹ தர்மிணியான நான்‌ பிரத்யஷமாகக்‌ கண்‌டதுவே!

கர்வன்‌-பேஷ்‌! அம்மா ஸந்யாஹிநி ! யுக்தி விசேஷத்தால்‌ நான்‌ இப்பொழுது. அறிந்ததைக்‌ கூறுகிறேன்‌ கேள்‌! பிறார் ஸொத்திலேயே கண்ணுள்ளவளும்‌, கோண புத்தி மிகுந்தவளுமான இவளே என்‌ மதினி குஹனா தேவி! ஸ்வாமிகள்‌ தான்‌ என்‌ முத்தண்ணா ‘டம்பாசாரியார்‌-நமது தர்ம ஸந்தேகம்‌ இவர்களால் எப்படித் தீர வல்லது –

டம்பன்‌–(மந்த ஹாஸத்துடன் ) ஸரி தான்‌ ! ஸரி தான்‌! வீண் சப்த ஆடம்பரம் செய்பவனும்‌ மிகுந்த குணசாலிகளையும்‌ தூஷிப்பவனாகிய நீ, தம்பி கர்வனாகத் தான்‌ இருக்க வேண்டும்‌ ! ஸந்யாஸி வேஷம் பூண்டிருப்பது உனது தர்ம பத்னி ௮ஸூயை யம்மாள்‌ தான்‌! தர்ம ஸந்தேகம்‌ நிவர்த்தியாயிற்றா ? என்னால் –

கர்வன்‌.–௮ண்ணா ! ௮டியேன்‌ ௮பராதங்களை க்ஷமித்‌தருள வேண்டும்‌! டம்பன்‌–௮பராதமென்ன ! ௮துவே யன்றோ நம்‌ குணம்‌ (ஒருவரை யொருவர்‌ கட்டிக்‌ கொள்‌கிறார்கள்‌.)
கர்‌வன்‌.–௮தோ ! மகா ராஜனும்‌ தேவியாரும்‌ வருகிறார்கள்‌ -நாம்‌ சற்று அடங்கி ஒதுங்கி நிற்போம்‌- (ஒதுங்‌கி நிற்கிறார்கள் ) (மஹா மோகனும் துர்மதியும்‌ பிரவேசம்‌]

மோகன்‌.--என்ன ஆச்சர்யம்‌ ! விவேகளை வெல்வதற்காக அனுப்பப்பட்ட காம க்ரோதாதியர்‌, வ்யூஹம்‌ கலைந்து, பயந்தோடி, நம்மைக்‌ காண்பதற்கு அஞ்சிப்‌ பிராயோபவேசஞ்‌ செய்து விட்டார்களாமே! குயுக்‌திகளாலான பல்வேறு மதங்களும்‌ பிரயோசன மற்றன ! பெண்ணாசையும்‌, மண்ணாசையும்‌, பொன்னாசையும்‌, பேராசை கோபம்‌ முதலியனவற்றின்‌ உதவியைப்‌ பெற்ற போதிலும்‌, விவேகனால்‌ பீடிக்கப்பட்ட ஜீவாத்மாவால்‌ நிராகரிக்கப் பட்டன ! இருந்தும்‌ ஜீவன்‌ பூர்ணமாக விவேகன்‌ வசம்‌ ஆகாமல்‌ ஊசலாடிக் கொண்டிருக்கும்‌ தற்கால நிலையில்‌, ஊக்கம் விடாது நமது ராஜ்யத்தை நிலை நிறுத்த முயன்றே தீர வேண்டும்‌ ! அதற்கேற்ற ஸாமர்‌த்யமுள்ள மந்திரிகளைத்‌ தேட வேண்டும்‌ !
(டம்பன்‌ முதலானோர்‌ முன் வந்து நமஸ்கரிக்கின்‌றனர்‌;)
ப்ரியே ! நீ கவலை விடு ராக்ஷஸர்களை வெல்வதில்‌ ராமன்‌ தனித்தே நின்று ஜெயித்தாப்‌ போல, காம க்ரோதாதியரால்‌ கை விடப்‌ பட்டாலும்‌ நான்‌ தனித்தேனும் நின்று, விவேக மோஹ யுத்தத்தில்‌ வெற்றி பெறாது திரும்பேன்‌ என்பைத நிச்சயமாய் நம்பு –

டம்பன்‌,– பிரபோ! அந்த ராமனுக்குக்‌ குரங்குகளல்லவா உதவி செய்து வெற்றியைக் கொடுத்தன. கிருஷ்ணனுக்குக்‌ கேவலம்‌ இடையர்களே யன்றோ பக்க பலம்‌.ஆகவே, இதோ நிற்கும்‌ நாங்கள்‌ இருக்க உமக்கேன்‌ கவலை?

மோகன்‌.–பேஷ்‌ !–, இந்தக்‌ கலி காலமே எனக்குத்‌ தேர்‌! துர்மதீ! நீயே என்‌ ஸாரதி! டம்பனே எனது ஜயத்‌தைக்‌ தெரிவிக்கும்‌ துந்துபியாகிறான்‌–. கர்வனே இனி எனது கவசம்‌! வெற்றி என்னுடையதே !–டம்பா மீண்டும்‌ புண்ய நதிகளின்‌ சமீபங்களில்‌ சஞ்சரித்து உனது தர்மங்களை ஜாக்ரகையாகக்‌ காத்து வருவாயாக!–. தர்ப்பா! – மகா வைராக்யத்துடன்‌ தபஸ்‌ செய்பவர்கள்‌ . நிறைந்த காடுகளிலும்‌ வேறிடங்களிலும்‌ சஞ்சாரஞ் செய்து என்‌ ஆஞ்ஞாசக்ரத்தைக்‌ கை விடாது செலுத்தி வருவாய்‌. ‘

டம்ப -தர்ப்ப மஹா ராஜன் உத்தரவுப்படியே இதோ செல்கிறோம்
(தம் தம் மனைவிகளுடன் செல்கிறார்கள் )

மோகன்–பிரியே -இனி நாம்‌ தைரியத்துடன் செல்‌வோம்‌ வா –விவேகனை வெல்வது அசாத்யமானது அல்ல -ஜயம் நன்மை விட்டு விலக வில்லை இன்னமும்‌ !
(குதூஹலத்துடன்‌ செல்கிறார்கள்‌)

நான்காம்‌ காட்சி-இடம்‌ :–விவேகனது கோட்டைக்‌கெதிரில்‌–[விவேகன்‌, தன்‌ ஸாரததியான தர்க்கனுடன்‌ ரதா ரூடனாய்க்‌ காணப்படுகிறான்‌.]

விவேகன்‌.-தர்க்கா! தியானத்திற்கேற்‌ற ஸ்தலத்தைத் தேடி வரும்‌.என்‌ மனோ ரதத்தை வெகு சாமர்த்யத்‌துடன்‌ செலுத்தத்‌ கூடியவன்‌ நீ ஒருவனே ! ஜீவாத்மா சகல இந்‌தியங்களையும் தனக்கு வசமாக்கிக்‌ கொண்டு விட்‌டான்‌ ! கர்ம பூமியாகிய பாரத வர்ஷத்‌தில் தான்‌ யோகம்‌- ௮துள்‌, கைலாஸம்‌ பவனீபதிக்கு ஸ்தானமாயினும் அநந்யப்‌ பிரயோஜனமான தியானத்‌திற்கு ௮து ஏற்ற இடமல்ல- ஸித்தர்களினால்‌ ௮டையப் பட்டிருக்கும்‌ கந்தமாதன பர்வதமும்‌ யோக ஸித்தி உண்டாகக் கூடிய இடமில்லை. ஆயினும்‌!. யுத்தத்தில்‌ உண்டான காய வடுக்களுடன்‌ ஸ்ரீராமனை ஸ்தோத்திரஞ்‌ செய்து குதூகலத்துடன்‌ காணப்பட்ட ஆஞ்சநேயன்‌ ஆங்கு பாடிய ஸ்லோகமொன்று இன்னமும்‌ என் காதில்‌ ஒலித்துக் கொண்டே மனதில்‌ பதிந்திருக்கறது ! | ஹா ஹா!

பகவதி பரத்வாஜே புக்திஸ்‌ ததா ஸபரீ க்ருஹே
ப்‌ரபுரனுஸ்ருதோ விஸ்வாமித்ர: ப்லவங்க பதிஸ்‌ சதா |
ப்ருகுபதி தபோலூநம்‌ திருஷ்டி: ககஸ்ய ச தக்ஷிணா
ஜயதி லளிதோத்துங்கா வ்ருத்திர்‌ தஸாஸ்ய ரிபோரியம்

இங்கிருந்தால்‌, மனது , த்யானத்தை மறந்து இந்தக் காரணாம்ருதத்‌தால்‌ மயக்கப்பட்டு நிலை தடுமாறக் கூடும்‌!–, ஹிமவத் பர்வதச் சாரலிலோ, கங்கையின்‌ சலனமும்‌ ஸமாதியைக் கெடுக்க வல்ல பல ஸ்ருங்காரங்களுங்‌ காணப்‌ படுகின்‌றன–. ஆர்யா வர்த்த தேசமும்‌ பாஷண்டர்கள்‌ நிறைந்துளதால் நம்‌ காரியத்திற்கேற்ததல்‌ல -. ஹ! ஹி! -. அயோத்யையை நினைத்தால்‌ மயிர்க்‌ கூச்சலிடுகிறது –

நமஸ்‌தஸ்மை கஸ்மை சந பவது நிஷ் கிஞ்சந ஜன
ஸ்வயம்‌ ரஷா தீஷா ஸமதிக ஸமிந்தாந யஸஸே |
ஸுராதி ஸஸ்வை’ ரஷண குபித ஸாபாயுதவ தூ:
த்ருஷத்தா துர்ஜாத ப்ரஸமந பதாம்போஜ ரஜஸே.

ஆனால்‌ தத் ஸமையமோ, இவ்‌ வயோத்யையும்‌ கிருத யுக தர்‌மம்‌ நீக்கியும் , நிவர்த்தி தர்மத்தைக்‌ கொண்ட ஸாதுக்களால்‌ விடப்பட்டதாயு மிருக்கறது !–. பூமி பாரத்தைப்‌ போக்க வேண்டிப்‌ பகவான்‌ ௮வதரித்‌து லீலா விநோதங்‌கள்‌ நடத்தி வந்த மதுரா பட்டினமோ, அந்தக்‌ காரணத்தால்‌ பூஜிக்கத்‌ தக்கதே !…

ஹர்த்தும் கும்பே விநிஹிதகர ஸ்வாது ஹய்யங்க வீநம்
த்ருஷ்ட்வா தாம க்ரஹண சடுலாம்‌ மாதரம்‌ ஜாத ரோஷாம்‌|
பாயா தீஷசத் ப்ரசலிசபதோ நாப கச்சந் ந திஷ்டந்
மித்யா கோபஸ்‌ ஸபதி நயநே மீலயந் விஸ்வ கோப்தா

ஆனாலும்‌ சுந்தரிகளான கோபிமார்களது லீலைகளையே ஞாபகப் படுத்துவதும்‌, தத் காலம் அதர்மத்தால் முழுங்கப் பட்டதுமான ௮ந்த மதுராபுரியும்‌ சமாதிக்கு ஏற்ற இடமில்லை. ஸ்ரீஹரி க்ஷேத்ர மெனப்படும்‌ ஸாளக்ராம ஷேத்ரமும்‌ என் மனத்திற்குப்‌ பிடித்ததாயில்லை! வாரணாசியும்‌ வஸதியானதல்ல–. விந்த்யாசலச் சாரலும்‌ பிரயோஜனமில்லை–. பாலைவனங்கள்‌, -பணமே பிரதானமாகக்‌ கொண்டவர்கள்‌ நிறைந்த இடம்‌

ப்ராளபதி பூர்ணதி ஸ்கலதி முஹ்யதி ஹுங்குருதே
ந ச பதவீமவைதி ந ச தாம ந சத்ரபதே |
விக்ருதி ச ப்ரஸூதி விஷமாஸய தோஷபூமா
தனமதி ராமதேந தமதீவ தாரவலயம்

காவிரிப்‌ பிரதேசமும் மகா கடின சித்தர்களும்‌, அங்குள்ள ஸாதுக்களிடம்‌ விஷமம்‌ செய்பவர்களும்‌, ஹிம்சிக்‌குமவர்களாலும்‌ நிறைக்கப் பட்டிருக்கறது –யாதவாசலம்‌ பரவாயில்லை–பரசுராம க்ஷேத்ரம் மோக்ஷ ஆசையுள்ள பெரியோர்களை நிந்திக்கும்‌ இடம்‌–மலய பர்வதம்‌ பூலோக ஸ்வர்க்கந்தான்‌–பாண்டிய தேசம்‌ நம்‌ ஸம்பிரதாய கூடஸ்‌தரான ஸ்ரீ சடகோபன்‌ திருவவதரித்த பிரதேசம்‌ ! (கை கூப்பி)

ஸாரஸ்‌ ஸாரஸ்வதாநாம்‌ ஸடரிபுபனிதி ஸ்ஸாந்தி ஸூத்தாந்த ஸீமா
மாயா மாயாமிநீபி:ஸ்வ குணவிததி பிர் பந்த யந்தி ந்தயந்தி |
பாராம்பாரம்‌ பரீதோ பவ ஜலதி பவந் மஜ்ஜநாநாம்‌ ஜநாநாம்‌
ப்ரத்யக் ப்‌ரத்யஷ யெந்ந ப்‌ரதி நியதரமா ஸந்நிதாநம்‌ நிதாநம்‌ ॥

திருமாலிருஞ்‌ சோலைக்‌ கண்ணிருக்கும்‌ அழகர்‌ க்ருபை எல்லா இடங்களிலும்‌ பரவி இருக்கிறதல்லவா

த்வயா ஜுஷ்ட துஷ்டிம்‌ பஜதி பரமேஷ்‌டீ நிஜப்தே
வஹந் முர்த்தீ ரஷ்டவ் விஹரதி ம்ரூடாநீ பரி ப்ருட: |
பிபர்தி ஸ்வாராஜ்யம்‌ வ்ருஷ சிகரி ஸ்ருங்காரி கருணே
ஸூநா ஸீரோ தேவாஸூர ஸமர நாஸீரஸுபட: |

அப்பப்ப ? சோள தேசத்தில்‌ தங்குவ்தும்‌ பிசகு! கலைமகள்‌ நூபூரம்‌ ஒலியின்‌ மிகுதியை ஸூசிக்கும்‌ கவிஞர்கள்‌ வாக்கு மலிந்து சஞ்சல சித்தர்களைக் கவரும் இங்கு தங்கினால்‌, நமக்குள்ள சிறிது மநோ திடமும்‌ மறைந்து போகும்‌ !–ஆனல்‌, ஸ்ரீரங்கம்‌ (ஸந்தோஷத்துடன் )

கநகருணாரஸெள கபரிதாம்‌ பரிதாப ஹராம்‌ நயந மஹஸ்சடாம்‌ மயி தரங்கய ரங்க பதே
துரிதஹு தாஸந ஸ்புரித துர்தம து:கமஷீ மலிநித விஸ்வஸெளத துரபஹ்நவ வர்ண ஸுதாம்‌.

மகா ஸ்லாக்யமான க்ஷேத்ரமே தான்‌ இது !–.தொண்‌டை மண்டலத்திலுள்ள ஸத்ய விரத ஷேத்தரமென்‌னும்‌ ஹஸ்‌கிரியும்‌ வெகு ஸ்லாக்கியமானது தான் –

ஸம்ஸாரா வர்தவேக ப்ரஸமந ஸூப த்ருக் தேசிக ப்ரேக்ஷிதோஹம்‌
ஸந்த்யக் தோந்யை ருபாயை யநுசித சரி தேஷ் வத்ய ஸாந்தாபிஸந்தி :
நிஸ் ஸங்கஸ்‌ தத்வ த்ருஷ்ட்யா நிரவதிக தயம்‌ ப்ரார்த்ய ஸம்‌ ரக்ஷகம்‌ த்வாம்‌.
ந்யஸ்ய தவத் பாதபத்மே வரத நிஜ பரம்‌ நிர்பரோ நிர் பயோஸ்மி-

ஸ்ரீவரதனையே ரக்ஷகனாகப்‌ பிரார்த்தனை செய்து என்னுடைய பாரத்தை ௮வன்‌ திருவடித்‌ தாமரைகளிலேயே சமர்ப்‌பித்து விட்டேன்‌ — நிர்ப்பபயனானேன்‌ -என்‌ ஸந்தேகங்களெல்லாம்‌ ஓழிந்தன!–. கசடறக் கற்ற ஆசார்‌ய ஸ்ரேஷ்டர்களது கடாக்ஷமும்‌ பெற்‌றவனானேன்‌ !-(ஸ்ரீவேங்கடாசலமோ ! -அஞ்சலி ஹஸ்‌தனாய் )

நிஷாதாநாம்‌ நேதா கபிகுலபதி காபி சபரீ
குசேல: குப்ஜா ஸா வ்‌ரஜ யுவ தயோ மால்ய க்ருதிதி
அமீஷாம்‌ நிம்நத்வம்‌ வ்ருஷிகிரிபதே ருந்நதிமபி
ப்ரபூதை: ஸ்ரோதோபி; ப்ரஸபமநுகம்‌ பேஸமயஸி

தர்க்கன்‌…-பிரபோ பாரத வர்ஷத்திலுள்ள சகல தேசங்களையும்‌ பார்த்து விட்டோம்‌. ௮வற்றுள்‌, யோக ஸித்திக்கு எந்த இடம்‌ யுக்தமான தென்று மகா ராஜனுக்குப்‌ படுகிறதோ?
விவேக. ஸாரிதி ! பஞ்சேந்திரியங்களையுமடக்‌கி எவனொருவன்‌ எங்கிருக்க வல்லனோ ௮துவே ஸ்லாக்யமான இடம்‌! கலியின்‌ கொடுமையால்‌ விபாபிக்கப்பட்ட உலகில்‌ ஸமாதிக்கு ஏற்ற இடம் இது தான் என்று சொல்ல முடியாது -. தன்னைச்‌ சரணடைந்தவரைக்‌ காப்பதாக அருளிச்‌ செய்திருக்கும்‌ பகவானைச்‌ சரணமடைவதற்குச் சாதனமான இடம்‌ ஒருவனுடைய நிர்மல மனஸே — அம் மனத்துள்‌ ஞானக்குன்றிலேறி, ஆசார வனத்துள்‌ இருந்து , லக்ஷ்மீபதியின்‌ திஸ்ருவடிகளே சரணமென்னும்‌ ஆசைப் பெறுக்கில்‌ நீராடி, உபநிஷ அர்த்தங்களைச்‌ சிந்தித்தலாம்‌ தவமியற்றுபவன்‌ எங்கிருந்தால் என்ன ? எப்‌படி யிருந்தாலென்ன -ஆழ்வார்‌ ஆசாரியர்கள்‌ புகழ்ந்து பாடி யிருக்கும் ஸ்தலங்களில்‌, எங்கு ஸ்ரீமந் நாராயணனது திருவடி ஸேவை செய்து வரும்‌ பெரியோர்கள்‌ இருக்‌கிறார்களோ ௮துவே தியானத்‌ததிற்கேற்ற இடமாகும்‌. ஸ்‌தலமாயிருந்து பெரியோரில்லாத இடத்தை விட, ஸ்‌தலமென்ற பேரற்றதாயினும்‌ பெரியோர்களான ஸாத்விகர்களை யுடைய இடமே சிறந்தது. எந்த இடமான போதிலும்‌, பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹத்‌தை ஸதா அவனவன்‌ ஹ்ருதய கமலத்தில்‌ வைத்துத்‌ தியானஞ்‌ செய்து வர வேண்டுவதவஸ்யம்‌. இனி, நாம்‌ போய்‌, ஜீவனுக்குப்‌ பகவானுடைய திவ்ய மங்கள விக்‌ரகத்தை. நிர்த்தாரணஞ்‌ செய்து தியானத்தில்‌ தெளிவான வ்ருத்தியை உண்டாக்குவோம்‌, வா-
(போகிறார்கள் )

ஜந்தாம்‌ காட்சி–இடம்‌ விவேகனது சித்ர சாலை[ஸம்ஸ்காரன்‌ பிரவேஸம் )
ஸம்ஸ்‌.
–தேவ சில்பியான விச்வ கர்மாவையும்‌, ௮ஸூர சில்பியான மயனையும்‌ வென்று இளைப்பாறி வந்தேன்‌ விவக ராஜனது சிற்பியான யான்‌ ! ஸுமதி தேவியின்‌ உத்திரவால்‌ ஸஹதிருஷ்டி, ஸத்ருச த்ருஷ்டி என்ற சேடிகளால்‌ எழுப்பப் பட்டவனாய்‌ ஸேனாபதி வ்யவஸாயனால்‌ ஏவப்‌ பட்டவனாக ஜீவாத்மாவினுடைய மனத்தையே சுவராக வைத்‌துக் கொண்டு, சுத்தம்‌ ௮சுத்தமென்று பிரிக்கக் கூடியதான ப்ரபஞ்சம்‌ முழுவதையும்‌ சித்திரித்து “எழுதி விவேக மகாராஜனின்‌ ஆஞ்ஞஜையைப்‌ “பூர்த்தி செய்து விட்டேன்‌! -சித்திரமும்‌. கைப் பழக்க மல்லவா- மஹா ராஜன்‌ என்‌ சித்திரத்தை ஆதரித்து , சந்தோஷித்து நல்ல பஹுமானமே கொடுப்பார்‌! அதோ அவரே வந்து விட்டார்‌!

[விவேகன்‌, ஸூமதி, வ்யவஸாயன்‌ பிரவேசம்‌.]

வ்யவ.–ப்ரபோ! தேவி! ஸம்ஸ்காரனென்னும்‌ நமது சில்பியால் உள்ளத்தை உள்ளபடி சித்‌திரத்துக்‌ காட்டப்‌ பட்டிருக்கும்‌ முக்காலுத்தையும் உணர்த்தும் இந்தத் சித்ர சாலையைக்‌ கடாக்ஷித்‌தருள வேண்டும்‌–
விவேக.–(சுற்றிப்பார்‌த்‌து ) கண்ணே! என்றும்‌ காணாதோர்‌ ஆச்சர்யமே இது -யாவும்‌ வெகு சிறப்பாகவும்‌ உண்மையாகவுமே ௮மைந்திருக்கின்றன-ஹ ஹ ஜான திருஷ்டியைச் செலுத்த விரும்பும் புருஷனுக்கு முக் குணங்களால்‌ செய்யப்பட்ட இந்த ப்ரக்ருதி என்‌னும்‌ குதிரை, அதோ ௮வன்‌ புத்தயை மறைக்கிறது -அதனால்‌, : ஸம்ஸாரமென்னும்‌ ஜ்வராக்னிக்கு ஜன்ம பூமியாகிய வற்றைத்‌ தெரிவிக்க ௮ந்த அசுத்த பாகத்தை நீ பார்க்க வேண்டாம்-

ஸூமதி .-நாதா! பழைய வாஸனையின்‌ காரணத்தால்‌, கண்‌ ப்‌ரக்ருதியின்‌ பக்கம்‌ செல்கின்றதாயினும்‌, தங்கள்‌ உத்‌திரவின்‌ படியே நான்‌ ௮வைகளைக்‌ காணப் போவதில்லை!
வ்யவ.–சுதத ஸ்ருஷ்டி ஸ்‌வரூபமான பகவானது நித்ய விபூதி யென்னும்‌ பாகத்‌தை மகா ராஜனும்‌ ராணியாரும்‌ நன்முகக்‌ கடாக்ஷித்தருள வேண்டும்‌.

விவேக.–௮ப்‌.படியே செய்வோம்‌. ௮துவே, மனது நிலைத்‌திருப்பதற்கு ப்‌ரயத்னமில்லாமல்‌ ஸுலபமாகச்‌ செய்‌யக் கூடிய காரியமாகும்‌. பரமாத்மாவினுடைய ௮வதாரரங்கள்‌ யாவும்‌ ௮வனது ௮பார தயையினால்‌ உண்‌டானவை யல்லவா”?
வ்யவ.–ஆம்‌ ப்ரபோ !இதோ !-, (ஆச்சர்ய பரவசனாக) மகா அத்புதமான இந்தச்‌ சித்‌திரத்தை எழுத மயனாலுமாகாது – விச்வ கர்மாவாலுமாகாது ! அந்த ஸாஷாத்‌ ஸ்ரீமந் “நாராயணனே தான் தன்னைப் பற்றிய இச் சித்திரங்களை எழுதினான்‌ போலும்‌!-அதோ பாருங்கள்‌! ஸமுத்திரத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு மூன்று அவதாரங்கள்‌ காட்டப் பட்டிருக்கின்றன ! முழுகிப் போன வேதங்களைத்‌ தேடுவதற்காக பார்வைகளால்‌ ஸமுத்‌ரமத்தியில்‌ தாமரைக் காடு பூத்தது போலத்‌ தோன்‌றும் பகவானது மச்சாவதாரம்‌ முதலானது! ஹா! ஹா! – உச்சைச்ரவஸ்‌, ஐராவதம்‌, அம்ருதம்‌ முதலானவற்றைக் கொடுத்த ஸமுத்ரம்‌ மந்தரசரியால்‌ கடையப்‌ பெற்ற: போது அம்மலையை ௮நாயாஸமாகத்‌ தாங்கிக் கொண்டும்‌ தூங்கிக் கொண்டுமிருக்கும்‌ கூர்மாவாதார மூர்த்தியின்‌ விசித்‌ரத்தைப்‌ பாருங்கள்‌ !--கல்பக விருஷம்‌, சந்திரன்‌ கெளஸ்துப ரத்னாதி அபூர்வ வஸ்துக்களுடன்‌ ஸ்ரீ மகா விஷ்ணுவின்‌ : வஷஸ்‌ ஸ்தல் லக்ஷ்மியையே கொடுத்த ஷீரஸாகரமல்லவா அந்தக்‌ கூர்மத்தை உடைய சமுத்திரம் ! – (ஆனந்த பரவசனாகி )

விவேக:–ஆச்சர்யம்‌ ! ஆச்சர்யம்

கல்யாணாநா மவிகலநிதி காபி காருண்ய ஸீமா –
நித்யாமோதா நிகமவசஸாம்‌ மெளளி மந்தார மாலா –
ஸம்பத் திவ்யா மதுவிஜயிநஸ் ஸந்நி தத்தாம்‌ ஸதாமே
ஸைஷாதேவீ சகல புவந ப்ரார்த்தநா காமதேநு :

அந்த லஷ்மியின்‌ கிருபா கடாக்ஷத்தாலேயே என்‌ கோறிக்கை ஈடேற வேண்டும்‌ –, ஸுமதி! இந்த லஷ்மியை முன்னிட்டுக் கொண்டு போனால்‌ பகவானை மிகவும்‌ சுலபமாய்‌ அடையலாம்‌!
வ்யவ..–தேவி ! ‘ பெளராணிகர்கள்‌ வார்‌த்தை யாதெனில் –

தேவ திர்யங்‌ மனுஷ்யேஷு புந்நாமா பகவாந் ஹரி :
ஸ்‌த்ரீநாம்நீ லஷ்மிர்‌ மைத்ரேய நாநாயோர்‌ வித்யதே பரம்‌.’

தேவ மனுஷ்ய திர்யக்குகளில்‌ ஆண் பாலெல்லாம்‌ பகவானாகிய ஸ்ரீவிஷ்ணு . ஸ்வரூபமே- பெண் பாலெல்லாம்‌ ஸ்ரீ மஹா லஷ்மீ ஸ்வரூபமே.
விவேக.–ஸரியே !

ஸாதாரண்யே ஸத்யபி ஸ்வேச்சயைவ : த்வேதா விஸ்வம்‌ யத் விபூதிர்‌ வ்யபாஜி சூடாபாகே தீப்யமாநவ் ஸ்ருதீ நாம்‌ திவ்யா வேதெள தம்பதீமே தயேதாம்

வ்யவ –இது லஷ்‌மியைத் தரித்துக் கொண்டிருக்கிற ரூபம்‌–பூமியைத்‌ தரிக்கிற மத்றொரு ரூபத்தை அதோ பாருங்கள்‌ !-

விவேக-– மஹத் ஆச்சர்யம்‌ இந்த ஆதி வராஹ அவதாரம் – ஹா? ஹா! லக்ஷ்மியை மார்பில்‌ வைத்து உபசரித்த பகவான்‌ பூ தேவியை ஆதி சேஷ ரூபியாய்‌ ஆயிரம்‌ ஸ்ரங்களால்‌ வஹித்துப்‌ போகிக்கும் காக்ஷி மகத்‌ ஆனந்த கரமாயிருக்கறது !

ஸூமதி — நாதா! எப்படி இந்த மஹா வராஹர்‌, பிரளயத்தில்‌ மூழ்க பூமியை ஹீரண்யாக்ஷனைக் கொன்று மீட்டு வந்தாரோ, ௮ப்படியே, ஆர்ய புத்ரரான தாங்களும்‌ ஸம்ஸார ஸாகரத்தில்‌ மூழ்கிய புருஷனை மோக்ஷ சத்ருக்‌களைக்‌ கொன்று மீட்டு வருங்‌ காஷியைக்‌ காண விரும்புகிறேன்‌ !
வ்யவ.–தேவி! உமது ௮பீஷ்டம்‌ நிச்சயம்‌ ஸித்திக்கும்‌– ௮தோ பாருங்கள்‌ நரஸிம்ஹாவதாரக்‌ காஷியை !

விவேக.–௮ஸூரர்களுக்குப்‌ பயங்கரமாயும்‌, பிரஹ்லாதனுக்‌குக்‌ குளிர்ச்சியைக்‌ காட்டுவதுமாகிய பார்வையைக்‌ கொண்ட ஹிரண்யகசிபுவின்‌ காலனே நம்மை மோஹ மாயைகளினின்றும்‌ காத்து ரக்ஷிக்க வேண்டும்‌ !
வ்யவ.–வாமனாவதாரக்‌ காஷியை ௮தோ கண்டீர்களா ?
விவேக ;–திரிவிக்‌ரமனின்‌ பராக்ரமமே நம்மையும்‌ பாதுகாத்தருள வேண்டும்‌! வ்யவ.–அதோ!மூன்று லோகங்களையும்‌ காப்பாற்‌றிய ப்ருகு, ரகு யதுவினுடைய வம்சங்களில்‌ பிறந்த மூன்று ராமர்‌களும்‌ !

௮நேந கில கோஸல ஸுதா குமாரபாவ கஞ்சுகித காரணா காரேண
கெளமார கேளிகோபாயித கெளசிகாத்வரேண, ராணாத்வர துர்யபவ்ய
திவ்யாஸ்த்ர ஸாலிநா, ப்‌ரணத ஜந விமதந துர் லளித தோர்லளிதேந மை
திலநகர ஸுலோசநா லோசந சசோர சந்த்ரேண, திநகர குல கமல திவாகரேண, கண்ட பரஸூ கோதண்ட ப்‌ரகாண்ட கண்டந சவ்ண்ட புஜ தண்டேந , பித்ரு வசந பரிபாலந ப்‌ரதிஜ்ஞாவஜ்ஞாத யெளவராஜ்யேந , தண்டக தபோவந ஜங்கம பாரிஜாதேந , ௧ரதரகரதரு கண்‌டந சண்ட பவநேந , த்வி ஸப்‌த ரஷஸ் ஸஹஸ்‌ர–நளவந விலோளந : மஹா களபேந , மஹித மஹாம்ருத தர்ஸந முதித மைதிலீ த்ருட தர,சச பரி ரம்பண விரோபித விகடவீர வ்ரணேந, க்ருத்ர ராஜ தேஹ திதஷா லக்ஷித பக்தஜந தாக்ஷிண்யேந , ௮வந்த்ய மஹிம முநி ஜந பஜந முஷித: ஹ்ருதய கலுஷு சபரீ மோஷ ஸாஷி பூதேந , ப்‌ரபஞ்ஜநதநய பாவுக பாஷித ரஞ்ஜித ஹ்ருதயேந , தரணிஸுதா , சரணாகதி பர தந்த்ரீ க்ருத, ஸ்வாதந்தர்யேணே, விமதஸஹோதர ரஷ : பரிக்ரஹ ஸம்ரம்ப விஜ்ரும்பித ஸர்வேஸ்வர பாவேந , ஸக்ருத் ப்‌ரபந்ந ஜந ஸம்ரஷண தீஷித ஸத்ய விரதேந , கபிகுலகரதல துலித கிரி நிகர ஸாதித ஸேது பத ஸீமா ஸீமந்தித ஸமுத்ரேண, விஸ கட விசிக விதாடந விகடித மகுட விஹ்வல விஸ்‌ரவஸ் தநய விஸ்ரம ஸமய விஸ்ராணந விக்யாத விக்ரமேண, விபீஷண வசம்வதீக்ருத லங்கைஸ்வர்‌யேண, ப்‌ரதிஜ்ஞார்ணவ,தரண க்௫த ஷண பரத மநோரத,ஸிஹ்‌மாஸநாதி ரூடேந , திவ்ய பெளமாயோத்தயாதி தைவதேந , ஜாநகீ ஸஹ தர்ம சாரிணா, ஸர்வ தர்ம ஸமாராதநீயேந , ஸநாதந தர்மேண, ஸாகேத ஜந பத ஜநிதநிக ஜங்கம ததிதர ஜந்து ஜாத திவ்ய ௧தி தாந தர்சித நித்ய நிஸ்ஸீம வைபவேந , பகவதா பக்‌த ஜநாபி ராமேண ஸ்ரீ ராமேண விஸ்வ மேதத் ஸநாதி க்ருதம் –

விவேக– ரகுராமனே ஸாதுக்களைக்‌ காப்‌பாற்றும்‌ ப்ரபத்‌தி சாஸ்‌திரத்‌தினால்‌ பிரதிபாதிக்கப் பட்டவராவர்‌ !

வ்யவ.–வேதாந்த ஸாரமாகிய கீதையை உபதேசம்‌ செய்‌தருளிய ஆசார்யனான ஸ்ரீவாஸூ தேவன்‌ ! இதோ
விவேக, -நமாமி!

நிகடேஷு நிஸா மாயாமி நித்யம்‌ நிக மாந்தை ரதுநாபி ம்ருக்ய மாணம்‌ யமளார்ஜுந த்ருஷ்ட பால கேளிம்‌ யமுநா ஸாஷிக யவ்வனம் யுவாநாம்

வ்யவ.–ஸகல பாபத்தையும்‌ போக்கடிக்கக் கூடிய கல்கி இதோ !-ப்ரபோ : பகவானது இந்தப் பல அவதாரங்களில்‌, புருஷனுக்குத்‌ தியானத்திற்கு விஷயமாகக்‌ கூடிய அவதாரம்‌ எது என்பதை மகா ராஜன்‌ நிர்த்தாரணஞ்‌ செய்து அருள வேண்டும்‌ !

லிவேக:–நமக்கு ‘இதில்‌ -௮தி௧ பாரமே யில்லை ! தன்‌ திருவடிகளில்‌ தலை வணங்கினவர்களுக்குப்‌ பிரமாணங்களில்‌ உள்ளபடி பகவான்‌ தானே பிரகாசிக்கிறார் | பழைய ஸம்ஸ்காரங்களுக்கு தகுந்தாப் போல , ஒவ்வொருவருக்‌கும்‌ ஒவ்வொரு சுவையை உண்டு பண்ணுகிறார்‌. மகாப்‌ பிரபுவான அவர்‌ இஷ்டத்திற்குத்‌ தடங்கல்‌ யாரால்‌ உண்டாக்கக்‌ கூடும்‌? ஆகவே, புருஷனது த்யானத்திற்குத் தகுந்த ரூபத்‌தை ௮வரே அவனுக்குக் கொடுப்பதால்‌ நமக்கேது பாரம்‌ ?–ஸேனாபதி ! சில்பி மஹா ஸமர்த்‌தன்‌! அவனுக்குத்‌ தகுந்தபடி பஹுமானம்‌ செய்‌. இனி எதிர்‌த்து நிற்கும்‌ ‘விரோதிகளை வெல்ல வேண்டிய விஷயங்களைக்‌ குறித்து நாம்‌ யோசிக்கச்‌ செல்‌வோம்‌ வா. (போகிறார்கள்‌)

ஆறாம்‌ காட்சி –இடம்‌ :–யுத்தகளம்‌: -மஹாமோஹன்‌ தண்டிறங்கி இருக்கும்‌ இடம்‌.-[நாரதர்‌ பாடிய வண்ணம்‌ பிரவேசம்‌.)

நாரதர்‌–அதராஹித சாருவம்‌ ஸநாநா மகுடாலம்பி மயூரபிஞ்சமாலா:
ஹரிநீலசிலா விபங்கநீலா: ப்‌ரதி பாஸ் ஸந்து மமாம்‌திம ப்‌ரயாணே- [மஹா மோஹனும்‌, துர்மதியும்‌ பிரவேசம் )

மோஹன்‌.–பகவந் ! ஸர்வ லோக ஸஞ்சாரியான தேவரீரால்‌, மாயை என்ற எனது ராஜ தானி ௮னுக்ரகிக்கப்பட நாங்கள்‌ கிருதார்‌தர்களானோம்‌–, தேவி! ‘மஹர்ஷிக்கு அர்க்ய பாத்யாதிகளும் மதுபர்க்கமும் சமர்ப்பி

துர்மதி -இதோ

நாரதர் (தடுத்த ஜாடையாய் ) உபவாஸ விரதத்தில் இருக்கிறேன்‌-துவாதசி பாரணை வரையில்‌ எவரிடமிருக்தும்‌ எதையும்‌ பெற்றுக் கொள்வதற்கில்லை

மோஹன்‌.–பர்க்யம்‌ ! ப்‌ராபோ தங்கள்‌ பிரபாவம்‌ அளவிட முடியாததன்றோ -நமது ஸுகம்‌ விருத்தி யடைவதற்குக் காரணமேயாகும் தேவரீர் இங்கு இப்பொழுது வந்தது –

நார- (தனக்குள்‌) நம்‌ அபீஷ்டம்‌ ஜயமே அடையும்‌ (வெளிப்படையாய்‌)–மகாராஜ ! உன் ப்‌ரபாவமன்றோ அளவிட முடியாதது! . தாமரை யிலையில்‌ பட்ட நீர்‌ போல்‌ எதிலும்‌ பட்டு நிலைக்காத ஜீவாத்மாவை அநந்த போகங்களையும் ௮னுபவிக்கச்‌ செய்யும்‌ உன் பிரபாவமே ஸ்லாக்கியமானது
[வாயில்‌ காப்போன் பிரவேசம்‌.].

வாயில்காப்‌:-தேவ ! விவேக ராஜன்‌ தூதன்‌, திருஷ்ட ப்ரத்யயன்‌ பேட்டிக்குக்‌ காத்‌திருத்கிறான் –

மோஹன்‌.- வரச் சொல்‌

[வாயில்‌ காப்போன்‌ போக த்ருஷ்ட ப்ரத்யயன்‌ பிரவேசம்‌. ]

தூதன்‌. (ஓருபுறம்‌ தனக்குள்‌). ஓகோ! கலகப் பிரியரும்‌ இங்கிருக்கிறாரா? நமக்கு நல்லது தான்‌–,

நாரதர்‌: “ப்ரபோ! தூதன்‌ அதோ வருகிறான்‌ ! உபசரித்து விசாரிக்கலாம்‌;

மோஹன்‌. -உபசாசமிருக்கட்டும்‌-. என்னடா ஸமாசாரம்‌?

தூதன்‌. (ஓர்‌ பனை ஓலையை நீட்டி) இதோ எங்கள்‌ மகா ராஜனுடைய உத்திரவு !

‘மோஹன்‌– என்ன? எனக்குமா உத்தரவு

நாரதர்‌,– வேலைக்காரர்கள்‌ தம் யஜமானனைப் பற்றி உயர்த்திப்‌ பேசுவது ஸகஜம் தானே ! அதை யெல்லாம்‌ லக்ஷஷியம் செய்யக் கூடாது.
மோஹன்‌. -௮டே தூதா! உங்கள்‌ லிபி எமக்குப்‌: பரிசயமில்லாததால்‌ நீயே படி, கேட்போம்‌.
தூதன்‌ அப்படியே. (படிக்கிறான்‌). “மங்களம்‌? மகா ராஜன்‌ விவேகன்‌, மகா மோஹனுக்குத்‌ தெரிவிப்பது : துஷ்டர்கள்‌. . சண்டையை விரும்புவதும்‌ ஸாதுக்கள்‌ ஸந்தியைக்‌ கோறுவதும்‌ ப்‌ரஷித்தம்‌ ”’.

மோஹன்‌..–ஸரி தான்‌ ! தனது தாழ்மையையே விவேகன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறான்‌–உம்‌. மேலே–
தூதன்‌.-தீ யந்தாமிஹ தக்ஷிணா பதபுவோ யாவத்கலே ரத்யயஸ்‌ தத்‌ர ஸ்‌தாவர திர்யக் அம்‌சம் அகிலம்‌ புங்க்க்ஷவ த்வமய்பக்ஷத இத்தாந் நாம குலஷயோப சமநோபாயே த்வயா தஸ்துஷா ஸந்திஸ்‌ ஸத்ய கிராம துச்ச மநஸா மச்சாத் மநாமஸ்‌து ந —

நமக்குள்‌ சமாதானம்‌ ஏற்படுவதே முறை யல்லவா ?
(கை கொட்டிச்‌ சிரித்து )மோஹன்‌- யுத்தத்‌திற்குப்‌ பயந்த இந்த. .விவேகன்‌ சில போகங்களை அனுபவிக்க எல்லை யில்லா ஐஸ்வர்யமுள்ள எனக்கு உத்தரவு செய்வது சூர்யனுக்கு தேஜஸ்‌ உண்டாக வரம்‌ கொடுப்பது போலத் தான்‌ இருக்கிறது –

நார.–(தனக்குள்‌ சிரித்து )–. இந்த ஸமாதானம்‌ ஏற்‌படாதபடி. தடுக்க வேண்டியதே எனது முக்ய கடமை00இனி : (வெளிப்படையாக, துக்க பாவத்துடன்‌) என்ன ஆச்சர்யம்‌? | (பாடுகிறார் )

ப்ரூபங்கேஷ- ப்ருதக் விதேஷு பலிநோ யஸ்யா யதந்தே
ஜகத் யாஸம்‌ ஸாரமலங்க்ய ஸாஸநகதே ராஜந் மதீராத்மந : –
ப்‌ரஹ்மஸ்‌ தம்ப படஸ்ய முக்‌த ஜநக த்ரோஹஸ்ய மோஹஸ்யதே –
தஸ்யா ஸீதிதரேண ஸந்தி வசநம்‌ கிங்கஸ்யவா கத்யதே

அடா? டா! மகா சூரனாகிய மகா மோஹ ராஜனிடமா ஸந்தி என்னும்‌ பேச்சு பேசும்படியாக ஆயிற்று

துர்மதி ,.–நாதா ! சமாதானம்‌ என்கிற வியாஜத்தினால்‌ விவேகனை இங்கு வரவழைத்துப்‌ பிறகு அவனை உயிருடன்‌ பிடித்துப்‌ பீடிப்பதே உசிதமென எனக்குத்‌ தோன்றுகிறது | |

மோஹன்‌. (உரத்துச்‌ சிரித்த) பேதையே ! மகாமோஹனிடமா இத்தகைய பேச்சுக்கள்‌ ? ஸ்‌திரிகளுக்கு ராஜ காரியம்‌ என்ன தெரியும்‌? கேள்‌ என்‌ வீர வ்‌ரதத்தை ! என்னை வெட்டி னாலும்‌ ஸரி,–கொளுத்‌தினாலும்‌ ஸரி;-ஊசி முனை நாட்டக் கூடிய பூமியையும்‌ விவேகவன் அதீனத்தில் விடேன்‌ !–. எவ்வித ஸமாதானமும்‌ அவனுடன் கோறேன்‌!. தெரிந்ததா ?–௮ப்படிக்கேதாவது செய்‌வேனாயின்‌ நான்‌ மஹா மோக மஹா ராஜனல்ல –

நார-(மனத்துள் ) பிணப்பிடிபோல்‌ பிடிவாதம்‌ கொள்ளும்‌ மூர்க்கனல்லவா இவன்‌–(வெளிப்படையாய்‌) தேவி _துர்மதி! உனது நாதன்‌ வார்த்தைகள்‌ ஸ்லாகிக்கத்‌ தத்கவைகளே -தூதன்‌ படிக்க இருப்பதை
மேலேயும்‌ கேட்போம்‌.

மோஹன்‌.–(அலக்ஷியத்துடன்‌) கேட்பதற்கு என்ன இருக்கப் போகிறது ?–ஸரி.–மேலே படி–..

தூதன்‌.–.ஆகவே, ஸமாதான மேற்பட்டால்‌ நாம்‌ நம் நம்‌ வரம்பிற்குள்‌ இருக்கப் போகிறோம் – சண்டை உண்‌டானால்
(படுகிறான் )

நிஷ்காம க்ரோத லோப்ந்நி பதிதகுஹநா டம்ப தர்பாபி மாநம்
நிர்தூ தேர்ஷ்யாப்ய ஸூயாமத விஹ்ருதி ஐஹந் மஸ்தா ஸ்தம்ப ஜாட்‌யம்
அத்யஸ்வோ வா விதத்யாதபி சரமயுகே விஸ்வம ஷுத்ர ஸத்வம்‌
வேலாதீத ப்‌ரஸர்பந் மதுமதந தயா தத்த ஸேகோ விவேக

சண்டை யுண்டானால்‌, இன்றோ நாளையோ உனது மந்திரிகளனைவரையும்‌ ஓழித்து , இந்தப் ப்ரபஞ்சத்தை ஸத்வ குணமுடையதாக விவேகன்‌ செய்யப் போவது நிச்சயம்‌.”

மோஹன்‌ (கோபாதீனனாகி )–. ஹா! ஹா! எவனும்‌ என்‌னுடன்‌ பேசத் துணியாத வார்த்தைகள்‌ !–யாரடா அங்கே? இந்தத்‌ தூதனைக்‌ கொன்று விடு இக் கணமே?

நார--இவன்‌ ராஜ தூதனல்லவா

மோஹன்‌: ஆயின்‌, அங்க ஹீனப்படுத்தி. யனுப்பி விடுங்கள்‌”!
தூதன்‌.-யோஜனையேன்‌?–இதோ நானே ஒடிவிடுகிறேன்‌’ (மறைவில் சென்று )-(தனக்குள் ) இங்கு நடப்பதை கவனித்துச்‌. செல்கிறேன்‌.

நார-தூதனை ஜாடையாகக் கண்டு ஸ்லாகிக்கிறார்-

மோஹன் -(கோப வெறியால் பாத பீடத்தைக் காலால் உதைத்துத் தள்ளி பற்களால்‌ உதட்டைக்‌ கடித்துக் கொண்டு ) ஹ!’ஹ! எத்‌திக்கும்‌ துதிக்கும்‌ கீர்த்திக்கும் நேர்த்திக்கும் சேர்த்திக்கிடமான எனக்குமா இந்த அவமானம் – இதைப்‌ பொறுத்திருப்பதாலேயே ௮தம நீசனாகிறேனல்‌லவா? (யோசித்து )--. ப்ரியே! வஞ்சிக்கப்பட்ட என்‌ பிதாவுக்கே வருந்துகிறேன்‌! இது வரை சுகமாக இருந்து வந்த ஜிவாத்மாவுக்கு இனிப் போக்கு என்ன -அடே துராசாரா விவேகா வீண்‌ காரியங்களில்‌ ஏன்‌ தலை யிட்டுக் கொள்கிறாய் –

நார-ஏன் வருத்தம் உமது ஸுவ்ர்யம் யாவராலும் காணப்பட்டதும் கேட்கப்பட்டதுமே -சம்சாரம் நிலைத்து இருக்கும் வரை உனது பிரபாவம் நிலைத்தே இருக்கும் -அதோ! ஸூர்யன்‌ ௮ஸ்தமிக்கிறான்‌, மாலைக்‌ கடன்கள்‌ முடிக்க வேண்டும்‌. நான்‌ போய்‌ வருகிறேன்‌ (பாடிக் கொண்டே போகிறார் )

ஜயதி லளித வ்ருத்திம்‌ சிக்ஷிதோ வல்லவீநாம்‌ சிதில வலய சிஞ்ஜா சீதளைர்‌ ஹஸ்‌த தாளை ௮கில புவந ரக்ஷா கோபவேஷஸ்ய விஷ்ணோ ரதா மணி ஸுதாயாமம்‌ ஸவான் வம்ஸந நாள :

மோஹன்‌.--ப்ரியே ! இரவு கிட்டியது ! இனி நாம்‌ சயன ஸுகமனுபவிக்கச்‌ செல்வோம்‌ ! பொழுது புலர்ந்ததும்‌ விவேகனை வெல்ல வேண்டிய வழிகளைச்‌ சிந்திக்கலாம்‌,
துர்ம–நாதா ! விரோதி எதிர்த்‌து வர சயன ஸுகம்‌ கோறுவது பைத்யத்தினாலா ? அல்லது அதி தீரத்தினாலா
மோஹன்‌.–பேதாய்‌ 1! அளவில்லாத ஸைன்யமும்‌ சூராதி வீரர்களும்‌ கொண்ட எனக்கேன்‌ யுத்தத்தைப்‌ பற்றிக்‌ கவலை? காமனை ஆராதிப்பதே ! விவேகனை வெல்லக்‌ கூடிய ஒரே உபாயம்‌. ஆகவே தான்‌ நான்‌ சயன ஸுகம்‌ கோறியதும்‌ ! என்‌ வீரர்கள்‌ தாமே மிகுதியை கவனிப்பார்கள்‌, வா போவோம் (போகிறார்கள் )

அங்கம்‌- 3-முதற்‌ காட்சி – இடம்‌ ?-யுத்த களம்‌ ஓர் புறம்‌ (நரதரும்‌, தும்புருவும்‌ விமானத்தில்‌ ஏறிக் கொண்டு வருகிறார்கள்‌)
நார-
ராம ராவண யுத்தக் காட்ஷியைக் கண்டு வெகு நாளாயிற்று -அதை யொத்ததாக நடக்கும்‌ விவேக மஹா மோஹ யுத்தமும்‌ மஹா கடோரமானதாகவே இருக்கப்‌ போகிறது -முடிவில் விவேகன் ஜெயிப்பது திண்ணமே

தும்பு -யுத்தம் முடியும் வரை எந்தக் கட்சி ஜெயிக்கும் என்பதை எப்படி நாம் நிச்சயித்து முன் கூறக் கூடும்

நார-என் வார்த்தையுமா பொய்க்கும் -பாருமே
(திரைக்குள் பெரிய சல சல சப்தம)

தும்பு –(சந்தோஷத்துடன் ).அதோ! யுத்த பேரிகை !.அதோ ..’ஸேனைகளும்‌ ஆயுதங்களும்‌ கலந்து தாக்க ஆரம்பித்து விட்டன -அதோ. லோபன்‌ யுத்த சன்னத்தனாகி கிளம்பி விட்டான்‌ !
நார-(சிரிப்புடன் )௨லகம் முழுவதையும்‌ : ஸ்வர்ண மயமாக்கி அதை இந்த லோபனுக்கு அளித்தாலும்‌, அந்தப்‌ பொன்னையும்‌ வட்டிக்கு விட்டுப் பெருக்க ஆசைப்‌ படுபவன் அல்லவா இந்த லோபன் –

தும்பு. -ஹா! ஹா! அதோ ! மூஞ்சூரைப்‌ பாம்பு விழுங்குவது போல்‌ துஷ்டி யென்னும்‌ திருப்தி லோபனை விழுங்கி விட்டாள்‌ ! லோபன்‌ ஸேனை யெல்லாம்‌ சிதறுண்டு ஓடுகிறது அதோ! அதோ !–. சிதறுண்டோடும்‌ ஸேனையைத்‌ தைரிய வார்த்தைகள்‌ கூறித்‌ திரட்டி, வருபவன்‌ யார்‌?
நார. –௮வன் தான்‌ காமன்‌ !மன்மதன் -மீனக்கொடியோன் ! ஸ்திரீகளே ௮வனது ஸைன்யம்‌!–ஹ! ஹ! ‘எதற்கெல்லாமோ அஞ்சா நெஞ்சனாகிய விவேகன்‌ ! இந்த ஸ்‌திரீ லோலனுக்கா பயப்படுபவன்‌?–அதோ ! இந்த ஸ்திரீ லோலனை ஜெயிக்க விரக்தி என்னும் ஸ்த்ரீயையே விவேகன்‌ ஏவி யிருக்கிறான்‌ பாரு !
(திரைக்குள் விரக்தி )

அதப்‌ரஜ கநஸ்தந ப்ரப்ருதி மாம்ஸ விஷ் பூர்ஜித ப்‌ரஸக்த விகட வ்ரண ப்‌ரதி பதஞ்ஞயா ப்‌ரஞ்ஞயாஸ்த்ரிய ஸ்த்ரிகுண வீசிமத்கரள வீசிகாஸ் சிந்தயந் கஸப்ய பரிபாடிகரம்‌ படதி காட மூடோ ஜந

காம புருஷார்த்தத்தில ஸாரமில்லை..

நார--கேட்டாயோ: விரக்தியின்‌ வார்த்தைகளை -அதோ மன்மதனும் அவன் ஸைன்யமும் விரக்த்தியால் இருந்தவிடம் தெரியாமல் துரத்தப் பட்டிருப்பதைக் காண்பாய்-

தும்பு–ஆச்சர்யம்‌ .–. அதோ!” லோபனும்‌ காமனும்‌ தோற்கடிக்கப் பட்டதைக்‌ கண்டு ஸஹியாத கோபன்‌ மகா வேகத்துடன்‌ நெருப்பு ஜ்வாலைகளை வீசிக்கொண்டு யுத்தரங்கம்‌ வந்திருக்கிறான்‌ பாரும்‌!

நார-இந்த ௮ஸுரனுக்கு ஆயுதமாக எதுவும்‌ உதவுகிறது–. ஸமயோசிதமாக சரீரத்தோடு. சேர்ந்த வைகளான கை, கால் , நகம்‌, பல்‌ யாகிய சகலமும்‌ ஆயுதமாக்கப் படுகிறது ! பேஷ் ! . இவனை எதிர்க்கப்‌ பொறுமையை ஏவி விட்‌டார்‌ விவேக ராஜன்‌!–. ஹ ! ஹா! கோபத்தின்‌ கர்ஜனம்‌ சுத்தமான ஷமையின்‌ மந்த ஹாஸத்தினால் நாஸத்தை அடைந்து விட்டது.

தும்பு –ஆம் ஆம் -ஷமையினால் தடுக்கப்பட்ட க்ரோதன் முன்னும்‌ போகாது , பின்னும்‌ நகராது வெட்கிக்‌ கோபாதீனனாகிப்‌ பரதவிக்கும்‌ காட்சி வெகு விநோதமாயிருக்‌கிறது -. ஆச்சர்யம்‌! அதோ கோபன்‌ பின் வாங்க யத்தனிக்கிறான் -அதோ க்ரோதனை க்ஷமை கட்டிக் கொண்டு விட்டாள்‌ !

நார-. பொறுமையைக்‌ கவசமாய்க்‌ கொண்டவனை எவ்வித தோஷமும்‌ அணுகாதல்லவா ‘–அன்னானை வெல்வதும்‌ கூடாத ‘கரரியமல்லவா !:

தும்பு. இவ்வளவு சூரர்கள்‌ கொல்லப்பட்ட பிறகும்‌ யுத்த ரங்கத்தில்‌ முன்னணிக்கு- வரும்‌ அல்பன்‌ யார் ?.ஹ ஹ,தர்ப்பனே!–.. அட! அட! காண்பதற்குள் மறைந்த விடடானே கர்வன்‌.! எப்படி.

நார-சிம்ஹத்தை மான் எதிர்த்தது போல் விவேகனது திருஷ்டியால் தோன்றிய அதிக திருஷ்ட்டி என்பவளால் கர்வன் வீர ஸ்வர்க்கம் அனுப்பப் பட்டான்-

தும்பு.–௮தோ வரும்‌ கலியுகக்‌ தாடகை யார்‌? தர்ப்பன்‌ மனைவி அஸூயையோ !–பேஷ்‌! முதிதை சந்தோஷத்‌துடன்‌ அவளைக்‌ கொன்று விட்டாள்‌ !
நார.–மதுகைடபர்களே புனர் ஜென்ம மெடுத்து வந்தார்களோ வென்று ஐயுற வல்ல மஹா மோஹனுடைய மஹா ப்ர தானிகளும்‌ தத்‌தம்‌ மனைவிமார்களுடன்‌ மாண்டது தைவ ஸங்கல்பமென்லும்‌ நியதியைத்‌ தாண்ட எவராலுமாகாது என்பதை ஸந்தேகமற நிரூபிக்கிறதல்லவா–ஆஹா! அதென்ன. த்வந்தவ யுத்தம்‌?,..ஹா ! ஹா! ஸூமதி வல்‌லபனுக்கும்‌ துர்மதி காந்தனுக்கும் அல்லவா யுத்தம்‌ மும்‌ முறமாக நடக்கிறது ராம ராவண யுத்தம் போல்‌ –பல முறை விவேகனால்‌ அடிக்கப் பட்டும்‌ சளையாதவனாகி மஹா மோஹன்‌ மேன்மேலும்‌ ஆக்ரோசத்துடன்‌ எதிர்த்து வருகிறான்‌…அதோ! விவேகன் பலத்ததோர்‌ அடியினால்‌ கீழே வீழ்த்தி விட்டார்‌ மஹா மோஹனை !

தும்பு-அதோ ! திரும்பவும்‌ பிரஞ்‌ஜை பெற்று யுத்த சன்னத்தனாகி விட்டானே அந்த மாயாவி

நார– (பரபரப்பு டன்‌ மேல் போட்டிருந்த கிருஷ்ணாஜினத்தை உதறிக் கொண்டு)–௮தோ !. அதோ! கொல்லப் பட்டான்‌ (மஹா மோஹன்‌ !—. தர்மமே ஜயம் –

பவது ஸ ப்ரஹ்மதா பவது ஸ ப்ரஹ்மதா
தர்மமே ஜயம்
(திரைக்குள் அழுகை )

துர்மதி
மஹா ராயா ஹா தும்மயி ஜீவியேஸா ஹா ணிஹிள ஜணமோஹண ! கஹிம் கயோஸி ? பந்திக்காஹம்‌ கஹீதோ மமனாஹா தாஹிம்‌ தியஸ மஹிளாஹிம்

ஹா நாதா எங்கே போனீர் எப்படிப் போனீர்

நார-கஷ்டம்‌! கஷ்டம்‌! துர்மதியின்‌ பிரலாபமும்‌ மார்பில் அடித்துக் கொண்டு செய்யும் ரோதனமும் கேட்க ஸஹிக்க வில்லை
(திரைக்குள் )

துர்மதி -ஐயோ கணமும் என்னை விட்டுப் பிரியாத நீர் இப்பொழுது என்னை இப்படி தனியாகத் தவிக்க விட்டுச் செல்லத் துணிந்தீர்

நார-யுத்தம் முடிந்து விட்டது -குரூரமான காலத்தின் பரிபாகம் யாராலும் தடுக்க முடியாததல்லவா -தேவ ஸ்த்ரீகளின் வளையல் ஸப்தம் கேட்ட மஹா மோஹன் இனி இவர்களது ரோதனங்கள் எல்லாம் தொந்திரவு செய்யப் படக் கூடாத தீர்க்க நித்திரையை அடைந்து விட்டான் -அதோ மது கைடபர்களை நிக்ரஹித்த பகவானைப்போல மோகனை வென்ற விவேகனும் தேவ ஸ்ரேஷ்டர்களால் ஸ்தோத்ரம் செய்யப்படுகின்றனன்-

தும்பு,–எங்கும்‌ புஷ்‌ப வர்ஷம்‌ ! துந்துபி முழக்கம்‌

நார.–இந்த வெற்றிக்‌ கொண்டாட்டத்தை நாமும்‌ ௮னுபவித்து விவேக மகாராஜனுடைய ஜயத்தை உலக முழுவதும்‌ ப்‌ரஸித்தம்‌ செய்வோம்‌ :–. . இனி விவேக மகா ராஜனுக்கும்‌ ஸூமதிக்கும்‌ ஆகவிருக்கும்‌ பட்டாபிஷேக மஹோத்ஸவத்கைக்‌ கண்டு களிக்கச்‌ செல்கிறேன்‌.

தும்பு.—நானும்‌ விவேக ராஜன்‌ வெற்றியைப்‌ பிரசித்தப் படுத்தி வருகிறேன்‌. (போகிறார்கள் )

இரண்டாம்‌ காட்சி – இடம்‌ யுத்த களம்‌-விவேகன்‌ பாசறை[ விவேகனும்‌ வ்யவஸாயனும் ப்ரவேஸம் )
விவேக.
–சேனாபதி ! உன்னாலே தான்‌ ஸகல தோஷங்களுக்கும்‌ உத்பத்தி ஸ்‌தானமாகிய வெல்வதற்கு அரிதான மஹா மோஹனை நான்‌ முறிய அடித்‌தொழித்தது
வ்யவ.-ப்ரபோ! – நாங்கள்‌ தங்கள்‌ கருவிகளே யல்லவா -தாமே யன்றோ எம்மை ஆட்டி வைப்பவர்

விவேக- ஸர்வ ஸ்வாமியான ‘ பகவானுடைய கர்யத்தில்‌ பராதீனனான என்னை ஏன்‌ ஸ்தோத்திரம்‌ செய்கிறாய்‌ -யாவும்‌, பரமாத்மாவின்‌ லீலைகளுடைய அலைகளின் பரம்பரை-

வ்யவ.–பிரபோ ! தங்கள்‌ வணக்கமே ச்லாகிக்கத் தக்கது ! ௮து இன்மையே மகா மோகன்‌ வீழ்ச்சிக்குக்‌ காரண மாயது !– மோக்ஷ மார்க்கத்திலிருந்த முள் முனைகளைப்‌ பிடிங்கி தங்கள்‌ ஆட்கள்‌ வழியைச்‌ சுத்தப்‌ படுத்தி விட்டனர்‌.–இனி வேதாந்தமாகிய ஸிம்ஹாஸ னத்தில்‌ தாங்கள்‌ அமர்ந்‌து பட்டாபிஷேகக் கோலத்‌துடன்‌ அளிக்கும்‌ மகோத்ஸவக்‌ காஷியைக்‌ கண்டு களிக்கக்‌ கோறுகிறோம்‌ நாங்கள்‌.
விவேக.—ஸேநாபதே! ஜீவாத்மா முடிவை அடையாத த்யானத்திலிருக்கையில்‌ நான்‌ எப்படிப்‌ பட்டாபிஷேகத்திற்கு அர்ஹனாவேன்‌? ப்ரஹ்மஞ்ஞாந ஆரம்பம்‌ மாத்திர மல்லவா இப்பொழுது செய்யப்பட்டிருக்‌கிறது ! ௮து பூர்‌த்தி யடைந்தாலன்றோ என்‌ பிரதிஞ்ஞை நிறைவேற வல்லது ! –

வ்யவ .–இன்னமும்‌ ஏன்‌ கலக்கம்‌ ?: ஜீவன்தான்‌, தன்‌ சரீரமே ஆத்மா என்கிற புத்தியை விட்டு, தான்‌ பரமாத்‌மாவின்‌ சரீரம்‌ என்னும் புத்தியைப்‌ பெற்று விட்‌டானே.

விவேக –தொந்திரவு! முற்றிலும் விட்டபாடில்லை இன்னமும்‌!மனக் குரங்கு சபலஸ்வ பாவத்திலிருந்து ஒய்வடைந்த போதிலும்‌, சாம்பலால்‌ மூடப்பட்ட தணல் போல, ஒவ்வொரு ஸமயங்களில்‌ பரவசனாகி வெளி விஷயங்களை நினைக்கிறான்‌–. ஆகவே, நாம்‌ ஸாதித்ததைவிட, ஸாதிக்க வேண்டிய காரியங்களே கஷ்‌டமானவை !—காமன்‌ முதலியோர்‌ ‘இறந்த போதிலும்‌, கர்மமென்னும்‌ அவித்யை இறந்து போன அவர்களை உயிர்ப்பிக்கக்‌ கூடிய மருந்தாக. இன்னமும். இருந்து வருகிறது -(அனுதாபத்துடன்‌) ஜீவாத்மா இன்னமும்‌ கோடிக் கணக்கான பாபம்‌ செய்து கொண்டே யிருக்கிறானே ! இவைகளை எப்படித்‌ தாண்டப்‌ போகிறான்-

வ்யவ.–இதற்கா கவலை? இந்தப்‌ பாபங்களைப்‌ பகவானிடததி லிருந்து உண்டானதாகிய யோகமாகிய ப்‌ரளய காலாக்நி க்ஷணத்தில்‌ பஸ்‌மீகரித்து விடாதா? மேலும்‌, தன்‌னுடைய பாரமனைத்தையும்‌ முகுந்தனிடத்தில்‌ சமர்ப்பித்து நிர்ததோஷனாகி முக்தன்‌ போலிருக்கிறான்‌ அந்தப்‌ புருஷன்‌ பகவானுடை.ய அபிப்ராயங்களை சாஸ்‌திரத்‌தில்‌ உள்ளபடி தெரிந்த செய்து பாப ரஹிதனாகி விடுவான்-

(ஸூமதியும் சேடியும் ப்ரவேஸம்)

ஸூமதி -நாதா தங்கள் ஜெயத்தை அப்சரஸ் ஸுக்களுடைய குதூஹல கான கோஷங்களில் நின்றும் அறிந்து வந்தேன்
வ்யவ -தேவி ஜயம் ஒரு லக்ஷியமா நமக்கு -இனி இன்னமும் ஜெயமடைய வேண்டியதற்கான உபாயங்களைச் சிந்திக்க வேண்டும் அல்லவா
விவேக-எல்லா உலகத்திற்கும் அந்தர்யாமியாய் இருக்கும் பரமாத்மாவே சகல பாரத்தையும் நிர்வஹிக்க வல்லவராதலால் அவரே தாம் நம் ஜயம் பூர்த்தி யாவதற்கான உபாயங்களைக் காட்டி அருள வேண்டும் –

ஆதேயத்வ ப்ரப்ருதி நியமை ராதிகர் துஸ் ஸரீரம்‌
ஸ்த்தாஸ்தே மப்‌ரயத நபலேஷ்வே: ததா யத்தமே தத்
விஸ்வம்‌ பஸ்யந்நிதி பகவதி வ்யாப காதர் த்ருஷ்டே
கம்பீராணா மக்ருதக க்ராம்‌ காஹதே சித்தவ்ருத்திம்‌.

வ்யவ –-வாஸ்‌தவமே ! ஸமாதி உண்டாவதற்காக ஜீவனுக்குச்‌ சிறந்த ஆசார்யனால்‌ ச்ரேஷ்டமான மந்த்‌திரத்ன்‌ ரஹஸ்யார்த்தங்கள்‌ உபதஸிக்கப்பட்டு அவனும்‌ ஞானி யாக்கப்பட வேண்டி இருக்கிறது இனி-

விவேக –ஆம்‌ அது பூர்‌த்தி யடைவது பகவானுடைய வசத்தில் தான்‌ இருக்கிறது இனி –ஹா. என்ன தேஜஸ் அங்கே தெரிவது –

வ்யவ –(உற்று நோக்கி )பகவான் நாரதர் வருகிறார் போலே காண்கிறது

ஸூமதி –ஆம் நாதா நாரத மஹரிஷியுடன் தாங்கள் பேசும்வரை நான் என் தோழிகளுடன் தங்கள் அபீஷ்ட பூர்த்திக்கான யோஜனைகளைச் செய்து வருகிறேன் (போகிறாள் )(நாரதர் பாடிய வண்ணம் ப்ரவேஸம்)

அதராஹித சாருவம்‌ சநாளா – மகுடாலம்பி மயூர பிஞ்ச மாலா: –
ஹரிநீல சிலா விபங்க நீலா: ப்‌ரதிபாஸ் ஸந்து மமாந்தி மப்ரயாணே

விவேக.--(விரைந்‌து சென்று வரவேற்று உபசரித்து நமஸ்‌கரிக்கிறான்‌)–. பகவந் ! அடியோங்க்கள ௮னுக்‌ரஹித் தருள வேண்டும்‌ !
நார--ஆயுஷ்மன்‌ ! ஜீவாத்மாவை எவ்விதத் தடங்கலுமின்‌ றி | மோக்ஷத்‌தில்‌ சேர்க்கக் கடவாய்‌ ! – மஹா மோஹனை ஜயித்‌தவனாகிய நீ கலியையே நீக்கி விட்டாயே இப்‌ பிரபஞ்சத்தில்‌!
விவேக..-பகவந் ! இன்னமும்‌ நாங்கள்‌ ஜாக்‌கிரதையுடன்‌ பார்த்திருந்து ஜயிக்க வேண்டிய சத்ருக்கள்‌ இருந்தால்‌ வெளிப்படுத்‌தி யருள வேண்டும்‌ !
நார--ஜீவாத்மா பிரக்ருதியைத்‌ தாண்டி இன்னமும்‌ மோஷமடைய வில்லை யல்லவா -ஆகவே ௮வன்‌ கால சக்கரத்தில் ௮கப்பட்டுத்‌ துர் வாஸனையினால்‌ இன்னமும்‌ அல்ப சுகங்களில்‌ புத்‌தியைச்‌ செலுத்தாமல் இருக்கும்படி ஜாக்ரதை செய்ய வேண்டும்‌-
விவேக.—பாக்யம்‌-கால சக்‌ரத்‌தினுடைய சுழலில் இருந்து புருஷனை வெகு சீக்ரத்திலேயே வெளிப்படுத்த வேண்டிய பிரயத்தனங்களைச்‌ செய்து முடிக்கிறேன்!தாங்களும் அதற்கேற்ற உதவிகளைச்‌ செய்தருள வேண்டும் -ஆசாரியனற்றவன்‌ வேத மார்க்கத்தில்‌ நடக்க முடியாதல்லவா! ஆகவே தேவரீரே என்னால்‌ அங்கீ கரிக்கப் பட்ட. புருஷனுக்கு மந்த்ரோபதேசம்‌ செய்து வழி காட்டி உத்தரித்து அருள வேண்டும்

நார- இவ் விஷயத்தில்‌ என்‌ சக்திக்குத்‌ தகுந்தபடி நான்‌ பிரயத்தனப்‌ படுவதற்குமா ஆஷேபம்‌ ? அப்படியே செய்து வருவேன்‌–இதோ புறப்பட்டேன்‌ உங்‌கள்‌ ௮பீஷ்டத்தை நிறைவேற்றி வைக்க!”
( ஆனந்தத்துடன்‌ செல்கிறார்‌)

விவேக.-இனி ஸமாதி ஸித்தியானதுவே! பக்தி அல்லது ப்‌ரபத்தியில்‌ ஆசை யுடையவனுக்குப்‌ பகவானுடைய தயையே ஆதாரம்‌! இந்த புருஷனும்‌ ௮ந்த தயையினால்‌ ௮ங்கீகரிக்கப் பட்டவனாகக்‌ காணப்படுகிறான்‌-ஆகவே நான்‌ ஜீவனுக்குப்‌ பகவத்‌ ஸங்கல்பம்‌ சீக்கிரத்தில் ஸித்திக்கும்படி செய்கிறேன்‌ ! நீ போய்‌ விஷ்‌ணு பக்தியை த்வரிதப்படுத்து (போகிறார்கள் )-

மூன்றாம்‌ காட்சி -இடம்‌ ஆகாயம்‌ -மோக்ஷ-மார்க்கம்‌-(விஷ்ணு ப்க்தி பிரவேஸம் )
விஷ்ணு பக்தி -(தனிமை )
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு –

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினால் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

ஜீவனுக்குப்‌ பகவானைப் பற்றிய தியானம்‌ பரி பூர்‌ணமாக ஏற்பட்டிருக்கிறது. இனி ௮வனைப்‌ பாப ரஹிதனாக்க வேண்டும்‌. பகவத்‌ ஸங்கல்பத்தாலேயே ஆகக்‌ கூடிய: காரியம்‌ ௮து – நற் குணங்கள்‌ உண்டாகின்றன ! பகவத்‌ ஸங்கல்பமாகிற ஸூர்யன்‌ உதயமாகப் போவது நிச்சயமே –
(கைகளைக் கூப்பி )

பல விதரண தக்ஷம் பஷ பாதாநபிஞ்ஞம் பிரகுண மது விதேயம் ப்ரப்ய பத்மா ஸஹாயம்
மஹதி குண ஸமாஜே மாந பூர்வம் தயே த்வம் பிரதி வதஸி யதார்ஹம் பாப்மநாம் மாமகாநாம்

தயா தேவியே என் பாவங்களுக்குப் பிரதிவாதம் செய்ய வேண்டும் அப் பரமாத்மாவிடம் -ஹா ஹா தயாதேவியின் ஏவுதல் தானா -அதோ வேதாத்மாவான கருடாழ்வாரும் நர்த்தனம் ஆடுபவர் போல் சேவை சாதிக்கிறாரே -இவரே தான் ஆஸ்ரித ரக்ஷகனை சீக்கிரத்தில் ஆஸ்ரிதர்களிடம் அழைத்து வந்து அவர்களைக் காத்தருள வேண்டும் –(கைகூப்பி )

நமோ பன்னகநத்தாய வைகுண்ட வச வர்த்திநேஸ்ருருதி ஸிந்து ஸூதோத்பாத மந்தராய கருத்மனே
என்ன ஆசார்யம் எங்கு பார்த்தாலும் ஒரே தேஜோ மயமான ப்ரகாஸம் விளங்குகிறதே -தயாதேவிக்குப் பர்த்தாவான பகவானுடைய ஸங்கல்பன் வருவதை ஸூசிப்பிக்கிறது இப்பிரகாஸம்
(ஸங்கல்பன் ப்ரவேஸம் )

வி பக்தி -சந்தோஷத்துடனும் பரபரப்புடனும் எதிர்கொண்டழைத்து நமஸ்கரிக்கிறாள்
ஸங்கல் –ப்ரீதியுடன் கைகொடுத்து எழுப்புகிறார்
வி பக்தி -பகவானுடைய ஸங்கல்பமாகிய தேவரீருக்கு சதகோடி நமஸ்காரங்கள் -அடிக்கடி சேவிக்கிறாள்
ஸங்கல்-பத்ரே போதும் போதும் சிறந்த யோகங்களுக்கு எல்லாம் சிறந்தவளாகிய உன் மஹிமையும் நமஸ்காரமும் என்னையே உன்னை வணங்கும்படி செய்கின்றன -உன் விருப்பம் யாது
வி பக்தி -ஹா ஹா பிரபோ தாம் பரதந்த்ர பாவத்தை ஒப்புக் கொள்வதும் ஸ்வ தந்தரராய் இருப்பதால் தான் -நான் ஞாபகமூட்ட விரும்புவது ஒன்றே -ஜீவாத்மாவை மஹா மோஹாதி பிசாசங்கள் விட்டுவிட்டன -அவனும் பிரணவம் திரு அஷ்டாக்ஷரம் இவைகளை ஜபித்துக் கொண்டு ஸந்தோஷமாக மோஷ தர்மத்திலேயே தான்‌ இருக்‌கிறான்‌. எது நேர்ந்தாலும்‌ ௮தை நன்மையாகவே தான்‌ நினைக்கிறான்‌

ஸங்க.— இருந்தாலும்‌, எவ்வளவோ காலங்களாக ஸம்ஸாரமாகிய அல்ப ஸுகங்களில்‌ ஈடுபட்டு கர்ம பாச வசப்பட்டவனான இந்த ஜீவாத்மா, ஸத்ய லோகம்‌ மாதிரியான அல்ப ஸுகமுள்ள இடங்களையே கோறுவானாகில் எவ்விதம் மோஷத்திற்கு அர்ஹனாவான்‌ !

வி பக்தி -(காதுகளை மூடிக்கொண்டு )தாங்கள்‌ அப்படிச்‌ ஸந்தேகிக்கலாகாது – பரமாத்மாவின்‌ நாபிகமலத்‌துதித்த வேதனுக்கும்‌ மதுகைடபர்கள்‌ மூல்யமாய்‌ ஆபத்து நேர்ந்ததை ஜீவாத்மா அறியாதவனல்ல-ஆகவே மோஷித்திற்குத்‌ தாழ்ந்த ஸ்வர்க்காதி போகங்களையும்‌ இனி இச்சிக்க மாட்டான்‌–தாங்கள் தான் இவன்‌ விலங்குகளைச்‌ சீக்கிரத்தில் அறுத்துத் தள்ள வேண்‌டும்‌–. இதோ ! .. தங்களையே அந்தக்‌ காரியத்திற்காக நிச்சயமாய்‌ நம்பி யிருக்கும்‌. விவேக மஹாராஜனை உம்மிடம் அழைத்து வருகிறேன் -(விரைந்து செல்கிறாள் )

ஸங்க -(தனிமை )(நாற்புறமும் பார்த்த வண்ணம் )ஜீவாத்மா க்ருதார்த்தனாகி விட்டான் -ஸ்ருங்காரம் வீரம் கருணை அத்புதம் ஹாஸ்யம் பயம் பீபத்ஸம் ரவ்த்ரம் ஆகிய அஷ்ட ரஹஸ்யங்களுடைய விஷயங்களின்றும் விலகினவனாகி -தத்வ ஞானம் உண்டாகி ஸாந்தி ரஸத்தோடு பிரகாசிக்கிறான் -மோக்ஷ மார்க்கத்தில் மநோ ரதத்தில்‌ அதிவேகமாகவே. சென்று கொண்டிருக்கிறான்‌–. மறைவிலிருந்தே இன்னமும்‌ சிறிது காலம்‌ இவனைப்‌ பரீஷித்தறிகிறேன்‌-(போகிறான்‌)

நான்காம் காட்சி -இடம் -விரஜைக்கு இக்கரை -ஸாந்த ஸ்வரூபனான புருஷன்‌ ஸ்ரத்தையுடன்‌ பிரவேஸம்‌.]

புருஷ- (துக்கத்‌துடன்‌ சிந்தித்தவனாய்‌) : ஹா ஹா – பிறப்புப்பிணி யொழித்தேன்‌ ! துக்க ஸாகரத்தையும் தாண்டிக் கரை யேறி விட்டேன்‌! பகவானது கிருபையால்‌ நிவ்ருத்‌தி தர்மத்தில்‌ வைக்கப் பட்டேன்‌ ! விவேகனது மகிமையினால்‌ காம க்ரோதாதிகளை வென்றேன் !–(ஆயினும்‌ ! (பெரு மூச்செறிந்து .)–. பரமாத்மாவை மட்‌டிலும்‌ இன்னமும்‌ கிடைக்கப்‌ பெற்றிலேனே ! முன்‌ போல்‌ பக்தனாகவும்‌ இருக்க வில்லை! விரும்பியபடி முக்தனாகவும்‌ ஆக வில்லை !. தீனனாயிருக்கும்‌ அடியேன்‌ எதைச்‌ செய்வது? எதை விலக்குவது ? எப்பொழுது எனக்கு முக்தி கிட்ட வல்லது ?

ஸ்ரத்–நாதா! முழு ஞானியல்‌லேனாயினும்‌, முக்திக்குப்‌ பாத்திரமாகியே உள்ளீர்‌ என்றோ அடியாள்‌ விஞ்‌ஞாபித்துக்‌ கொள்கிறேன்‌, – ஆகவே தாம்‌ சந்‌ தோஷப்‌பட வேண்டி இருக்க, இன்னமும்‌ வருந்துவானேன்‌-

புருஷ –பேதாய் -சப்தாதி விஷயங்கள் என்னை இன்னமும் தொடர்ந்து என் ஞானத்தைத் தடுக்கின்றனவே -துராசைப் பேய் என்னை எப்படிக் கெடுத்து விடுமோ என்ற பயம் என்னை விட்டபாடில்லையே -நான் தீனன் -மஹா தீனன்-

ஸ்ரத்தா –நாதா பேதையான நான் தங்களுக்கு யாது சொல்லக் கூடும் -வெகு காலத்திற்கு முன் நடந்தேறியவைகளைக் குறித்து ஏன் இப்பொழுது சிந்தித்து வருந்து கிறீர்கள்-

புருஷ –நீ கூறுவது வாஸ்தவமே -சென்றதையோ வரப்போவதையோ நினைத்து வருந்துவதில் பிரயோஜனம் இல்லை தான் -மரணம் எப்பொழுது நேர்ந்தால் என்ன-இன்றைக்காய் என் என்றைக்காய் என்ன-நாம் செய்ய வேண்டுவன வற்றை முன் ஜாக்கிரதையுடனேயே சீக்கிரத்திலேயே செய்து முடித்துக் கொள்வதே உசிதம் –

ஸ்ரத்தா -விரோதிகளைப் பற்றித் தாம் இனி சிந்திப்பதே தவறு -இன்றைக்கோ என்றைக்கோ மோக்ஷம் கிட்டுவது திண்ணம் என்ற நிச்சயத்துடனே இருக்க வேண்டியதே —

புருஷ –நல்ல ஸமயத்திலேயே இந்த நித்ய ஞானத்தை ஞாபகமூட்டினை -நீ உடனே விஷ்ணு பக்தியை அடைந்து என் ஸ்திதியை அவளுக்கு அறிவித்து என்னை சீக்கிரத்திலேயே மீட்க்கும் வழியை நாடி வா

ஸ்ரத்–அப்படியே (போகிறாள் )

புருஷ–(சிந்தனையில் ஆழ்ந்து –)சம்சாரச் சழல்களில் இருந்து கரை யேற்றப் பட்டுக் களைத்திருக்கும் ஏழையேனை, நித்யானந்த ஸ்வரூபனான ஹரியெனும்‌ சந்தன விருஷம்‌ தன் நிழலில்‌, ‘தன்‌ ஆதி வாஹிகர்களால்‌ அழைத்து இருத்தி இன்னமும்‌ ஆனந்திக்கச் செய்ய வில்லையே !
[ஸங்கல்பன்‌ பிரவேசம்‌.)

ஸங்கல்‌.–(புருஷனைக் கண்டு தனக்குள்‌ சந்தோஷத்‌துடன்‌ ஒருபுறமாய்‌)--. ஹா! ஹா! ஸ்ரீலக்ஷ்மீபதியின்‌ திருவடிகளில்‌ தன்னை ஒப்படைக்திருக்கும்‌ இந்தப்‌ புருஷனுக்குள்ள மேன்மை எவ்வளவே கணக்கிலாது கர்மானுஷ்டான பரர்களுக்கும்‌, யோகானுஷ்டான பரர்களுக்கும்‌ இருக்க வில்லை யல்‌லவா ! இந்தப்‌ புருஷனிடம்‌ யம படர்களும்‌, ௮ந்த யமனுமே அணுக அஞ்சுகின்றனர்‌! தேவதைகளும்‌ நடுங்குகின்றனர்‌! ராக்ஷஸாதி துஷ்டர்கள்‌ கண்ணில் படாது ஒடுகின்‌றனர்‌ ! இவன்‌ இருக்கும்‌ தேசத்திலும்‌ பசி பிணி மூப்‌புத்‌ துன்ப மென்பவைகளைக்‌ காணவே காணும்‌!–. பகவானிடத்தி லிருப்பதை விட அவன்‌ பக்தர்களிடத்த லல்லவா இந்த புருஷனுக்குப்‌ பிரேமம் ௮திகமாயிருக்கிறது –. இவனை அடைவதால்‌ தானும்‌ கிருதார்த்தனாவேன்‌ அன்றோ !
(புருஷன்‌ முன்‌ ஸந்தோஷம்‌ பஹுமானம்‌ இவைகளுடன்‌ நெருங்கி )
மகாத்மான் பகவானுடைய கைங்கர்யத்தில்‌ பரம ப்ரீதி யுள்ளவரா யிருக்கிறீர்‌ நீர்‌ என்பதைக்‌ காண மிவும்‌ ஸந்தோஷிக்கிறேன்‌ !

புருஷ.–(பரபரப்புடனும்‌ பயத்துடனும்‌ ஸந்தோஷத்துடனும்‌ நமஸ்கரித்து அஞ்சலி ஹஸ்தனாய் )--.. பகவந் தாம்‌ யாரென்று அறியச்‌ சக்தி யற்றவனாயிருககிறேன்‌ !–. பகவானே தானே, இல்லை, ௮வருக்குப்‌ பரம அந்தரங்‌கமானவரோ ?

ஸங்கல்‌.–மகாத்மரந் ! பகவத்‌ ஸங்கல்‌பன்‌ நானே. தீன ஜன பந்துவும்‌. பரம புருஷனது பத்னியுமாகிய க்ருபா தேவியினால்‌ ஏவப்பட்ட நான்‌, உம்மை ஸகல பாப புண்யங்க ளென்னும்‌ விலங்குகளினின்றும்‌ விடுவிப்ப தாதியாகப்‌ பரப் பிரம்மத்தினது ஸேவையை அந்தமாக வுடைப கரரியாதிகளைச்‌ செய்து முடிக்க உம்மை அடைந்துள்‌ளேன்‌!–ஆகவே மோஷ ஐஸ்வர்யம்‌ உமக்கு ஸமீபத்திலேயே கிட்டக் கூடியதென்பதைச்‌ ஸந்‌தேகமற நம்பும்‌. ரஜோ குண தமோ குணங்கள்‌ ௮டங்‌கி உம்மிடம்‌ ஸத்வ குணம்‌ விருத்தி யடைகின்றதா? இந்திரியங்கள்‌ யாவும்‌ உமக்கு வசப்பட்டனவா? மனம்‌ நிர்மலமாகவும்‌ நிச்சலமாகவும்‌ இருக்கிறதா ?

புருஷ:–(ஸந்தோஷத்துடன்‌ தழதழத்து)--. ப்ரபோ மிகவும்‌ கிருதார்தனானேன்‌ !. பகவானுடைய கிருபா கடாஷத்தினால் உமது அனுக்ரஹம்‌ பெற்றுள்ள அடியேனுக்கு ஸித்திக்கக்‌ கூடாததும்‌ உண்டோ.?

ஸங்கல்‌.–( தனக்குள்‌) இவரை இன்னமும் சிறிது சோதிக்க வேண்டும்‌–. (வெளிப்படையாய்‌) பத்ர! கிடைத்‌தற்கரிய ஸமாதியின்‌ பூர்த்தி உமக்கு எப்படி இருக்‌கிறது?

புருஷ.–ப்ரபோ! ஸமாதி விசேஷமாக அனுபவிக்கக்‌ தக்கதாய்‌ இருந்த போதிலும்‌, விசேஷித்து இவ்விதமிருக்‌கிறதென்று சொல்ல முடிய வில்லையே. -ஸ்ரீ பூமி நீளா ஸமேதனைத்‌ தியானம்‌ செய்யும் பொழுது மஹா ஆநந்த மாகவே யிருக்கிறது. வெகு சீக்கிரத்தில்‌ மனம்‌ அவ்விடத்திலேயே லயம்‌ ௮டைகிறது !

ஸங்கல்‌.–(ஸந்‌தோஷத்துடன்‌) மகாத்மந் ! பகவதனுக்ரகம்‌ உம்மிடம்‌ பூர்ணமாகவும்‌ நிச்சயமாகவும்‌ உண்டாயிருக்‌கிறது–, ப்‌ரகிருதி ஸம்பகந்தத்தைப் போக்‌கி பரமாத்மாவுடன்‌ ஸாம்யத்தை யடைந்து, நீரும்‌ ஆதிசேஷாதியரைப்‌ போல்‌ பகவத்‌ கைங்கர்ய ஸித்தி பெற்ற முத்த ராகப்‌ போகிறீர்‌! ப்ராரப்த கர்மாவின்‌ முடிவில்‌ நீரும்‌ பரமபதத்தை அடைவீர்‌. அப்பொழுது உம்மால்‌ த்தயஜிக்கப்பட்ட சுக்ர பலன்களை உமது நண்பர்கள்‌ அடைவார்கள்‌. பாப பலன்களை உமது திவேஷிகள்‌ அடைவார்கள்‌.

புருஷ.–தேவ –. ஓரு விஷயம்‌ அனுக்ரஹித்தருள. வேண்டும்‌. ஆதி வாஹிகர்கள்‌ அழைத்துப் போய்ப்‌ பகவானிடம்‌ சமர்ப்பித்‌து , – அவனுடைய ஆகாராங்கள்‌ பிரகாசமாக எற்பட்டு, “இனிமேல்‌ : ஜன்‌மமில்லை யென்று சொல்லப்படுகிறதே ௮ந்த விஷயத்தை அடியேன்‌ அறியத் தகுந்தவனாயின்‌ ௮றிய விரும்புகிறேன்‌.

ஸங்கல்‌.–நீர்‌ அறியத் தகாததும்‌ உண்டோ இனி? புனர்‌ ஜென்மம் என்பது இல்லாது அழிவில்லாததான பரமபதத்‌தையே நீர்‌ அஅடையப் போகிறீர்‌- பரமாத்ம ஸேவா கைங்கர்யமாகிய ஒரு ஸார்வ பெளமத்வம்‌ உமக்குக்‌ கிடைக்கப்‌ போகிறது. விவேகனுக்கும்‌ யெளவ ராஜ்‌யம் கொடுக்க நிச்சயிக்கப் பட்டிருக்‌கிறது -இனி நான்‌ போய்‌ வருகிறேன்‌–. (சிறிது தூரம்‌ சென்று திரும்பி) ப்‌ரஹ்ம வித்யையின்‌ சம்பிரதாய ப.ரம்பை விட்டுப்‌ போகாதிருக்க ௨மது மூலமாய்‌ உலகத்தார்க்கு ஓரு வார்த்தை சொல்லிச்‌ செல்கிறேன்‌ கேளும்‌. பகவானிடத்தில்‌ மிகுந்த பத்தியுள்ள மகாத்மாவாகிய புருஷன்‌ சிஷ்யர்களுக்குத்‌ தாமே ஸந்தேககம் தெளிவித்து சகல அர்த்தங்களையும்‌ போதித்து, ௮வர்கள்‌ மூலமாக ஸத் ஸம்ப்ரதாயம்‌, ஆசார்ய சிஷ்யக்‌ கிரமமாக வ்ருத்தியாகி , அந்‌தணரந்திய ரெல்லையில்‌ நின்ற அனைவருக்கும்‌ ஷேமத்தையும்‌ மங்களத்தையும்‌ உண்டாக்க வேண்டு மென்பதே.
(புருஷனை திரும்பிப்‌ பார்த்துக் கொண்டே போகிறார் .)

புருஷ–(தனிமை)–ஹா! ஹா! அளவில்லா அபராதங்கள்‌ நிறைந்த நானும்‌ மோக்ஷமடையும்‌ ஸம்பவத்‌தினால்‌ எவராலும்‌ செய்ய முடியாததையும்‌ செய்யக் கூடிய ஸாமர்தய மென்னும்‌ பகவானுடைய ௮பாரா சக்தி என்னிடத்தில்‌ இப்பொழுது ப்‌ரத்யஷமாகவே காண்பிக்கப்பட்ட தல்லவா!–ம ஹா ஆச்சர்யம்‌ –இந்தச்‌ சரீரம் எவ்வளவு அசுத்தமானது -ஜல மலப்‌ பேழை ! எலும்புக்‌ கூடு! ரக்த மாம்ஸாதிகளாகிய நாற்றக் குழி! சேற்றில்‌ விழுந்த குழந்தையை எடுக்கத்‌ தானும்‌ சேற்றில்‌ குதிக்கும்‌ தகப்பனைப் போல்‌ இந் நரகக்‌ குழியினின்றும்‌ நம்மைக்‌ காக்கப்‌ பரமனும்‌ அந் நரகக்‌ குழியில்‌ தானும் குதித்‌து , இந்தச்‌ சரிரத்திலிருந்து, ஜீவன்‌ சரீரத்தை விட்டுப்‌ போகும் காலத்தில் மோஷ வழியாகிய நூற்றியோராம்‌ நாடியில்‌ அதைப்‌ பிரவேசிக்கச்‌ செய்கிறார் அல்லவா ! இவ்வளவும்‌ :அந்த அஸஹாய சூரனான விவேகனுடையவும்‌, ஆச்சர்ய மஹிமையுடைய விஷ்ணு பக்தியினுடையவும்‌. காரியமேயல்லவா * அந்த மஹாத்மாக்களின்‌ திவ்ய தர்சன பாக்யம்‌ எனக்கு எக்காலம் கிட்டுமோ !–. ௮தோ! அவர்கள் தான்‌ போலும்‌ ! என்‌ பாக்யமே பாக்யம்‌ !
(ஒர்‌ புறம்‌ ஒதுங்‌கி நிற்கிறான்‌,) (விவேகன்‌, ஸூமதி, விஷ்ணு பக்தி பிரவேசம்‌)

வி- பக்தி--மஹா ராஜ கர்ப்ப ஜன்ம ஜரா மரணங்கள்‌ என்ற சக்கரச்‌ சுழல்களில்‌ சிக்கிய ஜீவாத்மாவிற்கு மோக்ஷ ஸாம்‌ராஜ்ய பதவி கிடைக்கும் படியான வஸதிகள்‌ ஏற்‌படுத்திக்‌ கொடுத்த தங்கள்‌ ப்‌ரதாபம்‌ சொல்லில் அடங்‌காததுவே யாகிறது !
விவேச.–யாவும்‌ உன்னுடைய ௮னுக்‌ரஹத்தால்‌ உண்டானதுதான்‌ : (பக்த்யா த்வநந்யயா)அநந்ய பக்தியே அவனை அடைவதற்குக் காரணமாகும் எனப் பகவான் கீதையில் அருளிச் செய்ய வில்லையா -அது கிடக்கட்டும் -புருஷன் . இன்னமும் பிரக்ருதியைக் கடக்க வில்லையே ! விரஜா நதியைத் தாண்டி வந்த பின்னரன்றோ நித்யானந்த ஸ்வரூனாகக்‌ கூடியவர்‌?

வி-பக்தி..-இதைக்‌ குறித்து மஹா ராஜன்‌ வ்யஸனப்பட வேண்டியதில்லை. பகவத்‌ ஸங்கல்பத்தால்‌ புருஷனுடைய பாப ஸமுத்ரம்‌ வரண்டு போய் விட்டது . பாம்பு தோலுரிப்பது போல, ப்ருஷனும் ப்ரக்ருதியை தியஜித்து விடுவார்‌.

விவேக. _ஆயின்‌ நாம்‌, ஆரம்பித்த கார்யமும்‌ பூர்த்தி ஆகி விட்டது. நம்‌ முயற்சியும்‌ ப்ரயோஜனத்தை உடையதாய் ஆயிற்று
(ஆகாயத்தில்‌. வாத்ய முழக்கம்‌, யாவரும்‌ ஆச்சர்யப்‌ படுகின்றனர் )

வி-பக்தி.-ஜீவாத்மாவிற்கு மோஷ ஐஸ்வர்யம்‌ கிட்டிவிட்டதென்று தேவதைகள்‌ ஆனந்தித்துச்‌ செய்யும்‌ குதூ ஹலவாத்ய முழக்கங்களைக்‌ கேட்டீர்களா !

புருஷா.–(ஒரு புறம்‌ ஸந்தோஷத்‌துடன்‌) நம்முடைய ஷேம லாபத்தால்‌ சந்தோஷ மடைந்திருக்கும்‌ விவேகாதியரை நான்‌ எதிர் கொண்டு வரவேற்பதே முறை. (முன்‌ வருகிறான்‌.)
விவேக.--௮தோ ! பகவத்‌ ஸங்கல்பத்தினால்‌ பாப ரஹிதரான புருஷன்‌ இதோ வருகிறார்‌ – நாம்‌. நமஸ்கரிப்போமாக!.
(நமஸ்கரிக்கிறார்கள் )

புருஷ –ஸர்வே தீர்காயுஷோ பூயாஸ்த
பத்ரே !. விஷ்‌ணு பக்தி! : ஜெயசீலனாய் விளங்கும் விவேகனை தைவாதீனமாய்‌ அடைந்த என்‌ பாக்யமே பாக்யம்‌ –
(விவேகனை ஆலிங்கனம் செய்து ஆனந்த பரவசனாய் )
வத்ஸ!
விரோதிகள்‌ வசப்பட்டு பாபங்களையே செய்து ப்‌ரக்ருதியில்‌ உழன்று வந்‌த என்னை நற்பத்தி புகட்டி. மீட்டு ரக்ஷித்தாய்‌ ! என்‌ பாபமனத்தையும்‌ போக்கியவள் இந்த விஷ்ணு பக்தியே யல்லவா –

விவேகோயம்‌ தத் வேஷ்வ விதத விஸேஷக்ர ஹதனுர்‌ பவோதஙத் தோஷ ப்‌ரதிகமநிகாத்மா ச ஸுமதி : பாப்ரேமாகாராத்வ மிதி ஸமவேதாஸ்த்ர ய இமே தம: பாரே த்ரி குணமபி ச த்யக்ஷத நமாம்

திவ்யம்ஸ் ஸம்ப்‌ரதி துந்துபிர்‌தி சிதிசித் வாநைர் முஹு ஸ்ரூயதே தேவாநாமபி ஹாவு ஹாவு லஹரீ விக்ஷோபய த்யம் பரம்‌ ஆரப்த ப்‌ரதி ஸம்ஸ்க்ருதி க்ருத முகைரர்சிர் முசைமஸ் ஸ்ரீபதே ராஜ்ஞா தாரி பிராதி வாஹிக கணை ராதிஸ்யதே பத்‌ததி : ॥

தத்வங்களில்‌. உண்மையான விசேஷத்தையே க்‌ரஹித்‌ கும்‌ ஸ்வ பாவனான விவேகனும்‌, ஸம்ஸார ஸாகரத்தின்‌ தோஷங்களை ௮றிவதையே ஸ்வரூபமாக வுடைய ஸூமதியும் பரந்தாமனின் ப்ரீதி ஸ்வரூபையான விஷ்ணு பக்தியும் பரமபதத்தில் என்னை விட்டு அகலாதிருப்பீர் களாக

ஜந்தாம்‌ காட்சி.-இடம் -பரமபதம் முக்தர்களின் நித்யானந்த-பல்லாண்டு பாடு பஜிக்கிறார்கள் (நடிகர்கள் எல்லாரும் )

பரத வாக்யம்
அங்கீ குரவந்வ கலுஷதியோ நித்ய மத்யாத்ம வித்யாம் ஆத்யோ தர்ம ஸ்ப்ருசது வஸூதா மாசிஷ பாரவர்தீ தேவ ஸ்ரீ மான் நிரவதிதயா ஸிந்து ரஸ்மின் ப்ரபந்யே வக்தா ஸ்ரோத வசன விஷய ப்ரீயதாம் வாஸூ தேவ

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு –

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினால் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் –மூன்றாம் பாதம் – வியத் பாதம்-ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

April 16, 2026

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

அவிரோத அத்யாயம் -பர ப்ரஹ்மமே நிகில ஜகத் ஏக காரணம் -இந்தப் பொருளோடு எந்த முரண்பாடும் இல்லை என்றும் இதில் நிரூபணம் -எந்த விதத்தாலும் அசைக்க முடியாதது-ஸர்வ பிரகார துர் தர்ஷணம் –

2-3-1-வியத₃தி₄கரணம்-ப்ரஹ்மம் தவிர அனைத்தும் படைக்கப் படுவதே

பாதத்தின் ஸங்கதி
முதல் அத்யாயத்தில் “-அகில ஜகத் ஏக காரணம்-உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்கிற முடிவு எட்டப்பட்டது. இரண்டாவது அத்யாயத்தில் அந்த முடிவை எதிர்த்து எழக் கூடிய ஆஷேபங்களுக்கெல்லாம் வேத வ்யாசர் பதில் கூறுகிறார்.-உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்பதில் இரண்டு பகுதிகள் உள்ளன. “ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்பது ஒரு பகுதி, “உலகம் அனைத்துக்கும் காரணம்” என்பது இரண்டாவது பகுதி.-அதில் முதல் பகுதியைத் தாக்குவதற்காக ப்ரஹ்மம் காரணமாக இருக்க முடியாது என்று பலரும் செய்த ஆஷேபங்கள் அனைத்துக்கும் இரண்டாவது அத்யாயத்தின் முதல் பாதத்தில் வேத வியாசர் பதிலுரைத்தார். அதற்கு மேல் இரண்டாவது பாதத்தில் மற்ற மதங்களில் உலகத்துக்கு காரணமாக மற்ற பொருள்கள் சொல்லப் படுகின்றனவே , அவை எதுவும் ஜகத் காரணமாக இருக்க முடியாது. அந்த மதங்கள் அனைத்துமே தவறானவை என்பதை வேத வியாசர் நிரூபித்தார். ஆக இரண்டு பாதங்களால் “ப்ரஹ்மம் ஒரே காரணம்” என்பது நிலை நாட்டப்பட்டது.
இனி அடுத்த இரண்டு பாதங்களில் நாம் எடுத்த முடிவின் இரண்டாவது பகுதியான “உலக அனைத்துக்கும் காரணம்” என்கிற பகுதியைத் தாக்குவதற்காக பல விதமான ஆஷேபங்களை மற்றவர்கள் எழுப்புகிறார்கள். ப்ரஹ்மம் ஒரு சில பொருட்களுக்குக் காரணமாக இருக்கட்டும், உலகில் அனைத்தும் ப்ரஹ்மத்தால் படைக்கப்பட்டதல்ல, என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள். அதற்கு பதில் சொல்லி “உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்கிற முடிவை மறுபடியும் நிலை நாட்டுகிறார் வேத வியாசர் அடுத்த இரண்டு பாதங்களால்.

இந்த அத்யாயத்தின் முதல் பாதத்துக்கு ஸ்ம்ருதி பாதம் என்று பெயர்,ஸ்ம்ருதிகளைக் கொண்டு பூர்வ பக்ஷிகள் ஆஷேபங்களை எழுப்பிய படியால். இரண்டாவது பதத்துக்கு தர்க்க பாதம் என்று பேயர், தர்க்கத்தின் அடிப்படையில், அதாவது யுக்திகளைக் கொண்டு மற்ற மதங்கள் எல்லாம் தவறானவை என்று வியாசர் நிரூபித்த படியால். இந்த மூன்றாவது பதத்துக்கு வியத் பாதம் என்று பெயர். வியத் என்றால் ஆகாசம். ஆகாசம் முதலான பொருள்களும் கூட ப்ரஹ்மத்தால் தான் படைக்கப் படுகின்றன என்று இதில் நிரூபிக்கிற படியால். அடுத்தது நான்காவது பதத்துக்கு ப்ராண பாதம் என்று பெயர், ப்ராணன், இந்திரியங்கள் முதலானவையும் பகவானால் தான் படைக்கப் படுகின்றன என்று அந்த பாதத்தில் நிரூபிக்கப் போகிறார். இது தான் இந்த பாதத்திற்கும் முன் பின் பாதங்களுடன் இருக்கும் ஸங்கதியாகும்.

ஆகாசம் உண்டாக முடியுமா?
2-3-1-வியத₃தி₄கரணம் – பூர்வ பக்ஷம் – ஆகாசம் உண்டாக்கப் படுவதில்லை , அது நித்யமானது என்கிறார் பூர்வ பக்ஷீ
1-ந வியத் அஸ்ருதத:
– “ஆகாசம் உண்டாவதில்லை , அப்படிச் சொல்லும் ஸ்ருதி இல்லாதபடியால்”
பூர்வ பக்ஷி சொல்வது – உலகத்தில் நாம் புலன்களால் அறிந்ததோடு முரண்பட்ட ஒரு விஷயத்தை வேதமாகவே இருந்தாலும் போதிக்க முடியாது. வேதமே கூட “நெருப்பு குளிர்ந்தது” என்று சொன்னால், அதை அப்படியே ஏற்க முடியாது, புலன்களால் ’நெருப்பு சூடானது’ என்று நாம் அறிந்திருக்கிற படியால். எனவே , அச் சொல் தொடருக்கு வேறு மாதிரி தான் பொருள் கொள்ள வேண்டும்.
அதே போல், ஆகாசம் உண்டாவது என்பது நடக்க முடியாத ஒன்று. எனவே , வேதத்தால் கூட “ஆகாசம் உண்டாக்கப் படுகிறது” என்று போதிக்க முடியாது.

ஆகாசம் உண்டாக்கப் படமுடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள்
(1) உலகில் உண்டாக்கப்படும் பொருள்கள் அனைத்துமே பகுதிகளோடு கூடியவை தான். ஆனால் ஆகாசத்துக்குப் பகுதிகள் இல்லை . எனவே ஆகாசம் உண்டாக்கப் படமுடியாதது
(2) உலகில் உண்டாக்கப்படும் பொருள்கள் அனைத்துமே நடுத்தர அளவோடு (பரிமாணத்தோடு) தான் இருக்கும்.-ஆனால் ஆகாசமோ எல்லா இடத்திலும் பரந்துள்ளது. எனவே ஆகாசம் உண்டாக்கப் படமுடியாது.

மேலும், சாந்தோக்ய உபநிஷத்தில் ப்ரஹ்மம் உலகத்தைப் படைக்கும் முறையை வருணிக்கும் போது “(ததை ₃ஷத ப₃ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி, தத்வதஜ: அஸ்ருஜத) அதாவது ’அந்த ப்ரஹ்மம் ஸங்கல்பம் செய்தது – “நான் பலவாக ஆகக் கடவேன், அதற்காக ஸ்ருஷ்டிக்கக் கடவேன்” என்று. (ஈஷத் அதிகரணம் -1-1-5 முன்பே பார்த்துள்ளோம்-நெருப்பு ஜலம் பிருத்வி மூன்றும் இங்கு சொல்லப்பட்டுள்ளது -ஆகாசம் வாயு இவை பற்றி சொல்லப் பட வில்லை இங்கு -)அந்த ப்ரஹ்மம் தேஜஸ் என்ற நெருப்பைப் படைத்தது’ எனப்படுகிறது. எனவே , ஸ்ருஷ்டியைச் சொல்லும் போது முதன் முதலில் ஐம்பூதங்களுக்குள் தேஜஸ் தான் உண்டாக்கப் படுகிறது என்று கூறி, அதற்குப் பிறகும் ஜலம் பூமி ஆகியவற்றின் ஸ்ருஷ்டி மட்டும் தான் சொல்லப்படுகிற படியால் ஆகாசம் உண்டாக்கப் படுவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆக இவ்வாறு ஆகாசம் ப்ரஹ்மத்தால் படைக்கப் படாதபடியால் “உலகமனைத்தும் ப்ரஹ்மம் காரணம்” என்று நீங்கள் சொல்வது தவறானது என்று வாதிடுகிறார் பூர்வ பஷி

ஆகாசமும் உண்டாக்கப்படுவதே
ஸித்தாந்தம் – 2-அஸ்தி து
– “ (ஆகாசம் உண்டாவதைச் சொல்லும் வேத வாக்யம்) இருக்கிறது அ்ன்றோ ”
தைத்திரீய உபநிஷத்தில் (ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த: ) அதாவது “பரமாத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டானது” என்று ஸ்பஷ்டமாக ஆகாசத்தின் ஸ்ருஷ்டி சொல்லப்படுவதால் ஆகாசமும் படைக்கப்படுவதே .(ஆனந்தாதி அதிகரணம் -முன்பே இது பற்றி பார்த்துள்ளோம்)
புலன்களால் அறியப்பட்ட விஷயங்களோடு முரண்பட்ட ஒரு விஷயத்தை வேதமாகவே இருந்தாலும் போதிக்க முடியாது என்று நீங்கள் சொன்னதை ஏற்கிறோம். ஆனால் வேதத்துக்கு ஒரு சிறப்பு உள்ளது, புலன்களோடு முரண் படாமல் ஆனால் புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை வேதத்தால் போதிக்க முடியும். இவ் விடத்திலும் ஆகாசத்தின் உத்பத்தி என்பது நம்முடைய புலன்களுக்கு அப்பாற்பட்டது. அப்படிப்பட்ட ஸ்ருஷ்டி உண்டு என்று வேதம் சொல்லும் போது அது புலன்களுக்கு முரண் பட்டதே அல்ல. “ஆகாசம் உண்டாவதில்லை ” என்று நாம் புலன்களால் அறிந்தது கிடையாது. “ஆகாசம் உண்டாகிறது” என்று தெரிந்து கொண்டதில்லை , அவ்வளவே . ஆகையால் புலன்களுக்கு முரண் படாமல், ஆனால் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆகாசத்தின் உத்பத்தியை வேதம் சொல்வதில் எந்த முரண்பாடும் இல்லை

மேலும் பகுதிகள் இல்லாத்படியால் ஆகாசம் உண்டாக்கப் படவே முடியாது என்று சொல்லியிருந்தீர்கள். அதுவும் தவறானது. ஏன் என்றால் ஆகாசத்துக்கு பகுதிகள் கண்டிப்பாக உள்ளன. வேதத்திலும் புராணங்களிலும் த்ரிவித் கரணம் என்றும்
பஞ்சீகரணம் எ
ன்ற ஒரு செயல் சொல்லப்படுகிறது. ஐம் பூதங்களையும் படைத்த பிறகு பரமாத்மா இந்த ஐந்து பூதங்களையும் ஒன்றோடு ஒன்று கலக்கிறாராம். கலந்த பிறகு பார்த்தோ மென்றால் ஆகாசம் என்பதில் 50% ஆகாசமும் தலா 12.5% நிலம், நீர், தீ, காற்று ஆகிய மற்ற நான்கு பூதங்களும் உள்ளன என்று சாஸ்த்ரம் கூறுகிறது. ஆகாசத்திற்கு பகுதிகளே இல்லை என்றால் எப்படி இப்படி பிரித்து கலக்க முடியும்? அதனால் பகுதிகளில்லை என்று நீங்கள் சொல்வதும் தவறானது.
ஆகவே , இந்த வேத வாக்கியம் ஆகாசத்தின் உண்டாக்கத்தைச் சொல்லுகிறபடியால் ஆகாசமும் உண்டாக்கப் படுவது தான் என்பது வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்.

பூர்வ பக்ஷியின் கேள்வி
3-கௌ₃ணீ அஸம்ப₄வாத் சப்₃தா₃த் ச –
“இரண்டாம் பக்ஷம், முடியாத படியாலும் சொல்லாலும்”
இங்கு பூர்வபக்ஷீ ஆஷேபம் செய்கிறார் –கௌ₃ணீ- “ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த:” என்ற வாக்கியத்தில் உள்ள ’ஸம்பூ₄த:’(உண்டானது) என்ற சொல்லுக்கு நேரடியாக உண்டாக்கம் என்ற பொருள் கொள்ள முடியாது. இரண்டாம் பஷமாக-கௌணமாக) தோற்றம் -வெளிப்பாடு என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு வீரனை ’இவன் சிங்கம்’ என்று சொல்வது எப்படி Figurative (உருவகம்) என்று சொல்லப்படுகிறதோ அது போல் இங்கும் முதன்மையான பொருளல்ல.
அஸம்ப₄வாத் – முடியாத படியால் – தேஜஸ்ஸே முதலில் தோன்றுகிறது என்று வேதம் சொல்வதால் ஆகாசம் உண்டாக்கப்பட முடியாதபடியால்
சப்₃தா₃த் ச – சொல்லாலும் – வேதத்திலேயே (्வாயு: ச அந்தரிஷம் ச ஏதத் அம்ருதம்) அதாவது
’வாயுவும் ஆகாசமும் நித்யமானவை ’ என்று சொல்கிற படியாலும் ஆகாசத்துக்கு உண்டாக்கம் கிடையாது.

4-ஸ்யாத் ् ச ஏகஸ்ய ப்₃ரஹ்ம சப்₃த₃வத் – “ஒ்ன்றுக்கு இருக்கலாம், ப்ரஹ்மம் என்ற சொல் போல்”
இங்கு ஒரு கேள்வி எழுகிறது. அதற்கான விடையை இந்த ஸூத்ரத்தில் பூர்வ பஷி கூறுகிறார்.
கேள்வி – “பரமாத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டானது” என்று சொன்ன பிறகு “வாயுவிலிருந்து நெருப்பு”,“நெருப்பிலிருந்து ஜலம்” முதலான வாக்கியங்கள் உள்ளன. முதல் வாக்யத்தில் இருக்கும் ’உண்டானது’ (ஸம்பூ₄த: ) என்ற சொல்லை பின் வாக்கியங்களிலும் சேர்க்க வேண்டும்.இதை அனு க்ஷங்கம் என்பர் – அப்போது, முதல் வாக்கியத்தில் ஆகாசம் உண்டாக முடியாததால் ’உண்டாகிறது’ என்ற சொல்லுக்கு ’வெளிப்படுகிறது’ என்று பொருள் கொண்டு விட்டு, பின்னால் உள்ள வாக்கியங்களில் தேஜஸ் முதலானவை உண்மை யாகவே உண்டாகிற படியால் ’உண்டாகிறது’ என்ற சொல்லுக்கு ’உண்டாக்கம்’ என்ற பொருளை எப்படிக் கொள்ள முடியும்?-பதில் – ஒரே சொல்லுக்கு வேறு இடங்களில் வேறு பொருள்கள் இருக்கலாம். உபநிஷத்தில் ஒரே இடத்தில் ஒரு முறை ப்ரஹ்மம் என்ற சொல்லுக்கு மூல ப்ரக்ருதி என்றும் இரண்டாம் முறை பரமாத்மா என்று பொருள் கொள்வது போல்.

வ்யாஸரின் பதில்
5-ப்ரதிஜ்ஞ அஹாநி அவ்யதிரேகாத் –
“ப்ரதிஜ்ஜைக்கு பாதிப்பில்லாமை வேறல்லாத படியால்”
பூர்வ பக்ஷியின் வாதத்துக்கு இந்த ஸூத்ரத்தில் வேத வ்யாஸர் பதில் அளிக்கிறார்.
சாந்தோக்ய உபநிஷத்தில் முதலில் தேஜஸ்ஸின் உண்டாக்கம் சொல்லப்படுவதைக் கொண்டு ’ஸம்பூ₄த:’ என்ற சொல்லுக்கு இரண்டாம் பஷமாகப் பொருள் கொள்ள இயலாது-சாந்தோக்யத்திலேயே ஆகாசத்தின் உத்பத்தி சொல்லப் பட்டுள்ள படியால் என்கிறார் வேத வ்யாஸர்.

சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாம் ப்ரபாடகத்தில் உள்ள ஸத்₃வித்யையில் தான் தேஜஸ்ஸின் உண்டாக்கம் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அந்த ப்ரகரணத்தின் தோடக்கத்திலேயே உத்தாலகர் என்ற தந்தை ஸ்வேத கேது என்ற மகனைப் பார்த்து “எந்த ஒன்றை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை உன் ஆசார்யர்களிடம் கேட்டாயா?” என்று வினவுகிறார். இதில் ஒரு ப்ரதிஜ்ஜை (அறிவிப்பு) உள்ளது – “ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று. அந்த ப்ரதிஜ்ஜை உண்மையாக இருக்க வேண்டும், அதற்கு அஹாநி(பாதிப்பில்லாமை ) இருக்க வேண்டும் என்றால், ஆகாசமும் உண்டாக்கப் படுவது தான் என்று ஏற்கத் தான் வேண்டும்.

இவ் விடத்தில் உத்தாலகர் சொல்வது – ’உலகத்தில் ஒரு காரணப் பொருளை அறிந்தால் அதன் கார்யங்கள் அனைத்தையும் அறிந்ததாகும். எடுத்துக் காட்டுக்கு, ஒரு மண் கட்டியை அறிந்தால், அதிலிருந்து உண்டாகும் குடம், தட்டு, சுவர் முதலான அனைத்தையுமே நாம் ஒரு விதத்தில் ’மண்’ என்ற அளவிற்கு அறிந்ததாகத் தான் ஆகும். ஏனெனில் குடம் என்பது மண்ணைக் காட்டிலும் வேறு பொருள் அல்ல. அது போல் தான் இங்கும் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகனைத்தையும் அறிந்ததாகும் என்கிறார். அதாவது, உலகில் அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாவதால், ப்ரஹ்மத்தைக் காட்டிலும்
வேறு பொருளல்ல. ஆகையால் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்கிறார். இது உண்மையாக இருக்க வேண்டுமென்றால் ஆகாசமும் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகி யிருக்கத் தான் வேண்டும். இல்லா விட்டால், ப்ரஹ்மத்தை அறிந்தாலும் ஆகாசத்தை அறிந்ததாக ஆகாதபடியால் உத்தாலகர் ’அனைத்தையும் அறிந்ததாகும்’ என்று சொன்னது பொய்யாகி விடும். எனவே சாந்தோக்யமே ஆகாசத்தின் உத்பத்தியைக் கூறுகிறது.

மேலும் சில யுக்திகள்
6–சப்₃தே₃ப்₄ய: –
“(ஆகாசம் உண்டாவதை மற்ற சில வாக்கியங்களிலிருந்து அறியலாம்”
ஸதே₃வ ஸோம்ய இத₃ம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்” –-ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகனைத்தும் ஸத் என்ற ஒரே பொருளாக இருந்தது, வேறு எதுவுமில்லை –இவ்வாறு வேதம் சொல்வதால், ப்ரளயத்தின் போது ஸத் என்ற பரமாத்மா மட்டுமே இருந்தார் என்று தெரிகிற படியால், அப்போது ஆகாசமும் இல்லை , பிற்பாடு தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாயிற்று என்று தெரிகிறது.

(ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!
–4-10-1-)

“ஐததா₃த்ம்யம் இத₃ம் ஸர்வம்” – இது அனைத்தும் ப்ரஹ்மமே -குடம் தட்டு சுவர் முதலான பொருள்கள் எல்லாம் மண்ணிலிருந்து உண்டான படியால் ’இவை அனைத்தும் மண் தான்’ என்று சொல்வது போல் இங்கு வேதம் ’இவ் வுலகில் அனைத்துமே ப்ரஹ்மம் தான்’ என்று கூறுவதால், உலகில் ஒரு பகுதியான ஆகாசமும் ப்ரஹ்மத்திட மிருந்து தோன்றியது தான் என்று தெளிவாகிறது.

7– யாவத் ₃விகாரம் து விபா₄க₃: ஸ்யாத் லோகவத்
விகாரம்
என்றால் காரியப் பொருள். விபா₄க₃ம் என்றால் உண்டாக்கம். ஆகாசம் முதலானவை காரியப் பொருள்கள் தான் என்று சொல்வதாலேயே அவை ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றன என்பது சொன்னதாகிறது
லோகவத் – உலகத்தில் போல் – உலகத்தில் ’இவர்கள் அனைவரும் தேவ தத்தனின் புதல்வர்கள்’ என்று சொல்லி விட்டு, ஒரு சிலர் அவனிடமிருந்து பிறந்தது விளக்கப் பட்டால், அனைவரும் அவனிடமிருந்து பிறந்தது சொல்லப்பட்டதாகும். -அது போல், ’உலகில் அனைத்தும் ப்ரஹ்மத்தின் காரியங்கள்’ என்று சொல்லி விட்டு, தேஜஸ் ஜலம் பூமி என்பவை உண்டாகும் முறையை வேதம் காட்டினால், அது மற்றவை உண்டாக வில்லை என்ற பொருளைத் தராது, அவை அனைத்தும் அதே போல் தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகி யுள்ளன என்பதையே குறிக்கும்-’வாயுவும் ஆகாசமும் நித்யமானவை ’ என்று வேதம் சொல்வது, முற்றிலுமாக உண்டாக்கமும் அழிவும் இல்லாததால் அல்ல, மற்ற பொருள்களை விட நீண்ட காலத்துக்கு இவை இரண்டும் அழியாமல் இருப்பதால் மட்டுமே –

அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது
8–ஏதேந மாதரிச்வா வ்யாக்₂யத:
– “இத்தால் வாயு (உண்டாகக் கூடியதாக) விளக்கப் பட்டது”
இப்படி ஆகாசம் உண்டாகக் கூடியது தான் என்பதற்குச் சொன்ன யுக்திகளாலேயே வாயுவும் உண்டாகக் கூடியது தான் என்பது நிரூபமாகிறது.-இதை முன் ஸூத்ரத்திலேயே சேர்க்காமல், தனி ஸூத்ரமாக வ்யாஸர் வைத்தது, அடுத்த அதிகரணத்தில் வாயுவை மட்டும் நினைவு கூறுவதற்காக. இது அடுத்த அதிகரணத்தில் தெளிவாகும்

9-அஸம்ப₄வஸ்து ஸத: அநுபபத்தே :
(உண்டாக) முடியாமை ஸத் என்கிற பரமாத்மாவுக்கே , (மற்ற பொருள்களுக்கு உண்டாகாமை ) பொருந்தாத படியால்-இவ் வதிகரணத்தில் ஆகாசமும் வாயுவும் உண்டாகக் கூடியவை என்று சொன்னதோடு நிற்காமல், உலகில் அனைத்துமே உண்டாகக் கூடியது தான் என்று நிரூபிக்கிறார் இந்த ஸூத்ரத்தால். உலகில் உண்டாகாமை என்ற பண்பு பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும், மற்றப் பொருள்களுக்குப் பொருந்தாது. ஏன் என்றால், முன்னமே சொன்னபடி, சா₂ந்தோக்₃ய உபநிஷத்தின் 6ஆம் ப்ரபாடகத்தில் உள்ள ஸத் வித்யை என்ற பகுதியில் உத்தாலகர் என்ற தகப்பனார் ஸ்வேதகேது என்ற மகனிடம் ’ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்’ என்கிறார். இது உண்மையாக வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி தான் உள்ளது –உலகப் பொருள்களும் ப்ரஹ்மமும் ஒரே போருளாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி தான் உள்ளது – உலகப் பொருள்கள் அனைத்தும் ப்ரஹ்டமிருந்து உண்டாகி யிருக்க வேண்டும். ஆகையால், எந்தப் பொருளுமே உண்டாகாததாக
இருக்கவே முடியாது.

ஆக, இவ்வதிகரணத்தால், தன்னைத் தவிர்ந்த அனைத்துப் பொருள்களுக்கும் பரமாத்மாவான ப்ரஹ்மம் காரணமாக உள்ளது என்று நிரூபிக்கப் பட்டது. எனவே , முதல் அத்யாயத்தில் நாம் எட்டிய முடிவு சரியானதே என்று நிலை நாட்டப்படுகிறது.


2-3-2-தேஜோதி₄கரணம்-அனைத்தும் ப்ரஹ்மத்திடமிருந்தே உண்டாகிறதுபூர்வ பக்ஷியின் வாதம்-ஸங்கதி – முன் அதிகரணத்தில் ஆகாசமும் வாயுவும் உண்டாக்கப் படுகின்றன எனப்பட்டது.-அதற்கடுத்து உண்டாகக் கூடிய தேஜஸ், ஜலம், ப்ருதிவீ ஆகியவற்றைப் பற்றின ஆராய்ச்சி இங்கு செய்யப்படுகிறது
முன் அதிகரணத்தில் உலகப் பொருள்கள் அனைத்துமே உண்டாக்கப் படுகின்றன என்று சொல்லப் பட்டது. மூல ப்ரக்ருதியிலிருந்து அவ்யக்தம், மஹான், அஹங்காரம், புலன்கள், தன்மாத்ரங்கள், ஐம் பூதங்கள் என்பவை அனைத்தும் உண்டாகின்றன என்று வேதம் கூறுகிறது. அதில் ஒரு கேள்வி எழுகிறது – இவை ஒவ்வொன்றுமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றனவா? அல்லது ப்ரஹ்மம் மூல ப்ரக்ருதியிலிருந்து அவ்யக்தம் என்பதை மட்டும் உண்டாக்கும், அதற்குப் பின் அந்தந்த அசேதனப் பொருள்களே அடுத்தடுத்த அசேதனப் பொருள்களை உண்டாக்குகின்றனவா? என்று.

பூர்வ பக்ஷம் – அந்தந்த அசேதனப் பொருள்களே அடுத்தடுத்த பொருள்களை உண்டாக்குகின்றன
1-தேஜ : அத: ததா ₂ஹிஆஹ
அத:
– அதிலிருந்து -முன் அதிகரணத்தின் 8ஆம் ஸூத்ரத்தில் சொல்லப்பட்ட மாதரிச்வா எனும் வாயுவிடமிருந்து
தேஜ : – தேஜஸ் என்ற நெருப்பு உண்டாகிறது
ததா₂ஹிஆஹ– அவ்வாறு அன்றோ (வேதம்) சொல்கிறது
தைத்திரீய உபநிஷத்தில் ஆத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டாயிற்று, ஆகாசத்திலிருந்து வாயு உண்டாயிற்று என்று சொன்ன பிறகு, (வாயோர் : அக்₃நி: ) அதாவது வாயுவிலிருந்து நெருப்பு உண்டாகிறது என்று தான் கூறப்பட்டுள்ளது. எனவே அசேதனப் பொருளே அடுத்த அசேதனப் பொருளை உண்டாக்குகிறது, ப்ரஹ்மம் அல்ல.

2-ஆப: – “(அதிலிருந்து அதாவது தேஜஸ்ஸிலிருந்து) ஜலம் (உண்டாகிறது, அவ்வாறு அன்றோ சொல்கிறது)”
தைத்திரீயத்தில் (அக்₃நே : ஆப: ) அதாவது “அக்₃நியிலிருந்து ஜலம் உண்டானது” என்றும், சாந்தோக்யத்தில்(தத் அப: அஸ்ருஜத) அதாவது “அந்த தேஜஸ் ஜலத்தைப் படைத்தது” என்றும் தான் சொல்லப்படுகிறது.

பூர்வபக்ஷியின் வாதம் தொடர்கிறது
3-ப்ருதி₂வீ –
(அதிலிருந்து அதாவது ஜலத்திலிருந்து) ப்ருதி₂வீ (உண்டாகிறது, அவ்வாறு அன்றோ சொல்கிறது)”
தைத்திரீயத்தில் (அத்₃ப்₄ய: ப்ருதி₂வீ ) அதாவது “ ஜலத்திலிருந்து ப்ருதிவீ உண்டானது” என்றும்,
சாந்தோக்யத்தில் (தா: அந்நம் அஸ்ருஜந்த) அதாவது “அந்த ஜலம் அந்நத்தைப் படைத்தது” என்று தான் சொல்லப்படுகிறது. எனவே அந்தந்த அசேதனப் பொருளே அடுத்த காரியத்தை உண்டாக்கி விடுகிறது.

4–அதி₄கார-ரூப- சப்₃தா₃ந்தரேப்₄ய: – அந்நம் எனப்படுவது ப்ருதி₂வீ தான் என்று நிரூபிக்கிறார்
அதி₄காரம் – இந்த ப்ரகரணத்தில் (வேதப் பகுதியில்) ஆகாசம் வாயு முதலான பூதங்களின் உண்டாக்கமே பேசப்படுகிற படியால் இங்கும் அந்நம் என்பது உணவல்ல, உணவுக்கெல்லாம் காரணமாக இருக்கும் ப்ருதிவீ தான்
ரூபம் – இதே வேதப் பகுதியில் “நெருப்பில் இருக்கும் சிவப்பு, வெண்மை மற்றும் கருமை ஆகிய வண்ணங்கள் தேஜஸ், ஜலம் மற்றும் அந்நத்திலிருந்து வந்தவை ” என்று கூறப் படுகிறது. இப்படி தேஜஸ்ஸுக்கும் ஜலத்துக்கும் ஸமமாகச் சொல்லப்படுவதால், அந்நம் என்பதும் ஐம் பூதங்களில் ஒன்றான ப்ருதிவியாகத் தான் இருக்க வேண்டும்.
சப்₃தா₃ந்தரம் – சாந்தோக்ய உபநிஷத்தில் அந்நம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டாலும் இதே போன்ற இடத்தில் தைத்திரீயத்தில் ப்ருதிவீ என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்நம் என்பது ப்ருதிவீ தான்.எனவே அந்நம் என்பது ப்ருதி₂வியே . ஆக, தேஜஸ் முதலான அசேதனங்களே அடுத்த பொருள்களை உண்டாக்குகின்றன

கேள்வி – வேதத்தில் ஓரிடத்தில் எல்லாப் பொருள்களும் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாவதாகச் சொல்லப்படுகிறதே ?-ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண: மந: ஸர்வேந்த்₃ரியாணி | க₂ம் வாயு: ஜ்யோதி: ஆப: ப்ருதி₂வீ விச்வவஸ்ய தா₄ரிணீ || ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராணன், மனது, புலன்கள், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதி₂வீ ஆகியவை உண்டாகின்றன –

பதில் – இவை யெல்லாம் நேரடியாக ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றன என்று வேதம் சொல்லவில்லை , அடுத் தடுத்து வரிசையாக இவை உண்டாகிற படியால், பரம்பரையாக எல்லாம் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டானது என்றே சொல்கிறது

ஸித்தாந்தியின் பதில்-ஸித்தாந்தம் –5–த₃பி₄த்₄யாநாத் ஏவ து தல்லிங்காத் ஸ:
ஸ: து
– (மஹான் முதலானவைக்கு காரணம்) அவரே = அவ்யக்தம் முதலானவற்றை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவே –
த₃பி₄த்₄யாநாத் ஏவ தல் லிங்காத் – அபி₄த்₄யாநம் (ஸங்கல்பம்) என்கிற தனிப்பட்ட லிங்கத்தால் (அடையாளத்தால்) தேஜஸ், ஜலம் முதலானவை அடுத்தடுத்த பொருளைப் படைப்பதற்கு முன் ஸங்கல்பம் (எண்ணம்) செய்கின்றன என்று வேதம் சொல்கிறது – தத் தேஜ ஐக்ஷத” தா ஆப ஐக்ஷந்த” என்று. அசேதனப் பொருள்களுக்கு இது பொருந்தாது, எனவே அந்தந்த அசேதநப் பொருளே சரீரமாகக் கொண்ட பரமாத்மா தான் அடுத்தடுத்த பொருளை உண்டாக்குகிறார் என்பதே பொருத்தமானது. பரமாத்மா அனைத்துக்கும் அந்தர்யாமியே –

(ஏ தஸ்மாத் ஜாயதே பிராணன் மனஸ் ஸர்வேந்த்ரியாணி கம் வாயு ஜ்யோதி ஆபோ பிருத்வீ -அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது -என்றும் வேத வாக்கியம் உள்ளது)

6–விபர்யயேண து க்ரம: அத: உபபத்₃யதே ச –”மாறுபட்ட வரிசை இத்தால் பொருந்துகிறது”
விபர்யயேண து – (அவ்யக்தம் மஹான் அஹங்காரம் என்கிற ஸ்ருஷ்டி வரிசையிலிருந்து) மாறுபட்ட
க்ரம: – (எல்லாமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது என்று சொல்லப்பட்ட) க்ரமம் அதாவது வரிசை
அத: – இதனால் (அதாவது அனைத்துமே பரமாத்மா விடமிருந்தே உண்டாகிற படியால்)
உபபத்₃யதே ச – பொருந்துகிறது-

“ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :” என்ற வேத வாக்கியத்தில் பரமாத் மாவிடமிருந்து அவ்யக்தம், அதிலிருந்து மஹான்,-அதிலிருந்து அஹங்காரம், அதிலிருந்து ஐம் பூதங்கள் உண்டாகின்றன என்கிற வரிசையைச் சொல்லாமல் “எல்லாமே பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது” என்று சொல்லப்படுகிறது.
அதற்கு பூர்வ பஷி – எல்லாமே நேரடியாக பரமாத்மாவிமிருந்து உண்டாகா விட்டாலும், பரம்பரையாக உண்டாவதை இந்த வாக்கியம் சொல்கிறது என்றார்.
இப்போது ஸித்தாந்தத்தில் அந்தந்த அசேதனப் பொருள்களை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவிடமிருந்தே அனைத்தும் உண்டாகிற படியால், அனைத்துமே நேரடியாக பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று சொல்வது கூடப் பொருத்தமானதே – அதனால் “ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :” என்ற வாக்கியம் எங்கள் பக்ஷத்துக்கு ஸாதகமானது-

7-அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரமேண தல் லிங்காத் இதி சேத் ந அவிசேஷாத்
பூர்வ பஷி கேள்வி கேட்கிறார்
– இந்த வேத வாக்கியம் அனைத்தும் நேரடியாக பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று சொல்லவில்லை , ஒரு வரிசையில் தான் அடுத்தடுத்த பொருள்கள் உண்டாவதைச் சொல்கிறது என்று.
தல் லிங்காத் – (’ஆகாசம் வாயு தேஜஸ்’ என்ற வரிசையோடு சேர்த்துப் படிக்கப் படுதல் என்ற) அடையாளத்தால்
அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரமேண – ப்ராணனுக்கும் பூதங்களுக்கும் நடுவில் புலன்களும் மனதும் உண்டாகின்றன
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறானது
அவிசேஷாத் – வேறுபாடில்லாத படியால்

’ஏதஸ்மாத் ஜாயதே ’ அதாவது ’பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறாது’ என்ற சொற்றொடர் ப்ராணனோடு மற்றும் சேரவில்லை , இங்கு சொல்லப்பட்ட அனைத்துப் பொருள்களோடும் சேர்கிறது. எனவே எல்லாமே பரமாத்மாவிடமிருந்து நேரடியாக உண்டகிறது என்று தான் கொள்ள வேண்டும்.
மேலும், இங்கு ஒரு குறிப்பிட்ட வரிசை சொல்லபடுகிறது என்று கூறுவது உங்கள் வேதத்திலும் பொருந்தாது. ஏனென்றால் இந்த வாக்கியத்தில் முதலில் ப்ராணன் உண்டாகிறது என்று கூறி, அதற்குப் பிறகு தான் ஆகாசத்திலிருந்து வாயு உண்டாகிறது என்று சொல்லப்படுகிறது. இது பொருந்தாது. ப்ராணன் (மூச்சுக் காற்று) என்பது வாயுவின் குறிப்பிட்ட வகையானபடியால் அது வாயுவுக்கு முன் உண்டாக முடியாது. எனவே இங்கு க்ரமம் (வரிசை ) சொல்லப்படவில்லை , எல்லாமே பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று தான் சொல்லப் படுகிறது.

ஆக இந்த அதிகரணத்தில் ’தேஜஸ்’’ஜலம்’ முதலான சொற்கெல்லாம் அந்தந்த அசேதனப் பொருளை மட்டும் குறிப்பிடவில்லை , அந்தந்த அசேதனப் பொருளை சரீரமாகக் கொண்ட பரமாமைவையே குறிக்கின்றன என்று கூறப்பட்டது. இதில் ஓர் ஆஷேபத்தை பூர்வபஷி எழுப்புகிறார் – எல்லாச் சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன என்றால், உலகில் அனைவரும் தினமும் குடம் துணி மேஜை ஆடு மாடு முதலான பொருள்களைக் குறிக்க அந்தந்த சொற்களைப் பயன்படுத்துவது தவறாகி விடுமே ? பிறகு உலகப் பேச்சு வழக்கு என்பதே நின்று போய் விடுமே? என்று.-இதற்கு வேத வ்யாஸர் அடுத்த ஸூத்ரத்தில் விடை அளிக்கிறார்.

8-சராசர வ்யபாஸ்ர யஸ்து ஸ்யாத் தத் வ்யபதேசோ பாக்த தத் பாவ பாவாத்
சராசர வ்யபாஸ்ர யஸ்து-
-அசையும் மற்றும் அசையாத உலகப் பொருள்களைப் பற்றி
தத்₃வ்யபதே₃ ச : – அந்தந்த சொற்களின் ப்ரயோகமானது (பயன்பாடானது)
பா₄க்த: ஸ்யாத் – உடைக்கப்பட்டதாக – இரண்டாம் பக்ஷமாக இருக்கும்
தத்₃பா₄வ பா₄வித்வாத் – அனைத்துச் சொற்களும் பரமாத்வையே சொல்கின்றன என்று தெரிந்து கொண்ட பிறகு மட்டுமே எல்லாச் சொற்களும் பரமாத்வையே போதிக்கிறபடியால்.

அதாவது, உலகத்தில் பொதுவாகக் காணப்படும் சொற்களின் பயன்பாடு தவறானது அல்ல, ஆனால் முழுமையானதும் அல்ல. ஒவ்வொரு சொல்லுக்கும் பரமாத்மா வரை போதிக்கும் சக்தி இருந்தாலும், அது தெரியாமல் மக்கள் அந்தந்தச் சொற்களைப் பயன்படுத்துவதால், அக் காலத்தில் குடம் துணி முதலான பொருள்களை மட்டும் அந்தந்தச் சொற்கள் குறிக்கின்றன. எப்போது வேதாந்தம் கற்று, ’எல்லாச் சொற்களும் பரமாத்வையே கூறுகின்றன’ என்று உணர்கிறார்களோ அப்போது அந்தந்தச் சொற்களின் முழுமையான சக்தியை உணர்ந்த படியால் அதற்குப் பின் அவர்களுக்கு அந்தந்தச் சொற்கள் பரமாத்மா வரை போதிக்கின்றன.

(அனைத்து சொற்களும் அவனைக் குறிக்கும் என்றும் அறிந்த பின்பு –புகழும் நல் ஒருவன் என்கோ –இத்யாதிகண்ணனைக் கூவுமாறு அறியேன்–குன்றங்கள் அனைத்தும் என்கோ -ஆழ்வார் –)

ஆக, இந்த அதிகரணத்தில், அனைத்துப் பொருள்களும் ப்ரஹ்மத்திடமிருந்து தான் உண்டாகின்றன என்று நிரூபித்தார்.

2-3-3-ஆத்மாதி₄கரணம்–ஜீவாத்மாவும் உண்டாக்கப்படுகிறாரா?—-ஸங்கதி – இந்த பாதத்தின் முதல் அதிகரணத்தில் ப்ரஹ்மத்தைத் தவிர்ந்த மஹான், அஹங்காரம், ஆகாசம், வாயு முதலான அனைத்துப் பொருள்களுமே உண்டாக்கப் படுகின்றன என்று நிரூபிக்கப் பட்டது. அதற்கு மேல் இரண்டாவது அதிகரணத்தில் அவை அனைத்துமே பரமாத்மாவிடம் இருந்து தான் உண்டாகின்றன என்றும் சொல்லப்பட்டது. இப்படி அசேதன பொருள்களின் உண்டாக்கத்தைச் சொன்ன பிறகு சேதனனான ஜீவாத்மாவைப் பற்றி விசாரம் செய்யப்படுகிறது. ஜீவாத்மாவும் ஆகாசம் முதலானவற்றைப் போல் உண்டாக்கப் படுகிறாரா? இல்லையா? என்பது இந்த அதிகரணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி.

(இதில் ஸித்தாந்தம் ஸூத்ரம் ஒன்றே உள்ளது)

பூர்வ பக்ஷியின் வாதம்–ப்ரஹ்மத்தைத் தவிர அனைத்தும் உண்டாக்கப்படுகிறது என்று முன் அதிகரணங்களில் நிரூபித்ததால், ஜீவாத்மாவும் உண்டாக்கப் படுகிறார் என்று பூர்வபக்ஷி வாதிடுகிறார். இதற்கு இரண்டு யுக்திகளைக் கூறுகிறார் –
1-ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந பிரதிஜ்ஞா உபபத்தி –
அதாவது சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாவது ப்ரபாடகத்தில் ஸத் வித்யா என்கிற பிரகரணத்தில் உத்தாலகர் என்கிற தந்தை ஸ்வேதகேது என்கிற மகனைப் பார்த்து, “எந்த ஒன்றை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகுமோ , அதை உன் ஆசார்யர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டாயா?” என்று கேட்கிறார். அங்கு இருக்கும் பிரதிஜ்ஜை – “ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்பது. இது எப்படிப் பொருந்துமென்றால் – எப்படி ஒரு மண் கட்டியை அறிந்தால், அதிலிருந்து உண்டாகக் கூடிய குடம், தட்டு முதலானவற்றை அறிந்ததாகுமோ , அதே போல் உலகமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறபடியால் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும் என்று உத்தாலகர் கூறுகிறார். இந்த ப்ரதிஜ்ஜை பொருந்த வேண்டும் என்றால் ஜீவாத்மாக்களும் ப்ரஹ்மத்திடம் இருந்து உண்டாகி யிருக்க வேண்டும். இல்லா விட்டால் ப்ரஹ்மத்தை அறிந்தால் ஆகாசம் முதலான அசேதனப் பொருள்களை மட்டுமே அறிந்ததாகுமே தவிர ஜீவாத்மாக்களை அறிந்ததாக ஆகாது. எனவே ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று சொல்வது பொய்யாகி விடும். அதனால் ஜீவாத்மாக்களும் ப்ரஹ்மத்திடம் இருந்து உண்டாகிறார்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

(2) ப்ராக் ஸ்ருஷ்டே : ஏகத்வ அவதாரணம் – “ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகமனைத்தும் ஒரே பொருளாகத் தான் இருந்தது” என்று வேதம் கூறுகிறது. இந்த வாக்கியம் சரியாக இருக்க வேண்டும் என்றால் ப்ரளய காலத்தில் ஆகாசம், வாயு முதலானவை எப்படி இல்லையோ , அதே போல் ஜீவாத்மாக்களும் தனித்து இல்லை . பரமாத்மா ஒருவரே இருந்தார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். ஆகையால் ப்ரளய காலத்தில் ஜீவாத்மாக்கள் இருக்க வில்லை . அதற்குப் பிறகு தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டானார்கள் என்று தான் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஆகவே , ஜீவாத்மாவும் உண்டாக்கத் தான் படுகிறார். இதற்கு வேதத்திலும் சில வாக்கியங்கள் வலுவூட்டுகின்றன –
தோயேந ्ஜீவான் வ்யஸ்ஸர்ஜ பூ₄ம்யாம் –
தண்ணீரோடு ஜீவன்களைப் படைத்தார்
ப்ரஜாபதி: ப்ரஜா: அஸ்ருஜத – ப்ரஜாபதி உடலோடு கூடிய ஆத்மாக்களைப் படைத்தார்
யதோ வா இமாநி பூ₄தாநி ஜாயந்தே – இந்த ஜீவ ராசிகள் எதிலிருந்து உண்டாயினவோ
இந்த வாக்கியங்களில் எல்லாம் ஜீவனோடு கூடின உலகப் பொருட்கள் உண்டாக்கப் படுகின்றன என்று சொல்லப் படுகிறபடியால் ஜீவாத்மாவும் உண்டாக்கத் தான் படுகிறார்.

கேள்வி – ப்ரஹ்மம் நித்தியமானது என்று வேதம் சொல்கிறது. “தத் த்வம் அஸி”. “அஹம் ப்ரஹ்மாஸ்மி” முதலான வாக்கியங்கள் ஜீவாத்மாவும் ப்ரஹ்மமும் ஒன்று தான் என்று சொல்லுகின்றன. ஆகையால் ஜீவாத்மாவும் நித்தியமானவராக தானே இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேள்வி யெழுப்புகிறார்கள்.
பூர்வ பக்ஷியின் பதில் – அப்படிப் பார்த்தால் “ஸர்வம் க₂லு இத₃ம் ப்₃ரஹ்ம”, ”ஐததா₃த்ம்யம் இத₃ம் ஸர்வம்”-முதலான வாக்கியங்களில் அசேதனப் பொருட்கள் கூட ப்ரஹ்மமே தான். ஜகத்தே ப்ரஹ்மம் தான் என்று சொல்லப் படுகிறபடியால், ப்ரஹ்மம் நித்தியமான படியால் அசேதனப் பொருள்களும் நித்யமானவை என்று ஏற்க வேண்டி வரும். அது எப்படிப் பொருந்தாதோ , அதுவே போல் உங்கள் வாதமும் பொருந்தாது.
எனவே ஆகாசம் முதலானவற்றைப் போல் ஜீவாத்மாக்களுக்கும் உத்பத்தி உண்டு என்று பூர்வ பக்ஷி கூறுகிறார்.

ஸித்தாந்தியின் பதில்
ஸித்தாந்தம் – 1- ந ஆத்மா ச்ருதே : நித்யத்வாத் ச தாப்₄ய:
ஆத்மா ந –
ஜீவாத்மாக்கள் (உண்டாக்கப் படுவது) இல்லை
ச்ருதே : – வேதத்திலிருந்து (அவர்களுக்கு உண்டாக்கம் இல்லை என்று தெரிகிறபடியால்)
தாப்₄ய: – அந்த வேத வாக்கியங்களிலிருந்தே
நித்யத்வாத் ச – ஆத்மாக்கள் நித்யமானவை என்று அறிகிற படியாலும்
வேதத்தில் தெளிவாகவே ஆத்மாக்களுக்கு உண்டாக்கம் இல்லை என்று சில வாக்கியங்களில் சொல்லபடுகிறது.
ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சித்-அனைத்தையும் அறியும் சக்தி கொண்ட ஜீவாத்மா உண்டாவதும் இல்லை, அழிவதும் இல்லை
ஜ்ஞாஜ்ஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீசௌ-முழுமையான ஜ்ஞாநம் கொண்ட பரமாத்மா, குறைந்த ஜ்ஞாநம் கொண்ட ஜீவாத்மா ஆகிய இருவருமே அஜர்கள்-அதாவது உண்டாக்கம் இல்லாதவர்கள்
அதே போல் சில வேத வாக்கியங்கள் ஜீவாத்மாக்கள் நித்யமானவர்கள், அதாவது அழிவற்றவர்கள் -எப்போதும் இருக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன –நித்யோ ् நித்யாைநாம் யோ வித₃தா₄தி காமாந்--நித்யமானவரான ஒரு பரமாத்மா நித்யமான எண்ணிறந்த ஜீவாத்மாக்களுக்கு ஆசைப்பட்டதைக் கொடுக்கிறார்-
அஜ: நித்ய: சாச்வத: அயம் புராண:-ஜீவாத்மா பிறப்பில்லாதவர், நித்யமானவர், மாறுபாடுகள் அற்றவர், மிகப் பழமையானவராய் இருந்தாலும் புதுப் பொருள் போல் ஆச்சர்யமூட்டுபவர்
ஆகவே , ஜீவாத்மாக்கள் உண்டாக்கப் படுவதில்லை என்று வேதத்திலிருந்து தெரிகிறது என்கிறார் வேத வ்யாஸர்.

ஸித்தாந்தியின் பதில் -இதற்கு மேல் பூர்வ பக்ஷி சொன்ன யுக்திகளுக்கு பதில் கூற வேண்டும்.
கேள்வி
– ஜீவாத்மாக்கள் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகவில்லை என்றால் “ப்ரஹ்மம் ஒன்றை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று உத்தாலகர் கூறியது எப்படிப் பொருந்தும்?
பதில் – ஜீவாத்மாக்கள் உண்டாக்கப் படாவிட்டாலும் ப்ரஹ்மத்தினுடைய கார்யங்கள் தான் என்று ஏற்கப்படுகிறது. மண்ணை அறிந்தால் அதன் கார்யங்களை அறிந்ததாவது போல் ப்ரஹ்மத்தை அறிந்தால் ஜீவர்களை அறிந்ததாகும்.
கேள்வி – ஜீவாத்மாக்கள் கார்யம் தான், ஆனால் உண்டாவதில்லை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்?
பதில் – ’கார்யம்’ என்றால் ’வேறொரு நிலையை -மாறுபாட்டை அடைந்திருக்கும் பொருள்’அவஸ்தாந்தர ஆபபத்தி-. அந்த வேறொரு நிலை மாறுபாடு (Transformation) என்பது இரண்டு வகைப்படும்
1-ஸ்வரூப விகாரம் உருவ மாறுபாடு – இது தான் ஒரு பொருளின் உண்டாக்கம் என்று சொல்லப்படுகிறது.
2-ஸ்வபா₄ப விகாரம் – தன்மையில் மாறுபாடு – இது ஏற்படும் போது உண்டாக்கம் என்று சொல்வதில்லை .-அசேதனப் பொருள்களுக்கு மட்டும் தான் ஸ்வரூப விகாரம் (உருவ மாறுபாடு) என்பது உண்டு. ஒரே தங்கம் காசாகவும், மோதிரமாகவும், தோடாகவும், சங்கிலியாகவும் வெவ்வேறு வடிவங்களை அடைகிறது. அப்போது மோதிரம் உண்டாகிறது, சங்கிலி உண்டாகிறது என்று சொல்கிறோம்.
சேதனர்களான ஜீவாத்மாக்களுக்கு ஸ்ருஷ்டியின் போது உருவ மாறுபாடுகள் கிடையாது, ஆனால் தன்மைகளில் மாறுபாடுகள் உண்டு -– ஒரு ஸமயம் அறிவு குறைந்திருக்கும், ஒரு ஸமயம் மலர்ந்திருக்கும். இதற்கு ஸ்வபாவ விகாரம் என்று பெயர். இது ஏற்படும் போது அந்தப் பொருள் உண்டாகிறது என்று சொல்வது கிடையாது.
ஆக, அசேதனங்கள் சேதனர்கள் அனைத்துமே ப்ரஹ்மத்தால் மாறுபாடுகளை அடைகிறபடியால் ப்ரஹ்மத்தின் கார்யங்கள் தான், ஆனால் ஜீவாத்மா உண்டாகிறார் என்று கூற முடியாது என்று வ்யாஸர் கூறுகிறார்.-ஜீவாத்மாவைப் பற்றி பிறப்பு மரணம் முதலான சொல்லாலெல்லாம் ஓர் உடலை எடுத்துக் கொள்வதையும் அதை விடுவதையும் வைத்துச் சொல்லப்படுகின்றன. ஜீவாத்மா உண்டாவதுமில்லை அழிவதுமில்லை என்பதே உண்மை .

(சம பரதேவ ஏகி பவதி-நாம ரூப விபாகம் இல்லாமல் ஒன்றாகவே ப்ரஹ்மம் இருந்தது என்று சொல்லிற்று தவிர சேதன அசேதன பொருள்கள் இல்லை என்றதல்ல –தத்வ த்ரயங்களும் நித்யமானவையே தான்)

2-3-4-ஜ்ஞாதி₄கரணம்-ஜீவாத்மாவைப் பற்றின ஆராய்ச்சி-
முதல் பூர்வ பக்ஷம் -ஜ்ஞாதி₄கரணம் –ஸங்கதி
– இந்தப் பாதத்தின் முதல் மூன்று அதிகரணங்களால் உலகிலுள்ள அனைத்துமே ப்ரஹ்மத்தால் தான் படைக்கப் படுகிறது என்று நிரூபித்தார் வ்யாஸர். அதில் மூன்றாவது அதிகரணத்தில் ஜீவாத்மாவைப் பற்றிய பேச்சு வந்தபடியால், இனி அடுத்த நான்கு அதிகரணங்களால் ஜீவாத்மாவினுணடய ஸ்வரூபம் எப்படிப்பட்டது என்று ஆராய்கிறார்.
இந்த விவாதத்தில் மூன்று பக்ஷங்கள் இருக்கின்றன–2 பூர்வ பக்ஷங்கள், 1 வேதாந்தம் சொல்லும் ஸித்தாந்தம்.
1-பௌத்தர்கள், ஸாங்க்யர்கள் முதலானவர்களின் பக்ஷம்
– ஜீவாத்மா ஜ்ஞாநம் மட்டுமே
இந்த மதங்களில் ஆத்மாவை ’சிந் மாத்ரம்’ -’ஜ்ஞாந மயம்’ என்று கூறுவார்கள். இதற்கு “ஜ்ஞாநம் மட்டுமே ஆத்மா ”என்று பொருள். அதாவது, ஒரு குடம் மண்ணால் ஆனது, ஒரு மோதிரம் தங்கத்தால் ஆனது, அது போல் ஜீவாத்மா ஜ்ஞாநத்தாலேயே ஆனவர் என்று பொருள். “மாத்ரம்” சொல்லால் “ஜ்ஞாநம் மட்டுமே ” என்று சொல்வதால் ஆத்மா ஜ்ஞாநமுடையவர் (ஜ்ஞாதா) அல்ல, அதாவது அறிவாளி அல்ல, அறிவே தான் ஜீவாத்மா.

இதற்கு இவர்கள் சில வேத வாக்யங்களைச் சான்றாகக் காட்டுகிறார்கள் –
1–சுக்ல யஜுர் வேதத்தில் இரண்டு சாகைகள் (கிளைகள்) உள்ளன. ஒன்று மாத்யந்தின சாகை , மற்றொன்று காண்வ சாகை -இரண்டிலுமே அந்தர்யாமி ப்ராஹ்மணம் என்ற உபநிஷத் பகுதி உள்ளது. இப் பகுதியில், நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ப்ரக்ருதி மஹான் அஹங்காரம் புலன்கள் ஆத்மாக்கள் முதலான உலகிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அந்தர்யாமி பரமாத்மாவே என்று கூறப்படுகிறது. அச் சமயத்தில், மாத்யந்தின சாகையில் (ய: ஆத்மநி திஷ்ட₂ன்) அதாவது ’யாரொருவர் ஆத்மாவில் இருக்கிறாரோ ’ என்று கூறப்படுகிறது. அதே இடத்தில் காண்வ சாகையில் (யோ விஜ்ஞாநே திஷ்ட₂ன்) அதாவது ’யாரொருவர் ஜ்ஞாநத்தில் இருக்கிறாரோ ’ என்று கூறப்படுகிறது. ஆகவே ,ஆத்மா என்பவரைத் தான் ஜ்ஞாநம் என்று வேதம் கூறுவதை நாம் உணரலாம். எனவே ஜ்ஞாநமே ஆத்மா .

2-தைத்திரூய உபநிஷத்தில் ஓரிடத்தில் (விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே ) அதாவது “அறிவு யாகம் செய்கிறது” என்றுள்ளது. ஆத்மா தானே யாகம் செய்ய முடியும். அதனால் ஆத்மா தான் இங்கு அறிவு எனப்படுகிறார்

இரண்டாவது பூர்வபக்ஷம்–வைஸேஷிகம்- ந்யாய மதம் முதலானவற்றின் பக்ஷம் – ஜடமான ஆத்மாவுக்கு அறிவு செயற்கையான பண்பு-இவர்கள் முன் சொன்ன பக்ஷத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார்கள். ஆத்மா ஜ்ஞாநமே வடிவானவர் என்று முன் பக்ஷத்தில் சொல்லப்பட்டதை இவர்கள் ஏற்கவில்லை-ஆத்மா குடம் மேஜை புத்தகம் போன்ற ஒரு பொருள் தான்,அதாவது ஜடமான பொருள் தான், ஜ்ஞாந வடிவானவர் அல்ல என்கிறார்கள்.

இந்த ஸந்தர்பத்தில் ஜ்ஞாநம் என்றால் என்ன என்று பார்ப்போம். ஜ்ஞாநம் என்ற பொருளுக்கு இலக்கணமே-’ஸ்வயம் ப்ரகாஸத்வம்’ அதாவது ’தானாகத் தோற்றுவது – அறியப்படுவது’ என்ற பண்பு தான். உலகத்தில் குடம் மேஜை முதலான பொருள்கள் அறியப் படுவதற்கு அவை மட்டும் இருந்தால் போதாது, வெளிச்சம் வேண்டும், கண் வேண்டும், நமக்கு அறிவு வேண்டும்; இப்படி மற்ற பொருள்களின் உதவியால் அறியப்படும் பொருள்களை ஜடம் என்பார்கள். இவை அஸ்வயம் ப்ரகாஸம் -அதாவது தானாகத் தோற்றாத பொருள்கள்-ஆனால் ஜ்ஞாநம் என்பது அப்படி யல்ல, தான் இருந்தாலே தானாகத் தோற்றிவிடும், ஜ்ஞாநத்தை அறிவதற்கு வேறொரு ஜ்ஞாநம் கூடத் தேவை யில்லை – தானே அறியப் படுகிறது. எனவே அதை அஜடம் என்றும்ஸ்வயம் ப்ரகாஸம் என்று கூறுவார்கள். ந்யாய மதத்தவர்கள் சொல்வது ஆத்மா குடம் முதலானவற்றைப் போல் ஜடமான பொருள் தான் என்று.

அதே போல், முதல் பக்ஷத்தில் ஏற்கப்படாத ஒன்றை இவர்கள் ஏற்கிறார்கள் – ஆத்மா அறிவாளி (ஜ்ஞாதா) தான், அவருக்கு அறிவு (ஜ்ஞாநம்) என்ற பண்பு உள்ளது, ஆனால் அது இயற்கை யானதோ நிரந்தரமானதோ அல்ல, அவ்வப்போது செயற்கையாக வரக் கூடியது என்கிறார்கள். மோக்ஷம் அடையும் பொழுது ஜ்ஞாநம் முழுமையாக இல்லாமல் போய்விடும், எனவே ஆத்மா முழுமையாக ஒரு கல்லைப் போல் ஆவதே மோக்ஷம் என்கிறார்கள்.

இதற்கு இவர்கள் கூறும் யுக்திகணளப் பார்ப்போம் –முதலில், ஜீவாத்மா உலகெங்கும் வ்யாபித்து அதாவது நீக்கமற நிறைந்திருக்கிறார் என்று ஏற்க வேண்டும். ஏனென்றால்,ஒரு ஜீவாத்மா பயன்படுத்தப் போகும் பொருள்கள் உலகில் வெவ்வேறு இடங்களில் உண்டாகின்றன. அவற்றின்
உண்டாக்கத்துக்கு அந்த ஜீவாத்மாவின் பாபமும் புண்யமும் காரணம் என்று கண்டிப்பாக ஏற்க வேண்டும். (ஸர்வத்ர கார்ய உத்பத்யதே -பொருள்கள் உண்டாவதற்கு ஆத்மாவின் கர்மங்கள் காரணம் –
)ஆனால் பாப புண்யங்களை உடைய ஆத்மா ஓரிடத்தில் இருந்தால், வேறிடத்தில் உண்டாகும் பொருளுக்கு எப்படி காரணமாக முடியும்? எனவே ஆத்மா எங்கும் வ்யாபித்து இருக்கிறார் என்று ஏற்க வேண்டும்.

இப்படி வ்யாபித்திருக்கும் ஆத்மாவை ’ஜ்ஞாநமே வடிவானவர்’ என்று சொன்னாலோ ’இயற்கை யாகவே ஜ்ஞாநம் என்ற நிரந்தரமான பண்பை உடையவர்’ என்று சொன்னாலே கீழ்க் கண்ட குற்றங்கள் ஏற்படும் –
1-(ஸர்வத்ர உபலப்த பிரஸங்க)உலகெங்கும் இருக்கும் பொருள்களை எல்லாம் நாம் எப்போதும் அறிய முடிய வேண்டும். அப்படி ஏற்பட வில்லை
2-பொருள்களை அறிவதற்கு புலன்களின் தேவையே இல்லாமல் போய் விடும்.
3-ஆழ்ந்த உறக்கத்திலும் கூட ஆத்மாவுக்கு அறிவு ஏற்பட வேண்டும், ஆனால் அப்படி நாம் கண்டதில்லை

தங்கள் பக்ஷத்துக்குச் சான்றாக இவர்கள் காட்டும் வேத வாக்யங்கள் –
1-நாஹ க₂ல்வயம் ஸம்ப்ரதி ஆத்மானம் ஜானாதி-அயம் அஹம் அஸ்மி இதி, நோ ஏவ இமாநி பூதாநி–என்ற வாக்கியத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது இந்த ஜீவாத்மா தன்னையும் அறிவதில்லை , மற்றப் பொருள்களையும் அறிவதில்லை என்று கூறப் படுகிற படியால் உறக்கத்தில் ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் எதுவும் இல்லை என்று தெரிகிறது.

(ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞா அஸ்தி) என்ற வாக்கியத்தில் ’முக்திக்குப் பின் ஜ்ஞாநம் இல்லை ’ என்று சொல்லப்படுவதால், முக்தியில் ஆத்மா கல்லைப் போல் தான் இருக்கிறார். எனவே ஜ்ஞாநம் என்பது ஆத்மாவுக்கு இயற்கையான நிரந்தரமான பண்பல்ல, செயற்கையாக அவ்வப்போது வரக்கூடியது மட்டுமே என்கிறார்கள்.

வேதாந்தம் கூறும் ஸித்தாந்தம்
இந்த இரண்டு பூர்வ பக்ஷங்களையும் தகர்த்து, வேதாந்தம் கூறும் ஆத்மாவின் உண்மையான தன்மையை வேத வ்யாஸர் இந்த அதிகரணத்தில் காட்டுகிறார். முதலில் ஸித்தாந்தம் என்ன என்று பார்ப்போம், பிறகு ஸூத்ரங்களின் பொருளைப் பார்க்கலாம்.(இதில் 14 ஸூத்ரங்கள் உள்ளன )

உபநிஷத்துக்கள் கூறும் பக்ஷம் – ஜ்ஞாநமே வடிவான ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் என்ற இயற்கையான பண்பும் உள்ளது-உபநிஷத்துக்களை ஆராய்ந்தால், முன் சொன்ன இரண்டு பக்ஷங்களிலிருந்து வேறுபட்ட ஒரு பக்ஷம் சொல்லப்படுகிறது.-முதல் பக்ஷத்தில் சொன்னது போல் ஆத்மா ஜ்ஞானமே வடிவானவர் என்பதை நாமும் ஏற்கிறோம். எனவே ந்யாய மதத்தவர்கள் சொல்வது போல் ஆத்மா குடம் போல் ஜடமானவர் அல்ல, ஸ்வயம் ப்ரகாஸமான ஒரு பொருள் தான் என்றுnஆகிறது. ஆனால் முதல் பக்ஷத்தில் ஆத்மா அறிவாளி அல்ல, ஆத்மாவுக்கு அறிவு என்ற பண்பு கிடையாது என்றார்கள்,
அதை நாம் ஏற்க வில்லை . ஆத்மா ஜ்ஞானமே வடிவானவர், அதோடு கூட அவருக்கு ஜ்ஞாநம் என்ற பண்பும் உள்ளது என்று கூறுகிறோம். ஜ்ஞாந வடிவான ஆத்மாவுக்கு த₄ர்மி ஜ்ஞாநம் அதாவது பண்பாளனான ஜ்ஞாநம் என்று பெயர். ஆத்மாவிடம் இருக்கும் ஜ்ஞாநத்துக்கு த₄ர்ம ஜ்ஞாநம் – த₄ர்மபூ₄த ஜ்ஞாநம் – பண்பான ஜ்ஞாநம் என்று பெயர்.

ஒரு விளக்கு எரியும் பொழுது அதில் ஜ்வாலை என்ற ஒரு பொருள் உள்ளது. அது நெருப்பே வடிவானது. ஆனால் அது ஓரிடத்தில் மட்டும் தான் இருக்கும். அதற்கு மேல், அந்த ஜ்வாலையில் பண்பாக, அந்த ஜ்வாலையையே அண்டி இருக்கும் ’ஒளி’ – ’ப்ரபா₄’ என்ற ஒரு பொருள் உள்ளது. அது பல இடங்களுக்குப் பரவுகிறது. அதுவும் நெருப்பால் ஆனது தான். எப்படி தேஜஸ்ஸால் (நெருப்பால் ) ஆக்கப்பட்ட ஜ்வாலைக்கு நெருப்பால் ஆக்கப்பட்ட ஒளி என்பது பண்பாக இருக்கிறதோ , அதே போல் ஜ்ஞாநமே வடிவான ஜீவாத்மாவுக்கும் பண்பாக வேறொரு ஜ்ஞாநம் இருக்கிறது.

ஜீவாத்மா ’நான்’, ’நான்’ என்று தோற்றுவதெல்லாம் த₄ர்மி ஜ்ஞாநத்தின் தோற்றம். தன்னைத் தவிர்ந்த மற்ற பொருள்களை யெல்லாம் அறிவது தன்னுடைய த₄ர்ம ஜ்ஞாநத்தைக் கொண்டு தான். இந்த ஜ்ஞாநம் என்பது ஆத்மாவுக்கு இயற்கையானது, என்று ஆத்மாவோடு நிரந்தரமாக இருப்பது, உறக்கத்திலும் சரி மோக்ஷத்திலும் சரி இது ஒரு நாளும் ஆத்மாவை விட்டுச் செல்லாது, மோக்ஷத்தில் ஜ்ஞாநம் முழுமையாக மலர்கிறது என்பதே வேதாந்தத்தின் ஸித்தாந்தம்

2-3-4-ஜ்ஞாதி₄கரணம்-ஜீவாத்மா அறிவுடையவரே -ஜீவாத்மா இயற்க்கையாக அறிவுடையவரே – ஸித்தாந்தம் – முன் சொல்லப்பட்ட இரண்டு பூர்வ பக்ஷங்களையும் கண்டித்து வேதாந்தம் கூறும் ஸித்தாந்தத்தை வேத வ்யாஸர் இந்த அதிகரணத்தில் 14 ஸூத்ரங்களால் காட்டுகிறார்.

1– ஜ்ஞ: அத எவ – “(ஜீவாத்மா) அறிவுடையவர் தான், அதனாலேயே ”
ஜ்ஞ:என்றால் அறிபவர் -அறிவாளி-ஜ்ஞாதா என்று பொருள். (ஸர்வஞ்ஞன் -அனைத்துக்கும் அறிபவர் போல் )ஜீவாத்மா அறிவாளி தான் என்கிறார் வ்யாஸர். இத்தால், ஜீவாத்மா அறிவு மட்டுமே , அறிவாளி அல்ல என்ற ஸாங்க்யர்களின் மதத்தை மறுக்கிறார்.
அத ஏவ’ என்றால் அதனாலாயே -அந்தக் காரணத்தாலேயே என்று பொருள். முன் அதிகரணத்தில் ஆத்மா நித்யமானவர் என்று நிரூபிக்க ஸ்ருதி என்ற வேதத்தையே காரணமாகக் கூறி யிருந்தார் வ்யாஸர் – “நாத்மா ஸ்ருதே :” என்று. ஆகவே , ஸ்ருதி (வேதம்) என்ற அதே காரணத்தாலேயே ஜீவாத்மா அறிவுடையவர் என்றும் தெரிகிறது என்று ஸூத்ரத்தின் பொருள்.

வேதத்தில் பல இடங்களில் ஆத்மா அறிவுடையவர் என்று கூறப்படுகிறது –
அத₂ யோ வேத₃ ஜிக்₄ராணீதி ஸ ஆத்மா – “எவனொருவன் ’நான் முகர்கிறேன்’ என்று அறிகிறானோ அவன் தான் ஆத்மா
ஸத்ய ஸங்கல்ப: – “முக்தனான ஜீவாத்மா நினைப்பதெல்லாம் நடக்கிறது”
ய: அயம் விஜ்ஞாந மய: ப்ராணேஷு ஹ்ருதி₃ அந்தர் ஜ்யோதி: புருஷ: -“ஹ்ருதயத்தில் மூச்சுக் காற்றோடு இருக்கும் ஜீவாத்மா தான் ஜ்ஞாநமே வடிவானவர், ஜ்ஞாநத்தை உடையவரும் கூட”

ஞானாத்யேவ அயம் புருஷ போன்ற ஸ்ருதி வாக்கியங்களும் உண்டு

ஆத்மா மிக நுண்ணியவர் (அணு) ஆத்மா விபு₄வாக எங்கும் வ்யாபித்திருப்பதால், அவருக்கு ஜ்ஞாநம் இயற்கையான பண்பாக இருந்தால் அவர் எப்போதும் அனைத்தையும் அறிய வேண்டுமே ? அப்படி உலகில் காண்பதில்லை -.எனவே ஆத்மாவுக்கு இயற்கையாக ஜ்ஞாநம் கிடையாது – என்று பூர்வ பஷி கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதில் சொல்கிறார் வ்யாஸர் –
2–உத் க்ராந்தி ् க₃தி ஆக₃தீநாம் –
“புறப்படுதல், செல்லுதல் மற்றும் வருதல் (சொல்லப் படுவதால்)”
ஆத்மா எப்போதும் அனைத்தையும் அறியாததற்குக் காரணம் அவருக்கு இயற்கையாக ஜ்ஞாநம் இல்லாமை அல்ல.-அவர் விபு₄வாக இல்லாத படியால் தால். வேதத்தில் உத்க்ராந்தி (ஆத்மா உடலில் இருந்து புறப்படுதல்) க₃தி (ஆத்மா ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்குச் செல்லுதல்) மற்றும் ஆக₃தி (திரும்பவும் இவ் வுலகுக்கு வருதல்) சொல்லப்படுவதால் ஆத்மா சிறிய அளவுடையவர் தான் என்று நாம் அறியலாம். எங்கும் நிறைந்திருக்கும் பொருள் எப்படி ஓரிடத்திலிருந்து புறப்படவோ வேறிடம் செல்லவோ முடியும்?
உத்க்ராந்தி ஏஷ ஆத்மா நிஷ்க்ராமதி சக்ஷுஷோ வா மூர்த்₄நோ வா. –“இந்த ஆத்மா கண் மூலமோ தலை மூலமோ வேறொன்றாலோ உடலிலிருந்து புறப்படுகிறார்”
க₃தியே அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ர மஸமேவ ரத க₃ச்ச₂ந்தி -“யாரெல்லாம் இவ் வுலகத்திலிருந்து புறப்படுகிறார்களோ அவர்கள் சந்த்ரனையே அடைகிறார்கள்”
ஆக₃தி – தஸ்மாத் லோகாத் புந: ஏதி அஸ்மை லோகாய கர்மணே – “அவ் வுலகத்திலிருந்து திரும்பவும் இவ் வுலகத்துக்கு வருகிறார்கள், வினைப் பயன்கணை அநுபவிக்க”

3-ஸ்வாத்மநா ச உத்தரயோ : – “கடைசி இரண்டையும் தானாகவே தான் (செய்கிறார்)”
ஆஷேபம் – ஆத்மா உடலை விடுவது என்பது செல்வதல்ல, இருக்கும் இடத்திலேயே தொடர்பு அறுவது தான்
பதில் – அவ்வாறு இருந்தாலும் க₃தி (செல்லுதல்) ஆக₃தி (வருதல்) என்ற அடுத்த இரண்டையும் ஆத்மா தானாகவே தான் செய்ய வேண்டும், எனவே ஆத்மா சிறியவர் தான். நீக்கமற நிறைந்தவராக இருக்க முடியாது.

ஆத்மா மிக நுண்ணியவர் (அணு)
4- ந् அணு: அதச்ச்₂ருதே : இதி சேத் ந இதராதி₄காராத்
ந அணு:
– ஜீவாத்மா அணுவானவர் அல்ல
அதச்ச்₂ருதே : – அதற்கு நேர் எதிரான மஹத்த்வம் (பெரிய அளவு) அவருக்குச் சொல்லப்படுகிறபடியால்
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறானது
இதராதி₄காராத் – வேறொருத்தரைப் பற்றின பேச்சுக்கு நடுவில் இருப்பதால்.

பூர்வ பக்ஷியின் கேள்வி – உபநிஷத்தில் “
ய: அயம் விஜ்ஞாந மய: ப்ராணேஷு ஹ்ருதி₃ அந்தர்ஜ்யோதி: புருஷ:
” என்று ஹ்ருதயத்தில் இருக்கும் ஜீவாத்மாவைப் பற்றிப் பேசத் துவங்கி விட்டு, (ஸ வா ஏஷ மஹாந் அஜ ஆத்மா) அதாவது “இந்த ஆத்மா பிறப்பில்லாதவரும் பெரியவரும் ஆவார்” என்று கூறப்படுகிறது. மஹாந் என்ற சொல்லுக்கு பெரிய அளவுடையவர் என்று பொருள். எனவே ஜீவாத்மா அணுவாக இருக்க முடியாது.
பதில் – ஜீவாத்மாவைப் பற்றிப் பேசி வரும் போது இந்த வாக்கியம் இடம் பெற வில்லை , இடையிலேயே பரமாத்மாவைப் பற்றி உபநிஷத் பேசத் துவங்கி விட்டு – “ (யஸ்ய அநுவித்த: ப்ரதிபு₃த்₃த₄: ஆத்மா) அதாவது “இந்த ஜீவாத்மாவால் உபாஸிக்கப்படுபவர் சிறந்த ஜ்ஞாநமுடைய பரமாத்மா” என்று. அதற்குப் பின்னால் தான் நீங்கள் காட்டிய வாக்கியம் உள்ளது. எனவே , அதில் மஹாந் என்று சொல்லப்படுபவர் பரமாத்மா தான், ஜீவாத்மா அல்ல.

5–ஸ்வ சப்₃த₃ உந்மாநாப்₄யாம் ச – “தன் சொல்லாலும், எடுத்து அளப்பதாலும் (ஆத்மா அணு தான்)”
ஸ்வ சப்₃த₃
: – நேரடியாகவே நுண்ணிய அளவைக் கூறும் ’
அணு’ என்ற சொல் ஜீவாத்மாணவப் பற்றிப் பயன் படுத்தப் படுகிறது உபநிஷத்தில் – (ஏஷ: அணு: ஆத்மா சேதஸா வேதி₃தவ்ய: )-அதாவது “இந்த அணுவான (நுண்ணிய) ஆத்மா மனதால் அறியப் பட வேண்டும்” என்று.
உந்மாநம் – ஒரு பொருளை அளவு கோலாக எடுத்து, அதைக் கொண்டு வேறொன்றை அளப்பது. வேதத்திலும்-(வாலாக்₃ர சத பா₄க₃ஸ்ய ததா₄ கல்பிதஸ்ய ச பா₄க₃: ஜீவஸ்ய விஞ்ஞஸ்ய:) அதாவது’ஒரு நெல் மணியின் நுனியில் நூற்றில் ஒரு பங்கில் நூற்றில் ஒரு பங்கு அளவு ஆத்மா இருப்பார்” எனப்படுகிறது –

ஓரிடத்திலிருந்து அனைத்தையும் அறிதல்
பூர்வ பக்ஷியின் கேள்வி –
ஆத்மா நுண்ணியவராக இருந்தால் உடல் முழுவதும் எப்படி உணர்ச்சி ஏற்படுகிறது? இதற்கு வேதவ்யாஸர் முதலில் வேறொருவரின் கண்ணோட்டத்தில் பதில் கூறுகிறார் அடுத்த 2 ஸூத்ரங்களால் –

6–அவிரோத சந்த₃நவத் – “முரண்பாடு இல்லை , சந்தநத்தைப் போல்”
சந்தனம் எப்படி உடலின் ஒரு பகுதியில் பூசப் பட்டாலும் உடல் முழுவதுக்கும் குளிர்ச்சி (ஆஹ்லாதம்) ஊட்டுகிறதோ , அதே போல் ஜீவாத்மாவும் உடலில் ஓரிடத்தில் மட்டும் இருந்தாலும் உடலெங்கும் ஏற்படும் வேதனையை அறிவதில் முரணில்லை –

7–அவஸ்தி₂தி வைஸேஷ்யாத் இதி சேத் ந அப்₄யுபக₃மாத், ஹ்ருதி₃ ஹி
மேற் சொன்ன பதிலில் பூர்வ பஷி கேட்கும் கேள்வியும் அதற்கு வ்யாஸரின் பதிலும் இந்த ஸூத்ரத்தில் உள்ளன.
அவஸ்தி₂தி வைஸேஷ்யாத் – “குறிப்பிட்ட (சிறப்பான) இடத்தில் இருப்பதால்” என்று பொருள். சந்தனம் உடலில் எங்கு பூசப் பட்டாலும் உடல் முழுவதுக்கும் குளிர்ச்சி ஏற்படுத்தாது. அதற்கென்று சில மர்மமான இடங்கள் உள்ளன –-நெஞ்சு, மூக்கு, கண், காது, என்பது போல். அங்கு பூசப் பட்டால் மட்டுமே உடலுக்குக் குளிர்ச்சி தரும். அதுபோல் ஆத்மாவுக்கு சிறப்பான ஸ்தா₂னம் (இருப்பிடம்) இல்லாத படியால் அவருக்கு உடல் முழுவதிலும் உணர்ச்சி வராது.
இதி சேத் ந – இவ்வாறு நீங்கள் கூறினால் அது தவறானது
அப்₄யுபக₃மாத் – ஆத்மாவுக்கும் உடலில் அதுபோல் குறிப்பிட்ட சிறப்பான இருப்பிடத்தை ஏற்கிறபடியால்
ஹ்ருதி₃ ஹி – ஹ்ருதயத்திலன்றோ (ஜீவாத்மா உணர்கிறார்)
(ஹ்ருதி₃ ஜி அயம் ஆத்மா தத்ர ஏக சதம் நாடீ₃நாம்) அதாவது உடலிலிருக்கும் 101 நாடிகளும் வந்து சேரக் கூடிய ஹ்ருதயத்திலன்றோ ஜீவாத்மா இருக்கிறார்” என்று வேதம் கூறுகிறது. எனவே நாடிகள் அனைத்தும் வந்து சேரக் கூடிய ஹ்ருதயம் என்கிற சிறப்பான இடத்தில் ஜீவாத்மா உள்ள படியால் அவரும் உடலெங்கும் ஏற்படும் இன்ப துன்பங்களை உணர்வதில் எந்த முரண்பாடும் இல்லை-

ஓரிடத்திலிருந்து அனைத்தையும் அறிதல்
-இவ்வாறு பூர்வபஷி எழுப்பிய கேள்விக்கு இரண்டு ஸூத்ரங்கைளால் வேறொருவர் கண்ணோட்டத்தில் பதிலளித்து விட்ட அநந்தரம் இனி தன்னுடைய பதிலைக் கூறுகிறார் வ்யாஸர் –

8– கு₃ணாத் வா ஆலோகவத் – “அல்லது (தன்னுடைய) குணத்தின் மூலம், ஒளியைப் போல்”
ஜீவாத்மா உடலில் ஓரிடத்தில் இருந்தாலும், உடலெங்கும் உணர்ச்சி ஏற்படுவதில் எந்த முரண்பாடும் இல்லை -ஏனென்றால், அந்த ஜீவாத்மா தன்னுடைய தனித் தன்மையான ஜ்ஞாநம் (அறிவு) என்ற குணத்தின் மூலம் இந்த உடல் முழுவதிலும் வ்யாபித்து (நிறைந்து) இருக்கிறார்.
ஒளியைப்போல் – தீபம் (சுடர் -ஜ்வாலை ) என்பது ஓரிடத்தில் இருந்தாலும், அதனுணடய ஒளி (ப்ரபா₄) என்பது அறை முழுவதும் நிறைந்திருப்பது போல், ஜீவாத்மாவும் தன் ஜ்ஞாநத்தால் உடலை வ்யாபித்து இருக்கிறார்-(ஸுவ்பரி ஆபாத விருத்திக்கு -50 சரீரங்களை எடுத்துக் கொண்டு ஞானத்தைக் கொண்டு இயக்கிய வ்ருத்தாந்தம் உண்டே-).
பூர்வ பக்ஷியின் கேள்வி – ஜ்ஞாநம் என்பது ஆத்மாவின் பண்பு என்று எப்படி அறிகிறீரர்கள்? ஜ்ஞாநமே தானே ஆத்மா?
வ்யாஸரின் பதில் – அடுத்த இரண்டு ஸூத்ரங்களால்

9– வ்யதிரேக: க₃ந்த₄வத் ததா₂ ச த₃ர்ஸயதி –“(ஜ்ஞாநத்துக்கு ஆத்மாவிடமிருந்து) வேறுபாடு மணத்தைப் போல், (வேதம்) அவ்வாறு காட்டுகிறது”
உலகில் “மணமுடைய புஷ்பம்” என்று அறிவதால், புஷ்பம் என்கிற பொருளுக்கு மணம் என்பது குணம் (பண்பு) ஆகிறது. அதனால் மணம் என்பது புஷ்பத்தைக் காட்டிலும் வேறுபட்டது என்று தெரிகிறது. அதே போல் வேதமும்- (ஜாநாத் யேவாயம் புருஷ:) அதாவது இந்த ஆத்மா அறிவுடையவரே ” என்று கூறுவதால், ஜ்ஞாநம் என்பது ஆத்மாவின் பண்பாகிறது, எனவே ஆத்மாவைக் காட்டிலும் ஜ்ஞாநம் வேறு என்று தெரிகிறது.

10-ப்ருத₂க் உபதே₃சாத் – “தனியானது என்கிற உபதேசத்தால் ”
வேதத்தில் (ந விஜ்ஞாது: விஜ்ஞாதே : விபரிலோபோ வித்₃யதே ) அதாவது “ஆத்மாவினுடைய ஜ்ஞாநத்துக்கு அழிவு இல்லை ” என்று தெளிவாக ஆத்மா வேறு ஜ்ஞாநம் வேறு என்று உள்ளது –

ஆத்மாவை எப்படி ஜ்ஞாநம் என்று அழைக்கலாம்?–பூர்வ பக்ஷியின் கேள்வி – ஜ்ஞாநம் ஆத்மாவின் பண்பு தான் என்றால், அந்தர்யாமி ப்ராஹ்மணத்திலும் தைத்திரீயத்திலும் ஏன் ஜீவாத்மா ’ஜ்ஞாநம்’ என்று குறிப்பிடப்படுகிறார்? ஜ்ஞாநமுடையவர் என்று தானே சொல்ல வேண்டும்?
பதில் –
11-தத் ₃கு₃ண ஸாரத்வாத் து தத்₃வ்யபதே ₃ச : ப்ராஜ்ஞவத்
தத்₃கு₃ண ஸாரத்வாத் து –
ஜ்ஞாநம் என்ற குணத்தையே ஸாரமாகக் (முக்கியமான அடையாளமாகக்) கொண்டபடியால்
தத்₃வ்யபதே ₃ச : – ஜீவாத்மா ’ஜ்ஞாநம்’ என்றே அழைக்கப்படுகிறார்
ப்ராஜ்ஞவத் – பரமாத்மாவைப் போல
ஒரு பொருளினுடைய ஸாரமான (ப்ரதானமான) பண்பு எதுவோ , அப் பண்பைக் குறிக்கும் சொல்லைக் கொண்டு அந்தப் பொருளையும் குறிக்கலாம் என்று உலகில் ஒரு வழக்கமுண்டு. நம்மாழ்வாரை ’க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வம்’அதாவது ’க்ருஷ்ண பக்தி’ என்றே அழைக்கிறோம், அவருக்கு க்ருஷ்ண பக்தியை முக்கியமான பண்பான படியால்.

(நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் தன்னைத் தாழ்ந்தவன் என்று கொள்ளாமல் -புன்மையாகக் கருத்துவர் -தாழ்ச்சி யாகவே-கருதுவர் என்கிறார்)

அதுபோல் ஜீவாத்மாவின் ப்ரதானமான குணம் ஜ்ஞாநம். அதனால் ஆத்மாவையே ஜ்ஞாநம் என்று சொல்லலாம். இதுபோல் பரமாத்மாவுக்கும் உள்ளது. பரமாத்மாவின் ஸாரமான குணம் எல்லை யற்ற ஆநந்தம்-(ஸ ஏகோ ப்₃ரஹ்மண ஆநந்த₃: ) முதலான இடங்களில் ஆநந்தம் பரமாத்மாவின் பண்பு எனபட்டிருந்தாலும், (ஆநந்தோ ₃ ப்₃ரஹ்மேதி வ்யஜாநாத்) முதலான இடங்களின் பரமாத்மாவை ஆநந்தம் என்றே குறிப்பிடப்படுகிறது வேதம். இதுவும் இதே வழக்கத்தை அடி யொற்றித்தான்.
12-யாவதா ₃த்ம பா₄வித்வாத் ச ந தோ₃ஷ: தத்₃த₃ர்ஸநாத்
ஜ்ஞாநத்தைக் குறிக்கும் சொல் ஆத்மாவைக் குறிப்பதில் எந்த தோஷமும் இல்லை , ஏனென்றால் ஜ்ஞாநம் என்பது ஆத்மாவின் இயற்கையான நிரந்தரமான பண்பு, ஆத்மா உள்ள வரை அதுவும் இருக்கும்.
இங்கு ’ ச ’ என்ற சொல்லால் ஆத்மாவை ஜ்ஞாநம் என்று அழைப்பதற்கு வேறொரு காரணமும் கூறப்படுகிறது – நம் மதத்தில் அறிவாளியான ஆத்மா தானும் ஜ்ஞாநமே வடிவமானவர் என்பதால் எந்த தோஷமும் இல்லை – என்று.

(ஸ்வரூப நிரூபக தர்மம் என்பதால் ஞானம் என்றே சொல்லலாம் –ச -அதனாலும் தோஷம் இல்லை என்றது மறைமுகமாக வேதாந்தப்படி ஞானமயமாயும் ஞானத்துடனும் இருப்பதால் -)

உறங்கும் போது ஏன் ஜ்ஞாநம் தோன்றவில்லை ?
பூர்வ பக்ஷியின் கேள்வி –
ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் இயற்கையாக என்றுமே இருக்கும் பண்பு என்றால் ஆழ்ந்த உறக்கத்தில் அது வெளிப்பட வேண்டுமே ? அப்படி காணப்படவில்லை . ஆக அப்போது ஆத்மாவுக்கு ஜ்ஞாநமே இல்லை – பதில் –
13–பும்ஸ்த்வாதி ₃வத் து அஸ்ய ஸத: அபி₄வ்யக்தி யோகா₃த்
அஸ்ய-
– இந்த ஜ்ஞாநத்துக்கு
ஸத: எப்போதும் இருப்பினும்
அபி₄வ்யக்தி யோகா₃த் –ஒரு காலத்தில் வெளிப்பாடு என்று ஏற்பட முடியுமான படியால்
பும்ஸ்த்வாதி₃வத் து – ஆண்மை முதலானவற்றைப் போல
ஒரு குழந்தை பிறக்கும் போதே ஆண் தன்மை அல்லது பெண் தன்மை யோடும், அதற்கான உருப்புகளோடும் தான் பிறக்கிறது.(சரீரம் ஏழு தாதுக்களுடன் பிறக்கிறது – ) ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை அப் பண்புகள் வெளிப்படுவதில்லை -, உருப்புகள் இயங்குவதில்லை -. அதற்காக அது வரை அந்தக் குழந்தைக்கு ஆண் தன்மையோ பெண்தன்மையோ இல்லவே இல்லை என்று சொல்லி விட முடியாது. அதே போல் தான் ஜ்ஞாநம் எப்போதுமே ஆத்வாவிடம் இருந்தாலும், விழித்திருக்கும் போது மட்டும் வெளிப்படுகிறது -தோற்றமளிக்கிறது என்று கொள்வதே பொருத்தமானது. ஜ்ஞாநமே இல்லை என்னக் கூடாது.
(ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞாஸ்தி) என்னும் வாக்யமும், முக்திக்குப் பின் ஜ்ஞாநமே இல்லை என்று சொல்லவில்லை – உடலையும் ஆத்மாவையும் ஒன்றாக நினைக்கும் மயக்கமில்லை என்று தான் கூறுகிறது.

14-நித்யோ பலப்₃தி₄ப்ரஸங்க₃: அந்ய தர நியமோ வா அந்யதா₂-
இப்படி வேதாந்தம் சொன்ன பக்ஷத்தை ஏற்காமல் எங்கும் நிறைந்த ஆத்மா ஜ்ஞாநம் மட்டுமே என்று கொண்டால் எப்போதுமே அறிவும் அறிவின்மையும் சேர்ந்தே இருக்க வேண்டும், அல்லது எப்போதுமே அறிவு மட்டும் தான் இருக்க முடியும், அல்லது எப்போதுமே அறிவின்மை தான் இருக்க முடியும். எனவே அது பொருந்தாது.

இவ்வாறு இவ்வதிகரணத்தில் ஜ்ஞாநமே வடிவான ஆத்மா ஜ்ஞாநத்தை உடையவரும் கூட என்று நிரூபிக்கப்பட்டது

2-3-5-கர்த்ரதி₄கரணம் –ஜீவாத்மா தான் செயல் படுபவர் -கர்த்ரதி₄கரணம்–ஸங்கதி – முன் அதிகரணத்தில் ஆத்மா ஜ்ஞாந முடையவர் தான் என்று நிரூபிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த அதிகரணத்தில் அந்த ஆத்மா ’கர்த்தா’ அதாவது செயல்படுபவரா? அல்லவா? என்கிற ஆராய்ச்சி செய்யப்படுகிறது.-
பூர்வ பக்ஷியின் வாதம்-– ஆத்மா ’கர்த்தா’ அல்ல, அதாவது அவர் எந்தச் செயல்களையும் செய்வதில்லை . ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களை உடைய ப்ரக்ருதி- ப்ரதானம் என்ற அசேதனப் பொருள் தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது. ஆத்மாவைப் பற்றிப் போதிக்கும் பல ஸாஸ்த்ரங்கள் இவ்வாறே கூறுகின்றன-

கடோபநிஷத்தில் -ஹந்தா சேத் மன்யதே ஹந்தும் ஹத: சேத் மந்யதே ஹதம்| உபௌ₄தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹந்யதே || “ஒருஜீவாத்மா தன்னைக் கொல்பவனாக நினைத்தால் அவன் தன்னை உணர வில்லை என்று பொருள். ஜீவாத்மா கொல்வதே இல்லை ”

பகவத்கீதையில்- ப்ரக்ருதே : க்ரியமாணாநி கு₃ணை : கர்மாணி ஸர்வச : | அஹங்கார விமூடா₄த்மா கர்த்தா அஹம் இதி மந்யதே || “ப்ரக்ருதியின் குணங்களான ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்பவை தான் அனைத்துச் செயல்களையும் செய்கின்றன. உடலும் தானும் ஒன்று என்னும் மயக்கத்தில் இருப்பவன் தான் தன்னையே கர்த்தா என்று தவறாக நினைத்துக் கொள்கிறான்.
ஆக இப்படி பல இடங்களில் ஆத்மா எந்தச் செயலையும் செய்வதில்லை என்று சொல்லப்பட்டுள்ளதால் ஆத்மா கர்த்தா அல்ல, ப்ரக்ருதி தான் செயல் படுகிறது என்று பூர்வ பஷி கூறுகிறார்.

வேதம் வீணாகக் கூடாது (இந்த பூர்வ பக்ஷத்தை 7 ஸூத்ரங்களால் கண்டித்து உபநிஷத் சொல்வதை நிரூபிக்கிறார் வ்யாஸர்)1–கர்த்தா ஸாஸ்த்ரார்த்த₂ வத்த்வாத்–“(ஜீவாத்மா தான்) செய்பவர்; ஸாஸ்த்ரம் பயனுள்ளதானபடியால்” • வேதங்களில் உள்ள கட்டளைகள் எல்லாம்-

(ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க₃காம: யஜேத) அதாவது “ஸ்வர்கத்தை ஆசைப் படுபவன்(அதை அடைவதற்காக) ஜ்யோதிஷ்டோமம் என்னும் யாகத்தைச் செய்யக் கடவன்” என்பது போல் தான் உள்ளன. எனவே , யார் பயனை அடையப் போகிறாரோ (போ₄க்தா) அவர் தான் செயல்களைச் செய்பவர் (கர்த்தா) என்று தெரிகிறது. எனவே , இன்ப துன்பங்களை அநுபவிக்கக் கூடியஜீவாத்மா தான் கர்த்தாவாக(செயல் படுபவராக) இருக்க முடியும், ப்ரக்ருதி அல்ல.
மேலும், இந்த ஸூத்ரத்தில் வேதத்தை ’ஸாஸ்த்ரம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் வ்யாஸர்.’ஸாஸ்த்ரம்’ என்ற சொல்லுக்கே ’ஸாஸநம் செய்வது – ஆணை யிடக் கூடியது-செயல் பட வைப்பது’ என்று பொருள். அதாவது, செயல் படாமல் இருப்பவனை செயல் பட வைக்கும் நூல் தான் ஸாஸ்த்ரம். ஒரு நூலானது அறிவை ஏற்படுத்துவதன் மூலம் தான் ஒருவனை செயல் பட வைக்க முடியும். எனவே , அறிவுடையவனான(ஜ்ஞாதா) ஜீவாத்மா தான் செயல்படுபவனாக(கர்த்தா) இருக்க முடியும், ப்ரக்ருதி அல்ல. –இதை ஏற்காமல், அறிவும் இல்லாத இன்ப துன்பங்களையும் அநுபவிக்காத ப்ரக்ருதி தான் செயல்படுகிறது என்றால், அப்போது ஸாஸ்த்ரத்தால் அந்த செயல்பாடு ஏற்பட முடியாத படியால் ஸாஸ்த்ரம் அனைத்தும் வீணாகி விடும்

(ஞாத்ருத்வம் கர்த்ருத்வம் போக்த்ருத்வம் -அறிவு செயல்பாடு அனுபவம் -மூன்றும் யாருக்கு யாரால் என்பதை சரியான அறிய வேண்டும்-ஆத்மா நித்யம் என்பதைக் காட்டவே கீழ்ச் சொன்ன வேத வாக்கியங்களும் கீதா ஸ்ம்ருதியும் – கொல்லவும் இல்லை கொலை பண்ணவும் இல்லை என்கிறது -கொல்லப்படுபவன் கொல்கிறேன் என்றும் நினைப்பவன் முட்டாள் என்கிறது -பிரக்ருதியுடன் தொடர்பால் வந்தவை செயற்கை -இயற்கையில் சுக வடிவம் -இங்கு குணங்களால் செய்விக்கப்படுகிறாய் என்பதைக் காட்டவே கீதா வசனம் –உடல் ஜீவாத்மா இந்திரியங்கள் மூச்சுக் காற்று பரமாத்மா ஐவரும் சேர்ந்து தான் செயல்களைச் செய்கிறார்கள் என்றும் கீதையில் உண்டே)

2–உபாதா₃நாத் விஹாரோ தே₃ஸாத் ச – “கைக் கொள்வதும் திரிவதும் சொல்லப்படுவதாலும்”
வேதத்தில்(ஏவமே வைஷ ஏதாந் ப்ராணாந் க்₃ருஹீத்வா ஸ்வே ஸரீரே யதா₂காமம் பரிவர்ததே )அதாவது “இந்த ஜீவாத்மா ஐந்து வகையான ப்ராண வாயுக்களையும் எடுத்துக் கொண்டு தன் ஆணைப்படி உடலுக்குள் திரிகிறார்” என்று சொல்லப் படுகிறது. இதில் தெளிவாக ப்ராணங்களை எடுத்தல்- கைக் கொள்ளுதல் என்ற செயலையும் திரிதல் என்ற செயலையும் செய்பவர் ஆத்மாவே என்று கூறப்படுள்ள படியாலும் எல்லாச் செயல்களிலுமே ஜீவாத்மா தான் கர்த்தாவாக இருக்க வேண்டும், ப்ரக்ருதி அல்ல.

ஸித்தாந்தியின் வாதங்கள் -தொடர்கிறது –
3) வ்யபதே ₃சாத் ச க்ரியாயாம், ந சேத் நிர்தே₃ச விபர்ய்ய:
க்ரியாயாம்
– எல்லாச் செயல்களிலும் வ்யபதே ₃சாத் (ஜீவாத்மாவையே செய்பவராக வேதம்) குறிப்பிடுகிற படியாலும்(அவரே கர்த்தா)
தைத்திரீய உபநிஷத்தில் (விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே கர்மாணி தநுதே அபி ச ) அதாவது “விஜ்ஞாநம் எனப்படும் ஜீவாத்மா யாகம் முதலான வைதிகச் செயல்களையும் ஸாதாரண உலகச் செயல்களையும் செய்கிறார்” என்று தெளிவாக ஜீவாத்மாவே கர்த்தா என்று சொல்லப்பட்டுள்ளது என்று காட்டுகிறார் வ்யாஸர்.
ந சேத்–(இவ்வாறு) இல்லை யென்றால்-(அதாவது இந்த வேத வாக்யத்தில் விஜ்ஞாநம் என்று சொல்லப்படுவது ஜீவாத்மாஅல்ல, புத்₃தி₄ எனப்படும் மனது தான்,-அது தான் செயல்களை யெல்லாம் செய்கிறது என்றால்)
நிர்தே ₃ச விபர்ய்ய:-குறிப்பிடுவதில் மாற்றம் இருந்திருக்க வேண்டும்–அதாவது, மனது என்பது கருவியான படியால் “விஜ்ஞாநத்தால் யாகம் செய்யப் படுகிறது” என்று சொல்லி யிருக்க வேண்டும், ஆனால் “விஜ்ஞாநம் யாகம் செய்கிறது” என்றே சொல்லப் பட்டுள்ளது. எனவே இங்கு விஜ்ஞாநம் என்பது மனது அல்ல, ஜீவாத்மாவே ; அவரே கர்த்தா.

4–உபலப்₃தி₄வத் அநியம:- “அறிவைப் போல் வரை யறை இல்லாமை ஏற்பட்டு விடும்”
முன் அதிகரணத்தில் “நித்யோபலப்₃த்₄யநுபலப்₃தி₄ப்ரஸங்க₃:…” என்ற கடைசி ஸூத்ரத்தில் இவ்வாறு கூறப்பட்டது– ஜீவாத்மா எங்கும் உள்ளார், அவர் ஜ்ஞாநமே வடிவமானவர் என்று பூர்வபக்ஷிகள் சொல்வது உண்மை யானால் ஒன்று எப்போதுமே நமக்கு அறிவு ஏற்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், அல்லது எப்போதுமே ஏற்படாமலேயே இருக்க வேண்டும். ஒரு ஸமயத்தில் அறிவு, ஒரு ஸமயத்தில் அறிவின்மை என்கிற வரை யறை பொருந்தாது”.
அதே போல் ப்ரக்ருதி தான் செயல்படுகிறது என்றால், அது எல்லா ஜீவாத்மாக்களுக்கும் பொதுவானபடியால், ப்ரக்ருதி ஒரு செயலைச் செய்ததும் ஒரே ஸமயத்தில் எல்லா ஜீவாத்மாக்களும் அதே பயனை அடைந்து விட வேண்டும், ப்ரக்ருதி செய்யா விட்டால் எல்லாருமே பயனை அடையாமல் இருக்க வேண்டும். சிலர் அடைந்து சிலர் அடையாமலிருப்பது என்கிற நியமம்(வரை யறை ) ஏற்பட முடியாமல் போய் விடும். அதனால் ஜீவாத்மா தான் கர்த்தா.-

( ஸித்தாந்தியின் வாதங்கள் தொடர்கின்றன )
5-சக்தி விபர்யயாத்
– “(இன்ப துன்பங்களை அநுபவிக்கும்) சக்தி மாறி யிருக்க வேண்டும்”
புத்தி எனப்படும் மனது தான் செயல்படுகிறது என்றால், அப்போது அச் செயல்களின் பயனாய் ஏற்படும் இன்ப துன்பங்களையும் அந்த மனது தான் அநுபவிக்க வேண்டும். அப்படியானால் போ₄க்த்ருத்வம் (இன்ப துன்பங்களை அநுபவிக்கும் சக்தி) என்பதும் ஜீவாத்மாவிட மில்லை -மனதில் தான் உள்ளது என்று மாற்றி ஏற்க வேண்டும்.
ஆனால் உங்கள் மதத்தில்“(புருஷ: அஸ்தி போ₄க்த்ரு பா₄வாத்) அதாவது“இன்ப துன்பங்களை அனுபவிக்கும் தன்மை யிருப்பதால் தான் ஜீவாத்மா என்ற பொருளை ஏற்கிறோம்”என்று கூறுகிறீர்கள். அந்த போ₄க்த்ருத்வமும் மனதுக்குத் தான் உள்ளது என்றால், ஜீவாத்மா என்ற ஒரு பொருளே இல்லை என்றாகி விடும்.

6–ஸமாத்₄ யபா₄வாச் ச – “ஸமாதி₄ என்பதும் ஏற்ப முடியாமல் போய்விடும்”
உங்களுடைய(ஸாங்க்ய) மதத்தில் “அசேதனமான ப்ரக்ருதி வேறு, அறிவுடையவனான நான் வேறு” என்கிற த்யானம் தான் மோக்ஷத்தை அடையும் வழி ஆகும். இதற்கு ஸமாதி₄ என்று பெயர் (நிரீஸ்வர சாங்க்ய மதத்தில் ஈஸ்வரனே இல்லை -நாம் த்யானம் என்பதை பரமாத்மாவைப் பற்றியே-இது வாசி ). ப்ரக்ருதி தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது என்றால், அப்போது ஸமாதி எனும் த்யானத்தையும் ப்ரக்ருதி தான் செய்ய வேண்டும். ஆனால், ப்ரக்ருதி எப்படி “நான் ப்ரக்ருதி அல்ல” என்று த்யானிக்க முடியும்? எனவே உங்கள் மதத்தில் ஸமாதி என்பதே பொருந்தாது

பூர்வ பக்ஷியின் கேள்வி–ஜீவாத்மா தான் கர்த்தா என்றால், ஏன் எப்போதுமே செயல்பாடுகள் இருப்பதில்லை?
பதில் –7– யதா₂ ச தக்ஷா உப₄யதா₂-
“தச்சனைப் போல் இரண்டு விதமாகவும் (பொருந்தும்)”
ஒரு தச்சன், தன்னிடம் எல்லாக் கருவிகளும் இருந்தாலும், தான் சில ஸமயங்களில் வேலை செய்கிறான், சில ஸமயங்களில் ஓய்வெடுக்கிறான். அதே போல் புலன்கள் என்ற கருவிகளை உடைய ஜீவாத்மாவும் தன்னுடைய ஆணைப்படி சில ஸமயங்களில் மட்டும் செயல்படுகிறார் என்பது பொருத்தமானதே . உங்கள் மதத்தின் படி ப்ரக்ருதி செயல்படுகிறது என்றால் தான் அதற்கு அறிவு- ஆணை இல்லாத படியால் எபபோதுமே செயல்பாடு ஓயாது.

ஆக, இவ்வாறு அறிவுடையவரான ஜீவாத்மா தான் கர்த்தா (செயல்படுபவர்) என்று நிரூபித்தார் வ்யாஸர்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேத நாராயணப்பெருமாள் -ஸ்ரீ மன்னார் கோயில்-

April 10, 2026

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பழையது
மன்னார் கோவில் வேதநாராயணசுவாமி கோவில் (ராஜகோபால சுவாமி கோவில்)பெருமாள், லட்சுமண சன்னதி, குலசேகர ஆழ்வார் அவதார தலம் என 3 நிலைகளில் பிரசித்தி பெற்றது-வேதநாராயணர் மூன்று நிலைகளில் (நின்ற நிலை, அமர்ந்த நிலை மற்றும் படுத்த நிலை) ஆசி வழங்குகிறார்.-இங்கு பண்டைய தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன-அம்பாசமுத்திரத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில்.-இவ்விடம் வேதபுரி (வேத நாராயண பெருமாளின் பெயரால்) மற்றும் ராஜேந்திர விண்ணகரம் (இக்கோயிலைக் கட்டிய/புதுப்பித்த மாபெரும் சோழ மன்னன்) ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.பெரிய நம்பி வம்சாவளியைச் சேர்ந்த திரு. நரசிம்ம கோபாலன் ஆச்சார்யாவின் தனி ஒரு கை முயற்சியால், ஒரு காலத்தில் சிதிலமடைந்திருந்த கோயில் தற்போது மிகுந்த பாராட்டுக்குரிய, உண்மையிலேயே குறிப்பிடத்தக்க புனரமைப்பைக் கண்டு வருகிறது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த முயற்சிக்கு இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து இதுவரை மிகக் குறைந்த ஆதரவே கிடைத்துள்ளது.-இருப்பினும், ஸ்ரீ நரசிம்ம கோபாலன் ஆதரவின்மையால் மனம் தளர்ந்துவிடுபவர் அல்லர். விஷ்ணு பகவானின் எட்டு விருப்பமான மலர்களில் ஒன்றாகக் கருதப்படும் செண்பகப் பூக்களை விதைத்து வளர்ப்பதில் அவர் காட்டிய உறுதி, கடந்த 3-4 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பலன்களைத் தந்துள்ளது; தற்போது கோயிலின் வடக்குப் பகுதி முழுவதும் செண்பக மரங்களால் நிறைந்துள்ளது. இங்கு காணப்படும் செண்பகப் பூக்களின் எண்ணிக்கையை வேறு எந்த திவ்ய தேசத்திலும் காண முடியாது என்பதே, ஸ்ரீ நரசிம்ம கோபாலன் ஆற்றிய பேரார்வமிக்க சேவைக்குச் சான்றாகும்.-நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் விஷ்ணு பகவானைப் போற்றும் குலசேகர ஆழ்வார், செண்பகப் பூக்களை மட்டுமே குறிப்பிடுவதால், இப்பூ மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

கோலார்ந்த நெடுஞ் சார்ங்கம் கூனர்ச் சங்கம் கொலை யாழி கொடுந்தண்டு கொற்ற ஒள்வாள்
கால் ஆர்ந்த கதிக்கருடன் என்னும் வென்றிக் கடும்பரவை இவை அனைத்தும் புறஞ் சூழ் காப்ப
சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணியிர் பள்ளி கொள்ளும்
மாலோனைக் கண்டு இன்பக்கலவி எய்தி வல்லினையேன் என்றுகொலோ வாழும் நாளே –

விஷ்ணு பகவான் மீதான அவரது பக்தி, அதிகாரத்தைத் துறந்து வைணவ இறைவனைப் போற்றும் பாதையில் அவரை வழிநடத்தியது. பல விஷ்ணு கோவில்களுக்குச் சென்று வந்த பிறகு, குலசேகர ஆழ்வார் இறுதியாக மன்னார் கோயிலை அடைந்தார். அங்கு, ஸ்ரீரங்கத்தின் ரங்கநாதப் பெருமானைக் கண்ட வேதநாராயணனின் அழகில் அவர் கவரப்பட்டார். ஸ்ரீரங்கத்தைப் போலவே, மன்னார் கோயிலும் தெற்குப் பக்கத்தில் தாமரை பரணி மற்றும் வடக்குப் பக்கத்தில் கருணா ஆறு என இரண்டு ஆறுகளால் சூழப்பட்டுள்ளது.-மன்னார் கோயிலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருந்த குலசேகர ஆழ்வார், தனது அபிஷேக தெய்வமான ராமரைத் தினமும் பூஜை செய்து, இறுதியில் இந்த இடத்திலேயே மோட்சம் அடைந்தார். இன்றுவரை, இந்த அபிஷேக மூர்த்தியின் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. மன்னார் கோயிலில் அவர் ஆற்றிய முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, இக்கோயில் குலசேகர பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இதுவே, நேரடியாக ஆழ்வார் பெருமாள் கோயில் என்று பெயரிடப்பட்ட ஒரே வரலாற்றுப் பெருமாள் கோயிலாகும். மேலும், குலசேகர ஆழ்வார் சன்னதியும், அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட புனிதக் கொடிமரமும் (கொடிமரம்) இங்கு காணப்படுகின்றன. இது (ஆழ்வார்களுக்கு) ஒரு சிறப்பு அம்சமாகும், 

வரலாற்று கல்வெட்டுகள்-சோழர் மற்றும் சேரர் கால ஆட்சியாளர்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் தொடர்பான பல கல்வெட்டுகளைக் காணலாம். கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழர் இக்கோயிலுக்குப் பெரும் பங்களிப்புகளைச் செய்தார்; அந்த அளவிற்கு இவ்விடம் ராஜேந்திர விண்ணகரம் என்று குறிப்பிடப்பட்டது. பின்னர், சேர மன்னன் ராஜசிம்மன் இக்கோயிலுக்குப் பல நிலத்துண்டுகளைத் தானமாக வழங்கினார். ஜடவர்ம சோழப் பாண்டியர் மற்றும் நாயக்க மன்னர்களும் மன்னார் கோயிலுக்குப் பங்களிப்புகளைச் செய்துள்ளனர். கோயிலின் நுழைவாயிலுக்கு அருகிலேயே தரையிலும் சுவாரஸ்யமான கல்வெட்டுகள் உள்ளன.

அழகிய மணவாள ஜீரின் அவதார ஸ்தலம் ‘பன்னீராயிர பாடி’ எனப்படும் திவ்ய பிரபந்தத்தின் விரிவான வியாக்யானம் (விளக்கம்/விளக்கம்) வழங்கிய வாதி கேசரி ஆழ்வாகிய மணவாள ஜீயர் பிறந்தது இது.

மன்னார் கோயிலுக்கு ஒரு சுவாரஸ்யமான மற்றும் மிகவும் சாதகமான நிகழ்வு என்னவென்றால், திருக்குறுங்குடி கைசிக ஏகாதசி நிகழ்விற்கான கைசிக புராணத்தின் முன்னோட்டப் பயிற்சி அமர்வு, வரும் சனிக்கிழமை, 21 நவம்பர் 2009 அன்று இங்கு நடை பெற்றது-கடந்த சில ஆண்டுகளாக இக்கோயிலில் தெப்போத்ஸவம் புத்துயிர் பெற்று, மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்களை ஈர்த்துள்ளது.

தற்செயலாக, விபீஷணனும், மன்னார் கோயிலின் வேதநாராயணனிடம் ஈர்க்கப்பட்டான்.

மூலவர் : வேத நாராயணப் பெருமாள் கிழக்கு நோக்கி
உற்சவர் : கருட உடனுறை ராஜகோபாலசுவாமி
வேதவல்லி தாயார் மற்றும் புவனவல்லி தாயார்

மூலஸ்தானம் அஷ்டாங்க விமானமாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. மதுரை கூடலழகர் கோவில், உத்திரமேரூர் கோவில் இரண்டிலும் இதே போன்ற அஷ்டாங்க அமைப்பு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.-இக்கோவிலில் மூன்று நிலைகள் உள்ளன. மூன்று நிலைகளிலும் பெருமாள் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார்.-கீழே உள்ள மூலஸ்தானத்தில் வேத நாராயணர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.-அடுத்து நிலையில் அமர்ந்து, பரமபத நாதனாக காட்சியளிக்கிறார்.-மூன்றாம் நிலையில் பள்ளிகொண்ட பெருமாள் ரங்கநாதர் காட்சி தருகிறார்–யானை தொண்டு ,பூனை தொண்டு என்று மேல உள்ள சுற்று பாதைகள் ஒரு கோட்டை அமைப்பில் உள்ளது -.-தலமரம் பலா செண்பகம். இங்குள்ள தீர்த்தத்தின் பெயர் பிருகு தீர்த்தம்.

தொடர்புக்கு : PS. நரசிம்ம கோபாலன் ஆச்சார்யா@ 04634 252874 / 318408

புதுப்பிப்பு: சம்ப்ரோக்ஷணம் 2010 ஆகஸ்ட் 23 அன்று நடைபெற்றது. கோயில் இப்போது புதிய மற்றும் தூய்மையான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

மன்னார் கோயில், தென்காசி – குற்றாலம் நெடுஞ்சாலையை ஒட்டி, அம்பாசமுத்திரத்திற்கு மேற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அம்பாசமுத்திரம், திருநெல்வேலிக்கு மேற்கே 35 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அம்பாசமுத்திரம்/பாப்பநாசத்திற்கு ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் பேருந்துகள் உள்ளன. திருநெல்வேலியிலிருந்து ஒரு மணி நேரத்தில் கோயிலை அடையலாம். திருநெல்வேலியிலிருந்து அம்பைக்கு தினமும் பயணிகள் ரயில் உள்ளது (திருவேலியிலிருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்டு, நெல்லையில் இணைப்பு ரயில் வரும்; அம்பையில் காலை 10:00 மணிக்கு வந்து சேரும்; மாலை 4:25 மணிக்கு புறப்பட்டு, திருவேலியில் மாலை 5:30 மணிக்கு வந்து சேரும் – நெல்லை இணைப்பு ரயில்).திருநெல்வேலியிலிருந்து மன்னார் கோயிலுக்கு காரில் சென்று வர சுமார் ரூ.500-600 செலவாகும். அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மன்னார் கோயிலுக்கு ஆட்டோவில் செல்ல ரூ.60/- செலவாகும். உள்ளூர் பேருந்துகள் / மினி பேருந்து சேவை மூலமாகவும் கோயிலை அடையலாம்.-மணிமுத்தாறு அணை இங்கிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. பேச்சிப்பாரை அணை இங்கிருந்து தெற்கு நோக்கி சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது.குற்றாலம் அருவி மன்னார் கோயிலிலிருந்து 50 கி.மீ. மேற்கே அமைந்துள்ளது.

அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பிவை
வைத்த சிந்தை வைத்த ஆக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அநந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே –

பிருகு மகரிஷி க்யாதி என்பவள் அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுக்க -அவர்கள் வலிமை மிக்கு தேவர்களைத் துன்புறுத்த -அவர்கள் ஸ்ரீ மன் நாராயணனை சரணம் புக -அங்கு அவ் வானவர்களுக்கு ஆகுலம் தீர -கருதிடம் பொருதும் சக்கரத்தாழ்வான் அவளை சேதிக்க -பிருகு கோபத்தால் -நீயும் பூவுலகில் பிறந்து மனைவியை இழந்து பரிதபிக்கக் கடவாய் என்று-சாபம் கொடுத்து பின்பு-அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யாமார் -என்று உணர்வது மன்னிப்பு கேப்பதற்காக தவம் இருந்து -சாஷாத்காரித்து -கோபத்தால் தபோ பலத்தை வீணாக்கி கேட்டை விளைவித்துக் கொண்டேன் -மன்னித்து அருள என்று வேண்ட -எம்பெருமானும் கவலை கொள்ளாதீர் -உமது வாக்குக்குள்ளும் புகுந்து சொல்வித்தவனும் நானே -சக்ரவர்த்தி திருமகனாய் அவதரித்து நம் அடியவனான விபீஷணாழ்வானை கடாஷித்து அருளுவேன் -நம் தேவியரான பிராட்டியைப் பிரிந்து உம் திருவாக்கையும் உண்மையாக்குவேன் -என்று அருளிச் செய்தார் -முக்காலமும் உணர்ந்த பிருகு மகரிஷி -இராவண வதத்தின் பின்பும் பிராட்டியுடன் இலங்கையில் இருந்து திரும்பி எழுந்து அருளும் பொழுது-அகத்தியர் எழுந்து அருளி இருக்கும் மருள் நீக்கும் மலையான மலையாசலத்தின் அடிவாரத்தில் எழுந்து அருளி இருக்க-புஷ்பக விமானத்தில் இருந்து ஸேவை ஸாதித்தார் -சாபம் நீங்கிய பிருகு ரிஷி -தனது கொள்ளுப்பேரனான மார்கண்டேயருடன் வேதங்களைப் போதித்துக் கொண்டு வேத நாராயணனை உலகறியச் செய்து -வேத புரி-ப்ரஹ்ம தேசமாக்கி உலகை வாழ்வித்தருளினார் -பிருகு மார்க்கண்டேயர் இரு சித்தர்களும் ப்ரதிஷ்டை செய்ததாலே சைத்த ஸ்தலம் -என்பர்

கலியுகம் பிறந்து 8 வருஷம் பராபவ வருஷம் மாசி புனர்வசு -சுக்ல பஷ துவாதசி வியாழக்கிழமை -கௌஸ்துப அம்சமாக குலசேகரப்பெருமாள் திருவவதாரம்-பிரபன்ன குலத்துக்கே ஸீரோ பூஷணம் -என்பதாலே இத் திருநாமம் – கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் -கொங்கர் கோன் -குலசேகரன் -பிருதுகளைப் பெற்றவர்-இளை என்னும் திருக் குமாரத்தியும் -த்ருடவ்ரதன் என்னும் திருக் குமாரரையும் பெற்றவர் -ஸ்ரீ ராமபிரானையும் ஸ்ரீ ராஜகோபாலனையும் திருவாராதனப் பெருமாளாகக் கொண்டவர்
ஆரம் கெடப்பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே
வாரம் கொடு குடப்பாம்பில் கையிட்டவன் மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குலசேகரன் முடிவேந்தர் ஸிகா மணியே –

தாமிரபரணி நதிக்கும் கருணா நதிக்கும் நடுவிலே சமந்தா ப்ரஹ்ம தேசம் -வேத நாராயண புரம் வேதபுரி திவ்ய ஷேத்ரத்தில் நீண்ட காலம் தங்கி இருந்து திருவித்துவக்கோடு பதிகம் இப்பெருமானுக்கே மங்களா ஸாஸனம் என்பர்

இவரது திருவாராதன பெருமாள்களும் கோயிலுக்குள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டு வேத விமானம் அஷ்டாங்க வேத விமானமாயிற்று-அம்பாசமுத்திரம் வடமேற்கில் மூன்று மைல் தூரம் -ஐந்து மைல் தூரத்திலே பாபநாசம் உள்ளது -பத்து மைல் தூரத்திலே மணிமுத்தாறு அணை உள்ளது -மலை அடிவாரத்தில் உள்ள புராதான க்ஷேத்ரம் இது-

மூலவர் -வேத நாராயணன் -நின்ற திருக்கோலம் -இரு மருங்கிலும் ஸ்ரீ தேவி பூ தேவி -வலப்பக்க சுவரில் பிரமனும் இடப்பக்க சுவரில் சிவனும் பெருமாள் திருவடியின் பிருகு மகரிஷியும் மார்க்கண்டேய மகரிஷியும் சின் முத்ரையுடன் ஸேவை ஸாதிக்கிறார்கள்
உத்சவர் -வேத நாராயணப்பெருமாள் -இரு பக்கமும் வேதவல்லித்தாயார் புவனவல்லித்தாயார் அமர்ந்த திருக்கோலம் -இருவருக்கும் தனிக் கோயில்களும் உண்டு-

கர்ப்ப க்ரஹத்துக்கு வெளியே அர்த்த மண்டபமும் -அதன் நடுவே ஓர் மண்டபமும் வேதிகையும் இருக்கின்றன -அந்த வேதிகையில் குலசேகரப் பெருமாளுடைய திருவாராதனப் பெருமாள்களான இளைய பெருமாள் பிராட்டி ஸஹிதமான சக்ரவர்த்தி திருமகனும் எழுந்தருளி உள்ளார்கள் -இம்மண்டபத்தின் மேல்பக்கமும் வடபக்கமும் உள்ள திண்ணை களிலே -காட்டுமன்னார் கண்ணன் ஆழ்வாராதிகள் ராமானுஜர் மா முனிகளும் எழுந்தருளி உள்ளனர் -இந்த மண்டபத்திலிருந்து வேத நாராயணனைச் சுற்றி ப்ரதக்ஷிணமாக வர ஒரு வழி உண்டு -அத்தை அடைத்துள்ளனர் -இந்த மண்டபத்துக்கு தென் கிழக்கு மூலையில் மேலே போக படிக்கட்டுகளும் உண்டு -அதையும் அடைத்துள்ளனர் -இந்த மண்டபத்துக்கு வெளியே ஒரு பெரிய மண்டபம் உள்ளது -அதற்கு மற்ற தேசங்களில் மஹா மண்டபம் என்பர் -இங்கு இதற்கு குலசேகர மண்டபம் என்று பெயர் -இதிலும் ஓர் உள் மண்டபமும் வேதிகையும் உள்ளன -இந்த வேதிகைக்கு விஸ்வநாத நாயக்கன் பீடம் என்று பெயர் -இதில் குலசேகரப் பெருமாளுடைய திருவாராதனப் பெருமாள்களான ஸ்ரீ ராஜகோபாலன் ஆண்டாள் பெரியதிருவடி எழுந்தருளி உள்ளனர் -ஸ்ரீ ராஜகோபாலனுக்கு அருகில் ஒரு மேடையில் குலசேகரப் பெருமாள் உத்சவர் எழுந்தருளி உள்ளார் –

இம் மண்டபத்திற்கு வெளியே உள்ள கிளிக் குறடும் மண்டபமும் மணி மண்டபம் என்றும் பெயர் பெறும் – இக் குறட்டிலிருந்து வலப் பக்கத்து படிகளில் இறங்கிச் சென்றால் தென் கிழக்கு மூலையில் பெரிய மடப்பள்ளி உள்ளது -பின் தெற்கு பிரதக்ஷிணத்தில் மேற்கு நோக்கிப் போகும் பொழுது நடுவிலே சாந்தமே உருவெடுத்த யோக நரஸிம்ஹர் ஸந்நிதி இருக்கிறது -அவரை சேவித்து விட்டு வேதவல்லித் தாயார் ஸந்நிதிக்குப் படிக் கட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டும் -தாயாரை சேவித்து வலமாக சந்நிதியைச் சுற்றி வலப் பக்கமுள்ள படிகளில் இறங்கி வந்து தெற்கு ப்ரதக்ஷிணத்தில் நடுவிலே உள்ள படிகளில் ஏறி மாடிக்குச் சென்று வேத நாராயணன் பரமபத நாதன் போல் வீற்று இருந்து சேவை சாதிக்க சேவித்து -யானை முடுக்கு என்றும் சொல்லப்படும் அந்தப் பெருமாள் வல ப்ரதக்ஷிணத்தில் சென்று கிழக்குப் பக்கமுள்ள படிகள் வாழியே மேலே சென்று அரங்கன் போல் பள்ளி கொண்டருளும் வேத நாராயணனை சேவிக்க வேண்டும் -இங்கு திரு நாபி கமலத்தில் நான்முகனும் ஸ்ரீ பூமி நீளைகளுடன் அநந்த சயன சேவை -இங்கும் வலப் பக்க சுவரில் பிரமனும் இடப் பக்க சுவரில் சிவனும் சேவை ஸாதிக்கிறார்கள் -பெருமாளைத் தவிர வலப் பக்கம் கருடனும் இடப் பக்கம் விபீஷணனும் மாலியவானும் எழுந்தருளி உள்ளனர் -கீழே பிருகு மார்க்கண்டேயர் ரிஷிகளும் எழுந்தருளி உள்ளனர் -இப் பள்ளி கொண்டருளும் பெருமாளை சுற்றி பூனை முடிக்கும் எனப்படும் ப்ரதக்ஷிணம் உள்ளது -இங்கும் ஸ்ரீ ரெங்கம் போல் ஸப்த பிரகாரம் உள்ளது –

இப் பெருமானையும் வலம் வந்து படிகளில் கீழ் இறங்கிச்சென்று தெற்கு ப்ரதக்ஷிணத்தை அடைந்து மேற்கு ப்ரதக்ஷிணம் வழியாக வடக்கு ப்ரதக்ஷிணம் போய் அங்கு பரமபத வாசலுக்கு மேற்கு உள்ள படிகளில் ஏறி வடக்கு நாச்சியார் சந்நிதியை அடைய வேண்டும் -அங்கு எழுந்தருளி இருக்கும் புவனவல்லித் தாயாரை சேவித்து வலம் வந்து கிழக்கே உள்ள படிகளில் இறங்கி வடகீழ் மூலைக்குச் சென்று தெற்கு நோக்கி இருக்கும் விஷ்வக்சேனரை சேவித்துக் கொண்டு சின்னக்கோபுர வாசல் வழியே கொடி மர மண்டபத்துக்கு வந்து அங்கு பலம் நோக்கிச் சென்று கோயிலை ப்ரதக்ஷிணம் செய்தால் வெளி வடக்கு ப்ரதக்ஷிணத்தில் இராப்பத்து உத்சவம் மண்டபமும் அதற்கு கிழக்கே தெற்கு நோக்கி குலசேகரப்பெருமாள் சந்நிதியும் உள்ளது -இவருக்கு தனி கோயிலே கொடிமரம் தேர் உள்ளன -மாசிப் புனர்பூசம் உத்சவம் முன்பு சிறப்பாகக் கொண்டாடில் வந்தனர்

இங்கு ஆழ்வார் கூப்பிய திருக்கரங்களுடன் எழுந்தருளி உள்ளார் -அவரைச் சுற்றி சுவரில் மற்றைய ஆழ்வார்களும் ஓவிய வடிவில் எழுந்தருளி உள்ளனர் -இங்கு ஆழ்வாரைச் சேவித்து வலம்வந்தால் கிழக்கே உடையவருக்கு பெரிய சந்நிதி உள்ளது -நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது -குமார கிருஷ்ணப்ப நாயக்கர் சிலையும் பிரதானமாக இங்கு உள்ளது -செண்டலங்கார மகா முனிவர் சிலையும் பராங்குசதாசர் சிலையும் இங்கு வெகு அழகாக இலங்குகின்றன -மா முனிகளின் ஸந்நிதியும் பெரியதாக உள்ளது –
வித்துவக்கோடு பதிகமும்
உன்னித்து மற்றறொரு தெய்வம் தொழாள் பாசுரம் நித்ய அனுசந்தேயம்

ப்ரபந்நாம்ருத நூலில் ஆந்திர பூர்ணர் என்னும் அனந்தார்யார் -குலசேகரப்பெருமாள் வேத நாராயண புரத்தில் எழுந்தருளி பெருமாள் கைங்கர்யத்தில் ஈடுபடு 67 திரு நக்ஷத்திரத்தில் ஸ்ரீ மன் நாராயணன் திருவடிகளை அடைந்தார் -என்று அருளிச் செய்துள்ளார்
இது வைகானஸ ஆகம திருக்கோயில்
ப்ரஹ்ம தேசமே வித்வான்கள் நிறைந்த திரு வித்துவக்கோடு ஆயிற்று என்பர்
ஸ்ரீ ராஜகோபாலன் பேசும் தெய்வமாக இருப்பதால் இந்த ப்ரஹ்ம தேசமே அழகிய மன்னனார் கோயில் -மன்னார் கோயிலாயிற்று –
அன்றிக்கே குலசேகர ராஜா என்பதால் மன்னார் கோயிலே என்று பெயராயிற்று என்னவும் கொள்ளலாம்

———————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவிருத்தத்தில் ஐதிஹ்யங்கள்-

April 9, 2026

இவ்வாறு நடந்தது இவ்வாறு நடந்தது என்பதை இதிஹ இதிஹ என்று விவரிப்பதால், விவரண நூல்கள் இதிஹாஸங்கள் எனப்படுகின்றன-அருளிச்செயல், அவற்றின் விரிவுரைகள், இதிஹாஸங்கள் அவற்றின் விரிவுரைகள், ஸ்ரீவசன பூ4ஷணம் முதலிய செம்பொருள் நூல்கள் யாவும் செவி வழியாகவே வந்துள்ளன. ஓரோர் ஆசார்யர் தத்தம் சீடர்களுக்கு இவற்றை விளக்கும் பொழுது சுவை சேர்த்து சில நிகழ்வுகளையும் சொன்னார்கள். இவை குருபரம்பரா ப்ரபா4வத்தில் பதிவாகியுள்ளன. ஈடு போன்ற வ்யாக்யான நூல்களிலும் இவை உள்ளன.-

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும்  அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை உயிரளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே.
–பாசுரம் 1:

ஆழ்வார், த3ண்ட3காரண்யத்தில் ரிஷிகள் “ஏஹி பஶ்ய ஶரீராணி” என்று பெருமாளிடம் தம்மை அரக்கர்கள் அடித்தும் பொடித்தும் துன்புறுத்தியத்தைத் தங்கள் ஶரீரங்களில் இருந்த காயங்களையும் தழும்புகளையும் காட்டிக் குறை இரந்தாப்போல் இப்பாசுரத்தில் ஞான ஸ்வரூபனும், ஞான கு3ணகனுமான ஆத்மாவை ப்ரக்ருதி (அநாதி3 ஜன்ம, கர்ம, அவித்3யா, பாபம் முதலியன) தின்றிருப்பதை எம்பெருமானிடம் காட்டுகிறார் என்று ஆளவந்தார் நிர்வாகம். அம்மங்கி அம்மாள் எனும் ஆசார்யர், “உதிரக் கூறை காட்டுகிறார்” என்றார். அதாவது, பெருமாளுக்கு ரிஷிகள் உடம்பைக் காட்டினாப் போல் தம் குருதிக் கறை படிந்த நிலை (அஞ்ஞானாதிகள்) காட்டுகிறார்.-“

பிறந்தாய்!”: என்பதற்கு ப4ட்டர் ஒரு சுவையான விளக்கம் தந்ததாக ஸ்ரீவத்ஸாங்க தா3ஸர் கூறியதாக நஞ்சீயர் ஸாதி4ப்பார்: அதாவது: எம்பெருமான் பல பிறவிகளில் அவதரித்திருந்தாலும், அவனால் உலகினரைத் திருத்திப் பரமபதம் கொண்டு செல்ல முடியவில்லை, உடுத்த துணியோடு பரமபதம் திரும்பிச் சென்றான்; அதையும் பிடுங்கிக் கொள்ளாமல் அவனை அதோடு விட்டது விஶேஷம். ஆனால் ஆழ்வார் அவதரித்தபின் அவனது திருவுள்ளம் நிறைவேறப் போகிறது என்பதால், இனி அவன் பிறக்க வேண்டிய தேவை இல்லை என்று ப4ட்டர் ரஸமாகக் கூறுவார் என்பது நஞ்சீயர் குறிப்பு.

குழற்கோ வலர்மடப் பாவையும் மண்மகளும் திருவும்
நிழற்போல்வனர் கண்டு நிற்குங்கொல்? மீளுங்கொல் ? தண்ணந்துழாய்
அழற்போல் அடுஞ்சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக்கடவும்
தழற்போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே
பாசுரம் 3

இதில் -அப்புள்ளின் பின்னே அன்றோ நெஞ்சு போயிற்று–சம்பந்த ஸத்ருச பதார்த்தங்கள் -பாதகம் ஆகும் விஸ்லேஷத்தில்-ராமம் மே அநு கதா த்ருஷ்ட்டி -சக்ரவர்த்தி-இருவருக்கும் நிழல் -பெருமானுக்கு நிழல் போல் -நமக்கும் நிழல் – மானஸ அனுபவம் கிட்டியது -பாஹ்ய அனுபவம் கிட்டுமா திருமலை நம்பி அருளிச் செய்ததாக பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்வதாக -நம்பிள்ளை ஈடு -இதுக்கு சங்கதி-பிராகிருத சம்பந்தம் போனது -சாஷாத்காரம் பெற்றது -சாத்மிக்குமா- நிலைக்குமா–நம்மால் அனுபவிக்க முடியுமா –என்றுமாம் -இப்படி மூன்று சங்கதிகள் இப்பாட்டுக்கு

முதல் பாட்டில் இமையோர் தலைவா என்று வியந்த தலைவியின் இயல்பில் மாறுபாடு கண்டாள் தோழி. இப்பாசுரத்தில், தலைவி, சக்கரக்கையன், ஸ்ரீ பூ4 நீளாதே3விமார் நாதன் ஆகிய எம்பெருமானை ஒருக்கணமும் பிரியாதிருக்கும் க3ருட3னின் பா4க்கியம்தான் என்னே எனத் தன்னைக் கண்டுவிட்டுச் சென்ற பெருமாளை நினைத்து, அவன் அவர்களோடுள்ள சேர்த்தி கண்ட என் நெஞ்சு மீளுமோ மீளாதோ எனப் பராங்குஶ நாயகி நினைப்பது.-திருமலை நம்பி இதை, உண்மையிலேயே தமக்கு எம்பெருமானை அனுபவிக்க இயலுமா என ஆழ்வார் நினைப்பதாகக் கூறுவார் என பிள்ளை திருநறையூர் அரையர் விளக்குவார்.நஞ்சீயரோ, ப4ட்டர் “உலகியலில் தமக்குள்ள ஸம்பந்தத்தை அறுக்க வேண்டுமென எம்பெருமானை முதல் பாட்டில் வேண்டிய ஆழ்வார், அவனை முதலில் கண்டபோது தம்மால் அந்த ஆனந்தத்தைத் தாங்க முடியுமா என ஐயுற்றார்” என்று விளக்குவார் என்கிறார்.

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே
  —-4—-தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் –

இங்கு அவர் புள்ளே-உறங்கா வல்லி தாசர் பொன்னாச்சியார் –காது தோடு -பாகவதர்கள் அபகரித்த வ்ருத்தாந்தம்-

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே
 –7-கால மயக்கு –இன்னுயிர்ச் சேவல் -9-5–எம்பெருமானார் உகந்த பாசுரம்-திருவெள்ளறை இருந்து அரையர் திருவரங்கம் கூட்டி வந்த பதிகம்
ஸ்மாரக பதார்த்தம் -கிளி மேகம் 
-)

காண்கின்றனைகளும் கேட்கின்றனகளும் காணில் இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்றன  இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றமேந்தி தண் மாமலை வேங்கடத்துள் உம்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே 
–பாசுரம் 8:

இது தலைவன் பொருள்வயின் (பொருள் தேடி) பிரிவது பற்றிக் குறிப்புத்தர, தலைவி வருந்தும் நிலை.-இதை விளக்க நம் பூர்வர்கள் எம்பெருமானார், அவர் ஆசார்யர் திருமலை நம்பி, திருக்கச்சி நம்பிகள் பற்றியொரு விருத்தாந்தம் தெரிவிக்கிறார்கள்.-திருமலையில் இருந்த எம்பெருமானார், யாராவது காஞ்சி சென்று திருக்கச்சி நம்பிகள் எவ்வாறு உள்ளார் என்று கண்டு வரமுடியுமா என்று கேட்க ஒருவரும் இசையவில்லை. திருமலை நம்பி தாமே சென்று திருக்கச்சி நம்பிகளை சந்தித்து, உடனே கிளம்பவும், நம்பிகள் அவரை “எதற்கு தேவரீர் வந்தது? இவ்வளவு அவசரம் ஏன் ? தேவப்பெருமாள் திருநாள் கண்டு போகலாமே ” என்றார். திருமலை நம்பி, உடையவர் விருப்பம் தெரிவித்து, அவர் திருவுளம் பற்றி வந்ததாகச் சொல்லிக் கிளம்பினார். இதில் இரு சுவையான விஷயங்கள்: 1. தம் ஆசார்யர் காஞ்சியில் எப்படி உள்ளாரோ என்று எம்பெருமானார்க்கு ஓர் அஸ்தானே (காரணமற்ற ) பயம், அவர் மீது இருந்த அன்பினால். இந்தத் தலைவி போன்ற நிலை. 2. ஆசார்யர்கள் எவ்வளவு நைச்சியம் , பணிவு காட்டினார்கள் என்பது.-தலைவன் தலைவி விஷயம் சொல்லும் பாசுரத்துக்கு எம்பெருமானார்/திருக்கச்சி நம்பிகள் அன்புப் பிணைப்பைப் பேசியது நினைக்கத்தக்கது.-

நம் பிள்ளை ஈட்டில்
ஸ்ரீ ராமாயணத்தில்-பெருமாள் பிராட்டியைப் பிரிந்து கழுத்து தோள் மாலை சாத்தி
சக்ரவர்தியைக் காணச் செல்ல-தாற்காலிகமாக பிரிவு-இங்கும் பிரிவு பக்தி வளர்க்க -ஆர்த்தி உண்டாக்க-பதி ஸம்மானம் சீதா-மைய கண்ணாள் பார்க்க-திவ்ய அந்தப்புரம் கனக புரம்
சக்ரவர்த்தி அருளப்பாடு கேட்டு சுமந்திரன் வர-பிராட்டி இரண்டு மூன்று திருவாசல் அளவும் மங்களா ஸாஸனம் பண்ணிக் கொண்டு புறப்பட-புரிந்து பார்த்து அருளி-அத்தைக் கண்ட பெருமாள்
அங்கும் இங்கும் –பரிவர் இல்லை -என்று நினைத்து பண்ணுவதைக் கண்ட பெருமாள்
பின்னவும் தவிர மாட்டாதே வரும் அளவும் தாரகமாக தனது தோள் மாலையை இவள் தோளிலே இட்டு
முறை மாறாடி தாழ்வுகளைச் செய்து போனாள்-
அஸீ தேக்ஷிணா -இந்தீவர மாலை இட்டாள் அப்போது பிரிவு போல்- இங்கும் பிரிவு

பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்பார்–இது எல்லாம் பகவத் விஷயத்தில்-இங்கு பாகவத விஷயத்தில்-இவர் அவகாஹம்-திருக்கச்சி நம்பி எவ்வாறு என்று எம்பெருமானார் சொல்ல -கடுக நான் என்று எழுந்து செல்வார் இல்லை-யாரும் பதில் சொல்லாமல் பெரிய நம்பி பெருமாள் கோயில் எழுந்து அருள -நிஷேதிக்க முடியாத விஷயம் எழுந்து அருள ஆகாலாதோ-திரு நாள் அணித்தாய் இருந்தது நான் வந்த கார்யம் தலைக் கட்டிற்று-இப்படி போய் வர அமையும் -பிரிந்து இருக்க முடியாதே பெரிய நம்பிக்கு உடையவர் -இருவருக்கும் பிரிவு அஸஹ்யம்

திண்பூஞ்சுடர்நுதி, நேமி அஞ்செல்வர் விண்ணாடனைய
வண்பூ மணி வல்லீயை ஆரே பிரிபவர்தாம்?
பாசுரம் 9:–இதில் தலைவன் தலைவியைத் தன்னால் நீங்கி இருக்க இயலாமையைத் தெரிவிப்பதாக ஆழ்வார் தமக்கும் எம்பெருமானுக்கு உள்ள அப்ருத2க் ஸ்திதி2யைப் பாடுகிறார்-

எம்பெருமானார் ஒரு ஸ்ரீவைஷ்ணவரை, பிள்ளை உறங்கா வில்லி தாஸரிடம் சென்று தமக்கு வேண்டிய நெல் வாங்கிக்கொள்ள அனுப்பினார். அவர், தாஸரிடம் சென்று உடனே நெல் பெறாமல் திரும்பிவிட, உடையவர் துணுக்குற்று என்ன ஆயிற்று நெல் என் பெறவில்லை? என்ன, அவர், “அடியேன் சென்றபோது தாஸர் கண்ணும் கண்ணீருமாக அழுதுகொண்டிருந்தார்” என்றார் . உடையவர் யாதோ ஒரு வருத்தம்பற்றி, திருவரங்கத்திலிருந்து திருமலை செல்ல நினைத்திருந்ததால் தாஸர் இந்நிலையில் இருந்தார் என்று எம்பெருமானார் புரிந்துகொண்டார்.-மணிவல்லி என்பது சம்பிரதாயத்தில் நெறி வழுவாது அநந்யார்ஹ ஶேஷத்வம் பேணும் ஆத்மாவைக் குறிக்கும்.-இங்கு எம்பெருமானாரின் ஆருயிர்ச் சீடரான பிள்ளை உறங்கா வில்லி தாஸருக்கு இது இயல்வாகப் பொருந்துகிறது.

உமது வாயோ? அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ? அடும் தொண்டையோ? அறையோ! இதறிவரிதே
–பாசுரம் 10:இப்பாசுரத்தில் ஆழ்வாரின் அவயவ அழகிலும் இனிய சொல் திறனிலும் ஈடுபட்ட அடியார்கள் அவரைப் பற்றிப் பிரிவு தாங்காது சொல்வது போல, நாயகன் நாயகியைப் புகழும் வகையில் பொருள் வருகிறது.

திரு மலைக்குப் போக நினைத்தான் என்று பழி இட்டாள்-நீ காண் நினைத்தாய் -என்கிறான்
அவன்-அதாவது-பாகவத் சம்ஸ்லேஷம் பிறந்த பின்பு பாகவத் சம்ஸ்லேஷம் மட்டுமேயாய் இருந்த படி
ஸ்வரூப ஜ்ஞானம் கண்டிலோம் –எங்களை அறியச் செய்யாது ஒழிந்தால் உன்னை அறிய வேண்டாமோ –(எங்களை -என்று மதுரகவி ஆழ்வார் போல் உள்ள அனைவரையும் சொன்னவாறு )
ஸ்வரூபம் -விக்ரஹம் -உன்னுடைய விக்ரக வைலஷண்யம் நீ அறியாய்
 –(உம்மை விட்டுப் பிரிந்தால் தரிக்க மாட்டாத எங்களையும் நீ அறியாய்-உன்னுடைய ஸ்லாக்யதையையும் நீ அறியாய்-
கீழ்ப் பாசுரம் -இப்பாசுரம் -பிரிந்தால் அஸஹ்யம்-பிரிய மாட்டேன் இரண்டுக்கும் -இரண்டுக்கும் சேர்ந்து ஐதிக்யம்-இங்கும் திருவேங்கட யாத்ரை உள்ளதே )

எம்பெருமானார் திரு மலைக்குப் போவதாய் பிறந்த படி கேட்டு-பிள்ளை உறங்கா வல்லி தாசர்
அது தாங்க மாட்டாமல் தம் அகத்தே போய் மூடிக் கொண்டு கிடந்து-காண்கின்றனகளும்   -என்கிற பாட்டை அனுசந்தியா நிற்க-அங்குச் செய்கின்ற அளவு என்ன என்று ஒரு வைஷ்ணவரை போக விட-இப் பாட்டை அனுசந்தித்து சோகித்து கிடந்தார் -என்ன–உடையவர் -நெல் கொடுத்து வா என்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை அனுப்ப அவர் வாங்கிக் கொள்ளாமல் அழுது இருக்க அத்தை அவர் வந்து உடையவருக்கு தெரிவித்தார்-இது நம்பிள்ளை ஈட்டில் உண்டே
மாறு ஓன்று இல்லா மாருதி சிறியாண்டான் ஸ்வாமியை மேல்கோட்டையில் இருந்து அனுப்பி கூரத்தாழ்வானைப் பற்றி அறிந்தார் உடையவர் இவ்வாறு அடிக்கடி சிஷ்யர்களைப் பற்றி விசாரிப்பார்
 வண்  பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் -என்று சொல்லி போர மாட்டிற்று இல்லையோ என்று அருளிச் செய்தார்

பின் அடிகளில், இந்த இதழ்கள் என்ன வாயா, அல்லது கிளியும் நாணும் அவயவமா, அல்லது (சிவப்புப் பொருந்திய) கொவ்வைப் பழமா என்று அழகை வியந்து சொல்வது. நம் ஆசார்யர்கள் தமது பூர்வர்களின் திருமேனியிலும் மிக ஈடுபாடும் பக்தி பாரவச்யமும் கொண்டிருந்தமைக்கு இதைக் காட்டி, எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பி தொடர்பான ஓர் ஐதிஹ்யம் சொல்லப்படுகிறது. அதாவது, எப்போதும் நம்பிகள் திருவரங்கம் வந்து திரும்பத் திருக்கோட்டியூர் புறப்படுகையில் எம்பெருமானார் மரியாதை நிமித்தமாக அவரை சிறிது தூரம் வரை பின் தொடர்வார். அப்போது ஒருமுறை, “அடியேனுக்கு உய்வு பெற எப்போதும் தியானிக்க ஒன்று அருளிச் செய்ய வேண்டும்” என்கிறார். ஏற்கெனவே அவரிடம் ரஹஸ்ய உபதே3ஶம் பெற்றவர் இப்படி வேண்ட, நம்பிகளும், “அடியேன் ஆற்றில் இறங்கி நீராடும்போது ஆமை முதுகு (கூர்மாசனம்) போல் தெரியும் அடியேன் ஆசார்யர் ஆளவந்தார் முதுகுத் தோற்றத்தையே அவர் திருநாடு எய்தியபின் நினைத்திருப்பேன். நீரும் அப்படியே இரும்” என்றார். இதனால் ஆசார்யர்களின் திருமேனியில் ஶிஷ்யர்களின் ஈடுபாடு அவர்களின் உபதே3ஶத்திற்போன்றே அவசியம் என்றதாயிற்று.-ஆசார்யர்கள் தம் ஶிஷ்யர்களின் ஆத்ம க்ஷேமத்தைப் பாதுகாப்பார்கள்; ஶிஷ்யர்கள் அவர்தம் திருமேனி நலத்தைப் பேணுவார்கள்.-ஆசார்யன் சிச்சன்  ஆருயிரைப் பேணுமவன்-தேசாரும் சிச்சன் அவன் சீர்வடிவை ஆசையுடன் நோக்குமவன் -பகவத் ஶேஷத்வத்தைவிட பாகவத ஶேஷத்வமே இறுதி நிலை என்பதை ஆழ்வாரின் இப்பாசுரங்களில் நம் பூர்வாசார்யர்கள் கண்டு அநுபவித்து நமக்குக் காட்டியுள்ளனர்.

அரியன யாம் இன்று காண்கின்றன கண்ணன் விண் அனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்கு
உரியன ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி ஓரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே
.
–பாசுரம் 11-

தலைவியுடன் இருக்கும் தலைமகன் தான் பொருள் ஈட்டுவதற்காக அவளைப் பிரிந்து செல்ல வேண்டும் என்பதை நேர்படச் சொல்லாமல் எல்லாரும் பொருள் சம்பாதிப்பதற்கு அவ்வப்போது தத்தம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வதுண்டு என்றான். இவன் தான் பிரிந்து செல்லப்போவதையே இப்படிக் குறிப்பாக உணர்த்துகிறார் என்று அவள் நினைத்தாள்.-கூடி இருக்கும் வேளையில் பிரிவை நினைப்பதோ அல்லது நினைப்பூட்டுவதோ மிகவும் துன்பம் விளைவிப்பது.-இதை ப4ட்டர் சுவைபடக் கூறி விளங்க வைத்தது ஓர் ஐதிஹ்யம். அவர் திரு அத்4யயனத் திருநாளில் எல்லாரும் திருவாய்மொழி அநுப4வத்திலும் நம்பெருமாள் அழகிலும் ஆழ்ந்துள்ளனர்; இவ்வேளையில் இந்த ஏகாத3ஶி எனும் (பட்டினி கிடப்பதாகிய) உடல் வலிமை குறைந்து ப4க3வத3நுப4வத்துக்கு இடையூறாக ஏற்படுத்தியது யார் என்று வெறுத்துச் சொன்னதாகக் கூறுவர்.

என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனி யவர் கண் தங்காது என் றொரு வாய் சொல்
நன்னீல மகன்றில்காள்! நல்குதிரோ நல்கீரோ?–1-4-4-என் நீர்மை கண்டு-என் ஸ்வபாவம் -மார்த்த்வம் – மென்மைதனைக் கண்டு அருள் செய்து,-நாம் பிரியுமது தகாது’ என்னாதே பொகட்டுப் போனவர்க்கு.
ஸ்ரீ பட்டரை ஒரு தமிழ்ப் புலவர் ‘கேட்டு இரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன,
‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ?’ என்று அருளிச் செய்தார்.-கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதும் உளதோ?’ என்ன,
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’
‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’ என்பன போன்ற
தமிழ்ப் பாக்களை நீ அறியாயோ?
’ என்று அருளிச்செய்தார்.

பலபல ஊழிகளாயிடும்  அன்றி ஒர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறாயிடும் கண்ணன் விண்ணனையாய்
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும்  யாம் மெலிதும்
பலபல சூழலுடைத்து அம்ம! வாழி இப்பாயிருளே.
–பாசுரம் 16:

தலைவனைப் பிரிந்த தலைவி தோழியிடம் இருளை வியந்து சொல்வதாக இப்பாட்டு உள்ளது. அவனோடு இருந்து, பின் பிரிந்துள்ளபோது நேரம் ஊழி போல் நீளுவதாக அவள் வருத்தம். அந்த இருளும் கண்ணன் போல் நிறம் கொண்டுள்ளது. ஆழ்வார் தம் பாசுரங்களில் எம்பெருமானை நினைவுறுத்தும் அசேதனங்களால் பராங்குஶ நாயகி படும் துயரைக் குறித்துள்ளார்.-இதை விளக்கும் நஞ்சீயர், ஸ்ரீராமாயணத்தில் பெருமாளைக் காட்டில் விட்டபின் குகனோடு மூன்று நாட்கள் இருந்து பின் அயோத்தி செல்லும் ஸுமந்திரனை நினைவு கூர்ந்தார்.-“கு3ஹேன ஸார்த4ம் தத்ரைவ ஸ்தி2தோऽஸ்மி திவஸான் ப3ஹூன்” எனும் ஶ்லோகத்தை மேற்கோள் காட்டினார். ஶிஷ்யர் நம்பிள்ளை, “ஸுமந்திரன் குகனோடு மூன்று நாள்களே இருந்தான். ஆனால் பலநாள்கள் எனப் பொருள்பட ‘திவஶான் பஹூன்’ என்பானேன்” என்று வினவ, ஆசார்யர், அதற்கு, “ஒன்றைப் பிரிந்திருக்கும்போது, அதை நினைவூட்டுபவர் முன் இருந்தால் பிரிவு நெடிதாகத் தோன்றுமே. குகனோடு இருந்ததால் பெருமாளை நெடு நாள் பிரிந்த மாதிரி ஸுமந்திரனுக்குத் தோற்றியது” என்றார்.-காதலர்க்குப் பிரிவின் போது காலம் நீளுவது போல் எம்பெருமானைப் பிரிந்த ஆழ்வார்க்கும், அவரைப் பிரிந்த அடியார்க்கும் தோற்றும். பா4க3வத விஶ்லேஷமும் (பிரிவும்) ப4க3வத் விஶ்லேஷம் போன்றே உள்ளது. ஆழ்வார் பாசுரங்களில் பா4க3வத ஸமாக3மம் (சேர்த்தி) பகவத் ஸமாக3மம் போன்றே வலியுறுத்தப்படுகிறது.-நெடுமாற்கடிமை, பயிலும் சுடரொளி என இரு திருவாய்மொழிகள் பா4க3வத ஶேஷத்வத்தை வியந்து பேசும். பொலிக பொலிக திருவாய்மொழி அடியார்களால் கலியும் கெடும் என்பதை அவர்கள் வரவை முன் கூட்டி இயம்பும்.-

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே
 –23-தலைவன் குறை யுற உரைத்தல் –

அருவினையேன் மனமோ–
எங்கேனும் போகிலும்  புனத்தயலே வழி போக வேண்டும்-பாபத்தை பண்ணினேன் —
பாகவதர்களை அடைந்த பின்பு மீளவே கூடாதே-பிள்ளை திரு நறையூர் அரையர் -உகந்து அருளின தேசம் எல்லாம் கிடக்க- திரு நகரி அருகே போக வேண்டும் பாபம் உண்டாவதே – இது பாவம் ஆனால் இதற்க்கு எதிர் தட்டான பகவத் விஷயம் புண்ணியம்-தென் ஆனாய்-நாலு பக்கமும் யானையைத் தேடிப் போவார் தப்பலாம்-பாகவதர்கள் இடம் சேர்ந்து விலகாமல் -ஆழ்வார் திருவடிகளில் ஈடுபட்டு மீள முடியாமல் சிக்குண்டதுக்கு ஐதிக்யம்-சீரார் வேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் -மண்டின இடங்களில் புகுந்தவர்-வேலிக்கு வெளியில் திருக்குருகூரில் அகப்பட்டதுக்கு – பிள்ளை உறங்கா வல்லி தாசர் உடையவர் பாதமே என்று இருந்ததற்கு–(நம்பிள்ளை ஈட்டில் ஆப்பான் திருவழுந்தூர் அரையர் மச்சிலே பிள்ளை திரு நறையூர் அரையர் இப்பாட்டை அநுஸந்தியா நிற்க-ஸீ ல குணம் காட்டும் எம்பெருமான் எங்கும் உண்டாகா நிற்க-திருப்புளிக் கீழ் -அடைந்தேன் -சிக்கினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே சீலாதி குணம் அளவு இல்லையே-குண வித்தர் படி
 -பகவத் விஷயத்தை சமாஸ்ரயித்து கொண்டை மேலே காற்று அடிக்க திரிய பெறாதே மீள ஒண்ணாத பாகவத சம்ச்லேஷத்தில் இழிவதே-என்று- கொண்டை மேல் காற்று அடிக்க -என்றது-தலைக்கு மேல் காற்று அடிக்க -அதாவது கவலை இன்றி இருத்தல்–கொண்டை மேல் காற்று அடிக்க -என்றது-அதிகமாக ஸூகப்படுவதுக்கு இந்த வார்த்தை-

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே
 –25-தலைவன் மாலைக்குத் தலைவி ஆசைப்படுதல் –

பண்டு உய்யக் கொண்டார் பக்கலிலே -இவர் நாதமுனி சிஷ்யர் அல்லர்-சாதனாந்தர நிஷ்டர் வேறே உய்யக் கொண்டார் ராமானுஜர் காலம் அவரும் இல்லை-நான்காம் வர்ணம் பாகவத பிரபாவம் அறிந்தவர்-இவர் இடம் உசாவி -அருளாளப்பெருமாள் எம்பெருமானார் தாசர் இருவரும் சங்கை
அவரைக் கண்டு தான் இருந்த இடத்தை அவருக்கு கொடுத்து கடக்க நிற்க-தாசரும் தனது தன்மை அறிந்தவர் எல்லாரும் தாசர் என்று அறிந்து இருப்பார்களே என்ன-என்னால் உம்மை அறியப்போமோ
பகவான் நிர்ஹேதுகமாக கிருபையால் படைத்து -ஜகத்காரணம் இவனே என்று அறிந்தவன்
தேவர்கள் கூட அந்த பாகவதர் பெருமையை அறியவே மாட்டார்கள் பாரதம்-பிரானே உம்முடைய பெருமை தெரியாது என்று சொல்ல தேவர்கள் வேணும் -நான் யார் சொல்ல

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவரிடை நீர்
இன்னம் சொல்லீரோ? இதுவோ தகவு என்று இசைமின்களே!
–பாசுரம் 30:

எம்பெருமான் மற்ற தேவர்களைப்போல் அன்றி சரணடையவும், உபாஸிக்கவும் எளியன் என்பதை ஆழ்வார் பல வகைகளிலும் காட்டுவார். அத்துடன், அவன் தன்னிடம் வந்தவரிடம் அல்லது தானே சென்றடைந்தவரிடமும் ஒன்றும் எதிர்பார்க்க மாட்டான் என்பதையும் பலப்படச் சொல்வார். ஆழ்வார்கள் அனைவருமே ஒரு மிடறாகக் காட்டும் அரும்பொருள் இது. இப்பாசுரத்துக்கு விளக்கம் அளிக்கும்போது கிடாம்பி ஆச்சான் ஓர் அத்புதமான விளக்கம் அருளினார்:-அதாவது, தன் நாயகனைக் காணச் சென்ற தன்னால் அனுப்பப்பட்ட தன் நெஞ்சு தான் தூது செல்வதை மறந்து பெருமானோடே நின்று தங்கிவிட அந்த நெஞ்சுக்குப் பறவைகளைப் பராங்குஶ நாயகி தூது அனுப்புகிற சூழல் இப்பாசுரத்தில் வருகிறது. இதில் ” தொழுது இரந்தேன்” என்கிறார் ஆழ்வார். தொழுதால் போதாதோ இரங்கவும் வேண்டுமோ?–எம்பெருமான் சரணாக3தனிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான் என்பதை விளக்க, கிடாம்பி ஆச்சான் இவ்விடத்துக்குச்சேர-“அந்யத் பூர்ணாத் அபாம் கும்பா4த் அந்யத் பாத3வநே ஜநாத் அந்யத் குசல ஸம்ப்ரஶ்நாத் ந ச இச்ச2தி ஜநார்த3ந:”-என்கிற அழகான ஶ்லோகத்தை எடுத்தார்.-கிருஷ்ணன் ஒரு பூர்ண கும்ப4ம், திருவடி விளக்குவது, நலமா என்று அன்புடன் விசாரிப்பது இது தவிர வேறு எதுவும் எதிர்பார்க்க மாட்டான் என இந்த மஹாபா4ரத ஶ்லோகம் க்ருஷ்ணனின் எளிமையை விளக்குகிறது.-இதுகூட ஒருக்கால் ( ஒரே ஒரு முறை) செய்தால் போதுமா என்று ஶிஷ்யர்கள் கேட்டபோது, ஆச்சான் “ஒருக்கால் என்ன அரைக்கால் போதும்” என்றார்!-அதாவது உபசாரம் செய்யவே வேண்டா மனத்தால் செய்ய நினைத்தாலே போதும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்துவிடுகிறான்.-இவ்வாறு கிடாம்பி ஆச்சான் இறைவனின் எளிமையை விளக்கினார் என்பர்.

கிடாம்பி ஆச்சானோடு நம்பி திரு வழுதி நாடு தாசரும் மற்றும் நம் முதலிகளும் இருந்து
அந்யத் பூர்ணாத் ஸ்லோஹம்–அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவநேஜனாத்  அந்யத் குசல சம்ப்ரசனா அந்ந சேச்சதி ஜனார்த்தன–  – கேளா நிற்க -அந்யத் என்கிறது ஒரு கால் அமையும் என்கிறதோ என்ன-அரை கால் அமையும்-என்று கிடாம்பி ஆச்சான் நியமித்தான்-(தொழுது இரந்தால் இரண்டும் வேண்டாமே )கிருத அபராதச்ய ஹிதே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் அந்தரேனா அஞ்சலிம் பத்வா லஷ்மணஸ்ய ப்ரசா தானாத் –கிஷ்கிந்தா காண்டம் -32-17- தீரக் கழிய அபராதம் பண்ணின வுமக்கு இளைய பெருமாள் பிரசாதிக்கும் போது ஓர் அஞ்சலி   நேராமல் போகாது என்று திருவடி மகாராஜற்கு சொன்னால் போல —அஞ்சலிக்கு அவ் அருகு இல்லை-என்று இருக்க-இரப்பவும் செய்தேன்–தொழுகையும்  இரக்கையும் தன்னதே ஆய் இருந்த படி –உவாச ச மஹா ப்ராஜ்ஜா -யுத்த காண்டம் -17-11-விபீஷணன் சரண் அடைந்து இரக்கம் படும் படி பல சொல் சொன்னது போல்–வந்ததே போதும்-அஞ்சலியும் செய்தான்–உவாச ச மேலும் பேசவும் செய்தான்

யாம் கபிநாம் சகஸ்ராணி ஸுப ஹூன்ய யுதானிச திஷு சர்வாஸூ மார்கந்தே சேய மாயாதி தாமயா–சுந்தர காண்டம் -30-3- என்று முதலிகள் எல்லாரும் கூட புஜித்தாலும் புஜித்து முடிய ஒண்ணாத ப்ரீதியாலே தனியே அகப் பட்டேன் என்று-முதலிகள் எல்லோரும் கூட மது வனத்தில் புகுந்த பொழுது-ததி முக பிரப்ருதிகள்  நலிய –அஹம் ஆவார் யிஷ்யாமி யுஷ்மா கம்பரி பந்தின -சுந்தர காண்டம்  62-2—என்று உங்களுக்கு விரோதி ஆனவர்களை நான் போக்குகிறேன் நீங்கள் அமுது செய்யுங்கோள்  என்ன —இப்படி மது வனம் அழிந்த படி யை மகா ராஜர் கேட்டு– இது வெறுமனே ஆக மாட்டாது –பிராட்டியை கண்டார்கள் –-த்ருஷ்டா தேவி -சுந்தர காண்டம் 63-17–என்று நிச்சயித்து ,-அப்போது அவ் அருகுக்கு உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே வாலானது வளர்ந்து  ருஷ்ய முக பர்வதத்திலே சென்று அமைந்தது- அறைந்தது —அம் மது வனம் இன்றாகில் ராஜ புத்ரர்கள் முதுகோடே போம் -என்று பட்டர் அருளி செய்வார்-

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–

இரங்கார் –வாராது ஒழிந்தால் –பூசுவனவும் புலர்த்துவனவும் இரட்டிக்க வேணுமோ(பூசும் சந்தனம் இரண்டு மடங்கு பூசிக் கொள்கிறானே )அம்மனோ – புலி என்னுமா போலே – ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிற தத்துவத்தை அம்மே என்று அஞ்ச வேண்டும்படி இவளுக்குப் பிறந்த ஸ்வரூப அந்யதா பாவம்-ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதத்ஸ்ஸன-என்று புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கு அஞ்ச வேண்டாத படி இருக்க –ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவனுக்கு ப்ரஹ்மம் தன்னையே அறியச் செய்தேயும்- அஞ்ச வேண்டும்படி இறே இவள் தசை –ஓ என்று–க்ரூர்யத்தைச் சொல்லுகிறது –-அசை என்றுமாம் –இலங்கைக் -குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
ஒருத்திக்காக கடலை யடைத்து- இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும் எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டு குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –இதுவும் அழகியது ஒன்றாய் உண்டாய் இருக்கலாகாது என்று அஸூ யையாலே அழித்தான் அத்தனை காண் –ஒருத்திக்காக உதவினன் அல்லன் காண் -என்பர் திருமலை நம்பி –

கடமாயினகள் கழித்துத் தன்கால் வன்மையால் பலநாள்
நடமாயின புக்கு நீர்நிலை நின்றதவம் இதுகொல்?
குடமாடி இம்மண்ணும் விண்ணும் குலுங்க உலகளந்து
நடமாடிய பெருமான் உருவொத்தன நீலங்களே
.
–பாசுரம் 38-

யோகிகள் யோக அப்யாசம் பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்— அது போல் இவரும் பகவத் அனுபவம் சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையாலே –நம்மை லோக யாத்ரையின் நின்றும் வேத (வைதிக )யாத்ரையில் மூட்டும் தனை அருமை போரும்-ஆழ்வார்களை – வேத (வைதிக )யாத்ரையில் நின்றும்
லோக யாத்ரையிலே மூட்டுகை –நம்மை சம்சாரத்தில் உண்டான ருசி வாசனையை தவிர்த்து பகவத் விஷயத்தில் உண்டாக்குக்கைக்கு உள்ள அருமை போரும்-ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் ருசி வாசனையை தவிர்த்து –சம்சாரத்தில் உண்டாக்குக்கைக்கு – இரண்டும் எம்பார் அருளி செய்தார் –

இது தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் எனும் துறையில் வருகிற பாசுரம். காதலர் பிரிந்திருக்கும்போது ஒருவர் மற்றவரை நினைந்து அவர் போன்றவற்றை அவராகவே பாவித்து அப்போதைக்குப் பிரிவுத் துயரை மறப்பது ஒன்று உண்டே. ஆழ்வார் இப்படியில் அனுகாரம் என்கிற ரீதியில் பலகாலும் எம்பெருமானை அனுபவிக்கிறார். ஆனது பற்றியே ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆன்மிக விஷயங்களை விவரிக்கும்போதும் ஓரோர் இடம், திவ்ய தேஶம், அவ்விடத்து இயற்கை எழில், அவ்விடத்து மாந்தர் தோற்றச் சிறப்பு, கல்வி, செல்வ மேன்மைகளைச் சொல்வதும். இதை ஈடு வ்யாக்யானத்தில் நம்பிள்ளை ஆழ்வார் இவ்விபூ4தியும் அவன் உடைமை என்பதால் அனுபவிக்கிறார் என்பர். உண்மையில் அருளாளர்களான ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தாமும் அனுபவித்து நம்மையும் அனுபவிப்பிக்கிறார்கள்.-இப்பாசுரத்தில் மண்ணும் விண்ணும் அளந்த எம்பெருமான் திருமேனி நிறத்தை நீலோத்பல மலர்கள் நாயகிக்கு நினைப்பூட்டியது தெரிகிறது. ஒரு மலரைக் கண்டாலும் அதன் நிறம் எம்பெருமானை நினைவூட்டுகிறது. இந்த விபூ4தியில் உள்ளன யாவும் அவன் ஸ்வரூபம் என்பதால் அதில் அவளுக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் வருகிறது.-ஆளவந்தாரின் ஆசார்யரும், நாத2முனிகளின் சீடரும் ஆன குருகைக் காவலப்பனை அவரது சீடர் ஒருவர், “ஜகத் ஈச்வரர்களுக்கு என்ன தொடர்பு?” (அதாவது உலகுக்கும் எம்பெருமானுக்கும் என்ன ஸம்பந்தம்?) என்று கேட்டார். அதற்கு குருநாதர் “இந்த உடலுக்கும் ஆத்மாவுக்கும் என்ன ஸம்ப3ந்த4மோ அதேதான் உலகுக்கும் ஈச்வரனுக்கும் .” என்கிறார். சீடர் மேலும், “எனக்கு எம்பெருமானை நினைப்பதற்கு ஒரு வழி சொல்லித் தர வேண்டும்” என்று வேண்டினார். அதற்கு குருகைக் காவலப்பன், “நான் உமக்கு எம்பெருமானை எப்போதும் நினைக்க வழி சொல்லித் தருகிறேன்; ஆனால், நீர் எனக்கு அவனை எப்படி மறப்பது, நினையாமல் இருப்பது என்று சொல்லிக் கொடும்!” என்றாராம்.-நீல மலர்களைக் கண்டதும் பராங்குஶ நாயகிக்கு எம்பெருமான் நினைவு வந்தது. ப்ரக்ருதியில் உள்ள அனைத்திலும் “ஶரீரம் யத் அவாப்னோதி” என்று கீதையில் சொன்னபடி அவனே நிறைந்திருப்பதால் எந்தப் பொருளைக் கண்டாலும் ஆசார்யருக்கு அது எம்பெருமானின் ஶரீரமாகவே தோற்றுகிறது. அவ்வாறிருக்க எம்பெருமானை எவ்வாறு நினையாது இருக்க முடியும் என்று கருத்து

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே
 -39-தலைவனின் உருவம் பற்றித் தலைவி கூறுதல் –-

நீல தட வரை மேல்– பச்சை மா மலை போல் மேனி -என்னுமா போலே ஒரு நீல கிரி போலே காணும் திரு மேனி இருப்பது–புண்டரீக -இத்யாதி –அதன் மேல் பூரணமாக தாமரை பூத்த பெரிய தடாங்கள் போலே மிகா நின்றன –-உடம்பு எல்லாம் கண்ணாய் இருக்கிறபடி –-அவ் அவயவம் ஒழிய  அவயாந்தரத்தில் போக ஒண்ணாத படி இருக்கிற படி —(கிருபையா -சர்வ-இத்யாதி -பராசர பட்டர் -கண்கள் நாடு பிடிக்கப் புறப்பட )தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அஷணீ – என்று உபநிஷத்களில் -சாந்தோக்ய உபநிஷத் -16-7-சொல்லுகிற தாமரை –எமக்கு எல்லா இடத்தவும் –கந்தவ்ய பூமியில்  இல்லாத படிக்கு ஈடாக  திருக் கண்கள் தொடர்ந்த படி –கண்ணை செம்பளித்தவாறே கண்ணுக்குள்ளே தோற்றின படி –(திருக் கமல பாதம் வந்து என் கண்ணின்னுள்ளே ஒக்கின்றதே ) புறம்பு எங்கும் தோற்ப்பித்து என்னை தோற்ப்பிக்க வந்தபடி —சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய்மொழி -7-7-1-கரு மாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் -திருவாய்மொழி -8-9-1—இத்யாதி-

கண்ணின் கோலங்களே –கண்களின் அழகுகள் ஆனவை–அதாவது
1-பரபாக சோபையும்
2-மிளிர்த்தியும்
3-பெருமையும்
4-சிவப்பும்
5-குளிர்த்தியும்–தொடக்கமானவை

கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்கள் நீலத் தடவரை மேல் நெடும் தடங்கள் போலப் பொலிந்து எமக்கு எல்லா விடத்தவும்-என்று அந்வயம்-

கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ  அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பரப்பால் மிக்கு மற்றெப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே
.
–பாசுரம் 43-

தலைவி பராங்குஶ நாயகி தலைவன் கண்ணனின் உருவ எழிலை உரைக்கும் பாசுரம் இது. இதில் ஆழ்வார், எம்பெருமானின் திருக்கண் அழகை முதலில் வியக்கிறார்; பின்பு தம்மை அணைக்கும் கையும் தாமரை போன்றது என்கிறார்; இவ்வாறு வியந்து அனுபவித்துப் போற்றியவர் திருவடிகளையும் தாமரை என்று நினைத்துப் போற்றுகிறார். திருமேனியோ கருமுகில் போலாகி அவன் வள்ளன்மையும் குளிர்த்தியும் தெரிவது என்கிறார்.-இதை விவரித்தபோது ஒரு சீடர், கண்கள், கைகள், திருமேனி இவற்றை எல்லாம் விவரித்து எதற்காகத் திருவடியைப் பேசுகிறார் என்று ஐயம் எழுப்பினார். இதற்குப் பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் மிகவும் சுவைபட, “குழந்தைக்குத் தாயின் முலை போல அடியார்க்கு எம்பெருமானின் திருவடிகள் ; அது தாயின் பால் உண்டு பின் தாயின் முகம் நோக்கும். அதேபோல் இவர்களும் எம்பெருமானின் ஸர்வ அவயவ ஸௌந்த3ர்யங்களையும் கண்டு பருகினாலும் அவனது திருவடிகளிலேயே நோக்காய் இருப்பர்” என்று விளக்கினார்.

கண் இட்டு கொடுக்க அணைத்த கை –சம்ஸ்ப்ருச்யா க்ருஷ்ய சப்ரீத்யா ஸூகாடாம் பரிஷஸ்வஜே-என்று அக்ருரனை அணைத்தால் போலே –அடியோ அவையே –அணைத்த போதே ஸூக ஸ்பர்சத்தால் துவண்டு விழுந்த எல்லை –-புண்டரீகாஷா நம -இறே– கண்ணுக்கு தோற்றவர்கள் காலிலே விழும் அத்தனை இறே –வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால் –எல்லையில் கிடந்தவர்கள் உடைய ஜீவனம் –பிரஜை முலையிலே வாய் வைத்து தாய் முகத்தை பார்க்குமா போலே -என்று பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்–மதி விகற்ப்பால் எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறம்-என்று அந்வயம்-மதி விகற்ப்பால்-புத்தி பேதங்களால் –விண்ணும் இத்யாதி –சம்சாரிகளுக்கு  அவ் வருகே சர்வேஸ்வரன் பக்கலிலே உத்பத்தி ஸ்தானத்தை உடையவனுமாய் –அவனாலே லப்த ஞானனுமாய் இருந்துள்ள பிரம்மா தொடக்கமானவர் –அதுக்கு அவ் வருகான முக்தர் –-நித்யர் –இவர்களுக்கு மநோ ரதத்துக்கு நிலமோ ?-எனக்கு உபகாரனான அவன்  உடைய எழிலின் பிரகாரம் –யானைக்கு குதிரை வைப்பாரைப் போல் நித்யர்களுக்கும் இவனது அழகு-உயர்வற உயர் நலம் உடையவன் அன்றோ இவன் எம்பிரான்– தமக்கு அவ் வழகை இறையிலி யாக்கின உபகாரத்தை கொண்டாடுகிறார் –மயர்வற மதி நலம் அருளினான் அன்றோ –உபகாரம் கொண்டாடும் பாசுரம் அதே போல் இதுவும்-நித்யராலும் பரிச்சேதித்து அறிய முடியாத அவயவ சோபையையும் திருமேனியின் எழிலையும் அவனது நிர்ஹேதுக கிருபையால் உள்ளபடி அறிந்து அனுபவித்தேன் என்கிறார் 

நிறமுயர் கோலமும் பேரும்  உருவும் இவை இவை என்று
அறமுயர் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங்கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி ஒன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான பெருமையே.
–பாசுரம் 44-இப்பாசுரம் தலைவி தலைவன் பெருமையை உணர்த்துவதாக அமைந்தது.

எம்பெருமான்பால் மிக்கிருக்கும் கணக்கற்ற மிகு நலன்களை எண்ணுவதோ முழுமையாக விரித்துரைப்பதோ இயலாது. அவனது ஈடற்ற தோற்றப் பொலிவு இது என்றவாறு சிலர் சில சொல்லலாகும். அல்லது அவன் திருநாமங்கள் சிறப்பு என்று சில சொல்லக்கூடும். அவனது திவ்ய அவயவ ஸௌந்த3ர்ய லாவண்யாதிகளை ஒரு சிலர் சொல்ல முயற்சி செய்யலாம். ஆயினும் ஒவ்வோரிடத்திலும் அவன் திவ்ய ஞான ஒளி விளக்காய் அவர்களுக்குத் தோற்றியதன்றி இன்னது, இவ்வளவு இவன் படி என்று சொல்ல முடிவதில்லை. “சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ என்பதற்கேற்ப எப்போதும் சொல்லையும் அதனால் பெறப்படும் பொருளையும் கடந்து நிற்கிறான். அப்ராப்ய மனஸா ஸ–இப்படிப்பட்ட எம்பெருமானின் திருநாம மஹிமை அதன் இனிமை இவற்றை நம் ஆழ்வார்களும் ஆசார்யர்களும் வாய் வெருவிய படியே இருப்பர். இந்தப் பாசுர விளக்கத்தில் பெரியவாச்சான் பிள்ளை ஓர் அழகிய ஐதிஹ்யத்தைக் காட்டியருளுகிறார்.-எம்பெருமானாரின் மாதுலரும் ஆசார்யருமான திருமலை நம்பி தமது அந்திம த3ஶையில் இருந்தபோது கணியனூர் சிறியாத்தான் அவரைக் காணச் சென்றார். நம்பிகள், அவரை, ப4ட்டரைக் குறித்து, தமக்குத் தஞ்சமாக நினைத்திருக்கும் திருநாமம் எது எனச்சொல்ல வேண்டும் என்று வேண்டினார். கேட்பவர் எம்பெருமானார்க்கே ஆசார்யர். ஆகவே, என்ன சொல்வது என்று வெட்கமும் திகைப்பும் அடைந்த சிறியாத்தான் மௌனமாய் இருந்தார். நம்பிகள் விடாமல், “தா3ஶரதீ2 இது மௌனம் ஸாதி4க்கும் விஷயமன்று – சொல்லவேணும்” என்றார். சிறியாத்தான் , “நாராயணன் போன்ற திருநாமங்களும் சொல்வார்; ஆனால் விரும்பியிருப்பது அழகிய மணவாளப் பெருமாள் என்பதையே” என்றார் .“இது கணவன் பேரைச் சொல்வதுபோல் உள்ளது; ஆயினும் ப4ட்டர் நினைத்து சொல்வதைத் தவிர வேறு சிறப்பான தஞ்சம் (உபாயம்) இல்லை” என்று அருளிச் செய்த திருமலை நம்பிகள் “அழகிய மணவாளப் பெருமாளே ஶரணம்” என்று கூறியவாறே திருநாடு அடைந்து விட்டார்.தமக்குப்பின் ப4ட்டரையே ஆசார்யராகக் கருதும்படி எம்பெருமானார் கட்டளை இருந்ததால் அவர்தம் சீடர்கள் அனைவரும் அப்படியே ஒழுகினர். ஆதலால், மூத்தவராய் எழுந்தருளியிருந்த நம்பிகளும் ப4ட்டர் திருவாக்கை ஶிரஸா வகித்து அனுஷ்டித்தார் என்பதில் அவர் பெருமையும், ஆசார்யர்க்கு உண்டான தனித்துவமும், திருநாமத்துக்குள்ள ஏற்றமும் தெளிவாகிறது.-இப்பாசுரத்தில் எம்பெருமான் திருக்கோலம், திருநாமம், திருவுருவம் ஆகிய மூன்றும் குறிக்கப் பெறுகின்றன. ஆழ்வார் எப்போதும் எம்பெருமானை ஸ்வரூப, ரூப , கு3ண வைப4வங்களைச் சிந்தித்தும் சொல்லியுமே போது போக்குபவர். இந்த அநுப4வத்தை அடியொற்றியே ஆசார்யர்களும் கு3ண அநுபவமும் நாம ஸங்கீர்த்தனமும் தம் வாழ்வில் முக்கிய அம்ஶங்களாகவும் இவற்றையே பகவத் கைங்கர்ய வெளிப்பாடுகளாகவும் அமைத்துக் கொண்டனர்.-

இப்பாசுர வ்யாக்யானத்தில் பெரியவாச்சான் பிள்ளை திருமலை நம்பிக்கு எம்பெருமான் திருநாமத்தில் இருந்த ஆத3ரத்தை விளக்கினார். அவரே இந்த “பேரும் ” என்பதை விளக்க இன்னோர் ஐதிஹ்யமும் காட்டுகிறார்.-ஆச்சி மகன் எனும் ஆசார்யர் தமது இறுதி நிலையில் உணர்வற்று இருந்தார். ஆசார்ய ஶ்ரேஷ்டரான பராஶர ப4ட்டர் அவரைக் காண எழுந்தருளினார். அவர் அருகே சென்று அவர் செவியில் மிக மென்மையாக “அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகளே சரணம்” என்று கூறினார். இதை ப4ட்டர் தம் திருவாக்கால் ஸாதி4த்த மாத்திரத்தில் ஆச்சி மகன் தம் பூர்வ வாசனையால் ப்ரக்ஜ்ஞை வர பெற்று அவர் தாமும் அத்திருநாமத்தை உச்சரித்தவாறே உடனே திருநாட்டுக்கு எழுந்தருளினாரென்று வரலாறு. எம்பெருமான் திருநாமம் உய்திக்கு வழி என்பதை ஆசார்யர்கள் இவ்வாறு காட்டுகிறார்கள்

பேரும் –
இவ் அழகுக்கு வாசகமான திரு நாமமும் –-மகர நெடும் குழைக் காதர் போல –திரு மலை நம்பி-(பெரிய திரு மலை நம்பியின் திரு குமாரர் -பிள்ளை திரு மலை நம்பி)அந்திம தசையில் கணியனூர் சிறியாத்தானை- பிள்ளை (பட்டர்-கூரத் ஆழ்வானோ பாதி யாகையாலே பட்டரை பிள்ளை என்பர் )தமக்கு  தஞ்சமாக நினைத்திருக்கும் திரு நாமம் என் – அத்தை சொல்ல வேணும் -என்ன –இவர் முன்னே நாம் எத்தை சொல்லுவது -என்று கூசி இரா நிற்க –தாசரதீ பேசாது இருக்கும் அவஸ்தை அன்று காண் இது -என்ன-நாராயண ஆதி நாமங்களும் சொல்லிப் போருவர் –ஆகிலும் விரும்பி இருப்பது அழகிய மணவாள பெருமாள் -என்னும் திரு நாமத்தை -என்ன-பர்த்ரு நாமத்தோபாதியாய் இரா நின்றது – ஆகிலும் பிள்ளை நினைத்து இருந்தது போக்கி தஞ்சம் இல்லை -என்று அழகிய மணவாள பெருமாளே சரணம் -என்று திரு நாட்டுக்கு நடந்தார் –நா அகாரியம் சொல்லில்லாதவர் அவதாரிகையில் இந்த ஐ திக்யம் உண்டே ஆச்சார்ய திரு நாமம் சொல்லாதது நாவுக்கு அக்காரியம் என்றவாறு பஞ்சம உபாய நிஷ்டர் -கணியனூர் சிறியாத்தான்)ஆச்சி மகன் அந்திம தசையிலே தன்னை அறியாதே கிடக்க-பட்டர் எழுந்து அருளி-செவியி னில் ஊதி னாரை போலே -அழகிய மணவாள பெருமாளே சரணம் -என்ன பூர்வ வாசனையாலே அறிவு குடி புகுந்து அத் திரு நாமத்தைச் சொல்லி
திரு நாட்டுக்கு நடந்தார்  – 

பெரியவாச்சான் பிள்ளை இதற்கு மற்றுமொரு நிகழ்வாக ஆளவந்தார் திருமகனார் ஆகிய சொட்டை நம்பி வைபவமும் கூறுகிறார். நம்பிகள் தாம் இறுதி நிலை அடையும் தருவாயில் ஆசார்யர்கள் அனைவரும் அவர் திருமாளிகை சென்று, வணங்கி, “தேவரீர் இப்போது திருவுள்ளத்தில் விரும்புவது என்ன?” என்று வினவினர். அவர், “அடியேன் ஸ்ரீ வைகுண்டம் சென்றால் அங்கே ஸ்ரீ வைகுண்ட நாதன் திருமுகம் நம்பெருமாள் திருமுகம் போலே குளிர்ந்து இராமல் போனால், வானைக் கிழித்துக்கொண்டு மீளவும் இங்கேயே வந்து விடுவேன் என்று எண்ணி இருக்கின்றேன்” என்றாராம்!-ஆசார்யர்கள் நம்பெருமாள் எனும் திருநாமத்தின் மீதும், அவரது திருமேனி அழகிலும் எவ்வளவு ஈடுபாடும் ஆழ்ந்த அழகுணர்வும் கொண்டிருந்தனர் என்பது வியக்கத்தக்கது.

உருவும் –
ஆளவந்தார் மகனார் சொட்டை நம்பி அந்திம தசையில் முதலிகள் அடைய-புக்கிருந்து –-நீர் நினைத்து கிடக்கிறது என் -என்ன-வைகுண்டத்திலே  சென்றால் நம்பெருமாளுடைய குளிர்ந்த முகம் போலே
ஸ்ரீ வைகுண்ட நாதன் முகம் குளிர்ந்து இல்லையாகில் முறித்து கொண்டு இங்கு ஏற ஓடிப் போரும் இத்தனை என்று கிடக்கிறேன்
 -என்றார் – (இதே விஷயம் பட்டரும் அருளிச் செய்ததாகவும் உண்டே )பட்டர் பெருமாள் பாடு புக்கிருக்க -பெருமாள் திருமஞ்சனத்து ஏறி அருளுகிறவர் –
பட்டரை கண்டு -உனக்கு வேண்டுவது என் -என்று கேட்டு அருள –சேலையை கடுக்கி (விலக்கி )திருவரையையும் துடைப்பற்றையும் ஒரு கால் காட்டி அருள வேணும் -என்றார் –
பெருமாள் -அஞ்சினாயோ -என்று கேட்டருள –நாயந்தே -பரமபதம் என் சிறு முறிப்படி அழியும் -உம்முடைய குளிர்ந்த திரு முகமும் – திரு நாம தழும்பும் இழக்கிறேனாக  கருதி அஞ்சா நின்றேன் -என்றார்-(பெருமாள் காட்டி அஞ்சினாயோ என்று கேட்டு அருள பரமபதம் போவதும் அஞ்சினாயோ–அதில் பயம் இல்லை -சங்கையும் இல்லை வைத்த அஞ்சல் என்ற கை இருக்க அஞ்சுவேனோ)-

பெரும் கேழலார்  தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே 
-45-தலைவி தலைவன் நீரில் உதவியதை நினைந்து உரைத்தல் –

வரத-ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்-விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் –-ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்-ச து –அந்த எம்பெருமானாரோ-யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்-ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –ச ச –அந்த ஆளவந்தார் தாமும்-நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்-பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே–ச ச -அந்த நாதமுனிகளும்-பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்-குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு
இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ
ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும்
தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்-ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ –
பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ
இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத் தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ-நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம் என்னும் இடத்தை மூதலிக்கிறார்

மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டுகொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரித் துழாய் துணையாத்
துலை  கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே.
-பாசுரம் 51:

கடற்கரையில் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி கடல் அலை ஓசைக்கு ஆற்றாமல் வருந்திச் சொல்லுகிற இப்பாசுரத்தில் ஆழ்வார் எம்பெருமானின் கருணையைக் காட்டுவதாக நம் முதலிகள் நிர்வஹிப்பர்.எம்பெருமான் மந்தர மலையை மத்தாக்கி, வாஸுகிப் பாம்பை நாணாக்கி ஸமுத்3ர மந்த2னம் செய்து அமுதம் எடுத்தான். அந்த மாயன் இராமபிரானாக வந்தபோது கடல் கடந்து சென்று பிராட்டியை மீட்க, கடலைக் கடக்கவேண்டி வந்தது. விபீ4ஷணன் சொன்னபடி பெருமாள் ஸமுத்திர ஶரணாக3தி செய்து கேட்டும் கடல் அரசன் வராது தாழ்த்தியதால் சினம் கொண்ட பெருமாள் ஒரே அம்பினால் இக்கடலை வற்றச் செய்வேன் என்று சூளுரைக்க, அப்போது கடல் அரசன் வணங்கி வந்து நின்றான்.இந்த சந்தர்ப்பத்தை விளக்கிய ப4ட்டர் அதற்குத் தக்க வால்மீகி ராமாயணம் யுத்த காண்ட ஶ்லோகம் ஒன்றைச் சொன்னார்:ரக்த மால்யாம்ப3ரத4ர: பத்3மபத்ர நிபே4க்ஷண: ஸர்வபுஷ்ப மயீம் தி3வ்யாம் ஶிரஸா தா4ரயன் ஸ்ரஜம்। ஜாத ரூப மயைஶ்சைவ தபநீய விபூ4ஷிதை: ஆத்மஜாநாம் ரத்னானாம் பூ4ஷிதௌ பூ4ஷணோத்தமை:।।-6-22-20] என்கிற அழகிய ஶ்லோகத்தைச் சொல்லி விளக்கினார். இந்த ஶ்லோகத்தில் வால்மீகி, கடல் அரசன் பெருமாளைக் காண வந்து வணங்கியபோது சிவந்த மாலைகளைச் சூடி, அழகிய மணிகள் ஒளிரும் ஆப4ரணங்களை அணிந்து வந்தான் என்றுள்ளதைச் சுட்டி ஶிஷ்யர் ஒருவர், “பெருமாள் மிக்க சினத்தோடு வில்லையும் அம்பையும் ஏந்தி கடலை வற்றடிப்பேன் என்று நிற்கையில் அவன் இவ்வளவு அலங்கரித்து வந்தது என்ன துணிவில்?” என்று வினவினார். அதற்கு ப4ட்டர், “கிணற்று நீர் சூடாகி , கிணற்றைச் சுடுமோ? அதன் தன்மை குளிர்ந்து இருப்பதன்றோ? எம்பெருமான் தன்னிடம் கார்யம் கொள்ள ஓர் அச்சுறுத்தலாக வில்லை வளைத்தானே அல்லாமல் தன்னை ஒருபோதும் தண்டிக்கமாட்டான் என்ற உணர்வு இருந்ததால் கடல் அரசன் இவ்வாறு வந்தான்” என்று சாதுர்யமாக ஸமாதா4னம் கூறியருளினார்.-எம்பெருமான் எப்போதும் எவரையும் ஒறுப்பவனல்லன். அவன் ஶாஸ்த்ர விதி4 மீறுபவரையும் இறுதி வரை ஏதாவது ஒரு சாக்கில் மன்னிப்பதையே விரும்புபவன். இராவணன், ஶிஶுபாலன் போன்றோரிடத்தும் மித்ர பா4வநை இருந்தாலே போதும் என்றவன். உபாய நைரபேக்ஷ்யம் (ஓர் உபாயத்தை எதிர்பாராமை) போன்றே அபராத4 ஸஹத்வமும் அவனது விஶேஷ இயல்பு என்பதை ஆழ்வார் பல இடங்களிலும் பலவாறாகக் காட்டியருளுகிறார்.-எம்பெருமானுக்கு எவர் மீதும் வெறுப்போ காழ்ப்போ கிடையாது பாரபக்ஷமும் இல்லை என்பது ஶாஸ்த்ர ஸித்3த4ம். அதையே ப4ட்டர் விளக்கினார்.

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே
– 52-

மழைக் கண் மடந்தை –போக ஸ்தானத்தையும் பார்த்து இவளையும் பார்த்தால்-பின்னை அவள் பின்னே போம்படியாய் –ஒரு பாட்டம் மழை விழுந்தால்  போலே ஆயிற்று –குளிர நோக்கினால் நோக்கி இருப்பது –பின்னை அவள் கருத்தை பின் செல்ல வேண்டும்படியாய் இற்று இருப்பது –அரவணை ஏற –திரு அனந்தாழ்வான் மேலே சம்ஸ்லேஷ அர்த்தமாக சென்று ஏற –மண் மாதர்- பூமிப் பிராட்டி–விண் வாய் அழைத்து –விண்ணாகிற வாயாலே அழைத்து -என்னுதல் –விண்ணிலே (வாய் -இடம் )நின்று அழைத்து என்னுதல் –திரைகள் மேல் நோக்கிக் கொந்தளித்து -ஆகாசத்திலே சப்தித்த போது-பூமியானது அழைத்தால் போலே ஆயிற்று இருக்கிறது –புலம்பி பல பாசுரங்களைச் சொல்லி புலம்பி–முலை மலை மேல் நின்றும் –முலைகளாகிற மலைகளில் நின்றும்-ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு பூமி விபூதி ஆகையாலே -மலைகளை முலைகளாக சொல்லலாம் இறே–காரார் வரை கொங்கை -இத்யாதி--ஆறுகளாய் –வர்ஷித்தவாறே – மலைகளில் நின்றும் அருவிகள் விழுந்து நிரம்பி போகா நிற்கும் இறே –மழைக் கண்ண நீர் – மழை போல் இருந்துள்ள கண்ணீர் – மற்றை போது மழையான கண்ண நீர் தானாய் இருக்கும் இறே–திருமால் கொடியேன் என்று –-இருவருமான சேர்த்தி பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –அது நமக்கு இழவுக்கு உடல் ஆவதே –நீர்மைக்கு உடலானது -க்ரௌர்யத்துக்கு உடலாய் தலைக் கட்டுகிறதே –என்று வார்கின்றதே –அவனுடைய கொடுமையைச் சொல்லி அழுகிறவளுடைய கண்ணீர் ப்ரவஹிக்கிற படி காண் –பிராட்டியும் சர்வேஸ்வரனும் சம்ஸ்லேஷத்தில் ஆரம்பிக்க – ஸ்ரீ பூமிப் பிராட்டி அது கண்டு பொறுக்க மாட்டாமை-அழுகிறாள்  காண் என்று- அவன் குறித்து போன கார் காலம் வந்து வர்ஷிக்க அத்தை மயக்குகிறாள் தோழி-அவளோடு அவன் கலந்த போது அவயவியோடு கலந்தால் போலே இவர்கள் இருக்கவும் –
இவர்களோடு கலந்த போது தன்னுடைய ஸ்தன பாஹூ  திருஷ்டிகள் உடன் கலந்தால் போலே அவள் நினைத்து இருக்கவும் – இப்படி இவர்களுடைய ஸ்வரூபமாய் அபரிச்சின்ன விஷயம் ஆகையாலே –
எல்லாரும் கூடி அனுபவிக்க வேண்டி இருக்க -இருவருக்கும் பாத்தம் போராதே ஷூத்தர விஷயங்களில் உண்டான சாபத்ன்யம் இவ்விஷயத்தில் உண்டாக சொல்லுமது உப பன்னம் ஆம் படி எங்கனே என்ன –இச் சோத்யத்துக்கு முன்புள்ள முதலிகள்- தானும் அவளுமான போகத்துக்கு நாம் ஸ்ரக் சந்தனாதிகளோ பாதியாய் இருக்க   என்னை அநாதரித்து போவதே  என்று இன்னாதாய் அழுகிறாள் -என்று பரிஹரித்தார்கள் –இத்தை ஆளவந்தார் கேட்டருளி –-வடிவிணை இல்லா மலர் மகளை இந்நீர் நடுங்க நடுங்கும்படி கடலிலே கொடு போவதே – படுக்கையாக நான் கிடக்கச் செய்தே -என்று
ஸ்ரீ பூமிப் பிராட்டி அழுகிறாள் காண்
-என்று அருளிச் செய்தார்–இத்தை  ஸ்ரீ பட்டர் -கேட்டருளி –
இது   எல்லாம் வேண்டாம் காண்- அனுபபன்னமாய் இருப்பதோர் அர்த்தத்தைச் சொல்லவே -இது எங்கனே கூடும்படி என்று தலைமகள் நெஞ்சிலே படும் — அவள் விசாரித்து நிர்ணயிக்கும் காட்டில் அவன் வந்து கொடு நிற்கும் -என்னும் விஸ்ரம்பத்தாலே சொன்னார்களாக அமையும் காண் -என்று அருளி செய்தார்-ஒரு ஆச்சார்யர் நம்பிள்ளை இடத்தில் குறைய நினைத்து தாமே திரு விருத்தத்தைப் பார்த்துக் கொண்டு போக இப் பாட்டு அளவாக ஒரு வகையாக நிர்வஹித்து இது தெரியாமையாலே ஒருத்தரும் அறியாதபடி அர்த்த ராத்திரியிலே வந்து பிள்ளையை அழைக்க இப் பாட்டினுடையவும் இவருடையவும் ஸ்வ பாவம் அறியுமவர் ஆகையால் அழைக்கும் கருங்கடலோ என்றாராம் என்று ஆத்தான் அருளிச் செய்வர்

வாராயின முலையாள் இவள் வானோர் தலை மகனாம்
சீராயின தெய்வ நன்னோய் இது தெய்வத் தண்ணந்துழாய்த்
தாராயினும் தழை ஆயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே.
–பாசுரம் 53:

இது கட்டுவிச்சி பேச்சாக வரும் பாசுரம். சிறிய திருமடலிலும் திருமங்கை ஆழ்வாரின் கட்டுவிச்சி தலைமகளின் நோய் திருமால் மீதான காதல் நோய் என்பதைப் பரக்கச் சொல்லி அதற்கு மருந்து எம்பெருமான் தொடர்பானவற்றையே ஸ்மரிப்பதும், ஸ்மரிப்பிப்பதும் என்று அவனது பல விப4வ அவதார சேஷ்டிதங்களை விவரிப்பாள்.-இக்கட்டுவிச்சி, தாயரிடம் உங்கள் மகளைப் பிடித்திருப்பது தெய்வ நன்னோய் ; இதைத் தணிக்க எம்பெருமானின் திருத்துழாய் மாலையோ, தழையோ, அல்லது துளசிக் கொம்பு கிளையோ, அல்லது அடி வேரோ கொண்டு வீசினால் அவள் துன்பம் தணியும் என்கிறாள்-இப்பாசுரத்தை மிக அழகாக ப4ட்டர் விரித்துரைத்தார்.

கண புரத்து பொன் மலை போன்று நின்றவன் தன்-–பெரிய பிராட்டியும் தானுமாய் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க ஒண்ணாது—திருக் கண்ண புரத்திலே வந்து நிற்கிறவனாக வேணும்–பொன்னகலம் தோயாவேல் –-அவனுடைய வீறுடைத்தான மார்பிலே அணைக்கப் பெற்று-தன்னுடைய கிலேசம் தீரா வாகில்–என்னிவைதான் வாளா--இவற்றினுடைய சிருஷ்டிக்கு ஒரு பிரயோஜனம்   வேண்டாவோ–எனக்கே பொறையாகி--இருவர் கூட தரிக்கிற இத்தை – நான் ஒருத்தியும் எங்கனே தரிக்கும்படி எனக்கே தான்–சுமை ஆயிடுக – இவை தான் முதுகிலே  ஆக பெற்றோம் ஆகில் கண் காண இருந்து செவ்வி அழிய வேணுமோ மூவாமை காப்பதோர் மன்னு மருந்து அறிவீர் இல்லையே –இதுக்கு பட்டர் –
நாட்டில் ஓர் அந்தர் ஆளிகர் ( நடுவே சஞ்சரிப்பவர்-தூதர்-கடகர் )இல்லையோ  -என்கிறார் காண் -என்று அருளி செய்தார் –
(கொடி -ஜீவன்–மலர் -ஞானம்–நறு மணம் -பக்தி –திருமங்கை ஆழ்வார் ஞானம் பக்தி அனுபவிக்க திருமால் ஒருவனால் முடியும் என்றபடி – ஆந்தராளிகர் -தலைவன் தலைவி நடுவில் ஊடலை தீர்க்கும் நடுவர் -)

இவ் வார்த்தையைக் கேட்ட போது பிள்ளை திரு நறையூர் அரையர் உள்ளிட்டார் அடைய நாலைந்து நாழிகை போது வேறொரு வார்த்தைக்கு இடம் கொடாதே-
கொண்டாடியவர்கள்-பட்டது காணும் -என்று நம் ஜீயர் அருளி செய்வர் –வளர்த்ததனால் பயன் பெற்றேன் -என்கிற பாட்டை – பட்டர் அருளிச் செய்த சில வார்த்தைகளைக் கேட்டு – இதுக்கு முன் பூர்வாசார்யர்கள் பக்கலிலும் இவ் வார்த்தை கேட்டு அறியோம் -என்று கொண்டாட –

(பிள்ளை திரு நறையூர் அரையர் -வயசில் மூத்தவர் இளையவரான பட்டரைக் கொண்டாட )பிள்ளாய் (பூஜ்ய யுக்தி இது )பண்டும் இப்படி ஸ்லாகித்தாரும் உண்டு காணும் –-ஒரு திர்யக்கை வளர்த்து –
திரு நாமங்களைக் கற்பித்து – பின்னை அது சொல்லக் கேட்டு – அதன் காலிலே விழுந்தாரும் உண்டு காணும் -என்று அருளிச் செய்தார் –(ராமானுஜ சம்பந்தி என்று அன்றோ கொண்டாடினீர் என்றபடி
இதே போல் பெரிய நம்பி ராமானுஜர் விஷயத்திலும் உண்டே )நீர் உமக்கு வேண்டின நிலையிலே ஹேதுக்களை வையும் – உம்மை அனுபவிக்கிற இது -இழவாது ஒழியும் அத்தனையே வேண்டுவது -என்றாராம் –

அது கேட்டு மிகவும் மூத்த ஆசார்யர்களும் பட்டரின் பேரறிவாண்மையையும் பாசுரங்களை விளங்கும் பான்மையையும் பாராட்டினார்கள். இதைப்போல் பல நிகழ்வுகளும் கு3ருபரம்பரா ப்ரபா4வம் முதலிய நூல்களில் காணக் கிடைக்கும். அடியார்களைக் கொண்டாடுவது எம்பெருமான் திருவுள்ளத்துக்கு மிகவும் உவப்பானது என்பதை இது காட்டும்.-பெரியவாச்சான் பிள்ளை தம் திருவிருத்த வியாக்கியானத்தில் இப்பாசுரத்தை விளக்குகையில் எம்பெருமானார் தொடர்பான ஒரு ஐதிஹ்யத்தைக் கூறுகிறார்:நம்பெருமாள் ஒரு திருவிழாவின்போது திருப்புன்னை மரத்தடியில் எழுந்தருளியிருந்தார். அப்போது சற்று தொலைவில் எம்பெருமானார் எழுந்தருளியிருக்க, பெருமாளை வணங்க வந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானரையும் சேவித்தார்கள். இதுகண்ட உடையார் ஸுப்3ரமணிய ப4ட்டர் எனும் அரசு அதிகாரி, சுவாமியிடம், “ஸ்வாமி ஓர் ஐயம் அடியேனுக்கு: பெருமாள் ஸந்நிதி3யிலேயே சிலர் உம்மை வணங்குகிறார்கள்; தேவரீரும் அவர்களைத் தடுப்பதில்லை; இது ஏன் ?” என்றார். அதற்கு சுவாமி, “நீர் அரசு வேலை செய்பவர். ஒரு வேலையாக அரசரிடம் வருபவர் அரசரின் காலணிகளைத் தம் தலையில் வைத்துக் கொண்டால் நீர் தடுப்பீரோ? அல்லது அக்காலணிகள் தம்மைக் கொண்டாட வேண்டாம் என்று கூறுமோ? அவர் உண்மையில் அக்காலணிகளையா கொண்டாடுகிறார்? அவற்றைத் தலையில் அவர் சுமந்தால் மகிழ்ச்சி அரசனுக்கே அன்றி, அக்காலணிகளுக்கு அன்றே! அடியாரைத் துதிப்பதால் சிறப்பு அடியாருக்கன்று, மகிழ்ச்சியும் பெருமாளுக்கே” என்று கூறினர்.-இதில் எம்பெருமானாரின் பணிவும், எல்லாப் பெருமைகளும் எம்பெருமானுக்கே எனும் கைங்கர்ய மனோபா4வமும், பாகவதருக்குத் தரும் சிறப்பு ப4க3வானுக்கே சேரும் என்பதும் தெளிவாகிறது.

வியலிடமுண்ட பிரானார் விடுத்த திருவருளால்
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம்தோழி! ஓர் தண் தென்றல் வந்து
அயலிடையாரும் அறிந்திலர் அம்பூந்துழாயின் இன்  தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன்களே .
–பாசுரம் 56:

தலைவன் இரவிடைக் கலந்தமையைத் தோழி தலைவிக்கு உரைத்தல் எனும் வகையில் இப்பாசுரம் அமைந்துள்ளது.-அகன்ற இடத்தை உடையவளான பூமி பிராட்டி எம்பெருமானிடம் தனக்கு உதவ வேண்டும் என்று கேட்டிலள்; ஆகிலும் அருள் உணர்வுள்ள எம்பெருமான் அவளை ப்ரளய நீரிலிருந்து மீட்டெடுத்தான். அதே போல் அவன் பராங்குஶ நாயகிக்கும் உதவுவான்.-இதை விளக்கும்போது வங்கிபுரத்து நம்பி “நாம் உய்தி பெறத் தஞ்சமாக நினைக்கத் தக்கது எது” என்று கேட்ட சீடர்களுக்கு, விஷ்ணு த4ர்மத்தில் க்ஷத்ர ப3ந்து3 சொல்வதாக அமைந்துள்ள ஶ்லோகத்தைக் கூறி, எவ்வகையிலும் தகுதி அற்ற, அல்ப அறிவினன் ஆகிய என்னைக் காக்க வேணும் எனும் ப்ரார்த்தனை தகும் என்கிறார். எம்பெருமானார், அது அங்கனமன்று; காளியன் செய்த ப்ரார்த்தனை தகும் என்கிறார்..எம்பெருமானார்,”க்ஷத்ரப3ந்து3 ப்ரார்த்தனையில் நான் உன்னை வணங்குகிறேன் ஆகவே அருள் புரி என்றுள்ளது. அவன் அருளை பெற க்ஷத்ரப3ந்து3 தான் வணங்கியதைக் காரணமாக் கூறுகிறான். ஆனால், மடுவில் கிருஷ்ணனை முற்றாக வளைத்துத் துன்புறுத்திய காளியனோ, தனது தகுதி எதையும் காட்டாமல், அதற்காக எம்பெருமான் தன்னை ரக்ஷிக்க வேண்டும் என்னாத, உன்னை அர்ச்சிக்கவும் துதிக்கவும் நான் ஆற்றல் இல்லாதவன், க்ருபா மாத்ரை மனோ வ்ருத்தி: ப்ரஸீத மே – உன்னுடைய க்ருபை ஒன்றையே நீ காட்டி என்னை ரக்ஷித்தருள்வாய் என்றான். தான் வணங்கியதையோ, ப்ரார்த்தித்ததையோ ஒரு சாதனமாகக் காட்டாமல் எம்பெருமான் க்ருபை ஒன்றையே நினைத்த காளியனின் நினைவே நமக்குத் தஞ்சம்” என்று விளக்கினார்.ஒரு பயனை எதிர்பாராமல், எம்பெருமானை வணங்குவது நம் ஸ்வரூபம் என்பதால் மட்டுமே அநன்ய ப்ரயோஜனராய் ப்ரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை ஸ்வாமி இதில் நல்ல உதாரணத்தோடு நம் மனதில் பதியும்படி அருளிச் செய்தார்.

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே
 – 60-தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்குதல் –

கடல் இத்யாதி –இவ் விடத்தை பட்டர் அருளிச் செய்யா நிற்க – அல்லாத அவயவங்களினுடைய-நிரம்பாமையைச் சொல்லி வைத்து  இதனுடைய பெருமையைச் சொன்னால் விரூபமாகாதோ -என்று ஜீயர் கேட்க –இதிலும் சிறுமையே காணும் சொல்கிறது –இங்கனே சொல்லலாவது தானும்  இன்று -(பால்யத்தில்)-நாளை-இது தானும் சொல்லப் போகாது -என்று அருளிச் செய்தார் — இப்படி விசதமாக பார்க்கிறது இந்த பால்யத்தில்-இத்தனை –யௌவனம் குடி புகுந்தால் ஒறுக்கிப் பார்க்குமது ஒழிய இப்படி நன்றாகப் பாராள் –ஆகையால் இதுவும் பால்யத்துக்கு ஸூசகம் என்றபடி-

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே
 – 62–தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல் 

அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனேசெங்கற் சீரை கட்டி கூப்பிட்டாகிலும் பெற வேண்டும் படி யாயிற்று வடிவு அழகும் படுக்கையும் –அரவணை மேல் – இவள் கடின ஸ்த்தலத்திலே கிடக்க–நீர் மெல்லிய படுக்கையை தேடிக் கிடக்கிறீரே –முகில் வண்ணனே-இத்தை எம்பார் அருளிச் செய்கிற போது –இயலைச் சொல்லுகிறவரைப் பார்த்து -இவ்வளவிலே முகம் காட்டாதே-செங்கற் சீரை கட்ட இருக்கிறவர் -முதலிகளாய்  இருப்பார் –தலையிலே பிரம்புகள் விழிலும்-முகில் வண்ணரே -என்னீர் -என்று அருளிச் செய்தார் –இருவருமான வன்று சேர நிற்கவும்- பிரிந்த வன்று தாய்க் கூற்றிலே நிற்குமவர் இறே இவர் –முகில் வண்ணன் -என்று ஏக வசனமாக சொன்னால் – நம்மை ஏக வசனமாக உதாசீனமாக சொல்லுகிறது -என் -என்றபடி – ஆகையால் முகில் வண்ணர் -என்று பூஜ்யமாக சொல்லீர் என்று அருளிச் செய்தார் -என்றபடி –மிதுனமே உத்தேச்யமாய் இருக்க – எம்பார் பிராட்டி பஷமாய் இருந்து ஈஸ்வரனை வெறுக்கிறது என் என்ன என்று அருளிச் செய்கிறார்-(அன் விகுதி இல்லாமல் அர் விகுதி வெறுத்துப் பேசுவான் என் என்னில் பிரிந்தால் தாயார் பக்கமே ஒதுங்கி இருப்பார் அது போல் பட்டரும் நாச்சியார் திருவிழி விளிக்க ஒண்ணாது என்றாரே )

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே
 – -64 –தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் –

பாமுரு மூவுலகும் -7-6-இதன் விவரணம்-ஓ ஓ என்று அடையாமல் -ஆழ்வார் ஆர்த்தி நம்மால் சொல்ல முடியாதே என்பர் அம் மங்கி அம்மாள் -அதில் வியாக்யானம்-வினையோடு நொந்து இங்கு -வினை -ஸஹஜ பக்தி -பகவத் ப்ரீதியையே சொன்னவாறு-லௌகிக விஷயத்துக்கு மடைமாற்ற விடமுடியாமல் தடுக்கும்-வினை என்பது கர்மம் அர்த்தம் கொண்டால் லௌகிக விஷய ஆசையை பகவத் விஷயத்தில் மாற்ற முடியாமல் தடுக்கும்-அரன் அயன் பெற்றார்கள் என்று கொல் சார்வது -அங்கு அதிகாரம் இல்லாத நான் வணங்குகிறேன் இங்கு ப்ரயோஜனாந்தர பரர்களே அடைந்தார்கள் எனக்கு கிட்டவில்லை அங்கு-ஆர்த்தி மிக்கு உரைத்த பாசுரம் –

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின்  கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே 
– 72-இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் –

இவ்விடத்தே பிள்ளை அமுதனார் -ஒரு கதை சொல்லுவார் –-ஒரு சாது பிராமணர் காட்டிலே தனி வழியே போனானாய்- ஒரு பசு தொடர்ந்து வந்ததாய் – இத்தால் வந்த நலிவை போக்கி நம்மை ரஷிப்பார் யார் -என்று இருக்கிற சமயத்தில் ஒரு புலி வந்து தோன்றி அப்பசுவையும் கொன்று –
அதனுடைய ரத்த பானத்தைப் பண்ணி – இவன் முன்னே வந்து தண்டையை முறுக்கி இட்டு இருந்ததாய் அந்த பசுவையாகில் ஒருபடி பிராண ரஷணம் பண்ணி போகல் ஆயிற்று –-இனி இத்தைத்  தப்பி நம் சத்தையை நோக்குகை  என்று ஒரு பொருள் இல்லை ஆகாதே -என்று-அது போலே இறே இதுக்கும் –-இப்படி பிறரும் அதி சங்கை பண்ணும் படி பலத்தில் த்வரையை யுடைய இவருக்கு அனுபவ ஸித்தி இல்லாமையாலே பிறந்த மோஹமும் பல வை லக்ஷண்ய விஷயமான ஞானமும் நடந்து அலாப நிபந்தநமான கிலேசத்தை விளைக்க ஆர்த்தரான பிரகாரத்தை இருளுக்கு ஆற்றாத ஈடுபாட்டின் மேலே
இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்த தலைவி வார்த்தையால் அருளிச் செய்கிறார்–திங்களம் பிள்ளையும் போழ்க  – அதுவும் நம்மை வந்து நலிந்திடுக –வந்து தோன்றிற்று வாலியதே –
அவ்விருளுக்கு  மேலே இத் திங்களும் வந்து பாதகமாய் தோற்றிற்று – மாமைக்கு இன்று வாழ்கின்றவாறு இதுவோ 
-என்று அந்வயம் –

உலாகின்ற கெண்டை  யொளி யம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள்   முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே 
– -75 –தலைவன் தலைவியின் வூரைப் பற்றி விசாரித்தல் -சன்மம் பல பல -3 -10 –

மானாவிச் சோலை போலே ஆவது அழிவதாய் –காதாசித்கமாக அவன் வந்து முகம் காட்டிப் போகும்-லீலா விபூதியோ –உங்களுடைய வாஸ ஸ்தானம் —வானவர் நாடு -என்கிறபடியே –அவர்கள் இட்ட வழக்காய் இருக்கும் இறே அவ் விபூதி –அஹங்கார மமஹாரங்களாலே -ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம்-நடை யாடாதபடி –பண்ணிக் கொண்டு இருப்பார்கள் இறே இங்கு உள்ளோர் –(அவனது வைகுண்டமோ அடியார்களான நமது வையமோ என்று நாம் நினைப்போம்-மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே-அங்கு ஆழ்வார் ஏக ராஜா-இங்கு ஆழ்வார் தேவநாதன் இருவரும் ராஜாக்கள்
ஈர் அரசு கிடையாதே அங்கு அவர்கள் நீதி வானவர்கள் அன்றோ ) பிள்ளை திரு நறையூர் அரையர் –
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ – அன்றிக்கே அவனதான வையமோ -என்று பணிப்பாராம்
-இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- ஆழ்வாரது ஸ்வரூபத்தைக் கண்டு ஈடுபட்ட பாகவதர் அவரையும் அவரோடொத்த அவரது அன்பரையும் நோக்கி ‘நுமது இடம் அந்த நித்யவிபூதியோ? என்று வியந்துரைத்தலாம்.–அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – என்கையாலே
ஸ்வரூப பிரகாசம் யுடையாருக்கு உத்தேச்யம் நித்ய விபூதி என்றும் இந்த விபூதியிலே யானாலும்
நேமிப்பிரான் தமர் போந்தார் -திருவாய் -5-2-6- என்று அங்குள்ளார் இங்கே வந்தார் என்று சொல்ல வேண்டும்படியாய் இருக்கும் என்றதாயிற்று –

சீரரசாண்டு  தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே
 – -80 –பிரிவு ஆற்றாத தலைவி மாலைப் பொழுதுக்கு இரங்குதல் –

பேரரசே –-எளிய செயல்கள் செய்யுமவன் அல்லனே –செய்யுமவை அடங்க பெருத்தாயிற்று இருப்பது –எம் விசும்பரசே –பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் பிறந்த பின் சம்சாரத்தில் காட்டில் பரம பதம் அணித்தாய் காணும் இவருக்கு இருப்பது –பொன் உலகு ஆளீரோ -என்று முதல்-அதுவே இறே கொடுத்தது –எம்மை நீத்து வஞ்சித்து ஓரரசே –-உபய விபூதிக்கும் தனித் தனியே கடவனோபாதி- என்னை அகற்றி-முடிக்கைக்கும் தனி முடி சூடி இருக்கிறவனே -என்று பிள்ளான் –(என்று எம்பார் என்றும் சிலர் சொல்வர் -என்னை அகற்றி -அது செய்கிற போது பிரியேன் என்று வைத்து பிரிந்து – இஸ் ஸ்வபாவதுக்கு புறம்பு-என்னோடு ஒப்பார் யார் -என்று இருக்கிறவன் ஆயிற்று — என்னால் அல்லது செல்லாதவரை பொகட-வல்லார் யார் – என்னோபாதி இல்லையே -என்று இதுக்கும் தனி முடி சூடி இருக்கிறவன் ஆயிற்று-என்று பட்டர்-எம் விசுபரசே!= பரமபதத்தைப் போலவே எம்மையும் அநந்யார்ஹ சேஷமாக்கிக் கொள்ளதக்கவனே! என்றபடி.-முதலில் என்னை விட்டுப் பிரியவேமாட்டேன், என்று சொன்னதும், பின்பு ‘இன்ன காலத்தில் வருவேன்’ என்று காலங் குறித்துக் கூறினாலும் இரண்டும் பொய்யாம்படி. தன்னைப் பிரிந்து சென்று நெடுநாள் வாராது விளம்பித்தது பற்றி “எம்மைநீத்து வஞ்சித்த ஓராசே” என்றாள். ‘இவ்விடத்து ஓராசே!’ என்றது இப்படியும் ஒரு தலைவனுண்டோவென்று குறை கூறியவாறு.–“எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே!” என்பதற்கு- “என்னை உபேக்ஷித்து உன்னைக் காட்டாதிருக்கிற இந்த ஸ்வபாவத்திலே முடிசூடியிருக்கிறவனே!”
என்று விசேஷார்த்தம் உரைப்பர்.

விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது  இத் தையலுக்கே – – 
-83 –அன்றிலின் குரலுக்கு தலைவி தளர்வதைக் கண்டு தோழி இரங்குதல் –

விளரிக் குரல் அன்றில்–விளரி என்று உச்சமான த்வனிக்கு பெயர் – -உயர்ந்த த்வனியை  உடைத்தாம் படி கார்யப்பாட்டால் கூப்பிடுகிற அன்றிலினுடைய-மென்பெடை-கலக்கும் போதும் பூ தொடுமா போலே தீண்டும்படி யாயிற்று மார்த்வம் –இம் மார்த்வத்திலே விரஹமுமானால் பாடாற்றப் போகாது இறே-மேகின்ற –மேவா நிற்கிற –நித்ய சம்ஸ்லேஷமாய் செல்லா நிற்கும் இறே – அநபாயினிக்கு ஸ்மாரகமாய் இருக்கிறபடி –முன்றில் பெண்ணை –முன்றில் என்று முற்றத்துக்கும் வாசலுக்கும் பெயர்-முற்றத்துப் பனை நடலாமோ என்று இவ் விடத்துக்கு நிர்வஹியா நிற்கச் செய்தேவங்கி புரத்து நம்பியை சிலர் கேட்க –   அதுவோ இவள் கார்யம்  தளிரும் முறியுமாய் செல்லுகிறது-என்று பணித்தாராம் –(அநர்த்தப்பட்டுப் போனதுக்கு இதுவே ஹேது என்றவாறு ) முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந் தீர்கின்ற வன்றிலின் கூட்டை- பிரிக்க கிற்பவர் யார் கொலோ -பெரிய திரு மொழி – 11- 2- 1- –அவனை கொடு வருவர் யாரோ -என்கிறபடி இறே –(நம்மாழ்வார் அங்கி பாசுரம் போல் அங்க பேசுறதுக்கு இதுவும் )அல்லது பிரிப்பன பிரித்து கூட்டுவன கூடித் திரிகிறாள் அன்றே இவள்-முளரிக் குரம்பை –-இதனுடைய சௌகுமார்யத்துக்கு ஈடாக – தாமரை இலைகளையும் பூக்களையும்-கொடு வந்து – கூடாக பண்ணிவிக்கும் இறே –அன்றிக்கே –முளரி -என்று முள்ளாய் –முள்ளாலே செய்த-கூடு என்னவுமாம் –இது இதுவாக –இக் கூடு கூடாக –இது இப்படி குடில் கட்டி கொண்டு போந்து – பாதகமாய் அற்ற பின்பு-மென் பெடையோடே மேவா நின்றுள்ள விளரி குரல் அன்றிலினுடைய முன்றில் பெண்ணை–முளரிக் குரம்பை இது இதுவாக –முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும் –

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே  
– – -85-மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல் –

ஆழ்வான்-திருக்கோட்டியூர் நம்பி பாடு நின்றும் வந்த அனந்தரத்தில்-பிள்ளைப் பிள்ளாய் -என்னுள்ளான் என்ன – வேண்டும் ஸத்தாநே –ஆழ்வார் -அடியேன் உள்ளான் -என்றபடி-கண்டாயே -என்று பணித்தார் –பிள்ளைப் பிள்ளாய் -என்று ஆழ்வானைக் குறித்து நம்பி அருளிச் செய்தார் என்னவுமாம் –அன்றிக்கே-ஆழ்வான் தம்முடைய சிஷ்யரான பிள்ளை பிள்ளையைக் குறித்து அருளிச் செய்தார் -என்னவுமாம் –அடியேன் அடி யாவி –பெண் பிள்ளை ஆவி என்னவுமாம் தாயார் வார்த்தையாக –

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து  ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே
 – – 86-தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துதல் –

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் -தாமரைப் பூ பசிய இலையின் மீது உயர்ந்து விகஸிப்பது போலே திரு நாபித் தாமரை மலர் பசிய திருமேனி மீது எழுந்து தோன்றி இருக்குமே
அடைக்கமலமாக புகுந்த சிவனுக்கு நீக்கி -ரக்ஷகமாக இருந்து நீக்கினவன் என்றுமாம் – அடைக்கலத்தோங்கு அயன் –என்று தன்னிடம் அடைக்கலமாக வந்த நான் முக்கண் என்றுமாம் அடைக்கலம் என்றால் ரஷிப்பதற்கு உரிய பொருளும் ரக்ஷகனையும் குறிக்கும்
கமலத்து அலர் -தாமரைப் பூ என்று கொண்டால் தோன்றிய -வருவித்திக் கொள்ள வேண்டும் – முடை -கெட்ட நாற்றம்-புடைக் கலந்தானை-புடைக்க அலர்ந்தானை–பட்டர் திருகோட்டியூரி லெழுந்தருளி யிருக்கும்போது ஒரு ஸ்வாமி வந்து ‘அடியேனுக்கு ஓருரு திருவிருத்தம் பொருளருளிச் செய்யவேணும்’ என்று பிரார்த்திக்க, ‘நம்பெருமானைப்பிரிந்த துயரத்தினால் எனக்கொன்றும் சொல்லப் போகிறதில்லை;-நஞ்சீயர் பக்கலிலே கேட்டுக்கொள்ளும் என்று சொல்லி, நஞ்சீயர்க்கு நியமிக்க, சீயரும் பொருளருளிச் செய்து வகையில் இப்பாட்டளவிலே வந்தவாறே “புடைக்க அலந்தானை” என்கிற பாடப்படியே நஞ்சீயர் பொருளுரைக்க, பட்டர் அதுகேட்டு ‘ஜீயா!” “அலந்தானை” என்ற பாடத்திற்காட்டிலும் “அலர்ந்தானை” என்ற பாடம் ஆழ்வார் திருவுள்ளத்திற்கு மிகப் பொருந்தும் போரே இன்று தோன்றுகின்றது’ என்றருளிச் செய்தாராம். –அவதார பிரயோஜனம் பெற்றோமே என்று மகிழ்வான்-ஆற்றாமை மிக்கு ஆழ்வார் திருக் கல்யாண குணங்களையும் திரு நாமங்களையும் சொல்லி முறையிடுகிறார் –

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று   தலைப் பெய்வனே
 – – 89-தலைவனது  கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் —

பூவினை மேவிய தேவி மணாளனை-அத்யந்த போக்யதையைப் பூரிப்பதான போக்ய அதிசயத்துக்கு ஸூசகமாய் இருக்கிற பூவிலே நித்ய வாஸத்தை யுடையளாய்-நிரதிசய வை லக்ஷண்யத்தை யுடைத்தான ஸ்வரூபாதிகளாலே த்யோதமானையாய் இருக்கிற-பெரிய பிராட்டியாருக்கு நித்ய போக்யனானவனை-(இதம் இத்தம்-ஸ்வரூபத்துக்கும் ஸ்வாதந்தர்யத்துக்கும் நீயே நிரூபணம் பட்டர்புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை-இந்த மேன்மை யுண்டாய் இருக்கச் செய்தே சிறுமை என்று இகழாதே பசுக்களை மேய்க்கக் கடவனாய் அதிலே நிலை நின்ற சிக்கனவை யுடைய இடையனானவனை-அன்றுலகீரடியால் தாவின வேற்றை-இப்படி இனியனானாலும் தன்னுடைமை பிறர் கொள்ளும் அளவில் தன் கால் கீழே இட்டுக் கொள்ளும் மேனாணிப்பை யுடையவனை–எம்மானை-கீழ்ச் சொன்ன ஸ்வபாவங்களைக் காட்டி என்னை அடிமையாக்கிக் கொண்ட ஸ்வாமி யானவனை–எஞ்ஜான்று தலைப் பெய்வனே –இப் பிரகாரங்களாலே கிட்டக் குறை யில்லை-அது எக்காலம் என்றதாயிற்று –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – 
-95 ––தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –

அநாதியான சரீர ஸம்பந்தத்தாலே விஸ்லேஷித்துப் போகாத படி என்னை அங்கீ கரித்து அருள வேணும் என்று நிருபாதிக பந்துவான ஸ்ரீ யபதியை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய பிரபத்தி நிஷ்டையை அருளிச் செய்கிறார் ––பக்தி பாரவச்யத்தாலே யாதல் –அயோக்யா அனுசந்தானத்திலே யாதல் –ஏதேனும் ஒரு படி-கண் அழிவு சொல்லிக் கை வாங்காதே –தன் பக்கலிலே பிராவண்ய அதிசயத்தை உடையேனாய் –இதர விஷயங்களிலே அருசியையும் உடையேனாய் –பண்ணின மகோ உபகாரத்தை அனுசந்தித்து –
அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார் –இவ்விடத்தில் ஜீயர் குறியாக அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு –திருக் கோட்டியூரிலே பட்டர் எழுந்து அருளி இருக்கச் செய்தே –அங்கே ராமானுஜ தாசர் என்கிற ஸ்ரீ வைஷ்ணவர் –அடியேனுக்கு திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் என்ன பெருமாளைப் பிரிந்த சோகத்தாலே நான்-ஒன்றுக்கும் ஷமண் அல்ல –ஜீயரே நீரே அருளிச் செய்யும் என்ன –ஜீயரும் அருளிச் செய்து கொடு போக்கு நிற்கச்-செய்தே –வளவன் பல்லவதரையர் -என்று திருக் கோட்டியூர் நம்பி-ஸ்ரீ பாதத்தை உடையார் ஒருவர் அனுசந்தித்து கொடு போந்தராய் – அவர் இப்பாட்டு-அளவிலே வந்தவாறே -கண்ணும் கண்ணநீருமாய் -புளகித காத்ரராய் -இருக்க –
இத்தைக் கண்டு — பாட்டுகளில் வார்த்தை சொல்லுவது -இனி பிரசங்கித்த மாத்ரத்திலே வித்தர் ஆனீரே என்ன –நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே- எம்பெருமான்-திரு முன்பே இப் பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் -என்று அருளிச் செய்தார் – அத்தை-இப்போது ஸ்மரித்தேன் என்ன –அவர் இதிலே ஏதேனும் அருளிச் செய்யும் வார்த்தைகளை நினைத்து-இருப்பது உண்டோ -என்ன –அது எனக்கு போகாது –இப் பாசுர மாத்ரத்தை   நினைத்து இருப்பேன் -என்றாராம் –
நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று ஐந்தாறு நாழிகை போது இத்தையே கொண்டாடி அருளிச் செய்தார்

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –
 – 99-தலைவி தனக்குத் தலைவன் இடத்து உள்ள அன்பு உறுதியைத் தோழிக்கு கூறல் —

ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க  புக்கால் –பிள்ளை உறங்கா வல்லி  தாசர் கண்ணும் கண்ணீருமாய் அத்தை இத்தை (பரத்வத்தையும் ஸுலப்யத்தையும் )பிரசங்கித்து சிதிலராவார் –அத்தைக் கண்டு -கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று – சதுர் ஆஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே – பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-
மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –கள்வன் கொல் யான் அறியேன்  கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க —அந்த பெண் பிள்ளையின் பர்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக –மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –-இப்படி இருக்கிறவன் இறே  தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் -(இவரே நஞ்சீயர் பட்டர் இடம் சேர்த்து வைத்தார் -தீர்த்த வாசி ப்ராஹ்மணர் இவ்வாறு திருமழிசை தாசர் ஆனார்)
நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் –அர்த்தாத் -யாத்ருசிகமாக -அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து – அவரும் தாமுமாக (திருமழிசை தாசரும் நஞ்சீயருமாக )திருவாய் மொழி ஓதா நிற்க –(கந்தாடை )ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் -அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க-புக -வேண்டா -என்று கை கவித்து கொடு வந்து –நீங்கள் கோயில் கூழைத் தனம் (நியதி இல்லா அனுபவம் )-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன –லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ (பட்டர்)பாதத்திலே யாயிற்று -என்றாராம் –

பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -(எம்பெருமானார் பற்றிய வ்ருத்தாந்தம் )
இரவு (பால்)அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் –முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில் நாலிரண்டு ஒவியல் (உத்தரீயம் )கொண்டு பரிமாற-
வேண்டுபடியாய் ஆயிற்று கண்ண நீர் வெள்ளமிட்ட படி -(வடுக நம்பி இப்படி ஆவாராம் )பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாராய் – அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் –அப்படியே செய்து கொடு போந்தார்களாய் – இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து – இத்தை ஒரு நாள் குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –

கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே
புகும் போதிலே தாழ்த்து புக –ஏன் நீ வேகினாயீ -என்ன – ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானாய் –இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள –
பிறந்தவாறு -என்றானாய் –அதில் சொன்ன வார்த்தைகள் என்  -என்ன –ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் –நீ கேட்ட படி என்-அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி –அநந்தரம்-ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து –நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் வாழ்வாரும் ஒருவரே – இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி  நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் –இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –என்ன பரம சேதனனோ-என்று அருளிச் செய்தாராம் –

நீர் தெளிந்து இருக்கிற போதே –உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன – ஆகில் அத்தைக் கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே – இப் பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –போக்யதையில் நவநீத ஸுர்ய அபதாநத்தில் காட்டில் இல்லை என்றீர்-ஸம்ஸார உத்தாரணத்துக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது இவ்விஷயத்தை என்ன-பிரஜை விழுந்த கிணற்றிலே ஒக்கக் குதித்து எடுக்கும் தாயைப் போலே ப்ரளயம் கொண்ட பூமியை முழுகி எடுத்த மஹா உபகாரகனே என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்கிறார் –

ஒரு விசை திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு நடந்த இடத்தே இவ் அர்த்தத்தை அருளிச் செய்வதாக ஒரு ஏகாந்த ஸ்தலத்தை எம்பெருமானாரையும் கொண்டு புக்கராய் –திருப்பணி செய்வான் ஒருத்தன் அங்கே உறங்கி குறட்டை விடா நிற்க –அவனைக் கண்டு அனர்த்தப் பட்டோம் -என்று-
இவ் விசைவுக்கு தவிர்ந்து பிற்றை இசைவிலே இத்தை நம்பி அருளிச் செய்ய கேட்டு அருளி
ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற அளவிலே-உச்சி வெய்யிலிலே வந்து புகுந்து
நம்பி இவ் வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று அருளிச் செய்தார் –உனக்கு இது சொல்லாது இருக்க மாட்டேன் இறே -என்று சஹகாரி நைர பேஷயத்தை அருளிச் செய்தார் இறே  –அல்லால் இல்லை என்பது இதுவேஈஸ்வரனை ஒழிந்த தன்  ஸ்வீகாரமும் உபாயம்-இல்லை என்பதற்கு இந்த ஐதிஹ்யம்  அருளிச் செய்கிறார் –பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலான எம்பெருமானாரும் –அர்ச்சாவதாரத்தில் விபவ சமாதி பண்ணுவதும் –மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் –தம்முடைய பரம சித்தாந்தத்தை வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில்இங்கும் அங்கும் ஞானப்பிரானை அல்லார் இல்லை நான் கண்ட நல்லதுவே-ஞானம் ப்ரேமம் பக்தி கொடுத்து அதுக்கும் மேலே –நமக்காக அஹம் ஸ்மராமி- நயாமி பரமாம் கதிம் –அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் -காஞ்சி தேவப்பெருமாள் ஆறு வார்த்தைகளில் ஓன்று -இதன் அடிப்படையிலே –பட்டர் -கௌசிக புராணத்தில் மற்ற அவதாரங்களை விட வராஹ அவதார ஏற்றம்-ரஹஸ்ய சிந்தாமணி -தேசிகன் வராஹ சரம ஸ்லோக வியாக்யானம்-

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே
 – – 100-முனியே நான்முகன் -10-10-

சாதநாந்தரங்களை அனுஷ்டித்தாலும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கும் படியையும் சொல்லிக் கொண்டு ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டு-தடுத்தும்-வளைத்தும் அவனைப் பெற வேண்டும்படியான பரம பக்தி தலை எடுத்து நிர்க்குணர் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும் அவனுக்கும் தம் கார்யம் செய்து அல்லது ஸ்ரீ திரு நாட்டிலே குடி இருப்பு அரிதாம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தியோடே திருவடிகளிலே சரணம் புக
ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட இவர் அபேஷித்த படியே ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து தோற்றி கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தையும் அறுத்து ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய சூரிகளோடே ஒரு கோவை யாக்கி-நித்ய கைங்கர்யம் கொண்டருள-
அத்தாலே-தாம் நிரஸ்த பிரதிபந்தகராய் பிராப்த சமஸ்த மநோ ரதரான படியை-சொல்லித் தலைக் கட்டுகிற முனிய நான் முகனே யில் அர்த்தத்தை முனி மாறன் இத்யாதியாலே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்
சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று-கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு-அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே-பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் –கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி–இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம்–முடிந்த அவா என்றது பரமபக்திஇவை ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள் -என்று இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் —ஏவம்விதமான பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று —

—-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -52-அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே –அந்தாமத் தன்பு -2-5-

April 7, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

மண் மாதர் -பூமா தேவி திருமுலைத்தடம் –-தென்னன் உயர் பொறுப்பும் தெய்வ வடமலையும் இத்யாதி காரார் வரை கொங்கை -இத்யாதி– இரண்டு திருமலையும் -இதன் மேல் நின்று கண்ணீரே நீராக அருவியாக பெருகுகிறதாம்-திருமால் கொடியான் என்று சொல்லி -தனக்கு மிதுனத்தில் கைங்கர்யம் கொடுக்காமல்-இந்த அருவி சப்தமே -என்று சமாதானம்-மூவரும் அத்தனை நெருக்கம் -இது போல் வராதே-மூன்று நிர்வாஹங்கள் இதற்கு-நஷ்டம் பராக் கடாக்ஷம் இல்லாத போது த்ரிபுவனங்களும் இருக்க மழைக்கண் நோக்கு -பிராட்டி கடாக்ஷம் பெற்று சத்தை பெற்றனவே–அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு -2-5–இதன் விவரணம்-அங்கு -உள்ளார் இடம் செய்த அன்பை ஆழ்வார் மேல் வைக்க –இது காறும் இல்லாமல் இருக்க இப்பொழுது சேர்ந்த பின்பே பூர்ணன் ஆனான்
கலந்த பின்பே அனைத்தும் –திவ்ய ஆபரணங்கள் -திவ்ய ஆயுதங்கள் –உள-ஏற்கனவே இருந்தும் இல்லாததும் சமம் முன்பு – -இப்பொழுது தான் உளவானவை ஆனதே-தோழி -கால மயக்கு துறை –
மழையே இல்லை –பூமாதேவி யுடைய கண்ண நீரே -என்று சொல்லி சமாதானம் படுத்த முயல்கிறாள் 

இப்படி இவருடைய ஆர்த்தியைக் கண்ட ஸூஹ்ருத் பூதர் அனுபவ யோக்ய தசையிலே அனுபவிக்கப் பெற்றிலோம் -ஆசந்ந ரானார் நித்ய அனுபவம் பண்ணப் பெறா நின்றார்கள்-நமக்கு அவனோடு உண்டான அசாதாரண சம்பந்தமும் அகிஞ்சித் கரமாயிற்றே -என்று இவர் ஈடுபடுகிறாராக நினைத்து
நிதர்சன முகத்தாலே ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்யத்தை ஸூசிப்பித்து ஆற்றின பிரகாரத்தை
காலம் கண்டு கலங்கின தலை மகள் ஆற்றாமையை தோழி காலம் மறைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-கலந்து பிரிந்த தலைமகன் கார் காலத்திலே வருகிறோம் என்று போனானாய் காலமும் வந்து வர்ஷிப்பதும் செய்யா நின்றது என்று தலைமகள் தளர தோழியானவள்
அக்காலம் அன்று காண் இது –பெரிய பிராட்டியார் ஸர்வேஸ்வரனையும் கொண்டு திருவனந்த ஆழ்வான் மேலே ஸம்ஸ்லேஷ அர்த்தமாக ப்ரவேசிக்க அத்தைக் கண்ட ஸ்ரீ பூமிப் பிராட்டியானவள்
இப்பரிமாற்றத்துக்கு நான் கூட்டு அன்றிக்கே ஒழிவதே -என்று அழுகிற கண்ணநீர் காண் இது
நீ நினைக்கிற வர்ஷம் அல்ல காண் இது -என்று இங்கனே காலத்தை மயக்கி தரிப்பிக்கிறாளாய் இருக்கிறது

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே
– 52–கால மயக்கு –

அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன்
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே
வாய்ந்த வன்பை நாடோறும் வை––15—ஆடியாடி யிலே தாம் பட்ட இடர் எல்லாம் போம்படி ஆசைப் பட்டபடியே அடியார் குழாங்கள் உடன் கூடி வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு தம்மோட்டைக் கலவியாலே அவன் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பை மண்டி அனுபவித்துப்ரீதராய்ச் செல்லுகிற
அந்தாமத்து அன்பில் அர்த்தத்தை அந்தாமத்து அன்பாலே -அருளிச் செய்கிறார் –அந்தாமத்து அன்பு செய்யும் படியான ஆழ்வார் திருவடிகளிலே உன் தன் மொய் கழற்கு அன்பை முயல்கின்றேன் – என்கிறபடியே-மனசே ஸூசங்கதமான சங்கத்தை நித்யமாக நிஷிப்தம் ஆக்கு நிதியை அடியிலே இட்டு வைப்பாரைப் போலே அன்பை அடியிலே இட்டு வை-

அழைக்கும் கரும் கடல்–அபாம் அபி சுக்லம்-என்று ஜலத்துக்கு ஸ்வாபம் வெளுப்பே ஆகிலும்  – நீர் செறிவாலே கறுத்து இருக்கும் இறே- கீழ் கறுத்து மேல் வெளுத்த திரைகளை உடைத்தாய் இருந்த போது – நீல ரத்னத்தாலே செய்ததொரு ஸ்தலத்திலே ஸ்படிகத்தாலே சோபன பரம்பரையாக (படிக்கட்டு)
படுத்தால் போல்-ஆயிற்று இருக்கிறது –சக்யம் அம்பர மாருஹ்ய மேக சோபான பந்க்திபி
குடஜ்   அர்ஜுன   மாலாபிர் அலங்கர்த்தும் திவாகர
–-மால்யமான் என்னும் மலை பகுதியில் இருந்த போது பெருமாள் இளைய பெருமாள் இடம் அருளிய வார்த்தை-சக்யம் (கிஷ்கிந்தா)-இத்யாதி –மேகங்களான சோபன பங்க்திகளாலே ஆகாசத்திலே ஏறி –அக்காலத்திலே அலரக் கடவ- குடஜங்களையும் அர்ஜூனங்களையும் கொண்டு –நம் குருவான ஆதித்யனுடைய மத்யத்திலே-சதா த்யேயனாய் இருக்கிற சர்வேஸ்வரனை உபாசிக்கை சக்யமாய் இருந்தது – இதுக்கு குறை இத்தைனையும் இறே-நாம் பெரிய பெருமாளை சமாராதனம் பண்ணப் புக்கால் –சஹ பத்ன்யா -என்றபடி –கூட நின்று எடுத்து-கை நீட்டும் மைதிலி உண்டாக பெறாத இது ஒன்றும் இறே குறை-வெண் திரைக்கே கொண்டு போய் –அத் திரைகளால் அலைக்கிற இதிலே நீர் நடுக்க – நடுங்க கொண்டு போய்–அலர்வாய் – அலர் -தாமரை-தாமரைப் பூவைப் போலே இருந்துள்ள திருப் பவளத்தை உடையவள்-என்னுதல் –அலரிலே உண்டானாவள் –வாய் -இடம்-தாமரையை தனக்கு உத்பத்தி ஸ்தானமாய் உடையவள் என்னுதல்–மழைக் கண் மடந்தை –போக ஸ்தானத்தையும் பார்த்து இவளையும் பார்த்தால்-பின்னை அவள் பின்னே போம்படியாய் –ஒரு பாட்டம் மழை விழுந்தால்  போலே ஆயிற்று –குளிர நோக்கினால் நோக்கி இருப்பது –பின்னை அவள் கருத்தை பின் செல்ல வேண்டும்படியாய் இற்று இருப்பது –அரவணை ஏற –திரு அனந்தாழ்வான் மேலே சம்ஸ்லேஷ அர்த்தமாக சென்று ஏற –மண் மாதர்- பூமிப் பிராட்டி–விண் வாய் அழைத்து –விண்ணாகிற வாயாலே அழைத்து -என்னுதல் –விண்ணிலே (வாய் -இடம் )நின்று அழைத்து என்னுதல் –திரைகள் மேல் நோக்கிக் கொந்தளித்து -ஆகாசத்திலே சப்தித்த போது-பூமியானது அழைத்தால் போலே ஆயிற்று இருக்கிறது –புலம்பி பல பாசுரங்களைச் சொல்லி புலம்பி–முலை மலை மேல் நின்றும் –முலைகளாகிற மலைகளில் நின்றும்-ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு பூமி விபூதி ஆகையாலே -மலைகளை முலைகளாக சொல்லலாம் இறே–காரார் வரை கொங்கை -இத்யாதி--ஆறுகளாய் –வர்ஷித்தவாறே – மலைகளில் நின்றும் அருவிகள் விழுந்து நிரம்பி போகா நிற்கும் இறே –மழைக் கண்ண நீர் – மழை போல் இருந்துள்ள கண்ணீர் – மற்றை போது மழையான கண்ண நீர் தானாய் இருக்கும் இறே–திருமால் கொடியேன் என்று –-இருவருமான சேர்த்தி பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –அது நமக்கு இழவுக்கு உடல் ஆவதே –நீர்மைக்கு உடலானது -க்ரௌர்யத்துக்கு உடலாய் தலைக் கட்டுகிறதே –என்று வார்கின்றதே –அவனுடைய கொடுமையைச் சொல்லி அழுகிறவளுடைய கண்ணீர் ப்ரவஹிக்கிற படி காண் –பிராட்டியும் சர்வேஸ்வரனும் சம்ஸ்லேஷத்தில் ஆரம்பிக்க – ஸ்ரீ பூமிப் பிராட்டி அது கண்டு பொறுக்க மாட்டாமை-அழுகிறாள்  காண் என்று- அவன் குறித்து போன கார் காலம் வந்து வர்ஷிக்க
அத்தை மயக்குகிறாள் தோழி

அவளோடு அவன் கலந்த போது அவயவியோடு கலந்தால் போலே இவர்கள் இருக்கவும் –
இவர்களோடு கலந்த போது தன்னுடைய ஸ்தன பாஹூ  திருஷ்டிகள் உடன் கலந்தால் போலே அவள் நினைத்து இருக்கவும் – இப்படி இவர்களுடைய ஸ்வரூபமாய் அபரிச்சின்ன விஷயம் ஆகையாலே –
எல்லாரும் கூடி அனுபவிக்க வேண்டி இருக்க -இருவருக்கும் பாத்தம் போராதே ஷூத்தர விஷயங்களில் உண்டான சாபத்ன்யம் இவ்விஷயத்தில் உண்டாக சொல்லுமது உப பன்னம் ஆம் படி எங்கனே என்ன –இச் சோத்யத்துக்கு முன்புள்ள முதலிகள்- தானும் அவளுமான போகத்துக்கு நாம் ஸ்ரக் சந்தனாதிகளோ பாதியாய் இருக்க   என்னை அநாதரித்து போவதே  என்று இன்னாதாய் அழுகிறாள் -என்று பரிஹரித்தார்கள் –இத்தை ஆளவந்தார் கேட்டருளி –-வடிவிணை இல்லா மலர் மகளை இந்நீர் நடுங்க நடுங்கும்படி கடலிலே கொடு போவதே – படுக்கையாக நான் கிடக்கச் செய்தே -என்று
ஸ்ரீ பூமிப் பிராட்டி அழுகிறாள் காண்
-என்று அருளிச் செய்தார்–இத்தை  ஸ்ரீ பட்டர் -கேட்டருளி –
இது   எல்லாம் வேண்டாம் காண்- அனுபபன்னமாய் இருப்பதோர் அர்த்தத்தைச் சொல்லவே -இது எங்கனே கூடும்படி என்று தலைமகள் நெஞ்சிலே படும் — அவள் விசாரித்து நிர்ணயிக்கும் காட்டில் அவன் வந்து கொடு நிற்கும் -என்னும் விஸ்ரம்பத்தாலே சொன்னார்களாக அமையும் காண் -என்று அருளி செய்தார்-ஒரு ஆச்சார்யர் நம்பிள்ளை இடத்தில் குறைய நினைத்து தாமே திரு விருத்தத்தைப் பார்த்துக் கொண்டு போக இப் பாட்டு அளவாக ஒரு வகையாக நிர்வஹித்து இது தெரியாமையாலே ஒருத்தரும் அறியாதபடி அர்த்த ராத்திரியிலே வந்து பிள்ளையை அழைக்க இப் பாட்டினுடையவும் இவருடையவும் ஸ்வ பாவம் அறியுமவர் ஆகையால் அழைக்கும் கருங்கடலோ என்றாராம் என்று ஆத்தான் அருளிச் செய்வர்

கால மயக்கு துறை –7-/-18-/52-/-68-பாட்டுக்களிலும் இதே துறை –-ஆற்றாமை மிக்கு -விரக காலம் நீடிப்பதால் மீண்டும் மீண்டும் இதே துறை வரும்-கடல் தன் மகளான ஸ்ரீ தேவியை இனிய குரலால் அழைத்து அலைகள் ஆகிற கையால் நீட்டி அவன் இடம் சேர்க்க-பூ தேவி கொங்கைகள் மலைகள் மேல் ஆறாக பெருக- காரார் வரைக் கொங்கை –திரு மடல்–திருமால் கொடியேன் என்று வார்கின்றதே -திருமகள் மேல் காதல் பித்து –பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு – பல நாயகிகள் உடையவனும் இது இயல்பு காண் –பூ தேவி போலே பராங்குச நாயகி உன்னையும் உபேக்ஷித்தான் -என்று சொல்லி
நாயகி ஆராயாது தொடங்கி ஆற்றாமை குறையுமே-திருப் பாற் கடல் -கருங்கடல் என்னலாமோ என்னில் – நீல ரத்னத்தை பாலில் இட்டால் அப்பால் முழுவதும் மணி நிறம் ஆகுமே –
பிராணவாகார விமானம் நிறம் மாறியது போலே -பெரிய பெருமாள் நிழலீட்டாலே கருங்கடல்-
பெரிய கடல் என்றுமாம் -கருமை -பெருமை –

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்-மழைக் கண் மடந்தை யரவணை ஏற -பிறந்த அகவாசி தோன்ற ஆதரித்து அழைப்பாரைப் போலே அழைப்பதாய் தன்னுள் அகவாயில் கண் வளருகிற ஸர்வேஸ்வரன் திருமேனியின் நிழலீட்டாலே ஸ்யாமளமான கடலானது தன்னுடைய வெளுத்த திரக் கைகளாலே எடுத்துக் கொண்டு போகப் போய் தாமரைப்பூ இடத்திலே இருக்கிற
மழை போலே அத்யுதாரமான கண்ணை யுடையளாய் மடப்பம் முதலான ஸ்த்ரீத்வ குணத்தாலே பூர்ணையாய் இருக்கிற பெரிய பிராட்டியார் திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே ஏற–குளிர்ந்த கண் -என்றுமாம்-மண் மாதர்-பூமியாகிய பிராட்டி யானவள்–விண் வாய் அழைத்து புலம்பி-தானும் கிட்டு அனுபவிக்கப் பெறாத இழவாலே ஆகாசத்திலே மேக த்வனி முகத்தால் புலம்பி அழைத்து–முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்–பூமிக்கு முலையாய் இருக்கிற மலை மேல் நின்றும் ஆறுகளாகிற பிரவாகத்தை யுடைத்ததாய்க் கொண்டு–மழைக் கண்ண நீர்-வர்ஷமான கண்ண நீரானது–திருமால் கொடியேன் என்று வார்கின்றதே–பெரிய பிராட்டியாருக்குப் பிச்சானாவான் கொடியனாய் இருந்தான் என்று வடியா நின்றது என்று உத் ப்ரேக்ஷையாலே காலத்தை மயக்கி உரைத்தாளாயிற்று –இத்தால்-இவருடைய ஆர்த்தியைக் கண்ட ஸூஹ்ருதுக்கள் நித்ய அநபாயினி யான பிராட்டியாரோடு ஒத்த போகத்தை யுடைய ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு க்ஷண விஸ்லேஷத்தில் அதிசய ஆர்த்தி பிறக்கும்படி அன்றோ(இது நாலாவது நிர்வாகம் –கீழ் பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகத்தில் மூன்று பார்த்தோமே )
அத் தலையில் வை லக்ஷண்யமும் ஸ்வா தந்தர்யமும் இருக்கும்படி நீர் அவன் செய்தது கண்டு ஆறி இருக்கை காணும் பிராப்தம் என்று இவரை ஆஸ்வஸிப்பித்ததாயிற்று
பூமி பக்கல் யுண்டான இந்த உத் ப்ரேக்ஷை ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்யத்துக்கு ஸூசகம் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்-அழைக்கும் போகத்துக்கு ஏகாந்தமான ஸ்தலம் இங்கே யுண்டாய் இருக்க போக்தாக்களாய் இருக்கிற நீங்கள் வாரிகளோ என்று அழைக்கிறாப் போலே யாயிற்று
கடல் கோஷிக்கிற படி
–கருங்கடல் வெண் திரைக்கே-நீர்ச்சேர்த்தியாலே கறுத்து இருக்கும் இறே
கீழ் கறுத்து அவகாசம் யுண்டாய் மேல் திரைந்து காட்டின பொது வெளுத்து இருக்கும் இறே
அபாமபி சுக்லம் -என்று ஜலத்துக்கு ஸ்வ பாவம் வெளுப்பே யாகிலும் அந்நீர்ச் சேர்த்தியாலே கறுத்து இருக்கும் இறே கீழே கறுத்து மேலே

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி–மண் மாதர் விண் வாய் அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய் மழைக் கண்ண நீர் திருமால் கொடியேன் என்று வார்கின்றதே –=வாய் -இடம்-ஸ்வாவதாரத்தில் அவன் பிரிவைப் பொறாத மண் மகளுக்காக இவ்வாகாசத்தை தனக்கு இடமாகக் கொண்ட மேகங்கள் வேங்கடவனைத் தன் முழக்கத்தால் அழைத்ததாயிற்று-அதுக்கு அவன் வாராமையாலே அவனுக்கு இருப்பிடமாகிற முலையில் நின்றும் அவன் கேட்கத் தன் சீர் முழக்கத்தால்
தான் அவன் கொடுமைகளைப் புலம்பிக் கொண்டு மழையாகிற தன் கண்ணீர்கள் ஆறுகளாய்ப் பெருக அழா நின்றதே-மழை -மேகம்-வார்கின்றதே -பெருகா நின்றதே –

ஸ்வாபதேசம் – எம்பெருமானுடைய ஸ்வாதந்தர்யம் -காட்டுமே-இத்தால் – நாமும் தேவிமார் போலே அனுபவிக்கப் படுபவர் –-கால விளம்பத்துக்கு ஆறி இருக்கவே வேண்டும் -என்றவாறு –

ஸ்வாபதேசம்-பகவத் லாபத்தால் அல்லது கால ஷேபம் பண்ண இவர்க்கு அரிதாகையாலே பார்ஸ்த்வஸ்தர் அநுப பன்னங்களைச் சொல்லியாகிலும் ஆஸ்வசிப்பிக்க வேண்டும்படியான தசை பிறந்தபடியைச் சொல்லுகிறது –

தாத்பர்யம்--வர்ஷா காலத்தில் வர்ஷம் குறித்துப் போன நாயகன் அக் காலம் வந்ததும் வருவதாகச் சொல்லிப் போக வர்ஷமும் வர அவன் வரவில்லை -என்று ஆர்த்தி விஞ்சி நாயகி இருக்க
தோழியானவள் இது வர்ஷா காலம் அல்ல வந்தால் அவனும் வந்து இருப்பான் என்று சொல்ல
மழை கொட்டுகிறதே-ஆறுகளும் பெருகா நின்றனவே என்ன
நீல ரத்னம் -படிக்கட்டுக்களில் போவாரைப் போல பெரிய பிராட்டியார் தனது நாயகன் உடன் சென்று திருவனந்த ஆழ்வான் மேல் அவன் கருத்தின் வழி நடப்பவன் அவன்-கச்ச ராம மயா சஹா சீதை சொன்னாள்-அவள் கூட்டிப் போகப் போனான் பெருமாள் அன்றோ-மழைக் கண் மடந்தை கண் வழி அன்றோ அவனும் செல்பவன்-மிதுனமாய் இருப்பது அவனது தயா வர்த்தக ஹேது என்று இருக்க
விபரீதமாய் முன்பு உள்ள தயையும் போய் நிர்த் தயானாய் போனானே என்று அழுகிறாள்
கண்ண நீர்கள் ஆறு போல் பெருகா நின்றது நீ வர்ஷா காலம் என்று பிரமிக்க வேண்டா -என்று
காலத்தை மயக்கி சமாதானம் படுத்துகிறாள்

2-5-அந்தாமத்து அன்பு -பிரவேசம் –

கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே ‘கஜேந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது;
முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’என்றதனைப் போன்றது ஒன்றாம்,
கீழ் ‘ஆடிஆடி’ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார்க்குப் பிறந்த வ்யஸனம் -துக்கம்;
அது எல்லாம் ஆறும்படியாக,
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் ‘சேனை முதலியாரால் கொடுக்கப்பட்ட கைலாகை ஏற்றுக் கொள்ளாமலும்’
என இவ்வாறாகக் கூறியுள்ளபடியே,
பெரிய த்வரையோடே – மிகுந்த விரைவோடே ஆயுதங்களையும் ஆபரணங்களையும் -அக்ரமமாக -முறைபிறழத் தரித்துக் கொண்டு,
மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப் புக்கு,
யானையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து எடுத்துக்கொண்டு கரையிலே ஏறி,
க்ராஹம் சக்ரேனை மாதவ ‘திருவாழியாலே முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே,
பிரஜையின் – குழந்தையின் வாயில் முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது போன்று,
பெரிய பிராட்டியாரும் தானுமாக, இரண்டுக்கும் நலிவு வாராமல் திரு ஆழியாலே விடுவித்துச் சாத்தியருளின
திருப்பரியட்டத்தின் தலையைச் சுருட்டித் தன் வாயிலே வைத்து
அவ்யானையின் புண் வாயை வேதுகொண்டு திருக்கையாலே குளிரத் தீண்டிக்கொண்டு நின்றாற்போலே,

இவ்வாழ்வாரும் ’வலங்கொள் புள் உயர்த்தாய்’என்று கூப்பிட்ட-ஆர்த்த நாதம் – துக்க ஒலியானது செவிப்பட,
‘அழகிதாக நாம் உலகத்தைப் பாதுகாத்தோம்! நாம் ஆரானோம்!’ என்று,
பிற்பட்டதனால் உண்டாகும் -லஜ்ஜா பயங்களினால் -நாணத்தாலும் பயத்தாலும்-விஹ்வலனாய் கலங்கினவனாய்,
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் ஒப்பனை, திவ்ய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி, இவை எல்லாவற்றோடும்
வந்து ஸம்ஸ்லேஷித்து – கலந்து- அத்தாலே ஹ்ருஷ்டானாய் -மகிழ்ந்தவனாய்,
தான் -க்ருதக்ருத்யனாய் -செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து முடித்தவனாய்
இருக்கிற இருப்பை அனுபவித்து, -அவ்வனுபவ ஜெனித ஹர்ஷ ப்ரகரஷத்தாலே –
அவ்வனுபவத்தால் உண்டான மகிழ்ச்சியின் மிகுதியால் தாம் பெற்ற பேற்றைப் பேசி அனுபவிக்கிறார்.

அஞ்சாம் திருவாய் மொழியிலே – இப்படி இவருடைய ஆர்த்தியைக் கண்டு த்வரிதனாய் ஸம்ஸலேஷித்த சர்வேஸ்வரனுக்கு ப்ரீதியாலே வந்த ஸுந்தர்யாதிசயத்தை
அருளிச் செய்கிறதாக -பிரதமத்திலே –
-1-சங்க்ரஹேண-பூஷண அவயவ -ஆயுத சோபா விசிஷ்டமான வடிவு அழகையும் –2-அத்தோடு கூடின விபூதி உன்மேஷத்தையும்
-3-சம்ச்லேஷ காரிதமான ரக்ஷகத்வ உன்மேஷத்தையும் –4-ஸ்திர உஜ்ஜ்வல்யத்தையும் –
-5-உபமான ராஹித்யத்தையும் –6-அபர்யந்த பூஷணாதி யோகத்தையும் –
-7- தர்ச நீய சேஷ்டிதத்வத்தையும் —-8-சம்ச்லேஷ வைலக்ஷண்யத்தினுடைய வாசா மகோசாரதையையும்–
–9-சொல்லுகைக்கு அதிகாரிகள் இல்லை என்னும் இடத்தையும் -10-சொல்லுகை அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து -தம்முடைய சம்ச்லேஷ ப்ரீதிகாரித ஸுந்தர்ய பாரம்யத்தை அருளிச் செய்கிறார் –

முதற்பாட்டில், இவர் ஆசைப்பட்ட படியே அடியார்கள் குழாங்களோடே வந்து கலந்தபடி சொன்னார்;
இரண்டாம் பாட்டில், தம்மோடு கலந்த பின்பு திருமேனியும் திவ்விய அவயவங்களும் திவ்விய ஆயுதங்களும் நிறம் பெற்றன என்றார்;
மூன்றாம் பாட்டில், தம்மோடே கலந்து தன் சத்தை பெறுதல். இன்றேல், இல்லையாம் படியாய் வந்து கலந்தான் என்றார்;
நான்காம் பாட்டில், மேல் உவமையாகச் சொன்ன பொருள்கள் நேர் நில்லாமையாலே, அவற்றைச் சிக்ஷித்துச் சேர்த்துக் கூறி அனுபவித்தார்;
ஐந்தாம் பாட்டில், அவைதாமும் உவமையாக நேர் நில்லாமையாலே, அவற்றைக் கழித்து உபமேயந்தன்னையே அனுபவித்தார்.
ஆறாம் பாட்டில், ‘இப்படி எல்லாரைக்காட்டிலும் வேறுபட்ட தன்மையினையுடைய இவன், முத்தன் தன்னை
அனுபவிக்குமாறு போன்று, தான் என்னை அனுபவித்தான்’ என்றார்;
ஏழாம் பாட்டில், தமக்காக இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தான் என்றார்;
எட்டாம் பாட்டில், ‘அவனை என்னால் பேச முடியாது’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், துணை தேடிக் கொண்டு மீண்டும் பேசுவதற்குத் தொடங்கினார்;
‘பத்தாம் பாட்டில்’, ‘இப்படிகளால் என்னோடே கலந்து இம்மகாகுண ஒன்றையும் பேச என்றால் சால மிறுக்குடைத்து’ என்றார்;
நிகமத்தில் , இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே 
–2-5-1-

என் ஆவி –அவன் மேல் விழத் தாம் இறாய்த்தமை தோன்றுகிறது.-இவர், முன் நிலையினை நினைந்து இறாய்நின்றார்;அதுவே காரணமாக அவன் மேல் விழாநின்றான்.
கமர் பிளந்து இடத்திலே நீர் பாய்ச்சுவாரைப் போன்று. ‘உள்உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ என்கிற ஆவியிலே வந்து சேர்கின்றான் ஆதலின், ‘என் ஆவி’ என்கிறார்.
‘விடாயர் மடுவிலே சேருமாறு போன்று வந்து சேர்கின்றான்’ என்பார், ‘சேர்’ என்கிறார்.
‘இப்படி மேல் விழுகைக்குக் காரணம் என்?’ என்னில், ‘அம்மான் ஆகையாலே’ இவரைப் பெற்ற பின்னரே அவன் சர்வேஸ்வரனானான் என்பார், ‘அம் தாமத்து அன்பு செய்து
என் ஆவி சேர் அம்மான்’
 என்கிறார் 

அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள – இதற்கு, ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைபட்டபடியே, நித்திய சூரிகளோடே வந்து கலந்தான்,’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் அருளிச் செய்வர். ‘
ஆயின், அவர்களை ‘ஆழி நூல் ஆரம்’ என்று சொல்லுவது என்?’ என்னில், சின்மயராய் -ஞானவான்களாய் இருக்கச் செய்தே, பாரதந்திரிய சித்திக்காகத் தங்களை இங்ஙனம் அமைத்துக் கொள்கிறார்கள் இத்தனையே.
இனி, இதற்கு எம்பெருமானார்,-செந்தாமரைத் தடம் கண்’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள்-இவரோடு கலப்பதற்கு முன்பு அவனைப் போன்றே இவையும்-அனுஜ்ஜ்வலமாய் – ஒளி இழந்தவையாய்ச்–அசத்- சத்தை அற்ற பொருளுக்குச் சமமாய், இவரோடு கலந்த பின்பு உஜ்ஜவலமாய் ஒளிப்பொருளாகிச் சத்தை பெற்ற படையைச் சொல்லுகிறது’ என்று பொருள் அருளிச் செய்வர்.
‘ஆயின், அவன் ஒளியிழந்தால் இவையும் ஒளியிழக்க வேண்டுமோ?’ எனின்,
கற்பகத் தரு வாடினால் அதில் பூவும் தளிரும் வாடுவன அன்றோ?

———-

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே
 –2-5-2-

தம்மோடே கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி, ‘தன் உடம்பைப் பற்றிப் பிரமன் சிவன் முதலியோர்கள் சத்தையாம்படி இருக்கின்றவன் தான், என் உடம்பைப் பற்றித் தன் சத்தையாம்படி இராநின்றான்’ என்கிறார்

’ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை; விபூதி இல்லை’ என்கிறவர்கள் முன்பே, ஆப்த தமரான இவர்,‘திரு உடம்பு வான் சுடர்’ என்னப்பெறுவதே! ‘ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை, குணம் இல்லை’ என்கிறவர்கள் செய்து வைக்க மாட்டாத பாவம் இல்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்?’ என்று அருளிச் செய்வர் நஞ்சீயர்.

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அன்றே திருமேனியில் துவக்கு உண்கிறார்?தான் மதித்தார்க்குக் கொடுப்பதும் திருமேனியை ஆதலானும் ‘திருஉடம்பு’ என்கிறார்.-வான் சுடர் –முதலிலே தேஜோ ரூபமான திருமேனி; மிகவும் ஒளி பெற்றது இவருடைய கலவியாலே-.இப்படித் திருமேனி பேரொளிப் பிழம்பாய் இருப்பத்தற்குக் காரணம் பஞ்ச சக்தி மயமாக இருத்தல்’ என்பது நம்பிள்ளையின் திருவுள்ளம்.
பஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.

ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கு – என்னோடே வந்து கலக்கிற இடத்தில், நீங்குமிடம் ஒன்றும் இன்றியே வந்து கலந்தான். அநந்ய பரையான ‘தனக்கே உரியவரான பெரிய பிராட்டியாரைப் போன்று, அந்நிய பரரான -பிறர்க்கு உரியவர்களான பிரமனுக்கும் சிவனுக்கும் திருமேனியில் இடங்கொடுத்து வைப்பதே!’ என்று இந்தச் சீல குணத்தை அனுசந்தித்து, வித்தராய் இருந்தார் முன்பு; இப்போது தமக்கு உடம்பு கொடுத்தபடி கண்டவாறே ‘அது பரத்துவம்’ என்று தோற்றி, ‘ இது என்ன சீலத்தின் மிகுதி! ஓ’ என்பார் ‘ஓ’ என்கிறார்.

———-

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே 
–2-5-3-

ஸ்வ வ்யதிரிக்த- தன்னின் வேறுபட்ட -ஸமஸ்த வஸ்துக்களும் -எல்லாப் பொருள்களும் தன்னைப் பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன், தான் என்னைப்பற்றி உளனாய் என்னோடே வந்து கலந்தான்’-உலகத்துப் பொருள்கள், இவனைப் பற்றாத போது சத்தை இன்றியே இருக்கிறது, ஸ்வரூபத்தாலே; இவன், ஆழ்வாரைக் கலவாத போது சத்தை இன்றியே இருப்பது,பிரணயித்வ குணத்தால் -காதலாகிய பண்பாலே–என்னுள் கலந்தவன் – அகஸ்தியப் பிராதா ‘அகஸ்தியர்க்கு உடன்பிறந்தவன்’ என்னுமாறு போன்று, நிரூபகம் இருக்கிறபடி.-‘நாராயணன், வாஸூ தேவன்’ என்பன போன்று, ‘என்னுள் கலந்தவன்’ என்று காணும் அவனுக்குத் திருநாமம்.வாட்டம்இல் புகழ் வாமனன்’ இவரோடு கலந்த பின்பு வளர்ந்தபடியும், புகர் பெற்றபடியும், தரையிலே கால் பாவித் தரித்தபடியும், திண்மையை உடையனானபடியும் நோக்கி, ‘மின்னும் சுடர்மலை’ என்கிறார்.

—————-

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே 
–2-5-4-

நீர் ஒருகால் கூறியதை ஒன்பதில் கால் கூறி இங்ஙனே கிடந்து படுகிறது என்?’ என்ன,
‘நான் அது தவிர்கிறேன்; நீங்கள் அவ் விஷயத்தை ஒருகால் இருந்தபடியே எப்பொழுதும் இருக்கும்படி செய்ய –வல்லிகோளே- வல்லீர்களோ?’ என்கிறார்.மரதகம் குன்றம் ஒக்கும் –
கீழ் –எப்பொருளும் தனாய் -ஜெகதாகாரனாய் , உலகமே உருவமாய் நிற்கும் நிலை சொல்லிற்று; இங்கு, அசாதாரண விக்கிஹம் தன்னையே சொல்லுகிறது.
கீழ் ‘மின்னும் சுடர்’ என்று தம்முடைய கலவியால் வந்த புகரைச் சொல்லிற்று;-அப்புகருக்கு இருப்பிடமான-ஆஸ்ரயமான அசாதாரண விக்கிரஹத்தைச் சொல்லுகிறது இங்கு.

—————

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –
2-5-5–

ஆராவமுதமாய்-உபமேயத்தையே சொல்லுகிறார்.-அசித்தைக்காட்டிலும் தம்மைக் குறைய நினைத்தபடியாலே ‘அல் ஆவி’ என்கிறார்.-என்னை ஆரா அமுதாக நினைத்து, என் அளவாகத் தன்னை நினைத்து அன்றோ கலந்தது-காரார் கருமுகில் போல் – என்னுடைய கலவி ‘பெறாப்பேறு’ என்னும் இடம் தன் வடிவிலே தோன்ற இரா நின்றான்.-பின்னும் இழை பலவே – அனுபவித்துப் போம் இத்தனை ஒழிய, என்னாற்சொல்லித் தலைக் கட்டப் போமோ? முடியாது,’ என்றபடி.

————-

பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–
2-5-6-

என்னுடனே கலந்து ஆற்றானாய்ப்-அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி -பல சரீரங்களை மேற்கொண்டு என்ன அனுபவியா நின்றான்’ -முத்தன் தன்னை யனுபவிக்கும்போது படுமாறு போன்று, தான் என்னை அனுபவிக்கப் பல வடிவு கொள்ளா நின்றான் -ஆக, இவற்றால், தன்னின் வேறு பட்டவற்றை எல்லாம் விஷயமாக உடையனாய், அவற்றை எல்லாம் அறியவும் வல்லவனாய்,-அவற்றை எல்லாம் அனுபவித்தால் வரும் ஏற்றத்தையும் உடையவனாய் இருக்கும் இருப்பைத் தெரிவித்தபடி.-சர்வ இந்திரியங்களுக்கும் போக்யமாய் இருக்கும் பரிகரங்களை உடையவன் என்னும் இடத்துக்கு உப லக்ஷணம் -பாம்பணை மேலாற்கேயோ-என்றது –

————

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே
 –2-5-7—

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும், ஷீராப்தியில் -திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளி, இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தன எல்லாம் எனக்காக அன்றோ?’ -பொன் முடி அம் போர் ஏறு பள்ளி அமர்ந்ததுவும், ஏறு செற்றதுவும், மராமரம் எய்ததுவும் ஆன இவையெல்லாம், எனக்காகவே கிடீர்-தன்னுடைய சர்வ சேஷ்டிதங்களையும் எனக்கே போக்யமாகச் செய்து அருளினான் -என்கிறார் –

———-

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே
 –2-5-8-

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் என் தண்மையைப் பாராது,
என்னோடே வந்து கலந்த இம்மஹா குணத்தை என்னால் பேசி முடியாது,’ என்கிறார்.

என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை – அவ்விஞ்ஞாத -‘அறியாதவராக இருக்கின்றார்’ என்கிறபடியே, என் தண்மை பாராதே கண்ணைச் செம்பளித்து வந்து கலந்தான்.-இறைவன் பக்கல் நன்மைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருப்பன போன்று,-இவர் பக்கல் தீமைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருக்கின்றபடி.
இனி, இதற்கு,’ ‘ஆடி ஆடி’ என்ற திருப்பதிகத்தில் -விஸ்லேஷ வியசனத்தால் -‘பிரிவுத்துன்பத்தாலே நான் முடியப் புக,-அது காணமாட்டாது என்னோடே வந்து கலந்து
ஒரு குணத்தையும் சொல்லப்புகில், ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப்புக்க வேதம் பட்டது படும் இத்தனை.
இனி, இத்தொடர்மொழிக்கு, ‘அவன் என்னை அனுபவிப்பிக்க, அத்தால் எனக்குப் பிறந்த ரசம் அனுபவித்துவிடும் அத்தனை அல்லாது, பாசுரமிட்டுச் சொல்லி முடியாது’ என்றுமாம்.சொல்லுவது என் சொல்லீரே – விஷயாந்தர அனுபவத்துக்கு பாசுரம் இட்டுச் சொல்லுகிற நீங்கள் இதுக்கு ஏதேனும் சொல்ல வல்லீர்களோ-

———–

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன்
 –2-5-9-

பாசுரம் இல்லை’ என்னா, கைவாங்கமாட்டாரே; சம்சாரிகளைப் பார்த்து,
‘என் நாயனான சர்வேஸ்வரனை நீங்கள் அனைவரும் கூடியாகிலும் சொல்ல வல்லீர்களோ?’ என்கிறார்.-திவ்யாத்தம ஸ்வரூப குணங்களுக்கு எல்லை காணிலும் திவ்ய மங்கள விக்கிரகங்களின் குணங்களுக்கு எல்லை காண முடியாமல் இருத்தலைத் தெரிவித்தபடி.-உபமான ரஹிதன் –

————-

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே
 –2-5-10-

பட்டர் இவ்விடத்தில்–
நைநம் வாசா ஸ்த்ரீயம் ப்ரூவன் நைநமஸ்த்ரீ புமான் ப்ரூவன் புமாம்சம் ந ப்ரூவன் நைனம் வதன் வததி கம்சன் அ இதி ப்ரஹ்ம
(,‘பரமாத்துமாவைப் பற்றிப் பேசும் ஒருவன் தனது வாக்கால் இப்பரம்பொருளைப் பெண் என்றும் சொல்லுகிறான் இல்லை;
ஆண் என்றும் சொல்லுகிறான் இல்லை; இவ்விருபாலுக்கும் வேறான அலியாகவும் சொல்லுகிறான் இல்லை.
அத்தகைய பரம்பொருள் அகாரவாச்சியனாய் இருக்கின்றான்’; )
ச வை ந தேவா ஸூரமர்த்ய திர்யங் ந ஸ்த்ரீ ந ஷண்டோ ந புமான் ந ஐந்து நாயங்குண கர்ம ந சன் நிஷேத சேஷோ ஜயதாத சேஷ
(‘அப் பரம்பொருள், தேவன் அசுரன் மனிதன் விலங்கு இவைகளாய் இல்லை; பெண்ணாகவும் இல்லை; அலியாகவும் இல்லை;
ஆணாகவும் இல்லை; வேறுபட்ட மற்றைப் பொருள்களாகவும் இல்லை; குணமாக இல்லை;
கிரியையாக இல்லை; சேதனனுமாக இல்லை; அசேதனனுமாக இல்லை,’ )என்னும்
இவ்வேத புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி அருளிச் செய்தவாறே,
அருகு இருந்து கேட்டிருந்த ஒரு தமிழ்ப்புலவர், ‘ஸ்வாமி, நாட்டில் காணப்படுகின்ற மூன்றின்படியும் அல்லனாகில்,
சொல்லப்படுகின்ற பொருள் சூன்யமோ பின்னை?’ என்று கேட்க,
பட்டர், ‘பிள்ளை இயல் அறிவுக்குப் போந்திருந்தது இல்லையே!
‘ஆணல்லன் பெண்ணல்லள் அலியும் அல்லது’ என்றார் இலரே? ‘அல்லன், அல்லன், அல்லன்’ என்கிறார். ஆதலின்
‘புருஷோத்தமன்’ என்பதனை அச்சொற்கள் தாமே தோற்றுவிக்கின்றனவே?’ என்று அருளிச்செய்தார்.
‘ஆணல்லன் பெண்ணல்லன்’ என்கின்ற இத்தால் சஜாதீய விஜாதீய நிஷேதம் செய்தபடி

ஏகப் பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை -நீ எங்கட்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும்’ என்ற சிலர் இரந்தால், அப்படியே வந்து பிறப்பான்-அன்போடு தன்னைப் பேணி மறைக்க வேண்டும்படி வந்து அவதரிப்பான்’ -இந்த இந்த நிலைகளை எனக்கு அறிவித்த இறைவன் படிகளைப் பேச என்றால் சால மிறுக்குடைத்து.

————

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே
 –2-5-11-

பேச ஒண்ணாது ஒழிந்தது பரத்துவத்தை அன்று; குடக்கூத்து ஆடிய செயல் ஒன்றுமே ஆயிற்று.-கூடுவர் வைகுந்தம் – ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ’ என்று ஆசைப்பட்டுப் பெறாது ‘ஆடியாடி’யாய் விசனப் படாமல், இப் பாசுர மாத்திரத்தைச் சொல்லவே நான் பிரார்த்தித்துப் பெற்ற பேறு பெறுவார்கள்.-இவருடைய அனுபவத்தை பரமபதத்தில் அனுபவிக்க பெறுவார் –-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -100-நல்லார் நவில் குருகூர் நகரான் -முனியே நான்முகன் -10-10-

April 7, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அவன் சேற்றில் கால் வைத்து இடந்து எடுப்பதை அனுசந்திக்கவே நாம் சம்சார சேற்றில் உழல வேண்டாமே-நானும் பிறந்து நீயும் பிறக்க வேண்டுமோ -கீதாச்சார்யன்-ஆழ்வார் தாமாக அருளிச் செய்கிறார் இதில் பொய் நிலம் -பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல்–பொல்லா பிரகிருதி
அருமையான-அரிய – பிரகிருதி-வினை பிரகிருதி -கர்மங்களுக்கு காரணம்-மாய பிரகிருதி –வன் ப்ரக்ருதி -ஈஸ்வரனால் மட்டுமே போக்க முடியும் சேற்று அள்ளல் ப்ரக்ருதி –முனியே நான்முகன் -10-10-இதன் விவரணம்சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ -பிரகிருதி விவரணம் அங்கு

அவதாரிகை –நீர் பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையீருமாய் – இப்படி அறுதி இட்டு காண்கைக்கு ஈடான-நன்மையை உடையீருமாய் இருக்கையாலே நீர் இப் பேறு பெற்றீர் –உம்மைப் போலே ஜ்ஞானம்-இன்றிக்கே பாக்ய ஹீனருமாய் பிற்பாடருமான சம்சாரிகள் செய்வது என் என்ன –அவர்களுக்கு என் தன்னை ஜ்ஞானமில்லையே யாகிலும் – நான் சொன்ன இப் பாசுர மாத்ரத்தையே- சொல்ல அவர்களும் எல்லாம் நான் பெற்ற பேறு பெறுவார்கள் -என்கிறார் –-நூல் பயன்

இப்படி ஸர்வேஸ்வரன் திருச் செவி படும்படி-கேட்டு அருளாய் -தத் விஷயத்திலும் ததீய விஷயத்திலும்
தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தையும் தத் விஸ்லேஷ ஹேதுவான தேச வாஸாதிகளால் உண்டான உத்வேக யோகத்தையும் வெளியிட்டு இம் முகத்தாலே தம்முடைய விருத்த கீர்த்தனம் பண்ணின இப்பிரபந்தத்தில் அபி யுக்தரானவர்களுக்குப் பலம் தாம் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அபேக்ஷித்த ஸம்ஸார நிவ்ருத்தி என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-இப்பாட்டில் பிரபந்தம் கற்றாருடைய பேறு சொல்லுகிறது
பகவத ப்ரஸாத லப்த்த ஞானத்தை யுடையீருமாய்-இப்படி அறுதியிட்டுக் காண்கைக்கு ஈடான சக்தியை யுடையீருமாய் இருக்கையாலே நீர் இப்பேறு பெற்றீர்-உம்மைப் போலே ஞானம் இன்றிக்கே பாக்ய ஹீனராய்ப் பிற்பாடருமான ஸம்ஸாரிகள் செய்வது என் என்ன-அவர்களுக்கு என்னத்தனை ஞானம் இல்லையே யாகிலும் நான் சொன்ன இப்பாசுர மாத்ரத்தைச் சொல்ல வல்லாரும் எல்லாம் நான் பெற்ற பேறு பெறுவார்கள் என்கிறார்

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே
– – 100-

நல்லார்–நல்ல குணங்களையும் நல்ல காரியங்களையுமுடையரான மஹான்கள்
நவில்–புகழ்ந்து கூறப்  பெற்ற
குருகூர் நகரான்–திருக்குருகூரென்னும் திருப்பதியில் திருவவதரித்தவரும்.
திருமால்–லக்ஷ்மீபதியான எம்பெருமானது
திருபேர்–திருநாமங்களை
நல்லார்–பயின்றவரான அடியார்களுடைய
அடி–திருவடிகளாகிற
கண்ணி–பூமாலையை
சூடிய–தமது முடிக்கு அணியாகக் கொண்டவருமான
மாறன்–நம்மாழ்வார்
விண்ணப்பம் செய்த–(பகவத் ஸந்நிதாநத்திலே) விஜ்ஞாபநஞ்செய்த
சொல் ஆர் தொடையல்–சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை வடிவமான
இ நூறும்–இந்த நூறு பாசுரங்களையும்
வல்லார்–கற்று வல்லவர்கள்
பிறப்பு ஆம்–ஸம்ஸாரத்திற்குக் காரணமும் காரியமுமாகிய
பொல்லா அருவினை–ஆத்மாவை கெடுக்க வல்ல  கொடியவையாய் போக்க முடியாதவையான  அரியதான ஊழ்வினைகளாகிற
மாயம் வல் சேறு அள்ளல்–ருசி வாசனைகளை பிறப்பித்து வஞ்சிக்குமதான  கொடிய சேற்றின் அடர்த்தியை யுடைய
பொய் நிலத்து–பொய்யாகிய பிரகிருதி மண்டலத்தில்
அழுந்தார்–அழுந்த மாட்டார்கள் (முக்தராகப் பெறுபவர்கள் என்றவாறு.-

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து
 –100–கீழ் சூழ் விசும்பு அணி முகிலிலே ஸ்ரீ பரம பதத்திலே புக்கு நிரதிசய ஆனந்த உக்தராய் நித்ய ஸூரிகள் திரளிலே இருக்கிறாராக-தம்மை அனுசந்தித்த இது
ஜ்ஞான அனுசந்தானம் மாத்ரமாய் பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே-மேரு சிகரத்திலே ஸூ கோத்ரமாக இருந்தவன் பேர் ஆழமான பள்ளத்திலே தலை கீழாக தள்ளுண்டு-விழுந்து நோவு படுமா போலே-அனந்த கிலேச பாஜனமான சம்சாரத்தில்-தாம் இருக்கிற படியைக் கண்டு
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு பண்டு போலே ஒரு குணாவிஷ்காராதிகளால் பரிஹரிக்க ஒண்ணாத படி ஆற்றாமை தலை எடுத்து ஒரு தூத ப்ரேஷாணாதிகளால் இட்டு நீட்டுகையும் இன்றிக்கே தாமே அவன் முகத்தைப் பார்த்து தம்மால் இது பரிஹரித்துக் கொள்ளப் போகாது இருக்கிறபடியும்
சாதநாந்தரங்களை அனுஷ்டித்தாலும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கும் படியையும் சொல்லிக் கொண்டு ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டு-தடுத்தும்-வளைத்தும் அவனைப் பெற வேண்டும்படியான பரம பக்தி தலை எடுத்து நிர்க்குணர் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும் அவனுக்கும் தம் கார்யம் செய்து அல்லது ஸ்ரீ திரு நாட்டிலே குடி இருப்பு அரிதாம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தியோடே திருவடிகளிலே சரணம் புக
ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட இவர் அபேஷித்த படியே ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து தோற்றி கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தையும் அறுத்து ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய சூரிகளோடே ஒரு கோவை யாக்கி-நித்ய கைங்கர்யம் கொண்டருள-
அத்தாலே-தாம் நிரஸ்த பிரதிபந்தகராய் பிராப்த சமஸ்த மநோ ரதரான படியை-சொல்லித் தலைக் கட்டுகிற முனிய நான் முகனே யில் அர்த்தத்தை முனி மாறன் இத்யாதியாலே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்
சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று-கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு-அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே-பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் –கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி–இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம்–முடிந்த அவா என்றது பரமபக்திஇவை ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள் -என்று இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் —ஏவம்விதமான பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று —

நல்லார் நவில் –லோகத்தில் சத்துக்கள் அடைய -ஆழ்வார் ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை –ராமோ ராமோ ராம -இதிவத் -(ராமோத்வைதம் போல் ஆழ்வார் ஒருவரே இங்கு பேசப்படுகிறார் ) சர்வதாபி கதஸ் சத்பி –பெருமாள் சிரமம் செய்து விட்டு ஒரு-நிழலிலே இருந்த அளவிலே – பர சம்ருத்யை  ஏக பிரயோஜனாந்தர வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் –-சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் –-பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புக்கைக்கு அன்றிக்கே ஆறுகள் வந்து புகுருகிறது –-நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –திரு மால் இத்யாதி--அவர்கள் அடைய ஆழ்வார் என்னா நிற்க செய்தே –இவர் தாம் –-பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் —என்னை யாளும் பரமரே –என்கிறார் –-திருமால் திருப்பேர் வல்லார் அடிக்  கண்ணி சூடியதைப் பற்றி -பெரும் பேறு பெற்றீர் -என்கிறார் –-ஸ்ரீ ய பதி உடைய திரு நாமங்களைச் சொல்லுகைக்கு அதிகாரம் உடையவர்கள் உடைய- திருவடிகள் ஆகிற மாலையை சூடுகையே நிரூபகமாக உடைய ஆழ்வார் –விண்ணப்பம் செய்த – அடியேன் செய்யும் விண்ணப்பமே -என்று தொடங்கி – விண்ணப்பம் செய்து-தலைக் கட்டின வார்த்தை யாயிற்று –

சொல்லார் தொடையல் –ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா –பாட்யே கேயே ச மதுரம் -என்கிறபடியே-இதில் சாரஸ்யத்துக்கும்  ஆக ஆதரிக்க வேணும் –இந்நூறும் –மகா பாரதம் போலே பரந்து இருத்தல் –-பிரணவம் போலே சுருங்கி இருத்தல் -செய்யாதே –-நூறு பாட்டாய் –ஜ்ஞாதவ்யாம்சம் அடைய உண்டாய் இருக்கை –வல்லார் அழுந்தார் –பலத்தை முற்பட சொல்லுகிறார் -(த்ருஷ்டா ஸீதா -கண்டேன் என்று முற்படச் சொன்னது போல் -வீடுமின் முற்றவும் முதலில் சொன்னது போலவும் )

எதில் அழுந்தார் என்கிறது என்னில் –1-பிறப்பாம் பொல்லா –ஜன்மமாகிற பொல்லா –ஜ்ஞாநானந்த லஷணமாய் –ஈஸ்வர சேஷமாய் இருக்கிற-ஆத்ம வஸ்து –அதுக்கு அநு ரூபம் அன்று இறே -அசித் சம்சர்க்கம் –2-அரு வினை –கர்ம பரம்பரையாலே மேன்மேல் என அது தன்னை வர்த்திப்பித்து
பூண் கட்டுமதாய் இருக்கை –3-மாய –ருசி வாசனைகளைப் பிறப்பிப்பதாய்–4-வன் சேறு –தோய்ந்தார் பின்பு கரை கழுவ வேண்டும்படியாய் இருக்கை-5-அள்ளல் –கால் இட்டால் கீழே சுரிக்கும்படியாய் இருக்கை–6-பொய் நிலம் –அது தான் கீழ் தரை இன்றிக்கே இருக்கை –இப்படி இருக்கிற சம்சாரத்தில் அழுந்தார்கள் –பொல்லாததுமாய்-அருவினையாய் –  மாயமுமாய் -பொய் நிலமுமாய் இருக்கிற
பிறப்பாகிற வன் சேற்று அள்ளலில் அழுந்தார் – என்று அந்வயம்–ஞான பிரானை அல்லால்  இல்லை நான் கண்ட நல்லதுவே -என்று அருளிய ஞான தேசிகர் -ஆழ்வாரை அல்லால் தொழா மதுரகவி பிரக்ருதிகள்  –-அனந்தன் மேல் கிடந்த புண்ணியனை பாகவத பர்யந்தமாக பற்றுகை — ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியாலே இத்தை அருளி – ஆவிர்பூத ஸ்வ ஸ்வரூபராய் வாழும் பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்

கருமம் ஒழிந்து பிறப்பு அற்று முக்தி பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார்
குருகூர் திவ்ய தேச மகிமையால் ஆழ்வார் தாம் பெற்ற பேறு என்கிறார்
திரு மால் திருப்பேர்-வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்-பாகவத பக்தி நிஷ்டை –
பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை திருவாய் மொழிகளில் வெளியிட்டு அருளியது போல
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த-என்று உபசம்ஹரித்து –-அடியேன் செய்யும் விண்ணப்பம் என்று தொடங்கியது போலே மஹா பாரதம் போலே பரந்து இருத்தல் -பிரணவம் போலே சுருங்கி இருத்தல் -செய்யாதே நூறு பாட்டாய் ஞாதவ்ய அம்சம் அடைய உண்டாய் இருக்கை-

மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே -மஹா விவேகிகளையும் முழுக வைக்கும்-எம்பெருமானும் வந்து பிறந்தால் மயக்கி இழுக்கும் சம்சாரம் அன்றோ-பிரபந்தம் முழுவதுமே சம்சார நிவ்ருத்தியை விண்ணப்பம் செய்த வாறு-நல்லார் நவில் -விசேஷணம் ஆழ்வாருக்கும் திருக் குருகூருக்கும் -ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் -என்கிற பிரபாவம் அன்றோ-சம்சாரிகள் உண்டியே உடையே என்று உகந்து இருக்க – ஆழ்வாரோ உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்பதாலே மாறன் –இப்பிரபந்தம் கற்றார் பெறும் யுரைத்து தலைக்கட்டுகிறது இப்பாசுரம் ஆகவே இது நூற்பயன்.-ஞான மனுட்டானமிவை நன்றாகவேயுடையரான ஆசார்யரைச் சரணமாக வடைந்து அவரது ஸம்பந்தமூலமாக எம்பெருமானை யநுபவிக்கிற மதுரகவிகள் போல்வாரான நல்லவர்களால் புகழ்ந்து கூறப்பெற்ற இக்குருகூரென்று ப்ரஸித்தமான திருநகரியில் திருவவதரித்துவரும் பகவதபாகவத விஷயத்தில் பக்தி மிகுந்தவருமான ஆழ்வராலே விண்ணப்பஞ் செய்யப்பட்டதாய், எம்பெருமானும் பிறரும் தலைமேற் கொண்டு ஆதரிக்கத் தக்க இனிய பாமாலை யாகிய இத்திவ்யப்பிரபந்தத்தைக் கற்று வல்லவர்கள் அரும்மொழியப் பிறப்பற்று முக்தி பெறுவரென்று பயனுரைக்கப்பட்டதாயிற்று.–குருகூர்க்கு ‘நல்லார்நவில்’ என்ற விக்ஷேணமிடட்தனால், அப்படிப்பட்ட திவ்ய தேசத்தில் பிறந்ததனால்தான் தமக்கு இப்படிப்பட்ட பக்திப் பெருகாதல் உண்டாயிற்று என்பதாகத் தொணிக்கும். இப்படி லோக விலக்ஷணராண ஆழ்வார்
திருவலதரிக்கப் பெற்ற திருநகரியை நல்லவரர் நவிலச் சொல்ல வேணுமோ?-திருவாய் மொழியில் * பயிலுஞ்சுடரொளி! நெடுமற்கடிமை முதலிய திருப்பதிககளில் ஆழ்வாருடைய பாகவத பக்தி நிஷ்டை
மிக விளங்குதலால் ‘திருமால் திருப்பேர் வல்லாறடிக் கண்ணி சூடிய’ என்று தமக்கு இட்டுக்கொண்ட விக்ஷேணம் மிகப் பொருத்தம்.-முதற் பாசுரத்தில் ‘அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்று உபக்ரமித்ததற்கு ஏற்ப இங்கு மாறன் விண்ணப்பஞ்செய்த’ என்று உப்ஸம்ஹரிக்கப்பட்டமை காண்க.-இந்நூறும் என்ற விடத்து நம்பிள்ளையீடு காண்மின்:-“மஹாபாரதம்போலே பரந்திருந்தல், ப்ரவம்போல சுருங்கியிருந்தல் செய்யாதே-நூறுபாட்டாய் ஜ்ஞாதவ்யாம்சமடைய உண்டாயிருக்கை.” மஹா விவேகிகளும் ஆழ்ந்தால் கால் வாங்க வொண்ணாதபடி-முழுகுவிக்குந் தன்மை யுடையதான ஸம்ஸாரத்தை மாய வன் சேற்றள்ளற் பொய்ந் நிலம்’ என்றது மிகப் பொருந்தும்.
பராத்பனான எம்பெருமானும் இதிலே வந்து பிறந்தால் அவனையும் மயங்கி யிழுக்கும் வன்சேற்றை.
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்புமிந்நின்ற நீர்மை இனியாமுறமை அடியேன் செய்யும் விண்ணப்பம்’ என்று தொடங்கி விண்ணப்பஞ்செய்த இந்நூறும் வல்லார் அழுந்தார் பொய்நிலத்து’ என்று முடித்ததனால் இப்பிரபந்தம் முழுவதும் விரோதியைப் போக்கித் தர வேணுமென்று ஆழ்வார் தமது வருத்தத்தை –ஸம்ஸார நிவ்ருத்தி. யபேக்ஷையை – விண்ணப்பஞ் செய்தவாறாம்.–நம்பிள்ளையும் பெரியவாச்சான் பிள்ளையும் இட்டருளின வியாக்கியானங்களில் ‘நல்லார் நவில்’ என்றதற்கு – லோகத்தி ஸத்துக்களடைய ஆழ்வாராழ்வார் என்னுமத்தனை’ என்றருளிச் செய்திருக்கக் காண்கையாலே ‘நல்லார் நவில்’ என்பது குருகூர்க்கு விசேஷணமன்றியே குருகூர் நகரான ஆழ்வார்க்கு விக்ஷேணமாய் கொள்ள்பபட்டதாகத் தெரிகின்றது. நல்லவர்களாலே புகழப்படட் நம்மாழ்வார் என்கை (திருமால் திருப்பேர்வல்லா ரடிக்கண்ணி சூடிய மாறன்’ என்று நைச்சியந் தோற்றப் பேசிக் கொள்ளுகிற ஆழ்வார் நம்மைப் பற்றி ‘நல்லார் நவில்’ என்று சிறப்பாக விஷேணமிட்டுக் கொள்வாரென்று சங்கிக்க இடமுண்டெனினும் ஆழ்வாருடைய ஒப்புயர்வற்ற பிரபாவத்தை (ஸத்துக்களால் அநவரதம் புகழ்ந்து கூறப்படுந்தன்மையை)க் கண்டறியும் ஆசரர்யர்கள்
இங்ஙனே வியாக்கியானித்தல் பொருந்தத் தட்டில்லை ‘ஏற்கும் பெரும்புகழ் வண் குருகூர்ச்சடகோபன்’ என்று ஆழ்வார் தாமும் மெய்மறந்து அருளிச் செய்யும்படியாகயிறே ப்ரபாவந்தானிருப்பதுமாறன் = உண்டியே உடையே உகந்தோடு மூலகத்தாருடைய இயற்கைக்கு மாறுபட்டு-உண்ணுஞ் சோறு பருகுவீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லால் கண்ணன்” என்றிருந்ததனால் ஆழ்வார் மாறனென்று திருநாமம் பெற்றார் என்க-

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்-நல்லார் ஆகிறார் ஆச்சார்ய விஷயத்திலே சேஷத்வ ரக்ஷகத்வாதிகளை ஏறிட்டு ஈஸ்வரனை தத் ஸம்பந்த த்வாரா அனுபவித்துப் போரும் மதுரகவிகள் போல்வார்-அவர்களாலே நவிலப்பட்ட-ஸ்துதிக்கப்பட்ட -திருக்குருகூர் என்று
திரு நாமமான திரு நகரி யுடையவர்–திரு மால் திருப் பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன்
ஸ்ரீ யபதிக்கு வாசகமான மூல மந்த்ர த்வயங்களில் அர்த்த அபி யுக்தரான பரம பாகவதருடைய திருவடிகள் ஆகிற பூம் கொத்தை சிரஸா வஹித்துப் போருகிற ஆழ்வார்–இத்தால் –ஸஹோ வாஸ வ்யாஸ பாராசர்ய -யஜுர் என்றும்-வால்மீகிர் பகவான் ருஷி -பால -4-1- என்றும் சொல்லுமா போலே
விலக்ஷண பரிக்ரஹத்தையும் ஜென்ம தேச பூர்த்தியையும்-வல்லார் அடிக்கண்ணி சூடிய என்று ஞானாதிக்யமும் சொல்லுகையாலே பிரபந்த கர்த்தாவான ஆழ்வாருடைய ஆப்த தமத்வம் தோற்றிற்றுவிண்ணப்பம் செய்த-என்று பாரதந்தர்யத்தாலே ஸ்வரூப ஞானம் ப்ரகாசிக்கையாலே பிரம விப்ர லம்பாதி தோஷ ராஹித்யம் தோற்றிற்று —சொல்லார் தொடையில் என்று ஸப்த சந்தர்ப்பத்தை மாலாகாரம் ஆக்குகையாலே இது கர்த்தவ்ய புத்த்யா செய்தது அன்று –கைங்கர்ய புத்த்யா செய்தது என்றபடிஇந்நூறும்-என்று இப்பாட்டுக்கள் நூறும் தனித்தனியே மாலா ரூபமாய் பகவத் விஷயத்துக்கு சிரஸா வாஹ்யமாயும் ஹ்ருத்த்ய மாயும் இருக்கிற படி உகப்புக்கு விஷயம் என்றதாயிற்று –வல்லார்
இப்பாட்டு நூற்றினுடையவும் பாவ கர்ப்பமான அர்த்தத்தை அனுசந்திக்க வல்லவர்கள்–அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே ––நிலத்து – அழுந்தார்
பிறப்பாலே உண்டாகக் கடவதாய் துக்க ஹேதுவாய் இருக்கிற கடக்க அரிய கர்மத்தை யுடைத்தாய்
அறிந்தாலும் கால் வாங்க ஒண்ணாத படியான ஆச்சர்யத்தை யுடைத்தான புத்ர தாராதி சங்கம் ஆகிற சிக்கென்ற சேற்றையும் கொண்டு முழுக்கும்படியான நரகம் ஆகிற அள்ளலை யுடைத்தாய் அஸத்ய ஸப்த வாஸ்யமான ப்ரக்ருதி மண்டலத்தில் அழுந்தார்கள்–பொய்ந் நிலத்தில் அழுந்தாரே
என்று ஏகாரம் தேற்றம் ஆகவுமாம்-பொய்ந் நிலத்தே என்று ஈற்று அசையாகவுமாம்-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-நல்லார் நவில் –லோகத்தில் சத்துக்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னும் அத்தனை-ராமோ ராமோ ராம -யுத்த -131-101-இதிவத்-ஸர்வதா பிகத ஸத்பி -பாலா -1-16-
பெருமாள் ஸ்ரமம் செய்து விட்டு ஒரு நிழலிலே இருந்த அளவிலே பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனரானவர்கள்–தங்களுக்கு உறுப்பானவை கற்கைக்காக வந்து படுகாடு கிடப்பர்கள்
ஸமுத்ர இவ ஸிந்துபி-இப்படிக் கிடக்கிறது இவர் குறை நிரப்புகைக்கோ என்னில் பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புகைக்கு அன்று இறே ஆறுகள் வந்து புகுருகிறது-நடுவு தரிப்பில்லாமை இத்தனை இறே-பேராளன் பேரோதும் பெரியோர் -பெரிய திரு -7-4-4-என்னுமா போலே இவர்களை நல்லார் என்னும் இத்தனை ஒழியப் பாசுரம் இடப் போகாது-இவர்கள் பேச்சுகளும் தலை மிக்கு இருக்கும்திருமால் இத்யாதி-அவர்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னா நிற்கச் செய்தே
இவர் தாம் பயிலும் திருவுடையார் யாவரேலும் கண்டீர் –எம்மை ஆளும் பரமர் –3-7-1- என்னா நிற்பார்-ஸ்ரீ யபதியினுடைய திரு நாமங்களை சொல்லுகைக்கு அதிகாரம் உள்ளவர்களுடைய
திருவடிகளாகிற மாலையைச் சூடுகிற இத்தையே நிரூபகமாக யுடைய ஆழ்வார்-விண்ணப்பம் செய்த
அடியேன் செய்யும் விண்ணப்பமே -திருவிருத்தம் -1-என்று தொடங்கி விண்ணப்பம் செய்த வார்த்தை யாயிற்று–சொல்லார் தொடையல் ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா-பாட்யே கேயே சதுரம் -பாலா -4-8- என்று இருக்கிற இதில் ஸாரஸ்யத்துக்காக ஆதரிக்க வேண்டும்–இந் நூறும்-பாரதம் போலே பரந்து இருத்தல் -ப்ரணவம் போலே சுருங்கி இருத்தல் செய்யாதே- நூறு பாட்டாய் ஞாதவ்ய அம்சம் அடைய உண்டாய் இருக்கை–வல்லார் அழுந்தார்-பலத்தை முற்படச் சொல்லுகிறார்–அது எங்கே என்னில்-பிறப்பாம்-ஜென்மம் ஆகிற–பொல்லா-ஞான ஆனந்த லக்ஷணமாய்-ஈஸ்வர சேஷமாய் இருக்கிற ஆத்ம வஸ்துவுக்கு அனுரூபம் அன்று இறே அசித் ஸம் சர்க்கம் –

தாத்பர்யம்--மதுரகவி போல்வார் -ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே என்று அருளிச் செய்த ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியால் போக்கிக் கொள்ள வேண்டும்-நம்மாழ்வார் தானே ஒரே உபாயம் என்று இவர் வார்த்தையால் சொல்ல வைக்க தற்புகழ்ச்சி இல்லை யதார்த்த கதனம் தானே
மீண்டும் பிறக்க மாட்டோம்-சம்சாரம் கடந்து உஜ்ஜீவிப்போம் என்று அருளிச் செய்கிறார்
விலக்ஷணர் வர்த்திக்கும் திருக்குருகூர்-ஜென்ம வைலக்ஷண்யம் அவர்கள் புகழும் கல்யாண குணங்களை யுடையவர் ஸ்ரீ யபதி நாமம் சொல்லும் பக்தர்களில் அக்ர கண்யர் சேஷத்வ பாரதந்தர்யம் ஆத்ம குணங்கள் மிக்கவர் இனிய சப்த சந்தர்ப்பம் -ஞாதவ்ய சகல ப்ரகாசகமாய் உள்ள
இந்தப் பிரபந்தம் அனுசந்திக்க வல்லார் ஆழ்வாரது கடாக்ஷ பூதராகி-ருசி வாசனா ஜனகமாய் இருக்குமே -அடைந்தாரை அழுந்தப் பண்ணும்-பரிணாம சாலியாய்-ஜென்மம் ஜரை மரணம் இத்யாதி ஆத்ம ஸ்வரூப திரோதாகம் -சம்சாரம் -கர்மங்கள் காரணம் – இவற்றைக் கடந்து தத்வ ஞானம் யதார்த்தம் அறிந்து ஸ்வ ஸ்வரூபம் ஆவிர்பாவம் பெற்று இயற்கைத் தன்மை பெறுவது போல்-
புதிதாக ஊட்ட வேண்டாமே ஞான மயமான ஆத்ம ஸ்வரூபம் -பெற்று வாழ்வார்கள்
என்கிறார் –

10-10-முனியே நான்முகனே முக்கண் அப்பா -ப்ரவேஸம்-

பரமபதத்திலே புக்கு-அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை -என்கிறபடியே
எல்லை இல்லாத ஆனந்தத்தை உடையராய்-
அத் திரளிலே இருந்த இருப்பு நினைக்கக் கூடிய ஞானமே மாத்ரமாய்-
புறம்பே கண்டு அனுபவிப்பதற்கு தகுதி இன்றிக்கே இருந்தது –அதற்கு மேலே-
இல்லை கண்டீர் இன்பம் -9-1-6–என்றும்
பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம் -திரு விருத்தம் -100-என்றும்
தாம் பிறருக்கு உபதேசிக்கிற இவ் உலகத்திலே சரீரத்தோடு கட்டுப் பட்டவராய்-
இருக்கிற படியையும் கண்டார் –
கண்டு -மேருவின் உச்சியில் துக்கம் இல்லாதவனாய்-மேலான சுகத்தை உடையவனாய் இருக்கிறான் ஒருவன்-
பல பல துக்கங்களை உடையதாய்-தாண்ட முடியாததாய்-பேர் ஆழமாய்-
ஓர் இடத்திலும் நிலை இன்றிக்கே இருக்கும்படியான பாதாளத்திலே-
விழுந்து நோவு படுமாறு போலே துக்கம் கொண்டவர் ஆனார் –

அதற்கு மேலே
பண்டு அவன் தமக்கு கை வந்த படியையும் -என்னை உயிர் வேறு அன்றி ஒன்றாக –
தன்னைப் பெறுகைக்கு உபாயம் தானே அல்லது வேறு இன்றிக்கே இருக்கிற படியையும்-
ஆவிக்கு ஒரு பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் –
தன் தலையிலே ஒரு உபாயத்தை ஏறிட்டுக் கொண்டு ஒழுகுமவனுக்கும் -மேவித் தொழும் பிரமன் சிவன் –
தன் கை பார்த்து இருக்க வேண்டும் படி-
எல்லா பொருள்களையும் காப்பாற்றுகின்றவனாய்-இருக்கும் படியையும் நினைந்து-
அக்கணத்தில் பெறாமையாலே-
இப்படி இருக்கிறவன் நம்மை இங்கனே நோவு பட விட்டு வைப்பதே என்று-மிகவும் துக்கம் கொண்டவர் ஆனார்-

அங்கனம் துக்கம் கொண்டவர் -தாய் தந்தையர்கள் முன்னே இருக்க பசியாலும் தாகத்தாலும்-
நோவு படுகிற சிறு குழவியானது துன்பத்தின் மிகுதியாலே தாய் பேரைச் சொல்லிக் கூப்பிடுமாறு போலே-
வள வேழ் உலகின் -என்ற திருவாய் மொழியில் கூறிய தன்மையை உடைய தாம்-
தம் தன்மையை நினைக்க ஆற்றல் இல்லாதவராய் –
தூதர் மூளவும் அறிவிக்கவும் இயலாதவராய்-
அவனே எதிரே நின்று பிராட்டி ஆணை இட்டு தலக்கு -நாணம் -அற்றுச் சொல்லும்படியான ஆற்றாமையோடு-
இரக்கம் இல்லாதவர் உடைய மனங்களும் இரங்கும்படியாக-
அவனுக்கு தம்மைக் காப்பாற்றி அல்லது பரம பதத்தில் இருப்பு அரிதாம் படியாகவும்-
காற்றுத் தீயிலே அகப்பட்டாரைப் போலே துயர ஒலியோடு பெரு மிடறு செய்து கூப்பிட்டு-

தே யத்யமானா பதிதா சவிரா ந நத்யமானா பயசல்யவித்யா
சாகா ம்ருகா ராவணா சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -50-45
வானரங்கள் ராவணனுடைய அம்பால் துன்பம் உற்றவனாய் ஓடின
புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்கிறபடியே
தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக்கார்

இவர் சரணம் புக
அவன் அருள்கடல் ஆகையாலே-இவரை இப்படி நோவுபட இட்டு வைத்தோமே அன்றோ -என்று
இவரைக் காட்டிலும் தாம் நொந்து
கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே –
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து –
பிராட்டிமாரோடே பெரிய திருவடி மேலே இவர் விரும்பியபடியே எல்லாவற்றாலும் நிறைந்தவனாய் வந்து தோற்றி
இவருடைய சரீர சம்பந்தத்தையும் அறுத்து
அடியார்கள் குழாம களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே
அத்திரளிலே புகப் பெற்று-
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும்
இவர் தாமே சொல்லலாம்படி இவர் விடாயும் தீர
இவர் விடாய்க்கு அவ்வருகான தன்னுடைய விடாயும் தீரும் படி கலந்து அருளினான் -என்கிறார்-

இப் பிரபந்தத்துக்கு தலைவன் சர்வேஸ்வரன் -பிரமேயம் –
இப்பிரபந்தம் -அவாவில் அந்தாதி -பிரமாணம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் கவி பாடினார் -பிரமாதா
இனி இவருடைய அவதாரம் தான்-சர்வேஸ்வரனுடைய அவதாரத்தைப் போன்று
சாதுக்களின் உடைய புண்ணியத்தின் பலம்
பிரமேய பிரமான பிரமாதா வைலஷணயத்தையும்
இவர் அவதார வைலஷணயத்தையும்
அருளிச் செய்கிறார் –

ஷேமுசி பக்தி ரூபா -பக்தி ரூபாபன்ன -மதி நலம் -பக்தி பூமா என்றுமாம் –
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்க-ஆதி லீலே-
உலகம் யாவையும் -தாம் உளவாக்கலுக்கும் நிலை பெறுத்தலும் நீங்கலும் நீங்கலா -அலகிலா விளையாட்டுடை அண்ணல் அவன் –

பத்தாம் திருவாய் மொழியில் கீழ் -அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய் தேச விசேஷத்திலே புக்குத்
திரு மா மணி மண்டபத்திலே ஏறி ஸூரி பரிஷத்திலே அந்தர்பவித்து நிரதிசய ஆனந்த யுக்தனாய்க் கொண்டு
முக்தன் இருக்கும் இருப்பை அபரோஷிக்க –
பர ஞானத்தால் இது தம்முடைய பேறாக சாஷாத் கரித்து அனுபவித்தவர் -அந்த சமாதி குலைந்தவாறே –
முன்பு இருந்த சம்சாரத்தை தரிசித்து -கொடு உலகம் காட்டேலே -என்று தாம் அஞ்சி இருந்த சம்சாரத்தைத் தரிசித்து
மிகவும் ஆர்த்தராய் அபரோக்ஷ ஸித்தமான இப்பேற்றை பெற்று அல்லது தரிக்க மாட்டாத படி
பரமபக்தி ரூபமான நிரவதிக அபி நிவேசம் பிறந்து
இவ்வளவும் நம்மைப் புகுர நிறுத்தினவன் தானே முழுக்க நிர்வஹிப்பானாக ஏறிட்டுக் கொண்டு
பெரிய திருவடி திருத் தோளிலே ஸந்நிஹிதனாய்த் தம் தலையிலே திருவடிகளை வைத்து
பல பிரதானத்திலே அதி த்வரிதானாம் படியை அனுசந்தித்து
அவ்வனுசந்தான பாவநத்வத்தாலே அபரோக்ஷ சித்தனான சர்வேஸ்வரனுடைய உபகாரமான
போக்ய விக்ரஹத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மீ வல்லபத்வத்தையும்
சர்வ காரணத்வத்தையும்
ஸமஸ்த வாஸ்து பிரகார யோகத்தையும்
அதிசயித போக்யத்வத்தையும்
அத்யந்த பிரணயித்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷகத்வத்தையும்
சர்வ அந்தராத்மவத்தையும்
ஸமஸ்த பிரதானத்வத்தையும்
பரிபூர்ண போக பிரதத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய சந்நிதியில் தம்முடைய
ஆர்த்தியும் அபி நிவேச அதிசயமும் தோற்றும்படி அவனுடைய உபகாரகத்வாதிகளைச் சொல்லி
மறுக்க ஒண்ணாத படி பிராட்டி திருவாணை இட்டு-
சர்வ பிரகார ரக்ஷகனான நீ எனக்குப் பூர்ண அனுபவத்தைத் தர வேணும் -என்று மிகவும் கூப்பிட
அவனும் இவருடைய வரவுக்கு ஈடாக குண விக்ரஹ விபூதி பரிபூர்ணனாய்க் கொண்டு பிராட்டியோடும் கூட
ஏக ரஸமாம்படி ஸம்ஸ்லேஷித்த பிரகாரத்தை அனுசந்தித்து
இனி இந்தப் பேற்றுக்குத் தட்டில்லை என்று நிஷ்கர்ஷித்து தாம் அவாப்த ஸமஸ்த பலரான படியைப் பேசி முடித்து அருளுகிறார் –

முனியே  நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

நிர்ஹேதுகமாக-உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி-உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்து நீ சென்று பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க- விட ஒண்ணாது-என்கிறார்-

முனியே-பஹுஸ்யாம் என்று மஹதாதி விசேஷாந்தமான ஜகத் ஸ்ருஷ்ட்டியைப் பண்ணுவதான மாநஸமான சங்கல்பத்தை யுடையையாய் இருந்துள்ள சர்வாதிகனே –தஜ்ஜலான்அவனே படைக்கப் படுகிறான் -அவனே படைக்கிறான் -அவனே பாதுகாக்கின்றான் அழிக்கின்றான்-அவனே பாதுகாக்கப் படுகின்றான்ஸ்தூல சூஷ்ம சேதன அசேதன விசிஷ்டம் -ப்ரஹ்மம் – விசேஷணம் மாறி விசேஷ்யம் ஒன்றாக இதம் சர்வம்-கரண களேபர விதுரமாய் அசித் கல்பமாய் – ஸோஸ்ய நஸா பன்னமாய்-சதேவ -என்று தன்னைச் சொல்லும் செயலாலே சொல்லும்படி ஸூஷ்ம அவஸ்தையை -பஜித்துக் கிடக்கிற அன்று –ச ஏகாகீ நரமேத -என்கிறபடி இவற்றினுடைய நோவை அனுசந்திக்கிற இருப்பைச் சொல்லுகிறது-சர்வேஸ்வரனும் தானும் இவற்றைப் பிரிந்து அசித்தைப் போன்ற தன்மை உடன் இருந்தான் என்பதை சொல்கிறது-முனிதல் கோபித்தல் – -என்றுமாம் —எனக்கு ருசியைப் பிறப்பிக்கைக்காக நாம ரூபங்களை உன் பேறாகத் தந்து பண்ணின கிருஷி பலித்து உன்னால் அல்லது செல்லாமையை உண்டாக்கிக் கொண்டு நீ கை விடப் பார்த்தாயா –என்றுமாம் –முனியே-அம்மே -என்பாரைப் போலே-ஆசைப்பட்ட எனக்கு இன்று உதவல் ஆகாதோ -நீ நினைக்கும் அன்றோ உதவல் ஆவது- நான் நினைக்கும் அன்று உதவல் ஆகாதோ -உன்னை ஒழிய ஒரு புகல் இல்லாதவருக்கு உதவுமவன் அன்றோ-

நான்முகனே-என்கிற இது -விசேஷமான சதுர்முகன் அளவிலே பர்யவசிக்கிறது அன்று -அவனுக்கு அந்தர்யாமியான அவன் அளவும் செல்லுகிறது-சேதனன் ஸ்வ சரீரத்தைக் கொண்டு தன் நினைவாலே கமன கமன ஆகமனாதி சேஷ்டிதங்களைப் பண்ணுமா போலே -ஸ்வ சரீர பூதனான சதுர்முகனைக் கொண்டு ஸ்வ சங்கல்பத்தாலே தேவாதி சதுர்முக ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறான் -ஸர்வேஸ்வரனே-இதனால் இவன் நினைத்த அன்று ஏதேனும் கொண்டு கார்யம் கொள்ள வல்லவன் -என்பதனைத் தெரிவித்த படி –
இருந்து படைக்கும் ஆசனத்தைப் போன்றவன் பிரமன் –
 அசேதன பொருள்களான மகத்த முதலான தத்வங்களைக் கொண்டு படைத்ததோடு- அறிவுள்ளவனான பிரமனைக் கொண்டு படைத்ததோடு வேறு பாடு இல்லை அவனுக்கு –சேதன பொருள்கள் -அசேதனப் பொருள்கள் என்று தம்மில் தாம் வேற்றுமை உண்டாகிலும்–அவனைக் குறிக்க பரதந்த்ரம் ஆகும் இடத்தில் இரண்டும் ஒக்கும் –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய –

அழிக்கின்றவனையும் அழிக்கின்ற சர்வேஸ்வரனுக்கு சரீரமாய் இருக்கிற சிவன் உடைய
முக்கண் -என்ற பெயராலே -அவனில் வேறாய் -அவனுக்கு அந்தராத்மாவாய் இருக்கும் எம்பெருமானையே விளிக்கிறது –அப்பா – என்கிற சொல் உபகாரத்தைக் காட்டுகிறது-படைத்தலைக் காட்டிலும் அழித்தல் உபகாரமே அன்றோ – நான்கு நாள்கள் கழித்து படைத்தாலும் ஆத்மா கிடக்கும்–சடக்கென அழிக்கா விட்டால் ஆத்மாவை இழக்க வேண்டும்படி தீம்பிலே ஆயிற்று கை வளர்வது –

ஏகோஹவை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்ம ந ஈசான நேமே தயாவா ப்ருத்வி-ந நஷத்ராணி ந ஆப ந அக்னி ந சோம ந சூர்யஸ்- ஏகாகி நரமேதி -தஸ்ய த்யானாத்தஸ்ய தஸ்ய ஏகாகத்யா ந சேந்த்ரியாணி — அனபுனரேவ நாராயணஸ் அத்யம் காமம் மனஸா த்யாலீத-தஸ்ய த்யாநாத் தஸ்தஸ்ய லலாடாத் ஸ்வேத அபதத் தா இமா ஆப தத் ஹிரண்மயம் அண்டம் அவ்வத் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே-என்ற மகா உபநிஷத் வாக்யத்தை நினைப்பூட்டுதல் செய்கிறது – முனியே நான் முகனே முக் கண் அப்பா -என்கிற இந்த விளி வாக்கியம்-ஏக த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா சம்ஹாரக ததா-அத்யஷஸ் சானுமந்தாச குணமாயா சமாவ்ருத -ஜிதந்தா-நீ ஒருவனே உலகத்தை படைக்கிறவனும்-அப்படியே உலகத்தை அழிக்கின்றவனும் ஆகின்றாய் -என்றபடி-சிருஷ்டி ஸ்திதி அந்தகரனீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம்-ஸ சம்ஜ்ஞானம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23–படைத்தல் காத்தல் அழித்தலைச் செய்கிற-பிரமன் விஷ்ணு சிவன் என்ற பெயர்களை- பகவானான அந்த ஜனார்த்தனனே அடைகிறான் –

கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே-தாமரை பூத்தது ஒரு மாணிக்கம் புன் முறுவல் செய்தாப் போலே ஆயிற்று வடிவு இருப்பது–இதுவும் ஒரு வியாவ்ருத்தி இருக்கிற படி-பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தான் இட்சுவாகு குலத்தாரோடும் யது குலத்தாரோடும் ஒத்த தரத்தனாய் கொண்டு திரு அவதாரம் செய்தாப் போலே-ஆதி தேவனாய் -விஷ்ணு -என்னும் திருப் பெயரை உடையவனாய்-தனது உருவத்தினாலேயே திரு அவதாரம் செய்து காப்பாற்றும் படியைச் சொல்லி விளிக்கிறது- நான் முகனே முக்கண் அப்பா –என்கிற இடத்தில் கண்களை செம்பளித்துக் கொண்டு போய் விசேடியத்திலே இளைப்பாறினார்–இங்கு விசேஷணமே தம் குறிக்கோள் ஆனபடியைச் சொல்கிறது -காத்தலானது தானே தண்ணளி செய்து செய்ய வேண்டுவது ஓன்று ஆகையாலே வேறு ஆள் இட ஒண்ணாது
ஆள் இட்டாலும் வேறு சிலரால் காப்பாற்ற ஒண்ணாது–-என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –என்று-ஆழ்வார்கள் திரு மேனிக்கு அப்பால் போக அறியார்கள்–முறுவலும் கண்ணுமாய் இருபத்தொரு மாணிக்க மலை போலே யாய்த்து வடிவு இருப்பது -முறுவலையும் தப்பினாரையும் -அகப்படுத்த வற்றான கண் –

முனியே என்று சமஷ்டி ஸ்ருஷ்டியையும் –நான் முகனே என்று வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டியையும் –முக்கண் அப்பா சம்ஹாரத்தையும் –கரு மாணிக்கமே -பாலனத்தையும் அருளிச் செய்தார்
என் கள்வா-நான் அறியாமே இவ் வழகைக் காட்டி வஞ்சித்து என்னை அடிமை கொண்டவனே-சர்வேஸ்வரனுக்கும் தனது பொருளை களவு கொண்டு கொள்ளும் படிக்கு ஈடாக அன்றோ-இவனுடைய –என்னின் -உரம் இருப்பது–பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று-கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே -திவ்ய கவி -உன்னதமான ஆத்ம வஸ்துவை அபஹரித்துக் கொண்டு இருக்கிற என்னை விஷயீ கரிப்பதே –நான் அபஹரிக்கைக்கு அடி -கர்மம் -நீ அபஹரிக்கைக்கு அடி வடிவு அழகு –உடையவன் உடைமை பெற்றாலும் அபகாரம் என்னும் படி யாய்த்து ஸ்வாதந்தர்யம் வயிரம் பற்றின படி -நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகைக் காட்டி என்னை விஷயீ கரித்தவனே -என்று ஆழ்வான் நிர்வாஹம் 

தனியேன் ஆர் உயிரே –என் இசைவு இன்றிக்கே என்னை அங்கீ கரித்த அளவேயோ –
உன் சுவட்டினை அறிவித்து-பிரிந்தாலும் முடியாதபடி குணங்களின் தோற்றரவாலே உளேன் ஆம்படி செய்தவனே-இவ் உலக மக்களோடு பொருந்தாமையும்-பரமபதத்திலே புகப் பெறாமையும்-நோக்கித்- தனியேன் -என்கிறார் –உன்னைப் பிரிந்து பொருந்தாத இவ் உலகத்தில் இருக்கின்ற எனக்கு உயிருக்கு காரணமாய் உள்ளவனே 

இனி–சம்சாரத்தின் தண்மையை அறிந்த அளவன்றிக்கே முக்த ப்ராப்த தேசத்தையும் சாஷாத் கரிப்பித்து -உன் சுவட்டை அறிவித்த பின்பு –இனி ஒரு குண ஆவிஷ் காரத்தாலே பெற்றேனாகப் பண்ணி என்னை வஞ்சியாதே கொள்-இது 19 வைத்து இனி -3 தடவை 17 தடவை -இன்னும் ஒரு இனி தான் உண்டு –இனிப் பண்டு போலே உன்னுடைய குண சேஷ்டிதாதிகளை என் நெஞ்சிலே காட்டி வஞ்சித்து என்னை ஒன்றும் மறப்பிக்க ஒண்ணாது –இனி மெய்யே வந்து கலந்து அருள வேணும் -என்று கொண்டு தம்முடைய அபேக்ஷிதம் செய்து அல்லது எம்பெருமானுக்குத் திரு நாட்டிலும் கூட இருக்க ஒண்ணாத தொருபடி
பெரிய ஆர்த்தியோடே பெரும் கூப்பீடாகக் கூப்பிடுகிறார் –
நான் போகல் ஒட்டேன் -நானே அறிவேன் -என்ற கை பறியாலே பறித்த அறிவு அன்றிக்கே நீயே காட்டக் காணப் பெற்ற நான் விஸ்லேஷிக்க ஓட்டேன் —போகல் ஒட்டேன் –வரும் போது உன் ஸ்வா தந்த்ர்யத்தால் வரலாம் அத்தனை -அல்லது-போம் போது உன் கார்யம் உன்னதோ – இவர்க்கு இப்படி சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறிய தமக்கு உண்டான விரைவாலேயும்- விரும்பிய அளவில் இவர் கார்யம் செய்யப் பெறாத பிற்பாட்டுக்கு-
ப்ரசீநந்து பவந்த மீ ஹ்ரீ ஏஷா ஹி மமதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபச்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9- நான் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட அந்தணர்களால்-நான் அடையப் பட்டேன் என்னும் இது எனக்கு- மிகவும் நாணமாய் இருக்கிறது -நீங்கள் என்னுடைய தவறினைப் பொறுத்து அருள வேண்டும் -என்று- நாணம் கொள்ளுபவன் ஆகையாலும் அன்றோ –

ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னை அறிவதற்கு முன்பு த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -உன்னை அறிந்த பின்பு குணங்களை ஆவிஷ் கரித்து அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் –என்னையே -அங்கன் செய்ய வேண்டுகிறது என் என்ன –ஏஹி பஸ்ய சரீராணி -என்கிறபடியே விரஹம் தின்று சேஷித்த உடம்பைக் காட்டுகிறார் –அங்கு சரீர மாத்ரம் -அவர்களுக்கு-இவருக்கு ஆத்மாவின் நாசம் அன்றோ –

——————-

மாயம்  செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

அவனுக்கும் மறுக்க ஒண்ணாத படி-பெரிய பிராட்டியார் திரு ஆணை இடுகிறார் – உன் திரு –நித்யைவ ஏஷா ஜகத்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ-யதா சர்வகதா விஷ்ணு ததைவ இயம் த்வ்ஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17-விஷ்ணுவுக்கும் செல்வமாய் இருப்பவள் -என்கிறபடியே–உலகத்துக்கு எல்லாம் செல்வம் அவன் -அவனுக்கும் செல்வம் இவள் –
அன்றிக்கே
விஷ்ணுவுடைய திரு -என்றபடி-உன்னுடைய செல்வம் -என்னுதல்-
திருவுக்கும் திருவாகிய செல்வா -பெரிய திருமொழி -7-7-1-என்றும்-
ஸ்ரிய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்-சமர்த்ததம் ஆபத்சகம் அர்த்தி கல்பகம் -ஸ்தோத்ர ரத்னம் -45
தாம் ஸ்ரீ இதி த்வத் உபசம்ஸ்ரயநாத நிராஹூ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -29
திருமகளாலே சர்வேஸ்வரன் தெய்வத் தன்மையை அடைகிறான் –
யாவர் ஒருவனுக்கு அந்த ஜனக ராஜன் குலத்தில் பிறந்த பிராட்டி மனைவியாய் இருக்கின்றாளோ-அவருடைய ஆற்றல் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது -என்கிறபடியே-
ஆதாரப் பிரதானமாய் இருத்தல்-ஆதேயப் பிரதானமாய் இருத்தல் –
ஆதேயத்துக்கு ஆதாரத்தை ஒழிய உளதாம் தன்மையும் இல்லை-
நிரூப்யத்துக்கு நிரூபகத்தை ஒழிய ஸ்வரூபத்தின் நிலை இல்லை –
ஒன்றை ஓன்று ஒழியில் ஸ்வரூபம் நிலை பெறுதல் இல்லை –

தன் ஆகத் திரு மங்கை தங்கிய திரு மார்வன் -நாச்சியார் திருமொழி -8-4-
தான் உளன் ஆகைக்காக -தன் சத்தை பெறுகைக்காக-நித்ய யுவதியான பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்யும்-வீறு உடைய திரு மார்பு –
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணா-யுத்தம் -66-10-பிராட்டியைப் பிரிந்தால் ஒரு கண நேரமும் உய்யேன் என்கிறபடியே –ஸ்ரத்தாயா -லஷ்மயா -தேவத்வம் ஈஸ்வரத்வம்-அடைகிறான் -ஆதார பிரதான்யம் -சர்வ ஆதாரம் ஈஸ்வரன் -பரிமளம் புஷ்ப்பம் இடமும்– ஒளி ரத்னம் -ஆதேயம் பிரதான்யம் -இங்கு மட்டும் சமப் பிரதான்யம் -என்றவாறு – -தன்னாகத்து திருமங்கை தங்கிய சீர் மார்பன் —ஆதார நிரூபக பிரதான்யம் இரண்டும் சொல்லிஆகத்து திருமங்கை -அவளுக்கு பிரதான்யம் -தங்கிய சீர் மார்பன் -அவனுக்கு பிரதான்யம் –-மற்றையோர்க்கு எல்லாம் உன்னுடைய ஆணை-உனக்கு நீ உகந்தார் இடும் ஆணை-அத்தனை அன்றோ –நின் ஆணை -திரு ஆணை-என்று இருவரையும் ஓக்கச் சொல்லவுமாம் -மயாச ஸீதயா சைவ சப்தோ அஸி ரகு நந்தன -என்கிறபடியே –

மார்வத்து மாலை –-கேவலம் செல்வமாய் இருக்கை அன்றிக்கே-திரு மார்புக்கு அலங்காரமாய் இருக்கை –-மார்புக்கு அலங்காரம் அவள்-அவளுக்கு அலங்காரம் மார்பு –நங்கை-வடிவு ஒழிய-மற்றை ஸ்வரூபம் குண விபூதிகளும் -அவளாலே என்கை-திருவாளனுக்கு திரு இல்லாதவர் ஒப்பு ஆகார் அன்றோ –வாசம் செய் பூங்குழலாள் –
நாற்றத்துக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்–சர்வகந்த -என்பவனுக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்–சர்வ கந்த -என்னும் ஏற்றம் அவனுக்கு இத் தலையாலே காணும் அவனுக்கு வந்தது-ஸ்ரத்தாயா அதேவ அஸ்னுதே தேவன் ஆனான் என்பர் ரஸோக்தியால் –

திரு ஆணை நின் ஆணை கண்டாய் – திருவினுடைய ஆணை காண் – என் கார்யம் செய்து அல்லது இட்ட அடி பேர ஒண்ணாதபடி உனக்கு இட்ட ஆணை –எல்லார்க்கும் அறப் பெரியவன் ஆகையாலே மற்றையோர்க்கு எல்லாம் உன்னுடைய ஆணை- உனக்கு நீ உகந்தார் இடும் ஆணை அத்தனை அன்றோ –

மாதரம் ரஷ கைகேயீம் மா ரோஷம் குரு தாம் ப்ரதி-மயா ச சீதாயாசைல சப்த அஸி ரகுநந்தன -அயோத்யா 118-27–ஒ பரதனே தாயான கைகேயியைக் காப்பாற்று-அவள் இடம் கோபம் வையாதே–மயா ச சீதாயா-என் மேலும் சீதை மேலும் ஆணை -என்ற பெருமாள் போலே-இங்கேயும்-பெரிய பிராட்டியார் ஆணை-நின் ஆணை -காண் -என்கிறார்

உமக்கு பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் தலைவன் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை காணும் -என்ன–அடியவன் உளனாய் கண்டு இருக்க வேண்டுமே -உயிர் வேறு இன்றி -என்று–தம்முடைய இல்லாமையை விவரிக்கிறது மேல் இரண்டு அடிகளாலும்-மேலில் பாட்டுக்களாலும்-பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் வேறு நிற்றலும் வேறாகத் தோன்றலும் உண்டோ -என்கிறார்–கண்கள் சிவந்து -2 1/2 பாட்டுக்கள் -பரமாத்மா ஸ்வரூபம் -மேலே 7 1/2 பாட்டுக்கள் ஜீவாத்மா ஸ்வரூபம் பிரித்தால் போலே-இங்கும் மேலே 8 1/2 பாசுரங்கள் -என்றவாறு –

நேசம் செய்து –-பெரிய பிராட்டியார் பக்கலிலும் செய்யாத அன்பை என் பக்கலிலே செய்து –
நான் அன்பு செலுத்த இருந்தாயோ-என் விடாய்க்கு அடி உன் விடாய் அன்றோ-ஈஸ்வரஸ்ய அஸ்ய ஸுஹார்த்தம் முதல் படி அன்றோ –

உன்னோடு என்னை –உன்னை அறிந்தாயோ-என்னை அறிந்தாயோ –-உயிர் வேறின்றி ஒன்றாகவே – உயிர் வேறுபாடு இல்லாதபடி அன்றோ என்னை அங்கீ கரித்தது-உன்னது என்னதாவியுமஎன்னது உன்னதாவியும் -4-3-9-என்னும்படி-என்னைப் பிரித்துக் காண ஒண்ணாதபடி அன்றோ நீ தலையாலே சுமந்தது–தலை தடுமாறாக செயல் புரிந்தது -கலவிக் காலத்தில் என் ஸ்வரூபம் நீ இட்ட வழக்காயும் உன் ஸ்வரூபம் நான் இட்ட வழக்காயும் படி அன்றோ -நீ செய்த செயல் – தலை தடுமாறி பரிமாறினாய் –தட்டு மாறின சீலம் திருக் காட்கரை அப்பன் –சூரியன் பிரபை என்று பிரித்து சொல்லும் படி அங்கு –இங்கு உயிர் வேறு இன்றி -விசத தமமாகப் பண்ணி -அன்றோ கலந்து –

கூசம் செய்யாது கொண்டாய் –சர்வஞ்ஞனான நீயும் வாசி வைத்துக் கலக்க அறிந்திலை-என் பக்கல் உள்ள தாழ்மையைப் பாராதே அங்கீ கரித்தாய் – முதலிலே என்னுடைய முன்னைய செயல்களைப் பாராதே மதி நலம் அருளினாய்–பின்பு -வளவேழ் உலகில் -நான் தாழ்ந்தவன் என்று அகல-என்னை என் வழியில் விடாதே–உன் செல்லாமையும் காட்டிச் சேர்த்துக் கொண்டாய்-இப்படி அன்று நீ செய்திலை யாகில் இன்று வருந்த வேண்டா ஆயிற்று –

1-சாஸ்த்ரங்களால் அறிவிக்கும் அளவு போராது-
2-குணங்களை அனுபவிக்கும் அளவாலே போராது-
3-உட் கண்ணால் காணலும் போராது –
4-உன்னைக் கிட்டி அனுபவிக்கும் படி செய்ய வேண்டும் –
வர வேண்டும் கூவ வேண்டும் -நடை அழகைக் காண வேண்டும் -மிடற்று ஓசையை கேட்க வேண்டும் -கைங்கர்யம் கொள்ள வேண்டும் –
அந்தோ –தன்னை ஒழியச் செல்லாமையை-தானே விளைத்து-கூப்பிட வந்து முகம் காட்டாது ஒழிவதே-

—————

கூவிக்  கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

கூவிக் கொள்ளும் அளவும் போராது-வந்து கூவிக் கொள்ள வேண்டும் -என்பார் –
வந்து -என்கிறார் –ஆற்றாமை மிக்காலும் நான் வந்து கிட்டுகை முறைமை அன்று-
உனக்கு தாழ்ச்சியுமாம் -என்கிறார் –எழுதும் என்னும் இது மிகை -9-8-9- என்பவனுக்கு-
நாம் செல்லுதல் என்னும் அது பொறுக்க முடியாதது -என்னும் இடம் சொல்ல வேண்டாவே அன்றோ–வருகை -அவனுக்கே உரியதாய் இருக்கிறபடி-அந்தோ – உனக்கு நிறம் அன்று என்று நான் சொல்ல வேண்டுவதே –

என் பொல்லாக் கருமாணிக்கமே--நீ அழைத்த போது கண்டு இருக்கல் ஆயிற்றே- நீ நீ அன்றிக்கே இருந்தாய் ஆகில்-க்ரமத்தில் அழைக்க நினைத்தாய் ஆகில் -அழகைக் காட்டி -உனக்கே உரியவன் ஆகும்படி செய்தது என்-ஸ்வரூபத்தை பார்த்து ஆறி இருக்க வேண்டாமோ -என்னில்அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேண்டுமே–ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் – பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி–கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு -என்று சொல்லாதவர்களுக்கும்-உதவுமவன் அன்றோ நீ –சொல்ல அறியாமையாலே-பிரமன் முதலாயினோர்கள் சொல்லார்கள் –-நித்ய ஸூரிகள் யான் எனது என்ற பற்று இல்லாதவர்கள் ஆகையாலும்- புதிதாக சொல்ல வேண்டாமையாலும் சொல்லார்கள்-

உம்பர் அந்த அதுவே –அவர்களுக்கும் மேலான நித்ய ஸூரிகட்கும்-அப்படிப் பட்ட-உபய லிங்க விசிஷ்டனாய் -எளிதில் அடையத் தக்க பொருளாக இருப்பவனே-ஸூ பாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் –சதா பஸ்யந்தி ஸூரய -பிரமாண பிரசித்தியைச் சொல்லுகிறார்-அயர்வறும் அமரர்களுக்கு பரம ப்ராப்யன் ஆனவனே –அது -என்று-நித்ய ஸூரிகளோடு- பிரமன் முதலாயினர்களோடு- வேறுபாடு அற நிர்வாஹகனாய் இருக்கிற-
நீ வந்து என்னைக் கூவிக் கொள்ளாய் –

இப் பாட்டால் -கீழும் மேலும் சொல்லுகிற சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் காரிய காரண பாவம் என்னுமத்தை அருளிச் செய்தார் யாய்த்து – சர்வம் கல்விதம் ப்ரஹ்ம —

—————

உம்பர்  அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

 ஒவ் ஒரு இடத்திலும் -சேர்த்து-ஆர்த்தி மிக கூப்பிடுகிறார்-பொறுப்பை நிர்வகிக்கத்த பின்பு -ஓர் ஒன்றே ரஷிக்க ஹேதுவான பின்பு அநாதரிப்பது —உம்பர் அம் தண் பாழேயோ –-மஹான் முதலிய காரணங்களுக்கு எல்லாம் காரியம் ஆகையாலே மேலாய் –-தன்னுடைய ஒரு கூற்றாலே கார்ய வர்க்கத்தை பிறப்பிக்க வற்றான ஆற்றலை உடைத்தாய்–வியக்கத் தக்க பரிணாமத்தை உடையதாய்- ஆத்மாக்களுக்கு போகத்தையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளலாம்-நிலமாய் இருந்துள்ள மூல பிரக்ருதிக்கு நிர்வாஹகன் ஆனவனே-உம்பர் அம் தண் பாழ் -என்கிற இதனால்-ஆத்மாக்களுக்கு சரீரமாய் -அவ் வழியாலே ஈஸ்வரனுக்கு சரீரம் ஆகை அன்றிக்கே யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிர்த்வி சரீரம் – ஆத்மாக்களுக்கு வேறு பட்டதான அசேதனப் பொருள்களுக்கும்-அவனை ஒழிய நிர்வாஹகர் இல்லை என்பதனை தெரிவித்த படி–

பாழேயோ -என்கிற இதனால் சுத்த பேதம் கொள்ளுகிற மீமாம்சகரையும்–-ஸ்வரூபத்தால் தாதாத்மியம் கொள்ளுகிற மாயாவாதிகளையும் அழிக்கிறது –நுட்பமான சித் அசித்துக்களை சரீரமாக உடையவன் காரணம் ஆகையாலே-காரணனாய் உள்ள நிலை சொல்லிற்று–இதனால் விசேஷணத்துக்கு முதன்மை சொல்லும் நியாய வைசேடிக மதங்களும்–விசேஷணதுக்கு பொய்மை கூறும் மாயாவாதி மதங்களும்-ஆழ்வாருக்கு உடன்பாடு அன்று -என்றதாயிற்று
நீயேயோ -என்கிற இதனால்–ஆத்மாவை ஒழிய சரீரத்துக்கு நிலை இல்லாதது போலே-
ஈஸ்வரனை ஒழிய ஆத்மாவுக்கு நிலை இல்லை என்றது ஆயிற்று –

ஆடையின் வெண்மை -படஸ்ய ஸுக்லயம் -வெண் தன்மை –நிஷ்கர்ஷகம்-வெண் ஆடை -அநிஷ்கர்ஷகம்-வை வைஷிகா நிஷ்கர்ஷகம்-சுக்ல பட -வெண் ஆடை சொல்லாமல் ஆடையின் வெளுப்பு-நியதி –நிஷ்கர்ஷகம்-கந்தம் பிருத்வி மண்ணில் மணம்-தர்மத்தை மட்டும் சொல்லும் தர்மியை சொல்லாதே

பிரகாரி பிரகார சம்பந்தம் -காரிய காரண சம்பந்தம் -நீயே பாழ்–சர்வம் கல் இதம் ப்ரஹ்மம் –
நீ ஆத்மா தத் தவம் அ ஸி
 –அதனுள் மீசை நீயே யோ-ஜகத் வியதிரிக்த விஷயங்களில் -நிஷ்கர்ஷம் தர்மம் தர்மம் சொல்லும் தர்மியை சொல்லாதே – பூவின் மணம் -மணத்தை தானே குறிக்கும் பூவைக் குறிக்காதேபகவத் விஷயத்தில் நிஷ்கர்ஷமான சொல்லும் அவனையே குறிக்கும் –நீ பிரகிருதி பாழ் சொல்லலாம் -என்றவாறு –-பிரகிருதி சப்தம் அவன் அளவில் பர்யவசிக்கும் –சர்வ சப்த வாச்யத்வம் –என் உடம்பு நாம் சொல்ல வேண்டும் -அவன் நானே உடம்பு -சொல்லலாம்-சரீர ஆத்ம பாவத்தால் – ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் காரணம் -என்றவாறு –
நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மம் -அத்வைதிகள் –
விசேஷண பிரதான்யம் சொல்லும் வைசேஷிகர் –
நீ என்பதற்கு தானே ஆழ்வார் பிரதான்யம் என்கிறார் –
பொய் இல்லை -விசேஷணம் உண்டு என்கிறார் -ஆகையால் இரண்டு மதங்களையும் கண்டனம் பண்ணி அருளுகிறார் –

அம்பரம் நற் சோதி –ஆகாசமும் சிறப்புடைத்தான ஒளியும்–இவை இரண்டும் மற்றைய பூதங்களுக்கும் உப லஷணம்-அதனுள் பிரமன் அரன் நீ –-பஞ்சீக்ருதமான ஐம் பெரும் பூதங்களால் உண்டான-அண்டங்களிலே வசிக்கிற பிரமன் சிவன் முதலாயினார்களும்-நீ இட்ட வழக்கு -என்கிறது –-உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ 
தேவர்களையும் மற்றும் உள்ளாரையும் படைத்த முனியாய்-பிரசித்தமாய் இருப்பவனும் நீ-
பிரமன் அரன் நீ -என்ற ஒற்றுமை தன்மை-கார்ய காரண தன்மை அடியாய் வந்தது-
பரம் பொருளின் இடத்தும் உண்டானவை-அவனால் அழிக்கப் படுகின்றவை -காக்கப் படுகின்றன–ஆதலால் காணப் படுகின்றன இவை எல்லாம் ப்ரஹ்மம் அல்லவா -என்னுமாறு போலே–எல்லா பொருள்களையும் கர்மங்கட்கு தகுதியாக படைப்பதற்கு-
அவர்கள் செய்த முன் கர்மங்களை நினைக்கும் அவன் -முனி ஆகிறான்-ஸ்தூலமான சித்தியும் அசித்தையும் சரீரமாக உடையவன் என்பதனாலே-காரியமாம் தன்மை சொல்லிற்று ஆயிற்று – சதேவ ஏக மேவ அத்விதீயம் நீயே தான் காரணமும் காரியமும் -சாந்தோக்யம் தமிழ் செய்த மாறன் –

எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே – என் கார்யத்தை நீயே செய்வதாக ஏறிட்டுக்கொண்டு-அதனை விட்டு-அசேதனப் பொருளை பொகடுமாறு போலே பொகட்டாய்-என்னுதல்-
அன்றிக்கே –
எல்லாவற்றையும் நிர்வஹிக்கிற நீ-என் ஒருவனையும் என் கார்யம் செய்வேனாகப் பார்த்து-
உன் பக்கல் நின்றும் போர விட்டு விரும்பாமல் இருந்தாய் -என்னுதல்-

என்னை--உன்னால் அல்லது செல்லாத என்னை–போர விட்டாய்–அவன் பக்கலில் நின்றும் பிரி கதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி-குணம் நடையாடாத தேசத்திலே தள்ளினாய் -என்கிறார்-

———-

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே 
–10-10-5-

நீ –படைப்பே தொடங்கி-இவ்வளவும் வரப் புகுர நிறுத்தின நீ -என்றது-
ஞானத்தாலும் ஆற்றலாலும் நிறைவுற்று இருக்கிற நீ -என்னுதல் என்றது-
ஆள் பார்த்து உழி தரும் நீ -நான்முகன் அந்தாதி -60-
எதிர் சூழல் புக்கு திரியும் நீ -2-7-6-என்றபடி

பேற்றினைப் பெறுவது இறைவனாலே–அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டத்தால் அன்று – என்னும் இடம் தோற்றுகைக்காக –எத்தைக் கொண்டு என்னாதே -ஆரைக் கொண்டு -என்கிறார் – ப்ரஹ்மம் தானே பல பிரதன் -அசேதன கிரியா கலபரங்கள் இல்லையே –என்னது என்கைக்கு ஒரு கர்ணாதிகள் இல்லை-நான் என்கைக்கு ஒரு ஸ்வ தந்த்ரனான கர்த்தா இல்லை-இது வேறு உண்டோ என்று கருத்து –-ஆரைக் கொண்டு எத்தை என்கிற இரு உக்தியாலே விஷண்ணராகிறார்–

தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரைஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –நெருப்பினால் நன்கு காய்ச்சப் பட்ட இரும்பு-காய்ச்சல் தீர நீரை முற்றும் உண்ணுமாறு போலே என் ஆத்மாவை முற்றும் உண்ணுவதற்காக- எனக்கு உன்னுடைய எல்லை இல்லாத இனிமையைக் காட்டி-என்னை அடிமைப் படுத்தினாய் –
என் விடாய் தீரக் கலந்தாய் -என்று இருந்தேன்-உன் விடாய் தீரவாய் இருந்ததே அன்றோ -என்றது உனக்காக அன்றோ உன்னைக் காட்டிற்று -என்றபடி-
அன்றிக்கே
உயிரை என்ற இரண்டாம் வேற்றுமையை முதல் வேற்றுமையாகக் கொண்டு-
என் ஆர் உயிர் ஆனது உன்னை ஆரப் பருக -என்னவுமாம்-
அப்போது காய்ந்த இரும்பு அக் காய்ச்சல் தீரும்படி-நீரைப் பருகுமாறு போலே- என் ஆர் உயிர் ஆனது என் தாபம் எல்லாம் தீரும்படி- உன்னை அனுபவிக்க எனக்கு பண்டு எல்லை இல்லாத-இனியன் ஆனவனே -என்றுமாம் –

————-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ
–10-10-6-

எனக்கு ஆரா அமுதமாய் -தேவ ஜாதியினுடைய உப்புச் சாறு அன்றிக்கே –சதா ஸேவ்யமுமாய்-நித்ய ஸூரிகள் எல்லாரும் கூட அனுபவிக்கும் உன்னை -சம்சாரியான எனக்குத் தந்தாய் –எனது ஆவியை –-என்னுடையது என்னுமதுவே காரணமாக- காதலியின் அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே-என் உடம்பை விரும்பினாய் –இன்னுயிரை –பகவான் உடைய அபிப்ராயத்தாலே–தவதவ நாறுகிற படி –தவ -பாரதந்த்ர்யம்-மற்றொரு தவ -உரிச் சொல்
அன்றிக்கே-செவ்வாய் கிழமை மங்கள வாரம் என்னுமா போலே –சரீரத்தோடு சேர்ந்து இருக்கையாலே தண்ணிது -என்று சொல்கிறார்

இனி உண்டு ஒழியாய்–நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் துணை செய்தது உண்டோ –திருவிருத்தம் தொடங்கி அனுபவித்தாயே –உன் கார்யத்துக்கு உன்னை வேண்டிக் கொள்ள வேண்டுமோ-இவருடைய அமுதத்துக்கு அனுபவிக்கும் தன்மை உண்டு காணும் –போக்த்ருத்வம் உண்டே –

ஈஸ்வரனுக்கு நிருபாதிக போக்த்ருத்வமும்-சேதனனுக்கு போக்யத்வமும் இறே ஸ்வாபாவிகம் –-அதனுடைய அனுபவ ஜெனித ப்ரீதியாலே வருகிற பர்யவாசநம் இ றே சேதன போக்த்ருத்வம் -ஈஸ்வர போக்யத்வமும்-ஆகை இறே ஸ்வரூபத்தை நிர்த்தேசித்து இவனுடைய போக்யத்வத்தையும் ஈஸ்வரனுடைய போக்த்ருத்வத்தையும் சொல்லி
சைதன்ய ப்ரயுக்தமான பர்யவசாநத்தாலே சேதன போக்த்ருத்வத்தையும் ஸ்ருதி சொல்லி முடித்தது-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத என்று –

இவ்வாத்மாவையும்-இதனுடைய சரீரத்தையும் விரும்புகை உனக்குச் சேருமோ-
நீ உகந்தாருக்குச் சேருமோ –

புண்டரீகக் கண்-அக்காயா தாமரை பூத்துக் கனியப் பழுத்தால் போலே ஆயிற்று–திரு மேனியும் திருக் கண்களும் திருப் பவளமும் -இருப்பது-பிராட்டி விரும்பும் துறைகள் அல்லவோ இவை-

உனக்கு ஏற்கும் கோலம் -என்று-அவ் அழகினை இங்கே ஏறிடுகிறார் -நியாயாதிதேசம் –
அதிதேசம் -ஏறிடுதல்-ஸ்வரூப அதிதேசம் இல்லை இங்கு -முற்றுவமை இல்லை-
நியாய அதிதேசம் -அது போன்று இது -சிறப்புடைத்து –காயம் பூ பொருந்தாதே ஹிரண்ய வர்ணை அன்றோ -அதனால் பெருமை பொருந்தும் -அவனைப் போன்ற அழகு உடையவள் என்றபடி —

கோலம் மலர்ப் பாவைக்கு அன்பா -என் அன்பேயோ--அவள் பக்கல் அன்புடையவன் -என்று தோற்றி இரா நின்றது- தம் பக்கல் -அன்பு என்றும் -அது உடையவன் என்றும்-தெரிக்க போகிறது இல்லை – ஞானத்தை உடையவனை ஞானம் என்ற சொல்லால் கூறுவது போன்று- தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -சாரீரக மீமாம்சை-2-2-20-

————-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ
 –10-10-7-

இறுதி இனி -வராஹ அவதாரம் சொல்லி நிகமிக்கிறார்ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -திரு விருத்தத்திலும் -நிகமித்தார்

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ –பிராட்டி பக்கல் உள்ள அன்பின் மிகுதியாலே-அந்த அன்பே காரணமாக அவளால் அங்கீ கரிக்கப் பட்ட- என் பக்கலிலே மிக்க அன்புள்ளவன் ஆனவனே–ரிஷிகளை ரக்ஷித்து அன்றோ பிராட்டியால் ஆலிங்கனம் பெற்றார் பெருமாள்
பட்டர் தம்முடைய அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை-
பெரிய பிராட்டியார்க்கு அன்பன் ஆகையாலே-அவளால் அங்கீ கரிக்கப் பட்ட நமக்கும் அன்பனாம் என்று-இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது -என்று ஜீயருக்கு அருளிச் செய்தார் – திரு மால் என்னை ஆளும் மால் -10-7-5-என்னும்படியே- தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ –என் அன்புக்கு அடி இல்லையோ –
திருவுக்கு பரிகரமான என்னிடமும் மால் -மால் நடுவில் -திரு என்னை இரண்டு பக்கமும் –
திரு மால் இடம் பேசி இருவருமாக என்னை ஆள்வார்கள் -கைங்கர்யம் கொள்ளுவார்கள் -என்றபடி –

கோல வராகம் – மாசு உடம்பில் நீர் வாரா நின்ற நிலை அன்றோ-இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயம் ஆயிற்று-அவன் அழிவுக்கு இட்ட வடிவிற்கே அன்றோ இவர் ஆலத்தி வழிக்கிறது-
மாசுடம்பின் நீர் வாரா மானமிலா பன்றி இவர் கண்ணுக்கு கோலா வராஹம் -ஆலத்தி எடுக்கும் படி –பிரணயித்துவுக்கு நமஸ்காரமாகுமே அலங்கரித்து வந்தால் -தாம் தாமான படியில் வரக் கூடாதே -ராஸிக்யம் பூர்த்தி –

உன்னைப் பெற்று இனி போக்குவனோ –ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து-
என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ–நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-

————–

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயாப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ
-10-10-8–

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை –ஓர் அச்சு இல்லாக் காசாய் போகிற்றாகில் போகிறது-என்று இருக்கிறேனோ- அன்றிக்கே-உன்னை நீ அறியாயோ -என்னுதல்
மிக மிகத் தாழ்ந்தவனாய் இருந்த எனக்கு-மிகவும் தாரகனான உன்னைப் பெற்று வைத்து-
இனி நான் உன்னை விடுவேனோ-உன்னை என் தனிப் பேர் உயிரை  –வரில் போகடேன் -கெடில் தேடேன் -என்று-இருக்கிற ஆத்மாவின் அளவேயோ–உன்னை நீ அறியாயோ–உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரேயோ -8-1-5-என்கிறபடியே- எல்லா ஆத்மாக்களுக்கும் ஆத்மாவான உன்னை ––என் தனிப் பேர் உயிரை -என்றது தம்மில் வேறுபாடு –கைவல்யத்தில் இருந்து மாறுபாடு –உயிராய்– நல்வினை தீ வினைகளைச் செய்கிற ஆத்மாவுக்கு-நிர்வாஹகனாய்- அந்த இரு வினைகளைச் செய்கிறவன் தான் உனக்கு உரியவன் அன்றாகில் அன்றோ உன்னை விடலாவது –அனுஷ்டாதாவும் உன் ஆதீனம் —அனுஷ்டாதா கர்மம் கர்ம பலன்கள் -பிரகிருதி த்யாஜ்யம் ஆகிய சம்சாரம் உன்னை ஒழிய வேறு இல்லையே –

முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-
நீ வியாபியாது இடம் உண்டாகில் அன்றோ விடுவது -வியாப்பியங்கள் அறியாத படி அன்றோ நின்றாய்
கண்ணுக்கு விஷயம் ஆனாய் ஆகில் பிழையேனோ -மறைந்து அன்றோ உள்ளாய்
அல்லாதாருக்கு வெளியிடாமல் இருந்து என் முதல் தனி வித்து –
அறிவித்து அருளி -பிரதம ஸூ ஹ்ருத் நீ அன்றோ –
நான் ஓர் அடி விட நின்றேன் ஆகில் ஆறி இருப்பேன் –

————-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ
–10-10-9-

எங்கும் வந்து முகம் காட்டலாம்படி- உலகத்தை உருவமாகக் கொண்டு இருக்கும்-இருப்பைக் காட்டித் தந்தோம் அன்றோ -என்ன- அது உகந்தார்க்கும் உகவாதார்க்கும் பொதுவாய் இருந்தது- வேறு உருவம் இல்லையாகில் அன்றோ-அதுவே அமையும்-என்று ஆறி இருக்கலாவது- பரம பதத்தில் வேறுபாட்டோடு கூடியதாய்-எல்லாம் நிறைந்ததாய் இருக்கும் இருப்பை-காண வேண்டும் –என்கிறார் –

முதல் -நிமித்த காரணம்-
தனி -துணைக் காரணம்-
வித்து -முதல் காரணம்-

முதல் தனி உன்னை –முதன்மை பெற்றவனாய்-ஒப்பற்றவனாய்-குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்து இருக்கின்ற நீயான உன்னை–தனி -சஹகாரி வேண்டாதவன் – ஸூய ரக்ஷணம் – அவனது உணவை பறித்தால் போலே –எனை நாள் வந்து கூடுவன் நான் –என்று வந்து கூடுவேன்--அவன் கொடுத்த ஞானத்தாலே ஸ்வரூபத்தை-உணர்ந்தாருக்கு-
தன்னை பிராட்டிமாரோடே சேர்ந்து பேசலாம் படியாய் இருக்கையால் –வந்து கூடுவேன் – -என்கிறார்–நான் -பரம பதத்தில் சுவடு அறிந்த நான் -என்றது–உனக்கு உரியதான விக்ரகத்தை காண ஆசைப் பட்ட நான் -என்றபடி-

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உரு வாழ் பாழ் ஆய் –முதல்-முதன்மை பெற்றதாய்-தனி-உபமானம் இல்லாததாய்-அங்கும் இங்குமான மகத்து முதலான தத்வங்கள்-முழுவதிலும் எங்கும் ஒக்கப் பரந்து- ஆத்மாக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும்-விளைக்கும் விலை நிலமாக-இருக்கிற மூலப் பகுதிக்கு ஆத்மா ஆனவனே-

நடுவில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள-மீண்டும் அவதாரிகையும்-வியாக்யானமும் அருளுகிறார் –மூன்று ஸ்ரீ யபதி படி -ஆரம்பத்திலும் இங்கே போலே பலர் வர மீண்டும் அருளிச் செய்தால் போலே -இங்கும் வந்தார்கள் சாத்துமுறை அன்று —
முதல் தனி வித்தேயோ –
முதல் -நிமித்த காரணம்-
தனி -துணைக் காரணம்-
வித்து -முதல் காரணம்-

முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் –-மூ உலகு என்கையாலே- கிருதகம்- அக்ருதகம்-கிருதகாகிருதகம் – என்று-மூன்று வகைப்பட்ட அண்டத்தைச் சொல்லுகிறது-
கல்பாந்தக காலத்தில் அழிவதும் அழியாததும் -அழிந்தும் அழியாமலும் இருப்பதும் –மகர் லோகம் -நெருப்பால் கதுவப் படும் -மேலே போவார்களாம் –

இத் துணையும் லீலா விபூதியோடு கூடி இருக்கிற இருப்பை சொல்லிற்று –
நித்ய ஸூரிகளுக்கு இனியனாய் இருக்கும் வடிவு அழகினை-கண்டு அனுபவிக்க வேண்டும் என்கிறார் மேல்-
உன்னை-
பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைச் சொல்லுகிறது-
உன்னை என்ற அளவில் பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைக் காட்டுமோ என்னில் –காட்டும்-
ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்க கண்ட சதிர் -4-9-10-என்கிறபடியே-
அவனையும் அவளையும் சொல்லவே பரமபதமும் அடங்கிற்றே அன்றோ–
ஸ்ரீ தேவி பூமா தேவி நடுவில் நின்ற நிலையை அன்றோ இந்த பதிகத்தில் சொல்லிக் கொண்டே வருகிறார் –
உன்னை-முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ –8-1-1-என்று ஐயுறும்படி இருக்கும் திரு முடியும்-
மாயன் குழல் –7-7-9-என்னும்படியான திருக் குழலும்-
கோளிளைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்-
கோளிளைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்-
கோளிளை யாவுடைய கொழும் சோதி வட்டம் கொல் -7-7-8-என்னும்படியான-அழகிய திருமுகமும்-
நாய்ச்சிமார் உடைய திருக் கரங்களின் ஆபரணங்களால் அடையாளம் செய்யப் பட்டதாய்-கனக வளையா முத்ரா – கமுகினுடைய இளம் கழுத்தையும் சங்கையும் ஒத்ததாய் இருந்துள்ள திருக் கழுத்தும்-
கற்பகம் கா அன்ன நற் பல தோள்களும் -6-5-8-
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாக -என்றும் அனுபவித்துக் கொண்டு-
இருக்கச் செய்தேயும் அகலகில்லேன் -என்று அவள் பிச்சேற்றும் படி -லஷ்மீ லலித க்ருஹம் -கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம் —
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பும் -1-8-10-
உள்ளத்துள் நின்று நிலாவுகின்றதே -அமலனாதி பிரான் -4–என்கிறபடியே
நித்யர் முக்தர் இவர்கள் உடைய உள்ளங்களிலே அழகு செண்டு ஏறுகிற -வையாளி கண்டு அருளும் –திரு உதர பந்தமும்-
வனப்பாகிற வாரிதி இத்தலப் பட்டு சுளித்தால் போல் இருக்கிற திரு உந்தியும்-தாமோதரத்வம் பிரதம தர விபூஷணம் —
ஒரு அடை மொழி இட வேண்டாதே -அல்குலும் -5-5-8- என்னும்படி இருக்கிற அல்குலும் -சிற்றிடையும்-
மாலைக் காலத்தில் தோன்றுகிற செந் நிறத்தாலே அழகு பெற்ற ஆகாசம் போலே இருக்க-
திரு அரை பூத்தால் போல் இருக்கிற –அந்தி போல் நிறத்தாடையும் –
வாழை மரம் முதலானவற்றைப் போன்ற கம்பீரமான திருத் தொடைகளும்-
தாமரை நாளம் போலே -பிராட்டி மார் தீண்டுவதால் மயிர் செறித்து-முட்களோடு கூடிய திருக் கணைக் கால்களும்-
சங்கு-சக்கரம் கற்பகம் கொடிதாமரை அங்குஜம் வஜ்ரம் ஆகிய-அடையாளம் பண்ணப் பட்டதாய் – நாய்ச்சிமாரும் கூட கூசித் தொட வேண்டும்படி மெல்லடியாக –
தேனே மலரும் -என்கிறபடி எல்லை இல்லாத இனியவான திருவடிகளையும் உடையையாய்-
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து அருளுகிற உன்னை –

எனை நாள் வந்து கூடுவன்-என்று வந்து கிட்டக் கடவேன்–மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே பிராட்டிமாரைப் போன்று பேசலாய் இருக்கிறபடி–நான்-அவ் வடிவு அழகினைக் காண ஆசைப் பட்ட நான்-

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ்  பாழ் ஆய் – முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்-அங்கும் இங்குமான மகத் தத்துவங்கள் முழுவதிலும் பரந்து-
மக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான-கருநிலமாய் உள்ள மூலப் பகுதிக்கு ஆத்மாவாய்- ஆய் -சரீர ஆத்மா காரண கார்ய நிபந்தமான சாமா நாதி கரண்யம் –

முதல்-மூலப் பகுதியை நோக்க -தான் முதன்மை பெற்றதாய்-நியமிக்க கூடியதாய்- தனி-உபமானம் இல்லாததாய்–சூழ்ந்து- மூலப் பகுதியிலும் மூலப் பகுதியால் ஆன பொருள்களிலும் பரந்து –-அகன்று ஆழ்ந்து உயர்ந்த –பரந்து இருக்கும் இடத்தில்-ஞானத்தாலே பத்து திக்குகளிலும் பரந்த-முடுவிலீயோ –அளவிட்டு அறிய முடியாததான-ஆத்மா தத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே-முடிவு -என்பது அழிவினைக் குறிப்பதாகக் கொண்டு–சரீரத்தை போன்று அழிந்து போவது அன்றிக்கே-என்றும் உள்ளதான ஆத்ம தத்துவம் -என்னவுமாம் –

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்-முழு உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தாய்-முதல் தனிச் சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலியாய்-இருக்கிற முதல் தனி உன்னைக் கண்டேன்- பரம பதத்தில் நித்ய ஸூரிகளுக்கு இனியனாய் இருக்கிற-உன்னை எனை நாள் வந்து கூடுவேன் நான்-

காரண கார்யங்கள் ஆன இரண்டு நிலைகளை உடைய-சித்துக்கும் அசித்துக்கும் நிர்வாஹகனாய்-இருக்கிற இருப்பைக் காட்டி அனுபவிப்பித்த இவ்வளவும் போராது-யுன்னை யுன்னை--உனக்கே உரிய விக்ரகத்தை உடையவனாய்-பரம பதத்தில் இருக்கும் இருப்பைக் கண்டு-அனுபவிக்க வேண்டும் -என்றதாயிற்று-

———–

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே
–10-10-10-

இவர் வேண்டிக் கொண்ட படியே- எல்லா வற்றாலும் நிறைந்தவனாய் கொண்டு வந்து கலந்து அருளக் கண்டு- அளவிட முடியாததான மூலப் பகுதி தத்வத்தாலும்-ஆத்ம தத்வத்தாலும்- உன்னுடைய நினைவின் உருவமான ஞானத்திலும்-பெரியதான என் விடாய் எல்லாம் தீர-வந்து -என்னோடு -கலந்தாய்- என்னுடைய விருப்பமும் ஒருபடி முடியப் பெற்றது-என்கிறார் – இனி இல்லை -என்னும்படி என்னை விடாய்ப்பித்து-அதற்கு அவ்வருகான விடாயை உடையனாய்க் கொண்டு-என்னோடு வந்து கலந்து- உன்னுடைய விடாயும் ஒரு படி நீங்கியதே -என்கிறார்–துயர் ஆறு சுடர் அடி -அறுக்கும் அறும் சுடர் அடி -இரண்டு நிர்வாகம் போலே –ஆழ்வார் விடாயைத் தீர்த்து அவன் விடாயும் தீர பெற்றான் என்று நிகமிக்கிறார் ––ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லையே
அப்ரஹ்மாத்மக தத்வம் இல்லையே -அதனால் இவற்றை சொல்கிறார் அவனையே சொல்லலாம் படி –

மக்களுக்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான-மூலப் பகுதிக்கு ஆத்மா ஆனவனே –அதற்குள்ளும் பரந்து-அதனைக் காட்டிலும் பெரியதாய்-அதனை ஏவுகின்றது ஆகையாலே மேலாய்- விகாரம் முதலானவைகள் இல்லாமையாலே சிறந்ததாய்-
மலர்ந்த ஒளி உருவமான ஆத்மா வஸ்துவுக்கும்-ஆத்மா ஆனவனே –
பேறு பெறுகிற இப்பொழுது-மூலப் பிரக்ருதியையும் ஆத்மாவையும் சொல்லுகிறது-
கீதையில் ஆத்மாவை -சர்வ கதம் -வெல்வேறு ஜீவாத்மாக்கள் -மூலம் வியாப்தி -என்றபடி –
தம்முடைய காதல் பெரியவற்றிலும் பெரியது என்கைக்காக –
அவற்றுக்கும் ஈஸ்வரனை ஒழிய-தோன்றுதல் நிலைத்தல் இல்லாமையாலே அவ்வளவும் சொல்லுகிறது –சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ – சுடர் இன்ப ஞானமேயோ -ஞானத்துக்கு இருப்பிடம் ஆனவனே-
சுடர் -சங்கல்ப ரூபமான -தடை இல்லாததால் சுடர் என்கிறார்-
அவை இரண்டினையும் தன்னுள் அடக்கிக் கொண்டு-அவற்றுக்கு நிர்வாஹகனான-நினைவின் உருவகமாய்- சுகத்தின் உருவமான ஞானத்தை உடையவனே என்று-நினைவின் உருவமான ஞானத்தினைச் சொல்லுதல்-
அன்றிக்கே
சுடர் ஞான இன்பமேயோ என்று-ஒளி உருவனும் -இன்பத்தின் உருவனும் ஆனவனே -என்று எம்பெருமானைச் சொல்லுதல் – அனுகூல ஞானமே ஆனந்தம் –

சூழ்ந்து – மேலே கூறிய மூன்று தத்துவங்களையும்-விளாக்குலை கொண்டு –அதனில் பெரிய –அவை குளப்படியாம் படி பெரிதான –-என் அவா –என்னுடைய காதலை-அறச் சூழ்ந்தாயே- அதனிலும் பெரிய உன் காதலைக் காட்டி வந்து கலந்தாயே –என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஒவும்படி பண்ணிற்றே-
பரதனை மடியில் ஏற்றுக் கொண்டு மகிச்சி உற்றவராய் தழுவினார் -என்கிறபடியே-மீண்டு புகுந்து- ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து-உச்சியை மோந்து உகந்து-அணைத்தால் போலே -ஆயிற்று- இவருடைய விடாய் கெடும்படி கலந்தது –
அற வஸ்து அல்பம் -என்கிறார் அபாவம் என்கிறார் இல்லை -சங்கல்பம் தடுக்க முடியாத ஞானம் –-அனுகூலமானதால் ஆனந்தம் –ஆஸ்ரயம் ஞானமேயோ-ஞானத்துக்கு ஆஸ்ரயம் ஞாதா என்றவாறு –மேரு மலை மேல் கீழே உள்ள கடுகு பார்த்து அல்பம் என்னுமா போலே -அல்பத்தவம் என்றவாறு –ஓ அதிசயம் ஒவ் ஒரு இடத்திலும் அடி தோறும் ஹ்ருஷ்டர் ஆகிறார் -பேர் ஆனந்தம் பெற்றார் 

————-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–
10-10-11-

நிகமத்தில்-அகில ஹேய பிரத்யநீகனாய்-கல்யாண குண ஏக நாதனாய்-
ஞான ஆனந்தஙகளே வடிவு உடையவனாய்-உயர்வற உயர்நலம் உடையவனாய்-
வனப்பு முதலாயின வற்றுடன் திவ்ய மங்கள விக்ரகத்தை உடையவனாய்-
அளவிறந்த திவ்ய ஆபரணங்களை உடையவனாய்-
திருமகள் மணமகள் ஆய்மகள் மூவருக்கும் நாயகனாய்-
அஸ்தானே பயசங்கை செய்யும் நித்யசூரிகள் -திரு வநந்த ஆழ்வான் -பெரிய திருவடி
எப்பொழுதும் அடிமை செய்யும் திருவடித் தாமரைகளை உடையவனாய்-
ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனாய்-சர்வேஸ்வரனாய்-
தன்னாலே ஏவப்படும் பரமன் முதலாயினவர்கட்கும் அந்தராத்மாவாய்-
தன்னைக் காண வேண்டும் என்று விடாய் கொண்டு அடைகின்ற அடியவர்கள் விடாய்-தீரக் கலக்கும் தன்மையான எம்பெருமானைக் காண வேண்டும் என்று கூப்பிட்டு-
அவனைப் பெற்று துக்கம் அற்றவராய்-எல்லா தடைகளும் நீங்கினவராய்-
ஆழ்வாரின் பக்தியின் தூண்டுதலால் பிறந்த-ஆயிரம் திருவாய் மொழியும்-அவற்றில் வைத்துக் கொண்டு- மேலே கூறிய படி அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி-
பரமபக்தியால் பிறந்த அந்தாதியான-இத் திருவாய்மொழி வல்லார்-
சம்சாரத்தில் பிறந்து வைத்தே-அயர்வறும் அமரர்களோடு ஒப்பர்
-என்கிறார்-

அவா அறச் சூழ் அரியை – விரும்பியவற்றை எல்லாம் அருளும் சர்வேஸ்வரனை –தம்முடைய காதல் கெட வந்து கலந்த படியாலே- ஒரு அடைவு கொடாதே அது தன்னையே சொல்கிறார் –-அவா அறச் சூழுகையாவது– தன்னைக் காண வேண்டும் என்னும் விடாய் உள்ள-அடியவர்களின் விடாயை தீர கலக்கை –

அயனை அரனை அலற்றி--தன்னுடைய ஏவல் ஆள்களான பிரமன் சிவனுக்கும் அந்தராத்மாவானவனை–அயனை அரனை -என்கிற சாமாநாதி கரண்யத்தால்-
பிரமன் சிவன் போல்வார் ஈஸ்வரர் ஆவார்களோ என்னும் மக்கள் கொள்ளும் ஐயத்தை அறுக்கிறார்–அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் சர்வேஸ்வரன் அதீனமாய்- இருப்பதாலே அவர்களுக்கு பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் –தலைவர்களாய் இருக்கும் தன்மை அவர்கள் செயல்கள் காரணமாக வந்த இத்தனை –
இச் சாமாநாதி கரண்யத்தை அறியும் தன்மை இன்றியே எளியராய் இருப்பார்-அறியத் தகும் முறையிலே கூறப்படும் வகைகளும் உண்டு-அவை
அயனை அரனை அவா அற்று-அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -ஒரு வகை –
அயனை அரனை அவா அறச்-சூழ் அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் –மற்று ஒரு வகை-

அலற்றி அவா அற்று வீடு பெற்று –-கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்-ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த-

அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –-பக்தியின் தூண்டுதலாலே பிறந்த ஆயிரம்-
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –அன்றிக்கே-அவா உபாத்தியாராக நடத்த -நடந்த ஆயிரம் –என்னுதல்-
ஆழ்வாருக்கு பிறகு நூறாயிரம் கவிகள் பேரும் உண்டானார்கள்- அவர்கள் கவிகளோடு கடல் ஓசையோடு வாசி அற்று-அவற்றை விட்டு இவற்றைப் பற்றுகைக்கு அடி-
இவருடைய காதல் பெருக்கு வழிந்து புறப்பட்ட சொல் ஆகை அன்றோ –-பக்தர்களுக்கு ஹிதமாக-பராங்குசர் அருளிச் செய்தவை –

முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து-தரிக்க ஒண்ணாத படியான-பரம பக்தியால் பிறந்த தாயிற்று-இத் திருவாய்மொழி-இந்த அவாவிற்கு உதவிற்றிலன் ஆகில்-ஈஸ்வரனுக்கு சைதன்யம் இன்றிக்கே ஒழியும் –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழிக்கு முன்பு-பர பக்தியாலே சென்றது –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழி -பர ஞானத்தால் சென்றது
இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே –

பகவானுடைய திருவருள் பாதியும்-தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு-
சரீரத்தின் முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்-
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின –கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற பக்தியினுடைய இடத்திலே–சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க – அது அடியாக பிறந்த-பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது –

அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –இதனை அறிந்தவர்கள்-இவ் உலகத்தில் பிறந்து வைத்தே-நித்ய சூரிகளோடு ஒப்பர் –பிறந்தே உயர்ந்தார் –சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம்-இவர்களுடைய பிறப்பும் –பிறக்க பிறக்க அவனுக்கு உதகர்ஷம் உண்டானாப் போலே -அனுக்ரஹ நிபந்தனம் சர்வேஸ்வரன் அவதாரம் —

பக்தி பூர்வகமாக பிறந்த பிரபந்தம் -பரமபக்தி அளவும் –வேதத்துக்கும் பரிக்ரகம் கிடைத்ததே ஆழ்வார் வாயனவாய் ஆனதால்-பொற்குடம் ஆனதே சர்வரும் அனுபவிக்கும் படி –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -99-ஈனச் சொல் ஆயினும் ஆக –செஞ்சொல் கவிகாள் -10-7-

April 7, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

மித்ர பாவேந –சரணாகத ரக்ஷணம் -விரதம் கொண்டு -கைவிட மாட்டேன் இருப்பதாக பெருமாள் சித்தாந்தம்-நயாமி பரமாம் கதிம்-அஹம் ஸ்மராமி –வராகப்பெருமாள் சித்தாந்தம்-பக்தி பிரபத்தியால் முக்தி இரண்டையும் தாண்டி -பூர்வ பக்ஷம் ஆக்கி -அவன் திருவடிகளே கதி –ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -சரணாகதியாகப் பற்றியதும் உபாயம் ஆகாது -என்கிறார்
இதுவே ஆழ்வார் சித்தாந்தம் –-பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே -நிர்ஹேதுக கிருபை-அவன் இரக்கம் உபாயம்-அவன் இனிமை புருஷார்த்தம்-கோல வராஹம் ஒன்றாய் கோட்டிடை -திருவாய் மொழியிலும் சரம அருளிச் செயல் இங்கே போல்-தேவப் பெருமாள் இமையோர் தலைவா அமரர்கள் அதிபதி உபக்ரமம் அவன் சொன்னதை இவன் நடத்திக் காட்டியதால் இரண்டும் இவ்வாறு –யத்ர -மதிர் மம –சஞ்சயன் மதம் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே –மதுரகவி ஸித்தாந்தம்-செஞ்சொல் கவிகாள் -10-7-இதன் விவரணம்-இங்கு ஈனச் சொல் -நைச்சியம் பாவித்து அருளிச் செய்கிறார்ஞானப்பிரானை அல்லால் -மற்று ஒன்றைக் காணாவே-பழிச்சொல் என்று பாராமல் காதலை வெளிப்படுத்தியவாறு –ஸர்வ சக்தன்-ஸர்வஞ்ஞன் தானே -அசக்த அஞ்ஞானரான நமக்கு எல்லாம் நல்ல ரக்ஷகன்-குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனே அறிவு ஒன்றும் இல்லாத நமக்கு ரக்ஷகன்–ஞானப்பிரான் -சத்தையை இருப்பத்தைச் சொல்ல வில்லை-இவர் ஒருவரையே பற்ற வேண்டும் என்றும் சொல்ல வில்லை-உபாயாந்தரம் போல் நாம் பற்றும் பற்றுதலும் உபாயம் இல்லை என்பதை தான் இங்கு அருளிச் செய்கிறார் –-ஞானப்பிரான் தான் உண்டு என்னாமல் -அல்லால் இல்லை -நான் கண்ட நல்லது -உறுதிபட அருளிச் செய்கிறார்-யார் புகல் இடம்-யாருக்குப் புகல் இடம்–ஸூ குமாரனான பரதன் எப்பாடு படுவானோ இந்த குளிரில் -இளைய பெருமாள் சொல்ல
பெருமாள் அயோத்யைக்குத் திரும்ப யத்தனிக்க-கைகேயி பற்றி பேசி மாற்றியது போல் மதுரகவி பிரக்ருதிகள் ஆழ்வாரை மாற்றி இப்படிப் பேச வைத்து தமது சித்தாந்தத்தை அருளிச் செய்விக்கிறார்கள் 

அவதாரிகை-பகவத் விஷயத்தில் நீர்  இன்ன போது மோஹித்து கிடப்புதீர் என்று அறிகிறிலோம்-
உம்மை-விஸ்வசிக்க போகிறது இல்லை –  அத்ய ராஜ குலச்ய ஜீவிதம் த்வதீனம்  ஹே புத்திர வியாதி தே சரீரம் பரிபாததே நச்சித் -அயோத்யா காண்டம் -8 7-9 – —ரசவாதம் கீழ்ப் போமாம் போலே
ஸ்ரீ பரத ஆழ்வான் மோஹித்து கிடக்க -திருத் தாய்மார் வந்து சொல்கிறார்கள் –
இப் படை வீடாக-உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்கிறது –-சக்கரவர்த்தி துஞ்சினான் –
பெருமாள் பொகட்டுப் போனார் –-நீ இருந்தாய் என்கிறார்கள் அன்று- உன் முகத்தில் பையாப்பு கண்டால் அவர் மீளுவர் என்னும் அத்தாலே அன்றோ இது ஜீவித்து கிடக்கிறது – நீ இல்லை என்று கேட்கில் இத் திக்கில் என்றும் நோக்குவரோ –புத்ர வ்யாதிர் நுதே கச்சித் சரீரம் பரிபாதிதே –என்றும் –
அபி வ்ருஷா -என்கிறபடிக்கே-படை வீட்டில்-ஸ்தாவரங்கள் அடைபட நோவோன்றாய் இருக்கச் செய்தே –
பிள்ளாய் உனக்கு நோய் என் -என்று-கேட்கும்படி வேண்டி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி –அப்படி சத் பிரக்ருதிகளாய் இருக்கையாலே – இன்ன போது மோஹிப்புதீர்  என்று தெரிகிறது இல்லை சௌலப்ய குணத்தை உபதேசிக்க புக்கு -எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமவர் இறே இவர் –

ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க  புக்கால் –பிள்ளை உறங்கா வல்லி  தாசர் கண்ணும் கண்ணீருமாய் அத்தை இத்தை (பரத்வத்தையும் ஸுலப்யத்தையும் )பிரசங்கித்து சிதிலராவார் –அத்தைக் கண்டு -கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று – சதுர் ஆஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே – பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-
மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –கள்வன் கொல் யான் அறியேன்  கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க —அந்த பெண் பிள்ளையின் பர்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக –மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –-இப்படி இருக்கிறவன் இறே  தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் -(இவரே நஞ்சீயர் பட்டர் இடம் சேர்த்து வைத்தார் -தீர்த்த வாசி ப்ராஹ்மணர் இவ்வாறு திருமழிசை தாசர் ஆனார்)
நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் –அர்த்தாத் -யாத்ருசிகமாக -அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து – அவரும் தாமுமாக (திருமழிசை தாசரும் நஞ்சீயருமாக )திருவாய் மொழி ஓதா நிற்க –(கந்தாடை )ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் -அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க-புக -வேண்டா -என்று கை கவித்து கொடு வந்து –நீங்கள் கோயில் கூழைத் தனம் (நியதி இல்லா அனுபவம் )-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன –லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ (பட்டர்)பாதத்திலே யாயிற்று -என்றாராம் –

பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -(எம்பெருமானார் பற்றிய வ்ருத்தாந்தம் )
இரவு (பால்)அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் –முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில் நாலிரண்டு ஒவியல் (உத்தரீயம் )கொண்டு பரிமாற-
வேண்டுபடியாய் ஆயிற்று கண்ண நீர் வெள்ளமிட்ட படி -(வடுக நம்பி இப்படி ஆவாராம் )பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாராய் – அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் –அப்படியே செய்து கொடு போந்தார்களாய் – இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து – இத்தை ஒரு நாள் குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –

கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே
புகும் போதிலே தாழ்த்து புக –ஏன் நீ வேகினாயீ -என்ன – ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானாய் –இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள –
பிறந்தவாறு -என்றானாய் –அதில் சொன்ன வார்த்தைகள் என்  -என்ன –ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் –நீ கேட்ட படி என்-அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி –அநந்தரம்-ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து –நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் வாழ்வாரும் ஒருவரே – இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி  நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் –இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –என்ன பரம சேதனனோ-என்று அருளிச் செய்தாராம் –

நீர் தெளிந்து இருக்கிற போதே –உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன – ஆகில் அத்தைக் கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே – இப் பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –

போக்யதையில் நவநீத ஸுர்ய அபதாநத்தில் காட்டில் இல்லை என்றீர்-ஸம்ஸார உத்தாரணத்துக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது இவ்விஷயத்தை என்ன-பிரஜை விழுந்த கிணற்றிலே ஒக்கக் குதித்து எடுக்கும் தாயைப் போலே ப்ரளயம் கொண்ட பூமியை முழுகி எடுத்த மஹா உபகாரகனே என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவனே அவன் சரமத்தால் யுக்தார்த்த ஞானமே உங்களுக்கு மோக்ஷ உபாயத்தில் நல்லதும் அவனை அல்லால் மற்றொரு ஸித்த உபாயமாவை இல்லை-அவனால் யுக்த உபாயம் அல்லது வேறொரு ஸாத்ய உபாயம் இல்லை-இது என் ஸித்தாந்தம் என்கிறார் –

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –
– 99-தலைவி தனக்குத் தலைவன் இடத்து உள்ள அன்பு உறுதியைத் தோழிக்கு கூறல் —

ஈனம் சொல் ஆயினும் ஆக–(என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) பிரயோஜனம் அல்லாத -இழி சொல்லாயினும் ஆகுக.;
எறி திரை வையம் முற்றம்–வீசுகிற அலைகளை யுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும்
ஏனத்து உரு ஆய் கிடந்த–பாதாளத்தில் இருந்தும்  வராஹ மூர்த்தியாய்க் கோட்டாற் குத்தி எடுத்து வந்த
பிரான்–தலைவனும்
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும்–பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும்
அல்லாதவர்க்கும்–அவர்களலல்லாத நித்ய ஸூரிகள் -மற்றும் மனிதர்கட்கும்
மற்று எல்லாயவர்க்கும்–மற்றுமுள்ள நரகர் முதலியோ ரெல்லோர்க்கும்
ஞானம்–அறிவைக் கொடுக்கிற
பிரானை அல்லால்–தலைவனுமாகிய எம்பெருமானை யன்றி
நான் கண்ட நல்லது இல்லை–நான் அறிந்த நற்பொருள் வேறு இல்லை.

செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு—
97–தம்மோடு வந்து கலந்து-தமக்கு பரதந்த்ரனாய் தம் திரு மேனியிலே அத்ய அபி நிவிஷ்டனாய் திரு மேனியோடே தம்மை ஸ்ரீ திரு நாட்டில் கொடு போக வேணும் என்று
அவன் தம் திருமேனியில் மிகவும் பண்ணுகிற சாபலத்தைக் கண்டு நம் பக்கல் ஆதர அதிசயத்தால் அன்றோ-இவன் நம் உடம்பை ஆதரிக்கிறது என்று பார்த்து இதன் தோஷம் அறியாமல்-ராகாந்தனாய் இருக்கிற இவனுக்கு இதன் தோஷத்தை யுணர்த்தவே இத்தை தவிரும் என்று நினைத்து-இதன் தோஷங்களை அவனுக்கு அறிவிக்க அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே
அது தானே அவனுக்கு மேல் விழுகைக்கு உடலாக-எனக்கு இது மிகவும் அநபிமதமாய் இருக்கும்
ஆன பின்பு இத்தைக் கழிக்க வேணும் -என்று இவர் அவன் திருவடிகளிலே தலையை மடுத்து சரணம் புக-இவர் விதி வகை பார்க்குமவன் ஆகையாலே இவர்க்கு அநபிமதம் ஆகில்-வருந்தியும் நாம் இத்தை கழித்து கொடுக்கக் கடவோம்-என்று தலை துலுக்க நம் சொலவைப் பரிபாலிப்பதே-இது ஒரு சீலம் இருந்தபடி என் –என்று தலை துலுக்குகிற- செஞ்சொல் கவிகாள் லில் அர்த்தத்தை செஞ்சொல் பரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –சம்பச்ச சாத்விக ஜனச்ய -என்னும்படி ஸ்ரீ ஆழ்வாரான ஸ்ரீ மாறன்-நம்முடைய சம்பத்து –

ஈனச் சொல் ஆயினுமாக –சிலர் ருசி உண்டாய் கேளா நிற்க -நான் சொல்லாது இருக்க மாட்டேன் –சர்வேஸ்வரன் முந்துற அர்ஜுனனுடைய சோகத்தை காண்கையாலே-ரஹஸ்யத்தை சொல்லிக் கொடு நின்று –பின்பு மூலையில் கிடந்ததை முற்றத்தில் இட்டோம் -என்று பதண்  பதண்  என்றான் இறே –இவர் அதை முற்படவே அருளிச் செய்து கொள்கிறார் –ஈனச் சொல் ஆகிறது –அஹிதமான சொல்லு –
அஹிதமாகை யாவது -பிரயோஜன சூன்யமாகை –-அதாவது-ஸ்வரூபத்துக்கு அநநு ரூபத்தை சொல்லுதல் –அசக்ய கிரியையைச் சொல்லுதல் செய்கை –தன் பரத்தை ஒரு சர்வ சக்தி தலையிலே ஏறிடுகையிலே எழுகிறது (உத்யோகிக்கிறது )ஆகையாலே  –அசக்ய கிரியை அல்ல –தன் பாரதந்த்ரதோடே சேர்ந்தது ஆகையாலே இது தான் ஸ்வரூபத்தோடு சேருமதாய் இருக்கும் –தன்னுடைய அஞ்ஞான அசக்திகளால் வரும் –ஜ்ஞான வைகல்யமும்(தாழ்ச்சி -குறைவு )சக்தி வைகல்யமும் -வராதிறே ஒரு சர்வ சக்தியை பற்றுகையாலே –எறி திரை வையம் முற்றும்  ஏனத்து உருவாய் இடந்த பிரான் –என்று சக்தியைச் சொல்கிறது – ஞானப் பிரான் -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது ஆயினுமாக –ஆகியுமாக என்னாதே –ஈனச் சொல்லாயினும் நன்றாக என்று நைசயம் சொல்லாதே ஆயினும் –-ஆக என்கையாலே – அவன் அருளிச் செய்ததுக்கு நால்வர் இருவர் உண்டானவோபாதி இதுக்கும் சிலர் உண்டாகிலும் உண்டாக – அவர்கள் ஆதரிக்க்கவுமாம் தவிரவுமாம் நான் சொல்லித் தவிரேன் –இவற்றின் அனர்த்தைக் கண்டு இவற்றை நல் வழி போக்கி பரிகரிக்க வேண்டும் அன்றோ –ஆசை உடைய நான் பேசாது இரேன் இறே –நீர் தாம் இப்படி -பூவுக்கிட்டோம்  போலவும் என்று சொல்லுகிறது தான் ஏது என்ன –எறி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த பிரான் –சர்வ சேதனருக்கும் சர்வேஸ்வரனைப் பற்ற அடுக்கும் -என்று –என் தான் -அவனையே பற்ற வேண்டுகிறது என் என்ன –இவை யாபன்னமான வன்று -பரார்தமாகத் தன்னைப் பேணாதே
ரஷிப்பான் ஒருவனைப் பற்ற வேண்டாமோ –இது ஹேது கர்ப்ப பிரதிக்ஜ்ஜை –(ஆபத்து வந்த பிரளயத்தில் ரஷித்தவன் ஹேது-ப்ரதிஜ்ஜை -இவனை அல்லால் வேறே நல்லது அல்ல)ஹேதுவாகிறது தான் என் என்ன –எறி திரை வையம் –கடல் சூழ்ந்த பூமியை பிரளயம் கொள்ள –பிறர்க்காக தன்னை அழிய மாறுவான் ஒருவன் ஆகையாலே –ரஷ்யத்துக்காக தன்னைப் பாராதே-அழிய மாறுவான் -என்கை –இடந்த -இத்தால்-சர்வ சக்தி -என்னுமிடத்தைச் சொல்லுகிறது —பிரான் –சக்தியே அன்றிக்கே இவற்றை ரஷிக்கைக்கு ஈடான பிராப்தியும் அவன் கையதே என்கிறது –ஸ்வாமி என்கிறது –இவற்றின் உடைய ரஷண உபாய ஜ்ஞானமும் –அதுக்கு ஈடான சக்தியும் பிராப்தியும் உள்ளது அவன் பக்கலிலே என்கை –இவனுடைய அஞ்ஞான அசக்திகளாலும் அவனையே பற்ற வேணும் –இனி உடைமை பெறுகைக்கு  உடையவனே யத்நிக்கும் அத்தனை இறே – உடைமை தான் யத்நிக்குமது இல்லை இறே -ஆகையாலும் அவனே வேணும் –ஆக –குறைவாளர்க்கோ அவனைப் பற்ற அடுப்பது என்ன–இரும் கற்பகம் இத்யாதி –-இங்கே ஒரு ஸூஹ்ருதத்தைப் பண்ணி அதுக்கு பலமாக ஸ்வர்க்கத்திலே போய்
கல்பக வ்ருஷம் அபேஷித சம்விதானம் பண்ண இருப்பார்க்கும்  அவன் வேணும் –ஸ்வ கர்ம பலன் அனுபவிக்கிறான் ஆகில்-அவன் என் என்னில் –இவன் பண்ணின கிரியை இங்கே நசியா நின்றது இறே –இவன் கர்மத்தையும் அளந்து – இவன் தன்னையும் அளந்து பலம் கொடுப்பான் ஓர் ஈஸ்வரன் வேணும் இறே –கிரியை நசித்தால்-நின்று பலம் கொடுக்கைக்கு கிரியா சக்தி என்றாதல் –அபூர்வம் என்றாதல் –ஒன்றைக் கொள்ளா நின்றார்கள் இறே –இனி ஓன்று கற்பிக்கும் இடத்தில் ஒரு பரம சேதனனைக் கற்பிக்க அமையாதோ –மற்ற எல்லா யவர்க்கும் –ஷயியான பலத்தை அனுபவிக்கிறவர்கள் தங்களுக்கே அன்றி –அநந்த ஸ்திர-பலத்தை அனுபவிக்கிற நித்ய ஸூரிகளுக்கும் அவன் வேணும் –அவர்களுக்கும் அனுபவத்துக்கு தங்கள் சத்தை-வேணுமே –எல்லா யவர்க்கும் –தேக யாத்ரைக்கு அவ்வருகு அறியாதே   –ஸ்தூவோஹம் க்ருசோஹம்-என்று இருக்கிற மனுஷ்யாதிகளுக்கும் வேண்டும்- சம்விதானம் பண்ணிக் கொடுக்கைக்கும் அவனே வேணும்–ஜ்ஞானாதிகரையும் அதற்க்கு குறைய நின்றாரையும் ஒக்க எடுக்கையாலே இத் தலையில் உண்டான அறிவு அசத் சமம் என்கை –என் தான் ஜ்ஞானத்தால் அன்றோ மோஷம்  –பேற்றுக்கு இத் தலையில் ஜ்ஞானம் உண்டாக வேண்டாவோ என்ன –உண்டாகவுமாம்-இல்லையாகவுமாம் –அப்ரதிஷேதத்துக்கு வேண்டுவதே இவன் பக்கலில் வேண்டுவது —ஞானான் மோக்ஷம் -உபநிஷத் சொல்லுமே என்னில்
நமது ஞானத்துக்கு -அவனே மோக்ஷ உபாயம் -என்று அறிய வேண்டுமே —அப்ரதிஷேதத்துக்கு-விலக்காமை -அத்வேஷமே வேண்டும்-அவன் ஞானத்துக்கு மட்டுமே மோக்ஷ உபாதத்வம்-ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலை த்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்–பேற்றுக்கு அடியான ஜ்ஞானம் அவன் பக்கலிலே உண்டு என்கிறார் –ஞானப் பிரானை –
தன்னை சூழ்த்திக்  கொள்ளுக்கைக்கு ஈடான-அறிவு இறே இவன் பக்கலிலே உள்ளது –தனக்குத் தான் தேடும் நன்மை கழுத்துக்கட்டியாகுமே–பர ரஷண உபாயம் உள்ளது அவனுக்கே யாயிற்று —அல்லால் இல்லை –ப்ரஹ்லாதன் போல் )அவன் உளன் என்கை யல்ல –ஈஸ்வரன் இல்லை என்று சாஸ்திரம் எழுதுகிறவனும்-அந்திம சமயத்தில் வந்தவாறே -சஹ ஸ்ருதி நலியா நின்றது -என்றான் இறே –
வழி கெட நடந்தோமா -என்று நாஸ்திகரும் கூட அங்கீகரிக்கிற அளவன்றே இவர்கள் சொல்லுகிறது –எங்கும் உளன் கண்ணன் என்று அன்றோ இங்கு உள்ளானா என்பதுக்கு பதில்–ஈஸ்வர தத்வம் ஓன்று உண்டோ என்று கேட்டால் தத்வ த்ரயங்களும் உண்டே என்று அன்றோ பதில் சொல்லுவார்கள்
ஆஸ்திகரும் அங்கீ கரிக்கும் படி அன்றோ பதில்–ப்ரஹ்மம் சத்யம் ஆத்மா மித்யா -ஜீவனே ப்ரஹ்மம் அத்வைதி –ஈஸ்வரன் என்றாலே ஈஸ்வரனும் ஈஸிதவ்யனும் வேணுமே-அப்பா என்றால் பிள்ளையும் இருக்க வேண்டுமே-பெருமாளை மட்டும் சொல்லும் சொல் இல்லையே-திருவேங்கடமுடையான் என்றாலே திருவேங்கடமும் வேணுமே-கேசவன் என்றாலே கேசம் உள்ளவன் -க ஈசன் -இருவருக்கும் நியந்தா அன்றோ-ஸோஸ்நுதே –ஸஹ ப்ரஹ்மணா –கூட இருந்து அனுபவிக்கிறான்-ஆதிப் பரனோடு ஒன்றாம் என்ற வாதம் பொய்யாக்கி அல்லல் தவிர்த்த ராமானுஜன் அன்றோ–உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -களைவாய் துன்பம் –களையாது ஒழிவாய் -களை கண் மற்றிலேன்-அவனை ஒழிந்த தானும்-தான் பரிக்கிரஹிக்கிற உபாயங்களும் அடைய கழுத்துக் கட்டி என்கை –

ஒரு விசை திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு நடந்த இடத்தே இவ் அர்த்தத்தை அருளிச் செய்வதாக ஒரு ஏகாந்த ஸ்தலத்தை எம்பெருமானாரையும் கொண்டு புக்கராய் –திருப்பணி செய்வான் ஒருத்தன் அங்கே உறங்கி குறட்டை விடா நிற்க –அவனைக் கண்டு அனர்த்தப் பட்டோம் -என்று-
இவ் விசைவுக்கு தவிர்ந்து பிற்றை இசைவிலே இத்தை நம்பி அருளிச் செய்ய கேட்டு அருளி
ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற அளவிலே-உச்சி வெய்யிலிலே வந்து புகுந்து
நம்பி இவ் வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று அருளிச் செய்தார் –உனக்கு இது சொல்லாது இருக்க மாட்டேன் இறே -என்று சஹகாரி நைர பேஷயத்தை அருளிச் செய்தார் இறே  –அல்லால் இல்லை என்பது இதுவேஈஸ்வரனை ஒழிந்த தன்  ஸ்வீகாரமும் உபாயம்-இல்லை என்பதற்கு இந்த ஐதிஹ்யம்  அருளிச் செய்கிறார் –இனி பல போக்தாவான தன் ஸ்வரூபமும்
தான் பரிக்கிரஹித்த உபாயங்களுமே இறே சஹ காரியாக உள்ளது –அவற்றைத் தவிர்க்கிறது –விடுவித்து பற்றுவித்து அருளும் அவனே உபாயம்-பக்தி தன்னையும் பகவானையும் உபாயமாக ஏற்கும் –பகவான் தான் உபாயம் ஏற்பான் –சரணாகதி தான் உபாயம் என்பதையும் ஏற்காதே-நான் கண்ட –
கைப் பறியாக பறித்ததாய்-புண்ய பாபங்கள் கலந்து இருக்கையாலே –புண்யம் தலையெடுத்த போதாக வெளிச் செறித்து –அல்லாது போது கலங்கி இருக்கிற ஜ்ஞானத்தைக் கொண்டு –பிறரை பிரமிப்பைக்கு சொல்லும் விப்ரலம்ப வாக்கியம் அன்றிக்கே-பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையேனாய் –அவ் வெளிச் செறிப்பு கொண்டு அறுதி இட்டு-சொன்ன வர்த்தம் இது-தான் பிறர்க்கு சொல்ல வேணும் என்று சொல்லிற்றும் அல்ல –என் அனுபவத்துக்கு போக்கு விட்டு சொன்ன பாசுரம் -என்கிறார்--கைப்பறியாய் பறித்ததாய் –ஸ்வ யத்னத்தால் சாதிக்கப்பட்ட -இத்தால் ருஷிகளை சொல்லுகிறது –-அத்தை இத்தை -பரத்வத்தையும் சௌலப்யம் இரண்டையும்-கோயில் கூழை -நியதி இல்லாதா வியாபாரம் -கோயில் பரிசாரகம் செய்யும் வியாபாரம்-வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் -அமுது செய்த அடையாளம் –பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலான எம்பெருமானாரும் –
அர்ச்சாவதாரத்தில் விபவ சமாதி பண்ணுவதும் –மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் –தம்முடைய பரம சித்தாந்தத்தை வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில்
இங்கும் அங்கும் ஞானப்பிரானை அல்லார் இல்லை நான் கண்ட நல்லதுவே-ஞானம் ப்ரேமம் பக்தி கொடுத்து அதுக்கும் மேலே –நமக்காக அஹம் ஸ்மராமி- நயாமி பரமாம் கதிம் –அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் -காஞ்சி தேவப்பெருமாள் ஆறு வார்த்தைகளில் ஓன்று -இதன் அடிப்படையிலே –பட்டர் -கௌசிக புராணத்தில் மற்ற அவதாரங்களை விட வராஹ அவதார ஏற்றம்-ரஹஸ்ய சிந்தாமணி -தேசிகன் வராஹ சரம ஸ்லோக வியாக்யானம்-

ஆழ்வார் திரு உள்ள உறுதியை வெளியிட்டு அருளுகிறார்-எல்லாயவர்க்கும் -பறவை விலங்காதி/ அல்லாதவர்க்கும் -நித்ய ஸூ ரிகளுக்கும்-மற்று எல்லாயவர்க்கும் – நிஹினமான மநுஷ்யர்களுக்கும் என்றுமாம்-ஞானப்பிரானே நம்மை சம்சார பிரளயத்தில் இருந்தும் உத்தாரணம் செய்து அருளுவான் –முன்பு பிரளய வெள்ளத்தில் மூழ்கிப் போன பூமியை உத்தரணஞ் செய்து நிலை நிறுத்திய மஹோபகாரகனையே நான் ஸம்ஸாரப் பெருங்கடலினின்று என்னை வீடேற்றுதற்குத் தஞ்சமாக நினைத்திருப்பேனென்று ஆழ்வார் தம்முடைய திருவுள்ளவுறுதியை அன்பர்க்கு வெளியிடுகிறார். இப்போது நான் வெளியிடுகிற என்னுடைய ஸித்தாந்தம் அறம்பொருளின்பங்களையே தஞ்சமாக நினைத்து தேஹாத்மாபிமாநங் கொண்டு பகவத் விஷயத்தில் விமுகராயிருக்கிற ஸம்ஸாரிகள் ஏற்றுக் கொள்ளாமல் இகழும்படியான இழிந்த சொல்லாயினும் ஆகுக; என்னுடைய உறுதியை வெளியிட்டே தீரவேனென்கிறார் முந்துற முன்னம் ஈனச்சொல்லாயினுமாக என்றதனால். குழந்தை கிணற்றில் விழுந்தவாறே உடன் குதித்து அதனை யெடுக்கும் தாய்போலப் பூமியைப் பிரளங் கொண்டவாறே உடன் குதித்து அதனையெடுக்கும் தாய்போலப் பூமியைப் பிரளயங்கொண்டவாறே முழுகியெடுத்து மஹேபாகாரனையன்றி மற்றொருவனையும் அடைக்கலம் புகமாட்டேனெற்றாயிற்று.-ஒரு காலத்தில் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக் கொண்டு கடலில் மூழ்கிப்போன ஹிரண்யாக்ஷனை எம்பெருமான் மஹாவராஹ ரூபியாகத் திருவவதரித்துக் கொன்று பூமியைக் கோட்டாற குத்தியெடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினன் என்பது ஏனத்துருவாய கதை. இப்பொழுது நடக்கிற ச்வேதவராஹகல்பத்துக்கு முந்தின பரம்மபலபத்தைப் பற்றிய பிரளத்தின்
இறதியில் பிரளயப் பெருங்கடலில் மூழ்கியிருந்த பூமியைத் திருமால் மேலேயெடுக்க நினைத்து ஸ்ரீவராஹ ரூபங்கொண்டருளிக் கோட்டு நுனியாலே பூமியை எடுத்து வந்தனனென்றும் அதுபற்றி இக்கலபத்துக்கு வராஹகலபமென்றே பெயராயிற்றென்றும் புரானவரலாறு உண்டு.-எல்லாயவர்க்கு என்றதில் விலங்கு பறவை முதலிய பலவகைப் பிறப்புகளையும் அடக்குவர்.-அன்றியே, ‘அல்லாதவர்க்கும்’ என்பதற்கு எம்ªபேருமானை விட்டு பிரிந்து தரியாதபடியாகவுள்ள நித்ய ஸூரிகளுக்கும் என்றம் உரைத்தலுமுண்டு.-கிளவித்துறை வகையில் இப்பாட்டைத் தலைவன் பக்கலில் தனக்குள்ள அன்புறுதியைத் தலைவி தோழிக்குக் கூறுதலாகக் கொள்ளலாம்.
ஸர்வேச்வரனாகிய நாயகனை கலந்து பிரிந்த (பராங்குச) நாயகி, தான் அவன் விஷயத்திற் கொண்ட காதலின்- காண்க.-துறந்து தோழிக்கு எடுத்துக்கூறிய தென்க. இதுவும் தலைவி தோழிக்கு அறிந்தொடு நிறற்றலின்பாற்படும்.-தனது களவொழுக்கத்தைப் புலப்படுத்துதலால் உண்டாகும் பழி தூற்றுக்குத்தான் பயன்படாமை தோன்ற ‘ஈனச் சொல்லாயினுமாக’ என்றாள் என்று கொள்க.-‘எல்லாயவர்’ என்பதில் ‘எல்லாம்’ – பகுதி; மகரம் கெட்டது; ய்- எழுத்துப் பேறு. அ- சாரியை; வ்- சந்தி; அர்- விகுதி.–ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீவராஹப்பெருமாளுக்கு ஞானப்பிரானென்று திருநாமம் வழங்கும்.

ஈனச் சொல்லாயினுமாக-நான் சொல்லுகிற பரமார்த்தம் விமுகரான ஸம்ஸாரிகள் ஏற்றுக் கொள்ளாதே இகழும்படி தண்ணிதான சொல்லாகிலுமாக-அர்த்த பவ்ருஷாதிகள் (சொத்து வீரம் )ரக்ஷகம் என்று நினைத்து இருக்கிற தேஹாத்ம அபிமானிகளுக்கு-ஸாஸ்த்ர கம்யமான பகவத் விஷயம் உத்தார ஹேது என்று உபதேசிக்கை இகழுகைக்கு உறுப்பாம் என்று கருத்து –எறி திரை வையம் முற்றும் ஏனத்துருவாய் யிடந்த பிரான்-எறிகிற திரையை யுடைத்தான ப்ரளயத்திலே பூமி எல்லாவற்றையும்-நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ ரூபத்தைப் பரிக்ரஹித்து அண்ட கபாலத்தில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்த மஹா உபகாரகன்-இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும்-அபிமத பல பிரதத்வத்தாலே வந்த பெருமையை யுடைத்தான கற்பக வ்ருக்ஷங்களினுடைய–செறிவை யுடைத்தான சுவர்க்கத்தில் வாஸத்தை யுடைய தேவர்களுக்கும்–(எனக்கே தன்னைத் தந்த கற்பகம் இல்லையே இவை)அல்லாதவர்க்கும்–அத் தேவ ஜாதி தானே உத்க்ருஷ்டம் என்னும்படியான மனுஷ்ய ஜாதீயருக்கும்–மற்று எல்லா யவர்க்கும்-இவர்களிலும் அபக்ருஷ்டரான திர்யக் ஸ்தாவர ஜாதி பேதங்களில் உள்ளார் எல்லாருக்கும்-ஞானப் பிரானை யல்லால் இல்லைஸ்திதே மனஸி -வராஹ சரம ஸ்லோகம் இத்யாதியாலே உத்தாரக ஹேதுவான ஞானத்தை உபதேசித்த ஸ்வாமியை ஒழிய இல்லை–நான் கண்ட நல்லதுவே –நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

தாத்பர்யம்-இதில் மதுரகவி ப்ரக்ருதிகள் -அந்தரங்கர்-இவர் பகவத் விஷயத்தில் ஈடுபட்டு மோஹித்து இருப்பதை அறிந்து-பிரசுத்துதமான கிருஷ்ண அவதிகாரத்திலும் மோஹிப்பார் என்று அறிந்து
இனி இவர் ஸ்திதியை விஸ்வசிக்க முடியாது-நம்மைப் பார்க்க வைப்போம்-பிரிவாற்றாமை குறைக்க இதுவே வழி-சரம ஸ்லோகம் கீதாச்சார்யன் உபதேசித்தான் போல் -அர்ஜுனனை வியாஜ்யமாகக் கொண்டு அருளிச் செய்தது போல்-ஆழ்வாரும் -நமக்காக தான் கண்ட நல்லதை -அந்தரங்கரை வியாஜமாகக் கொண்டு –லோக உஜ்ஜீவன அர்த்தமாக தம்முடைய பரம சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –இதுக்கு மேல் வேறே ஒன்றும் இல்லையே -ஆகவே இதுவே பரமமான -ஸித்தாந்தம்
ஞானப்பிரான் சன்னதி-நீராஞ்சனம் தேங்காய் மூடியில் -ஞான தீபம் தூண்ட -காயத்ரி ஜபம் பிரார்த்திப்பதும் இதுவே-மற்றவை தன்னடையே கிட்டும்-நாம் உபதேசிக்கும் இது சம்சாரிகளுக்கு ருசிக்காமல் இருந்தாலும் –சொல்லி அல்லது தரிக்க மாட்டாமல் -அனுபவம் உந்த அன்றோ அருளிச் செய்கிறார்-ஆழ்வார் வார்த்தை ஈனச் சொல் ஆகாதே-சில மஹான்கள் சிலர் உண்டாக இருப்பதால் சொல்கிறேன்-சம்சாரிகளுக்கும் காலாந்தரத்தில் ஆவது ருசி பிறக்கலாம் அன்றோ -உஜ்ஜீவன ஹேது -ஹிதத்துக்காக அருளிச் செய்கிறார்-பரம காருணிகர் அன்றோ ஆழ்வார்-காது கொடுத்தாலே போதும்
ஸ்ரவணம் கீர்த்தனம் –ஆத்ம சமர்ப்பணம் செல்வத்துள் எல்லாம் தலை -செவிச் செல்வம் தானே
நான் சொல்வது ஸூ லப அனுஷ்டானமாகவும் -இனிமையாகவும் இருக்கும்-மருந்தாகவும் விருந்தாகவும் ஸ்வரூப அனுரூபமாகவும் இருக்கும் –-அது ஏது என்னில் ஸ்ரீ யபதியாய் பராத்பரன்
தனது மேன்மையும் பாராதே இவர்கள் பிரார்த்தனையும் எதிர்பாராமல் தானே வந்து மஹா அவதாரமாய் -உத்தரித்து அருளிய மஹா உபகாரகன்-நம் அனைவரையும் ரக்ஷித்து அருளியவன்
புண்யங்கள் செய்து கற்பக வருஷம் இடம் அபீஷ்டம் பெற்று வாழும் தேவர்களுக்கும் அதன் மூலம் -அந்தராத்மாவாக இவன் தானே-தண்ணீர் ரசமாகவே நான் இருக்கிறேன் ஸூர்யனில் ஒளியாயும் இருந்து தேவர்களைக் காப்பவன் அவன்-அல்லாதவர் -கர்ம சம்பந்த ஸூந்யராய் -வைபவம் மிக்க நித்ய ஸூரிகளுக்கும் தனது திரு மேனியை அனுபவிப்பித்து தரிக்க வைப்பவனும் இவனே மற்ற எல்லாருக்கும் -சம்சாரிகள் -மனுஷ்ய பசு பஷாதிகள்;-ஸர்வவித அபீஷ்டங்களையும் கொடுத்து ரக்ஷிப்பவன் அவனே-சர்வஞ்ஞனாய் -ஞானப்பிரான்-சர்வ சக்தனாய் -இடந்து-அவாப்த ஸமஸ்த காமனாய் நிரங்குச ஸ்வதந்த்ரனாய் நிருபாதிக சர்வ ஸ்வாமியாய் அவனை ஒழிய அல்ப சக்தர் அல்ப ஞானம் உள்ளவர் -சம்சாரிகளுக்கும் -கர்மாதீனர் -இவர்களுக்கும் ப்ரஹ்மாதிகள் ரக்ஷகர் ஆகார்
உபாயாந்தரங்களின் தாழ்ச்சி -ஜடப்பொருள் மோக்ஷம் தராதே-நஸ்வரமாய் -சேதனர் ப்ரத்யயனனம் பண்ணி சாதிக்க வேண்டுமே-கர்ம ஞான பக்தி -பரிபக்குவம் இல்லா தவர்களுக்கு -வேதம் முக்குண சம்சாரிகளுக்கும் உபதேசிக்கும்-நமது நிலைக்குத் தக்க அனுஷ்டானம் வேண்டுமே – நதியில் இருந்து கைக்குத் தக்க நீரைப் பருக வேண்டுமே –-இவ்வர்த்தத்தை உலகை வஞ்சிக்கவோ ஆச்சார்ய பீடம் வகுக்கவோ புகழுக்காகவோ கியாதி லாப பூஜா -லாபத்துக்காக சொல்ல வில்லை –-நான் -பெருமையை வியாக்யாதா விவரிக்கிறார்-ஸம்ஸார -பங்க நிமக்நாராய் -சகல சேதன உத்தாரண ஏக பரனாய் -வராஹ மூர்த்தியை ஈடுபட்டு பகவத் கடாக்ஷத்தால் -அந்தக்கரண மலம் இல்லாமல் தத் பிரசாத லப்த தத்வ யாதாத்ம்ய அவபோதம் பெற்று அனுபவ ஜெனி பிரேமம் உள் அடங்காமல் வெளி வந்த சொல்லால் இந்த உபதேசம் இது உங்கள் நன்மைக்காக இந்த மஹா அர்த்தத்தை உபதேசிக்கிறேன் என்கிறார் –

10-7-செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின்-ப்ரவேஸம்-

விதி வகையே -என்கிறபடியே அவன் தம்மிடத்தில்-பரதந்த்ரனாய் நிற்கிறபடியை அருளிச் செய்தார் –
அவ்வழியாலே-
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே -என்றும்-
தலை மேலே தாள் இணைகள் -என்றும் –
அவன் தன் திரு மேனியோடு புகுந்து கலந்த படியை அருளிச் செய்தார் –
தம்மோடு வந்து கலந்த இடத்தில் தம்மிடத்தில் பரதந்த்ரனாய்-திரு மேனியை விட மாட்டாதே-
அவன் செய்கிற காதல் பெருக்கினை கண்டார் –
கண்டவர் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று நாம் அடியிலே வேண்டிக் கொள்ளச் செய்தேயும்-
இங்கு நம்மை வைத்தது ஒரு கார்யத்துக்காக என்று இருந்தோம்-
அதாவது இப்பிரபந்தம் தலைக் கட்டு வித்துக் கொள்ளுகை -என்றபடி
அது அவ்வளவில் அன்றிக்கே-நம் உடம்பினை விரும்பி விட மாட்டாமையாலேயாய் இருந்தது –
இவன் வெற்று உடம்பனாய்-சரீர சபலனாய் – இருந்தான்-கவி பாடுவித்துக் கொள்ளுகை ஒரு வ்யாஜ மாத்ரம்-
அது பிரதானம் அன்று-இதுவே இவனுக்கு நினைவு -என்று நினைந்தார் –

நினைந்தவர் -இவ் உடம்பினை விரும்புகிறது நம் இடத்தில் காதலால் அன்றோ –
இப்படி நம்மை விரும்பின இவ்வளவிலே நம்முடைய விருப்பத்தை முடித்துக் கொள்வோம் என்று பார்த்து –
தேவரீர் திரு உள்ளத்தில் ஓடுகிறது என் -என்றார் –
நான் உடம்பனாயே வேறு ஓன்று அறியாமல் படுகிற பாடு அன்றோ -மற்று உண்டோ -என்றான் –
உம் உயிர் வீடுடையான் -உயிரையும் வீடான சரீரத்தையும் உடையான் -ஆத்மாவை வீடான சரீரமாக உடையான் –
அங்கண் ஒண்ணாது -தேவர் -இச் சரீரத்தில் செய்து அருளும் விருப்பத்தை தவிர வேண்டும் –
மங்க ஒட்டு உன் மா மாயை -என்று விண்ணப்பம் செய்தார் –
இவர் விலக்கினது-அவருடைய காதல் பெருகுவதற்கு உடலாயிற்று –
ஒரு மா நொடியும் பிரியான் –
தந்தாமைக் கொண்டு அருமைப் படுத்துவார்கள் அன்றோ மேல் விழுகைக்காக-அது போலே ஆயிற்று-

இப்படி இவன் இவ் உடம்பிலே செய்கிற ஆதரத்தினைக் கண்டு-இவனுடைய காதல் பெருக்கு இருந்தபடியைக் காணில்-
இவ் உடம்போடு நம்மைக் கொடு போக நினைத்து இருக்கிறான் போலே இருக்கிறது-
அப்படிச் செய்யும் போது இவ் உலக வாழ்க்கை நமக்கு என்றும் உள்ளதாய் விடும்-நித்ய மண்டலம் அன்றோ -சரீரமும் நித்தியமாக இருந்து விடுமே –
இங்கே இருந்து இதற்கு ஒரு முடிவு கண்ட தாமத்தை இழந்தோம் ஆவோம் இத்தனை-இதனைக் கழித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்தார்-

பார்த்தவர் –
மங்க ஓட்டே -என்றும்
மங்க ஒட்டு உன் மா மாயம் -என்றும்-
பொங்கு ஐம்புலனும் -பாசுரம்-என்றும்-
மும்முறை விரும்புவதும் மும்முறையும் தவிரச் சொல்லுகையும் அறியலாம்-
தேவரீர் இச் சரீரத்தை விரும்புகைக்கு அடி-
என்னிடத்தில் செலுத்தும் காதல் பெருக்கே அன்றோ-நான் இதனை விரும்பவில்லை
தேவரீரும் இவ் உடம்பில் செய்கிற விருப்பத்தினைத் தவிர வேண்டும் -என்ன
நீர் உம்முடைய விருப்பத்தை விடாதவாறு-நம் விருப்பத்தை விடுவதாமோ -என்றான்
அம் தண் திருமால் இரும் சோலை வாழி மனமே கை விடேல் -பாசுரம் கொண்டு பிரவேசம்
இவன் இப்படி விரும்புகிறது – இவ் உடம்பின் இழிவுகளை காணாமையால் அன்றோ –
இவனுக்கு இவ் உடம்பின் தாழ்வுகளைக் காட்டுவோம் என்று பார்த்து
இவ் உடம்பாகிறது -பருத்தல் சிறுத்தல் வளர்தல் குறைதல் களை உடையதாய் -விடத் தக்கதாய் இருப்பது ஓன்று –
விரும்பப் படும் ஆத்மாவைப் போன்று ஒரே தன்மையதாய்-வேறு பட்ட சிறப்பினை உடையதாய் இருப்பது ஓன்று அன்று
இதனை வெறுத்து அருள வேண்டும் -என்றார்-
அவ்வார்தைகளே இவன் மென்மேலும் விரும்புவதற்கு காரணங்கள் ஆயின –
மனைவினது அழுக்கை உகப்பாரைப் போலே எல்லா காலத்திலும் இவன் விட மாட்டாதவனாய் இருந்தான் –
இவனை கால் கட்டியாகிலும் ‘இக் கால்கட்டினை-அவிழ்த்துக் கொள்வோம் என்று பார்த்து-
இதில் செய்கிற விருப்பத்தினை தேவரீர தவிர வேண்டும்-என்று சரணம் புக்கார் –பிரார்தனாமதி சரணாகதி –
இவர் சொன்னபடியே செய்ய இழிந்தவன் ஆகையாலே
தனக்கு இவ் உடம்பிலே மென்மேலும் விருப்பம் செல்லச் செய்தேயும்
இவர் இதனை விரும்பாத பின்பு நாமும் இதனை வருந்தியாவது வெறுப்போம் -என்று பார்த்தான் –
இவர் இடத்து அவன் காட்டும் பாரதந்த்ர்யத்தாலே
இவ் உடம்பு ஒழிய அவன் கொடு போவானாய் இருந்தான் -மான் ஆங்கார மனம் கெட –
ஆக
இப்படியாலே -அருள் பெறுவார் -திருவாய் மொழியிலே தொடங்கின ஈஸ்வர பாரதந்த்ர்யத்தை முடித்து-
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாய்-எல்லா பொருள்களுக்கும் தலைவனான -சர்வேஸ்வரன்-
தனக்கு இவ் உடம்பில் விருப்பம் செல்லா நிற்கச் செய்தே-
நாம் -இதனைத் தவிர வேண்டும் -என்னத் தவிருவதே –என்ன ஒரு சீல குணம் இருக்கும்படியே –
இவ் விஷயத்தில் ஒருவரும் இழியாதீர்கள்-இழிந்து நான் பட்டதுவே அமையும்-என்று மிகுந்த பிரீதியாலே-
உயிர் காத்து ஆட்செய்மின் -என்று – பிறருக்கு சொல்லித் தலைக் கட்டுகிறார் –

த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலே தழைக்கும் -சூர்ணிகை -185-
நீராடப் போதுவீர்–அனுபவம் அடியார்கள் முன்னிட்டே -இனியது தனி அருந்தேல் -கரீஷ்மா காலத்தில் மடுவில் -செல்வார் துணை தேட்டம் -மூன்றும்
கல்யாண குணாம்ருத சாகரம் -அன்றோ இவன் -பரத்வம் கணுக்கால் அளவு -ஸுலப்யம் இடுப்பு -வாத்சல்யம் நெஞ்சு -ஸுசீல்யம் முழுகப் பண்ணும்
ஸஹ பதன்யா விசாலாஷ்யா சீதா பிராட்டி கூட்டி அன்றோ பெருமாள் இழிந்தார் –
கவி பாட சரீரம் வேண்டுமே -ஸுசீல்யத்தில் இழியாமல் இருக்க உபதேசிக்கிறார் –

ஏழாம் திருவாய் மொழியில் கீழ் இவர்க்குப் பரமபதத்தைக் கொடுக்கையில் யுத்யோகித்த சர்வேஸ்வரன்
இவர் முடியில் திருவடிகளை வைத்துத் திரு உள்ளத்திலே பூர்ணமாகப் புகுந்து இருந்து –
விரை குழுவு நாறும் துளவம் மெய்ந்நின்று கமழும்என்னும்படி
திருமேனி முழுக்கத் திருத்துழாய் பரிமளமாம்படியாக இவருடைய சரீரத்தோடு அந்த கரணத்தோடு
மற்றும் உள்ள அவயவங்களோடு வாசியற அத்யபி நிவிஷ்டனாய்
ஆதரிக்கிறபடியைக் கண்டு இவ்வாதார அதிசயத்துக்கு ஹேது வான அவனுடைய
ஆச்ரித விஷயமான அபி நிவேசத்தையும்
அதிசயித போக்யத்வத்தையும்
ஆஸ்ரித தேகத்தில் ஆதாரத்தையும்
அதில் அத்யந்த அபி நிவேசத்தையும்
ரசிகத்வத்தையும்
சர்வாதிகத்வத்தையும்
ஆஸ்ரிதார்த்த திவ்ய தேச வாசத்தையும்
சர்வ பிரகார சம்ச்லேஷத்தையும்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ஹேதுத்வத்தையும்
அபேக்ஷ அபராதீனத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் விதனான சர்வேஸ்வரன் யுடைய ஆதார அதிசயம் இருந்த படியால் நாம் இனி யாம் உறாமை -என்று
உபேக்ஷித்த தேஹாதிகளையும் விளம்பமறக் கொண்டு போவாரைப் போலே இரா நின்றது –
அஸ்த்திரமாய் தோஷ பூயிஷ்ட்ட்மாகையாலே அ புருஷார்த்தமாய் அனுபவ விரோதி யாகையாலே
இருக்கிற இத்தை நம் பக்கல் ஆதரத்தாலே விரும்பா நின்றான் –
இத்தை அறிவித்தும் நாம் அவனை அர்த்தித்தும்-விடுவித்துக் கொள்ளுவோம் என்று
தெற்கில் திருமலையில் அவனை அபேக்ஷிக்க அதுக்காக அவன் நிவர்த்திப்பிக்கையிலே உத்யுக்தனாம் படியைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார் –

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே
–10-7-1-

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் –பிரயோஜனம் இல்லாத செவ்வையை யுடைத்தாய்- ஸ்வயம் ப்ரயோஜன ரூபமான சொற்களாலே கவிபாட வல்லவர்கள்
பிரயோஜனத்தைக் கணிசிக்கை கவிக்கு குடிலம் ஆகையாவது –இன் கவி பாடும் பரம கவிகள் -என்றும் –செந்தமிழ் பாடுவார் என்றும் -சொல்லுகிற முதல் ஆழ்வாரைகளை யாய்த்து நினைக்கிறது –பெரும் தமிழன் அல்லேன் -என்னா- வாய் அவனை அல்லது வாழ்த்தாது –என்கிறவர்கள் இறே அநந்ய பிரயோஜனர் –அவன் கையில் உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் அகப்படாதபடி காத்துக் கொண்டு வாசிகமான அடிமை செய்யப் பாருங்கோள் –அநந்ய ப்ரயோஜனராய் இழிவார்க்கு ஆத்மாத்மீயங்கள் அவனாலே அபஹ்ருதமாய் அவர்ஜனீயம் என்று கருத்து –ஆள் செய்கையாவது கவி பாடுதல் -என்று இருக்கும்-புகழும் நல் ஒருவன் -என்கிற திருவாய் மொழியில் தம்வாசனையாலே

உயிர் காத்து ஆட்செய்மின் –-உங்களை நோக்கிக் கொண்டு நின்று கவி பாடப் பாருங்கோள்-நீங்கள் உளராய்க் கவி பாட வேண்டுமே-
இத்தலை உண்டானால் அன்றோ அத்தலைக்கு மங்களா சாசனம் செய்யலாவது-
ஆட் செய்மின் -என்கிறார் -கவி பாடுதல் வாக்கினால் செய்யப்படும் அடிமை ஆதலாலே-
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மா மாயன் -9-6-7-அன்றோ –கவி பாட கொள்ளும் வியாஜ்யம் -என்றவாறு –அடிமை கொள்வாரைப் போலே புகுந்து மற்றைப் படியேயாய்-இருக்கும் பலிப்பது–அடிமை பண்ணி -பாது காத்துக் கொள்ளுங்கோள்-
ஆழம் காலிலே இழிந்து அமிழ்வார் அவ் விடத்தே கொண்டைக் கோல் நாட்டுமாறு போலே-
கொண்டைகோல் நாட்டுகிறார் ஆழ்வார் -என்று சிற்றாள் கொண்டான் -பணிப்பர்-
இவ்விடம் பரப்புத் துறை-இவ்விடம் மடு-என்று-நிலவர் எல்லை குறிக்குமாறு போலே-
உடையவர் உயிர் காத்து ஆட்செய்மின்–இன்னார் உயிர் என்னாமையாலே
அவன் உயிரைக் காத்து ஆள் செய்யுங்கோள் -என்று அருளிச் செய்தது -என்றது
அவன் மேல் விழ தாங்கள் இறாய்க்கையாவது அவன் இழத்தலே அன்றோ-அவன் உயிரைக் காத்தலைச் செய்யுங்கோள் -என்றபடி-அயோக்யதா அனுசந்தானத்தாலே அகன்றால் -சேராமல் அவன் இல்லை நீங்களும் இல்லை –என்னை அழித்துக் கொள்வேன் -திரு மங்கை ஆழ்வார் திரு நெடும் தாண்டகம் -பெருமாளை அழிக்க திட்டம்-ரகஸ்யம் புரிந்து கொண்டான் -தன்னைக் காட்டினான்

நினைதொறும் சொல்லும் தோறும் நெஞ்சு இடிந்து உகும் -9-6-2-என்றும்-
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய் -என்றும்-
சீலம் முதலான குணங்களில் புண்பட்டு அன்றோ இவர் இருப்பது –உங்களை இழத்தற்கு வேண்டிய காரித்தைச் செய்யாதே-அவனுடைய இறைமைத் தன்மையிலே -நியந்த்ருத்வம் -ஐஸ்வர்யம் –இழிந்து கவி பாடப் பாருங்கோள்-
பஸ்யமே யோக ஐஸ்வர்யம் -விஸ்வ ரூபம் காட்டி -ஐஸ்வர்யம் என்றாலே நியந்த்ருத்வம் —
சீல குணத்திலே இழிய நினையீதீர்கோள் –

என்னை உபகரணமாகக் கொண்டு கவி சொல்லுகை என்னும் வ்யாஜத்தினாலே என்னுள்ளே புகுந்து கலந்து –இன்னபடி செய்து அருளினான் -என்று அயர்வறும் அமரர்க்கும் அறிய நிலம் அல்லாத தொரு படி-என் நெஞ்சையும் உயிரையும் தன்னுள்ளே அடக்கி தானேயாம்படி-மாள புஜித்து பரிபூர்ணன் ஆனான் என்கிறார் –

வஞ்சக் கள்வன் மா மாயன் -இத்தலையில் அடிமையை நிலை நிறுத்துவாரைப் போலே புகுந்து-தான் அதனை எறட்டுக் கொண்டு-தலைவனாம் தன்மையை இத்தலையிலே வைத்து-தலைமேல் கொள்வான் -ஆயிற்று –களவு தன்னை களவு காணும் ஆயிற்று – -சேஷத்வம் திருடினான் -கள்வா -ஆத்மபஹாரம் –பிள்ளை பெருமாள் ஐயங்கார்-சேஷித்வம் பட்டம் கொடுத்து இதுவே சேஷத்வம் என்று காட்டிய கள்வன்-எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் என்பர் –மா மாயன்-அப்படி அறியச் செய்தேயும் தப்ப ஒண்ணாத படியான-ஆச்சர்யமான செயல்களையும் குணங்களையும் உடையவன் –மையல் ஏற்றி மயக்க உன் முகம் தான் மாய மந்த்ரம் தாம் கொலோ -நாச்சியார் திரு மொழி -2-4-

மாயக் கவியாய் –ஆழ்வீர் உம்மைக் கொண்டு உலகத்தில் நடையாடாத-சில கவிகளைப் பாடுவித்துக் கொள்ளப் பாரா நின்றோம்-அப்படிச் செய்வோம் -என்று ஆயிற்றுப் புகுந்தது
கவி என்று ஒரு காரணத்தை இட்டுக் கொண்டு வந்தான்-காதலி இருக்கும் இடத்தில் -தண்ணீர் -என்று புகுமாறே போலே –

வந்து-வந்தவனும் தானே ஆயிற்று –நான் தான் இருந்த இடத்தே சென்று-
என்னை இட்டு சில கவிகள் பாடுவித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லச் செய்கை அன்றிக்கே-
தானே வந்தான் –அடையத் தகுந்தவனான தானே ஆயிற்று வந்தான்-இதுவன்றோ சீலம் ஆவது –அபி கம்யனாக தான் இருக்க அபிசரித்தான்–

வந்த இடத்தில் அவன் உமக்கு நலிவாக செய்தது என் என்னில் –
என் நெஞ்சும் உயிரும் –நெஞ்சினைக் கூறியது உடலுக்கு உப லஷணம்-உயிர் -ஆத்மா-
வரும் பொழுது நான் இருந்தேன் வந்த பின்பு என்னைக் காண்கின்றிலேன்-

உள் கலந்து –
ஒரு நீராகக் கலந்து –சரீரத்தோடு ஆத்மாவோடு வாசி அற அனுபவிக்கிறான் –

நின்றார் அறியா வண்ணம் –
இச் செயலுக்குத் தலைவரான பிராட்டி திரு வநந்த ஆழ்வான்-திருவடி முதலானார்க்கும் அறிய முடியாதபடி-ஆயிற்று என்னோடு கலந்தது –
இப்படிப் பட்ட காதலோடு கூடிய செயல்களில் நிற்பார் அவர்களே அன்றோ –
அவர்களுக்கும் தெரியாதபடி –ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -9-6-9- என்னுமாறு போலே –

என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு –
சரீரம் வேறு உயிர் வேறு என்று நினைத்திலன் -எனக்கு மயர்வற மதி நலம் அருளினவன் -–தேஹாத்ம விவேகம் அறிந்திலன் –
உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான் -9-6-5-என்னுமாறு போலே சரீரத்தையும் உயிரையும் ஒரு சேர அனுபவித்தான் –சேதனனுடைய போக்த்ருத்வமும் அசத் சமமாம் படி தானே போக்தாவாய்ப்-பெறாப் பேறு பெற்று-இப்பொழுது தான் – அவாப்த ஸமஸ்த காமனானான்

தானே யாகி –தம்மை காண்கின்றிலர் காணும்-இருவருமாக அனுபவிப்பாரைப் போலே புகுந்து அனுபவிக்கிறவன் தானே யானான்-மற்று ஒன்றைக் காணா -காண்பனவும் -உரைப்பனவும் மற்று ஒன்றி கண்ணனையே கண்ட –திருப் பாண் ஆழ்வார்-தன்னையும் -தன் இருப்பிடம் – பலம் -சொல்லாமல் —
என்னை முற்றப் பருகினான் -9-6-10-என்னுமாறு போலே-இத்தலை இனிய பொருளாய் அற்றதாயிற்று-இத்தலை ஒரு அறிவுடைப் பொருள் என்று தோற்றாதபடி ஆயிற்று செயல் செய்தபடி –பிறருக்கு உறுப்பாய் இருக்குமது ஒழிய-தனக்கு என ஒரு தகுதி இல்லாத அறிவில்லாப் பொருளைப் போன்று செய்தான்-தனக்கேயாக -2-9-4- என்றபடியே கொண்டான்-
இனிய பொருள்களிலும் ஸ்வரூப பேதங்கள் -உண்டாகா நின்றதன்றோ- சந்தனம் மலர் போலே-அவை போன்றதே விட்டது அறிவுடைப் பொருளும்-
சூஷ்ம ஓட்டும் நீரிலே கழுவி-பைந்தொடி மடந்தயரைக் கொண்டு-ஷட்குண ரசாந்தமாக்கி -ஆசார்ய ஹிருதயம் –
தானேயாகி-

ஈர் அரசு தவிர்த்தான் என்பார் -தானேயாகி -என்கிறார்-
இத்தலையை புள் கவ்வப் பண்ணி -செருக்கு அற்றவனாக்கி –தானே தலைவனாய் நின்றான் -என்றபடி-

நிறைந்தானே –அவாப்த சமஸ்த காமன் -எனபது இது காறும் பெயர் மாத்ரமேயாய்-இவரைப் பெற்ற பின்பாயிற்று நிறைந்தவன் ஆயிற்று-இங்கனே இருப்பது அன்றோ சீலமாவது -என்றது-பெரியவன் சிறியவன் இடத்தில் கலக்கும் இடத்தில்-தன் பெருமையும் அவன் சிறுமையும் தோற்றாத படி-புரை அறக் கலக்கை அன்றோ –
அபிஷிஸ்ய ஸ லங்காயாம் ராஷஸேந்த்ரம் விபீஷணம்-க்ருத க்ருத்யா ததா ராம விஸ்வர பிரமுமோதா ஹ -சங்ஷேப ஸ்ரீ ராமாயணம் -85 -என்னுமாறு போலே-

என் நெஞ்சையும் உயிரையும் உள்ளே புக்கு கலந்து அவற்றைப் புஜித்து-என் அபிமானத்தைப் போக்கித் தானே எனக்கு அபிமானியாய் அத்தாலே பூர்ணனானவன் –

————-

தானே  ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–10-7-2-

தானே ஆகி நிறைந்து –ஏவகாரம்-இருவரும் சேர்ந்து செயல் செய்யப் புகுந்து-தானே பெற்றானாய் இரா நின்றான் –தான் போக்தா –

தானே யான் என்பான் ஆகி –யானே என்பான் தானாகி –-எல்லார் இடத்திலும் நிற்கும் நிலை ஒழிய-இவருடைய திரு மேனியில் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது
நான் என்ற பெயர் அளவேயாய் நிற்கிற நான் -தான் என்னலாம் படி ஆனேன்-
சேஷ பூதன்-என்றவன் சேஷி ஆனேன் -என்றவாறு -அப்ருதக் சித்த விசேஷம் தெரிந்து தானே அவன்-
அஹங்காரத்தால் இல்லை -கடல் ஞாலம் செயதேனும் யானே போலே –
தம்மைத் தடவிப் பார்த்த இடத்தில் காண்கின்றிலர் –அவன் தலையிலே சுமக்க காண்கிற இத்தனை –

எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே--சர்வ ரச -என்கிற பொதுவான நிலை அன்றிக்கே-எனக்கு எல்லை இல்லாத இனியன் ஆனவனே –கொடியேன் பருகு இன்னமுதே -என்கிறபடி-
தன்னைத் தானே துதித்து -என்கிற இடத்தில் தம்மைக் கண்டிலர்-
இங்குத் தாம் உளராகவும்-தமக்கு இனியதாகவும் தோன்றிற்று-
தாம் பாடின கவி கேட்டு -அவன் இனியனாய் இருக்கும் இருப்பு-தமக்கு இனியதாய் இருக்கிறபடி –உபாய பாவத்தில் அந்வயம் இல்லை -உபேயம் -அனுபவத்தில் அந்வயம் உண்டே —

திருமால் இரும் சோலைக் கோனே -யாகி-இரண்டு உலகங்களையும் உடையவனாய் இருந்ததால் வந்த ஏற்றத்துக்கும் அவ்வருகே-
ஓர் ஏற்றம் போலே ஆயிற்று திருமலையை உடையனாய் இருக்கையால் வந்த ஏற்றமும் –
இவரைப் பெற்ற பின்பே காக்கும் தன்மை நிறைந்த தாயிற்று-திருமலையில் வந்து ஆழ்வாரைப் பெற்ற பின்பாய்த்து சேஷித்வம் பூர்ணம் யாய்த்து –
இல்லையாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்போடு-திருமலையில் நிலையோடு வாசி அற்று போமோ அன்றோ –

நின்று ஒழிந்தான் –இங்கு நின்ற பின்பு ஆயிற்றுப் பரகு பரகு-வியாகுலம் -அற்றது-க்ருதகிருத்யனாய் இரா நின்றான் –என்னை முற்றும் உயிர் உண்டே –என் உயிரை முற்றும் உண்டே-எங்கும் பரந்து இருக்கிற தான்-அணு அளவிதான ஆத்மாவினை நுகர்தல்-தனக்கு ஏற்றமாம் படி ஆயிற்று இத்தலையான படி –அவன் தன் அபிப்ராயத்தாலே மதித்து இருந்தபடி –தம்மோடு கலந்த பின்பு எம்பெருமானுக்குப் பிறந்த ஸம்ருத்தியைக் கண்டு இனியராய் அனுபவிக்கிறார் –

என்னைப் பெறுகையாலே சர்வேஸ்வரனாய் –என்னை உபகரணமாகக் கொண்டு -தன்னைத் தானே ஸ்துதித்து -எனக்கு நிரதிசய போக்யனாய் -என்னைப் பெற்ற பின்பு திருமலைக்கு நாதனும் ஆனான் –என்னை முற்றும் உயிர் உண்டே–என்னுயிரை ஓன்று ஒழியாமே அனுபவித்து –

————-

என்னை  முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

என் மாய ஆக்கை –என்னுடைய உயிரை அனுபவித்து அவ்வளவிலே தான் தவிருவானாய் இருந்தானோ-மங்க ஒட்டு என்னும் அளவும் அவன் இதனை விட மாட்டாமையாலே உள்ளே புகுரா நின்றான் –இதனுள் புக்கு –புகுந்து என்னாதே புக்கு -என்கிறது அத்தோடு தமக்கு தொற்று அற்று இருக்கிற படி தோற்றுகைக்காக-மங்க வொட்டு-என்று அவன் அனுமதி பார்த்து இருக்கும் இறே –என்றும் அசித்தோடும் முகம் பழகின இவர் இறாய்க்க -ஹேய பிரதி படனானவன் இறே மேல் விழா நின்றான் –

என்னை முற்றும் தானேயாய் –இப்படி உயிர் உடலோடு வாசி அற எங்கும் புக்குப் பரந்து இருக்கையாலே -தானே -என்ன தட்டு இல்லை-காரண கார்ய பாவ்யம் ஆகையாலே-
இவர் -நான் -என்னும் அதனையும் கொண்டான்-இவர் – எனது -என்னும் அதனையும் கொண்டான்-ஈஸ்வரனுக்கும் கூட விளாக்குலை கொண்டு -கபளீ கரித்து-அனுபவிக்க ஒண்ணாத படி ஆனார் ஆயிற்று -என்னுதல்-
சகல பிரகாரங்களை -ஞானம் ஆனந்தம் சேஷத்வம் குணங்கள் போன்றவை முற்றவும் என்றபடி –

திசை கூப்பிச் சேர்ந்த யான் –ஒரு திக்குப் பட அன்றோ இவர் விரும்புவது என்றது –அவனை உகந்து அவ்வழியாலே அவன் விரும்பின தேசத்தை உகந்து-அதனோடு சம்பந்தம்
உடைய திக்கினை உகந்து-இப்படி அவனோடு சம்பந்தம் உடைய சம்பந்திகள் அளவும் உகக்கும்படி கை கழியப் போந்த நான் -என்றபடி –
அவன் தான் இவரை உகந்து-இவருடைய சம்பந்தம் உடைய உடம்பினை விரும்புவது போலே ஆயிற்று-என் எண் தான் ஆனானே -1-9-7-என்றார் அன்றோ அடியிலே –

என் கொல் அம்மான் திருவருளே –அம்மான் திருவருள் என் கொல் –இவர் திறத்தில் எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போலே எதனைச் செய்தோம் என்று இரா நின்றான் ஆயிற்று-

இன்னம் போவேனே கொலோ –என் கொல் அம்மான் திருவருளே–இனி எனக்கு ஒரு கந்தவ்ய பூமி யுண்டோ -சர்வேஸ்வரனுடைய பாரிப்புக்கு அவதி என்னோ –விடில் செய்வது என் என்று அதிசங்கை பண்ணினான் அன்பினால் என்கை-
சரமாவதி சேஷம் ஆகையால் -தன்னை விட பிரசங்கம் இல்லை -விடில் என் செய்வது -என்று அதிசங்கை பண்ணினான் அன்பினால் என்கை-
அன்றிக்கே அவனை விரும்பி –அவன் உகந்த தேசத்தை விரும்பி –அத்தோடு சேர்ந்த திக்கை விரும்பும் படி சேஷத்வத்தின் நிலையிலே நிறுத்தினவன்–இதில் காட்டில் வேறு சில ப்ராப்யங்கள் யுண்டாய் அவற்றை உபகரிக்கப் பாரிப்பாரைப் போலே இரா நின்றது -எனக்கு ஒன்றும் செய்திலேனாய் பரகு பரகு என்கிற இதுக்கு அவதி என்னோ -விஷயம் இன்றியே இருக்க பிரமிக்கவும் ஆமாகாதே-

———–

என் கொல்  அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

தம்முடைய திருமேனியைக் காட்டிலும்-தம்மோடு கலந்து பழகுவதற்கு-
தக்க நிலம் என்று திருமலையில் அவன் வைத்து இருக்கும்-காதல் பெருக்கினை -அருளிச் செய்கிறார்-

நன்கு என் உடலம் கை விடான்-சர்வேஸ்வரன் தன்னைக் கேட்டார்க்கு சொல்லுகிற வார்த்தை இருக்கிறபடி –அத்தை ஆழ்வார் அனுவாதம் செய்கிறார் என்றபடி –
ஆழ்வாரை -நமக்குத் தந்த திருமேனி அன்றோ -என்னா நின்றான் ஆயிற்று –ததீயத்வ ஆகாரத்தால் லீலா விபூதியை உத்தேச்யம் என்று ஆழ்வார் சொல்வது போலே -ஆழ்வார் சம்பந்தத்தால் சரீரமும் அவனுக்கு உத்தேச்யமானது –

ஞாலத்தூடே நடந்து உழக்கி –எத்தனை காலம் உண்டு அவன் இப் பேறு பெருகைக்கு உழன்று திரிகின்றது –எல்லார்க்கும் பொதுவானவனுடைய செயல் எல்லாம் எனக்கு எனக்கு என்று-சொல்லலாம் அன்றோ அடியார் ஆனார்க்கு –இந்திரனுக்கு இழந்த அரசினைப் பெற்றேன் என்னவுமாய்-மகா பலிக்கு -வள்ளல் என்னும் பெயர் பெற்றேன் -என்னவுமாம்சிலருக்கு பொன் பயந்தேன் என்னவுமாய்-மாலாகிப் பொன் பயந்தேன் மன்னன் சரிதைக்கே -திருமங்கை
இவருக்கு எனக்காகச் செய்தான் -என்னவுமாய் இருக்கிறது காணும் –
உவந்த உள்ளதனாய் -கொடையாளி -மகாபலி -இந்திரன் ராஜ்யம் பெற்று உகந்து-ரிஷிகள் காணப் பெற்றோம்-அடியார் கார்யம் செய்தோம் அவன் உகக்க -திருவடி பெறப் பெற்றோம் ஆழ்வார்கள் உகந்து -ஒரே கல்லில் ஐந்து மாங்காய்-சத்யம் விதானம் நிஜ ப்ருத்ய – நரசிம்மன் -அவதாரம் -மெய்ப்படுத்த- பிரகலாதன் வார்த்தை
-ப்ரஹ்மா – வேதங்கள் -ஹிரண்யகசிபு காட்டி -ரிஷிகள் இந்த உருவம் சேவிக்க –

திரு உலகு அளந்து அருளுகை ஒரு வியாஜ்யமாய் -ஆழ்வாரை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் ஏதோ என்று ஆராய்ந்து திரு மலையிலே நின்று அருளினான் -ஆரியர்கள் இகழ்ந்த தெற்கில் திக்கில் ஒரு ஆபரணம் போலே இருந்துள்ள திருமலையில் வந்து நின்றான் –

நங்கள் குன்றம் கை விடான்-ஆழ்வார் திரு மேனியை பிராப்யமாகவும் நினைத்திரா நின்றான் என்றது-உத்தேச்யம் ஆழ்வார் திருமேனியாய்-அது பெறுகைக்கு ஆயிற்று திரு மலையில் நிலை -என்றபடி –

நண்ணா அசுரர் நலியவே-திவ்ய மங்கள விக்ரகம் இல்லை திருக் கல்யாண குணங்கள் இல்லை என்று பிதற்றும் அசுரக் கூட்டங்கள்-
திருமால் இரும்சோலையில் எம்பெருமான் நின்ற நிலை கண்டவாறே தொலைந்தன –
அப்படியே இவன் ஆழ்வார் திருமேனியில் காதல் இப்படி பட்டது என்று அறிந்தவாறே ஆழ்வார் குறைகளை எண்ணுகிற அசுரக் கூட்டம் தொலைந்தன –

————-

நண்ணா  அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும்  நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

எண்ணா தனகள் எண்ணும் -உபய விபூதி யுக்தனுக்கு இன்னம் விபூதி வேணும் என்றும் -அசங்க்யாத குணகனுக்கு இன்னம் குணம் வேணும் என்றும் மேன் மேலே என எண்ணா நிற்குமவர்கள் –திருவாய் மொழியை தவிர வேறு ஒரு செல்வம் வேண்டா-என்று இதுவே நினைந்து பேர் உவகையராம் தன்மையர் ஆகையால் –நல் முனிவர் –

நன்கு என் உடலம் கைவிடான் -என்னும்-அளவு அன்றிக்கே என் வார்த்தை அளவிலே களியா நின்றான் -இதில் பேசப் படுகிற பரம்பொருளின் உடைய அவதாரம் போலே ஆயிற்று-துதிப் பாடலாகிய இதனுடைய அவதாரமும் –தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -9-4-9-என்னக் கடவது அன்றோ–இந்த திருவாய் மொழியே அவர்களுக்கு தாரகம் –

யானாய்த் தன்னைத் தான் பாடி –தந்தையானவன் மகனுக்கு பசுவினை நீர் வார்த்துக் கொடுத்து அவன் பக்கலிலே தான் மீள நீர்-ஏற்றுப் பசுவினைப் பெறுமாறு போலே
மகனுக்கு சொற்களைக் கற்பித்து அவன் சொல்லக் கேட்டு தந்தை இனியர் ஆமாறு போலே –தான் பாடினான் ஆகில் ஸ்ரீ கீதையோடு ஒத்துப் போம்-பண்டே பரமன் பனித்த -10-4-9-என்று இவர் அங்கீ கரிக்கையாலே அந்த ஸ்ரீ கீதை தானும் வீறு பெற்றது அன்றோ –

நம்பி திரு வழுதி நாடு தாசர் -அருள் கொண்டாடும் -என்கிற பாட்டிலே
ஸ்ரீ கீதையைக் கற்றான் ஒருவன் காலை நேரத்திலே ஒரு சபைக்குச் சென்றால்-
பலருமாக நாழி அரிசியைக் கொடுத்து நம்ப மாட்டமையாலே-புறத் திண்ணையிலே கிட -என்பார்கள்
திருவாய் மொழியைக் கற்றான் ஒரு விண்ணப்பம் செய்வான் என்றால் சர்வேஸ்வரன் அகப்பட புறப்பட்டு-எதிர் கொண்டு அகம் ஒழித்துக் கொடுத்து-அமுதுபடியும் எடுத்து விட்டு உபசரிப்பார்கள் -என்றாராம் –

தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–ப்ரீதிக்குப் போக்கு வீடாக ஆளத்தி வையா நின்றான் -ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பகவத் லாபத்தில் ப்ரீதிக்கு போக்குவிட்டு சேஷ பூதன் சொல்லக் கடவத்தை –அவாக்ய அநாதர -என்கிற தான் ப்ரீதி பிரகரஷத்தாலே அந்த பூர்த்தி குலைந்து சொல்லுகிறான் இறே-இக்கவிகள் ஆகிற அம்ருதத்தைப் பருகிக் களித்து அம்ருத பானம் பண்ணின வண்டுகள் போலே தென்னா தெனா வென்று திருமலையில் நின்று பாடி அருளா நின்றான் என்கிறார் –

திரு மால் இரும் சோலையானே-தாம் பாடின கவிகளின் இனிமையை நினைந்தார் –இவை தாம் அடியாக பிறந்தன என்று சொல்லலாய் இருந்தன அல்ல –
இதற்கு அடி என்ன -என்று பார்த்தார் –அவன் தன் நெஞ்சினில் புகுந்து இருந்து பாடுவித்தானாய் இருந்தது-இவரைப் பாடுவித்த முக்கோட்டை-தொலை வில்லி மங்கலமும் இவரது முக்கோட்டை –

———–

திருமால்  இரும் சோலையானேயாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

செழு மூஉலகும் தன்-ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்–கட்டளைப் பட்ட தரை லோக்யத்தையும் அத்விதீயமாக சிறிதான வயிற்றிலே வைத்து -கல்பம் தோறும் கல்பம் தோறும் தலையாக ரக்ஷிக்கும் -பிரளய ஆபத்தில் ஜகத்துக்கு தன்னை ஒழிய செல்லாதாப் போலே என்னை ஒழிய தனக்கு செல்லாத படியாய் இருக்கை –மா -விபரீத லஷணை-

சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே –
பிரமன் சிவன் முதலான தேவர்கள் காணப் பெறாமையாலே-எல்லை இல்லாத பக்தியை உடையராய்-திருவடிகளை அடைவு கெட ஏத்த-
அவர்களுக்கு முகம் தோற்றாமே கடக்க நின்று-அருள் செய்கின்ற சர்வேஸ்வரன்-
எனக்கு கண்களுக்கு இலக்காம்படி-திருமலையிலே வந்து நின்று-என்னை அடிமை கொள்ளுகையில் எனக்குப் பெரும் பித்தனாய் என்னைப் பிரிகிறிலன் என்கிறார் —என்னை ஆளுமால் –என்னை அடிமை கொள்ளுகைக்காக பிச்சுத் தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவன் –ப்ரஹ்மாதிகள் பராத் பரன்– என்று அறியாதவர் பிரதிமாஸு அப்ரபுத்தி ஞானம் மலராதவர்களுக்கும் விக்ரக ரூபம்-யோகிகளுக்கு ஹிருதயம் சேவை –வேத வித்துக்களுக்கு அக்னியில் சேவை -ஸுலப்யம் அறிந்தவர் தானே இவனை உணர முடியும் –

————

அருளை ஈ  என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

மருள்கள் கடியும் மணி மலை –பேற்றினை அடைவதற்கு தடைகளாக உள்ளவற்றை-அடையப் போக்கும் தேசம் ஆயிற்று-
அன்றிக்கே-
திருமலையை ஒழிந்தது ஒன்றே பெறத் தக்க பேறு-என்று பிறக்கும் புத்தியைத் தவிர்த்து தருமாயிற்று-நிரதிசய புருஷார்த்தமான திருமலை –திரு மாலிருஞ்சோலையே – -என்னலுமாம்-

அது தான் என் என்னில் –
திருமால் இரும் சோலை மலையே –ஸ்வயம் புருஷார்த்தம் திருமலை -என்றதாயிற்று –இம் மலையே தான் நாம் அடையத் தக்க பேறு-என்று திரு மலையைக் கொண்டாடுகிறார்-இதுவே பிராப்தம் என்று –மருள் ஒழி மடநெஞ்சே என்றவர் தாமே திரியட்டும் இதுவே பேறு என்கிறாரே-

———–

திருமால்  இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

இரண்டு திருமலைகளிலும்-பரத்வத்திலும்-வியூகத்திலும்-பண்ணும் விருப்பம் முழுவதினையும்-இவர் திருமேனி ஒன்றிலும் பண்ணா நின்றான் –உயிரே -மனமே -வாக்கே -கருமமே-என்பவற்றில் உள்ள ஏகாரத்தாலே-அவற்றிலும் முறையால் அன்றியே
கண நேரமும் இடை விடாதே-சௌபரியைப் போலே பல வடிவு கொண்டு நில்லா நின்றான்-கரணங்கள் -காரியம் -கர்த்தா -மூன்றையும் சொல்லி -ஒன்றில் நின்றும் ஒன்றில்- கால் வாங்கிப் போய்-அனுபவிக்கின்றிலன் -என்றபடி –
தலையே உடலே உயிரே மனமே வாக்கே கருமமே -ஒவ் ஒன்றிலும் -ஒரு மா நொடியும் பிரியான் –இரண்டு திருமலையை சொன்னது உகந்து அருளினை திவ்ய தேசங்களுக்கும் உப லக்ஷணம் –

என் ஊழி முதல்வன் ஒருவனே –என் இடத்தில் காதலை உடையவன் ஆகைக்காக-காலத்தாலே அறியப் படுகின்ற எல்லா பொருள்களுக்கும்-காரணமான ஒப்பற்றவன் –
அழிவு காலத்தில் -சேதன அசேதனங்கள் எல்லாவற்றிற்கும்-தன்னை ஒழிய செல்லாதவாறு போலே ஆயிற்று-
இவர் திருமேனி ஒழிய தான் செல்லாத படி இருக்கிறபடி –பிரணயித்தவத்துக்கு தாரணம் என்றவாறு –கார்ய காரண உபய அவஸ்தா சித் அசித்துக்கள் யுடைய சத்தை தன் அதீனமாம் படி இருக்கிறவன் -தன்னுடைய சத்தை என் சரீர அதீனமாம் படி இரா நின்றான் -இவனும் ஒருவனாய் இருக்கிறானே –

————-

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

பிரளய ஆபத்துக்களில் இவற்றுக்குத் தன்னை ஒழிய-நிலைத்து இருத்தல்-இல்லாதாவாறு போலே – தான் இவரை ஒழியில்- தரிக்க மாட்டானாய் இரா நின்றான் –

வாழி மனமே கை விடேல் –மனமே நான் சொல்லுகிற இந்நன்மை உனக்கு மாறாதிடுக-
அவன் இப்படி நம் பக்கலிலே மேல் விழுந்து விரும்புகையாகிற-நன்மைக்கு எல்லாம் காரணம் -திருமலை -ஆயிற்று –
இதனை ஒருகாலும் கை விட நினையாதே காண் -என்கிறார் -தம் திரு உள்ளத்தைப் பார்த்து –அவனும் தன் திரு உள்ளத்தைக் குறித்து –ஆழ்வாரைத் தந்தது அவருடைய திருமேனியாய் இருக்கும் –திருமால் இரும் சோலை தானே ஆழ்வார் திருமேனி -நீயும் அதனை ஒருகாலும் விடாதே காண் -என்றான் –பிரானே அங்கன் ஒண்ணாது -இதனைத் தவிர வேண்டும் -என்று நிர்பந்திக்கிறார் –

உடலும் உயிரும் மங்க ஓட்டே –உடலும் உயிரும் மங்கும்படி இசைய வேண்டும் –ஒட்டு -இசைதல் –இது அத் திருமலையைப் போன்று பற்றத் தகுந்தது ஓன்று அன்று –சாலவும் விடத் தக்கதாய் இருப்பது ஓன்று –உமக்கு வைராக்யம் வந்தது போலே எனக்கு ராகம் வந்தது -என்றான் –
இதனை மங்க இசைய வேண்டும் –மங்க ஒட்டு -என்கையாலே-ஆழ்வார் அவன் இசைவாலே தான் இத்தனை காலம் இருந்தார் -கர்ம சேஷத்தால் அல்ல -அவனது இச்சையால் தானே –ஆழ்வார் இங்கே எழுந்து அருளி இருந்த இருப்பு பிராரப்த கர்மத்தால் அன்று -பகவத் இச்சையாலே தானே -என்கிறது –நன்கு என்னுடலம் கை விடான் –என்றார் இறே –

————-

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

திரு மால் இரும் சோலை மேய நங்கள் கோனே –திருமலையில் நின்று சேஷித்வம் காட்டி அருளிய நீ பேற்றினையும் தந்து அருள வேண்டும் -என்றபடி –
பரமபதம் கலவிருக்கையாய் இருக்க அவ்விடத்தை விட்டு-நீ திருமலையில் வந்து முற்பாடனாய் நிற்கிறது–நான் சொன்னபடி கார்யம் செய்வதற்காக அன்றோ –
நீ நினைத்தபடி செய்யப் பார்த்தாய் ஆகில் பின்னை அவ் இருப்பிலே என்னை அழைத்துக் கொள்ளாயோ- திருமலையிலே வந்து நின்று என்னுடைய சேஷத்வத்தையும்-உன்னுடைய சேஷித்வத்தையும்-எனக்கு அறிவித்தவனே –

மங்க ஒட்டு உன் மா மாயை-வெண்ணெய் பால் உண்டு வெறும் கலத்தை உடைத்தீரே -அது போலே செய்ய வேண்டும் –

இது விடத்தக்கது இது கொள்ளத் தக்கது என்னும் வேறுபாட்டினை நாம் அறியகில்லோம்-
அறிந்த நீர் விடத் தக்கது என்பதனை எனக்கு இன்னது என்று சொல்லிக் காணீர் -நான் கழித்து தர -என்றான்-சேதனன் கர்மத்தால் ப்ரக்ருதி யாத்மா விவேகம் பண்ண மாட்டாதாப் போலே இவர் பக்கல் வியாமோஹம் அவன் பிரகிருதி யாத்மா விவேகம் பண்ண ஓட்டுகிறது இல்லை – ஒரு கர்மம் செய்தது செய்ய மாட்டாமை இல்லை அன்றோ கழி பெரும் காதல் –
அது போலும் அன்றிக்கே -இது நிலை நிற்குமது அன்றோ–சதுர் விம்சதி தத்தவாத்மிகையான பிரக்ருதியினுடைய ஹேயதையை அவனுக்கு உணர்த்தி -இத்தை விரும்பாதே போக்கி யருள வேணும் -என்கிறார் –

—————-

மான்  ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

அவன் செய்கிறோம் என்று தலை துலுக்கினால்-பின்னைப் பெற்றதாய் இருக்கத் தட்டில்லையே –தானே தானே ஆனானைத் –ஆத்மாவிலும் ஆத்மாவோடு சம்பந்தப் பட்ட பொருள்களிலும்-எனக்கு உண்டான ஆசையைத் தவிர்த்து-
தானே அபிமானத்துக்கு விஷயம் ஆனவனை-
அன்றிக்கே

மகத்து முதலானவற்றின் உருவமான இச் சரீரத்தினை-ஒழித்து அருள வேண்டும் என்று சொன்ன இப்பத்தும்
அன்றிக்கே
மான் ஆங்காரத்து இவை பத்து -என்பதற்கு-பெரிய செருக்கோடு சொன்ன இப்பத்தும் -என்னுதல் –
பராங்குச ப்ருங்க ராஜம் -வண்டுகள் தேனை குடிக்கும் -ஆழ்வார் உடைய கமலப் பாதங்களில் தேனை அருந்தும் எம்பெருமானார் –
இத் தலையில் இரக்கும் தன்மை ஒழிய தானே-இரப்பாளனுமாய்-இதனை விரும்புகின்றவனும் தானே ஆனான் -என்னுதல் –
பிராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பானும் தானே ஆனான் என்றவாறு –

திருமால் இரும் சோலை மலைக்கே–திருமலையே உத்தேச்யமாகச் சொல்லிற்று -அழகரைச் சொன்னவிடம் ஆநு ஷங்கிகம் —கற்பகத் தருவினை சொன்னதைப் போன்று-
திருமலையில் உள்ளன அடங்க உத்தேச்யமாக கடவன அன்றோ-
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10 என்றும் சொன்னார்கள் அன்றோ –திருவேங்கடமுடையானாகவும் ஆவேன் என்றவாறு –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –