ஸ்ரீ எம்பெருமானார் வைபவம்-

August 16, 2026

அநந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஶ்ச தத: பரம் பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கஶ்சித் பவிஷ்யதி”, என்கிற ப்ரஸித்தமான ஶ்லோகத்தில் ஆதி ஶேஷன் யுகம்தோறும் அவதரிக்கும் க்ரமமும் கலி யுகத்தில் வரவிருக்கும் அவதாரமும் காட்டப்பட்டுளது(கலௌ கஶ்சித் பவிஷ்யதி) என்றதுக்கு நாமே விஷயம்;-நம் பிறவி ஸர்வோத்தாரகமாகப் பிறந்த பிறவியாய் இருக்கும். ஆகையாலே எல்லாரும் நம்மைப் பற்றி நிர்ப் பரராய் இருங்கோள். ஒரு குறைகளுமில்லை” என்றருளிச் செய்தார்.-இவ்வர்த்தம் பரம ரஹஸ்யம்.–சரமோபாய நிர்ணயம்

பூர்வாபர குரூகதைஶச ஸ்வப்ந வ்ருத்தைர் யதீஶபாக் |
க்ரியதேத்ய மயா ஸம்யக் சரமோபாய நிர்ணயம் |
|-சரமோபாய நிர்ணயம்

எம்பெருமானாருக்கு முன்னும் பின்னுமிருந்த ஆசார்யர்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டும், ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயத்வம் உடையவரிடத்திலேயே பொருந்தும் என்று சரமோபாய நிர்ணயத்தில் நன்கு நிரூபிக்கப்படுகிறது.

விஷ்ணு: ஶேஷீ ததீய: ஶுப குண நிலயோ விக்ரஹ: ஶ்ரீஶடாரி:
ஶ்ரீமாந் ராமாநுஜார்ய: பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம்|
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர, தஸ்மாத்
ஶிஷ்டம் ஶ்ரீமத் குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய ஶேஷ:||
-பெரியவாச்சான் பிள்ளை யருளியதாக ஶ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்

[விஷ்ணுவானவர் அனைவர்க்கும் ஶேஷி யாயிருப்பவர்:-நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனி யாவார்.-கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரையிணையாய் விளங்குகிறார்.-அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆசார்ய ஶப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது. வேறெவரிடமும் அப்படி விளக்கவில்லை. ஆகையால், மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும் அந்த எம்பெருமானார்க்கு ஶேஷமாயிருப்பது.] (குருகுணாவளி)

யஸ் ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பர ஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரி ஸூநும் ஶரணம் ப்ரபத்யே ||-
எந்த நம்மாழ்வார் கருணை மிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை
எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது)

“ப்ரயாணகாலே சதுரஸ் ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீஷய|
பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||”-
தன் சரம காலத்தில் தன் திருவடி வாரத்திலிருந்த நாலு ஶிஷ்யர்களைப் பார்த்து நடாதூர் அம்மாள்-‘பக்தி ப்ரபத்திகள் உங்களுக்கு செயற்கரியவையாகில் எம்பெருமானாரை ஶரணமாக கொள்ளுங்கள்’ என்று உபதேஶித்தார்

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத் குரு|
ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||)-
எல்லார்க்கும் எம்பெருமானார் திருவடிகளொழிய வேறொரு தஞ்சமில்லை, த்ரி ப்ரகாரமும் ஸத்யமே சொல்லுகிறேன்,
ப்ரபன்ன குலாந்தர்ப்பூதர்க்கெல்லாம் எம்பெருமானாரே உத்தாரகர், இதில் சற்றும் ஸம்ஶயமில்லை”

“இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கியாதென்றுலர்ந்து அவமே ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே”-அமுதனார் அருளிச் செய்தார்-

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்களெல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்காயினரே

கேஶவ ஸோமயாஜியார் மற்றும் காந்திமதி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார் இவர். இவரின் மாமாவான பெரிய திருமலை நம்பி, இவருக்கு “இளையாழ்வார்” என்ற திருநாமமிட்டு, தாப ஸம்ஸ்காரம் செய்து வைத்து இவரை ஸ்ரீவைஷ்ணவத்தில் ஈடுபடுத்தினார்.

இளமையில், இவர் பேதாபேதம் (ப்ரஹ்மத்துக்கும் ஆத்மாவுக்கும் ஒரே சமயத்தில் ஒற்றுமை மற்றும் வேற்றுமை உள்ளது என்று கூறுவது) என்னும் வேற்று ஸித்தாந்தத்தில் சிறந்து விளங்கிய யாதவப்ரகாஶர் என்கிற வித்வானிடத்தில் வேதாந்தக் கல்வி பயின்றார். ஒரு கேள்வி எழலாம் – ஏன் இவர் வேற்று ஸித்தாந்த வித்வானிடத்தில் பயில வேண்டும்? பெரியோர்கள் இவ்வாறு ஸமாதானம் அளிப்பர் – ஒரு ஸித்தாந்தத்தை வாதில் வெல்வதற்கு முதலில் அதை முழுமையாகக் கற்றறிய வேண்டும். இவரும் அவ்வாறே, பூர்வபக்ஷத்தை நன்றாகக் கற்றறிந்து, பின்பு விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நாட்டினார். இந்தக் கொள்கையைப் பெரியவாச்சான் பிள்ளை தன்னுடைய ஆசார்யனான நம்பிள்ளையைப் பெரிய திருமொழி 5.8.7 பாசுர வ்யாக்யானத்தில் “அந்தணன் ஒருவன்” என்பதை விளக்குமிடத்தில் கொண்டாடும் விதத்தைக் கொண்டு அறியலாம். அவர் கூறுவது “முற்பட த்வயத்தைக் கேட்டு, இதிஹாஸ புராணங்களையும் அதிகரித்து, பரபக்ஷ ப்ரத்க்ஷேபத்துக் குடலாக ந்யாயமீமாம்ஸைகளும் அதிகரித்து, போதுபோக்கும் அருளிச்செயலிலேயாம்படி பிள்ளையைப்போலே அதிகரிப்பிக்க வல்லவனையிரே ஒருவன் என்பது” (முதலில் த்வயத்தை ஆசார்யன் மூலம் அறிந்து கொண்டு, பின்பு இதிஹாஸ புராணங்களை அறிந்து, ப்ரதிவாதிகளை வாதில் ஜயிக்க ந்யாயம் மீமாம்ஸை போன்றவற்றைக் கற்று, பின்பு ஆழ்வார்களின் அருளிச்செயலிலேயே பொழுதைப் போக்கும் நம்பிள்ளையே சிறந்த ‘ஒருவன்’ என்று கொண்டாடப்படுபவர்). இதிலிருந்து தங்களுடைய ஸித்தாந்த்தை நிலை நாட்டுவதற்கு, பூர்வபக்ஷத்தை (எதிராளிகளின் வாதத்தை) அறிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ ராமானுஜர் யாதவப்ரகாஶரிடம் கல்வி பயிலும்பொழுது, இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மேலும், ஸ்ரீ ராமானுஜரின் சிறந்த ஞானத்தாலும், பிறருக்கு விஷயங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும் திறமையாலும், அவரின் புகழ் வளரத் தொடங்கியது. இது கண்டு பொறுக்க முடியாத யாதவப்ரகாஶரின் ஶிஷ்யர்கள் அவரைக் காசி யாத்ரைக்கு அழைத்துச் சென்று அச்சமயத்தில் கொல்ல நினைத்தனர். ஆனால், (பிற்காலத்தில் எம்பார் என்று கொண்டாடப்பட இருக்கும்) கோவிந்தரின் ஸமயோஜித புத்தியால், அவர்களிடமிருந்து தப்பி, ஒரு வேடுவ தம்பதியின் உருவில் வந்த காஞ்சீபுரம் பெருந்தேவித் தாயார் பேரருளளான் எம்பெருமானின் துணையால் காட்டில் இருந்து தப்பி காஞ்சீபுரம் வந்தடைகிறார் ராமானுஜர்.அங்கு வந்த பிறகு, ராமானுஜர் தேவப் பெருமாளுக்குத் திருவாலவட்டம் (விசிறி) கைங்கர்யம் செய்யும் அந்தரங்கரான பூவிருந்தவல்லியைச் சேர்ந்த திருக்கச்சி நம்பியைச் சந்திக்கிறார். திருக்கச்சி நம்பி ஆளவந்தாரின் ப்ரிய ஶிஷ்யர்.தேவப் பெருமாள் நம்பியிடம் அவ்வப்பொழுது உரையாடும் அளவுக்கு மிகவும் அன்பு கொண்டவர். ராமானுஜர் நம்பியின் மேற்பார்வையில் தேவப் பெருமாளுக்குத் தினமும் சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வரும் கைங்கர்யம் செய்து வருகிறார். அச்சமயத்தில், ராமானுஜர் தஞ்சம்மாளை மணம்புரிந்து காஞ்சீபுரத்திலேயே வசித்து வருகிறார். அவருக்குச் சில சந்தேகங்கள் எழ, தேவப் பெருமாளிடம் அவற்றைக் கேட்டுத் தெளிவு படுத்துமாறு நம்பியிடம் (என்ன சந்தேகங்கள் என்று கூறாமல்) ப்ரார்த்திக்கிறார். நம்பியும் ராமானுஜரின் நிலையைத் தேவப் பெருமாளுக்கு உரைக்க, தேவப் பெருமாள் நம்பி மூலமாக ராமானுஜருக்கு ஆறு வார்த்தைகளை அருளுகிறார்.

1-அஹமேவ பரம் தத்துவம்”-நாராயணமே உயர்ந்த தத்துவம், நாராயணனே பரம் பொருள்.-2-தர்சநம் பேத ஏவச”-ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.-3-“உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்”-மோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம்.-4-அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”-அப்படிச் சரணடைந்தவர்கள் கடைசிக் காலத்தில் என்னை நினைக்க வேண்டாம் (நான் அவர்களை அப்பொழுது நினைப்பேன்)-5-தேஹாவஸாநே முக்தி ஸ்யாத்”-அப்படிச் சரணடைந்தவர்கள் இந்த உடம்பின் முடிவிலேயே முக்தி அடைவர்கள்-6-“பூர்ணாசார்ய ஸ்மாச்ரய”-பெரிய நம்பியை ஆசார்யனாகப் பற்று

ராமானுஜரும், உடனே பெரிய நம்பியைச் சந்திக்க ஸ்ரீரங்கத்தை நோக்கிப் பயணிக்கிறார்.

பெரிய நம்பி நாதமுனிகளின் திருப்பேரனாரான ஆளவந்தாரின் முக்கிய சீடர்களில் ஒருவர். முன்னதாக, ஸம்ப்ரதாயத்தின் தலைமை ஆசார்யான ஆளவந்தார், காஞ்சீபுரத்திற்கு வந்தபோது,  ராமானுஜர் ஒரு சிறந்த ஆசாரியராவார் என்று கடாக்ஷித்தார். ராமானுஜரும் ஆளவந்தாரின் பெருமையை அறிந்திருந்ததால் அவரின் சீடராக விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் ராமானுஜர் சென்ற முறை ஆளவந்தாரைச் சந்திக்கச் ஸ்ரீரங்கம் சென்றபோது, காவிரிக்கரையை அடையும் சமயத்திலேயே ஆளவந்தார் திருநாடு எழுந்தருளிவிட்டார். ஆளவந்தார் அச்சமயத்தில் மூன்று குறைகளோடு இருந்தார் – அவை 1) வ்யாஸ பராஸர ரிஷிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும், 2) நம்மாழ்வாருக்கு நன்றி செலுத்த வேண்டும் 3) ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு விளக்கம் எழுத வேண்டும். மடங்கிய மூன்று விரல்களுடன் கூடிய ஆளவந்தாரின் சரம திருமேனியைச் சேவித்த ராமானுஜர், தான் அந்த மூன்று குறைகளையும் போக்குவதாக சபதம் செய்ய, மூன்று விரல்களும் உடனே விரிந்தன. பின்பு ராமானுஜர் வருத்தத்துடன் காஞ்சீபுரம் திரும்பி தன் கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்து வந்தார். அதன் பின், ஸ்ரீரங்கத்து ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய நம்பியிடம் ராமானுஜரை பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து, தர்சன ப்ரவர்த்தகராக ஆக்குமாறு ப்ரார்த்தித்தனர். பெரிய நம்பியும் ராமானுஜரை தன்னுடைய சிஷ்யராக்கும் எண்ணத்துடன் காஞ்சீபுரத்தை நோக்கிப் பயணிக்கிறார்.

இருவரும், காஞ்சீபுரத்துக்கு அருகில் உள்ள மதுராந்தகம் என்னும் இடத்தில் சந்தித்தனர்.ராமானுஜர் ஏரிகாத்த பெருமாள் கோயிலுக்கு வந்தவுடன், பெரிய நம்பியை அவருடைய குடும்பத்துடன் சந்திக்கிறார். அவரை வணங்கி, தன்னை அவருடைய சீடராக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறார். பெரிய நம்பி காஞ்சீபுரத்துக்குச் சென்று அங்கே வைத்து பஞ்சஸம்ஸ்காரம் செய்யலாம் என்கிறார். ராமானுஜரோ “இவ்வுலகம் மிகவும் அநித்யம், முன்பே ஆளவந்தாரிடம் சீடராகும் வாய்ப்பை இழந்தேன், அதே போல மீண்டும் நடக்கக் கூடாது” என்கிறார். எனவே, நம்பியை அப்போதே பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளுமாறு ப்ரார்த்திக்க நம்பியும் அவ்வாறே செய்தார். இவ்வாறு, ராமானுஜர் ஶாஸ்த்ரத்தில் கூறியபடி ஒரு ஆசார்யனிடத்தில் க்ரமமாக சரணடைய வேண்டியதின் முக்கியத்துவத்தைத் தானே அனுஷ்டித்துக் காட்டினார். பின்பு, அங்கிருந்து அனைவரும் காஞ்சீபுரம் சென்றடைய, பெரிய நம்பி தன்னுடைய குடும்பத்துடன் சில காலம் அங்கு தங்குவதாகத் தீர்மானிக்கிறார்.-காஞ்சீபுரத்தில் பெரிய நம்பி திருக்கச்சி நம்பியால் வரவேற்கப்பெற்று தேவப் பெருமாளுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு, ராமானுஜர் பெரிய நம்பிக்குத் தன் திருமாளிகையின் ஒரு பகுதியைத் தங்குவதற்குக் கொடுத்தார். நம்பியும் தன் குடும்பத்துடன் அங்கே ஆறு மாதங்கள் தங்கி இருந்து ராமானுஜருக்கு திவ்ய ப்ரபந்தம் ரஹஸ்யார்த்தங்கள் முதலியவற்றைக் கற்றுக் கொடுத்தார்.

ஒரு முறை, ராமானுஜரின் திருமாளிகைக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் பசியுடன் வர, ராமானுஜர் தன் மனைவியிடம் அவருக்கு உணவு அளிக்கும்படிக் கூற, அவரின் மனைவியோ உணவு இல்லை என்று மறுக்கிறார். அந்த ஸ்ரீவைஷ்ணவர் வருத்தத்துடன் செல்ல, ராமானுஜர் மடப்பள்ளி உள்ளே சென்று ப்ரஸாதம் இருப்பதைக் காண்கின்றார். மிகவும் கோபம் கொண்ட அவர், அக்கோபத்தை தன் மனைவியிடம் வெளிப்படுத்தினார். முன்பு கூட, ராமானுஜரின் மனைவியான தஞ்சம்மாள் திருக்கச்சி நம்பியிடம் முறை தவறி நடந்தார். ஒரு முறை திருக்கச்சி நம்பியை தன் திருமாளிகைக்கு அழைத்து, உணவிட்டு அவ்வுணவின் மிச்சத்தை தான் உண்ணவேண்டும் என்று விரும்பினார் ராமானுஜர். ஆனால் அவர் மனைவியோ, நம்பியின் பெருமை மற்றும் ராமானுஜரின் ஆசையையும் புரிந்து கொள்ளாமல் நம்பி வந்தவுடன் அவருக்கு உணவிட்டு அந்த இடத்தையும் சுத்தம் செய்து விடுகிறார். இறுதியான ஒரு நிகழ்வு – ஒரு முறை ராமனுஜரின் மனைவிக்கும் பெரிய நம்பியின் மனைவிக்கும் கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் ஒரு பிணக்கு ஏற்பட்டது. மிகவும் வருத்தமுற்ற பெரிய நம்பி, ராமானுஜரிடம் சொல்லிக்கொள்ளாமல் தன் குடும்பத்துடன் ஸ்ரீரங்கத்துக்குச் சென்று விட்டார். இதை அறிந்த ராமானுஜர் மிகவும் உடைந்து போனார்.

அவர் பகவத் விஷயத்திலேயே தன் பொழுதை முழுமையாகப் போக்க நினைத்து, முற்றும் துறந்த நிலையான ஸந்யாஸ ஆஶ்ரம ஸ்வீகாரம் செய்வதாக முடிவெடுத்தார். அவர் உடனே காஞ்சீபுரம் தேவப் பெருமாள் ஸன்னிதியில் உள்ள அனந்த ஸரஸ்ஸில் சென்று தீர்த்தமாடி தேவப் பெருமாள் முன்பு சென்று அவரையே ஆசார்யனாகக் கொண்டு தனக்கு ஸந்யாஸிகளுக்கு ஏற்றதான த்ரிதண்ட காஷாயங்களை அளிக்குமாறு ப்ரார்த்தித்தார். தேவப் பெருமாளும் ராமானுஜரின் திருவுள்ளத்தை ஆமோதித்து அவருக்கு ஸந்யாஸ ஆஶ்ரம ஸ்வீகாரத்தைச் செய்து வைத்து, “ராமானுஜ முனி” என்ற பெயரையும் அளித்து அவருக்கு ஒரு மடத்தையும் அளித்தார். இதைக் கேள்வியுற்ற முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வான் உடனே காஞ்சீபுரம் வந்தடைந்து அவரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றுக் கொண்டு அவருக்கு இடை விடாது கைங்கர்யம் செய்யத் தொடங்கினர். யாதவப்ரகாஶரும் அவரின் தாயாரின் அறிவுரையை ஏற்று ராமானுஜரின் ஶிஷ்யரானார். இவ்வாறு ராமானுஜர் ராமானுஜ முனியாகி ஸந்யாஸ ஆஶ்ரமத்தை சிறந்த முறையில் நடத்திப் போனார்.ராமானுஜர் யதிராஜர் என்று ப்ரசித்தமாக அழைக்கப்பட்டார்; மிகுந்த பெருந்தன்மையுடன் யாதவப்ரகாஶரைத் தன் சீடராக ஏற்றுக் கொண்டு, அவரை ஸந்யாஸ ஆஶ்ரமத்தில் ஈடுபடுத்தி, கோவிந்த ஜீயர் என்று அவருக்குப் பெயரிடுகிறார்.  மேலும், அவரைக் கொண்டே ஸ்ரீவைஷ்ணவ ஸந்யாஸிகளின் நடத்தையை விளக்கும் “யதி தர்ம ஸமுச்சயம்” என்ற ப்ராமாணிகமான மற்றும் விரிவான க்ரந்தத்தை எழுதச் செய்கிறார். இந்நிகழ்ச்சி மூலம் ராமானுஜர் தன்னை முன்பு கொல்லவே முயன்ற யாதவப்ரகாஶரைத் தான் ஏற்றுக்கொண்டதோடு அவரைச் சிறந்த கைங்கர்யத்திலும் ஈடுபடுத்தினார்.-காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு, கூரத்தாழ்வானுக்கும் முதலியாண்டானுக்கும் ஶாஸ்த்ர உபதேஶம் செய்துகொண்டிருந்தார்.

ஸ்ரீரங்கநாதர் ஸம்ப்ரதாயத்தைச் சிறந்த முறையில் வளர்க்கும் பொருட்டு ராமானுஜரை ஸ்ரீரங்கம் அழைத்து வர விரும்பி  தேவப்பெருமாளுக்கு ஸ்ரீமுகம் அனுப்புகிறார். தேவப்பெருமாளோ அதற்கு செவி சாய்க்க மறுக்கிறார். ஸ்ரீரங்கநாதர் ஸமயோஜிதமாக திருவரங்கப் பெருமாள் அரையரைக் காஞ்சிபுரத்துக்கு அனுப்பி, அவரின் திவ்ய கானத்தைக் கொண்டு தேவப்பெருமாளைக் கவர்ந்து ராமானுஜரைப் பரிசாகப் பெற்று வருமாறு நியமிக்கிறார். அரையர் காஞ்சிபுரம் அடைந்து, திருக்கச்சி நம்பி புருஷகாரத்துடன் தேவப்பெருமாளை அணுகி, அவரின் திருமுன்பே பண்ணிசைத்துப் பாட, எம்பெருமான் அந்த கானத்தில் மிகவும் மயங்கி “நீர் விரும்பியதைக் கேட்டு பெற்றுப் போம்” என்கிறார். உடனே, அரையர் எம்பெருமானிடம் ராமானுஜரைத் தன்னுடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்புமாறு ப்ரார்த்திக்கிறார். அது கேட்டு ராமானுஜரின் பிரிவை உணர்ந்த தேவப்பெருமாள் மிகவும் வருந்தினார் – ஆயினும் தான் கொடுத்த வார்த்தைக்காக ராமானுஜரை அரையருடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பினார்.

ஸ்ரீரங்கம் அடைந்தவுடன், அரையரும் யதிராஜரும் சிறப்பாக வரவேற்கப்பட்டனர். இருவரும் பெரிய பெருமாள் ஸந்நிதிக்குச் செல்ல, பெரிய பெருமாளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றார். அவர், ராமானுஜருக்கு “உடையவர்” (பெருமானின் நித்ய விபூதி மற்றும் லீலா விபூதிக்கு ஸ்வாமி) என்கிற பட்டத்தை அளித்து, அவர் தங்குவதற்கு ஒரு மடத்தையும் அளித்து, அவருக்குக் கோயில் நிர்வாகத்தைச் சீர் செய்யும்படி ஆணையும் பிறப்பித்தார். மேலும், அவர், ராமானுஜருடன் தொடர்புள்ள அனைவருக்கும் மோக்ஷம் உறுதி என்று அறுதியிட்டார். உடையவரும், பெரிய நம்பியிடம் தன்னுடைய உபகார ஸ்ம்ருதியை வெளியிட்டார். பெரிய நம்பியும் ஸம்ப்ரதாயத்திற்கு நன்மை விளைவதைக் கண்டு பேரின்பம் அடைந்தார். உடையவரும் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்து கோயில் செயல்பாடுகளைச் சிறந்த முறையில் நேர்படுத்தத் தொடங்கினார்.

ஸ்ரீ ராமானுஜர் இவ்வாறு ஸ்ரீரங்கத்தில் இருந்தவாறு கோயில் காரியங்களைச் சீர் செய்து வந்தார். ஶிவ பக்தராய் மாறி காளஹஸ்தியில் இருந்த தன்னுடைய சிறிய தாயார் குமாரரான கோவிந்தரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் கொண்டு, திருமலை நம்பியிடம் அவருக்கு நல்லுபதேஶம் செய்து நம் ஸம்ப்ரதாயத்திற்கு ஆக்கும்படி ப்ரார்த்தித்தார் [இந்த கோவிந்தரே யாதவ ப்ரகாஶருடன் யாத்ரை சென்றபோது ராமானுஜரின் உயிரைக் காத்தவர்). பெரிய திருமலை நம்பி காளஹஸ்தி சென்று சிறந்த ஶிவ பக்தராக மாறி சேவை செய்து வந்த கோவிந்தரை வழி மறித்தார். அவர் ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம் மற்றும் ஆழ்வார் பாசுரங்களைக் கொண்டு ஸ்ரீமந்நாராயணின் பரத்வத்தை கோவிந்தருக்கு விளக்கினார். சில முறை அந்த உபதேஶங்களைக் கேட்டு, கோவிந்தரின் மனம் தெளிவு பெற்று, ருத்ரனிடத்தில் இருந்த பிடிப்பு நீங்கி, பெரிய திருமலை நம்பியின் திருவடியில் வந்து ஆதரத்துடன் விழுந்தார். நம்பியும், கோவிந்தரைப் பேரன்புடன் ஏற்றுக் கொண்டு, அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரமும் செய்து தன்னுடன் அழைத்து வந்தார்.  கோவிந்தரும் நம்பியுடன் திருமலையில் தங்கி இருந்து, அறிய வேண்டிய அர்த்தங்களைக் கற்றுத் தேர்ந்து, நம்பிக்குத் தொண்டு புரிந்து வந்தார். இறுதியில், எம்பெருமானாருடன் நிரந்தரமாக வாழ ஸ்ரீரங்கத்துக்கே வந்து சேர்கிறார் 

ராமானுஜர் பின்பு பெரிய நம்பி திருமாளிகைக்குச் சென்று அவரிடம் ஸாரார்த்தங்களைக் கற்றுத் தருமாறு ப்ரார்த்திக்கிறார். நம்பியும் ஆனந்தத்துடன், மிகச் சிறந்ததான த்வய மஹா மந்த்ரத்தின் திவ்யமான அர்த்தங்களை ராமானுஜருக்கு விளக்குகிறார்.  மேலும் அவர் ராமானுஜரிடம் “இதில் அறிய வேண்டுவது மேலும் உள்ளது; ஆளவந்தாரின் ப்ரிய ஶிஷ்யரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சென்று அவற்றைக் கற்று வரவும்” என்று ஆணை இடுகிறார்.

ராமானுஜர் உடனே திருக்கோஷ்டியூர் திவ்ய தேசத்துக்குப் புறப்பட்டார். ஊர் எல்லையை அடைந்ததும், அங்கிருக்கும் சிலரிடம் திருக்கோஷ்டியூர் நம்பியின் திருமாளிகை எங்கு உள்ளது என்று வினவினார். அங்கிருந்தவர்கள் நம்பியின் திருமாளிகை இருக்கும் திசையைக் காட்ட, தண்டனிட்டுக்கொண்டே அவர் திருமாளிகையைச் சென்று அடைந்தார். இதைக் கண்ட ஊர் மக்களும் நம்பியின் பெருமைகளை அறிந்து ஆச்சர்யம் அடைந்தனர். ராமானுஜரும் நம்பியைக் கண்டவுடன் அவர் திருவடியில் விழுந்து ரஹஸ்யார்த்தங்களைக் கற்றுத் தருமாறு ப்ரார்த்திக்கிறார். ஆனால் நம்பியோ அவருக்குக் கற்றுக் கொடுப்பதில் சிறிதும் ஈடுபாடு காட்டாமல் இருக்க, ராமானுஜர் வருத்தத்துடன் ஸ்ரீரங்கம் திரும்புகிறார்.

ராமானுஜர் ஸ்ரீரங்கம் திரும்பியும், திருக்கோஷ்டியூர் நம்பியிடத்தில் ரஹஸ்யார்த்தங்கள் கேட்க மிகவும் பாரிப்புடன் இருக்கிறார். நம்பி ஒருமுறை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளி இருந்து, பின் திருக்கோஷ்டியூர் திரும்பும் பொழுது, நம்பெருமாள் ராமானுஜருக்கு ரஹஸ்யார்த்தங்கள் கற்றுக் கொடுக்குமாறு நம்பிக்கு ஆணையிடுகிறார். நம்பி நம்பெருமாளிடம் ஶாஸ்த்ரத்தில் முயன்று சேவை செய்யாதவர்களுக்கு இவ்வர்த்தங்களை உபதேஶிக்கக் கூடாது என்று உள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். நம்பெருமாளோ ராமானுஜரிடம் ஶிஷ்ய லக்ஷணப் பூர்த்தி உள்ளதால் அவருக்குக் கற்றுக் கொடுப்பது பொருந்தும் என்று ஸமாதானம் சொல்கிறார். நம்பியும் அதற்கு இசைந்து ராமானுஜரைத் திருக்கோஷ்டியூருக்கு வந்து விஷயங்களைக் கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். ராமானுஜரும் திருக்கோஷ்டியூருக்குச் செல்ல, நம்பியோ மற்றொரு ஸமயம் வந்து கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். இவ்வாறு பதினெட்டு முறை நடக்கிறது. ராமானுஜர், இந்த நிலை பொறுக்காமல், நம்பியின் ஶிஷ்யர் ஒருவர் மூலமாக தன்னுடைய ஆர்த்தியை நம்பிக்கு வெளியிடுகிறார். இறுதியாக நம்பியின் இசைவினோடு, ராமானுஜர் கீதா சரம ஶ்லோகத்தின் அர்த்தத்தைக் கேட்டு அறிகிறார். நம்பி ராமானுஜரிடம் இவ்வர்த்தங்களை தகுதியற்றவருக்கு வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். ஆனால் ராமானுஜரோ ஆசையுடையோர்க்கெல்லாம் அவ்வர்த்தங்களை அறிவிக்கிறார்.  அதைக் கேட்ட நம்பி கோபமடைந்து ராமானுஜரை வருமாறு ஆணை இடுகிறார். ராமானுஜர் நம்பியிடம் இவ்வர்த்தங்களை அறிந்தவர்கள் உண்மை ஞானம் பெற்று உஜ்ஜீவனம் அடைவர்கள் என்பதை விளக்குகிறார்.  ராமானுஜரின் பரந்த உள்ளத்தை உணர்ந்த நம்பி, அவரை “எம்பெருமானார்” (எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனிலும் மேம்பட்டவர்) என்று கொண்டாடுகிறார். பின்பு, நம் ஸம்ப்ரதாயமும் “எம்பெருமானார் தரிஶனம்” என்றே பேர் பெற்று விளங்கியது. பின்பு, எம்பெருமானார் இந்த ரஹஸ்ய அர்த்தங்களை கூரத்தாழ்வானுக்கும் முதலியாண்டானுக்கும் அவர்கள் ப்ராத்தனைக்கு இணங்க விளக்குகிறார்.

1-முமுஷுவுக்கு சம்சார பீஜம் நசிக்க வேணும்
அது நசித்தால் ஒழிய அகங்கார மமகார நிபிருத்தி ஆக மாட்டாதே -அஹங்காரம் -கர்வம் -மமகாரம் -மாத்சர்யம் –
2- அஹங்கார மமகாரம் நிவ்ருத்தியானால் ஒழிய தேஹாத்ம அபிமானம் போகாது
3- தேஹாத்ம அபிமானம் போனால் ஒழிய ஆத்ம ஞானம் பிறவாது
4-ஆத்ம ஞானம் பிறந்தால் ஒழிய ஐஸ்வர்ய போகாதிகளில் உபேக்ஷை பிறவாது –
5-ஐஸ்வர்ய போகாதிகளில் உபேக்ஷை பிறந்தால் ஒழிய பகவத் ப்ரேமம் பிறவாது
6-பகவத் ப்ரேமம் பிறந்தால் ஒழிய விஷயாந்தர ருசி விடாது
7-விஷயாந்தர ருசி விட்டால் ஒழிய பாரதந்தர்யம் பிறவாது
8-பாரதந்தர்யம் பிறந்தால் ஒழிய அர்த்த காம ராக த்வேஷாதிகள் ஒழியாது
9-ராக த்வேஷாதிகள் ஒழிந்தால் ஒழிய ஸ்ரீ வைஷணத்வம் உண்டாகாது
10-ஸ்ரீ வைஷ்ணவத்வம் கை கூடினால் ஒழிய ஸாத்விக பரிக்ரகம் ஏற்படாது
11-சாத்விக பரிக்ரஹம் பிறந்தால் ஒழிய பாகவத பரிக்ரஹம் பிறக்க மாட்டாது
12-பாகவத பரிக்ரஹம் பிறந்தால் ஒழிய பகவத் பரிக்ரஹம் பிறக்க மாட்டாது
13-பகவத் பரிக்ரஹம் பிறந்தால் ஒழிய அநந்ய ப்ரயோஜனன் ஆக மாட்டான்
14- அநந்ய ப்ரயோஜனன் ஆகாதே அநந்யார்ஹ சேஷ பூதன் ஆகான்
15-அநந்யார்ஹ சேஷ பூதன் ஆகாதே அநந்ய சரண்யன் ஆக மாட்டான்
16-அநந்ய சரண்யன் ஆகாதே அதிகாரி புருஷன் ஆக மாட்டான்
17-அநந்ய சரண்யன் ஆணவனுக்கே திரு மந்த்ரம் கை கூடும்
18-இப்படி 18 படிகள் தாண்டிய பின்பே எம்பெருமானாருக்கு திருக்கோட்டியூர் நம்பி அருளிச் செய்தார்

பின்பு, திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருக்குத் திருவாய்மொழியின் அர்த்தங்களைக் கற்றுக் கொடுக்குமாறு திருமாலை ஆண்டானிடம் பணித்தார். எம்பெருமானாரும் அறிந்துகொள்ள வேண்டிய அர்த்தங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். சில சமயங்களில் ஆண்டானுக்கும் எம்பெருமானாருக்கும் சில பாசுர அர்த்தங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. திருவாய்மொழி 2.3.3. “அறியாக் காலத்துள்ளே” பாசுர விளக்கத்தின் போது, எம்பெருமானார் மாற்றுக் கருத்தைச் சொல்ல, ஆண்டான் கோபித்துக் கொண்டு காலக்ஷேபத்தை நிறுத்தி விடுகிறார். திருக்கோஷ்டியூர் நம்பி இது பற்றிக் கேள்விப்பட்டு உடனே திருவரங்கத்துக்குச் செல்கிறார். அவர் ஆண்டானிடம் எம்பெருமானாரின் பெருமைகளை எடுத்துரைத்து எந்த நிலைமையிலும் காலக்ஷேபத்தை நிறுத்தாமல் நடத்துமாறு கூறுகிறார். ஆண்டானும் அதற்கு இசைந்து காலக்ஷேபத்தைத் தொடருகிறார். ஆனால், மீண்டும் ஒரு முறை கருத்து வேறுபாடு வர, எம்பெருமானார் “ஆளவந்தார் இவ்வாறு இதை விளக்க மாட்டார்” என்று கூற, ஆண்டானும் “நீரோ ஆளவந்தாரைச் சந்தித்ததே இல்லை. இவ்வாறு இருக்க இது எப்படி உமக்குத் தெரியும்” என்று வினவ, எம்பெருமானார் “அடியேன் ஆளவந்தாருக்கு ஏகலவ்யனைப் போலே” என்றார். அது கேட்ட ஆண்டான் எம்பெருமானாரைப் பற்றி திருக்கோஷ்டியூர் நம்பி விளக்கியது பொருத்தமாக இருக்கவே, எம்பெருமானார் ஒரு அவதார விஶேஷம் என்று உணர்ந்து, ஆளவந்தாரிடம் கேட்காமல் விட்டுப் போன அர்த்தங்களை எம்பெருமானாரிடம் இருந்து கேட்டு அறியலாம் என்ற எண்ணத்துடன், அவரை மிகவும் ஆதரித்துப் போந்தார்.

இவ்வாறு திருவாய்மொழி காலக்ஷேபம் முடிந்தபின், எம்பெருமானார் பெரிய நம்பியிடம் செல்ல, நம்பியும், எம்பெருமானாரைத் திருவரங்கப் பெருமாள் அரையரிடம் சென்று சில ரஹஸ்யார்த்தங்களைக் கேட்டு அறியுமாறு பணிக்கிறார். எம்பெருமானாரும் அரையரிடம் சென்று, 6 மாதங்கள் அவருக்குப் பாலமுது செய்தல் மற்றும் மஞ்சள் காப்பு செய்து தருதல் ஆகிய கைங்கர்யங்களைப் பணிவுடன் செய்கிறார். ஒரு முறை எம்பெருமானாரால் ஸமர்ப்பிக்கப்பட்ட மஞ்சள் காப்பு தரமாக இல்லாததால் அரையர் தன் திருமுகத்தைத் திருப்பி வைத்துக் கொள்கிறார். உடனே எம்பெருமானார் மீண்டும் ஒரு முறை மஞ்சள் காப்பு புதிதாகத் தயார் செய்து அரையரின் ஆனந்தத்திற்காக ஸமர்ப்பிக்கிறார். மிகவும் ஆனந்தித்த அரையர், ரஹஸ்யார்த்தமான “சரமோபாயம்” (இறுதியான வழி) – ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை உபதேஶிக்கிறார்.

எதற்காக எம்பெருமானார் பல ஆசார்யர்களிடம் பயில வேண்டும் என்று ஒருவர் நினைக்கலாம். ஒரு ராஜா தன்னுடைய பல மந்திரிகளைக் கொண்டு ஒரு இளவரசனைத் தயார் செய்வது போல், ஆளவந்தார் மிகச் சிறந்த ஞானச் செல்வத்தை தன்னுடைய ஶிஷ்யர்களிடம் அளித்து அவற்றைத் தக்க சமயத்தில் எம்பெருமானாருக்கு கற்றுக் கொடுக்குமாறு ஆணையிட்டார். ஆளவந்தார் ராமானுஜரிடம் கொண்டிருந்த அன்பைக் கண்ட ஆளவந்தாரின் ஶிஷ்யர்களும், ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் கொண்டிருந்தனர். இதனாலேயே எம்பெருமானாருக்கு முன்பிருந்த ஆசார்யர்கள் அவர் திருமுடி சம்பந்தத்தாலும் பின்புள்ளவர்கள் அவர் திருவடி சம்பந்தத்தாலும் மிக்க பெருமையை அடைந்தார்கள். எப்படி ஒரு ஹாரத்தின் நடு நாயகமான மாணிக்கக் கல் அந்த ஹாரத்தின் இரண்டு பக்கத்துக்கும் அழகு சேர்க்குமோ, அப்படியே எம்பெருமானாரும் தனக்கு முன்பிருந்த ஆசார்யர்களுக்கும் பின்பிருந்த ஆசார்யர்களுக்கும் பெருமை சேர்க்கிறார்.

பின்பு, ஸ்ரீரங்கத்தில் ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் மற்றும் ஸ்ரீ ரங்கநாதன் திருமுன்பே கத்ய த்ரயத்தை அருளிச்செய்தார். அதன் பிறகு எம்பெருமானை க்ருஹங்களில் திருவாராதனம் செய்யும் முறையை விளக்கும் நித்ய க்ரந்தத்தையும் அருளிச்செய்தார்.

இச்சமயத்தில், எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் ஏழகம் (ஏழு வீடுகளில்) மாதுகரம் (பிக்ஷை) கொண்டு அமுது செய்து வந்தார். அவர் ஸ்ரீரங்கத்தில் செய்யும் சீர்திருத்தங்களை விரும்பாத சிலர், ஒரு பெண்ணின் மூலம் விஷமிட்ட அன்னத்தைக் கொடுக்குமாறு செய்தனர். அவளுக்கு இதில் உடன்பாடு இல்லாவிடினும், வேறு வழியின்றி, மிகுந்த மன வருத்தத்துடன் எம்பெருமானாருக்கு பிக்ஷை இட்டாள். ஏதோ தவறு நடப்பதை உணர்ந்த எம்பெருமானார், அந்த அன்னத்தைக் காவிரியில் கரைத்து உபவாஸம் இருக்க ஆரம்பித்தார். விஷயம் அறிந்த திருக்கோஷ்டியூர் நம்பி உடன் ஸ்ரீரங்கத்துக்கு விரைந்தார். கடும் வெயிலில் எம்பெருமானார் அவரை வரவேற்கக் காவிரிக் கரைக்கு எழுந்தருளினார். எம்பெருமானார் நம்பியைக் கண்டவுடன், வெயிலையும் பொருட்படுத்தாமல் கீழே விழுந்து தண்டன் ஸமர்ப்பித்து நம்பி எழுந்திருக்கச் சொல்லும் வரை அப்படியே இருந்தார். நம்பி சிறிது நேரம் தாமதிக்க, எம்பெருமானாரின் சிஷ்யரான கிடாம்பி ஆச்சான் எம்பெருமானாரை உடனே எடுத்து நிறுத்தி, நம்பியிடம் “இப்படிப்பட்ட ஆசார்யனை இந்த வெப்பத்தில் எப்படித் தவிக்கவிட விடுகிறீர்” என்று கடிந்து கொண்டார். நம்பியும் ஆச்சானிடம் “எம்பெருமானாரிடம் பரிவுள்ள ஒருவரைக் கண்டு கொண்டேன். என்னையும் மீறி அவரை எடுத்து நிறுத்தினீரே. இனி, நீரே அவருக்குத் தினமும் ப்ரஸாதம் செய்து கொடுக்கவும்” என்று கூறினார். இவ்வாறு, அனைவரும் எம்பெருமானாரிடம் தங்கள் அன்பையும் பரிவையும் காட்டினர்.

யஞ்ய மூர்த்தி என்னும் வித்வான், காசிக்குச் சென்று பல வித்வான்களை வாதத்தில் வென்று, ஸந்யாஸியாகி, பல விருதுகளுடனும் ஶிஷ்யர்களுடனும் இருந்தபோது ராமானுஜரின் பெருமை அறிந்து, ஸ்ரீரங்கத்துக்கு வந்து ராமானுஜரை வாதப் போருக்கு அழைத்தார். ராமானுஜரும் அதை ஏற்றுக் கொண்டார். யஞ்ய மூர்த்தி தான் தோற்றால் ராமானுஜரின் பாதுகைகளைத் தலை மேல் தாங்கி, அவருடைய திருநாமத்தைத் தான் சூட்டிக்கொண்டு அவருடைய ஸித்தாந்தத்தை ஏற்பதாகக் கூறினார். உடையவரோ தான் தோற்றால் க்ரந்த ஸந்யாஸம் (க்ரந்தங்கள் எழுதுவது, விளக்குவது முதலியவை செய்யாமல் இருத்தல்) ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். பதினேழு நாட்களுக்கு இருவரும் மிகவும் தீவிரமாக வாதம் செய்தனர். பதினேழாவது நாளன்று யஞ்ய மூர்த்தியின் வாதம் ஓங்கி இருக்க, அவர் மிகுந்த மிடுக்குடன் சபையை விட்டுச் சென்றார். ராமானுஜர் மிகுந்த வருத்தத்துடன் தன்னுடைய திருவாராதனப் பெருமாளான பேரருளாளனிடம் “மஹநீயர்களான ஆழ்வார் தொடக்கமாக ஆளவந்தார் வரை வளர்த்த இந்தத் தலை சிறந்த ஸம்ப்ரதாயம் இன்று என்னால் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது; ஒரு மாயாவாதி இன்று இதை அழிக்கப் பார்க்கிறான்; இதுவே உன் திருவுள்ளமாகில், அப்படியே ஆகுக” என்று கூறி ப்ரஸாதம் எடுத்துக் கொள்ளாமல் உறங்கச் சென்றார். இரவில், பெருமாள் அவரின் கனவில் தோன்றி ஆளவந்தாரின் ஸ்ரீஸூக்திகளைக் கொண்டு யஞ்ய மூர்த்தியை ஜெயிக்குமாறு உணர்த்தினார். விழித்தெழுந்த ராமானுஜர் வருத்தம் தீர்ந்து, தன்னுடைய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, மடம் திருவாராதனப் பெருமாளிடம் விடை கொண்டார். ராமானுஜரின் கம்பீரமான வரவைக்கண்ட யஞ்ய மூர்த்தி, வித்வானாகையாலே, ஒரு தெய்வீகச் செயல் நடந்திருப்பதை உணர்ந்து, அவரின் திருவடிகளிலே விழுந்து “நான் வாதில் தோற்றேன்” என்றார். ஆச்சர்யமடைந்த ராமானுஜர் “மேலே வாதம் செய்ய வேண்டாமோ” என்று வினவ, யஞ்ய மூர்த்தி “தேவரீரிடம் பெரிய பெருமாளே பேசின பின்பு, தேவரீர் பெரிய பெருமாளிடம் இருந்து வேறு பட்டவர் அல்ல என்பதை நான் புரிந்து கொண்டேன். இனி நான் வாய் திறப்பதற்குப் ப்ராப்தி இல்லை. ராமானுஜரோ ப்ரஹ்மத்தின் குணங்களை விளக்கிக் கூறி மாயாவாத ஸித்தாந்தக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்தார். யஞ்ய மூர்த்தி உண்மையை உணர்ந்தவராய் தன்னுடைய (மாயாவாத ஸந்யாஸிகள் வைத்துக் கொள்ளும்) ஏகதண்டத்தை உடைத்தெறிந்து, ராமானுஜரைத் தனக்கு ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய த்ரிதண்ட ஸந்யாஸம் தருமாறு வேண்டுகிறார். பேரருளாளப் பெருமாளின் நினைவாகவும், யஞ்ய மூர்த்தியின் ஶபதமான “தோற்றால் ராமானுஜரின் திருநாமத்தை வைத்துக் கொள்வேன்” என்றதையும் நினைவில் கொண்டு ராமானுஜர் அவருக்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்ற திருநாமத்தைச் சூட்டினார். ராமானுஜரே அவருக்கு அருளிச்செயலையும் அதன் ஆழ்ந்த அர்த்தங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் மிகுந்த ஈடுபாட்டுடன் எம்பெருமானாரை விட்டுப் பிரியாமல் இருந்தார்.

உடையவர் ஆழ்வான் ஆண்டான் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் மற்றும் பலருக்கு ஸ்ரீரங்கத்தில் தொடர்ந்து உபதேஶங்களைச் செய்து வந்தார். பல வித்வான்களும் அவர் பெருமையைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஸ்ரீரங்கம் வந்தடைந்து அவரை ஆஶ்ரயித்தனர். அநந்தாழ்வான், எச்சான், தொண்டனூர் நம்பி மற்றும் மருதூர் நம்பி ஆகியோர் உடையவரை ஆஶ்ரயிக்க வர, அவர் அவர்களை அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடம் ஆஶ்ரயிக்கும்படி ஆணையிடுகிறார். அவர்களும் அவ்வாறே செய்ய, அருளாளாப் பெருமாள் எம்பெருமானார் அவர்களை “எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்” என்றிருக்குமாறு கூறுகிறார்.

பின்பு ஒரு ஸமயம், உடையவர் திருவாய்மொழி காலக்ஷேபம் செய்து வந்தார். திருவேங்கடமுடையான் விஷயமான “ஒழிவில் காலம்” பதிகத்தை விளாக்கும்போது “இங்கு எவரேனும் திருமலைக்குச் சென்று ஒரு நந்தவனம் அமைத்து, திருவேங்கடமுடையானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்ய முடியுமா” என்று கேட்க, அநந்தாழ்வான் உடனே எழுந்து தான் அதைச் செய்வதாகக் கூறினார். எம்பெருமானாரும் அவருக்கு க்ருபை பண்ண, அவர் திருமலைக்குச் சென்று, ஒரு நந்தவனத்தையும், குளத்தையும் செய்து, அந்த நந்தவனத்துக்கு “இராமானுசன்” என்று பெயரிட்டு, திருவேங்கடமுடையானுக்குக் கைங்கர்யம் செய்யத் தொடங்கினார்.-உடையவரும் ஒரு திவ்யதேச யாத்ரை செய்யத் திருவுள்ளமாகி, நம்பெருமாளிடம் அதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்தவுடன், திருக்கோவலூர் மற்றும் காஞ்சீபுரம் திவ்ய தேச எம்பெருமான்களுக்கு மங்களாஶாஸனம் செய்து பின்பு திருமலையை நோக்கிச் சென்றார்.உடையவர் திருமலை திருப்பதி நோக்கித் தன் ஶிஷ்யர்களுடன் செல்லத் தொடங்கினார். ஒரு சமயத்தில் வழி தெரியாமல் திகைத்து அங்கே இருந்த ஒரு விவசாயியிடம் வழி கேட்டார். அவனும் தெளிவாக வழி காட்ட, உடையவர் உணர்ச்சிப் பெருக்கினால் அவனைப் பரமபதத்திற்கு வழிகாட்டும் அமாநவனாக எண்ணி நன்றியுடன் தண்டனிட்டார். சில நாட்களில் திருப்பதியை அடைந்து திருமலை அடிவாரத்தில் ஆழ்வார்களைத் தொழுதார். அவர் அங்கேயே சில காலம் எழுந்தருளியிருந்து, அந்த நாட்டு ராஜாவை ஶிஷ்யனாக ஏற்றுக் கொண்டு, தன்னுடைய ஶிஷ்யர்களையும் அங்கே குடியேற்றினார். இந்த விஷயங்களைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மற்றும் பலரும் வந்து அவரை வரவேற்று, அவரைத் திருமலை ஏறி திருவேங்கடமுடையானுக்கு மங்களாஶாஸனம் செய்யுமாறு வேண்டினர். அவரோ ஆழ்வார்கள் திருமலையைப் புனிதமாகக் கருதியதால் அதில் ஏறியதில்லை, ஆதலால் தானும் ஏற மாட்டேன் என்று முதலில் மறுத்தாலும், ஶிஷ்யர்களின் ப்ரார்த்தனையால், திருமலை அடிவாரம் சென்று, தீர்த்தமாடி, மிகவும் பக்தியுடன், எம்பெருமானின் ஸிம்மாஸனத்தில் ஏறுவது போலத் திருமலையில் ஏறினார்.

உடையவர் திருமலை சென்று அடைந்தவுடன், திருமலை நம்பி, திருவேங்கடமுடையான் ப்ரசாதங்களோடு வந்து வரவேற்றார். தன்னுடைய ஆசார்யர்களில் ஒருவரான திருமலை நம்பியே எதிர் கொண்டு அழைத்ததைக் கண்ட உடையவர் அவரிடம் “யாரேனும் சிறியவரை விட்டு அடியேனை வரவேற்றிருக்கலாமே” என்று கூற, நம்பியோ, “நான்கு வீதியிலும் சுற்றிப் பார்த்தும், என்னை விடத் தாழ்ந்தவர் தென்படவில்லை” என்று விடை அளித்தார். இதைக் கேட்ட உடையவரும் அவர் ஶிஷ்யர்களும் மிகவும் ஆச்சர்யம் அடைந்தனர். பின்பு, ஜீயர்கள், ஏகாங்கிகள் கோயில் கைங்கர்யபரர்கள் என்று அனைவரும் வந்து உடையவரை வரவேற்றனர். பின்பு, உடையவர் கோயிலைப் ப்ரதக்ஷிணமாக வந்து ஸ்வாமி புஷ்கரணியில் தீர்த்தமாடி த்வாதஶ ஊர்த்வ புண்ட்ரங்கள் அணிந்து கொண்டு வராஹப் பெருமாளை வணங்கி  ப்ரதான ஸந்நிதியை அடைந்து ஸேனை முதலியாரை வணங்கி திருவேங்கடமுடையானுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு இது நித்யஸூரிகள் வாழும் இடம் ஆதலால் இரவில் தங்கக் கூடாது என்று கூறி, திருமலை அடிவாரத்துக்குத் திரும்பத் திருவுள்ளம் கொண்டார். ஆனால் நம்பியும் மற்றவர்களும் திவ்ய தேசமாதலால் அவரை மூன்று நாட்கள் தங்குமாறு வேண்ட, அவரும் அதற்கு இசைந்து ப்ரஸாதம் ஸ்வீகரிக்காமல் திருவேங்கடமுடையானை அனுபவித்தே மூன்று நாட்களைக் கழித்தார். பின்பு திருவேங்கடமுடையானிடம் விடை பெற்றுக்கொள்ளப் ப்ரார்த்திக்க, அப்பொழுது எம்பெருமானும் அவரை நித்ய விபூதிக்கும் லீலா விபுதிக்கும் உடையவர் என்று முன்பு சொன்னதை வழி மொழிந்து அவரை வழி அனுப்புகிறார்.

பின்பு அவர் திருமலையில் இருந்து இறங்கி, திருப்பதியில் ஒரு வருட காலம் தங்கி இருந்தார். திருமலை நம்பியிடத்தில் ஒரு வருட காலமும் ஸ்ரீ ராமாயணத்தின் ஆழ்ந்த அர்த்தங்களைக் கற்று அறிகிறார்-அதன் முடிவில் நம்பியிடம் ஸ்ரீரங்கம் திரும்ப நியமனம் கேட்கிறார். நம்பி உடையவருக்கு ஏதாவது பரிசளிக்க விரும்ப, உடையவர் நம்பியிடம் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் கோவிந்தப் பெருமாளைத் தன்னுடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வைத்து நம் ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்கு உதவுமாறு கேட்கிறார். நம்பியும் மகிழ்ச்சியுடன் கோவிந்தப் பெருமாளை உடையவருடன் அனுப்பி வைக்க, உடையவரும் ஸ்ரீரங்கத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கினார்.

உடையவர் கோவிந்தப் பெருமாளுடன் கடிகாசலத்தை (சோளிங்கர்) அடைந்து அக்காரக் கனி எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு திருப்புட்குழி அடைந்து ஜடாயு மஹாராஜர், மரகதவல்லித் தாயார் மற்றும் விஜயராகவன் எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு கச்சியைச் சுற்றியுள்ள பல திவ்ய தேசங்களைச் சேவித்து திருக்கச்சி நம்பி ஸந்நிதியை அடைந்தார். இது நடுவே, கோவிந்தப் பெருமாள் தன்னுடைய ஆசார்யரான பெரிய திருமலை நம்பியைப் பிரிந்ததால் வருத்தமுற்று உடல் வெளுத்தார். இதை உணர்ந்த உடையவர் அவரைத் திருப்பதி சென்று ஆசார்யரைச் சேவித்து வருமாறு கூறி சில ஸ்ரீவைஷ்ணவர்களையும் உடன் அனுப்புகிறார். தானோ திருக்கச்சி நம்பியுடன் கச்சியில் இருந்து தேவாதிராஜனைச் சேவித்து வருகிறார். கோவிந்தப் பெருமாள் திருமலை நம்பி திருமாளிகையை அடைந்து, அங்கே கதவுகள் சாற்றியிருந்ததால் வாயிலில் காத்திருந்தார். அங்கே இருந்தவர்கள் திருமலை நம்பியிடம் இவரின் வரவை அறிவிக்க, அவர் கதவைத் திறக்க மறுத்து உடையவரிடமே சென்று அவரையே தஞ்சமாகக் கொண்டிருக்கும்படி கூறினார். தன்னுடைய ஆசார்யரினின் திருவுள்ளத்தை முழுதுமாக அறிந்த கோவிந்தப் பெருமாள் உடையவரிடம் வந்தடைந்தார். உடன் சென்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவரிடம் அங்கே நடந்ததை விவரிக்கத் திருமலை நம்பியின் உபதேசத்தை அறிந்த உடையவர் மிகவும் மகிழ்ந்தார்.

பின்பு, அவர்கள் அங்கிருந்து விடைபெற்று ஸ்ரீரங்கத்தை வந்தடைந்தனர். ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆரவாரத்துடன் வரவேற்க, உடையவர் ஸேவா க்ரமத்தில் பெரிய பெருமாளைச் சென்றடைந்தார். பெரிய பெருமாள் அவரைப் பேரன்புடன் வரவேற்று, யாத்ரையைப் பற்றி விசாரித்து, தீர்த்தம் ஸ்ரீசடகோப மரியாதைகளை அளிக்கிறார். இதன் பின்பு, ஸ்ரீரங்கத்தில் உடையவர் கருணையுடன் தன்னுடைய அனுஷ்டானங்களுடன் இந்த உயர்ந்த ஸித்தாந்தத்தைக் காலக்ஷேபம் செய்து கொண்டிருந்தார்.

கோவிந்தப் பெருமாளும் ஆனந்தத்துடன் காலக்ஷேபங்களிலும் கைங்கர்யங்களிலும் பங்கு பெற்று வந்தார். ஒரு முறை சில ஸ்ரீவைஷ்ணவர்கள் கோவிந்தப் பெருமாளைக் கொண்டாட அவரும் அதை ஆனந்தத்துடன் ஆமோதித்தார். இதைக் கண்ட உடையவர் அவரிடம் “நம்மை ஒருவர் கொண்டாடும்போது நாம் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் கூடாது. நாம் அவர்களிடம் அதற்குத் தகுதி அற்றவர் என்று தாழ்மையுடன் கூறிக் கொள்ள வேண்டும்” என்றார். அதைக் கேட்ட கோவிந்தப் பெருமாள் “நான் காளஹஸ்தியில் நீசனாக இருந்தேன். இன்று என்னை ஒருவர் புகழ்கிறார் என்றால் அது தேவரீருடைய பெரிய கருணையால் என்னைத் திருத்திப் பணி கொண்டு இந்நிலைக்கு உயர்த்தியதாலேயே. ஆகையால் எல்லாப் பெருமைகளும் தேவரீருக்கே” என்றார். இதைக் கேட்ட எம்பெருமானார் கோவிந்தப் பெருமாளின் சிறந்த நிஷ்டையை அங்கீகரித்தார். அவர் உடனே கோவிந்தப் பெருமாளிடம் “இப்படிப்பட்ட நற்குணங்களை எமக்கும் தந்தால் ஆகாதோ” என்று கூறி அவரை அணைத்துக் கொண்டார். கோவிந்தப் பெருமாளும் உலக இன்பங்களில் ஈடுபாடு அற்று இருந்ததால் எம்பெருமானார் அவரை ஸந்யாஸாச்ரமத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஆணையிடுகிறார். கோவிந்தப் பெருமாளும் ஸந்யாஸாச்ரமத்தை ஏற்றுக் கொள்ள, எம்பெருமானாரும் அவருக்கு எம்பார் என்று பெயரிட்டார்.-பின்பு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நம்முடைய ஸம்ப்ரதாயத்தின் ஸாரமான அர்த்தங்களைக் காட்டும் ஞான ஸாரம் மற்றும் ப்ரமேய ஸாரம் அருளிச் செய்கிறார்.

வேதாந்தக் கொள்கைகளை நிர்ணயம் செய்யும் நோக்குடன், எம்பெருமானார் ஆழ்வான் மற்றும் ஏனைய ஶிஷ்யர்களோடு ப்ரஹ்ம ஸூத்ரத்துக்குப் பொருள் விரிக்கும் க்ரந்தமான போதாயன வ்ருத்தி க்ரந்தத்தைப் பெற காஷ்மீர் செல்லத் தொடங்கினார். அந்த க்ரந்தத்தைப் பெற்றுக் கொண்டு ஸ்ரீரங்கத்தை நோக்கிச் சென்றார். வரும் வழியில், காஷ்மீரத்தைச் சேர்ந்த சில தீயவர்கள் போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை அபஹரித்துச் சென்றார்கள். எம்பெருமானார் முழுதும் அந்த ஸ்ரீ கோஶத்தைப் படிக்காததால் மிகவும் வருந்த, ஆழ்வான் அவரைத் தேற்றி, தாம் அதை எம்பெருமானார் ஓய்வெடுக்கும்போது முழுவதுமாகப்  படித்து விட்டதாகக் கூறினார். ஸ்ரீரங்கம் திரும்பியவுடன் எம்பெருமானார் தாம் சொல்லச் சொல்ல ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு ஒரு வ்யாக்யானம் எழுதுமாறு ஆழ்வானை நியமிக்கிறார். அவர் ஆழ்வானிடம் “நமக்கும் உமக்கும் கருத்து பேதங்கள் இருந்தால் நீர் எழுதுவதை அப்போதே நிறுத்தலாம்” என்றார். இவ்வாறு ஒரு முறை ஆத்மாவைப் பற்றி விளக்கும்போது, உடையவர் ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் ஸ்வரூபம் என்று சொல்ல ஆழ்வானோ ஶேஷத்வமே முக்கியம் என்றிருப்பவராதலால் எழுதுவதை நிறுத்தி விடுகிறார். எம்பெருமானார் கோபமுற்று ஆழ்வானைத் தாம் சொல்லுவதை எழுதும்படி ஆணையிட, ஆழ்வான் பின்பும் எழுத மறுக்க எம்பெருமானார் மிகுந்த கோபத்தை அடைந்தார். அருகில் இருந்தவர்கள் “எம்பெருமானாரின் இந்தச் செயலைப் பற்றி என்ன நினைக்கிறீர்” என்று வினவ, ஆழ்வானோ “அவர் சொத்தை உடையவர், நாமோ சொத்து. அவர் என்னை எவ்வாறு வேண்டுமானாலும் நடத்தலாம்” என்றார். சிறிது நேரத்துக்குப் பிறகு எம்பெருமானார் யோஜித்துத் தன்னுடைய தவறை உணர்ந்து ஆழ்வானிடம் மன்னிப்புக் கோரி, ஸ்ரீ பாஷ்யத்தை மீண்டும் தொடருகிறார். இவ்வாறே எம்பெருமானார் ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், கீதா பாஷ்யம் போன்ற க்ரந்தங்களை அருளிச் செய்தார். இவ்வாறு ஆளவந்தாரின் ஆசைகளை நிறைவேற்றினார்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவரிடம் சென்று “தேவரீர் பிற மதங்களை ஜயித்து நம் ஸித்தாந்தத்தை நன்றாக நிலை நிறுத்திவிட்டீர். இனி திவ்ய தேஶங்களுக்கு திக்விஜயம் செய்து மங்களாஶாஸனம் செய்யவும்” என்று ப்ரார்த்தித்தனர். அதை ஆமோதித்த உடையவர் அவர்களுடன் நம்பெருமாளிடம் சென்று யாத்திரைக்கு அனுமதி கேட்டு நின்றார். நம்பெருமாளும் அதற்கு இசைந்தார்.-உடையவரும் பல ஸ்ரீவைஷ்ணவர்களுடன் தன்னுடைய யாத்திரையைத் தொடங்கி, பாரத தேஶத்தில் உள்ள பல திவ்ய தேஶங்களையும் க்ஷேத்ரங்களையும் தரிசித்தார். முதலில் சோழ நாட்டு திவ்ய தேஶங்களில் தொடங்கி, திருக்குடந்தை மற்றும் பல திவ்ய தேஶங்களை மங்களாஶாஸனம் செய்தார். பின்பு திருமாலிருஞ்சோலைக்கும் அதன் அருகில் இருக்கும் கோயில்களுக்கும் சென்று, திருப்புல்லாணியை அடைந்து ஸேது தர்ஶநமும் செய்து, ஆழ்வார்திருநகரி சென்றடைந்தார். அங்கே நம்மாழ்வாருக்கும் பொலிந்து நின்ற பிரானுக்கும் மங்களாஶாஸனம் செய்து நிற்க, நம்மாழ்வார் இவரைக் கண்டு மிகவும் உகந்து அனைத்து மரியாதைகளும் அளித்தார். பின்பு நவ திருப்பதிகளையும் மங்களாஶாஸனம் செய்தார். வழி நெடுகிலும் பிற மத வித்வான்களை ஜயித்து நம் விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நிறுத்தினார்.-அவர் அங்கிருந்து திருக்குறுங்குடியை வந்தடைந்தார். நம்பியும் உடையவரை வரவேற்று அர்ச்சகர் மூலம் “நான் எத்தனையோ அவதாரங்கள் செய்தும் ஒரு சில ஶிஷ்யர்களே தேற, நீர் எவ்வாறு இத்தனை ஶிஷ்யர்களை உருவாக்கியுள்ளீர்” என்று கேட்டான். உடையவரோ அதற்கு “கேட்கும் க்ரமத்தில் கேட்டாலே சொல்ல முடியும்” என்றார். நம்பியும் அவருக்கு ஒரு ஆஸனத்தை அளித்து, தான் தன்னிடத்தை விட்டு இரங்கிப்  பணிவுடன் நின்றான். உடையவர் அந்த ஆஸனத்தில் தன் ஆசார்யனான பெரிய நம்பி இருப்பதாகப்  பாவித்து அதன்  அருகில் தான் அமர்ந்து, த்வய மஹா மந்த்ரத்தின் பெருமையை எடுத்துரைத்து, அதனாலேயே இந்த வழியில் பலரை ஈடுபடுத்துவதாக விளக்கினார். நம்பியும் அகமகிழ்ந்து ராமானுஜரை ஆசார்யனாக  ஏற்க, ராமானுஜரும் அவனுக்கு “ஸ்ரீவைஷ்ணவ நம்பி” என்ற திருநாமத்தைச் சாற்றினார்.பின்பு, உடையவர் திருவண்பரிஸாரம், திருவாட்டாறு மற்றும் திருவனந்தபுரம் திவ்ய தேஶங்களுக்குச் சென்றார். திருவனந்தபுரத்தில் ஒரு மடத்தை ஏற்படுத்தி, அங்கிருந்த இதர மத வித்வான்களையும் ஜயித்தார். மற்ற மலை நாட்டு திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் செய்து மேற்குக் கடற்கரை மார்க்கமாகச் சென்று உத்தர பாரத தேஶத்தை அடைந்தார். அங்கு மதுரா, சாளக்ராமம், த்வாரகா, அயோத்யா, பத்ரிகாஶ்ரமம், நைமிசாரண்யம், புஷ்கரம் போன்ற ஸ்தலங்களில் மங்களாஶாஸனம் செய்து, கோகுலம், கோவர்தனம், வ்ருந்தாவனம் போன்ற திவ்ய ஸ்தலங்களுக்கும் சென்று, பல இதர மத வித்வான்களை வாதிட்டு வென்றார்.

அங்கிருந்து அவர் காஷ்மீர தேஶத்தை அடைந்து ஸரஸ்வதீ தேவியின் தலைமையில் இருந்த ஸரஸ்வதீ பண்டாரத்தை அடைந்தார். ஸரஸ்வதீ தேவி தானே உடையவரை எதிர் கொண்டு வரவேற்று சாந்தோக்ய உபநிஷத்தில் காணப்படும் “தஸ்ய யதா கப்யாஸம்” ஶ்ருதியின் அர்த்தத்தை விளக்குமாறு வேண்டினாள் (முன்பு இந்த ஶ்லோகமே ராமானுஜருக்கும் யாதவ ப்ரகாஶருக்கும் வேற்றுமை வளரக் காரணமாயிருந்தது). உடையவரும் அதன் அர்த்தத்தை உள்ளபடி எடுத்துரைக்க, அவள் பெரிதும் மகிழ்ந்து, உடையவரின் ப்ரஹ்ம ஸூத்ர உரையான ஸ்ரீபாஷ்யத்தைத் தன் தலை மேல் தாங்கி, அவரைக் கொண்டாடினாள். அவள் உடையவருக்கு “ஸ்ரீ பாஷ்யகாரர்” என்ற விருதத்தை அளித்து ஹயக்ரீவர் விக்ரஹத்தையும் அளித்தாள். உடையவர் அவளிடம் “ஏன் இத்தனை மகிழ்ச்சி?” என்று வினவ, அவளும், முன்பு ஶங்கரர் வந்த பொழுது, இதே ஶ்ருதிக்கு விளக்கம் கேட்ட பொழுது, அவர் சரியாக விளக்காதாதை, இப்பொழுது தேவரீர் விளக்கியதால் தான் ஆனந்தப் படுவதாகக் கூறினாள். இது கண்டு அங்கிருந்த வித்வான்கள் வாதப் போருக்கு வர, அவர்கள் அனைவரையும் வாதில் வென்று, ஸித்தாந்தத்தை நிலை நாட்டினார். இது கண்ட அவ்வூர் ராஜா மிகவும் ஆச்சர்யப்பட்டு, உடையவர் ஶிஷ்யனானான். தோற்ற வித்வான்கள் மிகவும் ஆத்திரப்பட்டு, ஸூந்யம் வைத்து உடையவரைக் கொல்ல முயல, அது அவர்களையே கெடுக்கத் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்தனர். ராஜா உடையவரிடம் அவர்களைக் காக்குமாறு ப்ரார்த்திக்க, அவர்கள் அனைவரும் கோபம் தணிந்து, பின்பு உடையவர் ஶிஷ்யர்களாகவும் ஆயினர்.

பின்பு, புருஷோத்தம க்ஷேத்ரத்தை (ஜகந்நாத புரியின் இருப்பிடம்) அடைந்து, ஜகந்நாதனுக்கு மங்களாஶாஸனம் செய்தார். மாயாவாதிகளை ஜயித்து, ஒரு மடத்தையும் நிறுவினார். அங்கிருந்து ஸ்ரீ கூர்மம், ஸிம்ஹாத்ரி, அஹோபிலம் திவ்ய தேஶங்களுக்குச் சென்ரார்.-இறுதியாக அவர் திருவேங்கடத்தை அடைந்தார். அச்சமயத்தில் ஒரு சில ஶைவர்கள் திருவேங்கடமுடையான் (ஸ்ரீனிவாஸன் எம்பெருமான்) ருத்ரன் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது உடையவர் “நீங்கள் உங்கள் தேவதையின் ஆயுதங்களை வைத்துச் செல்லுங்கள், நாமும் நம் தேவதையின் ஆயுதங்களான சங்கு மற்றும் சக்கரத்தை வைத்துச் செல்லுவோம். எந்த தேவதையோ அதன் ஆயுதங்களைத் தானே எடுக்கும். இங்கிருக்கும் தெய்வமே முடிவெடுக்க வேண்டும்” என்று கூறி, அனைவரையும் கர்ப்ப க்ருஹத்தில் இருந்து வெளியேற்றித் திருக்காப்பு சேர்த்தனர்.எம்பெருமான் ஶங்க சக்கரங்களோடு சேவை ஸாதித்தான். அதன் பிறகு உடையவர் மலை இறங்கி அங்கிருந்து தன் யாத்திரையைத் தொடர்ந்தார்.-பிறகு, உடையவர் காஞ்சீபுரம், திருவல்லிக்கேணி, திருநீர்மலை மற்றும் அங்கிருக்கும் பல திவ்ய தேஶங்களுக்குச் சென்று மங்களாஶாஸனம் செய்தார். அவர் அங்கிருந்து புறப்பட்டு மதுராந்தகத்தை அடைந்து தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த பல மாயாவாத வித்வான்களை வாதிட்டு வென்றார். பின்பு திருவஹிந்த்ரபுரம் மற்றும் காட்டுமன்னார்கோயிலுக்கும் சென்றார்.-இவ்வாறு, உடையவர் பல திவ்ய தேஶங்களுக்குச் சென்று தன் யாத்திரையை முடித்துக் கொண்டு ஸ்ரீரங்கம் திரும்பினார். அவர் பெரிய பெருமாளிடம் சென்று அமலனாதிபிரான் ஸேவித்து மங்களாஶாஸனம் செய்ய, பெரிய பெருமாள் அவர் சௌகர்யத்தை விசாரித்தார். உடையவரும் “எங்கிருந்தாலும் தேவரீரையே நினைத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு என்ன வருத்தம் வந்துவிடும்?” என்றார். அதன் பின்பு ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு, தன் நித்யானுஷ்டானங்களைச் செய்து போனார்.

இச்சமயத்தில், ஸ்ரீரங்கத்தில், மழை காரணமாக கூரத்தாழ்வான் தன்னுடைய உஞ்சவ்ருத்திக்குச் செல்ல முடியவில்லை. தன்னுடைய மாலை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, ப்ரஸாதம் உட்கொள்ளாமல் இருந்தார். இரவில், நம்பெருமாள் அரவணை அமுது செய்யும் காலத்தை உணர்த்தும் கோயில் மணியோசை கேட்டது. அதைக் கேட்ட ஆழ்வானின் தர்மபத்தினி ஆண்டாள், தன்னுடைய கணவரின் நிலையை நினைந்து மனம் வருந்தி, நம்பெருமாளிடம் “உம்முடைய பக்தர் இங்கே உணவில்லாமல் இருக்க, நீர் மட்டும் நன்றாக அமுது செய்வதென்?” என்று வினவ, அவளின் நிலை உணர்ந்த நம்பெருமாள், தன்னுடைய கைங்கர்யபரர்கள் மூலம் ஆழ்வான் திருமாளிகைக்கு உடனே ப்ரஸாதம் கொடுத்து விடுகிறார். அதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஆழ்வான் ஆண்டாளைப் பார்க்க, அவள் நடந்ததைச் சொன்னாள். எம்பெருமானிடம் இப்படி ப்ரார்த்தித்துப் பெறுவதை ஆழ்வான் விரும்பவில்லை. இருந்தாலும், இரண்டு திரள்களைக் கையில் வாங்கி, தான் சிறிது உண்டு, ஆண்டாளுக்கும் அந்தப் ப்ரஸாதத்தைக் கொடுத்தார். இந்த இரண்டு ப்ரஸாதத் திரள்களே ஆண்டாளுக்கு இரண்டு அழகிய குழந்தைகளை அளித்தன. பதினோறு நாட்கள் தீட்டுக் கழிந்து, பன்னிரண்டாம் நாள், எம்பெருமானார் எம்பார் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்களுடன், ஆழ்வான் திருமாளிகைக்குக் குழந்தைகளைக் கடாக்ஷிக்க ஆர்வத்துடன் எழுந்தருளினார். எம்பெருமானார் எம்பாரைக் குழந்தைகளைத் தன்னிடம் கொண்டு வருமாறு கூற, எம்பார் பட்டரைத் தன் கையில் கொண்டு வருகிறார். அப்பொழுது எம்பெருமானார் எம்பாரிடம் “இந்தக் குழந்தையிடம் தேஜஸ் நன்றாக விளங்குகிறது, ஒரு அழகிய பரிமளமும் தெரிகிறது. என்ன செய்தீர்?” என்ன, எம்பாரும் “த்வய மந்த்ரத்தை ரக்ஷையாக ஓதினேன்” என்றார். எம்பெருமானார் எம்பாரிடம் “என்னை முந்திக் கொண்டு விட்டீரே, சரி நீரே இக்குழந்தைக்கு ஆசார்யனாக இரும்” என்றார்.   எம்பெருமானார் அக்குழந்தைக்குப் பராஶர முனியின் நினைவாக “பராஶர பட்டர்” என்று பெயரிட்டு, ஆளவந்தாரிடம் செய்த இரண்டாவது ஶபதத்தை நிறைவேற்றினார். பின்பு, இவர் தலைமையில் எம்பார் அக்குழந்தைக்குச் ஸமாஶ்ரயணம் செய்தார். பின்பு, எம்பெருமானார் ஆழ்வானிடம் அக்குழந்தையை பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டிக்கு தத்துக் கொடுக்கச் சொல்ல, ஆழ்வானும் அவ்வாறே செய்தார். பட்டர் சிறு குழந்தையாக இருந்தபோது, பெரிய பிராட்டியாரே அவருக்குத் தாலாட்டுப் பாடி வளர்த்தார். மேலும் பெரிய பெருமாள் முன்பு போகம் வைக்கப் பட்டால், பட்டர் தவழ்ந்து சென்று அதிலிருந்து உண்டபின்னேயே எம்பெருமான் அதை ஆனந்தத்துடன் அமுது செய்வான். இவ்வாறு பட்டர் சிறு வயதிலேயே சிறந்த பண்டிதராக விளங்கி, எம்பெருமானார் மற்றும் எம்பாருக்குப் பின்பு ஸம்ப்ரதாயத் தலைவர் ஆனார்.

எம்பாரின் பூர்வாஶ்ரமத் தம்பியான சிறிய கோவிந்தப் பெருமாளின் தர்மபத்தினி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க, நம்மாழ்வாரின் நினைவாக, அக்குழந்தைக்கு “ஸ்ரீ பராங்குஶ நம்பி” என்று திருநாமமிட்டு, ஆளவந்தாரின் மூன்றாவது குறையையும் போக்கினார்.-முதலியாண்டான் எம்பெருமானாரிடம் மிகுந்த ஈடுபாட்டுடனும் எம்பெருமானாரும் அவரிடம் பேரன்புடனும் இருந்தார். ஒரு முறை எம்பெருமானார் பெரிய நம்பி திருக்குமாரத்தி அத்துழாய்க்கு வேலையாளாகச் செல்லும்படி ஆணையிட, உகந்து அவ்வாணையை ஏற்றார் ஆண்டான்.-ஆளவந்தாரின் சிறந்த ஶிஷ்யரான மாறனேர் நம்பியின் இறுதிச் சடங்குகளைப் பெரிய நம்பி செய்ய, உள்ளூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய நம்பி ப்ராஹ்மணராகையாலும் மாறனேர் நம்பி பஞ்சமராகையாலும், அச்செயலை ஏற்கவில்லை. எம்பெருமானார் பெரிய நம்பியை வரவழைத்து விளக்கம் கேட்க, அவரும் மாறனேர் நம்பியின் பெருமையை எடுத்துரைத்துத் தன் செயல் சரியே என்பதை உணர்த்தினார். அதைக் கேட்டு மகிழ்ந்த எம்பெருமானார், பெரிய நம்பியின் செயல் சரி என்பது தெரிந்தும், அவரிடமே அதற்கு விளக்கம் அறிய விரும்பியதை மற்றவர்களுக்கு உணர்த்தினார்.

இவ்வாறு அனைவரும் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானாரின் வாக்குப்படி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வர, கொடியவனான சோழ ராஜா சைவ மதத்தில் ஈடுபட்டு, சிவனைப் பரதெய்வமாக நிலை நாட்ட விரும்பினான். அவன் அனைத்து வித்வான்களையும் வரவழைத்து சிவ பரத்வத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஆணையிட்டான். அச்சபையில் இருந்த ஆழ்வானின் ஶிஷ்யனான நாலூரான் “பலர் ஏற்று என்ன பயன்? எம்பெருமானாரும் ஆழ்வானும் ஏற்றுக் கொண்டாலே அது உண்மையாக நிலைநிற்கும்” என்று கூற, அதை கேட்ட ராஜா தன் சேவகர்களை ராமானுஜரின் மடத்துக்கு அனுப்பி அவரை அழைத்து வரக் கூறினான். அச்சமயம் எம்பெருமானார் தீர்த்தமாடச் சென்றிருக்க, அங்கிருந்த ஆழ்வான், ராஜாவின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு, தானே எம்பெருமானாரின் த்ரிதண்ட காஷாயங்களை சாற்றிக் கொண்டு, ராஜாவின் சேவகர்களுடன் சென்றார். மடத்துக்குத் திரும்பிய எம்பெருமானார் இவ்விஷயம் கேள்விப்பட்டு, ஆபத்தை உணர்ந்து, ஆழ்வானின் வெள்ளை ஆடைகளை அணிந்து கொண்டு, தன்னுடைய ஶிஷ்யர்களுடன் ஸ்ரீரங்கத்தை விட்டுச் சென்றார். இதை அறிந்த சில சேவகர்கள் அவர்களைத் தொடர்ந்து செல்ல, எம்பெருமானார் மணலைக் கையில் எடுத்து மந்திரித்துத் தன் ஶிஷ்யர்களிடம் கொடுக்க, அவர்கள் அதை வழியில் தூவிச் சென்றனர். அந்த மணலை மிதித்த சேவகர்கள் கடும் வலிக்கு உள்ளாகி, அவர்கள் பின்வாங்கிச் சென்றனர்.எம்பெருமானார் மேற்கே பாதுகாப்பான இடமாகக் கருதப் பட்ட திருநாராயணபுரத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார். காட்டு வழியில், அவரின் ஶிஷ்யரான நல்லான் சக்ரவர்த்தியால் திருத்தப்பட்ட சில வேடர்களைச் சந்தித்தார். ஆறு நாட்கள் தொடர்ந்து நடந்ததால் மிகவும் களைப்புற்றிருந்ததால் மிகவும் பசியுடன் இருந்த ஸ்ரீவைஷ்ணவர்களை அவ்வேடர்கள் வரவேற்று, எம்பெருமானாரின் க்ஷேமத்தை வினவினர். எம்பெருமானாரை ஸ்ரீவைஷ்ணவர்கள் வேடர்களுக்குக் காட்டிக் கொடுக்க, அவ்வேடர்கள் மிகவும் ஆநந்தப்பட்டு, தேனும் தினை மாவும் ஸமர்ப்பிக்க, எம்பெருமானார் தவிர மற்ற அனைவரும் அதை ஏற்று உண்டனர். வேடர்கள் அருகில் இருந்த க்ராமத்தில் சென்று அவர்களை ஒரு ப்ராஹ்மண இல்லத்தில் விட்டு, சமைப்பதற்குத் தேவையான பதார்த்தங்களையும் கொடுத்தனர்.

அந்த இல்லத்தில் ப்ராஹ்மணரின் (கொங்கிலாச்சான்) தர்ம பத்தினி, எல்லோரையும் வணங்கி, தான் தயார் செய்யும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறார். ஸ்ரீவைஷ்ணவர்களோ, தாங்கள் எல்லோரிடமும் உணவு ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுக்க, அவளும் உடனே தானும் எம்பெருமானாரின் ஶிஷ்யை என்றும், ஸ்ரீரங்கத்தில் சில காலம் முன்பு வசித்த போது எம்பெருமானார் தன்னைச் ஶிஷ்யையாக ஏற்றுக் கொண்டதாகவும் கூறினாள். அவள் கூறியது – முன்பு ஒரு காலத்தில், நன் ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, ராஜாக்களும் மந்திரிகளும் எம்பெருமானாரிடம் வந்து ஆசி வாங்கிச் செல்வர். ஆனல் அவரோ தினமும் பிக்ஷைக்கு வருவார். ஒரு நாள் அவரிடம் “ஏன் இந்த நிலை?” என்று கேட்க அவரும் “நான் அவர்களுக்கு பகவானைப் பற்றிய விஷயங்களை உணர்த்துவதால் அவர்கள் என்னிடம் வருகின்றனர்” என்றார்.நான் அவரிடம் எனக்கும் அதே விஷயங்களை உபதேசிக்குமாறு கேட்க, அவர் என்னைத் தன் ஶிஷ்யையாக ஏற்றுக் கொண்டு உபதேசித்தார். நாங்கள் எங்கள் ஊருக்குத் திரும்பும் காலத்தில் அவர் ஆசிகளைக் கேட்க, அவரும் தன் திருப்பாதுகைகளை எனக்கு அளித்தார். பின்பு நாங்கள் இங்கே வந்து விட்டோம். இதைக் கேட்ட எம்பெருமானார் தான் யார் என்பதை கூறாமல், ஸ்ரீவைஷ்ணவர்களை அவள் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதற்கு முன், ஒரு ஸ்ரீவைஷ்ணவரை அவள் செய்வதைப் பார்க்குமாறு கூறினார். அவள் தளிகை சமைத்து முடித்து, தன் பூஜை அறைக்குச் சென்று, அங்கிருந்த ஸன்னிதிக்கு முன்பு இருந்து த்யானித்தாள். அந்த ஸ்ரீவைஷ்ணவர் ஒரு விக்ரஹம் போன்று இருந்த ஒரு வஸ்து இருப்பதைக் கண்டார். அவர் எம்பெருமானாரிடம் அவர் கண்டதைக் கூறினார். எம்பெருமானார் அவளிடம் “நீ உள்ளே என்ன செய்தாய்” என்று கேட்க அவள் “எம்பெருமானார் அளித்த திருப்பாதுகைகளை வணங்கி உணவை அவற்றுக்கு நைவேத்யம் செய்தேன்” என்றாள்.அவர் அவளிடம் அவற்றை வெளியே எடுத்து வரச் சொல்ல அவளும் அவ்வாறே செய்தாள். அவர் அது தன்னுடையது என்பதை உடனே உணர்ந்து கொண்டார். அவளிடம் “இங்கு எம்பெருமானார் இருப்பது உனக்குத் தெரிகிறதா” என்று கேட்க, அவளும் விளக்கை ஏற்றிக் கொண்டு வந்து எல்லோருடைய திருவடிகளையும் கண்டாள். எம்பெருமானாரின் திருவடிகளைக் கண்டு ஆநந்தத்துடன் “இவை எம்பெருமானாரின் திருவடிகள் போல உள்ளன, ஆனால் நீரோ வெள்ளை சாற்றிக் கொண்டிருப்பதால், என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை” என்றாள். எம்பெருமானார் தான் யார் என்பதை அவளுக்கு உணர்த்தி, அவளுக்குத் தான் செய்த உபதேசங்களைக் கூறுமாறு கூறினார். அவளும் அவற்றை மகிழ்ச்சியுடன் சொல்ல, எம்பெருமானார் அனைவரையும் ப்ரஸாதம் எடுத்துக் கொள்ளுமாறு ஆணையிட்டார். ஒரு பகவத் விக்ரஹத்துக்கு நைவேத்யம் செய்யப்படாததால் தான் அந்த ப்ரஸாதத்தை எடுத்துக் கொள்ளவில்லை. பின்பு அவள் பழங்கள், பால் மற்றும் சர்க்கரையை அவரிடம் ஸமர்ப்பிக்க அவரும் தன் பெருமாளுக்கு அவற்றைப் படைத்து, பின்பு தானும் ஏற்றுக் கொண்டார். ஸ்ரீவைஷ்ணவர்களின் ஶேஷப்ரஸாதத்தைத் தன் கணவருக்குக் கொடுத்துத் தான் மட்டும் உண்ணாமல் இருக்கிறாள். அதைக் கண்டு ஏன் என்று அவர் வினவ, “நீர் முன்பு எம்பெருமானாரை ஆசார்யனாக ஏற்கவில்லை. இன்று அவரே நம் இல்லம் தேடி வந்துள்ளார். நீர் அவரை ஆசார்யனாக ஏற்பேன் என்று சம்மதித்தால் மட்டுமே நான் உண்பேன்” என்ன அவரும் அதை ஏற்க, அவளும் ப்ரஸாதத்தை எடுத்துக் கொள்கிறாள். காலையில், அவர் எம்பெருமானாரிடம் சென்று சரணடைய எம்பெருமானாரும் அவருக்கு உபதேசங்கள் செய்து அவரைச் ஶிஷ்யராக ஏற்கிறார். பின்பு, எம்பெருமானார் காஷாய த்ரிதண்டத்தைச் ஸம்பாதித்து, சில நாட்கள் அங்கேயே இருந்து, மீண்டும் மேற்கு நோக்கிச் செல்லத் தொடங்கினார்.

அங்கிருந்து பௌத்த ஜைனர்கள் நிறைந்த ஸாளக்ராமம் வந்தடைந்தார். அவர்கள் இவரை கணிசியாமல் இருக்க, முதலியாண்டானை அவரின் திருவடிகளை ஊரில் உள்ள கேணியில் விளக்கச் சொல்ல, அவரும் அப்படியே செய்ய, புனிதமான அந்த தீர்த்தத்தை உட்கொண்ட அனைவரும் எம்பெருமானாரிடம் ஈடுபாடு கொண்டனர். அதே ஸமயத்தில் அந்த ஊரில் இருந்த வடுக நம்பி எம்பெருமானாரை எல்லாமாக ஏற்றுக் கொண்டு, ஆசார்ய பக்திக்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்கினார். எம்பெருமானார் அங்கிருந்து தொண்டனூர் சென்றடைந்து, விடல தேவ ராயன் என்கிற ராஜாவின் பேய் பிடித்த மகளை குணமாக்குகிறார். ராஜாவும் அவனின் குடும்பமும் எம்பெருமானார் ஶிஷ்யர்களாக, எம்பெருமானார் அந்த ராஜாவுக்கு விஷ்ணு வர்தந ராயன் என்று பெயரிடுகிறார். இதைக் கேள்விப்பட்ட 12000 ஜைன வித்வான்கள் எம்பெருமானாரிடம் வாதிட வர, எம்பெருமானார் தனக்கும் அவர்களுக்கும் நடுவே திரையிட்டு தான் திரைக்குப் பின்னிருந்து ஒரே சமயத்தில் அவர்கள் அனைவரிடமும் வாதிடுகிறார். திரைக்குப் பின்னால், தன்னுடை நிஜ ரூபமான ஆயிரம் தலை கொண்ட ஆதிஶேஷ வடிவை எடுத்துக் கொண்டு அவர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் ஒரே ஸமயத்தில் விடை கொடுக்கிறார். அவரிடம் தோற்ற பலரும் அவரின் ஶிஷ்யர்களாக தன்னுடைய மேன்மையை அவர்களுக்கு வெளியிடுகிறார். ராஜாவும் எம்பெருமானாரைக் கொண்டாடுகிறான்.-இவ்வாறு தொண்டனூரில் வாழ்ந்து வந்த காலத்தில், அவரிடம் இருந்த திருமண் முடிந்து போக, அவர் வருத்தமுடன் இருந்தார். திருநாராயணபுரத்து எம்பெருமான் அவர் கனவில் வந்து “நாம் உமக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறோம், திருமண்ணும் இங்கேயே உள்ளது” என்று கூற, ராஜாவின் உதவியுடன் திருநாராயணபுரம் அடைந்து, திருநாராயணபுரத்து எம்பெருமானைச் சேவிக்க முற்பட, அங்கே கோயில் இல்லாமல் இருப்பது கண்டு மிகவும் வருத்தமுற்றார். பின்பு திருமேனி சோர்வுற்று சிறிது கண்ணயர, கனவில் எம்பெருமான் தான் இருக்கும் இடைத்தைக் காட்டிக் கொடுக்க, எம்பெருமானார் எம்பெருமானை பூமியில் இருந்து வெளிக்கொணர்ந்தார். நம்மாழ்வார் பேரன்புடன் திருநாரணனைக் கொண்டாடியதால் திருவாய்மொழியில் “ஒரு நாயகமாய்” பதிகத்தை இந்த எம்பெருமானுக்கு என்று எம்பெருமானார் ஆக்கினார். திருமண் கிடைக்கப் பெற்று, பன்னிரு திருநாமங்கள் சாற்றிக்கொண்டார். பின்பு, ஊரைத் திருத்தி, கோயிலைப் புனர் நிர்மாணம் செய்து பல கைங்கர்யபரர்களையும் நியமித்தார்.-உத்ஸவ விக்ரஹம் இல்லாததால் உத்ஸவங்கள் கொண்டாட முடியாத நிலை இருந்தது. இது கண்டு வருத்தமுற்ற எம்பெருமானாரின் கனவில் மீண்டும் எம்பெருமான் தோன்றி, ராம ப்ரியன் என்கிற உத்ஸவர் தற்பொழுது தில்லி பாதுஷாவின் அரண்மனையில் இருப்பதைக் காட்டிக்கொடுக்க, எம்பெருமானாரும் தில்லி சென்று, ராஜாவிடம் இவ்விஷயத்தைக் கூற, ராஜாவும் தன் மகளின் அந்தப்புரத்துக்கு எம்பெருமானாரை அழைத்துச் சென்று காண்பித்தான். அந்தப்புரத்தில் ராமப்ரியன் விக்ரஹத்தை அதீத ப்ரீதியுடன் ராஜாவின் குமாரத்தி பேணிக்கொண்டிருந்தாள். எம்பெருமானார் அந்த விக்ரஹத்தைக் கண்டவுடன் மிகவும் ஆனந்தித்து “செல்லப்பிள்ளை இங்கே வாராய்” என்று கூற, எம்பெருமானும் உடனே துள்ளிக் குதித்து எம்பெருமானார் மடியில் வந்தமர்ந்தான். இதைக் கண்டு ஆச்சர்யமடைந்த ராஜா எம்பெருமானுக்கு பல திருவாபரணங்களைச் சமர்ப்பித்து எம்பெருமானாருடன் அனுப்பி வைத்தான். ராஜாவின் குமாரத்தியோ ராமப்ரியன் பிரிவு தாங்காமல் எம்பெருமானார் கோஷ்டியைத் தொடர்ந்து வர, திருநாராயணபுரத்து எல்லையில், எம்பெருமான் அவளைத் தன்னுள் (ஆண்டாளைச் செய்தது போல) அந்தர்கதம் ஆக்கிக்கொண்டான். எம்பெருமானாரும் அவளைத் துலுக்க நாச்சியார் என்று பெயரிட்டு எம்பெருமான் திருவடியிலேயே ப்ரதிஷ்டை செய்தார். பின்னர், உத்ஸவரை ஸந்நிதியில் புனர் ப்ரதிஷ்டை செய்து அனேக உத்ஸவங்களை நடத்திப் போனார்.

இவ்வாறு பன்னிரண்டு ஆண்டு காலம் திருநாராயணபுரத்தில் இருந்து கொண்டு பல கைங்கர்யங்கள் செய்தும் பல ஸ்ரீவைஷ்ணவர்களை உருவாக்கியும் தன் காலத்தை ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்கு ஏற்றவாறு கழித்தார். ஸ்ரீரங்கத்திலிருந்து மாருதி சிறியாண்டான் மூலமாக ஶைவ ராஜா மாண்டான் என்ற செய்தி கேட்டு மிகவும் ஆனந்தித்து ஸ்ரீரங்கம் புறப்பட முற்பட்டார். அங்கிருந்த அவரின் ஶிஷ்யர்கள் இவ்விஷயம் கேட்டு எம்பெருமானாரைப் பிரிந்து எப்படி இருக்க முடியும் என்ற கவலைக்கடலில் மூழ்கினர். எம்பெருமானார் அவர்களைத் தேற்றி, அவர்கள் விருப்பத்துக்கு இணங்க தனக்கு ஒரு திருமேனியை ஏற்படுத்த ஒப்புக் கொண்டார். இத்திருமேனியே “தமருகந்த திருமேனி” என்று ப்ரஸித்தமாகக் கொண்டாடப்படுகிறது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு பயண கதியில் ஸ்ரீரங்கம் வந்தடைந்து பெரிய பெருமாளுக்கும் பெரிய பிராட்டிக்கும் மங்களாஶாஸனம் செய்துகொண்டு நம் ஸம்ப்ரதாயத்தையும் செவ்வனே வளர்த்துக் கொண்டு வாழ்ந்தார்.ஸ்ரீரங்கம் எழுந்தருளிய உடையவர் பெரிய பெருமாளை மங்களாஶாஸனம் செய்து, ஸன்னிதி ப்ரதக்ஷிணம் செய்து புத்துணர்வு பெற்று, தன்னுடைய ஶிஷ்யர்களுடன் கூரத்தாழ்வான் திருமாளிகைக்குச் சென்றார். ஆழ்வான் பக்திப் பெருக்குடன் உடையவர் திருவடிகளில் விழுந்து அவர் திருவடிகளைப் பற்றிக் கொண்டு கிடக்க, உடையவர் அவரை ஆதரத்துடன் எடுத்து அணைத்துக் கொண்டு, ஆழ்வானின் கண்ணில்லாத கோலத்தைக் கண்டு மாளாத துன்பத்துடன் பேசாதிருந்தார். பின்பு கண்ணீருடன் தழுதழுத்த குரலில் ஆழ்வானிடம் “நம்முடைய தரிஶனத்துக்காக (ஸம்ப்ரதாயத்துக்காக) உம்முடைய தரிஶனத்தையே (கண்களையே) இழந்தீரே” என்று கூற, ஆழ்வானும் “இது என்னுடைய அபசாரத்தினாலேயே நடந்தது” என்று கூறினார். உடையவர் “அன்று! நீர் அபசாரப்படுவீரோ? இது என்னுடைய அபசாரமாகவே இருக்க வேண்டும்” என்று தேற்றினார். ஒருவாறு எல்லோரும் தேறி நிற்க, உடையவர் தன்னுடைய மடத்துக்குத் திரும்புகிறார்.

இச்சமயத்தில், சில ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவரிடம் (தற்பொழுது சிதம்பரம் என்று அழைக்கப்படும்) திருச்சித்ரகூடம் ஶைவ ஸமயத்தைச் சேர்ந்த தீயவர்களால் அழிக்கப்பட்டது என்று கூறினர். உடையவரும், அந்த திவ்ய தேசத்து எம்பெருமானின் உத்ஸவ விக்ரஹம் திருப்பதிக்குப் பாதுகாப்பாக எழுந்தருளுப்பட்டது என்று அறிந்து உடனே திருப்பதி நோக்கி விரைந்தார். அங்கே திருச்சித்ரகூடத்தில் இருந்தது போன்றே ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு புதிதாக ஒரு மூல மூர்த்தியை ப்ரதிஷ்டை செய்வித்தார் (தற்காலத்தில் கீழ் திருப்பதியில் நாம் ஸேவிக்கும் கோவிந்தராஜப் பெருமாள் இவரே). பின்பு உடையவர் திருமலை மேல் சென்று திருவேங்கடமுடையானுக்கு மங்களாஶாஸனம் செய்து, அங்கிருந்து காஞ்சீபுரம் சென்று தேவப் பெருமாளுக்கு மங்களாஶாஸனம் செய்து, ஸ்ரீரங்கம் வந்தடைந்து தொடர்ந்து ஸம்ப்ரதாயத்தை வளர்த்து வந்தார்.

பின்பு, உடையவர் ஆழ்வானை அழைத்து “தேவப் பெருமாளைப் ஸ்தோத்ரம் செய்தால் அவர் வேண்டியது அருள்வார் என்று கூறி”, அவரை ஸ்தோத்ரம் செய்து அவருடைய கண் பார்வை திரும்பப் பெறப் ப்ரார்த்திக்குமாறு ஆணையிடுகிறார். ஆழ்வான் முதலில் தயங்கினாலும், உடையவரின் ஆணையை மீற முடியாமல் ஏற்றுக் கொண்டு, ஶ்ரீவரதராஜ ஸ்தவத்தை அருளிச்செய்து, அதன் இறுதியில் தன் உட்கண்களால் எம்பெருமானைக் காணும்படி ஆக வேண்டும் என்று ப்ரார்த்திக்க எம்பெருமானும் ஆனந்தத்துடன் அதை நிறைவேற்ற, இதை ஆழ்வான் உடையவரிடம் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு த்ருப்தி அடையாத உடையவர் ஆழ்வானையும் அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் வந்தடைந்து, தேவப் பெருமாள் திருமுன்பே ஆழ்வானை ஶ்ரீவரதராஜ ஸ்த்வம் ஸேவிக்குமாறு கூறுகிறார். அவ்வாறு ஸேவித்துக் கொண்டு இருக்கும் பொழுது வேறு காரியமாக வெளியே செல்ல, ஆழ்வான் ஸ்த்வத்தைச் ஸேவித்து முடிக்கிறார். தேவப் பெருமாளும் ஆழ்வானுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, ஆழ்வானும் “நாம் பெற்ற பலன் நாலூரானும் பெற வேண்டும்” என்று கேட்க தேவப் பெருமாளும் அதை ஏற்றுக்கொள்கிறார். அங்கே மீண்டும் எழுந்தருளிய உடையவர் நடந்த விஷயம் கேட்டுப் பெருமாளையும் ஆழ்வானையும் வெறுத்து, தன்னுடைய ஆசையை நிறைவேற்றாததற்காகக் கடிந்து கொண்டார். தேவப் பெருமாள் உடனே ஆழ்வானுக்குப் பெருமாளும் உடையவரும் தெரியும்படி அருளினார். அவ்வாறு அருளப்பட்ட ஆழ்வான், தேவப் பெருமாளின் அழகை அனுபவித்து உடையவரிடம் விண்ணப்பிக்க, உடையவரும் த்ருப்தி அடைந்தார்.

ஒருமுறை உடையவர் நாச்சியார் திருமொழிக்குப் பொருள் விளக்கிக் கொண்டிருக்க, “நாறு நறும் பொழில்” பாசுரம் வர, அதில் ஆண்டாள் திருமாலிருஞ்சோலை அழகர் எம்பெருமானுக்கு நூறு தடா அக்கார அடிசிலும் நூறு தடா வெண்ணெயும் ஸமர்ப்பிக்க ஆசைப் படுவது கண்டு, உடனே புறப்பட்டு திருமாலிருஞ்சோலை வந்தடைந்து, எம்பெருமானுக்கு ஆண்டாள் விருப்பப்படி அக்கார அடிசிலும் வெண்ணெயும் ஸமர்ப்பித்தார். அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்து ஆண்டாள் ரங்கமன்னாருக்கு மங்களாஶாஸனம் செய்தார். ஒரு அண்ணன் தன் தங்கைக்குப் பரிவுடன் செய்வது போன்ற உடையவரின் இந்தச் செயலால் மிகவும் மகிழ்வுற்ற ஆண்டாள், உடையவரை “நம் கோயில் அண்ணர்” (ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அண்ணன்) என்று அழைத்தார். அங்கிருந்து புறப்பட்டு ஆழ்வார்திருநகரி சென்றடைந்து ஆழ்வார் மற்றும் ஆதிநாதருக்கு மங்களாஶாஸனம், பின்பு ஸ்ரீரங்கம் வந்தடைந்து தன்னுடைய காலக்ஷேபத்தைத் தொடர்ந்தார்.அவருக்குப் பல ஶிஷ்யர்கள் இருந்தனர். மேலும் அவர் 74 ஸிம்ஹாஸனாதிபதிகளையும் ஆசார்யர்களாக நம் ஸம்ப்ரதாய வளர்ச்சிக்காகவும், கொள்கைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கவும், நியமித்தார். இந்தச் சமயத்தில், பல ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவருக்குக் கைங்கர்யம் செய்து வந்தனர்.

கூரத்தாழ்வான், முதலியாண்டான், நடாதூர் ஆழ்வான், பட்டர் போன்றோர் ஸ்ரீபாஷ்யத்தை ப்ரசாரம் செய்ய உதவினர்.–அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பெருமானாரின் எம்பெருமான்களுக்குத் திருவாராதனம் செய்து வந்தார்.-கிடாம்பிப் பெருமாளும் கிடாம்பி ஆச்சானும் திருமடைப்பள்ளியை நிர்வஹித்தனர்.-வடுக நம்பி உடையவருக்கு எண்ணெய்க்காப்பு ஸமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்தார்.-கோமடத்துச் சிறியாழ்வான் கலசப் பானையும் திருவடிஜோடுகளையும் எடுப்பார்.-பிள்ளை உறங்கா வில்லி தாஸர் கருவூலத்தை நோக்கினார்.-அம்மங்கி பால் காய்ச்சுவார்; உக்கலாழ்வான் ப்ரஸாதம் எடுப்பார்.-உக்கலம்மாள் திருவாலவட்டக் கைங்கர்யம் செய்வார்.-மாருதிப் பெரியாண்டான் உடையவரின் திருக்கைச் செம்பு பிடிப்பார்.-மாருதிச் சிறியாண்டான் மடத்துக்குத் தேவையான மளிகை, காய்கறிகள் ஏற்பாடு செய்வார்.-தூய முனி வேழம் தீர்த்த கைங்கர்யம் செய்வார்.-திருவரங்கமாளிகையார் ஶ்ரீபண்டாரம் நிர்வஹிப்பார்.-பிள்ளை உறங்கா வில்லி தாஸரின் மருமக்களான வண்டரும் செண்டரும் ராஜ சேவை செய்து ஆயிரம் பொன் சம்பாதித்து மடத்துக்குச் சமர்ப்பிப்பர்.-இராமானுஜ வேளைக்காரர் உடையவருக்கு மெய்க்காவலாக இருப்பார்.-அகளங்க நாட்டாழ்வான் பிற மத வித்வான்களுடன் தர்க்கிப்பார்.-

உடையவரின் பெருமை பெரிய பெருமாள், திருவேங்கடமுடையான், பேரருளாளன், திருநாராயணப் பெருமாள், அழகர், திருக்குறுங்குடி நம்பி, நம்மாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், ஆளவந்தார், பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமலை நம்பி, திருமாலை ஆண்டான், ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர், உடையவருடைய பல  ஶிஷ்யர்கள், ப்ரஹ்ம ராக்ஷஸு மற்றும் ஊமை முதலானோர்களால் வெளியிடப்பட்டது.-பெரிய பெருமாள் (ஸ்ரீரங்கம்) தன்னுடைய நித்ய விபூதியையும் லீலா விபுதியையும் உடையவருக்கு அளித்து உடையவரின் ஸம்பந்திகளுக்கும் அவற்றை அவர் இஷ்டப்படி வினியோகம் செய்யும்படி அருளினார்.-திருவேங்கடமுடையான் (திருமலா திருப்பதி)பெரிய பெருமள் எம்பெருமானாருக்கு அளித்த “உடையவர்” என்ற விருதை அங்கீகரித்தார். மேலும் அவர் உடையவரின் விருப்பத்தின் பேரில், தும்பையூர்க் கொண்டி என்னும் தயிர்க்காரிக்கு மோக்ஷம் அளித்தார்.-பேரருளாளன் (காஞ்சீபுரம்) உடையவர் யஞ்ய மூர்த்தியை வாதத்தில் ஜயிப்பதற்கு உதவினார். மேலும் முன்பு வேறு ஸித்தாந்த்தத்தைச் சேர்ந்திருந்து சிறு வயதில் உடையவருக்கு ஸாமான்ய ஶாஸ்த்ரம் கற்றுக் கொடுத்த யாதவ ப்ரகாஶனை உடையவருக்கு ஶிஷ்யராகி அவரிடமே ஸந்யாஸாஶ்ரமம் ஏற்றுக் கொள்ளச் சொன்னார்.-திருநாராயணன் (மேலக்கோட்டை) உடையவரைக் கொண்டு தன்னுடைய திவ்ய க்ஷேத்ரத்தைப் புனர் நிர்மாணம் செய்யச்செய்து உடையவரின் செல்லப் பிள்ளையாகி, உடையவர் தன்னை எடுத்து அணைக்கும்படி அமைத்துக் கொண்டார்.-அழகர் (திருமாலிருஞ்சோலை) உடையவரின் பெருமையை இரண்டு முறை வெளியிட்டார் – பெரிய நம்பி திருவம்ஶத்தார் உடையவர் உடையாருக்குப் பெருமாள் அருளப்பாடிட்டு அழைக்க, தாங்கள் உடையவருக்கு ஆசார்ய வர்க்கம் என்றெண்ணி ஒதுங்கி நிற்க, அழகர், நீங்களும் உடையவர் உடையார் கோஷ்டியில் சேர்தலே நன்று என்றார். மேலும், கிடாம்பி ஆச்சானிடம் உடையவரின் ஶிஷ்யர்கள் அகதி இல்லை என்று நிர்ணயித்துக் காட்டினார்.-திருக்குறுங்குடி நம்பி உடையவரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டு ப்ரஸித்தமாக ஸ்ரீவைஷ்ணவ நம்பி என்றே அழைக்கப்பட்டார்.-நம்மாழ்வார் ஸம்ஸாரத்தில் துன்பப்படும் ஆத்மாக்களைக் கண்டு வருந்தி பின்பு எம்பெருமானாரின் அவதாரத்தை உணர்ந்து ஆனந்தத்துடன் “பொலிக! பொலிக! பொலிக!” என்று பாடினார்.-ஸ்ரீமந் நாதமுனிகள் “நாம் உபதேசித்தால் சில ஆத்மாக்கள் உஜ்ஜீவனம் அடைவர் ஆனால் எம்பெருமானார் உபதேசித்தால் அனைவரும் உஜ்ஜீவனம் அடைவர், எப்படி வீர நாராயணபுரம் (வீராணம்) ஏரி எல்லோருக்கும் பயன்படுகிறதோ அது போல” என்றார்.-ஆளவந்தார் உடையவரைக் கண்டு “ஆம் முதல்வன்” என்று மொழிந்தார்.-பெரிய நம்பி எம்பெருமானாருக்கு ஆசார்யராக இருந்தும் அவரின் பெருமைகளைக் கண்டு அவருக்கு தண்டன் ஸமர்ப்பித்தார்-திருக்கோஷ்டியூர் நம்பி ஆசை உடையோர்க்கெல்லாம் ரஹஸ்யார்த்தங்களை உபதேஶித்த உடையவரின் பெரும் கருணையைக் கண்டு உடையவருக்கு “எம்பெருமானார்” (எம்பெருமானையும் விடப் பெரியவர்) என்ற விருதை அளித்தார்-திருமாலை ஆண்டான் உடையவருடன் சில கருத்து வேற்றுமைகள் கொண்டிருந்தார். ஆயினும், உடையவரின் பெருமைகளை உணர்ந்தபின் அவரை மிகவும் கொண்டாடி, தன் திருக்குமாரரையும் அவரிடமே ஶிஷ்யாராக ஆக்கினார்-திருவரங்கப் பெருமாள் அரையர் மிகவும் ரஹஸ்யார்த்தமான “ஆசார்ய அபிமானம்” என்பதை உடையவருக்கு உபதேஶித்து, தன் திருக்குமாரரையும் அவரிடமே ஶிஷ்யாராக ஆக்கினார்.-உடையவரின் ஶிஷ்யர்கள் அவரின் திருவடித் தாமரைகளில் மிகுந்த விஶ்வாஸத்துடன் இருந்து, அவற்றையே தங்களுக்கு உபாயமாகவும் உபேயமாகவும் கொண்டிருந்தனர்.-அமுதனார் உடையவர் விஷயமாக இராமானுச நூற்றந்தாதியை ஸமர்ப்பிக்க, அது 4000 திவ்ய ப்ரபந்தத்திலும் சேர்க்கப்பட்டது.-ராஜகுமாரியின் உடம்பில் புகுந்திருந்த ப்ரஹ்ம ராக்ஷஸு யாதவ ப்ரகாஶனைக் கணிசியாமல் எம்பெருமானாரை நித்யஸூரிகளின் தலைவர் என்று காட்டிக் கொடுத்தது.-உடையவரால் அருளப்பட்ட ஒரு ஊமை சில வருடங்கள் காணாமல் போய்த் திரும்பி வந்து “உடையவர் விஷ்வக்ஸேனரே” என்று கூறி மறைந்தார்.-இவ்வாறு பல பெரியோர்கள் உடையவரின் பெருமையை வெளியிட்டனர்.-

ஸ்ரீமந் நாதமுனிகள் தொடக்கமாகப் பல ஆசார்யர்கள் இருக்க உடையவருக்கு என்ன தனிச் சிறப்பு எனில் எம்பெருமான் பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், ஸ்ரீ ராமாவதாரமும் க்ருஷ்ணாவதரமும் அவர்களின் மற்றவர்களுக்குச் சரண் அளித்ததாலும் கீதோபதேஶம் செய்ததாலும் சிறந்ததாகக் கருதப்படுகின்றன-பல திவ்ய தேஶங்கள் இருந்தாலும், கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை (திருப்பதி), பெருமாள் கோயில் (காஞ்சீபுரம்) மற்றும் திருநாராயணபுரம் ஆகியவை ஆசர்யர்களுடன் இருந்த விசேஷ ஸம்பந்தத்தால் சிறந்ததாகக் கருதப்படுகின்றன.-பல ரிஷிகள் இருந்தாலும், வேத வ்யாஸ பகவான், பராஶர பகவான், சௌனக பகவான், ஶுக பகவான், நாரத பகவான் ஆகியோர் அவர்களின் வேத வேதாந்த புராண இதிஹாஸ வெளியீடுகளால் சிறந்தவர்களாக் கருதப்படுகின்றனர்.-பல ஆழ்வார்கள் இருந்தாலும் நம்மாழ்வார் அறிய வேண்டிய அர்த்தங்களையும், ஸித்தாந்த்தையும் தெளிவாக அறிவித்ததால் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறார்.-இதே போல, உடையவர் இங்கே கூறியுள்ள அனைத்து விஷயங்களிலும் பங்கு பெற்றதாலும், நம் ஸித்தாந்தத்துக்கும் ஸம்ப்ரதாயத்துக்கும் சிறந்த அடித்தளம் அமைத்ததாலும் அவற்றின் வளர்ச்சிக்கு வித்திட்டதாலும் மிகவும் கொண்டாடப்படுகிறார்.-

உடையவரின் ஶிஷ்யர்கள் அவர்களின் ஆசார்ய ப்ரதிபத்தியாலும், எம்பெருமானார் நம்மாழ்வாரின் திருவடி நிலைகளாக இருந்ததாலும், ஆழ்வார் “பொலிக பொலிக பொலிக” என்று இவர் திருவவதாரத்தை முன்பே அறிவித்ததாலும் “எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்” என்றே எப்பொழுதும் இருந்தனர். மேலும், உடையவர் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைக் கொண்டே நம் ஸம்ப்ரதாயத்தை வளர்த்ததால், ஆழ்வாரின் நேர் ஶிஷ்யராகவே கருதப்படுகிறார். ஆளவந்தாரும் இவரும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லையாயினும், ஆளவந்தாரின் திருவுள்ளக் கருத்தை நன்றாக அறிந்திருந்ததாலும் அவரின் ஆசைகளைத் தாம் பூர்த்தி செய்ததாலும், ஆளவந்தாருக்கும் நேர் ஶிஷ்யராகவே கருதப்படுகிறார்.உடையவர் ஸ்ரீராமாயணத்தில் வரும் விபீஷண ஶரணாகதி சரித்ரத்தைக் கொண்டு ஶரணாகதி தத்துவத்தை விளக்கிக் கொண்டிருந்த பொழுது, பிள்ளை உறங்கா வில்லி தாஸர் மிகவும் உள்ளம் கலங்கினார். அதைக் கண்ட உடையவர் தாஸரை “ஏன் வருந்துகிறீர்” என்று கேட்க தாஸரும் “அனைத்தையும் விட்டு ஸ்ரீ ராமனே ஶரணம் என்று வந்த விபீஷணனையே இவ்வளவு காக்க வைத்தால் நம் நிலை என்ன? நமக்கு மோக்ஷம் கிடைக்குமா?” என்று வினவினார். இதை கேட்ட உடையவர் தாஸரிடம் “கேளீர் பிள்ளாய்! எனக்கு மோக்ஷம் கிடைத்தால், உமக்கும் கிடைக்கும்; பெரிய நம்பிக்குக் கிடைத்தால், எனக்குக் கிடைக்கும்; ஆளவந்தாருக்குக் கிடைத்தால் பெரிய நம்பிக்குக் கிடைக்கும் …. இவ்வாறு நம்மாழ்வார் வரை சென்றால் அவர் திருவாய்மொழியின் இறுதியில் தான் மோக்ஷம் பெற்றதாக அறிவித்துள்ளதால், உமக்கும் கட்டாயம் கிடைக்கும்” என்று கூறி அவரைத் தேற்றினார்.

ராமானுச நூற்றந்தாதி ப்ரபந்தம் மூலம் அமுதனார் எம்பெருமானாரே மோக்ஷத்துக்கு உபாயம் என்றும் அவருக்கும் அவர் அடியவர்களுக்கும் சேவை செய்வதே நம் குறிக்கோள் என்றும் நிர்ணயித்துள்ளார்.-முதலியாண்டானின் திருக்குமாரர் கந்தாடையாண்டான் இப்படிப்பட்ட எம்பெருமானாரிடம் அவரின் ஒரு விக்ரஹத்தைப் நிர்மாணித்து அதை ஸ்ரீபெரும்பூதூரில் ப்ரதிஷ்டை செய்து அனைவரும் அவரைப் பிற்காலத்தில் சேவிக்குமாறு ஏற்பாடு செய்ய உத்தரவு கேட்க எம்பெருமானாரும் அனுமதி அளித்தார். ஒரு சிறந்த சிற்பியைக் கொண்டு ஒரு அழகிய விக்ரஹம் செய்யப்பட்டது. அந்த விக்ரஹம் எம்பெருமானாரின் திருவுள்ளத்துக்கு  மிகவும் ஏற்புடையதாக இருந்ததால் எம்பெருமானாரும் அதைத் தழுவிக் கொண்டார். அந்த விக்ரஹம் ஸ்ரீபெரும்பூதூரில் தை புஷ்யத்தன்று ப்ரதிஷ்டை செய்யப் பட்டது.-இவ்வாறு உடையவர் 120 வருடங்கள் இம்மண்ணுலகில் வாழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று நித்யஸூரிகளுடன் சேர்ந்திருக்க மிகுந்த ஆர்த்தி தலை எடுக்க, பெரிய பிராட்டி புருஷகாரத்துடன் பெரிய பெருமாளிடம் சென்று கத்ய த்ரயம் ஸேவித்துத் தன்னை இங்கிருந்து அங்கு அழைத்துக் கொள்ளுமாறு ப்ரார்த்தித்தார். பெரிய பெருமாளும் எம்பெருமானாருக்கு அன்றிலிருந்து ஏழாம் நாள் மோக்ஷம் கொடுப்பதாக வாக்களித்தார். எம்பெருமானார் பெருமாளிடம் “என்னுடைய ஸம்பந்த ஸம்பந்திகளுக்கும் எனக்குக் கிடைத்த பேறு கிடைக்க வேண்டும் ப்ரார்த்திக்க”, எம்பெருமானும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். உடையவர் பெரிய பெருமாளிடம் இருந்து விடை பெற்று, ராஜ நடையுடன் தன் மடத்தைச் சென்றடைந்தார். அவர் அடுத்த மூன்று நாட்களுக்குத் தன் ஶிஷ்யர்களுக்கு அரிய அர்த்தங்களை அறிவிக்க, அவர்கள் அதைக் கண்டு ஆச்சர்யப் பட, மேலும் மறைக்க முடியாது என்று உணர்ந்த உடையவர் “இன்றிலிருந்து நான்காம் நாள் பெரிய பெருமாள் அனுமதியின் பேரில் நாம் பரமபதத்துக்குச் செல்கிறோம்” என்று அருளிச்செய்ய, அங்கிருந்த ஶிஷ்யர்கள் கடல் கலங்கினாப் போலே திடித்து “நாமும் ப்ராணத் த்யாகம் செய்வோம்” என்று கூற, உடையவர் “அவ்வாறு செய்தால் உமக்கும் எனக்கும் இனி ஸம்பந்தம் இல்லை” என்று அருளித் தேற்றினார்.இவ்வாறு மேலும் பல அரிய உபதேஶங்களைச் செய்து, தன்னுடைய ஶிஷ்யர்கள் பலருக்கும் ஓரோர் பொறுப்பை அளித்தார். அனைவரையும் கூரத்தாழ்வான் திருக்குமாரரான பட்டருக்கு அனுகூலமாக இருக்கும்படி ஆணையிட்டார். அனைவரிடமும் அபராத க்ஷாமணம் செய்து கொண்டு மீண்டும் தன் சரம உபதேஶங்களை அருளினார். முக்கியமாக மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களின் குணங்களைக் கொண்டாடும்படியும், ஸஹோதரர்கள் போலே கூடி உழைக்குமாறும் ஆணையிட்டார். உபாயாந்தரங்களில் கண் வையாமல், அனைத்துப் பொறுப்பகளையும் கைங்கர்யமாகச் செய்யுமாறு கூறினார். மேலும், ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில் த்வேஷம் பாராட்டமலும் ஸம்ஸாரிகளைக் கொண்டாடாமல் இருக்கவும் ஆணையிட்டார்.-பின்பு, பட்டரைப் பெரிய பெருமாளிடம் அழைத்துச் சென்று, தீர்த்த மரியாதைகளை வாங்கிக் கொடுத்து, அனைவரிடமும் பட்டரே தர்ஶன நிர்வாஹம் செய்வார் என்றும், பட்டரிடம் “மேல்நாடு சென்று வேதாந்தியைத் திருத்தும் என்றும் ஆணையிட்டார். எம்பார் பெரியவராக இருந்ததால், தன்னுடைய ஶிஷ்யரான பட்டரை வழி நடத்திச் சென்றார்.

பரமபதம் செல்ல வேண்டிய நாள் அன்று, எம்பெருமானார் தன்னுடைய நித்யானுஷ்டான கர்மங்களான ஸ்நானம், பன்னிரு திருமண்கள் சாற்றிக்கொள்ளுதல், ஸந்த்யாவந்தனம் முதலியவை அனுஷ்டித்து மடத்துப் பெருமாள் திருவாராதனம் முடித்து, குருபரம்பரையை த்யானித்து, பத்மாஸனத்தில் அமர்ந்து, பரவாஸுதேவனில் தன் மனத்தை நிறுத்தி, ஆளவந்தாரின் திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானித்து, சாய்ந்து கொண்டு, தன் கண்களை அகல விரித்து, தன் திருமுடியை எம்பார் மடியிலும், தன் திருவடியை வடுக நம்பி மடியிலும் வைத்துக் கொண்டு, ஒளிமயமான ஆதிஶேஷ உருவத்தில் பரமபதத்தை நோக்கி எழுந்தருளினார். இதைக் கண்ட ஶிஷ்யர்கள் வேரற்ற மரம் போல் கீழே விழுந்து  கதறினர். சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டனர். பெரிய பெருமாள் தன்னுடைய இழப்பையும் பரமபதநாதனின் லாபத்தையும் நினைத்து வருந்தி, சுருளமுதை விலக்கினான். பின்பு உத்தம நம்பி மூலம் தன்னுடைய அனைத்து பரிகரங்களையும் எம்பெருமானாருக்குக் கொடுத்து விடுகிறான். மடத்தில், எம்பெருமானாரின் விமல சரம திருமேனிக்கு ஸ்நாநம், பன்னிரு திருநாமம் சாற்றுதல், தீபம் தூபம் போன்ற உபசாரங்கள் ஸமர்ப்பிக்கப்பட்டன. அபிமான புத்ரரான பிள்ளான், சரம கைங்கர்யங்களைச் செவ்வனே செய்தார்.திருவரங்கத்து ஸ்ரீவைஷ்ணவர்கள் மிகவும் உத்ஸாககத்துடன் வேதம், உபநிஷத், திவ்ய ப்ரபந்தம், வாத்யம், அரையர் ஸேவை போன்றவைகளை ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் எம்பெருமானார் சரம திருமேனியை எழுந்தருளிக் கொண்டு போகையில், பூவும் பொரியும் தூவிக்கொண்டு சென்றனர். பெரிய பெருமாளின் ஆணைப்படி, எம்பெருமானார் யதி ஸம்ஸ்கார விதியின் படி பூமிக்கடியில் பெருமாளின் வஸந்த மண்டபத்திலேயே திருப்பள்ளிப் படுத்தப் பட்டார். பெரிய பெருமாள் ஆணைப்படி, திருப்பள்ளிப்படுத்திய இடத்தின் மேலேயே முதலியாண்டான் எம்பெருமானாருக்கு ஒரு திருமேனியைப் ப்ரதிஷ்டை செய்தார்.-பின்பு, பல ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளியதைக் கேள்வியுற்று மிகவும் வருந்தினர். சிலர் எம்பெருமானாரின் பிரிவைத் தரிக்க முடியாமல் உயிரையும் விட்டனர். ஸ்ரீரங்கத்துக்கு வந்தவர்களோ பட்டர் அங்கு தர்ஶன நிர்வாஹம் செய்வது கண்டு தங்களைத் தேற்றிக் கொண்டனர்.-

சொல்லுவோம் ராமானுஜன் நாமங்களே-1..இளையாழ்வார்- 2-இராமானுசன்”-3-யதிராஜர் :–4-உடையவர்-5-லஷ்மண முனி-6-எம்பெருமானார்-7-சடகோபன் பொன்னடி-8-கோயில் அண்ணர்-9-தேசிகேந்த்ரன்-10-தபரேசர்-11-ஸ்ரீ பாஷ்யகாரர்-12-ஸ்வாமி தகப்பன்-13-ஸ்வாமி :-

ஸ்ரீமந் மஹாபூதபுரே ஸ்ரீமத் கேஶவ யஜ்வன: |
காந்திமத்யாம்
 ப்ரஸூதாய யதிராஜாய மங்களம் ||

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே | 
ஸ்ரீரங்க வாஸினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் ||


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிராட்டி பக்ஷ பிரமாணங்கள்–

August 16, 2026

அனவதிக அதிசயத்வ வஸனாத் ஈஸ்வர வ்யதிரிக்த அசேஷ கோசரஸ்யா அபி தத ஐஸ்வரஸ்ய ஈஸ்வர அபிமதத்வாந் ந த்வை ராஜ்யாதி தோஷ

அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ இதி விஷ்ணு பக்நீத்வவேஷேண ஹி ஸர்வஸ்ய ஜகத இயம் ஈஷ்டே

ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -இத்யத்ர து யத்யபி ஸர்வ பூதாநாம் இதி பிரதிசம்பந்தி நிர்தேசாத் ஸ்த்ரீ ப்ரத்யய அநு சாரேண ஈஸ்வர பத்நீ விவஷா ந சக்யா ததா அபி வாக்யாந்தர பலாத் அர்த்தஸ்ய ததாத்வ ஸித்தி–

அநவதிக அதிசய கல்யாண குண கணங்கள் -கொண்டவள்–எம்பெருமானைப் போலவே இவளுக்கும்-அநவதிக அதிசய-இவை தான் ஓர் ஒன்றே அபரிச் சேத்யமாய் இருக்கும்-அசங்யேய-
எண்ணிறந்து இருக்கை-கல்யாணசதஹ்ரதாநாம் லோலத்வம் சஸ்த்ராணாம் தீஷ்ணதாம் ததா
கருடா நிலயோ சைக்ர்யம் அனுகச்சந்தி யோஷித இயம் து பவதோ பார்யா தோஷை ரேதைர் விவர்ஜிதா ஸ்லாக்யா ச வ்யபதேச்யா ச யதா தேவீ ஹ்யருந்ததீ –ஆரண்ய -13-7-என்கிறபடியே
உள்ளது எல்லாம் அழகியதாய் இருக்கை-இவள் குணங்களுக்கு வ்யாவர்த்தம் அவன் குணங்கள் –
அவன் குணங்களுக்கு தோஷம் எது என்னில்-அவனுக்கு ஸ்வரூப அனுபந்தியான நிரங்குச ஸ்வா தந்த்ர்யம் உண்டு –-க்ரோத மாஹாரயத் தீவரம் வதார்த்தம் சர்வ ரஷஸாம்துஷ்ப்ரேஷ சோபவத் க்ருத்தோ யுகாந்தாக்னி ரிவ ஜவலன்-ஆரண்ய -24-34-என்று கோபத்தை அருளப் பாடிட்டுக் கார்யம் கொள்ள வேண்டும் என்கிறவனுக்கும் பூஜ்யையாய் இருக்கை –-அது தானும் இவளுக்கு இன்றிக்கே இருக்கைகுண கணாம்- இவை தான் திரள் திரளாய் இருக்கை-

அநவதிகத்வம் இஹ ஸ்வ அபேக்ஷயா உத்கர்க்ஷ அவதி ரஹித்வம் –ஸ்வாமி தேசிகன் –அநவதிக அதிசய கல்யாண குண-இங்கு அநவதிக-மேல் உள்ளவற்றுக்கு விசேஷணம் -இத்தை விட வேறே ஒன்றுமே உயர்வு அற்றது-

அனவதிக அதிசயத்வ வஸனாத் ஈஸ்வர வ்யதிரிக்த அசேஷ கோசரம் இத்யப்யுபகந்தவ்யம் அதாப் யஸ்யா ஈஸ்வர வ்யதிரிக்த அசேஷ கோசரஸ்யா ஐஸ்வரஸ்ய ஈஸ்வர அபிமதத்வாந் ந த்வை ராஜ்யாதி தோஷ–ஸ்வாமியுடைய ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி
ஸ்ரீ விஷ்ணு பத்நீயாகவே -பரதந்தரையாகவே -ஆளுகிறாள் என்கிறது அடுத்து – அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ இதி விஷ்ணு பக்நீத்வவேஷேண ஹி ஸர்வஸ்ய ஜகத இயம் ஈஷ்டே–ஆகையால் ஈரரசு படாது-

அநந்யாதீந கல்யாணம் அந்ய மங்கள காரணம்
ஜகன் நிதாநம் அத்வந்வம் த்வந்வம் வந்தாமஹே மஹ
-ஸ்ரீ பட்டரின் லஷ்மீ கல்யாண திவ்ய கிரந்த மங்கள ஸ்லோகம் (இக்கிரந்தம் இப் பொழுது கிடைக்கவில்லை )
த்வந்வம்-என்றது மிதுனமே சேஷி என்றவாறு -அதுக்கு நான்கு விசேஷணங்கள் –
1-அநந்யாதீந கல்யாணம்
2-அந்ய மங்கள காரணம்
3-ஜகன் நிதாநம்
4-அத்வந்வம்

ஆநீத் அவாதம் ஸ்வதயா ததேகம் -ஸ்ருதியும் பிராட்டிக்கும் ஜகத் காரணத்வம் உண்டு என்கிறது-ஆநீத் -பிரளயத்தில் ப்ரஹ்மம் மட்டுமே உள்ளது-அவாதம் ஸ்வதயா ததேகம் -பிராட்டியதன் கூடியே உள்ளது அந்தப் ப்ரஹ்மம் இதற்கே ஜகத் காரணத்வம் உண்டு என்கிறது-ஸ்வதயா இத்யநேந லஷ்மீ விசிஷ்டத்வம் உச்யதே –

ஏகதா ச டிவிதா சைவ தைஸ்தை ஸ்ருதியப்தி பாரகை
வ்யபதிஸ் யாவஹே ஸாஸ்த்ரே தாவாவாம் ஸர்வ காரணம் –
அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை 4 அத்யாய ஸ்லோகம் -எம்பெருமான் விஷ்வக்சேனருக்கு உபதேசிக்கிறார் -என்னையும் பிராட்டியையும் ஒன்றாகவும் வேறாகவும் கூறுவார்கள் -நாங்கள் இருவருமே ஜகத்துக்குக் காரணம் ஆகிறோம் –
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே –அதேவோவாக இருப்பவன் இவளால் தேவத்வம் பெறுகிறான்
ஸ்வதா த்வம் லோக பாவநீ -உலகைப் படைத்துக் காக்குமவளே மஹா லஷ்மீ-ஸ்ரீ விஷ்ணு புராணம்-

மஹாந்தம் ஆவி சாந்த்யேநம் ப்ரேரயாமி ஸ்வ ஸ்ருஷ்டயே
ப்ரேர்யாமாணத் தாத்தா தஸ்மாத் அஹங்காரச்ச ஜஜ்ஜிவாந்
–5-35-ஸ்ருஷ்டியின் பொருட்டு நான் அந்த மஹான் என்பதில் பிரவேசித்தேன் -இந்த செய்ய மூலமாக மஹத் என்ற அதில் இருந்து அஹங்காரம் வெளிப்பட்டது

பூர்வம் ய சங்கர ப்ரோக்தா மஹா மாயா ஸமுத்பவ
யா பத்னீ தஸ்ய கௌரீ சா ஜஜ்ஜே அபிமதிரத்ர து
–5-36 மஹா மாயாவில் இருந்து வெளிப்பட்டவளும் -சங்கரின் பத்னியும் ஆகிய கௌரி என்னுடையது என்ற எண்ணமாக வடிவம் எடுத்தாள்–நான் என்பது அஹங்காரம் -எனது என்பது அஹமதி என்பதாகும்

ஆவிஸ்ய அமும் அஹங்காரம் ஸ்ருஷ்டயே ப்ரேரயாம்யஹம்
ச பபூவ த்ரிதா பூர்வம் குண வ்யதிக ராத்ததா –5-37-
-அந்த அஹங்காரம் என்பதில் பிரவேசித்த நான் அதனை மேலும் வளரச் செய்கிறேன் – மூன்று குணங்களின் காரணமாக அந்த அஹங்காரம் என்பது மூன்று விதமாக உருவெடுத்தது –

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே
நஷ்டம் ப்ராக் தத் அலாபதஸ் த்ரி புவனம் சம்ப்ரத் யநந்தோ தயம்
ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருததே
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித்--3–இன்னமும் ஸ்ரீ பிராட்டிக்கு ஜகத் காரணத்வத்திலே அந்வயம் உண்டோ -என்று ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ பிள்ளானை பிரஸ்னம் பண்ண-ஆவது என் இவ்வர்த்தத்தில் சந்தேஹம் உண்டோ-ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யானி பிரஜாஸ் ச உத்பாதாயி தவ்யா —(விவாக பிரகரண ஸ்லோகம்) நம் இருவராலும் கார்யங்கள் செய்யப்பட வேண்டும் -பிரஜைகளும் ஸ்ருஷ்டிக்கப்பட வேண்டும் -என்று அன்றோ இருப்பது-இவள் சஹ தர்ம சாரிணி அன்றோ என்று அருளிச் செய்தார் ஸ்ரீ பிள்ளான் –இப்படி ஜகத் காரணத்வத்தில் இவளுக்கு அந்வயமுண்டோ என்று ப்ரஸ்னம் பண்ணின நடாதூர் அம்மாளைக் குறித்து பிள்ளான் அருளிச் செய்த வார்த்தையை இவ்விடத்தில் அனுசந்திப்பது -அதாவது -இவ்வர்த்ததில் ஸந்தேஹமுண்டோ –ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யானி ப்ரஜாஸ் சோத்பாதயி தவ்யா -(தம்பதிகளாகிய நாம் இருவரும் சேர்ந்து கர்மங்களைச் செய்ய வேண்டும் -பிரஜைகளைப் பிறப்பிக்க வேண்டும் )என்று பிரமாணம் சொல்லுகையாலே ஸஹ தர்ம சாரிணியான இவளுக்கும் அந்வயமுண்டு என்று அருளிச் செய்தது –

வித்யா ஸஹாயவாந் தேவ விஷ்வக்ஸேநோ ஹரி பிரபு
ஆதிகர்த்தா ஸ தேவாநாம் அப்ரமேயோ ஜனார்த்தன
-சாந்தி பர்வத்தில் மோக்ஷ தர்ம ஸ்லோகம்
வித்யா-மஹா லஷ்மி -மா தவன் -வித்யாபதி
ஸஹாய -ஸஹ அயதே ஏதேதி வா கச்சதீதி வா ஸஹாய
-இவள் அந்வயிப்பதால் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி லயம் அனைத்தையுமே செய்கிறான் –

மாயா வா ஏஷா நாரஸிம்ஹீ ஸர்வமிதம் ஸ்ருஜதி ஸர்வமிதம் ரஷதி ஸர்வமிதம் ஸம் ஹரதி –நரஸிம்ஹ தாபநீய உபநிஷத் –மாயா சப்தம் பிராட்டியைக் காட்டும் –

நாராயண பரம் ப்ரஹ்ம சக்திர் நாராயணீ ச சா வ்யாபகாவதி சம்ஸ்லேஷாத் ஏக தத்வமிவோதிதவ் -அஹிர்புத்ன்ய ஸம்ஹிதை

லஷ்ம்யா ஸமஸ்த சித் அசித் பிரபஞ்ச சேஷஸ் ததீசஸ்ய து சாபி ஸர்வம்
ததாபி ஸாதாரண ஈஸீத்ருத்வம் ஸ்ரீ ஸ்ரீ சயோ த்வவ் ச சதைக சேஷீ –
பாஞ்சராத்ர ஸம்ஹிதை-

யாமாலம்ப்ய ஸூகே நேமம் துஸ்த்ரம் ஹி குணோ ததிம்
விஸ்தரந்த்ய சிரேணைவ வயக்த த்யான பராயண
—ஸ்ரீ ஸாத்விக ஸம்ஹிதை-

ஸர்வ காம ப்ரதாம் ரம்யாம் ஸம்ஸார ஆர்ணவ தாரிணீம்
ஷிப்ர பிரஸாதிநீம் தேவீம் சரண்யாம் அனுசிந்தயேத் –
காஸ்யப ஸ்ம்ருதி –

கல்யாண நாம விகல நிதி காபி காருண்ய ஸீமா நித்யாமோதா நிகம வாசஸாம் மௌலி மந்த்ர மாலா
சம்பத் திவ்யா மது விஜயிந சந்நிதத்தாம் ஸதா மே சைஷா தேவீ சகல புவன பிரார்த்தநா காம தேனு –
-ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த மங்கள ஸ்லோகம்

ஸ்ரீரியஸ்: ஸ்ரீ: ஸ்ரீரங்கேசய தவச ஹ்ருத்யாம் பகவதீம்
ஸ்ரீரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம: ஸ்ருணுதராம்
த்ருசௌ தே பூயாஸ்தாம் ஸுகதரளதாரே ஸ்ரவணத:
புந: ஹர்ஷ உத்கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுக சதம்–
9-

ஸ்ரீயச் ஸ்ரீச் ஸ்ரீ ரங்கேச -திருவுக்கும் திருவாகிய செல்வத் திருவரங்கா – பட்டர் திரு மிடற்று சாய் போல் இருக்கிறதே என்று உணர்ந்து -என் காணும் -எங்கு வந்தீர் -என்ன விசேஷம் –என்றார் அழகிய மணவாளப் பெருமாள்-பகவதீம் ஸ்ரீரியம் பணாமச்–தேவரீருடைய திருத்தேவியாரை ஸ்துதிக்க-வந்தேன் -தேவரீர் திருச்செவி சாத்தி அருள வேண்டும்-அங்கே சென்று ஸ்துதிக்கலாகாதோ இங்கு வருவான் என் -என்றார்-தவச ஹ்ருதயம்- ஸ்ரீரியம் பணாமச்-உம் திரு உள்ளத்துக்கு இனியவளே அன்றோ-ஸ்ரீரியம்-த்வத்தோபி யுச்சைர் வயமிஹ பணாம –திருத்தேவியார் தேவரீருடைய திரு உள்ளத்துக்கு மிகவும் இனியவராகையாலே இங்கே தேவரீர் திரு முன்பே ஸ்துதிப்பதே நன்று என்று கொண்டு இங்கே வந்தேன் என்கிறார் – அப்படியாகில் சொல்லும் என்றார் பெருமாள் திரு உள்ளத்தில் பரம ஹர்ஷாவாஹமாக இருந்தாலும் மேலும் இவர்-வாய் சொல் கேட்க்கும் அபி நிவேசத்தால் –
ஸ்ரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம–தேவரீரைட் காட்டிலும் மிக உயர்ந்தவராக சொல்லப்போகிறேன் -அது அபிமதம் தானே என்றார்-பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே யாள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -என்று புகழ் பெற்ற நான் பர உத்கர்ஷம் ஸஹிப்பேனோ -என்று சிவிட்க்கென்று இருந்தார்-பர உத்கர்ஷம் சஹியாதவர் போலே இருக்கும் இருப்பைக் கண்டு-ஸ்ருணுதராம்-தேவரீரையும் நிறம் பெற வைக்கும் இவள் வைபவத்தை -அறவிஞ்சின அபிநிவேசத்தோடே – காதாரக் கேளாய் –-ஸ்ரவணத தே த்ருசௌ ஸூக தரளதாரே பூயாஸ்தாம்-திரு உள்ளப் பூரிப்பு வடிவிலே தொடை கொள்ளலாம் படி தேவரீருடைய திருக்கண்கள் ஆனந்த மிகுதியாலே கருவிழி சுழலமிட்டு கேட்டு அருள வேணும்-இவ்வளவியோ பின்னையும் உண்டோ என்ன-புனர் ஹர்ஷோத் கர்ஷாத் புஜயோ கஞ்சுகசுதம் ஸ்புடது -மேலும் மேலும் விண்ணப்பம் செய்ய உடல் பூரிப்பாலே -கஞ்சுகம் வெடிக்க வெடிக்க வேறு ஒரு கஞ்சுகம் சாத்தி
அதுவும் வெடிக்கும் படி -இப்படி ஹர்ஷ அதிசயம் எனக்குத் தெரிய வேண்டும் – -விக்ருதம் விளைக்க நல்லதாம் படி-த்வத்தோ அபி உச்சை -தேவரீர் உடைய உயர்த்திக்கும் மேலே -என்றும்-தேவரீர் எம் பெரிய பிராட்டியாரை புகழும் அத்தை விஞ்சின அதிசயம் என்றுமாம்-வயம் -பிராட்டி கடாஷம் பெற்ற ஹர்ஷத்தால் பன்மையில் –ஆளவந்தார் போன்ற பரமாச்சார்யர்களையும் சேர்த்து அருளுகிறார் என்றுமாம்-தொடங்கும் பொழுதே ஸ்ரீயஸ்ரீ -என்று புகழ்ந்து கொண்டே தொடங்கினது ஒரு சாதுர்யம்
பிராட்டியாரை எவ்வளவு உயர்தியாகப் பேசினாலும் திருவுக்கும் திருவாகிய செல்வா -என்னப்பட்ட தேவரீருக்கு ஒரு கொத்தை உண்டோ –த்வத்தோபி உச்சை -என்பது -தேவரீருடைய உயர்த்தியைக் காட்டிலும் உயர்த்தி என்பது தவிர தேவரீர் திரு வாக்காலே பிராட்டியை ஸ்துதித்தால் எவ்வளவு அதிசயமாக இருக்குமோ -அதிலும் விஞ்சின அதிசயமாக ஸ்துதிக்கப் போகிறேன் என்பதாம்
இங்கு வயம் என்று தம்மை பஹு வசனத்தாலே சொல்லிக் கொண்டது -இது தன்னாலே தமக்கு ஒரு கௌரவம் உண்டாவதாகத் திரு உள்ளம் பற்றி என்கை –

“ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜகதாம் ஸர்கோபஸர்க்க ஸ்திதி தீ:
ஸ்வர்க்கம் துர்கதிம் அபவர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வன் ஹரி:” |
“யஸ்யா வீக்ஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே சகிலம்
கிரீடேயம் கலு நான்ய தாசஸ்ய ரஸதா ஸ்யாதை கரஸ் யாத்தயா
” ||-ஸ்ரீ ஸ்தவம் – ஸ்லோகம் 1 ️–பகவான் ஹரி நாராயணன் உலகில் படைத்தல், அழித்தல் மற்றும் காத்தல் என்று எல்லாம் செய்யும் போது,
பிராட்டியின் அழகான முக குறிப்பு இணக்கத்திலேயே பகவான் இவைகளை செய்கிறான்.
இத்தகைய சக்தியுடைய, எல்லா காலங்களிலும், இடங்களிலும் அகல கில்லேன் இறையும் என்ற ‘ஸ்ரீய பதி’ பகவானுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கிற ஸ்ரீவிஷ்ணு பத்னியாகிய பிராட்டியே! மிகுந்த பக்தியும்,ஞானமும் அளித்து என்னை ரக்ஷிப்பாயாக!

சகர்த்த யஸ்யா பவநம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதீய ஜந்மபூ: |
ஜகத்ஸமஸ்தம் யதபாங்க ஸம்ஶ்ரயம்
யதர்த்தம் அம்போதிரமந்த்ய பந்திச ||
-ஶ்லோகம் 37 –எம்பெருமானே! எந்தப் பிராட்டிக்கு இருப்பிடமாக உன்னுடைய திருமார்பை ஆக்கினாயோ,-எந்தப் பிராட்டியின் பிறப்பிடமான திருப்பாற்கடல் உனக்கு விருப்பமான உறைவிடம் ஆனதோ,-எந்தப் பிராட்டியின் கடாக்ஷத்தை நம்பி இவ்வுலகம் இருக்கிறதோ, யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,-யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–

ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||
-ஶ்லோகம் 38–நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள் மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

ஸ்ரீ அருளிச் செயல்களில் மாலை -பத பிரயோகங்களும் வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்-

August 13, 2026

திருமாலை அறியாதார் திருமாலை அறியாதவர் ஆவர்

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே
– 2-8-ஸ்வ ஸ்பர்சத்தாலே அலை எறிகிற திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன்-வண்டுகள் நெருங்கி இருக்கிற செவ்வித் திருத் துழாய் மாலை சேர்ந்து -வரை போலே இருக்கிற பெரும் திரு மார்வை உடையராய் –-மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னக் கடவது இறே-செவ்வித் தாமரைப் பூ போலே மலர்ந்த திருக் கண்களை உடையவரை-பக்தியை உடையராய் இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே எழுந்து ஆடுவது பாடுவதாய் – ப்ரீதி பிரேரிக்க இருக்க மாட்டாதே சஞ்சரித்து-ஸ்ரீ கோயிலிலே ஸூலபரான படியைக் காட்டி என்னை எழுதிக் கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாளுக்கேv
பக்தி கார்யமான பித்தேறித் திரியும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மிக்கு பித்தேறா நின்றது -என்கிறார் –

மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை யிவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் —10-அதிக்ருத அதிகாரமாய் -சமஸ்க்ருதமாய் -தெரியாத சப்தங்களாலே சொன்ன அர்த்தங்களை வ்யக்தமாக எல்லார்க்கும் தெரியும்படி செவ்விய சொல்லால் சொன்ன-தெய்வ நன் மாலை – அப்ராக்ருதமாய் – கேட்டார் ஆரார்கள் செவிக்கு இனிய செஞ்சொலே -10-6-11-)-என்று நித்ய ஸூரிகள் கேட்டு அனுபவிக்கலாம் படி இருக்கிற மாலை தொடை-

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-வேத நன்மாலையில் வாசி -சர்வாதிகாரம் –அந்த தப பலமான லஷண லஷ்யங்களிலே குறைவற்று இருக்கும் பெருமையை யுடைத்தாய் –
சர்வாதிகாரமாய் -அத்யந்த விலஷணமான சப்த சந்தர்ப்பங்களையும் யுடைய
விலஷணமான தமிழாகிற மாலையைச் சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன்   ஆனேன் –யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8–-நித்ய முக்தரும் அடைவு கெட்டுச் சொல்லுவார்கள் –நானும் அடைவு கெட்டுச் சொல்லுவேன்-என் பிரபந்தம் அடைவு பட்டு இருக்கை-அவர்களில் ஏற்றம் –ஏதத் சாம காயன் நாஸ்தே -தை ப்ருகு -10-5- -இங்கே இருக்க யுண்டானபடி –

பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள்-
ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்
மேல் எழப் பாய்ந்து பிடித்து கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா -1-4 7- –இப்படி பெரியனான அவனை(மால் -வியாமோஹம் -பெருமை -கறுமை )-சிறியன் என்று பரிச் சேதியாதே–பெருமையை உடைய சந்த்ரனே –-உன் பெருமைக்கு ஈடாக – இவன் நம்மை ஆதரித்து அழைக்கப் பெற்றோமே -என்னும் உகப்பு தோற்ற ஓடி வா –

அன்னமும் மீன் உருவுமாய் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என்ன வலம் களைவாய் ஆடுக செங்கீரை யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று
அன்ன நடை மடவாள் யசோதை உகந்த பரிசு ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே -1 5-11 –ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாகரான ஸ்ரீ ஆழ்வார் அருளி செய்த -திராவிட ரூபமாய் –
இனியதான இசையோடு கூடி இருந்துள்ள -தொடைகளான இப் பத்தையும் -அப்யசிக்க வல்லவர்கள் –

தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே
மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே
உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2 7-4 –மருவும் தமநகமும் கலந்து கட்டின அழகிய மாலைகள் ஆனவை பரிமளம் கமழா நின்றன-உன் திருக் குழலிலே சேரத் தக்க மணம் பாழே போகா நின்றது என்கை-

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை
பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே
– 2-7 10-யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒன்றை சொல்லிலும் பண்ணிலே சேரும்படி சொல்லா நிற்கும்-ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த-இம் மாலையும் ஒரு பத்தே -என்று இதனுடைய ஸ்லாக்கியதையை சொல்லுகிறது –இதுக்கு ஒரு பலம் சொல்லாதே இத்தை ஸ்லாகித்து விட்டது இதனுடைய ரச அனுபவம் தானே இதுக்கு பலம் என்று தோற்றுகைக்காக –

போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே
-2 8-10 –பகவத் விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுகையே வேத தாத்பர்யம் என்று அறிந்து –கைக் கொள்ள வல்ல ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த மாலையான இத் திருமொழியில் –பாட்டுகள் தோறும் பின்னடியில் சொன்ன பிரயோஜனத்தை கைக் கொள்ள வல்ல பக்திமான்களாய்  உள்ளவர்களுடைய மங்களா சாசன விரோதியாய் உள்ள பாபம் தன்னடையே விட்டு போம் –

காரார் மேனித் நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி
ஆரா இன்னமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே -3-1-11- –இயல் அழகால் மிக்கு -அதுக்கு மேலே இனிய இசையோடு கூடி இருந்து உள்ள சந்தர்பத்தை சாபிப்ராயமாக வல்லவர்கள்-இந்திரியங்களை பட்டி புகாமல் ஸ்வரூப அநுரூபமாக நடக்கும்படி நியமிக்கும் அவனுக்கு
நித்ய கிங்கராய் பெறுவர்-

என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனைக்
கன்றின் பின் போக்கினேன் என்ற யசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள்
வல்லவர்க்கு இடர் இல்லையே -3 2-10 –ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ளவர்களுக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த சப்தார்தங்களினுடைய ரசத்தை உடைத்தான -தமிழ் தொடைகளான இப்பத்தை சாபிப்ராயமாக வல்லவர்களுக்கு ஸ்ரீ பகவத் விஸ்லேஷ துக்கம் இல்லை

வலம் காதில் மேல் தோன்றிப் பூ அணிந்து மல்லிகை வன மாலை மௌவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டு தீம் குழல் வாய் மடுத்தூதி ஊதி
அலங்காரத்தால் வரும் மாயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு
விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே – 3-4-9-வலக் காதிலே செம் காந்தள் பூவை அலங்காரமாக சாத்தி –இடக் காதுக்கு ஒன்றும் சொல்லாமையாலே –
ஒரு காதுக்கு சாத்திக் கொண்டு வருகிற இது தானும் ஓர் அழகாக சாத்திக் கொண்டு வந்தான் -என்னுதல்-ஒரு காதுக்கு சாத்தின அளவில் மல்லிகை மாலையை காண்கையாலே-அத்தை மறந்து இத்தை சாத்தி விட்டான் -என்னுதல்-வனம் -என்கிற இத்தை மல்லிகையோடு சேர்த்து -காட்டு மல்லிகை -என்னுதல்-அன்றிக்கே-வனம் என்று –வனப்பத்தை உடைத்தாய் -அழகாய் -மல்லிகையால் உண்டான அழகிய மாலை -என்னுதல்-மௌவல் மாலை-மௌவலாவது   -மல்லிகையின் அவாந்தர பேதம்
பூவை காயா என்னும் இடத்தில் பூவை யாவது காயாவின் அவாந்தர பேதம் ஆனால் போலே
மௌவல் மாலை என்று இங்கும் அந்த வனப்பு கூட்டிச் சொல்லவுமாம்-கீழ் –அணிந்து -என்றதை-
இங்கும் கூட்டி இம் மாலைகளை அணிந்து என்று சொல்லக் கடவது-இவை தான் திரு மார்புக்கு அலங்காரமாக சாத்துமவை இறே-சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டு –சிலிங்காரம் -சிருங்காரம் -அலங்காரம் என்றபடி-இத்தால் திருக் குழல் பணியாக சாத்தும் பூம் தொடைகளை சொல்லுகிறது

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 4-10 – ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ளார்க்கு நிர்வாஹராய்-அரவத்தமளிப் படியே –-ஸ்ரீ சர்வேஸ்வரனை எப்போதும் தம்முடைய திரு உள்ளத்தில் வைத்துக் கொண்டு இருக்கையாலே –-ஸ்ரீ விஷ்ணு சித்தர் -என்னும் திரு நாமத்தை உடையரான-ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த மாலையான இப்பத்தையும் –

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ பட்டார் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் நன்குடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 5-11 –ஸ்ரீ வில்லி புத்தூரிலே சர்வோத்தரராய்க் கொண்டு -விளங்கா நின்றுள்ள ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த சப்த சந்தர்ப்பமான இப் பத்தையும்

நாவலம் பெரிய தீவினில் வாழு நங்கைமீர்கள் இதோர் அற்புதம் கேளீர்
தூவலம் புரி உடைய திருமால்  தூய வாயில் குழலோசை வழியே
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகுலிப்ப வுடல் உள் அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே -3 6-1 – –கயிறு மாலையாகி வந்து –

கயிற்றிலே ஒழுங்கு பட சேர்த்த மாலைகள் போலே நிரை நிரையாக வந்து –இவனைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள்-அன்றிக்கே – குழலோசை வழியே வந்து -இவனைக் கண்டவாறே -லஜ்ஜித்து –
கவிழ்தலை இட்டு -( சூழ்ந்து )-நின்றார்கள் என்னுதல் -எதிர் செறிக்க மாட்டாமல் கவிழ்தலை இட்டு நின்றார்கள் -என்னுதல்-

ஞாலம் முற்று உண்டு ஆல் இலை துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகி மகிழ்ந்தனள்  என்று தாயுரை செய்ததனைக்
கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லார்க்கு இல்லை வரு துயரே
-3 7-11 –ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த –
சந்தர்ப்பமாய் ஸ்லாக்யமாய் இருந்துள்ள பத்துப் பாட்டையும் சாபிப்ராயமாக அனுசந்திக்க வல்லார்களுக்கு ஸ்ரீ பகவத அனுபவாதிகளுக்கு விரோதியாய் வருவதொரு துக்கம் இல்லை-

அல்லியம்பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம்போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு பார்த்ததும் ஓர் அடையாளம் –3-10-2-எல்லியம்போது-அம் எல்லிப் போது – இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில் -அழகிய-ஸூக அனுபவத்துக்கு ஏகாந்தமான
காலம் என்பதால் அம் காலம்– இராத்திரி வேளையிலே- – இனிமையான இருப்பாக இருந்ததான ஓர் இடத்திலே-மல்லிகை மா மாலை கொண்டு அங்கு பார்த்ததும் ஓர் அடையாளம் — மல்லிகைப் பூவினால் தொடுக்கப் பட்ட சிறந்த மாலையினால் நீர் ஸ்ரீ ராமபிரானைக் கட்டியதும் ஓர் அடையாளம் –வனவாசம் பற்றி இன்னும் அருளிச் செய்யவில்லை என்பதால் இது திரு அயோத்யையில் நிகழ்ந்ததாகக் கொள்வதே பொருத்தம் –

கரிய முகல் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து 
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை 
திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும் 
பரவு மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வார்களே
-4- 1-10 –வேதத்துக்கு நிர்வாஹரான 
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த மாலையான இப் பத்தையும் -ப்ரீதி பர வசராய் கொண்டு  
அடைவு கெடப் பேசும் மனசை உடைய பக்தராய் உள்ளவர்கள் -காண்கைக்கு தேட வேண்டாதே -நித்ய அனுபவம் பண்ணலாம் படி  சர்வ ஸ்மாத் பரனான அவனுடைய திருவடிகளை சேரப் பெறுவர்கள்.

எட்டுத் திசையும் எண் நிறந்த பெரும் தேவிமார்
விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் மலை
பட்டிப் பிடிகள் பகடு உறிஞ்சி சென்று மாலை வாய்த்
தெட்டித் திளைக்கும் தென் திரு மால்  இரும் சோலையே
– 4-2 -10-மாலை வாய்த்-ராத்திரி இடத்திலே-அந்த சம்ஸ்லேஷ ரசம் முற்றிக் கனியா நிற்கும்-இப்படி இருந்துள்ள சிறப்பை உடைய திரு மால் இரும் சோலை -என்கை-

மன்னு  நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் போகி மால் இரும் சோலை அதுவே – 4-3- 3-பொற்கென்ற பூக்களை உடைத்தான புன்னையும் -செருந்தியும் – புனத்தில் உண்டான வேங்கையும் கோங்கும் ஒழுங்கு பட நின்று பூக்கையாலே – திருமலை ஆழ்வாருக்கு பொன்னரி மாலைகள் சுற்றினாலே போலே இருக்கும் பொழில்களை உடைய மால் இரும் சோலை -அதுவே -கடல் வண்ணன் மலை –(பொன்னரி-மரம் தங்கம் -பூக்கள் மணிகள் போல் )

செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவ பிரான் மேல் 
பத்தராய் இறந்தார்   பெரும் பேற்றை பாழித் தோள்  விட்டு சித்தன் புத்தூர்  கோன்
சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார் 
சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே –
4- 5-10 –ஆசைவாய் சென்ற சிந்தையராகி -என்கிறபடியே  கரண த்ரயமும் –புறம்பு போதல் -கலந்து இருத்தல் செய்யாதே  ஸ்ரீ யபதி விஷயமாக செய்த இப் பத்துப் பாட்டையும் அப்யசித்தவர்கள் -ஸ்ரீ ஆழ்வாரைப் போலே – கரண த்ரயமும் ஒரு படிப்பட உடையராய்  ஸ்ரீ யபதி பக்கல் சென்ற மனசை உடையர் ஆவார்கள்-

பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்துறை புருடோத்தமன் அடி மேல்
வெங்கலி நலியா வில்லிபுத்தூர் கோன் விட்டு சித்தன் விருப்புற்று
தங்கிய வன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நா வுடையார்க்கு

கங்கையில் திரு மால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே -4- 7-11 –நிலை நின்ற பிரேமத்தாலே செய்த தமிழ் தொடை யான இது-ஒருகாலும் நீங்காதே வர்திக்கும்படியான நாவை உடையவர்களுக்கு –அதாவது – எப்போதும் இத்தையே சொல்லிக் கொண்டு திரியும் அவர்களுக்கு -என்கை-கங்கையில் குளித்து -திரு மால் கழல் இணைக் கீழே-இருந்த கணக்காமே-அதாவது
இத் திருமொழி தங்கின நா உடையார்களுக்கு -ஏதேனும் ஓர் இடத்தில் இருந்தாலும் – ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளில் பிறப்பால் வந்த ஏற்றத்தை உடைய கங்கையிலே ஸ்நானம் பண்ணி – ஸ்ரீ திருக் கண்டம் கடி நகரிலே எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீயபதியானவன் திருவடிகளின் கீழே நிரந்தர சேவை பண்ணி -இருந்ததோடு பிரயோஜனம் ஒக்கும் -என்கை-பகவத் ப்ரீதி இறே அதுக்கு பிரயோஜனம் –-அது இவர்களுக்கும் ஒக்கும் என்றது ஆய்த்து

பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல் 
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு 

இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 -8-10 –பாட்டு தோறும் திருவரங்கம் என்கிற திரு நாமத்தை உடைத்தான தமிழ்த் தொடையாக -ஸ்ரீ பெரியாழ்வார் விஸ்தரேண அருளிச் செய்த இப்பத்தையும் கொண்டு -மது கைடபர் களாகிற இவருடைய சரீரத்தையும் திரு வனந்த ஆழ்வானுடைய சுவாச உஷ்ணத்தாலே  தக்தமாக்கி பொகட்டவனை-இத் திரு மொழியைக் கொண்டு இப்படி விரோதி நிரசன சீலரான ஸ்ரீ பெரிய பெருமாளை  வாய் படைத்த பிரயோஜனம்  பெரும் படி   ஏத்த வல்லார்களுக்கு அடியாராய் உள்ளவர்கள் -நாங்கள் என்று தம்முடைய சம்பந்திகளையும் கூட்டிக் கொண்டு அருளிச் செய்கிறார் -இத்தால்-இத் திரு மொழியைக் கொண்டு ஸ்ரீ பெரிய பெருமாளை ஏத்துமவர்கள்  விஷயத்தில்  தமக்கு உண்டான பிரதிபத்தி விசேஷத்தை அருளிச் செய்தார் ஆய்த்து-

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே
  – 4-10 -10-அனுபவத்துக்கும் –
மங்களா சாசனத்துக்கும் விரோதி ஆனவற்றை போக்கிக் கொள்ளுகைக்காக அருளிச் செய்த
சப்த சந்தர்ப்ப ரூபமான இப் பத்து பாட்டையும்

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்–30-சங்கத் தமிழ் மாலை – குழாங்களாய்-என்னுமா போலே திரள் திரளாக அனுபவிக்க வேண்டும் பிரபந்தம் – பஞ்ச லஷம் குடியில் பெண்கள் திரள் திரளாக அனுபவித்த பிரபந்தம் இறேபிராட்டி ஆண்டாள் ஆனால் போலே உபநிஷத் தமிழ் ஆனபடி –பாவனமான அளவன்றிக்கே போக்யமுமாய் இருக்கையும் தலையாலே சுமக்க வேண்டி இருக்கையும் –கோதை சொன்ன மாலை –மாலையே கட்டின மாலை – மாலைக் கட்டின மாலை –அடுத்த பத்தியோடு இரண்டு தலையும் தாள் பூவும் நடுவே நாயகமுமாய் தொடுப்புண்ட மாலை

கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை
விருப்புடை ன் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே-1-10-விருப்பம் அடியாகப் பிறந்த -பிராப்ய த்வரை விஞ்சி -அருளிச் செய்த இனிய தமிழ் தொடை வல்லார்கள்- சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து-பகவல் லாபத்துக்காக மடல் எடுப்பரோபாதி-
காமன் காலில் விழ வேண்டும் படியான இவரைப் போல் அன்றிக்கே –-இப் பிரபந்தம் கற்றார்கள் -சம்சாரத்தை விட்டு நித்ய அநுபவம் பண்ணுகிற
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாக –
வானவர்க்காவர் நற்கோவையே -4-2-11–திருவாய் மொழி -அனுபவிக்கப் பெறுவார்கள் –

கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–3-10-இவ் விஷயத்தில் இவ்வளவான அவகாஹா நத்துக்கு அடி பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு யாய்த்து –இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்-பாட்யே கேயே ச மதுரம் -பால -4-8--எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே –திருவாய் -7-9-11-மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே– நித்தியமான ஸ்ரீ வைகுண்டத்திலே போய் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடன் கூட நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–——5-11-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றிக்கே-விஷயத்தை மாறுபாடுருவும் படி அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லவர்கள்-நமோ நாராயணாய வென்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே -என்று இறே தமப்பனார் வார்த்தை-இக்குடிக்காக உள்ளதோர் ஆசை இறே இது –மங்களா சாசனம் -அதுவே பலமாகப் பெறுவர்-

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து
மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-3-மண மாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்- நாத்தனராய் -இதுக்கு எல்லாம் கடவாளாய் அபிமானித்த துர்க்கை யாய்த்து-மாலைகளும் மடியும் (கூறைப் புடைவையையும் ) சூட்டி ஒப்பித்தாள்–இவளுடைய ஸ்பர்சம் தானே ஓன்று தங்கி அவனோடு அணைந்தால் போலே இருக்கிறது காணும் இவளுக்கு–வேத மந்த்ரங்களால் பரிசுத்திக்கப் பட்ட கூறைப் புடைவையையும் தேன் ஒழுகும் மண மாலையையும் சித்தப் படுத்திக் கொண்டு – அவனோடு கூடப் பிறந்தவள் என்னைத் தொட்டு மண மாலை சூட்டப் பெற்றேன் காண் தோழி –

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—6-11-அனுபவத்துக்கு பாசுரமிட்ட அத்தனை அல்லது நெஞ்சோடு கூட கவி பாடிற்று அல்லவாய்த்து –இவளோடு ஒத்த தரத்திலே பெண்கள் இத்தை அப்யசித்தார்கள் ஆகில் கிருஷ்ணனைப் போலே இருக்கும் வரனைப் பெறுவர்கள்புருஷர்கள் அப்யசித்தார்கள் ஆகில் பெரியாழ்வாரைப் போலே பகவத் பிரவணரான புத்ரர்களைப் பெற்று ஹ்ருஷ்டராவார்கள் –ஆண்டாளுக்கும் உப லஷணம் – பகவத் பிரவணரான புத்ரர்கள் என்றதுமாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே –பெரியாழ்வார் -1-7-11- என்றார் இறே தாம் கை கண்டவர் ஆகையாலே –

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-தாமச புருஷர்கள் புகுரும் தேசம் அன்று – சாத்விகர் இது கொண்டு கார்யம் கொள்ளார்கள்–பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து பகவத் அர்ஹமான வஸ்து -இங்கனே இழந்து இருந்து கிலேசப் படுவதே –-கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4- என்றும்-மானிடர்வர்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -1-5- அவனால் ஏற்றுக் கொள்ளப் படாமல் சம்சாரிகளுக்கும் பயன்படாமல் வீணாக போவதே –

வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல உறாமையும் உள் மெலிவும் ஓத வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னை
பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்–12-7-அவன் தான் இதர விசஜாதீயனாய் இருக்குமா போலே – அம்மாலையின் படியும் அத்தைக் கொடு வந்து ஸ்பர்சிக்க இது தணியும் –

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் – தனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து- நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே – அவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த –-அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்-

கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே —13-3-ஒரு மாலை பெற வேணும் என்று அல்ல இவளுக்கு நிர்பந்தம் –அவனும் மால் தானே-அவன் மார்விலே ஆசைப்பட்டு இட்ட மாலை வேணும் என்றதாய்த்து-

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே--14-2-மின்னும் மேகமும் சேர்ந்தால் போலே யாய்த்து ஸ்யாமமான திரு மேனிக்கு பரபாகமாய் உஜ்ஜ்வலமான வனமாலை அசைந்து வரும்படியாக –
மாலையிடுவான் -மாலா காரர் -இவனுக்கு பவ்யனாய்த்து இறே இருப்பது-கர்ப்ப தாசர் -என்னுமா போலே – தானும் மாலா காரர் மகள் இறே – தான் இட்ட மாலையையும் சாத்திக் கொண்டு விளையாடுமே-இம்மாலை யிட்டால் விக்ருதராய் இருக்கும் திரு ஆய்ப்பாடியிலே காண்கை அன்றிக்கே கண்ட பெண்கள் மயங்கி விழுவார்கள் – ஸ்ரீ பிருந்தா வனத்திலே ஸ்வரை சஞ்சாரம் பண்ணி விளையாடக் கண்டோம் –

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதக வாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —14-8-அக வாயில் தண்ணளி மிக்கு இருக்கும்
அதுக்கு நிபந்தனம் பிராட்டியோட்டை வாசனம்-பாஞ்ச ஜன்யத்தோடு சொல்லில் கண் எச்சில் படும் என்று பிரித்து அனுபவிக்கிறாள் –-கூராழி வெண் சங்கு ஏந்தி-திருவாய் -6-9-1- என்றும்-சங்கு சக்கரங்கள் -திருவாய் -7-2-1-என்பது போலே சேர்த்துச் சொல்லாமல் பிரித்து அனுபவிக்கிறாள் –

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக் கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?–1-2-காயாவின் அழகிய பூவாலே செய்யப்பட மாலை போலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை-அரணாகப் போரும் மதிளை யுடைய ஸ்ரீ கோயிலிலே-அப்படி பரிவனான ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற-சமயோ போதிதஸ் ஸ்ரீ மான் -என்னும் படி கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனை-

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள் பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள் கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-கேசியை அநாயாசேன பிளந்து – ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் -என்று உகந்த ஆஸ்ரீத-வ்யாமுக்தனை-

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-உள்ளில் அர்த்தத்தில் இழிய வேண்டாதே – பதங்கள் சேர்ந்த சேர்த்திகள் பார்க்க வேண்டாதே –
இது தானே ஆகர்ஷகமாய் இருக்கிற தமிழ்த் தொடை பத்தும் வல்லார்-சீலாதி குண பூரணராய் –
சர்வ ஸ்வாமிகளாய்- வத்சலராய் இருக்கும் -ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே யனுபவிக்க ஆசைப் பட்டால் போலே கிட்டப் பெறுவார்கள் –

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-ஸ்பர்ஹணீயமான ஸ்ரீ திருவரங்கத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்-திரு மேனியின் ஸ்பர்சத்தாலே-ஒருக்காலைக்கு ஒரு காலை செவ்வி செவ்வி பெறுமாய்த்து இட்ட திருமாலை –வாழ்த்தி –வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறபடியே-அவளும் இவனும் சேர்ந்த சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணி-மால் கொள் சிந்தையராய்-பித்தேறின மனஸை உடையராய்

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே
– 2-8-ஸ்வ ஸ்பர்சத்தாலே அலை எறிகிற திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன்-வண்டுகள் நெருங்கி இருக்கிற செவ்வித் திருத் துழாய் மாலை சேர்ந்து -வரை போலே இருக்கிற பெரும் திரு மார்வை உடையராய் –-மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னக் கடவது இறே-செவ்வித் தாமரைப் பூ போலே மலர்ந்த திருக் கண்களை உடையவரை-பக்தியை உடையராய் இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே எழுந்து ஆடுவது பாடுவதாய் – ப்ரீதி பிரேரிக்க இருக்க மாட்டாதே சஞ்சரித்து-ஸ்ரீ கோயிலிலே ஸூலபரான படியைக் காட்டி என்னை எழுதிக் கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாளுக்கேv
பக்தி கார்யமான பித்தேறித் திரியும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மிக்கு பித்தேறா நின்றது -என்கிறார் –

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே
2-10-இனிய சப்தங்களை உடைய தமித் தொடை வல்லவர்கள்-இவர் ஆசைப் பட்டுப் போந்த பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆகிற புருஷார்த்தத்தை லபிப்பார்கள் –-

நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா! என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..-தேநத்தேதம நு வ்ரதா-என்னுமா போலே
அவன் என் பக்கல் வ்யாமுக்தன் ஆன படி கண்டு நானும் பித்தேறினேன் –

மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க மயில் தழை பீலி சூடி
பொங்கிள வாடை அரையில் சாத்தி பூம் கொத்து காதில் புணர பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத உன் குழலின் இன் இசை போதராதே– 6-9-மங்களம் என்று சொல்லப் பட்டவை எல்லாம் உடைத்தாய் –தர்ச நீயமுமாய் இருக்கிற வனமாலை-மை போல் நெடு வரைவாய் தாழும் அருவி போல் தார் கிடப்ப –என்னுமா போலே-திரு மார்விலே விளங்க-

அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினில் ஏமத்தூடி எள்கி வுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான் குலசேகரன் இன் இசையில் மேவி
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே– 6-10-பாட்யே கே யே ச மதுரம் –என்னும்படியான தமித் தொடை பத்தும்-

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை தமக்கு முடி மேல் மாலையாக உடைய ஸ்ரீ பெருமாள்-அழகிய இசையோடு கூடின தமிழ்த் தொடை வல்லவர்கள்-இங்கே இருந்து அவதாரத்தில் ஏக தேசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே இருந்து புலம்பாதே
உபய விபூதி நாயகனை ஸ்ரீ பரம பதத்தில் நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-அழகிய இசையோடு கூடின தமிழ்த் தொடை வல்லவர்கள்-இங்கே இருந்து அவதாரத்தில் ஏக தேசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே இருந்து புலம்பாதே-உபய விபூதி நாயகனை ஸ்ரீ பரம பதத்தில் நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன

பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே— 8-11-ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய பால்ய அவஸ்தையில் ஸ்ரீ கௌசல்யார் சொன்ன பாசுரத்தை ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே சொன்ன தமிழ் தொடை-ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த-லஷணத்தால் குறைவற்ற இப்பத்தும் வல்லார்கள்
ஸ்ரீ திருத் தாயாராயும் அடியாராயும் அனுபவிக்கப் பெறுவார்கள் –

ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய் வனம் புக்க வதனுக்கு ஆற்றா
தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி கண் செல்லார் தாமே–9-11-பாட்யேகேயேச மதுரம் -என்று இவை பூரணமான தமிழ் தொடை வல்லவர்கள் –பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு விஷய பிரவணர் ஆகார்கள் –

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் – ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –9-தாது மிக்க கொன்றை மாலை என்ன -நெருங்கி சிவந்த ஜடை என்ன -இவற்றை உடைய ருத்ரன்-கொன்றை மாலையைச் சொல்லுகையாலே -போக ப்ரதானன் என்றும் – தீர்க்கத பாவாகையாலே செறிந்து ஸ்தான பாஹூள்யத்தாலே சிவந்து இருக்கிற ஜடையை உடையான் ஆகையாலே -அந்த போகம் தான் சாதித்து லபித்தது என்றும் சொல்லுகிறது –இத்தால் -போகமே புருஷார்த்தம் -அது தானே ஈஸ்வரனை ஆஸ்ரயித்து பெற வேணும் என்கிறது-

தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்னதென்ன வல்லமல்ல வாகிலும்
சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே –14-சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே-திருத் துழாய் -நாதத்வ சிஹ்னம் ஆகையாலும் -போஹ்யத்வ சிஹ்னம் ஆகையாலும்-ப்ராப்ய பூதனும் நீயே என்கை

கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே –38–இப்படி ஷூத்ரரான இடையருடைய சேஷ்டிதத்திலே இழிந்தவன் -சர்வ சேஷியாய் –-அவாக்ய அநாதர -என்கிற பூரணன் கிடீர் என்கிறார்
ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் வடத்தோடும் வனமாலை யோடும் கூடின திரு மார்வை உடையவனே –சத்தா ப்ரயுக்தமான சக்தி யதிசயத்தையும் -அவயவ சோபையையும் -அலங்கார
சோபையையும் அனுபவிக்கிறார்-

முத்திறத்து வாணியத்தில் இரண்டில் ஓன்றும்  நீசர்கள்
மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை யுய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ –68-சர்வேஸ்வரத்வ ஸூ சுகமாய் -தொடை செறிந்து ஸ்ரமஹரமாய் இருந்துள்ள திருத் துழாயாலே அலங்க்ர்தனாய் -சௌலப்யாதி கல்யாண குண உக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து வாழும் கோள்-நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் -இத்யாதிகளைச் சொல்லிப் புகழ்ந்து யாவதாத்மபாவி ஆநந்த நிர்பரராய் இரும் கோள்–ஏஷஹ் யேவா நந்த யாதி -என்னக் கடவது இறே

அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –74-பரம்பி கிளர்ந்து தெளிந்த திரைகளை உடைய ஷீராப்தியிலே நித்ய வாஸம் பண்ணுகிற ஆஸ்ரித வத்ஸலனுடைய வாத்ஸல்ய வாசியான திரு நாமத்தை வாயாலே-சொன்னால் 

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே -113–ஸ்வரூப அநு பந்தியான கல்யாண குணங்களால் வந்த வைலஷண்யத்தை உடைய சர்வேஸ்வரனை-நண்ணும் வண்ணம் எண்ணு –இப்படி துர்மாநியானவனுடைய பாதகத்தைப் போக்கினவன் –அநந்ய பிரயோஜனரான நம்முடைய துர்மாநாதிகளைப் போக்குவிக்கக் குறை இல்லை –நீ அவனை ப்ராபிக்கும் பிரகாரம் அவன் இரக்கமே என்று புத்தி பண்ணி இரு-அதாகிறது –அவனை நம் தலையாலே ப்ராபிக்க விரகு இல்லை –
அவன் தானே இரங்கி தன்னைத் தந்து அருள வேணும் என்று வ்யவஸ்திதனாய் இருக்கை=

சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே -118-தமோ அபிபூதி யோடும் -விஷயாந்தர ப்ராவண்யத்தோடும் -செல்லக் கடவ ராத்ரியும் – தேக யாத்ரா  சேஷமாக போது போக்கக் கடவ அஹஸ்ஸூம் – ராத்ரியோடே கூடின ஸாயம் சந்தையும் – அஹஸ் ஸோ டே கூடின ப்ராதஸ் சந்தையும் – கரண த்ரயங்களும் ஏக விஷயமானாப் போலே – சர்வ காலத்துக்கும் விஷயம் அதுவே யாகை –

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது வுடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடித்
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே–5—தண் துழாய் மாலை மார்பன் –சர்வேஸ்வரத்வ ஸூசுகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதமானவன் –இவர்கள் பற்றின துராரராத விஷயங்கள் போல் அன்றியே தன் வெறுமையை முன்னிட்டு என்னைப் பற்றுமவனை ரஷிக்க கடவேன் என்று தனி மாலை இட்டு கொண்டு இறே அவன் இருப்பது –அவன் ரஷகன் ஆகாதவன்றும் கிட்டுவார்க்கு அவ் வடிவும் ஒப்பனையுமே பிரயோஜனம் போரும் கிடீர்-திருமாலை அறியாதார் திருமாலை அறியாதவர் ஆவர்

எறியு நீர் வெறி கொள் வேலை மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர் கோனை ஏத்த
அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில்
பொறியில் வாழும் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே –13-பரிமளத்தையும் – செவ்வியையும் உடைத்தான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருத்யனாய் இருக்கும் இருப்புக்குத் தோற்று நித்ய ஸூரிகள் ஏத்துமா போலே இவர்களையும் ஏத்த வாய்த்து கண்டது –

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா
புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே-30-நம்முடைய குறைகளைப் பார்த்து அகல வொண்ணாதபடி, ஒழிக்க வொழியாத உறவே ஹேதுவாகக் கைப்பற்றக் கடவோமென்று காக்கு மியல்வினனாயிருக்கு மிருப்புத் தோற்றத் தனி மாலை யிட்டிருப்பவரன்றோ தேவரீர்;-நாங்கள் கரும பலனை அனுபவிப்பதற்கு நீர் தனி மாலை யிட்டுக் கொண்டிருப்பானேன்?

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே–34-நினைவுக்கு வாய்த் தலையான நெஞ்சிலே இருக்குமவன் ஆய்த்து- புறம்பு உள்ளான் ஒருவன் ஆகில் இறே-கண்ணால் கண்டத்துக்கு அவ்வருகு அறியான் என்று இருக்கலாவது –சதா சந்நிஹிதனாய் இருக்கை-போக்குப் பகுதி உண்டாகில் இறே போன போதாக மூலை அடியே நடக்கலாவது –மாலை –சர்வாதிகனை –ஆத்மாவும் உள்ளே வர்த்தியா நிற்கச் செய்தே சர்வத்தையும் அறிய மாட்டான் –ஆகாசம் வியாபியா நிற்கச் செய்தே
வ்யாப்யத்தை குறித்து அதுக்கு நியந்த்ர்தை இல்லை –இவன் –சர்வஞ்ஞனாய் சர்வ நியந்தாவாய் இருக்கும் –

வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்
தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பராகில்
ஊன மாயினகள் செய்யும் ஊன காரகர்கள்  ஏனும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –41-தேன் பெருகா நின்ற திருத் துழாய் மாலையைத் திரு முடியிலே அணியுமவனே! என்று அநுஸந்திப்பாராகில்(அப்படிப்பட்ட மஹாத்துமாக்கள்) போனகம் செய்த சேடம்–தாங்கள் அமுது செய்து மிகுந்த பிரஸாதத்தை-தருவர் ஏல் அன்றேஅநுக்ரஹிப்பாரானால் அப்போதே-புனிதம் –(அந்த ப்ரஸாதத்தைப் பெற்றவர்கள்) பரிசுத்தராவர்கள்.

வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்க மாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே–45-கவளமால் யானை கொன்ற கண்ணனை –
கவளம் கொண்டு இருப்பதாய் பெருத்து இருந்துள்ள ஆனையைக் கொன்ற கிருஷ்ணனை –-களபமால் -என்று எதுகைக்கு சேர பாடம் ஆன போது – களபம் என்று உருவத்தில் பெருத்த யானை -என்றபடி –அவதாரத்துக்கு பிற்பாட ரான தம்முடைய விரோதியைப் போக்கி கோயிலிலே வந்தார் ஆய்த்து –-கீழே ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றார் இங்கே ஆனை கொன்ற என்கிறார்-இத்தால்
தேவாநாம் தானவாநாஞ்ச -என்றது அழிந்தது-அங்கு உள்ளார் விரோதிகளைப் போக்கி தன்னை அனுபவிப்பித்தாப் போலே இவர் தம் உடைய பிரதிபந்தங்களைப் போக்கி தம்மை அனுபவிப்பித்த படி –
திரு அவதரித்த அன்று ஒளிந்து போன ஊரிலே கண் காண வந்து விரோதியை அழியச் செய்த ஏற்றத்தை அனுபவிக்கிறார்–யரங்க மாலைத் – அவதாரத்துக்கு பிற்பாட ரான தம்முடைய விரோதியைப் போக்கி கோயிலிலே வந்தார் ஆய்த்து –மாலை -ஆஸ்ரித விஷயத்தில் பெரும் பித்தர் ஆனவரை –விரோதி நிரசனமும் தத் பூர்வகமான ஸ்வ அனுபவமும் தன் பேறாய் இருக்கை-

மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை யிவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் —10-அதிக்ருத அதிகாரமாய் -சமஸ்க்ருதமாய் -தெரியாத சப்தங்களாலே சொன்ன அர்த்தங்களை வ்யக்தமாக எல்லார்க்கும் தெரியும்படி செவ்விய சொல்லால் சொன்ன-தெய்வ நன் மாலை – அப்ராக்ருதமாய் – கேட்டார் ஆரார்கள் செவிக்கு இனிய செஞ்சொலே -10-6-11-)-என்று நித்ய ஸூரிகள் கேட்டு அனுபவிக்கலாம் படி இருக்கிற மாலை தொடை-

கரிய மா முகில் படலங்கள் கிடந்தது அவை முழங்கிட களிறென்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டறை பைம் பொழில் மங்கையர் கோன் கலியனது ஒலி மாலை
அரிய வின்னிசை பாடு நல்லடியவர்க்கு அரு வினை யடையாவே
—1-2-10–ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு நியாமகரான ஸ்ரீ ஆழ்வார் ஒலி உடையதாம் படி சொன்ன தொடை ஆயிற்று-அரிய இன்னிசை-ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தம் வாயாலே அரிய இன்னிசை -என்பதே என்று அருளிச் செய்வர்-ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் சிலரோடு பிணக்கி-கையிலே தாளத்தை பொகட்டு-இந்த பதிகத்தை என்னுடன்- இயலிலும் இழியலாம் பொருளிலும் இழியலாம் இசையில் ஒருவராலும் இழிய ஒண்ணாது-அருமையால் நினைக்கிறது பெருமை-இனிமையால் நினைக்கிறது -சுவைப் பாட்டை –அருமை பெருமைகளையும் சுவைப் பாட்டையும் உடைத்தாய் இருக்கும்-

வண்டு தண்  தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே -1-3-10-திருமங்கைக்கு நிர்வாஹகரான ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த மாலை-

தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10-திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் ஒலி உடைத்தாம் படியாக சொன்ன சொல் தொடை

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை
வல்லவர் தீதிலரே-1-7-10–இரும் தமிழ் நூல் புலவன் – ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –செஞ்சொல் மாலை வல்லவர் –-அரிய அர்த்தத்தை உள்ளபடி காட்டவற்றான செவ்விய சொல் தொடை வல்லவர் –

செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே–1-8-10–திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
அழகிய தமிழில் செவ்விய சொல்லாலே செய்த தொடையை தரித்து சொல்ல வல்லவர்கள் நிச்சிதமாகவே கடல் சூழ்ந்த பூமிக்கு ரஷகராய் பின்பு நித்ய விபூதியும் தங்கள் இட்ட வழக்காம் படி
ஆகப் பெறுவர்கள் –

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லாரவர் வானவர் ஆகுவர் தாமே–1-10-10-

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார்

அண்டமாள்வதாணை அன்றேலாள் வர மருலகே—2-2-10-சீர் என்று கவிக்கு அலங்காரமாய் இருப்பது ஓன்று உண்டு – அத்தை சொல்லிற்று ஆகவுமாம் –அன்றிக்கே – இங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி அவை ப்ரேரிக்க பாடின மாலை என்னவுமாம் –

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே—
2-3-10-ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடைய ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –

நெடுமாலவன் மேவிய நீர் மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில்
கட மா களியானை வல்லான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடுமால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும் அன்றி யிலங்கொலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்குடை மன்னவராய் அடி கூடுவரே–2-4-10-திரு மங்கையில் உள்ளாருக்கு பிரதாநராய் இருப்பாருமாய் – யுத்தத்திலே மத்த கஜத்தை நடத்த வல்லருமான
ஆழ்வார் ஒலி உடைத்தாம்படி செய்த தமிழ் தொடை வல்லார்க்கு –

மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி தன்னை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே—2-8-10—-ராஜா தொண்டைமான் சக்கரவர்த்தி அவன் பக்ன அபிமானியாய் ஆக்கின பின்பாயிற்று ஈஸ்வரன் நல் முடி தரித்ததும்-சர்வேஸ்வரத்வம் நிலை நின்றதும்-முன்பு எல்லாம் ஈரரசு பட்டு இறே போந்தது –தான் குறையக் கடவது அன்றிக்கே கேட்டார் செவிக்கும் ஆகர்ஷகம் ஆகும்படியான இசையை உடைத்தாய்
ஆஸ்ரயம் தான் செவ்வியதாய் இருக்கிற இவற்றைக் கொண்டு

பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகர் மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகாண்டு திகழ்வர்களே—2-9-10–கவிக்கு சொல்லுகிற லஷணங்கள் ஒன்றும் குறையாதபடி அருளிச் செய்த பகவத் குணங்கள் நெருங்கத் தொடுத்த செவ்விய தமிழ்த் தொடை வல்லார் பெரிய பிராட்டியார் உடைய கடாஷத்தாலே லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு –

வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னை
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் என்று
வாரணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி யைந்தும் யைந்தும் வல்லார்
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே–2-10-10-பிறருக்கு இடரை விளைக்கக் கடவதான அது கொண்ட இடரைப் போக்கி அதின் பக்கலிலே வ்யாமுக்தன் ஆனவனை-

சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே–3-2-10–பரம உதாரரான திரு மங்கை ஆழ்வார் குறையாத ஓசை உடைத்தாக அருளிச் செய்த திரு மொழி பத்தும் வல்லார் ப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி வாழ்வாராகப் பெறுவர்- கைங்கர்ய ஸ்ரீ விச்சேதம் இல்லாமல் பெரும் தாளுடை பெருமான் அடிக்கீழ் பிரியாது இருப்பாரே –

பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னம் பைம்பூண்
நெஞ்சிடந்து குருதி உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணை கிற்பீர் நீல மாலைத்
தஞ்சடைய இருள் தழைப்பத் தரளம் ஆங்கே
தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்
செஞ்சுடர் வெயில் விரிக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-4—அவ் ஊரில் மாடங்களில் அழுத்தின நீல ரத்ன மாலையை தனக்கு தஞ்சமாக உடைய-அதாவது-ராத்ரியை தனக்கு அபாஸ்ரயமாக உடைத்தாய் இருக்கிற-இருளை தழைப்ப நடுவே அழுத்தின முத்தானது குளிர்ந்த சந்தரன் உடைய நிலாவைக் காட்ட இடை இடையே அழுத்தின பவளமானது புகரை உடைய
ஆதித்யன் உடைய பிரகாசத்தை காட்டா நின்றது –ஆக ஏக காலத்தில் இருளும் சந்த்ரோதயமும் வெய்யிலும் ஒக்கக் கண்டு அனுபவிக்கும் படியான தேசம் ஆயிற்று – (கோபமும் அருளும் ஓக்கக் காட்டி அருளிய ஸ்ரீ நரசிம்மன் போல்

செங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்ட முக்கி யடையார் சீயம்
கொங்கு மலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முகத் தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே–3-4-10—சதுர்முக சமரான பிராமணர் திரண்ட தேசத்திலே சீராம விண்ணகரிலே நித்யவாசம் பண்ணுகிற புண்டரீ காஷனை கவி பாடிற்று –தமிழுக்கு கடவார் திரள இருந்தால் இத்தையே எப்போதும்
ஒக்க கொண்டாட வேண்டும்படி இருக்கிற இத் தொடையல் பத்தும் வல்லார்-

நீடு பல் மலரிட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா
பாடலின் ஒலி சங்கினோசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்
ஆடலோசை யறா அணி யாலி யம்மானே–3-5-5-ஒழிவில் காலம் எல்லாம் – 3-3-1–எண்டிசையும் உள்ள பூக்களைக் கொண்டு -4-7-8- என்கிறபடியே-பலவகைப்பட்ட மலரை உடைத்தான மாலைகளை இட்டு உன்னுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருக்கிற திருவடிகளை தொழுது ஏத்துகிற –

புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென்னாலி யிருந்த மாயனை
கல்லின் மன்னு திண் தோள் கலியன் ஒலி செய்த
நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று
தாம் உடனே
வல்லராய் யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே–3-5-10–ஆழ்வார் அருளிச் செய்த நல்ல இன்னிசையான- தொடை-இதில் உண்டான ஆதராதி அதிசயத்தாலே விட மாட்டாமை பிரித்து பிரித்து அருளிச் செய்கிறார்-

மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி
நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை
கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை
ஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே
–3-6-10-நெடுமாலை – தூது விடவும் வார்த்தை சொல்லவும் மாட்டாதே நிற்கிறான் போலே காணும்-தூது விட மாட்டாத படி யாயிற்று அத்தலை பட்டுக் கிடக்கிறது – இத்தலை ஊர்த்த்வம் மாசான் நா ஜீவிஷ்யதே -என்றால்-ந ஜீவேயம் -என்னும் அத்தனை இறே அத்தலை –கண்டுரைத்த தமிழ் மாலை –-தூதருக்கு வார்த்தை சொன்னபடி கேட்டு அவன் முன்னே வந்து நிற்க கண்டு சொன்ன-

தாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் என்று
காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்தும்
மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே–3-7-10–திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த-இப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் – தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா – ஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்-

வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டைய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களியானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே–3-8-10—நல்ல வயலை உடைய திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்-ஒலியை உடைத்தாய் அருளிச் செய்த தமிழ் தொடை யாகிற இத் திரு மொழியைக் கற்றார்-

சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்
வங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ்
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே–3-9-10—சத்ருக்கள் உடல் துணியும்படியாக வாள் வீசுகிற பர கால ஆழ்வார் அருளிச் செய்த சங்கப் புலவர்கள் திரள இருந்து தமிழ் கொண்டாடப் புக்கால் இத்தையே கொண்டாடும்படியான தமிழ் தொடை
பத்தையும் வல்லார்கள் உபய விபூதியையும் தாங்கள் இட்ட வழக்காம் படியான பிரபாவத்தை உடையராய்ப் பெறுவர்-

சென்று சினவிடை ஏழும் பட அடர்த்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில்
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரி மேய விண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை
கன்றிநெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான் கலிகன்றி யொலி மாலை ஐந்தினோடு மூன்றும்
ஒன்றினோடும் ஒன்றும் இவை கற்று வல்லார்
உலகத்து உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே–3-10-10-திரு மங்கையில் உள்ளாருக்கு பிரதானரான ஆழ்வார் அருளிச் செய்த-ஒலி உடைத்தான தொடை எட்டும் இரண்டும் பத்தான இத்தை அப்யசிதவர்கள் (எட்டும் -ஐந்தும் மூன்றும் -விபவ அவதார இரண்டும் -முதலும் முடிவும் )

சீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன்  கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண்  விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே  –4-4-10-ஆழ்வார் அருளிச் செய்த-கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும்-அது கலசாத ஐந்தும்-

நல் லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர்  வானவர் தாமே —-4-7-10-தோள் வலி போலே கவி பாட வல்ல வலியும்-

ஏரார்  பொழில்  சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே —4-9-10-திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்தார் –பகவத் குணங்களை நிறையத் தொடுத்த தொடை-

வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன் மணி நீண் முடிப்
பை கொள் நாகத் தணையான் பயிலும் இடம் என்பரால்
தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச்
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே —5-4-2–குழலிலே பூக்களை வைத்து முலையை குங்குமத்தால் அலங்கரித்து இருந்துள்ளவர்கள்-படுக்கையை விட்டு ப்ரஹ்ம முகூர்த்தத்தில்
ஸ்நாநார்த்தமாக இழிவார்கள்-குழலிலே மாலையும் குங்குமுமாய்க் கலங்கி ஓடா நிற்கும் யாய்த்து –

அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன்
வல்லவர்  
தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10-நன்றான இசையோடு கூடின
தொடை நாலிரண்டு இரண்டினையும் – இதில் உண்டான ஆதரத்தாலே சேர்த்து அனுபவிக்கிறார்-உந்தி – வையம் -இரண்டும் உலகுண்ட வடதள சாயி விஷயம் -விளைத்த -வம்பு -ராமன் விஷயம்-கலை -கஞ்சன் -கிருஷ்ண விஷயம்-சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்-இப்படி நாலு இரண்டும்-இப்படி இவற்றில் ஒரு ப்ரேமமும் ஆசையும்-பண்டு -திருக் குறளன் விஷயம்-ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்-இப்படி இரண்டும்– இப்படி இவற்றில் ஒரு ப்ரேமமும் ஆசையும்

தாதாடு வன மாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாதாளன் குடமாடி  மது சூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே–5-5-6–தாது மாறாத –ஆடுகை யாவது -நடை யாடுகை-காட்டிலே தானும் தன்னேராயிரம் பிள்ளைகளும் கூடப் பறித்து செவ்வி அழியாத மாலையை – அது பரார்த்தம் என்று இருந்தோம் –

சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார்
கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே–
5-5-10–பர காலன் என்று பேர் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த சொல் தொடையைக் கற்று வல்லார்கள் –(இவரைப் போல் ) கைப்பறி பறிக்கை அன்றிக்கே இதன் பொருளை ஆசார்யர்களோடே கற்று அறியுமவர்கள்-தனி முத்துக் குடைக் கீழே இதில் அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தை அனுபவித்து பரம பதத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்- (இங்கே-நாடு பரிபாலனம் – கடமை நிறைவேற்றி அங்கு ஸூக அனுபவம் )

ஆ மருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
கா மரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நா மருவு தமிழ் மாலை நால் இரண்டோடு  இரண்டினையும்
தா மருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே —5-6-10–மனஸ் சஹகாரம் வேண்டாதே இத்தை ஒரு கால் நாக்கிலே இட்டால் பின்னை நா விடாதே இருக்கும் ஆய்த்து-

வண்டறை பொழில் திருப்பேர் வரி வரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ் சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே—-5-9-10-திரு மங்கைக்கு நிர்வாஹகராய் திண்ணிய திறலை உடைத்தான தோளை உடையரான ஆழ்வார்-அதி கிருதாதிகாரமான வேதார்த்தத்தை சர்வ அதிகாரமான சொல்லாலே அருளிச் செய்தார் ஆய்த்து –

நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும்
உறை கொள் புகராழி  சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே—5-10-10–உறையில் கிடக்க அவசரம் இல்லை யாய்த்து திரு மங்கை ஆழ்வார் வேலுக்கு சத்ரு நிரசனம் பண்ணி கறை கழற்ற அவசரம் இன்றிக்கே இருக்கும் இப் பத்தையும் முறையில் இவை பயில-

தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை
வானாரும் மதிள் சூழ்  வயல் மங்கையர் கோன் மருவார்
ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –6-2-10—திருமங்கை  ஆழ்வார் கையில் வேல் உருவிய சத்ரு சரீரங்கள் ஆயத்து சத்ரு சரீரங்களிலே குளித்த வேலை உடையரான ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார் –

தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்
காரார் புயல் தடக் கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –6-3-10-கார் காலத்திலே கழுத்தே கட்டளையாக நீரைப் பருகின மேகம் போலே கொடுத்து வளர்ந்த கையை உடைய ஆழ்வார் ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையை வல்லார் –

தாமத் துளப நீண் முடி மாயன் தான் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல்
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை
சேமத் துணையாம் செப்பு மவர்க்குத் திருமாலே–6-5-10–அழகிய புகரை உடைத்தான-காமம் என்று பிரகாமமாய்-பிரதிஷ்டமாய் -அத்தால் நினைக்கிறது மிகுதியாய்-மிக்க புகரை உடைய வேலைக் கையிலே உடைய திரு மங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாய் சொன்ன மாலை –செப்பு மவர்க்குத்-திருமால் -சேமத் துணையாம் – இவனை அடை கொடு பாழ் போக்குகை அன்றிக்கே இவனுடைய ரஷணத்தை முடிய தலைக் கட்டிக் கொடுக்கும் துணையாம்-கோலத் திரு மா மகளோடு உயிர்கள் காப்பான் -சாலப் பல நாள் உகந்து ஸ்ரீ யபதி அன்றோ

செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங் கண் மாலைப்
பொய்ம் மொழி  யொன்றில்லாத மெய்ம்மை யாளன் புல மங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம் மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்  பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே —6-6-10—யதா பூத வாதிகளாய் வேதத்துக்கு வியாச பதம் செலுத்த வல்லராய் இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற தர்ச நீயமான மாடங்களை உடைய திரு நறையூரிலே வர்த்திக்கிற புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை  கவி பாடிற்று –

நன்மை யுடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
பன்னி யுலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள்
மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –6-7-10–அரணாக போரும்படியான மதிளாலே சூழப் பட்ட திரு மங்கைக்கு ராஜாவான ஆழ்வார் ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையை-

ஒடா வரியாய் இரணியனை ஊன் இடந்த
சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே –6-8-4-திரு நீர் மலையிலே சந்நிஹிதன் ஆனவனை –ஜகத் ரஷணத்துக்காக முடி கவித்து மாலை இட்டுக் கொண்டு இருக்கிறவனை-

வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக்
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10–முன்பு எனக்கு ஏற்றமாக நினைத்து இருப்பது இது -( பண்டு காமனானவாறும் ) இப்போது எனக்கு பிறந்த செவ்வியும் கண்டி கோளே- இப்போது மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும் இதுவும் விஷயமான படி கண்டி கோளே –(நாராயண நாமத்தால் வந்த மஹிமை ப்ரத்யக்ஷம் )-

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ்  மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு  இல்லை துயரே -7-1-10—அவன் திருவடிகளில் நித்ய கைங்கர்யத்தை அதிகரித்த திருமங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடை –

நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நன்னீர்மையால் மகிழ்ந்து  நெடும் காலம் வாழ்வாரே –7-2-10–இத்தை அனுசந்தித்தார்க்கு -இது ஒரு சப்தமே -என்று கொண்டாடும் இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற சொல் தொடையைச் சொல்லும் அவர்கள் இத்தை சொல்லுகையே போரும் ஆய்த்து பிரயோஜனம் –

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து  ஆடியும்  தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே -7-3-10–தாம் அறிந்ததாக அனுபவித்து விடுகை அன்றிக்கே பின்பு உள்ளார்க்கும் அனுபவ யோக்யமாம் படி-பக்தாம்ருதம்–தொண்டர்க்கு அமுது உண்ண -என்கிறபடியே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் விருந்து இட்டார் ஆய்த்து –

பூ மாண் சேர் கருங்குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான் தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10—ஆழ்வார்
ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையைக் கொண்டு பகவத் விஷயத்தில் ருசி உடையீர் –ஹேய ப்ரத்ய நீகமாய் தர்ச நீயமாய் இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்–அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை உடையராய்க் கொண்டு தொழுது இம் மாலையைச் சூட்டுங்கோள் –பாகவத பிரபாவம் சூடுவதே பலன் -வேறே வேண்டாமே –

மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும்
வேலைக் கடல் போல் நெடு வீதி விண்டோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப்   புகையால்   அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே —7-5-7-போக யோக்யமான காலத்திலே வந்து புகுந்து பூம் படுக்கையிலே தங்கி அநந்தரம் அங்கு நின்றும் போந்து –

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை
சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10–திரு மங்கையில் உள்ளாருக்கு ராஜாவாய் உள்ளவர் பிரதி பஷ நிரசன சீலராய் உள்ளார் –சொல்களால் சம்ருத்தமாய் உள்ள தமிழ் தொடையை வாயாலே சொல்ல –

அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன்  மங்கைக் குல வேந்தன்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும்
வல்லார்
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மகிழ்வாரே –7-7-10–சொன்ன இனிய தமிழான இந்த நல்ல ரத்ன மாலையை-லஷணங்களில் குறைவற்று இருக்கிற இப் பத்தையும் அப்யசிக்க வல்லார் –இந்த்ரிய வஸ்தையை  அனுசந்தித்து அஞ்சின ஆழ்வார் (யோகியாக இல்லாமல் போகியாக) இத்தை பலமாகச் சொல்லுவான் என் என்னில் இவருக்கு அந்த ஐஸ்வர்யம் பாகவத சேஷமாக்குக்கைக்கு உடலாகையாலே அதுவும் புருஷார்த்தத்திலே புக்குப் போய்த்து காண்-என்று பட்டர் அருளிச் செய்தாராம் –

சீரார் நெடு மறுகில் சிறு புலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே —7-9-10–திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
ஒலியை உடைத்தாம்படி அருளிச் செய்த மாலை –

மெய்ந் நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண  மங்கையுள்  கண்டு கொண்டேனே —7-10-2-மாலை –
சர்வாதிகனை –

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்  நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9–மாலுருவாய் நின்ற விண்ணினை--த்ரிபாத்விபூதி -என்னலாம்படியான பரப்பை உடைய நித்ய விபூதி உக்தன் ஆனவனை –மாலை –-ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹமே வடிவாய் இருக்கிறவனை-

வண்டமரும் வன மாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-9-தன் நிலத்திலே நின்ற போது மணம் மட்டமாய் –திருக் குழலிலே  ஏறினவாறே இரட்டிற்றாய் இற்று இருப்பது – வண்டுகள் பரிமளம் போலே படிந்து கிடக்கும் யாயிற்று-

மா வளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்

பூ வளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-சந்தஸ் ஸூக்களால் குறைவற்று லஷணோபேதமுமான –

தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை  மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை  பாட வினையாய நண்ணாவே —8-3-10–எல்லாருக்கும் ஸ்பருஹை  பண்ண வேண்டும்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடையரான  ஆழ்வார் அருளிச் செய்த இந்த தமிழ் தொடையை –

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய்   கோற்றும்பீ -8-4-10–பிரமாணங்களில் கேட்டுப் போகை அன்றிக்கே
கண்ணாலே காணலாம் படியான நிரவதிக சம்பத்தை உடையருமாய் பிரதி பஷத்தை வென்று இருப்பாருமான ஆழ்வார் ஒலியை உடைத்தாம் படி சொன்ன இத் தொடையைக் கொண்டு –

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன்  கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே
—8-8-10-ஆழ்வார் அருளிச் செய்த
தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய தமிழ் மாலை சொல்ல-

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே —8-9-10-விஷய வைலஷண்யத்தை ஒழியவே
மிக்க நன்மையை உடைத்தாய் இருக்கிற இன் தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு
கைங்கர்ய ருசியை உடையரான  நீங்கள் –(பாவின் இன்னிசைப் பாடித் திரிவேன் -இன்னிசையே போதும் -நாவினால் நவிற்று இன்பம் எய்த )

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே —8-10-10–ஆழ்வார் ஒலியை உடைத்ததாக
அருளிச் செய்த மாலை-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10–திரு மங்கையில் உள்ளாருக்கு பிரதானராய் எல்லாருக்கும் ஸ்ப்ருஹை பண்ண வேண்டும்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடைய ஆழ்வார் ஒன்றும் குறையாத படி இனிய இசையாலே அருளிச் செய்த  -தம்மால் அளவிட ஒண்ணாமையால் பிரித்து அனுபவிக்கிறார்- (ஸூய அனுபவம் முதல் ஏழும் -பர உபதேசம் அடுத்த இரண்டும் -பலம் அருளி நிகமனம் )-

காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே   யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் —9-5-3–காலையிலும் மாலையில் போலே இருக்கை -பாதித்து முடியா நின்றது –காலையும் மாலை போலே பாதகமாகா நின்றது – காலை யரும்பி –மாலை யலரும் (தமிழர்கள் சொல்வர் )-என்கிறபடியேயேயாய்
இருக்கிற படியே இருக்கிறது இல்லை – ஏக ரூபமாய் நலியா நின்றது –

திண் இமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி
பண்டை வல்லவிவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் —9-5-5-தென்றலோடு கூட பெரிய கோட்பாட்டை உடைத்தாய் வருகிற மாலையும் –

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே —9-6-10–சாஸ்திர உக்தமான லஷணத்தில் ஒன்றும் குறையாத படி கவி பாட வல்லரான ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்த –

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம்
தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே —9-10-2–மௌவல் மாலையோடும் மல்லிகை மாலையோடும்
மது பானம் பண்ணின வண்டுகள் ஆடா நின்றன –-இவற்றோடு கூடி அணைந்த மாருதம் உண்டு -காற்று-அது அப்ராக்ருதமான பரிமளத்தை கந்திக்க வந்து உலவா நிற்கும் திருக் கோட்டியூரானே –

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை யாரமுதினைப் பைந்துழாய்
மாலை யாலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே —10-1-3–அந்த ரஸ்யதையில் உண்டான ஏற்றம் போலே
ஐஸ்வர்ய ஸூசகமாய் அழகிதான   திருத் துழாயை  உடைய சர்வேஸ்வரனை – திரு வாலியிலே கண்டு உகந்து போய் –

வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து
அன்று அரக்கர் குன்ற மன்னார் ஆடி யுய்ந்த  குழ மணி தூரத்தைக்
கன்றி நெய்நீர் நின்ற  வேற்கைக் கலியன் ஒலி மாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்றாடுமினே
—10-3-10—திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்தது –ஆக –ஆண் பிள்ளை கவி பாடுகிறார்-ஆண் பிள்ளைகள் தோற்று ஆடுகிறார்கள் –இப் பத்தையும் பாடிக் கொண்டாட உங்களுக்கு இனி வரக் கடவதொரு பயம் இல்லை –

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறிப் பால் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே —10-6-10-

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2–ரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய செய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய (நிரங்குச ஸ்வ தந்த்ரன் அன்றோ ) இது செய்யக் கடவார் இல்லை –

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய   மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –10-7-14--இத் திரு மொழியை வல்லவர்களுக்கு யசோதைப் பிராட்டியார் உடைய அனுபவித்தில் குறைய அனுபவிக்க வேண்டா -என்கிறார் –

அல்லிக் கமலக் கண்ணனை  யங்கோர் ஆய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே–10-8-10-

தொண்டீர் பாடுமினோ
சுரும்பார் பொழில் மங்கையர் கோன்
ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள்
தொண்டீர் பாடுமினோ
-10-10-10-அழகிய மாலையை உடைய-வேலை நிரூபகமாக உடைய
ஆழ்வார் அருளிச் செய்த மாலைகள்-தொண்டீர் பாடுமினோ –பல ஸ்ருதி சொல்லாது ஒழிந்தது
இது தானே பிரயோஜனம் -ஆகையாலே –

பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப்
பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ்  மாலை
கற்றாரோ முற்று உலகு ஆள்வர் இவை கேட்க
உற்றார்க்கு உறு துயர் இல்லை யுலகத்தே –11-3-10-

நிலையிட மெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1–மலைகள் அழிஞ்சு போகாத படி தரித்து ஏறிட்டுக் கொண்டு வருகிற ஜலம்  தாரகமான வஸ்துவை – சர்வாதிகனான சர்வேஸ்வரனை – அவன் அப்படி தன்னுருக் கொடுத்து வேற்றுருக்  கொண்டு அரியன செய்து ரஷியா நின்றான் -( பக்தானாம் ப்ரஸாததே ) உனக்குச் செய்ய வேண்டும் அருந்தேவை -அவனை மறவாது இருக்கை-( இதுவே அரிய சேவை நமக்கு

தளை யவிழ் கோதை மாலை யிரு பால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண்
அள வெழ வெம்மை மிக்க  வரி யாகி யன்று  பரியோன் சினங்கள் அவிழ
வளை யுகிர் ஒளி மொய்ம்பின் மறவோன தாகம் மதியாது சென்று ஒரு உகிரால்
பிள வெழ  விட்ட குட்டமது வைய மூடு பெரு நீரின் மும்மை பெரிதே —11-4-4–மத்ஸ்ய கூர்மோ வராஹஸ்ஸ நரசிம்ஹ –இறே-கட்டு நெகிழா நின்றுள்ள தொடை கொள் மாலை-பூ மாலை என்றும் (பேதம் )-இவை இரண்டு அருகும் அசைந்து வர அந்த தோளின் மாலைகளோடு கண்ணில் புறப்படுகிற நெருப்போடு வாசி இல்லை காணும் இவருக்கு – இரண்டு வட்டணித்த கண் –

மெய்நின்ற  பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும்  ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10-திருமாலைக் –-அவள் முன்னாக ஆஸ்ரயிக்கில் இறே
பாபங்கள் அகலுவது –பதினொன்று என்று கொள்ளக் கூடாது -இவை பத்தும் அவை பத்தும்வெளிக் கரணங்கள் நிந்தனை முதல் ஐந்து ‘ஆத்ம நிந்தித்து இவை ஐந்து -ஆத்ம சப்தம் மனசையும் ஜீவனையும் கீதையில் சொன்னான் அன்றோ )

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே-1-
மாலை –மாலாய் பிறந்த நம்பி -இறே –
ஆசா லேசம் உடையார் பக்கல் முக்தனாய் இருக்குமவனை –

வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே-8-நிராலம்பனாய் இருக்கிற என்னை
நிர்ஹேதுகமாக வந்து விஷயீகரித்தவனை என்கிறார் –மாலை –-அதுக்கடியான வ்யாமோஹம் –

ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர்  வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே -12–உலகங்கட்கு எல்லாம் ஆர் உயிர் ஆனவனே –அரங்க மாலை – கண்ணுக்கு தோற்றாதபடி நின்று தாரகமாகை அன்றிக்கே கண்ணாலே காண -வ்யாமோஹம் -தான் ஒரு வடிவு என்னலாம் படி இருக்கை –

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தட வரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-தேவ ஜாதிகள் சொல் போல் அன்றிக்கே –
தூய-பிரயோஜன நிரபேஷமான-மா மாலை சொற்கள் ஆகிற செவ்வி அழியாத -மாலையைக் கொண்டு –சூட்டுவன் தொண்டனேனே – இத்தால் அல்லது செல்லாத சபலன் – அநசூயை பிராட்டிக்கு சூட்டினாப் போலே-இப் பத்தால் அடி சூட்டலாகும் அந் தாமமே -திருவாய்மொழி -2-4-11- –நறிய நன் மலர் நாடி நன் குருகூர் சடகோபன் -திருவாய்மொழி -5-5-11-)

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20–பெரும் தன்மையை உடைய -வேலை உடைய -ஆழ்வார் அருளிச் செய்த பரமோதாரமான-தமிழ் மாலை-நாலைந்து -இருபதையும்-அநந்ய பிரயோஜனராய் கற்க வல்லார்கள் –-தெளி விசும்பான பரம பதத்தை ஆளப் பெறுவார்கள்-இந்திரனோடு …வெள்ளறை நின்றாய் -பெரியாழ்வார் திரு மொழி -2-81- இவர்கள் அர்ச்சித்து பல்லாண்டு பாடுவார்கள்-கலியன் அவன் செங்கண் மால் என்கிறார் -பெரியாழ்வார் திருவெள்ளறையான் என்கிறார் அவன் பெயரை கலியனும் ஊரின் பெயரை பெரியாழ்வாரும் சொன்னபடி –)

உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து – என்னொளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள்ளூரும்  இளம் தெங்கின் தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் நம்மூர் என்ன
கள்ளூறும் பைம் துழாய் மாலையானைக் கனவிடத்தில் யான் காண்பது கண்டபோது
புள்ளூரும் கள்வா நீ போகல் என்பன் என்றாலும் இது நமக்கோர் புலவி தானே–23-தோளிலே இட்ட தனி மாலையும் தாமுமாய் வந்த வரவை நீ காணப் பெற்றது இல்லை காண் – புழுகு நெய் ஏறிட்டுக் கொண்டு வருவாரைப் போலே நான் உகந்தபடி ஒப்பித்து வந்தார் –அவனூர் பட்டது அத்தனையும் படும் காண் அவன் உடம்பு – ரச சிரைகள் திறந்து மது ஒழுகா நின்றுள்ள திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே –கள்ளூறும் –-தன்னிலத்தில் காட்டில் திரு மார்பில் ஸ்பர்சித்த பின்பு செவ்வி பெற்ற படி –பைம் துழாய் – திருத் துழாய் குளிர்ந்து இருந்தது என்று நீ அறிந்தபடி என் என்ன – என்னை அணைக்கையாலே அறிந்தேன் -என்கிறாள் –

அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-இப்படி இத் தேசத்தில் நிற்பது இருப்பது கிடப்பது -ஆகைக்கு அடி என் என்னில்-மாலை –-ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆகையாலே –(மாலை) “மாயாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை“ என்கிறபடியே
தானும் வ்யாமோஹ சாலியாய் அடியார்களையும் வ்யாமோஹ சாலிகளாக ஆக்குமவன் என்க.)

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -30–பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் –-பன்னுதல் -பரம்புதல்-ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும் விளாக் கொலை கொண்டு இருக்கை –நூல் -சர்வ லஷணோபேதமாய் இருக்கை –
பின்பு லஷணம் கட்டுவாருக்கும் இது கொண்டு செய்ய வேண்டும்படி இருக்கை –தமிழ் -சர்வாதிகாரமாய் இருக்கை –மாலை-ஈஸ்வரனுக்கு சிரஸா தார்யமாய் இருக்கை –(எம்பெருமானும் அவனடியார்களும் உகந்து முடி மேற் கொள்ளும் பிரபந்தமாதலால் மாலை எனப்பட்டது.)

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-சொன்மாலை  – சொற்றொடை -என்னுமா போலே செவ்வி மாறாத மாலை-அநசூயையினுடைய ஒப்பனை போலே அழகியதாய் இருக்கை–அவனுடைய தார் -சர்வேஸ்வரத்வ ஸூசகம் ஆனாப் போலே இப் பிரபந்தமும் பகவத் பரத்வத்தைக் காட்ட வற்றாய் இருக்கை –சொன்மாலை -யென்று-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை மாறுபாடுருவப் பேசின படி –

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று
—-52–விலஷணமான புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு
அக்ரமாக ஸ்தோத்ரம் பண்ணி-எப்போதும் – விச்சேதிக்கக் கடவதன்றிக்கே –திருமால் – வேண்டிற்று எல்லாம் பெறுகைக்கு அடி

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது
——57-நயிக்கப் படுகின்ற -நீர்மை யுடைத்தான -திரு மந்த்ரத்துக்கு நிர் வசன ரூபமான இப் பிரபந்தத்தைக் கொண்டு-அவனுக்கு வாசகமான திரு மந்த்ரத்தை அப்யசித்தேன்-சொல் தொடை கற்றேன்-அநந்தரம் அனுகூல வ்ருத்தியையும் பண்ணினேன்   –

ஓரடியும் சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை
-100-திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய் போக்யதை அளவிறந்து இருந்து உள்ளவனையேசாதனமாக ஹ்ருதயத்தில் அத்யவசி  -ஸூலபனும் அன்றிக்கே விரோதி போக்காதே ஒழியிலும் விடப் போகாது –

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று——————16-அவன் ஆஸ்ரித வ்யாமுக்தனாய் இருக்க -இவன் தான் அவனை மனத்தடைய வைப்பதாம் – இவனாலே அவனை மனசிலே வைக்கப் போமோ – இவன் அவனை அறிக்கையும் ஆஸ்ரயிக்கையும் என்று ஓன்று உண்டோ-அவன் தானே ருசி ஜனகனாயும்
பிராப்தியும் பண்ணித் தரும் அத்தனை போக்கி இவன் யத்நிக்கை என்று ஒரு பொருள் உண்டோ -என்றபடி-

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு———–17-தன் நெஞ்சிலே மாலைக் கொண்டு -சர்வேஸ்வரனை தன்னுடைய ஹ்ருதயத்திலே கொண்டு-

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-அழகிய செவ்விப் பூ மாலைகளைக் கொண்டு ஆஸ்ரிதர்க்காக கொண்ட வடிவே தனக்கு வடிவாக நினைத்து இருக்குமவன் உடைய செவ்வித் திருவடிகளிலே சேர்த்து –

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-–கருமாலைப் – கறுத்து ஸ்ரமஹரமான நிறைத்தை யுடையனான சர்வேஸ்வரன் –-ஸ்ப்ருஹணீயமான வடிவு காட்டுவதற்கு முன்னே–ஸ்ரீ யப்பதியை நமக்கு ஸ்வாமிநியான பெரிய பிராட்டியார் பேணிக் காட்டும் -ஆதரித்துக் கொடு வந்து காட்டும்-திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் -மூன்றாம் -1-என்கிறபடியே அவளைக் கண்டால் இறே அவ்வடிவு தோற்றுவது-

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-வேத நன்மாலையில் வாசி -சர்வாதிகாரம் –அந்த தப பலமான லஷண லஷ்யங்களிலே குறைவற்று இருக்கும் பெருமையை யுடைத்தாய் –
சர்வாதிகாரமாய் -அத்யந்த விலஷணமான சப்த சந்தர்ப்பங்களையும் யுடைய
விலஷணமான தமிழாகிற மாலையைச் சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன்   ஆனேன் –யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8–-நித்ய முக்தரும் அடைவு கெட்டுச் சொல்லுவார்கள் –நானும் அடைவு கெட்டுச் சொல்லுவேன்-என் பிரபந்தம் அடைவு பட்டு இருக்கை-அவர்களில் ஏற்றம் –ஏதத் சாம காயன் நாஸ்தே -தை ப்ருகு -10-5- -இங்கே இருக்க யுண்டானபடி –

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83–மறை யாங்கு என உரைத்த மாலை – இவை  எல்லாத்தாலும் வருவது ஓன்று இல்லை இறே – சொல்லப் பட்டவன் தான் மறப்பான் ஒருவனாகப் பெற்றதாகில் -வாய் திறந்து ஏதேனும் ஒன்றைச் சொன்னான் ஆகில் – அது வேத சப்தமாம்படி இருப்பான் ஒரு சர்வேஸ்வரன் ஆய்த்து-வாக் விவ்ருதாஸ் ச வேதா -முண்டகம் -2-1-4-என்று சொல்லப் படுகிற சர்வாதிகனை –அங்கன் அன்றிக்கே – அர்த்தங்களை யுள்ளபடி சொல்லப் போந்த வேதங்களும் அது என்று சொல்லும் அத்தனை போக்கி இது என்று கொண்டு  பரிச்சேதித்துச் சொல்ல மாட்டாத பிரபாவத்தை யுடைய சர்வேஸ்வரனை –வேதங்கள் ஆங்கு என்று சொல்லிப் போனவனை என்றுமாம் –

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் –அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று
–85—அமுதன்ன சொன் மாலை ஏத்தித் தொழுதேன் – அவனையும் தேவர்கள் அம்ருதத்தையும் ஒழிய இவருடைய அம்ருதம் -அவனைப் பேசும் சொல்லு –சொன் மாலை –அவை -எம்பெருமானும் அமுதமும் -கோதாம்படியான சொல்லு –-எல்லா போக்யதையும் தன்னுடைய போக்யதையிலே பொதிந்து இருக்கையாலே அவனை அமுது என்கிறது –-இது அவன் தன்னையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய் இருந்துள்ள சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து-திருவடிகளிலே நிர்மமனாய் விழுந்தேன் –ஏத்தித் தொழுதேன் – அறிந்து கவி பாடினேன் அல்லேன் – ஏத்தித் தொழவே எம்பெருமான் அபிசந்தியாலே கவி யாய்த்து –சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று யஸ்மின் அக்ருத்ரிமகிராம் கதிரேகண்டா-என்று
பிரமாணங்களாலே சொல்லப் பட்ட நன் மாலை –-விலஷணமான எம்பெருமானை சர்வ சப்தங்களுக்கும் வாச்யனானவனை-வசஸாம் வாச்யமுத்தமம் -ஜிதந்தே -9–ஏத்தி நவின்று –
மிகவும் ஆதரித்து ஏத்தினேன் –-ஆதராதிசயம் தோற்றப் புகழ்ந்து கொண்டு சொல்லி நன் மாலை ஏத்தித் தொழுதேன் –

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு ——21-வாசம் என்று குளிர்த்தியாகவும் பரிமளமாகவும்-பரிமளத்தையும் செவ்வியையும் உடைத்தாய் சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனானவன் –

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில்  சென்றூத  -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும்
——-23-திரு மார்வில் ஸ்பர்சத்தாலே தன்னிலத்தில் நின்றாப் போலே இருக்கிற திருத் துழாய் மாலையை யுடையவன்–ஸ்ப்ருஹணீயமான திருவடிகளிலே –-மனம் விரும்பித் துழாய் மாலாய் வரும் என்று மேலே மனஸ்ஸோடே கூட்டவுமாம்-மனஸ்ஸானது ஹ்ருதயமான துழாய் கலங்கிக் கொண்டு மாலாய் வரும்-பிச்சேறா  நிற்கும்-வ்யாமோஹத்தைப் பண்ணித் துழாவி வாரா நின்றது – வண்டுகள் பட்டது படா நின்றது –

முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம்  கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண்  அலங்கல் மாலையான் தாள்  —–53-ஸ்ரமஹரமாய் அசைந்து வாரா நின்றுள்ள
மாலையை உடையனானவன் திருவடிகளை –

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-சொன்மாலை – தம்முடைய திருவந்தாதி

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே
 –21-சூட்டு நன் மாலைகள்
சூடுவதற்குத் தகுதியான நல்ல மாலைகள்-(தலையில் சூடி -தோளில் மாலை )
(நல் -இரண்டுக்கும் -ஹார மத்ய மணி நியாயம் தேஹளீ தீப நியாயம் -நாயக ஸ்ரீ போல் )மாலைக்கு  நன்மை யாவது-அப்ராக்ருதம் -ஆகவே நல்ல மாலை-அனுரூபமாய் புனுகினில் தோய்த்தால் போல்
அநுராக ரஞ்சிதம் -(பக்தியில் தோய்க்கப் பெற்ற )-சூட்டு -திருமுடி சாத்தாய்-மாலை -தோளுக்கு விடுவதாகவும்(மூன்று முடிக்கு உரிய அரசு-பார் அளந்த பேர் அரசே விசும்பு அரசே என்னை வஞ்சித்த ஓர் அரசே-வைர முடி ராஜ முடி கிருஷ்ண ராஜ முனி -மூன்று முடிக்கு உள்ள அரசே -நாயனார் )
கிரீட மகுட சூடாவதாம்சம்) அப்போது நன்மை மத்யம விளக்கு போல் இரண்டுக்கும் அந்வயமாம்-புஷ்பத்துக்குத் தூய்மையாவது-த்ரிவித தியாகம் -கர்த்ருத்வ மமதா பல தியாகங்கள் மூன்றும்
கர்த்ருத்வமும் மமதையும் ப்ரயோஜனாந்தரமும் ஆகிய மூன்றும் இல்லாமல்(புழு மயிறு ஸ்ராய் இல்லாமல் )-அநந்ய பிரயோஜனர் இடுமதாய் இருக்கை–-கெண்டை ஒண் கண்  இத்யாதி–மிக்க சீர் தொண்டர் இட்டதொண்டர் -லௌகிக ப்ரயோஜனாந்தரர்-சீர் தொண்டர் -மோக்ஷம் உபாசகர்-மிக்க சீர் தொண்டர் -ஸ்வயம் பிரயோஜனம் )ஏந்தி-பாரதந்தர்யத்தால்-யாவத் அங்கீ காரம் ஏந்திக் கொண்டு நின்று இருப்பதே தூய்மை (கொண்டு வைத்தேன் -நீ நீராட வேண்டும் பிரார்த்தனை தான் செய்யலாம் )தன்னை அங்குத்தைக்கு உறுப்பாக்கி , இருக்கும் அதுக்கு-மேற் பட வில்லையாய் இருக்கை
அங்குற்றைக்கு இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் என்கிற படி — மஞ்சளும் செம்கழு நீரும் வாசிகையும்–பெரியாழ்வார் திரு மொழி -2-4-4–என்கிறபடி  –(கொண்டு வைத்தேன் -இதுவே நம் கர்தவ்யம்-ஏற்றுக் கொள்வது அவன் இச்சை இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் )

சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே
 –20–-மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே – அவன் தோளில் இட்ட அழகிய திருத் துழாயைக் கொண்டு இவள் மேல் ஸ்பர்சிப்பது–சொல் மொழி என்று உப ஜீவிக்கும் மருந்தும் –தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே -என்று-மேல் பூசும் மருந்தும் –தேவதாந்த்ர ஸ்பர்சமும் தத் சம்பந்தி ஸ்பர்சமும் இவருக்கு சத்தயா பாதகமாய் இருந்த படியும்– பகவத் ஸ்பர்சமும் பாகவத ஸ்பர்சமும் சத்தயா தாரகமாய் இருந்த படியும் சொல்லுகிறதுஉலகு ஏழும் உண்டான் சொல் மொழி -என்று நாம உச்சாரண பேஷஜாத் நஸ்யந்தி சகலா ரோகா -என்கிறபடியே ரக்ஷகனுடைய நாம உச்சாரணமே ஆர்த்தி சாந்தி கரம் என்றபடி–மாலை யம் தண் யம் துழாய் -என்று போக்ய வஸ்து ஸம்ஸ்லேஷமும் ஆஹ்லாத ஜனன முகத்தாலே ஆர்த்தியை சமிப்பிக்கும் என்றதாயிற்று–கொண்டு சூட்டுமினே –என்கையாலே போக்ய விஷயத்திலே தலை வைக்கப் பண்ணி-அத்தாலே-நோ பஜநம் ஸ்மரன் -சாந்தோக்யம் -8-12- என்கிறபடியே ஆர்த்தியை நினைக்கைக்கும் வழி இல்லை இறே-ஆகையால் உபதேச மூலமான ஸப்த உச்சாரணமும் போக்ய அந்வயமும் விஸ்லேஷ ஆர்த்தி நிவர்த்தகம் என்றதாயிற்று –

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு  நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே
  –35–உலகு அளந்த இத்யாதி –-சர்வேஸ்வரன் பக்கல் உண்டான திரு துழாய் மாலையிலே பிரவணமான மனசை உடைய இவளுக்கு-மாலை நல்கிற்று எல்லாம்-மாலை நல்குகை-சத்த்தையை வைக்கை — சந்தான சாபம் வைத்த படி–மாலை சோல்வான் இத்யாதி–சிலரை ஹிம்சிக்கப் புக்கவர்களை ஹிம்சிக்கப் புகுவாரைப் போலே-சத்தையைத்  துளாவிக் கொண்டு வரா நின்றது-

மலர்ந்தே யொழிந்தில   மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே 
– 68-மாலைகளாகவும் – அம் மாலைகளாலே சமைந்த பொன் வாசிகை போலே –சுருளவும் இறே யவை தான் பூப்பது – கண்டாருடைய ஹ்ருதயங்கள் அபஹ்ருததாம்படி -என்னுதல் –தழைப் பந்தல் தண்டுற நாற்றி மலர்ந்தே ஒழிந்தில -என்னுதல் –மாலைகளாகவும் பொன் மாலையால் சமைந்த வட்டம் போலே சுருளவும் கொன்றை பூத்தலால்–அம்மலர் அலரத் தொங்குதல் -பந்தலில் கொம்புகளின் இடையில் தொங்க விட்டதை போல் உள்ளதால்-புலந்தோய் தழைப் பந்தர் -என்கையாலே இந்திரியங்கள் படியும்படியான விஷய பிரவணர் ஒதுங்க நிழல் என்றபடி–மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-என்கையாலே
ருஜு வாயும் (நேர்மையாயும் -சாத்விக ஆகாரம் அளவு விஞ்சி போல் ) வக்ரமாயும் (வளைந்தும் ராஜஸ தாமஸ ஆகாரங்கள் தள்ளுபடி தானே ) யுண்டான போக்ய வஸ்துக்களை ஸூசித்தப்படி-

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை  புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே 
– -69-புல்லிதான தலையை உடைத்தான  சந்த்யை யானது –(சிறிய பொழுது -ஆழ்வாருக்கு துன்பம் தருவது ஆகவே புல்லியது ) நக நிப ஸூ ஞ்சதி யாந்தமோவல்லய-என்கிறாப் போலே சந்த்யையினுடைய உபக்கிரமம் இத்தனை – சந்த்யை யானது அல்ல காண் இது –புன் தலை மாலை -நலியும் மாலை -பகலுக்கும் இரவுக்கும் நடுவில் சிறிய பொழுது என்றுமாம்-புன் தலைமாலை-புல்லிதான தலையை யுடைத்தான ஸந்த்யையானது-

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே
 – 73–மாலைப்பொழுதுக்கும் இளம்பிறைக்கும் வருந்தும்படி இவளைத் தனியே விட்டிருத்தல் உலக முழுவதும் ரக்ஷிக்கும் அவனுடைய பெருந்தன்மைக்குச் சிறிதும் ஏழாது என்கிறாளாயிற்று.-ஆகாசத்தில் நின்றும் மிகுந்த வெளுத்த நிலாவாகிய பாலை உலகமெங்கும் நிறையச் சுரந்து சொரிகிற சந்திரனாகிய காமதேநுவின் சுரப்பு அதிகரித்திருக்கின மாலைப் பொழுதிலே இத் தலைவி தனிமைப்பட்டுத் தளர்ந்திருப்பதானது-ஆழியங் கையவன் அனைத்துலகங்களுயும் காத்தருளுந் திறத்துக்குப் பொருந்துமோ? (பொருந்தாது) என்றவாறு.-முதிர்ந்த மாலையில் வெளுத்த சந்த்ரனாகிற ஆகாசத்தில் உள்ள ஸூரபியானது லோகங்கள் எல்லாம் நிறையும்படி வான் -மிகவும் வெளுத்த நிலாவாகிற முதிர்ந்த பாலை சுரக்குமாயிற்று முதிர்ந்த மாலை பால் சுரக்கும் காலமாகையாலே அற முதிர் மாலை யாயிற்று-

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு    புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே
 –  -77-மாலைப் பொழுதை மகளாகவும் -சூரியனை அவள் கணவனாகவும் -சந்திரனை அவர்கள் பிள்ளையாகவும் சூரியனது சிவந்த கிரணங்களை செங்கோலாகவும் சூர்யன் அஸ்தமிப்பதை கணவன் இறந்ததாகவும் -அஸ்தமித்த திக்கை அவன் இறந்து விழுந்த போர்காலமாகவும் அஸ்தமிக்கும் காலத்து செவ்வானத்தை அவன் ரத்தம் தெரித்ததாகவும் உருவாக்கப் படுத்தியவாறு-புன்மாலை என்றதால் செக்கர் நல் மேகங்களைக் காட்டி பீதாம்பரம் சாத்திக் கொண்டு மேகம் போன்று இருக்குமவர் திருமேனியை ஸ்மரிப்பித்து நலிகிற படி சொல்லிற்று-

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே  
– – -85–மாற்றுடைய பொன் போலே ஒளியை யுடைய சுடரானது இருளோடே வந்து கிட்டி மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் அக்குரங்கின் கையிலே மாணிக்யம் அகப்பட்டால் போலே படும்படியான மாலையிலே-அன்றியே மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் போலே என்றுமாம்–குரங்குதலாவது வளைதலாய்-உதித்த ஆதித்யன் உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கொடுமையைச் சொன்னபடி-

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே 
– – 92-அவ் வடிவைக் காண்கைக்கு  அர்த்திப்பார்  நேரும் அளவல்ல வாயிற்று இவர்கள் நேருவது –நாள் தோறும் –அது தன்னிலும் -இடைவிடாது தொழுவார்கள்

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –
 – -93 —உத்பவ அபிபவ ரூபத்தாலே ஆதித்யன் இருளை மேலிடுவது –ராத்திரி ஆதித்யனை- மேலிடுவதாகிற இத்தைக் கண்டு வைத்தும் –நந்தத் யுதித ஆதித்யே-விடிந்த வாறே அபிமத விஷயத்தை சாதிக்கைக்கு த்ரவ்யார்ஜனம்-பண்ணுக்கைக்கு ஈடான காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள்–கங்குல் ஆகிற குறும்பர் அவன் கிரணங்களைப் பரக்க விட ஓடா நிற்பர்கள் இறே-மாலையிலே பெரிய பிரதாபத்தை யுடைய ஆதித்யனை அழித்து அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக்கொள்வர்கள்–மாலை –இவன் அனுசந்திக்க என்று உபக்ரமிக்கும் அத்தனை இறே வேண்டுவது –மேல் உள்ளது எல்லாம்-தானே செய்து -கொடு வந்து மேல் விழும்படியான வ்யாமோஹத்தை உடையவனை 

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே –
 – 97–தொல்லை மால் -சம்ச்லேஷம் பழையது என்றவாறு -அநாதியான வியாமோஹம் கொண்டவன் -என்றும் அனைத்துக்கும் பழைய பெரியவன் என்றுமாம் –பகவத் ஸ்வரூபத்தை முழுவதும் ஸாக்ஷாத்கரிக்க விரும்பித் தொடங்கினார்க்குக் காலம் முடிந்துபோவதேயன்றி அவ்வநுபவம் முடிந்து கண்வாங்குந் தன்மையில்லையென்று ஆழ்வார் அன்பர்க்கு அருளிச் செய்கிறார்.-ஸூர்யன் உதிப்பதும் மீண்டும் அஸ்தமிப்பதுமாய் இப்படியே நாள் திங்கள் நோக்கி இரங்குதலே யன்றி நித்யஸூரிகள் எப்பொழுதும் கைகூப்பிக்கொண்டு கைங்கர்யம் பண்ம் பொருட்டு சூழப்பெற்ற அநாதியான எம்பெருமானைக் கண் களிப்பக் கண்டு முடிக்க வேணுமென்பதோர் ஒப்பற்ற அன்பைக் கொண்டு நிற்பவர்களுக்கு அவன் பக்கல் வைத்தகண் வாங்கி இமைக்க இடமுண்டோ வென்கிறார்.-தொல்லை மால்’ என்றதற்கு ஜீவாத்மாக்களிடத்தில் அநாதியாகவுள்ள வ்வயாமோஹ முடையானென்றும் எல்லாவற்றுக்கும் பழமையான பெரியோனென்றும் பொருள் கொள்வர்.-

வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இது வன்றே
மேலைத் தாம் செய்த வினை–44—ஸத்வ கார்யமான ஞானத்தாலே ரஜஸ் தமஸ்ஸூக்களைத் தள்ளி
ஸர்வேஸ்வரனை வாழ்த்தாதே இருப்பர்கள்-இது வன்றோ சம்சாரம் நித்யமாக இவர்கள் பண்ணின பாபம்–இது பராசர பட்டர் நிர்வாகம்=ஈஸ்வரனுடைய குணங்களில் சேர்ந்த நெஞ்சும் குணம் ஒன்றையுமே ஏத்தும் வாயும் அல்லாத குணங்களிலும் உள் புக்கதில்லை யாகிலும் எல்லா குணங்களிலும் உள் புகும்படி ஆராய்ந்து ஸர்வேஸ்வரனை ஏத்தாது இருப்பர்கள் இது வன்றோ பண்ணின பாபத்த்தின் பலம் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் நிர்வாகம்-

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு
–65-அபரிச்சின்னனாய் -(தொல் மாலை)-ஸ்ரீ ஸூக்தி –சொல் மாலை –
மற்ற மாலைகளில் நின்றும் வ்யாவ்ருத்தமாக அன்றோ இருப்பது –வாடாத மணம் மாறாத மாலை தானே சொல் மாலை-அவனோ பராத்பரன் -நாம் சூட்டும் மாலை போகுமோ என்கிற சங்கைக்கு
தன்னைத் தாழ விட்டு நாராயணன் கேசவன் மாதவன் ஆனபடியால் வாத்சல்யம் மிக்கு -அழகு ஈர்க்கும் -பிராட்டி இருக்க ஏற்றுக் கொள்ள வைப்பவளும் அருகில் உண்டே

திருத் துழாய்த் தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் -கட்டுரையா –திருத்துழாய்மலர்கள் நிறைந்த மணம் மிக்க மாலையையும் அபிநயித்துக் காட்டினாள்.

கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை சீரார் திரு மார்வின் மேற்கட்டிசெங்குருதி-அவ்வசுரனுடைய குடலை (பிடுங்கி யெடுத்து)-அழகிய பிராட்டிக்கு இருப்பிடமான மார்பிலே வெற்றிலையாக அணிந்துகொண்டு

சீரார் திருத் துழாய் மாலை நமக்கு அருளி தாரான் -தரும் -என்று இரண்டத்தில் ஒன்ற்றதனை-சிறந்த திருத்துழாய் மாலையை-தருவன் தரமாட்டான் என்ற இரண்டு வார்த்தைகளில் ஏதாவதொரு வார்த்தையை-

இன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலை சேர் மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண் ——25–இனிய இசைகளைப்பாடுகின்ற வண்டுகள் பொருந்தி யிருக்கப்பெற்ற பூஞ்சோலைகளிலே,-புஷ்பங்களை யணிந்தும் மயில் தோகை போன்றுமிருக்கிற கூந்தலை யுடையவர்களாயும்-

என் மனத்து மாலை யிடவெந்தை ஈசனை ——–119-என்மேல் வ்யாமோஹ்முடையனாகி எனது நெஞ்சை விட்டுப்பிரியாதவனாய்-திருவிடவெந்தையிலெழுந்தருளியிருக்கிற ஸர்வேவரனாய்-

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்

பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –தொல்லை மாலை –-நித்யஸ் சத்யா -என்கிறபடி -நித்ய சத்யனுமாய் –-ஏகோஹைவை நாராயணா ஆஸீத் ந பிரம்மா ந ஈசான ச ஏகாகீ நாமேத -என்றும்-அசிதவிஷ்டா ந் பிரளயே ஜந்தூ நவலோக்ய ஜாத நிர்வேத – என்றும் -சொல்லுகிறபடியே சம்சாரமாகிற பெரும் கடலிலே விழுந்து நோவு பட்டு உரு மாய்ந்து கிடக்கிற இச் சேதனருக்காக நிர்வேதப்படும்படியான வ்யாமோஹத்தை வுடைய ஸ்ரீயபதியை-

செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செம் தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும்
பேராத சீரரங்கத்
தய்யன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே – 13-மிக்க சீர் தொண்டரான தம்மாலே –வைஜயந்தீ வனமாலை என்றும் கலம்பகன் மாலை என்றும் அனுபோக்தாக்களாலே உல்லேக்கிக்கும் படி சந்தர்ப்பிக்கப் பட்டதாய் -தம்முடைய கர ச்பர்சத்தாலே வந்த புதுக் கணிப்பு எல்லாம் நிறத்திலே காணலாம் படியான பசுமை உடைத்தான -திருத் துழாயாலே வகுப்புண்டாய் சமைத்த திரு மாலையும்-தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் இவர் தம்மை தாமே நிரூபித்து கொள்ள வல்லவர் இறே –செய்யும் மறைத் தமிழ் மாலையும் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் இருவகை மாலைகளை அரங்கத்து ஐயனுக்கு சமர்ப்பிக்கின்றார் –
ஒருவகை -திரு துழாய் மாலை-மற்று ஒரு வகை -தமிழ் மாலை-ஆண்டாளும் அரங்கனுக்கு பா மாலையும் பூ மாலையும் சமர்பித்து உள்ளாள்-ஆயின் அப்பூ மாலை அவளால் தொடுக்கப் பட்டது அன்று -சூடி சமர்பிக்கப் பட்டது தான்-திருத் துழாய் மாலையோ தொண்டர் அடி பொடி ஆழ்வார் தம் கையினாலேயே தொடுத்தது –ஆதலின் –-செய்யும் துளப மாலை -என்றார் –

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –-அலங்கரிக்கத் தக்க புஷ்ப மாலையை -சூடிக் கொடுத்தவள்-முந்துற முன்னம்-குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும்- 4-11–சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ்ப் பத்தும் வல்லார் -9-10–தாழ் குழலாள் துணிந்த துணிவை -12-10–தாழ் குழலாள்–என்னும்படியான தன்னுடைய திருக் குழலிலே அலங்கரித்துக் கொண்டு -அது தன்னைக் களைந்து ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கும்படி கொடுத்தவள் -இப்படி யாகையாலே இவளுக்கு -சூடிக் கொடுத்தவள் -என்று அதுவே நிரூபகமாய் ஆய்த்து – சூடிக் கொடுத்த சுடர் கொடியே -என்னக் கடவது இறே –

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை

சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8—யதோ வாசோ நிவர்த்தந்தே-என்று மீளும் படியான உத்கர்ஷத்தை உடையவனை-தண் துழாய் மாலையனை–சர்வாதிக விஷயத்துக்கு அடையாளமான திருத் துழாய் மாலையை உடையவனை-என் முடிவு காணாதே- என்னுள் கலந்தானை
தன்னுடைய உத்கர்ஷத்துக்கு முடிவு இல்லாதோபாதி உஎன்னுடைய நிகர்ஷத்துக்கும் முடிவு இன்றிக்கே இருக்க அத்தைப் பாராதே அவ்விஞ்ஞாதவாய் என்னோடே கலந்தவனை -தன்னைப் பிரிந்து நான் முடியுமது காண மாட்டாமையாலே என்றுமாம்

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்

பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-வேதம் போலே அடி அன்றிக்கே இருக்கிறது அன்று -அப்வருஷேயம் -என்னுமதில் காட்டிலும் விலக்ஷணமாய் இருக்கிறதாயிற்று வக்த்ரு சுத்தியால்-

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்

உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11-செயிர் -குற்றம் –இல் -இல்லாமை -ஆக நிர்த்தோஷமான சப்த சந்தர்ப்பத்தை உடைய ஆயிரம்-

கண்ணனை மாயன் றன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே.–3-4-9-ஆபத்து கண்டால் படுக்கையில் பொருந்தாதே ரக்ஷிக்கும் சர்வேஸ்வரனை-

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-ஆசைப்பட்ட விஷய அநு குணமாய் இறே நோவு பாடும் இருப்பது –ஒரு சொல் தொடை எடுக்கையாகிறது ஒரு மலையை எடுத்தால் போலே இருக்கிறது-நான் விரஹம் பொறுக்க மாட்டாத மேன்மையை உடைய நான்-வாசக மாலை கொண்டு-உன் குணத்துக்கு வாசகமான சொல் தொடையைக் கொண்டு உன்னையே இருந்திருந்து யதோ வாசோ நிவர்த்தந்தே-என்னும்படியான உன்னையே-

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3–பாக்களால் இயலப் பட்ட வேதம் -சந்தஸ்ஸூக்களை உடைத்தான் வேதம் அதில் நன்றான மாலைகளைக் கொண்டு -ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு – சர்வ வேதா யத் பத்மாம நந்தி -என்கிறபடியே அல்லாத இடங்களுக்கும் ப்ரதிபாத்யனே யானாலும் ஆராத நத்திலே யாதல் -விபூதியிலே யாதல் பரந்து இருக்கும் –

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-இவருடைய பாவ பந்தம் அவனுக்கு பரிமளிதமான அங்க ராகமே யாயிற்று -வழக்கனான மாலை அன்றிக்கே ஆதரித்துச் சூடும் மாலை –என்னுடைய யுக்தி மாத்திரமே-இவர் நெஞ்சிலும் பரிமளிதம் யாயிற்று இவர் வாக்கு -வாக்கான மாலை இ றே சாந்துக்கு பூக்கட்டி இறே மனம் கொடுப்பது

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.
–4-3-4-பூத்தண் மாலை கொண்டு- உன்னைப் போதால் வணங்கேனேலும்-குளிந்த பூ மாலையைக் கொண்டு -பூதனை வந்து கிட்டின போது ஆதல் -அசுரர்கள் இடத்தே சென்ற போது ஆதல்-பிராட்டியும் தானும் இருந்த போது ஆதல் -அவ்வவ காலங்களில் வணங்கேனேலும் திருவடிகளில் விழுந்து சிசிர உபசாரம் பண்ணப் பெற்றிலேன் யாகிலும்-நின்-பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.
குளிர்ந்த பூ மாலையோடு நித்ய சித்தமாய்ச் செல்லுகிற உன்னுடைய திரு அபிஷேகத்துக்கு ஆதரித்து சாத்தும் மாலை என் பிராணன் ஆவதே-பிராணன் -சத்தை –

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?
–4-5-1-கைகள் ஆரத் தொழுது--வைகுந்தம் என்று ககை காட்டும் -தாயவனே என்று தடவும் என் கைகள் -என்னும் கைகளின் விடாய் தீர்க்கும்படி தொழுது
சொல் மாலைகள்-வாடாத மாலைகள்-ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே–கிருஷ்ணா தி சிரஸா ஸ்வயம் -என்கிறபடியே சிரஸா வஹிக்கும் படியாக பாக்யம் பண்ணின எனக்கு-இவர் கவி பாட்டு ஈஸ்வரனுக்கு அலங்காரமாக இருக்கையாலே மாலை என்கிறதுஇவருக்கு நோன்பு ஆகிறது -மண்ணை இருந்து துழாவி -யில் விடாய் ஆதல் பகவத் பிரசாதம் ஆதல் -தம்முடைய பேற்றுக்கு அடியாக மயர்வற மதி நலம் அருளினான் என்றார் இறே-பூர்வ க்ஷண வர்த்தி இறே ஒன்றுக்கு ஹேது ஆவது –

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-மொய்-என்று வலி யாதல் -பெருமை யாதல்
வலி யான போது-சிதிலமாய் இராதே சொல் செறிந்து கட்டுடைத்தாய் இருக்கை–பெருமையான போது இவ்விஷயத்தை விளாக் குலை கொள்ளவற்றாய் இருக்கை –-யதோ வாசோ நிவர்த்தந்தே-என்று மீளாதே இவ்விஷயத்துக்கு நேரே வாசகமாய் இருக்கை –இசை மாலைகள் –-பரிமள பிரசுரமான பூ மாலைகள் போலே கேட்டார் நெஞ்சு பிணிப்புண்ணும் படி இசை விஞ்சி இருக்கை –-அவனும் அவளும் நித்ய ஸூரிகளுமாய் இருந்து கேட்டுக் கொண்டாட பிறந்த பிரபந்தம் இறே-ஸ்ரீ ராமாயணத்தில் காட்டில் இப்பிரபந்தத்துக்கு ஏற்றம் -பகவத் ஹ்ருதயத்தை பின் சென்ற ப்ரஹ்மா அடியாக-நாரதாதிகள் முன்னிலையாக பிறந்த பிரபந்தம் அன்றிக்கே-கேட்டாரார் வானவர்கள் – தென்னா வென்னும் என் அம்மான் -என்கிறபடி தானும் நித்ய ஸூரிகளும் கேட்டுக் கொண்டாடும் படி இருக்கை –-ஏத்தி உள்ளப் பெற்றேன்-மன பூர்வோ வாக் உத்தர -என்கிற நாட்டார் படியும் அன்று -இவர் படி-ஏத்தி பின்னை யாயிற்று நினைத்தது-கவி பாடுகைக்கு நினைவு அத்தலையில் யானாலும் பேறு தம்மதாய் இருக்கிற படி-சாஸ்திர பலம் ப்ரயோத்த்ரி என்கிற இடம் அன்றியிலே இருக்கிற படி-முடியானே -யிலே விடாய்த்த போது தனித்தனியே கரணங்கள் விடாய்த்தால் போலே இங்கு தனித் தனியே யாயிற்று அனுபவிக்கிறதுஈஸ்வரன் நினைவாலே பாடுகிற கவி யாகையாலே தாமும் கரணங்களோ பாதி அந்வயித்தார்

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-நெஞ்சின் வருத்தம் இன்றிக்கே வாக் ப்ரவ்ருத்தி மாத்ரமான திருவாய்மொழி யைக் கொண்டு நா புரட்டின இடம் எங்கும் கவியாய்க் கிடக்கை
ஏத்தி நண்ணப் பெற்றேன்;-இவர் நண்ணி ஏத்தினவர் அல்லர் -ஏத்திக் கொண்டு பண்ணுகிறார்

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;

காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5–மாற்ற மாலை புனைந்து ஏத்தி
பண்ணின உபகாரகத்துக்கு பிரதிபகாரம் காணாமையாலே ஏத்தினேன் -அது திருவாய்மொழி யாயிற்று-சொல் மாலையைத் தொடுத்து ஏத்தி -மாற்றம் –சொல்-நாளும் மகிழ்வு எய்தினேன்;
நாள் தோறும் ஆனந்தத்தை உடையேன் ஆனேன் –-வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவி -என்னும்படி யானேன்-தேவ மாத்ருகம் போலே காதாசித்கம் அன்றிக்கே பகவத் பிரசாதம் அடியாக வந்தது ஆகையால் நதீ மாத்ருகம் போலே நித்ய ஸித்தமாய் இருக்கும் இறே

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-உரிய சொல்லால்-இவ்விஷயத்துக்கு நேரே வாசகமான சொல்லாலே-இசைமாலைகள்-ஸம்ஸரவே மதுரம் வாக்கியம் என்னும் படி திருச் செவி சாத்தலாய் இருக்கை-ஏத்தி உள்ளப்பெற்றேற்கு-ஏத்தி அனுபவிக்கப் பெற்ற எனக்கு-அரியது உண்டோ-நான் பெறாதே இனி பெற வேண்டி இருப்பது ஒரு பொருள் உண்டோ எனக்கு-ஈஸ்வரோஹம் என்று இருக்கிற சம்சாரத்தில் சேஷத்வம் ரசிக்கப் பெற்று ஸ்வரூப அநு ரூபமாக வாசிகமான அடிமை செய்யப் பெற்று வினை நோய்கள் கரியவே -என்று விரோதியும் கழிக்கப் பெற்ற எனக்கு

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம்
என்னகுறை நமக்கே?–4-5-7–ஆபத்தே கைம்முதலாக – ரஷிக்கும் இடத்தில் பரிகர நியதி இல்லை என்கை-இடையரும் பசுக்களும் தொலையும் படி இந்திரனும் பசியாக்ரஹத்தாலே வர்ஷிக்க ரஷித்தான்-தீ மழை இறே –-பிரானை – தென்றல் சந்திரன் தண்ணீர் போலே உபகரிக்கையே செல்லமாய் இருக்குமவன்-சொன் மாலைகள்-என்னுடைச் சொற்கள் என்னும் தூய மாலை -என்னக் கடவது இறே-நன்று சூட்டும்-அவ்விஷயத்தை விளாக் குலை கொண்டு பேச வல்லேன் ஆனேன் -அவன் விரும்பும்படி சொல்லப் பெற்றேன்-

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு

அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-சொல்மாலைகள் சொல்லுமாறு-அமைக்க வல்லேற்கு-ஈஸ்வரன் அழைத்து -நமக்கு ஒரு கவி சொல் என்றால் அப்போதே சமைக்க வல்ல எனக்கு என்று பூர்வர்கள் நிர்வாஹம்-பகவத் குணங்களில் உடைகுலைப் பட்டு இருக்கிற நெஞ்சை தரித்து நின்று கவி சொல்ல வல்லேனாம் படி அமைக்க வல்ல எனக்கு என்று பட்டர் நிர்வாஹம்
ஈஸ்வரன் விஷயீ கரித்து குளிர நோக்கினால் அவ் வழகிலே சுழி யாறு பட வேண்டி இறே இருப்பது

உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11-செயிர் -குற்றம் –இல் – இல்லாமை -குற்றமற்ற இப்பத்து –ஈஸ்வரன் விரும்பாத ஆத்மாத்மீயங்கள் வேண்டா என்கிற இடம் அகவாயிலும் உண்டாம் படி இருக்கை –

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-நாள் தோறும் கமலா நின்றுள்ள திரு மகிழ் மாலையை திரு மார்பிலே யுடையவர்-நண்ணாதார் முறுவலிப்ப -திருவாய் மொழியில் சம்சாரிகள் கிலேசத்தை அனுசந்தித்து திரு உள்ளம் வாடின வாறே இட்ட மாலையும் வாடிற்று-பகவத் பரத்வத்தை உபதேசித்து -இவர்களுக்கு ஒரு குறை இல்லை -என்று திரு உள்ளமுகந்தவாறே அதுவும் செவ்வி பெற்றது

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4–தர்ச நீயமாய் குளிர்ந்த திரு மாலையும் -உபய விபூதி ரக்ஷணத்துக்கு முதலி என்று தோன்றும் படி இட்ட தனி மாலையும் -ஸ் ப்ருஹணீயமான திரு அபிஷேகமும் -உபய விபூதி நாதன் என்று கோட் சொல்லுகிற முடி என்கை வடிவும் -அந்த முடிக்கு தகுதியான விக்ரஹமும்-

கூந்தல்  மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-ஆராய்ந்து சொன்ன தமிழ்த் தொடை-இந்த லோகத்தில் எல்லாரும் கொண்டாடும் படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை யுடையராய் ஸ்ரீ லஷ்மீ பாதிக்கு அடியாரானவர்களை ஆராதிக்கப் பெறுவார்கள் -அவர்களுக்கு ஆராதனம் ஆகிறது இவர் அநு கரித்த இப் பாசுரத்தை சொல்லுகை-தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் என்னக் கடவது இறே-இவர் இவ் வநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ப்ரியகரர் ஆனால் போலே இது கற்றாரும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரியமான வ்ருத்தியைப் பண்ணக் கடவர் என்கை-

ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.–6-2-11–பிரணய ரோஷம் போனவாறே -போகு நம்பீ என்றும் -புள்ளுவம் பேசாதே என்றும் சொன்னவை ஏத்திற்றாய் விட்டது-அத்விதீயமான பத்து -ஆஸ்ரிதரோடு பாவ பந்தம் வெளியிட்ட பத்து-

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7–ஆஸ்ரித விரோதிகளை போக்கப் பெற்றதால் ஒப்பித்து இருக்கிற படி-

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-பெரிய பெருமாள் திருவடிகளிலே யாயிற்று ஆயிரமும் சொல்லிற்று –திரு மோகூர்க்கு ஈத்த பத்து -திரு வேங்கடத்துக்கு இவை பத்து –என்றும் பிரித்துக் கொடுத்த அத்தனை –திருப் பலகையில் அமுது படியில் திருப் பதிகளில் நாயன்மார்க்கு அளந்து கொடுக்குமா போலே –என்று பிள்ளை அருளிச் செய்வர் –

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11–அவனைத் தாம் ஆசைப்பட்ட படியை சொன்ன இப்பத்து –யதோ வாசோ நிவர்த்தந்தே என்று மீளுகை அன்றிக்கே பகவத் குணங்களுக்கு நேரே வாசகமாகை-

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை
மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11–சிரமஹரமாய் -தர்ச நீயமான சோலையை யுடைய திருக் கடித் தானத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ யபதியை-

வயிற்றில்  கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே—8-7-9-இவற்றை அடைய தன் திரு வயிற்றிலே கொண்ட இடத்திலும் ஒரு விகாரம் இன்றிக்கே முன்பு போலே நின்ற சர்வேஸ்வரனை-

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11—அந்த வாஸ்யத்துக்கு தகுதியான யுக்தி வாய்த்த தமிழ்த் தொடை ஆயிரத்திலும் இத் திருவாய் மொழி நேர் பட்டவர்கள் –

சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை
பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11–அழகு மிக்கு இருந்துள்ள திரு நகரி -அன்றியே -கோல நீள் -என்று சப்தம் தானே உண்டாகையாலே –அடி மேல் அணி -மாலை -என்று கூட்டிக் கொள்ளவுமாம் –

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9–என்னளவு இன்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்–இப்பேறு என்னால் வந்ததாக மாட்டாது -நான் சர்வேஸ்வரனால் விஷயீக்ருதன் ஆனேன் –

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-செல்லப்பட்டு இருந்துள்ள கதிரை யுடைத்தான மலையானது மயங்கப் பண்ணா நின்றது -அஸ்தமியா நின்றுள்ள ஆதித்யனை யுடைய ஸந்த்யையானது மோஹிப்பியா நின்றது -புடைவையை வாயிலே கொடுத்து நலிவாரைப் போலே ஓடுகிற வியசனத்துக்கு போக்கு விட்டு கூப்பிட ஒண்ணாத படி உணர்த்தி அழியும் படி மோஹிப்பியா நின்றது-

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2—பதார்த்த தர்சனம் பண்ணி தரிக்கலாம் பகலையும் முடித்துக் கொண்டு மலையானது தோற்றா நின்றது –பிராட்டி தனிமையில் ஐயோ என்னும் பெரிய யுடையாரை முடித்துக் கொண்டு ராவணன் நலிந்தால் போலே-

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என் அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-ஒரு துணை யற்று இருக்கிற அளவிலே பசுக்கள் புகுரும் ஸந்த்யையும் ஆகா நின்றது –எனக்குத் துணை இல்லை என்று அறிந்தால் மாலைக்கு பிற்காலிக்க வேண்டாவோ -ஆச்வாஸ கரமான பகல் போய்-பிரிந்தார் வெருவும் ஸந்தயையும் ஆகா நின்றது-

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-ஆச்வாஸ ஹேதுவான பகலையும் முடித்துக் கொண்டு -மாலையும் ஆகா நின்றது –சர்வ காலத்துக்கும் துணையான நெஞ்சையும் காண்கிறிலேன் என்னுதல் -மாலையையும் காண்கிறிலேன் -என்னுதல் 

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-மிகவும் பயாவஹமாம் படி ராத்திரியும் வந்தது -இனி இருந்து கிலே ஸிக்க வேண்டாத படி இது முடித்தே விடும் போலே இருந்தது –

மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-மாலையையும் அவனையும் கூடப் பிணைத்து விட்டாள் போலே காணும் -அவன் வருவதாக குறித்துப் போன காலமும் வந்தது -தான் வருகிறிலன் –

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11–ஒப்பிக்கப் பட்ட ஆபரணங்களை யுடைய இடைப் பெண்கள் -கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய புகுந்து -என்கிறபடியே அவன் வரவுக்கு உடலாக தங்களை அலங்கரித்து வரும் காலத்திலே வரக் காணாமையாலே கூப்பிட்ட கூப்பீட்டை –அப்படி வியாமோஹத்தை யுடையவனைக் கிட்டி தொழுது சாபலமுடையார் பூமியிலே நின்று அடைவு கெடக் கூப்பிட்டு உஜ்ஜீவியுங்கோள் -இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு என்னைப் போல் என் சொல்லி உய்வன்-என்று கூப்பிட வேண்டா -பேற்றிலே அந்வயம் என்கை –

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்

வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1–சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டி ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள் -மால் -என்று ஸ்நேஹ கார்யமான வியாமோஹமாய்-மாலையுற்று -என்னவுமாம் –பக்தி உக்தராய் -என்றபடி –காலை மாலை -ஆஸ்ரயணீயத்துக்கு கால நியதி இல்லை -என்கிறது -ஆதி நடுவந்திவாய் -என்கிறபடியே சர்வ காலத்துக்கும் உப லக்ஷணம் –

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5–பத்மகேசரே ஸம்ஸ்ருஷ்ட -மத்த கஜமானது முன்னே தலைப்பறை கொட்ட வருமா போலே வாடையை முன்னோடே விட்டுக் கொண்டே பெரிய கிளர்த்தியோடே ஸந்த்யையும் வந்தது -இவளை முடிக்க வேணும் என்று ஸந்த்யையானது கூட்டுத் தேடிக் கொண்டு வாரா நின்றது -/வந்தன்றாலோ—வந்தால் பரிஹரிக்க ஒண்ணாது

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11–அவனோட்டை பிரிவு பொறுக்க மாட்டாத படியால் -ஒரு பருவத்தில் இடைப் பெண்கள் அனுசந்தித்த -தொடையாய் -அவர்களில் ஒருத்தி பசு நிரை மேய்க்க வேண்டா -என்று உரைத்தாள் -எல்லாரும் திரளச் சொன்னால் அவன் செவிப்படாது என்னுமத்தாலே -நப்பின்னைப் பிராட்டியைப் போலே அவனுக்கு மறுக்க ஒண்ணாத தரம் யுடையாள் ஒருத்தியை வார்த்தை சொல்ல விட்டார்கள் -இப்படி யாகில் இறே –அடிச்சியோம் -என்றும் –தொழுத்தையோம் -என்றும் -ஆழும் என்னாருயிர் -என்றும் -என் சொற் கொள் என்றும் -சொன்ன பன்மைகளும் ஒருமைகளும் -சேரக் கிடப்பது

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-பரம பரம்பரனை–மல் திண் தோள் மாலை–பற்று என்று பற்றி-சர்வாதிகனாய் -விரோதி போக்குகைக்கு ஈடான தோள் மிடுக்கை யுடையனாய் -ஆஸ்ரிதர் பக்கல் வியாமுக்தனானவனை -பரம ப்ராப்யம் என்று பற்றி –

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்

கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11—பாட்யே கே யே ச மதுரம் -என்கிறபடியே இசையோடு புணர்ப்புண்ட தமிழ்த்தொடை –நித்ய ஸூரிகள் இத்தைக் கேட்டால் பர்யாப்தர் ஆகார் -இப்பாடுகிறது உள்ளீடானவன் சீலத்தாலேயே என்னில் –பாசுரத்துக்காக என்கிறது –ஸம்ஸ்ரவே மதுரம் -என்கிறபடியே செவியே தொடங்கி ரசிக்கும்-செஞ்சொல்லே–-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்ட சொல்லு –சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினால் –ன்னா செந்தமிழ் பத்தும் என்றார் இறே –

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-தாம் விரும்புகிற மார்வுக்கு மாலை யானவள் -உன் திருமார்வுக்கு அலங்காரம் ஆனவள் என்கை –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ரகுவீர கத்யம்–

August 12, 2026

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த  ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்)

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ ।
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ॥

ஜயதிய ஆஸ்ரித ஸந்த்ராச த்வாந்த  வித்வம்ஸந உதய: ।
பிரபாவான் சீதயா தேவ்யா பரம வ்யோம பாஸ்கர: ॥மங்கள ஸ்லோகம்

பால ஸூர்யனாக அனுபவம் -அஞ்ஞானம் -பயம் –ஆஸ்ரித சந்த்ராஸம் –இவற்றைப் போக்கும்-ரகு குல சந்திரன் –பிரபாவான் சீதயாபாஸ்கரேண பிரபாதயா -இருவருமே அருளிச் செய்த த்ருஷ்டாந்தம்
பரம ஆகாஸம் -ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து அருள் கிரணங்களில் -உள்ளத்தில் புகுத்தி அபயம் அளித்து போக்கி அருளுகிறவன்–ஜயதிய-பல்லாண்டு பாடுவோம்

 பால காண்டம்

ஸ்ரீ திருவஹீந்த்ர புரத்தில் ஸ்ரீ ராமனை அனுபவித்து -கவிதார்க்கிக ஸிம்ஹம் -கவிதை இல்லாமல் கவியாக இல்லாமல் கத்யமாக அருளிச் செய்தவன்-மொத்தம் 94 சூர்ணிகைகள் பால காண்டத்தின் 20 சூர்ணிகைகள்

ஜய ஜய மஹாவீர !–1-
மஹாதீர தௌரேய !
–2

ஜய ஜய மஹாவீர !-உனக்கும் வெற்றி உண்டாகட்டும் -மஹா வீரனே உனக்கு பல்லாண்டு -விரோதிகள் கூடப் போற்றும்படி -சுகன் சாரணர் -குருவி வேஷத்துடன் வேவு பார்க்க வர -விபீஷணன் கண்டு கட்டி வைக்க -பெருமாள் நமது ராணுவ ரஹஸ்யங்களை கொடுக்கச் சொல்லி -மஹா வீரன் -தனி ஒருவனாக அழிக்க வல்லவன் என்று கண்டு சொல்ல -ராவணனும் -பின் புகழும் படி –வீர ராகவன் -திருநாமம் சாற்றி அருளினான் –

மஹாதீர தௌரேய !–வீரன் உடல் வலிமை -தீரன் -மன வலிமை -மனோ தைர்யம் -சோர்வு அடையாமல் -மஹா வீரனாகவும் தீரனாகவும் உள்ளவன்–தௌரேய !—வீர தீர ஸுர்ய -முன் அணியில் நிற்கும் முதன்மை யானவன் —அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா —-கண் எச்சில் வராதபடி -ஜய ஜய -பல்லாண்டு பாடுகிறார் -ஒவ்வொரு சூர்ணிகையிலும் ஜய ஜய சேர்த்து பல்லாண்டு பல்லாண்டு பாட வேண்டும்

தேவாஸுர ஸமர ஸமய ஸமுதித நிகில நிர்ஜர நிர்தாரித நிரவதிக-மாஹாத்ம்ய !–3-

தேவாஸுர ஸமர ஸமய ஸமுதித –ஓன்று கூடி –
உத்தர காண்டம் -அசுரர்கள் அரக்கர்கள் -இரண்டு வகை -மாலி சுமாலி -வந்து தேவர்களுடன் போர் -தேவர்கள் சரணாகதி -கருட வாஹன ரூடனாக வந்து -இவர்கள் புறமுதுகு இட்டு ஓட-சரணாகதி ரக்ஷண விரத தர்மம் -ஓடி ஓடி துரத்தி அடிப்பேன் –பசுக் கூட்டம் தாக்கும் புலியைத் துரத்தி ஓடுவது போல் -சக்கரத்தாழ்வார் முன் வந்து கழுத்தை சீவி –
நிகில நிர்ஜர -அனைவரும் -ஜர இல்லாதவர் தேவர்கள்
நிர்தாரித நிரவதிக-மாஹாத்ம்ய !–நிச்சயம் பண்ணி கொண்டாடினார்கள் -இவனே ரக்ஷகன் என்று
ஆகவே பின்பும் ராவணனை வீழ்த்தவும் சரண் அடைந்தார்கள் என்பதை அடுத்த சூரணையில் அருளிச் செய்கிறார்=

தஶவதன தமித தைவத பரிஷதப்யர்தித தாஶரதி-பாவ !–4-

தஶவதன--ஸூமாலி -மகள் வயிற்றுப் பேரன் ராவணன்
தமித-துன்புறுத்துகிறான் – யாகம் செய்து நான்முகனிடம் பெற்ற வரம் -வாள் -கொண்ட பலனால் அஹங்கரித்தவன்-மனிதனால் இறக்கக் கூடாது என்று அஹங்காரத்தால் கேட்கவில்லை
தைவத பரிஷதப் யர்தித –முப்பத்து முக்கோடி தேவர் கூட்டங்கள் -பிரார்த்திக்க
தாஶரதி-பாவ !-பாபங்கள் போக்க அஸ்வமேத யாகம் பிள்ளை பெற ரிஷ்ய சிங்கர் மூலம் புத்திர காமோஷடி யாகம் –

தினகர – குல – கமல – திவாகர !-5

தினகர – குல – கமல – திவாகர !-ஸூர்ய வம்சம் -விவஸ்மான்- இஷ்வாகு -சத்யலோக நாராயணனை அடோத்யையில் ப்ரதிஷ்டை -சிபி சக்ரவர்த்தி -ஹரிச்சந்திரன் -மாந்தாதா -யாவத் ஸூர்ய உதயம் அஸ்தமனம்-உள்ள பிரதேசங்களை ஆண்டவன்-sun never sets in British empire இத்தை அறியாத நாம் பின்பு சர்ச்சில் சொன்னதை அறிவோம் -அம்பரீஷன் -ரகு -தானம் கொடுப்பதில் சிறந்தவன்-கஜானா முழுவதும் தானம் கொடுத்தவன் –கமல – திவாகர !–மொட்டு போல் இருக்கும் தாமரை விரிவடைய பிறந்த பெருமாள்-

திவிஷததிபதி – ரண – ஸஹசரண – சதுர – தசரத -சரமருண – விமோசன !-6-

திவிஷததிபதி-தேவர் அதிபதி இந்திரனின் – ரண – ஸஹசரண – சதுர – தசரத -உடன் சண்டை போட வல்லவன் –பத்து திசைகளிலும் ரதம் ஓட்ட வல்லவன்–சம்பாசரன் எதிர்த்து வெற்றி வாங்கி-கூட கைகேயி கூட்டிப் போனான்-இரண்டு வரங்கள் தருவதாக வாக்கு கொடுத்தான் –சரம ருண – விமோசன !-தேவர் கடன் -பூஜை தினம் பண்ணி -போக்க வேண்டும் -உடம்பில் புலன்கள் கண்ணில் ஸூர்யன் போல் –ரிஷி கடன் -படித்து நடப்பதே வேண்டும்-ஞானம் கொடுத்தவர்கள் – -பித்ரு கடன் -பிறவி கொடுத்தவர்கள் -வாரிசு உருவாக்கி தர்மம் படி வாழ வைக்க வேண்டும் -மூன்று கடன்கள் –குழந்தை இல்லை என்றும் நேராகச் சொல்லாமல் -மங்கள கர நூல் -அத்தைப் போக்கிக் கொடுத்த ராமனுக்கு பல்லாண்டு –

கோஸல – ஸுதா – குமார – பாவ – கஞ்சுகித – காரணாகார !–7-

கோஸல – ஸுதா – குமார – பாவ – கஞ்சுகித – காரணாகார !-கௌசலை குமாரன் -ஆகாரம் -தன்மை -முதல் தனி வித்து என்பதை ஒளித்து -உலகை திருவயிற்றில் வைத்தருளிய பெருமாளை 12 மாதம் கர்ப்ப வாஸம் –பரம்பொருள் என்பதை மறந்தான் அல்ல -மறைத்தான் –

கௌமார -கேளி – கோபாயித – கௌசிகாத்வர !–8-

கௌமார -கேளி – கோபாயித – கௌசிகாத்வர !-விஸ்வாமித்திரர் யாக ரக்ஷணம் இவனது பால விளையாட்டு –கல்விச் சிலையால் காத்தான் – -கோதண்டம் -சீதா கல்யாணம் பின்பு

ரணாத்வர துர்ய பவ்ய திவ்யாஸ்த்ர ப்ருந்த வந்தித !–9-

ரணாத்வர துர்ய பவ்ய திவ்யாஸ்த்ர –அஸ்திரம் – சஸ்திரம் -மந்த்ரம் சொல்லி உபயோகம் –போரே யாகம் -தர்மம் நிலை நாட்ட –ப்ருந்த வந்தித !-தேவர்கள் நேராக வந்து கருவிகளாக பயன்படுத்த முன்பே வந்து பணிவுடன் கூட்டமாக வந்து வணங்கினார்கள்-
தர்ம சக்கரம் சிவசூலம் கால பாசம் வருண பாசம் போன்ற அஸ்திரங்கள் பட்டியல் வால்மீகி ராமாயணத்தில் உள்ளன

ப்ரணத ஜன விமத விமதன துர்லளித தோர்லளித !–10-

ப்ரணத ஜன -பக்த ஜனங்களின் –விமத விமதன -எதிரிகளை அழிக்க வல்ல துர்லளித தோர்லளித !–பயங்கரமான அழகிய திருத் தோள்கள் -சார்ங்கம் தோய்ந்த திருத் தோள்கள் -பக்தர்களுக்கு அழகியவையாயும் விரோதிகளுக்கு பயங்கரமாயும் இருக்குமே –

தனுதரவிதாடன விகடித விஶராருஶராருதாடகா தாடகேய !-

தனுதர -மிகச் சிறிய -விஶிக-அம்புகள் – விதாடன-கொண்டு அடுத்து – விகடித -துன்புற்ற –விஶராரு-மற்றவர்களால் துன்புறுத்த முடியாத – ஶராரு -இவர்கள் துன்புறுத்த வல்லவர்கள் –தாடகா தாடகேய !--துன்புறுத்தியவனே-மூவருக்கும் பொதுவான வினைச் சொல் இதுவே –அன்னைக்கு சம்ஸ்காரம் பண்ண இவனை விட்டு வைத்தான்மாரீசனை விரட்டி சுபாகுவைக் கொன்று – ர ஆரம்பிக்கும் சொற்களே பயப்படுத்தும் படி துன்புறுத்திய பெருமாளுக்கு பல்லாண்டு

ஜட-கிரண ஶகல-தர ஜடில நட பதி மகுடதட நடனபடு விபுத-
ஸரிததி பஹுள மது களந லலித பத நளின-ரஜ உப-ம்ருʼதித
நிஜவ்ருஜின ஜஹதுபல தனுருசிர பரம-முனிவர யுவதி நுத !

ஜட-கிரண –சந்த்ர சூடன் -தலையில்-ஶகல-தர-துண்ட பிறையன் ஜடில நட பதி -நடராஜர் –மகுடதட -முடியில் –நடன படு-நாட்டியமாடவிபுத-ஸரிததி -தேவ நதி கங்கை-பஹுள மது களந-தேன் பெருக்கு- லலித பத–தேனே மலரும் திருப்பதங்கள்- நளின-ரஜ-திருவடி துகள் -திருவடியால் தீண்ட மாட்டான் – உப-ம்ருʼதித நிஜ வ்ருஜின-அகலிகை சாபம் தீர்த்த – ஜஹ துபல-உபலம் கல் – தனு ருசிர பரம-முனிவர யுவதி நுத !-கௌதமர் இடம் அகலிகையைக் கொடுத்த (சிவன் பெற்ற பேற்றை போல் பெற்ற அகலிகையை )பெருமாளுக்கு பல்லாண்டு

குஶிகஸுத கதித விதித நவ விவித கத !

குஶிக ஸுத-விஸ்வாமித்திரர் – கதித –கதைகள் – விதித-அறிந்து நவ விவித கத !-புதிதான பல கதைகள் -பெருமாளுக்கு இவர் சொன்னதும் அறிய வேண்டுமோ –உபநிஷத் ரஹஸ்யம் -ஆச்சார்யர் மூலம் கற்றதே கல்வி -ஸர்வஞ்ஞனும் இத்தைக் காட்டி அருள வேண்டும் -யாதாத்ம்ய தாத்பர்யங்கள் நவ -புதிதாக பல இருக்குமே -புதையல்கள் போல் -பலவும் இருக்கும் அன்றோ –

மைதில நகர ஸுலோசனா லோசன சகோர சந்த்ர !

மைதில நகர--மிதிலை நகரில் உள்ள ஸுலோசனா லோசன-அழகிய பெண்களின் கண்கள் – சகோர சந்த்ர !--சகோரப்பறவை -ராமசந்திரன் -சாதகப் பறவை என்றும் சொல்வார்கள் -சந்திரன் ஒளியையே உணவாகக் கொள்ளும் -அதையே உண்டு வாழும் –தோள் கண்டார் தோளே கண்டார்–தடக்கை கண்டாரும் அக்தே -இத்யாதி -கம்பர் –

கண்ட-பரஶு கோதண்ட ப்ரகாண்ட கண்டன ஶௌண்ட புஜ-தண்ட !-உன் கரத்தால் சிவ பெருமானின்
வில்லை உடைத்து  ஓ வலிமையான ஆயுதமேந்தியவனே, வெற்றி, வெற்றி

சண்டகர கிரண மண்டல போதித புண்டரீக வந ருசி லுண்டாக லோசந !–சூரியனின் துளையிடும் கதிர்களால் ஆற்றல் பெற்ற தாமரை மலர்களின் அழகை உன் கண்களின் த்ருஷ்ட்டி , வெற்றி, வெற்றி. 

மோசித ஜனக ஹ்ருʼதய ஶங்காதங்க !-ஜனகனின் இதயத்தை சந்தேகம் மற்றும் கவலையிலிருந்து விடுவித்தாய், 

பரிஹ்ருʼத நிகில நரபதி வரண ஜனக துஹித்ரு குசதட விஹரண ஸமுசித கரதல !–மற்ற எல்லா அரசர்களிடமிருந்தும் திருமண மாலையைப் பறித்து, ஜனகனின் மகளின் மார்பில், வெற்றி, வெற்றி ஆகியவற்றைப் பற்றிக் கொள்ளத் தகுந்த கைப்பிடியைப் பெற்றிருந்தாய்.

ஶதகோடி ஶதகுண கடின பரஶு தர முனிவர கர த்ருʼத
துரவநமதம நிஜ தநுராகர்ஷண ப்ரகாஶித பாரமேஷ்ட்ய !
–கோடரியைக் கையில் ஏந்தியிருந்த முனிவர், நூறு பில்லியன் மடங்கு கடினமானதும், நூறு மடங்கு அதிக செயல்திறன் மிக்கதுமான வில்லைக் கொண்டு கடினமான பயிற்சி செய்து, அந்த வில்லை வளைத்து அம்பை எய்து, உமது உன்னத மகிமையை அவருக்குக் காட்டினீர்

க்ரது-ஹர ஶிகரி கந்துக விஹ்ருத்யுந்முக ஜகத-ருந்துத ஜிதஹரி-
தந்தி தந்த தந்துர தஶவதந தமந குஶல தஶ-ஶத-புஜ முக
ந்ருபதி-குல ருதிர ஜர பரித ப்ருʼதுதர தடாக தர்பித பித்ருʼக
ப்ருகு பதி ஸுகதி விஹதிகர நத பருடிஷு பரிக !
-20-கதவின் பூட்டைப் போன்ற ஒரு அகன்றஅம்பினால்,  ஆயிரம் கரங்களும் முகங்களும் கொண்ட அரசனைக் கொன்று, பத்து முக ராவணனைத் தோற்கடித்து, கைலாச மலையை உலுக்கி, தேவேந்திரனைத் தோற்கடித்து, இந்திரனின் கம்பீரமான யானையால் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் காட்டி,  மேலும் இருபத்தொரு தலைமுறை அரசர்களைக் கொன்று, அவர்களின் இரத்தம் நிறைந்த குளத்தில் தன் தந்தைக்கு பலி கொடுத்த ப்ருகு குலத்தின் தலைவனின் நல்ல காலத்திற்கு நீ முற்றுப்புள்ளி வைத்தாய்., வெற்றி, வெற்றி –

அயோத்யா காண்டம்

அந்ருத பய முஷித ஹ்ருʼதய பித்ருʼ வசன பாலன ப்ரதிஜ்ஞா- வஜ்ஞாத யௌவராஜ்ய !–தான் கொடுத்த சத்தியத்தால் கட்டுண்டு, மிகவும் அச்சம் நிறைந்திருந்த உன் தந்தையின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக, நீ யுவ ராஜா (பட்டத்து இளவரசர்) பதவியைத் துறந்தாய், வெற்றி, வெற்றி.

நிஷாத ராஜ ஸௌஹ்ருʼத ஸூசித ஸௌஶீல்ய ஸாகர !–22-வேட்டையாடும் அரசனுக்குப் பெரும் நட்பைக் காட்டியதன் மூலம் நீ நற்குணங்களின் சமுத்திரம் என்பதை நிரூபித்தாய், வெற்றி, வெற்றி.

பரத்வாஜ ஶாஸன பரிக்ருʼஹீத விசித்ர சித்ரகூட கிரி கடக தட ரம்யாவஸத !–23-பரத்வாஜ முனிவரின் விருப்பப்படி, அற்புதமான சித்திரகூடத்தின் அடிவாரத்தில் ஒரு அழகான வீட்டில் நீங்கள் வாழ்ந்தீர்கள், வெற்றி, வெற்றி

அநன்ய ஶாஸனீய !–வேறு யாராலும் கட்டளையிட முடியாத நீ , வெற்றி, வெற்றி

ப்ரணத பரத மகுடதட ஸுகடித பாதுகாக்ர்யாபிஷேக நிர்வர்த்தித ஸர்வ லோக யோக க்ஷேம !-25-உனக்கு வணக்கம் செலுத்தி, அனைத்து மக்களின் நலனையும், வெற்றி, வெற்றியைக் கவனித்து வந்த பரதனால் செருப்புக்கு மகுடம் சூட்ட ஏற்பாடு செய்தாய்.

பிஶித ருசி விஹித துரித வல-மதன தனய பலிபுகனு-கதி ஸரபஸ ஶயன த்ருʼண ஶகல பரிபதன பய சரித ஸகல ஸுரமுனி-வர பஹுமத மஹாஸ்த்ர ஸாமர்த்ய !--26-ப்ரஹ்மாஸ்த்ர சக்தியால் மாமிசம் உண்ண ஆசைப்பட்ட காகத்தின் வடிவிலான இந்திரனின் மகன் மீது, உனது தர்பைப் படுக்கை யிலிருந்து ஒரு புல்லை ஏவினாய்.  அவன் பெரிதும் அஞ்சி, எல்லா தேவர்களையும் முனிவர்களையும் அணுகினான், வெற்றி, வெற்றி

த்ருஹிண ஹர வல-மதன துராரகக்ஷ ஶர லக்ஷ !–27-எல்லா தேவர்களாலும் கூட அந்த இந்திரனின் மகனை உனது அம்பின் இலக்கிலிருந்து காப்பாற்ற முடியவில்லை, வெற்றி, வெற்றி.

தண்டகா தபோவன ஜங்கம பாரிஜாத !–28-நீ தண்டடக வனத்தின் அசையும் வரம் தரும் மரமாக இருந்தாய், வெற்றி, வெற்றி.

விராத ஹரிண ஶார்தூல !–29-நீ விராதா, வெற்றி, வெற்றி என்ற மானைப் போல் இருந்தாய்

விலுலித பஹுபல மக கலம ரஜநிசர ம்ருʼக ம்ருʼகயாரம்ப ஸம்ப்ருʼத சீரப்ருʼதனுரோத !-30-பிறகு ராக்ஷஸ மிருகங்களைப் போல் வேட்டையாடிப் பயிர்களைக் காத்தாய். பட்டை அவர்களைப் பாதுகாக்கிறது, வெற்றி, வெற்றி.

த்ரிஶிர: ஶிரஸ்த்ரிதய திமிர நிராஸ வாஸர-கர !–31-த்ரிசிரஸின் மூன்று தலைகளை வெட்டும் போது இருளை விரட்டும் சூரியனைப் போல் தோன்றினாய், வெற்றி, வெற்றி

தூஷண ஜலநிதி ஶோஷண தோஷித ருஷிகண கோஷித விஜய கோஷண !-32-தூஷணனால் (கரனின் தளபதி) உலர்த்தப்பட்ட நீர்ப் புதையலில் இருந்து நீ நீரைத் திரும்பக் கொண்டு வந்தாய், முனிவர்கள் உன் வெற்றியைப் போற்றினார்கள். வெற்றி, வெற்றி.

கரதர கர தரு கண்டன சண்ட பவன !-33-மூர்க்கமான கரனை இரண்டாகப் பிளந்த புயல் நீயே, வெற்றி, வெற்றி.

த்விஸப்த ரக்ஷ: ஸஹஸ்ர நளவன விலோலன மஹாகலப !-34-ரக்ஷசர்களைப் போல பதினான்காயிரம் மரங்களைப் பிடுங்கிய மாபெரும் யானை நீயே.

அஸஹாய ஶூர ! அநபாய ஸாஹஸ !–35-36-நிகரற்ற வீரன், வெற்றி, வெற்றி.-நீ என்றும் வீரம் மிக்க வீரன், வெற்றி, வெற்றி.-

மஹித மஹா-ம்ருʼத தர்ஶன முதித மைதிலீ த்ருʼட-தர பரிரம்பண விபவ விரோபித விகட வீரவ்ரண !-37-மிகவும் மதிக்கப்பட்ட போரைக் கண்டு, மிதிலையின் மகள், போர், வெற்றி, வெற்றி ஆகியவற்றின் காயங்களால் மார்பில் மூடப்பட்டிருக்கும் நிலையில், உன்னை இறுகத் தழுவினாள்.

மாரீச மாயா ம்ருக சர்ம பரிகர்மித நிர்பர தர்பாஸ்தரண !-38-உன் தர்ப்ப புல் படுக்கை. மரீச்சா, வெற்றி, வெற்றி என்று மாயையான மானின் தோலுடன் பரவியது.

விக்ரம யஶோ லாப விக்ரீத ஜீவித க்ருத்ர-ராஜ தேஹ திதக்ஷா லக்ஷித-பக்தஜன தாக்ஷிண்ய !-39-உமது பக்தர்களிடம் மென்மையான உணர்ச்சிகளைக் கொண்ட நீ, மிகுந்த வீரத்துடன் போராடி இழந்த கழுகு மன்னனின் இறுதிச் சடங்குகளைச் செய்தாய், வெற்றி

கல்பித விபுத பாவ கபந்தாபிநந்தித !-40-வடிவத்தை, வெற்றியை, வெற்றியை மீண்டும் பெற்ற 
கபந்தநனால்  உனக்கு நன்றி  கூறப்பட்டது

அவந்த்ய மஹிம முனிஜன பஜன முஷித ஹ்ருʼதய கலுஷ ஶபரீ மோக்ஷ ஸாக்ஷிபூத !–41-
மகிழ்ந்த மனம் கொண்ட புகழ், வெற்றி, வெற்றி

கிஷ்கிந்தா காண்டம்

ப்ரபஞ்ஜன தனய பாவுக பாஷித ரஞ்ஜித ஹ்ருʼதய ! தரணி-ஸுத ஶரணாகதி பரதந்த்ரீக்ருʼத ஸ்வாதந்த்ர்ய !-42-43-காற்றின் மகனின்  மங்களகரமான மற்றும் பணிவான  பேச்சால் உங்கள் மனம் மகிழ்ச்சியடைந்தது, வெற்றி, வெற்றி –ஜயா  என்ற உங்கள் மகனால் நீங்கள் திரும்பப் பெற்றீர்கள். அவருக்கு சுதந்திரம், வெற்றி, வெற்றி

த்ருட கடித கைலாஸ கோடி விகட துந்துபி கங்காள கூட தூர விக்ஷேப தக்ஷ தக்ஷிணேதர பாதாங்குஷ்ட தர சலன விஶ்வஸ்த ஸுஹ்ருʼதாஶய !-44-உனது வலது பெருவிரலின் அசைவால், துந்துபியின் மலை போன்ற பிரம்மாண்டமான எலும்புக்கூட்டை மிக நீண்ட தூரம் எறிந்து, நெருங்கிய நட்பையும் நம்பிக்கையையும் பெற்றாய், வெற்றி, வெற்றி.

அதிப்ருʼதுல பஹு விடபி கிரி தரணி விவர யுகபதுதய விவ்ருʼத சித்ரபுங்க வைசித்ர்ய !–45-உனது அலங்கரிக்கப்பட்ட அம்பால் மிக அகன்ற மரங்களையும், மலையையும், பூமியையும், நரகத்தையும் துளைத்தாய், அதிசயங்களிலும் அதிசயம், வெற்றி, வெற்றி

விபுல புஜ ஶைல மூல நிபிட நிபீடித ராவண ரணரணக ஜநக சதுருததி விஹரண சதுர கபிகுலபதி ஹ்ருʼதய விஶால ஶிலாதல தாரண தாருண ஶிலீமுக !–46-துறவியின் மார்பில் ஒரு துறவியின் கடுமையான அம்பை எய்தினாய். போரிட வந்த ராவணன், அவனைத் தன் கைக் குழியில் வைத்துக் கொண்டு, தன் அன்றாடப் பிரசாதம், வெற்றி, வெற்றி என்று நான்கு சமுத்திரங்களுக்கும் பறந்தான்

ஸுந்தர காண்டம்

அபார பாராவார பரிகா பரிவ்ருʼத பரபுர பரிஸ்ருʼத தவ தஹன ஜவன-பவன-பவ கபிவர பரிஷ்வங்க பாவித ஸர்வஸ்வ தான !–47-காற்றின் மகனாகிய வானரப் பெருமானை நீ தழுவி , அவன்விரும்பியதை எல்லாம் கொடுத்து , பெருங்கடலைக் கடக்கும் , பெருங்கடலைக் கடக்க அவனுக்குத் தோன்றியவானரப் பெருமானை நீ தழுவிக் கொண்டாய்

யுத்த காண்டம்

அஹித ஸஹோதர ரக்ஷ: பரிக்ரஹ விஸம்வாதி விவித ஸசிவ விஸ்ரலம்பண ஸமய ஸம்ரம்ப ஸமுஜ்ஜ்ருʼம்பித ஸர்வேஶ்வர பாவ !–48-எதிரிக்குக் கொடுக்கப்பட வேண்டிய வெற்றியைப் பாதுகாப்பதைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு மந்திரிகளுக்கு நம்பிக்கையை அளிக்க நீ உன் பிரபஞ்ச வடிவத்தை எடுத்துக் கொண்டாய் 

ஸக்ருʼத் ப்ரபன்ன ஜன ஸம்ரக்ஷண தீக்ஷித !-வீர ! ஸத்யவ்ரத !–49-50-51-உன்னிடம் தன்னை ஒப்படைப்பவர்களை காக்கும் தவம் நீ எடுத்தாய், வெற்றி , வெற்றி –வீரன் , வெற்றி , வெற்றி -சத்தியம், வெற்றி , வெற்றி என்ற தவம் உள்ளவனே

ப்ரதிஶயன பூமிகா பூஷித பயோதி புளிந !–சமுத்திரத்தின் மணலை அதன்மேல் படுத்து புல்லால் அலங்கரித்த நீ 

ப்ரளய ஶிகி பருஷ விஶிக ஶிகா ஶோஷிதாகூபார வாரி பூர !-பிரளயத்தில் சுடர்., வெற்றி, வெற்றி

ப்ரபல ரிபு கலஹ குதுக சடுல கபிகுல கரதல துலித ஹ்ருʼத கிரி நிகர ஸாதித ஸேது-பத ஸீமா ஸீமந்தித ஸமுத்ர !–54-போருக்குத் துடித்த குரங்கு குலத்தை அமர்த்தி சமுத்திரத்தைப் பிரிக்கும் பாலத்தைக் கட்டி, பருத்தி மூட்டைகளைப் போல மலைகளைக் கொண்டு வந்து கடலில் எறிந்தாய், வெற்றி, வெற்றி.

த்ருத-கதி தரு-ம்ருʼக வரூதினீ நிருத்த லங்காவரோத வேபது லாஸ்ய லீலோபதேஶ தேஶிக தனுர்ஜ்யாகோஷ !–55-ஆசிரியையான நீ உன் வில்லின்  சத்தத்தால் லங்காவின் பெண்களை  நடனம் போல் நடுங்க அறிவுறுத்தினாய் 

ககன-சர கனக-கிரி கரிம-தர நிகம-மய நிஜ-கருட கருதநில லவ களித விஷ-வதன ஶர கதன !-56-வேதங்களின்  வடிவமான உங்கள் நண்பன் கருடன்,  வானில் ஒரு பொன் மலையாகத் தோன்றி, தன் சிறகுகளின் தென்றலால் அந்த விஷ அம்பின் விளைவை விரட்டி யடித்தான், வெற்றி, வெற்றி—சிறிய திருவடி என்று பெயர் பெற்ற உன்னுடைய நண்பன் ஆன கருடன் எதிரி விடுத்த விஷம் தோய்த அம்பில் இருந்து உன்னுடைய வானர சேனையை மிகவும் கஷ்டப்படுதிய போது தன்னுடைய சிறகுகளால் காற்று போல் அதை விசிறி தள்ளினான். வேதங்களின் உருவம் என்றும் கருடனை கூறுவார்கள்.

அக்ருʼத சர வநசர ரண-கரண வைலக்ஷ்ய கூணிதாக்ஷ பஹுவித ரக்ஷோ பலாத்யக்ஷ வக்ஷ: கவாட பாடன படிம ஸாடோப கோபாவலேப !-57-நீ கோபத்துடனும் வீரத்துடனும் மார்பைப் பிளந்தாய், ஏனென்றால் அவர்கள் தாழ்வான துறவிகளுக்கு எதிராகப் போரிட்டார்கள். , வெற்றி, வெற்றி -இதற்கு முன் கண்டறியாத குரங்குகள் யுத்தத்தை கண்டு வெட்கிப்போன பலபல ராக்ஷஸ தலைவர்களின் மார்பாகிற கவாடம் பிளந்திட மிகவும் முனிந்தவனே! ஸ்ரீ ராம ! ஜய விஜயீபவ

கடுரட-தடனி டங்க்ருதி சடுல கடோர கார்முக விநிர்க்கத விஶங்கட விஶிக விதாடன விகடித மகுட விஹ்வல விஶ்ரவஸ்தனய விஶ்ரம ஸமய விஶ்ராணன விக்யாத விக்ரம !–58-நீ மிகுந்த கோபத்துடன் உனது வில்லைத் தூளாக்கி அவனது வில்லைப் பொடியாகப் பொடி செய்து அனுப்பியாய். உங்கள் மிகவும் பிரபலமான வீரத்தை காட்டும் ஓய்வு., வெற்றி, வெற்றி–கேட்போர் காது கிழிய டங்காரம் செய்கிற கோதண்ட வில்வலவா ! நீ விளங்குவாயாக-இத்தகைய பெரும் போரிலும் ., இராவணனின் மகுட மாத்திரத்தை பங்கம் செய்து உயிரை வைத்து ஒடிப் போ என்று விட்ட உன்னுடைய உதார குணத்தை உலகமே புகழ்கிறது .

கும்பகர்ண குல கிரி விதளன தம்போளி பூத நி:ஶங்க கங்கபத்ர !–59-நீ கேள்விக்கு இடமில்லாத சக்தி கொண்ட மிக சக்திவாய்ந்த அம்புக்குறியை பயன்படுத்தி அவர்களின் குடும்ப மலையான கும்பகர்ணனை உடைத்தாய் , வெற்றி , வெற்றி

அபிசரண ஹுதவஹ பரிசரண விகடன ஸரபஸ பரிபதத் அபரிமித கபிபல ஜலதி லஹரி கலகல-ரவ குபித மகவஜி தபிஹனன-க்ருʼதனுஜ ஸாக்ஷிக ராக்ஷஸ த்வந்த்வ-யுத்த !–60-இந்திரஜித்தைக் கொன்ற பிறகு, அவனது சூனிய  ஹோமத்தை எல்லை யில்லாத வானரப் படையுடன் சீர் குலைத்து, அலறல் சத்தம் எழுப்பி, நீர் அலைகளை வீசி, உன்னுடைய மாபெரும் வெற்றியைக் கண்ட உன் சகோதரன்.–சத்ருக்களை வெல்ல வேண்டி இந்திரஜித்து அபிசாரயாகம் செய்திட, அதை அறிந்து லக்ஷ்மணன் வாநர ஸேனைகளோடு சென்று விலக்க அப்போது கடல் கலந்தது போல இருவரும் கை கலக்க இவர் அவனை கொன்றார்.அப்படி எதற்கும் இளமையாக இளையபெருமாள் ஸாக்ஷியாகப் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே நீ இரண்டாம் தடவையாக தனித்து லக்ஷ கணக்கிலான ராக்ஷஸர்களுடன் த்வந்த்வ யுத்தம் செய்தாய்.

அப்ரதித்வந்த்வ பௌருஷ !-61-பரஸ்பர சண்டை, வெற்றி, வெற்றி ஆகியவற்றில் உனது முழுமையான மற்றும் ஒப்பற்ற வீரம்

த்ர யம்பக ஸமதிக கோராஸ்த்ராடம்பர !–62-சிவபெருமானை விட உக்கிரமான தெய்வீக அம்புகள் உங்களிடம் உள்ளன

ஸாரதி ஹ்ருʼத ரத ஸத்ரப ஶாத்ரவ ஸத்யாபித ப்ரதாப !-63-அந்த ராட்சச மன்னனின் தேரோட்டி , போர், வெற்றி, வெற்றி

ஶித ஶர க்ருʼத லவந தஶமுக முக தஶக நிபதன புனருதய தர களித ஜனித தர தரள ஹரி-ஹய நயன நளின-வன ருசி-கசித கதல நிபதித ஸுர-தரு குஸும விததி ஸுரபித ரத பத !–64-உன் தேர் பாதை நறுமணம் வீசியது. தாமரை மலர்கள்) ப்ரஹ்மாஸ்திரத்தால் ராவணனின் தலைகளை வெட்டுவதைப் பார்த்து  அவர்கள் விழுந்து மீண்டும் தோன்றிய பிறகு .வெற்றி, வெற்றி

அகில ஜகததிக புஜ பல வர பல தஶ-லபந லபந தஶக லவந ஜனித கதன பரவஶ ரஜனி-சர யுவதி விலபன வசன ஸமவிஷய நிகம ஶிகர நிகர முகர முக முனி-வர பரிபணித!–65-மண்டோதரிக்குப் பிறகு வேதங்களுக்குத் தகுந்த துதிகளைப் பயன்படுத்தி நீங்கள் பெரிய முனிவர்களால் வணக்கம் மற்றும் புகழப்பட்டீர்கள்  இளம் ராட்சசப் பெண்மணி தனது மிகுந்த துக்கத்தால் வேத உண்மைகள் அடங்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி பிரபஞ்சத்தின் மிகவும் வலிமையான பிரபஞ்சத்தின் அதிபதியான தனது இழப்பைப் பற்றி புலம்பினார். வெற்றி, வெற்றி

அபிகத ஶதமக ஹுதவஹ பித்ருʼபதி நிர்ருʼதி வருண பவன தனத கிரிஶர முக ஸுரபதி நுதி முதித !அமித மதி விதி விதித கதித நிஜ விபவ ஜலதி ப்ருʼஷத லவ !-66-67-உன்னை இந்திரன், அக்னி , யமன் , நிருதி, வருணன்,  வாயு , குபேர , சிவன் ஆகியோர் அணுகி ,  அவர்களின்  புகழ் வெற்றி, வெற்றியால் மகிழ்ந்தனர்  கடலில் துளி, வெற்றி, வெற்றி-

விகத பய விபுத விபோதித வீர ஶயன ஶாயித வானர ப்ருʼதனௌக !–68-பின்னர், தன் பயத்தை இழந்த இந்திரனிடம் அனைத்து வானரங்களையும் மீண்டும் உயிர்ப்பிக்குமாறு நீ வேண்டினாய், அவனும் அவ்வாறே செய்தான், வானரங்கள் ஒரு பெரிய நதியைப் போல நகரத் தொடங்கின., வெற்றி, வெற்றி.

ஸ்வ ஸமய விகடித ஸுகடித ஸஹ்ருʼதய ஸஹதர்ம சாரிணீக !–69-நீ முன்னர் உன் சுய விருப்பத்தின் பேரில் பிரிந்திருந்த உன் மனைவியுடன் தர்மத்தை நிறைவேற்றுவதில் பங்காளியாக இருப்பவள் 
மீண்டும் இணைந்தாய். வெற்றி, வெற்றி.

விபீஷண வஶம்வதீ-க்ருʼத லங்கைஶ்வர்ய !-70-லங்காவின் செல்வத்தின் மீது விபீஷணனை முழுமையாகக் கட்டுப்படுத்தினாய் ., வெற்றி , வெற்றி

நிஷ்பன்ன க்ருʼத்ய !–71-நீ உன் கடமைகளை முடித்தாய் ,  வெற்றி , ஜெயம்

க புஷ்பித ரிபு பக்ஷ !–72–புஷ்பக ரபஸ கதி கோஷ்பதீ-க்ருʼத ககனார்ணவ !-73-புஷ்பக விமானத்தின் வேகத்தால் கடலை பசுவின் குளம்படி ஆக்கி , வெற்றி ,  வெற்றி

ப்ரதிஜ்ஞார்ணவ தரண க்ருʼத க்ஷண பரத மனோரத ஸம்ஹித ஸிம்ஹாஸனாதிரூட !–74-அக்கினியில் குதிப்பதாக சபதம் எடுத்த பரதன், சிம்மாசனத்தில் அமர்ந்து, வெற்றி, வெற்றி

ஸ்வாமின்!-75-மை லார்ட் வெற்றி, வெற்றி
ராகவ ஸிம்ஹ!–76-ஓ ராகவா சிங்கம், ஜெயம், ஜெயம்

உத்தர காண்டம்

ஹாடக கிரி கடக லடஹ பாத பீட நிகட தட பரிலுடித நிகில ந்ருʼபதி கிரீட கோடி விவித மணி கண கிரண நிகர நீராஜித சரண ராஜீவ !--77-உமது பொன் பாதம் பொன்  மேரு மலையைப் போல் ஒளிர்ந்தது 
வணங்கும் மன்னர்களின் மகுடங்களில் உமது ஒளிரும் தாமரை பிரதிபலித்த போது, ​​அது கற்பூரம் ஏற்றி வணங்கப்படுவது போல் தோன்றியது. வெற்றி, வெற்றி

திவ்ய பௌமாயோத்யாதிதைவத !–78-நீர் இரு அயோத்யாக்களுக்கும் (ஒன்று விண்ணகத்திலும் மற்றொன்று மண்ணிலும்) அதிதேவதையாக இருந்தீர், வெற்றி, வெற்றி

பித்ருʼ வத குபித பரஶு-தர முனி விஹித ந்ருʼப ஹனன கதன பூர்வ கால ப்ரபவ ஶத குண ப்ரதிஷ்டாபித தார்மிக ராஜ வம்ஶ !–79-தன் தந்தை கொல்லப்பட்டதால் கோபமடைந்த கோடரி ஏந்திய முனிவரால் முந்தைய தலை முறையினர் கொல்லப்பட்ட போது, ​​நீர் நல்ல அரச குடும்பங்களை மீண்டும் நிலை நாட்டினீர், வெற்றி, வெற்றி

ஶுச சரித ரத பரத கர்வித கர்வ கந்தர்வ யூத கீத விஜய காதா ஶத !–80-பெருமையும் கர்வமும் 
கொண்ட கந்தர்வர்களுடன் போரிட நல்ல குணத்துடன் அன்பான பரதனை அனுப்பினாய் , அவனது வெற்றிக்குப் பிறகு உன்னைப் பாடி துதிக்க ஆரம்பித்து , வெற்றி ,  வெற்றி 
.

ஶாஸித மது-ஸுத ஶத்ருக்ன ஸேவித !

குஶ லவ பரிக்ருʼஹீத குல காதா விஶேஷ !-82-நீ சத்ருக்னனை அனுப்பி, மதுவின் லவா மகனைக் கொன்று, அதைச் செய்தபின், அவன் உனக்கு மீண்டும் சேவை செய்யத்  தொடங்கினான் 

விதி வஶ பரிணமதமர பணிதி கவிவர ரசித நிஜ சரித நிபந்தன நிஶமன நிர்வ்ருʼத !–83- ஸர்வ ஜன ஸம்மானித !=84-விதியின் திருப்பங்களால் மரணம் கண்ட ஒரு மாபெரும் கவிஞன் இயற்றிய உன் கதையின் சொற்பொழிவைக் கேட்டு நீங்கள் சிலிர்த்துப் போனீர்கள் . அனைத்து மக்களாலும் புகழப்பட்ட பின், வெற்றி, வெற்றி

புனருபஸ்தாபித விமான வர விஶ்ராணன ப்ரீணித வைஶ்ரவண விஶ்ராவித யஶ: ப்ரபஞ்ச !–85-குபேரர்களுக்கு புஷ்பக விமானத்தை பரிசாகத் திருப்பித் தந்தாய், உன்னைப் புகழ்ந்து உலகம் முழுவதும் உன் புகழ் பரவியது

பஞ்சதாபன்ன முனிகுமார ஸஞ்ஜீவநாம்ருʼத !–86-ஜெபம் செய்து கொண்டிருந்த முனிவரின் இறந்த மகனை மீண்டும் உயிர்ப்பித்தாய் தவம் , வெற்றி, வெற்றி

த்ரேதாயுக ப்ரவர்தித கார்தயுக வ்ருʼத்தாந்த !–87-நீ க்ருத யுகத்தில் பராமரித்தாய் , 
திரேதா யுகத்தின்  தர்மம் ,  வெற்றி , வெற்றி

அவிகல பஹுஸுவர்ண ஹய-மக ஸஹஸ்ர நிர்வஹண நிர்வர்த்தித நிஜ வர்ணாஶ்ரம தர்ம !–88-ஏராளமான தங்கத்தை பரிசாக அளித்து, பல அஸ்வமேத யாகங்களை நடத்துதல், வெற்றி, வெற்றி

ஸர்வ கர்ம ஸமாராத்ய !-89-மக்களால் சகல கடமைகளையும் செய்து வழிபட்ட நீ, வெற்றி, வெற்றி
ஸனாதன தர்ம !-90-ஜெய  ஜெயம், ஹிந்துக்களின் மதத்திற்கு வெற்றி

ஸாகேத ஜனபத ஜனி தனிக ஜங்கம ததிதர ஜந்து ஜாத திவ்ய கதி தான தர்ஶித நித்ய நிஸ்ஸீம வைபவ !-91-என்றும் எல்லையற்ற புகழ் பெற்றவரே,அயோத்தி  மக்கள் அனைவருக்கும் , அங்கு வாழும் விலங்குகளுக்கும் முக்தியை அளித்தவரே, வெற்றி, வெற்றி. 

பவத-பநாதா-பித பக்தஜன பத்ராராம !–92-இல்லறத் துயரத்தால் வாடும் பக்தர்களை நீர் கவனித்து, அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறீர், வெற்றி, வெற்றி.

ஶ்ரீ ராமபத்ர !-93-ராம பத்ரனுக்கு வெற்றி, வெற்றி
நமஸ்தே புனஸ்தே நம: !
-94-வணக்கங்களும் மீண்டும் வணக்கங்களும்

சதுர்முகேஶ்வரமுகை: புத்ர பௌத்ராதி ஶாலினே । நம: ஸீதா ஸமேதாய ராமாய க்ருʼஹமேதினே ॥-95-நான்முகனை மகனாகவும், பரமேஸ்வரனைப் பேரனாகவும்  கொண்ட  சீதையுடன் இல்லறம் நடத்தும் ராமருக்கு வணக்கங்கள்

கவிகதக ஸிம்ஹகதிதம் கடோத ஸுகுமார கும்ப கம்பீரம் ।
பவ பய பேஷஜமேதத் படத மஹாவீர வைபவம் ஸுதிய: ॥-ஓ அறிஞர்களே, ‘மாபெரும் நாயகனின் பெருமை’ எனும் இப்பிரபு, கவிஞர்களுள் சிங்கமான கவிஞரால் இயற்றப்பட்டுள்ளது; ஆழ்ந்த உட்பொருள்களைக் கொண்ட மென்மையான மற்றும் கடினமான சொற்களால் ஆனது; மேலும் இது, இல்லறம் எனும் நோயின் அச்சத்தை அழித்துவிடும்.

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே ।
ஸ்ரீமதே வேங்கடேஶாய வேதாந்த குரவே நம: ॥

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

———————————–

மரகத வுருவும்-தூய தாமரைக் கண்களும் -துவர் இதழ் பவள வாயும்-உபதேசம் அருளி -அழகைக் காட்டி -கடாக்ஷித்து -பேற்றை அளிக்கிறான்-

August 11, 2026

அவதாரிகை

இவ் விஷயத்தில் ப்ராவண்யத்தை தவிர்த்து
எங்களைப் போலே தேக யாத்ரா பரராய் வர்த்திக்கவே தரிக்கலாம் -என்ன
கண் வளர்ந்து அருளுகிற அழகைக் கண்டு வைத்து
இஸ் ஸ்மர்த்தி யடங்க எங்களுக்கு -என்னும்படியான ஸ்வரூப ஞானம் உடைய எங்களுக்கு
அஹம் மம –என்கிற உங்களைப் போலே
அகல விரகு உண்டோ –
என்கிறார் –

—————

பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே–

பதவுரை

பாயும் நீர்–பாயா நின்றுள்ள காவிரி சூழ்ந்த
அரங்கம் தன்னுள்–கோயிலிலே
பாம்பு அணை–சேஷ சயநத்திலே
பள்ளி கொண்ட–கண் வளர்ந்தருளா நின்ற
மரகதம் உருவும்–மரகத மணி போன்ற திருமேனி நிறமும்
தோளும் –திருத் தோள்களும்
தூய தாமரை கண்களும்–பரிசுத்தமான தாமரை மலர் போன்ற திருக் கண்களும்
துவர் இதழ்–சிவந்த அதரமும்
பவளம் வாயும்–பவளம் போன்ற வாயும்
மாயனார்–ஆச்சரிய சக்தி வாய்ந்த எம் பெருமானது
திரு நல் மார்வும்–பிராட்டி வாழ்கின்ற விலக்ஷணமான மார்பும்.
ஆய சீர் முடியும் –வேலைப்பாடுள்ள அழகிய திருமுடியும்
தேசும்–(இவற்றாலுண்டான) தேஜஸ்ஸும்.
அடியரோர்க்கு–ஸ்வரூப ஜ்ஞான முடைய தாஸர்களுக்கு
அகலலாமோ–இழக்கத் தகுமோ?

—————————–

பாயு நீர் அரங்கம் –
அடைத்தேற்ற வேண்டாத படி நீருக்குப் பள்ள நாலியான கோயில் –
இது உப லஷணம் –

பாவனமாயும்
பிரசன்னமாயும் உள்ள பதார்த்தங்களுக்கு
பள்ள மடையாய் இறே கோயில் இருப்பது –
ரமணீயம் ப்ரஸன்நாம்பு சந் மநுஷ்ய நோயதா –
நீருக்கு சாத்விகர் நிதர்சனமாய் இறே இருப்பது –

தன்னுள் பாம்பணைப் –
அந் நீர் உறுத்தாமைக்கு படுத்த படுக்கையாய் யாய்த்து திரு வநந்த ஆழ்வான் –
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து -என்னக் கடவது இறே

பள்ளி கொண்ட மாயனார் –
கண் வளர்ந்து அருளும் போதை அழகு ஆச்சர்யமாய்த்து இருப்பது –
சமயா போதிதச் ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப-என்னக் கடவது இறே –
நிற்றல் இருத்தல் செய்தார் ஆகிலும் அகலலாம் கிடீர்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -என்றும்
ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலேன் -என்றும்
என்றும் சொல்லக் கடவது இறே –
ஆனையில் கிடக்கை -ஆனை போல் கிடக்கை –

(வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள் பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும் அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ! கேசவா ! கெடுவேன் கெடுவேனே–பெருமாள் திருமொழி 7-2-

ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
ஆனை தன் அவயவங்களை பொகட்டுக் கொண்டு ஸ்வைரகமாக கிடந்தால் போலே
தொட்டிலிலே கிடக்கும் போது அனுபவிக்கப் பெற்றிலேன் என்று ஐயோ -என்கிறாள்)

திரு நன் மார்பும்
பிராட்டியாலே லஷணமான மார்பும்
பிராட்டியினுடைய செம்பஞ்சின் சுவடுகளும்
கழித்த மாலைகளுமாய் கிடக்கும் யாய்த்து –
பிராட்டி –அகலகில்லேன் இறையும்-என்று -பிரிய மாட்டாத
வை லஷண்யத்தை உடைய  மார்வு -என்னவுமாம்

மரகத வுருவும்-
கண்டார் கண் குளிரும்படி நீர் வெள்ளத்தை திறந்து விட்டாப் போலே யாய்த்து வடிவு இருப்பது

தோளும்-
கீழ் இலவை போலே
இடு சிவப்பு-ஆரோபிதாகாரம் -என்றபடி – இல்லாத தோளும்
அவ் வெள்ளத்திலே அழுந்துவார்க்கு தெப்பம் போலே
இருக்கிற திருத் தோளும் –

தூய தாமரைக் கண்களும்-
பிராட்டியோடு ஹிரண்யாதிகளோடு வாசி அற
குளிர நோக்குகிற திருக் கண்களும் –

நோக்குத் தூய்மை யாவது –
நிர்ஹேதுகமாக கடாஷிக்கை –

ஸூஹ்ருதம் சர்வ பூதானாம் -என்கிறபடியே –
அனுகூல பிரதி கூல விபாக ரஹீதமாய்த்து சௌஹார்த்தம் இருப்பது –

தேவாநாம் தாநவா நாஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்கிறபடியே
சம்பந்தம் ஒத்ததாய்த்து இருப்பது –

இப்படி இருக்க
சில பதார்த்தங்களுக்கு கடாஷம் அநர்த்த ஹேது வாகிறது -பிரகிருதி தோஷத்தாலே –
சர்வ அனுகூலமான தென்றல் ஆனது ஒரு பதார்த்ததில் வந்தால் சோஷகம் ஆகாது நின்றது இறே –

மென்மை குளிர்த்தி நாற்றம் இவற்றுக்கு தாமரை ஒரு போலியாம் இத்தனை -போக்கி
அகவாயில் தண்ணளிக்கு த்ர்ஷ்டாந்தம் ஆக மாட்டாதே

துவர் இதழ் பவள வாயும் –
சிறந்த திரு அதரத்தையும்
பவளம் போலே இருந்துள்ள தந்த பந்தியையும் உடைய வாயும் –
அவாக்ய அநாதர -என்கிற காம்பீர்யம் குலைந்து –
கிட்டினாரை சாந்தவ வாதனம் பண்ணுகிற திருப் பவளமும் –
ஸ்வ அபராதத்தை அனுசந்தித்து கிட்டி அஞ்சினவர்கள் உடைய அபராதத்துக்கு
நேர்த்தரவு கொடுக்க ஸ்மிதம் பண்ணும் திருப் பவளமும் -என்கை –

ஆய சீர் முடியும்-
பண்டே யாய்ச் சீர்மையை உடைத்தான முடியும் –
சித்தமாய் ஐஸ்வர்ய ஸூசகமான திரு அபிஷேகமும் –

இத்தனையாலுமாக அவயவ சோபை சொல்லிற்று –

தேசும் –
இத்தால் சமுதாய சோபையைச் சொல்லுகிறது –

அடியரோர்க்கு அகலலாமே –
இஸ் சமர்த்தியைக் கண்டால் ஸ்வரூப ஞானம் உடையார்க்கு அகலப் போமோ
இதற்குப் புறம்பாய் -அஹம் மம -நான் என்னது -என்று
இருப்பார்க்கு அன்றோ அகலல் ஆவது –

ஆமே -என்றது
எதிரிகளுக்கும் அகலப் போகாது என்ன வேண்டும் படியாய் இறே
அர்த்தத்தின் மெய்ப்பாடு இருப்பது-

(எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏட்டுபுறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே
பரம பாவநமான திருவரங்கந் திருப்பதியிலே திருவனந்தாழ்வான் மீது
“தன் தாளுந் தோளும் முடிவுகளும் சமனிலாத பல பரப்பி” என்றபடி
ஸகலாவயவ ஸெளந்தரியமும் நன்கு விளங்கும்படி சாய்தருள்கின்ற எம்பெருமானது திவ்ய தேஜஸ்ஸைக்
காணப் பெற்றவர்களும் மீண்டு கால் பேர்ந்து விலக முடியுமோ?)

———-

மரகத வுருவும்-தூய தாமரைக் கண்களும் -துவர் இதழ் பவள வாயும்உபதேசம் அருளி -அழகைக் காட்டி -கடாக்ஷித்து -பேற்றை அளிக்கிறான்

யமாதி நியமங்கள் வேண்டாமே -இவை கொண்டே அறிந்து தியானித்து மனம் வாக் கார்யம் அவனிடம் ப்ரவணமாகி கடாக்ஷத்துக்கு இலக்காகலாமே

பூமாதி கரணம்-மற்ற ஒன்றைக் கேட்க்காதே -பேசாதே -நினைக்காதே-நான்யஸ்ய -பஸ்யதி -ஸ்ருணோதி -தியானாதி -மூன்றும் சேர்ந்தே பல பாசுரங்கள் –பச்சை மா மலை போல் மேனி -பவள வாய் -கமலச் செங்கண்
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாமம் வாள்முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள
செந்தாமரை தடம் கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிகள் செம்பொன் திரு வுடம்பே
–2-5-1–இங்கும் மூன்றும் சேர்ந்து அருளிச் செய்கிறார்-ஆழ்வார்கள் திவ்ய மங்கள விக்ரஹத்திலும் கல்யாண குணங்களிலுமே ஆழங்கால் பட்டு அருளிச் செய்துள்ளார்கள் -ரிஷிகள் ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் இழிந்து இருப்பார்கள் – ப்ருஹத்வாத் -ஞான ஆனந்த மயமாய் -அனுகூல ஞானமே ஆனந்தம் –ஸர்வ வ்யாபி -ஆகாசம் போல் -ஸர்வ நியந்தா -ஸர்வேஸ்வரேஸ்வரன் -ஸூபாஸ்ரயம் -நமக்கு கிட்டும்படி தியானத்துக்கு எளியதாய் -இடம் காலம் உருவம் அடக்கி –பஞ்ச பிரகாரம் –பச்சை மா மலை போல் மேனி என்பதே மரகத உரு-கட்டுண்ணப் பண்ணிய பெருமாள்-கிருபை அடியாக விகாரம் -தளிர் புரையும் திருவடிகள்-அல்பஸ்ருதே : -1-3-3- தஹராகாசம் அல்பமானது (சிறியது) என்று சொல்லப் படுகிறபடியால் அது பரமாத்மாவாக இயலாதே
இதி சேத் – என்று கேட்டால்
தது₃க்தம் – அதற்கான விடை முன்னமே 1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் “அர்ப₄கோகஸ்த்வாத் தத்₃ வ்யபதே ₃சாத் நேதி சேத் ந நிசாய்யத்வாதே₃வம் வ்யோமவச்ச” என்கிற ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது. பரமாத்மா அளவற்றவராய் இருந்தாலும், உபாஸகனுக்கு அனுக்ரஹிப்பதற்காக அவர் ஹ்ருதயத்துக்குள்ளும் சிறிய வடிவத்வதாடு இருக்கிறபடியால் இதில் பொருந்தாமை இல்லை.

பரமேஷ்டி புமான் நிவ்ருத்த விஸ்வ ஸர்வ –பஞ்ச பூதங்கள் போல் இவை உண்டாக்கப்படுபவை அல்ல -அப்ராக்ருதம் -ஸுத்த ஸத்வம் -ஞானத்தை வளர்க்கும் -தானே விளங்கும் மற்ற அனைத்தையுமே விளக்கும் -ஸூயம் ப்ரகாஸம்-ஜெய் சிந்தானாம் -சிந்தா நல்ல விஷயம் -சிந்தை மற்ற நின் திறத்து அல்லால் அனைத்தும் -சிதை போல் ஆகும் -ஸாத்யமான த்யானம் —

ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–5-

ந தே ரூபம் –
ரூபம் -எனபது திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
ஆகார -என்று திவ்ய விக்ரஹத்தை மேலே சொல்லுகையாலே-
இஸ் ஸ்லோகத்தால்
ஸ்வரூபாதிகள் இவனுக்கு இல்லை என்கிறது -எங்கனே -என்னில்
தே -என்று
நிர்த்தேசித்து வைத்து -ஸ்வரூபாதிகளை நிஷேதிக்கையாலே
நிஷேதிக்கிறது எவ் வாகாரத்தாலே -என்னில்
ஸ்வரூபாதிகளாலே தேவர் கொள்ளுவது ஒரு கார்யம் இல்லை என்று ஸ்வார்த்தத்தை நிஷேதிக்கிறது –

தே ரூபம் ந தே –
உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் உனக்காய் இராது
ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமாய் இருக்கில்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கிற அது பர தந்த்ரமாய் இருக்கும் –
மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம் ந்ருபை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12-என்றும்
கிங்க ரௌ சமுபஸ்தி தௌ -பால -31-4-என்றும் சொல்லக் கடவது இறே-

தூய தாமரைக் கண்கள்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி
கண்கள் விரிவடைந்து நீண்ட அப்பெரியவாய கண்கள்–அதீர்க்கம்-அப்ரேம துகம்-க்ஷண உஜ்ஜ்வலம் -ந சோர அந்தக்கரணம் பஸ்யதாம் -கூரத் தாழ்வான்-தாமரை நின் கண் ஒவ்வாவே -யதா கப்யாஸம் ஏவ புண்டரீகம்–ததைவ அக்ஷிணீ–இரண்டு திருக்கண்கள் –
ஆறு நிர்வாகங்கள் –மூன்று பொருந்தாது -மூன்று பொருந்தும்

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார்

August 11, 2026

திருநக்ஷத்ரம் : ஆனி அவிட்டம்
அவதார ஸ்தலம் : திருமழிசை
ஆசார்யன் : திருதகப்பனார் நரஸிம்ஹாசார்யர்

மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.

இளமையிலேயே மிக்க அறிவாளியாய் திகழ்ந்த இவர், 15 ப்ராயத்துக்குள் தம் யஜுஸ் சாகை முழுதும் கற்றார். அத்தோடே தர்க்கம், வியாகரணம், மீமாம்ஸை, சாங்க்யம், பதஞ்ஜலி யோகம் முதலியனவும், ஜ்யோதிஷம், ஸங்கீதம், பரத நாட்யம், போன்றனவும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 20 பிராயம் முடியுமுன்பே ஸகல சாஸ்த்ர நிபுணர் ஆனார். திருத்தகப்பனாரிடம் ரஹஸ்ய கிரந்தங்கள் கற்று மிக்க இளமையிலேயே ஸம்ப்ரதாய ஸ்ரீகோசங்கள் எழுதலானார். வாதூல வரதாசார்யர் மற்றும் பல திவ்ய தேச யாத்ரைகள் செய்து பலரை வாதில் வென்ற ஸ்ரீரங்காசார்யர் இருவரிடமும் பயின்றார்.

இவரின் லிகித கைங்கர்யங்களில் தலையானது பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த ஸ்ரீவசன பூஷணத்துக்கு மாமுனிகள் அருளிச் செய்த வ்யாக்யானத்துக்கு விரிவான அரும்பத உரை அருளியது ஆகும். இவரின் மற்றொரு க்ரந்தமான பக்தி ஸாரோதயம் திருமழிசை ஆழ்வாரின் சரித்ரத்தை மிக அழகாகக் காட்டியுள்ளது.

51 ஆண்டுகளே எழுந்தருளியிருந்த இந்த ஸ்வாமி அச்சிறிய வயதுக்குள் பலரை வாதங்களில் வென்றார். ஈச்வர வருஷம் ஐப்பசி சுக்லபக்ஷ சதுர்த்தசியில் பரமபதித்தார்.

க்ரந்தங்கள்

இவர் தான் வாழ்ந்த குறுகிய காலத்துள் பல க்ரந்தங்கள் அருளியுள்ளார். அவற்றின் தொகுப்பு இங்கே:

  • ஸ்ரீ பக்தி ஸாரோதயம்
  • வேதவல்லி சதகம்
  • ஹேமலதாஷ்டகம்
  • அபீஷ்ட தண்டகம்
  • சுக சந்தேசம்
  • கமலா கல்யாண நாடகம்
  • மலயஜா பரிணய நாடிகா
  • ந்ருஸிம்ஹாஷ்டகம்
  • மாமுனிகள் ஸ்ரீவசன பூஷண வ்யாக்யான அரும்பதம்
  • திருச்சந்த விருத்த ப்ரதிபதம்
  • ஸ்ரீரங்கராஜ ஸ்தவ வ்யாக்யானம்
  • மஹாவீரசரித வ்யாக்யா
  • உத்தர ராம சரித வ்யாக்யா
  • சத ச்லோகீ வ்யாக்யா
  • ராமாநுஜாஷ்டக வ்யாக்யா
  • நக்ஷத்ர மாலிகா வ்யாக்யா
  • தேவராஜ குரு விரசித வரவரமுனி சதக வ்யாக்யா
  • துஷ்க்கர ச்லோக டிப்பணி
  • தினசர்யா
  • ஷண்மத தர்சனி
  • லக்ஷ்ம்யா உபாயத்வ நிராஸ:
  • லக்ஷ்மீ விபுத்வ நிராஸ:
  • ஸூக்தி ஸாதுத்வ மாய்யா
  • தத்வ ஸுதா
  • தத்வ ஸார வ்யாக்யா
  • ஸச்சரித்ர பரித்ராணம்
  • பழனடை விளக்கம்
  • த்ரிம்சத் பிரச்னோத்தரம்
  • லக்ஷ்மீ மங்கள தீபிகா
  • ராமானுஜ அதிமானுஷ வைபவ ஸ்தோத்ரம்
  • அநு பிரவேச ச்ருதி விவரணம்
  • ”சைலோக்னிச்ச” ச்லோக வ்யாக்யா
  • மஹீஸார விஷய சூர்ணிகா
  • “ஸ்வாந்தே மே மதனஸ்திதிம் பரிஹர” இத்யாதி ஸ்லோக வ்யாக்யானம்
  • ஸச்சர்யக்ஷகம்
  • ப்ராப்ய ப்ரபஞ்சந பஞ்ச விம்சதி:
  • ந்யாய மந்தரம்
  • தாத்பர்ய ஸச்ச்ரீகரம்
  • வசஸ் சுதா மீமாம்ஸா
  • வசஸ் சுதா பூர்வ பக்ஷ உத்தரம்
  • ப்ரஹ்மவத்வதங்கம்
  • லக்ஷ்மீ ஸ்தோத்ரம்
  • வரணபஞ்ச விம்சதி:

இவ்வாறு தமது அளப்பரிய ஞான வைபவத்தால் ஸம்ப்ரதாயப் பெரும்பணியாற்றிய அண்ணாவப்பங்கார் ஸ்வாமியின் வைபவம் சிறிதே அனுபவித்தோம். நாமும் இவரின் திருவடிகளில் பணிந்து, பகவத் விஷயத்தில் சிறிது ஞானத்தைப் ப்ரார்த்திப்போம்.

இவர் தனியன்:

ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அமலனாதிபிரான் -அனுபவம்

August 11, 2026

வ்ருச்சிகே ரோஹிணீ ஜாதம்‌ ஸ்ரீபாணிம் நிசுளாபுரே
ஸ்ரீவத்ஸாம்சம்‌ காயகேந்தரம்‌ முனி வாஹனன் ஆஸ்ரயே
-திருப்பாணாழவார்‌ திருநக்ஷத்திரத் தனியன்‌

பெரியாழ்வார் அவதார ஈடுபாடு-(பெரியாழ்வார் திருமொழி)

அ. பாதக்கமலம் -(1.3.1)-திருப்பாணாழ்வார் அருளியதிருப்பாணாழ்வார் அர்ச்சாவதார
ஈடுபாடு (அமலனாதிபிரான்) திருக்கமலபாதம் (1)
ஆ. பீதகச்சிற்றாடையொடும்(1.8.3.)–அரைச்சிவந்தாடையின்மேல் – (2)
இ.அழகியஉந்தி-(1.3.8)-அயனைப்படைத்ததோர்எழில் உந்தி -(3)
ஈ. பழம்தாம்பால் ஆர்த்தஉதரம் (13.9)-திருவயிற்றுதர பந்தனம் (4)
உ. குருமாமணிப் பூண்குலாவித் திகழும் திருமார்பு (1.3.10)-திருவார மார்பு-(5)
ஊ. அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம்-(1.3.13)-முற்றுமுண்ட கண்டம் – (6)
எ. நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலம் – (1.3.12)-கையினார் சுரிசங்கனலாழியர் – (7)
ஏ. செந்தொண்டைவாய்-(1314)-செய்ய வாய்(7)
ஐ.கண்களிருந்தவா – (1.3.16)-அப்பெரியவாய கண்கள் – (8)
ஒ. உருவுஉரியவொளிமணிவண்ணன் (1.3.17)-எழில் நீலமேனி -(9)-குழல்களிருந்தவா – (13.20)-துளப விரையார் கமழ் நீண்முடி- (7)

நாச்சியார் பெரிய பெருமாளுடன் “நமக்கு அந்தரங்கரான இப் பாண் பெருமாள் புறம்பே நிற்கலாமோ” என்று கூறுகிறார். இதில் ஆழ்வாரை ”பாண் பெருமாள்’ என்று பெயரிட்டு அழைப்பது காண முடிகிறது-எம் பெருமான் ஆணைப்படி லோகசாரங்க முனிவர் திருப்பாணாழ்வாரைத் தம்தோள்களின் மேல் ஏற்றிக் கொண்டு எம்பெருமான் சன்னதிக்கு வந்ததனால் இவருக்கு’முனி வாகனர்.’ என்ற பெயர் வழங்கலாயிற்று.”மேலும்,நம்மாழ்வார் தாம் அருளிய திருவாய்மொழியில் ”இசைகாரர்’ என்ற பெயரால் திருப்பாணாழ்வாரை நினைப்பதாகக் கூறுவர்.” பட்டர் தாம் அருளிய வடமொழி ஸ்லோகத்தில் ஆழ்வாரை “யோகி வாஹாந் என்றும் அழைக்கின்றார். இவ்வாறாக திருப்பாணாழ்வாருக்கு பாண் பெருமாள், முனி வாகனர், இசை காரர் யோகி வாஹான் என்று பலபடியான திருநாமங்கள் இருப்பதைக் காணமுடிகிறது.

அமலனாதிபிரான் முதல் மூன்று பாடல்களில் எல்லா வேதத்தின் சுருக்கமாய் மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியதான ‘ஓம்” என்கிற பிரணவத்தின் அகார,உகார, மகாரங்களாலே முதலீட்டு மூன்று பாட்டுக் களையுடைய அடியிலே அமைந்துள்ளது இப்பிரபந்தம் என்றும், ”ஓம்” என்ற பிரணவத்தைத் தெரிவிப்பதான வஸ்து எம்பெருமான் என்றும், பெரிய பெருமாளைப் பிரணவ வடிவமான விமானத்தின் நடுவில் திருவடி தொடங்கி திருமுடி வரையில் அனுபவித்த பிரபந்தம் என்கிற விருப்பத்தோடு ஆசாரிய உச்சாரண முறையில் கற்பார்கள் என்றும், அமலனாதிபிரானின் பெருமையைச் சீயர் கூறுவர்.’சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழாலளித்த பாரியலும் புகழ்ப்பாண் பெருமாள்–திருவரங்கத்து அமுதனார்-மாமுனிகள் இதற்கு உரைய-எம்பெருமானின் இயல்பு, வடிவம், குணம் செல்வங்கள் (லீலா விபூதி, நித்ய விபூதி ) இவற்றை உள்ளபடியே தெரிவிப்பதால் வந்த சீர்மையை உடையது என்றும், ருக்,. யஜூர்,சாம, அதர்வண என்று நான்கு வகைப்பட்ட வேதத்தினுடைய இனிமையான பொருளை சொல்வது என்றும், இதனை அருளியவர் நடை விளங்கு தமிழ் மாலையாலே உதவி செய்தவராய் பூமியிலே நிலையாக நின்றுள்ள கீர்த்தியையுடைய திருப்பாணாழ்வார்

“அண்டர்கோன் அணியரங்கள் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று அருளியபடியே ஆளவந்தார் வேறொரு விஷயம் அறியாதவராய் இருந்தார்; அவ்வாறே ஆளவந்தார் திரு மேனியிலே வாட்டம் கண்டு எழுந்தருளியிருக்கும் போது அவருடைய சீடர்கள் தங்களுக்குத் தஞ்சமாக இருப்பதின் பொருளைச் சொல்ல வேண்டும்படி வேண்டினர், அதற்கு ஆளவந்தார் “பெரிய பெருமாளின் திருவடிகளின் கீழே வீணையும் கையுமாய் சேவித்து இருக்கும் திருப்பாணாழ்வார் விக்ரஹத்தை பாதாதிகே சாந்தமாக ( பாதம் முதல் முடிவரையில்) சேவித்துக் கொண்டு போருங்கள்” என்று சொன்னார். மேலும், பெரிய பெருமாள் உயிர் நிலை அறிந்தவர் திருப்பாணாழ்வார்; திருப்பாணாழ்வார் உயிர் நிலை அறிந்தவர் திருவரங்கப் பெருமாள் அரையர் என்றும் அருளினார்.திருமந்திரத்தின் பொருளாக போக மண்டபமாகத் திருவரங்கம் திகழ்கிறது-இதனை வெளியிட்டவர் திருப்பாணாழ்வார்-கோயில் என்று சொல்லப்படும் திருவரங்கத்துக்கு முதன்மை வந்ததுக்குக் காரணம் அவ்வெம்பெருமான் திருப்பாணாழ்வாரோடு கலந்து பரிமாறுகையாலே என்பர்-பரமபதம், திருவேங்கடம், திருவரங்கம்ஆகிய இம்மூன்று திவ்விய தேசங்களையும் ஆழ்வார் இருந்த இடத்திலிருந்தே முதல் பாடலிலேயே மங்களாசாசனம் செய்தார் என்பது அறிய முடிகிறது.

‘சதுர மா‘ நாலாம் பாட்டின்‌ முகலெழுத்தான, :‘ என்பது முதலாவதான பிரமாண-பிரணவம் – சாரத்தையும்‌, இரண்டாவதான பிரமேய சாரத்தையும்‌-பாதுகை – சேர்கிறது

‘உயர்வற உயர் நலம் உடையவன்.”–”அமலன்” என்ற சொல்லாலே குறிப்பிடுகிறார்.அதாவது, குற்றங்களுக்கு எதிர்தட்டானவன் என்றும், தூய்மை யானவன் என்றும், தான் ஒருவன் தூயனாவது மட்டுமின்றித் தன்னோடு உறவுடையாரையும் தூய்மை யாக்க வல்ல திருவடியை யுடையவன்

யவன்” என்று திருவாய்மொழியில் குறிப்பிட்டதை, ஆழ்வார் ‘‘ஆதி” என்று குறிப்பிடுகிறார்; ‘யவன்” என்ற சொல் பிரசித்தியைக்காட்டுகிறது . அத்தகைய பிரசித்தியைத்தான் ”ஆதி” என்று குறிப்பிடுகின்றார் ஆழ்வார். இச் சொல்லுக்கு ‘உலகுக்கு காரணமாம் தன்மை” ( ஜகத் காரணத்வம்) என்றுஉரையிடுவர் பெரியவாச்சான் பிள்ளை-

மயர்வற மதி நலம் அருளினன்“-இது தன்னையே திருப்பாணாழ்வார் ” பிரான்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.”பிரான்” என்பதினால் ஆழ்வார் தாழ்ச்சியைப் பாராதே எம்பெருமான் ஆழ்வாரைத் தனக்கு இலக்காக்கிக் கொண்ட உதவியாளனைச் சொன்னபடி.

”நீதி வானவன்“-வானவனுடைய நீதியாவது ஆண்டவன் – அடியவன் என்ற உறவாம் தன்மை (சேஷ சேஷித்துவங்கள்) முறை மாறாது இருத்தல்-அதாவது “சேஷித்வம்” என்பது தலைவனாம் தன்மை.-ஈச்வரன் நான்” என்று எதிரிட்டு இருக்கும் இடம் இந்த உலகம்:-நித்ய விபூதியான வானுலகில் கலக்குவாறுமில்லை. கலங்குவாறுமில்லை; இந்த பூமியில் கலக்குவாறுமுண்டு கலங்குவாறுமுண்டு என்றவாறு.

கொண்டல் வண்ணன்” என்ற சொல்லடிப் படையில் எம்பெருமான் மேகம் போல் வள்ளல்
தன்மை யுடையவன் என்பதை இவர் பக்கல் ஔதார்யம் இல்லை யென்று போகவோ?-‘வெண்ணெய் உண்ட வாயன்” என்ற சொல்லடிப் படையில் அடியார்களுடைய உடைமையான வெண்ணெயை விழுங்கியதனால் அந்தக் குணுங்கு நாற்றம் வாயிலே தோன்றும்படி இருப்பதினால் “வடிவில் பசை யில்லை யென்று போகவோ?“-கோவலனாய்” என்ற சொல்லடிப்படையில் இடையரோடு இடைச்சியரோடு வாசியற ஒரு நீராகக் கலந்ததனால் “செனசில்யம் இல்லை யென்று போகவோ?” என்றும்.”என்னுள்ளம் கவர்ந்தானை” என்ற சொல்லடிப்படையில் கோவலனாய் வெண்ணெய் உண்டாப் போலே கொண்டல் வண்ணனாய் ஆழ்வார் உள்ளத்தைக் கவர்ந்ததனால்”நெஞ்சுக்கு பிடித்திருந்த தில்லை யென்று போகவோ?”-“அண்டர் கோன்” என்ற சொல் அடிப்படையில் வேறு அண்டத்திலுள்ள ஆத்ம சமூகத்திற்குத் தலைவனாய் இருப்பதனால் “மேன்மை யில்லை யென்று போகவோ?”-” அணியரங்கன்” என்ற சொல்லடிப்படையில் கண்ணாலே காணலாம்படி சம்சாரத்துக்கு
ஆபரணமான திருவரங்கத்தில் எம்பெருமான் வந்து பள்ளி கொண்டதனால் சௌலப்பியம்
(எளிவந்த தன்மை) இல்லை யென்று போகவோ?
என் அமுதினை” என்ற சொல்லடிப்படையில்
அளப்பரிய ஆரமுதாய் இருப்பதனால் இனிமை (போக்யதை) இல்லையென்று போகவோ?”அமுதினைக் கண்ட கண்கள்” என்ற சொல்லடிப்படையில் திருவரங்கத்து இறைவனை முழுமையாக அனுபவித்த கண்கள் ஆதலால் “அனுபவத்தில் குறை யுண்டென்று போகவோ?”–நாயனார் அருளுவது சுவை மிக்கதாகும்.

செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே-“மற்ற அவயவங்களின் அழகில் முன்பே என் நெஞ்சு பறிகொடுத்த என்னை மற்ற அவயவங்களைக்காட்டிலும் தனது திருப்பவள செவ்வாயைக் காட்டி “கல்லை நீராக்கி, நீரையும்தானே கொண்டது என்றும் உகக்கின்றார். ஆழ்வார். இதையே ‘கல்லை நீராக்கி நீரைத் தானே கொண்டதனால் வந்த உகப்பு என்பர்.

வேதாந்த தேசிகர் தாம் அருளிய முனிவாகன போகத்தில் முதல் மூன்று பாடல்கள்
அகார, உகார, மகாரமாகிய ” ஓம் ” என்ற பிரணவத்தின் பொருள் என்பதையும், நான்காவது பாடல் ‘ நம:” என்பதின் பொருள் என்றும், ஐந்து ஆறாவது பாடல்கள் ” நாராயண ” என்ற சொல்லின் பொருள் என்றும், ஏழு எட்டு ஒன்பது பத்து ஆகிய நான்குபாடல்கள் “ஆய” என்பதின் பொருள் என்றும், இவற்றை அனைத்தையும் கூட்டி “ஓம் நமோ நாராயணாய” என்ற திருமந்திரத்தின் பொருளாக அமலனாதிபிரான் அமைந்துள்ளது
என்று விரிவாக உரை வழங்கியுள்ளார்.

பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே ” என்னும் தொடருக்கு உரை
வழங்கிய ஆசாரியர்கள், முன்பாட்டான “கையினார் சுரிசங்கனலாழியர்” என்ற பாடலில் ”என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ” என்று அறிவு வளர்ச்சிக்கு இடமான வழியைக் கவர்ந்தபடியைச் சொல்லிற்று என்பர். அதாவது அறிவை அபகரித்தபடியைச் சொல்லுகிறது. “அறிவைக் கவர்தலாவது அழகிலே அலமருகை

ஆல மா மரத்தினிலை மேல்–ஆல மாமரத்திலே நெரித்தால் பால்பாயும்படி இருக்கின்ற இளந்தளிர்” என்று சொல்லி”மாமரம்” என்பதற்கு எதிர் மறையாய்ச் சிறிய மரம் என்று பொருள் உரைப்பர். “‘இலைமேல் என்பதனால் இந்த இலைக்குள்ளே அடங்கும்படியாய்த்து வடிவின் சிறுமை யிருப்பது”யசோதை பாலகன் முற்றினவன்” (மிகப்பெரியவன்) என்னும்படி “ஒப்பற்ற இளம் பாலகன் – முற்றினவன்” மிகப்பெரியவன். இங்கே எதிர்மறையாக யசோதையின் பால் வாய்ப் பிள்ளையான கிருஷ்ணனும் முரணித்திருக்கும்படி இவனுடைய இளமை (பால்யம்) செம்பால்பாயா நிற்கும்’ என்று எதிர்மறைப் பொருள் கூறிஉணர்த்துவார்.

உலகறிய மலிபுகழ்க்‌ கார்த்திகை மாதத்தில்‌ உரோகிணி நாளுறந்தை வளம்பதியில்‌ தோன்றித்‌
தலமள ந்த தென்னரங்கர்பால்‌ உலோக சாரங்கமா முனிதோள்‌ தனிலே வந்து
பலமறையின்‌ பொருளாற்‌ பாண் பெருமாளே நீ பாதாதி கேசமதாய்ப்‌ பாடித்‌ தந்த
சொல வமலனாதிபிரான்‌ பத்துப்பாட்டும்‌ சோராமலெனக்‌ கருள் செய்‌ துலங்க நீயே| |
(பிரபந்த ஸாரம் )

வணடின முரலுந்‌ தாமவன மணி மார்பன்றன்னைக்‌
கண்‌ டுள நிறையாநந்த நீரிரு கண்ணுங்‌ காட்ட
அண்டர்‌ நாயகனை வாழ்த்தி யவனருளமுதமாந்‌திப்‌
பண்டுபோம்‌ பொருள்‌ கிடைத்தபடியுள மகிழ்ந்தானன்றே,
மாடமாளிகையரங்க மறைவலாரிவனை வாழ்த்திக்‌
கோடுடைப்‌ பரனுக்‌ குற்ற குணங்களிலீடுபட்டுப்‌
பாடலிலுனக்கு நாமம்‌ பாண்‌ பெருமாள்‌ என்றரோத
வீடிலான்‌ வேதாந்தார்த்த மிசைத்தனன்‌ றமிழிலன்றே
(ஸ்ரீ சடகோப திவ்ய சரிதம் )

உம்பர்தொழும் மெய்ஞ்ஞானத்து உறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்தவள்ளல் வாழியே
வம்பவிழித்தார் முனிதோளில் வந்த பிரான்வாழியே
மலர்க் கண்ணை மற்றொன்றில் வையாதான் வாழியே
அம்புவியில் மதிலரங்கர் அகம் புகுந்தான் வாழியே
அமலனாதிபிரான் பத்தும் அருளினான்வாழியே
செம்பொன்னடி முடியளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே

எம்பெருமானுறையூராரேத்த வந்தோன் வாழியே
ஏற்ற கார்த்திகையில் உரோகிணி யுதித்தான் வாழியே
அம்புவியிலங்கருக் கண்டுகந்தான் வாழியே
அக மகிழ்ந்ததே அவர் புகழநின்று யர்ந்தோன் வாழியே

அம்புய நேர்தாண்முனிதோள் வைத்திட்டான் வாழியே
அமலனாதிபிரான் பத்து அருள் செய்தான் வாழியே
பைம்பொழில் சூழ் திருவரங்கந் திகழ்ந்தபிரான் வாழியே
பாண்பெருமாள் பங்கயத்தாள் பார்தனில் வாழியே

    —————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

    ஸ்ரீ பொன் பதர் கூடம்-அருள் மிகு சதுர் புஜ ஸ்ரீ கோதண்ட ராமர் திருக் கோயில்

    August 11, 2026

    மூலவர் : சதுர்புஜ கோதண்டராமர்
    தாயார் ; சீதா பிராட்டி
    தீர்த்தம் : தேவராஜ புஷ்கரிணி, சேஷ தீர்த்தம்
    புராண பெயர் : பொன்பதர்க்கூடம்
    ஊர் : பொன்பதர்க்கூடம்

    ஸ்தல வரலாறு:
    ஸ்ரீ ராமபிரானாக மனித வடிவில் அவதரித்த மகாவிஷ்ணு, எடுத்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்கது, ராம அவதாரம். இந்த அவதாரத்தின் போது தாய் கவுசல்யா, பக்தன் ஆஞ்சநேயர், இலங்கையில் சீதாதேவியின் மீது பரிவு காட்டிய திரிசடை, ராவணனின் மறைவிற்குப் பின்னர், அவனுடைய மனைவி மண்டோதரி ஆகிய நால்வருக்கும், நான்கு திருக்கரங்களுடன் சங்கு-சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணு திருக் கோலத்தில் காட்சி தந்து அருளினார். இந்த திருக் காட்சியைத் தானும் தரிசிக்க விரும்பிய தேவராஜ மகரிஷி, இத் தலத்தில் மகா விஷ்ணுவை நினைத்துத் தவமியற்றினார். தேவராஜ மகரிஷியின் பக்திக்கு மனமிரங்கிய மகாவிஷ்ணு சங்கு, சக்கரம், அபயம், ஹஸ்தம் என நான்கு திருக்கரங்களுடன் சதுர்புஜ கோதண்டராமராக காட்சி கொடுத்து அருளினார். தான் கண்ட இக்காட்சியை பக்தர்களும் கண்டு மகிழ வேண்டும் என்று மகரிஷி வேண்டிக்கொள்ள, மகாவிஷ்ணு இத்தலத்தில் சதுர்புஜ கோதண்டராமராக எழுந்தருளினார் என்று தல வரலாறு சொல்கிறது. பிற்காலத்தில் இங்கே கோவில் அமைக்கப்பட்டது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    ஒருசமயம், வைஷ்ணவ ஆசார்ய புருஷர்களில் ஒருவரான சுவாமி தேசிகர் இப்பகுதிக்கு யாத்திரையாக வந்த தருணத்தில் ஒரு கடலை வியாபாரி வீட்டின் திண்ணையில் அவருடைய அனுமதி பெற்று தான் பூஜைக்காக உடன் கொண்டு வந்திருந்த ஹயக்ரீவர் விக்கிரகத்துடன் தங்கினார். அன்றிரவு தன் நிலத்தை ஒரு குதிரை மேய்வதாக கடலை வியாபாரி கனவு கண்டார். மறுநாள் திண்ணையில் குதிரை முகம் மனித உடலுடன் கூடிய ஹயக்ரீவ விக்கிரகத்துடன் அமர்ந்திருந்த தேசிகரிடம் தன் கனவை சொல்லி வியந்தார் வியாபாரி. அவருக்கு ஹயக்ரீவர் அருள் பரிபூர்ணமாக கிடைத்து விட்டதாக கூறினார் தேசிகர். பிறகு தன் நிலத்திற்கு போய் பார்த்த போது குதிரை மேய்ந்ததாக கனவில் கண்ட தன் நிலத்தில் நெற் கதிர்கள் பொன் மணிகளாக விளைந்திருப்பதைக் கண்டு பிரமித்தார். அதிலிருந்து இத்தலம் “பொன் உதிர்ந்த களத்தூர்’ என்று அழைக்கப்பட்டு நாளடைவில் “பொன் விளைந்த களத்தூர்’ என்று மாறியது. இந்த பொன் நெல் மணிகளைத் தூற்றிய போது இவற்றின் பொன் பதர்கள் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தில் போய் விழுந்ததாம். அப்படி பதர் விழுந்த இடமே “பொன் பதர் கூடம்’ என்றாகியது. இங்கு தான் சதுர்புஜ ராமர் கோயில் உள்ளது.
    கோயில் சிறப்புகள்:
    தமிழ்நாட்டில் தொண்டை மண்டலம் பகுதியில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களாக பல திருக்கோயில்கள் விளங்கினாலும் அபிமான தலங்களாகவும் பல கோயில்கள் போற்றப்படுகின்றன. அவைகளில் ஒன்று தான் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீராமன் அருள்பாலிக்கும் பொன்பதர் கூடம்.
    பெரும்பாலான தலங்களில் அருளாட்சி செய்யும் கோதண்டராமர், கையில் வில்-அம்பு வைத்திருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள கோதண்டராமரின் கரங்களில் வில்- அம்பு இல்லை. அதற்கு பதிலாக சங்கு, சக்கரம் ஏந்தியும், அபயம், ஹஸ்தம் காட்டியும் சீதாதேவியுடன் திருமணக் கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருவது வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சி என்கிறார்கள்.
    இங்கு சதுர்புஜ ராமர் சங்கு, சக்கரம், கோதண்டம் மற்றும் பாணம் இவைகளை தரித்துக் கொண்டு அருள் பாலித்து வருகிறார். உற்சவ மூர்த்தியும் அதே திருக் கோலத்துடன் ராம காவியத்தில் வர்ணிக்கப்பட்ட வண்ணம் இளைய பெருமாள், சீதாப்பிராட்டி மற்றும் அனுமன் இவர்களோடு சேவை தந்து தம்மை வழிபடுவோருக்கு அனைத்து வரங்களையும் அருளுகின்றார்.
    இத்தலத்து உற்சவமூர்த்தி அபூர்வமான அமைப்பில் அருள்பாலிக்கிறார். விரல், நகம் மற்றும் கைகளில் ரேகைகள் தெரியும்படியாக இந்த உற்சவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
    மகாவிஷ்ணு கோலத்தில் ராமபிரான் காட்சி தந்த தலம் என்பதால், இத்தல உற்சவரின் திருமார்பில் மகாலட்சுமி அமைந்திருப்பது கூடுதல் விசேஷம்.
    சீதாதேவியைத் திருமணம் செய்யும் முன்னர் ராமபிரான் இடது கால் பெருவிரலால் வில்லின் ஒரு பகுதியை மிதித்து உடைத்தார் என்பதன் அடிப்படையில், இடதுகால் சற்று முன்னே அழுத்திய நிலையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கோலத்தில் ராமபிரானை தரிசிப்பது அபூர்வம்.
    ஆஞ்சநேயர் பவ்யமாக அமர்ந்திருக்கும், உற்சவர் கோலத்தினையும் இங்கே காணலாம்.
    தர்மதிஷ்டர் என்னும் மகானுக்கு ஒரு சாபத்தால் சயன ரோகம் ஏற்பட்டது. நிவர்த்தி வேண்டி இத்தலத்தில் ராமபிரானை வழிபட்டார். சுவாமி, அவரது நோயைப் போக்கியருளினார். இந்நிகழ்வின் அடிப்படையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து, கல்கண்டு படைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.
    இங்கு இறைவன் புஷ்பக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
    லட்சுமி நாராயணர், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகர் ஆகியோர் முன்மண்டபத்தில் அருள்பாலிக்கின்றனர்.
    இந்த ஆலயத்திற்குள், ‘சேஷதீர்த்தம்’ என்ற தீர்த்தக்குளம் உள்ளது. தேவராஜ புஷ்கரணி என்ற தீர்த்தம், ஆலயத்திற்கு வெளியே சற்று தொலைவில் இருக்கிறது.
    கோயிலில் தனிச்சன்னதியில் ஸ்ரீ தர்ப்பஸயன சேதுராமர். ஸயனக்கோலம். திருப்புல்லாணியில் சேவிக்கும் அதே திருக்கோலம். இராமருக்குப் பின்னால் லக்ஷ்மணரும், திருவடிக்கு அருகில் ஸமுத்ரராஜனும், ஆஞ்சநேயரும் நிற்கிறார்கள்.
    பொன் விளைந்த களத்தூரில் அருகருகே இரண்டு கோயில்கள் அமைந்திருக்கிறது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீகோதண்ட ராமர் திருக்கோயில்.
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில். மூலவர் வைகுண்டநாதர். உற்சவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். ஆனால் சிங்கமுகம் இல்லை. சாந்தமான ரூபத்தில் சேவை சாதிக்கிறார். இவர் மாமல்லபுரத்தில் இருந்தவராம்.
    ஸ்ரீ நரசிம்மரே விரும்பி வந்து குடிகொண்ட தலம்.
    அந்நிய படையெடுப்பின்போது ஸ்ரீ நரசிம்மரே அசரீரியாக, தன்னை மாமல்லபுரத்திலிருந்து எடுத்துச் செல்லும்படியும், கூடவே பறந்து வரும் கருடன் எங்கே தரை இறங்குகிறதோ, அங்கே தன்னைப் பிரதிஷ்டை செய்யும்படி அருளினாராம். மாமல்லபுரம் ஆலயங்கள் கடலில் மூழ்கிய நிலையில், ஒரு வயோதிகரின் கனவில் நரசிம்மர் தோன்றி சொன்னார் என்றும் சொல்வதுண்டு. தாயார் அஹோபிலவல்லித் தாயார். ராமர், ஹயக்ரீவர், ஆண்டாள், ஆழ்வார்களுக்கும் தனி சன்னதிகள் உள்ளன.
    திருவிழா:
    தைப்பொங்கல் தினத்தன்று இத்தல இறைவனுக்கு, விசேஷ திருமஞ்சனமும், பரிவேட்டை உற்சவமும் நடைபெறும். ராமநவமி, பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம், திருவாதிரை ஸ்ரீஉடையவர் சாற்றுமுறை, ஸ்ரீராமர் கோடை உற்சவம், நவராத்திரி உற்சவம், அன்னக்கோடி உற்சவம், தனுர்மாத பூஜை, அனுமன் ஜெயந்தி முதலான உற்சவங்கள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. தினமும் காலை, மாலை என இருகால பூஜைகள் நடைபெறுகின்றன
    திறக்கும் நேரம்:
    காலை 6 மணி முதல் 7 மணி வரை,
    மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்
    முகவரி:
    அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் கோயில்
    பொன்பதர்கூடம் – 603 405.
    காஞ்சிபுரம் மாவட்டம்..
    போன்: +91- 44 – 2744 1227, 97890 49704
    அமைவிடம்:
    செங்கல்பட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் பொன்பதர்கூடம் என்ற இத்தலம் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று, பொன்பதர்கூடம் வழியாக இயக்கப்படுகிறது. தவிர செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றத்தில் இருந்து ஷேர் ஆட்டோ வசதியும் இருக்கிறது.
    மாவட்டம் : காஞ்சிபுரம்

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ள ஸ்ரீமத்‌ அபாமார்ஜந ஸ்தோத்ரம்‌ –

    August 11, 2026

    பாராயணத்திற்குச்‌ சிறந்ததாக ““ஸ்ரீ அபாமார்ஜந ஸ்தோத்ரம்‌” பெரியோர்களால்‌ உகந்து ஏற்றுக் கொள்ளப் பட்டதாம்‌-பலவித ஜ்வரமும்‌ மற்றும்‌ வ்யாதிகளும்‌ துர் தைவ, க்ரஹ. | பீடைகளும்‌ தனித்தனியே பெயரிட்டுக்‌ கூறப்பட்டு, அதன்‌ நிவ்ருத்தி வேண்டிக் கொள்ளப்படுகிறது. ‘ஹிரண்யாக்ஷனைக்‌ | கொன்று பூமிப் பிராட்டியின்‌ துயர்‌ துடைத்த ஸ்ரீ மஹா வராஹரும்‌, தந்தையின்‌ உத்தரவால்‌ நலியும்‌ க்ருத்யையையும்‌ விஷத்தையும்‌ போக்கி ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானை ரக்ஷித்த ஸ்ரீ அழகிய சிங்கரும்‌, இந்த்ரனது செல்வத்தைக்‌ கவர்ந்த மாவலியை வஞ்சித்த ஸ்ரீ வாமநரும்‌, எங்கும்‌. பரந்த, திருமேனியுடன்‌ எல்லாரையும்‌ அணைத்துக்‌ கொண்ட ஸ்ரீ திரிவிக்கிர்மனும்‌, கஜேந்த்ராழ்வான்‌ முதலியவரை ரக்ஷித்த ஸ்ரீ ஸுதார்சநாழ்வானும்‌ நம்மைக்‌ கைவிடமாட்டார்கள்‌ என்றே பரம விச்வாஸத்துடன்‌ இந்த ஸ்ரீ அபாமார்ஐந ஸ்தோத்‌ரத்தைப்‌ பாராயணம்‌ செய்து ஸகல வித வ்யாதிகளும்‌ நீங்கப்‌ பெற்றும்‌, ஸகல க்ஷேமங்களும்‌ கூடப் பெற்றும்‌ நல் வாழ்வு வாழ வேண்டுமென்று ப்ரார்த்திக்கிறோம்‌

    ஸ்ரீ தால்ப்ய உவாச
    பகவந்‌ ப்ராணிநஸ்‌ ஸர்வே விஷ ரோகாத் யுபத்ரவை; |
    துஷ்ட க்ரஹாபி காதைச்‌’ ச ஸர்வ கால-முபத்ருதா –
    ஆபிசாரிக க்ருத்யாபி: ஸ்பர்ச ரோகைச்‌’ ச தாருணை: |
    ஸதா ஸம்பீட்யமாநாஸ்து திஷ்டந்தி முநி ஸத்தம —
    கேந கர்ம விபாகேந விஷ ரோகாத் யுபத்ரவா: |
    ந பவந்தி ந்ருணாம்‌ தந்மே யதாவத்‌ வக்து மர்ஹஸி –

    ஸ்ரீ புலஸ்ய உவாச
    வ்ரதோபவா ஸைர்யைர் விஷ்ணுர் நான்ய ஜென்மநி தோஷித: |
    தே நரா முநி சார்தூல விஷ ரோகாதி பாகிந
    ஆரோக்யம்‌ பரமாம்‌ ருத்திம்‌ மநஸா யத்‌ யதிச்சதி |
    தத் ததாப்நோத்ய ஸந்திக்தம்‌ பரத்ராச்யுத தோஷ க்ருத் –
    நாதீந்‌ ப்ராப்நோதி ந வ்யாதீந்‌ விஷ க்ரஹ நிபந்தநம்‌।
    க்ருத்யா ஸ்பர்ஸ பயம்‌ வாபி ததோஷிதே மது ஸூதநே —
    ஸர்வ து:க சமஸ்தஸ்ய ஸெளம்யாஸ்‌ தஸ்ய ஸதா க்ரஹா; |
    தேவாநாமபி துஷ்ட்யை ஸ யஸ்ய துஷ்டோ ஜநார்தந —
    யஸ் ஸமஸ்‌ ஸர்வ பூதேஷு யதாத்மநி ததா பரே |
    உபவாஸாதி தாநேந தோஷிதே மதுஸூதநே ॥
    தோஷகாஸ்‌ தஸ்ய ஜாயந்தே நரா: பூர்ண மநோ ரதா.।
    அரோகாஸ்‌ ஸுகிநோ போகாந்‌ போக்தாரோ முநி ஸத்தம ॥
    ந தேஷாம்‌ ச’த்ரவோ நைவ ஸ்பர்ஸ ரோகாதி பாகிந;। |
    க்ரஹ ரோகாதிகம்‌ வாபி பாப கார்யம்‌ ந ஜாயதே ||
    அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீந் யாயுதாநி ச |
    ரக்ஷந்தி ஸகலாபத்ப்ய, யேந விஷ்ணு ருபாஸித-

    ஸ்ரீ தால்ப்ய உவாச
    அநாராதித கோவிந்தா யே நரா து:க பாகிந:| தேஷாம்‌ து:காபி பூதாநாம்‌ யத்‌ கர்தவ்யம்‌ தயாளுபி –
    பச்‌’யத்பிஸ்‌ ஸர்வ பூதஸ்தம்‌ வாஸுதேவம்‌ மஹாமுநே ।
    ஸமத்ருஷ்டிபிரீ சே’சச’ம்‌ தந் மம ப்ரூஹ்ய சேஷத-

    ஸ்ரீ புலஸ்த்ய உவாச
    ஸ்ரோது காமோஸி வை தால்ப்ய ஸ்ருணுஷ்வ்‌ ஸுஸமாஹித: | அபமார்ஜநகம்‌ வக்ஷயே ந்யாஸ பூர்வ மிதம்‌ பரம் –

    ஓம்‌ நமோ பகவதே வாஸு தேவாய ஸர்வ க்லேசாப ஹந்த்ரே நம –

    அத ந்யாஸ :
    அஸ்ய ஸ்ரீமத்‌ அபாமார்ஜந ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய ஸ்ரீபுலஸ்த்யோ பகவாந்‌ ருஷி:-அநுஷ்டுப் சந்த;- ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்ச’நா தேவதா: ஹராமுகஸ்ய துரிதமிதி பீஜம்‌ | அச்யுதாநந்த கோவிந்தேதி சக்தி:| _ ஜ்வலத் பாவக லோச நேதி கலகம்‌ | வஜ்ராயுத நக ஸ்பர்‌சேதி கவசம்‌ | ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்சந ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக —

    வராஹாய அங்குஷ்டாப்யாம்‌ நம: | நாரஸிம்ஹாய தர்ஜநீப்யாம்‌ ஸ்வாஹா | வாமநாய மத்யமாபயாம்‌ வஷட்‌ | விஷ்ணவே அநாமிகாப்யாம்ஹும்‌ |ஸூதர்சநாய கநிஷ்டிகாப்யாம்‌ வெளஷட்‌ | பாஞ்சஜந்யாய கரதல கர ப்ருஷ்டாப்யாம்‌ பட்‌ நம, | இதி கர ந்யாஸ: ॥

    அத அங்க ந்யாஸ:

    வராஹ நரஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே | ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம: (மார்பில்‌)
    நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே-— ஐஸ்வர்யாய சிரஸே ஸ்வாஹா (தலையில்‌)
    நம: புஷ்கர நேத்ராய கேச’வாயாதி சக்ரிணே, சக்த்யை சி’காயை வஷட்‌ (சிகையில்‌)
    தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே , பலாய கவசாய ஹும்‌ (கவசம் போல்‌ இரு புறத்தில்‌)
    காச்‌’யபாயாதி ஹ்ரஸ்வாய ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே தேஜஸே நேத்ராப்யாம்‌ வெளஷட்‌ (கண்களில்‌)
    ஓம் நம: பரமார்த்தாய. புருஷாய மஹாத்மநே ॥ வீர்யாய அஸ்த்ராய பட்‌ (இரு கையைத் தட்ட)
    ஓம்‌ பூர்‌ புவஸ் ஸூவரோம்‌ இதி திக்பந்த: | (எட்டு திக்கில்‌ வலமாகச்‌ சொடக்கவும் )

    த்யானம்
    அத த்யாநம்‌ ப்ரவக்ஷ்யாமி ஸர்வ பாப ப்ரணாச நம்‌|
    வராஹ ரூபிணம்‌ தேவம்‌ ஸம்ஸ்மரந்‌ அர்ச்சயேத்‌ ஜபேத்
    ஜலெளகதாம்‌ ந: ஸசராசரா தரா விஷாண கோட்யா கில விச்‌’வரூபிணா |
    ஸமுத் த்ருதா யேந வராஹ ரூபிணா ஸ மே ஸ்வயம்பூர்‌ பகவாந்‌ ப்ரஸீதது ॥

    சஞ்சத்‌ சந்த்ரார்க தம்ஷ்ட்ரம்‌ ஸ்புரதுரு ரதநம்‌ விதயுதுத்யோத ஜிஹ்வம்‌
    கர்ஜத்‌ பர்ஜந்ய நாதம்‌ ஸ்புரித ரவி ருசிம்‌ சஷுர ஷூத்ர ரெளத்ரம்‌ |
    த்ரஸ்தாசா’ ஹஸ்தியூதம்‌ ஜ்வலதநல ஸடா கேஸரோத் பாஸமாநம்‌
    ரஷோ ரக்தாபிஷிக்தம்‌ ப்ரஹரதி துரிதம்‌ த்யாயதாம்‌ நாரஸிம்ஹம்

    அதிவிபுல ஸுகாத்ரம்‌ ருக்ம பாத்ரஸ்த மந்நம்‌
    ஸலலித ததிகணடம்‌ பாணிநா தக்ஷிணே ந।
    கலச’ம்‌ அம்ருத பூர்ணம்‌ வாம ஹஸ்தே ததாநம்‌
    தரதி ஸகல து:கம்‌ வாமநம்‌ பாவயேத ய: —

    விஷ்ணும்‌ பாஸ்வத்‌ கிரீடாங்கத வலயகளா கலப ஹாரோஜ்‌ ஜ்வலாங்கம்‌
    ஸ்ரோணீ பூஷா ஸுவக்ஷோ மணி மகுட மஹா குணடலைர்‌ மண்டி தாங்கம்‌ | ஹஸ்தோதயத்‌-சங்க சக்ராம்புஜ கத மமலம்‌ பீத கெளசே’ய மாசா”
    வித்யோதத-பாஸ முத்யஜ்‌ திநகர ஸத்ருச’ம்‌ பத்ம ஸம்ஸ்தம்‌ நமாமி ॥

    கல்பாந்தார்க ப்ரகாசம்‌ த்ரி புவந- ‘ மகிலம்‌ தேஜஸா பூரயந்தம்‌
    ரக்தாக்ஷம்‌ பிங்ககேசம்‌ ரிபுகுலதமநம்‌ பீம-தம்ஷ்ட்ராட்ட ஹாஸம்‌ |
    சங்கம்‌ சக்ரம்‌ கதாப்ஐம்‌ ப்ருதுதர முஸலம்‌ சூல பாச’ங்குசாக்நீந்
    பிப்ராணம்‌ தோர்பிராத்யம்‌ மநஸி முரரிபும்‌ பாவயே சக்ர ஸம்ஜ்ஞம்‌ ||

    ஓம்‌ நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே |
    அரூப பஹு ரூபாய வ்யாபிநே பரமாத்மநே

    நிஷ் கல்மஷாய சு’த்தாய த்யாந யோக ரதாய ச |
    நமஸ்க்ருத்ய ப்ரவஹ்யாமி யத்ர ஸித்யது மே வச –

    நாராயணாய ஸூத்தாய விச்வேசா யேஸ்வராய ச |
    அச்யுதாநந்த கோவிந்த பத்ம நாபாய ஸெளஹ்ருதே —

    ஹ்ருஷீகேசாய கூர்மாய மாதவா யாச்யுதாய ச |
    தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே ॥

    ஐநார்தநாய க்ருஷ்ணாய உபேந்த்ர ஸ்ரீதராய்‌ ச |
    த்ரிவிக்ரமாய ராமாய வைகுண்டாய ஹராய ச |!
    பிரத்யும்நா யாநிருத்தாய புருஷோத்தம தே நம: |
    யோகீஸ்வராய குஹ்யாய கூடாய பரமாத்மநே ॥
    பச்த ப்ரியாய தேவாய விஷ்வக்ஸேநாய சார்ங்கிணே।
    அதோக்ஷஜாய தஷாய மத்ஸ்யாய மது ஹாரிணே–

    வராஹாய ந்ருஸிம்‌ஹாய வாமநாய மஹாத்மநே |
    வராஹேச’ ந்ருஸிம்ஹேச” வாமநேச: த்ரி விக்ரம-
    ஹயக்ரீவேச ஸர்வேச ஹ்ருஷீகேச ஹராசு:பம்‌ |
    அபராஜித சக்ராத்யை: சதுர்பி: பரமாத்புதை:
    அகண்டிதா நுபாவைஸ்த்வம்‌ ஸர்வ துஷ்ட ஹரோ பவ।
    ஹரா முகஸ்ய துரிதம் துஷ்க்ருதம் துருபோஷிதம்
    ம்ருத்யு பந்தார்த்திபயதம்‌ அரிஷ்டஸ்ய ச யத்பலம்‌ |
    பரமத்வாந ஸஹிதம்‌ ப்ரயுக்தம்‌ சாபிசாரிகம் –

    கர ஸ்பர்ச” மஹா ரோகாந்‌ ப்ரயுக்காந்‌ த்வரயா ஹர |
    ஓம்‌ நமோ வாஸுதேவாய நம: க்ருஷ்ணாய சார்ங்கிணே–
    நம: புஷ்கர நேத்ராய கேச’வாயாதி சக்ரிணே |
    நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே ||
    மஹாஹவ ரிபுஸ்கந்த கருஷ்ட சக்ராய சக்ரிணே |
    தம்ஷ்ட்ராக்ரேண க்ஷிதி த்ருதே த்ரயீ மூர்த்தி மதே நம: ॥
    மஹா யஜ்ஞ வராஹாய சேஷ போகோப சாயிநே |
    தப்தஹாடக கேசாந்த ஜ்வலத்பாவக லோசந ॥

    வஜ்ராயுத நகஸ்பர்ச” திவ்ய ஸிம்ஹ நமோஸ்து தே |
    காச்‌’யபாயாதி ஹ்ரஸ்வாய ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே
    துப்யம்‌ வாமந ரூபாய க்ரமதே காம்‌ நமோ நம; |
    வராஹா சேஷ துஷ்டாநி ஸர்வ பாப பலாநி வை ||
    மர்த மர்த மஹா தம்ஷ்ட்ர மர்த மர்த ச தத் பலம்‌ |
    நரஸிம்ஹ கராளாஸ்ய தந்த ப்ராந்தோஜ் ஜ்வலாநந —

    பஞ்ஜ்‌ பஞ்ஜ நிநாதேந துஷ்டாந்யஸ் யார்த்தி நாஸந |
    ருக் யஜுஸ் ஸாம ரூபாபிஃ வாக்பிர்‌ வாமந ரூப த்ருக்‌ |
    ப்ரசமம்‌ ஸர்வ துஷ்டாநாம்‌ நயத்வஸ்ய ஐநார்தந:।
    கெளபேரம்‌ தே முகம்‌ ராத்ரெள ரெளத்ரம்‌ . ்‌ ஸெளம்யம்‌ முகம்‌ திவா ॥ .
    ஜ்வராந்‌ ம்ருத்யு பயம்‌ கோரம்‌ விஷம்‌ நாச’யதே ஜ்வரம்‌ |
    த்ரிபாத் பஸ்ம ப்ரஹரண: த்ரிசிரா ரக்த லோசந: |
    ஸ மே ப்ரீதஸ்‌ ஸுகம்‌ தத்யாத்‌ ஸர்வாமய பதிர் ஜ்வர –

    ஆத்யந்தவந்த: கவய: புராணா; ஸந் மார்க வந்தோ ஹ்யநுசாஸிதார; |
    ஸர்வ ஜ்வராந்‌ க்நந்து மமா நிருத்த ப்ரத்யும்‌ந ஸங்கர்ஷண வாஸு தேவா. || ஐகாஹிகம்‌ த்வ்யாஹிகம்‌ ச ததா த்ரி திவஸ ஜ்வரம்‌ |
    சாதுர்த்திகம்‌ ததாத் யுக்ரம்‌ ததைவ ஸதத ஜ்வரம்‌ ||
    தோஷோத்தம்‌ ஸந்‌நிபா தோத்தம்‌ ததைவாகந்துகம்‌ ஜ்வரம்‌|
    சமம்‌ நயாசு கோவிந்த சிந்த்திச்‌ சிந்த்யஸ்ய வேதநாம் –

    நேத்ர்து;கம்‌ சி’ரோது;கம்‌ து;கம்‌ சோதர ஸம்பவம்‌ |
    அதிச்‌’வாஸ மநுச்ச்வாஸம்‌ பரிதாபம்‌ ஸவேபதும்‌ ||
    குதக்ராணாங்க்ரி ரோகாம்ச்‌’ ச குக்ஷி ரோகம்‌ ததா க்ஷயம்‌|
    காமாலாதீந்‌ ததா ரோகாந்‌ ப்ரமே ஹாம்ச்‌’ சாதி தாருணாந்‌ |
    பகந்தராதி ஸாராம்ச்‌’ச முக ரோகாம் ஸவல்குளிம்‌ |
    அச்‌’மரீ மூத்ர க்ருச்ச்ரம்‌ ச ரோகா நந்யாம்ச்‌’ ச தாருணாந்‌ |
    யே வாத ப்ரபவா ரோகா; யே ச பித்த ஸமுத்பவா; |
    கபோத் பவாச்‌’ச யே ரேகா; யே சாந்யே ஸாந்நி பாதிகா —

    ஆகந்துகாச்‌’ச யே ரோகா; லூதாதி ஸ்போடகாதய: |
    ஸர்வே தே ப்ரசமம்‌ யாந்து வாஸூ தேவாபமார்ஐநாத்‌ ||
    விலயம்‌ யாந்து தே ஸர்வே விஷ்ணோ ருச்சாரணேந ச |
    க்ஷயம்‌ கச்சநது சாசேஷா; சக்ரேணாபி ஹதா ஹரே: ॥
    அச்யுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயணாம்ருத |
    ரோகாந்‌ மே நாச’யாசேஷாந ஆசு: தந்வந்தரே ஹரே ॥
    ௮ச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்‌ |
    நச்‌’யநதி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம்‌ வதாமயஹம்

    ஸத்யம் ஸத்யம்‌ புநஸ் ஸத்யம்‌ உத்த்ருத்ய புஜமுச்யதே |
    வேதாச் சாஸ்த்ரம் பரம்‌ நாஸ்தி நதைவம்‌ கேசவாத் பரம்‌ ॥
    ஸ்தாவரம்‌ ஜங்கமம்‌ சாபி க்ருத்ரிமம்‌ சாபி யத்விஷம்‌ |
    தநதோத்பவம்‌ நகோத்பூதம்‌. ஆகாஸ ப்ரபவம்‌ விஷம்‌ |
    லூதாதிஸ் போடகம்‌ சைவ விஷமத் யந்த துஸ் ஸஹம்‌ |
    சமம்‌ நயது தத் ஸர்வம்‌ கீர்த்தி தோஸ்ய ஜநார்தந 😐
    க்ரஹாந்‌ ப்ரேத க்ரஹாந்‌ சைவ ததா வைநாயிக க்ரஹாந்‌ |
    வேதாளாம்ச்‌’ ச பிசாசாம்ச்‌’ ச கந்தர்வாந்‌ யஷ ராக்ஷஸாந் –
    சாகிநீபூத நாத்யாம்ச்‌’ ச ததா வைநாயிக க்ரஹாந்‌ |
    முக மண்டலிகாந்‌ க்ரூராந ரேவதீந் வ்ருத்த ரேவதீந்‌ ||
    வ்ருச்‌’சிகாக்யாந்‌ க்ரஹாந்‌ சோக்ராந்‌ ததா மாத்ரு கணாநபி |
    பாலஸ்ய விஷ்ணோச்‌’சரிதம்‌ ஹந்து பால க்ரஹாநி மாந ॥|
    வ்ருத்தாநாம்‌ யே க்ரஹா: கேசித்‌ யேச பால க்ரஹா: க்வசித்‌।
    நரஸிம்ஹஸ்ய: தே த்ருஷ்ட்யா தக்தா யே சாபி யெளவநே —

    ஸடா கராள வதநோ நரஸிம்ஹோ மஹா பல: | க்ரஹாந சேஷாந் நிச்‌சேஷாந கரோது ஜகதோ ஹித:
    நர ஸிம்ஹ மஹா ஸிம்ஹ ஜ்வாலா மாலோஜ் ஜ்வலாநந |
    க்ரஹாந சே’ஷாந்‌ ஸர்வேஷாம்‌ காதகாதாக நிலோசந
    யே ரோகா யே மஹோத்பாதா யத் விஷம்‌ யே மஹோரகா: |
    யாநி ச க்ரூர பூதாநி க்ரஹ பீடாச்‌’ ச தாருணா-

    சஸ்த்ரஷதே ச யே தோஷா: ஜ்வாலா கர்தமகாதய: |
    யாநி சாந்யாநி துஷ்டாநி ப்ராணி பீடா கராணி ச ॥
    தாநி ஸர்வாணி ஸர்வாத்மந்‌ பரமாத்மந்‌ ஜநார்தந |
    கிஞ்சித் ரூபம்‌ ஸமாஸ்தாய வாஸு தேவாஸ்ய நாசய ||
    க்ஷிப்த்வா ஸுதர்சநம்‌ சக்ரம்‌ ஜ்வாலா மாலாதி பூஷணம்‌ |
    ஸர்வ துஷ்டோபச’ மநம்‌ குரு தேவவராச்யுத ॥.
    ஸுதர்ச’ந மஹா சக்ர கோவிந்தஸ்ய கராயுத |
    தீஷ்ண பாவக ஸங்காச’ கோடி ஸூர்ய ஸமப்ரப |
    த்ரைலோக்ய கர்தா த்வம்‌ துஷ்ட த்ருப்த தாநவதாரண |
    தீஷ்ண தார மஹா வேக சிநதி சிந்தி மஹாஜ்வரம்‌ ॥

    சிந்தி பாதம்‌ ச லூதம் ச சிந்தி கோரம்‌ மஹத்பயம்‌ |
    க்ருமிம்‌ தாஹம்‌ ச சூலம்‌ ச விஷ ஜ்வாலாம்‌ ச கர்தமாந்‌ ||
    ஸர்வதுஷ்டாநி ரஷாம்ஸி க்ஷபயாரி விபீஷண |
    ப்ராச்யாம்‌ ப்ரதீச்யாம்‌ திசிச தக்ஷிணோத்தர யோஸ்ததா ॥
    ரக்ஷாம்‌ கரோது பகவாந்‌ பஹு ரூபீ ஜநார்தந: |
    பரமாத்மா யதா விஷ்ணு: வேதாந்தேஷ் வபிதீயதே ||
    தேந ஸத்யேந ஸகலம்‌ துஷ்டமஸ்ய ப்ரசாம்யது |:
    யதா விஷ்ணுர்‌ ஜகத் ஸர்வம்‌ ஸதேவாஸாுர மாநுஷம் —

    தேந ஸத்யேந ஸகலம்‌ துஷ்டமஸ்ய ப்ரசாம்யது |
    யதா விஷ்ணெள ஸ்ம்ருத ஸத்ய: ஸம்க்ஷயம்‌ யாந்தி த பாதகா: |.
    தேந ஸத்யேந ஸகலம்‌ துஷ்ட மஸ்ய ப்ரசாம்யது |
    யதா யஜஞோச்‌’வரோ விஷ்ணு: வேதாந்தேஷ் வபிதீயதே ॥
    தேந ஸத்யேந ஸகலம்‌ யந்மயோக்தம்‌ ததாஸ்து தத்‌ |
    சாந்திரஸ்து சிவம்‌ சாஸ்து ஹ்ருஷீகேச”ஸ்ய கீர்த்தநாத் –

    வாஸுதேவ சரீரோத்தை: குசை’ஸ் ஸம் மார்ஜிதம்‌ மயா |
    அபாமார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ்‌ ததா |
    மமாஸ்து ஸர்வ து:காநாம்‌ ப்ரசமோ யாசநாத்‌ ஹரே! |
    சாந்தாஸ் ஸமஸ்தா ரோகாஸ்தே க்ரஹாஸ்‌ ஸர்வ விஷாணி ச
    பூதாநி ச ப்ரசாம்யந்து ஸம்ஸ்ம்ருதே மதுஸூதநே |
    ஏதத்‌ ஸமஸ்த ரோகேஷு பூத க்ரஹ பயேஷு ச ॥
    அபாமார்ஜநகம்‌ சஸ்த்ரம்‌ விஷ்ணு நாமாபி மந்த்ரிதம் –

    ஏதே குசா விஷ்ணு ச:ரீர ஸம்பவா!:
    ஐநார்தநோ அஹம்‌ ஸ்வயமேவ சாகத: | ஹதம்‌ மயா துஷ்டமசேஷ மஸ்ய
    ஸ்வஸ்தோ பவத்வேஷ யதா வசோ ஹரே: |
    ‘சாந்திரஸ்து சிவம்‌ சாஸ்து ப்ரணச்‌:ய த்வ ஸுகம் சயத்‌ |
    ஸ்வாஸ் த்யமஸ்து சிவம்‌ சாஸ்து துஷ்டமல்ய ப்ரசாம்யது ||
    யதஸ்ய துரிதம்‌ கிஞ்சித்‌ தத் க்ஷிப்தம்‌ லவணார்ணவே |
    ஸ்வாஸ்த்ய மஸ்து சி’வம்‌ சாஸ்து ஹ்ருஷீ கேச’ஸ்ய கீர்த்தநாத் –

    ஏதத்‌ ரோகாதி பீடாஸு ஐந்தூநாம்‌ ஹித மிச்சதா |
    விஷ்ணு பக்தேந கர்தவ்யம்‌ அபாமார் ஜநகம்‌ பரம்‌ |
    அநேந ஸர்வ துஷ்டாநி ப்ரசமம்‌ யாந்த்ய ஸம்‌சய: |
    ஸர்வ பூத ஹிதார்த்தாய குர்யாத் தஸ்மாத்‌ ஸதைவ ஹி ||
    குர்யாத் தஸ்மாத்‌ ஸதைவ ஹ்யோம்‌ நம இதி |
    இதம்‌ ஸ்தோத்ரம்‌ பரம்‌ புண்யம்‌ ஸர்வ வ்யாதி விநாசநம்‌ |
    விநாசாய ச ரோகாணாம்‌ அப ம்ருத்யு ஐயாயச |
    இதம்‌ ஸ்தோத்ரம்‌ ஜபேத்‌ சாந்த: குசை’ஸ் ஸம்மார்ஜயேத்‌ சுசி; ||
    வ்யாத் யபஸ்மார குஷ்டாதி பிசா சோரக ராக்ஷஸா: |
    தஸ்ய பார்ச்‌வம்‌ ந கச்சந்தி ஸ்தோத்ர மேதத்து ய: படேத்‌।
    வாராஹம்‌ நார ஸிம்ஹம்‌ ச வாமநம்‌ விஷ்ணு மேவ ச |
    ஸ்மரந்‌ ஜபேதிதம்‌ ஸ்தோத்ரம்‌ ஸர்வ து:கோப சாந்தயே ॥

    இதி ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தர புராணே தால்ப்ய புலஸ்த்யஃ ஸம்வாதே அபாமார்ஜந ஸ்தோத்ரம்‌ ஸம்பூர்ணம் –

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ விஷ்ணு விஜய ஸ்தோத்திரம்-

    August 10, 2026

    தேவா ஊச:
    ததா: ஸ்ம விஷ்ணும்‌ ஐகதாதி பூதம்‌ ஸுரா ஸுரரேந்த்ரம்‌ ஜகதாம்‌ ப்ரபாலகம்‌ | யந்நாபி-பத்மாத்‌ கில பத்ம யோநி: பபூவ தம்‌ வை சரணம்‌ கதா: ஸ்ம: ॥–1-

    நமோ நமோ மத்ஸ்ய-வபுர்த்தராய நமோஸ்து தே கச்சப ரூப-தாரிணே |
    நம: ப்ரகுர்மச்‌’ ச ந்ருஸிம்ஹ ரூபிணே ததா புநர்‌ வாமந ரூபிணே நம; ||–2-

    நமோஸ்து தே க்ஷத்ர விநாச: நாய ராமாய ராமாய தசாஸ்ய நாசிநே |
    ப்ரலம்ப ஹந்த்ரே சிதிவாஸஸே நமோ நமோஸ்து புத்தாய ச தைத்ய மோஹிநே–3–

    ம்லேச்சாந்த காயாபி ச கல்கி நாம்நே நம: புந: க்ரோட வபுர்த்தராய |
    ஜகத்திதார்த்தம்‌ ச யுகே யுகே பவாந்‌ பிபர்த்தி ரூபம்‌ த்வ ஸுராபவாய ॥–4-

    நிஷூதி தோயம்‌ ஹ்யதுநா கில த்வயா தைத்யோ ஹிரண்யாக்ஷ இதி ப்ரகல்ப: |
    யச்‌ சேந்த்ர முக்யாந்‌ கில லோக பாலாந்‌ ஸம் ஹேலயா சைவ திரச்‌’சகார | –
    -5-

    ஸ வை த்வயா தேவ ஹிதார்த்த மேவ நிபாதிதோ தேவவர ப்ரஸீத |
    த்வமஸ்ய விஸ்வஸ்ய விஸர்க கர்த்தா ப்ராஹ்மேண ரூபேண ச தேவ தேவ ||-
    -6-

    பாதா த்வமேவாஸ்ய யுகே யுகே ச ரூபாணி தத்ஸே ஸு மநோ ஹராணி |
    த்வமேவ காலாக்நி ஹரச்‌ச பூத்வா விஸ்வம்‌ க்ஷயம்‌ நேஷ்யஸி சாந்த காலே-
    -7-

    அதோ பவாநேவச விஸ்வகாரணம்‌ ந தே பரம்‌ ஜீவ-மஜீவமேவ |
    யத்கிஞ்ச பூதம்‌ ச பவிஷ்ய ரூபம்‌ ப்ரவர்த்தமாநம்‌ ச தவைவ ரூபம்‌ ॥-8-

    ஸர்வம்‌ த்வமேவாஸி சராசராக்யம்‌ ந பாதி விஸ்வம்‌ த்வத்ருதே ச கிஞ்சித்‌ |
    அஸ்தீதி நாஸ்தீதி ச பேத-நிஷ்ட்டம்‌-த்வய்யேவ பாதம்‌ ஸதஸத்‌ ஸ்வரூபம்‌ ॥–9-

    ததோ பவந்தம்‌ கதமோபி தேவ ந ஜ்ஞாது மர்ஹ-த்யவிபக்வ-புத்தி: |
    ருதே பவத்‌-பாத-பராயணம்‌ ஜநம்‌ தே நாகதா; ஸ்ம: சரணம்‌ சரண்யம்‌ ॥–10-

    வ்யாஸ உவாச
    ததோ விஷ்ணு; ப்ரஸந்நாத்மர உவாச த்ரிதிவெளகல: | |
    துஷ்டோஸ்மி தேவா பத்ரம்‌ வோ யுஷ்மத்‌-ஸ்தோத்ரேண ஸாம்ப்ரதம் –11-

    பல ஸ்ருதி
    ய இதம்‌ ப்ரபடேத்‌ பக்த்யா விஜய ஸ்தோத்ர மாதராத்‌ ॥
    ந தஸ்ய துர்லபம்‌ தேவா; த்ரிஷு லோகேஷு கிஞ்சந —
    12-

    கவாம்‌ சத ஸஹஸ்ரஸ்ய ஸம்யக்‌ தத் தஸ்ய யத் பலம்‌ |
    தத் பலம்‌ ஸமவாப்நோதி கீர்த்தந-ஸ்ரவணாந்‌ நர: |॥ –
    -13-

    ஸர்வ காம ப்ரதம்‌ நித்யம்‌ தேவ தேவஸ்ய கீர்த்தநம்‌ |
    அத: பரம்‌ மஹா ஜ்ஞாநம்‌ ந பூதம்‌ ந பவிஷ்யதி–14–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –