Archive for the ‘ஸ்ரீ மஹாபாரதம்’ Category

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்-ஸ்ரீ மோக்ஷ தர்மம் உப பர்வம்-பகுதி 3–

October 17, 2025

சாங்கிய தத்துவம்! – சாந்திபர்வம் பகுதி – 302-உடலையும், ஆன்மாவையும் சாங்கியர்கள் புரிந்து கொள்ளும் வகை; அவர்கள் முக்தி அடையும் முறை; உடலின் களங்கங்கள்; அவற்றைச் சாங்கியர்கள் அகற்றும் வழிமுறை; சாங்கிய தத்துவத்தின் மேன்மை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா, அன்புள்ள ஒரு குரு தன் சீடனிடம் சொல்வதுபோல, ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட யோக பாதையை முறையாக எனக்கு விளக்கியிருக்கிறீர்.(1) நான் இப்போது சாங்கிய தத்துவத்தின் கோட்பாடுகளைக் குறித்துக் கேட்கிறேன். அந்தக் கோட்பாடுகளை முழுமையாக எனக்கு உரைப்பீராக. மூவுலகங்களில் உள்ள ஞானம் உம்மால் அறியப்பட்டிருக்கிறது” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தெளிவான ஆன்ம அறிவைக் கொண்டவர்களும், சாங்கிய கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களுமான அனைவரின் நுண்கோட்பாடுகள் என்னென்ன என்பதை இப்போது கேட்பாயாக. அந்தக் கோட்பாடுகள், கபிலரைத் தங்களில் முதல்வராகக் கொண்டவர்களும், பலமிக்கவர்களுமான பெரும் யதிகள் {சாங்கியர்கள்} அனைவராலும் நிறுவப்பட்டவையாகும். ஓ! மனிதர்களின் தலைவா, அந்தக் கோட்பாட்டில் பிழைகள் {தோஷங்கள்} ஏதும் தென்படுவதில்லை.(4) அதன் தகுதிகள் {புண்ணியங்கள்} பலவாகும்.

அனைத்துப் பொருட்களும் பிழைகள் உள்ளவையே என்பதை அறிவின் துணையுடன் புரிந்து கொண்டும், மனிதர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள், யக்ஷர்கள், பாம்புகள், கந்தர்வர்கள், பித்ருக்கள், (பறவைகளாகவும், விலங்குகளாகவும்) இடைநிலை வகைகளில் உலவிக் கொண்டிருப்பவை, (கருடன் முதலிய) பெரும்பறவைகள், மருத்துகள், அரசமுனிகள், மறுபிறப்பாள தவசிகள், அசுரர்கள், விஸ்வேதேவர்கள், தெய்வீக முனிவர்கள், பரம் கண்ட யோகியர், பிரஜாபதிகள், பிரம்மன் ஆகியோரும் கைவிடுவதற்கு அரிதான பொருட்களைப் புரிந்து கொண்டும், இவ்வுலகில் ஒருவன் இருக்கப்போகும் காலத்தின் உயர்ந்த எல்லையை உண்மையில் புரிந்து கொண்டும், இம்மையில் இன்பநிலை என்று அழைக்கப்படும் பெரும் உண்மையையும் புரிந்து கொண்டும், ஓ! சொல்திறமிக்க மனிதர்களில் முதன்மையானவனே,(5-10) (நிலையற்ற) பொருட்களின் தொடர்புடைய கவலைகள் அனைத்தையும் குறித்த தெளிவான அறிவுடனும், இடைநிலை வகையில் வீழ்ந்தோர், நரகத்தில் மூழ்கியோர் ஆகியோரின் கவலைகளை முழுமையாக நன்றாக அறிந்து கொண்டும்,(11) சொர்க்கத்தின் தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் களங்கங்கள் {பாவங்கள்} அனைத்தையும் கண்டும், ஓ பாரதா, வேத தீர்மானங்களோடு தொடர்புடைய தகுதியின்மைகள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய சிறப்புகள் அனைத்தையும் கண்டும்,(12) யோக மற்றும் சாங்கிய அமைப்பு தத்துவங்களின் நிறைகுறைகளை உணர்ந்தும்,(13) சத்வ குணம் பத்து தன்மைகளைக் கொண்டதென்றும்[1], ரஜஸ் குணத்திற்கு ஒன்பதென்றும்[2], தமஸ் குணத்திற்கு எட்டு என்றும்[3], புத்திக்கு ஏழு தன்மைகள் என்றும்[4],(14) மனத்திற்கு ஆறு என்றும்[5], வெளிக்கும் {ஆகாயத்திற்கு} ஐந்தென்றும் உணர்ந்து[6], அதற்கு மேலும் புத்திக்கு நான்கு தன்மைகளும்[7], தமஸ் குணத்திற்கு மூன்றும்[8],(15) ரஜஸ் குணத்திற்கு இரண்டும்[9], சத்வ குணத்திற்கு ஒரு தன்மையும் உண்டென்று உணர்ந்து கொண்டும்[10], அழிவடையும்போது பொருட்கள் அனைத்தும் பின்பற்றும் பாதையையும், தன்னறிவின் {சுயஞானத்தின்} போக்கையும் உண்மையில் புரிந்து கொண்டும்,(16) அறிவும், அனுபவமும் கொண்டவர்களும், காரணங்களில் தாங்கள் கொண்ட கருத்துகளால் மேன்மையடைந்தவர்களுமான சாங்கியர்கள், முற்றான மங்கல நிலையை அடைந்து, சூரியக் கதிர்களைப் போலவோ, காற்றைப் போலவோ வெளியில் {ஆகாயத்தில்} புகலிடத்தை அமைத்துக் கொண்டு, விடுதலையின் {முக்தியின்} இன்ப நிலையை அடைகிறார்கள்[11].(17)

வடிவத்தைச் சார்ந்தது பார்வை {கண்}; மணத்தைச் சார்ந்தது மணப்புலன் {மூக்கு}; ஒலிக்கு காது; சாறுகளுக்கு நாவு;(18) தீண்டலுக்குத் தோல் (அல்லது உடல்). காற்றானது வெளியையே {ஆகாயத்தையே} தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. மயக்கமானது {அறியாமை} தமஸையே (இருளையே) தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. பேராசையானது புலன்நுகர் பொருட்களையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது.(19) அசைவை {நகர்வை} (அசைவுப்புலன்களைச்) சார்ந்தவன் விஷ்ணு. பலம் (பலத்தின் புலன்களைச்} சார்ந்தவன் இந்திரன். வயிற்றைச் சார்ந்தவன் நெருப்பு தேவன் {அக்னி}. நீர்நிலைகளைச் சார்ந்தவள் பூமாதேவி. நீர்நிலைகள் வெப்பத்தையே (அல்லது நெருப்பையே) தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளன.(20) காற்றைச் சார்ந்தது வெப்பம்; காற்றானது வெளியையே {ஆகாயத்தையே} தன் புகலிடமாகக் கொண்டுள்ளது; வெளியானது மஹத்-ஐயே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. மஹத்-க்கு புத்தியே அடித்தளமாக இருக்கிறது.(21) புத்தியானது தமஸ் குணத்தையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது; தமஸ் குணமானது ரஜஸ் குணத்தையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது; ரஜஸ் குணமானது சத்வ குணத்தையே அடைப்படையாகக் கொண்டுள்ளது; சத்வ குணமானது ஆன்மாவைச் சார்ந்திருக்கிறது.(22) ஆன்மாவானது மகிமையும் பலமும் மிக்க நாராயணனைத் தன் புகலிடமாகக் கொண்டிருக்கிறது. அந்த மகிமைமிக்கத் தேவன் விடுதலையை {முக்தியைத்} தன் புகலிடமாகக் கொண்டிருக்கிறான். விடுதலையானது அனைத்துப் புகலிடங்களின் சார்பும் அற்றதாக இருக்கிறது.(23)

இவ்வுடலானது, பதினாறு உடைமைகளைக் கொண்டது[12], சத்வ குணத்தின் விளைவாகவும் இருப்பது என்பதை அறிந்து கொண்டும், உயிரின உடலின் இயல்பையும், அதற்குள் வசிக்கும் சேதனையின் {பூர்வ வாசனையின்} தன்மையையும் முழுமையாகப் புரிந்து கொண்டும்,(24) உடலுக்குள் வாழும் ஓர் இருப்பும், உடலின் ஒவ்வொரு காரியத்தில் இருந்தும் தனித்திருப்பதும், எந்தப் பாவமும் பற்றமுடியாததுமான ஆத்மாவை உணர்ந்து கொண்டும், புலன் நுகர் பொருட்களில் பற்று கொண்டோரின் செயல்கள் எனும் இரண்டாம் பொருளின் இயல்பை உணர்ந்து கொண்டும்,(25) புலன்கள் மற்றும் ஆன்மாவைத் தங்கள் புகலிடமாகக் கொண்ட புலனின்பப் பொருட்களின் தன்மைகளைப் புரிந்து கொண்டும், அடைவதற்கரிதான {அடையக் கடினமான} விடுதலை {முக்தி} மற்றும் அதைச் சொல்லும் {வேதம் முதலிய} சாத்திரங்களை மெச்சிக் கொண்டும்,(26) முக்கிய உயிர் மூச்சுகளான பிராணன், அபானன், ஸமானன், வியானன், உதானன் ஆகியவற்றின் இயல்பையும், கீழ்நோக்கிச் செல்வதும், மேல்நோக்கிச் செல்வதுமான இரண்டு உயிர்மூச்சுகள் பிறவற்றின் {ஆவஹன், பிரவஹன் ஆகியவற்றின்} இயல்பையும் முழுமையாக அறிந்து கொண்டும்,(27) உண்மையில் ஏழு வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்ய விதிக்கப்பட்டிருக்கும், அவ்வேழு உயிர் மூச்சுகளை அறிந்து கொண்டும், பிரஜாபதிகள், முனிவர்கள், அறம் மற்றும் நீதியின்கண் எண்ணிக்கையில் பலவாக உள்ள உயர்ந்த பாதைகள் ஆகியவற்றின் இயல்பை உறுதிசெய்து கொண்டும்,(28) ஓ எதிரிகளை எரிப்பவனே, ஏழு முனிவர்கள் {சப்தரிஷிகள்}, எண்ணிலடங்கா அரசமுனிகள், தெய்வீகமான பெருமுனிவர்கள், சூரியப் பிரகாசத்துடன் கூடிய மறுபிறப்பாள முனிவர்கள் பலர் ஆகியோர்(29) அனைவரும் நெடுங்காலத்தின் போக்கில் தங்கள் பலங்களை இழந்ததைக் கண்டும், ஓ! ஏகாதிபதி, அண்டத்தின் வலிமைமிக்கவர்கள் அனைவரும் அழிவடைந்ததைக் கேள்விப்பட்டும்,(30) ஓ! மன்னா, பாவச் செயல்களைச் செய்த உயிரினங்கள் அடைந்த மங்கலமற்ற கதிகளையும், யமனின் ஆளுகைக்குள் உள்ள வைதரணி ஆற்றில் விழுந்தோரின் துயரங்களையும் புரிந்து கொண்டும்,(31) பல்வேறு கருவறைகளின் மூலம் உயிரினங்களுக்குள் மங்கலமற்ற வகையில் திரிவதையும், குருதி, நீர்,(32) சளி, சிறுநீர், மலம் மற்றும் அனைத்துத் துர்நாற்றங்களுக்கிடையில் அவை வசிக்கும் தன்மையையும், பிறகு குருதி மற்றும் உயிர் வித்து ஆகியவற்றின் கலவையின் விளைவால் மஜ்ஜை தசைக்கட்டுகளுடன்,(33) நூற்றுக்கணக்கான நரம்புகள் மற்றும் தமனிகள் நிறைந்ததும், ஒன்பது வாயில்களைக் கொண்டதுமான தூய்மையற்ற மாளிகையாக அமைந்த உடலைப் பெறுவதைத் புரிந்து கொண்டும், தனக்கான நன்மை எது, நன்மையை உண்டாக்கக்கூடிய பல்வேறு கலவைகள் என்னென்ன என்பதைப் புரிந்து கொண்டும்,(34) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இருள் {தமஸ்}, அல்லது ஆசை {ரஜஸ்}, அல்லது நல்லியல்பின் {சத்வ} குணங்களாலான இயல்பைக் கொண்ட உயிரினங்களின் அருவருக்கத்தக்க ஒழுக்கத்தைக் கண்டும்,(35) ஆன்மாவை முழுமையாக அறிந்தவர்களான சாங்கிய கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களால் விடுதலையை {முக்தியை} அடைய இயலாததற்குக் காரணமெனக் கடிந்துரைக்கப்படும் {மேற்கண்ட வகையில் அருவருக்கத்தக்க} அந்த ஒழுக்கத்தைக் கண்டும், ராகுவால் விழுக்கப்படும் சந்திரனையும், சூரியனையும்,(36) தாங்கள் நிறுவப்பட்ட நிலையில் இருந்து விழும் நட்சத்திரங்களையும், தங்கள் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பும் நட்சத்திரக்கூட்டங்களையும் கண்டும், ஒருங்கிணைந்த அனைத்துப் பொருட்களும் {ஸ்திரீ புருஷர்கள்} பிரியும் சோகத்தையும்,(37) ஒன்றையொன்று விழுங்கும் உயிரினங்களின் மிகக் கொடிய நடத்தையை அறிந்து கொண்டும், மனிதர்களின் குழந்தைப் பருவத்தில் இல்லாத புத்தியையும், உடல் அடையும் சிதைவையும், அழிவையும் கண்டும்,(38) கோபம் மற்றும் மயக்கத்தில் {அறியாமையில்} மூழ்கியதன் விளைவால் உயிரினங்கள் இழக்கும் சத்வ குணத்தைக் குறித்துக் கொண்டும், ஆயிரக்கணக்கான மனிதர்களில் ஒருவர் மட்டுமே விடுதலை {முக்தி} அடைவதற்குப் போராடும் தீர்மானத்தை எட்டுவதைக் கண்டும்,(39) சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி விடுதலையை {முக்தியை} அடைவதில் உள்ள கடினத்தைப் புரிந்து கொண்டும், அடையப்படாத பொருட்களில் உயிரினங்கள் கொள்ளும் அதிக அக்கறையையும், அடைந்த பொருட்களில் கொண்ட அக்கறையின்மையையும் கண்டும்,(40) ஓ! மன்னா, உயிரிழந்தவர்களுடைய வெறுத்தொதுக்கும் உடல்களையும், புலன்நுகர் பொருட்கள் அனைத்தாலும் விளையும் தீமையையும் குறித்துக் கொண்டும்,(41) ஓ! பாரதா, இல்லங்களில் (மனைவிகள் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில்) எப்போதும் துன்பம் நிறைந்த வாசத்தைக் கண்டும், பிராமணர்களைக் கொன்ற குற்றத்தால் வீழ்ந்த மனிதர்களின் கொடுங்கதியை அறிந்து கொண்டும்,(42) ஓ! யுதிஷ்டிரா, கிளர்வூட்டும் சாராயத்தைப் பருகுவதில் அடிமையாக இருக்கும் தீய பிராமணர்கள், ஆசான்களின் மனைவியருடன் குற்றத்தொடர்புடன் இருப்பவர்கள்,(43) தாயை முறையாக மதிக்காதவர்கள், தேவர்களை முறையாக மதிக்காதவர்கள், அவர்களை வழிபடாதவர்கள் ஆகியோரின் கதியை அறிந்து கொண்டும்,(44) தீச்செயல்களைச் செய்வோரின் கதி மற்றும் இடைநிலை வகைகளில் {பறவை மற்றும் விலங்குகளாகப்} பிறப்பெடுத்தோரின் பல்வேறு முடிவுகளையும் (தங்கள் தத்துவம் கொடுக்கும்) அறிவின் உதவியால் புரிந்து கொண்டும்,(45) வேதங்களின் பல்வேறு தீர்மானங்கள், பருவகாலங்கள், மறையும் வருடங்கள், மாதங்கள்,(46) பிறை நாட்கள் {பக்ஷங்கள்}, நாட்கள் ஆகியவற்றின் போக்குகளை உறுதி செய்து கொண்டும், சந்திரன் வளர்வதையும், தேய்வதையும் நேரடியாகக் கண்டும்,(47) பொங்கி அடங்கும் கடல்களையும், செல்வம் குறைந்து போவதையும், மீண்டும் அது பெருகுவதையும்,(48) ஒருங்கிணைந்த பொருட்களின் பிரிவையும், யுகங்களின் கழிவையும், மலைகளின் அழிவையும், ஆறுகள் காய்ந்து போவதையும்,(49) பல்வேறு வகைகளின் {வர்ணங்களின்} (தூய்மை அடையும்) கேட்டையும், அந்தக் கேட்டுக்கும் மீண்டும் மீண்டும் நேரும் அழிவையும் கண்டும், பிறவி, முதுமை, மரணம், உயிரினங்களின் கவலைகள் ஆகியவற்றைக் கண்டும்,(50) உடல் தொடர்பான குறைகள், மனிதர்கள் அடையும் கவலைகள், உயிரினங்களின் உடல்கள் அடையும் மாற்றங்களையும் உண்மையாக அறிந்து கொண்டும்,(51) ஆன்மா தொடர்புடைய களங்கங்கள் {தோஷங்கள்} அனைத்தையும், உடல்களைப் பற்றும் மங்கலமற்ற களங்கங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டும் (சாங்கிய தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறார்கள்) விடுதலை அடைகிறார்கள்” என்றார் {பீஷ்மர்}.(52)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! அளவற்ற சக்தி கொண்டவரே, ஒருவனுடைய உடல் தொடர்பாக நீர் காணும் களங்கங்கள் யாவை? இந்த ஐயத்தை எனக்கு முழுமையாகவும், உண்மையாகவும் விளக்குவதே உமக்குத் தகும்” என்றான்.(53)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! எதிரிகளைக் கொல்பவனே, கேட்பாயாக. ஓ! பலமிக்கவனே, அனைத்துப் பாதைகளையும் அறிந்தவர்களும், ஞானத்துடன் கூடியவர்களுமான சாங்கியர்கள், அல்லது கபிலரைப் பின்பற்றுபவர்கள், மனித உடலில் ஐந்து களங்கங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.(54) அவை ஆசை, கோபம், அச்சம், உறக்கம் மற்றும் மூச்சு ஆகியவையே ஆகும்.(55) இந்த ஐந்து களங்கங்களும் உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தின் உடல்களிலும் காணப்படுகின்றன. ஞானத்துடன் கூடியவர்கள், மன்னிக்கும் தன்மையின் துணையுடன் கோபத்தின் வேரை அறுக்கிறார்கள். அனைத்துக் காரியங்களையும் கைவிடுவதால் ஆசை அறுக்கப்படுகிறது.(56) நல்லியல்பின் (சத்வ) குணத்தை வளர்த்தெடுப்பதால் உறக்கம் வெல்லப்படுகிறது, விழிப்புணர்வை வளர்த்தெடுப்பதால் அச்சம் வெல்லப்படுகிறது. ஓ! மன்னா, எளிய உணவால் உயிர்மூச்சும் வெல்லப்படுகிறது.(57)

நூற்றுக்கணக்கான குணங்களின் துணையால் குணங்களையும், நூற்றுக்கணக்கான களங்கங்களால் களங்கங்களையும், நூற்றுக்கணக்கான காரணங்களால் பல்வேறு காரணங்களையும் உண்மையில் புரிந்து கொண்டு,(58) விஷ்ணுவின் நுற்றுக்கணக்கான மாயைகளால் மறைக்கப்பட்டதும், சித்திரங்கள் கொண்ட சுவற்றையும், நிலையற்ற நாணற்புல்லையும், நீரில் உள்ள நுரையையும் போன்றதே உலகம் என்பதை உறுதி செய்து கொண்டு,(59) இருள் நிறைந்த குழியாக (குழியினைப் போலப் பயங்கரமானதாக}, அல்லது (நித்திய தன்மையுடன் ஒப்பிடுகையில்) குறுகிய காலமே இருப்பதால் நீர்க்குமிழி போல உண்மையற்றதுமாக, உடனே அழியக்கூடியதாக, மகிழ்ச்சியற்றதாக, நிர்மூலத்தையே கதியாகக் கொண்டதாக, தப்பிக்கும் வழியே இல்லாததாக,(60) முற்றிலும் ஆதரவற்ற நிலையில் சகதியில் மூழ்கிய யானையைப் போல ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் மூழ்கியிருப்பதாக அதை {உலகத்தைக்} கண்டும், இவையாவற்றையும் குறித்துக் கொண்டும், ஓ! மன்னா, பெரும் ஞானம் கொண்ட சாங்கியர்கள், பிள்ளைகளிடம் கொண்ட உறவில் எழும் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டு,(61) தங்கள் {சாங்கிய} அமைப்பு சொல்லும் அனைத்தையும் தழுவும் பரந்த அறிவின் துணையுடன், அந்த அறிவாயுதத்துடனும், தவங்களெனும் தண்டத்துடனும், ரஜஸ் குணத்தில் இருந்து பிறக்கும் மங்கலமற்ற அனைத்து மணங்களையும், தமஸ் குணத்தில் இருந்து எழும் இயல்பைக் கொண்ட மணங்கள் அனைத்தையும், சத்வ குணத்தில் இருந்து எழும் மங்கலமற்ற மணங்கள் அனைத்தையும், உடலில் பிரிக்க முடியாத வகையில் இருக்கும் அதே மூன்று குணங்களில் இருந்து பிறக்கும் தீண்டல் (மற்றும் பிற புலன்கள்) இன்பங்கள் அனைத்தையும் அறுத்து,(62,63) ஓ! பாரதா, வெற்றியால் மகுடம் சூடப்படும் இந்த யதிகள், உண்மையில் அறிவெனும் யோகத்தின் உதவியால் பிறவிப் பெருங்கடலைக் கடக்கிறார்கள்.

பயங்கரமான அந்தப் பெருங்கடல், துன்பத்தையே தன் நீராகக் கொண்டிருக்கிறது. கவலையும், துயரும் அதன் ஆழமான தடாகங்களாக இருக்கின்றன. நோயும் மரணமும் அதிலிருக்கும் பெரும் முதலைகளாக இருக்கின்றன. ஒவ்வொரு அடியிலும் இதயத்தைத் தாக்கும் பேரச்சங்கள் அதனில் இருக்கும் பெரும்பாம்புகளாகும்.(64) தமஸ் குணம் கொண்ட செயல்களே அதிலிருக்கும் ஆமைகளாகும். ரஜஸ் குணம் கொண்டவை அதன் மீன்களாகும். விவேகமே அதைக் கடக்கப் பயன்படும் தோணியாகும். புலன் நுகர்பொருட்களில் உள்ள பற்று அதிலுள்ள சகதியாகும். முதுமை துன்பம் நிறைந்த ஒரு பகுதியாக இருக்கிறது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அறிவே அதனில் இருக்கும் தீவாகும். செயல்களே அதன் பேராழமாக அமைகிறது. உண்மையே அதன் கரைகளாக இருக்கின்றன. பக்தி நோன்புகள் அதன் பரப்பில் மிதக்கும் பச்சை பாசிகளாக இருக்கின்றன. பொறாமை அதிலுள்ள வலிமைமிக்கப் பெரும் நீரோட்டமாக இருக்கிறது. இதயத்தில் உள்ள பல்வேறு மிகையுணர்ச்சிகள் அதன் சுரங்கங்களாக இருக்கின்றன. பல்வேறு வகையான மனநிறைவுகள் அதன் மதிப்புமிக்க ரத்தினங்களாக இருக்கின்றன. துயரும், நோயும் அதிலுள்ள காற்றாக இருக்கிறது. அவலங்களும், தாகமும் வலிமைமிக்க அலைகளாக இருக்கின்றன. துன்பமிக்கவையும், மரணத்தை ஏற்படுத்தக்கூடியவையுமான நோய்கள் அதில் பெரும் யானைகளாக இருக்கின்றன. எலும்புக்கூட்டங்கள் அதன் படிக்கற்களாகவும், சளி அதன் நுரையாகவும் இருக்கின்றன. கொடைகள் அதன் முத்து வங்கியாக இருக்கின்றன. குருதித்தடாகங்கள் அதன் வைடூரியங்களாக இருக்கின்றன. உரத்த சிரிப்பு அதன் முழக்கமாக இருக்கிறது. பல்வேறு வகை அறிவியல்கள் {சாத்திரங்கள்} அதில் உள்ள கடக்கமுடியாத இடங்களாகும். கண்ணீர் அதன் உப்புநீராகும். தோழமை துறத்தல் (அதைக் கடப்பதற்க்காக முனைபவர்களுக்கு) பெரும் புகலிடமாக இருக்கிறது. பிள்ளைகளும், மனைவியரும் அதிலுள் உள்ள எண்ணிலடங்கா அட்டைப்பூச்சிகளாகும் {ஒட்டுண்ணிகளாகும்}. நண்பர்களும், உற்றாரும் அதன் கரைகளில் உள்ள பெருநகரங்களும், நகரங்களும் ஆகும். தீங்கிழையாமையும், வாய்மையும் அதன் எல்லைக் கோடுகளாகும். மரணம் அதன் புயலலை ஆகும். வேதாந்த அறிவு (நீரில் தூக்கி வீசப்படுபவர்களுக்குப் புகலிடம் அளிக்கவல்ல) அதிலுள்ள தீவாகும். உயிரினங்களிடம் கொள்ளும் கருணையால் செய்யப்படும் செயல்கள் உயிர் காக்கும் மிதவைகளாக இருக்கின்றன. வணிகப் பொருட்களைத் தேடி நீரில் பயணிப்போருக்கு அழிக்கப்படும் விலைமதிப்பட்ட பொருளாக விடுதலை {முக்தி} இருக்கிறது. நெருப்புத் தழல்களைக் கக்கும் குதிரைத் தலை கொண்ட அதன் தற்சார்பு முன்னோடியைப் போல இந்தப் பெருங்கடலும் பயங்கரமான நெருப்புகளைக் கொண்டிருக்கிறது. பருவுடலில் வசிக்கும் சாங்கியர்கள், கடப்பதற்கு அரியவையான அந்தக் கடப்பாடுகளைக் கடந்து, தூய வெளிக்குள் நுழைகிறார்கள்.(65-72)

அப்போது சூரியன், சாங்கிய கோட்பாடுகளைப் பயிலும் அந்த அறவோரைத் தன் கதிர்களால் சுமக்கிறான். தாமரைத் தண்டில் உள்ள இழைகள், தாங்கள் உறிஞ்சும் நீர் அனைத்தையும் மலருக்குக் கொடுப்பதைப்போல, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பருகும் சூரியன், அவற்றை ஞானிகளான அந்த நல்லோருக்குக் கொடுக்கிறான்.(73) ஓ! பாரதா, சக்தியும், தவங்களெனும் செல்வத்தையும் கொண்ட இந்த யதிகள், தங்கள் பற்றுகள் அனைத்தையும் அழித்து, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டு, நுட்பமானதும், குளுமையானதும், நறுமணமிக்கதும், தீண்டுதற்கினியதுமான தென்றலால் சுமக்கப்படுகிறார்கள்.(74) உண்மையில், ஓ! குந்தியின் மகனே, பேரின்ப உலகங்களில் வீசிக்கொண்டிருக்கும் ஏழு காற்றுகளில் சிறந்த காற்றானது வெளியில் {ஆகாயத்தில்} உள்ள உயர்ந்த கதியை அவர்களுக்கு அளிக்கிறது.(75) பிறகு அவர்கள் கொண்டு சேர்க்கப்படும் வெளியானது, அவர்களுக்கு ரஜஸ் குணத்தின் உயர்ந்த கதியை அளிக்கிறது.(76) பிறகு ரஜஸ் குணமானது அவர்களைச் சத்வத்தின் உயர்ந்த கதிக்குச் சுமந்து செல்கிறது. பிறகு, ஓ! தூய ஆன்மாவே, அந்தச் சத்வ குணமானது, அவர்களைப் பலமிக்கப் பரமன் நாராயணனிடம் கொண்டு செல்கிறது.(77) பலமிக்கவனும், தூய ஆன்மாகக் கொண்டவனுமான நாராயணன் இறுதியாக அவனைப் பரமாத்மாவிடம் சுமந்து செல்கிறான். ஓ! மன்னா, பரமாத்மாவை அடையும் அந்தக் களங்கமற்ற மனிதர்கள், அஃது (என்றழைக்கப்படும் அதன் {பிரம்மத்தின்}) உடலாகி, அழிவின்மையை அடைந்து, மீண்டும் திரும்பாத நிலையை அடைகிறார்கள். ஓ! பிருதையின் மகனே, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் ஆதிக்கத்தையும் கடந்த உயர் ஆன்மா மனிதர்களால் அடையப்படும் உயர்ந்த கதி அதுவே” என்றார் {பீஷ்மர்}.(79)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாவமற்றவரே, உறுதியான நோன்புகளைக் கொண்ட அந்த மனிதர்கள் பலமும், இன்பமும் நிறைந்த அந்தச் சிறந்த நிலையை அடைந்த பிறகு, அவர்களுடைய முற்பிறவிகளில் நேர்ந்த பிறப்பு மற்றும் மரணம் உள்ளிட்டவற்றை நினைவுகூர்வார்களா?(80) இந்தக் கேள்விக்கான உண்மையை முறையாக எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். ஓ! குரு குலத்தவரே, உம்மைத் தவிர வேறு எவரிடமும் இதைக் கேட்பது முறை என்று நான் நினைக்கவில்லை.(81) விடுதலையை {முக்தியைச்} சொல்லும் சாத்திரங்களைக் கண்டதில், (விடுதலை {முக்தி} நிலையை அடைந்ததும் நனவு நிலை மறைந்து விடும் எனச் சில சாத்திரங்கள் சொல்கின்றன, அதே வேளையில் இதற்கு நேரெதினாதை சில சாத்திரங்கள் அறிவிக்கின்றன என்பதால்) இந்தப் பெரும் குறையை நான் காண்கிறேன். உயர்ந்த கதியை அடைந்த பிறகு, அந்த யதிகள் நனவுநிலையோடு தொடர்ந்து வாழ்ந்தால்,(82) ஓ மன்னா, பிருவிருத்தியின் அறமே உயர்ந்ததாகக் காணப்படும். மேலும், விடுதலை {முக்தி} நிலையில் நனவுநிலை மறைந்துபோகும் என்றால், அந்த முக்தியை அடைந்த மனிதன், கனவற்ற உறக்கத்தில் மூழ்கியவரே ஆவார். (கனவற்ற உறக்க நிலையில் ஒருவனுடைய நனவுநிலையானது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதேயன்றி ஒருபோதும் தொலைந்துபோவதில்லை. அந்த உறக்கத்தில் இருந்து அவன் விழிப்படைந்தால் மீண்டும் அது திரும்பிவிடும் என்றால்) முக்தி நிலையில் நனவுநிலை இல்லையென்று சொல்வதைவிட முறையற்ற வேறு எதுவும் இருக்க முடியாது” என்றான் {யுதிஷ்டிரன்}.(83)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே,பதிலளிக்க எவ்வளவு கடினமாக இருந்தாலும், நீ கேட்ட கேள்வி முறையானதே. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பெரும் கல்விமான்களே மலைப்படையும் வகையில் இந்தக் கேள்வி இருக்கிறது.(84) நான் விளக்கிச் சொல்லப்போகும் உண்மையைக் கேட்பாயாக. கபிலரைப் பின்பற்றும் உயர் ஆன்மாக்கள் {சாங்கியர்கள்}, இந்தக் காரியத்தில் தங்கள் உயர்ந்த புத்தியை நிறுவியிருக்கிறார்கள்.(85) ஓ! மன்னா, உடல் படைத்த உயிரினங்களில் நடப்பட்டிருக்கும் {நிறுவப்பட்டிருக்கும்} அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்}, தங்கள் தங்களுக்குரிய உணர்வுச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. அவற்றின் மூலமே நுட்பமானவன் {ஆன்மா} உண்டாகிறதென்பதால் அவை ஆன்மாவின் கருவிகளாக இருக்கின்றன.(86) ஆன்மாவோடு கலக்காத புலன்கள், மரக்குவியல்களைப் போன்றனவாகும். மேலும் அவை பெருங்கடலின் பரப்பில் காணப்படும் நுரையைப் போல (தாங்கள் தொண்டாற்றும் செயல்பாடுகளில்) அழிவையே அடையும்.(87) ஓ!எதிரிகளை எரிப்பவனே, உடல் கொண்ட உயிரினமானது, தன் புலன்களுடன் உறக்கத்தில் மூழ்கும்போது, நுட்பமான ஆத்மாவானது, வெளியில் உலவும் காற்றைப் போல அனைத்துப் பொருட்களின் மத்தியிலும் திரிகிறது.(88) ஓ! மன்னா, உறக்கத்தில், நுட்பமான ஆத்மாவானது, விழிப்பில் இருப்பது போலவே, (அனைத்து வடிவங்களைக்) காணவும், தீண்டலுக்குரிய பொருட்கள் அனைத்தையும் தொடவும், பிற உணர்வுகளைப் பெறவும் செய்கிறது.(89) செயல்படுபவர் இல்லாமல் செயல்பட முடியாத விளைவால், உறக்கத்தின் போது புலன்கள் அனைத்தும் தங்கள் தங்களுக்குரிய இடங்களில் இல்லாமல் (தங்கள் சக்திகளை இழந்து) நஞ்சற்ற பாம்புகளைப் போல இருக்கின்றன.(90)

அத்தகைய வேளைகளில், நுட்பமான ஆத்மா, அனைத்துப் புலன்களுக்குமுரிய இடங்களுக்குச் சென்று, அவற்றின் செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை.(91) ஓ! பாரதா, ஓ! யுதிஷ்டிரா, ஓ! பார்த்தா, சத்வத்தின் அனைத்து குணங்களும், புத்தியின், மனம், வெளி, காற்று, நீர், நிலம் ஆகியவற்றின் குணங்களும், ஜீவ ஆத்மாக்கள் கொண்ட இந்தக் குணங்கள் அனைத்துடன் கூடிய புலன்களும், அதனுடன் கூடிய ஜீவ ஆத்மாவும் பரமாத்மா அல்லது பிரம்மத்தால் மூழ்கடிக்கப்படுகிறது {வெற்றி கொள்ளப்படுகிறது}. நல்ல மற்றும் தீய செயல்களும் அந்த ஜீவ ஆத்மாவை மூழ்கடிக்கிறது. தங்கள் ஆசானுக்காக மதிப்புடன் காத்திருக்கும் சீடர்களைப் போலப் புலன்களும் ஜீவாத்மாவிடம் காத்திருக்கின்றன.(94,95)

ஜீவாத்மா பிரக்ருதியைக் கடக்கும்போது, மாற்றமில்லாத பிரம்மமும், இரட்டைகள் அனைத்தையும் கடந்த உயர்ந்தவனும், பிரகிருதியைக் கடந்தவனுமான நாராயணனை அடைகிறது.(96) ஓ! பாரதா, ஜீவாத்மாவானது, தகுதி மற்றும் தகுதியின்மை ஆகிய இரண்டையும் கடந்து, குணங்கள் எதுவும் இல்லாததும், மங்கலங்கள் அனைத்தின் இல்லமுமான பரமாத்மாவுக்குள் நுழைந்து மீண்டும் திரும்பாத நிலையை அடைகிறது.(97) இவை பேராசானின் கட்டளைகளைச் செய்யக் குறிப்பிட்ட காலங்களில் மீண்டும் வர வேண்டியிருக்கிறது.(98) ஓ! குந்தியின் மகனே, (இந்த உடல் கைவிடப்பட்ட) உடனே விடுதலைக்கு முனைந்தவனும், ஞானத்துடன் கூடியவனும், குணமுடன் இருப்பதால் ஆசையுள்ளவனுமான யதி, உடலற்றவன் அடையும் விடுதலை {முக்தி} எனும் அமைதியை அடைவதில் வெல்கிறான்.(99) ஓ! மன்னா, சாங்கியர்கள் பெரும் ஞானத்தைக் கொண்டவர்கள் ஆவர். இவ்வகை ஞானத்தின் மூலமே அவர்கள் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறார்கள். இதற்கிணையான ஞானம் வேறில்லை.(100)

எவ்வகை ஐயத்திற்கும் வசப்படாதே. சாங்கிய அமைப்பில் விளக்கப்பட்டிருக்கு ஞானமானது உயர்ந்ததெனக் கருதப்படுகிறது. அந்த அறிவு அனைத்தையும் அறிந்த நிலையும், நித்தியமாக நிலைத்திருக்கும் நிலையுமாகும். அதுவே முழுமையான நித்திய பிரம்ம நிலையாகும்.(101) அதற்குத் தொடக்கமோ, நடுநிலையோ, முடிவோ கிடையாது. அது முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்த நிலையாகும். அண்டத்தின் படைப்புக்கு அதுவே காரணமாகும். அது முழுமையாக இருக்கிறது. எவ்வகைச் சிதைவுமில்லாததாக இருக்கிறது. சீரானதாகவும், எப்போதும் இருப்பதாகவும் அஃது இருக்கிறது. இவ்வாறு அதன் புகழ் ஞானிகளால் பாடப்படுகிறது.(102) அதனிலிருந்தே, படைப்பும், அழிவும், அனைத்து சீர்திருத்தங்களும் வருகின்றன. பெரும் முனிவர்கள் அதைக் குறித்துப் பேசுகின்றனர், சாத்திரங்களில் மெச்சுகின்றனர்.(103) கல்விமான்களான பிராமணர்கள் அனைவரும், அறவோர் அனைவரும் அதை {அந்நிலையை} பிரம்மம், பரநிலை, தெய்வீக நிலை, முடிவற்ற நிலை, அனைத்தையும் அறிந்த நிலை, சிதைவற்ற நிலை என்று கருதுகிறார்கள்.(104) புலன்நுகர் பொருட்களில் பற்றுக் கொண்ட பிராமணர்கள் அனைவரும், மாயைக்குரிய குணங்களோடு அதைத் தொடர்புப்படுத்தித் துதித்துப் புகழ்கின்றனர். தவங்களையும், தியானங்களையும் நன்றாக நோற்கும் யோகிகள் மற்றும் அளவற்ற உள்பார்வை கொண்ட சாங்கியர்கள் ஆகியோரின் பார்வைகள் ஒன்றே.(105) ஓ! குந்தியின் மகனே, சாங்கிய தத்துவத்தின் வடிவமே, வடிவமற்றவனின் வடிவம் என ஸ்ருதிகள் அறிவிக்கின்றன. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, (அந்தத் தத்துவத்தின்படியான) அறிதல் நிலைகள் பிரம்ம அறிவே என்றே சொல்லப்பட்டுள்ளது.(106)

ஓ! பூமியின் தலைவா, அசைவன, அசைவற்றன எனப் பூமியில் இருவகை உயிரினங்கள் இருக்கின்றன. இவற்றில் அசைவனவே மேன்மையானவை.(107) ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி பிரம்மத்தை அறிந்தவர்களில் இருப்பதும், வேதங்களில் நேர்வதும், பிற சாத்திரங்களில் காணப்படுவதும், யோகத்தில் உள்ளதும் பல்வேறு புராணங்களில் காணப்படுவதுமான அந்த உயர்ந்த ஞானங்கள் அனைத்தும், சாங்கிய தத்துவத்தில் காணப்படுகின்றன.(108) உயர்ந்த வரலாறுகளில் காணப்படும் ஞானம் எதுவும், ஓ! மன்னா, ஞானியரால் அங்கீகரிக்கப்பட்ட செல்வமீட்டல் தொடர்புடைய அறிவியல்களில் வரும் ஞானம் எதுவும், இவ்வுலகில் இருக்கும் ஞானம் எதுவும், சாங்கியர்களின் உயர்ந்த ஞானத்தில் இருந்து வந்தவையே ஆகும்.(109) ஓ! மன்னா, ஆன்ம அமைதி, உயர்ந்த பலம், சாத்திரங்கள் சொல்லும் நுட்பமான அறிவுகள் அனைத்தும், நுட்பமான சக்தியைக் கொண்ட தவங்களும், அனைத்து வகை இன்பநிலைகளும் என அனைத்தும், சாங்கிய அமைப்பில் முறையாக விதிக்கப்பட்டிருக்கின்றன.(110)

ஓ பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரனே}, தங்கள் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் அந்த முழுமையான அறிவை அடையத் தவறும் சாங்கியர்கள், தேவர்களின் நிலையை அடைந்து பல காலங்களை இன்ப நிலைகளில் கடத்துகின்றனர். தேவர்களாகத் தங்கள் விருப்பப்படித் தலைமை செலுத்திய பிறகு ஒதுக்கப்பட்ட காலம் தீர்ந்ததும் அவர்கள் கல்விமான்களான பிராமணர்கள் மற்றும் யதிகளின் மத்தியில் விழுகிறார்கள்.(111) ஆகாயத்தில் நுழையும் தேவர்களைக் போலவே சாங்கிய அமைப்பைப் பின்பற்றும் மறுபிறப்பாளர்களும், துதிக்கத்தக்க தங்கள் அமைப்பில் மொத்தமாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, இந்த உடலைக் கைவிட்டு, ஞானிகள் அனைவராலும் வழிபடப்படும் உயர்ந்த நிலையான பிரம்ம நிலைக்குள் நுழைகிறார்கள்.(112) சாங்கிய அமைப்பால் பரிந்துரைக்கப்படும் அறிவை அடைய தங்களை அர்ப்பணிக்கும் மறுபிறப்பாளர்கள், தங்கள் உயர்நிலையை அடையத் தவறினாலும், இடைநிலை உயிரினங்களின் மத்தியிலோ, பாவிகளின் மத்தியில் வீழும் நிலைக்குத் தள்ளப்படுவது காணப்படுவதில்லை.(113) ஓ! மன்னா, பரந்ததும், உயர்ந்ததும், புராதனமானதும், பெருங்கடலைப் போன்றதும், அளவிடமுடியாததும், தூய்மையானதும், முற்போக்கானதும், ஏற்புடையதுமான சாங்கிய அமைப்பை முழுமையாக அறிந்த உயர் ஆன்மா கொண்டவன் நாராயணனுக்கு இணையானவன் ஆவான்.(114) ஓ! மனிதர்களில் தேவனே, சாங்கிய அமைப்பைக் குறித்த உண்மையை உனக்குச் சொல்லிவிட்டேன். அது பழங்காலத்தில் இருந்து அண்டத்தில் நீடித்திருக்கும் நாராயணனின் உடல்வடிவமாகும். படைப்புக்கான வேளைவரும்போது, அவனே படைப்பை உண்டாக்குகிறான், அழிவுக்கான வேளை வருகையில் அவனை அனைத்தையும் விழுங்குகிறான். அனைத்தையும் தன் உடலுக்குள் ஈர்த்துக் கொள்ளும்போது, அண்டத்தின் உள்ளான்மாவான அவன் உறங்கச் செல்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(115)

வசிஷ்டர் கராளன்! – சாந்திபர்வம் பகுதி – 303-அழிவற்றது மற்றும் அழியக்கூடியவை குறித்து ஜனக குலத்தின் மன்னன் கராளனுக்கும், பெருமுனிவர் வசிஷ்டருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எது சிதைவற்றது என்று அழைக்கப்படுகிறதோ, எதை அடைவதன் மூலம் எவரும் திரும்பி வர வேண்டிய அவசியமில்லையோ, அஃது என்ன? மேலும் எது சிதைவுள்ளது என்று அழைக்கப்படுகிறதோ, எதை அடைவதன் மூலம் ஒருவன் மீண்டும் திரும்ப வேண்டி வருமோ, அஃது என்ன?(1) ஓ! எதிரிகளைக் கொல்பவரே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, சிதைவுள்ளது, சிதைவற்றது ஆகிய இரண்டையும் உண்மையில் புரிந்து கொள்வதற்காக அவற்றுக்கிடையில் உள்ள வேற்றுமையை நான் உம்மிடம் கேட்கிறேன்.(2) வேதங்களை அறிந்த பிராமணர்கள் உம்மை ஞானப் பெருங்கடல் எனச் சொல்கிறார்கள். உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்களும், உயர் ஆன்மாக்களைக் கொண்ட யதிகளும் அதையே சொல்கிறார்கள்.(3) நீர் வாழ இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. சூரியன் தனது தென்பாதையில் இருந்து வடபாதைக்குத் திரும்பும்போது நீர் உயர்ந்த கதியை அடைவீர்.(4) நீங்கள் எங்களை விட்டுச் சென்றுவிட்டால், நாங்கள் எங்களுக்கான நன்மைகள் அனைத்தையும் யாரிடம் இருந்து கேட்போம்? நீரே குரு குலத்தின் விளக்காவீர். உண்மையில், நீர் ஞான ஒளியால் சுடர்விடுகிறீர்.(5) எனவே, ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, நான் இவை யாவற்றையும் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். அமுதம் போல எப்போதும் இனிமையாக இருக்கும் உமது உரைகளைக் கேட்கும் ஆவல் தணிவடையாமல் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது” என்றான்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்கதையில் வசிஷ்டருக்கும், ஜனக குலத்தைச் சேர்ந்த மன்னன் கராளனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(7) ஒரு காலத்தில் முனிவர்களில் முதன்மையானவரும், சூரியப்பிரகாசம் கொண்டவருமான வசிஷ்டர் சுகமாக அமர்ந்திருந்தபோது, மன்னன் ஜனகன் {கராளன்} அவரிடம் நமது பரமநன்மைக்கான {மோட்சத்துக்கான} உயர்ந்த ஞானத்தைக் குறித்துக் கேட்டான்.(8) ஆன்மா குறித்த அறிவுத்துறையில் உயர்ந்த திறனைக் கொண்டவரும், அந்த அறிவியலின் அனைத்துக் கிளைகளிலும் குறிப்பிட்ட தீர்மானங்களைக் கொண்டவரும்,(9) முனிவர்களில் முதன்மையானவருமான மைத்ராவருணி {வசிஷ்டர்} அமர்ந்திருந்தபோது, கூப்பிய கரங்களுடன் அவரை அணுகிய மன்னன் {கராளன்} அவரிடம் நன்கு உச்சரிக்கப்பட்ட, இனிமையான, சர்ச்சைக்குரிய நோக்கமேதும் இல்லாத, பணிவான வார்த்தைகள் மூலம் இந்தக் கேள்வியைக் கேட்டான்,(10) “ஓ! புனிதமானவரே, எதை அடைந்தால் ஞானிகள் மீண்டும் திரும்பி வர வேண்டியதில்லையோ, அந்தப் பரமநித்திய {உயர்ந்த அழிவற்ற} பிரம்மத்தைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்.(11) எது அழியத்தக்கது என்றழைக்கப்படுகிறது என்பதையும், இந்த அண்டம் அழிவடையும்போது, அஃது எதனுள் நுழைகிறது என்பதைக் கேட்க விரும்புகிறேன். உண்மையில், அழிவற்றது, மங்கலமானது, நன்மையானது, அனைத்து வகைத் தீமையில் இருந்து விடுபட்டது என எது சொல்லப்படுகிறது?” என்று கேட்டான் {ஜனக குல மன்னன் கராளன்}.(12)

வசிஷ்டர் {மன்னன் கராளனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, இந்த அண்டம் எவ்வாறு அழிவடைகிறது என்பதையும், இதற்கு முன் எப்போதும் அழியாததும், இனி எந்தக் காலத்திலும் ஒருபோதும் அழிய முடியாததும் எது என்பதையும் கேட்பாயாக.(13) (தேவர்களுடைய அளவீடுகளின்படி) ஒரு யுகம் பனிரெண்டயிரம் {12,000} வருடங்களைக் கொண்டதாகும். அத்தகைய நான்கு யுகங்கள் ஆயிரம் முறை {12000 X 4 X 1000} நேர்வது ஒரு கல்பமாகும். அதுவே பிரம்மனுடைய ஒரு பகலின் அளவாகும்.(14) ஓ! மன்னா, பிரம்மனின் இரவும் அதே அளவைக் கொண்டதாகும். {அத்தகைய} பிரம்மனே அழிவடையும்போது, வடிவமற்ற ஆன்மாவைக் கொண்டவனும், அனிமா, லகிமா {ப்ராப்தி} முதலிய யோக குணங்களை இயற்கையிலேயே கொண்டவனுமான சம்பு விழிப்படைந்து, பெரும் அளவுகளைக் கொண்டவனும், முடிவிலா செயல்களைச் செய்பவனும், வடிவத்தோடு கூடியவனும், அண்டத்தைப் போன்றவனும், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனை, அல்லது மூத்தவனை {ஹிரண்யகர்ப்பனை} மீண்டும் ஒருமுறை படைக்கிறான் {சம்பு ஹிரண்யகர்ப்பனைப் படைக்கிறான்}. அந்தச் சம்புவே வேறு வகையில் ஈசானன் (அனைத்தின் தலைவன்) என்று அழைக்கப்படுகிறான். அவன் தூய்மையானவனாகவும், பிரகாசமிக்கவனாகவும், சிதைவுகள் அனைத்தையும் கடந்தவனாகவும்,(15,16) அனைத்துத் திசைகளிலும் பரந்து விரிந்த கரங்களும் கால்களும் கொண்டவனாகவும், எங்கும் கண்களையும், தலையையும், வாயையும், காதுகளையும் கொண்டவனாகவும் இருக்கிறான்.(17)

{அப்படி படைக்கப்படும்} மூத்த பிறவி ஹிரண்யகர்ப்பன் என்று அழைக்கப்படுகிறான். (வேதாந்தத்தில்) இந்தப் புனிதமானவன் புத்தி என்றழைக்கப்படுகிறான். யோக சாத்திரங்களில் அவன் பெரியவன் {மஹத்}, விரிஞ்சி, பிறப்பில்லாதவன் என்று அழைக்கப்படுகிறான்.(18) சாங்கிய சாத்திரங்களில் முடிவின்மையையே தன் ஆன்மாவாகக் கொண்டவனாகக் கருதப்படும் அவன், பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறான். பல்வேறு வடிவங்களிலும், அண்டத்தின் ஆன்மாவாகவும் இருக்கும் அவன், ஒருவனாகவும் {ஓரக்ஷரமாகவும்}, அழிவற்றவனாகவும் கருதப்படுகிறான்.(19) முடிவிலா உட்பொருள்களைக் கொண்ட மூவுலகங்களும், எந்த மூலத்தின் துணையும் இல்லாமல் அவனால் படைக்கப்பட்டு, அவனாலேயே மூழ்கடிக்கப்படுகின்றன. அவனுடைய பலவகை வடிவங்களின் விளைவால் அவன் அண்ட வடிவத்தைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்.(20) பல மாற்றங்களை ஏற்படுத்தித் தன்னைத் தானே அவன் படைத்துக் கொள்கிறான். வலிமையும், சக்தியும் கொண்ட அவன், முதலில் நனவுநிலையையும் {அஹங்காரத்தையும்}, நனவுநிலையுடன் கூடிய பிரஜாபதி என்றழைக்கப்படும் பெரும்பூதத்தையும் {அஹங்கார்ரத்தைச் செய்கின்ற விராட்டையும்} படைக்கிறான்.(21) புலப்படாததில் {அவ்யக்தத்தில்} இருந்தே புலப்படுபவன் (அல்லது ஹிரண்யகர்ப்பன்) படைக்கப்பட்டான். இதுவே கல்விமான்களால் ஞானப்படைப்பு என்று அழைக்கப்படுகிறது. ஹிரண்யகர்ப்பனால் படைக்கப்பட்ட மஹான் (அல்லது விராட்) மற்றும் நனவுநிலை {அஹங்காரம்} அறியாமையின் படைப்பாகும்[1].(22)

ஸ்ருதிகளை விளக்கும் கல்விமான்களால் அறியாமை மற்றும் ஞானம் {அறிவு} என்ற பெயர்களால் அழைக்கப்படும் (வழிபடத்தகுந்த) குணங்களின் துதி {வித்தை}, அதன்மூலம் நிகழும் அழிவு {அவித்தை}ஆகியவை இஃது, அஃது, அல்லது மூன்றில் உள்ள வேறொன்றை (அக்ஷரம்{1}, ஹிரண்யகர்ப்பன்{2}, அல்லது விராட் என்பனவற்றைக்) குறிப்பிடும் வகையில் எழுகின்றன[2].(23) ஓ! மன்னா, நனவுநிலையில் {அகங்காரத்தில்} இருந்து மூன்றாவதாக (நுட்பமான) பூதங்கள்{3} {ஸூக்ஷ்ம பூதங்கள்} படைக்கப்பட்டன என்பதை அறிவாயாக[3]. மூன்றாவதின் {பூதங்களின்} மாறுபாடுகளில் இருந்து நான்காவது படைப்பாக நனவுநிலையின் அனைத்து வகைகளும் {திரள் பூதங்களும் / ஸ்தூலபூதங்களும்} உண்டாகின[4].(24) இந்த நான்காவது படைப்பில் காற்று {வாயு}, ஒளி, வெளி {ஆகாயம்}, நீர், பூமி {நிலம்} ஆகியவையும், அவற்றின் குணங்களான ஒலி, ஊறு, வடிவம், சுவை மற்றும் மணமும்{13} அடங்கியிருக்கின்றன.(25) இந்தப் பத்தும் ஒரே வேளையில் உண்டாகின என்பதில் ஐயமில்லை. ஓ! ஏகாதிபதி, (மேலே குறிப்பிடப்பட்ட) மூல பூதங்களின் கலவையில் இருந்து எழுந்தவையே ஐந்தாவது படைப்பாகின.(26) இதில் {இந்த ஐந்தாம் படைப்பில்}, காது {சுரோத்திரம்}, தோல் {தவக்கு}, கண்கள் {சக்ஷுஸ்}, நாவு {ஜிஹ்வை}, ஐந்தாவதாக மூக்கு {கிராணம்}, வாக்கு, இரு கரங்கள், இரு கால்கள், குதம் மற்றும் பிறப்புறுப்பு ஆகியன உள்ளடங்கும்.(27) இவற்றில் முதல் ஐந்து அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} என்றும், இறுதி ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} என்றும் அமைகின்றன{23}. ஓ! மன்னா, மனத்துடன்{24} கூடிய இவையாவும் அடுத்தடுத்து எழுந்தன.(28) இவையே உயிரினங்கள் அனைத்தின் வடிவங்களிலும் உள்ள இருபத்துநான்கு காரியங்களாகின்றன {தத்துவங்களாகின்றன}. இவற்றைச் சரியாகப் புரிந்து கொள்வதன் மூலம் வாய்மையின் உட்பார்வை கொண்ட பிராமணர்கள் ஒருபோதும் துன்பத்தின் வசப்படுவதில்லை.(29)உடல் என்றழைக்கப்படும் இவற்றின் கலவையையே மூவுலகங்களிலும் உள்ள உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தும் கொண்டிருக்கின்றன. உண்மையில், ஓ! மன்னா, அவற்றின் கலவைகளே தேவர்கள், மனிதர்கள், தானவர்கள்,(30) யக்ஷர்கள், பூதங்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், பெரும்நாகர்கள், சாரணர்கள், பிசாசங்கள்,(31) தெய்வீக முனிவர்கள், ராட்சசர்கள், கடிக்கும் வண்டுகள், புழுக்கள், கொசுக்கள், கழிவில் பிறக்கும் புழுக்கள், எலிகள், நாய்கள், சுவாபாகர்கள் {நாயை உண்ணும் புலையர்கள்}, சைநேயங்கள் {மான்களை உண்ணும் நீசர்கள்}, சண்டாளர்கள், புல்கசர்கள்,(32) யானைகள், குதிரைகள், கழுதைகள், புலிகள், மரங்கள், பசுக்கள் ஆகியவையாக அறியப்படுகின்றன. நீர், ஆகாயம், பூமி ஆகியவற்றைத் தவிர வேறு எதனிலும் உயிரினங்கள் இருப்பதாக நாம் கேள்விப்படாததால் இவற்றில் உள்ள எந்த உயிரினமும் இந்தக் கலவையையே கொண்டிருக்கின்றன.(33,34) ஓ! ஐயா, புலப்படுவது {வடிவமாக இருப்பவை} என்றழைக்கப்படும் வர்க்கத்தில் சேர்க்கப்படும் இவை அனைத்தும் நாளுக்கு நாள் அழிவடைவது காணப்படுகிறது. எனவே, இந்த இருபத்துநான்கின் கலவையால் உண்டான அனைத்து உயிரினங்களும் அழியத்தக்கன {சிதைவுள்ளவை} என்று சொல்லப்படுகின்றன.(35)

இதுதான் அழிவில்லாதது. புலப்படுவவை, புலப்படாதவை ஆகியவற்றால் உண்டான இந்த அண்டம் அழிவடைவதால் அஃது அழியத்தக்கது என்று சொல்லப்படுகிறது.(36) மூத்த பிறப்பான மஹான் என்றழைக்கப்படும் பூதமே அழியக்கத்தக்கது என்று எப்போதும் சொல்லப்படுகிறது. ஓ! ஏகாதிபதி, நீ என்னிடம் கேட்ட அனைத்தையும் உனக்குச் இப்போது சொல்லிவிட்டேன்.(37) ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இருபத்துநாலையும் கடந்து இருப்பத்தைந்தாக இருப்பவன் விஷ்ணு என்றழைக்கப்படுகிறான். அனைத்துக் காரியங்களிலும் படர்ந்தூடுருவி இருந்தாலும் (ஞான) காரியமாக இல்லாத அந்த விஷ்ணு, அனைத்து குணங்களும் அற்றிருக்கும் விளைவால் ஞானிகளால் அவ்வாறு அழைக்கப்படுகிறான்.(38) அழியத்தக்கவை புலப்படுபவை அனைத்தையும் உண்டாக்குவதால் இவை அனைத்தும் வடிவத்தைக் கொண்டிருக்கின்றன. இருபத்துநாலாவதான பிரகிருதியே (தன் மாறுதல்களின் மூலம் எழுந்த) இவை அனைத்திற்கும் தலைமை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது. இருபத்தைந்தாவதான விஷ்ணு வடிவமற்றவனாக இருப்பதால் அண்டத்திற்குத் தலைமை தாங்குவதாகச் சொல்ல முடியாது[5].(39) புலப்படாதது {பிரகிருதி}, (சித்-உடன் கலப்பதன் விளைவால் உண்டாகும்) உடல் கொள்ளும்போது, உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வசிக்கிறது. நித்தியமான சேதனத்தை (அழிவற்றவனைப்) பொறுத்தவரையில் அவன் குணங்களும் வடிவமும் அற்றவனாக இருந்தபோதிலும் (பிரகிருதியுடன் கலப்பதன்ன் விளைவால்) அனைத்து வடிவங்களையும் ஏற்கிறான்.(40) பிறப்பு இறப்பு என்ற குணங்களைக் கொண்ட பிரகிருதியுடன் கலக்கும் அவனும், பிறப்பிறப்பின் குணங்களை ஏற்கிறான். உண்மையில் அவன் குணங்களேதும் அற்றவனாக இருப்பினும், அத்தகைய கலவையின் விளைவால் அவன் உணரப்படும் பொருளாகிறான்.(41) இவ்வழியிலேயே மகத்-ஆன்மா (ஹிரண்யகர்ப்பன்), பிரகிருதியுடன் கலந்து, அறியாமையைக் கொண்டு, மாற்றங்களை அடைந்து தன்னுணர்வைப் பெறுகிறான்[6].(42)சத்வம், ரஜஸ், தமஸ் குணங்களுடன் கலக்கும் அவன், மறதியாலும், அறியாமையின் விளைவாலும் பல்வேறு வகைகளைச் சார்ந்த பல்வேறு உயிரினங்களாக அடையாளம் காணப்படுகிறான்.(43) பிரகிருதியுடன் கலந்து வசிப்பதால் எழும் அவனது பிறப்பு மற்றும் அழிவின் விளைவால், உண்மையில் அவன் யாரோ, அவனாகவே தன்னை நினைக்கிறான். இஃது, அல்லது அதுவாகத் தன்னைக் கருதும் அவன், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களைப் பின்பற்றுகிறான்.(44) தமஸின் ஆதிக்கத்தில் அவன் தமஸால் பீடிக்கப்படும் பல்வேறு வகை நிலைகளை அடைகிறான். ரஜஸ் மற்றும் சத்வத்தின் ஆதிக்கத்தால் அவன் அதே போன்று ரஜஸ் மற்றும் சத்வத்தால் பாதிக்கப்பட்ட நிலைகளை அடைகிறான்.(45) இவை வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களாகும். அந்த நிறங்கள் அனைத்தும் பிரகிருதியின் தொடர்புடையவையாக இருக்கின்றன (வெள்ளையாக, சிவப்பாக அல்லது கருப்பாக இருப்பவன் அவனோடு தொடர்புடைய பிரகிருதியின் இயல்பின்படி காலத்திற்கேற்ற நிறத்தை அடைகிறான்).(46) தமஸ் குணத்தால் ஒருவன் நரகத்திற்குச் செல்கிறான். ரஜஸால் மானிட நிலையை அடைகிறான் (அல்லது தக்க வைத்துக் கொள்கிறான்). சத்வத்தின் மூலம் மக்கள் தேவர்களின் உலகங்களுக்கு உயர்ந்து, பேரின்ப நிலையின் பங்குதாரர்கள் ஆகின்றனர்.(47) தொடர்ந்து பாவச்செயல்களைச் செய்வதால் ஒருவன் இடைநிலை வகைகளில் {பறவை மற்றும் விலங்கு பிறப்பை அடைந்து} மூழ்குகிறான். அறம் சார்ந்து செயல்படுவதால் மட்டுமே ஒருவன் தேவர்களின் நிலையை அடைகிறான்.(48) இவ்வழியில், இருபத்தைந்தாவது காரியமான அக்ஷரம் (அழிவற்றது) புலப்படாததுடன் (பிரகிருதியுடன்) கலப்பதன் மூலம், க்ஷரமாக (அழிவுள்ளதாக) மாறுகிறது என ஞானியர் சொல்கின்றனர். எனினும், ஞான வழிமுறைகளின் மூலம் அழிவற்றவனானவன், தன் உண்மை இயல்பை வெளிப்படுத்துகிறான்” என்றார் {வசிஷ்டர்}.(49)

ஆன்ம அறியாமை! – சாந்திபர்வம் பகுதி – 304-அறியாமையில் கட்டுண்டிருக்கும் ஆன்மாவைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…

வசிஷ்டர் {ஜனக மன்னன் கராளனிடம்}, “இவ்வாறு, ஆன்மாவானது தன் மறதியின் விளைவால் அறியாமையைப் பின்பற்றி, ஒன்றன்பின் ஒன்றாக ஆயிரக்கணக்கான உடல்களை {பிறவிகளை} அடைகிறது. ஆயிரக்கணக்கான பிறவிகளை இடைநிலை வகைகளின் மத்தியிலும், சில வேளைகளில் (குறிப்பிட்ட) குணங்களுடன் ஏற்படும் கலவையின் விளைவாலும், மற்றும் அந்தக் குணங்களின் பலத்தாலும் தேவர்களுக்கு மத்தியிலும் எடுக்கிறது. மனித நிலையில் இருந்து சொர்க்கத்திற்கும், சொர்க்கத்திலிருந்து மீண்டும் மனித நிலைக்கும், பிறகு மனித நிலையில் இருந்து பல நீண்ட வருடங்களுக்கு நரகிலும் மூழ்குகிறது.(3) கூடுகளைக் கட்டும் {பட்டுப்}புழுவானது, தன்னைச் சுற்றிலும் நூல்களைப் பரப்பி அனைத்துப் பக்கங்களிலும் முழுமையாகத் தன்னை மறைத்துக் கொள்வதைப் போலவே, ஆன்மாவும், உண்மையில் குணங்கள் அனைத்தையும் கடந்ததாக இருந்தாலும், அனைத்துப் புறங்களிலும் குணங்களை நிறுவிக் கொள்கிறது (அவ்வாறு நிறுவி தன் சுதந்திரத்தை இழக்கிறது).(4)

(உண்மை இயல்பில்) இன்பதுன்பங்களைக் கடந்த நிலையில் இருந்தாலும், இவ்வாறே அது தன்னைத் தானே இன்பதுன்பங்களுக்கு உட்படுத்திக் கொள்கிறது. இவ்வாறே அது அனைத்து நோய்களையும் கடந்ததாக இருந்தாலும், தலைவலி, கண்வலி, பல்வலி, தொண்டைபாதிப்புகள், குடற்புண் {ஜலோதரம்}, அதிகத் தாகம், நொதி வீக்கம் {ஜ்வரகண்டம்}, வாந்திபேதி {விஷூசி}, தொழுநோய் {வெண்குஷ்டம்}, தீக்காயங்கள் {அக்னிதக்தம்}, இளைப்பு {காகம்}, காசநோய் {அபஸ்மாத்திரம்}, காக்காய்வலிப்பு {த்வந்துவம்} மற்றும் உடல்படைத்த உயிரினங்களின் உடல்களில் தோன்றும் பல்வேறு நோய்களாலும் தான் பீடிக்கப்படுவதாகக் கருதுகிறது.(5-7) ஆயிரக்கணக்கான இடைநிலை வகைகளிலும், சில வேளைகளில் தேவர்களுக்கு மத்தியிலும் பிறப்பதாகப் பிழையாகக் கருதும் அது துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, நற்செயல்களின் கனிகளை அனுபவிக்கிறது.(8)

அறியாமையைக் கொண்ட அது {ஆன்மா}, சிலவேளைகளில் தான் வெள்ளுடை அணிந்திருப்பதாகவும், சிலவேளைகளில் நான்கு துண்டுகளைக் கொண்ட முழு உடை அணிந்திருப்பதாகவும் கருதுகிறது, அல்லது (படுக்கையில் விரிப்புகளுக்கு மத்தியில் இல்லாமல்) தரையில் கிடப்பதாகவோ, தவளையைப் போன்ற குறுகிய கை கால்களைக் கொண்டிருப்பதாகவோ, தவசியின் தியான மனோநிலையில் நிமிர்ந்து அமர்ந்திருப்பதாகவோ, மரவுரி உடுத்தியிருப்பதாகவோ, வானத்தையே கூரையாகக் கொண்டு அமர்ந்திருப்பதாகவோ, கிடப்பதாகவோ, செங்கற்கள் மற்றும் கற்களால் கட்டப்பட்ட மாளிகைக்குள் இருப்பதாகவோ, கரடு முரடான கற்களில் இருப்பதாகவோ, சாம்பலில் இருப்பதாகவோ, வெறுங்கற்களில் இருப்பதாகவோ, வெறும் தரையில் இருப்பதாவோ, படுக்கையில் இருப்பதாகவோ, போர்க்களங்களில் இருப்பதாகவோ, நீரில் இருப்பதாகவோ, புழுதியில் இருப்பதாகவோ, பலகைகளில் இருப்பதாகவோ, கனியின் விருப்பத்தால் தூண்டப்பட்டுப் பல்வேறு வகைப் படுக்கைகளில் இருப்பதாகவோ, புல்லாலான சிறிய உடையை அணிந்திருப்பதாகவோ, மொத்தமாக நிர்வாணமாக இருப்பதாகவோ, பட்டு உடுத்தியிருப்பதாகவோ, கருப்பு மானின் தோலை அணிந்திருப்பதாகவோ, பட்டாடை உடுத்தியிருப்பதாகவோ, ஆட்டுத்தோல், அல்லது புலித்தோல், அல்லது சிங்கத் தோல் உடுத்தியிருப்பதாகவோ, சணலாலான ஆடை உடுத்தியிருப்பதாகவோ, பூச்சமரப்பட்டை அணிந்திருப்பதாகவோ, முட்செடிகளால் உண்டான ஆடைகளை அணிந்திருப்பதாகவோ, புழுக்கள் வெளியிடும் நூல்களில் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்திருப்பதாகவோ, கிழிந்த கந்தலுடை அணிந்திருப்பதாகவோ, குறிப்பிட முடியாத அளவுக்கு எண்ணற்ற பிறவகை ஆடைகளை உடுத்தியிருப்பதாகவோ {ஆத்மா} கருதிக் கொள்கிறது. ஆத்மாவானது, பல்வேறு வகை ஆபரணங்களையும், ரத்தினங்களையும் அணிந்திருப்பதாகவோ, பல்வேறு வகை உணவுகளை உண்பதாகவோ தன்னைக் கருதிக் கொள்கிறது.(9-15)

ஆத்மாவானது, ஓரிரவு இடைவெளிகளில் உண்பதாகவோ, ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உண்பதாகவோ, ஒவ்வொரு நாளும் நான்கு, ஆறு மற்றும் எட்டாவது மணி நேரத்தில் உண்பதாகவோ,(16) அல்லது ஆறு, அல்லது ஏழு, எட்டு இரவுகளுக்கு ஒருமுறை உண்பதாகவோ, பத்து அல்லது பனிரெண்டு நாட்களுக்கு ஒருமுறை உண்பதாகவோ,(17) ஒரு மாதத்திற்கு ஒருமுறை உண்பதாகவோ, கிழங்குகளை மட்டும் உண்பதாகவோ, கனிகளை உண்பதாகவோ, காற்று அல்லது நீரை மட்டுமே உட்கொள்வதாகவோ, பிண்ணாக்கோ, தயிரோ, பசுஞ்சாணத்தையோ,(18) பசுவின் சிறுநீரையோ, கீரைகளையோ, மலர்களையோ, பாசிகளையோ, கஞ்சியோ,(19) மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகள், அல்லது தரையில் சிதறிக் கிடக்கும் கனிகளையோ, பல்வேறு உணவுகளையோ (தவ வெற்றியை அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு உண்பதாகவோ கருதுகிறது.(20)

ஆத்மாவானது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் பதி சாந்திராயன நோன்பைப் பின்பற்றுவதாகவோ, நான்கு வாழ்வுமுறைகளில் பரிந்துரைக்கப்படும் பல்வேறு நோன்புகள், வழிமுறைகள் மற்றும் கடமைகளையும் பின்பற்றுவதாகவோ,(21) நான்கு முக்கிய வகையில் சேர்க்கப்பட்ட துணை வாழ்வுமுறைகளின் கடமைகளைப் பின்பற்றுவதாகவோ, தீயோரையும், பாவிகளையும் தனித்துக் காட்டும் பல்வேறு வகைப் பயிற்சிகளைப் பின்பற்றுவதாகவோ தன்னைக் கருதிக் கொள்கிறது. ஆன்மாவானது ஓய்விடங்களை அனுபவிப்பதாகவும், மலைகளின் இனிமைநிறைந்த நிழல்களையும், ஊற்றுகள் மற்றும் நீரோடைகளின் அருகில் குளுமையையும்,(22) தனிமையான ஆற்றங்கரைகள், தனிமையான காட்டுப்பகுதிகள், சுறுசுறுப்பாக இயங்கும் மனிதர்களுக்கு மத்தியில இருந்து விலகி தேவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட புனிதத்தலங்கள், தடாகங்கள், நீர்நிலைகள்,(23) இல்லங்களும், மாளிகைகளும் உள்ள அளவுக்கான தனிமையான மலைக்குகைகள் ஆகியவற்றில் தங்கி அனுபவிப்பதாகவும் கருதிக் கொள்கிறது. ஆன்மாவானது, பல்வேறு வகை மறைமந்திரங்களை உரைப்பதாகவும், பல்வேறு வகை நோன்புகளை நோற்பதாகவும், விதிகள், பல்வேறு வகைத் தவங்கள், பல்வேறு வகை வேள்விகள் மற்றும் பல்வேறு வகைச் சடங்குகளைச் செய்வதில் ஈடுபடுவதாகவும் கருதிக் கொள்கிறது.(25)

ஆன்மாவானது, சிலவேளைகளில் வணிகர்கள், வியாபாரிகளின் வழிகளைப் பின்பற்றுவதாகவும், பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின் நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும், இல்லாதோர், குருடர் மற்றும் ஆதரவற்றோருக்கு பல்வேறு வகைக் கொடைகளை அளிப்பதாகவும் கருதிக் கொள்கிறது.(26) ஆன்மாவானது, அறியாமையுடன் இருப்பதன் விளைவால் சத்வம், ரஜஸ், தமஸ், அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் பல்வேறு குணகளைப் பின்பற்றுகிறது.(27) ஆன்மாவானது, பிரகிருதியின் ஆதிக்கத்தால் மாறுபாடுகளுக்கு உட்பட்டு, இவையாவற்றையும், நோற்று, பின்பற்றி, பயின்று தன்னை அவ்வாறே கருதிக் கொள்கிறது. உண்மையில் ஆன்மாவானது புனித மந்திரங்களான ஸ்வாஹா, ஸ்வதா, வஷத் ஆகியவற்றைச் சொல்வதில் ஈடுபடுவதாகவும், பெரியோராகத் தான் கருதுவோரை வணங்குவதாகவும்;(28) பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பதாகவும், சீடர்களுக்குப் போதிப்பதாகவும், கொடை அளிப்பதாகவும், அவற்றை ஏற்பதாகவும், வேள்விகளைச் செய்வதாகவும், சாத்திரங்களைக் கற்பதாகவும், இவ்வகையிலான செயல்கள் மற்றும் சடங்குகள் அனைத்தையும் செய்வதாகவும் கருதிக் கொள்கிறது.(29) ஆன்மாவானது, பிறப்பு, இறப்பு, சச்சரவுகள் மற்றும் கொலை ஆகியவற்றில் தொடர்புடையதாகத் தன்னைக் கருதிக் கொள்கிறது. இவை யாவும் நல்லோர் மற்றும் தீயோரின் செயற்பாதைகளாக அமைகின்றன என்று கல்விமான்கள் சொல்கிறார்கள்.(30)

பிரகிருதி தேவியே பிறப்பையும், மரணத்தையும் உண்டாக்குகிறாள். அண்டப் பேரழிவுக்கான காலம் நேரும்போது, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களும் குணங்களும், மாலை வேளையில் தன் கதிர்கள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் சூரியனைப் போலத் தனியாக இருக்கும் பரமாத்மாவிற்குள் ஈர்த்துக் கொள்ளப்படுகின்றன;(31) படைப்புக்கான காலம் நேரும்போது, காலை வேளையில் கதிரைப் பொழியும் சூரியனைப் போல அது {பரமாத்மா} மீண்டும் அவற்றைப் படைத்துப் பரவச் செய்கிறது. இவ்வாறே ஆன்மாவானது, எண்ணிக்கையில் முடிவிலாதவையும், தனக்கு ஏற்புடையவையுமான தன் வடிவங்களும், குணங்களுமான இந்த வரம்புகள் அனைத்தையும் கொண்டதாக விளையாட்டாகத் தன்னைக் கருதிக் கொள்கிறது. இவ்வழியிலேயே ஆன்மாவானது, உண்மையில் முக்குணங்களைக் கடந்ததாக இருந்தாலும், செயற்பாதைகளில் தன்னை இணைத்துக் கொண்டு, மாறுதல்களின் மூலம் சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்களின் தன்மைகளைக் கொண்ட வரம்புகள் மற்றும் செயல்கள் அனைத்துடன் கூடிய பிறப்பு, இறப்பு என்ற குணங்களைக் கொள்கிறது. ஆன்மாவானது செயற்பாதைக்கு வந்ததும், குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட தன்மைகளையும், குறிப்பிட்ட கதிகளை உண்டாக்குபவையாகவும் கருதுகிறது.(32-34) ஓ! ஏகாதிபதி, இந்த மொத்த அண்டமும் பிருகிருதியால் குருடாக்கப்பட்டு, (பிரகிருதியின் மூலம்) அனைத்துப் பொருட்களும் பல்வேறு வகைகளில் ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் மூழ்கடிக்கப்படுகின்றன.(35)

ஆன்மாவானது பிரகிருதியுடன் இருப்பதன் விளைவாலேயே இன்ப துன்பங்களை உண்டாக்கும் இந்த முரண்பட்ட இரட்டைகளே மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. இந்த அறியாமையின் விளைவினாலேயே ஜீவனானது இந்தச் சோகங்கள் அனைத்தையும் தனதாகவும், அவை தன்னைத் தேடி வருவதாகவும் கருதிக் கொள்கிறது.(36) உண்மையில், ஓ! ஏகாதிபதி {கராளனே}, அந்த அறியாமையின் மூலமே ஜீவனானது, எவ்வாறேனும் அந்தக் கவலைகளைக் கடக்க வேண்டும் என்றும், தன் நற்செயல்கள் அனைத்திற்காகவும் காத்திருக்கும் இன்பங்களை அனுபவிக்கத் தேவர்களின் உலகிற்குச் செல்ல வேண்டும் என்று கற்பனை செய்கிறது. அந்த அறியாமையின் மூலமே அஃது {ஜீவன்}, இவ்வுலகின் இன்பதுன்பங்களைச் சகிக்கவும், அனுபவிக்கவும் வேண்டுமென நினைகிகறது.(37,38) ஜீவனானது அந்த அறியாமையின் மூலமே, “நான் மகிழ்ச்சியை அடைய வேண்டும். தொடர்ச்சியாக நற்செயல்கள் செய்வதால் என் வாழ்வின் முடிவு வரை நான் மகிழ்ச்சியைப் பெறுவேன். என் எதிர்காலப் பிறவிகள் அனைத்தும் இன்பமாக அமையும்.(39) மேலும் இப்பிறவியில் நான் செய்யும் (தீய) செயல்களின் மூலம் முடிவிலா கவலையே எனதாகும். மனித வாழ்வில் இருந்து ஒருவன் நரகிற்குள் மூழ்குவதால், மனித நிலையே பெருந்துன்பம் நிறைந்தது.(40) நரகத்திலிருந்து மீண்டும் நான் மனித நிலைக்குத் திரும்பப் பல வருடங்கள் ஆகும். மனித நிலையில் இருந்து மீண்டும் நான் தேவர்களின் நிலையை அடைவேன். அந்த மேன்மையான நிலையில் இருந்து மீண்டும் மனித நிலையை அடைந்து,(41) அங்கிருந்து மீண்டும் நான் நரகில் மூழ்குவேன்” என்று நினைக்கிறது.

அடிப்படை பூதங்கள், புலன்கள் ஆகியவற்றின் இந்தக் கலவையானது, அதனில் உள்ள சித்-ன் சிந்தனையுடன் இவ்வாறு ஆன்மாவின் தன்மைகளுடன் கூடியதாக இருக்கிறது என்று கருதும் ஒருவன்,(42) மீண்டும் மீண்டும் தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் திரிந்து நரகில் மூழ்க வேண்டியிருக்கும். எப்போதும் மமதையுடன் கூடிய ஜீவனானது இத்தகைய பிறவிகளில் சுழல வேண்டியிருக்கிறது.(43) ஜீவன் அடுத்தடுத்து கோடிக்கணக்கான பிறவிகளை அடைவதன் மூலம் அதனுக்குக் கிட்டும் வடிவங்கள் அனைத்தும் மரணத்திற்கு ஆட்படக்கூடியவையே. நல்ல மற்றும் தீய கனிகள் நிறைந்த இவ்வழியில் செயல்படும் ஒருவன்,(44) மூவுலகங்களிலும் அடுத்தடுத்த வடிவங்களை ஏற்று அதனோடு தொடர்புடைய இன்பதுன்பங்களையும் பொறுத்துக் கொள்ளவும் அனுபவிக்கவும் வேண்டும். நல்ல மற்றும் தீ செயல்கள் நிறைந்த செயல்களைப் பிரகிருதியே உண்டாக்குகிறது;(45) மூவுலங்களில் கிட்டும் கனிகளையும் பிரகிருதியே தாங்கிக் கொள்ளவும், அனுபவிக்கவும் செய்கிறது. உண்மையில் பிரகிருதியானது செயல்களின் நடைமுறைகளைப் பின்பற்றுகிறது. இடைநிலை வகைகள், மனித நிலை, தேவர்கள் ஆகிய இந்த மூன்று களங்களும்(46) பிரகிருதியில் இருந்து தோன்றுபவை என்பது அறியப்பட வேண்டும். பிரகிருதியானவள் குணங்கள் அனைத்தும் இல்லாதது என்று சொல்லப்படுகிறாள். (மஹத்-உடன் கூடிய தொடக்கத்தில்) அவளது செயல்களின் விளைவால் மட்டுமே அவளது இருப்பு உறுதி செய்யப்படுகிறது.(47) இதே வகையிலேயே புருஷன் (அல்லது ஆத்மா) குணங்கள் அற்றவனாக இருந்தாலும், சிந்தனையைப் பெறும்போது உடல் செய்யும் செயல்களின் விளைவால் தன் இருப்பை உறுதி செய்கிறது[1].ஆன்மாவானது எவ்வகை மாறுதலுக்கு உட்படாதது என்றாலும், செயற்கோட்பாடே பிரகிருதியை நகரச் செய்கிறது என்றாலும்,(48) அறிவு மற்றும் செயல்புலன்களோடு {ஞானகர்மேந்திரியங்களோடு} கலக்கும் அஃது, அந்தப் புலன்களின் செயல்கள் அனைத்தையும் தனதாகவே கருதுகிறது. காது முதலிய ஐந்து அறிவுப்புலன்களும்,(4) வாக்கு முதலிய செயற்புலன்களும், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற குணங்களுடன் கலந்து எண்ணற்ற பொருட்களில் ஈடுபடுகின்றன. உண்மையில் ஜீவனுக்குப் புலன்கள் இல்லையென்றாலும், தன் வாழ்வின் செயல்களைத் தானே செய்வதாகவும், அறிவு மற்றும் செயற்புலன்கள் அனைத்தும் தனதே என்றும் அவன் {ஜீவன்} கருதுகிறான்.(50) உண்மையில் உடலில்லாமல் இருந்தாலும், அவன் தனக்கு உடலிருப்பதாகக் கருதுகிறான். குணங்களற்றவனாக இருப்பினும் அவற்றைக் கொண்டுள்ளதாகவும், காலத்தைக் கடந்தவனாக இருப்பினும், காலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவனாகவும் தன்னைக் கருதிக் கொள்கிறான்.(51) புத்தியற்றவனாகயிருந்தாலும், அது தனக்கிருப்பதாகவும், (இருபத்து நான்கு) காரியங்களையும் கடந்திருந்தாலும், அவற்றுடன் ஒன்றாகவும் அவன் தன்னைக் கருதிக் கொள்கிறான். மரணமற்றவனாக இருந்தாலும், தன்னை மரணத்திற்கு உட்பட்டவனாகவும், அசைவற்றவனாக இருந்தாலும், தன்னை அசைபவனாகவும் அவன் கருதிக் கொள்கிறான்.(52) உடல் கூடற்றவனாகாக இருந்தாலும், தனக்கு ஒன்று இருப்பதாகவும், பிறப்பற்றவனாக இருந்தாலும், தனக்குப் பிறந்து உண்டு என்றும் அவன் கருதுகிறான். தவங்களைக் கடந்தவனாக இருந்தாலும், தவங்களில் ஈடுபடுபவனாகவும், தனக்கு எந்தக் கதியும் கிடையாது என்றாலும், கதியடையத் தகுந்தவன் என்றும் தன்னை அவன் கருதிக் கொள்கிறான்.(53) அசைவும், பிறப்பும் அற்றவனாக இருந்தாலும், அவை இரண்டும் தனக்கு இருப்பதாகவும், அச்சத்தைக் கடந்தவனாக இருந்தாலும், அச்சம் கொண்டவனாகவும் அவன் தன்னைக் கருதிக் கொள்கிறான். அழிவற்றவனாக இருந்தாலும் அவன் தன்னை அழியத்தக்கவனாகக் கருதுகிறான். அறியாமையுடன் கூடிய ஆன்மாவானது இவ்வாறே தன்னைக் குறித்து நினைத்துக் கொள்கிறது” என்றார் {வசிஷ்டர்}.(54)

ஆத்ம களங்கம்! – சாந்திபர்வம் பகுதி – 305-ஜீவனின் பதினாறு கலைகள்; பதினாறாவது கலையான சித்; ஜீவன் களங்கமடையும் தருணம் ஆகியவற்றைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…

வசிஷ்டர் {ஜனக மன்னன் கராளனிடம்}, “இவ்வாறே அறியாமையின் விளைவாலும், அறியாமையுடன் கூடிய பிறவற்றின் தொடர்பாலும் ஜீவனானவன், அழிவையே கதியாகக் கொண்ட ஆயிரம் கோடி பிறவிகளை அடைகிறான்.(1) ஜீவனானவன், அறியாமையுடன் கூடிய சித்-ஆக மாறுவதன் விளைவால், இடைநிலை வகைகள், மனிதர்கள், தேவர்களுக்கு மத்தியில் ஆயிரம் வசிப்பிடங்களை அடைகிறான்.(2) அறியாமையின் விளைவால் அந்த ஜீவன், ஆயிரமாயிரம் முறை சந்திரமாஸைப் போல வளரவும் தேயவும் செய்கிறான். இதுவே அறியாமையுடன் கூடிய ஜீவனின் உண்மையான இயல்பாகும். உண்மையில் சந்திரமாஸுக்கு பதினாறு பகுதிகள் {கலைகள்} முழுமையாக உண்டு என்பதை அறிவாயாக. அவற்றில் பதினைந்து மட்டுமே வளரவும், தேயவும் செய்கின்றன.(3) (புலப்படாதிருப்பதும், புதுநிலவின் {அமாவாசையின்} இரவில் தோன்றுவதுமான எஞ்சியிருக்கும் பாகமான) அந்தப் பதினாறாவது பாகம் நிலையானதாக இருக்கிறது. சந்திரமாஸைப் போலவே, ஜீவனுக்கும் முழுமையாகப் பதினாறு கலைகள் இருக்கின்றன. அவற்றில் (சித்-ன் பிம்பத்தோடு {சிந்தனையோடு} கூடிய பிரகிருதி, ஞானம் மற்றும் செயற்புலன்கள் பத்து, உட்பொருட்கள் நான்கு ஆகியவை) பதினைந்தும் தோன்றவும், மறையவும் செய்கின்றன. பதினாறாவது (தூய சித்-ஆனது) எந்த மாறுதலுக்கும் உட்படுவதில்லை.(4)

அறியாமையுடன் கூடிய ஜீவன், மேற்குறிப்பிட்ட பதினைந்து பாகங்களுடன் {கலைகளுடன்} மீண்டும் மீண்டும் தொடர்ந்து பிறக்கிறான். நித்தியமானதும், மாற்றமில்லாததுமான ஜீவனின் பாகம் அடிப்படை பூதங்களுடன் கலக்கிறது, இந்தக் கலவை மீண்டும் மீண்டும் நேர்கிறது.(5) பதினாறாவது பாகம் {கலை} நுட்பமானதாகும் {சூக்ஷ்மமானதாகும்}. அது {தூய சித்} (நிலையானவனும், மாற்றமில்லாதவனுமான) சோமனாக அறியப்பட வேண்டும். அஃது ஒருபோதும் புலன்களால் தாங்கப்படுவதில்லை. மறுபுறம் புலன்களே அதனால் தாங்கப்படுகின்றன.(6) அந்தப் பதினாறும் உயிரினங்களின் பிறப்புக்குக் காரணமாக இருப்பதால், ஓ! ஏகாதிபதி {கராளனே}, அவற்றின் துணை இல்லாமல் ஒருபோதும் உயிரினங்களால் பிறவியை அடைய முடியாது. அவையே பிரகிருதி என்றழைக்கப்படுகின்றன. ஜீவன் பிரகிருதியுடன் கலக்க வேண்டிய காரியத்தின் அழிவே விடுதலை {முக்தி} என்றழைக்கப்படுகிறது.(7)

இருபத்தைந்தாவதாக இருக்கும் மஹத்-ஆன்மாவானது, புலப்படாதது என்றழைக்கப்படும். பதினாறு பாகங்களை {கலைகளைக்} கொண்ட உடலைத் தனதெனக் கருதினால், அது மீண்டும் மீண்டும் வடிவத்தை ஏற்க வேண்டும். ஓ! மன்னா, களங்கமற்றதும், தூயதும் எது என்பதை அறியாததன் விளைவால், தூய்மை மற்றும் தூய்மையின்மை ஆகிய இரண்டின் கலவையில் விளையும் அர்ப்பணிப்புக்காக, உண்மையில் தூய்மையான ஆன்மாவானது தூய்மையற்றதாகிறது {களங்கமடைகிறது}.(8,9) அறியாமையில் அர்ப்பணிப்புடன் இருக்கும் ஜீவனானது, ஞானத்தின் தன்மையைக் கொண்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் அறியாமையுடன் தொடர்பு கொள்கிறது.(10) ஓ! ஏகாதிபதி, அனைத்து வகைக் குற்றங்களில் இருந்து விடுபட்டிருந்தாலும், பிரகிருதியின் முக்குணங்களில் கொண்ட அர்ப்பணிப்பின் விளைவால் அஃது அந்தக் குணங்களைக் கொண்டதாகிறது” என்றார் {வசிஷ்டர்}.(11)

உடல் மற்றும் வடிவம்! – சாந்திபர்வம் பகுதி – 306- உயிரினங்கள் உடல் மற்றும் வடிவம் ஆகியவை உண்டாகும் வழிமுறை; ஆத்மா, பரமாத்மா, விடுதலை ஆகியவை குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…

ஜனகன் {கராளன் முனிவர் வசிஷ்டரிடம்}, “ஓ! புனிதமானவரே, ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான உறவானது, அழிவற்றதற்கும் {அக்ஷரத்திற்கும்}, அழிவுள்ளதற்கும் {க்ஷரத்திற்கும்} (அல்லது புருஷனுக்கும் {ஆன்மாவுக்கும்} பிரகிருதிக்கும்) இடையில் உள்ளதை {உள்ள உறவைப்} போன்றது எனச் சொல்லப்படுகிறது.(1) ஓர் ஆணில்லாமல் ஒரு பெண்ணால் ஒருபோதும் கருவுறமுடியாது. ஒரு பெண்ணில்லாமல் ஓர் ஆணாலும் ஒருபோதும் எந்தவொரு வடிவத்தையும் படைக்க முடியாது.(2) ஒருவரோடொருவர் கொள்ளும் கலவியின் விளைவாலும், ஒருவர் அடுத்தவரின் குணங்களைச் சார்ந்திருப்பதாலும் (உயிரினங்களின்) வடிவங்கள் உண்டாவது காணப்படுகிறது. அனைத்து வகைப் பிறவிகளிலும் இதுவே வழக்கமாக இருக்கிறது.(3) (பாலினப்) புணர்வு நோக்கங்களுக்காக ஒருவரோடொருவர் கொள்ளும் கலவியின் மூலமும், ஒருவர் மற்றவரின் குணங்களைச் சார்ந்திருப்பதன் மூலமும், மாதவிடாய் {ருது} காலங்களில் (உயிரினங்களின்) வடிவங்கள் உண்டாகின்றன. அதன் குறியீடுகளை நான் உமக்குச் சொல்கிறேன்.(4) தந்தைக்குரிய குணங்களையும், தாய்க்குரிய குணங்களையும் கேட்பீராக. ஓ! மறுபிறப்பாளரே {வசீஷ்டரே}, எலும்புகள், நரம்புகள், ஊன் ஆகியன தந்தையிடம் இருந்து பெறப்படுகின்றன என்று நாம் அறிகிறோம்.(5) தோல், சதை, குருதி ஆகியன தாயிடம் இருந்து பெறப்படுகின்றன எனக் கேள்விப்படுகிறோம். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, வேதங்களிலும், பிற சாத்திரங்களிலும் இதையே படிக்க முடிகிறது.(6)

வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டதாகப் படிக்கப்படும் எதுவும் அதிகாரமிக்கதாகக் கருதப்படுகிறது. மேலும், வேதங்கள் மற்றும் (வேதங்களுக்கு இணங்கிய) பிற சாத்திரங்களின் அதிகாரம் நித்தியத்தன்மை கொண்டதாகும்.(7) பிரகிருதி மற்றும் புருஷனால், ஒன்றையொன்று எதிர்த்தும், ஒன்றின் குணங்களை மற்றது சார்ந்துமென எப்போதும் கலந்திருக்க முடியுமென்றால்,(8) ஓ! புனிதமானவரே {வசீஷ்டரே}, விடுதலை {முக்தி} என்ற ஒன்று இருக்க முடியாது என்றே நான் காண்கிறேன். ஓ! புனிதமானவரே, அனைத்துப் பொருட்களும் உமது கண்ணெதிரே இருப்பது போன்ற ஆன்ம பார்வையைக் கொண்டவர் நீர். எனவே, விடுதலையின் {முக்தியின்} இருப்புக்கான நேரடி சான்று ஏதேனும் இருந்தால், அது குறித்து எனக்குச் சொல்வீராக.(9) நாம் விடுதலையை அடைய விரும்புகிறோம். உண்மையில், மங்கலமானதும், உடலற்றதும், முதுமையற்றதும், நித்தியமானதும், புலன்களின் திறனுக்கு எட்டாததும், தனக்கு மேன்மையான ஏதும் அற்றதுமான அஃதை அடையவே நாம் விரும்புகிறோம்” என்றான் {கராளன்}.(10)

வசிஷ்டர் {கராளனிடம்}, “(இக்காரியத்தைப் பொறுத்தவரையில்), வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களின் குறியீடுகள் நீ சொல்வது போலத்தான் இருக்கின்றன. அக்குறியீடுகளை நீ எடுத்துக் கொள்ள {புரிந்து கொள்ள} வேண்டிய வகையிலேயே எடுத்திருக்கிறாய் {புரிந்து வைத்திருக்கிறாய்}.(11) எனினும், வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களின் உரைகளை மட்டுமே நீ உன் புத்தியில் கொண்டிருக்கிறாய். ஓ! ஏகாதிபதி, அவ்வுரைகளின் உண்மையான பொருளை நீ உண்மையில் அறிந்து கொள்ளவில்லை.(12) எந்த மனிதன், வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களின் உரைகளுடைய உண்மைப் பொருளை அறிந்து கொள்ளாமல் வெறுமனே உரைகளை மட்டும் தன் புத்தியில் சுமக்கிறானோ, அவன் அவற்றைக் கனியில்லாமலேயே சுமக்கிறான்.(13) உண்மையில், ஒரு படைப்பின் பொருளைப் புரிந்துகொள்ளாமல், அதன் உள்ளடக்கத்தை நினைவில் கொள்பவன், பயனற்ற சுமையைச் சுமப்பதாகவே சொல்லப்படுகிறது. எனினும், ஓர் ஆய்வின் {கிரந்தத்தின்} உண்மைப் பொருளை அறிந்தவன், அவ்வாய்வின் நோக்கத்தைக் கற்றவனாகச் சொல்லப்படுகிறான்.(14) ஓர் உரையின் பொருளைக் குறித்துக் கேட்கப்படும்போது, கவனமாகக் கற்றதன் மூலம் தான் புரிந்து கொண்ட பொருளைச் சொல்வதே ஒருவனுக்குத் தகும்.(15)

எந்த மந்த புத்தியுள்ளவன், கல்விமான்களின் கூட்டத்திற்கு மத்தியில் உரைகளின் பொருளை விளக்க மறுப்பானோ அந்த மூடப் புத்தியுள்ளவனால், சரியான பொருளை ஒருபோதும் விளக்க முடியாது[1].(16) அறியாமை கொண்டவன், ஆய்வுகளின் உண்மைப் பொருளை விளக்கப் புகும்போது கேலிக்குள்ளாகிறான். ஆன்மாவைக் குறித்த அறிவைக் கொண்டவர்களும் கூட, (அவர்கள் விளக்குவது கல்வியால் {கவனத்துடன் படித்துப் புரிந்து கொண்ட கல்வியால்} அடைந்ததாக இல்லையென்றால்) அத்தக்கைய சந்தப்பங்களில் கேலிக்கே உள்ளவார்கள்.(17) ஓ! ஏகாதிபதி {கராளனே}, சாங்கிய மற்றும் யோக தத்துவ அமைப்புகளை அறிந்த உயர் ஆன்மாக்களுக்கு மத்தியில் (பழங்காலத்தில் இருந்து ஆசான்களால் சீடர்களுக்கு) விடுதலை குறித்து எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதை இப்போது கேட்பாயாக.(18) யோகிகள் காண்பதையே சரியாகச் சாங்கியர்களும் அடைய முனைகிறார்கள். எவன் சாங்கிய மற்றும் யோக அமைப்புகளை ஒன்றெனக் காண்கிறானோ அவன் புத்திமானெனச் சொல்லப்படுகிறான்.(19) நீ என்னிடம் சொன்ன தோல், சதை, குருதி, கொழுப்பு, பித்தம், ஊன், நரம்புகள், (ஞானம் மற்றும் செயல் என்ற இரு வகை) புலன்கள் ஆகியன {உண்மையில்} இருக்கின்றன.(20)பொருட்கள் பொருட்களிலிருந்தும், புலன்கள் புலன்களிலிருந்தும் உண்டாகின்றன. வித்தானது வித்திலிருந்து பெறப்படுவதைப் போலவே, ஓர் உடலிலிருந்தே ஒருவன் உடலை அடைகிறான்.(21) பரம்பொருளானவன், புலன்களற்றவனாக, வித்தற்றவனாக {வித்து அற்றவனாக}, பருப்பொருளற்றவனாக, உடலற்றவனாக இருக்கும்போது, அவன் குணங்கள் அனைத்தும் அற்றவனாகவே இருக்க வேண்டும்; அவன் அவ்வாறு இருப்பதன் விளைவால் அவன் எவ்வகைக் குணங்களையும் எவ்வாறு பெற்றிருக்க முடியும்?(22) வெளி {ஆகாயம்} மற்றும் பிற குணங்கள், சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களில் இருந்து தோன்றி, இறுதியாக அவற்றிலேயே மறைகின்றன. இவ்வாறே குணங்கள் பிரகிருதியில் இருந்து எழுந்து பிரகிருதியிலேய மறைகின்றன.(23) பிரகிருதியிலான தோல், சதை, குருதி, கொளுப்பு, பித்தம், ஊன், எலும்புகள் மற்றும் நரம்புகள் ஆகிய இந்த எட்டும் (ஆணின்) உயிர் வித்தின் மூலம் உண்டாக்கப்படுகின்றன.(24) ஜீவாத்மா, அண்டம் ஆகிய இரண்டும் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் மூலம் பிரகிருதியின் தன்மையைப் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. பரமாத்மாவானவான், ஜீவாத்மா மற்றும் அண்டம் ஆகிய இரண்டிலும் இருந்து வேறுபட்டவனாவான்[2].(25)பருவகாலங்கள் வடிவமற்றவையாக இருந்தாலும், குறிப்பிட்ட கனிகள் மற்றும் மலர்களின் தோற்றங்களின் மூலம் {தோன்றும் காலத்தைக் கொண்டு அவை} ஊகிக்கப்படுவதைப் போலவே, பிரகிருதியும் வடிவமற்றதாக இருந்தாலும், மஹத்-ன் குணங்கள் மற்றும் அதனில் இருந்து எழும் எஞ்சிய குணங்களால் ஊகிக்கப்படுகிறது.(26) இவ்வழியிலேயே, உடலில் சைத்யன்யத்தின் இருப்பும், எந்தக் குணமும் இல்லாத, முற்றிலும் களங்கமற்ற பரமாத்மா ஆகியவை அறியப்படுகின்றன.(27) தொடக்கமும், அழிவும் இல்லாததும், முடிவு இல்லாததும், அனைத்துப் பொருட்களையும் மேற்பார்வையிடுவதும், மங்கலமானதுமான ஆன்மாவானது, தன்னை உடலோடும், பிற குணங்களோடும் அடையாளம் காண்பதன் விளைவால் மட்டுமே குணங்களுள்ளதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது {புரிந்து கொள்ளப்படுகிறது}.(28) குணங்களை உண்மையில் அறிந்தவர்கள், குணங்களுடன் கூடிய பொருட்களால் மட்டுமே குணங்களைக் கொண்டிருக்க முடியும் என்பதையும், ஆனால் எது குணங்கள் அனைத்தையும் கடந்திருக்கிறதோ, அதனால் எந்தக் குணத்தையும் கொண்டிருக்க முடியாது என்பதையும் அறிகிறார்கள்.(29) பிழையால் ஏற்கப்பட்டதையும், பிரகிருதியில் பிறந்த குணங்கள் அனைத்தையும், ஜீவாத்மா வெல்லும்போது மட்டுமே அது பரமாத்மாவைப் பார்க்கிறது.(30)

அறிவதாகக் கருதப்படுவதும், அறியாமை அல்லது பிழையின் குணத்தைக் கடந்ததும், புலப்படாததும், குணங்கள் அனைத்தையும் கடந்ததும், பரம் {உயர்ந்தது} என அழைக்கப்படுவதும், குணங்கள் அனைத்தின் தொடர்பறுத்ததும், அனைத்துப் பொருட்களையும் விதிப்பதும், நித்தியமானதும், மாற்றமில்லாததும், பிரகிருதியைப் புறக்கணிப்பதும், இருபத்துநான்கு தத்துவங்களைக் கடந்து இருப்பதைந்தாவதாக இருப்பதும், சாங்கியர்கள், யோகியர்கள் மற்றும் பிற அமைப்புகளை நம்புபவர்கள் அனைவராலும் புத்தியைக் கடந்தது எனச் சொல்லப்படுவதுமான பரமாத்மாவை சாங்கிய மற்றும் யோக அமைப்புகளை அறிந்த உயர்ந்த முனிவர்கள் மட்டுமே அறிகிறார்கள்.(31-33) பிறவியை அஞ்சுபவர்களும், வாழும் நனவின் {அகங்காரத்தின்} பல்வேறு நிலைகள் மற்றும் மரணத்தைக் கொண்டவர்களுமான ஞானிகள், புலப்படாததை அறிவதில் வெல்லும்போது, பரமாத்மாவைப் புரிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(34) ஜீவாத்மாவானது, பரமாத்மாவுடன் கலப்பது சாத்திரங்களுக்கு இணக்கமானதும், முற்றிலும் சரியானதுமென ஒரு புத்திமான் கருதுகிறான்; அதே வேளையில் புத்தியற்றவனோ அவற்றை {ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும்} ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகப் பார்க்கிறான்.(35)

க்ஷரம் மற்றும் அக்ஷரம் (அழியத்தக்கது மற்றும் அழிவற்றது) ஆகிய இரண்டின் குறியீடுகளை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். அக்ஷரம் என்பது ஒருமை அல்லது ஒற்றுமை, அதே வேளையில் பலவகையானது க்ஷரமாகும்.(36) ஒருவன் இந்த இருபத்தைந்து தத்துவங்களை முறையாகப் புரிந்து கற்கத் தொடங்கும்போது, ஆன்மாவின் ஒருமை சாத்திரங்களுக்கு இணக்கமானது என்பதையும், அதன் பன்மை அவற்றுக்கு எதிரானது என்பதையும் புரிந்து கொள்கிறான்.(37) படைக்கப்பட்ட தத்துவங்கள் அல்லது கோட்பாடுகளில் சேர்க்கப்பட்டதும், அப்பட்டியலைக் கடந்து நிற்பதுமான இதன் பல்வேறு குறியீடுகள் இவையே. தத்துவங்களின் பட்டியல் எண்ணிக்கையில் இருபத்தைந்தை மட்டுமே கொண்டது என்று ஞானிகள் சொல்கிறார்கள்.(38) தத்துவங்களைக் கடந்து நிற்பதானது, எண்ணிக்கையைக் கடந்து இருபத்தாறாவதாக அமைகிறது. (எண்ணிக்கையில் இருப்பத்தைந்தாக இருக்கும்) படைக்கப்பட்ட பொருட்களை அவற்றின் (ஐந்து) பூதங்களோடு புரிந்து கொள்வது அல்லது கற்பதே, தத்துவங்களைப் புரிந்து கொள்ளும் கல்வி, அல்லது தத்துவப் புரிதலாகும். இவற்றைக் கடந்து நிற்கும் அதுவே நித்தியமானதாகும்” என்றார் {வசிஷ்டர்}[3].(39)

யோகம், சாங்கியம்! – சாந்திபர்வம் பகுதி – 307-யோக முறை மற்றும் சாங்கிய முறை; ஆன்மா, புருஷன், க்ஷேத்ரம், க்ஷேதரஜ்ஞன் ஆகியவற்றைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…

ஜனகன் {ஜனக மன்னன் கராளன் முனிவர் வசிஷ்டரிடம் }, “ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அக்ஷரம் (அழிவற்றது) என்பதன் குணம் ஒருமை என்றும், க்ஷரம் (அழியத்தக்கது) என்றழைக்கப்படுவதன் குணம் பன்மை என்று நீர் சொன்னீர். எனினும், இவ்விரண்டின் இயல்பைக் குறித்து நான் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை. இன்னும் என் மனத்தில் ஐயங்கள் பதுங்கியிருக்கின்றன.(1) அறியாமையிலுள்ள மனிதர்கள் ஆன்மாவைப் பல நிகழ்வுகள் கொண்டதாகப் பார்க்கின்றனர். எனினும், அறிவும், விவேகமும் கொண்டோர் ஆன்மாவை ஒன்றே ஒன்றாகக் கருதுகின்றனர். எனினும், நான் மிக மந்த புத்தியுள்ளவனாக இருக்கிறேன். எனவே, இவை யாவும் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவனாக இருக்கிறேன்.(2) அக்ஷரம் மற்றும் க்ஷரத்தின் ஒருமை மற்றும் பன்மைக்காக நீர் சொன்ன காரணங்களையும், என் நிலையற்ற புத்தியின் விளைவால் கிட்டத்தட்ட மறந்துவிட்டேன்.(3) எனவே, ஒருமை {அபேதம்} மற்றும் பன்மை {பேதம்}, ஞானி, அஜ்ஞானி, ஜீவாத்மா, ஞானம், அறியாமை, அக்ஷரம், க்ஷரம், சாங்கிய மற்றும் யோக அமைப்புகள் ஆகியவை குறித்து நீர் எனக்கு மீண்டும் சொல்லவும், நான் கேட்கவும் விரும்புகிறேன்” என்றான் {கராளன்}.(4,5)

வசிஷ்டர் {மன்னன் கராளனிடம்}, “நீ கேட்பதை உனக்குச் சொல்கிறேன். எனினும், ஓ! ஏகாதிபதி, யோக நடைமுறைகளைத் தனியாக விளக்குகிறேன் கேட்பாயாக.(6) யோகிகளின் கட்டுப்பாடான தியானமே அவர்களுடைய உயர்ந்த பலமாகும்[1]தியானம் இருவகைப்பட்டது என யோகத்தை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.(7) ஒன்று மனக்குவிப்பு மற்றொன்று (சுவாசத்தை முறைப்படுத்தும்) பிராணாயாமம் என்றழைக்கப்படுகிறது. பிராணாயாமம் பொருள் கொண்டதாகவும், மனக்குவிப்பு அதைக் கொள்ளாததாகவும் சொல்லப்படுகிறது[2].(8) சிறுநீர் கழிப்பு, மலக்கழிப்பு, உணவு உண்ணுதல் ஆகிய மூன்று வேளைகளைத் தவிர ஒருவன் தனது மொத்த காலத்தையும் தியானத்தில் அர்ப்பணிக்க வேண்டும்.(9) மனத்தின் துணையுடன் புலன்களை அவற்றுக்குரிய பொருட்களில் இருந்து விலக்கும் புத்திமான், தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, பிராண மூச்சை வெளிப்படுத்தும் இருபத்திரண்டு {22} முறைகளுக்கு {ஏவல்களுக்கு} ஏற்புடைய வகையில், எது (அறியாமை அல்லது பிரகிருதி என்றழைக்கப்படும்) இருபத்துநான்கு தத்துவங்களைக் கடந்ததோ, எது உடலின் ஒவ்வொரு பகுதியில் இருப்பதாகவும், சிதைவு மற்றும் அழிவுக்கு அப்பாற்பட்டதாகவும் ஞானிகளால் கருதப்படுகிறதோ அதனுடன் {பரமாத்மாவுடன்} ஜீவாத்மாவைக் கலக்க வேண்டும்.(10,11)

அந்த இருபத்திரண்டு {22} முறைகளின் மூலம்தான் ஆன்மா எப்போதும் அறியப்படுகிறது என நாம் கேள்விப்படுகிறோம். தீய ஆசைகளால் ஒருபோதும் பாதிக்கப்படாத மனம் கொண்டவனுடையதே இந்த யோகப்பயிற்சி என்பது உறுதியாகும். அது வேறு யாருடையதுமல்ல.(12) ஓ! மிதிலையின் மன்னா {கராளா}, ஒருவன், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, எளிமையான உணவு உண்டு, புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, புலன்கள் அனைத்தின் செயல்பாடுகளையும் நிறுத்திய பிறகு, ஒரு பாறையைப் போன்ற அசைவற்ற நிலையை ஏற்று, புத்தியால் மனத்தை அமைதிப்படுத்தி, இரவின் முதல் மற்றும் இறுதிப் பகுதியில் தன் மனத்தை ஆன்மாவில் நிலைநிறுத்த வேண்டும்.(13,14) யோக விதிகளை அறிந்த ஞானிகள் ஒரு மரத்துண்டைப் போல நிலையாகவும், ஒரு மலையைப் போல அசைவில்லாமலும் இருக்கும்போதே அவர்கள் யோகத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(15) ஒருவன் கேட்கவும், நுகரவும், சுவைக்கவும், காணவும் செய்யாதபோது; தீண்டலின் எந்த உணர்வும் பெறாதபோது; அனைத்துக் காரியங்களில் இருந்தும் மனம் முற்றிலும் விடுபட்டிருக்கும்போது;(16) அவன் எந்தப் பொருளையும் உணராதபோது, எந்தச் சிந்தனையையும் வளர்க்காதபோது; அவன் மரத்துண்டைப் போல ஆகும்போது, அவன் கச்சிதமான யோகத்தில் இருப்பதாக ஞானியரால் அழைக்கப்படுகிறான்.(17)

அத்தகைய நேரத்தில் அவன், காற்றில்லாத ஓர் இடத்தில் எரியும் விளக்கைப் போல ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்; அத்தகைய நேரத்தில் அவன் தன் நுட்பமான வடிவத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மத்துடன் கச்சிதமாகக் கலக்கிறான். ஒருவன் அத்தகைய முன்னேற்றத்தை அடையும்போது, அவன் உயரவோ {உயர்ந்த நிலையை அடையவோ}, இடைநிலை வகைகளுக்கு மத்தியில் வீழவோ வேண்டிய தேவையேதும் இல்லை.(18) அறிபவன், அறியப்படுவது, அறிவு ஆகியவற்றை முழுமையாக அடையாளங் கண்டதாக நம்மைப் போன்ற மனிதர்கள் சொல்லும்போது, யோகியானவன் பரமாத்மாவைக் காண்பதாகச் சொல்லப்படுகிறது.(19) யோகத்தில் இருக்கும்போது, அந்த யோகியின் இதயத்தில் சுடர்மிக்க நெருப்பைப் போலவோ, பிரகாசமான சூரியனைப் போலவோ, வானத்தில் தோன்றும் தீப்பிழம்பைப் போலவோ பரமாத்மா தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது[3].(20)பிறப்பற்றதும், அமுதச் சாரமும், புத்தி மற்றும் ஞானம் கொண்டவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான உயர் ஆன்ம பிராமணர்களால் காணப்படுவதுமான பரமாத்மாவானது,(21) நுட்பத்திலும் நுட்பமானதாகவும், பெரிதிலும் பெரிதானதாகவும் இருக்கிறது. ஆத்மாவானது, அனைத்து உயிரினங்களிலும் வசித்தாலும், அஃது அவற்றால் காணப்படுவதில்லை.(22) உலகங்களைப் படைத்தவன், மனமெனும் விளக்கின் துணையுடன் புத்தியெனும் செல்வம் கொண்ட மனிதனால் மட்டுமே காணப்படுகிறான். அவன் அடர் இருளின் அடுத்தக் கரையில் வசித்து, அதைக் கடந்திருப்பவன் ஈஸ்வரன் என்றழைக்கப்படுகிறான்.(23) வேதங்களை அறிந்தவர்களும், அனைத்தையும் அறிந்தவர்களுமான மனிதர்கள், அவனை இருளை விலக்குபவன், களங்கமற்றவன், இருளைக் கடந்திருப்பவன், குணங்கள் அற்றவன், அவற்றை {குணங்களைக்} கொண்டவன் என்று அழைக்கிறார்கள்.(24)

இதுவே யோகிகளின் யோகம் என்றழைக்கப்படுகிறது. யோகத்தின் குறியீடாக இருப்பது வேறெது? யோகிகள் இத்தகைய பயிற்சிகளின் மூலம் அழிவையும், சிதைவையும் கடந்த பரமாத்மாவைக் காண்பதில் வெல்கிறார்கள்.(25) யோக அறிவியல் காரியங்களைக் குறித்து இந்த அளவுக்கு விளக்கமாக நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.

இனி, பிழைகளைப் படிப்படியாக அழிப்பதன் மூலம் பரமாத்மாவைக் காணும் சாங்கிய மெய்யியல் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்.(26) பிரகிருதியில் கட்டப்பட்ட அமைப்பைக் கொண்ட சாங்கியர்கள், புலப்படாததான பிரகிருதியே முதன்மையானது எனச் சொல்கிறார்கள். ஓ!ஏகாதிபதி, பிரகிருதியில் இருந்து மஹத் என்றழைக்கப்படும் இரண்டாம் கோட்பாடு உண்டாவதாக அவர்கள் சொல்கிறார்கள்.(27) மஹத்திலிருந்து நனவுநிலை {அகங்காரம்} என்றழைக்கப்படும் மூன்றாம் கோட்பாடு தோன்றுவதாக நாம் கேள்விப்படுகிறோம். ஆன்ம பார்வையால் அருளப்பட்ட சாங்கியர்கள், அந்த நனவுநிலையில் இருந்து ஒலி, வடிவம், ஊறு {தீண்டல்}, சுவை மற்றும் மணம் ஆகியவற்றின் ஐந்து {5} நுட்பமான சாரங்கள் தோன்றுவதாகச் சொல்கிறார்கள்.(28) இந்த எட்டையும் {8} அவர்கள் பிரகிருதி என்ற பெயரில் அழைக்கிறார்கள். இந்த எட்டின் மாறுபாடுகள் {விகாரங்கள்} எண்ணிக்கையில் பதினாறாக {16} இருக்கின்றன. அவை {அந்தப் பதினாறு விகாரங்கள்} வெளி {ஆகாயம்}, ஒளி, பூமி {நிலம்}, நீர் மற்றும் காற்று ஆகிய திரள் பூதங்கள் ஐந்தும், அறிவு மற்றும் செயற்புலன்கள் {ஞானக் கர்மேந்திரியங்கள்} பத்தும் {10}, மனமும் ஆகும்.(29) சாங்கிய பாதையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அதன் விதிகள் மற்றும் வகைமைகளை அறிந்தவர்களுமான ஞானிகள், இந்த இருபத்துநான்கு {24} காரியங்களையும் {தத்துவங்களையும்} மொத்த சாங்கிய விசாரணையின் எல்லையைத் தழுவியவையாகக் கருதுகிறார்கள்.(30)

எது உண்டாக்கப்பட்டதோ, அது படைக்கப்பட்ட காரணத்திலேயே கலக்கிறது. பரமாத்மாவால் ஒன்றன்பின் ஒன்றாகப்படைக்கப்பட்ட இந்தக் கோட்பாடுகள், நேர்மாறான வரிசையில் அழிக்கப்படுகின்றன.(31) ஒவ்வொரு புதிய படைப்பின்போதும் குணங்கள் (மேற்சொன்ன வகையில்) மையம் விலகி வெளிநோக்கி இருப்புக்கு வருகின்றன. கடலில் பிறக்கும் அலைகள் அந்தக் கடலில் மறைவதைப் போலவே (அவை ஒவ்வொன்றும் அழிவடையும்போது அதன் மூலத்திற்குள்) நேர்மாறான வரிசையில் கலக்கின்றன.(32) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பிரகிருதியின் படைப்பும் அழிவும் இவ்வாறே நடைபெறுகிறது. அண்டப் பேரழிவின் போது பரம்பொருள் மட்டுமே எஞ்சுகிறான்; மீண்டும் உயிர்கள் படைக்கப்படும்போது அவனே பல்வேறு வடிவங்களை ஏற்கிறான்.(33) ஓ! மன்னா, ஞானிகளும் இவ்வாறே இஃதை உறுதி செய்கிறார்கள். மேலோங்கும் புருஷனைப் பிரகிருதியே இவ்வாறு பன்மையை ஏற்கவும், மீண்டும் ஒருமைக்குத் திரும்பவும் வைக்கிறாள். பிரகிருதியே கூட இதே குறியீடுகளையே கொண்டிருக்கிறாள்.(34) விசாரணை தத்துவங்களின் இயல்பை முழுமையாக அறிந்தவன், பிரகிருதியும் அதே வகைப் பன்மையையும், ஒருமையையும் ஏற்கிறாள் என்று அறிவான். ஏனெனில், அழிவின் போது அவள் ஒருமைக்குத் திரும்புகிறாள், படைப்பின் போது மீண்டும் அவள் பன்மையை ஏற்கிறாள்.(35)

உற்பத்தி அல்லது வளர்ச்சிக் கோட்பாடுகளைக் கொண்ட பிரகிருதியை ஆன்மாவே பல்வேறு வடிவங்களை ஏற்கச் செய்கிறது. பிரகிருதி க்ஷேத்திரம் (அல்லது மண் {நிலம்}) என்றழைக்கப்படுகிறது. பெரியதான ஆன்மா, இருபத்துநான்கு காரியங்கள் அல்லது கோட்பாடுகளைக் கடந்திருக்கிறது. அஃது அந்தப் பிரகிருதி அல்லது க்ஷேத்திரத்திற்குத் தலைமை தாங்குகிறது.(36) எனவே, ஓ பெரும் மன்னா, யதிகளில் முதன்மையானோர், ஆன்மாவே தலைமை தாங்குபவன் {அதிஷ்டாதா} என்று சொல்கின்றனர். உண்மையில், க்ஷேத்திரங்கள் அனைத்தையும் ஆன்மா தலைமை தாங்குவதன் விளைவாகவே அவன் {ஆத்மா} தலைமை தாங்குபவன் {அதிஷ்டாதா} என்றழைக்கப்படுகிறான்.(37) அவன் {ஆத்மா} புலப்படாத க்ஷேத்திரத்தை அறிந்திருக்கிறான். எனவே, அவன் க்ஷேத்திரஜ்ஞன் {க்ஷேத்திரத்தை அறிந்தவன்} என்றும் அழைக்கப்படுகிறான். புலப்படாத க்ஷேத்திரத்திற்குள் (உடலுக்குள்) ஆன்மா நுழைவதன் காரணமாக அவன் புருஷன் என்றழைக்கப்படுகிறான்.(38) க்ஷேத்திரம் என்பது க்ஷேத்திரஜ்ஞனிலிருந்து வேறுபட்டதாகும். க்ஷேத்திரம் புலப்படாததாகும். இருபத்து நான்கு கோட்பாடுகளைக் கடந்த ஆன்மாவே அறிபவன் {ஞாதா} என்று அழைக்கப்படுகிறான்.(39) அறிவும், அறியப்படும் பொருளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகும். மேலும் அறிவானது, புலப்படாததெனச் சொல்லப்படுகிறது, அதே வேளையில் அறியப்படும் பொருளானது இருபத்து நான்கு கோட்பாடுகளைக் கடந்த ஆன்மாவாகும்.(40)

புலப்படாதது க்ஷத்திரம் என்றும் சத்வம் (புத்தி) என்றும், ஈஸ்வரன் (உயர்ந்த தலைவன்) என்றும் அழைக்கப்படுகிறது; அதே வேளையில் இருபத்தைந்தாவது {25} கோட்பாடான புருஷன் தனக்கு மேம்பட்ட எதையும் கொண்டிராததால் (அனைத்துக் கோட்பாடுகளைம் கடந்து வழக்கத்திற்காக மட்டுமே கோட்பாடாக அழைக்கப்படுவதால்) கோட்பாடாக இருப்பதில்லை.(41) ஓ! மன்னா சாங்கிய தத்துவம் இவ்வளவே. சாங்கியர்கள், அண்டத்தின் காரணத்தைப் பிரகிருதி என்றழைத்து, திரள் கோட்பாடுகள் அனைத்தையும் சித்-க்குள் கலந்து பரமாத்மாவைக் காண்கிறார்கள்.(42) பிரகிருதியோடு சேர்ந்து இருபத்து நான்கு காரியங்களையும் {கோட்பாடுகளையும்} சரியாகக் கற்கும் சாங்கியர்கள், அவற்றின் உண்மையான இயல்பை உறுதி செய்து கொண்டு, அந்த இருபத்துநான்கு கோட்பாடுகளையும் கடந்திருப்பதை {கடந்திருக்கும் அதை [ஆன்மாவைக்]} காண்கிறார்கள்.(43) பிரகிருதியைக் கடந்திருப்பதும், இருபத்துநான்கு காரியங்களுக்கும் அப்பாலிருப்பதுமான ஆன்மாவே உண்மையில் ஜீவனாகும். அவன் {ஜீவன்}, பிரகிருதியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பரமாத்மாவை அறிவதில் வெல்லும்போது, பரமாத்மாவாகவே அடையாளம் காணப்படுகிறான்.(44) சாங்கிய அமைப்பைக் குறித்து உண்மையில் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். இந்தத் தத்துவத்தை அறிந்தவர்கள் அமைதியை அடைவதில் வெல்கிறார்கள்.(45)

அந்நிலையை அடைவதில் வென்றவர்கள், தங்கள் உடல்கள் அழிந்த பிறகு இவ்வுலகத்திற்கு ஒருபோதும் திரும்ப வேண்டியதில்லை; அதே வேளையில் அவர்கள், அழிவற்ற இயல்பை அடைந்ததன் விளைவால், இப்பிறவியில் இருந்து விடுபட்டவர்களாக, பலமடைந்ததாக, சமாதியின் இன்பநிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகிறார்கள்.(48) இந்த அண்டத்தை (ஒன்றாகச் சீராகக் காண்பதற்குப் பதிலாக) பலவாகக் காண்பவர்கள் தவறாகக் காண்பதாகச் சொல்லப்படுகிறது. இம்மனிதர்கள் பிரம்மத்தைக் காணாத குருடர்களாக இருக்கிறார்கள். ஓ பகைவர்களைத் தண்டிப்பவனே, அத்தகைய மனிதர்கள் மீண்டும் மீண்டும் இவ்வுலகத்திற்கு வந்து (பல்வேறு வகை உயிரினங்களின் மத்தியில்) உடல்களை ஏற்கின்றனர்.(48) மேலாகச் சொல்லப்பட்ட அனைத்தையும் அறிந்தவர்கள், இவ்வுடலைக் கடந்து, அதற்கு மேலும் எந்த உடற்கட்டுகளையும் ஏற்கும் கட்டாயதிற்கு உள்ளாகாத போதே அனைத்தையும் அறிந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(49) அனைத்துப் பொருட்களும் (அல்லது மொத்த அண்டமும்) புலப்படாததன் {அவ்யக்தத்தின்} விளைவென்று சொல்லப்படுகிறது. இருபத்தைந்தாவதான ஆன்மா அனைத்துப் பொருட்களையும் கடந்திருக்கிறது. ஆன்மாவை அறிந்தவர்களுக்கு இவ்வுலகத்திற்குத் திரும்ப வேண்டிய அச்சம் கிடையாது” என்றார் {வசிஷ்டர்}.(50)

அறிவு, அறியாமை! – சாந்திபர்வம் பகுதி – 308-வித்தை மற்றும் அவித்தை குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…

வசிஷ்டர் {கராளனிடம்}, “நான் இவ்வளவு நேரம் சாங்கிய தத்துவம் குறித்து உனக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். இனி வித்யை (அறிவு) எது, அவித்யை (அறியாமை) எது என்று ஒன்றன்பின் ஒன்றாக உனக்குச் சொல்லப்போகிறேன், கேட்பாயாக.(1) படைப்பு மற்றும் அழிவு எனும் குணங்கள் நிறைந்த பிரகிருதி அவித்யை (அறியாமை) என்றழைக்கப்படுவதாகவும்; அதே வேளையில் படைப்பு மற்றும் அழிவு ஆகிய குணங்களில் இருந்து விடுபட்டவனும், இருபத்துநான்கு {24} காரியங்கள் அல்லது கோட்பாடுகளைக் கடந்தவனுமான புருஷன் வித்யை (அறிவு) என்றழைக்கப்படுவதாகவும் கல்விமான்கள் சொல்கின்றனர்.(2) சாங்கிய தத்துவத்தில் அடுத்தடுத்து விளக்கப்பட்ட பொருட்களுக்கு மத்தியில் வித்யை எது என்று உனக்கு முதலில் சொல்கிறேன் கேட்பாயாக.(3) அறிவு மற்றும் செயற் புலன்களில் {ஞானகர்மேந்திரியங்களில்}, அறிவுப் புலன்களே {ஞானேந்திரியங்களே} வித்யையாக அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அறிவுப்புலன்கள் மற்றும் அவற்றின் பொருட்களுக்கிடையில் முன்னதே {ஞானேந்திரியங்களே} வித்யையைக் கொண்டிருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம்.(4) புலன் நுகர் பொருட்கள் மற்றும் மனத்திற்கிடையில் மனமே வித்யையாக இருக்கிறதென ஞானிகள் சொல்கின்றனர். மனம் மற்றும் நுண்பூதங்கள் {சூக்ஷ்ம பூதங்கள்} ஐந்துக்கிடையில், ஐந்து நுட்பமான பூதங்களே வித்யையாக அமைகின்றன.(5)

ஐந்து நுண்பூதங்கள் மற்றும் நனவுநிலைக்கிடையில் {அகங்காரத்திற்கு இடையில்}, நனவுநிலையே {அகங்காரமே} வித்யையாக அமைகிறது. நனவுநிலை மற்றும் மஹத்-க்கு இடையில், ஓ! மன்னா {கராளா}, மஹத்தே வித்தையாகும்.(6) மஹத் முதலிய அனைத்துக் காரியங்கள் அல்லது கோட்பாடுகள் மற்றும் பிரகிருதிக்கிடையில், புலப்படாததும், உயர்ந்ததுமான பிரகிருதியே வித்யை என்றழைக்கப்படுகிறது. பிரகிருதி மற்றும் விதி என்றைழக்கப்படும் உயர்ந்ததற்கிடையில், பின்னதே {விதியே} வித்யை என்றறியப்பட வேண்டும்.(7) பிரகிருதியைக் கடந்திருக்கும் (புருஷன் என்றழைக்கப்படும்) இருபத்தைந்தாவதானது வித்யை என்றறியப்பட வேண்டும். ஓ! மன்னா, ஞானங்கள் அனைத்திலும், எது ஞானத்தின் பொருளாக இருக்கிறதோ, அது புலப்படாதது {அவ்யக்தம்} என்று சொல்லப்படுகிறது[1].(8) மேலும், ஞானம் புலப்படாதது என்றும், ஞானத்தின் பொருள், இருபத்துநான்கை {24 கோட்பாடுகளைக்} கடந்தது என்றும் சொல்லப்படுகிறது. மீண்டும் ஞானம் புலப்படாததென்றும், அறிபவன் {ஞேயன்} இருபத்துநான்கையும் கடக்கிறான் என்றும் சொல்லப்படுகிறது. நான் இப்போது வித்யை மற்றும் அவித்யை குறித்த செய்தியை உனக்குச் சொன்னேன்.(9) அழிவற்றவை மற்றும் அழியத்தக்கவை ஆகியவற்றைக் குறித்த அனைத்தையும் நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். ஜீவன் மற்றும் பிரகிருதி ஆகிய இரண்டும் அழிவற்றவை என்றும், அவை இரண்டும் அழியத்தக்கவை என்றும் சொல்லப்பட்டுள்ளன.(10)இதன் காரணத்தை நான் புரிந்து கொண்டவாறு சரியாக உனக்குச் சொல்கிறேன். ஜீவன் மற்றும் பிரகிருதி ஆகிய இரண்டும் தொடக்கமும் முடிவும், அல்லது அழிவும் அற்றவையாகும். (படைப்பின் காரியத்தில்) அவை இரண்டும் உயர்ந்தவையாகக் கருதப்படுகின்றன.(11) அவை இரண்டும் காரியங்கள் அல்லது கோட்பாடுகள் என்றழைக்கப்படவேண்டும் என்று ஞானம் கொண்டவர்கள் சொல்கிறார்கள். படைப்பு மற்றும் அழிவு (எனத் தொடரும்) குணங்களின் விளைவால் புலப்படாதது (அல்லது பிரகிருதி) அழிவற்றது என்று அழைக்கப்படுகிறது.(12) கோட்பாடுகளை உண்டாக்கும் நோக்கத்திற்காகப் புலப்படாதது மீண்டும் மீண்டும் மாறுதலுக்கு உட்படுகிறது.(13) மஹத் முதலிய கோட்பாடுகள் புருஷனாலும் உண்டாக்கப்படுவதாலும், புருஷனும், புலப்படாததும் {பிரகிருதியும்} ஒன்றையொன்று சார்ந்திருப்பதன் விளைவாலும், இருபத்தைந்தாவது {தத்துவமான} புருஷன் க்ஷேத்திரம் (அக்ஷரம் அல்லது அழிவற்றவன்) என்றும் அழைக்கப்படுகிறான்[2].(14) யோகியானவன் விடுபட்டு, புலப்படாத ஆன்மாவில் (அல்லது பிரம்மத்தில்) கோட்பாடுகள் அனைத்தையும் கலக்கும்போது, இருபத்தைந்தாவதும் (ஜீவன் அல்லது புருஷனும்) அந்தக் கோட்பாடுகள் அனைத்துடன் அதற்குள் மறைகிறான்.(15)கோட்பாடுகள் அதனதன் மூலங்களுக்குள் கலக்கும்போது, பிரகிருதி மட்டுமே எஞ்சுகிறது. ஓ மகனே, க்ஷேத்ரஜ்ஞனும் (ஜீவன் அல்லது ஆத்மாவும்) தன்னை உண்டாக்கிய காரணத்திற்குள் கலக்கும்போது,(16) (பிரம்மம் மட்டுமே எஞ்சியிருப்பதால்) பிரகிருதியானவள் கோட்பாடுகள் அனைத்துடன் சேர்ந்து க்ஷரமாகி (அல்லது அழிவடைந்து), கோட்பாடுகள் அனைத்தில் இருந்தும் தொடர்பறுந்ததன் விளைவால் குணங்களற்ற நிலையையும் அடைகிறாள்.(17) இவ்வாறே க்ஷேத்ரஜ்ஞன், க்ஷேத்திரத்தைக் குறித்த ஞானம் மறையும்போது, தன் இயல்பால் குணங்களற்றவனாகிறான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(18) அவன் க்ஷரமாகும்போது குணங்களை ஏற்கிறான். எனினும், அவன் தன் சொந்த இயல்பை அடையும்போது, தன்னுடைய குணங்களற்ற உண்மை நிலையைப் புரிந்து கொள்வதில் வெல்கிறான்.(19) பிரகிருதியைக் கைவிட்டு, அவளிடம் இருந்து தான் வேறுபட்டவன் என்று உணரத் தொடங்கும் புத்திமானான க்ஷேத்ரஜ்ஞன் அப்போது தூய்மையடைந்தவனாக, களங்கமற்றவனாகக் கருதப்படுகிறான்.(20) ஜீவன் பிரகிருதியுடன் ஒன்றாகக் கலந்திராத போது, அவன் பிரம்மத்துடன் அடையாளங்காணப்படுகிறான். எனினும், அவன் பிரகிருதியுடன் கலந்திருக்கும்போது, பிரம்மத்தில் இருந்து வேறுபட்டவனாகத் தெரிகிறான்.(21) உண்மையில், ஜீவன் பிரகிருதியிடமும், அவளது கோட்பாடுகளிடமும் எந்தப் பற்றும் காட்டாதபோது, அவன் பரமனைக் காண்பதில் வெல்கிறான், ஒருமுறை அவனை {பரமனைக்} கண்டதும் அந்த இன்பநிலையில் இருந்து வீழ்ந்துவிட அவன் விரும்புவதில்லை.(22)

உண்மையின் அறிவு தோன்றும்போது, ஜீவன் இவ்வகையில் அழுகிறான்: ஐயோ, வலையில் அகப்பட்ட மீனைப் போல, பிரகிருதியால் அமைந்த இந்த உடலில் அறியாமையால் வீழ்ந்ததன் மூலம் மடமையைச் செய்துவிட்டேன்.(23) ஐயோ, அறியாமையின் மூலம் மீனானது தன்னால் நீரில் மட்டுமே வாழ முடியும் என்று நினைத்து நீருக்கு நீர் மாறுவதைப் போலவே நான் உடலைவிட்டு உடல் மாறி வருகிறேன்.(24) உண்மையில், நீரைத் தவிர வேறு எதையும் தன் பூதமாக அறியாத மீனைப் போலவே, நானும் பிள்ளைகள் மற்றும் மனைவிகளைத் தவிர வேறு எதையும் என்னுடையதாக ஒருபோதும் அறியவில்லை.(25) (பரமாத்மாவைக் குறித்த) மறதியுடனும், அறியாமையின் மூலமும் மீண்டும் மீண்டும் உடல்விட்டு உடல் மாறிக் கொண்டிருக்கும் எனக்கு ஐயோ.(26) பரமாத்மா மட்டுமே என் நண்பனாவான். அவனுடன் நட்பு கொள்ளும் இயல்திறம் எனக்குண்டு. என் இயல்பு என்னவாக இருந்தாலும், நான் யாராக இருந்தாலும், நான் அவனைப் போல ஆகத் தகுந்தவனே, அவனைப் போன்ற நிலையை அடையவும் தகுந்தவனே.(27) நான் அவனுடனான ஒப்புமையைக் காண்கிறேன். உண்மையில், நான் அவனைப் போன்றவனே. அவன் களங்கமற்றவன். நானும் அதே இயல்பைக் கொண்டவன் என்பது தெளிவாகத் தெரிகிறது.(28)

அறியாமையாலும், திகைப்பினாலும் {மயக்கத்தினாலும்} நான் அசைவற்ற {உயிரற்ற ஜட} பிரகிருதியோடு தொடர்பையடைந்தேன். உண்மையில் பற்றில்லாதவனாக இருந்தாலும், பிரகிருதியுடனான பற்றுநிலையிலேயே நான் நீண்ட காலத்தைக் கடத்தியிருக்கிறேன்.(29) ஐயோ, இஃதை அறிய இயன்றவனாக இருந்தாலும், இவ்வளவு காலம் நான் அவளாலேயே {பிரகிருதியாலேயே} அடக்கப்பட்டேன். பிரகிருதியானவள் உயர்ந்த, நடுத்தரமான, இழிந்தவையான {வகைகளில்} பல்வேறு வடிவங்களை ஏற்கிறாள். ஓ!, நான் எவ்வாறு இந்த வடிவங்களில் வசித்தேன்?(30) நான் எவ்வாறு அவளோடு சேர்ந்து வாழ்ந்தேன்? என் அறியாமையின் விளைவால் மட்டுமே நான் அவளது {பிரகிருதியின்} துணை கொண்டேன். நான் இப்போது (சாங்கியத்திலோ, யோகத்திலோ} நிலைத்திருப்பேன்.(31) நான் இனியும் அவளது துணையைத் தக்கவைத்துக் கொள்ள மாட்டேன். அவளோடு சேர்ந்து {இவ்வளவையும்} கடந்து வந்த நான், இவ்வளவு காலம் அவளால் வஞ்சிக்கப்பட்டதாகவே நினைக்கிறேன். ஏனெனில், உண்மையில் மாற்றமற்றவனான என்னால், மாறுதலுக்கு உட்படும் துணையை எவ்வாறு வைத்துக் கொள்ள முடியும்?(32) இதற்கு அவளைப் பொறுப்பாக்க முடியாது. பரமாத்மாவிடம் இருந்து திரும்பி, நானே அவளோடு பற்றுக் கொண்டேன் என்பதால் பொறுப்பு என்னுடையதே.(33) அந்தப் பற்றின் விளைவால் உண்மையில் வடிவமற்ற நான் பல்வேறு வடிவங்களை ஏற்க வேண்டியிருந்தது. உண்மையில் இயல்பாக வடிவமற்றவனாக இருப்பினும், மமதையின் விளைவால் பல்வேறு வடிவங்களை ஏற்று அவமதிப்பையும், துயரையும் அடைந்தேன்.(34)

பிரகிருதியுடைய விளைவுகளின் தொடர்பில் ஏற்பட்ட என் மமதையால் நான் பல்வேறு வகை உயிரினங்களாகப் பிறப்படைந்தேன். ஐயோ, உண்மையில் மமதையற்றவனாக இருப்பினும், நான் பிறவி எடுத்த வகைகளில், ஞானமனைத்தும் தொலைந்த ஆன்மாவைக் கொண்டனாகத் தீய இயல்பைக் கொண்ட பல்வேறு செயல்களைச் செய்ததன் விளைவால் {மமதையெனும்} பாதிப்பை அடைந்தேன். நனவுநிலையின் {அகங்காரத்தின்} சாரமாக இருப்பவனிடமும் {சித்தத்திடமும்}, பல்வேறு துண்டுகளாய் தன்னைப் பிரித்துக் கொண்டு, அவற்றோடு என்னைச் சேர்க்க முனைபவளிடமும் {பிரகிருதியிடமும்} இனி எனக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை. இப்போதுதான் நான் இயல்பாகவே மமதையற்றவன் என்றும், அனைத்திலும் என்னை ஈடுபடுத்தும் பிரகிருதியின் வடிவங்களை உண்டாக்கும் நனவுநிலை {அகங்காரம்} அற்றவன் என்றும் புரிந்து கொண்டு விழிப்படைந்திருக்கிறேன்[3].(35-37) எப்போதும் நனவுநிலையின் {அகங்காரத்தின்} சாரத்தால் செய்யப்பட்ட இந்த மமதையைக் கைவிட்டு, இந்தப் பிரகிருதியையே கைவிட்டு மங்கலமானவனை {அழிவற்ற பரமாத்மாவை} நான் புகலிடமாகக் கொள்வேன்.(38) நான் அவனிடமே கலந்திருப்பேன்; அசைவற்ற {ஜட} பிரகிருதியோடு கலந்திருக்க மாட்டேன். நான் அவனோடு கலந்திருந்தால் அஃது எனக்கு நன்மையை உண்டாக்கும். இயல்பிலேயே நான் பிரகிருதியில் இருந்து வேறுபட்டவன்” {என்று ஜீவன் அழுகிறான்}.(39) இருபத்தைந்தாவதாக இருப்பவன் (ஜீவன்), இவ்வாறு பரத்தைப் புரிந்து கொள்வதில் வெல்லும்போது, அழியத்தக்கவற்றைக் கைவிட்டு, மங்கலமான அனைத்தின் சாரமாக இருக்கும் அழிவற்றதோடு {பரமாத்மாவோடு} சேர்த்துத் தன்னை அடையாளம் காண்கிறான் {அந்த ஜீவாத்மாவானவன் பரமாத்மாவோடு ஒன்றுகலக்கிறான்}.(40) உண்மை இயல்பில் குணங்களற்றவனும், உண்மையில் புலப்படாதவனுமான ஜீவன், புலப்படுபவையுடன் கூடி குணங்களை ஏற்கிறான். ஓ! மிதிலையின் ஆட்சியாளா {கராளா}, குணங்களற்றதும், புலப்படாததன் தோற்றுவாயுமான அதை {பரம்பொருளைக்} காண்பதில் அவன் வெல்லும்போது, அதனிலேயே அவன் தன்னை அடையாளம் காண்கிறான் {அதனுடன் நீக்கமறக் கலக்கிறான்}.(41)நான், என் அறிவுக்குத் தக்க வகையிலும், சாத்திரங்களில் விளக்கப்பட்டுள்ளபடியும் அழிவற்றது, அழியத்தக்கது ஆகியவற்றின் குறியீடுகளை இப்போது உனக்குச் சொன்னேன்.(42) நுட்பமானதும், களங்கமற்றதும், நிச்சயமானதுமான ஞானம் எவ்வாறு எழுகிறது என்பதை நான் கேள்விப்பட்டவாறே இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(43) சாங்கிய மற்றும் யோக அமைப்புகளுக்குரிய சாத்திரங்களின் படி அவற்றின் குறியீடுகளை நான் ஏற்கனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன். உண்மையில், சாங்கிய ஆய்வுகளில் விளக்கப்பட்டிருக்கும் அறிவியலும், யோக சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருப்பதும் ஒன்றாகவே இருக்கின்றன.(44) ஓ! ஏகாதிபதி {கராளா}, சாங்கியர்கள் சொல்லும் ஞானமானது அனைவரையும் விழிப்படையச் செய்யும் வல்லமை கொண்டதாகும். சாங்கிய சாத்திரங்களின் ஞானமானது, சீடர்களின் நன்மைக்காகவே மிகத்தெளிவாக மனத்தில் ஆழப்பதிய வைக்கப்படுகிறது.(45) இந்தச் சாங்கிய அமைப்பு மிகப் பரந்து விரிந்தது என்று கல்விமான்கள் சொல்கிறார்கள். யோகிகள், அந்த அமைப்பிலும், வேதங்களிலும் பெரும் மதிப்பை வைத்திருக்கிறார்கள்.(46) சாங்கிய அமைப்பில், இருபத்து நான்கைக் கடந்த எந்தக் காரியத்தையோ கோட்பாட்டையோ ஏற்பதில்லை. உயர்ந்த காரியம் அல்லது உயர்ந்த கோட்பாடு எனச் சாங்கியர்கள் கருதுவது முறையாக (என்னால்) விளக்கப்பட்டிருக்கிறது.(47) யோக தத்துவத்தில், இருமையற்ற {இரண்டற்ற} அறிவின் சாரமான பிரம்மமானது, அறியாமை கொள்வதாலேயே ஜீவனாகிறது என்று சொல்லப்படுகிறது. எனவே, யோக சாத்திரங்களில் பிரம்மம், ஜீவன் ஆகிய இரண்டும் பேசப்படுகின்றன {சாங்கியத்தில் பிரம்மம் பேசப்படுவதில்லை}” என்றார் {வசிஷ்டர்}.(48)

தக்கார் தகவிலார்! – சாந்திபர்வம் பகுதி – 309-பிரம்மம், சாங்கியம், யோகம் குறித்த அறிவுரையைப் பெறத்தக்கவர், தகாதவர் ஆகியோரைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்…

வசிஷ்டர் {மன்னன் கராளனிடம்}, “புத்தம் (பரமாத்மா) மற்றும் (சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) குணங்களின் வகைமுறையான அபுத்தம் (ஜீவன்) ஆகியவற்றைக் குறித்து நான் இப்போது சொல்லப்போவதைக் கேட்பாயாக. (மாயையின் ஆதிக்கத்தில்) பல வடிவங்களை ஏற்கும் பரமாத்மா, ஜீவனாகி அந்த வடிவங்கள் அனைத்தையும் உண்மையாகக் கருதுகிறான்[1].(1) அத்தகைய மாறுபாடுகளின் (அவற்றைத் தானாகவே கருதும்) விளைவால், (சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) குணங்களைக் கொள்ளும் ஜீவனானவன், படைப்பவனும், தான் படைத்தவற்றைத் தனக்குள்ளேயே ஈர்த்துக் கொள்பவனுமான பரமாத்மாவைப் புரிந்து கொள்ளத் தவறுகிறான்.(2) ஓ! ஏகாதிபதி {கராளா}, இடைவிடாமல் விளையாட்டாக மாறுதலடையும் ஜீவன், புலப்படாததன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளவல்லவனாக இருக்கும் காரணத்தால், புத்யமானன் (புரிந்து கொள்பவன்) என்றழைக்கப்படுகிறான்[2].(3) குணங்களுடன் வெளிப்படும் பிரம்மமானது உண்மையில் குணங்களற்றது என்பதைப் புலப்படாததால் அல்லது பிரகிருதியால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. எனவே பிரகிருதியானது புத்தியற்றதாகச் சொல்லப்படுகிறது[3].(4) எப்போதாவது பிரகிருதியால் இருபத்தைந்தாவதை (ஜீவனை) அறியமுடியுமென்றால், அப்போது அந்தப் பிரகிருதியானது (ஜீவனிலிருந்து வேறுபட்ட ஒன்றாக அறியப்படாமல்) அதனோடு கலந்திருக்கும் ஜீவனாகவே அடையாளம் காணப்படும் என்று ஸ்ருதிகளில் ஒரு தீர்மானம் இருக்கிறது. (எனினும், கலப்படமில்லாததும், தொடர்பற்றதும், இருபத்தைந்தாவதைக் கடந்திருப்பதுமான பரமாத்மாவைப் பிரகிருதியால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது). இதன் விளைவால் புலப்படாதவனும், உண்மையான இயல்பின்படி மாற்றமில்லாதவனுமான ஜீவன், அல்லது புருஷனானவன், விழிப்பற்றவன் அல்லது அறியாமை கொண்டவன் என்று அழைக்கப்படுகிறான்.(5)உண்மையில், இருபத்தைந்தாவதால் {ஜீவனால்} புலப்படாததை {அவ்யக்தத்தைப்} புரிந்து கொள்ள முடியும் என்பதால் அவன் புத்யமானன் என்றழைக்கப்படுகிறான். எனினும், களங்கமானதும், இருமையற்ற அறிவானதும், அளக்க முடியாததும், நித்தியமானதுமான இருபத்தாறாவதை {பிரம்மத்தை} அவனால் உடனே புரிந்து கொள்ள முடியாது. இருபத்தாறாவதால் {பிரம்மத்தால்} இருபத்தைந்து மற்றும் இருபத்து நான்காவதாக இருக்கும் ஜீவன் மற்றும் பிரகிருதி ஆகிய இரண்டையும் அறிந்து கொள்ள முடியும்.(6,7) ஓ! பேரொளி கொண்டவனே, புலப்படாததும், காணப்படுவது, காணப்படாதது ஆகிய அனைத்தின் உண்மை இயல்பையும் உட்பொதிந்திருப்பதும், அண்டத்தில் எச்சார்பும் அற்ற ஒன்றேயொன்றுமான பிரம்மத்தை அறிந்து கொள்வதில் ஞானம் கொண்ட மனிதர்கள் மட்டுமே வெல்கிறார்கள்.(8) ஜீவன் தன் உண்மை இயல்பில் இருந்து வேறுபட்டவனாகத் தன்னைத் தானே கருதிக் கொள்ளும்போது (அதாவது, தன்னைப் பருத்தவன், மெலிந்தவன், வெளுத்தவன், கருத்தவன், பிராமணன் அல்லது சூத்திரன் என்று கருதிக் கொள்ளும்போது), அவன் பரமாத்மாவையும், தன்னையும், தான் கலந்திருக்கும் பிரகிருதியையும் (அவள் தன்னில் இருந்து வேறுபட்டவள் என்பதையும்) அறிந்து கொள்ளத் தவறுகிறான்.(9) ஜீவன் பிரகிருதியைப் புரிந்து கொள்வதில் வெல்லும்போது, அவன் தன் இயல்புக்கு மீண்டவனாகச் சொல்லப்படுகிறான். மேலும் அவன் (பிரம்மம் தொடர்பான) களங்கமற்றதும், தூய்மையானதும், உயர்ந்ததுமான புத்தியை அடைகிறான்.(10)

ஓ! மன்னர்களில் புலியே {கராளனே}, அந்தச் சிறந்த புத்தியை ஜீவன் அடையும்போது, இருபத்தாறாவதாக (அல்லது பிரம்மமாக) அழைக்கப்படும் (இருமையற்ற) தூய அறிவை அடைகிறான். பிறகு அவன் படைப்பு மற்றும் அழிவுக்குரிய குணங்கள் நிறைந்த புலப்படாதது அல்லது பிரகிருதியைக் கைவிடுகிறான்.(11) புத்தியற்றதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் ஆதிக்கத்தில் செயல்படுவதுமான பிரகிருதியை அறிந்து கொள்வதில் ஜீவன் வெல்லும்போது, அவன் குணங்களற்றவனாகிறான். இவ்வாறு புலப்படாததை {பிரகிருதியை} (தன்னில் இருந்து வேறுபட்டதாக) புரிந்து கொள்வதன் விளைவால் அவன் பரமாத்மாவின் இயல்பை அடைவதில் வெல்கிறான்.(12) (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) குணங்களில் இருந்து அவன் விடுபட்டு, பரமாத்ம இயல்பில் கலக்கும்போது, ஜீவன் அந்தப் பரமாத்மாவுடன் அடையாளம் காணப்படுகிறான் {பரமாத்மாவாகவே காணப்படுகிறான்}. பரமாத்மா, சிதைவு மற்றும் அழிவைக் கடந்த தத்துவமற்ற தத்துவம் என்றழைக்கப்படுகிறான்.(13) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, ஆன்மாவானது, (உடலின்) புலப்படும் கோட்பாடுகளைத் தன் ஓய்விடமாகக் கொண்டிருந்தாலும், அந்தக் கோட்பாடுகளின் இயல்பை அடைந்ததாகச் சொல்ல முடியாது. (ஜீவாத்மாவையும் சேர்த்து) மொத்தம் இருபத்தைந்து கோட்பாடுகள் (தத்துவங்கள்) உள்ளதாக ஞானிகள் சொல்கிறார்கள்.(14) உண்மையில், ஓ! மகனே, ஆன்மாவானது (மஹத் உள்ளிட்ட) கோட்பாடுகள் எதையும் கொண்டிருப்பதாகக் கருதப்படுவதில்லை. புத்தியுடன் கூடிய அது {ஆன்மா}, கோட்பாடுகளைக் கடந்து நிற்கிறது. அறியும் (அல்லது விழிப்படையும்) ஒருவனுடைய குறியீடாக இருக்கும் கோட்பாட்டையும் அது விரைவில் கைவிடுகிறது[4].(15)

ஜீவன், சிதைவும் அழிவும் அற்ற இருபத்தாறாவதாகத் தன்னைக் கருதும்போது, அவன் தன் சக்தியால் இருபத்தாறாவதோடான ஒப்புமையை அடைகிறான்.(16) தூய புத்தியான இருபத்தாறவதால் விழிப்படையச் செய்யப்பட்டாலும், ஜீவன் அறியாமையை அடைகிறான். ஸ்ருதிகள் மற்றும் சாங்கிய சாத்திரங்களில் விளக்கப்பட்டுள்ளபடி இந்தக் காரணத்தினாலேயே ஜீவன் பல்வேறு வடிவங்களை ஏற்கிறான்.(17) சேதனம் (மற்றும் புத்தியற்ற பிரகிருதி ஆகியவற்றுடன்) கூடிய ஜீவன், தன் நனவு அனைத்தையும் இழக்கும்போது, அவன் பல்வேறு வடிவங்களை இழந்து மீண்டும் ஒருமையை அடைகிறான்.(18) ஓ! மிதிலையின் ஆட்சியாளா {கராளா}, இன்ப துன்பங்களுடன் கலந்தவனாகக் காணப்படுபவனும், தன் நனவில் இருந்து அரிதாகவே விடுபடுபவனுமான ஜீவன், புத்தியைக் கடந்திருக்கும் பரமாத்மாவுடன் ஒப்புமையை அடைவதில் வெல்லும்போது, அவன் அறம் மற்றும் மறத்தில் {தர்ம அதர்மங்களில்} இருந்து விடுபடுகிறான்.(19) உண்மையில் ஜீவன், பிறப்பற்றதும், பலமிக்கதும், பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டதுமான இருபத்தாறாவதை {பிரம்மத்தை} அடைந்து, அதை முழுமையாகப் புரிந்து கொள்வதில் வெல்லும்போது, தானே பலமிக்கவனாகி, புலப்படாதது, அல்லது பிரகிருதியை முற்றாகக் கைவிடுகிறான்.(20)

ஜீவனானவன், இருபத்தாறாவதைப் புரிந்து கொண்டதன் விளைவால், இருபத்து நான்கு கோட்பாடுகளும் அவனுக்கு உண்மையற்றவையாகவோ, மதிப்பற்றவையாகவோ ஆகிறது. ஓ! பாவமற்றவனே, புத்தியற்றது (அல்லது பிரகிருதி), ஜீவன், தூய அறிவு (பரமாத்மா) ஆகியவற்றை ஸ்ருதிகளில் குறிப்பிட்டுள்ளபடியும், உண்மைக்கு ஏற்புடைய வகையிலும் நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். பன்மையும், ஒருமையும் சாத்திரங்களின் வழிகாட்டலின்படி இவ்வாறே புரிந்துகொள்ளப்படுகின்றன.(21,22) கொசுவுக்கும், உடும்பரத்திற்கும் {அத்திக்கும்} இடையில் உள்ள, அல்லது மீனுக்கும் நீருக்கும் இடையிலான வேறுபாடுகள், ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையிலான வேறுபாட்டை எடுத்துக் காட்டுகின்றன[5].(23) இவ்விரண்டின் {ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஆகியவற்றின்} பன்மை மற்றும் ஒருமை இவ்வழியிலேயே புரிந்து கொள்ளப்படுகிறது. புத்தியற்ற, அல்லது புலப்படாத பிரகிருதியில் இருந்து வேறுபட்ட ஒன்றைக் குறித்த இந்தப் புரிதலே, அல்லது தன்னறிவே விடுதலை {முக்தி} என்றழைக்கப்படுகிறது.(24) உயிரினங்களின் உடல்களில் வசிக்கும் இருபத்தைந்தாவதானது {ஜீவாத்மாவானது}, புத்தியைக் கடந்திருக்கும் புலப்படாததை அல்லது பரமாத்மாவை அறிந்து விடுதலை {முக்தியை} அடைய வேண்டும்.(25)உண்மையில், இருபத்தைந்தாவதானது {ஜீவாத்மாவானது} இவ்வழியில் மட்டுமே விடுதலையை அடையவல்லதாக உள்ளதேயன்றி, வேறு எவ்வழிமுறைகளினாலும் அல்ல என்பது உறுதியானதாகும். தற்சமயம் தான் வசிக்கும் க்ஷேத்திரத்தில் இருந்து உண்மையில் வேறுபட்டவனாக இருப்பினும், அதனுடன் கலந்திருப்பதன் விளைவால் அவன் {ஜீவன் / க்ஷேத்திரஜ்ஞன் அந்த} க்ஷேத்திரத்தின் இயல்பையே அடைகிறான்.(26) தூய்மையானதுடன் சேர்ந்து அவன் தூய்மையடைகிறான். புத்தியுடன் சேர்ந்து அவன் புத்திமானாகிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, விடுதலையடைந்தவனுடன் {முக்தனுடன்} சேர்வதன் மூலம், அவன் விடுதலையடைகிறான்.(27) அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனுடன் சேர்வதன் மூலம் அவன் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். விடுதலையை அடைய முனைபவனுடன் சேர்வதன் மூலம், அவனது தோழமையின் இயல்பால் ஈர்க்கப்பட்டு, தானும் விடுதலை அடைய முனைகிறான்.(28) தூய செயல்களைச் செய்பவனுடன் சேர்வதன் மூலம் அவன் தூய்மையான செயல்களைச் செய்பவனாகவும், சுடர்மிக்க ஒளியைக் கொண்டவனாகவும் தூயனாகிறான். களங்கமற்ற ஆன்மா கொண்டவனுடன் சேர்வதன் மூலம் அவனும் களங்கமற்ற ஆன்மா கொண்டவனாகிறான்.(29) சார்பற்ற ஒரே ஆன்மாவுடன் சேர்வதன் மூலம் அவன் ஒருவனாகவும், சார்பற்றவனாகவும் {சுதந்திரனாகவும்} ஆகிறான். தன்னான்மாவின் சார்பு கொண்ட ஒருவன், அதே இயல்பினனாகி சார்பற்ற {சுதந்திர} நிலையை அடைகிறான்.(30)

ஓ! ஏகாதிபதி {கராளா}, முற்றான உண்மையாக இருக்கும் அனைத்தையும் உனக்கு முறையாகச் சொல்லியிருக்கிறேன். நித்தியமான, களங்கமற்ற, தொடக்ககாலப் பிரம்மத்தைக் குறித்து நான் ஒருசார்பின்றி நேர்மையாக உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(31) ஓ! மன்னா, வேதங்களை அறியாதவனாக இருந்தாலும், பணிவானவனும், பிரம்ம அறிவை அடைவதில் விருப்பமும், ஆவலும் கொண்ட ஒரு மனிதனுக்கே ஆன்ம விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த உயர்ந்த அறிவைப் புகட்டலாம்.(32) பொய்மையையே புத்தியாகக் கொண்டவனுக்கோ, வஞ்சகனுக்கோ, ஒழுக்கமற்றவனுக்கோ, மனோபலம் அற்றவனுக்கோ, கோணல் புத்தி கொண்டவனுக்கோ, ஞானிகளிடம் பொறாமை கொண்டவனுக்கோ, பிறருக்குத் துன்பம் அளிப்பவனுக்கோ இஃது ஒருபோதும் புகட்டப்படக்கூடாது. இந்த ஞானத்தைப் பாதுகாப்பாக யாருக்கெல்லாம் புகட்டலாம் என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(33) நம்பிக்கையுடன் கூடியவனுக்கோ, தகுதி {புண்ணியம்} உடையவனுக்கோ, பிறரைக் குறித்துத் தீயன பேசுவதை எப்போதும் தவிர்ப்பவனுக்கோ, தூய நோக்கங்களில் தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவனுக்கோ, அறிவும், விவேகமும் கொண்டவனுக்கோ, வேள்விகள் மற்றும் வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் சடங்குகளைச் செய்பவனுக்கோ, மன்னிக்கும் மனோநிலை கொண்டவனுக்கோ, அனைத்து உயிரினுக்கும் நன்மை செய்பவனுக்கோ, கருணை கொண்டவனுக்கோ,(34) தனியொருவனாகத் தனிமையில் வசிக்க விரும்புபவனுக்கோ, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களை அனைத்தையும் செய்ய விரும்புபவனுக்கோ, சண்டை சச்சரவுகளை வெறுப்பவனுக்கோ, பெரும் கல்விமானுக்கோ, ஞானம் கொண்டவனுக்கோ, மன்னிக்கும் தன்மை, தற்கட்டுப்பாடு, ஆன்ம அமைதி ஆகியவற்றைக் கொண்டவனுக்கோ இது கொடுக்கப்படலாம்.(35)

இத்தகைய குணங்கள் இல்லாதவனுக்குப் பிரம்மத்தைக் குறித்த இந்த உயர்ந்த அறிவு உபதேசிக்கப்படக்கூடாது. இதைத் தாங்கிக் கொள்வதற்குத் தகுந்த கொள்ளிடம் கொண்டவரெனக் கருதப்பட முடியாத எவருக்கும் இந்த அறிவைப் புகட்டுவன் மூலம் எந்தப் பயனோ, நற்கனியோ எழுவதில்லை எனச் சொல்லப்படுகிறது.(36) எந்த நோன்புகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றாத ஒருவன், அனைத்து வகைச் செல்வங்கள் மற்றும் ரத்தினங்கள் நிறைந்த மொத்த பூமியையும் {இந்த உயர்ந்த ஞானத்தை அடைவதற்காக} பரிமாறிக் கொள்ள முன்வந்தாலும், அவனுக்கு இந்த உயர்ந்த அறிவானது ஒருபோதும் புகட்டப்படக்கூடாது. எனினும், ஓ! மன்னா, புலன்களை வென்ற ஒருவனுக்கு இது நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும்.(37) ஓ கராளா, நீ இன்று என்னிடமிருந்து உயர்ந்த பிரம்மத்தைக் குறித்த அனைத்தையும் கேட்டிருப்பதால் இனியும் நீ எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. தொடக்கமும், நடுநிலையும் (முடிவும்) இல்லாததும், அனைத்து வகைத் துன்பங்களையும் போக்கவல்லதும், உயர்ந்ததும், புனிதமானதுமான பிரம்மத்தைக் குறித்து நான் உனக்கு முறையாகச் சொல்லிவிட்டேன்.(38) ஓ!மன்னா, மங்கலம் நிறைந்ததும், அனைத்து அச்சங்களையும் போக்கவல்லதும், உயர்ந்த நன்மையை உண்டாக்கவல்லதும், பிறப்பு இறப்பை அகற்றவல்லதுமான பிரம்மத்தைக் கண்டும், அறிவனைத்தின் சாரத்தை அடைந்தும் பிழை மற்றும் திகைப்பனைத்தையும் {மோஹத்தை} இன்றே கைவிடுவாயாக.(39) ஓ! மன்னா, மிக மேன்மையான ஆன்மா கொண்ட பெரும்பூதமும், நித்தியமானவனுமான ஹிரண்யகர்ப்பனைக் கவனமாக நிறைவு செய்ததால், அவனிடம் இருந்தே இந்த அறிவை நான் அடைந்தேன். ஓ! ஏகாதிபதி, இன்று உன்னால் கேட்கப்பட்டதும், என் ஆசானிடம் இருந்து நான் பெற்றதைப் போலவே அந்தப் பிரம்ம அறிவை உனக்குப் புகட்டியிருக்கிறேன். உண்மையில், விடுதலையை அறிந்த மனிதர்கள் அனைவரின் புகலிடமாக உள்ள இந்த உயர்ந்த அறிவை, நான் பிரம்மனிடம் இருந்து பெற்றதைப் போன்றே சரியாக உனக்குப் புகட்டியிருக்கிறேன்” என்றார் {வசிஷ்டர்}”.(40,41)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “எதை அடைவதன் மூலம் இருபத்தைந்தாவது (அல்லது ஜீவன்) ஒருபோதும் திரும்ப வேண்டியதில்லையோ அந்த உயர்ந்த பிரம்மத்தைக் குறித்து (ஜனக குலத்தைச் சேர்ந்த மன்னன் கராளனிடம்) பெருமுனிவர் (வசிஷ்டர்) சொன்னதற்கு ஏற்புடைய வகையிலேயே நானும் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(42) சிதைவிற்கும், மரணத்திற்கும் உட்படாத பரமாத்மாவை உண்மையில் அறியாததன் விளைவால், ஜீவன் மீண்டும் மீண்டும் இந்த உலகத்திற்குத் திரும்பும் கடப்பாடு உண்டாகிறது. எனினும், அந்த உயர்ந்த அறிவை அடைவதில் ஜீவன் வெல்லும்போது, அவன் மீண்டும் திரும்ப வேண்டியதில்லை.(43) ஓ! மன்னா, ஓ! மகனே, அந்தத் தெய்வீக முனிவரிடம் {நாரதரிடம் இருந்து} நான் கேட்டதும், உயர்ந்த நன்மையை உண்டாக்க வல்லதுமான உயர்ந்த அறிவை நான் உனக்குப் புகட்டியிருக்கிறேன்.(44) இந்த அறிவானது உயர் ஆன்மா கொண்ட முனிவர் வசிஷ்டரால் ஹிரண்யகர்ப்பனிடம் இருந்து பெறப்பட்டதாகும்.முனிவர்களில் முதன்மையான வசிஷ்டரிடம் இருந்து அது நாரதரால் பெறப்பட்டது.(45) நித்தியமான பிரம்மத்துடன் உண்மையில் அடையாளங்காணப்படும் அந்த அறிவை நாரதரிடம் இருந்தே நான் அடைந்தேன். ஓ! குருக்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும், சிறந்த வார்த்தைகள் நிறைந்ததுமான இந்த உரையைக் கேட்ட நீ, இதற்கு மேலும் துன்ப வசப்படக்கூடாது.(46)

க்ஷரம் மற்றும் அக்ஷரம் ஆகியவற்றை அறிந்த மனிதன் அச்சத்தில் இருந்து விடுபடுகிறான். உண்மையில், ஓ! மன்னா, இந்த ஞானத்தை அடையாதவனே அச்சத்தை வளர்ப்பான்.(47) மூட ஆன்மா கொண்ட மனிதன், (பிரம்மத்தைக் குறித்த) அறியாமையின் விளைவால், இந்த உலகத்திற்கு மீண்டும் மீண்டும் திரும்புகிறான். உண்மையில், இந்த வாழ்வில் இருந்து அகன்றதும் {இறந்ததும்}, மரணத்தையே கதியாகக் கொண்ட ஆயிரமாயிரம் பிறவி வகைகளில் அவன் பிறக்க வேண்டியிருக்கும்.(48) தேவர்களின் உலகிலும், மனிதர்களின் உலகிலும், இடைநிலை வகை {உயிரினங்களின்} உலகிலும் அவன் மீண்டும் மீண்டும் தோன்றவேண்டியிருக்கும். காலப்போக்கில் அவன் தான் மூழ்கிய அறியாமை எனும் பெருங்கடலைக் கடப்பதில் வென்று, மொத்தமாக மறுபிறவியைத் தவிர்ப்பதிலும் வென்று, பரமாத்மாவுடன் அடையாளம் காணப்படும் நிலையை அடைகிறான்.(49) அறியாமையெனும் பெருங்கடல் பயங்கரமானதாகும். அடியற்ற அது புலப்படாதது என்றழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, நாளுக்கு நாள் உயிரினங்கள் அந்தப் பெருங்கடலில் வீழ்ந்து மூழ்குவது காணப்படுகிறது.(50) ஓ! மன்னா, நித்திமானதும், அளவற்றதுமான அறியாமையெனும் பெருங்கடலில் இருந்து நீ விடுபட்டதால், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் இருந்தும் விடுபடுவாய்” என்றார் {பீஷ்மர்}.(51)

அறமீட்டல்! – சாந்திபர்வம் பகுதி – 310-ஆறமீட்டல் மற்றும் அறிவு ஈட்டல் ஆகியவற்றைக் குறித்து ஜனக மன்னன் வசுமானுக்கு விளக்கிச் சொன்ன பிராமண முனிவர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு காலத்தில், ஜனக குல மன்னன் ஒருவன் {மன்னன் வசுமான்}, வசிப்பாரற்ற காடுகளில் மானைத் தேடித் திரிந்து கொண்டிருந்தபோது, பிருகு குலத்தைச் சேர்ந்த ஒரு மேன்மையான பிராமணரை அல்லது முனிவரைக் கண்டான்.(1) சுகமாக அமர்ந்திருந்த அந்த முனிவருக்குத் தலைவணங்கிய அந்த மன்னன் வசுமான், அவர் அருகில் அமர்ந்து, அவர் அனுமதியுடன் இந்தக் கேள்வியைக் கேட்டான்:(2) “ஓ! புனிதமானவரே, நிலையற்ற உடலைக் கொண்டவனும், ஆசைகளுக்கு அடிமையாக இருப்பவனுமான ஒரு மனிதனுக்கு இம்மையிலும், மறுமையிலும் எது உயர்ந்த நன்மையை உண்டாக்கும்?” என்று கேட்டான்(3) மன்னனால் முறையாகக் கௌரவிக்கப்பட்டு இவ்வாறு கேட்கப்பட்டவரும், தவத் தகுதி கொண்டவருமான அந்த முனிவர் நன்மைமிக்க வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(4)

முனிவர் {மன்னன் வசுமானிடம்}, “உன் மனத்திற்கு ஏற்புடைய வகையில் இம்மையையும், மறுமையையும் நீ விரும்பினால், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்பில்லாதவற்றைச் செய்வதை நீ தவிர்க்க வேண்டும்.(5) நல்லோருக்கு அறமே நன்மையானது. நல்லோருக்கு அறமே புகலிடமாக இருக்கிறது. அறத்திலிருந்தே அசையும் மற்றும் அசையாத உயிரனங்களுடன் கூடிய மூவுலகங்களும் உண்டாகின.(6) ஓ! ஏற்புடைய பொருட்கள் அனைத்தையும் அனுபவிப்பதில் ஆவலும், விருப்பமும் கொண்டவனே, ஆசைக்குரிய பொருட்களில் நீ இன்னும் தெவிட்டாமல் இருப்பது எவ்வாறு? ஓ! சிறு மதிகொண்டோனே, நீ தேனைக் காண்கிறாயேயன்றி, பள்ளத்தைக் காணாத குருடனாக இருக்கிறாய்.(7) அறக்கனிகளை ஈட்ட விரும்பும் ஒருவன் அறமீட்டுவதில் தன்னை நிறுவிக் கொள்வதைப் போலவே அறிவுக்கனிகளை ஈட்ட விரும்பும் ஒருவனும் தன்னை அறிவை ஈட்டுவதில் நிறுவி கொள்ள வேண்டும்.(8) தீய மனிதன் ஒருவன், அற விருப்பத்தின் காரணமாக, களங்கமற்ற தூய செயலொன்றைச் செய்ய முனைந்தால், அவனது ஆசை நிறைவடைவது சாத்தியமில்லாமல் போகிறது. மறுபுறம், நல்லோனொருவன் அறமீட்டும் விருப்பத்தால் தூண்டப்பட்டுக் கடினமான ஒரு செயலைச் செய்ய முனைந்தாலும், அஃது அவனுக்கு எளிதாக இருக்கிறது.(9) காட்டில் வசிக்கும் ஒருவன், நகரத்தில் வாழும் இல்லறத்தாரின் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தால், அவன் காட்டுத் துறவியாக அல்லாமல் நகரவாசியாகவே பார்க்கப்படுவான். அதே போல நகரத்தில் வசிக்கும் ஒருவன், வானப்ரஸ்த வாழ்வுமுறைக்குரிய இன்பநிலையை அனுபவித்துக் கொண்டிருந்தால், அவன் நகரவாசியாக அல்லாமல் காட்டுவாசியாகவே பார்க்கப்படுவான்.(10)

செயல்களின் அறத்தகுதிகளை உறுதி செய்து கொண்டு, செயல்களைத் தவிர்த்து, குவிந்த புலன்களுடன், எண்ணம், சொல் மற்றும் செயலில் அறப்பயிற்சிக்கு உன்னை நீ அர்ப்பணிக்க வேண்டும்.(11) காலம், இடம் ஆகியவற்றின் ஆதிக்கத்தைத் தீர்மானித்து, நோன்புகளையும், தூய்மையாக்கும் பிற சடங்குகளையும் செய்து தூய்மையடைந்து, வன்மம் இல்லாமல் நல்லோருக்குப் பெருங்கொடைகளை அளிக்க வேண்டும்.(12) நேர்மையான வழிமுறைகளில் செல்வத்தை ஈட்டும் ஒருவன், அதைத் தகுந்தோருக்குக் கொடையளிக்க வேண்டும். ஒருவன் கோபத்தைக் கைவிட்டு கொடையளிக்க வேண்டும்; கொடையளித்த பிறகு, அதுகுறித்து வருந்தவோ, அதைப் பற்றிப் பேசவோ கூடாது.(13) கருணை நிறைந்தவனும், தூய்மையானவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், பேச்சில் வாய்மை கொண்டவனும், வெளிப்படைத்தன்மை கொண்டவனும், பிறப்பால் தூய்மையானவனுமான பிராமணன், கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருதப்படுகிறான்.(14) ஒரே கணவனைக் கொண்டவளும், தன் கணவன் சார்ந்த வகையைச் சார்ந்தவளுமான தாய்க்குப் பிறந்த ஒருவன் தூய பிறப்பைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில், ரிக், யஜுஸ் மற்றும் சாமம் எனும் மூன்று வேதங்களை அறிந்தவனும், (வேள்விகள் செய்வது, பிறரின் வேள்விகளைச் செய்து கொடுப்பது, கல்வி, கற்பித்தல், கொடையளிப்பது, கொடையேற்பது ஆகிய) ஆறு கடமைகளை முறையாகச் செய்பவனுமான அத்தகைய பிராமணன், கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருதப்படுகிறான்.(15)

செயல்படுபவன், காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் தன்மைக்கேற்றபடி, அறம் மறமாகவும், மறம் அறமாகவும் மாறுகிறது.(16) பாவமானது, ஒருவனுடைய உடலில் உள்ள புழுதியைப் போல அகற்றப்பட வேண்டும். சிறியதை சிறு முயற்சியாலும், பெரியதை பெரிய முயற்சியாலும் அகற்ற வேண்டும்.(17) ஒரு மனிதன் தன் குடலின் மாசகற்றிய பிறகு, தன் உடலமைப்பில் (நலம் தரும் சத்து மருந்தாக) மிக நன்மையான செயலைச் செய்யும் நெய்யை உட்கொள்ள வேண்டும். அதே போலவே, ஒருவன் களங்கமனைத்திலும் இருந்து தன்னைத் தூய்மை செய்து கொண்டு, அறமீட்டுவதில் தன்னை நிறுவி கொண்டால் அந்த அறமானது மறுமையில் உயர்ந்த மகிழ்ச்சியை நிச்சயம் உண்டாக்கும்.(18) உயிரினங்கள் அனைத்தின் மனத்திலும் நல்ல மற்றும் தீய எண்ணங்கள் இருக்கின்றன. தீய எண்ணங்களில் இருந்து மனத்தை விலக்கி, அதை நற்சிந்தனைகளை நோக்கிச் செலுத்த வேண்டும்.(19) ஒருவன் தன்னுடைய வகைக்குண்டான நடைமுறைகளை எப்போதும் மதிக்க வேண்டும். எனவே, நீ உன் வகைக்கான நடைமுறைகளில் நம்பிக்கை கொள்ளும் வகையில் செயல்படுவாயாக.(20)

ஓ! பொறுமையற்ற ஆன்மா கொண்டவனே, பொறுமையைப் பயில்வாயாக. ஓ! மூட புத்தி கொண்டவனே, புத்தியடைய முனைவாயாக. அமைதியற்றவனே அமைதியை நாடுவாயாக, ஞானமற்றவனே, ஞானத்துடன் செயல்பட முனைவாயாக.(21) அறவோரின் தோழமையுடன் திரியும் ஒருவன் இம்மைக்கும், மறுமைக்குமான நன்மையான வழிமுறைகளைத் தன் சொந்த சக்தியின் மூலமே அடைவான்.(22) அரசமுனியான மஹாபிஷன் உறுதியற்றவனாக இருந்ததால் சொர்க்கத்தில் இருந்து விழுந்தான். யயாதியும் கூட, (தற்பெருமை பேசியதன் விளைவால்) தன் தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்ததும் (சொர்க்கத்தில் இருந்து வீசியெறியப்பட்டாலும்) அவன் தன் உறுதியினால் இன்பவுலகங்களை மீண்டும் அடைவதில் வென்றான்.(23) அறவோர் மற்றும் தவத்தகுதி கொண்ட கல்விமான்களுடன் சேர்வதால் நீ பெரும் புத்தியையும், உனக்கான உயர்ந்த நன்மையையும் நீ அடைவாய்” என்றார் {அந்த முனிவர்}”.(24)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தவசியின் இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், நல்ல மனோநிலை கொண்டவனுமான மன்னன் வசுமான், ஆசைத் தேடல்களைத் தன் மனத்தில் இருந்து விலக்கி, அதை {மனத்தை} அறமீட்டுவதில் நிறுவினான்”.(25)

யாஜ்ஞவல்கியர்! – சாந்திபர்வம் பகுதி – 311-பிரகிருதி மற்றும் படைப்புமுறை குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கடமையில் இருந்து விடுபட்டதும், அதற்கு மாறானதும் {தர்ம அதர்மங்களில் இருந்து விடுபட்டதும்}, அனைத்து ஐயங்களில் இருந்தும் விடுபட்டதும், பிறப்பு, இறப்பு, அறம் {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகியவற்றைக் கடந்திருப்பதும், மங்கலமானதும், நித்திய அஞ்சாமையும், நித்தியமானதும், அழிவற்றதும், மாற்றமில்லாததும், எப்போதும் தூய்மையானதும், கடும் உழைப்பில் இருந்து எப்போதும் விடுபட்டதும் எதுவோ, அதைக் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(1,2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் யாஜ்ஞவல்கியர் மற்றும் ஜனகன் {ஜனககுல மன்னன் தேவராதன்} ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) ஒரு காலத்தில், கேள்விகள் அனைத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக அறிந்தவனும், புகழ்பெற்றவனுமான ஜனக குல மன்னன் தேவராதன், முனிவர்களில் முதன்மையான யாஜ்ஞவல்கியரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான்.(4)

ஜனகன் {தேவராதன், யாஜ்ஞவல்கியரிடம்}, “ஓ! மறுபிறப்பாள முனிவரே, புலன்கள் எத்தனை வகைப்படும்? பிரகிருதி எத்தனை வகைப்படும்? புலப்படாதது {அவ்யக்தம்} எது? உயர்ந்த பிரம்மம் {பரப்பிரம்மம்} எது? பிரம்மத்தைவிட உயர்ந்தது எது?(5) பிறப்பும், இறப்பும் எது? கால அளவுகள் என்னென்ன? ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, உமது அருளைப் பெற்று உம்மிடம் நான் வேண்டும் இக்காரியங்கள் அனைத்தையும் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(6) நானோ அறியாதவன், நீரோ ஞானப் பெருங்கடல். எனவே, உண்மையில் கேட்க விரும்பியே இக் காரியங்கள் குறித்து உம்மைக் கேட்கிறேன்” என்றான்.(7)

யாஜ்ஞவல்கியர் {தேவராதனிடம்}, “ஓ! ஏகாதிபதி, உன் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்கிறேன் கேட்பாயாக. யோகிகள் மதிப்பதும், சாங்கியர்களிடம் உள்ளதுமான உயர்ந்த ஞானத்தை நான் உனக்குச் சொல்கிறேன்.(8) நீ அறியாதது ஏதுமில்லை. இருந்தும் என்னைக் கேட்கிறாய். எனினும், கேள்வி கேட்கப்படுபவன் பதிலளிக்க வேண்டும். இதுவே நித்திய நடைமுறையாம்.(9) பிரகிருதி என்ற பெயரில் எட்டுக் {8} கோட்பாடுகள் அழைக்கப்படுகின்றன, அதே வேளையில் மாறுபாடுகள் என்று பதினாறு {16 விகாரங்கள்}அழைக்கப்படுகின்றன. புலப்படாதவை {அவ்யக்தம்} ஏழாகும் {7}. இவையே அத்யாத்ம அறிவியலை அறிந்தோரின் கருத்துகளாக இருக்கின்றன.(10) புலப்படாதது (அல்லது மூலப் பிரகிருதி {அவ்யக்தம்}), மஹத், நனவுநிலை {அகங்காரம்}, பூமி, காற்று, வெளி, நீர், ஒளி(11) ஆகிய நுட்பமான ஐந்து பூதங்கள் உள்ளிட்ட இந்த எட்டும் பிரகிருதி என்ற பெயரில் அறியப்படுகின்றன. மாறுபாடுகள் {விகாரங்கள்} என்றழைக்கப்படுபவற்றின் பட்டியலை இப்போது கேட்பாயாக. காது, தோல், கண், நாக்கு, மூக்கு;(12) ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை, மணம், வாக்கு, இரு கரங்கள், இரு கால்கள், குதம் மற்றும் இன்பஉறுப்புகள் {மற்றும் மனம்} ஆகியவையே அவை[1].(13)இவற்றில் ஒலி முதலிய பத்தும், ஐம்பெரும் கோட்பாடுகளில்[2] பிறப்பவையும் விசேஷங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஓ! மிதிலையின் ஆட்சியாளா, அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} ஐந்தும் சவிசேஷம் என்று அழைக்கப்படுகின்றன.(14) அத்யாத்ம அறிவியலை அறிந்த மனிதர்கள் மனத்தைப் பதினாறாவதாகக் கருதுகிறார்கள். இஃது உன் கருத்துகளுக்கும், கோட்பாடுகள் குறித்த உண்மைகள் அறிந்த பிற கல்விமான்களுக்கும் இணக்கமானதே ஆகும்.(15) ஓ! மன்னா {தேவராதா}, புலப்படாததில் {அவ்யக்தத்தில்} இருந்து மஹத்-ஆன்மா {ஹிரண்ய கர்ப்பனின் நான்கில் ஒரு பங்கு} உண்டாகிறது. பிரதானம் (அல்லது பிரகிருதி) தொடர்பான முதல் படைப்பு இஃது எனக் கல்விமான்கள் சொல்கிறார்கள்.(16) ஓ! மனிதர்களின் மன்னா, மஹத்திலிருந்து நனவுநிலை {அஹங்காரம்} உண்டாகிறது. புத்தியைத் தன் சாரமாகக் கொண்ட இஃது இரண்டாம் படைப்பு என்றழைக்கப்படுகிறது[3].(17) நனவுநிலையில் {அஹங்காரத்தில்} இருந்து ஒலியைத் தன் சாரமாகக் கொண்ட மனமும், வெளியின் {ஆகாயத்தின்} குணங்களைக் கொண்ட பிறவும், எஞ்சியவையும எழுந்தன. இது நனவுநிலை தொடர்பானது மூன்றாம் படைப்பு என்று சொல்லப்படுகிறது.(18) ஓ! மன்னா, மனத்தில் இருந்து (எண்ணிக்கையில் ஐந்தான) பெரும்பூதங்கள் உண்டாகின. மனோநிலை {மானஸம்} என்று நான் சொல்வது போல அழைக்கப்படும் இதை, நான்காம் படைப்பாக அறிவாயாக.(19) (அடிப்படை) பெரும் பூதங்களின் தொடர்புடைய ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை, மணம் ஆகியவை ஐந்தாம் படைப்பு எனப் பூதங்களை அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.(20)காது, தோல், கண், நாக்கு, மூக்கு ஆகியவற்றின் {அறிவுப்புலன்களின் / ஞானேந்திரியங்களின்} படைப்பு ஆறாவதாகவும், எண்ணப் பன்மையின் சாரத்தைக் கொண்டதாகவும் கருதப்படுகிறது.(21) பிறகு, ஓ! ஏகாதிபதி, காது முதலியவற்றுக்கு அடுத்து வரும் புலன்கள் (செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} எழுகின்றன. ஏழாம் படைப்பு என்றழைக்கப்படும் இவை {இந்தச் செயற்புலன்கள் / இந்தக் கர்மேந்திரியங்கள்} அறிவுப்புலன்களுடன் {ஞானேந்திரியங்களுடன்} தொடர்பு கொள்கின்றன.(22) ஓ! ஏகாதிபதி, அதன் பிறகே மேல் நோக்கிய மூச்சுக் காற்றும் (பிராணனும்) குறுக்காக ஏழும் (சமானன், உதானன், வியானன் உள்ளிட்ட) மூச்சுக்காற்றுகளும் உண்டாகின்றன. எட்டாம் படைப்பான இஃது ஆர்ஜவம் என்றழைக்கப்படுகிறது[4].(23) அடுத்து உடலின் கீழ்ப்பகுதிகளில் குறுக்காகச் செல்லும் (சமானன், உதானன் மற்றும் வியானனும்) மூச்சுக்காற்றுகளும், கீழ்நோக்கிச் செல்லும் அபானன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்றும் வருகிறது. ஓ! மன்னா, ஒன்பதாம் படைப்பான இதுவும் ஆர்ஜவம் என்றே அழைக்கப்படுகிறது.(24) ஓ! ஏகாதிபதி, இந்த ஒன்பது வகைப் படைப்புகளும், இந்த இருபத்துநான்கு கோட்பாடுகளும் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி அறிவிக்கப்படுகின்றன.(25) ஓ! மன்னா, இதன் பிறகு, இந்தக் கோட்பாடுகள் அல்லது குணங்களைப் பொறுத்தவரையில் கல்விமான்களால் குறிப்பிடப்படும் கால அளவை உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(26)

இருபது பூதங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 312-அவ்யக்த முதலியவற்றின் காலக்கணக்கையும், படைப்பையும் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்..

யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, புலப்படாததை (அல்லது பரம புருஷனைப்) பொறுத்தவரையிலான காலக்கணக்கை உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக. பத்தாயிரம் {10000} கல்பங்கள் அவனுடைய ஒரு பகல் என்று சொல்லப்படுகிறது.(1) அவனது இரவின் காலமும் அதே அளவு {10000 கல்பங்கள்} கொண்டதாகும். ஓ! ஏகாதிபதி, அந்த இரவு முடிந்ததும் அவன் முதலில் உடல் கொண்ட உயிரினங்கள் வாழ்வதற்கான செடி கொடிகளைப் படைக்கிறான்.(2) பிறகு அவன் தங்க முட்டையில் இருந்து எழும் பிரம்மனைப் படைக்கிறான். அந்தப் பிரம்மன் படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் வடிவமாவான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) ஒரு முழு வருடம் அந்த முட்டைக்குள் இருந்தவனும், பெரும் தவசியும், பிரஜாபதி (அனைத்து உயிரினங்களின் தலைவன்) என்றும் அழைக்கப்படுபவனுமான பிரம்மன் அதைவிட்டு {அந்த முட்டையை விட்டு} வெளியே வந்து, மொத்த பூமியையும், மேலுள்ள சொர்க்கத்தையும் படைத்தான்.(4)

பிறகு அந்தத் தலைவன் {பிரம்மன்}, வானத்தை இடையில் வைத்து சொர்க்கத்தையும், பூமியையும் பிரித்தான்.(5) பிரம்மனின் ஒரு பகல் ஏழாயிரத்து ஐநூறு {7500} கல்பங்களாகும்.(6) அத்யாத்ம அறிவியல் அறிந்த மனிதர்கள், அவனது இரவும் அதே அளவைக் கொண்டது என்று சொல்கிறார்கள். மஹான் என்றழைக்கப்படும் அந்தப் பிரம்மன், பிறகு பூதம் என்றழைக்கப்படுவதும், சிறந்த சாரத்தைக் கொண்டதுமான நனவுநிலையை {அகங்காரத்தைப்} படைக்கிறான்[1].(7) பெரும்பூதங்கள் என்றழைக்கப்படும் உட்பொருள்களில் இருந்து எந்த உடலையும் படைப்பதற்கு முன்னால், தவங்களுடன் கூடிய மஹான் அல்லது பிரம்மன், அவனது மகன்கள் என்றழைக்கப்படும் நால்வரை படைத்தான்[2].(8)ஓ! ஏகாதிபதி, நான்கு உள் இயக்கங்களோடு கூடிய (அறிவுப்) புலன்கள் {ஞானேந்திரியங்கள்} பித்ருக்களில் (பித்ருக்கள் என்றழைக்கப்படும் பெரும்பூதங்களில்) இருந்து உண்டாகின. அசைவன மற்றும் அசையாதவற்றைக் கொண்ட இந்த மொத்த அண்டமும் அந்தப் பெரும்பூதங்களாலேயே நிறைந்திருக்கிறது[3].(9) பலமிக்க நனவுநிலையே {அகங்காரமே} ஐம்பூதங்களையும் படைத்தது. அவை பூமி, காற்று, வெளி {ஆகாயம்}, நீர் மற்றும் ஒளியென்று எண்ணிக்கையில் ஐந்தாக இருக்கிறது.(10) மூன்றாம் படைப்பான (பெரும் பூதமான) இந்த நனவுநிலை {அகங்காரம்}, தன் இரவுக்கு ஐயாயிரம் {5000} கல்பங்களையும், பகலுக்கு அதே கால அளவையும் கொண்டிருக்கிறது.(11) ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை, மணம் ஆகிய இந்த ஐந்தும் விசேஷங்கள் {தன்மாத்திரைகள்} என்றழைக்கப்படுகின்றன. அவை ஐம்பெரும் பூதங்களுக்குள் பொதிந்திருக்கின்றன.(12)ஓ! மன்னா, இந்த ஐந்தாலும் உடனே படர்ந்தூடுருவப்படும் {நீக்கமற நிறைக்கப்படும்} பூதங்கள் அனைத்தும், ஒன்றோடொன்று தோழமையை விரும்பி, ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன;(13) ஒன்றையொன்று சவாலுக்கழைத்து, ஒன்றையொன்று கடந்திருக்கின்றன; மாற்ற முடியாத மயக்கக் கோட்பாடுகளால் வழிகாட்டப்படும் உயிரினங்கள் ஒன்றையொன்று கொன்று, எண்ணற்ற இடைநிலை வகை உயிரினங்களில் புகுந்து இவ்வுலகில் திரிகின்றன.(14) அவற்றின் ஒருபகல் மூவாயிரம் {3000} கல்பங்களாகும். அவற்றின் இரவும் அதே அளவைக் கொண்டதாகும்.(15) ஓ! மன்னா {தேவராதா}, மனமானது {மூளையானது} புலன்களால் வழிகாட்டப்பட்டு அனைத்துப் பொருட்களிலும் திரிகிறது. புலன்கள் எதையும் உணர்வதில்லை. மனமே அவற்றின் மூலம் எதையும் உணர்கிறது.(16)

கண்ணானது, மனத்தின் {மூளையின்} துணையால் வடிவங்களைப் பார்க்கிறதேயன்றி தன்னாலல்ல. மனத்தின் கவனம் திரும்புகையில், கண்ணின் முன்பு ஒரு பொருள் இருந்தாலும் அதைக் காணத் தவறுகிறது.(17) புலன்கள் உணர்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. புலன்களின் மூலம் மனமே உணர்வதால் இதில் உண்மையில்லை.(18) மனத்தின் செயல்பாடு நிறுத்தப்படும்போது, அதைப் பின்தொடர்ந்து புலன்களின் செயல்பாடும் நின்று போகிறது. மனச்செயல்பாட்டின் நிறுத்தமே புலன்களின் செயல்பாட்டை நிறுத்தும். எனவே ஒருவன் புலன்கள் மனத்தின் ஆளுகையில் இருப்பதாகக் கருத வேண்டும்.(19) உண்மையில் மனமே, புலன்கள் அனைத்தின் தலைவன் என்று சொல்லப்படுகிறது. ஓ! பெரும்புகழ் கொண்டவனே, அண்டத்தில் இருக்கும் இருபது பூதங்கள் இவையே” என்றார் {யாஜ்ஞவல்கியர்}[4].(20)

பிரளயம்! – சாந்திபர்வம் பகுதி – 313-அண்டம் அழிக்கப்படும் முறை குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்.

யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, “நான் ஒன்றன்பின் ஒன்றாகப் படைப்பின் முறையை, அவற்றின் மொத்த எண்ணிக்கை, பல்வேறு கோட்பாடுகள் மற்றும் அவை ஒவ்வொன்றின் காலக்கணக்கீட்டுடன் உனக்குச் சொல்லிவிட்டேன். அவற்றின் அழிவைக் குறித்து இப்போது சொல்கிறேன், கேட்பாயாக.(1) நித்தியமானவனும், சிதைவற்றவனும், தொடக்கமும், முடிவும் இல்லாதவனுமாக இருப்பவன், மீண்டும் மீண்டும் பொருட்கள் அனைத்தையும் எவ்வாறு படைத்து அழிக்கிறான் என்பதைக் கேட்பாயாக.(2) அவனது பகல் முடிந்து, இரவு வந்ததும் அவன் உறங்க விரும்புகிறான். அத்தகைய வேளையில் புலப்படாதவனான {அவ்யக்தனான} அந்தப் புனிதமானவன் {பிரம்மன்}, (உலகை அழிப்பதற்கான) தன் பெரும் சக்திகளை அறிந்தவனான {அஹங்காரபிமானியான} மஹாருத்திரன் என்று அழைக்கப்படுபவனைத் தூண்டுகிறான்.(3)

புலப்படாதவனால் தூண்டப்பட்ட அவன் {மஹாருத்திரன்}, நூறாயிரங்கதிர்களைக் கொண்ட சூரியனின் வடிவை ஏற்று, சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பான பனிரெண்டு பகுதிகளாகத் தன்னைப் பிரித்துக் கொள்கிறான்.(4) ஓ! ஏகாதிபதி, பிறகு அவன் பாலூட்டிகள், முட்டையிட்டு குஞ்சுபொறிப்பவை, {வியர்வை உள்ளிட்ட} கழிவில் பிறப்பவை, தாவரங்கள் எனப் படைக்கப்பட்ட நால்வகை உயிரினங்களையும் எந்தத் தாமதமும் செய்யாமல், தன் சக்தியின் மூலம் எரிக்கிறான்.(5) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் இவ்வாறு அழிக்கப்படுவதால், பூமியானது ஆமை ஓட்டைப் போல வெறுமையாகிறது.(6)

பூமியின் முகப்பில் உள்ள அனைத்தையும் எரித்தபிறகு, அளவிலா வலிமை கொண்ட ருத்திரன், விரைவாக அந்த வெற்று பூமியை பெரும் சக்தி கொண்ட நீரால் நிரப்புகிறான்.(7) பிறகு அவன் (பூமி மூழ்கியிருக்கும் அந்த) நீரை வற்றச் செய்வதற்காக யுக நெருப்பைப் படைக்கிறான். நீர் மறைந்ததும், நெருப்பெனும் பெரும்பூதம் சுடர்மிக்கதாய் சீற்றத்துடன் தொடர்ந்து எரிகிறது.(8) பிறகு, ஆழ்ந்த சக்தியைக் கொண்டதும், ஏழு தழல்களைக் கொண்டதும், அனைத்து உயிரினங்களிலும் வெப்பமாக இருப்பதுமான அந்தச் சுடர்மிக்க நெருப்பை, அளவிலா சக்தியும், வலிமையும் கொண்ட காற்று {வாயு} விரைவாக விழுங்குகிறது. அந்நெருப்பை விழுங்கிய காற்றானது, மேல்நோக்கி, கீழ்நோக்கி, குறுக்குவெட்டாக என அனைத்துத் திசைகளிலும் திரிகிறது.(9,10)

பிறகு ஆழ்சக்தி கொண்ட அக்காற்றை, அளவிலா இருப்பைக் கொண்ட வெளியானது விழுங்குகிறது. மனமானது, அந்த அளவற்ற வெளியையும் உற்சாகமாக விழுங்குகிறது.(11) பிறகு அனைத்தின் ஆன்மாவாக இருப்பதும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமான நனவுநிலை {அகங்காரம்}, அந்த மனத்தை விழுங்குகிறது. பிறகு கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்த மஹத் ஆன்மாவானது அந்த நனவுநிலையை {அகங்காரத்தை} விழுங்குகிறது.(12)
ஒப்பற்ற மஹத் ஆன்மா அல்லது அண்டமானது, அனைத்துப் பொருட்களின் தலைவனும், அனிமா, லகிமா, பிராப்தி முதலிய யோக குணங்களைக் கொண்டவனும், இயல்பாகவே உள்ளீர்ப்பவனும், மாற்றமில்லாத தூய ஒளியைக் கொண்டவனும், பரமனாகக் கருதப்படுபவனுமான சம்புவால் {சிவனால்} விழுங்கப்படுகிறது.(13)

அவனது கைகளும், கால்களும் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிகின்றன; அவன் கண்களும், தலையும், முகமும் எங்குமிருக்கின்றன; அவனது காதுகள் ஒவ்வொரு இடத்தையும் அடைகின்றன, அவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்.(14) அனைத்து உயிரினங்களின் இதயம் அவனே; அவன் கட்டைவிரல் அளவுள்ள அணுவாக இருக்கிறான். அனைத்தின் தலைவனும், எல்லையற்றவனும், பரமாத்மாவுமான அவன் இவ்வாறே அண்டத்தை விழுங்குகிறான்.(15) இதன்பிறகு, சிதைவற்றவனும், எவ்வகைக் களங்கமும் அற்றவனும், கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை உண்டாக்குபவனும், முற்றிலும் களங்கமற்றவனுமான அந்த மாற்றமற்றவன் {சிவன்} மட்டுமே எஞ்சியிருக்கிறான்.(16)

ஓ! ஏகாதிபதி, இவ்வாறே அழிவை {பிரளயத்தைக்} குறித்து உனக்கு நான் சொல்லிவிட்டேன். இனி அத்யாத்மா, அதிபூதம், அதிதெய்வம் ஆகியவற்றைக் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(17)

முக்குணக் குறியீடுகள்! – சாந்திபர்வம் பகுதி – 314-அத்யாத்மம், அதிபூதம், அதிதெய்வம், முக்குணங்கள் ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்..

யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, “தத்துவங்களை அறிந்த பிராமணர்கள் இரு பாதங்களையும் அத்யாத்மா என்றும், {கால்களால்} நடக்கும் செயல்பாட்டை {மார்க்கத்தை} அதிபூதம் என்றும், விஷ்ணுவையே (அந்தப் பாதங்களின்) அதிதெய்வமாகவும் சொல்கின்றனர்.(1) குதம் {பாயு} அதியாத்மம்; அதன் செயல்பாடான மலம் வெளியேற்றுதல் அதிபூதம், மித்திரன் (சூரியன், அந்த உறுப்பின்) அதிதெய்வம்.(2) பிறப்புறுப்பு {குறி} அத்யாத்மம் என்றழைக்கப்படுகிறது. அதன் ஏற்புடைய செயல்பாடு {ஆனந்தம்} அதிபூதம் என்றழைக்கப்படுகிறது, பிரஜாபதி {பிரம்மன்} அதன் அதிதெய்வமாவான்.(3) கைகள் அத்யாத்மம்; அவற்றின் செயல்களைக் குறிக்கும் செயல்பாடு அதிபூதம்; இந்திரன் அந்த உறுப்பின் அதிதெய்வம்.(4) வாக்கு அத்யாத்மம்; அவற்றின் மூலம் சொல்லப்படும் சொற்கள் {சொல்லக்கூடிய விஷயம்} அதிபூதம்; அக்னி அதன் அதிதெய்வம்.(5) கண்கள் {நேத்திரம்} அதியாத்மம்; பார்வை அல்லது வடிவம் {ரூபம்} அவற்றின் அதிபூதம்; சூரியன் அவற்றின் அதிதெய்வம்..(6) காதுகள் {ஸ்ரோத்ரம்} அத்யாத்மம்; ஒலி {சப்தம்} அதன் அதிபூதம்; திசைப்புள்ளிகள் {திக்குகள்} அதன் அதிதெய்வம்.(7)

நாக்கு {ரசனை} அத்யாத்மம்; சுவை {ரஸம்} அதன் அதிபூதம்; நீர் {அப்பு} அதன் அதிதெய்வம்.(8) நுகர்வுணர்வு {கிராணம்} அத்யாத்மம்; மணம் {கந்தம்} அதன் அதிபூதம்; பூமி {பிருதிவி} அதன் அதிதெய்வம்.(9) தோல் {துவக்கு} அத்யாத்மம்; ஊறு {தீண்டல் /ஸ்பரிசம்} அதன் அதிபூதம்; காற்று {வாயு} அதன் அதிதெய்வம்.(10) மனம் அத்யாத்மம்; எதனுடன் மனம் ஈடுபடுகிறதோ அது {நினைக்கக்கூடிய விஷயம்} அதிபூதம்; சந்திரன் அதன் அதிதெய்வம்.(11) நனவுநிலை {அகங்காரம்} அத்யாத்மம்; பிரகிருதியாகத் தன்னைக் காணும் உறுதிப்பாடு {செருக்கு / கர்வம்} அதிபூதம்; மஹத் அல்லது புத்தி அதன் அதிதெய்வம்.(12) புத்தி அத்யாத்மம்; புரிந்து கொள்வது {அறியக்கூடிய விஷயம்} அதிபூதம்; க்ஷேத்ரஜ்ஞன் அதிதெய்வம் {என்றும் தத்துவங்களை அறிந்த பிராமணர்கள் சொல்கிறார்கள்}.(13) ஓ! மன்னா {தேவராதனா}}, மூல தத்துவங்கள் அல்லது கோட்பாடுகளின் இயல்பை முழுமையாக அறிந்தவனே, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் (பல்வேறு வடிவங்களில் வெளிப்படும்) பரமனின் பலத்தை {விபூதியை} உண்மையில் தனித்தனியாக, விவரமாக {ஸ்பஷ்டமாக} உனக்கு விளக்கியிருக்கிறேன்.(14)

ஓ! ஏகாதிபதி, பிரகிருதியானவள் தான் விரும்பியபடி விளையாடுவதைப் போல, தானே மாறுபாடுகளுக்கு {விகாரங்களுக்கு} உட்பட்டு, குணங்கள் என்றழைக்கப்படும் மூல மாறுபாடுகளின் கலவையை ஆயிரமாயிரமாகப் படைக்கிறாள்.(15) மனிதர்கள் ஒரே விளக்கில் இருந்து ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றுவதைப் போலவே, பிரகிருதியும், மாறுபாட்டின் மூலம், புருஷனின் (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் எனும்) முக்குணங்களைச் சார்ந்த இருப்பிலுள்ள ஆயிரக்கணக்கான பொருட்களைப் பெருக்குகிறாள்.(16)

{சத்வ குணம்:}
பொறுமை {தைரியம்}, இன்பம் {ஆனந்தம்}, செழிப்பு {அபிவிருத்தி}, நிறைவு {பிரீதி}, மேலான காரியங்களில் விருப்பம், மகிழ்ச்சி {சுகம்}, {மனத்}தூய்மை, உடல்நலம் {ஆரோக்கியம்}, உள்ளடக்கம் {ஸந்தோஷம்}, நம்பிக்கை {ஸ்ரத்தை},(17) கொடை, கருணை, மன்னிக்கும் தன்மை, உறுதி, நன்மை, சமமாய் இருத்தல், வாய்மை, கடமைகளை அறிதல் {கடனில்லாமை}, மென்மை {நேராயிருத்தல்}, பணிவு {லஜ்ஜை}, அமைதி {சபலமில்லாமை},(18) புறத்தூய்மை {சரீரசுத்தி}, எளிமை {மேன்மை}, கடமை நடைமுறைகளைச் செய்தல் {ஆசாரம்}, ஆசையின்மை, இதயத்தில் அஞ்சாமை {மனத்தில் பரபரப்பில்லாமை}, தோற்றம் அல்லது முற்பிறவி செயல்களின் நன்மை தீமைகளில் அலட்சியம்,(19) கொடைகளைக் கொடுப்பதன் மூலம் மட்டுமே பொருட்களைப் பெறுவது, பேராசையின்மை {வைராக்கியம்}, பிறரின் நலத்தைக் கருத்தில் கொள்வது {பரோபகாரம்}, அனைத்து உயிரினங்களிடமும் கருணை {தயை} ஆகிய இவை சத்வ குணத்தோடு தொடர்புடையன என்று சொல்லப்படுகிறது.(20)

{ரஜஸ் குணம்:}

ரஜஸ் குணம் தொடர்புடைய பண்புகளின் பட்டியல் மேனியழகில் செருக்கு, தலைமை நிலையை உறுதி செய்தல், போர் {கலகம்}, ஈயாமை, கருணையின்மை {தயையில்லாமை}, இன்பதுன்பங்களை அனுபவித்தல்,(21) பிறரை நிந்திப்பதில் விருப்பம், அனைத்து வகைச் சச்சரவுகளிலும் ஈடுபடல், ஆணவம், மதிப்பின்மை, கவலை, பகைமை பாராட்டல்,{22) பரிதாபம், பிறர் உடைமைகளை அபகரித்தல், வெட்கமின்மை, குறுக்கு புத்தி, ஒழுங்கின்மை, முரட்டுத்தனம், காமம், கோபம், செருக்கு,(23) மேன்மையை உறுதி செய்தல், வன்மம், அபிமானம் ஆகியற்றைக் கொண்டதாகும்.

{தமஸ் குணம்:}
தமஸில் இருந்த உண்டாகும் குணக்கூட்டங்களை இப்போது உனக்குச் சொல்லப்போகிறேன்.(24) தீர்மான மயக்கம் {மோகம்}, ஒளியின்மை, இருள் {தாமிஸ்ரம்}, குருடாக்கும் இருள் {அந்ததாமிஸ்ரம்} ஆகியவையே அவை. இருளின் மூலம் மரணம் குறிப்பிடப்படுகிறது, குருட்டு இருள் என்பது கோபமாகும்.(25). இவற்றைத் தவிர்த்த தமஸின் பிற குறியீடுகள் அனைத்து வகை உணவிலும் பேராசை, உணவிலும் பானத்திலும் தீராப்பசி,(26) மணம், உடை, கேளிக்கை, படுக்கை, இருக்கை, பகலுறக்கம், விவாதம், அலட்சியவுணர்வில் பற்று, விழிப்பின்மையால் உண்டாகும் அனைத்து வகைச் செயல்கள்,(27) அறியாமையால் நடனம், கருவி மற்றும் குரலிசையில் பற்று, சிறப்புமிக்க அறங்கள் அனைத்திலும் வெறுப்பு ஆகியவையாகும். உண்மையில் இவையே தமஸின் குறியீடுகளாகும்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.{28}

குணமும் கதியும்! – சாந்திபர்வம் பகுதி – 315-குணங்களும், வினைகளும் அடையும் கதிகளைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்…

யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) இந்த மூன்றும் பிரகிருதியின் குணங்களாகும். இவை அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுடனும் தொடர்புடையவையாகவும், அவற்றை எப்போதும் உள்ளீர்ப்பவையாகவும் இருக்கின்றன.(1) யோக குணங்கள் ஆறைக் கொண்ட புலப்படாத {அவ்யக்தமான} புருஷன் (இந்த முக்குணங்களைத் தழுவுவதன் மூலம்) நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக் கணக்கான வடிவங்களாகத் தன்னைத் தானே மாற்றிக் கொள்கிறான்.(2) அத்யாத்ம அறிவியலை அறிந்தவர்கள் சத்வ குணம் அண்டத்தில் உயர்ந்த இடத்திற்கும், ரஜஸ் நடுநிலைக்கும், தமஸ் இழிந்த இடத்திற்கும் ஒதுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.(3) கலப்பில்லாத அறத்தின் துணையின் மூலம் ஒருவன் (தேவர்களுக்குரிய) உயர்ந்த கதியை அடைகிறான். பாவத்துடன் கலந்த அறத்தின் மூலம் ஒருவன் மனித நிலையை அடைகிறான். அதே வேளையில் கலப்பில்லாத பாவத்தின் மூலம் (விலங்காகவோ, தாவரம் முதலியவையாகியோ) ஒருவன் இழிந்த கதியை அடைகிறான்.(4)

ஓ! மன்னா {தேவராதனா}, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் கலவைகளைக் குறித்து உனக்குச் சொல்கிறேன் இப்போது கேட்பாயாக.(5) சிலவேளைகளில் ரஜஸானது சத்வத்துடன் சேர்ந்து காணப்படுகிறது. தமஸ் ரஜஸுடன் இருக்கிறது. தமஸுடன் சத்வமும் காணப்படுகிறது. சத்வம், ரஜஸ், தமஸ் சம அளவில் கலந்திருப்பதும் காணப்படுகிறது. அவை புலப்படாதவளாக, அல்லது பிரகிருதியாக அமைகின்றன.(6) புலப்படாதவன் (அவ்யக்தமான புருஷன்) சத்வத்துடன் சேரும்போது அவன் தேவர்களின் உலகங்களை அடைகிறான். சத்வம் மற்றும் ரஜஸ் ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும்போது, அவன் மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பெடுக்கிறான்.(7) ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்போது, அவன் இடைநிலை உயிரினங்களில் பிறப்பெடுக்கிறான். மூன்று குணங்களான சத்வம், ரஜஸ், தமஸ் என அனைத்தையும் கொண்டிருப்பவன், மனிதன் என்ற நிலையை அடைவான்.(8)

அறம் {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகிய இரண்டையும் கடந்த உயர் ஆன்ம மனிதர்கள், நித்தியமானதும், மாற்றமில்லாததும், சிதைவற்றதும், அழிவற்றதுமான இடத்தை {கதியாக} அடைகிறார்கள்.(9) ஞானிகள், மிக மேன்மையான பிறவிகளை அடைந்து, களங்கமற்றதும், சிதைவற்றதும், புலன்களின் அறிவுக்கு எட்டியதைக் கடந்ததும், அறியாமையில் இருந்து விடுபட்டதும், பிறப்பு இறப்புக்கு மேலானதும், அனைத்து வகை இருளையும் விலக்கும் முழு ஒளி உள்ளதுமான இடத்தை {கதியாக} அடைகின்றனர்.(10) புலப்படாதவளில் {பிரகிருதியில்} வசிக்கும் பரமனின் (புருஷனின்) இயல்பைக் குறித்து நீ என்னிடம் கேட்டாய். நான் உனக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா, கேட்பாயாக. பிரகிருதியில் வசிக்கும்போது, பிரகிருதியின் இயல்பை ஏற்காமல் தன்னியல்பிலேயே அவன் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது.(11) ஓ! மன்னா, பிரகிருதியானவள் அசைவற்றவளாகவும் {உயிரற்றவளாகவும்}, புத்தியற்றவளாகவும் இருக்கிறாள். புருஷனால் தலைமை தாங்கப்படும்போது மட்டுமே, அவளால் படைக்கவும், அழிக்கவும் முடியும்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(12)

ஜனகன் {தேவராதன்}, “ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இருவரும் தொடக்கமும், முடிவும் அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வடிவமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இரண்டும் சிதைவற்றவர்களாக இருக்கிறார்கள்.(13) அவர்கள் இருவரும் புரிந்துகொள்ளப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அவர்களில் ஒருவர் அசைவற்றவள் {உயிரற்றவள்}, புத்தியற்றவள் என்று எவ்வாறு சொல்லப்படுகிறார்? மேலும் மற்றொருவர் அசைவுள்ளவன் {உயிருள்ளவன்}, புத்தியுள்ளவன் என்று எவ்வாறு சொல்லப்படுகிறார்? மேலும் பின்னவன் ஏன் க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறான்?(14) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, விடுதலையறம் {மோக்ஷதர்மம்} குறித்து முற்றும் அறிந்தவர் நீர். அந்த விடுதலை அறத்தை உம்மிடமிருந்து நான் முற்றாக அறிய விரும்புகிறேன்.(15)

புருஷனின் இருப்பு, அவனது ஒருமை, பிரகிருதியில் இருந்து தனிப்பட்டிருக்கும் அவனது தன்மை, உடலுடன் தொடர்புடைய தேவர்கள்,(16) உடல்படைத்த உயிரினங்கள் இறந்ததும் செல்லும் இடம், காலப்போக்கில் அவை இறுதியாகச் சென்றடையக்கூடிய இடம் ஆகியவற்றை எனக்குச் சொல்வீராக.(17) சாங்கிய அமைப்பிலும், யோக அமைப்பிலும் விளக்கப்படும் ஞானத்தைத் தனித்தனியாக எனக்குச் சொல்வீராக. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, மரணம் குறித்த முன்னெச்சரிக்கை குறியீடுகளைக் குறித்தும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். இக்காரியங்கள் அனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல நீர் நன்குஅறிந்திருக்கிறீர்” என்று கேட்டான் {ஜனக குல மன்னன் தேவராதன்}.(18)

சாங்கிய தத்துவம்! – சாந்திபர்வம் பகுதி – 316-சாங்கிய அமைப்பைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்

யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, “ஓ! மகனே, குணங்கள் அற்ற ஒன்றை, அதன் குணங்களைச் சுட்டி ஒருபோதும் விளக்கமுடியாது. எனினும், எது குணங்களைக் கொண்டதென்றும், எது அவை அற்றதென்றும் நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(1) செம்மலரைப் பிரதிபலிக்கும் படிகத்தைப் போலவே, புருஷனானவன் குணங்களை ஏற்கும்போது, அவன் குணங்களைக் கொண்டவனாக அழைக்கப்படுகிறான்; ஆனாலும் பிரதிபலிப்பில் இருந்து விடுபட்ட படிகத்தைப் போல அவன் குணங்களில் இருந்து விடுபடும்போது, குணங்கள் அனைத்தையும் கடந்த தன் உண்மையான இயல்பில் அவன் காணப்படுகிறான் என்று தத்துவங்கள், அல்லது கோட்பாடுகள் அனைத்தின் உண்மையை அறிந்த உயர் ஆன்ம முனிவர்கள் சொல்கிறார்கள்[1].(2) புலப்படாத பிரகிருதியானவள், தன் இயல்பிலேயே குணங்களைக் கொண்டவளாக இருக்கிறாள். அவளால் அவற்றைக் கடக்க முடியாது. இயல்பிலேயே புத்தியற்றவளான அவள், குணங்களுடன் பிணைக்கப்பட்டவளாகவே இருக்கிறாள்.(3) புலப்படாத பிரகிருதியால் எதையும் அறிந்து கொள்ள முடியாத அதே வேளையில், புருஷனோ, “என்னைவிட உயர்ந்தது ஏதுமில்லை” என்று எப்போதும் தன் நினைவில் கொண்டிருக்கும் ஞானத்தைத் தன் இயல்பாகவே கொண்டிருக்கிறான்.(4)இந்தக் காரணத்தால், புலப்படாதவளாக இருப்பவள் (அல்லது பிரகிருதி), இயல்பிலேயே அசைவற்றவளாகவும் {உயிரற்றவளாகவும்}, புத்தியற்றவளாகவும் இருந்தாலும், நித்தியமானவனும், அழிவற்றவனுமான புருஷனுடன் சேரும் விளைவால், தன் இயல்பில் அழியத்தக்கவளாகவே இருந்தாலும், அசைவுள்ளவளாகவும் {உயிருள்ளவளாகவும்}, புத்தியுள்ளவளாகவும் ஆகிறாள்[2].(5) {இந்த} அறியாமையின் மூலம் புருஷன் மீண்டும் மீண்டும் குணங்களுடன் தொடர்பு கொண்டு, தன் உண்மை இயல்பைப் புரிந்து கொள்ளத் தவறி, விடுதலையை {முக்தியை} அடைவதிலும் தவறுகிறான்.(6) புருஷன், பிரகிருதியில் இருந்து தோன்றும் கோட்பாடுகளுக்குத் தலைமை தாங்குவதன் விளைவால், அவன் அந்தக் கோட்பாடுகளின் இயல்பைக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. படைப்புக் காரியத்தில் அவனது இயக்கத்தின் விளைவால் அவன் படைக்கும் குணத்தைக் கொண்டவனாகவும் சொல்லப்படுகிறான்.(7) யோக காரியத்தில் அவனது இயக்கத்தின் விளைவால் அவன் யோக குணத்தைக் கொண்டவனாகவும் சொல்லப்படுகிறான். பிரகிருதிய என்றறியப்படும் குறிப்பிட்ட கோட்பாடுகளுக்கு {தத்துவங்களுக்குத்} தலைமை தாங்குவதால் அவன் பிரகிருதியின் இயல்பைக் கொண்டவன் எனவும் சொல்லப்படுகிறான்.(8)(அசைவற்ற பொருட்கள் அனைத்தின்) வித்துகளைப் படைக்கும் காரியத்தில் உள்ள அவனது இயக்கத்தின் விளைவால், அவன் அந்த வித்துகளின் இயல்பைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். பல்வேறு கோட்பாடுகள் அல்லது குணங்களை வாழ்வில் உண்டாக்கும் காரணத்தால் (அந்தக் கோட்பாடுகளே அழியத்தக்கன என்பதால்} அவன் சிதைவுக்கும், அழிவுக்கும் ஆட்படுவதாகச் சொல்லப்படுகிறான்.(9) மேலும், அனைத்திற்கும் சாட்சியாக இருப்பதன் விளைவாலும், தன்னைத் தவிர வேறு எதுவும் இல்லாததன் விளைவாலும், பிரகிருதியுடன் தன்னை அடையாளம் காணும் தன் நினைவின் விளைவாலும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், அத்யாத்மாவை அறிந்தவர்களும், அனைத்து வகை நோயில் இருந்தும் விடுபட்டவர்களுமான யதிகள், தன்னைத் தவிர இரண்டாமவன் இல்லாதவனும், மாற்றமில்லாதவனும், (காரணத்தின் வடிவில்) புலப்படாதவனும், நிலையற்றவனும், (விளைவுகளின் வடிவில்) புலப்படுபவனுமாக அவனை {புருஷனைக்} கருதுகிறார்கள்.(10) இதையே நாம் கேள்விப்படுகிறோம். எனினும் ஞானத்தை மட்டுமே (தங்கள் விடுதலைக்கு {முக்திக்கு}) சார்ந்திருப்பவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களுமான சாங்கியர்கள், பிரகிருதி ஒன்றே, புருஷர்கள் பலர் என்று சொல்கிறார்கள்[3].(11) உண்மையில், நிலையற்றதாக இருந்தாலும், நிலையாகத் தோன்றும் பிரகிருதியில் இருந்து புருஷன் வேறுபட்டவனாக இருக்கிறான். நாணற்குச்சியானது, வெளிப்புற உறையில் {தர்ப்பையில்} இருந்து வேறுபட்டிருப்பதைப் போலவே புருஷனும் பிரகிருதியில் இருந்து வேறுபட்டிருக்கிறான்.(12)உண்மையில், அத்திக்குள் பதுங்கியிருக்கும் புழுவானது, அத்தியில் இருந்து வேறுபட்டதாகவே அறியப்பட வேண்டும். அந்தப் புழுவானது அத்திக்குள் இருந்தாலும், அஃது ஒரு போதும் அந்த அத்தியின் ஒருபகுதியாகக் கருதப்படுவதில்லை.(13) மீனானது, தான் வாழும் நீரில் இருந்து வேறுபட்டது, அதே போல நீரும், தன்னில் வாழும் மீனில் இருந்து வேறுபட்டதாகும். மீனும், நீரும் ஒன்றாகவே இருந்தாலும் அஃது ஒருபோதும் நீரால் நனைக்கப்படுவதில்லை.(14) மண்கடாயில் {உகையில்} உள்ள நெருப்பானது அந்தக் கடாயில் இருந்து வேறுபட்டது, அந்தக் கடாயும் தான் கொண்டிருக்கும் நெருப்பிலிருந்து வேறுபட்டதாகும். நெருப்பு அந்தக் கடாயில் இருந்தாலும், அஃது ஒருபோதும் அதன் பகுதியாகக் கருதப்பட முடியாது.(15) நீரில் மிதக்கும் தாமரை இலையானது, தான் மிதக்கும் நீரில் இருந்து வேறுபட்டதாகும். நீருடன் அஃது உடனுறைந்திருந்தாலும், அஃது ஒருபோதும் நீரின் ஒருபகுதியாகாது.(16)

இவ்வாறு குறிப்பிடப்படுபவை அந்தந்தப் பொருட்களில் நிலையாக உடனிருப்பது, சாதாரண மக்களால் ஒருபோதும் சரியாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை[4].(17) பிரகிருதியையும், புருஷனையும் வேறு எவ்வொளியிலும் காண்போர், பார்வைப்பிழை கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் பயங்கர நரகில் நிச்சயம் மூழ்குகிறார்கள்.(18) அனைத்துப் பொருட்களையும் சரியாக உறுதி செய்யும் சிறந்த அறிவியலான சாங்கியர்களின் தத்துவத்தையே நான் உனக்குச் சொன்னேன். சாங்கியர்கள், புருஷன் மற்றும் பிரகிருதியின் இயல்பை இவ்வழியில் உறுதி செய்து கொண்டே விடுதலையை {முக்தியை} அடைகிறார்கள்.(19) அண்டத்தின் பெருங்கோட்பாடுகளை அறிந்த பிற அமைப்புகளைக் குறித்தும் நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். இனி நான் யோகிகளின் அறிவியலைக் குறித்து உனக்குச் சொல்கிறேன்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(20)

யோகம்! – சாந்திபர்வம் பகுதி – 317-யோக நிலைகளான சகுண பிராணாயாமம், நிர்க்குண பிராணாயாமம், சமாதி ஆகியவை குறித்தும் யோகிகளின் தத்துவம் குறித்தும் ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்…

யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனுக்கு}, “நான் சாங்கியர்களின் அறிவியலை உனக்குச் சொன்னேன். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இப்போது, யோகிகளின் அறிவியலை நான் கேள்விப்பட்டவகையிலும், பார்த்த வகையிலும் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(1) சாங்கிய ஞானத்தோடு ஒப்பிடத்தக்க வகையில் வேறு ஞானம் ஏதும் இல்லை. யோக பலத்தோடு ஒப்பிடத்தக்க வகையில் வேறு பலம் ஏதும் கிடையாது. ஒரே நடைமுறைகளை விதிக்கும் இவ்விரண்டும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கவல்லவையாகக் கருதப்படுகின்றன.(2) புத்தியால் அருளப்படாத மனிதர்களே சாங்கிய மற்றும் யோக அமைப்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டிருப்பதாகக் கருதுகிறார்கள். எனினும், ஓ! மன்னா, அவற்றை (கற்று, சிந்தித்த பிறகு) நாம் அடையும் தீர்மானத்தின்படி அவற்றை ஒன்றாகவே நாம் காண்கிறோம்.(3) சாங்கியர்கள் பார்ப்பதையே யோகிகளும் பார்க்கிறார்கள். சாங்கியம் மற்றும் யோக அமைப்புகளை ஒன்றாகக் காண்பவன், அண்டத்தை விதிக்கும் தத்துவங்கள், அல்லது கோட்பாடுகளை உண்மையில் அறிந்தவனாகக் கருதப்படுகிறான்.(4)

ஓ! மன்னா {தேவராதனா}, உயிர் மூச்சுகளும், புலன்களுமே யோகம் பயில்வதற்கான முக்கிய வழிமுறைகள் என்பதை அறிவாயாக. அந்த உயிர் மூச்சுகளையும், புலன்களையும் ஒழுங்கு செய்வதன் மூலம் மட்டுமே யோகிகள் தங்கள் விருப்பப்படி எங்கும் திரிகிறார்கள்[1].(5) பருவுடல் அழிவடையும்போது, (அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் முதலிய அட்டமா சித்திகளான) எட்டு யோக குணங்களைக் கொண்ட நுண்ணுடல்களுடன் அனைத்து வகை இன்பநிலைகளையும் (அவ்வுடலால்) அனுபவித்தபடியே அண்டத்தில் திரிகிறார்கள்.(6)

யோக பலம் எட்டு வகையெனச் சாத்திரங்களில் ஞானிகள் சொல்லியிருக்கின்றனர். அவர்கள் யோகத்தை எட்டு அங்கங்களைக் கொண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்[2].(7) உண்மையில், ஓ! மன்னா, அவர்கள் வேறு எவ்வகை யோகத்தைக் குறித்தும் பேசவில்லை. யோகிகளின் சிறந்த நடைமுறைகளில் (அவற்றின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு) இரண்டுவகை உண்டு எனச் சொல்லப்படுகிறது. சாத்திரங்களில் தோன்றும் குறியீடுகளின்படி அவை, குணங்களுடன் கூடிய நடைமுறை {சகுணயோகம்} மற்றும் குணங்களில் இருந்து விடுபட்ட நடைமுறை {நிர்க்குணயோகம்} என்று இருவகைப்படும்.(8)ஓ! மன்னா {தேவராதனா}, மூச்சை அடுத்தடுத்து ஒழுங்குசெய்து, (குறிப்பிட்ட பதினாறு பொருட்களில்) மனத்தைக் குவிப்பது (ஒரு வகை {யோகம்} ஆகும்). காலம் நெடுகிலும் புலன்களை அடக்கி (தியானிப்பவர், தியானிக்கப்படும் பொருள் ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் அனைத்தையும் அழிக்கும் வழியில்) மனத்தைக் குவிப்பது (மற்றொரு வகை {யோகம்} ஆகும்). முதல் வகை யோகம் குணங்களைக் கொண்டதாக {சகுண யோகமாகச்} சொல்லப்படுகிறது; இரண்டாம் வகைக் குணங்களில் இருந்து விடுபட்டதாக {நிர்க்குண யோகமாகச்} சொல்லப்படுகிறது[3].(9) மேலும் மூச்சை ஒழுங்குமுறை செய்தல் குணங்களுடன் கூடிய யோகமாகும். குணங்களற்ற யோகத்தில் மனமானது, அதன் செயல்பாடுகளில் இருந்து விடுபட்டு நிலைத்திருக்க {குவிந்திருக்க} வேண்டும். ஓ! மிதிலையின் ஆட்சியாளா {தேவராதனா}, (உள்ளிழுத்து நிறுத்தப்படும்) மூச்சானது, (வரையறுக்கப்பட்ட மந்திரத்தின் மூலம்) ஒரு திட்டவட்டமான தோற்றத்தின் மீது மனத்தைச் செலுத்தாமல் வெளியேற்றப்பட்டால், அந்தப் புதிய பயிற்சியாளனின் {உடல்} அமைப்பில் காற்று {வாயு} பெருகி, அவனுக்குப் பெரும் தீங்கை இழைக்கும் என்பதால், குணங்களுடன் கூடிய மூச்சுப் பயிற்சி {சகுண பிராணாயாமம்} மட்டுமே அவனால் முதலில் செய்யப்பட வேண்டும்[4].(10) இரவின் முதல் யாமத்தில் {ஜாமத்தில்}, மூச்சைப் பிடிக்கும் பனிரெண்டு வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உறங்கிய பிறகு, இரவின் இறுதி யாமத்தில், அதையே செய்வதற்கு வேறு பனிரெண்டு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.(11) அமைதியாக இருப்பவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், ஓய்வில் வாழ்பவனும், தன்னில் மகிழ்பவனும், சாத்திரங்களின் கருத்துகளை முழுமையாக அறிந்தவனுமான ஒருவன், (இந்த இருபத்துநான்கு வழிமுறைகளின் மூலம் மூச்சை ஒழுங்குபடுத்தி) தனது ஆன்மாவை (பரமாத்மாவில்) நிலைநிறுத்த வேண்டும்[5].(12)ஐம்புலன்களின் ஐந்து களங்கங்களான ஒலி, வடிவம், ஊறு {தீண்டல்}, சுவை மற்றும் மணத்தை (அவற்றை அவை நுகரும் பொருட்களில் இருந்து விலகச் செய்து) களைந்து,(13) ஓ! மிதிலையின் ஆட்சியாளா, பிரதீபம், அபபங்கம் என்றழைக்கப்படும் நிலைகளைக் களைந்து, புலன்கள் அனைத்தும் மனத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.(14) ஓ! மன்னா, மனமானது நனவுநிலையில் {அகங்காரத்தில்} நிலைநிறுத்தப்பட வேண்டும்; நனவுநிலையானது புத்தியில் நிலைநிறுத்தப்பட வேண்டும்; புத்தியானது பிரகிருதியில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.(15) இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக இவற்றைக் கலக்கும் யோகிகள், ஒன்றேயானவனும், ரஜஸ் குணத்தில் இருந்து விடுபட்டவனும், களங்கமற்றவனும், நிலையானவனும், எல்லையற்றவனும், தூய்மையானவனும், குறையற்றவனும்,(16) நித்தியபுருஷன் என்றழைக்கப்படுபவனும், மாற்றமில்லாதவனும், பிரிக்கப்பட முடியாதவனும், சிதைவும், அழிவும் அற்றவனும், எப்போதும் இருப்பவனும், குறைவைக் கடந்தவனும், நிலையான பிரம்மமுமான பரமாத்மாவைத் தியானிக்கிறார்கள்.(17)

ஓ! ஏகாதிபதி, யோகத்தில் இருப்பவனின் குறியீடுகளைக் குறித்து இப்போது கேட்பாயாக. சமாதியில் இருப்பவனிடம் நிறைவாக உறங்குபவனிடம் காணப்படும் நிறைவும் மற்றும் உற்சாகக் குறியீடுகள் அனைத்தும் இருக்கும்.(18) சமாதியில் இருப்பவன், எண்ணெய் நிறைந்ததும், காற்று இல்லாத பகுதியில் எரிவதுமான விளக்கின் நிலைத்த மேல்நோக்கிய தழலைப் போலத் தெரிவான் என ஞானிகள் சொல்கின்றனர்.(19) மேகங்களில் இருந்து கனமழை பொழிந்தாலும், சற்றும் அசைக்கப்பட முடியாத ஒரு பாறையைப் போலவே அவன் இருப்பான்.(20) சங்கங்கள், பேரிகைகள், அல்லது பாடல்கள் அல்லது நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளின் ஒலி ஒன்றாக முழங்கும்போதும் அந்த ஆரவாரத்தால் அசைக்கப்பட முடியாதவனாக அவன் இருப்பான். இதுவே சமாதியில் இருப்பவனின் குறியீடாகும்.(21)

பதற்றமற்ற துணிவும், உறுதிப்பாடும் கொண்ட மனிதன், தன் கரங்களில் எண்ணெய் நிறைந்த பாத்திரத்துடன் படிகளில் ஏறும்போது, ஆயுதம் தரித்த மனிதர்களால் அச்சுறுத்தப்பட்டாலும், ஒரு துளி எண்ணெயையும் சிந்த விடாததைப் போலவே ஒரு யோகியும், தன் மனம் குவிந்த சமாதி நிலையில் பரமாத்மாவைக் காணும்போது, தன் புலன்களின் செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தியிருப்பதன் விளைவால் சற்றும் அசையாதவனாக இருப்பான். இதுவும் சமாதியில் இருக்கும் யோகியின் குறியீடாக அறியப்பட வேண்டும்.(22-24)

சமாதியில் இருக்கும்போது அந்த யோகி, நிலையானதும், அடர்ந்த இருளுக்கு மத்தியில் சுடர்மிக்க ஒளியாக இருப்பதுமான பரப்பிரம்மத்தைக் காண்கிறான்.(25) இவ்வழிமுறைகளின் மூலமே அவன் பல வருடங்கள் சென்றதும், தன் உயிரற்ற உடலைக் கைவிட்டு விடுதலையை {முக்தியை} அடைகிறான். இதையே நித்யமான ஸ்ருதி அறிவிக்கிறது.(26) இதுவே யோகிகளின் யோகம் என்று அழைக்கப்படுகிறது. அது வேறென்ன? ஞானம் கொண்டவர்கள் இஃதை அறிந்தே, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களாகத் தங்களைக் கருதுகிறார்கள்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(27)

மரணக்குறியீடுகள்! – சாந்திபர்வம் பகுதி – 318-உயிர் வெளியேறும் உறுப்புகள் குறிப்பிடும் கதி; மரணக் குறியீடுகள் ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்…

யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, “ஓ! மன்னா, மரணமடைபவர்கள் செல்லும் இடங்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன், கவனத்துடன் கேட்பாயாக. ஜீவாத்மா கால்களின் வழியே வெளியேறினால் அந்த மனிதன் விஷ்ணுலோகத்திற்குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது.(1) ஆடுதசைகளின் வழியே வெளியேறினால் அவன் வசுக்களின் உலகத்திற்குச் செல்கிறான் என நாம் கேள்விப்படுகிறோம். முழங்கால் முட்டிகளின் வழியே வெளியேறினால் அவன் சத்யஸ்கள் என்றழைக்கப்படும் தேவர்களின் தோழமையை அடைகிறான்.(2) குதத்தின் வழியே வெளியேறினால் அந்த மனிதன் மித்ரனின் உலகத்தை அடைகிறான். பின்தட்டுகளின் வழியே வெளியேறினால் அம்மனிதன் பூமிக்குத் திரும்புகிறான். தொடைகளின் வழியே வெளியேறினால் அவன் பிரஜாபதியின் உலகத்திற்குச் செல்கிறான்.(3)

விலாக்களின் வழியே வெளியேறினால், அம்மனிதன் மருத்துகளின் உலகத்திற்கும்,
மூக்குத்துளைகளின் வழியே வெளியேறினால் சந்திரனின் உலகத்திற்கும் செல்கிறான்.
கரங்களின் வழியே வெளியேறினால் அம்மனிதன் இந்திரலோகத்திற்கும்,
மார்பு வழியே வெளியேறினால் ருத்ரலோகத்திற்கும் செல்கிறான்.(4) கழுத்தின் வழியே வெளியேறினால் அந்த மனிதன் நரன் என்ற பெயரில் அறியப்படும் முதன்மையான தவசியின் சிறந்த உலகத்திற்குச் செல்கிறான்.
வாயின் வழியே வெளியேறினால் அம்மனிதன் விஸ்வேதேவர்களின் உலகிற்கும்,
காதுகளின் வழியே வெளியேறினால் பல்வேறு திசைப்புக்களின் தேவர்களுடைய உலகத்திற்கும் செல்கிறான்.(5)
மூக்கின் வழியே என்றால் வாயுதேவனின் உலகத்திற்கும்;
கண்களின் வழியேயென்றால் அக்னிலோகத்திற்கும் அம்மனிதன் செல்கிறான்.
புருவங்களின் வழியேயென்றால் அஸ்வினிலோகத்திற்கும்,
நெற்றியின் வழியேயென்றால் பித்ருலோகத்திற்கும் அம்மனிதன் செல்கிறான்.(6)ஓ! மிதிலையின் ஆட்சியாளா,
உச்சந்தலையின் வழியே வெளியேறினால், அம்மனிதன் தேவர்களில் முதன்மையானவனும், பலமிக்கவனுமான பிரம்மனின் உலகத்திற்குச் செல்கிறான். ஜீவாத்மாக்கள் தங்கள் உடல்களில் இருந்து வெளியேறும் வழிகளின்படியே மனிதர்கள் செல்லும் பல்வேறு இடங்களைக்குறித்து நான் உனக்குச் சொன்னேன்.(7)

வாழ்வதற்கு ஒருவருடம் மட்டுமே கொண்டவர்களைக் குறித்து ஞானிகளால் விதிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை குறியீடுகளை {மரணக் குறியீடுகளை / அரிஷ்டங்களை} இப்போது நான் சொல்லப் போகிறேன்.(8) அருந்ததி என்றழைக்கப்படும் நிலையான விண்மீனை முன்பே கண்டும், துருவம் என்றழைக்கப்படும் மற்றொரு விண்மீனைக் காணத் தவறும் ஒருவனுக்கு, அல்லது முழு நிலவையோ, எரியும் விளக்கின் தழலையோ தென்புறம் நோக்கி உடைந்திருப்பதைப் போலக் காணும் ஒருவனுக்கு வாழ்வதற்கு ஒரு வருடம் மட்டுமே உண்டு {அவர்கள் ஒரு வருடத்திற்கு மேல் இறந்து விடுவார்கள் என்பது பொருள்}.(9) ஓ! மன்னா, பிறரின் கண்களில் பிரதிபலிக்கப்படும் தங்கள் தோற்றங்களைக் காண முடியாத மனிதர்கள் வாழ்வதற்கு ஒரு வருடம் மட்டுமே உண்டு.(10)

காந்தியுடன் கூடிய ஒருவன் அஃதை இழப்பது, அல்லது ஞானத்துடன் கூடியவன் அஃதை இழப்பது என இவ்வாறு தங்கள் அக மற்றும் புற இயல்பில் மாற்றம் கொண்ட ஒருவன் வாழ்வதற்கு ஆறு மாதங்கள் மட்டுமே உண்டு.(11) தேவர்களை அவமதிப்பவன், அல்லது பிராமணர்களிடம் சச்சரவு செய்பவன், அல்லது, இயல்பாகக் கரிய நிறம் கொண்டிருந்தும் வெண்ணிறம் அடையும் ஒருவன் வாழ்வதற்கு ஆறு மாதங்கள் மட்டுமே உண்டு.(12)

சிலந்தி வலையைப் போலச் சந்திரனில் பல துளைகளைக் காணும் ஒருவன், அல்லது அதே போன்ற துளைகளைச் சூரியனில் காணும் ஒருவன் வாழ்வதற்கு ஒரு வாரம் மட்டுமே உண்டு.(13) வழிபாட்டுக்குரிய இடங்களில் நுகரும் நறுமணத்தைச் சவங்களின் நாற்றத்தைப் போல உணர்பவன் வாழ்வதற்கு ஒரு வாரம் மட்டுமே உண்டு.(14)

மூக்கு, அல்லது காதுகள் தளர்வது {வளைவது}, பற்கள் மற்றும் கண்கள் நிறமிழப்பது {அவற்றில் பசையற்றுப் போதல்}, நினைவுகள் அனைத்தையும் இழப்பது, உடல் வெப்பமனைத்தையும் இழப்பது ஆகியன அந்த நாளே ஏற்படப்போகும் மரணத்தைக் குறிப்பிடும் அறிகுறிகளாகும்.(15)

உணரத் தக்க எந்தக் காரணமுமின்றி இடது கண்ணில் இருந்து திடீரெனக் கண்ணீர் சிந்துவது, ஒருவனுடைய தலையில் இருந்து ஆவி வெளியேறுவது போலக் காணப்படுவது ஆகியன அந்த நாள் முடிவடைவதற்குள் அந்த மனிதன் இறக்கப் போகிறான் என்பதற்கான உறுதியான அறிகுறிகளாகும்.(16)

இந்த முன்னெச்சரிக்கை அறிகுறிகள் அனைத்தையும் அறிந்து கொள்பவனும், தூய்மையான ஆன்மாகக் கொண்டவனுமான மனிதன், பகலும், இரவும் தன் ஆன்மாவை பரமாத்மாவோடு (சமாதியில்) கலக்க வேண்டும்.(17) இவ்வாறே அவன் அழிய வேண்டிய நாள்வரை செயல்பட வேண்டும். எனினும் அவன் இறக்க விரும்புவதற்குப் பதில் இவ்வுலகில் வாழ விரும்பினால், ஓ! மன்னா, மணம் மற்றும் சுவைகள் அனைத்திலும் உள்ள இன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, துறவியாக வாழ வேண்டும்.(18,19)

உண்மையில், ஓ! ஏகாதிபதி, ஆன்ம ஞானத்தால் அருளப்பட்ட மனிதன், சாங்கியர்களால் பரிந்துரைக்கப்படும் வாழ்வுமுறையை நடைமுறையாக்கி, தன் ஆத்மாவைப் பரமாத்மாவுடன் கலப்பதன் மூலம் மரணத்தை வெல்கிறான்.(20) இறுதியாக அவன், முற்றிலும் அழிவற்றதும், பிறப்பற்றதும், மங்கலமானதும், மாற்றமில்லாததும், நித்தியமானதும், நிலையானதும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் அடைய முடியாததுமான நிலையை அடைகிறான்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(21)

பரமஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 319-சூரியனிடமிருந்து யஜுர் வேதத்தை அடைந்தது; கந்தர்வ மன்னன் விஸ்வாவசுவின் இருபத்தைந்து கேள்விகள்; அவற்றுக்குத் தாம் அளித்த விடைகள்; பிரகிருதி, ஜீவாத்மா, பரமாத்மா தொடர்புடைய மோக்ஷ அறிவியல்; ஆகியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்…

யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, “ஓ! ஏகாதிபதி, புலப்படாததில் {அவ்யக்தத்தில்} வசிக்கும் பரப்பிரம்மத்தைக் குறித்து நீ என்னிடம் கேட்டாய். உன் கேள்வி ஆழ்ந்த புதிருடன் தொடர்புடையதாகும். ஓ! மன்னா, குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, முனிவர்களால் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பணிவுள்ளவனாக என்னை ஒழுங்கு செய்து கொண்டு சூரியனிடமிருந்து நான் யஜுஸ்களை {யஜுர் வேதத்தைப்} பெற்றேன்.(2) முன்பு நான், வெப்பம் தரும் தேவனை {சூரியனைத்} துதித்தபடியே கடுந்தவத்தில் ஈடுபட்டேன். ஓ! பாவமற்றவனே, என்னிடம் நிறைவடைந்த பலமிக்கச் சூரியன், என்னிடம்,(3) “ஓ! மறுபிறப்பாள முனிவரே, எவ்வளவுதான் அடைவதற்கரிதாக இருந்தாலும் எதில் உமது இதயத்தை நிலைபெறச் செய்திருக்கிறீரோ, அந்த வரத்தைக் கேட்பீராக. உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் நான் அஃதை உமக்கு அருள்வேன். எனது அருளை அடைவது மிக அரிதானதாகும்” என்றான்.(4)

வெப்பம் தரும் ஒளிக்கோள்களின் முதன்மையானவனுக்கு {சூரியனுக்குத்} தலைவணங்கிய நான் இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னேன், “எனக்கு யஜுஸ்களைக் குறித்து எந்த அறிவும் கிடையாது. தாமதமேதுமின்றி நான் அவற்றை அறிய விரும்புகிறேன்” என்றேன்.(5)

இவ்வாறு கேட்கப்பட்ட அந்தப் புனிதனமானவன் என்னிடம், “நான் உமக்கு யஜுஸ்களைக் கொடுப்பேன். வாக்கையே சாரமாகக் கொண்ட தேவி சரஸ்வதி உமது உடலுக்குள் நுழைவாள்” என்று சொன்னான்.(6)

பிறகு அந்தத் தேவன், எனது வாயைத் திறக்குமாறு ஆணையிட்டான். ஆணையிடப்பட்டவாறே நானும் செய்தேன். ஓ! பாவமற்றவனே, தேவி சரஸ்வதி என்னுடலுக்குள் நுழைந்தாள்.(7) இதனால் நான் எரியத் தொடங்கினேன். தாங்கவொண்ணா வலியால் நான் ஓர் ஓடையில் விழுந்தேன். உயர் ஆன்ம சூரியன் எனக்குச் செய்த நன்மையைப் புரிந்து கொள்ளாத நான் அவனிடம் கோபமடைந்தேன்.(8)

தேவியின் சக்தியால் நான் எரிந்து கொண்டிருந்தபோது, புனிதமான சூரியன் என்னிடம், “இந்த எரிச்சல் உணர்வை சற்றே பொறுத்திருப்பீராக. இது விரைவில் தணிவடையும், நீரும் குளிர்வடைவீர்” என்றான்.(9) உண்மையில் நான் குளிர்வடைந்தேன். ஒளியைச்செய்பவன் {சூரியன்}, சுகம் மீண்ட என்னைக் கண்டு, என்னிடம், “ஓ! மறுபிறப்பாளரே, மொத்த வேதங்களும், பிற்சேர்க்கையாகக் கருதப்படும் பிற பகுதிகளும் {கில மந்திரங்களும்}, உபநிஷத்துக்களும் உள்ளொளியால் உமக்குத் தோன்றும்.(10) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, மொத்த சதபதங்களையும் {சதபத பிராம்மணங்களையும்} நீர் தொகுக்கப் போகிறீர். அதன் பிறகு உமது புத்தி, விடுதலையின் {முக்தியின்} பாதையில் திரும்பும்.(11) சாங்கியர்கள் மற்றும் யோகியர்கள் இருவராலும் ஆசைப்படப்படுவதும், விரும்பப்படுவதுமான கதியையும் நீர் அடைவீர்” என்றான். இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்ன அந்தத் தெய்வீகமான சூரியன் அஸ்த மலைகளுக்குச் சென்றான்.(12)

அவனது இறுதி வார்த்தைகளைக் கேட்டு, நான் இருந்த இடத்தில் இருந்து அவன் சென்ற பிறகு, மகிழ்ச்சியாக இல்லம் திரும்பி தேவி சரஸ்வதியை நான் நினைவுகூர்ந்தேன்.(13) என்னால் நினைக்கப்பட்டதும், உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்துகளால் அலங்கரிக்கப்பட்டவளும், ஓம் என்ற ஓரசையை {ஓங்காரத்தைத்} தன் முன்னிலையில் கொண்டவளுமான மங்கலகரமான சஸ்வதி என் கண்களுக்கு முன்பாக உடனே தோன்றினாள்.(14) பிறகு நான் விதிப்படி அந்தத் தேவிக்கு வழக்கமான அர்க்கியத்தையும், வெப்பம் தரும் தேவர்களில் முதன்மையான சூரியனுக்கு மற்றொன்றையும் அர்ப்பணித்தேன். இந்தக் கடமையைச் செய்துவிட்டு, அவ்விரு தேவர்களிடமும் அர்ப்பணிப்புடன் என் இருக்கையில் அமர்ந்தேன். அதன்பேரில் மொத்த சதபத பிராம்மணங்களும், அவற்றின் புதிர்கள், அவற்றின் சுருக்கங்கள், அவற்றின் பிற்சேர்க்கைகள் ஆகியனவும் என் மனக்காட்சியில் தானே தோன்றியதால், நான் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தேன்.(16)

நற்சீடர்களான நூறு பேருக்கு நான் அவற்றைக் கற்பித்தேன், அதன்காரணமாக, தன் சீடர்களால் சூழப்பட்டவரும், உயர் ஆன்மா கொண்டவருமான என் தாய்மாமனுக்கு (வைசம்பாயனருக்கு) ஏற்பில்லாததைச் செய்தேன்[1].(17) பிறகு, ஓ! மன்னா {தேவராதா}, கதிர்களுக்கு மத்தியில் உள்ள சூரியனைப் போலவே, என் சீடர்களுக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்த நான், உனது உயர் ஆன்ம தந்தையுடைய {ஜனகனுடைய} வேள்வியின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டேன்.(18) அந்த வேள்வியில், வேதங்களை ஓதியதற்காகக் கொடுக்கப்படும் தக்ஷிணையை யார் பெறுவது என்பதில் எனக்கும், என் தாய்மாமனுக்கும் {வைசம்பாயனருக்கும்} இடையில் ஒரு சச்சரவு ஏற்பட்டது.(19) தேவலரின் முன்னிலையிலேயே நான் தக்ஷிணையில் பாதியை எடுத்துக் கொண்டேன் (மற்றொரு பாதி என் தாய்மாமனுக்குச் சென்றது).(19) உன் தந்தை {ஜனகன்}, சுமந்தர், பைலர், ஜைமினி மற்றும் பிற தவசிகள் அனைவரும் அந்த ஏற்பாட்டுக்கு உடன்பட்டனர்[2].(20)ஓ! ஏகாதிபதி, நான் இவ்வாறே சூரியனிடம் இருந்து பத்து யஜுஸ்களை ஐந்து முறை {அதாவது ஐம்பது சாகைகளைப்} பெற்றேன். பிறகு நான் ரோமஹர்ஷனுடன் சேர்ந்து புராணங்களைக் கற்றேன்.(21) ஓ! மன்னா, அந்த (மூல) மந்திரங்கள் மற்றும் தேவி சரஸ்வதியுடன், சூரியனிடம் கிடைத்த உத்வேகத் துணையால், சிறந்த சதபத பிராம்மணங்களைத் தொகுப்பதில் என்னை நிறுவிக் கொண்டு, அதற்கு முன்பு வேறு எவராலும் செய்யப்படாத பணியைச் செய்வதில் வெற்றியை அடைந்தேன். நான் விரும்பிய பாதையைப் பின்பற்றினேன், அதையே என் சீடர்களுக்கும் கற்பித்தேன்.(22,23) உண்மையில், மொத்த வேதங்களும், அவற்றின் சுருக்கங்களும் என்னால் என் சீடர்களுக்குச் சொல்லப்பட்டன. என் போதனைகளின் விளைவால், மனம் மற்றும் உடல் தூய்மையடைந்த என் சீடர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(24) நான் சூரியனிடம் இருந்து பெற்ற ஐம்பது அங்கங்களைக் கொண்ட இந்த ஞானத்தை நிலைநிறுத்திய பிறகு, அந்த ஞானத்தின் பெரும்பொருளை {பிரம்மத்தை} இப்போது தியானித்துக் கொண்டிருக்கிறேன்.(25)

ஓ! மன்னா {தேவராதா}, வேதாந்த சாத்திரங்களை நன்கறிந்தவனான கந்தர்வன் விஸ்வாவசு, இந்த ஞானத்தால் பிராமணர்களுக்குக் கிட்டும் நன்மை, அதிலிருக்கும் உண்மை, இந்த ஞானத்தின் சிறந்த நோக்கம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்காக என்னிடம் ஒரு காலத்தில் கேள்விகளைக் கேட்டான். ஓ! மன்னா வேதங்கள் தொடர்பாக மொத்தம் இருபத்து நான்கு கேள்விகளை அவன் என்னிடம் கேட்டான். இறுதியில் உள்ளுணரும் ஆய்வுமுறை குறித்த ஞானக் கிளை {மனனமெனும் யுக்தி} தொடர்பாக அவன் இருபத்தைந்தாவது கேள்வியையும் கேட்டான். அக்கேள்விகள் பின்வருமாறு: “அண்டம்{1} மற்றும் அண்டமற்றது{2} {விஷ்வாவிஷ்வம்} என்றால் என்ன? அஸ்வாம் {புருஷன்}{3} மற்றும் அஸ்வம் {பிரகிருதி}{4} என்றால் என்ன? மித்திரன்{5} என்றால் என்ன? வருணன்{6} என்றால் என்ன?(26-28) ஞானம்{7} என்றால் என்ன? ஞானத்தின் பொருள் {ஞேயம்}{8} என்றால் என்ன? புத்தியற்றது {அஜஞன் / அறியாதவன்}{9} என்றால் என்ன? புத்தியுடன் கூடியது {ஞன் / அறிகின்றவன்}{10} என்றால் என்ன? கம் {ஆனந்தம்}{11} என்றால் என்ன? மாற்றக் கொள்கை {தபஸ் / ஆலோசனை}{12} என்றால் என்ன? அஃது இல்லாதது {அதபஸ் / ஆலோசியாமை}{13} என்றால் என்ன? சூரியனை விழுங்குபவன்{14} மற்றும் சூரியன்{15} {ஸூர்யாதிஸூர்யர்கள்} என்றால் என்ன? வித்தை{16} மற்றும் அவித்யை{17} {வித்யாவித்யைகள்} என்றால் என்ன?(29) வேத்யம் {அறியக்கூடியது}{18} மற்றும் அவேத்யம் {அறியக்கூடாதது}{19} {வேத்யாவேத்யம்} என்றால் என்ன? அசைவற்றது {அசலம்}{20} மற்றும் அசைவுள்ளது {சலம்}{21} என்றால் என்ன? தொடக்கமற்றது {அக்ஷரம் / குறைவற்றது}{22}, அழிவற்றது {அவ்யயம்}{23}, அழியக்கூடியது {க்ஷேம்யம்}{24} ஆகியவை என்னென்ன?” {என்று கேட்டான்}. இந்தச் சிறந்த கேள்விகளே அந்த முதன்மையான கந்தர்வனால் {விஸ்வாவசுவால்} என்னிடம் கேட்கப்பட்டன.(30)

கந்தர்வர்களில் முதன்மையான மன்னன் விஸ்வாவசு, இந்தக் கேள்விகளை என்னிடம் ஒன்றன்பின் ஒன்றாகக் கேட்ட பிறகு, அவற்றுக்கு நான் முறையாகப் பதிலளித்தேன்.(31) எனினும் முதலில் நான் அவனிடம், “உன் கேள்விகளைக் குறித்து நான் சிந்திக்கும் வரை ஒரு குறுகிய {ஒரு முகூர்த்த} காலத்திற்குக் காத்திருப்பாயாக” என்று அவனிடம் சொன்னேன். “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அந்தக் கந்தர்வன் அமைதியாக அமர்ந்தான்.(32) அப்போது நான், தேவி சரஸ்வதியை மீண்டும் மனத்தால் நினைத்தேன். அந்தக் கேள்விகளுக்கான மறுமொழிகள், தயிரில் இருந்து வரும் நெய்யைப் போல இயல்பாகவே என் மனத்தில் எழுந்தன.(33) உள்ளுணரும் ஆய்வுமுறையெனும் உயர்ந்த அறிவியலை நோக்கில் கொண்ட நான், ஓ! ஏகாதிபதி, உபநிஷத்துகளையும், வேதங்கள் தொடர்பான துணை சாத்திரங்களையும் என் மனத்தால் கடைந்தேன்.(34) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ஏற்கனவே நான் உனக்குச் சொன்னதும், இருபத்தைந்தாவதான ஜீவனை அடிப்படையாகக் கொண்டதுமான விடுதலை {முக்தி} குறித்துச் சொல்லும் நான்காவது அறிவியலை அப்போது நான் அவனுக்கு விளக்கிச் சொன்னேன்[3].(35)ஓ! ஏகாதிபதி {தேவராதா}, மன்னன் விஸ்வாவசுவிடம் இவை அனைத்தையும் சொன்ன பிறகு நான் அவனிடம், “நீ என்னிடம் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு இப்போது பதிலளிக்கிறேன் கேட்பாயாக.(36) ஓ! கந்தர்வா, அண்டம் மற்றும் அண்டமற்றது {விஷ்வாவிஷ்வம்} என்றால் என்ன? என்று நீ கேட்ட கேள்விக்கு இப்போது பதிலளிக்கிறேன். அண்டமானது புலப்படாததாகவும் {அவ்யக்தமாகவும்}, (விடுதலையை {முக்தியை} விரும்புவோருக்குப்} பயங்கரமான பிறப்பிறப்புக் கோட்பாடுகளுடன் கூடிய மூலப் பிரகிருதியாகவும் இருக்கிறது.(37) மேலும் அது (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) முக்குணங்களால் நிறைந்த படைப்புக் கோட்பாடுகளைக் கொண்டிருப்பதன் விளைவால் அஃது {அண்டம் / விஷ்வம்} குணங்களுடையதாகவும் இருக்கிறது[4]. அண்டமற்றது {அவிஷ்வம்} என்பது குணங்களேதும் அற்ற புருஷனாகும். அஸ்வாம் மற்றும் அஸ்வம் ஆகியன, பெண் மற்றும் ஆணாகவும்,{38) முன்னது பிரகிருதியாகவும், பின்னது புருஷனாகவும் சொல்லப்படுகின்றன. அதேபோல, மித்ரன் என்பது புருஷனும், வருணன் என்பது பிரகிருதியுமாகின்றன[5].(39) மேலும் ஞானமானது பிரகிருதியாகவும், ஞானத்தின் பொருளாக அறியப்படுவது புருஷனாகவும் அழைக்கப்படுகின்றன. அறியாதது (ஜீவன்), அறிவது அல்லது புத்தி ஆகிய இரண்டும் குணங்களற்ற புருஷனாக இருக்கின்றன (ஏனெனில், புருஷன் அறியாமை கொள்ளும்போதே ஜீவனாகிறான்).(40)மாற்றக் கொள்கை கொண்டதாகவும் {தபஸ் / ஆலோசனை}, மாற்றக்கொள்கை இல்லாததாகவும் {அதபஸ் / ஆலோசனையற்றது} உள்ள கம் {ஆனந்தம்} குறித்து நீ கேட்டாய். நான் பதிலளிக்கிறேன், கம் என்பது புருஷனாகும்[6]. மாற்றக்கொள்கையுடன் கூடியது {தபஸ்} பிரகிருதியாகும். மாற்றக் கொள்கை இல்லாதது {அதபஸ்} புருஷனாகும்.(41) அதே போலவே, அவேத்யம் (அறியமுடியாதது) என்றழைக்கப்படுவது பிரகிருதியாகும்; வேத்யம் என்றழைக்கப்படுவது புருஷனாகும்.(42) அசைவற்றது {அசலம்} மற்றும் அசைவுள்ளது {சலம்} குறித்தும் நீ என்னிடம் கேட்டாய். என் பதில் என்ன என்பதைக் கேட்பாயாக. மாற்றங்களுக்கு உட்பட்டுப் படைப்பு மற்றும் அழிவுக்குக் காரணமாக இருக்கும் அசைவுள்ளது {சலமானது} பிரகிருதியாகும். மாற்றங்களுக்கு உட்படாமல் படைப்பு மற்றும் அழிவுக்குத் துணை புரிவதால் அசைவற்றது {அசலமானது} புருஷனாகும்.(43) (வேறொரு தத்துவ அமைப்பின்படி) வேத்யம் பிரகிருதியாகும்; அதே வேளையில் அவேத்யம் புருஷனாகும். பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டும் புத்தியற்றவையாகவும், நிலையானவையாகவும், அழிவற்றவையாகவும்,(44) பிறப்பற்றவையாகவும், நித்தியமானவையாகவும் அத்யாத்மம் என்ற பெயரில் உள்ள தத்துவங்களை அறிந்த தத்துவ ஞானிகள் கொண்ட தீர்மானங்களின் படியே அறியப்படுகின்றன.(45)படைப்பின் காரியத்தில், பிரகிருதி அழிவற்றதாக இருப்பதன் விளைவால், பிறப்பற்ற அந்தப் பிரகிருதி, சிதைவுக்கோ, அழிவுக்கோ உட்படாததாகக் கருதப்படுகிறது. மேலும் புருஷன், மாறாததாக இருப்பதால், அழிவற்றதாகவும், மாற்றமில்லாததாகவும் இருக்கிறது.(46) பிரகிருதியில் வசிக்கும் குணங்களே அழியத்தக்கன, பிரகிருதியானவள் அழியத்தக்கவளல்ல. மேலும் பிரகிருதியானது, மாற்றங்களுக்கு உட்பட்டு, படைப்புக்கான காரணமாகச் செயல்படுகிறது. படைக்கப்பட்ட விளைவுகளாவன தோன்றவும், மறையவும் செய்கின்றன, மூலப்பிரகிருதியோ தோன்றுவதுமில்லை, மறைவதுமில்லை. எனவே பிரகிருதி அழிவற்றது என அழைக்கப்படுகிறது. இவ்வாறே, உள்ளுணர்வு ஆய்வுமுறையின் அடிப்படையிலானதும், விடுதலையையே {முக்தியையே} கதியாகக் கொண்டதுமான நான்காம் அறிவியலை நான் சொல்லிவிட்டேன்.(47) ஓ! விஸ்வாவசு, உள்ளுணர்வு ஆய்வுமுறை அறிவியலின் மூலமும், ஆசான்களிடம் காத்திருந்தும், ரிக்குகள், சாமங்கள், யஜுஸ்கள், நோற்கப்பட வேண்டிய கடமைகளின் அனைத்து நடைமுறைகள் மற்றும் வேதங்கள் அனைத்தும் மதிப்புடன் கற்கப்பட வேண்டும்.(48) ஓ! கந்தர்வர்களில் முதன்மையானவனே, வேதங்களையும், அதன் கிளைகள் அனைத்தையும் கற்றாலும், அனைத்துப் பொருட்களும் தங்கள் பிறப்பைக் கொள்வதும், அழிவடையும்போது அனைத்துப் பொருட்களும் சென்று கலப்பதும், வேதம் போதிக்க முனையும் ஞானப் பொருளுமான பரமாத்மாவை அறியாதவர்களின், உண்மையில், வேதங்கள் நிறுவ முனைவதைக் குறித்து எந்த அறிவும் இல்லாதவர்களின் வேத கல்வியானது எந்நோக்கமும் இல்லாததாக, வீணான சுமையாகவே அவர்களுக்கு இருக்கும்.(49,50)

நெய்யை விரும்பும் மனிதன், தான் முனைவது என்ன என்பதைக் காணாமல், கழுதைப்பாலைக் கடைந்தால், உடல்கழிவின் இழிமணத்திற்கு ஒப்பான ஒரு பொருளையே அடைவான்.(51) அதைப் போலவே, வேதங்கற்ற ஒருவன், எது பிரகிருதி, எது புருஷன் என்பதைப் புரிந்து கொள்ளத் தவறினால், அவன் தன் மூடப் புத்தியை மட்டுமே உறுதிசெய்து, (வேதக் கதை எனும் வடிவிலான) பயனற்ற சுமையையே சுமக்கிறான்[7].(52) ஒருவன், மீண்டும் மீண்டும் பிறந்து இறப்பதைத் தவிர்ப்பதற்காகக் கவனமான அர்ப்பணிப்புடன், பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் சிந்திக்க வேண்டும்.(53) ஒருவனுக்கு மீண்டும் மீண்டும் பிறப்பிறப்புகள் நேர்வைக் குறித்துச் சிந்தித்து, அழியத்தக்க விளைவுகளை உண்டாக்கும் செயலறத்தைத் தவிர்த்து, அழிவற்ற யோக அறத்தை அவன் பின்பற்ற வேண்டும்.(54)ஓ! காசியபா[8], ஒருவன் ஜீவாத்மாவின் இயல்பையும், பரமாத்மாவுடன் அது கொண்டுள்ள தொடர்பையும் தொடர்ந்து சிந்திப்பதால், குணங்கள் அனைத்தையும் நீக்குவதிலும், பரமாத்மாவைக் காண்பதிலும் வெல்கிறான்.(55) மூடப் புத்தி கொண்ட மனிதர்களால் மட்டுமே, நித்தியமானதும், புலப்படாததுமான பரமாத்மாவானது, இருபத்தைந்தாவதிலிருந்து அல்லது ஜீவாத்மாவிலிருந்து வேறுபட்டதாகக் கருப்படுகிறது. ஞானத்துடன் கூடியவர்கள இவை இரண்டையும் உண்மையில் ஒன்றாகவே காண்கிறார்கள்.(56) மீண்டும் மீண்டும் நேரும் பிறப்பிறப்புகளை அஞ்சும் சாங்கியர்களும், யோகிகளும், ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் ஒன்றாகவே கருதுகிறார்கள்” என்றேன் {யாஜ்ஞவல்கியர் கந்தர்வன் விஸ்வாவசுவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்}.(57)அப்போது விஸ்வாவசு, “ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, ஜீவாத்மாவானது அழிவற்றது என்றும், உண்மையில் பரமாத்மாவில் இருந்து வேறாக இல்லாதது என்றும் நீர் சொல்கிறீர். எனினும், இதைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருக்கிறது. இக்காரியம் குறித்து மீண்டும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(58) இது குறித்து, ஜைகீஷவ்யர், அசிதர், தேவலர், மறுபிறப்பாள தவசியான பராசரர், நுண்ணறிவைக் கொண்டவரான {புத்திமானான} வார்ஷகண்யர், பிருகு, பஞ்சசிகர், கபிலர், சுகர், கௌதமர், ஆர்ஷ்டிஷேணர், உயர் ஆன்மாவான கர்க்கர், நாரதர், ஆஸுரி, நுண்ணறிவைக் கொண்டவரான புலஸ்தியர், ஸனத்குமாரர், உயர் ஆன்மாக் கொண்ட சுக்கிரர் மற்றும் என் தந்தையான கசியபர் ஆகியோரின் உரையாடல்களை நான் கேட்டிருக்கிறேன். அதற்கடுத்து, ருத்திரன் மற்றும் நுண்ணறிவுமிக்க விஸ்வரூபர், பல்வேறு தேவர்கள், பித்ருக்கள் மற்றும் தைத்தியர்கள் இது குறித்த செய்த உரையாடல்களையும் நான் கேட்டிருக்கிறேன். ஞானங்கள் அனைத்தின் நித்திய பொருளையே அவர்கள் பொதுவாக உரையாடுவதால், நான் அவர்கள் சொல்லும் அனைத்தையும் அடைந்திருக்கிறேன்.(59-63)

எனினும், உமது நுண்ணறிவின் துணை கொண்டு அவற்றைக் குறித்து நீர் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன். நீர் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவராகவும், சாத்திரங்களைக் கற்பிக்கும் கல்விமானாகவும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவராகவும் இருக்கிறீர்.(64) நீர் அறியாதது ஏதுமில்லை. ஓ! பிராமணரே, தேவர்கள் மற்றும் பித்ருக்களின் உலகங்களின் விளக்கப்படும் ஸ்ருதிகளின் பெருங்கடலாக நீர் இருக்கிறீர்.(65) ஒளிக்கோள்கள் அனைத்தின் நித்திய தலைவனான ஆதித்தியனே (இந்த ஞானக்கிளையின் காரியத்தில்) உமது ஆசான் என்று பிரம்மலோகத்தில் வசிக்கும் பெரும் முனிவர்கள் சொல்கின்றனர்.(66) ஓ! யாஜ்ஞவல்கியரே, ஓ! பிராமணரே, சாங்கியர்களின் மொத்த அறிவியலையும், அதிலும் குறிப்பாக யோகிகளின் சாத்திரங்களையும் நீர் அடைந்திருக்கிறீர்.(67) அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டம் குறித்து முழுமையாக அறிந்த நீர், விழிப்படைந்த ஞானத்தைக் கொண்டவர் என்பதில் ஐயமில்லை. தயிரிலிருந்து வெண்ணையைத் திரட்டி எடுப்பதைப் போல அந்த ஞானத்தைக் (குறித்து நீர் உரையாடுவதை நான்) கேட்க விரும்புகிறேன்” என்றான் {கந்தர்வன் விஸ்வாவசு}.(68)

யாஜ்ஞவல்கியர் {ஆகிய நான்}, “ஓ! கந்தர்வர்களில் முதன்மையானவனே, நீ ஞானங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளவல்லவனாவாய். எனினும், நீ கேட்பதால், என் ஆசானிடமிருந்து {சூரியனிடமிருந்து} பெற்ற வகையிலேயே நான் உனக்குச் சொல்கிறேன்.(69) புத்தியற்ற பிரகிருதியானது, ஜீவனால் உணரப்படுகிறது. எனினும், ஓ! கந்தர்வா, ஜீவனைப் பிரகிருதியால் உணர முடியாது.(70) ஜீவனானது பிரகிருதியில் பிரதிபலிக்கப்படுவதன் விளைவால், பின்னது {பிரகிருதியானது} சாங்கியர்களாலும், ஸ்ருதிகளில் குறிப்பிடப்படும் மூலக் கோட்பாடுகளை அறிந்த யோகிகளாலும் பிரதானம் என்றழைக்கப்படுகிறது.(71) ஓ! பாவமற்றவனே, மற்றது {ஆத்மாவானது}, இருபத்துநான்காவதும் (பிரகிருதியும்}, இருபத்தைந்தாவதும் {ஆன்மாவும்) காணப்படுவதைக் காண்கிறது; இருபத்தாறாவது காணப்படுவதைக் காணாதிருக்கிறது[9].(72) இருபத்தைந்தாவதானது {ஆன்மாவானது}, தன்னைவிட உயர்ந்தது ஏதுமில்லை எனக் கருதுகிறது. எனினும், உண்மையில், தன்னைக் காணும் அஃதை (இருபத்தாறாவதை {பரமாத்மாவை} ) அது {இருபத்தைந்தாவது} காண்பதில்லை[10].(73)ஞானம் கொண்ட மனிதர்கள், உண்மையில் சார்பற்ற இருப்பைக் கொண்ட இருபத்தைந்தாவதோடு அல்லது ஆன்மாவோடு, (புத்தியற்ற அல்லது செயலற்ற பிரகிருதியான) இருபத்துநான்காவது அடையாளங்காணப் படுவதை ஒருபோதும் ஏற்கக்கூடாது. மீனானது நீரில் வாழ்கிறது. அது தன் இயல்பால் தூண்டப்பட்டே அங்கே இருக்கிறது.(74) நீரில் வாழும் மீனானது, அதனிலிருந்து தனியாகக் கருதப்படுவதைப் போலவே, இருபத்தைந்தாவதும், அது தொடர்ந்து இருபத்துநான்காவது அல்லது பிரகிருதியுடன் தொடர்புநிலையில் இருந்தாலும், பிரகிருதியில் இருந்து தனிப்பட்ட சார்பற்ற உண்மையான நிலையிலேயே உணரப்பட வேண்டும். நான் என்ற மமதையில் மூழ்கும்போது, இருபத்தாறாவதோடு {பரமாத்மாவோடு} கூடிய தன் அடையாளத்தைப் புரிந்து கொள்ள முடியாத போது, பிரகிருதியுடன் தானே இருப்பதால் உண்டாகும் மாயையில் பீடிக்கப்படும் விளைவாலும், தான் சிந்திக்கும் முறையினாலும், ஜீவாத்மாவனது, எப்போதும் {மமதையில்} மூழ்கவே செய்தாலும், அத்தகைய மமதையில் இருந்து விடுபடும்போது மேல்நோக்கி எழுகிறது.(75,76) தான் ஒன்று என்றும், தான் வசிக்கும் பிரகிருதியானது மற்றொன்று என்றும் உணர்வதில் ஜீவாத்மா வெல்லும்போது, ஓ மறுபிறப்பாளனே {கந்தர்வன் விஸ்வாவசுவே}, அது பரமாத்மாவைக் காண்பதில் வென்று, அண்டத்தோடு ஒன்றும் நிலையை அடைகிறது.(77) ஓ! மன்னா, பரம் ஒன்றும், இருபத்தைந்தாவது (அல்லது ஜீவாத்மா) மற்றொன்றுமாகும். எனினும், பரமானது ஜீவாத்மாவுக்கு மேலிருப்பதன் விளைவால், ஞானிகள் அவை இரண்டையும் ஒன்றாகவே கருதுகிறார்கள்.(78)

பிறப்பிறப்பை அஞ்சுபவர்களும், இருபத்தாறாவதன் {பரமாத்மாவின்} காட்சியால் அருளப்பட்டவர்களும், உடல் மற்றும் மனத்தூய்மை கொண்டவர்களும், பரமாத்மாவில் பக்தி கொண்டவர்களுமான யோகிகளும், சாங்கிய தத்துவ அமைப்பைப் பின்பற்றுபவர்களும், இந்தக் காரணங்களினாலேயே ஜீவாத்மாவை அழிவற்றதாக {ஜீவாத்மா அழிவற்றது என்ற கருத்தை} வரவேற்பதில்லை[11]. ஒருவன் பரமாத்மாவைக் கண்டு, தன் தனித்துவ நனவுநிலையை {அகங்காரத்தை} இழந்து, தன்னைப் பரத்துடன் அடையாளம் காணும்போது, அவன் அனைத்தையும் அறிந்தவனாகி, அனைத்தையும் அறிந்த அத்தகைய நிலையால், மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து விடுபடுகிறான். ஓ! பாவமற்றவனே, புத்தியற்ற பிரகிருதி, புத்தியுடன் கூடிய ஜீவாத்மா மற்றும் அனைத்தையும் அறிந்த பரமாத்மா ஆகியவற்றைக் குறித்து ஸ்ருதிகளில் உள்ள குறியீடுகளின்படியே நான் உனக்கு உண்மையாகச் சொல்லியிருக்கிறேன். அறிவது மற்றும் அறியப்படுவது ஆகியவற்றுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணாதவனும், ஞானம் மற்றும் அறியப்பட்டது ஆகியவற்றுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணாதவனுமான மனிதன், அண்டத்தின் மூலக் காரணமான கேவலம் {முழுமையாகவும்} மற்றும் கேவலமற்ற {முழுமையற்றதாகவும்} என இரண்டாகவும், ஜீவாத்மா {இருபத்தைந்தாவது} மற்றும் பரமாத்மாவாகிய {இருபத்தாறாவதுமாகிய} இரண்டாகவும் இருக்கிறான்” என்றேன் {யாஜ்ஞவல்கியன் என்கிற நான்}.(79-82)விஸ்வாவசு, “ஓ! பலமிக்கவரே, தேவர்களின் மூலப்பொருளாக இருக்கும் விடுதலையை {முக்தியைக்} குறித்துப் போதுமான அளவுக்கு முறையாக நீர் சொல்லிவிட்டீர். சிறந்த உண்மையை நீர் சொன்னீர். தீராத அருள் எப்போதும் உம்மிடம் இருக்கட்டும், உமது மனம் எப்போதும் புத்தியுடன் கலந்திருக்கட்டும்” என்றான்”.(83)

யாஜ்ஞவல்கியர் தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் கந்தர்வ இளவரசன் {விஸ்வாவசு}, ஒளிமிக்க அழகில் ஒளிர்ந்தபடியே சொர்க்கத்தை நோக்கிச் சென்றான். என்னைவிட்டுச் செல்லும் முன் அந்த உயர் ஆன்மா {விஸ்வாவசு}, என்னை வலம் வந்து முறையாகக் கௌரவித்தான், நானும் உயர்வான நிறைவுடன் அவனைப் பார்த்தேன்.(84) ஓ! மன்னா {தேவராதா}, என்னிடம் இருந்து பெற்ற அறிவியலை, பிரம்மலோகத்தில் வசிக்கும் தேவர்கள், பிற தேவர்கள், பூமியில் வசிப்போர், பாதாளலோகவாசிகள் மற்றும் விடுதலை {முக்தி} பாதையைப் பின்பற்றுவோருக்கு அவனே {விஸ்வாவசுவே} கற்பித்தான்.(85) சாங்கியர்கள், தங்கள் அமைப்பின் நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். யோகிகள், தங்கள் அமைப்பில் கற்பிக்கப்படும் நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர, தங்கள் விடுதலையை {முக்தியை} அடைய விரும்பும் வேறு பிறரும் இருக்கின்றனர். அவர்களிடம் இந்த அறிவியல் புலப்படத்தக்க கனிகளை உண்டாக்கும்.(86) ஓ! மன்னா, விடுதலையானது {முக்தியானது / மோக்ஷமானது}, ஞானத்தில் இருந்தே உண்டாகிறது. ஞானமில்லாமல் அஃதை ஒருபோதும் அடைய முடியாது. ஓ! ஏகாதிபதி, ஞானிகள் இதையே சொல்கின்றனர். எனவே, பிறப்பிறப்பில் இருந்து தன்னை விடுதலை அடையச் செய்யும் உண்மை ஞானத்தை அனைத்து விவரங்களுடன் அறிவதில் ஒருவன் முனைப்பைக் காட்ட வேண்டும்.(87) நம்பிக்கையுள்ள ஒருவன், பிராமணனிடமிருந்தோ, க்ஷத்திரியனிடமிருந்தோ, வைசியனிடமிருந்தோ, தாழ்ந்த பிறவியைச்சார்ந்த ஒரு சூத்திரனிடமிருந்தோ கூட அந்த ஞானத்தை அடைய வேண்டும். அத்தகைய ஞானத்தில் எப்போதும் அவன் மதிப்பைக் காட்ட வேண்டும். நம்பிக்கையுள்ள ஒருவனைப் பிறப்பிறப்பால் பீடிக்க முடியாது[12].(88)அனைத்துவகை {வர்ணங்களைச் சார்ந்த} மனிதர்களும் பிராமணர்களே. அனைவரும் பிரம்மத்திலிருந்தே எழுந்தனர். அனைத்து மனிதர்களும் பிரம்மத்தையே சொல்கிறார்கள்[13]. பிரம்மத்தில் இருந்து பெறப்பட்டு, அதை {பிரம்மத்தை} நோக்கியே செலுத்தப்படும் புத்தியின் துணையுடன், பிரகிருதி மற்றும் புருஷன் ஆகியவற்றைக் குறித்த இந்த அறிவியலை நான் கற்பிக்கிறேன். உண்மையில் இந்த மொத்த அண்டமும் பிரம்மமே.(89) பிராமணர்கள் பிரம்மாவின் வாயிலிருந்தும், க்ஷத்திரியர்கள் கரங்களில் இருந்தும், வைசியர்கள் தொப்புளிலிருந்தும், சூத்திரர்கள் அவனது பாதங்களில் இருந்து உண்டானார்கள். (இவ்வழியிலேயே உண்டான) அனைத்து வகையினரும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களாகக் கருதப்படக்கூடாது.(90) ஓ! மன்னா {தேவராதா}, அறியாமையால் தூண்டப்படும் மனிதர்கள் அனைவரையும், இறப்பையும், பிறப்பையும் அடையச் செய்யும் காரணமாக இருப்பது செயல்களே[14]. ஞானமற்றவர்களான அனைத்து வகை {வர்ண} மனிதர்களும், பயங்கர அறியாமையால் இழுத்துச் செல்லப்பட்டு, பிரகிருதியில் இருந்து உண்டாகும் கோட்பாடுகளின் மூலம் பல்வேறு வகைகளில் {வர்ணங்களில்} வீழ்கிறார்கள்.(91) இக்காரணத்தினாலேயே அனைவரும் ஞானத்தை அடைய முனைய வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அஃதை {அந்த ஞானத்தை} அடைய முனைய வேண்டும் என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஞானம் கொண்ட ஒருவனே பிராமணனாவான். (க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களாகிய) பிறரும் ஞானத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, இந்த விடுதலை {முக்தி} அறிவியல் அனைவருக்குமானதாகும். ஓ! மன்னா, ஞானிகளால் இது சொல்லப்பட்டிருக்கிறது[15].(92) உன்னால் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் வாய்மைக்கு ஏற்புடைய வகையில் என்னால் பதிலளிக்கப்பட்டது. எனவே, துன்பங்கள் அனைத்தையும் நீ களைவாயாக. இவ்விசாரணையின் {பொருளின்} மறு எல்லைக்குச் செல்வாயாக {ஞானத்தின் மறுகரையை அடைவாயாக}. உன் கேள்விகள் நன்றாக இருந்தன. எப்போதும் உன் சிரத்தில் அருளிருக்கட்டும்” என்றார் {யாஜ்ஞவல்கியர்}”.(93)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “நுண்ணறிவைக் கொண்ட யாஜ்ஞவல்கியரால் இவ்வாறு கற்பிக்கபட்ட மிதிலையின் மன்னன் {தேவராதன்} மகிழ்ச்சியால் நிறைந்தான்.(94) அம்மன்னன், அந்த முதன்மையான தவசியை வலம் வந்து அவரைக் கௌரவித்தான். மன்னன் விடைகொடுத்ததும், அவர் {யாஜ்ஞவல்கியர்} அவனது சபையில் இருந்து புறப்பட்டார். விடுதலை {முக்தி} அறம் குறித்த ஞானத்தை அடைந்த மன்னன் தேவராதன் தன் ஆசனத்தில் அமர்ந்து,(95) பத்து லட்சம் பசுக்களையும், பெரும் அளவிலான தங்கத்தையும், பெரும் அளவிலான ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களையும் தீண்டி, அவற்றைப் பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்குக் கொடையாக அளித்தான்.(96) அந்த முதிர்ந்த மன்னன் {தேவராதன்}, விதேஹர்களின் ஆட்சியுரிமையில் தன் மகனை நிறுவிவிட்டு, யதிகளின் நடைமுறைகளைப் பின்பற்றி வாழத் தொடங்கினான்.(97) அம்மன்னன், (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) பொதுவான கடமைகள் மற்றும் கடமை தவறுதல்கள் {தர்மாதர்மங்கள்} அனைத்தையும் சிறுமையாக நினைத்து, சாங்கியர்கள் மற்றும் யோகிகளின் அறிவியலை முழுமையாகக் கற்கத் தொடங்கினான்.(98) முடிவற்றவனாகத் தன்னைக் கருதிய அவன், சார்பற்ற, நித்தியமான ஒருவனை {பரமனை} மட்டுமே சிந்திக்கத் தொடங்கினான். பொதுவான கடமைகள் மற்றும் கடமை தவறல்கள், அறம் மற்றும் மறம், வாய்மை மற்றும் பொய்மை,(99) பிறப்பு மற்றும் இறப்பு, பிரகிருதியால் உண்டாகும் கோட்பாடுகள் தொடர்புடைய பிற பொருட்கள் அனைத்தையும் அவன் கைவிட்டான்.(100)

சாங்கியர்களும், யோகிகளும், தங்கள் அறிவியல்களின் போதனைப்படியே, இந்த அண்டத்தைப் புலப்படுவது மற்றும் புலப்படாதது ஆகியவற்றின் செயல்பாட்டு விளைவு எனவே கருதுகிறார்கள்.(101) தற்சார்புடையதும், உயர்ந்ததில் உயர்ந்ததும், நித்தியமானதும், தூய்மையானதுமான பிரம்மமானது நன்மை மற்றும் தீமையில் இருந்து விடுபட்ட ஒன்றாக இருப்பதாகக் கல்விமான்கள் சொல்கிறார்கள். எனவே, ஓ! ஏகாதிபதி, நீ தூய்மையடைவாயாக.(102) கொடையாளி, கொடைபெறுபவன், கொடை, கொடையளிக்கப்பட விதிக்கப்பட்டவை ஆகியன அனைத்தும் புலப்படாத ஆன்மாவாகவே கருதப்படுகின்றன. ஆன்மாவே அந்த ஆன்மாவின் ஒரே உடைமையாகும். எனவே, ஒருவனுக்கு அந்நியனாக எவன் இருக்க முடியும்? நீ எப்போதும் இவ்வழியிலேயே சிந்திப்பாயாக. ஒருபோதும் வேறு வகையில் சிந்திக்காதே.(103,104) குணங்களுடன் கூடிய பிரகிருதி எது, குணங்களைக் கடந்த புருஷன் எது என்பதை அறியாதவனே, அந்த ஞானமற்றவனே, புனித நீர்நிலைகளுக்குச் சென்று வேள்விகளைச் செய்கிறான்[16].(105) ஓ! குருவின் மகனே {யுதிஷ்டிரா}, ஒருவன் வேத கல்வியாலோ, தவங்களாலோ, வேள்விகளாலோ ஒருபோதும் பிரம்ம நிலையை அடைய முடியாது. புலப்படாதவன், அல்லது பரமனை உணர்வதில் வென்றால் மட்டுமே அவன் மதிப்புமிக்கவனாகக் கருதப்படுகிறான்.(106) மஹத்திடம் காத்திருப்பவர்கள் {மஹத்தை பூஜிக்கிறவர்கள்} மஹத்தின் உலகங்களை அடைகிறார்கள். நனவுநிலையிடம் {அகங்காரத்திடம்} காத்திருப்பவர்கள், நனவுநிலைக்குரிய இடத்தை அடைகிறார்கள். உயர்ந்ததிடம் காத்திருப்பவர்கள், இவற்றைவிட உயர்ந்த இடங்களை அடைகிறார்கள்[17].(107)சாத்திரங்களைக் கற்ற கல்விமான்களும், புலப்படாத பிரகிருதியைவிட உயர்ந்ததாக இருக்கும் நித்திய பிரம்மத்தை உணர்வதில் வென்றவர்களுமான மனிதர்கள், பிறப்பிறப்பைக் கடந்ததும், இருப்பில் உள்ளதும், இல்லாதிருப்பதும், குணங்களில் இருந்து விடுபட்டதுமான நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(108) நான் இந்த ஞானம் அனைத்தையும் ஜனகனிடம் இருந்து பெற்றேன். ஜனகன் அதை யாஜ்ஞவல்கியரிடம் இருந்து அடைந்தான். ஞானமே மிக மேன்மையானது. வேள்விகளை அதனோடு ஒப்பிட முடியாது. ஞானத்தின் துணையாலேயே ஒருவன், இக்கட்டுகளும், ஆபத்துகளும் நிறைந்த உலகமெனும் பெருங்கடலைக் கடப்பதில் வெல்கிறான். வேள்விகளின் மூலம் ஒருவனால் அந்தப் பெருங்கடலை ஒருபோதும் கடக்க முடியாது.(109) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறப்பிறப்பு மற்றும் பிற தடைகளை ஒருவன் சாதாரண முயற்சியின் மூலம் கடக்க முடியாது. வேள்விகள், தவங்கள், நோன்புகள் மற்றும் நியமங்களால் மனிதர்கள் {மோக்ஷத்தையடைவதில்லை;} சொர்க்கத்தையே அடைகிறார்கள். ஆனால் அவர்கள் அங்கிருந்து மீண்டும் பூமியிலேயே விழுகிறார்கள்.(110) எனவே, மிகத் தூய்மையானதும், அருளப்பட்ட நிலையும், களங்கமற்றதும், புனிதமானதும், (விடுதலையாக இருப்பதால்) அனைத்து நிலைகளையும் கடந்திருப்பதுமான பர நிலையை நீ மதிப்புடன் துதிப்பாயாக. ஓ மன்னா, க்ஷேத்திரத்தை உணர்வதன் மூலம், ஞானமீட்டும் வேள்வியைச் செய்வதன் மூலம் நீ உண்மையில் ஞானியாவாய்.(111) பழங்காலத்தில் யாஜ்ஞவல்கியர், உபநிஷதக் கல்வியின் மூலம் அடையப்படும் நன்மையை மன்னன் ஜனகனுக்குச் செய்தார். நித்தியமானதும், மாற்றமில்லாததுமான பரத்தைக் குறித்தே அந்தப் பெரும் முனிவர் {யாஜ்ஞவல்கியர்}, மிதிலையின் மன்னனிடம் {ஜனக குல தேவராதனிடம்} உரையாடினார். அஃது அவனை, மங்கலமானதும், அழிவற்றதும், அனைத்து வகைத் துன்பங்களையும் கடந்திருப்பதுமான பிரம்ம நிலையை அடையத்தக்கவனாக்கியது” {என்றார் பீஷ்மர்}.112.

ஜராமரணம்! – சாந்திபர்வம் பகுதி – 320-முதுமை மற்றும் மரணத்தைக் கடக்கும் வழிமுறை குறித்து ஜனகனுக்குச் சொன்ன பஞ்சசிகர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பெரும் சக்தியையும், பெரும் செல்வத்தையும் பெற்ற பிறகு, நெடுங்காலத்தை வாழ்நாளாகப் பெற்ற பிறகு, ஒருவன் எவ்வாறு மரணத்தைத் தவிர்ப்பதில் வெல்வான்?(1) தவங்கள், (வேதங்களில் விதிக்கப்பட்ட) பல்வேறு செயல்களைச் செய்வது, ஸ்ருதிகளில் ஞானம், மருந்துகள் உண்பது ஆகிய இந்த வழிமுறைகளில் எதன் மூலம் ஒருவன் முதுமையையும், மரணத்தையும் தவிர்ப்பதில் வெல்லலாம்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம், “இது தொடர்பாகப் பழங்கதையில், நடைமுறையில் பிக்ஷுவாக {சந்நியாசியாக} இருந்த பஞ்சசிகருக்கும், ஜனகனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) ஒரு காலத்தில் விதேஹர்களின் ஆட்சியாளனான ஜனகன், வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், கடமைகள் {தர்மங்கள்} அனைத்தின் நோக்கம் மற்றும் பொருள் குறித்துத் தான் {ஜனகன்} கொண்டிருந்த ஐயங்கள் அனைத்தும் நீங்கியவருமான பெரும் முனிவர் பஞ்சசிகரிடம் கேள்வி கேட்டான்.(4) மன்னன் {ஜனகன்}, “ஓ! புனிதமானவரே, எவ்வொழுக்கத்தின் மூலம் ஒருவன் முதுமையையும், மரணத்தையும் கடக்கலாம்? தவங்களாலா? புத்தியாலா, (வேள்விகள் மற்றும் நோன்புகள் போன்ற) அறச்செயல்களாலா? சாத்திரக் கல்வி மற்றும் ஞானத்தாலா?” என்று கேட்டான்.(5)

விதேஹர்களின் ஆட்சியாளனால் இவ்வாறு கேட்கப்பட்டவரும், புலப்படாத அனைத்தின் பொருட்களை அறிந்தவரும், கல்விமானுமான பஞ்சசிகர், “(முதுமை மற்றும் மரணம் ஆகிய) இவை இரண்டையும் தவிர்க்க முடியாது; எந்தச் சூழ்நிலையிலும் இதைத் தவிர்க்க முடியாது என்பதும் உண்மையுமல்ல.(6) பகல்களோ, இரவுகளோ, மாதங்களோ நிற்பதில்லை. நிலையற்றவனாக இருந்தாலும், (நிவிருத்தி அறம் அல்லது செயல்கள் அனைத்தையும் தவிர்த்தல் எனும்) நித்திய {நிலையான} பாதையைப் பின்பற்றும் மனிதனால் மட்டுமே பிறப்பிறப்பைத் தவிர்ப்பதில் வெல்ல முடியும்[1].(7) அனைத்து உயிரினங்களுக்கும் அழிவு ஏற்படுகிறது. முடிவிலா கால வெள்ளத்தில் உயிரினங்கள் அனைத்தும் நிற்காமல் பிறந்து கொண்டிருப்பது காணப்படுகிறது. (மீட்பதற்கு) ஓர் ஓடமும் இல்லாததும், முதுமை மற்றும் மரணம் என்ற இருபெரும் முதலைகளால் தொற்றப்பட்டதுமான முடிவிலா கால வெள்ளத்தில் பிறப்பவை, தம் துணைக்கு யாருமில்லாமல் மூழ்கிப்போகின்றன.(8)அந்த வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் ஒருவன், உதவி பெற நண்பன் எவனையும் காண்பதிலும், வேறு எவனது நலத்தில் ஈர்க்கப்படுவதிலும் தவறுகிறான்.(9) அவன், தன் பாதையில் மட்டுமே மனைவிகளையும், பிற நண்பர்களையும் சந்திக்கிறான். எந்தக் காலத்திலும் எவருடனும் இத்தகைய தோழமையை அவன் அதற்கு முன்பு அனுபவிப்பதில்லை.(10) கால வெள்ளத்தில் பிறக்கும் உயிரினங்கள், காற்றால் அசைக்கப்பட்டுப் பேரொலியுடன் ஒன்றையொன்று சந்திக்கும் மேகத்திரள்களைப் போல ஒருவருக்கொருவர் மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றனர்.(11) முதுமையும், மரணமும் ஓநாய்களைப் போல உயிரினங்கள் அனைத்தையும் விழுங்குபவையாகும். உண்மையில் அவை, பலமிக்கவை மற்றும் பலமற்றவை, குட்டை மற்றும் நெட்டையான அனைத்தையும் விழுங்குகின்றன.(12)

எனவே, நிலையற்றவையாக இருக்கும் உயிரினங்கள் அனைத்தின் மத்தியில் ஆன்மா மட்டுமே என்றென்றும் {நித்தியமாக} நிலைத்திருக்கிறது. உயிரினங்கள் பிறக்கும்போது அவன் ஏன் மகிழ வேண்டும்? அவை இறக்கும் போது அவன் ஏன் வருந்த வேண்டும்?(13) ‘எங்கிருந்து நான் வந்தேன்? நான் யார்? நான் எங்கே செல்லப் போகிறேன்? நான் யாருடையவன்? எதன் முன்னால் நான் ஓயப்போகிறேன்? {இனி எங்கே இருக்கப் போகிறேன்?} நான் என்னவாகப் போகிறேன்?’ என்று எந்தக் காரணத்திற்காகவும், எதற்காகவும் நீ ஏன் வருந்த வேண்டும்?(14) (உன் செயல்களுக்கு) உன்னைத் தவிர வேறு யார் சொர்க்கத்தையோ, நரகத்தையோ காணப் போவது? எனவே சாத்திரங்களை வீசியெறியாமல் ஒருவன் கொடைகளை அளிக்கவும், வேள்விகளைச் செய்யவும் வேண்டும்” என்றார் {பஞ்சசிகர்}.(15)

முக்தலக்ஷணம்! – சாந்திபர்வம் பகுதி – 321-முக்தி அறிகுறிகள் முதலியவற்றைக் குறித்து ஜனக குல மன்னன் தர்மத்வஜனுக்கும், பிக்ஷுகினி ஸுலபைக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தின் அரச முனியே, இல்லற வாழ்வுமுறையைக் கைவிடாமல், புத்தியையும் (பிற புலன்களையும்) அழிப்பதன் மூலம் கிட்டும் விடுதலையை {முக்தியை} எவரும் அடைந்திருக்கிறார்களா? இஃதை எனக்குச் சொல்வீராக.(1) திரள் மற்றும் நுட்பமான வடிவத்தை {லிங்க சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும்} எவ்வாறு கைவிடமுடியும்? ஓ! பாட்டா, விடுதலையின் உயர்ந்த மகிமை என்ன என்பதைச் சொல்வீராக?” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் ஜனகனுக்கும் {தர்மத்வஜனுக்கும்}, சுலபைக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) பழங்காலத்தில் ஜனககுலத்தைச் சார்ந்தவனும், தர்மத்யஜன் {தர்மத்வஜன்} என்ற பெயரைக் கொண்டவனுமான ஒருவன் மிதிலையின் மன்னனாக இருந்தான். அவன் துறவற நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் இருந்தான்.(4) அவன் வேதம், மோக்ஷசாத்திரங்கள், மன்னர்களுக்குரிய கடமை சார்ந்த சாத்திரங்கள் ஆகியவற்றை அறிந்தவனாக இருந்தான். அவன் தன் புலன்களை அடக்கி இந்தப் பூமியை ஆண்டுக் கொண்டிருந்தான்.(5) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, உலகில் அவனது நல்லொழுக்கத்தைக் கேள்விப்பட்டவர்களும், ஞானத்தை அறிந்தவர்களுமான ஞானிகள் பலர், அவனைப் போல இருக்க விரும்பினர்.(6) அதே சத்திய யுகத்தில், துறவியும் {பிக்ஷுகியும்}, சுலபை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு பெண்மணி யோக கடமைகளைப் பயின்று பூமி முழுவதும் திரிந்து கொண்டிருந்தாள்.(7) அவ்வாறு பூமியில் திரிந்து கொண்டிருந்த சுலபை, பல்வேறு இடங்களைச் சார்ந்த தண்டிகள் பலரிடமிருந்து விடுதலை அறத்தில் {மோக்ஷதர்மத்தில்} அர்ப்பணிப்புடன் இருந்த மிதிலையின் ஆட்சியாளனை {தர்மத்யஜனைக்} குறித்துக் கேள்விப்பட்டாள்.(8) மன்னன் ஜனகனை {தர்மத்யஜனைக்} குறித்த இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, இஃது உண்மையா, இல்லையா என்பதை உறுதி செய்ய விரும்பிய சுலபை, ஜனகனிடம் தனிப்பட்ட முறையில் பேச விரும்பினாள்.(9)தன் யோக சக்தியால், தனது பழைய வடிவத்தையும், குணங்களையும் கைவிட்ட சுலபை, களங்கமற்ற குணங்களும், ஒப்பற்ற அழகும் கொண்ட வடிவத்தை ஏற்றாள்.(10) தாமரை இதழ்களைப் போன்ற விழிகளையும், அழகிய புருவங்களையும் கொண்ட அந்தப் பெண்மணி, கண்ணிமைக்கும் நேரத்தில் மிகவிரைவான கணையின் வேகத்தில் விதேஹர்களின் தலைநகரை அடைந்தாள்.(11) பெரும் மக்கள் தொகையால் நிறைந்த மிதிலையெனும் தலைநகரை அடைந்த அவள், துறவியின் தோற்றம் பூண்டு அம்மன்னன் முன்னிலையில் சென்றாள்.(12) அவளது அழகிய வடிவைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்த அந்த ஏகாதிபதி {தர்மத்யஜன்}, யார் அவள்? யாருடையவள்? எங்கிருந்து வருகிறாள் என்பதை விசாரித்தான்.(13) அவளை {சுலபையை} வரவேற்ற அவன் {தர்மத்வஜன்}, அவளுக்கான சிறந்த இருக்கையை அளித்து, அவளது கால்களைக் கழுவி கொள்ள நீரைக் கொடுத்து கௌரவித்து, புத்துணர்வைத் தரும் சிறந்த பொருட்களால் அவளை நிறைவு செய்தான்.(14) முறையாகப் புத்துணர்வை அடைந்து, தனக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பல் சடங்குகளால் நிறைவையடைந்த பெண் துறவியான சுலபை, அமைச்சர்கள் சூழ, கல்விமான்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த மன்னனை (விடுதலையறத்தில் {மோக்ஷதர்மத்தில்} அவனது பற்றை அறிவிக்கும்படி அவனைத்) தூண்டினாள்.(15)

நிவிருத்தி அறத்தைப் பின்பற்றுவதன் மூலம் விடுதலை அடைவதில் ஜனகன்{தர்மத்வஜன்} வென்றுவிட்டானா என்பதில் ஐயம் கொண்டவளும், யோக சக்தியுடையவளுமான சுலபை, தன் புத்தியைக் கொண்டு மன்னனின் புத்திக்குள் நுழைந்தாள்.(16) மன்னனின் கண்களில் இருந்து வெளிப்படும் கதிர்களைத் தன் கண்களில் இருந்து வரும் ஒளிக்கதிர்களால் தடுத்த அந்தப் பெண்மணி, உண்மையை உறுதி செய்ய விரும்பி, யோகக் கட்டுகளைக் கொண்டு மன்னன் ஜனகனை {தர்மத்வஜனைக்} கட்டினாள்[1].(17) தனது வெல்லப்பட முடியாத தன்மையில் செருக்குடைய அந்தச் சிறந்த ஏகாதிபதி {தர்மத்வஜன்}, சுலபையின் நோக்கங்களை வீழ்த்தி, தன் பிரிதிறனால் அவளது தீர்மானத்தை அறிந்தான்[2].(18) மன்னன் தன் நுட்பமான வடிவில் அரசக் குடையும், செங்கோலும் இல்லாதிருந்தான். அந்தப் பெண்மணியான சுலபை அவளது நுட்பமான வடிவில் திரிதண்டம் இல்லாதிருந்தாள். ஒரே (திரள்) வடிவில் {மன்னன் தர்மத்யஜனின் உடலுக்குள்} இருந்த அவர்கள் இருவரும் {தர்மத்யஜனும், சுலபையும்} ஒருவருடனொருவர் உரையாடினர். அந்த ஏகாதிபதிக்கும், சுலபைக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கேட்பாயாக.(19)ஜனகன் {தர்மத்யஜன் சுலபையிடம்}, “ஓ! புனிதமான பெண்மணியே, நீ அர்ப்பணிப்புடன் உள்ள ஒழுக்கமுறை யாது? நீ யாருடையவள்? எங்கிருந்து நீ வந்திருக்கிறாய்? இங்கே உன் காரியம் முடிந்த பிறகு, நீ எங்கே செல்லப் போகிறாய்?(20) மற்றவரின் சாத்திர அறிவை, வயதை, பிறவி வகையைக் கேள்வி கேட்காமல் எவராலும் உறுதி செய்ய முடியாது. எனவே, என்னிடம் வந்திருக்கும் நீ என்னுடைய இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.(21) அரசக்குடை, செங்கோல் முதலிய செருக்கனைத்திலிருந்து உண்மையில் விடுபட்டவனாக என்னை அறிவாயாக. நான் உன்னை முழுமையாக அறிய விரும்புகிறேன். நீ என்னால் மதிக்கத்தகுந்தவளாவாய்.(22) (இவ்வுலகில்) வேறு எவராலும் சொல்ல முடியாத விடுதலை {முக்தி} குறித்து உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. பழங்காலத்தில் இந்தப் புகழ்பெற்ற ஞானத்தை யாரிடம் இருந்து அடைந்தேன் என்பதையும் சொல்கிறேன் கேட்பாயாக[3].(23) பராசர குலத்தைச் சார்ந்தவரும், சந்நியாச ஆசிரமத்தை ஏற்றவரும், மதிப்புமிக்கவரும் உயர் ஆன்மா கொண்டவருமான பஞ்சசிகரின் அன்புக்குரிய சீடன் நான்.(24) நான் ஐயங்கள் விலகியவனாக, சாங்கிய, யோக அமைப்புகளையும், நன்கறியப்பட்ட விடுதலை {முக்தி} பாதைகள் மூன்றுக்குமுரிய வேள்விகள் மற்றும் பிற சடங்குகளையும் முழுமையாக அறிந்தவனாகவும் இருக்கிறேன்[4].(25)பூமியில் திரிந்து, சாத்திரங்களால் குறிப்பிடப்படும் பாதையைப் பின்பற்றிய கல்விமானான பஞ்சசிகர், முன்பொரு மழைக்காலத்தில் நான்கு மாதங்கள் என் வசிப்பிடத்தில் மகிழ்ச்சியாக வசித்தார்.(26) சாங்கியர்களில் முதன்மையான அவர், வாய்மைக்கு ஏற்புடைய வகையிலும், புத்தியால் உணரக்கூடிய வகையிலும், விடுதலை {முக்தி} அடைவது குறித்துப் பல்வேறு வழிமுறைகள் குறித்து என்னிடம் பேசினார். எனினும், அவர் என் நாட்டைக் கைவிடச் சொல்லி எனக்கு ஆணையிடவில்லை.(27) பற்றில் இருந்து விடுபட்டு, பரப்பிரம்மத்தில் என் ஆத்மாவை நிலைநிறுத்தி, தோழமையால் அசையாமல், விடுதலை {முக்தி} குறித்துச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள மூன்று ஒழுக்கங்களை முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்து வருகிறேன்.(28) (அனைத்து வகைப் பற்றிலும்) துறவு கொள்வதே விடுதலைக்கான உயர்ந்த வழிமுறையாகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவனை விடுதலையடையச் செய்யும் துறவு ஞானத்தில் இருந்து உண்டாவதாகச் சொல்லப்படுகிறது.(29) ஞானத்தில் இருந்து யோக முயற்சி எழுகிறது, அம்முயற்சியின் மூலம் ஒருவன் தன்னறிவை, அல்லது ஆத்ம ஞானத்தை அடைகிறான். ஞானத்தின் மூலம் ஒருவன் இன்பதுன்பங்களைக் கடக்கிறான். அதுவே அவனை மரணத்தைக் கடக்கச் செய்து உயர்ந்த வெற்றியை அடையவல்லவனாக்குகிறது.(30)

அந்த உயர்ந்த புத்தி (தன்னறிவு {ஆத்மஞானம்}) என்னால் அடையப்பட்டிருக்கிறது, அதன் படியே நான் முரண்பட்ட இரட்டைகளைக் கடந்திருக்கிறேன். இம்மையிலும் நான் திகைப்பில் {மயக்கத்தில்} இருந்து விடுபட்டவனாகவும், பற்றுகள் அனைத்தையும் கடந்தவனாகவும் இருக்கிறேன்.(31) நீரால் நிறைந்து மென்மையான மண், (விதைக்கப்படும்) வித்தைத் துளிர்க்கச் செய்வதைப் போலவே, மனிதர்களின் செயல்களே மறுபிறப்பை உண்டாக்குகின்றன.(32) வித்திற்குத் துளிர்க்கும் திறனிருந்தாலும், கடாயில் வறுக்கப்பட்டால் துளிர்க்க இயலாததைப் போலவே,(33) என் புத்தியானது, துறவறம் பயின்ற புனிதமான பஞ்சசிகரின் போதனைகளால், புலன்நுகர் பொருட்களில் பற்றுக் கொள்ளும் பலனை உண்டாக்காமல், ஆசையால் விளையும் உற்பத்திக் கோட்பாட்டில் இருந்து {என் புத்தி} விடுபட்டிருக்கிறது.(34) என் மனைவியிடம் அன்பையோ, பகைவர்களிடம் வெறுப்பையோ நான் அனுபவிப்பதில்லை. உண்மையில், பற்று மற்றும் கோபம் ஆகியவற்றின் {விருப்பு வெறுப்பின்} கனியற்ற தன்மையைக் கண்டு நான் அவை இரண்டில் இருந்தும் விலகியிருக்கிறேன்.(35)

என் வலக்கரத்தில் சந்தனம் பூசுபவன், என் இடக்கத்தைக் காயப்படுத்துபவன் ஆகிய இருவரையும் நான் ஒன்றாகவே கருதுகிறேன்.(36) என் (உண்மை) நோக்கத்தை அடைந்துவனாகவும், மகிழ்ச்சியானவனாகவும், மண்ணாங்கட்டியையும், கல்லையும், தங்கக்குவியலையும் ஒன்றாகப் பார்ப்பவனாகவும் இருகிறேன். அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனாக நான் இந்நாட்டை ஆள்வதில் ஈடுபடுகிறேன். இதன் விளைவால் திரிதண்டதாரிகள் அனைவராலும் நான் எங்கும் புகழப்படுகிறேன்.(37) விடுதலையை {முக்தியை} அறிந்த சில முதன்மையான மனிதர்கள், விடுதலைக்கு மூன்று பாதைகள் உண்டு என்று சொல்கிறார்கள். (ஞானம், யோகம் மற்றும் வேள்விச்சடங்குகளே இவை). சிலர், உலகின் பொருள்கள் அனைத்தையும் நோக்கமாகக் கொண்ட ஞானத்தையே விடுதலைக்கான வழிமுறையாகக் கருதுகிறார்கள். சிலர், (அகம் மற்றும் புறம் என்ற) இரண்டு செயற்பாடுகளையும் துறப்பதே வழிமுறை என்கின்றனர்.(38) விடுதலை குறித்த சாத்திரங்களை அறிந்த மற்றொரு வகை மனிதர்கள், ஞானமே ஒரே வழிமுறை என்று சொல்கிறார்கள். நுண்பார்வையுடன் கூடிய யதிகள் செயல்களே வழிமுறை என்று சொல்கின்றனர்.(39) உயர் ஆன்ம பஞ்சசிகர், ஞானம் மற்றும் செயல்கள் குறித்த கருத்துகள் இரண்டையும் புறந்தள்ளி மூன்றாவதையே ஒரே வழிமுறையாக அல்லது விடுதலைக்கான பாதையாகக் கருதினார்.(40)

இல்லற வாழ்வுமுறையை நோற்கும் மனிதர்கள் {கிருஹஸ்தர்கள்}, யமம் மற்றும் நியமத்துடன் இருந்தால் அவர்கள் சந்நியாசிகளுக்கு இணையானவர்களாவர். மறுபுறம், விருப்புவெறுப்பு, மனைவிகள், கௌரவம், செருக்கு, பற்று ஆகியவற்றுடன் கூடிய சந்நியாசிகள் இல்லறவாழ்வுமுறையை நோற்கும் மனிதர்களுக்கு இணையானவர்களாவர்[5].(41) ஞானத்தால் ஒருவன் விடுதலையை அடையமுடியுமெனில் திரிதண்டத்தில் விடுதலை இருக்கும் (ஏனெனில் அத்தகைய தண்டங்களைத் தரிப்பவர்கள் அடைய வேண்டிய ஞானத்தை அடைவதில் வேறு எதுவும் தடுக்காது). அவ்வாறெனில், குடையிலும், செங்கோலிலும் ஏன் விடுதலை கிட்டாது?, குறிப்பாகத் திரிதண்டம் தரிக்கவும், செங்கோல் தரிக்கவும் ஒரே காரணம் இருக்கும்போது ஏன் விடுதலை கிட்டாது?(42) ஒருவனுக்குக் குறிப்பிட்ட காரணங்களால் தேவைப்படும் பொருட்கள் மற்றும் செயல்களில் அவன் பற்று கொள்கிறான்.(43) ஒரு மனிதன், இல்லற வாழ்வுமுறையின் களங்கங்களைக் கண்டு (பெரும் தகுதி நிறைந்ததாகத் தான் கருதும்) மற்றொரு வாழ்வுமுறைக்காக அதைக் கைவிடும்போது, அத்தகைய புறக்கணிப்புக்கும், பின்பற்றுதலுக்கும் அவன் பற்றுகளில் இருந்து உடனே விடுபட்டுவிட்டதாகக் கருத முடியாது (அவன் செய்திருப்பதெல்லாம் முந்தைய வாழ்வு முறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புதிய வாழ்வுமுறையில் பற்று கொண்டதை மட்டுமே).(44) அரசுரிமையானது, பிறரை கௌரவிக்கவும், தண்டிக்கவும் வேண்டிய முறைகள் நிறைந்தது. ஒரு துறவியின் வாழ்வும் அதே போன்றவை நிறைந்தவையே (ஏனெனில் அவர்களும் பிறரை கௌரவிக்கவும், தண்டிக்கவும் செய்கிறார்கள்). எனவே, இவ்வகையில் துறவிகளும் மன்னர்களும் ஒரே நிலையில் இருக்கிறார்கள் எனும்போது ஏன் துறவிகள் மட்டும் விடுதலையை அடைய வேண்டும்? மன்னர்கள் ஏன் அடையக்கூடாது?(45)எனவே, அரசுரிமை இருந்தபோதிலும், ஞானத்தால் மட்டுமே அனைத்துப் பாவங்களையும் கழுவிக்கொண்டு, பரப்பிரம்மத்தில் அவன் வாழ்ந்திருக்கிறான்.(46) காவி உடை அணிந்து, தலையை மழித்துக் கொண்டு, திரிதண்டமும், கமண்டலமும் ஏந்துவது ஒருவனுடைய வாழ்வுமுறையின் புற அடையாளங்கள் மட்டுமே ஆகும். ஒருவன் விடுதலை அடைவதற்குத் துணை புரிவதில் இவற்றுக்கு எந்த மதிப்பும் கிடையாது.(47) ஒரு குறிப்பிட்ட வாழ்வுமுறையின் புற அடையாளங்களைப் பின்பற்றியபோதிலும், ஞானம் மட்டுமே ஒருவனைத் துன்பத்தில் இருந்து விடுதலையடையச் செய்யும் காரணமாக இருக்கும் எனும்போது, வெறும் அடையாளங்களைப் பின்பற்றுவது முற்றிலும் பயனற்றதாகும்.(48) அல்லது, அவற்றால் துன்பங்களைத் தணிக்க முடியும் என்பதைக் கண்டு நீ சந்நியாச அடையாளங்களைத் தரித்தால், நான் தரிக்கும் குடை மற்றும் செங்கோலில் ஏன் அந்தத் துன்பத்தைக் காணக்கூடாது?(49) விடுதலை {முக்தி} வறுமையில் இல்லை; அதே போலப் பற்றும் செழிப்பில் காணப்படுவதில்லை. ஒருவன் வறுமையில் இருந்தாலோ, செழிப்பாக இருந்தாலோ அவன் ஞானத்தால் மட்டுமே விடுதலையை அடைய முடியும்.(50)

(பொதுவாக மனிதர்களிடம்) பற்றை உண்டாக்கும் நாடு, மனைவிகள் என்ற வடிவில் அறம், பொருள் மற்றும் இன்பத்தை அனுபவிப்பதாக மேம்போக்காகத் தெரிந்தாலும் இக்காரணங்களால் நான் சுதந்திரமான நிலையில் வாழ்வதாக அறிவாயாக.(51) நாடு மற்றும் செல்வத்தால் உண்டாகும் கட்டு {பந்தம்}, பற்றுகளாலான கட்டு {பந்தம்} ஆகியவற்றை, விடுதலையைச் சொல்லும் சாத்திரங்கள் எனும் கல்லில் கூராக்கப்பட்ட துறவு எனும் வாளால் வெட்டிவிட்டேன்.(52) என்னைப் பொறுத்தவரையில் நான் இவ்வழியிலேயே என்னை விடுவித்துக் கொண்டேன். ஓ! பெண் துறவியே, நான் உன்னிடம் அன்பை வளர்க்கிறேன். ஆனால், நீ பின்பற்றும் வாழ்வுமுறைக்கேற்ற நடைமுறைகள் தொடர்பானதாக உன் நடத்தை இல்லை என்பதை நான் உன்னிடம் சொல்வதை அது {உன்னிடம் நான் கொண்டுள்ள அன்பு} தடை செய்யாது.(53) உன் வடிவில் பெரும் மென்மையை {மார்த்தவத்தைக்} கொண்டிருக்கிறாய். நீ அழகாக இருக்கிறாய். சிறந்த வடிவமைப்பை நீ கொண்டிருக்கிறாய். வயதின் இளமையுடனும் இருக்கிறாய். இவை அனைத்தும் இருந்து நீ நியமத்துடன் (புலனடக்கத்துடன்) இருக்கிறார். உண்மையில் நான் இஃதை ஐயுறுகிறேன்.(54) உண்மையில் நான் விடுதலையடைந்திருக்கிறேனா இல்லையா என்பதை உறுதி செய்வதற்காக (யோக சக்தியின் துணையுடன் என்னுள் புகுந்து) என் உடலை நிறுத்தியிருக்கிறாய். இந்தச் செயல்பாடு, நீ தரிக்கும் அடையாளங்களுக்குரிய வாழ்வுமுறைக்குக் களங்கம் கற்பிப்பதாக இருக்கிறது.(55)

ஒரு யோகி ஆசையுடன் இருந்தால் அவன் தண்டந்தரிக்கத் தகுந்தவனல்ல. உன்னைப் பொறுத்தவரையில் நீ உன் தண்டத்தில் பற்று கொள்ளவில்லை. விடுதலை பெற்றவர்களைப் பொறுத்தவரையில் அவர்களும் வீழ்ச்சியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(56) உன் புத்தியின் துணையுடன் என் திரள் உடலில் நுழைந்து என்னுடன் தொடர்பை ஏற்படுத்துக் கொண்ட விளைவால் ஏற்படும் வரம்புமீறுதலைச் சொல்கிறேன் கேட்பாயாக.(57) நீ என் நாட்டுக்கு, அல்லது என் அரண்மனைக்கும் வந்த காரணம் என்ன? யாருடைய குறிப்பின் மூலம் நீ என் இதயத்திற்குள் {மனத்திற்குள்} நுழைந்தாய்?(58) நீ பிராமணப் பெண்ணாக இருப்பதால், முதன்மையான வகையை {வர்ணத்தைச்} சேர்ந்தவளாக இருக்கிறாய். எனினும் என்னைப் பொறுத்தவரையில், நான் ஒரு க்ஷத்திரியனாவேன். நம் இருவருக்கும் ஒரு சேர்க்கையும் இல்லை. வர்ணக்கலப்பைச் செய்யாதே.(59) விடுதலைக்கு வழிவகுக்கும் கடமைகளின் நடைமுறையில் நீ வாழ்கிறாய். நானோ இல்லற வாழ்வுமுறையை வாழ்கிறேன். எனவே, எதிரெதிரான இரு வாழ்வு முறைகளின் இயல்பற்ற கலவையால் உன் செயல் மற்றொரு தீமையையும் செய்திருக்கிறது.(60)

நீ என் கோத்திரத்தைச் சேர்ந்தவளா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. உன்னைப் பொறுத்தவரையிலும், நீயும் என்னை (நான் சார்ந்த கோத்திரத்தை) அறிய மாட்டாய். நீ என் கோத்திரமாகவே இருந்தால், இயல்பற்ற சேர்க்கையாக என் உடலில் நுழைந்ததன் மூலம் நீ மற்றொரு தீமையைச் செய்திருக்கிறாய்.(61) உன் கணவர் உயிரோடிருந்து, தொலைவான இடத்தில் வசித்துக் கொண்டிருந்தால், நீ விதிப்படி சேர்ந்திருக்க வேண்டியவனுடன் இல்லாததால் என்னுடனான இந்தச் சேர்க்கையின் மூலம் நான்காவது தீமையையும் செய்திருக்கிறாய்.(62) எந்தக் குறிப்பிட்ட காரியத்தை நிறைவேற்றும் நோக்கத்தால் தூண்டப்பட்டு இந்தப் பாவச் செயல்கள் அனைத்தையும் நீ செய்தாய்? நீ இவற்றை அறியாமையில் செய்கிறாயா? அல்லது பிறழ்புத்தியால் செய்கிறாயா?(63) உன் தீய இயல்பின் விளைவால் நீ முற்றிலும் சுதந்திரமானவளாக இருந்தாலோ, தடையற்ற நடத்தை கொண்டவளாக இருந்தாலோ, உனக்குச் சாத்திர அறிவு என ஏதும் இருந்தால், நீ செய்திருக்கும் அனைத்தும் தீமையை உண்டாக்கவல்லவை என்பதை நீ புரிந்து கொள்வாய்.(64) நீ செய்த இந்தச் செயல்களின் விளைவால் மன அமைதியை அழித்ததும் மூன்றாம் களங்கமாகும். உன் மேன்மையை வெளிக்காட்ட முயற்சி செய்ததன் மூலம் தீய பெண்ணின் அடையாளம் உன்னில் காணப்படுகிறது.(65)

உன் வெற்றியை உறுதி செய்ய விரும்பி நீ என்னை மட்டும் வீழ்த்த விரும்பவில்லை, (கல்விமான்களும், மிக மேன்மையான பிராமணர்களும் அடங்கிய) என் முழு சபையையும் நீ வெல்ல விரும்புவது வெளிப்படையாகத் தெரிகிறது.(66) தகுதிமிக்க இந்தப் பிராமணர்கள் அனைவர் மீதும் இவ்வழியில் உன் கண்களைச் செலுத்துவதன் மூலம், இவர்கள் அனைவரையும் அவமதிக்கவும், (அவர்களை அவமதித்து) உன்னை மகிமைப்படுத்திக் கொள்ளவும் விரும்புகிறாய் என்பதும் வெளிப்படையாகத் தெரிக்கிறது.(67) யோக பலத்தில் நீ கொண்டிருக்கும் செருக்கால் திகைப்படைந்தும், (என் பலத்தைக் கண்டதில்) பிறந்த பொறாமையினாலும், உன் புத்தியை என் புத்தியோடு கலந்ததன் மூலம் உண்மையில் அமுதத்துடன் நஞ்சைக் கலந்துவிட்டாய்.(68) ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பும்போது ஏற்படும் சேர்க்கை அமுதம் போன்ற இனிமையாகும். எனினும், ஒரு பெண் விரும்பி நேரும் ஆணுக்கும், பெண்ணுக்குமான சேர்க்கையில், அவள் தன்னை விரும்பாத எதிர் பாலினத்தானை அடைந்தால், தகுதிக்கு {புண்ணியத்திற்குப்} பதிலாக, நஞ்சு போன்ற களங்கம் மட்டுமே விளையும்[6].(69) என்னைத் தீண்டுவதைத் தொடராதே. நான் அறவோன் என்பதை அறிவாயாக. உன் சாத்திரங்களின்படியே நீ செயல்படுவாயாக. நான் விடுதைலயடைந்தவனா? இல்லையா? என்று நீ செய்ய விரும்பிய விசாரணை நிறைவடைந்தது.(70)உன் ரகசிய நோக்கங்கள் அனைத்தையும் என்னிம் இருந்து மறைப்பது உனக்குத் தகாது. இவ்வாறு வேடம் போடுவதும், உன் நோக்கத்தை மறைத்துக் கொள்வதும், உன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள இதைச் செய்தாயா? அல்லது (எனக்கு எதிரியான) வேறு மன்னனின் நோக்கத்தை நிறைவேற்ற வந்தாயா? என்பதை மறைப்பதும் உனக்குத் தகாது.(71) ஒரு மன்னனின் முன்போ; ஒரு பிராமணனின் முன்போ; பெண்களுக்குரிய குணங்களைக் கொண்ட மனைவியின் முன்போ ஒருவன் தன்னை வஞ்சகமாக மறைத்துக் கொள்ளக்கூடாது. இந்த மூவரிடமும் வஞ்சகமான வேடத்தில் தோன்றுவோர் விரைவில் அழிவையே சந்திப்பார்கள்.(72) மன்னர்களின் பலம் அவர்களுடைய அரசுரிமையில் இருக்கிறது. வேதங்களை அறிந்த பிராமணர்களின் பலம் வேதங்களில் இருக்கிறது. பெண்கள் அழகு, இளமை மற்றும் அருள்நிலையின் விளைவால் உயர்ந்த பலத்தைப் பெற்றிருக்கிறார்கள்.(73) இந்தப் பலங்களைப் பெற்றவர்கள் பலமிக்கவர்களாவர். எனவே, நன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும ஒருவன், இந்த மூவரிடமும், நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் அணுக வேண்டும். (இந்த மூவரிடமும்) நேர்மையின்மையும், வஞ்சகமும் வெற்றியை உண்டாக்கத் தவறும்.(74) எனவே, பிறப்பால் நீ சேர்ந்த வகை, உன் கல்வி, ஒழுக்கம், மனோ நிலை, இயல்பு மற்றும் நீ இந்த இடத்திற்கு வந்த நோக்கம் ஆகியவற்றை எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்” என்றான் {ஜனக மன்னன் தர்மத்யஜன்}”.(75)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “மன்னனால் இவ்வாறு இனிமையற்ற, முறையற்ற வகையில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி நிந்திக்கப்பட்டாலும் சுலபை வெட்கமடையாதிருந்தாள்.(76) மன்னன் இந்த வார்த்தைகளைச்சொன்ன பிறகு, அந்த அழகிய சுலபை, தன்னை விட அழகான மறுமொழியைப் பின்வரும் சொற்களில் சொன்னாள்.(77)சுலபை {ஜனகமன்னன் தர்மத்வஜனிடம்}, “ஓ! மன்னா, ஒன்பது சொற்குற்றங்களில் இருந்தும், ஒன்பது தீர்மானப் பிழைகளில் {சொற்குற்றம் மற்றும் புத்தியின் குற்றங்களில்} இருந்தும் வாக்கானது எப்போதும் விடுபட்டிருக்க வேண்டும். தெளிவான பொருளைத் தரும் அதே வேளையில் அது நன்கறியப்பட்ட பதினெட்டு தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.(78) பொருள் மயக்கம் {ஸூக்ஷ்மம்}, தொடக்கவுரை மற்றும் முடிவுரையின் குறை நிறைகளை உறுதி செய்தல் {ஸாங்கியம்}, ஒப்பீட்டளவில் அந்தக் குறை நிறைகளின் பலம் மற்றும் பலவீனத்தை எடை போடுதல் {கிரமம்}, முடிவை நிறுவுதல் {நிர்ணயம்}, நம்பத்தகுந்த ஏற்புடைய தன்மை, அல்லது முடிவுரையோடு தொடர்புடையது {பிரயோஜனம்}, ஆகிய பொருளுடன் தொடர்புடைய இந்த ஐந்து தன்மைகளும் {காரியங்களும்}, வாக்கின் தகுதிகளாக {வாக்கியமாக} அமைகின்றன.(79) பொருள் மயக்கம் {கருத்தில் தெளிவின்மை} முதலிய இந்தத் தேவைகளின் தன்மைகளை அவற்றின் கலவையின்படி விளக்குகிறேன் கேட்பாயாக.(80)

ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக அறியப்படும் பொருட்களின் விளைவால், ஞானமானது அந்த வேறுபாட்டைச் சார்ந்திருக்கும்போதும், (காரியத்தைப் புரிந்து கொள்வதைப் பொறுத்தவரையில்) புத்தியானது அடுத்தடுத்த சொற்கலவைகளின் பல்வேறு கருத்துகளைச் சார்ந்திருக்கும்போதும், அது {புத்தி} தெளிவில்லாமல் {பொருள் மயக்கத்துடன்} இருப்பதாகச் சொல்லப்படுகிறது[7].(81) சாங்கியம் என்றழைக்கப்படும் (குறை நிறைகளை) உறுதிசெய்தலின் மூலம், (தொடக்கவுரை, முடிவுரைகளில் உள்ள) குறை நிறைகளை நீக்கி தற்காலிகமானப் பொருள்கள் பின்பற்றப்படுகின்றன[8].(82) (மேற்கண்ட நடைமுறையின் மூலம் உறுதிசெய்யப்பட்ட) குறை நிறைகளின் ஒப்பீட்டளவிலான பலம் மற்றும் பலவீனங்களைக் கருத்தில் கொள்வது, அல்லது கிரமம் எனப்படுவது, முன்னுரிமைகளில் உரிமையைத் தீர்மானிப்பது, அல்லது ஒரு வாக்கியத்தில் உள்ள சொற்களின் துணைத்தொடர்புகளை உள்ளடக்கியதாகும். இதுவே கிரமம் என்ற சொல்லுக்குத் தொடர்புடைய பொருளாகும், என வாக்கியங்கள், அல்லது உரைகளின் விளக்கங்களை அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.(83) முடிவுரை என்பது இறுதித் தீர்மானமாகும். அறம் {தர்மம்}, பொருள் {அர்த்தம்}, இன்பம் {காமம்}, வீடு {மோக்ஷம்} என்று சொல்லப்படுவதில் குறிப்பாக அவை ஒவ்வொன்றும் என்னென்ன என்று சொல்லும் உரையே முடிவுரையாகும்[9].(84) விருப்பு வெறுப்பில் இருந்து உண்டாகும் துன்பம் பெரும் அளவில் அதிகரிக்கும். ஓ! மன்னா, இக்காரியத்தில் ஒருவன் பின்பற்றும் ஒழுக்கமே (அனுபவிக்கப்படும் துன்பத்தை விலக்கவல்ல) பிரயோஜனம் என்றழைக்கப்படுகிறது[10].(85)ஓ! மன்னா {தர்மத்வஜா}, பொருள் மயக்கம் முதலிய (எண்ணிக்கையில் ஐந்து) தன்மைகள் ஒன்றாகத் தோன்றும்போதே, புரிந்து கொள்ளக்கூடிய ஒரு முழுமையான வாக்கியமாக அஃது அமையும்[11].(86) நான் சொல்லும் வார்த்தைகள் பொருள் நிறைந்தவையும்{1}, (சொல் ஒவ்வொன்றும் பல பொருட்களின் அடையாளங்களாக இல்லாததன் விளைவால்) பொருள் மயக்கத்தில் இருந்து விடுபட்டவையும்{2}, காரணக் காரியத் தொடர்புடையதும் {தர்க்கப்பூர்வமானதும்}{3}, கூறியது கூறல், அல்லது ஒருபொருட்பன்மொழி ஆகியவற்றில் இருந்து விடுபட்டதும்{4}, மென்மையானதும்{5}, நிச்சயமானதும்{6},(87) மிகைப்பேச்சில் இருந்து விடுபட்டதும்{7}, ஏற்புடையதும், அல்லது இனிமையானதும்{8}, உண்மை நிறைந்ததும்{8}, (அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய) முத்தொகுப்புக்கு ஏற்புடையதும்{9}, (பிராகிருதத்தில் இருந்து விடுபட்டதும்) பண்பட்டதும்{10},(88) கோளமற்றதும், அல்லது குற்றமில்லாததும்{11}, கடுமையற்றதும், அல்லது புரிந்து கொள்ளக் கடினமற்றதும்{12}, முறையாக வகைப்படுத்தப்பட்டதும்{13}, பொருளைப் பொறுத்தவரையில் வலிந்து பெறப்படாததும்{14}, காரணம் மற்றும் விளைவில் {காரணக் காரியங்களில்} ஒன்றுக்கொன்று சரியானதும்{15}, தனித்தனியான ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட பொருளைக் கொண்டதுமாக{16} இருக்கும்[12].(89) ஆசை, கோபம், அச்சம், பேராசை, நம்பிக்கையற்ற தன்மை, வஞ்சனை, வெட்கம், கருணை, செருக்கு ஆகியவற்றால் தூண்டப்பட்ட நான் உன்னிடம் ஒன்றையும் சொல்லமாட்டேன். (நீ சொன்னதற்குப் பதிலளிப்பதே முறை என்பதால் பதிலளிக்கிறேன்).(90)பேசுபவன், கேட்பவன், சொல்லப்படும் வார்த்தைகள் ஆகியன, பேச்சின் போக்கில் ஒன்றோடொன்று முற்றிலும் ஏற்புடைய வகையில் இருக்கும்போது, பெருள் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது.(91) என்ன சொல்லப்பட வேண்டும் என்ற காரியத்தில், தான் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் பேசுபவன் கேட்பவனின் புத்தியை அலட்சியம் செய்யும்போது {அவமதிக்கும் போது}, அந்த வார்த்தைகளை எவ்வளவுதான் நல்லவையாக இருந்தாலும், அவை கேட்பவனால் எடுத்துக்கொள்ளக்கூடியவையாக இருப்பதில்லை.(92) பேசுபவன் தான் பேசும் பொருளுக்கான மதிப்பைக் கைவிட்டு, சிறந்த ஒலியும் பொருளும் கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், கேட்பவரின் மனத்தில் தவறான தாக்கத்தையே ஏற்படுத்துகிறான். அத்தகைய சொற்களின் அத்தகைய தொடர்பு நிச்சயம் களங்கத்தையே ஏற்படுத்தும்.(93) எனினும், பொருளை வெளிப்படுத்தும் வார்த்தைகளைச் சொல்லிக் கேட்பவனுக்கு நன்றாகப் புரியும் வகையில் பேசுபவன், உண்மையில் பேச்சாளன் என்று அழைக்கப்படத் தகுந்தவனாவான். வேறு எந்த மனிதனுக்கும் அப்பெயர் தகுந்ததில்லை.(94) எனவே, ஓ! மன்னா, பொருள் நிறைந்தவையும், சொற்செல்வத்துடன் கூடியவையுமான என் வார்த்தைகளைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(95)

நான் யார்? யாருடையவள்? எங்கிருந்து வந்தேன்? முதலிய கேள்விகளை நீ என்னிடம் கேட்டாய். ஓ! மன்னா, உன் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கையில் சிதறாத மனத்துடன் கேட்பாயாக.(96) அரக்கு மற்றும் மரமும், புழுதித் தூசி மற்றும் நீர்த்துளியும் ஒன்றாகக் கலந்திருப்பதைப் போலவே அனைத்து உயிரினங்களின் இருப்பும் இருக்கிறது.(97) ஒலி, ஊறு {தீண்டல்}, சுவை, வடிவம் மற்றும் மணம், புலன்கள், ஆகியவை தங்கள் சாரங்களில் வெவ்வேறானவையாக இருந்தாலும், அரக்கும், மரமும் போலக் கலந்த நிலையிலேயே நீடிக்கின்றன.(98) இவற்றில் எதனிடமும் எவனும் நீ யார் எனக் கேட்பதில்லை என்பது நன்கறியப்பட்டது. அவை ஒவ்வொன்றுக்கும் தன்னைக் குறித்தோ, பிறவற்றைக் குறித்தோ எந்த அறிவும் கிடையாது.(99) கண்ணால் தன்னைக் காணமுடியாது. காதால் தன்னைக் கேட்க முடியாது. மேலும் கண்ணால் பிற புலன்களின் செயல்பாடுகள் எதையும் செய்ய முடியாது., அதே போலப் புலன்களில் எதனாலும் தன்னுடையதைத் தவிர வேறொரு புலனின் செயல்பாட்டைச் செய்ய முடியாது.(100)

இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்தாலும் கூட, எவ்வாறு புழுதியும், நீர்த்துளியும் ஒன்றாகக் கலந்திருந்தாலும் ஒன்றையொன்று அறிந்து கொள்ள முடியாதோ, அதே போலவே அவை அனைத்தும் தங்களை அறியத் தவறுகின்றன. தங்கள் தங்களுக்குரிய செயல்பாட்டைச் செய்வதற்காக அவை புறத்தில் இருக்கும் தங்கள் நுகர் பொருட்களின் தொடர்புக்காகக் காத்திருக்கின்றன.(101) கண், வடிவம் மற்றும் ஒளி ஆகியன பார்த்தல் என்ற செயல்பாட்டின் மூன்று தேவைகளாக இருக்கின்றன. பிற புலன்களின் செயல்பாடுகளிலும், அவற்றின் விளைவான கருத்துகளிலும் இதுவே நேர்கிறது.(102) மேலும், (பார்வை, கேட்டல் முதலிய) புலன்களின் செயல்பாடுகளுக்கும், அவற்றின் விளைவுகளான (வடிவம், ஒலி முதலிய) கருத்துகளுக்கும் இடையில் புலன்களைத் தவிர மற்றொரு உட்பொருளாக இருக்கும் மனமும் தனக்கென உரிய செயல்பாட்டைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. அதன் உதவியாலேயே ஒருவன், இருப்பையும், இல்லாமையையும் வேறுபடுத்திப் பார்த்து (புலன்களில் இருந்து பெறப்படும் கருத்துகள் அனைத்தின் காரியத்திலும்) நிச்சயத் தன்மையை அடைகிறான்.(103) ஐந்து அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்}, ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} மற்றும் மனம் ஆகியவை சேர்த்து இவை மொத்தம் பதினொன்றாக இருக்கின்றன. பனிரெண்டாவது புத்தியாகும். எது அறியப்பட வேண்டும் என்பதில் ஐயம் எழும்போது புத்தியே முன்வந்து (சரியான புரிந்து கொள்ளத் துணை புரிந்து) ஐயங்கள் அனைத்தையும் தீர்க்கிறது.(104) இந்தப் பனிரெண்டாவதற்கு {புத்திக்குப்} பிறகு, எண்ணிக்கையில் பதிமூன்றாவதாக வருவது சத்வம் எனும் மற்றொரு தத்துவமாகும். அதன் உதவியால் உடல் அமைப்புகளில் அஃது எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு குறைபடுகிறது என்பதைக் கொண்டு உயிரினங்கள் அடையாளங்காணப் படுகின்றன.(105)

இதன் பிறகு, (எண்ணிக்கையில் பதினான்காவதாகத் தான் {சுயம்} என்ற) மற்றொரு கோட்பாடு நனவுநிலையாகும். அஃது ஒருவன் சுயத்துக்கும், சுயமல்லாததற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள உதவுகிறது.(106) ஆசை என்பது பதினைந்தாவது தத்துவமாகும். அதற்குள்ளேயே மொத்த அண்டமும் இருக்கிறது.(107) அவித்யை பதினாறாம் தத்துவமாகும். பிரகிருதி மற்றும் வியக்தி (மாயை மற்றும் பிரகாசம்) என்றழைக்கப்படும் பதினேழாம் மற்றும் பதினெட்டாம் கோட்பாடுகள் அதனுள்ளேயே {அவித்யைக்குள்ளேயே} இருக்கின்றன.(108) இன்பம் மற்றும் துன்பம், முதுமை மற்றும் மரணம், ஈட்டல் மற்றும் இழத்தல், ஏற்புடைமை மற்றும் ஏற்பில்லாமை ஆகிய முரண்பட்ட இரட்டைகள் பத்தொன்பதாம் தத்துவமாக அமைகின்றன. பத்தொன்பதாம் தத்துவத்தையும் கடந்து, இருபதாவது என்றழைக்கப்படும் மற்றொரு தத்துவமான காலம் இருக்கிறது. இந்த இருபதாம் தத்துவச் செயல்பாட்டின் மூலமே உயிரினங்கள் அனைத்திற்கும் பிறப்பிறப்புகள் நேர்கின்றன என்பதை அறிவாயாக.(110)

இந்த இருபதும் ஒன்றாகவே நீடித்திருக்கின்றன. இவற்றைத் தவிர ஐம்பெரும் பூதங்களும், இருப்பும், இல்லாமையும் சேர்ந்து பட்டியலை இருபத்தேழாக்குகின்றன. இதையும் கடந்து விதி {புண்ணியப் பாவங்கள்}, சுக்ரன் {வீரியம்}, பலம் ஆகிய மூன்றும் சேர்வதால் பட்டியல் முப்பதை அடைகிறது.(111) எதனில் இந்த முப்பது தத்துவங்களும் இருக்கின்றனவோ அஃது உடல் என்று சொல்லப்படுகிறது.(112) சில மனிதர்கள், புலப்படாத பிரகிருதியே இந்த முப்பது தத்துவங்களுக்கும் மூலம் அல்லது காரணம் என்று கருதுகிறார்கள். (இது நாத்திக சாங்கிய பள்ளியின் கருத்தாகும்). மொத்த பார்வை கொண்ட காணாதர்கள் புலப்படுவதை (அல்லது அணுக்களை) அவற்றின் காரணம் எனக் கருதுகிறார்கள்.(113) புலப்படாததோ, புலப்படுவதோ எது அவற்றின் காரணமாக இருந்தாலும், அல்லது (பரமன், அல்லது புருஷன் மற்றும் புலப்படுவதுஅல்லது அணுக்கள் ஆகிய) இரண்டுமே காரணமாகக் கருதப்பட்டாலும், அல்லது நான்காவதாக (பரமன், அல்லது புருஷன், அவனது மாயை, ஜீவன், அவித்யை அல்லது அறியாமை என்ற) நான்கும் காரணமாக இருந்தாலும், அத்யாத்மாவை அறிந்தவர்கள் பிரகிருதியையே அனைத்து உயிரினங்களின் காரணமாகப் பார்க்கிறார்கள்.(115)

புலப்படாததாக இருக்கும் பிரகிருதியானது, இந்தத் தத்துவங்களின் வடிவில் புலப்படுவதாகிறது. ஓ! ஏகாதிபதி, நான், நீ, உடலுடன் கூடிய பிறர் அனைவரும், (நம் உடல்களைப் பொறுத்தவரையில்) பிரகிருதியின் விளைவுகளாவே இருக்கிறோம்.(116) கருவூட்டல் மற்றும் (கரு தொடர்புடைய) பிற நிலைகள், உயிர்வித்து மற்றும் குருதியின் கலவையின் மூலமே நேர்கின்றன. கருவூட்டலின் பின்விளைவாக, முதலில் தோன்றும் விளைவானது கலலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(117) கலலத்தில் இருந்து புத்புதம் (குமுழி) என்றழைக்கப்படுவது எழுகிறது. புத்புதமென்றழைக்கப்படும் நிலையில் இருந்து பேசி என்றழைக்கப்படும் நிலை எழுகிறது. பேசி என்றழைக்கப்படும் நிலையிலிருந்து, பல்வேறு அங்கங்கள் வழிப்படும் நிலை எழுகிறது. இந்த இறுதி நிலையில் இருந்து நகங்களும், முடியும் தோன்றுகின்றன.(118) ஓ! மிதிலையின் மன்னா {தர்மத்யஜா}, ஒன்பதாம் மாதத்தில் பிறக்கும் உயிரினத்தின் பாலினம் அறியப்பட்டு, ஆண்பிள்ளை என்றும் பெண்பிள்ளை என்றும் அழைக்கப்படுகின்றன.(119) உயிரினம் கருவறையில் இருந்து வெளிவந்ததும், அதன் நகங்களும், விரல்களும் மெருகூட்டப்பட்ட தாமிரத்தின் வண்ணத்தில் தெரிகின்றன. பிறக்கும்போது காணப்பட்ட வடிவம் மாறும்போது நேரும் அடுத்த நிலை குழந்தைப்பருவம் என்றழைக்கப்படுகிறது.(120)

குழந்தைப் பருவத்தில் இருந்து இளமைப் பருவம் அடையப்படுகிறது, இளமையில் இருந்து முதுமையும் அடையப்படுகிறது. உயிரினங்கள் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது, முந்தைய நிலையில் இருந்த வடிவம் மாற்றமடைகிறது.(121) பொதுப் பயன்பாட்டில் பல்வேறு செயல்களைச் செய்யும் உடலின் பூதங்கள் ஒவ்வொரு உயிரினத்திலும் ஒவ்வொரு கணமும் மாற்றமடைகின்றன. எனினும், அம்மாற்றங்கள் கவனிக்கப்பட முடியாத அளவுக்கு நுணுக்கமாக நடைபெறுகின்றன.(122) உயிரினங்கள் அனைத்தின் உடல்நிலைகளும் நல்ல இனத்தைச் சார்ந்த வேகமான குதிரையைப் போல இவ்வாறு தொடர்ந்து மாறுதலுக்கு உட்படுபவையாக இருக்கும்போது, யார் எங்கிருந்து வந்தவன்? எங்கிருந்து வரவில்லை?(124) யார் யாருடையவன்? யாருடையவனல்ல? அவன் எங்கே எழுவதில்லை? உயிரினங்களுக்கும், அவற்றின் உடல்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது?(125)

தீக்கல் இரும்புடன் தொடர்பு கொள்ளும்போதும், இரு கட்டைகள் ஒன்றோடொன்று உரசும்போதும் உண்டாகும் நெருப்பைப் போல ஏற்கனவே சொல்லப்பட்ட ஏற்கனவே பெயர் சொல்லப்பட்ட (முப்பது) தத்துவங்களின் கலவையால் உயிரினங்கள் உண்டாகின்றனர்.(126) உண்மையில், உன் உடலில் நீ உன் உடலையே காண்பது போலும், உன் ஆன்மாவில் உன் ஆன்மாவையே காண்பது போலும், நீ ஏன் உன் உடலையும், உன் ஆன்மாவையும் பிறரின் உடல்களிலும், ஆன்மாக்களிலும் காணவில்லை?(128) ஓ! மன்னா, “இஃது என்னுடையது, இஃது என்னுடையதல்ல” என்ற (பிழையான) இருமை {முரண்பட்ட இரட்டைகளின்} ஞானத்தில் இருந்து நீ விடுபட்டது உண்மையென்றால், யார் நீ? யாருடையவள்? எங்கிருந்து வருகிறாய்? போன்ற கேள்விகளினால் என்ன பயன் ஏற்படப்போகிறது?(129) பகைவர்கள், கூட்டாளிகள், நடுநிலையாளர்கள், வெற்றிக்காலம், அமைதிக்காலம் போர்க்காலங்களில் பிறர் செயல்படுவதைப் போலவே செயல்படும் ஒரு மன்னனிடம் விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடுகள் என்று எவற்றைச் சொல்ல முடியும்?(130)

அனைத்துச் செயல்களிலும் ஏழுவகைகளில் வெளிப்படும் முத்தொகையின் {அறம், பொருள் மற்றும் இன்பத்தின்) உண்மை இயல்பை அறியாதவனும், அந்த முத்தொகையில் பற்று கொண்டவனுமான ஒருவனிடம் விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடுகள் என்று எவற்றைச் சொல்ல முடியும்?[13](131) ஏற்பில்லாதவர், ஏற்புடையவர், பலவீனர் மற்றும் பலவான்களிடம் சம பார்வைச் செலுத்த தவறுபவனிடம் விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடுகள் என்று எவற்றைச் சொல்ல முடியும்? அதற்குத் தகாத நீ செய்யும் விடுதலைக்கான {முக்திக்கான} பாசாங்கு உனது ஆலோசகர்களால் {அமைச்சர்களால்} தடுக்கப்பட வேண்டும்.(132) (உன்னிடம் இவ்வளவு களங்கங்கள் இருக்கும்போது) விடுதலையை {முக்தியை} அடைய நீ செய்யும் இந்த முயற்சியானது, தடுக்கப்பட்ட உணவுகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் ஏற்கும் நோயாளி மருந்தைப் பயன்படுத்தவதைப் போன்றதே ஆகும்.(133) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, மனைவிகள் மற்றும் பற்றுக்கான பிற தோற்றுவாய்களைக் குறித்துச் சிந்திக்கும் ஒருவன் தன் ஆன்மாவில் உள்ள இவற்றைக் காண வேண்டும். விடுதலைக்கான {முக்திக்கான} குறியீடாக வேறு எதைத் தான் பார்க்க முடியும்?(134) இவற்றைக் குறித்தும், விடுதலை அறத்தைப் பின்பற்றுவதாகச் சொன்னாலும் நீ இன்னும் பற்றுக் கொண்டிருக்கும் நன்கறியப்பட்ட நான்கு செயல்கள் (உறக்கத்தில் கிடப்பது, அனுபவிப்பது, உண்பது, உடுத்துவது) தொடர்பான குறிப்பிட்ட சில தோற்றுவாய்களைக் குறித்தும் இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(135)மொத்த உலகையும் ஆள வேண்டிய மனிதன் உண்மையில் இரண்டாமவன் அற்ற ஒரே மன்னனாக இருக்க வேண்டும். மேலும் அவன் ஒரே ஓர் அரண்மனையில் மட்டுமே வாழும் கடப்பாடு கொண்டவனாவான்.(136) அந்த அரண்மனையில் அவனுக்கு ஒரே ஓர் உறங்கும் அறை மட்டுமே இருக்க வேண்டும். அந்த அறையிலும், இரவில் படுத்துக் கொள்ள அவனுக்கு ஒரே ஒரு படுக்கை மட்டுமே இருக்க வேண்டும்.(137) அந்தப் படுக்கையிலும் அவன் தன் மனைவியான ராணிக்குப் பாதியைக் கொடுக்கும் கடப்பாடு கொண்டவனாவான். மன்னனுக்குரிய பங்கு எவ்வளவு சிறியது என்பதை விளக்கும் எடுத்துக்காட்டாக இஃது அமையும்.(138) அவனது இன்பப் பொருட்கள், அவன் உண்ணும் உணவு, அவன் உடுக்கும் உடைகள் ஆகியவற்றிலும் இதுவே வழக்காகும். இவ்வாறு அவன் அனைத்துப் பொருட்களிலும் மிகச் சொற்பமான பங்கிலேயே பற்றுக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அவன் வெகுமதி அளிக்கும், தண்டிக்கும் கடமைகளிலும் பற்றற்றவனாக இருக்கிறான்.(139) மன்னன் எப்போதும் பிறரைச் சார்ந்தவனாகவே இருக்க வேண்டும். அவனுக்கு உரிய அனைத்திலும் சிறு பகுதியை மட்டுமே அவன் அனுபவிக்கிறான், மேலும் அந்தச் சிறு பகுதியிலும் அவன் (பிறர் தங்கள் தங்களுக்குரிய உடைமைகளில் பற்று கொண்டிருப்பதைப் போலவே) கட்டாயமாகப் பற்றப்படுகிறான். அமைதி மற்றும் போர்க்காரியத்திலும் மன்னனைச் சார்பற்றவனாகச் சொல்ல முடியாது.(140)

பெண்கள், விளையாட்டு மற்றும் பிற வகை இன்பங்கள் குறித்த காரியத்தில் மன்னனின் விருப்பம் மிகவும் சுருக்கப்பட்டதாகும். ஆலோசனை பெறும் காரியத்திலும், தன் அமைச்சர்களின் சபையிலும் மன்னனுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது?(141) எனினும், அவன் தன் ஆணைகளைப் பிற மனிதர்களின் மேல் நிறுவினால் அவன் முற்றிலும் சுதந்திரமானவனாகச் சொல்லப்படுகிறான். ஆனால், அடுத்தக் கணமே தன் வகைக்கான பல்வேறு காரியங்களில் தன்னால் ஆணையிடப்பட்ட மனிதர்களாலேயே அவனது சுதந்திரம் தடை செய்யப்படுகிறது.(142) மன்னன் உறங்க விரும்பினால், தொழில் தொடர்பாகத் தொடர்பு கொள்ளும் மனிதர்களால் தடுக்கப்பட்டு அவனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அனுமதிக்கப்படும்போதே அவன் உறங்க வேண்டும், உறங்கும் போதும், தொழில் நிமித்தமான அவசரம் கொண்டோரைக் கவனிப்பதற்கு அவன் விழிப்புடன் இருக்க வேண்டிய கடப்பாடும் அவனுக்கு உண்டு.(143) நீராடல், தீண்டல், பானம், உணவு, நெருப்பில் ஆகுதிகளை ஊற்றல், வேள்விகளைச் செய்தல், பேசுதல், கேட்டல் ஆகிய இந்த வார்த்தைகளை மன்னர்கள் பிறரிடம் கேட்டு, அவற்றைச் சொல்வோருக்கு அடிமையாக இருக்க வேண்டும்.(144) மனிதர்கள் கூட்டங்கூட்டமாக வந்து மன்னனிடம் கொடைகளை வேண்டுவார்கள். எனினும் பொதுக் கருவூலத்தின் பாதுகாவலனாக இருப்பதால் அவன் மிகுந்த தகுதியைக் கொண்டவருக்குக் கூடக் கொடைகளை அளிக்க முடியாது.(145)

அவன் கொடைகளை அளித்தால், கருவூலம் தீர்ந்துவிடும். அவன் கொடையளிக்கவில்லையெனில், வேண்டுபவர்கள் ஏமாற்றமடைந்து பகைக்கண்களுடன் பார்ப்பார்கள். இதன் காரணமாக எரிச்சலையும் அவன் {மன்னன்}, தன் மனத்தில் மானிட வெறுப்பைப் படரவிடுகிறான்.(146) ஞானிகளும், வீரர்களும், செல்வந்தர்களுமான பலர் சேர்ந்து ஒன்றாக வசித்தால், அதன் விளைவாக மன்னனின் மனம் நம்பிக்கையின்மையால் நிறைகிறது. அஞ்சுவதற்குக் காரணமேதும் இல்லாதிருந்தாலும், மன்னன் தன்னிடம் காத்திருப்போரையும் மற்றும் தன்னை வழிபடுவோரையும் அஞ்சுகிறான்.(147) ஓ! மன்னா, நான் குறிப்பிட்டவர்களும் அவனிடம் குற்றத்தைக் காண்கிறார்கள். எவ்வழியில் மன்னனுக்கு அவர்களிடம் அச்சமேற்படுகிறது என்பதைக் காண்பாயாக.(148) மேலும் தன் சொந்த வீடுகளில் உள்ள மனிதர்கள் அனைவரும் மன்னர்களே. மேலும் தன் சொந்த வீடுகளில் உள்ள மனிதர்கள் அனைவரும் இல்லற வாழ்வு முறையை வாழ்பவர்களே. ஓ! ஜனகா {தர்மத்வஜா}, மன்னர்களைப் போலவே சொந்த வீடுகளில் உள்ள மனிதர்களும் தண்டிக்கவும், வெகுமதியளிக்கவும் செய்கிறார்கள்.(149) மன்னர்களைப் போலவே பிறருக்கும், மகன்களும், மனைவியரும், தங்கள் சுயங்களும், கருவூலங்களும், நண்பர்களும், கிடங்குகளும் உள்ளன. இக்காரியங்களின் பிற மனிதர்களிடம் இருந்து மன்னன் வேறுபட்டவனல்ல.(150)

“நாடு அழிகிறது, நகரம் எரிகிறது, முதன்மையான யானை {பட்டத்து யானை} இறந்தது” ஆகிய இவை அனைத்தும் அறியாமை மற்றும் பிழையால் உண்டாகும் மனப்பதிவுகள் என்பதைக் கருத்தில் கொள்ளமால் மன்னனும் பிறரைப் போலவே {எனது என்ற அகங்காரத்தால் அவன்} துன்பவசப்படுகிறான்.(151) மன்னனானவன், ஆசை வெறுப்பு, மற்றும் அச்சம் ஆகியவற்றால் உண்டாகும் மனத்துன்பங்களில் இருந்து அரிதாகவே விடுபடுகிறான். தலைவலி மற்றும் பல்வேறு வகை நோய்களாலும் பொதுவாகவே பீடிக்கப்படுகிறான்.(152) (இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்திலும் மன்னன் (பிறரைப் போலவே) பீடிக்கப்படுகிறான். அவன் அனைத்திலும் அச்சங்கொள்கிறான். உண்மையில், எதிரிகளும், ஆளும் தடைகளும் நிறைந்த நாட்டை அனுபவித்துக் கொண்டே மன்னன் தன் இரவுகளை உறங்காமல் கழிக்கிறான்.(153) எனவே, அரசுரிமை இன்பத்தின் மிகச் சிறிய பகுதியால் மட்டுமே அருளப்பட்டிருக்கிறது. அது கொடுக்கும் துன்பமோ மிகப் பெரியதாகும். வைக்கோலை எரிக்கும் நெருப்பின் தழல்கள், அல்லது நீர்ப்பரப்பின் நுரையில் உள்ள குமிழி போல அது திடமற்றதாகும் {உறுதியற்றதாகும்}.(154) அரசுரிமையை அடைய விரும்பியோ, அஃதை அடைந்தோ அமைதியை வெல்வோம் என்ற நம்பிக்கை எவனுக்கு இருக்கும்? நீ இந்த நாட்டையும், இந்த அரண்மனையையும் உனதாகக் கருதுகிறாய்.(155)

இந்தப் படையும், இந்தக் கருவூலமும், இந்த அமைச்சர்களும் உனக்குச் சொந்தம் என நீ நினைக்கிறாய். எனினும், உண்மையில் அவை அவை யாருடையவை? யாருடையதில்லை? கூட்டாளிகள், அமைச்சர்கள், தலைநகரம், மாகாணங்கள், தண்டனை, கருவூலம், மன்னன் ஆகிய(156) நாட்டின் அங்கங்களான ஏழும், ஒன்றையொன்று தாங்கியிருக்கும் மூன்று குச்சுகளைப் போல ஒன்றையொன்று சார்ந்தவையாகும். இவை ஒவ்வொன்றின் தகுதியும், பிறவற்றின் தகுதியாலேயே நிறுவப்படுகின்றன. இவற்றில் எஞ்சியவற்றைவிட மேன்மையானது என்று எதைச் சொல்ல முடியும்(157) அந்தக் குறிப்பிட்டவை ஒவ்வொன்றும் தங்கள் இயக்கத்தின் மூலம் ஏதோ ஒரு முக்கிய முடிவைத் தருகின்றபோது அவை ஒவ்வொன்றும் தனித்துவமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு காணப்படும் திறனின் மூலமே அந்த நேரத்தில் மேன்மையானதாகச் சொல்லப்படுகிறது.(158) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஏழு அங்கங்களும், {விருத்தி, க்ஷயம் மற்றும் ஸ்தானம்} ஆகிய மூன்றும் சேர்ந்தவையும், ஒன்றையொன்று சார்ந்திருப்பவையுமான இந்தப் பத்து தொகையும் {தசவர்க்கமும்} மன்னனைப் போலவே நாட்டை அனுபவிப்பதாகச் சொல்லப்படுகிறது.(159) பெருஞ்சக்தி கொண்டவனும், க்ஷத்திரிய நடைமுறைகளில் உறுதியான பற்றைக் கொண்டவனுமான மன்னன், குடிமக்களின் வயலில் விளைவதில் பத்தில் ஒரு பாகத்தில் மட்டுமே நிறைவு கொள்ள வேண்டும். சில மன்னர்கள் பத்தில் ஒரு பாகத்தைவிடக் குறைந்த அளவிலேயே நிறைவடைவதும் காணப்படுகிறது.(160)

இவ்வுலகில் உரிமையுள்ள எவரும் இல்லாமல் அரச அலுவலுக்கு உரிய ஒருவனுமில்லை, ஒரு மன்னன் இல்லாத எந்த நாடும் கிடையாது. நாடு என்ற ஏதும் இல்லையென்றால், அறம் என்ற ஏதும் இருக்காது, அறம் என்ற ஏதும் இல்லை என்றால் விடுதலை எங்கிருந்து எழும்?(161) மிகப் புனிதமானதும், உயர்ந்ததுமான தகுதிகள் அனைத்தும் மன்னர்கள் மற்றும் நாடுகளுக்கு உரியவையாகும். ஒரு நாட்டை நன்கு ஆள்வதன் மூலம் ஒரு மன்னன் மொத்த உலகையும் தக்ஷிணையாகக் கொடுத்த ஒரு குதிரை வேள்வியைச் செய்வதற்குரிய தகுதியை ஈட்டுகிறான். (ஆனால் எத்தனை மன்னர்கள் தங்கள் நாடுகளை நன்றாக ஆள்கிறார்கள்?(162) ஓ! மிதிலையின் ஆட்சியாளா, மன்னர்கள் மற்றும் நாடுகள் தொடர்புடைய இத்தகைய நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான களங்கங்களை என்னால் சுட்டிக் காட்டமுடியும்.(163) மேலும், என் உடலிடம் கூட எனக்கு உண்மையான தொடர்பேதும் இல்லாத போது, பிறரின் உடல்களில் நான் எத்தொடர்பையும் கொண்டதாக எவ்வாறு கொள்ள முடியும்? வர்ணக்கலப்பை ஏற்படுத்தியதாக நீ என்னைக் குற்றஞ்சாட்ட முடியாது.(164) விடுதலை {முக்த} அறத்தையும், அதன் வழிகள், முறைகள், நடைமுறைகள், முடிவு ஆகியவற்றையும் சேர்த்து மொத்தமாகப் பஞ்சசிகரின் உதடுகளில் இருந்து நீ கேட்டாயா?(165)

ஓ! மன்னா, நீ உன் கட்டுகள் அனைத்தையும் கடந்து விட்டதாகவும், பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டதாகவும் இருந்தால் நீ ஏன் இன்னும் இந்தக் குடையையும், அரச சின்னங்களையும் தரிக்கிறாய்?(166) நீ சாத்திரங்களைக் கேட்டதே இல்லையென்றோ, எந்தப் பயனும் இல்லாமல் அவற்றைக் கேட்டிருக்கிறாய் என்றோ, ஒருவேளை, சாத்திரங்களைப் போலத் தெரியும் வேறு ஏதோ உடன்படிக்கைகளைக் கேட்டிருக்கிறாய் என்றோ நான் நினைக்கிறேன்.(167) உலகம் சார்ந்த அறிவை மட்டுமே கொண்டிருக்கிறாய் என்றும், சாதாரண மனிதர்களும் கட்டப்படும் தீண்டல், மனைவியர், மாளிகைகள் முதலியவற்றில் நீயும் கட்டப்பட்டிருக்கிறாய் என்றும் தெரிகிறது.(168) நீ அனைத்துக் கட்டுகளில் இருந்து விடுபட்டிருக்கிறாய் என்பது உண்மையானால், என் புத்தியால் மட்டுமே உன் மேனியில் நுழைந்த நான் உனக்கு என்ன தீங்கைச் செய்துவிட்டேன்?(169) அனைத்து வகை மனிதர்களுக்கு மத்தியில் யதிகள், வசிக்கப்படாத அல்லது கைவிடப்பட்ட வசிப்பிடங்களில் வசிப்பதே வழக்கமாகும். உண்மையான ஞானத்தில் வெறுமையான புத்தியால் நுழைந்ததன்மூலம் நான் உனக்கு என்ன தீங்கைச் செய்துவிட்டேன்?(170)

ஓ! மன்னா, ஓ! பாவமற்றவனே, நான் என் உள்ளங்கைகளாலோ, கரங்களாலோ, பாதங்களாலோ, தொடைகளாலோ, என் உடலின் எந்தப் பாகத்தாலோ நான் உன்னைத் தீண்டவில்லை.(171) நீ உயர்ந்த குலத்தில் பிறந்தவனாவாய். நீ பணிவுள்ளவன். முன்னறிதிறனும் கொண்டிருக்கிறாய். நான் உன் உடலுக்குள் நுழைந்த செயலானது நன்மையோ, தீமையோ அது நம் இருவர் மட்டுமே தொடர்புடைய தனிப்பட்ட செயலாகும். அந்தத் தனிப்பட்ட செயலை உன் சபையினர் அனைவரின் முன்பும் வெளிப்படுத்தியது முறையற்றதாகாதா?(172) இந்தப் பிராமணர்கள் மதிக்கத்தகுந்தவர்களாவர். இவர்கள் ஆசான்களில் முதன்மையானவர்களுமாவர். அவர்களுடைய மன்னனாகிய நீயும் மதிக்கத்தகுந்தவனே. அவர்களை மதிக்கும் நீ, அவர்களால் மதிகப்படவும் தகுந்தவனாவாய்.(173) இவையனைத்தையும் குறித்துச் சிந்திக்கும் நீ பேச்சுரிமை விதிகளை உண்மையாக அறிந்தவனாக இருந்தால். எதிர்பாலினத்தைச் சேர்ந்த இருவருக்கிடையில் நடந்த சேர்க்கையை இந்த மனிதர்களில் முதன்மையானவர்களுக்கு அறிவித்தது முறையாகாது.(174) ஓ! மதிலையின் மன்னா, தாமரை இலையைத் தொடாமல் அதைச் சற்றும் நனைக்காமல் இருக்கும் நீர்த்துளியைப் போலவே நான் உன்னை முற்றிலும் தீண்டாதிருக்கிறேன்.(175)

இவ்வாறு இருக்கும்போதிலும் நீ என் தீண்டலை உணர்வாயெனில், துறவி வகையைச் சார்ந்த பஞ்சசிகரின் போதனைகள் மூலம் உன் புத்தியானது புலன்நுகர் பொருட்களில் இருந்து விலகியிருக்கிறது என்பதை எவ்வாறு நம்ப முடியும்?(176) இல்லற வாழ்வு முறையில் இருந்து விழுந்திருந்தாலும், அடைவதற்கரிய விடுதலையை {முக்தியை} நீ இன்னும் அடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. விடுதலை என்ற இலக்கை அடைந்துவிட்டதாகப் பாசாங்கு செய்யும் நீ அவ்விரண்டு நிலைகளுக்கு இடையிலேயே இருக்கிறாய்.(177) விடுதலையடைந்த ஒருவன் மற்றொருவனுடன் கொள்ளக்கூடிய தொடர்பானது, நீ அஞ்சும் வகையிலான கலப்புக்கு வழிவகுக்காது. அது புருஷனுக்கும், பிரகிருதிக்கும் இடையிலான கலப்பைப் போன்றதாகும்.(178) உடலையும் ஆன்மாவையும் ஒன்றெனக் கருதுபவர்கள் மட்டுமே, பல்வேறு வகைகளையும் {வர்ணங்களையும்}, வாழ்வுமுறைகளையும் {ஆசாரங்களையும்} வெவ்வேறென நினைத்தும், கலப்பின் சாத்தியத்தை அனுமானித்தும் பிழை செய்வார்கள். என் உடல் உன்னிலிருந்து வேறுபட்டதாகும். ஆனால் என் ஆன்மா உன் ஆன்மாவிலிருந்து வேறுபட்டதல்ல. என்னால் இஃதை உணர முடியும்போது, யோகத்தின் மூலம் நான் உனக்குள் நுழைந்திருந்தாலும், என் புத்தி உன்னில் உண்மையில் இல்லை என்பதில் சிறு ஐயமும் ஏற்படவில்லை.(179)

கையில் பானை தாங்கப்படுகிறது. அந்தப் பானையில் பால் இருக்கிறது. அந்தப் பாலில் ஓர் ஈ இருக்கிறது. கை மற்றும் பானை, பானை மற்றும் பால், பால் மற்றும் ஈ ஆகியன ஒன்றாக நீடித்திருந்தாலும், அவை ஒவ்வொன்றும் வேறுபட்டவையாகும்.(180) அந்தப் பானை பாலின் இயல்பைக் கொள்வதில்லை. பாலும் ஈயின் இயல்பை அடைவதில்லை. அவற்றின் நிலை ஒன்றையொன்று சார்ந்திருந்தாலும், அவை கொண்ட தற்காலிக நிலையால் என்ற மாற்றமும் ஏற்படாது.(181) இதே வகையிலேயே நிறமும், நடைமுறைகளும் விடுதலையடைந்த மனிதனில் ஒன்றாக நீடித்திருந்தாலும், உண்மையில் அவனைப் பற்றவில்லை. நான் உன்னுடன் கொண்ட சேர்க்கையின் விளைவால் எவ்வகையான கலப்பு {வர்ணக்கலப்பு} ஏற்பட முடியும்?(182) நிறத்தால் நான் உனைனவிட மேம்பட்டவளல்ல. நான் வைசியருமல்ல, சூத்திரருமல்ல. ஓ! மன்னா, நான் உன் வகையைச் சார்ந்த ஒரு தூய {க்ஷத்திரிய} குலத்திலேயே பிறந்தேன்.(183) பிரதானர் என்ற பெயரில் ஓர் அரசமுனி இருந்தார். நீ அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பாய் என்பது வெளிப்படை. நான் அவரது குலத்தில் பிறந்தவள், என் பெயர் சுலபையாகும்.(184) (பெரும் மலைகளில் வசிக்கும் தலைமை மேதைகளான) துரோணர், சதசிருங்கர் மற்றும் சக்ரத்வாரர் ஆகியோரின் துணையுடன் தேவர்களில் முதன்மையான இந்திரன், என் மூதாதையர்கள் செய்த வேள்விகளுக்கு வழக்கமாக வருவான்.(185) அத்தகைய குலத்தில் பிறந்த எனக்குத் தகுந்த கணவனைக் காண முடியாது என்பது தெரிந்தது. விடுதலை அறம் கற்பிக்கப்பட்டவளான நான் தவப் பயிற்சிகளை நோற்றுக் கொண்டு பூமியில் மட்டுமே திரிந்து வருகிறேன்.(186) நான் பின்பற்றும் துறவு வாழ்வில் எந்தப் போலித்தனமும் எனக்குக் கிடையாது. நான் பல்வேறு வகையினரின் நடைமுறைகளைக் குழப்புவதில்லை. எனக்குச் சொந்தமான முறையான வாழ்வுமுறையையே நான் உறுதியாகப் பின்பற்றுகிறேன்.(187)

நான் என் நோன்புகளில் உறுதியாகவும், நிலையாகவும் இருக்கிறேன். சொல்லின் உரிமையைச் சிந்திக்காமல் நான் எவ்வார்த்தையையும் சொல்வதில்லை. ஓ! ஏகாதிபதி, முறையாகச் சிந்திக்கமால் நான் உன்னிடம் வரவில்லை.(188) விடுதலை அறத்தின் மூலம் உன் புத்தி தூய்மையடைந்திருக்கிறது என்று நான் கேள்விப்பட்டதால், சில நன்மைகளை விரும்பி நான் இங்கே வந்தேன். உண்மையில், நீ முயலும் விடுதலை குறித்து விசாரிக்கவே நான் இங்கே வந்தேன்.(189) என்னை மகிமைப்படுத்திக் கொள்வதற்காகவோ, என் எதிராளிகளை அவமதிக்கவோ நான் இதைச் சொல்லவில்லை. ஆனால் நேர்மையால் மட்டுமே தூண்டப்பட்டு நான் இதைச் சொல்கிறேன். விடுதலையை {முக்தியை} அடைந்தவன், வெற்றிக்காக வாக்குப்போரின் மூலம் ஒருபோதும் அறிவுப் போராளியாவதில்லை. மறுபுறம், உண்மையில் விடுதலையை அடைந்தவன், முற்றிலும் அமைதியான இடமாக இருக்கும் பிரம்மத்தில் அர்ப்பணிப்பு கொள்கிறான்.(190) ஒரு துறவி வெறும் வீட்டில் ஓரிரவு மட்டும் வசிப்பதை (வசித்து மறுநாள் காலையில் செல்வதைப்) போலவே நானும் (ஏற்கனவே சொன்னது போல உண்மை ஞானமற்ற வெற்று அறையைப் போன்ற) உன்னில் வசிக்கப் போகிறேன்.(191) வாக்கு மற்றும் பிற காணிக்கைகளால் நீ ஒரு விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய விருந்தோம்பலைக் கொண்டு என்னை முறையாகக் கௌரவித்தாய். ஓ! மிதிலையின் ஆட்சியாளா, இந்த ஓரிரவு என் அறை போன்றதேயான உன்னில் உறங்கிவிட்டு, நாளை நான் செல்வேன்” என்றாள் {சுலபை}”.(192)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சிறந்த பொருளும், காரணமும் நிறைந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஜனகன் {தர்மத்யஜன்} அவளுக்கு {சுலபைக்கு} பதிலேதும் சொல்லத்தவறினான்”.(193)

பாவகாத்யயனம்! – சாந்திபர்வம் பகுதி – 322-உலகம் நிலையற்றது; பிரம்மஞானத்தைக் கொண்டு பிறப்பிறப்பில் இருந்து விடுதலையடைய வேண்டிய அவசியம்; இதயத்தைத் தூய்மையாக்கும் பாடத்தைச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பழங்காலத்தில், வியாசரின் மகனான சுகர் எவ்வாறு விடுதலை நிலையை வென்றெடுத்தார்? நீர் சொல்லி அக்கதையைக் கேட்க நான் விரும்புகிறேன். இதில் நான் தணியாத ஆவல் கொண்டிருக்கிறேன்.(1) ஓ! குரு குலத்தவரே, புலப்படாதது ({வெளிப்படாத} காரணம்), புலப்படுவது ({வெளிப்படும்} விளைவுகள்), அவற்றில் இருந்தாலும், அவற்றில் பற்றில்லாத உண்மை (அல்லது பிரம்மம்), சுயம்புவான நாரயாணனின் செயல்கள் ஆகியவற்றைக் குறித்த தீர்மானங்களை உமது புத்திக்கு அறிந்தவரை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “சாதாரண மனிதர்களால் தீங்கற்றவை என்று கருப்படும் செயல்களைச் செய்து கொண்டு, அச்சமில்லாமல் வாழ்ந்து வரும் தம் மகன் சுகரைக் கண்ட வியாசர், அவருக்கு வேதம் முழுமையும் கற்பித்து, ஒருநாள் அவரிடம் இவ்வார்த்தைகளில் பேசினார்.(3)

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஓ! மகனே, உன் புலன்களை வென்று, அதீத குளிர், அதீத வெப்பம், பசி, தாகம், காற்று ஆகியவற்றையும் வென்று, (யோகிகள் செய்வதைப் போல) அவற்றை வென்ற பிறகு, அறம் பயில்வாயாக.(4) வாய்மை {ஸத்யம்}, நேர்மை {ருஜுவாயிருத்தல்}, கோபம் மற்றும் வன்மத்தில் இருந்து விடுதலை {குரோதமின்மை மற்றும் அஸூயையில்லாமை}, தற்கட்டுப்பாடு {தமம்}, தவங்கள், நற்கடமைகள் {துன்பம் செய்யாமை}, கருணை {குரூரத் தன்மையில்லாமை} ஆகியவற்றை நீ முறையாகப் பயில்வாயாக.(5) வாய்மையைச் சார்ந்திருக்கும் நீ, அனைத்துவகை நேர்மையின்மைகளையும், வஞ்சனைகளையும் கைவிட்டு, அறத்தில் உறுதியான அர்ப்பணிப்புக் கொள்வாயாக. தேவர்கள் மற்றும் விருந்தினர்கள் உண்ட பிறகு எஞ்சும் உணவில் உன் வாழ்வைத் தாங்கிக் கொள்வாயாக.(6) நீர்ப்பரப்பில் இருக்கும் நுரையைப் போலவே உன் உடலும் நிலையற்றதாகும். ஜீவாத்மாவானது, ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையைப் போலப் பற்றில்லாமல் அதில் {உடலில்} அமர்ந்திருக்கிறது. ஏற்புடைய பொருட்கள் அனைத்தின் துணையும் மிகக் குறுகிய காலம் வருபவையே. ஓ! மகனே பிறகேன் நீ இத்தகைய மறதியில் உறங்குகிறாய்?(7) உன் எதிரிகள் {ஆசைகள்} கவனத்துடனும், விழிப்புடனும், (உன்மீத பாய) எப்போதும் தயாராகவும், தங்கள் வாய்ப்புக்காக எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இஃதை அறியாமல் நீ ஏன் மூடனாயிருக்கிறாய்?(8)

நாட்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கடக்கும்போது, உன் வாழ்நாள் காலமும் குறைகிறது. உண்மையில், உன் வாழ்நாள் காலம் இடையறாமல் குறைந்து கொண்டிருக்கும்போது, (மீட்பின் வழிமுறைகளைக் கற்க) நீ ஏன் ஆசான்களை நோக்கி ஓடாமல் இருக்கிறாய்?(9) (மறுமை இருப்பில்) நம்பிக்கையற்றவர்களே, குருதியின் சதையும் பெருகச் செய்யும் விளைவை மட்டுமே கொண்ட இவ்வுலகம் சார்ந்த பொருட்களில் தங்கள் இதயத்தை நிலைநிறுத்துகிறார்கள். மறுமையைப் பொறுத்தவரையில் அவர்கள் முற்றிலும் கவலையற்றவர்களாகவே இருக்கிறார்கள்.(10) பிழையான புரிதல்களின் மூலம் மலைப்படைந்த மனிதர்கள், அறத்தில் வெறுப்பை வெளிக்காட்டுகிறார்கள். சுற்றி வளைந்து செல்லும் தவறான பாதையில் தவறாக வழிநடத்தப்படும் மனிதர்களுக்குப் பின்னால் செல்லும் மனிதனும் அவர்களைப் போலவே இணையாகப் பீடிக்கப்படுகிறான்.(11) எனினும், நிறைவடைந்தவர்கள், சாத்திரங்களில் அர்ப்பணிப்புள்ளவர்கள், உயர் ஆன்மா கொண்டவர்கள், பெரும் வலிமையைக் கொண்டவர்கள் ஆகியோர் அறப்பாதையிலேயே நடக்கின்றனர். நீ அவர்களிடம் காத்திருந்து, அவர்களின் போதனைகளை நாடுவாயாக.(12) அறத்தில் கண்கள் நிறுவப்பட்ட ஞானிகளிடம் இருந்து பெறப்படும் போதனைகளின் படி நீ செயல்படுவாயாக. மேன்மையாகச் சொல்லப்படும் அந்தப் பாடங்களின் மூலம் தூய்மையடைந்து புத்தியைக் கொண்டு, சரியான பாதையில் இருந்து பிறழ எப்போதும் தயாராக இருக்கும் உன் இதயத்தைக் கட்டுப்படுத்துவாயாக.(13) தற்காலம் தொடர்புடையவற்றிலேயே எப்போதும் புத்தியைக் கொண்டோர், நாளையென்பது வெகுதொலைவில் உள்ளது என்று கருதி அச்சமில்லாமல் இருப்போர், உணவுக் காரியங்களில் எத்தகைய கட்டுப்பாடுகளையும் கொள்ளாதோர் ஆகிய உணர்வற்ற மனிதர்கள் இவ்வுலகமானது தகுதி காணும் களம் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்.(14)

அறத்தால் அமைந்த படிக்கட்டுகளுக்குச் சென்று, ஒன்றன்பின் ஒன்றாக அதில் ஏறுவாயாக. தற்போது நீ, தன்னைச் சுற்றி வலையைப் பின்னி, தப்பும் வழிமுறைகள் அனைத்தையும் இழக்கும் ஒரு புழுவைப் போன்றவனாகவே நீ இருக்கிறாய்.(15) கட்டுப்பாடுக்ள அனைத்தையும் மீறுபவனும், காட்டாற்றின் அருகில் இருக்கும் வீட்டைப் போன்றவனும், செருக்கால் தலையை உயர்த்தி நிற்கும் மூங்கிலைப் போலப் (பிறருக்குத்) தெரிபவனுமான நாத்திகவாதியை எந்தத் தயக்கமும் இல்லாமல் உன் இடப்பக்கத்தில் நிறுத்துவாயாக {அவனை உன்னிடமிருந்து இருந்து விலக்குவாயாக}[1].(16) ஆசை, கோபம், மரணமெனும் கடும்பூதங்களை {முதலைகளைக்} கொண்டதும், பிறப்பெனும் சுழலைக் கொண்டதும், ஐம்புலன்களெனும் நீரைக் கொண்டதுமான வாழ்வெனும் பெருங்கடலை யோகமெனும் ஓடத்தைக் கொண்டு கடப்பாயாக.(17) மரணத்தால் பாதிக்கப்படுவதும், முதுமையால் பீடிக்கப்படுவதும், பகல்கள் மற்றும் இரவுகள் என்ற இடிகள் இடையறாமல் விழுவதுமான இவ்வுலகத்தை அறம் எனும் ஓடத்தைக் கொண்டு கடப்பாயாக.(18) நீ அமர்ந்திருக்கும்போதோ, கிடக்கும்போதோ எக்கணத்திலும் மரணம் உன்னைத் தேடிக் கொண்டிருக்கும்போது, எந்நேரத்தில் மரணம் உன்னைத் தன் பலியாகக் கொள்ளும் என்பது நிச்சயமாகும். மீட்பை நீ எங்கிருந்து அடையப்போகிறாய்.(19) செம்மறியாட்டை அபகரித்துச் செல்லும் காலனைப் போலவே, ஒருவன் செல்வம்மீட்டுவதிலும், இன்பங்களை அனுபவிப்பதிலும் ஈடுபட்டு அவற்றில் நிறைவடையாதிருக்கும்போதே காலன் அவனை அபகரித்துச் செல்கிறான்.(20)

இருளில் நுழைய விதிக்கப்படும்போது, நன்கு வளர்க்கப்பட்ட தழலைக் கொண்ட அற புத்தியாலான விளக்கை நீ ஏந்துவாயாக.(21) மனிதர்களின் உலகில் ஒன்றுக்குப் பின் ஒன்றெனப் பல்வேறு வடிவங்களில் வீழும் ஓர் உயிரினம், பெரும் கடின காலத்திற்குப் பிறகே பிராமண நிலையை அடைகிறது. நீ அந்நிலையை அடைந்திருக்கிறாய். ஓ! மகனே, நீ அதை (முறையாகப்) பராமரிக்க முயற்சி செய்வாயாக.(22) ஒரு பிராமணன், ஆசைகளில் நிறைவு கொள்வதற்காகப் பிறப்பை அடைவதில்லை. மறுபுறம், மறுமையில் ஒப்பற்ற மகிழ்ச்சியை அடைவதற்காக இவ்வுலகில் தன்னை வருத்திக் கொள்ளவும், தவங்கள் செய்யவுமே அவன் {பிராமணன்} உடலைக் கொள்கிறான்.(23) நீண்ட நெடிய கடுந்தவங்களின் துணையுடனே பிராமணத் தன்மை என்ற நிலை அடையப்படுகிறது. அந்நிலையை அடைந்த ஒருவன், புலன்களில் ஈடுபடுவதால் தன் காலத்தை வீணடிக்கக்கூடாது. தவங்கள் மற்றும் தற்கட்டுப்பாட்டில் எப்போதும் ஈடுபட்டு, உனக்கான நன்மையை விரும்பி, அமைதியில் அர்ப்பணிப்புடன் நீ வாழவும், செயல்படவும் செய்வாயாக.(24) ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் காலமும் ஒரு குதிரையைப் போன்றதாகும். அந்தக் குதிரையின் இயல்பு புலப்படாததாகும். (ஏற்கனவே சொல்லப்பட்ட பதினாறு) தத்துவங்களே {கலைகளே} உடலாகின்றன. அதன் இயல்பு மிக மிக நுட்பமனாதாகும். க்ஷணங்கள், திருதிகள், நிமிஷங்கள் ஆகியன அதன் உடலில் உள்ள ரோமங்களாகும். சந்தி வேளைகள் அதன் தோள்பூட்டுகளாக இருக்கின்றன. தேய்பிறையும், வளர்பிறையும் சம சக்தியைக் கொண்டு அதன் இரு கண்களாக இருக்கின்றன. மாதங்கள் அதன் உறுப்புகளாகும். அந்தக் குதிரை வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.(25)

உன் கண்கள் குருடாகவில்லையெனில், அக்குதிரை பார்வைக்குப் புலப்படாத பாதையில் நகர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு, மறுமை குறித்த கேள்விக்கு உன் ஆசான்கள் என்ன சொல்கின்றனர் என்பதைக் கேட்டு உன் இதயத்தை அறத்தில் நிலைநிறுத்துவாயாக.(26) அறத்தில் இருந்து வீழ்பவர்களும், பொறுப்பற்ற ஒழுங்கில் தங்களை நடத்திக் கொள்பவர்களும், பிறரிடம் எப்போதும் வன்மத்தைக் காட்டுபவர்களும், தீய வழிகளில் நடப்பவர்களும், யமலோகத்தில் (இருப்புசார்ந்த) உடலை அடைந்து, பல்வேறு வகையான தங்கள் நீதியற்ற செயல்களின் விளைவால் பல்வேறு துன்பங்களை அடைகின்றனர்.(27) அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனும், நல்லோரிடமும், தீயோரிடமும் வேறுபாடு பார்க்காமல் பாதுகாத்து, தண்டிப்பவனுமான மன்னன், அறச்செயல்கள் செய்த மனிதர்களின் உலகை அடைகிறான். பல்வேறுவகை நற்செயல்களைச் செய்வதன் விளைவால் களங்கமற்றதும், ஆயிரமாயிரம் பிறவிகள் எடுத்தாலும் அடைய முடியாததுமான இன்பநிலையை அவன் அடைகிறான்.(28) பெற்றோர் மற்றும் ஆசான்களின் ஆணைகளை மீறும் மனிதன், இறந்த பிறகு நரகத்தை அடைந்து பயங்கர முகத்தோற்றம் கொண்ட சீற்றமிகு நாய்களும், இரும்பு அலகுகளைக் கொண்ட காகங்களும், கருங்காக்கை, கழுகுகள் மற்றும் பிற பறவை கூட்டங்களும், குருதி உறிஞ்சும் புழுக்களும் அவனைத் தாக்குகின்றன.(29) சுயம்புவால் விதிக்கப்பட்ட பத்து கட்டளைகளை, பொறுப்பற்ற தன்மையின் விளைவால் மீறும் இழிந்த பாவி, பித்ருக்களின் மன்னனுடைய ஆட்சிப்பகுதிகளில் உள்ள காட்டுக் கழிவுகளில் பெரும் துன்பத்துடன் தன் காலத்தைக் கழிக்கும் கடப்பாட்டை அடைகிறான்[2].(30)பேராசையால் களங்கமடைந்தவனும், பொய்மையில் அன்பு பாராட்டுபவனும், ஏமாற்று மற்றும் வஞ்சனையில் எப்போதும் திளைப்பவனும், போலித்தனம் மற்றும் வஞ்சகம் பயில்வதன் மூலம் பிறருக்குத் தீங்கிழைப்பவனுமான மனிதன், ஆழ்நரகிற்குச் சென்று, தன் தீச்செயல்களுக்காகப் பெரும் துன்பங்களை அனுபவிக்கிறான்.(31) அத்தகைய மனிதன், கொதிக்கும் நீரைக் கொண்ட வைதரணி என்றழைக்கப்படும் பேராற்றில் நீராட வற்புறுத்தப்பட்டு, வாட்களைப் போன்ற கூரிய இலைகளைக் கொண்ட மரங்கள் நிறைந்த வனத்திற்குள் அனுப்பப்பட்டு, போர்க்கோடரிகளாலான படுக்கையில் கிடத்தப்படுகிறான். அவன் தன் நாட்களைப் பெருந்துன்பத்துடன் பயங்கர நரகில் இவ்வாறே கழிக்கிறான்.(32) நீ பிரம்மலோகத்தையும், தேவர்களின் உலகங்களையும் மட்டுமே காண்கிறாய், ஆனால் உயர்ந்ததை (மோக்ஷத்தைக்) காணாத குருடனாக இருக்கிறாய். ஐயோ, (தளர்ச்சி, முதுமை என்ற) வரிசையில் மரணத்தைக் கொண்டு வருவதை எப்போதும் காணாத குருடனாக இருக்கிறாய்.(33) (விடுதலையின் {முக்தியின்} பாதையில்) செல்வாயாக. ஏன் தாமதிக்கிறாய்? உன் மகிழ்ச்சியை அழிக்கும் பேரச்சம் உன் எதிரில் இருக்கிறது. விடுதலை அடைவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பாயாக.(34) மரணம் அடைந்தவுடன் யமனின் ஆணைக்காக அவன் முன்னிலைக்கு நிச்சயம் எடுத்துச் செல்லப்படுவாய். மறுமையில் இன்பநிலையை அடைவதற்காகப் பயிலக் கடினமான கடும் நோன்புகள் மூலம் அறத்தை ஈட்ட முனைவாயாக.(35)

பிறரின் துன்பங்களைக் கருத்தில் கொள்ளாத யமன், உன்னையும், உன் நண்பர்களையும் போன்ற மனிதர்கள் அனைவரின் உயிரையும் விரைவில் எடுத்துக் கொள்வான். அவனைத் தடுக்கவல்லவன் எவனுமில்லை.(36) வெகு விரைவில் உன் முன்னிலையில் யமனின் காற்று வீசும் (உன்னை அவனது முன்னிலைக்கு அழைத்துச் செல்லும்). வெகுவிரையில் நீ பயங்கரத் தனிமையை அடைவாய். அங்கே உன் நன்மைக்கானதை அடைவாயாக.(37) மிக விரைவில் உன் முன்னிலைக்கு வரப்போகும் அந்த மரணக்காற்று இப்போது எங்கிருக்கிறது? (அந்தக் கவனத்துடன் நீ இருக்கிறாயா?) அந்தக் கணம் நேரும்போது, திசைப்புள்ளிகள் அனைத்தும் உன் கண் முன்பு சுழலத் தொடங்கும். (அந்தக் கவனத்துடன் நீ இருக்கிறாயா?)(38) ஓ! மகனே, (அந்தக் கணம் நேரும்போது) அந்தப் பயங்கர இருப்பில் ஆதரவற்றவனாக இருக்கும்போது உன் வேதங்கள் உன் பார்வையில் இருந்து விரைவில் மறையும். எனவே, சிறப்புவாய்ந்த தியான யோகத்தில் நீ உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக.(39) (மரணத்திற்குப் பிறகு) பிழையின் இயல்பிலான உன் கடந்த கால நல்ல மற்றும் தீய செயல்களை நினைத்து வருந்தாமல் இருக்கச் செய்யும் ஒரே புதையலை அடைய முனைவாயாக[3].(40)முதுமை வெகுவிரைவில் உன் உடலைப் பலவீனப்படுத்தி, உன் பலத்தையும், அங்கங்களையும், அழகையும் களவாடிவிடும். எனவே அந்த ஒரே புதையலை நீ நாடுவாயாக.(41) நோயைச் சாரதியாகக் கொண்டவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்தகன், உன் உடலைத் துளைத்து நொறுக்கவும், உன் உயிரை எடுக்கவும் வெகுவிரைவில் வருவான். எனவே, கடுந்தவங்களைச் செய்வாயாக.(42) உன் உடலுக்குள் வசிக்கும் அந்தப் பயங்கர ஓநாய்கள் {ஆசைகள்} வெகுவிரைவில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உன்னைத் தாக்கும். எனவே, அறச் செயல்கள் செய்ய முயற்சி செய்வாயாக.(43) வெகுவிரையில் அடர்த்தியான இருளில் நீ தனியாக இருப்பதைக் காண்பாய், வெகுவிரைவில் மலையின் உச்சியில் தங்க மரணங்கள் இருப்பதையும் காண்பாய். எனவே, அறச்செயல்களைச் செய்ய விரைவாயாக[4].(44) நட்பின் போர்வையில் உள்ள உன் தீய தோழர்களான உன் எதிரிகள் (புலன்கள்) வெகுவிரைவில் உன்னைச் சரியான பார்வையில் இருந்து திரும்பச் செய்வார்கள். எனவே, ஓ! மகனே, உயர்ந்த நன்மையை அடைய முனைவாயாக.(45)மன்னர்களிடமோ, கள்வர்களிடமோ அச்சத்தை ஏற்படுத்தாததும், மரணத்தின்போதும் கைவிடத்தகாததுமான அந்தச் செல்வத்தை நீ ஈட்டுவாயாக.(46) ஒருவனுடைய செயல்களால் ஈட்டப்படும் அந்தச் செல்வத்தை யாருடனும் நீ பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் தான் ஈடிய அந்தச் செல்வத்தையே (மறுமையில்) அனுபவிக்கிறான்.(47) ஓ! மகனே {சுகரே}, மறுமையில் வாழ்வதற்குத் தேவையானவற்றைப் பிறருக்குக் கொடுப்பாயாக. அழிவற்றதும், நீடித்திருப்பதுமான அந்தச் செல்வத்தை ஈட்டுவதில் நீ உன்னை நிறுவிக் கொள்வாயாக.(48) இன்பங்களில் தணிவு ஏற்படும் முன்பே மரணம் நேரலாம் என்பதால் முதலில் அனைத்து வகை இன்பங்களையும் அனுபவிக்க நினைக்காமல், உன் இதயத்தை விடுதலையை {முக்தியை} நோக்கித் திருப்புவாயாக. இதை நோக்கில் கொண்டு நற்செயல்களைச் செய்வதில் விரைவாயாக.(49) தாயோ, மகனோ, உறவினர்களோ, உற்ற நண்பர்களோ வெகுமதிகளை அளித்து வேண்டிக் கேட்டாலும் இறக்கும் மனிதனுடன் துணைக்கு வர மாட்டார்கள். யம லோகத்திற்கு ஒருவன் துணைக்கு யாருமில்லாமல் தனியாகவே செல்ல வேண்டும்.(50)

மரணத்திற்கு முன்பு அவன் செய்த நல்ல மற்றும் தீய செயல்கள் மட்டுமே அடுத்த உலகத்திற்குச் செல்லும் அவனோடு உடன் செல்லும்.(51) நல்ல மற்றும் தீய வழிமுறைகள் மூலம் ஒருவனால் ஈட்டப்பட்ட தங்கமும், ரத்தினங்களும், அவனது உடல் அழிவை அடையும்போது எந்த நன்மையையும் உண்டாக்குவதில்லை.(52) அடுத்த உலகிற்குச் சென்ற மனிதர்களால், இவ்வாழ்வில் செய்யப்பட்ட, செய்யப்படாத செயல்களின் சாட்சியாக ஆன்மாவைத் தவிர வேறு சிறந்த சாட்சி ஏதும் கிடையாது.(53) செயல்படும் சைதன்யம் (ஜீவாத்மா) சாட்சியான சைதன்யத்திற்குள் நுழையும்போது உடல் அழிவை அடைகிறது என்பது, யோகிகள் தங்கள் யோக புத்தியின் மூலம் தங்கள் இதயங்களால் ஆகாயத்தில் நுழையும்போது காணப்படுகிறது[5].(54) இங்கேயும் நெருப்பின் தேவன் {அக்னி}, சூரியன் மற்றும் காற்று {வாயு} ஆகிய மூவரும் உடலில் வசிக்கிறார்கள். ஒருவன் தன் வாழ்நாளில் செய்யும் செயல்கள் அனைத்துக்கும் இவர்கள் சாட்சியாக இருக்கின்றனர்.(55)அனைத்துப் பொருட்களையும் வெளிக்காட்டும் குணத்தைக் கொண்ட பகல்களும், அனைத்துப் பொருட்களையும் மறைக்கும் குணத்தைக் கொண்ட இரவுகளும், அனைத்துப் பொருட்களையும் தீண்டியபடியே இடையறாமல் கடந்து போகின்றன (அதன்படி அந்தப் பொருட்களுக்காக ஒதுக்கப்பட்ட இருப்பின் காலத்தைக் குறைத்து வருகின்றன). எனவே, நீ உன் வகைக்கான கடமைகளை நோற்பாயாக.(56) (யமலோகத்திற்கு வழிவகுக்கும்) மறுமையின் சாலையானது, (இரும்பு அலகைக் கொண்ட பறவைகள் மற்றும் ஓநாய்களின் வடிவிலான) பல எதிரிகளாலும், வெறுத்தொதுக்கும் பயங்கரப் பூச்சிகள் மற்றும் புழுக்களாலும் தொற்றப்பட்டிருக்கிறது. அந்தச் சாலையில் உனக்குத் துணையாக வரப்போவது செயல்கள் மட்டுமே என்பதால் நீ உன் செயல்களைக் கவனமாகச் செய்வாயாக.(57) அங்கே ஒருவன் தன் செயல்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை, ஆனால் தன்னால் செய்யப்பட்ட ஒவ்வொரு செயல்களுக்கான கனிகளை அவன் அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் வேண்டும்.(58) அப்சரஸ்களும், பெரும் முனிவர்களும் பேரின்பநிலைகளின் கனிகளை அடைவதைப் போலவே, அறச்செயல்கள் செய்யும் மனிதர்களும் தங்கள் தங்கள் அறச்செயல்களின் கனிகளாகச் செலுத்துபவர்களின் விருப்பத்திற்கேற்ப எங்கேயும் செல்லக்கூடிய ஒளி பொருந்திய தேர்களை மறுமையில் அடைகிறார்கள்.(59) களங்கமற்ற செயல்களையும், தூய்மையான ஆன்மாக்களையும், தூய பிறவியையும் கொண்ட மனிதர்கள், இம்மையில் {இவ்வுலகில்} செய்யப்பட்ட தங்கள் சொந்த அறச் செயல்கள் தொடர்பான மறுமையின் {அவர்கள் செல்லக்கூடிய வேறு உலகங்களின்} கனிகளை அடைகிறார்கள்.(60)

மனிதர்கள், இல்லறக் கடமைகளாலமைந்த நெடுஞ்சாலையில் நடந்து செல்வதன் மூலம் பிரஜாபதி, அல்லது பிருஹஸ்பதி அல்லது நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} ஆகியோரின் உலகங்களை அடைந்து மகிழ்ச்சியான கதிகளை அடைகிறார்கள்.(61) என்னால் ஆயிரமாயிரம் போதனைகளை உனக்குத் தர முடியும். எனினும், பலமிக்கத் தூய்மையாளியே (அறம்) {பரிசுத்தமாகச் செய்கிற தர்மமே}, மூட மனிதர்கள் அனைவரையும் இருளில் வைத்திருக்கிறது என்பதை அறிவாயாக[6].(62) நீ இருபத்துநான்கு {24} வயதைக் கடந்துவிட்டாய். இப்போது முழுமையாக நீ இருபத்தைந்து வயதை அடைந்தவனாக இருக்கிறாய். உன் வயது கடந்து செல்கிறது. அறக்கொள்முதல் செய்யும் கிடங்கை விரிக்கத் தொடங்குவாயாக {அறமீட்டுவாயாக}.(63) பிழையிலும், விழிப்பற்ற தன்மையிலும் வசிக்கும் யமன் மிக விரைவாக உன் புலன்களை அவற்றுக்குரிய சக்திகளைக் கொண்டே இழக்கச் செய்வான். அந்த அழிவு ஏற்படும் முன்னர் நீ இன் உடலை மட்டுமே சார்ந்துஉன் கடமைகளை விரைவாகச் செய்வாயாக.(64) நீ மட்டுமே முன்னும் பின்னும் இருக்கக்கூடிய சாலையில் செல்லும் உன் கடமையின் போது, உன் உடலாலோ, உன் மனைவியாலோ, உன் பிள்ளையாலோ உனக்கு என்ன தேவை இருக்கிறது?[7](65)மனிதர்கள் யமலோகத்திற்கு எந்தத் துணையும் இல்லாமல் தனியாகச் செல்ல வேண்டிய இந்தப் பயங்கரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால், முற்றான ஒரே செல்வக்குவியலை {புதையலை} (அறம் அல்லது யோக சமாதியை) அடைவதற்கு நீ முனைய வேண்டும் என்பதே தெளிவாகத் தெரிகிறது.(66) பிறரைப் பீடிப்பதைக் கருத்தில் கொள்ளாத பலமிக்க யமன், ஒருவனுடைய நண்பர்களையும், உறவினர்களையும், அவனது குலத்தையும் வேரோடு அபகரித்துச் செல்கிறான். அவனைத் தடுக்க வேறு எவனுமில்லை. எனவே, அறத்தைத் திரட்ட நீ முனைவாயாக.(67) ஓ! மகனே, நான் பின்பற்றும் சாத்திரங்களுக்கு ஏற்புடைய இந்தப் பாடங்கள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்கிறேன்.(68) தன் வகைக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் தன் உடலை ஆதரித்துக் கொள்பவனும், அத்தகைய செயல்களுடன் பிணைக்கப்பட்ட எந்தக் கனியையும் ஈட்ட கொடையளிப்பவனுமான மனிதன், அறியாமை மற்றும் பிழையால் பிறக்கும் விளைவுகள் அனைத்தில் இருந்து விடுபடுகிறான்.(69) அறச் செயல்களைச் செய்யும் மனிதன் வேத அறிவிப்புகளில் இருந்து அடையும் ஞானம் எல்லாமறிந்த நிலைக்கு {கடவுளுக்கு} வழிவகுக்கிறது. அந்த எல்லாமறிந்த நிலையானது {கடவுள்} மனிதன் அடையக்கூடிய உயர்ந்த பொருளின் அறிவியலை (விடுதலையை {முக்தியை}) போன்றதாகும். நன்றியுள்ளவர்களுக்குச் சொல்லப்படும் போதனையானது, (மனிதர் அடையக்கூடிய உயர்ந்த பொருளை அடைவதற்கு வழிவகுப்பதன் விளைவால்) நன்மையாகிறது.(70)

மனித வாழிடங்களுக்கு மத்தியில் ஒருவன் கொள்ளும் இன்பமானது உண்மையில் அவனை இறுகப் பற்றும் கயிறாகும். அறச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் அந்தக் கயிற்றை அறுத்து, பேரின்ப உலகங்களுக்குச் செல்கிறார்கள். எனினும், தீய மனிதர்கள் அந்தக் கயிற்றை அறுக்கத் தவறுகிறார்கள்.(71) ஓ! மகனே, நீ இறக்கப் போவதால் செல்வத்தாலோ, உறவினர்களாலோ, பிள்ளைகளாலோ உனக்கென்ன பயனேற்படப் போகிறது? குகைக்குள் மறைந்திருக்கும் உன் ஆன்மாவைத் தேடுவதில் ஈடுபடுவாயாக. உன் பாட்டான்கள் அனைவரும் எங்கே சென்றனர்? நாளை செய்ய வேண்டியதை நீ இன்று செய்வாயாக. பிற்பகலில் செய்ய வேண்டியதை முற்பகலில் செய்வாயாக. ஒருவன் தன் பணியைச் செய்துவிட்டானா இல்லையா என்று பார்த்து மரணம் காத்திருப்பதில்லை.(73) ஒருவன் இறந்ததும் (சுடலைக்கு) உடலைப் பின்தொடர்ந்து செல்லும் அவனது உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அஃதை {உடலை} ஈமச் சிதைக்குள் வீசிவிட்டு திரும்பிவிடுகின்றனர்.(74) ஐயுறுவாதிகள், கருணையற்றவர்கள், தீய வழிகளில் அர்ப்பணிப்புள்ளவர்கள் ஆகியோரைப் புறக்கணிக்கத் தயங்காமல், அக்கறையற்றதன்மையோ, உணர்வின்மையோ இல்லாமல் உனக்கான உயர்ந்த நன்மையைத் தேட முயற்சிப்பாயாக.(75) எனவே, உலகம் காலனால் இவ்வாறு பீடிக்கப்படும்போது, அசைக்கமுடியாத பொறுமையின் துணையுடனும், உன் முழு இதயத்துடனும் அறத்தை ஈட்டுவாயாக[8].(76)விடுதலையை {முக்தியை} அடையும் வழிமுறைகளை நன்கறிந்தவனும், தன் வகைக்குரிய கடமைகளை முறையாகச் செய்பவனுமான மனிதன் மறுமையில் நிச்சயம் பேரின்ப நிலையை அடைவான்.(77) வேறொரு உடலை அடைவதே மரணம் என்று உணர்ந்தவனும், அறவோர் நடக்கும் பாதையில் இருந்து விலகாதவனுமான உனக்கு அழிவே கிடையாது. அறப்பங்குகளைப் பெருக்குபவனே உண்மையில் ஞானியாவான். மறுபுறம், அறத்திலிருநுத வீழ்பவனோ மூடனாவான் என்று சொல்லப்படுகிறது.(78) நற்செயல்களைச் செய்வதில் ஈடுபடும் ஒருவன் சொர்க்கத்தையும், பிற வெகுமதிகளையும் அச்செயல்களின் கனிகளாக அடைகிறான்; ஆனால் தீயச் செயல்களில் பற்று கொண்டவனோ நரகத்தில் மூழ்குகிறான்.(79) அடைவதற்கரிதானதும், சொர்க்கத்திற்கான முதற்படியுமான மானிட நிலையை அடைந்து ஒருவன், மீண்டும் வீழ்ந்துவிடாதவாறு தன் ஆன்மாவை பிரம்மத்தில் நிலைநிறுத்த வேண்டும்.(80)

சொர்க்கத்தின் பாதையில் செலுத்தப்படும் புத்தியைக் கொண்டவனும், அங்கிருந்து விலகாதவனும், ஞானிகளால் உண்மையில் அறவோனாக {தர்மவானாகக்} கருதப்படுபவனுமான மனிதன் இறக்கும்போது அவனது நண்பர்கள் துயரில் ஈடுபடக்கூடாது.(81) பிரம்மத்தை நோக்கிச் செலுத்தப்படாத அமைதியான புத்தியைக் கொண்டவனும், சொர்க்கத்தை அடைந்தவனுமான மனிதன் (நரகம் எனும்) பேரச்சத்தில் இருந்து விடுபடுகிறான்.(82) தவசிகளின் ஆசிரமங்களில் பிறந்து, அங்கேயே இறப்பவர்கள், தங்கள் வாழ்வு முழுவதும் இன்பங்கள் மற்றும் ஆசையில் ஈடுபடுவதில் இருந்து விலகியிருப்பதன் மூலம் அதிகத் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில்லை.(83) எனினும், இன்பத்திற்குரிய பொருட்களைக் கொண்டிருந்தாலும், அவற்றைக் கைவிட்டு, தவப் பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒருவன் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்[9].(84) நூற்றுகணக்கான, ஆயிரக்கணக்கான தாய்மார்கள், தந்தைமார்கள், மகன்கள், மனைவிகள் இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் உண்டு, இனியும் உண்டாவார்கள். எனினும், அவர்கள் யார்? நாம் யாருடையவர்கள்?(85)நான் தனியாகவே இருக்கிறேன். என்னுடையவர் என்று சொல்ல எனக்கு யாரும் கிடையாது. நான் யாருக்கும் உரியவனுமல்ல. நான் யாருடையவன் என்று சொல்ல ஒருவரையும், என்னுடையவர் என்று சொல்ல ஒருவரையும் நான் காணவில்லை.(86) உன்னைக் கொண்டு அவர்களுக்குச் செய்ய ஒன்றுமில்லை. அவர்களைக் கொண்டு நீ செய்ய வேண்டியதும் ஒன்றுமில்லை. உயிரினங்கள் அனைத்தும் தங்கள் முற்பிறவி செயல்களுக்கு ஏற்புடைய வகையிலேயே தங்கள் பிறப்பை அடைகின்றன. நீயும் உன் செயல்களின் மூலம் தீர்மானிக்கப்படும் (ஒரு புதிய வகையிலான பிறப்பை அடைவதற்குரிய) இடத்திற்குச் செல்ல வேண்டும்.(87) செல்வந்தர்களின் நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் மட்டுமே அவர்களிடம் பற்றுடன் நடந்து கொள்வது காணப்படுகிறது. எனினும், வறியவனின் நண்பர்களும், தொண்டர்களும் அவன் வாழும்போதே வீழ்ந்துவிடுகின்றனர்.(88) மனிதன் தன் மனைவி (மற்றும் பிள்ளைகளின்) நிமித்தம் எண்ணற்ற தீச்செயல்களைச் செய்கிறான். அந்தத் தீச்செயல்களில் இருந்தே அவன் இம்மையிலும், மறுமையிலும் துன்பத்தை அடைகிறான்.(89) வாழும் ஒவ்வொரு உயிரினத்தாலும் செய்யப்படும் செயல்களின் மூலம் இவ்வுலக வாழ்வு கெட்டுப்போவதை ஞானமுள்ள மனிதன் காண்கிறான். எனவே, ஓ! மகனே, நான் உனக்குச் சொன்ன அறிவுரைகளின்படியே நீ செயல்படுவாயாக.(90)

உண்மைப் பார்வை கொண்ட மனிதன், இவ்வுலகைச் செயற்களமாக மட்டுமே கண்டு, மறுமையில் பேரின்பநிலையை அடைய விரும்பி நற்செயல்களைச் செய்ய வேண்டும்.(91) மாதங்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்} எனும் கரண்டிகளின் துணையைக் கொண்டதும், சூரியனையே நெருப்பாகக் கொண்டதும், ஒவ்வொரு உயிரினத்தாலும் செய்யப்படும் ஒவ்வொரு செயலின் கனிகளையும் சாட்சியாகக் காணும் இரவு பகலெனும் விறகுகளைக் கொண்டதுமான காலம், தடுக்கப்படமுடியா தன் பலத்துடன் முயன்று (தன் கொப்பரையில்_ உயிரினங்கள் அனைத்தையும் சமைக்கிறது.(92) கொடையளிக்கப்படாததும், அனுபவிக்கப்படாதமான செல்வத்திற்கான நோக்கம்தான் என்ன? {அந்த செல்வத்தினால் என்ன பயன்?} ஒருவனுடைய எதிரிகளைத் தடுப்பதிலோ, அடக்குவதிலோ ஈடுபடதா பலத்திற்கான நோக்கம்தான் என்ன? {அந்த பலத்தினால் என்ன பயன்?} ஒருவனை அறச்செயல்கள் செய்யத்தூண்டாத சாத்திர அறிவின் நோக்கம்தான் என்ன? {அந்த சாத்திர அறிவினால் என்ன பயன்?} புலன்களை அடக்காததும், தீச்செயல்களில் இருந்து விலகாததுமான அன்மாவின் நோக்கம்தான் என்ன? {அந்த ஆன்மாவினால் என்ன பயன்?}” என்றார் {வியாசர்}”.(93)

பீஷமர் தொடர்ந்தார், “தீவில் பிறந்தவரால் {துவைபாயனரான} வியாசரால் சொல்லப்பட்ட இந்த நன்மையான வார்த்தைகளைக் கேட்ட சுகர், தன் தந்தையை விட்டகன்று, தனக்கு விடுதலை அறத்தை {மோக்ஷதர்மத்தைக்} கற்பிக்கக்கூடிய ஓர் ஆசானைத் தேடிச் சென்றார்”[10].(94)

விதைத்த வினையே முளைக்கும்! – சாந்திபர்வம் பகுதி – 323- செய்த வினை செய்தவனையே சரியாக வந்தடையும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கொடைகள், வேள்விகள், நன்கு செய்யப்படும் தவங்கள், ஆசான்களுக்கும், மதிப்புமிக்கப் பெரியோருக்கும் செய்யப்படும் கடமையுணர்வுமிக்கத் தொண்டுகள் ஆகியவற்றுக்குச் செயற்திறன் {பலாபலன்} உண்டென்றால் அதைக்குறித்து எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீமையுடன் தொடர்புடைய புத்தியானது மனத்தைப் பாவத்தில் வீழச் செய்கிறது. இந்நிலையில் தன் செயல்களைத் தானே களங்கம் செய்யும் ஒருவன் பெரும் துன்பத்தில் வீழ்கிறான்.(2) பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவர்கள் மிகவறிய நிலையில் உள்ள மனிதர்களாகப் பிறக்க வேண்டிவரும். பஞ்சத்துக்குப் பஞ்சம், துன்பத்துக்குத் துன்பம், அச்சத்திற்கு அச்சம் என்பதே அவர்களது மாற்றமாக இருக்கும். இறந்தவர்களைக் காட்டிலும் இவர்களே இறந்தவர்களாக இருக்கிறார்கள்.(3) நம்பிக்கை கொண்டவர்கள், தற்கட்டுப்பாடு கொண்டவர்கள், அறச்செயல்களில் அர்ப்பணிப்புமிக்கவர்கள் ஆகியோர் செழிப்பை அடைந்தவர்களாக, இன்பத்துக்கு இன்பம், சொர்க்கத்திற்குச் சொர்க்கம், மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி என்ற மாற்றமடைகின்றனர்.(4) நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர்கள், இரைதேடும் விலங்குகளாலும், யானைகளாலும் தொற்றப்பட்டதும், பாம்புகள், கள்வர்கள் மற்றும் அச்சத்திற்குரிய பிற காரணங்கள் நிறைந்ததுமான பாதையற்ற தடத்தில் கையைப் பிசைந்தபடியே கடக்க நேரிடும். இவற்றைத் தவிர வேறு என்ன சொல்லப்பட வேண்டும்?(5)

மறுபுறம், தேவர்களையும், விருந்தினர்களையும் மதிப்பவர்கள், பரந்த மனம் கொண்டவர்கள், நல்லோரை முறையாக மதிப்பவர்கள் ஆகியோர் தூய்மையடைந்த, வெல்லப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களுக்குச் சொந்தமான (இன்பம்நிறைந்த) பாதையைத் தங்களுடையதாகக் கொள்கிறார்கள்.(6) தானியங்களுடன் பதர்களும், பறவைகளுடன் கரப்பான்பூச்சிகளும் கணக்கிடப்படாததைப் போலவே மனிதர்களுடன் அறவோர் கணக்கிடப்படுவதில்லை.(7) ஒருவன் செய்யும் செயல்கள், அவன் வீழும்போது அவனோடு கிடக்கிறது.(8) உண்மையில், ஒருவன் செய்யும் பாவங்கள் அவன் அமரும் போது அமர்கின்றன, அவன் ஓடும்போது ஓடுகின்றன. செய்தவன் செயல்படும்போது பாவங்களும் செயல்படுகின்றன. உண்மையில் அவை செய்தவனின் நிழல் போல அவனைப் பின்தொடர்கின்றன.(9) எந்த வழிமுறையிலும், எந்தச் சூழ்நிலையிலும் ஒருவன் செய்யும் எந்தச் செயலும், (அவற்றின் கனிகளைப் பொறுத்தவரையில்) அதைச் செய்தவனால் மறுமையில் நிச்சயம் அனுபவிக்கப்படவும், தாங்கிக் கொள்ளப்படவும் வேண்டும்.(10)

உயிரினங்கள் வீசப்படும் தொலைவு மற்றும் அவற்றின் செயல்களோடு தொடர்புடைய விதியை முறையாகக் காணும் காலம் அவற்றை {அந்த உயிரினங்களை} அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எப்போதும் இழுத்துக் கொண்டிருக்கிறது.(11) மலர்களும், கனிகளும் தூண்டப்படாமலே தாமதிக்காமல் உரிய காலத்தில் தோன்றுவதைப் போலவே, முற்பிறவியில் செய்த செயல்களும் {வினைகளும்} உரிய காலத்தில் தோன்றுகின்றன.(12) கௌரவம் மற்றும் கௌரவமின்மை, ஈட்டல் மற்றும் இழத்தல், அழிவு மற்றும் வளர்ச்சி ஆகியவை தோன்றுவது காணப்படுகிறது. (அவை வரும்போது) அவற்றை யாராலும் தடுக்க முடியாது. தோன்றியதும் மறைவதால் அவற்றில் எதுவும் நீடித்திருக்காது.(13) ஒருவன் அனுபவிக்கும் துன்பம் அவனது செயல்களின் விளைவேயாகும். ஒருவனுடைய மகிழ்ச்சி அவனது செயல்களில் இருந்தே உண்டாகிறது. ஒருவன் தாயின் கருவறைக்குள் கிடக்கும் காலத்திலிருந்து தன் முற்பிறவி செயல்களை அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் தொடங்குகிறான்.(14) குழந்தைப் பருவம், இளமை, அல்லது முதுமையில் ஒருவன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் எதன் விளைவையும் அவனது மறுமையில் அதே வயதுகளில் அவன் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறான்.(15)

ஆயிரம் பசுக்களுக்கு மத்தியில் கன்று தன் தாயை அடையாளம் காண்பதைப் போலவே முற்பிறவியில் ஒருவன் செய்த செயல்கள், அடுத்தபிறவியில் அவன் தன் இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் நின்றாலும் (தவறேதும் இல்லாமல்) அவனையே வந்து அடையும்.(16) அழுக்கடைந்த துணியானது நீரால் வெளுக்கப்படுவதைப் போலவே, அறவோரும் நோன்புகள் தவங்களெனும் நெருப்பில் தொடர்ந்து தங்களை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம் தூய்மையடைந்து, இறுதியாக எல்லையில்லா மகிழ்ச்சியை அடைகின்றனர்.(17) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, நன்கு செய்யப்படும் நீடித்த தவங்களால் பாவங்கழுவப்பட்டவர்களின் ஆசைகளும், நோக்கங்களும், கனிவதால் மகுடம் சூட்டப்படுகின்றன.(18) வானத்தில் பறவைகளின் பாதையைய் போன்றோ, நீரில் மீன்களின் பாதையைப் போன்றோ அறவோரின் பாதையையும் பிரித்தறிய முடியாது.(19) பிறரை நிந்திப்பதற்கு எந்தத் தேவையுமில்லை; அதே போலப் பிறர் தவறிய தருணங்களைச் சொல்ல வேண்டியதுமில்லை. மறுபுறம் ஒருவன், தனக்கு இனிமையானதையும், ஏற்புடையதையும், நன்மையானதையும் செய்துகொள்ள வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(20)

வியாசரின் தவம்! – சாந்திபர்வம் பகுதி – 324-: மகனைப் பெற வியாசர் தவமிருந்தது; சிவன் வரமருளியது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கடுதவங்களைக் கொண்ட உயர் ஆன்மா சுகர் வியாசரின் மகனாக எவ்வாறு பிறந்தார்? உயர்ந்த வெற்றியை அடைவதில் அவர் எவ்வாறு வென்றார்?(1) தவத்தையே செல்வமாகக் கொண்ட வியாசர் எந்தப் பெண்மணியிடம் தன் மகனைப் பெற்றார்? சுகரின் தாயார் யார் என்பதை நாம் அறியவில்லை, மேலும் அந்த உயர் ஆன்ம தவசியின் பிறப்பைக் குறித்த எதையும் நாம் அறியவில்லை.(2) சிறுவனாக இருந்தபோதே இவரது மனம் எவ்வாறு நுட்பமான ஞானத்தில் (பிரம்மத்தில்) செலுத்தப்பட்டது? உண்மையில், இவ்வளவு இளம் வயதில் இத்தகைய மனநிலை வாய்த்த வேறு இரண்டாவது மனிதனை இவ்வுலகில் காண முடியாது.(3) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, இவை யாவையும் நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். அமுதம் போன்ற உமது சிறந்த வார்த்தைகளைக் கேட்பதில் நான் ஒருபோதும் தணிவடைவதில்லை.(4) ஓ! பாட்டா, சுகரின் மகிமை, ஞானம் மற்றும் அவரது ஆத்மயோகத்தையும் (பரமாத்மாவுடன் அவர் கலந்த வகையையும்) முறையான வரிசையில் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வயது, முதுமை, செல்வம் அல்லது நண்பர்களைச் சார்ந்து முனிவர்கள் தகுதியை அடைவதில்லை. வேத கல்வியில் ஈடுபடுபவனே பெரியவன் என அவர்கள் சொல்கிறார்கள்.(6) நீ கேட்கும் இவை அனைத்தும் தவங்களையே தங்கள் வேராகக் கொண்டவையாகும். மேலும், ஓ! பாண்டுவின் மகனே, அந்தத் தவமானது புலனடக்கத்தில் இருந்தே எழுகிறது.(7) தன் புலன்களிடம் கடிவாளத்தை ஒப்படைக்கும் ஒருவன் நிச்சயம் களங்கத்தை ஈட்டுகிறான். அவற்றைக் கட்டுப்படுத்துவதாலேயே அவன் வெற்றியை ஈட்டுகிறான்.(8) ஆயிரம் குதிரை வேள்விகள், அல்லது நூறு வாஜபேயங்களோடு தொடர்புடைய தகுதியானது, யோகத்தில் இருந்து எழும் தகுதியின் பதினாறில் ஒரு பங்குக்கு ஈடாகாது.(9) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் புரிந்து கொள்ள முடியாதவையான சுகரின் பிறந்த சூழ்நிலைகள், தன் தவங்களால் அவர் வென்ற கனிகள், (தன் செயல்களால்) அவர் அடைந்த முதன்மையான கதி ஆகியவற்றைக் குறித்து இப்போது உனக்குச் சொல்லப்போகிறேன்.(10)

ஒரு காலத்தில், கர்ணீகார மலர்களால் {கொன்றை மலர்களால்} அலங்கரிக்கப்பட்ட மேருவின் சிகரத்தில், தன் தோழர்களான பயங்கரமான பூதகணங்களின் துணையுடன் மஹாதேவன் விளையாடிக் கொண்டிருந்தான்.(11) மலைகளின் மன்னனுடைய மகளான தேவி பார்வதியும் அங்கிருந்தாள். தீவில் பிறந்தவர் ({துவைபாயனரான} வியாசர்}, இயல்புக்குமீறிய கடுந்தவங்களை அந்தச் சிகரத்திற்கு அருகிலேயே செய்து கொண்டிருந்தார்.(12) ஓ! குருக்களில் சிறந்தவரே, யோகப் பயிற்சிகளில் அர்ப்பணிப்புடன் இருந்த அந்தப் பெரும் தவசி, யோகத்தின் மூலம் தன் ஆன்மாவுக்குள் தன்னையே ஈர்த்துக் கொண்டும், தாரணையில் ஈடுபட்டும், ஒரு மகனுக்காக (மகனைப் பெறுவதற்காக) கடுந்தவங்கள் பலவற்றைச் செய்து வந்தார்.(13) அவர் அந்தப் பெருந்தேவனிடம், “ஓ! பலமிக்கவனே {விபுவே}, நெருப்பு {அக்னி}, பூமி {நிலம்}, நீர் {அப்பு}, காற்று {வாயு} மற்றும் வெளி {ஆகாயம்} ஆகியவற்றின் பலத்துடன் கூடிய ஒரு மகன் எனக்குக் கிடைக்கட்டும்” என்று வேண்டிக் கொண்டிருந்தார்.(14) தீவில் பிறந்த முனிவரான அவர் {வியாசர்} மிகக் கடுமையான தவங்களில் ஈடுபட்டு, தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் அணுக முடியாத பெருந்தேவனிடம் (வார்த்தைகளாலல்லாமல்) தன் யோகத் தீர்மானத்தின் மூலம் வேண்டினார்.(15)

பலமிக்கவரான வியாசர், காற்றை மட்டுமே உண்டு பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், உமையின் தலைவனுமான மஹாதேவனைத் துதித்தபடியே நூறு வருடங்கள் அங்கேயே இருந்தார்.(16) அங்கே மறுபிறப்பாள முனிவர்கள், அரசமுனிகள், லோகபாலகர்கள், சாத்யர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், ருத்திரர்கள், சூரியன், சந்திரமாஸ், மருத்துகள், பெருங்கடல்கள், ஆறுகள்,(17) அசுவினிகள், தேவர்கள், கந்தர்வர்கள், நாரதர் மற்றும் பர்வதர், கந்தர்வன் விஸ்வாவசு, சித்தர்கள் மற்றும் அப்ரசஸ்கள் அனைவரும் இருந்தனர்.(18) அங்கே ருத்திரன் என்ற பெயராலும் அழைக்கப்படும் மஹாதேவன் {சிவன்}, கர்ணீகார மலர்களால் {கொன்றை மலர்களால்} ஆன சிறந்த மாலையை அணிந்து கொண்டு, கதிர்களால் ஒளிரும் நிலைவைப் போலச் சுடர்விட்டுபடியே அமர்ந்திருந்தான்.(19) தேவர்களும், தெய்வீக முனிவர்களும் நிறைந்த இனிமையான தெய்வீக வனத்தில் அந்தப் பெரும் முனிவர் ஒரு மகனைப் பெறும் விருப்பத்தால் உயர்ந்த தியான யோகத்திலேயே நீடித்திருந்தார்.(20)

அவரது பலம் குன்றவில்லை, எந்தத் துன்பத்தையும் அவர் உணரவில்லை. இதனால் மூன்று உலகங்களும் மிகவும் ஆச்சரியமடைந்தன.(21) அளவிலா சக்தியைக் கொண்ட அந்த முனிவர் {வியாசர்}, யோகத்தில் அமர்ந்திருந்தபோது, அவரது சக்தியின் விளைவால் அவரது சடாமுடி நெருப்பின் தழல்களைப் போலச் சுடர்விடுவதாகத் தெரிந்தது.(22) சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம் இருந்தே நான் இவற்றைக் கேட்டறிந்தேன். அவரே எப்போதும் தேவர்களின் செயல்களைக் குறித்து எனக்குச் சொல்வார்.(23) உயர் ஆன்மா கொண்டவரும் (தீவில் பிறந்தவருமான) கிருஷ்ணரின் {வியாசரின்} சடாமுடி இவ்வாறு அவரது சக்தியால் எரிந்து கொண்டிருந்த காரணத்தாலேயே இந்த நாள்வரை அது நெருப்பின் நிறத்துடன் கூடியதாக இருக்கிறது.(24) ஓ! பாரதா, முனிவரின் இத்தகைய தவங்கள் மற்றும் அர்ப்பணிப்பில் நிறைவடைந்த பெருந்தேவன் (அவர் விரும்பியதைக் கொடுக்கத்) தீர்மானித்தான்.(25)

முக்கண் தேவன் {சிவன்}, மகிழ்ச்சியாகப் புன்னகைத்தபடியே அவரிடம், “ஓ! தீவில் பிறந்தவரே {துவைபாயனரே}, நீர் விரும்பியதைப் போன்றே ஒரு மகனைப் பெறுவீர்.(26) மகிமை நிறைந்த அவன், நெருப்பைப் போல, காற்றைப் போல, பூமியைப் போல, நீரைப் போல, வெளியைப் போலத் தூய்மையானவனாக இருப்பான்.(27) அவன் தன்னுணர்வில் பிரம்ம விழிப்பு நிலையில் இருப்பான்; அவனது புத்தியும், ஆன்மாவும் பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும்; அவன் பிரம்மத்தைப் போன்றவனாகவே அதையே முழுமையாகச் சார்ந்திருப்பான்” என்றான் {சிவன்}[1].(28)

சுகப்ரம்மத்தின் தோற்றம்! – சாந்திபர்வம் பகுதி – 325- சுகப்பிரம்மத்தின் பிறப்பு மற்றும் உபநயனம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெருந்தேவனிடம் {சிவனிடம்} இருந்து உயர்ந்த வரத்தை அடைந்த சத்தியவதியின் மகன் {வியாசர்}, நெருப்பை உண்டாக்குவதற்காக ஒரு நாள் அரணிக் கட்டைகளை எடுத்துக் கடைவதில் ஈடுபட்டார்.(1) ஓ! மன்னா, அந்தச் சிறப்புமிக்க முனிவர் அவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தன் சக்தியின் விளைவால் பேரழகைக் கொண்டிருந்த அப்சரஸ் கிருதாசியைக் கண்டார்.(2) ஓ! யுதிஷ்டிரா, அந்தக் காட்டில் அப்சரஸைக் கண்ட சிறப்புமிக்க முனிவர் வியாசர் திடீரென ஆசையால் பீடிக்கப்பட்டார்.(3) ஆசையால் இதயம் பீடிக்கப்பட்ட முனிவரைக் கண்ட அந்த அப்சரஸ், தன்னை ஒரு பெண்கிளியாக மாற்றிக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தாள்.(4) அந்த அப்சரஸ் மற்றொரு வடிவத்தால் தன்னை மறைத்திருப்பதை முனிவர் கண்டாலும், அவரது இதயத்தில் எழுந்த ஆசை (மறையாமல்) அவரது உடலில் ஒவ்வொரு பகுதிக்கும் பரவியது.(5)

பொறுமையை வேண்டிய அந்தத் தவசி அந்த அசையை அடக்கப் பெரும் முயற்சி செய்தார். எனினும், வியாசர் எவ்வளவுதான் முயன்றாலும், கலக்கமடைந்த தன் மனத்தை அடக்குவதில் அவர் வெல்லவில்லை. நடக்கப் போவதைத் தவிர்க்க முடியாததால், முனிவரின் இதயம் கிருதாசியின் அழகிய வடிவில் ஈர்க்கப்பட்டது.(6) அவர் தன் உணர்வை அடக்கி நெருப்பை உண்டாக்கும் பணியில் தன்னை நிறுவிக் கொள்ள உண்மையில் மெய்யுறுதிப்பாட்டுடன் முயன்றாலும், அவரது உயிர்வித்து {அந்த அரணிக்கட்டைகளிலேயே} வெளியேறியது.(7) ஓ! மன்னா, இருந்தாலும் அந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவர் {வியாசர்}, நடந்ததற்காக எந்த ஐயுணர்வும் அடையாமல் தன் அரணிக் கட்டைகளைக் கடைவதைத் தொடர்ந்தார். விழுந்த அந்த வித்தில் இருந்து, சுகர் என்றழைக்கப்படும் ஒரு மகன் அவருக்குப் பிறந்தார்.(8) அவரது பிறப்பு தொடர்பான இந்தச் சூழ்நிலையின் விளைவாலேயே அவர் சுகர் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். உண்மையில் இவ்வாறே முனிவர்களில் முதன்மையானவரும், யோகிகளில் உயர்ந்தவருமான அந்தப் பெருந்தவசி (தன் தந்தை நெருப்பை உண்டாக்க வைத்திருந்த) ஈர் அரணிக் கட்டைகளில் இருந்து தன் பிறப்பை அடைந்தார்[1].(9) வேள்வியில் தெளிந்த நெய் ஆகுதியாக ஊற்றப்படும்போது சுடர்மிக்க நெருப்பானது சுற்றிலும் ஒளியைப் பொழிவதைப் போலவே, சுகரும் தன் சக்தியின் விளைவால் ஒளியால் சுடர்விட்டபடி தன் பிறப்பை அடைந்தார்.(10)ஓ! குருவின் மகனே, தூய ஆன்மாவைக் கொண்ட சுகர், தன் தந்தையின் சிறந்த வடிவத்தையும், நிறத்தையும் ஏற்று, புகையற்ற நெருப்பைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(11) ஓ! மன்னா, ஆறுகளில் முதன்மையான கங்கை,  தன் உடல் கொண்ட வடிவுடன் மேருவின் சாரலுக்கு வந்து, தன் நீரால் சுகரை (அவரது பிறப்புக்குப் பிறகு) நீராட்டினாள்.(12) ஓ! குருவின் மகனே, ஓ! ஏகாதிபதி, அப்போது அந்த உயர் ஆன்ம சுகர் பயன்படுத்த ஒரு தண்டமும் ஒரு கரிய மான்தோலும் {கிருஷ்ணாஜினமும்} ஆகாயத்தில் இருந்து விழுந்தது.(13) கந்தர்வர்கள் மீண்டும் மீண்டும் பாடினார்கள்; பல்வேறு இனங்களைச் சேர்ந்த அப்சரஸ்கள் ஆடினார்கள்; தெய்வீகப் பேரிகைகள் உரக்க முழங்கத் தொடங்கின.(14) கந்தர்வன் விஸ்வாவசு, தும்புரு, நாரதர் மற்றும் ஹாஹா மற்றும் ஹுஹு என்ற பெயர்களில் அழைக்கப்படும் கந்தர்வர்கள் சுகரின் பிறப்பைத் துதித்தனர்.(15)

சக்ரனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட லோகபாலகர்களும், தேவர்களும், தெய்வீக மறுபிறப்பாள முனிவர்களும் அங்கே வந்தனர்.(16) காற்றின் தேவன் {வாயு}, அந்த இடத்தில் தெய்வீகப் பூமாரியைப் பொழிந்தான்.(17) அசைபவற்றையும், அசையாதவற்றையும் கொண்ட அண்டம் முழுமையும் இன்பத்தால் நிறைந்தது.(18) பேரொளி கொண்ட உயர் ஆன்ம மஹாதேவன் {சிவன்}, {உமா} தேவியின் துணையுடன், அன்பால் உந்தப்பட்டு அங்கே வந்து, முனிவரின் மகன் பிறந்ததும் அவருக்குப் புனித நூலை தரித்துவிட்டான்.(19) தேவர்களின் தலைவனான சக்ரன் {இந்திரன்} சிறந்த வடிவிலான ஒரு கமண்டலத்தையும், சில தெய்வீக ஆடைகளையும், அன்புடன் அவருக்குக் கொடுத்தான்.(20)

ஓ! பாரதா, அன்னங்கள், சதபத்ரங்கள் {நூறு சிறகுகளைக் கொண்ட அன்னங்கள்}, ஆயிரக்கணக்கான நாரைகள் மற்றும் பல கிளிகளும், சாஸங்களும் அவரது தலையை வட்டமிட்டன {வலம் வந்தன}.(21) பெரும் காந்தியையும் நுண்ணறிவையும் கொண்ட சுகர், அந்த அரணிக் கட்டைகள் இரண்டில் பிறப்பை அடைந்து, பல நோன்புகள் மற்றும் நியமங்களைக் கவனமாக நோற்றபடி அங்கேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.(22) சுகர் பிறந்த உடனேயே, ஓ மன்னா, புதிர்கள் அனைத்துடன் கூடிய வேதங்களும், அவற்றின் பொழிப்புரைகளும் அவரது தந்தையுடன் வசிப்பதைப் போலவே அவரிடமும் வசிக்க வந்தன.(23) அதன் பிறகும் சுகர், உலக நடைமுறையின்படியே, அங்கங்கள் மற்றும் உரைகளுடன் கூடிய வேதங்கள் அனைத்தையும் அறிந்தவரான பிருஹஸ்பதியைத் தன் ஆசானாகத் தேர்ந்தெடுத்தார்[2].(24)ஓ! பலமிக்க ஏகாதிபதி, புதிர்கள் மற்றும் பொழிப்புரைகள் அனைத்துடன் கூடிய வேதங்களையும், வரலாறுகள் அனைத்தையும், அரசு அறிவியலையும் படித்த அந்தப் பெருந்தவசி,(25) தன் ஆசானுக்குரிய கட்டணத்தை அளித்துவிட்டு {குருவுக்குத் தக்ஷிணை கொடுத்துவிட்டு} வீடு திரும்பினார். பிரம்மச்சாரியின் நோன்பைப் பின்பற்றிய அவர், அது முதல் தன் கவனம் அனைத்தையும் குவித்துக் கடுந்தவங்களைப் பயிலத் தொடங்கினார்.(26) குழந்தைப்பருவத்திலும் கூட அவர், தனது ஞானத்திற்காகவும், தவங்களுக்காகவும் தேவர்களாலும், முனிவர்களாலும் மதிக்கப்பட்டார்.(27) ஓ! மன்னா, அந்தப் பெருந்தவசியின் மனமானது, இல்லறத்தைத் தங்களில் ஒன்றாகக் கொண்ட மூன்று வகை வாழ்வு முறைகளிலும் {மூவகை ஆசிரமங்களிலும்} இன்பங்கொள்ளாமல் விடுதலை {முக்தி} அறத்தையே தன் மனத்தில் நோக்கமாகக் கொண்டு, அதையே செய்தார்” என்றார் {பீஷ்மர்}.(28)

வியாசரின் ஆணை! – சாந்திபர்வம் பகுதி – 326-வியாசரின் ஆணையை ஏற்று, விதேஹர்களின் தலைநகரான மிதிலைக்குச் சென்று, மன்னன் ஜனகனின் அரண்மனையை அடைந்த சுகர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “விடுதலையைக் குறித்து எண்ணிய சுகர் தன் தந்தையை {வியாசரை} அணுகி, பணிவுடன் கூடியவராக, தனக்கான உயர்ந்த நன்மையை அடைய விரும்புபவராக அந்தப் பேராசானை {வியாசரை} வணங்கி, அவரிடம்,(1) “விடுதலை {முக்தி} அறத்தை {மோக்ஷதர்மத்தை} நீர் நன்கறிந்தவராவீர். ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! பலமிக்கவரே, உயர்ந்த மனோ அமைதி எனதாகும் வகையில் அதைக் குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(2)

தன் மகனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெரும் முனிவர், அவரிடம், “ஓ! மகனே, விடுதலையறத்தையும் {மோக்ஷதர்மத்தையும்}, வாழ்வின் பல்வேறு கடமைகள் அனைத்தையும் நீ கற்பாயாக” என்றார்.(3)

அறவோர் அனைவரிலும் முதன்மையான சுகர், ஓ! பாரதா, தன் தந்தையின் கட்டளையின் பேரில் யோக சாத்திரங்கள் அனைத்திலும், கபிலரிடம் இருந்து உண்டான அறிவியலிலும் {சாங்கிய அறிவியலிலும்} தேர்ச்சியடைந்தார்.(4)வியாசர், தன் மகன் வேதங்களின் ஒளியைக் கொண்டிருப்பதையும், பிரம்மசக்தியைக் கொண்டிருப்பதையும், விடுதலையறத்தை {மோக்ஷதர்மத்தை} அறிந்திருப்பதையும் கண்டு அவரிடம்,(5) “மிதிலையின் ஆட்சியாளனான ஜனகனிடம் செல்வாயாக. உன் விடுதலைக்கான அனைத்தையும் அந்த மிதிலையின் மன்னன் உனக்குச் சொல்வான்” என்றார்.(6)

ஓ! மன்னா, சுகர் தன் தந்தையின் ஆணையை ஏற்றுக் கொண்டு, கடமைகளின் உண்மையையும், விடுதலை தரும் புகலிடத்தையும் குறித்து மன்னனிடம் தெரிந்து கொள்வதற்காக மிதிலைக்குச் சென்றார்.(7)

அவர் புறப்படுவதற்கு முன்னர் அவரது தந்தை அவரிடம், “சாதாரண மனிதர்கள் செல்லும் பாதையிலேயே நீ அங்கே செல்வாயாக. வானத்தினூடாகச் செல்வதற்காக நீ உன் யோகபலத்தைப் பயன்படுத்த வேண்டாம்” என்றார்.(8)சுகர் (எளிய இயல்பினரென்பதால்) இதில் எந்த ஆச்சரியத்தையும் அடையவில்லை. மேலும் அவர் அந்த இடத்திற்கு எளிமையுடன் செல்ல வேண்டும் என்றும், இன்பத்திற்கான ஆசையில் செல்லக்கூடாது என்றும் சொல்லப்பட்டார், {வியாசர்}, “நண்பர்களும், மனைவிகளும் உலகப் பற்றுக்கான காரணங்கள் என்பதால், நீ செல்லும் வழியில் நண்பர்களையோ, மனைவிகளையோ தேடாதே.(9) வேள்வி செய்வதில் நம் உதவியைப் பெறுபவர்களில் ஒருவனான மிதிலையின் ஆட்சியாளன் {ஜனகன்} இருந்தாலும், அவனோடு வாழும்போது நீ உயர்வு மனப்பான்மையுடன் எதிலும் ஈடுபடக்கூடாது. நீ அவனது இயக்கத்தின் கீழ், அவனுக்குக் கீழ்ப்படிந்தே வாழ வேண்டும். அவனே உன் ஐயங்கள் அனைத்தையும் அகற்றுவான்.(10) அம்மன்னன், கடமைகள் அனைத்தையும் நன்கறிந்தவன், விடுதலை {முக்தி} குறித்த சாத்திரங்களையும் நன்கறிந்தவனாவான். நான் வேள்வி நடத்திக் கொடுப்பவர்களில் அவனும் ஒருவன். அவன் சொல்வதை நீ எந்த ஐயுணர்வுமின்றிச் செய்ய வேண்டும்” {என்றார்}.(11)

இவ்வாறு கற்பிக்கப்பட்ட அற ஆன்ம சுகர், கடல்களுடன் கூடிய பூமி முழுமையிலும் வானத்தின் ஊடாகச் செல்லவல்லவரென்றாலும் அவர் கால்நடையாகவே மிதிலைக்குச் சென்றார்.(12) பல குன்றுகள், மலைகள், ஆறுகள், நீர்நிலைகள், தடாகங்கள், தோப்புகள், இரைதேடும் விலங்குகளும், பிற விலங்குகளும் நிறைந்த காடுகள் ஆகியவற்றைக் கடந்து,(13) மேரு மற்றும் ஹரி என்ற இரு வர்ஷங்களை அடுத்தடுத்து கடந்து, அடுத்ததாக இமய வர்ஷத்தையும் கடந்து இறுதியாகப் பாரதம் என்ற பெயரில் அறியப்பட்ட வர்ஷத்தை வந்தடைந்தார்.(14) வழியில் சீனர்களும், ஹூணர்களும் வசித்த பல நாடுகளைக் கண்ட அந்தத் தவசி இறுதியாக ஆர்யவர்த்தத்தை அடைந்தார்.(15)

அவர் தன் தந்தையின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தும், அவற்றைத் தொடர்ந்து தன் மனத்தில் கொண்டும், காற்றில் பறக்கும் பறவைகளைப் போலப் பூமியில் படிப்படியாகத் தன் வழியில் கடந்து சென்றார்.(16) பல இனிய ஊர்களையும், மக்கள் கூட்டம் நிறைந்த நகரங்களையும் கடந்து சென்ற அவர், அவதானிக்கக் காத்திராமல் பல்வேறு வகைச் செல்வங்களையும் காணாமல் சென்றார்.(17) அவர் தன் வழியில் பல இனிய தோட்டங்களையும், தளங்களையும், புனித நீர்நிலைகளையும் கடந்து சென்றார்.(18)அதிகக் காலம் கடக்கும் முன் அறம் சார்ந்த உயர் ஆன்ம ஜனகனால் பாதுகாக்கப்பட்ட விதேஹர்களின் நாட்டை அவர் அடைந்தார்.(19) அங்கே அவர் மக்கள் தொகை நிறைந்த கிராமங்களையும், பல வகை உணவு மற்றும் பானங்களையும், மனிதர்களாலும், கால்நடைக் கூட்டங்கள் பலவற்றாலும் நிறைந்திருந்த மாட்டிடையர்களின் வசிப்பிடங்களையும் கண்டார்.(20)

நெல், கோதுமை மற்றும் பிற தானியங்கள் நிறைந்த வயல்கள் பலவற்றையும், அன்னங்கள், நாரைகள் வசித்தவையும், அழகிய தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான தடாகங்கள் மற்றும் நீர்நிலைகள் பலவற்றையும் கண்டார்.(21) வசதிவாய்ப்புள்ள மக்கள் நிறைந்த விதேஹ நாட்டின் ஊடே கடந்து சென்று, பல்வேறு வகை மரங்கள் நிறைந்த, இனிமைநிறைந்த மிதிலையின் தோட்டங்களை {உபவனத்தை} அடைந்தார்.(22) யானைகள், குதிரைகள், தேர்கள் நிறைந்து, ஆண் பெண் மக்களால் நிரம்பிய அதனில் தன் கண்ணுக்கு விருந்தளிக்கப்பட்ட எந்தப் பொருளையும் காணக் காத்திராமல் கடந்து சென்றார்.(23) (விடுதலை அறத்தில் {மோக்ஷதர்மத்தில்} திறம்பெற விரும்பிய) தன் மனச்சுமையைத் தாங்கிக் கொண்டும், இடையறாமல் அந்நிலையிலேயே வசித்துக் கொண்டும் சென்றவரும், உற்சாக ஆன்மா கொண்டவருமான சுகர், அக ஆய்வில் மட்டுமே திளைப்பை அடைந்து இறுதியில் மிதிலையை அடைந்தார்.(24) வாயிலை வந்தடைந்த அவர், வாயில்காப்போர் மூலம் {தன் வருகையைச்} சொல்லியனுப்பினார். மன அமைதி கொண்டவரும், தியானத்திலும், யோகத்திலும் அர்ப்பணிப்புள்ளவருமான அவர், அனுமதியைப் பெற்றுக் கொண்டு அந்நகருக்குள் {மிதிலைக்குள்} நுழைந்தார்.(25)

வசதிவாய்ப்புள்ள மனிதர்களால் நிறைந்த முக்கியச் சாலையின் {ராஜமார்க்கத்தின்} வழியே சென்ற அவர், மன்னனின் அரண்மனையை அடைந்து, எந்த ஐயுணர்வுமின்றி அதனுள் நுழைந்தார்.(26) சுமைதூக்குபவர்கள் கடுமொழிகளால் அவரைத் தடுத்தார்கள். அதன்பேரில் சுகர் கோபமேதும் அடையாமல் நின்று அங்கேயே காத்திருந்தார்.(27) சூரியனோ, அவர் நடந்து வந்த நெடுந்தொலைவோ அவரைக் களைப்படையச் செய்யவில்லை. பசியோ, தாகமோ, களைப்பாலோ அவர் பலவீனமடையவில்லை. சூரியனின் வெப்பத்தால் அவரை எரிக்கவோ, துன்புறுத்தவோ, தளர்வடையச் செய்யவோ முடியவில்லை.(28) அந்தச் சுமைதூக்கிகளில், பிரகாசத்துடன் கூடிய நடுப்பகல் சூரியனைப் போல அங்கே நின்று கொண்டிருந்த அவரிடம் கருணை கொண்ட ஒருவன் இருந்தான்.(29) முறையான வடிவில் அவரை வழிபட்டு, அவரை முறையாக வணங்கி, கூப்பிய கரங்களுடன் அந்த அரண்மனையின் முதல் அறைக்கு அவரை அழைத்துச் சென்றான்.(30)

ஓ! மகனே {யுதிஷ்டிரா}, அங்கே அமர்ந்த அவர் விடுதலையை {முக்தியை} மட்டுமே சிந்திக்கத் தொடங்கினார். ஒரே தன்மையிலான காந்தியைக் கொண்ட அவர், நிழல்விழுந்த இடத்தையும், சூரியனின் கதிர்களுக்கு வெளிப்பட்ட இடங்களையும் சமகண்ணுடனே பார்த்தார்.(31)வெகு விரைவில் மன்னனின் அமைச்சர், கரங்களைக் கூப்பியபடியே அந்த இடத்திற்கு வந்து அரண்மனையின் இரண்டாம் அறைக்கு அவரை அழைத்துச் சென்றார்.(32) அந்த அறையானது, அரண்மனையின் அந்தப்புரத்தில் ஒரு பகுதியாக அமைந்திருந்த ஓர் அகன்ற நந்தவனத்திற்கு வழிவகுத்தது. அஃது இரண்டாம் சைத்ரரதம் போல இருந்தது. முறையான இடைவெளிகளில் அழகிய நீர்த்தடாகங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. அந்த வனத்தில் இருந்த இனிமைநிறைந்த மரங்கள் அனைத்தும் மலரும் பருவத்தில் இருந்தன.(33)

ஒப்பற்ற அழகுடைய காரிகையர் கூட்டம் அங்கே இருந்தது. அந்த அமைச்சர் சுகரை இரண்டாம் அறையில் இருந்து அந்த இனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தத் தவசிக்கு இருக்கை அளிக்கும்படி அந்தக் காரிகைகளுக்கு ஆணையிட்ட அமைச்சர், அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்.(34) நன்கு உடுத்தியிருந்த அந்தக் காரிகையர், அழகிய அம்சங்களையும், சிறந்த இடைகளையும், இளங்காதுகளையும் கொண்டவர்களாகவும், மெலிதான சிவப்பாடைகளை அணிந்தவர்களாகவும், புடம்போட்ட தங்கத்தாலான ஆபரணங்கள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்.(35) ஏற்புடைய உரையாடல்களைச் செய்வதிலும், பித்துகொள்ளச் செய்யும் களியாட்டங்களில் நன்கு திறம்பெற்றவர்களாகவும், ஆடல் மற்றும் பாடல் கலைகளில் முற்றான தலைவிகளாகவும் திகழ்ந்தனர். எப்போதும் புன்னகையுடன் உதடுகளைத் திறக்கும் அவர்கள், அழகில் அப்ஸரஸ்களைப் போலவே இருந்தனர்.(36) பாலுறவுச் செயல்கள் அனைத்திலும் திறம்பெற்றவர்களாகவும், தாங்கள் காத்திருக்கக்கூடிய {பணிவிடை செய்யக்கூடிய} மனிதர்களின் எண்ணங்களைப் படிக்கும் திறன் கொண்டவர்களாகவும், சிறப்புத் திறன்கள் அனைத்தையும் கொண்டவர்களாகவும், மிக மேன்மையான வகையைச் சேர்ந்தவர்களாகவும், எளிய ஒழுக்கத்தையே கொண்டவர்களாகவும் இருந்த ஐம்பது காரிகையர் அந்தத் தவசியை {சுகரைச்} சூழ்ந்து கொண்டனர்[1].(37) அவரது காலைக் கழுவிக் கொள்ள நீரையும், வழக்கமான பொருட்களையுங்கொடுத்து மதிப்புடன் அவரை வழிபட்ட அவர்கள், அந்தப் பருவகாலத்திற்குரிய சிறந்த, ஏற்புடைய உணவுவகைகளையுங்கொடுத்து அவரை நிறைவு செய்தார்கள்.(38)

அவர் உண்ட பிறகு, அந்தக் காரிகையர் ஒருவர் பின் ஒருவராக அவரைத் திடலுக்கு அழைத்துச் சென்று, விருப்பத்திற்குரிய ஒவ்வொரு பொருளையும் அவருக்குக் காட்டினார்கள்.(39) மனிதர்கள் அனைவரின் எண்ணங்களையும் அறியவல்லவர்களான அந்தக் காரிகையர், விளையாடிக் கொண்டும், நகைத்துக் கொண்டும், பாடிக் கொண்டும், உன்னத ஆன்மாவைக் கொண்ட அந்த மங்கலமான தவசியை உபசரித்தனர்.(40) தூய ஆன்மாவைக் கொண்டவரும், அரணிக்கட்டைகளில் பிறந்தவரும், தன் கடமைகளில் எவ்வகையையும் ஐயமில்லாமல் செய்பவரும், தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டவரும், கோபத்தை முற்றாக ஆள்பவருமான அந்தத் தவசி {சுகர்}, இவை யாவற்றிலும் விருப்பமோ, கோபமோ கொள்ளவில்லை.(41) அப்போது, அழகிய பெண்களில் முதன்மையானவர்களான அவர்கள் அவருக்கு ஒரு சிறந்த இருக்கையை அளித்தனர்.(42)தன் பாதங்களையும், பிற அங்கங்களையும் கழுவிக் கொண்ட சுகர், தன் மாலை வேளை வேண்டுதல்களைச் சொல்லி, அந்தச் சிறந்த இருக்கையில் அமர்ந்து, தான் அங்கே வந்த நோக்கத்தைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(43) இரவின் முதல் பகுதியில் அவர் தன்னை யோகத்தில் அர்ப்பணித்தார். அந்தப் பலமிக்கத் தவசி, இரவின் நடுப்பகுதியை உறக்கத்தில் கழித்தார்.(44) வெகுவிரைவில் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட அவர், தன் உடலின் தூய்மைக்குத் தேவையான சடங்குகளைச் செய்த பிறகு அழகிய பெண்களால் சூழப்பட்டிருந்தாலும் மீண்டும் யோகத்தில் தன்னை அர்ப்பணித்தார்.(45) ஓ! பாரதா, தீவில்பிறந்தவரான கிருஷ்ணரின் {வியாசரின்} மகன், இவ்வாறே அந்த நாளின் இறுதிப் பகுதியையும், அந்த இரவு முழுமையையும் மன்னன் ஜனகனின் அரண்மனையில் கடத்தினார்”{என்றார் பீஷ்மர்}.(46)

பிரம்ம ஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 327-சுகரை வரவேற்று, வழிபட்டு அவருக்கு பிரம்மஞானத்தை உபதேசித்த மன்னன் ஜனகன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, அடுத்த நாள் காலையில், மன்னன் ஜனகன் தன் அமைச்சர்கள் மற்றும் மொத்த குடும்பத்தின் துணையுடனும், தன் புரோகிதரை முன்னணியில் நிறுத்திக் கொண்டும் சுகரிடம் வந்தான்.(1) அந்த ஏகாதிபதி, விலைமதிப்புமிக்க இருக்கைகள் பல்வேறு வகையான ரத்தினங்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்தும், தன் தலையில் அர்க்கிய உட்பொருட்களைச் சுமந்து கொண்டும் தன் மதிப்புமிக்க ஆசானின் {வியாசரின்} மகனை {சுகரை} அணுகினான்.(2) மன்னன், பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், சிறந்த விரிப்பு விரிக்கப்பட்டதும், அனைத்துப் பகுதியிலும் அழகாக இருந்ததும், மிக்க விலைமதிப்புமிக்கதுமான இருக்கையைத் தன் புரோகிதரின் கைகளில் இருந்து, தன் கைகளாலேயே பெற்று, தன் ஆசானின் மகனான சுகரிடம் பெரும் மதிப்புடன் கொடுத்தான்.(3,4) (தீவில் பிறந்த) கிருஷ்ணரின் மகன் {கிருஷ்ண துவைபாயணரான வியாசரின் மகன் சுகர்} அதில் அமர்ந்தபிறகு, பரிந்துரைக்கப்படும் சடங்குகளின்படி மன்னன் அவரை முறையாக வழிபட்டான். முதலில் அவரது பாதங்களைக் கழுவிக் கொள்ள நீரைக் கொடுத்த அவன், பிறகு அர்க்கியத்தையும், பசுவையும் அவருக்குக் கொடுத்தான்.(5)

அந்தத் தவசியும் {சுகரும்} தனக்கு அளிக்கப்பட்ட வழிபாட்டை முறையான சடங்குகளுடனும், மந்திரங்களுடனும் ஏற்றுக் கொண்டார். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரான அவர், மன்னனால் {ஜனகனால்} அளிக்கப்பட்ட காணிக்கையை இவ்வாறு ஏற்றுக் கொண்டு,(6) அவருக்கு அளிக்கப்பட்ட பசுவையும் பெற்றுக் கொண்டு அந்த ஏகாதிபதியை வணங்கினார். பெரும் சக்தியைக் கொண்ட அவர், மன்னனின் நலனையும், செழிப்பையும் விசாரித்தறிந்தார்.(7) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உண்மையில் சுகர் அந்த ஏகாதிபதியின் {ஜனகனின்} தொண்டர்கள் மற்றும் அலுவலர்களின் நலத்தையும் விசாரித்தார்.(8) உயர் ஆன்மாவையும், உயர்ந்த பிறப்பைக் கொண்ட அந்த ஏகாதிபதி {ஜனகன்}, கூப்பிய கரங்களுடன் வெறுந்தரையில் அமர்ந்து அந்த வியாசர் மகனின் {சுகரின்} நலத்தையும், அவரது குறைவற்ற செல்வத்தையும் குறித்து விசாரித்தான்.(9) பிறகு அந்த ஏகாதிபதி தன் விருந்தினர் வந்த நோக்கத்தைக் கேட்டான்.(10)

சுகர் {ஜனகனிடம்}, “நீர் அருளப்பட்டு இருப்பீராக. விதேஹர்களின் ஆட்சியாளரும், ஜனகன் என்ற பெயரால் உலகம் முழுவதும் அறியப்பட்டவருமான தமது எஜமானர் விடுதலை அறம் {மோக்ஷதர்மம்} குறித்து நன்கறிந்தவர் என்று என் தந்தை {வியாசர்} சொன்னார்.(11) பிரவிருத்தி, அல்லது நிவிருத்தி ஆகிய அறக்காரியங்களில் தீர்மானத்தை எட்டுவதில் ஐயமேதும் எழுந்தால் தாமதமில்லாமல் அவரிடம் செல்லும்படியும் {ஜனகரான உம்மிடம் செல்லும்படியும்} அவர் ஆணையிட்டார். மிதிலையின் மன்னர் என் ஐயங்கள் அனைத்தையும் அகற்றுவார் என்றும் அவர் சொன்னார்.(12) எனவே, என் தந்தையுடைய {வியாசருடைய} ஆணையின் பேரில் உம்மிடம் பாடங்கள் கேட்கும் நோக்கத்தில் நான் இங்கு வந்துள்ளேன். ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, எனக்குக் கற்பிப்பதே உமக்குத் தகும்.(13) பிராமணர்களின் கடமைகள் என்னென்ன? விடுதலையை {முக்தியை} நோக்கமாகக் கொண்ட அந்தக் கடமைகளின் சாரமென்ன? {மோக்ஷரூபமான புருஷார்த்தமானது என்ன ஸ்வரூபமுடையது?} மேலும், விடுதலை {முக்தி} எவ்வாறு அடையப்படுகிறது? அது ஞானத்தின் துணையால் அடையத்தக்கதா? தவங்களின் உதவியால் அடையத்தக்கதா?” என்று கேட்டார்.

ஜனகன் {சுகரிடம்}, “ஒரு பிராமணன் பிறந்தது முதல் அவனுடைய கடமைகள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ! மகனே, புனித நூலை ஏற்ற {உபநயனம் செய்யப்பட்ட} பிறகு அவன் தன் கவனத்தை வேத கல்வியில் அர்ப்பணிக்க வேண்டும்.(15) தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் தான் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடுவதற்காகத் தவங்கள் பயின்று, கடமையுணர்வுடன் தன் ஆசானுக்குத் தொண்டு செய்து, பிரம்மச்சாரியின் கடமைகளை நோற்பதன் மூலம் அவன், தீய நோக்கங்கள் அனைத்தையும் கைவிடவேண்டும்.(16) மிகக் கவனமாக வேதங்களைப் பயின்று, தன் புலன்களை அடக்கி, தன் ஆசானுக்குரிய தக்ஷிணையைக் கொடுத்த பிறகு அவன் தன் ஆசானின் அனுமதியுடன் இல்லம் திரும்ப வேண்டும்.(17) இல்லம் திரும்பிய அவன், இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} மேற்கொண்டு ஒரு துணைவியை மணந்து அவளிடம் மட்டுமே கட்டுப்பட்டு, அனைத்துவகைத் தீய நோக்கங்களில் இருந்தும் தன்னை விடுவிக்கும் வகையில் வாழ்ந்து தன் இல்லற நெருப்பை நிறுவிக் கொள்ள வேண்டும்.(18) இல்லறத்தில் வாழும் அவன் மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் பெற வேண்டும். அதன் பிறகு, காட்டுக்குள் ஓய்ந்து சென்று அதே நெருப்புகளை வழிபடுவதைத் தொடர்ந்து, இதயப்பூர்வமான விருந்தோம்பலுடன் விருந்தினர்களை உபசரிக்க வேண்டும் {வானப்ரஸ்தாஸ்ரமத்தை ஏற்க வேண்டும்}.(19) அதன்பிறகு அவன், காட்டில் அறவோனாக வாழ்ந்து, தன் நெருப்பைத் தன் ஆன்மாவில் நிறுவி, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, ஆன்மாவின் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டுச் சந்நியாசம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையில், அல்லது பிரம்மம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையில் தன் நாட்களைக் கடத்த வேண்டும்” என்றான் {ஜனகன்}.(20)

சுகர் {ஜனகனிடம்}, “ஒருவன், சாத்திரக் கல்வி மற்றும் அனைத்துப் பொருட்களின் உண்மைப் பொருளை உணர்தல் ஆகியவற்றின் மூலம் தெளிந்த புத்தியை அடைந்தால், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் விளைவுகளில் இருந்தும் அவனது இதயம் நிரந்தரமாக விடுபட்டால், அத்தகைய மனிதனும் பிரம்மச்சர்யம், கார்ஹஸ்தியம், வானப்ரஸ்தம் என்றழைக்கப்படும் மூன்று வாழ்வு முறையையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பின்பற்ற வேண்டுமா?(21) இதையே நான் உம்மிடம் கேட்கிறேன். எனக்கு இதைச்சொல்வதே உமக்குத் தகும். உண்மையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, வேதங்களின் உண்மை பொருளின்படி இதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(22)

ஜனகன் {சுகரிடம்}, “சாத்திரக் கல்வியின் மூலமும், விஞ்ஞானம் என்ற பெயரில் அறியப்படும் அனைத்துப் பொருட்களின் உண்மைப் பொருளை உணர்தலின் மூலமும் தூய்மையடைந்த புத்தியின் துணையில்லாமல் விடுதலையை {முக்தியை} அடைவது சாத்தியமற்றதாகும். மேலும் அந்தத் தூய்மையடைந்த புத்தியும், ஓர் ஆசானின் தொடர்பில்லாமல் அடையப்பட முடியாது என்றும் சொல்லப்படுகிறது.(23) (உலகமெனும் பெருங்கடலைக் கடப்பதில் ஒருவன் வெல்வதிலும், அதில் துணை செய்வதிலும்) ஞானம் படகாகிறது, ஆசானே படகோட்டியாகிறார். அப்படகை அடைந்த பிறகே ஒருவன் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறான். உண்மையில், பெருங்கடலைக் கடந்ததும் அவன் அவை இரண்டையும் {படகான ஞானத்தையும், படகோட்டியான ஆசானையும்} கைவிடலாம்.(24) உலகங்கள் அனைத்தையும் அழிவில் இருந்து காப்பதற்கும், (உலகங்கள் எவற்றைச் சார்ந்திருக்க்கிறதோ அந்தச்) செயல்களை அழிவில் இருந்து காப்பதற்கும் பழங்கால ஞானிகளால் இந்த நான்கு வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} தொடர்புடைய கடமைகள் பயிலப்பட்டன.(25) ஒருவன் பல பிறவிகளின் போக்கில் இவ்வகைமுறை சார்ந்த செயல்களுக்கு ஏற்புடைய வகையில் நல்ல மற்றும் தீய செயல்களைக் கைவிடுவதன் மூலம் விடுதலையை அடைகிறான்[1].(26) எந்த மனிதன் பல பிறவிகளில் செய்யும் தவங்களின் மூலம் மனம், புத்தி மற்றும் ஆன்மத் தூய்மையை அடைவதில் வெல்கிறானோ அவனால் (தன் புதிய பிறவியில்) முதல் வாழ்வுமுறையிலேயே {பிரம்மச்சரிய வாழ்வுமுறையிலேயே} கூட நிச்சயம் விடுதலையை {முக்தியை} அடைய முடியும்.(27)

தூய்மையடைந்த புத்தியை அடைகையில் விடுதலை அவனுடையதாவதன் மூலம் அவன் புலப்படும் அனைத்துப் பொருட்களின் ஞானத்தையும் அடைவான் எனும்போது, {கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம் என்ற} மூன்று பிற வாழ்வுமுறைகளை நோற்பதன்மூலம் அடையத்தக்க விருப்பமான பொருள் வேறென்ன இருக்க முடியும்?[2](28) ரஜஸ் மற்றும் தமஸில் {குணங்களில்} பிறக்கும் களங்கங்கள் அனைத்தையும் ஒருவன் கைவிட வேண்டும். அவன், சத்வத்தின் {சத்வ குணத்தின்} பாதையைப் பின்பற்றித் தன்னைத் தன்னால் {சுயத்தைச் சுயத்தால்} அறிய வேண்டும்[3].(29) தன்னை {தன் சுயத்தை} அனைத்து உயிரினங்களிலும், அனைத்து உயிரினங்களில் தன்னையும் {தன் ஆன்மாவென்ற சுயத்தையும்} காணும் ஒருவன், (எதனிலும் பற்றுக் கொள்ளாமல்) நீரில் வாழ்ந்தும், நீரில் நனையாமல் இருக்கும் நீர்வாழ் உயிரினங்களைப் போல வாழ வேண்டும்.(30) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடப்பதிலும், அவற்றின் ஆதிக்கத்தைத் தடுப்பதிலும் வெல்லும் ஒருவன், பற்றுகள் அனைத்தையும் கைவிடுவதில் வென்று, கீழே இருந்து வானத்திற்குப் பறந்து செல்லும் பறவையைப் போல, மறுமையில் முடிவிலா இன்ப நிலையை அடைகிறான்.(31) இது தொடர்பாகப் பழங்காலத்தில் மன்னன் யயாதியால் பாடப்பட்டதும், விடுதலை {முக்தி} குறித்த சாத்திரங்களை {மோக்ஷசாத்திரங்களை} அறிந்த மனிதர்கள் அனைவராலும் நினைவில் கொள்ளப்படுவதுமான ஒரு சொலவடை இருக்கிறது.(32) (பரமாத்மா எனும்) பிரகாசமிக்கக் கதிர், ஒருவனின் ஆன்மாவுக்குள்ளேயே இருக்கிறது, வேறு எங்கும் இல்லை. அஃது அனைத்து உயிரினங்களிலும் சமமாக இருக்கிறது. யோகத்தில் அர்ப்பணிப்புள்ள இதயத்துடன் கூடிய ஒருவனால் அதைத் தனக்குள்ளேயே காண முடியும்.(33)தன்னைப் பார்த்தவுடனே மற்றவன் அஞ்சாத வகையில் வாழ்பவனும், பிறரைக் கண்டு ஒருபோதும் அஞ்சாதவனும், விருப்பு வெறுப்பு வளர்ப்பதை நிறுத்துபவனுமான ஒருவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(34) எண்ணம், சொல் மற்றும் செயலில் அனைத்து உயிரினங்களிடமும் கொள்ளும் பாவம் நிறைந்த மனோநிலையை நிறுத்துபவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(35) மனம் மற்றும் ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், மனத்தைக் கலங்கடிக்கும் தீய நோக்கத்தைக் கைவிடுவதன் மூலமும், ஆசை மற்றும் மயக்கத்தை விடுவதன் மூலமும் ஒருவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(36) ஒரு மனிதன், கேட்கும் பொருட்கள் மற்றும் பார்க்கும் பொருட்கள் அனைத்திலும், (பிற புலன்களின் செயல்பாடுகளிலும்), வாழும் உயிரினங்கள் அனைத்திலும் சம மனநிலையைக் கொண்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடக்கும்போது அவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(37) ஒரு மனிதன், புகழ் மற்றும் இகழ், தங்கம் மற்றும் இரும்பு, இன்பம் மற்றும் துன்பம், வெப்பம் மற்றும் குளிர், நன்மை மற்றும் தீமை, ஏற்புடையவை மற்றும் ஏற்பில்லாதவை, வாழ்வு மற்றும் மரணம் ஆகியவற்றில் சமமாகக் கண்களைச் செலுத்தும் போது அவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(38, 39)

துறவி வகையினரின் கடமைகளை நோற்கும் ஒருவன், நீட்டப்பட்ட தன் அங்கங்களை உள்ளிழுத்துக் கொள்ளும் ஓர் ஆமையைப் போலத் தன் புலன்களையும், மனத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.(40) இருளில் மூழ்கிய ஒரு வீட்டை தூண்டப்பட்ட விளக்கின் துணையுடன் பார்ப்பதைப் போலவே, புத்தி எனும் விளக்கின் துணையால் ஆன்மாவையும் காண முடியும்.(41) ஓ!புத்திசாலிகளில் முதன்மையானவனே, நான் உனக்குச் சொல்லும் இந்த ஞானம் அனைத்தும் உன்னிடம் வசிப்பதை நான் பார்க்கிறேன். விடுதலை அறத்தை {மோக்ஷதர்மத்தைக்} கற்க விரும்பும் ஒருவனால் அறியப்பட வேண்டிய எதையும் நீ ஏற்கனவே அறிந்திருக்கிறாய்.(42) ஓ! மறுபிறப்பாள முனிவனே, உனது ஆசானின் அருள் மூலமாகவும், நீ பெற்ற கல்வியின் மூலமும், நீ ஏற்கனவே புலன்நுகர் பொருட்கள் அனைத்தையும் கடந்துவிட்டாய் என நான் நம்புகிறேன்.(43) ஓ! பெரும் தவசியே, உனது தந்தையின் அருள் மூலம் அனைத்தையும் அறிந்தவன் நான், எனவே உன்னை அறிந்து கொள்வதில் வென்றிருக்கிறேன்.(44)

நீ உனக்கு இருப்பதாக நினைப்பதைவிட உன் ஞானம் மிகப் பெரியதாகும். உள்ளுணர்வின் மூலம் விளையும் உன் கருத்துகளும் நீ கொண்டிருப்பதாக நினைப்பதைவிட மிகப் பெரியவையாகும். நீ அறிந்ததைவிட உன் பலம் மிகப் பெரியது.(45) உன் இளம் வயதினாலோ, ஐயங்களை அகற்ற இயலாததாலோ, விடுதலை {முக்தி} அடையாததால் உண்டாகும் அச்சத்தாலோ, உள்ளுணர்வின் மூலம் உன் மனத்தில் ஏற்கனவே எழுந்த ஞானத்தை நீ அறியாமல் இருக்கிறாய்.(46) எங்களைப் போன்றோரின் மூலம் ஐயங்கள் விலக்கப்பட்ட பிறகே ஒருவன் தன் இதய முடிச்சுகளைத் திறப்பதில் வெல்கிறான். அதன்பிறகு செய்யும் அறம் சார்ந்த முயற்சியின் மூலம் அவன் அந்த ஞானத்தை அடைந்து அறிந்து கொள்கிறான்.(47)

உன்னைப் பொறுத்தவரையில் நீ ஏற்கனவே ஞானத்தை அடைந்தவனாவாய். உன் புத்தி நிலையாகவும், அமைதியாகவும் இருக்கிறது. நீ பேராசையில் இருந்து விடுபட்டவனாக இருக்கிறாய். ஓ! பிராமணா, இவையாவும் இருந்தாலும், முயற்சி இல்லாத ஒருவனால், அடைவதற்கரிய உயர்ந்த பொருளான பிரம்மத்தை அடைவதில் ஒருபோதும் வெல்லமுடியாது.(48) இன்பத்திற்கும், துன்பத்திற்கும் இடையில் நீ எந்த வேறுபாட்டையும் காணவில்லை. நீ பேராசையுடன் இல்லை. ஆடுவதிலும், பாடுவதிலும் உனக்கு விருப்பமில்லை. உனக்குப் பற்றுகள் ஏதும் இல்லை.(49) நண்பர்களிடம் உனக்குப் பிணைப்பேதும் கிடையாது. அச்சத்தைத் தூண்டும் பொருட்களில் உனக்கு அச்சமேதுமில்லை. ஓ! அருளப்பட்டவனே, தங்கக் குவியலிலும், மண்ணாங்கட்டியிலும் நீ சமகண்களைக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன்.(50) நானும், ஞானம் கொண்ட பிறரும், உயர்ந்த, அழிவற்ற அமைதி வழியில் நீ நிறுவப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.(51) ஓ! பிராமணா, ஒரு பிராமணன் அடையத்தக்க கனிகளைப் பெற்றுத் தருபவையும், விடுதலை {முக்தி} என்று சொல்லப்படும் பொருள் சாரங்களைப் போன்றவையுமான கடமைகளிலேயே நீ இருக்கிறாய். இன்னும் என்னிடம் நீ கேட்பதற்கு வேறென்ன இருக்கிறது?” என்று கேட்டான் {ஜனகன்}”.(52)

வேதக்கல்விக்கான வழிமுறை! – சாந்திபர்வம் பகுதி – 328-உலகையும், தேவர்களையும் அவமதித்த முருகன்; வேலை அசைத்த விஷ்ணு; வேலை அசைக்க முடியாமல் வீழ்ந்த பிரகலாதன்; கடுந்தவம் செய்த சிவன்; சிவனின் தவத்தைப் பாதுகாத்த அக்னி; சீடர்களுக்கு வேதங்களைப் போதித்த வியாசர்; சீடர்கள் வியாசரிடம் வேண்டிய வரம்; வேத கல்வியை வழங்க வேண்டிய வழிமுறைகளை வகுத்த வியாசர் …

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னன் ஜனகனின் இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், தூய்மையான ஆன்மாவையும், நிறுவப்பட்ட தீர்மானங்களையும் கொண்டவருமான சுகர், தன்னைத் தன்னால் {சுயத்தைச் சுயத்தால்} கண்டு, தன்ஆன்மாவை தன் ஆன்மாவிலேயே நிலைக்கச் செய்யத் தொடங்கினார்.(1) தன் நோக்கம் நிறைவடைந்த அவர், அமைதியையும், மகிழ்ச்சியையும் அடைந்தவராக, மேலும் ஜனகனிடம் கேள்விகளைக் கேட்காமல், காற்றின் வேகத்தில் காற்றைப் போலவே வடக்கு நோக்கி இமய மலைகளுக்குச் சென்றார்[1].(2)அந்த மலைகள் பல்வேறு அப்சரஸ் இனங்களால் நிறைந்ததாகவும், மென்மையான பல ஒலிகளை எதிரொலிப்பதாகவும் இருந்தது. ஆயிரக்கணக்கான கின்னரர்கள் மற்றும் பிருங்கராஜங்களால் {வண்டுகளாலும்} நிறைந்திருந்த அது, மதகங்கள் {நீர்க்காக்கைகள்}, கஞ்சரிதங்கள் {கருங்குருவிகள்}, பல்வேறு வண்ணங்களிலான ஜீவஜீவகங்கள் {சகோரப்பறவைகள்} ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(3,4) கண்கவர் வண்ணங்களிலான பல மயில்கள் அங்கே தங்கள் கீச்சுக்குரலால் காதுக்கினியவகையில் அகவிக் கொண்டிருந்தன.(5) அன்னங்களின் கூட்டங்கள் பலவும், கோகிலங்களின் {குயில்களின்} கூட்டங்கள் பலவும், அந்த இடத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தன. பறவைகளின் இளவரசனான கருடன் அந்தச் சிகரத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தான்.(6) லோகபாலர்கள் நால்வர், தேவர்களும், முனிவர்களில் பல்வேறு வகையினரும் உலகிற்கு நன்மை செய்ய விரும்பி எப்போதும் அங்கே வந்து கொண்டிருந்தனர்.(7) உயர் ஆன்ம விஷ்ணு ஒரு மகனைப் பெறும் நோக்கத்துடன் அங்கே கடுந்தவம் செய்திருந்தான்.(8)

இங்கேதான் குமாரன் என்ற பெயரிலான தேவ தளபதி, தன் இளம் வயதில், மூவுலகங்களையும், தேவலோகவாசிகள் அனைவரையும் அலட்சியம் செய்து, தன் ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால் / வேலால்} பூமியைப் பிளந்தான். தன் ஈட்டியை வீசிய ஸ்கந்தன், அண்டத்திடம்,(9) “வலிமையிலோ, பிராமணர்களிடம் அதிக அன்பு கொள்வதிலோ என்னிலும் மேன்மையானவனாகவோ, பிராமணர்கள் மற்றும் வேதங்களிடம் கொள்ளும் அர்ப்பணிப்பில் என்னுடன் ஒப்பிடத்தக்கவனாகவோ, சக்தியில் என்னைப் போன்றவனாகவோ எவனாவது இருந்தால்,(10) அவன் இந்த ஈட்டி {சக்தியை / வேலைத்} தூக்கட்டும், அல்லது அசைக்கவாவது செய்யட்டும்” என்றான்.

இந்த அறைகூவலைக் கேட்ட மூவுலகங்களும் கவலையால் நிறைந்தன. அனைத்து உயிரினங்களும் தங்களுக்குள் “இவ்வீட்டியைத் தூக்கப் போவது யார்?” என்று ஒன்றையொன்று கேட்டுக் கொண்டன.(11) தேவர்கள், அசுரர்கள் மற்றும் ராட்சசர்கள் அனைவரும் புலன்களாலும், மனத்தாலும் கலங்கியிருப்பதை விஷ்ணு கண்டான்.(12) அந்தச் சூழ்நிலையில் எதைச் செய்வது சிறந்ததென அவன் சிந்தித்தான். ஈட்டிவீசுவதைக் குறித்த அந்த அறைகூவலைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவன் {விஷ்ணு}, நெருப்பு தேவனின் {அக்னியின்} மகனான ஸ்கந்தனின் மீது தன் கண்களைச் செலுத்தினான்.(13) தூய ஆன்மாவைக் கொண்ட விஷ்ணு, சுடர்மிக்க அந்த ஈட்டியைத் தன் இடக்கையால் பற்றி அஃதை அசைக்கத் தொடங்கினான்.(14) பெரும் வலிமையைக் கொண்ட விஷ்ணுவால் இவ்வாறு அந்த ஈட்டி அசைக்கப்பட்டபோது, மலைகள், காடுகள், கடல்களுடன் கூடிய பூமியானவள் அந்த ஈட்டியுடன் சேர்ந்து மொத்தமாகக் குலுங்கினாள்.(15)

அந்த ஈட்டியை உயர்த்த விஷ்ணு முழுத் தகுதியுடையவன் என்றபோதிலும், அவன் {விஷ்ணு} அஃதை {ஈட்டியை} அசைத்ததோடு நின்றுவிட்டான். இதன் மூலம் அந்தப் பலமிக்கத் தலைவன் {விஷ்ணு}, ஸ்கந்தனின் கௌரவத்திற்குக் குறைவு நேராமல் பார்த்துக் கொண்டான்.(16) அஃதை அசைத்த பிறகு, அந்தத் தெய்வீக விஷ்ணு, பிரஹலாதனிடம், “குமாரனின் வலிமையைப் பார். இந்த அண்டத்தில் வேறு எவராலும் இந்த ஈட்டியைத் தூக்க முடியாது” என்றான்.(17) இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிரஹலாதன் அந்த ஈட்டியைத் தூக்கத் தீர்மானித்தான். அதைப் பிடித்த அவனால் அதைக் கொஞ்சமும் அசைக்கமுடியவில்லை.(18) அவன் உரக்க அலறியபடியே மயக்கமடைந்து மலையுச்சியில் இருந்து கீழே விழுந்தான். உண்மையில், அந்த ஹிரண்யகசிபுவின் மகன் {பிரஹலாதன்} பூமியில் விழுந்தான்.(19)

காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட மஹாதேவன் {ருத்ரன்}, வடக்குப்பக்கத்தில் இருந்த அந்தப் பிரம்மாண்ட மலைகளுக்குச் சென்று கடுந்தவங்களைச் செய்தான்.(20) மஹாதேவன் தவம் செய்த ஆசிரமமானது அனைத்துப் பக்கங்களிலும் சுடர்மிக்க நெருப்பால் சூழப்பட்டிருந்தது. தூய்மையடையாத ஆன்மா கொண்ட மனிதர்களால் அணுகப்பட முடியாத அம்மலை ஆத்தியம் என்ற பெயரில் அறியப்பட்டது.(21) அதைச் சுற்றிலும் பத்து யோஜனைகள் அகலத்தில், யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும், தானவர்களாலும் அணுகப்பட முடியாத அளவுக்கு ஒரு நெருப்பு வளையம் இருந்தது.(22) வலிமையும், சக்தியும் கொண்ட சிறப்புமிக்க நெருப்பு தேவன் {அக்னி}, ஒற்றைக் காலில் ஆயிரம் தேவ வருடங்கள் நின்றிருந்த பெரும் ஞானம் கொண்ட மஹாதேவனின் அருகில் இருந்து {அந்தத் தவத்திற்கான} தடைகள் அனைத்தையும் அகற்றுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(23) உயர்ந்த நோன்புகளைக் கொண்ட மஹாதேவன், அந்த முதன்மையான மலையின் அருகில் வசித்து, (தன் தவங்களின் மூலம்) தேவர்களைத் தகிக்கச் செய்தான்.(24)

அந்த மலைகளின் அடிவாரத்தில்தான், பெரும் தவத்தகுதியைக் கொண்ட பராசரரின் மகன் வியாசர், தமது சீடர்களுக்கு வேதங்களைக் கற்பித்தார்.(25) சுமந்து, வைசம்பாயனர், பெரும் ஞானியான ஜைமினி, பெரும் தவத்தகுதியைக் கொண்ட பைலர் ஆகியோரே உயர்வாக அருளப்பட்ட அந்தச் சீடர்களாவர்.(26)

சுகர், தம் தந்தையும், பெரும் தவசியுமான வியாசர், தமது சீடர்கள் சூழ வசித்து வந்த இனிமை நிறைந்த ஆசிரமத்திற்குச் சென்றார்.(27) ஆசிரமத்தில் அமர்ந்திருந்த வியாசர், சிதறிய தழல்களுடன் கூடிய சுடர்மிக்க நெருப்பைப் போன்றோ, பிரகாசமான சூரியனுக்கு ஒப்பாகவோ வந்து கொண்டிருக்கும் தம் மகனைக் கண்டார்.(28) சுகர் வந்து கொண்டிருந்தபோது, அவர் மரங்களையோ, மலையின் பாறைகளையோ தீண்டுவது போன்று தெரியவில்லை. புலன்நுகர் பொருட்கள் அனைத்தில் இருந்தும் முழுமையாகத் தொடர்பறுந்து, யோகத்தில் ஈடுபட்டிருந்த அந்த உயர் ஆன்ம தவசி {சுகர்}, வில்லில் இருந்து ஏவப்பட்ட ஒரு கணையின் வேகத்திற்கு ஒப்பாக வந்து கொண்டிருந்தார்.(29) அரணிக் கட்டைகளில் பிறந்தவரான சுகர் தமது தந்தையை அணுகி அவரது பாதங்களைத் தீண்டினார். பிறகு வழக்கமான நடைமுறைகளின் படியே தன் தந்தையின் சீடர்களை வணங்கினார்.(30) பிறகு, மன்னன் ஜனகனுடனான தமது உரையாடலின் விபரங்கள் அனைத்தையும் தம் தந்தையிடம் பெரும் உற்சாகத்துடன் சொன்னார்.(31) பராசரரின் மகனான வியாசர், தமது பலமிக்க மகன் வந்த பிறகும், தமது சீடர்களுக்கும், தமது மகனுக்கும் கற்பிப்பதில் ஈடுபட்டவாறு அங்கே இமயத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.(32) ஒரு நாள் அவர் அமர்ந்திருந்தபோது, வேதங்களில் நன்கு திறம்பெற்றவர்களும், தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தியவர்கள், அமைதியான ஆன்மாவுடன் கூடியவர்களுமான அவரது சீடர்கள் அவரைச் சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள்.(33) அவர்கள் அனைவரும் வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும் முழுமையாகத் திறம்பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் தவங்களை நோற்பவர்களாகவும் இருந்தனர். கூப்பிய கரங்களோடு அவர்கள் தங்கள் ஆசானிடம் பின்வரும் வார்த்தைகளில் பேசினர்.(34)

அந்தச் சீடர்கள், “உமது அருளால், நாங்கள் பெரும் சக்தி கொண்டவர்களாக இருக்கிறோம். எங்கள் புகழும் பரவியிருக்கிறது. நீர் எங்களுக்கு அருள ஓர் ஆதரவை நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகிறோம்” என்றனர்.(35)

அவர்களுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த மறுபிறப்பாள முனிவர்  {வியாசர்} அவர்களிடம், “பிள்ளைகளே, என்ன வரத்தை நான் அருள நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை எனக்குச் சொல்வீராக” என்றார்.(36)

தங்கள் ஆசானின் இந்தப் பதிலைக் கேட்ட சீடர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். மீண்டும் தங்கள் ஆசானுக்குத் {வியாசருக்குத்} தலைவணங்கிய அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் கரங்களைக் கூப்பியபடி இந்தச் சிறந்த வார்த்தைகளை ஒரே குரலில் சொன்னார்கள்: “ஓ! தவசிகளில் சிறந்தவரே, எங்கள் ஆசான் எங்களிடம் நிறைவுடன் இருந்தால், நிச்சயம் நாங்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களே.(37,38) ஓ! பெரும் முனிவரே, நீர் எங்களுக்கு ஒரு வரத்தை அருள வேண்டுமென நாங்கள் அனைவரும் உம்மிடம் வேண்டுகிறோம். நீர் எங்களிடம் அருள்கூர்வீராக. (எங்கள் ஐவரைத் தவிர) ஆறாவது சீடன் புகழை அடைவதில் வெல்ல வேண்டாம்.(39) நாங்கள் நால்வர். எங்கள் ஆசானின் மகன் ஐந்தாவதாக அமைகிறார். வேதங்கள் எங்கள் ஐவரில் மட்டுமே ஒளிரட்டும். இதுவே நாங்கள் வேண்டும் வரமாகும்” என்றனர்.(40)

பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், வேதங்களின் பொருளை நன்கறிந்தவரும், அற ஆன்மாவைக் கொண்டவரும், மறுமையில் மனிதர்களுக்கான நன்மைகளை அளிக்கும் பொருட்களை நினைப்பதிலேயே எப்போதும் ஈடுபடுபவரும், பராசரரின் மகனுமான வியாசர், தமது சீடர்களின் வார்த்தைகளைக் கேட்டு, பெரும் நன்மை நிறைந்த இந்த நீதிமிக்க வார்த்தைகளைத் தன் சீடர்களுக்குச் சொன்னார்: “ஒரு பிராமணனுக்கோ, பிரம்மலோக வாசத்தை அடைய ஆவலுடன் விரும்புபவனின் மூலம் வேதக் கருத்துகளைக் கேட்க விரும்பும் ஒருவனுக்கோ வேதங்கள் எப்போதும் கொடுக்கப்பட வேண்டும்[2].(41,42) நீங்கள் பெருகுவீராக. வேதங்கள் (உங்கள் முயற்சிகளின் மூலம்) பரவட்டும். முறையாகச் சீடனாகாத ஒருவனுக்கு வேதங்கள் ஒருபோதும் கொடுக்கப்படக்கூடாது. நல்ல நோன்புகளை நோற்காதவனுக்கும் அவை கொடுக்கப்படக்கூடாது. தூய்மையடையாத ஆன்மாவைக் கொண்டவனுக்குள் வசிப்பதற்கும் அவை கொடுக்கப்படக்கூடாது.(43) (வேத அறிவைக் கற்பிக்க) சீடர்களாக ஏற்கக்கூடிய மனிதர்களின் முறையான தகுதிகளாக இவையே அறியப்பட வேண்டும். ஒருவனுடைய குணத்தை முறையாக ஆராயாமல் எந்த அறிவியலும் அவனுக்குக் கொடுக்கப்படக் கூடாது. தூய தங்கமானது, வெப்பம், வெட்டுதல், தேய்த்தல் ஆகியவற்றின் மூலம் சோதிக்கப்படுவதைப் போலவே சீடர்களும் அவர்களுடைய பிறப்பு {குலம்} மற்றும் சாதனைகளின் மூலம் சோதிக்கப்பட வேண்டும்.(45)நிறுவப்படக்கூடாத பணிகளிலோ, ஆபத்து நிறைந்த பணிகளிலோ உங்கள் சீடர்களை நீங்கள் ஒருபோதும் நிறுவக்கூடாது. ஒருவனுடைய ஞானமானது, எப்போதும் அவனுடைய புத்தி மற்றும் கல்வியில் அவனுடைய தளரா உழைப்பு ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்கதாகும்.(46) சீடர்கள் அனைவரும் அனைத்துக் கடினங்களையும் {சிரமங்களையும்} வெல்லட்டும், அவர்கள் அனைவரும் மங்கலமான வெற்றியை அடையட்டும். அனைத்து வகைகளை {வர்ணங்களைச் சார்ந்த} மனிதர்களுக்கும் நீங்கள் சாத்திரங்களைக் கற்பிக்கத் தகுந்தவர்களாக இருக்கிறீர்கள். அவ்வாறு கற்பிக்கும்போது, ஒரு பிராமணனை முன்னே வைத்துக் கொண்டு அவனிடம் மட்டுமே நீங்கள் சொல்ல வேண்டும்[3].(47) இவையே வேத கல்வியின் விதிகளாகும். மேலும் இதுவே உயர்ந்த பணியாகவும் கருதப்படுகிறது. வேதங்களைக் கொண்டு தேவர்களைத் துதிக்கும் நோக்கத்திற்காகவே சுயம்புவால் அவை படைக்கப்பட்டன.(48) புத்தி மயக்கத்தின் மூலமாக எந்த மனிதன், வேதமறிந்த ஒரு பிராமணனை நிந்திக்கிறானோ, அத்தகைய தீய பேச்சின் விளைவால் அவன் நிச்சயம் அவமானத்தை அடைவான்.(49) அறவிதிகள் அனைத்தையும் அலட்சியம் செய்து ஞானத்தை வேண்டுபவன், அறவிதிகளை அலட்சியம் செய்து ஞானத்தைப் போதிப்பவன் ஆகிய இருவரும் வீழ்கிறார்கள். மேலும், இத்தகைய வேண்டலும், இத்தகைய போதனையும் ஆசானுக்கும் சீடனுக்கும் இடையில் நீடிக்க வேண்டிய பற்றுக்குப் பதிலாக, நம்பிக்கையின்மையையும், ஐயுணர்வையுமே நிச்சயம் உண்டாக்கும்.(50) வேதங்களைக் கற்கவும், கற்பிக்கப்படவும் வேண்டிய வழி குறித்த அனைத்தையும் நான் இப்போது உங்களுக்குச் சொன்னேன். இந்த அறிவுரைகளை உங்கள் மனத்தில் கொண்டே நீங்கள் உங்கள் சீடர்களிடம் செயல்பட வேண்டும்” என்றார் {வியாசர்}”.(51)

ஏழு மருத்துகள்! – சாந்திபர்வம் பகுதி – 329-வியாசரிடம் விடைபெற்றுச் சென்ற அவரது சீடர்கள்; களங்கங்கள் என்னென்ன என்பதைச் சொன்ன நாரதர்; வியாசரை வேதமோதத் தூண்டிய நாரதர்; வேதமோதக்கூடாத வேளை; ஏழு வாயுக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர் …

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தங்கள் ஆசானின் {வியாசரின்} இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும், பெரும் சக்தியைக் கொண்டவர்களுமான வியாசரின் சீடர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து ஒருவொரையொருவர் தழுவிக் கொண்டனர்.(1) அவர்கள் தங்களுக்குள், “நமது எதிர்கால நன்மையைக் கருதி சிறப்புமிக்க நமது ஆசானால் சொல்லப்பட்டதை நாம் எப்போதும் நினைவில் கொண்டு, அதன்படியே நிச்சயம் செயல்படுவோம்” என்றனர்.(2)

மகிழ்ச்சி நிறைந்த இதயங்களோடு ஒருவருக்கொருவர் இவ்வாறு சொல்லிக் கொண்டவர்களும், வார்த்தைகளை முற்றாக ஆள்பவர்களுமான வியாசரின் சீடர்கள், மீண்டும் தங்கள் ஆசானிடம், “ஓ! பலமிக்கவரே, ஓ! பெருந்தவசியே, உமக்கு நிறைவுண்டானால், வேதங்களை வகுப்பதற்காக {பரவச் செய்வதற்கு} நாங்கள் இம்மலையில் இருந்து பூமிக்குச் செல்ல விரும்புகிறோம்” என்றனர்.(4)

தமது சீடர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பலமிக்கப் பராசரர் மகன், அறம் மற்றும் லாபம் தாண்டி நன்மை நிறைந்த வார்த்தைகளால் அவர்களுக்கு மறுமொழிகூறினார்.(6) {வியாசர்}, “விரும்பியபடி நீங்கள் பூமிக்கும் செல்லலாம், தேவலோகத்திற்கும் செல்லலாம். வேதங்கள் எப்போதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட நேரிடும், எனவே நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்[1].(6)வாய்மை நிறைந்த தங்கள் ஆசானால் {வியாசரால்} அனுமதிக்கப்பட்ட அந்தச் சீடர்கள், அவரை வலம் வந்து, அவருக்குத் தலைவணங்கி அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டனர்.(7) பூமிக்கு இறங்கி வந்த அவர்கள் அக்னிஷ்டோமத்தையும் பிற வேள்விகளையும் செய்தனர்; அவர்கள் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களுக்கான வேள்விகளைச் செய்து கொடுக்கத் தொடங்கினர்.(8) இல்லறவாழ்வுமுறையில் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்தி வந்த அவர்கள், பிராமணர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். பெரும்புகழையும், செழிப்பையும் கொண்ட அவர்கள், {பிறருக்குப்} போதிப்பதிலும், {பிறரின்} வேள்விகளைச் செய்து கொடுப்பதிலும் ஈடுபட்டனர்.(9) வியாசர், தமது சீடர்கள் சென்ற பிறகு, தமது மகனின் {சுகரின்} துணையுடன், தமது ஆசிரமத்திலேயே இருந்தார். கவலைநிறைந்த நினைவுகளுடன் தன் நாட்களைக் கடத்திவந்த அந்த முனிவர், ஆசிரமத்தின் ஓர் ஓரத்தில் அமைதியாக ஓய்ந்து அமர்ந்திருந்தார்.(10) அந்நேரத்தில், பெரும் தவத்தகுதியைக் கொண்ட நாரதர், வியாசரைக் காண அந்த இடத்திற்கு வந்து, செவிக்கினிய ஒலியிலமைந்த வார்த்தைகளால் அவரிடம் பேசினார்.(11)

நாரதர், “ஓ! வசிஷ்ட குலத்தைச் சேர்ந்த மறுபிறப்பாள முனிவரே, ஏன் இப்போது வேதவொலிகள் அமைதியடைந்தன? ஆழ்ந்த எண்ணங்களின் சிந்தனையில் உள்ள ஒருவரைப் போலத் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டு ஏன் நீர் தனியாக அமைதியாக அமர்ந்திருக்கிறீர்?(12) ஐயோ, வேத எதிரொலிகள் இல்லாத இந்த மலையானது, ராகுவால் தாக்கப்படும்போதோ, புழுதியால் மறைக்கப்படும்போதோ காந்தியை இழக்கும் சந்திரனைப் போலத் தன் அழகனைத்தையும் இழந்திருக்கிறது.(13) தெய்வீக முனிவர்கள் வசித்திருந்தாலும், வேதவொலிகளை இழந்திருக்கும இந்த மலை அழகனைத்தையும் இழந்து நிஷாதர்களின் கிராமத்துக்கு ஒப்பாக இருக்கிறது.(14) வேதவொலியை இழந்ததன் விளைவால் முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் ஒளியில்லாமல் இருக்கிறார்கள்” என்றார்.(15)

நாரதரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, தீவில் பிறந்த கிருஷ்ணர் {வியாசர்}, “ஓ! பெரும் முனிவரே, வேத வெளிப்பாடுகளை நன்கறிந்தவரே, நீர் சொல்பவை அனைத்தும் எனக்கு ஏற்புடையவையாகவும், உண்மையில் உம்மால் சொல்லத்தகுந்தவையாகவும் உள்ளன. நீர் அனைத்தையும் அறிந்தவர். நீர் அனைத்தையும் கண்டவர். உமது ஆர்வம் அனைத்துப் பொருட்களையும் தழுவியதாக இருக்கிறது.(16,17) மூவுலகங்களில் நேர்ந்தவை அனைத்தையும் நீர் நன்கறிந்திருக்கிறீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே, நீர் எனக்கு ஆணையிடுவீராக. ஓ!, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக.(18) ஓ! மறுபிறப்பாள முனிவரே, இப்போது என்னால் செய்யத்தகுந்தவற்றை எனக்குச் சொல்வீராக. என் சீடர்களிடமிருந்து பிரிந்திருக்கும் என் மனம் இப்போது உற்சாகமற்றதாக இருக்கிறது” என்றார்.(19)

நாரதர் {வியாசரிடம்}, “வேதமோதுவதை நிறுத்துவதே அதன் {வேதத்தின்} களங்கமாகும் பிராமணர்கள் நோன்பு நோற்காததே அவர்களின் களங்கமாகும். பாஹ்லீக குலம் இந்தப் பூமியின் களங்கமாகும். ஆர்வம் பெண்களின் களங்கமாகும்.(20) நீர் நுண்ணறிவைக் கொண்ட உமது மகனுடன் வேதங்களை ஓதி, ராட்சசர்களிடம் இருந்து எழும் அச்சங்களை அந்த வேதவொலிகளின் எதிரொலியால் அகற்றுவீராக” என்றார்”.(21)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “கடமைகளை {தர்மங்களை} அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், வேதமோதுவதில் உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்டவருமான வியாசர், நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, நாரதரிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்று பதிலளித்தார்[2].(22)அவர், தமது மகனான சுகருடன் சேர்ந்து, உச்சரிப்பு ஆய்வின் விதிகள் அனைத்தையும் நோற்று, மூவுலகங்களையும் நிறைக்கும் வகையில் மிக உரத்த குரலில் வேதமோதுவதில் தம்மை நிறுவிக் கொண்டார்.(23) ஒரு நாள், கடமைகள் அனைத்தையும் நன்கறிந்தவர்களான அந்தத் தந்தையும் மகனும் வேதமோதுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பெருங்கடலின் மத்தியில் வீசும் வலுவான காற்றால் உந்தப்பட்டது போல் தெரிந்த கடுங்காற்று எழுந்தது.(24) அந்த வேளை புனித பாராயணத்திற்குத் தகுந்ததல்ல என்பதை அந்தச் சூழ்நிலையில் புரிந்து கொண்ட வியாசர், உடனே பாராயணத்தை நிறுத்துமாறு தமது மகனுக்கு ஆணையிட்டார். தமது தந்தையால் இவ்வாறு தடுக்கப்பட்ட சுகர் ஆர்வத்தால் நிறைந்தார்.(25)

அவர் தமது தந்தையிடம், “ஓ! மறுபிறப்பாளரே, இந்தக் காற்று எங்கிருந்து வருகிறது? இந்தக் காற்றின் போக்கைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டார்.(26)

சுகரின் இந்தக் கேள்வியைக் கேட்ட வியாசர் ஆச்சரியத்தால் நிறைந்தார். அது வேத பாராயணம் நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடும் ஒரு சகுனம் என்று சொல்லி சுகருக்கு அவர் பதிலளித்தார்,(27) “நீ ஆன்ம பார்வையைப் பெற்றிருக்கிறாய். உன் மனமும், ஒவ்வொரு மாசிலிருந்தும் தூய்மையடைந்திருக்கிறது. ஆசை மற்றும் இருள் {ரஜஸ் மற்றும் தமஸ்} குணங்களில் இருந்து நீ விடுபட்டிருக்கிறாய். நீ இப்போது நல்லியல்பின் {சத்வ} குணத்தில் நிலைபெற்றிருக்கிறாய்.(28) ஒருவன் தன் பிம்பத்தை ஒரு கண்ணாடியில் காண்பதைப் போலவே நீ இப்போது உன் ஆன்மாவால் ஆன்மாவைக் காண்கிறாய். உன் ஆன்மாவிலேயே நிலைபெற்றிருக்கும் நீ வேதங்களைக் குறித்தும் சிந்திக்கிறாய்.(29) பரமாத்மாவின் பாதை தேவயானம் (தேவர்களின் பாதை) என்றழைக்கப்படுகிறது. தமஸ் குணத்தாலான பாதை பித்ருயானம் (பித்ருக்களின் பாதை) என்றழைக்கப்படுகிறது. இவையே மறுமைக்கான இரு பாதைகளாகும். ஒன்றின் வழியே மக்கள் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர். மற்றொன்றின் மூலம் மக்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள்.(30)

காற்றானது {வாயுவானது} பூமியின் பரப்பிலும், ஆகாயத்திலும் வீசுகிறது. அவை ஏழு வழிகளில் {மார்க்கங்களில்} வீசுகின்றன. ஒன்றன்பின் ஒன்றாக நான் சொல்கிறேன் கேட்பாயாக.(31) உடலானது புலன்களைக் கொண்டுள்ளது. புலன்களானவை, சத்யஸ்களாலும், வலிமையும், பலமும் கொண்ட பெரும்பூதங்கள் பலவற்றாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. இவையே {புலன்களே} சமானன் என்ற பெயரில் வெல்லப்பட முடியாத ஒரு மகனை ஈன்றது.(32) சமானனிலிருந்து உதானன் என்றழைக்கப்படும் மகன் ஒருவன் எழுந்தான். உதனானிலிருந்து வியானன் எழுந்தது. வியானனிலிருந்து அபானன் எழுந்தது, இறுதியாக அபானனிலிருந்து பிராணன் என்றழைக்கப்படும் காற்று எழுந்தது.(33) எதிரிகள் அனைத்தையும் எரிப்பவனான அந்த வெல்லப்பட முடியாத பிராணன் பிள்ளையற்றவனானான். அந்தக் காற்றுகளின் {வாயுக்களின்} வெவ்வேறு செயல்பாடுகளைக் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன்.(34) உயிரினங்கள் அனைத்தின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் காற்றே {வாயுவே} காரணமாக இருக்கிறது. உயிரினங்கள் அதன் மூலம் வாழத்தகுந்தவையாவதாலேயே அக்காற்று பிராணன் (அல்லது உயிர்) என்றழைக்கப்படுகிறது.(35)

மேற்கண்ட பட்டியலில் முதலாவதாக இருப்பதும், பிரவஹம் (சமானன்) என்ற பெயரில் அறியப்படுவதுமான காற்றானது {வாயுவானது}, முதல் வழியில் புகை மற்றும் வெப்பத்தில் பிறக்கும் மேகத்திரள்களைத் தூண்டுகிறது. ஆகாய வழியில் நீர்நிறைந்த மேகங்களின் தொடர்பை அடையும் அந்தக் காற்றானது, மின்னல் கீற்றுகளின் பிரகாசத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.(36)

ஆவஹம் {நமது உடலுக்குள் உதானன்} என்றழைக்கப்படும் இரண்டாம் காற்று {வாயு} பேரொலியுடன் வீசுகிறது. இந்தக் காற்றே சோமனையும் {சந்திரனையும்}, பிற ஒளிக்கோள்களையும் எழவும், தோன்றவும் செய்கிறது. (அண்டத்தின் நுண்ணுயிரான இந்த) உடலுக்குள் உள்ள அந்தக் காற்று ஞானிகளால் உதானன் என்றழைக்கப்படுகிறது.(37)

நான்கு பெருங்கடல்களில் இருந்து நீரை உறிஞ்சி, ஆகாயத்திலுள்ள மேகங்களுக்கு அளித்து, அம்மேகங்களை மழை தேவனுக்கு {பர்ஜன்யனுக்கு} அளிக்கும் காற்றானது, பட்டியலில் மூன்றாவதாக உத்வஹம் {நமது உடலுக்குள் வியானன்} என்ற பெயரில் அறியப்படுகிறது.(38,39)

மேகங்களை ஆதரிப்பதும், அவற்றைப் பல்வேறு பகுதிகளாக வகுப்பதும், மழைபொழிவிற்காக அவற்றை உருக்குவதும், மீண்டும் அவற்றைத் திடமாக்குவதும், முழங்கும் மேகங்களின் ஒலியாக உணரப்படுவதும், உலகைப் பாதுகாப்பதற்காக மேகங்களின் வடிவைத் தானே ஏற்றுக் கொண்டிருப்பதும், தேவர்கள் அனைவரின் தேர்களையும் வானத்தில் சுமந்து செல்வதுமான காற்றானது {வாயுவானது} ஸம்வஹம் {நமது உடலுக்குள் அபானன்} என்ற பெயரில் அறியப்படுகிறது. பட்டியலில் நான்காவதான அது {ஸ்வஹம் / அபானன்} மலைகளையே பிளக்கும் வல்லமையும், பெரும் பலமும் கொண்டதாகும்.(40,41)

ஐந்தாவது காற்றானது {வாயுவானது}, பெரும் சக்தியையும், வேகத்தையும் கொண்டதாகும். உலர்ந்ததாக இருக்கும் அது, மரங்களை வேரோடு பிடுங்கி கீழே வீழ்த்தவல்லதாகும். அதனுடன் இருக்கும் மேகங்கள், வலாஹம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.(42) அந்தக் காற்றானது, பல வகைகளிலான பேரிடர் நிகழ்வுகளை உண்டாக்கியபடி, ஆகாயத்தில் முழங்கும் ஒலிகளையும் உண்டாக்குகிறது. அது விவஹம் {நமது உடலில் பிராணன்} என்ற பெயரில் அறியப்படுகிறது.(43,44)

ஆறாவது காற்றானது {வாயுவானது}, தெய்வீக நீர்நிலைகள் அனைத்தையும் சுமந்தபடி, அவை கீழே விழாமல் பாதுகாக்கிறது. தெய்வீக கங்கையின் புனித நீரை நீடிக்கச் செய்து வீசும் அந்தக் காற்றானது, அது {அந்தக் கங்கை நீர்} கீழ்நோக்கிப் பாயாமல் தடுக்கிறது.(45) உண்மையில் ஆயிரம் கதிர்களின் தோற்றுவாயும், உலகிற்கு ஒளியூட்டுவதுமான சூரியன், அந்தக் காற்றால் தொலைவிலேயே தடுக்கப்பட்டு ஒற்றைக் கதிரைக் கொண்ட ஒளிக்கோளாகத் தோன்றுகிறது.(46) அந்தக் காற்றின் செயல்பாட்டினாலேயே சந்திரன் தேயும் சந்திரன், முழு வட்டில் வெளிப்படும்வரை மீண்டும் வளர்கிறது. ஓ! தவசிகளில் முதன்மையானவனே, அந்தக் காற்று {வாயு}, பரிவஹம் என்ற பெயரில் அறியப்படுகிறது[3].(47)உரிய நேரத்தில் உயிரினங்கள் அனைத்தின் உயிரை அபகரித்துச் செல்வதும், மரணம் {மிருத்யு} மற்றும் சூரியனின் மகனான யமன் ஆகியோர் பின்பற்றும் பாதையைக் கொண்டதும்,(48) எப்போதும் தியான யோகத்தில் ஈடுபடும் நுட்பமான பார்வை கொண்ட யோகிகளால் அடையப்படும் இறவாமையின் ஊற்றுக் கண்ணாக இருப்பதும்(49), பழங்காலத்தில் உயிரினங்களின் தலைவனான தக்ஷனின் பத்து பிள்ளைகளின் மூலம் பிறந்தவர்களான ஆயிரக்கணக்கான {தக்ஷனின்} பேரப்பிள்ளைகள் அண்டத்தின் எல்லையை அடைவதில் துணைபுரிந்ததும், உலகத்திற்குத் திரும்பிவரும் கடப்பாட்டில் இருந்து விடுவித்து ஒருவனைத் தன் தீண்டலினாலேயே விடுதலையை {முக்தியை} அடையச் செய்வதுமான காற்றானது {வாயுவானது} பராவஹம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. காற்றுகள் அனைத்திலும் முதன்மையான அஃது, எவராலும் தடுக்கப்பட முடியாததாக {ஏழாவது காற்றாக / வாயுவாக} இருக்கிறது.(50,51)

இந்தக் காற்றுகள் {வாயுக்கள் / மருத்துகள்} அனைவரும் அதிதியின் மகன்களாவர்[4]. எங்கும் செல்லவல்லவையும், அனைத்தையும் தாங்கிப் பிடிப்பவையுமான அவை {வாயுக்கள்}, எந்த நேரத்திலும் உன்னோடு இணையாமல் உன்னைச் சுற்றிலும் வீசிக் கொண்டே இருக்கின்றன.(52) எனினும், வீசத்தொடங்கியிருக்கும் இந்தக் காற்றால் இந்த முதன்மையான மலையே திடீரென நடுங்குவது ஆச்சரியம் நிறைந்ததாகும்.(53) இந்தக் காற்று விஷ்ணுவின் மூக்குத்துளைகளில் வரும் அவனது மூச்சுக்காற்றாகும். இது வேகத்தால் தூண்டப்பட்டுப் பெருஞ்சக்தியுடன் வீசத் தொடங்கும்போது மொத்த அண்டமும் கலக்கமடைகிறது {பீடையடைகிறது}.(54) எனவே, காற்று வலுவாக வீசத்தொடங்கும்போது, வேதமறிந்த மனிதர்கள் வேதபாராயணம் செய்வதில்லை. வேதங்களும் காற்றின் வடிவமேயாகும். எனவே {வேதமானது} சக்தியுடன் சொல்லப்படும்போது, புறக்காற்றுப் பீடிக்கப்படுகிறது” என்றார் {வியாசர்}.(55)பராசரரின் பலமிக்க மகன் {வியாசர்}, இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, (காற்றன் பலம் குறைந்ததும்) தமது மகனை {சுகரை} வேதபாராயணம் செய்யும்படி ஆணையிட்டார். பிறகு அவர், தெய்வீகக் கங்கையின் நீரில் மூழ்குவதற்காக அந்த இடத்தை விட்டுச் சென்றார்” என்றார் {பீஷ்மர்}.(56)

உலக இயல்புகள்! – சாந்திபர்வம் பகுதி – 330-வியாசர் சென்றதும் சுகரிடம் வந்த நாரதர்; நன்மையானவை எவை என சுகர் கேட்டது; நன்மையானவற்றையும், உலக இயல்பையும் சுகருக்குச் சொன்ன நாரதர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வியாசர் அந்த இடத்தைவிட்டுச் சென்றவுடன், நாரதர் வானத்தின் ஊடாகப் பயணித்து, சாத்திரக் கல்வியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுகரிடம் வந்தார். வேதங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளுக்குரிய பொருளைச் சுகரிடம் கேட்கும் நோக்கத்திலேயே அந்தத் தெய்வீக முனிவர் வந்தார்.(1) தெய்வீக முனிவரான நாரதர் தமது ஆசிரமத்திற்கு வந்ததைக் கண்ட சுகர், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி அர்க்கியம் கொடுத்து அவரை வழிபட்டார்.(2)

தமக்கு அளிக்கப்பட்ட கௌரவங்களில் நிறைவடைந்த நாரதர், சுகரிடம், “ஓ! அறவோரில் முதன்மையானவனே, ஓ! அன்புக்குரிய குழந்தாய், நான் உனக்கு என்ன நன்மையைச் செய்ய வேண்டும் எனச் சொல்வாயாக” என்று கேட்டார்.(3)

நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட சுகர், ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இந்த வார்த்தைகளை அவரிடம் {நாரதரிடம்} சொன்னார், “எது எனக்கு நன்மையானது என்பதை எனக்குக் கற்பிப்பதே உமக்குத் தகும்” {என்று சுகர் கேட்டார்}.(4)

நாரதர் {சுகரிடம்}, “பழங்காலத்தில் சிறப்புவாய்ந்த சனத்குமாரர், தம்மிடம் உண்மையை விசாரிக்க வந்தவர்களும், தூய ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான சில குறிப்பிட்ட முனிவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(5) ஞானத்தைப் போன்று வேறொரு கண்ணில்லை. வாய்மையைப் போன்று வேறொரு தவமில்லை. பற்றை {ஆசையைப்} போன்று வேறொரு கவலையில்லை. துறவைப் போன்று வேறொரு மகிழ்ச்சியில்லை.(6) பாவச் செயல்களைத் தவிர்த்தல், நிலையான அறப்பயிற்சி, நல்லொழுக்கம், அனைத்து அறக்கடமைகளையும் முறையாக நோற்பது ஆகியனவே உயர்ந்த நன்மையாகும்.(7) கவலைநிறைந்த மனித நிலையை அடைந்த பிறகு, எவன் அதில் பற்றுக் கொண்டு கலக்கமடைகிறானோ {மயக்கமடைகிறானோ}, அத்தகைய மனிதன், கவலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. (உலகம் சார்ந்த பொருட்களில்) பற்றுக் கொள்வது துன்பத்தின் குறியீடாகும்.(8) உலகம் சார்ந்த பொருட்களில் பற்றுக் கொண்ட மனிதனின் புத்தியானது மேலும் மேலும் மயக்கவலையில் சிக்கிக் கொள்கிறது. மயக்கவலையில் சிக்கிக் கொள்ளும் மனிதன் இம்மையிலும், மறுமையிலும் துன்பத்தையே அடைகிறான்.(9) ஒருவன் தன் நன்மையை நாடினால் அவன் தன் சக்திக்குத்தக்க ஒவ்வொரு வழிமுறையினாலும் ஆசை மற்றும் கோபம் ஆகிய இரண்டிலிருந்தும் {காமகுரோதங்களில் இருந்தும்} விலக வேண்டும். அவை இரண்டும் ஒருவனுக்கான நன்மையை அழிப்பதற்காக மட்டுமே உண்டாகிறது.(10)

ஒருவன் எப்போதும் தன் தவங்களைக் கோபத்திலிருந்தும் {குரோதத்திலிருந்தும்}, செழிப்பைச் செருக்கிலிருந்தும் பாதுகாக்க வேண்டும். ஒருவன் எப்போதும் தன் ஞானத்தை மதிப்பு மற்றும் அவமதிப்பு {மான அவமானம்} ஆகியவற்றில் இருந்தும், அவனது ஆன்மாவைப் பிழையிலிருந்தும் {அஜாக்ரதையிலிருந்தும்} பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(11) கருணையே {அஹிம்சையே} உயர்ந்த அறமாகும். மன்னிக்கும் தன்மையே {பொறுமையே} உயர்ந்த தகுதியாகும் {பலமாகும்}. தன்னறிவே {சுயஞானமே} உயர்ந்த ஞானமாகும். வாய்மையைவிட உயர்ந்ததேதும் கிடையாது.(12) உண்மையைப் பேசுவதே எப்போதும் முறையானதாகும். உண்மையைப் பேசுவதைவிட நன்மைக்கானதைப் பேசுவதே மிகச் சிறப்பானதாகும். உயிரினங்கள் அனைத்திற்குமான பெரும் நன்மை நிறைந்ததே வாய்மை என நான் கருதுகிறேன்.(13) ஒருபோதும் நம்பிக்கையில் ஈடுபடாமல் {எதிர்பார்ப்பில் ஈடுபடாமல்} ஒவ்வொரு செயலையும் கைவிடுபவனும், உலகச் சூழலில் இருந்து முற்றிலும் தொடர்பறுந்தவனும், உலகம் சார்ந்த அனைத்தையும் துறந்தவனுமான மனிதனே உண்மையில் கல்விமான் என்றும் ஞானம் கொண்டவன் என்றும் சொல்லப்படுகிறான்.(14) தன் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உள்ள புலன்களின் துணையுடன் புலன்நுகர் பொருட்கள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டும் அவற்றில் பற்றில்லாமல் இருப்பவனும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவனும், இன்பதுன்பங்களால் ஒருபோதும் அசைக்கப்படாதவனும், தியான யோகத்தில் எப்போதும் ஈடுபடுபவனும்,(15) புலன்களில் ஆதிக்கம் செலுத்தும்தேவர்களுடன் எப்போதும் தோழமையுடன் வாழ்பவனும், அவற்றில் இருந்து தொடர்பறுந்தவனும், உடலைக் கொண்டிருந்தாலும், அதனோடு ஒருபோதும் தன்னை ஒப்பிடாதவனுமான ஒருவன் விடுதலையடைந்து, மிக விரைவில் உயர்ந்த நன்மையை அடைகிறான்.(16)

ஓ! தவசியே, பிறரை ஒருபோதும் காணாதவனும், பிறரை ஒருபோதும் தீண்டாதவனும், பிறருடன் ஒருபோதும் பேசாதவனுமான ஒருவன் விரைவில் தனக்கான உயர்ந்த நன்மையை அடைகிறான்.(17) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் எந்தத் தீங்கையும் இழைக்கக்கூடாது. மறுபுறம் அவன் அனைத்திடமும் முற்றான நட்புடன் நடந்து கொள்ள வேண்டும். மனித நிலையை அடைந்த ஒருவன் ஒருபோதும் எந்த உயிரினத்திடமும் பகைமையுடன் நடந்து கொள்ளக்கூடாது.(18) உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களிலும் முற்றான அலட்சியம், முற்றான நிறைவு, அனைத்து வகை எதிர்பார்ப்புகளையும் கைவிடல், பொறுமை ஆகியவை புலன்களைக் கட்டுப்படுத்தித் தன்னறிவை அடைந்த ஒருவனுக்கான உயர்ந்த நன்மையாக அமைகின்றன.(19) ஓ! குழந்தாய், பற்றுகள் அனைத்தையும் கைவிட்டு உன் புலன்கள் அனைத்தையும் அடக்கி, அதன் மூலம் இம்மையிலும், மறுமையிலும் இன்பநிலையை அடைவாயாக.(20)

பேராசையில் {காமத்தில்} இருந்து விடுபட்டோர் ஒருபோதும் எந்தக் கவலையையும் அடைய வேண்டியதிராது. எனவே ஒருவன் தன் ஆன்மாவில் இருந்து பேராசைகள் அனைத்தையும் கைவிட வேண்டும். ஓ! இனியவனே, அருளப்பட்டவனே, பேராசையைக் கைவிடுவதன் மூலம் கவலை மற்றும் துன்பத்தில் இருந்து நீ விடுபட இயன்றவனாவாய்.(21) வெல்லமுடியாததை {விடுதலையை / முக்தியை} வெல்ல விரும்பும் ஒருவன், தவங்கள், தற்கட்டுப்பாடு, பேசாமை {மௌனம்}, ஆன்ம அடக்கம் ஆகியவற்றுக்குத் தன்னை அர்ப்பணித்து வாழ வேண்டும்.(22) பற்றுகளுக்கு மத்தியில் அவற்றில் பற்றில்லாமல் வாழ்பவனும், எப்போதும் தனிமையில் வாழ்பவனுமான பிராமணன், மிக விரைவில் உயர்ந்த இன்பநிலையை அடைகிறான்.(23) பாலுறவுக் கலவி வாழ்வில் திளைப்பையடையும் உயிரினங்களுக்கு மத்தியில் தன்னிலேயே மகிழ்ச்சியுடன் வாழும் மனிதன், ஞானத்தால் தாகம் தணிக்கப்பட்ட மனிதனாக அறியப்பட வேண்டும். ஞானத்தால் தாகம் தணிக்கப்பட்ட மனிதன் ஒருபோதும் துன்பத்தில் ஈடுபடுவதில்லை என்பது நன்கறியப்பட்ட ஒன்றாகும்.(24) நற்செயல்களின் மூலம் ஒருவன் தேவர்களின் நிலையை அடைகிறான்; அதே வேளையில் உண்மையில் தீமையான செயல்களைச் செய்யும் ஒருவன், இழிந்த விலங்குகளின் மத்தியில் ஆதரவற்ற நிலையில் வீழ்கிறான்.(25)

கவலை, துன்பம் மற்றும் மரணம் ஆகியவற்றால் எப்போதும் பீடிக்கப்படும் ஓர் உயிரினம் (காலத்தின் கொப்பரையில்) இவ்வுலகில் சமைக்கப்படுகிறது. அதை நீ அறிவாயா?(26) உண்மையில் தீங்கானதை நன்மையென்றும்; உண்மையில் உறுதியில்லாததை உறுதியானதென்றும்; விரும்பத்தகாததை விரும்பத்தக்கது என்றும், நன்மையற்றதை நன்மையானது என்றும் கருதுவதைத் தொடர்கிறாய். ஐயோ, இவற்றைச் சரியாக உணர்ந்து நீ ஏன் விழிக்காமல் இருக்கிறாய்?(27) தன் வலைக்குள் தானே அடைபடும் பட்டுப்புழுவைப் போல உன் எண்ணற்ற செயல்களால் பிறக்கும் மயக்கம் மற்றும் பிழையால் அமைந்த வலைக்குள் நீ தொடர்ந்து அடைபட்டுக் கொண்டிருக்கிறாய். ஐயோ, இந்தச் சூழ்நிலையைச் சரியாக உணர்ந்து நீ ஏன் விழிக்காமல் இருக்கிறாய்?(28) இவ்வுலகப் பொருட்களில் எந்தப் பற்றும் கொள்ளும் தேவை உனக்கில்லை. உலகம்சார்ந்த பொருட்களில் பற்றுக் கொள்வது தீமையையே உண்டாக்கும். தன்னைச் சுற்றிலும் வலையைப் பின்னும் பட்டுப்புழு இறுதியில் அதன் செயலாலேயே அழிவையடையும்.(29) மகன்கள், மனைவிகள், உறவினர்களிடம் பற்றுள்ள மனிதர்களோ, புதைகுழியில் மூழ்கும் காட்டு யானைகள் படிப்படியாகப் பலவீனமடைந்து மரணமடைவதைப் போல இறுதியில் அழிவையே சந்திக்கிறார்கள்.(30)

பாசவலையால் இழுக்கப்படும் உயிரினங்கள் அனைத்தும், பெரும் வலைகளால் மண்ணுக்கு இழுக்கப்படும் மீன்களைப் போலப் பெருந்துன்பத்தையே அடைகிறார்கள்.(31) உறவினர்கள், மகன்கள், மனைவிகள், இந்த உடல், கவனமாகப் பாதுகாக்கப்படும் ஒருவனுடைய உடைமைகள் அனைத்தும் நிலையற்றவையாக, மறுமையில் எத்தொண்டுமாற்றாதவையாகவும் இருக்கின்றன. ஒருவன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் மட்டுமே ஒருவனை மறுமையில் பின்தொடர்கின்றன.(32) மறுமையில் இவை அனைத்தையும் விட்டுவிட்டு, நிச்சயம் நீ ஆதரவற்றவனாகவே செல்லப்போகிறாய் எனும்போது, ஐயோ, உண்மையான நிலையான செல்வத்தைக் கவனிக்காமல், எம்மதிப்புமில்லாத நிலையற்ற பொருட்களின் மீது நீ ஏன் பற்று கொள்கிறாய்?(33) நீ செல்ல வேண்டிய பாதையானது (ஓய்வெடுப்பதற்கான) எவ்வகை ஓய்விடங்களும் இல்லாததாக இருக்கிறது. அவ்வழியில் ஒருவன் ஆதரவாகப் பிடித்துக் கொள்ளக்கூடிய ஏதும் கிடையாது. அது {அந்தப் பாதை} கடக்கும் நாடு அறியப்படாததாகவும், கண்டுபிடிக்கப்படாததாகவும் இருக்கிறது. மேலும் அஃது அடர்த்தியான இருளில் மூழ்கியிருக்கிறது. ஐயோ, தேவையான செலவுக்கு ஆயத்தமாகாமல் நீ எவ்வாறு அவ்வழியில் செல்லப் போகிறாய்?(34) நீ அந்தச் சாலையில் செல்லும்போது, உன்னைப் பின்தொடர்ந்து எவரும் வரப் போவதில்லை. இம்மையிலிருந்து நீ மறுமைக்குச் செல்லும்போது, நீ செய்த நல்ல மற்றும் தீய செயல்கள் மட்டுமே உன்னைப் பின்தொடரப்போகின்றன.(35)

கல்வி, செயல்கள், (அக மற்றும் புறத்) தூய்மை, பெரும் ஞானம் {பேரறிவு} ஆகிய வழிமுறைகளின் மூலமே ஒருவன் பொருட்களின் பொருளைத் தேடுகிறான். பொருட்களில் முதன்மையானது அடையப்படும்போது, அவன் (மறுபிறப்பிலிருந்து) விடுபடுகிறான்.(36) மனித வசிப்பிடங்களுக்கு மத்தியில் ஒருவன் வாழ உணரும் விருப்பமானது கட்டும் கயிற்றைப் போன்றதாகும். நற்செயல்களைச் செய்வோர் அந்தக் கட்டை அறுப்பதில் வென்று, தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். தீச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் மட்டுமே அவற்றை அறுப்பதில் வெல்வதில்லை.(37) வாழ்வு (அல்லது உலகம்) எனும் ஆறு பயங்கரமானதாகும். மேனி அல்லது வடிவழகு அதன் கரைகளாக இருக்கிறது. மனம் அதன் ஓட்டத்தின் வேகமாக இருக்கிறது. தீண்டல் அதன் தீவாக இருக்கிறது. சுவை அதன் ஓட்டமாக இருக்கிறது. மணம் அதன் சகதியாக இருக்கிறது. ஒலி அதன் நீராக இருக்கிறது. அதில் சொர்க்கத்தை நோக்கி வழிவகுக்கும் குறிப்பிட்ட பகுதி பெரும் சிரமங்களைக் கொண்டதாகும். ஒருவன் அந்த ஆற்றைக் கடக்கும் படகாக உடல் இருக்கிறது. மன்னிக்கும் தன்மை {பொறுமை} அதைத் தூண்டும் படகுத்துடுப்பாக இருக்கிறது. வாய்மை அப்படகை நிலைபெறச் செய்யும் சரளையாக {அடிச்சுமையாக} இருக்கிறது. அறம்சார்ந்த நடைமுறையானது, கடினமான நீர்நிலைகளில் அந்தப் படகை இழுக்கப் பயன்படும் கொடிக்கம்பத்தை இணைக்கும் இழையாக இருக்கிறது. ஈகை அல்லது தானம், அந்தப் படகைத் தூண்டும் காற்றாக இருக்கிறது. நிலையான வேகத்துடன் கூடிய அந்தப் படகைக் கொண்டுதான் ஒருவன் வாழ்வெனும் ஆற்றைக் கடக்க வேண்டும்.(38,39) அறம் மற்றும் மறம், வாய்மை மற்றும் பொய்மை ஆகிய இரண்டையும் கைவிடுவாயாக. வாய்மை மற்றும் பொய்மையைக் கைவிட்ட பிறகு, இவற்றைக் கைவிடச் செய்வதையும் கைவிடுவாயாக.(40)

நோக்கங்கள் அனைத்தையும் கைவிடுவதன் மூலம் நீ அறத்தைக் கைவிடுவாயாக; ஆசைகள் அனைத்தையும் கைவிடுவதன் மூலம் நீ பாவத்தையும் கைவிடுவாயாக. புத்தியின் துணையோடு நீ வாய்மையையும், பொய்மையையும் கைவிடுவாயாக; இறுதியாக, உயர்ந்த தத்துவத்தின் (பரமாத்மாவின்) ஞானத்தின் மூலம் அந்தப் புத்தியையும் கைவிடுவாயாக.(41) எலும்புகளைத் தூண்களாகக் கொண்டதும்; நரம்புகளைக் கட்டும் கயிறுகளாகவும், இழைகளாகவும் கொண்டதும்; சதை மற்றும் குருதியை புறப் பூச்சாகக் கொண்டதும்; தோலைப் புறக் கூடாகக் கொண்டதும்; மலமும் சிறுநீரும் நிறைந்தும், அதனால் கெட்ட மணம் கொண்டதும்; முதுமை மற்றும் துன்பம் என்ற தாக்குதல்களுக்கு உட்பட்டதும்; நோயின் இருக்கையாகவும், துன்பத்தில் பலவீனமடைவதாகவும் இருப்பதும்; ரஜஸ் குணத்தின் ஆதிக்கத்தைப் பெற்றதும்; நிலையற்றதும், உள்வசிக்கும் உயிரினத்தின் (தற்காலிக) வசிப்பிடமாகத் தொண்டுபுரிவதுமான இவ்வுடலை நீ கைவிடுவாயாக.(42,43) பருப்பொருளாலான இந்த மொத்த அண்டமும், மஹத் அல்லது புத்தி என்றழைக்கப்படுவதும், (ஐந்து) பெரும்பூதங்களால் ஆனவையாகும். பர செயல்பாட்டின் மூலமே அது மஹத் என்றழைக்கப்படுகிறது.(44) ஐம்புலன்களும், தமஸ், சத்வம் மற்றும் ரஜஸ் என்ற முக்குணங்களும் (ஏற்கனவே சொல்லப்பட்டவற்றுடன் சேர்த்து) பதினேழாகிறது[1].(45)புலப்படாதவை {அவ்யக்தம்} என்ற பெயரில் அறியப்படும் இந்தப்பதினேழும், புலப்படுபவை {வியக்தம்} என்று அழைக்கப்படும், ஐந்து புலன் நுகர் பொருட்களும் (வடிவம், சுவை, ஒலி, தீண்டல் மற்றும் மணம்), நனவுநிலை மற்றும் புத்தி ஆகியவையும் சேர்ந்து நன்கறியப்பட்ட பட்டியலான இருபத்து நான்காக {24} அமைகிறது[2].(46) இந்த இருபத்து நான்கு உடைமைகளையும் கொள்ளும்போது ஒருவன் ஜீவன் (புமான்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்.(47) (அறம், பொருள் மற்றும் இன்பம் என்ற) முத்தொகை, மகிழ்ச்சி, கவலை, வாழ்வு, மரணம் ஆகியவற்றின் உண்மையையும், அவற்றின் விபரங்களையும் அறிந்தவன், வளர்ச்சியையும், சிதைவையும் அறிந்தவன் எனச் சொல்லப்படுகிறான். அறிவுக்கு எட்டும் பொருட்கள் எதுவும் ஒன்றன்பின் ஒன்றாகப் படிப்படியாக அறியப்பட வேண்டும்.(48) புலன்களால் உணரத்தக்க பொருட்கள் அனைத்தும் புலப்படுபவை {வ்யக்தம்} என்றழைக்கப்படுகின்றன. புலன்களைக் கடந்தவையும், குறியீடுகளின் மூலம் மட்டுமே உணரப்படுபவையுமான பொருட்கள் புலப்படாதவை {அவ்யக்தம்} என்று சொல்லப்படுகின்றன.(49) புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவன், இனிய மழையில் தாகம் கொண்ட காய்ந்த பயணியைப் போலப் பெரும் நிறைவை வெல்கிறான். புலன்களை அடக்கிய ஒருவன், தன் ஆன்மா அனைத்துப் பொருட்களையும் தழுவப் பரவுவதையும், அனைத்துப் பொருட்களும் தன் ஆன்மாவுக்குள் அடங்குவதையும் காண்கிறான்.(50)(இவ்வாறு) பரமனைத் தன் ஆன்மாவிலேயே காண்பவன், அல்லது அனைத்து நிலைகளிலும் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் (தன்ஆன்மாவிலேயே) எப்போதும் காணும் மனிதனிடம் உள்ளதும், ஞானத்தையே தன் வேராகக் கொண்டதுமான பலம் ஒருபோதும் தொலைந்து போவதில்லை[3].(51) பிழை மற்றும் மயக்கத்தில் உண்டாகும் அனைத்து வகைத் துண்பங்களையும் ஞானத்தின் துணையுடன் கடக்கும் ஒருவன், அனைத்து உயிரினங்களுடனான தொடர்பை அடைவதால் எந்தத் தீமையையும் ஒருபோதும் பற்றுவதில்லை[4].(52) புத்தி முழுமையாக வெளிப்படும் அத்தகைய மனிதன், உலகில் நீடித்திருக்கும் ஒழுக்க நடைமுறையில் ஒருபோதும் களங்கம் காண்பதில்லை. விடுதலையை {முக்தியை} அறிந்த ஒருவன், பரமாத்மா தொடக்கமும் முடிவுமற்றது; அனைத்து உயிரினங்களாகவும் பிறப்பெடுக்கிறது; ஜீவாத்மாவில் (சாட்சியாக) அது வசிக்கிறது; அது செயலற்றதாவும், வடிவற்றதாகவும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். தவறான தன் செயல்களின் விளைவால் துன்பத்தைச் சந்திக்கும் மனிதன் மட்டுமே,(53,54) அந்தத் துன்பத்தைக் களையும் நோக்கத்திற்காக எண்ணற்ற உயிரினங்களைக் கொல்கிறான்[5]அத்தகைய வேள்விகளைச் செய்யும் விளைவால், நிகழ்த்துபவர்கள் {அந்த வேள்வியைச் செய்பவர்கள்} மறுபிறப்பையும், அனைத்துப் புறத்திலும் எண்ணற்ற செயல்களைச் செய்யும் தேவையையும் அடைகிறார்கள்.(55)பிழையால் குருடாகும் ஒரு மனிதன் {மோகமடைந்தவன்}, உண்மையில் துன்பத்தின் ஊற்றுக்கண்ணான அதையே இன்பநிலையென்று கருதி, முறையற்ற உணவை உண்ணும் ஒரு நோயாளியைப் போலவே, தொடர்ந்து துன்பத்தை அடைகிறான்.(56) அத்தகைய மனிதன் கடையப்படும் எந்தப் பொருளையும் போலவே, தன் செயல்களால் ஒடுக்கப்பட்டுக் கடையப்படுகிறான். தன் செயல்களால் கட்டப்பட்ட அவன் மறுபிறப்பை அடைகிறான். அவனது செயல்களின் இயல்பே அவனது வாழ்வின் வகையைத் தீர்மானிக்கிறது.(57) பல்வேறு வகைக் கொடுமைகளை அனுபவிக்கும் அவன், நிற்காமல் சுழலும் சக்கரத்தைப் போலவே மீண்டும் மீண்டும் மறுபிறப்பெனும் வளையத்தில் பயணிக்கிறான். எனினும், நீ உன் கட்டுகள் அனைத்தையும் அறுத்திருக்கிறாய். நீ செயல்கள் அனைத்தையும் தவிர்க்கிறாய்.(58) அனைத்தையும் அறிந்தவனும், அனைத்துப் பொருட்களிலும் திறம்பெற்றவனுமான நீ வெற்றியையடைந்து, இருப்பிலுள்ள பொருட்கள் அனைத்திலும் இருந்து விடுபடுவாயாக. புலனடக்கம், தவசக்தி ஆகியவற்றின் மூலம் (பழங்காலத்தில்) பல மனிதர்கள் செயற்கட்டுகளை அறுத்து, உயர்ந்த வெற்றியையும், தடையில்லாத இன்பநிலையையும் அடைந்திருக்கிறார்கள்” என்றார் {நாரதர்}.(59)

விடுதலை உத்தி! – சாந்திபர்வம் பகுதி – 331-உலக இயல்பையும் முக்திக்கான உத்திகளையும் சுகருக்குச் சொன்ன நாரதர்…

நாரதர் {சுகரிடம்}, “அருளப்பட்டவையும், அமைதி குறித்தவையும், துயரை விலக்குபவையும், மகிழ்ச்சியை உண்டாக்குபவையுமான சாத்திரங்களைக் கேட்பதன் மூலம், ஒருவன் தூய புத்தியை அடைந்து, அதன் மூலம் உயர்ந்த இன்பநிலையை அடைகிறான்.(1) கவலைக்கான ஆயிரம் காரணங்களும், அச்சத்திற்கான நூறு காரணங்களும் புத்தியற்றவனையே நாளுக்குநாள் பீடிக்கின்றனவேயன்றி ஞானியையோ, கல்விமானையோ அல்ல.(2) எனவே, உன் துன்பங்களை விலக்கும் நோக்கில் நான் சொல்லப்போகும் சில பழங்கதைகளைக் கேட்பாயாக. ஒருவனால் தன் புத்தியை அடக்க முடியுமென்றால் {புத்தியானது அவனது வசத்திலிருக்குமென்றால்}, அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான்.(3) விரும்பத்தகாததை அடைவது மற்றும் ஏற்புடையதில் இருந்து விலகுவது ஆகியவற்றின் மூலம் மட்டுமே சிறு மதி கொண்ட மனிதர்கள் அனைத்து வகை மனதுக்கங்களையும் அடைகிறார்கள்.(4) காரியங்கள் கடந்து சென்ற பிறகு ஒருவன் அவற்றின் தகுதிகளை நினைத்து வருந்தக்கூடாது. அத்தகைய கடந்த காரியங்களைப் பற்றுடன் நினைப்பவனால் ஒருபோதும் விடுதலையை {முக்தியை} அடைய முடியாது.(5)

தான் பற்றுக் கொள்ளத் தொடங்கும் பொருட்களில் ஒருவன் எப்போதும் களங்கங்களைக் காண வேண்டும். அவன் அத்தகைய பொருட்களை மிகத் தீமை நிறைந்தவையாக எப்போதும் கருத வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் விரைவில் அவற்றிலிருந்து விடுதலையடைவான்.(6) கடந்ததை நினைத்து வருந்தும் மனிதன் செல்வத்தையோ, அறத்தகுதியையோ, புகழையோ ஈட்டத் தவறுகிறான். இருப்பில் இல்லாததை ஒருபோதும் அடையமுடியாது. அத்தகைய பொருட்கள் கடந்து சென்றால், (ஒருவன் எவ்வளவுதான் அவற்றுக்காக வருத்தப்பட்டாலும்) மீண்டும் அவை திரும்பாது.(7) உயிரினங்கள் உலகம் சார்ந்த பொருட்களைச் சில வேளைகளில் அடைகின்றன, சில வேளைகளில் இழக்கின்றன. இவ்வுலகில் தனக்கு நேரும் அனைத்து நிகழ்வுகளிலும் எந்த மனிதனும் வருத்தமடைவதில்லை.(8) கடந்து சென்ற ஒன்றின் இறப்பிலோ, இழப்பிலோ ஒருவன் கொள்ளும் துக்கத்திற்காகத் துக்கத்தை மட்டுமே அடைகிறான். ஒரு துன்பத்திற்குப் பதிலாக அவன் இரு துன்பங்களை அடைகிறான்.(9) உலகில் வாழ்வு மற்றும் மரணம் என்ற நடைமுறையைத் தங்கள் புத்தியின் துணையுடன் கண்ணீர் சிந்தாமல் காணும் மனிதர்கள் சரியாகப் பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய மனிதர்கள் (என்ன நடந்தாலும்) ஒருபோதும் கண்ணீர் சிந்துவதில்லை.(10)

ஒருவன் தன்னால் முடிந்த சிறந்த முயற்சிகளைச் செய்தாலும் தவிர்க்க முடியாததும், உடல், அல்லது மனத் துன்பத்தை உண்டாக்கவல்லதுமான அத்தகைய பேரிடரேதும் நேரும்போது, ஒருவன் அதைக்குறித்துத் துன்பத்துடன் சிந்திப்பதை நிறுத்த வேண்டும்.(11) துன்பத்திற்கான மருந்து இதுவே, அதைக் குறித்துச் சிந்திப்பதல்ல. அதை நினைப்பதால் ஒருவனால் ஒருபோதும் அதை அகற்ற முடியாது; மறுபுறம், துன்பத்தை நினைப்பதால் அஃது அதிகரிக்கவே செய்கிறது.(12) மனத்துயரங்கள் ஞானத்தால் கொல்லப்பட வேண்டும்; அதே வேளையில் உடல் துயரங்கள் மருந்துகளால் விலக்கப்பட வேண்டும். இதுவே ஞானத்தின் சக்தியாகும். இத்தகைய காரியங்களில் ஒருவன் புத்தி குறைந்த மனிதர்களைப் போல நடந்து கொள்ளக்கூடாது.(13) இளமை, அழகு, உயிர், செல்வம், உடல்நலம், அன்புக்குரியோரின் தோழமை ஆகிய இவையாவும் நிலையற்றவையே. ஞானம் கொண்ட ஒருவன் இவற்றில் ஒருபோதும் ஆசை கொள்ளக்கூடாது. மொத்தமாக ஒரு சமூகத்துக்கே தொடர்புடைய துன்பம் நிறைந்த காரியங்களில் ஒருவன் தனியாக அழக்கூடாது. அவ்வாறு ஈடபடாமல், துயரம் வரும்போது அதைத் தவிர்க்கமுனையும் ஒருவன், தீர்வுக்கான வாய்ப்பைக் கண்டவுடன் அதைச் செய்ய வேண்டும்.(15)

இந்த வாழ்வில் மகிழ்ச்சியின் அளவைவிடத் துன்பம் மிகப் பெரியது என்பதில் ஐயமில்லை. மனிதர்கள் அனைவரும் புலன் நுகர் பொருட்களில் பற்றை வெளிப்படுத்தி, மரணத்தை ஏற்பில்லாததாகக் கருதுகிறார்கள் என்பதிலும் ஐயமில்லை.(16) எந்த மனிதன் இன்பதுன்பங்கள் இரண்டையும் கைவிடுகிறானோ, அவன் பிரம்மத்தை அடைந்தவனாகச் சொல்லப்படுகிறான். அத்தகைய மனிதன் இவ்வுலகில் இருந்து செல்லும்போது, அவனது காரியத்தில் ஞானிகள் ஒருபோதும் துன்பத்தில் ஈடுபடுவதில்லை.(17) செல்வத்தைச் செலவழிப்பதில் துன்பம் இருக்கிறது. அதைப் பாதுகாப்பதிலும் துன்பமிருக்கிறது. எனவே, ஒருவன் தனது செல்வம் அழிவடையும்போது எத்துன்பத்திலும் ஈடுபடக்கூடாது.(18) புத்தி குறைந்த மனிதர்கள் பல்வேறு தரத்திலான செல்வத்தை அடைந்து, நிறைவை வெல்லத் தவறி இறுதியில் துன்பத்தில் அழிவடைகிறார்கள். எனினும் ஞானிகளோ எப்போதும் நிறைவுடன் இருக்கிறார்கள்.(19) சேர்க்கைகள் அனைத்தும் இறுதியில் கலையவே {பிரியவே} போகின்றன. உயர்ந்த பொருட்கள் அனைத்தும் வீழவும், தாழ்வடையவும் விதிக்கப்பட்டிருக்கின்றன. சேர்க்கைகள் நிச்சயம் பிரிவிலேயே முடியப்போகின்றன, வாழ்வும் நிச்சயம் மரணத்திலேயே முடிவடையும்.(20)

தாகம் தணிவடையாது {ஆசைக்கு முடிவில்லை}. மனநிறைவே உயர்ந்த மகிழ்ச்சியாகும். எனவே, ஞானிகள் மனநிறைவையே மிக மதிப்புமிக்கச் செல்வமாகக் கருதுகிறார்கள்.(21) ஒருவனுக்காக ஒதுக்கப்பட்ட வாழ்வுக்காலம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது {கடந்து செல்கிறது}. அஃது ஒருக்கணம் கூடத் தன் பாதையில் நிற்பதில்லை. ஒருவனுடைய உடல் நீடிக்க முடியாதபோது, அவன் (இவ்வுலகத்தில்) வேறு எந்தப் பொருளை நீடிக்கப்போவதாகக் கருத முடியும்?(22) உயிரினங்கள் அனைத்தின் இயல்பையும் சிந்தித்து, அது மனத்தால் புரிந்து கொள்ளப்பட முடியாதது எனத் தீர்மானிக்கும் மனிதர்கள், தங்கள் கவனத்தை உயர்ந்த பாதையை நோக்கித் திருப்பி, அதில் நல்ல முன்னேற்றத்தை அடைபவர்கள் துன்பத்தில் ஈடுபடவேண்டியதில்லை[1].(23) தன் இரையை அபகரித்து ஓடும் புலியைப் போலக் காலனானவன், மனிதன் ஆசை மற்றும் அனுபவிப்பதில் தணிவடையாமல் அத்தகைய (லாபமில்லா) தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே அவனை அபகரித்துச் செல்கிறான்.(24) ஒருவன் எப்போதும் தன்னைக் கவலையில் இருந்து விடுவித்துக் கொள்ள முனைய வேண்டும். உற்சாகச் செயல்பாடுகளைத் தொடங்குவதன் மூலம் ஒருவன் கவலையை விலக்க முனைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட கவலையில் இருந்து விடுபட்டதும், மேலும் கவலையில் ஈடுபடாமல், களங்கமான நடத்தைகள் அனைத்தையும் தவிர்ப்பதன் மூலம் கவலையைத் தொலைவில் வைக்கும் வழியில் ஒருவன் செயல்பட வேண்டும்[2].(25)ஒலி, தீண்டல், வடிவம், மணம், சுவை ஆகியவற்றை அனுபவிப்பதில் செல்வந்தனும், வறியவனும் ஒரே வகையிலேயே எதையும் காண்பதில்லை[3].(26) சேர்க்கைக்கு முன்பு உயிரினங்கள் ஒருபோதும் துன்பமடைவதில்லை. எனவே, தன் உண்மை இயல்பில் இருந்து வீழாத ஒருவன், அந்தச் சேர்க்கை முடிவடையும்போது ஒருபோதும் துன்பத்தில் ஈடுபடுவதில்லை[4].(27) ஒருவன் தனது பாலுறவு பசியையும், வயிற்றின் பசியையும் பொறுமையின் துணை மூலம் அடக்க வேண்டும்[5]. அவன் தனது கைகளையும், கால்களையும் கண்ணின் துணையால் பாதுகாக்க வேண்டும். கண்களும், காதுகளும், பிற புலன்களும் அவனது மனத்தால் பாதுகாக்கப்பட வேண்டும். மனமும், வாக்கும் ஞானத்தின் துணையால் ஆளப்பட வேண்டும்.(28) அறிந்த மனிதர்களிடமும், அறியாதவர்களிடம் போலவே அன்பு மற்றும் பாசத்தை அவன் கைவிட்டு, பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அத்தகைய மனிதனே ஞானி என்று சொல்லப்படுகிறான், அவனே நிச்சயம் மகிழ்ச்சியைக் காண்கிறான்.(29) எந்த மனிதன் தன் ஆன்மாவிலேயே நிறைவடைகிறானோ[6], எவன் யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, எவன் தன்னை {ஆன்மாவைத்} தவிர வேறு எதையும் சார்ந்திருக்கவில்லையோ, எவன் தன்னை {ஆன்மாவைத்} தவிர வேறு எந்தத் துணையுமில்லாமல் நடந்து கொள்கிறானோ அவனே இன்பநிலையை அடைவதில் வெல்கிறான் {சுகம் அடைகிறான்}” என்றார் {நாரதர்}.(30)

கயிலாயம் சென்ற சுகர்! – சாந்திபர்வம் பகுதி – 332-சுகருக்கு உலக இயல்புகளையும், மோக்ஷதர்மத்தையும் தொடர்ந்து கற்பித்தது; மோக்ஷமடைய விரும்பிய சுகர்; வியாசரிடம் விடைபெற்றுக் கொண்டு கயிலாயம் சென்ற சுகர்…

நாரதர் {சுகரிடம்}, “இன்பதுன்பங்களின் மாற்றங்கள் தோன்றும்போது, அல்லது மறையும்போது, அந்த நிலைமாற்றங்கள் ஞானத்தின் மூலமோ, கொள்கைகள் அல்லது முயற்சியின் மூலமோ தவிர்க்கமுடியாதவையாக இருக்கின்றன.(1) ஒருவன் தன் உண்மை இயல்பில் இருந்து வீழ்ந்துவிட அனுமதியாமல், அவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தன்னால் இயன்ற சிறந்த முயற்சியைச் செய்ய வேண்டும். அத்தகைய கவனம் மற்றும் முயற்சியைக் கொள்ளும் ஒருவன் ஒருபோதும் சோர்வடைய வேண்டியதில்லை. தன்னை {சுயத்தை} அன்புக்குரிய ஏதோ ஒன்றைப் போலக் கருதும் அவன், முதுமை, மரணம் மற்றும் நோயில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(2) மன மற்றும் உடல் நோய்கள், பலமிக்க வில்லாளியின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கூர்முனைக் கணைகளைப் போல உடலைப் பீடிக்கும்.(3) தாகத்தால் கொடுமைக்குள்ளாவதும், வேதனையால் கலக்கமடைவதும், முற்றிலும் ஆதரவற்றதும், நீண்ட வாழ்நாளை விரும்புவதுமான ஒரு மனிதனின் உடல் அழிவை நோக்கியே இழுக்கப்படுகிறது.(4)

பகல்களும், இரவுகளும், தங்கள் ஓட்டத்தில் மனிதர்கள் அனைவரின் வாழ்நாள் காலங்களைச் சுமந்தபடியே இடையறாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆறுகளின் ஓட்டத்தைப் போல அவை திரும்பிப் பாறாமல் இடையறாமல் பாய்ந்து கொண்டிருக்கின்றன.(5) வளர் பிறை நாட்களும், தேய்பிறை நாட்களும் இப்பணியில் ஒரு கணமும் நிற்காமல் மனித உயிரினங்களைத் தொடர்ந்து இடையறாமல் வீணடித்து வருகின்றன.(6) நாளுக்கு நாள் எழுவதும், மறைவதுமாக இருப்பவனும், சிதைவற்றவனுமான சூரியன், மனிதர்களின் இன்ப துன்பங்களைத் தொடர்ந்து சமைத்துக் கொண்டிருக்கிறான்.(7) விதியைச் சார்ந்திருப்பவையும், மனிதனால் எதிர்பார்க்கப்படாதவையுமான அவனது நல்ல மற்றும் தீய நிகழ்வுகளை இரவுகள் தங்களுடன் எடுத்துக் கொண்டு இடையறாமல் சென்று கொண்டிருக்கின்றன.(8)

மனிதச் செயல்களின் கனிகள், பிற சூழ்நிலைகளைச் சாராமல் இருந்தால், அவன் தான் விரும்பிய எந்தப் பொருளையும் அடைவான்.(9) புலன்களை அடக்கியவர்களும், புத்திசாலிகளும், நுண்ணறிவு கொண்டவர்களுமான மனிதர்களும் கூட, செயல்களற்றவர்களாக இருந்தால், எந்தக் கனிகளையும் ஈட்டுவதில் அவர்கள் ஒருபோதும் வெல்வதில்லை[1].(10) புத்தியற்றவர்களாகவும், எந்தவகைச் சாதனைகளும் இல்லாதவர்களும், மனிதர்களில் இழிந்தவர்களுமான மற்றவர்கள், வெற்றியை எதிர்பார்க்காதிருந்தாலும், தங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனிவதால் மகுடம் சூட்டப்படுகின்றனர்.(11) அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்ய எப்போதும் ஆயத்தமாக இருப்பவனும், உலகமனைத்தையும் வஞ்சிப்பதில் ஈடுபடுபவனுமான வேறொருவன் மகிழ்ச்சியில் புரள்வதும் காணப்படுகிறது.(12)சோம்பலாக அமர்ந்திருக்கும் வேறொருவன் பெருஞ்செழிப்பை அடைகிறான்; அதேவேளையில், மெய்யுறுதியுடன் முயற்சி செய்பவன் கிட்டத்தட்ட அடையும் தருவாயில் இருக்கும் விரும்பத்தகுந்த கனிகளைத் தவறவிடுவதும் காணப்படுகிறது.(13) நீ இதை மனிதனின் களங்கங்களில் ஒன்றாக ஏற்பாயாக. ஒருவரைப் பார்ப்பதன் மூலம் ஒருவனின் இயல்பில் உண்டாகும் உயிர் வித்தானது, மற்றொருவருக்குச் செல்கிறது.(14) அது கருவறைக்குச் செல்லும்போது, சில வேளைகளில் கருவை உண்டாக்கிறது, சில வேளைகளில் தவறுகிறது. பாலுறவு கலவி பொய்க்கும்போது, ஒரு கனியையும் உண்டாக்காமல் பெரும் மலர்கள் பலவற்றை மலரச் செய்யும் ஒரு மாமரத்திற்கு அஃது ஒப்பாகிறது[2].(15) வாரிசைப் பெற விரும்பும் சில மனிதர்களைப் பொறுத்தவரையில், தங்கள் நோக்கம் கனிவதற்காக (பல்வேறு தேவர்களை வழிபடுவதன் மூலம்) இதயப்பூர்வமாக முயன்றும் கருவறையில் கருவை உண்டாக்க அவர்கள் தவறுகிறார்கள்.(16)கடும் நஞ்சுமிக்கப் பாம்பைக் கண்டு அஞ்சும் ஒருவனைப் போலக் கரு உண்டாவதை அஞ்சும் வேறொருவன், நீண்ட வாழ்வைக் கொண்டவனும், தான் கடந்த வாழ்நிலைகளில் இருந்து தானே திரும்பி வந்ததைப் போலத் தெரிபவனுமான மகன் தனக்குப் பிறப்பதை அவன் காண்கிறான்.(17) வாரிசுக்கான ஆவலும், ஏக்கமும் கொண்டவர்களும், அக்காரியத்தினால் உற்சாகமற்றிருப்பவர்களுமான பல மனிதர்கள், பல தேவர்களுக்கு வேள்வி செய்து, கடும் தவங்களை மேற்கொண்டு இறுதியாகத் தங்கள் குலத்திலேயே இழிந்தவர்களாகத் தங்களை நிரூபித்துக் கொள்ளும் பிள்ளைகளைப் பத்து நீண்ட மாதங்கள் முறையாகச் சுமந்து பெறுகின்றனர்.(18) அத்தகைய சடங்குகள் மற்றும் நியமங்களுடைய அறத்தின் மூலம் பெறப்பட்ட வேறு சிலர், தங்கள் தந்தைமாரால் ஈட்டப்பட்டு, சேமிக்கப்பட்ட செல்வத்தையும், தானியங்களையும், அனுபவிக்கத்தகுந்த பல்வேறு ஆதாரங்களையும் உடனே அடைகின்றனர். பாலுறவு செயலில் எதிர் பாலினங்களைச் சேர்ந்த இருவர் ஒருவரோடொருவர் கலவி புரியும்போது, தாயைப் பீடிக்கும் பேரிடரைப் போலக் கருவறையில் கரு உண்டாகிறது.(20)

உயிர் மூச்சுகள் நின்ற உடனேயே, திரள் உடல் அழிவடைந்தாலும், சதை மற்றும் கபத்தால் உண்டான அந்தத் திரள் உடலால் செய்யப்பட்ட செயல்கள் அழிவடையாமல் உடல்படைத்த உயிரினம் கொண்டிருக்கும் பிற உடல் வடிவங்களைப் பீடிக்கிறது[3].(21) உடல் அழிந்த பிறகு, அழிவடைந்த அந்த உடலைப் போன்றே அழிவடையக்கூடிய மற்றொரு உடல், பயணிகளை ஒன்றிலிருந்து ஒன்றிற்கு மாற்ற மற்றொன்றிற்குச் செல்லும் படகைப் போலவே, எரிக்கப்பட்டதும் அழிவையடைந்ததுமான அந்த உயிரினத்திற்காக (அதனிடம் செல்ல) ஆயத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது.(22) கலவிச் செயலின் விளைவால், அசைவற்றதான ஒரு துளி உயிர்வித்தானது, கருவறையில் விடப்படுகிறது. யாருடைய, அல்லது எதன் கவனிப்பால் அந்தக் கரு உயிருடன் வைக்கப்படுகிது என்பதை நான் உன்னிடம் கேட்கிறேன்.(23) உண்ணும் உணவு உடலின் எந்தப் பகுதிக்குள் செல்கிறதோ, எங்கே அது செரிக்கப்படுகிறதோ, அந்த இடத்திலேயே இந்தக் கரு வசித்தாலும் அங்கே அது செரிக்கப்படாமல் இருக்கிறது.(24)கருவறையில், சிறுநீருக்கும் மலத்திற்கும் மத்தியில் ஒருவனுடைய பயணம் இயற்கையால் ஒழுங்குமுறை செய்யப்பட்டுள்ளது. அங்கே வசிக்கும் காரியத்தில், அல்லது அங்கிருந்து தப்பிக்கும் காரியத்தில் பிறக்கப் போகும் உயிரினம் சுதந்திரம் கொண்டதல்ல. உண்மையில், அது முற்றிலும் ஆதரவற்ற நிலையிலேயே இருக்கிறது.(25) சில கருக்கள் (வளர்ச்சிநிலை அடையாமலேயே) கருவறையில் இருந்து விழுகின்றன. சில உயிரோடு வெளியே வருகின்றன (தொடர்ந்து வாழ்கின்றன). அதே வேளையில் சில, (தங்கள் செயல்களின் இயல்பின் மூலம்) தங்களுக்காக வேறு உடல்கள் ஆயத்தமாக இருப்பதன் விளைவால் வாழ்வை இழந்து அழிவைச் சந்திக்கின்றன.(26) எந்த மனிதன் பாலுறவுக் கலவிச் செயலில் உயிர்நீரை உட்செலுத்துகிறானோ, அவன் ஒரு மகனையோ, மகளையோ அடைகிறான். அவ்வாறு அடையப்படும் வாரிசு, காலம் நேரும்போது, அதே போன்ற கலவியில் ஈடுபடுகிறது.(27) ஒரு மனிதனின் வாழ்வுக்கு ஒதுக்கப்பட்ட காலம் நெருங்கும்போது, அவனது உடலில் உள்ள ஐம்பூதங்களும், ஏழாவது மற்றும் ஒன்பதாவது நிலைகளை அடைந்து, பிறகு இல்லாமல் போகிறது. எனினும், மனிதன் எந்த மாற்றத்தையும் அடைவதில்லை[4].(28)வேடர்களால் தாக்கப்படும் சிறு விலங்குகளைப் போல நோய்களால் மனிதர்கள் பீடிக்கப்படும்போது, அவர்கள் எழுவதற்கும், அசைவதற்குமான தங்கள் சக்த்தியை அப்போது இழக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(29) நோய்களின் மூலம் மனிதர்கள் பீடிக்கப்பட்டால், மருத்துவர்கள் சிறந்த முயற்சிகளைச் செய்தாலும் தங்கள் துன்பத்தைத் தணிக்க முடியவில்லையெனினும் அவர்கள் தங்கள் திரண்ட செல்வத்தைச் செலவழிக்கவே விரும்புகிறார்கள்.(30) நன்கு திறம்பெற்றவர்களும், தங்கள் சாத்திரங்களை நன்கு கற்றவர்களும், சிறந்த மருந்துகளால் நன்கு ஆயத்தமடைந்தவர்களுமான மருத்துவர்களேகூட, வேடர்களால் தாக்கப்படும் விலங்குகளைப் போல நோய்களால் பீடிக்கப்படுகின்றனர்.(31) வலுவூட்டும் பானங்களையும், பல்வேறு வகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட நெய்யையும் பருகும் மனிதர்களும் கூடப் பலமான யானைகளால் ஒடிந்த மரங்களைப் போல முதுமையால் உடைந்து போவது காணப்படுகிறது.(32)

விலங்குகள், பறவைகள், இரைதேடும் விலங்குகள் ஆகியவையும், வறியவர்கள் ஆகியோரும் பிணியால் பீடிக்கப்படும்போது, மருந்துகளால் அவர்களுக்குச் சிகிச்சையளிப்பவன் எவன்? உண்மையில் அவர்கள் நோய்வாய்ப்படுவது காணப்படுவதில்லை.(33) சிறு விலங்குகளைத் தாக்கும் பெரும் விலங்குகளைப் போலவே பிணிகளும் கடுஞ்சக்தி கொண்டவர்களும், வெல்லப்பட முடியாத ஆற்றலைகள் கொண்டவர்களையும் பீடிப்பது காணப்படுகிறது.(34) சக்தியிழந்த மனிதர்கள் அனைவரும் துன்பத்தைக் குறிக்கும் ஓலமிட்டு, பிழையிலும், துன்பத்திலும் மூழ்கி, வீசப்பட்ட கடும் ஓடையிலேயே சுமந்து செல்லப்படுவதும் காணப்படுகிறது.(35) உடல் கொண்ட உயிரினங்கள், இயற்கையை வெல்ல முனையும்போது, செல்வம், அரசு சக்தி அல்லது கடுந்தவங்களின் துணையுடன் அதை வெல்ல இயலாமல் போகிறது.(36)

மனிதர்கள் செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டால், அப்போது மனிதர்கள் ஒருபோதும் சாக மாட்டாரகள், ஒருபோதும் முதுமைக்கு ஆட்பட மாட்டார்கள், ஒருபோதும் ஏற்புடைய எதையும் அடைய மாட்டார்கள், இறுதியாகத் தங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனிந்து மகுடம் சூட்டப்படுவார்கள்.(37) மனிதர்கள் அனைவரும் தங்கள் நிலையில் படிப்படியாக மேன்மையடையவே விரும்புகிறார்கள். இந்த விருப்பத்தை நிறைவு செய்யவே அவர்கள் தங்கள் சிறந்த சக்தியால் முயற்சிக்கிறார்கள். எனினும் விளைவானது அவர்களது விருப்பத்திற்கு ஏற்புடையதாக இருப்பதில்லை.(38) முற்றிலும் விழிப்புணர்வுடன் இருப்பவர்களும், நேர்மையானவர்களும், துணிவுமிக்கவர்களும், ஆற்றல்மிக்கவர்களுமான மனிதர்களும் கூட, செழிப்பின் செருக்கிலும், மதுவிலும் போதையுண்ட மனிதர்களைத் துதிப்பது காணப்படுகிறது.(39) இடர்களைக் கவனிக்குமுன்பே அவை காணாமல் போகும் சில மனிதர்களும் காணப்படுகிறார்கள். எந்தச் செல்வமும் இல்லாதிருந்தாலும் அனைத்து வகைத் துயரங்களில் இருந்து விடுபட்ட வேறு சிலரும் காணப்படுகிறார்கள்.(40)

செயல்களின் ஒன்றுதலில் உள்ள கனிகளைப் பொறுத்தவரையில் பேரமைதியே காணப்படுகிறது. சிலர் வாகனங்களைத் தங்கள் தோள்களில் சுமப்பதும், சிலர் அந்த வாகனங்களைச் செலுத்துவதும் காணப்படுகிறது.(41) மனிதர்கள் அனைவரும் செழிப்பையும், செல்வாக்கையும் விரும்புகிறார்கள். சிலர் மட்டுமே தேர்களை (யானைகளையும், குதிரைகளையும்) தங்கள் உடைமைகளாகக் கொண்டிருக்கிறார்கள். முதல் மனைவி இறந்து, வேறு மனைவியை அடையத் தவறுபவர்கள் சிலர் இருக்கிறார்கள்; அதே வேளையில் நூற்றுக்கணக்கான மனைவிகளைக் கொண்ட பிறரும் இருக்கிறார்கள்.(42) துன்பமும் இன்பமும் அருகருகே நீடிக்கும் இரு பொருட்களாகும். மனிதர்கள் இன்பத்தையோ, துன்பத்தையோ அடைகிறார்கள். இந்த ஆச்சரியத்தைப் பார். எனினும், அத்தகைய காட்சியின் பிழையால் நீ மயக்கமடையாதே.(43) அறம் மற்றும் மறம் ஆகிய இரண்டையும் கைவிடுவாயாக. வாய்மையையும், பொய்மையையும் கைவிடுவாயாக. வாய்மை மற்றும் பொய்மை ஆகிய இரண்டையும் கைவிட்ட பிறகு, எதனுடைய துணையின் மூலம் அவற்றைக் கைவிட்டாயோ, அதனையும் கைவிடுவாயாக.(44) ஓ! முனிவர்களில் சிறந்தவனே, எது பெருந்துன்பம் என்பதை நான் இப்போது உனக்குச் சொன்னேன். (மனிதர்களாக இருந்த) தேவர்கள் அனைவரும் சொர்க்கவாசிகளாவதற்காக, இத்தகைய அறிவுரைகளின் துணையுடன், இந்தப் பூமியை விட்டுச் செல்வதில் வெல்கிறார்கள்” என்றார் {நாரதர்}.(45)

பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், அமைதியான மனத்தைக் கொண்டவருமான சுகர், நாரதரின் வார்த்தைகளைக் கேட்டு, தாம் பெற்ற அறிவுரைகளின் வேறுபாட்டைக் குறித்துச் சிந்தித்தாலும், முடிவான எந்தத் தீர்மானத்தையும் அவரால் எட்ட முடியவில்லை.(46) பிள்ளைகள் மற்றும் மனைவிகளைப் பெறுவதால் பெருந்துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதையும்; அறிவியலையும், வேதங்களையும் அடைவதற்காக ஒருவன் பெரும் உழைப்பைச் செலுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே அவர் தமக்குள்ளேயே, “நித்தியமானதும், அனைத்து வகைத் துன்பத்தில் இருந்தும் விடுபட்டுமாக இருந்தாலும், பெருஞ்செழிப்பைக் கொண்டதுமான நிலை எது?” என்று கேட்டுக் கொண்டார்.(47) கடமைகள் அனைத்தின் தொடக்கத்தையும், முடிவையும் நன்கறிந்தவரான சுகர், தாம் செல்வதற்காக விதிக்கப்பட்ட நடைமுறையைக் குறித்து ஒருக்கணம் சிந்தித்து, பெரும் இன்பநிலை நிறைந்த உயர்ந்த கதியை அடையத் தீர்மானித்தார்.(48)

அவர் {சுகர்} தமக்குள்ளேயே, “பற்றுகள் அனைத்தையும் களைந்து, முற்றிலும் விடுப்பட்டவனாகி எவ்வாறு நான் சிறந்த கதியை அடையப் போகிறேன்? உண்மையில், பல்வேறு வகைப் பிறவிகளைக் கொண்ட இந்தப் பெருங்கடலுக்குத் திரும்பாமல் இருக்கக்கூடிய சிறந்த நிலையை நான் எவ்வாறு அடையப் போகிறேன்?(49) எங்கிருந்து திரும்பிவர வேண்டாமோ அந்த இருப்புநிலையை அடையவே நான் விரும்புகிறேன். அனைத்து வகைப் பற்றுகளையும் கைவிட்டு, மனத்தின் துணையால் சிந்தித்து ஒரு நிச்சயத் தன்மையை அடைந்து நான் அந்தக் கதியை அடையப் போகிறேன்.(50) ஆன்மா அமைதியாக இருக்கக்கூடியதும், முதுமைக்கோ, மாற்றத்திற்கோ ஆட்படாமல், நித்தியமாக வசிக்ககூடியதுமான அந்த நிலையை நான் அடையப் போகிறேன்.(51) எனினும், யோகத்தின் துணையில்லாமல் அந்த உயர்ந்த கதியை நிச்சயம் அடைய முடியாது. முற்றான ஞான நிலை மற்றும் தெளிவு நிலையை அடைந்த ஒருவன் ஒருபோதும் செயல்களின் மூலம் இழிந்த பற்றுகளை அடைய முயல மாட்டான்.(52)

எனவே, நான் யோகம் பயின்று, என் தற்போதைய இருப்பிடமான இவ்வுடலைக் கைவிட்டு, காற்றாக மாறி, சூரியனால் பிரதிபலிக்கப்படும் பிரகாசத் திரளுக்குள் நுழையப் போகிறேன்.(53) ஜீவன் அந்தப் பிரகாசத் திரளுக்குள் நுழையும்போது, தேவர்களுடன் கூடிய சோமனைப் போல அவன் தகுதி {புண்ணியம்} தீர்ந்தவனாக, பூமியில் வீழ்ந்து, மீண்டும் போதிய தகுதியை அடைந்து மீண்டும் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.(54) சந்திரன் தேய்ந்து மீண்டும் வளர்வது காணப்படுகிறது. மீண்டும் மீண்டும் நேரும் இந்தத் தேய்தல் மற்றும் வளர்தலைக் காணும் நான் இத்தகைய மாறுபாடுகளைக் கொண்ட இருப்பின் வடிவத்தைக் கொள்ள விரும்பவில்லை.(55) சூரியன் தனது கடுங்கதிர்களால் உலகங்கள் அனைத்திற்கும் வெப்பமூட்டுகிறான். அவனது வட்டில் எந்தவொரு ஒளி குறைவையும் அடைவதில்லை. மாறாமல் நீடிக்கும் அவன், அனைத்துப் பொருட்களின் இருந்தும் சக்தியை உறிஞ்சுகிறான். எனவே நான் சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட சூரியனுக்குச் செல்ல விரும்புகிறேன்[5].(56)அனைவராலும் வெல்லப்படமுடியாதவனாக, என் உள் ஆன்மாவில் உள்ள அச்சமனைத்தில் இருந்தும் விடுபட்டவனாக, இந்த என் உடலைக் கைவிட்டவனாக நான் அங்கே சூரியலோகத்தில் வாழப் போகிறேன்.(57) பொறுத்துக் கொள்ளமுடியாத சக்தியைக் கொண்ட சூரியனுக்குள் நான் பெரும் முனிவர்களுடன் சேர்ந்து நுழையப் போகிறேன். அனைத்து உயிரினங்கள், இந்த மரங்கள், இந்த யானைகள், இந்த மலைகள், பூமி, திசைகளின் பல்வேறு புள்ளிகள், ஆகாயம்,(58) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோரிடம் உண்மையில் நான் உலகின் உயிரினங்கள் அனைத்திற்குள்ளும் நுழையப் போகிறேன் என்பதை அறிவிக்கப் போகிறேன்[6].(59) முனிவர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும் இன்று என் யோக ஆற்றலைக் காணட்டும்” என்று {தமக்குள்ளேயே} சொல்லிக் கொண்டார் {சுகர்}. இந்த வார்த்தைகளைச் சொன்ன சுகர், தன் நோக்கத்தை உலகப் புகழ்பெற்ற நாரதரிடம் தெரிவித்தார்.(60)சுகர், நாரதரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தமது தந்தை {வியாசர்} இருந்த இடத்திற்குச் சென்றார். பெருமுனிவரும், உயர் ஆன்மா கொண்டவரும், தீவில் பிறந்தவருமான {துவைபாயனருமான} கிருஷ்ணரின் {வியாசரின்} முன்னிலையை அடைந்த அவர், வழக்கமான விசாரிப்புகளைச் செய்தார்.(61) சுகரின் நோக்கத்தைக் கேட்ட அந்த உயர் ஆன்ம முனிவர் {வியாசர்} பெரிதும் நிறைவடைந்தார். அவரிடம் பேசிய அந்தப் பெரும் முனிவர், “ஓ! மகனே, ஓ! அன்புக்குரிய மகனே, என் கண்கள் நிறைவடையும் வண்ணம் நான் சிறிது காலம் உன்னைப் பார்க்கும் வகையில் இன்று இங்கேயே தங்குவாயாக” என்றார்”.(62) எனினும் பற்றில் இருந்தும், ஐயங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட சுகர், விடுதலையை மட்டுமே சிந்திக்கத் தொடங்கிப் பயணத்தில் தம் இதயத்தை நிலை நிறுத்தினார்.(63) தமது தந்தையை விட்டுச் சென்ற அந்த முதன்மையான முனிவர் {சுகர்}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட தவசிகளின் கூட்டம் வசிக்கும் பரந்த கயிலாயச் சாரலுக்குச் சென்றார்” என்றார் {பீஷ்மர்}.(64)

முக்தியின் பாதையில் சுகர்! – சாந்திபர்வம் பகுதி – 333-யோகத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொண்ட சுகர்; முக்தியின் வழியைக் அவர் கண்டடைந்தது; தாம் கண்ட பாதையை நாரதருக்குச் சொன்னது; மீண்டும் யோகத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டது; தமது தந்தை அழைத்தால் மறுமொழி கூறுமாறு தேவதேவிகளுக்கு ஆணையிட்டது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, {கயிலாய} மலையின் சிகரத்தில் ஏறிய வியாசரின் மகன் {சுகர்}, பிற உயிரினங்களின் நடமாட்டம் இல்லாத புற்களற்ற சமதரையில் அமர்ந்தார்.(1) யோகத்தினுடைய அடுத்தடுத்த படிநிலைகளின் வரிசையை அறிந்தவரான அந்தத் தவசி {சுகர்}, சாத்திரங்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்புடைய வகையிலும், விதிக்கப்பட்ட விதிகளின்படியும், முதலில் தம் ஆன்மாவை ஓர் இடத்திலும், பிறகு மற்றுமோர் இடத்திலுமென {படிப்படியாக} நிலை நிறுத்தி, பாதம் தொடங்கி அங்கங்கள் அனைத்தையும் கடந்து சென்றார்.(2) பிறகு சுகர், சூரியன் உதித்து வெகு நேரமாகாத போது, தமது முகத்தைக் கிழக்குப்புறம் நோக்கித் திருப்பி, கைகால்களை மடக்கிப் பணிவான மனோநிலையில் அமர்ந்தார்.(3)

நுண்ணறிவைக் கொண்டவரான அந்த வியாசரின் மகன், யோகத்தில் {தமக்குள்} தம்மையே காண ஆயத்தமாக இருந்த அந்த இடத்தில் எந்தப் பறவைக்கூட்டமுமில்லை, எந்த ஒலியும் இல்லை, வெறுத்தொதுக்கும், அல்லது அச்சத்தைத் தூண்டும் எந்தக் காட்சியும் தென்படவில்லை.(4) பிறகு அவர் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட தமது ஆன்மாவைக் கண்டார். அனைத்துப் பொருட்களிலும் உயர்ந்ததைக் கண்டு அவர் இன்பமாகச் சிரித்தார்.(5) பிறகு அவர் விடுதலையின் பாதையை {மோக்ஷ மார்க்கத்தை} அடைவதற்காக மீண்டும் தம்மை யோகத்தில் நிறுவிக் கொண்டார். யோகத்தின் பேராசானாக ஆன அவர், வெளியெனும் பூதத்தைக் கடந்தார்.(6) அதன்பிறகு, தெய்வீக முனிவரான நாரதரை வலம் வந்து, உயர்ந்த யோகத்தைத் தாமே அடைந்த உண்மையை முனிவர்களில் முதன்மையான அவரிடம் {நாரதரிடம்} சொன்னார்.(7)

சுகர் {நாரதரிடம்}, “நான் (விடுதலையின் {முக்தியின்}) பாதையைக் காண்பதில் வென்றேன். நானே அதைக் கண்டுகொண்டேன். ஓ! தவங்களைச் செல்வமாகக் கொண்டவரே, நீர் அருளப்பட்டிருப்பீராக. ஓ! பெருங்காந்தி கொண்டவரே, மிகவும் விரும்பத்தக்க கதியை உமது அருளால் நான் அடையப் போகிறேன்” என்றார்”.(8)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீவில் பிறந்த வியாசரின் மகனான சுகர், தெய்வீக முனிவரான நாரதரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு வணங்கி, மீண்டும் தம்மை யோகத்தில் நிலைநிறுத்தி வெளியெனும் பூதத்திற்குள் நுழைந்தார்.(9) அவர், கயிலாய மலைச் சாரலில் இருந்து உயர்ந்து வானத்திற்குள் எழுந்தார். ஆகாயத்தினூடாகப் பயணிக்கவல்லவரும், நிலைத்த தீர்மானத்தால் அருளப்பட்டவருமான சுகர், அப்போது தம்மைக் காற்றெனும் பூதமாகக் கண்டார்.(10) கருடனின் பிரகாசத்தைக் கொண்ட அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர் {சுகர்}, மனோ வேகத்தில், அல்லது எண்ணத்தின் வேகத்தில் வானத்தினூடாகச் சென்று கொண்டிருந்தபோது, அனைத்து உயிரினங்களும் தங்கள் கண்களை அவர் மேல் செலுத்தின.(11) நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியைக் கொண்ட சுகர், மூவுலகங்கள் முழுமையையும் ஒரே தன்மையைக் கொண்ட பிரம்மமாகக் கருதி, நெடுநீளம் கொண்ட அந்தப் பாதையில் சென்று கொண்டிருந்தார்.(12)

அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும், குவிந்த கவனத்தோடும், அமைதியான, அச்சமற்ற ஆன்மாவோடும் சென்று கொண்டிருந்த அவர் மீது தங்கள் கண்களைச் செலுத்தின.(13) அனைத்து உயிரினங்களும், விதிக்கு ஏற்புடைய வகையிலும், தங்கள் சக்திக்குத் தகுந்த வகையிலும் அவரை மதிப்புடன் வழிபட்டன.(14) அப்சரஸ்கள் மற்றும் கந்தர்வ குலங்கள் அனைத்தும் அவரைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தன. வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவர்களும் கூட அதற்கிணையான வியப்பையே அடைந்தனர்.(15)

அவர்கள் {முனிவர்கள்}, “தவங்களால் வெற்றியை அடைந்த இவன் யார்? தன் உடலில் இருந்து {பார்வை} விலகியவனும், மேல் நோக்கிய பார்வையுடன் கூடியவனுமான இவன், நம் அனைவரையும் தன் பார்வையின் மூலம் இன்பத்தால் நிறையச் செய்கிறான்” என்றனர்.(16)

உயர்ந்த அற ஆன்மாவைக் கொண்டவரும், மூவுலகங்களிலும் முழுமையாகக் கொண்டாடப்படுபவருமான சுகர், தம் முகத்தைக் கிழக்கு நோக்கித் திருப்பிக் கொண்டு, சூரியனை நோக்கிச்செலுத்தப்பட்ட பார்வையுடன் அமைதியாக {மௌனமாகச்} சென்று கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சென்ற போது, அவர் அனைத்திலும் பரவும் ஒலியால் மொத்த ஆகாயத்தையும் நிறைப்பதாகத் தெரிந்தது.(17) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர் அவ்வழியில் வருவதைக் கண்டு பிரமிப்படைந்த அப்ஸரஸ் குலங்கள் அனைத்தும் வியப்பால் நிறைந்தன.(18) அவர்கள் ஒருவருக்கொருவர், “இவர் பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டவராகவும், ஆசைகள் அனைத்தில் இருந்தும் விடுதலையடைந்தவராகவும் இங்கே வருகிறார் என்பதில் ஐயமில்லை. இத்தகைய உயர்ந்த கதியை அடைந்திருக்கும் இந்தத் தேவன் யார்?” என்று கேட்டனர்.(19)

பிறகு அவர் {சுகர்} ஊர்வசியும், பூர்வசித்தியும் எப்போதும் வசிக்கும் மலய மலைகளுக்குச் சென்றார்.(20) அவர்கள் இருவரும், அந்தப் பெரும் மறுபிறப்பாள முனிவரின் சக்தியைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் {ஊர்வசி}, “வேதங்களை ஓதுவதையும், அவற்றைக் கற்பதையும் வழக்கமாகக் கொண்ட ஒரு மறுபிறப்பாள இளைஞனின் இந்தக் குவிந்த கவனம் ஆச்சரியம் நிறைந்ததாகும். விரைவில் இவன் நிலவைப் போல ஆகாயம் முழுவதும் செல்லப் போகிறான். இவன் தன் தந்தையிடம் கொண்ட கடமைநிறைந்த தொண்டுணர்வு மற்றும் பணிவிடையினால் இந்தச் சிறந்த புத்தியை அடைந்திருக்கிறான்.(21,22) இவன் கடுந்தவங்களைச் செய்த தன் தந்தையிடம் உறுதியான பற்றுடன் இருக்கிறான், மேலும் இவனது தந்தையால் மிகவும் விரும்பப்படுபவனாகவும் இருக்கிறான். ஐயோ, கவனமில்லாத இவனது தந்தையால், திரும்பிவராத பாதையில் ஏன் இவன் அனுப்பப்பட்டான்?” என்றனர் {என்றாள்}.(23)

ஊர்வசியின் இந்த வார்த்தைகளையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் கவனித்து, தம் கண்களை அனைத்துப் பக்கங்களிலும் செலுத்தி,(24) மீண்டும் ஆகாயம் முழுமையையும், மலைகள், நீர்நிலைகள், காடுகள், தடாகங்கள் மற்றும் ஆறுகள் அனைத்தையும் கொண்ட மொத்த உலகத்தையும் கண்டார்.(25) தேவர்கள் மற்றும் தேவிகள் அனைவரும், தீவில் பிறந்த முனிவரின் மகனை {வியாசரின் மகனை} மதிக்கும் வகையில் தங்கள் கரங்களைக் குவித்து, ஆச்சரியத்துடனும், மதிப்புடனும் அவனைக் கண்டனர்.(26) அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரான சுகர் அவர்கள் அனைவரிடமும் இந்த வார்த்தைகளைச் சொன்னார், “என் தந்தை {வியாசர்} என்னைப் பின்தொடர்ந்து வந்து, மீண்டும் மீண்டும் என் பெயரைச் சொல்லி அழைத்தால்,(27) நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்காக அவருக்குப் பதிலளியுங்கள். என்னிடம் அன்பு கொண்ட நீங்கள் அனைவரும் இந்த என் வேண்டுகோளை நிறைவேற்றுவீராக” என்றார் {சுகர்}.(28)

சுகரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திசைப்புள்ளிகள் அனைத்தும், காடுகள் அனைத்தும், கடல்கள் அனைத்தும், ஆறுகள் அனைத்தும், மலைகள் அனைத்தும், ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் அவருக்குப் பதிலளித்தன,(29) “ஓ! மறுபிறப்பாளரே, நாங்கள் உமது ஆணையை ஏற்கிறோம். நீர் சொன்னது போலவே ஆகட்டும். அந்த முனிவரால் {வியாசரால்} சொல்லப்படும் வார்த்தைகளுக்கு நாங்கள் இவ்வழியிலேயே பதிலளிக்கப் போகிறோம்” {என்றன}” என்றார் {பீஷ்மர்}.(30)

மோக்ஷமடைந்த சுகர்! – சாந்திபர்வம் பகுதி – 334-முக்திக்கான பாதையில் சுகர் கண்ட காட்சிகள்; சுகர் முக்தியடைந்தது; சுகரைப் பின்தொடர்ந்து சென்ற வியாசர், சுகருக்காக வருந்தி அழுதது; வியாசருக்கு வரமளித்த சிவன்; சுகரின் பிறப்பு மற்றும் வாழ்வைக் கேட்பதால் கிட்டும் பரமகதி ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கடும் தவங்களைக் கொண்ட மறுபிறப்பாள முனிவரான சுகர், இவ்வாறு தம் வழியில் (அனைத்துப் பொருட்களிடமும்) பேசி, நான்கு வகைக் களங்கங்களை {தோஷங்களைக்}[1] கைவிட்டு, வெற்றியில் {யோக ஸித்தியில்} நிலைத்திருந்தார்.(1) எட்டுவகைத் தமஸ்களைக் கைவிட்டு, ஐந்து வகை ரஜஸ்களையும் விட்டுவிட்டார்[2]. பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவர், பிறகு சத்வ குணத்தையும் கைவிட்டார். இவை யாவும் மிக ஆச்சரியமானவைகளாகத் தோன்றின.(2) பிறகு அவர் குணங்களற்றதும், ஒவ்வொரு குறியீட்டிலிருந்தும் விடுபட்டதுமான பிரம்மம் என்ற அந்த நித்திய நிலையிலேயே வசித்து, புகையற்ற நெருப்பைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(3)விண்கற்கள் விழத் தொடங்கின[3]. திசைப்புள்ளிகள் அனைத்தும் எரிவதாகத் தெரிந்தன. பூமி நடுங்கினாள். இந்தத் தோற்றப்பாடுகள் அனைத்தும் மிக ஆச்சரியமானவைகளாகத் தெரிந்தன.(4) மரங்கள் தங்கள் கிளைகளையும், மலைகள் தங்கள் சிகரங்களையும் உதிர்க்கத் தொடங்கின. (இடியின்) உரத்த ஒலியானது இமய மலைகளையே பிளப்பது போலக் கேட்டது.(5) சூரியன் அந்தக் கணத்தில் ஒளியற்றவனாகக் காணப்பட்டான். நெருப்பு ஒளியை வெளியிட மறுத்தது. தடாகங்கள், ஆறுகள் மற்றும் கடல்கள் அனைத்தும் கலக்கமடைந்தன.(6) வாசவன் {இந்திரன்}, சிறந்த சுவையும், மணமும் கொண்ட மழையைப் பொழிந்தான். தூய தென்றல், சிறந்த நறுமணங்களைச் சுமந்தபடி வீசத் தொடங்கியது.(7)ஆகாயத்தினூடாகச் சுகர் சென்று கொண்டிருந்தபோது, இமயத்திற்குரிய ஒன்றும், மேருவுக்குரிய ஒன்றுமென அழகிய இரண்டு சிகரங்களைக் கண்டார். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடன் நெருங்கி இருந்தன. அதிலொன்று தங்கத்தாலானதால் மஞ்சள் நிறத்திலும், மற்றொன்று வெள்ளியாலானதால் வெள்ளை நிறத்திலும் இருந்தன.(8) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அவை ஒவ்வொன்றும் நூறு யோஜனைகள் உயரமும், அதே அளவு அகலமும் கொண்டவையாக இருந்தன. உண்மையில் சுகர் வடக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, அந்த அழகிய சிகரங்கள் இரண்டையும் கண்டார்.(9) அவர், அச்சமற்ற இதயத்துடன் ஒன்றோடொன்று கலந்திருந்த அந்த இரு சிகரங்களையும் மோதிச் சென்றார். அந்தச் சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த இரு சிகரங்களும் திடீரென இரண்டாகப் பிளந்தன.(10) ஓ! ஏகாதிபதி, அந்தக் காட்சியைக் காண மிக அற்புதமாக இருந்தது. அந்தச் சிகரங்கள், சுகர் செல்வதைத் தடுக்க இயலாதவையாக இருந்ததால் அவர் அவற்றைத் துளைத்துச் சென்றார். இதனால் சொர்க்கத்தில் வசித்தவர்களிடமிருந்து பேரொலி எழுந்தது.(11,12)

அந்த மலையில் வசித்து வந்த கந்தர்வர்கள் மற்றும் பிறர் அந்த மலை பிளக்கப்பட்டதையும், சுகர் அதைக் கடந்து சென்றதையும் ஆரவாரத்துடன் கண்டனர். உண்மையில், ஓ! பாரதா, அந்தக் கணத்தில் “நன்று, நன்று” என்ற வார்த்தைகள் எங்கும் கேட்டன.(13) கந்தர்வர்கள், முனிவர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்கள் கூட்டத்தினாலும், வித்யாதரர் குலங்கள் அனைத்தினாலும் அவர் துதிக்கப்பட்டார்.(14) ஓ! ஏகாதிபதி, ஊடுருவமுடியாத அந்த அரணை சுகர் இவ்வாறு துளைத்துச் சென்ற அக்கணத்தில், சொர்க்கத்திலிருந்து பொழியப்பட்ட தெய்வீக மலர்களால் ஆகாயம் நிறைந்திருந்தது.(15) அற ஆன்மா கொண்ட சுகர் அப்போது, மலர்ந்திருக்கும் சோலைகள் மற்றும் காடுகள் பலவற்றினால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பகுதியின் கீழே பேரழகுடன் ஓடிக் கொண்டிருக்கும் தெய்வீக ஓடையான மந்தாகினியை {தேவ கங்கையை} உயர்ந்த பகுதியில் {வானத்தில்} இருந்து கண்டார்.(16) அந்த நீரில் அழகிய அப்சரஸ்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆடையற்றிருந்த அந்த விண்ணுலகவாசிகள், உடலற்றவராக இருந்த சுகரைக் கண்டு வெட்கமேதும் அடையவில்லை.(17)

சுகர் பெரும்பயணம் மேற்கொண்டிருப்பதை அறிந்த அவரது தந்தை வியாசர், அன்பால் நிறைந்தவராக அதே விண்பாதையில் அவரை {சுகரைப்} பின்தொடர்ந்து சென்றார்.(18) அதேவேளையில் சுகர், காற்றுப் பகுதிக்கு {வளிமண்டலத்திற்கு}[4] மேலிருக்கும் ஆகாயப்பகுதியில் சென்று, தமது யோக ஆற்றலை வெளிப்படுத்தி, பிரம்மத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார் {பிரம்மத்தோடு கலந்தார்}.(19) கடுந்தவங்களைக் கொண்ட வியாசர், உயர்ந்த யோகத்தின் நுண்பாதையைப் பின்பற்றி, சுகர் முதலில் பயணம் தொடங்கிய இடத்தைக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அடைந்தார்.(20) அதே வழியில் சென்ற வியாசர், எதன் ஊடாகச் சுகர் கடந்து சென்றாரோ, அந்த மலைச்சிகரம் பிளந்து கிடப்பதைக் கண்டார். தீவில் பிறந்த அந்தத் தவசியைச் சந்தித்த முனிவர்கள், அவரது மகனின் சாதனைகளை அவருக்குச் சொல்லத் தொடங்கினர்.(21) எனினும் வியாசர், தமது மகனின் பெயரைச் சொல்லி உரக்க அழைத்து, தாமுண்டாக்கிய ஒலியால் மூவுலகங்களையும் எதிரொலிக்கச் செய்து, அழுது புலம்பத் தொடங்கினார்.(22)அதே வேளையில், அனைத்துப் பொருட்களுக்குள்ளும் நுழைந்து, அவற்றின் ஆன்மாவாக ஆனவரும், எங்கும் நிறைந்த நிலையை அடைந்தவரும், அற ஆன்மா கொண்டவருமான {தர்மாத்மாவுமான} சுகர், எதிரொலியின் வடிவில் “போ” {Bho} என்ற ஓரசையைச் சொல்லித் தமது தந்தைக்குப் பதிலளித்தார்.(23) இதனால், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மொத்த அண்டமும் “போ” என்ற ஓரசையைச் சொல்லிச் சுகரின் பதிலை எதிரொலித்தது.(24) அந்நேரத்தில் இருந்து, மலைக்குகைகளிலோ, மலைச்சாரல்களிலோ ஒலிகள் ஒலிக்கப்படும்போது அவை சுகரின் பதிலைச் சொல்வது போல இன்னும் {இப்போது வரை} அதை (போ என்ற ஓரசையை} எதிரொலிக்கின்றன.(25) சுகர், இவ்வழியிலேயே ஒலி முதலிய குணங்கள் அனைத்தையும் கைவிட்டு, மறையும் வகையில் தமது யோக ஆற்றலைக் காட்டி உயர்ந்த நிலையை அடைந்தார்.(26)

அளவிலா சக்தி கொண்ட தமது மகனின் மகிமையையும், பலத்தையும் கண்ட வியாசர், அந்த மலைச்சாரலில் அமர்ந்து, துயரத்துடன் தமது மகனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(27) தெய்வீக ஓடையான மந்தாகினியில் {தேவ கங்கையின்} கரைகளில் விளையாடிக் கொண்டிருந்த அப்சரஸ்கள் அனைவரும், அந்த முனிவர் அங்கே அமர்ந்திருப்பதைக் கண்டு, வெட்கத்தால் இதயம் இழந்தவர்களாகக் கலக்கமடைந்தனர்.(28) அம்முனிவரைக் கண்டதும், அவர்களில் சிலர் தங்கள் நிர்வாணத்தை மறைக்க ஓடைக்குள் குதித்தனர், சிலர் புதர்களில் நுழைந்தனர், சிலர் விரைவாகத் தங்கள் ஆடைகளை எடுத்தனர்.(29) (அவர்களில் எவரும் அவரது மகனைக் கண்டு கலக்கக் குறியீடுகளைக் காட்டவில்லை). இந்த அசைவுகளைக் கண்ட முனிவர் {வியாசர்}, தமது மகன் {சுகர்} பற்றுகள் அனைத்தில் இருந்து விடுதலை அடைந்ததையும், தாம் அவற்றில் இருந்து விடுபடாததையும் புரிந்து கொண்டார். இதனால் அவர் மகிழ்ச்சி மற்றும் வெட்கம் ஆகிய இரண்டாலும் நிறைந்தார்.(30)

வியாசர் அங்கே அமர்ந்திருந்தபோது, மங்கல தேவனும், பிநாகைபாணியும் {பிநாகை என்ற வில்லைத் தரித்தவனும்}, தேவர்கள் மற்றும் கந்தர்வர்கள் பலரால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனும், பெரும் முனிவர்கள் அனைவராலும் துதிக்கப்பட்டவனுமான சிவன் அங்கே வந்தான்.(31) தமது மகனைக் குறித்த கவலையில் எரிந்து கொண்டிருந்தவரும், தீவில் பிறந்தவருமான {துவைபாயனருமான} அம்முனிவருக்கு ஆறுதலளிக்கும் வகையில் மஹாதேவன் {சிவன்},(32) “நெருப்பு {அக்னி}, பூமி {பிருத்வி}, நீர் {அப்பு}, காற்று {வாயு}, வெளி {ஆகாயம்} ஆகியவற்றின் சக்தியைக் கொண்ட மகனை முன்பு நீர் வேண்டினீர்.(33) உமது தவங்களால் அதே போன்றவொரு மகன் உண்டானான். என் அருளால் அவன் தூயனாகவும், பிரம்ம சக்தியால் நிறைந்தவனாகவும் இருந்தான்.(34) புலன்களை முழுமையாக அடக்காதவர்களாலோ, தேவர்களில் எவராலோ கூட வெல்ல முடியாத உயர்ந்த கதியை அவன் அடைந்திருக்கிறான். ஓ! மறுபிறப்பாள முனிவரே, அந்த மகனுக்கான ஏன் நீர் வருந்துகிறீர்? எவ்வளவு காலம் மலைகள் இருக்குமோ, எவ்வளவு காலம் பெருங்கடல் இருக்குமோ, அவ்வளவு காலம் உமது மகனின் புகழ் மங்காதிருக்கும்.(36) ஓ! பெரும் முனிவரே, என் அருளால், உமது மகனுக்கு ஒப்பான ஒரு நிழல்வடிவம், உம்மைவிட்டு ஒருக்கணமும் அகலாமல், உமதருகிலேயே இருப்பதை நீர் இவ்வுலகில் காண்பீர்” என்றான்.(37)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, சிறப்புமிக்க ருத்திரனாலேயே இவ்வாறு ஆதரிக்கப்பட்ட அம்முனிவர், தம் அருகிலேயே தமது மகனின் நிழலைக் கண்டார். இதனால் மகிழ்ச்சியில் நிறைந்த அவர் அந்த இடத்தை விட்டுச் சென்றார்.(38) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, சுகரின் பிறப்பு மற்றும் வாழ்வு குறித்து நீ கேட்ட அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(39) தெய்வீக முனிவரான நாரதரும், பெரும் யோகியான வியாசரும், பழங்காலத்தில் இக்காரியம் குறித்து உரையாடல்களில் கேட்கப்பட்ட போது, இவையனைத்தையும் எனக்கு மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.(40) எந்த மனிதன் அமைதிநிலைக்குத் தன்னை அர்ப்பணித்து, விடுதலை {முக்தி} குறித்த நேரடி தொடர்புடைய இந்தப் புனித வரலாற்றைக் கேட்பானோ, அவன் நிச்சயம் உயர்ந்த கதியை அடைவான்” என்றார் {பீஷ்மர்}.(41)

நரநாராயணர்! – சாந்திபர்வம் பகுதி – 335-நாரத முனி, நாராயண முனி ஆகியோருக்கிடையிலான உரையாடல்; நரனும் நாராயணனும் செய்த தினசரி சடங்குகள்; நரநாராயணர்களால் துதிக்கப்பட்ட தேவன் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு மனிதன், இல்லறவாசியாகவோ {கிருஹஸ்தனாகவோ}, பிரம்மச்சாரியாகவோ, காட்டுத்துறவியாகவோ {வானப்பிரஸ்தனாகவோ}, சந்நியாசியாகவோ இருந்து வெற்றியடைய விரும்பினால், அவன் எந்தத் தேவனைத் துதிக்க {ஆராதிக்க} வேண்டும்?(1) எங்கிருந்து அவன் சொர்க்கத்தையும், உயர்ந்த நன்மையையும் (விடுதலையையும் {முக்தியையும்}) நிச்சயமாக அடையலாம். எந்த விதிமுறைகளின்படி அவன் தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிக்கும் ஹோமத்தைச் செய்ய வேண்டும்?(2) ஒருவன் விடுதலை {முக்தியை} அடையும்போது எந்தக் கதியை அடைகிறான்? விடுதலையின் சாரம் என்ன? சொர்க்கத்தை அடைந்த பிறகு, அங்கிருந்து வீழாதிருக்க ஒருவன் என்ன செய்ய வேண்டும்?(3) தேவர்களின் தேவன் யார்? பித்ருக்களின் பித்ரு யார்? தேவர்களின் தேவருக்கும், பித்ருக்களின் பித்ருவுக்கும் மேலானவர் யார்? ஓ! பாட்டா இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! கேள்வி கேட்கும் கலையை நன்கறிந்தவனே, ஓ! பாவமற்றவனே, நீ கேட்ட இந்தக் கேள்வி ஆழ்ந்த புதிரைக்கொண்டதாகும். ஒருவன் நூறு ஆண்டுகள் முயன்றாலும், பொருள்முறைப்படி விவாதிக்கும் அறிவியலின் {தர்க்க சாஸ்திரத்தின்} துணை கொண்டு இதற்குப் பதிலளிக்க முடியாது.(5) ஓ! மன்னா, நாராயணனின் அருளில்லாமலோ, உயர்ந்த ஞானத்தை அடையாமலோ, இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது. இக்காரியம் ஆழ்ந்த புதிரோடு தொடர்புடையதென்றாலும், ஓ! பகைவர்களைக் கொல்பவனே, நான் அஃதை உனக்கு விளக்குகிறேன்[1].(6)இது தொடர்பாக, நாரதருக்கும் நாராயண முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொல்லும் பழைய வரலாறு குறிப்பிடப்படுகிறது.(7) ஓ!ஏகாதிபதி, கிருத யுகத்தில் தான்தோன்றியான {சுயம்புவான} மனுவின் காலகட்டத்தில் {மன்வந்தரத்தில்}, அண்டத்தின் ஆன்மாவான நித்திமான நாராயணன், தர்மனுக்கு மகனாக நரன், நாராயணன், ஹரி மற்றும் சுயம்புவான கிருஷ்ணன் என்ற நால்வராகப் பிறந்தான்[2].(8,9) அவர்கள் அனைவரிலும், நாராயணனும், நரனும் பதரி என்ற பெயரில் அறியப்படும் இமய ஆசிரமத்திற்குத் தங்கத் தேர்களில் சென்று கடுந்தவங்களைச் செய்தனர்.(10) அந்தத் தேர்கள் ஒவ்வொன்றிலும் எட்டுச் சக்கரங்கள் இருந்தன. ஐம்பூதங்களால் செய்யப்பட்ட அந்தத் தேர்கள் மிகவும் அழகானவையாக இருந்தன.தர்மனின் மகன்களாகப் பிறந்த அந்த உண்மையான லோகபாலர்கள், கடுந்தவத்தின் விளைவால் மிகவும் மெலிந்தவர்களானார்கள். உண்மையில், அந்தத் தவங்களுக்காகவும், அவர்களின் சக்திக்காகவும், தேவர்களாலேயே அவர்களைப் பார்க்க இயலவில்லை.(11) அவர்கள் எந்தத் தேவனிடம் அன்பு கொள்கிறார்களோ, அந்தத் தேவனால் மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும்.(12)

நாரதர், அவர்களிடம் அர்ப்பணிப்பாலும், அவர்களைக் காணும் நீண்ட ஆவலாலும் மேரு மலைகளின் உயர்ந்த சிகரத்தில் இருந்து கந்தமாதனத்திற்குக் கீழே இறங்கிவந்து உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தார்.(13) பெரும் வேகம் கொண்ட அவர் இறுதியாகப் பதரி ஆசிரமம் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்தார். ஆவலால் உந்தப்பட்ட அவர், நரனும் நாராயணனும் தங்கள் தினசரி சடங்குகளைச் செய்து கொண்டிருந்த வேளையில் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தார்.(14)

அவர் {நாரதர்} தமக்குள்ளேயே, “தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள மற்றும் பெரும்பாம்புகள் உள்ளிட்ட உலகங்கள் அனைத்தும் எவரில் நிறுவப்பட்டுள்ளனவோ, உண்மையில் இஃது அவரது ஆசிரமமே.(15) முன்பு இந்தப் பெரும் பொருளுக்கு ஒரே வடிவமே இருந்தது. அந்த வடிவமானது, அந்தத் தேவனால் வளர்க்கப்பட்ட தர்மனின் குலம் பெருகுவதற்காக நான்கு வடிவங்களில் பிறவியை அடைந்தது.(16) நரன், நாராயணன், கிருஷ்ணன், ஹரி என்ற நான்கு பெருந்தேவர்களால் தர்மன் இவ்வாறு கௌரவிக்கப்பட்டது அற்புதம் நிறைந்ததாகும்.(17) இந்த இடத்திலேயே முன்பு கிருஷ்ணனும், ஹரியும் வசித்தனர். எனினும் இப்போது நரன் மற்றும் நாராயணன் ஆகிய இந்த இருவர் தங்கள் தகுதியை {புண்ணியத்தைப்} பெருக்கிக் கொள்ளும் நோக்கத்தில் இங்கே வசித்துத் தவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.(18) இந்த இருவரும் அண்டத்தின் பெரும்புகலிடமாக இருக்கிறார்கள். இந்த இருவரும் செய்யும் தினசரி சடங்குகளின் இயல்புகள் என்ன? அவர்களே அனைத்து உயிரினங்களின் தந்தைமாரும், அனைத்துப் பொருட்களின் சிறப்புமிக்கத் தேவர்களும் ஆவர். பெரும் நுண்ணறிவைக் கொண்ட இந்த இருவரும் வழிபடும் அந்தத் தேவன் யார்? அனைத்துப் பொருட்களின் பித்ருக்களான இவ்விருவரும் துதிக்கும் அந்தப் பித்ருக்கள் யார்?” என்று கேட்டுக் கொண்டார்.(19)

நாராயணனிடம்
 பக்தியில் நிறைந்திருந்த நாரதர், தமது மனத்தில் இதை நினைத்துத் திடீரென அந்தத் தேவர்கள் இருவரின் முன்பும் தோன்றினார்.(20) அந்தத் தேவர்கள் இருவரும் தங்கள் தேவர்கள் மற்றும் முனிவர்களுக்கான துதிகளை நிறைவு செய்த பிறகு, தங்கள் ஆசிரமத்திற்கு வந்திருந்த அந்தத் தெய்வீக முனிவரைக் கண்டனர். பின்னவர் {நாரதர்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள நித்திய கடமைகளின்படி கௌரவிக்கப்பட்டார்.(21) சிறப்புமிக்கவரான முனிவர் நாரதர், உண்மை தேவர்களான அவர்கள் இருவரும் வேறு தேவர்களையும், பித்ருக்களையும் வழிபடும் இயல்புக்குமீறிய நடத்தைக் கண்டு, தாம் பெற்ற கௌரவங்களால் நன்கு நிறைவடைந்து அங்கே அமர்ந்தார்.(22) உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் கூடிய அவர், மஹாதேவனை வணங்கி, தமது கண்களை நாராயணன் மீது செலுத்திக் கொண்டே இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(23)

நாரதர், “வேதங்களிலும், புராணங்களிலும், அங்கங்களிலும், உப அங்கங்களிலும் நீயே மதிப்புடன் பாடப்படுகிறாய். நீ பிறப்பற்றவனாகவும், நித்தியமானவனாகவும் இருக்கிறாய். படைப்பாளன் நீயே. அண்டத்தின் அன்னை நீயே. அழிவின்மையின் உடல்வடிவம் நீயே, பொருட்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே. கடந்த காலமும், எதிர்காலமும், உண்மையில், மொத்த அண்டமும் உன்னிலேயே நிறுவப்பட்டுள்ளன.(24) ஓ!தலைவா, இல்லறத்தை முதலாகக் கொண்ட நான்கு வாழ்வுமுறைகளும் {ஆசிரமங்களும்}, பல்வேறு வடிவங்களிலான உன்னையே இடையறாமல் துதிக்கின்றன.(25) அண்டத்தின் தந்தையாகவும், தாயாகவும், ஆசானாகவும் நீயே இருக்கிறாய். இன்று நீ துதிக்கும் அந்தத் தேவன் அல்லது பித்ரு யார் என்பதை நாங்கள் அறியவில்லை” என்றார்.(26)

அதற்கு அந்தப் புனிதமானவன் {நாராயணன்}, “இக் காரியம் குறித்து ஒருவனால் எதுவும் சொல்லப்படக்கூடாது. இஃது ஒரு புராதனப் புதிராகும். நீர் என்னிடம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு {பக்தி} மிகப் பெரியதாகும். எனவே, ஓ!மறுபிறப்பாளரே, வாய்மைக்கு ஏற்புடைய வகையில் நான் உமக்குச் சொல்லப் போகிறேன்.(27) நுட்பமானதும், புலப்படாததும், வெளிப்படாததும், அசைவற்றதும், நீடித்து நிலைத்திருப்பதும், புலன்கள் மற்றும் புலன்நுகர் பொருட்களுடனான எந்தத் தொடர்பும் இல்லாததும்,(28) (ஐந்து) பூதங்களிடம் இருந்து தொடர்பறுந்ததும் எதுவோ, அதுவே இருப்பிலுள்ள உயிரினங்கள் அனைத்தினுள்ளும் வசிக்கும் ஆத்மாவாக அழைக்கப்படுகிறது. அது க்ஷேத்ரஜ்ஞன் என்ற பெயரில் அறியப்படுகிறது. சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய முக்குணங்களையும் கடந்திருக்கும் அதுவே புருஷன் என்று சாத்திரங்களில் கருதப்படுகிறது.(29) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அவனிலிருந்தே சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்களைக் கொண்ட புலப்படாதவள் தோன்றினாள். உண்மையில் புலப்படாதவளாக இருப்பினும் அவள் அழிவில்லாத பிரகிருதி என்று அழைக்கப்பட்டு, புலப்படும் வடிவங்கள் அனைத்திலும் வசித்து வருகிறாள்.(30)

நாங்கள் இருவரும் எங்கிருந்து உதித்தோமோ அந்தத் தோற்றுவாய் அவளே {பிரகிருதியே} என்பதை அறிவீராக. இருப்பில் உள்ள மற்றும் இருப்பில் இல்லாத பொருட்கள் அனைத்தினாலும் உண்டானதும், நீக்கமற நிறைந்திருப்பதுமான ஆன்மாவானவன் எங்களால் துதிக்கப்படுகிறான். தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் நாங்கள் செய்யும் சடங்குகள் அனைத்திலும் அவனையே நாங்கள் வழிபடுகிறோம்.(31) ஓ! மறுபிறப்பாளரே, அவனைத் தவிர வேறு உயர்ந்த தேவர் எவரும், அல்லது பித்ரு எவரும் இல்லை. அவனே எங்கள் ஆன்மா என்பது அறியப்பட வேண்டும். அவனையே நாங்கள் வழிபடுகிறோம்.(32) ஓ! மறுபிறப்பாளரே, மனிதர்களால் பின்பற்றப்படும் இந்தக் கடமையின் நடைமுறைகள் அவனிடம் இருந்த வெளிவந்தன. தேவர்களுக்கும், பித்ருக்களுக்குமான சடங்குகள் அனைத்தும் முறையாகச் செய்யப்பட வேண்டும் என்பதை அவனே விதித்திருக்கிறான்.(33) பிரஜாபதிகள் என்றழைக்கப்படும் பிரம்மன், ஸ்தாணு, மனு, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது,(34) வசிஷ்டர், பரமேஷ்டி, விவஸ்வத், சோமன் கர்த்தமர் என்றழைக்கப்படுபவர், குரோதர், அவாக், கிருதர்(35) ஆகிய இந்த இருபத்தோரு பேரும் முதலில் பிறந்தவர்களாவர். அவர்கள் அனைவரும் பரம்பொருளின் நித்திய விதிகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தனர்.(36)

தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிப்பதற்காக விதிக்கப்பட்ட சடங்குகள் அனைத்தையும் விரிவாக நோற்ற அந்த முதன்மையான மறுபிறப்பாளர்கள், தாங்கள் வேண்டிய பொருட்கள் அனைத்தையும் அடைந்தனர்.(37) உடலற்ற தேவலோகவாசிகளே அந்த உயர்ந்த தேவனை வணங்கி, அவனது அருளின் மூலம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட கனிகளையும், கதிகளையும் அடைகின்றனர்.(38) (அறிவுப்புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, உயிர் மூச்சுகள் ஐந்து, மனம் மற்றும் புத்தி அடங்கிய) பதினேழு குணங்களில் இருந்து விடுபட்டவர்களும், செயல்கள் அனைத்தையும் கைவிட்டவர்களும், திரள் உடலாக அமையும் பதினைந்து கலைகளுமற்றவர்களும் முக்தர்கள் என்று சொல்லப்படுவதே சாத்திரங்களின் இறுதித் தீர்மானமாகும்[3].(39) முக்தர்கள் தங்கள் இறுதி கதியாக எதை அடைகிறார்களோ அதுவே க்ஷேத்ரஜ்ஞன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. (சாத்திரங்களின்படி) அவன் {க்ஷேத்ரஜ்ஞன்} குணங்கள் அனைத்தையும் கொண்டவனாகவும், அவை அனைத்தும் அற்றவனாகவும் கருதப்படுகிறான்.(40)அவனை {க்ஷேத்ரஜ்ஞனை} ஞானத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நாங்கள் இருவரும் அவனிலிருந்தே உதித்தோம். இவ்வழியில் அவனை அறிந்திருக்கும் நாங்கள் அனைத்துப் பொருட்களின் நித்திய ஆன்மாவான அவனைத் துதிக்கிறோம்.(41) வேதங்களும், வாழ்வு முறைகள் {ஆசிரமங்கள்} அனைத்தும் விரிந்த கருத்துகளின்படி அறியப்பட்டாலும் அவனை அனைவரும் பக்தியுடன் வழிபடுகின்றனர். அவனே விரைந்து அருள் வழங்கி அவர்களுக்கு இன்பம் நிறைந்த உயர்ந்த கதிகளை அளிக்கிறான்.(42) இவ்வுலகில் அவனால் நிறைந்தவர்கள், அவனிடம் முற்றான முழுமையான பக்தியைக் கொண்டு மிக உயர்ந்த கதிகளை அடைகின்றனர். எனெனில், அவர்கள் அவனில் நுழைந்து, அவனது சுயத்திலேயே கலக்கிறார்கள்.(43) ஓ! நாரதரே, நீர் என்னிடம் கொண்ட பக்தியாலும், நான் உம்மிடம் கொண்ட அன்பினாலும் அசைக்கப்பட்டு உயர்ந்த புதிரை உமக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், நீர் என்னிடம் கொள்ளும் பக்தியின் விளைவாலேயே எனது உரையை உம்மால் கேட்க முடிந்தது” என்றான் {நாராயணன்}.(44)

உலகின் முதல் சாத்திரம்! – சாந்திபர்வம் பகுதி – 336-ஸ்வேதத்வீபத்திற்குச் சென்ற நாரதர்; பாஞ்சராத்ர சாத்திரத்தின் வரலாறு; உலகின் முதல் நீதி சாத்திரத்தைத் தொகுத்த சப்தரிஷிகள்; நீதி சாத்திரத்தை அடைந்த மன்னன் உபரிசரன்; நாராயணன் சொன்ன வார்த்தைகள்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “முதன்மையான நாராயணனால் இந்த வார்த்தைகளால் சொல்லப்பட்டவரும், மனிதர்களில் முதன்மையானவருமான நாரதர், உலக நன்மைக்காக நாராயணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)

நாரதர், “ஓ! சுயம்புவே, தர்மனின் இல்லத்தில் நான்கு வடிவங்களில் நீர் பிறப்பெடுத்த நோக்கம் நிறைவேறட்டும். நான் இப்போது உன் உண்மை இயல்பைக் காண்பதற்காக (வெண் தீவுக்கு {ஸ்வதேத்வீபத்திற்குச்}) செல்லப் போகிறேன்.(2) நான் எப்போதும் பெரியோரை வழிபடுகிறேன். நான் ஒருபோதும் பிறரின் இரகசியங்களை வெளியிட்டதில்லை. ஓ! அண்டத்தின் தலைவா, நான் வேதங்களைக் கவனமாகக் கற்றிருக்கிறேன். நான் கடுந்தவங்களைச் செய்திருக்கிறேன். நான் ஒருபோதும் பொய்மை பேசியதில்லை.(3) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடியே நான் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய நான்கைப் பாதுகாத்திருக்கிறேன்[1]. நான் நண்பர்களிடமும் பகைவர்களிடமும் சமமாகவே நடந்து கொள்கிறேன். தேவர்களின் முதல்வனான பரமாத்மாவிடம் முற்று முழுதான அர்ப்பணிப்பை {பக்தியைக்} கொண்ட நான் அவனை இடையறாமல் துதித்து வருகிறேன்.(4) சிறப்புத்தகுதிகளான இந்தச் செயல்களின் மூலம் என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்ட பிறகு, எல்லையில்லாதவனான அண்டத்தின் தலைவனுடைய காட்சியைப் பெறுவதில் நான் ஏன் வெல்ல மாட்டேன்?” என்றார் {நாரதர்}.பரமேஷ்டியின் மகனான அவர் {நாரதர்} சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், சாத்திரங்களைப் பாதுகாப்பவனுமான நாராயணன், “ஓ! நாரதரே, செல்வீராக” என்று சொன்னான்.(5) உயர்ந்த யோக பலத்தைக் கொண்ட நாரதர் திடீரென ஆகாயத்தில் எழுந்து, மேரு மலைகளின் சிகரத்தை அடைந்தார். அந்தச் சிகரத்தில் ஒரு தனிமையான இடத்தை அடைந்த அந்தப் பெருந்தவசி சிறிது நேரம் ஓய்ந்திருந்தார்.(7) பிறகு அவர் தமது கண்களை வடமேற்குத் திசையில் செலுத்தி மிக அற்புதமான காட்சியை ஒன்றைக் கண்டார். வடக்கில் உள்ள பாற்கடலில் வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்ற பெயரைக் கொண்ட ஒரு பெரிய தீவு இருக்கிறது.(8) மேரு மலைகளில் இருந்து அதன் தொலைவு முப்பத்திரண்டாயிரம் யோஜனைக்கும் மேல் எனக் கல்விமான்கள் சொல்கிறார்கள். அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்குப் புலன்கள் ஏதும் கிடையாது. அவர்கள் எந்த உணவும் உட்கொள்ளாமலேயே வாழ்கிறார்கள். அவர்களது கண்கள் இமைப்பதில்லை. அவர்கள் சிறந்த மணங்களை வெளியிடுகிறார்கள்.(9)

அவர்களது நிறம் வெண்மையானதாகும். அவர்கள் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தவர்களாக இருந்தனர். அவர்களது எலும்புகளும், உடல்களும் வஜ்ரத்தைப் போன்று கடினமானதாக இருந்தன. அவர்கள் மான அவமானங்களை ஒரே ஒளியில் கருதினர். அவர்கள் அனைவரும் தேவர்களைப் போலத் தெரிந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் மங்கலக் குறிகளையும், பெரும் பலத்தையும் கொண்டிருந்தனர்.(10) அவர்களது தலைகள் குடைகளைப் போல இருந்தன. அவர்களது குரல்கள் மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்டவர்களாவர். அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு முஷ்கங்களைக் கொண்டிருந்தனர்[2]. அவர்களது பாதங்கள் நூறு கோடுகளால் குறிக்கப்பட்டிருந்தன. அவர்கள் அனைவரும் அறுபது பற்களையும், எட்டு சிறு பற்களையும் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பல நாவுகள் இருந்தன. அந்த நாவுகளைக் கொண்டு அனைத்துத் திசைகளையும் நோக்கும் சூரியனையே தீண்டுவதைப் போலத் தெரிந்தது.(11) உண்மையில் அவர்கள், மொத்த அண்டமும், வேதங்களும், கடமைகள், அமைதியான குணம் கொண்ட முனிவர்களும் எதனில் இருந்து எழுந்தார்களோ அந்தப் பெருந்தேவனையே விழுங்கிவிட வல்லவர்களைப் போலத் தெரிந்தனர்” என்றார் {பீஷ்மர்}.(12)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, அவர்களுக்குப் புலன்கள் ஏதும் கிடையாது, அவர்கள் தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள எதையும் உண்பதில்லை, அவர்களது கண்கள் இமைப்பதில்லை; அவர்கள் எப்போதும் சிறந்த மணத்தைப் பரப்புகிறார்கள் என்று சொன்னீர். நான் கேட்கிறேன், அவர்கள் எவ்வாறு பிறந்தார்கள்? அவர்கள் அடையும் பரகதி எது?(13) ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, விடுதலை {முக்தி} அடையும் மனிதர்களின் அடையாளங்களும், வெண்தீவுவாசிகளைப் போன்றதாகுமா? என் ஐயங்களை விலக்குவீராக. {கேட்பதற்கு} நான் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். வரலாறுகள் மற்றும் உரையாடல்களின் பெருங்கொள்ளிடமாக நீர் இருக்கிறீர். எங்களைப் பொறுத்தவரையில், ஞானம் மற்றும் அறிவுரைகளுக்கு உம்மையே நாங்கள் முற்றிலும் சார்ந்திருக்கிறோம்” என்றான்.(15)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, என் தந்தையிடம் இருந்து நான் கேட்ட இந்தக் கதை மிகப் பெரியதாகும். அதை நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். உண்மையில், இது கதைகள் அனைத்தின் சாரமாகக் கருதப்படுகிறது.(16) ஒரு காலத்தில் உபரிசரன் என்ற பெயரில் பூமியில் ஒரு மன்னன் இருந்தான். அவன் தேவர்களின் தலைவனான இந்திரனுடைய நண்பனாக அறியப்பட்டார். அவன் ஹரி என்ற பெயரில் அழைக்கப்படும் நாராயணனிடம் அர்ப்பணிப்புடன் இருந்தான் {பக்தி கொண்டிருந்தான்}.(17) அவன் சாத்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகள் {தர்மங்கள்} யாவையும் நோற்பவனாக இருந்தான். எப்போதும் தன் தந்தையிடம் அர்ப்பணிப்புடன் இருந்த அவன், எப்போதும் விழிப்புணர்வு நிறைந்தவனாகவும், செயலுக்கு ஆயத்தமானவனாகவும் இருந்தான். அவன் நாராயணனிடம் இருந்து பெற்ற வரத்தின் விளைவால் உலகின் அரசுரிமையை வென்றான்.(18) பழங்காலத்தில் சூரியனால் அறிவிக்கப்பட்ட சாத்வத சடங்கை {பாஞ்சராத்ரவிதியைப்}[3] பின்பற்றிய மன்னன் உபரிசரன் அந்தத் தேவர்களின் தேவனை (நாராயணனை) வழிபடுவதை வழக்கமாகக் கொண்டு, தன் வழிபாடு நிறைவடைந்ததும் அண்டத்தின் பெரும்பாட்டன்களைத் துதித்துக் கொண்டிருந்தான்.(19) பெரும்பாட்டன்களை (பித்ருக்களை) வழிபட்ட பிறகு அவன் பிராமணர்களை வழிபட்டான். பிறகு அவன் தன்னைச் சார்ந்திருந்தவர்களுக்குக் காணிக்கைகளைப் பகிர்ந்தளித்தான். அவர்களுக்குத் தொண்டாற்றிய பிறகு எஞ்சியதிலேயே மன்னன் தன் பசியைத் தணித்துக் கொண்டான். வாய்மையில் அர்ப்பணிப்புள்ள அந்த ஏகாதிபதி, எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைப்பதைத் தவிர்த்து வந்தான்.(20)தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாத தேவர்களின் தேவனும், அண்டத்தின் படைப்பாளனும், எவ்வித சிதைவும் இல்லாதவனுமான ஜனார்த்தனனிடம் மொத்த ஆன்மாவுடன் கூடிய அர்ப்பணிப்புடன் அவன் இருந்தான்.(21) பகைவர்களைக் கொல்பவனான அவன் நாராயணனிடம் கொண்ட அர்ப்பணிப்பை {பக்தியைக்} கண்ட தேவர்களின் தலைவன், தன் இருக்கையையும், படுக்கையையும் அவனுடன் பகிர்ந்துகொண்டான்.(22) அவனது நாடு, செல்வம், மனைவிகள், விலங்குகள் அனைத்தும் நாராயணனிடம் இருந்து பெறப்பட்டதாகவே அவனால் கருதப்பட்டன. எனவே அவன் தன் உடைமைகள் அனைத்தையும் அந்தப் பெருந்தேவனுக்கே காணிக்கையாக்கினான்.(23) சாத்வதச் சடங்கைப் பின்பற்றிய மன்னன் உபரிசரன், குவிந்த ஆன்மாவுடன் கட்டாயமற்ற மற்றும் கட்டாயமான தன் வேள்விச் செயல்கள் மற்றும் நியமங்கள் அனைத்தையும் {காம்யகங்களையும், நைமித்திகங்களையும்} செய்து வந்தான்.(24) அந்தச் சிறப்புமிக்க மன்னனின் அரண்மனையில், பாஞ்சராத்ர சடங்கை நன்கறிந்த முதன்மையான பிராமணர்கள் பலர், தேவன் நாராயணனுக்குப் படைக்கப்படும் உணவை அனைவருக்கும் முன்பு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.(25)

பகைவர்களைக் கொல்பவனான அவன் தன் நாட்டைத் தொடர்ந்து அறம் சார்ந்து ஆண்டு வந்த வரை, அவனது உதடுகளில் இருந்து எந்தப் பொய்மையும் நழுவி வந்ததில்லை, எந்தத் தீமையும் அவனது மனத்துக்குள் நுழைந்ததில்லை.(26) அவன் தன் அங்கங்களைக் கொண்டு ஒருபோதும் சிறு பாவத்தையேனும் செய்ததில்லை. சித்திர சிகண்டிகள்[4] என்ற பெயரில் அறியப்பட்ட மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது மற்றும் பெருஞ்சக்தியைக் கொண்ட வசிஷ்டர் என்று கொண்டாடப்படும் ஏழு முனிவர்களும், மலைகளில் முதன்மையான மேருவின் சாரலில் ஒன்றுகூடி, நான்கு வேதங்களுக்கு இணக்கமான கடமைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த சிறந்த சாத்திரத்தை உண்டாக்கினார்கள். அந்தச் சாத்திரத்தின் உள்ளடக்கம் ஏழு வாய்களால் சொல்லப்படுவதாகவும், மனித கடமைகள் மற்றும் நடைமுறைகளின் சுருக்கமான சிறந்த தொகுப்பாகவும் இருந்தது. ஏற்கனவே சொல்லப்பட்டது போல, சித்திர சிகண்டிகள் என்ற பெயரால் அறியப்பட்ட அந்த ஏழு முனிவர்களும், (மஹத், அகங்காரம் முதலிய) ஏழு (பிரகிருதி) பூதங்களாகவும், பட்டியலில் எட்டாவதாகச் சுயம்புவான மனுவும் மூலப் பிரகிருதியின் உள்ளடக்கமாக இருந்தனர். இந்த எண்மரே அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவர்களும், கவனம் திரும்பியிருக்கும் அந்தச் சாத்திரத்தை உண்டாக்கியவர்களும் ஆவர்.(27-30)முழுக் கட்டுப்பாட்டுடன் கூடிய புலன்கள் மற்றும் மனத்துடன், எப்போதும் யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருந்த அந்த எட்டு தவசிகளும், குவிந்த ஆன்மாக்களுடன், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை முழுமையாக அறிந்தவர்களாக வாய்மை எனும் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருந்தனர்.(31) “இது நன்மையானது, இது பிரம்மம், இஃது உயர்ந்த நன்மையானது” என்று இவ்வழியில் தங்கள் மனத்தில் சிந்தித்த அந்த முனிவர்களே, உலகங்களையும், அறநெறி அறிவியலையும், உலகங்களை ஆளும் கடமைகளையும் உண்டாக்கினர்.(32) அறம், செல்வம் மற்றும் இன்பம், அதைத் தொடர்ந்து விடுதலை {முக்தி} குறித்தும் அந்த ஆசிரியர்கள் அந்தச் சாத்திரத்தில் உரை செய்திருந்தார்கள். அவர்கள் பூமிக்கும், சொர்க்கத்திற்குமான பல்வேறு கட்டுப்பாடுகளையும் வரைமுறைகளையும் அதில் விதித்திருந்தனர்.(33) பலமிக்கவனும், சிறப்புமிக்கவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான நாராயணனை, பல முனிவர்களின் துணையுடன் ஆயிரம் தேவ வருடங்கள் தவங்களால் வழிபட்டு அந்தச் சாத்திரத்தை அவர்கள் உண்டாக்கினார்கள்.(34) அவர்களது தவங்கள் மற்றும் வழிபாட்டால் நிறைவடைந்த நாராயணன், வாக்கின் தேவியான சரஸ்வதியை அந்த முனிவர்களின் மேனியில் நுழையும்படி ஆணையிட்டான். அந்தத் தேவியும் உலகங்களுக்கு நன்மை செய்வதற்காக, தனக்கு ஆணையிடப்பட்ட வகையிலேயே செயல்பட்டாள்.(35)

வாக்கின் தேவி அவர்களது மேனியில் நுழைந்ததன் விளைவால் தவங்களை நன்கறிந்தவர்களான அம்முனிவர்கள், சொல், கருத்து {பொருள்}, காரணம் ஆகியவற்றாலான அந்த முதன்மையான சாத்திரத்தைத் தொகுப்பதில் வென்றார்கள்.(36) ஓம் என்ற ஓரசையால் புனிதமடைந்த அந்தச் சாத்திரத்தைத் தொகுத்தபிறகு அந்த முனிவர்கள், முதலில் அதை அன்புடன் கேட்டுக் கொண்டிருந்த நாராயணனிடம் படித்துக் காட்டினார்கள்.(37) சிறப்புமிக்கவனும், உடலற்றவனுமான நாராயணன் தான் கேட்டதில் மிக உயர்ந்த நிறைவை அடைந்தான்.

பிறகு பொருட்கள் அனைத்திலும் முதன்மையான அவன் {நாராயணன்} அம்முனிவர்களிடம் உடலற்ற குரலில் {அரூபக் குரலில் / அசரீரியாக}, “நூறாயிரம் சுலோகங்களில் நீங்கள் தொகுத்திருக்கும் இந்தச் சாத்திரம் சிறப்பானதாகும். இதனிலிருந்தே உலகங்கள் அனைத்தின் கடமைகளும், நடைமுறைகளும் உண்டாகும்.(39) யஜுஸ், ரிக், சாமம் மற்றும் அங்கிரசின் அதர்வணம் என்ற நான்கு வேதங்களுக்கும் முழு இணக்கத்துடன் இருக்கும் உங்கள் சாத்திரம், பிரவிருத்தி மற்றும் நிவிருத்தி ஆகிய இரண்டிலும் அங்கீகரிக்கப்பட்டதாக உலகமெங்கும் கொண்டாடப்படும்.(40) சாத்திரங்களின் அதிகாரத்திற்கு ஏற்புடைய வகையிலேயே நான் அருள் எனும் குணத்தின் மூலம் பிரம்மனையும், எனது கோபத்திலிருந்து ருத்திரனையும், (மஹத், அகங்காரம் முதலிய) பிரகிருதிகளால் உங்களையும், பிராமணர்களையும் உண்டாக்கினேன்.(41) சூரியன், சந்திரமாஸ், காற்று, பூமி, நீர், நெருப்பு, விண்மீன்கள், கோள்கள், நட்சத்திரக்கூட்டங்கள், உயிரினங்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் அனைத்தும், (வேதம் அல்லது) பிரம்மம் ஓதுபவர்கள் ஆகியோர் அனைவரும் தங்கங்கள் தங்களுக்குரிய வட்டங்களில் தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட வகையில் செயல்பட்டு வாழ்கிறார்கள். நீங்கள் தொகுத்திருக்கும் இந்தச் சாஸ்திரமும், உயர்ந்த அதிகாரத்தைக் கொண்ட படைப்பாக மனிதர்கள் அனைவராலும் அதே ஒளியில் கருதப்படும். இஃது என் ஆணையாகும். இந்தச் சாத்திரத்தின் வழிகாட்டுதலின்படி சுயம்புவான மனு, உலகின் கடமைகள் மற்றும் நடைமுறைகளை அறிவிப்பார்.(42-44) உசனஸும் {சுக்கிராச்சாரியரும்}, பிருஹஸ்பதியும் உண்டாகும்போது, அவர்கள் இந்தச் சாத்திரத்தால் வழிநடத்தப்பட்டும், மேற்கோளாகக் கொண்டும் அறம் மற்றும் அறநெறி குறித்த சாத்திரங்களை உண்டாக்குவார்கள்[5].(45)சுயம்புவான மனுவும், உசனஸும், பிருஹஸ்பதியும் தங்கள் சாத்திரங்களை வெளியிட்ட பிறகு,(46) உங்களால் தொகுக்கப்பட்ட இந்த அறிவியல், (உபரிசரன் என்ற பெயராலும் அறியப்படும்) மன்னன் வசுவால் அடையப்படும். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, உண்மையில், அம்மன்னன் இந்தப் படைப்பின் ஞானத்தைப் பிருஹஸ்பதியிடம் இருந்து அடைவான்.(47) நல்ல சிந்தனைகள் அனைத்தாலும் நிறைந்திருக்கும் அம்மன்னன் என்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவானாக இருப்பான். இந்தச் சாத்திரத்தால் வழிநடத்தப்பட்டு அவன் தன் அறச்செயல்களையும் நடைமுறைகளையும் அமைத்துக் கொள்வான்.(48) உண்மையில் உங்களால் தொகுக்கப்பட்ட இந்தச் சாத்திரம், அறம் மற்றும் நெறிகள் குறித்த சாத்திரங்கள் அனைத்திலும் முதன்மையானதாக இருக்கும். சிறப்பு நிறைந்த இந்தச் சாத்திரம், செல்வத்தையும், அறத்தகுதியையும் ஈட்டுவதற்கு உரிய அறிவுரைகள் நிறைந்ததாகவும், புதிர்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.(49) உங்களுடைய இந்தச் சாத்திரத்தை வெளியிடுவதன் விளைவால், நீங்கள் பெரும் குலம் ஒன்றின் மூதாதையர்களாவீர்கள். மன்னன் உபரிசரனும், மகிமையும் செழிப்பும் கொண்டவனாக இருப்பான்.(50) எனினும் அந்த மன்னனின் மரணத்திற்குப் பிறகு இந்த நித்திய சாத்திரம் உலகில் இருந்து மறைந்துவிடும். இவை யாவையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றான் {நாராயணன்}.(51)

புலப்படாதவனான நாராயணன், அந்த முனிவர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அவர்களை விட்டுவிட்டு, அவர்களால் அறியப்படாத வேறொரு இடத்திற்குச் சென்றான்.(52) அப்போது உலகத்தின் தந்தைகளான அந்த முனிவர்கள், உலகம் அடையப்போகும் கதியை நினைத்துக் கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தின் நித்திய மூலமாகச் சாத்திரத்தை வெளியிட்டனர்.(53) அதற்கடுத்து முதல், அல்லது கிருத யுகத்தில் பிருஹஸ்பதி அங்கிரஸக் குலத்தில் பிறந்தபோது, அந்த ஏழு முனிவர்களும், உபநிஷத்துகள் மற்றும் வேதங்களின் பல்வேறு கிளைகளுக்கு இணைக்கமான தங்கள் சாத்திரத்தை வெளியிடும் பணியை அவருக்குக் கொடுத்தனர்.(54) உலகங்கள் அனைத்தையும் தாங்குபவர்களும், தர்மங்கள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் முதலில் வெளியிட்டவர்களுமான அவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்து இடத்திற்குச் சென்று தவங்களில் தங்களை அர்ப்பணிக்கத் தீர்மானித்தனர்” என்றார் {பீஷ்மர்}.(55)

நாராயணீயம்! – சாந்திபர்வம் பகுதி – 337-உபரிசர வசு செய்த யாகம்; பிருஹஸ்பதிக்கு நாராயணனின் மகிமையைச் சொன்ன ஏகதர் மற்றும் பிறர்; ஸ்வேதத்வீபம் என்ற வெண்தீவு; அங்கே வசிக்கும் வெண் மனிதர்கள்; ஸ்வேதத்வீபத்தில் நாராயணனைக் காணாத முனிவர்கள்; உபரிசரவசு அடைந்த கதி..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] “பெரும் கல்பம் {மஹாகல்பம்} நிறைவடைந்ததும், அங்கிரஸ குலத்தில் தேவபுரோஹிதர் பிருஹஸ்பதி பிறந்தபோது, தேவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.(1) பிருஹத், பிரம்ம, மஹத் என்ற சொற்கள் அனைத்தும் ஒரே பொருளைக் கொண்டனவாகும்[2]. ஓ! மன்னா, தேவ புரோஹிதர் இந்தக் குணங்கள் அனைத்தையும் கொண்டிருந்ததால் பிருஹஸ்பதி என்று அழைக்கப்படலானார்.(2) வசு என்றும் அழைக்கப்படும் மன்னன் உபரிசரன், பிருஹஸ்பதியின் சீடனாகி விரைவில் அவனது முதன்மையான சீடனானான். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட அவன், தன் ஆசானின் காலடியில் அமர்ந்து, சித்திர சிகண்டிகள் என்ற பெயரில் அறியப்பட்ட ஏழு முனிவர்களால் தொகுக்கப்பட்ட அந்த அறிவியலை {சாத்திரத்தைக்} கற்கத் தொடங்கினான்.(3) வேள்விகள் மற்றும் பிற அறச்சடங்குகள் மூலம் தீமைகள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்த அவன் {உபரிசரன்}, சொர்க்கத்தை ஆளும் இந்திரனைப் போல இந்தப் பூமியை ஆண்டு வந்தான்.(4)அந்தச் சிறப்புமிக்க மன்னன் தன் ஆசானான பிருஹஸ்பதி ஹோத்ரியாக அமைந்த ஒரு பெரும் குதிரை வேள்வியை {அஸ்வமேதயாகத்தைச்} செய்தான்.(5) பிரஜாபதியின் (பிரம்மனின்) மகன்களான ஏகதர், துவிதர், திரிதர் ஆகியோர் அந்த வேள்வியின் சத்யஸ்களானார்கள்.(6) இன்னும் தனுஷர், ரைப்யர், அர்வாவஸு, பராவஸு, மேதாதி, பெரும் முனிவரான தாண்டியர்,(7) அருள் நிறைந்தவரான சாந்தி முனிவர், வேதசிரஸ் என்று அழைக்கப்பட்டவர், சாலிஹோத்திரரின் தந்தையும், முனிவர்களில் முதன்மையானவருமான கபிலர்,(8) முதன்மையானவரான கல்பர் {கடர்}, வைசம்பாயனருக்கு மூத்தவரான {அண்ணனான} தைத்திரி, கண்வர், தேவஹோத்தர் ஆகிய வேறு பதினாறு பேரும் சத்யஸ்களாக இருந்தனர்.(9)

ஓ! ஏகாதிபதி அந்தப் பெரும் வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் திரட்டப்பட்டன. அதில் எந்த விலங்கும் கொல்லப்படவில்லை. மன்னன் அவ்வாறே அதை விதித்திருந்தான்(10) அவன் கருணை நிறைந்தவனாக இருந்தான். தூய்மையான, தயாள மனம் கொண்ட அவன், ஆசைகள் அனைத்தையும் கைவிட்டவனாகவும், சடங்குகள் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருந்தான். அவ்வேள்விக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் காட்டில் விளைபவையாகவே இருந்தன.(11) புராதன தேவர்களுக்குத் தேவன் (ஹரி), அந்த வேள்வியினால் மன்னனிடம் உயர்ந்த நிறைவை அடைந்தான். வேறு எவராலும் காணப்பட முடியாதவனான அந்தப் பெருந்தேவன், தன் வழிபாட்டாளனுக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(12) அவன் {ஹரி}, அதன் மணத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் தனக்கு அளிக்கப்பட்ட பங்கான புரோடாசத்தை[3] எடுத்துக் கொண்டான். அந்தப் பெருந்தேவன் யாரும் காணாதவண்ணம் அந்தக் காணிக்கைகளை எடுத்துக் கொண்டான்.(13) இதனால் பிருஹஸ்பதி கோபம் அடைந்தார். அவர், வேள்விக் கரண்டியை எடுத்து வானத்தில் வேகமாக வீசி எறிந்துவிட்டு, கோபத்தில் கண்ணீர் சிந்தத் தொடங்கினார்.(14)அவர் {பிருஹஸ்பதி} மன்னன் உபரிசரனிடம், “நாராயணனுக்குரிய வேள்விக் காணிக்கைகளை இங்கே வைக்கிறேன். என் கண்களுக்கு முன்பாகவே இதை அவன் எடுக்கப் போகிறான் என்பதில் ஐயமில்லை” என்றார்”.(15)

யுதிஷ்டிரன், “உபரிசரனின் பெரும் வேள்வியில் தேவர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய வடிவங்களில் வந்து அனைவரும் காணும்படி தங்கள் பங்குகளை எடுத்துக் கொண்டனர். பலமிக்க ஹரி மட்டுமே ஏன் வேறுவகையில் மறைமுகமாகத் தன் பங்கை எடுத்துக் கொண்டான்?” என்று கேட்டான்.(16)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிருஹஸ்பதி கோபமடைந்த போது, மாமன்னன் வசுவும், அவனது சத்யஸ்கள் அனைவரும் அந்த மாமுனிவரைத் தணிவடையச் செய்ய முயன்றனர்.(17) அவர்கள் அனைவரும் மிக அமைதியாகப் பிருஹஸ்பதியிடம், “நீர் கோபவசப்படக்கூடாது. இந்தக் கிருத யுகத்தில், நீர் கொள்ளும் கோபத்தை யாரும் கொள்ளக்கூடாது.(18) உம்மால் வேள்வி காணிக்கையளிக்கப்பட்ட பெருந்தேவனே கோபத்தில் இருந்து விடுபட்டவனாவான். ஓ! பிருஹஸ்பதி, அவன் உம்மாலோ, எங்களாலோ காணப்பட முடியாதவனாவான்.(19) அவனது அருள் கொண்டவர்கள் மட்டுமே அவனைக் காண முடியும்” என்றனர்.

அப்போது, ஏழு முனிவர்களால் தொகுக்கப்பட்ட அறநெறிகள் மற்றும் கடமைகளை நன்கறிந்தவர்களான ஏகதர், திவிதர், திரிதர் முதலிய முனிவர்கள், அந்தச் சபையில் பின்வருமாறு உரையாடத் தொடங்கினர்,(20) “நாங்கள் பிரம்மன் நினைவில் பிறந்த அவரது மகன்களாவோம் {பிரம்மாவின் மானஸபுத்திரர்களாவோம்} (சாதாரண வழியில் பிறக்கவில்லை). ஒரு காலத்தில் நாங்கள் எங்கள் உயர்ந்த நன்மையை அடைவதற்காக வடக்கே சென்றோம்.(21) ஆயிரம் வருடங்கள் தவமிருந்து, பெரும் தவத் தகுதியை ஈட்டிய நாங்கள், மீண்டும் நிலையான மரக்கட்டைகளைப் போல ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தோம்.(22) நாங்கள் தவமிருந்த நாடானது, மேரு மலைகளுக்கு வடக்கே, பாற்கடலின் கரைகளில் இருக்கிறது.(23) நாங்கள் எங்கள் மனத்தில் கொண்டிருந்த நோக்கமானது, தெய்வீகமான நாரயாணனை அவனது வடிவிலேயே காண்பதாகும். எங்கள் தவங்கள் நிறைவடைந்ததும், இறுதியான தூய்மைப்படுத்தும் சடங்குகளைச் செய்த பிறகு, ஓ! பலமிக்கப் பிருஹஸ்பதி, மேக முழக்கம் போல ஆழமானதும், மிக இனிமையானதும், எங்கள் இதயத்தை இன்பத்தால் நிறைப்பதுமான ஓர் அரூபக் குரலை நாங்கள் கேட்டோம்.(24)

அந்தக் குரல், “பிராமணர்களே, உற்சாகம் நிறைந்த ஆன்மாக்களோடு நீங்கள் இந்தத் தவங்களைச் செய்திருக்கிறீர்கள். நாராயணனிடம் பக்தி கொண்ட நீங்கள், பெரும்பலம் கொண்ட அந்தத் தேவனைக் காண்பதில் எவ்வாறு வெல்வது என அறியும் வகையை நாடுகிறீர்கள்.(25) பாற்கடலின் வடகரையில் வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்ற பெயரைக் கொண்டதும், பெரும் காந்தியைக் கொண்டதுமாக ஒரு தீவு இருக்கிறது. அந்தத் தீவில் வசிக்கும் மனிதர்கள், சந்திரனின் கதிர்களைப் போன்ற வெண்நிறத்தைக் கொண்டவர்களாகவும், நாராயணனிடம் பக்தி கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.(26) அனைத்திலும் முதன்மையானவனான அவனை வழிபடும் அவர்கள், தங்கள் முழு ஆன்மாவுடன் அவனிடம் அர்பணிப்புக் கொண்டவர்கள் {பக்தி செலுத்துபவர்கள்} ஆவர். அவர்கள் அனைவரும், நித்தியமானவனும், சிறப்புமிக்கவனுமான ஆயிரம் கதிர்களைக் கொண்ட தேவனில் நுழைகிறார்கள்.(27) அவர்கள் புலன்களற்றவர்களாவர். அவர்கள் உயிர்வாழ்வதற்காக எவ்வகை உணவையும் உட்கொள்வதில்லை. அவர்களது கண்கள் இமைப்பதில்லை. அவர்களது உடல்கள் எப்போதும் நறுமணத்தை வெளியிடுகின்றன. உண்மையில் வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} வசிப்பவர்கள் ஒரே தேவனை மட்டுமே நம்பவும், வழிபடவும் செய்கிறார்கள். தவசிகளே, நான் அங்கே வெளிப்பட்டிருக்கிறேன் என்பதால் அங்கே செல்வீராக” என்றான் {நாராயணன்}.(28)

அரூபக் குரலின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் அனைவரும், குறிப்பிட்டு விளக்கப்பட்ட நாட்டிற்குச் செல்லும் வழியில் சென்றோம்.(29) அவனைக் காணும் ஆவலிலும், அவனுக்காக நிறைந்த இதயத்துடனும் இறுதியாக நாங்கள் வெண்தீவு என்று அழைக்கப்பட்ட அந்தப் பெரிய தீவை அடைந்தோம். அங்கே எங்களால் எதையும் காண முடியவில்லை. உண்மையில், அந்தப் பெருந்தேவனின் சக்தியால் எங்கள் பார்வை குருடாக்கப்பட்டதால் எங்களால் அவனைக் காண முடியவில்லை.(30) இதன் காரணமாக அந்தப் பெருந்தேவனின் கருணையால், ’போதுமான அளவு தவங்களைச் செய்யாதவனால் நாராயணனை விரைவாகக் காண முடியாது’ என்ற கருத்து எங்களின் மனத்தில் எழுந்தது.(31) இந்தக் கருத்தின் ஆதிக்கத்தால், காலத்திற்கும், இடத்திற்கும் தக்க வகையில் மீண்டும் நாங்கள் நூறு வருடங்களுக்குக் கடுந்தவங்களைச் செய்தோம். எங்கள் நோன்புகள் நிறைந்தவடைந்ததும், நாங்கள் மங்கலமான குணங்களைக் கொண்ட எண்ணற்ற மனிதர்களைக் கண்டோம்.(32) அவர்கள் அனைவரும் (நிறத்தில்) சந்திரனைப் போலத் தெரிந்தனர், அவர்களிடம் அருள் குறியீடுகள் அனைத்தும் இருந்தன. அவர்களது கரங்கள் எப்போதும் வேண்டும் வகையில் கூப்பியே இருந்தன. சிலரின் முகங்கள் வடக்கு நோக்கியும், சிலரின் முகங்கள் கிழக்கு நோக்கியும் இருந்தன.(33) அந்த உயர் ஆன்ம மனிதர்களால் செய்யப்பட்ட ஜபம் மனோஜபமாகும் (அவை வார்த்தைகளாலான மந்திரச் சொற்களைச் சொல்வதாக இல்லை). அவர்களது இதயங்கள் முழுமையாக அவனில் நிறுவப்பட்டிருப்பதன் விளைவால், ஹரி அவர்களிடம் உயர்வான நிறைவை அடைந்திருந்தான்.(34)

ஓ! தவசிகளில் முதன்மையானவரே {பிருஹஸ்பதியே}, அம்மனிதர்கள் வெளிப்படுத்திய பிரகாசமானது, அண்ட அழிவின்போது சூரியன் வெளிப்படுத்தும் காந்திக்கு ஒப்பானதாக இருந்தது.(35) உண்மையில் நாங்கள் அத்தீவே சக்திகள் அனைத்தின் வீடு என நினைத்தோம். அங்கே வசித்த அனைவரும் முற்றிலும் சமமான சக்தியுடன் இருந்தனர்.(36) பிறகு, ஓ! பிருஹஸ்பதி, நாங்கள் ஆயிரம் சூரியர்களின் குவிந்த பிரகாசத்துக்கு ஒப்பான ஓர் ஒளி எழுவதைக் கண்டோம்.(37) அங்கே வசித்தவர்கள் ஒன்றுகூடி, மதிப்புமிக்க மனோநிலையுடன் கரங்களைக் கூப்பி, முழு மகிழ்ச்சியுடன் நமஸ் (வணங்குகிறோம்) என்ற ஒற்றைச் சொல்லைச் சொல்லிக் கொண்டே அந்த ஒளியை நோக்கி ஓடினார்கள்.(38) அவர்கள் அனைவரும் சேர்ந்து பேரொலி எழுப்பியதை நாங்கள் கேட்டோம். அந்த மனிதர்கள் அனைவரும் அந்தப் பெருந்தேவனுக்கு ஒரு வேள்வியைக் காணிக்கையாக்குவதில் ஈடுபடுவதாகத் தெரிந்தது.(39) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் அவனது சக்தியால் திடீரென எங்கள் புலன்களை இழந்தவர்களானோம். பார்வை, பலம் மற்றும் புலன்கள் அனைத்தையும் இழந்த எங்களால் வேறு எதையும் காணவோ, உணரவோ முடியவில்லை.(40)

அங்கே வசித்திருந்தவர்களின் கூட்டம் எழுப்பிய பேரொலியை மட்டுமே நாங்கள் கேட்டோம். அது {அந்தப் பேரொலி}, “ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, வெற்றி உனதாகட்டும். ஓ! அண்டத்தைப் படைத்தவனே, உன்னை வணங்குகிறோம்.(41) ஓ! ரிஷிகேசா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, ஓ! முதல் பிறவியே உன்னை நாங்கள் வணங்குகிறோம்” என்றது. தனித்தவகையிலும், சொல் உச்சரிப்பு விதிகளுக்கு ஏற்புடைய வகையிலும் உண்டான அந்த ஒலி இதுவாகவே இருந்தது.(42)

அதே வேளையில், தெய்வீக மலர்கள், குறிப்பிட்ட மூலிகைகள், அச்சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்படும் செடிகள் ஆகியவற்றின் மணங்களைக் கொண்டதுமான நறுமணமிக்க, தூய்மையான தென்றல் அங்கே வீசியது.(43) பெரும் அர்ப்பணிப்புடன் கூடியவர்களும், இதயம் நிறைந்த மதிப்பைக் கொண்டவர்களும், பஞ்சராத்ரத்தில் விதிக்கப்பட்ட விதிகளை அறிந்தவர்களுமான அந்த மனிதர்கள், மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் அந்தப் பெருந்தேவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்[4].(44) அவ்வொலி எழுந்தபோது அவ்விடத்தில் ஹரி தோன்றினான் என்பதில் ஐயமில்லை. எங்களைப் பொறுத்தவரையில், அவனது மாயையால் மயங்கியிருந்த எங்களால் அவனைக் காண முடியவில்லை.(45) ஓ! அங்கிரஸ குலத்தில் முதன்மையானவரே, தென்றல் வீசுவது நின்று, வேள்வி முடிந்த பிறகு எங்களது இதயங்கள் கவலையால் கலக்கமடைந்தன.(46) தூய பரம்பரையில் வந்த அந்த ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு மத்தியில் நாங்கள் நின்று கொண்டிருந்தபோது, எவரும் எங்களைக் கண்ணாலாவது, மனத்தாலாவது மதிக்கவில்லை.(47) உற்சாகம் நிறைந்தவர்களும், அர்ப்பணிப்பால் நிறைந்தவர்களும், பிரம்மமனோநிலையில் பயிற்சிகளைச் செய்பவர்களுமான அந்தத் தவசிகள் எங்களுக்கு எவ்வகை உணர்வையும் வெளிப்படுத்தவில்லை[5].(48)நாங்கள் மிகக் களப்படைந்திருந்தோம். எங்கள் தவங்கள் எங்களை மெலிவடையச் செய்திருந்தன. அந்நேரத்தில், வானத்தில் இருந்து ஓர் அரூபக் குரல் இந்த வார்த்தைகளில் எங்களிடம் பேசியது,(49) {அந்தக் குரல்}, “புறப்புலன்கள் அனைத்தும் இல்லாதவர்களான இந்த வெண்மனிதர்களே (நாராயணனைக்) காணத்தகுந்தவர்கள். இந்த வெண்மனிதர்களின் பார்வையால் கௌரவிக்கப்பட்ட மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்கள் மட்டுமே அந்தப் பெருந்தேவனைக் காணத்தகுந்தவர்கள்.(50,51) முனிவர்களே, நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்பிச் செல்லுங்கள். அர்ப்பணிப்பில்லாத {பக்தியற்ற} ஒருவனால் அந்தப் பெருந்தேவனை {நாராயணனைக்} காண இயலாது.(52) அவனது பளிச்சிடும் பிரகாசத்தின் விளைவால் காணப்பட இயலாதவனாக இருக்கும் அந்தப் பெருந்தேவனை, முற்றுமுழுதாக அவனிடம் மட்டுமே நீண்ட காலமாக அர்ப்பணிப்பு பக்தி} கொண்ட மனிதர்களால் மட்டுமே காண முடியும். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் செய்ய வேண்டிய பெருங்கடமை இருக்கிறது.(53) கிருத யுகம் முடிந்து, திரேதா யுகம் நேரும்போது, விவஸ்வானின் காலத்தில் {மன்வந்திரத்தில்} உலகங்களுக்குப் பேரிடர் நேரிடும். முனிவர்களே, அப்போது நீங்கள் (அந்தப் பேரிடரை விலக்குவதற்காக) தேவர்களின் கூட்டாளிகளாக வேண்டும்” {என்றது}.(54)

அமுதம் போன்ற இந்த இனிய வார்த்தைகளைக் கேட்ட நாங்கள், அந்தப் பெருந்தேவனின் கருணையின் மூலம் நாங்கள் விரும்பிய இடத்திற்கு விரைவாக வந்து சேர்ந்தோம்.(55) அத்தகைய கடுந்தவங்கள், மற்றும் அர்ப்பணிப்பு மிக்க வேள்வி காணிக்கைகளின் {ஹவ்யகவ்யங்களின்} துணையின் மூலம் கூட அந்தப் பெருந்தேவனை எங்களால் காண முடியவில்லை எனும்போது, அவ்வளவு எளிதாக அவனைக் காணலாம் என நீர் எவ்வாறு நினைக்கலாம்?(56) நாராயணனே பெரும்பொருளாவான். அவனே அண்டத்தைப் படைத்தவனாவான். வேத மந்திரங்களின் துணையுடன் தெளிந்த நெய் மற்றும் வேறு உணவு வகைக் காணிக்கைகளுடன் அவனே வேள்விகளில் துதிக்கப்படுகிறான். அவன் தொடக்கமும், முடிவுமில்லாதவனாவான். அவன் வெளிப்படாதவனாவான். தேவர்கள் மற்றும் தானவர்கள் ஆகிய இருவரும் அவனையே வழிபடுகிறார்கள்” என்றனர்.(57) ஏகதரால் பேசப்பட்டவையும், அவரது தோழர்களான திவிதர் மற்றும் திரிதரால் அங்கீகரிக்கப்பட்டவையுமான இந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டவரும், சத்யஸ்களால் வேண்டப்பட்டவருமான உயர்ந்த மனத்தைக் கொண்ட பிருஹஸ்பதி தேவர்களுக்குரிய துதிகளை முறையான சடங்குகளுடன் செய்து அந்த வேள்வியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.(58)

மன்னன் உபரிசரனும், தனது பெரும் வேள்வியை நிறைவு செய்த பிறகு, தன் குடிமக்களை அறம்சார்ந்து ஆட்சி செய்யத் தொடங்கினான். இறுதியில் அவன் தன் உடலைக் கைவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். சிறிது காலத்திற்குப் பிறகு, பிராமணர்களின் சாபத்தால் அவன் இன்ப உலகங்களில் இருந்து வீழ்ந்து, பூமியின் குடல்களுக்குள் ஆழமாக மூழ்கிப் போனான்.(59) ஓ! ஏகாதிபதிகளில் புலியே {யுதிஷ்டிரா}, அந்த வசுவானவன் {உபரிசரன்}, வாய்மை அறத்தில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்தான். அவன் பூமியின் குடல்களுக்குள் ஆழ மூழ்கினாலும் அவனது அற அர்ப்பணிப்பு தணியவில்லை.(60) நாராயணனிடம் எப்போதும் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனும், நாராயணனையே தங்கள் தேவனாகக் கொண்ட புனித மந்திரங்களை எப்போதும் உரைப்பவனுமான அவன், நாராயணனின் அருளின் மூலம் மீண்டும் சொர்க்கத்தை அடைந்தான்.(61) பூமியின் குடல்களுக்குள் இருந்து எழுந்த மன்னன் வசு {உபரிசரன்}, தான் அடைந்த உயர்ந்த கதியின் விளைவால் பிரம்மலோகத்திற்கும் மேலான ஓர் உயர்ந்த இடத்திற்குச் சென்றான்” என்றார் {பீஷ்மர்}.(62)

உபரிசரன் அடைந்த சாபம்! – சாந்திபர்வம் பகுதி – 338-வேள்விகள் தானியங்களைக் கொண்டு செய்யப்பட வேண்டுமா? விலங்குகளைக் கொண்டு செய்யப்பட வேண்டுமா? என்பதில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இடையில் நேர்ந்த சச்சரவு; மன்னன் உபரிசரன் சொன்ன தீர்ப்பு; பிராமணர்களால் சபிக்கப்பட்ட உபரிசரன்; தேவர்களின் கருணையாலும், நாராயணனின் அருளாலும் உயர்ந்த கதியை அடைந்தது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மாமன்னன் வசு நாராயணனிடம் முழுமையான பக்தியுடன் இருந்தபோது, என்ன காரணத்தினால் அவன் சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்தான்? மேலும் அவன் ஏன் பூமியின் பரப்புக்குக் கீழே மூழ்கிப் போனான்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாக முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஒரு காலத்தில், பிராமணர்களில் முதன்மையானோரிடம் பேசிய தேவர்கள், அவர்களிடம் அஜஸ் என்ற பலிகளைக் காணிக்கையாக்குவதன் மூலம் வேள்விகள் செய்யப்பட வேண்டும் என்பதைச் சொன்னார்கள். அஜ என்ற சொல்லின் மூலம் வெள்ளாடு என்று புரிந்து கொள்ள வேண்டுமேயன்றி வேறு எந்த விலங்கையும் அல்ல.(3)

முனிவர்கள், “வேத ஸ்ருதியானது, வேள்விகளில் வித்துகள் {தானியங்கள்} காணிக்கைகளாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வித்துகளே {தானியங்களே} அஜஸ் என்று அழைக்கப்படுகின்றன. வெள்ளாடுகளைக் கொல்வது உங்களுக்குத் தகாது.(4) தேவர்களே, விலங்குகளைக் கொல்ல விதிக்கப்படுவது நல்லோருக்கும், அறவோருக்குமான அறமல்ல. மேலும் இது கிருத யுகமாகும். அறம்சார்ந்த இந்த யுகத்தில் விலங்குகள் எவ்வாறு கொல்லப்படலாம்?” என்றனர்”.(5)

பீஷ்மர் தொட்ரந்தார், “முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் இந்த உரையாடல் நேர்ந்து கொண்டிருந்தபோது, மன்னர்களில் முதன்மையானவனான வசு அவ்வழியில் வந்தான். பெருஞ்செழிப்பைக் கொண்ட அந்த மன்னன், தன் துருப்புகள், வாகனங்கள் மற்றும் விலங்குகளுடன் ஆகாயத்தில் வந்து கொண்டிருந்தான்.(6)

வானத்தின் மூலம் அந்த இடத்திற்கு வரும் மன்னன் வசுவைக் கண்ட அந்தப் பிராமணர்கள், தேவர்களிடம், “இவன் எங்கள் ஐயங்களை விலக்குவான்.(7) இவன் வேள்விகளைச் செய்பவன். இவன் கொடைகளை அளிக்கும் ஈகையாளன். இவன் எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையை நாடுபவனாவான்” என்றனர்.(8)

இவ்வாறு தங்களுக்குள் பேசிக்கொண்ட முனிவர்களும் தேவர்களும் விரைவாக மன்னன் வசுவிடம் வந்து அவனைக் கேள்வி கேட்டனர். {அவர்கள்}, “ஓ! மன்னா, எதைக் கொண்டு ஒருவன் வேள்விகளைச் செய்ய வேண்டும்?(9) அவன் வெள்ளாட்டைக் கொண்டு வேள்வி செய்ய வேண்டுமா? மூலிகைகள் மற்றும் செடிகளைக் கொண்டு வேள்வி செய்ய வேண்டுமா? எங்களுடைய இந்த ஐயங்களை நீ விலக்குவாயாக. இக்காரியத்தில் நாங்கள் உன்னையே நீதிபதியாகக் கொள்கிறோம்” என்றனர்.(10)

இவ்வாறு அவர்களால் சொல்லப்பட்ட வசு {உபரிசரன்}, பணிவுடன் தன் கரங்களைக் கூப்பியபடி அவர்களிடம், “பிராமணர்களில் முதன்மையானவர்கள், இக்காரியத்தில் உங்கள் கருத்து என்ன என்பதை உண்மையில் எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டான்.(11)

முனிவர்கள், “ஓ! மன்னா, வேள்விகள் தானியங்களைக் கொண்டு செய்யப்பட வேண்டுமென நாங்கள் கருதுகிறோம். எனினும், தேவர்களோ விலங்குகளைக் கொண்டு வேள்விகள் செய்யப்பட வேண்டும் எனச் சொல்கின்றனர். எங்களுக்கிடையில் நீதிபதியாக இருந்து இந்தக் கருத்துகளில் எது சரி என்பதைச் சொல்வாயாக” என்றனர்”.(12)

பீஷ்மர் தொடர்ந்தார், “தேவர்களால் சொல்லப்படும் கருத்து என்ன என்பதை அறிந்த வசு {உபரிசரன்}, அவர்களுக்குச் சாதகமாக விலங்குகளைக் கொண்டே வேள்விகள் செய்யப்பட வேண்டும் என்று சொன்னான்.(13)

சூரியனின் காந்தியுடன் கூடிய முனிவர்கள் அனைவரும் இந்தப் பதிலால் மிகவும் கோபமடைந்தனர். தேரில் அமர்ந்திருந்தவனும், (தவறாகத்) தேவர்களின் தரப்பை அடைந்தவனுமான வசுவிடம் அவர்கள்,(14) “நீ (தவறாகத்) தேவர்களின் தரப்பை அடைந்ததால், சொர்க்கத்தில் இருந்து வீழ்வாயாக. ஓ! ஏகாதிபதி, இந்த நாள் முதல் நீ வானத்தில் பயணிக்கும் உன் சக்தியை இழப்பாயாக. எங்கள் சாபத்தால் நீ பூமியின் பரப்புக்கு அடி ஆழத்தில் மூழ்குவாய்” என்றனர்.(15)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, முனிவர்கள் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், உடனே கீழே விழுந்த மன்னன் உபரிசரன், பூமியின் குழிக்குச் சென்றான். எனினும், நாராயணனின் ஆணையின் பேரால் அவனது நினைவு தவறவில்லை.(16) பிராமணர்களால் வசுவுக்கு இடப்பட்ட சாபத்தால் துன்புற்ற தேவர்கள், அவனுடைய நற்பேற்றின் காரணமாக, அந்தச் சாபத்தை எவ்வாறு சமன் செய்வது {தணிப்பது} என்பதைக் கவலையுடன் நினைக்கத் தொடங்கினர்.(17)

அவர்கள், “இந்த உயர் ஆன்ம மன்னன் நம் நிமித்தமாகவே சபிக்கப்பட்டிருக்கிறான். சொர்க்கவாசிகளான நாம் ஒன்று சேர்ந்து அவன் நமக்குச் செய்ததற்குப் பதிலாக அவனுக்கு நன்மையைச் செய்ய வேண்டும்.” என்றனர்.(18)

நினைவின் துணைகொண்டு இதைத் தங்கள் மனங்களில் தீர்மானித்த தேவர்கள் மன்னன் உபரிசரன் இருந்த இடத்திற்குச் சென்றனர். அவனது முன்னிலைக்குச் சென்ற அவர்கள்,(19) பிராமணர்களின் பெருந்தேவனிடம் (நாராயணனிடம்) நீ அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டிருக்கிறாய். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பெருந்தேவனாக இருக்கும் அவன், உன்னில் நிறைவடைந்திருப்பதால், உன் மீது விழுந்திருக்கும் சாபத்தில் இருந்து உன்னை மீட்பான்.(20) எனினும், உயர் ஆன்ம பிராமணர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதே முறையானது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உண்மையில் அவர்களது தவங்கள் கனி தர வேண்டும்[1].(21) உண்மையில் நீ வானத்தில் இருந்து பூமிக்கு ஏற்கனவே விழுந்துவிட்டாய். எனினும், ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உன்னைப் பொறுத்தவரையில் உனக்கு நாங்கள் உதவ விரும்புகிறோம்.(22) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நீ இந்தக் குழியில் இருக்கும்வரை (எங்கள் வரத்தின் மூலம் உனக்குரிய வாழ்வாதாரத்தைப்) பெறுவாயாக.(23) பிராமணர்களால் குவிந்த மனத்துடனும், புனித மந்திரங்களின் துணையுடனும் வேள்விகளில் ஊற்றப்படுவதும், வசுதாரம் {வஸோர்த்தாரை / ஆஜ்யதாரை} என்ற பெயரில் அழைக்கப்படுவதுமான தெளிந்த நெய்யின் இழையானது, எங்களது பொறுப்பில் உனதாகட்டும். உண்மையில், பலவீனமோ, மனத்தளர்வோ உன்னைப் பற்றாது[2].(24) ஓ! மன்னர்களின் மன்னா, பூமியின் குழிக்குள் வாழும்போது நீ வசுதாரம் என்றழைக்கப்படும் தெளிந்த நெய்க்கீற்றுகளைக் குடிக்கப் போவதால், பசியோ, தாகமோ உன்னைப் பீடிக்காது. உன் சக்தியும் குன்றாது. நாங்கள் உனக்குத் தரும் இந்த வரத்தின் விளைவால், தேவர்களின் தேவனான நாராயணன், எங்களிடம் நிறைவடைந்து, உன்னை இங்கிருந்து பிரம்மலோகத்திற்குக் கொண்டு செல்வான்” என்றார்கள்.(25)மன்னனுக்கு இந்த வரங்களை அளித்த பிறகு, மன்னனுக்கு இவ்வரங்களை அளித்த தேவலோகவாசிகளும், தவங்களைச் செல்வமாகக் கொண்ட அந்த முனிவர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்றனர்.(26) அப்போது அந்த வசுவானவன், ஓ! பாரதா, அண்டத்தைப் படைத்தவனைத் துதிக்கத் தொடங்கி, பழங்காலத்தில் நாராயணனின் வாயில் இருந்து வெளிவந்த புனித மந்திரங்களை அமைதியாக ஓதிக் கொண்டிருந்தான்[3].(27) அம்மன்னன் பூமியின் குழிக்குள் வசித்துவந்தாலும், ஓ! பகைவர்களைக் கொல்பவனே {யுதிஷ்டிரா}, ஒவ்வொரு நாளும் ஐந்து வேளைகளில் செய்யப்படும் நன்கறியப்பட்ட ஐந்து வேள்விகளில் தேவர்கள் அனைவரின் தலைவனான அந்த ஹரியை வழிபட்டு வந்தான்.(28) ஹரி என்றும் அழைக்கப்படும் நாராயணன், அந்தத் துதிகளின் விளைவால், நிறைவடைந்து, தன்னையே ஒரே புகலிடமாக எண்ணி தன்னையே முழுமையாகச் சார்ந்திருந்தவனும், புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியவனுமான அவனிடம் உயர்ந்த நிறைவையடைந்தான்.(29)அப்போது, வரங்களை அளிப்பவனான சிறப்புமிக்க விஷ்ணு, பணியாளனாகத் தன்னிடம் காத்திருந்தவனும், பறவைகளில் முதன்மையானவனும், பெரும் வேகம் கொண்டவனுமான கருடனிடம் இந்த இனிய இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(30) “ஓ! பறவைகளில் முதன்மையானவனே, ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. அற ஆன்மா கொண்டவனாகவும், கடும் நோன்புகளைக் கொண்டவனாகவும், வசு என்ற பெயரில் ஒரு பெரும் மன்னன் இருக்கிறான். பிராமணர்களின் கோபத்தால் அவன் பூமியின் குழிக்குள் வீழ்ந்திருக்கிறான்.(31) பிராமணர்கள் (தங்கள் சாபம் பலித்திருப்பதால்) போதுமான அளவுக்குக் கௌரவிக்கப்பட்டு இருக்கின்றனர். நீ இப்போது அந்த மன்னனிடம் செல்வாயாக.(32) ஓ! கருடா, பூமியின் குழிக்குள் இப்போது வசித்து வருபவனும், வானத்தில் பறக்க முடியாதவனும், மன்னர்களில் முதன்மையானவனுமான அந்த உபரிசரனிடம் என் ஆணையின் பேரில் சென்று, தாமதமில்லாமல் அவனை உயர்ந்த ஆகாயத்திற்குக் கொண்டு வருவாயாக” என்றான் {விஷ்ணு}.(33)

விஷ்ணுவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கருடன், தன் சிறகுகளை விரித்து, காற்றின் வேகத்தில் விரைந்து, மன்னன் வசு வாழ்ந்துவந்த பூமியின் குழிக்குள் நுழைந்தான்.(34) திடீரென அந்த வினதையின் மகன் {கருடன்}, அம்மன்னனைத் தூக்கிக் கொண்டு வானத்தில் உயரப் பறந்து, அங்கேயே தன் அலகுகளில் இருந்து மன்னனை விடுவித்தான்.(35) அந்தக் கணத்தில் மீண்டும் தன் தேவ வடிவத்தை அடைந்த மன்னன் உபரிசரன், பிரம்மலோகத்திற்குள் மீண்டும் நுழைந்தான்.(36) ஓ! குந்தியின் மகனே, இவ்வழியிலேயே அந்தப் பெரும் மன்னன் பேச்சின் களங்கத்திற்காகப் பிராமணர்களின் சாபத்தின் மூலம் முதலில் விழுந்து, பெருந்தேவனின் (விஷ்ணுவின்) ஆணையின் பேரில் மீண்டும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(37) அனைத்திலும் முதன்மையானவனும், பலமிக்கவனுமான தலைவன் ஹரியை மட்டுமே அவன் {உபரிசரன்} அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} வழிபட்டு வந்தான். இந்த அர்ப்பணிப்புமிக்க வழிபாட்டின் காரணமாகத்தான் அம்மன்னன், பிராமணர்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட சாபத்தில் இருந்து தப்புவதிலும், பிரம்மனின் பேரின்ப உலகத்தை மீண்டும் அடைவதிலும் மிக விரைவாக வென்றான்”.(38)

பீஷ்மர் தொடர்ந்தார், “பிரம்மனின் ஆன்ம மகன்களின் தோற்றம் குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். பழங்காலத்தில் தெய்வீக முனிவரான நாரதர் எவ்வாறு வெண்தீவிற்கு {ஸ்வேதத்வீபத்திற்குச்} சென்றார் என்பதை நான் இப்போது சொல்லப் போகிறேன், சிதறாத கவனத்துடன் கேட்பாயாக”.(39)

நாராயணத் துதி! – சாந்திபர்வம் பகுதி – 339-நாராயணனைக் காணச் சென்ற நாரதர்; நாரதர் சொன்ன நாராயணத் துதி ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்றழைக்கப்படும் பரந்த ஆட்சிப்பகுதியை அடைந்த சிறப்புமிக்க முனிவர் {நாரதர்}, (நான் ஏற்கனவே உன்னிடம் சொன்னது போன்ற) சந்திர காந்தியைக் கொண்ட அதே வெண்மனிதர்களைக் கண்டனர்.(1) நாராயணனைக் காண விரும்பிய அவர், மிகக் கடினமான நோன்புகளை நோற்றபடியே, புனிதமான மந்திரங்களை அமைதியாக உரைப்பதில் அமைதியாகவும், கவனமாகவும் ஈடுபட்டு அங்கே வசிக்கத் தொடங்கினார்.(2) குவிந்த மனத்தைக் கொண்ட அந்த மறுபிறப்பாள முனிவர், கரங்களை உயர்த்தி, யோகத்தில் நின்றபடி, குணங்கள் கொண்ட மற்றும் குணங்கள் அனைத்தும் அற்ற ஆன்மாவான {சகுண மற்றும் நிர்க்குண பரமாத்மாவான} அண்டத்தின் தலைவனிடம் பின்வரும் பாடலைப் பாடினார்.(3)

நாரதர், “ஓ! தேவர்களின் தேவா {தேவதேவேசனே}, ஓ! செயல்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனே {நிஷ்கிரியனே}, குணங்கள் அற்றவனே {நிர்க்குணனே}, உலகங்கள் அனைத்திற்கும் சாட்சியாக இருப்பவனே {லோகஸாக்ஷியே}, க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுபவனே {க்ஷேத்ரஜ்ஞனே}, அனைத்திலும் முதன்மையானவனே {புருஷோத்தமனே}, எல்லையற்றவனே {அநந்தனே}, புருஷன் என்றழைக்கப்படுபவனே {புருஷனே}, பெரும்புருஷனே {மஹாபுருஷனே}, புருஷர்கள் அனைவரிலும் முதன்மையானவனே {புருஷோத்தமனே}, முக்குணங்களின் ஆன்மாவானவனே {த்ரிகுணனே}, முதன்மையானவன் என்று அழைக்கப்படுபவனே {பிரதாநனே}, அமுதமாக இருப்பவனே {அம்ருதனே}, இறப்பற்றவன் என்று அழைக்கப்படுபவனே {அம்ருதாக்யனே}, அனந்தன் (சேஷன்) என்றழைக்கப்படுபவனே {அநந்தாக்யனே}, வெளியாக {ஆகாயமாக} இருப்பவனே {வியோமனே}, தொடக்கமற்றவனே {அம்ருதாத்மாவே}, வெளிப்பட்டும், வெளிப்படாமலும், இருந்தும், இல்லாமலும் இருப்பவனே {ஸதஸத்வ்யக்தாவ்யக்தனே}, வாய்மையின் இல்லமாக இருப்பவனே {ருத்தாமனே}, தேவர்களில் முதல்வனே {அதிதேவனே} (நாராயணனே),

செல்வங்களை (அல்லது செயல்களின் கனிகளை) அளிப்பவனே {வஸ்பிரதனே}, தக்ஷன் மற்றும் படைப்பின் தலைவர்கள் பிறரோடு அடையாளங்காணப் படுபவனே {பிரஜாபதியே}, அஸ்வதம் {அரசமரம்} மற்றும் பெரும் மரங்களாக இருப்பவனே {ஸுப்ரஜாபதியே}, நான்கு தலை பிரம்மனே {வநஸ்பதியே}, படைக்கப்பட்ட பொருட்கள் அடைதிலும் தலைவனே {மஹாபிரஜாபதியே}. வாக்கின் தலைவனே {ஊர்ஜஸ்பதியே}, அண்டத்தின் (அல்லது இந்திரனின்) தலைவனே {வாஸ்பதியே}, நீக்கமற நிறைந்திருக்கும் ஆன்மாவே {ஜகத்பதியே}, சூரியனாக இருப்பவனே {மநஸ்பதியே}, பிராணன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சாக இருப்பவனே {திவஸ்பதியே}, நீர்நிலைகளின் தலைவனே (வருணனே) {மருத்பதியே}, பேரரசனே {ஸலிலபதியே}, அல்லது மன்னனோடு அடையாளங்காணப்படுபவனே {பிருதிவீபதியே}, திசைப்புள்ளிகளைச் சார்ந்த லோகபாலர்களோடு அடையாளம் காணப்படுபவனே {திக்பதியே}, இறுதி அழிவின் போது அண்டத்தின் புகலிடமாக இருப்பவனே {பூர்வநிவாஸனே}, வெளிப்படாதிருப்பவனே {குஹ்யனே},

பிரம்மனுக்கு வேதங்களைக் கொடுத்தவனே {பிரம்மபுரோஹிதனே}, வேள்விகளோடு அடையாளம் காணப்படுபவனே {பிரம்மகாயிகனே}, உடல்களின் துணையுடன் பிராமணர்களால் அடையப்படும் வேத கல்வியும், தேவர்களின் நால்வகைக் கோட்பாடுகளோடு அடையாளம் காணப்படுபவனே {ராஜகனே}, நான்கு வர்ணங்களாக இருப்பவனே {சாதுர்மஹராஜிகனே}, பிரகாசம் கொண்டவனே {ஆபாஸுரனே}, பெரும் பிரகாசம் கொண்டவனே {மஹாபாஸுரனே}, காயத்ரி மற்றும் பிற புனித மந்திரங்களுடன் ஏழு பெரும் வேத காணிக்கைகளை ஏற்பவனே {சப்தமஹாபாகனே}, யமனே {யாம்யனே}, சித்திரகுப்தனும், யமனின் தொண்டர்களாக ஆனவனே {மஹாயாம்யனே}, யமனின் மனைவியே {ஸம்ஜ்ஞாஸம்ஜ்ஞனே}, துஷிதன் என்றழைக்கப்படும் தேவ வகையைச் சேர்ந்தவனே {துஷிதனே}, மஹா துஷிதன் என்றழைக்கப்படும் வேறு தேவ வகையைச் சேர்ந்தவனே {மஹாதுஷிதனே}, காலனாக இருப்பவனே {பிரமர்த்தநனே}, ஆசையாகவும், காலனுக்குத் துணை புரிய படைக்கப்படும் நோய்கள் அனைத்தாகவும் {பரிநிர்மிதனே} இருப்பவனே, உடல்நலமாகவும், நோயில் இருந்துவிடுபட்ட நிலையாகவும் {அபரிநிர்மிதனே} இருப்பவனே, ஆசைகள் மற்றும் விருப்பங்களுக்கு உட்படுபவனே {வசவர்த்தினே}, ஆசைகள் மற்றும் விருப்பங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவனே {அவசவர்த்தினே}, பல்வேறு இனங்களில், வடிவங்களில் எல்லையில்லாமல் வெளிப்படுபவனே {அபரிமிதனே}, தண்டிக்கப்படுபவனே {வசவர்த்தினே}, தண்டிப்பவனே {அவசவர்த்தினே},

(அக்னி ஹோத்ரம் முதலிய) சிறு வேள்விகளாக இருப்பவனே {யஜ்ஞனே}, (பிரம்ம வேள்வி முதலிய) பெரும் வேள்விகளாக இருப்பவனே {மஹாயஜ்ஞனே}, ரித்விஜர்களாக இருப்பவனே {அஸம்யஜ்ஞனே}, வேள்விகள் அனைத்தின் தோற்றமாக (வேதங்களாக) இருப்பவனே {யஜ்ஞஸம்பவனே}, நெருப்பாக இருப்பவனே {யஜ்ஞயோநியே}, {யஜ்ஞகர்ப்பனே} வேள்விகள் அனைத்தின் இதயமாக (மந்திரங்கள் மற்றும் அவற்றில் சொல்லப்படும் ஸ்லோகங்களாக) இருப்பவனே {யஜ்ஞஹ்ருதயனே}}, வேள்விகளில் பாடப்படும் பொருளாக இருப்பவனே {யஜ்ஞஸ்துதனே}, வேள்வி காணிக்கைகளின் பங்குகளை எடுத்துக் கொள்பவனே {யஜ்ஞபாகஹரனே}, ஐந்து வேள்விகளின் உடல்வடிவமாக இருப்பவனே {பஞ்சயஜ்ஞனே}, (பகல், இரவு, மாதம், பருவகாலங்கள், வருடம் என்ற) ஐந்து காலப்பிரிவுகளை, அல்லது காலப்பகுதிகளை உண்டாக்குபவனே {பஞ்சகாலகர்த்ருபதியே}, பஞ்சராத்ரம் என்றழைக்கப்படும் சாத்திரங்களைத் தவிர வேறு எதனாலும் புரிந்துகொள்ளப்பட முடியாதவனே {பஞ்சராத்ரிகனே}, எதிலிருந்தும் சுருங்காதவனே {வைகுண்டனே}, வெல்லப்படமுடியாதவனே {அபராஜிதனே}, (உடற்கட்டு இல்லாமல்) மனமாக மட்டுமே இருப்பவனே {மானஸிகனே}, {நாவமிகனே} பெயரால் மட்டுமே அறியப்படுபவனே {நாமநாமிகனே},

தலைவன் பிரம்மனாகவே இருப்பவனே {பரஸ்வாமியே}, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நோன்புகள் மற்றும் நியமங்களை நிறைவு செய்தவனே {ஸுஸ்நாதனே}, (திரிதண்டம்தரித்த) அன்னப்பறவையாக இருப்பவனே {ஹம்சனே}, (ஒரே தண்டம் தரிக்கும்) பேரன்னப்பறவையாக இருப்பவனே {பரமஹம்சனே}, (தண்டமில்லாத) முதன்மையான அன்னப்பறவையாக இருப்பவனே {மஹாஹம்ஸனே}, {பரமஜ்ஞேயனே} வேள்விகள் அனைத்திலும் முதன்மையானவனாக இருப்பவனே {பரமயாஜ்ஞிகனே}, {சாங்கிய யோகமாக இருப்பவனே {ஸாங்க்யயோகனே}, சாங்கிய தத்துவத்தின் உடல்வடிவமாக இருப்பவனே {ஸாங்க்யமூர்த்தியே}, ஜீவன்கள் அனைத்திலும் வசிப்பவனே {அம்ருதேசயனே}, அனைவரின் இதயங்களிலும் வாழ்பவனே, ஒவ்வொரு புலனிலும் வசிப்பவனே {ஹிரண்யேசயனே}, பெருங்கடலின் நீரில் மிதப்பவனே, வேதங்களில் வாழ்பவனே {வேதேசயனே}, (அண்டம் உண்டாகும்போது முட்டையின் தோற்றத்தில்) தாமரையில் கிடப்பவனே {பத்மேசயனே}, அண்டத்தின் தலைவனே {தேவேசயனே}, வழிபாட்டாளர்களைக் காப்பதற்கு எங்கும் செல்லும் துருப்புகளைக் கொண்டவனே {விஷ்வக்ஸேநனே}, உன்னை வணங்குகிறேன்.

உயிரினங்கள் அனைத்துமாகப் பிறப்பவன் {ஜகதந்வயன்} நீயே. (அனைத்து உயிரினங்களையும் கொண்ட) அண்டத்தின் தோற்றுவாய் {ஜகத்ப்ரக்ருதி} நீயே. நெருப்பையே வாயாகக் கொண்டவன் நீயே. பெருங்கடலின் நீரில், குதிரைத் தலையுடன் வெளிப்பட்டுச் செல்லும் நெருப்பு {வடவாமுகாக்நி} நீயே. வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் புனிதமாக்கப்பட்ட நெய் {ஆகுதி} நீயே. (உடலின் நெருப்பு, அல்லது வெப்பத்தைத் தூண்டி, அதை வாழவும் வளரவும் செய்யும்) தேரோட்டி {ஸாரதி என்ற அக்நி} நீயே. வஷட் {வஷட்காரம்} நீயே. ஓம் ஏன்ற ஓரசை {ஓங்காரம்} நீயே. தவங்கள் நீயே. மனம் நீயே. சந்திரமாஸ் {சந்திரன்} நீயே. வேள்வி நெய்யைப் புனிதமாக்குபவன் ச்சக்ஷுராஜ்யம்} நீயே. சூரியன் நீயே. திசைகளின் நான்கு முக்கியப் புள்ளிகளில் நின்றிருக்கும் யானைகள் {திக்கஜம்} நீயே. திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டுபவன் {திக்பாநு} நீயே. துணைத்திசைகள் அனைத்திற்கும் ஒளியூட்டுபவன் {விதிக்பாநு} நீயே.

குதிரை தலை கொண்டவன் {ஹயசிரஸ்} நீயே. ரிக் வேதத்தின் முதல் மூன்று மந்திரங்கள் {பிரதமத்ரிஸுபர்ணன்} நீயே. (பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்ற) பல்வேறு வகை மனிதர்களின் பாதுகாவலன் {வர்ணதரன்} நீயே. (கார்ஹபத்தியத்தின் தொடக்கத்தில் உள்ள) ஐந்து நெருப்புகள் பஞ்சாக்நி} நீயே. நாசி என்றழைக்கப்படும் வேள்வி நெருப்பை மூன்றுமுறை முடுக்கியவன் {திரிணாசிகேதன்} நீயே. (வேதங்களுடைய) ஆறு அங்கங்களின் புகலிடம் {ஷடங்கநிதாநன்} நீயே. வேள்விகள் மற்றும் பிற அறச் சடங்குகளில் சாமங்களைப் பாடுவதில் ஈடுபடும் முதன்மையான பிராமணர்கள் நீயே. பிராக்ஜோதிஷன் நீயே, முதல் சாமத்தைப் பாடுபவன் நீயே {ஜியேஷ்டஸாமகன்}. அதர்வசிரஸ் என்ற பெயரால் அழைக்கப்படும் உபநிஷத்தின் உடல்வடிவம் {அதர்வசிரஸ்} நீயே. (சூரிய, சக்தி, கணேச, சிவ மற்றும் விஷ்ணு வழிபாடு தொடர்புடைய) முதன்மையான ஐந்து சாத்திரங்களின் பொருள் {பஞ்சமஹாகல்பன்} நீயே.

நீரின் நுரையை மட்டுமே உண்டு வாழும் ஆசான் என்று அழைக்கப்படுபவன் {பேநபாசார்யன்} நீயே. வாலகில்யன் நீயே. யோகத்தில் இருந்து வீழாதவனின் உடல்வடிவம் {வைகாநஸன்} நீயே. சரியான தீர்மானம் அல்லது அறிவின் உடல்வடிவம் {அபக்நயோகனும், அபக்நபரிஸங்க்யாநனும்} நீயே. யுகங்களின் தொடக்கம் {யுகாதி} நீயே. யுகங்களின் நடுப்பகுதி {யுகமத்யன்} நீயே. அவற்றின் முடிவும் {யுகநித்நன்} நீயே. ஆகண்டலன் (இந்திரன்) நீயே. பிராசீனகர்ப்பனும், கௌசிகனும் நீயே. புருஷ்டுதன் நீயே. புருஹூதன் நீயே, அண்டத்தின் கைவினைஞன் நீயே. அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் {விஷ்வகிருத்} நீயே. எல்லையற்ற அசைவுகளைக் கொண்டவன் {விஷ்வஜித்} நீயே. எல்லையில்லா உடல்களைக் கொண்டவன் {விஷ்வரூபன்} நீயே. முடிவில்லாதவன் {அநந்தகதி} நீயே, தொடக்கமில்லாதவன் {அநந்தபோகன்} நீயே, நடுவுநிலை இல்லாதவன் {அநாதி} நீயே. வெளிப்படாத நடுப்பகுதியைக் கொண்டவன் {அமத்யன்} நீயே.

வெளிப்படாத முடிவைக் கொண்டவன் {அவ்யக்தமத்யனும், அவ்யக்தநிதநனும்} நீயே. நோன்புகளை இல்லமாகக் கொண்டவன் {விரதாவாஸன்} நீயே. பெருங்கடலில் வசிப்பவன் {ஸமுத்ராதிவாஸன்} நீயே. புகழ், தவங்கள், தற்கட்டுப்பாடு, செழிப்பு, அறிவு, பெருஞ்சாதனைகள் மற்றும் அண்டத்திற்குரிய அனைத்தின் இல்லமாக இருப்பவன் {ய்யோவாஸனும், தபோவாஸனும், தமர்வாஸனும், லக்ஷ்ம்யாவாஸனும், வித்யாவாஸனும், கீர்த்யாவாஸனும், ஸ்ரீவாஸனும், ஸர்வவாஸனும்} நீயே. வாசுதேவன் நீயே. அனைத்து விருப்பங்களையும் அருள்பவன் {ஸர்வச்சந்தகன்} நீயே. ராமனைத் தன்தோள்களில் சுமந்த குரங்கு {ஹரிஹரயன்} நீயே. பெருங்குதிரை வேள்வி {ஹரிமேதன்} நீயே. பெரும் வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகளைப் பங்காகப் பெறுபவன் {மஹாயஜ்ஞபாகஹரன்} நீயே. வரங்களையும், மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அளிப்பவன் {வரப்ரதனும், ஸுகப்ரதனும், தனப்ரதனும்} நீயே. ஹரிக்கு அர்ப்பணிப்புள்ளவன் நீயே. புலனடக்கம் கொண்டவன் {ஹரிமேதன்} நீயே. நோன்புகளும், நியமங்களும் {யமனும், நியமனும்} நீயே. பேரழிவுகள் {கிருச்ரன்} நீயே, கடும் பேரழிவுகள் {அதிக்ருச்ரன்} நீயே, மிகக் கடும் பேரழிவுகளும் {மஹாக்ருச்ரன்} நீயே.

நோன்புகள் மற்றும் அற, பக்திச் சடங்குகளைச் செய்பவன் {நியமதரனும், நிவ்ருத்தப்ரதமனும்} நீயே. பிழைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவன் {நிவ்ருத்திதர்ம்பரவசகதன்} நீயே. பிரம்மச்சாரி {பிரவசநகதனே} நீயே. பிருசினியின் கருவறையில் பிறந்தவன் {பிருச்நிகர்ப்பப்ரவருததனே} நீயே. வேதசடங்குகள் மற்றும் செயல்கள் அனைத்தும் பிறப்பெடுத்த இடம் {பிரவ்ருத்தவேதவிக்ரியன்} நீயே. பிறப்பில்லாதவன் {அஜன்} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வகதி} நீயே. அனைத்துப் பொருட்களிலும் கண்களைச் செலுத்துபவன் {நக்ராஹ்யன்} நீயே. புலன்களால் புரிந்து கொள்ளப்பட முடியாதவன் {அக்ஷயன்} நீயே. சிதைவுக்கு உள்ளாகாதவன் {அசலன்} நீயே. பெரும்பலம் கொண்டவன் {மஹாவிபூதி} நீயே. பார்க்கமுடியாத அளவுக்குப் பரந்த உடலைக் கொண்டவன் {மஹாத்ம்யசரீரன்} நீயே. புனிதமானவனும் {பவித்ரனும்}, மிகப் புனிதமானவனும் {மஹாபவித்ரனும்} நீயே. தங்கமயமானவன் {ஹிரண்யமயன்} நீயே.

பரந்தவன் {பிருஹத்} நீயே. தர்க்கம் அல்லது வாதத்தின் கருத்துக்கு அப்பாற்பட்டவன் {அப்தர்க்யன்} நீயே. அறிந்து கொள்ளப்பட முடியாதவன் {அவிஜ்ஞேயன்} நீயே. காரணங்களில் முதன்மையானவன் {பிரம்மாக்ரியன்} நீயே. அனைத்து உயிரினங்களையும் படைப்பவனும் {பிரஜஸர்க்ககரன்}, அவற்றை அழிப்பவனும் {பிரஜாநித்னகரன்} நீயே. பெரும் மாயசக்திகளைக் கொண்டவன் {மஹாமாயாதரன்} நீயே. சித்திரசிகண்டி என்றழைக்கப்படுபவன் நீயே. வரங்களை அளிப்பவன் {வரப்ரதன்} நீயே. வேள்விக் காணிக்கைகளின் பங்கை ஏற்பவன் {புரோடோசபாகஹரன்} நீயே. வேள்விகள் அனைத்தில் இருந்தும் தகுதியை அடைபவன் {கதாத்வரன்} நீயே.

ஐயங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவன் {சிந்நத்ருஷ்ணன்} நீயே. எங்கும் நிறைந்தவன் {ஸர்வதோவ்ருத்தன்} நீயே. பிராமணனின் வடிவம் கொண்டவன் {பிராம்மணரூபன்} நீயே. பிராமணர்களிடம் அன்பு கொண்டவன் {பிராம்மணபிரியன்} நீயே. அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் {விஷ்வமூர்த்தி} நீயே. மிகப் பரந்த வடிவைக் கொண்டவன் {மஹாமூர்த்தி} நீயே. நண்பர்களில் பெரியவன் {பாந்தவன்} நீயே. வழிபாட்டாளர்கள் அனைவரிடமும் கருணை கொண்டவன் {பக்தவத்ஸலன்} நீயே. பிராமணர்களின் பெருந்தேவன் {பிராம்மண்யதேவன்} நீயே. உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட சீடன் நானே. நான் உன்னைக் காண விரும்புகிறேன். விடுதலையின் வடிவில் இருக்கும் {நிர்வகல்பகஜ்ஞானத்தின் பொருட்டு} உன்னை நான் வணங்குகிறேன்” {என்று வேண்டினார் நாரதர்}.(4)

நோய் நீக்கும் புராணம்! – சாந்திபர்வம் பகுதி – 340-நாரதருக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நாராயாணன்; நாரதருக்கும், நாராயணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்; தன் இயல்பையும், தனது அவதாரங்களையும் நாரதருக்கு எடுத்துச் சொன்ன நாராயணன்; பிரம்மன் காணாத நாராயணனின் வடிவத்தைக் கண்ட நாரதர்; நாராயணீயத்தின் மகிமையை உரைத்த பீஷ்மர்; படிப்பதாலும், கேட்பதாலும், நோய் நீங்கும் பலனைத் தரும் புராணம்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு பிறர் அறியாத பெயர்களால் பாடப்பட்டவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனுமான தெய்வீக நாராயணன், தவசி நாரதருக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(1) அவனது வடிவம் சந்திரனை விடத் தூய்மையானதாகவும், சில தன்மைகளில் சந்திரனில் இருந்து வேறுபட்டதாகவும் இருந்தது. அவன் சுடர்மிக்க நெருப்பின் நிறத்தைக் கொண்டிருந்தான். அந்தப் பலமிக்கத் தலைவன் விஷ்டி என்ற வடிவத்தில் இருந்தான்.(2) சில தன்மைகளில் கிளியின் இறகுகளுக்கு ஒப்பானவனாகவும், சில தன்மைகளில் தூய படிகத் திரளுக்கு ஒப்பாகவும், சில தன்மைகளில் மை மலைக்கு ஒப்பாகவும், சில தன்மைகளில் தூய்மையான தங்கத் திரளுக்கு ஒப்பாகவும் அவன் இருந்தான்.(3) அவனது நிறம் முதலில் அமையும் பவளத்திற்கு ஒப்பானதாகவும், வெண்மையாகவும் இருந்தது. சில தன்மைகளில் அந்த நிறம் தங்கவண்ணமாகவும், சில தன்மைகளில் வைடூரியத்திற்கு ஒப்பாகவும் இருந்தது.(4) சில தன்மைகளில் நீலவைடூரிய வண்ணத்திற்கு ஒப்பாகவும், சில தன்மைகளில் இந்திரநீலக்கல்லுக்கு ஒப்பாகவும் இருந்தது. சில தன்மைகளில் மயில்கழுத்தின் வண்ணத்திற்கும், சிலவற்றில் முத்து மாலைக்கும் ஒப்பானதாக இருந்தது.(5)

அந்த நித்திய தேவன், தன் மேனியில் பல்வேறு வகைகளிலான இந்த வண்ணங்களைச் சுமந்தபடி நாரதரின் முன்பு தோன்றினான். ஆயிரங்கண்களைக் கொண்டவனாகவும், பேரழகுவாய்ந்தவனாகவும் அவன் இருந்தான். நூறு தலைகளையும், நூறு கால்களையும் கொண்டிருந்தான்.(6) ஆயிரம் வயிறுகளையும், ஆயிரம் கரங்களைக் கொண்டிருந்தான். இருப்பினும் அவன் மனத்திற்கு முழுமையாகப் புலப்படாதவனாகவே தோன்றினான். அவனது ஒரு வாயால் ஓம் என்ற ஓரசையையும், ஓம்-மைத்தொடர்ந்து காயத்ரியையும் {காயத்ரி மந்திரத்தையும்} சொன்னான்.(7) மனத்தை முழுக் கட்டுப்பாட்டில் வைந்திருந்தவனும், ஹரி மற்றும் நாராயணன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டவனுமான அந்தப் பெருந்தேவன், நான்கு வேதங்களில் அரண்யகம் என்ற பெயரில்அறியப்பட்ட பல மந்திரங்களைச் சொன்னான்.(8) தேவர்கள் அனைவரின் தலைவனும், வேள்விகளில் துதிக்கப்படுபவனுமான அந்தப் பெருந்தேவன், தன் கரங்களில் ஒரு வேள்வி பீடத்தையும், ஒரு கமண்டலுவையும், சில வெண் ரத்தினங்களையும், பாதணிகள் இரண்டையும், தர்ப்பைப் புற்கட்டு ஒன்றையும், ஒரு மான் தோலையும், பற்குச்சி ஒன்றையும், சுடர்மிக்கச் சிறு நெருப்பையும் கொண்டிருந்தான்[1].(9) உற்சாகம் மிக்க ஆன்மா கொண்டவரும், மறுபிறப்பாளரும், வாக்கைக் கட்டுப்படுத்தியவருமான நாரதர், அந்தப் பெருந்தேவனை வணங்கித் துதித்தார்.(10) அவ்வாறு மதிப்புடன் தலைவணங்கி நின்றவரிடம் {நாரதரிடம்}, சிதைவறியாதவனும், தேவர்கள் அனைவரிலும் முதல்வனுமான அவன் {நாராயணன்} பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(11)அந்தப் புனிதமானவன் {நாராயணன்}, “பெரும் முனிவர்களான ஏகதர், திவிதர், திரிதர் ஆகியோர் என்னைக் காண்பதற்காக இந்த ஆட்சிப்பகுதிக்கு வந்தனர்.(12) எனினும், அவர்களால் தங்கள் விருப்பங்களைக் கனியச் செய்ய இயலவில்லை. தங்கள் மொத்த இதயங்களுடன் என்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்களைத் தவிர வேறு எவராலும் என்னைக் காண முடியாது. உம்மைப் பொறுத்தவரையில், என்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்கள் அனைவரிலும் நிச்சயம் முதன்மையானவர் நீர்.(13) இந்த உடல்கள் நான் ஏற்கும் சிறந்த உடல்களாகும். ஓ! மறுபிறப்பாளரே, இவை தர்மனின் இல்லத்தில் பிறந்தன. நீர் எப்போதும் அவர்களை வணங்கி, அந்த வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட விதிகளுடன் கூடிய சடங்குகளைச் செய்வீராக.(14) ஓ! பிராமணரே, நீர் விரும்பும் வரங்களை என்னிடம் கேட்பீராக. இன்று நான் உம்மிடம் நிறைவடைந்திருக்கிறேன், இப்போது சிதைவிலும், அழிவிலும் இருந்து விடுபட்ட என அண்ட வடிவில் உமக்கு முன்பு தோன்றியிருக்கிறேன்” என்றான் {நாராயணன்}.(15)

நாரதர், “ஓ! புனிதமானவனே, இன்று உன் காட்சி கிடைக்கப்பெற்றதால், ஓ! தேவா, நான் நோற்று வந்த என் தவங்கள், தற்கட்டுப்பாடு, நோன்புகள் மற்றும் நியமங்கள் அனைத்தும் தாமதமில்லாமல் கனிந்திருப்பதாகக் கருதுகிறன்.(16) உண்மையில், ஓ! நித்திய தலைவா, இன்று உன்னை நீ எனக்கு வெளிப்படுத்தியதே நான் வேண்டிய உயர்ந்த வரமாகும். ஓ! புனிதமானவனே, அண்டத்தையே உன் கண்ணாகக் கொண்டவன் நீயே. சிங்கம் நீயே. உன் வடிவம் அனைத்துடனும் அடையாளங்காணத்தக்கது. ஓ! தலைவா, பலம் கொண்டவனான நீ பரந்தவனாகவும், எல்லையற்றவனாகவும் இருக்கிறாய்” என்றார்”.(17)

பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வாறு பரமேஷ்டியின் மகனான நாரதரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அந்தப் பெருந்தேவன் அந்தத் தவசியிடம் {நாரதரிடம்}, “ஓ! நாரதரே, செல்வீராக, தாமதிக்காதீர்.(18) சந்திர நிறத்தைக் கொண்ட இந்த வழிபாட்டாளர்கள் அனைவரும், அனைத்துப் புலன்களும் இல்லாதவர்கள், அவர்கள் எவ்வகை உணவை உண்டும் உயிர்வாழவில்லை. மேலும் அவர்கள் அனைவரும் விடுதலையடைந்தவர்களாவர் {முக்தியடைந்தவர்களாவர்}. என்னிடம் முழுமையாகக் குவிந்த மனங்களுடன் மக்கள் என்னைக் குறித்துச் சிந்திக்க {தியானிக்க} வேண்டும். அத்தகைய வழிபாட்டாளர்கள் எவ்வகைத் தடைகளையும் ஒருபோதும் எதிர்கொள்ளமாட்டார்கள்.(19) இந்த மனிதர்கள் அனைவரும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். பழங்காலத்திலிருந்தே இவர்கள் என்னிடம் முழு அர்ப்பணிப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் இருந்து விடுபட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னில் நுழையவும், என் சுயத்தில் கலக்கவும் தகுந்தவர்களாக இருக்கிறார்கள்.(20)

கண்களால் காணப்பட முடியாதவனும், தீண்டும் புலனால் தீண்டப்பட முடியாதவனும், மணப்புலனால் நுகரப்பட முடியாதவனும், சுவை புலனின் உணர்தலுக்கு அப்பாற்பட்டவனும்,(21) சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்களால் தீண்டப்பட முடியாதவனும், அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், அண்டத்தின் சாட்சியாக இருப்பவனும், மொத்த அண்டத்தின் ஆன்மாவாக விளக்கப்படுபவனும்,(22) படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் உடல் அழிவிலும் அழிக்கப்படாதவனும், பிறப்பற்றவனும், மாற்றமில்லாதவனும், நித்தியமானவனும், குணங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், பிரிக்கப்பட முடியாதவனும், முழுமையானவனும்,(23) இருபத்து நான்கு தத்துவங்களைக் கடந்து நிற்கும் இருபத்தைந்தாவதாகக் கருதப்படுபவனும், புருஷன் என்ற பெயரால் அழைக்கப்படுபவனும், செயலற்றவனும், ஞானத்தால் மட்டுமே புரிந்து கொள்ளப்படக்கூடியவனும்,(24) மறுபிறப்பாளர்களில் முதன்மையானோர் நுழைந்து விடுதலை அடையும் இடமாக இருப்பவனும், நித்தியமான பரமாத்மாவுமான அவன் வாசுதேவன் என்ற பெயரால் அறியப்படுகிறான்.(25)

ஓ! நாரதரே, அந்தத் தேவனின் மகிமையையும், பலத்தையும் காண்பீராக. அவன் ஒருபோதும் நற்செயல்களாலோ, தீச்செயல்களாலோ தீண்டப்படுவதில்லை. சத்வ, ரஜஸ், தமஸ் என்பன (மூலமான) முக்குணங்களாகச் சொல்லப்படுகின்றன. இவை அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் வசித்துச் செயல்படுகின்றன.(27) க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படும் ஜீவாத்மாவானவன், இந்த முக்குணங்களின் செயல்பாட்டை அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் செய்கிறான். எனினும், அவன் அவற்றைக் கடந்தவனாகவும், அவற்றால் தீண்டப்பட முடியாதவனாகவும் இருக்கிறான். இந்தக் குணங்களில் இருந்து விடுபட்ட அவன் அவற்றை அனுபவிப்பவனாகவும், தாங்கிக் கொள்பவனாகவும் இருக்கிறான். அவற்றைத் தானே உண்டாக்கிய அவன் அவை அனைத்திற்கும் மேலானவனாவான்.(28)

ஓ! தெய்வீக முனிவரே, அண்டத்தின் புகலிடமான பூமியானது (அண்ட அழிவின் வேளையில்) நீரில் மறைந்து போகும். நீரானது ஒளியில் மறைந்து போகும், ஒளியானது காற்றில் மறைந்து போகும்.(29) காற்றானது வெளியில் மறைந்து போகும், வெளியானது மனத்தில் மறைந்து போகும். மனமான பெரும்பூதம், புலப்படாதவளான பிருகிருதியில் மறைந்து போகும். புலப்படாதவளான பிருகிருதி, ஓ! பிராமணரே, செயலற்ற புருஷனில் மறைந்து போவாள். புருஷனை விட உயர்ந்ததும், நித்தியமானதுமான வேறு எதுவும் கிடையாது.(31) அண்டத்தின் அசைவன மற்றும் அசையாதனவற்றிற்கு மத்தியில் நித்திய புருஷனான வாசுதேவனைத் தவிர வேறு எதுவும் மாற்றமில்லாதது இல்லை.(32) பெரும்பலம் கொண்ட வாசுதேவனே அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாவான். பூமி, காற்று, வெளி, நீர் , ஐந்தாவதாக ஒளி,(33) ஆகியனவே பெரும்பலம் கொண்ட அடிப்படை பூதங்களாகும். இவை ஒன்றுக்கொன்று கலந்து உடலென்று அழைக்கப்படும் வடிவை அடைகின்றன. ஓ! பிராமணரே, நுட்பமான ஆற்றலைக் கொண்டவனும், அனைவரின் கண்களுக்கும் புலப்படாதவனும், பலமிக்கவனுமான வாசுதேவன், உடல் என்றழைக்கப்படும் அந்த ஐந்து அடிப்படை பூதக் கலவையில் நுழைகிறான். அத்தகைய நுழைவே பிறப்பு என்றழைக்கப்படுகிறது, பிறவியடையும் அவன் அந்த உடலை அசையவும், செயல்படவும் வைக்கிறான்.(34) அடிப்படையான இந்த ஐந்து பூதங்களின் கலப்பு இல்லாமல் எந்த உடலும் அமையமுடியாது.(35)

மேலும், உடலுக்குள் ஜீவன் நுழையாமல், அதனுள் வசிக்கும் மனத்தால் இயங்கவோ, செயல்படவோ முடியாது. உடலுக்குள் நுழையும் பெரும்பலம் கொண்டவனே ஜீவன் என்று அழைக்கப்படுகிறான். அவன் சேஷன் மற்றும் சங்கர்ஷணன் என்ற வேறு பெயர்களாலும் அறியப்படுகிறான்.(36) எவன் தன் செயல்களின் மூலம் சங்கர்ஷணனிலிருந்து எழுகிறானோ அவன் சனத்குமாரன் என்றும், அண்ட அழிவு நேரும்போது எவனில் அனைத்து உயிரினங்களும் கலக்குமோ, எவன் அனைத்து உயிரினங்களின் மனமாக இருக்கிறானோ அவன் பிரத்யும்னன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.(37) அவனிடம் இருந்து காரணமாகவும், விளைவாகவும் இருக்கும் படைப்பாளன் எழுகிறான். இந்த இறுதியானவனிலிருது, அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டமனைத்தும் எழுகிறது. இவனே அநிருத்தன் என்றழைக்கப்படுகிறான். அவன் வேறு வகையில் ஈசானன் என்றும் அழைக்கப்படுகிறான், அவன் செயல்கள் அனைத்திலும் வெளிப்படுகிறான்.(38) க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படுபவனும், குணங்களற்றவனும், சிறப்புமிக்கவனுமான வாசுதேவனே, ஜீவனாகப் பிறப்பெடுக்கும்போது பலமிக்கச் சங்கர்ஷணனாக அறியப்படுகிறான்.(39) சங்கரஷ்ணனிலிருந்து ‘மனமாகப் பிறப்பவன்’ என்றழைக்கப்படும் பிரத்யும்னன் எழுகிறான். பிரத்யும்னனிலிருந்து அநிருத்தன் எழுகிறான். அவன் அகங்காரமாகவும், ஈஸ்வரனாகவும் (உயர்ந்த தலைவனாகவும்) இருக்கிறான்.(40)

என்னிலிருந்தே அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட மொத்த அண்டமும் எழுகிறது. ஓ! நாரதரே, அழிவில்லாதவையும், அழிவடைபவையும், இருப்பவையும், இல்லாதவையும் என்னிலேயே எழுகின்றன.(41) என்னில் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டோர் என்னில் நுழைந்து விடுதலையை {முக்தியை} அடைகின்றனர். நான் புருஷன் என்று அறியப்படுகிறேன். செயல்களற்ற நான் இருபத்தைந்தாவதாக {25வது தத்துவமாக} இருக்கிறேன்.(42) குணங்களைக் கடந்த நான் முழுமையானவனாகவும், பிரிக்கப்பட இயலாதவனாகவும் இருக்கிறேன். நான், முரண்பட்ட இரட்டைகளைக் கடந்தவனாகவும், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனாகவும் இருக்கிறேன். ஓ! நாரதரே, இதைப் புரிந்து கொள்ள நீர் தவறுவீர். வடிவுடையவனாக என்னை நீர் காண்கிறீர். நான் விரும்பினால், ஒரு கணத்தில் என்னால் இந்த வடிவத்தை மறைக்க முடியும். நானே உயர்ந்த தலைவனாகவும் {ஈஸ்வரனாகவும்}, அண்டத்தின் ஆசானாகவும் இருக்கிறேன்.(43) ஓ! நாரதரே, எதை நானாக நீர் காண்கிறீரோ அது என் மாயை மட்டுமே ஆகும். நான் இப்போது படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் குணங்களைக் கொண்டவனாகக் காணப்படுகிறேன். நீர் என்னை அறிந்து கொள்ள இயலாதவராக இருக்கிறீர்.(44) நான் என் நான்கு வகை வடிவங்களை உமக்குச் சொல்லியிருக்கிறன். ஓ! நாரதரே, நானே செயல்படுபவன், நானே காரணன், நானே விளைவும் ஆவேன்.(45)

நான் உயிரினங்கள் அனைத்தின் மொத்த கூட்டுத் தொகையாக இருக்கிறேன். அனைத்து உயிரினங்களும் என்னையே தங்கள் புகலிடமாகக் கொள்கின்றன. ஜீவாத்மாவைக் கண்டதாக நீர் நினைக்க வேண்டாம்.(46) ஓ! பிராமணரே, அனைத்துப் பொருட்களிலும் நான் படரந்தூடுருவி இருக்கிறேன், அனைத்து உயிரினங்களின் உள்ளும் ஆன்மாவாக இருக்கிறேன். எனினும், உயிரினங்கள் அனைத்தின் உடல்களும் அழிக்கப்படும்போதும் நான் அழிவடைவதில்லை.(47) தவ வெற்றியை அடைந்த அந்த உயர்ந்த அருளைக் கொண்ட மனிதர்கள், ஓ! பெருந்தவசியே, ரஜஸ் மற்றும் தமஸ் என்ற குணங்கள் இரண்டிலிருந்தும் விடுபட்டவர்களாக என்னில் மொத்தமாக அர்ப்பணிப்புக் கொண்டு, எனக்குள் நுழைவதில் வெற்றியடைந்தார்கள்.(48) ஹிரண்யகர்ப்பன் என்றழைக்கப்படுபவனும், உலகின் தொடக்கமாக இருப்பவனும், நான்கு முகங்களைக் கொண்டவனும், நிருக்தத்தின் உதவியின்றிப் புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், பிரம்மன் என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுபவனுமான நித்திய தேவன், என் காரியங்களைச் செய்வதிலேயே ஈடுபடுகிறான்.(49) என் கோபத்தில் பிறந்த தேவன் ருத்திரன், என் நெற்றியில் இருந்து உண்டானவனாவான். என் உடலின் வலப்பகுதியில் பதினோரு ருத்திரர்கள் (வலிமையுடன்) பெருகியிருப்பதைப் பார்பீராக.(50) என் உடலின் இடப்பக்கத்தில் பனிரெண்டு ஆதித்தியர்கள் இருக்கின்றனர். என் முன்னே இருக்கும் தேவர்களில் முதன்மையான எட்டு வசுக்களையும்,(51) என் பின்னே இருக்கும் தேவ மருத்துவர்களான நாஸத்யன் மற்றும் தஸ்ரன் ஆகிய இருவரையும் பார்ப்பீராக. பிரஜாபதிகள் அனைவரையும், ஏழு முனிவர்களையும் {சப்தரிஷிகளையும்} என் உடலில் பார்ப்பீராக.(52)

வேதங்களையும், எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கான வேள்விகள் அனைத்தையும், அமுதத்தையும், மூலிகைகள், செடிகள், தவங்கள், நோன்புகள் மற்றும் பல்வேறு வகை நியமங்களையும் என்னில் காண்பீராக.(53) ஒன்று கலந்த உள்ளார்ந்த வடிவில் என்னில் மொத்தமாக வசிப்பவையும், வலிமையின் குறியீடுகளாக இருப்பவையும், தலைமையின் குணங்கள் என்று குறிப்பாக அழைக்கப்படுபவையுமான எட்டு குணங்களையும் என்னில் காண்பீராக. ஸ்ரீ, லட்சுமி, கீர்த்தி மற்றும் கூன்முதுகுடன் கூடிய பூமியையும் காண்பீராக.(54) வேதங்களின் தாயான தேவி சரஸ்வதி என்னில் வசிப்பதைக் காண்பீராக. ஓ! நாரதரே, ஆகாயத்தில் திரியும் ஒளிக்கோள்களில் முதன்மையானவனாகத் துருவனைக் காண்பீராக.(55) நீரின் கொள்ளிடங்களான பெருங்கடல்கள் அனைத்தையும், தடகாங்களையும், ஆறுகளையும் காண்பீராக. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உள்ளார்ந்த வடிவங்களில் உள்ள பித்ருக்களில் முதன்மையான நால்வரையும் காண்பீராக. வடிவமற்றவையான (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) முக்குணங்கள் என்னில் வசிப்பதையும் காண்பீராக.(56)

தேவர்களைக் கௌரவிக்கச் செய்யப்படும் செயல்களைவிடப் பித்ருக்களைக் கௌரவிக்கச் செய்யப்படும் செயல்கள் (தகுதியின் அடிப்படையில்) மேன்மையானவையாகும். தேவர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகிய இருவரின் பித்ருவான நான் (அவர்கள் இல்லாத காலத்திலிருந்தே) தொடக்கத்தில் இருந்தே இருக்கிறேன்.(57) குதிரைத் தலையாகி, மேற்கத்திய மற்றும் வடக்கத்திய பெருங்கடலில் திரிந்து, மந்திரங்களுடன் முறையாக ஊற்றப்படும் வேள்விக் காணிக்கைகளையும், மதிப்புடனும், பக்தியுடனும் அளிக்கப்படும் திடமான வேள்வி உணவுகளையும் உட்கொள்கிறேன்.(58) பழங்காலத்தில் வேள்விகளில் என்னைத் துதித்த பிரம்மனை நானே படைத்தேன். அதனால் அவனிடம் நிறைவடைந்த நான், அவனுக்குச் சிறந்த பல வரங்களை அளித்தேன்.(59) கல்பத்தின் தொடக்கத்தில் அவன் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்றும், அகங்காரம் இருப்புக்கு வரும் தொடக்கத்தின் விளைவால் பல்வேறு பெயர்கள் சூட்டப்படும் பல்வேறு பொருட்களுடன் கூடிய உலகங்கள் அனைத்தின் அரசுரிமையையும் அவனுக்குக் கிடைக்கும் என்று அவனிடம் சொன்னேன்.(60)

(உயிரினங்களின் பழக்க வழக்கத்திற்கு) அவனால் கொடுக்கப்படக்கூடியவையும், எவராலும் மீற முடியாதவையுமான எல்லைகளையும், வரைமுறைகளையும் அவனுக்குச் சொன்னேன். அவனிடம் (வேள்விகளில் முறையான செயல்களின் மூலம்) வேண்டுவோருக்கு வரங்கள் கொடுக்கக்கூடியவனாக அவன் இருப்பான் என்பதையும் அவனுக்குச் சொன்னேன்.(61) தேவர்கள், அசுரர்கள், முனிவர்கள், பித்ருக்கள், படைப்பில் அமைந்திருக்கும் பல்வேறு உயிரினங்கள் அனைத்தினாலும் துதிக்கத்தக்கவனாக அவன் இருப்பான் என்பதையும் அவனுக்கு உறுதிகூறினேன்.(62) தேவர்களின் காரியத்தை நிறைவேற்ற நான் எப்போதும் வெளிப்படுவேன் என்பதையும், அக்காரியத்திற்காக அவன் ஒரு தந்தை தன் மகனை அழைப்பதைப் போல என்னை அழைப்பதையும் ஏற்பேன் என்பதையும் அவனுக்குப் புரிய வைத்தேன்.(63) நான் பிரம்மனிடம் நிறைவு கொண்டதன் விளைவால் அளவிலா சக்தி கொண்ட அவனுக்கு ஏற்புடைய பல உயர்ந்த வரங்களை அருளினேன். (மீண்டும்) நான் நிவிருத்தி சொல்லும் நடைமுறையைப் பின்பற்றினேன்.(64) உயர்ந்த நிவிருத்தியானது கடமைகள் மற்றும் செயல்கள் அனைத்தையும் அழிப்பதில் அடையாளம் காணப்படும். எனவே, நிவிருத்தியைப் பின்பற்றும் ஒருவன் மற்றான இன்பநிலையை அடைய வேண்டும்.(65) சாங்கிய தத்துவ உண்மைகளில் இருந்து பெறப்பட்ட தீர்மானமான முடிவுகளுடன் கூடிய கல்விமான்களான ஆசான்கள், ஞானப் பலத்தைக் கொண்ட கபிலரைப் போலவே, சூரியனின் பிரகாசத்திலும், யோகத்தின் குவிந்த நிலையிலும் வசிப்பவனாக என்னைக் குறித்துச் சொல்லியிருக்கின்றனர்.(66)

(வேத) சந்தங்களில் சிறப்புமிக்க ஹிரண்யகர்ப்பனால் மீண்டும் மீண்டும் பாடப்படுபவன் நானே. ஓ! பிராமணரே, யோக சாத்திரங்கள், யோகத்தில் திளைப்பவனாக என்னைக் குறித்துச் சொல்கின்றன.(67) நான் நித்தியமானவன். வெளிப்படும் ஒரு வடிவை ஏற்கும் நான், தற்போது சொர்க்கத்தில் வசித்து வருகிறேன். ஆயிரம் யுகங்களின் முடிவில் நான் மீண்டும் இந்த அண்டத்தை என்னுள் ஈர்த்துக் கொள்வேன்.(68) அசைவன மற்றும் அசையாதன உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தையும் என்னுள் ஈர்த்துக் கொண்ட பிறகு, ஞானத்தை மட்டுமே துணையாகக் கொண்டு நான் நீடித்திருப்பேன்.(69) பல காலங்கள் கழிந்ததும், மீண்டும் என் ஞானத்தின் துணையுடன் நான் அண்டத்தைப் படைப்பேன். என்னுடைய நான்காவது வடிவமானது அழிவற்ற சேஷனை உண்டாக்குகிறது.(70) சேஷன் சங்கர்ஷணன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறன். சங்கர்ஷணன் பிரத்யும்னனை உண்டாக்குவான். பிரத்யும்னனிலிருந்து நான் அநிருத்தனாகப் பிறப்பெடுக்கிறேன். நான் மீண்டும் மீண்டும் (என்னை) படைத்துக் கொள்கிறேன்.(71) அநிருத்தனிலிருந்து பிரம்மன் உண்டாகிறான். பின்னவன் அநிருத்தனின் தொப்புலிலிருந்து பிறப்பை அடைகிறான். பிரம்மனிலிருந்து அசைவன மற்றும் அசையாதன உள்ளிட்ட உயிரினங்கள் எழுகின்றன.(72)

ஒவ்வொரு கல்பத்தின் தொடக்கத்திலும் படைப்பானது இவ்வழியிலேயே மீண்டும் மீண்டும் நேர்கிறது என்பதை அறிவாயாக. இவ்வுலகில் நேரும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனன் போலவே படைப்பும், அழிவும் அடுத்தடுத்து நேர்கின்றன.(73) மேலும் அளவிலா சக்தி கொண்ட காலமானது மறைந்த சூரியனை மீண்டும் கொண்டு வருவதைப் போலவே, பூமியானவள் நீருக்கடியில் மூழ்கும் போது, அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகப் பன்றியின் வடிவை ஏற்று, கடலெனும் கச்சையைக் கொண்ட பூமியை மீண்டும் தன் நிலையில் நிறுத்துவேன். அதன்பிறகு, பலத்தின் செருக்கால் நிறைந்த ஹிரண்யாக்ஷன் என்ற பெயரைக் கொண்ட திதியின் மகனைக் கொல்வேன்.(74,75) பிறகு தேவர்களுக்கு நன்மை செய்வதற்காகச் சிங்கமனிதன் {நரசிங்க} வடிவை ஏற்று, வேள்விகளை அழிப்பவனான திதியின் மகன் ஹிரண்யகசிபுவைக் கொல்வேன்.(76)

(பிரஹலாதனின் மகனான) விரோசனனுக்குப் பலி என்ற பெயரில் ஒரு வலிமைமிக்க மகன் பிறப்பான். அந்தப் பேரசுரன் தேவர்களாலும், அசுரர்களாலும், ராட்சசர்களாலும் கொல்லப்பட முடியாதவனாக இருப்பான். அவன் சக்ரனை அண்டத்தின் ஆட்சியுரிமையில் இருந்து தூக்கி வீசுவான்.(77) சசியின் தலைவனை முறியடித்த பிறகு, மூவுலகங்களின் அரசுரிமையையும் அவன் எடுத்துக் கொண்ட பிறகு, நான் கசியபரின் மூலமாக அதிதியின் கருவறையில் பனிரெண்டாவது ஆதித்தியனாகப் பிறப்பேன்.(78) ஓ! நாரதரே, அளவற்ற காந்தியைக் கொண்ட இந்திரனிடம் அதை (பலியிடம் இருந்து மூவுலகங்களின் அரசுரிமையைப் பறித்து) மீட்டளித்து, தேவர்களை அவர்களுக்குரிய இடங்களில் மீண்டும் நிறுவுவேன்.(79) தானவர்களில் முதன்மையான பலியைப் பொறுத்தவரையில், அவனைப் பாதாள உலகங்களில் வசிக்கச் செய்வேன்.(80)

திரேதா யுகத்தில் பிருகு குலத்தில் ராமனாக {பரசுராமராகப்} பிறந்து, பலத்திலும், உடமைகளிலும் செருக்கடைந்திருக்கும் க்ஷத்திரியர்களை அழிப்பேன்.(81) திரேதா யுகம் முடிந்து, துவாபர யுகத்தின் தொடக்கத்தில் நான் இக்ஷ்வாகு அரச குலத்தைச் சார்ந்த தரசரதனின் மகன் ராமனாக நான் பிறப்பெடுப்பேன்.(82) அந்நேரத்தில், ஏகதர், திவிதர் என்ற பெயர்களால் அழைக்கப்படும் பிரஜாபதியின் இரண்டு மகன்கள், தங்கள் தம்பியான திரிதருக்குச் செய்த தீங்கின் விளைவால், மனித வடிவின் அழகை இழந்து குரங்குகளாகப் பிறப்பை அடைவர்.(83) ஏகதர் மற்றும் திவிதரின் குலத்தில் பிறக்கும் குரங்குகள், பெரும்பலத்திலும், வலிமையிலும், சக்தியிலும் பெருகி, சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான ஆற்றலைப் பெற்றிருப்பர். ஓ! மறுபிறப்பாளரே, அந்தக் குரங்குகள் அனைத்தும், தேவ காரியங்களை நிறைவேற்றுவதில் எனக்குக் கூட்டாளிகளாவர்.(84) பிறகு நான், ராட்சசர்களின் பயங்கரத் தலைவனும், புலஸ்திய குலத்தில் இழிந்தவனும், சீற்றமிக்கவனும், உலகங்கள் அனைத்துக்கும் முள்ளாக இருப்பவனுமான ராவணனை அவனது பிள்ளைகள் மற்றும் தொண்டர்களுடன் சேர்த்துக் கொல்வேன்.(85)

துவாபர மற்றும் கலியுகங்களின் சந்திக்கு நெருக்கமான காலத்தில், மதுரா நகரத்தில் பிறப்பை அடைந்து, கம்சனை அழிக்கும் நோக்கத்திற்காக நான் உலகில் மீண்டும் தோன்றுவேன்.(86) அங்கே தேவர்களுக்கு முட்களாக இருக்கும் தானவர்களில் எண்ணற்றவர்களைக் கொன்ற பிறகு, நான் துவாரகை நகரத்தின் குசஸ்தலியில் என் வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வேன்.(87) அந்நகரத்தில் வசித்திருக்கும்போது, அதிதிக்குத் தீங்கை இழைத்தவனும், பூமியின் மகனுமான அசுரன் நரகனையும், முரன் மற்றும் பீடன் என்ற வேறு சில தானவர்களையும் கொல்வேன்.(88) மற்றொரு முதன்மையான தானவனான பிராக்ஜோதிஷத் தலைவனையும் கொன்று, அந்த இனிமை நிறைந்த நகரத்தில் இருந்து பல்வேறு வகைச் செல்வங்களைத் துவாரகைக்குக் கொண்டு வருவேன்.(89) {பேரனான அநிருத்தனுக்காகச் சோணிதபுரமென்கிற பாணாஸுரனுடைய நகரத்தை அடைந்து பெரும்போர் புரிவேன், [அப்பொழுது]} தானவன் பாணனுக்கு {பாணாசுரனுக்கு} நன்மை செய்வதில் பற்றுள்ளவர்களும், தங்கள் வழிபாட்டாளர்களுக்காக என்னுடன் போரிட முயல்பவர்களும், தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுபவர்களுமான மஹேஸ்வரனையும் {சிவனையும்}, மஹாசேனனையும் {முருகனையும்} நான் வெல்வேன்[2].(90) தானவன் பலியின் மகனும், ஆயிரம் கரங்களைக் கொண்டவனுமான பாணனை வென்று, அடுத்ததாகச் சௌபம் என்றழைக்கப்படும் தானவ நகரத்தில் வசிப்போர் அனைவரையும் அழிப்பேன்.(91) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, அடுத்ததாக நான், கர்க்கரின் சக்தியின் விளைவால் பெரும் வலிமை பெற்றிருக்கும் தானவனான கால யவனனைக் கொல்வேன்[3].(92)உலகின் பிற மன்னர்கள் அனைவருடனும் சச்சரவு செய்பவனும், ஜராசந்தன் என்ற பெயரைக் கொண்டவனுமாக ஒரு செருக்குமிக்க அசுரன் கிரிவ்ரஜத்தின் மன்னனாகத் தோன்றுவான். அவனது மரணம் என் புத்தியின் துணையால் வேறு ஒருவரால் ஏற்படுத்தப்படும்.(93) அடுத்ததாக நான், உலகின் மன்னர்கள் அனைவராலும் கப்பம் கட்டப்படுவதும், தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனால் செய்யப்படுவதுமான வேள்வியில் சிசுபாலனைக் கொல்வேன். இந்தச் செயல்கள் சிலவற்றில் வாசவனின் மகனான அர்ஜுனன் மட்டுமே எனக்குத் துணைவனாக இருப்பான்.(94,95) யுதிஷ்டிரனையும், அவனது தம்பிகள் அனைவரையும் அவர்களது மூதாதையரின் நாட்டில் நிறுவுவேன். உலகிற்கு நன்மை செய்யும் பொருட்டு, நானும் அர்ஜுனனும் பெரும் எண்ணிக்கையிலான க்ஷத்திரியர்களை எங்கள் பலத்தால் எரிக்கும்போதும், என்னையும் அவனையும் {அர்ஜுனனையும்} மக்கள் நாராயணன் என்றும், நரனென்றும் அழைப்பார்கள். எங்கள் விருப்பப்படி பூமியின் கனத்தைக் குறைத்தபிறகு, அனைத்தையும் தழுவும் என் சானத்தை நினைவுகூர்ந்து, முக்கியச் சாத்வதர்கள் அனைவரையும், எனக்கு மிகப் பிடித்த நகரமான துவாரகையையும் என்னுள் கலப்பேன்.(96-98)

நான்கு வடிவங்களைக் கொண்ட நான் இவ்வாறு பெரும் ஆற்றலைக் கொண்ட பல செயல்களைச் செய்து, என்னால் படைக்கப்பட்டதும், பிராமணர்கள் அனைவராலும் மதிக்கப்படுவதுமான பேரின்ப உலகங்களுக்குள் இறுதியாக நுழைவேன்.(99) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அன்னப்பறவை, ஆமை, மீன் எனத் தோன்றிய பிறகு நான் பன்றியாக வெளிப்பட்டு, பின்னர்ச் சிங்கமனிதனாகவும் {நரசிங்கமாகவும்}, குள்ளனாகவும் {வாமனனாகவும்}, பிருகு குலத்தின் ராமனாகவும், தசரதனின் மகன் ராமனாகவும், சாத்வதக் குலக்கொழுந்தான கிருஷ்ணனாகவும், இறுதியில் கல்கியாகவும் வெளிப்படுவேன்.(100) வேதங்களிலுள்ள திறன் தேர்வுகள் இவ்வுலகில் இருந்து மறையும்போது அவற்றை நான் மீண்டும் கொண்டுவருவேன். கிருத யுகத்தில், வேதங்களும், அவற்றின் திறன் தேர்வுகளும் என்னால் மீண்டும் படைக்கப்பட்டன.(101) அவை மீண்டும் மறைந்து போகின்றன, அல்லது புராணங்களில் இருந்து பகுதி அளவில் மட்டுமே கேட்கப்படுகின்றன. என் சிறப்புத் தோற்றங்கள் பலவும் உலகில் கடந்த காலச் செய்திகளாகிவிட்டன.(102) நான் தோன்றிய வடிவங்களில் உலகின் நன்மையை அடைந்து மீண்டும் நான் எனச் சொந்த இயல்புக்குத் திரும்பியிருக்கிறேன். ஓ! நாரதரே, உமது முழுமையான பக்தியின் விளைவால் நீர் இன்று காணும் இந்த எனது வடிவத்தைப் பிரம்மனே கூடக் கண்டதில்லை. ஓ! பிராமணரே, என்னில் முழுமையான பக்தி கொண்டிருக்கும் உமக்கு நான் இப்போது அனைத்தையும் சொல்லிவிட்டேன். ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் கடந்த காலத் தோற்றங்களையும், எதிர்காலத் தோற்றங்களையும், அவற்றின் புதிர்கள் அனைத்துடன் சேர்த்து உமக்குச் சொல்லிவிட்டேன்” என்றான் {நாராயணன்}.(104)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “மாற்றமில்லாத அண்டந்தழுவிய வடிவைக் கொண்டவனும், புனிதமானவனுமான அந்தச் சிறப்புமிக்கத் தேவன், இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அப்போதே அங்கேயே மறைந்து போனான்.(105) பெருஞ்சக்தி கொண்ட நாரதர், வேண்டிய உயர்ந்த ஆதரவை அடைந்து, நரனையும், நாராயணனையும் காண பதரி என்றழைக்கப்படும் ஆசிரமத்திற்குப் பெரும் வேகத்துடன் சென்றார்.(106) நான்கு வேதங்களுக்கு முற்றிலும் இணக்கமானதும், சாங்கிய யோகத்துடன் ஒத்திசைவதும், பஞ்சராத்ர சாத்திரங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுவதும், நாராயணனின் வாயாலேயே சொல்லப்பட்டதுமான இந்தப் பெரும் உபநிஷதத்தை, நாராயணனின் உதடுகளில் இருந்து தாம் கேட்டதுபோலவே, நாரதர் (தமது தந்தையான) பிரம்மனின் வசிப்பிடத்தில் கேட்கும் பலரின் முன்னிலையில் சரியாக அதே முறையில் மீண்டும் சொன்னார்” {என்றார் பீஷ்மர்}.(107,108)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “நுண்ணறிவைக் கொண்ட நாராயணனின் மகிமையைச் சொல்லும் இந்த அற்புத உரையை, அனைத்துப் பொருட்களையும் படைத்தவரான பிரம்மன், நாரதரின் உதடுகளில் இருந்து கேட்டான் என்றால், இது குறித்து அவர் அறியாதவரா? (109) உலகங்கள் அனைத்தின் சிறப்புமிக்கப் பெரும்பாட்டன் எவ்வகையிலாவது பெரும் நாராயணனிடம் இருந்து வேறுபட்டவரா அல்லது தாழ்ந்தவரா? அளவற்ற சக்தியைக் கொண்ட நாராயணனின் பலத்தை அவர் எவ்வாறு அறியாமல் இருந்தார்?” என்று கேட்டான்.(110)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னர்களின் மன்னா, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பெருங்கல்பங்களும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான படைப்புகளும் அழிவுகளும் ஏற்கனவே நேர்ந்து, கடந்த கால நிகழ்வுகள் ஆகிவிட்டன.(111) ஒவ்வொரு படைப்பின் தொடக்கத்திலும், பெரும் பலம் கொண்டவனும், அனைத்துப் பொருட்களைப் படைப்பவனுமான பிரம்மன் (நாராயணனால்) நினைக்கப்படுகிறார். ஓ! மன்னா, தேவர்கள் அனைவரிலும் முதன்மையான நாராயணன் தம்மைவிட மேம்பட்டவன் என்பதைப் பிரம்மா நன்கறிவார்.(112) நாராயணனே பரமாத்மா என்பதையும், அவனே உயர்ந்த தலைவன் {நியந்தா} என்பதையும், அவனே பிரம்மனையும் படைப்பவன் என்பதையும் அவன் அறிவான். பிரம்மனின் வசிப்பிடத்திற்கு வந்திருந்தவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான முனிவர் கூட்டத்திற்கே நாரதர், பழமையானதும், வேதங்களுக்கு இணக்கமானதுமான இந்தப் பழைய புராணத்தைச் சொன்னார். தேவன் சூரியன், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட அந்த முனிவர்களிடம் இருந்து அந்தப் புராணத்தைக் கேட்டு, ஓ! மன்னா, தன் பரிவாரத்தில் தொடர்பவர்களும் தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டோருமான அறுபத்தாறாயிரம் முனிவர்களுக்கு அதை மீண்டும் சொன்னான்.(113-11¬5)

உலகங்கள் அனைத்திற்கும் வெப்பத்தைக் கடத்தும் தேவனான சூரியன், தனக்கு முன்பு எப்போதும் பயணிப்பதற்காக (பிரம்மனால்) படைக்கப்பட்ட அவர்களுக்கு மீண்டும் அந்தப் புராணத்தைச் சொன்னான்.(116) ஓ! மகனே, சூரியனின் பரிவாரத்தைப் பின்தொடர்பவர்களான அந்த உயர் ஆன்ம முனிவர்களும், மேருவின் சாரலில் கூடும் தேவர்களுக்கு இந்தச் சிறந்த புராணத்தை மீண்டும் சொன்னார்கள்.(117) ஓ! மன்னர்களின் மன்னா, தவசிகளில் சிறந்தவரும், மறுபிறப்பாளருமான அசிதர், தேவர்களிடமிருந்து இந்தப் புராணத்தைக் கேட்டுப் பித்ருக்களுக்கு அதை மீண்டும் சொன்னார்.(118) ஓ! மகனே, முற்காலத்தில் இந்தப் புராணத்தை என் தந்தையான சந்தனு எனக்குச் சொன்னார். ஓ! பாரதா, என் தந்தையிடமிருந்து அதைக் கேட்ட நான் இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(119) புராணம் என்றழைக்கப்படும் இந்தச் சிறந்த பழங்கதையைக் கேட்ட தேவர்களும், முனிவர்கள் அனைவரும் பரமாத்மாவைத் துதிக்கின்றனர்.(120)

ஓ! மன்னா, முனிவர்களுக்குச் சொந்தமானதும், இப்படி ஒருவருக்கொருவர் வழிவழியாகச் சொல்லப்படுவதுமான இந்தப் புராணத்தை, வாசுதேவனை வழிபடாத எவருக்கும் நீ சொல்லக்கூடாது.(121) ஓ! மன்னா, நீ என்னிடம் இருந்து கேட்டிருக்கும் இந்தப் புராணம் உண்மையில் வேறு நூறு புராணங்களின் சாரங்களைக் கொண்டதாகும்.(122) ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் தேவர்களும் அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலைக் கடைந்து அமுதத்தை உண்டாக்கினர். அதே போலவே, பழங்காலத்தில் ஒன்றுகூடிய பிராமணர்கள், சாத்திரங்கள் அனைத்தையும் கடைந்து, அமுதத்துக்கு ஒப்பான இந்தப் புராணத்தை உண்டாக்கினர்.(123) ஓர் ஓய்வான இடத்தில் குவிந்த கவனத்துடனும், நிறைந்த அர்ப்பணிப்புடனும் இந்தப் புராணத்தை அடிக்கடி படிப்பவனும், அடிக்கடி கேட்பவனும்,(124) வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு பெரிய தீவில், சந்திரனின் நிறத்தைக் கொண்ட சொர்க்கவாசியாவதில் வெல்கிறான். அத்தகைய ஒரு மனிதன் ஆயிரம் கதிர்களைக் கொண்ட நாராயணனுக்குள் நுழைவதில் வெல்கிறான் என்பதில் ஐயமில்லை.(125)

நோயாளி ஒருவன், இந்தப் புராணத்தைத் தொடக்கத்தில் இருந்து கேட்பதால் தன் நோயில் இருந்து விடுதலையடைகிறான். இந்தப் புராணத்தைப் படிக்கவோ, கேட்கவோ விரும்பும் மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைகிறான். அர்ப்பணிப்புக் கொண்ட வழிபாட்டாளன், இதைப் படிப்பதினாலோ, கேட்பதினாலோ, அர்ப்பணிப்புமிக்க வழிபாட்டாளர்களுக்காக முன்பதிவு செய்யப்படும் உயர்ந்த கதியை அடைகிறான்.(126) ஓ! ஏகாதிபதி, அனைத்திலும் முதன்மையான அவனை நீயும் எப்போதும் துதித்து வழிபட வேண்டும். அவனே அனைத்து உயிரினங்களின் தந்தையும், தாயுமாக இருக்கிறான். மொத்த அண்டத்திலும் அவனே மதிப்புமிக்கப் பொருளாகிறான்.(127) ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, பிராமணர்களின் சிறப்புமிக்க நித்திய தேவனும், உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனுமான ஜனார்த்தனன் உன்னிடம் நிறைவு கொள்ளட்டும்” {என்றார் பீஷ்மர்}”.(128)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஜனமேஜயா, இந்தச் சிறந்த புராணத்தைக் கேட்டு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனும், அவனது தம்பிகள் அனைவரும் நாராயணனிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டோராகினர்.(129) ஓ! பாரதா, (அந்த நாளில் இருந்து) அவர்கள் அனைவரும் நாராயணனை அமைதியாகத் தியானிக்கும் பயிற்சியை மேற்கொண்டு, “சிறப்புமிக்கவனான அந்தப் புனிதமானவனுக்கே வெற்றி” என்ற வார்த்தைகளை அவனை மகிமைப்படுத்தும் வகையில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.(130) மேலும், ஆசான்களில் சிறந்தவரும், தீவில் பிறந்தவரும் {துவைபாயனரும்}, தவங்களில் அர்ப்பணிப்புமிக்கவருமான கிருஷ்ணர் {வியாசர்}, அமைதியாக உரைக்கத்தகுந்த உயர்ந்த மந்திரமான “நாராயணா” என்ற சொல்லைச் சொல்லி பாடினார்.(131) அவர், எப்போதும் அமுதத்தின் வசிப்பிடமாக இருக்கும் பாற்கடலுக்கு ஆகாயத்தின் மூலம் பயணித்து, அங்கே அந்தப் பெருந்தேவனை வழிபட்டு, மீண்டும் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(132)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “(பிரம்மனின் வசிப்பிடத்தில் கூடியிருந்த முனிவர் கூட்டத்திற்கு) நாரதரால் சொல்லப்பட்ட புராணத்தையே நான் இப்போது உனக்கு மீண்டும் சொன்னேன். இந்தப் புராணம், பழங்காலத்தில் இருந்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இறங்கி வந்திருக்கிறது. நான் முற்காலத்தில் இதை எனக்குத் திரும்பச் சொன்ன என் தந்தையிடம் இருந்து கேட்டேன்”.(133)

சூதர் {சௌதியானவர் சௌனகரிடம்} தொடர்ந்தார், “வைசம்பாயனர் ஜனமேஜயனுக்குச் சொன்ன அனைத்தையும் நான் இப்போது உமக்குச் சொன்னேன். வைசம்பாயனரின் விவரிப்பைக் கேட்ட மன்னன் ஜனமேஜயன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி தன் கடமைகள் அனைத்தையும் செய்தான்.(134) நீங்கள் அனைவரும் கடுந்தவங்களைச் செய்தவர்களாகவும், உயர்ந்தவையும், சிறந்தவையுமான பல நோன்புகளையும் நோற்பவர்களாகவும் இருக்கிறீர்கள். நைமிசம் என்ற பெயரில் அறியப்படும் இந்தப் புனிதமான காட்டில் வசிக்கும் நீங்கள் வேதங்கள் அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையாவர்கள் ஆவீர்கள்.(135) மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் அனைவரும் சௌனகரின் இந்தப் பெரும் வேள்விக்கு வந்திருக்கிறீர்கள். சிறந்த வேள்விகளில் நீங்கள் அனைவரும், தெளிந்த நெய்யிலான ஆகுதிகளை மந்திரங்களின் துணையுடன் நெருப்புக்குள் முறையாக ஊற்றியும், அவற்றை நாராயணனுக்குக் காணிக்கையாக்கியும், நித்தியமானவனும், உயர்ந்த தலைவனுமான அவனையே வழிபட்டுத் துதிப்பீராக. என்னைப் பொறுத்தவரையில், நான் இந்தச் சிறந்த புராணத்தைப் பரம்பரைவழியாக முற்காலத்தில் என் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன்” {என்றார் சௌதி}.(136)

வியாசரின் நாராயணீயம்! – சாந்திபர்வம் பகுதி – 341-பிரம்மன் முதலிய தேவர்கள் தவமிருந்ததையும்; நாராயணன் அவர்களுக்கு வரமளித்ததையும், பிரவிருத்தி மற்றும் நிவிருத்தி அறங்களை நாராயணன் பிரம்மனுக்குச் சொன்னதையும் தமது சீடர்களுக்குச் சொன்ன வியாசர்…

சௌனகர் {சௌதியிடம்}, “வேதங்களையும், அதன் அங்கங்களையும் முழுமையாக அறிந்தவனும், சிறப்புமிக்கத் தேவனும், பலமிக்கவனுமான நாராயணன், ஒரே நேரத்தில் வேள்விகளைச் செய்பவனாகவும், அவற்றை அனுபவிப்பவனாகவும் எவ்வாறு இருக்கிறான்?(1) மன்னிக்கும் தன்மையுடன் கூடிய அவன், (தவிர்க்கும் தன்மையான) நிவிருத்தி அறத்தைப் பின்பற்றுகிறான். உண்மையில், நிவிருத்தியின் கடமைகளை அந்தப் பலமிக்கப் புனிதமானவனே விதித்திருக்கிறான்.(2) அவ்வாறிருக்கையில், பிரவிருத்தி அறத்தின் மூலம் விளையும் வேள்விப் பங்குகளைத் தேவர்கள் பலர் ஏன் எடுத்துக் கொள்கின்றனர்? தவிர்க்கும் அறத்தின் விதிகளைச் சிலர் பின்பற்றுகின்றனர், அவன் ஏன் தன் மனோநிலைக்கு முரணாகச் சிலரை படைத்திருக்கிறான்?(3) ஓ! சூதா, இந்த எங்கள் ஐயங்களை விலக்குவாயாக. இந்த ஐயம் நித்தியமானதாகவும், பெரும்புதிர் தொடர்புடையதாகவும் தெரிகிறது. (பிற) சாத்திரங்களுக்கு இணக்கமானவையும், நாராயணன் குறித்தவையுமான கதைகள் அனைத்தையும் நீ கேட்டிருக்கிறாய்” என்றார் {சௌனகர்}.(4)

சௌதி, “ஓ! சிறந்த சௌனகரே, வியாசரின் சீடரான வைசம்பாயனர், இக்காரியம் குறித்து ஜனமேஜயனால் கேள்வி கேட்கப்பட்டபோது சொன்னவற்றை உமக்குச் சொல்கிறேன்.(5) உயிரினங்கள் அனைத்தின் உள்ளார்ந்த ஆன்மாவாக இருப்பவனான நாராயணனின் மகிமையைக் கேட்டவனும், நுண்ணறிவும், ஞானமும் மிக்கவனுமான ஜனமேஜயன் சரியாக இக்காரியங்களைக் குறித்து வைசம்பாயனரிடம் கேட்டான்.(6)

ஜனமேஜயன் {வைசம்பாயனர்}, “பிரம்மன், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகியோருடன் கூடிய மொத்த உலகங்களும், செழிப்பை உண்டாக்குபவையாகச் சொல்லப்படும் செயல்களுடன் ஆழமான தொடர்புடையவையாகத் தெரிகின்றன.(7) ஓ! மறுபிறப்பாளரே, இருப்பை இல்லாமலாக்குவதும், உயர்ந்த நிலையுமான விடுதலை {முக்தி} நிலையானது உம்மால் சொல்லப்பட்டது. தகுதி, தகுதியின்மை ஆகிய இரண்டுமற்று விடுதலையடைபவர்கள் {முக்தியடைபவர்கள்}, ஆயிரம் கதிர்களைக் கொண்ட பெருந்தேவனுக்குள் நுழைவதில் வெல்கிறார்கள் என நாம் கேட்கிறோம்.(8) ஓ! பிராமணரே, நித்தியமான விடுதலை அறத்தை {மோக்ஷ தர்மத்தைப்} பயில்வது மிகக் கடினமானதாகத் தெரிகிறது. இதிலிருந்து மாறுபடும் தேவர்கள் அனைவரும், வேள்வி நெருப்புகளிலும், இதே வழிமுறைகளில் அவர்களுக்கு அளிக்கப்படும் பிற காணிக்கைகளிலும், மந்திரங்களுடன் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை அனுபவிப்பவர்களாக இருக்கிறார்கள்.(9) மேலும், பிரம்மன், ருத்திரன், வலனைக் கொன்றவனான பலமிக்கச் சக்ரன் {இந்திரன்}, சூரியன், விண்மீன்களின் தலைவன் (சத்திரமாஸ்), காற்றின் தேவன் {வாயு}, நெருப்பின் தேவன் {அக்னி}, நீர்நிலைகளின் தேவன் {வருணன்}, (உயிரோட்டமான) அளவற்ற வெளி {ஆகாயம்}, (விழிப்புணர்வு கொண்ட) அண்டம், எஞ்சிய சொர்க்கவாசிகள் ஆகிய இவர்கள், தன் முயற்சியால் கொண்டுவரப்படும் விழிப்புடன் கூடிய இருப்பை அழிக்கும் வழிமுறையை அடைவது குறித்து அறியாதவர்களாக இருப்பதாகத் தெரிகிறது[1].(10,11) எனவே, அழிவற்ற, மாற்றமில்லாத பாதையை அவர்கள் அடையவில்லை என்பது உறுதியானதாகும். அந்தப் பாதையைவிட்டு விலகி, காலத்தால் அளக்கப்படும் விழிப்புடன் கூடிய இருப்புநிலைக்கு வழிவகுக்கும் பிரவிருத்தி அறத்தை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.(12) உண்மையில், நிலையற்ற வெகுமதிகளைக் கொடுக்கும் செயல்களுடன் பற்றுடைய இது பெருங்களங்கமாகும். ஓ! மறுபிறப்பாளரே, இந்த ஐயம் என் இதயத்தில் குத்திய வாளாக {தைத்த முள்ளாக} இருக்கிறது. இதுகுறித்த பழைய கதைகளைச் சொல்லி அஃதை அகற்றுவீராக.(13) ஓ! மறுபிறப்பாளரே, பல்வேறு வகை வேள்விகளில் மந்திரங்களின் துணையுடன் தேவர்களுக்கு அளிக்கப்படும் வேள்விக் காணிக்கைகளில் அவர்கள் தங்களுக்குரிய பங்குகளை எடுத்துக் கொள்வதாக எக்காரணத்தினால் சொல்லப்படுகிறது? மேலும் தேவர்கள் வேள்விகளில் ஏன் துதிக்கப்படுகின்றனர்?(14) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பிறர் செய்யும் வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகளின் பங்கை எடுத்துக் கொள்ளும் அவர்கள் யாருக்காகப் பெரும் வேள்விகளைச் செய்கிறார்கள்?” என்று கேட்டான்.(15)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நீ என்னிடம் கேட்ட இந்தக் கேள்வி ஓர் ஆழ்ந்த புதிர் தொடர்புடையதாகும். தவங்களைச் செய்யாதவனும், புராணங்களை அறியாதவனுமான எந்த மனிதனாலும் இதற்கு விரைவாகப் பதிலளிக்க முடியாது.(16) எனினும், வியாசர் என்று அழைக்கப்படுபவரும், தீவில் பிறந்தவரும், வேதங்களை வகுத்த பெரும் முனிவருமான எங்கள் ஆசான், முன்பொரு காலத்தில் எங்களால் கேள்வி கேட்கப்பட்டபோது சொன்னதை உனக்குச் சொல்கிறேன்.(17) சுமந்தர், ஜைமினி, உறுதியான நோன்புகளைக் கொண்ட பைலர், நான்காவதாக {வைசம்பாயனனாகிய} நான், ஐந்தாவதாக உகர் ஆகியோர் சிறப்புமிக்க வியாசரின் சீடர்களாக இருந்தோம்.(18) எண்ணிக்கையில் ஐவராக இருந்த நாங்கள் தற்கட்டுப்பாடு மற்றும் நோன்புகளில் தூய்மை கொண்டவர்களாகவும், கோபத்தையும் எங்கள் புலன்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்தியவர்களாகவும் இருந்தோம். எங்கள் ஆசான் மஹாபாரதத்தை ஐந்தாவதாகக் கொண்ட வேதங்களை எங்களுக்குக் கற்பித்து வந்தார்.(19) ஒரு காலத்தில், மலைகளில் முதன்மையானதும், சித்தர்களும், சாரணர்களும் வசித்து வந்த இடமும், இனிமை நிறைந்ததுமான மேருவின் சாரலில் வேத கல்வியில் நாங்கள் ஈடுபட்டு வந்தபோது, நீ இன்று வெளிப்படுத்திய இதே ஐயம் எங்கள் மனங்களில் எழுந்தது.(20) எனவே, நாங்கள் இது குறித்து எங்கள் ஆசானிடம் கேட்டோம். எங்கள் ஆசான் சொன்ன பதிலை நான் கேட்டேன். ஓ! பாரதா, அந்தப் பதிலை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன்.(21)

அறியாமையால் ஏற்படும் அனைத்து வகை இருளையும் அகற்றுபவரும், பராசரரின் மகனுமான வியாசர், தமது சீடர்களால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்டு இந்த வார்த்தைகளைச் சொன்னார்:(22) “உண்மையில் நான் மிகக் கடுமையான தவங்களைச் செய்திருக்கிறேன். மனிதர்களில் சிறந்தவர்களே, கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து நான் முழுமையாக அறிந்திருக்கிறேன்.(23) பாற்கடலின் கரைகளில் நான் வசித்திருந்தபோது, என் தவங்கள் மற்றும் புலன்களில் நான் கொண்டிருந்த கட்டுப்பாட்டின் விளைவால் நாராயணன் என்னிடம் நிறைவு கொண்டான். அந்தப் பெருந்தேவன் கொண்ட நிறைவின் விளைவால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைக் குறித்து முழுதுணரும் அறிவு என் மனத்தில் எழுந்தது.(24) உங்கள் மனங்களைக் கலக்கமடையச் செய்தும் இந்தப் பெரும் ஐயங்களைக் குறித்து முறையான வரிசையில் சொல்கிறேன் கேட்பீராக. ஞானக் கண் மூலம் நான் கல்பத்தின் தொடக்கத்தில் நேர்ந்தவை அனைத்தையும் கண்டேன்.(25) சாங்கியர்கள் மற்றும் யோகத்தை அறிந்தவர்கள் ஆகிய இருவரும் பரமாத்மா என்ற பெயரில் எவனை அழைக்கிறார்களோ, அவனே தன் செயல்களின் விளைவால் முதன்மையான புருஷனாகக் கருதப்படுகிறான். கல்விமான்களால் புலப்படாதது {அவ்யக்தம்} அல்லது பிரதானம் என்றழைக்கப்படும் பிரகிருதி அவனிலிருந்தே எழுகிறது.(26) பலமிக்கதான அந்தப் புலப்படாததிலிருந்தே உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்காக அநிருத்தன் என்றழைக்கப்படுபவன் எழுந்தான். அந்த அநிருத்தனே, உயிரினங்களுக்கு மத்தியில் பேரான்மா என்ற பெயரால் அறியப்படுகிறான்.(27) அந்த அநிருத்தனே புலப்படுபவனாகி {வியக்தனாகி}, பெரும்பாட்டனான பிரம்மனைப் படைத்தான். அனைத்து வகைச் சக்திகளையும் கொண்ட அநிருத்தனே, நனவுநிலை {அகங்காரம்} என்ற மற்றொரு பெயரால் அறியப்படுகிறான்.(28)

அந்த நனவுநிலையிலிருந்து {அகங்காரத்திலிருந்து} பூமி, காற்று, வெளி, நீர் மற்றும் ஐந்தாவதாக ஒளி என்ற ஐம்பெரும்பூதங்கள் எழுந்தன.(29) (எண்ணிக்கையில் ஐந்தான) பெரும்பூதங்களைப் படைத்த பிறகு அவன் அவற்றின் குணங்களைப் படைத்தான்[2]. பிறகு அவன் அந்தப் பெரும்பூதங்களைக் கலந்து உடல்கொண்ட பல்வேறு வடிவங்களைப் படைத்தான். அவர்களைச் சொல்கிறேன் கேட்பீராக.(31) மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, உயர் ஆன்ம வசிஷ்டர், சுயம்புவான மனு ஆகிய எண்மர் பிருகிருதியின் தனிமங்களாக அறியப்பட வேண்டும். உலகங்கள் அனைத்தும் இவர்களைச் சார்ந்தே இருக்கின்றன.(31) அப்போது, உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மன், உயிரினங்கள் அனைத்தின் வெற்றிக்காக அங்கங்கள் அனைத்துடன் கூடிய வேதங்களையும், அங்கங்களோடு கூடிய வேள்விகளையும் படைத்தான். பிருகிருதியின் இந்த எட்டுத் தனிமங்களில் இருந்தே இந்தப் பரந்த அண்டம் எழுந்தது.(32) பிறகு, கோபம் எனும் கோட்பாட்டில் இருந்து ருத்திரன் எழுந்தான். உயிர் கொண்ட அவன், தன்னைப் போன்ற இன்னும் பத்து பேரைப் படைத்தான். இந்தப் பதினோரு ருத்திரர்களும், விகார புருஷர்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.(33) ருத்திரர்கள், (எட்டு) பிரகிருதிகள், தெய்வீகமான பல்வேறு முனிவர்கள் ஆகியோர் உயிர் பெற்று, அண்டத்தைத் தாங்குவதற்காகவும், அதன் இயக்கத்தை நோக்கில் கொண்டும் பிரம்மனை அணுகினார்கள்.(34)பெரும்பாட்டனிடம் பேசிய அவர்கள், “ஓ! புனிதமானவரே, ஓ! பெரும்பலமிக்கவரே, நாங்கள் உம்மால் படைக்கப்பட்டோம். ஓ! பெரும்பாட்டனே, எங்களில் எவரெவர் எந்தெந்த காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக.(35) எந்தக் குறிப்பிட்ட காரியங்களைக் கண்காணிப்பதற்காக எந்த அதிகாரம் உம்மால் படைக்கப்பட்டிருக்கிறது? எங்களில் எவர், எந்த வகை நனவுநிலையை {அகங்காரத்தைக்} கொண்டு, இவற்றில் எந்த அதிகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்?(36) எங்கள் அதிகாரத்திற்குத் தக்கப்படி கடமைகளையாற்ற எங்கள் ஒவ்வொருவருக்கும் எந்தெந்த அளவுக்குப் பலம் விதிக்கப்பட்டிருக்கிறது?” {என்று கேட்டனர்}. அவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்}, பின்வரும் வழியில் அவர்களுக்கு மறுமொழி கூறினான்.(37)

பிரம்மன், “தேவர்களே, இக்காரியத்தைக் குறித்து என்னிடம் கேட்பதில் நீங்கள் நன்றாகச் செயல்படுகிறீர்கள். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருப்பீராக. உங்கள் கவனத்தில் உள்ள அதே காரியம் குறித்தே நானும் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.(38) மூவுலகங்களும் எவ்வாறு தாங்கப்பட வேண்டும்? எவ்வாறு அதை முன்னெடுக்க வேண்டும்? உங்களுடைய பலமும், என்னுடைய பலமும் எவ்வாறு கதியை நோக்கிப் பயன்படுத்தப்பட வேண்டும்?(39) நாம் அனைவரும் இந்த இடத்தை விட்டு அகன்று, உலகத்தின் சாட்சியாகவும், இருப்பில் உள்ளவர்களில் முதன்மையானவனுமான அந்தப் புலப்படாதவனிடம் {அவ்யக்தனிடம்} செல்வோம். எது நமக்கான நன்மை என்பதை அவன் நமக்குச் சொல்வான்” என்றான்.(40)

இதன்பிறகு, அந்தத் தேவர்களும், முனிவர்களும், மூவுலகங்களுக்கும் நன்மை செய்ய விரும்பி, பாற்கடலின் வடகரைக்குப் பிரம்மனுடன் சென்றனர்.(41) அங்கே வந்ததும் அவர்கள் வேதங்களில் பிரம்மன் அறிவித்தபடியே கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினர். அந்தக் கடுந்தவங்கள் மஹாநியமம் (நோன்புகள் மற்றும் நியமங்களில் முதன்மையானது) என்ற பெயரால் அறியப்பட்டன.(42) மேல் நோக்கிய கண்களுடனும், மேலுயர்த்திய கரங்களுடனும், நிலையான மனத்துடனும் அங்கே அவர்கள் மரக்கட்டைகளைப் போல அசையாதிருந்தனர்.(43) அவர்கள் ஆயிரம் தேவ வருடங்களுக்கு இந்தக் கடுந்தவங்களைச் செய்தனர். அந்தக் காலம் நிறைவடைந்ததும், வேதங்கள் மற்றும் அவற்றின் அங்கங்களுடன் இணைக்கமான இந்த இனிய வார்த்தைகளை அவர்கள் கேட்டனர்.(44)

அருளப்பட்டவனும், புனிதமானவனுமான அவன் {அவ்யக்தன்}, “தேவர்களே, பிரம்மனின் துணையுடன் கூடியவர்களும், தவச் செல்வத்தைக் கொண்டவர்களுமான முனிவர்களே, உங்கள் அனைவருக்கும் நல்வரவு கூறி மதித்து, இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன்.(45) உங்கள் இதயங்களில் என்ன இருக்கிறது என்பதை நான் அறிவேன். உண்மையில், உங்கள் சிந்தனைகள் மூவுலங்களின் நன்மைக்கானவையே. உங்கள் சக்தியையும், பலத்தையும் பெருக்கி, (செயல்களுக்கான ஒருதலைச்சார்பு கொண்ட) பிரவிருத்தியை உங்களுக்குக் கொடுப்பேன்.(46) தேவர்களே, என்னைத் துதிக்கும் விருப்பத்தில் நீங்கள் இந்தத் தவங்களைச் செய்திருக்கிறீர்கள். இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவர்களே, நீங்கள் மேற்கொண்ட அந்தத் தவங்களுக்கான சிறந்த கனிகளை இப்போது அனுபவிப்பீராக.(47) இந்தப் பிரம்மன் உலகங்கள் அனைத்தின் தலைவனாவான். பலம் கொண்ட அவன் உயிரினங்கள் அனைத்தின் பெரும்பாட்டனாவான். நீங்கள் தேவர்களில் முதன்மையானவர்களாகவும் இருக்கிறீர்கள். என் மகிமைக்காக நீங்கள் அனைவரும் குவிந்த மனங்களுடன் வேள்விகளைச் செய்வீராக.(48) நீங்கள் செய்யப்போகும் அந்த வேள்விகளின் காணிக்கைகளில் எப்போதும் எனக்கு ஒரு பங்கைக் கொடுப்பீராக. படைப்பின் தலைவர்களே, அதன் பிறகு உங்கள் ஒவ்வொருவருக்குமுரிய அதிகாரங்களையும், உங்கள் நன்மைக்காக விதிக்கப்பட்டவற்றையும் ஒப்படைப்பேன்” என்றான் {அவ்யக்தன்}.(49)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தேவர்களின் தேவனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், பெரும் முனிவர்கள் மற்றும் பிரம்மன் ஆகியோர் அனைவரும், தங்கள் உடலில் மயிர்க்கூச்சம் ஏற்படும் வகையில் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(50) அவர்கள், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி விஷ்ணுவைக் கௌரவிப்பதற்கான ஒரு வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த வேள்வியில் பிரம்மனே கூட விஷ்ணுவுக்கான காணிக்கைகளில் ஒரு பகுதியை அர்ப்பணித்தான்.(51) பிரம்மனைப் போலவே தேவர்கள் மற்றும் தெய்வீக முனிவர்கள் ஒவ்வொருவரும் அதே போன்ற பகுதிகளை அந்தப் பெருந்தேவனுக்குக் காணிக்கையாக அளித்தனர். இவ்வாறு பெருமதிப்புடன் விஷ்ணுவுக்குக் காணிக்கையாக்கப்பட்ட அந்தப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் அளவு மற்றும் தரம் ஆகிய இரண்டும் கிருத யுகத்திற்காக விதிக்கப்பட்ட விதிகளின்படியே இருந்தன.(52) தேவர்கள், முனிவர்கள் மற்றும் பிரம்மன் ஆகியோர், அந்த வேள்வியில், சூரியனின் நிறத்தைக் கொண்டவனாகவும், இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவனாகவும், தமஸ் குணத்தின் எல்லையைக் கடந்திருப்பவனாகவும், பரந்தவனாகவும், அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனாகவும், அனைத்தின் உயர்ந்த தலைவனாகவும், வரங்களை அளிப்பவனாகவும், பலங்கொண்டவனாகவும் அந்தப் பெருந்தேவனைத் துதித்தனர்.(53)

வரமளிப்பவனும், புலப்படாதவனும், உடலற்றவனுமான அந்தப் பெருந்தேவன் {நாராயணன்}, இவ்வாறு துதிக்கப்பட்டு, அங்கே கூடியிருந்த சொர்க்கத்தின் தேவர்களிடம்:(54) “இவ்வேள்வியில் உங்களால் அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கைகள் அனைத்தும் என்னை வந்தடைந்தன. நான் உங்கள் அனைவரிடமும் நிறைவுடன் இருக்கிறேன். நான் உங்களுக்கு வெகுமதிகளை அளிக்கப் போகிறேன். இருப்பினும், அவை நீங்கள் திரும்பி வரவேண்டிய கதிகள் நிறைந்தவையாகவே இருக்கும்[3].(55) தேவர்களே, நான் உங்களிடம் கொண்ட அன்பு மற்றும் என் அருளின் விளைவால், இந்த நாள் முதல், இதுவே உங்கள் தனித்துவமான சிறப்பியல்பாக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு யுகத்திலும் பெரும் அளவிலான காணிக்கைளுடன் கூடிய வேள்விகளைச் செய்து, பிரவிருத்தியில் பிறக்கும் கனிகளை அனுபவிப்பவர்களாக இருப்பீர்கள்.(56) தேவர்களே, வேதங்களில் விதிகளின்படி வேள்விகளைச் செய்யப் போகும் மனிதர்கள், தங்கள் வேள்விக் காணிக்கைகளில் உங்கள் அனைவருக்குமுரிய பங்குகளைக் கொடுப்பார்கள்.(57) இந்த வேள்வியில் எவன் எந்தக் காணிக்கையைக் கொடுத்தானோ, அவன் (இத்தகைய வேறு வேள்விகளில்) இதே போன்ற பங்கைப் பெறுபவனாக வேத சூத்திரங்களில் அமைப்பேன்.(58) உங்கள் அதிகாரத்திற்குரிய காரியங்களைக் கவனிக்கப் படைக்கப்பட்ட நீங்கள், அந்த வேள்விகளில் நீங்கள் புறம் {காணிக்கைகளின்} பங்குகளைச் சார்ந்த உங்கள் பலத்துடன் உலகங்களைத் தாங்குவீர்களாக.(59)உண்மையில், நீங்கள் பல்வேறு உலகங்களில் நடைபெறும் சடங்குகள் மற்றும் நோன்புகளின் மூலம் பிருவிருத்தியின் கனிகளில் எழும் உங்கள் பலத்தைப் பெற்று அந்த உலகக் காரியங்களைத் தொடர்ந்து தாங்குவீராக.(60) மனிதர்களால் செய்யப்படும் வேள்விகளில் இருந்து உங்கள் பலத்தைப் பெறும் நீங்கள் என்னைப் பலப்படுத்துவீர்கள். இவையே உங்கள் அனைவருக்காகவும் நான் சிந்திப்பதாகும்.(61) இந்நோக்கத்திற்காகவே நான் வேதங்களையும், வேள்விகளையும், செடிகள் மற்றும் மூலிகைகளையும் படைத்திருக்கிறேன். பூமியில் மனிதர்களின் மூலம் இவற்றால் முறையாகத் தொண்டாற்றப்படும் தேவர்கள் நிறைவை அடைவார்கள்.(62) தேவர்களில் முதன்மையானவர்களே, இந்தக் கல்பத்தின் முடிவு வரை, பிரவிருத்தி அறத்தின் விளைவைச் சார்ந்திருக்கும் வகையில் உங்கள் அமைப்புகளை உண்டாக்கி, உங்கள் படைப்பை விதித்திருக்கிறேன். இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவர்களே, அவரவருக்குரிய அதிகாரத்தின்படி நீங்கள் மூவுலகங்களின் நன்மையை நாடுவதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீராக.(63) மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் ஆகிய இந்த ஏழு முனிவர்களும் {இந்த சப்தரிஷிகளும்} என் மனோவிருப்பத்தாலேயே படைக்கப்பட்டார்கள் {இவர்கள் என் மானஸபுத்திரர்கள்}. இவர்கள் வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானோராவார்கள். உண்மையில் அவர்கள் வேத ஆசான்களாக ஆவார்கள். வாரிசுகளை உண்டாக்கும் செயலுக்குத் தங்களை அர்ப்பணிப்பதையே இவர்கள் {சப்தரிஷிகளும்} நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதால் பிரவிருத்தி அறத்தில் பற்றுள்ளவர்களாகவே இவர்கள் இருப்பார்கள்.(65)

செயல்கள் மற்றும் நோன்புகளில் ஈடுபடும் உயிரினங்களுக்கு இதுவே நான் சொல்லும் நித்திய பாதையாகும். உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்கு அதிகாரம் படைத்த பலமிக்கத் தலைவன் அநிருத்தன் என்றழைக்கப்படுகிறான்.(66) ஸனர், ஸநத்ஸுஜாதர், ஸநகர், ஸநந்தனர், ஸநத்குமாரர், கபிலர், ஏழாவதாக ஸநாதனர்(67) ஆகிய இந்த ஏழு முனிவர்களும் {இந்த சப்தரிஷிகளும்} பிரம்மனின் ஆன்ம மகன்களாவர் {பிரம்மனின் மானஸ புத்திரர்களாவர்}. (கல்வி அல்லது முயற்சியைச் சார்ந்திராமலேயே) ஞானம் தானாக இவர்களை அடையும். இவர்கள் எழுவரும் நிவிருத்தி அறத்தில் பற்றுடையவர்களாவர். இவர்களே யோகத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானோராவார்கள். இவர்கள் சாங்கிய தத்துவத்தில் ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்களே கடமை குறித்த சாத்திரங்களின் ஆசான்களாக இருப்பார்கள், இவர்களே நிவிருத்தி அறத்தின் கடமைகளை அறிமுகம் செய்து, அவற்றை உலகங்களில் பாயச் செய்வார்கள்.(69)

புலப்படாததிலிருந்து (பிரகிருதியிலிருந்து) நனவுநிலையும் {அகங்காரமும்}, (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) முப்பெரும் குணங்களும் உண்டாகின. பிரகிருதியைக் கடந்திருப்பவன் க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படுகிறான்.(70) நானே அந்த க்ஷேத்ரஜ்ஞன் ஆவேன். செயல்களில் பற்றுடையோருக்குரிய பாதையானது, மறுபிறவிகளைக் கொண்டதாகும். அந்தப் பாதையில் ஒருவனால் திரும்பாத இடத்தை அடையமுடியாது. பல்வேறு உயிரினங்கள் பல்வேறு கதிகளுக்காகப் படைக்கப்படுகின்றன. சில பிரவிருத்தி பாதையைக் கருத்தில் கொண்டும், சில நிவிருத்தி பாதையைக் கருத்தில் கொண்டும் படைக்கப்படுகின்றன. ஓர் உயிரினம் எந்தப் பாதையைப் பின்பற்றுகிறோ, அதற்குரிய வெகுமதியையே அஃது அனுபவிக்கிறது. இந்தப் பிரம்மனே, உலகங்கள் அனைத்தின் ஆசானாவான். பலம் கொண்ட இவனே அண்டத்தைப் படைக்கிறான்.(71,72) அவனே உங்கள் தாயும், தந்தையும், பாட்டனும் ஆவான். என் ஆணையின் பேரில் அனைத்து உயிரினங்களுக்கு அவன் வரங்களை அளிக்கிறான்.(73) அவனது ஆணையின் பேரில் அவனது புருவத்தில் இருந்து உதித்தவனும், பலம் கொண்டவனுமான அவனுடைய மகன் ருத்திரன், படைக்கப்பட்டவை அனைத்தையும் தாங்குவான்.(74) நீங்கள் உங்களுக்குரிய அதிகாரங்களை அடைந்து, விதிப்படி உலகங்களின் நன்மையை நாடுவீராக. உலகங்கள் அனைத்திலும் சாத்திரச் செயல்பாடுகள் நடைபெறட்டும். இதில் எந்தத் தாமதமும் வேண்டாம்.(75)

தேவர்களில் முதன்மையானோரே, அனைத்து உயிரினங்களின் செயல்களையும், அதன்மூலம் அவை அடையப்போகும் கதிகளையும் நீங்களே விதிப்பீராக. உயிரினங்கள் அனைத்தும் வாழக்கூடிய கால அளவையும் நீங்களே நிர்ணயிப்பீராக.(76) யுகங்கள் அனைத்திலும் முதன்மையானதும், இப்போது நடைபெறுவதுமான இந்த யுகம், கிருதம் என்ற பெயரில் அறியப்பட வேண்டும். இந்த யுகத்தில் செய்யப்படும் வேள்விகளில் உயிரினங்கள் கொல்லப்படக்கூடாது. என் ஆணையன்றி வேறுவகையில் இது நடைபெறக்கூடாது.(77) இந்த யுகத்தில் அறம் முழுமையாகத் தழைக்கும். இதன் பிறகு திரேதம் என்றழைக்கப்படும் யுகம் நேரும். அந்த யுகத்தில் வேதங்கள் ஒரு பகுதியை இழக்கும். அவற்றில் மூன்று மட்டுமே நீடித்திருக்கும்.(78) அந்த {திரேத} யுகத்தில் செய்யப்படும் வேள்விகளில், விலங்குகள் புனித மந்திரங்களின் துணையால் காணிக்கையாக்கப்பட்ட பிறகு கொல்லப்படும். அறத்தைப் பொறுத்தவரையில் ஒரு பகுதியை இழந்து மூன்று பகுதிகள் மட்டுமே தழைக்கும்.(79) திரேதம் முடிந்ததும், துவாபரம் என்ற பெயரிலான கலப்பு யுகம் நேரும். அந்த யுகத்தில் அறம் இரண்டு பகுதிகளை இழக்கும், இரண்டு பகுதிகள் மட்டுமே தழைக்கும்.(80) துவாபரம் முடிந்ததும் நேரும் யுகம் திஷ் என்றழைக்கப்படும், அது தனக்கு முன்பு கலியை {கலிபுருஷனைக்} கொண்டுவரும். அறம் மூன்று பகுதிகளை இழக்கும். அனைத்து இடங்களிலும் ஒரேயொரு பகுதி மட்டுமே நீடித்திருக்கும்” என்றான் {நாராயணன்}.(81)

அந்தப் பெருந்தேவன் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, தேவர்களும், தெய்வீக முனிவர்களும் அவனிடம், “அந்த யுகத்தில் ஒவ்வொரு இடத்திலும் அறத்தின் நான்காவது பகுதி மட்டுமே நீடித்திருக்கும் என்றால், ஓ! புனிதமானவனே, நாங்கள் எங்கே செல்வோம்? என்ன செய்வோம்?” என்று கேட்டனர்.(82)

அதற்கு அருள்நிறைந்த அந்தப் புனிதமானவன் {நாராயணன்}, “தேவர்களில் முதன்மையானோரே, அந்த யுகத்தில், அனைத்து உயிரினங்களிடமும் கருணை நிறைந்த கடமைகளின் துணையுடன் எங்கெல்லாம் வேதங்கள், வேள்விகள், தவங்கள், வாய்மை, தற்கட்டுப்பாடு ஆகியவை அப்போதும் நீடித்திருக்குமோ அத்தகைய இடங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டும். பாவத்தால் உங்களை ஒருபோதும் தீண்ட முடியாது” என்றான்”.(83)

வியாசர் தொடர்ந்தார், “அந்தப் பெருந்தேவனால் இவ்வாறு ஆணையிடப்பட்ட தேவர்களும், அவர்களுடன் கூடிய முனிவர்கள் அனைவரும், அவனுக்குத் தலைவணங்கிய பிறகு, தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்றனர்.(84) சொர்க்கவாசிகள் அந்த இடத்தைவிட்டு அகன்ற பிறகு, அப்போது அநிருத்தனின் வடிவில் வசித்திருந்த அந்தப் பெருந்தேவனைக் காணும் விருப்பத்தில் அங்கேயே இருந்தான்.(85) அந்தத் தேவர்களில் முதன்மையானவன் ஒரு பெரிய குதிரைத் தலையைக் கொண்ட வடிவை ஏற்றுப் பிரம்மனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். வேதங்களையும், அதன் அங்கங்களையும் உரைத்தபடியே அவன் ஒரு கமண்டலத்துடனும், திரிதண்டத்துடனும், பிரம்மனின் முன்னிலையில் தோன்றினான்.(86) உலகங்கள் அனைத்தையும் படைப்பவன் {பிரம்மன்}, அளவிலா சக்தி கொண்ட அந்தப் பெருந்தேவனைக் குதிரைத் தலை மகுடம் சூட்டப்பட வடிவில் கண்டு, அந்த வரமளிக்கும் தலைவனைத் தலைவணங்கி வழிபட்டு, அவனது முன்னிலையில் மதிப்புடன் கரங்கூப்பி நின்றான். அந்தப் பெருந்தேவன் பிரம்மனை ஆரத்தழுவி இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னான்.(88)

அந்தப் புனிதமானவன் {அஸ்வசிரஸுடன் கூடிய பெருந்தேவன்}, “ஓ! பிரம்மாவே, உயிரினங்கள் பின்பற்றவேண்டிய செயல் நடைமுறைகளைக் குறித்துச் சிந்திப்பாயாக. நீயே அண்டத்தின் தலைவனாகவும், ஆசானாகவும் இருக்கிறாய். உன் மேல் சுமையை நிறுத்திபிறகு விரைவில் நான் கவலையில் இருந்து விடுபடுவேன்.(89) எனினும், தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் கடினமான நிலை ஏற்படும் நேரங்களில், அந்த நெருக்கடி நிலையின் முக்கியத்துவத்தை நான் புரிந்து கொள்ளும் வகையிலான வடிவங்களில் வந்து பிறப்பேன் {அவதாரம் எடுப்பேன்}” என்றான்.(90)

இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, குதிரைத் தலையைக் கொண்ட அந்த மகத்தான வடிவம் அங்கேயே, அப்போதே மறைந்தது. அவனது ஆணையை ஏற்ற பிரம்மனும் விரைவில் தன் உலகத்திற்குச் சென்றான்.(91) இதனாலேயே, ஓ! அருளப்பட்டவர்களே, தொப்புளில் தாமரையைக் கொண்ட அந்த நித்திய தேவன், வேள்விகளில் முதல் பங்கை ஏற்பவனாகி, அதன் காரணமாகவே வேள்விகள் அனைத்தையும் நித்தியமாகத் தாங்குபவன் என்றழைக்கப்படுகிறான்.(92) அழிவில்லாத கனிகளை விரும்பும் உயிரினங்கள் எந்தக் கதியை அடைய விரும்புகின்றனவோ அந்தக் கதியைக் கொண்ட நிவிருத்தி அறத்தையே அவன் பின்பற்றுகிறான். அதே நேரத்தில் அண்டத்தில் பல்வேறு கருத்துகளைக் கொடுக்கும் நோக்கத்தில் அவனே பிறருக்காகப் பிரவிருத்தி அறத்தையும் விதித்தான்.(93) இருப்பிலுள்ள படைக்கப்பட்ட அனைத்திற்கும் அவனே தொடக்கமும், நடுநிலையும், முடிவுமாக இருக்கிறான். அவனே அவர்களது படைப்பாளனாகவும், தியானிக்கத் தகுந்து பொருளாகவும் இருக்கிறான். செயல்படுபவனாகவும், செயலாகவும் அவனே இருக்கிறான். யுக முடிவில் அண்டத்தைத் தன்னுள் ஈர்த்துக் கொண்டு, உறங்கச் சென்று மற்றொரு யுகம் தொடங்கும்போது மீண்டும் அண்டத்தைப் படைக்கிறான்.(94)

உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனும், முக்குணங்களைக் கடந்தவனும், பிறப்பற்றவனும், அண்டமே வடிவானவனும், சொர்க்கவாசிகள் அனைவரின் வசிப்பிடமாகவும், புகலிடமாகவும் இருப்பவனுமான அந்தச் சிறப்புமிக்கவனை நீங்கள் அனைவரும் வணங்குவீராக.(95) அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனாகவும், ருத்திரர்களின் தலைவனாகவும், ஆதித்தியர்கள் மற்றும் வசுக்களின் தலைவனாகவும் உள்ள அவனை நீங்கள் வணங்குவீராக.(96) அசுவினிகளின் தலைவனும், மருத்துகளின் தலைவனும், வேதங்களில் விதிக்கப்பட்ட வேள்விகள் அனைத்தின் தலைவனும், வேதாங்கங்களின் தலைவனுமான அவனை நீங்கள் வணங்குவீராக.(97) பெருங்கடலில் எப்போதும் வசிப்பவனும், ஹரி என்றழைக்கப்படுபவனும், தர்ப்பைப் புற்களைப் போன்ற முடியைக் கொண்டவனுமான அவனை நீங்கள் வணங்குவீராக. அமைதி மற்றும் நிலையமைதியாக இருப்பவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் மோக்ஷ அறத்தைப் புகட்டுபவனுமான அவனை வணங்குவீராக.(98) தவங்கள், அனைத்துவகைச் சக்திகள், புகழ் ஆகியவற்றின் தலைவனும், வாக்கின் தலைவனும், ஆறுகளின் தலைவனுமான அவனை வணங்குவீராக.(99) கபர்தின் {சடையுள்ளவன்} என்றழைக்கப்படுபவனும், பெரும் பன்றியும், ஒற்றைக் கொம்புடன் கூடிய குதிரையும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், சூரியனும், நன்கறியப்பட்ட குதிரைத் தலையைக் கொண்டவனும், எப்போதும் நான்கு வகை வடிவங்களில் வெளிப்படுபவனுமான அவனை வணங்குவீராக.(100) வெளிப்படாதவனும், அறிவால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், அழியத்தக்கதாகவும், அழிவில்லாததாகவும் இருப்பவனுமான அவனை வணங்குவீராக. மாற்றமில்லாதவனாக இருக்கும் அந்த உயர்ந்த தேவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்.(101) அவன் ஞானக் கண்ணின் துணையால் மட்டுமே அறிய முடிந்த உயர்ந்த தலைவனாக இருக்கிறான். இவ்வாறு, பழங்காலத்தில் ஞானக்கண்ணின் துணையால் நான் அந்த முதன்மையான தேவனைக் கண்டேன்.(102) சீடர்களே, நீங்கள் கேட்ட அனைத்தையும் சொல்லிவிட்டேன். நீங்கள் என் சொற்களின்படி செயல்பட்டு, ஹரி என்றழைக்கப்படும் அந்த உயர்ந்த தலைவனுக்குக் கடமையுணர்வுடன் தொண்டாற்றுவீராக. வேத சொற்களில் அவன் புகழைப் பாடித் துதித்து, முறையான சடங்குகளின்படி அவனை வழிபடுவீராக” என்றார் {வியாசர்}”.(103)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “வேதங்களைத் தொகுத்தவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான அவர், இது குறித்து எங்களால் கேட்கப்பட்ட போது இவ்வாறே சொன்னார். உயர்ந்த அறவனோனான அவரது மகனும் {சுகரும்}, சீடர்கள் {நாங்கள்} அனைவரும் இஃதை அவர் சொன்னபோது கேட்டுக் கொண்டிருந்தோம்.(104) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, எங்கள் ஆசானும், நாங்களும், நான்கு வேதங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ரிக்குகளால் அந்தப் பெருந்தேவனை {நாராயணனைத்} துதித்தோம்.(105) இவ்வாறே நீ கேட்டது குறித்த அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன். ஓ! மன்னா, தீவில் பிறந்தவரான எங்கள் ஆசான் இவ்வாறே எங்களுக்குச் சொன்னார்.(106)

“அந்தப் புனிதமான தலைவனை வணங்குகிறோம்” என்ற வார்த்தைகளை எவன் சொல்கிறானோ, குவிந்த கவனத்துடன் இந்த உரையாடலை எவன் கேட்கிறானோ, எவன் படிக்கிறானோ, எவன் பிறருக்குச் சொல்கிறானோ,(107) அவன் புத்தியும், உடல்நலமும் கொண்டவனாகவும், அழகையும், பலத்தையும் உடையவனாகவும் ஆவான். நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த நோயில் இருந்து அவன் விடுபடுவான்; கட்டுகளில் {பந்தங்களில்} அகப்பட்டிருந்தால் அந்தக் கட்டுகளில் இருந்து அவன் விடுபடுவான். ஆசைகளைப் பேணி வளர்க்கும் மனிதன், (இதன் மூலம்) தன் விருப்பங்கள் அனைத்தும் கனியப்பெற்று, நீண்ட வாழ்நாளையும் எளிதாக அடைவான்.(108)

ஒரு பிராமணன் இதைச் செய்வதால் வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனாவான். ஒரு க்ஷத்திரியன் இதைச் செய்வதால் வெற்றியால் மகுடம் சூட்டப்படுவான். ஒரு வைசியன் இதைச் செய்வதால் பெரும் லாபங்களையும், ஒரு சூத்திரன் இதைச் செய்வதால் பேரின்பத்தையும் அடைவார்கள்.(109) மகனற்ற மனிதன் ஒரு மகனை அடைவான். கன்னிப்பெண் விரும்பத்தக்க கணவனை அடைவாள். கருவுற்ற பெண்மணி {இதைச் செய்தால்} ஒரு மகனை ஈன்றெடுப்பாள்.(110) மலட்டுப் பெண்ணும் கருவுற்று, மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் என்ற செல்வத்தை அடைவாள். பயணத்தில் இந்த உரையை வரிசை மாறாமல் உள்ளடியே கூறுபவன், தன் வழியில் எந்தத் தடங்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாகச் செல்வான். உண்மையில், ஒருவன் இந்த உரையைப் படிப்பதாலோ, உரைப்பதாலோ {கேட்பதாலோ}, தான் விரும்பும் எந்தப் பொருளையும் அடைவான்.(111) நிறைவான முடிவைக் கொண்டதும், இருப்பிலுள்ள அனைத்திலும் முதன்மையான உயர்ந்த ஆன்மாவின் {பரமனின்} குணங்களைச் சுமந்திருப்பதுமான அந்தப் பெரும் முனிவரின் {வியாசரின்} இந்த வார்த்தைகளையும், முனிவர்களின் பெருங்கூட்டமும், சொர்க்கவாசிகளும் {தேவர்களும்} சொல்லும் இந்த உரையைக் கேட்டுப் பரமனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள் பெரும் மகிழ்ச்சியை அடைவார்கள். {இது வியாஸமகரிஷியின் உறுதியான வார்த்தை}” {என்றார் வைசம்பாயனர்}.(112)

பெயர்களின் தனிப்பொருள்! – சாந்திபர்வம் பகுதி – 342-கிருஷ்ணன் தனது மகிமையையும், தன் பெயர்களின் தனிப்பட்ட பொருள்களையும் அர்ஜுனனுக்குச் சொன்னது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! புனிதமானவரே, பெருமுனிவரான வியாசர் தமது சீடர்களுடன் மதுசூதனின் புகழைப் பாடியபோது குறிப்பிட்ட பல்வேறு பெயர்களின் தனிப்பொருள்களை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனான {பகவானான} ஹரியின் அந்தப் பெயர்களைக் கேட்க நான் விரும்புகிறேன். உண்மையில் அந்தப் பெயர்களைக் கேட்பதன் மூலம் நான் பிரகாசமான கூதிர் கால நிலவைப் போலத் தூய்மையடைந்து புனிதமடைவேன்” என்று கேட்டான்.(1,2)

வைசம்பாயனர் சொன்னார், “குணங்கள் மற்றும் செயல்களின் மூலம் அமைந்த ஹரியின் பல்வேறு பெயர்களுடைய தனிப்பொருள்களை அந்தப் பலமிக்க ஹரியே உற்சாகம் நிறைந்த ஆன்மாவோடு பல்குனனுக்கு {அர்ஜுனனுக்கு} விளக்கியதைக் கேட்பாயாக.(3) ஒரு காலத்தில், பகைவீரர்களைக் கொல்பவனான பல்குனன், எந்தப் பெயர்களால் உயர் ஆன்ம கேசவன் துதிக்கப்படுகிறானோ அவற்றில் சிலவற்றின் பொருளைக் கேசவனிடமே கேட்டான்.(4)

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! புனிதமானவனே, ஓ! கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை விதிப்பவனே, ஓ! இருப்பிலுள்ள அனைத்தையும் படைத்தவனே, ஓ! மாற்றமில்லாதவனே, ஓ! உலகங்கள் அனைத்திற்கும் புகலிடமாக இருப்பவனே, ஓ! அண்டத்தின் தலைவா, ஓ! அனைத்து மனிதர்களின் அச்சங்களை விலக்குபவனே,(5) ஓ! கேசவா, ஓ! தேவா, உன்னுடைய பல்வேறு செயல்களின் விளைவால் வேதங்களிலும், புராணங்களிலும் பெரும் முனிவர்களால் குறிப்பிடப்படும் உன்னுடைய பெயர்கள் அனைத்தின் தனிப்பொருள் விளக்கத்தை நான் உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். ஓ! தலைவா, அந்தப் பெயர்களின் தனிப்பொருட்களை உன்னையன்றி வேறெவரும் விளக்கத்தகுந்தவர் அல்ல” என்று கேட்டான்[1].(6,7)அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “ஓ! அர்ஜுனா, ரிக்வேதம், யஜுர் வேதம், அதர்வணங்கள், சாமங்கள், புராணங்கள், உபநிஷத்துக்கள், கணிய சாத்திரம் {சோதிட சாத்திரம்},(8) சாங்கிய சாத்திரங்கள், யோக சாத்திரங்கள், மற்றும் வாழ்வியல் சாத்திரங்கள் ஆகியவற்றில் பெரும் முனிவர்களால் சொல்லப்படும் பெயர்கள் பலவாகும்.(9) அந்தப் பெயர்களில் சில என் குணங்களுக்கும், சில என் செயல்களுக்கும் தொடர்புடையனவாகும். ஓ! பாவமற்றவனே, (குறிப்பாக) என் செயல்களைக் குறித்த பெயர்கள் ஒவ்வொன்றின் பொருளைச் சொல்கிறேன் கேட்பாயாக.(10) பழங்காலத்தில் நீ என் உடலின் பாதியாக இருந்தாய் என்று சொல்லப்படுகிறது. பெரும் மகிமை கொண்டவனும், உடல்படைத்த உயிரினங்கள் அனைத்தின் பரமாத்மாவாக இருப்பவனுமானவனை வணங்குகிறேன்[2].(11) அண்டத்தோடு அடையாளம் காணப்படுபவனும், (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற அடிப்படையான) முக்குணங்களைக் கடந்தவனும், அந்தக் குணங்களின் ஆன்மாவுமான நாராயணனை வணங்குகிறேன். அவனது அருளிலிருந்து பிரம்மன் எழுந்தான், அவனது கோபத்திலிருந்து ருத்திரன் எழுந்தான்.(12) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் எங்கிருந்து எழுந்தனவோ, அதன் தோற்றுவாயாக அவனே இருகிறான். சத்வ குணம் கொண்டோர் அனைவரிலும் முதன்மையானவனே, சத்வ குணம் பதினெட்டுக் குணங்களைக் கொண்டதாகும்[3].வானத்தையும், பூமியையும் தன் ஆன்மாவாகக் கொண்டவளும், தன் படைப்பு சக்தியால் அண்டத்தைத் தாங்குவதில் வெல்பவளுமான பரம இயற்கையின் குணம் அதுவே {சத்வ குணமே}. அந்த இயற்கையானவள் செயல்கள் அனைத்தின் கனியினோடு (உயிரினங்கள் தங்கள் செயல்களின் மூலம் அடையும் பல்வேறு இன்ப உலகங்களின் வடிவில்) அடையாளம் காணப்படுகிறாள்.(13) அவள் தூய சித்-ஆகவும் இருக்கிறாள். அவள் இறப்பற்றவளாகவும், வெல்லப்பட முடியாதவளாகவும், அண்டத்தின் ஆன்மாவாகவும் அழைக்கப்படுகிறாள். அவளிடமிருந்தே படைப்பு மற்றும் அழிவு என்ற இரண்டு மாறுபாடுகளும் {விகாரங்களும்} தோன்றுகின்றன.(14) (அவள் எனது பிரகிருதி அல்லது இயற்கையோடு அடையாளம் காணப்படுகிறாள்). பாலினமற்ற அவளே, அல்லது அவனே மக்கள் செய்யும் தவங்களாக இருக்கிறாள்/ன். செய்யப்படும் வேள்வியாகவும், வேள்வியைச் செய்யும் வேள்வியாளனாகவும் அவனே இருக்கிறான். அவனே புராதனனும், முடிவற்றவனுமான புருஷனாவான். வேறு பெயரில் அநிருத்தன் என்றழைக்கப்படும் அவன், அண்டத்தின் படைப்பு மற்றும் அழிவுக்கான தோற்றுவாயாக இருக்கிறான்[4].(15)ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, பிரம்மனின் இரவு முடிந்த போது, அந்த அளவிலா சக்தி கொண்டவனுடைய {அநிருத்தனுடைய} அருளின் மூலம் முதலில் ஒரு தாமரை தோன்றியது.(16) அநிருத்தனின் அருளின் மூலம் அந்தத் தாமரையினுள் பிரம்மன் தோன்றினான். பிரம்மனுடைய பகல்பொழுதின் மாலை வேளையில் அநிருத்தன் கோபத்தால் நிறைந்ததன் விளைவால், (அண்ட அழிவுக்கான வேளை நேரும்போது) அனைத்தையும் அழிக்க வல்லவனாகவும், ருத்திரன் என்றழைக்கப்படுபவனாகவும் அவனது நெற்றியில் இருந்து ஒரு மகன் பிறந்தான். (அநிருத்தனின்) உற்சாகம் மற்றும் கோபம் ஆகியவற்றில் இருந்து உண்டான பிரம்மன் மற்றும் ருத்திரன் என்ற இவ்விருவரும் தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாவர்.(17,18)அநிருத்தனின் வழிகாட்டுதலின் பேரில் இந்தத் தேவர்கள் இருவரும் படைக்கவும், அழிக்கவும் செய்கின்றனர். அனைத்து உயிரினங்களுக்கும் வரங்களை அளிக்கவல்லவர்களாக இருப்பினும், (படைப்பு மற்றும் அழிவு என்று) தாங்கள் கவனிக்கும் அலுவலின் காரியத்தில் அவர்கள் அநிருத்தனின் கைகளில் இருக்கும் கருவிகளே ஆவர். (அண்டத்தைப் பொறுத்தவரையில் வெளிப்படையாகச் செயல்படுபவர்களாகப் பிரம்மனையும், ருத்திரனையும் அமைத்து, அநிருத்தனே அனைத்தையும் செய்கிறான்).(19)

ருத்திரன் வேறுபெயரில் கபர்தின் என்றும் அழைக்கப்படுகிறான். அவன் தன் தலையில் சடாமுடி தரித்தவனாக இருக்கிறான், சில வேளைகளில் வழுக்கைத் தலையை வெளிப்படுத்துகிறான். அவன் தன் இல்லமாக அமைந்த சுடலைக்கு மத்தியிலேயே வசிக்க விரும்புகிறான். அவன் கடும் நோன்புகளை நோற்பவனாக இருக்கிறான். அவன் பெரும் பலமும், சக்தியும் கொண்ட ஒரு யோகியாவான்.(20) தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், பகனின் கண்களைப் பிடுங்கியவனும் அவனே. ஓ! பாண்டுவின் மகனே, ருத்திரன் தன் ஆன்மாவாக நாராயணனையே கொண்டிருக்கிறான் என்று எப்போதும் அறியப்பட வேண்டும்.(21) ஓ! பார்த்தா, தேவர்களின் தேவனான மஹேஸ்வரன் வழிபடப்படும்போது, பலமிக்க நாராயணனும் வழிபடப்பட வேண்டும்.(22) ஓ! பாண்டுவின் மகனே, அண்டமனைத்தின், உலகங்களனைத்தின் ஆன்மாவாக நானே இருக்கிறேன். அதே போல ருத்திரனே என் ஆன்மாவாக இருக்கிறான். இதன் காரணமாகவே நான் எப்போதும் அவனைத் துதிக்கிறேன்.(23) மங்கலனும், வரமளிப்பவனுமான ஈசானனை நான் துதிக்கவில்லையெனில், எவனும் என்னைத் துதிக்கமாட்டார்கள்.(24) நான் நிறுவும் விதிகளையே உலகங்கள் அனைத்தும் பின்பற்றுகின்றன. அந்த விதிகள் எப்போதும் துதிக்கப்பட வேண்டும், அதன் காரணமாகவே நான் அவற்றைத் துதிக்கிறேன்.(25)

எவன் ருத்திரனை அறிவானோ, அவன் என்னை அறிவான், எவன் என்னை அறிவானோ அவன் ருத்திரனை அறிவான். எவன் ருத்திரனைப் பின்பற்றுகிறானோ, அவன் என்னையே பின்பற்றுகிறான். ருத்திரனே நாராயணனாவான். அவர்கள் இருவரும் ஒருவரே; ஒருவனே இரண்டு வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறான்.(26) ஒருவராகவே உள்ள ருத்திரனும், நாராயணனும் வெளிப்படும் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்து, அவற்றை {அந்தப் பொருட்களைச்} செயல்பட வைக்கின்றனர். ஓ! பாண்டுவின் மகனே, ருத்திரனைத் தவிர வேறு எவனும் எனக்கு வரமருளத் தகுந்தவனல்ல.(27) இஃதை என் மனத்தில் தீர்மானித்துக் கொண்டு, ஒரு மகனைப் பெறும் வரத்தை அடைவதற்காகப் பழங்காலத்தில் நான் ருத்திரனைத் துதித்தேன். இவ்வாறு ருத்திரனைத் துதிப்பதால் நான் என்னையே துதிக்கிறேன்.(28) விஷ்ணு தன்னையன்றி {தன் சுயத்தையன்றி} வேறு எந்தத் தேவனுக்கும் தலைவணங்குவதில்லை. இதன் காரணமாகவே (ஏற்கனவே நான் உனக்குச் சொன்னது போலவே ருத்திரனாக நானே இருப்பதால்) நான் ருத்திரனைத் துதிக்கிறேன்.(29) பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மற்றும் பெரும் முனிவர்கள் அனைவரும், ஹரி என்று வேறு பெயரில் அழைக்கப்படும் தேவர்களில் முதன்மையான நாராயணனையே துதிக்கின்றனர்.(30) கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றில் இருப்பில் உள்ள அனைத்திலும் முதன்மையானவனாக விஷ்ணு எப்போது துதிக்கப்பட்டு, மதிப்புடன் வழிபடப்பட வேண்டும்.(31) விஷ்ணுவுக்கு நீ தலைவணங்குவாயாக. அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குபவனுக்கு நீ தலைவணங்குவாயாக. ஓ! குந்தியின் மகனே, தேவர்களில் முதன்மையானவனும், வேள்விகளில் தனக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை உண்பவனுமான அந்தப் பெரும் வரமளிக்கும் தேவனை வணங்குவாயாக.(32)

நான்கு வகை வழிபாட்டாளர்கள் இருப்பதாக நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் அனைவரிலும், வேறு எந்தத் தேவனைத் துதிக்காமல் என்னிடம் மட்டுமே அர்ப்பணிப்பு கொண்டோரே முதன்மையானவர்கள் ஆவர். நானே அவர்கள் தேடும் கதியாக இருக்கிறேன். அவர்கள் செயல்களில் ஈடுபட்டாலும் அவற்றின் கனிகளை ஒருபோதும் நாடுவதில்லை.(33) என் வழிபாட்டாளர்களில் எஞ்சிய மூன்று வகையினர், தங்கள் செயல்களுக்கான கனிகளை விரும்புபவர்கள் ஆவர். அவர்கள் பெரும் இன்ப நிலை கொண்ட உலகங்களை அடைந்தாலும், அவர்களது தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்ததும் மீண்டும் அங்கிருந்து வீழ்வார்கள். எனவே என் வழிபாட்டாளர்களில், முழு விழிப்புநிலையை அடைந்தவர்கள் (அத்தகைய விழிப்பு நிலையின் மூலம், என்னோடும் அடையாளங்காணப்படும் மனிதர்களால் அடையப்படும் கதியைத் தவிர வேறு இன்பங்கள் அனைத்தும் நிலையில்லாதவை என்பதை அறிந்து) முதன்மையான (அருமதிப்புள்ள) கதியை அடைகின்றனர்[5].(34) இத்தகைய தெளிவை வெளிப்படுத்தும் ஒழுக்கம் கொண்டவர்களும், விழிப்படைந்தவர்களுமான அவர்கள், பிரம்மன், அல்லது மஹாதேவன், அல்லது சொர்க்கத்தில் தோன்றும் பிற தேவர்களைத் துதிப்பதில் ஈடுபட்டாலும், இறுதியாக அவர்கள் என்னையே அடைவதில் வெல்கிறார்கள்.(35) ஓ! பார்த்தா, என் வழிபாட்டாளர்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையே இவ்வாறு உனக்குச் சொன்னேன்.(36)ஓ! குந்தியின் மகனே, நீயும், நானும் நரன் மற்றும் நாராயணன் என்று அறியப்படுகிறோம். பூமியின் சுமையைக் குறைக்கும் நோக்கத்திற்காகவே நாமிருவரும் மனித உடல்களை ஏற்றோம்.(37) ஆன்மாவைச் சார்ந்திருக்கும் பல்வேறு வகை யோகங்களை நானறிவேன். ஓ! பாரதா, நான் யார் என்பதையும், நான் எங்கிருந்து வந்தேன் என்பதையும் நானறிவேன். நிவிருத்தி அறத்தையும், உயிரினங்களின் செழிப்புக்குப் பங்களிக்கும் அனைத்தையும் நானறிவேன்.(38) நான் நித்தியமானவன், மனிதர்கள் அனைவருக்கும் நானே ஒரே புகலிடமாக இருக்கிறேன். நரன் என்றழைக்கப்படுவனிடமிருந்து தோன்றியதால் நீர்நிலைகள் நாரம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. பழங்காலத்தில் இருந்து நீர்நிலைகளையே என் புகலிடமாக நான் கொள்வதால், நாராயணன் என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன்.(39) சூரியனின் வடிவை ஏற்கும் நான், என் கதிர்களால் அண்டத்தைத் தழுவுகிறேன். அனைத்து உயிரினங்களின் வசிப்பிடமாக நானே இருப்பதால் வாசுதேவன் என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன்.(40)

ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களின் கதியாகவும், அவற்றின் தந்தையாகவும் நானே இருக்கிறேன். ஆகாயம் மற்றும் பூமி முழுமையிலும் நான் நீக்கமற நிறைந்திருக்கிறேன், என் காந்தியானது காந்திகள் அனைத்தையும் கடந்திருக்கிறது.(41) ஓ! பாரதா, உயிரினங்கள் அனைத்தும் முடிவில் அடைய விரும்பும் கதியாக நானே இருக்கிறேன். அண்டமனைத்திலும் நான் விஸ்தரித்திருப்பதால் {நிறைந்திருப்பதால்} விஷ்ணு என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன்.(42) புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வெற்றியை அடைய விரும்பும் மக்கள், சொர்க்கமாகவும், பூமியாகவும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ள ஆகாயமாகவும் உள்ள என்னையே அடைய முனைகின்றனர். இதன் காரணமாக நான் தாமோதரன்[6] என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(43) பிருச்னி என்ற சொல்லில் உணவு, வேதங்கள், நீர் மற்றும் அமுதம் ஆகியவையும் அடங்கும். இவை நான்கும் எப்போதும் என் வயிற்றில் இருக்கின்றன. எனவே நான் பிருச்னிகர்ப்பன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(44) ஒரு காலத்தில், ஏகதர் மற்றும் திவிதரால் முனிவர் திரிதர் கிணற்றுக்குள் தள்ளிவிடப்பட்ட போது, மனம் தளர்ந்த திரிதர், “ஓ பிருச்னிகர்ப்பா, வீழ்ந்துவிட்ட திரிதனைக் காப்பாயாக” என்று என்னை இருப்புக்கு அழைத்ததாக முனிவர்கள் சொல்கின்றனர்.(45) முனிவர்களில் முதன்மையானவரும், பிரம்மனின் (ஆன்ம) மகனுமான திரிதர், இவ்வாறு என்னை அழைத்ததும், அந்தக் குழியில் இருந்து அவர் காக்கப்பட்டார்.(46) உலகிற்கு வெப்பத்தை வழங்கும் சூரியனிலிருந்தும், சுடர்மிக்க நெருப்பிலிருந்தும் {அக்னியிலிருந்தும்}, சந்திரனிலிருந்தும் வெளிப்படும் கதிர்களே என் மயிராகின்றன. எனவே, கல்வியாளர்களான பிராமணர்களில் முதன்மையானோர் என்னைக் கேசவன் என்ற பெயரால் அழைக்கின்றனர்.(47)உயர் ஆன்ம உதத்தியர், தமது மனைவியைக் கருவுறச் செய்து, தேவர்களின் மாயையால் அவளிடமிருந்து மறைந்தார். தம்பியான பிருஹஸ்பதி, அந்த உயர் ஆன்மாவுடைய {உதத்தியருடைய} மனைவியின் முன் தோன்றினார்.(48) ஓ! குந்தியின் மகனே, உதத்தியருடைய மனைவியின் கருவறையில் இருந்தவனும், ஏற்கனவே அடிப்படையான ஐம்பூதங்களால் உடலமைந்ததுவனுமான குழந்தை, கலவி விருப்பத்தால் அங்கே வந்த அந்த முதன்மையான முனிவரிடம் {பிருஹஸ்பதியிடம்},(49) “ஓ! வரங்களை அளிப்பவரே, நான் ஏற்கனவே இந்தக் கருவறையில் நுழைந்துவிட்டேன். என் தாயைத் தாக்குவது உமக்குத் தகாது” என்றான். இன்னும் பிறக்காதவனான அந்தக் குழந்தையின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிருஹஸ்பதி, கோபத்தால் நிறைந்து, ஒரு சாபத்தை அளிக்கும் வகையில்,(50) “கலவி இன்பத்தை விரும்பி இங்கே நான் வந்தபோது, இவ்வழியில் நீ எனக்குத் தடங்கலாக அமைந்ததால், என் சாபத்தின் மூலம் நீ குருடனாகப் பிறப்பாய் என்பதில் ஐயமில்லை” என்றார்.(51) அந்த முதன்மையான முனிவர் அளித்த இந்தச் சாபத்தின் மூலம், உதத்தியரின் பிள்ளை குருடாகப் பிறந்து, நீண்ட நாட்கள் குருடனாகவே இருந்தார். இதன் காரணமாக, பழங்காலத்தில் அந்த முனிவர் தீர்க்கதமஸ் என்ற பெயரால் அறியப்பட்டார்.(52)

எனினும் அவர், நான்கு வேதங்களையும், அவற்றின் நித்திய அங்கங்கள் மற்றும் உப அங்கங்களையும் அடைந்தார். அதன் பிறகு அவர், இந்த எனது இரகசிய பெயரைச் சொல்லி, அடிக்கடி என்னை இருப்புக்கு அழைத்தார். உண்மையில், விதிக்கப்பட்ட விதியின்படியே மீண்டும் மீண்டும் அவர் என்னைக் கேசவன் என்ற பெயரைக் கொண்ட அழைத்தார்.(53) இந்தப் பெயரை மீண்டும் மீண்டும் சொன்னதனால் அடைந்த தகுதியின் {புண்ணியத்தின்} மூலம், தனது குருட்டு நிலையில் இருந்து குணமடைந்த அவர், அதுமுதல் கௌதமர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். எனவே, ஓ! அர்ஜுனா, தேவர்கள் மற்றும் உயர் ஆன்ம முனிவர்கள் அனைவருக்கும் மத்தியில் என்னுடைய இந்தப் பெயரைச் சொல்வது வரங்களை விளைவிக்கும். நெருப்பின் தேவனும், சோமனும் ஒன்றாகக் கலந்து ஒன்றாகவும், ஒரே பொருளாகவும் ஊடுகலந்தனர். இதன் காரணமாகவே, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மொத்த அண்டமும் இவ்விரு தேவர்களால் நீக்கமற நிறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது[7].(55) புராணங்களில், அக்னியும் சோமனும் ஒரே இயல்பைக் கொண்டவர்களாகவும், ஒரே விளைவைக் கொண்டவர்களாகவும் சொல்லப்படுகின்றனர். ஒரே விளைவுக்கு வழிவகுக்கும் இயல்பைக் கொண்ட இவை இரண்டின் விளைவால், அவர்கள் ஒருவருக்கொருவர் தகுந்தவரென்றும், அண்டத்தைத் தாங்குபவர்கள் என்றும் சொல்லப்படுகின்றனர்” என்றான் {கிருஷ்ணன்}.(56)

ருத்திர நாராயணப் போர்! – சாந்திபர்வம் பகுதி – 343-அக்னி மற்றும் சோமனின் இயல்பொற்றுமை; ருத்திரனுக்கும் நாராயணனுக்கும் இடையில் நடந்த போர்…

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “பழங்காலத்தில், அக்னியும், சோமனும் எவ்வாறு தங்கள் சொந்த இயல்பில் சீரான தன்மையை அடைந்தனர்? இந்த ஐயம் என் மனத்தில் எழுகிறது. ஓ! மதுசூதனா, இதை விலக்குவாயாக” என்றான்.(1)

உயர்ந்தவனான அந்தப் புனிதமானவன் {ஸ்ரீ கிருஷ்ண பகவான்}, “ஓ! பாண்டுவின் மகனே, என் சக்தியில் இருந்து எழும் நிகழ்வுகளைக் கொண்ட ஒரு புராதனக் கதையைச் சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் அதைக் கேட்பாயாக.(2) தேவ அளவின்படி நாலாயிரம் {4000} யுகங்கள் கடந்ததும், அண்ட அழிவு ஏற்படுகிறது. புலப்படுவது, புலப்படாததில் மறைகிறது. அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் அழிவை அடைகின்றன.(3) ஒளி, பூமி, காற்று ஆகிய அனைத்தும் மறைந்து போகின்றன. அண்டத்தில் இருள் பரவி, அஃது ஒரே நீர்ப்பரப்பாகிறது.(4) இரண்டாவது ஒன்றில்லாத பிரம்மத்தைப் போல முடிவில்லாமல் நீர் மட்டுமே இருக்கும்போது, பகலும் இருப்பதில்லை, இரவும் இருப்பதில்லை. இருப்பும், இல்லாமையும் இருப்பதில்லை; புலப்படுவதும், புலப்படாததும் இருப்பதில்லை.(5) அண்டத்தின் நிலை இவ்வாறு இருக்கும்போது, அழிவற்றவனும், இறப்பற்றவனும், புலன்களற்றவனும், உணரப்பட முடியாதவனும், பிறப்பற்றவனும், கருணை நிறைந்த வாய்மையின் சுயமும், சிந்தாமணி என்றழைக்கப்படும் ரத்தினத்தின் கதிர்கள் எனும் இருப்பின் வடிவத்துடன் கூடியவனும், பகைமை, சிதைவு, மரணம், மூப்பு ஆகிய கோட்பாடுகள் அற்றவனும், வடிவமற்றவனும், நீக்கமற நிறைந்திருப்பவனும், அண்டப்படைப்பின் கோட்பாடாகவும், தொடக்கம், நடுநிலை, முடிவு இல்லாது நித்தியமாக இருப்பவனுமான நாராயணனின் குணக் கலவையான தமஸில் இருந்து இருப்பவற்றில் முதன்மையானவனும், நித்தியமானவனும், மாற்றமில்லாதவனுமான ஹரி எழுகிறான்.(6) இந்தத் துணிவுரைக்கு அதிகாரம் இருக்கிறது.

ஸ்ருதி {வேதம்}, “பகல் இல்லை. இரவு இல்லை. இருப்பு இல்லை. இல்லாமை இல்லை. தொடக்கத்தில் தமஸ் மட்டுமே இருந்தாள்” என்று சொல்கிறது[1].(7)அவள் அண்டத்தின் வடிவில் இருந்தாள், அவள் நாராயணனுடைய அண்ட வடிவத்தின் இரவாக இருந்தாள். இதுவே தமஸ் என்ற சொல்லின் பொருளாகும்.(8) இவ்வாறு தமஸில் பிறந்த (ஹரி என்றழைக்கப்படும்) அந்தப் புருஷனிலிருந்து பிரம்மத்தைக் காரணமாகக் கொண்டு பிரம்மன் என்றழைக்கப்படுபவன் இருப்புக்கு வந்தான். உயிரினங்களைப் படைக்க விரும்பிய பிரம்மன், தன் கண்களிலிருந்து அக்னியையும், சோமனையும் உண்டாக்கினான். அதன் பிறகு உயிரினங்கள் படைக்கப்பட்டபோது, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் என்ற முறையான வரிசையில் மனிதர்கள் படைக்கப்பட்டனர். சோமனாகப் பிறந்தவன் பிரம்மாவன்றி வேறு எவனுமல்ல; பிராமணராகப் பிறந்தோர் அனைவரும்உண்மையில் சோமனே ஆவர். அக்னியாகப் பிறந்தவன் க்ஷத்திரியனன்றி வேறு எவனுமல்ல. பிராமணர்கள் க்ஷத்ரர்களைவிடப் பெருஞ்சக்தி கொண்டவர்களாக இருந்தனர். இதன் காரணம் யாதென நீ கேட்டால், க்ஷத்திரியர்களை விடப் பிராமணர்கள் மேன்மையானவர்கள் என்பது உலகம் முழுவதிலும் வெளிப்படும் ஒரு குணமாகும் என்பதே பதிலாகும். இது பின்வருமாறு நேர்ந்தது. மனிதர்களைப் பொறுத்தவரையில் பிராமணர்களே மூத்த படைப்பாக இருக்கின்றனர். பிராமணர்களை விட மேன்மையான எவரும் அவர்களுக்கு முன்பு படைக்கப்பட்டதில்லை. எவன் ஒரு பிராமணனின் வாயில் உணவூட்டுவானோ அவன் (தேவர்களை நிறைவு செய்வதற்காக) சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவபவனாகக் கருதப்படுகிறான். பிரம்மன் உயிரினங்களைப் படைக்கும் காரியம், இவ்வழியில் பொருட்களை விதித்தே நிறைவடைந்தது எனச் சொல்கிறேன். அவன் {பிரம்மன்} படைக்கப்பட்ட அனைத்தையும் அதனதன் நிலைகளில் நிறுத்தி மூவுலங்களையும் தாங்கினான். ஸ்ருதிகளின் மந்திரங்களில் இதே போன்ற தீர்மானம் ஒன்றிருக்கிறது.(9) {ஸ்ருதியில்}, “ஓ! அக்னி, வேள்விகளில் ஹோத்ரி நீயே, அண்டத்திற்கு நன்மை செய்பவன் நீயே. தேவர்களுக்கும், மனிதர்களுக்கும், உலகங்கள் அனைத்திற்கும் நன்மை செய்பவன் நீயே” {என்றிருக்கிறது}.(10)

இதற்கு (வேறொரு) சான்றாதாரமும் இருக்கிறது. {ஸ்ருதியில்}, “ஓ! அக்னி, அண்டம் மற்றும் வேள்விகளின் ஹோத்ரி நீயே. தேவர்களும், மனிதர்களும் எதன் மூலம் அண்டத்திற்கு நன்மை செய்வார்களோ, அந்தத் தோற்றுவாய் நீயே” {என்றிருக்கிறது}.(11) “உண்மையில் அக்னியே ஹோத்ரியாகவும், வேள்விகளைச் செய்பவனாகவும் இருக்கிறான். மேலும் வேள்வியின் பிரம்மாவாக அக்னியே இருக்கிறான்.(12) மந்திரங்கள் சொல்லாமல் வேள்வி நெருப்புக்குள் ஆகுதிகள் ஏதும் ஊற்றப்படக்கூடாது; தவங்களைச் செய்யும் மனிதர்களில்லாமல் தவங்களில்லை; மந்திரங்களுடன் ஆகுதிகள் ஊற்றுவதாலேயே தேவர்கள், மனிதர்கள் மற்றும் முனிவர்களின் வழிபாடுகள் நிறைவடைகின்றன. எனவே, ஓ அக்னி, வேள்விகளின் ஹோத்ரியாக நீயே கருதப்படுகிறாய். மனிதர்களின் ஹோமச் சடங்குகள் குறித்து அறிவிக்கப்பட்டிருக்கும் மந்திரங்கள் அனைத்தும் நீயே” {என்றுமிருக்கிறது}. பிறர் செய்யும் வேள்விகளை நடத்திக் கொடுக்கும் கடமை பிராமணர்களுக்கு விதிக்கப்படுகிறது. மறுபிறப்பாள, அல்லது இரு பிறப்பாள வகையைச் சேர்ந்தவர்களான க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்ற வேறு இருவகையினனுக்கு அதே கடமை பரிந்துரைக்கப்படவில்லை. எனவே, பிராமணர்களே அக்னியைப் போல வேள்வியைத் தாங்குகின்றனர். (பிராமணர்கள் செய்து கொடுக்கும்) வேள்விகள் தேவர்களைப் பலமடையச் செய்கின்றன. இவ்வழியில் பலமடையும் தேவர்கள், (வாழும் உயிரினங்கள் அனைத்தையும் ஆதரிப்பதன் மூலம்) பூமியைக் கனியச் செய்கின்றனர். ஆனால் முதன்மையான வேள்விகளின் மூலம் அடையப்படும் விளைவானது, பிராமணர்களின் வாயின் மூலமும் அடையப்படலாம்.(13) பிராமணனின் வாயில் உணவை அளிக்கும் கல்விமான், தேவர்களை நிறைவு செய்வதற்காகப் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவனாகச் சொல்லப்படுகிறான்.(14) இவ்வழியில் பிராமணர்களே அக்னியாகக் கருதப்படுகின்றனர். கல்வியைப் பெற்றவர்கள் அக்னியைத் துதிக்கின்றனர். மேலும் அக்னியே விஷ்ணு ஆவான். உயிரினங்கள் அனைத்தினுள்ளும் நுழையும் அவனே அவற்றின் உயிர் மூச்சுகளைத் தாங்கிப்பிடிக்கிறான்.(15)

இது தொடர்பாகச் சநத்குமாரரால் பாடப்பட்ட ஒரு சுலோகம இருக்கிறது. பிரம்மன் அண்டத்தைப் படைத்த போது, முதலில் பிராமணர்களைப் படைத்தான். பிராமணர்கள் வேத கல்வியின் மூலம் இறவாமையை அடைந்து, அத்தகைய கல்வியின் துணையால் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர். பிராமணர்களின் நுண்ணறிவு, வாக்கு, செயல்கள், நோன்புகள், நம்பிக்கை மற்றும் தவங்கள் ஆகியன பசுவின் அமுதத்தை {வெண்ணையைத்} தாங்கும் உறியைப் போலப் பூமியையும் சொர்க்கத்தையும் தாங்குகின்றன.(16) வாய்மையைவிட உயர்ந்த கடமை வேறேதும் இல்லை. தாயைவிட மதிக்கத்தகுந்த மேன்மையானவர்கள் வேறு எவரும் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் இன்பநிலையை அளிப்பதற்குப் பிராமணனைவிட மிகத் தகுந்தவன் வேறு எவனும் இல்லை.(17) பிராமணர்கள் (தங்களுக்கு ஒதுக்கப்படும் நிலங்கள் மற்றும் பிற வகை உடைமைகளிலிருந்து) வாழ்வாதாரத்திற்கு எந்தக் குறிப்பிட்ட வழிமுறையும் இல்லாத ஆட்சிப்பகுதிகளில் வசிப்போர் துன்பத்தை அடைவார்கள். அங்கே எருதுகள் மக்களைச் சுமக்கவோ, ஏர் உழுவோ செய்வதில்லை, அதே போல எந்த வகை வாகனங்களும் அவற்றை ஏற்பதில்லை. குடுவைகளில் உள்ள பால் ஒருபோதும் வெண்ணைப் பெறுவதற்காகக் கடையப்படுவதில்லை. மறுபுறம், அங்கே வசிப்பவர்கள், அனைத்து வகைச் செழிப்புகளையும் இழந்து, (அமைதியின் அருளை அடைவதற்குப் பதிலாக) திருடர்களாகிறார்கள்.(18)

வேதங்கள், புராணங்கள், வரலாறுகள், மற்றும் அதிகாரமிக்கப் பிற எழுத்துகளில் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவும், அனைத்துப் பொருட்களையும் படைப்பவர்களும், இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் அடையாளங்காணப்படுகிறவர்களுமான பிராமணர்களே நாராயணனின் வாயாக இருக்கிறார்கள். உண்மையில், அந்த வரமளிக்கும் பெருந்தேவன் பேச்சைக் கட்டுப்படுத்தித் தவமிருந்தபோது, அவனது வாயில் இருந்து முதலில் வந்தவர்கள் பிராமணர்களே. விளக்கப்படமுடியாத வடிவத்தில் பிரம்மனாக நானே இருந்து, தேவர்கள், அசுரர்கள் மற்றும்பெரும் முனிவர்களைப் படைத்து, அவரவருக்குரிய நிலைகளில் நிறுத்தி, தேவைப்படும் நேரத்தில் தண்டிக்கவும் செய்வதால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மேம்பட்ட நிலையைப் பிராமணர்கள் அடைகிறார்கள். அஹல்யை சிற்றின்ப வன்தாக்குதலுக்கு உள்ளான விளைவால், அவளது கணவரான கௌதமரால் இந்திரன் சபிக்கப்பட்டான், அதன் மூலமே அவன் தன் முகத்தில் பச்சை தாடியைக் கொண்டான். கௌசிகரின்அந்தச் சாபத்தின் மூலம் இந்திரன் தன் விதைப்பைகளையும் (அண்டத்தை) இழந்தான், பின்னர், (பிற தேவர்கள் அவன் மீது கொண்ட அன்பால்) ஓர் ஆட்டின் விதைப்பைகளால் (அஜத்தின் விருஷணத்தால்) அந்த இழப்பு சமன் செய்யப்பட்டது.

மன்னன் சர்யாதியின் வேள்வியில், பெரும் முனிவரான சியவனர், அசுவின் தேவர்கள் இருவரையும் வேள்விக்காணிக்கைகளின் பங்காளிகளாக்க விரும்பியபோது, இந்திரன் அதைத் தடுத்தான். சியவனர் இவ்வாறு வற்புறுத்தியபோது, அவர் மீது வஜ்ரத்தை வீச நினைத்தான் இந்திரன். அந்த முனிவர் {சியவனர்} இந்திரனின் கரங்களை முடக்கினார். ருத்திரனால் தமது வேள்வி அழிந்த பெரும் முனிவர் தக்ஷர், மீண்டும் தம்மைக் கடுந்தவங்களில் ஈடுபடுத்திக் கொண்டு அடைந்த உயர்ந்த பலத்தின் விளைவால், ருத்திரனின் நெற்றில் மூன்றாவது கண் போன்ற ஒன்றைத் தோன்றச் செய்தார். ருத்திரன், அசுரர்களுக்குச் சொந்தமான முந்நகரத்தை {திரிபுரத்தை} அழிக்க முயன்ற போது, சகிப்புத்தன்மையைக் கடந்து தூண்டப்பட்டவரும், அசுரர்களின் ஆசானுமான உசானஸ், தமது தலையின் சடாமுடியில் இருந்து ஒன்றைப் பிடுங்கி, அந்த ருத்திரன் மீது வீசினார். அந்தச் சடாமுடியில் இருந்து பல பாம்புகள் எழுந்தன. அந்தப் பாம்புகள் ருத்திரனைக் கடித்ததால் அவனது தொண்டை நீல நிறமானது. கடந்த காலமான {யுகமான} சுயம்புவான மனுவின் காலத்தில், நாராயணன் ருத்திரனின் தொண்டையைப் பற்றியதாகவும், அதனால் ருத்திரனின் தொண்டை நீலமானதாகவும் சொல்லப்படுகிறது[2].அமுதத்திற்காகப் பெருங்கடல் கடையப்பட்ட நிகழ்வின்போது, அங்கிரஸ் குலத்தைச் சார்ந்த பிருஹஸ்பதி, புருஷ்சாரணம் என்ற சடங்கைச் செய்வதற்காகப் பெருங்கடலின் கரையில் அமர்ந்தார். தொடக்க ஆசமனத்திற்காக {நீராடலுக்காக} அவர் சிறிதளவு நீரை எடுத்தபோது, அது புழுதி நிறைந்ததாகக் காணப்பட்டது. இதனால் கோபமடைந்த பிருஹஸ்பதி, “நான் உன்னைத் தீண்ட வந்தும், அதைக் கருத்தில் கொள்ளாமல் நீ இவ்வளவு தூய்மையில்லாமல் இருப்பதாலும், தெளிவடையாமல் இருப்பதாலும், இந்த நாள் முதல் மீன்கள், சுறாக்கள், ஆமைகள் மற்றும் பிற நீர்வாழ் விலங்குகளால் நீ கறைபடிந்திருப்பாய்” என்று சொல்லி பெருங்கடலுக்குச் சாபமளித்தார். அந்தக் காலத்திலிருந்து பெருங்கடலின் நீரானது, பல்வேறு வகைக் கடல் விலங்குகளாலும், ராட்சசர்களாலும் நிறைந்திருக்கிறது.

முன்பொரு சமயம் தாஷ்டிரியின் {துவஷ்டாவின்} மகன் விஷ்வரூபர், தேவர்களின் புரோகிதரானார். அவருடைய தாயானவள் ஓர் அசுரனின் மகள் என்பதால் அவர் தாய்வழியில் அசுரர்களோடு தொடர்புடையவராக இருந்தார். வேள்வி காணிக்கைகளில் தேவர்களுக்குரிய பங்கை பொதுவெளியில் கொடுத்தாலும், தனிப்பட்ட முறையில் அசுரர்களுக்கும் பங்கைக் கொடுத்தார். ஹிரண்ய கசிபுவைத் தங்கள் தலைமையில் கொண்ட அசுரர்கள், விஷ்வரூபரின் தாயான தங்கள் தங்கையிடம் சென்று, அவளிடம், “தாஷ்டிரியின் மூலம் உண்டானவனும், திரிசிரிஸ் என்ற வேறு பெயரால் அழைக்கப்படுபவனுமான உன் மகன் விஷ்வரூபன், இப்போது தேவர்களின் புரோகிதராக இருக்கிறான். பொது வெளியில் வேள்விக் காணிக்கைகளில் தேவர்களுக்குரிய பங்கை அவன் கொடுக்கும்போது, அதில் எங்கள் பங்கையும் தனிப்பட்ட முறையில் கொடுத்து வருகிறான். இதன் விளைவால் தேவர்கள் பெருக்கத்தையும், நாங்கள் பலவீனதைதயும் அடைகிறோம். எனவே, அவனை எங்கள் தரப்பை அடையச் செய்வதே உனக்குத் தகும்” என்றார்கள்.

அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட விஷ்வரூபரின் தாய், (இந்திரனின்) நந்தன வனத்தில் இருந்து தன் மகனிடம் சென்று அவரிடம், “ஓ! மகனே, நீ ஏன் உன் எதிரிகளைப் பெருக்கி உன் தாய் மாமன்களின் தரப்பை பலவீனப்படுத்துகிறாய்? இவ்வழியில் செயல்படுவது உனக்குத் தகாது” என்றாள்.

தன் தாயால் இவ்வாறு வேண்டப்பட்ட விஷ்வரூபர், அவளது வார்த்தைகளைக் கீழ்ப்படிய வேண்டும் என்று நினைத்து, அந்தச் சிந்தனையின் விளைவால், தன் தாய்க்கு உரிய மரியாதைகளைச் செலுத்திவிட்டு, ஹிரண்யகசிபுவின் தரப்பை அடைந்தார். திரிசிரஸ் {விஷ்வரூபர்} வந்ததும், மன்னன் ஹிரண்யகசிபு, பிரம்மனின் மகனும், தன் பழைய ஹோத்ரியுமான வசிஷ்டரை அனுப்பிவிட்டு, {ஹோத்ரி என்ற} அந்த அலுவலில் திரிசிரஸை நியமித்தான். இதனால் கோபமடைந்த வசிஷ்டர், “என்னை அனுப்பிவிட்டு, வேறொருவரை உன் ஹோதிர்யாக நியமித்துக் கொண்டதால் இந்த உனது வேள்வி நிறைவு பெறாது, இதற்கு முன் இல்லாத ஓர் உயிரினம் உன்னைக் கொல்லும்” என்று அவனுக்குச் சாபமளித்தார். இந்தச் சாபத்தின் விளைவால், ஹிரண்யகசிபு சிங்க மனிதனின் {நரசிம்மத்தின்} வடிவில் இருந்த விஷ்ணுவால் கொல்லப்பட்டான்.

விஷ்வரூபர், தமது தாய்வழி உறவினர்களின் தரப்பை அடைந்து, அவர்களைப் பெருக்குவதற்காகக் கடுந்தவங்களைச் செய்தார். அவரைத் தமது நோன்புகளில் இருந்து பிறழச் செய்ய விரும்பிய இந்திரன் அழகிய பல அப்சரஸ்களை அவரிடம் அனுப்பினான். ஒப்பற்ற அழகைக் கொண்டவர்களும், தெய்வீகமானவர்களுமான அந்தத் தேவகன்னிகளைக் கண்டு விஷ்வரூபரின் இதயம் கலக்கமடைந்தது. குறுகிய காலத்திற்குள் அவர் அவர்களிடம் மிகுந்த பற்றைக் கொண்டார். அவர் அவர்களிடம் பற்றுக் கொண்டார் என்பதை அறிந்த அந்தத் தெய்வீக தேவ கன்னிகள், ஒருநாள் அவரிடம், “இனியும் நாங்கள் இங்கே இருக்க மாட்டோம். உண்மையில் நாங்கள் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்லப் போகிறோம்” என்றனர்.

தம்மிடம் அவ்வாறு சொன்னவர்களிடம் அந்தத் தாஷ்டிரியின் மகன், “நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள்? என்னோடே இருங்கள். நான் உங்களுக்கு நன்மையைச் செய்வேன்” என்றார்.

அவர் இவ்வாறு சொல்வதைக் கேட்ட அந்த அப்சரஸ்கள், “நாங்கள் அப்சரஸ்கள் என்றழைக்கப்படும் தெய்வீகமான தேவகன்னிகளாவோம். சிறப்புமிக்கவனும், பெரும் பலம் கொண்டவனும், வரமளிப்பவனுமான இந்திரனையே பழங்காலத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்தோம்” என்றனர்.

அப்போது விஷ்வரூபர் அவர்களிடம், “இந்த நாளே, தேவர்கள் அனைவரையும், அவர்களின் தலைமையில் உள்ள இந்திரனையும் இல்லாமல் செய்வேன்” என்றார்.

இதைச் சொன்ன திரிசிரஸ், பெரும் திறம் கொண்ட குறிப்பிட்ட புனிதமான மந்திரங்களை மனதிதல் சொல்லத் தொடங்கினார். அந்த மந்திரங்களின் சக்தியால் அவரது சக்தி அதிகரிக்கத் தொடங்கியது. வேள்விகளுக்கு அடிமையாக இருந்த பிராமணர்கள், முறையான சடங்குகளுடன் புனித நெருப்பில் ஊற்றிய சோமம் அனைத்தையும் ஒரு வாயினால் பருகத் தொடங்கினார். இரண்டாவது வாயினால் அவர் (வேள்விகளில் கொடுக்கப்பட்ட) உணவுகள் அனைத்தையும் உண்ணத் தொடங்கினார். மூன்றாம் வாயினால் அவர் இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அனைவரின் சக்தியையும் பருகத் தொடங்கினார. அவர் குடித்துஃக கொண்டிருந்த சோமத்தினால், அவரது உடலின் ஒவ்வொரு பகுதியும் சக்தியில பெருகுவதைக் கண்ட தேவர்கள் அனைவரும், இந்திரனுடன் சேர்ந்து பெரும்பாட்டன் பிரம்மனிடம் சென்றனர்.

அவனது {பிரம்மனின்} முன்னிலையை அடைந்த அவர்கள், “எங்கும் செய்யப்படும் வேள்விகளில் முறையாக அளிக்கப்படும் சோமம் அனைத்தும் விஷ்வரூபரால் பருகப்படுகிறது. எங்களுக்குரிய பங்குகள் ஏதும் எங்களுக்குக் கிடைப்பதில்லை. அசுரர்கள் பெருகுகிறார்கள், நாங்களோ பலவீனமடைகிறோம். எனவே, எங்களுக்கான நன்மை எதுவோ, அதை விதிப்பதே உமக்குத் தகும்” என்றனர்.

தேவர்கள் நிறுத்தியதும், பெரும்பாட்டன் அவர்களிடம், “பிருகு குலத்தைச் சேர்ந்த பெரும் முனிவர் ததீசி இப்போதும் கடுந்தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். தேவர்களே, அவர்களிடம் சென்று ஒரு வரத்தை வேண்டுங்கள். அவர் தமது உடலைக் கைவிடும்படி ஏற்பாடு செய்யுங்கள். பிறகு அவரது எலும்புகளைக் கொண்டு வஜ்ரம் என்றழைக்கப்படும் புதிய ஆயுதம் ஒன்றை உண்டாக்குங்கள்” என்றான்.

பெரும்பாட்டனால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்ட தேவர்கள், புனிதமான முனிவர் ததீசி தமது தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர். இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அந்தத் தவசியிடம், “ஓ! புனிதமானவரே, உமது தவங்கள் தடையில்லாமல் நன்றாக நடைபெறுகிறது என நம்புகிறோம்” என்றனர்.

அதற்குத் தவசியான ததீசி அவர்களிடம், “உங்கள் அனைவருக்கும் நல்வரவு. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக. நீங்கள் சொல்வதை நிச்சயம் நான் செய்வேன்” என்றார்.

அப்போது அவர்கள் அவரிடம் {தேவர்கள் முனிவர் ததீசியிடம்}, “உலகங்கள் அனைத்தின் நன்மைக்காக நீர் உமது உடலைக் கைவிடுவதே உமக்குத் தகும்” என்றனர்.

பெரும் யோகியும், இன்ப துன்பங்களை ஒரே ஒளியில் காண்பவரும், உற்சாகத்துடன் இருப்பவருமான தவசி ததீசி இவ்வாறு வேண்டப்பட்டதும், தமது யோக சக்தியால் தம் ஆன்மாவைக் குவித்துத் தமது உடலைக் கைவிட்டார்[3]. களிமண்ணாலான அந்தத் தற்காலிகமான வசிப்பிடத்தை அவரது ஆன்மா கைவிட்டபோது, தாத்ரியானவர் {பிரம்மன்}, அவரது எலும்புகளை எடுத்து வஜ்ரம் என்றழைக்கப்படும் ஒரு தடுக்கப்பட முடியாத ஆயுதத்தை உண்டாக்கினார்.ஒரு பிராமணரின் எலும்புகளால் இவ்வாறு செய்யப்பட்டதும், பிற ஆயுதங்களால் ஊடுருவப்பட முடியாததும், தடுக்கப்பட முடியாததும், விஷ்ணுவின் சக்தியால் நிறைந்ததுமான அந்த வஜ்ரத்தைக் கொண்டு இந்திரனானவன், தாஷ்டிரியின் மகனான விஷ்வரூபரைத் தாக்கினான். இவ்வாறு தாஷ்டிரியின் மகனைக் கொன்ற இந்திரன், அவரது தலையை உடலில் இருந்து துண்டித்தான். எனினும், விஷ்வரூபரின் உயிற்ற உடல் கடையப்பட்ட போது, அதனுள் இருந்த சக்தி, விருத்திரன் என்ற பெயரைக் கொண்ட வலிமைமிக்க அசுரன் ஒருவனை உண்டாக்கியது. விருத்திரன் இந்திரனின் பகைவனானான், ஆனால் அவனையும் இந்திரன் வஜ்ரத்தால் கொன்றான். இவ்வாறு பிரம்மஹத்தி என்ற பாவம் இரண்டுமுறை செய்யப்பட்ட விளைவால், பேரச்சமடைந்த இந்திரன் சொர்க்கத்தின் ஆட்சியுரிமையைக் கைவிட்டான். பிறகு அவன் மானஸத் தடாகத்தில் வளர்ந்த ஒரு குளிர்ந்த தாமரைத் தண்டில் நுழைந்தான். அனிமா என்ற யோக குணத்தின் விளைவால் மிக நுட்பமான வடிவை அடைந்த அவன் அந்தத் தாமரைத் தண்டின் இழைகளுக்குள் நுழைந்தான்.

மூவுலகங்களின் தலைவனான, சச்சியின் கணவன், பிரம்மஹத்தி என்ற பாவத்தில் கொண்ட அச்சத்தினால் காணாமல் போன போது, இந்த அண்டம் தலைவனற்றதானது. ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் தேவர்களைத் தாக்கின. பெரும் முனிவர்களால் சொல்லப்பட்ட மந்திரங்கள் தங்கள் திறன்கள் அனைத்தையும் இழந்தன. எங்கும் ராட்சசர்கள் தோன்றினர். மன்னனற்றவர்களாக இருந்த அனைத்து உலகவாசிகளும் பலத்தை இழந்தவர்களாக ராட்சசர்களுக்கும், பிற தீய உயிரினங்களுக்கும் எளிய இரையாக வீழத் தொடங்கினர். அப்போது தேவர்களும், முனிவர்களும் ஒன்று சேர்ந்து ஆயுஷின் மகனான நஹுஷனை மூவுலகங்களின் மன்னனாக அவனுக்கு முறையாக முடிசூட்டினர். நஹுஷன் தன் நெற்றியில் முழுமையாகக் கொண்டிருந்த ஐநூறு ஒளிக்கோள்களின் சுடர்மிக்கப் பிரகாசம், ஒவ்வொரு உயிரினத்தின் சக்தியையும் குன்றச் செய்தது. இவ்வாறு இருந்த நஹுஷன் தொடர்ந்து சொர்க்கத்தை ஆளத் தொடங்கினான். மூவுலகங்களும் இயல்பான நிலைக்குத் திரும்பின. அண்டத்தில் வசித்தவர்கள் மீண்டும் மகிழ்ச்சியானவர்களாகவும், உற்சாகமானவர்களாகவும் ஆனார்கள்.

அப்போது நஹுஷன், “அந்த இந்திரன் அனுபவித்த அனைத்தும் என் முன்னிலையில் இருக்கின்றன. அவனது மனைவியான சச்சி மட்டுமே இல்லை” என்றான்.

இதைச் சொன்ன நஹுஷன் சச்சி {இந்திராணி} இருந்த இடத்திற்குச் சென்று, அவளிடம், “ஓ! அருளப்பட்ட மங்கையே, நான் தேவர்களின் தலைவன் வந்திருக்கிறேன். என்னை ஏற்பாயாக” என்றான்.

சச்சி அவனுக்கு மறுமொழியாக, “நீர் இயல்பாகவே அறவொழுக்கத்தில் பற்று கொண்டவராவீர். மேலும் நீர் சோம {சந்திர} குலத்தைச் சார்ந்தவராக இருக்கிறீர். நீர் மாற்றான் மனைவியைப் பீடித்தல் தகாது” என்றாள்.

அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட நஹுஷன், அவளிடம், “இந்திரனின் நிலை {பதவி} இப்போது என்னால் அடையப்பட்டது. நான் இந்திரனின் ஆட்சிப்பகுதிகளையும், அவனுடைய மதிப்புமிக்க உடைமைகள் அனைத்தையும் அனுபவிக்கத் தகுந்தவனாவேன். உன்னை அனுபவிக்க நினைப்பதில் பாவமேதும் இல்லை. முன்பு நீ இந்திரனுடையவளாக இருந்ததால் இப்போது எனதாக வேண்டும்” என்றான்.

சச்சி அவனிடம், “நான் நோற்கும் நோன்பொன்று நிறைவடையாமல் இருக்கிறது. {நோன்பின்} இறுதியான சடங்குகள் நிறைவடைந்ததும், ஒரு சில நாட்களில் நான் உம்மிடம் வருகிறேன்” என்றாள்.

இந்திரனின் மனைவியிடம் இந்த உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டு நஹுஷன் அவளது முன்னிலையில் இருந்து அகன்றான். அதே வேளையில் துயரத்தாலும், சோகத்தாலும் பீடிக்கப்பட்ட சச்சி, தன் தலைவனைக் காணும் ஆவலாலும், நஹுஷன் மீது கொண்ட அச்சத்தாலும் (தேவர்களின் தலைமைப் புரோஹிதரான) பிருஹஸ்பதியிடம் சென்றாள். முதல் பார்வையிலேயே பிருஹஸ்பதி அவள் கவலையடைந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டார். உடனே அவர், அவள் தன் கணவனை மீட்கத் தேவையானவற்றைச் செய்யும் நோக்கம் கொண்டிருப்பதைத் தியான யோகத்தின் மூலம் அறிந்தார்.

பிருஹஸ்பதி அவளிடம், “தவத்தகுதியையும், நீ இப்போது நோற்கும் நோன்பின் விளைவால் உண்டாகும் தகுதியையும் கொண்டு, வரமளிக்கும் தேவியான உபஸ்ருதியை இருப்புக்கு அழைப்பாயாக. உன்னால் இருப்புக்கு அழைக்கப்படும் அவள், உடனே தோன்றி உன் கணவன் வசிக்கும் இடத்தைக்காட்டுவாள்” என்றார்.

அவள் அந்தக் கடும் நோன்பு நோற்றுக் கொண்டிருந்த போது, உரிய மந்திரங்களின் துணையுடன் வரமளிக்கும் தேவியான உபஸ்ருதியை இருப்புக்கு அழைத்தாள்.

சச்சியால் இருப்புக்கு அழைக்கப்பட்ட அந்தத் தேவி அவள் முன் தோன்றி, “உன் விருப்பத்தைக் கேட்க நான் இங்கிருக்கிறேன். உன்னால் இருப்புக்கு அழைக்கப்பட்டதால் நான் வந்திருக்கிறேன். நீ பேணி வளர்க்கும் எந்த விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும்?” என்று கேட்டாள்.

அவளுக்குத் தலைவணங்கிய சச்சி, “ஓ! அருளப்பட்ட மங்கையே {பகவதி}, என் கணவர் எங்கிருக்கிறார் என்பதைக் காட்டுவதே உனக்குத் தகும். வாய்மை நீயே. ரிதம் {ஸத்துக்களுக்குத் தாய்} நீயே” என்றாள்.

இவ்வாறு சொல்லப்பட்ட தேவி உபஸ்ருதி, அவளை மானஸத் தடாகத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே வந்த அவள், தாமரைத் தண்டின் இழைகளுக்குள் வசிக்கும் சச்சியின் தலைவனான இந்திரனை அவளுக்குச் சுட்டிக் காட்டினாள். தன் மனைவி நிறம் குன்றி, மெலிந்திருப்பதைக் கண்ட இந்திரன், மிகவும் கவலையடைந்தான்.

அந்தச் சொர்க்கத்தின் தேவன் தனக்குள்ளேயே, “ஐயோ, பெருஞ்சோகம் என்னை மூழ்கடிக்கிறது. நான் என் நிலையில் இருந்து வீழ்ந்துவிட்டேன். என் நிமித்தமாகக் கவலையடைந்திருக்கும் என் மனைவி காணாமல் போன என்னைக் கண்டுபிடித்து இங்கே வந்திருக்கிறாள்” என்றான்.

இவ்வாறு சிந்தித்த இந்திரன், அன்புக்குரிய தன் மனைவியிடம், “இப்போது நீ எந்நிலையில் இருக்கிறாய்?” என்று கேட்டான்.

அவள், “நஹுஷன் என்னை அவனது மனைவியாகும்படி அழைக்கிறான். நான் அவனிடம் செல்லப் போகும் காலத்தை நிர்ணயித்து அவகாசம் பெற்றிருக்கிறேன்” என்றாள்.

இந்திரன் அவளிடம், “நீ நஹுஷனிடம் சென்று, ’இதற்கும் முன் ஒருபோதும் பயன்படுத்தப்படாததும், சில முனிவர்கள் பூட்டப்பட்டதுமான வாகனத்தில் உன்னிடம் வந்து, அந்நிலையிலேயே உன்னை மணக்க வேண்டும்’ என்றும், ’இந்திரன் மிக அழகிய பல வாகனங்களைக் கொண்டிருந்தான், அவை அனைத்தும் அவனைச் சுமந்திருக்கின்றன’ என்றும், ’எனினும், இந்திரனுக்கே இல்லாத அத்தகைய வாகனத்தில் அவன் வர வேண்டும்’ என்றும் சொல்வாயாக” என்றான்.

இவ்வாறு தன் தலைவனால் ஆலோசனை கூறப்பட்ட சச்சி, மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள். இந்திரன் மீண்டும் தாமரைத் தண்டின் இழைகளுக்குள் நுழைந்தான்.

இந்திரனின் ராணி மீண்டும் சொர்க்கத்திற்குத் திரும்பியதைக் கண்ட நஹுஷன், அவளிடம், “நீ நிர்ணயித்த காலம் முடிவடைந்தது” என்றான். இந்திரன் அவளிடம் செய்யச் சொன்னதைச் சச்சி அவனிடம் சொன்னாள்.

நஹுஷன், தான் செலுத்திய வாகனத்தில் பெரும் முனிவர்கள் பலரைப் பூட்டி, சச்சி வாழ்ந்து வந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டான். மைத்ரவருணனின் உயிர்வித்தின் மூலம் கும்பத்தில் பிறந்தவரும், முனிவர்களில் முதன்மையானவருமான அகஸ்தியர், இவ்வழியில் நஹுஷனால் அவமதிக்கப்படும் அந்த முதன்மையான முனிவர்களைக் கண்டார். அவரை {அகஸ்தியரை} நஹுஷன் தன் காலால் தாக்கினான்.

அவனிடம் அகஸ்தியர், “இழிந்தவனே, பெரும் முறையற்ற செயலைச் செய்வதால் நீ பூமியில் விழுவாயாக. பாம்பாக மாறி, இந்தப் பூமியும் மலைகளும் உள்ளவரை அந்த வடிவத்திலேயே தொடர்ந்து வாழ்வாயாக” என்று சபித்தார்.

அந்தப் பெரும் முனிவரால் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டவுடனே நஹுஷன் அந்த வாகனத்தில் இருந்து கீழே விழுந்தான். மூவுலகங்களும் மீண்டும் தலைவனற்றவையாகின. தேவர்களும் முனிவர்களும் ஒன்றுசேர்ந்து விஷ்ணு இருக்கும் இடத்திற்குச் சென்று, இந்திரனை மீட்டுக் கொண்டு வரக் கோரினர்.

அவனை {விஷ்ணுவை} அணுகிய அவர்கள், “ஓ! புனிதமானவனே, பிரம்மஹத்தி என்ற பாவத்தில் மூழ்கியிருக்கும் இந்திரனை மீட்பாயாக” என்றனர்.

வரமளிப்பவனான விஷ்ணு அவர்களிடம், “இந்திரன் ஒரு குதிரை வேள்வியை விஷ்ணுவை மதிக்கும் வகையில் செய்யட்டும். அப்போது அவன் தனது முந்தைய நிலையை அடைவான்” என்றான்.

தேவர்களும், முனிவர்களும் இந்திரனைத் தேடத் தொடங்கினர், ஆனால் அவர்களால் அவனைக் காண முடியாததால் சச்சியிடம் சென்று, “ஓ! அருளப்பட்ட மங்கையே, இந்திரனிடம் சென்று அவனை இங்கே கொண்டு வருவாயாக” என்றனர்.

அவர்களால் வேண்டிக்கொள்ளப்பட்ட சச்சி {இந்திராணி} மீண்டும் மானஸத் தடாகத்திற்குச் சென்றாள். இந்திரன், அத்தடாகத்திலிருந்து எழுந்து பிருஹஸ்பதியிடம் வந்தான். தேவ புரோஹிதரான பிருஹஸ்பதி, ஒரு நல்ல குதிரைக்குப் பதில் அனைத்து வழியிலும் வேள்விக்குத் தகுந்த ஒரு கருப்பு மானை வைத்து, குதிரை வேள்வி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பிருஹஸ்பதி, மருத்துகளின் தலைவனான இந்திரனை (கொல்வதில் இருந்து காக்கப்பட்ட) அந்தக் குதிரையிலேயே அவனது இடத்திற்கு வழிநடத்தினார்[4]. பிறகு அந்தச் சொர்க்கத்தின் தலைவன் {இந்திரன்}, தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவராலும் துதிகளால் துதிக்கப்பட்டான். பிரம்மஹத்தி பாவமானது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பெண், நெருப்பு, மரங்கள், பசு ஆகியவற்றில் வசிக்கும்படி விதிக்கப்பட்டு, அதனிலிருந்து தூய்மையடைந்த அவன் தொடர்ந்து சொர்க்கத்தை ஆளத் தொடங்கினான். இவ்வாறே ஒரு பிராமணரின் சக்தியால் பலமடைந்த இந்திரன், தன் பகைவனைக் கொல்வதில் வென்றான் (அந்தச் செயலின் விளைவாகப் பாவத்தில் மூழ்கியபோது, மற்றொரு பிராமணரின் சக்தியால் மீட்கப்பட்டான்). இவ்வாறே இந்திரன் மீண்டும் தன் நிலையை அடைந்தான்.பழங்காலத்தில், பெரும் முனிவரான பரத்வாஜர் தெய்வீக கங்கையின் கரையில் தமது துதிகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது விஷ்ணு மூன்று அடி வடிவைக் கொண்டு {வாமனனாக} அந்த இடத்திற்கு வந்தான்[5]. அந்த இயல்புக்குமீறிய காட்சியைக் கண்ட பரத்வாஜர், கை நிறையக் கொண்ட நீரால் விஷ்ணுவைத் தாக்கினார். இதனால் விஷ்ணுவின் மார்பில் (ஸ்ரீவத்ஸம் என்றழைக்கப்படும்) ஒரு வடுவை அடைந்தான்[6].முனிவர்களில் முதன்மையானவரான பிருகுவால் சபிக்கப்பட்ட அக்னி, அனைத்துப் பொருட்களையும் விழுங்கும் கடப்பாடு உடையவனாகச் செய்யப்பட்டான்.(19-57) ஒரு காலத்தில் தேவர்களின் தாயான அதிதி, தன் மகன்களுக்காக உணவு சமைத்திருந்தாள். அந்த உணவை உண்டு, அதன் மூலம் பலமடையும் தேவர்கள் அசுரர்களைக் கொல்வார்கள் என்று அவள் நினைத்திருந்தாள். உணவு சமைக்கப்பட்ட பிறகு, புதன் (என்ற பெயரால் அறியப்படும் கோளின் தலைமைத் தேவன்) ஒரு கடும் நோன்பை நிறைவு செய்து, அதிதி முன்னிலையில் வந்து, “எனக்குப் பிச்சை கொடு” என்று கேட்டான். இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட அதிதி, தன் மகன்களான தேவர்கள் முதலில் உண்ணாமல் வேறு யாரும் உணவை உண்ணக்கூடாது என்று நினைத்து அவனுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. இவ்வாறு தனக்குப் பிச்சை அளிக்க மறுத்த அதிதியின் நடத்தையால் கோபமடைந்தவனும், பிரம்மனின் சுயமுமான புதன், தான் நிறைவு செய்திருந்த கடும் நோன்பின் மூலம் சபித்தான். அதிதி தனக்குப் பிச்சையிட மறுத்ததால் விவஸ்வான் {சூரியன்} தனது இரண்டாம் பிறவியில் அவளது கருவறையில் முட்டையின் {அண்டத்தின்} வடிவில் பிறப்படையும்போது அவள் பெரும் வலியை உணர்வாள் {துன்பமடைவாள்} என்று சபித்தான். அந்த நேரத்தில் அதிதி விவஸ்வானிடம் புதனின் சாபத்தை நினைவு கூர்ந்தாள், அதன் காரணமாகவே சிராத்தங்களில் துதிக்கப்படும் தேவனான விவஸ்வான் அதிதியின் கருவறையில் இருந்து வெளி வந்ததும், மார்த்தாண்டன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(58)

பிரஜாபதியான தக்ஷன் அறுபது {60} மகள்களின் தந்தையானான். அவர்களில் இருபத்துமூவர் கசியபருக்கும்; பத்து பேர் தர்மனுக்கும்; பத்து பேர் மனுவுக்கும், இருபத்தெழுவர் சோமனுக்கும் அளிக்கப்பட்டனர். நக்ஷத்திரங்கள் என்றழைக்கப்படுபவர்களும், சோமனுக்கு அளிக்கப்பட்டவர்களுமான அந்த இருபத்தெழுவரும் அழகிலும், சாதனைகளிலும் இணையானவர்களாகவே இருப்பினும், சோமன், எஞ்சியோரைவிட ரோகிணியிடமே அதிகப் பற்றுடன் இருந்தான். அவனது மனைவிகளில் எஞ்சியோர் அனைவரும், பொறாமையில் நிறைந்து, அவனை விட்டு அகன்று தங்கள் தந்தையிடம் சென்று தங்கள் கணவனின் நடத்தை குறித்துச் சொல்லும் வகையில், “ஓ! புனிதமானவரே, அழகில் நாங்கள் அனைவரும் இணையானவர்களாகவே இருப்பினும், எங்கள் கணவரான சோமர், எங்கள் சகோதரியான ரோஹிணியிடம் அதிகப் பற்றுடன் இருக்கிறார்” என்றனர். தன் மகள்கள் சொன்ன வெளிப்பாடுகளில் கோபமடைந்த தெய்வீக முனிவரான தக்ஷன், தன் மருமகனை காச நோய் தாக்கி அவனிடமே வசிக்கட்டும் என்று சாபமளித்தான். தக்ஷனின் இந்தச் சாபத்தினால் பலமிக்கச் சோமனைப்ப பீடித்த காசநோய் அவனது உடலுக்குள் நுழைந்தது. இவ்வழியில் காசநோயால் பீடிக்கப்பட்ட சோமன், தக்ஷனிடம் வந்தான். பின்னவன் {தக்ஷன்} அவனிடம், “நீ உன் மனைவியரிடம் சமமாக நடந்து கொள்ளாததால் நான் உன்னைச் சபித்தேன்” என்றான். பிறகு அந்த முனிவன் {தக்ஷன்}, சோமனிடம், “உன்னைப் பீடித்திருக்கும் காசநோயால் நீ குறைவை அடைகிறாய். மேற்குப் பெருங்கடலில் ஹிரண்யசரம் என்றழைக்கப்படும் புனித நீர்நிலை இருக்கிறது. அந்தப் புனித நீருக்குச் சென்று அங்கே நீராடுவாயாக” என்றான். அந்த முனிவனின் ஆலோசனையின் பேரில் சோமன் அங்கே சென்றான். சோமன் அந்த ஹிரண்யசிரத்தை அடைந்து அங்கே நீராடினான். தூய்மைச் சடங்குகளைச் செய்து அவன் தன் பாவத்தில் இருந்து தூய்மையடைந்தான். சோமனால் அந்தப் புனித நீர்நிலை ஒளிர்ந்ததால் (அபாசிதம் அடைந்ததால்), அந்த நாள் முதல் அது பிரபாஸை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. எனினும், பழங்காலத்தில் தக்ஷன் அளித்த சாபத்தின் விளைவால் முழு நிலவின் {பௌர்ணமியின்} இரவிலிருந்து தேயத்தொடங்கிப் புது நிலவின் {அமாவாசையின்} இரவில் முற்றாக மறைவதும், அதன் பிறகு மீண்டும் முழு நிலவின் இரவு வரை வளர்வதும் இன்று வரை நடக்கிறது. பிரகாசமான சந்திர வட்டில் {இவ்வாறு} களங்கமடைந்த காலத்திலிருந்து சோமனின் உடலில் குறிப்பிட்ட சில கரும்புள்ளிகள் இருக்கின்றன. உண்மையில் நிலவின் அற்புத வட்டில் அந்த நாள் முதல் முயலின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறது.(59)

ஒரு காலத்தில் ஸ்தூலசிரஸ் என்ற பெயரைக் கொண்ட முனிவர் ஒருவர் மேரு மலைகளின் வடக்குச் சாரலில் கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்தார். அவர் அந்தக் கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்தபோது, அனைத்து வகை இனிய நறுமணங்களையும் சுமந்தபடி ஒரு தூய்மையான தென்றல் அங்கே வீசத் தொடங்கி அவரது உடலுக்கு விசிறிவிட்டுக் கொண்டிருந்தது. அவன் செய்த கடுந்தவத்தால் அவரது உடல் வெந்து கொண்டிருந்ததாலும், அனைத்து வகை உணவையும் தவிர்த்து அவர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து கொண்டிருந்ததாலும் அவரைச் சுற்றிலும் வீசிய இனிய தென்றலின் விளைவால் அவர் உயர்வான நிறைவை அடைந்தார். தனக்கு விசிறிவிட்ட அந்த இனிய தென்றலிடம் அவர் இவ்வாறு நிறைவடைந்ததால், அவரைச் சுற்றிலும் இருந்த மரங்கள் (பொறாமையடைந்து) அவரது புகழைப் பழிக்கும் வகையில் மலர்களை வெளியிட்டன. மரங்களின் இந்நடத்தையால் வெறுப்படைந்த முனிவர், “இதுமுதல் உங்களால் எல்லா நேரங்களிலும் உங்களுக்கு உரிய மலர்களை வெளிப்படுத்த முடியாது” என்று சபித்தார்.(60)

பழங்காலத்தில் நாராயணன் உலகத்திற்கு நன்மை செய்வதற்காகப் பெரும் முனிவர் வடவாமுகராகப் பிறந்தான். மேருவின் சாரலில் கடுந்தவம் செய்து கொடிருந்தபோது அவர் பெருங்கடலை தன் முன்னிலைக்கு வருமாறு அழைத்தார். எனினும், பெருங்கடல் அவரது ஆணைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. இதனால் சினமடைந்த அந்த முனிவர்கள் வெப்பத்தோடு கூடிய தன் உடலைக் கொண்டு பெருங்கடலின் நீரைத் திடமாக்கி மனித வியர்வையின் சுவையுடன் அதை உப்புத்தன்மை அடையச் செய்தார். மேலும் அந்த முனிவர், “இனி உன் நீர் பருகும் நிலையில் இராது. உனக்குள் திரியும் குதிரைத் தலைக்கு மட்டுமே உன் நீர் பருகுவதற்கு இனிமையானதாக இருக்கும்” என்றார். இதன் காரணமாகவே பெருங்கடலின் நீரானது இந்த நாள்வரை சுவையில் உப்புத்தன்மை கொண்டதாகவும், குதிரைத் தலையைத் தவிர வேறு எவராலும் பருக முடியாததாகவும் இருக்கிறது[7].(61)உமை என்ற பெயரைக் கொண்ட இமய மலையின் மகளைத் திருமணம் செய்து கொள்ள ருத்திரன் விரும்பினான். (மஹாதேவனிடம உமையை அளிப்பதாக ஹிமவான் {இமயம்} உறுதியளித்த பிறகு) ஹிமவானை அணுகிய பெரும் முனிவர் பிருகு, அவனிடம், “உனது மகளான இவளை எனக்கு மணமுடித்துத் தருவாயாக” என்று கேட்டார். அதற்கு ஹிமவான், “என மகளுக்கு மணவாளனாக ருத்திரனை ஏற்கனவே தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்று மறுமொழி கூறினான். இந்த மறுமொழியால் கோபமடைந்த பிருகு, “உன் மகளை அளிக்க மறுத்து இவ்வாறு என்னை அவமதித்ததால் இனி ஒருபோதும் நீ ரத்தினங்களாலும், தங்கத்தாலும் நிறைந்திருக்கமாட்டாய்” என்றார். அந்த {பிருகு} முனிவருடைய சொற்களின் விளைவால் இந்த நாள் வரை இமய மலைகளில் தங்கமோ, ரத்தினங்களோ இருப்பதில்லை. பிராமணர்களின் மகிமை இவ்வாறானதே.(62)

பிராமணர்களின் உதவியின் மூலமே, நித்தியமானவளும், சிதைவில்லாதவளுமான பூமியைத் தங்கள் மனைவியாகக் கொள்ளவும், அவளை அனுபவிக்கவும் க்ஷத்திரியங்களால் முடிகிறது. மேலும் பிராமணர்களின் சக்தியானது, அக்னி மற்றும் சோமனாலானதாகும். இந்த அண்டம் அந்தச் சக்தியாலேயே தாங்கப்படுவதால், ஒன்று சேர்ந்த அக்னி மற்றும் சோமனாலேயே அது தாங்கப்படுகிறது.(63)

சூரியனும், சந்திரமாஸும் நாராயணனின் கண்களாக இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. சூரியனின் கதிர்களே என் கண்களாக அமைகின்றன. சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் இந்த அண்டத்தை வலுவூட்டவும், வெப்பமூட்டவும் செய்கின்றனர்.(64) இவ்வாறு சூரியனும் சந்திரனும் அண்டத்திற்கு வலுவும், பலமும் ஊட்டுவதால் அவர்கள் அண்டத்தின் ஹர்ஷம் (இன்பம்) எனக் கருதப்படுகிறார்கள். ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அக்னி மற்றும் சோமன் அண்டத்தைத் தாங்குவதற்குச் செய்யும் இச்செயல்களின் விளைவாலேயே நான் ரிஷிகேசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன். உண்மையில் நானே அண்டத்தைப் படைப்பவனும், வரமளிப்பவனுமான ஈசானன் ஆவேன்[8].(65)புனித நெருப்பில் ஆகுதியாகத் தெளிந்த நெய் ஊற்றப்படும்போது சொல்லப்படும் மந்திரங்களின் சக்தியால், வேள்விகளில் அளிக்கப்படும் (முக்கிய) பங்கை நான் பெறுகிறேன். என் நிறமானது, ஹரித் என்றழைக்கப்படும் முதன்மையான ரத்தினத்தின் நிறத்தைக் கொண்டதாகும். இந்தக் காரணத்தால் நான் ஹரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறேன்.(66)

நான் உயிரினங்கள் அனைத்தின் நிலையான வசிப்பிடமாக இருக்கிறேன். சாத்திரங்களை அறிந்த மனிதர்களால் நான் உண்மை, அல்லது அமுதத்தோடு அடையாளம் காணப்படுகிறேன். இதன் காரணமாக, கல்விமானான பிராமணர்கள் என்னை ரிததாமன் (உண்மையின் வசிப்பிடம், அல்லது அமுதத்தின் வசிப்பிடம்) என்ற பெயரில் அழைக்கிறார்கள்.(67)

பழங்காலத்தில் பூமி நீருக்குள் மூழ்கிக் காணாமல் போன போது, பெருங்கடலின் ஆழங்களில் அவளைக் கண்டு அங்கிருந்துஅவளை உயர்த்தியவன் நானே. இதன் காரணமாகத் தேவர்கள், கோவிந்தன் என்ற பெயரால் என்னைத் துதிக்கின்றனர்.(68)

சிபி என்ற சொல், உடலில் முடியில்லாத ஒருவனைக் குறிக்கும். சிபியின் வடிவில் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் சிபிவிஷ்டன் என்ற பெயரால் அறியப்படுகிறான்.(69) இந்தக் காரணத்திற்காகவே நான் இந்த இரகசியப் பெயரைக் கொண்டிருக்கிறேன்.(70) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான யாஷ்கர் {யாஷ்க முனிவலர்}, சிபிவிஷ்டன் என்ற பெயரில் என்னைத் துதித்து, பூமியின் பரப்பிலிருந்து மறைந்து போனவையும், பாதாள லோகத்தில் மூழ்கிக் கிடந்தவையுமான நிருக்தங்களை மீட்பதில் வென்றார்.(71)

நான் ஒருபோதும் பிறந்ததில்லை. நான் ஒருபோதும் பிறப்பதில்லை. நான் ஒருபோதும் பிறக்கப்போவதுமில்லை. அனைத்து உயிரினங்களின் க்ஷேத்ரஜ்ஞன் நானே. எனவே, நான் அஜன் (பிறக்காதவன்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்[9].(72)இழிவான எதனையும், நயமற்ற எதனையும் நான் ஒருபோதும் சொன்னதில்லை. வாய்மையின் சுயமானவளும், பிரம்மனின் மகளும், ரிதை என்ற பெயரால் அழைக்கப்படுபவளுமான தெய்வீக சரஸ்வதி என் வாக்கைப் பிரதிபலித்து எப்போதும் என் நாவில் குடியிருக்கிறாள்.(73) இருப்பில் உள்ளவையும், இல்லாதவையும் என்னால் என் ஆன்மாவில் கலக்கப்பட்டிருக்கின்றன. பிரம்மனின் வசிப்பிடமாகக் கருதப்படும் புஷ்கரையில் வசிக்கும் முனிவர்கள் என்னை வாய்மை என்ற பெயரால் அழைக்கின்றனர்.(74) நான் சத்வ குணத்தில் இருந்து ஒருபோதும் பிறழ்ந்ததில்லை, சத்வ குணம் என்னில் இருந்தே தோன்றியது என்பதை அறிவாயாக. ஓ! தனஞ்சயா, இப்பிறவியிலும் கூட என் புராதன குணமான சத்வ குணம் என்னைவிட்ட அகலவில்லை. நான் என்னைச் சத்வ குணத்தில் நிறுவிக் கொண்டு, கனிகளை எப்போதும் விரும்பாமல் செயல்களைச் செய்வதில் ஈடுபடுகிறேன். என் இயல்பான சத்வக குணத்தின் மூலம் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடையும் என்னை, சத்வ குணத்தைப் பின்பற்றுவதால் எழும் ஞானத்தின் துணையால் மட்டுமே காண முடியும். அந்தக் குணத்தில் பற்று கொண்டோரின் மத்தியில் மட்டுமே நான் அறியப்படுகிறேன். இந்தக் காரணத்திற்காகத் தான் நான் சாத்வதன் என்ற பெயரால் அறியப்படுகிறேன்.(75,76)

நான் இரும்பினால் செய்யப்பட்ட பெரிய கலப்பைக் கொழுவின் வடிவை ஏற்று, பூமியை உழுகிறேன். என் நிறம் கருப்பாக இருப்பதால், நான் கிருஷ்ணன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(77)

நான் பூமியை நீரோடும், வெளியை மனத்தோடும், காற்றை ஒளியோடும் இணைக்கிறேன். எனவே நான் வைகுண்டன் என்றழைக்கப்படுகிறேன்[10].(78)பரப்பிரம்மத்துடன் அடையாளம் காணப்படுவதன் மூலம் தனிப்பட்ட நனவுநிலை இருப்பைத் தவிர்ப்பது ஒரு வாழும் உயிரினம் அடையக்கூடிய உயர்ந்த குணம் அல்லது நிலையாகும். நான் அந்தக் குணம் அல்லது நிலையில் இருந்து ஒருபோதும் பிறழாதவனாக இருப்பதால் நான் அச்சுதன் {பிறழாதவன்} என்றழைக்கப்படுகிறேன்.(79)

பூமியும், ஆகாயமும் அனைத்துத் திசைகளிலும் விரிந்திருப்பதாக அறியப்படுகின்றன. அவை இரண்டையும் நானே தாங்குவதால் நான் அதோக்ஷஜன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(80) வேதங்களை அறிந்தவர்களும், சாத்திரங்களில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கு விளக்கம் கூறுவதில் ஈடுபடுபவர்களுமான மனிதர்கள் அதே பெயரை அழைத்தே வேள்விகளில் என்னைத் துதிக்கின்றனர்.(81) பழங்காலத்தில் பெரும் முனிவர்கள் கடுந்தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, “அதோக்ஷஜன் என்ற பெயரால் அழைக்கப்படத்தகுந்தவன் பலமிக்க நாராயணனைத் தவிர வேறு எவனுமில்லை” என்றனர்.(82)

அண்ட உயிரினங்கள் அனைத்தின் வாழ்வையும் நீட்டிக்கச் செய்யும் தெளிந்த நெய்யானது என் பிரகாசமாக இருக்கிறது {என்னைப் பிரகாசிக்கச் செய்யும் தெளிந்த நெய்யானது அண்ட உயிரினங்கள் அனைத்தின் வாழ்வையும் நீட்டிக்கச் செய்கிறது}. வேதமறிந்தவர்களும், குவிந்த ஆன்மாக்களைக் கொண்டோருமான பிராமணர்கள் இதன் காரணமாகவே கிருதார்ச்சிஸ் என்ற பெயரால் என்னை அழைக்கின்றனர்.(83)

உடலில் {பித்தம், சிலேத்துமம், வாதம் என்று} நன்கு அறியப்பட்ட மூன்று தாதுக்கள் இருக்கின்றன. செயலையே தங்கள் தோற்றுவாயாகக் கொண்ட அவை பித்த நீர் {பித்தம்}, சளி {சிலேத்துமம்}, காற்று {கபம்} என்றழைக்கப்படுகின்றன. உடலானது இம்மூன்றின் கலவையாகவே அழைக்கப்படுகிறது. இம்மூன்றால் தாங்கப்படும் உயிரினங்கள் அனைத்தும், இவை பலவீனமடையும் போது, தாங்களும் பலவீனமடைகின்றன. உயிர் அறிவியல் சார்ந்த சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் அனைவரும் இதன் காரணமாகவே திரிதாது என்ற பெயரால் என்னை அழைக்கின்றனர்.(84,85)

ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் புனிதமான தர்மம் {அறம்} விருஷம் என்ற பெயரில் அறியப்படுகிறது. எனவே நிகண்டுகம் என்றழைக்கப்படும் வேத அகரமுதலியில் சிறந்த விருஷன் என்று நான் அழைக்கப்படுகிறேன்.(86) கபி என்ற சொல் முதன்மையான பன்றியைக் குறிக்கிறது, தர்மம் வேறுபெயரில் விருஷம் என்றழைக்கப்படுகிறது. உயிரினங்கள் அனைத்தின் தலைவரும், தேவர்கள் மற்றும் அசுரர்களின் தந்தையுமான கசியபர், இதன் காரணமாகவே விருஷகபி என்ற பெயரால் என்னை அழைத்தார்.(87)

தேவர்களாலும், அசுரர்களாலும் எனது தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவை ஒருபோதும் காண இயன்றதில்லை. இதன் காரணமாகவே நான் அநாதி, அமத்தியன், அனந்தன் என்று பாடப்படுகிறேன். நானே பலமிக்க உயர்ந்த தலைவனாவேன் {ஈஸ்வரனாவேன்}, நானே அண்டத்தின் (அடுத்தடுத்த தோற்றங்களையும், அழிவுகளையும் காணும்) நித்திய சாட்சியாவேன்.(88) ஓ! தனஞ்சயா, நான் எப்போதும் தூய்மையான, புனிதமான சொற்களைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், ஒருபோதும் பாவம் நிறைந்ததைக் கேட்பதில்லை. எனவே நான் சுசிசிரவஸ் என்றழைக்கப்படுகிறேன்.(89)

ஓ! பிறரின் இன்பத்தை அதிகரிப்பவனே, பழங்காலத்தில் ஒற்றைக் கொம்புடைய பன்றியாகப் பிறந்து, கடலின் அடியில் மூழ்கிய பூமியை நான் உயர்த்தினேன். இதன் காரணமாக நான் ஏகசிருங்கன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(90) இந்நோக்கத்திற்காக நான் பெரும்பன்றியின் வடிவை ஏற்றபோது, என் முதுகில் மூன்று கூன்களைக் கொண்டிருந்தேன். உண்மையில், அந்த என் தனிப்பட்ட வடிவின் விளைவால் நான் திரிககுத் (மூன்று கூன் கொண்டவன்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்[11].(91)கபிலரால் எடுத்துரைக்கப்பட்ட அறிவியலை {சாங்கியத்தை} அறிந்தவர்கள் பரமாத்மாவை விரிஞ்சன் என்ற பெயரால் அழைக்கிறார்கள். அந்த விரிஞ்சனே வேறு பெயரில் பெரும் பிரஜாபதி (அல்லது பிரம்மன்) என்று அழைக்கப்படுகிறான். அண்டத்தின் படைப்பாளனான நான் உயிரினங்கள் அனைத்திற்கும் உயிரைக் கொடுத்ததன் விளைவால் விரிஞ்சன் என்றழைக்கப்படுபவனோடு அடையாளம் காணப்படுகிறேன்.(92) (அனைத்து தத்துவங்களிலும்) முடிவான தீர்மானங்களைக் கொண்ட சாங்கிய தத்துவ ஆசான்கள், ஞானத்தையே துணையாகக் கொண்டு சூரிய வட்டிலுக்கு மத்தியில் நிற்கும் நித்திய கபிலராக என்னை அழைக்கிறார்கள்.(93) வேத ஸ்லோகங்களில் பிரகாசமிக்க ஹிரண்யகர்ப்பனாகப் பாடப்படுபவனும், யோகியரால் எப்போதும் வழிபடப்படுபவனுமான அவனோடு பூமியில் எப்போதும் நான் அடையாளம் காணப்படுகிறேன்.(94)

இருபத்தோராயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட ரிக் வேதத்தின் உடல்வடிவமாக நான் கருதப்படுகிறேன். வேதங்களை அறிந்த மனிதர்கள், ஆயிரம் கிளைகளை {சாகைகளைக்} கொண்ட சாம வேதத்தின் உடல்வடிவமாக அழைக்கிறார்கள். அதே போலவே என்னை அர்ப்பணிப்புடன் வழிபடும் கல்விமான்களான பிராமணர்களில் சிலர் ஆரண்யகங்களில் என்னைப் பாடுகிறார்கள்.(95) அத்யார்யுக்களில் {அத்வரியுகாண்டத்தில்} என்னை ஆறும், ஐம்பதும், எட்டும், ஏழும், முப்பதுமான {அதாவது மொத்த எண்ணிக்கையில் நூற்றொரு} கிளைகளை {சாகைகளைக்} கொண்ட யஜுர் வேதமாக என்னைப் பாடுகிறார்கள்.(96) அதர்வணங்களை அறிந்த கல்விமான்களான பிராமணர்கள் ஐந்து கல்பங்களையும், அனைத்து கிரியைகளையும் கொண்ட அதர்வணங்களோடு அடையாளம் காணப்படுபவனாக என்னைக் கருதுகிறார்கள்.(97) ஓ! தனஞ்சயா, கிளைகளை {சாகைகளைப்} பொறுத்தவரையில் பல்வேறு வேதங்களில் இருக்கும் உட்பிரிவுகள், அந்த உட்பிரிவுகளில் அமைந்திருக்கும் ஸ்லோகங்கள், அந்த ஸ்லோகங்களில் உள்ள உயிரெழுத்துகள், உச்சரிக்கும் விதிகள் அனைத்தும் என் படைப்பே என்பதை அறிவாயாக.(98) ஓ! பார்த்தா, (படைப்பின் தொடக்கத்தில், பிரம்மன் மற்றும் தேவர்கள் அனைவரால் இருப்புக்கு அழைக்கப்பட்டு, பாற்கடலில் இருந்து) எவன் எழுகிறானோ, எவன் பல்வேறு தேவர்களுக்குப் பல்வேறு வரங்களை அளிக்கிறானோ அவன் நானன்றி வேறெவனுமல்ல. வேதங்களின் உப அங்கங்களில் உள்ள அசைகள் மற்றும் உச்சரிப்பு அறிவியலின் கொள்ளிடம் நானே.(99)

வாமதேவரால் சுட்டிக்காட்டப்பட்ட பாதையைப் பின்பற்றிய உயர் ஆன்ம பாஞ்சாலன், என் அருளால் (வேதங்களைப் படிப்பதில்) அசைகள் மற்றும் சொற்களின் பிரிவில் உள்ள விதிகளில் நித்திய தன்மையை அடைந்தான். பாப்ரவ்ய குலத்தில் {கோத்திரத்தில்} பிறந்த காலவர், உயர்ந்த தவ வெற்றியை அடைந்து, நாராயணனிடம் இருந்து வரத்தையும் அடைந்து, அசைகள் மற்றும் சொற்களின் பிரிவுகளையும், உச்சரிப்பு விதிகளையும் வகுத்து இவ்விரு காரியங்களையும் அறிந்த முதல் அறிஞரானார். குண்டரீகனும் {கோத்திரப் பெயர்}, பெருஞ்சக்தி கொண்டவனுமான மன்னன் பிரம்மதத்தன்,(100,101) பிறப்பிறப்பில் நேரும் துன்பத்தைச் சிந்தித்து, என் அருளால் தொடர்ந்த ஏழு பிறவிகளின் போக்கில் யோகத்தில் அர்ப்பணிப்புடைய மனிதர்களால் அடையப்படும் செழிப்பை அடைந்தான்.(102)

ஓ! பார்த்தா, ஓ! குரு குலத்தின் தலைவா, பழங்காலத்தில் ஒரு காரியத்திற்காகத் தர்மனின் மகனாகப் பிறப்படைந்த நான் தர்மஜன் என்ற பெயரால் கொண்டாடப்பட்டேன்.(103) நரன் என்றும் நாராயணன் என்றும் இரு வடிவங்களில் பிறப்பை அடைந்தேன். அவ்விரு வடிவங்களில் இருந்த நான், சாத்திரக் கடமைகள் மற்றும் வேறு கடமைகளைச் செய்வதற்கு உதவும் வாகனத்தைச் செலுத்தி, கந்தமாதன மலைகளில் ஓயாத தவத்தில் ஈடுபட்டேன்.(104)

அந்த நேரத்தில் தக்ஷன் பெரும் வேள்வியைச் செய்தான். எனினும், ஓ! பாரதா, அந்தத் தக்ஷன் வேள்விக் காணிக்கைகளில் ருத்திரனுக்கு ஒரு பங்கைக் கொடுக்க மறுத்துவிட்டான்.(105) தவசி ததீசியால் தூண்டப்பட்ட ருத்திரன் அந்தப் பெரும் வேள்வியை அழித்தான். ஒவ்வொரு கணமும் சுடர்விடும் தழல்களைக் கொண்ட ஓர் ஈட்டியை {சூலத்தை} அவன் ஏவினான்.(106) அவ்வீட்டி, தக்ஷன் வேள்விக்காக ஏற்பாடு செய்திருந்த அனைத்துப் பொருட்களையும் எரித்த பிறகு, பதரியின் ஆசிரமத்தில் (நரன் மற்றும் நாராயணனான) எங்களை நோக்கிப் பெருஞ்சக்தியுடன் வந்தது.(107) பெரும் வேகத்துடன் வந்த அந்த ஈட்டி {சூலம்} நாராயணனின் மார்பில் விழுந்தது. அந்த ஈட்டியின் சக்தியால் தாக்கப்பட்டதால் நாராயணனின் தலையில் இருந்த முடி பச்சை நிறமானது. உண்மையில் என் முடியின் நிறம் மாறியதன் விளைவால், நான் முஞ்சகேசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.(108)

நாராயணன் ஹும் என்று சொல்லி, சக்தியை இழந்த அந்த ஈட்டி மீண்டும் சங்கரனின் கரங்களில் கொடுத்தான்.(109) இதனால் பெருங்கோபம் அடைந்த ருத்திரன், கடுந்தவப் பலத்துடன் கூடிய முனிவர்களான நரநாரயணர்களை நோக்கி விரைந்தான்.(110) அப்போது நாராயணன், அவ்வாறு விரைந்து வந்த ருத்திரனின் தொண்டையைத் தன் கரத்தால் பற்றினான். அண்டத்தின் தலைவனான நாராயணனால் பற்றபட்டதும், ருத்திரனுடைய தொண்டையின் நிறம் மாறி கருப்பானது. அந்நேரத்தில் இருந்து ருத்திரன் சிதிகாந்தன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்.(111) அதே வேளையில் நரன், ருத்திரனை அழிப்பதற்காக ஒரு புல்லை எடுத்து அதை மந்திரங்களால் ஈர்த்தான். இவ்வாறு ஈர்க்கப்பட்ட அந்தப் புல்லானது வலிமைமிக்க ஒரு போர்க்கோடரியாக மாறியது.(112) நரன் திடீரென அதை ருத்திரன் மீது வீசினான். ஆனால் அது துண்டுகளாக நொறுக்கி விழுந்தது. அவ்வாயுதம் துண்டுகளாக நொறுங்கியதன் விளைவால் நான் கண்டபரசு என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்[12].(113)அர்ஜுனன், “ஓ! ஜனார்த்தனா, மூவுலகங்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய வெற்றியடைந்தது யார் என்பதை எனக்குச் சொல்வாயாக”என்றான்.(114)

அருள்நிறைந்த அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “ருத்திரனும், நாராயணனும் போரில் ஈடுபட்டபோது அண்டம் முழுவதும் திடீரெனக் கவலையால் நிறைந்தது.(115) நெருப்பின் தேவன், வேத மந்திரங்களின் துணையுடன் வேள்வகளில் முறையாக ஊற்றப்படும் தூய, தெளிந்த நெய் காணிக்கைகளை ஏற்க மறுத்தான். அப்போது தூய்மையான ஆன்மாக்களைக் கொண்ட முனிவர்களின் மனங்களில் வேதங்கள் உள்ளொளியால் ஒளிரவில்லை.(116) ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் தேவர்களைப் பீடித்தன. பூமி நடுங்கினாள். ஆகாய ஓடு இரண்டாகப் பிளந்ததாகக் காணப்பட்டது.(117) ஒளிக்கோள்கள் அனைத்தும் தங்கள் ஒளியை இழந்தன. படைப்பாளனான பிரம்மனே தன் இருக்கையில் இருந்து விழுந்தான். பெருங்கடல் வற்றியது. இமய மலைகள் பிளந்தன.(118)

ஓ! பாண்டுவின் மகனே, எங்கும் இத்தகைய பயங்கரச் சகுனங்கள் தோன்றியபோது, தேவர்கள் மற்றும் உயர் ஆன்ம முனிவர்கள் அனைவரும் சூழ பிரம்மன் போர் நடந்த அந்த இடத்திற்கு வந்தான். நிருக்தங்களின் துணையால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய நான்முகப் பிரம்மன் தன் கரங்களைக் கூப்பி ருத்திரனிடம்,(119,120) “மூவுலகங்களுக்கு நன்மை ஏற்படட்டும். ஓ! அண்டத்தின் தலைவா, அண்டத்திற்கு நன்மை செய்யும் விருப்பத்தில் உன் ஆயுதங்களைக் கீழே வீசுவாயாக.(121) அழிவற்றதும், மாற்றமில்லாததும், பரமும், அண்டத்தின் தோற்றுவாயும், சீரானதும், உயர்ந்த செயல்படு பொருளும், முரண்பட்ட இரட்டைகளைக் கடந்ததும், செயலற்றதும் எதுவோ,(122) அது வெளிப்பட விரும்பி (இரண்டாக இருந்தாலும் ஒன்றேயான) இந்த அருளப்பட்ட வடிவை ஏற்றிருக்கிறது. (பரப்பிரம்மத்தின் வெளிப்படு வடிவங்களான) இந்த நரனும், நாராயணனும், தர்மனின் குலத்தில் பிறந்தவர்களாவர்.(123) தேவர்களில் முதன்மையானவர்களான இவர்கள் உயர்ந்த நோன்புகளை நோற்று, கடுந்தவங்களைச் செய்து வருகிறார்கள். அவன் மட்டுமே அறியும் சிறந்த காரணத்தாலும், அவனது அருள் குணத்தாலும் அவனிடமிருந்தே எழுந்தவன் நான் என்பது அறியப்பட வேண்டும்.(124) அவனது கோபத்தில் இருந்து எழுந்தவனாக நீ இருந்தாலும், முன்படைப்புகள் அனைத்திற்கும் முன்பே நீடித்திருப்பதால் நித்தியமானவன் நீ. நானும், தேவர்கள் மற்றும் பெரும் முனிவர்களான இவர்களும்,(125) நீயும், பிரம்மத்தின் இந்த வெளிப்படு வடிவத்தைத் துதிக்க வேண்டும். தாமதமில்லாமல் உலகங்கள் அனைத்திலும் அமைதி ஏற்படட்டும்” என்றான். பிரம்மனால் இவ்வாறு சொல்லப்பட்ட ருத்திரன், நெருப்பெனும் தன் கோபத்தை நிறுத்தி,(126) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனுமான நாராயணனை நிறைவு செய்வதில் தன்னை நிறுவிக் கொண்டான். உண்மையில், அவன் துதிக்கத்தக்கவனும், வரமளிப்பவனும், பலமிக்கவனுமான நாராயணனை அடைந்தான்.(127)

வரமருள்பவனும், கோபம் மற்றும் புலன்களை முழுக் கட்டுப்பட்டில் கொண்டவனுமான அந்தத் தேவன் {நாராயணன்} ருத்திரனிடம் நிறைவையும், சமாதானத்தையும் அடைந்தான்.(128) அண்டத்தின் தலைவனும், ஹரி என்ற பெயரால் அழைக்கப்படுபவனுமான அந்தப் பெருந்தேவன், முனிவர்கள், பிரம்மன், தேவர்கள் அனைவராலும் துதிக்கப்பட்ட பிறகு, சிறப்புமிக்க ஈனானனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(129) “எவன் உன்னை அறிவானோ அவன் என்னை அறிவான். எவன் உன்னைப் பின்பற்றுவானோ அவன் என்னைப் பின்பற்றுவான். எனவே, உனக்கும் எனக்குமிடையில் எந்த வேறுபாடும் கிடையாது. நீ ஒருபோதும் வேறுவகையில் நினைக்காதே.(130) உன் சூலத்தால் என் மார்பில் ஏற்பட்ட இந்த அடையாளம் இந்த நாள் முதல் அழகிய சுழியின் வடிவை ஏற்கும், உன் தொண்டையில் என் கரம் ஏற்படுத்தியிருக்கும் அடையாளம் அழகிய வடிவை ஏற்கட்டும், இதன் விளைவால் நீ ஸ்ரீகண்டன் என்ற பெயரால் அழைக்கப்படுவாய்” என்றான் {நாராயணன்}.(131)

அருள் நிறைந்த புனிதமானவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “ஒருவருக்கொருவர் தங்கள் மேனிகளில் இத்தகைய அடையாளங்களை உண்டாகிக் கொண்டு, இவ்வாறே ருத்திரனிடம் நட்பை வளர்த்துக் கொண்ட நரன் மற்றும் நாராயணன் ஆகிய இரு முனிவர்களும்,(132) தேவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பிவிட்டு, அமைதியான ஆன்மாக்களோடு மீண்டும் தங்களைத் தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர். ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, பழங்காலத்தில் ருத்திரனுக்கும், நாராயணனுக்கும் இடையில் நடந்த போரில் பின்னவன் {நாராயணன்} எவ்வாறு வென்றான் என்பதைச் சொல்லிவிட்டேன்.(133) மேலும், அந்தப் பெருந்தேவனுக்கு முனிவர்கள் அளித்த தனிப்பொருள் கொண்ட இரகசிய பெயர்களையும் உனக்குச் சொல்லிவிட்டேன்.(134) ஓ! குந்தியின் மகனே, இவ்வழியில் பல்வேறு வடிவங்களை ஏற்கும் நான், பிரம்ம லோகத்திலும், அதற்கு மேலும் உயர்ந்த நித்திய உலகங்களிலும், கோலோகம் என்றழைக்கப்படும் உலகத்திலும் என் விருப்பப்படியே திரிந்து வருகிறேன்.(135)

பெரும்போரில் என்னால் பாதுகாக்கப்பட்டுப் பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறாய். ஓ! குந்தியின் மகனே, நீ செய்த போர்கள் அனைத்திலும் உனக்கு முன்பு நீ கண்டவன், தேவர்களுக்குத் தேவனும், கபர்தின் என்ற வேறு பெயரால் அழைக்கப்படுபவனுமான ருத்திரனையன்றி வேறு எவனுமல்ல.(137) வேறு பெயரில் காலன் என்றும் அறியப்படும் அவன் என் கோபத்தில் இருந்த உண்டானவன் என்பதை அறிவாயாக.(138) தேவர்களுக்குத் தேவனும், அளவிலா பலம் கொண்டவனுமான அந்த உமையின் தலைவனுக்கு {சிவனுக்குத்} தலைவணங்குவாயாக. அண்டத்தின் சிறப்புமிக்கத் தலைவனும், ஹரி என்ற பெயரில் அழைக்கப்படுபவனுமான அந்த அழிவற்ற தேவனுக்கும் {நாராயணனுக்கும்} குவிந்த ஆன்மாவோடு தலைவணங்குவாயாக. நான் மீண்டும் மீண்டும் சொன்னது போல அந்தத் தேவன் {ருத்திரன்}, என் கோபத்தில் இருந்து பிறந்தவனன்றி வேறெவனும் அல்ல. ஓ! தனஞ்சயா, இதற்கு முன்பு அவனது பலத்தையும், சக்தியையும் குறித்துக் கேட்டிருக்கிறாய்” என்றான் {கிருஷ்ணன்}”.(140)

நாரதரும் நரநாராயணர்களும்! – சாந்திபர்வம் பகுதி – 344-நாரதர் ஸ்வேதத்வீபத்தில் இருந்து திரும்பியது; அவர் மீண்டும் பதரியை அடைந்தது; நாரதருக்கும் நரநாராயணர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல்…

சௌனகர், “ஓ! சௌதி, நீ சொன்ன இந்தக் கதை சிறப்பானதாகும். உண்மையில், இதைக் கேட்ட தவசிகள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்திருக்கின்றனர்.(1) ஓ! சௌதி, பூமியில் உள்ள புனிதத் தலங்கள், மற்றும் புண்ணிய நீர்நிலைகள் அனைத்திற்கும் சென்று தூய்மைச் சடங்குகளைச் செய்வதால் கிட்டும் தகுதியைவிட {புண்ணியத்தைவிட} நாராயணனைக் குறித்துச் சொல்லும் ஒரு கதை அதிகக் கனிதரும் என்று சொல்லப்படுகிறது.(2) புனிதமானதும், ஒவ்வொரு பாவத்தையும் கழுவ வல்லதும், நாராயணனைக் குறித்ததுமான உனது இவ்வுரையைக் கேட்டு நிச்சயம் நாங்கள் அனைவரும் புனிதமடைந்தோம்.(3) அனைத்து உலகங்களாலும் துதிக்கப்படுபவனும், சிறப்புமிக்கவனும், தேவர்களில் முதன்மையானவனுமான அந்தத் தேவன் {நாராயணன்}, பிரம்மனோடு கூடிய தேவர்களாலும், முனிவர்கள் அனைவராலும் கூடக் காணப்பட இயலாதவனாவான்.(4) இருப்பினும், ஓ! சூதரின் மகனே, ஹரி என்றழைக்கப்படும் நாராயணனை நாரதரால், காண முடிந்தது. தெய்வீகமானவனும், பலமிக்கவனுமான அந்தத் தலைவனின் அருளாலேயே அவரால் காண முடிந்தது.(5) எனினும், அண்டத்தின் உயர்ந்த தலைவனான அவன் அநிருத்த வடிவத்தில் இருந்த காட்சியைப் பெற்ற பிறகும் கூடத் தெய்வீக முனிவரான நாரதர் தேவர்களில் முதன்மையானவர்களான நரன் மற்றும் நாராயணன் ஆகிய இருவரையும் காண (இமயச் சாரலில் உள்ள பதரி ஆசிரமத்தை நோக்கி) ஏன் மீண்டும் விரைந்து வந்தார்? ஓ! சௌதி, நாரதரின் அந்த நடத்தைக்கான காரணத்தை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார்.(6)

சௌதி, “பரிக்ஷித்தின் அரசமகனான ஜனமேஜயன் தன் (பாம்பு) வேள்வி தொடர்ந்து கொண்டிருந்தபோது, ஓ! சௌனகரே, வேள்விச் சடங்குகளின் இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட அந்த மன்னர்களின் மன்னன் {ஜனமேஜயன்}, தன் பாட்டின் பாட்டனும், வியாசர் என்றழைக்கப்படுபவரும், பலத்துடன் கூடிய தவசிகளில் முதன்மையானவரும், தீவில் பிறந்தவருமான முனிவர் கிருஷ்ணர் அல்லது வியாசர் என்றழைக்கப்பட்டவரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(8)ஜனமேஜயன் {வியாசரிடம்}, “தெய்வீக முனிவரான நாரதர், வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} இருந்து திரும்பியதும், புனிதனான நாராயணன் அவரிடம் சொன்ன வார்த்தைகளைச் சிந்தித்து, அடுத்ததாக என்ன செய்தார்?(9) இமய மலைகளின் சாரலில் உள்ள பதரி என்றழைக்கப்படும் ஆசிரமத்திற்கு வந்து, அவ்விடத்தில் கடுந்தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நரன் மற்றும் நாராயணன் ஆகிய இரு முனிவர்களைக் கண்டு எவ்வளவு காலம் அங்கே வசித்தார்? அவருக்கும் அந்த முனிவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல்களின் பொருள் என்ன?(10)உண்மையில் ஞானப் பெருங்கடலாக இருக்கும் நாராயணனைக் குறித்த இந்த உரையாடலானது, நூறாயிரம் {ஒரு லட்சம்} ஸ்லோகங்களாலான பாரதம் என்றழைக்கப்படும் பெரும் வரலாற்றை நுண்ணறிவைக் கொண்ட நீர் கடந்ததனால் எழுந்தது.(11) தயிரில் இருந்து வெண்ணைப் போலவும், மலய மலைகளில் இருந்து சந்தன மரம் போலவும், வேதங்களில் இருந்து ஆரண்யகங்களைப் போலவும், மருத்துவ மூலிகைகள் அனைத்தில் இருந்தும் வரும் அமுதம் போலவும், ஓ! தவப்பெருங்கடலே, ஓ! பிராமணரே, நாராயணனைக் குறித்ததும், அமுதம் போன்றதுமான இந்த உரையாடலானது, உலகில் உள்ள பல்வேறு வரலாறுகள் மற்றும் புராணங்களில் இருந்து உம்மால் எழுப்பப்பட்டிருக்கிறது.(13) நாராயணனே உயர்ந்த தலைவனாவான் {ஈஸ்வரன்} ஆவான். சிறப்புமிக்கவனும், பெரும்பலம் கொண்டவனுமான அவன் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருக்கிறான். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உண்மையில் அந்த நாராயணனின் சக்தி தடுக்கப்பட முடியாததாகும்.(14)

கல்பத்தின் முடிவில் பிரம்மன் முதலான தேவர்களும், கந்தர்வர்களுடன் கூடிய முனிவர்களும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் யாவும் நாராயணனுக்குள்ளேயே நுழைகின்றன.(15) எனவே, நாராயணனைத் தவிர உயர்ந்த வேறு எதுவும், புனிதமான வேறு எதுவும் பூமியிலோ, சொர்க்கத்திலோ இல்லை என நான் நினைக்கிறேன். புனிதத் தலங்கள் அனைத்திற்கும் செல்வது, புனித நீர் நிலைகள் அனைத்திலும் நீராடி தூய்மையடைவது ஆகியனவும், நாராயணனைக் குறித்த ஓர் உரையாடலைவிட அதிகத் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்குவதில்லை. அண்டத்தின் தலைவனான ஹரி குறித்ததும், பாவங்கள் அனைத்தையும் அழிப்பதுமான இந்த உரையாடலைத் தொடக்கம் முதல் கேட்டதனால், எங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்து தூய்மையடைந்ததாகவும், முற்றிலும் புனிதமடைந்ததாகவும் நாங்கள் உணர்கிறோம். என் மூதாதையான தனஞ்சயன், தன் கூட்டாளியாக வாசுதேவனைக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தால், அவன் குருக்ஷேத்திரப் பெரும்போரில் வெற்றியடைந்து ஒருபோதும் ஆச்சரியமாகாது. அண்டத்தின் பெருந்தலைவனான விஷ்ணுவையே தன் கூட்டாளியாகக் கொண்ட ஒருவனால் மூவுலகங்களிலும் அடையமுடியாதது எதுவுமில்லை என நான் நினைக்கிறேன். என் மூதாதையர்களின் உலகம் சார்ந்த செழிப்பு மற்றும் ஆன்ம செழிப்பைக் கவனித்துக் கொள்ள ஜனார்த்தனன் இருந்தான் எனும்போது அவர்கள் நிச்சயம் பெரும் பெரும் நற்பேற்றைப் பெற்றவர்களே, புகழத்தக்கவர்களே. உலகங்கள் அனைத்தினாலும் துதிக்கப்படும் புனிதமான நாராயணனை, கடுந்தவத்தின் துணையால் மட்டுமே காண முடியும்.(17-21) எனினும், மார்பில் அழகிய சுழியுடன் கூடிய நாராயணனைக் காண்பதில் அவர்கள் வெற்றியடைந்தனர். என் மூதாதையர்களைவிட, பரமேஷ்டியின் மகனான தெய்வீக முனிவர் நாரதர் பெரும் நிற்பேற்றைப் பெற்றவரே.(22) உண்மையில் அழிவுகள் அனைத்தையும் கடந்திருக்கும் நாரதர், வெண்தீவுக்குச் சென்று ஹரியைக் காணப் பெரும் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.(23) உண்மையில் அவர் அந்த உயர்ந்த தலைவனை {ஈஸ்வரனைக்} கண்டது அவனது அருளால் மட்டுமே என்பது தெளிவாகத் தெரிகிறது. அநிருத்தனின் வடிவில் உள்ள நாராயணனை நாரதர் கண்டது அவரது நற்பேற்றாலேயே.(24) நாராயணனை அவ்வடிவில் கண்ட நாரதர், பதரியில் இருக்கும் நர நாராயணர்களைக் காண மீண்டும் ஏன் விரைந்து வந்தார்? ஓ! தவசியே, பரமேஷ்டியின் மகனான நாரதர் வெண்தீவில் இருந்து திரும்பி, பதரியை அடைந்து, நர நாராயண முனிவர்களைக் கண்ட பிறகு, அங்கே எவ்வளவு காலம் வாழ்ந்தார்? அவர்களிடம் என்ன பேசினார்? உயர் ஆன்மா கொண்ட அவ்விருவரும் அந்த முதன்மையான முனிவரிடம் என்ன சொன்னார்கள்? இவை அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான் {ஜனமேஜயன்}.(26-28)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார்,[1] “அளவிலா சக்தி கொண்ட புனித வியாசருக்கு வணக்கம். நாராயணனைக் குறித்த இந்தக் கதை அவரது {வியாசரின்} அருளால் சொல்லப் போகிறேன்.(29) வெண்தீவை அடைந்த நாரதர் மாற்றமில்லாதவனான ஹரியைக் கண்டார். ஓ! மன்னா, அந்த உயர்ந்த தலைவன் சொன்ன கனமான வார்த்தைகளைத் தம் மனத்தில் சுமந்தபடியே அந்த இடத்தைவிட்டு அகன்று விரைவாக மேரு மலைகளை நோக்கிச் சென்றார். ஓ! மன்னா, மேருவை அடைந்ததும், தான் பெற்ற அனுபவத்தை நினைத்து ஆச்சரியத்தால் நிறைந்தார்.(30,31) அவர் தமக்குள்ளேயே, “இஃது எவ்வளவு ஆச்சரியமானது. நான் மேற்கொண்டது நீண்ட பயணமாகும். இத்தகைய நெடுந்தொலைவுக்குச் சென்று உடல்நலத்தோடும், பாதுகாப்பாகவும் திரும்பியிருக்கிறேன்” என்று நினைத்தார். பிறகு அவர் மேரு மலைகளில் இருந்து கந்தமாதனத்தை நோக்கிச் சென்றார்.(32)வானத்தில் பறந்து சென்ற அவர், பதரி என்ற பெயரில் அறியப்படும் அந்தப் பெரிய ஆசிரமத்தில் விரைவாக இறங்கினார். அங்கே அவர் (நரன் என்றும், நாராயணன் என்றும் அழைக்கப்படும்) அந்தப் புராதனத் தேவர்கள், தங்கள் சுயத்தையே சார்ந்திருந்து, உயர்ந்த நோன்புகளை நோற்றுக் கொண்டு, தவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்.(33) துதிக்கத்தக்கவர்களான அவ்விருவரும் தங்கள் மார்பில் ஸ்ரீவத்சம் என்றழைக்கப்படும் அழகிய சுழிகளையும், தங்கள் தலைகளில் சடாமுடிகளையும் தரித்திருந்தனர். உலகத்திற்கு ஒளியூட்டும் அவர்களது பிரகாசமானது சூரியனின் சக்தியைக் கடந்ததாக இருந்தது.(34) அவர்கள் இருவரின் உள்ளங்கைகளிலும் அன்னப்பறவையின் பாதம் {ஹம்ஸரேகை} என்றழைக்கப்படும் அடையாளத்தைக் கொண்டிருந்தன. அவர்களது உள்ளங்கால்களில் சக்கரத்தின் அடையாளம் இருந்தது. அவர்களது மார்பு மிக அகலமாக இருந்தது; அவர்களது கரங்கள் கால்மூட்டு வரை நீண்டிருந்தன.(35) அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு முஷ்கங்களைக்[2] கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அறுபது பற்களையும், நான்கு கரங்களையும் கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரின் குரலும் மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழமானதாக இருந்தது. அவர்களது முகம் அழகானதாகவும், அவர்களது நெற்றி அகலமானதாகவும், புருவங்கள் அழகானதாகவும், கன்னங்கள் நன்கு அமையப்பெற்றனவாகவும், மூக்குகள் நீண்டவையாகவும் இருந்தன.(36) அந்த இரண்டு தேவர்களின் தலையும் பெரியவையாகவும், உருண்டையாகவும், திறந்த குடைகளுக்கு ஒப்பானவையாகவும் இருந்தன. இந்த அடையாளங்களைக் கொண்டிருந்த அவர்கள் தோற்றத்தில் மிக மேன்மையானவர்களாகத் தெரிந்தனர்.(37)அவர்களைக் கண்ட நாரதர், மகிழ்ச்சியால் நிறைந்தார். அப்போது அவர் அவர்களை மதிப்புடன் வணங்கினார், பதிலுக்கு அவர்களும் அவரை வணங்கினர். அவர்கள் அந்தத் தெய்வீக முனிவரை “நல்வரவு” கூறி வரவேற்று வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர். முதன்மையானவர்களான அவ்விருவரையும் கண்ட நாரதர் தமக்குள்ளேயே இவ்வாறு நினைக்கத் தொடங்கினார்,(38) “அனைத்து உயிரினங்களாலும் மதிக்கப்படும் இந்த முதன்மையான முனிவர்கள் இருவரும், வெண்தீவில் நான் கண்டவனைப் போன்ற அதே தோற்றத்தைக் கொண்டவர்களாகத் தெரிகிறார்கள்” {என்று நினைத்தார்}.(39) இவ்வழியில் சிந்தித்த அவர், அவர்கள் இருவரையும் வலம் வந்து, அவருக்கு வழங்கப்பட்ட குசப் புற்களால் அமைந்த சிறந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.(40) இதன் பிறகு, தவங்களின் வசிப்பிடமானவர்களும், புகழ்மிக்கச் சாதனைகளைச் செய்தவர்களும், சக்தி மிக்கவர்களுமான அந்த முனிவர்கள் இருவரும், அமைதியான இதயத்துடனும், தற்கட்டுப்பாட்டுடனும் தங்கள் காலை சடங்குகளைச் செய்தனர்.(41) பிறகு அவர்கள் ஆவல் நிறைந்த இதயத்துடன், நாரதருக்கு அவரது கால்களைக் கழுவ நீரையும், வழக்கமான அர்க்கிய பொருட்களையும் கொடுத்து அவரை வழிபட்டனர். தங்கள் காலைச் சடங்குகளைச் செய்து, தங்கள் விருந்தினரை வரவேற்று தேவையான விருந்தோம்பல்களையும் செய்த பிறகு அவர்கள் மரப்பலகைகளால் ஆன இரண்டு இருக்கைகளில் அமர்ந்தனர்.(42) அந்த இரு முனிவர்களும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தபோது, புனித நெருப்பில் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஊற்றுவதன் விளைவால் ஒளிரும் வேள்விப் பீடங்களைப் போலவே அந்த இடம் ஒருவித அழகுடன் ஒளிரத் தொடங்கியது.(43) அப்போது நாராயணர், களைப்பில் இருந்து புத்துணர்வை அடைந்து, தமக்குள் அளிக்கப்பட்ட விருந்தோம்பலுடன் கூடிய வரவேற்பில் நிறைவடைந்து, சுகமாக அமர்ந்திருக்கும் நாரதரைக் கண்டு, அவரிடம் இவ்வார்த்தைகளைப் பேசத் தொடங்கினார்.(44)

நரனும், நாராயணனும், “நித்தியமானவனும், தெய்வீகமானவனும், எதிலிருந்து நாம் பிறந்தோமோ அந்த உயர்ந்த தோற்றுவாயுமான பரமாத்மாவை வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} கண்டீரா?” என்று கேட்டனர்.(45)

நாரதர், “மாற்றமில்லாதவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனுமான அந்த அழகனை நான் கண்டேன். உலகங்கள் அனைத்தும், முனிவர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும் அவனிலேயே வசிக்கின்றனர்.(46) இப்போதும் நித்தியமானவர்களான உங்கள் இருவரையும் காணும்போது அவனையே காண்கிறேன். அந்த ஹரியின் அடையாளங்கள் மற்றும் குறியீடுகள், புலன்களுக்கு முன்பு வெளிப்படும் உங்கள் இருவரின் வடிவங்களிலும் தெரிகின்றன. உண்மையில் நான் உங்கள் இருவரையும் அந்தப் பெருந்தேவனின் அருகிலேயே காண்கிறேன். பரமாத்மாவால் விடைகொடுத்து அனுப்பப்பட்டே இன்று நான் இங்கே வந்தேன்.(47-49) சக்தி, புகழ் மற்றும் அழகில் அவனுக்கு இணையானவர்களாகத் தர்மனின் குலத்தில் பிறந்த உங்கள் இருவரைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?(50) க்ஷேத்ரஜ்ஞன் குறித்த கடமைகளின் மொத்த நடைமுறைகளையும் அவன் எனக்குச் சொன்னான். எதிர்காலத்தில் அவன் இவ்வுலகத்தில் எடுக்கப்போகும் அவதாரங்கள் அனைத்தையும் எனக்குச் சொன்னான்.(51)

வெண்தீவில் {ஸ்வேதத்வீபத்தில்} வசிப்பவர்கள், சாதாரண மனிதர்களுக்குச் சொந்தமான ஐம்புல்களில் ஏதும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் விழிப்படைந்த ஆன்மா கொண்டவர்களாகவும், உண்மை ஞானத்துடன் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் அண்டத்தின் உயர்ந்த தலைவனான அந்த முதன்மையானவனிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் அந்தப் பெருந்தேவனைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள் அவனும் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(52) புனிதமானவனான அந்தப் பரமாத்மா தன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டோரிடம் எப்போதும் அன்புடன் இருக்கிறான். மறுபிறப்பாளர்களை அவன் விரும்புகிறான். தன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டோரிடம் எப்போதும் அன்பாக இருக்கும் அவன், தன்னை வழிபடுபவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(53) அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனும், அண்டத்தை அனுபவிப்பவனும், சிறப்புமிக்கவனுமான மாதவன் தன்னை வழிபடுபவர்களிடம் எப்போதும் அன்புடன் இருக்கிறான். அவனே செயல்படுபவன்; அவனே காரணன்; அவனே விளைவுமாக {காரியமாகவும்} இருக்கிறான். அவன் எல்லாம் வல்லவனாகவும், அளவிலா காந்தியைக் கொண்டவனாகவும் இருக்கிறான்.(54) அனைத்துப் பொருட்களும் எங்கே பிறக்கின்றனவோ அதன் காரணமாக அவனே இருக்கிறான். சாத்திர விதிகள் அனைத்தின் உடல்வடிவமாக அவனே இருக்கிறான். தத்துவங்கள் அனைத்தின் உடல்வடிவமாகவும் அவனே இருக்கிறான். அவன் பெரும்புகழைக் கொண்டவனாக இருக்கிறான்.(55)

தவங்களின் மூலம் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ளும் அவன், வெண்தீவில் (நேரும்) சக்தியைவிட உயர்ந்த காந்தியுடன் தன்னை ஒளியூட்டிக் கொள்கிறான். தவங்களால் தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அவன், மூவுலகங்களிலும் அமைதியை விதித்திருக்கிறான்.(56) இத்தகைய மங்கல புத்தியைக் கொண்ட அவன், புனிதத்தையே உடல்வடிவமாகக் கொண்ட மிக மேன்மையான நோன்பை நோற்பதில் ஈடுபடுபட்டிருக்கிறான். கடுந்தவங்களில் ஈடுபட்டபடியே அவன் வசிக்கும் ஆட்சிப்பகுதியில், சூரியன் சுடுவதில்லை, சோமன் அந்தப் பகுதியை அலங்கரிப்பதில்லை. அங்கே காற்று வீசுவதில்லை.(57) சிறப்புமிக்கவனான அண்டப் படைப்பாளன், எட்டு விரற்கட்டைகளின் அளவில் ஒரு பீடத்தை அமைத்துக் கொண்டு, கிழக்கு நோக்கிய முகத்துடன் கரங்களை உயர்த்தியபடியே ஒற்றைக் காலில் நின்று கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறான்.(58)

அங்கங்களுடன் கூடிய வேதங்களை ஓதியபடியே அவன் கடுந்தவங்களில் ஈடுபட்டு வருகிறான். பிரம்மனின் விதிகளுக்கு ஏற்ப முனிவர்களாலும், பசுபதியாலும், எஞ்சியிருக்கும் முக்கியத் தேவர்களாலும், தைத்தியர்களாலும், தானவர்களாலும், ராட்சசர்களாலும் வேள்வித்தீயில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான, அல்லது இறைச்சியாலான ஆகுதிகள் எதுவும் அந்தப் பெருந்தேவனின் பாதங்களையே அடைகின்றன.(59-61) அவனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனிதர்களால் செய்யப்படும் எந்தச் சடங்கையும், எந்த அறச் செயலையும் அந்தப் பெருந்தேவன் தன் தலையால் பெற்றுக் கொள்கிறான்.(62) விழிப்படைந்தவர்களும், உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான மனிதர்களைவிட மூவுலகிலும் வேறு எவரும் அவனுக்கு அன்புக்குரியவர் இல்லை. அவனிடம் முழுமையான அர்ப்பணிப்பு கொண்டவன் {பக்திமான்} அந்த மனிதர்களைவிட அன்புக்குரியவன் ஆவான்.(63) அந்தப் பரமாத்மாவால் விடைகொடுத்தனுப்பப்பட்டே நான் இங்கே வந்தேன். சிறப்புமிக்கவனும், புனிதமானவனுமான ஹரி இஃதையே எனக்குச் சொன்னான். எனவே நான் இதுமுதல் அநிருத்தனின் வடிவில் உள்ள நாராயணனிடம் அர்ப்பணிப்புடன் உங்கள் இருவருடன் வசிக்கப் போகிறேன்” என்றார் {நாரதர்}.(64)

பதரியில் வசிக்கும் நாரதர்! – சாந்திபர்வம் பகுதி – 345-பரமாத்மாவின் மகிமையைச் சொன்ன நரனும், நாராயணனும்; தவத்தில் ஈடுபட்ட நாரதர்…

நரனும், நாராயணனும் {நாரதரிடம்}, “(அநிருத்தனின் வடிவில்) பலமிக்க நாராயணனை நீர் கண்டதால் உயர்ந்த அருளைக் கொண்டவராகவும், உயர்ந்த புகழுக்குத் தகுந்தவராகவும் இருக்கிறீர். வேறு எவராலும், ஏன் ஆதி தாமரையில் பிறந்த பிரம்மனாலும் கூட அவனைக் காண முடிந்ததில்லை.(1) பலமிக்கவனும், புனிதம் நிறைந்தவனுமான அந்தப் புருஷர்களில் முதன்மையானவன், வெளிப்படாத மூலத்தையும், காணப்பட முடியாதவனாகவும் இருக்கிறான் ஓ! நாரதரே, நாங்கள் உமக்குச் சொல்லும் இந்த வார்த்தைகள் உண்மையே.(2) அர்ப்பணிப்புடன் அவனைத் துதிப்பவனைவிட இந்த அண்டத்தில் வேறு எவனும் அவனுக்கு அன்புக்குரியவன் இல்லை. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இதன் காரணமாகவே அவன் உம்மிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(3) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, தவங்கள் நோற்பதில் ஈடுபட்டுவரும் அந்தப் பரமாத்மாவின் ஆட்சிப்பகுதிக்கு எங்கள் இருவரைத் தவிர வேறு எவராலும் செல்ல முடியாது.(4) அந்த இடம் அவனால் அலங்கரிக்கப்பட்டிருப்பதன் விளைவால், அஃது {அவ்விடம் / வெண்தீவு / ஸ்வேதத்வீபம்} ஆயிரம் சூரியர்கள் ஒன்றுதிரண்டதற்கு ஒப்பான காந்தியைக் கொண்டிருக்கிறது.(5)

ஓ! பிராமணரே {நாரதரே}, சிறப்புமிக்கவனும், அண்டப் படைப்பாளனின் தோற்றுவாயுமான அவனிடம் இருந்தே பூமியுடன் தொடர்புடைய மன்னிக்கும் குணம் பிறந்தது.(6) அனைத்து உயிரினங்களின் நன்மைக்கான குணங்களைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கவனில் இருந்தே ரசம் (சுவை) எழுந்தது. நீருடன் தொடர்புடைய ரஸம் என்ற குணம் நீராகவே இருக்கிறது.(7) அவனிடமிருந்தே வடிவம் அல்லது பார்வையை ஆன்மாவாகக் கொண்ட குணத்துடன் கூடிய வெப்பம் அல்லது ஒளி எழுந்தது. அது சூரியனைப் பற்றுவதன் விளைவால், சூரியனால் ஒளிரவும், வெப்பத்தைத் தரவும் முடிகிறது.(8) சிறப்புமிக்கவனும், முதன்மையானவனுமான அவனிடமிருந்தே தீண்டலும் எழுந்தது. அது காற்றைப் பற்றுவதன் விளைவால் காற்றானது தீண்டல் உணர்வை உண்டாக்கியபடியே உலகம் முழுவதும் திரிகிறது.(9) மொத்த அண்டத்தின் பலமிக்கத் தலைவனான அவனிடம் இருந்தே ஒலி எழுந்தது. அது வெளியுடன் பற்று கொள்வதன் விளைவால் மறைக்கப்படாததாகவும், அடைக்கப்படாததாகவும் இருக்கிறது.(10) அனைத்து உயிரினங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மனம் இந்தச் சிறப்புமிக்கவனிடம் இருந்தே எழுந்தது. சந்திரனுடன் பற்று கொள்வதன் விளைவால் சந்திரன் அனைத்துப் பொருட்களையும் வெளிப்படுத்தும் குணத்தைக் கொண்டிருக்கிறான்.(11)

வேள்விகளில் அளிக்கப்படும் ஆகுதிகள் மற்றும் பிற காணிக்கைகளை உண்ணும் தெய்வீக நாராயணன், ஞானத்தை மட்டுமே துணையாகக் கொண்டு எந்த இடத்தில் வசிக்கிறானோ, அந்த இடமே அனைத்துப் பொருட்களையும் உண்டாக்கும் காரணமான சத் என்ற பெயரில் அறியப்படுகிறது.(12) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, களங்கமற்றவர்களும், அறம் மற்றும் பாவம் ஆகிய இரண்டில் இருந்தும் விடுபட்டவர்களுமான மனிதர்களின் பாதையானது மங்கலமும், இன்பமும் நிறைந்ததாகும்.(13) உலகங்கள் அனைத்தின் இருளை விலக்கும் சூரியனே (முக்தன் ஒருவன் கடந்து செல்லும்) வாயிலாகச் சொல்லப்படுகிறான். சூரியனுக்குள் நுழையும் அத்தகைய மனிதர்களின் உடல்கள் அவனது நெருப்பில் எரிக்கப்படுகின்றன. அதன் பிறகு அவர்கள் எக்காலத்திலும், எவராலும் காண முடியாத நிலையை அடைகிறார்கள்.(14) புலப்படாத அணுக்களாகக் குறைக்கப்படும் அவர்கள் பிறகு (சூரியனின் நடுப்பகுதியில் வசிக்கும்) நாராயணனுக்குள் நுழைகிறார்கள். அவனிலிருந்தும் கடந்து செல்லும் அவர்கள் அநிருத்தன் என்ற வடிவத்திற்குள் நுழைகிறார்கள்.(15)

உடல்சார்ந்த குணங்கள் அனைத்தையும் மொத்தமாக இழந்து, மனமாக மட்டுமே மாறும் அவர்க்ள பிரத்யும்னனுக்குள் நுழைகிறார்கள். பிரத்யும்னனிலிருந்தும் கடந்து செல்பவர்களும், சாங்கிய தத்துவத்தை அறிந்தவர்களும், பரம்பொருளிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களுமான அந்த முதன்மையான மறுபிறப்பாளர்கள், ஜீவன் என்றழைக்கப்படும் சங்கர்ஷணனுக்குள் நுழைகிறார்கள். அதன் பிறகு, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற அடிப்படை முக்குணங்களையும் இழக்கும் அந்த மறுபிறப்பாளர்கள் அந்த அடிப்படை முக்குணங்களைக் கடந்தவனான க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படும் பரமாத்மாவுக்குள் நுழைகிறார்கள். அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் அசல் புகலிடம் அல்லது வசிப்பிடம் வாசுதேவனே என்பதை நீர் அறிய வேண்டும்.(16-18) குவிந்த மனத்தைக் கொண்டவர்களும், அனைத்து வகைக் கட்டுப்பாடுகளையும் நோற்பவர்களும், புலனடக்கம் கொண்டவர்களும், மொத்த ஆன்மாவுடன் சேர்த்து அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மனிதர்களே வாசுதேவனுக்குள் நுழைவதில் வெல்கிறார்கள்.(19)

ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {நாரதரே}, நாங்கள் இருவரும் தர்மனின் இல்லத்தில் பிறப்பை அடைந்தோம். மேலும் நாங்கள் இனிமையான இந்தப் பெரிய ஆசிரமத்தில் கடுந்தவங்களைச் செய்து வருகிறோம்.(20) ஓ! மறுபிறப்பாளரே, பரம்பொருளால் வெளிப்படுத்தப்பட்டவையும், மூவுலகங்களிலும் தேவர்கள் அனைவருக்கும் அன்புக்குரியவையுமான பொருட்கள் அனைத்திற்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் (பிற உயிரினங்களால அடையப்பட முடியாத பல்வேறு சாதனைகளை அடைவதற்காக) நாங்கள் இவ்வாறு தவத்தில் ஈடுபடுகிறோம்.(21) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பொதுவில் இல்லாதவையும், எங்கள் இருவருக்கு மட்டுமே பொருந்தக்கூடியவையுமான விதிகளுக்கு இணக்கமாகச் சிறந்த மற்றும் உயர்ந்த நோன்புகள் நிறைந்த கடுந்தவங்களை நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் செய்து வருகிறோம்.(22) ஓ! தெய்வீக முனிவரே, தவங்களைச் செல்வமாகக் கொண்ட தெய்வீக முனிவரான உம்மை நாங்கள் வெண்தீவில் கண்டோம். நாராயணனைச் சந்தித்த பிறகு நீர் ஒரு குறிப்பிட்ட தீர்மானத்தை அடைந்திருக்கிறீர்.(23) அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய மூவுலகங்களிலும் நாங்கள் அறியாதது ஏதுமில்லை. ஓ! பெருந்தவசியே, {மூவுலகங்களிலும்} நடக்கப் போகும், அல்லது நடந்த, அல்லது நடந்து கொண்டிருக்கும் நன்மை அல்லது தீமையை அந்தத் தேவதேவன் உமக்குச் சொன்னான்” என்றனர்”.(24)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கடுந்தவங்களில் ஈடுபட்டுவந்த நரநாராயணர்கள் இருவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தெய்வீக முனிவரான நாரதர், மதிப்புடன் தன் கரங்களைக் கூப்பி நாராயணனில் முழுமையான அர்ப்பணிப்பு கொண்டார்.(25) நாராயணனால் அங்கீகரிக்கப்பட்ட எண்ணற்ற புனித மந்திரங்களை அவர் காலத்திற்கும் தன் மனத்தில் முறையான நோன்புகளுடன் உரைத்துக் கொண்டே இருந்தார். பெரும் சக்தியுடன் கூடிய நாரதர், பரம தேவனான நாராயணனை வழிபட்டும், தர்மனின் இல்லத்தில் பிறந்த புராதன முனிவர்கள் இருவரையும் துதித்துக் கொண்டும், இமயச் சாரலில் உள்ள நரநாராயணர்களுக்குச் சொந்தமான பதரி எனும் ஆசிரமத்தில் ஓராயிரம் தேவ வருடங்களுக்குத் தொடர்ந்து வசித்து வந்தார்”.(26-27)

பித்ரு வழிபாடு! – சாந்திபர்வம் பகுதி – 346-பித்ருக்களுக்குச் செய்யும் சடங்குகளின் சிறப்பை நாரதருக்குச் சொன்ன நரனும், நாராயணனும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஒரு சமயத்தில் பரமேஷ்டியின் மகனான நாரதர், நர நாரயணரின் ஆசிரமத்தில் வசித்து வந்தபோது, தேவர்களை மதிக்கும் சடங்குகளையும், நோன்புகளையும் முறையாகச் செய்துவிட்டு, பித்ருக்களைக் கௌரவிக்கும் சடங்கைச் செய்வதில் தம்மை நிறுவிக் கொண்டார்.(1) இவ்வாறு அவர் ஆயத்தமாவதைக் கண்ட தர்மனின் மூத்த மகனான பலமிக்க நாராயணர், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, தேவர்கள் மற்றும் பித்ருக்கள் தொடர்புடைய இந்தச் சடங்குகள் மற்றும் நோன்புகளில் யாரை நீர் வழிபடுகிறீர்? ஓ! புத்திமான்கள் அனைவரிலும் முதன்மையானவரே, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் எனக்கு இது குறித்துச் சொல்வீராக. நீர் செய்வது என்ன? நீர் செய்யும் இந்தச் சடங்குகளால் என்ன கனிகளை {பலன்களை} நீர் விரும்புகிறீர்” என்று கேட்டார்.(2,3)

நாரதர், “முந்தைய நிகழ்வொன்றில் தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் சடங்குகளும், நோன்புகளும் செய்யப்பட வேண்டும் என்று நீர் என்னிடம் சொன்னீர். தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் சடங்குகள் உயர்ந்த வேள்வியாகும் என்றும், நித்தியமான பரமாத்மாவை வழிபடுவதற்கு இணையானவை என்றும் நீர் சொன்னீர்.(4) அந்தப் போதனையில் அறிவுரை பெற்ற நான், தேவர்களை வழிபட்டுச் செய்யப்படும் இந்தச் சடங்குகளின் மூலம் நித்தியமானவனும், மாற்றமில்லாதவனான விஷ்ணுவைக் கௌரவித்து வேள்வி செய்கிறேன். அந்தப் பரம தேவனிலிருந்த உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மன் பழங்காலத்தில் உதித்தெழுந்தான்.(5) பரமேஷ்டி என்றும் வேறு பெயரில் அழைக்கப்படும் அந்தப் பிரம்மன் என் தந்தையை (தக்ஷனை) உண்டாக்கினான். (தக்ஷ முனிவரின் சாபத்தால் பின்னாளில் அவருடைய மகனாகப் பிறப்பை அடைந்தாலும்) நான் அனைவருக்கும் முன்பாகப் பிரம்மனின் விருப்பத்தால் படைக்கப்பட்ட அவருடைய ஆன்ம மகனாவேன் {பிரம்மனின் மானஸபுத்திரனாவேன்}.(6) ஓ! சிறப்புமிக்கவரே, அறவோரே, நாராயணனால் விதிக்கப்பட்ட விதிகளுக்கு ஏற்புடைய வகையில் பித்ருக்களைக் கௌரவிக்கும் இந்தச் சடங்குகளை நான் நாராயணனுக்காகவே செய்கிறேன். சிறப்பு மிக்க நாராயணனே, (அனைத்து உயிரினங்களின்) தந்தையும், தாயும், பாட்டனுமாவான்.(7) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகள் அனைத்திலும் அண்டத்தின் தலைவனான அவனே துதிக்கப்படுகிறான், வழிபடப்படுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் தந்தைமாரான தேவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஸ்ருதிகளைச் சொல்லிக் கொடுத்தனர்.(8) ஸ்ருதிகளில் ஞானத்தை இழந்த அந்தத் தந்தைமார் தாங்கள் சொல்லிக் கொடுத்தவற்றை மீண்டும் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து அடைந்தனர். இந்நிகழ்வின் விளைவால், தங்கள் தந்தைமாருக்கு மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்த மகன்கள் தந்தையின் நிலையை அடைந்தனர் (தங்கள் மகன்களிடம் மந்திரங்களைப் பெற்ற தந்தைமார் மகன்களின் நிலையை அடைந்தனர்)[1].(9) அச்சந்தர்ப்பத்தில் தேவர்கள் என்ன செய்தனர் என்பதை நீங்கள் இருவரும் நன்கு அறிவீர்கள். (அந்தச் சந்தர்ப்பத்தில்) மகன்களும், தந்தைமாரும் ஒருவரையொருவர் இவ்வாறு வழிபட்டுக் கொண்டனர்.(10) முதலில் சில தர்ப்பை புற்களைப் பரப்பி வைத்துக் கொண்ட தேவர்களும், பித்ருக்களும் (தேவர்களின் பிள்ளைகளும்) மூன்று பிண்டங்களை அதில் வைத்து இவ்வழியில் ஒருவரையொருவர் வழிபட்டனர். எனினும், பழங்காலத்தில் பிண்டங்கள் என்ற பெயரை பித்ருக்கள் ஏன் அடைந்தனர் என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றார்.(11)நரனும், நாராயணனும், “பழங்காலத்தில், கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமி காட்சியில் இருந்து மறைந்து போனாள். பெரும் பன்றியின் வடிவையேற்ற கோவிந்தனர் (தன் வலிமைமிக்கத் தந்தத்தால்) அவளை மேலே உயர்த்தினான்.(12) பூமியை மீண்டும் அவளது பழைய நிலையிலேயே நிலைநிறுத்தியவனும், நீரும், புழுதியும் பூசப்பட்டவனுமான அந்தப் புருஷர்களில் முதன்மையானவன், உலகத்திற்கும், அதில் வசித்தவர்களுக்கும் தேவையானவற்றைச் செய்வதில் தன்னை நிறுவிக் கொண்டான்.(13) ஓ! நாரதரே, சூரியன் நடுவானை அடைந்து, காலை துதிகளுக்கான வேளை {ஆந்நிக காலம்} வந்த போது, அந்தப் பலமிக்கத் தலைவன் {வராகன்}, தன் தந்தத்தைக் கொண்டு, திடீரென மூன்று மண் உருண்டைகளை உருட்டி, ஏற்கனவே புல் பரப்பப்பட்ட பூமியில் வைத்தான். நித்திய விதியில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி அந்தப் பலமிக்க விஷ்ணு அந்த மண் உருண்டைகளைத் தன் சுயத்திற்கே அர்ப்பணித்தான்.(14,15) அந்தப் பலமிக்கத் தலைவன் தன் தந்தங்களால் உருட்டிய மண் உருண்டைகளைப் பிண்டங்களாகக் கருதி, தன் உடல் வெப்பத்தால் எழுந்தவையும், உள்ளே எண்ணெய் உள்ளவையுமான எள்வித்துகளைக் கொண்டு, கிழக்கு முகமாக அமர்ந்து அந்த அர்ப்பணிப்புச் சடங்கைத் தானே செய்தான். அப்போது அந்தத் தேவர்களில் முதன்மையானவன், மூவுலகங்களில் வசிப்போருக்கு உண்டான ஒழுக்க விதிகளை நிறுவும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(16,17)

அந்த விருஷாகபி, “உலகங்களைப் படைத்தவன் நானே. நான் பித்ருக்கள் என்றழைக்கப்படுவோரை உண்டாக்கத் தீர்மானித்திருக்கிறேன்” என்று சொன்னான். இந்த வார்த்தைகளைச் சொன்ன அவன், பித்ருக்களைக் கௌரவிப்பதற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படுத்தும் உயர்ந்த விதிகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(18)

அவன் அவ்வாறு ஈடுபட்டிருந்தபோது, தன் தந்தத்தால் உருட்டப்பட்ட மண் உருண்டைகள் மூன்றும் தெற்கு நோக்கி விழுந்திருப்பதைக் கண்டான். அப்போது அவன், “என் தந்தத்தால் உருட்டப்பட்ட இந்த உருண்டைகள், பூமியின் பரப்பில் தென் திசை நோக்கி விழுந்திருக்கின்றன. இதனால் வழிநடத்தப்படும் நான், இதுமுதல் இவை பித்ருக்கள் என்ற பெயரில் அறியப்பட வேண்டும் என அறிவிக்கிறேன்.(19) உருண்டையாக எந்தக் குறிப்பிட்ட வடிவத்திலும் இல்லாத்த இவை மூன்றும், உலகின் பித்ருக்களாகக் கருதப்பட வேண்டும். இவ்வாறே நான் நித்திய பித்ருக்களை உண்டாக்குகிறேன்.(20) தந்தையும், பாட்டனும், பெரும்பாட்டனுமான நானே இந்த மூன்று பிண்டங்களில் வசிப்பதாகக் கருதப்பட வேண்டும்.(21) எனக்கு மேன்மையானவன் வேறு எவனும் இல்லை. நான் வழிபடவோ, சடங்குகளுடன் துதிக்கவோ வேறு எவன் இருக்கிறான்? இந்த அண்டத்தில் என் தந்தையென எவன் இருக்க முடியும்? நானே என் பாட்டனாவேன்.(22) உண்மையில் நானே பெரும்பாட்டனாகவும் தந்தையாகவும் இருக்கிறேன். (அண்டமனைத்திற்கும்) நானே ஒரே காரணனாவேன்” என்றான்.ஓ! கல்விமானான பிராமணரே {நாரதரே}, விருஷாகபி என்றழைக்கப்படும் அந்தத் தேவர்களின் தேவன் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, வராஹ மலைகளின் சாரலில் பெரும் சடங்குகளுடன் அந்தப் பிண்டங்களுக்குக் காணிக்கையளித்தான். அந்தச் சடங்குகளின் மூலம் அவன் தன்னையே வழிபட்டான். அந்த வழிபாட்டை நிறைவு செய்த அவன் அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(23,24) இதனாலேயே பித்ருக்கள் பிண்டம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். இதுவே அந்தப் பொறுப்புப் பெயரின் அடித்தளமாகும். அச்சந்தர்ப்பத்தில் விருஷாகபியால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு ஏற்புடைய வகையிலேயே அனைவராலும் செய்யப்படும் வழிபாட்டைப் பித்ருக்கள் அடைகிறார்கள்.(25) பித்ருக்கள், தேவர்கள், ஆசான் அல்லது மதிப்புமிக்கப் பெரியவர், வீட்டிற்கு வரும் விருந்தினர், பசு, மேன்மையான பிராமணர்கள், பூமாதேவி, தாய்மார் ஆகியோரை எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் துதித்துக் கௌரவித்து வேள்வி செய்பவர்கள் விஷ்ணுவையே துதிப்பதாகவும், அவனுக்கே அவர்கள் வேள்வியைச் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பில் உள்ள அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தச் சிறப்புமிக்கத் தேவனே அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக இருக்கிறான்.(26,27) இன்ப துன்பங்களால் பாதிப்படையாத அவன் அனைத்திடமும் சமமாக நடக்கும் மனோநிலையைக் கொண்டவனாவான். மகிமை கொண்டவனும், பேரான்மாவுமான நாராயணனே அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாகச் சொல்லப்படுகிறான்” என்றனர் {நரனும், நாராயணனும்}”.(28)

நாராயண மகிமை! – சாந்திபர்வம் பகுதி – 347-தமது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்ற நாரதர்; ஜனமேஜயனுக்கு நாராயணனின் மகிமையைச் சொன்ன வைசம்பாயனர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நரனும், நாராயணனும் சொன்ன இந்த வார்த்தைகளைக்கேட்ட முனிவர் நாரதர், பரம்பொருளிடம் அர்ப்பணிப்பில் {பக்தியில்} நிறைந்தார்.(1) நரநாராயணர்களின் ஆசிரமத்தில் முழுமையாக ஆயிரம் வருடங்கள் வசித்து, மாற்றமில்லாதவனான ஹரியைக் கண்டு, நாராயாணனைக் குறித்த சிறந்த உரையாடல்களைக் கேட்ட பிறகு அந்தத் தெய்வீக முனிவர், இமயச் சாரலில் உள்ள தன் சொந்த ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(2) எனினும், முதன்மையான தவசிகளான நரனும், நாராயணனும், கடுந்தவப் பயிற்சிகளில் ஈடுபட்டபடியே இனிமை நிறைந்த தங்கள் பதரி ஆசிரமத்தில் தொடர்ந்து வசித்தனர்.(3) நீ பாண்டவ குலத்தில் பிறந்தவனாவாய். நீ அளவிலா சக்தி கொண்டவனாவாய். ஓ! பாண்டவ குலத்தைத் தழைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, நாராயணனைக் குறித்த இந்த உரையைத் தொடக்கம் முதல் கேட்ட உனது பாவங்கள் அனைத்தும் நிச்சயம் கழுவப்பட்டு, ஆன்ம புனிதம் அடைந்தவனாக நீ இருக்கிறாய்.(4)

ஓ! மன்னர்களில் சிறந்தவனே, மாற்றமில்லாதவனான ஹரியை விரும்பி மதிப்பதற்குப் பதிலாக வெறுக்கும் ஒருவனுக்கு இம்மையுமில்லை, மறுமையுமில்லை.(5) தேவர்களில் முதன்மையானவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான நாராயணனை வெறுக்கும் மனிதனுடைய மூதாதையர்கள் நிச்சயம் நித்திய நரகில் மூழ்குவார்கள்.(6) ஓ! மனிதர்களில் புலியே, விஷ்ணுவே இருப்பிலுள்ள அனைத்தின் ஆன்மாவாக இருக்கிறான். அவ்வாறிருக்கையில், ஒருவன் விஷ்ணுவை வெறுப்பதன் மூலம் தன்னையே வெறுப்பதால், எவ்வாறு எவனாலும் அவனை வெறுக்க முடியும்?(7) நமது ஆசானும், காந்தவதியின் {சத்தியவதியின்} மகனுமான முனிவர் வியாசரே, உயர்ந்த மற்றும் மாற்றமில்லாத மகிமையான நாராயணனின் மகிமையைக் குறித்த இந்த உரையை நமக்குச் சொல்லியிருக்கிறார். ஓ! பாவமற்றவனே, நான் அவரிடமிருந்தே இதைக் கேட்டேன், நான் கேட்டவாறே சரியாக இதை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(8)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, புதிர்களுடன் கூடியதும், விவரங்களின் சுருக்கமுமான இந்த வழிபாட்டு மரபானது, அண்டத்தின் தலைவனான நாராயணனிடமிருந்தே நாரதரால் அடையப்பட்டது.(9) இந்தப் பெரும் வழிபாட்டு மரபின் விபரங்கள் இவ்வாறே இருக்கின்றன. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இதற்கு முன்பே ஹரி கீதையில், விதிகளுடன் கூடிய சுருக்கமான குறிப்புடன் இதை நான் உனக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறேன்[1].(10) வியாசர் என்றும் அழைக்கப்படும் தீவில் பிறந்தவரான கிருஷ்ணரே பூமியில் நாராயணர் என்பதை அறிவாயாக. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, மஹாபாரதத்தைப் போன்ற ஓர் ஆய்வை அவரைத் தவிர வேறு எவனால் தொகுக்க முடியும்?(11) நீ ஒரு பெரும் வேள்வியைச் செய்யத் தீர்மானித்திருக்கிறாய். நீ தீர்மானித்தவாறே அந்த வேள்வி நடைபெறட்டும். பல்வேறு வகைக் கடமைகள் மற்றும் வழிபாட்டு மரபுகளைக் கேட்டவனான உனது குதிரை வேள்வி நடைபெறட்டும்” {என்றார் வைசம்பாயனர்}”.(12)சௌதி {சௌனகரிடம்} தொடர்ந்தார், “அந்த மன்னர்களில் சிறந்தவன் {ஜனமேஜயன்}, இந்தப் பெரும் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, தன் பெரும் வேளிவியின் நிறைவுக்காக விதிப்படி விதிக்கப்பட்டிருக்கும் அனைத்துச் சடங்குகளையும் செய்யத் தொடங்கினான்.(13) ஓ! சௌனகரே, உம்மால் கேட்கப்பட்ட நான், நாராயணனைக் குறித்த அந்தப் பெரும் சொற்பொழிவை {நாராயணீயத்தை} உமக்கும், நைமிசக் காட்டில் வசிப்பபோரான இந்த முனிவர்கள் அனைவருக்கும் முறையாகச் சொல்லிவிட்டேன்.(14) இதற்கு முன்பு, கிருஷ்ணன் மற்றும் பீஷ்மரின் முன்னிலையில், பல முனிவர்களும், பாண்டுவின் மகன்களும் கேட்டுக் கொண்டிருந்தபோது நாரதர் என் ஆசானுக்கு இதைச் சொன்னார்[2].(15) பரமதேவனான நாராயணனே மூவுலகங்களுக்கும், முனிவர்களில் முதன்மையான அனைவருக்கும் தலைவனாவான். பேரளவு கொண்ட இந்தப் பூமியைத் தாங்குபவன் அவனே. ஸ்ருதிகள் மற்றும் பணிவெனும் குணம் ஆகியவற்றின் கொள்ளிடம் அவனே. அமைதியான இதயத்தை அடையச்செய்யும் பயிற்சி விதிகள் அனைத்திற்கும், யமன் என்ற பெயரால் அழைக்கப்படுபவனிடம் செல்வோர் அனைவருக்கும் பெருங்கொள்ளிடம் அவனே. எப்போதும் முதன்மையான மறுபிறப்பாளர்கள் சூழ இருப்பவன் அவனே. அந்தப் பெருந்தேவனே உன் புகலிடமாக இருக்கட்டும்.(16)சொர்க்கவாசிகளுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் எப்போதும் செய்பவன் ஹரியே. (மூவுலகங்களுக்குத் தொல்லையாக அமையும்) அசுரர்களை எப்போதும் கொல்பவனும் அவனே. தவங்களின் கொள்ளிடம் அவனே. பெரும் புகழ் கொண்டவன் அவனே. மது மற்றும் கைடபன் என்ற பெயர்களில் அறியப்படும் தைத்தியர்களைக் கொன்றவன் அவனே. சாத்திரங்கள் மற்றும் பிற கடமைகளை {தர்மங்களை} அறிந்தவர்களும், அவற்றை நோற்பவர்களுமான மனிதர்களால் அடையப்படும் கதிகளை விதிப்பவன் அவனே. வேள்விகளில் அர்ப்பணிக்கப்படும் முதன்மையான காணிக்கைகளை எடுத்துக் கொள்பவன் அவனே. உன் புகலிடமும், பாதுகாப்பும் அவனே.(17) குணங்களுடன் கூடியவன் அவன். குணங்களில் இருந்து விடுபட்டவனும் அவனே. நான்கு வகை வடிவங்களில் இருப்பவன் அவனே. குளங்களை அர்ப்பணித்தல், அதே வகையிலான அறச் சடங்குகளைச் செய்தல் ஆகியவற்றில் இருந்து எழும் தகுதிகளை {புண்ணியங்களைப்} பகிர்ந்து கொடுப்பவன் அவனே. வெல்லப்பட முடியாதவனாகவும், பெரும் வலிமை கொண்டவனாகவும் இருந்து, அறச்செயல்கள் செய்த முனிவர்களின் ஆன்மாவால் மட்டுமே அணுகக்கூடிய கதியை எப்போதும் விதிப்பவனும் அவனே.(18) உலகங்களின் சாட்சி அவனே. பிறப்பில்லாதவன் அவனே. புராதனப் புருஷன் அவனே. சூரியனின் நிறத்திலான உயர்ந்த தலைவன் {ஈஸ்வரன்} அவனே, அனைத்தின் புகலிடமும் அவனே. நீரில் இருந்து எழுந்தவனே (நாராயணனே) அவனுக்கு {வாசுதேவனுக்குத்} தலைவணங்குவதால் நீங்கள் அனைவரும் அவனுக்கு {வாசுதவேனுக்குத்} தலைவணங்குவீராக.(18) அண்டத்தின் தோற்றுவாய் அவனே. அமிர்தம் என்றழைக்கப்படும் இருப்பு அவனே. நுட்பமானவன் அவனே. அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் புகலிடம் அவனே. மாற்றமில்லாத தன்மை பொருந்திய ஒருவன் அவனே. சாங்கியர்களும், ஆன்மக்கட்டுப்பாடு கொண்ட யோகியரும் நித்தியமான அவனையே தங்கள் புத்திகளில் தாங்கியிருக்கின்றனர்” {என்றார் சௌதி}[3].(20)

ஹயக்ரீவனும் மதுகைடபர்களும்! – சாந்திபர்வம் பகுதி – 348-பிரம்மனைப் படைத்த நாராயணன்; ஹயக்ரீவ வடிவத்தை ஏற்றது; மது கைடபர்கள் என்ற அசுரர்களைக் கொன்று வேதத்தை மீட்ட வரலாறு…

ஜனமேஜயன் {அல்லது சௌனகர்}, “தெய்வீகமான பரமாத்மாவின் மகிமையை நான் உம்மிடம் இருந்து கேட்டேன். தர்மனின் இல்லத்தில், நரன் மற்றும் நாராயணரின் வடிவத்தில் பரமதேவன் பிறந்ததையும் கேட்டேன்.(1) (மூழ்கிப் போன பூமியை உயர்த்துவதற்காகப் பரமதேவன் ஏற்ற வடிவமான) வலிமைமிக்கப் பன்றியில் இருந்து பிண்டம் தோன்றியதையும் கேட்டேன். பிரவிருத்தி அறம் மற்றும் நிவிருத்தி அறம் ஆகியவற்றுக்காக விதிக்கப்பட்ட தேவர்கள் மற்றும் முனிவர்களைக் குறித்தும் நான் உம்மிடம் இருந்து கேட்டேன்.(2) ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, நீர் எங்களுக்கு வேறு கதைகளையும் சொல்லியிருக்கிறீர். பெருங்கடலின் வடகிழக்கில் தோன்றிய வடிவமும், வேள்விக் காணிக்கைகள் மற்றும் ஆகுதிகளை உண்பவனும், குதிரைத் தலை கொண்டவனும், பெருவடிவம் கொண்டவனுமான விஷ்ணுவைக் குறித்தும் நீர் எங்களுக்குச் சொன்னீர். பரமேஷ்டி என்ற பெயரில் அறியப்படும் சிறப்புமிக்கப் பிரம்மனால் அந்த வடிவம் காணப்பட்டது.(3,4)

எனினும் அந்தச் சந்தர்ப்பத்தில், அதற்கு முன்பு ஒரு போதும் தோன்றியிராத பெரும்பொருளைப் போன்றவனும், அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவனுமான அந்த ஹரியின் வடிவம், சரியாக என்ன தன்மைகளைக் கொண்டிருந்தது? என்ன சக்தியைக் கொண்டிருந்தது?(5) ஓ! தவசியே, அதற்கு முன்பு ஒருபோதும் காணப்படாதவனும், அளவிலா சக்தி கொண்டவனும், குதிரைத் தலை கொண்டவனும், புனிதத்தையே சுயமாகக் கொண்டவனுமான அந்த முதன்மையான தேவனைக் கண்டதும் பிரம்மன் என்ன செய்தான்?(6) ஓ! மறுபிறப்பாளரே, இந்தப் புராதன ஞானப்பொருளைக் குறித்த இந்த ஐயம் எங்கள் மனங்களில் எழுகிறது. ஓ! புத்திமான்களில் முதன்மையானவரே, அந்தப் பரமதேவன் என்ன காரணத்திற்காக அந்த வடிவை ஏற்றான்? பிரம்மனின் முன்பு ஏன் அவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்?(7) இந்தப் பல்வேறு புனித காரியங்களைக் குறித்து எங்களிடம் உரையாற்றி நிச்சயம் நீர் எங்களைப் புனிதமடையச் செய்திருக்கிறீர்” என்றான் {ஜனமேஜயன்}[1].(8)சௌதி சொன்னார், “வேதங்களுக்கு முற்றிலும் இணக்கமானதும், பெரும் பாம்பு வேள்வியில் பரிக்ஷித்தின் மகனுக்குச் {ஜனமேஜயனுக்குச்} சிறப்புமிக்க வைசம்பாயனரால் சொல்லப்பட்டதுமான புராதன வரலாற்றை நான் உமக்குச் சொல்லப் போகிறேன்.(9) குதிரைத் தலையுடன் கூடிய விஷ்ணுவின் வலிமைமிக்க வடிவைக் குறித்துக் கேட்ட பரிக்ஷித்தின் அரச மகனும் {ஜனமேஜயனும்} இதே ஐயத்தையே கொண்டு, இதே கேள்விகளையே வைசம்பாயனரிடம் கேட்டான்.(10)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மனிதர்களில் சிறந்தவரே, நீர் சொன்ன நிகழ்வின் போது வடக்குப் பெருங்கடலின் கரைகளில் படைப்பாளனான பிரம்மனால் காணப்பட்டதும், குதிரைத்தலையுடன் கூடியதுமான அந்த வலிமைமிக்க வடிவத்தை ஹரியானவன் என்ன காரணத்திற்காக ஏற்றான்?” என்று கேட்டான்.(11)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! மன்னா, இவ்வுலகில் இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களும், மற்றும் உயர்ந்த தலைவனின் புத்தியின் மூலம் உண்டாகும் கலவையான அடிப்படையான ஐம்பூதக் கலவையின் விளைவால் உண்டானவையே.(12) முடிவிலாத் தன்மையைக் கொண்ட பலமிக்க நாராயணனே உயர்ந்த தலைவனும் {ஈஸ்வரனும்}, அண்டப்படைப்பாளனும் ஆவான். அனைத்துப் பொருட்களின் அக ஆன்மாவாகவும், வரங்களை அளிப்பவனாகவும் அவனே இருக்கிறான். குணங்கள் அற்ற அவனே அவற்றைக் கொள்ளவும் செய்கிறான்.(13) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அனைத்துப் பொருட்களுக்கும் அழிவு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. முதலில் நிலம் எனும் பூதம் நீருடன் கலந்து அனைத்துப் பக்கங்களிலும் ஒரே பரப்பாக நீர் மட்டுமே காணப்படும்.(14) அதன்பிறகு நீரானது ஒளிக்குள்ளும், ஒளியானது காற்றுக்குள்ளும் கலக்கின்றன. பிறகு காற்றானது வெளிக்குள்ளும், வெளியானது மனத்துக்குள்ளும் கலக்கின்றன.(15) மனமானது புலப்படுவதற்குள் (அல்லது நனவுநிலை, அல்லது அகங்காரத்திற்குள்) கலக்கிறது. புலப்படுவது, புலப்படாததற்குள் (அல்லது பிரகிருதிக்குள்) கலக்கிறது. புலப்படாதது (பிரகிருதியானது) புருஷனுக்குள் (ஜீவாத்மாவுக்குள்) கலக்கிறது, புருஷன் பரமாத்மாவுக்குள் (அல்லது பிரம்மத்திற்குள்) கலக்கிறான்.(16) அப்போது ஏதும் உணரப்படாதவகையில் அண்டம் முழுவதும் இருள் பரவுகிறது. அந்த ஆதி இருளுக்குள் இருந்து (படைப்புக் கொள்கையுடன் கூடிய) பிரம்மம் எழுகிறது. அந்த இருள் ஆதியானதாகவும், அழிவில்லா தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.(17)

அந்த ஆதி இருளில் இருந்து எழும் பிரம்மம், (தன் சொந்த ஆற்றலின் மூலம்) அண்டமெனும் கருத்தாக வளர்ந்து புருஷனின் வடிவை ஏற்கிறது. அத்தகைய புருஷன் அநிருத்தன் என்றழைக்கப்படுகிறான். பாலினமற்ற அவன், பிராதானம் (உயர்ந்தது, தொடக்கம்) என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுகிறான்.(18) ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, அவன் முக்குணங்களின் கவலை, அல்லது புலப்படாதது என்ற பெயரில் அறியப்படுகிறான். அவன் ஞானத்தை மட்டுமே துணையாகக் கொண்டு நிலைத்திருக்கிறான். அந்தச் சிறப்புமிக்க, பலமிக்கவன் விஷ்வக்ஸேனன் அல்லது ஹரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறான்.(19) யோக உறக்கத்தின் வசப்படும் அவன் நீரில் தன்னைக் கிடத்திக் கொள்கிறான். பிறகு அவன், பல்வேறு வகைத் தோற்றப்பாடுகள் மற்றும் அளவிலா குணங்கள் நிறைந்த அண்டத்தைப் படைப்பது குறித்துச் சிந்திக்கிறான்.(20)

அவன், படைப்புக் குறித்துச் சிந்திக்கும்போதே தன் உயர்ந்த குணங்களை நினைவுகூர்கிறான். இதிலிருந்து அநிருத்தனின் புத்தியைப் பிரதிபலிக்கும் நான்முகப் பிரம்மன் எழுகிறான்.(21) ஹிரண்யகர்ப்பன் என்றும் அழைக்கப்படும் சிறப்புமிக்கப் பிரம்மனே உலகங்கள் அனைத்தின் பாட்டனாவான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன், அநிருத்தனில் (அவனது தொப்புளில்) இருந்து எழும் தாமரைக்குள் தன் பிறப்பை அடைகிறான்.(22) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனும், நித்தியமானவனும், அற்புதக்கூறுகளைக் கொண்டவனுமான பிரம்மன் அந்தத் தாமரைக்குள அமர்ந்தபடியே அனைத்துப் பக்கங்களில் இருக்கும் நீரைக் கண்டான்.(23) பரமேஷ்டி என்றும் அழைக்கப்படும் பிரம்மன் சத்வ குணத்தைப் பின்பற்றி அண்டத்தைப் படைக்கத் தொடங்கினான். சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட அந்த ஆதி தாமரையில் நாராயணன் பெரும் தகுதி நிறைந்த இரு நீர்த்துளிகளை விட்டான். தொடக்கமும், முடிவும் இல்லாதவனும், அழிவைக் கடந்திருப்பவனுமான நாராயணன், தன் கண்களை அந்த இரு நீர்த்துளிகளில் செலுத்தினான்.(24,25)

அந்த இரு நீர்த்துகளில் மிக அழகாகவும், பிரகாசமாகவும் இருந்த ஒரு துளி தேன்துளியைப் போலத் தெரிந்தது. நாராயணனின் ஆணையின் பேரில் அந்தத் துளியில் இருந்து தமஸ்குணத்தால் அமையப்பெற்றவனும், மது என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு தைத்தியன் உதித்தான். அந்தத் தாமரைக்குள் இருந்த மற்றொரு நீர்த்துளி மிகக் கடினமானதாக இருந்தது. அதிலிருந்து ரஜஸ் குணத்தைக் கொண்ட தைத்தியன் கைடபன் உதித்தான்.(26) தமஸ் மற்றும் ரஜஸ் குணங்களைக் கொண்டவர்களும், வலிமையுடன் கூடியவர்களும், கதாயுதங்கள் தரித்தவர்களுமான அந்தத் தைத்தியர்க்ள இருவரும், தங்கள் பிறப்பை அடைந்த உடனேயே அந்தப் பரந்த ஆதி தாமரைக்குள் திரியத் தொடங்கினர்.(27) மிக இனிய வடிவைக் கொண்ட நான்கு வேதங்களையும் படைப்பதில் ஈடுபட்டுவரும் அளவிலா பிரகாசம் கொண்ட பிரம்மன் அதற்குள் {அந்தத் தாமரைக்குள்} இருப்பதை அவர்கள் கண்டனர்.(28) உடல்படைந்த அந்த முதன்மையான அசுரர்கள் இருவரும், நான்கு வேதங்களையும் கண்டு, அதைப் படைத்தவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென அவற்றை அவனிடம் இருந்து பறித்தனர்.(29) நித்தியமான வேதங்களைப் பறித்த அந்த வலிமைமிக்கத் தானவர்கள் இருவரும், தாங்கள் கண்ட பெருங்கடலின் நீருக்குள் பாய்ந்து அதனடியை நோக்கிச் சென்றனர்.(30) தன்னிடம் இருந்த வேதங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டதைக் கண்ட பிரம்மன் துயரத்தால் நிறைந்தான். இவ்வழியில் வேதங்களைக் களவு கொடுத்த பிரம்மன், இவ்வார்த்தைகளில் உயர்ந்த தலைவனிடம் {ஈஸ்வரனிடம்} பேசினான்.(31)

பிரம்மன், “வேதங்களே என் பெருங்கண்களாகும். வேதங்களே என் பெரும்பலமும் ஆகும். வேதங்களே என் பெரும்புகலிடமாகும். வேதங்களே என் உயர்ந்த பிரம்மம் ஆகும்.(32) இருப்பினும் என்னிடமிருந்த அந்த வேதங்களை அவ்விரு தானவர்களும் பலவந்தமாக அபகரித்துச் சென்றனர். நான் படைத்த உலகங்கள் வேதங்களை இழந்து இருளில் மூழ்குகின்றன.(33) (என்னிடம்) வேதங்கள் இல்லாமல், என் சிறந்த படைப்பை இருப்புக்குக் கொண்டுவர எவ்வாறு என்னால் இயலும்? ஐயோ, (இத்தகைய செயல்பாட்டின் மூலம்) வேதங்களை இழந்ததன் விளைவால் நான் அடையும் துயரம் பெரியதாகும்.(34) என் இதயம் மிகவும் துன்புறுகிறது. அது பெருஞ்சோகத்தின் வசிப்பிடமாகிவிட்டது. என் இழப்பினால் நான் மூழ்கியிருக்கும் இந்தத் துன்பப் பெருங்கடலில் இருந்து என்னை மீட்கப் போவது யார்? நான் தொலைத்த வேதங்களைக் கொண்டுவரப் போவது யார்? என்னிடம் கருணை கொள்ள யார் இருக்கிறார்?” என்றான்.(35)

ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவனே, பிரம்மன் இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, திடீரென ஹரியை இவ்வார்த்தைகளில் துதிக்கும் எண்ணம் அவனுக்கு எழுந்தது. அப்போது பலமிக்கப் பிரம்மன், மதிப்புடன் தன் கரங்களைக் குவித்த படி, தன் மூதாதையின் பாதத்தைப் பற்றியபடியும், நாராயணனைக் கௌரவிக்கும் இந்த உயர்ந்த துதிகளைப் பாடினான்.(36)

பிரம்மன், “ஓ! பிரம்மனின் இதயமே, உன்னை நான் வணங்குகிறேன். எனக்கு முன்பே பிறந்திருந்த {எனக்கு முன்னிருப்பவனே} உன்னை நான் வணங்குகிறேன். அண்டத்தின் தோற்றுவாய் நீயே. அனைத்திலும் முதன்மையான வசிப்பிடம் நீயே. ஓ! பலமிக்கவனே, அனைத்துக் கிளைகளுடன் கூடிய யோகப் பெருங்கடல் நீயே.(37) புலப்படுவது {ஸ்தூலம்} மற்றும் புலப்படாதது {ஸூக்ஷ்மம்} ஆகிய இரண்டையும் படைத்தவன் நீயே. உணரப்படமுடியாத பரப்பைக் கொண்ட மங்கலப் பாதையில் நடப்பவன் நீயே. அண்டத்தை உண்பவன் நீயே. உயிரினங்கள் அனைத்தின் உள்ளான்மா {அந்தராத்மா} நீயே. எந்தத் தோற்றுவாயும் இல்லாதவன் நீயே.(38) அண்டத்தின் புகலிடம் நீயே. தோற்றுவாயேதும் அற்றவனாக இருப்பதால் சுயம்புவாக இருப்பவன் நீயே. என்னைப் பொறுத்தவரையில் நான் உன் உற்சாகநிலையில் இருந்து உதித்தேன். உன்னில் இருந்தே நான் பிறப்பை அடைந்தேன். மறுபிறப்பாளர்கள் அனைவராலும் புனிதமானதாகக் கருதப்படும் {மானஸம் என்றழைக்கப்படும்} என் முதல் பிறவி உன் விருப்பத்தின் மூலம் அடைந்தேன். பழங்காலத்தில் {சாக்ஷுஷம் என்கிற} என் இரண்டாம் பிறவி உன் கண்களில் இருந்து உண்டானது.(39,40)

உன் அருளால் {வாசிகம் என்கிற} என் மூன்றாம் பிறப்பு உன் வாக்கில் இருந்து உண்டானது. ஓ! பலமிக்கத் தலைவா, {ஸ்ரோத்ரஜம்} என் நான்காம் பிறப்பு உன் காதுகளில் இருந்து உண்டானது.(41) ஓ! தலைவா, {நாஸத்யம் என்கிற} என் ஐந்தாம் பிறப்பு அனைத்து வகையிலும் சிறப்பான உன் மூக்கில் இருந்து உண்டானது. {அண்டஜம் என்கிற} என்னுடைய ஆறாம் பிறப்பு உன் மூலம் ஒரு முட்டையில் உண்டானது.(42) இது {பத்மஜென்மம் என்கிற} என் ஏழாம் பிறவியாகும். ஓ! தலைவா, இஃது இந்தத் தாமரைக்குள் நேர்ந்திருக்கிறது. ஓ! முக்குணமுமற்றவனே, ஒவ்வொரு படைப்பிலும் நான் உன் மகனாகவே பிறக்கிறேன்.(43) ஓ! தாமரை இதழ் கண்ணனே, உண்மையில் முக்குணங்களிலும் முதன்மையான சத்வ குணத்தால் அமைந்த உன் மூத்த மகனாக நான் பிறக்கிறேன். பரம {உயர்ந்த} இயல்பைக் கொண்டவன் நீ. உன்னிலிருந்தே உதிப்பவன் நீ.(44) உன்னால் படைக்கப்பட்டவன் நான். வேதங்களே என் கண்கள். எனவே நான் காலங்கடந்தவனாக இருக்கிறேன். இந்த யோக உறக்கத்தில் இருந்து எழுவாயாக. என் கண்களை மீண்டும் எனக்குத் தருவாயாக. நான் உனக்கு அன்பானவன், நீ எனக்கு அன்பானவன்” என்று துதித்தான் {பிரம்மன்}.(45)

பிரம்மனால் இவ்வாறு துதிக்கப்பட்டவனும், அனைத்துப் பக்கத்திலும் முகம் கொண்டவனுமான சிறப்புமிக்கப் புருஷன், தன் உறக்கத்தை உதறி, வேதங்களை (அவற்றைப் பலவந்தமாக அபகரித்துச் சென்ற தைத்தியர்களிடம் இருந்து) மீட்கத் தீர்மானித்தான். அவன், தனது யோகபலத்தைப் பயன்படுத்தி இரண்டாம் வடிவம் ஒன்றை ஏற்றான்.(46) சிறந்த மூக்கைக் கொண்ட அவனது உடல் சந்திரனைப் போலப் பிரகாசமடைந்தது. அவன் வேதங்களின் வசிப்பிடமான பெரும்பிரகாசமுடைய குதிரைத் தலை கொண்ட வடிவை ஏற்றான்.(47) ஒளிக்கோள்கள் மற்றும் விண்மீன்கூட்டங்களுடன் கூடிய ஆகாயமே அவனது தலையின் மகுடமானது. நீண்டு பாயும் அவனது தலை முடிகள் சூரியக் கதிர்களின் காந்தியுடன் இருந்தன.(48) மேலுலகமும், கீழுலகமும் அவனது இரு காதுகளாகின. பூமியே அவனது நெற்றியானது. கங்கை மற்றும் சரஸ்வதி ஆகிய ஆறுகள் இரண்டும் அவனது இடைகளாகின. பெருங்கடல்கள் இரண்டும் அவனது இரு புருவங்களாகின.(49) சூரியனும், சந்திரனும் அவனது இரு கண்களாகினர். சந்தியொளி அவனது மூக்கானது. ஓம் என்ற அசை அவனது நினைவும், புத்தியுமானது. மின்னல் அவனது நாவானது.(50)

இரண்டு இன்பலோகங்களான கோலோகமும், பிரம்மலோகமும் அவனது மேலுதடும், கீழுதடுமாகின. அண்ட அழிவை ஏற்படுத்துவதும், முக்குணங்களையும் கடந்திருப்பதுமான பயங்கரமான இரவு {காளராத்ரியானது} அவனது கழுத்தானது.(51) பல்வேறு பொருட்களைப் பல்வேறு அங்கங்களாகவும், குதிரைத் தலையையும் கொண்ட அந்த {ஹயக்ரீவ} வடிவை ஏற்றபிறகு, அந்த அண்டத்தின் தலைவன் அங்கேயே அப்போதே மறைந்து பாதாள லோகத்திற்குச் சென்றான்.(52) அந்த உலகத்தை அடைந்ததும் அவன் தன்னை உயர்ந்த யோகத்தில் நிறுவிக் கொண்டான். சிக்ஷை என்றழைக்கப்படும் அறிவியல் விதிகளின்படி ஒழுங்கமைக்கப்பட்ட குரலைப் பின்பற்றி வேத மந்திரங்களை அவன் உரத்த குரலில் சொல்லத் தொடங்கினான்.(53) தனித்தன்மை வாய்ந்த அவனது உச்சரிப்பு அனைத்து வகையிலும் இனிமையாகக் காற்றின் ஊடாக எதிரொலித்தது. அவனது குரல் பாதாளலோகத்தின் எல்லை முதல் மறுயெல்லை வரை நிறைந்திருந்தது. அனைத்து பூதங்களின் தன்மைகளையும் கொண்ட அது பெரும் நன்மைகளை உண்டாக்கவல்லதாக இருந்தது.(54) அப்போது அந்த அசுரர்கள் இருவரும், மீண்டும் வந்து எடுத்துக் கொள்ளும் வகையில் காலத்தால் வேதங்களிடம் ஓர் ஏற்பாட்டைச் செய்து கொண்டு {ஸங்கேதத்தால் [இரகசிய மொழியால்] வேதங்களைக் கட்டி}, அவ்வொலி வருவதாகத் தென்பட்ட இடத்தை நோக்கி ஓடினர்.(55)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதே வேளையில் பாதாள லோகத்தில் இருந்தவனும், குதிரைத் தலையுடன் கூடியவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான அந்த உயர்ந்த தலைவன் {ஹயக்ரீவன்}, வேதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டான்.(56) அவன், பிரம்மன் இருந்து இடத்தில் மீண்டும் வந்து வேதங்களை அவனிடம் கொடுத்தான். வேதங்களை மீட்டுப் பிரம்மனிடம் கொடுத்த அந்த உயர்ந்த தலைவன் மீண்டும் தன் சொந்த இயல்பை அடைந்தான்.(57) மேலும் அந்த உயர்ந்த தலைவன், குதிரைத் தலையுடன் கூடிய தன் வடிவை {ஹயக்ரீவனைப்} பெருங்கடலின் வடகிழக்குப் பகுதியில் நிறுவினான். (இவ்வழியில்) வேதங்களின் வசிப்பிடமான அவனை நிறுவியபிறகு, மீண்டும் குதிரைத் தலைக் கொண்ட வடிவை ஏற்றான்[2].(58) மது மற்றும் கைடபன் என்ற இரு தானவர்களும், ஒலியை வெளியிடும் எவரையும் காணாது மீண்டும் அதே இடத்திற்கு விரைவாகத் திரும்பி வந்தனர். அவர்கள் தங்கள் கண்களைச் சுற்றிலும்சுழல விட்டும், வேதங்களை அவர்கள் வீசிய அந்த இடம் வெறுமையாக இருப்பதைக் கண்டனர்.(59) வலிமையானவர்களில் முதன்மையான அவர்கள் இருவரும் பெரும் வேகத்துடன் பாதாள லோகத்தில் இருந்து எழுந்தார்கள்.(60)தாங்கள் பிறப்படைந்த ஆதி தாமரைக்குத் திரும்பி வந்த அவர்கள், பலமிக்கவனும், வெண்ணிறத்தையும், சந்திரனுக்கு ஒப்பான காந்தியையும் கொண்டவனும், அநிருத்தனின் வடிவில் இருந்தவனுமான அந்த உண்மையான படைப்பாளனைக் கண்டார்கள்.(61) அளவிலா ஆற்றலைக் கொண்டவனான அவன் யோக உறக்கத்தின் ஆதிக்கத்தில் தன் உடலைப் பரந்த நீர்ப்பரப்பை ஆக்கிரமிக்கும் வகையில் கிடத்தியிருந்தான்.(62) பெரும் பிரகாசத்தைக் கொண்டதும், சத்வமெனும் களங்கமிலா குணத்துடன் கூடியதுமான அந்தப் பரம தேவனின் உடலானது, நெருப்பைக் கக்குவதாகத் தெரிந்த ஒரு பாம்பின் சிறந்த தலையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது[3].(63)அந்தத் தலைவன் இவ்வாறு கிடப்பதைக் கண்ட அந்த முதன்மையான தானவர்கள் இருவரும், உரக்கச் சிரித்து முழங்கினார்கள். ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களுடன் கூடிய அவர்கள்,(64) “இவனே வெண்ணிறமுடைய அவன். இப்போது உறக்கத்தில் கிடக்கிறான். இவனே பாதாளலோகத்தில் இருந்து வேதங்களைக் கொண்டு வந்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை.(65) இவன் யாருடையவன்? யார் இவன்? பாம்பின் தலையில் ஏன் இவ்வாறு உறங்குகிறான்?” என்றனர். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் தானவர்கள் இருவரும் யோகத்துயிலில் இருந்த ஹரியை விழிப்படைச் செய்தனர்.(66)இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவன் (நாராயணன்) இவ்வாறு விழிப்படையச் செய்யப்பட்டதும், அந்தத் தானவர்கள் இருவரும் தன்னோடு போரிடும் நோக்கம் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். தன்னோடு போரிட ஆயத்தமாக இருக்கும் அந்த முதன்மையான அசுரர்கள் இருவரையும் கண்ட அவனும் அவர்களது அசையை நிறைவு செய்வதில் தன் மனத்தை நிலைநிறுத்தினான்.(67) அதன் பேரில் ஒரு புறம் அவர்கள் இருவரும் மறுபுறம் நாராயணன் என அவர்களுக்கிடையில் போர் நடைபெற்றது. அசுரர்களான மதுவும், கைடபனும், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களின் உடல்வடிவங்களாக இருந்தனர். பிரம்மனை நிறைவு செய்வதற்காக நாராயணன் அவ்விருவரையும் கொன்றான். அது முதல் அவன் மதுசூதனன் (மதுவைக் கொன்றவன்) என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.(68) அந்தப் பரம்பொருளானாவன், அவ்விரு அசுரர்களுக்கும் அழிவை ஏற்படுத்தி, பிரம்மனிடம் வேதங்களை மீட்டுத் தந்து, பிரம்மனின் துயரை விலக்கினான்.(69) பிறகு பிரம்மன், ஹரியின் துணையுடனும், வேதங்களின் உதவியுடனும் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய உலகங்கள் அனைத்தையும் படைத்தான்.(70) இதன்பிறகு, படைப்பு தொடர்புடைய முதன்மையான வகையிலான புத்தியைப் பெரும்பாட்டனுக்கு அருளிய ஹரி, தான் எங்கிருந்து வந்தானோ அந்த இடத்திற்குச் செல்வதற்காக அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(71) இவ்வாறே, குதிரை தலை கொண்ட வடிவை ஏற்ற நாராயணன் {ஹயக்ரீவன்}, மது மற்றும் கைடபன் என்ற இரு தானவர்களையும் கொன்றான் (கொன்ற பிறகு, பிரம்மனின் பார்வையில் இருந்து மறைந்தும் போனான்). எனினும், அண்டத்தில் பிரவிருத்தி அறத்தை உண்டாக்கும் நிமித்தமாக மீண்டும் அவன் அவ்வடிவை {ஹயக்ரீவ வடிவத்தை} ஏற்றான்.(72)இவ்வாறே அருள் நிறைந்த ஹரியானவன் பழங்காலத்தில் குதிரை தலை கொண்ட அந்த மகத்தான வடிவத்தை ஏற்றான். அவனது அனைத்து வடிவங்களிலும், பலத்துடன் கூடிய இந்த வடிவமே மிகப் பழமையானதாகக் கொண்டாடப்படுகிறது.(73) நாராயணன் குதிரைத் தலை தரித்த இந்த வரலாற்றை அடிக்கடி கேட்பவன், அல்லது மனத்தால் பாராயணம் செய்பவன் ஒருபோதும் வேதங்களையோ, பிற சாத்திரங்களையோ மறக்கமாட்டான். குதிரை தலை கொண்ட சிறப்புமிக்கத் தேவனைக் கடுந்தவங்களுடன் துதித்த முனிவர் பாஞ்சாலர் (காலவர் என்று வேறு பெயரால் அழைக்கப்படுபவர்) தேவனால் (ருத்திரனால்) சுட்டிக்காட்டப்பட்ட பாதையில் சென்று கிரம அறிவியலை அடைந்தார்[4].(75) ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேதங்களுக்கு இசைவானதும், நீ என்னிடம் கேட்டதுமான ஹயசிரஸின் பழங்கதையை நான் உனக்குச் சொன்னேன்.(76) அண்டத்தின் காரியங்களைச் சீரமைக்க அந்தப் பரம தேவன் என்னென்ன வடிவங்களை ஏற்பானோ, அவற்றை அவன் தன் உள்ளார்ந்த சக்திகளைப் பயன்படுத்தி உடனே ஏற்கிறான்.(77) அனைத்து செழிப்பையும் கொண்ட அந்தப் பரமதேவனே வேதங்களின் கொள்ளிடமாவான். அவனே தவங்களின் கொள்ளிடமும் ஆவான். பலமிக்க அந்த ஹரியே யோகமுமாவான். சாங்கிய தத்துவத்தின் உடல்வடிவமாகவும் அவனே இருக்கிறான். அவனே நாம் கேள்விப்படும் முதன்மையான பிரம்மமுமாக இருக்கிறான்.(78)வாய்மை நாராயணனையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. ரிதம் {கர்ம பயன் / செயற்கனி} நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது. திரும்பி வராத நிவிருத்தி அறமும் நாராயணனையே தன் உயர்ந்த வசிப்பிடமாகக் கொண்டுள்ளது.(79) பிரவிருத்தியின் அடிப்படையிலான மற்றொரு அறமும் இணையாக நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது. பூமி என்ற பூதத்திற்குரிய குணங்கள் அனைத்திலும் முதன்மையானது மணமாகும். அந்த மணமும் தன் ஆன்மாவாக நாராயணனையே கொண்டுள்ளது.(80) ஓ! மன்னா {ஜனமேஜயா}, நீரின் குணங்கள் (பல்வேறு வகையான) சுவைகள் என்றழைக்கப்படுகின்றன. இந்தச் சுவைகளும் நாராயணனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன. ஒளியின் முதன்மைக் குணம் வடிவமாகும். வடிவமும் நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது.(81) காற்றின் குணமான தீண்டலும் நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. காற்றின் {ஆகாயத்தின் என்றிருக்க வேண்டும்} குணமான ஒலியும் பிறவற்றைப் போன்றே நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது.(82) புலப்படாததன் (பிருகிருதியின்) குணமான மனமும், நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது. தெய்வீக ஒளிக்கோள்களின் நகர்வுகளால் கணக்கிடப்படும் காலமும் அதே போல நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது.(83)

புகழ், அழகு மற்றும் செழிப்பின் தலைமைத் தேவர்களும் அதே உயர்ந்த தேவனையே தங்கள் ஆன்மாக்களாகக் கொண்டுள்ளனர். சாங்கியம் மற்றும் யோக தத்துவங்கள் இரண்டும் நாராயணனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(84) பரம்பொருளே இவை அனைத்தின் காரணமான புருஷனாக இருக்கிறான். மேலும் அவன் அனைத்தின் காரணமான பிரதானனாகவும் (அல்லது பிரகிருதியாகவும்) இருக்கிறான்.(85) அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் அடித்தளம் அவனே. செயல்படுபவன் அவனே, அண்டத்தில் காணப்படும் பலவகைகளின் காரணம் அவனே. அண்டத்தில் செயல்படும் பல்வேறு வகைச் சக்திகள் அவனே. ஐந்தாவதாக, மக்களால் பேசப்படும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் புலப்படாத ஆதிக்கம் அவனே.(86) பரந்த பயன்பாட்டில் உள்ள இத்தகைய காரணங்களின் துணையுடன் பல்வேறு காரியங்களை ஆய்வு செய்வதில் ஈடுபடுவோர் மேலே சொல்லப்படும் ஐந்து காரணங்களுடனும், அனைத்துப் பொருட்களின் இறுதிப் புகலிடத்துடனும் ஹரியையே அடையாளம் காண்கின்றனர்.(87) உண்மையில், உயர்ந்த யோகபலத்துடன் கூடிய நாராயணனே ஒரே தத்துவமாக இருக்கிறான். ஆன்மாவை அறிந்தவர்களான பிரம்மன், உயர் ஆன்ம முனிவர்கள், சாங்கியர்கள், யோகியர், யதிகள் உள்ளிட்ட உலகவாசிகள் அனைவரின் பொதுவான எண்ணங்களும் கேசவனால் முழுமையாக அறியப்படுகின்றன, ஆனால் இவர்கள் எவராலும் அவனது எண்ணங்கள் ஒருபோதும் அறியமுடியாது.(88,89)

தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் எந்தச் செயலும், கொடுக்கப்படும் எந்தக் கொடையும், செய்யப்படும் எந்தத் தவமும்,(90) தனது உயர்ந்த விதிகளில் நிறுவப்பட்டிருக்கும் அந்த விஷ்ணுவையே புகலிடமாகக் கொண்டிருக்கின்றன. உயிரினங்கள் அனைத்தின் வசிப்பிடமாக இருப்பதாலேயே அவன் வாசுதேவன் என்ற பெயர் சூட்டப்பட்டான்.(91) அவன் மாற்றமில்லாதவன். அவன் பரமன் {உயர்ந்தவன்}. அவன் முனிவர்களில் முதன்மையானவன். அவன் உயர்ந்த பலத்தைக் கொண்டவன். அவன் முக்குணங்களையும் கடந்தவன் எனச் சொல்லப்படுகிறான். (அந்த அறிகுறியுமின்றி வேகமாக ஓடும்) காலமானது, அடுத்தடுத்த பருவகாலங்களின் வடிவில் வெளிப்படும்போது இவ்வாறே குறியீடுகளை ஏற்கிறது. அவன் குணங்களற்றவனாக இருந்தாலும், (தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக) குணங்களை ஏற்கிறான்.(92) உயர் ஆன்மாவைக் கொண்டவர்கள் கூட அவனது இயக்கங்களை {செயல்பாடுகளைப்} புரிந்து கொள்வதில் வெல்வதில்லை. ஞானத்தையே தங்கள் ஆன்மாக்களாகக் கொண்ட முதன்மையான முனிவர்கள் மட்டுமே குணங்கள் அனைத்தையும் கடந்திருக்கும் அந்தப் புருஷனைத் தங்கள் இதயங்களில் காண்பதில் வெல்கிறார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(93)

பக்தி அறம் – ஏகாந்தம்! – சாந்திபர்வம் பகுதி – 349-பக்தி அறத்தை முதலில் தொடங்கியவர்; தொடக்க காலத்தில் இருந்து வழிவழியாக வந்த அறத்தின் வரலாறு; பக்திஅறத்தை ஏன் அனைத்து மனிதர்களும் பின்பற்றுவதில்லை; இந்த ஏகாந்த அறத்தின் மூலம் பிரம்மத்தை அடையும் வகையை ஜனமேஜயனுக்குச் சொன்ன வைசம்பாயனர்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “சிறப்புமிக்கவனாக ஹரி, தன்னிடம் முழு ஆன்மாக்களோடு தங்களை அர்ப்பணிப்போரிடம் அருள் நிறைந்தவனாகிறான். விதிக்கு ஏற்புடைய வகையில் அவனுக்கு அளிக்கப்படும் வழிபாடுகள் அனைத்தையும் அவன் ஏற்கிறான்.(1) தங்கள் விறகை எரித்தவர்களும், தகுதி மற்றும் தகுதியின்மை {புண்ணியப் பாவங்கள்} ஆகிய இரண்டும் இல்லாதவர்களுமான மனிதர்கள் ஆசானிலிருந்து ஆசான் மூலமாக வழிவழியாக அடையும் ஞானத்தையும், இறுதியில் அவர்கள் அடையும் வெற்றியைக் குறித்தும் சொன்னீர்[1].(2) அத்தகைய மனிதர்கள், வேறு மூன்றின் மூலமாக நான்காவதான புருஷர்களில் முதன்மையான சாரத்தை, அல்லது வாசுதேவனையே எப்போதும் அடைகிறார்கள்[2]. எனினும், தங்கள் முழு ஆன்மாக்களுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள் {ஏகாந்திகள்} உடனே உயர்ந்த கதியை {பரமபதத்தை} அடைகிறார்கள்[3].(3) பக்தி அறமே (ஞானத்தை விட) மேன்மையானதாகவும், நாராயணனின் விருப்பத்திற்குரியதாகவும் தெரிகிறது என்பதில் ஐயமில்லை. இவர்கள் (அநிருத்தன், பிரத்யும்னன் மற்றும் சங்கர்ஷணன் என்ற) அடுத்தடுத்த மூன்று நிலைகளைக் கடக்காமல் மாற்றமில்லாத ஹரியை உடனே அடைகிறார்கள்.(4) முறையான நோன்புகள், ஒழுங்கமைக்கப்பட்ட விதிகளின்படியான உபநிஷத்துகளுடன் கூடிய வேத கல்வி ஆகியவற்றால் பிராமணர்களாலும், யதிகளின் அறத்தைப் பின்பற்றுவோராலும் அடையப்படும் கதியானது,(5) முழு ஆன்மாக்களுடன் ஹரியிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்களால் அடையப்படும் கதியைவிடக் குறைந்ததாக நான் நினைக்கிறேன். பக்தி அறத்தை முதலில் தொடங்கியது யார்? அஃதை அறிவித்தது தேவனா? முனிவரா?(6) முழு ஆன்மாக்களோடு அர்ப்பணிப்பில் ஈடுபடுபவர்களால் பயிலப்படும் நடைமுறைகள் என்னென்ன? அந்த நடைமுறைகள் எப்போது தொடங்கின? இவற்றில் எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. இவ்வையங்களை நீர் விலக்குவீராக. நீர் விளக்கப் போகும் பல்வேறு கூறுகளைக் கேட்க நான் பேராவலுடன் இருக்கிறேன்” என்றான் {ஜனமேஜயன்}.(7)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டவர்கள் மற்றும் குரு படைகளின் பல்வேறு பிரிவுகள் போருக்காக அணிவகுத்தபோதும், அர்ஜுனன் உற்சாகமிழந்த போதும், அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்} பல்வேறு குணங்களைக் கொண்ட மனிதர்களால் அடையப்படும் கதி எது, அடையப்படாத கதி எது என்ற கேள்வியை விளக்கினான். இதற்கு முன்பு நான் அந்தப் புனிதமானவனின் வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறேன். அச்சந்தர்ப்பத்தில் அந்தப் புனிதமானவனால் போதிக்கப்பட்ட அறம் புரிந்த கொள்ளக் கடினமானதாகும். தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் அதைப் புரிந்து கொள்ளவே முடியாது.(8,9) ஓ! மன்னா, பழங்காலமான கிருதயுகத்தில் சாமங்களுக்கு {சாம வேதத்திற்கு} முற்றிலும் ஏற்புடைய வகையில் படைக்கப்பட்ட இந்த அறம், உயர்ந்த தலைவனான {ஈஸ்வரனான} நாராயணனாலேயே தாங்கப்படுகிறது.(10) உயர்ந்த அருளைக் கொண்டவனான பார்த்தன் {யுதிஷ்டிரன்}, முனிவர்களுக்கு மத்தியிலும், கிருஷணன் மற்றும் பீஷ்மரின் முன்னிலையிலும் நாரதரிடம் (அவரது சொற்பொழிவுக்காக) இதையே கேட்டான்.(11) தீவில் பிறந்த கிருஷ்ணரான என் ஆசான் {வியாசர்} நாரதர் சொன்னதைக் கேட்டார். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்தத் தெய்வீக முனிவரிடம் இருந்து அடைந்து, அந்தத் தெய்வீக முனிவரிடம் இருந்து பெற்ற அதே வகையிலேயே எனக்கு அதைச் சொன்னார். ஓ! ஏகாதிபதி, நாரதரிடம் இருந்து அடையப்பட்ட அதே வழியிலேயே இப்போது நான் அஃதை உனக்குச் சொல்லப் போகிறேன். எனவே, நான் சொல்வதைக் கேட்பாயாக.(12)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாரதா, படைப்பாளனான பிரம்மன் நாராயணனின் மனத்தில் பிறந்து அவனது வாய்வழியே வெளிப்பட்ட கல்பத்தில், இந்த அறத்திற்கு ஏற்புடைய வகையில் தனது தைவ மற்றும் பைத்ர சடங்குகளை நாராயணனே செய்தான். நீரின் நுரையை உண்டு வாழும் முனிவர்கள் {பேனபர்கள்} அதை நாராயணனிடம் இருந்து அடைநனர்.(13,14) நுரையுண்ணும் முனிவர்களிடம் {பேனபர்களிடம்} இருந்து இந்த அறமானது, வைகானஸர்கள் என்ற பெயரைக் கொண்ட முனிவர்களால் அடையப்பட்டது. வைகானஸர்களிடம் இருந்து அதைச் சோமன் அடைந்தான். அதன்பிறகு அஃது அண்டத்தில் இருந்து மறைந்து போனது.(15)

ஓ! மன்னா, நாராயணனின் கண்களில் இருந்து உதித்த பிரம்மனின் {சாக்ஷுஷம் என்கிற} இரண்டாம் பிறப்புக்குப் பிறகு, பெரும்பாட்டன் (பிரம்மன்) மீண்டும் சோமனிடமிருந்து இவ்வறத்தைப் பெற்றான்.(16) இவ்வாறு நாராயணனின் ஆன்மாவாக இருக்கும் அவ்வறத்தைப் பெற்ற பிரம்மன், அதை ருத்திரனுக்குக் கொடுத்தான். ஓ! ஏகாதிபதி, அந்தப் புராதனக் கல்பத்தின் கிருத யுகத்தில் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ருத்திரன்,(17) வாலகில்யர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் முனிவர்கள் அனைவருக்கும் அதைச் சொன்னான். பிறகு நாராயணனின் மாயை மூலமாக அது மீண்டும் அண்டத்தில் இருந்து மறைந்து போனது.(18)

ஓ! மன்னா, நாராயணனின் வாக்கில் உண்டான பிரம்மனின் {வாசிகம் என்ற} மூன்றாம் பிறப்பில், இவ்வறமானது மீண்டும் நாராயணனிடமிருந்து உண்டானது.(19) பிறகு, சுபர்ணர் என்ற பெயரைக் கொண்ட ஒரு முனிவர் அஃதை அந்த முதன்மையானவனிடம் இருந்தே அடைந்தார்.(20) முனிவர் சுபர்ணர் முதன்மையான வழிபாட்டு மரபான இந்தச் சிறப்பான அறத்தை {தினமும்} பகல் வேளையில் மூன்று முறை சொல்லிக் கொண்டிருந்தார். இதன் விளைவால் அது திரிசௌபர்ணம் என்ற பெயரால் உலகத்தில் அழைக்கப்பட்டது.(21) இவ்வறம் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. அதனால் மனத்தில் ஆழப் பதிய வைக்கப்படும் கடமைகள் அவதானிக்க மிகக் கடினமானவையாக இருக்கின்றன. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவ்வறமானது அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தின் வாழ்வையும் தக்க வைக்கும் காற்றின் தேவனால் {வாயுவால்} முனிவர் சுபர்ணரிடமிருந்து அடையப்பட்டது. காற்றின் தேவன், விருந்தினர்களும் பிறரும் உண்ட பிறகு எஞ்சும் வேள்விக் காணிக்கைகளில் வாழும் முனிவர்களுக்கு அதைச் சொன்னான்.(22,23) இந்தச் சிறந்த அறமானது அந்த முனிவர்களிடம் இருந்து பெருங்கடலால் அடையப்பட்டது. பிறகு அது மீண்டும் அண்டத்தில் இருந்து மறைந்து நாராயணனில் கலந்தது.(24)

ஓ! மனிதர்களின் தலைவா, உயர் ஆன்ம பிரம்மன், நாராயணனின் காதிலிருந்து பிறந்த {ஸ்ரோத்ரஜம் என்ற} அடுத்த {நான்காவது} பிறப்பைக் கொண்ட கல்பத்தில் என்ன நடந்தது என்பதைக் கேட்பாயாக.(25) ஹரி என்றழைக்கப்படும் சிறப்புமிக்க நாராயணன், படைப்பைச் செய்யத் தீர்மானித்தபோது, அண்டத்தைப் படைக்கக்கூடிய பலமிக்க ஒருவனைக் குறித்துச் சிந்தித்தான்.(26) அவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவனுடைய காதுகளில் இருந்து அண்டத்தைப் படைக்கத்தகுந்த ஒருவன் எழுந்தான். அனைவரின் தலைவன் {நாராயணன்}, அவனைப் பிரம்மன் என்ற பெயரில் அழைத்தான்.(27)

உயர்ந்தவனான {பரமனான} நாராயணன் பிரம்மனிடம், “ஓ! மகனே, என் வாயிலிருந்தும், பாதத்திலிருந்தும் அனைத்து வகை உயிரினங்களையும் படைப்பாயாக. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, இந்தப் பணியை நீ செய்வதற்குப் போதிய சக்தியையும் பலத்தையும் நான் தருவேன் என்பதால் உனக்கு நன்மையானதையே செய்யப் போகிறேன்.(28) சாத்வதம் என்ற பெயரில் அறியப்படும் இந்தச் சிறந்த அறத்தையும் என்னிடம் இருந்து நீ பெறுவாயாக. இவ்வறத்தின் துணை கொண்டு நீ கிருத யுகத்தைப் படைத்து, முறையாக அதை விதிப்பாயாக” என்றான்.(29)

இவ்வாறு சொல்லப்பட்ட பிரம்மன், அந்தச் சிறப்புமிக்க ஹரிமேதஸுக்குத் தலைவணங்கி, நாராயணனின் வாயில் இருந்து பிறந்ததும், புதிர்கள், விளக்கங்களின் சுருக்கங்கள்(30) மற்றும் ஆரண்யகங்கள் ஆகியவற்றைக் கொண்டதும், வழிபாட்டு மரபுகள் அனைத்திலும் முதன்மையானதுமான அந்த வழிபாட்டு மரபை அவனிடம் இருந்து பெற்றான். அந்த வழிபாட்டு மரபை அளவிலா சக்தி கொண்ட பிரம்மனுக்குக் கற்பித்த நாராயணன், அவனிடம்(31) “ஒவ்வொரு யுகத்திலும் பின்பற்றப்பட வேண்டிய கடமைகளைப் படைப்பவன்” என்றான். பிரம்மனிடம் இதைச் சொன்ன நாராயணன், அங்கேயே மறைந்து, தமஸ் குணத்தின் எல்லையைக் கடந்ததும், புலப்படாதது வசித்திருப்பதும், கனியில் விருப்பமில்லா செயல்களின் பெயரில் அறியப்படுவதுமான இடத்திற்குச் சென்றான்.(33) இதன் பிறகு, வரங்களை அளிப்பவனும், உலகங்களின் பெரும்பாட்டனுமான பிரம்மன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட பல்வேறு உலகங்களைப் படைத்தான்.(33) முதலில் தொடங்கிய யுகம் உயர்ந்த மங்கலமுடையதாக இருந்து கிருதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அந்த யுகத்தில் சாத்வத அறம் அண்டம் முழுவதும் நீக்கமற நிறைந்து நீடித்திருந்தது.(34) அனைத்து உலகங்களையும் படைத்தவனான பிரம்மன், அந்த ஆதி அறநீதியின் துணையுடன் தேவர்கள் அனைவரின் தலைவனும், ஹரி என்றழைக்கப்படுபவனுமான பலமிக்க நாராயணனை வழிபட்டான்.(35)

அப்போது அவ்வறம் பரவுவதற்கும், உலகங்களுக்கு நன்மை செய்யவும் விரும்பிய பிரம்மன், ஸ்வாரோசிஷ் என்ற பெயரால் அறியப்பட்ட மனுவுக்கு அந்த வழிபாட்டு மரபைக் கற்பித்தான்.(36) ஓ! மன்னா {ஜனமேஜயா}, உலகங்கள் அனைத்தின் தலைவனும், பலமிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான ஸ்வாரோசிஷ் மனு, சங்கபதன் என்ற பெயரில் அழைக்கப்பட்ட தன் மகனுக்கு அந்த வழிபாட்டு மரபின் ஞானத்தை உற்சாகமாக அளித்தான்.(37) மனுவின் மகனான சங்கபதன், முக்கிய மற்றும் துணைத்திசைகளை ஆட்சி செய்யும் {திக்பாலனான} தன் மகன் சுவர்நபானுக்கு {ஸுதர்மாவுக்கு} அந்த வழிபாட்டு மரபின் ஞானத்தை அளித்தான். கிருத யுகம் முடிந்து திரேதா யுகம் தொடங்கியதும், மீண்டும் அந்த வழிபாட்டு மரபு உலகில் இருந்து மறைந்துபோனது.(38)

ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, நாராயணனின் மூக்கில் இருந்து பிறந்த பிரம்மனின் {நாஸத்யம் என்ற} அடுத்தப் பிறப்பில், ஓ! பாரதா, சிறப்புமிக்கவனும், பலமிக்கவனுமான நாராயணன், அல்லது தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட ஹரியே பிரம்மனின் முன்னிலையில் இவ்வறத்தைக் குறித்துப் பாடினான். பிறகு பிரம்மனின் விருப்பத்தால் படைக்கப்பட்ட அவனது மகன் சனத்குமாரர் இந்த வழிபாட்டு மரபைக் கற்றார்.(39,40) ஓ! குருக்களில் புலியே, கிருத யுகத்தின் தொடக்கத்தில் பிரஜாபதியான வீரணன் சனத்குமாரரிடம் இருந்து இந்த வழிபாட்டு மரபை அடைந்தான்.(41) இவ்வழியில் அதைக் கற்ற வீரணன் அதைத் தவசி ரைப்யருக்குக் கற்பித்தான். பதிலுக்கு ரைப்யர் தூய ஆன்மாவையும், நல்ல நோன்புகளையும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவனும், முக்கிய மற்றும் துணைத் திசைகளை அறம்சார்ந்து ஆளும் திக்பாலனுமான தன் மகன் குக்ஷிக்கு {குக்ஷிபாலனுக்கு} அதைச் சொன்னார். இதன்பிறகு நாராயணனின் வாயில் இருந்து பிறந்த அந்த வழிபாட்டு மரபானது மீண்டும் உலகத்தில் இருந்து மறைந்து போனது.(42,43)

ஹரியில் இருந்து உதித்த ஒரு முட்டையில் இருந்து பிரம்மன் அடைந்த {அண்டஜம் என்ற} அடுத்தப் பிறப்பில், மீண்டும் இவ்வறம் நாராயணனின் வாயில் இருந்தே வெளிப்பட்டது.(44) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதைப் பெற்றுக் கொண்ட பிரம்மன், அதை முறையாக முழுமையாகப் பின்பற்றினான். ஓ! ஏகாதிபதி, பிறகு பிரம்மன், பர்ஹிஷதர்கள் என்ற பெயரால் அறியப்பட்ட முனிவர்களுக்கு அதைச் சொன்னான். பிறகு, சாம வேதத்தை நன்கறிந்தவரும், ஜியேஷ்டர் என்ற பெயரால் அறியப்பட்டவருமான ஒரு பிராமணர் பர்ஹிஷதர்களிடம் இருந்து அஃதை அடைந்தார். அவர் சாமங்களை நன்கறிந்தவராக இருந்ததாலேயே ஜியேஷ்டசாமவிரத ஹரி என்ற பெயரால் அறியப்பட்டார்.(46) ஜியேஷ்டர் என்ற பெயரால் அறியப்பட்ட பிராமணரிடம் இருந்து அவிகம்பனன் என்ற பெயரைக் கொண்ட ஒரு மன்னன் இந்த வழிபாட்டு மரபை அடைந்தான். இதன் பிறகு, பலமிக்க ஹரியிடம் இருந்து பெறப்பட்ட இந்த வழிபாட்டு மரபானது உலகத்தில் இருந்து மீண்டும் மறைந்துபோனது.(47)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, நாராயணனின் தொப்புளில் உதித்த தாமரையின் முலம் பிரம்மன் அடைந்த {பத்மஜென்மம் என்ற} ஏழாம் பிறப்பில், இந்தக் கல்பத்தின் தொடக்கத்தில் இந்த வழிபாட்டு மரபானது அனைத்து உலகங்களையும் படைத்தவனும், தூய ஆன்மாவைக் கொண்டவனுமான பெரும்பாட்டனுக்கு நாராயணனாலேயே அறிவிக்கப்பட்டது. பழங்காலத்தில் பெரும்பாட்டன் {பிரம்மன்}, (தன் விருப்பத்தால் படைக்கப்பட்ட தன் மகன்களில் ஒருவனான) தக்ஷனுக்குக் கொடுத்தான்.(48,49) பதிலுக்குத் தக்ஷன், ஓ! ஏகாதிபதி, தன் மகன்களின் மகன்கள் அனைவரிலும் மூத்தவனும், வயதில் சாவித்ரிக்கு மூத்தவனுமான ஆதித்யனுக்கு அதைக் கொடுத்தான். ஆதித்யனிடம் இருந்து விவஸ்வான் அஃதை அடைந்தான்.(50) திரேதா யுகத்தின் தொடக்கத்தில் விவஸ்வான் இந்த வழிபாட்டு மரபை மனுவுக்குக் கொடுத்தான். மனு, அனைத்து உலகங்களைப் பாதுகாக்கவும், ஆதரிக்கவும் அதைத் தன் மகனான இக்ஷ்வாகுவுக்குக் கொடுத்தான்.(51) இக்ஷ்வாகுவால் வெளியிடப்பட்ட அந்த வழிபாட்டு மரபானது மொத்த உலகிலும் பரவியது. அண்ட அழிவு நேரும்போது அது மீண்டும் நாராயணனிடமே திரும்பி அவனிலேயே கலக்கும்.(52)

ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, யதிகளால் பயிலப்பட்டுப் பின்பற்றப்படு அறமானது ஏற்கனவே ஹரிகீதையில் {பகவத்கீதையில்}, சுருக்கமான விதிகளுடன் உனக்குச் சொல்லப்பட்டது.(53) ஓ! மன்னா, தெய்வீக முனிவரான நாரதர், புதிர்கள் மற்றும் விளக்கங்களின் சுருக்கம் ஆகிய அனைத்துடன் அஃதை அண்டத்தின் தலைவனான நாராயணனிடமிருந்தே பெற்றார்.(54) இவ்வாறே இந்த முதன்மையான அறமானது, மிகப் பழமைவாய்ந்ததும், நித்தியமானதுமாகும். எளிதில் புரிந்துகொள்ளப்பட முடியாததும், பயில்வதற்கு மிகக் கடினமானதுமான அது {இந்த அறமானது}, சத்வ குணத்தில் பற்றுக் கொண்ட மனிதர்களால் எப்போதும் ஆதரிக்கப்படுகிறது.(55) கடமைகளின் முழு அறிவுடன் நன்கு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டவையும், எந்த உயிரினத்திற்கும் எந்தத் தீங்கையும் செய்யாதவையுமான செயல்களின் மூலமே உயர்ந்த தலைவனான {ஈஸ்வரனான} ஹரி நிறைவை அடைகிறான்.(56)

சிலர் அநிருத்தன் என்ற ஒரேயொரு வடிவத்தைக் கொண்டவனாக நாராயணனைத் துதிக்கிறார்கள், சிலர் அநிருத்தன் மற்றும் பிரத்யும்னன் என்ற இரு வடிவங்களைக் கொண்டவனாக அவனைத் துதிக்கிறார்கள். சிலர், அநிருத்தன், பிரத்யும்னன் மற்றும் சங்கர்ஷணன் என்ற மூன்று வடிவங்களைக் கொண்டவனாகத் துதிக்கின்றனர். நான்காம் வகையினரோ, அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன் மற்றும் வாசுதேவன் என்ற நான்கு வடிவங்களைக் கொண்டவனாக அவனைத் துதிக்கின்றனர்.(57) ஹரியே க்ஷேத்ரஜ்ஞன் (ஆன்மா) ஆவான். (எப்போதும் முழுமையான அவன்) பிரிவுகள் இல்லாதவனாக இருக்கிறான். ஐந்து அடிப்படை பூதங்களைக் கடந்து அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் ஜீவன் அவனே. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி அவற்றைச் செலுத்தும் மனமும் அவனே ஆவான். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட அவனே அண்டத்தைப் படைத்தவனும், விதிப்பவனுமாவான். அவன் செயல்பாடு உள்ளவனாகவும், செயல்பாடு இல்லாதவனாக இரண்டாகவும் இருக்கிறான். காரணம், விளைவு {காரணக் காரியங்கள்} ஆகிய இரண்டும் அவனே. ஓ! மன்னா, தான் விரும்பியபடி விளையாடும் மாற்றமில்லாத ஒரே புருஷன் அவனே.(60)

இவ்வாறே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் புரிந்துகொள்ளப்பட முடியாததும், என் ஆசானின் {வியாசரின்} அருளால் என்னால் அடையப்பட்டதுமான பக்தி அறத்தை நான் உனக்குச் சொல்லுவிட்டேன்.(61) ஓ! மன்னா, முழு ஆன்மாக்களுடன் நாராயணனில் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள் மிக அரிதானவர்களே. ஓ! குரு குலத்தின் மகனே {ஜனமேஜயனே}, உலகளாவிய கருணையால் நிறைந்தவர்களும், ஆன்ம அறிவை {ஆத்மஞானத்தைக்} கொண்டவர்களும், பிறருக்கு நன்மை செய்வதிலேயே எப்போதும் ஈடுபடுபவர்களுமான மனிதர்களே உலகம் முழுவதும் இருந்தால், கிருத யோகம் தோன்றி, மனிதர்கள் அனைவரும் கனியில் விருப்பமில்லாமல் செயல்களை நிறைவேற்றுவார்கள்.(62,63) ஓ! ஏகாதிபதி, சிறப்புமிக்கவரும், கடமைகள் அனைத்தையும் நன்கறிந்தவரும், என் ஆசானுமான வியாசர், பல முனிவர்களின் முன்னிலையில், கிருஷ்ணனும், பீஷ்மரும் கேட்டுக் கொண்டிருந்தபோது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இந்தப் பக்தி அறத்தைக் குறித்து இவ்வகையிலேயே உரையாடினார். தவங்களின் செல்வத்துடன் கூடிய தெய்வீக முனிவரான நாரதரிடமிருந்தே அவர் அஃதை அடைந்தார்.(64,65) முழுமையான ஆன்மாக்களுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள், தேவர்களில் உயர்ந்தவனும், பிரம்மத்தோடு அடையாளம் காணப்படுபவனும், தூய நிறம் கொண்டவனும், சந்திரனின் பிரகாசம் கொண்டவனும், மாற்றமில்லாதவனுமான நாராயணனையே தங்கள் கதியாக அடைவதில் வெல்கிறார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(66)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பல்வேறு வகைக் கடமைகளைப் பயின்று விழிப்படைந்த ஆன்மாக்களைக் கொண்ட மறுபிறப்பாளர்களை நான் காண்கிறேன். பிராமணர்கள் அவ்வகைக் கடமைகளைப் பயிலாமல் ஏன் பிற வகை நோன்புகளையும், சடங்குகளையும் செய்கிறார்கள்?” என்று கேட்டான்.(67)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதா, உடல் படைத்த உயிரினங்கள் அனைத்தையும் பொறுத்தவரையில் சத்வ குணம் தொடர்புடையது என்றும், ரஜஸ் குணத்தின் தொடர்புடையது என்றும், தமஸ் குணத்தின் தொடர்புடையது என்றும் மூன்று வகை மனோநிலைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.(68) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஓ! மனிதர்களில் புலியே, உடல்படைத்த உயிரினங்களைப் பொறுத்தவரையில், சத்வ குணத்தில் பற்றுக் கொண்ட முதன்மையான மனிதன் நிச்சயம் விடுதலையை {முக்தியை} அடைவான்.(69) சத்வ குணத்தைக் கொண்டு, அதன் துணையால் மட்டுமே ஒருவன் பிரம்மத்தை அறிந்த மனிதனைப் புரிந்து கொள்ள முடியும். விடுதைலையை {முக்தியைப்} பொறுத்தவரையில் அது முற்றிலும் நாராயணனையே சார்ந்திருப்பதாகும். எனவே, சத்வ குணத்தால் ஆனதே விடுதலையாக {முக்தியாகக்} கருதப்படுகிறது.(70)

இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவனை நினைப்பதன் மூலம் முழு ஆன்மாவுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதன் பெரும் ஞானத்தை அடைகிறான்.(71) ஞானம் கொண்டவர்களும், யதிகளின் நடைமுறைகளையும், விடுதலையறத்தை {முக்தி அறத்தைப்} பின்பற்றுபவர்களும், தாகம் தணிந்தவர்களுமான மனிதர்கள், தங்கள் விருப்பம் கனிவதற்கு உதவும் ஹரியையே எப்போதும் காண்கிறார்கள்.(72) பிறப்புக்கு (மற்றும் இறப்புக்கு) உட்பட்டு, ஹரியின் கருணை பார்வையை அடைந்த மனிதன், சத்வ குணத்தைக் கொண்டவனாகவும், விடுதலை அடைவதில் அர்ப்பணிப்புமிக்கவனாகவும் அறியப்பட வேண்டும்.(73) நாராயணனிடம் முழு ஆன்மாவுடன் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதனால் பின்பற்றப்படும் அறமானது, சாங்கியர்களின் அமைப்புக்கு இணையான அல்லது அதே போன்ற தகுதியுடையதாகக் கருதப்படுகிறது.(74) ஒருவன், அவ்வறத்தைப் பின்பற்றுவதன் மூலம், நாராயணனையே ஆன்மாவாகக் கொண்ட விடுதலையை {முக்தியை} அடைவதால் உயர்ந்த கதியை அடைகிறான். நாராயணனால் கருணையுடன் பார்க்கப்படும் மனிதன் விழிப்படைந்தவனாகிறான் {புத்தனாகிறான்}.(75)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, எவனாலும் தன் விருப்பத்தால் விழிப்படைய முடியாது. ரஜஸ் மற்றும் தமஸ் என்ற இரு குணங்களையும் கொண்டிருக்கும் இயல்பானது கலப்பு எனச் சொல்லப்படுகிறது.(76) இத்தகைய கலப்பு இயல்பைக் கொண்டவனும், பிறப்புக்கு (மற்றும் இறப்புக்கும்) உட்படுபவனும், அவ்வகையில் பிரவிருத்தி {செயல்} கோட்பாட்டைப் பின்பற்றுபவனுமான மனிதன் மீது ஹரி ஒருபோதும் தன் கருணை பார்வையைச் செலுத்துவதில்லை.(77) பிறப்பிறப்பிற்கு உட்படும் மனிதன், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற இரண்டு தாழ்ந்த குணங்களில் மூழ்கிய மனத்தைக் கொண்டிருப்பதால் உலகங்களின் பெரும்பாட்டனான பிரம்மனே அவனைப் பார்க்கிறான்[4].(78) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, தேவர்களும் முனிவர்களும் சத்வ குணத்தில் பற்றுக் கொண்டவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் நுட்பமான வடிவைக் கொண்ட அந்தக் குணம் {சத்வ குணம்} இல்லாதவர்கள் எப்போதும் மாறும் இயல்பைக் கொண்டவர்களாகவே கருதப்படுவார்கள்” என்றார் {வைசம்பாயனர்}[5].(79)ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “மாற்றக் கோட்பாடுகள் நிறைந்த ஒருவனால் எவ்வாறு இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானதை அடைய முடியும்? இவற்றை நிச்சயம் நீர் அறிவீர் என்பதால் அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. மேலும் பிரவிருத்தியையும் முறையான வகையில் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(80)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “(சாங்கிய அமைப்பின் தத்துவப் பட்டியலில்) இருபத்தைந்தாவதாக உள்ள ஜீவனால், செயல்களை முற்றிலும் தவிர்க்க இயலும்போது, மிக நுட்பமானதும், (நுட்பமான வடிவிலான) சத்வ குணத்தால் நிறைந்ததும், (அ, உ, ம என்ற) மூன்று எழுத்துகளைக் கொண்ட {ஓம் என்ற} அசையின் சாரத்தால் நிறைந்ததுமான முதன்மையான இருப்பை அடைவதில் வெல்ல முடியும்[6].(81) சாங்கிய அமைப்பு, வேத ஆரண்யகம், பஞ்சராத்ர சாத்திரங்கள் என அனைத்தும் ஒன்றாகவும், முழுமையான ஒன்றின் பகுதிகளாகவும் இருக்கின்றன. நாராயணனையே சாரமாகக் கொண்ட அறமே, நாராயணனிடம் முழு ஆன்மாக்களுடன் அர்ப்பணிப்பு கொள்வரின் அறமாகும்[7].(82) பெருங்கடலின் அலைகள் எழுந்து, வெளியே சென்றாலும் முடிவில் மீண்டும் திரும்பிவிடுவதைப் போலவே பல்வேறு வகை ஞானங்களும் நாராயணனிலிருந்து எழுந்து முடிவில் மீண்டும் நாராயணனையே அடைகின்றன.(83) ஓ! குரு குலத்தின் மகனே, இவ்வாறே நான் உனக்குச் சாத்வத அறத்தைக் குறித்து விளக்கியிருக்கிறேன். ஓ! பாரதா, நீ அதற்குத் தகுந்தவனாக இருந்தால் முறையாக அவ்வறத்தையே பயில்வாயாக.(84)இவ்வாறே உயர்ந்த அருளைக் கொண்டவரான நாரதர், வெள்ளையர்களாலும், யதிகளாலும் பின்பற்றப்படுவதும், ஏகாந்தம் என்றழைக்கப்படுவதுமான இந்த நித்தியமான மாற்றமில்லாததை என் ஆசானான தீவில் பிறந்த கிருஷ்ணருக்கு {வியாசருக்குச்} சொன்னார்[8].(85) தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் நிறைவடைந்த வியாசர், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனுக்கு இவ்வறத்தைச் சொன்னார். என் ஆசானிடம் இருந்து அதைப் பெற்ற நான் இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(86) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இந்தக் காரணங்களாலே இவ்வறமானது பயில்வதற்கு மிகக் கடினமானதாக இருக்கிறது. உன்னைப் போலவே இதைக் கேட்ட பிறரும் கலக்கமடைகின்றனர் {மோகமடைந்து இதைப் பின்பற்றுவதில்லை}.(87) ஓ! மன்னா, அண்டத்தைப் பாதுகாப்பவனும், வஞ்சிப்பவனும் கிருஷ்ணனே ஆவான். ஓ! ஏகாதிபதி, அழிப்பவனாகவும், காரணமாகவும் அவனே இருக்கிறான்” என்றார் {வைசம்பாயனர்}.(88)

வியாசரின் முற்பிறவி – அபாந்தரதமஸ்! – சாந்திபர்வம் பகுதி – 350-வியாசர் விஷ்ணுவுக்கு மகனாகப் பிறந்த பழங்கதை; பல்வேறு வழிபாட்டு மரபுகளும்; அவை சுட்டும் இறுதி கதியும்..

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாள முனிவரே, சாங்கிய அமைப்பு, பஞ்சராத்திர சாத்திரங்கள், வேத ஆரண்யகங்கள் ஆகிய பல்வேறு ஞான அமைப்புகள் அல்லது அற அமைப்புகளே தற்போது உலகில் இருக்கின்றன.(1) இந்த அமைப்புகள் அனைத்தும் ஒரே போன்ற கடமை நடைமுறைகளைப் போதிக்கின்றனவா? அல்லது ஓ! தவசியே, அவற்றால் போதிக்கப்படும் கடமைகளின் நடைமுறைகள் ஒன்றுக்கொன்று வேறுபாடு கொண்டவையா? என்னால் கேட்கப்படும் நீர், பிரவிருத்தி குறித்து முறையான வகையில் உரைப்பீராக” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இருளை விலக்குபவரும், தீவுக்கு மத்தியில் பராசரருக்கு சத்தியவதியால் பெறப்பட்டவரும், பெரும் ஞானம் கொண்டவரும், பெருந்தகைமையுடன் கூடிய ஆன்மாவைக் கொண்டவருமான பெரும் முனிவரை {வியாசரை} நான் வணங்குகிறேன்.(3) அவரே பெரும்பாட்டனான பிரம்மனின் தோற்றுவாய் என்றும்; அவரே நாராயணனின் ஆறாவது வடிவம் என்றும்; அவர் யோக பலம் கொண்டவர் என்றும்; தம் பெற்றோருக்கு ஒரே மகனான அவர் நாராயணனின் அவதாரம் என்றும்; இயல்புக்கு மீறிய சூழ்நிலைகளில் ஒரு தீவில் பிறந்த அவர் வற்றாத வேதக் கொள்ளிடம் என்றும் கல்விமான்கள் சொல்கிறார்கள்.(4) கிருத யுகத்தில் பெரும் பலம் கொண்டவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான நாராயணன் அவரைத் தன் மகனாகப் படைத்தான். உண்மையில் உயர் ஆன்ம வியாசர், பிறப்பற்றவரும், புராதனமானவரும், வற்றாத வேதக் கொள்ளிடமும் ஆவார்” என்றார்.(5)

ஜனமேஜயன் {வைசம்பாயனிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, முனிவர் வசிஷ்டருக்கு, சக்திரி என்ற பெயரில் ஒரு மகன் இருந்ததாகவும், அந்தச் சக்திரிக்கு, பாராசரர் என்ற பெயரில் ஒரு மகன் இருந்ததாகவும், அந்தப் பராசரர் பெரும் தவத் தகுதியைக் கொண்டவரும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணன் {கருப்பன்_வியாசர்} என்ற பெயரைக் கொண்ட ஒரு மகனைப் பெற்றார் என்றும் நீரே இதற்கு முன்பு சொன்னீர்.(6) இப்போது மீண்டும் நீரே வியாசர் நாராயணனின் மகன் என்றும் சொல்கிறீர். அளவிலா சக்தியைக் கொண்டவரான வியாசர், தமது முற்பிறவியில் நாராயணனில் இருந்து உதித்தவரா? ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, நாராயணன் மூலம் ஏற்பட்ட வியாசரின் பிறப்பு குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(7)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஸ்ருதிகளின் பொருளைப் புரிந்து கொள்ள விரும்பியவரும், தவப் பெருங்கடலும், சாத்திரக் கடமைகள், அறிவை ஈட்டுவது ஆகியவை அனைத்திலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருப்பவருமான என் ஆசான் {வியாசர்}, சில காலம் இமய மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசித்து வந்தார்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவர் {வியாசர்}, மஹாபாரதத்தைத் தொகுக்கும்போது சக்தியில் நேர்ந்த கடுஞ்சோர்வின் விளைவால் அவர் தம் தவங்களில் களைப்படைந்தார். அந்நேரத்தில் சுமந்தன், ஜைமினி, உறுதியான நோன்புகளைக் கொண்ட பைலன், நான்காவதாக நான் {வைசம்பாயனர்}, அவருடைய மகனான சுகர் ஆகியோர் அவருக்குச் சீடர்களாக இருந்தோம். ஓ! மன்னா, எங்கள் ஆசான் உணர்ந்த களைப்பை நோக்கில் கொண்ட நாங்கள் அவரது களைப்பைப் போக்கத் தேவையான அனைத்தையும் செய்து கொண்டு அவரிடம் கடமையுணர்வுடன் காத்திருந்தோம்.(9,10) தமது சீடர்களால் சூழப்பட்ட வியாசர், கணங்களுக்கு மத்தில் உள்ள கணங்களின் தலைவனான மஹாதேவனைப் போல இமய மலையின் சாரலில் அழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(11) அங்கங்களுடன் கூடிய வேதங்கள் அனைத்தையும், மஹாபாரத ஸ்லோகங்கள் அனைத்தின் பொருட்களையும் தொகுத்த பிறகு ஒரு நாள், குவிந்த கவனத்தோடு கூடிய நாங்கள் அனைவரும் புலனடக்கம் கொண்டவரும், அந்த நேரத்தில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவருமான எங்கள் ஆசானை அணுகினோம்.(12) உரையாடலுக்கான ஓர் இடைவேளையை உண்டாக்கிக் கொண்ட நாங்கள், வேதங்கள், மஹாபாரத ஸ்லோகங்கள் ஆகியவற்றின் பொருட்களை எங்களுக்கு விளக்கிச் சொல்லுமாறும், நாராயணனிடம் இருந்து அவர் {வியாசர்} அடைந்த பிறவி குறித்த நிகழ்வுகளை எங்களுக்குச் சொல்லுமாறும் அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரிடம் கேட்டுக் கொண்டோம்.(13) தத்துவங்கள் அனைத்தையும் அறிந்தவரான அவர், முதலில் ஸ்ருதிகள் மற்றும் மஹாபாரதத்தின் விளக்கங்களையும் சொல்லி, பிறகு நாராயணனிலிருந்து தாம் அடைந்த பிறப்பு சம்பந்தமான பின்வரும் நிகழ்வுகளை எங்களுக்குச் சொன்னார்.(14)

வியாசர், “சீடர்களே, ஒரு முனிவரின் பிறப்பு தொடர்புடைய வரலாறுகளில் சிறந்தந்தும், உரைகளில் முதன்மையானதுமான இவ்வுரையை நீங்கள் கேட்பீராக. மறுபிறப்பாளர்களே, கிருத யுகத்தில் நடந்த இந்தக் கதையை என் தவங்களின் மூலம் நான் அறிந்து கொண்டேன்.(15) ஆதி தாமரையில் நேர்ந்த {பிரம்மனின் பத்மஜென்மம் என்கிற} ஏழாம் பிறப்பின் போது, கடுந்தவங்களைக் கொண்ட நாராயணன், நன்மை தீமைகள் இரண்டையும் கடந்தும், ஒப்பற்ற காந்தியை ஏற்று முதலில் பிரம்மனைத் தன் தொப்புகளில இருந்து படைத்தான்.

பிரம்மன் பிறப்படைந்ததும் நாராயணன் அவனிடம்,(16,17) “நீ என் தொப்புளில் இருந்து பிறந்திருக்கிறாய். படைப்பின் பலத்தைக் கொண்ட நீ, பகுத்தறிவுடைய, பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல்வேறு வகையிலான உயிரினங்களைப் படைப்பதில் உன்னை நிறுவிக் கொள்வாயாக” என்றான்.(18)

இவ்வாறு தன்னிருப்பின் ஆசிரியனால் சொல்லலப்பட்ட பிரம்மன், கவலையடைந்த மனத்துடன், தன் பணியின் கடினத்தை உணர்ந்து, தனக்கு இடப்பட்ட அணையைச் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தான். வரமளிப்பவனும், அண்டத்தின் தலைவனுமான சிறப்புமிக்க ஹரிக்குத் தலைவணங்கி இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(19) “ஓ! தேவர்களின் தலைவா, நான் உன்னை வணங்குகிறேன், ஆனால் பல்வேறு உயிரினங்களைப் படைக்க எனக்கென்ன பலம் இருக்கிறது என்று கேட்கிறேன்? நான் ஞானமில்லாதவன். இதை நோக்கில் கொண்டு என்ன விதிக்கப்பட வேண்டுமோ அதை விதிப்பாயாக” என்றான்.(20) இவ்வாறு பிரம்மனால் சொல்லப்பட்ட அண்டத்தின் தலைவனான நாராயணன், பிரம்மனின் பார்வையில் இருந்து அங்கேயே அப்போதே மறைந்து போனான். புத்தியுடன் கூடியவை அனைத்திலும் முதன்மையான அந்த உயர்ந்த தலைவன் {ஈஸ்வரன்}, அப்போது புத்தியைக் குறித்துச் சிந்தித்தான்.(21) ஹரியின் வடிவத்திற்கு ஒப்பான வடிவத்துடன் கூடிய புத்தியானவள், பலமிக்க ஹரியின் முன்பு தோன்றினாள். யோகமனைத்தையும் கடந்தவனான நாராயணன் இப்போது புத்தியெனும் தேவியிடம் முறையாக யோகத்தைப் பயன்படுத்தினான்.(22) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனும், மாற்றமில்லாதவனுமான ஹரி, செயல்பாடு, நன்மை மற்றும் யோகபலம் அனைத்துடன் கூடிய புத்தியெனும் தேவியிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(23) “உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்கான பணியை நிறைவு செய்வதற்காக நீ பிரம்மனுக்குள் நுழைவாயாக” என்றான். இவ்வாறு அந்த உயர்ந்த தலைவனால் {ஈஸ்வரனால்} ஆணையிடப்பட்ட புத்தியானவள், அதன் பேரில் பிரம்மனுக்குள் நுழைந்தாள்.(24)

ஹரியானவன், புத்தியுடன் கலந்தவனாகப் பிரம்மனைக் கண்டபோது, மீண்டும் அவனிடம், “இப்போது நீ பல்வேறு வகை உயிரினங்களையும் படைப்பாயாக” என்றான்.(25) “சரி” என்ற சொல்லை நாராயணனிடம் மறுமொழியாகக் கூறிய பிரம்மன் மதிப்புடன் தன் மூதாதையின் ஆணையை ஏற்றான். அப்போது பிரம்மனின் முன்னிலையில் இருந்து மறைந்த நாராயணன்,(26) ஒளி அல்லது பிரகாசம் என்ற பெயரில் அறியப்பட்ட தன் இடத்தில் ஒரு கணத்தில் சென்று சேர்ந்தான். (புலப்படாத்தன்மையுடன் கூடிய) தன் சுயநிலைக்கு மீண்டும் திரும்பிய ஹரி, ஒரே அண்ட இயல்பில் தன்னை இருத்திக் கொள்ளத் தீர்மானித்தான்.(27)

எனினும், பிரம்மனால் படைப்பின் பணி நிறைவடைந்ததும், நாராயணனின் மனத்தில் மற்றொரு எண்ணம் எழுந்தது. உண்மையில் அவன் இவ்வாறே சிந்தித்தான், “பரமேஷ்டி என்றழைக்கப்படும் பிரம்மன், தைத்தியர்கள், தானவர்கள், கந்தர்வகள் மற்றும் ராட்சசர்களை உள்ளடக்கிய இந்த உயிரினங்கள் அனைத்தையும் படைத்துவிட்டான். ஆதரவற்றவளான பூமாதேவி இந்த உயிரினங்களின் கனத்தால் சுமை நிறைந்தவளாகிவிட்டாள்.(29) உலகத்தில் உள்ள தைத்தியர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்கள் பலர் பெரும்பலத்துடன் கூடியவர்களாவார்கள். தவங்களைச் செய்யும் அவர்கள், பல்வேறு நேரங்களில் பல அற்புத வரங்களை அடைவதில் வெல்வார்கள்.(30) தாங்கள் பெற்ற அந்த வரங்களின் விளைவால் செருக்கிலும், வலிமையிலும் பெருகும் அவர்கள், தேவர்களையும், தவ வலிமை கொண்ட முனிவர்களையும் ஒடுக்கிப் பீடிப்பார்கள். எனவே, சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவாறு அடுத்தடுத்து பல்வேறு வடிவங்களை ஏற்று நான் இப்போது பூமியின் சுமையைக் குறைக்க வேண்டும்.(32) தீயவர்களைத் தண்டித்தும், நல்லோரை ஆதரித்தும் நான் இப்பணியை நிறைவேற்றுவேன். (இவ்வாறு என்னால் கவனித்துக் கொள்ளப்படுபவளும்) வாய்மையின் உடல்வடிவமுமான பூமியானவள், உயிரினங்களின் சுமையைச் சுமப்பதில் வெல்வாள்.(33) ஒரு பெரும்பாம்பின் வடிவை ஏற்கும் நான், வெட்டவெளியில் பூமியைத் தாங்க வேண்டும். இவ்வாறு என்னால் தாங்கப்படும் அவள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் தாங்குவாள். எனவே, பூமியில் பல்வேறு வடிவங்களில் அவதரிக்கும் நான், அத்தகைய நேரங்களில் அவளை ஆபத்தில் இருந்து காக்க வேண்டும்” {என்று நினைத்தான்}.(34) இவ்வழியில் சிந்தித்த அந்த மதுசூதனன், தன் நோக்கத்தில் கொண்ட பணியை நிறைவேற்றுவதற்காகக் காலாகாலத்தில் தோன்றப்போகும் பல்வேறு வடிவங்களைத் தன் மனத்தில் படைத்தான்.(35)

“பன்றி {வராஹம்}, சிங்க மனிதன் {நரசிம்மம்}, குள்ளன் {வாமனன்} மற்றும் {இராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட} மனிதர்களின் வடிவை ஏற்கும் நான், தீயவர்களாகவும், அடங்காதவர்களாகவும் மாறிவிட்ட தேவர்களின் எதிரிகளைக் கொல்வேன்” என்று நினைத்தான்.(36)

இதன்பிறகு அண்டத்தை உண்மையில் படைத்தவனான அவன் மீண்டும் “போ” என்ற ஓரசையைச் சொல்லி, சுற்றிலும் அஃதை எதிரொலிக்கச் செய்தான். இந்த வாக்கின் அசையில் (சரஸ்வதியில்} இருந்தே சாரஸ்வதர் என்ற பெயரைக் கொண்ட முனிவர் எழுந்தார்.(37) இவ்வாறு நாராயணனின் வாக்கில் பிறந்தவரான அந்த மகன் அபாந்தரதமஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பெரும் பலம் கொண்டவரான அவர், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை முழுமையாக அறிந்தவராக இருந்தார். நோன்புகளை நோற்பதில் உறுதிமிக்க அவர் வாக்கில் வாய்மை நிறைந்தவராக இருந்தார்.(38) பிறந்ததும் நாராயணனுக்குத் தலைவணங்கிய அந்த முனிவரிடம், தேவர்கள் அனைவரையும் உண்மையில் படைத்தவனும், மாற்றமில்லாத இயல்பைக் கொண்டவனுமான அவன் {நாராயணன்}, “ஓ! புத்தியுடன் கூடிய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, வேதங்களை வகுப்பதில் நீ உனது கவனத்தை அர்ப்பணிக்க வேண்டும். எனவே, ஓ! தவசியே, நான் ஆணையிட்டதைச் செய்வாயாக” என்றான்.(39)

சுயம்புவான மனுவின் பெயரைக் கொண்ட கல்பத்தில், நாராயணனின் வாக்கில் இருந்து இருப்புக்கு வந்த முனிவர் அபாந்தரதமஸ் அந்த உயர்ந்த தலைவனின் {ஈஸ்வரனின்} இந்த ஆணைக்குக் கீழ்ப்படிந்து, வேதங்களை வகுத்துத் தொகுத்தார்.(40) சிறப்புமிக்கவனான ஹரி, முனிவரின் அச்செயலுக்காகவும், அவரால் நன்கு செய்யப்பட்ட தவங்களுக்காகவும், நோன்புகள் மற்றும் நியமங்களுக்காகவும், அவரது புலனடக்கத்திற்காகவும் அவனிடம் நிறைவை அடைந்தான்.(41)

அவரிடம் பேசிய நாராயணன், “ஓ! மகனே {அபந்தரமஸே}, ஒவ்வொரு மன்வந்தரத்திலும் வேதங்களைப் பொறுத்தவரையில் நீ இவ்வழியிலேயே செயல்படுவாய். ஓ! மறுபிறப்பாளனே, நீ செய்த இந்தச் செயலின் விளைவால் நீ மாற்றமில்லாதவனாகவும், எவராலும் விஞ்ச முடியாதவனாகவும் ஆவாய்.(42) கலியுகம் தோன்றும்போது, கௌரவர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பாரதக் குலத்தின் குறிப்பிட்ட இளவரசர்கள் உன்னில் இருந்து பிறப்பை அடைவார்கள். அவர்கள், பலமிக்க நாடுகளை ஆளும் உயர் ஆன்ம இளவரசர்களாகப் பூமியில் கொண்டாடப்படுவார்கள்.(43) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, உன் மூலம் பிறந்தவர்களான அவர்களுக்கிடையில், நீ இல்லாத போது, ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளும் வகையில் பிணக்கு ஏற்படும்.(44) அந்த யுகத்திலும் கடுந்தவங்களைச் செய்யும் நீ, வேதங்களைப் பல்வேறு வகைகளாக வகுப்பாய். உண்மையில் அந்த இருள் யுகத்தில் உன் நிறம் கருமையாகும்.(45)

நீ பல்வேறு வகைக் கடமைகளையும், பல்வேறு வகை ஞானங்களையும் தோன்றச் செய்வாய். கடுந்தவங்களைச் செய்பவனாக இருந்தாலும், உலகின் மீது கொண்ட ஆசை மற்றும் பற்றில் இருந்து ஒருபோதும் விடுபட இயலாதவனாகவே இருப்பாய்.(46) எனினும் உன் மகன் {சுகர்}, மாதவனின் அருளால் பரமாத்மாவைப் போல அனைத்துப் பற்றுகளில் இருந்தும் விடுபடுவான். இது வேறு வகையில் ஆகாது.(47) பெரும்பாட்டனின் {பிரம்மனின்} மனத்தில் பிறந்த மகன் என்று கல்விமான்களான பிராமணர்களால் அழைக்கப்படுபவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தவப்பெருங்கடலைப் போன்றவரும், சூரியனின் காந்தியையே கடந்தவருமான வசிஷ்டர்,(48) வலிமையும், சக்தியும், ஆற்றலும் கொண்டவரும், பராசரர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பெரும் முனிவர் பிறக்கப் போகும் குலத்தின் மூதாதையாக இருப்பார். வேதப் பெருங்கடலும், தவங்களின் வசிப்பிடமுமான அந்த முதன்மையான மனிதர் {பராசரர்} (அந்தக் கலியுகத்தில் நீ பிறக்கும்போது) உன் தந்தையாவார்.(49) தந்தையின் இல்லத்தில் வசித்து வரும் ஒரு கன்னிப் பெண், பெரும் முனிவரான பராசரரிடம் கொள்ளும் கலவிச் செயல்பாட்டின் மூலம் அவளுக்கு நீ மகனாகப் பிறப்பாய்.(50)

கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த முக்கியப் பொருட்களில் உனக்கு எந்த ஐயமும் ஏற்படாது. தவங்களுடன் கூடியவனும், என்னால் கற்பிக்கப்பட்டவனுமான நீ, ஆயிரமாயிரம் யுகங்கள் கடந்த நிகழ்வுகளையும் காண்பாய். எதிர்காலத்தில் நேரப்போகும் ஆயிரமாயிரம் யுகங்களையும் நீ காண்பாய்.(51,52) ஓ! தவசியே, அப்பிறவியில் நீ, பிறப்பிறப்பற்றவனான நான், சக்கரம் தரித்துப் பூமியில் (யது குலத்தின் கிருஷ்ணனாக) அவதரிக்கப் போவதைப் பார்ப்பாய். ஓ! தவசியே, நீ என்னிடம் கொள்ளும் இடையறாத அர்ப்பணிப்பின் விளைவால் அடையப்படும் உன் தகுதியின் மூலம் இவை அனைத்தும் உனக்கு நடக்கும். நான் சொல்லும் இந்த வார்த்தைகள் வேறுவகையாகாது.(53) நீ உயிரினங்களில் முதன்மையான ஒருவனாக இருப்பாய். உன் புகழ் மகத்தானதாக இருக்கும். எதிர்காலக் கல்பத்தில் சூரியனின் மகனான சனியே, அந்தக் காலத்திற்கான பெரும் மனுவாகப் பிறப்பை அடைவான்.(54) ஓ! மகனே, அந்த மன்வந்தரத்தில், தகுதிகளைப் பொறுத்தவரையில் பல்வேறு காலங்களைச் சார்ந்த மனுக்களைவிட மேன்மையானவனாக இருப்பாய். என் அருளால் நீ அவ்வாறே ஆவாய் என்பதில் ஐயமில்லை.(55) இந்த உலகில் நீடித்திருக்கும் எதுவும் என் முயற்சியின் விளைவாக இருப்பவையே. பிறரின் எண்ணங்கள் அவர்களுடைய செயல்களுடன் பொருந்தாது. எனினும் என்னைப் பொறுத்தவரையில், சிறு தடையுமின்றி நான் நினைப்பதையே எப்போதும் விதிக்கிறேன்” {என்றான் நாராயணன்}.(56)

சாரஸ்வதர் என்ற பெயரில் அழைக்கப்படும் முனிவர் அபாந்தரதமஸிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த உயர்ந்த தலைவன் {ஈஸ்வரன்}, “செல்வாயாக” என்று சொல்லி அவருக்கு விடைகொடுத்து அனுப்பினான்.

{வியாசர் தொடர்ந்தார்} ஹரியின் ஆணையின் பேரில் பிறந்த அபாந்தரதமஸ் நானே. மேலும் நான் வசிஷ்ட குலத்தைத் திளைப்படைச் செய்பவனாக, கொண்டாடப்படும் கிருஷ்ண துவைபாயனன் என்ற பிறப்பை அடைந்திருக்கிறேன்.(57,58) என் முற்பிறவியில் நாராயணனின் அருளால் நான் அந்த நாராயணனின் ஒரு பகுதியாகவே பிறப்பை அடைந்தேன் என்பதை என் அன்புக்குரிய சீடர்களான உங்களுக்குச் சொன்னேன்.(59) நுண்ணறிவுமிக்கவர்களில் முதன்மையானவர்களே, பழங்காலத்தில் உயர்ந்த மன ஒருங்கமைப்பின் உதவியுடன் நான் கடுந்தவங்களைச் செய்தேன்.(60) பிள்ளைகளே, என்னிடம் பெரும் மதிப்புக் கொண்ட உங்களிடம் பேரன்பு கொண்டே, பழங்காலத்தில் என் முந்தைய பிறப்பில் நடந்தவையுமான நீங்கள் அறிய விரும்பிய அனைத்தையும் சொன்னேன்” என்றார் {வியாசர்}”.(61)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, களங்கமில்லா மனம் கொண்ட எங்கள் மதிப்புமிக்க ஆசானான வியாசரின் முற்பிறவி தொடர்புடைய சூழ்நிலைகளை நீ கேட்டதால் நான் உனக்குச் சொன்னேன். மீண்டும் நான் சொல்வதைக் கேட்பாயாக.(62) ஓ! அரசமுனியே, சாங்கியம், யோகம், பஞ்சராத்ரம், வேதங்கள் மற்றும் பசுபதி போன்ற பல்வேறு பெயர்களில் பல்வேறு வகை வழிபாட்டு மரபுகள் இருக்கின்றன.(63)

சாங்கிய வழிபாட்டு மரபானது பெரும் முனிவரான கபிலரால் அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. யோக அமைப்பை அறிவித்தது ஆதி ஹிரண்யகர்ப்பனை {பிரம்மனைத்} தவிர வேறு எவனும் அல்ல.(64) பிராசீனகர்ப்பர் என்ற சிலரால் அழைக்கப்படும் முனிவர் அபாந்தரந்தமஸ் வேதங்களின் ஆசானாகச் சொல்லப்படுகிறார்.(65) உமையின் தலைவனும், அனைத்து உயிரினங்களின் ஆசானும், ஸ்ரீகண்டர் என்ற பெயரால் அழைக்கப்படுபவனும், பிரம்மனின் மகனும், உற்சாகமிக்கவனுமான சிவனே, பாசுபதம் என்ற பெயரில் அறியப்படும் வழிபாட்டு மரபை அறிவித்தவன்.(66) சிறப்புமிக்க நாராயணனே, பஞ்சராத்ர சாத்திரங்களை உள்ளடக்கிய வழிபாட்டு மரபு மொத்தத்தையும் அறிவித்தவன். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இந்த வழிபாட்டு மரபுகள் அனைத்திலும், பலமிக்க நாராயணனே ஒரே விளக்கப் பொருளாகக் காணப்படுகிறான்.(67) இந்த வழிபாட்டு மரபுகளைச் சார்ந்த சாத்திரங்களின்படியும், அவற்றில் உள்ளடங்கியிருக்கும் ஞானத்தின் அளவுகளின் படியும், அவை நாராயணனையே ஒரே வழிபாட்டுப் பொருளாக அறிவிக்கின்றன.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இருளால் {அறியாமையால்} குருடான பார்வையைக் கொண்ட மனிதர்கள், நாராயணனையே அண்டத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளாகப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்.(68) சாத்திரங்களின் ஆசிரியர்களான ஞானிகள், முனிவனான நாராயணனே அண்டத்தில் மதிப்புடன் வழிபடத்தக்க பொருளாவான் என்று சொல்கின்றனர். அவனைப் போன்ற வேறு எவனும் இல்லை என்று நான் சொல்கிறேன்.(69) ஹரி என்ற பெயரில் அழைக்கப்படும் பரமதேவன், ஐயங்கள் அனைத்தையும் (சாத்திரங்கள் மற்றும் உள்ளுணர்வின் துணையால்) விலக்குவதில் வென்றோரின் இதயங்களில் வசிக்கிறான். போலி மொழிகளின் துணையுடன் அனைத்திலும் சச்சரவு செய்பவர்கள் மற்றும் ஐயத்தின் ஆதிக்கத்தில் உள்ளோரின் இதயங்களில் மாதவன் ஒருபோதும் வசிப்பதில்லை.(70) பஞ்சராத்திர சாத்திரங்களை அறிந்தவர்களும், அதில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நோற்பவர்களும், முழு ஆன்மாக்களுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்பு கொண்டோரும் நாராயணனுக்குள் நுழைவதில் வெல்கிறார்கள்.(71) சாங்கிய மற்றும் யோக அமைப்புகள் நித்தியமானவையாகும். மேலும், ஓ! ஏகாதிபதி, வேதங்கள் அனைத்தும் நித்தியமானவையாகும். இந்த வழிபாட்டு மரபுகள் அனைத்திலும் பழங்காலத்தில் இருந்து நீடித்திருக்கும் இந்த அண்டம் நாராயணனின் சுயமே என்று முனிவர்கள் அறிவிக்கின்றனர்.(72) வேதங்களில் விதிக்கப்பட்டவையும், சொர்க்கத்திற்கும், பூமிக்கும், வானத்திற்கும், நீருக்கும் இடையில் நேரும் நன்மையான அல்லது தீமையான எந்தச் செயலும் புராதன முனிவனான நாராயணனால் செய்யப்பட்டு, அவனிலிருந்தே உண்டாகின்றன” {என்றார் வைசம்பாயனர்}.(73)

வைஜயந்த மலை! – சாந்திபர்வம் பகுதி – 351-பரமாத்மாவின் மகிமை குறித்துப் பிரம்மனுக்கும் சிவனுக்கும் இடையில் நடந்த உரையாடல்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, புருஷர்கள் பலரா? அல்லது ஒரே ஒருவரா? அண்டத்தில் புருஷர்களில் முதன்மையாவன் எவன்? அனைத்துப் பொருட்களின் மூல காரணம் எனச் சொல்லப்படுவது எது?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “சாங்கியம் மற்றும் யோக அமைப்புகளின் ஊகங்களில் பல்வேறு புருஷர்கள் பேசப்படுகிறார்கள். ஓ! குரு குலத்தின் ஆசானே, இவ்வமைப்புகளைப் பின்பற்றுவோர் அண்டத்தில் ஒரே புருஷனே இருக்கிறான் {வேறு எவரும் இல்லை} என்பதை உறுதிப்படுத்த விரும்பவில்லை[1].(2) இதே வகையிலேயே பரம புருஷன் எனும் ஒரே மூலத்தில் இருந்து பல புருஷர்கள் வந்ததாகச் சொல்லப்படுவதில், இந்த மொத்த அண்டமும் மேன்மையான குணங்களைக் கொண்ட அந்த ஒரே புருஷனோடு அடையாளம் காணப்படுவதே என்றும் சொல்லலாம். முனிவர்களில் முதன்மையானவரும், ஆன்மாவைக் குறித்து அறிந்தவரும், தவங்கள், தற்கட்டுப்பாடு மற்றும் மதிக்கத்தக்க வழிபாட்டுக்குத் தகுந்தவரும் என் ஆசானுமான வியாசரை வணங்கி, இப்போது இதைக் குறித்து விளக்கப் போகிறேன்.(3,4)ஓ! மன்னா {ஜனமேஜயா}, புருஷனைக் குறித்த இந்த ஊகம் வேதங்கள் அனைத்திலும் நேர்கிறது. அது ரிதம் மற்றும் வாய்மையுடன் அடையாளம் காணப்படுவதாக நன்கறியப்பட்டிருக்கிறது. முனிவர்களில் முதன்மையான வியாசர் இது குறித்துச் சிந்தித்தார்.(5) ஓ! மன்னா, அத்யாத்மா என்றழைக்கப்படுவதைக் குறித்துச் சிந்திப்பதில் ஈடுபட்டவர்களும், கபிலரைத் தங்களில் முதல்வராகக் கொண்டவர்களுமான பல்வேறு முனிவர்கள், இக்காரியத்தில் பொதுவாகவும், குறிப்பிட்ட வகையிலும் தங்கள் கருத்துகளை அறிவித்திருக்கின்றனர்.(6) அளவிலா சக்தி கொண்ட வியாசரின் அருளின் மூலம், புருஷனின் ஒருமையைக் குறித்த கேள்வியை விளக்க வியாசர் சொன்னதை விவரிக்கப் போகிறேன்.(7) ஓ! மன்னா, இது தொடர்பாகப் பிரம்மனுக்கும், முக்கண் மஹாதேவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(8) ஓ! ஏகாதிபதி, பாற்கடலுக்கு மத்தியில் வைஜயந்தம் என்ற பெயரில் தங்கத்தைப் போன்ற பெரும் பிரகாசமுடைய மலை ஒன்று இருக்கிறது.(9) சிறப்புமிக்கவனான பிரம்ம தேவன் பெருங்காந்தியும், இன்பநிலையையும் கொண்ட தன் வசிப்பிடத்தில் இருந்து தனியாக அங்கே சென்று அத்யாத்ம நடைமுறை குறித்துச் சிந்திப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(10)

பெரும் நுண்ணறிவைக் கொண்ட நான்முகப் பிரம்மன் அங்கே அமர்ந்திருக்கையில், ஒருநாள் அவனது {பிரம்மனது} நெற்றியில் இருந்து பிறந்தவனும், அவனுடைய மகனுமான மஹாதேவன் அண்டத்தில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைச் சந்தித்தான்.(11) பலமிக்கவனும், உயர்ந்த யோகத்தைக் கொண்டவனுமான முக்கண்ணனான சிவன், பழங்காலத்தில் வானத்தினூடாகச் சென்று கொண்டிருந்தபோது, அந்த மலையில் அமர்ந்திருக்கும் பிரம்மனைக் கண்டதால் அதனுச்சியில் விரைவாக இறங்கினான்.(12) தன் மூதாதையின் முன் உற்சாகமிக்க இதயத்துடன் சென்று அவனது பாதங்களை வழிபட்டான். மஹாதேவன் தன் பாதத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்ததைக் கண்ட பிரம்மன், அவனைத் தன் இடது கையால் உயர்த்தினான்.(13) பலமிக்கவனும், அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே தலைவனுமான பிரம்மன் இவ்வாறு மஹாதேவனை உயர்த்தி, நீண்ட காலம் கழித்துக் கண்ட தன் மகனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(14)

பெரும்பாட்டன் {பிரம்மன் சிவனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உனக்கு நல்வரவு. நற்பேற்றாலேயே நீண்ட நாள் கழித்து என் முன்னிலையில் உன்னைக் காண்கிறேன். ஓ! மகனே, உன் தவங்கள், வேத கல்வி மற்றும் பாராயணம் ஆகியவை அனைத்தும் சரியாக நடைபெறுகின்றன என நம்புகிறேன். நீ எப்போதும் கடும் தவங்களைச் செய்பவன். எனவேதான் நான் உன் தவங்களின் முன்னேற்றம் மற்றும் நன்னிலை குறித்து உன்னிடம் கேட்கிறேன்” என்றான்.(15,16)

ருத்திரன் {தன் தந்தையான பிரம்மனிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, உமது அருளால் வேதகல்வி மற்றும் என் தவங்கள் அனைத்தும் நன்றாக நடைபெறுகின்றன. மேலும் அண்டமும் நன்றாகவே இருக்கிறது.(17) சிறப்புமிக்கவரான உம்மை நீண்ட காலத்திற்கு முன்பு இன்பமும், பிரகாசமும் நிறைந்த உமது இல்லத்தில் கண்டேன். இப்போது உமது பாதத்தின் வசிப்பிடமாக இருக்கும் இந்த மலைக்கு வந்திருக்கிறேன்.(18) இன்பமும், காந்தியும் நிறைந்த உமது வழக்கமான இடத்தைவிட்டு இத்தகைய ஒரு தனிமையான இடத்திற்கு நீர் வந்திருப்பது என் மனத்தில் பெரும் ஆவலைத் தூண்டுகிறது. ஓ! பெரும்பாட்டா, நீர் இவ்வாறு செயல்படுவதற்குப் பெருங்காரணம் இருக்க வேண்டும்.(19) வசிப்பிடங்களில் முதன்மையான உமது வசிப்பிட, பசி மற்றும் தாகமெனும் துன்பங்களில் இருந்து விடுபட்டதாகவும், தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவராலும், அளவிலா காந்தி கொண்ட முனிவர்களாலும், கந்தர்வார்களாலும், அப்சரஸ்களாலும் வசிக்கப்படுவதாகவும் இருக்கிறது. அத்தகைய இன்பமான இடத்தைக் கைவிட்டு, இந்த முதன்மையான மலையில் தனிமையில் வசிக்கிறீர். இதற்கான காரணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமல் இருக்காது” என்றான்.(21)

பிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, “மலைகளில் முதன்மையான இந்த வைஜயந்த மலையே எப்போதும் என் வசிப்பிடமாகும். இங்கே குவிந்த மனத்துடன் முடிவிலா அளவுகளுடன் கூடிய அண்டத்தின் ஒரே புருஷனைத் தியானிக்கிறேன்” என்றான்.(22)

ருத்திரன் {தன் தந்தையான பிரம்மனிடம்}, “நீர் சுயம்பு ஆவீர். உம்மால் படைக்கப்பட்ட புருஷர்கள் பலர் இருக்கிறார்கள். ஓ! பிரம்மாவே, மேலும் பிறரும் உம்மால் படைக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் நீர் சொல்லும் இந்த முடிவிலா புருஷனை தனித்தவனாகவும், ஒருவனாகவும் சொல்கிறீர்.(23) ஓ! பிரம்மாவே, உம்மால் தியானிக்கப்படும் முதன்மையான புருஷன் யார்? இதில் நான் பேராவல் அடைகிறேன். என் மனத்தைப் பீடித்திருக்கும் இந்த ஐயத்தை நீர் கருணையுடன் விலக்குவீராக” என்றான்.(24)

பிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, “ஓ! மகனே, நீ சொல்லும் புருஷர்கள் பலர் இருக்கிறார்கள். எனினும், புருஷர்கள் அனைவரையும் விஞ்சியிருப்பவனும், புலப்படாதவனுமான ஒரே புருஷனைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.(25) அண்டத்தில் நீடித்திருக்கும் பல புருஷர்கள் இந்த ஒரே புருஷன் எனும் அடித்தளத்திலேயே அமைந்திருக்கின்றனர்; இந்த ஒரே புருஷன் என்ற மூலத்தில் இருந்தே எண்ணிலடங்கா புருஷர்கள் பிறந்தனர்  என்று சொல்லப்படுகிறது,(26) எனவே, அவர்கள் அனைவரும் குணங்களை இழப்பதில் வென்றால், அண்டத்தோடு அடையாளம் காணப்படுபவனும், உயர்ந்தவனும் {பரமனும்}, முதன்மையிலும் முதன்மையானவனும், நித்தியமானவனும், மேற்கண்ட அனைத்து குணங்களும் இல்லாதவனுமான அந்த ஒரே புருஷனுக்குள் நுழையத் தகுந்தவர்கள் ஆவார்கள்” என்றான்.(27)

மஹாபுருஷன்! – சாந்திபர்வம் பகுதி – 352-பரமாத்மாவின் மகிமை குறித்துப் பிரம்மனுக்கும் சிவனுக்கும் இடையில் நடந்த உரையாடலின் தொடர்ச்சி…

பிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, “ஓ! மகனே, அந்தப் புருஷன் எவ்வாறு குறிப்பிடப்படுகிறான் என்பதைக் கேட்பாயாக. அவன் நித்தியமானவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கிறான். அவன் சிதைவற்றவனாகவும், அளவிடமுடியாதவனாகவும் இருக்கிறான். அவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்[1].(1) ஓ! அனைத்து உயிரினங்களிலும் சிறந்தவனே, அந்தப் புருஷனை உன்னாலோ, என்னாலோ, பிறராலோ காண முடியாது. புத்தியையும், புலன்களையும் கொண்டிருந்தாலும், தற்கட்டுப்பாடும், ஆன்ம அமைதியும் இல்லாது இருப்பவர்களால் ஒருபோதும் அவனைக் காண முடியாது. பரமபுருஷன் ஞானத்தின் துணையால் மட்டுமே காணப்படக்கூடியவனாகச் சொல்லப்படுகிறது.(2) உடலற்றவனாக இருந்தாலும் அவன் அனைத்து உடல்களிலும் வசிக்கிறான். உடல்களில் வசித்தாலும் அவன் அவ்வுடல்களால் செய்யப்படும் செயல்களால் ஒருபோதும் தீண்டப்படாதவனாக இருக்கிறான்.(3) அவன் உடல்கொண்ட அனைத்து உயிரினங்களுக்குள்ளும் அனைத்தையும் காணும் சாட்சியாக வசித்து அவற்றின் செயல்களைக் குறித்துக் கொள்வதில் ஈடுபடுகிறான். எப்போதும் எவராலும் அவனைப் புரிந்து கொள்ள முடியாது.(4)இந்த அண்டமானது அவனது தலையின் மகுடமாகும். அண்டமானது அவனது கரங்கள் ஆகும், அண்டமானது அவனது பாதமாகும். அண்டமானது அவனது கண்களாகும். அண்டமானது அவனது மூக்காகும். தனியொருவனாக க்ஷேத்திரங்கள் {உடல்கள்} அனைத்திலும் தன் விருப்பப்படி வரையறைகளின்றிச் சுகமாக உலவுகிறான்.(5) க்ஷேத்திரம் என்பது உடலுக்கான மற்றொரு பெயராகும். யோகத்தின் ஆன்மாவான அவன், க்ஷேத்திரங்கள அனைத்தையும், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் அறிந்திருப்பதால், க்ஷேத்ரஜ்ஞன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்[2].(6) உடல் கொண்ட உயிரினங்களுக்குள் அவன் எவ்வாறு நுழைகிறான், அவற்றை விட்டு எவ்வாறு வெளியேறுகிறான் என்பதை உணர்வதில் ஒருவரும் வெல்வதில்லை. சாங்கிய முறைக்கு ஏற்புடைய வகையிலும், யோகத்தின் துணை மூலமும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகளை முறையாகச் செய்வதன் மூலமும், அந்தப் புருஷனுக்கான காரணத்தைக் குறித்துச் சிந்திப்பதில் நான் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், அந்தச் சிறந்த காரணத்தால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும், நான் கொண்டிருக்கும் ஞானத்தின் அளவுக்கு ஏற்ப அந்த நித்திய புருஷனையும், அவனது ஒருமையையும், உயர்ந்த மகிமையையும் உனக்குச் சொல்கிறேன்.(7,8)கல்விமான்கள் ஒரே புருஷன் என்றே அவனைக் குறித்துச் சொல்கிறார்கள். இருப்பில் நித்தியமாக இருக்கும் அவன், மஹாபுருஷன் (பெரியவனும், உயர்ந்தவனுமான புருஷன்) என்ற குறிச்சொல்லுக்குத் தகுந்தவனாவான்.(9) நெருப்பு ஒரு பூதமாக இருந்தாலும், ஆயிரம் பல்வேறு சூழ்நிலைகளில் ஆயிரம் இடங்களில் அது சுடர்விட்டு எரிவது காணப்படுகிறது. ஒரே ஒரு சூரியனாக இருந்தாலும், அவனது கதிர்கள் பரந்த அண்டம் முழுதும் விரிந்திருக்கின்றன. பல்வேறு வகைகளில் தவங்கள் இருந்தாலும், அவை உண்டான ஒரே பொதுவான மூலத்தைக் கொண்டிருக்கின்றன. ஒரே காற்றாக இருந்தாலும், அஃது உலகில் பல்வேறு வடிவங்களில் வீசுகிறது. ஒரே பெருங்கடலானது, உலகில் பல்வேறு சூழ்நிலைகளில் காணப்படும் நீர்நிலைகள் அனைத்தின் தோற்றுவாயாக இருக்கிறது. குணங்கள் அற்றவனான அந்தப் புருஷனே எல்லையற்ற வெளியாக வெளிப்படும் அண்டமாக இருக்கிறான். அவனிடம் இருந்து உண்டான எல்லையற்ற அண்டமானது, அழிவுக்காகக் காலம் நேரும்போது, குணங்கள் அனைத்தையும் கடந்திருக்கும் அந்த ஒரே புருஷனுக்குள்ளேயே நுழைகிறது.(10)

உடல் மற்றும் புலன்களின் நனவுநிலையைக் கைவிடுவதன் மூலமும், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் கைவிடுவதன் மூலமும், வாய்மை மற்றும் பொய்மை ஆகிய இரண்டையும் கைவிடுவதன் மூலமும் ஒருவன் தன்னிடமுள்ள குணங்களைக் கைவிடுவதில் வெல்கிறான்.(11) புலப்படாத புருஷனை உணர்ந்து கொண்டு, அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன் மற்றும் வாசுதேன் என்ற நான்கு வடிவங்களின் நுட்பமான இருப்பைப் புரிந்து கொள்பவனுமான ஒருவன், அத்தகைய புரிதலின் விளைவால் இதயத்தில் முற்றான அமைதிநிலையை அடைந்து, அந்த ஒரே மங்கலப் புருஷனுக்குள் நுழைவதிலும், அவனோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலும் வெல்கிறான்.(12)

கல்விமான்களான சிலர் அவனையே பரமாத்மா என்று சொல்கின்றனர்.
வேறு சிலர் அவனை ஒரே ஆத்மாவாக {ஏகாத்மாவாகக்} கருதுகிறார்கள்.
மூன்றாம் வகைக் கல்விமான்கள் அவனையே ஆன்மாவாக விளக்குகிறார்கள்[3].(13)

உண்மை என்னவென்றால், பரமாத்மாவானவன் எப்போதும் குணங்களற்றவனாக இருக்கிறான் என்பதாகும். அவனே நாராயணன். அவனே அண்டத்தின் ஆன்மாவும், அவனே ஒரே புருஷனும் ஆகிறான். நீரில் வீசப்பட்டாலும் அதனால் ஒருபோதும் நனையாத தாமரை இலையைப் போலவே, செயல்களின் கனிகளால் அவன் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.(14) செயல்படும் ஆன்மா வேறு வகையானது. அந்த ஆன்மா சில நேரங்களில் செயல்களில் ஈடுபடுகிறது. அது செயல்களைக் கைவிடுவதில் வெல்லும்போது, விடுதலையை, அல்லது பரமாத்மாவோடு அடையாளங்காணப்படும் தன்மையை அடைகிறது.(15) செயல்படும் ஆன்மாவானது பதினேழு உடைமைகளைக் கொண்டிருக்கிறது[4]. எனவே, முறையான வரிசையில் எண்ணற்ற வகைப் புருஷர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(16)எனினும், உண்மையில் ஒரேயொரு புருஷனே இருக்கிறான். அண்டத்தைப் பொறுத்தவரையில் அவனே விதிமுறைகள் அனைத்தின் வசிப்பிடமாவான். அவனே ஞானத்தின் உயர்ந்த பொருளாவான். அவனே, அறிபவனாகவும், அறியப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே சிந்திப்பவனாகவும், சிந்திக்கப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே உண்பவனாகவும், உண்ணப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே நுகர்பவனாகவும், நுகரப்படும் மணமாகவும் இருக்கிறான். அவனே தீண்டுபவனாகவும், தீண்டப்படும் பொருளாகவும் இருக்கிறான்.(17) அவனே காண்பவனாகவும், காணப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே கேட்பவனாகவும், கேட்கப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே கருத்தில் கொள்பவனாகவும், கருதுபொருளாகவும் இருக்கிறான். அவனே குணங்களைக் கொண்டவனாகவும், அவற்றில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறான். ஓ! மகனே, அவனே நீடித்திருப்பதும், நித்தியமானதும், மாறாததுமான பிரதானம் என்ற பெயரில் இருகிறான்.(18) தாத்ரியைப் பொறுத்தவரையில் ஆதி விதியைப் படைப்பவன் அவனே. கல்விமான்களான பிராமணர்கள் அவனை அநிருத்தன் என்ற பெயரில் அழைக்கிறார்கள். வேதங்களில் இருந்து உண்டானவையும், சிறந்த தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்டவையும், அருள் நிறைந்தவையுமான செயல்கள் அனைத்தும் அவனாலேயே உண்டாகின்றன.(19)

அமைதிமிக்க ஆன்மாக்களைக் கொண்ட தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும், வேள்விப்பீடங்களில் தங்கள் இடங்களை அடைந்து, தங்கள் வேள்விக் காணிக்கைகளின் முதல் பங்கை அவனுக்கே அளிக்கின்றனர்[5].(20) அனைத்து உயிர்களின் ஆசானாகிய பிரம்மனான நான், அவனிலிருந்தே பிறப்பை அடைந்தேன், நீயோ {சிவனாகிய நீயோ} என்னில் இருந்து பிறப்பை அடைந்தாய். ஓ! மகனே {சிவனே}, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் கொண்ட அண்டமும், புதிர்களுடன் கூடிய வேதங்கள் அனைத்தும் என்னில் இருந்து உண்டாகின.(21) நான்கு பிரிவுகளாகப் பிரிந்து அவன் விரும்பும் வகையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். இத்தகைய சிறப்புமிக்க தெய்வீகத் தலைவனும் கூட, தன் சொந்த ஞானத்தாலேயே விழிப்படைகிறான்.(22) ஓ! மகனே {சிவனே}, நீ கேட்ட கேள்விகளின்படியும், சாங்கிய அமைப்பு மற்றும் யோக தத்துவம் ஆகியவற்றில் இக்காரியம் விளக்கப்பட்டிருக்கும் வழியின்படியும் இவ்வாறே நான் உனக்குப் பதிலளித்தேன்” என்றான் {பிரம்மன்}.(23)

மேன்மையான ஆசிரமம் எது? – சாந்திபர்வம் பகுதி – 353-மேன்மையான ஆசிரமம் குறித்து பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; நாரதருக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; இந்திரனுக்குக் கதை சொல்லத் தொடங்கிய நாரதர்…

சௌதி {சௌனகரிடம்}, “வைசம்பாயனர், நாராயணனின் மகிமையை ஜனமேஜயனுக்கு இவ்வகையில் விளக்கிய பிறகு அவர், மற்றொரு காரியம் குறித்து யுதிஷ்டிரன் கேட்ட கேள்வியையும், கிருஷ்ணன், முனிவர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரின் முன்னிலையிலும் பீஷ்மர் அவற்றுக்கு அளித்த பதில்களையும் சொல்லத் தொடங்கினார். உண்மையில் வைசம்பாயனர் பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்[1].யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, ஓ! பாட்டா, முக்தி அறம் தொடர்புடைய கடமைகள் குறித்து நீர் எங்களுக்குச் சொன்னீர். இப்போது பல்வேறு வாழ்வுமுறைகளைப் பின்பற்றும் மக்களுக்கான முதன்மையான கடமைகளை எங்களுக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்[2].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒவ்வொரு வாழ்வுமுறையைப் பொறுத்தவரையிலும் அவற்றில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நன்கு நடைமுறைப்படுத்தினால் அவை சொர்க்கத்திற்கும், வாய்மையின் உயர்ந்த கனிக்கும் {முக்திக்கும்} வழிவகுக்கவல்லவையே. கடமைகள் பல வாயில்களைக் கொண்டவையாகும். அவற்றால் கற்பிக்கப்படும் நடைமுறைகள் எதுவும் விளைவுகளைப் பொறுத்தவரையில் பயனற்றுப் போனதில்லை.(2)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நிலையான மற்றும் உறுதியான நம்பிக்கையுடன் எந்தக் கடமைகளையும் பின்பற்றும் எவனும், தன்னால் பின்பற்றப்படும் கடமைகளைப் புகழ்ந்து, எஞ்சியவற்றைத் தவிர்க்கிறான்.(3)

எனினும், நான் சொல்ல வேண்டும் என நீ விரும்பும் இந்தக் குறிப்பிட்ட காரியம் பழங்காலத்தில் தெய்வீக முனிவரான நாரதருக்கும், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலின் பொருளாக இருந்தது.(4)

ஓ! மன்னா, உலகங்கள் அனைத்தினாலும் மதிக்கப்படும் பெரும் முனிவரான நாரதர், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவராவார். அவர், நீக்கமற நிறைந்திருக்கும் காற்றைப் போல, எதனாலும் தடுக்கப்பட முடியாதவராக உலகங்கள் அனைத்திலும் திரிந்து கொண்டிருக்கிறார்.(5)

ஒரு காலத்தில் அவர் இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார். தேவர்களின் தலைவனால் முறையாகக் கௌரவரிக்கப்பட்ட அவர், அவனது அருகில் அமர்ந்தார்.(6)

அவர் களைப்பு நீங்கி சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட சச்சியின் தலைவன் {இந்திரன்}, அவரிடம் {நாரதரிடம்}, “ஓ! பெரும் முனிவரே, ஓ! பாவமற்றவரே, ஏதாவது ஆச்சரியம் நிறைந்ததை நீர் கண்டீரா?(7) ஓ! மறுபிறப்பாள முனிவரே, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட நீர், அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய அண்டத்தின் ஊடாக அனைத்தையும் சாட்சியாகக் கண்டபடி ஆவலுடன் திரிந்து வருகிறீர்.(8) ஓ! தெய்வீக முனிவரே, இந்த அண்டத்தில் நீர் அறியாதது ஏதுமில்லை. எனவே, நீர் கண்ட, அல்லது கேட்ட, அல்லது உணர்ந்த ஆச்சரியமான நிகழ்வு எதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(9)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பேசுபவர்களில் முதன்மையான நாரதர் இவ்வாறு கேட்கப்பட்டதும், பின்வரும் பெரிய வரலாற்றை அந்தத் தேவர்களின் தலைவனுக்குச் சொல்லத் தொடங்கினார்.(10)

நாரதர் தம் கருத்தில் கொண்டிருந்த அதே நோக்கத்திற்காகவே, இந்திரனிடம் அவர் சொன்ன அந்தக் கதையை நான் இப்போது சொல்லப் போகிறேன்; கேட்பாயாக” என்றார் {பீஷ்மர்}.(11)

மூவகை கடமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 354-ஒரு பிராமணரின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; மூவகை கடமைகளைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்த பிராமணர்; அந்தப் பிராமணரின் இல்லத்திற்கு விருந்தினராக வந்த மற்றொரு பிராமணர்..

{இந்திரனிடம் நாரதர் சொல்வதாக} பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மனிதர்களில் சிறந்தவனே, கங்கையாற்றின் தென்கரையில் அமைந்திருந்ததும், மஹாபத்மம் என்ற பெயரில் அழைக்கப்படுவதுமான ஒரு சிறந்த நகரத்தில் குவிந்த ஆன்மாவுடன் கூடிய ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார்.(1)

அத்ரி குலத்தில் பிறந்த அவர் இனிமையானவனாக இருந்தார். (நம்பிக்கையாலும், தியானத்தாலும்) ஐயங்கள் அனைத்தையும் விலக்கிய அவர், தாம் பின்பற்றும் பாதையை நன்கறிந்தவராக இருந்தார். அறக்கடமைகளை எப்போதும் நோற்பவரான அவர், தமது கோபத்தை முற்றான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். எப்போதும் மனம் நிறைந்திருந்த அவர், தமது புலன்களை முழுமையாக ஆள்பவராக இருந்தார்.(2)

தவங்கள் மற்றும் வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்த அவர், நல்ல மனிதர்கள் அனைவராலும் மதிக்கப்பட்டார். அறவழிகளின் மூலம் செல்வமீட்டிய அவரது ஒழுக்கமானது, அனைத்து பொருட்களிலும் அவர் சார்ந்ததும், அவர் பின்பற்றுவதுமான வாழ்வுமுறைக்குத் தொடர்புடையதாக இருந்தது.(3)

அவரது குடும்பம் மிகப் பெரியதாகவும், கொண்டாடப்படுவதாகவும் இருந்தது. அவருக்கு உற்றார், உறவினர், பிள்ளைகள், மனைவிகள் எனப் பலர் இருந்தனர். அவரது ஒழுக்கம் எப்போதும் மதிக்கத்தக்கதாகவும், களங்கமற்றதாகவும் இருந்தது.(4)

தாம் பல பிள்ளைகளைப் பெற்றிருப்பதைக் கண்ட அந்தப் பிராமணர், பெரிய அளவிலான அறச்செயல்களைச் செய்து வந்தார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவரது அற நோன்புகள், அவரது குடும்ப வழக்கங்கள் தொடர்புடையவையாகவே இருந்தன[1].(5)மூன்று வகைக் கடைமைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று அந்தப் பிராமணர் சிந்தித்தார். ’தாம் பிறந்த வகைக்கெனவும் {வர்ணத்துக்கெனவும்}, தாம் பின்பற்றும் (இல்லறம் நோற்கும் ஒரு பிராமணனின்) வாழ்வுமுறைக்கெனவும் {ஆசிரமத்திற்கெனவும்} வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் முதல்வகை. தர்ம சாஸ்திரங்கள் என்றழைக்கப்படும் குறிப்பிட்ட சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகள் இரண்டாம் வகை. வேதங்களிலும், சாத்திரங்களிலும் இல்லாவிட்டாலும் பழங்காலத்தில் இருந்து மதிப்புமிக்க, திறன்மிக்க மனிதர்களால் பின்பற்றப்படும் கடமைகள் மூன்றாம் வகை’ {எனச் சிந்திதார்}.(6)

“இதில் எந்தெந்த கடமைகளை நான் பின்பற்ற வேண்டும்? நான் பின்பற்றப்போகும் எந்தெந்த கடமைகள் எனக்கான நன்மைக்கு வழிவகுக்கும்? உண்மையில் எது என் புகலிடமாக இருக்க வேண்டும்?” என்பது போன்ற சிந்தனைகள் அவரை {அந்தப் பிராமணரைக்} கலங்கடித்தன. அவரால் தமது ஐயங்களுக்கு விடைகாண முடியவில்லை.(7)

இத்தகைய சிந்தனைகளால் கலக்கமடைந்திருந்த அந்த வேளையில், குவிந்த ஆன்மாவைக் கொண்டவரும், மிக மேன்மையான ஓர் அறத்தைப் பின்பற்றுபவருமான ஒரு பிராமணர் அவரது இல்லத்திற்கு விருந்தினராக வந்தார்.(8)

அந்த இல்லறத்தான் {முதல் பிராமணர்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வழிபாட்டு விதிகளின் படி தமது விருந்தினரை முறையாகக் கௌரவித்தார். தமது விருந்தினர் புத்துணர்வடைந்ததையும், சுகமாக அமர்ந்திருப்பதையும் கண்ட அந்த விருந்தோம்பி {முதல் பிராமணர்}, அவரிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார்” என்றார் {பீஷ்மர்}.(9)

சொர்க்கத்தின் கதவுகள்! – சாந்திபர்வம் பகுதி – 355-பிராமணர் தன் விருந்தினரிடம் முக்திக்கான வழிமுறை குறித்துக் கேட்டது; தமக்கும் அதில் ஐயமிருப்பதாக விருந்தினர் சொன்னது…

பிராமணர் {தன் இல்லத்திற்கு விருந்தினராக வந்த பிராமணரிடம்}, “ஓ! பாவமற்றவரே, உமது இனிய உரையாடலின் விளைவால் நான் உம்மிடம் மிகுந்த பற்றைக் கொண்டிருக்கிறேன். நீர் என் நண்பராகிவிட்டீர். நான் உம்மிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன்; கேட்பீராக.(1) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, ஓர் இல்லறத்தானாக {கிருஹஸ்தாஸ்ரமத்தைச் சேர்ந்தவனாக} என் மகனிடம் கடமைகளை ஒப்படைத்துவிட்டு, மனிதனின் உயர்ந்த கடமைகளைச் செய்ய விரும்புகிறேன். ஓ! மறுபிறப்பாளரே, என் பாதை எதுவாக இருக்க வேண்டும்?(2) ஆன்மாவைச் சார்ந்திருந்து ஒரே ஆன்மாவின் இருப்பை அடைய விரும்புகிறேன். ஐயோ, பற்றுகளில் கட்டப்பட்டிருக்கும் என்னால் அந்தப் பணியை நிறைவேற்றுவதில் என்னை நிறுவிக் கொள்ளும் இதயம் உண்மையில் வாய்க்கவில்லை[1].(3) இல்லற நோற்பில் என் வாழ்வின் சிறந்த பகுதி கடந்து விட்டதால், வரப்போகும் காலத்தில் எஞ்சியுள்ள என் வாழ்நாளில் என் {வாழ்வெனும்} பயணத்திற்கான செலவுகளைக் கொடுப்பதற்கான {பரலோகம் செல்வதற்கான} வழிமுறைகளை ஈட்ட விரும்புகிறேன்.(4) உலகமெனும் பெருங்கடலைக கடக்கும் விருப்பம் என் மனத்தில் எழுந்துள்ளது. ஐயோ, (என் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும்) அறமெனும் தெப்பத்தை எப்போது அடையப் போகிறேன்?(5) தேவர்களே கூடத் தங்கள் செயல்களின் கனிகளைப் பொறுத்துக் கொள்ளவும், தண்டிக்கப்படவும் செய்கிறார்கள் என்பதைக் கேட்டும், அனைத்து உயிரினங்களின் தலைக்கு மேலும் யமனின் கொடிக்கம்ப வரிசைகளையும், பறக்கும் கொடிகளையும் கண்டும்,(6) நான் சந்திக்கும் இன்பத்திற்குரிய பல்வேறு பொருட்களில் என் இதயம் இன்பத்தை அடையத் தவறுகிறது. பிச்சையெடுத்துத் திரிந்து கிடைக்கும் பிச்சையில் தங்கள் வாழ்வாதாரத்தைச் சார்ந்திருக்கும் யதிகளைக் கண்டு, யதிகளின் அறத்தில் எனக்கு மதிப்பேதும் உண்டாகவில்லை. ஓ! மதிப்புமிக்க விருந்தினரே, புத்தியின் மற்றும் காரணத்தின் அடிப்படையிலான அறத்தின் துணை கொண்டு, குறிப்பிட்ட கடமைகளின் நடைமுறையில் {அறத்தில்} என்னை நீர் நிறுவுவீராக” என்றார் {முதல் பிராமணர்}”.(7)பீஷ்மர் தொடர்ந்தார், “பெரும் ஞானத்தைக் கொண்ட அந்த விருந்தினர், அறம் சார்ந்த தம் விருந்தினரின் இந்தப் பேச்சைக் கேட்டு, இனிமையானதும், மென்மையானதும் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(8)

அந்த விருந்தினர் {இரண்டாம் பிராமணர்}, “இக்காரியம் குறித்து நானும் குழப்பத்திலேயே இருக்கிறேன். இதே எண்ணமே என் மனத்திலும் இருக்கிறது. இதில் ஒரு நிச்சயமான தீர்மானத்தை என்னால் அடையமுடியவில்லை. சொர்க்கத்திற்குப் பல கதவுகள் இருக்கின்றன.(9) விடுதலையை {முக்தியை} மெச்சும் சிலர் இருக்கிறார்கள். சில மறுபிறப்பாளர்கள், வேள்விகளைச் செய்வதால் கிட்டும் கனிகளைப் புகழ்கின்றனர். சிலர் காட்டு வாழ்க்கைமுறையை {வானப்ரஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுகின்றனர். மேலும் சிலர் இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுகின்றனர்.(10) சிலர், மன்னர்களின் கடமைகளை நோற்பதால் அடையப்படும் தகுதிகளை {புண்ணியங்களைச்} சார்ந்திருக்கின்றனர். சிலர் ஆன்மக் கட்டுப்பாடு எனும் பண்பாட்டில் விளையும் கனிகளைச் சார்ந்திருக்கின்றனர். ஆசான்கள் மற்றும் பெரியோர்களுக்குக் கடமையுணர்வுடன் கீழ்ப்படிவதால் விளையும் தகுதிகள் நன்மையானவை என்று சிலர் நினைக்கிறார்கள். சிலர் வாக்குக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுகின்றனர்.(11) சிலர் தங்கள் தாய் தந்தையரைக் கடமையுணர்வுடன் பார்த்துக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றிருக்கின்றனர். வாய்மை மற்றும் கருணை என்ற கடமைகளைப் பின்பற்றிச் சிலர் சொர்க்கத்திற்கு உயர்ந்திருக்கின்றனர்.(12) சிலர் போரிட விரைந்து, தங்கள் உயிர்களை விட்டுச் சொர்க்கத்தை அடைந்திருக்கின்றனர். மேலும் சிலர் உஞ்சம் என்றழைக்கப்படும் நோன்பைப் பின்பற்றி வெற்றியை அடைந்து சொர்க்கத்தின் பாதையை அடைந்திருக்கின்றனர்.(13) சிலர் தங்களை வேத கல்விக்கு அர்ப்பணித்திருக்கின்றனர். மங்கலங்கூடிய அத்தகைய கல்வியில் பற்று கொண்டவர்களும், நுண்ணறிவையும் அமைதியான ஆன்மாக்களையும் கொண்டவர்களும், தங்கள் புலன்களை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுமான இந்த மனிதர்கள் சொர்க்கத்தை அடைகின்றனர்.(14) எளிமையும், வாய்மையும் கொண்ட வேறு சிலர் தீய மனிதர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். வாய்மையும், எளிமையும், தூய்மையான ஆன்மாவையும் கொண்ட அத்தகைய மனிதர்கள் சொர்க்கவாசிகளாகக் கௌரவிக்கப்பட்டிருக்கின்றனர்.(15) எப்போதும் அகலத் திறந்திருக்கும் கடமைகள் {அறங்கள்} எனும் ஆயிரம் வாசல்களின் மூலம் மனிதர்கள் சொர்க்கத்தை அடைவது இவ்வுலகில் காணப்படுகிறது. காற்றின் முன்பான மேகத் திரள் போல உமது இந்தக் கேள்வி என் புத்தியைக் கலங்கடிக்கின்றன” என்றார் {விருந்தினர்}.(16)

நாகன் பத்மநாபன்! – சாந்திபர்வம் பகுதி – 356-நாகன் பத்மனிடம் செல்லும்படி விருந்தளிப்பவரிடம் சொன்ன விருந்தினர்…

விருந்தினர் தொடர்ந்தார், “ஓ! பிராமணரே, இவை யாவற்றையும் உமக்கு முறையாக விளக்க முயற்சிக்கிறேன். நான் என் ஆசானிடமிருந்து கேட்டதை உமக்குச் சொல்கிறேன் கேட்பீராக.(1)

முந்தைய படைப்பில் அறச்சக்கரம் சுழலத் தொடங்கிய இடமும், கோமதி ஆற்றங்கரையில் அமைந்திருப்பதும், நைமிஷம் என்ற பெயரில் அறியப்படுவதுமான காட்டில் {காட்டின் அருகில்} நாகர்களின் பெயரில் அழைக்கப்படும் ஒரு நகரம் இருக்கிறது.(2)

பழங்காலத்தில் தேவர்கள் அனைவரும் அந்த இடத்தில் ஒன்றுகூடி ஒரு மகத்தான வேள்வியைச் செய்தனர். அங்கே உலகமன்னர்களில் முதன்மையான மாந்தாத்ரி {மாந்தாதா}, இங்கேதான் தேவர்களின் தலைவனான இந்திரனை வென்றான்.(3)

அற ஆன்மா கொண்ட வலிமைமிக்க நாகன் ஒருவன், அந்தப் பகுதியில் இருக்கும் அந்த நகரத்தில் வசித்து வருகிறான். அந்தப் பெரும் நாகன், பத்மநாபன் அல்லது பத்மன் என்ற பெயரில் அறியப்படுகிறான்.(4)

(செயல்கள், அறிவு, துதி என்ற) முப்பாதையில் நடக்கும் அவன் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அனைத்து உயிரினங்களையும் நிறைவு செய்கிறான்.(5)

அனைத்திலும் பெருங்கவனத்துடன் சிந்தித்து, நல்லோரைப் பாதுகாத்து, இணக்கம் {சாம}, கொடை, அல்லது கையூட்டளித்தல் {தான}, வேற்றுமையை உண்டாக்கல் {பேத}, பலத்தைப் பயன்படுத்தல் {தண்டம்} என்ற நால்வகைக் கொள்கையைப் பின்பற்றித் தீயோரைத் தண்டித்தும் வருகிறான்.(6)

அங்கே சென்று நீர் விரும்பும் கேள்விகளை அவனிடம் கேட்பீராக. உயர்ந்த அறம் எது என்பதை உண்மையில் அவன் உமக்குக் காட்டுவான்.(7)

அந்த நாகன் விருந்தினர்களை எப்போதும் விரும்புபவன் ஆவான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன் சாத்திரங்களையும் நன்கறிந்தவனாவான். அவன், வேறு எந்த மனிதனிலும் காணப்படாதவையும், விரும்பத்தக்கவையுமான ஒழுக்கங்கள் அனைத்தையும் கொண்டவனாவான்.(8)

அவன், நீருடனோ, நீரில்லாமலோ செய்யப்படும் கடமைகளை எப்போதும் நோற்கும் மனநிலை கொண்டவனாவான். வேத கல்வியில் அவன் அர்ப்பணிப்புமிக்கவனாவான். அவன் தவங்களையும், தற்கட்டுப்பாட்டையும் கொண்டவனாவான். அவன் பெருஞ்செல்வத்தைக் கொண்டவனாவான்.(9)

அவன் வேள்விகளைச் செய்கிறான், கொடையளிக்கிறான், தீங்கிழைப்பதைத் தவிர்க்கிறான், மன்னிக்கவும் செய்கிறான். அவன் ஒழுக்கம் அனைத்து வகையிலும் சிறப்பானதாகும். பேச்சில் வாய்மை கொண்டவனும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனுமான அவன் நன்னடத்தைக் கொண்டவனும், தன் புலன்களை முறையாகக் கட்டுப்படுத்துபவனுமாக இருக்கிறான்.(10)

அவன் தன் விருந்தினர்கள் மற்றும் பணியாட்கள் அனைவரும் உண்ட பிறகே உண்கிறான். அவன் அன்புடன் பேசக்கூடியவனாவான். அவன், எது நன்மையானது, எது எளிமையானது, எது சரியானது, எது கண்டிக்கத்தக்கது என்ற அறிவைக் கொண்டவனாவான். அவன் செய்வதையும், செய்யாமல் விடுவதையும் கணக்கில் கொள்கிறான். அவன் எவரிடமும் ஒருபோதும் பகைமையுடன் நடந்து கொள்வதில்லை. அவன் எப்போதும் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதிலேயே ஈடுபடுகிறான். அவன், கங்கையின் மத்தியில் உள்ள ஒரு தடாகத்தின் நீரைப் போலத் தூய்மையானதும், களங்கமற்றதுமான ஒரு குடும்பத்தைச் சார்ந்தவனாவான்” {என்றார் விருந்தினர்}.(11)

பிராமணரின் புறப்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 357-சரியான பாதை காட்டியதற்காகத் தமது விருந்தினரை மெச்சிய பிராமணர்; இரவு முழுவதும் தமது விருந்தினருடன் உரையாடி, காலையில் நாகன் இருக்கும் நகரம் நோக்கிப் புறப்பட்டது…

விருந்தளிப்பவர் தம் மறுமொழியாக, “ஆறுதலளிக்கும் உமது இந்த வார்த்தைகளைக் கேட்டு, கனமான சுமையைத் தூக்கிக் கொண்டிருக்கும் ஒருவனது தலையில் இருந்தோ, தோள்களில் இருந்து அந்தச் சுமை எடுக்கப்பட்டால் அவனுக்கு உண்டாகும் அந்த அளவு நிறைவை நானும் அடைகிறேன்.(1)

நான்கு சக்கரங்களில் நீண்ட பயணத்தை மேற்கொண்ட ஒருபயணி, படுக்கையில் கிடக்கும்போது உணர்வதும், இடமில்லாததால் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த ஒரு மனிதன், ஓர் இருக்கைக் கிடைக்கும்போது உணர்வதும், அல்லது தாகத்தில் இருக்கும் மனிதன் குளிர்ந்த நீரைக் காணும்போது உணர்வதும், அல்லது பசித்த மனிதன் தன் முன் சுவைமிக்க உணவைக் காணும்போது உணர்வதும்,(2) அல்லது ஒரு விருந்தாளி சரியான நேரத்தில் தன் முன்பு விரும்பத்தக்க உணவு வைக்கப்படும்போது உணர்வதும், அல்லது நீண்ட காலம் ஆசைப்பட்டு ஒரு மகனைப் பெற்ற ஒரு முதிய மனிதன் உணர்வதும், ஒருவன் எவனை நினைத்து அதிகக் கவலைப்படுவானோ அந்த அன்புக்குரிய நண்பனையோ, உறவினனையோ சந்திக்கும்போது உணர்வதுமான நிறைவுக்கு ஒப்பாக உம்மால் சொலப்பட்ட இந்த வார்த்தைகளின் விளைவால் நான் நிறைவடைந்திருக்கிறேன்.(3,4)

மேல்நோக்கிய பார்வை கொண்ட ஒரு மனிதனைப் போல நான், உமது உதடுகளில் இருந்து விழுந்தவற்றைக் கேட்டும், அதன் முக்கியத்துவத்தைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டும் இருக்கிறேன். விவேகமிக்க இந்த வார்த்தைகளால் நீர் உண்மையில் எனக்கு அறிவுரையை வழங்கியிருக்கிறீர்.(5)

ஆம், நீ சொன்னது போலவே நான் செய்யப் போகிறேன். இந்த இரவை என்னோடு மகிழ்வாகக் கழித்து, அத்தகைய ஓய்வின் மூலம் உமது களைப்பை அகற்றிக் கொண்டு நாளை விடியற்காலையில் நீர் செல்லலாம்.(6) தெய்வீகச் சூரியனின் கதிர்கள் மங்கியிருப்பதையும், பகலின் தேவன் கீழ்நோக்கிய பாதையில் செல்வதையும் காண்பீராக” என்றார் {விருந்தளிப்பவர்}”.(7)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பகைவர்களைக் கொல்பவனே, அந்தப் பிராமணரால் விருந்தோம்பலுடன் கவனிக்கப்பட்டவரும், கல்விமானுமான அந்த விருந்தாளி, தனக்கு விருந்தளிப்பவரின் துணையுடன் அந்த இரவைக் கழித்தார்.(8)

உண்மையில் அவர்கள் இருவரும் நான்காவது வாழ்வுமுறையான சந்நியாச {துறவுக்} கடமைகள் குறித்து ஒருவருக்கொருவர் உற்சாகமாகப் பேசியபடியே அந்த இரவை மகிழ்ச்சியாகக் கழித்தனர். கவரும் வகையிலான அவர்களது உரையாடும் இயல்பினால் அந்த இரவு பகலைப் போலக் கழிந்து சென்றது.(9)

காலை விடிந்ததும், (விருந்தாளியின் உரையாடலின்படி) தமக்கு நன்மையானது எனக் கருதப்பட்டதை நிறைவேற்றும் ஆவல் நிறுவப்பட்ட இதயத்தைக் கொண்ட அந்தப் பிராமணரால் அந்த விருந்தாளி உரிய சடங்குகளுடன் வழிபடப்பட்டார்.(10)

அறவோரான அந்தப் பிராமணர் தமது விருந்தினருக்கு விடைகொடுத்தனுப்பி, தன் நோக்கத்தை அடையத் தீர்மானித்து, தமது உற்றார் உறவினரிடம் விடைபெற்றுக் கொண்டு, நாகர்களின் முதன்மையான வசிப்பிடத்தில் தம் இதயத்தை உறுதியாக நிலைக்கச் செய்து, சரியான நேரத்தில் அதை நோக்கிப் புறப்பட்டார்” {என்றார் பீஷ்மர்}.(11)

நாகனின் மனைவி! – சாந்திபர்வம் பகுதி – 358-வழிவிசாரித்து நைமிஷவனத்தில் உள்ள நாகப்பட்டணத்தை அடைந்த பிராமணர்; நாகனின் மனைவியைக் கண்டது; நாகன் அங்கில்லாதது; நாகன் வரும் வரை கோமதி ஆற்றங்கரையில் காத்திருந்த பிராமணர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இனிய காடுகள், தடாகங்கள் மற்றும் புனித நீர்நிலைகளைக் கடந்து சென்ற அந்தப் பிராமணர் இறுதியாக ஒரு குறிப்பிட்ட தவசியின் ஆசிரமத்தை வந்தடைந்தார்.(1)

அங்கே வந்த அவர், தமது விருந்தினரிடம் கேட்ட நாகனைக் குறித்து அவரிடம் {அந்தத் தவசியிடம்} சரியான வார்த்தைகளில் விசாரித்து, அவரது அறிவுறுத்தலின் படி தம் பயணத்தைத் தொடர்ந்தார்.(2)

தமது பயண நோக்கத்திற்கான தெளிவான கருத்துடன் கூடிய அந்தப் பிராமணர், நாகனின் இல்லத்தை அடைந்தார். அதற்குள் முறையாக நுழைந்த அவர், சரியான வார்த்தைகளால் தம்மை அறிவித்தபடியே, “ஹோ, இங்கே இருப்பது யார்? நான் ஒரு பிராமணன் இங்கே விருந்தினனாக வந்திருக்கிறேன்” என்றார்.(3)

பேரழகு படைத்தவளும், கடமைகள் அனைத்தையும் நோற்பதில் அர்ப்பணிப்புள்ளவளும், கற்புடையவளுமான அந்த நாகனின் மனைவி இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்.(4)

விருந்தோம்பும் கடமைகளில் எப்போதும் கவனத்துடன் இருக்கும் அவள், முறையான சடங்குகளுடன் விருந்தினரை வழிபட்டு, அவரை வரவேற்று, “நான் உமக்குச் செய்யக்கூடியது என்ன?” என்று கேட்டாள்.(5)

அந்தப் பிராமணர், “ஓ! பெண்ணே, நீ என்னிடம் சொன்ன இனிமையான வார்த்தைகளால் நான் போதுமான அளவுக்குக் கௌரவிக்கப்பட்டேன். என் பயணத்தால் உண்டான களைப்பும் அகன்றது. ஓ! அருள்நிறைந்த பெண்ணே, நான் சிறப்புமிக்கவனான உன் கணவனைக் காண விரும்புகிறேன்.(6) இதுவே என் உயர்ந்த நோக்கமாகும். இஃது ஒன்றே என் விருப்பத்திற்குரிய பொருளுமாகும். இந்தக் காரணத்திற்காகவே நான் இன்று உன் கணவனான நாகனின் வசிப்பிடத்திற்கு வந்திருக்கிறேன்” என்றார்.(7)

நாகனின் மனைவி, “மதிப்புமிக்க ஐயா, என் கணவர் ஒரு மாத காலம் சூரியனின் தேரை இழுப்பதற்காகச் சென்றிருக்கிறார். ஓ! கல்விமானான பிராமணரே, அவர் பதினைந்து நாட்களில் திரும்பி, உமக்குக் காட்சியளிப்பார்.(8) என் கணவர் இல்லத்தில் இல்லாத காரணத்தை உமக்குச் சொன்னேன். உள்ளபடி இஃது இவ்வாறிருக்கட்டும், நான் உமக்கு வேறென்ன செய்ய வேண்டும்? இதைச் சொல்வீராக” என்றாள்[1].(9)பிராமணர் {நாகனின் மனைவியிடம்}, “ஓ! கற்புடைய பெண்ணே, உன் கணவனைக் காணும் நோக்கத்துடனே நான் இங்கே வந்திருக்கிறேன். ஓ !மதிப்புமிக்க இல்லத்தலைவியே, நான் அருகில் இருக்கும் காட்டில் வசித்தபடியே, அவன் திரும்பி வருவதற்காகக் காத்திருப்பேன்.(10) உன் கணவன் திரும்பியதும், அவனைக் காணும் விருப்பத்தால் தூண்டப்பட்டு நான் இவ்விடத்திற்கு வந்திருக்கிறேன் என்பதை அவனிடம் கருணையுடன் சொல்வாயாக. அவன் திரும்பி வந்ததும் அஃதை எனக்குச் சொல்வாயாக.(11) ஓ! அருளப்பட்ட மங்கையே, அது வரை நான் சொற்ப உணவை உண்டு, உன் கணவன் திரும்பி வருவதற்காகக் கோமதியாற்றங்கரையில் காத்திருப்பேன்” என்றார்.(12)

நாகனின் மனைவியிடம் இதை மீண்டும் மீண்டும் சொன்ன அந்த முதன்மையான பிராமணர், அந்த நாகன் திரும்பி வரும் காலம் வரை வசித்திருப்பதற்காகக் கோமதியாற்றங்கரைக்குச் சென்றார்” என்றார் {பீஷ்மர்}.(13)

பிராமணரின் உண்ணாநோன்பு! – சாந்திபர்வம் பகுதி – 359-உணவு உண்ணும்படி பிராமணரிடம் கேட்டுக் கொண்ட நாகர்கள்; நாகர்களின் கோரிக்கையை மறுத்த பிராமணர்..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த நகரத்தைச் சார்ந்த நாகர்கள், தவப்பயிற்சியில் அர்ப்பணிப்பு மிக்க அந்தப் பிராமணர், நாகத்தலைவனின் வரவை எதிர்பார்த்து, உணவை முற்றிலும் துறந்து காட்டில் தொடர்ந்து வசித்து வருவதைக் கண்டு மிகவும் துன்புற்றனர்.(1)

அந்தப் பெரும் நாகனின் சகோதரர்கள், பிள்ளைகள் மற்றும் மனைவி உள்ளிட்ட உற்றார் உறவினர்கள் ஒன்றாகத் திரண்டு அந்தப் பிராமணர் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.(2)

கோமதி ஆற்றங்கரைக்கு வந்த அவர்கள், அற்புத நோன்புகளை நோற்றபடியே அனைத்துவகை உணவுகளையும் துறந்து, அமைதியாகக் குறிப்பிட்ட மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு தனிமையான ஓரிடத்தில் அமர்ந்திருந்த அந்த மறுபிறப்பாளரைக் {பிராமணரைக்} கண்டனர்.(3)

அந்தப் பெரும் நாகனின் உற்றார் உறவினர், அந்தப் பிராமணரின் முன்பு வந்து, அவருக்கு உரிய வழிபாட்டைச் செய்து, கள்ளங்கபடற்ற தன்மை நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(4) “ஓ! தவச் செல்வத்தைக் கொண்ட பிராமணரே, நீர் இங்கு வந்து ஆறு நாட்கள் ஆகின்றன. ஓ! அறத்திற்கு அர்ப்பணிப்புள்ள மறுபிறப்பாளரே, இருப்பினும் உணவுக்கென ஒரு வார்த்தையும் நீர் சொல்லவில்லை.(5) நீர் எங்களிடம் வந்திருக்கிறீர். உம்மைக் கவனிக்க நாங்கள் இருக்கிறோம். உமக்கான விருந்தோம்பல் கடமைகளை நாங்கள் அவசியம் செய்ய வேண்டும். நாங்கள் அனைவரும் உமக்குக் காரியம் இருக்கும் அந்த நாகத் தலைவனின் உறவினர்கள் ஆவோம்.(6) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, கிழங்குகள், அல்லது கனிகள், இலைகள், அல்லது நீர், அல்லது அரிசி, அல்லது இறைச்சியை உமது உணவாக உட்கொள்வதே உமக்குத் தகும்.(7) முற்றிலும் உணவைத் தவிர்த்த நிலையில் இந்தக் காட்டில் நீர் வசிப்பதன் விளைவால், இளைஞர்களும், முதியவர்களுமான மொத்த நாகச் சமூகமும் பீடிக்கப்பட்டிருக்கிறது.(8) எங்களில் எவரும் பிராமணக்கொலை என்ற குற்றத்தைச் செய்தவர்களல்ல. எங்களில் எவரும் பிறந்த உடனே மகனை இழந்தவர்களுமல்ல. எங்கள் குலத்தில், தன் வசிப்பிடத்திற்கு வந்த தேவர்கள், அல்லது விருந்தினர்கள் அல்லது உறவினர்கள் உண்பதற்கு முன்னர் எவரும் உண்டதில்லை” என்றனர்.(9)

அந்தப் பிராமணர், “உங்கள் அனைவருடைய வேண்டுகோளின் விளைவால் என் நோன்பு முறிந்ததாகக் கருதப்படலாம். நாகத் தலைவன் திரும்பி வருவதற்கு இன்னும் எட்டு நாட்கள் இருக்கின்றன.(10) எட்டாம் இரவு கடந்த பின்னும் நாகர்களின் தலைவன் திரும்பி வரவில்லையெனில், உணவை உண்பதன் மூலம் நான் என் நோன்பை முறித்துக் கொள்வேன். நாகத் தலைவனிடம் நான் கொண்ட மதிப்பின் விளைவாலேயே உணவனைத்தையும் துறக்கும் இந்த நோன்பை நோற்கிறேன்.(11) என் செயலுக்காக நீங்கள் வருந்தக்கூடாது. நீங்கள் அனைவரும் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்பிச் செல்லுங்கள். இஃது அவன் நிமித்தமாகச் செய்யப்படும் நோன்பாகும். என்னுடைய இந்த நோன்பு முறியும் வகையில் எதையும் நீங்கள் செய்யக்கூடாது” என்றார்.(12)

ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, கூடிவந்த நாகர்கள் அந்தப் பிராமணரால் இவ்வாறு சொல்லப்பட்டு அவரால் விடைகொடுத்து அனுப்பப்பட்டனர். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அதன் பேரில் அவர்களும் தங்கள் தங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்” என்றார் {பீஷ்மர்}.(13)

திரும்பி வந்த நாகன்! – சாந்திபர்வம் பகுதி – 360-திரும்பி வந்த நாகன்; அவனது மனைவி அவனைப் பிராமணரிடம் போகச் சொன்னது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “முழுமையாகப் பதினைந்து நாள் நிறைவடைந்ததும், சூரியனின் தேரை இழுக்கும் பணியை முடித்து, அவனது {சூரியனின்} அனுமதியைப் பெற்றுக்கொண்டு அந்த நாகத் தலைவன் (பத்மநாபன்) தன் வீட்டுக்குத் திரும்பினான்.(1)

அவன் திரும்பி வந்ததைக் கண்ட அவனது மனைவி, அவனது காலைக் கழுவி விடவும், அதே இயல்பிலான பிற பணிகளைக் கடமையுணர்வுடன் செய்யவும் அவனை அணுகினாள். இந்தப் பணிகளைச் செய்த பிறகு அவள் அவன் அருகில் அமர்ந்தாள். அப்போது களைப்பில் இருந்து புத்துணர்வு அடைந்த நாகன், கடமையுணர்வுமிக்கவளும், கற்புடையவளுமான தன் மனைவியிடம்,(2) “என் அன்பு மனைவி நான் இல்லாதபோது, நான் சொன்னவற்றுக்கு ஏற்புடைய வகையிலும், சாத்திர விதிகளின்படியும் தேவர்களையும், விருந்தினர்களையும் வழிபடுவதைக் கண்டுகொள்ளாமல் இல்லையென நம்புகிறேன்.(3) உன் பாலினத்திற்கு {பெண்களுக்கு} இயல்பான தூய்மையற்ற புத்திக்கு வசப்படாமல், இல்லத்தில் நானில்லாத போது, விருந்தோம்பல் கடமைகளை உறுதியாகப் பின்பற்றியிருப்பாய் என நம்புகிறேன். கடமை மற்றும் அறத்தின் தடைகளை நீ கடக்காமல் இருக்கிறாய் என நம்புகிறேன்” என்றான்.(4)

நாகனின் மனைவி, “சீடர்களின் கடமை, தங்கள் ஆசான் சொல்வதை மதிப்புடன் நிறைவேற்றுவது; பிராமணர்களின் கடமை வேத கல்வியும், அவற்றை நினைவில் கொள்வதும்; பணியாட்களின் கடமை தங்கள் தலைவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது; மன்னனின் கடமை, நல்லோரைப் பாதுகாத்து, தீயோரைத் தண்டித்து மக்களைப் பாதுகாப்பதாகும்.(5) க்ஷத்திரியனின் கடமைகள் தீமையில் இருந்து ஒடுக்குமுறையில் இருந்தும் உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பதைத் தழுவியது என்று சொல்லப்படுகிறது.(6) சூத்திரனின் கடமை, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்ற மூன்று மறுபிறப்பாள வகையினரிடம் {வர்க்கத்தினரிடம்} பணிவுடன் தொண்டாற்றுவது. ஓ! நாகர்களின் தலைவரே, ஓர் இல்லறத்தானின் அறம் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதில் அடங்கியிருக்கிறது.(7) சொற்ப உணவை உண்பது, உரிய வகையில் நோன்புகளை நோற்பது ஆகியவை புலன்களுக்கும், அறக்கடமைகளுக்கும் இடையில் உள்ள தொடர்பின் விளைவான (அனைத்து வகை {வர்க்க} மக்களின் தகுதியில் {புண்ணியத்தில்} அடங்கியிருக்கிறது.(8)

விடுதலைக்கு வழிவகுக்கும் வாழ்க்கையைப் பின்பற்றுபவன், “நான் யார்? எங்கிருந்து வந்திருக்கிறேன்? பிறக்கு எனக்கு என்னவாக இருக்கிறார்கள்? நான் பிறருக்கு என்னவாக இருக்கிறேன்?” என்ற இந்த நினைவுகளையே தன் மனத்தை எப்போதும் செலுத்த வேண்டும்.(9) கற்புடைமை, கணவனுக்குக் கீழ்ப்படிதல் ஆகியனவே மனைவியின் உயர்ந்த கடமையாக அமைகிறது. ஓ! நாகர்களின் தலைவரே, உமது போதனைகளால் நான் இதை நன்கறிந்திருக்கிறேன்.(10) எனவே, என் கடமையை அறிந்தவளும், அறத்திற்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் உம்மை என் கணவனாக அடைந்தவளுமான நான் ஏன் கடமையின் பாதையில் இருந்து நழுவி, கீழ்ப்படியாமை மற்றும் பாவத்தின் பாதையில் நடக்கப் போகிறேன்?(11) நீர் இல்லத்தில் இல்லாத போது, எவ்வகையிலும் தேவர்களுக்கான துதி நிற்கவில்லை. சிறு புறக்கணிப்பும் இல்லாமல் உமது வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினர்களை விருந்தோம்பல் கடமைகளுடன் நான் கவனித்துக் கொண்டேன்.(12) 

பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒரு பிராமணர் இங்கே வந்தார். அவர் தமது நோக்கத்தை என்னிடம் வெளிப்படுத்தவில்லை. அவர் உம்மைச் சந்திக்க விரும்பினார்.(13) கோமதி ஆற்றங்கரையில் உம் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து வசித்து வருகிறார். கடும் நோன்புகளைக் கொண்ட அந்தப் பிராமணர், பிரம்மத்தைச் சொல்வதில் ஈடுபட்டபடியே அங்கே அமர்ந்திருக்கிறார்.(14) ஓ! நாகர்களின் தலைவரே, நீர் உமது வசிப்பிடத்திற்குத் திரும்பிய உடனேயே உம்மை அங்கு அனுப்பி வைப்பதாக அவருக்கு உறுதியளித்திருக்கிறேன்.(15) ஓ! நாகர்களில் சிறந்தவரே, நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு அங்கே செல்வதே உமக்குத் தகும். ஓ! கண்களால் கேட்பவரே, அந்த மறுபிறப்பாளரை இங்கே கொண்டு வந்த அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதே உமக்குத் தகும்” என்றாள் {நாகனின் மனைவி}[1].(16)

கோபமடைந்த நாகன்! – சாந்திபர்வம் பகுதி – 361-மனிதன் நாகனை அழைப்பதா என மனைவியிடம் கோபித்துக் கொண்ட நாகன்; தன் கணவனை அமைதிப்படுத்தி பிராமணரிடம் செல்லச் சொன்ன அவனது மனைவி…

நாகன் {பத்மநாபன் தன் மனைவியிடம்}, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, அந்தப் பிராமணன் யாரென நினைக்கிறாய்? அவர் உண்மையில் மனிதன்தானா? அல்லது பிராமணரின் வடிவில் வந்த தேவனா?(1) ஓ! பெரும்புகழைக் கொண்டவளே, நோக்கத்திற்குத் தக்க என்னைக் காணவிரும்பும் மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? என்னைக் காண விரும்பும் மனிதனால், அவன் வசிக்கும் இடத்திற்கு வந்து தன்னைப் பார்க்குமாறு இவ்வாறு எனக்கு ஆணையிடமுடியுமா?(2) ஓ! இனிய பெண்ணே, தேவர்கள், அசுரர்கள் மற்றும் தெய்வீக முனிவர்களுக்கு மத்தியில் நாகர்கள் பெருஞ்சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள். பெரும் வேகம் கொண்ட அவர்கள் சிறந்த நறுமணத்தையும் கொண்டிருக்கிறார்கள்.(3) அவர்கள் {மனிதர்களால்} வழிபடத்தக்கவர்கள். அவர்கள் வரம் அருளவல்லவர்கள். உண்மையில், நாமும் பிறரால் பின்பற்றப்படத் தகுந்தவர்கள். ஓ! பெண்ணே, நாம் மனிதர்களால் காண இயலாதவர்களாக இருக்கிறோம்” என்றான்.(4)

அந்த நாகத்தலைவனின் {பத்மநாபனின்} மனைவி, “அந்தப் பிராமணரின் எளிமை மற்றும் கவர்ச்சியில் இருந்து, அவர் காற்றில் வாழும் எந்தத் தேவனும் அல்ல என அறிகிறேன். ஓ! பெருங்கோபம் கொண்டவரே, அவர் தம் முழு இதயத்துடன் உம்மை மதிக்கிறார் என்பதையும் நான் அறிவேன்.(5) உமது துணையைக் கொண்டு நிறைவேற வேண்டிய நோக்கம் ஏதோ அவரது இதயத்தில் நிலைத்திருக்கிறது. மழையை விரும்புவதும், சாதகம் என்றழைக்கப்படுவதுமான பறவை, (தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக) மழையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதைப் போலவே, உம்மைச் சந்திப்பதற்காக அந்தப் பிராமணரும் காத்துக் கொண்டிருக்கிறார்.(6) உம்மைக் காண இயலாமையின் விளைவால் பேரிடர் அவரை அணுகாதிருக்கட்டும். உம்மைப் போன்ற மதிப்புமிக்கக் குடும்பத்தில் பிறந்த எந்த மனிதனும், வீட்டிற்கு வந்த விருந்தினரைப் புறக்கணிப்பதன் மூலம் மதிப்புடன் நீடித்திருக்க முடியாது.(7)

உமக்கு இயல்பான கோபத்தைக் கைவிட்டு அந்தப் பிராமணரைக் காணச் செல்வதே உமக்குத் தகும். அந்தப் பிராமணரை ஏமாற்றுவதன் மூலம் தாழ்மையை அடைவது உமக்குத் தகாது.(8) துயர் துடைக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் வந்த மனிதர்களின் கண்ணீரைத் துடைக்க மறுக்கும் மன்னன் அல்லது இளவரசன் கருவைக் கொன்ற குற்றத்தை இழைத்தவனாவான். பேச்சைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் ஞானத்தை அடைகிறான்.(9) கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பெரும்புகழை அடைகிறான். பேச்சியில் வாய்மையைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவன் நாநலமென்ற கொடையை அடைந்து, சொர்க்கத்தில் கௌரவிக்கப்படுகிறான்.(10) நிலத்தைக் கொடையளிப்பதால் ஒருவன் புனித வாழ்வு முறையைப் பின்பற்றும் முனிவர்களுக்கு விதிக்கப்படும் உயர்ந்த கதியை அடைகிறான். அறவழிகளின் மூலம் செல்வம் ஈட்டுவதால் ஒருவன் விரும்பத்தக்க பல கனிகளை அடைகிறான்.(11) தனக்கான நன்மையை முழுமையாகச் செய்வதால் ஒருவன் நரகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கிறார். அறவோர் இதையே சொல்கின்றனர்” என்றாள்.(12)

நாகன், “செருக்கால் நான் ஆணவமேதும் அடையவில்லை. எனினும், என் பிறப்பின் விளைவால் ஓரளவு ஆணவம் என்னால் கருதத்தக்கதே. ஓ! அருளப்பட்ட பெண்ணே, என்னிடம் ஆசையில் பிறக்கும் கோபமேதும் கிடையாது. அவை அனைத்தும் உன் சிறந்த போதனைகளெனும் நெருப்பால் எரிக்கப்பட்டன.(13) ஓ அருளப்பட்ட இல்லத் தலைவியே, கோபத்தை விட அடர்ந்த இருள் எதனையும் நான் காணவில்லை. எனினும், நாகர்கள் கொண்டிருக்கும் மிகுந்த கோபத்தின் விளைவால், அவர்கள் மனிதர்கள் அனைவராலும் நிந்திக்கப்படும் பொருட்களாகின்றனர்.(14)

பேராற்றலைக் கொண்டவனான பத்து தலை இராவணன், கோபத்தின் ஆதிக்கத்திற்கு வீழ்ந்து இந்திரனின் பகைவனாகி, அந்தக் காரணத்தினாலேயே போரில் இராமனால் கொல்லப்பட்டான்.(15) பிருகு குல முனிவர் இராமர் {பரசுராமர்}, தமது தந்தையின் ஹோமப்பசுவுடைய கன்றைக் கொண்டு வருவதற்காகத் தங்கள் அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் நுழைந்ததைக் கேட்ட கார்த்தவீரியனின் மகன்கள், இவ்வாறு தங்கள் அரசக்குடிலில் நுழைந்ததை அவமதிப்பாகக் கருதி கோபவசப்பட்டதால், இராமரின் கரங்களில் அழிவை அடைந்தனர்.(16) உண்மையில் பெரும்பலத்தைக் கொண்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனுக்கு ஒப்பானவனவனுமான கார்த்தவீரியன் கோபவசப்பட்டதால் ஜமதக்னி குலத்தின் இராமரால் போரில் கொல்லப்பட்டான்.(17)

ஓ! இனிய பெண்ணே, உண்மையில் தவங்களுக்குப் பகையும், எனக்கான நன்மை அனைத்தையும் அழிப்பதுமான என் கோபத்தை உன் வார்த்தைகளால் கட்டுப்படுத்திக் கொண்டேன்.(18) அனைத்து அறங்களையும், தீராத தகுதிகளையும் {புண்ணியங்களையும்} கொண்ட உன்னை என் மனைவியாக அடைந்த நற்பேற்றினால் என்னை நானே பெரிதாகப் புகழ்ந்து கொள்கிறேன்.(19) நான் இப்போது அந்தப் பிராமணர் இருக்கும் இடத்திற்குச் செல்லப் போகிறேன். நிச்சயம் நான் அந்தப் பிராமணரிடம் முறையான வார்த்தைகளைப் பேசுவேன். அவர் நிச்சயம் தமது விருப்பங்கள் நிறைவேறியே இங்கிருந்து செல்வார்” என்றான் {நாகன் பத்மநாபன்}.(20)

தர்மாரண்யர்! – சாந்திபர்வம் பகுதி – 362-பிராமணரைக் கண்ட நாகன்; பிராமணர் தன் பெயரைச் சொல்லி தன் விருப்பத்தையும் சொன்னது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த நாகர்களின் தலைவன் {பத்மநாபன்} தன் அன்புக்குரிய மனைவியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அந்தப் பிராமணர் தன்னை எதிர்பார்த்துக் காத்திருந்த இடத்திற்குச் சென்றான். அவ்வாறு செல்லும் போதே அந்தப் பிராமணரைக் குறித்துச் சிந்தித்த அவன், அவர் நாக நகரத்திற்கு வந்த காரணம் எது என ஆச்சரியமடைந்தான்.(1) ஓ!மனிதர்களின் தலைவா, அந்த முதன்மையான நாகன், தன்னுடைய இயல்பான அற அர்ப்பணிப்பால் அவர் முன்பு சென்று, தன் விருந்தாளியான அவரிடம் இனிய வார்த்தைகளில்,(2) “ஓ! பிராமணரே, கோபவசப்படாதீர். நான் உம்மிடம் அமைதியாகப் பேசுகிறேன். கோபம் கொள்ளாதீர். யாரை எதிர்பார்த்து நீர் இங்கு வந்தீர்? உமது நோக்கம் என்ன?(3) கோமதி ஆற்றங்கரையின் இந்தத் தனிமையான இடத்தில் நீர் யாரைத் துதித்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டான்.(4)

அந்தப் பிராமணர் {நாகன் பத்மநாபனிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, என் பெயர் தர்மாரண்யன் என்றும், நான் நாகன் பத்மநாபனைக் காண இங்கே வந்திருக்கிறேன் என்றும் அறிவாயாக. அவனிடம் எனக்கு ஒரு காரியம் இருக்கிறது.(5) அவன் இப்போது இல்லத்தில் இல்லை எனக் கேள்விப்பட்டேன். எனவே, இப்போது நான் அவன் அருகில் இல்லை. மேகங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாதகப் பறவையைப் போல எனக்கு அன்பானவனாக நான் கருதும் ஒருவனுக்காக நான் காத்திருக்கிறேன்.(6) அவனுக்கு நேரும் தீமைகள் அனைத்தையும் களையவும், அவனுக்கு நன்மையைக் கொண்டுவரவும், அவன் வரும் வரை வேதங்களை உரைப்பதில் ஈடுபட்டு, யோகத்தில் மகிழ்ச்சியாக என் நேரத்தைக் கடத்தி வருகிறேன்” என்றார் {தர்மாரண்யர்}.(7)

நாகன், “உண்மையில் உமது ஒழுக்கம் மிக நல்லதாக இருக்கிறது. பக்திமானான நீர், அறவோர் அனைவருக்கும் நன்மை செய்வதில் அர்ப்பணிப்புள்ளவராக இருக்கிறீர். ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணரே, உமக்கு எல்லாப் புகழும் உண்டாகட்டும். நீர் அந்த நாகனைக் கருணைக் கண்களுடன் காண்கிறீர்.(8) ஓ! கல்விமானான முனிவரே, நீர் தேடும் அந்த நாகன் நானே. உமக்கு ஏற்புடைய எந்தக் காரியத்தை நான் செய்ய வேண்டும் என்று எனக்கு ஆணையிடுவீராக.(9) ஓ! மறுபிறப்பாளரே, நீர் இங்கிருக்கிறீர் என்பதை என் மனைவியிடம் இருந்து அறிந்து, உம்மைக் காண்பதற்காக நான் இவ்விடம் வந்திருக்கிறேன். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, எந்தப் பணியையும் நம்பிக்கையுடன் எனக்குக் கொடுப்பதே உமக்குத் தகும்.(11) உமது நன்மையை அலட்சியம் செய்து, எங்கள் நன்மை நாடுவதில் உமது நேரத்தை ஈடுபடுத்தும் உமது தகுதிகளால் நீங்கள் எங்களை விலைக்கு வாங்கிவிட்டீர்” என்றான்.(12)

அந்தப் பிராமணர் {தர்மாரண்யர்}, “ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட நாகா, உன்னைக் காணும் விருப்பத்தால் உந்தப்பட்டே நான் இங்கே வந்தேன். ஓ! பாம்பே, அனைத்திலும் அறியாமையைக் கொண்டிருக்கும் நான் உன்னிடம் ஒன்றைக் கேட்பதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்.(13) ஆன்மாவைச் சார்ந்திருக்கும் நான், ஜீவாத்மாவின் கதியான பரமாத்மாவை அடைய விரும்புகிறேன். நான் இவ்வுலகத்தில் மீது பற்றுடனோ, அதனுடன் தொடர்பறுத்துக் கொண்டோ இல்லை.(14) நீ சந்திரனைப் போன்ற ஏற்புடைய {இனிமையான} பிரகாசத்துடனும், தூய புகழில் மறைக்கப்படும் தகுதிகளின் பிரகாசத்திலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய்.(15) ஓ! காற்றை மட்டுமே உண்டு வாழ்பவனே, நான் உன்னிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்விக்கு முதலில் பதிலளிப்பாயாக. அதன்பிறகு, என்னை இங்கே கொண்டு வந்த நோக்கத்தைக் குறித்து உனக்குச் சொல்கிறேன்” என்றார் {தர்மாரண்யர்}.(16)

சூரிய அற்புதங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 363-சூரியனிலுள்ள அதிசயங்களை தர்மாரண்யர் என்ற பிராமணருக்குச் சொன்ன நாகன் பத்மநாபன்..

பிராமணர் {தர்மாரண்யர் நாகன் பத்மநாபனிடம்}, “ஒரே சக்கரமுடைய விவஸ்வானின் தேரை உன் முறைப்படி இழுக்கச் சென்று வந்தாய். நீ பயணம் செய்த உலகங்களில் ஆச்சரிக்கரமாக நீ கவனித்த எதையும் எனக்கு விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்” என்றார்.(1)

அந்த நாகன் {தர்மாரண்யரிடம்}, “தெய்வீகமான சூரியனே எண்ணற்ற ஆச்சரியங்களின் இல்லமாகவும், புகலிடமாகவும் இருக்கிறான். மூவுலகங்களில் வசிக்கும் உயிரினங்கள் அனைத்தும் சூரியனில் இருந்து உண்டானவையே.(2) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களான எண்ணற்ற முனிவர்களும், தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, மரக்கிளைகளில் அமரும் பறவைகளைப் போலச் சூரியனின் கதிர்களிலேயே வசிக்கின்றனர்.(3)

சூரியனில் இருந்து வெளிப்படும் பெருங்காற்றானது {வாயுவானது}, அதன் {சூரியனின்} கதிர்களையே புகலிடமாகக் கொண்டு, அங்கிருந்து அண்டத்தைக் கண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதைவிட அதிக ஆச்சரியம் தரத்தக்கது வேறு எது?(4) ஓ! மறுபிறப்பாள முனிவரே {தர்மாரண்யரே}, உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்யும் விருப்பத்தில் காற்றை {வாயுவை} பல பகுதிகளாகப் பிரிக்கும் சூரியன், அதை மழைக்காலங்களில் பொழியும் மழையாகச் செய்வதை விட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(5) சூரிய வட்டிலுக்குள் இருக்கும் பரமாத்மா, சுடர்மிக்கப் பிரகாசத்தில் குளித்தபடியே அண்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(6) சூரியனின் கருங்கதிர்கள் {சுக்கிரன் எனும் கோளின் சக்தி} மழை நிறைந்த மேகங்களாகி, பருவகாலத்தில் மழையாகப் பொழிவதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(7) தான் பொழியும் மழையை எட்டு மாதங்கள் பருகியிருந்து, மழைக்காலங்களில் மீண்டும் அதைப் பொழிவதைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(8)

சூரியனின் குறிப்பட்ட கதிர்களில் அண்டத்தின் ஆன்மா வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. அவனிலேயே அனைத்துப் பொருட்களின் வித்துகளும் இருக்கின்றன. அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்துடன் கூடிய பூமியைத் தாங்குபவன் அவனே {சூரியனே}.(9) ஓ! பிராமணரே, புருஷர்களில் முதன்மையானவனும், பெரும் பிரகாசத்தைக் கொண்டவனும், நித்தியமானவனும், தொடக்கமும், முடிவும் இல்லாதவனுமானா முதன்மையான புருஷன் சூரியனில் வசிக்கிறான் என்பதை விட ஆச்சரியம் நிறைந்தது வேறு எது?(10) எனினும், நான் இப்போது சொல்லப் போவதைக் கேட்பீராக. இஃது ஆச்சரியத்திலும் ஆச்சரியமானதாகும். சூரியனுக்கு அருகிலேயே இருந்ததால் தெளிந்த வானில் நான் இதைக் கண்டேன்.(11)

பழங்காலத்தில் ஒரு நாள் நடுப்பகலில் சூரியன் மகிமையுடன் ஒளிர்ந்து அனைத்திற்கும் வெப்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த போது, சூரியனின் பிரகாசத்திற்கு இணையாக ஒளிர்வதாகத் தெரிந்த ஒருவன் சூரியனை நோக்கி வந்தான்.(12) நான் ஏற்கனவே சொன்னது போலத் தன் சக்தியால் உலகங்கள் அனைத்தையும் தன் மகிமையால் சுடர்விடும்படியும், தன் சக்தியால் நிறையும்படியும் ஆகாயத்தைப் பிளந்து அதனுடாகத் தனக்கான பாதையை உண்டாகிக் கொள்பவனைப் போல அவன் வந்தான்.(13) அவனது உடலில் இருந்து வெளிப்பட்ட கதிர்கள், வேள்வித்தீயில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதியின் சுடர்மிக்கப் பிரகாசத்துக்கு ஒப்பாகத் தெரிந்தது. தன் சக்தியாலும், காந்தியாலும் அவன் பார்க்கப்பட முடியாதவனாக இருந்தான். அவனுடைய வடிவம் விளக்கப்பட முடியாததாக இருந்தது. உண்மையில் அவன் இரண்டாம் சூரியனைப் போலவே இருந்தான்.(14)

அவன் அருகே வந்ததும், சூரியன் (மதிப்புமிக்க வரவேற்பைக் கொடுக்கும் வகையில்) தன் கரங்கள் இரண்டையும் விரித்தான். பதிலுக்குச் சூரியனைக் கௌரவிக்கும் வகையில் அவனும் தன் வலக்கரத்தை நீட்டினான்.(15) பிறகு அவன், ஆகாயத்தைத் துளைத்துக் கொண்டு, சூரியனின் வட்டிலுக்குள் நுழைந்தான். சூரியனின் சக்திக்குள் கலந்த அவன், சூரியனாகவே மாறிவிட்டதாகத் தெரிந்தது.(16) இவ்வாறு அவ்விரு சக்திகளும் சந்தித்துக் கொண்டபோது, எது எதுவாக இருக்கிறது என்பதில் நாங்கள் குழப்பமடைந்தோம். உண்மையில், நாங்கள் தேரில் சுமந்த சூரியன் யார், வானத்தின் ஊடாக வந்தவன் யார் என்பதை அடையாளங்காண்பதில் நாங்கள் தவறினோம்.(17) குழப்பமடைந்த நாங்கள் சூரியனிடம், “ஓ! சிறப்புமிக்கவனே, உன்னில் கலந்தவனும், இரண்டாமவனாக உன்னைப் போல மாறியவனும் யார்?” என்று கேட்டோம்” என்றான் {நாகன் பத்மநாபன்}.(18)

உஞ்ச விருத்தி! – சாந்திபர்வம் பகுதி – 364-தன்னுள் நுழைந்த ஒளியின் வரலாற்றைச் சொன்ன சூரியன்…

சூரியன் {நாகன் பத்மநாபனிடம்}, “இவன் அக்னி தேவனல்ல, இவன் அசுரனல்ல. இவன் நாகனுமல்ல. உஞ்சம் {உஞ்சவிருத்தி} என்றழைக்கப்படும் நோன்பை நோற்பதில் வெற்றி மகுடம் சூட்டப்பட்டதன் விளைவால், சொர்க்கத்தை அடைந்த பிராமணன் இவன்[1].(1)இந்த மனிதன், மரத்தில் இருந்து விழுந்த பழங்கள், கிழங்குகள் மற்றும் இலைகளை உண்டு வாழ்ந்து வந்தான். சில வேளைகளில் இவன் நீரையும், சில வேளைகளில் காற்றை மட்டுமே உண்டும் குவிந்த ஆன்மாவோடு தன் நாட்களைக் கடத்தி வந்தான்.(2)

இவன் தொடர்ந்து உரைத்த சம்ஹிதைகளால் தேவன் மஹாதேவன் இவனிடம் நிறைவடைந்தான். இவன் சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் செயல்கள் நிறைவேற்றுவதில் முயற்சி செய்து வந்தான். அந்தச் செயல்களின் தகுதியாலேயே இவன் இப்போது சொர்க்கத்தை அடைந்திருக்கிறான்.(3)

செல்வம் இல்லாமல், எவ்வகை ஆசையும் இல்லாமல் இருக்கும் இவன், தன் வாழ்வாதாரக் காரியத்தில் உஞ்சம் {உஞ்சவிருத்தி} என்றழைக்கும் நோன்பை நோற்று வந்தான். நாகர்களே, கல்விமானான இந்தப் பிராமணன், அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்தான்.(4), {என்றான் சூரியன்}.

{நாகன் தர்மாரண்யரிடம்}, “சூரிய வட்டிலுக்கு வரும் இந்தச் சிறந்த கதியை அடையும் உயிரினங்களைவிடத் தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, நாகர்களோ மேன்மையானவர்கள் கிடையாது. ஓ! மறுபிறப்பாளரே {தர்மாரண்யரே}, அந்தச் சந்தர்ப்பத்தில் நான் கண்ட அற்புத நிகழ்வு இதுவே.(5)

ஓ! மறுபிறப்பாளரே, உஞ்ச நோன்பை நோற்றதால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்படும் மனிதர்களால் அடையப்படும் கதியை அடைந்தவருமான அந்தப் பிராமணர், இந்த நாள் வரை சூரிய வட்டிலிலேயே தங்கி இருக்கிறார்” என்றான் {நாகன் பத்மநாபன்}.(6)

விடைபெற்றுக்கொண்ட பிராமணர்! – சாந்திபர்வம் பகுதி – 365- தாம் வந்த நோக்கத்திற்கான விடையை நாகனின் பதில் இருந்து அடைந்த பிராமணர்; பத்மநாபனிடம் விடைபெற்றுச் சென்ற தர்மாரண்யர்…

பிராமணர் {தர்மாரண்யர் நாகன் பத்மநாபனிடம்}, “ஓ! நாகா, உண்மையில் இது மிகுந்த அற்புதம் நிறைந்ததாகும். நீ சொன்னதைக் கேட்டதால் நான் உயர்வான நிறைவை அடைந்திருக்கிறேன். நுட்பமான பொருள் நிறைந்த உன் வார்த்தைகள், நான் பின்பற்ற வேண்டிய வழியை எனக்குக் காட்டுகின்றன.(1) ஓ !நாகர்களில் சிறந்தவனே, நீ அருளப்பட்டிருப்பாயாக, நான் இங்கிருந்து செல்ல விரும்புகிறேன். என்னைக் குறித்து விசாரிக்க உன் பணியாட்களை அனுப்பி, இப்போதும், எப்போதும் என்னை நீ நினைவுகூற வேண்டும்” என்றார்[1].(2)நாகன் {பத்மநாபன்}, “உம்மை இங்கே கொண்டு வந்த நோக்கம் இன்னும் உமது நெஞ்சில் இருக்கிறது. நீர் இன்னும் எனக்கு அதை வெளிப்படுத்தவில்லை. பிறகு நீர் எங்கே செல்லப் போகிறீர்? ஓ! மறுபிறப்பாளரே {தர்மாரண்யரே}, என்னால் என்ன செய்யப்பட வேண்டும் என்பதையும், உம்மை இங்கே கொண்டு வந்த நோக்கத்தையும் எனக்குச் சொல்வீராக.(3) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, உமது காரியம் என்னவாக இருந்தாலும், அதை நிறைவேற்றிக் கொண்ட பிறகு, என்னை வணங்கி, வாக்கால் அதை வெளிப்படுத்தியோ, வெளிப்படுத்தாமலோ, என்னால் விடைகொடுக்கப்பட்டு, உற்சாகம் நிறைந்தவராக நீர் செல்லலாம்.(4) நீர் என்னிடம் நட்பைக் கொண்டிருக்கிறீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே, இந்த மரநிழலில் அமர்ந்திருக்கும் உம்மை நான் காண மட்டுமே செய்திருக்கிறேன், இந்நிலையில் நீர் செல்வது உமக்குத் தகாது.(4) நீர் எனக்கு அன்புக்குரியவராகவும், நான் உமக்கு அன்புக்குரியவனாகவும் ஆகிவிட்டோம் என்பதில் ஐயமில்லை. இந்த நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் உம்முடையவர்களேயாவர். ஓ! பாவமற்றவரே, என் இல்லத்தில் சில காலத்தைக் கழிப்பதில் உமக்குத் தடையென்ன இருக்கிறது?” என்று கேட்டான்.(6)

அந்தப் பிராமணர் {தர்மாரண்யர் பத்மநாபனிடம்}, “ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, ஓ! ஆன்ம ஞானத்தை அடைந்த நாகா, இஃது இவ்வாறே இருக்கிறது. தேவர்கள் எவ்வகையிலும் உனக்கு மேன்மையானவர்களாக இல்லை என்பது உண்மையே.(7) நீயாக இருப்பவன் நானே, நானாக இருப்பவன் உண்மையில் நீயே. நானும், நீயும், பிற உயிரினங்கள் அனைத்தும், பரமாத்மாவுக்குள் நுழைய வேண்டியவர்களே.(8) ஓ! நாகர்களின் தலைவா, அறம் அல்லது தகுதியை வென்றெடுக்கும் சிறந்த வழிமுறைகளுக்கான காரியத்தில் என் மனத்தில் ஓர் ஐயம் ஊடுருவியிருக்கிறது. உன்னிடம் இருந்து உஞ்ச நோன்பைக் குறித்து அறிந்ததால், உன் சொற்பொழிவின் மூலம் அந்த ஐயம் விலகப்பெற்றேன்.(9) எனவே, நன்மையான விளைவுகளைக் கொடுக்கும் காரியத்தில் மிகவும் திறன்மிக்கதான அந்த நோன்பை இதுமுதல் நான் பின்பற்றப் போகிறேன். ஓ! அருளப்பட்டவனே, சிறந்த காரணங்களின் அடிப்படையிலான இந்த நிச்சயத் தீர்மானத்தை நான் இப்போது அடைந்திருக்கிறேன். நான் உன்னிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். உனக்கு ஆசிகள். ஓ! நாகா, என் நோக்கம் நிறைவடைந்தது” என்றார் {தர்மாரண்யர்}”.(10)

நாகப் பிராமண வரலாறு! – சாந்திபர்வம் பகுதி – 366-தர்மாரண்யருக்கும் நாகன் பத்மநாபனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் உலகில் வரலாறான கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இவ்வழியில் அந்த முதன்மையான நாகனை வணங்கிய (தர்மாரண்யர் என்ற பெயரைக் கொண்ட) அந்தப் பிராமணர், உஞ்ச வகை வாழ்வுமுறையைப் பின்பற்றுவதில் உறுதியான தீர்மானதைத அடைந்து, அந்த நோன்பை முறையாகக் கற்கவும், தொடங்கவும் பிருகு குலத்தின் சியவனரிடம் சென்றார்.(1)

சியவனர் அந்தப் பிராமணருக்கான சம்ஸ்கார சடங்குகளைச் செய்து, முறையாக அவரது உஞ்ச வகை வாழ்வுமுறையைத் தொடங்கி வைத்தார். ஓ !ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்தப் பிருகுவின் மகனே இந்த வரலாற்றை மன்னன் ஜனகனின் அரண்மனையில் உரைத்தார். மன்னன் ஜனகனும் பதிலுக்கு உயர் ஆன்மாவைக் கொண்ட தெய்வீக முனிவரான நாரதருக்கு இதைச் சொன்னான்.(2,3)

களங்கமற்ற செயல்களைக் கொண்டவரான முனிவர் நாரதரும் ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்று, இந்த வரலாறு கேட்கப்பட்ட போது இதை இந்திரனுக்குச் சொன்னார்.(4) நாரதரிடம் இருந்து இவ்வாறு இஃதை அடைந்த தேவர்களின் தலைவன் {இந்திரன்}, ஓ! ஏகாதிபதி, பிராமணர்களில் முதன்மையானோர் அனைவரும் அடங்கிய ஒரு கூட்டத்தில் இந்த அருளப்பட்ட வரலாற்றைச் சொன்னான்.(5)

ஓ! மன்னா, (குருக்ஷேத்திரப் போர்க்களத்தில்} நான் பிருகு குலத்தின் ராமருடன் {பரசுராமருடன்} பயங்கரமாகப் போரிட்டுக் கொண்டிருந்தபோது, தெய்வீக வசுக்கள் இந்த வரலாற்றை எனக்குச் சொன்னார்கள்.(6)

ஓ! அறவோரில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உன்னால் கேட்கப்பட்ட நான் பெருந்தகுதி நிறைந்ததும், புனிதமானதும், சிறந்ததுமான இந்த வரலாற்றை உனக்குச் சொன்னேன்.(7)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்த கடமை எது என்று நீ என்னிடம் கேட்டாய். உன் கேள்விக்கான என் பதில் இந்த வரலாறே ஆகும். ஓ! ஏகாதிபதி, எந்தக் கனியையும் எதிர்பாராமல் இவ்வழியில் உஞ்ச நோன்பைப் பின்பற்றி அவர் {தர்மாரண்யர் நிச்சயம்} துணிவுமிக்க மனிதரே.(8) நாகர்களின் தலைவனால் {பத்மநாபனால்} தமது கடமை குறித்துக் கற்பிக்கப்பட்ட அந்தப் பிராமணர், உறுதியான தீர்மானத்தை அடைந்து, யமம் மற்றும் நியமம் என்ற நடைமுறைகளைப் பின்பற்றி, மற்றொரு காட்டிற்குச் சென்று, உஞ்ச நோன்பில் அனுமதிக்கப்பட்ட வகையிலான உணவை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தார்” என்றார் {பீஷ்மர்}.(8)

மோக்ஷதர்மம் உபபர்வம் முற்றும்

சாந்தி பர்வம் முற்றிற்று*

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்-ஸ்ரீ மோக்ஷ தர்மம்-பகுதி 2-ஸ்ரீ பராசர கீதை-

October 17, 2025

இந்திரன் விருத்திராசுரன் போர்! – சாந்திபர்வம் பகுதி – 281-இந்திரனுக்கும், விருத்தாசுரனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அளவிலா சக்தி கொண்டவனும், ஒப்பிலா அறிவைக் கொண்டவனும், விஷ்ணுவிடம் பெரும் பக்தி கொண்டவனுமான விருத்திரன் அறத்தின் பால் கொண்டிருந்த விருப்பம் மிகப் பெரியதாகும்.(1) அளவிலா சக்தியைக் கொண்ட விஷ்ணுவால் நிரப்பப்படும் இடத்தைப் புரிந்து கொள்ள மிகக் கடினமாக இருக்கிறது. ஓ! மன்னர்களில் புலியே, அஃதை (அசுரனான) விருத்திரனால் எவ்வாறு (இவ்வளவு நன்றாகப்) புரிந்து கொள்ள முடிந்தது?(2) நீர் விருத்திரனின் செயல்களைக் குறித்துப் பேசினீர். நானும் முழு நம்பிக்கையுடன் உம்மைக் கேட்டேன். எனினும், (உமது பேச்சில்) ஒரு காரியம் அறிவுக்குப் பொருத்தமாக எனக்குத் தெரியாததால் (எனவே, அதற்கான விளக்கம் தேவைப் படுவதால்), உம்மைக் கேள்வி கேட்கும் ஆவல் எனக்கு வளர்ந்திருக்கிறது[1].(3)ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, அறவோனும், விஷ்ணுவிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும் {விஷ்ணு பக்தனும்}, உபநிஷத்துகள் மற்றும் வேதாந்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதால் கிட்டும் உண்மை அறிவைக் கொண்டவனுமான விருத்திரன், எவ்வாறு இந்திரனால் வீழ்த்தப்பட்டான்?(4) ஓ! பாரதர்களின் தலைவரே, இந்த என் ஐயத்தைத் தீர்ப்பீராக. உண்மையில், ஓ! மன்னர்களில் புலியே, எவ்வாறு விருத்திரன் சக்ரனால் {இந்திரனால்} வெல்லப்பட்டான் என்பதை எனக்குச் சொல்வீராக.(5) ஓ! பாட்டா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, (தேவர்களின் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்}, அசுரர்களில் முதன்மையானவனுக்கும் {விருத்திரனுக்கும்} இடையில் நடந்த) அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக. அதைக் கேட்கும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பழங்காலத்தில், தெய்வீகப் படைகளின் துணையுடன் தன் தேரில் சென்ற இந்திரன், தன் முன்னே ஒரு மலையைப் போல நின்று கொண்டிருந்த அசுரன் விருத்திரனைக் கண்டான்.(7) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அவன் {விருத்திரன்} முழுமையாக ஐந்நூறு யோஜனைகள் உயரத்தையும், முந்நூறு யோஜனைகள் சுற்றளவையும் கொண்டிருந்தான்.(8) மூவுலகங்கள் ஒன்றுசேர்ந்தாலும் வெல்லப்படமுடியாத விருத்திரனின் அவ்வடிவத்தைக் கண்ட தேவர்கள் அச்சத்தால் ஊடுருவப்பட்டு முழுக் கவலை அடைந்தனர்.(9) உண்மையில், ஓ! மன்னா, தன் எதிராளியின் மிகப் பெரும் வடிவைத் திடீரெனக் கண்ட இந்திரனின், அடிமுனைகள் {கால்கள்} வாதத்தால் பீடிக்கப்பட்டன[2].(10) பிறகு, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போர் தொடங்கியதும், இருபுறங்களில் இருந்தும் பேரொலி எழுந்தது, பேரிகைகளும், பிற இசைக்கருவிகளும் முழங்கின.(11) ஓ! குருகுலத்தவனே, தன்னெதிரே சக்ரனை {இந்திரனைக்} கண்ட விருத்திரன், அச்சத்தை உணரவுமில்லை, போருக்காகத் தன் சக்திகள் அனைத்தையும் திரட்டும் மனநிலையிலும் இல்லை.(12)அப்போது, மூவுலகங்களையும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும், உயர் ஆன்மாவான விருத்திரனுக்கும் இடையில் போர் தொடங்கியது.(13) இருபுறத்தில உள்ள போராளிகளின் வாள்கள், போர்க்கோடரிகள் {பட்டஸங்கள்}, சூலங்கள், வேல்கள், தோமரங்கள், கனத்த கதாயுதங்கள், பல்வேறு அளவுகளிலான கற்பாறைகள், உரத்த நாணொலி கொண்ட விற்கள், பல்வேறு வகைகளிலான தெய்வீக ஆயுதங்கள், நெருப்புகள், எரிகொள்ளிகள் ஆகியவற்றால் மொத்த ஆகாயமும் மறைக்கப்பட்டது.(14,15) பெரும்பாட்டனை {பிரம்மனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரும், உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்கள் அனைவரும் அப்போரைக் காண அங்கே வந்தனர்,(16) ஓ! பாரதர்களின் காளையே {யுதிஷ்டிரனே}, சித்தர்களும், அப்சரஸ்களுடன் கூடிய கந்தர்வர்களும், தங்கள் முதன்மையான அழகிய தேர்களில் (அதே காரியத்திற்காக {போரைக் காண்பதற்காக})அங்கே வந்தனர்.(17)

அப்போது, அறவோரில் முதன்மையான விருத்திரன், ஆகாயத்தையும், தேவர்களின் தலைவனையும் அடர்த்தியான பாறைகளின் மழையால் வேகமாக மறைத்தான்.(18) இதனால் சினத்தில் நிறைந்த தேவர்கள், அப்போரில் விருத்திரனால் பொழியப்பட்ட அடர்த்தியான பாறைகளின் மழையைத் தங்கள் கணைகளின் மழையால் விலக்கினர்.(19) பிறகு, ஓ! குருக்களில் புலியே {யுதிஷ்டிரனே}, வலிமை மற்றும் பலத்தைக் கொண்டவனும், பெரும் மாயாசக்திகளைக் கொண்டவனுமான விருத்திரன், தன் மாயாசக்திகளின் துணையோடு மட்டுமே போரிடுவதன் மூலம் தேவர்களின் தலைவனைத் திகைக்கச் செய்தான்.(20) நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, இவ்வாறு விருத்திரனால் பீடிக்கப்பட்டு மலைப்படைந்த போது {மயங்கிய போது}, தவசி வசிஷ்டர் சாமங்களைச் சொல்லி அவனது புலன்களை மீண்டெழச் செய்தார் {அவனது மயக்கத்தைத் தெளிவித்தார்}[3].(21)வசிஷ்டர் {இந்திரனிடம்}, “ஓ! தேவர்களின் தலைவா, ஓ! தைத்தியர்கள் மற்றும் அசுரர்களைக் கொல்பவனே, தேவர்களில் முதன்மையானவன் நீயே. மூவுலகங்களின் பலம் உன்னில் இருக்கிறது. ஓ! சக்ரா, பிறகு ஏன் நீ இவ்வாறு சோர்வடைகிறாய்?(22) பிரம்மன், விஷ்ணு, அண்டத்தின் தலைவனான சிவன், சிறப்புமிக்கவனும், தெய்வீகமானவனுமான சோமன், உயர்ந்த முனிவர்கள் அனைவரும் (உன்னைப் பார்த்தபடியே) அதோ நிற்கின்றனர்.(23) ஓ! சக்ரா, சாதாரண மனிதனைப் போல நீ பலவீனத்திற்கு வசப்படாதே. ஓ தேவர்களின் தலைவா, போரில் உறுதியான தீர்மானத்துடன் உன் எதிரிகளைக் கொல்வாயாக.(24) உலகங்கள் அனைத்திற்கும் குருவும், உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவனுமான முக்கண்ணன் (சிவன்) அதோ உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஓ! தேவர்களின் தலைவா, இந்த உன் மயக்கத்தைக் கைவிடுவாயாக.(25) பிருஹஸ்பதியால் தலைமைதாங்கப்பட்ட மறுபிறப்பாள முனிவர்கள், உனது வெற்றிக்காக தெய்வீகப் பாடல்களால் அதோ உன்னைத் துதித்துக் கொண்டிருக்கின்றனர்” என்றார் {வசிஷ்டர்}”.(26)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெருஞ்சக்தி கொண்ட வாசவன் {இந்திரன்}, உயர் ஆன்ம வசிஷ்டரால் இவ்வாறு நனவுநிலை மீண்ட போது, அவனது பலம் பெரிதும் அதிகரித்திருந்தது.(27) அப்போது பகனைத் தண்டிக்கும் அந்தச் சிறப்புமிக்கவன், தன் நுண்ணறிவைச் சார்ந்து, உயர் யோகத்தின் துணையுடன் விருத்திரனின் மாயைகளை அகற்றினான்.(28) பிறகு அங்கிரஸின் மகனான பிருஹஸ்பதியும், பெருஞ்செழிப்புடைய அந்த முனிவர்களில் முதன்மையானவர்களும், விருத்திரனின் ஆற்றலைக் கொண்டு மஹாதேவனிடம் {சிவனிடம்} சென்று, மூவுலகங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, அந்தப் பேரசுரனை அழிக்குமாறு அவனை {சிவனைத்} தூண்டினர்.(29) அண்டத்தின் சிறப்புமிக்கத் தலைவனுடைய சக்தி, ஒரு கடும் நோயின் வடிவை ஏற்று, அசுரர்களின் தலைவனான விருத்திரனின் உடலில் ஊடுருவியது.(30) உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவனும், அண்டத்தைப் பாதுகாப்பவனும், சிறப்புமிக்கவனும், தெய்வீகமானவனுமான விஷ்ணு, இந்திரனின் வஜ்ராயுதத்திற்குள் நுழைந்தான்.(31) பெரும் நுண்ணறிவைக் கொண்ட பிருஹஸ்பதி, பெருஞ்சக்தியைக் கொண்ட வசிஷ்டர், முனிவர்களில் முதன்மையான பிறர் அனைவரும், நூறு வேள்விகளைச் செய்தவனும், உலகங்கள் அனைத்தாலும் புகழப்படுபவனும் வரமளிப்பவனுமான வாசவனிடம் {இந்திரனிடம்} சென்று, “ஓ! பலமிக்கவனே, தாமதமில்லாமல் விருத்திரனைக் கொல்வாயாக” என்றனர்.(33)

மஹேஸ்வரன், “ஓ! சக்ரா {இந்திரா}, பெரும் படையின் துணையுடன் கூடிய பெரும் விருத்திரன் அதோ நிற்கிறான். எங்கும் செல்லவல்லவனும், பெரும் மாயாசக்திகளைக் கொண்டவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான அவனே அண்டத்தின் ஆன்மாவாக இருக்கிறான்.(34) எனவே, இந்த அசுரர்களில் முதன்மையானவன் {விருத்திரன்}, மூவுலகங்கள் ஒன்றாகச் சேர்ந்தாலும், வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். ஓ! தேவர்களின் தலைவா, யோகத்தின் துணையுடன் நீ அவனைக் கொல்வாயாக. அவனை அலட்சியம் செய்யாதே.(35) ஓ! தேவர்களின் தலைவா, பலத்தை அடைவதற்காக அவன் முழுமையாக அறுபதாயிரம் {60,000} வருடங்கள் கடுந்தவம் செய்திருக்கிறான். பிரம்மன் அவன் வேண்டிய வரங்களான,(36) யோகிகளுக்குச் சொந்தமான மகிமை, பெரும் மாயாசக்திகள், அதீத வலிமை, மிக அபரிமிதமான சக்தி ஆகியவற்றை அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.(37) ஓ! வாசவா, நான் என் சக்தியை உனக்குத் தருகிறேன். அந்தத் தானவன் இப்போது தன் பொறுமையை இழந்திருக்கிறான். எனவே, இப்போது நீ உன் வஜ்ரத்தால் அவனைக் கொல்வாயாக” என்றான் {சிவன்}.(38)

சக்ரன், “ஓ! தேவர்களில் முதன்மையானவனே, உன் அருளின் மூலம் என் வஜ்ரத்தைக் கொண்டு இந்த வெல்லப்பட முடியாத திதியின் மகனை உன் கண்ணெதிரே கொல்லப் போகிறேன்” என்றான்”.(39)

பீஷ்மர் தொடர்ந்தார், “அந்தப் பேரசுரன் அல்லது தைத்தியன் {விருத்திரன்}, (மஹாதேவனின் சக்தியில் பிறந்த) அந்த நோயால் பீடிக்கப்பட்ட போது, மகிழ்ச்சியில் நிறைந்த தேவர்களும், முனிவர்களும் உற்சாகப் பேரொலி எழுப்பினர்.(40) அப்போது துந்துபிகள், சங்கங்கள், மத்தளங்கள், டிண்டிமங்கள், ஆகியவை ஒரே நேத்தில் முழங்ககப்பட்டன.(41) திடீரென அசுரர்கள் அனைவரும் நினைவிழப்பால் பீடிக்கப்பட்டனர். ஒரு கணத்தில் அவர்களது மாயாசக்திகளும் மறைந்து போயின.(42) முனிவர்களும், தேவர்களும் தங்கள் எதிரிகள் இவ்வாறு பீடிக்கப்பட்டதை உறுதி செய்து கொண்டு, இந்திரன் மற்றும் ஈசானன் ஆகிய இருவரையும் புகழ்ந்து, (விருத்திரனை அழிப்பதில் தாமதிக்காதவாறு) முன்னவனை {இந்திரனைத்} தூண்டத் தொடங்கினர்.(43) அந்த மோதலின் போது, முனிவர்களால் துதிபாடல்கள் பாடப்பட்டபோது தேரில் அமர்ந்திருந்த இந்திரன் ஏற்ற வடிவமானது, அச்சமின்றி யாராலும் பார்க்க முடியாததாக இருந்தது” என்றர் {பீஷ்மர்}[4].(44)

விருத்திரன் வதம் – பிரம்மஹத்தி! – சாந்திபர்வம் பகுதி – 282-சிவனின் சக்தியில் பிறந்த நோயால் விருத்திரனின் உடலில் தோன்றிய அறிகுறிகள்; விருத்திரனைக் கொன்றதும் இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி; அக்னி முதலிய நால்வருக்குப் பிரம்மஹத்தி என்ற பாவம் பிரித்துக் கொடுக்கப்பட்டது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, (மஹாதேவனின் சக்தியில் பிறந்த) அந்த நோயால் பீடிக்கப்பட்ட விருத்திரனின் உடலில் தோன்றிய அடையாளங்களை நான் உனக்குச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(1) வீரனான அந்த அசுரனின் வாய் நெருப்புத் தழல்களை வெளியிடத் தொடங்கியது. அவனது நிறம் மிகவும் குன்றியது. அவன் மேனியெங்கும் நடுங்கத் தொடங்கியது. அவனது மூச்சு கனமாகவும், அடர்த்தியாகவும் ஆனது.(2) அவனது முடி சிலிரிப்படைந்தது. ஓ! பாரதா, அவனது நினைவு, கடுமையான, பயங்கரமான, மங்கலமற்ற ஓநாயுடைய ஊளையின் வடிவில் அவனது வாயில் இருந்து வெளிப்பட்டது. சுடர்மிக்க எரி கோள்கள் அவனது வலப்புறத்திலும், இடப்புறத்திலும் விழுந்தன.(3) கழுகுகள், கங்கங்கள், நாரைகள் ஆகியன ஒன்றாகத் திரண்டு கடுமையாக அலறியபடியே விருத்திரனின் தலைக்கு மேல் வட்டமிட்டன.(4) பிறகு அம்மோதலில், தேவர்களால் துதிக்கப்பட்டவனும், வஜ்ரம் தரித்தவனுமான இந்திரன், தேரில் அமர்ந்திருந்த அந்தத் தைத்தியனைக் கடுமையுடன் பார்த்தான்.(5)

கடும் நோயால் பீடிக்கப்பட்ட அந்த அசுரன், ஓ! ஏகாதிபதி, கொட்டாவி விட்டபடியே மனிதத்தன்மையற்ற கூச்சலிட்டான்.(6) அந்த அசுரன் கொட்டாவி விட்ட போது, இந்திரன் தன் வஜ்ரத்தை அவன் மீது வீசினான். பெரும் சக்தியைக் கொண்டதும், யுக முடிவில் படைப்பை அழிக்கும் நெருப்புக்கு ஒப்பானதுமான அந்த வஜ்ரம், பெரும் வடிவிலான விருத்திரனை ஒரு கணத்தில் வீழ்த்தியது.(7) ஓ! பாரதக் குலத்தின் காளையே, விருத்திரன் கொல்லப்பட்டதைக் கண்ட தேவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் இருந்து உரத்த கூச்சலிட்டனர்.(8) தானவர்களின் எதிரியும், பெரும் புகழைக் கொண்டவனுமான மகவத் {இந்திரன்}, விருத்திரனைக் கொன்ற பிறகு, விஷ்ணுவால் ஊடுருவப்பட்டிருந்த வஜ்ரத்துடன் சொர்க்கத்திற்குள் நுழைந்தான்.(9) ஓ! குரு குலத்தவனே, சரியாக அப்போது, பிராமணக் கொலை என்ற பாவமானது {பிரம்மஹத்தியானது}, கடுமையான, பயங்கரமான வடிவில் (உடல் படைத்த வடிவில்) அனைத்து உலகங்களையும் அச்சத்தில் ஆழ்த்தியபடி, கொல்லப்பட்ட விருத்திரனின் உடலில் இருந்து வெளிப்பட்டாள்.(10)

ஓ! அற ஆன்மாவே {யுதிஷ்டிரனே}, பயங்கரப் பற்களும், கோரமான முகமும், கருப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில், கலைந்த முடியுடன், பயங்கரக் கண்களுடன் இருந்த அவள் {பிரம்மஹத்தி}, தன் கழுத்தில் கபால மாலையுடன் (உடல் கொண்டு வந்த அதர்வன) மந்திரத்தைப் போல, முழுவதும் குருதியால் மறைக்கப்பட்டு, மரவுரி உடுத்திக் கொண்டு விருத்திரனின் உடலில் இருந்து வெளியே வந்தாள். ஓ !ஏகாதிபதி, அத்தகைய பயங்கரத் தோற்றத்தையும், முகத்தையும் கொண்ட அவள் {பிரம்மஹத்தியானவள்},  வஜ்ரதாரியை {இந்திரனைப்} பீடிக்க அவனைத் தேடினாள்.(13) ஓ! குரு குலத்தவனே, சிறிது நேரங்கழித்ததும், விருத்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, மூவுலகங்களின் நன்மைக்குத் தொடர்புடைய ஏதோவொரு காரணத்திற்காகச் சொர்க்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.(14) பெரும் சக்தியுடன் கூடிய இந்திரன் தன் காரியத்திற்காகச் சென்று கொண்டிருப்பதைக் கண்ட அவள் {பிரம்மஹத்தியானவள்}, தேவர்களின் தலைவனைப் பற்றிக் கொண்டு, அந்தக் கணமுதல் அவனைப் பீடித்தாள்.(15)

பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} தன் மேனியை இவ்வாறு பீடித்ததும், அச்சமடைந்த இந்திரன், தாமரைத் தண்டின் இழைகளில் புகுந்து பல நீண்ட வருடங்களாக அங்கேயே வசித்தான்.(16) ஆனால் அந்தப் பிராமணக் கொலை என்ற பாவம் {பிரம்மஹத்தி} அவனை நெருக்கமாகப் பின்தொடர்ந்தது. ஓ! குருவின் மகனே {யுதிஷ்டிரா}, உண்மையில் அவளால் பற்றப்பட்ட இந்திரன் தன் சக்திகள் அனைத்தையும் இழந்தான்.(17) அவளை விரட்டுவதற்காக அவன் பெரும் முயற்சிகளைச் செய்தாலும், அந்த முயற்சிகள் அனைத்தும் பலிக்காமலாகின.(18) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவளால் பீடிக்கப்பட்ட தேவர்களின் தலைவன் இறுதியாகப் பெரும்பாட்டனின் முன்னிலைக்குச் சென்று, சிரம் தாழ்த்தி அவனை வணங்கினான்.(19) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, சக்ரன் {இந்திரன்}, பிராமணக் கொலை என்ற பாவத்தால் {பிரம்மஹத்தியால்} பீடிக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்ட பிரம்மன், (தன்னை வேண்டுபவனை விடுவிக்கும் வழிமுறைகளைக் குறித்து) சிந்திக்கத் தொடங்கினான்.(20)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இறுதியாகப் பெரும்பாட்டன் {பிரம்மன்} அந்தப் பிரம்மஹத்தியிடம் இனிய குரலில் அவளைத் தணிப்பதற்காக,(21) “ஓ! இனியவளே, எனப் பிடித்தமான இந்தத் தேவர்களின் தலைவன் உன்னால் விடுபடட்டும். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் நிறைவேற்ற வேண்டிய உனது விருப்பமென்ன?” என்று கேட்டான்.

அப்போது பிரம்மஹத்தி {பிரம்மனிடம்}, “மூவுலகங்களின் படைப்பாளனும், அண்டத்தால் துதிக்கப்படுபவனுமான சிறந்த தேவனே என்னிடம் நிறைவுடன் இருக்கும்போது, என் விருப்பங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாக நான் கருதுகிறேன். என் வசிப்பிடம் இப்போது உறுதி செய்யப்படட்டும்.(23) உலகங்களைப் பராமரிக்க வேண்டிய இந்த விதி உம்மால் அமைக்கப்பட்டது. ஓ! தலைவா, இந்த முக்கியமான விதியை நீரே அறிமுகப்படுத்தினீர்.(24) ஓ அறத் தலைவா, ஓ! உலகங்கள் அனைத்தின் பலமிக்கக் குருவே, நீர் என்னிடம் நிறைவுடனிருப்பதால் நான் நிச்சயம் சக்ரனை விட்டகல்வேன். ஆனால் நான் வசிப்பதற்கு ஒரு வசிப்பிடத்தை எனக்கு அருள்வீராக” என்று கேட்டாள் {பிரம்மஹத்தி}”.(25)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெரும்பாட்டன் {பிரம்மன் பிரம்மஹத்தியிடம்}, “அவ்வாறே ஆகட்டும்” என்று பிரம்மஹத்தியிடம் சொன்னான். உண்மையில் பெரும்பாட்டன் {பிரம்மன்}, இந்திரனின் மேனியில் இருந்து பிரம்மஹத்தியை அகற்றும் வழிமுறைகளைக் கண்டடைந்துவிட்டான்.(26) அந்தச் சுயம்பு உயர் ஆன்ம அக்னியை நினைத்தான். பின்னவன் {அக்னி தேவன்} உடனடியாகப் பிரம்மனின் முன்பு தோன்றி இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(27) “ஓ! சிறப்புமிக்க, தெய்வீகத் தலைவா, ஓ! எந்தக் குறையும் இல்லாதவரே, நான் உம் முன்பு தோன்றியிருக்கிறேன். நான் நிறைவேற்ற வேண்டியது என்ன என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(28)

பிரம்மன் {அக்னிதேவனிடம்}, “நான் இந்தப் பிராமணக் கொலை என்ற பாவத்தை {பிரம்மஹத்தியை} பல பகுதிகளைப் பிரிக்கப் போகிறேன். அவளிடம் இருந்து சக்ரனை {இந்திரனைக்} காப்பதற்காக, அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பங்கை நீ ஏற்பாயாக” என்று கேட்டான்.(29)

அக்னி {பிரம்மனிடம்}, “ஓ! பிரம்மாவே, நான் எவ்வாறு அவளிடம் இருந்து மீட்கப்படுவேன்? ஓ! பலமிக்கத் தலைவா, அதற்கு ஒரு வழியைச் சொல்வீராக. ஓ! அனைத்து உலகங்களாலும் புகழப்படுபவரே, (நான் காக்கப்படும்) வழிமுறைகளை விவரமாக அறிய நான் விரும்புகிறேன்” என்றான்.(30)

பிரம்மன் நெருப்பிடம், “தமஸ் குணத்தில் மூழ்கிய எந்த மனிதன், உன்னைச் சுடர்மிக்க வடிவில் கண்டும், தானியங்களையும், மூலிகைகளையும், சாறுகளைக் காணிக்கையாக்கி, ஹவிஸை உனக்கு அளிக்காமல் தவிர்க்கிறானோ,(21) அந்த மனிதனுக்குள், நீ கொண்ட பிரம்மஹத்தியின் {முதல்} பகுதி உடனடியாக நுழைந்து, அதுமுதல் அவனிலேயே வசித்திருக்கும். ஓ! ஹவிஸை சுமப்பவனே, உன் இதய நோய் அகலட்டும்” என்றான்”[1].(32)

பீஷமர் {யுதிஷ்டிரனிடம்}, “பெரும்பாட்டனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், ஹவிசையும், வேள்விக்காணிக்கைகளையும் உண்பவனுமான அவன் {அக்னி} அவனது கட்டளையை ஏற்றுக் கொண்டான். ஓ! மன்னா, அப்போது அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பகுதி அவனது உடலுக்குள் நுழைந்தது.(33) பிறகு பெரும்பாட்டன், மரங்களையும், மூலிகைகளையும், புல் வகைகள் அனைத்தையும் அழைத்து, அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். அவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அக்னியைப் போலவே அந்த வேண்டுதலால் கலக்கமடைந்த மரங்கள், மூலிகைகள் மற்றும் புற்கள், பெரும்பாட்டனிடம், (35) “ஓ! பெரும்பாட்டா, உலகங்கள் அனைத்திலும் உள்ள நாங்கள் எவ்வாறு இந்தப் பாவத்தில் இருந்து காக்கப்படுவோம். ஏற்கனவே விதியால் பீடிக்கப்பட்டிருக்கும் எங்களை மேலும் பீடிப்பது உமக்குத் தகாது.(36) ஓ! தேவா, நாங்கள் எப்போதும் வெப்பம், குளிர் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்கிறோம், காற்றால் இழுத்து வரப்படும் (மேகங்களின்) மழை ஆகியவற்றாலும், (மனிதர்களின் கரங்களால்) வெட்டப்படுவதாலும் பாதிக்கப்படுகிறோம்.(37) ஓ! மூவுலகங்களின் தலைவா, பிராமணக் கொலை என்ற பாவத்தின் (இந்தப் பிரம்மஹத்தியிலன் ஒரு பகுதியை) உமது உத்தரவின் பேரில் ஏற்றுக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம். எனினும், நாங்கள் எவ்வாறு மீட்கப்படுவோம் என்பதை எங்களுக்குச் சுட்டிக்காட்டுவீராக” என்றன.(38)

பிரம்மன் மரங்களிடம், “நீங்கள் ஏற்கும் இந்தப் பாவம் {பிரம்மஹத்தியின் இரண்டாம் பகுதி}, தீர்மான மயக்கத்தால், உங்களைப் பருவ காலங்களில் வெட்டும் மனிதனைப் பீடிக்கப் போகிறது” என்றான்.(39)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு உயர் ஆன்ம பிரம்மனால் சொல்லப்பட்டதும், மரங்களும், செடிகளும், புற்களும் அந்தப் படைப்பாளனைப் புகழ்ந்துவிட்டு, அங்கே மேலும் தாமதிக்காமல் அங்கிருந்து சென்று விட்டன.(40) பிறகு, ஓ! பாரதா, அனைத்து உலகங்களின் பெரும்பாட்டன் {பிரம்மன்}, அப்சரஸ்களை அழைத்து, அவர்களை நிறைவு கொள்ளச் செய்யும் வகையில் இந்த இனிய வார்த்தைகளைச் சொன்னான்:(41) “பெண்களில் முதன்மையான இந்தப் பிரம்மஹத்தி, இந்திரனின் உடலில் இருந்து வெளியே வந்திருக்கிறாள். என்னால் வேண்டப்படும் நீங்கள், (தேவர்களின் தலைவனைக் காப்பதற்காக) இவளது நான்கில் ஒரு பகுதியை உங்கள் மேனியில் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.(42)

அதற்கு அந்த அப்சரஸ்கள் {பிரம்மனிடம்}, “ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, உமது ஆணையின் பேரில் இந்தப் பாவத்தின் ஒரு பகுதியை நாங்கள் முழுமையாக விரும்பி ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், ஓ! பெரும்பாட்டா, (நாங்கள் உம்மிடம் செய்து கொள்ளும்) இந்தப் புரிந்துணர்வால் (விளையும் விளைவுகளில் இருந்து) நாங்கள் விடுபடும் வழிமுறைகளைக் குறித்தும் நீர் சிந்திக்க வேண்டும்” என்றனர்.(43)

பிரம்மன் பெண்களிடம், “உங்கள் இதயங்களின் நோய் அகலட்டும். நீங்கள் ஏற்றுக் கொள்ளும் இந்தப் பாவம் {பிரம்மஹத்தியின் மூன்றாம் பகுதி}, பெண்கள் மாதவிடாயில் இருக்கும்போது அவர்களுடன் கலவியை நாடும் மனிதனை உடனே பீடித்து, உங்களிடம் இருந்து அகன்றுவிடும்” என்றான்”.(44)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தின் காளையே, பெரும்பாட்டனால் இவ்வாறு சொல்லப்பட்ட பல்வேறு இனங்களைச் சார்ந்த அப்சரஸ்களும், உற்சாகம் நிறைந்த ஆன்மாக்களோடு, தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்று இன்பமாக விளையாடத் தொடங்கினர்.(45)

பிறகு, பெரும் தவத்தகுதியைக் கொண்டவனான, மூவுலகங்களின் சிறப்புமிக்கப் படைப்பாளன் {பிரம்மன்}, நீர்நிலைகளை நினைத்தவுடன் அவை உடனே அவனிடம் வந்தன.(46) அளவிலா சக்தியைக் கொண்ட பிரம்மனின் முன்னிலைக்கு வந்த அந்த நீர்நிலைகள், அவனை வணங்கி இவ்வார்த்தைகளைச் சொன்னன:(47) “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, உமது உத்தரவின் பேரில் நாங்கள் உமது முன்னிலையை அடைந்திருக்கிறோம். ஓ! அனைத்துலகங்களின் பலமிக்கக் குருவே, நாங்கள் நிறைவேற்ற வேண்டியது என்ன என்பதை எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டன.(48)

பிரம்மன் {நீர்நிலைகளிடம்} , “விருத்திரனைக் கொன்றதன் விளைவால் இந்தக் கொடிய பாவம் இந்திரனைப் பீடித்திருக்கிறது. பிரம்மஹத்தியின் நான்கில் ஒரு பகுதியை நீங்கள் ஏற்றுக் கொள்வீராக” என்றான்.(49)

நீர்நிலைகள் {பிரம்மனிடம்}, “ஓ! உலகங்கள் அனைத்தின் குருவே, நீர் அணையிட்டவாறே ஆகட்டும். எனினும், ஓ! எங்களின் பலமிக்கத் தலைவா, இந்தப் புரிந்துணர்வில் (இதன் விளைவில்) இருந்து நாங்கள் காக்கப்படும் வழிமுறைகளைக் குறித்தும் நீர் சிந்திப்பதே உமக்குத் தகும்.(50) தேவர்கள் அனைவரின் தலைவரும், அண்டத்தின் உயர்ந்த புகலிடமும் நீரே ஆவீர். துதிகளால் துயரில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்ள எங்களுக்கு வேறு யார் இருக்கிறார்?” என்று கேட்டன.(51)

பிரம்மன் நீர்நிலைகளிடம், “புத்தி மயக்கம் கொண்ட எந்த மனிதன், உங்களை இழிவாகக் கருதி, சளி, சிறுநீர் மற்றும் மலத்தை உங்களில் விடுவானோ,(52) அவனை இந்தப் பாவம் {பிரம்மஹத்தியின் நான்காம் பகுதி} உடனடியாகப் பீடித்து, அதுமுதல் அவனிலேயே வசித்துவரும். உண்மையில், இவ்வழியிலேயே நீங்கள் மீட்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றான்”.(53)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, அப்போது பிராமணக் கொலை என்ற அந்தப் பாவம் {பிரம்மஹத்தி}, தேவர்களின் தலைவனை விட்டு அகன்று, தனக்காகப் பெரும்பாட்டனின் ஆணையால் விதிக்கப்பட்ட வசிப்பிடங்களுக்குச் சென்றாள்.(54)

ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, இவ்வாறே இந்திரன் அந்தப் பயங்கரப் பாவத்தால் பீடிக்கப்பட்டான், (இவ்வாறே அவளிடம் இருந்து விடுதலையும் பெற்றான்). பிறகு பெரும்பாட்டனின் {பிரம்மனின்} அனுமதியுடன் இந்திரன் ஒரு குதிரை வேள்வியைச் செய்யத் தீர்மானித்தான்.(55) ஓ! ஏகாதிபதி, பிராமணக் கொலை என்ற பாவத்தால் {பிரம்மஹத்தியால்} பீடிக்கபட்ட இந்திரன், அந்த வேள்வியின் மூலமே தூய்மையடைந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(56) ஓ! பூமியின் தலைவா, தன் செழிப்பை மீண்டும் பெற்று, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்று, வாசவன் அடைந்த மகிழ்ச்சி மிகப்பெரியதாக இருந்தது.(57) ஓ! பிருதையின் மகனே, விருத்திரனின் குருதியில் இருந்து உயர்ந்த மகுடங்களைக் கொண்ட சேவல்கள் பிறந்தன. இந்தக் காரணத்தினாலேயே அந்த வளர்ப்புப் பறவைகள் {சேவல்கள்} மறுபிறப்பாள வகையினரும், தொடக்கச் சடங்கை மேற்கொண்ட தவசிகளுகும் (உணவாகக்) கொள்ளத் தூய்மையற்றதானது[2].(58)

ஓ! மன்னா {யுதிஷ்டிரனே}, இருபிறப்பாளர்களே {பிராமணர்களே} பூமியில் தேவர்களாக அறியப்படுவதால், அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவர்களுக்கு ஏற்புடையதையே செய்வாயாக.(59) ஓ! குரு குலத்தவனே, இவ்வழியிலேயே, நுட்பமான நுண்ணறிவின் துணையுடனும், வழிமுறைகளைச் செயல்படுத்தியதன் மூலமும், அளவிலா சக்தி கொண்ட சக்ரனால் வலிமைமிக்க அசுரன் விருத்திரன் கொல்லப்பட்டான்.(60) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, பூமியில் வெல்லப்படஇயலாதவனான நீயும் கூட மற்றொரு இந்திரனாகி உன் எதிரிகள் அனைவரையும் கொல்பவனாகலாம்.(61) ஒவ்வொரு பர்வ நாளிலும், விருத்திரனின் இந்தப் புனிதக் கதையைப் பிராமணர்களுக்கு மத்தியில் சொல்வோர், எந்தப் பாவத்தினாலும் ஒருபோதும் களங்கப்படமாட்டார்கள்.(62) விருத்திரன் தொடர்புடைய இந்திரனின் மிகப் பெரிய, அற்புதம் நிறைந்த சாதனையை நான் இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன். இன்னும் வேறு என்ன நீ கேட்க விரும்புகிறாய்” என்று கேட்டார் {பீஷ்மர்}.(63)-

தக்ஷன் வேள்வி! – சாந்திபர்வம் பகுதி – 283-தக்ஷனின் வேள்வியை அழித்த சிவன்; தன் நெற்றி வியர்வையில் உதித்த நோயைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்தது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பெரும் ஞானத்தைக் கொண்ட நீர், கல்வியின் ஒவ்வொரு துறையையும் முழுமையாக அறிந்திருக்கிறீர். விருத்திரன் கொல்லப்பட்ட கதையில் இருந்தே உம்மிடம் கேட்க என்னில் ஒரு கேள்வி எழுந்துள்ளது.(1) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, ஓ! பாவமற்றவரே, விருத்திரன் (முதலில்) நோயால் பீடிக்கப்பட்டான் என்றும், அதன் பிறகே வாசவனின் வஜ்ரத்தால் கொல்லப்பட்டான் என்றும் நீர் சொன்னீர்.(2) ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, அந்த நோய் எவ்வாறு உண்டானது? ஓ! தலைவா, அந்நோயின் தோற்றம் குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நோயின் தோற்றத்தைக் கேட்பாயாக. ஓ! பாரதா, நோயானது முதலில் இருப்பில் எவ்வாறு உதித்தது என்பது குறித்து முழுமையாக விளக்கி விரிவாகப் பேசப் போகிறேன்.(4) ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் மேரு மலைகளில் சாவித்ரி என்ற பெயருடைய ஒரு சிகரம் இருந்தது. உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்பட்ட அது, பெரும் காந்தியுடனும், அனைத்து வகை ரத்தினங்கள் மற்றும் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.(5) அளவிலா பரப்பைக் கொண்டிருந்த அந்தச் சிகரத்திற்கும் யாரும் செல்ல முடியாது. அந்த மலையின் சிகரத்தில் தெய்வீக மஹாதேவன் {சிவன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தான்.(6)

மலைகளின் மன்னனுடைய மகள் {உமை / பார்வதி} அவனது பக்கத்தில் பிரகாசத்துடன் ஒளிர்ந்தபடி அமர்ந்திருந்தாள். உயர் ஆன்ம தேவர்கள், அளவிலா சக்தி கொண்ட வசுக்கள்,(7) மருத்துவர்களில் முதன்மையான உயர் ஆன்ம அசுவினிகள், குஹ்யர்கள் பலரால் பணிவிடை செய்யப்பட்டவனும், பலமும் செழிப்பும் கொண்டவனும், கைலாச சிகரத்தையே தன் வசிப்பிடமாகக் கொண்டவனுமான யக்ஷர்களின் தலைவன் மன்னன் வைஸ்ரவணன் ஆகியோர் அனைவரும் உயர் ஆன்ம மஹாதேவனுக்காக அங்கே காத்திருந்தனர். பெரும் தவசியான உசனஸ் {சுக்கிராச்சாரியர்},(8,9) முனிவர்களில் முதன்மையானவர்கள் தங்களில் முதன்மையானவராகக் கொண்ட ஸனத்குமாரர், அங்கிரஸின் தலைமையிலான பிற தெய்வீக முனிவர்கள்,(10) கந்தர்வர்கள், விஸ்வாவசு, நாரதர், பர்வதர், அப்சரஸ்களின் பல்வேறு இனங்கள் ஆகியோர் அனைவரும் அந்த அண்டத்தின் குருவுக்காக அங்கே காத்திருந்தனர்.(11) தூய்மையான, மங்கலமான காற்று, பல்வேறு நறுமணங்களைச் சுமந்தபடி அங்கே வீசிக் கொண்டிருக்கும். அனைத்துப் பருவங்களுக்கும் உரிய மலர்களுடன் கூடிய மரங்கள் அங்கே நின்று கொண்டிருந்தன.(12) ஓ! பாரதா, எண்ணற்ற வித்யாதரர்களும், சித்தர்களும், தவசிகளும் அனைத்து உயிரினங்களின் தலைவனான மஹாதேவனிடம் காத்திருப்பதற்காக அங்கே சென்றனர்.(13)

பல்வேறு வடிவங்களையும் தன்மைகளையும் கொண்ட பல பூதங்களும், பயங்கரமான பல ராட்சசர்களும், பல்வேறு தன்மைகளைக் கொண்ட வலிமைமிக்கப் பிசாசங்களும்,(14) இன்பத்தில் பித்துப் பிடித்து, பல்வேறு வகை ஆயுதங்களை உயர்த்தியபடி, சக்தியில் சுடர் நெருப்புக்கு ஒப்பாக மஹாதேவனின் அணிவரிசையில் காத்திருந்தனர்.(15) சிறப்புமிக்க நந்தி, அந்தப் பெருந்தேவனின் ஆணையின் பேரில், தன் சுடர்மிக்க சக்தியுடன், நெருப்பின் தழலுக்கு ஒப்பான ஒரு வேலுடன் அங்கே நின்று கொண்டிருந்தான்.(16) ஓ! குருகுலத்தின் மகனே, ஆறுகள் அனைத்திலும் முதன்மையானவளும், அண்டத்தின் புனித நீர்கள் அனைத்திற்கும் பிறப்பிடமானவளுமான கங்கையும், தன் மெய்யுடலுடன் அந்தச் சிறப்பு மிக்கத் தேவனிடம் காத்திருந்தாள்.(17) இவ்வாறு தெய்வீக முனிவர்களாலும், தேவர்களாலும் துதிக்கப்பட்டவனும், அளவிலா சக்தி கொண்ட சிறப்புமிக்கவனுமான மஹாதேவன் அந்த மேருவின் சிகரத்தில் வசித்திருந்தான்.(18)

சில காலம் கழிந்ததும், பிரஜாபதியான தக்ஷன், (வேதங்களில் விதிக்கப்பட்ட) பழங்காலச் சடங்குகளின் படி ஒரு வேள்வியைச் செய்யத் தொடங்கினான்.(19) தக்ஷனின் அந்த வேள்விக்கு, சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்கள் அனைவரும் கூடி செல்வதெனத் தீர்மானித்திருந்தனர்.(20) அந்த உயர் ஆன்ம தேவர்கள், மஹாதேவனின் அனுமதியுடன், காந்தியில் நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான தங்கள் தெய்வீகத் தேர்களில் ஏறி, (இமயத்தில்) கங்கை வெளிப்படுகிறது என்று சொல்லப்படும் இடத்திற்குச் சென்றனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(21)

தேவர்கள் செல்வதைக் கண்டதும், மலைகளின் மன்னனுடைய சிறந்த மகள் {உமை} தன் கணவனிடம் {சிவனிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, சக்ரனின் தலைமையிலான அந்தத் தேவர்கள் எங்கே செல்கின்றனர்? ஓ! உண்மையை அறிந்தவரே, என் மனத்தில் பெரும் ஐயம் நிறைந்திருப்பதால் எனக்கு உண்மையைச் சொல்வீராக” என்று கேட்டாள்.(23)

மஹேஸ்வரன், “ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பெண்ணே, சிறந்தவனான பிரஜாபதி தக்ஷன் ஒரு குதிரை வேள்வியில் தேவர்களைத் துதிக்கிறான். இந்தச் சொர்க்கவாசிகள் அங்கேதான் செல்கின்றனர்” என்றான்.(24)

உமை, “ஓ! மஹாதேவரே, நீர் அவ்வேள்விக்குச் செல்லவில்லையா? அவ்விடத்திற்குச் செல்ல உமக்கென்ன தடை இருக்கிறது?” என்று கேட்டாள்.(25)

மஹேஸ்வரன், “ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பெண்ணே, பழங்காலத்தில் தேவர்கள் ஓர் ஒப்பந்தத்தைச் செய்தனர், அதன் விளைவாக வேள்விகள் அனைத்திலும் என் பங்கெனக் காணிக்கைகளேதும் ஒதுக்கப்படுவதில்லை.(26) ஓ! அழகிய நிறம்படைத்தவளே, அந்த ஒப்பந்தத்தின் விளைவாக அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைக்கு ஏற்புடைய வகையிலும், பழைய வழக்கத்தைப் பின்பற்றியும், தேவர்கள் வேள்விக் காணிக்கைகளில் எந்தப் பங்கையும் எனக்குத் தருவதில்லை” என்றான்.(27)

உமை, “ஓ! சிறப்புமிக்கவரே, உள்ளவை அனைத்திலும் நீரே பலத்தில் முதன்மையானவர். தகுதி, சக்தி, புகழ், செழிப்பு ஆகியவற்றில் நீர் யாருக்கும் வசப்பட்டவரில்லை, உண்மையில் நீர் அனைவரைக் காட்டிலும் மேன்மையானவர்.(28) எனினும், ஓ! பாவமற்றவரே, வேள்விக் காணிக்கையைப் பொறுத்தவரையில் உள்ள இயலாமையின் விளைவால் நான் பெருந்துயரமடைகிறேன், தலை முதல் பாதம் வரை எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது” என்றாள்”.(29)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்தத் தேவி (பார்வதி), உயிரினங்கள் அனைத்தின் தலைவனான தன் தெய்வீகத் துணைவரிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, துயரில் இதயம் எரிய அமைதியாக இருந்தாள்.(30)

அப்போது மஹாதேவன், அவளது இதயத்தில் இருப்பதையும், அவளது எண்ணங்களையும் புரிந்து கொண்டு, (அந்த அவமதிப்பைத் துடைப்பதற்காக) நந்தியிடம், “(தேவியுடன்) இங்கேயே காத்திருப்பாயாக” என்றான்.(31) தேவர்களின் தேவனும், பிநாகைதாரியும், வலிமையும், சக்தியும் கொண்டவனும், யோகத் தலைவர்கள் அனைவருக்கும் தலைவனும் அவன் {சிவன்}, தன் யோக சக்தி அனைத்தையும் திரட்டி, பயங்கரமான தன் தொண்டர்கள் (பூத கணங்கள்) அனைவரின் துணையுடன் (தக்ஷன் வேள்வி செய்து கொண்டிருந்த) அந்த இடத்திற்குச் சென்று அவ்வேள்வியை அழித்தான். ஓ! மன்னா, அவனது தொண்டர்களில் சிலர் உரத்த கூச்சலிட்டனர், சிலர் பயங்கரமாகச் சிரித்தனர்,(32,33) சிலர் அந்த (வேள்வி) நெருப்புகளைக் குருதியால் தணித்தனர்; பயங்கர முகங்களைக் கொண்ட சிலர், வேள்விப்பீடங்களைத் தள்ளி அவற்றைச் சுழற்றத் தொடங்கினர். வேறு சிலர் அந்த வேள்வியில் துணை புரிந்து கொண்டிருந்தவர்களை விழுங்கத் தொடங்கினர். பிறகு, இவ்வாறு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பீடிக்கப்பட்ட அந்த வேள்வி மானின் வடிவை ஏற்று வானத்தினூடாகத் தப்பிச் செல்ல முனைந்தது.(35)

அவ்வடிவில் வேள்வியே அவ்வாறு தப்பிச் செல்வதை உறுதிசெய்து கொண்ட மஹாதேவன், வில் மற்றும் கணையுடன் அதைப் பின்தொடரத் தொடங்கினான்.(36) அளவிலா சக்தி படைத்தவனும், தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அவனது இதயம் கோபத்தில் நிறைந்ததன் விளைவால், பயங்கரமான ஒரு வியர்வைத் துளி அவனது நெற்றியில் தோன்றியது.(37) அந்த வியர்வைத்துளி பூமியில் விழுந்த போது, அதிலிருந்து, யுகத்தின் முடிவில் (அனைத்தையும்) அழிக்கும் நெருப்புக்கு {காலாக்னிக்கு} ஒப்பான சுடர்மிக்க நெருப்பு தோன்றியது.(38) ஓ ஏகாதிபதி, அந்நெருப்பிலிருந்து குட்டையான வடிவம் கொண்டவனும், குருதிசிவப்பிலான கண்களைக் கொண்டவனும், பச்சை {மஞ்சள்} நிற மீசை கொண்டவனுமான ஒருவன் தோன்றினான்.(39)

ஒரு பருந்தையோ, ஓர் ஆந்தையையோ போல அவனது உடல் முழுவதும் மயிரால் மறைக்கப்பட்டிருந்தது, அவனது தலைமயிர் சிலிர்த்து நின்று கொண்டிருந்தது. பயங்கரமானவனான அவனுடைய நிறம் கரியதாகவும், அவனது ஆடை குருதி சிவப்பாகவும் இருந்தது. வைக்கோற்பொதியை எரிக்கும் நெருப்பைப் போல, பெருஞ்சக்தி கொண்ட அவன், வேள்வியின் மெய்யுடலை {அந்த மானை / மானின் வடிவில் இருந்த வேள்வியை} விரைவாக எரித்தான்.(40) காரியத்தைச் சாதித்த அவன், அங்கே கூடியிருந்த தேவர்களையும், முனிவர்களையும் நோக்கி விரைந்தான். அச்சத்தால் நிறைந்த தேவர்கள் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(41) ஓ ஏகாதிபதி, அவனுடைய நடையின் விளைவால் பூமி நடுங்கத் தொடங்கினாள்.(42) “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அண்டமெங்கும் கதறல்கள் கேட்டன. இதைக் குறித்துக் கொண்ட பலமிக்கப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, தன்னை மஹாதேவனிடம் வெளிப்படுத்திக்கொண்டு, பின்வார்த்தைகளில் அவனிடம் பேசினான்.(43)

பிரம்மன் {மஹாதேவனிடம்}, “ஓ! பலமிக்கவனே, இது முதல் தேவர்கள் வேள்விக்காணிக்கைகளில் ஒரு பங்கை உனக்குத் தருவார்கள். ஓ தேவர்கள் அனைவரின் தலைவா, இந்த உன் கோபம் உன்னால் விலக்கப்பட வேண்டும்.(44) ஓ! எதிரிகளை எரிப்பவனே, ஓ! மஹாதேவா, அதோ தேவர்களும், முனிவர்களும் உன் கோபத்தின் விளைவால் மிகவும் கலக்கமடைந்திருக்கின்றனர்.(45) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, ஓ! அற ஆன்மாவே, உன் வியர்வையில் இருந்து உதித்தவன், நோய் என்ற பெயரில் உயிரினங்களின் மத்தியில் உலவுவான்.(46) ஓ! பலமிக்கவனே, இவனது சக்தி அனைத்தும் திரண்ட நிலையிலேயே எஞ்சியிருந்தால் இவனைப் பூமாதேவியால் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, அவனைப் பல்வேறு பகுதிகளாகப் பிரிப்பாயாக” என்றான்.(47)

வேள்விக்காணிக்கைகளில் தனக்குரிய பங்கு முறையாக ஒதுக்கப்படும் என்று பிரம்மன் இந்த வார்த்தைகளைச் சொன்ன போது, பெரும் சக்தி கொண்ட அந்தப் பெரும்பாட்டனிடம் மஹாதேவன், “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறினான்.(48) உண்மையில், பிநாகைதாரியான அந்தப் பவன் {சிவன்}, சற்றே புன்னகைத்து மகிழ்ச்சியால் நிறைந்தான். வேள்விக்காணிக்கைகளில் இருந்து தனக்கெனப் பெரும்பாட்டனால் ஒதுக்கப்பட்ட பங்கை அவன் ஏற்றான்.(49) அனைத்தின் தன்மைகளையும் அறிந்த மஹதேவன், அனைத்து உயிரினங்களின் அமைதிக்காக அந்த நோயை பல பகுதிகளாகப் பிரித்தான். ஓ மகனே, அஃதை அவன் எவ்வாறு செய்தான் என்பதைக் கேட்பாயாக.(50) யானைகளின் தலையில் உணரப்படும் வெப்பம் {மண்டை கொதிப்பு}, மலைகளின் தாது {நிலக்கீல்}, நீரில் மிதக்கும் பாசி, பாம்புகளின் சட்டை,(51) காளைகளின் குளம்புகளில் தோன்றும் புண், விளைச்சலற்ற பூமிப் பகுதிகளின் உப்பு, விலங்குகள் அனைத்தின் மங்கலான பார்வை,(52) குதிரைகளுக்குக் தொண்டையில் தோன்றும் நோய்{கண்டத்தில் தோன்று சதையடைப்பு}, மயில்களுக்குத் தலையில் தோன்றும் கொண்டை {மண்டை வெடிப்பு}, குயில்களின் கண்ணோய் ஆகியன அந்த உயரான்ம மஹாதேவனால் நோயெனப் பெயரிடப்பட்டன.(53)

இதையே நாம் கேள்விப்படுகிறோம். ஆட்டின் ஈரல் நோய், கிளிகளின் விக்கல் ஆகியனவும் நோயின் வடிங்களாகவே அறியப்படுகின்றன. ஓ! அற மன்னா, புலிகளின் களைப்பும் நோயெனவே அறியப்படுகிறது.(54) ஓ! பாரதா, இவற்றைத் தவிர்த்து, மனிதர்களுக்கு மத்தியில் நோயானாது, பிறப்பின்போதும், மரணத்தின் போதும், அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் அனைவரின் உடலுக்குள்ளும் நுழைகிறது.(55) நோய் என்றழைக்கப்படும் இவையும், அவையும் பயங்கர சக்தி கொண்ட மஹேஸ்வரனாகவே அறியப்படுகிறது. உயிரினங்கள் அனைத்தின் மேலும் அதிகாரம் கொண்டவன் அவன் என்பதால் அவன் அனைவராலும் வழிபடத்தகுந்தவனாவான்.(56)

அவனே {மகாதேவனே} அறவோரில் முதன்மையான விருத்திரன் கொட்டாவி விட்டபோது அவனை வென்றவனாவான். அதன் பிறகே சக்ரன் {இந்திரன்} அவன் மீது வஜ்ரத்தை ஏவினான்.(57) ஓ! பாரதா, விருத்திரனின் உடலுக்குள் புகுந்த அந்த வஜ்ரம் அவனை இரண்டாகப் பிளந்தது. வஜ்ரத்தால் இரண்டாகப் பிளக்கப்பட்டவனும், பெரும் யோக சக்திகளைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான அந்தச் சூரன், அளவிலா சக்தியுடன் கூடிய விஷ்ணுவின் உலகத்திற்கு {வைகுந்தத்திற்குச்} சென்றான்.(58) விஷ்ணுவிடம் அவன் கொண்ட பக்தியின் விளைவால் அவன் மொத்த அண்டத்தையும் மூழ்கடிப்பதில் வென்றான். விஷ்ணுவிடம் அவன் கொண்ட பக்தியின் விளைவாலேயே அவன் கொல்லப்பட்ட போது விஷ்ணுவின் உலகத்திற்கு உயர்ந்தான்.(59) ஓ! மகனே, இவ்வாறு விருத்திரனின் கதையைச் சொன்னதன் வழியாக நோயைக் குறித்த விவரங்களை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். வேறு எதைக் குறித்து நான் உன்னிடம் பேச வேண்டும்?(60) மிகுந்த கவனத்துடனும், உற்சாகம் நிறைந்த இதயத்துடனும் நோயின் தோற்றத்தைக் குறித்த இந்தக் கதையைப் படிப்பவன், நோயில் இருந்து விடுபட்டு, தன் பங்காக மகிழ்ச்சியையே எப்போதும் பெறுவான். மகிழ்ச்சியால் நிறையும் அவன், தனது இதயத்தில் நிறுவும் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்” {என்றார் பீஷ்மர்}”.(61)

வீரபத்ரன், பத்ரகாளி! – சாந்திபர்வம் பகுதி – 284-மஹாதேவன் வீரபத்ரனைக் கொண்டு தக்ஷனின் வேள்வியை அழித்ததையும், பத்ரகாளியின் தோற்றத்தையும், சிவனிடம் தக்ஷன் பெற்ற வரத்தையும் ஜனமேஜயனுக்குச் சொன்ன வைசம்பாயனர்.

{நாகவேள்வியில்} ஜனமேஜயன் {வியாசரின் சீடரான வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, பிரசேதஸின் மகனான பிரஜாபதி தக்ஷனின் குதிரை வேள்வி வைவஸ்வத மனுவின் காலத்தில் எவ்வாறு அழிக்கப்பட்டது?(1) உமா தேவி சினத்திலும், துயரத்திலும் நிறைந்ததைப் புரிந்து கொண்டவனும், பலமிக்கவனும், அனைத்துப் பொருட்களின் ஆன்மா ஆனவனுமான மஹாதேவன் கோப வசப்பட்டான். பிறகு பிரிந்து போன அந்த வேள்வியின் அங்கங்களை அவனது {சிவனின்} அருளைக் கொண்டு தக்ஷனால் எவ்வாறு ஒன்றுதிரட்ட முடிந்தது? இவை யாவையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! பிராமணரே, உண்மையில் நடந்தவாறே இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் சொன்னார், “பழங்காலத்தில் தக்ஷன், மலைகளில் கங்கை வெளிப்படும் இடமும், முனிவர்களும் சித்தர்களும் வசிக்கும் புனிதமான இடமுமான இமயச் சாரலில் ஒரு வேள்வி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.(3) மரங்கள் மற்றும் பல்வேறு வகைக் கொடிகளால் அடர்ந்த அந்தப் பகுதியில் கந்தர்வர்களும், அப்சரஸ்களும் நிறைந்திருந்தனர். முனிவர் கூட்டங்களால் சூழப்பட்டவனும், அறவோரில் முதன்மையானவனும், உயிரினங்களை உண்டாகச் செய்பவனுமான தக்ஷனிடம் மரியாதையுடன் கைகூப்பியவாறு பூலோகவாசிகளும், ஆகாயவாசிகளும், சொர்க்கவாசிகளும் ஒன்றாகக் காத்திருந்தனர்.(4,5) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பாம்புகள், ராட்சசர்கள், ஹாஹா, ஹுஹு என்ற பெயரைக் கொண்ட இரு கந்தர்வர்கள், தும்புரு, நாரதர்,(6) விஸ்வாவசு, விஸ்வசேனன், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், சாத்தியர்கள், மருத்துகள்,(7) ஆகியோர் அனைவரும் வேள்வியில் பங்கெடுக்க இந்திரனுடன் அங்கே வந்தனர். வெப்பத்தைப் பருகுபவர்கள், சோமத்தைப் பருகுபவர்கள், புகையைப் பருகுபவர்கள், ஆஜ்யத்தைப் பருகுபவர்கள்,(8) முனிவர்கள், பித்ருக்கள் ஆகியோரும் பிராமணர்களுடன் அங்கே வந்தனர். இவர்களும், ஜராயுஜம், அண்டஜம், ஸ்வேதஜம், உத்பிஜ்ஜம் எனும் நான்கு வகை உயிரினங்களும் அந்த வேள்விக்கு அழைக்கப்பட்டன. மதிப்புடன் அழைக்கப்பட்ட தேவர்களும் தங்கள் துணைகளுடன் அங்கே தெய்வீகத் தேர்ஃகளில் வந்திருந்து சுடர்மிக்க நெருப்புகளைப் போல ஒளிர்ந்தபடியே அமர்ந்திருந்தனர்.(9,10)

அவர்களைக் கண்ட முனிவர் ததீசி துயராலும், கோபத்தாலும் நிறைந்து, “இந்த வேள்வியில் ருத்திரன் துதிக்கப்படாததால், இஃது ஒரு வேள்வியுமல்ல, தகுதியைத் தரும் அறச்சடங்கும் அல்ல.(11) உங்களை நீங்களே மரணத்திற்கும், கட்டுகளுக்கும் நிச்சயம் வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள். ஐயோ, காலத்தின் போக்கு எவ்வாறு இப்படி அமைந்தது? பிழையால் திகைக்கும் நீங்கள் உங்களுக்காகக் காத்திருக்கும் அழிவைக் காணவில்லை. இந்தப் பெருவேள்வியின் போக்கில் உங்கள் வாயிலில் ஒரு பயங்கரப் பேரிடர் நிற்கிறது. அதை நீங்கள் காணவில்லை” என்றார்.(12)

இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பெரும் யோகி {ததீசி}, (யோக) தியானத்தின் கண்களைக் கொண்டு எதிர்காலத்தைக் கண்டார். அவர் மஹாதேவனையும்ம், சிறந்த வரங்களை அளிப்பவளான அவனது தெய்வீக மனைவியையும்,(13), அந்தத் தேவிக்கு அருகில் உயர் ஆன்ம நாரதரையும் (கைலாச மலைச் சிகரத்தில் அர்ந்திருப்பதையும்) கண்டார். யோகத்தை அறிந்தவரான ததீசி நடக்கப் போவதை உறுதி செய்து கொண்டு உயர்வான நிறைவை அடைந்தார்.(14) தேவர்கள் அனைவரும், அங்கே வந்திருந்த பிறரும், அனைத்து உயிரினங்களின் தலைவனை அழைக்கத் தவறுவதில் ஒரே மனமாய் இருந்தனர்.

ததீசி மட்டுமே, அந்த இடத்தை விட்டு அகல விரும்பி,(15) “எவன் வழிபடப்படக் கூடாதோ அவனை வழிபட்டு, வழிபட வேண்டியவனை வழிபட மறுப்பதன் மூலம் ஒரு மனிதன் கொலை செய்த பாவத்தை எப்போதும் பெற்றிருப்பான்.(16) நான் ஒருபோதும் பொய் பேசியவனில்லை, ஒரு பொய்யையும் நான் ஒரு போதும் பேச மாட்டேன். இங்கே தேவர்கள் மற்றும் முனிவர்களுக்கு மத்தியில் நான் உண்மையைச் சொல்கிறேன்.17) அண்டத்தைப் படைத்தவனும், அனைவரின் தலைவனும், பலமிக்கக் குருவும், வேள்விக் காணிக்கைகளை ஏற்பவனுமான அனைத்துயிரினங்களின் பாதுகாவலன் விரைவில் இந்த வேள்விக்கு வருவான், நீங்கள் அனைவரும் அவனைக் காண்பீர்கள்” என்றார்.(18)

தக்ஷன், “சூலபாணிகளாகவும், தலையில் சடாமுடி தரித்தவர்களாகவும் பல ருத்திரர்களை நாம் கொண்டிருக்கிறோம். அவர்கள் எண்ணிக்கையில் பதினொருவராக இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் நான் அறிவேன், ஆனால் இந்த (புதிய ருத்திரனான) மஹேஸ்வரனை நான் அறியவில்லை” என்றான்.(19)

ததீசி, “மஹேஸ்வரனை அழைக்கக்கூடாது என்பது இங்குள்ளவர் அனைவரின் ஆலோசனையாகத் தெரிகிறது. எனினும், அவனை விட மேன்மையாகச் சொல்லக் கூடிய எந்தத் தேவனையும் நான் காணவில்லை. முன்மொழியப்பட்டிருக்கும் இந்தத் தக்ஷனின் வேள்வி நிச்சயம் அழிவடையப் போகிறது என நான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.(20)

தக்ஷன், “இங்கே இந்தத் தங்கக் கலசத்தில், மந்திரங்களாலும், (சடங்குளின்) விதிப்படியும் புனிதமாக்கப்பட்ட வேள்விக் காணிக்கையானது வேள்விகள் அனைத்தின் தலைவனுக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. நான் இந்தக் காணிக்கையை, ஒப்பீட்டைக் கடந்து விஷ்ணுவுக்குக் கொடுக்க விரும்புகிறேன். அவனே பலமிக்கவனும், அனைவரின் குருவுமாவான். அவனுக்காகவே வேள்விகள் செய்யப்படுகின்றன” என்றான்”.(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அதேவேளையில் தன் தலைவனுடன் அமர்ந்திருந்த உமாதேவி இந்த வார்த்தைகளைச் சொன்னாள். “வேள்விக் காணிக்கைகளில் பாதியையோ, மூன்றில் ஒரு பகுதி பங்கையோ சிறப்புமிக்க என் கணவர் பெறுவதற்கு நான் என்ன கொடைகளைக் கொடுக்க வேண்டும்? என்ன நோன்புகளை இருக்க வேண்டும், என்ன தவங்களைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டாள்.(22)

துயரால் கலக்கமடைந்து திரும்பத் திரும்ப இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்த தன் மனைவியிடம் சிறப்புமிக்க அந்த மஹாதேவன் மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன், “ஓ! தேவி, நீ என்னை அறியவில்லை. ஓ! மென்மையான அங்கங்களையும், இடையையும் கொண்டவளே, வேள்விகளின் தலைவனிடம் பேச வேண்டிய சரியான வார்த்தைகளை நீ அறியவில்லை.(23) ஓ! நீண்ட கண்களை உடையவளே, தியானமற்ற பாவிகளால் மட்டுமே என்னைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை நான் அறிவேன். உன் மாயா சக்தியால்தான் இந்திரனின் தலைமையிலான தேவர்களும், மூன்று உலகங்கள் அனைத்தும் திகைப்படைகின்றன[1].(24) வேள்விகளில் ஓதுவார்கள் என்னையே துதிக்கிறார்கள். சாமங்கள் பாடுபவர்கள் தங்கள் ரதந்தரங்களில் என்னையே பாடுகிறார்கள். வேதங்களை அறிந்த பிராமணர்கள் தங்கள் வேள்விகளை எனக்காகவே செய்கிறார்கள். மேலும், அதர்யுக்கள், வேள்விக் காணிக்கைகளின் பங்குகளை {ஹவிர்ப்பாகத்தை} எனக்கே அர்ப்பணிக்கிறார்கள்” என்றான்.(25){உமா} தேவி, “சாதாரணத் திறன் கொண்டவர்கள் கூட, தங்கள் மனைவியரின் முன்னிலையில் தங்களையே மெச்சிக் கொண்டு, தற்பெருமையில் ஈடுபடுவார்கள். இதில் எந்த ஐயமும் இல்லை” என்றாள்.(26)

புனிதமானவன் {சிவன்}, “ஓ! தேவர்கள் அனைவரின் ராணியே {தேவர்களுக்கெல்லாம் ஈஸ்வரியே}, நிச்சயமாக என்னை நானே மெச்சிக் கொள்ளவில்லை. ஓ! கொடியிடையாளே, நான் செய்யப் போவதை இப்போது பார். ஓ! அழகிய நிறம் படைத்தவளே, ஓ! என் அழகிய மனைவியே, (உனக்கு நிறைவைத் தராத) இந்த வேள்விக்காக (இந்த வேள்வியை அழிப்பதற்காக) நான் உண்டாக்கப்போகும் ஒருவனைக் காண்பாயாக” என்றான்.(27)

உயிரினும் அன்புக்குரிய தன் மனைவி உமையிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன பலமிக்க மஹாதேவன், காண்போருக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தச் செய்யும் ஒரு பயங்கரப் பூதத்தைத் தன் வாயில் இருந்து உண்டாக்கினான். அவனது உடலில் இருந்து வெளிப்பட்ட சுடர்மிக்கத் தழல்களுடன் அவனைக் காண இன்னும் பயங்கரமாக இருந்தது. அவனது கரங்கள் எண்ணிக்கையில் பலவாக இருந்தன, அவை ஒவ்வொன்றிலும் காண்போரை அச்சத்தில் ஆழ்த்தும் ஓர் ஆயுதமும் இருந்தது.(28)

அவ்வாறு உண்டாக்கப்பட்ட அந்தப் பூதம், அந்தப் பெருந்தேவனின் முன்பு கூப்பிய கரங்களுடன் நின்று, “நான் நிறைவேற்ற வேண்டிய கட்டளைகள் என்ன?” என்று கேட்டது. மஹேஸ்வரன், “சென்று, தக்ஷனின் வேள்வியை அழிப்பாயாக” என்றான்.(29)

இவ்வாறு அணையிடப்பட்டதும், சிங்கத்தின் ஆற்றலைக் கொண்டதும், மஹாதேவனின் வாயில் இருந்து வெளிவத்துமான அந்தப் பூதம், தன் சக்தி அனைத்தையும் வெளிப்படுத்தாமல், வேறு எவரின் துணையும் இல்லாமல் உமையின் கோபத்தைத் தணிக்கத் தக்ஷனின் வேள்வியை அழிக்க விரும்பியது.(30) கோபத்தால் தூண்டப்பட்டவளான மஹேஸ்வரன் மனைவியும், மஹாகாளி என்று பெயரில் அறியப்பட்ட ஒரு பயங்கர வடிவத்தைத் தானே ஏற்று, (தனக்காக அந்த வேள்வியை அழிக்கத் தன் தலைவனைத் தூண்டியது அவளே என்பதால்) தனது அழிக்கும் செயலைத் தானே தன் கண்களால் காண்பதற்காக, மஹாதேவனின் வாயிலிருந்து வெளிப்பட்ட அந்தப் பூதத்திற்குத் துணையாகச் சென்றாள். அந்த வலிமைமிக்கப் பூதம், மஹாதேவனிடம் தலைவணங்கி அனுமதிபெற்ற பிறகு புறப்பட்டது.(31) சக்தியிலும், பலத்திலும், வடிவத்திலும் அவன் {அந்தப் பூதம்}, தன்னைப் படைத்த மஹேஸ்வரனுக்கு ஒப்பாக இருந்தான். உண்மையில் அவன் (மஹாதேவனின்) கோபம் வாழும் உடலாக இருந்தான்.(32)

அளவிலா வலிமையும், சக்தியும், அளவிலா துணிவும், ஆற்றலும் கொண்ட அவன், தேவியின் கோபத்தைப் போக்குபவனான வீரபத்ரன் என்ற பெயரால் அழைக்கப்படலானான். அப்போது அவன், தன் உடலின் மயிர்க்கால்களில் இருந்து ரௌம்மியர்கள் என்ற பெயரில் அறியப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான கணங்களைப் படைத்தான்.(33) பயங்கர சக்தியும், ஆற்றலும் கொண்டவையும், அக்காரியத்தில் ருத்திரனுக்கு ஒப்பானவையும், கடுமை நிறைந்தவையுமான அந்தக் கணக்கூட்டம், தக்ஷனின் வேள்வியை அழிக்கும் விருப்பத்தால் தூண்டப்பட்டு இடியின் விசையுடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்றது. பயங்கரம் நிறைந்தவையும், பெரும் வடிவங்களையும் கொண்ட அவை, எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தன.(34) அவை தங்கள் குழப்பமான கதறல் மற்றும் அலறல்களால் வானத்தை நிறைத்தன. அவ்வொலி சொர்க்கவாசிகளை அச்சத்தில் நிறைத்தது.(35)

மலைகள் பிளந்து விழுந்தன, பூமி நடுங்கியது. சுழற்காற்றுகள் வீசத்தொடங்கியது. பெருங்கடல் பொங்கியது.(36) தூண்டப்படும் நெருப்புகள் சுடர்விட மறுத்தன. சூரியன் மங்கினான். கோள்கள், விண்மீன்கள், நட்சத்திரக் கூட்டங்கள், சந்திரன் ஆகியவை ஒளிரவில்லை.(37) முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியோர் நிறம் மங்கினர். அண்டந்தழுவிய இருள் வானத்திலும் பூமியிலும் பரவியது. அவமதிக்கப்பட்ட ருத்திரர்கள் அனைத்திற்கும் தீமூட்டத் தொடங்கினர்.(38) பயங்கர வடிவிலான அவர்களில் சிலர் அடிக்கவும், தாக்கவும் தொடங்கினர். சிலர் கலங்கடிக்கவும், பிறரை நசுக்கவும் தொடங்கினர்.(39) காற்று அல்லது மனோவேகத்தைக் கொண்ட சிலர், நெருக்கத்திலும், தொலைவிலும் விரையத் தொடங்கினர். சிலர் வேள்விப்பாத்திரங்களையும், தெய்வீக ஆபரணங்களையும் நொறுக்கத் தொடங்கினர். ஆகாயத்தில் மினுங்கும் நட்சத்திரங்களைப் போலத் துண்டுகள், தரையில் சிதறிக் கிடந்தன.(40)

சிறந்த பண்டங்கள், பானக்குடுவைகள் மற்றும் உணவுக் குவியல்கள் மலைகளைப் போலத் தெரிந்தன. தெளிந்து நெய்யையும், பாயசத்தையும் சகதியாகவும், கட்டித் தயிரை நீராகவும், சர்க்கரைக் கட்டிகளை மணலாகவும் கொண்ட பாலாறுகள் அனைத்துப் பக்கங்களிலும் ஓடின. அந்த ஆறுகள் அறுசுவைகளைக் கொண்டவையாக இருந்தன. பாகாலான மிக அழகிய தடாகங்களும் அவற்றில் இருந்தன.(41,42) பல்வேறு சிறந்த வகைகளிலான இறைச்சி, பல்வேறு வகையான உணவுகள், பல அற்புத வகைகளிலான பானங்கள், நக்கவும், உறிஞ்சவும் தக்க பல்வேறு வகைகளிலான உணவுகள் ஆகியவற்றைப்(43) பல்வேறு வாய்களைக் கொண்ட அந்தக் கணங்களின் படை உண்ணத் தொடங்கியது. பிறகு அவை, அந்தப் பல்வேறு வகை உணவுகளை வீசவும், சிதறவும் செய்தன. ருத்திரனுடைய கோபத்தின் விளைவால் அந்தப் பெரும் பூதங்கள் ஒவ்வொன்றும் அனைத்தையும் அழிக்கும் யுக நெரிப்பைப் போலத் தெரிந்தன.(44) தெய்வீகத் துருப்புகளைக் கலங்கடித்த அவை, அவர்களை அச்சத்தால் நடுங்கச் செய்து, அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடச் செய்தன. கடுமைநிறைந்த அந்தக் கணங்கள், ஒன்றோடொன்று விளையாடிக் கொண்டு, தெய்வீகக் காரிகைகளைப் பிடித்துத் தள்ளவும், வீசவும் செய்தன.(45)

ருத்திரனின் கோபத்தால் தூண்டப்பட்டுக் கடுஞ்செயல்களைச் செய்த அந்தக் கணங்கள், தேவர்கள் அனைவராலும் பெருங்கவனத்துடன் பாதுகாக்கப்பட்ட அந்த வேள்வியை மிக விரைவில் எரித்தன.(46) ஒவ்வொரு உயிரினத்தையும் அச்சத்தால் பீடிக்கச் செய்த அவற்றின் முழக்கங்கள் மிக உரத்தவையாக இருந்தன. அவை வேள்வித் தலையைக் கொய்து முழக்கமிட்டபடியே மகிழ்ந்தன.(47) பிறகு, பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், உயிர்களின் மூதாதையான தக்ஷனும் மரியாதையுடன் அந்த வலிமைமிக்கப் பூதத்திடம் தங்கள் கரங்களைக் கூப்பி, “நீ யார் என்பதை எங்களுக்குச் சொல்வாயாக” என்று கேட்டனர்.(48)

அதற்கு வீரபத்ரன், “நான் ருத்திரனுமல்லேன், அவனது மனைவியான உமாதேவியும் அல்லேன். (இந்த வேள்வியில் அளிக்கப்படும்) கூலியைப் பெறுவதற்காகவும் நான் இங்கே வரவில்லை. உமை கோபமடைந்த செய்தியை அறிந்து, அனைத்து உயிரினங்களின் ஆன்மாவான பலமிக்கத் தலைவன் {சிவன்} கோப வசமடைந்தான்.(49) பிராமணர்களில் முதன்மையானவர்களைக் காண நான் இங்கே வரவில்லை. ஆவலால் தூண்டப்பட்டும் நான் இங்கே வரவில்லை. நான் உங்களுடைய இந்த வேள்வியை அழிக்கவே இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவீராக.(50) வீரபத்ரன் என்ற பெயரால் அறியப்படும் நான், ருத்திரனின் கோபத்தில் இருந்து எழுந்தவனாவேன். பத்திரகாளி என்று அழைக்கப்படும் (என் தோழியான) இந்த மங்கை, தேவியின் கோபத்தில் இருந்து உதித்தவளாவாள். தேவர்களின் தேவனால் அனுப்பப்பட்டே நாங்கள் இருவரும் இங்கே வந்திருக்கிறோம்.(51) ஓ! பிராமணர்களில் முதன்மையானவர்களே, தேவர்களின் தலைவனான உமையின் கணவனிடம் பாதுகாப்பை நாடுவீராக. வேறு எந்தத் தேவனிடம் இருந்தும் வரங்களைப் பெறுவதைவிட அந்த முதன்மையான தேவனின் கோபத்தைத் தூண்டுவதைத் தவிர்ப்பதே கூடத் தகுந்ததாகும்” என்றான் {வீரபத்ரன்}.(52)

வீரபத்ரனின் வார்த்தைகளைக் கேட்டவனும், அறவோர் அனைவரிலும் முதன்மையானவனுமான தக்ஷன், மஹேஸ்வரனை வணங்கி, அவனை நிறைவு செய்வதற்காகப் பின்வரும் ஸ்லோகத்தைச் சொன்னான்.(53) {தக்ஷன்} “பிரகாசமானவனும், நித்தியமானவனும், நிலையானவனும், அழிவற்றவனும், தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனும், அண்டமனைத்தின் தலைவனுமான ஈசானின் பாதங்களின் நான் வீழ்கிறேன்” {என்றான்}[2].(54)இவ்வாறு புகழப்பட்ட பெருந்தேவனான அந்த மஹாதேவன், பிராணன் மற்றும் அபானன் (ஐந்து உயிர் மூச்சுகளில் முதன்மையான இரண்டு) ஆகிய இரண்டையும் நிறுத்தி, தன் வாயைச் சரியாக மூடி,(60) அனைத்துப் புறங்களிலும் (நலம் பயக்கும்) தன் பார்வையைச் செலுத்தி, அங்கே தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். பல கண்களைக் கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் வெல்பவனும், தேவர்கள் அனைவரின் தேவர்களுக்கே தலைவனுமான அவன், வேள்வி நெருப்புள்ள குளியில் இருந்து திடீரென எழுந்தான்.(61) ஆயிரம் சூரியர்களின் பிரகாசத்தைக் கொண்டவனும், மற்றொரு சம்வர்த்தக நெருப்பைப் போலத் தெரிந்தவனுமான அந்தப் பெருந்தேவன், (தக்ஷனைக் கண்டு) மென்மையாகச் சிரித்து, அவனிடம், “ஓ பிராமணா, நான் உனக்காக என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(62)

சரியாக அந்த நேரத்தில், தேவர்கள் அனைவரின் குருவானவர் {பிருஹஸ்பதி}, மோக்ஷ பகுதிகள் அடங்கிய வேத ஸ்லோகங்களைக் கொண்டு மஹாதேவனைத் துதித்தார். அப்போது அனைத்து உயிரினங்களின் மூதாதையான தக்ஷன், அதீதக் கலக்கமடைந்தும், அச்சத்தாலும், பீதியாலும் நிறைந்து, மரியாதையுடன் தன் கரங்களைக் குவித்து, கண்ணீரால் குளித்த கண்கள் மற்றும் முகத்துடன் அந்தப் பெருந்தேவனிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(63)

தக்ஷன், “பெருந்தேவன் என்னிடம் மனம் நிறைந்திருந்தால், அனைத்துயிரினங்களின் பெருந்தலைவன் எனக்கு வரமருளும் மனநிலையில் இருந்தால்,(64) பெருங்கவனத்துடன் நீண்ட வருட காலங்கள் சேகரிக்கப்பட்டவையும், இப்போது எரிக்கப்பட்டு, உண்ணப்பட்டு, பருகப்பட்டு, விழுங்கப்பட்டு, அழிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, சீர்குலைக்கப்பட்டவையுமான இந்த என் பொருட்கள் அனைத்தும்,(65) ஒன்றுக்குமாகாமால் போக வேண்டாம் {வீணாக வேண்டாம்}. இந்தப் பொருட்கள் எனக்குப் பயன்பட வேண்டும். இதுவே நான் வேண்டிக் கேட்கும் வரமாகும்” என்று கேட்டான்.(66)

பகனின் கண்களைப் பிடுங்கியவனான சிறப்புமிக்க ஹரன் அவனிடம் {தக்ஷனிடம்}, “நீ கேட்பது போலவே ஆகட்டும்” என்றான். அனைத்து உயிரினங்கள்ளின் சிறப்புமிக்க மூதாதையும், அறத்தின் பாதுகாவலனுமான அந்த முக்கண் தேவனால் இவ்வார்த்தைகளே சொல்லப்பட்டன.(67) பவனிடம் இருந்து அந்த வரத்தைப் பெற்ற தக்ஷன், காளையைத் தன் சின்னமாகக் கொண்ட அந்தத் தேவனின் முன்பு முழங்காலில் விழுந்து, அவனது ஆயிரத்தெட்டுப் பெயர்களைச் சொல்லித் துதித்தான்” {என்றார் வைசம்பாயனர்}[3].(68)

சிவசஹஸ்ரநாமாவளி! – சாந்திபர்வம் பகுதி – 285-சிவபெருமானின் ஆயிரத்தெட்டுப் பெயர்களைச் சொல்லித் துதித்த தக்ஷன்; தக்ஷனுக்கு வரமளித்த சிவன்; பாசுபத விரதம் குறித்துச் சொன்ன சிவன்; சிவசஹஸ்ரநாமத்தைச் சொல்வதால் உண்டாகும் பயனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொன்னார்}, “யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, உயிரினங்களின் மூதாதையான தக்ஷன் பெருந்தெய்வத்தை {மஹாதேவனைத்துதித்த அந்தப் பெயர்களை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். ஓ! பாவமற்றவரே, மதிப்புடன் கூடிய ஆவல் என்னை அவற்றைக் கேட்கத் தூண்டுகிறது” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இயல்புக்கு மீறிய செயல்களைச் செய்பவனும், இரகசிய நோன்புகளையுடையவனுமான அந்தத் தேவதேவனின் இரகசியமான மற்றும் வெளிப்படையான பெயர்களை இப்போது கேட்பாயாக.(2)

தக்ஷன், ஓ! தேவதேவர்கள் அனைவருக்கும் தலைவா {ஈஸ்வரா}, அசுரர்களின் படைகளை அழிப்பவனை நான் வணங்குகிறேன். தேவர் தலைவனின் பலத்தை முடக்குபவன் நீயே. தேவர்களாலும், தானவர்களாலும் துதிக்கப்படுபவன் நீயே.(3) ஆயிரங்கண் கொண்டவன் நீயே, கடுமை நிறைந்த கண் கொண்டவன் நீயே, முக்கண்ணன் நீயே. யக்ஷ ஆட்சியாளனின் நண்பன் நீயே. அனைத்து இடங்களிலும், அனைத்துத் திசைகளிலும் பரந்திருக்கும் கரங்களையும் கால்களையும் கொண்டவன் நீயே. அனைத்துப் புறங்களிலும் திரும்பும் கண்களும், தலையும், வாயும் கொண்டவன் நீயே.(4) அண்டத்தில் எங்கும் காதுகளைக் கொண்டவன் நீயே, ஓ! தலைவா, எங்கும் இருப்பவன் நீயே. கணை போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே, பெரிய காதுகளைக் கொண்டவன் நீயே, குடம் போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே. பெருங்கடலின் கொள்கலன் நீயே.(5) யானை, அல்லது காளை, அல்லது விரிந்த உள்ளங்கையைப் போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே. உன்னை வணங்குகிறேன். நூறு வயிறுகளைக் கொண்டவனே, நூறு மயிர்ச்சுழிகளைக் கொண்டவனே, நூறு நாவுகளைக் கொண்டவனே. நான் உன்னை வணங்குகிறேன்.(6)

காயத்ரியை பாடுபவர்கள், உன் பெருமைகளையே துதித்தே அந்தக் காயத்ரியைப் பாடுகின்றனர், சூரிய வழிபாட்டாளர்கள், சூரியனைத் துதிப்பதில் உன்னையே துதிக்கின்றனர். பிரம்மன் என்றும், இந்திரன் என்றும், (அளவற்ற) ஆகாயம் {ஊர்த்தவன்} என்றும் முனிவர்கள் உன்னையே கருதுகின்றனர்.(7) ஓ! வலிமைமிக்க வடிவம் கொண்டவனே, பெருங்கடலும் வானும் உன் இரு வடிவங்களாகும். கொட்டிலுக்குள் உள்ள பசுவைப் போல அனைத்துத் தேவர்களும் உன் வடிவத்திலேயே வசிக்கின்றனர்.(8) சோமன், அக்னி, நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, ஆதித்தியன், விஷ்ணு, பிரம்மன், பிருஹஸ்பதி ஆகியோரை நான் உன் உடலிலேயே காண்கிறேன்.(9) ஓ சிறப்புமிக்கவனே, காரணனும், விளைவும் {காரியமும்}, செயல்பாடும் {ப்ரிகையை}, உண்மை மற்றும் உண்மையற்ற அனைத்திற்கான கருவியும் நீயே, படைப்பும், அழிவும் நீயே.(10)

பவன் என்றும், சர்வன் என்றும் ருத்திரன் {பாவத்தை விலக்குபவன்} என்றும் அழைக்கப்படும் உன்னை வணங்குகிறேன். வரங்களை அளிப்பவனான {வரதனே} உன்னை நான் வணங்குகிறேன்.(11) அனைத்து உயிரினங்களின் தலைவனான உன்னை வணங்குகிறேன். அந்தகனைக் கொல்பவனான உன்னை வணங்குகிறேன்.(12) மூன்று சடை, மூன்று தலை ஆகியவற்றைக் கொண்டு, சிறந்த திரிசூலத்தைத் தரித்து, மூன்று கண்களைக் கொண்டவன் நீயே, எனவே, திரயம்பகம் என்றும் திரிநேத்திரன் என்றும் அழைக்கப்படுபவன் நீயே. மூன்று நகரத்தை {திரிபுரத்தை} அழித்த உன்னை வணங்குகிறேன்.(13) சண்டன் {குரூர வடிவத்தக் கொண்டன்} என்றும் குண்டன் {சட்டி போன்றவன்} என்றும் அழைக்கப்படுவனும், (அண்ட) முட்டையாய் இருப்பவனும், (அண்ட) முட்டையைச் சுமப்பவனும், தவசியின் தண்டத்தைத் தரித்தவனும், எங்கும் காதுகளைக் கொண்டவனும், தந்திமுண்டன் என்றழைக்கப்படுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(14) மேல்நோக்கிய கோரப் பற்களும், தலைமயிரும் கொண்டவனும், களங்கமற்று வெண்மையாயிருப்பவனும் {சுக்லனும்}, அண்டம் முழுவதும் பரந்து விரிந்து இருப்பவனும் {அவத்தன்}, {ரஜோ குணத்தால்} சிவப்பானவனும் {விலோஹிதனும்}, பழுப்பானவும் {தூம்ரனும்}, நீலத் தொண்டை கொண்டவனுமான {நீலகண்டனுமான} உன்னை வணங்குகிறேன்.(15)

ஒப்பிலாத பயங்கர வடிவம் கொண்டவனே {விரூபனே}, மிக மங்கலமானவனே {சிவனே} உன்னை நான் வணங்குகிறேன். சூரியனே, கழுத்தில் சூரியர்களின் மாலை தரித்தவனே, சூரியச் சின்னம் பொறித்த கொடிமரங்களையும், கொடிகளைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன்.(16) பூத கணங்களின் தலைவனே, காளையின் கழுத்தைக் கொண்டவனே, வில்லைத் தரித்தவனே {தந்வியே}, எதிரிகள் அனைவரையும் நொறுக்குபவனே, தண்டனையின் வடிவமே {தண்டனே}, மரவுரியாடை தரித்தவனே, உன்னை வணங்குகிறேன்.(17) வயிற்றில் தங்கம் கொண்டவனே, தங்கக் கவசம் பூண்டவனே, தங்க மகுடம் கொண்டவனே, உலகில் உள்ள தங்கமனைத்திற்கும் தலைவனே, உன்னை வணங்குகிறேன்.(18) துதிக்கப்படுபவனே {ஸ்துதனே}, துதிக்கத் தகுந்தவனே {ஸ்துத்பனே}, துதிக்கப்பட வேண்டியவனே {ஸ்தூயமானவனே}, அனைத்துப் பொருளும் ஆனவனே {சர்வனே}, அனைத்தையும் விழுங்குபவனே, அனைத்தின் ஆன்மாவாக இருப்பவனே, உன்னை வணங்குகிறேன்.(19) (வேள்விகளில்) ஹோத்ரியே {ஹோதாவே}, (வேள்விகளில்) ஓதப்படும் (வேத) மந்திரமே {மந்திரனே}, வெள்ளைக் கொடிகளையும், கொடிமரங்களையும் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். அண்டத்தின் தொப்புளாய் இருப்பவனே {நாபனே, நாப்யனே}, ஐம்பூதங்களின் வடிவில் காரணக் காரியமாய் இருப்பவனே, மறைப்பவை அனைத்தையும் மறைப்பவனே உன்னை வணங்குகிறேன்.(20)

கிருசநாசன் {மெல்லிய மூக்குடையவன்} என்றழைக்கப்படுபவனே, மெல்லிய அங்கங்களைக் கொண்டவனே, மெலிவானவனே {கிருசனே} உன்னை வணங்குகிறேன். எப்போதும் உற்சாகமாய் இருப்பவனே {ஸம்ஹ்ருஷ்ட விஹ்ருஷ்டனே}, குழப்பமான ஒலிகள் மற்றும் குரல்களின் உடல்வடிவமே {கிலகிலனே}, உன்னை வணங்குகிறேன்.(21) பூமியில் படர்ந்திருப்பவனே {சயமே}, ஏற்கனவே படர்ந்து விரிந்திருப்பவனே {சயிதனே}, செங்குத்தாக எழுந்து நிற்பவனே {உத்திதனே} உன்னை வணங்குகிறேன். நிலையானவனே {ஸ்திதனே}, ஓடுபவனே {தாவமே}, வழுக்கைத் தலை கொண்டவனே {முண்டனே}, தலையில் சடாமுடி தரித்தவனே {ஜடிலனே} உன்னை வணங்குகிறேன்.(22) ஆடல் விருப்பம் கொண்டவனே, காற்றால் நிறைந்த கன்னங்களைத் தட்டி வாயை உடுக்கையாக்குபவனே {முக வாத்தியம் வாசிப்பவனே} உன்னை வணங்குகிறேன்[1]. ஆறுகளில் மலரும் தாமரைகளை விரும்புபவனே, பாடுவதையும், இசைக்கருவிகளை இசைப்பதையும் விரும்புபவனே உன்னை வணங்குகிறேன்.(23) மூத்த பிறவியே {ஜ்யேஷ்டனே}, உயிரினங்கள் அனைத்தில் முதன்மையானவனே {ச்ரேஷ்டனே}, அசுரன் பலனைக் கொன்றவனே உன்னை வணங்குகிறேன். காலத்தின் உரிமையாளனே {காலனின் கடவுளே}, கல்பத்தின் வடிவமே {கல்யனே}; அனைத்து வகைச் சிறு மற்றும் பேரழிவுகளின் வடிவமே {க்ஷயனே, உபக்ஷயனே} உன்னை வணங்குகிறேன்.(24) பயங்கரமாகவும், பேரிகையொலிக்கு ஒப்பாகவும் சிரிப்பவனே, பயங்கர நோன்புகளை நோற்பவனே உன்னை வணங்குகிறேன். கடுமையானவனும், பத்துக் கரங்களைக் கொண்டவனுமான உன்னை எப்போதும் நான் வணங்குகிறேன்.(25)கைகளில் எலும்புகளை {மண்டையோட்டைத்} தரித்தவனே, ஈமச்சிதைகளின் சாம்பலை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன். அச்சத்தை ஏற்படுத்துபவனே {விபீஷ்ணனே}, காண்பதற்குப் பயங்கரனே {பீஷ்மனே}, பயங்கர நோன்புகளையும், நடைமுறைகளையும் கொண்டவனே {பீமனே} உன்னை வணங்குகிறேன்.(26) விகார வாயை {முகத்தைக்} கொண்டவனே, கத்தி போன்ற நாக்கைக் கொண்டவனே, பெரிய பற்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். சமைத்த மற்றும் பச்சை இறைச்சியை விரும்புபவனே, சுரைக்காய் வீணையில் மிகுந்த விருப்பமுள்ளவனே உன்னை வணங்குகிறேன்[2].(27) மழையைப் பொழியச் செய்பவனே {வ்ருஷனே}, அறம் விளைய உதவுபவனே {வ்ருஷ்யனே}, நந்தி வடிவனே {நந்திரூபனே}, அறத்தின் சுயமே உன்னை வணங்குகிறேன். காற்றையும், பிற சக்திகளையும் போல எப்போதும் நகர்பவனே {கடங்கடனே}, அனைத்துப் பொருட்களையும் கட்டுப்படுத்துபவனே {தண்டனே}, (காலமெனும் கொப்பரையில்) அனைத்து உயிரினங்களையும் சமைப்பதில் எப்போதும் ஈடுபடுபவனே {பசபசனே} உன்னை வணங்குகிறேன்.(28) அனைத்து உயிரினங்களிலும் முதன்மையானவனே, மேன்மையானவனே, வரங்களை அளிப்பவனே {வரதனே} உன்னை வணங்குகிறேன். சிறந்த மாலைகளையும், சிறந்த நறுமணப் பொருட்களையும், சிறந்த ஆடைகளையும் கொண்டவனே, சிறந்த உயிரினங்களுக்குச் சிறந்த வரங்களை அளிப்பவனே உன்னை வணங்குகிறேன்.(29) பற்றுள்ளவனே {ஆசையுள்ளவனே}, பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டவனே {ஆசையற்றவனே}, தியான யோகத்தின் வடிவமே {பாவநனே}, அக்ஷங்களின் மாலைகளால் {ருத்ராக்ஷமாலைகளால்} அலங்கரிக்கப்பட்டவனே உன்னை வணங்குகிறேன். காரணத்தில் கலந்தவனே {ஸம்பந்நனே}, விளைவுகளில் விலகுபவனே {விபிந்நனே}, நிழலாகவும், ஒளியாகவும் இருப்பவனே {சாயனே, ஆத்பனரூபனே} உன்னை வணங்குகிறேன்.(30)இனிமையானவனே, பயங்கரமானவனே, மிகப் பயங்கரமானவனே உன்னை வணங்குகிறேன். மங்கலமானவனே {சிவனே}, அமைதியானவனே {சாந்தனே}, பேரமைதிமிக்கவனே உன்னை வணங்குகிறேன்.(31) ஒரு காலைக் கொண்டவனே, பல கண்களைக் கொண்டவனே, ஒரே தலை கொண்டவனே, கடுமையானவனே {ருத்ரனே}, அற்ப காணிக்கைகளில் நிறைவடைபவனே, ஒப்புரவை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன்.(32) அண்டத்தின் கைவினைஞனே {பஞ்சாலனே}, அமைதிக் குணத்துடன் எப்போதும் கலந்தவனே உன்னை வணங்குகிறேன். பகைவரை அச்சுறுத்தும் மணியை {கண்டாமணியைக்} கொண்டவனே, மணியில் உண்டாகும் கிங்கிணி வடிவானவனே {கண்டாநாதரூபனே}, காதுகளால் உணர முடியாத ஒலியின் வடிவானவனே உன்னை வணங்குகிறேன்.(33) ஒன்றுசேர்ந்த ஆயிரம் மணியொலியைப் போன்றவனே, மணிமாலைகளை விரும்புபவனே, உயிர் மூச்சு உண்டாக்கும் ஒலியைப் போன்றவனே, மணங்கள் அனைத்தின் வடிவமே {கந்தனே}, கொதிக்கும் நீர்மங்களின் குழம்பிய ஒலியின் வடிவமே {கலகலனே} உன்னை வணங்குகிறேன்.(34) மூன்று ஹுங்களைக் கடந்தவனே, இரண்டு ஹுங்களை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன். மிக அமைதியானவனே, மலையின் மரங்களுடைய நிழலையே வசிப்பிடமாகக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன்[3].(35)உயிரினங்கள் அனைத்தின் இதயச் சதையை விரும்புபவனே, பாவங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்துபவனே {தாரகரே}, வேள்விக் காணிக்கைகளின் வடிவமே {தரனே} உன்னை வணங்குகிறேன். வேள்வியின் வடிவமே {யஜ்ஞனே}, வேள்வி செய்பவனே {யஜியே}, வேள்வி நெய் ஊற்றப்படும் வாயுடைய பிராமணனே {ஹுதனே}, மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட நெய் ஊற்றப்படும் நெருப்பே {ப்ரஹுதனே} உன்னை வணங்குகிறேன்[4].(36) (வேள்வியின்) ரித்விஜர்களின் வடிவமே {யஜ்ஞவாஹனே}, புலன்களைக் கட்டுக்குள் கொண்டவனே {தாந்தனே}, சத்வமே ஆனவனே {தப்யனே}, ரஜஸையும் கொண்டவனே {ஆத்மநனே} உன்னை வணங்குகிறேன். ஆற்றங்கரை வடிவானவனே {தடனே}, ஆறுகளே ஆனவனே {தட்யனே}, ஆறுகள் அனைத்தின் தலைவனே (பெருங்கடலே) {ஸமுத்திரமே} உன்னை வணங்குகிறேன்.(37) உணவை அளிப்பவனே {அந்நதனே}, உணவுகள் அனைத்தின் தலைவனே, உணவை உண்பவனுக்கு ஒப்பானவனே உன்னை வணங்குகிறேன். ஆயிரம் கரங்களைக் கொண்டவனே, ஆயிரம் கால்களைக் கொண்டவனே,(38) கரங்களில் ஆயிரம் திரிசூலங்களை உயர்த்திப் பிடிப்பவனே, ஆயிரம் கண்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். உதிக்கும் சூரியனின் வடிவானவனே, குழந்தையின் வடிவானவனே,(39) பிள்ளைகளின் வடிவில் உள்ள ஊழியர்கள் {நண்பர்கள்} அனைவரின் பாதுகாவலனே, பிள்ளைகளின் பொம்மை வடிவானவனே உன்னை வணங்குகிறேன். முதியவனே {வ்ருத்தனே}, பேராசைமிக்கவனே {லுப்தனே}, ஏற்கனவே கலக்கமடைந்தவனே {க்ஷுப்தனே}, கலக்கமடையப் போகிறவனே {க்ஷோபணனே} உன்னை வணங்குகிறேன்.(40)கங்கை அலைகளின் அடையாளம் கொண்ட சடையைக் கொண்டவனே, முஞ்ச {தர்ப்பைப்} புற்களுக்கு ஒப்பான சடைமயிர் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். (நன்கறியப்பட்ட) ஆறு செயல்களில் நிறைவடைபவனே, மூன்று செயல்களைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவனே உன்னை வணங்குகிறேன்[5].(41) {நான்கு} வாழ்வுமுறைகளுக்குரிய {ஆசிரமங்களுக்குரிய} கடமைகளை வகுத்தவனே உன்னை வணங்குகிறேன். ஒலிகளால் துதிக்கத்தகுந்தவனே {குஷ்யனே}, கவலை வடிவானவனே, ஆழ்ந்த குழப்பமான ஒலியின் வடிவானவனே {கலகலனே} உன்னை வணங்குகிறேன்.(42) வெண்மையும், பழுப்பும், கருப்பும், சிவப்புமெனக் கண்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். உயிர்மூச்சுகளை வென்றவனே, ஆயுதங்களின் வடிவானவனே {தண்டனே}, அனைத்துப் பொருட்களையும் பிளப்பவனே {ஸ்போடநனே}, மிக மெலிதானவனே {க்ருசனே} உன்னை வணங்குகிறேன்.(43) அறம், இன்பம், பொருள் மற்றும் விடுதலையை எப்போதும் சொல்பவனே உன்னை வணங்குகிறேன். சாங்கியனே, சாங்கியர்களில் முதன்மையானவனே, சாங்கிய யோகத்தை அறிமுகம் செய்தவனே உன்னை வணங்குகிறேன்.(44) (பயணங்களில்) தேருள்ளவனே, தேரில்லாதவனே உன்னை வணங்குகிறேன். நாற்சந்தி சாலைகளைத் தேராகக் கொண்டவனே, கருப்பு மானின் தோலை மேலாடையாக {உத்தரீயமாகக்} கொண்டவனே, பாம்பை புனித நூலாகக் கொண்டவனே {ஸர்ப்பயஜ்ஞோபவீதமுடையவனே} உன்னை வணங்குகிறேன்.(45)ஈசானனே {மிக விரும்பப்படுபவனே}, வஜ்ரம் போன்ற கடின உடல் கொண்டவனே, பச்சை {மஞ்சள்} சடாமுடி கொண்டவனே உன்னை வணங்குகிறேன். முக்கண்ணனே, அம்பிகையின் தலைவனே, புலப்படுபவனே {வ்யக்தனே}, புலப்படாதவனே {அவ்யக்தனே} உன்னை வணங்குகிறேன்.(46) ஆசையே {காமனே}, ஆசைகளைக் கொடுப்பவனே {காமதனே}, ஆசைகள் அனைத்தையும் கொல்பவனே {காமகநனே}, நிறைவு மற்றும் நிறைவின்மையைப் பாகுபடுத்துபவனே உன்னை வணங்குகிறேன். அனைத்துப் பொருளாக இருப்பவனே {ஸர்வனே}, அனைத்துப் பொருளையும் கொடுப்பவனே {ஸாவதனே}, அனைத்துப் பொருளையும் அழிப்பவனே {ஸாவகநனே} உன்னை வணங்குகிறேன். மாலை வானில் தோன்றும் வண்ணங்களாக {சிவப்பு வண்ணமாக} இருப்பவனே உன்னை வணங்குகிறேன்.(47) வலிமையும், பலமும் ஆனவனே, வலிமைமிக்கக் கரங்களாக இருப்பவனே, வலிமைமிக்கவனே, பெரும் பிரகாசம் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். பெரும் மேகத் திரளைப் போலத் தெரிபவனே, நித்தியத்தன்மையின் வடிவமே உன்னை வணங்குகிறேன். நன்கு வளர்ந்த உடலைக் கொண்டவனே {மஹாகாலரூபியே}, மெலிந்த அங்கங்களைக் கொண்டவனே, தலையில் சடாமுடி தரித்தவனே, மரவுரியும், விலங்குத் தோலும் அணிபவனே உன்னை வணங்குகிறேன்.(48) சூரியனையோ, நெருப்பையோ போன்ற பிரகாசத்தையுடைய சடாமுடி கொண்டவனே, மரவுரியும், தோலும் ஆடையாகக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். ஆயிரஞ்சூரியப் பிரகாசம் கொண்டவனே, எப்போதும் தவங்களில் ஈடுபடுபவனே உன்னை வணங்குகிறேன்.(49) நோய்த்தூண்டல் உள்ளவனே {உந்மாதநனே / மயக்கமடையச் செய்பவனே}, நூற்றுக்கணக்கான அலைகளைக் கொண்ட கங்கை நீரால் நனைந்த சடாமுடி கொண்டவனே உன்னை வணங்குகிறேன். சந்திரன், யுகங்கள் மற்றும் மேகங்களை மீண்டும் மீண்டும் சுழற்றுபவனே உன்னை வணங்குகிறேன்[6].(50)உணவே {அந்நமே}, உணவை உண்பவனே {அத்தா}, உணவைக் கொடுப்பவனே {போக்தா}, உணவை வளர்ப்பவனே {அந்நதனே}, உணவை உண்டாக்குபவனே உன்னை வணங்குகிறேன். உணவை சமைப்பவனே, சமைத்த உணவை உண்பவனே {பக்வபுக்}, காற்றும் நெருப்புமாக இருப்பவனே {பவனனே, அநலனே} உன்னை வணங்குகிறேன்.(51) ஓ! தேவதலைவர்கள் அனைவரின் தலைவனே {தேவேசனே}, பாலூட்டிகள் {ஜராயுஜங்கள்}, முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை {அண்டஜங்கள்}, கழிவில் பிறப்பவை {ஸ்வேதஜங்கள்}, தாவரங்கள் {உத்பிஜ்ஜங்கள்} ஆகிய நான்கு வகை உயிரினங்களாக இருப்பவனே உன்னை வணங்குகிறேன்.(52) அசைபவை மற்றும் அசையாதவை ஆகியவற்றைக் கொண்ட அண்டத்தைப் படைத்தவனே, அவற்றை அழிப்பவனே உன்னை வணங்குகிறேன். ஓ! பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவனே, பிரம்மத்தை அறிந்தவர்கள் உன்னையே பிரம்மமாகக் கருதுகின்றனர்.(53) பிரம்மத்தைச் சொல்பவர்கள் உன்னையே மனத்தின் உயர்ந்த தோற்றமாகவும், ஆகாயம், காற்று மற்றும் ஒளி உறங்கும் புகலிடமாகவும் சொல்கின்றனர். ரிக்குகள், சாமங்கள் மற்றும் ஓம் எனும் அசை நீயே.(54) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, சாமங்களைப் பாடி பிரம்மத்தைச் சொல்பவர்கள், ஹாயி-ஹாயி, ஹுவா-ஹாயி, ஹுவா-ஹோயி என்ற அசைகளைச் சொல்லும்போது உன்னையே தொடர்ந்து பாடுகின்றனர்[7].(55)யஜுஸ்கள், ரிக்குகள் மற்றும் வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் காணிக்கைகளால் ஆனவன் நீயே. வேதங்கள் மற்றும் உபநிஷத்துகளில் உள்ள துதிகளில் துதிக்கப்படுபவன் நீயே.[8](56) பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும், கலப்பு வர்ணங்களும் நீயே. வானத்தில் தோன்றும் மேகத்திரள்கள் நீயே; மின்னல் நீயே; இடிமுழக்கம் நீயே.(57) வருடங்கள் நீயே, பருவ காலங்கள் நீயே, மாதங்கள் நீயே, பிறைநாட்களும் நீயே. யுகம் நீயே, கண் இமைப்பால் பிரதிபலிக்கப்படும் நேரம் {நிமிடம்} நீயே, காஷ்டை நீயே, நட்சத்திரங்கள் நீயே, கோள்கள் நீயே, கலையும் நீயே.(58) மரங்கள் அனைத்தின் உச்சி நீயே, மலைகள் அனைத்தின் சிகரங்கள் நீயே. இழிந்த விலங்குகளில் புலி நீயே, பறவைகளில் கருடன் நீயே, பாம்புகளில் அனந்தன் நீயே.(59) பெருங்கடல்கள் அனைத்திலும் பாற்கடல் நீயே, ஆயுதம் ஏவும் கருவிகளில் வில் நீயே. ஆயுதங்களில் வஜ்ரம் நீயே, நோன்புகளில் வாய்மை நீயே.(60)வெறுப்பும் நீயே, விருப்பும் நீயே; பற்றும் நீயே, (தீர்மான) மயக்கமும் நீயே; மன்னிக்கும் தன்மை நீயே, மன்னிக்கா தன்மையும் நீயே. முயற்சி நீயே, பொறுமை நீயே, பேராசை நீயே, காமம் நீயே, கோபம் நீயே; வெற்றி நீயே, தோல்வியும் நீயே.(61) கதாயுதம் தரித்தவன் நீயே, கரங்களில் கட்டாங்கமும், ஜர்ஜ்ஜரமும் தரித்தவன் நீயே. வெட்டுபவன், துளைப்பவன், அடிப்பவன் நீயே. (அனைத்து உயிரினங்களுக்கும்) வழிகாட்டுபவனும், இன்ப துன்பங்களைக் கொடுப்பவனும் நீயே.(62) {யமம் ஐந்து, நியமம் ஐந்து என்ற} பத்து ஒழுக்கங்களால் குறிப்பிடப்படும் அறம் நீயே; அனைத்து வகைச் செல்வம், அல்லது பொருள் நீயே; இன்பமும் நீயே. கங்கை நீயே, பெருங்கடல்கள் நீயே, ஆறுகள் நீயே, குளங்கள் {பல்வலங்கள் / குட்டைகள்} நீயே, தடாகங்கள் {ஸரஸ்கள் / ஏரிகள்} நீயே.(63) மெல்லிய கொடிகள் நீயே, அடர்த்தியான செடிகொடிகள் நீயே, அனைத்து வகைப் புற்களும் நீயே, உதிர்களின் மூலிகைகள் நீயே. இழிந்த விலங்குகள் நீயே, பறவைகள் நீயே. அனைத்துக் காரியங்கள் மற்றும் செயல்களின் தோற்றம் நீயே, கனிகளும், மலர்களும் விளையும் பருவகாலங்கள் நீயே.(64) வேதங்களின் தொடக்கம் நீயே, அவற்றின் முடிவும் நீயே; காயத்ரி நீயே, ஓம் எனும் அசை நீயே.(65)

பச்சையானவன் {ஹரிதம்} நீயே, சிவப்பானவன் {ரோஹிதம்} நீயே, நீலமானவன் {நீலம்} நீயே, கருப்பானவன் {கிருஷ்ணம்} நீயே, குருதி வண்ணம் {ரத்தம்} நீயே, சூரிய வண்ணம் {அருணம்} நீயே, அடர்பழுப்பானவன் {கத்ரு} நீயே, {கபிலம் / கரிக்குருவியின் நிறம் நீயே}, மென்பழுப்பவானவன் {கபோதம்} நீயே, அடர் நீலமானவன் {மேசகம் / மயில்தோகையின் நிறம்} நீயே[9].(66) நிறமற்றவன் நீயே, சிறந்த நிறம் நீயே, நிறங்களை உண்டாக்குபவன் நீயே, ஒப்பற்றவன் நீயே. தங்கப் பெயர் கொண்டவன் நீயே, தங்கத்தை விரும்புபவன் நீயே.(67) இந்திரன் நீயே, யமன் நீயே, வரமளிப்பவன் நீயே, செல்வத்தின் தலைவன் நீயே, அக்னி நீயே, கிரகணம் {ஒளி மறைப்பு} நீயே, சித்திரபானு என்றழைக்கப்படும் நெருப்பு நீயே, ராஹு நீயே, சூரியன் நீயே.(68) வேள்வி நெய் ஊற்றப்படும் நெருப்பு நீயே. நெய்யை ஊற்றுபவன் நீயே. நெய் ஊற்றி கௌரவிக்கப்படுபவன் நீயே, ஊற்றப்படும் நெய்யே ஆனவன் நீயே, அனைவரின் பலமிக்கத் தலைவன் நீயே. திரிசுபர்ணர்கள் என்றழைக்கப்படும் பிராமண வகையினர் நீயே; வேதங்கள் அனைத்தும் நீயே; யஜுஸ்களில் சதருத்ரீயம் என்றழைக்கப்படும் பகுதிகள் நீயே.(69) புனிதங்களில் புனிதன் நீயே, மங்கலமான அனைத்துப் பொருட்களிலும் மங்கலமானவன் நீயே. அசைவற்ற உடலில் அசைவு {ஹிண்டுகள்} நீயே. மனித வடிவில் வசிக்கும் சித் நீயே. குணங்களை அடைந்து, அழிவை அடையத்தக்கவனாகுபவனும் நீயே. ஜீவன் நீயே, குணங்கள் இல்லாதிருக்கையில் ஒருபோதும் அழிவில்லாதவன் நீயே. ஜீவனுடன் கூடிய உடலின் வடிவில் சிதைவுக்கும், மரணத்திற்கும் தகுந்தவனாக இருப்பினும் முழுமையானவன் நீயே.(70)உயிர்மூச்சு நீயே, சத்வம் நீயே, ரஜஸ் நீயே, தமஸ் நீயே, குற்றமில்லாதவன் நீயே. பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகள் நீயே. விழிதிறப்பும் {உந்மேஷமும்}, விழி அடைப்பும் {நிமேஷமும்} நீயே. தும்மலும் {க்ஷுதமும்}, கொட்டாவியும் {ஜ்ரும்பிதமும்} நீயே, எப்போதும் உள்நோக்கித் திரும்பிய சிவந்த கண்களைக் கொண்டவன் நீயே. பெரிய வாயும், வயிறும் படைத்தவன் நீயே.(72) ஊசிகளைப் போல உன் உடலில் மயிர் கொண்டவன் நீயே. பச்சையான தாடி கொண்டவன் நீயே {செம்பட்டையான மீசை கொண்டவன் நீயே}. மேல்நோக்கிய தலைமயிர் கொண்டவன் நீயே. வேகத்திலும் வேகமானவன் நீயே. குரல் மற்றும் கருவி இசையின் கோட்பாடுகளை அறிந்தவன் நீயே. குரல் மற்றும் கருவி இசையை விரும்புபவன் நீயே.(73) நீரில் உலவும் மீன் {மத்ஸ்யன்} நீயே, வலையில் சிக்கிய மீனும் {ஜலசரன்} நீயே. நிறைவானவன் நீயே, விளையாட்டை விரும்புபவன் நீயே, அனைத்து வகைச் சச்சரவுகளின் வடிவமாக இருப்பவன் நீயே. காலம் {கலி} நீயே, கெட்ட காலம் {துஷ்காலன்} நீயே, முதிரா காலம் {அகாலன்} நீயே, மிகைமுதிர்ந்த காலம் {அதிகாலன்} நீயே[10].(74) கொலை {மரணம் / மிருத்யு} நீயே, (கொல்லும்) கத்தி {க்ஷுரம்} நீயே, கொல்லப்படுபவனும் {க்ருத்யன்} நீயே. துணைவன் {பக்ஷன்} நீயே, எதிரி நீயே, துணைவர்களையும், எதிரிகளையும் அழிப்பவன் நீயே. மேகங்கள் தோன்றும் காலம் நீயே, பெரும்பற்கள் நீயே, சம்வர்த்தகமும், வலாஹமும் நீயே[11].(75)காந்தியின் வடிவில் புலப்படுபவன் {கண்டன்} நீயே. மாயையால் பீடிக்கப்பட்டதன் விளைவால் மறைந்திருப்பவன் {புலப்படாதவன் / அகண்டன்} நீயே. உயிரினங்களை அவற்றின் செயல்களின் கனிகளால் இணைப்பவன் {கடி} நீயே. கையில் மணியைக் கொண்டவன் {கண்டி} நீயே. அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் (உன் பொம்மைகளாக வைத்துக் கொண்டு) விளையாடுபவன் {சருசேலி} நீயே. காரணங்கள் அனைத்தின் காரணம் {மிலீமிலி} நீயே. (பிரணவத்தின் வடிவிலான) பிரம்மம் நீயே, ஸ்வாஹா நீயே, தண்டதாரி {தண்டி} நீ, வழுக்கை {மொட்டைத்} தலையன் {முண்டன்} நீயே, சொற்கள், செயல்கள் மற்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தியவன் நீயே.(76) நான்கு யுகங்கள் நீயே, நான்கு வேதங்கள் நீயே, நான்கு (வேள்வி) நெருப்புகள் உற்பத்தியாகும் மூலம் நீயே. நான்கு வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} கடமைகள் அனைத்தையும் இயக்குபவன் நீயே. நான் வகைகளை {வர்ணங்களை} உண்டாக்குபவனும் நீயே.(77) பகடையில் எப்போதும் விருப்பம் கொண்டவன் நீயே. வஞ்சகன் {சூதாடி / தூர்த்தன்} நீயே. கணங்களாகப் பிரிந்திருக்கும் பூதங்களின் தலைவன் நீயே, அவர்களின் ஆட்சியாளனும் நீயே. சிவப்பு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, செவ்வாடைகளை உடுத்துபவன் நீயே. மலைச்சாரலில் உறங்குபவன் {கிரிசன்} நீயே, சிவப்பு வண்ணத்தை {காஷாயன்} விரும்புபவன் நீயே.(78) கலைஞன் {சில்பிகன்} நீயே; கலைஞர்களில் முதன்மையானவன் நீயே; கலைகள் அனைத்தின் தோற்றமும் நீயே. பகனின் கண்களைப் பிடுங்கியவன் நீயே; கடுமையானவன் நீயே, பூஷனின் பற்களைச் சிதைத்தவன் நீயே.(79) ஸ்வாஹா நீயே, ஸ்வதா நீயே, வஷட் நீயே, வணக்கத்தின் வடிவம் நீயே, வழிபாட்டாளர்கள் அனைவராலும் சொல்லப்படும் நமஸ் நமஸ் {நமோநமஹ} என்ற சொற்கள் நீயே. பிறர் அறியாத நோன்புகளையும், தவங்களையும் கொண்டவன் நீயே. பிரணவம் {தாரகன்} நீயே; நட்சத்திரக்கூட்டங்கள் மின்னிக் கொண்டிருக்கும் ஆகாயம் நீயே.(80)

தாத்ரி {தாதா / விஷ்ணு}, விதாத்ரி {விதாதா / நான்முகப் பிரம்மன்}, சந்தாத்ரி {சந்தாதா / அனைத்தையும் ஒன்றாகச் செய்பவன்}, விதாத்ரி {விதிகளை வடிவமைப்பவன் / மஹேஸ்வரன்}, உயர்ந்த காரணமான அனைத்துப் பொருட்களின் புகலிடமாகவும் {தாரணனாகவும்}, புகலிடங்கள் அனைத்தின் சார்பற்றவனாகவும் {அதரனாகவும்} இருப்பவன் நீயே. பிரம்மத்தை அறிந்தவன் {பிரம்மம்} நீயே, தவம் நீயே, வாய்மை நீயே, பிரம்மச்சரியத்தின் ஆன்மா நீயே, எளிமை {ஆர்ஜவம்} நீயே.(81) அனைத்து உயிரினங்களின் ஆன்மா {பூதாத்மா} நீயே, உயிரினங்கள் அனைத்தின் படைப்பாளன் {பூதக்ருத்} நீயே, முழு இருப்பு {பூதன்} நீயே, கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவை எழுந்த காரணன் நீயே. பூமி {பூ:} நீயே, ஆகாயம் {புவ:) நீயே, சொர்க்கம் {ஸ்வ:) நீயே. நித்தியமானவன் நீயே, தற்கட்டுப்பாடு கொண்டவன் {தாந்தா} நீயே, பெருந்தேவன் {மஹாதேவன்} நீயே.(82) தொடக்கம் {தீக்ஷிதன்} நீயே, தொடக்கமில்லாதவன் {அதீக்ஷிதன்} நீயே. மன்னிப்பவன் {க்ஷாந்தன்} நீயே, மன்னிக்காதவன் நீயே; புரட்சியாளர்கள் {அடங்காதவர்கள்} அனைவரையும் தண்டிப்பவன் நீயே. சந்திர மாதம் நீயே, யுகச்சக்கரம் (கல்பம்) நீயே, அழிவு {ஸம்வர்த்தன்} நீயே, படைப்பும் {ஸம்பரவர்த்தகன்} நீயே.(83) காமம் {காமன்} நீயே, உயிர் வித்து {பிந்து} நீயே, நுட்பமானவன் {அணு} நீயே, திரளானவன் {ஸ்தூலன்} நீயே, கர்ணிகார மலர்களாலான மாலைகளை விரும்புபவன் நீயே. நந்தி போன்ற முகத்தைக் கொண்டவன் நீயே, பயங்கர முகத்தைக் கொண்டவன் நீயே, அழகிய முகம் கொண்டவன் {ஸுமுகன்} நீயே, கொடூர முகம் {துன்முகன்} கொண்டவன் நீயே, முகமற்றவன் {அமுகன்} நீயே.(84) நான்கு முகம் கொண்டவன் நீயே, பல முகங்களைக் கொண்டவன் நீயே, போரில் ஈடுபடும்போதும் நெருப்பின் முகம் {அக்நிமுகன்} கொண்டவன் நீயே. தங்க வயிற்றைக் கொண்டவன் (நாராயணன்) {ஹிரண்யகர்ப்பன்} நீயே, (உணவும், உடைமைகளும் அற்ற பூமியில் பற்று கொள்ளாத) பறவை {சகுநி} நீயே, (வலிமைமிக்கப் பாம்புகளின் தலைவன்) அனந்தன் நீயே, (பெரிதிலும் பெரிதான) விராட் நீயே.(85)

மறத்தை {அநீதியை} அழிப்பவன் நீயே, மஹாபார்ஸ்வன் என்றழைக்கப்படுபவன் நீயே, சண்டதாரன் நீயே, பூதகணங்களின் தலைவன் நீயே. பசுவைப் போன்ற இழிந்தவன் நீயே, பசுவின் பாதுகாவலன் நீயே, காளைகளின் தலைவனை {நந்தியை} உன் பணியாளாகக் கொண்டவன் நீயே.(86) மூவுலகங்களின் பாதுகாவல் நீயே, கோவிந்தன் நீயே, புலன்களை இயக்குபவன் நீயே, புலன்களால் புரிந்து கொள்ள முடியாதவன் நீயே. உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே, நிலையானவனே நீயே, அசைவற்றவன் {நிஷ்கம்பன்} நீயே, நடுங்காதவன் {கம்பன்} நீயே, நடுக்கத்தின் வடிவம் நீயே.(87) தடுக்கப்பட முடியாதவன் நீயே, நஞ்சுகள் அனைத்தையும் முறிப்பவன் நீயே, (போரில்) தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் நீயே, கடந்து செல்லப்பட முடியாதவன் நீயே, நடுங்கச்செய்ய முடியாதவன் நீயே, அளவிட முடியாதவன் நீயே, வெல்லப்பட முடியாதவன் நீயே, வெற்றி {ஜயன்} நீயே.(88) வேகம் {சசன்} நீயே, சந்திரன் நீயே, (அண்டத்தை அழிப்பவனான) யமன் நீயே, (செல்லவிடாமல்) குளிர், வெப்பம், பசி, பலவீனம் மற்றும் நோயை பொறுப்பவன் நீயே. மனத்துயர்கள் அனைத்தும் நீயே, உடல் நோய்கள் அனைத்தும் நீயே, அந்த நோய்களற்றவன் நீயே.(89) மானின் வடிவில் தப்பிச் செல்ல முயற்சித்த என் வேள்வியை அழித்தவன் நீயே. நோய்கள் அனைத்தின் தோற்றமும், விலக்கமும் நீயே. உயர்ந்த முகடு {சிகண்டி} நீயே. தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் நீயே. காட்டுத் தாமரைகளின் மத்தியில் வசிப்பவன் நீயே.(90)

தவசியின் தண்டத்தைத் தரித்தவன் நீயே. மூன்று வேதங்களை முக்கண்களாகக் கொண்டவன் நீயே. கடுமையான தண்டனைகளைக் கொடுப்பவன் நீயே. (அண்டம் உதித்தபோது தோன்றிய) முட்டையை அழிப்பவன் நீயே. நஞ்சு மற்றும் நெருப்பு ஆகிய இரண்டையும் பருகுபவன் நீயே, தெய்வங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே. சோமம் பருகுபவன் நீயே, மருத்துகளின் தேவன் நீயே.(91) அமுதம் பருகுபவன் நீயே. அண்டத்தின் ஆண்டவன் நீயே. மகிமையில் ஒளிப்பவன் நீயே, ஒளிர்வதனைத்தின் தலைவன் நீயே. நஞ்சிலிருந்தும், மரணத்திலிருந்தும் பாதுகாப்பவன் நீயே. பாலும், சோமமும் பருகுபவன் நீயே. சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்தவர்களைப் பாதுகாப்பவர்களில் முதன்மையானவன் நீயே. தேவர்களில் முதல்வனை {பிரம்மனைப்} பாதுகாப்பவன் நீயே.(92) தங்கமே உயிர் வித்தாகக் கொண்டவன் {ஹிரண்யரேதஸ்} நீயே. ஆண் நீயே, பெண் நீயே, அலி நீயே. குழந்தை நீயே, இளைஞன் நீயே, பற்கள் உதிர்ந்த முதிர்ந்தவன் {ஸ்தவிரன்} நீயே, நாகர்களில் முதன்மையானவன் {ஐராவதன்} நீயே, சக்ரன் {இந்திரன்} நீயே, அண்டத்தை அழிப்பவன் நீயே, படைப்பாளன் நீயே.(93) பிரஜாபதி நீயே, பிரஜாபதிகளில் துதிக்கப்படுபவன் நீயே, அண்டத்தை ஆதரிப்பவன் நீயே, அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் நீயே, பெருஞ்சக்தி கொண்டவன் நீயே, அனைத்துத் திசைகளிலும் திரும்பி முகங்களைக் கொண்டவன் நீயே. சூரியனையும், சந்திரனையும் இரு கண்களாய் கொண்டவன் நீயே, பெரும்பாட்டனை இதயமாகக் கொண்டவன் நீயே. பெருங்கடல் நீயே. சரஸ்வதி தேவியை உன் வாக்காகக் கொண்டவன் நீயே, நெருப்பையும் {அநலனையும்}, காற்றையும் {அநிலனையும்} உன் வலிமையாக {பலமாகக்} கொண்டவன் நீயே. பகலும், இரவும் நீயே. இமை திறத்தல் மற்றும் அடைத்தல் உள்ளிட்ட செயல்கள் அனைத்தும் நீயே.(94) ஓ! மங்கல தேவனே {சிவ பெருமானே}, பிரம்மனோ, கோவிந்தனோ {விஷ்ணுவோ}, புராதன முனிவர்களோ உண்மையில் உன் மகிமையைப் புரிந்து கொள்ளத் தகுந்தவர்களல்ல.(95)

நீ கொண்ட நுட்பமான வடிவங்கள் எங்களுக்குப் புலப்படவில்லை. ஓ!, தந்தையானவன் தன் மடியில் பிறந்த பிள்ளைகளைப் பாதுப்பத்தைப் போல என்னைக் காப்பாயாக.(96) ஓ! என்னைப் பாதுகாப்பாயாக. நான் உன் பாதுகாப்புக்குத் தகுந்தவனாவேன். ஓ! பாவமற்றவனே நான் உன்னை வணங்குகிறேன். ஓ! சிறப்பு மிக்கவனே, உன் பக்தர்களிடம் கருணை நிறைந்தவன் நீயே. நான் எப்போதும் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்.(97) பெருங்கடலின் அடுத்தக் கரையில், புரிந்து கொள்ளக் கடினமான வடிவில், பல்லாயிரம் மனிதர்களை மறைத்துத் தனிமையில் உள்ளவன் என் பாதுகாவலனாகட்டும்.(98) புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டவர்களும், சத்வ குணத்தைக் கொண்டவர்கள், தங்கள் உயிர் மூச்சுகளை ஒழுங்கு செய்தவர்களும், உறக்கத்தை வென்றவர்களுமான மனிதர்களால் பிரகாசமான ஒளியின் வடிவில் காணப்பட்ட யோகத்தின் ஆன்மாவை நான் வணங்குகிறேன்.(99) சடாமுடி தரித்தவனும், தவசியின் தண்டத்தைக் கையில் கொண்டவனும், நீண்ட வயிற்றுப் பகுதியைக் கொண்ட உடலைக் கொண்டவனும், முதுகில் கமண்டலம் கட்டப்பட்டவனும் பிரம்மனின் ஆன்மாகவும் இருப்பவனை நான் வணங்குகிறேன்.(100)

நீரின் ஆன்மாவாக இருப்பவனை, மேகத்தை முடியாய் கொண்டவனை, மூட்டுகளில் ஆறுகளைக் கொண்டவனை, வயிற்றில் நான்கு கடல்களைக் கொண்டவனை நான் வணங்குகிறேன்.(101) யுக முடிவு நேரும்போது உயிரினங்களை அனைத்தையும் விழுங்கி அண்டத்தை மறைக்கும் நீர்ப் பரப்பில் (உறங்குவதற்கு) பரந்து விரிந்து கிடப்பவனின் பாதுகாப்பை நான் நாடுகிறேன்.(102) ராஹுவின் வாய்க்குள் நுழைந்து இரவில் சோமனைப் பருகுபவனும், சுவர்பானுவாகி சூரியனையும் விழுங்குபவனும் என்னைப் பாதுகாக்கட்டும்.(103) பிரம்மனின் படைப்புக்குப் பிறகு உன்னில் இருந்து எழுந்த குழந்தனைகளான தேவர்கள் (வேள்விக் காணிக்கைகளில்) தங்களுக்குரிய பங்குகளை அனுபவிக்கிறார்கள். ஸ்வாஹா மற்றும் ஸ்வதாவுடன் செய்யப்படும் காணிக்கைகளை அவர்கள் (அமைதியாக) அனுபவிக்கட்டும், அந்தக் கொடைகளில் இருந்து அவர்கள் இன்பத்தை அடையட்டும். நான் அவர்களை வணங்குகிறேன்.(104) அனைத்து உடல்களிலும் கட்டைவிரல் அளவில் வசிக்கும் மூர்த்திகள் {ருத்திரர்கள் / மஹாருத்திரனின் பகுதிகள்} என்னை எப்போதும் பாதுகாத்து, நிறைவு கொள்ளச் செய்யட்டும்.(105)

உடல்படைத்த உயிரினங்களில் வசித்து, தாங்கள் துன்புற்று அழாமல் அவற்றைத் துயரில் அழச் செய்து, தாங்கள் மகிழ்ச்சியடையாமல் அவற்றை மகிழ்ச்சியடைச் செய்யும் அந்த மூர்த்திகளை எப்போதும் நான் வணங்குகிறேன்.(106) ஆறுகள், பெருங்கடல்கள், குன்றுகள், மலைகள், மலைக்குகைகள், மரத்தின் வேர்கள், பசுக்கொட்டில்கள், அடைதற்கரிய காடுகள், நாற்சந்திகள், சாலைகள், வெட்ட வெளிகள், (ஆறுகள், தடாகங்கள் மற்றும் பெருங்கடல்களின்) கரைகள், யானைச்சாலைகள், குதிரைச் சாலைகள், தேர்ச்சாலைகள், கைவிடப்பட்ட தோட்டங்கள் மற்றும் வீடுகள், ஐம்பூதங்கள், முக்கிய மற்றும் துணைத் திசைகளில் வசிக்கும் ருத்திரர்களை நான் எப்போதும் வணங்குகிறேன். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட வெளியிலும், சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்களிலும் வசிப்பவர்களையும், பாதாள லோகத்தில் வசிப்பவர்களையும், துறவை மேற்கொண்டவர்களையும், உயர்ந்ததை அடைவதற்கான பிற மேன்மையான நடைமுறைகளில் ஈடுபடுபவர்களையும் நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.(107-110)

எண்ணமுடியாதவர்களும், அளவிடமுடியாதவர்களும், வடிவமில்லாதவர்களும், முடிவிலா குணங்களைக் கொண்டவர்களுமான ருத்திரர்களை நான் வணங்குகிறேன்.(111) ஓ! ருத்திரா, அனைத்து உயிரினங்களையும் படைதவன் நீயே, ஓ! ஹரனே, அனைத்து உயிரினங்களின் ஆண்டவன் நீயே, அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கும் ஆன்மாவும் நீயே என்பதால்தான் (என் வேள்விக்கு) உன்னை நான் அழைக்கவில்லை.(112) அபரிமிதமான கொடைகளுடன் வேள்விகள் அனைத்திலும் துதிக்கப்படுபவனே நீயே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் நீயே என்பதால்தான் நான் உன்னை அழைக்கவில்லை.(113) அல்லது, ஓ! தேவா, உன் நுட்பமான மாயையில் திகைப்படைந்த நான் உன்னை அழைக்கத் தவறிவிட்டேன்.(114) என்னிடம் நிறைவு கொள்வாயாக, ஓ! பவா, ரஜஸ் குணத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் என்னிடம் அருள்கூர்வாயாக. ஓ! தேவா, என் மனம், புத்தி, சித்தம் அனைத்தும் உன்னிலேயே வசிக்கிறது” என்றான் {என்று துதித்தான் தக்ஷன்}[12].(115)அனைத்து உயிரினங்களின் தலைவனான மஹாதேவன் {சிவன்}, இந்தத் துதிகளைக் கேட்டு (மேலும் தக்ஷனுக்குத் தீங்கிழைக்க எண்ணாமல்) நின்றான். உண்மையில், மிகவும் நிறைவடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, தக்ஷனிடம், “ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்ட தக்ஷா, உன் துதிகளால் நான் நிறைவடைந்தேன். மேலும் என்னைத் துதிக்க வேண்டாம். நீ என் உதவியைப் பெறுவாய்.(117) ஓ! உயிரினங்களின் மூதாதையே, (நிறைவடையாத இந்த ஒரு வேள்வியின் விளைவாக) என் அருளால் ஆயிரம் குதிரை வேள்விகள் மற்றும் நூறு வாஜபேயங்களின் கனியை நீ ஈட்டுவாய்” என்றான்.(118)

சொற்களின் முற்றான ஆசானான மஹாதேவன் மீண்டும் தக்ஷனிடம், உயர்ந்த ஆறுதல் கூறும் வகையில், “உலகின் உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனே நீயே இருப்பாயாக.(119) ஓ! தக்ஷா, இந்த வேள்வியில் நிகழ்ந்த தீங்குகளுக்கான நீ துயரடையாதே. முந்தைய கல்பங்களில் கூட நான் உன் வேள்வியை அழித்திருக்கிறேன்[13].(120) ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, நான் மேலும் உனக்குச் சில வரங்களைக் கொடுக்கப் போகிறேன். என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாயாக. உன் முகத்தில் பரவியிருக்கும் இந்த உற்சாகமற்ற தன்மையைக் களைந்து, சிதறாத கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக.(121){சிவன் தொடர்ந்தான்}, “ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்களிலிருந்தும், ஸாங்கியத்திலிருந்தும் பெற்ற அறிவுக்குப் பொருத்தமான வாதத்தின் துணையால், பல நீண்ட வருடங்கள் செய்யக்கூடிய கடுந்தவங்களைத் தேவர்களாலும், தானவர்களாலும் செய்ய முடிந்தது.(122) எனினும், நான் வகுத்த சாரமானது ஒப்பற்றதும், அனைத்து திசைகளிலும் நன்மையை உண்டாக்கவல்லதுமாகும். இஃது அனைத்து வகை வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைக்} கொண்ட மனிதர்களாலும் செய்யப்படலாம். இது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கிறது. பல வருடங்கள், அல்லது புலன்களை அடங்கிய மனிதர்களின் தகுதியின் {புண்ணியத்தின்} மூலம் இஃது அடையப்படுகிறது. இது புதிரால் மறைக்கப்பட்டிருக்கிறது. ஞானமற்றவர்கள் இதைக் கண்டிக்கத்தக்கதாகக் கருதுகிறார்கள்.(123) இது நான்கு வகைகள் {வர்ணங்கள்} மற்றும் நான்கு வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} ஆகியவற்றில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளுக்கு முரண்பட்டதும், மிகச் சொற்பமான கடமைகளில் மட்டுமே உடன்பட்டதுமாக இருக்கிறது. (அனுமானங்களில் இருந்து) தீர்மானங்களை (வரையறுக்கும்) அறிவியலில் நன்கு திறம்பெற்றவர்களாலும் அனைத்து வாழ்வுமுறைகளையும் கடந்து, அதைப் பின்பற்றத் தகுந்தவர்களாலும் அதன் ஏற்புடைமையைப் புரிந்து கொள்ள முடியும்.(124) ஓ! தக்ஷா, பழங்காலத்தில், பாசுபதம் என்றழைக்கப்பட்ட மங்கலமான அறம் {விரதம்} என்னால் உண்டாக்கப்பட்டது. அவ்வறத்தைச் சரியாகப் பின்பற்றுவது அபரிமிதமான நன்மைகளை உண்டாக்கும்.(125) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, அந்த நன்மைகள் யாவும் உனதாகட்டும். உன் இதயத்தில் உள்ள இந்த நோயை விலக்குவாயாக” என்றான்{சிவன்}. இந்த வார்த்தைகளைச் சொன்ன மஹாதேவன் {சிவன்}, தன் மனைவி (உமை) மற்றும் தன் தொண்டர்கள் அனைவருடன் அளவிலா ஆற்றலைக் கொண்ட தக்ஷனின் பார்வையில் இருந்து மறைந்து போனான்.(126)

தக்ஷனால் முதலில் சொல்லப்பட்ட இந்தத் துதியை உரைப்பவன், அல்லது மற்றொருவனால் உரைக்கப்படுவதைக் கேட்பவன், சிறு தீமையையும் சந்திக்காமல் நீண்ட வாழ்நாளை அடைவான்.(127) உண்மையில், தேவர்களில் முதன்மையானவனாகச் சிவன் இருப்பதைப் போலவே துதிகள் அனைத்திலும் முதன்மையாக ஸ்ருதிகளுக்கு ஏற்புடைய இந்தத் துதியும் இருக்கிறது.(128)  புகழ், அரசாட்சி, மகிழ்ச்சி, இன்பம், பொருள் {லாபம்}, செல்வம் ஆகியவற்றை விரும்பும் மனிதர்களும், கல்வியில் விருப்பமுள்ளவர்களும் இந்தத் துதியைப் பக்தியுணர்வுடன் கேட்க வேண்டும்.(129)  நோயால் பீடிக்கப்பட்டவன், துன்பத்தால் வருந்துபவன், துயரில் மூழ்கியவன், கள்வர்கள் அல்லது அச்சத்தால் பீடிக்கப்பட்டவன், அரசனின் வெறுப்புக்கு உள்ளானவன் ஆகியோர் (இந்தத் துதியை உரைப்பதால், அல்லது கேட்பதால்) அச்சத்தில் இருந்து விடுபடுவார்கள்.(130)
இந்தத் துதியைக் கேட்பது, அல்லது உரைப்பதன் மூலம் ஒருவன் உலகம் சார்ந்த இந்த உடலுடனே, மஹாதேவனின் தொண்டர்களாக அமைந்திருக்கும் கணங்களுக்கு இணையான தன்மையை அடைவான். (இந்தத் துதியின் மூலம்) ஒருவன் சக்தியையும், புகழையும் பெறுவான், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவான்.(131) இந்தத் துதி உரைக்கப்படும் இல்லத்தில் ராட்சசர்களாலோ, பிசாசங்களாலோ, பூதங்களாலோ, விநாயகர்களாலோ எந்த அமளிகளிலும் ஈடுபடமுடியாது.(132)

பிரம்மச்சரிய நடைமுறைகளை நோற்று இந்தத் துதியைக் கேட்கும் பெண்ணானவள், தன் தந்தை மற்றும் தன் கணவனின் இல்லத்தில் ஒரு தேவியின் வழிபாட்டை வெல்வாள்.(133) இந்தத் துதியைக் கவனத்துடன் கேட்பவன் அல்லது உரைப்பவனின் செயல்கள் அனைத்தும் எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படும்.(134) இந்தத் துதியை உரைப்பதன் விளைவால் ஒருவன் தன் மனத்திற்குள் அமைத்துக் கொள்ளும் விருப்பங்கள் அனைத்தும், வார்த்தைகளில் அமைத்துக் கொள்ளும் விருப்பங்கள் அனைத்தும் அவை கனிவதால் மகுடம் சூட்டப்படும்.(135) தற்கட்டுப்பாட்டைப் பயின்று மஹாதேவன், குஹன், உமை, நந்தி ஆகியோரின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு உரிய சடங்குகளை உரிய முறையில் அர்ப்பணிப்புடன் செய்யும் மனிதன், தான் விரும்பிய அனைத்துப் பொருட்களையும், அனுபவிக்கத்தக்க, இன்பத்திற்குரிய அனைத்தையும் அடைவான்.(136) அத்தகைய மனிதன் இப்பிறவியை விட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தால், இடைநிலை உயிரினங்களான விலங்குகளாகவோ, பறவைகளாகவோ மீண்டும் ஒருபோதும் பிறப்பை அடைய மாட்டான். இதைப் பராசரரின் மகனான பலமிக்க வியாசரும் சொல்லியிருக்கிறார்” என்றார் {பீஷ்மர்}.(137)

ஆன்மிகவியல்! – சாந்திபர்வம் பகுதி – 286-அத்யாத்மா குறித்து மீண்டும் விசாரித்த யுதிஷ்டிரன்; ஆத்மா, புத்தி, பூதங்கள், புலன்கள் மற்றும் கொணங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விவரித்த பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மனிதனைப் பொறுத்தவரையில் அத்யாத்மா என்பது என்ன? அஃது எங்கிருந்து எழுகிறது” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்யாத்ம அறிவியலின் துணையுடன் ஒருவனால் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். மேலும் அஃது அனைத்து பொருட்களிலும் மேன்மையானது. நான் என் புத்தியின் உதவியைக் கொண்டு நீ கேட்கும் அத்யாத்மா குறித்து உனக்கு விளக்கப் போகிறேன். ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, என் விளக்கத்தைக் கேட்பாயாக.(2) பூமி, காற்று, ஆகாயம், நீர், ஐந்தாவதாக ஒளி ஆகியவையே பெரும்பூதங்களாகும். இவையே தோற்றமும், அழிவுமாகும் (தோற்றம் மற்றும் அழிவிற்கான காரணங்களாகும்).(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே, உயிரினங்களின் உடல்கள் (நுண்ணுடல் மற்றும் பருவுடல் ஆகிய இரண்டும்) இந்த ஐந்தின் பண்புகளுடைய கலவையின் விளைவேயாகும். அந்தப் பண்புகள் மீண்டும் மீண்டும் தொடங்கி, மீண்டும் மீண்டும் (அனைத்துப் பொருட்களுக்கும் மூலக் காரணமான பரமாத்மாவுக்குள்) கலக்கிறது.(4) பெருங்கடலின் முடிவிலா அலைகள் எழுந்து, தங்களுக்குக் காரணமான கடலிலேயே கலப்பதைப் போல, இந்த ஐந்து அடிப்படை பூதங்களில் இருந்து படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும், இந்த ஐந்து பெரும்பூதங்களுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் கலக்கின்றன.(5) ஓர் ஆமை தன் கால்களை நீட்டி மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்வதைப் போல, எண்ணிலா உயிரினங்கள் அனைத்தும் இந்த ஐந்து நிலையான பெரும்பூதங்களில் இருந்து எழுந்து (அதனுள்ளேயே நுழைகின்றன).(6)

உண்மையில் ஒலியானது ஆகாயத்தில் இருந்து உண்டாகிறது, அடர்த்தியான பொருள் அனைத்தும் பூமியின் குணத்தைக் கொண்டிருக்கின்றன. உயிரானது காற்றில் இருந்து வருகிறது. சுவை நீரில் இருந்து வருகிறது. வடிவமானது ஒளியின் தன்மையாகும்.(7) இவ்வாறே அசையும் மற்றும் அசையாதவற்றைக் கொண்ட அண்டம் முழுவதும், இந்த ஐந்து பெரும்பூதங்களின் பல்வேறு கலவைகளிலேயே ஒன்றாக நீடித்திருக்கின்றன. அழிவு நேரும்போது, பல்வேறு வகையான முடிவற்ற உயிரினங்களும் தங்களை மீண்டும் அந்த ஐந்தினுக்குள் கலக்கின்றன, பிறகு படைப்புத் தோன்றும்போது மீண்டும் அந்த அந்த ஐந்தில் இருந்து உதிக்கின்றன.(8) படைப்பாளன், அனைத்து உயிரினங்களிலும் தான் சரியென நினைக்கும் அளவுகளில் இந்த ஐம்பூதங்களையும் கலந்து வைக்கிறான்.(9)

ஒலி, காதுகள் மற்றும் துளைகள் அனைத்தும் – ஆகிய இம்மூன்றும் – வெளியையே {ஆகாயத்தையே} தங்கள் தோற்றத்தின் காரணமாகக் கொண்டிருக்கின்றன. சுவை, நீர்மங்கள் அனைத்தும் மற்றும் நாக்கு ஆகியவை நீரின் தன்மையைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.(10) வடிவம், கண், வயிற்றில் உள்ள செரிமான நெருப்பு ஆகியன ஒளியின் இயல்பைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மணம், நுகரும் உறுப்பு {மூக்கு}, உடல் ஆகியன பூமியின் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன.(11) உயிர், தீண்டல் மற்றும் செயல்பாடு ஆகியன காற்றின் தன்மைகளாகச் சொல்லப்படுகின்றன. ஓ மன்னா, ஐம்பூதங்களைக் குறித்தும் நான் உனக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்.(12)

ஓ! பாரதா, இவற்றைப் படைத்த பரமன், சத்வம், ரஜஸ், தமஸ், காலம் மற்றும் நனவுநிலையின் {அகங்காரத்தின்}செயல்பாடுகள் மற்றும் ஆறாவதாக அமையும் மனத்துடன் சேர்த்து இவற்றைக் கலந்து வைத்தான்.(13) புத்தி என்றழைக்கப்படும் ஒன்று, உள்ளங்காலுக்கு மேலும், உச்சந்தலைக்குக் கீழும் நீ காணும் உட்பகுதியில் வசிக்கிறது.(14) மனிதனில் ஐந்து (அறிவுப்) புலன்கள் இருக்கின்றன. ஆறாவதாக (ஆறாவது புலனாக) மனம் இருக்கிறது. ஏழாவதே புத்தி என்றழைக்கப்படுகிறது. க்ஷேத்ரஜ்ஞன் அல்லது ஆன்மா எட்டாவதாகும்.(15) புலன்களும், செயல்படும் பொருள்களும், அதனதனுக்குரிய செயல்பாடுகளை உணர்வதன் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். சத்வம், ரஜஸ், தமஸ் என்றழைக்கப்படும் நிலைகள், அவற்றின் புகலிடத்திற்காகவோ, அமைப்பிற்காகவோ புலன்களையே சார்ந்திருக்கின்றன.(16) புலன்களானவை, தங்கள் தங்களுக்குரிய பொருட்களின் தாக்கத்தைப் பற்றுவதற்காகவே நீடித்திருக்கின்றன. மனமானது ஐயத்தையே தன் செயல்பாடாகக் கொண்டுள்ளது. புத்தியானது உறுதி {செய்வதையே தன் செயல்பாடாகச்} செய்கிறது. க்ஷேத்ரஜ்ஞன் (பிறவற்றின் {ஏழின்} செயல்பாட்டைக் காணும்) செயல்பாடற்ற சாட்சியாக மட்டுமே சொல்லப்படுகிறான்.(17) சத்வம், ரஜஸ், தமஸ், காலம், செயல்கள் ஆகிய குணங்கள் புத்தியை இயக்குகின்றன. புலன்களும், மேற்குறிப்பிட்ட ஐந்து குணங்களுமே புத்தியாகிறது.(18) புத்தி இல்லாத போது, புலன்களோடு கூடிய மனமும் இன்னும் பிற குணங்கள் (சத்வம், ரஜஸ், தமஸ், காலம் மற்றும் செயல்கள் ஆகிய) ஐந்தும் இயங்குவதில்லை.

எதைக் கொண்டு புத்தியானது பார்க்கிறதோ அது கண் என்று அழைக்கப்படுகிறது.
புத்தி கேட்கும்போது, அது காது என்று அழைக்கப்படுகிறது.
அவள் {புத்தி} நுகரும்போது, அவள் மணத்தின் புலனாகிறாள்;
அவள் சுவைக்குரிய பல்வேறு பொருட்களைச் சுவைக்கும்போது, அவள் நாக்கு என்ற பெயரின் மூலம் அழைக்கப்படுகிறாள்.(19)
மேலும் அவள் தீண்டலின் பல்வேறு பொருட்களைத் தீண்டும்போது அவள் தீண்டும் புலனாகிறாள்.
புத்தியே பல்வேறு வகையில் அடிக்கடி மாறுதலுக்கு உள்ளாகிறாள். புத்தியானவள் எதையும் விரும்பும்போது மனமாகிறாள்.(20)

(புத்தி எனும்) தனிப்பட்ட அமைப்பின் அடிப்படைகளான மனத்தோடு கூடிய ஐம்புலன்களும் புத்தியின் படைப்புகளேயாகும். அவை இந்திரியங்கள் என்றழைக்கப்படுகின்றன. அவை களங்கப்படும்போது, புத்தியும் களங்கமடைகிறது.(21) ஜீவனில் புத்தியானவள் மூன்று நிலைகளில் இருக்கிறாள். சில வேளைகளில் அவள் இன்புறுகிறாள்; சில வேளைகளில் அவள் துன்புறுகிறாள்;(22) சில வேளைகளில் இன்பமும் துன்பமும் அற்ற நிலையில் இருக்கிறாள். புத்தியானவள், (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) இந்த மூன்று நிலைகளையே தன் சாரமாகக் கொண்டு, இந்த மூன்று நிலைகளிலேயே சுழன்று கொண்டிருக்கிறாள்.(23) ஆறுகளின் தலைவனான பொங்கும் கடலானது, எப்போதும் தன் கரைகளுக்குள்ளே இருப்பதைப் போலவே, புத்தியும், இந்த (மூன்று) நிலைகளின் தொடர்புடன் (புலன்கள் உள்ளிட்ட) மனத்தில் இருக்கிறாள்.(24)

ரஜஸ் நிலை விழிப்படையும்போது, புத்தியானவள் ரஜஸாக மாறுகிறாள். மகிழ்ச்சி, இன்பம், திளைப்பு, உற்சாகம், இதய நிறைவு ஆகியன(25) ஏதோவொருவகையில் தூண்டப்படும்போது சத்வ தன்மையுள்ளதாகின்றன. குறிப்பிட்ட காரணங்களில் இருந்து எழும் இதய எரிச்சல், துயரம், கவலை, நிறைவின்மை, மன்னிக்கும்தன்மையின்மை(26) ஆகியன ரஜஸின் விளைவுகளாகும். அறியாமை, பற்று, பிழை {குற்றம்}, கவனமின்மை, திகைப்பு, கிலி,(27) அற்பத்தனம் {சிறுமை}, உற்சாகமின்மை, உறக்கம், தாமதித்தல் ஆகியன குறிப்பிட்ட காரணங்களால் உண்டாகும்போது அவை தமஸின் தன்மைகளாகின்றன.(28)

உடல் அல்லது மனமானது இன்பம் அல்லது மகிழ்ச்சியின் தொடர்புடைய எந்நிலையில் எழுந்தாலும், அது சத்வ நிலையின் விளைவாகக் கருதப்பட வேண்டும்.(29) மேலும் ஒருவனுக்குக் கவலைநிறைந்ததாகவும், ஏற்பில்லாததாகவும் இருக்கும் எதுவும் ரஜஸில் இருந்து எழுந்ததாகக் கருதப்பட வேண்டும். அத்தகைய செயல் எதையும் தொடங்காமலேயே (அதைத் தவிர்ப்பதற்காக) ஒருவன் தனது கவனத்தைத் திருப்ப வேண்டும்.(30) உடல் அல்லது மனத்தில், உணர இயலாத, புதிரான வகையில் பிழை நிறைந்து அல்லது திகைப்படையச் செய்யும் எதுவும் தமஸுடன் தொடர்புடையதாக அறியப்பட வேண்டும்.(31) இவ்வாறே நான் இவ்வுலகில் புத்தியில் வசிக்கும் பொருட்கள் அனைத்தையும் உனக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன். இவற்றை அறிவதன் மூலம் ஒருவன் விவேகியாகிறான். ஞானத்தின் குறியீடாக வேறு எது இருக்கு முடியும்?(32)

புத்தி மற்றும் ஆன்மா ஆகிய இரு நுண்ணியப் பொருட்களுக்கிடையிலான வேறுபாட்டை இப்போது அறிவாயாக. இவற்றில் ஒன்றான புத்தியே குணங்களை உண்டாக்குகிறது. மற்றொன்றான ஆன்மா அவற்றை உண்டாக்குவதில்லை.(33) இயல்பில் அவை ஒன்றுக்கொன்று வேறானவையாக இருந்தாலும் அவை எப்போதும் ஒரே நிலையில் கலந்தே இருக்கின்றன. ஒரு மீனானது, தான் வசிக்கும் நீரிலிருந்து வேறான ஒன்றாகும், ஆனால் மீனும், நீரும் ஒன்றாகத்தான் இருந்தாக வேண்டும்.(34) குணங்களால் ஆன்மாவை அறிய முடியாது. எனினும் ஆன்மாவானது அவற்றை அறியும். அறியாமை கொண்டோர் புத்தியில் குணங்கள் இருப்பதைப் போல இந்தக் குணங்கள் ஆன்மாவில் கலந்த நிலையிலேயே இருக்கின்றன என்று கருதுகிறார்கள். எனினும், ஆன்மாவானது செயல்பாடின்றி அனைத்தையும் காணும் சாட்சி மட்டுமே என்பதால் உண்மை அவ்வாறானதாக இல்லை.(35) புத்திக்கு எந்தப் புகலிடமும் கிடையாது. (புத்தியின் இருப்பில் ஈடுபடும்) உயிர் என்றழைக்கப்படுவது, குணங்கள் ஒன்றாகச் சேர்வதன் விளைவுகளில் இருந்தே உண்டாகிறது. (புத்தியின் மூலம் உண்டாக்கப்பட்ட இந்தக் குணங்களைத் தவிர) காரணங்களாகச் செயல்படும் வேறு சில, உடலில் வசிக்கும் புத்தியைப் படைக்கின்றன. குணங்களின் உண்மை இயல்பையோ அவற்றுடைய இருப்பின் வடிவத்தையோ எவராலும் உணர முடியாது.(36)

ஏற்கனவே சொல்லப்பட்டது போலப் புத்தியே குணங்களைப் படைக்கிறது. ஆன்மாவானது (செயலற்ற சாட்சியாக) அவற்றைக் காண மட்டுமே செய்கிறது. புத்திக்கும், ஆன்மாவுக்கு இடையில் நீடிக்கும் இந்த ஒற்றுமை நித்தியமானதாகும்.(37) உள் வசிக்கும் புத்தியானது, உயிரற்றவையும், புரிந்து கொள்ளாதவையுமான புலன்களின் மூலமே அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்கிறது. உண்மையில் புலன்களானவை (தன்னால் பொருட்களைக் காண முடியாது என்றாலும், பிறர் காண ஒளியை வீசும்) விளக்குகளைப் போன்றவை மட்டுமே.(38) இதுவே (புலன்கள், புத்தி மற்றும் ஆன்மாவின்) இயற்கையாகும். இதை அறியும் ஒருவன், துயரத்திற்கோ இன்பத்திற்கோ வசப்படாமல் உற்சாகமாக வாழ வேண்டும். அத்தகைய மனிதனே செருக்கின் ஆதிக்கத்தைக் கடந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(39) புத்தியானவள் தன் இயல்பின் மூலம் இந்தக் குணங்கள் அனைத்தையும் உண்டாக்குகிறாள் என்பது – சிலந்தியானது (தன் இயல்பின் விளைவால்) வலை பின்னுவதைப் போன்றதாகும். இந்தக் குணங்களைச் சிலந்தி பின்னும் வலையாக அறிய வேண்டும்.(40)

அழிவடையும்போது குணங்கள் இருப்பதில்லை; அவற்றின் இருப்பு புலப்படுவதில்லை. எனினும், ஒரு பொருள் புலன்களின் திறனைக் கடக்கும்போது அதன் இருப்பு (அல்லது இல்லாமை) உள்ளுணர்வால் உறுதி செய்யப்படுகிறது. இஃது ஒரு குழுவினருடைய கருத்தாகும். வேறு சிலர், அழிவோடு சேர்த்து குணங்களும் இல்லாமல் போகின்றன என்று உறுதி செய்கின்றனர்.(41) புத்தி மற்றும் சிந்தனை குறித்துச் சொல்லப்படும் முடிச்சுகள் நிறைந்த இந்தப் பிரச்சனையை அவிழ்த்து, ஐயமனைத்தும் களையும் ஒருவன் கவலையை விட்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.(42) அதன் ஆழத்தை அறியாத மனிதர்கள், மயக்கமெனும் நீரால் நிறைந்த ஓர் ஆற்றைப் போன்ற இந்தப் பூமியில் விழும்போது துயரடைவதைப் போலவே, புத்தியில் ஒற்றுமை இருக்கும் இந்த நிலையில் இருந்து விழும் மனிதனும் துயரடைகிறான்.(43) எனினும் அத்யாத்மாவை அறிந்து மனோவுறுதி கொண்ட ஞானிகள், அந்த நீரின் மறுகரையை அடைய இயன்றவர்கள் என்பதால் அவர்கள் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை. உண்மையில், ஞானமே (அந்த ஆற்றில்) திறமிக்கத் தோணியாகும்.(44) ஞானமற்றவர்களை அச்சுறுத்தும் பீதி நிறைந்த கிலிகளை ஞானிகள் சந்திக்க வேண்டியதில்லை. அறவோரைப் பொறுத்தவரையில், அவர்களில் எந்த மனிதனும் அடைந்த கதிக்கு மேன்மையான கதியை அவர்களில் எவரும் அடைவதில்லை. உண்மையில், இவ்வகையில் அறவோர் தங்கள் சமத்தன்மையை வெளிக்காட்டுவர்.(45) ஞானியைப் பொறுத்தவரையில், (அவன் அறியாமையில் மூழ்கியிருந்த) கடந்த காலங்களில் அவனால் செய்யப்பட்ட எந்தச் செயல்களையும், (ஞானமடைந்த பிறகு) அவன் செய்த கொடுமைநிறைந்த எந்தச் செயல்களையும் ஞானத்தையே தன் ஒரே வழிமுறையாகக் கொள்வதன் மூலம் அழிக்கிறான். பிறகு, அவன் ஞானமடைந்த பிறகு, பிறரின் தீச்செயல்களைக் கண்டிப்பது, பற்றின் ஆதிக்கத்தில் தானே தீச்செயல்களைச் செய்வது என்ற அந்த இரண்டு தீமைகளையும் செய்வதை நிறுத்துகிறான்” என்றார் {பீஷ்மர்}.(46)

துன்பமற்ற நிலை! – சாந்திபர்வம் பகுதி – 287-துக்கத்தையும், மரணத்தையும் தவிர்ப்பது எவ்வாறு என்று கேட்ட யுதிஷ்டிரன்; நாரதருக்கும், சமங்கருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உயிரினங்கள் எப்போதும் துன்பத்தையும், மரணத்தையும் கண்டு அஞ்சுகின்றன. ஓ! பாட்டா, இந்த இரண்டும் நேராமல் தவிர்ப்பது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாக நாரதருக்கும், சமங்கருக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2)

நாரதர் {சமங்கரிடம்}, “(பெரியோரை வணங்க சிலர் தங்கள் தலைகளை மட்டுமே தாழ்த்துகின்றனர்) நீர் பெரியோர்களை வணங்க உமது மார்பு தரையைத் தொடும் வரை நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்து வணங்குகிறீர். நீர் உமது கரங்களைக் கொண்டே (வாழ்வெனும் ஆற்றைக்) கடப்பதாகத் தெரிகிறது[1]. நீர் எப்போதும் துன்பத்தில் இருந்து விடுபட்டவராகவும், மிகுந்த உற்சாகம் நிறைந்தவராகத் தென்படுகிறீர். நீர் எப்போதும் நிறைவுடையவராகவும், மகிழ்ச்சியானவராகவும் ஒரு குழந்தையைப் போல (இன்பமாக) விளையாடிக் கொண்டிருப்பவராகவும் தென்படுகிறீர்” என்றார்.(4)

சமங்கர் {நாரதரிடம்}, “ஓ! கௌரவங்களை அளிப்பவரே. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்களைக் குறித்த உண்மையை நான் அறிவேன். எனவே நான் ஒருபோதும் உற்சாகமிழப்பதில்லை[2].(5) இவ்வுலகில் செயல்களின் தொடக்கம் எது, அவற்றால் அடையப்படும் கனிகள் என்னென்ன, அந்தக் கனிகள் எவ்வாறு பல்வேறு வகைகளில் இருக்கின்றன என்பதையும் நான் அறிவேன். எனவே நான் ஒருபோதும் துன்பத்தின் வசப்படுவதில்லை[3].(6) ஓ! நாரதரே, கல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள், செல்வந்தர்கள், குருடர்கள், மூடர்கள், பித்தர்கள் என நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பாரும்[4].(7) இவர்கள் தங்கள் முற்பிறவிச் செயல்களின் மூலம் வாழ்கிறார்கள். நோய்களில் இருந்து விடுபட்டவர்களான தேவர்களே கூட, முற்பிறவிகளின் செயற் தன்மையின் மூலம் (அந்நிலையில்) இருக்கிறார்கள். பலவீனர்களும், பலவான்களும் என அனைவரும் தங்கள் முற்பிறவி செயல்களின் தன்மையால் வாழ்கின்றனர். எனவே, நீர் நம்மை மதிப்பதே உமக்குத் தகும்.(8) ஆயிரங்களைக் கொண்டவர்கள் வாழ்கிறார்கள். நூறுகளைக் கொண்டவர்களும் வாழ்கிறார்கள். துன்பத்தில் மூழ்கியவர்களும் வாழ்கிறார்கள். நாமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதையும் பாரும்.(9)ஓ! நாரதரே, நாம் துன்பவசப்படாமல் இருக்கும்போது, (அறக்) கடமை பயிற்சியோ, (அறச்) செயல் நோற்போ நமக்கு என்ன செய்துவிட முடியும்? இன்ப துன்பங்கள் அனைத்தும் முறிவற்றவை என்பதால், அவற்றால் ஒருபோதும் நம்மைக் கலங்கடிக்க முடிவதில்லை[5].(10) ஞானிகள் என்று எதனால் மனிதர்கள் சொல்லப்படுகிறார்கள், அது பிழையில் {குற்றத்தில்} இருந்து புலன்களை விடுபடச் செய்யும் ஞானமே ஆகும். புலன்களே பிழைக்கும் {குற்றத்திற்கும்}, துயரத்திற்கும் வசப்படுகிறது. பிழைக்கு {குற்றத்திற்கு} ஆட்படும் புலன்களைக் கொண்ட ஒருவன் ஞானத்தை அடைவான் என்று ஒருபோதும் சொல்ல முடியாது.(11) பிழையின் ஆதிக்கத்தால் மனிதன் கொள்ளும் செருக்கானது, அவன் அடங்கியிருக்கும் பிழையின் {குற்றத்தின்} வடிவம் மட்டுமே ஆகும். பிழை செய்யும் மனிதனைப் பொறுத்தவரையில் அவனுக்கு இம்மையும் கிடையாது, மறுமையும் கிடையாது. துன்பங்கள் எப்போதும் நீடித்திருப்பதில்லை, இன்பமும் எப்போதும் இருக்காது என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும்[6].(12) திருப்பங்கள் மற்றும் துன்ப நிகழ்வுகள் நிறைந்த இந்த உலகவாழ்வை என்னைப் போன்ற ஒருவன் ஒருபோதும் பின்பற்ற மாட்டான். அத்தகைய ஒருவன், இன்பத்திற்குரிய பொருட்களை விரும்புவதில் கவனம் கொள்ள மாட்டான், அவை கொண்டு வரும் மகிழ்ச்சியை நினைக்க மாட்டான், அல்லது அவை கொண்டு வரும் துன்பங்களையும் நினைக்க மாட்டான்.(13) தற்சார்பு கொள்ள இயன்ற ஒருவன், பிறரின் பொருள்களில் ஒருபோதும் பேராசை கொள்ள மாட்டான்; அடையப்படாத லாபங்களைக் குறித்து நினைக்க மாட்டான்; அபரிமிதமான செல்வத்தை அடைவதால் மகிழ்ச்சியை உணர மாட்டான்; செல்வத்தை இழப்பதால் துன்பவசப்பட மாட்டான்.(14) நண்பர்களாலோ, செல்வத்தாலோ, உயர்ந்த பிறப்பாலோ, சாத்திரக் கல்வியாலோ, மந்திரங்களாலோ, சக்தியாலோ மறுமையின் துன்பத்தில் ஒருவனை மீட்க முடியாது. ஒழுக்கத்தின் மூலமே ஒருவனால் அங்கே இன்பத்தை அடையமுடியும்.(15)யோகத்தை அறியாத மனிதனின் புத்தியை ஒருபோதும் விடுதலையை {முக்தியை} நோக்கிச் செலுத்த முடியாது. யோகத்தை அறியாத ஒருவனால் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைய முடியாது. பொறுமையும், கவலையைக் கைவிடும் மனோவுறுதியுமே மகிழ்ச்சி உண்டாவதற்கான இரண்டு அறிகுறிகளாகும்.(16) ஏற்புடைய {இனிமையான} எதுவும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இன்பம் செருக்கைத் தூண்டுகிறது. மேலும் செருக்கானது கவலையை உண்டாக்குகிறது. இந்தக் காரணங்களுக்காகவே நான் இவை அனைத்தையும் தவிர்க்கிறேன்.(17) என் உடல் உயிருள்ளதாகத் திரிந்து கொண்டிருப்பதால், இதயத்தைத் திகைப்படையச் செய்யும் துயரம், அச்சம், செருக்கு ஆகியவற்றையும், இன்ப துன்பங்களையும் நான் (கவலையற்ற) சாட்சியாக மட்டுமே காண்கிறேன்[7].(18) செல்வம் மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும், தாகம் மற்றும் பிழையையும் கைவிட்டு, துயரத்தில் இருந்தும், அனைத்து வகை இதயக் கவலைகளிலும் இருந்தும் விடுபட்டுப் பூமியில் திரிந்து விருகிறேன்.(1) அமுதம் பருகிய ஒருவனைப்போல, இம்மையிலோ, மறுமையிலோ, மரணத்திலோ, கொடூரத்திலோ, காமத்திலோ, அவ்வகையான எவற்றிலோ எனக்கு அச்சமேதும் இல்லை.(20) ஓ! பிராமணரே, நான் செய்த கடுமையான, அழிவற்ற தவங்களின் விளைவாக நான் இந்த ஞானத்தை அடைந்திருக்கிறேன். ஓ! நாரதரே, இதன் காரணமாகவே, என்னிடம் வரும் துன்பத்தால் என்னைப் பீடிப்பதில் வெல்ல முடிவதில்லை” என்றார் {சமங்கர்}” {என்றார் பீஷ்மர்}.(21)

தற்கட்டுப்பாடு அற்றவனுக்கான நன்மையும் சிறப்பும்! – சாந்திபர்வம் பகுதி – 288-ஆன்ம ஞானத்தைத் தேடாத மனிதர்கள் எவ்வழியில் மேன்மையடையலாம், நன்மையும், சிறப்பும் அடையலாம் என்பது குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, சாத்திரங்களின் உண்மைகளை அறியாதவனும், எப்போதும் ஐயத்தில் இருப்பவனும், தற்கட்டுப்பாட்டையும், ஆன்ம ஞானத்தை நோக்கமாகக் கொண்ட பிற பயிற்சிகளையும் தவிர்ப்பவனுமான ஒருவனுக்கு எது நன்மை என்பதை எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஆசானை வழிபடுதல், முதியோரிடம் மதிப்புடன் காத்திருத்தல் {அவர்களுக்குப் பணிவிடை செய்தல்}, (தகுந்த பிராமணர்களால் சொல்லப்படும்) சாத்திரங்களைக் கேட்டல் ஆகியவையே (நீ சொன்னதைப் போன்ற ஒருவனுக்கு) உயர்ந்த நன்மையை அளிப்பதாகச் சொல்லப்படுகிறது.(2) இது தொடர்பாகக் காலவருக்கும் தெய்வீக முனிவரான நாரதருக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(3)

ஒரு காலத்தில், தனக்கான நன்மையை அடைவதில் விருப்பம் கொண்ட காலவர், பிழை மற்றும் களைப்பில் {குற்றங்குறைகளில்} இருந்து விடுபட்டவரும், சாத்திரங்களில் கல்விமானும், அறிவில் நிறைவுடையவரும், தன் புலன்களை முற்றாக ஆள்பவரும், யோகத்தில் அர்ப்பணிப்புள்ள ஆன்மாவுடன் கூடியவருமான நாரதரிடம்,(4) “ஓ! முனிவரே, இவ்வுலகத்தில் ஒரு மனிதன் மதிக்கப்படுவதற்குத் தகுந்த ஒழுங்கங்கள் அனைத்தும் உம்மில் நிரந்தரமாக வசிக்கின்றன.(5) பிழையில் {குற்றத்தில்} இருந்து விடுபட்டவரான உமக்கு, பிழைக்கு ஆட்படுபவர்களும், உலகின் உண்மைகளை அறியாதவர்களுமான எங்களைப் போன்ற மனிதர்களின் மனங்களில் நிறைந்திருக்கும் ஐயங்களை அகற்றுவதே தகும்.(6) சாத்திரத் தீர்மானங்கள் செயல்களைச் செய்யத் தூண்டும் அதே வேளையில் ஞானம் (அடைவதற்கான) தூண்டலையும்  உண்டாக்குகின்றன என்பதால் எங்களுக்கு என்ன செய்வது என்பது தெரியவில்லை. இக்காரியம் குறித்து எங்களுக்குச் சொல்வதே உமக்குத் தகும்[1].(7) ஓ சிறப்புமிக்கவரே, வெவ்வேறு ஆசிரமங்கள் {வாழ்வுமுறைகள்} வெவ்வேறு ஒழுக்க நடைமுறைகளை அங்கீகரிக்கின்றன. “இது நன்மையானது, இந்த மற்றொன்று நன்மையானது” என்ற வகையிலேயே சாத்திரங்கள் எப்போதும் நம்மைத் தூண்டுகின்றன.(8)சாத்திரங்களால் இவ்வாறு தூண்டப்பட்டு, தங்களுக்காக அந்தச் சாத்திரங்கள் விதித்திருப்பதை முழுமையாக அங்கீகரித்து, அதன்படியே பல்வேறு பாதைகளில் பயணித்து அந்த நான்கு ஆசிரமங்களைப் பின்பற்றுவோரைக் கண்டும், எங்கள் சாத்திரங்களில் நிறைவோடு இருக்கும் எங்களைப் பார்த்தும்  உண்மையில் எது நன்மையானது என்பதைப் புரிந்து கொள்ள நாங்கள் தவறுகிறோம்.(9) சாத்திரங்கள் அனைத்தும் சமச்சீரானவை என்றால், எது உண்மையில் நன்மையானது என்பது வெளிப்பட்டிருக்குமே. எனினும், பல்வேறு வகைப்பட்ட சாத்திரங்களின் விளைவால் உண்மையான நன்மை எது என்பது புதிராகிப் போகிறது.(10) இந்தக் காரணங்களால் எது உண்மையில் நன்மையானது என்பது எனக்குக் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. எனவே, ஓ! சிறப்புமிக்கவரே, இக்காரியம் குறித்து எனக்குச் சொல்வீராக. (இதற்காகவே) நான் உம்மை அணுகினேன். ஓ!, எனக்குப் போதிப்பீராக” என்றார் {காலவர்}.(11)

நாரதர் {காலவரிடம்}, “ஓ! குழந்தாய், ஆசிரமங்கள் எண்ணிக்கையில் நான்காகும். அவை அனைத்தும், தாங்கள் வடிவமைக்கப்பட்ட நோக்கங்களுக்காகவும், தங்களில் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கும் கடமைகளுக்காகவும் தொண்டாற்றுகின்றன. ஓ! காலவா, நல்ல திறன் கொண்ட ஆசானிடம் அவற்றை முதலில் உறுதிசெய்து கொண்டு, பிறகு அவற்றைக் குறித்துச் சிந்திக்க வேண்டும்[2].(12) ஆசிரமங்களின் தகுதிகள் {புண்ணியங்கள்}, தங்கள் தங்களுக்குரிய வடிவில் வெவ்வேறானவையும், பொருளில் வேறுபட்டவையும், தாங்கள் தழுவும் நோன்புகளில் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையுமாகும்[3].(13) அகன்ற நோக்கில் கண்டால், ஆசிரமங்கள் அனைத்தும், (ஆன்ம அறிவு என்ற) தங்கள் உண்மை நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்த மறுக்கின்றன. எனினும், நுட்பமான பார்வையைக் கொண்டவர்கள் தங்கள் உயர்ந்த கதியை அதில் காண்கிறார்கள்.(14) எது உண்மையில் நன்மையானதோ, எதில் நண்பர்களுக்கான நன்மைகள், எதிரிகளை ஒடுக்குதல்,(15) (அறம், பொருள், இன்பம் ஆகிய) மூன்றையும் அடைவதில் ஐயமேற்படவில்லையோ, அதுவே உயர்ந்த சிறப்பு {நன்மை} என்று ஞானிகளால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாவச் செயல்களைத் தவிர்ப்பது, தொடர்ந்த அற மனோநிலை, நல்லோர் மற்றும் பக்திமான்களிடம் நன்னடத்தை ஆகிய இவையே மிகச் சிறந்தவையாகும்.(16)உயிரினங்கள் அனைத்திடமும் மென்மை, நடத்தையில் உண்மை, இனிய சொற்களைப் பயன்படுத்துதல் ஆகிய இவையே சிறப்பானவை {நன்மையானவை} என்பதில் ஐயமில்லை.(17) தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள் ஆகியோரிடம் சமமான பகிர்தலையும், பணியாட்களிடம் பற்றையும் ஒருவன் கொண்டால் அவையே மிகச் சிறந்தவையாகும்.(18) பேச்சில் வாய்மை சிறந்தது. எனினும், உண்மை குறித்த அறிவை அடைவது மிகக் கடினமானதாகும். வாய்மையே உயிரினங்களுக்கு மிக நன்மையானது என நான் சொல்வேன்.(19) செருக்கைத் துறத்தல், கவனமின்மையைக் களைதல், மனோநிறைவு, தற்சார்புடன் வாழ்தல் ஆகியவையே உயர்வான சிறப்புகளாக {நன்மைகளாகச்} சொல்லப்படுகின்றன.(20)

நன்கறியப்பட்ட விதிகளின் படி வேதங்கள் மற்றும் அவற்றின் அங்கங்களைக் குறித்த கல்வி, ஞானம் அடைவதற்காகச் செய்யப்படும் ஆனைத்து வகை ஆய்வுகள், மற்றும் தேடல்கள் ஆகியவை சிறப்பானவை என்பதில் ஐயமில்லை.(21) எது சிறப்பானதோ, அஃதை அடைய விரும்பும் ஒருவன், ஒலி, வடிவம், சுவை, தீண்டல் மணம் ஆகியவற்றை அதிகமாகவும், தங்களுக்காக மட்டுமே என்ற வகையிலும் ஒருபோதும் அனுபவிக்கக்கூடாது.(22) சிறப்படைய விரும்பும் ஒருவனால், இரவில் உலவுதல், பகலில் உறங்குதல், சோம்பலில் ஈடுபடுதல், அயோக்கியத்தனம், ஆணவம், புலன் நுகர் பொருட்களில் அதிகமாக ஈடுபடுதல், அவற்றை முற்றிலும் தவிர்த்தல் என்ற இவை அனைத்தும்  துறக்கப்பட வேண்டும்.(23) பிறரை இகழ்வதன் மூலம் ஒருவன் தன்னை மேன்மைப்படுத்திக் கொள்ள முனையக்கூடாது. உண்மையில், அவன் தன் தகுதிகளால் மட்டுமே புகழ்பெற்றவர்களில் இருந்து தனித்தன்மையை {விசேஷ மேன்மையை} நாட வேண்டுமேயன்றி, ஒருபோதும் தாழ்ந்தவர்களிடம் அதைச் செய்யக்கூடாது.(24) உண்மையில் தகுதியற்ற {புண்ணியமற்ற} மனிதர்கள், தன்னையே வியந்து பாராட்டிக் கொள்ளும் உணர்வால் நிறைந்து, தங்கள் சிறப்புகள் மற்றும் செல்வாக்கை உறுதி செய்வதன் மூலம் உண்மையான தகுதியுள்ள மனிதர்களை {புண்ணியவான்களை} இகழ்கிறார்கள்.(25)

தன் முக்கியத்துவம் என்ற உணர்வில் பெருகும் இம்மனிதர்கள், (சரியான உணர்வுக்கு மீளும் வகையில்) தங்களோடு எவரும் தலையிடாதபோது, அவர்கள் உண்மையில் தனிச் சிறப்புடைய மனிதர்களைவிடத் தங்களை மேன்மையானவர்களாகக் கருதிக் கொள்கிறார்கள்.(26) உண்மை ஞானமும், உண்மையான தகுதிகளையும் கொண்ட ஒருவன், பிறரைக் குறித்து இழிவாகப் பேசுதல் மற்றும் தற்புகழ்ச்சி செய்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலம் பெரும் புகழை அடைகிறான்.(27) மலர்கள் தங்கள் சிறப்பை ஊதி முழக்காமல், தூய்மையும், இனிமையும் நிறைந்த தங்கள் நறுமணத்தை வீசுகின்றன. பிரகாசமான சூரியனும், முற்றான அமைதிநிலையில் ஆகாயத்தில் தன் காந்தியைப் பொழிகிறான்.(28) அவ்வகையிலேயே, தங்கள் நுண்ணறிவின் துணையுடன் இது போன்ற பிற குற்றங்களைக் களைந்து, தற்சிறப்புகளைப் புகழ்ந்து கொள்ளாமல் இருக்கும் மனிதர்களே இவ்வுலகில் புகழுடன் சுடர்விடுகிறார்கள்.(29) தன் புகழையே ஊதிக்கொள்ளும் மூடனால் ஒருபோதும் இவ்வுலகில் ஒளிர முடியாது. எனினும், உண்மைத் தகுதியும், கல்வியும் கொண்ட மனிதன், குழிக்குள்ளேயே மறைந்திருந்தாலும் புகழை அடைவான்.(30)

எவ்வகைக் குரல்வளத்தோடு தீய வார்த்தைகள் சொல்லப்பட்டாலும், அஃது உடனே மறைந்துவிடும். நல்ல வார்த்தைகள் எவ்வளவு மென்மையாகச் சொல்லப்பட்டாலும் இவ்வுலகில் சுடர்விடும்.(31) சூரியன் தனது நெருப்பு வடிவத்தை (சூரியகாந்தம் என்றழைக்கப்படும் ரத்தினத்தில்) வெளிக்காட்டுவதைப் போலவே, பகட்டு நிறைந்த மூடர்களால் சொல்லப்படுபவையும் சிற்றறிவைக் கொண்டவையுமான வார்த்தைகள், அவர்களுடைய இதயங்களை (அவற்றின் அற்பத்தனைத்தை) மட்டுமே வெளிப்படுத்தும்.(32) இந்தக் காரணங்களால் மனிதர்கள் பல்வேறு ஞானங்களை அடைய முனைகிறார்கள். ஞானம் தொடர்பாக அடையப்படும் அனைத்தும் மதிப்புமிக்கவையாகவே எனக்குத் தோன்றுகின்றன.(33) ஒருவன் தன்னை எவரும் கேட்காதவரை பேசக்கூடாது; முறையற்ற வகையில் கேட்கப்படும்போதும் பேசக்கூடாது. அவன் நுண்ணறிவையும், ஞானத்தையும் கொண்டிருந்தாலும் (பேசுமாறு தன்னை எவரும் கேட்டுக் கொள்ளும் வரை, உரிய முறையில் கேட்கப்படும் வரை) அவன் மூடனைப் போலவே அமர்ந்திருக்க வேண்டும்.(34) அறம், ஈகையில் அர்ப்பணிப்புள்ள நேர்மையாளர்கள் மற்றும் தங்களுக்குரிய வகையின் {வர்ணக்} கடமைகளைச் செய்பவர்கள் ஆகியோருக்கு மத்தியிலேயே ஒருவன் வசிக்க வேண்டும்.(35)

சிறப்பை அடைய விரும்பும் ஒருவன், பல வகையினரின் கடமைகளில் குழப்பங்கள் நேரும் {மக்கள் தங்களுக்குத் தகாத காரியங்களைச் செய்யும்} இடங்களில் ஒருபோதும் வசிக்கக்கூடாது.(36) (வாழ்வாதார வழிமுறைகளை ஈட்டும்) பணிகள் அனைத்தையும் தவிர்த்து, முயற்சியில்லாமல் கிடைத்தவற்றில் நிறைவுடன் வாழும் மனிதனும் இங்கே காணப்படுகிறான். அறவோருக்கு மத்தியில் வாழ்வதன் மூலமே ஒருவன் தூய அறத்தை அடைவதில் வெல்கிறான். அதே வகையில், பாவிகளுக்கு மத்தியில் வாழும் ஒருவன் பாவத்தால் களங்கப்படுகிறான்.(37) நீர், நெருப்பு, நிலவின் கதிர் ஆகியவை தீண்டிய உடனேயே குளிர் அல்லது வெப்பத்தை உணர்த்துவதைப் போலவே, அறம் மற்றும் மறத்தின் சுவடுகளே இன்பதுன்பங்களை உண்டாக்குகின்றன.(38) விகாசத்தை {வேள்வியில் எஞ்சியவற்றை} உண்பவர்கள், தங்களுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள உணவு வகைகளின் சுவையைக் கவனிக்காமலேயே உண்கிறார்கள். எனினும், தங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட உணவுகளின் சுவையை வேறுபடுத்திப் பார்த்துக் கவனமாக உண்பவர்கள், இன்னும் செயல்பாட்டு பந்தங்களின் மூலம் கட்டப்பற்றவர்களாகவே அறியப்பட வேண்டும்.(39) எங்கே ஒரு பிராமணர், அறிவின் அடிப்படையில் ஆன்மா குறித்த அறிவை அடைய விரும்பும் சீடர்களிடம் கடமைகளைக் குறித்து உரையாடினாலும், அத்தகைய அறிவை அவர்கள் {சீடர்கள்} மதிக்கவில்லையோ அந்த இடத்தில் இருந்து அறவோன் அகல வேண்டும்[4].(40)எனினும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளவற்றுக்கு முழு இணக்கமாகச் சீடர்கள் மற்றும் ஆசான்களுக்கு இடையிலான நடத்தை இருக்கும் எந்த இடத்தையும்விட்டு யார்தான் விலகிச்செல்வார்?(41) எந்த இடத்தில் கல்விமான்களின்மேல் அடிப்படையற்ற களங்கத்தை மக்கள் சொல்வார்களோ, அந்த இடத்தில் தன் மதிப்பை {சுயகௌரவத்தை} விரும்பும் எந்தக் கல்விமான்தான் இருப்பான்?(42) எங்கே பேராசைமிக்க மனிதர்கள் அறத்தின் எல்லைகளை {அறம் நிலைப்பதற்குரிய தடைகளைத்} தகர்ப்பார்களோ, அந்த இடத்தைவிட்டு ஆடையில் நெருப்பு பற்றியதைப் போல எவன்தான் விலகாமல் இருப்பான்?(43) எங்கே பணிவுடனும், அச்சமில்லாமலும் அறக்கடமைகளைப் பயிலும் மனிதர்கள் இருப்பார்களோ, அந்த இடத்தில் அறமனம் கொண்ட நல்லோருக்கு மத்தியிலேயே ஒருவன் நீடித்து வசிக்க வேண்டும்.(44) எங்கே மனிதர்கள் செல்வத்தை ஈட்டுவதற்காகவும், தற்காலிகமானப் பயன்கள் பிறவற்றிற்காகவும் அறக்கடமைகளைப் பயில்வார்களோ அந்த இடத்தில் உள்ள மக்கள் அனைவரும் பாவிகளாகக் கருதப்படுவதால் அங்கே அவன் வசிக்கக்கூடாது. (45)

எங்கே மனிதர்கள் வாழ்வாதாரத்தை அடைய விரும்பி பாவச்செயல்களில் ஈடுபடுவார்களோ, அங்கேயிருந்து அறையில் பாம்பைக் கண்ட ஒருவனைப் போல அவன் மிக வேகமாகத் தப்பிச் செல்ல வேண்டும்.(46) நன்மையில் விருப்பமுள்ள ஒருவன், எந்தச் செயலின் விளைவால் முள் படுக்கையில் கிடப்பதைப் போல உணர்வானோ, முற்பிறவிகளின் செயல்களில் பிறந்த ஆசையால் பீடிக்கப்படுவானோ, அந்தச் செயலைத் தொடக்கத்தில் இருந்தே துறக்க வேண்டும்.(47) எந்த நாட்டில் மன்னனும், மன்னனின் அலுவலர்களும் சம அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்களோ, எங்கே (விருந்திற்கு வந்த) உறவினர்களுக்கு உணவூட்டும் முன்பே உண்ணும் வழக்கம் கொண்டோர் இருக்கிறார்களோ, அந்த நாட்டை விட்டு அறவோன் விலக வேண்டும்.(48) சாத்திர அறிவைக் கொண்ட பிராமணர்களுக்கு முதலில் எங்கே உணவூட்டப்படுகிறதோ; எங்கே அவர்கள் அறக்கடமைகளை முறையாகச் செய்வதில் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்களோ, எங்கே அவர்கள் சீடர்களுக்குப் போதித்து, பிறரின் வேள்விகளில் துணை புரிகிறார்களோ அந்த நாட்டிலேயே ஒருவன் வசிக்க வேண்டும்.(49) ஸ்வாஹா, ஸ்வதா, வஷத் ஆகிய ஒலிகள் முறையாகவும், தொடர்ச்சியாகவும் எந்த நாட்டில் ஒலிக்கிறதோ, அங்கே ஒருவன் எந்தத் தயக்கமும் இல்லாமல் வசிக்கலாம்.(50)

எந்த நாட்டில் நஞ்சூட்டப்பட்ட இறைச்சியைப் போலப் பிராமணர்கள் வாழ்வின் தேவைகளை அடைய முடியாத துன்பத்தில் புனிதமற்ற நடைமுறைகளில் ஈடுபடுவதை ஒருவன் காண்கிறானோ, அந்த நாட்டை விட்டு அவன் அகல வேண்டும்.(51) எந்த நாட்டில் வசிப்பவர்கள் கேட்கப்படுவதற்கு முன்பே உற்சாகமாகக் கொடுக்கிறார்களோ, அந்த நாட்டில் ஓர் அறவோன் தன் விருப்பங்கள் அனைத்தும் ஏற்கனவே நிறைவடைந்த ஒருவனைப் போல நிறைவான இதயத்துடன் வசிக்க வேண்டும்.(52) எந்த நாட்டில் தீயோர் தண்டிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட தூய ஆன்மா கொண்டோருக்கு நன்மைகள் கிடைக்கிறதோ, அந்த நாட்டில், அறச்செயல்களில் அர்ப்பணிப்புடைய மனிதர்களுக்கு மத்தியில் ஒருவன் வாழ வேண்டும்.(53) எந்த நாட்டில் மன்னன் அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டுள்ளானோ, எங்கே மன்னன் ஆசைகளைக் கைவிட்டு, செழிப்பை அடைந்து, அறவிதிகளின்படி ஆள்கிறானோ, எங்கே தற்கட்டுப்பாடுடைய மனிதர்களிடம் சச்சரவு செய்பவர்களுக்கும், நல்லோரிடம் தீச்செயல் புரிபவர்களுக்கும், வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும், பேராசை மிக்கவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படுகிறதோ அந்த நாட்டில் ஒருவன் எந்தத் தயக்கமுமில்லாமல் வசிக்கலாம்.(54,55)

அத்தகைய மனோநிலை கொண்ட மன்னர்கள், அந்நாட்டில் வசிப்போரின் செழிப்பு குன்றும்போது அந்நாட்டுக்குச் செழிப்பைக் கொண்டுவருவார்கள்.(56) ஓ! மகனே {காலவா}, நன்மையானது, அல்லது சிறந்தது எது என்ற உன் கேள்விக்கு நான் உனக்குப் பதில் சொல்லிவிட்டேன். ஆன்மாவுக்கான நன்மை, அல்லது சிறப்பு எது என்பது மிக உயர்ந்த பண்பைக் கொண்டதாகையால் அது குறித்து எவரும் விளக்க முடியாது.(57) ஒரு மனிதன் இங்கே நேரும் தன் வாழ்க்கைப் பயணத்தில் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக மேலே குறிப்பிட்டபடி நடந்து கொண்டு, அனைத்து உயிரினங்களின் நன்மைக்குத் தன் ஆன்மாவை அர்ப்பணித்து, தனக்காக விதிக்கப்பட்ட கடமைகளை நோற்பதன் மூலம் அடையும் உயர்ந்த சிறப்புகள் {நன்மைகள்} பலவாகும்” என்றார் {நாரதர்}.(58)

மோக்ஷோபாயங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 289-மனோவுறுதி முதலிய முக்திக்கான வழிமுறைகள் குறித்து சகரனுக்கும், அரிஷ்டநேமிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நம்மைப் போன்ற மன்னர்கள், அடைய வேண்டிய பெரும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு இவ்வுலகில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? மேலும் அவன், பற்றுகளில் இருந்து விடுபட்டிருக்கும் வகையில் எந்தெந்த குணங்களை எப்போதும் கொண்டிருக்க வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பழங்கதையில் இது தொடர்பாக ஆலோசனை கேட்ட சகரனுக்கு, அரிஷ்டநேமி[1] சொன்னவற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2)சகரன் {அரிஷ்நேமியிடம்}, “ஓ! பிராமணரே, எந்த நன்மையைக் கொண்டு ஒருவனால் இம்மையில் பேரின்பத்தை அனுபவிக்க முடியும்? உண்மையில் துன்பத்தையும், கலக்கத்தையும் ஒருவனால் எவ்வாறு தவிர்க்க முடியும்? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சகரனால் கேட்கப்பட்டவரும், சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரும், தர்க்ஷிய குலத்தைச் சேர்ந்தவருமான அரிஷ்டநேமி, கேள்வி கேட்பவன் அனைத்து வகையிலும் தன் போதனைகளுக்குத் தகுந்தவன் என்று கருதி இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(4) {அரிஷ்டநேமி}, “இவ்வுலகில் முக்தியால் உண்டாகும் பேரின்பநிலையே உண்மையான பேரின்பமாகும். அறியாமையில் உள்ள மனிதன், பிள்ளைகள் மற்றும் விலங்குகளிடம் கொண்ட பற்றாலும், செல்வம் மற்றும் தானியங்களால் பீடிக்கப்பட்டதாலும் அது குறித்து அறிவதில்லை.(5) உலகப் பொருட்களில் பற்றுடைய புத்தி, தாகத்தால் பீடிக்கப்பட்ட மனம் {எதுவும் வேண்டும் என்ற ஏக்கங்கொண்ட மனம்} என்ற இவை இரண்டும் திறன்மிக்க அனைத்து சீர்திருத்தங்களையும் கலங்கடித்துவிடும். பற்றுகளெனும் சங்கிலிகளால் கட்டப்பட்டு அறியாமையில் உள்ள மனிதன் விடுதலையை {முக்தியை} அடைய இயலாதவனாகிறான்.(6) நான் இப்போது பற்றிலிருந்து பிறக்கும் கட்டுகள் {பந்தங்கள்} அனைத்தையும் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன். கவனத்துடன் அவற்றைக் கேட்பாயாக. உண்மையில், ஞானம் கொண்ட ஒருவனால் பொருளுடன் அவற்றைக் கேட்க இயலும்.(7)

{உரிய} காலத்தில் பிள்ளைகளைப் பெற்று, அவர்கள் இளைஞர்களானதும் திருமணம் செய்து கொடுத்து, அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை ஈட்டத்தகுந்தவர்கள்தான் என்பது உறுதி செய்துகொண்டு, பற்றுகள் அனைத்தில் இருந்தும் உன்னை விடுவித்துக் கொண்டு, மகிழ்ச்சியாகத் திரிவாயாக.(8) உன்னால் அன்புடன் பேணிக்காக்கப்பட்ட மனைவி வயதில் முதிர்ச்சியடைந்து, அவள் ஈன்ற மகனிடம் பற்றுடன் இருக்கும்போது, உயர்ந்த பொருளை (விடுதலையை {முக்தியை}) ஈட்டும் நோக்கத்தோடு, {உரிய} காலத்தில் அவளை விட்டு அகல்வாயாக.(9) உனது வாழ்வின் முதன்மையான வருடங்களில் உன் புலன்களைக் கொண்டு அவற்றுக்குரிய பொருட்களை முறையாக அனுபவித்த பிறகு, ஒரு மகனைப் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும், பற்றுகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாகத் திரிவாயாக {சுகமாக நடப்பாயாக}.(10) புலன்களை அவற்றுக்குரிய பொருட்களில் {போதிய அளவுக்கு} ஈடுபடுத்திய பிறகு, மேலும் மேலும் அவற்றில் ஈடுபடும் விருப்பத்தை நீ அடக்க வேண்டும். பிறகு பற்றுகளில் இருந்து விடுபட்டு, முயற்சி இல்லாமலும், ஏற்கனவே தீர்மானிக்கப்படாமலும், கிடைப்பதில் நிறைவடைந்து, அனைத்து உயிரினங்கள் மற்றும் பொருட்களில் சமபார்வையைச் செலுத்தி மகிழ்ச்சியாகத் திரிவாயாக.(11)

ஓ! மகனே, (பற்றுகளில் இருந்து விடுபடும் வழி என்ன என்பதை) இவ்வாறே உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். விடுதலை {முக்தியை} அடையும் விருப்பம் குறித்து இனி உனக்கு விளக்கமாகச் சொல்லப் போகிறேன்.(12)

பற்றுகள் மற்றும் அச்சத்தில் இருந்து விடுபட்ட மனிதர்கள் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறார்கள். எனினும், உலகப் பொருட்களில் பற்றுடைய மனிதர்கள் அழிவடைகிறார்கள் என்பதில் ஐயமில்லை.(13) (மனிதர்களைப் போலவே) புழுக்களும், எறும்புகளும் உணவை அடைவதில் ஈடுபட்டு, தேடலிலேயே இறப்பது காணப்படுகிறது. பற்றுகளில் இருந்து விடுபட்டவர்கள் மகிழ்ச்சியை அடைகிறார்கள், அதே வேளையில் உலகப் பொருட்களில் பற்றுடையோர் அழிவடைகிறார்கள்.(14) நீ விடுதலையை அடைய விரும்பினால், “நானில்லாமல் இவர்கள் எவ்வாறு இருப்பார்கள்?” என்று நினைத்து, ஒருபோதும் உன் உறவினர்களிடம் உன் எண்ணங்களைச் செலுத்தாதே.(15) ஓர் உயிரினம் தானே பிறப்படைந்து, தானே வளர்ந்து, இன்பதுன்பங்களையும், மரணத்தையும் தானே அடைகிறது.(16)

இவ்வுலகில் மக்கள் இன்புற்று, தங்கள் பெற்றோராலோ, தங்களாலோ ஈட்டப்பட்ட உணவு, ஆடை ஆகியவற்றையும், இன்னும் பிற உடைமைகளை அடைகின்றனர். முற்பிறவின் விளைவாலன்றி எதையும் இப்பிறவியில் அடைய முடியாது என்பதால், இது முற்பிறவிச் செயல்களின் விளைவேயாகும்.(17) பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் தங்கள் செயல்களால் பாதுகாக்கப்பட்டு, செயல்களின் கனிகளை வகுப்பவனால் {பரமனால்} விதிக்கப்பட்ட விளைவின் காரணமாகத் தங்கள் உணவை அடைகின்றன.(18) களிமண்கட்டியான மனிதன், பிற சக்திகளையே முழுமையாகச் சார்ந்திருக்கிறான். எனவே, இவ்வளவு உறுதியற்றவனாக இருக்கும் ஒருவனால், தன் உறவினர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு உணவளிப்பதற்கும் அவனிடம் உள்ள அறிவார்ந்த கருத்து {காரணம்} என்ன?(19) உன் உறவினர்களைக் காக்க மிகுந்த முயற்சிகளைச் செய்தும், நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்களைக் காலன் கொண்டு போகும் அந்தக் கணம் மட்டுமே உன்னை விழிப்படையச் செய்யும்.(20)

உன் உறவினர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களைக் காத்து, உணவளிக்கும் உன் கடமை முடிவதற்கு முன்பே மரணம் அடைந்து, அவர்களை நீ கைவிடக்கூடும்.(21) உன் உறவினர்கள் இவ்வுலகில் இருந்து காலனால் கொண்டு போகப்பட்ட பிறகு, அங்கே அவர்கள் இன்புறுகிறார்களா, துன்புறுகிறார்களா என்பதை உன்னால் அறிய முடியாது.(22) நீ வாழ்ந்திருந்தாலும், இறந்திருந்தாலும், உன் உறவினர்கள் தங்களின் சொந்த செயல்களுடைய கனிகளின் விளைவால், தங்களை இவ்வுலகில் தக்கவைத்துக் கொள்வதில் வெல்லும்போது, உன் நன்மைக்கானதையே நீ செய்ய வேண்டும்[2].(23) அறியப்பட்ட வழக்கம் இதுவே எனும்போது, இந்த உலகில் உள்ள எவனையும் எவனைச் சேர்ந்தவனாகக் கருத முடியும்? எனவே, விடுதலை {முக்தி} அடைவதில் உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக. மேலும் நான் உனக்குச் சொல்லப் போவதைக் கேள்.(24)பசி, தாகம், அத்தகைய பிற உடல்நிலைகள், கோபம், பேராசை மற்றும் குற்றங்களை வென்றவனும், உறுதிமிக்க ஆன்மா கொண்டவனுமான மனிதன் நிச்சயம் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(25) மடமையினால் சூதாட்டம், குடி, கூத்தியாள் உறவு, வேட்டை ஆகியவற்றில் ஈடுபட்டுத் தன்னை மறக்காதவன் எப்போதும் விடுதலை அடைந்தவன் ஆவான் {முக்தனாவான்}.(26) உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக ஒவ்வொரு பகலும், ஒவ்வொரு இரவும் உண்ணும் தேவையின் விளைவால் உண்மையில் கவலையடைபவன், வாழ்வின் களங்கங்களை {குற்றங்களை} நன்கு உணர்ந்தவன் என்று சொல்லப்படுகிறான்[3].(27) பெண்களுடன் நேரும் கலவியால் மட்டுமே மீண்டும் மீண்டும் தனக்குப் பிறவிகள் நேர்கின்றன என்று கவனமான சிந்தனையின் விளைவால் கருதுபவன், பற்றுகளில் இருந்து விடுபட்டவனாகக் கருதப்படுகிறான்.(28) உயிரினங்களின் பிறப்பு, அழிவு, முயற்சி (அல்லது செயல்கள்) ஆகியவற்றின் இயல்பை உண்மையில் அறிந்த மனிதன் நிச்சயம் விடுதலையடைந்தவனே {முக்தனே} ஆவான்.(29) தானியங்கள் நிறைந்த ஆயிரம் கோடி வண்டிகளில், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ள ஒரு கைப்பிடி தானியம் மட்டுமே (தன் ஏற்புக்குத் தகுந்தது) போதுமெனக் கருதுபவனும், மூங்கில் மற்றும் நாணல்களாலான கொட்டகைக்கும், மாளிகைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டில் அலட்சியம் கொள்பவனுமான மனதின் நிச்சயம் விடுதலை அடைவான் {முக்தனாவான்}[4].(30)உலகமானது, மரணம், நோய் மற்றும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காணும் மனிதன் நிச்சயம் விடுதலையடைவான்.(31) உண்மையில், உலகை அவ்வாறு காணும் ஒருவன் நிறைவடைவதில் வெல்வான்; அதே வேளையில், உலகை அத்தகைய ஒளியில் காணத்தவறும் ஒருவன் அழிவையே அடைவான். சிறிதளவில் மட்டுமே மனம் நிறையும் மனிதனும் விடுதலை அடைந்தவனாகக் கருதப்படுகிறான்.(32) உண்பவர்களையும், உணவுகளையும் {உண்ணப்படுபவைகளையும்} கொண்டதாக உலகைக் காண்பவனும், மாயையில் பிறக்கும் இன்ப துன்பங்களால் ஒருபோதும் தீண்டப்படாதவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாக {முக்தனாக} கருதப்படுகிறான்.(33) மஞ்சத்தோடு கூடிய மென்மையான படுக்கையையும், கடினமான தரையையும் ஒன்றாகக் கருதுபவனும், நெல்லரிசியையும், இழிவான அரிசியையும் ஒன்றாகக் கருதுபவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(34) பட்டுத்துணியையும், தர்ப்பையாலான துணியையும் ஒன்றாகக் கருதுபவனும், பீதாம்பரத்தையும், மரவுரியையும் ஒன்றாக மதிப்பவனும், தூய ஆட்டுத் தோலுக்கும் {ஆட்டுமயிர்க்கம்பளத்துக்கும்}, தூய்மையற்ற தோலுக்குமிடையில் எந்த வேறுபாட்டையும் காணாதவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(35)

ஐம்பூதக் கலவையின் விளைவெனவே இவ்வுலகைக் காண்பவனும், இக்கருத்தையே முதன்மையாகக் கொண்டு இவ்வுலகில் நடந்து கொள்பவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(36) இன்ப துன்பங்களை ஒன்றாக, ஈட்டல், இழப்புகளை இணையாகக் கருதுபவனும், வெற்றி தோல்வியில் வேற்றுமை பாராட்டாதவனும், விருப்பு வெறுப்புகளை ஒன்றாகக் கொள்பவனும், அச்சம் மற்றும் கவலையில் மாற்றமடையாமல் இருப்பவனுமான மனிதன் முற்றாக விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(37) பல குறைபாடுகளைக் கொண்ட தன் உடலை குருதி, சிறுநீர், மலம் ஆகியவற்றின் திரளாகவும், சீர்கேடுகள் மற்றும் நோய்களின் திரளாகவும் கருதும் மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(38) முதுமையடையும்போது இவ்வுடலானது, தோல் சுருக்கங்கள், நரை முடிகள், உடல் மெலிவு, நிறக் குறைவு, வடிவச் சீர்குலைவு ஆகியவற்றால் தாக்கப்படும் என்பதை எப்போதும் நினைக்கும் மனிதன் விடுதலை அடைகிறான்.(39) ஆண்மை இழத்தல், கண்பார்வை மங்குதல், செவிட்டுத்தன்மை, பலத்தை இழத்தல் ஆகியவற்றுக்குத் தன்னுடல் ஆட்படும் என நினைக்கும் மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(40)

முனிவர்கள், தேவர்கள், அசுரர்கள் ஆகியோரும் தங்கள் தங்களுக்குரிய பகுதிகளில் இருந்து செல்ல வேண்டியவர்களே என்று அறியும் மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(41) பெரும் பலமும், தாக்கமும் கொண்ட ஆயிரக்கணக்கான மன்னர்களும் கூட இந்தப் பூமியில் இருந்து செல்ல வேண்டியிருந்தது என்பதை அறிந்த மனிதன் விடுதலை {முக்தி} அடைவதில் வெல்கிறான்.(42) இவ்வுலகில் பொருட்களை அடைவது எப்போதும் கடினமானது, {அதனால் பெறும்} துன்பம் அதிகமானது, உறவினர்களைப் பராமரிப்பது துன்பத்தையே எப்போதும் தரும் என்பதை அறிந்த மனிதன் விடுதலை அடைகிறான் {முக்தனாகிறான்}.(43) பிள்ளைகள் மற்றும் பிற மனிதர்களின் அபரிமிதமான குறைகளைக் கண்ட எவன் தான் விடுதலையை {முக்தியைப்} புகழ மாட்டான்?(44) சாத்திரங்கள் மற்றும் உலக அனுபவத்தில் மூலம் விழிப்படைந்தவனும், இவ்வுலகின் ஒவ்வொரு மனிதக் கவலையும் நிச்சயமற்றவை என்பதைக் கண்டவனுமான மனிதன் விடுதலை {முக்தி} அடைகிறான்.(45) என்னுடைய இந்த வார்த்தைகளை மனத்தில் கொண்டு, இல்லற வாழ்விலோ {கிருஹஸ்தாஸ்ரமத்திலோ}, விடுதலைக்கு வழிவகுக்கும் எந்த வாழ்விலோ {சந்நியாசத்திலோ} உன் புத்தியைக் குழப்பிக் கொள்ளாமல் விடுதலையடைந்த ஒருவனைப் போல உன்னை அமைத்துக் கொள்வாயாக” என்றார் {அரிஷ்டநேமி}[5]. (46)அவரது இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேட்ட அந்தப் பூமியின் தலைவன் சகரன் விடுதலையை {முக்தியை} விளைவிக்கும் ஒழுக்கங்களை அடைந்து, அவற்றின் உதவியோடு தன் குடிமக்களை ஆள்வதைத் தொடர்ந்தான்” என்றார் {பீஷ்மர்}.(47)

சுக்கிராச்சாரியார்! – சாந்திபர்வம் பகுதி – 290-சுக்கிராச்சாரியார் தேவர்களின் பக்கம் சேராமல் அசுரர்களின் நன்மையை நாடிய காரணம்; சுக்கிரன் என்ற பெயர் தோன்றியதற்கான காரணம் ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, இந்த ஆவல் எப்போதும் என் மனத்தில் இருக்கிறது. ஓ! குருக்களின் பாட்டா, அது குறித்த அனைத்தையும் நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன்.(1) தெய்வீக முனிவரும், கவி என்றும் அழைக்கப்படுபவரும், உயர் ஆன்மா கொண்டவருமான உசனஸ், அசுரர்களுக்கு ஏற்புடையதையும், தேவர்களுக்கு ஏற்பில்லாததையும் செய்வதில் ஏன் ஈடுபட்டார்?(2) தேவர்களின் சக்தியை மங்கச் செய்வதில் அவர் ஏன் ஈடுபட்டார்? தானவர்கள், தேவர்களில் முதன்மையானோரிடம் ஏன் எப்போதும் பகைமையில் ஈடுபட்டனர்.(3) ஒரு தேவனைப் போன்ற காந்தியைக் கொண்ட உசனஸ் என்ன காரணத்தால் சுக்ரன் என்ற பெயரை அடைந்தார்? இக்காரியங்கள் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக.(4) பெருஞ்சக்தியைக் கொண்டவராக இருப்பினும், அவர் ஏன் ஆகாய மத்தியில் பயணிப்பதில் வெல்லவில்லை? ஓ! பாட்டா, இக்காரியங்கள் அனைத்தையும் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்[1].(5)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இவை அனைத்தையும் உண்மையில் நேர்ந்தபடியே கவனத்துடன் கேட்பாயாக. ஓ! பாவமற்றவனே, நான் கேள்விப்பட்டு, புரிந்து கொண்ட வகையிலேயே இக்காரியங்களைக் குறித்து உனக்குச் சொல்லப்போகிறேன்.(6) உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரும், அனைவராலும் கௌரவிக்கப்படுபவரும், பிருகு குலத்தின் வழித்தோன்றலுமான உசனஸ், போதுமான காரணத்திற்காகவே தேவர்களுக்கு ஏற்பில்லாதவற்றைச் செய்வதில் ஈடுபடலானார்[2].(7) யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் தலைவரான அரசன் குபேரன், அண்டத்தின் தலைவனான இந்திரனுடைய கருவூலத்திற்குத் தலைவனாவான்[3].(8) யோக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பெருந்தவசியான உசனஸ் {சுக்கிராச்சாரியார்}, குபேரனின் உடலுக்குள் நுழைந்து, தமது யோக சக்தியால் அந்தக் கருவூலத் தலைவனின் விடுதலையை {சுதந்திரத்தை} இழக்கச் செய்து, அவனது செல்வங்கள் அனைத்தையும் கவர்ந்தார்[4].(9) தன் செல்வம் தன்னிடம் இருந்து அபகரிக்கப்பட்டதைக் கண்ட கருவூலத் தலைவன் {குபேரன்} மிகவும் மனம் வருந்தினான். கவலையால் நிறைந்து, கோபத்தால் தூண்டப்பட்ட அவன் தேவர்களில் முதன்மையான மஹாதேவனிடம் {சிவனிடம்} சென்றான்.(10)குபேரன், அளவிலா சக்தி கொண்டவனும், தேவர்களில் முதல்வனும், கடுமையானவனும், இனிமையானவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனுமான சிவனிடம் இந்தக் காரியத்தை எடுத்துரைத்தான்.(11) அவன், “உசனஸ், யோகத்தினால் ஆன்மத் தூய்மை அடைந்து {தம்மைத் தூய்மையாக்கிக் கொண்டு}, என் வடிவத்திற்குள் {உடலுக்குள்} நுழைந்து, என் சுதந்திரத்தை அபகரித்து, என் செல்வம் அனைத்தையும் அபகரித்துவிட்டார். யோகத்தின் மூலம் என்னுள் நுழைந்த அவர், பின்னர் அதைவிட்டு அகன்றுவிட்டார்” என்றான்.(12)

இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், உயர்ந்த யோக சக்திகளைக் கொண்டவனுமான மஹேஸ்வரன் சினத்தால் நிறைந்தான். ஓ! மன்னா, அவனது கண்கள் குருதிச் சிவப்படைந்து, (உசனஸைத் தாக்கி வீழ்த்துவதற்குத் தயாராக) தன் சூலத்துடன் காத்திருந்தான்.(13)

உண்மையில், அந்த முதன்மையான ஆயுதத்துடன் கூடிய அந்தப் பெருந்தேவன், “அவன் எங்கே? அவன் எங்கே?” என்று கேட்கத் தொடங்கினான்.

அதே வேளையில் மஹாதேவனின் நோக்கத்தை (தமது யோக சக்தியின் மூலம்) உறுதி செய்து கொண்ட உசனஸ் {சுக்கிராச்சாரியார்}, தொலைவிலேயே அமைதியுடன் காத்திருந்தார்.(14) உண்மையில், யோக சக்தியில் மேன்மையான உயர் ஆன்ம மஹேஸ்வரனின் கோபத்தை உறுதி செய்து கொண்ட உசனஸ், மஹேஸ்வரனிடம் செல்லலாமா, தப்பிவிடலாமா அல்லது இருந்த இடத்திலேயே இருக்கலாமா என்று சிந்திக்கத் தொடங்கினார்.(15) யோக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட ஆன்மாவைக் கொண்ட உசனஸ், கடுந்தவங்களின் துணையுடன் மஹாதேவனை எண்ணிப்பார்த்து, மஹாதேவனின் சூல முனையிலேயே தம்மை நிறுத்திக் கொண்டார்.(16) வில் தரித்த ருத்திரன், தவங்களில் வெற்றியடைந்த உசனஸ், தூய ஞானத்தின் வடிவில் தம்மை மாற்றிக் கொண்டு, தன் சூல முனையில் இருப்பதை அறிந்து, அந்த ஆயுதத்தைத் தன் கரத்தால் வளைத்தான்.(17) அளவிலா சக்தி கொண்டவனும், கடுமையான கரங்களைக் கொண்டவனும், பலமிக்கவனுமான மஹாதேவன் இவ்வாறு தன் சூலத்தை (வில்லின் வடிவத்தில்) வளைத்த நேரம் முதல், அந்த ஆயுதம் பிநாகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது[5].(18) அந்த உமையின் தலைவன் {சிவன்}, இவ்வாறு தன் உள்ளங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பார்க்கவரை {உசனஸைக்} கண்டு, தன் வாயைத் திறந்தான். பிறகு அந்தத் தேவர்களின் தலைவன், பார்க்கவரைத் தன் வாய்க்குள் வீசி உடனே அவரை விழுங்கிவிட்டான்.(19) பிருகு குலத்தைச் சேர்ந்தவரும், பலமிக்கவரும், உயரான்மா கொண்டவருமான உசனஸ், மஹேஸ்வரனின் குடலுக்குள் நுழைந்து அங்கே திரியத் தொடங்கினார்” என்றார் {பீஷ்மர்}.(20)யுதிஷ்டிரன், “ஓ! மன்னா, மேன்மையான புத்திமான்களில் முதன்மையானவனின் குடலுக்குள் திரிவதில் எவ்வாறு உசனஸால் வெல்ல முடிந்தது? அந்தப் பிராமணர் அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் குடலுக்குள் இருக்கையில், அவன் {அந்தத் தேவன்} என்ன செய்தான்?” என்று கேட்டான்[6].(21)பீஷ்மர், “பழங்காலத்தில், மஹாதேவன் (உசனஸை விழுங்கிய பிறகு) நீருக்குள் புகுந்து, பல கோடி வருடங்களுக்கு அங்கேயே அசைவில்லாமல் ஒரு மரக்கட்டையைப் போல (தியோன யோகத்தில் ஈடுபட்டு) இருந்தான்.(22) கடுமையான வகையைச் சார்ந்த அவனது யோகத் தவம் நிறைவடைந்ததும் அந்தப் பெரும் தடாகத்தில இருந்து அவன் எழுந்தான். அப்போது தேவர்களின் ஆதி தேவனான நித்தியமான பிரம்மன் அவனை அணுகி,(23) அவனது தவங்களின் முன்னேற்றத்தையும், அவனது நலத்தையும் குறித்து விசாரித்தான்.

காளையைத் தன் சின்னமாகக் கொண்ட அந்தத் தேவன் {சிவன்}, “என் தவங்கள் நன்கு பயிலப்பட்டன” என்றான்.(24)

நினைத்தற்கரிய ஆன்மா கொண்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், வாய்மை அறத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனுமான சங்கரன், தன் குடலுக்குள் இருந்த உசனஸ், தன் தவங்களின் விளைவால் இன்னும் மேன்மையடைந்திருப்பதைக் கண்டான்.(25) அந்த முதன்மையான யோகி (உசனஸ்), தவங்களில் கிட்டிய செல்வம் மற்றும் (குபேரனிடம் இருந்து அபகரித்த) செல்வம் ஆகியவற்றால் வளம்பெற்று, பெருஞ்சக்தியுடன் மூவுலகங்களிலும் பிரகாசமாக ஒளிருந்து கொண்டிருந்தார்.(26) இதன் பிறகு, பிநாகைதாரியும், யோகத்தின் ஆன்மாவுமான மஹாதேவன் மீண்டும் தியான யோகத்தில் தன்னை ஈடுபடுத்தினான். எனினும், கவலையால் நிறைந்த உசனஸ் அந்தப் பெருந்தேவனின் குடலுக்குள் திரியத் தொடங்கினார்.(27) தப்பிச் செல்லும் வழியை அறிய விரும்பிய அந்தப் பெருந்தவசி, தாம் எங்கே இருந்தாரோ அங்கேயே இருந்து அந்தத் தேவனின் துதிகளைப் பாடத் தொடங்கினார். எனினும், வெளியேறும் வழிகள் அனைத்தையும் அடைத்த ருத்திரன், அவர் வெளியே வருவதைத் தடுத்தான்.(28)

எனினும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, பெருந்தவசியான உசனஸ், மஹாதேவனின் குடலுக்குள் இருந்தபடியே, அந்தத் தேவனிடம், “எனக்குக் கருணை காட்டுவாயாக” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தார்.(29)

அவரிடம் {உசனஸிடம்} மஹாதேவன், “என் சிறுநீர்க்குழாயின் {சிசினத்தின்} வழியே வெளியேறுவாயாக” என்றான்.

பிறகு, தன் உடலில் இருந்து வெளியேறும் வழிகள் அனைத்தையும் அடைத்தான்.(30) அனைத்துப் பக்கங்களிலும் அடைக்கப்பட்டு, வெளியேறக் குறிப்பிடப்பட்ட வழியை அறியாமல், மஹாதேவனின் சக்தியில் எரிந்தபடியே அந்தத் தவசி அங்கேயும் இங்கேயும் திரிந்து கொண்டிருந்தார்.(31) இறுதியாக வெளியேறும் வழியை கண்டடைந்து, அதன் வழியே வெளியேறினார். இந்தச் செய்தியின் விளைவால் அவர் சுக்கிரன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். இந்தச் செய்தியின் விளைவாலேயே அவர் (தமது திரிதல்களின் போக்கில்) ஆகாயத்தின் மைய புள்ளிய அடைய முடியாதவரானார்.(32) தன் குடலில் இருந்து வெளியேறி, சக்தியால் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் அவரைக் கண்ட பவன் {சிவன்}, கோபத்தால் நிறைந்து, சூலத்தைத் தன் கையில் உயர்த்திப்பிடித்தபடி நின்றான்.(33)

அப்போது உமாதேவி குறுக்கிட்டு உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், கோபம் நிறைந்தவனுமான தன் கணவன் {சிவன்}, அந்தப் பிராமணனைக் கொல்லாதவாறு தடுத்தாள். இவ்வாறு உமை, நோக்கத்தை நிறைவேற்றுவதிலிருந்து தன் தலைவனைத் தடுத்ததன் விளைவால், தவசியான உசனஸ் (அந்த நாள் முதல்) அந்தத் தேவியின் மகனானார்.(34)

தேவி {உமை}, “இந்தப் பிராமணன் இனியும் உம்மால் கொல்லத்தகுந்தவனல்ல. அவன் என் மகனாகிவிட்டான். ஓ! தேவா, உமது குடலுக்குள் இருந்து வெளியேறிய ஒருவனை உமது கரங்களால் கொல்வது தகாது” என்றாள்”.(35)

பீஷ்மர் தொடர்ந்தார், “தன் மனைவியின் இவ்வார்த்தைகளால் தணிவடைந்த பவன் {சிவன்}, ஓ! மன்னா, புன்னகைத்தபடியே, “இவன் விரும்பிய இடத்திற்குச் செல்லட்டும்” என்ற இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னான்.(36) வரம் அளித்த மஹாதேவனையும், அவனது மனைவியான உமாதேவியையும் வணங்கியவரும், மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவருமான பெரும் தவசி உசனஸ், தாம் தேர்ந்தெடுத்த இடத்திற்குச் சென்றார்.(37) ஓ! பாரதர்களின் தலைவா, நீ கேட்ட உயர் ஆன்ம பார்க்கவரின் கதையை உனக்குச் சொல்லிவிட்டேன்” {என்றார் பீஷ்மர்}.(38)

கர்மபலன்! – சாந்திபர்வம் பகுதி – 291-நன்மை அளிக்கக்கூடிய காரணங்களைக் குறித்துப் பராசரர், மன்னன் ஜனகனுக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இதன்பிறகு எங்களுக்கு நன்மையானது எது என்பதை எனக்குச் சொல்வீராக. ஓ! பாட்டா, அமுதம் போல எனக்குத் தோன்றும் உமது வார்த்தைகளால் என் தாகம் தீரவில்லை.(1) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! வரங்களை அளிப்பவரே, எந்த நற்செயல்களை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மனிதன் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த நன்மையை அடைவதில் வெல்கிறான்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்காலத்தில் கொண்டாடப்பட்ட மன்னன் ஜனகன், உயர் ஆன்ம பராசரரிடம் என்ன கேட்டான் என்பதை உனக்குச் சொல்கிறேன்.(3)

ஜனகன் {பராசரரிடம்}, “இம்மையிலும், மறுமையிலும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மையளிப்பது எது? இது தொடர்பாக அறியப்பட வேண்டிய அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)

இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் தவத்தகுதியைக் கொண்டவரும், ஒவ்வொரு அறத்தின் விதிகளையும் அறிந்தவருமான பராசரர்[1], மன்னனுக்கு உதவ விரும்பி இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(5)பராசரர் {ஜனகனிடம்}, “செயல்களால் ஈட்டப்படும் அறமே இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த நன்மையைக் கொடுக்கும். அறத்தைவிட உயர்ந்ததேதும் கிடையாது எனப் பழங்காலத்துத் தவசிகள் சொல்லியிருக்கின்றனர்.(6) அறக்கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மனிதன் சொர்க்கத்தில் கௌரவிக்கப்படுகிறான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனகா}, உடல் கொண்ட உயிரினங்களின் அறமானது, செயல்கள் குறித்து (சாத்திரங்களில் விதிக்கப்பட்ட) விதிகளில் இருக்கிறது. பல்வேறு வாழ்வுமுறைகளில் உள்ள நல்ல மனிதர்கள் அனைவரும், அந்த அறத்திலேயே தங்கள் நம்பிக்கையை நிறுவி தங்கள் தங்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுகின்றனர்[2].(7) ஓ! குழந்தாய், இவ்வுலகில் நான்கு வகை வாழ்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. (கொடைகளை ஏற்கும் பிராமணர்கள்; வரிகளைப் பெறும் க்ஷத்திரியர்கள்; உழவைச் செய்யும் வைசியர்கள், தொண்டாற்றும் சூத்திரர்கள் ஆகிய நான்கு வர்ணங்களே அந்த நான்கு வாழ்வு வகைகளாகும்). மனிதர்கள் எங்கே வாழ்கின்றனரோ அங்கே அவர்களை ஆதரிக்கும் வழிமுறைகள் தோன்றுகின்றன.(8) அறம் அல்லது பாவம் நிறைந்த செயல்களைப் பல்வேறு வழிகளில் நிறைவேற்றும் உயிரினங்கள், ஐம்பூதங்களுக்குள் கரைந்து போகும்போது {தங்கள் அழிவின் போது}, பல்வேறு கதிகளை அடைகின்றன[3].(9) வெங்கலப்பத்திரங்கள், நீர்மமாக்கப்பட்ட தங்கத்திலோ, வெள்ளியிலோ ஊறவைக்கபடும்போது அந்த உலோகங்களின் வண்ணத்தைப் பற்றிக் கொள்வதைப் போலவே முற்பிறவி செயல்களையே முற்றாகச் சார்ந்திருக்கும் ஓர் உயிரினமும், அந்தச் செயல்களின் தன்மையிலிருந்து தன் வண்ணத்தை ஏற்றுக் கொள்கிறது.(10) விதையில்லாமல் ஏதும் முளைக்க முடியாது. மகிழ்ச்சிக்கு வழிவகுக்கவல்ல செயல்களை நிறைவேற்றாமல் எவனும் மகிழ்ச்சியை அடைய முடியாது. ஒருவனுடைய உடல் (அடிப்படை பூதங்களுக்குள்) கறைந்து போகும்போது (அழிவடையும்போது), அவன் முற்பிறவி நற்செயல்களின் விளைவால் மட்டுமே மகிழ்ச்சியை அடைகிறான்.(11)ஓ! குழந்தாய், ஓர் ஐயுறுவாதி, “விதியின் விளைவெனவோ, முற்பிறவிகளில் செய்த அறம் அல்லது பாவம் நிறைந்த செயல்களின் விளைவெனவோ இவ்வுலகில் எதையும் நான் காணவில்லை. {அறிந்ததைக் கொண்டு, அறியாததைக் குறித்த கருத்தை அடையும்} ஊகத்தால் இருப்பையோ, விதியின் செயல்பாட்டையோ நிறுவமுடியாது[4]. தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர் (தங்கள் முற்பிறவி செயல்களால் அல்லாமல்) தங்கள் சொந்த இயல்பின் விளைவாலேயே அந்த நிலையை அடைந்தார்கள்.(12) மனிதர்கள் முற்பிறவியில் தாங்கள் செய்த செயல்களை அடுத்தப் பிறவியில் நினைவுகூர்வதில்லை. எந்தக் குறிப்பிட்ட பிறவியிலும் அடையப்பட்ட கனிகளை விளக்குவதற்காக, முற்பிறவியில் செய்யப்பட்டதாக நான்கு வகைச் செயல்களின் பெயர்களையே எப்போதும் குறிப்பிடுகின்றனர்[5].(13) வேதங்களையே அதிகாரமாகக் கொண்ட தீர்மானங்கள், இவ்வுலக மனிதர்களின் நடத்தையை ஒழுங்குமுறை படுத்துவதற்காகவும், மனிதர்களின் மனங்களை அமைதியடையச் செய்வதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஓ குழந்தாய், (ஐயுறுவாதி தொர்ந்து கொண்டிருக்கிறார்), உண்மை ஞானம் கொண்ட மனிதர்கள் சொல்பவற்றை இவற்றால் பிரதிபலிக்க முடியாது” {என்று ஓர் ஐயுறுவாதி சொல்கிறான்}.(14) இந்தக் கருத்துத் தவறானதாகும். உண்மையில், கண், மனம், நாக்கு மற்றும் தசைகளால் ஒருவன் செய்யும் நான்கு வகைச் செயல்களில் உள்ள கனிகளையே அவன் அடைகிறான்[6].(15)ஓ! மன்னா, ஒரு மனிதன் தன் செயல்களின் கனியாக முழு மகிழ்ச்சியை அடைகிறான், சில வேளைகளில் அதே வளியில் துன்பத்தை அடைகிறான், சிலவேளைகளில் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் சேர்ந்தே அடைகிறான். {செய்யப்படும் செயல்கள்} அறமோ {புண்ணியமோ}, பாவமோ செயல்கள் (அனுபவக்கப்படாமலோ, அவற்றின் கனிகளைத் தாங்கிக் கொள்ளாமலோ) ஒருபோதும் அழிவதில்லை[7].(16) ஓ! குழந்தாய், சிலவேளைகளில் நற்செயல்களால் உண்டாகும் மகிழ்ச்சி மறைக்கப்படும். வாழ்வெனும் கடலில் மூழ்கும் மனிதனின் கவலைகள் மறையும் வரை அது {மகிழ்ச்சி} வெளிப்படாது.(17) கவலை (பொறுத்துக் கொள்வதன் மூலம்) தீர்ந்த பிறகு, ஒருவன் தன் நற்செயல்களை (அதன் கனிகளை) அனுபவிக்கத் தொடங்குகிறான். ஓ மன்னா, நற்செயல்களின் கனிகள் தீர்ந்ததும், பாவச் செயல்களின் கனிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதை அறிவாயாக.(18) தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, பொறுமை, சக்தி, நிறைவு, பேச்சில் வாய்மை, பணிவு, தீங்கிழையாமை, வியசனம் என்றழைக்கப்படும் தீச்செயல்களில் இருந்து விடுதலை, புத்திக்கூர்மை ஆகிய இவையே மகிழ்ச்சியை உண்டாக்குபவை.(19) எந்த உயிரினமும், நற்செயல்கள் அல்லது தீச்செயல்களின் கனிகளை நித்தியமாக அனுபவிப்பதில்லை. ஞானம் கொண்ட மனிதன், தன் மனத்தைத் திரட்டுவதிலும், நிலைக்கச் செய்வதிலும் முனைப்பைச் செலுத்த வேண்டும்.(20)ஒருவன் மற்றொருவனின் நற்செயல்களையோ, தீச்செயல்களையோ ஒருபோதும் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ முடியாது. உண்மையில், அவன் தான் செய்யும் செயல்களின் கனிகளை மட்டுமே இன்புறவும், பொறுத்துக் கொள்ளவும் செய்கிறான்.(21) எனினும், உலகப் பொருட்கள் அனைத்திலும் பற்று கொள்வோர் முற்றிலும் வேறுபட்ட பாதையில் நடக்கிறார்கள்.(22) அடுத்தவன் செய்வதால், தானும் நிந்திகக்கூடிய செயலை ஒருவன் செய்யக்கூடாது. உண்மையில், பிறரைக் கண்டிக்கும் செயலைத் தானே செய்வதின் மூலம் அவன் பரிகாசத்தையே ஈட்டுவான்.(23) துணிவற்ற க்ஷத்திரியன், அனைத்து வகை உணவையும் உண்ணும் பிராமணன், (உழவு மற்றும் வர்த்தகக் காரியங்களில்) முயற்சியற்ற வைசியன், சோம்பலுடன் கூடிய (எனவே, உழைப்பை வெறுக்கும்) சூத்திரன், நன்னடத்தை இல்லாத கல்விமான், அறவொழுக்கமற்ற உயர்குடி பிறவி, வாய்மையில் இருந்து வீழ்ந்த பிராமணன், கற்பற்ற, தீய பெண்,(24) பற்றுகளைக் கொண்ட யோகி, தனக்காக மட்டுமே சமைத்துக் கொள்ளும் ஒருவன், விவாதத்தில் ஈடுபடும் மூடன், மன்னன் இல்லாத நாடு, யோகத்தில் ஈடுபடாதவனும், குடிமக்களிடம் பற்றைப் பேணி வளர்க்காதவனுமான மன்னன் ஆகிய இவர்கள் அனைவரும் பரிதாபத்திற்குரியவர்கள்” என்றார் {பராசரர்}.(25)

தற்கட்டுப்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 292-நன்மை அளிக்கக்கூடிய காரணங்களைக் குறித்துப் பராசரர், மன்னன் ஜனகனுக்குச் சொன்னதன் தொடர்ச்சியை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்.

பராசரர் {ஜனகனிடம்}, “மனத்துடன் கூடிய உடலெனும் இந்தத் தேரை அடைந்து, ஞானம் எனும் கடிவாளத்தைக் கொண்டு, புலன்நுகர் பொருட்களெனும் குதிரைகளைக் கட்டுப்படுத்தும் மனிதனை நுண்ணறிவு கொண்டவன் {அவன் புத்திமான்} என நிச்சயம் கருதலாம்.(1) ஓ! மறுபிறப்பாளனே, தற்சார்புடைய மனம் கொண்டவனும், வாழ்வாதார வழிமுறைகளைக் கைவிட்டவனுமான ஒரு மனிதனால் (பரமனிடம் குவிந்த தியானம் மற்றும் பரமனிடம் கொள்ளும் பக்தியின் வடிவில்) செய்யப்படும் வணக்கமுறை மிகுந்தப் பாராட்டுக்குரியதாகும்; அந்த வணக்கமுறையானது, செயல்களைக் கடப்பதில் வென்ற மனிதனிடம் பெறப்பட்ட போதனையின் விளைவால் கிடைப்பதேயன்றி, {ஆன்ம} முன்னேற்றத்தில் ஒரே நிலையில் உள்ள மனிதர்களின் விவாதப் பரிமாற்றத்தால் கிடைப்பதல்ல[1].(2) ஓ! மன்னா {ஜனகனே}, இவ்வளவு கடினத்துடன் குறிப்பிட்ட அளவுக்கான வாழ்நாள் காலத்தை அடைந்து பிறகு, (புலன்களின் ஈடுபாட்டால்) அஃதை ஒருவன் குறைத்துக் கொள்ளக் கூடாது. மறுபுறம், மனிதன் எப்போதும் அறச்செயல்களின் மூலம் படிப்படியாக அடையக்கூடிய முன்னேற்றத்திற்காக எப்போதும் முயற்சிக்க வேண்டும்[2].(3) ஜீவன் தன் வெவ்வேறு இருப்புக் காலங்களில் ஆறு வெவ்வேறு நிறங்களை அடைந்த பிறகு, மேன்மையான நிறத்தில் இருந்து கீழே விழுபவன் கண்டிப்புக்கும், நிந்தனைக்கும் தகுந்தவனாவான். எனவே, நற்செயல்களின் விளைவை அடைந்த ஒருவன் ரஜஸ் குணத்தால் களங்கமடைந்த செயல்கள் அனைத்தையும் தவிர்க்கும் வகையில் தன் நடத்தையை அமைத்துக் கொள்ள வேண்டும்[3].(4) மனிதன் செய்யும் அறச்செயல்களின் மூலம் மேன்மையான நிறத்தை அடைகிறான். அடைதற்கரிய மேன்மையான நிறத்தை அடைய இயலாத மனிதன், பாவம் நிறைந்த செயல்களைச் செய்வதன் மூலம் (நரகில் மூழ்கி, தாழ்ந்த நிறத்தில் வீழ்வதன் மூலம்) தன்னைத் தானே கொன்று கொள்கிறான்.(5)விழிப்பற்ற நிலையிலோ, அறியாமையிலோ செய்யப்படும் பாவம்நிறைந்த செயல்கள் அனைத்தும் தவங்களின் மூலம் அழிக்கப்படுகின்றன. எனினும், அறிந்தே செய்யப்பட்ட பாவச் செயலானது மிகுந்த துன்பத்தை உண்டாக்குகிறது.(6) எனவே, ஒருவன் கவலையை மட்டுமே கனியாகக் கொண்ட பாவச் செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது.(7) நுண்ணறிவுமிக்க மனிதன், பாவம் நிறைந்த தன்மையைக் கொண்ட ஒரு செயலானது, பெரும் பயனை விளைவிப்பதாக இருந்தாலும், சண்டாளனைத் தீண்டாத ஒரு தூய மனிதனைப் போல அஃதை {அந்தப் பாவச்செயலை} ஒருபோதும் செய்யமாட்டான்[4].(8) பாவச் செயல்கள் துன்பம் நிறைந்தவையாக இருப்பதையே நான் காண்கிறேன். பாவத்தின் மூலம், பாவியின் பார்வையே வக்கிரமடைவதால் அவன் தன் உடலையும், ஆன்மாவோடு கூடிய உடலின் அங்கங்களையும் சீர்குலைத்துக் கொள்கிறான்.(9) இந்த உலகில் துறவை மேற்கொள்ளாத மூடன், இம்மையில் விடைபெற்றுச் செல்லும்போது பெரும் துன்பத்தால் பீடிக்கப்படுகிறான்.(10)ஓ! மன்னா, நான் சொல்வதைக் கவனத்துடன் கேட்பாயாக, நிறமற்ற துணி புழுதியடையும்போது, அதைத் தூய்மைப்படுத்தலாம், ஆனால் கருப்புச் சாயம் கொண்ட துணியைத் தூய்மைப்படுத்த முடியாது; பாவத்தின் வழக்கிலும் அதேதான் நேர்கிறது.(11) அறிந்தே பாவமிழைத்த மனிதன், அந்தப் பாவத்தைக் கழிப்பதற்காக அறச்செயல்களைச் செய்தால், அந்த நல்ல மற்றும் தீய செயல்களுக்குண்டான கனிகளைத் தனித்தனியாக அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் வேண்டும்[5].(12) பிரம்மத்தை ஓதுபவர்கள் {பிரம்மவாதிகள்}, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் கொண்டு, அறியாமையால் செய்யப்பட்ட தீங்கேற்படுத்தும் செயல்கள் அனைத்தும் அறச்செயல்களால் கழிக்கப்படுகின்றன என்று சொல்கிறார்கள்.(13) எனினும், அறிந்தே செய்யப்பட்ட பாவத்தை அறத்தால் ஒருபோதும் கழிக்க முடியாது. பிரம்ம சாத்திரங்களை அறிந்தவர்களும், பிரம்மத்தை ஓதுபவர்களுமான மறுபிறப்பாளர்கள் இவ்வாறே சொல்கிறார்கள். அறவோராலோ, பாவிகளாலோ அறிந்தும், அறியாமலும் செய்யப்படும் எந்தச் செயலும் (அவற்றின் கனிகள் அனுபவிக்கப்படாத, அல்லது தாங்கிக் கொள்ளப்படாத வரையில்) எஞ்சியேயிருக்கின்றன என்பதே என் பார்வையாகும்[6].(15)முழு ஆய்வுடன் மனமறியச் செய்யப்பட்ட செயல்கள், அதனதன் பருமை அல்லது நுண்மையின்படி திரளான, அல்லது நுட்பமான கனிகளை விளைவிக்கின்றன[7].(16) எனினும், ஓ! அற ஆன்மா கொண்டவனே {ஜனகனே}, பெரும் தீங்கு நிறைந்த செயல்கள், அறியாமையில் செய்யப்பட்டிருந்தால், அவற்றுக்குண்டான விளைவுகளைத் தவறாமல் உண்டாக்குபவையும், நரகத்திற்கே கூட வழிவகுப்பவையுமான அந்தச் செயல்கள், பொருத்தமற்ற வகையிலான விளைவுகளை {அற்பவிளைவுகளையே} அவனிடம் உண்டாக்கும்.(17) தேவர்கள், அல்லது மதிப்பிற்குரிய தவசிகள் போன்றோரால் செய்யப்படும் (ஐயம் நிறைந்த அல்லது அறமற்ற இயல்பைக் கொண்ட) செயல்களைப் பொறுத்தவரையில், அவற்றை ஓர் அறவோன் செய்யக்கூடாது; கேள்விப்பட்டாலும் அவற்றை நிந்திக்கக்கூடாது.(18) ஓ! மன்னா {ஜனகனே}, தன் திறனைக் குறித்துச் சிந்தித்து உறுதியடைந்து, அறச்செயல்களைச் செய்யும் மனிதன், நிச்சயம் தனக்கான நன்மையை அடைவான்.(19) சுடப்படாத {மண்} பாத்திரத்தில் ஊற்றப்படும் நீரானது படிப்படியாகக் குறைந்து, இறுதியில் மொத்தமாக வெளியேறிவிடும். எனினும், அது சுடப்பட்ட பாத்திரத்தில் ஊற்றப்பட்டால், அளவு குறையாமல் அப்படியே எஞ்சி நிற்கும். அதே போலவே, புத்தியின் துணையுடன் சிந்திக்காமல் செய்யப்படும் செயல்கள் நன்மையை விளைவிப்பதில்லை; அதே வேளையில் தீர்மானத்துடன் செய்யப்பட்ட செயல்கள், மங்கா சிறப்புடன் எஞ்சி தங்கள் விளைவாக மகிழ்ச்சியை விளைவிக்கும்.(20)நீருள்ள பாத்திரத்தில் மேலும் நீர் ஊற்றப்பட்டால், அங்கே ஏற்கனவே இருந்த நீரின் அளவு அதிகரிக்கும்; அதே போலவே தீர்மானத்துடன் செய்யப்படும் செயல்கள் அனைத்தும், அவை நியாயமானவையாக இருந்தாலும், வேறு வகையில் இருந்தாலும், அறத்தின் {புண்ணியத்தின்} அளவு அதிகரிக்கவே செய்கிறது.(21,22) ஒரு மன்னன், தன் எதிரிகளையும், தங்கள் மேன்மையை உறுதிசெய்ய முனையும் அனைவரையும் அடக்கி, முறையாக ஆண்டுத் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். ஒருவன், புனித நெருப்பைத் தூண்டி, பல்வேறு வேள்விகளில் அவற்றில் ஆகுதிகளை ஊற்றி, மத்திம வயதிலோ, முதிர் வயதிலோ காடுகளுக்குள் ஓய்ந்து, (இறுதி இரண்டு வாழ்வுமுறைகளைப் பயின்று) அங்கேயே வாழ வேண்டும்.(23) தற்கட்டுப்பாடு, அறவொழுக்கம் ஆகியவற்றைக் கொண்ட ஒருவன், தன்னைப் போலவே பிற உயிரினங்களையும் பார்க்க வேண்டும். மேலும், ஓ! மன்னா, அவன் பெரியோர்களை மதிக்க வேண்டும். வாய்மையும், நன்னடத்தையும் பயில்வதன் மூலம் அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான்” என்றார் {பராசரர்}.(24)

அறஞ்செயவிரும்பு! – சாந்திபர்வம் பகுதி – 293-அறம் செய்ய விரும்புவதே மேன்மையடையும் வழி என ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பராசரர் {ஜனகனிடம்}, “இவ்வுலகில் உள்ள எவரும், மற்றொருவருக்கு நன்மை செய்வதில்லை. எவரும் பிறருக்குக் கொடையளிப்பதும் காணப்படுவதில்லை. அனைவரும் தங்களுக்காகச் செயல்படுவதே காணப்படுகிறது.(1) மக்கள் அன்பில்லாதவர்களாகும்போது, தங்கள் பெற்றோரையும், தங்கள் உடன் பிறந்தோரையும் கைவிடுவது காணப்படுகிறது. வேறு வட்டங்களைச் சார்ந்த உறவினர்களைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?[1](2) புகழ்பெற்றவருக்குக் கொடுக்கப்படும் கொடை, புகழ்பெற்றவரால் கொடுக்கப்படும் கொடைகள் ஆகிய இரண்டும் சமமான தகுதிக்கே {புண்ணியத்திற்கே} வழிவகுக்கும். எனினும், இவ்விரு செயல்களில் கொடையேற்பதைவிடக் கொடையளிப்பது மேன்மையானது[2].(3) உரிய வழிமுறைகளில் அடையப்பட்டு, உரிய வழிமுறைகளில் பெருக்கப்படும் செல்வமானது, அறமீட்டும் நிமித்தமாகக் கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும்.(4) அறமீட்ட விரும்புபவன், பிறருக்குத் தீங்கிழைக்கும் வழிமுறைகளில் ஒருபோதும் செல்வத்தை ஈட்டக்கூடாது. ஒருவன் செல்வத்தைப் பற்றார்வத்துடன் தேடாமல், தன் சக்திக்குத்தக்க செயல்களையே செய்ய வேண்டும்.(5)

(தாகத்துடன் கூடிய) விருந்தினருக்கு குளிர்ந்த அல்லது நெருப்பில் சுடப்பட்ட நீரை அர்ப்பணிப்புமிக்க மனத்துடன் கொடுப்பதன்மூலம், பசித்தவனுக்கு உணவிட்ட செயலுக்குரிய தகுதியை {புண்ணியத்தை} ஒருவன் ஈட்டுகிறான்.(6) உயர் ஆன்ம ரந்திதேவன், கிழங்குகள், கனிகள் மற்றும் இலைகளைத் தவசிகளுக்குக் காணிக்கையளித்து அவர்களை வழிபட்டதன் மூலம் உலகங்கள் அனைத்திலும் வெற்றியை அடைந்தான்.(7) சிபியின் அரச மகன் {சிபி எனும் நகரத்தைச் சேர்ந்த மன்னன் [சைப்யன்]}, தோழனுடன் {மாடானுடன்}[3] கூடிய சூரியனுக்கு அதே வகைக் காணிக்கைகளை அளித்து அவனை நிறைவடையச் செய்ததன் மூலம் இன்ப உலகங்களை அடைந்தான்.(8) மனிதர்கள் அனைவரும் பிறவி அடைவதன் மூலம் தேவர்கள், விருந்தினர்கள், பணியாட்கள், பித்ருக்கள் மற்றும் தங்கள் சுயத்திற்குக் கடன்பட்டவர்களாகிறார்கள். எனவே, ஒவ்வொருவரும் அந்தக் கடன்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளத் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும்.(9) ஒருவன், வேதங்களைக் கற்பதன் மூலம் பெரும் முனிவர்களிடம் தான் பட்ட கடனிலிருந்து விடுபடுகிறான். அவன் வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்களிடம் பட்ட கடனிலிருந்து விடுபடுகிறான். சிரார்த்தச் சடங்குகளைச் செய்வதன் மூலம் அவன் பித்ருக்களிடம் பட்ட கடனில் இருந்து விடுபடுகிறான். நன்மை செய்வதன் மூலம் சக மனிதர்களிடம் பட்ட கடனை அவன் அடைக்கிறான்.(10)வேத மந்திரங்களைக் கேட்பதன் மூலமும், அவற்றின் கருத்தைச் சிந்திப்பதன் மூலமும், வேள்விகளில் எஞ்சியவற்றை உண்பதன் மூலமும், தன் உடலைப் பராமரிப்பதன் மூலமும் ஒருவன் தன் சுயத்திற்கு {ஆன்மாவுக்குப்} பட்ட கடனை அடைக்கிறான். அவன் தன் பணியாட்களுக்குப் பட்ட கடனுக்காகத் தொடக்கத்தில் இருந்தே செயல்கள் அனைத்தையும் முறையாகச் செய்ய வேண்டும்.(11) மனிதர்கள் செல்வமற்றவர்களாக இருந்தாலும், பெரும் முயற்சிகளின் மூலம்[4] வெற்றியை அடைவது காணப்படுகிறது. முனிவர்கள் தேவர்களை முறையாகத் துதிப்பதன் மூலமும், வேள்வி நெருப்பில் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை முறையாக ஊற்றுவதன் மூலமும், தவ வெற்றியை அடைவது காணப்படுகிறது.(12) ரிசீகரின் மகன், விஷ்வாமித்திரரின் மகனானான். வேள்விக் காணிக்கைகளில் பங்குகளை {அவிர்ப்பாகங்களைக்} கொண்ட தேவர்களை ரிக்குகளைக் கொண்டு துதிப்பதன் மூலம் அவன் மறுமையில் வெற்றியை அடைந்தான்[5].(13) உசனஸ், தேவர்களின் தேவை நிறைவு செய்ததன் மூலம் சுக்கிரனானார். உண்மையில், (உமா) தேவியின் புகழைத் துதித்தன் மூலம் அவர் ஆகாயத்தில் பெருங்காந்தியுடன் திளைக்கிறார்[6].(14)மேலும், அசிதர், தேவலர், நாரதர், பர்வதர், கக்ஷீவான், ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமர்}, தூய ஆன்மாவைக் கொண்ட தாண்டியர்,(15) வசிஷ்டர், ஜமதக்னி, விஷ்வாமித்திரர், அத்ரி, பரத்வாஜர், ஹரிசமச்ரு, குண்டாதரர் சுருதச்ரவஸ்(16) ஆகிய இந்தப் பெருமுனிகள், ரிக்குகளின் துணையுடனும், குவிந்த மனங்களுடனும் விஷ்ணுவைத் துதித்ததன் மூலமும், தவங்களின் மூலமும், நுண்ணறிவுடன் கூடிய அந்தப் பெருந்தேவனின் அருளின் மூலமும் வெற்றியை அடைந்தனர்.(17) தகுதியில்லாத பல மனிதர்கள், அந்த நல்ல தெய்வத்தைத் துதித்ததன் மூலம் தனிச்சிறப்பு வாய்ந்த பெரும் நிலையை அடைந்தனர். ஒருவன் தீய அல்லது நிந்திக்கத்தக்க எந்தச் செயலையும் செய்வதன் மூலம் முன்னேற்றத்தை நாடக்கூடாது.(18) அறவழிகளில் ஈட்டப்பட்ட செல்வமே உண்மையான செல்வமாகும். அறமற்ற வழிமுறைகளில் ஈட்டப்பட்ட செல்வம் நிந்தனைக்குரியதாகும். அறமே அழிவற்றதாகும். செல்வத்தின் மீது கொண்ட விருப்பத்தால் அஃது ஒருபோதும் இவ்வுலகில் கைவிடப்படக்கூடாது.(19) தன் புனித நெருப்பைப் பராமரிப்பவனும், தேவர்களுக்குத் தன் தினத் துதிகளைக் காணிக்கையாக்குபவனுமான அற ஆன்மா கொண்ட மனிதனே அறவோர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, வேதங்கள் அனைத்தும் (தக்ஷிணை, கார்ஹபத்யம், ஆஹவனியம் என்ற) மூன்று புனித நெருப்புகளில் நிறுவப்பட்டுள்ளன.(20)

எந்தப் பிராமணன், {குறைவற்ற} செயல்களை முழுமையாகச் செய்வானோ அவன் {அந்த மூன்று நெருப்புகளடங்கிய} புனித நெருப்பைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். செயல்களைச் செய்யாமல் இருப்பவன், அந்தப் புனித நெருப்பைப் பராமரிப்பதைவிட, அஃதை உடனே கைவிடுவதே சிறந்தது[7].(21) புனித நெருப்பும், தாய், பெற்ற தந்தை, ஆசான் ஆகியோரும், முறையாகப் பணிவிடை செய்யவும், பணிவுடன் தொண்டு புரியவும் தகுந்தவர்கள் ஆவர்.(22) செருக்கடையச் செய்யும் உணர்வுகள் அனைத்தையும் கைவிட்டு, முதியோரிடம் காத்திருந்து, அவர்களுக்குத் தொண்டாற்றுபவனும், கல்விமானும், காமம் இல்லாதவனும், அன்பின் கண்ணோடு உயிரினங்கள் அனைத்தையும் பார்ப்பவனும், செல்வமற்றவனும், தன் செயல்களில் அறவோனும், (எவருக்கும்) எத்தீங்கையும் செய்யும் விருப்பம் இல்லாதவனுமான மனிதனே, இவ்வுலகில் உண்மையில் மதிப்பிற்குரிய மனிதனாக நல்லோராலும், பக்திமான்களாலும் வழிபடப்படுகிறான்” என்றார் {பராசரர்}.(23)

வர்ணதர்மங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 294-வர்ணங்களின் கடமைகளையும்; அறத்தைத் தக்கவைத்துக் கொள்ள வர்ணக்கடமைகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதையும் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பராசரர் {ஜனகனிடம்}, “தாழ்ந்த வகையினர் {சூத்திர வர்ணத்தார்}, {பிராமண, க்ஷத்திரிய, வைசியர் என்ற} பிற மூன்று வகையினரிடம் தங்கள் வாழ்வாதாரத்தை அடைவதே முறையாகும். அன்புடனும், மதிப்புடனும் {பிற வர்ணத்தாரால்} கொடுக்கப்படும் அத்தகைய தொண்டு அவர்களை {சூத்திரர்களை} அறவோராக்கும்.(1) எந்தச் சூத்திரனின் மூதாதையராவது தொண்டில் ஈடுபடாமல் இருந்தாலும் கூட, அவன் (தொண்டைத் தவிர) பிற தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. உண்மையில், தொண்டையே அவன் தனது தொழிலாகக் கொள்ள வேண்டும்.(2) அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவர்கள் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ள நல்லோருக்கே துணைபுரிய வேண்டும், ஒருபோதும் தீயோருக்குத் துணை புரியக் கூடாது என்பது என்னுடைய கருத்து.(3)

கிழக்கு மலைகளில் {உதயப் பர்வதத்தில்} உள்ள தங்கமும், உலோகங்களும், சூரியனுக்கு அருகாமையில் இருப்பதால் பெரும் காந்தியுடன் சுடர்விடுவதைப் போலவே, தாழ்ந்த வகையினரும் நல்லோருடன் கொள்ளும் உறவால் காந்தியுடன் ஒளிர்வார்கள்.(4) வெள்ளைத் துணியானது சாயத்தின் நிறத்தை ஏற்கிறது. சூத்திரர்களின் வழக்கிலும் அவ்வாறே நடக்கிறது[1].(5) எனவே, ஒருவன் நல்ல குணங்கள் அனைத்துடனும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டுமேயன்றி ஒருபோதும் தீய குணங்களைப் பற்றக்கூடாது. இவ்வுலகில் மனிதர்களின் வாழ்நாள் மிகவேகமானதும், நிலையற்றதுமாகும்.(6)இன்பத்திலும், துன்பத்திலும் நல்லதை மட்டுமே ஈட்டும் ஞானியே உண்மையில் சாத்திரங்களை அவதானிப்பவனாகக் கருதப்படுகிறான்.(7) புத்தியுடைய மனிதன், அறம்பிறழ்ந்த எந்தச் செயலிலும் உயர்ந்த பயன்களே இருந்தாலும், அஃதை ஒருபோதும் செய்யமாட்டான். அத்தகைய செயல்கள் உண்மையில் நன்மையானதாகக் கருதப்படுவதில்லை.(8) சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான பசுக்களை அபகரித்து, (தகுந்த மனிதர்களுக்கே) கொடையாக அளித்தாலும் கூட, சட்டத்தை மீறும் அம்மன்னன் (அவன் செய்த செயலை உணர்த்தும் வகையிலான) வெற்று ஒலியைத் தவிர (அந்த ஈகையிலிருந்து) வேறு எந்தக் கனியையும் அடையமாட்டான். மறுபுறம் களவு எனும் பாவத்தையே அவன் ஈட்டுகிறான்.(9)

அண்டந்தழுவிய மதிப்புடைய தாத்ரி என்றழைக்கப்படும் ஒருவனைச் சுயம்பு {பிரம்மன்} முதலில் படைத்தான். தாத்ரி அனைத்து உலகங்களையும் தாங்கிப்பிடிப்பதில் ஈடுபடும் ஒரு மகனை {பர்ஜன்யனைப்} படைத்தான்[2].(10) அந்தத் தேவனை {பர்ஜன்யனை} வழிபடும் வைசியன், தன்னை ஆதரித்துக் கொள்வதற்காக உழவிலும், கால்நடை வளர்த்தலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். க்ஷத்திரியர்கள், பிற வகையினர் {பிற வர்ணத்தார்} அனைவரையும் பாதுகாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பிராமணர்கள் அனுபவிக்க மட்டுமே வேண்டும்[3].(11) சூத்திரர்களைப் பொறுத்தவரையில் அவர்கள், வேள்விகளில் காணிக்கையளிக்கப்படும் பொருட்களைப் பணிவுடனும் நேர்மையுடனும் சேகரிக்கும் பணியிலும், வேள்விகள் செய்யப்பட்ட இடங்களையும் பீடங்களையும் தூய்மைப்படுத்துவதிலும் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு வகையினரும் இவ்வழியில் செயல்பட்டால் அறத்திற்கு எக்குறைவும் நேராது.(12)அறம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டால், பூமியில் வசிக்கும் அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியடையும். பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தின் மகிழ்ச்சியைக் காணும் சொர்க்கத்தின் தேவர்கள் மகிழ்ச்சியால் நிறைகிறார்கள்.(13) எனவே தன் வகைக்கு விதிக்கப்பட்ட கடமைகளுக்கு ஏற்புடைய வகையில் பிற வகையினரைப் பாதுகாக்கும் மன்னன் மதிக்கத் தகுந்தவனாகிறான். அதே போல, சாத்திரக் கல்வியில் ஈடுபடும் பிராமணனும், செல்வமீட்டுவதில் ஈடுபடும் வைசியனும்,(14) குவிந்த கவனத்துடன் பிற மூன்று வகையினருக்கும் எப்போதும் தொண்டு செய்வதில் ஈடுபடும் சூத்திரனும் மதிப்புக்குத் தகுந்தவர்களாவர். ஓ! மனிதர்களின் தலைவா, வேறுவழிகளில் தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்ளும் ஒவ்வொரு வகையும் {வர்ணமும்} அறத்தில் இருந்து வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.(15

ஆயிரக்கணக்கான கொடைகளை ஒருபுறம் வைத்தாலும், அறம் சார்ந்து ஈட்டப்பட்டு, துன்பத்துடன் ஒருவன் கொடுக்கும் இருபது சோழிகளே கூட {சோகிகளேகூட / இருபது பணம் கூட} பெரும் நன்மையை விளைவிக்கும். {அவ்வாறெனில் அறம்சார்ந்து ஈட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கொடைகள் எவ்வளவு பெரிய நன்மைகளை விளைவிக்கும்?} (16) ஓ! மன்னா {ஜனகனே}, பிராமணர்களை முறையாக மதித்து அவர்களுக்குக் கொடைகளை அளிக்கும் மனிதர்கள், அந்தக் கொடைகளுக்கு ஒப்பான சிறந்த கனிகளை அறுவடை செய்வார்கள்.(17) கொடையேற்பவரைத் தேடி, உரிய முறையில் அவரைக் கௌரவித்துக் கொடையாளியால் கொடுக்கப்படும் கொடை மதிப்புமிக்கதாகும். வேண்டுதலின் பேரில் கொடையாளி கொடுக்கும் கொடை நடுத்தரமானதாகும்.(18)

எனினும், அவமானப்படுத்தும் வகையில் எந்த மதிப்புமில்லாமல் கொடுக்கப்படும் கொடையானது (தகுதியின் {புண்ணியத்தின்} அடிப்படையில்) மிகத் தாழ்ந்ததாகும். உண்மையைச் சொல்லும் தவசிகள் இதையே சொல்கின்றனர்.(19) வாழ்வெனும் பெருங்கடலில் மூழ்கும் மனிதன், பல்வேறு வழிகளின் மூலம் அந்தப் பெருங்கடலைக் கடக்கவே முனைய வேண்டும். உண்மையில், இவ்வுலகக் கட்டுகளில் இருந்து விடுபடும் வகையில் அவன் முயற்சிக்க வேண்டும்.(20) பிராமணன் தற்கட்டுப்பாட்டால் ஒளிர்கிறான்; க்ஷத்திரியன் வெற்றியாலும், வைசியன் செல்வத்தாலும்; சூத்திரன் (மூவகையினுக்கு) தொண்டு புரிவதில் {பணி செய்வதில்} உள்ள புத்திசாலித்தனத்தாலும் மகிமையில் ஒளிர்கிறார்கள்” என்றார் {பராசரர்}.(21)

காமகுரோதலோபம்! – சாந்திபர்வம் பகுதி – 295-மனிதர்களின் உடலுக்குள் புகுந்து காமம், குரோதம் மற்றும் லோபத்தைத் தூண்டிய அசுரர்கள்; சிவனிடம் தேவர்கள் செய்த முறையீடு; முப்புரமெரித்த சிவன்; சப்தரிஷிகளில் இருந்து ஆட்சியாளர்கள் தோன்றியது; பூமியில் மீண்டும் அறம் தழைத்தது ஆகியவற்றை ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பராசரர் {ஜனகனிடம்}, “கொடையேற்பதன் மூலம் பிராமணனாலும், போரில் வெல்லப்பட்ட வெற்றியால் க்ஷத்திரியனாலும், தன் வகைக்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் வைசியனாலும், பிற மூன்று வகையினருக்கும் தொண்டு செய்வதன் மூலம் சூத்திரனாலும் ஈட்டப்படும் செல்வம், அளவில் சிறியதாக இருப்பினும் புகழத் தக்கதாகும். மேலும் அறமீட்டுவதில் செலவிடப்படும்போது, பெரும் நன்மைகளை அது விளைவிக்கும். பிற மூன்று வகையினருக்கும் சூத்திரனே நிலையான தொண்டாற்றுபவனாகச் சொல்லப்படுகிறான்.(2) வாழ்வின் அழுத்தத்தில், ஒரு பிராமணன் க்ஷத்திரிய, வைசிய வகைகளின் கடமைகளைச் செய்தால், அவன் அறத்தில் இருந்து வீழ்ந்தவனாக மாட்டான். எனினும், ஒரு பிராமணன் தாழ்ந்த வகையின் {சூத்திரனின்} கடமைகளைச் செய்யும்போது, நிச்சயம் அவன் வீழவே செய்கிறான்.(3) ஒரு சூத்திரன், பிற மூன்று வகையினரிடம் செய்யும் தொண்டில் இருந்து வாழ்வாதாரத்தை ஈட்டமுடியவில்லையெனில், விதிப்படியே அவன் வணிகம், கால்நடை வளர்த்தல், சிற்பக் கலைகள் ஆகிவற்றைப் பின்பற்றலாம்.(4) உலகில் நிந்திக்கத்தக்கவையாகக் கருதப்படுபவையான அரங்க நாடகங்களில் தோன்றுதல், பல்வேறு வடிவங்களில் வேடந்தரித்தல், பதுமையாட்டம் {பொம்மலாட்டம்}, மது மற்றும் இறைச்சி விற்பனை, இரும்பு மற்றும் தோல் விற்பனை ஆகிய தொழில்களில் ஏற்கனவே ஈடுபடாத {தன் முன்னோர்கள் செய்யாத மேற்கண்ட தொழில்களில் இதுவரை ஈடுபடாத} ஒருவன், தன் வாழ்வாதரத்தை ஈட்டுவதற்காக அவற்றை ஒருபோதும் செய்யக்கூடாது. இவற்றில் ஈடுபடுவோர், அவற்றைக் கைவிட்டால் பெரும் தகுதியை ஈட்டலாம் என்றே நாம் கேள்விப்படுகிறோம்.(5,6)

வாழ்வில் வெற்றியடைந்தவன், ஆணவம் நிறைந்த மனத்தின் விளைவால் பாவம் நிறைந்தவனாக நடந்து கொள்ளும்போது, அச்சூழ்நிலையில் அவனது செயல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகின்றன.(7) முந்தைய காலங்களின் மனித இனம் தற்கட்டுப்பாட்டுடன் இருந்ததாகவும், அறத்தை அவர்கள் பெரும் மதிப்போடு போற்றியதாகவும்; வாழ்வாதாரத்திற்காக அவர்கள் பின்பற்றிய நடைமுறைகள் அனைத்தும், சாத்திர விதிகளுக்கு ஏற்புடையதாக இருந்ததாகவும்; சீ! என்று சொல்வதே அவர்களுக்குரிய ஒரே தண்டனையாக இருந்ததாகவும் புராணங்களில் இருந்து நாம் கேள்விப்படுகிறோம்.(8) ஓ! மன்னா, நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அறத்தைத் தவிர மனிதர்களுக்கு மத்தியில் வேறு எதுவும் மெச்சப்படுவதில்லை. அறத்தில் பெரும் முன்னேற்றமடைந்த அந்தக் காலத்து மனிதர்கள், அவர்கள் கண்ட நற்குணங்களை மட்டுமே வழிபட்டனர்.(9) எனினும், ஓ! குழந்தாய், உலகில் அறம் மேலோங்குவதை அசுரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. (எண்ணிக்கையிலும், சக்தியிலும்) பெருகிய அசுரர்கள் (காமம் மற்றும் கோபம் என்ற வடிவில்) மனிதர்களின் உடல்களுக்குள் புகுந்தனர்.(10) அப்போதுதான் அறத்தை அழிக்கும் செருக்கு மனிதர்களிடம் உண்டானது. செருக்கில் இருந்து ஆணவமும், ஆணவத்தில் இருந்து கோபமும் எழுந்தன.(11) மனிதர்கள் இவ்வாறு கோபத்தில் மூழ்கியபோது, பணிவுடன் கூடிய நடத்தையும், நாணமும் மறைந்து, அலட்சியப்போக்கு அவர்களை மூழ்கடித்தது.(12)

கவனமின்மையால் பீடிக்கப்பட்ட அவர்களால் முன்பைப் போலப் பார்க்க முடியாததன் விளைவால், அவர்கள் எந்தவொரு மனத்தாங்கலும் இல்லாமல் ஒருவரையொருவர் ஒடுக்குவதன் மூலம் செல்வத்தை அடையத் தொடங்கினர்.(13) மனிதர்கள் இவ்வாறான போது, “சீ” என்று நிந்திக்கும் தண்டனையால் மட்டுமே குற்றவாளிகளிடம் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை. மனிதர்கள், தேவர்களுக்கோ, பிராமணர்களுக்கோ எந்த மதிப்பையும் அளிக்காமல் தங்கள் புலன்களை முழுமையாக {புலன்நுகர் பொருட்களில்} ஈடுபடுத்த தொடங்கினர்.(14) அந்நேரத்தில் தேவர்கள், பொறுமையுடையவனும், பலவடிவத் தன்மை கொண்டவனும் {பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும்}, முதன்மையான குணங்களைக் கொண்டவனும், தேவர்களில் முதன்மையானவனுமான சிவனிடம் சென்று அவனது பாதுகாப்பை நாடினார்கள்.(15) தேவர்கள் தங்கள் இணைந்த சக்தியை அவனுக்குக் {சிவனுக்குக்} கொடுத்தனர், அதன் பேரில் அந்தப் பெருந்தேவன் {சிவன்}, ஆகாயத்தில் வசித்து வந்த ஆசை {காமம்}, கோபம் {குரோதம்}, பேராசை {லோபம்} ஆகிய மூன்று அசுரர்களையும், அவர்களது வசிப்பிடங்களையும் தன்னுடைய ஒரே கணையால் பூமியில் வீழ்த்தினான்[1].(16) கடும் ஆற்றலைக் கொண்டவனும், தேவர்களைப் பீதியடையச் செய்தவனுமான அசுரர்கள் தலைவனும் {மஹாமோஹனும்}, சூலந்தரித்த மஹாதேவனால் கொல்லப்பட்டான்.(17) அசுரர்களின் தலைவன் கொல்லப்பட்டபோது, மனிதர்கள் மீண்டும் தங்கள் முறையான இயல்புகளை அடைந்து, முந்தைய காலங்களைப் போல மீண்டும் வேதகல்வியிலும், பிற சாத்திரங்களைக் கற்பதிலும் ஈடுபடத் தொடங்கினர்.(18)அப்போது பழங்காலத்தின் ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்} முன்வந்து தேவர்களின் தலைவனாகவும், சொர்க்கத்தின் ஆட்சியாளனாகவும் வாசவனை {இந்திரனை} நிறுவினார்கள். மேலும் அவர்கள் மனித இனத்தைத் தண்டிக்கும் தண்டக்கோலைத் தாங்களே தங்கள் பணியாக ஏற்றுக் கொண்டனர்.(19) அந்த ஏழு முனிவர்களுக்குப் பிறகு (மனிதர்களை ஆள்வதற்காக) மன்னன் விப்ருதுவும், க்ஷத்திரிய வகையைச் சார்ந்த இன்னும் பல மன்னர்களும் தனித்தனி மனிதக்குழுக்களைத் தனித்தனியாக ஆள்வதற்காக வந்தனர்.(20) (மஹாதேவன் உயிரினங்களின் மனத்தில் இருந்து தீய ஆசைகள் அனைத்தையும் அகற்றிய போது) அந்தப் பழங்காலத்தில் தீய உணர்வுகள் அகலாத குறிப்பிட்ட சில முதியவர்கள் இருந்தனர்.(21) அவர்களுடைய தீய மனநிலையின் விளைவாலும், அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளாலும், பயங்கர ஆற்றலைக் கொண்ட பல மன்னர்கள் தோன்றி, அசுரர்களுக்குத் தகுந்த செயல்களை மட்டுமே செய்யத் தொடங்கினர்.(22) அதீத மடமை கொண்ட மனிதர்கள் அந்தத் தீயச் செயல்களைக் கடைப்பிடித்து, அவற்றையே அதிகாரமிக்கவையாக நிறுவி, இந்த நாள் வரை அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்[2].(23) ஓ! மன்னா, இந்தக் காரணத்தினாலேயே நான், சாத்திரங்களின் உதவியுடன் முறையாகச் சிந்தித்து, ஒருவன் தீங்கு அல்லது வன்மம் நிறைந்த செயல்கள் அனைத்தையும் தவிர்த்து ஆன்ம ஞானம் அடைவதற்கு முயல வேண்டும் என்று உனக்குச் சொல்கிறேன்.(24) ஞானம் கொண்ட மனிதன், அறச்சடங்குகளைச் செய்வதற்காக நெறிகளைக் கைவிட்டு அறமற்ற வழிகளின் மூலம் செல்வத்தை நாடமாட்டான். அத்தகைய வழிமுறைகளில் ஈட்டப்பட்ட செல்வம் ஒருபோதும் நன்மை பயக்காது.(25)நீ இவ்வகை க்ஷத்திரியனாக வேண்டும். உன் புலன்களை அடக்கி, உன் நண்பர்களுக்கு ஏற்புடையவனாகி, உனது வகைக்கான கடமைகளின்படி உன் குடிமக்கள், பணியாட்கள் மற்றும் பிள்ளைகளைப் பேணி வளர்ப்பாயாக.(26) (மனித வாழ்வில் தோன்றும்) செழுமை மற்றும் வறுமையின் கலவையின் மூலம் நட்புகளும், பகைமைகளும் எழுகின்றன. (ஒவ்வொரு ஜீவனையும் பொறுத்தவரையில்) ஆயிரமாயிரம் இருப்புகள் தொடர்ந்து சுழல்கின்றன, ஜீவ இருப்பின் ஒவ்வொரு நிலையிலும் இவை நேர்ந்தே ஆக வேண்டும்[3].(27) இந்தக் காரணத்தினால் நீ ஒவ்வொரு வகை நற்குணங்களிலும் பற்றுக் கொள்ள வேண்டும், ஒருபோதும் களங்கங்களின் {குற்றங்களில்} பற்றுக் கொள்ளக் கூடாது. எந்த அறமும் அற்றவனும், மிகுந்த மூடனுமான ஒரு மனிதன்கூட, தனது எந்த நல்ல குணத்திற்காகவும் புகழப்படுவதைக் கேட்டால், இன்பத்தால் நிறைவான். நற்குணத்தின் தன்மை இத்தகையதே ஆகும்[4].(28) ஓ! மன்னா, அறமும் {புண்ணியமும்}, பாவமும் மனிதர்களுக்கு மத்தியில் மட்டுமே இருக்கின்றன. இவை மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களுக்கு மத்தியிலும் இல்லை.(29) எனவே, உணவுத் தேவையோ, பிற அவசிய தேவைகளோ ஏற்படும்போது, அவற்றைக் கடக்கும் ஒருவன், அற மனநிலையுடனிருந்து, ஞானத்தை அடைந்து, எப்போதும் தன்னைப் போலவே பிற உயிரினங்கள் அனைத்தையும் பார்த்து, எந்த வகைத் தீங்கையும் செய்வதில் இருந்து முற்றாக விலக வேண்டும்.(30) ஒருவனுடைய மனம் ஆசையற்றதாகி, அதனிலிருந்து இருள் அனைத்தும் அகலும்போதுதான் ஒருவன் மங்கலமானதை அடைவதில் வெல்கிறான் {க்ஷேமத்தை அடைகிறான்}” என்றார் {பராசரர்}.(31)

தவம்! – சாந்திபர்வம் பகுதி – 296-பற்றால் விளையும் பேராசை, பேராசையால் நேரும் பாவங்கள், பாவங்களால் நேரும் அழிவு ஆகியவற்றையும்; தவத்தின் மேன்மையையும் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பராசரர் {ஜனகனிடம்}, “இல்லறவாழ்வை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் ஒருவன் செய்ய வேண்டிய கடமை விதிகள் குறித்து நான் இப்போது உனக்குச் சொன்னேன். இனி தவங்களின் விதிகளைக் குறித்து உனக்குச் சொல்லப்போகிறேன். இக்காரியத்தைச் சொல்லப்போகிறேன் நீ கேட்பாயாக.(1) ஓ! மன்னா, ரஜஸ் மற்றும் தமஸ் {ஆசை மற்றும் இருள் குணங்கள்}, பற்றிலிருந்து உண்டாகும் “நான்” என்ற அகந்தை {மமதை} ஆகியற்றால் நிறைந்த உணர்வானது இல்லறத்தானின் {கிருஹஸ்தனின்} இதயத்தில் எழுவது பொதுவாகக் காணப்படுகிறது.(2) இல்லற வாழ்வை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} மேற்கொள்ளும் ஒருவன், பசுக்கள், வயல்கள், பல்வேறு வகைச் செல்வங்கள், மனைவிகள், பிள்ளைகள் மற்றும் பணியாட்களை அடைகிறான்.(3) இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றும் ஒருவன், இந்த நோக்கங்களிலேயே தன் கண்களைத் தொடர்ந்து செலுத்துகிறான். இச்சூழ்நிலைகளில் ஒருவனுடைய விருப்பு வெறுப்புகள் அதிகரித்து, (நிலையற்றவையான) தன் உடைமைகளை நித்தியமானவை என்றும், அழிவற்றவை என்றும் கருதுகிறான்.(4) ஓ! மன்னா, ஒருவன் விருப்பு வெறுப்பில் மூழ்கி, உலகப் பொருட்களை ஆள்வதில் வசப்படும்போது, கவனமின்மையிலிருந்து எழும், அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை அவனைப் பீடிக்கிறது {பற்றுகிறது}.(5)

இவ்வுலகின் இன்பங்களில் பெரும்பங்கைக் கொண்டிருக்கும் மனிதனே அருளப்பட்டவன் என்று நினைத்து இன்பத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கும் மனிதன், தன் பற்றின் விளைவால், புலன்களுக்கு நிறைவைத் தரும் காரியங்களைத் தவிர வேறு எந்த இன்பத்தையும் காணாதவனாகிறான்.(6) அத்தகைய பற்றால் விளையும் பேராசையில் மூழ்கும் அவன், தன் உறவினர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முனைந்து, பிறகு அவர்களை நிறைவு செய்வதற்காகத் தன் சக்திக்குத்தக்க ஒவ்வொரு வழிமுறையாலும் செல்வத்தைப் பெருக்க முனைகிறான்.(7) பிள்ளைகள் மீது கொண்ட அன்பால் நிறையும் அத்தகைய மனிதன், செல்வத்தை அடைவதற்காக, தீமையென அவன் அறிந்த செயல்களைச் செய்து, செல்வத்தை இழக்கும்போது துயரில் வீழ்கிறான்.(8) கௌரவங்களை ஈட்டி, தன் திட்டங்களின் தோல்வியை எப்போதும் தடுக்கும் அவன், இன்பத்திற்கான தன் ஆசையை நிறைவு செய்யும் வழிமுறைகளிலேயே செயல்படுகிறான். இறுதியில், அவன் நாடும் நடத்தையின் தவிர்க்கமுடியாத விளைவாக அழிவை அடைகிறான்.(9) எனினும், புத்தியுடையவர்களும், அழிவற்ற பிரம்மத்தை ஓதுபவர்களும், மங்கலமான, நன்மையான செயல்களை மட்டுமே செய்ய முனைபவர்களும், ஆசையில் இருந்து மட்டுமே எழுபவையும், கட்டாயமற்றவையுமான செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவர்களுமானவர்களே உண்மையான இன்பநிலையை அடைகிறார்கள் என்பது நன்கறியப்பட்டதாகும்.(10)

ஓ! மன்னா, பற்றை மையமாகக் கொண்ட அத்தகை பொருட்கள் அனைத்தையும் இழப்பது, செல்வத்தை இழப்பது, உடல்நோய் மற்றும் மனத்துன்பங்களின் வேதனை ஆகியவற்றில் மூலம் ஒரு மனிதன் மனத்தளர்ச்சியில் வீழ்க்கிறான். இந்த மனத்தளர்ச்சியின் மூலம் ஆன்ம விழிப்புணர்வு எழுகிறது. அத்தகைய விழிப்புணர்வில் இருந்து சாத்திரக் கல்வி எழுகிறது. ஓ! மன்னா, ஒருவன் சாத்திரக் கருத்துகளின் சிந்தனையில் இருந்து தவத்தின் மதிப்பைக் காண்கிறான்.(12) எது மிக முக்கியமானது, எது தற்செயலானது என்ற அறிவைக் கொண்ட அரிய மனிதன், ஏற்புடைய மனைவிகள், பிள்ளைகள் ஆகியவற்றைக் கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியானது முற்றான துன்பத்திற்கே வழிவகுக்கிறது என்ற உண்மையால் ஈர்க்கப்பட்டுத் தவங்களைச் செய்ய முனைகிறான்[1].(13) ஓ! குழந்தாய், தவங்கள் அனைவருக்குமானவை. தாழ்ந்த வகை மனிதர்களுக்கும் (சூத்திரர்களுக்கும்) அவை விதிக்கப்பட்டிருக்கின்றன. தவங்கள், தன் புலன்கள் அனைத்தையும் ஆளும் தற்கட்டுப்பாடுடைய மனிதனைச் சொர்க்கத்தின் வழியில் நிறுத்துகின்றன[2].(14) ஓ! மன்னா, பலமிக்கவனான உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவன் {ஹிரண்யகர்ப்பன்}, குறிப்பிட்ட இடைவெளிகளில் நோன்புகளைப் பயின்று, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் தவங்களின் மூலமே படைத்தான்.(15)ஓ! குழந்தாய், ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், அக்னி, அஸ்வினிகள், மருதர்கள், விசுவேதேவர்கள், ஸாத்யர்கள், பித்ருக்கள், மருத்துக்கள்,(16) யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் சொர்க்கவாசிகளும், இன்னும் பிற தேவர்கள் அனைவரும் தங்கள் தவங்களின் மூலமே வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டனர்.(17) தொடக்கத்தில் பிரம்மனால் படைக்கப்பட்ட பிராமணர்கள், பூமியை மட்டுமல்லாமல் சொர்க்கத்தையும் தங்கள் தவங்களால் கௌரவித்ததன் மூலம் வெற்றியடைந்து இன்பத்துடன் திரிந்தனர்.(18) மனிதர்களின் இந்த உலகில், மன்னர்களும், உயர் குடியில் பிறந்த இல்லறவாசிகள் பிறர் அனைவரும் தாங்கள் செய்த தவங்களின் விளைவால் மட்டுமே தங்கள் நிலையை அடைந்தனர்[3].(19) அவர்கள் அணியும் பட்டுத்துணிகள், தங்கள் மேனியில் அலங்கரித்துக் கொள்ளும் சிறந்த ஆபரணங்கள், அவர்கள் செலுத்தும் விலங்குகள் மற்றும் வாகனங்கள், அவர்கள் அமரும் இருக்கைகள் ஆகியன அனைத்தும் அவர்களின் தவங்களால் விளைந்தவையே.(20)ஆயிரக்கணக்கில் அவர்களால் அனுபவிக்கப்படும் அழகிய பெண்கள் மற்றும் அரண்மனை மாளிகை வாசம் ஆகியவை அவர்களின் தவங்களால் விளைந்தவையே.(21) விலைமதிப்புமிக்கப் படுக்கைகள், பல்வேறு வகைகளிலான இனிய உணவுப் பொருட்கள் ஆகியவை அறம் சார்ந்து செயல்படுபவர்களின் {நல்வினை செய்பவர்களின்} உடைமைகளாகின்றன.(22) ஓ! எதிரிகளை எரிப்பவனே, தவங்களால் அடைய முடியாத ஏதும் மூவுலகிலும் இல்லை. உண்மை ஞானம் அற்றவர்களும் கூடத் தங்கள் தவங்களின் விளைவால் துறவை வெல்கிறார்கள்[4].(23) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, செழிப்புடன் {மகிழ்ச்சியில்} இருந்தாலும், துன்பத்திலிருந்தாலும் ஒரு மனிதன் சாத்திரங்களை நினைவுகூர்ந்து, தன் புத்தி மற்றும் மனத்தின் துணை கொண்டு பேராசையைக் கைவிட வேண்டும்.(24) நிறைவில்லாமையே துயரை உண்டாக்குகிறது. (பேராசையின் விளைவே நிறைவின்மையாகும்). பேராசை புலன்களின் கலக்கத்திற்கே வழிவகுக்கும். ஒருவனுடைய புலன்கள் கலக்கமடைந்தால், தொடர்ந்து பயன்படுத்தாத ஞானத்தை {வித்தையைப்} போலவே அவனது விவேகம் {பிரஜ்ஞை} காணாமல் போகும்[5].(25)ஒருவனுடைய விவேகம் மறையும்போது, எது சரியானது எது முறையற்றது என்பதை வேறுபடுத்திப் பார்க்க அவன் தவறுகிறான். எனவே, ஒருவனுடைய மகிழ்ச்சி அழியும் (அழிந்து துன்பவசப்படும்) போது அவன் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும்.(26) எது ஏற்புடையதோ அதுவே மகிழ்ச்சி {இன்பம்} என்றழைக்கப்படுகிறது. எது ஏற்பில்லாததோ அது துன்பம் என்று சொல்லப்படுகிறது. தவங்கள் பயிலப்படும்போது {அவற்றின் மூலம்} மகிழ்ச்சியே விளைகிறது. அவை பயிலப்படாத போது, துன்பமே விளைகிறது. தவங்களைப் பயில்வது மற்றும் தவிர்ப்பதால் உண்டாகும் கனிகளைக் காண்பாயாக.(27) களங்கமற்ற தவங்களைப் பயில்வதன் மூலம் மக்கள் எப்போதும் அனைத்து வகை மங்கல விளைவுகளையே அடைந்து, நல்ல பொருட்கள் அனைத்தையும் அனுபவித்து, பெரும் புகழை அடைகிறார்கள்[6].(28) எனினும், கனியில் விருப்பத்தால் {பலன் மீது கொண்ட ஆசையால்} அவற்றை (களங்கமற்ற தவங்களைக்) கைவிடும் ஒருவன், உலகம் சார்ந்த உடைமைகளைக் காரணமாகக் கொண்ட ஏற்பில்லாத விளைவுகள் பலவற்றையும், அவமதிப்பையும், பல்வேறு வகைத் துன்பங்களையும், அவற்றின் கனிகளையும் {பலன்களையும்} அடைவான்.(29) அறம், தவங்கள், ஈகை பயில்வதில் விருப்பமுடைமை இருந்தாலும், தடுக்கப்பட்ட அனைத்து வகைச் செயல்களைச் செய்யும் விருப்பமும் மனத்தில் எழுகிறது. இவ்வாறு பல்வேறு வகைப் பாவச் செயல்களைச் செய்யும் ஒருவன் நரகத்திற்கே செல்கிறான்[7].(30)ஓ! மனிதர்களில் சிறந்தவனே {ஜனகனே}, இன்பத்திலும் துன்பத்திலும் தனக்காக விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழாத மனிதன் சாத்திரக் கண் கொண்டவன் {சாத்திரநேத்திரமுடையவன்} என்று சொல்லப்படுகிறான்.(31) ஓ! ஏகாதிபதி, தீண்டல், நாக்கு {சுவை}, பார்வை {ஒளி}, மணம் மற்றும் கேட்பது {ஒலி} ஆகியவற்றுக்கு உரிய புலன்களின் நிறைவால் ஒருவன் அடையும் இன்பமானது, வில்லால் ஏவப்பட்ட கணை பூமியில் விழுவதற்கு ஆகும் காலம் வரையே நீடிக்கும் எனச் சொல்லப்படுகிறது.(32) குறுகிய காலத்தையே கொண்ட அந்த இன்பம் முடிந்ததும், ஒருவன் மிகக்கூரிய துன்பத்தையே அனுபவிக்கிறான். விடுதலையால் {முக்தியின் மூலம்} விளையும் ஒப்பற்ற நிலையை மூடர்களே மெச்சமாட்டார்கள்.(33) புலன்களின் நிறைவில் உண்டாகும் துன்பத்தைக் காணும் ஞானிகள், விடுதலையை {முக்தி} அடையும் நோக்கில் அமைதி மற்றும் தற்கட்டுப்பாடெனும் நற்பண்புகளை வளர்க்கிறார்கள். அவர்களுடைய அறவொழுக்கத்தின் விளைவால் செல்வத்தாலோ, இன்பத்தாலோ அவர்களை ஒருபோதும் துன்புறுத்துவதில் வெல்ல முடியாது.(34) இல்லறவாசிகள் முயற்சியில்லாமல் அடையப்படும் செல்வத்தையும், பிற உடைமைகளையும் எந்தக் கழிவிரக்கமும் இல்லாமல் அனுபவிக்கலாம். எனினும், (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) அவர்களின் வகைக்கான கடமைகளைப் பொறுத்தவரையில், அவற்றை அவர்கள் முயற்சியின் உதவியுடனே வெளிப்படுத்த வேண்டும் என்பது என் கருத்து[8].(35)கௌரவம் அடைந்தவர்கள், உயர் குடியில் பிறந்தவர்கள், சாத்திரங்களின் கருத்தை நோக்கியே எப்போதும் தங்கள் கண்களைக் கொண்டவர்கள் ஆகியோரின் நடைமுறைகளை, கட்டுப்பாடில்லாத மனங்களைக் கொண்ட பாவிகளால் ஒருபோதும் பின்பற்ற இயலாது.(36) வீண்தற்பெருமையின் ஆதிக்கத்தில் மனிதனால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் அழிவையே அடைகின்றன. எனவே, மதிப்பிற்குரியவர்களுக்கும், உண்மையான அறவோருக்கும் தவத்தைத் தவிர இவ்வுலகில் செய்ய வேறெந்த செயலும் இல்லை[9].(37) எனினும், செயல்களுக்கு அடிமைகளாக இருக்கும் இல்லத்தாரைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் முழு இதயங்களுடன் தங்களை அச்செயல்களில் நிறுவிக் கொள்ள வேண்டும். ஓ! மன்னா, தங்கள் வகைக்கான கடமைகளைப் பின்பற்று அவர்கள், கவனத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் வேள்விகளையும், அறச்சடங்குகள் பிறவற்றையும் முறையாகச் செய்ய வேண்டும்.(38) உண்மையில், நதி {ஆற்றின் பெண்பால்} மற்றும் நதங்களான {ஆற்றின் ஆண்பால்} ஆறுகள்[10] அனைத்தும் பெருங்கடலையே தங்கள் புகலிடமாகக் கொள்வதைப் போல, அனைத்து வகைகளைச் சார்ந்த மனிதர்களும், இல்லறத்தானையே புகலிடமாகக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் {பராசரர்}.(39)

வர்ண, கோத்திர வேறுபாடு! – சாந்திபர்வம் பகுதி – 297-தவம் குன்றியதால் விளைந்த வர்ண வேறுபாடு; நான்கு வர்ணங்களின் அடிப்படைத் தோற்றம்; வர்ணங்களின் கலப்பால் உண்டான கோத்திரங்கள்; வர்ணங்களுக்குத் தனிச்சிறப்புடைய கடமைகள் மற்றும் வர்ணங்களுக்குப் பொதுவான கடமைகள்; களங்கமேற்படுத்துவது பிறவியா? செயல்களா? போன்றவற்றை ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! பெரும் முனிவரே {பராசரரே}, பல்வேறு வகைகளை {வர்ணங்களைச்} சார்ந்த மனிதர்களின் மத்தியில் உள்ள இந்த வர்ண வேறுபாடு எங்கிருந்து வந்தது? இதை நான் அறிய விரும்புகிறேன். ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) ஒருவன் ஈன்றெடுக்கும் வாரிசு தன் சுயமே ஆகும் என ஸ்ருதிகள் சொல்கின்றன. உண்மையில் பிரம்மனிலிருந்து எழுந்த அனைவரும் பிராமணர்களாகத்தானே இருந்திருக்க வேண்டும். பிராமணர்களில் இருந்து எழுந்த மனிதர்கள் ஏன் அந்தப் பிராமணர்களில் இருந்து வேறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்?” என்று கேட்டான்.(2)

பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, நீ சொல்வது போலத்தான் இஃது இருக்கிறது. ஈன்றெடுக்கப்பட்ட வாரிசானவன் ஈன்றவனைத் தவிர வேறு எவனும் அல்ல. எனினும், தவத்தில் இருந்து வீழ்ந்ததன் விளைவால் பல்வேறு நிறங்களைக் கொண்ட வர்க்க {வர்ண} வேறுபாடுகள் தோன்றின. நிலமும் {தாயும்}, வித்தும் {தந்தையும்} நல்லவையாக {நல்லவர்களாக} இருந்த போது விளைந்த பயிர் {வாரிசானவன்} தகுதிமிக்கதாக {புண்ணியவானாக / பிராமணனாக} இருந்தது {இருந்தான்}. எனினும், நிலமும், வித்தும் வேறுவகையில் அல்லது தாழ்ந்த வகையில் இருக்கும்போது விளையும் பயிர் தாழ்வடைகிறது.(3,4) அனைத்து உயிரினங்களின் தலைவன் {பிரம்மன்}, உலகங்களைப் படைக்கத் தன்னை நிறுவிக் கொண்டபோது, சில உயிரினங்கள் அவனது வாயிலிருந்தும், சில அவனது கரங்களில் இருந்தும், சில அவனது தொடைகளில் இருந்தும், சில அவனது பாதங்களில் இருந்து வந்ததைச் சாத்திரங்களை அறிந்தவர்கள் அறிவார்கள்.(5) ஓ! குழந்தாய், இவ்வாறு அவனது வாயிலிருந்து எழுந்தவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவனது கரங்களில் இருந்து எழுந்தவர்கள் க்ஷத்திரியர்கள் என்று பெயரிடப்பட்டார்கள். ஓ! மன்னா, அவனது தொடைகளில் இருந்து எழுந்தவர்கள், செல்வமிக்க வர்க்கமான {வர்ணத்தாரான} வைசியர்கள் என்றழைக்கப்பட்டார்கள். இறுதியாக, அவனது பாதங்களில் இருந்து பிறந்தவர்கள் தொண்டாற்றும் வர்க்கமான {வர்ணத்தாரான} சூத்திரர்களாகினர்.(6) ஓ! ஏகாதிபதி, இந்த நான்கு வகைகள் {வர்ணங்கள்} மட்டுமே இவ்வாறு படைக்கப்பட்டன. இதற்கு மேலும் உள்ள வர்க்கங்கள் {கலப்புவர்ணங்கள்}, மேலும் மேலும் இவற்றுக்குள் நேர்ந்த கலப்பால் எழுந்ததாகச் சொல்லப்படுகிறது.(7) ஓ! ஏகாதிபதி, க்ஷத்திரியர்கள் என்றழைக்கப்படும் அதிரதர்கள், அம்பஷ்டர்கள், உக்கிரர்கள், வைதேஹகர்கள், ச்வபாகர்கள், புக்கஸர்கள், ஸ்தேநர்கள், நிஷாதர்கள், ஸூதர்கள், மாகதர்கள், அயோகர்கள், காரணர்கள், விராத்தியர்கள், சண்டாளர்கள் ஆகியோர் அனைவரும் உண்மையில் இருந்த நான்கு வகையினர் ஒருவரோடொருவர் கலந்ததால் எழுந்தவர்களாவர்” என்றார் {பராசரர்}[1].(8,9)

ஜனகன் {பராசரரிடம்}, “அனைவரும் பிரம்மனில் இருந்து மட்டுமே எழுந்திருக்கும்போது, மனிதர்களிடம் எவ்வாறு இன {கோத்திர} வேற்றுமை உண்டானது? ஓ! தவசிகளில் சிறந்தவரே, இவ்வுலகில் முடிவில்லா வேற்றுமைகளைக் கொண்ட இனங்கள் {கோத்திரங்கள்} காணப்படுகின்றன.(10) வேற்றுமையற்ற தோற்றம் {பிறப்பைக்} கொண்டிருக்கும்போதும் தவங்களில் அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் எவ்வாறு பிராமணர்களின் நிலையை அடைவார்கள்? உண்மையில், தூய கருவறைகளில் பிறந்தவர்களும், தூய்மையற்ற கருவறைகளில் பிறந்தவர்களும் பிராமணர்களாகிறார்களே?” என்று கேட்டான்[2].(11)பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, தவங்களின் மூலம் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் வென்ற உயர் ஆன்ம மனிதர்களின் நிலையானது, அவர்கள் அடைந்த தாழ்ந்த பிறவிகளால் பாதிக்கப்பட்டது என்று கருத முடியாது.(12) ஓ! ஏகாதிபதி, பெரும் முனிவர்கள் பாகுபாடற்ற கருவறைகளில் பிள்ளைகளைப் பெற்று, அவர்களுக்கு {அந்தப் பிள்ளைகளுக்குத்} தங்கள் தவச் சக்தியின் மூலம் முனிவர்களின் நிலையை அளித்தனர்[3].(13) என் பாட்டா வசிஷ்டர், ரிஷ்யசிருங்கர், காசியபர், வேதர், தாண்டியர், கிருபர், காக்ஷீவான், கமடர் மற்றும் பிறரும்,(14) ஓ! மன்னா, யவக்ரீதர், பேசுபவர்களில் முதன்மையான துரோணர், ஆயு, மதங்கர், தத்தர், துருபதர் {திருமதர்}, மாத்ஸ்யர் ஆகியோர் அனைவரும்,(15) ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா, தங்கள் தவத்தின் வன்மையால் தங்கள் தங்களுக்குரிய {முனிவர்களின் / பிராமண} நிலைகளை அடைந்தனர்.(16) ஓ! ஏகாதிபதி, முதலில் அங்கிரஸ், கசியபர், வசிஷ்டர் மற்றும் பிருகு என்ற நான்கு {மூலக்} கோத்திரங்கள் (இனங்கள்) மட்டுமே இருந்தன.(17) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, செயல்கள் மற்றும் ஒழுக்கத்தின் விளைவால் காலாகாலத்தில் பல கோத்திரங்கள் இருப்புக்கு வந்தன. அந்தக் கோத்திரங்களின் பெயர்கள், அவற்றை நிறுவியோரின் தவங்களால் உண்டானவையாகும். நல்ல மனிதர்கள் அவற்றை {கோத்திரங்களைப்} பயன்படுத்துகின்றனர்” என்றார் {பராசரர்}[4].(18)ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! புனிதமானவரே, பல்வேறு வகைகளின் {வர்ணங்களின்} சிறப்புக் கடமைகளைக் குறித்து எனக்குச் சொல்வீராக. அவற்றின் பொதுவான கடமைகளையும் எனக்குச் சொல்வீராக. நீர் அனைத்தையும் அறிந்தவராவீர்” என்றான்.(19)

பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, கொடைளை ஏற்பது, பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, சீடர்களுக்குப் போதிப்பது ஆகியன பிராமணர்களின் சிறப்புக் கடமைகளாகும். பிற வகையினரை {வர்ணத்தாரைப்} பாதுகாப்பது க்ஷத்திரியனுக்கு முறையானதாகும்.(20) உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியன வைசியர்களின் தொழில்களாகும். ஓ! மன்னா, அதே வேளையில் இந்த (மூன்று) மறுபிறப்பாள வகையினருக்கும் தொண்டாற்றுவது சூத்திரர்களின் தொழிலாகும்.(21) ஓ! ஏகாதிபதி, நான்கு வகையினரின் {வர்ணத்தாரின்} சிறப்புக் கடமைகளை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! குழந்தாய், இந்த நான்கு வகையினருக்கும் {பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்களுக்கும்} பொதுவான கடமைகளை இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(22) கருணை{குரூரத்தன்மையில்லாமை}{1}, தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்சை}{2}, விழிப்புணர்வு {தவறுதலில்லாமை}{3}, பிறருக்கு உரியவற்றைக் கொடுத்தல் {விலகியிருத்தல்}{4}, இறந்து போன மூதாதையர்களைக் கௌரவிக்கும் வகையில் சிரார்த்தங்கள் செய்தல் {ச்ராத்தகர்மம்}{5}, விருந்தினர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய விருந்தோம்பலைச் செய்தல் {அதிதிபூஜை}{6}, வாய்மை {ஸத்தியம்}{7}, கோபத்தை அடக்குதல் {குரோதமில்லாமை}{8},(23) தான் மணந்த மனைவியரிடம் நிறைவடைதல்{9}, (அக மற்றும் புறத்) தூய்மை {சுசியாயிருத்தல்}{10}, வன்மம் இல்லாமை {அஸூயையின்மை}{11}, தன்னறிவு அடைதல் {ஆத்மஜ்ஞானம்}{12}, துறவு {பொறுமை}{13} ஆகிய கடமைகள், ஓ! மன்னா, அனைத்து வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} பொதுவானவையாகும்.(24)

பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று வகையினரும் மறுபிறப்பாளர்களாவர் {இரு பிறப்பாளர்கள் / த்விஜர்களாவர்}. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவர்கள் அனைவருக்கும் இக்கடமைகளில் சம உரிமை உண்டு.(25) ஓ! ஏகாதிபதி, இந்த மூன்று வகையினரும் தங்கள் தங்களுக்குரிய வர்க்கங்களை {வர்ணங்களைச்} சார்ந்த ஏதோவொரு அறவோனை முன்மாதிரியாகக் கொண்டு பெரும் தகுதியை ஈட்டுவதைப் போலவே, தங்களுக்கு விதிக்கப்பட்டவற்றைத் தவிர வேறு கடமைகளைச் செய்து துன்பத்தையும் அடைகின்றனர்.(26) சூத்திரன் (தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்வதால்) ஒருபோதும் வீழ்வதுமில்லை, மறுபிறப்புச் சடங்குகளேதும் செய்யத் தகுந்தவனாவதுமில்லை. வேதங்களில் இருந்து வரும் கடமைகளின் நடைமுறைகள் அவனுடையவையல்ல. எனினும், அனைத்து வகையினருக்கும் பொதுவான {மேற்குறிப்பிடப்பட்ட} பதிமூன்று கடமைகளைப் பயில்வதில் இருந்து அவன் தடை செய்யப்படுவதில்லை.(27) ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா {ஜனகனே}, ஓ! ஏகாதிபதி, வேதங்களைக் கற்ற பிராமணர்கள், {அறவோனான} ஒரு சூத்திரனைப் பிரம்மனுக்கு இணையானவனாகக் கருதுகிறார்கள். எனினும், நானோ அத்தகைய ஒரு சூத்திரனை உலகங்கள் அனைத்தில் முதன்மையானவனும், அண்டத்தில் பிரகாசிப்பவனுமான விஷ்ணுவாகவே பார்க்கிறேன்[5].(28) தாழ்ந்த வகையை {வர்ணத்தைச்} சார்ந்த மனிதர்கள், (காமம் மற்றும் கோபம் முதலிய) தீய ஆசைகளை விட விரும்பி நல்லோரின் ஒழுக்கத்தை நோற்றுச் செயல்படலாம்; உண்மையில் அவ்வாறு செயல்படும்போது, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் சடங்குகள் அனைத்தையும், அவற்றில் பிற வகையினரால் சொல்லப்படும் மந்திரங்களைத் தவிர்த்து அவற்றை {அந்தச் சடங்குகளைச்} செய்வதன் மூலம் அவர்கள் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறார்கள்.(29) எங்கெல்லாம் தாழ்ந்த வகையை {வர்ணத்தைச்} சார்ந்தவர்கள் நல்லோரின் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் மகிழ்ச்சியை அடைவதில் வென்று, அதன் விளைவாக இம்மையிலும், மறுமையிலும் தங்கள் காலத்தை இன்பமாகக் கழிக்கிறார்கள்” என்றார் {பராசரர்}.(30)ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! பெரும் தவசியே, ஒரு மனிதன் தன் செயல்களால் களங்கமடைகிறானா? அல்லது, அவன் பிறக்கும் வகை அல்லது வர்க்கத்தின் {வர்ணத்தின்} மூலம் களங்கமடைகிறானா? இந்த ஓர் ஐயம் என் மனத்தில் எழுகிறது. இஃதை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(31)

பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, செயல்கள் மற்றும் பிறவி ஆகிய இரண்டும் களங்கத்தின் மூலங்களே ஆகும். அவற்றின் வேறுபாட்டை இப்போது கேட்பாயாக.(32) பிறப்பால் களங்கமடைந்தாலும், பாவம் செய்யாமல் இருக்கும் மனிதன் பிறவி மற்றும் செயல்களால் உண்டாகும் பாவங்களைத் தவிர்க்கிறான்.(33) எனினும், மேன்மையான பிறவியைக் கொண்ட ஒருவன் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்தால், அச்செயல்கள் அவனைக் களங்கப்படுத்தும். எனவே, செயல்கள் மற்றும் பிறவி ஆகிய இரண்டிலும் (பிறவியை விட) அதிகக் களங்கத்தைச் செயல்களே உண்டாக்குகின்றன” என்றார்.(34)

ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்கள் அனைவரிலும் சிறந்தவரே, இவ்வுலகில் பிற உயிரினங்களுக்கு எந்தத் தீங்கையும் இழைக்காமல் செய்யப்படும் அறச்செயல்கள் என்னென்ன?” என்று கேட்டான்.(35)

பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! ஏகாதிபதி, மனிதர்களை எப்போதும் மீட்கும் தீங்கில்லா செயல்களைக் குறித்துக் கேட்டாய், நான் சொல்வதைக் கேட்பாயாக.(36) தங்கள் இல்லற நெருப்புகளை ஒருபுறம் வைத்து, உலகப் பற்றுகள் அனைத்தில் இருந்தும் தங்கள் தொடர்புகளை அறுத்துக் கொள்ளும் மனிதர்கள், கவலைகள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறார்கள். படிப்படியாக யோக பாதையில் அடியெடுத்து வைக்கும் அவர்கள், இறுதியாக உயர்ந்த பேரின்ப நிலையை (விடுதலையை {முக்தியைக்}) காண்கிறார்கள். நம்பிக்கையும் பணிவும் கொண்டு, எப்போதும் தற்கட்டுப்பாட்டைப் பயின்று, கூரிய புத்தியுடன், செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவர்கள் நித்தியமான இன்ப நிலையை அடைகிறார்கள்.(37,38) ஓ! மன்னா, மனிதர்களில் அனைத்து வர்க்கத்தினரும் {வர்ணத்தாரும்} இவ்வுலகில் முறையான அறச்செயல்கள், வாய்மை பேச்சு, அறமற்றவற்றைத் தவிர்த்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம் சொர்க்கத்திற்கு உயர்கிறார்கள். இதில் எந்த ஐயமும் கிடையாது” என்றார் {பராசரர்}.(39)

மனிதப்பிறவியின் மேன்மை! – சாந்திபர்வம் பகுதி – 298-மனிதப்பிறவியின் மேன்மை; அதற்குரிய பல தர்மங்கள் ஆகியவற்றைக் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பராசரர் {ஜனகனிடம்}, “அர்ப்பணிப்பற்ற {குணமில்லாத} மனிதர்களுக்கு அவர்களின் தந்தைமார், நண்பர்கள், ஆசான்கள், ஆசான்களின் மனைவியர் ஆகியோரால் தங்கள் அர்ப்பணிப்பில் உள்ள தகுதிகளை {புண்ணியங்களை} அவர்களுக்குக் கொடுக்க இயலாது {இவர்கள் அவர்களுக்குப் பயன்படுவதில்லை}. அத்தகைய பெரியோரிடம் உறுமிக்க அர்ப்பணிப்பைக் கொண்டவர்களும், அவர்களுக்கு ஏற்புடையதைப் பேசுபவர்களும், அவர்களின் நன்மையை நாடுபவர்களும், நடத்தையால் அவர்களுக்கு அடங்கியிருப்பவர்களும் மட்டுமே அர்ப்பணிப்பின் தகுதியை {புண்ணியத்தை} அடைய முடியும். (1) தந்தையே தன் பிள்ளைகளுக்குத் தேவர்களில் உயர்ந்தவனாவான். தாயைவிட உயர்ந்தவன் தந்தை எனச் சொல்லப்படுகிறது. ஞானத்தை அடைவதே உயர்ந்த உடைமையாகக் கருதப்படுகிறது. புலன்நுகர் பொருட்களை அடக்கியவர்கள் (ஞானத்தை அடைவதன் மூலம்) உயர்ந்ததை (விடுதலையை {முக்தியை}) அடைகிறார்கள்.(2)

எந்த க்ஷத்திரிய இளவரசன், போர்க்களத்திற்குச் சென்று, அனைத்துத் திசைகளிலும் பறக்கும் நெருப்புக் கணைகளுக்கு மத்தியில் காயமடைந்து அவற்றால் எரிபடுகிறானோ, அவன் தேவர்களால் அடையப்படும் உலகங்களை நிச்சயம் அடைந்து, அங்கே முற்றிலும் நிறைவான சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிக்கிறான்.(3) ஓ! மன்னா, களைப்படைந்தவனையோ, அச்சமடைந்தவனையோ, ஆயுதம் இல்லாதவனையோ, அழுது கொண்டிருப்பவனையோ, போரிட விருப்பமில்லாதவனையோ, கவசம் தரிக்காதவனையோ, தேர்கள், குதிரை மற்றும் யானை இல்லாதவனையோ, போரிடும் முயற்சியை நிறுத்தியவனையோ, நோயுற்றவனையோ, இடத்தை இரந்து கேட்பவனையோ, இளம் வயதினனையோ, முதிர்ந்தவனையோ ஒரு க்ஷத்திரியன் தாக்கக்கூடாது.(4) கவசம், தேர்கள், குதிரை, யானை ஆகியவற்றைக் கொண்டவனும், தன் வகையை {வர்ணத்தைச்} சேர்ந்தவனும், தன் நிலைக்கு இணையான நிலையைக் கொண்டவனுமான ஒருவனுடனேயே ஒரு க்ஷத்திரியன் போரிட வேண்டும்.(5) இணையானவன் அல்லது மேம்பட்டவனின் கைகளில் நேரும் மரணமே மெச்சத்தக்கது; இழிந்தவன், அல்லது கோழை, அல்லது வறியவனின் கைகளில் நேர்வதல்ல {அவ்வாறு நேரும் மரணம் மெச்சப்படுவதில்லை}. இது நன்கறியப்பட்டதாகும்.(6) பாவி, அல்லது இழி பிறவி, அல்லது தீய நடத்தை கொண்டவன் கைகளில் நேரும் மரணம் மகிமையற்றதும், நரகத்திற்கு வழிவகுப்பதுமாகும்.(7)

வாழ்நாள் காலம் தீர்ந்தவனை எவனாலும் காப்பாற்ற முடியாது. அதே போலவே, வாழ்நாள் காலம் தீராதவனை எவனாலும் கொல்லவும் முடியாது.(8) ஒருவன் தன் அன்புக்குரிய பெரியோர்களை, (தன் நன்மைக்காக) இழி செயல்கள் செய்வதிலிருந்தும், பிறருக்கு தீங்கு செய்யும் செயல்களில் இருந்தும் தடுக்க வேண்டும். அவன் பிறரின் உயிரை எடுப்பதன் மூலம் தன் வாழ்நாளை நீட்டிக்க விரும்பக்கூடாது.(9) புனிதத் தலங்களில் வசித்து மனிதர்களின் கடமைகளை நோற்கும் இல்லறவாசிகள் அனைவரும், தங்களை உயிரைவிட நேரும்போது, புனித ஓடைகளின் கரைகளில் {ஆற்றங்கரைகளில்} தங்கள் உயிரை விடுவதே மெச்சத்தகுந்ததாகும்.(10) ஒருவனுடைய வாழ்நாள் காலம் தீர்ந்ததும், ஐந்து பூதங்களுக்குள் அவன் கறைந்துபோகிறான். சில வேளைகளில் (விபத்துகளின் மூலம்) இது திடீரென நேர்கிறது, சில வேளைகளில் (இயற்கையின்) விளைவுகளால் இது நேர்கிறது.(11)

உடலை அடைந்த ஒருவன், (மகிமையற்ற விபத்தின் மூலம் ஒரு புனிதத்தலத்தில்) அழிவை அடைந்தால், அதே வகையிலான மற்றொரு உடலை அடைகிறான். விடுதலையின் {முக்தியின்} பாதையில் இருந்தாலும் ஒரு பயணியாகும் அவன், ஓர் அறையில் இருந்து மற்றொரு அறைக்குச் செல்லும் மனிதனைப் போல மற்றொரு உடலை அடைகிறான்.(12) அத்தகைய மனிதன் அடையும் இரண்டாம் உடலுக்கு (புனிதத்தலத்தில் அவனது மரணம் நேர்ந்தாலும் கூட) விபத்தாலான அவனது மரணம் மட்டுமே காரணமாகும். அதற்கு இரண்டாம் காரணம் வேறேதும் இல்லை. உடல்படைத்த உயிரினங்கள் (புனிதத்தலங்களில் நேரும் விபத்தாலான மரணத்தின் விளைவால்) அடையும் புதிய உடலானது இருப்பிற்கு வந்து ருத்திரர்கள் மற்றும் பிசாசங்களோடு பற்று கொள்கிறது[1].(13) அத்யாத்மாவை அறிந்த கல்விமான்கள், தோலால் மறைக்கப்பட்டிருக்கும் பெருநரம்புகள், சிறு நரம்புகள், எலும்புக்கூட்டங்கள், தூய்மையற்ற பொருட்கள்கள், ஐம்பூதக் கலவைகள், புலன்கள், ஆசையில் பிறக்கும் புலன்நுகர் பொருட்கள் ஆகியவற்றின் திரட்டே உடல் என்று சொல்கிறார்கள். (உண்மையில்) அழகும், பிற சாதனைகளுமற்ற இந்தத் திரட்டே, முற்பிறவி ஆசைகளின் சக்தியால் மனித வடிவத்தை ஏற்கிறது.(14,15)உரிமையாளனால் {ஆன்மாவால்} கைவிடப்பட்ட உடல் அசைவற்றதாகவும், உயிரற்றதாகவும் {ஜீவனற்றதாகவும்} ஆகிறது. உண்மையில், அடிப்படை உட்பொருட்கள் தங்கள் தங்களுக்குரிய இயல்புகளுக்குத் திரும்பும்போது, உடலானது தூசியுடன் கலக்கிறது.(16) செயல்களின் சேர்க்கையால் உண்டான இந்த உடல், அதன் செயல்களால் தீர்மானிக்கப்பட்ட சூழ்நிலைகளிலேயே மீண்டும் தோன்றுகிறது. ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா {ஜனகா}, உண்மையில் எந்தச் சூழ்நிலைகளில் இந்த உடல் அழிவடைகிறதோ, அந்தச் சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படும் மறுபிறவியில், அதன் முற்பிறவி செயல்களின் கனிகளை அஃது அனுபவிப்பதும், தாங்கிக் கொள்வதும் காணப்படுகிறது.(17) ஓ! மன்னா, ஜீவன், தான் வசித்திருந்த உடலின் அழிவுக்குப் பிறகு, உடனே வேறு உடலில் பிறப்பெடுப்பதில்லை.(18) பரந்த மேகத்தைப் போல அது சில காலம் வானத்தில் திரிந்திருக்கிறது. ஓ! ஏகாதிபதி, புதிய கொள்ளிடத்தை அடைந்தபிறகே அது மறுபிறப்பை எடுக்கிறது.(19)

ஆன்மாவானாது மனத்தைவிட உயர்ந்ததாகும். மனமானது, புலன்களைவிட உயர்ந்ததாகும். அசையும் {ஜீவனுள்ள} உயிரினங்களே படைக்கப்பட்ட பொருட்களில் முதன்மையானவையாகும்.(20) அசையும் உயிரினங்களிலும், இரு கால்களைக் கொண்டவை மேன்மையானவையாகும். இரண்டு கால் உயிரினங்களில் மறுபிறப்பாளர்கள் மேன்மையானவர்களாவர்.(21) மறுபிறப்பாளர்களில் விவேகிகள் மேன்மையானவர்களாவர். விவேகிகளில் அன்ம அறிவை அடைபவர்கள் மேன்மையானவர்களாவர். ஆன்ம அறிவை அடைந்தவர்களில் பணிவுள்ளவர்கள் மேன்மையானவர்களாவர்.(22) மனிதர்கள் அனைவரையும் பொறுத்தவரையில் பிறப்பை மரணம் பின்தொடர்கிறது. இது தீர்மானிக்கப்பட்டதாகும். சத்வ, ரஜஸ், தமஸ் குணங்களின் ஆளுகையில் உள்ள உயிரினங்கள், முடிவைக் கொண்ட செயல்களையே நாடுகின்றன.(23) சூரியன் வடக்கத்திய சாய்வில் {உத்தராயணத்தில்} இருக்கும் போதும், புனிதமான, மங்கலமான காலம் {முகூர்த்தம்} மற்றும் நட்சத்திரத்தின் போதும் அழிவை அடையும் மனிதன் அறவோனாகக் கருதப்படுகிறான்.(24) பாவங்கள் அனைத்தில் இருந்தும் தன்னைக் கழுவிக் கொண்டு, தான் செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தையும் தன் சக்திக்குத் தக்க செய்து, எந்த மனிதனுக்கும் துன்பத்தைத் தருவதைத் தவிர்த்து, தானாக நேரும் வேளையில் மரணத்தை அடைபவன் அறவோனாவான்.(25)

நஞ்சு உட்கொண்டு, தூக்கிட்டு, எரித்துக் கொண்டு, கள்வர்களின் கரங்களில், விலங்குகளின் பற்களில் மரணத்தை அடையும் ஒருவன் மகிமையற்றவனாகச் சொல்லப்படுகிறான்.(26) அறவோர், மிகுந்த வேதனைகளைத் தரும் வகையிலான மன மற்றும் உடல் நோய்களால் பீடிக்கப்பட்டாலும், இத்தகைய மரணங்களை அடைவதில்லை.(27) ஓ! மன்னா, அறவோரின் உயிர்கள் {ஜீவன்கள்}, சூரியனைத் துளைத்துக் கொண்டு, பிரம்மலோகங்களுக்கு உயர்கின்றன. அறமற்றோர் மற்றும் பாவிகளாக இருந்தோரின் உயிர்கள் {ஜீவன்கள்} நடு உலங்களில் திரிந்து கொண்டிருக்கின்றன. பாவிகளின் உயிர்கள் அடி ஆழங்களில் {பாதாளங்களில்} மூழ்கிப் போகின்றன. (மனிதனுக்கு) ஒரேயொரு எதிரிதான் உண்டு, மற்றொன்றில்லை. ஓ! மன்னா, அந்த எதிரியானது அறியாமையாகும். அதனால் மூழ்கடிக்கப்பட்ட ஒருவன், அச்சம் நிறைந்த, மிக் கொடூரச் செயல்களைச் செய்ய வழி நடத்தப்படுகிறான்.(28,29) ஓ! மன்னா, எந்த எதிரி ஸ்ருதிகளில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளின் படி பெரியோர்களிடம் காத்திருப்பதன் {அவர்களுக்குப் பணிவிடை செய்வதன்} மூலம் ஒருவனின் சக்திக்குள் அடக்கப்பட வேண்டுமோ, எந்த எதிரியை நிலையான முயற்சிகளைத் தவிர வேறு எதனாலும் வெல்ல முடியாதோ, அந்த எதிரி {அறியாமை} ஞானம் எனும் கணைகளின் மூலம் மட்டுமே நொறுக்கப்படுகிறது.(30)

தகுதியை {புண்ணியத்தை} அடைய விரும்பும் மனிதன் முதலில் பிரம்மச்சாரியாகி வேதங்களைப் பயின்று, நோன்புகளை நோற்க வேண்டும். அதன் பிறகு அவன் இல்லற வாழ்வுமுறையில் {கிருஸ்தாஸ்ரமத்தில்} நுழைந்து வழக்கமான வேள்விகளைச் செய்ய வேண்டும். தன் குலத்தை நிறுவிய பிறகு அவன் காட்டுக்குள் நுழைந்து, தன் புலன்களை அடக்கி, விடுதலையை {முக்தியை} வெல்ல விரும்ப வேண்டும்.(31) ஒருவன் ஒவ்வொரு இன்பத்தையும் தவிர்ப்பதன் மூலம் தனது ஆண்மையை ஒருபோதும் நீக்கிக் கொள்ளக் கூடாது. ஒருவன் சண்டாளனாகவே ஆனாலும், அனைத்துப் பிறவிகளிலும் மனித நிலையே அவனுக்கு விரும்பத்தக்கதாகும்.(32) ஓ ஏகாதிபதி, உண்மையில் மனிதனானால் தகுதிமிக்கச் செயல்களின் மூலம் ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள முடியும் என்பதால் அந்த வகை (மனிதப்) பிறப்பே முதன்மையானதாகும்.(33) மனித நிலையில் இருந்து வீழ்ந்து விடக்கூடாது என்பதாலே மனிதர்கள் ஸ்ருதிகளின் அதிகாரத்தால் வழிநடத்தப்படும் அறச்செயல்களை எப்போதும் செய்கிறார்கள்.(34) அடைதற்கரிய மனித நிலையை அடைந்த எந்த மனிதன், வன்மத்தில் ஈடுபட்டு, அறவோரை அவமதித்து, ஆசையின் வசப்படுகிறானோ, அவன் நிச்சயம் தன் ஆசைகளால் வஞ்சிக்கப்படுவான்.(35) எந்த மனிதன் அன்பால் வழிநடத்தப்பட்ட கண்களுடன் அனைத்து உயிரினங்களையும் அன்பால் வளர்க்கத்தகுந்தவை என்று கருதுவானோ, எவன் அனைத்து வகைச் செல்வங்களையும் அலட்சியம் செய்வானோ,(36) எவன் அவற்றுக்கு ஆறுதல் அளித்து, உணவளித்து, ஏற்புடைய வார்த்தைகளைச் சொல்வானோ, எவன் அவற்றின் மகிழ்ச்சியில் மகிழ்ந்தும், துயரில் துன்புறுவானோ, அவன் மறுமையில் ஒருபோதும் துன்புறமாட்டான்.(37)

ஒருவன் சரஸ்வதி {சரஸ்வதி ஆறு}, நைமிசக்காடு {நைமிசவசன்}, புஷ்கரை நீர்நிலைகள் மற்றும் உலகில் உள்ள புனிதத்தலங்கள் அனைத்திற்கும் சென்று, கொடைகளை அளித்து, துறவைப் பயின்று, இனிய குணங்களைக் கொண்டு, நீராடல்கள் மற்றும் தவங்களின் மூலம் தன் உடலைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.(38) தங்கள் வீடுகளுக்குள்ளேயே மரணத்தை அடையும் மனிதர்களின் உடல்களுக்கு ஈமச் சடங்குகளைச் செய்ய வேண்டும். சுடலைக்கு {சுடுகாட்டுக்கு} வாகனங்களின் எடுத்துச் செல்லப்படும் அவர்களது உடல்கள் {சடலங்கள்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட தூய்மைச் சடங்குகளின் படி அங்கே எரிக்கப்பட வேண்டும்.(39) அறச்சடங்குகள், நன்மைக்கான விழாக்கள், வேள்விகளைச் செய்வது, பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, கொடைகள், தகுதிமிக்கப் பிற செயல்களைச் செய்வது, இறந்து போன தன் முன்னோர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் தன் சக்திக்குத்தக்க செய்வது ஆகிய அனைத்தையும் ஒருவன் தன் {ஆன்ம} நன்மைக்காகவே செய்கிறான்.(40) ஓ !மன்னா, ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்களும், பிற சாத்திரங்களும், களங்கமற்ற செயல்களைக் கொண்ட ஒருவனின் நன்மைக்காகவே உண்டாகின” என்றார் {பராசரர்}”.(41)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, இவை அனைத்தும் விதேஹர்களின் ஆட்சியாளனுடைய {ஜனகனின்} நன்மைக்காக உயர் ஆன்ம தவசியால் {பராசரரால்} அவனுக்குச் சொல்லப்பட்டவையாகும்”.(42)

முக்திக்கான வழிமுறைகள்! – சாந்திபர்வம் பகுதி – 299-முக்திக்கான வழிமுறைகள் குறித்து ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மிதிலையின் ஆட்சியாளனான ஜனகன், அனைத்துக் கடமைகளிலும் குறிப்பிட்ட அறிவை கொண்ட உயர் ஆன்ம பராசரரிடம் மீண்டும் கேள்வி கேட்டான்.(1)ஜனகன் {பராசரரிடம்}, “எது நன்மையை விளைவிக்கும்? (உயிரினங்களுக்கு) எது சிறந்த பாதை? {அடையும் பொருளில் எது} எந்தச் சாதனை ஒருபோதும் அழிவடையாதது? எந்த இடத்திற்குச் சென்ற பிறகு ஒருவன் திரும்ப வேண்டியதில்லை? ஓ! உயர்ந்த புத்தியைக் கொண்டவரே, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

பராசரர் {ஜனகனிடம்}, “(பற்றுகளில் இருந்து) தொடர்பறுத்துக் கொள்வதே நன்மைக்கான வேர் ஆகும். அறிவே உயர்ந்த பாதை. பயின்ற தவங்கள் ஒருபோதும் அழிவடைவதில்லை. தகுந்தோருக்கு அளிக்கப்படும் கொடைகளும் தொலைந்துபோவதில்லை.(3) பாவத்தின் கட்டுகளை ஒருவன் உடைக்கும்போது, அவன் அறத்தில் இன்பம் கொள்ளத் தொடங்குகிறான். ஒருவன் கொடைகள் அனைத்திலும் உயர்ந்த கொடையான அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதிமொழியை எடுக்கும்போது, அவன் வெற்றியை அடைகிறான்.(4) (தகுந்த மனிதர்களுக்கு) ஆயிரம் பசுக்களையும், நூறு குதிரைகளையும் கொடையளிப்பவனும், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதி மொழியை அளிப்பவனும், அனைத்து உயிரினங்களிடமிருந்தும் பதிலுக்குத் தீங்கிழையாமையையே உறுதிமொழியாகப் பெறுகின்றனர்.(5) அனைத்துவகைச் செல்வம் மற்றும் இன்பங்களின் மத்தியில் வாழும் ஒருவன், புத்தி அருளப்பட்டவனாக இருந்தால், அவற்றோடு வாழமாட்டான்; புத்தியில்லாதவனோ நிலையற்றவையான இன்பப் பொருட்களிலேயே முழுமையாக வாழ்கிறான்.(6) தாமரை இலையை நனைக்க முடியாத நீரைப் போல ஞானியிடம் பாவத்தால் ஒட்ட முடியாது. மரத்தோடு உறுதியாக ஒட்டிக் கொள்ளும் அரக்கைப் போலப் பாவமானது புத்தியில்லாதவனிடம் உறுதியாக ஒட்டிக் கொள்கிறது[1].(7)பலன்களைத் தாங்கிக் கொள்ளாமல் {அனுபவிக்காமல்} தீர்ந்துபோகாத பாவமானது, அதைச் செய்தவனை ஒருபோதும் விடுவதில்லை. அதேபோல, பாவம் செய்தவனும், நேரம் வரும்போது அதனிலிருந்து எழும் விளைவுகளைத் தாங்கிக் கொள்ளவே வேண்டும்.(8) எனினும், தூய ஆன்மாக்களைக் கொண்டோரும், பிரம்மத்தின் இருப்பை உணர்ந்தவர்களும், தங்களுடைய செயல்களின் கனிகளால் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை.(9) அறிவு மற்றும் செயற்புலன்களை {ஞானகர்மேந்திரியங்களைப்} பொறுத்தவரையில் அவற்றில் கவனமில்லாதவனும், தன் தீச்செயல்களை அறிந்து கொள்ளாதவனும், நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டிலும் இதயப்பற்று கொண்டவனும் பேரச்சத்தால் பீடிக்கப்படுகிறார்கள்.(10) எப்போதும் பற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவனும், கோபத்தை முழுமையாக அடக்கியவனுமான ஒருவன், உலகம் சார்ந்த பொருட்களில் இன்புற்று வாழ்ந்திருந்தாலும் பாவத்தால் ஒருபோதும் களங்கப்படுவதில்லை.(11) ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்ட மதில் {அணை} அடித்துச் செல்லப்படாமல் இருக்கும்வரை, நீரைப் பெருகச் செய்வதைப் போலவே, இன்ப நுகர் பொருட்களில் பற்றில்லாத மனிதன், சாத்திர வரையறைகளுடன் கூடிய அறமென்ற மதிலை உண்டாக்கிக் கொண்டு ஒருபோதும் தளர்வுறாமல் இருக்கிறான். மறுபுறம், அவனது தகுதிகளும், தவங்களும் அதிகரிக்கின்றன[2].(12)(சூரிய காந்தம் என்றழைக்கப்படும்) தூய ரத்தினமானது தன்னைத் தானே உறிஞ்சி ஈர்த்துக் கொள்வதைப் போலவே, சூரியக் கதிர்களை ஆளும் விதியின் படியே, குவிந்த கவனத்தின் {தியானத்தின்} உதவியுடன் யோகமானது விளைகிறது[3].(13) எள் வித்துகள், (நறுமணமிக்க) மலர்களுடன் மீண்டும் மீண்டும் கலப்பதன் விளைவால் மிகுந்த ஏற்புடைய குணத்தை அடைவதைப் போலவே, சத்வ குணமும் மனிதர்கள் எந்த அளவுக்குத் தூய ஆன்மாக்களைக் கொண்ட பிற மனிதர்களோடு பழகுகிறார்களோ அந்த அளவுக்கு {அவர்களிடம் சத்வ குணம்} உண்டாகிறது.(14) ஒருவன் சொர்க்கவாசத்தை விரும்பும்போது, அவன் தன் மனைவியர், செல்வம், பதவி, வாகனங்கள், பல்வேறு வகை நற்செயல்கள் ஆகியவற்றைக் கைவிடுகிறான். உண்மையில், ஒருவன் அத்தகைய மனநிலையை அடையும்போது, அவனது புத்தியானது, புலன்நுகர் பொருட்களில் இருந்து தொடர்பறுத்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.(15) (மறுபுறம்) புலன்நுகர் பொருட்களில் பற்றுக் கொண்ட புத்தியோடு கூடிய மனிதன், தனக்கான நன்மை எது என்பதைக் காண்பதில் குருடனாகி, தூண்டிலிலுள்ள இறைச்சியைக் கண்ட மீனை (மீனானது அழிவால் இழுத்துச் செல்லப்படுவதைப்) போல உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களிடமும் தன் இதயத்தால் இழுத்துச் செல்லப்படுகிறான்.(16)பல்வேறு அங்கங்களாலான உடலைப் போல மரணமடையக்கூடிய உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தே நீடித்திருக்கின்றன. அவை ஒரு வாழைத்தண்டைப் போலவே வீரியமற்றவையாக இருக்கின்றன. (தற்சார்புடன் இருக்க விட்டால்) அவை (பலவீனமான பொருட்களாலான) ஒரு படகைப் போல இந்த உலகப் பெருங்கடலில் மூழ்குகின்றன[4].(17) அறமீட்டுவதற்குக் குறிப்பிட்ட நேரம் என்று ஏதும் கிடையாது. மரணம் எந்த மனிதனுக்காகவும் காத்திருக்காது. மனிதன் தொடர்ந்து மரணத்தின் {காலனின்} கோரப்பற்களை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கும்போது, அனைத்து நேரங்களிலும் அறச்செயல்களைச் செய்வது முறையானதே.(18) கவனத்துடன் இருக்கக்கூடிய ஒரு குருட்டு மனிதனால் தன் சொந்த வீட்டுக்குள் உலவமுடிவதைப் போலவே, யோகத்தில் நிலைத்த மனம் கொண்ட ஞானியானவன், (தான் பின்பற்ற வேண்டிய) பாதையில் செல்வதில் வெற்றியடைகிறான்.(19) பிறப்பின் விளைவால் மரணம் எழுவதாகச் சொல்லப்படுகிறது. பிறவியானது மரணத்தின் ஆளுகைக்கு உள்ளடங்கியதே. விடுதலையின் {முக்தியின்} கடமை நடைமுறைகளை அறியாத ஒருவன், விதியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இயலாதவனாகப் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் சக்கரமாகச் சுழல்கிறான்.(20)புத்தியால் பரிந்துரைக்கப்பட்ட பாதையில் நடக்கும் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியை ஈட்டுகிறான். விரிவானவை துன்பத்தில் நிறைந்திருக்கின்றன, அதே வேளையில் சுருங்கியவை மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. அனாத்மாவால் {ஆத்மா அல்லாதவற்றால்} பிரதிபலிக்கப்படும் கனிகள் {பலன்கள்} விரிவானவை என்று சொல்லப்படுகிறது. (சுருக்கமானவற்றை உள்ளடக்கிய) துறவே ஆன்ம மகிழ்ச்சியை விளைவிப்பதாகும்[5].(21) தாமரைத்தண்டு தன்னுடன் கூடிய சேற்றை விரைவாக விட்டகல்வதைப் போலவே, ஆன்மாவானது மனத்தை வேகமாகக் கைவிடுகிறது[6].(22) மனமே முதலில் ஆன்மாவை யோகத்தை நோக்கிச் செலுத்துகிறது. பிறகு யோகம் மனத்தினுள் கலக்கிறது. ஆன்மா யோகத்தில் வெற்றியடையும்போது, குணங்களற்ற தன் சுயத்தைப் பார்க்கிறது[7].(23) புலன் நுகர் பொருட்களுக்கு மத்தியில் ஈடுபட்டு, அத்தகையே ஈடுபாட்டைத் தன்னுடைய பணியெனக் கருதும் ஒருவன், அந்தப் பொருட்களில் அவன் கொண்ட இத்தகைய அர்ப்பணிப்பின் விளைவால் தன்னுடைய உண்மையான பணியில் இருந்து வீழ்கிறான்.(24) ஒரு ஞானியின் ஆன்மாவானது, அதன் அறச்செயல்களின் மூலம் சொர்க்கத்தில் உயர்ந்த இன்பநிலையை அடையும் அதே வேளையில், ஞானமில்லாத ஒருவன் மிகுந்த ஆழத்தில் மூழ்குகிறான், அல்லது இடைநிலை உயிரினங்களுக்கு மத்தியில் பிறப்பை அடைகிறான்.(25)சுடப்பட்ட மண் பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரானது, ஒழுகாமல் குறைவில்லாமல் அங்கேயே எஞ்சியிருப்பதைப் போலவே, கடுந்தவங்களுக்கு உள்ளான ஒருவடைய உடலானது, (பிரம்மலோகத்தில் உள்ள) இன்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும் (மறுக்காமல்) அனுபவிக்கிறது.(26) அதே போல உலகம் சார்ந்த பொருட்களை அனுபவிக்கும் மனிதனால் ஒருபோதும் விடுதலை {முக்தியை} அடைய முடியாது. மறுபுறம், (இவ்வுலகில்) அத்தகைய பொருட்களைக் கைவிடும் மனிதன், இம்மையில் பெரும் மகிழ்ச்சியை அனுபவிப்பதில் வெல்கிறான்.(27) பிறவிக் குருடனான ஒருவன், தன் வழியைக் காண இயலாததைப் போலவே ஒளிபுகாத கூட்டுக்குள் மறைக்கப்பட்டிருக்கும் ஆன்மாவுடன் கூடிய ஒரு புலனின்பவாணன், மூடுபனியால் சூழப்பட்டு (தான் அடைய வேண்டிய உண்மைப் பொருளைக்) காணத் தவறுவதே காணப்படுகிறது.(28) வணிகன் கடலோடி தங்கள் மூலதனத்திற்குத் தகுந்த இலாபங்களை ஈட்டுவதைப் போலவே, மனிதர்களின் இந்த உலகில் உள்ள உயிரினங்களும், தங்கள் தங்களுக்குரிய செயல்களின்படியே தங்கள் கதிகளை அடைகின்றன.(29) காற்றை விழுங்கும் பாம்பைப் போலவே, காலனும் முதுமையெனும் வடிவில் பகல்களாலும், இரவுகளாலும் ஆன இந்த உலகில் திரிந்து அனைத்து உயிரினங்களையும் விழுங்குகிறான்.(30)

ஓர் உயிரினம், பிறக்கும்போது, முற்பிறவிகளில் தன்னால் செய்யப்பட்ட செயல்களின் கனிகளை அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறது. ஒருவனுடைய முற்பிறவிகளில் செய்யப்பட்ட செயல்களின் விளைவாக அல்லாமல் ஏற்புடைய, அல்லது ஏற்பில்லாத எதையும் ஒருவன் அனுபவிப்பதோ, தாங்கிக் கொள்வதோ இல்லை.(31) கிடந்தாலும், நடந்தாலும், சும்மா அமர்ந்தாலும், தன் தொழில்களில் ஈடுபட்டாலும், ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும், (முற்பிறவிகளில் அவன் செய்த) நல்ல மற்றும் தீய செயல்களே அவனை எப்போதும் அணுகுகின்றன.(32) பெருங்கடலின் மறுகரையை அடைந்த ஒருவன், தான் எங்கிருந்து பயணித்து வந்தானோ அதே இடத்திற்குத் திரும்புவதற்குக் கடலைக் கடக்க விரும்புவதில்லை[8].(33) (ஆறு அல்லது தடாகத்தின்) நீரில் மூழ்கிய தன் படகைக் கயிற்றின் உதவியால் எழுப்பும் மீனவனைப் போலவே, மனமும், உடல் உணர்வில் இருந்து விடுதலையடையாமல் உலகப் பெருங்கடலில் மூழ்கிய ஜீவனைத் தியான யோகத்தின் உதவியால் எழுப்புகிறது[9].(34) ஆறுகள் அனைத்தும் கடலை நோக்கி ஓடி, அதனுள் கலப்பதைப் போலவே மனமும், யோகத்தில் ஈடுபடும்போது, தொடக்ககாலப் பிரகிருதியுடன் கலக்கிறது[10].(35)பற்றின் சங்கிலிகள் பலவற்றால் கட்டப்பட்ட மனங்களைக் கொண்டவர்களும், அறியாமையில் மூழ்கியிருப்பவர்களுமான மனிதர்கள், நீரில் மணல் வீடுகளைப் போல அழிவை அடைகின்றனர்[11].(36) தன் உடலை ஒரு வீடாகவும், அதன் (அக மற்றும் புறத்) தூய்மையைப் புனித நீராகவும் கருதுவதும், புத்தியின் பாதையில் நடப்பதுமான உடல் படைத்த ஓர் உயிரினம், இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறது.(37) விரிவானவை துன்பத்தை உண்டாக்குகின்றன; அதே வேளையில் சுருங்கியவை மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. அனாத்மாவால் {ஆத்மா அல்லாதவற்றால்} பிரதிபலிக்கப்படும் கனிகள் {பலன்கள்} விரிவானவை. (சுருக்கமானவற்றை உள்ளடக்கிய) துறவே ஆன்மாவுக்கான நன்மையை விளைவிக்கிறது.(38) ஒருவனுடைய தீர்மானத்தால் எழும் அவனது நண்பர்களும், (தன்னல) காரணங்களுக்காகப் பற்றுக் கொள்ளும் அவனது உறவினர்களும், அவனது மனைவியர், மகன்கள் மற்றும் பணியாட்களும் அவனுடைய செல்வத்தை விழுங்க மட்டுமே செய்கின்றனர்.(39) தாயாலோ, தந்தையாலோ ஒருவனுடைய மறுமைக்கான சிறு நன்மையையும் அளிக்க முடியாது. ஒருவனுயை வாழ்வாதாரத்திற்கான உணவைக் கொடைகளே கொண்டிருக்கின்றன. உண்மையில், ஒருவன் தன்னுடைய செயல்களின் கனிகளை அனுபவிக்கவே வேண்டும்.(40) தாய், மகன், தந்தை, சகோதரன், மனைவி, நண்பர்கள் ஆகியோர் தங்கத்தின் அருகிலேயே தங்கக்கோடுகளால் வரையப்பட்டதைப் போன்றவர்களாவர்.(41)முற்பிறவியில் செய்யப்பட்ட நன்மையான மற்றும் தீமையான செயல்கள் அனைத்தும் இழைத்தவனை வந்து சேரும். முற்பிறவியின் செயல்களுக்கான விளைவைத் தற்காலத்தில் அனைவரும் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறார்கள் என்பதை அறிந்து ஆன்மாவானது, (இனிமையற்ற கனிகள் அனைத்தையும் தவிர்க்கும் வகையில் செயல்பட) புத்தியைப் பல்வேறு திசைகளில் தூண்டுகிறது.(42) உரிய துணைகளுடனும், மெய்யுறுதியுடனும் கூடிய முயற்சியைச் சார்ந்து தன் பணிகளில் தன்னை நிறுவிக்கொள்ளும் ஒருவன் தோல்விகளை ஒருபோதும் சந்திப்பதில்லை.(43) ஒளிக்கதிர்கள் ஒருபோதும் சூரியனைக் கைவிடாததைப் போலவே, செழிப்பும் ஐயமில்லா நம்பிக்கையுடன் கூடிய ஒருவனை ஒருபோதும் கைவிடுவதில்லை.(44) களங்களமற்ற ஆன்மாவைக் கொண்ட மனிதனால், நம்பிக்கையுடனும், மெய்யுறுதியுடனும், உரிய வழிமுறைகளின் துணையுடனும், செருக்கில்லாமலும், புத்தியுடனும் செய்யப்படும் செயலானது ஒருபோதும் தொலைந்து போகாது.(45) ஓர் உயிரினம் தாயின் கருவறையில் வசிக்கும் காலத்திலேயே, முற்பிறவிகளில் தன்னால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் அடைகிறது. தடுக்கப்பட முடியாத மரணம் {மிருத்யு}, காலத்தின் {காலனின்} துணையுடன் கொண்டுவரும் உயிருக்கான அழிவானது, அரத்தால் அரியப்படும் மரத்தின் தூசியைச் சிதறடிக்கும் காற்றைப் போல அனைத்து உயிரினங்களையும் தங்கள் கதிக்கு வழிநடத்திச் செல்கிறது.(46) முற்பிறவியில் தன்னால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்களின் மூலமே மனிதன் தங்கத்தையும், விலங்குகளையும், மனைவியரையும், பிள்ளைகளையும், கௌரவப் பிறவியையும், மதிப்புமிக்க உடைமைகளையும், தனது மொத்த செழிப்பையும் அடைகிறான்” என்றார் {பராசரர்}”.(47)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, வாய்மைக்கு இணங்க தவசியால் {பராசரரால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும், அறவோர்களில் முதன்மையானவனுமான ஜனகன், முனிவர் {பராசரர்} சொன்ன அனைத்தையும் கேட்டு, அதன் மூலம் பேரின்பத்தை அடைந்தான்”.(48)

பராசர கீதை முற்றும்

சாத்யர்களும், அன்னமும்! – சாந்திபர்வம் பகுதி – 300-சாத்யர்களுக்கும், அன்னப்பறவைக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; கடுமொழியால் ஏற்படும் பாதிப்பு; கடுமொழியைப் பொறுத்துக் கொள்பவன் ஈட்டும் தகுதி ஆகியவற்றைச் சொன்ன அன்னப்பறவை…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, வாய்மை, தற்கட்டுப்பாடு, மன்னிக்கும்தன்மை {பொறுமை}, ஞானம் ஆகியவற்றைக் கல்விமான்கள் புகழ்கின்றனர். இவ்வறங்களில் உமது கருத்தென்ன?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர், “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பழங்கதையில் சாத்யர்களுக்கும் ஓர் அன்னப்பறவைக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் சொல்லப் போகிறேன்.(2)

ஒரு காலத்தில், பிறப்பற்றவனும் உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமானவன் (பிரம்மன்) தங்கத்தாலான அன்னப்பறவையின் வடிவை ஏற்று, மூவுலகங்களிலும் திரிந்து கொண்டிருந்தபோது சாத்யர்களைச் சந்தித்தான்.(3)

சாத்யர்கள் {பிரம்மனிடம்}, “ஓ! தலைவா, நாங்கள் சாத்யர்கள் என்றழைக்கப்படும் தேவர்களாவோம். உன்னிடம் கேள்வி கேட்க விரும்புகிறோம். உண்மையில், விடுதலையின் அறத்தை {மோக்ஷதர்மத்தைக்} குறித்தே நாங்கள் உன்னிடம் கேட்கப் போகிறோம்.(4) ஓ! பறவையானவனே, உன்னைப் பெரும் கல்விமான் என்றும், சொல்திறமிக்கவன் என்றும், வாக்கில் ஞானம் உள்ளவன் என்றும் கேள்விப்படுகிறோம். ஓ! பறவையானவனே, அனைத்துப் பொருட்களிலும் எது உயர்ந்ததென நீ நினைக்கிறாய்? ஓ! உயர் ஆன்மா கொண்டவனே, எதனில் மனம் இன்பத்தை அடைகிறது? எனவே, ஓ! பறவைகளில் முதன்மையானவனே, ஓ! இறகு படைத்த படைப்புகளின் தலைவனே, எதைச் செய்தால் ஒருவன் அனைத்துக் கட்டுகளில் இருந்தும் விடுபடலாம் என்று நீ கருதும் முதன்மையான செயலை எங்களுக்குப் போதிப்பாயாக” என்று கேட்டார்கள்.(6)

அன்னப்பறவை {பிரம்மன்}, “அமுதம் பருகியவர்களே, தவங்கள், தற்கட்டுப்பாடு, வாய்மை மற்றும் மனத்தை அடக்குதல் ஆகியவற்றைப் பயில வேண்டும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதயத்தில் உள்ள முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்க்கும் ஒருவன், ஏற்புடையவை மற்றும் ஏற்பில்லாதவை ஆகியவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.(7) ஒருவன் பிறருடைய முக்கிய அங்கங்களுக்குத் தீங்கேற்படுத்தக்கூடாது. அவன் கொடூரப் பேச்சுகளைப் பேசக் கூடாது. அவன் ஒருபோதும் இழிந்தவர்களிடம் இருந்து சாத்திர போதனைகளைப் பெறக் கூடாது. பிறரைத் துன்பத்தில் பீடிக்கச் செய்யும் வார்த்தைகள், அவர்களை (துன்பத்தில்) எரிப்பதற்கான காரணமாகவும், நரகத்திற்கு வழிவகுக்கும் செயலாகவும் இருப்பதால் அவற்றை ஒருபோதும் பேசக்கூடாது.(8) உதடுகளில் இருந்து வார்த்தைகள் கணைகளாகப் பாய்கின்றன. (யாரை நோக்கி அவை ஏவப்படுகின்றனவோ அந்த) ஒருவன் அவற்றால் பீடிக்கப்பட்டு, உடனே எரிகிறான். அந்தக் கணைகள், இலக்காக்கப்பட்ட மனிதனின் முக்கிய அங்கத்தைத் தவிர வேறு எந்தப் பாகத்தையும் தாக்குவதில்லை. எனவே, கல்விமானான ஒருவன் அவற்றை ஒருபோதும் பிறரின் மீது ஏவக்கூடாது.(9) ஒரு மனிதன் ஒரு ஞானியை சொற்கணைகளால் ஆழமாகத் துளைத்தால், அந்த ஞானியானவன் (கோபவசப்படாமல்) அமைதியைப் பின்பற்ற வேண்டும். கோபப்படத் தூண்டப்பட்டாலும் கோபத்தின் வசப்படாத மனிதன், அவ்வாறு தூண்டுபவனின் தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் அவனிடம் இருந்து அபகரித்துக் கொள்கிறான்.(10)

எதில் ஈடுபட்டால், அது பிறரைக் குறித்துக் குறை பேச வழிவகுத்து, அவனுக்கு {அவர்களை} எதிரியாக்குமோ, அந்த நெருப்பு போன்ற தன் கோபத்தை, எந்த அற ஆன்மா கொண்ட மனிதன், முழு இன்பத்துடன் கூடியவனாக, வன்மத்தில் இருந்து விடுபட்டவனாக அடக்குவானோ, அவன் பிறரின் தகுதிகளை {அவர்களிடம் இருந்து} எடுத்துக் கொள்கிறான்[1].(11) என்னைப் பொறுத்தவரையில், மற்றொருவர் என்னைக் குறித்துத் தவறாகப் பேசும்போது, ஒருபோதும் நான் அவற்றுக்குப் பதிலளிக்கமாட்டேன். தாக்கப்பட்டால் தாக்குபவனை எப்போதும் நான் மன்னிக்கவே செய்கிறேன். மன்னிக்கும் தன்மை, வாய்மை, கபடமின்மை {மனநேர்மை}, கருணை ஆகியனவே (அறங்கள் அனைத்திலும்) முதன்மையானவை என அறவோர் கருதுகின்றனர்.(12) வாய்மையே வேதங்களின் புதிராகும் {இரகசியமாகும்}. தற்கட்டுப்பாடே வாய்மையின் புதிராகும். விடுதலையே {முக்தியே} தற்கட்டுப்பாட்டின் புதிராகும். சாத்திரங்கள் அனைத்தின் போதனையும் இதுவேயாகும்[2].(13) எந்த மனிதன், கிளர்ந்தெழும் பேச்சுத் தூண்டலையும் {வாக்கின் வேகத்தையும்}, மனத்தில் தோன்றும் கோபத்தூண்டலையும் {கோபத்தின் வேகத்தையும்}, (தகாத பொருள்களில் கொள்ளும்) தாகத் தூண்டலையும், வயிறு மற்றும் இன்ப உறுப்பின் தூண்டல்களையும் {ஆசைகளின் வேகத்தையும்} அடக்குகிறானோ, அவனையே ஒரு பிராமணனாகவும், முனியாகவும் நான் கருதுகிறேன்.(14) எவன் கோப வசப்படாமல் இருக்கிறானோ, அவன் கோபப்படுபவனைவிட மேன்மையானவன். எவன் துறவைப் பயில்கிறானோ, அவன் துறவில்லாதவனை விட மேன்மையானவன், எவன் மனிதத்தன்மைகளைக் கொண்டிருக்கிறானோ, அவன் அவை இல்லாதவனைவிட மேன்மையானவன். எவன் ஞானத்தைக் கொண்டிருக்கிறானோ, அவன் அஃது இல்லாதவனைவிட மேன்மையானவன்[3].(15)

கடுஞ்சொற்களால் ஒருவன் தாக்கப்படும்போதும், பதிலுக்கு அவனும் தாக்கக்கூடாது. உண்மையில் அத்தகைய சூழ்நிலையில் கோபத்தைத் துறக்கும் ஒருவன், அவ்வாறு தன்னைத் தாக்குபவனை எரித்து, அவனுடைய தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் அபகரித்துக் கொள்கிறான்.(16) எவன் கடுமொழியால் தாக்கப்படும்போது, பதிலுக்குக் கடுமொழி பேசவில்லையோ, எவன் புகழப்படும்போது, அந்தப் புகழுரைகளை ஏற்றுப் பேசுவதில்லையோ, எவன் தாக்கப்படும்போதும், பதிலுக்குத் தாக்காமலும், தாக்குபவனுக்குத் தீங்கை விரும்பாமலும் மனோவுறுதியுடன் இருக்கிறானோ, அந்த மனிதன், தேவர்களாலும் விரும்பப்படும் தோழமையையே எப்போதும் அடைகிறான்.(17) அவமதிக்கப்பட்டுத் தாக்கப்பட்டுப் பழித்துக் கூறப்படும் ஒருவனால், {இந்தப் பாவங்களைச் செய்த} பாவியானவன், ஓர் அறவோனைப் போலக் கருதப்பட்டு மன்னிக்கப்பட வேண்டும். இவ்வழியில் செயல்படுவதன் மூலம் ஒருவன் வெற்றியை அடைகிறான்.(18) என் நோக்கங்கள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டாலும், அறவோரிடம் எப்போதும் நான் மதிப்புடன் காத்திருக்கிறேன் {அவர்களுக்குப் பணீவிடை செய்கிறேன்}. எனக்கு எந்தத் தாகமும் {ஆசையும்} இல்லை. என் கோபம் அடக்கப்பட்டிருக்கிறது. பேராசையில் மயங்கி நான் ஒருபோதும் அறத்தின் பாதையில் இருந்து விழ மாட்டேன். செல்வத்திற்காக (செல்வத்திற்கான வேண்டுதல்களுடன்) நான் எவரையும் அணுகுவதில்லை[4].(19) சபிக்கப்பட்டால் பதிலுக்கு நான் சபிப்பதில்லை. தற்கட்டுப்பாடே அழிவின்மையின் {முக்தியின்} வாயில் என்பதை நான் அறிவேன். நான் ஒரு பெரும்புதிரை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். மனிதபிறவியை விட மேன்மையான நிலை ஏதும் இல்லை[5].(20)

[4] கும்பகோணம் பதிப்பில், “எனக்கு ஆசையும், கோபமும் மேலோங்குகிறதில்லை. நான் எதையும் அடைய விரும்பித் தர்மத்தை விட்டு விலகுகிறதில்லை. ஒன்றையும் தீய வழியில் அடைகிறதில்லை” என்றிருக்கிறது.

[5] கும்பகோணம் பதிப்பில், “என்னை ஒருவன் சபித்தாலும் நான் திரும்ப அவனைச் சபிக்கிறதில்லை. இவ்வுலகத்தில் அடக்கத்தை மோக்ஷத்திற்கு வாயிலாக நினைக்கிறேன். அப்படிப்பட்ட இந்த அடக்கத்தை ரஹஸ்யமான பிரம்மமாகச் சொல்லுகிறேன். மானிட ஜன்மத்தைக் காட்டிலும் மிகவும் மேலானது ஒன்றுமில்லையன்றோ?” என்றிருக்கிறது.

இருளார்ந்த மேகங்களில் இருந்து {விடுபடும்} சந்திரனைப் போலப் பாவத்தில் இருந்து விடுபடும் ஞானியானவன், பிரகாசத்துடன் ஒளிர்ந்து, தன் காலத்திற்காகப் பொறுமையுடன் காத்திருப்பதன் மூலம் வெற்றியை அடைகிறான்.(21) எவன் அண்டத்தைத் தாங்கும் முதன்மையான தூணாவதன் மூலம் அனைவருடைய துதியின் பொருளாகிறானோ {புகழப்படுகிறானோ}, எவனிடம் அனைவராலும் ஏற்புடைய வார்த்தைகள் மட்டுமே பேசப்படுகிறதோ, அந்தக் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட மனிதன் தேவர்களின் தோழமையை அடைகிறான்.(22) தூற்றுபவர்கள் {அவதூறு பேசுபவர்கள்}, ஒரு மனிதனின் தகுதியின்மைகளைக் குறித்துப் பேசத் தயாராக இருப்பதைப் போல அவனுடைய தகுதிகளைப் பேச ஒருபோதும் முன்வருவதில்லை.(23) எந்த மனிதன், தன் பேச்சையும், மனத்தையும் முறையாகக் கட்டுப்படுத்தி, பரமனிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, அவனே வேதங்கள், தவங்கள் மற்றும் துறவின் கனிகளை அடைவதில் வெல்கிறான்.(24) ஞானியானவன், (பதிலுக்கு) இகழ்வதன் மூலமும், அவமதிப்பதன் மூலமும் தகுதியற்றவர்களை {புண்ணியமற்றவர்களை} ஒருபோதும் தூற்றக்கூடாது. அவன் {பிறரால் மிகைப்படப் புகழப்பட்டுப் பதிலுக்கு) பிறரை மிகைப்படப் புகழக்கூடாது. {மிகைப்படப் புகழ்வதன் மூலம்} தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ளக்கூடாது.(25)

ஞானம் கொண்டவனும், கல்விமானுமான ஒரு மனிதன் அவதூறுகளை அமுதமாகக் கருதுகிறான். தூற்றப்பட்டாலும் அவன் கவலையில்லாமல் உறங்குகிறான். மறுபுறம், தூற்றியவனோ அழிவை அடைகிறான்.(26) கோபத்துடன் ஒருவன் செய்யும் வேள்விகள், கோபத்துடன் ஒருவன் தரும் கொடைகள், கோபத்துடன் ஒருவன் செய்யும் தவங்கள், கோபத்துடன் ஒருவன் அளிக்கும் காணிக்கைகள் மற்றும் ஆகுதிகள் ஆகியவற்றின் தகுதிகளை {புண்ணியங்களை} யமன் அபகரித்துக் கொள்கிறான். கோபமடையும் மனிதனின் உழைப்பனைத்தும் முற்றிலும் கனியற்றவையாகின்றன.(27) தேவர்களில் முதன்மையானவர்களே, இன்ப உறுப்பு, வயிறு, கரங்கள் இரண்டு, வாக்கு ஆகிய நான்கு வாயில்களையும் நன்கு கட்டுப்படுத்தும் மனிதனே அறமறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(28) வாய்மை, தற்கட்டுப்பாடு, கபடமின்மை, கருணை, பொறுமை, துறவு ஆகியவற்றை எப்போதும் பயிலும் மனிதன் வேத கல்வியில் அர்ப்பணிப்புமிக்கவனாகி, பிறரின் உடைமைகளில் பேராசை கொள்ளாமல், ஒரே நோக்கத்துடன் நன்மையானதைத் தேடி, சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான்.(29) தாயின் மடியில் உள்ள நான்கு காம்புகளை உறிஞ்சிக் குடிக்கும் கன்றைப் போலவே ஒருவன் இந்த அறப்பயிற்சிகள் அனைத்திலும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். வாய்மையை விடப் புனிதமான வேறு எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.(30)

மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில் திரிந்த பிறகு, பெருங்கடலைக் கடக்கும் தோணி மட்டுமே ஒரே வழிமுறையாக இருப்பதைப் போல, சொர்க்கத்தை அடைய வாய்மை மட்டுமே ஒரே வழி என்று நான் அறிவிக்கிறேன்.(31) ஒரு மனிதன் எவருடன் வசிக்கிறானோ அவரைப் போலவே, எவரை மதிக்கிறானோ அவரைப் போலவே, எவ்வாறு ஆக வேண்டும் என்று விரும்புகிறானோ அவ்வாறே ஆகிறான்.(32) ஒரு மனிதன் எந்த நல்லோனிடமோ அல்லோனிடமோ மதிப்புடன் காத்திருக்கிறானோ, தவத்தகுதியைக் கொண்ட எந்தத் தவசியிடமோ, கள்வனிடமோ மதிப்புடன் காத்திருக்கிறானோ, அந்த மனிதனின் பாதையிலேயே நடக்கும் அவன், மூழ்கிய சாயத்தின் வண்ணத்தை ஏற்கும் துணியைப் போல அவனது {அந்த மனிதனின்} வண்ணத்தை {குணத்தைப்} பற்றிக் கொள்கிறான்.(33) ஞானமும், நல்லியல்பும் கொண்டோரிடம் தேவர்கள் எப்போதும் உரையாடுகிறார்கள். எனவே, அவர்கள் மனிதர்கள் கொள்ளும் இன்பங்களைக் காண ஒருபோதும் விரும்புவதில்லை. (மனிதர்கள் பேணி வளர்க்கும்) இன்ப நுகர் பொருட்கள் அனைத்தும் ஏற்றத்தாழ்வுகளையும், {ஒன்றுக்கொன்று} சில பகைமைகளையும் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்த மனிதன், சந்திரனையும் காற்றையும் விட மேன்மையானவனாக ஆகிறான்[6].(34) ஒருவனுடைய இதயத்தில் குடியிருக்கும் புருஷன் {ஆத்மா} களங்கமடையாமல், அறப்பாதையில் நடக்கும்போது, தேவர்கள் அவனிடம் மகிழ்ச்சியடைகிறார்கள்.(35)இன்பப் புலன் {பிறப்புறுப்பு} மற்றும் வயிறு ஆகியவற்றில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், களவுக்கு அடிமையாக இருப்பவர்கள், எப்போதும் கடுமொழியில் பேசுபவர்கள் ஆகியோர் உரிய சடங்குகளுடன் தங்கள் குற்றங்களான பாவக்கழிவுகளைச் செய்து கொண்டாலும், தேவர்கள் அவர்களைத் தொலைவிலேயே கைவிடுகிறார்கள்.(36) இழிந்த ஆன்மா கொண்டவன், உணவில் கட்டுப்பாடுகள் எதையும் நோற்காதவன், பாவச் செயல்களைச் செய்பவன் ஆகியோரிடம் தேவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சி கொள்வதில்லை. மறுபுறம் அத்தேவர்கள், வாய்மை நோன்பைப் பயில்பவர்கள், நன்றிமறக்காதவர்கள், அறப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோரிடம் தொடர்பு கொள்கிறார்கள்.(37) பேச்சை விட அமைதியே சிறந்தது. அமைதியைவிட வாய்மை பேசுவது சிறந்தது. மேலும் சொல்வதாக இருந்தால், வாய்மை பேசுவதை விட அறத்தொடர்புடன் வாய்மை பேசுவது மிகச் சிறந்தது. வாய்மையும் அறமும் கொண்டிருந்தாலும் ஏற்புடையதைப் பேசுவது, அறத்தொடர்புடைய உண்மை பேச்சைவிடச் சிறந்ததாகும்” என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}.(38)

சாத்யர்கள், “இவ்வுலகம் எதனால் மறைக்கப்பட்டிருக்கிறது? எக்காரணத்தால் ஒருவன் ஒளிரத் தவறுகிறான்? எக்காரணத்தால் மக்கள் தங்கள் நண்பர்களைக் கைவிடுகின்றனர்? எக்காரணத்தால் மக்கள் சொர்க்கத்தை அடையத் தவறுகின்றனர்?” என்று கேட்டனர்.(39)

அன்னப்பறவை {பிரம்மன்}, “உலகமானது அறியாமை (எனும் இருளால்) மறைக்கப்பட்டிருக்கிறது. வன்மத்தின் விளைவால் மனிதர்கள் ஒளிரத் தவறுகின்றனர் {புகழடையத் தவறுகின்றனர்}. பேராசையால் தூண்டப்படும் மக்கள் தங்கள் நண்பர்களைக் கைவிடுகிறார்கள். பற்றின் விளைவால் மனிதர்கள் சொர்க்கத்தை அடையத் தவறுகின்றனர்” என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}.(40)

சாத்யர்கள், “பிராமணர்களில் எவன் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான்? பலருக்கு மத்தியில் வசித்தாலும் அவர்களில் அமைதியின் நோன்பை எவனால் மட்டுமே நோற்க முடியும்? அவர்களுக்கு மத்தியில் பலவீனனாக இருந்தாலும் எவன் மட்டுமே பலவானாகக் கருதப்படுகிறான்? அவர்களுக்கு மத்தியில் எவன் மட்டுமே சச்சரவில் ஈடுபடுவதில்லை?” என்று கேட்டனர்.(41)

அன்னப்பறவை, “பிராமணர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான். பிராமணர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே, பலருக்கு மத்தியில் வசித்தாலும் அமைதியின் நோன்பை நோற்பதில் வெல்கிறான். பிராமணர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே பலவீனனாக இருந்தாலும், பலவானாகக் கருதப்படுகிறான். அவர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே சச்சரவுகளைத் தவிர்ப்பதில் வெல்கிறான்” என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}[7].(42)சாத்யர்கள், “பிராமணர்களின் தெய்வீகத்தன்மை எதிலிருக்கிறது? எதில் அவர்களது தூய்மை இருக்கிறது? எதில் அவர்களது தூய்மையின்மை இருக்கிறது? எதில் அவர்களின் மனிதத்தன்மை இருக்கிறது?” என்று கேட்டனர்.(43)

அன்னப்பறவை, “வேத கல்வியிலேயே பிராமணர்களின் தெய்வீகத்தன்மை இருக்கிறது. அவர்களது நோன்புகளில் அவர்களின் தூய்மை இருக்கிறது. அவதூற்றில் {பரநிந்தனையில்} அவர்களது தூய்மையின்மை இருக்கிறது. மரணத்தில் அவர்களது மனிதத்தன்மை இருக்கிறது” என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}”[7].(44)

பீஷ்மர் தொடர்ந்தார், “சாத்யர்கள் (மற்றும் அன்னப்பறவைக்கு) இடையில் நடைபெற்ற சிறந்த உரையாடலை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். உடலே (பருவுடன் மற்றும் நுண்ணுடல் ஆகிய இரண்டும்) செயல்கள் மற்றும் இருப்பு, அல்லது ஜீவன் ஆகியவற்றின் பிறப்பிடமாக இருக்கிறது என்பது உண்மை”.(45)

யோக பலம்! – சாந்திபர்வம் பகுதி – 301-யோகத்திற்கும், சாங்கியத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு; யோக முறை; யோகிக்கான உணவுமுறை; யோகிகளின் சிறப்பு ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, சாங்கிய மற்றும் யோக அமைப்புகளின் தத்துவங்களுக்கிடையில் உள்ள வேறுபாடு என்ன என்பது குறித்து எனக்கு விளக்குவதே உமக்குத் தகும். ஓ! குருகுலத்தில் முதன்மையானவரே, ஓ! கடமைகள் அனைத்தையும் அறிந்தவரே, நீர் அனைத்தையும் அறிதிருக்கிறீர்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “சாங்கியத்தைப் பின்பற்றுபவர்கள் சாங்கிய அமைப்பைப் புகழ்கின்றனர், யோகிகளாக இருக்கும் மறுபிறப்பாளர்கள் யோக அமைப்பைப் புகழ்கிறார்கள். தங்கள் தங்களுக்குரிய அமைப்புகளின் மேன்மையை நிறுவுவதற்காக ஒவ்வொருவரும் தன்னுடைய அமைப்பே சிறந்ததென்று சொல்கிறார்கள்.(2) ஓ! எதிரிகளை நொறுக்குபவனே, யோகத்தில் அர்ப்பணிப்புடைய ஞானிகள், கடவுளின் இருப்பை நம்பாதவர்களால் விடுதலையை {முக்தியை} அடைய முடியாது என்று காட்டுவதற்காக முறையான, மிக நல்ல காரணங்களைச் சொல்கிறார்கள்.(3) மேலும் சாங்கியக் கோட்பாடுகளை நம்பும் மறுபிறப்பாளர்கள், ஒருவன் அனைத்தின் முடிவுகளின் உண்மையான ஞானத்தை அடைவதன் மூலம், உலகப் பொருட்கள் அனைத்தில் இருந்தும் தொடர்பறுத்துக் கொண்டு,(4) இந்த உடலைவிட்டுச் சென்ற பிறகு, அவன் விடுதலையடைய வேண்டுமேயன்றி வேறில்லை என்று காட்டுவதற்காக நல்ல காரணங்களை முன்வைக்கிறார்கள். பெரும் ஞானம் கொண்ட மனிதர்கள் விடுதலைக்கான {முக்திக்கான} சாங்கிய தத்துவத்தை இவ்வாறே விளக்கியிருக்கிறார்கள்.(5)

இரு தரப்பிலும் காரணங்கள் இவ்வாறு சமமாக இருக்கும்போது, ஒரு தரப்பில் இருப்பவன் மாற்றுத் தரப்பை தனதாக ஏற்றுக் கொள்ளத் துணிந்தால் அவனை {அத்தரப்பு} ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மையில், அத்தரப்பில் சொல்லப்படும் வார்த்தைகள் நன்மையானவை என்று கருதப்பட வேண்டும். இருதரப்பிலும் நல்ல மனிதர்கள் காணப்படுகிறார்கள். உன்னைப் போன்றவர்கள் இவற்றில் எக்கருத்தையும் பின்பற்றலாம்.(6) யோகத்தின் சாட்சிகள், நேரடியாகப் புலன்களின் உற்றறியும் திறனால் சொல்லப்படுகின்றன; சாங்கியத்தினுடையவை சாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. ஓ! யுதிஷ்டிரா, இந்த இரு தத்துவ அமைப்புகளும் என்னால் அங்கீகரிக்கப்படுகின்றன.(7) ஓ! மன்னா, இந்த அறிவியல் அமைப்புகள் இரண்டிலும் எனக்கு உடன்பாடு உண்டு, மேலும் நல்லோர் மற்றும் ஞானிகளின் உடன்பாடும் உண்டு. ஓ! மன்னா, விதிகப்பட்ட அறிவுரைகளின்படி பயிலப்பட்டால் இவை இரண்டும் ஒரு மனிதனை உயர்ந்த கதி அடைய வைக்கின்றன.(8) ஓ! பாவமற்றவனே, இவ்வமைப்புகள் இரண்டிலும் தூய்மையும், அனைத்து உயிரினங்களிடம் கொள்ளும் கருணையும் சமமாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும் நோற்க வேண்டிய நோன்புகளும் இவ்விரண்டிலும் சமமாக விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான பாதைகளைச் சுட்டிக்காட்டும் சாத்திரங்கள் மட்டுமே வேறுபடுகின்றன” என்றார் {பீஷ்மர்}.(9)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இரண்டு அமைப்புகளிலும் பரிந்துரைக்கப்படும் நோன்புகள், தூய்மை, கருணை மற்றும் கனிகள் ஆகியன ஒன்றேயெனில், அவற்றின் சாத்திரங்கள் (அவை பரிந்துரைக்கும் பாதைகளைப் பொறுத்தவரையில்) என்ன காரணத்தால் ஒன்றாக இல்லை?” என்று கேட்டான்.(10)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “யோகத்தின் துணை மூலம், பற்று {ராகம்}, கவனமின்மை {மோகம்}, பாசம் {ஸ்நேகம்}, காமம், கோபம் {க்ரோதம்} ஆகிய ஐந்து களங்கங்களை {தோஷங்களைக்} கைவிடுவதால் ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(11) பெரிய மீன்கள், வலையை அறுத்துக் கொண்டு, (இன்பத்தில் உலாவ) தங்கள் சொந்த பூதத்திற்குள் {நீருக்குள்} செல்வதைப் போலவே யோகிகளும் (காமம், கோபம் முதலியவற்றை அறுத்துக் கொண்டு) அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்து, விடுதலையெனும் {முக்தியெனும்} பேரின்பத்தை அடைகிறார்கள்.(12) வலிமைமிக்க விலங்குகள், தங்களைப் பிடிக்க வேடர்களால் விரிக்கப்படும் வலைகளை அறுத்துக் கொண்டு, விடுதலையெனும் இன்பநிலைக்குள் தப்பிச் செல்வதைப் போலவே, யோகிகளும் கட்டுகள் {பந்தங்கள்} அனைத்திலிருந்தும் விடுபட்டு, விடுதலைக்கு வழிவகுக்கும் பாவமற்ற பாதையை அடைகிறார்கள்.(13) ஓ! மன்னா, உண்மையில் பேராசையில் பிறக்கும் கட்டுகளை அறுப்பவர்களும், பலத்துடன் கூடியவர்களுமான யோகிகள், விடுதலைக்கான {முக்திக்கான} பாவமற்ற மங்கலமான, உயர்ந்த பாதையை அடைகிறார்கள்.(14) ஓ! ஏகாதிபதி, வலைகளில் அகப்படும் பலவீனமான விலங்குகள் நிச்சயம் அழிவடையும். யோக பலமற்ற மனிதர்களின் வழக்கும் அவ்வாறே ஆகிறது.(15)

ஓ! குந்தியின் மகனே, ஓ! ஏகாதிபதி, வலையில் விழுந்து அதனில் சிக்கிக் கொள்ளும் பலவீனமான மீன்களைப் போலவே, யோக பலமற்றவர்கள் (உலகக் கட்டுகளின் மத்தியில்) அழிவை அடைகிறார்கள்.(16) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, வேடர்கள் விரிக்கும் நுட்பமான வலைகளில் பறவைகள் சிக்கும்போது, (பலவீனமாக இருந்தால்) அழிவைச் சந்தித்து, பலத்துடனிருந்தால் தப்பிச் செல்வதைப் போலவே,(17) யோகிகளுக்கும் நேர்கிறது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, செயல்பாட்டு பந்தங்களால் கட்டப்பட்ட பலவீனமானவர்கள் அழிவை அடைகிறார்கள், அதே வேளையில் பலமுடையவர்க்ள அவற்றை உடைக்கின்றனர்.(18) ஓ! மன்னா, வலுவில்லாத சிறு நெருப்பானது, தன் மீது பெரும் மரங்கள் போடப்பட்டால் அணைந்து போகிறது. ஓ! மன்னா, அதே போலவே பலமில்லாத யோகியானவன் (உலகத்துடனும், அதன் பற்றுகளிலும் தொடர்பு கொள்ளும்போது) அழிவை அடைகிறான்.(19) எனினும், ஓ! ஏகாதிபதி, அதே நெருப்பு வலுவடையும்போது (அணையாமல்) காற்றின் உதவியோடு மொத்த பூமியையும் எரிக்கக்கூடும்.(20) அதே போலவே, பலத்தில் வளர்ந்து, சக்தியுடன் எரிந்து வலிமையுடன் இருக்கும் யோகியானவன், அண்ட அழிவில் எழும் சூரியனைப் போல மொத்த அண்டத்தையே எரிக்கவல்லவனாகிறான்.(21)

ஓ! மன்னா, ஒரு பலவீனமான மனிதன் ஓடையால் அடித்துச் செல்லப்படுவதைப் போலவே, ஒரு பலவீனமான யோகி ஆதரவற்ற நிலையில் புலன்நுகர்பொருட்களால் அடித்துச் செல்லப்படுகிறான்.(22) ஒரு யானை பலமிக்கப் பெரிய ஓடையையும் தாக்குப்பிடிக்கிறது. அதே போலவே, யோகபலமடைந்த ஒரு யோகியும் புலன் நுகர் பொருட்கள் அனைத்தையும் தாக்குப்பிடிக்கிறான்.(23) அனைத்துப் பொருட்களின் சார்பற்றவர்களும், யோக பலமும், தலைமைப்பண்பும் கொண்டவர்களான யோகிகளானவர்கள், படைப்பின் தலைவர்கள், முனிவர்கள், தேவர்கள், அண்டத்தின் பெரும்பூதங்கள் ஆகியவற்றுக்குள் (ஆகியவர்களின் / ஆகியவற்றின் இதயங்களுக்குள்) நுழைகின்றனர்.(24) ஓ! மன்னா, யமனாலோ, அந்தகனாலோ, பயங்கர ஆற்றலைக் கொண்ட மிருத்யுவாலோ அளவில்லா சக்தி கொண்ட ஒரு யோகியைக் கோபத்தில் முறியடிக்க முடியாது.(25)

யோகபலமடையும் யோகியால், ஆயிரக்கணக்கான உடல்களை உண்டாக்கி, அவற்றுடன் பூமியில் உலவ முடியும்.(26) அவர்களில் சிலர் புலன் நுகர் பொருட்களை அனுபவித்துப் பிறகு மீண்டும் கடும் தவப்பயிற்சிகளில் தங்கள் நிறுவிக் கொண்டு (கதிர்களை விலக்கிக் கொள்ளும்) சூரியனைப் போல அத்தகைய தவங்களில் இருந்து மீண்டும் விலகுகிறார்கள்.(27) பலம் கொண்டவனும், கட்டுகளால் கட்டப்பட முடியாதவனுமான யோகி, விடுதலையை {முக்தியை} அடைவதில் நிச்சயம் வெல்கிறான்.(28) ஓ! ஏகாதிபதி, யோக சக்திகள் குறித்து நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். யோகத்தின் நுட்பமான சக்திகளையும், அவற்றின் குறியீடுகளையும் நான் மீண்டும் சொல்கிறேன்.(29) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தாரணை மற்றும் {யோகத்தால் ஏற்படும்} ஆத்மாவின் சமாதி நிலை ஆகியவற்றின் நுட்பமான குறியீடுகளைக் கேட்பாயாக[1].(30)விழிப்புடன், கவனத்துடனும் கூடிய ஒரு வில்லாளி தன் இலக்கை அடிப்பதில் வெல்வதைப் போலவே, ஆன்மாவில் ஈர்க்கப்பட்ட யோகியும் விடுதலை அடைகிறான் என்பதில் ஐயமில்லை.(31) (தலையில் வைக்கப்பட்ட) நீர் நிறைந்த பாத்திரத்தில் மனத்தை நிலைக்கச் செய்து படிகளில் விழிப்புடன் நடக்கும் ஒரு மனிதனைப் போலவே,(32) தன் ஆன்மாவில் நிலைத்து ஈர்க்கப்பட்ட யோகியும், அஃதை {ஆன்மாவைத்} தூய்மைப்படுத்தி, சூரியனைப் போலப் பிரகாசிக்கச் செய்கிறான்.(33) ஓ குந்தியின் மகனே, கடலின் பரப்பில் தூக்கிவீசப்படும் படகானது விழிப்புடன் கூடிய படகோட்டியால் மறுகரைக்கு விரைவாக எடுத்துச் செல்லப்படுவதைப் போலவே,(34) ஓ! ஏகாதிபதி, ஞானம் கொண்ட மனிதனும், தன் ஆன்மாவை சமாதியில் நிலைக்கச் செய்து, தன் உடலைக் கைவிட்ட பிறகு அடைதற்கரிய விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(35)

ஓ! மன்னா, விழிப்புடன் கூடிய தேரோட்டியானவன், (தேரில்) நல்ல குதிரைகளைப் பூட்டி, தேர்வீரன் விரும்பும் இடத்திற்கு அவனை இட்டுச் செல்வதைப் போலே,(36) ஓ! ஏகாதிபதி, தாரணையில் விழிப்புடன் இருக்கும் யோகியும், வில்லில் இருந்து ஏவப்பட்டு, இலக்காக வைக்கப்பட்ட இடத்தை அடையும் ஒரு கணையைப் போல உயர்ந்த இடத்தை (விடுதலையை {முக்தியை}) விரைவில் அடைகிறான்.(37) ஆன்மாவில் தன்னைச் செலுத்தி அங்கேயே அசையாமல் இருக்கும் யோகி, தன் பாவங்களை அழித்து, அறவோரால் அடையப்படும் அழிவற்ற இடத்தை அடைகிறான்.(38) ஓ! மன்னா, உயர்ந்த நோன்புகளை {மஹாவிரதத்தை} விழிப்புடன் நோற்கும் யோகியானவன், தன் ஜீவாத்மாவை நாபி {தொப்புள்}, மிடறு {தொண்டை}, தலை, இதயம், மார்பு, விலாப்புறங்கள், கண், காது, மூக்கு ஆகியவற்றில் இருக்கும் நுண் ஆத்மாவில் முறையாகக் கலந்து, மலையளவுக்கு இருக்கும் தன் நற்செயல்கள் மற்றும் தீச்செயல்கள் {புண்ணியப் பாவங்கள்} அனைத்தையும் எரித்து, சிறந்த யோகத்தைப் பயின்று விடுதலையை {முக்தியை} அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}, (39-41)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பாரதரே, எந்த வகை உணவுகள் உண்டு, எந்தப் பொருட்களை வென்றால் ஒரு யோகியால் யோகபலத்தை அடைய முடியும் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(42)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! பாரதா, பிண்ணாக்கையும், நொய் அரிசியையும் உண்டு, எண்ணெயையும் {தைலங்களையும்}, வெண்ணையையும் தவிர்க்கும் யோகியானவன், யோக பலத்தை அடைவான்.(43) நீருடன் கலக்காத வாற்கோதுமை மாவை {யவபிஷ்டத்தை} நெடுங்காலம் உண்பதன் மூலமும், ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே எனத் தன் உணவைச் சுருக்கிக் கொள்வதன் மூலமும், தூய ஆன்மா கொண்ட யோகியானவன் யோக பலத்தை அடைகிறான்.(44) முதலில் நாளின் ஒரே ஒரு வேளையும், பிறகு ஒரு பிறைநாளுக்கு {ஒரு பக்ஷகாலத்திற்கு} ஒரு முறையும், பிறகு மூன்று மாதங்களில் ஒரு முறையும், பிறகு ஒரு வருடத்திற்கு ஒரு முறையும் பாலுடன் கலந்த நீரை மட்டுமே பருகும் யோகியானவன் யோக பலத்தை அடைகிறான்.(45) ஓ! மன்னா, இறைச்சியை முற்றிலும் தவிர்ப்பதன் மூலம் தூயஆன்மா கொண்ட யோகியானவன் பலத்தை அடைகிறான்.(46) காமம், கோபம், வெப்பம், குளிர், மழை, அச்சம், துயரம், மூச்சு, மனிதர்களுக்கு ஏற்புடைய அனைத்து ஒலிகள், புலன்நுகர் பொருட்கள்,(47) ஓ! மன்னா, வெல்வதற்கு அரிதானதும், கலவி இன்பத்தைத் தவிர்ப்பதால் பிறப்பதுமான மனஉலைவு, பயங்கரத் தாகம், தீண்டலாலும், உறக்கத்தாலும் கிட்டும் இன்பங்கள், கிட்டத்தட்ட வெல்லப்பட முடியாத காலதாமதம் ஆகியவற்றில் இருந்து, ஓ! மன்னர்களில் சிறந்தவனே,(48) பற்றில்லாதவர்களும், பெரும் ஞானம் கொண்டவர்களுமான யோகிகள், நுட்பமான ஆன்மாவைத் தங்கள் புத்திகளின் துணையாலும், கல்வி மற்றும் தியானம் எனும் செல்வங்களின் துணையாலும் விலகியிருக்கச் செய்கிறார்கள்.(49)

கல்விமான்களான பிராமணர்களின் இந்த உயர்ந்த (யோக) பாதையானது நடப்பதற்கு மிகக் கடினமானதாகும். எவராலும் இந்தப் பாதையில் எளிதாக நடக்க முடியாது.(50) இப்பாதையானது, எண்ணற்ற பாம்புகளும், தவழும் மண்புழுக்களும் நிறைந்ததும், எங்கும் (மறைவான) குழிகளைக் கொண்டதும், ஒருவனுடைய தாகத்தைத் தணிக்கும் நீரில்லாததும், முட்கள் நிறைந்ததும், அதனால் நடக்க முடியாத வகையில் இருக்கும் ஒரு பயங்கரக் காட்டைப் போன்றதாகும்.(51) உண்மையில் இந்த யோகப் பாதையானது, உணவுகள் கிடைக்காததும், காட்டுத்தீயில் எரிக்கப்பட்ட மரங்களைக் கொண்ட ஒரு பாலைவனத்தின் ஊடாகச் செல்வதும், கள்வர்க்கூட்டங்களால் மொய்க்கப்பட்டுப் பாதுகாப்பற்றதாக இருப்பதுமான ஒரு சாலையைப் போன்றதாகும். (இலக்கை அடைவதற்காக) வெகு சில இளைஞர்களால் மட்டுமே இதைப் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முடியும்.(52) இந்த இயல்பைக் கொண்ட பாதையைப் போலவே, சில பிராமணர்களால் {மட்டுமே} எளிதாகவும், சுகமாகவும் யோகபாதையில் நடந்து செல்ல முடியும். இப்பாதையை அடைந்து, நடப்பதை நிறுத்தும் (சற்று முன்னேறியதும் புறமுதுகிடும்) மனிதன், பல களங்கங்களைக் கொண்ட குற்றவாளியாகக் கருதப்படுகிறான்.(53) ஓ! பூமியின் தலைவா, தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால், கத்தியைப் போன்ற கூர்முனை கொண்ட தியான யோகத்தில் எளிதாக நிற்க முடியும். எனினும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டாரால் அவ்வாறு நிற்க முடியாது.(54) தியானயோகம் கலையும்போது, அல்லது அதற்குத் தடையேற்படும்போது, பயணிகளை மறுகரைக்குக் கொண்டு செல்ல இயலாத தலைவனில்லாத தோணியைப் போல, அஃது அந்த யோகியை மங்கலமான கதிக்கு வழிநடத்துவதில்லை.(55)

ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, உரிய சடங்குகளுடன் தியான யோகத்தைப் பயிலும் மனிதன், பிறப்பு மற்றும் இறப்பு, மகிழ்ச்சி மற்றும் துன்பம் ஆகியவற்றைக் கைவிடுவதில் வெல்கிறான்.(56) நான் சொல்லும் இவை அனைத்தும் யோகம் குறித்த பல்வேறு சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. யோகத்தின் உயர்ந்த கனிகள் மறுபிறப்பாள வகையினரிடம் காணப்படுகின்றன.(57) அந்த உயர்ந்த கனியானது பிரம்மத்தைப் போன்றதாகும். மகிமை கொண்ட உயர் ஆன்ம யோகியால், தேவர்கள் அனைவரின் தலைவனான பிரம்மன், வரமளிக்கும் விஷ்ணு, பவன், தர்மன், ஆறுமுகம் கொண்ட கார்த்திகேயன், பிரம்மனின் (மானஸ) மகன்கள், அதிகத் துன்பத்தை உண்டாக்கும் இருள் குணம் {தமோ குணம்}, ஆசை குணம் {ரஜஸ் குணம்}, தூய்மையான சத்வ குணம், உயர்ந்ததான பிரகிருதி, வருணனைக் கணவனாகக் கொண்ட சித்தி தேவி, அனைத்து வகைச் சக்திகள், அனைத்தையும் தாங்கும் பொறுமை, சுற்றிலும் மின்னும் நட்சத்திரங்களுடன் ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் பிரகாசமான தலைவன் {சந்திரன்}, விஸ்வர்கள், (பெரும்) பாம்புகள், பித்ருக்கள், மலைகள், குன்றுகள், பயங்கரமான பெரிய கடல்கள், ஆறுகள், மழை நிறைந்த மேகங்கள், பாம்புகள், மரங்கள், யக்ஷர்கள், முக்கிய மற்றும் துணைத் திசைகள், கந்தர்வர்கள், ஆடவர்கள், பெண்கள் ஆகியோருக்குள் தன் விருப்பப்படியே நுழையவும் வெளியேறவும் முடியும்.(58-61) ஓ மன்னா, வலிமையான சக்தி கொண்ட பரம்பொருளுடன் தொடர்புடைய இந்த உரையாடல் மங்கலமானதாகக் கருதப்பட வேண்டும். யோகியானவன், நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டிருக்கிறான். (பரமனில் ஆழ்ந்த தியானத்தின் மூலம்) அனைத்துப் பொருட்களையும் கடந்து நிற்கும் உயர் ஆன்ம யோகியால் அனைத்துப் பொருட்களையும் படைக்கவும் முடியும்” என்றார் {பீஷ்மர்}.(62)

சாந்தி பர்வம் – பாகம் 2 முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்-ஸ்ரீ மோக்ஷ தர்மம்-பகுதி 1–

October 17, 2025

பிங்களை என்ற வேசி! – சாந்திபர்வம் பகுதி – 174-ஆன்மவிடுதலையை நாடுவதே கடமைகளில் முதன்மையானது; இன்பமும் துன்பமும் வாழ்க்கையில் மாறிமாறிச் சக்கரமாகச் சுழன்று வருவன என்று யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர், பிள்ளையை இழந்து வாடிக் கொண்டிருந்த மன்னன் சேனஜித்திடம் பேசிய ஒரு பிராமணரின் உரையை விளக்கமாகச் சொன்னது; துன்பத்திற்குக் காரணமான அறியாமை; விதியின் வலிமை ஆகியவற்றைச் சொல்லி மூடனும், அறிஞனும் துன்பமடைவதில்லை, மாறாக இந்த இரு நிலைகளுக்கு இடைப்பட்டவர்களே துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்று மன்னன் சேனஜித்திடம் சொன்ன அந்தப் பிராமணர், பிங்களை என்ற வேசியின் கதையையும், அவள் பாடிய ஸ்லோகத்தையும் சொன்னது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மன்னர்களின் கடமைகள் தொடர்பான மங்கலக் கடமைகள் குறித்து நீர் உரையாடினீர். இப்போது, ஓ! மன்னா, (நான்கு) வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} வாழ்வோருக்குரிய முதன்மையான கடமைகளை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறம் பல வாயில்களைக் கொண்டதாகும். அறம் (பரிந்துரைக்கும் கடமைகளை) நோற்பது ஒருபோதும் பயனற்றதாகாது. ஒவ்வொரு வாழ்வுமுறைக்கும் {ஆசிரமத்திற்கும்} தனித்தனியே கடமைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. (மறுமையில் கிடைக்கக்கூடியவையாக இருக்கும் அக்கடமைகளின் கனிகள் புலப்படாதனவாக இருக்கின்றன). எனினும் ஆன்மாவை நோக்கிச் செய்யப்படும் தவத்தின் கனிகள் இம்மையிலேயே {இவ்வுலகிலேயே} அடையப்படுகின்றன[1].(2) எந்தப் பொருளில் ஒருவன் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, அதைத் தவிர வேறு எதுவும் பேரருள் நிறைந்த உயர்ந்த உடைமையாக அவனுக்குத் தோன்றாது.(3) ஒருவன் முறையாகச் சிந்திக்கும்போது, (அத்தகைய சிந்தனையால் அவனது இதயம் தூய்மையடையும்போது), இவ்வுலகின் பொருட்கள் அனைத்தையும் அவன் வெறும் துரும்பைப் போலப் பயனற்றவையாக அறிந்து கொள்வான். அப்போது அவன் அந்தப் பொருட்கள் மீது கொண்ட பற்றிலிருந்து விடுபடுவான் என்பதில் ஐயமில்லை.(4) ஓ! யுதிஷ்டிரா, குறைகள் நிறைந்த இவ்வுலகம் இவ்வாறு இருக்கும்போது, நுண்ணறிவைக் கொண்ட ஒவ்வொரு மனிதனும், தன் ஆன்ம விடுதலையை {முக்தியை} அடைவதற்காக முயற்சிக்க வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(5)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஒருவன் செல்வத்தை இழக்கும்போது, அல்லது ஒருவனுடைய மனைவியோ, மகனோ, தந்தையோ இறக்கும்போது, தன் துயரத்தை எந்த ஆன்ம நிலை கொண்டு கொல்ல வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்றான்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் செல்வத்தை இழக்கும்போது, அல்லது அவனுடைய மனைவியோ, மகனோ, தந்தையோ இறக்கும்போது, அவன், “ஐயோ, இது பெருந்துன்பம்” என்று நிச்சயம் சொல்வான். ஆனால் அவன், சிந்தனையுடன் துணையுடன் அந்தக் கவலையைக் கொல்ல வேண்டும்.(7) இது தொடர்பாகச் {மன்னன்} சேனஜித்தின் சபைக்கு வந்த அவனுடைய மறுபிறப்பாள நண்பர், மன்னனிடம் பேசிய பேச்சைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(8) அந்த ஏகாதிபதி {சேனஜித்}, தன் மகனுடைய மரணத்தின் நிமித்தமாகத் துயரில் கலங்கி, கவலையில் எரிந்துகொண்டிருப்பதைக் கண்ட அந்தப் பிராமணர், உற்சாகமிழந்த இதயத்துடன் இருந்த அந்த ஆட்சியாளனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்:(9) “நீ ஏன் மயங்குகிறாய்? எந்த நுண்ணறிவும் இல்லாமல் இருக்கிறாய். நீயே துன்பத்திற்குப் பொருளாக இருக்கும்போது (பிறருக்காக) ஏன் வருந்துகிறாய்? சிலர் உனக்காகச் சில நாட்கள் வருந்துவார்கள், பிறகு அவர்களுக்கான சமயத்தில் அவர்களுக்காகப் பிறர் வருந்துவார்கள்.(10) ஓ! மன்னா, நானும், நீயும், உனக்காகக் காத்திருப்போரும் {உன்னிடம் பணிசெய்வோரும்} என அனைவரும் நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல்லப்போகிறோம்” என்றார்.(11)

சேனஜித், “ஓ! கல்விமானான பிராமணரே, ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, எதை அடைந்தால் நீர் கவலையடைய வேண்டாமோ, அந்த நுண்ணறிவு எது? அந்தத் தவம் எது? அந்த எண்ணம் எது? அந்த அறிவு எது? அந்தக் கல்வி எது?” என்று கேட்டான்.(12)

அந்தப் பிராமணர் {மன்னன் சேனஜித்திடம்}, “உயர்ந்தவையும், நடுத்தரமானவையும், தாழ்ந்தவையுமான உயிரினங்கள் அனைத்தும், அதனதன் செயல்களின் விளைவால் துயரில் சிக்கிக் கொள்வதைப் பார்.(13) என்னுடைய சுயத்தையே நான் எனதாகக் கருதவில்லை. மறுபுறம், மொத்த உலகத்தையும் நான் எனதாகக் கருதுகிறேன். மேலும், (நான் காணும்) இவை அனைத்தும் என்னைப் போலவே பிறருக்கும் சொந்தமானவை என்றும் கருதுகிறேன். இந்த எண்ணத்தின் விளைவால் என்னைத் துயரம் அணுகாது.(14) இந்த நுண்ணறிவை {புத்தியை} அடைந்தபிறகு, நான் இன்பத்திற்கோ, துன்பத்திற்கோ வசப்படுவதில்லை.(15) பெருங்கடலில் மிதக்கும் இரு மரத்துண்டுகள் ஒரு சமயத்தில் ஒன்றாகச் சேர்ந்து, பிறகு பிரிவதைத் போலவே இந்த உலகில் (வாழும்) உயிரினங்களின் சேர்க்கையும் நேர்கிறது.(16) மகன்கள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் ஆகியோர் அனைவரும் இவ்வகையினரே. ஒருவன் அவர்களிடம் இருந்து பிரியப்போவது நிச்சயம் என்பதால், அவன் அவர்களிடம் ஒருபோதும் பற்று கொள்ளக்கூடாது.(17) உன் மகன் புலப்படாத உலகில் இருந்து வந்தான். அவன் உன்னை அறிந்திருக்கவில்லை. நீயும் அவனை அறிந்திருக்கவில்லை. நீ யார்? யாருக்காக நீ வருந்திக் கொண்டிருக்கிறாய்?(18)

ஆசையெனும் நோயிலிருந்தே துயரம் எழுகிறது. மேலும், ஆசையெனும் நோய் நீங்குவதிலிருந்தே மகிழ்ச்சி விளைகிறது. இன்பத்தில் இருந்தே துன்பம் எழுகிறது, மேலும் துன்பமானது மீண்டும் மீண்டும் எழுகிறது.(19) இன்பத்திற்குப் பிறகு துன்பமும், துன்பத்திற்குப் பிறகு இன்பமும் {மாறி மாறி} வருகின்றன. மனிதர்களின் இன்பங்களும் துன்பகங்களும் ஒரு சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கின்றன.(20) இன்பத்திற்குப் பிறகு உனக்குத் துன்பம் வரும். மீண்டும் நீ இன்பத்தை அடைவாய. எப்போதும் துன்பத்தையும், எப்போதும் இன்பத்தையும் ஒருவரும் அனுபவிப்பதில்லை.(21) இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டிற்கும் புகலிடமாக இவ்வுடல் இருக்கிறது[2]. உடல்படைத்த உயிரினம், தன் உடலின் உதவியால் செய்யும் எந்தச் செயல்களின் விளைவுகளையும் அவனது அந்த உடலே அனுபவிக்கும்.(22) உடல் இருப்பில் எழும்போது அதனுடனே சேர்ந்தே உயிரும் எழுகிறது. இந்த இரண்டும் ஒன்றாகவே இருக்கின்றன, ஒன்றாகவே அழிகின்றன[3].(23) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள், உலகம் சார்ந்த பல கட்டுகளால் கட்டப்பட்டு, நீரில் மணற்கரை போல அழிவைச் சந்திக்கின்றனர்.(24)அறியாமையில் பிறந்த பல்வேறு வகைத் துன்பங்கள், உயிரினங்கள் கொண்ட பற்றின் விளைவால் அவற்றைப் பீடித்து, எள்ளை நசுக்கும் செக்குகள் போலச் செயற்பட்டு, (தாங்கள் வசப்பட்டிருக்கும்) மறுபிறப்பு சுழற்சியைப் பிரதிபலிக்கும் செக்குகள் போல அவற்றை {உயிரினங்களை} நசுக்குகின்றன.(25) மனிதன், தன் மனைவிக்காக (மற்றும் பிறருக்காக) எண்ணற்ற தீச்செயல்களைச் செய்கிறான், ஆனால், இம்மையிலும், மறுமையிலும் அவன் தனியாகவே பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்கிறான்.(26) பிள்ளைகள், மனைவியர், உற்றார் உறவினர் ஆகியோருடன் பற்றுடன் இருக்கும் மனிதர்கள் அனைவரும், பலமற்ற காட்டு யானைகள், புதைகுழியில் மூழ்குவதைப் போல, துன்பக்கடலெனும் சகதியில் மூழ்குகின்றனர்.(27) உண்மையில், ஓ! தலைவா, செல்வத்தின் இழப்பாலும், மகன் மற்றும் உற்றார், உறவினரின் இழப்பாலும் மனிதன் அனுபவிக்கும் பெருந்துயரானது, காட்டுத்தீயின் எரிசக்திக்கு ஒப்பானதாகும்.(28) இன்பம் துன்பம், இருப்பு இல்லாமை ஆகிய இவை அனைத்தும் விதியைச் சார்ந்தே இருக்கின்றன.(29) நண்பர்களைக் கொண்டவனாக இருந்து நண்பர்களற்றவனாக ஆனவன், எதிரிகளைக் கொண்டவனாக இருந்து எதிரிகளற்றவனாக ஆனவன், ஞானம் கொண்டவனாக இருந்து ஞானமற்றவனாக ஆனவன், ஆகிய இவர்களில் ஒவ்வொரும் விதியின் மூலமே இன்பத்தை அடைகின்றனர்.(30)

ஒருவனுடைய மகிழ்ச்சிக்கு நண்பர்கள் காரணமாக இருப்பதில்லை. ஒருவனுடைய துன்பத்துக்கு எதிரிகள் காரணமாக இருப்பதில்லை. செல்வம் அடைவதை ஏற்படுத்த ஞானம் தகுந்ததல்ல {ஞானத்தால் செல்வத்தைக் கொண்டு வர முடியாது}; அதே போல இன்பம் அடைவதை ஏற்படுத்த செல்வம் தகுந்ததல்ல {செல்வம் இன்பத்தைத் தராது}.(31) செல்வத்திற்கு நுண்ணறிவு {புத்தி} காரணமல்ல, அதேபோவே எழைமைக்கு மடமையும் காரணமல்ல. வேறெதையும் அல்லாமல் ஞானத்தை மட்டுமே கொண்டவன் உலகின் வகையைப் புரிந்து கொள்கிறான் {ஒரு ஞானியாலன்றி வேறு எவராலும் இவ்வுலகத்தின் வகையைப் புரிந்து கொள்ள முடியாது}.(32) புத்திசாலி, வீரன், முட்டாள், கோழை, மூடன், கல்விமான், பலவீனன், பலமிக்கவன் ஆகியோரில் எவனிடம் இருந்து விதிக்கப்பட்டிருக்கிறதோ அவனிடம் இருந்தே மகிழ்ச்சி ஏற்படும்.(33) பசுவானவள், கன்று, உரிமையாளனான பசுமந்தையாளன் {இடையன்}, கள்வன் ஆகியோருக்கு மத்தியில், எவன் அவளது {அந்தப் பசுவின்} பாலைக் குடிப்பானோ அவனுக்கே உரிமையானவள் ஆவாள்[4].(34) முற்றிலும் செயலற்ற அறிவைக் கொண்டவர்கள், மேலான அறிவுக்கு அப்பாற்பட்ட மனநிலையை அடைந்தவர்கள் ஆகியோர் இன்பத்தை அடைவதில் வெல்கிறார்கள். இந்த இரண்டு வகையினருக்கு மத்தியில் உள்ளோரே துன்பத்தை அனுபவிக்கிறார்கள்[5].(35)ஞானம் கொண்டவர்கள், இரண்டு இறுதிநிலைகளிலேயே திளைக்கிறார்களேயன்றி நடுவில் உள்ள நிலைகளில் அல்ல. இந்த இரண்டு இறுதிநிலைகளில் எதை அடைந்தாலும் மகிழ்ச்சியை அடையலாம் என்று தவசிகள் சொல்கின்றனர். அந்த இரண்டிற்கும் இடையில் உள்ள நடுநிலைகளே துன்பத்தைக் கொண்டிருக்கின்றன[6].(36) (சமாதி நிலை கொண்டு வரக்கூடிய) உண்மையான பேரின்ப நிலையை அடைவதில் வென்றவர்கள், இவ்வுலகத்தின் இன்ப துன்பங்களில் இருந்து விடுபட்டவர்கள், பொறாமையற்றவர்கள் ஆகியோர் செல்வத்தை அடைவதாலும், இழப்பதாலும் ஒருபோதும் கலங்குவதில்லை.(37) உண்மையான பேரின்பத்திற்கு வழிவகுக்கும் நுண்ணறிவை {புத்தியை} அடைவதில் தவறியவர்கள், ஆனால் (சாத்திரங்களுடைய அறிவின் துணையால்) மடமை மற்றும் அறியாமையை விஞ்சியவர்கள், அளவுக்குமீறி இன்பத்தையும், அளவுக்கு மீறிய துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள்.(38) சரியானது, அல்லது தவறானது என்ற கருத்தமைவுகள் எதுவும் இல்லாத மனிதர்கள் செருக்காலும், பிறரை வெற்றி கொண்டதாலும் உணர்வற்றவர்களாகி, சொர்க்கத்தின் தேவர்களைப் போல மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார்கள்[7].(39) இன்பமானது துன்பத்திலேயே முடியும். செயலின்மையே துன்பம்; அதே வேளையில் புத்திசாலித்தனமே (செயல்படுவதே) மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. செல்வாக்கும், செழிப்பும் புத்திசாலியிடம் {செயல்படுபவனிடம்} வசிக்குமேயன்றி, ஒருபோதும் சோம்பேறியிடம் வசிக்காது.(40)இன்பமோ துன்பமோ, ஏற்புடையதோ, ஏற்பில்லாததோ இவற்றில் எது நேர்தாலும் அதை அனுபவிக்க வேண்டும், அல்லது வெல்லப்பட முடியாத இதயத்துடன் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.(41) தினமும் நூற்றுக்கணக்கான துன்ப நிகழ்வுகளும், நூற்றுக்கணக்கான அச்சந்தரும் நிகழ்வுகளும் அறியாமையும், மடமையும் கொண்ட மனிதனைத் தாக்குகின்றனவேயன்றி, ஞானியையல்ல.(42) ஞானத்தை அடைந்தவனும், தன் நன்மைக்கான அறிவரைகளைக் கேட்பதில் கவனம் நிறைந்தவனும், பொறாமையற்றவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனுமான நுண்ணறிவுமிக்க மனிதனைத் துன்பத்தால் தீண்டமுடியாது.(43) ஞானமிக்க மனிதன், அத்தகைய அறிவைச் சார்ந்து, (விருப்பம் மற்றும் ஆசையின் ஆதிக்கத்தில் இருந்து) இதயத்தைப் பாதுகாத்துக் கொண்டு இங்கே செயல்பட வேண்டும். எதிலிருந்து அனைத்தும் எழுகிறதோ, எதற்குள் அனைத்தும் மறைந்துபோகிறதோ, அந்தப் பரமாத்மாவை அறிந்தவனை உண்மையில் துன்பத்தால் தீண்டமுடியாது[8].(44) எதன் நிமித்தமாகத் துன்பம், இதய எரிச்சல், கவலை ஆகியன ஏற்படுகின்றனவோ, எதன் நிமித்தமாக முயற்சி தூண்டப்படுகிறதோ, அந்த வேரானது ஒருவனின் உடல் பகுதியாகவே இருப்பினும் அதைக் கைவிட வேண்டும்[9].(45)எனது என்ற கருத்தில் பேணிவளர்க்கப்படும் எந்தப் பொருளாக இருந்தாலும், அது துயரம் மற்றும் இதய எரிச்சலின் தோற்றுவாயாக அமையும்.(46) விரும்பப்படும் எந்தப் பொருளும் கைவிடப்படும்போது, அது மகிழ்ச்சியின் தோற்றுவாயாக அமையும். ஆசைக்குரிய பொருட்களைத் தொடரும் மனிதன் அந்தத் தொடர்ச்சியின் போக்கில் அழிவையே அடைவான்.(47) புலன்களை நிறைவு செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியோ, சொர்க்கத்தில் ஒருவன் அனுபவிக்கும் பேரின்பமோ, ஆசைகள் அனைத்தின் அழிவில் இருந்து எழும் இன்பத்தின் பதினாறில் ஒரு பங்குக்கும் ஈடாகாது.(48) சரியோ, தவறோ முற்பிறவிச் செயல்களின் விளைவுகள், ஞானிகளையும், மூடர்களையும், துணிவுமிக்கோரையும், மருண்டோரையும் அடைந்தே தீரும்.(49) இவ்வாறே இன்பமும் துன்பமும், ஏற்புடையவையும், ஏற்பில்லாதவையும் தொடர்ச்சியாக உயிரினங்களுக்கு மத்தியில் (சக்கரமாகச்) சுழல்கின்றன.(50)

நுண்ணறிவுமிக்கவனும், ஞானியுமான மனிதன், இத்தகைய அறிவைச் சார்ந்து சுகமாக வாழ்கிறான். ஒரு மனிதன் தன் ஆசைகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, தன் கோபமானது தன்னிடம் சிறந்ததைப் பெற ஒருபோதும் அனுமதிக்காமல் இருக்க வேண்டும்.(51) இந்தக் கோபம் இதயத்தில் எழுந்து, அங்கே சீற்றத்துடனும், வளத்துடனும் வளர்கிறது. மனிதர்களின் மனங்களில் பிறந்து, உடல்களில் வசிக்கும் இந்தக் கோபமே மரணம் என்று ஞானிகளால் சொல்லப்படுகிறது.(52) ஒரு மனிதன், ஓர் ஆமையானது தன் அங்கங்களை உள்ளிழுத்துக் கொள்வதைப் போலத் தன் ஆசைகள் அனைத்திலிருந்தும் விலகினால், தன்னொளியுடன் கூடிய அவனது ஆன்மா, தன்னைக் காண்பதில் வெற்றியடைகிறது[10].(53) எனது என்ற கருத்தில் பேணிவளர்க்கப்படும் அந்தப் பொருளாக இருந்தாலும், அது துயரம் மற்றும் இதய எரிச்சலின் தோற்றுவாயாக அமையும்[11].(54) ஒரு மனிதன் எந்த அச்சத்தையும் உணராமல், வேறு எவராலும் அஞ்சப்படாமல் இருக்கும்போது, விருப்பையோ, வெறுப்பையோ அவன் வளர்க்காதபோது, அவன் பிரம்ம நிலையை அடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.(55)உண்மை, பொய்மை, துன்பம், இன்பம், அச்சம், துணிவு, ஏற்புடைமை, ஏற்பில்லாமை ஆகிய இருமைகளைக் கைவிட்டால், நீ அமைதிநிறைந்த ஆன்மாவாகலாம்.(56) ஒரு மனிதன், எந்த உயிரினத்துக்கும் எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ தீங்கிழைக்காத போது, அவன் பிரம்ம நிலையை அடைவதாகச் சொல்லப்படுகிறான்.(57) தவறான வழிநடத்தப்படுவதால் கைவிடமுடியாததும், முதுமையிலும் அழியாததும், மரண நோயாகக் கருதப்படுவதுமான தாகத்தை {ஆசையைக்} கைவிட்டவன் உண்மையான மகிழ்ச்சியை அடைவான்.(58) இதுதொடர்பாக, ஓ! மன்னா, சாதகமற்ற நிலையிலும் நித்திய தகுதியை {புண்ணியத்தை} அடைந்த பிங்களையால் {பிங்களை என்ற வேசியால்} பாடப்பட்ட சுலோகம் கேட்கப்படுகிறது.(59) பிங்களை என்ற பெயரைக் கொண்ட ஒரு வீழ்ந்த பெண்மணி, நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்குச் சென்று, ஒரு விபத்தின் காரணமாகத் தன் காதலனின் தோழமை மறுக்கப்பட்டாள். பெரும் துன்பம் நிறைந்த அந்த நேரத்தில், அவள் ஆன்ம அமைதியை அடைவதில் வென்றாள்[12].(60)பிங்களை, “ஐயோ, அமைதிநிறைந்த சுயம் அருகில் இருக்க, வெறியின் வசப்பட்டு நான் நீண்ட பல வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். மரணம் என் வாயிலில் இருக்கிறது. எனினும், இதற்கு முன் நான் தூய்மையின் சாரத்தை நாடவில்லை.(61) ஒன்பது வாயில்களும் ஒரு தூணும் கொண்ட இந்த வீட்டை (உண்மை அறிவின் மூலம்) நான் மறைக்கப் போகிறேன்[13]. அருகில் இருக்கும் பரமாத்மாவை உண்மையில் அன்புக்குரியதாய் எந்தப் பெண்தான் கருதுகிறாள்?[14](62) நான் இப்போது விழித்துக் கொண்டேன். அறியாமையெனும் உறக்கத்தில் இருந்து இப்போது விழித்துவிட்டேன். நான் இனி ஆசைக்கு வசப்பட மாட்டேன். உண்மையில் நரகத்தின் உடல் வடிவங்களான மனிதக்காதலர்கள், காமத்துடன் அணுகி இனியும் என்னை வஞ்சிக்க இயலாது.(63) விதியின் மூலமோ, முற்பிறவி செயல்களின் மூலமோ தீமையும் நன்மையைத் தரும். (அறியாமை உறக்கத்திலிருந்து) விழிப்படைந்த நான், உலகப் பொருட்கள் மீது கொண்ட ஆசைகள் அனைத்தையும் கைவிடுகிறேன். என் புலன்களை முழுமையாக ஆட்சி செய்யப் போகிறேன்.(64) ஆசை மற்றும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} ஆகியவற்றில் இருந்து விடுபட்டவன் இன்பமாக உறங்குவான். நம்பிக்கை மற்றும் ஆசையில் இருந்து அடையும் விடுதலையே இன்ப நிலையாகும்” என்றாள் {என்பது அந்த ஸ்லோகமாகும்}. பிறகு, ஆசையையும், நம்பிக்கையையும் விலக்கியப் பிங்களை இன்பமாக உறங்கினாள்” என்றார் {அந்தப் பிராமணர்}”.(65)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “கல்விமானான அந்தப் பிராமணர் சொன்ன இவற்றாலும் இன்னும் பிற சொற்களாலும் ஆறுதலடைந்த மன்னன் சேனஜித், (தன் துயரத்தைக் கைவிட்டு) இன்பத்தை உணர்ந்து மகிழ்ச்சியை அடைந்தான்”.(66)

மேதாவியின் நீதி! – சாந்திபர்வம் பகுதி – 175- காலம் வேகமாகச் செல்வதைக் கருத்தில் கொண்டு எந்த உயர்ந்த நன்மையை மனிதன் நாட வேண்டும் என்று கேட்ட யுதிஷ்டிரன்; நிச்சயத்தன்மையற்ற வாழ்வைக் குறித்தும், பிரம்மத்தைத் தவிர அனைத்தும் ஒடுங்குதலைக் குறித்தும் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் நடந்த உரையாடலை உரைத்த பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் அழிவைத் தரும் காலம் கடந்து கொண்டிருக்கிறது[1]. ஓ! பாட்டா, நாடப்பட வேண்டிய நன்மையான பொருள் எது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இது தொடர்பாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட பழைய கதை குறிப்பிடப்படுகிறது.(2) ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு குறிப்பிட்ட பிராமணர், பெரும் நுண்ணறிவைக்கொண்டவனும், (இதன் காரணமாகவே) மேதாவி என்றழைக்கப்பட்ட ஒரு மகனைப் பெற்றிருந்தார்.(3) ஒரு நாள், மோக்ஷ அறம் குறித்த உண்மைகளை நன்கறிந்த அந்த மகன் {மேதாவி}, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்த தன் தந்தையிடம் பேசினான்.(4)

மகன் {மேதாவி}, “ஓ! தந்தையே, மனிதனின் வாழ்வுக்காலம் மிக விரைவாகக் கடந்து செல்வதைக் கொண்டு ஒரு ஞானம் கொண்ட மனிதன் என்ன செய்ய வேண்டும்? ஓ! தந்தையே, ஒருவன் செய்ய வேண்டிய கடமைகளின் போக்கை, அவற்றின் கனிகளைக் குறித்துத் தவறாமல் எனக்குச் சொல்வீராக. உம்மிடம் இருந்து கேட்டு, அந்தக் கடமைகளை நோற்க நான் விரும்புகிறேன்” என்று கேட்டான்.(5)

தந்தை, “ஓ! மகனே {மேதாவியே}, ஒருவன் பிரம்மச்சரிய வாழ்வுமுறையை {ஆசிரமத்தை} நோற்று, வேதங்களை முதலில் கற்க வேண்டும். பிறகு அவன் தன் மூதாதையர்களை மீட்பதற்காக {கிருஹஸ்தாசிரமத்தை ஏற்று} பிள்ளைகளைப் பெற வேண்டும். அடுத்ததாகத் தன் நெருப்பைக் கிண்டி, (பரிந்துரைக்கப்பட்டிருக்கும்) வேள்விகளை முறையான சடங்குகளுடன் செய்ய அவன் முனைய வேண்டும்[2]இறுதியாக, அவன் தியானத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் காட்டிற்குள் நுழைய வேண்டும்” என்று சொன்னார்.(6)மகன் {மேதாவி தன் தந்தையிடம்}, “இவ்வாறு அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டு, இவ்வாறு உலகம் தாக்கப்படும்போது, மரண விளைவுகளை ஏற்படுத்தும் இத்தகைய தடுக்கப்பட முடியாத காரியங்கள் அதன் மீது பாயும்போது, எவ்வாறு நீர் இவ்வார்த்தைகளை அமைதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டான்.(7)

தந்தை {மேதாவியிடம்}, “எவ்வாறு உலகம் தாக்கப்படுகிறது? எதனால் அது சூழப்பட்டிருக்கிறது? மரண விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும் தடுக்கப்பட முடியாத அளவில் அதன் {உலகத்தின்} மீது பாய்வதுமான அஃது எது? ஏன் நீ என்னை இவ்வாறு அச்சுறுத்துகிறாய்” என்று கேட்டார்.(8)

மகன் {மேதாவி தன் தந்தையிடம்}, “காலனே உலகத்தைத் தாக்குகிறான். முதுமையால் உலகம் சூழப்படுகிறது. (மனிதனின் வாழ்வுக்காலத்தைத் தொடர்ந்து குறைக்கும் வகையில்) வந்து போய்க் கொண்டிருக்கும் இரவுகளே அந்தத் தடுக்கப்பட முடியாத காரியங்கள்.(9) காலன் யாருக்காகவும் காத்திருக்க மாட்டான், (ஆனால் ஒவ்வொரு உயிரினத்தையும் நோக்கி உறுதியாக நகர்ந்து வருகிறான்) எனும்போது, அறிவு எனும் ஆடையால் மறைத்துக் கொள்ளாமல் என்னால் எவ்வாறு காலத்தைக் கடத்த முடியும்[3]?(10) அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு இரவும், ஒருவனின் இருப்புக்குரிய காலத்தைக் குறைத்தபடியே கடந்து சென்று கொண்டிருக்கும்போது, ஞானம் கொண்ட மனிதன் அந்த நாளை கனியற்றதாகவே கருத வேண்டும்.(11) (காலன் உறுதியாக அணுகி வரும்போது) ஆழமற்ற நீரின் மீனைப் போல மகிழ்ச்சியை உணர்பவன் எவன் இருக்கிறான்? மனிதனின் ஆசைகள் நிறைவேறும் முன்பே அவனிடம் காலன் வந்து விடுகிறான்.(12) ஒரு மனிதன் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, அவனது இதயம் வேறுவகையில் நிலைத்திருக்கும்போது, செம்மறியாட்டைக் கவர்ந்து செல்லும் பெண்புலியைப் போலக் காலன் அவனை அபகரித்துச் செல்கிறான்.(13)நீர் உமது நன்மைக்கானதை இந்த நாளிலேயே நிறைவேற்றிக் கொள்வீராக. இந்தக் காலன் உம்மிடம் வர வேண்டாம். காலன், தன் பலியாடுகளை அவர்கள் செயல்கள் நிறைவடையும் முன்பே இழுத்துச் செல்கிறான்.(14) நாளை செய்ய வேண்டிய செயல்களை இன்றே செய்ய வேண்டும், பிற்பகலில் செய்ய வேண்டியதை முற்பகலிலேயே செய்துவிட வேண்டும். தன் பலியாடுகளின் செயல்கள் நிறைவேறிவிட்டனவா, இல்லையா என்று பார்த்துக் கொண்டு காலன் காத்திருப்பதில்லை.(15) இன்று தன்னிடம் காலன் வரமாட்டான் என்பதை எவன் அறிவான்? இளம் வயதிலேயே ஒருவன் அறம்பயில வேண்டும். வாழ்வென்பது நிலையற்றதாகும். அறம்பயிலப்பட்டால், இம்மையில் புகழும், மறுமையில் பேரின்பமும் அதன் விளைவுகளாக இருக்கும்.(16) 

அறியாமையில் மூழ்கிய ஒருவன், மகன்களுக்காகவும், மனைவியருக்காகவும் உழைக்க ஆயத்தமாக இருக்கிறான். நல்ல அல்லது தீய செயல்களைச் செய்யும் ஒருவன், அவற்றை வளர்த்துப் பெருக்குகிறான்.(17) உறங்கும் மானை அபகரித்துச் செல்லும் புலியைப் போலவே, மகன்கள், விலங்குகளில் இன்புற்று, தன் ஆசைகளை நிறைவு செய்து கொள்வதற்காக அடிமையாக இருக்கும் மனிதனைக் காலன் அபகரித்துச் செல்கிறான்.(18) அவன் தன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கும் மலர்களைப் பறிக்க இயலும் முன்பே, தன் ஆசைக்குரிய பொருட்களை அடைந்து மனநிறைவடையும் முன்பே, இரையை அபகரிக்கும் புலியைப் போல அவனைக் காலன் அபகரித்துச் செல்கிறான்.(19) “இது செய்து முடிக்கப்பட்டது; இது செய்யப்பட வேண்டும்; இது பாதிச் செய்யப்பட்டிருக்கிறது” என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, இன்பத்தை நிறைவு செய்வதில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு மத்தியில் இருக்கும்போதே காலன் அவனை அடக்கி ஆட்கொள்கிறான்.(20)

மனிதன் தன் வயல், தன் கடை, அல்லது தன் இல்லம் என எத்தொழிலைப் பற்றுடன் செய்து கொண்டிருந்தாலும், அவன் தன் செயல்களின் கனியை அடையும் முன்பே காலன் அவனை அபகரித்துச் செல்கிறான்.(21) பலவீனன், பலமிக்கவன், துணிவுமிக்கவன், அச்சம் கொண்டவன், மூடன், கல்விமான் இவர்களில் எவரும் தங்கள் செயல்களின் கனிகளை அடையும் முன்பே காலன் அவர்களை அபகரித்துச் செல்கிறான்.(22) பல்வேறு காரணங்களில் இருந்து எழும் மரணம், முதுமை, நோய், கவலை ஆகிய அனைத்தும் உமது உடலிலேயே வசித்து வரும்போது, எவ்வாறு உம்மால் முற்றிலும் {ஒன்றுமில்லாததுபோல} நலமாக வாழ முடிகிறது?(23) உடல்படைத்த உயிரினம் பிறந்தவுடனேயே, அதன் அழிவுக்காக (அழிவைக் கொண்டுவர) முதுமையும், மரணமும் அதனைத் தொடர்ந்து வருகின்றன. இருப்பில் இருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருட்களை அனைத்தும் இவ்விரண்டால் {முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றால்} பாதிப்பை அடைகின்றன.(24) (தோழர்களுக்கு மத்தியில்) கிராமங்களிலும், நகரங்களிலும் வசிப்பதில் ஒருவன் கொள்ளும் பற்றே, காலனின் வாய் என்று சொல்லப்படுகிறது[4]. மறுபுறம், காடானது, புலன்களை அடைத்து வைக்கும் கொட்டகையாகக் கருதப்படுகிறது. இது ஸ்ருதிகளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது[5].(25)நல்லோர், அக்கட்டுகளை அறுத்து விடுதலையை அடைகின்றனர், அதே வேளையில் தீயோர் அவற்றை அறுப்பதில் வெல்வதில்லை.(26) எண்ணம், சொல், அல்லது செயலால் ஒருபோதும் உயிரினங்களுக்குத் தீங்கிழைக்காதவன், உயிருக்கும், உடைமைக்கும் அழிவைத்தரும் இத்தகையவற்றால் ஒருபோதும் தீங்குற மாட்டான்[6].(27) காலனின் தூதர்கள் (நோய் மற்றும் முதுமை) அணுகும்போது, பொய்மையை விழுங்கும் வாய்மையைத் தவிர எதனாலும் அவர்களை {நோய் மற்றும் முதுமையை} தடுக்க முடியாது. வாய்மையே அழிவில்லாதது[7].(28) இந்தக் காரணங்களுக்காகவே ஒருவன் வாய்மை எனும் நோன்பைப் பயில வேண்டும்; வாய்மையுடன் ஒன்று கலப்பத்தில் அவன் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்; வாய்மையே அவனின் வேதம் என அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்; தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, வாய்மையின் மூலம் அவன் காலனை வெல்ல வேண்டும்.(29) மரணமின்மை, மரணம் ஆகிய இரண்டும் உடலிலேயே விதைக்கப்பட்டிருக்கிறது. அறியாமை மற்றும் குழப்பம் ஆகியவற்றின் மூலம் ஒருவன் மரணமடைகிறான்; அதே வேளையில் வாய்மையின் மூலம் மரணமின்மை அடையப்படுகிறது.(30)எனவே, தீங்கிழைப்பதில் இருந்து விலகி, வாய்மையை அடைய முயன்று, ஆசை மற்றும் கோபத்தின் ஆதிக்கத்தை மீறி, இன்பம் மற்றும் துன்பத்தை ஒரே பார்வையில் கருதி, அமைதியை அடைந்து, மரணமில்லாதவனை {தேவனைப்} போல நான் மரணத்தைத் தவிர்க்கப் போகிறேன்.(31) சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் வரும் வரையில், என் புலன்களைக் கட்டுப்படுத்தி, சாந்தி வேள்வி, பிரம்ம வேள்வி, சொல்வேள்வி, மன வேள்வி, செயல் வேள்வி ஆகியவற்றில் நான் என்னை ஈடுபடுத்திப் போகிறேன்[8]பிசாசங்கள் மட்டுமே செய்யக்கூடியதும், நிலையற்ற கனிகளை உண்டாக்கக்கூடியதுமான கொடுமையான விலங்கு வேள்விகளையோ, உடல் வேள்விகளையோ {உடலைத் தியாகம் செய்வதையோ} என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு செய்ய முடியும்[9]?(33) எவனுடைய சொற்கள், எண்ணங்கள், தவங்கள், துறவு, யோகத் தியானம் ஆகியன அனைத்தும் பிரம்மத்தில் நிலைத்திருக்குமோ, அவன் உயர்ந்த நன்மையை ஈட்டுவதில் வெல்வான்.(34) அறிவுக்கு (அறிவுக்கண்ணுக்கு) இணையான வேறு எந்தக் கண்ணும் இல்லை. வாய்மை (வாய்மையில் உள்ளதைப்) போன்ற தவம் வேறேதும் இல்லை. பற்று (பற்றில் உள்ளதற்கு) இணையான துயரம் வேறேதும் இல்லை. துறவை (துறவில் அடைவதைப் போன்ற) மகிழ்ச்சி வேறேதும் இல்லை.(35)பிரம்மத்தில் இருந்து பிரம்மத்தின் மூலமாகப் பிறந்தவன் நான். நான் பிள்ளையற்றவனாக இருந்தாலும், என்னைப் பிரம்மத்திற்கே அர்ப்பணிப்பேன். நான் பிரம்மத்திற்கே திரும்புவேன். என்னை மீட்க ஒரு மகன் தேவையில்லை.(36) பயிலல், நன்னடத்தை, பொறுமை, தீங்கிழையாமை, எளிமை, சடங்குகள் மற்றும் காணும் வேள்விகள் அனைத்தையும் தவிர்த்தல் ஆகியவற்றைக் கொண்டு அனைத்தையும் சமமாகப் பார்ப்பதால் விளையும் நிலையான தனிமையை விட ஒரு பிராமணனுக்குச் செல்வம் வேறேதும் இல்லை.(37) ஓ! பிராமணரே, ஒருவன் மரணமடையப் போகிறான் எனும்போது, செல்வம், உற்றார் உறவினர், மனைவியர் ஆகியவற்றால் அவனுக்கு என்ன பயன் இருக்க முடியும்? குகைக்குள் மறைக்கப்பட்டிருக்கும் உமது சுயத்தை {ஆன்மாவை} நாடுவீராக. உமது பாட்டன்மாரும், உமது தந்தைமாரும் எங்கே இருக்கின்றனர்” என்று கேட்டான் {மேதாவி}”[10].(38)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, (இந்தக் கதையில்) மகனின் பேச்சைக் கேட்ட பிறகு, வாய்மை எனும் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்த அந்தத் தந்தையின் வழியில் நீயும் நடப்பாயாக” என்றார்.(39)

சம்பாகர்! – சாந்திபர்வம் பகுதி – 176-இன்பமும், துன்பமும், செல்வந்தனுக்கும், ஏழைக்கும் எவ்வாறு ஏற்படுகின்றன என்று கேட்ட யுதிஷ்டிரன், துன்பத்தால் அவதிப்பட்டு, முக்தியை அடைந்த சம்பாகர் எனும் ஒரு ஏழைப் பிராமணரின் கதையை யுதிஷ்டிரனுக்கு உரைத்த பீஷ்மர்.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, இன்பமும், துன்பமும், வெவ்வேறு நடைமுறைகளையும், சடங்குகளையும் நோற்று வாழும் செல்வந்தனுக்கும், ஏழைக்கும் எங்கிருந்து எவ்வாறு உண்டாகுகின்றன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அமைதியையும், விடுதலையையும் {முக்தியையும்} தானே அடைந்த சம்பாகரால் {சம்யாகரால்} என்ன பாடப்பட்டது என்பது குறித்த பழங்கதையொன்று இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில், தீய மனைவி, தீய உடை, பசி ஆகியவற்றால் துன்பத்தை அடைந்தவரும், துறவு நோன்பை நோற்று வாழ்பவருமான ஒரு குறிப்பிட்ட பிராமணர் இந்த ஸ்லோகங்களை என்னிடம் சொன்னார்[2].(3) இந்தப் பூமியில் பிறந்த மனிதனை, அவன் பிறந்த நாள் முதலே பல்வேறு வகை இன்ப துன்பங்கள் அடைகின்றன.(4) அவன் அந்த இரண்டையும் விதியின் செயல் என ஏற்றுக் கொண்டால் இன்பம் வரும்போது மகிழ்ச்சியையும், துன்பம் வரும்போது துயரத்தையும் அவன் உணர மாட்டான்.(5)உன் மனம் ஆசையற்றிருந்தாலும், நீ இன்னும் பெருஞ்சுமையைச் சுமக்கிறாய். உனக்கான நன்மையை (விடுதலையை) அடைய நீ முயல வில்லை. உன் மனத்தைக் கட்டுப்படுத்துவதில் நீ வெல்லவில்லையா?(6) வீட்டையும், விருப்பத்திற்குரிய உடைமைகளையும் துறந்து சென்றால், நீ உண்மையான மகிழ்ச்சியைச் சுவைக்கலாம். அனைத்தையும் இழந்த மனிதன் மகிழ்ச்சியாக உறங்கி, மகிழ்ச்சியாக விழிக்கிறான்.(7) இவ்வுலகில் முற்றான ஏழைமையே மகிழ்ச்சியாகும். அதுவே நல்ல உடற்கோட்பாடாகும், அதுவே அருள்களின் தோற்றுவாயாகும், அதுவே ஆபத்திலிருந்து விடுதலையாகும். எதிரியற்ற இவ்வழி (ஆசையை வளர்ப்பவர்களால்) அடையமுடியாததாகவும், (ஆசையில் இருந்து விடுபட்டவர்களால்) எளிதாக அடையத்தக்கதாகவும் இருக்கிறது.(8) மூன்று உலகங்களின் ஒவ்வொரு பகுதிகளிலும் என் கண்களைச் செலுத்தும் என்னால், தூய நடத்தையிலும், (உலகம் சார்ந்த பொருட்களில்) பற்றில்லாமையிலும் ஓர் ஏழைக்கு இணையான மனிதனைக் காண முடியவில்லை.(9) நான் ஏழைமையையும், அரசுரிமையையும் தராசில் எடை பார்த்தேன். அரசுரிமையைவிட ஏழைமையே கனமானதாகவும், பெரும் தகுதிகளைக் கொண்டதாகவும் தெரிந்தது.(10)

செல்வத்தைக் கொண்ட அரசுரிமை எப்போதும் கவலையால் கலங்கடிக்கப்பட்டு, காலனின் கோரப்பற்களுக்கிடையில் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, ஏழைமைக்ககும், அரசுரிமைக்குமிடையில் இந்தப் பெரும் வேறுபாடு இருக்கிறது.(11) எனினும், ஏழையைப் பொறுத்தவரையில், செல்வம் ஏதும் இல்லாதவனாக இருப்பதால் அவன் நம்பிக்கைகளில் {எதிர்பார்ப்புகளில்} இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, நெருப்போ, எதிரியோ, மரணமோ, கள்வர்களோ அவனிடம் இருந்து அடைய முடியாத விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(21) தன் விருப்பப்படி திரிபவனும், தன் கரத்தையே தலையணையாகக் கொண்டு வெறுந்தரையில் கிடப்பவனும், அமைதியை அடைந்தவனுமான அத்தகைய மனிதனை தேவர்களும் மெச்சுகின்றனர்.(13) கோபம் மற்றும் காமத்தால் பாதிக்கப்படும் செல்வந்தன், தீய இதயத்தால் களங்கப்பட்டவனாக இருக்கிறான். அவன் சரிந்த பார்வைகளையும், வெற்று பேச்சுகளையும் பார்க்கவும் பேசவும் செய்கிறான். பாவம் நிறைந்தவனாகும் அவனுடைய முகம் எப்போதும் சுருக்கங்களுடன் கரியதாக இருக்கிறது.(14) தன் உதடுகளைக் கடித்துக் கொண்டும், கோபத்தால் தூண்டப்பட்டும், கடுமையான, கொடுஞ்சொற்களை அவன் பேசுகிறான். அத்தகைய மனிதன் மொத்த உலகத்திற்கும் ஒரு கொடையளித்தாலும், அவனைப் பார்க்கவும் யார் விரும்புவார்?(15)

செல்வத்துடன் தொடர்ந்த தோழமையானது, பலவீன அறிவுடைய மனிதனைக் கலங்கடிக்கிறது. காற்றானது கூதிர் கால மேகங்களை விரட்டுவதைப் போலவே, அது {செல்வத்தின் தோழமை} அவனது அறிவை விரட்டிவிடும். செல்வத்துடனான தோழமை, “நான் அழகானவன். நான் செல்வம்படைத்தவன்.(16) நான் உயர் பிறவி கொண்டவன். நான் செய்வதனைத்திலும் வெற்றியடைபவன். நான் சாதாரண மனிதன் கிடையாது” என்று அவனை நினைக்க வைக்கிறது. இந்த மூன்று காரணங்களின் விளைவால் அவனது இதயம் போதை கொள்கிறது.(17) உலகம் சார்ந்த உடைமைகளில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட இதயத்துடன் அவன் தன் தந்தைமாரால் திரட்டப்பட்ட செல்வத்தை வீணாக்குகிறான். தேவைகளால் செல்வம் குறைந்ததும் அவன் பிறரின் செல்வத்தை அபகரிப்பதை பழியற்றதாகக் கருதுகிறான்.(18) இந்நிலையில் அவன் தடைகள் அனைத்தையும் மீறி,அனைத்துப் பக்கங்களிலும் பிறரின் உடைமைகளை அபகரிக்கும்போது, காடுகளில் காணப்படும் மானைக் கூரிய கணைகளால் பீடிக்கும் விளையாட்டு வீரனைப் போல மனிதர்களின் ஆட்சியாளர்கள் அவனைத் தடுத்துப் பீடிக்கின்றனர்.(19)

அத்தகைய மனிதன், நெருப்பு மற்றும் ஆயுதங்களால் தோன்றும் இதே வகைத் துன்பங்கள் பலவற்றில் மூழ்குகிறான்.(20) எனவே, உலகம் சார்ந்த மனச்சார்புகளையும் (பிள்ளைகள் மனைவியர் போன்ற ஆசைகளையும்), கடந்து செல்பவையான அனைத்து உண்மையின்மைகளையும் (உடல் போன்றவற்றையும்) ஒருவன் தன் நுண்ணறிவின் துணையுடன் அலட்சியம் செய்து, அந்த வலிநிறைந்த துன்பங்களுக்கு உரிய மருந்துகளை இட்டுத் தீர்வு காண வேண்டும்.(21) துறக்காமல் ஒருவனால் இன்பத்தை ஒருபோதும் அடைய முடியாது. துறக்காமல் தனக்கான உயர்ந்த நன்மையை அவனால் ஒருபோதும் அடைய முடியாது. துறக்காமல் எளிதாக ஒருபோதும் உறங்க முடியாது. எனவே, அனைத்தையும் துறந்து, நீ மகிழ்ச்சியை அடைவாயாக” என்றார்.(22)

சம்பாகர் பாடிய இவையனைத்தும், ஹஸ்தினாபுரத்தில் ஒரு பிராமணரால் எனக்குச் சொல்லப்பட்டது. இந்தக் காரணத்திற்காக நான் துறவை அனைத்திலும் முதன்மையானதாகக் கருதுகிறேன்” {என்றார் பீஷ்மர்}[3].(23)

மங்கி! – சாந்திபர்வம் பகுதி – 177-ஒரு மனிதன் ஏழையாக இருந்தால் அவன் எவ்வாறு மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்று கேட்ட யுதிஷ்டிரன்; தன் காளைகளை இழந்த மங்கியின் அவதானிப்புகள்; கவலைகள் நிறைந்ததே இன்பம் என்ற மங்கியின் அறிவுரையையும், அவர் அழிவின்மையை அடைந்த தகவலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “(ஈகை மற்றும் வேள்விச்) செயல்களை நிறைவேற்ற விரும்பி, (தேவையான) செல்வத்தை அடையத் தவறும் எந்த மனிதனும், அவனை மூழ்கச் செய்யும் செல்வ தாகத்தை அடக்கவும், இன்பத்தை அடையவும் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “(இன்பம், துன்பம், மதிப்பு, அவமதிப்பு போன்ற) அனைத்தையும் சமமாகப் பார்ப்பவனும், (பூமிசார்ந்த விருப்பங்களை நிறைவு செய்ய) ஒருபோதும் முயலாதவனும், பேச்சில் வாய்மை பயில்பவனும், அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனும், செயல்பாட்டில் {காரியத்தில்} விருப்பம் இல்லாதவனுமான ஒருவனே மகிழ்ச்சியான மனிதனாவான்.(2) இந்த ஐந்தும் முற்றான அமைதி, அல்லது விடுதலைக்கான {முக்தி /மோக்ஷத்துக்கான} வழிமுறைகள் எனப் பழங்காலத்தவர் சொல்லியிருக்கின்றனர். இவையே சொர்க்கமென்று அழைக்கப்படுகின்றன. இவையே அறம். இவையே பேரின்பம்.(3) பற்றுகளில் இருந்து விடுபட்ட போதும் மங்கியால் பாடப்பட்ட பழைய கதை ஒன்று இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(4)

செல்வத்தை விரும்பியவரான மங்கி, ஏமாற்றங்களால் தாம் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்படுவதைக் கண்டார். இறுதியில் சிறிதாக எஞ்சியிருந்த தன் உடைமையைக் கொண்டு, இளம் காளைகள் இரண்டை (உழவில் ஈடுபடுத்த) பயிற்றுவிப்பதற்காக நுகத்தடியுடன் சேர்த்து வாங்கினார்.(5) ஒரு நாள் நுகத்தில் பூட்டப்பட்ட இரு காளைகளும், பயிற்சிக்காக (வயலுக்குக்) கொண்டு செல்லப்பட்டன. சாலையில் படுத்திருக்கும் ஓர் ஒட்டகத்தைக் கண்டு மிரண்ட அந்த விங்குகள் திடீரென அந்த ஒட்டகத்தை நோக்கி ஓடி,(6) அதன் கழுத்தின் மீது விழுந்தன. காளைகள் தன் கழுத்தில் விழுந்ததைக் கண்டு சினந்த ஒட்டகம், தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற அந்த இரண்டு உயிரினங்களையும் சுமந்து கொண்டே, விரைவான எட்டுகளை வைத்து, பெரும் வேகத்துடன் ஓடியது.(7)

தன் காளைகள் இரண்டும் அந்தப் பலமிக்க ஒட்டகத்தால் சுமந்து செல்லப்படுவதைக் கண்டும், அவை மரணத்தருவாயில் இருப்பதைப் பார்த்தும் மங்கி, “செல்வமானது விதியால் விதிக்கப்படவில்லையெனில், கவனத்துடன் முயன்று, சாதிக்கத் தேவைப்படும் திறனும், நம்பிக்கையும் உள்ள ஒரு புத்திசாலியால் கூட அஃதை {செல்வத்தை} ஒருபோதும் அடையமுடியாது.(9) செல்வத்தை ஈட்டுவதில் அர்ப்பணிப்புடன் கூடிய நான், இதற்கு முன்பே பல்வேறு வழிமுறைகளில் முயன்றுவிட்டேன். நான் கொண்ட உடைமைக்கு விதியால் கொண்டுவரப்பட்ட தீப்பேற்றைப் பார்.(10) அந்த ஒட்டகம் சமமற்ற பாதையில் ஓடிக் கொண்டிருப்பதால் என் காளைகள் விழுவதும் எழுவதுமாகச் சுமந்து செல்லப்படுகின்றன. இந்நிகழ்வு ஒரு விபத்தாகத் தெரிகிறது[1].(11) ஐயோ, என் அன்புக்குரிய காளைகள் இரண்டும் அந்த ஒட்டகத்தின் கழுத்தில் இரண்டு ரத்தினங்களைப் போலத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இது விதியின் விளைவு மட்டுமே. {சூழ்நிலைக்கேற்ப மாறும்} வாய்ப்புக்குரியவற்றில் முயற்சி பயனற்றதாகும்.(12) அல்லது, முயற்சி போன்ற (விளைவுகளை உண்டாக்கும் காரணியான) ஏதாவது ஒன்றின் இருப்பும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், ஆழ்ந்த தேடலின் அதன் அடியில் விதி இருப்பது கண்டடையப்படலாம்[2].(13) எனவே இன்பத்தை விரும்பும் மனிதன் பற்றுகள் அனைத்தையும் துறக்க வேண்டும். பற்றுகள் ஏதும் இல்லாமல், செல்வமீட்டும் ஆசையேதும் இல்லாமல் உள்ள மனிதன் மகிழ்ச்சியாக உறங்கலாம்.(14)சுகர், அனைத்தையும் துறந்து, தன் தந்தையின் {வியாசரின்} வசிப்பிடத்தில் இருந்து பெருங்காட்டுக்குச் சென்ற போது[3],(15) “தன் விருப்பங்கள் அனைத்தின் கனிகளையும் அடைந்தவன், தன் விருப்பங்களைக் கைவிட்டவன் ஆகிய இருவருக்கிடையில் அனைத்தையும் துறந்தவனான பின்னவனே அனைத்தின் கனிகளையும் அடைந்த முன்னவனைக் காட்டிலும் மேன்மையானவன்.(16) எவராலும் ஆசையின் எல்லையை அடைய முடியாது. அறிவும், தீர்மானமும் அற்ற ஒருவன் மட்டுமே, தன் உடலையும், உயிரையும் பாதுகாத்துக் கொள்வதில் ஓர் ஆர்வத்தை உணர்வான்” என்றார்.(17)செயல்படும் விருப்பம் ஒவ்வொன்றையும் தவிர்ப்பாயாக. ஓ! காமம் கொண்ட என் ஆன்மாவே, பற்றுகள் அனைத்திலிருந்தும் உன்னை விடுவித்துக் கொண்டு அமைதியை அடைவாயாக. (ஆசையாலும், நம்பிக்கையாலும் {எதிர்பார்ப்பாலும்}) நீ மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுகிறாய். அவ்வாறிருப்பினும், நீ ஏன் இன்னும் பற்றுகளில் இருந்து விடுதலையடையவில்லை?(18) நான் உன்னால் அழிவடையத்தகாதவன், உன்னோடு விளையாடி களிக்கத் தகுந்தவன் என்றால், ஓ! செல்வத்தில் ஆசை கொண்ட ஆன்மாவே, என்னைக் காமத்தை நோக்கித் தூண்டாதே.(19) நீ திரட்டிய செல்வத்தை மீண்டும் மீண்டும் இழந்தாய். ஓ! செல்வத்தில் ஆசை பேராசை கொண்ட என் மூட ஆன்மாவே, செல்வத்தில் உள்ள ஆசையில் இருந்து எப்போதும் நீ விடுதலையடையப் போகிறாய்?(20) என் மடமையில் நான் நாணுகிறேன். நான் உனது பொம்மையாகிவிட்டேன். இவ்வாறே ஒருவன் பிறருக்கு அடிமையாகிறான்.(21) பூமியில் பிறந்த எவரும் இதற்கு முன்பு ஆசையின் எல்லையை அடைந்ததில்லை, இனி பிறக்கப் போகும் எவரும் அஃதை அடையப்போவதுமில்லை. செயல்கள் அனைத்தையும் கைவிடும் நான், இறுதியாக உறக்கத்தில் இருந்து விழிக்கிறேன். நாம் இப்போது விழித்துவிட்டேன்.(22) ஓ! ஆசையே, நூறு துன்பங்களால் எவ்வளவுதான் பாதிப்படைந்தாலும் நீ நூறு துண்டுகளாக உடைந்து போவதில்லை, ஆகையால் உன் இதயம் வஜ்ரம் போலக் கடினமானது என்பதில் ஐயமில்லை.(23) ஓ! ஆசையே, உன்னையும், உன் அன்புக்குரியவை அனைத்தையும் நான் அறிவேன். உன் அன்புக்குரியவற்றை நாடுவதால், நான் எனக்குள் மட்டுமே மகிழ்ச்சியை அடைவேன்[4].(24) ஓ! ஆசையே, நான் உன் வேரை அறிவேன். நீ விருப்பத்தில் இருந்து உதிக்கிறாய்[5]. எனவே, நான் விருப்பத்தைத் தவிர்ப்பேன். அப்போது நீ வேர்களோடு அழிக்கப்படுவாய்.(25)செல்வத்திற்கான ஆசை ஒருபோதும் மகிழ்ச்சியால் நிறைந்ததல்ல.  {செல்வம்} அடையப்பட்டால், அஃதை {செல்வத்தை} அடைந்தவன் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறான். அடைந்த பிறகு தொலைத்தால், அது மரணம் என்றே உணரப்படுகிறது. இறுதியாக, {செல்வத்தை} அடைவது என்பதே உறுதியற்ற ஒன்றாகும்.(26) ஒருவன் சரணடைவதாலேயே செல்வத்தை அடையமுடியாது. இதைவிட வேறு எது வலிநிறைந்ததாக இருக்க முடியும்? அடையப்படும்போது, அதன் அளவில் ஒருவன் ஒருபோதும் நிறைவடைவதில்லை, ஆனால் {மீண்டும் மீண்டும்} அடைய முனைவதைத் தொடர்கிறான்.(27) கங்கையின் இனிய நீரைப்போலச் செல்வமானது ஒருவனுடைய ஆவலை மட்டுமே தூண்டும். அதுவே என் அழிவாகும். நான் இப்போது விழித்துவிட்டேன். ஓ! ஆசையே, என்னைவிட்டு அகல்வாயாக. (ஐந்து) பூதங்களின் தொகையான {ஐம்பூதங்களாலான} என் உடலைப் புகலிடமாகக் கொண்ட அந்த ஆசை விரும்பிய இடத்திற்குச் சென்று அது விரும்பியவாறு மகிழ்ச்சியாக வாழட்டும்[6].(29) ஆன்மா இல்லாதவர்களே, நீங்கள் ஆசை மற்றும் காமத்தைப் பின்தொடர்வதால் எனக்கு உங்களிடம் இன்பமில்லை. உங்கள் அனைவரையும் கைவிட்டு, நற்பண்பின் குணத்திடம் {சத்வ குணத்தை} என் புகலிடமாகக் கொள்ளப் போகிறேன்[7].(30)என் உடல் மற்றும் மனத்திலேயே அனைத்து உயிரினங்களையும் கண்டு, யோகத்தில் என் அறிவையும், நல்லோரின் அறிவுரைகளில் என் வாழ்வையும், பிரம்மத்தில் ஆன்மாவையும் அர்ப்பணிக்கப்போகிறேன்.(31) எந்தப் பற்றும் இல்லாமல், எவ்வகை துன்பங்களும் இல்லாமல், இத்தகைய கவலைகளில் என்னை மீண்டும் நீ மூழ்கடிக்காதவாறு நான் இவ்வுலகில் இன்பமாகத் திரியப் போகிறேன்[8].(32) ஓ! ஆசையே, நான் தொடர்ந்து உன்னால் கலங்கடிக்கப்பட்டால், (என் மீட்பை அடையும்) பாதை ஏதும் அற்றவனாக இருப்பேன். ஓ! ஆசையே, நீயே தாகத்தையும், துயரத்தையும், களைப்பையும், உலைவையும் உண்டாக்குகிறாய்.(33) செல்வ இழப்பில் ஒருவன் உணரும் துயரமானது, வேறு எந்தச் சூழ்நிலையில் உணரப்படுவதைவிடக் கூரியதாகவும், பெரியதாகவும் இருக்கிறது என நான் நினைக்கிறேன். செல்வம் இழந்தவனை உற்றாரும், நண்பர்களும் அவமதிக்கின்றனர்.(34) பல்வேறு வகைகளில் ஆயிரக்கணக்கான அவமதிப்புகளும், அதற்கு மேலான வலிநிறைந்த குற்றங்கள் பலவும் உடைமையிலேயே உள்ளன. மறுபுறம், செல்வத்தில் வசிக்கும் சிறு மகிழ்ச்சியும் கூட வலி மற்றும் துன்பத்துடன் கலந்தே இருக்கிறது[9].(35)செல்வம்படைத்தவன் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கள்வர்களால் கொல்லப்படுகிறான், அல்லது பல்வேறு வகைக் கடுமைகளால் அவன் பீடிக்கப்படுகிறான், அல்லது எப்போதும் அச்சத்தால் நிறைந்திருக்கிறான்.(36) நீண்ட காலத்திற்குப் பிறகு, இறுதியாக, செல்வத்தில் விருப்பம் என்பது துன்பத்தால் நிறைந்தது என்பதைப் புரிந்து கொண்டேன். ஓ! ஆசையே, எந்த நோக்கத்தில் நீ உன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கிறாயோ, அதையே நீ என்னைத் தொடரும்படி வற்புறுத்துகிறாய். நீ தீர்மானமில்லாமல் இருக்கிறாய். நீ ஒரு முட்டாள். நீ நிறைவடைவதற்குக் கடினமானவன். உன்னை நிறைவு செய்ய முடியாது. நீ நெருப்பைப் போல எரிந்து கொண்டிருக்கிறாய்.(37) (ஒரு பொருளைத் தொடர்வதில்) அடைவதற்கு அஃது எளிதானதா, கடினமானதா என்று நீ விசாரிப்பதில்லை. நீ பாதாளத்தைப் போலவே விளிம்பு வரை நிறைவுசெய்யப்பட முடியாதவன். நீ என்னைத் துன்பத்தில் மூழ்கடிக்க விரும்புகிறாய். ஓ! ஆசையே, இந்த நாள் முதல் நான் உன்னுடன் வாழ இயலவனாகிறேன்.(38) என் உடைமையை இழந்ததால் முதலில் துன்பமடைந்த நான், இப்போது பற்றுகளில் இருந்து முற்றாக விடுபடுவதில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறேன். உன்னையும், உன்னைத் தொடர்ந்து வருபவற்றையும் நான் இந்தக் கணமுதல் ஒருபோதும் நினைக்க மாட்டேன்.(39) உன் காரியத்தில் இந்தப் பெருந்துன்பத்தை ஏற்கனவே நான் உணர்ந்திருக்கிறேன். (இப்போது) நுண்ணறிவற்றவனாக நான் என்னைக் கருதவில்லை. என் உடைமையை இழந்ததன் விளைவால் துறவைப் பின்பற்றப் போகும் நான், அனைத்து வகை நோயிலிருந்தும் விடுபட்டவனாவேன்.(40)

ஓ! ஆசையே, என் இதயத்தில் இருக்கும் விருப்பங்கள் அனைத்தையும் உன்னோடு சேர்த்து நான் கைவிடப்போகிறேன். நீ மீண்டும் என்னுடன் வசிக்கமாட்டாய், அல்லது என்னோடு விளையாட மாட்டாய்.(41) என்னைக் குறித்துத் தவறாகப் பேசுவோரையோ, அவதூறாகப் பேசுவோரையோ நான் மன்னிப்பேன். தீங்கிழைக்கப்படும்போதும் நான் தீங்கிழைக்க மாட்டேன். வெறுப்புணர்வால் எனக்கு ஏற்பில்லாத வார்த்தைகளை யாரும் பேசினாலும், அவ்வார்த்தைகளை அலட்சியம் செய்து, ஏற்புடைய வார்த்தைகளிலேயே நான் அவனிடம் பேசுவேன். நிறைவான இதயத்துடனும், சுகமான புலன்களுடனும் என்னால் அடையப்படுபவற்றைக் கொண்டு மட்டுமே நான் எப்போதும் வாழப்போகிறேன்.(42) என் எதிரியான உன்னால் ஊக்குவிக்கப்படும் எந்த விருப்பத்திலும் நான் பங்கேற்கமாட்டேன். பற்றிலிருந்து விடுதலை, ஆசை துறப்பு, மனநிறைவு, அமைதி, வாய்மை, தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, உலகளாவிய கருணை ஆகிய பண்புகள் இப்போது என்னிடம் வந்திருக்கின்றன.(43) எனவே, ஆசை, காமம், தாகம், துயர்மிக்கநிலை ஆகியன என்னைத் தவிர்க்கட்டும். நான் இப்போது நற்பண்பின் பாதையைப் பின்பற்றுகிறேன்.(44) ஆசை, காமம் ஆகியவற்றைக் கைவிட்ட எனக்கு இப்போது மகிழ்ச்சி பெரிதாக இருக்கிறது. காமத்தின் ஆதிக்கத்துக்கு ஒருபோதும் இனி வசப்படாமல், தூய்மையற்ற ஆன்மா கொண்ட ஒரு மனிதனைப் போல இனி துன்பத்தில் உழலமாட்டேன்.(45)

ஒருவன் கைவிடப்போகும் ஆசைகளின் அளவின்படி அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான். உண்மையில், ஆசையின் ஆதிக்கத்திற்கு வசப்படுபவன் எப்போதும் துன்பத்திலேயே உழல்கிறான்.(46) ஆசை தொடர்பான எந்த விருப்பங்களையெல்லாம் ஒரு மனிதன் கைவிடுகிறானோ, அவை அனைத்தும் ஆசையின் பண்பைக் கொண்டவை {ரஜோ குணத்தைச் சார்ந்தவை}. கவலை, நாணமின்மை, நிறைவின்மை ஆகிய அனைத்தும் ஆசை மற்றும் செல்வத்தில் இருந்தே எழுகின்றன.(47) கோடை காலத்தில் குளிர்ந்த தடாகத்தில் மூழ்கும் மனிதனைப் போல நான் பிரம்மத்திற்குள் இப்போது நுழைகிறேன். செயலை நான் தவிர்க்கிறேன். துயரத்தில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன். என்னிடம் இப்போது தூய மகிழ்ச்சி வருகிறது.(48) ஆசையின் நிறைவின் மூலம் விளையும் இன்பநிலை, அல்லது, சொர்க்கத்தில் ஒருவன் அனுபவிக்கும் தூய இன்ப நிலை ஆகியவை, தாக வகைகள் அனைத்தையும் கைவிடுவதால் எழும் பேரின்பத்தின் பதினாறில் ஒரு பங்குக்கும் ஈடாகாதவையாகும்.(49) ஆசையின் கொள்கையைக் கொன்று, கசந்த எதிரியான உடலை ஏழின் தொகையாக்கி, பிரம்மம் எனும் அழிவில்லா நகரத்திற்குள் நுழைந்து ஒரு மன்னனைப் போல நான் என் நாட்களைக் கடத்தப்போகிறேன்” என்றார் {மங்கி}[10].(50)இத்தகைய நுண்ணறிவைச் சார்ந்த மங்கி, பற்றுகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, உயர் இன்ப நிலையின் வசிப்பிடமான பிரம்மத்தை அடைந்தார்.(51) உண்மையில், மங்கி தன் காளைகள் இரண்டை இழந்ததன் விளைவால் அழிவின்மையை அடைந்தார். உண்மையில், அவர் ஆசையின் வேர்களை அறுத்ததால், அதன் மூலமே அவர் அந்த உயர்ந்த பேரின்பத்தை அடைந்தார்” என்றார் {பீஷ்மர்}.(52)

போத்யர்! – சாந்திபர்வம் பகுதி – 178-மிதிலையின் மன்னன் ஜனகனின் அவதானிப்புகளையும், பழங்காலத்தில் யயாதிக்கும் முனிவர் போத்யருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; போத்யரின் ஐந்து ஆசான்கள்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பழங்கதையில் ஆன்ம அமைதியை அடைந்தவனும், விதேஹர்களின் ஆட்சியாளனுமான ஜனகனால் பாடப்பட்ட சுலோகம் இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(1) அந்த ஏகாதிபதி {ஜனகன்}, “என் செல்வம் அளவற்றது. அதே வேளை நான் எதையும் கொண்டிருக்கவில்லை. (என் நாடான) மிதிலை மொத்தமும் எரிந்து போனாலும் எனக்கு எந்த இழப்பு இல்லை” என்று சொன்னான் {ஜனகன்}.(2)

பற்றிலிருந்து விடுபடுவது என்ற இது தொடர்பாகவே போத்யரின் உரையும் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா அதைக் கேட்பாயாக. ஒருகாலத்தில் நகுஷனின் அரச மகன் (யயாதி), ஆசையைக் கைவிட்டதன் விளைவாக ஆன்ம அமைதியை அடைந்தவரும், சாத்திரங்களை அணுக்கமாக அறிந்தவருமான முனிவர் போத்யரிடம் கேள்வி கேட்டான்.(4)

அந்த ஏகாதிபதி {யயாதி}, “ஓ! பெரும் ஞானியே, அமைதி குறித்து எனக்கு அறிவுரைகளை வழங்குவீராக. செயல்பாடுகள் எவற்றிலும் ஈடுபடமாலும், ஆன்ம அமைதியுடனும் எந்த அறிவைச் சார்ந்து நீர் இவ்வுலகில் திரிகிறீர்?” என்று கேடாடன்.(5)

போத்யர் {யயாதியிடம்}, “நான் பிறரின் அறிவுரைகளின்படியே என்னை நடத்திக் கொள்கிறேன், ஆனால் பிறருக்கு ஒருபோதும் நான் அறிவுரைகள் வழங்குவது கிடையாது. எனினும், (எதைக் கொண்டு என் நடத்தை கட்டமைக்கப்பட்டுள்ளதோ அந்த) அறிவுரைகளின் குறியீடுகளைக் குறிப்பிடுகிறேன். அதன் கருத்தை நீ தானாக அறிந்து கொள்வாயாக.(6) பிங்களை, அன்றில்[1]பாம்பு, காட்டின் வண்டுகள், (பின்வரும் கதையில் உள்ள) கணைகள் செய்பவன், (பின்வரும் கதையில் உள்ள) கன்னிகை ஆகிய இந்த ஆறுபேரும் எனக்கு ஆசான்களாவர்” என்றார் {போத்யர்}.(7)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, (இதயத்தைக் கலங்கடிப்பதில்) நம்பிக்கையானது {எதிர்பார்ப்பானது} மிகப் பலமிக்கதாகும். நம்பிக்கையிலிருந்து {எதிர்பார்ப்பிலிருந்து} விடுபடுவதே உயர்ந்த இன்பநிலையாகும். எதிர்பார்ப்பில்லாத அளவுக்கு நம்பிக்கையைக் குறித்த பிங்களை அமைதியாக உறங்கினாள்.(8) அலகில் இறைச்சியைக் கொண்டிருந்த அன்றிலைக் கண்டு பிற பறவைகள், வேறு இறைச்சி எதையும் காணாமல், அதைத் தாக்கி அழித்தன. ஒரு குறிப்பிட்ட அன்றிலானது, இறைச்சியை மொத்தமாகத் தவிர்த்து இன்பத்தை அடைந்தது[2].(9) தனக்கென வீட்டைக் கட்டிக் கொள்வது ஒருவனுக்குத் துன்பத்தை உண்டாக்குமேயன்றி இன்பத்தையல்ல. மற்றொரு உயிரினத்தின் வசிப்பிடத்தைத் தனதாக எடுத்துக் கொள்ளும் பாம்பு இன்பமாக வாழ்கிறது.(10)பிச்சையெடுக்கும் நிலையை அடைந்த தவசிகள், எந்த உயிரினத்திற்கும் தீங்கேற்படுத்தாமல் காட்டில் உள்ள வண்டுகளைப் போல மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.(11) கணைகளைச் செய்யும் ஒருவன் தன் அருகே மன்னன் கடந்து செல்வதையும் கவனிக்காத அளவுக்குத் தன் பணியில் ஆழ்ந்த கவனத்துடன் ஈடுபட்டு வந்தான்.(12) பலர் ஒன்றுகூடியிருக்கும்போது, சச்சரவுகள் உண்டாகும். இருவர் ஒன்றாக வசித்தால், நிச்சயம் உரையாடுவார்கள். எனினும், ஒரு கதையின் வரும் கன்னிகையின் மணிக்கட்டில் உள்ள {ஒற்றை} சங்கு வளையலை {சங்குகளாலான வளையலைப்} போல நான் தனியாகத் திரிந்து வருகிறேன்” என்றார் {பீஷ்மர்}[3].(13)(இந்தக் கதை மிகப் பழமையானது; இது பாகவதத்தில் முழுமையாகச் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில், தன் தந்தையின் இல்லத்தில் வசித்து வந்த ஒரு கன்னிகை, எண்ணற்ற பிராமணர்களுக்கு ரகசியமாக உணவளிக்க விரும்பினாள். களஞ்சியத்தில் இருந்து தானியத்தை எடுக்கும்போது, சங்குகளாலான அவளது வளையல்கள் குலுங்கத்தொடங்கின. அவ்வொலியால் கண்டுபிடிக்கப்படுவோம் என அஞ்சிய அவள் ஒரு கைக்கு ஒரே ஒரு வளையலை மட்டும் விட்டுவிட்டு எஞ்சிய அனைத்தையும் உடைத்துவிட்டாள்”)

ஆஜகர நோன்பு! – சாந்திபர்வம் பகுதி – 179-இவ்வுலகில் வெற்றியடைவதற்குரிய ஒழுக்கத்தையும், சிறந்த கதியை அடைய மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பிரஹலாதனுக்கும், ஆஜகர முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; தவிர்க்கப்பட முடியாத மரணத்தைக் கருத்தில் கொண்டு உலகம் சார்ந்த பொருட்கள் அனைத்திலும் பாகுபாடில்லாமல் இருந்த ஆஜகரர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மனிதர்களின் நடத்தைகளை அறிந்தவரே, எந்த நடத்தையின் மூலம் ஒரு மனிதன் துயரத்தில் இருந்து விடுபட்டு இவ்வுலகில் வெற்றியடைவான் என்பதை எனக்குச் சொல்வீராக. சிறந்த கதியை அடைவதற்கு ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வாறு செயல்பட வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்கதையில் உள்ளதும், பிரஹலாதனுக்கும், தவசி ஆஜகரருக்கும்[1] இடையில் நடந்ததுமான உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில் பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் பிரஹலாதன், பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தூய அமைதியான ஆன்மா கொண்டவருமான, திரிந்து கொண்டே இருப்பவருமான ஒரு பிராமணரிடம் கேள்வி கேட்டான்.(3)பிரஹலாதன் {தவசி ஆஜகரிடம்}, “ஆசையில் இருந்து விடுபட்டு, தூய ஆன்மாவுடன், பணிவு, தற்கட்டுப்பாடு, செயல்பாட்டில் விருப்பமின்மை, வன்மத்தில் இருந்து விடுதலை, ஏற்புடைய பேச்சு ஆகியவற்றுடனும், கண்ணியம், நுண்ணறிவு மற்றும் ஞானத்துடனும் (எளிமையாக) ஒரு குழந்தையைப் போல நீர் வாழ்கிறீர்.(4) நீர் ஒருபோதும் எந்த வகைப் பொருளை ஈட்டுவதில் மகிழ்ச்சியோ, இழப்பதில் துயரோ கொள்ளவில்லை. ஓ! பிராமணரே, நீர் எப்போதும் நிறைவுடன் இருக்கிறீர், உலகில் உள்ள எதையும் மதிப்பதாகவும் தெரியவில்லை.(5) ஆசை மற்றும் விருப்பத்தின் உந்துதலில் பிற உயிரினங்கள் அனைத்தும் சுமந்து செல்லப்படும்போது, அறம், பொருள், இன்பம் தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளிலும் நீர் முற்றான பாகுபாடின்றி இருக்கிறீர். (கலக்கமடையும் தன்மை இல்லாதவராக) அமைதி நிலையில் நீடித்திருப்பவராக நீர் தெரிகிறீர்.(6) புலன்களுக்குரிய பொருட்கள் அனைத்தையும் அலட்சியம் செய்யும் நீர், விடுதலையடைந்த சுயத்துடன் (எதிலும் பங்கெடுத்துக் கொள்ளாமல்) அனைத்தையும் பார்த்துக் கொண்டே செல்கிறீர்.(7) ஓ! தவசியே, இந்த உமது ஞானம் என்ன? கல்வி என்ன? (எதன் விளைவாக இவையனைத்தும் சாத்தியப்படுகிறதோ அந்த) நடத்தை {ஒழுக்கம்} என்ன? ஓ! பிராமணரே, இஃது எனக்கு நன்மையைச் செய்யும் என்று நீர் நினைத்தால் இதை எனக்குத் தாமதமில்லாமல் சொல்வீராக” என்று கேட்டான் {யயாதி}”.(8)

பீஷ்மர் தொடர்ந்தார், “உலகக் கடமைகளை அறிந்தவரும், நுண்ணறிவுமிக்கவருமான அந்தப் பிராமணர் {ஆஜகர்}, பிரஹலாதனால் இவ்வாறு கேட்கப்பட்டுப் பெரும் முக்கியத்துவத் வாய்ந்த, இனிய வார்த்தைகளில் அவனுக்குப் பதிலளித்தார்.(9)

{தவசி ஆஜகர்}, “ஓ! பிரஹலாதா, உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி, சிதைவு, மரணம் ஆகியவை, (புத்திக்கு) எட்டக்கூடிய எந்தக் காரணமும் இல்லாதிருப்பதைப் பார். இந்தக் காரணத்திற்காகவே நான் இன்பத்திலோ, துன்பத்திலோ ஈடுபடுவதில்லை[2].(10) அண்டத்திலுள்ள (செயல்பாடுகளுக்கான) மனச்சார்புகள் அனைத்தும், உயிரினங்களின் (உள்ளுறை) இயல்புகளில் இருந்து பாய்வது காணப்படுகிறது. (அண்டத்தில் உள்ள) அனைத்துப் பொருட்களும், அதனதன் இயல்புகளைச் சார்ந்தவையாக இருக்கின்றன. எனவே, நான் எதிலும் திளைப்படைவதில்லை[3].(11) ஓ! பிரஹலாதா, அனைத்து வகைச் சேர்க்கையும், பிரிவின் இயல்திறனை {நாட்டத்தை} கொண்டவையாகும். அனைத்து உடைமைகளும் நிச்சயம் முடிவில் அழிவடையும். எனவே நான் எந்தப் பொருளையும் அடைவதில் என் இதயத்தை ஒருபோதும் நிலைநிறுத்துவதில்லை.(12) பண்புகளைக் கொண்ட அனைத்துப் பொருட்களும் அழிவடையப் போவது நிச்சயம். பொருட்களின் தோற்றம் மற்றும் முடிவு ஆகிய இரண்டையும் அறிந்த (என்னைப் போன்ற) ஒருவனுக்கு என்ன எஞ்சியிருக்கிறது?(13)பெருங்கடலின் நீரிலுண்டான பெரிய அல்லது சிறிய பொருட்கள் அனைத்திற்கும் முடிவு காணப்படுகிறது.(14) ஓ! அசுரர்களின் தலைவா {பிரஹலாதா}, நிலத்தைச் சார்ந்த அசைவன, அசையாதன ஆகிய பொருட்கள் அனைத்துக்கும் மரணம் ஏற்படுவதை நான் வெளிப்படையாகக் காண்கிறேன்.(15) ஓ! தானவர்களில் சிறந்தவனே, வானத்தில் பறக்கும் சிறகு படைத்த பலமான உயிரினங்களுக்கும் உரிய காலத்தில் மரணம் நேர்கிறது.(16) ஆகாயத்தில் நகர்ந்து வரும் பெரியனவும், சிறியனவுமான ஒளிக்கோள்களும் அவற்றின் காலம் நேர்கையில் கீழே வீழ்கின்றன.(17) படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மரணத்திற்கு ஆட்படக் கூடியன என்பதைக் கண்டு, அனைத்துப் பொருட்களும் அதே இயல்பைக் கொண்டனவே என்று நினைத்து, அறிவை அடைந்து, இதயத்தில் எந்தக் கவலையும் இல்லாமல் நான் அமைதியாக உறங்குகிறேன்.(18)

எந்தச் சிரமமுமின்றி அதிகமான உணவை அடைந்தால், அதை அனுபவிக்க நான் தயங்குவதில்லை. மறுபுறம், பல நாட்கள் சேர்ந்தாற்போல எதையும் உண்ணாமல் கடந்திருக்கிறேன்.(19) சில வேளைகளில் மக்கள் விலைமதிப்புமிக்க உணவு பொருட்களை அபரிமிதமகாவும், சில வேளைகளில் சிறு அளவும், சில வேளைகளில் சொற்ப அளவிலும் கொடுத்து உண்ணச் செய்கிறார்கள், சில வேளைகளில் எந்த உணவும் எனக்குக் கிடைப்பதில்லை.(20) சில வேளைகளில் நான் ஒரு தானியத்தின் ஒரு பகுதியை {நொய்யை} மட்டும் உண்கிறேன்; சில வேளைகளில் எண்ணெய் எடுக்கப்பட்ட காய்ந்த பிண்ணாக்கையும் உண்பேன். சில வேளைகளில் அரிசியும், இறைச்சியும், ஆடம்பர வகையிலான பிற உணவும் உண்பேன்.(21) சில வேளைகளில் சிறந்த வகையிலான உயர்வான படுக்க விரிப்பில் உறங்குகிறேன். சில வேளைகளில் வெறுந்தரையில் உறங்குகிறேன். சில வேளைகளில் என் படுக்கை அற்புதமான மாளிகையிலோ, அறையிலோ இருக்கிறது.(22) சில வேளைகளில் மரவுரி அணிகிறேன், சில வேளைகளில் சணலால் செய்யப்பட்ட ஆடைகளையும், சில வேளைகளில் பட்டாடைகளையும், சில வேளைகளில் மான் தோல்களையும், சில வேளைகளில் விலைமதிப்புமிக்க வையிலான ஆடைகளையும் உடுத்துகிறேன்.(23) முயற்சி இன்றி என்னால் அடையப்படும், அறத்திற்கு இசைவான எந்த இன்பங்களையும் நான் ஒருபோதும் புறக்கணிப்பது கிடையாது. அதே வேளையில் அடைவதற்கரிதான அத்தகைய பொருட்களை அடைய நான் முயற்சி செய்வதும் கிடையாது.(24) நான் பின்பற்றி வரும் கடும் நோன்பு ஆஜகரம் என்றழைக்கப்படுகிறது[4]. இந்த நோன்பால் அழியாத்தன்மையை அடையமுடியும். அது மங்கலமானதும், துன்பமற்றதுமாகும். அஃது ஒப்பற்றதும், தூய்மையானதுமாகும். அது நல்லோரின் ஆலோசனைகளுக்கு இசைவானதாகும். அதை ஒருபோதும் பின்பற்றாத மூடர்களால் அஃது அங்கீகரிக்கப்படுவதில்லை. தூய்மையான இதயத்துடன் நான் என்னை அந்த ஒழுக்கத்தின்படியே அமைத்துக் கொள்கிறேன்.(25)என் மனம் ஒருபோதும் இந்நோன்பிலிருந்து பிறழ்வதில்லை. என் வகைக்கான நடைமுறைகளில் இருந்து நான் பிறழ்ந்ததில்லை. நான் அனைத்தையும் தவிர்க்கும் நிலையில் இருக்கிறேன். நான் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் அறிவேன். அச்சம், கோபம், காமம், பிழையான தீர்மானம் ஆகியவை இல்லாமல், தூய இதயத்துடன் நான் இந்த நோன்பைப் பின்பற்றுகிறேன்.(26) இந்நோன்பில் உணவு, பானம் மற்றும் இன்பத்துக்குரிய பிற பொருட்களில் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. அனைத்தும் விதியைச் சார்ந்திருப்பது போல, எங்களைப் போன்றவர்களுக்குக் காலம் மற்றும் இடத்தைக் கருத்தில் கொள்ளும் நடைமுறை ஏதும் கிடையாது. நான் பின்பற்றும் நோன்பானது, இதயத்தின் உண்மையான மகிழ்ச்சிக்குப் பங்களிக்கிறது. தீயோரால் இஃது ஒருபோதும் பின்பற்றப்படுவதில்லை. நான் தூய இதயத்துடன் இதைப் பின்பற்றுகிறேன்.(27) காமத்தால் தூண்டப்பட்ட மனிதர்கள், பல்வேறு வகைகளில் செல்வத்தைப் பின்தொடர்ந்து செல்கின்றனர். அந்தத் தொடர்ச்சியில் கலங்கடிக்கப்படும் அவர்கள், கவலையுடன் மனச்சோர்வை அடைகின்றனர். பொருட்களின் உண்மைகளை ஊடுருவியிருக்கும் என் நுண்ணறிவின் துணையால் இவை அனைத்தையும் குறித்து முறையாகச் சிந்தித்து, தூய இதயத்துடன் நான் இந்நோன்பைப் பின்பற்றுகிறேன்.(28) துன்பத்தில் இருக்கும்போது, செல்வத்தை அடைவதற்காக நல்ல மற்றும் தீய மனிதர்களை நாடுவோரை நான் கண்டிருக்கிறேன். அமைதியில் பற்றுடன், விருப்பங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(29) இன்பம், துன்பம், இழப்பு, லாபம், பற்று, துறவு, மரணம், வாழ்வு ஆகிய அனைத்தும் விதியால் விதிக்கப்படுகின்றன என்பதை வாய்மையின் உதவியால் கண்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(30)

அச்சம், பற்று, தீர்மானப்பிழை, செருக்கு ஆகியவை இல்லாமலும், ஞானம், நுண்ணறிவு, புரிதல், அமைதியில் பற்று ஆகியவற்றுடனும், பெரும்பாம்புகள் தன்னிடம் வரும் கனியில் அசையாமல் இன்புற்றிருக்கின்ற என்பதைக் கேட்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(31) படுக்கை மட்டும் உணவில் எந்த வகைக் கட்டுப்பாடுகளுமில்லாமல், என் இயல்புடன் கூடிய தற்கட்டுப்பாடு, சிக்கனம், தூய நோன்புகள், வாய்மை, ஒழுக்கத்தூய்மை ஆகியவற்றுடன், (எதிர்காலப் பயன்பாட்டுக்கென) செயல்களின் வெகுமதிகளில் எந்த ஆசையுமில்லாமல் மகிழ்ச்சியுடனும், தூய இதயத்துடனும் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(32) ஆசைக்குரிய நோக்கங்கள் விலக்கப்பட்டதன் விளைவால் சோகத்தின் காரணங்கள் அனைத்தும் என்னை விட்டுப் பறந்தோடிவிட்டன. ஒளியின் இணக்கத்தை அடைந்த பிறகு, தாகமுள்ளதும், கட்டுப்பாடில்லாதும், (முறையான பண்பாட்டில், வெளி பொருட்களின் எந்தத் தேவையுமின்றி) தன்னைச் சார்ந்திருப்பதில் கட்டுப்படக்கூடியதுமான என் ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதற்காகத் தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(33)

என் இதயம், மனம், சொற்கள் ஆகியவை எவற்றுக்கு வழிவகுக்குமோ, அவற்றில் கவனம் கொள்ளாமல், அவை தொடர்பான மகிழ்ச்சியானது, அடைவதற்குக் கடினமானது, காலத்தைப் பொறுத்தவரையில் கடந்து போக்ககூடியது என்ற இரண்டையும் கண்டு, தூய இதயத்துடன் இந்நோன்பை நான் பின்பற்றுகிறேன்.(34) இக்காரியத்தைப் பொறுத்தவரையில், பெரும் நுண்ணறிவைக் கொண்ட கல்விமான்கள், தங்கள் சாதனைகளை அறிவிக்க விரும்பி, தங்கள் கோட்பாடுகளை நிறுவும்போது, பிறரின் கோட்பாடுகளை நிந்தித்து, சச்சரவுகளைத் தீர்க்க முடியாத இவை தொடர்பான இதையும் அதையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.(35) மூடர்கள் சரியான ஒளியில் இந்நோன்பைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். எனினும், இஃதுவே அறியாமைக்கு அழிவைத் தரும் என நான் காண்கிறேன். இஃது அழிவின்மை நிறைந்தது, பல்வேறு வகையான தீமைகளுக்குத் தீர்வானது எனக் கருதி மனிதர்களுக்கு மத்தியில் திரியும் நான், குற்றங்கள் அனைத்தையும் அடக்கி, (உலகம் சார்ந்த நன்மைகளில் நான் கொண்ட) தாகங்கள் அனைத்தில் இருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன்” என்றார் (ஆஜகரர்}”.(36)

பீஷ்மர் தொடர்ந்தார், “பற்றிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு அச்சம், காமம், மடமை, கோபம் ஆகியவை இல்லாமல், இந்த ஆஜகர நோன்பைப் பின்பற்றும், அல்லது இவ்வாறு அழைக்கப்படுவது போலவே இந்த விளையாட்டில் ஈடுபடும் உயர் ஆன்ம மனிதன், நிச்சம் பெரும் இன்பத்தில் தன் நாட்களைக் கழிப்பதில் வெல்கிறான்”.(37)

காசியபன்! – சாந்திபர்வம் பகுதி – 180-மனிதர்களின் புகலிடம் எது எனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அறிவே இன்பத்திற்குக் காரணம் என்பதை விளக்க இந்திரனுக்கும், காசியபருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ பாட்டா, உற்றார், செயல்கள், செல்வம், ஞானம் ஆகிய இவற்றில் ஒரு மனிதன் எதைப் புகலிடமாகக் கொள்ள வேண்டும்? என்னால் கேட்கப்படும் இதற்குப் பதில் சொல்வீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஞானமே உயிரினங்களின் புகலிடமாகும். ஞானமே உடைமைகளில் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஞானமே உலகில் பேரின்ப நிலையாகும். ஞானமே சொர்க்கமாகும் என்பது நல்லோர் மற்றும் அறவோரின் மதிப்பீடாகும்.(2) பலி, பிரஹலாதன், நமுசி, மங்கி ஆகியோர் (உலகம்) சார்ந்த செழிப்பை இழந்தபோதும் ஞானத்தின் மூலமே பேரின்பத்தை அடைந்தனர். ஞானத்தைவிட மேன்மையானதாக வேறு என்ன இருக்கிறது?(3) இது தொடர்பாக இந்திரனுக்கும், காசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா அதைக் கேட்பாயாக.(4)

ஒரு காலத்தில் செழிப்புமிக்க வைசியன் ஒருவன், தன் செழிப்பை அனுபவித்துக் கொண்டு, தன் செல்வாக்கில் செருக்குடன், தன் தேரைக் கவனமில்லாமல் செலுத்தி, தவங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், காசியபர் என்ற பெயரைக் கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான ஒரு முனிவரின் மகனைக் கீழே தள்ளிவிட்டான்.(5) தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்த அந்த இளைஞன், வலி மிகுதியாலும், கோபவசப்பட்டு, துன்பத்தின் ஆளுகையின் கீழ் தீர்மானமுள்ளவனாக, “நான் என் உயிரை விடப் போகிறேன். ஓர் ஏழையின் உயிருக்கு இவ்வுலகில் எந்தத் தேவையும் இல்லை” என்று சொன்னான்.(6)

கலக்கமடைந்தவனான அந்தப் பிராமணன், சக்தியை இழந்து, மரணத் தருவாயில் அமைதியாகக் கிடந்த போது, நரியின் வடிவில் காட்சியில் தோன்றிய இந்திரன், அவனிடம்,(7) “(தாழ்ந்த) உயிரினங்கள் அனைத்தும் மனித குலத்தில் பிறக்க ஆசைப்படுகின்றன. மேலும் மனிதர்களில், பிராமண நிலையே மிகவும் விரும்பத்தக்கதாகும்.(8) ஓ! காசியபா, நீ மனிதனாக இருக்கிறாய், மனிதர்களிலும் ஒரு பிராமணனாக இருக்கிறாய். பிராமணர்களிலும், நீ வேதங்களை அறிந்தவனாக இருக்கிறாய். அடைதற்கரிய நிலையை அடைந்திருக்கும் உனக்கு, மடமையால் உயிரை விடுவது தகாது.(9) (உலகம் சார்ந்த) அனைத்து வகை உடைமைகளும் செருக்கு நிறைந்தவையே. அவ்வகையில் ஸ்ருதிகளின் தீர்மானமே முற்றிலும் உண்மையாகும். உயிரைக் கைவிடும் இத்தகைய தீர்மானத்தை அமைத்ததில் நீ காமத்துடன் செயல்படுகிறாய்.(10)

ஓ!, கரங்களைக் கொண்டவர்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகிறார்கள். கரங்களைக் கொண்ட உயிரினங்களின் நிலையை அடைய ஆவலுடன் நான் விரும்புகிறேன்.(11) செல்வங்களில் நீ பேராசை கொள்வதைப் போலவே நாங்களும் கரங்களில் பேராசை கொள்கிறோம். கரங்களை அடைவதைவிட மதிப்பிக்க உடைமை வேறு ஏதும் இல்லை.(12) ஓ! பிராமணா, என் உடலில் நுழைந்திருக்கும் இந்த முள்ளை என்னால் பிடுங்க முடியாது, அல்லது, என்னைக் கடித்துப் பெரிதும் துன்புறுத்திக் கொண்டிருக்கும் இந்தப் பூச்சிகளையும், புழுக்களையும் என்னால் நசுக்க முடியாது.(13) பத்து விரல்களுடன் கூடிய இரு கரங்கள் கொடுக்கப்பட்டவர்கள், தங்கள் அங்கங்களைக் கடிக்கும் புழுக்களை நசுக்கி வீசுகிறார்கள்.(14) அவர்கள், மழை, குளிர் மற்றும் வெப்பத்திற்காகத் தங்களுக்காக உறைவிடங்களைக் கட்டிக் கொள்கிறார்கள். சிறந்த உடைகள், நல்ல உணவு, வசதிமிக்கப் படுக்கைகள், சிறந்த உறைவிடங்களை அனுபவிக்கவும் செய்கிறார்கள்.(15)

கரங்களைக் கொண்டோர், பசுக்கள் மற்றும் பிற விலங்குகளால் பயன்பெற்று, சுமை சுமக்கவோ, தங்கள் வாகனங்களை இழுக்கவோ அவற்றைப் பயன்படுத்தி, (தங்கள் சொந்த காரியங்களுக்காக) பல்வேறு வழிமுறைகளில் அந்த விலங்குகளைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு இந்தப் பூமியில் வாழ்கிறார்கள்.(16) நாவற்றவையும், ஆதரவற்றவையும், சொற்ப பலம் கொண்டவையும், கரங்களற்றவையுமான அந்த உயிரினங்கள் அனைத்தும், (மேற்குறிப்பிட்டவாறு) பல்வேறு வகையான துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்கின்றன. ஓ! தவசியே, நற்பேற்றினால் நீ அவற்றைப் போன்றவனாக இல்லை.(17) நற்பேற்றினாலேயே நீ நரியாகவோ, புழுவாகவோ, எலியாகவோ, பாம்பாகவோ, தவளையாகவோ, எந்த வகையைச் சேர்ந்த வேறு எந்த விலங்காகவோ பிறக்கவில்லை.(18) ஓ! காசியபா, இந்த அளவு ஈட்டியிருக்கும் நீ மனநிறைவுள்ளவனாக இருக்க வேண்டும். உயிரினங்களுக்கு மத்தியில் நீ மேன்மையான பிராமணனாக இருக்கிறாய் என்ற எண்ணமே எவ்வளவு மகிழ்ச்சியை உனக்கு அளிக்க வேண்டும்?(19) இந்தப் புழுக்கள் என்னைக் கடிக்கின்றன. கரங்கள் இல்லாததால் என்னால் அவற்றை விரட்ட முடியவில்லை. என்னுடைய இந்தப் பரிதாப நிலையைப் பார்.(20)

உண்மையில் நான் என் இருப்புக்காக இன்னும் அதிகமான துன்பங்களில் வீழ்கிறேன், கூடாது என்பதனாலும், பெரும் பாவச் செயல் என்பதனாலுமே, நான் என் உயிரை விடாதிருக்கிறேன்.(21) ஒரு நரியாக இருக்கும் இந்த வகை இருப்புச் சகித்துக் கொள்ள முடியாததாகும். இதேபோன்று துயர இருப்புக்கான பலவகைகளும், அதைவிடத் துயரமான இருப்பு வகைகளும் இருக்கின்றன.(22) பிறப்பால் சில குறிப்பிட்ட வகை உயிரினங்கள் மகிழ்ச்சியாகவும், சில பெருந்துன்பத்திலும் இருக்கின்றன. ஆனால், முற்றான மகிழ்ச்சியை உடைமையாகக் கொண்ட எந்த வகை உயிரினமும் இருப்பதாக நான் காணவில்லை.(23) செல்வத்தை அடையும் மனிதர்கள், அடுத்ததாக அரசுரிமையை விரும்புகின்றனர். அரசுரிமையை அடைந்த பிறகு, அவர்களுடைய அடுத்ததாக அவர்கள் தேவ நிலையை விரும்புகிறார்கள். அந்த நிலையையும் வென்ற பிறகு, அவர்கள் தேவர்களின் தலைமையை அடைய விரும்புகிறார்கள்.(24) (பிறப்பால் நீ பிராமணனாக இருப்பதால்) நீ செல்வந்தனானால், உன்னால் ஒருபோதும் மன்னனாக முடியாது. (உன் பிராமண நிலையானது, தேவ நிலைக்குச் சமமாகவோ, மேன்மையானதாகவோ இருப்பதால்) உன்னால் தேவனாகவும் முடியாது. எவ்வழிமுறையிலாவது (எவ்வழியிலாவது தெய்வீக அருள் கிடைத்து மேன்மையான நிலையை அடைவதற்குப் பதில்) நீ தேவனாகிவிட்டால், நீ தேவர்களின் தலைமைப் பதவிக்கு ஆசைப்படலாம். அப்போதும் நீ நிறைவடையமாட்டாய்.(25)

விரும்பிய பொருட்களை அடைவதால் மனநிறைவு விளையாது. அதிகமாக நீரை அருந்துவதால் தாகம் தணியாது[1]. அடைவதில் உள்ள தாகம், புதுவிறகுகள் இடப்படும் நெருப்பைப் போல, இன்னும் புதியவற்றை அடையவே சுடர்விடும்.(26) உன்னில் கவலை இருக்கிறது. ஆனால் உன்னில் மகிழ்ச்சியும் இருக்கிறது. இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டும் உன்னிலேயே இருக்கின்றன. பிறகு, நீ ஏன் துன்பவசப்படுகிறாய்?(27) ஒருவன் தனது விருப்பங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தின் புலன்களையும், அறிவையும், கூண்டில் உள்ள பறவைகளைப் போல அடைத்து வைக்க வேண்டும்.(28) இரண்டாவது தலையையோ, மூன்றாவது கரத்தையோ வெட்ட முடியாது. இருப்பில் இல்லாதவற்றால் அச்சத்தை உண்டாக்க முடியாது.(29) ஒரு குறிப்பிட்ட பொருள் வழங்கும் இன்பத்தை அறியமுடியாத ஒருவன் அந்தப் பொருளை ஒருபோதும் விரும்பமாட்டான். தீண்டல், பார்வை, கேள்வி ஆகியவை கொடுக்கும் இன்பங்களை உண்மையாக அனுபவிப்பதில் இருந்தே ஆசைகள் எழுகின்றன.(30)வாருணி என்றழைக்கப்படும் மதுவின் சுவையையோ, லட்வாகம் என்றழைக்கப்படும் பறவைகளின் இறைச்சியின் சுவையையோ குறித்து உனக்குக் கருத்தேதும் இருக்க முடியாது. எந்தப் பானமும், எந்த உணவும் இவைற்றைவிட இனிமையாக இருக்க முடியாது.(31) ஓ! கசியபா, நீ ஒருபோதும் சுவைத்ததில்லை என்பதால், மனிதர்களுக்கு மத்தியில் உள்ள பிறவகை மேன்மையான பானங்களையும், உணவையும் உனக்குத் தெரியாது.(32) எனவே, சுவைக்காமல் இருப்பது, தீண்டாமல் இருப்பது, பார்க்காமல் இருப்பது ஆகியவையே மகிழ்ச்சியை அடைவதற்கான மனிதனின் நோன்பாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.(33) கரங்களைக் கொண்ட உயிரினங்கள் பலமிக்கவையாகவும், செல்வமீட்டுபவையாகவும் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. மரணம், சிறை மற்றும் இன்னும் பலவித சித்திரவதைகளால் (தங்கள் குலத்தினர் கைகளாலேயே) மீண்டும் மீண்டும் துன்புற்று, மனிதர்களே மனிதர்களால் அடிமைத்தன்மையை அடைகின்றனர். அவர்களது நிலை இவ்வாறிருப்பினும் (அதற்கு வருந்தாமல்), சிரித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இன்பங்களில் ஈடுபடுகின்றனர்.(34,35)

இன்னும் பிறர், கரங்களின் வலிமையைக் கொண்டவர்களாக, அறிவு படைத்தவர்களாக, பெரும் மனோசக்தி கொண்டவர்களாக இருப்பினும், நிந்திக்கத்தக்க, பாவகர, பரிதாபகரமான தொழில்களையே பின்பற்றுகின்றனர்.(36) (கண்ணியமிக்க) வேறு தேவைகளுக்காக அத்தகைய தொழில்களிலிருந்து மாறும் அவர்கள், (முற்பிறவின்) செயல்களாகக் கட்டடப்பட்டவர்களாகவும், விதியின் சக்திக்குக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.(37) மிகத் தீய மனிதர்களான புல்கஸனும், சண்டாளனும்[2] கூடத் தன் உயிரைக் கைவிட ஒருபோதும் விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் வகைப் பிறப்பில் நிறைவுடன் இருக்கிறார்கள். இக்காரியத்தில் மாயையைப் பார்.(38) கரங்களற்றவர்களாக, வாதநோயால் தாக்கப்பட்டவர்களாக, பிற வகை நோய்களால் பீடிக்கப்பட்டவர்களாக உன் இனத்தில் இருப்போரைக் காண்டால், நீ உன்னை மகிழ்ச்சி மிக்கவனாகவும், உன் வகையில் மதிப்புமிக்க உடைமைகளைக் கொண்டவனாகவும் உன்னைக் கருதிக் கொள்வாய்.(39) உன் மறுபிறப்பாள {பிராமண} உடல் பாதுகாப்பாக, நலமாக, நோயற்றதாக, அங்கப் பழுது ஏதும் அற்றதாக இருந்தால், மனிதர்களுக்கு மத்தியில் ஒருபோதும் நீ நிந்திக்கப்பட மாட்டாய் என்பது நிச்சயம்.(40)ஓ! பிராமணா, உண்மையின் அடிப்படையில் காணப்பட்ட எந்தப் பழி இருந்தாலும், உன்னை வர்ணத்திலிருந்து விலக்கினாலும் உன்னோடு ஒட்டியிருக்கும் உன் உயிரை விடுவது உனக்குத் தகாது. எழுவாயாக, அறம் பயில்வாயாக. உன் உயிரை விடுவது உனக்குத் தகாது.(41) ஓ! மறுபிறப்பாளனே, நான் சொல்வதைக் கேட்டு, என் சொற்களில் நம்பிக்கை வைத்தால், வேதங்களில் சொல்லப்பட்ட உயர்ந்த அற வெகுமதியை நீ அடைவாய்.(42) வேத கல்வியில் நீ உன்னை நிறுவிக் கொள்வாயாக, புனித நெருப்பை முறையாகப் பராமரிப்பாயாக, வாய்மை, தற்கட்டுப்பாடு, ஈகை ஆகியவற்றை நோற்பாயாக. தற்புகழ்ச்சியுடன் ஒருபோதும் பிறருடன் உன்னை ஒப்பிடாதே.(43) வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்கள், தங்களுக்கும், பிறருக்கும் வேள்விகளைத் தாங்களே செய்யத் தகுந்தவர்களாகி, எந்த வகை வருத்தத்தையும், எந்த வகைத் தீமையையும் அடையாமல் இருக்கலாம்.(44) மங்கலமான திதியில், மங்கலமான நட்சத்திரக்கூட்டத்தில், மங்கலமான நேரத்தில் பிறந்தவர்கள், வேள்விகள் செய்யச் சிறப்பாக முயன்று, ஈகை பயின்று, பிள்ளைகளைப் பெற்று, நற்காரியங்களைச் செய்ய விருப்பமுள்ளவர்களாகப் பேரின்பத்தை அடைவார்கள்.(45) மறுபுறம், தீய நட்சத்திரக்கூட்டங்களில், மங்கலமற்ற திதியில், தீய காலங்களில் பிறந்தவர்கள், வேள்விகளற்றவர்களாக, பிள்ளைகளற்றவர்களாக இறுதியில் அசுர வகையில் வீழ்வார்கள்.(46)

என் முற்பிறவியில் பயனற்ற கல்வியைக் கற்றேன். நான் எப்போதும் காரணங்களைத் தேடுபவனாக, மிகச் சொற்பமான நம்பிக்கைக் கொண்டவனாக இருந்தேன். நான் வேதங்களை அவதூறு செய்பவனாகவும் இருந்தேன். வாழ்வின் நால்வை நோக்கங்கள் அற்றவனாக, கண்ணக்குரிய தெளிவான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட தர்க்க அறிவியலுக்கு அரப்பணிப்புடன் இருந்தேன்.(47) நான் எப்போதும் (சரியாகத் தோன்றும்) காரணங்கள் அடிப்படையிலான வார்த்தைகளைச் சொல்பவனாக இருந்தேன். உண்மையில் என் சபைகளில் நான் எப்போதும் காரணங்களைப் பேசுவேன் (நம்பிக்கையை அல்ல). ஸ்துரிதிகளின் தீர்மானங்களை மதிப்பில்லாமலும், பிராமணர்களிடம் சர்வாதிகத் தொனியில் நான் பேசுவேன்.(48) நான் நம்பிக்கையற்றவனாகவும், அனைத்திலும் ஐயம் நிறைந்தவனாகவும், உண்மையில் அறியாமை கொண்டவனாக இருந்தாலும், கல்வியில் செருக்குடையவனாக இருந்தேன். அந்த என் பாவங்களின் விளைவாலேயே, ஓ! மறுபிறப்பாளனே, இந்தப் பிறவியில் நான் ஒரு நரியின் நிலையை அடைந்தேன்.(49) நூறு பகல்களும், இரவுகளும் ஒரு நரியாக நான் இருந்தால் மீண்டும் மனித நிலையை என்னால் அடைய முடியுமென்றால்,(50) இருப்பின் உண்மை நோக்கங்களில் கவனத்துடன், வேள்விகளிலும், கொடைகளிலும் ஈடுபட்டு மனநிறைவுடன் என் வாழ்வைக் கடத்துவேன். எது அறியப்பட வேண்டும் எது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை நான் அப்போது அறிவேன்” {என்றான் நரியின் வடிவில் இருந்த இந்திரன்}.(51)

இவ்வாறு சொல்லப்பட்ட தவசி காசியபன், “ஓ! அறிவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவனே, இவை யாவற்றிலும் நான் உண்மையில் பெரிதும் ஆச்சரியமடைகிறேன்.” என்று சொல்லி எழுந்தான்.(52)

அறிவில் விரிவடைந்த கண்களுடன் கொண்ட பார்வையில், அந்தப் பிராமணன், தன்னிடம் பேசியது தேவர்களுக்கும், சச்சிக்கும் தலைவனான இந்திரன் என்பதைக் கண்டான்.(53) தன்னைச் சுமக்கும் சிறந்த வகைக் குதிரைகளைக் கொண்ட அந்தத் தேவனைக் {இந்திரனைக்} காசியபன் வழிபட்டான். பிறகு அந்தத் தேவனின் அனுமதியோடு, அந்தப் பிராமணன் தன் வசிப்பிடத்திற்குத் திரும்பினான்” என்றார் {பீஷ்மர்}.(54)

முன்வினைப் பயன்! – சாந்திபர்வம் பகுதி – 181-முற்பிறவியின் நல்வினையும், தீவினையும் அடுத்தப் பிறவியில் அதற்குரிய பலன்களைக் கொடுப்பதன் நிச்சயத் தன்மை; அறம் பயில வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, கொடைகள், வேள்விகள், தவங்கள், ஆசான்களுக்குக் கடமையுணர்வுடன் செய்யக்கூடிய தொண்டுகள் ஆகியவை ஞானத்தையும், உயர்ந்த இன்பத்தையும் உண்டாக்குமா என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மனமானது, ஆசை, கோபம் மற்றும் தீய விருப்பங்களின் நிமித்தமாகப் பாதிப்படைந்தால், அது {மனம்} பாவத்தை நோக்கி நகரும். ஒருவனின் செயல்கள் பாவத்தால் களங்கப்பட்டால், அவன் வலிநிறைந்த {துன்பமிக்க} பகுதிகளில் வசிக்கக் கட்டுப்பட்டவனாவான்.(2) பாவிகள் வறுமையான சூழ்நிலையில் பிறந்து, பஞ்சம், துன்பம், அச்சம், மரணம் ஆகியவற்றின் வேதனைகளுக்கு மீண்டும் மீண்டும் ஆட்படுவார்கள்.(3) தங்கள் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களும், நம்பிக்கையுடன் கூடியவர்களுமான அறம் சார்ந்த செயல்களைச் செய்வோர் {ஆத்திகர்கள்}, செல்வந்தர்களாகப் பிறந்து, விழாக்களிலும், சொர்க்கத்திலும், மகிழ்ச்சியிலும் மீண்டும் மீண்டும் திளைக்கிறார்கள்.(4) நம்பிக்கையில்லாதவர்கள் {நாத்திகர்கள்}, விலங்கிடப்பட்ட கைகளுடனும், ஊனுண்ணும் விலங்குகள், யானைகள், பாம்புகள் மற்றும் கள்வர்களின் விளைவால் பயங்கரம் நிறைந்த பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களைக் குறித்து வேறு என்ன சொல்ல முடியும்?(5)

மறுபுறம், தேவர்களையும், விருந்தினர்களையும் மதிப்போர், ஈகையாளர்கள், நல்லோரையும், நேர்மையானோரையும் விரும்புவோர் ஆகியோர், தங்கள் ஈகைச் செயல்களின் விளைவால், தூய ஆன்மாக்களுக்குச் சொந்தமான இன்பமான வழியில் செல்கின்றனர்.(6) அறத்தை மதிக்காதவர்களான மனிதர்களில் தீயோர், தானியங்களில் பதர்களைப் போலவும், பறவைகளில் கொசுக்களைப் போலவும் ஆகிறார்கள்.(7) செயல்படுபவனுடைய முற்பிறவி செயல்களை அவன் விட்டுச் செல்ல விரும்பினாலும், அவற்றின் {முற்பிறவி செயல்களின்} விளைவால் விதிக்கப்பட்டவையே அவனைப் பின்தொடரும். அவன் உறங்கும்போது, அதுவும் {முன்வினையும்} உறங்குகிறது, அவன் என்ன செய்தாலும் அதுவும் அதையே செய்கிறது[1].(8) அஃது அவனுடைய நிழலைப் போலவே, அவன் ஓயும்போது ஓய்ந்து, செல்லும் போது சென்று, செயல்படும்போது செயல்படுகிறது.(9) ஒரு மனிதன் என்ன செயலைச் செய்தாலும் அதன் கனிகளை அவன் நிச்சயம் அடைவான்.(10)(தங்களுக்குத் தகுந்த வகை இருப்புகளில்) வீழ விதிக்கப்பட்டவையும், தங்கள் செயல்களின் விளைவால் இன்புறவோ, துன்புறவோ விதிக்கப்பட்டவையுமான உயிரினங்கள் அனைத்தையும் காலம் இழுத்துச் செல்கிறது.(11) முற்பிறவியின் செயல்கள், மலர்களையும், கனிகளையும் போல உரிய காலத்தில் தங்கள் விளைவுகளைப் பெருக்கிக் கொண்டு, உரிய காலத்தில் பெரிதான எவ்வகை முயற்சியுமின்றித் தோன்ற ஒருபோதும் தவறுவதில்லை.(12) மதிப்பு, அவமதிப்பு, ஈட்டல், இழப்பு, சிதைவு, வளர்ச்சி ஆகியவை விதிக்கப்பட்டதுபோலவே, முற்பிறவியல் செய்யப்பட்ட செயல்களின் விளைவுகள் (இன்புறுவதாலோ, துன்புறுவதாலோ) தீர்ந்ததும், எவனிடமும் பாயவோ, தோன்றவோ செய்யாது {வினைகள் தீர்நதாலும் புதிதாகச் செய்யப்படும் செயல்களால்} மீண்டும் மீண்டும் நேர்கின்றன[2].(13) தாயின் கருவறையில் இருக்கும் ஓர் உயிரினம் தன் செயல்களின் விளைவுகளால் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் இன்பத்த்திலோ, துன்பத்திலோ இன்புறவோ துன்புறவோ செய்கிறது.(14) குழந்தைப் பருவத்திலோ, இளமைப் பருவத்திலோ, முதுமைப் பருவத்திலோ வாழ்வின் எந்தக் காலத்திலோ நல்ல, அல்லது தீய செயலைச் செய்யும் ஒருவன், தனது அடுத்தப் பிறவியின் அதே காலத்தில் நிச்சயம் அவற்றின் விளைவுகளை அனுபவிக்க நேரிடும்.(15)ஆயிரம் பசுக்களுக்கு மத்தியிலும் தன் தாயை அடையாளம் கண்டு அணுகும் கன்றைப் போல, முற்பிறவியின் செயல்களும், அவற்றைச் செய்தவனைப் புதுப் பிறவியில் அடைகின்றன.(16) (அழுக்கான) துணி, நீரில் அலசப்பட்டால் தூய்மையடைகிறது. அதே போல, வருத்தத்தில் எரியும் மனிதர்களும் உரிய தவங்களின் மூலம் எல்லையில்லா இன்பத்தை அடைகின்றனர்[3].(17) காடுகளில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொள்ள முடிந்தோர், நீண்ட காலத்திற்குத் தவங்களைச் செய்து, தங்கள் பாவங்களைக் கழுவிக் கொண்டு, தங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும் நோக்கங்களை அடையலாம்.(18) வானத்தில் பறவைகளின் பாதையையோ, நீரில் மீன்களின் பாதையையோ யாராலும் குறிக்க முடியாததைப் போல, அறிவால் தூய்மையடைந்த ஆன்மாக்களை அடையும் மனிதர்களின் பாதையும் எவராலும் குறிப்பிடப்பட முடியாது[4].(19) பாவச் செயல்கள் குறித்து இதற்கு மேலும் எந்தக் குறிப்புக்கும், பேச்சுக்கும் அவசியமில்லை. உரிய தீர்மானத்துடனும், தனக்குத் தகுந்த சிறப்பான முறையிலும், ஒருவன் தனக்கு நன்மையானதை செய்து கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளிலேயே ஞானத்தையும், உயர்ந்த இன்பநிலையையும் அடைய முடியும்” என்றார் {பீஷ்மர்}.(20)

படைப்புக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 182-அண்டம் படைக்கப்பட்டது குறித்துப் பிருகு முனிவருக்கும், பரத்வாஜ முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டம் எதிலிருந்து படைக்கப்பட்டது? அழிவு நேரும்போது அது யாரிடம் செல்கிறது? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) உண்மையில், பெருங்கடல், ஆகாயம், மலைகள், மேகங்கள், நிலங்கள், நெருப்பு, காற்று ஆகியவற்றுடன் கூடிய இவ்வண்டம் யாரால் படைக்கப்பட்டது.(2) பொருட்கள் {உயிரினங்கள்} யாவும் எவ்வாறு படைக்கப்பட்டன? இருப்பின் வகைகள் {உயிரினங்களில்} தனித்தனி பிரிவுகள் {ஜாதிகள்} எவ்வாறு ஏற்பட்டன? அறம் மற்றும் மறம் குறித்த விதிகளும், அவற்றின் தூய்மையும், மாசும் எவ்வாறு உண்டாகின? இறப்பவர்கள் எங்கே செல்கிறார்கள்? இதைக் குறித்தும், மறுமை குறித்தும் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பரத்வாஜரின் கேள்விகளுக்குப் பிருகு சொன்ன புனிதச் சொற்கள் அடங்கிய பழங்கதை இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(5) சுடர்மிக்க சக்தியும், காந்தியும் கொண்ட பெருமுனிவர் பிருகு, கைலாச சிகரத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட பரத்வாஜர், பின் வரும் வார்த்தைகளில் அவரிடம் பேசினார்.(6)

பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “பெருங்கடல், ஆகாயம், மலைகள், மேகங்கள், நிலங்கள், நெருப்பு, காற்று ஆகியவற்றுடன் கூடிய இந்த உலகம் யாரால் படைக்கப்பட்டது?(7) தொடக்கத்தில் உயிரினங்கள் அனைத்தும் எவ்வாறு படைக்கப்பட்டன? சாதிப் பாகுபாடுகள் எவ்வாறு தோன்றின?[1] (ஒழுக்கத்தில்) தூய்மையும் மாசும் எவ்வாறு உண்டாகின? உயிரினங்களுக்கான அறம் மற்றும் மறத்திற்கான விதிகள் எவ்வாறு உண்டாகின?(8) இறப்பவர்கள் எங்கே செல்கிறார்கள்? இம்மை மற்றும் மறுமை குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டார்.(9) இவ்வாறு தன் ஐயங்களைக் கேட்ட பரத்வாஜரிடம், சிறப்புமிக்கவரும், பிரம்மத்திற்கு ஒப்பானவரும், மறுபிறப்பாள முனிவருமான பிருகு இந்த வார்த்தைகளைத் தன் மறுமொழியாகச் சொன்னார்.(10)பிருகு {பரத்வாஜரிடம்}, “பெருமுனிவர்களால் மானஸம் {மானஸர்} என்ற பெயரில் அறியப்பட்ட ஒரு பழம்பொருள் இருந்தது. அது தொடக்கமும் முடிவும் அற்றதாக இருந்தது. அந்தத் தெய்வீகப் பொருள் ஆயுதங்களால் ஊடுருவப்படாததாக இருந்தது. அது சிதைவும், அழிவும் அற்றதாக இருந்தது.(11) அது வெளிப்படாத பொருளாகச் சொல்லப்படுகிறது. அது நித்தியமானதாக, சிதைவற்றதாக, மாற்றமில்லாததாக இருக்கிறது. அதன் மூலமே உயிரினங்கள் பிறக்கின்றன, அதன் மூலமே இறக்கின்றன.(12) அது மஹத் என்ற பெயரில் ஒரு தெய்வீகப் பொருளை முதலில் படைத்தது[2].(13) மஹத் நனவுநிலையைப் படைத்தது. அந்தத் தெய்வீகப் பொருள் {மஹத்} வெளியைப் படைத்தது. அந்தப் பலமிக்கப் பொருளே {மஹத்தே}, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.(14) வெளியில் இருந்து நீர் பிறந்தது, நீரில் இருந்து நெருப்பும், காற்றும் பிறந்தன. நெருப்பு மற்றும் காற்றின் கலவையில் பூமி பிறந்தது.(15)தான்தோன்றியான மானஸம், ஆற்றலைக் கருவில் கொண்ட ஒரு தெய்வீகத் தாமரையைப் படைத்தது. அந்தத் தாமரையில், வேதப் பெருங்கடலான பிரம்மன் எழுந்தான்[3].(16) அந்தத் தெய்வீகமானவன் பிறந்ததும், “நானே அஃது” என்ற வார்த்தைகளைச் சொன்னான் என்று ஸ்ருதிகள் சொல்கின்றன. இதன் காரணமாக அவன் நனவுநிலை என்ற பெயரில் அழைக்கப்படலானான். அவனே படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தின் உடலாக இருக்கிறான். அவனே அவற்றின் படைப்பாளனாகவும் இருக்கிறான். நாம் காணும் இந்த ஐந்து பூதங்களும் பேராற்றல் கொண்ட அந்தப் பிரம்மனே.(17) மலைகளே அவனது எலும்புகளாக இருக்கின்றன. பூமி அவனது கொழுப்பாகவும், சதையாகவும் இருக்கிறது. பெருங்கடல்கள் அவனது குருதியாக இருக்கின்றன. அண்டவெளி அவனது வயிறாக இருக்கிறது.(18) காற்று அவனது மூச்சாக இருக்கிறது. நெருப்பு அவனது ஆற்றலாக இருக்கிறது. ஆறுகள் அவனது நரம்புகளாக இருக்கின்றன. சூரியன், சந்திரன் என்று அழைக்கப்படும் அக்னியும், சோமனும், அவனது கண்களாகச் சொல்லப்படுகின்றனர்.(19) மேலுள்ள ஆகாயம் அவனது தலையாகச் சொல்லப்படுகிறது. பூமி அவனது இரு கால்களாக இருக்கிறது. அடிவானத்தின் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகள் அவனது கரங்களாக இருக்கின்றன. அவன் அறியப்பட முடியாதவனாகவும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மனிதர்களாலேயே உணரப்பட முடியா ஆன்மா கொண்டவனாகவும் இருக்கிறான்.(20) மொத்த அண்டத்திலும் படர்ந்தூடுவியிருக்கும் அந்தத் தெய்வீகமானவன், அனந்தன் (முடிவற்றவன்) என்ற பெயரில் அறியப்படுகிறான். நனவுநிலையில் வாழும் அவன், தூய்மையற்ற ஆன்மா கொண்டோரால் அறியப்பட முடியாதவனாக இருக்கிறான்.(21) உன்னால் கேட்கப்பட்டதால், எவன் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் இருப்புக்கு அழைக்க நனவுநிலையைப் படைத்தவனோ, எவனிலிருந்து இந்த அண்டம் எழுந்ததோ அவனைக் குறித்து இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்றார் {பிருகு}.(22)பரத்வாஜர், “ஆகாயம், அடிவானின் புள்ளிகள், இந்தப் பூமியின் பரப்பு, காற்று ஆகியவற்றின் எல்லை எது? உண்மையை எனக்குச் சொல்வதன் மூலம் என் ஐயங்களைத் தீர்ப்பீராக” என்று கேட்டார்.(23)

பிருகு, “நீ மேலே காணும் வானம் எல்லையற்றதாகும். தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுக்கும், தெய்வீகமானவர்களுக்கும் அதுவே வசிப்பிடமாக இருக்கிறது. அஃது இனிமை நிறைந்ததாகவும், பல்வேறு உலகங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. அதன் எல்லைகளை உறுதிப்படுத்த முடியாது.(24) சூரியனாலும், சந்திரனாலும் தங்கள் கதிர்களின் எல்லைக்கு அப்பால் மேலேயோ, கீழேயோ பார்க்க முடியாது. சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் அடைய முடியாத இடங்களில் சூரியனையோ, நெருப்பையோ போன்ற காந்தியைக் கொண்டவையும், தன்னொளி கொண்டவையுமான ஒளிக்கோள்கள்[4] இருக்கின்றன.(25) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அடைவதற்கரிதாக, முடிவிலா எல்லைகளைக் கொண்டதாக இருப்பதன் விளைவால், பரந்த புகழ்பெற்ற காந்தியைக் கொண்ட இவற்றாலும் {ஒளிக்கோள்களாலும்} கூட ஆகாயத்தின் எல்லைகளைக் காண முடியாது.(26) தேவர்களாலும் அளக்க முடியாத இந்த அண்டவெளியில், ஒன்றன் மேல் ஒன்றாகத் தன்னொளி கொண்ட சுடர்மிக்க உலகங்கள் பல இருக்கின்றன.(27) நிலத்தின் எல்லைகளுக்கு அப்பால் பெருங்கடலின் நீர் இருக்கிறது. நீருக்கு அப்பால் இருள் இருக்கிறது. இருளுக்கு அப்பால் நீரே இருக்கிறது, அதற்கும் அப்பால் நெருப்பிருக்கிறது.(28) கீழ்நோக்கி பாதாள உலகங்களுக்கு அப்பால் நீர் இருக்கிறது. அந்த நீருக்கு அப்பால், பெரும்பாம்புகளின் உலகம் இருக்கிறது. அதற்கும் அப்பால் மீண்டும் வானம் இருக்கிறது, வானத்திற்கு அப்பால் மீண்டும் நீர் இருக்கிறது.(29) இவ்வாறே நீரும் வானமும் மாறி மாறி முடிவில்லாமல் இருக்கின்றன. நீரால் பிரதிபலிக்கப்படும் தெய்வீகத்தின் எல்லைகள் இவ்வாறே இருக்கின்றன. நெருப்பு, காற்று மற்றும் நீரின் எல்லைகளைத் தேவர்களாலும் உறுதி செய்ய முடியாது.(30)நெருப்பு, காற்று, நீர், நிலம் ஆகியவற்றின் இயல்பு அண்டவெளியைப் போன்றதே. உண்மையான அறிவின்மையின் மூலம் அவை தனிப்பட்டவையாகத் தெரிகின்றன.(31) மூன்று உலகங்கள் மற்றும் பெருங்கடலின் எல்லைகளைத் தீர்மானிக்கும் பல்வேறு சாத்திரங்களைத் தவசிகள் படிக்கின்றனர்.(32) எனினும், அடையமுடியாததாகவும், பார்வையால் புரிந்து கொள்ள முடியாதாக இருக்கும் ஒன்றின் எல்லைகள் எவரால் தீர்மானிக்க முடியும்?(33) தேவர்கள் மற்றும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களின் பாதையாக இருக்கும் ஆகாயத்தின் எல்லைகளை உறுதி செய்வது சாத்தியமானால் கூட, அளவற்றதும், முடிவிலி என்ற பெயரால் அறியப்படுவதும், உயர் ஆன்ம மானஸம் என்ற பெயரால் அழைக்கப்படுவதுமான ஒன்றின் அளவுகளை ஒருபோதும் தீர்மானிக்க முடியாது.(34) சில வேளைகளில் அதன் வடிவம் சுருங்கி இருக்கிறது, சில வேளைகளில் விரிந்திருக்கிறது, அதற்கு {மானஸத்திற்கு} இணையான ஒன்றைத் தவிர, அதன் எல்லைகளைப் புரிந்து கொள்ள வேறு எவரால் முடியும்?(35) அறத்தின் சாரத்தைக் கொண்டவனாகவும், அசையும் மற்றும் அசையாத பொருட்களின் படைப்பாளனாகவும் அனைத்தையும் அறிந்த தலைவன் பிரம்மன், (நான் ஏற்கனவே சொன்னது போல) அந்தத் தாமரையில் முதன்முதலில் வடிவத்துடன் படைக்கப்பட்டான்” என்றார் {பிருகு}.(36)

பரத்வாஜர், “அந்தத் தாமரையில் இருந்து பிரம்மன் எழுந்ததால், அந்தத் தாமரையே முதலில் பிறந்ததாகக் கருதப்பட வேண்டுமேயன்றி பிரம்மன் கிடையாது. எனினும், பிரம்மன் ஏன் முதல்வனாகச் சொல்லப்படுகிறான்? எனது இந்த ஐயத்தை நீர் நீக்குவீராக” என்று கேட்டார்.(37)

பிருகு, “பூமியே அந்தத் தாமரையாகச் சொல்லப்படுகிறது. பிரம்மனாக மாறிய அந்த மானஸத்தின் வடிவத்திற்கு ஓர் இருக்கை அளிப்பதற்காக அது {அந்தத் தாமரை} படைக்கப்பட்டது.(38) சொர்க்கத்தையே அடைந்த சுமேரு அந்தத் தாமரையின் கர்ணிகையானது[5]. அதிலிருந்தே, பலமிக்க அண்டத் தலைவன் {பிரம்மன்} உலகங்கள் அனைத்தையும் படைத்தான்” என்றார்.(பிருகு}.(38)

பூமியின் தோற்றம்! – சாந்திபர்வம் பகுதி – 183-பல்வேறு பொருட்களும், பூமியும் படைக்கப்பட்ட முறை குறித்துப் பிருகு முனிவருக்கும், பரத்வாஜ முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, அந்தப் பலமிக்கப் பிரம்மன், மேருவில் வசித்துக் கொண்டு, பல்வேறு வகைப் பொருட்களை எவ்வாறு படைத்தான் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(1)

பிருகு {பரத்வாஜரிடம்}, “(பிரம்மனின் வடிவில் இருக்கும்) பெரும் மானஸம், மனவிருப்பத்தின் ஆணையால் பல்வேறு வகைப் பொருட்களைப் படைத்தது. அனைத்து உயிரினங்களின் பாதுகாப்புக்காக முதலில் அது நீரைப் படைத்தது.(2) நீரே அனைத்துயிரினங்களின் உயிராக இருக்கிறது, நீரே அவற்றின் வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது. நீரில்லையென்றால் அனைத்து உயிரினங்களும் அழியவே வேண்டும். மொத்த அண்டமும் நீரால் படர்ந்தூடுருவப்பட்டிருக்கிறது.(3) பூமி, மலைகள், மேகங்கள், வடிவம் கொண்ட பொருட்கள் என அனைத்தும் நீரின் நிலைமாற்றங்கள் என்றே அறியப்பட வேண்டும். அந்தப் பூதம் {நீர்} திண்மைப் பொருளாவதால் இவை அனைத்தும் உண்டாக்கப்பட்டன” என்றார் {பிருகு}.(4)

பரத்வாஜர், “நீர் எவ்வாறு உண்டானது? நெருப்பும் காற்றும் எவ்வாறு உண்டாகின? பூமியானது எவ்வாறு படைக்கப்பட்டது? இவற்றில் எனக்குப் பேரையங்கள் {பெரும் ஐயங்கள்} இருக்கின்றன” என்று கேட்டார்.(5)

பிருகு, “ஓ! மறுபிறப்பாளனே, பிரம்ம கல்பம் என்றழைக்கப்பட்ட பழங்காலத்தில் மறுபிறப்பாள வகையைச் சார்ந்த உயர் ஆன்ம முனிவர்கள் ஒன்று கூடிய போது, அண்டப் படைப்பு குறித்த இந்த ஐயத்தையே உணர்ந்தனர்.(6) அவர்கள் பேச்சைத் தவிர்த்து, அசைவற்றவர்களாக நீடித்து, (தவ) தியானத்தில் ஈடுபட்டார்கள். உணவனைத்தையும் கைவிட்டு, காற்றை மட்டுமே உண்ட அவர்கள், ஆயிரம் தேவ வருடங்களுக்கு இவ்வாறே நீடித்திருந்தனர்.(7) அந்தக் காலத்தின் முடிவில், வேதங்களைப் போன்ற புனிதமான சில குறிப்பிட்ட வார்த்தைகள் அடுத்தடுத்து அவர்கள் அனைவரின் காதுகளையும் அடைந்தன. உண்மையில், ஆகாயத்திலிருந்து இந்தத் தெய்வீகக் குரல் சொல்வது கேட்டது:(8)

{அக்குரல்},”முன்பு முற்றிலும் அசைவற்றதாக, அசைக்க முடியாததாக முடிவில்லா வெளி மட்டுமே இங்கே இருந்தது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், காற்று ஆகியவை இல்லாமல் அஃது உறங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(9) அப்போது இருளுக்குள் அதைவிடக் கரியதான ஏதோ ஒன்றைப் போல நீர் எழுந்தது. பிறகு நீரின் அழுத்தத்தால் காற்று எழுந்தது.(10) துளையில்லா வெற்றுப்பாத்திரம் முதலில் ஒலியேதும் அற்றதாக இருந்தாலும், நீரும், காற்றும் நிரப்பப்பட்டதும் பேரொலியை எழுப்புவதைப் போலவே,(11) முடிவிலா வெளி நீரால் நிரப்பப்பட்ட போது, அந்த நீரினூடாகத் துளைத்துக் கொண்டு பேரொலியுடன் காற்று எழுந்தது[1].(12) பெருங்கடலின் நீரழுத்தத்தால் இவ்வாறு உண்டான காற்றே இன்னும் வீசிக் கொண்டிருக்கிறது. (தடையில்லாமல்) வெளிக்கு வந்த அதன் இயக்கம் ஒருபோதும் நிற்காமல் இருக்கிறது.(13)அப்போது, காற்றுக்கும், நீருக்கும் இடையில் உண்டான உராய்வின் விளைவால், பெரும் வலிமையையும், சுடர்மிக்க ஆற்றலையும் கொண்டதும், மேல்நோக்கிய தழல்களுடன் கூடியதுமான நெருப்பு இருப்பில் எழுந்தது. வெளியை மறைத்திருந்த இருளை அந்நெருப்பு அகற்றியது.(14) காற்றின் துணையுடன் கூடிய நெருப்பு, வெளியையும், நீரையும் ஒன்றாக இழுத்தது. உண்மையில், நீருடன் இணைந்து நெருப்பு திண்மையடைந்தது.(15) நெருப்பின் நீர்ப்பகுதியானது, வானத்தில் இருந்து விழுந்தபோது திண்மையடைந்து, பூமி என்று அறியப்படும் ஒன்றாக ஆனது.(16) எதில் அனைத்தும் பிறந்தனவோ, அந்தப் பூமியே, அல்லது நிலமே, அனைத்து வகைச் சுவை, அனைத்து வகை மணம், அனைத்து வகை நீர்மங்கள், அனைத்து வகை உயிரினங்களுக்குத் தோற்றுவாயாக இருக்கிறது” என்றது {அக்குரல்}.(17)

பஞ்சபூதக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 184-தாவரங்களும் ஐம்பூதங்களைக் கொண்டன, எனவே அவைகளுக்கும் உயிர் உண்டு என்பதையும், அசையும் உயிரினங்களில் ஐம்பூதங்கள் எவ்வாறு கலந்திருக்கின்றன என்பதையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு…

பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “உயர் ஆன்ம பிரம்மன் ஆயிரக்கணக்கான உயிரினங்களைப் படைத்திருக்கும்போது, அவன் முதலில் படைத்தவையும், பேருயிரினங்களும் {மஹா பூதங்களும்}, அண்டம் முழுவதும் படர்ந்தூடுருவி இருப்பவையுமான ஐம்பூதங்களை மட்டுமே உயிரினங்கள் {பூதங்கள்} என்ற தனிப்பட்ட பெயரைக் கொண்டிருப்பது ஏன்?” என்று கேட்டார்.(1,2)

பிருகு {பரத்வாஜரிடம்}, “முடிவிலி அல்லது அகன்ற என்ற வகையைச் சார்ந்த அனைத்துப் பொருட்களும் பெரியது {மஹத்} என்ற பெயரைப் பெறுகின்றன. இதன் காரணமாகவே இந்த ஐம்பூதங்களும், பெரும் உயிரினங்கள் {மஹாபூதங்கள்} என்று அழைக்கப்படுகின்றன[1].(3) காற்றானது செயல்பாடாக இருக்கிறது. வெளியானது கேட்கப்படும் ஒலியாக இருக்கிறது. நெருப்பானது அதன் உள்ளிருக்கும் வெப்பாக இருக்கிறது. நீரானது அதில் உள்ள நீர்ச்சாரமாக இருக்கிறது. பூமியானது {நிலமானது} திண்மை அடைந்த பொருளாக {பருப்பொருளாக} சதைகளாக எலும்புகளாக இருக்கிறது. இவ்வாறே (உயிரினங்களின்) உடல்கள் (பழைமையான) ஐந்து பூதங்களால் ஆனவையாக இருக்கின்றன.(4) அசையும், அசையாத பொருட்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களால் ஆனவையாகவே இருக்கின்றன. உயிரினங்களின் ஐம்புலன்களிலும் ஐம்பூதங்களே கலந்திருக்கின்றன. காதில் வெளியின் பண்புத்தொகுதிகள் கலந்திருக்கின்றன. மூக்கில் பூமியும்; நாவில் நீரும்; தீண்டலில் காற்றும்; கண்களில் ஒளியும் (அல்லது நெருப்பும்) கலந்திருக்கின்றன” என்றார் {பிருகு}.(5)பரத்வாஜர், “அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் ஐம்பூதங்களின் தொகுதியாக இருக்குமானால், அசையாத பொருட்கள் அனைத்திலும் அந்தப் பூதங்கள் காணப்படாதது ஏன்?(6) மரங்களில் வெப்பமேதுமிருப்பதாகத் தெரியவில்லை. அவற்றுக்கு எந்த அசைவும் இருப்பதாகவும் தெரியவில்லை. மேலும் அவை அடர்ந்த துகள்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஐம்பூதங்கள் காணப்படவில்லை.(7) மரங்கள் கேட்பதில்லை; அவை காண்பதுமில்லை; மணம் மற்றும் சுவையையும் அவை உணரவல்லவையாக இல்லை. தீண்டல் உணர்வும் அவற்றிடம் இல்லை. எவ்வாறு அவை (மூலமான) ஐம்பூதங்களின் தொகுதியாகக் கருதப்படலாம்?(8) மரங்களில் திரவபொருள், வெப்பம், பூமி {நிலம்} ஆகியவை ஏதும் இல்லாததன் விளைவால், அவை (மூலமான) ஐம்பூதங்களின் தொகுதிகளாகக் கருதப்படக்கூடாது என்றே தெரிகிறது” என்றார் {பரத்வாஜர்}.(9)

பிருகு, “அடர்த்தியைக் கொண்டிருந்தாலும், மரங்களினுள் நிச்சயம் வெளி {ஆகாயம்} இருக்கிறது. மலர்கள் மலர்வதும், கனிகள் கனிவது அவற்றில் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது.(10) அவற்றினுள் வெப்பம் இருப்பதன் விளைவாலேயே, அவற்றிலிருந்து இலைகள், பட்டைகள், கனிகள், மலர்கள் ஆகியன உதிர்கின்றன. அவை நோய்வாய்ப்பட்டு வாடுகின்றன. இது தீண்டல் உணர்வு அவற்றுக்கு இருப்பதையே காட்டுகிறது.(11) காற்றின் ஒலி, நெருப்பு, இடி ஆகிய அதிர்ச்சியின் மூலம், அவற்றின் கனிகளும் மலர்களும் விழுகின்றன. காதின் மூலம் ஒலி உணரப்படுகிறது. எனவே மரங்களுக்குக் காதுகள் இருக்கின்றன, அவை கேட்கின்றன.(12) ஒரு கொடி ஒரு மரத்தில் சுற்றி, அனைத்துப் பக்கங்களில் படர்கிறது. பார்வையில்லையென்றால் அதற்கு வழி தெரியாது. இதன் காரணமாக, மரங்களுக்குப் பார்வை இருக்கிறது என்பது தெளிவாகிறது.(13) மேலும் மரங்கள் நல்ல மற்றும் தீய மணங்களின் விளைவால் உயிரிவளம் தேறி, பல்வேறு வகைத் தூபங்களிலான புனித நறுமணங்களைத் தரும் மலர்களை மலரச் செய்கின்றன[2]. மரங்கள் மணத்தைக் கொண்டிருக்கின்றன என்பது வெளிப்படை[3].(14) அவை தங்கள் வேர்களின் மூலமாக நீரைக் குடிக்கின்றன. அவை பல்வேறு வகையான நோய்க்கு ஆட்படுகின்றன. அந்த நோய்களும் பல்வேறு வகைச் செயல்பாடுகளால் தீர்க்கப்படுகின்றன. இதன் மூலம் மரங்களுக்குச் சுவையை உணரும் தன்மை இருக்கிறது என்பது தெளிவாகிறது.(15)ஒருவன் தாமரைத் தண்டின் மூலமாக நீரை உறிஞ்சுவதைப் போலவே, காற்றின் உதவியுடன், தங்கள் வேர்களின் மூலமாக நீரைக் குடிக்கின்றன.(16) அவை இன்பத்திற்கும், துன்பத்திற்கும் எளிதாக உட்படுகிறவையாகவும், வெட்டும்போதோ, கொய்யப்படும்போதோ வளர்பவையாகவும் இருக்கின்றன. இந்தச் சூழ்நிலைகளால் மரங்களுக்கு உயிர் இருக்கிறது என்பதே எனக்குத் தெரிகிறது. அவை அசைவற்றவை கிடையாது.(17) இவ்வாறு உறிஞ்சப்படும் நீரை நெருப்பும் காற்றும் செரிக்கச் செய்கின்றன. மேலும், மரமானது எந்த அளவுக்கு நீரை எடுத்துக் கொள்கிறதோ அந்த அளவுக்கு வளர்ந்து ஈரத்தன்மை கொண்டதாகிறது.(18)

அசையும் பொருட்கள் அனைத்தின் உடல்களிலும் ஐம்பூதங்களும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் அளவுகள் வேறுபடுகின்றன. இந்த ஐம்பூதங்களின் விளைவாலேயே அசையும் பொருட்களால் தங்கள் உடல்களை நகர்த்திக் கொள்ள முடிகிறது.(19) தோல், சதை, எலும்புகள், மஜ்ஜை ஆகியன பூமியாலானவை {நிலத்தாலானவை}.(20) ஆற்றல், கோபம், கண்கள், உள்ளார்ந்த வெப்பம், உணவைச் செரிக்கச் செய்யும் வேறு வெப்பம் ஆகி இந்த ஐந்தும், உடல்படைத்த அனைத்து உயிரினங்களிலும் நெருப்பாக இருக்கின்றன.(21) காதுகள், மூக்கு, வாய், இதயம், வயிறு ஆகிய ஐந்தும், உயிரினங்களின் உடல்களில் வெளி பூதமாக இருக்கின்றன. சளி, பித்தநீர், வியர்வை, கொழுப்பு, இரத்தம் ஆகியவை அசையும் உடல்களில் ஐவகை நீராக இருக்கின்றன.(23) பிராணன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்றின் மூலம் ஓர் உயிரினத்தால் நகர முடிகிறது. வியானம் என்றழைக்கப்படுவதன் {வாயுவின்} மூலம் செயல்பாட்டுக்குரிய பலத்தைப் பெற முடிகிறது. அபானன் என்றழைக்கப்படுவதன் {வாயுவின்} மூலம் கீழ்நோக்கி நகர முடிகிறது. சமானன் {ஸமானன்} என்றழைக்கப்படுவது {வாயு} இதயத்தில் வசிக்கிறது.(24) உதானன் என்றழைக்கப்படுவதன் {வாயுவின்} மூலம் ஒருவனால் ஏப்பம் விட {மூச்சுவிட} முடிகிறது, (நுரையீரல்கள், தொண்டை, வாய்) ஆகியவற்றைத் துளைப்பதன் விளைவால் பேசவும் முடிகிறது. இவையே உடல்படைத்த உயிரினம் வாழவும் நகரவும் வழிவகுக்கும் ஐவகைக் காற்றுகளாகும் {வாயுக்களாகும்}.(25)

உடல்படைத்த ஓர் உயிரினம் தன்னில் இருக்கும் பூமி {நிலம்} எனும் பூதத்தின் மூலம் மணத்தின் பண்புகளை அறிகிறது. நீர் எனும் பூதத்தின் மூலம் அது சுவையை உணர்கிறது. கண்களைப் பிரதிபலிக்கும் நெருப்பு எனும் பூதத்தின் மூலம், அது வடிவங்களைப் பார்க்கிறது, காற்று எனும் பூதத்தின் மூலம் அது தீண்டல் உணர்வை அடைகிறது.(26) மணம், தீண்டல், சுவை, பார்வை, ஒலி ஆகியவை அசையும் மற்றும் அசையாத பொருட்களின் (பொதுப்) பண்புகளாகக் கருதப்படுகின்றன. நான் முதலில் பல்வேறு வகை மணங்களைக் குறித்துப் பேசப் போகிறேன்.(27) ஏற்புடையமணம், ஏற்பில்லாத மணம், இனிய மணம், கடுமையான நாற்றம், தொலைதூரம் செல்கிற மணம், பல்வேறு வகையைக் கொண்ட மணங்களைக் கொண்டது, காய்ந்த மனம், மணமற்றது என அவை இருக்கின்றன[4].(28) இந்த ஒன்பது வகை மணங்கள் பூமி {நிலம்} என்ற பூதத்தால் அமைக்கப்படுகின்றன. கண்களால் ஒளி காணப்படுகிறது, காற்று எனும் பூதம் மூலம் தீண்ட முடிகிறது.(29) ஒலி, தீண்டல், பார்வை, சுவை ஆகியவை நீரின் பண்புகளாகும். இனி நான் சுவை எனும் உணர்வைக் குறித்து (விரிவாகப் பேசப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(30)உயர் ஆன்ம முனிவர்கள் பல்வேறு வகைச் சுவைகளைக் குறித்துப் பேசியிருக்கின்றனர். அவை, இனிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு {காரம்} ஆகியனவாகும். இந்த ஆறுவகைச் சுவைகளும் நீரெனும் பூத்தைச் சார்ந்தவையாகும்.(32) வடிவத்தைப் பார்க்க ஒளி பங்களிக்கிறது. வடிவம் பல்வேறு வகைகளில் இருக்கிறது. குட்டை, நெட்டை {நீளம்}, பருமை, நான்கு முனை கொண்டது {சதுரம்}, உருண்டை,(33) வெளுப்பு, கறுப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், நீலச்சிவப்பு, கெட்டியானது, வெளிச்சமானது {பிசுக்குள்ளது}, வழுவழுப்பானது {மெழுக்குள்ளது}, எண்ணெய்ப்பசையுள்ளது, மென்மையானது, பயங்கரமானது.(34) இந்தப் பதினாறு வகை வெவ்வேறு வடிவங்களும் ஒளி, அல்லது பார்வையின் பண்பைக் கொண்டவை. காற்று எனும் பூதத்தின் பண்பு தீண்டல். தீண்டல் பல்வேறு வகைகளைக் கொண்டது.(35) வெப்பமானது, குளிரானது, ஏற்புடையது, ஏற்பில்லாதது, அக்கறையற்றது, எரிச்சலுள்ளது, கனிவானது, மென்மையானது, கனமில்லாதது, கனமிக்கது.(36) ஒலி, தீண்டால் ஆகிய இரண்டும் காற்றெனும் பூதத்தின் பண்புகளாக இருக்கின்றன. இந்தப் பதினோரு பண்புகளும் காற்றை {வாயுவைச்} சார்ந்தவை.(37)

வெளிக்கு {ஆகாயத்திற்கு} ஒரே ஒரு பண்பு மட்டுமே உண்டு. அஃது ஒலி என்று அழைக்கப்படுகிறது. நான் இப்போது பல்வேறு வகையான ஒலிகளைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(38) அவை, ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய ஏழு மூலக்குறிகளை {ஸ்வரங்களைக்} ஆகியவையே.(39) இந்த ஏழு வகைப் பண்புகளும் வெளி {ஆகாயம் எனும் பூதம்} தொடர்புடையவையாகும். ஒலியானது, குறிப்பாகப் பேரிகை முதலிய இசைக்கருவிகளில் வெளிப்படுவதாக இருந்தாலும் பரம்பொருளைப் போல வெளியெங்கும் பிரிக்க முடியாதவாறு உட்பொதிந்திருக்கிறது.(40) சிறி, பெரிய பேரிகைகள், சங்குகள், மேகங்கள், தேர்கள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் ஆகிய எதன் மூலம் கேட்கப்பட்டாலும் ஒலியானது, ஏற்கனவே பட்டியலிடப்பட்ட இந்த ஏழுவகை ஒலிகளையே கொண்டிருக்கிறது.(41) இவ்வாறு வெளியின் பண்பான ஒலி பல்வேறு வகைகளைக் கொண்டதாக இருக்கிறது. கல்விமான்கள் ஒலியானது வெளியில் பிறந்ததாகச் சொல்கிறார்கள். காற்றின் பண்பான பல்வேறு வகைத் தீண்டல்களின் மூலம் எழுப்பப்படும்போது அது {ஒலி} கேட்கப்படுகிறது. எனினும், பல்வேறு வகையான தீண்டல்கள் தடுக்கப்பட்டால் அது {ஒலி} கேட்கப்படுவதில்லை[5]. உடலின் ஒத்த பகுதிகளில் பூதங்கள் கலந்து, பெருகி, வளர்கின்றன.(42,43) நீர், நெருப்பு, காற்று ஆகியவை உயிரினங்களின் உடல்களில் எப்போதும் விழிப்புடன் இருக்கின்றன. அவையே உடலின் வேர்களாக இருக்கின்றன. (ஏற்கனவே குறிப்பிடப்பட்ட) ஐந்தும் உயிர் மூச்சுகளில் படர்ந்தூடுருவி அவை உடலில் வசித்து வருகின்றன” என்றார் {பிருகு}.(44)

உடல் இயக்கவியல்! – சாந்திபர்வம் பகுதி – 185-உடலில் உள்ள பிராண வாயு உள்ளிட்ட வாயுக்களின் செயல்பாடுகளைக் குறித்துப் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு…

பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “உடல்வெப்பம், அல்லது நெருப்பானது {அக்னி}, உடலுக்குள் புகுந்து எவ்வாறு அங்கே வசிக்கிறது? தனக்கென வெளியை அடையும் காற்று {வாயு} எவ்வாறு உடலை அசையச் செய்யவும், முயற்சி செய்யவும் வைக்கிறது?” என்று கேட்டார்.(1)

பிருகு {பரத்வாஜரிடம்}, “ஓ! மறுபிறப்பாளனே {பிராமணனே}, ஓ! பாவமற்றவனே, வலிமைமிக்கப் பூதமான காற்று {வாயு}, உயிரினங்களின் உடல்களை எவ்வாறு அசையவும், முயற்சிக்கவும் வைக்கும் நடைமுறை குறித்து உனக்குச் சொல்கிறேன்.(2) வெப்பம் தலையில் (மூளையில்) வசித்துக் கொண்டு உடலை (அழியாமல்) பார்த்துக் கொள்கிறது. பிராணன் என்றழைக்கப்படும் காற்று {வாயு} அல்லது மூச்சானது, தலைக்குள் வசித்துக் கொண்டு, தன் வெப்பத்தால் அனைத்து முயற்சிகளுக்கும் காரணமாக இருக்கிறது.(3) அந்தப் பிராணனே, உயிரினமாகவும், அண்ட ஆன்மாவாவாகவும், அழிவில்லாததாகவும், உயிரினங்கள் அனைத்தின் மனமாகவும், அறிவாகவும், நனவு நிலையாகவும், புலன்நுகர்பொருட்களுக்குரிய அனைத்துப் பொருட்களாகவும் இருக்கிறது[1].(4) இவ்வாறு ஓர் உயிரினமானது, அனைத்து வகையிலும் பிராணனால் இயக்கப்பட்டு, {உடலை} முயற்சி செய்ய வைக்கிறது.சமானன் என்றழைக்கப்படும் மற்றொரு மூச்சின் விளைவாக, புலன்களில் ஒவ்வொன்றும் அதனதன் செயல்களுக்கேற்ப செயல்படுகின்றன.(5) அபானன் என்றழைக்கப்படும் மூச்சானது, சிறுநீர்ப்பை மற்றும் வயிற்றின் குடல்களில் உள்ள வெப்பத்தைக் கொண்டு அசைந்து, சிறுநீர் மற்றும் மலம் கழிக்க வைப்பதில் ஈடுபடுகிறது.(6) இம்மூன்றிலும் {மூன்று பகுதிகளிலும்} செயல்படும் ஒற்றை மூச்சானது, அறிவியல் அறிந்தவர்களால் உதானன் என்றழைக்கப்படுகிறது[2].(7) மனிதர்களின் உடல்களில் உள்ள இணைப்புகள் அனைத்தையும் இயங்கச் செய்யும் மூச்சானது வியானன் என்றழைக்கப்படுகிறது.(8) உயிரினங்களில் உடல்களில் உள்ள வெப்பமானது, சமானன் என்ற மூச்சினால் உடலியக்கம் முழுவதிலும் சுற்றிச் செலுத்தப்படுகிறது. இவ்வாறு உடலில் வசித்திருக்கும் அந்த மூச்சானது, பல்வேறு வகைத் திரவங்களிலும் {அன்னரஸங்களிலும்}, தாதுக்களிலும், குற்றமான பொருட்கள் அனைத்திலும் செயல்படுகிறது[3].(9) அபானன் மற்றும் பிராணனுக்கு இடையில் தொப்புகள் பகுதியில் வசிக்கும் வெப்பமானது {அக்நியானது}, இந்த இரண்டு மூச்சுகளின் {வாயுக்களின்} உதவியுடன், அந்த உயிரினம் உண்ணும் உணவுகள் அனைத்தையும் செரிக்கச் செய்கிறது.(10)வாயில் தொடங்கிக் குதம் {மலவாய்} வரையில் ஒரு நாளம் {குழாய்/குடல்} இருக்கிறது. அதன் எல்லையானது குதம் என்றழைக்கப்படுகிறது. உயிரினங்கள் அனைத்தின் உடல்களிலும் இந்த முக்கிய நாளத்திலிருந்து எண்ணற்ற துணைக் கிளைகள் {நாளங்கள்} பிரிந்து செல்கின்றன[4].(11) மேற்சொன்ன பெயர்களிலான பல்வேறு மூச்சுக்காற்றுகள் (இந்த நாளங்களின் வழியாக) விரைவதன் விளைவாக, அந்த மூச்சுகள் ஒன்றுகலக்கின்றன. (பிராணனில் வசிக்கும்) வெப்பமானது உஷ்மன் {உஷ்ணம்} என்றழைக்கப்படுகிறது. அந்த வெப்பமே உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தின் செரிமானத்திற்கும் காரணமாக இருக்கிறது.(12) வெப்ப ஊற்றைச் சுமந்து செல்லும் பிராணன் என்றழைக்கப்படும் மூச்சானது {வாயுவானது}, கீழ்நோக்கிச் சென்று குதக் கால்வாயெனும் எல்லையை அடைந்து, பிறகு மீண்டும் மேல்நோக்கி அனுப்பப்படுகிறது. மேலும் அதன் இருக்கையான தலைக்குத் திரும்பிவரும் அது {பிராணன்}, மீண்டும் வெப்பத்தைச் சுமந்து கொண்டு கீழே செல்கிறது.(13) தொப்புளுக்குக் கீழுள்ளது செரிக்கப்பட்டவற்றைக் கொண்ட பகுதியாகும். உடலைத் தக்கவைத்துக் கொள்ள உயிர் சக்திகள் அனைத்தும் தொப்புளில் இருக்கின்றன. பிராணனை முதலாகக் கொண்ட பத்து வகை மூச்சுகளால்[5] {வாயுக்களால்} தூண்டப்படுபவையும், {ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல} இதயத்தில் இருந்து கிளை விட்டு வருபவையுமான {ரத்த} நாளங்கள், உணவு கொடுக்கும் திரவச் சாறுகளை மேல்நோக்கியும், கீழ்நோக்கியும், குறுக்குத் திசையிலும் கொண்டு செல்கின்றன[6].(15) இன்பத்தையும், துன்பத்தையும் முற்றிலும் சமமாகக் கண்டு களைப்பை வென்றவர்களான யோகிகள், மூளைக்குள் ஆன்மாவைத் தாங்கி பிரம்மத்தை அடைவதில் வெல்வதற்கு, வாயிலிருந்து குதத்திற்குச் செல்லும் இந்த நாளமே பாதையாக இருக்கிறது[7].(16)இவ்வாறு, பிராணன், அபானன் மற்றும் பிறவாக அழைக்கப்படும் மூச்சுகளில் {வாயுக்களில்} வெப்பம் {அக்னி} வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வெப்பமானது, (புலப்படக்கூடிய) எந்தப் பாத்திரத்திலும் வைக்கப்பட்டுள்ள ஒரு நெருப்பைப் போல அங்கே எரிந்து கொண்டே இருக்கிறது” என்றார் {பிருகு}.(17)

உயிர் எங்கே? – சாந்திபர்வம் பகுதி – 186-உடலைத் தவிர உயிர் என்று ஏதும் எங்கே இருக்கிறது என்று பிருகுவிடம் விளக்கம் கேட்ட பரத்வாஜர்..

பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “காற்றுதான் {வாயுதான்} நம்மை உயிருடன் வைத்திருக்கிறது, நாம் அசையவும், நம்மை முயற்சி செய்யவும் வைக்கிறது, நம்மை மூச்சுவிடவும், பேசவும் வைக்கிறது என்றால், உயிர் என்பது மதிப்புக் குறைந்ததாக {பயனற்றதாகத்} தெரிகிறது.(1) (உணவு அனைத்தையும் செரிக்கும்) விலங்கு வெப்பம் இயற்கை நெருப்பின் {அக்னியின்} இயல்பைக் கொண்டதாக இருந்தால், நாம் உண்ணும் உணவைக் கரைப்பதன் மூலம் செரிப்பதில் துணைபுரிவது அந்நெருப்பே என்றால், உயிர் என்பது மதிப்புக் குறைந்ததாகத் தெரிகிறது.(2) ஒரு விலங்கு இறக்கும்போது, உயிர் என்று எது அழைக்கப்படுகிறதோ, அஃது அதைவிட்டு வெளியேறுவது ஒருபோதும் காணப்படுவதில்லை. மூச்சு மட்டுமே விட்டுச் செல்கிறது, உள்ளார்த வெப்பமும் அணைந்துவிடுகிறது.(3) உயிர் என்பது காற்றைத் தவிர வேறில்லை என்றாலோ, உயிரானது காற்றை மட்டுமே சார்ந்திருக்கிறது என்றாலோ, அது வெளிப்புற காற்றுக் கடலைப் போலத் தென்படும், மேலும் வெளியேறும்போது, அந்தக் காற்றுடன் கலக்கும்.(4) உயிரானது காற்றைச் சார்ந்திருக்கிறது என்றால், உடலில் இருந்து காற்று வெளியேறுவதால் அது முடிவடைகிறது என்றால், அது, நீரின் ஒரு பகுதி, பெருங்கடலுக்குள் செல்வதைப் போல, (வெளிப்புறத்தில் இருக்கும்) மற்றொரு காற்றுப்பகுதியுடன் கலந்து தன் வசிப்பிடத்தை மட்டுமே மாற்றிக் கொள்ளும்.(5)

ஒரு குறிப்பிட்ட அளவு நீர் கிணற்றுக்குள் இறைக்கப்பட்டாலோ, ஒரு விளக்கை சுடர்மிக்க நெருப்புக்குள் தூக்கி வீசினாலோ, அவை இரண்டும், ஓரின இயற்பியல் கொண்ட பூதத்துக்குள் நுழைந்து, தற்சார்பையோ, தனிப்பட்ட இருப்பையோ இழக்கின்றன. உயிரே காற்றென்றால் {வாயு என்றால்}, ஒரு விலங்கு இறக்கும்போது, வெளிப்புறத்தில் இருக்கும் காற்றுப் பெருங்கடலில் அது கலக்கவே செய்யும்.(6) பிறகு, ஐந்து (முக்கிய) பூதங்களால் ஆன இந்த விலங்குடம்பில் உயிர் இருக்கிறது என்று நாம் எவ்வாறு சொல்லலாம்? அந்தப் பூதங்களில் ஒன்று மறைந்தாலும், மற்ற நான்கு பூதங்களும் கரைந்துபோகின்றன.(7) உணவு உட்கொள்ளப்படவில்லையென்றால் நீரெனும் பூதம் வற்றிவிடுகிறது. மூச்சுக்காற்று தடுக்கப்பட்டால், காற்றெனும் {வாயு எனும்} பூதம் காணாமல் போகிறது. மலஜலக் கழிவுகள் நின்றால் வெளியெனும் {ஆகாயமெனும்} பூதம் மறைகிறது. உள்ளே உணவு செல்லவில்லை என்றால், நெருப்பெனும் பூதம் அணைகிறது.(8) நோய், காயங்கள் மற்றும் பிற துன்பங்களின் விளைவால் பூமியெனும் {நிலமெனும்} பூதம் துண்டுகளாக உடைகிறது. இந்த ஐந்தும் துன்புற்று, அந்தச் சேர்கை கரைந்தால் மட்டுமே, அந்த ஐந்தும் ஐந்து வெவ்வேறு திசைகளில் செல்லும்.(9) ஐந்து பூதங்களின் சேர்க்கையால் ஆன உடல் ஐந்து உள்ளடக்கங்களாகப் பிரிந்து சென்றால் உயிர் எங்கே போகும்? அஃது எதை அறிகிறது? அஃது எதைக் கேட்கிறது? அதென்ன சொல்கிறது?(10)

(பிராமணனுக்குத் தானமாக அளிக்கப்படும்) இந்தப் பசு, மறுமையில் என்னை மீட்கும் என்று சொல்லப்படுகிறது. எனினும், தானமாகக் கொடுக்கப்பட்ட அந்த விலங்கே இறக்கிறது. அவ்வாறிருக்கையில் இந்தப் பசு யாரை மீட்கும்?(11) இந்தப் பசுவை (கொடையாகப்) பெறுபவனும், கொடுப்பவனும் (மரணத்திற்கு உட்படுவதைப் பொறுத்தவரை) இணையானவர்களே. அவர்கள் இருவரும் இவ்வுலகில் அழிவை அடைகிறார்கள். அவ்வாறிருக்கையில் இஃது எவ்வாறு பொருந்தும்?(12) பறவைகளால் உண்ணப்படக்கூடியவனாக, அல்லது மலையில் இருந்து விழுவதன் மூலம் துண்டுகளாக உடைந்து போகிறவனாக, அல்லது நெருப்பால் எரிக்கப்படுபவனாக இருப்பவன் எவ்வாறு உயிர் மீள முடியும்?(13) வேர் வெட்டப்பட்ட மரம் மீண்டும் வளராது. விதைகளால் மட்டுமே முளைவிட முடியும். இறந்து போனவன் (ஏதாவது ஒருவகையில் புதிய இருப்புக்கு) மீண்டு வருவது எங்கே காணப்படுகிறது?(14) உண்மையில் வித்துகளே படைக்கப்பட்டன. இந்த அண்டம் முழுமையும் அடுத்தடுத்து வந்த வித்துகளின் விளைவால் விளைந்தவையே. இறந்து செல்பவை அழிவடையவே இறக்கின்றன. வித்துகள் வித்துகளிலிருந்தே விளைகின்றன” என்றார் {பரத்வாஜர்}.(15)

ஆத்மா? – சாந்திபர்வம் பகுதி – 187-உடலைத் தவிர உயிர் என்ற வேறு ஒன்றும் இருக்கிறது என்று பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு..

பிருகு {பரத்வாஜரிடம்}, “உயிரினத்திற்கோ, கொடுக்கப்பட்டவைக்கோ, நமது பிற செயல்களுக்கோ அழிவே கிடையாது. இறந்து போகும் உயிரினம் வடிவில் மட்டுமே மற்றொன்றாக மாறுகிறது. உடல் மட்டுமே கரைந்துபோகிறது.(1) உயிரினமானது, உடலைச் சார்ந்திருந்தாலும், உடல் அழியும் போது, அதனுடன் சேர்ந்து அழிவடைவதில்லை. விறகால் தூண்டப்பட்ட நெருப்பு, எரிந்த பிறகு எவ்வாறு காணப்படுவதில்லையோ அவ்வாறே உடல் கட்டுமானமும் அழிவுக்குப் பிறகு காணப்படுவதில்லை” என்றார் {பிருகு}.(2)

பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “நெருப்பைப் போல, உயிரினத்திற்கு அழிவில்லையென்றால், (நெருப்பைத் தூண்டிய) விறகு எரிக்கப்பட்டபிறகு, நெருப்பு காணப்படுவதில்லை என்பதை ஏற்கிறேன். நான் அறிந்த மட்டிலும், எரிபொருள் ஊட்டம் நிறுத்தப்படும்போது, நெருப்பு அணைந்து, நிர்மூலமடைகிறது.(3) எது எந்தச் செயல்பாடும் இல்லாது போனதோ, எது இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையோ, எது வெளியை நிரப்பாமல் இருக்கிறதோ, அஃது அழிவடைந்ததாகவே கருதப்பட வேண்டும்” என்றார் {பரத்வாஜர்}.(4)

பிருகு {பரத்வாஜரிடம்}, “எரிபொருள் எரிக்கப்பட்டதும், நெருப்பு காணப்படாது என்பது உண்மையே. இயற்கூறாய் அமைய, புலப்படக்கூடிய எந்தப் பொருளும் இல்லாதபோது அது வெளியில் {ஆகாயத்தில்} கலக்கிறது. எனவே, அது நம்மால் உணரப்பட முடியாததாக ஆகிறது.(5) அதேபோலவே, உயிரினமானது உடலைவிட்டு அகன்றதும் வெளியில் வாழ்கிறது, {முன் சொன்ன} நெருப்பைப் போலவே மிக நுண்ணிய வடிவை ஏற்பதால் அது பார்வைக்குப் புலப்படாததாகிறது.(6) நெருப்பு, அல்லது வெப்பமே பிராணன் முதலியவையாக அழைக்கப்படும் மூச்சுக் காற்றுகளை நீடிக்கச் செய்கிறது. (இவ்வாறு நீடித்திருக்கும்) வெப்பமே உயிர் என்றோ, வாழும் ஒன்றாகவோ அழைக்கப்படுகிறது. எந்த வெப்பம் மூச்சுகளை நீடிக்கச் செய்கிறதோ, அது மூச்சு ஒடுங்குவதன் விளைவால் அணைகிறது.(7) உடல் கட்டுமானத்தில் உள்ள வெப்பம் அணைந்ததும், அந்தக் கட்டுமானமே அசைவூட்டத்தை இழக்கிறது. வீழும் அஃது {உடல் கட்டுமானம்}, இறுதியாகச் சேருமிடமான பூமியாக {நிலமெனும் பூதமாக} மாற்றமடைகிறது.(8) அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்திலும் உள்ள மூச்சானது {வாயுக்கள்}, வெளியில் கலக்கும் போது, அவற்றில் உள்ள வெப்பமும் அந்த மூச்சையே {வாயுக்களையே} பின்தொடர்கிறது.(9) இம்மூன்றும் (வெளி, காற்று {வாயு} மற்றும் நெருப்பு ஆகியன) ஒன்றுகலக்கின்றன. மற்ற இரண்டும் (நீரும், பூமியும்) பூமியின் வடிவில் ஒன்று கலந்து நீடிக்கின்றன.(10) எங்கே வெளி {ஆகாயம்} இருக்கிறதோ, அங்கே காற்று {வாயு} இருக்கிறது, எங்கே காற்று இருக்கிறதோ, அங்கே நெருப்பு இருக்கிறது. அவை வடிவமற்றவை என்பது அறியப்பட வேண்டும், உடல்படைத்த உயிரினங்களைப் பொறுத்தே அவை வடிவங்கொள்கின்றன” என்றார் {பிருகு}.(11)

பரத்வாஜர், “உயிரினங்கள் அனைத்தின் உடற்கட்டுமானங்களிலும் வெப்பம், காற்று, பூமி, வெளி, நீர் ஆகியன இருக்கின்றனவென்றால், அப்போது உயிர் வாழும் ஒன்றின் {உயிரின் / ஜீவனின்} குறியீடுகள் என்ன? ஓ! பாவமற்றவரே, இவற்றை எனக்குச் சொல்வீராக.(12) ஐந்து முக்கியப் பூதங்களால் உண்டானவையும், ஐந்து செயல்களில் ஈடுபடுபவையும், ஐம்புலன்களைக் கொண்டவையும், அசைவூட்டம் கொண்டவையுமான உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிரின் {ஜீவனின்} இயல்பை நான் அறிய விரும்புகிறேன்.(13) சதை, குருதி, கொழுப்பு, தசைக்கட்டுகள் {நரம்புகள்}, எலும்புகள் ஆகியவற்றின் கலவையான உடல் அழிந்தபிறகு, எது உயிர் வாழ்கின்றதோ அந்த உயிர் {ஜீவன்} காணப்படுவதில்லை.(14) ஐம்பூதங்களாலான இவ்வுடல், உயிர் என்று அழைக்கப்படும் ஒன்று {ஜீவன்} இல்லாததாக இருந்தால், உடல், அல்லது மனத் துன்பம் தோன்றும்போது, அத்துன்பத்தை யார் உணர்வது? அல்லது எது உணர்கிறது?(15) எது சொல்லப்படுகிறதோ, அதைக் காதுகளின் உதவியுடன் உயிர் வாழும் ஒன்று {ஜீவன்} கேட்கிறது. எனினும், ஓ பெரும் முனிவரே, அதே ஒன்று {உயிர்}, மனம் வேறொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது கேட்காமல் இருக்கிறது. எனவே, உயிர்வாழும் ஒன்று {ஜீவன்} என்றழைக்கப்படும் ஒன்றிற்கான குறிக்கோள் ஏதும் இல்லை என்றே தெரிகிறது.(16) வாழும் உயிரானது {ஜீவனானது} மனத்தோடு இயைந்து செயல்பட்டு கண்களின் மூலமாக மொத்த காட்சியைப் பார்க்கிறது, ஆனால் மனம் வேறுவகையில் ஈடுபட்டிருக்கும்போது, கண்கள் தன் முன் இருப்பதைக் காண்பதில்லை.(17) மேலும் உறக்கத்தின் ஆதிக்கத்தில் இருக்கும்போது, அந்த ஒன்று {உயிரானது}, நுகர்வதோ, கேட்பதோ, பேசுவதோ, தீண்டல் மற்றும் சுவையின் உணர்வுகளை அனுபவிப்பதோ இல்லை.(18) கோபமடைவதும், கவலையடைவதும், பெருந்துயரை அனுபவிப்பதும் யார்? அல்லது எது? விரும்புவதும், எண்ணுவதும், வெறுப்பை உணர்வதும், சொற்களைப் பேசுவதும் எது?” என்று கேட்டார் {பரத்வாஜர்}.(19)

பிருகு, “உடலோடு சேர்ந்து பொதுவாக மனமும் ஐம்பூதங்களால் ஆனதே. இதன் காரணமாக, நீ சொன்ன எந்தச் செயல்பாடுகளின் விளைவாலும் இது நேரவில்லை. உள்ளார்ந்த ஒரே ஆன்மா மட்டுமே உடலை நீடிக்கச் செய்கிறது. மணம், சுவை, ஒலி, தீண்டல், வடிவம் மற்றும் (புற இயற்கையில் நீடிக்கும்) பிற பண்புகள் ஆகியவற்றை அதுவே {ஆன்மாவே} உணர்கிறது.(20) அந்த ஆத்மாவே, அங்கங்கள் அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஐம்பூதங்களால் தொகுக்கப்பட்ட உடலுக்குள் வசித்துக் கொண்டு, ஐந்து பண்புகளுடன் இருக்கும் மனத்திற்கு (மனத்தின் செயல்களுக்கு) சாட்சியாக இருக்கிறது. இன்பத்தையும், துன்பத்தையும் உணர்வது அதுவே {ஆன்மாவே}. அதனில் இருந்து உடல் பிரிக்கப்படும்போது, உடலானது அதற்குமேல் அவற்றை உணர்வதில்லை.(21) எந்த வடிவத்தையும், அல்லது தீண்டலையும் உணராதபோது, உடலில் வசிக்கும் நெருப்பில் வெப்பமேதும் இல்லாத போது, உண்மையில் அந்த விலங்குவெப்பம் அணையும்போது, ஆன்மாவால் கைவிடப்பட்டதன் விளைவால், அவ்வுடல் அழிவைச் சந்திக்கிறது.(22) இந்த மொத்த அண்டமும் நீரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. நீரே உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் வடிவமாக {ஸுக்ஷமசரீரமாக} இருக்கிறது. ஆன்மா என்பது அனைத்துப் பொருட்களிலும் நீடித்திருக்கும் படைப்பாளன் பிரம்மனே ஆவான்.(23)

ஆன்மா தீய பண்புகளை அடையும்போது, அது க்ஷேத்ரஜ்ஞன் என்ற அழைக்கப்படுகிறது. அப்பண்புகளில் இருந்து விடுபடும்போது, அது பரமாத்மா, அல்லது உயர்ந்த ஆத்மா என்று அழைக்கப்படுகிறது.(24) அஃதை ஆன்மா என்றறிவாயாக. அஃது அண்ட நல்லுணர்வால் ஊக்கமடைந்திருக்கிறது. அது {அவன்} தாமரையில் உள்ள நீர்த்துளி போல உடலில் வசிக்கிறது.(25) எது அண்ட நல்லுணர்வைக் கொண்டிருக்கிறதோ அதுவே க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறது என்பதை நன்கறிவாயாக. வாழும் உயிரானது, இருள் {தாமஸம்}, ஆசை {ரஜோ} மற்றும் நல்லுணர்வு {சத்துவம்} என்ற மூன்று பண்புகளைக் கொண்டதாகும்.(26) ஆன்மாவானது, நனவுநிலையைக் கொண்டிருக்கிறது, வாழ்வின் பண்புகளுடன் நீடித்திருக்கிறது என்று கல்விமான்கள் சொல்கின்றனர். ஆன்மாவே முயற்சி செய்கிறது, அனைத்தையும் முயற்சி செய்ய வைக்கிறது. ஆன்மா குறித்த அறிவுடையோர், ஆன்மாவானது உயிரிலிருந்து வேறானது என்று சொல்கின்றனர். ஏழு உலகங்களையும் படைத்த பரமாத்மாவே அவற்றை {ஆன்மாக்களை} இயக்குகிறது[1].(27) உடல் அழியும்போது வாழும் ஒன்று {உயிர்} அழிவதில்லை. அறிவற்ற மனிதர்களே அஃது இறக்கிறது என்று சொல்கிறார்கள். அது நிச்சயம் உண்மையல்ல. மரணம் என்று அழைக்கப்படுவது உடலின் அழிவு மட்டுமே ஆகும்.(28)இவ்வாறு பல்வேறு வடிவங்களில் பொதியப்படும் ஆன்மாவானது, ஒரு வடிவில் இருந்து மற்றொன்றாக மாறி, பிறரால் காணப்படாததாகவும், கவனிக்கப்படாததாகவும் இருக்கிறது. உண்மை ஞானத்தைக் கொண்டவர்கள், தங்கள் கூர்மையான நுண்ணறிவால் ஆன்மாவைக் காண்கிறார்கள்.(29) அனைத்துப் பாவங்களில் இருந்து தூய்மையடைந்த இதயத்துடன் எளிய உணவு உண்டு வாழும் ஞானி, யோகத் தியானத்திற்குத் தன்னை அர்ப்பணித்து, ஒவ்வொறு நாள் இரவு உறங்கும் முன்பும், உறங்கிய பின்னரும் தன் ஆன்மாவின் உதவியால் தன் ஆன்மாவையே காண்கிறான்[2].(30) உள்ளடங்கிய இதயத்தின் விளைவால், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, தன் ஆன்மாவைச் சார்ந்து ஒருவனால் முடிவற்ற மகிழ்ச்சியை அடைய முடியும்.(31) நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டவனும், மனத்தில் வசிப்பவனுமான மன்னன், வாழும் ஒன்று என்று அழைக்கப்படுகிறான். அனைத்தின் தலைவனான அவனிலிருந்தே இந்தப் படைப்பு எழுந்தது. உயிரினங்கள் மற்றும் ஆன்மாவின் தோற்றம் குறித்த விசாரணையின் முடிவில், இந்தத் தீர்மானமே அடையப்படுகிறது” என்றார் {பிருகு}.(32)

வர்ண வேறுபாடு? – சாந்திபர்வம் பகுதி – 188-பிராமணர்கள் தத்தமது விருப்பப்படி நடந்து கொண்டதால் உண்டான வர்ண வேறுபாடு குறித்து பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு..

பிருகு {பரத்வாஜரிடம்}, “பிரம்மன் முதலில் பிரஜாபதிகள் {படைப்பின் தலைவர்கள்} என்றழைக்கப்பட்ட சில பிராமணர்களைப் படைத்தான். நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியைக் கொண்ட அவர்கள், முதலில் தோன்றியவனின் {பிரம்மனின்} சக்தியின் மூலம் உண்டாக்கப்பட்டார்கள்.(1) பிறகு அந்தப் பலமிக்கத் தலைவன் {பிரம்மன்}, உயிரினங்கள் சொர்க்கத்தை அடையும்பொருட்டு, வாய்மை, கடமை, தவம், அழிவில்லா வேதங்கள், அனைத்து வகைப் பக்திச் செயல்பாடுகள், தூய்மை, ஆகியவற்றை (உயிரினங்கள் பயில்வதற்காகப்) படைத்தான்.(2) ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே, அதன் பிறகு, தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், தைத்தியர்கள், அசுரர்கள், பெரும் நாகர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள், பிசாசங்கள், மனிதர்களில்(3) நான்கு பிரிவினரான பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரும், படைப்பில் இருக்கும் பிற வகையைச் சார்ந்தவையும் படைக்கப்பட்டன.(4) பிராமணர்கள் வெண்ணிறத்தையும், க்ஷத்திரியர்கள் சிவப்பு நிறத்தையும் , வைசியர்கள் மஞ்சள் நிறத்தையும் அடைந்தனர், சூத்திரர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிறம் கருப்பாகும்[1]” என்றார் {பிருகு}.(5)பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “(மனிதர்களின்) நால்வகையினருக்கிடையிலான வேறுபாடு வண்ணங்களால் (பண்புகளால்) மட்டுமே உண்டானவை என்றால், நால் வகையும் ஒன்றுகலந்ததாகவே தெரிகிறது.(6) காமம், கோபம், அச்சம், பேராசை, துயரம், கவலை, பசி, களைப்பு, ஆகியன மனிதர்கள் அனைவரையும் வசப்படுத்தி அவர்களில் நீடித்திருக்கின்றன. பண்புகள் உடைமையால் எவ்வாறு மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும்?(7) மனிதர்கள் அனைவரின் உடல்களும், வியர்வை, சிறுநீர், மலம், சளி, கபம், குருதி ஆகியவற்றை வெளியிடுகின்றன. பிறகு, மனிதர்களை எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்?(8) அசையும் பொருட்கள் முடிவிலா எண்ணிக்கையில் இருக்கின்றன; அசையாத பொருட்களைக் கொண்ட இனங்களும் எண்ணற்றவையாக இருக்கின்றன. இவ்வளவு பெரிய வேற்றுமைகளைக் கொண்ட பொருட்களை {மனிதர்களை} எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்?” என்று கேட்டார் {பரத்வாஜர்}.(9)

பிருகு {பரத்வாஜரிடம்}, “வெவ்வேறு வகைகளுக்கிடையில் உண்மையில் எந்த வேறுபாடும் கிடையாது. பிரம்மனால் (சமமாகப்) படைக்கப்பட்ட மனிதர்கள், தங்கள் செயல்பாடுகளின் விளைவால், பல்வேறு வகையினராகப் பிரிந்திருக்கிறார்கள்.(10) ஆசைகளிலும், இன்பங்களை அனுபவிப்பதிலும் ஈடுபாடுடையவர்களும், கடுமை மற்றும் கோபம் என்ற பண்புகளைக் கொண்டவர்களும், துணிவுமிக்கவர்களும், பக்தி மற்றும் வழிபாட்டுக் கடமைகளில் கவனமில்லாதவர்களும், ஆசைப் பண்பை {ரஜோ குணத்தைக்} கொண்டவர்களுமான பிராமணர்களே க்ஷத்திரியர்களானார்கள்.(11) மேலும் தங்களுக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல், நற்பண்பு மற்றும் ஆசைப்பண்பு ஆகிய இரண்டையும் கொண்டவர்கள், கால்நடை வளர்த்தல் மற்றும் உழவு என்ற தொழில்களை ஏற்று வைசியர்களானார்கள்.(12) பொய்மையில் விருப்பமுள்ளவர்களும், பிற உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களும், பேராசை கொண்டவர்களும், வாழ்வதற்காக அனைத்து வகைச் செயல்களிலும் ஈடுபடுபவர்களும், ஒழுக்கத் தூய்மை தவறியவர்களும், இருளின் பண்பைக் கொண்டவர்களுமான பிராமணர்களே சூத்திரர்களானார்கள்.(13) இத்தொழில்களால் பிரிக்கப்பட்டவர்களும், தங்கள் வகையில் இருந்து வீழ்ந்தவர்களுமான பிராமணர்களே, மூன்று பிற வகையினரானார்கள். எனவே, பக்தி தொடர்புடைய கடமைகள் அனைத்தையும், வேள்விகளையும் செய்ய நான்கு வகையைச் சார்ந்த அனைவருக்கும் எப்போதும் உரிமையிருக்கிறது.(14) முதலில் சமமாகவே பிரம்மனால் படைக்கப்பட்டவர்களான இந்த நால்வகையைச் சேர்ந்த அனைவருக்கும், (வேதங்களில் உள்ள) பிரம்ம வார்த்தைகள் {அவற்றை அவர்கள் அனைவரும் பின்பற்ற} விதிக்கப்பட்டன. பலர் பேராசையால் மட்டுமே வீழ்ந்து, அறியாமை கொண்டவர்களானார்கள்.(15)

பிரம்மம் குறித்த சாத்திரங்களில் எப்போதும் அர்ப்பணிப்புடையவர்களும், நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளில் எப்போதும் கவனம் கொண்டவர்களுமான பிராமணர்களே, பிரம்மம் என்ற கருத்தைப் புரிந்து கொள்ள வல்லர்களாக இருக்கிறார்கள்.(16) பிராமணர்களாக இல்லாதவர்கள், படைக்கப்பட்ட அனைத்தும் உயர்ந்த பிரம்மமே என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள். வீழ்ந்தவர்களான இவர்கள், பல்வேறு (தாழ்ந்த) வகைகளின் உறுப்பினர்களாகின்றனர்.(17) அறிவொளியை இழந்து, கட்டுப்பாடற்ற ஒழுக்க நடைக்குப் பழகும் இவர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள், பிரேதங்கள் மற்றும் பல்வேறு மிலேச்ச இனங்களில் பிறப்பை அடைகின்றனர்.(18) தொடக்கத்தில் (பிரம்மனின் மனோ விருப்பத்தால்) உயிருடன் எழுந்த பெரும் முனிவர்கள், தங்கள் தவங்களின் மூலமாக, விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், அழிவற்ற வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளில் பற்றுடையவர்களுமான மனிதர்களை அடுத்தடுத்து உண்டாக்கினர்.(19) யோகத்தைப் புகலிடமாகக் கொண்டவனும், மனமே ஆனவனுமான ஆதி தேவனிலிருந்து {பிரம்மனில் இருந்து} எழுந்து, பிரம்மத்தையே அடிப்படையாகக் கொண்டு, அழிவற்ற, சிதைவற்ற மற்றொரு படைப்பும் இருக்கிறது[2]” என்றார் {பிருகு}.(20)

வர்ணக் குறியீடுகள்? – சாந்திபர்வம் பகுதி – 189-பிராமணர்களின் குறியீடுகளையும், பிரம்மத்துடன் கலப்பதற்கான தகுதிகளையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு…

பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “ஒருவன் எந்தச் செயல்பாடுகளின் மூலம் ஒரு பிராமணனாகிறான்? எதனால் ஒரு க்ஷத்திரியனாகிறான்? ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, மேலும் என்ன செயல்பாடுகளின் மூலம் ஒருவன் வைசியானாகவும், சூத்திரனாகவும் ஆகிறான்? ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவரே, இவற்றை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(1)

பிருகு {பரத்வாஜரிடம், “ஜாதம் {ஜாதகர்ம} என்றழைக்கப்படும் சடங்குகள் மற்றும் அத்தகைய சடங்குகளால் புனிதமடைந்தவனும்; ஒழுக்கத்தில் தூய்மையானவனும்; வேத கல்வியில் ஈடுபடுபவனும்; நன்கு அறியப்பட்ட ஆறு செயல்களில் (காலையும், மாலையும் தூய்மைச் சடங்குகள் செய்தல்; மந்திரங்களை அமைதியாக ஓதுதல்; வேள்வி நெருப்பில் ஆகுதி ஊற்றுதல்; தெய்வங்களை வழிபடுதல், விருந்தோம்பல் கடமைகளின் படி விருந்தினர்கள் உபசரித்தல், விஸ்வதேவர்களுக்கு உணவளித்தல் ஆகிய ஆறு செயல்களில்) அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவனும்;(2) பக்திச் செயல்பாடுகள் அனைத்தையும் செய்பவனும்; தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் முறையாக உணவளிக்காமல் உண்ணாதவனும்; ஆசான் மீது பெரும் மதிப்பு கொண்டவனும்; நோன்புகள் மற்றும் வாய்மையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுகிறான்.(3) எவனிடம் வாய்மை, தானம், தீங்கிழையாமை, கருணை, வெட்கம், நல்லுணர்வு[1], தவம் ஆகியன உள்ளனவோ அவனே பிராமணனாக அழைக்கப்படுகிறான்.(4)போர்த்தொழிலில் ஈடுபடுபவனும், வேதம் கற்பவனும், (பிராமணர்களுக்குக்) கொடையளிப்பவனும், (தன்னால் பாதுகாக்கப்படுகிறவர்களிடம் இருந்து) செல்வத்தைப் பெறுபவனுமான ஒருவன் க்ஷத்திரியன் என்று அழைக்கப்படுகிறான்.(5)

கால்நடை வளர்ப்பு, உழவுத் தொழில், செல்வம் ஈட்டுவதற்கான வழிமுறைகளின் {வணிகத்தின்} மூலம் புகழை ஈட்டுபவனும், ஒழுக்கத்தில் தூய்மை கொண்டவனும், வேத கல்வியில் ஈடுபடுபவனுமான ஒருவன் வைசியன் என்றழைக்கப்படுகிறான்[2].(6)அனைத்து வகை உணவை உண்பதில் இன்பங்கொள்கிறவனும், அனைத்து வகை வேலைகளிலும் ஈடுபடுபவனும், ஒழுக்கத்தில் மாசுள்ளவனும், வேதங்களைக் கல்லாதவனும், தூய்மையற்ற ஒழுக்கம் கொண்டவனுமான ஒருவன் சூத்திரன் என்று சொல்லப்படுகிறான்.(7) ஒரு சூத்திரனிடம் {வாய்மை உள்ளிட்ட} இந்தப் பண்பியல்புகள்[3] காணப்பட்டாலும், ஒரு பிராமணனிடம் காணப்படவில்லையென்றாலும், அத்தகைய சூத்திரன் சூத்திரனுமல்ல, அத்தகைய பிராமணன் பிராமணனுமல்ல[4].(8)பேராசையும், கோபமும் அனைத்துவகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இவையும், தற்கட்டுப்பாடும் அறிவின் உயர்ந்த விளைவுகளாகும்.(9) அந்த ஆவல்கள் (பேராசை மற்றும் கோபம் ஆகிய) இரண்டையும் ஒருவன் முழு இதயத்துடன் தடுக்க வேண்டும். அவை ஒருவனுடைய உயர்ந்த நன்மையை அழிக்கவே தோன்றுகின்றன.(10) ஒருவன் தன் கோபத்திடம் இருந்து தன் செழிப்பையும், செருக்கிலிருந்து தவங்களையும், மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றில் இருந்து அறிவையும், குற்றங்களில் இருந்து தன் ஆன்மாவையும் எப்போதும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,(11)

ஓ! மறுபிறப்பாளனே, எந்தப் புத்திசாலி கனியில் விருப்பமில்லாமல் அனைத்துச் செயல்களையும் செய்வானோ, எவனுடைய மொத்த செல்வமும் ஈகைக்காகவே இருக்கிறதோ, எவன் தினப்படியான ஹோமங்களைச் செய்வானோ அவனே உண்மையில் துறவியாவான் {தியாகியாவான்}. தீங்கிழைக்கும் செயல்கள் அனைத்தையும் தவிர்த்து உயிரினங்கள் அனைத்திற்கும் நண்பனாக ஒருவன் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்[5].(12) கொடைகள் யாவற்றையும் ஏற்காத ஒருவன், தன் நுண்ணறிவின் மூலம், தன் ஆசைகளுக்கு முற்றான தலைவனாக இருக்க வேண்டும். எந்தத் துன்பமும் இல்லாத தன் ஆன்மாவிலேயே அவன் வாழ வேண்டும். அப்போது அவன் இம்மையிலும் எந்த அச்சமும் கொள்ள மாட்டான், மறுமையிலும் அச்சமற்ற உலகத்தை அடைவான்.(13) ஒருவன், தவங்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாக, ஆசைகள் அனைத்தையும் முற்றாகத் தவிர்ப்பவனாக, எண்ணங்களை வெளியிடாத நோன்பை நோற்பவனாக, தன்னில் குவிந்த ஆன்மாவுடன் கூடியவனாக, வெல்லமுடியா புலன்களை வெல்ல விரும்புபவனாக, பற்றுகளுக்கு மத்தியில் பற்றற்றவனாக எப்போதும் வாழ வேண்டும்.(14)புலன்களுக்குப் புலப்படும் பொருட்கள் அனைத்தும் வெளிப்பாடு {வியக்தம்} என்றழைக்கப்படுகிறது. எனினும், புலன்களுக்கு எட்டாமல், வெளிப்பாடற்றதாக {அவியக்தமாக} இருப்பவையும், நுண்ணியப் புலனுணர்வால் மட்டுமே உறுதி செய்து கொள்ளக்கூடியவையுமான அனைத்தையும் அவன் அறிய முயல வேண்டும்[6].(15) நம்பிக்கையேதும் இல்லையென்றால், ஒருவனால் அந்த நுண்ணுணர்வை அடைய முடியாது. எனவே, அவன் நம்பிக்கையுடனே இருக்க வேண்டும். மனம் பிராணனிலும், பிராணன், பிரம்மத்திலும் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.(16) பற்றுகள் அனைத்திலிருந்தும் தொடர்பறுத்துக் கொள்ளும் ஒருவனே பிரம்மத்துடன் கலக்கலாம். வேறு எதையும் கவனிக்க வேண்டிய அவசியமில்லை. துறவுப் பாதையில் ஒரு பிராமணனால் எளிதாகப் பிரம்மத்தை அடைய முடியும்.(17) தூய்மை, நல்லொழுக்கம், அனைத்துயிரினங்களிடமும் கருணை ஆகியவையே ஒரு பிராமணனின் குறியீடுகளாகும்” என்றார் {பிருகு}.(18)

பூமியே மூதன்னை! – சாந்திபர்வம் பகுதி – 190-உண்மை சொர்க்கத்திற்கும், பொய் நரகத்திற்கும் இட்டுச் செல்லும்; பொய்யாலுண்டாகும் துன்பங்கள்; இம்மைக்கும் மறுமைக்கும் உள்ள வேறுபாடு ஆகியவற்றைப் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு..

பிருகு {பரத்வாஜரிடம்}, “உண்மையே பிரம்மம்; உண்மையே அனைத்து உயிரினங்களையும் உண்டாக்குகிறது. உண்மையின் மூலமே இந்த மொத்த அண்டமும் தாங்கப்படுகிறது; உண்மையின் துணை கொண்டே ஒருவன் சொர்க்கத்திற்குச் செல்கிறான்.(1) பொய்மையானது இருளின் மற்றொரு வடிவமாக மட்டுமே இருக்கிறது. இருள் கீழ்நோக்கியே வழிகாட்டும். இருளால் பாதிப்படைந்தோரும், அதனால் மறைக்கப்பட்டோரும், சொர்க்கத்தின் ஒளிமிக்க உலகங்களைக் காணத் தவறுகின்றனர்.(2) சொர்க்கம் ஒளி என்றும், நரகம் இருள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த அண்டத்தில் வசிக்கும் உயிரினங்கள் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய இரண்டையும் அடையலாம்.(3) இவ்வுலகிலும், உண்மையும் பொய்மையும், அறம் மற்றும் மறம், ஒளி மற்றும் இருள், இன்பம் மற்றும் துன்பம் என்பவைபோன்ற முரண்பட்ட வழிமுறைகளுக்கும், முரண்பட்ட குறியீடுகளுக்கும் வழிவகுக்கும்.(4) இவற்றில் எது உண்மையோ அஃது அறமாகும்; எஃது அறமோ அஃது ஒளியாகும்; எது ஒளியோ அஃது இன்பமாகும். அதேபோலவே, எது பொய்மையோ அது மறமாகும்; எது மறமோ அஃது இருளாகும்; எது இருளோ அது துன்பம் அல்லது துயரமாகும்.(5)

ஞானம் கொண்டோர், இவ்வுலக வாழ்வானது உடல் மற்றும் மனம் சார்ந்த கவலையிலும், நிச்சயம் துன்பத்தில் முடியக்கூடிய இன்பத்திலும் மூழ்கியிருப்பதைக் கண்டு, ஒருபோதும் திகைப்படையாதவர்களாக இருக்கிறார்கள்.(6) எவன் ஞானியோ அவன் கவலையில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முனைவான். உயிரினங்களின் மகிழ்ச்சியானது, இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிலும் நிலையற்றதாகும்[1].(7) இருளில் மூழ்கியிருக்கும் உயிரினங்களின் மகிழ்ச்சியானது, ராகுவால் பீடிக்கப்படும் சந்திரனின் காந்தியைப் போல மறைந்து போகிறது[2].(8) உடல் சார்ந்தது, மனம் சார்ந்தது என்று இன்பம் இரு வகையாகச் சொல்லப்படுகிறது. இம்மையிலும், மறுமையிலும், புலப்படக்கூடியவையும், புலப்படாதவையுமான (செயல்களின்) கனிகள் இன்பத்தின் நிமித்தமாகவே (வேதங்களில்) குறிப்பிடப்படுகின்றன[3]. முத்தொகையின் {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின்} கனிகள், அல்லது விளைவுகளில், இன்பத்தைவிட முக்கியமானது வேறேதும் இல்லை. மகிழ்ச்சியே விரும்பத்தக்கது. அதுவே ஆன்மாவின் பண்பாகும். அறமும், பொருளும் அதற்காகவே நாடப்படுகின்றன. அறமே அதன் வேராகும். உண்மையில், இதுவே அதன் தோற்றுவாயாகும். அனைத்து செயல்களும் மகிழ்ச்சியை அடைவதையே முடிவான இலக்காகக் கொண்டிருக்கின்றன” என்றார் {பிருகு}.(9)பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, “இன்பமே உயர்ந்த பொருள் என்று நீர் சொல்கிறீர். என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. (நீர் சொல்வது போல) இவ்வளவு விரும்பத்தக்கதாக உள்ள ஆத்மாவின் இந்தப் பண்பை அடைய முனையாமல் முனிவர்கள் வேறு ஏதோ உயர்ந்த வெகுமதியை அடைவதில் ஈடுபடுகிறார்கள். மூவுலகங்களின் படைப்பாளனான பலமிக்கப் பிரம்மன், பிரம்மச்சரிய நோன்பை நோற்றுத் தனியாக வாழ்ந்து வருவதாகக் கேள்விப்படுகிறோம். இன்பத்தை நிறைவு செய்வதன் மூலம் அடையப்படும் மகிழ்ச்சியில் அவன் ஒருபோதும் பற்றுடன் இல்லை. மேலும், அண்டத்தின் தெய்வீகத் தலைவனான உமையின் தலைவன் {சிவன்}, (இன்பத்திற்கான தேவனான) காமனை இல்லாமல் செய்தான். இதன் காரணமாக, உயர் ஆன்ம மக்கள் இன்பத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்று நாம் சொல்கிறோம். மேலும் அஃது ஆன்மாவின் உயர்ந்த பண்பாகத் தெரியவில்லை. இன்பத்தைவிட வேறேதும் உயர்ந்ததில்லை என்று தெய்வீகமான நீர் {தேவரீர்} சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. நாம் செய்யும் செயல்களின் விளைவுகளாக, நற்செயல்களில் இருந்து இன்பமும், பாவச்செயல்களில் இருந்து துன்பமும் இரண்டு வகைகளில் எழுகின்றன என்று சொல்லப்படுவது வெற்றுமொழியாக மட்டுமே இவ்வுலகில் இருக்கிறது” என்றார் {பரத்வாஜர்}[4].(10)பிருகு {பரத்வாஜரிடம்}, “இது பின்வருமாறு சொல்லப்படுகிறது: பொய்மை இருளில் {அறியாமையில்} இருந்து எழுகிறது. இருளில் {அறியாமையில்} மூழ்கியிருப்போர் அறத்தையல்லாமல் {தர்மத்தையல்லாமல்}, மறத்தை {அதர்மத்தை} மட்டுமே பின்தொடர்ந்து, கோபம், பேராசை, வன்மம், பொய்மை, மற்றும் இவை போன்ற வேறு தீமைகளுக்கும் வசப்பட்டவர்களாகிறார்கள். அவர்கள் இம்மையிலோ, மறுமையிலோ ஒருபோதும் மகிழ்ச்சியை அடைவதில்லை. மறுபுறம், பல்வேறு வகை நோய், துன்பம் மற்றும் தொல்லைகளில் அகப்படுகின்றனர். மரணம், சிறை மற்றும் இவ்வகைத் துன்பங்கள் பிறவற்றாலும், பசி, தாகம் மற்றும் களைப்பு ஆகியவற்றால் உண்டாகும் கவலைகளாலும் அவர்கள் வதைக்கப்படுகின்றனர். மழை, காற்று, எரியும் வெப்பம், மிகைப்பட்ட குளிர் ஆகியவற்றில் இருந்து எழும் எண்ணற்ற உடல் துன்பங்களையும் அவர்கள் அடைகிறார்கள். செல்வ இழப்பு, நண்பர்களிடம் இருந்து பிரிவு, முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றால் உண்டாகும் எண்ணற்ற மனத் துன்பங்களிலும் மூழ்குகிறார்கள்.(11)

பல்வேறு வகை உடல் மற்றும் மனத் துன்பங்களால் தீண்டப்படாதவர்களே இன்பத்தை அறிவார்கள்.(12) இந்தத் தீமைகள் ஒருபோதும் சொர்க்கத்தில் காணப்படுவதில்லை. அங்கே இனிய தென்றல் வீசிக்கொண்டிருக்கிறது. அங்கே சொர்க்கத்தில் இடையறாத நறுமணமும் வீசிக்கொண்டிருக்கிறது. சொர்க்கத்தில் பசியோ, தாகமோ, முதுமையோ, பாவமோ கிடையாது.(13) சொர்க்கத்தில் இடையறாத இன்பம் இருக்கிறது. இவ்வுலகில் {இம்மையில்} இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டும் இருக்கின்றன. நரகத்திலோ துன்பம் மட்டுமே இருக்கிறது. எனவே, இன்பமே அடையத்தக்க பொருளில் உயர்ந்ததாகும்.(14) இந்தப் பூமியே {பூமாதேவியே} அனைத்து உயிரினங்களின் மூதன்னையாக இருக்கிறாள். பெண்கள் அவளது இயல்பையே பெற்றிருக்கின்றனர். ஆண்விலங்கானது, பிரஜாபதியைப் போன்றதாகும். உயிர்வித்தானது, படைக்கும் சக்தி என அறியப்பட வேண்டும்.(15) இவ்வழியிலேயே படைப்பு நேர வேண்டுமெனப் பழங்காலத்தில் பிரம்மனால் விதிக்கப்பட்டது. தன் செயல்களால் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும், இன்பத்தையோ, துன்பத்தையோ அடைகிறார்கள்” என்றார் {பிருகு}[5].(16)

ஆசிரமதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 191-தானம், அறம், ஒழுக்கம் முதலியவற்றின் பயன்களையும், நான்கு ஆசிரமங்களுக்கு உரிய கடமைகளையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு…

பரத்வாஜர் {பிருகுவிடம்}, “கொடையின் {தானத்தின்} விளைவும், அறம், ஒழுக்கம், நன்கு பயிலப்படும் தவம், வேத கல்வி மற்றும் வேதம் ஓதல், நெருப்பில் ஆகுதிகளை ஊற்றல் ஆகியவற்றின் விளைவுகளும் {பயன்களும்} என்னென்ன?” என்று கேட்டார்.(1)

பிருகு {பரத்வாஜரிடம்}, “புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவதன் {ஹோமத்தின்} மூலம், பாவம் எரிக்கப்படுகிறது. வேத கல்வியின் மூலம் ஒருவன் அருள் நிறைந்த அமைதி மனத்தை அடைகிறான். கொடையின் மூலம் ஒருவன் இன்பங்களையும், இன்பநுகர் பொருட்களையும் அடைகிறான். தவங்களின் மூலம் ஒருவன் அருள் நிறைந்த சொர்க்கத்தை அடைகிறான்.(2) மறுமைக்கானது, இம்மைக்கானது என இருவகைக் கொடைகள் சொல்லப்படுகின்றன. நன்மைக்காகக் கொடுக்கப்படும் எதுவும் கொடையாளியின் மறுமையைக் கவனித்துக் கொள்கின்றன.(3) நன்மையற்றவைக்குக் கொடுக்கப்படும் எதுவும் இம்மையில் இன்புறுவதற்கான விளைவுகளை உண்டாக்குகின்றன. கொடைகளின் விளைவுகள் அந்தக் கொடைகளுக்கு ஒப்பானவையாகவே இருக்கின்றன” என்றார் {பிருகு}.(4)

பரத்வாஜர் {பிருகுவிடம்}, “எவனால் எந்தக் கடமைகள் செய்யப்பட வேண்டும்? கடமையின் {தர்மத்தின்} பண்பியல்புகள் என்னென்ன? கடமைகளில் எத்தனை வகைகள் இருக்கின்றன? இவற்றை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்றார்[1].(5)பிருகு {பரத்வாஜரிடம்}, “எந்த ஞானிகள் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைச் செய்வதில் ஈடுபடுவார்களோ, அவர்கள் சொர்க்கத்தையே தங்கள் வெகுமதியாக அடைகிறார்கள். வேறு வகையில் செய்யும் மக்கள் மூடக்குற்றம் செய்தவர்களாகிறார்கள்” என்றார்.(6)

பரத்வாஜர் {பிருகுவிடம்}, “முன்பு பிரம்மனால் விதிக்கப்பட்ட நான்கு வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்}, அவை ஒவ்வொன்றின் நடைமுறைகளையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டார்.(7)

பிருகு {பரத்வாஜரிடம்}, “பழங்காலத்தில், தெய்வீகப் பிரம்மன், உலகின் நன்மைக்காகவும், அறத்தைப் பாதுகாப்பதற்காகவும் நான்கு வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சட்டிக்காட்டினார். (கால வரிசையின் அடிப்படையில்) அவற்றில், ஆசானின் வசிப்பிடத்தில் வசிப்பது முதலாகக் குறிப்பிடப்படுகிறது. எவன் இந்த {பிரம்மச்சரிய} வாழ்வுமுறையில் இருக்கிறானோ, அவன் ஒழுக்கத்தூய்மை, வேத சடங்குகள், நலந்தரும் கட்டுப்பாடுகள், நோன்புகள், பணிவு ஆகியவற்றின் மூலம் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். காலை மற்றும் மாலை சந்திகளையும், சூரியனையும், தன் புனித நெருப்பையும், தெய்வங்களையும் அவன் வழிபட வேண்டும். தாமதம் மற்றும் சோம்பலை அவனைக் கைவிட வேண்டும். அவன் தன் ஆசானை வணங்குவது, வேத கல்வி, ஆசானின் போதனைகளைக் கேட்பது ஆகியவற்றின் மூலம் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் (காலை, நடுப்பகல், மாலை என) மூன்று வேளை தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.(8) அவன் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும். தன் புனித நெருப்பைக் கவனிக்க வேண்டும். தன் ஆசானுக்குக் கடமை உணர்வுடன் தொண்டு செய்ய வேண்டும். (தன்னை ஆதரித்தக்கொள்ள) தினமும் பிச்சையெடுக்கச் செல்ல வேண்டும். ஆசான் சொல்லும் எந்தக் கட்டளையையும் விருப்பத்துடன் நிறைவேற்றி, தன் நன்மைக்காக ஆசானால் போதிக்கப்படும் வேத கல்வியைப் பெறத் தயாராக இருக்க வேண்டும்[2]. இது குறித்து ஒரு சுலோகம் இருக்கிறது {அது பின்வருமாறு}: தன் ஆசானை மதிப்புடன் கவனித்துக் கொள்வதன் மூலம் தன் வேதத்தை அடையும் பிராமணன், சொர்க்கத்தை அடைவதில் வென்று, தன் ஆசைக் கனிகள் அனைத்தையும் அடைவான்.(9)காலவரிசையின் படி) இரண்டாவதாக அழைக்கப்படுவது இல்லற வாழ்வுமுறையாகும் {கார்ஹஸ்த்ய ஆச்ரமம்}. அந்த வாழ்வுமுறையின் செயல்பாடுகள் மற்றும் குறியீடுகள் ஆகிய அனைத்தையும் நாம் உனக்குச் சொல்வோம். ஆசானிடம் வாசத்தை நிறைவு செய்து வீடு திரும்பியவர்கள், பக்தியொழுக்கம் கொண்டவர்கள், தங்கள் துணைவியரின் தோழமையோடு அறம் சார்ந்த ஒழுக்கத்தின் கனிகளை விரும்புவோர் இந்த வாழ்வுமுறையைத் தங்களுக்கெனக் கொள்கிறார்கள். அதில் அறம், செல்வம் {பொருள்}, இன்பம் ஆகிய அனைத்தையும் அடையலாம். (இவ்வாறே) அது {இல்லறம்} முத்தொகை {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை} வளர்க்கத் தகுந்ததாக இருக்கிறது. வேதங்களை ஓதுவதன் மூலம் அடையப்படும் உயர்ந்த பயனுடன் கூடிய செல்வத்தின் மூலம், அல்லது மறுபிறப்பாள முனிவர்கள் வாழ்வதற்காகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் மூலம், அல்லது மலைகள் மற்றும் சுரங்கங்களில் விளைவதன் மூலம், அல்லது வேள்விகளில் கொடுக்கப்படும் செல்வங்கள் மற்றும் நோன்புகள் மற்றும் பிற சடங்குகளில், முடிவில் கொடுக்கப்படும் செல்வங்கள் மற்றும் தெய்வகளுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளின் மூலம் ஓர் இல்லறத்தான் குற்றமற்ற செயல்பாடுகளின் மூலம் செல்வத்தை அடைந்து, தன் வாழ்வுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த வாழ்வுமுறையே {இல்லறமே} பிற வாழ்வுமுறைகள் அனைத்திற்குமான வேராகக் கருதப்படுகிறது. ஆசான்களின் வசிப்பிடங்களில் வசித்து, பிச்சையெத்து வாழ்வோரும், நோன்புகள் அல்லது உறுதியேற்றுக்கொண்ட கட்டுப்பாடுகளின் படி வாழ்வோரும், இந்த வாழ்வுமுறையில் வாழ்வோரிடமிருந்தே தங்கள் வாழ்வாதாரத்தை அடைய முடியும். அவர்கள் பித்ருக்களுக்கு அளிக்கும் காணிக்கைகள் மற்றும் தெய்வங்களுக்கு அளிக்கும் காணிக்கைகளின் மூலமே அவர்கள் தங்களை முழுமையாக ஆதரித்துக் கொள்ள முடியும்.(10)

மூன்றாவது வாழ்வுமுறையானது காட்டு வாழ்வு {வானப்ரஸ்தம்} என்றழைக்கப்படுகிறது. இந்த வாழ்வுமுறையை நோற்பவர்கள் செல்வத்தையோ, பொருட்களையோ சேர்த்துவைப்பதில்லை[3]. பொதுவாக, பக்திமிக்கவர்களும், நல்லவர்களுமான இம்மனிதர்கள், சிறந்த உணவை உண்டு, வேத கல்வியில் ஈடுபட்டு, பூமியில் உள்ள தீர்த்தங்களிலும், பல்வேறு ஆட்சிப்பகுதிகளிலும் திரிந்து கொண்டிருப்பார்கள். எழுந்து நிற்பது, முன் சென்று வரவேற்பது, நேர்மையுடன் இனிய பேச்சுகளைப் பேசுவது, கொடுப்பவரின் தகுதிக்கேற்ற அளவில் கொடைகள் அளிப்பது, இருக்கைகளை அளிப்பது, சிறந்த வகைப் படுக்கைகளை அளிப்பது, சிறந்த வகை உணவுகளை அளிப்பது ஆகியவை அவர்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய சில வழிமுறைகளாகும்[4].(11) இது குறித்து ஒரு ஸ்லோகம் இருக்கிறது: ஒரு விருந்தினர் நிறைவடையாத எதிர்பார்ப்புடன் ஒருவீட்டில் இருந்து சென்றால், அந்த வீட்டு உரிமையாளனின் தகுதிகளைத் தான் எடுத்துக் கொண்டு, தனது பாவங்களை அவனுக்கு விட்டுச் செல்கிறான் என்று கருதப்படுகிறது.(12)மேலும், இல்லறவாழ்வில் வேள்விகள் மூலமும், பிற அறச் சடங்குகளின் மூலமும் தேவர்கள் நிறைவுசெய்யப்படுகிறார்கள்; ஈமச் சடங்குகளின் மூலம் பித்ருக்களையும், (வேத) அறிவை வளர்ப்பதாலும், ஆசான்களின் போதனைகளைக் கேட்பதாலும், சாத்திரங்களை நினைவுகூர்வதாலும் முனிவர்களையும், இறுதியாகப் பிள்ளைகளைப் பெறுவதால் படைப்பாளனையும் நிறைவு செய்கிறார்கள்[5].(13) இக்காரியத்தில் இரண்டு ஸ்லோகங்கள் இருக்கின்றன: இந்த வாழ்வுமுறையில் இருப்பவன், அனைத்து உயிரினங்களிடமும், பற்று நிறைந்த, காதுக்கு இனிய வார்த்தைகளைப் பேச வேண்டும். துன்பத்தை அளிப்பதும், அவமதிப்பதும், கடும் வார்த்தைகளைச் சொல்வதும் நிந்திக்கத்தக்கனவாகும்.(14) அவமதிப்பு, ஆணவம், வஞ்சனை ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். தீங்கிழையாமை {அஹிம்சை}, வாய்மை, கோபமின்மை ஆகியன (நான்கு) வாழ்வுமுறைகளில் வாழ்பவர்களுக்கும் தவங்களுக்குரிய தகுதியை உண்டாக்கும்.(15)மலர்மாலைகள், ஆபரணங்கள், ஆடைகள், நறுமண எண்ணெய்கள், களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, கருவி மற்றும் குரலிசை மற்றும் ஆடல்களின் மூலம் அடையப்படும் இன்பம்; கண்ணுக்கினிய காட்சிகளைக் காண்பது முக்கிய வகை உணவுப் பொருட்களைச் சேர்ந்த பல்வேறு வகைகளைச் சார்ந்தவையும், விழுங்கத்தக்கவை, பருகத்தக்கவை, உறிஞ்சத்தக்கவை ஆகிய உணவுகளையும் பானங்களையும் அனுபவிப்பது, விளையாட்டுகளின் மூலம் இன்பமடைவது; அனைத்து வகைக் கேளிக்கைகள் மற்றும் இன்ப நிகழ்ச்சிகளும் இல்லறவாழ்வில் அனுமதிக்கப்படுகின்றன.(16)

(அறம், பொருள், இன்பம் என்ற) முத்தொகையை அடைய முனையும் வாழ்வுமுறையை நோற்கும் மனிதன், நல்லுணர்வு {சத்வ}, ஆசை {ரஜோ}, இருள் {தமோ} ஆகிய மூன்று பண்புகளின் {குணங்களின்} பெருங்கதியை[6] அடைந்து, இம்மையில் பெரும் மகிழ்ச்சியை அடைந்து இறுதியில் அறவோர் மற்றும் நல்லோருக்காக ஒதுக்கப்படும் கதியை அடைகிறான்.(17) தன் வாழ்வுமுறைக்கு ஏற்ற கடமைகளைச் செய்வதன் மூலம், வயல் பிளவுகளில் விழுந்து கிடக்கும் தானியங்களைத் திரட்டி உண்பவனும், புலன் இன்பத்தைக் கைவிடுபவனும், செயல்பாட்டில் பற்றில்லாதவனுமாக இருக்கும் இல்லறத்தான், சொர்க்கத்தை அடைவதைக் கடினமானதாகக் காண மாட்டான்” என்றார் {பிருகு}[7].(18)

இம்மையும் மறுமையும்! – சாந்திபர்வம் பகுதி – 192-வானப்ரஸ்தம் மற்றும் சந்நியாச ஆசிரமங்களுக்குரிய குறியீடுகளையும், இமயத்திற்கு வடக்கே சொர்க்கத்திற்கு இணையான ஒரு பகுதியைப் பற்றிய குறிப்பையும் பரத்வாஜருக்குச் சொன்ன பிருகு…

பரத்வாஜர் {பிருகுவிடம்}, “காட்டுத் துறவிகள் {வானப்ரஸ்தர்கள்}, அறமீட்ட முனைந்து புனிதநீர்நிலைகளுக்கும், ஆறுகளுக்கும், நீரோடைகளுக்கும் பயணம் செய்து, மான்களும், எருமைகளும், பன்றிகளும், புலிகளும், காட்டு யானைகளும் நிறைந்திருக்கும் காடுகளில் தனியாகத் தவம் செய்வார்கள். அவர்கள் சமூகத்தில் வாழும் மக்கள் சுவைக்கும் அனைத்து வகை ஆடைகள், உணவுகள் ஆகியவற்றைக் கைவிடுவார்கள். அவர்கள் பல்வேறு வகைகளிலான காட்டு மூலிகைகள் {கீரைகள்}, கனிகள், கிழங்குகள், இலைகள் ஆகியவற்றைக் குறைவான அளவில் உண்டு வாழ்வார்கள். வெறுந்தரையே அவர்களது இருக்கையாக இருக்கும். அவர்கள் வெற்று பூமியிலோ, பாறைகளிலோ, கூழாங்கற்களிலோ, சரளைக் கற்களிலோ, மணலிலோ, சாம்பலிலோ படுத்துக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் அங்கங்களைப் புற்களாலும், விலங்கு தோல்களாலும், மரவுரிகளாலும் மறைத்துக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் தலைமுடிகளையும், தாடிகளையும் சிரைப்பதோ, தங்கள் நகங்களைக் கழிப்பதோ கிடையாது. அவர்கள் தங்கள் தூய்மைச் சடங்குகளை முறையான இடைவெளிகளில் செய்வார்கள்.

அவர்கள் முறையான நேரங்களில் தவறாமல் ஆகுதிகளைத் தரையிலும், புனித நெருப்பிலும் ஊற்றுகிறார்கள். (தங்கள் ஹோமங்களுக்குத் தேவையான) புனித விறகு, (வேள்விக்கும், வழிபாட்டுக்கும் தேவையான) புனித புற்கள், மலர்கள் ஆகியவற்றைச் சேகரிக்காத வரையிலும், (தங்கள் வேள்விப் பீடங்களை) பெருக்கி, தூய்மைப்படுத்தாத வரையிலும் அவர்கள் ஓய்வெடுக்கமாட்டார்கள். தங்கள் மேனியெங்கும் புண்ணானாலும், தங்கள் சதை, குருதி, தோல் மற்றும் எலும்புகள் மெலிந்தாலும், குளிர், வெப்பம், மழை, காற்று ஆகியவற்றைக் கிஞ்சிற்றும் கருதிப்பாராமல், பல்வேறு வகைச் சடங்குகள், தங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் நோன்புகள் மற்றும் செயல்பாடுகளைச் செய்வார்கள்[1]. பெரும் பொறுமையும், மனோவுறுதியும் கொண்ட அவர்கள், நல்லுணர்வின் பண்பையே {சத்வ குணத்தையே} எப்போதும் பயில்வார்கள்.(1) {இந்த வானப்ரஸ்தாச்ரமத்தைப் பற்றி ஒரு ஸ்லோகமிருக்கிறது. அதன் பொருளாவது} எந்த மனிதன், மறுபிறப்பாள முனிவர்களால் விதிக்கப்பட்ட கடமைகளின் நடைமுறைகளைக் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் செய்கிறானோ, அவன் நெருப்பைப் போலத் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்து, அடைவதற்கரிதான இன்ப உலகங்களை அடைகிறான்.(2)நான் இப்போது பரிவ்ராஜகர்கள் {துறவிகள் / சந்நியாசிகள்} என்றழைக்கப்படுபவர்களின் ஒழுக்கத்தைக் குறித்துச் சொல்லப் போகிறேன். அது பின்வருமாறு: அவர்கள், புனித நெருப்பு, செல்வம், மனைவி, பிள்ளைகள், ஆடைகள், இருக்கைகள், படுக்கைகள் போன்ற இன்ப நுகர் பொருட்களின் பற்றில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, பற்றின் கட்டுகளை அறுத்துக் கொண்டு, மண்ணாங்கட்டியையோ, பாறையையோ, தங்கத்தையோ சம கண்களுடன் கருதித் திரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் முத்தொகையை அடையவதிலோ, அனுபவிப்பதிலோ தங்கள் இதயங்களை ஒருபோதும் நிலைக்கச் செய்யக் கூடாது. எதிரிகள், நண்பர்கள், நடுநிலையாளர்கள், அந்நியர்கள் ஆகியோரைச் சமக் கண்களுடன் பார்க்க வேண்டும். அசையாத பொருட்கள் {மரங்கள்} அல்லது பாலூட்டிகள், முட்டையிடும் இனங்கள், கழிவுப்பொருட்களில் பிறப்பவை ஆகிய உயிரினங்கள், அல்லது காய்கறிகள் என்று அழைக்கப்படுபவற்றுக்கு, எண்ணம், சொல், அல்லது செயலில் ஒருபோதும் தீங்கிழைக்கமாட்டார்கள்[2].அவர்களுக்கு வீடுகள் கிடையாது. அவர்கள் குன்றுகளிலும், மலைகளிலும், ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும், மரநிழல்களிலும், தெய்வங்களில் கோவில்களில் திரிந்து கொண்டிருப்பார்கள். வசிப்பதற்காக அவர்கள் நகரங்களுக்கோ, கிராமங்களுக்கோ செல்லலாம். எனினும், ஒரு நகரத்தில் அவர்கள் ஐந்து இரவுகளுக்கு மேல் வாழக்கூடாது. அதே போல ஒரு கிராமத்தில் அவர்கள் ஓரிரவுக்கு மேல் வசிக்கக்கூடாது. ஒரு நகரத்திற்குள்ளோ, கிராமத்திற்குள்ளோ நுழையும் அவர்கள், தயாளச் செயல்களைச் செய்யும் பிராமணர்களின் வசிப்பிடங்களுக்கு மட்டுமே சென்று தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் தாங்கள் சுமந்து செல்லும் (மரக்) கிண்ணத்தில் விழுவதைத் தான் பிச்சையாக ஏற்க வேண்டுமேயன்றி, தவிர  ஒருபோதும் பிச்சையேதும் கேட்கக்கூடாது. காமம், கோபம், செருக்கு, பேராசை, மாயை, கஞ்சத்தனம், வஞ்சனை, அவதூறு, பகட்டு, உயிரினங்களுக்குத் தீங்கிழைத்தல் ஆகியவற்றில் இருந்து அவர்க்ள விடுபட வேண்டும்[3].(3) இதுகுறித்துச் சில ஸ்லோகங்கள் இருக்கின்றன: எந்த மனிதன் தன் எண்ணங்களை வெளியிடாமை என்ற நோன்பை நோற்று, எந்த உயிரினத்தையும் அச்சுறுத்தாமல் உலவி வருகிறானோ, அவனுக்கு எந்த உயிரினத்திடம் இருந்து அச்சமேதும் எழாது.(4) (வெளிப்புற நெருப்பைக் கிண்டாமல்), தன் உடலுக்குள் உள்ள நெருப்பின் மீது தன் வாய்வழியாக ஆகுதிகளை ஊற்றி தன் உடலுக்குள் உள்ள நெருப்பின் துணையுடன் அக்னிஹோத்ரம் செய்யும் கல்விமான், ஈகைசார்ந்த வாழ்வின் மூலம் அடையப்படும் இத்தகைய ஆகுதிகளை அந்நெருப்பில் ஊட்டுவதன் விளைவாக எண்ணற்ற இன்ப உலகங்களை அடைகிறான்.(5) மேற்சொன்னது போல விடுதலையையே {முக்தியையே} முடிவாகக் கொண்ட வாழ்வு முறையை நோற்கும் மறுபிறப்பாளன், தூய இதயத்துடனும், மனவுறுதியில் இருந்து விடுபட்ட அறிவுடனும், எந்தச் சுடர்மிக்க எரிபொருளாலும் ஊட்டப்படாத அமைதியான ஒளிக்கீற்றைப் போலப் பிரம்மத்தை அடைகிறான்” என்றார் {பிருகு}.(6)பரத்வாஜர் {பிருகுவிடம்}, “(நாம் வசிக்கும்) இந்த உலகத்துக்கு அப்பால், ஓர் உலகம் இருப்பதாகக் கேள்விப்படுகிறோமேயன்றி ஒருபோதும் பார்த்ததில்லை. அது குறித்த அனைத்தையும் நான் அறிய விரும்புகிறேன். அஃதை எனக்கு விளக்குவதே உமக்குத் தகும்” என்று கேட்டார்.(7)

பிருகு {பரத்வாஜரிடம்}, “வடக்கு நோக்கிச் சென்றால், இமயத்திற்கு மறுபக்கத்தில் புனிதமானதும், அருள் நிறைந்ததும், மிகவும் விரும்பத்தக்கதுமான ஒரு பகுதி இருக்கிறது. அது வேறு உலகம் என்றழைக்கப்படுகிறது[4].(8) அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், செயல்களில் அறம் மற்றும் பக்தி சார்ந்தவர்களாக, தூய இதயங்களைக் கொண்டவர்களாக, பேராசை மற்றும் தீர்மானப்பிழைகளில் இருந்து விடுபட்டவர்களாக, எவ்வகைத் துன்பங்களுக்கும் ஆளாதாவர்களாக இருக்கிறார்கள்.(9) இத்தகைய பண்புகளைக் கொண்ட அந்தப் பகுதி உண்மையில் சொர்க்கத்திற்கு இணையானதாகவே இருக்கிறது. அங்கே மரணம் உரிய காலத்தில் மட்டுமே நேர்கிறது. அங்கே வசிப்பவர்களை நோய்கள் ஒருபோதும் தீண்டுவதில்லை[5].(10) பிறன் மனைவியர் மீது ஒருவனும் எந்த ஆசையும் வளர்த்துக் கொள்வதில்லை. அனைவரும் தங்கள் தங்கள் மனைவியிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். இம்மக்கள் ஒருவரையொருவர் துன்புறுத்தாமலும், கொல்லாமலும், பிறரின் பொருளில் ஆசை கொள்ளாமலும் இருக்கின்றனர். அங்கே எந்தப் பாவமும் நேர்வதில்லை, எந்த ஐயங்களும் எழுவதில்லை[6].(11) அங்கே (அறச்) செயல்கள் அனைத்தின் கனிகளும் புலப்படுவதாக இருக்கின்றன. அங்கே சிலர், இருக்கைகளிலும், சிறந்த வகைப் பானங்கள் மற்றும் தின்பண்டங்களிலும் இன்பங்கொள்பவர்களாக, அரண்மனைகள் மற்றும் மாளிகைகளுக்குள் வாழ்கிறார்கள்.(12) சிலர், தங்க ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டு, சுற்றிலும் இன்பத்திற்குரிய அனைத்துப் பொருட்கள் சூழ இருக்கிறார்கள். மேலும், சிலர் தங்கள் உடலையும் ஆன்மாவையும் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும் மிகச் சொற்பமாகவே உண்கிறார்கள்.(13) அங்கே சிலர், பெரும் உழைப்புடன் தங்கள் உயிர் மூச்சைப் பிடித்துக் கொள்ள முனைகிறார்கள்[7].இங்கே (நாம் வசிக்கும் இந்தப் பகுதியில்) சில மனிதர்கள் அறத்திற்கும், சிலர் வஞ்சகத்துக்கும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். சிலர் இன்பத்துடனும், சிலர் துன்பத்துடனும் இருக்கிறார்கள். சிலர் ஏழைகளாகவும், சிலர் செல்வந்தர்களாகவும் இருக்கிறார்கள்.(14) இங்கே உழைப்பு, அச்சம், மாயை, வலிமிக்கப் பசி ஆகியன தோன்றுகின்றன. இங்கே செல்வத்திற்கான பேராசையும், கல்விமான்களையே மலைக்கச் செய்யும் ஆசையும் காணப்படுகிறது.(15) இங்கே நற்செயல்கள், அல்லது பாவச்செயல்கள் செய்வோரால் அளிக்கப்படும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றனஇருவகையாகப் பிரிந்திருக்கும் இந்தக் கருத்துகள் அனைத்தையும் அறிந்த ஞானி, ஒருபோதும் பாவத்தால் கறைபடியமாட்டான்.(16) ஏமாற்றத்துடன் கூடிய வஞ்சகம், களவு, அவதூறு, வன்மம், ஒடுக்குதல், தீங்கிழைத்தல், நம்பிக்கைக்குப்புறம்பாக நடத்தல், பொய்மை,(17) ஆகியவை தவங்களைச் செய்வோரின் தவத்தகுதிகளை {புண்ணியங்களைக்} கலைக்கின்றன. மறுபுறம் கல்விமானானவன், அவற்றைத் தவிர்த்து, தன் தவத்தகுதிகளை அதிகரித்துக் கொள்கிறான்.(18) இங்கே அறம் மற்றும் மறச் செயல்கள் குறித்த பல்வேறு சிந்தனைகள் இருக்கின்றன. நாம் வசிக்கும் இந்தப் பகுதி செயற்களமாகும். இங்கே நன்மையும், தீமையும் செய்யும் ஒருவன், தன் நற்செயல்களுக்காக நன்மையையும், தீச்செயல்களுக்காகத் தீமையையும் அடைகிறான்[8].(19)பழங்காலத்தில் இங்கே, முனிவர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும், படைப்பாளனும் {பிரம்மனும்} உரிய தவங்களைச் செய்து தூய்மையடைந்து பிரம்மத்தை அடைந்தனர்[9].(20) பூமியின் வட பகுதியானது மிக மங்கலமானதாகவும், புனிதமானதாகவும் இருக்கிறது. அறச்செயல்களைச் செய்பவர்களே (நாம் வசிக்கும்) இந்தப் பகுதியை உடையவர்களாக இருக்கிறார்கள், அல்லது யோகத்திற்கு மதிப்பளிப்பவர்களே இந்தப் பகுதியில் பிறக்கிறார்கள். (பல்வேறு மனநிலைகளைக் கொண்ட) பிறர் நடுத்தர இனங்களில் பிறக்கிறார்கள். மேலும் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலம் முடிந்ததும், இந்தப் பூமியிலேயே தொலைந்து போகிறார்கள்[10].(21,22) ஒருவொரையொருவர் உண்பதில் ஈடுபட்டு, பேராசை மற்றும் மாயையால் கறைபடிந்த இம்மனிதர்கள், (இறந்த பிறகு) வட பகுதிக்குச் செல்ல முடியாமல் இந்தப் பகுதிக்கே திரும்பி வருகிறார்கள்.(23) ஆசான்களின் போதனைகளை மதிப்புடன் கேட்பவர்களும், பிரம்மச்சரியத்தை நோற்பவர்களும், நோன்புகளைக் கொண்டவர்களுமான ஞானிகள், மனித வர்க்கங்கள் அனைத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள கதிகளை அறிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(24) பிரம்மனால் விதிக்கப்பட்ட கடமைகளின் நடைமுறைகளை நான் இப்போது சுருக்கமாக உனக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், இவ்வுலகில் எது அறம், எது மறம் என்பதை அறிந்த ஒருவனே நுண்ணறிவு கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்” என்றார் {பிருகு}”.(25)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவ்வாறே பிருகு, பெரும் சக்தி கொண்ட பரத்வாஜரிடம் பேசினார். உயரறம் சார்ந்த ஆன்மாவுடன் கூடிய பின்னவர் {பரத்வாஜர்}, ஆச்சரியத்தால் நிறைந்து, அந்தப் பெரும் முனிவரை {பிருகுவை} மதிப்புடன் வழிபட்டார்.(26) ஓ! ஏகாதிபதி, இவ்வாறே அண்டத்தின் தோற்றம் குறித்து உனக்கு விரிவாக உரைக்கப்பட்டது. ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இதன் பிறகு நீ என்ன கேட்க விரும்புகிறாய்?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(27)

ஒழுக்கவிதிகள்! – சாந்திபர்வம் பகுதி – 193-ஒழுக்கம் குறித்து உரையாடுமறு பீஷ்மரைக் கேட்ட யுதிஷ்டிரன்; நல்லோர் மற்றும் தீயோரின் பண்பியல்புகளையும், ஒழுக்க விதிகளையும் சொன்ன பீஷ்மர்; மனிதர்கள் அனைவருக்குமுரிய கடமைகளைக் குறித்துச் சொன்னது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர் என நான் நினைக்கிறேன். ஓ! கடமைகளை அறிந்தவரே, ஓ! பாவமற்றவரே, ஒழுக்கம் குறித்த விதிகளைப் பற்றி நீர் என்னுடன் உரையாடுவதைக் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீய செயல்களையும், தீய அறிவையும், அதீத மூர்க்கத்தையும் கொண்ட தீய ஒழுக்கத்தினர், தீயவர்கள் அல்லது கொடியவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எனினும், நல்லோர் என்றழைக்கப்படுபவர்கள், தூய ஒழுக்கத்தாலும், நடைமுறைகளாலும் அடையாளம் காணப்படுகிறார்கள்.(2) நெடுஞ்சாலைகளிலோ, மாட்டுக் கொட்டகைகளிலோ, நெல் விளையும் வயல்களிலோ இயற்கையின் அழைப்புகளுக்கு ஒருபோதும் பதில் கூறாதவன் {மலஜலங்கழிக்காதவன்} நல்ல மனிதனாவான்[1].(3) ஒருவன் தேவையான செயல்களைச் செய்த பிறகு, ஆற்று நீரில் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்து, நீர்க்காணிக்கையின் மூலம் தேவர்களை நிறைவு செய்ய வேண்டும். இது மனிதர்கள் அனைவரின் கடமையாகச் சொல்லப்படுகிறது.(4) சூரியன் எப்போதும் வழிபடப்பட வேண்டும். சூரியன் உதித்த பிறகு ஒருவன் உறங்கக்கூடாது. (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) காலை மற்றும் மாலை வேண்டுதல்களை முறையே கிழக்கு, மற்றும் மேற்கு நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும்.(5) ஒருவன், ஐந்து அங்கங்களைக் கழுவிய பிறகு[2], கிழக்கு நோக்கி அமர்ந்து அமைதியாக உண்ண வேண்டும். ஒருவன் உண்ண வேண்டிய உணவை ஒருபோதும் இழித்துரைக்கக்கூடாது. ஒருவன் நல்ல சுவைமிக்க உணவை உண்ண வேண்டும்.(6) உண்ட பிறகு அவன் தன் கைகளைக் கழுவிய பிறகே எழ வேண்டும்[3]. ஒருவன் ஈரக்காலுடன் ஒருபோதும் இரவு உறங்கச் செல்லக்கூடாது.-தெய்வீக முனிவரான நாரதர் நல்லொழுக்கத்தின் குறியீடுகள் இவையே என்று சொல்லியிருக்கிறார்.(7) ஒருவன் தினமும், ஒரு புனிதத்தலத்தையும், ஒரு காளையையும், ஒரு புனித சிலையையும் {தேவதையையும்}, பசுக் கொட்டகை, நாற் சந்தி சாலை, ஒரு பக்திமிக்கப் பிராமணன் மற்றும் ஒரு புனிதமான மரத்தை வலம் வர வேண்டும்[4].(8) உணவுக் காரியத்தில் ஒருவன் தன் விருந்தினர்கள், பணியாட்கள் மற்றும் சொந்தக்காரர்களுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணக்கூடாது. (இவ்வகையில்) பணியாட்களைச் சமமாக நடத்துவது மெச்சப்பட வேண்டும்.(9) (ஒரு நாளைக்கு இரண்டு வேளை) காலையும், மாலையும் உண்ண வேண்டும் என்பது தேவர்கள் விதித்ததாகும். இடைப்பட்ட எக்காலத்திலும் ஒருவன் (மீண்டுமொருமுறை) உண்ண வேண்டும் என்று விதிக்கப்படவில்லை. இவ்விதியின் படி உண்பவன் உண்ணாநோன்பிருந்த தகுதியை அடைகிறான்[5].(10)ஹோமத்திற்காக விதிப்பட்ட நேரங்களில் ஒருவன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அடுத்தவர் மனைவியரின் தோழமையை நாடாதவனும், உரிய பருவகாலத்தில் தன் மனைவியை நாடுபவனுமான ஞானி பிரம்மச்சரியத்தின் தகுதியை அடைகிறான்.(11) பிராமணர்கள் உண்டவற்றில் எஞ்சியவை அமுதம் போன்றவையாகும். அவை, வாழ்வாதாரமாகத் தாயின் மார்பு வழங்கும் பாலைப் போன்றவையாகும். அவ்வாறு எஞ்சியவற்றை உயர்ந்த மதிப்புள்ளதாகக் மக்கள் கருதுகிறார்கள். நல்லோர் அவற்றை உண்பதால் பிரம்மத்தை அடைகிறார்கள்[6].(12) (வேள்விப்பீடங்களை அமைப்பதற்காக) களிமண்ணைப் பிசைபவன், (வேள்வி எரிபொருளுக்காக) புற்களை வெட்டுபவன், (புனிதப்படுத்தப்பட்ட இறைச்சியை) உண்பதற்கு (எந்த வகை ஆயுதத்தையும் பயன்படுத்தாமல்) தன் நகங்களை மட்டுமே பயன்படுத்துபவன், பிராமணர்கள் உண்டவற்றில் எஞ்சியதையே எப்போதும் உண்பவன், வெகுமதியில் உள்ள விருப்பத்தால் செயல்படுபவன் ஆகியோர் இவ்வுலகில் நீண்ட நாள் வாழ மாட்டார்கள்[7].(13) (எந்த நோன்பிற்காகவும்) இறைச்சியை விலக்கியவன், இறைச்சியானது யஜுர்வேத மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்டதாகவே இருந்தாலும் அஃதை உண்ணக்கூடாது. (எந்த விலங்கின்) முதுகுத்தண்டில் உள்ள இறைச்சியையும் ஒருவன் தவிர்க்க வேண்டும், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியையும் தவிர்க்க வேண்டும்.(14) ஒருவன் தன் சொந்த இடத்திலிருந்தாலும், அந்நியரின் நிலத்தில் இருந்தாலும் அவனுடைய விருந்தாளியை ஒருபோதும் பட்டினியிருக்க விடக்கூடாது. பிச்சைகளையும், மாற்றுச் செயல்களின் மூலமும் பிற கனிகளை அடையும் ஒருவன் அவற்றைப் பெரியோர்களுக்கு அளிக்க வேண்டும்.(15)ஒருவன் பெரியோர்களுக்கு இருக்கைகளை அளித்து அவர்களை மதிப்புடன் வணங்க வேண்டும். அவன் பெரியோர்களை வணங்குவதன் மூலம் நீண்ட வாழ்நாளையும், புகழையும், செழிப்பையும் அடைகிறான்.(16) உதிக்கும் கணத்தில் சூரியனை ஒருவன் பார்க்கக்கூடாது, அதே போலவே பிறன் மனைவியான ஒரு பெண்ணின் நிர்வாணத்திலும் தன் பார்வையைச் செலுத்தக்கூடாது. (உரிய பருவ காலத்தில்) தன் மனைவியுடனான கலவி பாவமாகாது, ஆனால் அஃது எப்போதும் தனிமையிலேயே நடைபெற வேண்டும்.(17) புனிதத் தலங்கள் மற்றும் தீர்த்தங்கள் அனைத்திற்கும் இதயமாக இருப்பவர் ஆசானே. தூய்மையான மற்றும் தூய்மைப்படுத்தும் பொருட்கள் அனைத்தின் இதயமும் நெருப்பே {அக்னியே}. பசுவாலில் உள்ள முடியைத் தீண்டுவதுடன் சேர்த்து, நல்லோரும், பக்திமான்களும் செய்யும் செயல்கள் அனைத்தும் நல்லவையும், மெச்சப்படுபவையுமாகவே இருக்கும்.(18) ஒருவன் மற்றவனைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், மென்மையான நலன்விசாரிப்புகளை {ஸுகப்ரஸனங்களைச்} செய்ய வேண்டும். ஒவ்வொரு காலையிலும், மாலையிலும் பிராமணர்களை வணங்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(19) தேவர்களின் கோவில்களிலும், பசுக்களுக்கு மத்தியிலும், பிராமணர்களால் விதிக்கப்பட்ட அறச்சடங்குகளைச் செய்யும்போதும், வேதங்களைப் படிக்கும்போதும், உண்ணும் போதும், வலக்கரமே உயர்த்தப்பட வேண்டும்.(20)

உரிய சடங்குகளின் படி காலையிலும் மாலையிலும் பிராமணர்களை வழிபடுவது பெரும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்கும். இத்தகைய வழிபாட்டின் விளைவால், வணிகர்களின் கையிருப்பு பொருட்களும், உழவர்களின் விளைச்சலும் அதிகமாகும். அனைத்து வகைத் தானியங்களின் விளைச்சலும் அதிகமாகும், புலன்களால் இன்புறும் பொருட்கள் அனைத்தும் அதிகமாகப் பெறப்படும்.(21) (உண்ண அமர்ந்திருப்பவன்) மற்றவருக்கு உணவளிக்கும்போது, “போதுமானதாக இருக்கிறதா {ஸம்பந்நம்}” என்று கேட்க வேண்டும். குடிப்பதற்குப் பானம் கொடுக்கும்போது, “இது நிறைவு செய்யுமா? {தர்ப்பணம்}” என்று கேட்க வேண்டும். பாயசம், கஞ்சி, சித்திரான்னம் ஆகியவற்றை அளிக்கும்போது, “இது விழுந்துவிட்டதா? {ஸ்ரிகம்}’” என்று கேட்க வேண்டும்[8].(22) சிரைத்தபிறகும், துப்பிய பிறகும், குளித்த பிறகும், உண்ட பிறகும் மக்கள் பிராமணர்களை மதிப்புடன் வழிபட வேண்டும். அத்தகைய வழிபாடு நோய்வாய்ப்பட்ட மனிதர்களுக்கு நீண்ட வாழ்நாளை நிச்சயம் அளிக்கும்.(23) ஒருவன் சூரியனை நோக்கித் திரும்பி சிறுநீர் கழிக்கக்கூடாது, அதேபோல ஒருவன் தன் மலத்தைத் தானே காணக் கூடாது. ஒருவன் ஒரே படுக்கையில் ஒரு பெண்ணுடன் படுக்கவும், அவளுடன் உண்ணவும் கூடாது[9].(24) பெரியோர்களிடம் பேசும்போது நீ என்று சுட்டும் பெயர்ச்சொல்லையோ, அவர்களுடைய பெயர்களையோ ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. தாழ்ந்தவர்கள் {வயதில் இளையவர்கள்} அல்லது வயதில் சமமானவர்களிடம் நீ என்றோ, அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பதோ நிந்திக்கத்தக்கதல்ல[10].(25)பாவிகளின் இதயங்கள் அவர்களால் இழைக்கப்பட்ட பாவங்களைக் காட்டிக் கொடுக்கின்றன. தாங்கள் அறிந்தே செய்த பாவங்களை நல்லோரிடம் மறைக்கும் பாவிகள் அழிவைச் சந்திக்கிறார்கள்.(26) அறியாமை கொண்ட மூடர்களே தெரிந்தே செய்யப்பட்ட பாவங்களை மறைக்க முயல்வார்கள். அந்தப் பாவங்களை மனிதர்கள் பார்ப்பதில்லை என்பது உண்மையே, ஆனால் தேவர்கள் அவற்றைக் காண்கிறார்கள்.(27) ஒரு பாவத்தால் மறைக்கப்படும் மற்றொரு பாவம் புதிய பாவங்களுக்கு வழிவகுக்கும். அதே போலத் தகுதிமிக்க ஒரு செயல் மற்றொரு தகுதிமிக்கச் செயலால் மறைக்கப்பட்டால், அது தகுதிகளை அதிகரிக்கச் செய்கிறது. அறவோரின் செயல்கள் எப்போதும் அறத்தின் பார்வையிலேயே அவர்களைப் பின்தொடர்கிறது.(28) அறிவற்ற மனிதன் தான் இழைத்த பாவங்களை ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை. எனினும், சாத்திரங்களில் இருந்து வீழ்ந்து பாவங்களைச் செய்தவனை அவை {அந்தப் பாவங்கள்} அடையவே செய்கின்றன. (உரிய நேரத்தில்) சந்திரனிடம் வரும் ராகுவைப் போலவே, அந்தப் பாவச்செயல்கள் அந்த மூட மனிதனை வந்தடைகின்றன[11].(29) எதிர்பார்ப்புடன் திரட்டி வைக்கப்படும் {சேமிக்கப்படும்} பொருட்கள் அரிதாகவே அனுபவிக்கப்படுகின்றன. காலன் யாருக்காகவும் காத்திருப்பதில்லை (தன் இரை தயாராக இருக்கிறதோ, இல்லையோ அதைப் பறித்தே செல்கிறான்) என்பதால், அத்தகைய சேமிப்பு ஞானிகளால் ஒருபோதும் மெச்சப்படுவதில்லை.(30)அனைத்து உயிரினங்களுடைய மனத்தின் இயற்பண்பே அறம் என ஞானிகள் சொல்கிறார்கள். இதன் காரணமாக ஒருவன், தன் மனத்தால் அனைத்திற்கும் நன்மையைச் செய்ய வேண்டும்[12].(31) ஒருவன் அறத்தைத் தனியாகப் பயில வேண்டும். அறம் பயிலும் போது ஒருவன் பிறரின் உதவியை நாடக்கூடாது. ஒருவன் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளதை மட்டுமே அடைகிறான் எனும்போதும், ஒரு தோழனால் {உதவியால்} என்ன செய்ய முடியும்[13]?(32) அறமே மனிதனின் தோற்றுவாயாகும். அறமே தேவர்களின் அமுதமுமாகும். மரணத்திற்குப் பிறகு அறத்தின் மூலமே மனிதர்கள் நித்திய இன்பத்தை அடைகிறார்கள்” என்றார் {பீஷ்மர்}.(33)

அத்யாத்மா! – சாந்திபர்வம் பகுதி – 194-அத்யாத்மாவின் இயல்பைக் குறித்து விசாரித்த யுதிஷ்டிரன்; அத்யாத்மா குறித்துப் பீஷ்மரின் உரையாடல்; சத்வ, ரஜோ, தமோ என்ற மூன்று குணகளின் இயல்புகளைச் சொன்னது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஒவ்வொரு மனிதனுக்கும் விதிக்கப்பட்டிருப்பதும், அத்யாத்மா என்ற பெயரில் அழைக்கப்படுவதுமானது எது? அதன் இயல்பென்ன? என்பது குறித்து எனக்குச் சொல்வீராக[1].(1) ஓ! பிரம்மத்தைக் குறித்து அறிந்தவரே, அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட இந்த அண்டம் எங்கிருந்து உண்டாக்கப்பட்டது? அண்டப்பேரழிவு ஏற்படும்போது, அது யாரிடம் செல்கிறது? இக்காரியம் குறித்து என்னுடன் உரையாடுவதே உமக்குத் தகும்[2]” என்றான்.(2)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே, நீ என்னிடம் கேட்கும் அத்யாத்மா குறித்து நான் இப்போது உன்னுடன் உரையாடப்போகிறேன். ஓ! ஐயா, அது மிகவும் ஏற்புடையதும், பெரும் இன்ப {பேரின்ப} நிலையை உண்டாக்குவதுமாகும்.(3) (இதற்கு முன்பு) பேராசிரியர்கள், (இந்த அண்டத்தின்) படைப்பு மற்றும் அழிவு குறித்த உண்மைகளைச் சுட்டிக்காட்டிச் சென்றிருக்கிறார்கள். அவ்வுண்மைகளை அறிந்த மனிதன், இம்மையில் பெரும் நிறைவையும், மறுமையில் இன்பநிலையையும் அடைகிறான். அத்தகைய அறிவானது, பெரும் கனிகளை அடைவதற்கும், அனைத்து உயிரினங்களுக்கும் உயர்ந்த நன்மையை விளைவிப்பதற்கும் வழிவகுக்கும்.(4) பூமி {நிலம்}, காற்று {வாயு}, வெளி {ஆகாயம்}, நீர், எண்ணிக்கையில் ஐந்தாவதாக ஒளி (அக்னி) ஆகியவை பேருயிரினங்களாக {மகாபூதங்களாக} கருதப்படுகின்றன. இவற்றிலேயே படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தோற்றமும் மறைவும் இருக்கிறது.(5) எவனிலிருந்து இந்த அடிப்படை பூதங்கள் தங்கள் தோற்றத்தைப் பெற்றனவோ, (எவனிடம் அவற்றின் தொகை நுழையுமோ) அவனிடமே அனைத்து உயிரினங்களிடமிருந்தும் தங்களைப் பிரித்துக் கொண்டு கடலின் அலைகளைப் போல (எதிலிருந்து எழுந்தனவோ அதிலேயே) மீண்டும் திரும்புகின்றன.(6) ஆமை எவ்வாறு தன் அங்கங்களை நீட்டி மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்கிறதோ, அவ்வாறே பரமாத்மாவும் அனைத்துப் பொருட்களையும் படைத்தும், மீண்டும் தனக்குள்ளேயே எடுத்தும் கொள்கிறது.(7)

படைப்பாளன், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களிலும், இந்த ஐந்து அடிப்படை பூதங்களையும் பல்வேறு அளவுகளில் இடம்பெறச் செய்கிறான். எனினும், உயிரினமானது (அறியாமையின் மூலம்) அதைக் காண்பதில்லை.(8) ஒலி, கேட்பதற்கான உறுப்புகள் மற்றும் அனைத்துத் துளைகள் ஆகிய இந்த மூன்றும் வெளியையே {ஆகாயத்தையே} தங்கள் பிறப்பிடமாகக் கொள்கின்றன. தீண்டல், செயல்பாடு, தோல் ஆகியவை காற்றின் {வாயுவின்} மூன்று பண்புகளாக இருக்கின்றன.(9) வடிவம், கண், செரிமானம் ஆகியவை நெருப்பு {அக்னி}, அல்லது சக்தியின் மூன்று பண்புகளாக இருக்கின்றன. சுவை, திரவங்கள் அனைத்தும், நாவு ஆகியவை நீரின் மூன்று பண்புகளாக இருக்கின்றன.(10) மணம், மூக்கு, உடல் ஆகியவை பூமியின் {நிலத்தின்} மூன்று தன்மைகளாக இருக்கின்றன. (அடிப்படையான) பெரும்பூதங்கள் ஐந்தாகும். ஆறாவது மனமாகும்.(11) ஓ! பாரதா, புலன்களும், மனமும் உயிரினங்களின் உணர்வுகள் (அனைத்திற்கும் மூலம்) ஆகும்[3]. ஏழாவதானது புத்தி {நுண்ணறிவு} என்றழைக்கப்படுகிறது, எட்டாவதோ ஆன்மா {ஜீவன்} என்றழைக்கப்படுகிறது[4].(12)புலன்கள் உள்ளுணர்பவை; (அந்த உள்ளுணர்தல்களைத் தொடர்பு கொள்ள இயலாத) மனம், உறுதியற்ற நிலையை உண்டாக்குகிறது. புத்தியானது அனைத்து அறிவுகளையும் உறுதியான நிலையை அடையச் செய்கிறது. ஆன்மாவானது (செயல்படாமல்) சான்றாக {சாட்சியாக} இருக்கிறது.(13) இரண்டு உள்ளங்கால்களுக்கு மேலே இருப்பவை அனைத்தும், பின்னே {கீழே} இருக்கும் அனைத்தும், குறுக்காக இருக்கும் அனைத்தும் ஆன்மாவால் காணப்படுகின்றன. ஆன்மாவானது, நிரப்ப எந்த வெளியும் இல்லாத அளவுக்கு மொத்த இருப்பிலும் {உயிரினத்திலும்} படர்ந்தூடுருவி இருக்கிறது.(14) புலன்கள், மனம் மற்றும் புத்தியை மனிதர்கள் அனைவரும் முழுமையாக அறிவார்கள். இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} ஆகிய மூன்று நிலைகள், அல்லது குணங்கள் புலன்கள், மனம் மற்றும் புத்தியைச் சார்ந்தே இருக்கின்றன[5].(15) மனிதன், உயிரினங்கள் எவ்வாறு இவ்வுலகிற்கு வந்து போகின்றன என்பதை நுண்ணறிவின் {புத்தியின் துணையுடன் புரிந்து கொள்வதன் மூலம், நிச்சயம் படிப்படியாக உறுதியான மன அமைதியை அடைவான்.(16) (ஏற்கனவே குறிப்பிடப்பட்டதுபோல, இருள், ஆசை, நல்லியல்பு ஆகிய) மூன்று குணங்களும் (உலகப் பற்றுகளை {புரிந்து கொள்வதற்கு}) புத்திக்கு வழிவகுக்கின்றன. இவ்வகையில், புத்தியானது (நுண்ணறிவானது), புலன்களையும், மனத்தையும் போன்றதாகும். எனவே, புத்தியானது (ஐம்புலன்களுடன், மனத்தையும் சேர்ந்த) ஆறையும், அவற்றை உட்கொள்ளும் பொருட்களையும் போன்றதாகும். எனினும், (இருள், ஆசை மற்றும் நல்லியல்பு ஆகிய) இந்த மூன்று குணங்களும் செயல்பாட்டுக்கு வழிவகுக்க இயலாதபோது புத்தி அழிவடைகிறது[6].(17)அசையாத மற்றும் அசையும் பொருட்களைக் கொண்ட இந்த அண்டம் இந்தப் புத்தியைக் கொண்டிருக்கிறது. புத்தியிலிருந்தே அனைத்தும் எழுகின்றன, அனைத்தும் அதனுள்ளேயே அடங்குகின்றன. இதன் காரணமாகவே அனைத்தும் புத்தியின் {நுண்ணறிவின்} வெளிப்பாடே என்று சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன.(18) எதைக் கொண்டு ஒருவன் பார்க்கிறானோ, அது கண்ணாகும், எதைக் கொண்டு ஒருவன் கேட்கிறானோ அது காதாகும். எதைக் கொண்டு ஒருவன் நுகர்கிறானோ, அது மணத்திற்கான உறுப்பு {மூக்கு} என்று அழைக்கப்படுகிறது. எதைக் கொண்டு ஒருவன் சுவையை வேறுபடுத்திப் பார்க்கிறானோ அது நாக்கு என்று அழைக்கப்படுகிறது.(19) தீண்டும் உணர்வை ஒருவன் உடலை மறைக்கும் தோலால் அடைகிறான். எது புத்தி என்றழைக்கப்படுகிறதோ, அது மாற்றங்களுக்கு உட்படுகிறது. புத்தியானது எதையும் விரும்பும்போது, அது மனம் என்றழைக்கப்படுகிறது.(20) எந்த அடித்தளங்களில் புத்தியானது ஓய்ந்திருக்கிறதோ, அவை {அந்த அடித்தளங்கள்} ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்திற்குத் தொண்டாற்றுபவையாகவும், எண்ணிக்கையில் ஐந்தாகவும் இருக்கின்றன. அவை புலன்கள் என்றழைக்கப்படுகின்றன. புலப்படாத கொள்கையான புத்தியானது, அவற்றிலேயே {அந்த அடித்தளங்களிலேயே} ஓய்ந்திருக்கிறது.(21)

ஓர் உயிரினத்தில் இருக்கும் புத்தியானது, (இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} என்றழைக்கப்படும்) மூன்று நிலைகளுடன் தன்னைத் தொடர்புப்படுத்திக் கொள்கிறது. சிலவேளைகளில் அஃது இன்பத்தை அடைகிறது, சில வேளைகளில் துன்பத்தை அடைகிறது.(22) சில வேளைகளில் அஃது இன்பமும், துன்பமும் அற்றதாக இருக்கிறது. இவ்வாறே புத்தியானது, மனிதர்கள் அனைவரின் மனங்களிலும் இருக்கிறது.(23) ஆறுகளின் தலைவனும், அலைகளுடன் கூடியதுமான பெருங்கடலானது கரைகளை மீறிச் செல்வதைப் போல, (ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல) மூன்று நிலைகளாலான புத்தியானது, சில வேளைகளில், (யோகத்தின் மூலம்) அந்த மூன்று நிலைகளையும் கடந்து செல்கிறது[7].(24) எந்தப் புத்தி முக்குணங்களைக் கடந்து செல்கிறதோ, அது தூய நிலையில் (மாற்றமடையாத இருப்பாக) மட்டுமே மனத்தில் இருக்கிறது. எனினும், செயல்படத் தூண்டும் இருள் குணம் {தமோகுணம்}, அதை விரைவில் பின்தொடர்கிறது.(25) அந்த நேரத்தில் புத்தியானது, புலன்கள் அனைத்தையும் செயல்பட வைக்கிறது. அந்த மூன்றின் தன்மைகள் இவ்வாறே இருக்கின்றன: நல்லியல்பில் {சத்வ குணத்தில்} இன்பமும்; ஆசையில் {ரஜோ குணத்தில்} துன்பமும், இருளில் {தமோ குணத்தில்} மாயையும் வசிக்கின்றன.(26) மனத்தில் இருக்கும் நிலைகள் அனைத்தும் (பெயர் குறிப்பிடப்பட்ட) மூன்றில் சேர்க்கப்படுகின்றன. ஓ! பாரதா, புத்தியின் போக்கு குறித்து உனக்கு இப்போது சொல்லிவிட்டேன்.(27)ஒரு நுண்ணறிவுமிக்க மனிதன், தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். நல்லியல்பு, ஆசை, இருள் ஆகிய முக்குணங்கள் எப்போதும் உயிரினங்களைப் பற்றியிருக்கின்றன.(28) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நல்லியல்பு, ஆசை, இருள் ஆகியவற்றைச் சார்ந்த மூன்று வகைப் புத்திகளும் {நுண்ணறிவுகளும்} ஒவ்வொரு உயிரினத்திலும் காணப்படுகினறன.(29) நல்லியல்பின் குணம் {சத்வ குணம்} மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது; ஆசையின் குணம் {ரஜோ குணம்} கவலையை உண்டாக்குகிறது. இவ்விரண்டும், இருளின் குணத்துடன் {தமோ குணத்துடன்} சேர்ந்தால், அந்நிலை மகிழ்ச்சியையோ, கவலையையோ உண்டாக்காது (ஆனால் அதற்குப் பதில் மாயை, அல்லது குற்றத்தை மட்டுமே உண்டாக்கும்).(30) உடலிலோ, மனத்திலோ தோன்றும் ஒவ்வொரு மகிழ்ச்சியான நிலையும், நல்லியல்பின் பண்பினாலேயே விளைகின்றன என்று சொல்லப்படுகிறது.(31) ஒருவனுக்கு ஏற்பில்லாத துன்ப நிலையானது, ஆசைப்பண்பினால் விளைகிறதேயன்றி வேறெதனாலும் அல்ல. ஒருவன் அதைக் குறித்து எப்போதும் அச்சத்துடன் நினைக்கக்கூடாது[8].(32) மேலும், மாயையுடனும், குற்றத்துடனும் சேர்ந்ததும், உறுதிசெய்யப்பட முடியாததும், அறியப்படமுடியாததுமான அந்த நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவன் அறியவில்லையெனில், அந்நிலை இருள் பண்பைக் கொண்டது என்று கருதப்பட வேண்டும்.(33)உவகை {சந்தோஷம்}, நிறைவு {பிரியம்}, திளைப்பு {ஆனந்தம்}, {சுகம்}, இதய அமைதி {மனத்தில் நல்ல அடக்கம்} ஆகியவை நல்லியல்பு நிலையின் {சத்வ குணத்தின்} தன்மைகளாகும். இவை மனிதனுககு சில நேரங்களில் ஓரளவுக்கு உண்டாகின்றன.(34) நிறைவின்மை {சந்தோஷமில்லாமை}, இதய எரிச்சல் {பரிதாபம்}, துன்பம் {சோகம்}, பேராசை, பழியுணர்ச்சி {பொறாமை} ஆகியவை அனைத்தும் ஆசை நிலையின் {ரஜோ குணத்தின்} குறியீடுகளாகும். அவற்றை விளைவிப்பதற்கான போதுமான தகுந்த காரணத்துடனோ, இல்லாமலோ அவை காணப்படுகின்றன.(35) அவமதிப்பு {அபிமானம்}, மாயை {அவிவேகம்}, குற்றம் {அஜாக்ரதை}, உறக்கம், மலைப்பு {சோம்பல்} மற்றும் ஒருவனின் தீயூழின் காரணமாக உண்டாகுபவை அனைத்தும் இருள் நிலையின் {தமோ குணத்தின்} பல்வேறு தன்மைகளாகும்.(36) எட்டாததை எட்டுவதும், பல திசைகளில் விரிந்து செல்லக்கூடியதும், ஆசைகளின் நோக்கங்களை வெல்லும் காரியத்தில் நம்பிக்கையில்லாததும், நன்கு கட்டுப்படுத்தப்பட்டதுமான மனத்தைக் கொண்ட மனிதன் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியாக இருப்பான்[9].(37)புத்தி, ஆன்மா என்ற இரு நுண்ணியப் பொருட்களின் வேறுபாட்டைக் காண்பாயாக. இவற்றில் ஒன்று (புத்தி) குணங்களை வெளிப்படுத்துகிறது. மற்றது (ஆன்மா) அவ்வகையில் எதையும் செய்வதில்லை.(38) ஒரு கொசுவும், அத்தியும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதைக் காணலாம். இணைந்திருந்தாலும், அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாகும்.(39) அதே போலவே, புத்தியும், ஆன்மாவும் தங்கள் தங்களுக்குரிய இயல்புகளின்படி ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாக இருந்தாலும், அவை எப்போதும் ஒன்றான நிலையிலேயே காணப்படுகின்றன. மீனும், நீரும் ஒன்று கலந்த நிலையிலேயே இருக்கின்றன. எனினும், அவை ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டவையாகும். இது புத்தி மற்றும் ஆன்மாவின் வழக்கிலும் அவ்வாறே ஆகிறது.(40) குணங்கள் ஆன்மாவை அறியாமல் இருக்கின்றன, ஆனால், ஆன்மாவோ அவை அனைத்தையும் அறிந்திருக்கிறது. ஆன்மாவானது, குணங்களின் சான்றாக இருந்து அவை அனைத்தும் தன்னில் இருந்தே உண்டாகின்றன என்று கருதுகிறது.(41) செயல்படாத ஆன்மாவானது, தன்னினைவற்ற {சுயநினைவற்ற} புலன்கள், மனம் மற்றும் ஏழாவதான அறிவு ஆகியவற்றின் மூலமாகச் செயல்படும் போது, அடைப்பில் உள்ள துளையின் வழியாக வரும் கதிர்களைப் பொழிந்து அனைத்துப் பொருட்களையும் காட்டும் ஒரு விளக்கைப் போல, (இருப்பில் உள்ளவற்றுக்கு மத்தியில் உள்ள) பொருட்களைக் கண்டறிகிறது.(42)

அறிவு அல்லது புத்தியே அனைத்துக் குணங்களையும் உண்டாக்குகிறது. ஆன்மாவானது அவற்றை (சான்றாக) பார்க்க மட்டுமே செய்கிறது. புத்தி மற்றும் ஆன்மாவுக்கிடையிலான தொடர்பு நிச்சயம் இத்தகையதே[10].(43) புத்தியோ, ஆன்மாவோ சார்ந்திருக்கக்கூடிய புகலிடம் ஏதும் கிடையாது. அறிவானது {புத்தியானது}, மனத்தை உண்டாக்குகிறது, ஆனால் ஒருபோதும் குணங்களை உண்டாக்குவதில்லை.(44) புலன்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள், போதுமான அளவுக்கு மனத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படும்போது, ஆன்மாவானது, குடத்திலிட்ட விளக்கைப் போல, (அறிவுக்குத்) தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.(45) இயல்பான செயல்கள் அனைத்தையும் துறக்கும் மனிதன், தவங்களைப் பயின்று, ஆன்ம கல்விக்குத் தன்னை அர்ப்பணித்து, அதிலேயே திளைத்து, அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னையே கருதுவானானால், அவன் உயர்ந்த கதியை அடைவான்.(46) நீரில் நகரும் நீர்க்கோழியானது, {நீரெனும்} அந்தப் பூதத்தால் நனையாமல் இருப்பதைப் போலவே ஒரு ஞானியும் (இவ்வுலகத்தில்) உயிரினங்களுக்கு மத்தியில் உலவுவான்.(47)ஒருவன் தனது நுண்ணறிவின் மூலம் இவ்வகையிலேயே, துன்பமும் இன்பமும் இல்லாமல், அனைத்திலும் சம கண்ணுடன், வன்மமும், பொறாமையும் அற்றவனாக இவ்வுலகில் செயல்பட வேண்டும்.(48) இவ்வழியில் வாழ்பவன், நூல்களை அறுக்கும் சிலந்தியைப் போல, (குணங்களில் சிக்கிக் கொள்வதற்குப் பதிலாக) குணங்களை உண்டாக்குவதில் வெல்கிறான். உண்மையில், குணங்கள் சிலந்தியின் நூல்களைப் போலவே கருதப்பட வேண்டும்[11].(49) அத்தகைய மனிதர்களைப் பொறுத்தவரையில் குணங்கள் தொலையாது எனச் சிலர் சொல்கின்றனர். அவை அனைத்தும் தொலைந்து போகும் என்று சிலர் சொல்கின்றனர். தொலைந்து போவதில்லை என்று சொல்பவர்கள், (ஸ்ருதிகளில்) வெளிப்படுத்தப்பட்டவையும், இதற்கு முரணான எந்த அறிவிப்பும் இல்லாதவையுமான சாத்திரங்களைச் சார்ந்திருக்கின்றனர். மறுபுறம், அனைத்துப் குணங்களும் தொலைந்து போகின்றன என்று சொல்பவர்கள், ஸ்மிருதிகளைச் சார்ந்திருக்கிறார்கள். இந்தக் கருத்துகள் இரண்டையும் சிந்தித்துப் பார்த்து, தனக்கு எது சரியெனத் தோன்றுவதை ஒருவன் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.(50,51) இவ்வாறே ஒருவன் கடினமானதும், முடிச்சு கொண்டதுமான, ஐயத்தால் அறிவைக் குலைக்க வல்லதுமான இந்தக் கேள்வியைக் கடந்து, அதைக் கடபபதன் மூலம் மகிழ்ச்சியை அடைய வேண்டும். அந்த ஐயம் அகன்றால், அதற்கு மேலும் அவன் எந்த வகைத் துன்பத்திற்கும் ஆளாக வேண்டாம்.(52)நன்கு நிரம்பிய நீரோடைகளில் அருவருக்கத்தக்க அனைத்துடன் சேர்ந்து மூழ்கித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்பவர்களைப் போல, அருவருக்கத்தக்க இதயங்களைக் கொண்ட மனிதர்களும் அறிவை அடைவதில் வெல்லக்கூடும்.(53) ஒரு பெரிய ஆற்றைக் கடக்க வேண்டிவன், மறுகரையைப் பார்ப்பதால் மட்டுமே மகிழ்ச்சியை உணர்ந்துவிட மாட்டான். இவ்வழக்கு வேறுமாதிரியாக இருந்தால், (பார்த்துவிடுவதால் மட்டுமே ஒருவனால் ஒரு படகைக் கொண்டு மறுகரையை அடைந்துவிட முடியுமென்றால்), அவன் ஒருவேளை மகிழ்ச்சியை அடையலாம். உண்மையை அறிந்தவனிடம் இக்காரியமோ, வேறுமாதிரி இருக்கிறது. உண்மையைக் குறித்த வெறும் அறிவே அவனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. அந்த அறிவானது, கனிகளைத் தாங்கத் தொடங்கியதும், அம்மனிதன் மறுகரையை அடைந்துவிட்டான் என்று கருதப்படலாம். ஆன்மாவை உலகப் பொருட்களில் இருந்து விடுபட்ட தனியான ஒன்றாக அறிபவர்கள், உயர்ந்ததும், சிறந்ததுமான அறிவை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(54) ஒரு மனிதன், உயிரினங்கள் அனைத்தின் தோற்றம் மற்றும் மறைவைக் குறித்து அறிவதன் மூலம், அக்காரியத்தைச் சிந்தித்து, படிப்படியாக முடிவிலா மகிழ்ச்சியை அடைகிறான்.(55) எவன் (அழிவற்றதாக இல்லாமல் அழியத்தக்கதாக இருக்கும்) இந்த முத்தொகையை {மூன்று குணங்களைச்} சிந்தித்துப் பார்த்து, அஃதை அறிந்து கொண்டு கைவிடுகிறானோ, அவன் யோகத்தின் மூலம் உண்மையைக் காண்பதில் வென்று, முற்றான இன்பநிலையை அடைகிறான்.(56) பல்வேறு பொருட்களில் ஈடுபாடு கொண்டவையும், கட்டுப்படுத்துவதற்குக் கடினமானவையுமான புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தாத வரையில் ஆன்மாவைக் காண முடியாது.(57)

இஃதை அறிந்தவன் உண்மையில் ஞானியாவான். ஞானிக்கு வேறென்ன குறியீடு இருக்க முடியும்? இந்த அறிவை அடைந்தவர்களும், நுண்ணறிவுமிக்கவர்களுமான மனிதர்கள், வெற்றிமகுடம் சூடியவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்கிறார்கள்.(58) அறியாமையிலுள்ளோரை எது அச்சுறுத்துமோ, அஃது அறிவாளிகளை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது. (விடுதலையை {முக்தியை} விட) எவருக்கும் வேறேதும் உயர்ந்த கதியில்லை. எனினும், அதீத நற்குணத்தின் விளைவாக, விடுதலையின் {முக்தியின்} அளவைப் பொறுத்தே வேறுபாடுகள் தெரிகின்றன என்று தவசிகள் சொல்கிறார்கள்.(59) கனிகளில் எதிர்பார்ப்பில்லாமல் செயல்படும் மனிதன், (அச்செயல்களின் மூலம்) முற்பிறவியில் இழைக்கப்பட்ட தன் பாவச்செயல்களை அழிக்கிறான். ஞானம் கொண்ட ஒருவனுக்கு, (இவ்வாறு கழுவப்படும்) முற்பிறவியின் செயல்களும், இப்பிறவியில் (கனியின் எதிர்பார்ப்பில்லாமல் நிறைவேற்றப்படும்) செயல்களும், (நரகத்தில் வீழ்வது போன்ற) ஏற்பில்லாத எந்த விளைவுகளையும் உண்டாக்காது. ஆனால், அவன் செயல்களைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால், அச்செயல்களால் எவ்வாறு ஏற்புடைய (விடுதலையை {முக்தியைக்}) கொண்டு வர முடியும்.(60) (காமம், பொறாமை மற்றும் பிற தீய ஆசைகளால்) பீடிக்கப்பட்டிருக்கும் மனிதனை மக்கள் நிந்திக்கிறார்கள். அத்தீமைகள் அம்மனிதனை அடுத்தப் பிறவியில் தாழ்ந்த பல வகைப் பிறப்புகளில் வீழ்த்துகின்றன[12].(61) இவ்வுலகில் (மகன்கள், மனைவியர் போன்ற) தங்கள் உடைமைகளின் இழப்பால் அதிகமாக வருந்தும் தீயோரை மிகக் கவனமாகப் பார். அதே போன்ற சூழ்நிலைகளில் ஒருபோதும் வருந்தாதவர்களையும், அறிவைக் கொடையாகக் கொண்டவர்களையும் பார். (படிப்படியான விடுதலை {முக்தி} மற்றும் உடனடி விடுதலை ஆகிய) இரண்டையும் அறிந்தோரே, உண்மையில் ஞானிகளாக அழைக்கத்தகுந்தவர்களாவர்” என்றார் {பீஷ்மர்}[13].(62)

தியானயோகம்! – சாந்திபர்வம் பகுதி – 195-தியான யோகம் குறித்துச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்தி தியானயோகத்தில் ஈடுபடச் செய்யும் வழிமுறைகள் குறித்துச் சொன்னது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே, இனி நான் தியான யோகத்தின் நான்கு வகைகளைக் குறித்துப் பேசப் போகிறேன். அதைக்குறித்த அறிவை அடைந்த பெரும் முனிவர்கள், இம்மையிலேயே அழிவில்லா வெற்றியை அடைகிறார்கள்.(1) அறிவால் நிறைவடைந்த பெரும் முனிவர்கள், விடுதலையில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, யோகத்தை அறிந்து, தங்கள் தியான யோகம் சரியாகும் வழியில் செயல்படுகின்றனர்.(2) ஓ! பிருதையின் மகனே, உலகக் குற்றங்களில் இருந்து விடுபட்ட அவர்கள், ஒருபோதும் (மறுபிறவிக்காக இங்கே) திரும்பி வருவதில்லை. மறுபிறவியில் இருந்து விடுதலை அடைந்த அவர்கள், தங்கள் இயல்பான ஆன்ம நிலையிலேயே {ஆத்மரூபத்திலேயே} வாழ்கிறார்கள்[1].(3) (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் போன்ற) அனைத்து முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கத்திலிருந்தும் விடுபட்டு, (பற்றுகளில் இருந்து) விடுதலையடைந்து, ஒருபோதும் (கொடையாக) எதையும் ஏற்காமல், தங்கள் (இயல்பான) நிலையிலேயே எப்போதும் நீடிக்கும் அவர்கள், மனைவியர் மற்றும் பிள்ளைகளின் தோழமையிலிருந்து விடுபட்டவையும், யாராலும் எந்தச் சச்சரவுகளும் எழாத நிலையில் இருப்பவையும், முற்றான இதய அமைதிக்கு ஏற்ற வகையில் இருப்பவையுமான இடங்களில் வாழ்கின்றனர்.(4) அத்தகைய மனிதன், பேச்சை அடக்கி, தியானத்தின் உதவியால் (பரமாத்மாவிடம்) பிரியாத ஒன்றிய மனத்துடன், தன் புலன்கள் அனைத்தும் நொறுங்கிய ஒரு மரத்துண்டைப் போல அமர்ந்திருக்கிறான்.(5)அவன் காதின் மூலம் எந்த ஒலியையும் உணர்வதில்லை; தோலின் மூலம் எந்தத் தீண்டலையும் உணர்வதில்லை; கண்ணின் மூலம் எந்த வடிவத்தையும் உணர்வதில்லை; நாவின் மூலம் எந்தச் சுவையையும் உணர்வதில்லை.(6) மணத்திற்கு உரிய உறுப்பின் மூலம் அவன் மணங்கள் எதையும் உணர்வதில்லை. யோகத்தில் மூழ்கிய அவன், தியானத்தில் மெய்மறந்து அனைத்துப் பொருட்களையும் கைவிடுகிறான்.(7) பெரும் மனோ சக்தியைக் கொண்ட அவன், ஐம்புலன்களைத் தூண்டக்கூடிய எதையும் விரும்புவதில்லை. ஐம்புலன்களையும் தன் மனத்திற்குள் இழுத்துக் கொள்ளும் ஞானி, உறுதியற்ற தன் மனத்தை அந்த ஐம்புலன்களைக் கொண்டு (அறிவில் {புத்தியில்}) நிலைநிறுத்த வேண்டும் {மனத்தை ஸமாதியிலிருக்கும்படி செய்வான்}.(8) பொறுமையைக் கொண்ட யோகியானவன், எந்தப் பொருட்கள் உறுதியில்லாதவையாக இருக்கின்றனவோ அவை உறுதியடையும் வகையில், (உலகம் சார்ந்த பொருட்களுக்கு மத்தியில்) எப்போதும் திரியும் தன் மனத்தை (பயிற்சியின் ஆதிக்கத்தின் கீழுள்ள) தன் ஐந்து வாயில்களில் {புலன்களில்} நிலைநிறுத்த வேண்டும். அவன், உடலில் இருந்தோ, வேறு எந்தப் புகலிடத்திலிருந்தோ தன் மனத்தைச் சார்பற்றதாகச் செய்து, இதய ஆகாயத்தின் யோகப் பாதையில் அதை {இதயத்தை} நிலைநிறுத்த வேண்டும்[2].(9) யோகியானவன், முதலில் தன் புலன்களையும், மனத்தையும் நொறுக்கி (தியானப் பாதையில் செலுத்த வேண்டும்) என்பதால், நான் முதலில் தியானப் பாதையைக் குறித்துப் பேசினேன்.(10){புலன்களைத் தவிர்த்து} ஆறாவதாக இருக்கும் மனமானது இவ்வாறு அடக்கப்படும்போது, மேகங்களுக்கு மத்தியில் களித்தாடி கணிக்கப்படமுடியாத வேகத்தில் நகரும் மின்னலைப் போல மின்ன முனைகிறது.(11) ஒரு (தாமரை) இலையில் உள்ள நீர்த்துளி எவ்வாறு நிலையில்லாமல் அனைத்துத் திசைகளிலும் நகர்ந்து கொண்டிருக்கிறதோ, அவ்வாறே அந்த யோகியின் மனமும் தியானப் பாதையில் முதலில் நிலைக்கச் செய்யப்படும்போது {அப்பாதையில்} அலைபாய்கிறது.(12) இவ்வாறு நிலைக்கச்செய்யப்படும்போது, அந்த மனமானது சிறிது நேரத்திற்கு அந்தப் பாதையில் நிலைத்திருக்கிறது. எனினும், அது மீண்டும் காற்றின் பாதையில் சுற்றும்போது, காற்றைப் போலவே அது வேகம் கொள்கிறது.(13) தியான யோகத்தின் வழிகளை நன்கறிந்த மனிதன், இதனால் உற்சாகமிழக்காமல், உழைப்பு வீணானதை ஒருபோதும் கருத்தில் கொள்ளாமல், சோம்பலையும், வன்மத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் தன் மனத்தைத் தியானத்தில் செலுத்த வேண்டும்.(14) ஒருவன், அமைதிநோன்பை {மௌனவிரதத்தை} நோற்று யோகத்தில் தன் மனத்தை நிலைபெறச் செய்யத் தொடங்கும்போது, பகுத்தறிவு {விகாரஸமாதி}, ஞானம் {விதர்க்கஸமாதி}, தீமையைத் தவிர்க்கும் சக்தி {விவேகஸமாதி} ஆகியவை அவனால் ஈட்டப்படுகின்றன[3].(15)மனோவேகத்தின் விளைவாக எரிச்சலை உணர்ந்தாலும், அவன் அதை {மனத்தை} (தியானத்திலேயே) நிலைநிறுத்த வேண்டும். அந்த யோகி, ஒருபோதும் நம்பிக்கையை இழக்காமல், தன் நன்மையை நாட வேண்டும்.(16) புழுதி, அல்லது சாம்பல், அல்லது எரிக்கப்பட்ட சாணக் குவியல் நீரால் நனைக்கப்படும்போது நனையாதிருப்பதாகத் தோன்றி,(17) உண்மையில், அரைகுறையாக நனைக்கப்படும்போது காய்ந்ததாகவே இருந்து, அவை {சாம்பற்குவியல்கள்} முற்றாக நனையும் முன் இடையறாமல் தொடர்ந்து நனைக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பது போல,(18) அந்த யோகியும் தன் புலன்களைப் படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும். அவன் அவற்றை {புலன்களை} (அனைத்துப் பொருட்களில் இருந்தும்) படிப்படியாக விலக்க வேண்டும். இவ்வழியில் செயல்படும் மனிதன் அவற்றை {புலன்களைக்} கட்டுப்படுத்துவதில் வெல்கிறான்.(19) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒருவன் தன் மனத்தையும், புலன்களையும் தானே தியானப் பாதையில் செலுத்துவதால், உறுதிமிக்க யோகத்தின் மூலம் அவற்றை {புலன்களை} முழுக் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவருவதில் வெல்கிறான்.(20) தன் மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்துவதில் எவன் வெல்கிறானோ, அவன் முயற்சியாலோ, விதியாலோ ஒருபோதும் அடைய முடியாத இன்பநிலையை உணர்வான்[4].(21) அத்தகைய இன்பநிலையில் ஒன்றியிருக்கும் அவன், தியானச் செயல்பாட்டில் தொடர்ந்து மகிழ்கிறான். இவ்வாறே யோகிகள் அருள்மிக்க உயர்ந்த நிலையான நிர்வாணத்தை அடைகின்றனர்” என்றார் {பீஷ்மர்}.(22)

ஜபம்! – சாந்திபர்வம் பகுதி – 196-ஜபம் செய்வதன் பலன்களையும், அவை செய்யப்பட வேண்டிய வழிமுறைகளையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “நீர் நால்வகை வாழ்வு முறைகள் {ஆசாரங்கள்} மற்றும் அவற்றின் கடமைகளைக் குறித்து உரையாடினீர். அதே போல மன்னர்களின் கடமைகளைக் குறித்தும் உரையாடினீர். பல்வேறு வகை வரலாறுகளையும், அவை தொடர்பான பல்வேறு காரியங்கள் குறித்தும் உரைத்தீர்.(1) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, அறநெறி தொடர்பான பல்வேறு உரைகளையும் நான் உம்மிடம் இருந்து கேட்டிருக்கிறேன். எனினும், எனக்கு ஓர் ஐயம் இருக்கிறது. அதைத் தீர்த்து வைப்பதே உமக்குத் தகும்.(2) ஓ! பாரதரே, அமைதியாகப் புனித மந்திரங்களை ஓதுபவர்கள் {ஜபம் செய்பவர்கள்} (தங்கள் நடைமுறையால்) அடையும் கனிகளைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். அத்தகைய மனிதர்களுக்குக் குறிப்பிடப்படும் கனிகள் என்னென்ன? அவர்கள் இறந்த பிறகு எந்த உலகத்திற்குச் செல்வார்கள்?(3) ஓ! பாவமற்றவரே, அத்தகைய அமைதியான {மந்திர} ஓதலுக்கு {ஜபத்திற்கு} விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். ஓதுவார் {ஜபிப்பவர்} என்ற சொல்லைக் கேட்கும்போது, அதன் மூலம் நான் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? அத்தகைய மனிதன், சாங்கிய, அல்லது யோக, அல்லது கர்ம விதிகளைப் பின்பற்றுபவனாகக் கருதப்பட வேண்டுமா?[1](4) அல்லது, அத்தகைய மனிதன் (மனோ) வேள்விகளுக்குரிய விதிகளை நோற்பவனாகக் கருதப்பட வேண்டுமா? ஓதுவார்களின் {ஜபிப்பவர்களின்} பாதை எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்? அண்ட அறிவைக் கொண்டவரென என்னால் கருதப்படும் நீர், இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, யமன், காலன் மற்றும் ஒரு குறிப்பிட்ட பிராமணருக்கு இடையில் என்ன நிகழ்ந்தது என்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது[2].(6) விடுதலையை {முக்தியை} அடையும் வழிமுறைகளை அறிந்த தவசிகள், சாங்கியம், யோகம் என்ற இரு வழிமுறைகளைக் குறித்துப் பேசியிருக்கின்றனர். இவற்றில், வேதாந்தம் என்றும் அழைக்கப்படும் முன்னதில் {சாங்கியத்தில்), அமைதியான ஓதல் {ஜபம்} என்பதைப் பொறுத்தவரை துறவே போதிக்கப்படுகிறது. (சடங்குகளில் இருந்து) விலகப் போதிக்கும் வேதங்களின் அறிவிப்புகள், அமைதி நிரம்பியவையாகவும், பிரம்மம் தொடர்பானவையாகவும் இருக்கின்றன[3].(7) நன்மை அடைய தவசிகளால் சுட்டப்படும் சாங்கியம் {ஞானம்} மற்றும் யோகம் ஆகிய இரு பாதைகளும், (அமைதியான ஓதல்களுக்கு) தொடர்பானதாகவும், தொடர்பில்லாததாகவும் இருக்கின்றன[4].(8)(அந்த இரு பாதைகளிலும்) அமைதியான ஓதல் {ஜபம்} தொடர்பு கொண்டிருக்கும் முறையையும் {பிரவிருத்தி தர்மத்தையும்}, அதன் காரணத்தையும் நான் இப்போது விளக்கப் போகிறேன். அமைதியான ஓதலை {ஜபத்தைப்} பொறுத்தவரையில், இவ்விரண்டிலும் {சாங்கியம் மற்றும் யோகம் ஆகியவற்றில்}, புலன்களைக் கட்டுப்படுத்துவது, (புறப்பொருட்களில் இருந்து விலக்கி) மனத்தை நிலைநிறுத்துவது;(9) வாய்மை, (புனித) நெருப்பைப் பராமரித்தல், தனிமையில் வசித்தல், தியானம், தவம், தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, நன்மை செய்வதில் மனநாட்டம், உணவில் அளவோடிருத்தல்,(10) உலகம் சார்ந்த பற்றுகளில் இருந்து விலகல், பேசிக்கொண்டே இருப்பதைத் தவிர்த்தல், அமைதி ஆகியன அவசியமாகும். இவை (மறுபிறவியில் இன்பநிலைக்கோ, சொர்க்கத்திற்கோ செல்வது குறித்த ஆசையின் கனிக்கு வழிவகுக்கும்) ஒரு வேள்விக்கான {ஜபயஜ்ஞத்திற்கான} செயல்களாகும். (செயல்களில் இருந்து) விடுபடுவது தொடர்பான நடைமுறையை {நிவிருத்தி தர்மத்தை} இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.[5](11)பிரம்மச்சரிய நோன்பை நோற்று {புனித மந்திரங்களை} ஓதுபவனின் செயல்கள் {ஜபயஜ்ஞகர்மம்} நிற்கும் வகையைக் குறித்து நான் இப்போது அறிவிக்கப் போகிறேன். அத்தகைய மனிதன், என்னால் (ஏற்கனவே) சொல்லப்பட்ட ஒவ்வொரு வழியின்படியும் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்[6].(12) துறவுப் பாதையில் நடக்கும் ஒருவன், புறம் மற்றும் அகச் சார்புகள் இரண்டையும் விடுவதில் முனைய வேண்டும்.(13) குசப்புல்லில் அமர்ந்து, கையில் குசத்துடன், அவனது சடாமுடியை குசத்தால் கட்டி, தன்னைச் சுற்றிலும் குசத்தை வைத்துக் கொண்டு அவன் குச ஆடைகளை உடுக்க வேண்டும்.(14) உலகம் சார்ந்த அனைத்தையும் வணங்கும் அவன், அவற்றில் இருந்து விடுபட்டு, ஒருபோதும் அவற்றை நினைக்காமல் இருக்க வேண்டும். தன் மனத்தின் துணையுடன் சமநிலையை அடையும் அவன், தன் மனத்தை அந்த மனத்திலேயே நிலைநிறுத்த வேண்டும்.(15)உயர்ந்த நன்மையைத் தரும் (காயத்ரி என்ற) தொகுப்பை உரைத்துக் கொண்டும், அறிவின் துணையுடன் அவன் பிரம்மத்தை மட்டுமே தியானிக்க வேண்டும். அதன் பிறகு அவன், அதையும் கைவிட்டு, குவிந்த தியானத்தில் ஈர்க்கப்பட்டவனாக இருக்க வேண்டும்.(16) அவன் ஓதும் காயத்ரி {மந்திர} பலத்தைச் சார்ந்திருப்பதன் விளைவாக, குவிந்த தியானமானது தானே அவனுக்குக் கைக்கூடும். அவன் தவங்களின் மூலம் ஆன்மத் தூய்மை, தற்கட்டுப்பாடு, வெறுப்பின்மை மற்றும் ஆசைகளை அடைகிறான்.(17) பற்று மற்றும் மாயையிலிருந்து விடுபட்டு, (வெப்பம், குளிர், இன்ப துன்பம் போன்ற) முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கங்கள் அனைத்திற்கும் மேம்படும் அவன், ஒருபோதும் வருத்தம் அடையாமலும், உலகப் பொருட்களை நோக்கி இழுக்கப்படாமலும், ஒரு போதும் துன்பமடையாமலும் இருக்கிறான். அவன் தன்னைச் செயல்படுபவனாகவோ, தன் செயல்களின் விளைவுகளாலும் இன்புறுபவனாகவோ, துன்புறுபவனாகவோ கருதிக் கொள்வதில்லை.(18) தன்னலத்தின் மூலம் அவன் ஒருபோதும் வேறெதிலும் தன் மனத்தை நிலைநிறுத்துவதில்லை. செல்வத்தை அடைவதில் ஈடுபடாமல் இருக்கும் அவன், பிறரை அலட்சியம் செய்வதையோ, அவமதிப்பதையோ தவிர்க்கிறானேயன்றி செயல்படுவதைத் தவிர்ப்பதில்லை.(19)

அவன் தியானத்தில் ஈடுபடவே செயல்படுகிறான்; அவன் தியானத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறான, மாறாத தியான நாட்டம் கொண்டவனாக இருக்கிறான். அவன் தியானத்தின் மூலம் குவிந்த தியான {ஸமாதி} நிலையை அடைந்து, படிப்படியாக {காலகர்மத்தில்} தியானத்தையே கைவிடுகிறான்.(20) அந்நிலையில் அவன் அனைத்துப் பொருட்களையும் கைவிடுவதால் உண்டாகும் இன்பநிலையை அனுபவிக்கிறான். ஆசையின் கோட்பாடுகளில் முழுமையான திறன் பெற்ற அவன் தன் உயிர் மூச்சுகளை {ப்ராணன்களைக்} கைவிட்டுப் பிரம்மவுடலில் {ப்ரம்மரூபமானசரீரத்தில்} நுழைகிறான்.(21) அல்லது, அவன் பிரம்மவுடலுக்குள் நுழைய விரும்பவில்லையெனில், உடனே அவன் பிரம்மலோகத்திற்கு மேல்நோக்கி {தேவயானமென்னும் மார்க்கத்தில்} சென்று, மறுபிறப்பென்பதை மீண்டும் ஒருபோதும் அடையாமல் இருக்கிறான்.(22) அமைதித்தன்மையை {ஆத்மஞானத்தை} அடைந்து, அனைத்து வகைத் துன்பங்களில் இருந்தும் விடுபட்ட அத்தகைய மனிதன், தன் நுண்ணறிவைச் சார்ந்திருந்து, தூயதும், அழிவற்றதும், ஒரு களங்கமும் அற்றதுமான ஆன்மாவை அடைவதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(23)

ஜபமும் மறுபிறவிகளும்! – சாந்திபர்வம் பகுதி – 197- விதிப்படி ஜபிக்காதவன் அடையும் நரகங்களை யுதிஷ்டிரனுக்குப் பட்டியலிட்ட பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஜபம் செய்பவன் அடையும் உயர்ந்த கதியை நீர் சொன்னீர். இது மட்டுமே அவர்களது ஒரே கதியா? அல்லது அவர்கள் அடையக்கூடிய வேறேதும் கதிகள் உள்ளனவா?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பலமிக்க ஏகாதிபதியே, ஓ! மனிதர்களில் காளையே, ஜபம் செய்பவர்கள் அடையும் கதியையும், அவர்கள் மூழ்கும் பல்வேறு வகையான நரகங்களையும் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(2) ஜபம் செய்யும் எந்த மனிதன், வழிமுறைப்படி விதிக்கப்பட்டுள்ள நடத்தையில் நடந்து கொள்ள வில்லையோ, எவன் விதிக்கப்பட்ட சடங்கு, அல்லது ஒழுக்க நடைமுறையில் முழுமையாக நடந்து கொள்ள வில்லையோ, அவன் நரகத்திற்குச் செல்வான்[1].(3) நம்பிக்கையில்லாமல் ஜபம் செய்பவன், தன் செயல்பாட்டில் நிறைவில்லாதவன், அதில் எந்த மகிழ்ச்சியும் கொள்ளாதவன் ஐயமில்லாமல் நரகத்திற்குச் செல்வான்.(4) தங்கள் இதயங்களில் செருக்குடன் சடங்குகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் நரகத்திற்கே செல்வார்கள். ஜபம் செய்பவன் பிறரை அலட்சியம் செய்பவனாகவும், அவமதிப்பவனாகவும் இருந்தால், அவன் நரகத்திற்குச் செல்வான்.(5) ஜபம் செய்யும் மனிதன், உணர்வு முழுக்க ஆதிக்கத்தின் கீழும், கனியில் {பலனில்} உள்ள விருப்பத்தின் கீழும் அதில் ஈடுபட்டால், தன் இதயத்தில் இருக்கும் அந்தப் பொருட்கள் அனைத்தையும் அடைவான்[2].(6)தெய்வப் பெயரைக் கொண்ட பண்புகளில் தன் இதயத்தை நிலைக்கச் செய்து ஜபம் செய்பவனும் நரகத்திற்கே சென்று, அதில் இருந்து ஒருபோதும் விடுபடமாட்டான்[3].(7) (உலகம் சார்ந்த நோக்கங்களான செல்வம், மனைவியர் போன்ற) பற்றுகளின் ஆதிக்கத்தின் கீழ் ஜபம் செய்பவன், தன் இதயத்தில் நிலைபெற்றிருக்கும் அந்த நோக்கங்களை அடைவான்.(8) தீய அறிவும், தூய்மையற்ற ஆன்மாவும் கொண்டு, நிலையில்லா மனத்துடன் பணியில் ஈடுபட்டு ஜபம் செய்யும் ஒருவன், நிலையற்ற கதியை அடைவான், அல்லது நரகத்திற்குச் செல்வான்.(9) ஞானமில்லாதவனும், மூடனுமான ஒருவன் ஜபம் செய்தால், மலைப்படையவோ, மாயைவசப்படவோ செய்வான்; அத்தகைய மாயையின் விளைவால் நரகத்திற்குச் சென்று வருந்துவான்.(10) உறுதியான இதயம் கொண்ட ஒரு மனிதன், முழு ஒழுக்கத்துடன் ஜபம் செய்தாலும், தங்கள் தீய குணத்தால், நேர்மையான நம்பிக்கையில்லாமல் பலவந்தமாகப் பற்றுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு {ஜப} நிறைவை அடையாமல் இருந்தால், அவனும் நரகத்திற்கே செல்வான்” என்றார் {பீஷ்மர்}.(11)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஜபம் செய்யும் ஒருவன், (படைக்கப்பட்ட எந்தப் பொருளையும் போலல்லாமல்) தன்னியல்பில் நிலைத்திருப்பதும், உயர்ந்ததும், விவரிக்க முடியாததும், புலப்பட முடியாததும் {நினைத்துப் பார்க்க முடியாததும்}, ஜபம் மற்றும் தியானத்தின் காரியமாக அமைந்திருக்கும் ஓம் எனும் அசையில் வசிப்பதுமான சாரத்தை அடையும்போது, (உண்மையில், ஜபம் செய்பவர்கள் பிரம்ம நிலையை அடையும்போது), அவர்கள் ஏன் உடல்கொண்ட வடிவங்களில் மீண்டும் மறுபிறப்படைய வேண்டியிருக்கிறது” என்று கேட்டான்.(12)

பீஷ்மர், “உண்மை அறிவும், ஞானமும் இல்லாததன் விளைவால் ஜபம் செய்பவர்கள் பல்வேறு நரகங்களை அடைகிறார்கள். ஜபம் செய்பவர்கள் பின்பற்றும் ஒழுக்கங்கள் நிச்சயம் மிக மேன்மையானவையாகும். எனினும், நான் சொன்னவை அனைத்தும் குற்றங்களால் நேர்பவையாகும்” என்றார் {பீஷ்மர்}.(13)

பரலோகம்! – சாந்திபர்வம் பகுதி – 198-பரலோகத்திற்கும் பிற உலகங்களுக்கும் உள்ள வேறுபாட்டையும், பரலோகத்தைத் தவிர ஜபிப்பவன் அடையும் வேறு எந்த உலகமும் நரகமே என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஜபிப்பவன் எவ்விதமான நரகத்தை அடைகிறான்? ஓ! மன்னா {பீஷ்மரே}, இஃதை அறிய ஆவலாக இருகிறேன். இது குறித்து என்னிடம் உரையாடுவதே உமக்குத் தகும்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நீ நீதிதேவனின் {தர்மதேவன்/ எமதர்மன்} ஒரு பகுதியில் இருந்து எழுந்தாய் {பிறந்தாய்}. நீ இயல்பாகவே நீதியை நோற்பவனாக இருக்கிறாய். ஓ! பாவமற்றவனே, நீதியை அடிப்படையாகக் கொண்ட இவ்வார்த்தைகளைச் சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(2) பல்வேறு கூறுகள் மற்றும் வண்ணங்களைக் கொண்டவையும், பல்வேறு தன்மைகளையும், பல்வேறு கனிகளையும் உண்டாக்கவல்லவையும், பெரும் சிறப்பு வாய்ந்தவையும், செலுத்துபவர்களின் விருப்பங்களுக்கு ஏற்பச் செயல்படும் தேர்களைக் கொண்டவையும், தங்கத் தாமரைகள் பளபளக்கும் பல்வேறு இன்பத் தோட்டங்களைக் கொண்டவையும், அழகிய மாளிகைகள் மற்றும் நரகங்களைக் கொண்டவையும், உயர் ஆன்மத் தேவர்களுக்குச் சொந்தமானவையும், நான்கு லோகபாலர்கள், சுக்ரன், பிருஹஸ்பதி, மருத்துகள், விஸ்வதேவர்கள், சாத்யர்கள், அசுவினிகள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள் மற்றும் பிற தேவர்களுக்குச் சொந்தமானவையுமான உலகங்களேகூட, பரமாத்மாவின் உலகத்தோடு ஒப்பிடப்படுகையில் நரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.(3-6)

இறுதியாகப் பேசப்பட்ட உலகமானது, (இழிந்த நிலைக்கு மாறிவிடும் என்ற) அச்சமேதும் இல்லாததும், படைக்கப்படாததும் (அதனால் உண்மை இயல்பைக் கொண்டதும்), (அறியாமை, மாயை போன்ற) துன்பமேதும் இல்லாததும், ஏற்புடைய, அல்லது ஏற்கப்படாத ஏதும் இல்லாததும், (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) முக்குணங்களின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டதும், (அடிப்படையான ஐந்து பூதங்கள், புலன்கள், மனம், புத்தி ஆகிய) {புரிபஷடகமென்னும்} எட்டில் இருந்து விடுபட்டதும், (அறிபவன், அறியப்படும் பொருள், அறியும் செயல் ஆகியவற்றுக்குள்ள வேறுபாடுகள்) மூன்றும் இல்லாததும்;(7) (பார்த்தல், கேட்டல், நினைத்தல், அறிதல் என்ற) நான்கு பண்பியல்களில் இருந்து விடுபட்டைதும், (அறிவின்) நான்கு வகைக் காரணங்கள் இல்லாததும், இன்பம், திளைப்பு, கவலை, நோய் ஆகியவை இல்லாததுமான ஓர் உலகமாகும்[1].(8)(கடந்த காலம், தற்காலம், எதிர்காலம் என்ற வடிவங்களில் உள்ள) காலம் அங்கே பயன்பாட்டுக்காக எழுகிறது. அங்கே காலம் ஆட்சியாளனாக இருப்பதில்லை. இந்த உயர்ந்த உலகமே {பரலோகமே / பரமாத்மாவே} காலத்திற்கும், சொர்க்கத்திற்கும் ஆட்சியாளனாக இருக்கிறது.(9) ஜபிப்பவன் எவன் (அனைத்தையும் தன் ஆன்மாவுக்குள் உள்ளிழுத்துக் கொண்டு அந்த) ஆன்மாவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறானோ, அவன் அங்கே செல்கிறான். அவன் அதற்குபிறகு எந்தக் கவலையையும் உணரமாட்டான். இதுவே பரலோகம் என்றழைக்கப்படுகிறது. (நான் உன்னிடம் முதலில் பேசிய) பிற உலகங்களே நரகங்கள் ஆகும்.(10) நரகம் என்றழைக்கப்படும் உலகங்கள் அனைத்தையும் நான் உன்னிடம் சொல்லிவிடவில்லை. உண்மையில், அந்த முதன்மையான உலகத்தோடு {பரலோகத்தோடு} ஒப்பிடுகையில், பிற உலகங்கள் அனைத்தும் நரகங்கள் என்றே அழைக்கப்படுகின்றன” என்றார் {பீஷ்மர்}.(11)

ஜப வலிமை! – சாந்திபர்வம் பகுதி – 199-ஜபத்தின் வலிமையை விளக்க ஜபம் செய்த ஒரு பிராமணர், தன்மன், மன்னன் இக்ஷ்வாகு, காலன், மிருத்யு ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “காலம், மிருத்யு, யமன், இக்ஷ்வாகு மற்றும் ஒரு பிராமணருக்கு இடையில் நடந்த சச்சரவு ஒன்றை நீர் முன்னர்க் குறிப்பிட்டீர். அந்தக் கதையை முழுமையாக உரைப்பதே உமக்குத் தகும்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நான் பேசிக் கொண்டிருக்கும் காரியம் தொடர்புடையதும், சூரியனின் மகனான இக்ஷ்வாகு, ஒரு குறிப்பிட்ட பிராமணர், காலம் {காலதேவன்}, மிருத்யு {யமன்}ஆகியோருக்கு இடையில் நடந்ததுமான உரையாடலைச் சொல்லும் இந்தக்கதை ஒரு பழைய வரலாற்றில் தென்படுகிறது.(2) என்ன நடந்தது என்பதையும், அவர்களுக்குள் நடைபெற்ற அந்த உரையாடலையும், அஃது எங்கு நடைபெற்றது என்பதையும் என்னிடம் இருந்து கேட்பாயாக.(3) பெரும்புகழையும், பக்திமானுக்குரிய நடத்தையையும் கொண்ட குறிப்பிட்ட பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் ஜபம் செய்பவராக இருந்தார். பெரும் ஞானத்தைக் கொண்டிருந்த அவர், (வேதங்களின்) ஆறு அங்கங்களையும் அறிந்தவராக இருந்தார். அவர் குசிக குலத்தைச் சேர்ந்தவராகவும், பிப்பலாதரின் மகனாகவும் இருந்தார்[1].(4) அவர் (தமது தவங்களின் மூலமாக) அங்கங்களின் ஆன்ம உட்பொருளை அடைந்தார்[2]. இமயத்தின் அடிவாரத்தில் வசித்து வந்த அவர் வேதங்களுக்குத் தம்மை அர்ப்பணித்தவராக இருந்தார்.(5)காயத்ரி தொகுப்பை அமைதியாக ஜபித்து வந்த அவர், பிரம்மத்தை அடைவதற்காகக் கடும் தவங்களைச் செய்து வந்தார். அவர் நோன்புகளிலும், உபவாசங்களிலும் ஈடுபட்டு வரும்போதே ஓராயிரம் {1000} வருடங்கள் கடந்தன.(6) (காயத்ரி அல்லது சாவித்ரி) தேவரி அவர் முன்பு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, “நான் உம்மிடம் நிறைவுகொண்டேன்” என்றாள். அந்தப் பிராமணரோ அமைதியாக அந்தப் புனித மந்திரம் உரைப்பதைத் தொடர்ந்தபடியே அந்தத் தேவியிடம் ஒருவார்த்தையும் பேசாதிருந்தார்.(7) அவரிடம் இரக்கமடைந்த அந்தத் தேவி மிகவும் நிறைவடைந்தவளானால். அப்போது அந்த வேதங்களின் மூதன்னை, அந்தப் பிராமணர் ஈடுபட்டிருந்த ஜபத்தை மெச்சினாள்.(8) அந்தப் பிராமணர் (அந்த நாளைக்கான) ஜபத்தை நிறைவு செய்து எழுந்து, தலை வணங்கி அந்தத் தேவியின் பாதங்களில் தம்மை நெடுஞ்சாண்கிடையாகக் கிடத்திக் கொண்டார்.

உயர் ஆன்மா கொண்டவரான அந்த ஜபம் செய்பவர், அந்தத் தேவியிடம்,(9) “ஓ! தேவி, என் நற்பேற்றினாலேயே நீ என்னிடம் நிறைவு கொண்டு, எனக்குக் காட்சியளிக்கவும் வந்தாய். உண்மையில், நீ என்னிடம் நிறைவு கொண்டவளாக இருந்தால், என் இதயம் ஜபத்திலேயே இன்புறுவதாக இருக்க வேண்டும் என்ற வரத்தையே நான் கேட்பேன்” என்றார்.(10)

சாவித்ரி {காயத்ரி}, “ஓ! மறுபிறப்பாள முனிவரே, நீர் என்ன கேட்கிறீர்? நான் நிறைவேற்ற வேண்டிய உமது விருப்பம் யாது? ஓ! ஜபிப்பவர்களில் முதன்மையானவரே, நீர் விரும்பும் அனைத்தையும் என்னிடம் சொல்வீராக” என்று கேட்டாள்.(11)

இவ்வாறு அந்தத் தேவியால் சொல்லப்பட்டவரும், கடமைகளை அறிந்தவருமான அந்தப் பிராமணர், “ஜபம் செய்வதில் எனக்குள்ள விருப்பமானது ஒவ்வொரு கணமும் அதிகரிக்க வேண்டும்.(12) ஓ! மங்கலகரமான தேவியே, என் மனத்திற்குள் ஈர்க்கப்படும் ஸமாதி நிலையானது இன்னும் அதிகமாக முழுமை பெற வேண்டும்” என்று கேட்டார்.

அதற்கு அந்தத் தேவி இனிமையாக, “நீர் விரும்பியவாறே ஆகட்டும்” என்றாள்.(13)

அந்தப் பிராமணருக்கு நன்மை செய்ய விரும்பிய அந்தத் தேவி மீண்டும் அவரிடம், “பெரும் பிராமணர்களும் செல்லத்தக்க நரகத்திற்கு நீர் செல்லமாட்டீர்.(14) படைக்கப்படாததும், அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுபட்டதுமான பிரம்ம லோகத்திற்கு நீர் செல்வீர். நான் இப்போது செல்கிறேன், நீர் என்னிடம் கேட்டது நடக்கும்.(15) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும், {மெய்மறந்த நிலையில்} குவிந்த கவனத்துடனும் ஜபித்துக் கொண்டிருப்பீராக. தர்மதேவனே உம்மிடம் நேரில் வருவான். காலம், மிருத்யு, யமன் ஆகியோர் உம்மிடம் வருவார்கள். அறநெறி குறித்த கேள்வி ஒன்றின் நிமித்தமாக உமக்கும் அவர்களுக்குமிடையில் ஒரு சச்சரவு எழும்” என்றாள் {சாவித்ரி தேவி}”.(16)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் தேவி தன் வசிப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றாள். அந்தப் பிராமணர் இன்னும் ஓராயிரம் தேவ வருடங்களுக்கு ஜபத்தில் ஈடுபட்டார். கோபத்தைக் கட்டுப்படுத்தி, எப்போதும் சுயத்தையும் கட்டுப்படுத்திய அவர், உண்மைக்கு உறுதியான அர்ப்பணிப்புடனும், வன்மத்தில் இருந்தும் விடுபட்டவராகவும் இருந்தார்.(17) நுண்ணறிவு மிக்கப் பிராமணருடைய நோன்பின் நிறைவில் அவரிடம் நிறைவடைந்த தர்மன் {தர்மதேவன்}, அந்த மறுபிறப்பாளரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(18)

தர்மன், “ஓ! மறுபிறப்பாளரே, தர்மனான என்னைப் பாரும். உம்மைக் காண்பதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். நீர் ஈடுபட்டுவரும் இந்த ஜபத்திற்கான வெகுமதியை வென்றுவிட்டீர். அந்த வெகுமதியானது என்ன என்பதை என்னிடம் கேட்பீராக.(19) தேவர்கள் அல்லது மனிதர்கள் தொடர்புடைய அனைத்து இன்பலோகங்களையும் நீர் வென்றிருக்கிறீர். ஓ! நல்ல மனிதரே, தேவர்களின் வசிப்பிடங்கள் அனைத்திற்கும் மேலாக நீர் உயர்ந்திருப்பீர்.(20) ஓ! தவசியே, நீர் உமது உயிர் மூச்சை விட்டு, நீர் விரும்பிய உலகங்களுக்குச் செல்வீராக. உமது உடலைக் கைவிடுவதன் மூலம் நீர் இன்ப உலகங்கள் பலவற்றை நீர் வெல்வீர்” என்றான் {தர்மதேவன்}.(21)

அந்தப் பிராமணர், “நீர் சொல்லும் அந்த இன்ப உலகங்களில் எனக்கு என்ன வேலை இருக்கிறது? ஓ! தர்மா, நீர் விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக. ஓ! பலமிக்கத் தலைவா, இன்பத்திற்கும், துன்பத்திற்கும் ஆட்படும் இவ்வுடலை நான் கைவிடமாட்டேன்” என்றார்.(22)

தர்மன், “ஓ! தவசிகளில் முதன்மையானவரே, உமது உடல் நிச்சயம் கைவிடப்பட வேண்டும். ஓ! பிராமணரே, நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக. அல்லது, ஓ! பாவமற்றவரே, உமக்கு விருப்பமுள்ள வேறு எதையும் எங்களுக்குச் சொல்வீராக என்றான்.(23)

அந்தப் பிராமணர், “ஓ! பலமிக்கத் தலைவா, என்னுடைய இந்த உடல் இல்லாமல் நான் சொர்க்கத்தில் வசிக்க விரும்பவில்லை. ஓ! தர்மா, என்னைவிட்டுச் செல்வாயாக. என்னுடைய உடல் இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை” என்றார்.(24)

தர்மன், “(இவ்வாறு) இந்த உம்முடைய உடலில் உமது இதயத்தை நிலைக்கச் செய்யாமல் அதைக் கைவிட்டு மகிழ்ச்சியை அடைவீராக. ஆசை குணத்தில் {ரஜோ குணத்தில்} இருந்து விடுபட்ட உலகங்களுக்குச் செல்வீராக. உண்மையில், நீர் அங்கே சென்றால எந்தத் துன்பத்தையும் உணர மாட்டீர்” என்றான்.(25)

அந்தப் பிராமணர், “ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, நான் ஜபிப்பதிலேயே பேரின்பம் கொள்கிறேன். நீ சொல்லும் அந்த அழிவற்ற உலகங்களில் எனக்கு என்ன தேவை இருக்கிறது? உண்மையில், ஓ! பலமிக்கத் தலைவா, என்னுடைய இந்த உடல் இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை” என்றார்.(26)

தர்மன், “ஓ! மறுபிறப்பாளரே, உமது உடலைக் கைவிட நீர் விரும்பவில்லையெனில், உம்மை அணுகிக் கொண்டிருக்கும் காலன், மிருத்யு, யமன் ஆகியோரைக் காண்பீராக” என்றான்”.(27)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! அருளப்பட்ட மன்னா {யுதிஷ்டிரா} தர்மன் இதைச் சொன்னதும், (இந்த உலகத்தில் இருந்து அனைத்து உயிரினங்களையும் பறித்துச் செல்பவர்களான) விவஸ்வானின் மகன் (யமன்), காலன் மற்றும் மிருத்யு ஆகிய மூவரும் அந்தப் பிராமணரை அணுகி, அவரிடம் இவ்வாறு பேசினார்கள்.(28)

யமன், “நானே யமன். உம்மால் நன்கு செய்யப்பட்ட இந்தத் தவங்களுக்காகவும், நீர் நோற்று வந்த பக்தி ஒழுக்கத்திற்காகவும் உமக்கு உயர்ந்த வெகுமதி காத்திருக்கிறது” என்றான்.(29)

காலன், “உண்மையில், நீர் செய்து வந்த ஜபத்தின் நிறைவாக உயர்ந்த வெகுமதியை வென்றிருக்கிறீர். நீர் சொர்க்கத்திற்கு உயர வேண்டிய காலம் வந்துவிட்டது. நானே காலன், நான் உம்மிடம் வந்திருக்கிறேன்” என்றான்.(30)

மிருத்யு, “ஓ! அறமறிந்தவரே, நான் உரிய வடிவைக் கொண்ட மிருத்யுதேவியாவேன். ஓ! பிராமணரே, காலத்தால் தூண்டப்பட்டு உம்மைச் சுமந்து செல்வதற்காகவே நான் உம்மிடம் வந்திருக்கிறேன்” என்றாள்.(31)

அந்தப் பிராமணர், “சூரியனின் மகனுக்கும் {யமனுக்கும்}, உயர் ஆன்மக் காலனுக்கும், மிருத்யுதேவிக்கும், தர்மனுக்கும் நல்வரவு. உங்கள் அனைவருக்கும் நான் செய்ய வேண்டியதென்ன?” என்று கேட்டார்”.(32)

பீஷ்மர் தொடர்ந்தார், “அந்தச் சந்திப்பில், அந்தப் பிராமணர் அவர்களுடைய கால்களைக் கழுவிக் கொள்வதற்கு நீரும், அர்க்யத்திற்குத் தேவையான வழக்கமான பொருட்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். பிறகு, மிகவும் நிறைவடைந்த அவர், அவர்களிடம், “என் வலிமையைக் கொண்டு உங்கள் அனைவருக்கும் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.(33)

சரியாக அதே நேரத்தில், புனித நீர்நிலைகள் மற்றும் புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த (மன்னன்) இக்ஷ்வாகு, தேவர்கள் ஒன்றுகூடியிருந்த அந்த இடத்திற்கு வந்தான்.(34) அரசமுனியான அந்த இக்ஷ்வாகு தலைவணங்கி அவர்கள் அனைவரையும் வழிபட்டான். மன்னர்களில் சிறந்த அவன் பிறகு அவர்கள் அனைவரின் நலன் குறித்தும் விசாரித்தான்.(35) அந்தப் பிராமணர் மன்னனுக்கு {இக்ஷ்வாகுவுக்கு} ஓர் இருக்கையையும், அவனது பாதம் கழுவிக் கொள்ள நீரும், வழக்கமான அர்க்யமும் கொடுத்தார். அடுத்ததாக வழக்கமான அன்பு விசாரிப்புகளுக்குப் பிறகு அவர்,(36) “ஓ! பெரும் ஏகாதிபதியே, உனக்கு நல்வரவு. உன் விருப்பங்கள் அனைத்தையும் என்னிடம் சொல்வாயாக. உன்னதமானவனான நீ, என் வலிமையைக் கொண்டு நான் உனக்கு நிறைவேற்ற வேண்டியற்றை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார்.(37)

மன்னன் {இக்ஷ்வாகு}, “நான் ஒரு மன்னனாவேன். நீரோ நன்கறியப்பட்ட ஆறு கடமைகளைச் செய்யும் ஒரு பிராமணராவீர். (நான் கேட்க முடியாது), {எனவே} நான் உமக்குக் கொஞ்சம் செல்வம் தருகிறேன். அது நன்கறியப்பட்டது. நான் உமக்கு எவ்வளவு தரவேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(38)

அந்தப் பிராமணர், “ஓ ஏகாதிபதி, இரு வகைப் பிராமணர்கள் இருக்கிறார்கள். செயலுக்கு அடிமை, செயலின்மை என்ற இருவகை அறநெறிகள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில், கொடைகள் எதையும் ஏற்பதை நான் விலக்குகிறேன்.(39) ஓ! மன்னா, செயல் மற்றும் ஏற்பு ஆகிய கடமைகளுக்கு அடிமையாக இருப்போருக்கு அந்தக் கொடைகளை அளிப்பாயாக. எனவே, நான் கொடையாக எதையும் ஏற்க மாட்டேன். மறுபுறம், உனக்கு எது நன்மையானது என்பதை நான் உன்னிடம் கேட்கிறேன்? உண்மையில், நான் உனக்கு என்ன தர வேண்டும்? ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, என் தவத்தின் மூலம் நான் அதை நிறைவேற்றுகிறேன், சொல்வாயாக” என்று கேட்டார்.(40)

மன்னன் {இக்ஷ்வாகு}, “நான் ஒரு க்ஷத்திரியன். கொடுப்பீர் என்ற சொல்லை எவ்வாறு சொல்வது என்பதை நான் அறியமாட்டேன். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நாங்கள் கேட்கக் கூடிய ஒன்றே ஒன்று போரை எங்களுக்குக் கொடுப்பீராக என்பது மட்டும்தான்” என்றான்.(41)

பிராமணர், “நீ உன் வகைக்கான கடமையைச் செய்வதில் நிறைவுடன் இருக்கிறாய். அதே போலவே, ஓ! மன்னா, நான் என் கடமைகளைச் செய்வதில் நிறைவுடன் இருக்கிறேன். எனவே, நம்மிடைய மிகச் சிறிய வேறுபாடுதான் இருக்கிறது. நீ விரும்பியவாறு செயல்படுவாயாக” என்றார்.(42)

மன்னன், “நீர், “என் வலிமைக்குத் தகுந்ததை நான் உனக்குக் கொடுப்பேன்” என்ற வார்த்தைகளை முதலில் சொன்னீர். எனவே, ஓ! மறுபிறப்பாளரே, “(நீர் செய்த) ஜபத்தின் கனிகளை எனக்குக் கொடுப்பீராக” என்பதை நான் வேண்டுகிறேன்” என்றான்.(43)

பிராமணர், “நீ எப்போதும் போரையே கேட்பாய் என்று தற்பெருமை பேசிக் கொண்டிருந்தாய். பிறகு ஏன் நீ என்னிடம் போரைக் கேட்கவில்லை?” என்று கேட்டார்.(44)

மன்னன், “பிராமணர்கள், பேச்செனும் இடியைத் தரித்தவர்கள் என்றும், க்ஷத்திரியர்கள் கர வலிமையைக் கொண்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, ஓ! கல்விமானான பிராமணரே, உனக்கும் எனக்கும் இடையில் இந்தச் சொற்போர் தொடங்கியிருக்கிறது” என்றான்.(45)

பிராமணர், “என்னைப் பொறுத்தவரையில், இன்று என்தீர்மானமும் அதுவேதான். என் வலிமைக்குத்தக்க நான் என்ன உனக்குக் கொடுக்க வேண்டும்? ஓ! மன்னர்களின் மன்னா, சொல்வாயாக, என் செல்வத்தைக் கொண்டு நான் உனக்குக் கொடுப்பேன். தாமதிக்காதே” என்றார்.(46)

மன்னன், “உண்மையில், நீர் எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென விரும்பினால், இந்த ஆயிரக்கணக்கான வருடங்களாக ஜபம் செய்ததன் மூலம் நீர் ஈட்டிருக்கும் கனிகளை எனக்குக் கொடுப்பீராக” என்று கேட்டான்.(47)

அந்தப் பிராமணர், “நான் செய்த ஜபங்களின் உயர்ந்த கனியை எடுத்துக் கொள்வாயாக. உண்மையில், அந்தக் கனியில் பாதியை எந்த ஐயுணர்வுமின்றி எடுத்துக் கொள்வாயாக.(48) அல்லது, ஓ! மன்னா, நீ விரும்பினால் என் ஜபக்கனிகளை மொத்தமாகவும் எந்த ஐயுணர்வின்றி எடுத்துக் கொள்வாயாக” என்றார்.(49)

மன்னன், “நீர் அருளப்பட்டிருப்பீராக. நான் உம்மிடம் வேண்டிய உமது ஜபங்களின் கனிகளுக்கான எந்தத் தேவையும் எனக்கு இல்லை. உமது தலையின் மேல் அருள் நிலைக்கட்டும். நான் உம்மைவிட்டுச் செல்கிறேன். எனினும், (உமது ஜபங்களின்) அந்தக் கனிகள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(50)

அதற்கு அந்தப் பிராமணர், “நான் வென்ற கனிகள் குறித்த எந்த ஞானமும் எனக்குக் கிடையாது. எனினும், ஜபத்தின் மூலம் நான் அடைந்த அந்தக் கனிகளை நான் கொண்டிருக்கிறேன். தர்மன், காலன், யமன், மிருத்யு ஆகியோர் (அந்தக் கொடைச் செயலின்) சாட்சிகளாவர்” என்றார்.(51)

மன்னன், “இந்த நோன்புகளின் மூலம் நீர் அடைந்த அந்தக் கனிகளால் எனக்கு என்ன செய்ய முடியும்? உமது ஜபங்களின் கனிகள் என்ன என்பதை எனக்கு உம்மால் சொல்ல முடியவில்லை என்றால், நிச்சயம் எனக்கு விருப்பமில்லாத அந்தக் கனிகள் உமதாகவே இருக்கட்டும்” என்றான்.(52)

பிராமணர், “நான் (உன்னிடம் இருந்து) வேறெதையும் ஏற்கமாட்டேன். ஓ! அரச முனியே, உன் வார்த்தைகளும், என் வார்த்தைகளும் உண்மையாக வேண்டும்.(53) என் ஜபத்தைப் பொறுத்தவரையில், சிறப்பான எந்த ஒரு விருப்பத்தையும் நான் பேணி வளர்த்ததில்லை. ஓ! மனிதர்களில் புலியே, பிறகு எவ்வாறு, அந்த ஜபங்களுக்கான கனிகளைக் குறித்த எந்த அறிவையும் நான் கொண்டிருப்பேன்?(54) நீ, “கொடுப்பீர்” என்றாய், நானும், “நான் கொடுத்தேன்” என்றேன். என்னால இந்த வார்த்தைகளைப் பொய்த்துக் கொள்ள முடியாது. வாய்மை காப்பாயாக. அமைதியாய் இருப்பாயாக.(55) ஓ! மன்னா, நீ என் வார்த்தையை மறுத்தால் பொய்மை மூலம் உனக்கு உண்டாகும் பாவம் பெரியதாக இருக்கும்.(56) ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, உண்மையற்ற ஒன்றைச் சொல்வது உனக்குத் தகாது. அதேபோல, நானும் நான் சொன்னதைப் பொய்த்துக் கொள்ள ஒருபோதும் துணியமாட்டேன்.(57) இதற்கு முன்பே, எந்தத் தயக்கமும் இல்லாமல் “நான் கொடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டேன். எனவே, நீ வாய்மையில் உறுதியுள்ளவனாக இருந்தால், என் கொடையை ஏற்பாயாக.(58) ஓ! மன்னா, நீ இங்கே வந்து என் ஜபங்களின் கனிகளை வேண்டினாய். எனவே, நீ வாய்மையில் உறுதியுள்ளவனாக இருந்தால், நான் கொடுத்ததைப் பெற்றுக் கொள்வாயாக.(59) பொய்மைக்கு அடிமையாக இருப்பவனுக்கு இம்மையும் இல்லை, மறுமையும் இல்லை. அத்தகைய மனிதன் (இறந்து போன தன்) மூதாதையர்களை மீட்பதில் தவறுகிறான். அவ்வாறிருக்கையில், (பிறக்கப் போகும் அவனுடைய) வாரிசுக்கு நன்மை செய்வதால் அவனால் எவ்வாறு வெல்ல முடியும்?(60)

ஓ! மனிதர்களில் காளையே, வேள்விகள், கொடைகள், நோன்புகள், அறச் சடங்குகள் ஆகியனவும் (ஒரு மனிதனைத் தீமையிலும், நரகத்திலும் இருந்து) இம்மையிலும், மறுமையிலும் மீட்பதில் வாய்மையை விடச் சிறந்தவை கிடையாது.(61) உன்னால் செய்யப்பட்ட தவங்கள் அனைத்தும், எதிர்காலத்தில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு நீ செய்யப்போகும் தவங்கள் அனைத்தும் சிறப்பில் வாய்மையைவிடப் பெரியன கிடையாது.(62) வாய்மையே அழிவில்லா பிரம்மமாகும் {பரமாத்மரூபமாகும்}. வாய்மையே அழிவில்லாத தவமாகும். வாய்மையே அழிவல்லாத வேள்வியாகும். வாய்மையே அழிவில்லாத வேதமாகும்.(63) வாய்மை வேதங்களில் விழித்திருக்கிறது {விளங்கிக் கொண்டிருக்கிறது}. வாய்மையுடன் பிணைக்கப்பட்ட கனிகளே உயர்ந்தவையாகச் சொல்லப்படுகின்றன. வாய்மையிலிருந்து அறமும், தற்கட்டுப்பாடும் எழுகின்றன. அனைத்தும் வாய்மையைச் சார்ந்தே இருக்கின்றன {வாய்மையிலேயே நிலைபெற்றிருக்கின்றன}.(64) வாய்மையே வேதங்களும், அவற்றின் அங்கங்களுமாகும். வாய்மையே அறிவாகும். வாய்மையே விதியாகும். வாய்மையே நோன்புகளும், உபவாசங்களுமாகும். வாய்மையே தொடக்கச் சொல்லான ஓம் ஆகும் {ஓங்காரமானது ஸத்யமாகவேயிருக்கிறது}.(65)

வாய்மையே உயிரினங்களின் தோற்றமாகும். வாய்மையே அவற்றின் சந்ததியாகிறது. வாய்மையின் மூலமே காற்று {வாயு} நகர்கிறது. வாய்மையின் மூலமே சூரியன் வெப்பத்தைக் கொடுக்கிறது.(66) வாய்மையின் மூலமே நெருப்பு எரிகிறது. வாய்மையிலேயே சொர்க்கமும் நிலைபெற்றிருக்கிறது. வாய்மையே, வேள்வி, தவம், வேதங்கள், சாம வேத சொற்கள்[3], மந்திரங்கள் மற்றும் சரஸ்வதி ஆகும்.(67) ஒரு காலத்தில் வாய்மையும், அனைத்து அறச்சடங்குகளையும் தராசின் இரு தட்டுகளில் நிறுத்தப்பட்டன என்று நாம் கேள்விப்படுகிறோம். இரண்டையும் எடை பார்த்தபோது, வாய்மையிருந்த பக்கமே கனம் அதிகமாக இருந்தது.(68) எங்கே வாய்மை இருக்குமோ அங்கே அறம் இருக்கிறது. வாய்மையின் மூலமே அனைத்தும் அதிகரிக்கிறது. ஓ! மன்னா, பொய்மையின் களங்கம் கொண்ட ஒரு செயலைச் செய்ய நீ ஏன் விரும்புகிறாய்?(69) வாய்மையில் உறுதியுடன் இருப்பாயாக. ஓ! ஏகாதிபதி தவறாகச் செயல்படாதே. “(எனக்குக்) கொடுப்பீர்” என்று நீ சொன்ன வார்த்தைகளே ஏன் பொய்யாக்கப் போகிறாய்?(70) ஓ! ஏகாதிபதி, நான் உனக்குக் கொடுத்த என் ஜபங்களுக்கான கனிகளை நீ ஏற்க மறுத்தால், நீ அறத்தில் இருந்து வீழ்ந்து உலகத்தில் திரிய வேண்டியிருக்கும்.(71) உறுதிமொழியளித்த பிறகு கொடுக்காத மனிதனும், வேண்டிய பிறகு அஃதை ஏற்காத மனிதனும் என இருவரும் பொய்மையால் களங்கப்படுவார்கள். எனவே, நீன் உன் வார்த்தைகளைப் பொய்யாக்குவது உனக்குத் தகாது” என்றார் {பிராமணர்}.(72)மன்னன், “போரிடுவதும், (குடிமக்களைக்) காப்பதுமே க்ஷத்திரியர்களின் கடமைகளாகும். க்ஷத்திரியர்கள் (கொடைகளைக்) கொடுப்பவர்கள் என்று சொல்லப்படுகிறது. பிறகு என்னால் எவ்வாறு நீர் (கொடையாகக் கொடுக்கும்) எதையும் ஏற்க முடியும்?” என்று கேட்டான்.(73)

அந்தப் பிராமணர், “ஓ! மன்னா, (முதலில் என்னிடம் இருந்து எதையும் ஏற்றுக்கொள்ளுமாறு ) ஒருபோதும் நான் சொல்லவில்லை. நான் வீட்டையும் நாடி வரவில்லை. நீயே இங்கு வந்து என்னிடம் வேண்டினாய். பிறகு ஏன் நீ ஏற்க மறுக்கிறாய்?” என்று கேட்டார்.(74)

தர்மன், “நானே தர்மன் என்று நீங்கள் இருவரும் அறிவீராக. உங்களுக்கிடையில் எந்தச் சச்சரவும் வேண்டாம். கொடையுடன் பிணைந்திருக்கும் வெகுமதி பிராமணருடையதாக இருக்கட்டும், வாய்மையின் தகுதியை {புண்ணியத்தை} இந்த ஏகாதிபதி அடையட்டும்” என்றான்.(75)

சொர்க்கம், “ஓ! பெரும் மன்னா, நான் உடல்வடிவம் கொண்டு இங்கே வந்திருக்கும் சொர்க்கம் என்பதை அறிவாயாக. உங்களுக்கிடையிலான இந்தச் சச்சரவு நிற்கட்டும். நீங்கள் ஈட்டிய தகுதி, அல்லது வெகுமதிகளைப் பொறுத்தவரையில் நீங்கள் இருவரும் சமமானவர்களே” என்றது.(76)

மன்னன் {இக்ஷ்வாகு}, “சொர்க்கத்தால் எனக்கு எந்தப் பயனும் கிடையாது. ஓ! சொர்க்கமே, நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே செல்வாயாக. கல்விமானான இதநப் பிராமணர் உன்னுடம் வர விரும்பினால், (வாழ்க்கையில் என் செயல்களின் மூலம்) நான் வென்ற வெகுமதிகளையும் எடுத்துக் கொண்டு உன்னோடு செல்லட்டும்” என்றான்.(77)

அந்தப் பிராமணர், “என் இளமைக் காலத்தில், அறியாமையின் மூலம் (கொடைகளை ஏற்பதற்காக) நான் என் கரங்களை நீட்டியிருக்கிறேன். எனினும், தற்போது துறவுக் {தவிர்க்கும்} கடமையை நோற்றபடி நான் காயத்ரியை ஜபித்து வருகிறேன்[4].(78) ஓ! மன்னா, துறவு {தவிர்க்கும்} கடமையை நீண்ட காலமாக நோற்கும் எனக்கு ஏன் இவ்வாறு ஆசை காட்டுகிறாய்? நான் என் கடமையை நானே செய்வேன். ஓ! ஏகாதிபதி உன்னால் வெல்லப்பட்ட வெகுமதிகளின் எந்தப் பங்கையும் பெற நான் விரும்பவில்லை. நான் தவங்களுக்கும் வேதங்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து {பிச்சை} ஏற்பதைத் தவிர்த்து வருகிறேன்” என்றார்.(79)மன்னன் {இக்ஷ்வாகு}, “ஓ! பிராமணரே, நீர் உமது ஜபத்தின் சிறந்த வெகுமதியை எனக்கு உண்மையில் கொடுக்கிறீர் என்றால், அந்த வெகுமதியில் பாதி எனதாகட்டும். அதேபோல என் செயல்களின் மூலம் நான் வென்ற வெகுமதியில் பாதியை நீர் எடுத்துக் கொள்வீராக.(80) பிராமணர்கள் ஏற்புக் கடமையில் ஈடுபடுகிறார்கள். அரச வகையில் பிறந்த மனிதர்கள் கொடுக்கும் கடமையில் ஈடுபடுகிறார்கள். (இரு வகையினருக்கும் விதிக்கப்பட்டிருக்கும்) கடமைகளை நீ அறியாவிட்டால், (நான் பரிந்துரைத்தபடியே) நமது கனிகள் சமமாக இருக்கட்டும்.(81) அல்லது நமது வெகுமதிகளைப் பொறுத்தவரையில் நீர் எனக்கு இணையானவராக இருக்க விரும்பவில்லையென்றால், நான் வென்ற வெகுமதிகள் மொத்தத்தையும் நீரே எடுத்துக் கொள்ளும். நீன் எனக்கு அருள்தர விரும்பினால், நான் வென்ற தகுதியை {புண்ணியத்தைப்} பெற்றுக் கொள்வீராக” என்றான்”.(82)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்த நேரத்தில் விரும்பத்தகாத தோற்றத்தைக் கொண்ட இருவர் {விரூபன், விக்ருதன்} அங்கே வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவன் தோள் மீது தன் கரத்தை வைத்திருந்தனர்; இருவரும் மோசமான ஆடைகளை உடுத்தியிருந்தனர். அவர்கள் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(83) “நீ எனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம்” என்றும், “உண்மையில் நான் உனக்குக் கொடுக்க வேண்டும்” என்றும் சொல்லிக் கொண்டு, “நாம் இவ்வழியில் சச்சரவில் ஈடுபடுகிறோம். மனிதர்களை ஆளும் மன்னன் இதோ இருக்கிறான்.(84) உண்மையில் நீ ஏனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம். நீ பொய்யாகப் பேசுகிறாய். நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன்” என்றும் சூடான சச்சரவு செய்து கொண்ட அந்த இருவரும் மன்னனிடம், “ஓ! ஏகாதிபதி, எங்கள் இருவரில் எவரும் பாவத்தின் களங்கத்தை அடையாமல் பார்த்துக் கொள்வாயாக” என்றனர்.(86)

விரூபன், “ஓ! ஏகாதிபதி, என் தோழனான விக்ருதனுக்கு, ஒரு பசுக்கொடையின் தகுதிகளை நான் கொடுக்க வேண்டும். அந்தக் கடனை அடைக்க நான் விரும்புகிறேன். எனினும், இந்த விக்ருதன் இந்த மீட்டளிப்பை மறுக்கிறான்” என்றான்[5].(87)விக்ருதன், “ஓ! ஏகாதிபதி, இந்த விரூபன் எனக்கு ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. ஓ! மன்னா, வாய்மையின் தோற்றத்தில் அவன் பொய்மையைப் பேசுகிறான்” என்றான்.(88)

மன்னன், “ஓ! விரூபா, நீ இங்கே உன் நண்பனுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. முதலில் நீ சொல்வதைக் கேட்டு, அதன்பிறகு உரியதைச் செய்வதே என் தீர்மானமாக இருக்கிறது” என்றான்.(89)

விரூபன், “ஓ! மன்னா, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, என் தோழனான இந்த விக்ருதனுக்குக் கொடுக்க வேண்டியவாறு அமைந்த அனைத்துச் சூழ்நிலைகளையும் விரிவாகச் சொல்கிறேன், கவனமாகக் கேட்பாயாக.(90) ஓ! பாவமற்றவனே, ஓ! அரசமுனியே, கடந்து சென்ற நாட்களில், இந்த விக்ருதன், தகுதியை {புண்ணியத்தை} வெல்லும் நிமித்தமாகத் தவங்களுக்கும், வேதகல்விக்கும் தம்மை அர்ப்பணித்திருந்த ஒரு பிராமணருக்கு ஒரு மங்கலப் பசுவைத் தானமாக அளித்தான்.(91) ஓ! மன்னா, அவனிடம் {விக்ருதனிடம்} சென்ற நான் அவனது அந்தச் செயலுக்கான வெகுமதியை இரந்து கேட்டேன். தூய இதயத்துடன் கூடிய விக்ருதன் அந்த வெகுமதியை எனக்குக் கொடையாக அளித்தான்.(92) பிறகு நான் தூய்மையடைவதற்காகச் சில நல்ல செயல்களைச் செய்தேன். மேலும் நான் கன்றுகளுடன் கூடியவையும், அதிக அளவில் பால் தரக்கூடியவையுமான இரண்டு கபிலைப் பசுக்களை {காராம்பசுக்களை} வாங்கினேன்.(93) பிறகு நான், அந்த இரு பசுக்களையும் உஞ்ச முறையில்[6] வாழ்ந்து வந்த ஓர் ஏழை பிராமணருக்கு உரிய சடங்குகளின் படி உரிய அர்ப்பணிப்புடன் கொடுத்தேன். ஓ! தலைவா, முன்பு என் தோழனிடம் இருந்து கொடையேற்ற நான், அவனுக்கு அந்த வெகுமதியை இரண்டு மடங்காகக் கொடுக்க விரும்புகிறேன்[7]. ஓ! மனிதர்களில் புலியே, சூழ்நிலைகள் இவ்வாறு இருக்கையில் (உன் தீர்மானத்தின்படி) எங்கள் இருவரில் அப்பாவி யார்? குற்றம் செய்தவன் யார்?(94,95) ஓ! ஏகாதிபதி, இதுகுறித்து ஒருவரோடொருவர் சச்சரவு கொண்டே நாங்கள் இருவரும் இங்கே வந்திருக்கிறோம். நீ சரியாகவோ, தவறாகவோ தீர்மானித்து, எங்கள் இருவருக்கிடையில் அமைதியை நிறுவுவாயாக.(96) இந்த எனது தோழன் ஏற்கனவே எனக்குக் கொடுத்ததற்குச் சமமானதை என்னிடமிருந்தும் திரும்பப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லையெனில், நீயே பொறுமையாகத் தீர்மானித்து, எங்கள் இருவரையும் சரியான பாதையில் நிலைநிறுத்த வேண்டும்” என்றான் {விரூபன்}.(97)மன்னன், “கடனாகக் கொடுக்கப்பட்டது திருப்பிக் கொடுக்கப்படுகையில் நீ ஏன் ஏற்க மறுக்கிறாய்? தாமதிக்காமல், உனக்கு உரியயதைப் பெற்றுக் கொள்வாயாக” என்றான்.(98)

விக்ருதன், “இவன் எனக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறான். நான் கொடுத்ததைக் கொடுத்துவிட்டேன் என்று நான் அவனிடம் சொல்கிறேன். எனவே, அவன் எனக்குத் தரவேண்டியது ஏதும் இல்லை. அவன் விரும்பியவாறு எங்கும் செல்லட்டும்” என்றான்.(99)

மன்னன் {இக்ஷ்வாகு}, “அவன் உனக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறான். எனினும், நீ அதைப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. இஃது எனக்குச் சரியானதாகத் தோன்றவில்லை. இதற்கு நீ தண்டிக்கத்தகுந்தவன் என நான் நினைக்கிறேன். இதில் சிறு ஐயமும் இல்லை” என்றான்.(100)

விக்ருதன், “ஓ அரசமுனியே, நான் அவனுக்குக் கொடையளித்தேன். அஃதை எவ்வாறு என்னால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்? இதில் நான் குற்றவாளியென்றால், ஓ பலமிக்கவனே, எனக்குத் தண்டனையைச் சொல்வாயாக” என்றான்.(101)

விரூபன், “நான் கொடுக்கத் தயாராக இருக்கும்போது நீ மறுத்தால், நீதியை நிறுத்துபவனான இந்த மன்னன் உன்னை நிச்சயம் தண்டிப்பான்” என்றான்.(102)

விக்ருதன், “எனக்குச் சொந்தமானது அவனால் வேண்டப்பட்ட பிறகே நான் கொடுத்தேன். அதை நான் எவ்வாறு திரும்ப எடுத்துக் கொள்வேன்? நீ செல்லலாம். நான் உனக்கு விடைகொடுத்துவிட்டேன்” என்றான்.(103)

{பிப்பலாதரின் மகனான அந்தப்} பிராமணர், “ஓ! மன்னா, நீ இவ்விருவரின் வார்த்தைகளையும் கேட்டாய். நான் உனக்குக் கொடுப்பதாக உறுதியளித்ததை எந்தத் தயக்கமும் இல்லாமல் பெற்றுக் கொள்வாயாக” என்றார்.(104)

மன்னன், “உண்மையில் இக்காரியம் அடியற்ற குழியைப் போன்று (முக்கியத்துவத்தில்) மிக ஆழமானதாகும். ஜபிப்பவரான இவரின் பிடிவாதம் எவ்வாறு முடியப் போகிறது?(105) இந்தப் பிராமணரால் கொடுக்கப்பட்டதை நான் ஏற்கவில்லையெனில், பெரும் பாவத்தின் களங்கம் படிவதை நான் எவ்வாறு தவிர்க்க முடியும்?” என்றான்.(106)

பிறகு அந்த அரச முனி {இக்ஷ்வாகு}, “உங்கள் ஒவ்வொருவருக்குமுரிய நோக்கங்களை வென்றுவிட்டவர்களாக நீங்கள் இருவரும் செல்லலாம். என்னில் நிறுவப்பட்டுள்ள அரசகடமைகள் பயனற்றவையாகக் கூடாது {இந்த இடத்தில் இருந்து கொண்டு மன்னர்களுக்கான தர்மத்தைப் பொய்யாக்காதீர்கள்}.(107) மன்னர்கள் அவர்களுக்குரிய கடமைகளை நோக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். எனினும், என் தீப்பேற்றின் நிமித்தமாக இழிந்தவனான என்னைப் பிராமணர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட கடமைகளின் நடைமுறைகள் பற்றுகின்றன” என்றான்[8].(108)அதற்கு அந்தப் பிராமணன், “ஓ! மன்னா, ஏற்பாயாக. நான் உனக்குக் கொடுக்க வேண்டும். நீ வேண்டினாய், நானும் (உனக்குக் கொடுப்பதாக) உறுதியளித்துவிட்டேன். எனினும், ஓ! ஏகாதிபதி, நீ ஏற்க மறுப்பாயானால், நிச்சயம் நான் உன்னைச் சபிப்பேன்” என்றார்.(109)

மன்னன் {இக்ஷ்வாகு}, “அரச கடமைகளுக்கு ஐயோ. {கடமைகள் குறித்து} தீர்மானிக்கப்பட்ட முடிவுகளின் இயக்கம் இவ்வாறாகிவிட்டதே. எனினும், முற்றிலும் இணையான இரண்டு கடமைகளின் நடைமுறைகளை வெளிப்படுத்தும் ஒரே காரணத்திற்காக நீர் கொடுப்பதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும்[9].(110) இதற்கு முன்பு ஒருபோதும் (கொடைகளை ஏற்க) நீட்டப்படாத என் கரமானது, கொடுப்பதற்காகவே இப்போது (ஏற்பதற்காகவும்) நீட்டப்படுகிறது. நீர் கொடுக்க வேண்டியதை எனக்குக் கொடுப்பீராக” என்றான்.(111)அந்தப் பிராமணர், “காயத்ரி ஜபத்தின் மூலம் நான் எந்தக் கனிகளையாவது வென்றிருந்தால், அவை அனைத்தையும் நீ பெற்றுக் கொள்வாயாக” என்றார்.(112)

மன்னன் {இக்ஷ்வாகு}, “ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, என் கரங்களில் விழுந்திருக்கும் இந்த நீர்த்துளிகளைப் பாரும். நானும் உமக்குக் கொடுக்க விரும்புகிறேன். என் கொடையை ஏற்பீராக. (நான் உமது கொடையை ஏற்றுக் கொண்டதைப் போல நீரும் என் கொடையை ஏற்றுக் கொள்வதன் மூலம்) நமக்கிடையில் ஒரு சமத்தன்மை இருக்கட்டும்” என்றான்.(113)

விரூபன், “ஓ! மன்னா, நாங்கள் இருவரும் ஆசையும், கோபமும் ஆவோம் என்பதை அறிவாயாக. எங்களாலேயே நீ இவ்வழியில் செயல்பட்டாய். நீ இந்தப் பிராமணருக்குப் பதில் கொடையை அளித்துவிட்டாய். மறுமையின் இன்பவுலகங்களைப் பொறுத்தவரையில் இந்த மறுபிறப்பாளருக்கும் உனக்கும் இடையில் சமத்தன்மை நிலைக்கட்டும். இந்த விக்ருதன் உண்மையில் எனக்குத் தர வேண்டியது ஏதுமில்லை. நாங்கள் உன் நிமித்தமாகவே அவ்வாறு நடந்து கொண்டோம். காலன், தர்மன், மிருத்யு மற்றும் நாங்கள் இருவரும் சேர்ந்து, உனக்கும் இந்தப் பிராமணருக்கும் இடையில் இந்தச் சச்சரவை உண்டாக்கி உன்னைக் குறித்த அனைத்தையும் உன் எதிரிலேயே ஆய்வு செய்தோம். உன் செயல்களின் மூலம் நீ வென்ற உலகங்களுக்கு உன் விருப்பப்படியே செல்வாயாக” என்றான் {விரூபன்}”.(116)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஜபம் செய்பவர்கள் (தாங்கள் செய்யும் ஜபத்தின்) கனிகளை எவ்வாறு அடைகிறார்கள் என்பதையும், ஜபம் செய்பவனின் கதி, அவர்கள் வெல்லும் உலகங்கள் ஆகியவற்றையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(117) காயத்ரி ஜெபம் செய்யும் ஒருவன், பரப்பிரம்மத்தை அடைவான், அல்லது அக்னியிடம் செல்வான், அல்லது சூரியலோகத்திற்குள் நுழைவான்.(118) அவன் சக்திமிக்கத் தனது (புதிய) உடலுடன் அங்கே விளையாடினால், அத்தகைய பற்றுகளில் திகைப்படையும் அவன், அந்தக் குறிப்பிட்ட உலகங்களின் பண்பியல்புகளைப் பற்றிக் கொள்வான்[10].(119) சோமன் {சந்திரன்}, வாயு, பூமி, வெளி ஆகியவற்றுக்குச் செல்பவனின் நிலையே அதே போன்றதே ஆகும். உண்மையென்னவெனில், இவை அனைத்திலும் வசிப்பவர்கள், அவற்றில் பற்றுக் கொண்டு, அந்தந்த உலகங்களின் குறிப்பிட்ட பண்பியல்புகளை வெளிக்காட்டுவார்கள். எனினும் ஒருவன் பற்றுகளில் இருந்து விடுபட்டு அந்த உலகங்களுக்குச் சென்று, (அங்கு அனுபவிக்கும் இன்பங்களில்) நம்பிக்கையில்லாமல் இருந்து, உயர்ந்ததையும், நினைத்தற்கரியதையும் விரும்பினால், அப்போது அவன் அதற்குள்ளும் நுழைவான்.(121) அவ்வழக்கில் அவன், ஆசையில் இருந்து விடுபட்டு, தனிப்பட்ட நனவு நிலை இல்லாதவனாக அமுதத்தின் அமுதத்தை அடைகிறான். முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, இன்பத்தையும் அமைதியை அடைந்து, துன்பமில்லாதவனாகப் பிரம்மமாகவே ஆகிறான்[11].(122)உண்மையில் அவன், துன்பத்தில் இருந்து விடுபட்டதும், அமைதியானதும், திரும்பி வர வேண்டிய அவசியம் இல்லாததும், ஒன்றேயானதும், நினைத்தற்கரியதுமான பிரம்ம நிலையை அவன் அடைகிறான்.(128) அச்சத்தின் நான்கு வழிமுறைகளில் இருந்தும்[12], ஆறு நிலைகளில் இருந்தும், மேலும் வேறு ஆறு மற்றும் பத்துப் பண்பியல்புகளில் இருந்தும் அவன் விடுபடுகிறான்[13]. படைப்பாளனையே விஞ்சி அவன் பரமாத்மாவுக்குள் உறிஞ்சப்பட்ட நிலையை அடைகிறான்.(124) அல்லது, பற்றுகளின் ஆதிக்கத்தின் கீழிருக்கும் அவன், அத்தகைய உறிஞ்சலுக்கு விரும்பாமல், அனைத்திற்கான பரம காரணத்தைச் சார்ந்த தனியான இருப்பாக இருக்க விரும்பினால், அவன் பேணி வளர்க்கும் விருப்பங்கள் அனைத்தின் கனிகளையும் அடைவான்.(125) அல்லது (முன்னர்ச் சொல்லப்பட்டதுபோல) நரகங்கள் என்றழைக்கப்பட்ட இன்ப உலகங்கள் அனைத்தையும் (வெறுப்புடன்) கண்டு, ஆசையை விரட்டி, அனைத்திலிருந்தும் விடுபட்டு அந்தந்த உலகங்களிலேயே உயர்ந்த இன்ப நிலையை அனுபவிக்கிறான்[14].(126) ஓ ஏகாதிபதி, ஜபிப்பவர்கள் அடையும் கதியைக் குறித்து உனக்குச் சொல்லிவிட்டேன். நான் உனக்கு அனைத்தையும் சொல்லிவிட்டேன். வேறு என்ன கேட்க விரும்புகிறாய்” {என்றார் பீஷ்மர்}.(127)

ஜபிப்பவர்களின் கதி! – சாந்திபர்வம் பகுதி – 200-பிராமணரும், இக்ஷ்வாகுவும் அடைந்த கதியைக் குறித்துக் கேட்ட யுதிஷ்டின்; இருவரும் வெகுமதிகளை அடைந்து பிரம்மலோகத்தை அடைந்தது; அவர்கள் உயிரை விட்ட வழிமுறை; அவர்களைப் பிரம்மன் வரவேற்ற விதம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, விரூபன் பேசி முடித்ததும், அந்தப் பிராமணராலோ, அந்த ஏகாதிபதியாலோ {இக்ஷ்வாகுவாலோ} அவனுக்கு என்ன மறுமொழி கொடுக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்வீராக.(1) உம்மால் விவரிக்கப்பட்ட கதிகளுள் அவர்கள் அடைந்த கதியென்ன? உண்மையில், அவர்களுக்கு இடையில் நடந்த உரையாடல் என்ன? அங்கே அவர்கள் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தப் பிராமணர், “நீ சொன்னதுபோலவே ஆகட்டும்” என்று சொல்லி தர்மன், யமன், காலன், மிருத்யு, சொர்க்கம் ஆகியவர்களையும், வழிபாட்டுக்குத் தகுந்த அனைவரையும் வழிபட்டார்.(3) தம்மை வணங்கி அங்கே வந்திருந்த முதன்மையான பிராமணர்களை அனைவரையும் அவர் வழிபட்டார். பிறகு அந்த ஏகாதிபதியிடம் பேசிய அவர், “ஓ! அரசமுனியே, என் ஜபங்களுக்கான வெகுமதிகளுடன் கூடிய நீ உயர்ந்த நிலையை அடைவாயாக. நீ சென்றதும் நான் என்னை மீண்டும் ஜபங்களில் நிறுவிக் கொள்வேன்.(5) ஓ! பெரும் வலிமைமிக்கவனே, “ஜபத்தில் உனது அர்ப்பணிப்புத் தொடர்ச்சியானதாக இருக்கட்டும்” என்று சாவித்திரி தேவி எனக்கு வரமளித்திருக்கிறாள்” என்றார்.(6)

மன்னன்  {இக்ஷ்வாகு}, “(ஜபத்தின் கனிகளை எனக்குக் கொடுத்துவிட்டதன் விளைவால்) உமது வெற்றிக் கனியற்றதாக இருந்தால், உமது இதயம் மீண்டும் பயிற்சியில் நிலைக்க வேண்டுமானால், என்னிடம் பாதி, பாதியைப் பகிர்ந்து கொண்டு, உமது ஜபங்களின் வெகுமதியை அடைவீராக” என்றான்[1].(7)அதற்கு அந்தப் பிராமணர், “(உன் செயல்பாடுகளின் விளைவுகளால் நீ அடைந்த வெகுமதிகளை என்னோடு பகிர்ந்து கொள்ள) இம்மனிதர்கள் அனைவரின் முன்னிலையிலும் நீ தளர்வுறாமல் முயற்சி செய்திருக்கிறாய். எனவே, (மறுமையில்) நமது வெகுமதிகள் நமக்கிடையில் சமமானவையாக இருக்கட்டும். நாம் நமது கதியை அடைவோமாக” என்றார்.(8)

தேவர்களின் தலைவன் {இந்திரன்} அவர்கள் அடைந்த தீர்மானத்தை அறிந்து லோகபாலர்கள் மற்றும் தேவர்களின் துணையுடன் அந்த இடத்திற்கு வந்தான்.(9) சத்யஸ்கள், விஸ்வர்கள், மந்திரர்கள், பல்வேறு வகை இசைகள், ஆறுகள், மலைகள், கடல்கள், புனித நீர்நிலைகள்,(10) தவங்கள், யோகம் குறித்த விதிமுறைகள், சாம வேத வரிகளைப் பாடுவதற்குத் துணை புரியும் ஒலிகள், சரஸ்வதி, நாரதர், பர்வதர், விஸ்வாவசு, ஹாஹாக்கள், ஹுஹூக்கள்,(11) குடும்பத்துடன் கூடியவனான கந்தர்வன் சித்திரசேனன், நாகர்கள், சித்தர்கள், முனிவர்கள், தேவர்களின் தேவனான பிரஜாபதி ஆகியோரும்,(12) நினைத்தற்கரியவனும், ஆயிரம் தலைகளைக் கொண்டவனுமான விஷ்ணுவும் அங்கே வந்தனர். ஆகாயத்தில் பேரிகைகளும், துந்துபிகளும் முழக்கப்பட்டன.(13) உயர் ஆன்மா கொண்ட அவர்கள் மீது தெய்வீகப் பூமாரி பொழியப்பட்டது. சுற்றிலும் அப்சரஸ் கூட்டங்கள் ஆடிக் கொண்டிருந்தனர்.(14)

சொர்க்கமானவன், தன் உடல்வடிவத்துடன் அங்கே வந்தான். அந்தப் பிராமணரிடம் பேசிய அவன் {சொர்க்கம்}, “நீர் வெற்றியை அடைந்தீர். நீர் உயர்வாக அருளப்பட்டிருக்கிறீர்” என்றான். அடுத்ததாக அந்த ஏகாதிபதியிடம் {இக்ஷ்வாகுவிடம்} அவன் {சொர்க்கம்}, “ஓ! மன்னா, நீயும் வெற்றியடைந்தாய்” என்றான்.(15)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இருவரும் (அந்தப் பிராமணரும், மன்னனும்) ஒருவருக்கொருவர் நன்மை செய்து, உலக நோக்கங்களில் இருந்து தங்கள் புலன்களை விலக்கிக் கொண்டனர்.(16) பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் ஆகிய உயிர்மூச்சுகளை {வாயுக்களைத்} தங்கள் இதயங்களில் {மனத்தில்} நிலைக்கச் செய்த அவர்கள், ஒன்றுகலந்த பிராணன் மற்றும் அபானனில் மனத்தை குவித்தார்கள்.(17) பிறகு அவர்கள் ஒன்று கலந்த அந்த இரு மூச்சுகளையும் வயிற்றில் நிறுத்தி, தங்கள் பார்வையை மூக்கு நுனியில் செலுத்தி, மெல்ல இரு புருவங்களுக்குக் கீழே அவற்றைச் செலுத்தினார்கள். பிறகு அவர்கள், தங்கள் மனத்தின் துணைகொண்டு அந்த இரு மூச்சுக்காற்றுகளையும் படிப்படியாகத் தங்கள் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.(18) முற்றிலும் செயலற்ற உடல்களுடன் அவர்கள் தங்கள் நிலைத்த பார்வையிலேயே மூழ்கியிருந்தார்கள் {லயித்திருந்தார்கள்}. தங்கள் ஆன்மாக்களின் கட்டுப்பாட்டைக் கொண்ட அவர்கள், மூளையில் தங்கள் ஆன்மாவை நிறுத்தினார்கள்.(19) அப்போது அந்த உயர் ஆன்ம பிராமணரின் மகுடத்தை {பிரம்மரந்தரஸ்தானத்தைப்} பிளந்து கொண்டு ஒரு காந்திமிக்க ஒளித்தழல் {ஜ்யோதியின் ஜ்வாலை} சொர்க்கத்திற்கு உயர்ந்தது.(20)

அனைத்து உயிரினங்களின் துன்ப ஓலங்களும் அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டன. அனைவராலும் துதிக்கப்பட்ட அந்தக் காந்தி {ஜ்யோதி}, பிரம்மனின் சுயத்துக்குள் நுழைந்தது.(21) அப்போது எதிர்கொண்டு சென்ற பெரும்பாட்டன் {பிரம்மன்}, ஒரு சாண் உயரமுள்ள வடிவத்தை ஏற்றிருந்த அந்தக் காந்தியிடம் {ஒளியிடம்}, “நல்வரவு” என்று சொல்லி,(22) மீண்டும் இந்த இனிய வார்த்தைகளைச் சொன்னான்: “உண்மையில், ஜபிப்பவர்களும் யோகிகளின் அதே கதியையே அடைவார்கள்.(23) (இங்கே திரண்டிருக்கும்) இவை அனைத்தையும் நேரடியாகப் பார்ப்பதே, யோகி அடையும் கதியாகும். ஜபிப்பவர்களைப் பொறுத்தவரையில், ஒரு வேறுபாடு இருக்கிறது. (அவர்கள் பூமியில் இருந்து புறப்பட்டதும்) பிரம்மனே எதிர்கொண்டு வந்து அழைக்கும் கௌரவம் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.(24) நீ என்னில் வசிப்பாயாக” என்றான். இவ்வாறு பேசிய பிரம்மன் மீண்டும் அந்த ஒளிக்கு நனவுநிலையைக் கொடுத்தான். உண்மையில், அந்தப் பிராமணர், கவலைகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு படைப்பாளனின் வாய்க்குள் நுழைந்தார்.(25)

அந்த ஏகாதிபதியும் {இக்ஷ்வாகுவும்}, அந்த முதன்மையான பிராமணரைப் போலவே அதே வழியில் தெய்வீகப் பெரும்பாட்டனுக்குள் நுழைந்தான்.(26) (அங்கே திரண்டிருந்த) தேவர்கள் அந்தத் தான்தோன்றியை {சுயம்புவை} வணங்கி, “ஜபிப்பவர்களுக்கு உண்மையில் மேன்மையான கதியே விதிக்கப்பட்டிருக்கிறது.(27) (நாங்கள் காண நீர் செய்திருக்கும்) இந்த முயற்சியானது ஜபிப்பவர்களுக்கானதாகும். எங்களைப் பொறுத்தவரையில், இதைக் காணவே நாங்கள் இங்கே வந்தோம். சமமானவர்களான இவ்விருவருக்கும் சம கௌரவத்தைக் கொடுத்து, சமகதியையே அவர்களுக்கு அளித்திருக்கிறீர்.(28) யோகிகள் மற்றும் ஜபிப்பவர்கள் அடையும் உயர்ந்த கதியை நாங்கள் இன்று கண்டோம். (இன்ப) உலகங்கள் அனைத்தையும் விஞ்சி செல்லும் இவர்கள் இருவரும் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல வல்லவர்களாக இருப்பார்கள்” என்றனர் {தேவர்கள்}.(29)

பிரம்மன், “எவன் பெரிய ஸ்மிருதியை (வேதங்களைப்) படிப்பானோ, எவன் முன்னதை {வேதங்களைப்} பின்தொடரும் (மனு மற்றும் எஞ்சிய) பிற மங்கலமான ஸ்மிருதிகளைப் படிப்பானோ, அவனும் இவ்வழியிலேயே என்னுடன் இதே உலகத்தை அடைவான்.(30) எவன் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருக்கிறானோ, அவனும் தன் மரணத்திற்குப்பிறகு இவ்வழியிலேயே எனக்குச் சொந்தமான உலகங்களை அடைவான்.(31) நான் செல்கிறேன். நீங்கள் அனைவரும் உங்களுடைய காரிய நிறைவேற்றத்திற்காக அவரவர் இடங்களுக்குச் செல்வீராக” என்றான் {பிரம்மன்}”.(32)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த முதன்மையான தேவன் அங்கேயே, அப்போதே மறைந்து போனான். முன்பே அவனிடம் விடைபெற்றிருந்தவர்களும் அங்கே திரண்டிருந்தவர்களுமான தேவர்கள் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.(33) ஓ! ஏகாதிபதி, அந்த உயர் ஆன்மாக்கள் அனைவரும் தர்மனால் கௌரவிக்கப்பட்டு, நன்கு நிறைவடைந்த இதயங்களுடன் அந்தப் பெரும் தேவனின் பின்னால் நடந்து சென்றனர்.(34) இவையே ஜபிப்பவர்களின் வெகுமதிகளும், இதுவே அவர்களுடைய கதியுமாகும். நான் கேட்டவாறே இவற்றை நான் உனக்கு விளக்கிவிட்டேன். ஓ! ஏகாதிபதி, நீ இன்னும் வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(35)

ஜீவாத்மா! – சாந்திபர்வம் பகுதி – 201-செயல், ஞானம், ஜீவன், பிரம்மம் குறித்துப் பிருஹஸ்பதிக்கும் மனுவுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “வேதங்கள் அனைத்திலும், (பல்வேறு} சடங்குகளிலும், நோன்புகளிலும் ஞானத்தைப் பிரதிபலிக்கும் யோகத்தின் கனிகள் {பயன்கள்} என்னென்ன? ஜீவனை எவ்வாறு அறியலாம்? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக உயிரினங்களின் தலைவரான மனுவுக்கும், பெரும் முனிவரான பிருஹஸ்பதிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் அடங்கிய பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில் தெய்வீக முனிவர்களில் முதன்மையானவரும், மனுவின் சீடருமான பிருஹஸ்பதி, தன் ஆசானை வணங்கி உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவரும், தலைவருமான அவரிடம்,(3) “(இந்த அண்டத்தின்) காரணம் என்ன? (வேள்விகள் மற்றும் பக்திச் செயல்பாடுகள் பிறவற்றையும் குறித்த) விதிகள் எங்கிருந்து பாய்ந்தன? கற்றோர் சொல்வது போன்ற ஞானத்துடன் பிணைக்கப்பட்ட கனிகள் என்னென்ன? ஓ! சிறப்புமிக்கவரே, வேதங்களாலேயே வெளிப்படுத்தப்பட இயலாதது எது? என்பவைக் குறித்து எனக்குச் சொல்வீராக[1].(4) வேள்விகள் மற்றும் அபரிமிதமான பசுக்கொடைகளின் மூலம், பொருள் அறிவியல் {அர்த்த சாஸ்திரம்}, வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றை அறிந்த அறிஞர்களால் புகழப்படும் அந்தக்கனிகள் என்னென்ன? அக்கனிகள் எங்கிருந்து எழுகின்றன? அவற்றை எங்கே காணலாம்?(5) பூமி, பூமிசார்ந்த பொருட்கள், காற்று, வானம், நீர்வாழ் உயிரினங்கள், நீர், சொர்க்கம், சொர்க்கவாசிகள் ஆகிய அனைத்தும் எங்கிருந்து எழுந்தன என்ற பழைய வரலாற்றை எனக்குச் சொல்வீராக.(6)மனிதன் எந்த ஞானத்தை அடைய முயல்கிறானோ அந்தப் பொருளை நோக்கியே அவனது உள்ளுணர்வுகள் செல்ல முனைகின்றன. அந்தப் பழைமையான, பரமனைக் {புராதானமான பரவஸ்துவை [பரம்பொருளைக்]} குறித்து எனக்கு எந்த அறிவும் இல்லை. அவனை {பரமனை} நோக்கிய உள்ளுணர்வுகளின் போலி வெளிப்பாடுகளில் இருந்து நான் எவ்வாறு என்னைக் காத்துக் கொள்ள முடியும்[2].(7) ரிக்குகள், சாமங்கள், யஜுஸ்கள், சந்தங்கள் {சந்தஸ்கள்}, வானியல் {நக்ஷத்ரவித்யை}, நிருக்தம், இலக்கணம் {வ்யாகரணம்}, சங்கல்பம் {கல்பஸூத்ரங்கள்}, சிக்ஷை ஆகிய அனைத்தையும் நான் கற்றிருக்கிறேன். ஆனால் ஒவ்வொன்றின் தொகைக்குள்ளும் நுழையும் பெரும்பூதங்களின் (ஐந்து அடிப்படை பூதங்களின்) இயல்பைக் குறித்த அறிவு எனக்கில்லை[3].(8) நான் கேட்ட அனைத்தையும், எளிய கூற்றுகளை மட்டுமே பயன்படுத்தி, உரிச்சொற்கள், அல்லது அடைமொழிகளைப் பிரித்து வேறுபடுத்தி எனக்குச் சொல்வீராக[4]. ஞானத்தின் கனிகள் என்னென்ன என்பதையும், வேள்வி மற்றும் பிற அறச்சடங்குகளில் பிணைக்கப்பட்ட கனிகள் என்னென்ன என்பதையும் எனக்குச் சொல்வீராக. ஒருவனின் உடலில் இருந்து ஜீவன் {ஜீவாத்மா} எவ்வாறு வெளியேறுகிறது என்பதையும் அது மற்றொன்றில் எவ்வாறு அடைகிறது என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார் {பிருஹஸ்பதி}.(9)மனு {பிருகஸ்பதியிடம்}, “எது ஒருவனுக்கு ஏற்புடையதோ, அதுவே அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதே போலவே எது ஒருவனுக்கு ஏற்பில்லையோ அதுவே அவனது துன்பமாகச் சொல்லப்படுகிறது. “இதன் மூலம் நான் மகிழ்ச்சியை அடைந்து துன்பத்தை விலக்குவேன்” என்ற உணர்விலிருந்தே அறச்சடங்குகள் அனைத்தும் பாய்கின்றன.(10) எனினும், ஞானத்தை அடைவதற்கான முயற்சிகளோ, இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டையும் தவிர்ப்பதற்கான உணர்வில் இருந்து எழுகின்றன[5].(11) வேதங்களில் தோன்றும் வேள்விகள் மற்றும் பிற சடங்குகள் குறித்த விதிகள் அனைத்தும் ஆசையுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றன. எனினும், எவன் ஆசையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறானோ அவனே பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான். மகிழ்ச்சியை அடையும் ஆசையில், பல்வேறு வகைச் செயற்பாதைகளில் நடக்கும் மனிதனோ நரகத்தையே அடைகிறான்[6]” என்றார் {மனு}.(12)பிருஹஸ்பதி {மனுவிடம்}, “இன்பத்தில் முடியும் ஏற்புடையதை அடைவதிலும், துன்பத்தைக் கொடுக்கும் ஏற்பில்லாததைத் தவிர்ப்பதிலும் மனிதர்கள் ஆர்வம் செலுத்துகின்றனர். மேலும், இத்தகைய அடைதலும், இத்தகைய தவர்த்தலும் செயல்களாலேயே நிறைவேற்றப்படுகின்றன” என்றார்[7].(13)மனு {பிருஹஸ்பதியிடம்}, “ஒருவன், செயல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலமே பிரம்மத்திற்குள் நுழைகிறான். செயல்கள் {வேள்விகள்} குறித்த விதிகளும் இந்தக் கதிக்காகத்தான் பாய்ந்தன[8]. செயல்களைக் குறித்த விதிகள், ஆசையில் இருந்து விடுபடாதோரின் இதயங்களை மட்டுமே மயக்கும். (ஏற்கனவே சொன்னது போல) ஒருவன் செயல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலம் உயர்ந்த நிலையை {பரமனான வஸ்துவை} அடைகிறான்.(14) இன்பநிலையில் (விடுதலையில் {முக்தியில்}) விருப்பம் கொண்ட ஒருவன், அறச்செயல்களைச் செய்து, ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செயல்களின் மூலம் (பற்றுகளில் இருந்து) தூய்மையடைந்து, இறுதியாகப் பெரும் காந்தியை வெல்கிறான். ஒருவன் தன்னைச் செயல்களில் இருந்து விடுவித்துக் கொள்வதன் மூலம், அந்தச் செயல்கள் கொடுக்கும் வெகுமதிக்கும் மேலான உயர்ந்த கதியான பிரம்மத்தை அடைகிறான்.(15) உயிரினங்கள் அனைத்தும் மனம் மற்றும் செயலாலேயே {கர்மத்தாலேயே} உண்டாக்கப்படுகின்றன. மேலும் இவை இரண்டே சிறந்த வழிகளாக அனைவராலும் துதிக்கப்படுகின்றன. புறச் செயல்கள் நிலையானவையும், நிலையற்றவையுமான கனிகளை உண்டாக்குகின்றன. நிலையான கனிகளை அடைவதற்கு, மனத்தால் கனிகளைக் கைவிடுவதைவிட வேறேதும் வழி இல்லை[9].(16) இரவு கடந்ததும், கண்ணானது, தன்னிலுள்ள இருள் திரை விலகி, தன் உடைமையாளரைத் தன் சக்தியின் மூலமே வழிநடத்துவதைப் போல, புத்தியானது ஞானத்தை அடையும்போது, தவிர்க்கத்தக்க தீமைகள் அனைத்தையும் காண்பதில் வெல்கிறது.(17)பாம்புகள், கூர்முனை குசப்புற்கள் {தர்ப்பைகள்} ஆகியவை வழியில் கிடப்பதைக் காணும்போது மனிதர்கள் அவற்றைத் தவிர்க்கிறார்கள். சிலர் அவற்றை மிதித்தாலும், அல்லது அவற்றில் விழுந்தாலும் அஃதை அறியாமையின் மூலமே செய்கிறார்கள். (அந்த அறியாமையைத் தவிர்த்து) ஞானக் கனிகளின் மேன்மையைப் பார்.(18) முறையாகச் சொல்லப்படும் மந்திரங்கள், வேள்விகள், தக்ஷிணை என்றழைக்கப்படும் கொடைகள், உணவு தானம், (தெய்வீகத் தியானத்திற்கான) மனக்குவிப்பு ஆகிய ஐந்து செயல்களே கனிகளை உண்டாக்கவல்லவை என்று சொல்லப்படுகின்றனவே தவிர வேறு எதுவும் {அவ்வாறு சொல்லப்படுவது} இல்லை.(19) செயல்கள் (மூன்று) குணங்களையே (சத்வம், ரஜஸ், தமஸ் {ஆகிய மூன்று குணங்களையே}) தங்கள் ஆன்மாவாகக் கொண்டிருக்கின்றன. இதை வேதங்கள் சொல்கின்றன. (வேதங்கள் மந்திரங்களைக் கொண்டிருக்கின்றன). எனவே, மந்திரங்களின் மூலமே செயல்கள் நிறைவேற்றப்படுவதால், மந்திரங்களுக்கும் அதே மூன்று குணங்கள் இருக்கின்றன. சடங்கும் அதே மூன்று குணங்களையே கொண்டிருக்கிறது. செயலின் கனிகள் மனத்தைச் சார்ந்திருக்கின்றன. ஜீவனே அந்தக் கனிகளை அனுபவிக்கிறது[10].(20)சிறந்த வகைகளிலான ஒலி, வடிவம், சுவை, தீண்டல், மணம் ஆகிய அனைத்தும் செயல் உலகத்தில் {கர்மலோகத்தில்} (சொர்க்கத்தில்) அடையப்படுவதால் அவையே செயல்களின் கனிகளாக இருக்கின்றன. எனினும் ஞானத்தின் கனிகளைப் பொறுத்தவரையில், மனிதன் அவற்றை மரணத்திற்கு முன்பே இம்மையிலேயே அடைகிறான்.(21) உடல் மூலம் செய்யப்படும் எந்தச் செயல்களுக்குமான கனிகளையும் ஒருவன் உடல் சார்ந்த நிலையிலேயே அனுபவிப்பான். உண்மையில், மகிழ்ச்சி பொதிந்த கட்டுமானமான உடல், துன்பம் பொதிந்த ஒரு கட்டுமானமுமாகும்[11].(22) சொற்களால் நிறைவேற்றப்படும் எந்தச் செயல்களின் கனிகளும், பேசப்படும் சொற்கள் என்ற நிலையிலேயே அனுபவிக்கப்படும். அதே போல, மனத்தால் நிறைவேற்றப்பட்ட எந்தச் செயல்களின் கனிகளும், விடுபடாத நிலையிலுள்ள மனத்தினாலேயே அனுபவிக்கப்படுகின்றன.(23) செயல்களின் கனிகளில் பற்றுடன் ஒரு மனிதன் செய்யும் நன்மையோ, தீமையோவான எவ்வகைச் செயல்களின் கனிகளையும் அதனதன் பண்பியல்புகளுடனே அவன் அனுபவிக்கிறான்.(24) நீரோட்டத்திற்கு எதிராகச் செல்லும் மீன்களைப் போல, முற்பிறவியின் செயல்கள், அவற்றைச் செய்தவனை அடைகின்றன. ஜீவன் {ஜீவாத்மா} தன் நற்செயல்களுக்காக இன்பத்தையும், தீச்செயல்களுக்காகத் துன்பத்தையும் அனுபவிக்கிறது.(25)எவனிலிருந்து {எதனிலிருந்து}, இந்த அண்டம் எழுந்ததோ, எவனை அறிவதன் மூலம் தூய்மையான ஆன்மா கொண்ட மனிதர்கள் இவ்வுலகைக் கடக்கிறார்களோ, வேத மந்திரங்களும், வார்த்தைகளும் எவனை வெளிப்படுத்துகின்றனவோ, அவனை {அஃதை} இப்போது நான் சுட்டிக்காட்டுவேன். உயர்ந்தவற்றில் உயர்வான அவனைக் குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக.(26) பல்வேறு வகைச் சுவை, மணம், தீண்டல், ஒலி மற்றும் வடிவங்களில் இருந்து விடுபட்டவனான அவன், புலன்களுக்குப் புலப்படாதவனும், வெளிப்படாதவனும், நிறமற்றவனும், ஒருவனாக இருப்பவனுமாவான். அவனே, ஐந்து வகைப் பொருட்களைத் தன் உயிரினங்களாக {ஜீவன்களாகப்} படைத்திருக்கிறான்[12].(27) அவன் ஆணோ, பெண்ணோ, அலியோ அல்லன். இருப்பாகவோ, இல்லாமையாகவோ, இருந்தும் இல்லாமையாகவோ அவன் இல்லை[13]பிரம்மத்தை அறிந்தவர்களால் மட்டுமே அவனை {பரம்பொருளைக்} காண முடியும். அவன் சிதைவில்லாதவனாவான்” {என்றார் மனு}.(28)

கர்மக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 202-பரம்பொருளுக்கும், ஐம்பூதங்களுக்குமிடையில் உள்ள உறவு; புலன்கள் மற்றும் புலன்நுகர் பொருட்களுக்கிடையில் உள்ள உறவும் அவற்றின் செயல்பாடுகளும்; ஆன்மாவின் தன்மையை உணரும் வழி; காரணக் காரியங்கள்; கர்மவினைகளின் தொடர்ச்சி; ஆன்மா உடல்களை உடையாகப் பயன்படுத்தல்; உடலின் அழிவுக்குப் பிறகு ஐம்பூதங்களுடன் கலக்கும் முறை; புதிய உடல் அடையும் நன்மை, தீமைகளின் தன்மைகள் ஆகியவற்றை பரத்வாஜருக்குச் சொன்ன மனு…

மனு {பரத்வாஜரிடம்}, “அழிவற்றவனும், சிதைவற்றவனுமான அவனிடமிருந்து {பரம்பொருளிடமிருந்து} முதலில் வெளி {ஆகாயம்} உண்டானது; வெளியில் இருந்து காற்று {வாயு} வந்தது; காற்றில் இருந்து ஒளி வந்தது; ஒளியில் இருந்து நீர் வந்தது. நீரில் இருந்து இந்த அண்டம் உண்டானது; அண்டத்திலிருந்து அதில் தோன்றும் அனைத்துப் பொருட்களும் உண்டாகின.(1) (பிரளயத்திற்குப் பிறகு), (உலகம் சார்ந்த) அனைத்துப் பொருட்களும் முதலில் நீருக்குள் நுழையும், அங்கிருந்து ஒளி அல்லது வெப்பத்திற்கும், அங்கிருந்து காற்றுக்கும் {வாயுவுக்கும்}, அங்கிருந்து வெளிக்குள்ளும் {ஆகாயத்திற்குள்ளும்} நுழையும். விடுதலையை {முக்தியை} நாடுவோர் வெளிக்கு {ஆகாயத்துக்குத்} திரும்ப வேண்டியதில்லை. மறுபுறம் அவர்கள் பிரம்மத்தை அடைகிறார்கள்.(2) முக்தியின் புகலிடமான பிரம்மம் வெப்பமானதோ, குளிந்ததோ, மென்மையானதோ, கடுமையானதோ, புளிப்பானதோ, துவர்ப்பானதோ, இனிமையானதோ, கசப்பானதோ கிடையாது. அவன் {பிரம்மத்தை அடைந்தவன்} ஒலியையோ, மணத்தையோ, வடிவத்தையோ கொண்டிருப்பதில்லை. அவன் இவை அனைத்தையும் விஞ்சியவனாக, அளவுகள் அற்றவனாக இருக்கிறான்.(3) தோலானது தீண்டலை உணர்கிறது; நா சுவையையும், மூக்கு மணத்தையும், காதுகள் ஒலிகளையும், கண்கள் வடிவங்களையும் உணர்கின்றன. அத்யாத்மாவை {ஆன்ம யோகத்தை} அறியாத மனிதர்கள், இவற்றைத் தாண்டிய எதையும் காண மாட்டார்கள்.(4) சுவைகளில் இருந்து நாவையும், மணங்களில் இருந்து மூக்கையும், ஒலிகளில் இருந்து காதுகளையும், வடிவங்களில் இருந்து கண்களையும், தீண்டலில் இருந்து தோலையும் விலக்கிய ஒருவனே, (புலன்கள் மற்றும் மனத்தில் இருந்து விடுபட்ட) சுயத்தின் {ஆன்மாவின்} பண்பியல்புகளைக் {ஆத்மஸ்வபாவத்தைக்} காண்பான்.(5)

செயல், செயலுக்கான பொருள், இடம், செயலின் நேரம், விருப்பங்கள், இன்பம் மற்றும் துன்பம் குறித்த மனச்சார்புகள் ஆகியவற்றில் செயல்படுபவனின் காரணங்களாக இருப்பவையே சுயம் (அல்லது ஆத்மா) என்று அழைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது[1].(6) எது அனைத்தையும் ஊடுருவி {வ்யாபகமானாசுவரரூபமோ} இருக்குமோ, எது (உயிரினங்களின் வடிவை ஏற்று) அனைத்தையும் செய்யுமோ, எது மந்திரங்களை {வேதங்களைப்} போல அண்டத்தில் நிலைத்திருக்குமோ[2], எது அனைத்திற்கும் காரணமாக இருக்குமோ, எது உயர்ந்ததில் உயர்ந்ததாக இருக்குமோ, எது இரண்டாவதாக ஒன்றில்லாமல் ஒன்றாகவே இருந்து அனைத்தையும் செய்யுமோ அதுவே காரணமாகும். வேறு அனைத்தும் விளைவுகளேயாகும் {காரியங்கள் ஆகும்}.(7) ஒரு மனிதனால் செய்யப்படும் செயல்களின் விளைவால் அவன் அடையும் விளைவுகளில் நன்மையும், தீமையும் ஒன்றாக ஒற்றுமையுடன் வசிக்கின்றன. உண்மையில், செயல்களில் பிறக்கும் நன்மை மற்றும் தீமையின் கனிகள் {பலன்கள்}, உடலில் வசிக்கும் ஞானத்தைப் போலவே தங்களுக்கு {அந்தப் பலன்களுக்குப்} புகலிடமான உயிரினங்களின் உடல்களில் ஒன்றாகவே வசிக்கின்றன[3].(8) தூண்டப்பட்ட விளக்கு எரியும்போது, தன் முன்னே இருக்கும் பிற பொருட்களைக் காணச் செய்வதைப் போலவே, உயர்ந்த மரங்களில் நிறுவப்பட்ட விளக்குகளைப் போன்றவையான ஐம்புலன்களும், அறிவால் தூண்டப்படும்போது தங்கள் தங்களுக்குரிய பொருட்களைக் கண்டடைகின்றன[4].(9) ஒரு மன்னனின் பல்வேறு அமைச்சர்கள் எவ்வாறு ஒன்றாகச் சேர்ந்து அவனுக்கு ஆலோசனை வழங்குகிறார்களோ, அவ்வாறே உடலில் உள்ள ஐம்புலன்களும் அறிவுக்குப் பணிவிடை செய்கின்றன. அறிவே அவை அனைத்திலும் மேன்மையானதாகும்.(10) நெருப்பின் தழல்கள், காற்றோட்டம், சூரியனின் கதிர்கள், ஆறுகளின் நீர்கள் எவ்வாறு மீண்டும் மீண்டும் சென்று வருகின்றனவோ, அவ்வாறே உடல் கொண்ட உயிரினங்களின் உடல்களும் மீண்டும் மீண்டும் சென்று வருகின்றன {இறந்து பிறக்கின்றன[5].(11)ஒரு மனிதன் ஒரு கோடரியை எடுத்து ஒரு மரத்துண்டை வெட்டினாலும் கூட, புகையையோ, நெருப்பையோ காணாததைப் போலவே, ஒரு மனிதனின் கரங்கள், கால்கள் மற்றும் வயிற்றை வெட்டிப் பிரித்தாலும், வயிறு, கரங்கள் மற்றும் கால்களுக்கிடையில் உள்ள பொதுவான எந்த அறிவுக் கோட்பாட்டையும் {ஆன்மாவையும்} அவன் காணமாட்டான்[6].(12) மரத்தை ஒன்றோடொன்று உரசுவதால், ஒரு மனிதன் புகையையும், நெருப்பையும் காண்பதைப் போலவே, நன்கு செலுத்தப்பட்ட புத்தியையும், ஞானத்தையும் கொண்ட மனிதன், (யோகத்தின் மூலம்) புலன்களையும், ஆன்மாவையும் ஒருங்கிணைத்து, தன் இயல்பின் இருப்பில் இருக்கும் பரமாத்மாவைக் காணலாம்[7].(13) ஒருவன் கனவுக்கு மத்தியல், தன் உடலானது தன்னில் இருந்து வேறுபட்டுத் தரையில் கிடப்பதைக் காண்பதைப் போலவே, ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியுடன் கூடிய மனிதன், (தான் இறந்த பிறகு) தன் உடலைக் கண்ட பிறகு, வேறொரு வடிவிற்குள் செல்கிறான்.(14) பிறப்பு, வளர்ச்சி, சிதைவு மற்றும் அழிவு ஆகியவற்றுக்கு ஆன்மா ஒரு போதும் ஆட்படுவதில்லை. வாழ்வின் விளைவுகளுடன் கூடிய செயல்களின் விளைவால், உடலை ஆடையாக உடுத்தியிருக்கும் ஆன்மாவானது, (அசைவை இழந்து), பிறரால் பார்க்கப்படாதவாறு இந்த உடலில் இருந்து மற்றொன்றுக்குக் கடந்து செல்கிறது.(15)ஆன்மாவின் வடிவை ஒருவராலும் தங்கள் கண்களால் காண முடியாது. மேலும் ஆன்மாவானது, எவரின் தீண்டலுக்கும் ஆட்பட முடியாது. ஆன்மாவானது அவற்றை (புலன்களைக்) கொண்டு எந்தச் செயலையும் செய்யாது. புலன்கள் ஆன்மாவை அணுகாது. எனினும், ஆன்மாவானது அவை அனைத்தையும் உணர்கிறது.(16) பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு முன்னால் சுடர்மிக்க நெருப்புக்குள் வைக்கப்படும் எதுவும், அதில் உள்ள ஒளி மற்றும் வெப்பத்தின் விளைவால், வேறு எந்த வண்ணத்தையோ, இயல்பையோ ஏற்காமல் ஒரு குறிப்பிட்ட நிறத்தை ஏற்பதைப் போலவே, ஆன்மாவின் வடிவும் அதன் நிறத்தை உடலில் இருந்து எடுப்பதாகத் தெரிகிறது.(17) இந்த வகையிலேயே, உடலைக் கைவிடும் மனிதனும், எவராலும் பார்க்கமுடியாதவாறு மற்றொன்றில் நுழைகிறான். உண்மையில், தன் உடலை அடிப்படையான (ஐந்து) பெரும்பூதங்களில் கைவிடும் அவன், அதே போல (ஐந்து) பூதங்களால் செய்யப்பட்ட ஒரு வடிவை ஏற்கிறான்.(18) உடல் கொண்ட உயிரினமானது (தன் உடல் அழிந்ததும்), தன் உடலில் உள்ள ஒவ்வொரு குறிப்பிட்ட பூதத்தையும், (தன் உடலுக்கு வெளியே உள்ள) தன் மெய்க்கு இயல்பான குறிப்பிட்ட பூதத்தில் கலந்து வெளி {ஆகாயம்}, காற்று {வாயு}, நெருப்பு {அக்னி}, நீர் மற்றும் பூமி {நிலம்} ஆகியவற்றில் நுழைகிறது. பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவையும், (தங்கள் செயல்பாட்டுக்காக) ஐந்து பூதங்களைச் சார்ந்திருப்பவையுமான புலன்களும், அதனதனுக்குரிய பூதங்களில் நுழைகின்றன.(19)

காதானது தன் திறனை வெளியில் {ஆகாயத்தில்} இருந்து பெறுகிறது; மூக்கானது மணத்தின் உணர்வைப் பூமியில் இருந்து பெறுகிறது. கண்ணின் தன்மையான வடிவமானது, ஒளி அல்லது நெருப்பின் விளைவாகும். நெருப்பு அல்லது வெப்பமானது, நீரின் காரணத்தைச் சார்ந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறுது. சுவையைத் தன் தன்மையாகக் கொண்ட நாக்கானது, நீரில் கலக்கிறது. தீண்டலைத் தன் தன்மையாகக் கொண்ட தோலானது, அதன் இயல்பான காற்றில் {வாயுவில்} தொலைந்து போகிறது.(20) (ஒலி உள்ளிட்ட) ஐந்து வகைத் தன்மைகளும் (அடிப்படையான ஐந்து பூதங்களான) (ஐந்து) பேருயிரிகளில் வசிக்கின்றன. (வெளி உள்ளிட்ட) ஐந்து வகைப் புலன்நுகர் பொருட்களும், (ஐந்து) புலன்களில் வசிக்கின்றன. மேலும் (ஐந்து வகைத் தன்மைகள், ஐந்து வகைப் பூதங்கள், ஐம்புலன்கள் ஆகிய) இவை மனத்தின் வழிகாட்டுதலைப் பின்தொடர்கின்றன. மனமோ, புத்தியின் வழிகாட்டுதலைப் பின்தொடர்கிறது, புத்தியோ அசுத்தமற்றதும், உண்மையானதும் எதுவோ, அதன் (பரமாத்மாவின் {ஆத்மாவின்}) வழிகாட்டுதலைப் பின்தொடர்கிறது.(21) செயலைச் செய்தவன், தன் முற்பிறவியில் தான் செய்த செயல்கள் அனைத்திற்கு ஏற்பவும் தன் புதிய உடலின் மூலம் நன்மையான மற்றும் தீமையான செயல்கள் அனைத்தையும் பெறுகிறான். இப்பிறவியில் செய்யப்படும் செயல்கள் மற்றும் அடுத்தடுத்த பிறவிகளில் செய்யப்படும் செயல்கள் அனைத்தும், நல்ல நீரோட்டத்தில் {பிரவாஹத்தில்} அதற்கு இணக்கமாகக் கடந்து செல்லும் நீர் வாழ் விலங்குகளைப் போலவே மனத்தைப் பின்தொடர்கின்றன.(22) வேகமாக நகர்வதும், ஓய்வற்றதுமான பொருள் காணப்படுவதைப் போல, (கண்ணாடியின் மூலம் காணப்படும்) நுண்ணியப் பொருள் பெரும் அளவுகளில் தோன்றுவதைப் போல, (வேறு வகையில் காணமுடியாத) தன் முகத்தை ஒரு மனிதனுக்கு நிலைக்கண்ணாடி காட்டுவதைப் போல, ஆன்மாவும் (நுண்ணியதாகவும், புலப்படாததாகவும் இருப்பினும்) புத்தியின் உணர்வுப் பொருளாகிறது” என்றார் {மனு}[8].(23)

கர்மப்பயன்! – சாந்திபர்வம் பகுதி – 203-புலப்படாததாக இருக்கும் ஆன்மாவின் இருப்பையும், எவ்வாறு ஆன்மாவை உணரலாம் என்பதையும் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு…

மனு {பிருஹஸ்பதியிடம்}, “புலன்களுடன் ஒன்றிணையும் மனம், கடந்தகாலத்தில் பெறப்பட்ட பொருட்களின் மனப்பதிவுகளை நீண்ட காலத்திற்குப் பிறகு நினைவுகூர்கிறது. புலன்கள் அனைத்தும் (தங்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளில் இருந்து) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டால்,[1] புத்தியின் வடிவில் உள்ள உயர்ந்தது (ஆன்மா), தன் உண்மையான இயல்பில் நீடித்திருக்கிறது.(1) (அத்தகைய நேரத்தில்) ஆன்மாவானது, புலன்நுகர் பொருட்களின் ஒருங்கமைவையோ, முரணையோ கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளாமல், அனைத்துத் திசைகளில் இருந்தும் அவற்றைத் திரட்டி ஒன்றாகப் பற்றி வைக்கும்போது, பொருத்தமற்ற பொருட்கள் அனைத்திற்கும் மத்தியில் அஃது அவசியம் உலவ நேர்கிறது. எனவே, அஃது (அமைதியான) சாட்சியாக இருக்கிறது. உடலுக்குள் பொதிந்திருக்கும் ஆன்மாவானது, தனிப்பட்ட சுதந்திர இருப்பாக இருக்கிறது[2].(2)ரஜஸ், தமஸ், மற்றும் மூன்றாவதாகச் சத்வம் ஆகியவை {குணங்கள்} இருக்கின்றன. மேலும் புத்திக்கு, விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் என்று மூன்று நிலைகளும் இருக்கின்றன. ஆன்மாவானது, அந்த நிலைகள், முதலில் குறிப்பிட்டப்பட்ட மூன்று வகைக் குணங்களின் இயல்புகள், முரண்பட்டவையான இன்பங்கள் மற்றும் துன்பங்கள் ஆகியவற்றைக் குறித்த அறிவைப் பெற்றிருக்கிறது[3]. ஆன்மாவானது, மரத்துண்டில் உள்ள நெருப்பில் நுழையும் காற்றைப் போலப் புலன்களுக்குள் நுழைகிறது.(3) ஒருவன் தன் கண்ணால் ஆன்மாவின் வடிவத்தைக் காணவோ, புலன்களுக்கு மத்தியில் உள்ள தீண்டலின் புலனுணர்வால் அதை {ஆன்மாவை} உணரவோ முடியாது. மேலும் ஆன்மாவானது, காதால் உணரப்படும் பொருளாகவும் இல்லை. எனினும், ஸ்ருதிகளின் துணை மற்றும் ஞானியரின் போதனைகள் மூலம் அதை {ஆன்மாவைக்} காணலாம். புலன்களைப் பொறுத்தவரையில், அதை {ஆன்மாவைத்} தொடரும் குறிப்பிட்ட புலனானது, தன் உணர்வை இழந்து, புலன் என்ற தன் இருப்பையே இழக்கிறது.(4)புலன்களால் தங்கள் தங்களுக்குரிய வடிவங்களைத் தாங்களே உணர முடியாது. ஆன்மாவானது (அறிவதையும், அறியப்படுவதையும உணர்வதால்) அனைத்தையும் அறிந்ததாக இருக்கிறது. அஃது அனைத்துப் பொருட்களையும் பார்க்கிறது. அனைத்தையும் அறிந்ததாக இருப்பதால், (முன்னர்ச் சொன்னது போலப் புலன்களால் உணரப்படாத) ஆன்மாவே புலன்களைக் காண்கிறது.(5) இமய மலையின் மறு பக்கத்தை யாரும் பார்த்ததில்லை, அதே போலச் சந்திர வட்டிலின் பின்புறத்தையும் யாரும் பார்த்ததில்லை. எனினும் அவை இல்லை என்று சொல்ல முடியாது.(6) அதேபோலவே, புலன்களால் உணரப்படாததாக இருப்பினும், அனைத்து உயிரினங்களிலும் வசிப்பதும், நுட்பமானதும், அறிவையே தன் சாரமாகக் கொண்டதுமான ஆன்மா இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது.(7)

நிலவின் களங்கங்களின் வடிவில் உலகம் பிரதிபலிக்கப்படுவதையே மக்கள் பார்க்கிறார்கள். அவர்கள் பார்த்தாலும் கூட, உலகமே அங்கே பிரதிபலிக்கப்படுகிறது என்பதை அறிவதில்லை. ஆன்ம அறிவும் அவ்வாறானதே ஆகும். அந்த அறிவு தானாகவே வர வேண்டும். ஆன்மாவானது ஆன்மாவையே சார்ந்திருக்கிறது.(8) பிறப்புக்கு முன்பும், இறப்புக்குப் பிறகும் புலப்படக்கூடிய பொருட்களின் வடிவமற்ற தன்மையைச் சிந்தித்த ஞானிகள், மேலீடான வடிவங்களாக இருக்கும் வடிவமற்ற பொருட்களைப் புத்தியின் துணையால் பார்க்கின்றனர். சூரியனின் நகர்வு காணப்படவில்லையெனினும், அஃது எழுவதையும் மறைவதையும் கண்டு, சூரியனுக்கு அசைவிருக்கிது என்று தீர்மானிக்கப்படுகிறது[4].(9) அதே போலவே, ஞானமும் கல்வியும் கொண்டவர்கள், ஆன்மாவானது எட்ட முடியாத தொலைவில் இருந்தாலும், நுண்ணறிவு {புத்தி} எனும் விளக்கின் உதவியுடன் அதை {ஆன்மாவைக்} கண்டு, அருகில் உள்ள ஐந்து வகைப் பூதங்களையும் பிரம்மத்துடன் கலக்க முனைகிறார்கள்.(10)உண்மையில், வழிமுறைகளைச் செயல்படுத்தாமல் எந்த நோக்கமும் நிறைவேற்றப்பட முடியாது. மீனவன், இழைகளால் செய்யப்பட்ட வலைகளின் வழியின் மூலமே மீனைப் பிடிக்கிறான்.(11) விலங்குகளை வழிமுறைகளாகக் கொண்டே பிற விலங்குகள் கைப்பற்றப்படுகின்றன. பறவைகளை வழிமுறைகளாகக் கொண்டே பிற பறவைகள் பிடிக்கப்படுகின்றன. யானைகளை நியமித்தே பிற யானைகள் பிடிக்கப்படுகின்றன. இவ்வழியில் ஆன்மாவை அறிவுக் கோட்பாட்டின் மூலம் உணரலாம்.(12) பாம்பின் கால்களைப் பாம்பே அறியும் என நாம் கேள்விப்படுகிறோம். அந்த வகையிலேயே ஒருவன், மொத்த உடலுக்குள் நுட்பமான வடிவத்தில் வசிக்கும் ஆன்மாவைத் தன் அறிவின் மூலம் காண்கிறான்.(13) மக்கள் தங்கள் புலன்களின் மூலம் புலன்களை அறிவதில்லை. அதேபோல, உயர்ந்ததான ஆன்மாவை வெறும் உயர்ந்த புத்தியால் மட்டுமே காண முடியாது. (14)

தேய்பிறையின் பதினைந்தாவது நாள் {புது நிலவின் / அமாவாசை} இரவில் நிலவு மறைக்கப்படுவதால் அதைக் காண முடியாது. எனினும், அதற்கு அழிவு ஏற்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது. உடலில் வசிக்கும் ஆன்மாவின் வழக்கும் அவ்வாறானது ஆகும்.(15) தேய்பிறையின் பதினைந்தாவது நாளில், நிலவின் மொத்த உடலும் புலப்படாத் தன்மையை அடைகிறது. அதே வகையிலேயே உடலில் இருந்து விடுபட்ட ஆன்மாவையும் உணர முடியாது.(16) நிலவானது, ஆகாயத்தின் மற்றொரு புள்ளிக்கு நகர்ந்ததும், மீண்டும் ஒளிரத்தொடங்குவதைப் போலவே, ஆன்மாவும் புதிய உடலை அடைந்து, மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறது.(17) நிலவின் பிறப்பு, வளர்ச்சி, மறைவு ஆகிய அனைத்தும், கண்களால் நேரடியாக உணரப்படுகிறது. எனினும், இந்தத் தோற்றப்பாடுகள், அந்த ஒளிக்கோளின் மொத்த வடிவுக்கும் பொருத்தமாக இருக்கின்றன. அவை ஆன்மாவின் குணங்களைப் போன்றவையல்ல.(18) தேய்பிறையின் பதினைந்தாம் நாளில் {அமாவாசையில்} நிலவு மறைந்து, மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போது, மறைந்து போன அதே ஒளிக்கோளாகவே அது கருதப்படுகிறது. அந்த வகையிலேயே, பிறப்பு, வளர்ச்சி, வயது ஆகிய மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருந்தாலும் ஒரு மனிதன் தன் அடையாளத்தில் ஐயங்கொள்ளாத வகையில் அதே நபராகவே கருதப்படுவான்.(19)

ராகு எவ்வாறு நிலவை அணுகுகிறது, விடுகிறது என்பது தெளிவாகக் காணப்படுவதில்லை. அந்த வகையிலேயே ஆன்மாவும், ஒருவனுடைய உடலை விட்டுப் பிரிவதையும், மற்றொன்றுக்குள் நுழையவதையும் காண முடியாது.(20) சூரியன் அல்லது நிலவுடன் இருக்கும்போது மட்டுமே ராகு புலப்படுகிறது. அதே போலவே ஆன்மாவும், உடலில் இருக்கும்போது மட்டுமே உணரப்படும் பொருளாக இருக்கிறது.(21) சூரியன் அல்லது சந்திரனிலிருந்து விடுபட்டதும் ராகுவைக் காண முடியாது. அதே போலவே, ஆன்மாவும் உடலைவிட்டு அகன்றதும் காணப்பட முடியாது.(22) மேலும், தேய்பிறையின் பதினைந்தாம் நாளில் {அமாவாசையில்} சந்திரன் மறையும்போது, நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்களால் அது கைவிடப்படாதிருப்பதைப் போல, ஆன்மாவானதும் உடலில் இருந்து பிரிந்தாலும், அந்த உடலால் அடைந்த செயல்களின் கனிகளை {கர்மப்பலன்களைக்} கைவிடுவதில்லை” என்றார் {மனு}.(23)

ஆன்மவுணர்வு! – சாந்திபர்வம் பகுதி – 204- எவ்வாறு ஆன்மாவை உணரலாம் என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு…

மனு {பிரஹஸ்பதியிடம்}, “இந்த வெளிப்பாடு (உடல்) {ஸ்தூலசரீரம்}, கனவின்போது (செயலின்றி) கிடந்து, ஜீவனானது {ஸூக்ஷமசரீரமானது} முன்னதிலிருந்து {உடலான ஸ்தூலசரீரத்திலிருந்து} தன்னை விடுவித்துக் கொண்டு நுண்ணிய வடிவில் நடப்பதைப் போல, ஆழ்ந்த உறக்கம் (அல்லது மரணம்) என்றழைக்கப்படும் நிலையில், புலன்கள் அனைத்துடன் கூடிய அந்த நுண்ணிய வடிவம் {ஜீவன் / சூக்ஷமசரீரம்} செயலற்றுப் போகவும், புத்தியானது அதனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விழிப்புடன் இருக்கிறது. இவ்வாறு இருப்பு மற்றும் இல்லாமை {முக்தி} ஆகிய நிலைகளில நேர்கிறது[1].(1) தெளிந்த நீரில் கண்ணால் வடிவச் சாயல்கள் {பிரதிபிம்பங்கள்} காணப்படுவதைப் போல, புலன்கள் கலக்கமடையாமல் இருந்தால், ஆன்மாவானது புத்தியால் காணப்படவல்லதாக இருக்கிறது.(2) எனினும், அந்நீர் கலங்கினால், அதன் அருகில் இருக்கும் மனிதனால் அந்த வடிவத்தோற்றங்களைக் காண முடியாது. அதைப் போலவே, புலன்கள் கலக்கமடைந்தால், ஆன்மாவைப் புத்தியால் காண முடியாது.(3) அறியாமையானது மாயையைத் தோற்றுவிக்கிறது. மாயை மனத்தைப் பாதிக்கிறது. மனமானது, பழுதாகும்போது, மனத்தையே தங்கள் புகலிடமாகக் கொண்ட ஐம்புலன்களும் பழுதடைகின்றன.(4) அறியாமையால் மடக்கப்பட்டு, உலகம் சார்ந்த பொருட்களெனும் சகதிக்குள் மூழ்கும் ஒருவனால், மனநிறைவு அல்லது நிலையமைதியின் இனிமைகளை அனுபவிக்க முடியாது. (இவ்வாறான சூழ்நிலையில்} நன்மை மற்றும் தீமையான செயல்களின் தொடர்பறாத ஆன்மாவானது, மீண்டும் மீண்டும் உலகம் சார்ந்த பொருட்களுக்கே திரும்புகிறது.(5)பாவத்தின் விளைவால் ஒருவனுடைய தாகம் ஒருபோதும் அடங்குவதில்லை. அவனுடைய பாவம் அழியும்போதே அவனது தாகமும் தணிகிறது.(6) தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளத்தக்க போக்கைக் கொண்ட உலகப் பொருட்களில் உள்ள பற்றின் விளைவால், ஒருவன் தான் விரும்ப வேண்டியவற்றை விடுத்து வேறு பொருட்களை விரும்புவதால், உயர்ந்ததை {பரமனை / பரம்பொருளை} அடையத் தவறுகிறான்[2].(7) அனைத்துப் பாவச் செயல்களின் அழிவிலிருந்தே மனிதர்களிடம் ஞானம் எழுகிறது. ஞானம் தோன்றியதும், ஒருவன், பளபளப்பான கண்ணாடியில் தன் வடிவத்தைக் காண்பதைப் போலவே, தன் புத்தியில் தன் ஆன்மாவைக் காண்பான்.(8) புலன்களைக் கட்டுப்படுத்தாததன் விளைவால் ஒருவன் துன்பத்தை அடைகிறான். புலன்களைக் கட்டுப்படுத்தியதால் ஒருவன் இன்பத்தை அடைகிறான். எனவே, ஒருவன் புலன்களால் உணரப்படும் பொருட்களில் இருந்து தன் முயற்சியுடன் தனது மனத்தை விலக்க வேண்டும்[3].(9) புலன்களுக்கு மேலானதாக மனம் இருக்கிறது; மனத்திற்கு மேலானதாகப் புத்தி இருக்கிறது. புத்திக்கு மேலானதாக ஆன்மா இருக்கிறது; ஆன்மாவுக்கு மேலானதாக உயர்ந்தது அல்லது மிகப்பெரியது {பரம்பொருள் / பரமாத்மா} இருக்கிறது.(10)வடிவமற்றதிலிருந்து {பரம்பொருளில் இருந்து} ஆன்மா எழுந்தது; ஆன்மாவில் இருந்து புத்தி எழுந்தது; புத்தியிலிருந்து மனம் எழுந்தது. மனம் புலன்களோடு கலக்கும்போது, அஃது {மனம்} ஒலியையும், புலன் நுகர் பொருட்களான பிறவற்றையும் உணர்கிறது.(11) எவன் அந்தப் {புலன்நுகர்} பொருட்களையும், வெளிப்பட்டிருக்கும் அனைத்தையும் கைவிடுவானோ, எவன் மூலப் பொருளில் {ப்ரக்ருதியில்} இருந்து எழும் அனைத்துப் பொருட்களில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கிறானோ, அவன் அவ்வாறு விடுபடுவதால் அழிவின்மையை அனுபவிக்கிறான் {முக்தியை அடைகிறான்} [4].(12) உதிக்கும் சூரியன் தன் கதிர்களை வெளியிடுகிறான். அவன் மறையும்போது தன்னால் வெளியிடப்பட்ட கதிர்களைத் தானே விலக்கிக் கொள்கிறான்.(13) அந்த வகையிலேயே ஆன்மாவும், உடலுக்குள் நுழைந்து, புலன்களால் வெளியிடப்படும் கதிர்களால் புலன்களின் ஐந்து வகைப் பொருட்களை அடைகிறது. எனினும், அது திரும்பும்போது, தானே அந்தக் கதிர்களை விலக்கிக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.(14) செயல்களால் உண்டாக்கப்பட்ட பாதையில் மீண்டும் மீண்டும் வழிநடத்தப்படும் அது {ஆன்மா} செயல்கள் செய்யப்பட்டதைப் பின்தொடர்ந்ததன் விளைவால் தன் செயல்களுக்கான கனிகளை அடைகிறது[5].(15)புலன்நுகர் பொருட்களில் உள்ள ஆசையானது, அத்தகைய ஆசையில் ஈடுபடாத மனிதனிடம் இருந்து விலகி இருக்கிறது. எனினும், ஆசையில் இருந்து முற்றிலும் விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனிடம் இருந்து ஆசையெனும் கோட்பாடே உண்மையில் விலகிச் செல்கிறது[6].(16) புத்தியை ஈர்த்திருக்கும் மனமானது இல்லாமல் போவது சாத்தியமென்பதால், புத்தியானது, புலன் நுகர் பொருட்களில் உள்ள பற்றில் இருந்து விடுபட்டு, மனத்தில் நிலைபெறும்போது, ஒருவன் பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்.(17) பிரம்மம் என்பது தீண்டவோ, கேட்கவோ, சுவைக்கவோ, பார்க்கவோ, நுகரவோ, ஆலோசிக்கவோ படக்கூடிய பொருள் அல்ல. (வேறு அனைத்தில் இருந்தும் விடுபட்ட) புத்தியால் மட்டுமே அஃதை அடைய முடியும்.(18) புலன்கள் மூலம் மனம் உணரும் அனைத்துப் பொருட்களும், மனத்திற்குள் ஈர்க்கப்படவல்லவை; மனமானது புத்திக்குள் ஈர்க்கப்படக்கூடியது; புத்தியானது ஆன்மாவுக்குள் ஈர்க்கப்படக்கூடியது, ஆன்மாவோ உயர்ந்ததற்குள் {பரம்பொருளுக்குள்} ஈர்க்கப்படக்கூடியது[7].(19) புலன்களால் மனத்தின் வெற்றிக்குப் பங்காற்ற முடியாது. மனத்தால் புத்தியை உணர முடியாது. வெளிப்படும் ஆன்மாவைப் புத்தியால் உணரமுடியாது. எனினும் நுட்பமான ஆன்மாவானது இவை அனைத்தையும் காண்கிறது[8]” என்றார் {மனு}.(20)

பரப்பிரம்மம்! – சாந்திபர்வம் பகுதி – 205-துன்பத்தைத் தவிர்ப்பதும், பிரம்மத்தை அடைவதும் எவ்வாறு என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு…

மனு {பிரஹஸ்பதியிடம்}, “உடல் மற்றும் மனத் துன்பங்கள் தோன்றும்போது, ஒருவனால் யோகத்தைப் பயில முடியாது. எனவே, அத்தகைய கவலைகளை நினைத்தேங்கிக் கொண்டிருப்பவனுக்கு அது கைக்கொள்ளக்கூடியதல்ல.(1) கவலைகளை நினைத்து ஏங்காமல் இருப்பதே அதற்கான மருந்தாகும். துன்பங்களை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால், அவை மேலும் தீவிரமடைந்து, தீங்கை அதிகரிக்கச் செய்கிறது.(2) ஒருவன் ஞானத்தால் மனத்துன்பத்தில் இருந்தும், குணப்படுத்தும் மருந்துகளால் உடல் துன்பத்தில் இருந்தும் விடுபட வேண்டும். ஞானம் இதையே கற்பிக்கிறது. கவலையில் இருக்கும்போது ஒருவன் குழந்தை போல நடந்து கொள்ளக்கூடாது.(3) ஞானம் கொண்ட மனிதன், நிலையற்றவையான இளமை, அழகு, நீடித்த வாழ்நாள் {ஆயுள்}, செல்வத் திரட்டு, அன்புக்குரியோரின் தோழமை ஆகிய ஆசைகளை ஒருபோதும் பேணி வளர்க்கக்கூடாது.(4) மொத்த சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கவலைக்காக ஒருவன் தனியாக வருந்தக்கூடாது. வாய்ப்பைக் காணும்போது அவன் தீர்வை நடைமுறைப்படுத்த முனைய வேண்டும்.(5)

வாழ்வில் மகிழ்ச்சியை விடத் துன்பத்தின் அளவே பெரியது என்பதில் ஐயமில்லை. புலன்நுகர் பொருட்களில் நிறைவுடன் இருக்கும் ஒருவனுக்கு, அவனது மயக்கத்தின் விளைவால், ஏற்பில்லா {இனிமையற்ற} மரணம் ஏற்படுகிறது.(6) துன்பம் மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும் தவிர்க்கும் மனிதன் பிரம்மத்தை அடைவதில் நிச்சயம் வெல்கிறான். அத்தகைய ஞானம் கொண்ட மனிதர்கள் ஒருபோதும் வருந்த வேண்டியதில்லை.(7) உலகம் சார்ந்த உடைமைகள் கவலையையே கொண்டு வருகின்றன. அவற்றைப் பாதுகாப்பதால் உனக்கு எந்த மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியாது. மேலும் அவை துன்பப்பட்டே ஈட்டப்படுகின்றன. எனவே, ஒருவன் அவற்றின் இழப்பைக் கருத்தில் கொள்ளக்கூடாது.(8) தூய அறிவானது (அல்லது பிரம்மம்), அறிவு சார்ந்த பல்வேறு பொருட்களில் (வடிவங்களில்) இருக்கிறது என்று (அறியாமை கொண்டோரால்) கருதப்படுகிறது. மனமானது அறிவின் ஓர் இயல்பே என்று அறிவாயாக. மனமானது அறிவுப்புலங்களோடு கலக்கும்போது, (பொருள் வடிவங்களின் உடல்களை உண்டாக்கும்) புத்தியானது பிறக்கிறது.(9) புத்தியானது, செயலின் குணங்களில் இருந்து விடுபடும்போது, (புறப்பொருட்களில் இருந்து விலக்கப்பட்ட) மனத்தை நோக்கிச் செலுத்தப்பட்டு, தியானம், அல்லது யோக முடிவிலான முழுமையான ஈர்ப்பின் (சமாதிநிலையின்) மூலமாகப் பிரம்மத்தை அறிவதில் வெல்கிறது.(10)

அறியாமையில் இருந்து பாய்வதும், புலன்களுடன் கூடியதும், குணங்களைக் கொண்டதுமான புத்தியோ, மலை முகட்டில் இருந்து பிற பகுதிகளை நோக்கிப் பாயும் ஓர் ஆற்றைப் போலப் புறப்பொருட்களை நோக்கி ஓடுகிறது.(11) புத்தியானது, மனத்திற்குள் ஈர்க்கப்படும்போது, உரைகல்லைக் கொண்டு தங்கத்தைத் தீண்டுவதைப் போலக் குணங்களில் இருந்து விடுபட்ட சிந்தனையை ஈர்ப்பதில் வென்று பிரம்ம அறிவை அடைகிறது.(12) புலன் நுகர் பொருட்களை உணர்வது மனமே ஆகும். (பிரம்மத்தை அடைவதற்கு முன்பாக) அதுவே முதலில் அடக்கப்பட வேண்டும். தன் முன்னுள்ள பொருட்களின் குணங்களைச் சார்ந்த மனத்தால், குணங்களற்ற ஒன்றைக் காட்ட முடியாது.(13) புலன்களுக்குண்டான வாயில்களனைத்தும் அடைக்கப்பட்டு, புத்தியானது மனத்திற்குள் ஈர்க்கப்பட வேண்டும். தியானத்தில் ஈர்க்கப்பட்டிருக்கும் இந்நிலையிலேயே அது {புத்தியானது} பிரம்ம அறிவை அடைகிறது.(14) (மொத்த வடிவங்களிலான) ஐவகைப் பூதங்களும், குணங்கள் என்று அறியப்படுபவையின் அழிவுக்குப் பிறகு, (தன்மாத்திரைகள் என்றழைக்கப்படும் தங்கள் நுட்பமான வடிவில்) விலகும் வகையிலேயே, புலன்நுகர் பொருட்களில் இருந்து விலகிய புலன்களுடன் கூடிய புத்தியானது மனத்திற்குள் மட்டுமே வசிக்கும்[1].(15)

நிச்சயமான குணத்தைக் கொண்டதாக இருப்பினும் புத்தியானது மனத்திற்குள் வசித்து, உட்புறத்தில் திரிந்தாலும், அது {புத்தி} மனமேயன்றி (தன்னைவிட உயர்ந்த) வேறேதுமாக இல்லை.(16) தியானத்தின் மூலம் சிறப்பை அடையும் மனம், அல்லது நனவுநிலையானது {அஹங்காரமானது}, குணங்களையும், அவற்றைக் கொண்டவைகளாகக் கருதப்படுபவற்றையும் அடையாளம் காண்பதில் வென்று, அந்தக் குணங்கள் அனைத்தையும் கைவிட்டு, குணங்களற்ற பிரம்மத்தை {நிர்க்குண பிரம்மத்தை} அடைகிறது[2].(17) வடிவமற்றதை (பிரம்மத்தை) {ஸூக்ஷ்மமானப்ரம்மத்தைக்} குறித்த அறிவைத் தருவதற்குப் போதுமானதாக, தகுந்ததாக எந்தக் குறியீடும் {த்ருஷ்டாந்தமும்} இல்லை. மொழியில் பொருள் அமைக்கப்பட முடியாத ஒன்று, எவராலும் அடையப்பட முடியாததாகும்[3].(18) தூய்மையடைந்த ஆன்மாவுடனும், தவங்கள், ஊகங்கள், தற்கட்டுப்பாடு, தன் வகைக்கென விதிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் பயிற்சிகள், வேதங்கள் ஆகியவை அளிக்கும் உதவியின் மூலமும் ஒருவன் உயர்ந்த பிரம்மத்தை {பரப்ரம்மத்தை} அடைய முயல வேண்டும்.(19) (தங்களுக்குள் உள்ள உயர்ந்ததை {பரம்பொருளைக்} காண்பதைத் தவிர்த்து) தெளிந்த பார்வை கொண்ட மனிதர்கள், குணங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு புற வடிவங்களிலும் அதை {பிரம்மத்தை} அடைய முயல்கிறார்கள். ஞேயம் (Jneya அறியப்பட வேண்டிய ஒன்று) என்ற பெயரால் அழைக்கப்படும் உயர்ந்தது {பிரம்மம்}, குணங்கள் இல்லாததன், அல்லது அவற்றின் இயல்பு இல்லாததன் விளைவாக, வாதத்தால் ஒருபோதும் உணரப்பட முடியாததாக இருக்கிறது {அது யுக்திக்கு எட்டாததாகும்}.(20)புத்தியானது, குணங்களில் இருந்து விடுபடும்போது மட்டுமே அதனால் பிரம்மத்தை அடையமுடியும். குணங்களில் இருந்து விடுபடாதபோது அஃது உயர்ந்ததிலிருந்து {பிரம்மத்திலிருந்து} மீண்டும் வீழ்கிறது. உண்மையில், குணங்களை நோக்கி விரைவதும், விறகுக்கு மத்தியில் நெருப்பைப் போல அவற்றின் மத்தியில் திரிவதுமே புத்தியின் இயல்பாகும்.(21) சுசுப்தி (கனவற்ற ஆழ்ந்த உறக்கம்) என்றழைக்கப்படும் நிலையில், ஐம்புலன்களும் தங்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளில் இருந்து விடுபட்டிருக்கும் வகையிலேயே, உயர்ந்த பிரம்மமானது, குணங்கள் அனைத்தில் இருந்து விடுபட்ட நிலையில், பிரக்ருதிக்கு {மூல இயற்கைக்கு} மேலாக உயர்ந்து நிலைத்திருக்கிறது[4].(22) இவ்வாறே, உடல்படைத்த உயிரினங்கள் குணங்களின் விளைவுகளால் செயல்படுகின்றன. அவற்றில் இருந்து அவை விலகும்போது விடுதலையை {முக்தியை} அடைகின்றன. (செயலின் மூலம்) சில சொர்க்கத்திற்குச் செல்கின்றன.(23) வாழும் பூதம் {ஜீவன்}, மூல இயற்கை {ப்ரக்ருதி}, புத்தி, புலன்நுகர் பொருட்கள் {விஷயங்கள்}, புலன்கள், நனவுநிலை {அஹங்காரம்}, தன்னடையாள நம்பிக்கை {அபிமானம்} ஆகியன (அழிவுக்குரியவையாக இருப்பதால்) பூதங்கள் என்றழைக்கப்படுகின்றன.(24) இவற்றின் மூலப் படைப்பு உயர்ந்ததில் {பரம்பொருளில்} இருந்து பாய்ந்தது. இரண்டாவது, அல்லது அடுத்தப் படைப்பானது, (எதிர்பாலின) இணைகள், அல்லது துணைகளின் மூலம், அடிப்படையான ஐந்தை {புலன்களைத்} தவிர்த்து அனைத்துப் பொருட்களையும்[5] உள்ளடக்கி, இனங்கள் அதே இனங்களைப் படைக்கும் விளைவிலான விதிகளுக்குக் கட்டுப்பட்டு உண்டாக்குகின்றன[6].(25) (வாழும்) உயிரினங்கள அறத்தின் மூலம் உயர்ந்த கதியை அடைகின்றன, பாவத்தின் மூலம் அவை இழிந்த கதியை ஈட்டுகின்றன. பற்றுகளில் இருந்து விடுதலையடையாதவன் மறுபிறப்பைச் சந்திக்கிறான்; அதே வேளையில் அவற்றில் இருந்து விடுதலை அடைந்தவன் அறிவை (அல்லது பிரம்மத்தை) {முக்தியை} அடைகிறான்” என்றார் {மனு}.(26)

செயல்விலக்கம்! – சாந்திபர்வம் பகுதி – 206-செயல்களில் இருந்து விலகுவதே உயர்ந்த அறம் என்பதைப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு…

மனு {பிரஹஸ்பதியிடம்}, “ஐம்புலன்களோடும், மனத்தோடும் ஐவகை உடைமைகள் கலக்கும்போது, ரத்தினத்தின் ஊடாகக் கடக்கும் நூலைப் போலத் தனிப்பட்ட ஒருவனால் {ஆன்மாவால்} பிரம்மம் {பரம்பொருள்} காணப்படுகிறது.(1) மேலும் நூலானது எவ்வாறு தங்கம், முத்து, வைடூரியம் அல்லது மண்ணால் செய்யப்பட்ட எந்தப் பொருளிலும் நூலாகக் கிடக்குமோ,(2) அவ்வாறே ஒருவனின் ஆன்மாவும், அதன் செயல்களின் விளைவாக ஒரு பசுவுக்குள்ளோ, குதிரை, மனிதன், யானை, பிற விலங்கு, புழு, அல்லது பூச்சிக்குள்ளோ வாழ்கிறது.(3) தனிப்பட்ட ஒருவன் {ஆத்மா} குறிப்பிட்ட ஓர் உடலுக்குள் இருந்து செய்யும் நற்செயல்கள் உண்டாக்கும் வெகுமதிகளை அந்தக் குறிப்பிட்ட உடலுக்குள் உள்ள அந்த ஒருவனே {ஆத்மாவே} அனுபவிக்கிறான்[1].(4) குறிப்பிட்ட வகை நீர்மத்தால் நனைக்கப்பட்ட மண்ணானது, அதில் வளரும் ஒவ்வொரு வகை மூலிகை, அல்லது செடிக்கும் அதற்குத் தேவையான வகையில் உள்ள சாற்றைக் கொடுக்கிறது. அதே வகையில், ஆன்மாவை சாட்சியாகக் கொண்ட புத்தியானது, முற்பிறவிச் செயல்களால் குறிப்பிடப்பட்ட பாதையைப் பின்பற்றவே இணங்குகிறது[2].(5)அறிவில் இருந்து ஆசை எழுகிறது. ஆசையிலிருந்து தீர்மானம் {முயற்சி} எழுகிறது. தீர்மானத்திலிருந்து செயல் பாய்கிறது. செயலில் இருந்து கனிகள் (நல்ல மற்றும் தீய விளைவுகள்) உண்டாகின்றன.(6) எனவே கனிகள் தங்களுக்குக் காரணமான செயல்களையே சார்ந்திருக்கின்றன. செயல்களோ தங்களுக்குக் காரணமாகப் புத்தியைக் கொண்டிருக்கின்றன. புத்தி அதன் காரணமாக அறிவைக் கொண்டிருக்கிறது; அறிவு அதன் காரணமாக ஆன்மாவைக் கொண்டிருக்கிறது.(7) அறிவு, கனிகள் {பலன்கள்}, புத்தி, செயல்கள் ஆகியன அழிவதன் விளைவால் அடையப்பட்டும் சிறந்த முடிவே பிரம்ம அறிவு என்றழைக்கப்படுகிறது {அதுவே பரமாத்மரூபத்தில் நிலைபெற்ற ஞானமாகும்}[3].(8) யோகியர் காணும் தன்னிருப்பின் சாரம் {பரமாத்மரூபம்} பெரியதும், உயர்ந்ததுமாகும். ஞானமற்றவர்களும், உலக உடைமைகளில் பற்றுடைய புத்தியைக் கொண்டவர்களும், ஆன்மாவுக்குள் இருப்பதை ஒருபோதும் காண்பதில்லை.(9)

நீரானது அளவில் பூமியைவிடப் பெரியதாகும்; ஒளியானது நீரைவிடப் பெரியதாகும்; காற்றானது ஒளியைவிடப் பெரியதாகும்;(10) வெளியானது {ஆகாயமானது} காற்றைவிடப் பெரியதாகும்; மனமானது வெளியைவிடப் பெரியதாகும்; புத்தியானது மனத்தைவிடப் பெரியதாகும்; காலமானது புத்தியைவிடப் பெரியதாகும்.(11) இந்த அண்டம் எவனுடையதோ அந்தத் தெய்வீக விஷ்ணு, காலத்தைவிடப் பெரியவனாவான். அந்தத் தேவன் தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாதவனாக இருக்கிறான்.(12) அவனுக்குத் தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவு ஆகியவை இல்லாததன் விளைவால் அவன் மாற்றமில்லாதவனாக இருக்கிறான். கவலைக்கும் எல்லைகள் உண்டு என்பதால், அவன் கவலைகள் அனைத்தையும் விஞ்சியவனாக இருக்கிறான்[4].(13) அந்த விஷ்ணுவே உயர்ந்த பிரம்மம் {பரப்பிரம்மம்} என்றழைக்கப்படுகிறான். உயர்ந்தது என்று எது அழைக்கப்படுமோ, அதன் பொருளாகவோ, புகலிடமாகவோ அவனே {விஷ்ணுவே} இருக்கிறான். அவனை அறிந்த ஞானியர், காலத்தின் ஆதிக்கத்திற்குள் உள்ள அனைத்தில் இருந்தும் விடுபட்டு, விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் நிலையை அடைகிறார்கள்.(14) (நம்மால் காணப்படும்) இவை அனைத்தும் குணங்களில் வெளிப்படுகின்றன. எது குணங்களற்ற பிரம்மம் என்றழைக்கப்படுமோ, அதுவே இவைகளைவிடப் பெரியதாகும். செயல்களில் இருந்து விலகுவதே உயர்ந்த அறமாகும். அவ்வறம் நிச்சயம் மரணமின்மைக்கு (விடுதலைக்கு {முக்திக்கு}) வழிவகுக்கும்.(15)ரிக்குகள், யஜுஸ்கள், சாமங்கள் ஆகியவை உடலையே தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளன. அவை நாவின் நுனியில் இருந்து பாய்கின்றன. முயற்சியில்லாமல் அவற்றை அடையமுடியாது, மேலும் அவை அழிவுக்குள்ளாகுபவையே.(16) எனினும், (உடலைச் சாராத) பிரம்மம், உடலைப் புகலிடமாகக் கொண்டிருப்பவனை (அறிபவனை அல்லது ஆன்மாவைச்) சார்ந்திருப்பதால், அதை {பிரம்மத்தை} இவ்வழியில் அடையமுடியாது. (வேதங்களை அடைய எது தேவைப்படுமோ அந்த) முயற்சியால், தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாத பிரம்மத்தை அடைய முடியாது.(17) ரிக், சாமங்கள், யஜுஸ்கள் ஆகிய ஒவ்வொன்றும் தொடக்கத்தைக் கொண்டுள்ளன. தொடக்கத்தைக் கொண்டுள்ளவைக்கு முடிவும் உண்டு. ஆனால் பிரம்மம் தொடக்கமற்றது என்று சொல்லப்படுகிறது.(18) பிரம்மம் தொடக்கமோ, முடிவோ இல்லாதிருப்பதால், அளவற்றதென்றும், மாற்றமில்லாததென்றும் சொல்லப்படுகிறது. மாற்றமில்லாத் தன்மையின் விளைவால், கவலைகள் அனைத்தையும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் விஞ்சியிருக்கிறது அந்தப் பிரம்மம்.(19) சாதகமில்லாத விதியின் மூலமும், முறையான வழிமுறைகளைக் காண்பதில் உள்ள இயலாமையின் மூலமும், செயல்களால் அளிக்கப்படும் இடையூறுகளின் மூலமும், மனிதர்கள் பிரம்மத்தை அடையும் பாதையைக் காணாதிருக்கிறார்கள்.(20)

உலகம் சார்ந்த பொருட்களில் உள்ள பற்று, உயர்ந்த சொர்க்கத்தின் இன்பங்களில் உள்ள நாட்டம், பிரம்மத்தைத் தவிர வேறெதிலும் உள்ள ஆசை ஆகியவற்றின் விளைவால் மனிதர்கள் உயர்ந்ததை {பரமாத்மாவை} அடைவதில்லை.(21) உலகம் சார்ந்த பொருட்களைக் காணும் பிறர் அவற்றை அடைய ஆசை கொள்கிறார்கள். அத்தகைய பொருட்களை விரும்பும் அவர்கள், பிரம்மமானது குணங்கள் அனைத்தையும் விஞ்சியிருப்பதன் விளைவால் அஃதை அடைய ஏங்குவதில்லை.(22) தாழ்ந்தவையான குணங்களில் பிணைக்கப்பட்டவனால், மேன்மையான குணங்களைப் படைத்தவனை {பரமாத்மாவைக்} குறித்த அறிவை எவ்வாறு அடைய முடியும்? குணங்கள் மற்றும் வடிவங்களைக் கொண்ட அனைத்துப் பொருட்களையும் விஞ்சியிருப்பவனைக் குறித்த அறிவை ஒருவனால் ஊகத்தினால் மட்டுமே அடைய முடியும்.(23) நுட்பமான புத்தியினால் மட்டுமே நம்மால் அவனை அறிய முடியும். நம்மால் அவனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மனத்தை மனத்தாலும், கண்ணைக் கண்ணாலுமே கைப்பற்ற முடியும்[5].(24) கசடுகளுடன் கூடிய புத்தியை அறிவின் {ஆத்மஞானத்தின்} மூலம் தூய்மையடையச் செய்ய முடியும். மனத்தைத் தூய்மைப்படுத்த புத்தியை ஈடுபடுத்தலாம். மனத்தின் மூலம் புலன்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒருவன் இவை யாவற்றையும் அடைந்தால், மாற்றமில்லாதவனை {அழிவற்ற பரமாத்மாவை} அடையலாம்.(25)ஆழ்ந்த சிந்தனையின் {தியானத்தின்} மூலம் பற்றுகளில் இருந்து விடுபட்டு, தெளிவான மனத்தால் வளம்பெருகிய ஒருவன், ஆசையற்றதும், குணங்கள் அனைத்திற்கும் மேலானதுமான பிரம்மத்தை அடைவதில் வெல்லலாம். மரத்துண்டுக்குள் பொதிந்திருக்கும் நெருப்பில் இருந்து காற்று விலகி இருப்பதைப் போலவே, (உலகம் சார்ந்த உடைமைகளில் உள்ள விருப்பத்தின் மூலம்) கலக்கமடைந்திருக்கும் மனிதர்கள், உயர்ந்ததில் {பரமாத்மாவில்} இருந்து விலகியே இருக்கிறார்கள்.(26) உலகம் சார்ந்த நோக்கங்கள் அனைத்தின் அழிவின் பேரில் மனமானது புத்தியைவிட உயர்ந்ததையே எப்போதும் அடைகிறது; அதே வேளையில், அவற்றின் பிரிவிலோ மனமானது புத்தியைவிடத் தாழ்ந்ததையே எப்போதும் அடைகிறது. எனவே, ஏற்கனவே விவரிக்கப்பட்ட வழிமுறைக்கேற்ப ஒருவன், உலகம் சார்ந்த நோக்கங்களை அழிப்பதில் ஈடுபட்டால், அவன் பிரம்ம உடலுக்குள் ஈர்க்கப்படும் நிலையை {பிரம்ம ரூபத்தை} அடைவான்[6].(27) ஆன்மாவானது புலப்படாததாக இருப்பினும், குணங்கள் எனும் ஆடை போர்த்தப்படும்போது, அதன் செயல்கள் புலப்படுகின்றன. (உடலுக்கு) அழிவு நேரும்போது, மீண்டும் அது புலப்படாததாகிறது. உண்மையில் ஆன்மா செயலற்றதாக இருக்கிறது. இன்பம் அல்லது துன்பத்தை உண்டாக்கவல்ல புலன்களுடன் அது கலந்திருக்கிறது.(28) புலன்களுடன் கலந்திருப்பதும், உடலுடன் கூடியதுமான அஃது {ஆன்மா} அடிப்படையான ஐந்து பூதங்களில் புகலிடத்தை அடைகிறது. எனினும், உயர்ந்ததும், மாற்றமில்லாததுமான ஒன்றின் {பரமாத்மாவின்} மூலம் சக்தியை இழக்கும்போது, அந்தச் சக்தி குறைபாட்டின் காரணமாக அது {ஆன்மா} செயல்படத் தவறுகிறது.(29)எந்த மனிதனும் இந்தப் பூமியின் முடிவைப் பார்த்ததில்லை, ஆனால் பூமிக்கும் நிச்சயம் முடிவு வரும் என்பதை அறிவாயாக. (பற்றுகளால்) இங்கே கலக்கமடையும் மனிதன், கடலில் தத்தளிக்கும் ஓடத்தைக் காற்றானது பாதுகாப்பான துறைமுகத்தில் சேர்ப்பதைப் போல, தன் இறுதி புகலிடத்திற்கு வழிநடத்தப்படுவான்.(30) தன் கதிர்களைப் பரப்பும் சூரியன், (உலகத்தின் ஒளி என்ற) ஒரு குணத்தை அடைகிறான்; (மறையும் வேளையில்) தன் கதிர்களை விலக்கிக் கொள்ளும் அவன் மீண்டும் குணங்களற்ற ஒரு பொருளாகிறான். அதே வகையில், வேறுபாடுகள் அனைத்தையும் கைவிட்டுத் தவங்களைச் செய்யும் ஒரு மனிதன், குணங்கள் யாவும் அற்றதான அழிவற்ற பிரமத்திற்குள் இறுதியாக நுழைகிறான்.(31) எவன் பிறப்பற்றவனோ, எவன் அறவோர் அனைவரின் உயர்ந்த புகலிடமோ, எவன் தான்தோன்றியோ {சுயம்புவோ}, எவனிடமிருந்து அனைத்தும் உண்டாகினவோ, எவனிடம் அனைத்தும் திரும்புமோ, எவன் தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாதவனோ, எவன் நிச்சயத்தன்மையைக் கொண்ட உயர்ந்தவனோ, அவனை {அந்தப் பரமாத்மாவைப்} பகுத்தறிவதன் மூலம் ஒரு மனிதன் அழிவின்மையை (விடுதலையை {முக்தியை}) அடைகிறான்” என்றார் {மனு}.{32)

தாமரைக் கண்ணன்! – சாந்திபர்வம் பகுதி – 207-விஷ்ணு உலகங்களை எவ்வாறு படைத்தான் என்று நாரதரால் சொல்லப்பட்டவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்; கிருஷ்ணன் சாதாரண மனிதனல்ல என்று சொன்னது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானியே, ஓ! பாரதர்களின் தலைவரே, தாமரைக் கண்ணனும், அழிவில்லாதவனும், அனைத்தையும் படைத்தவனும் {கர்த்தனும்}, எவராலும் படைக்கப்படாதவனும், (அனைத்திலும் படர்ந்தூடுருவியிருப்பதன் விளைவால்) விஷ்ணு என்று அழைக்கப்படுபவனும், அனைத்து உயிரினங்களின் மூலமாக இருப்பவனும், அனைத்து உயிரினங்களும் திரும்பிச்செல்லும் இடமாக இருப்பவனும், நாராயணன், ரிஷிகேசன் {இந்திரியங்களுக்கு ஈஸ்வரனும்}, கோவிந்தன், கேசவன் என்ற பெயர்களில் அறியப்படுபவனும், எவராலும் வெல்லப்பட முடியாதவனுமான அந்த ஒருவனைக் குறித்து விபரமாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1,2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இக்காரியம் குறித்து நான் கிருஷ்ண துவைபாயனரிடமிருந்தும் {வியாசரிடமிருந்தும்}, முனிவர் நாரதரிடமிருந்தும், இது குறித்து உரையாடிய ஜமதக்னியின் மகனான ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்தும் கேட்டிருக்கிறேன்.(3) ஓ! மகனே, அசிதர், தேவலர், கடுந்தவங்களைக் கொண்ட வால்மீகி, மார்க்கண்டேயர் ஆகியோர், ஆச்சரியம் நிறைந்தவனும், உயர்ந்தவனுமான கோவிந்தனைக் குறித்துப் பேசுகின்றனர்.(4) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தெய்வீகமான கேசவனே, அனைத்தின் பலமிக்கத் தலைவனாவான். புருஷன் என்று அழைக்கப்படும் அவன், அனைத்திற்குள்ளும் படர்ந்தூடுருவி, தன்னையே பலராக ஆக்கியிருக்கிறான்.(5) ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, அந்த உயரான்ம சாரங்கபாணியின் குணங்களைக் குறித்துப் பெரும் பிராமணர்கள் சொல்வதை இப்போது கேட்பாயாக.(6)

ஓ! மனிதர்களின் இளவரசே {யுதிஷ்டிரனே}, பழைய வரலாறுகளை அறிந்த மனிதர்கள் சொல்லும் கோவிந்தனின் செயல்களையும் நான் உனக்குச் சொல்கிறேன்.(7) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகவும், உயர் ஆன்மா கொண்டவனாகவும், அனைத்திலும் முதன்மையானவனாகவும் அவனே சொல்லப்படுகிறான். அவனே {அந்தப் புருஷோத்தமனே} (தன் விருப்பத்தின் பேரில்) காற்று, ஒளி, நீர், வெளி {ஆகாயம்} மற்றும் பூமி {நிலம்} என்ற ஐவகைப் பூதங்களை உண்டாக்கினான்.(8) உயர் ஆன்மா கொண்டவனும், அனைத்திலும் முதன்மையானவனும், அனைத்து பொருட்களின் பலமிக்கத் தலைவனுமான அவன், பூமியை {நிலமெனும் பூதத்தைப்} படைத்த பிறகு, நீரின் பரப்பில் தன்னைக் கிடத்திக் கொண்டான்.(9) அனைத்திலும் முதன்மையானவனும், அனைத்து வகைச் சக்தி மற்றும் காந்திக்குப் புகலிடமாக இருப்பவனுமான அவன் இவ்வாறு நீரில் மிதந்து கொண்டிருந்தபோது, அண்ட உயிரினங்கள் அனைத்திற்கும் முதலாகப் பிறந்த நனவுநிலையை உண்டாக்கினான்.(10) படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் புகலிடமாக உள்ள நனவுநிலையை மனத்துடன் சேர்த்தே அவன் படைத்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்த நனவுநிலையே கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் உயிரினங்கள் அனைத்தையும் தாங்கிப் பிடிக்கிறது.(11)

ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, நனவுநிலை என்ற பேரிருப்பு உதித்த பிறகு, சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்ட மிக அழகிய ஒரு தாமரையானது (நீரில் மிதந்து கொண்டிருந்த அந்தப்) பரம்பொருளின் தொப்புளில் இருந்து முளைத்தது.(12) ஓ! மகனே, அந்தத் தாமரையில் இருந்து சிறப்பு மிக்கவனும், தெய்வீகமானவனும், அனைத்துயிரினங்களின் பெரும்பாட்டனுமான பிரம்மன், தன் பிரகாசத்தால் அடிவானின் புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டியபடியே இருப்பிற்கு எழுந்தான்.(13) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இவ்வாறு தொடக்ககாலத் தாமரையில் இருந்து உயர் ஆன்மப் பெரும்பாட்டன் உதித்த பிறகு, தொடக்கமேதும் இல்லாதவனும், மது என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு பேரசுரன் ,இருள் குணத்தில் (தமோ குணத்தில்) இருந்து உதித்துப் பிறப்பை அடைந்தான்.(14) பிரம்மனுக்கு நன்மை செய்வதற்காக, அனைத்திலும் முதன்மையானவன் (உயர்ந்த தேவன்), கடுஞ்செயல்களைச் செய்பவனும், (பெரும்பாட்டனைக் கொல்லும்) கடுஞ்செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனுமான அந்தக் கடும் அசுரனைக் கொன்றான்.(15) இவனை (மது என்ற பெயர் கொண்ட அசுரனைக்) கொன்றதிலிருந்தே, தேவர்கள், தானவர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும், அறவோர் அனைவரிலும் முதன்மையான அவனை,[1] மதுசூதனன் (மதுவைக் கொன்றவன்) என்ற பெயரால் அழைக்கத் தொடங்கினர்.(16)இதன் பிறகு, பிரம்மன் தன் மனக்கட்டளையின் பேரில், தக்ஷன் முதலிய ஏழு மகன்களைப் படைத்தான். அவர்கள் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது (மற்றும் ஏற்கனவே குறிப்பிட்ட தக்ஷன்) ஆகியோராவர்.(17) இவர்களில் மூத்தவரான மரீசி, தன் மனக்கட்டளையின் பேரில், பெரும் சக்தி கொண்டவரும், பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், கசியபர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு மகனைப் பெற்றார்.(18) மரீசி பிறப்பதற்கு முன்பே பிரம்மன் தன் கால் பெரு விரலில் இருந்து ஒரு மகனைப் படைத்தான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அந்த மகனே, உயிரினங்களுக்கு மூதாதையான தக்ஷனாவான்[2].(19) ஓ! பாரதா, அந்தத் தக்ஷனுக்கு முதலில் பதிமூன்று மகள்கள் பிறந்தனர். அவர்களில் மூத்தவள் திதி என்றழைக்கப்பட்டாள்.(10) ஓ! ஐயா, மரீசியின் மகனும், கடமைகள் அனைத்தையும், அவற்றின் தனிச்சிறப்புகளையும் அறிந்தவரும், அறச் செயல்களையும், பெரும்புகழையும் கொண்டவருமான கசியபரே அந்தப் பதிமூன்று மகன்களுக்குக் கணவரானார்.(21)உயர்ந்த அருளைக் கொண்டவனான தக்ஷன், (ஏற்கனவே சொல்லப்பட்ட பதிமூன்றைத் தவிர) அடுத்ததாக மேலும் பத்து மகள்களைப் பெற்றான். உயிரினங்களின் மூதாதையும், அறவோனுமான தக்ஷன் அவர்களைத் தர்மனுக்குக் கொடுத்தான்.(22) ஓ! பாரதா, தர்மனானவன், வசுக்கள், அளவிலா சக்தி கொண்ட ருத்திரர்கள், விஸ்வதேவர்கள், சத்யஸ்கள் மற்றும் மருத்துகளுக்குத் தந்தையானான்.(23) தக்ஷன் அடுத்ததாக இருபத்தேழு இளைய மகள்களைப் பெற்றான். உயர்ந்த அருளைக் கொண்ட சோமனே {சந்திரனே} அவர்கள் அனைவருக்கும் கணவனானான்.(24) கந்தர்வர்கள், குதிரைகள், பறவைகள், பசுக்கள், கிம்புருஷர்கள், மீன்கள், மரங்கள் மற்றும் செடிகளைக் கசியபரின் (பதிமூன்று) மனைவிகள் பெற்றெடுத்தனர்.(25)

{கசியபரின் பதிமூன்றிலொரு மனைவியான} அதிதியானவள், தேவர்களில் முதன்மையானவர்களும், பெரும் பலம் கொண்டவர்களுமான ஆதித்யர்களைப் பெற்றாள். அவர்களுக்கு மத்தியில் விஷ்ணு, குள்ளனின் வடிவில் {வாமன அவதாரமாகப்} பிறப்பை எடுத்தான். கோவிந்தன் என்றும் அழைக்கப்படும் அவன், அவர்கள் அனைவரிலும் முதன்மையானவனானான்.(26) அவனுடைய ஆற்றலின் மூலமே தேவர்களின் வளம் அதிகரித்தது. தானவர்கள் வெல்லப்பட்டனர். {கசியபரின் மற்றொரு மனைவியான} திதியின் வாரிசுகளாக அசுரர்கள் இருந்தனர்.(27) {கசியபரின் மற்றொரு மனைவியான} தனுவானவள், விப்ரசித்தியை முதன்மையானவனாகக் கொண்ட தானவர்களைப் பெற்றெடுத்தாள். திதியோ பெரும்பலம் கொண்ட அசுரர்கள் அனைவரையும் பெற்றெடுத்தாள்.(28)

பகல், இரவு, வரிசையான பருவகாலங்கள், காலை {முற்பகல்}, மாலை {பிற்பகல்} ஆகியவற்றையும் அந்த மதுசூதனன் படைத்தான்.(29) சிந்தனைக்குப் பிறகு, மேகங்களையும், அசையாத மற்றும் அசையும் பொருட்கள் அனைத்தையும் படைத்தான். அபரிமிதமான சக்தியைக் கொண்ட அவன் விஸ்வர்களையும், பூமியையும், அவள் மீது கொண்ட அனைத்துப் பொருட்களையும் படைத்தான்.(30) பிறகு, ஓ! யுதிஷ்டிரா, உயர்ந்த அருளைக் கொண்டவனும், பலமிக்கவனுமான கிருஷ்ணன், தன் வாயிலிருந்து {முகத்திலிருந்து} நூறு முதன்மையான பிராமணர்களைப் படைத்தான்.(31) தன்னிரு கரங்களில் இருந்தும் அவன் நூறு க்ஷத்திரியர்களையும், தன் தொடைகளில் இருந்து நூறு வைசியர்களையும் படைத்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே, அதன் பிறகு அந்தக் கேசவன் தன்னிரு பாதங்களில் இருந்து நூறு சூத்திரர்களைப் படைத்தான்.(32) பெரும் தவத்தகுதியைக் கொண்டவனான அந்த மதுசூதனன், இவ்வாறு நான்கு வகைகளைச் சேர்ந்த மனிதர்களையும் படைத்த பிறகு, அனைத்து உயிரினங்களின் தலைவனாகவும், ஆட்சியாளனாகவும் தாத்ரியை (பிரம்மனை) நிறுவினான்.(33)

அளவிலா பிரகாசம் கொண்ட பிரம்மன், வேத அறிவை விளக்குபவனாகவும் ஆனான். மேலும் அந்தக் கேசவன், விருபாக்ஷன் என்றழைக்கப்படுபவனை ஆவிகள், பேய்கள் {பூதங்கள், பிரமதகணங்கள்} மற்றும் மாத்ரிகைகள் (தாய்மார்) என்று அழைக்கப்படும் பெண்கள் ஆகியோரின் ஆட்சியாளன் ஆக்கினான்.(34) பிறகு அவன், பித்ருக்கள் மற்றும் பாவிகள் அனைவரின் ஆட்சியாளனாக யமனை {ஸமவர்தின்} நியமித்தான்[3]. உயிரினங்கள் அனைத்தின் பரமாத்மாவான அவன், கருவூலங்கள் அனைத்தின் {நிதிகளின்} தலைவனாகக் குபேரனையும் நியமித்தான்.(35) பிறகு அவன், நீர் நிலைகளின் தலைவனும், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தின் ஆட்சியாளனுமான வருணனைப் படைத்தான். பலமிக்க அந்த விஷ்ணு, தேவர்கள் அனைவரின் தலைவனாக வாசவனை {இந்திரனை} நியமித்தான்.(36) அந்தக் காலங்களில் {சத்திய / கிருத யுகத்தில்}, யமனிடம் எந்த அச்சமும் இல்லாமல் மனிதர்கள் தாங்கள் விரும்பிய அளவு நீண்ட காலத்திற்கு வாழ்ந்தனர்.(37) அப்போது, கலவியானது இனவிருத்திக்கு அவசியமானதாக இருக்கவில்லை. அந்தக் காலங்களில் மனக்கட்டளையின் பேரிலேயே வாரிசுகள் பெறப்பட்டனர்.(38) அதைத் தொடர்ந்த திரேதா யுகத்தில், வெறும் தீண்டலால் மட்டுமே பிள்ளைகள் பெறப்பட்டனர். ஓ! ஏகாதிபதி, அப்போதும், அந்தக் காலத்தைச் சேர்ந்த மக்களுக்குக் கலவி அவசியமாக இருக்கவில்லை.(39) ஓ! மன்னா, அதற்கடுத்த காலமான துவாபர யுகத்தில் தான், கலவி நடைமுறை தோன்றி, மக்கள் மத்தியில் நீடித்தது. ஓ! ஏகாதிபதி, கலிகாலத்தில் மனிதர்கள் திருமணம் செய்து கொண்டு இணைகளாக வாழ்கின்றனர்[4].(40)அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனைக் குறித்து நான் இப்போது சொல்லிவிட்டேன். அவனே அனைத்தின் ஆட்சியாளன் என்று அழைக்கப்படுகிறான். ஓ! குந்தியின் மகனே, பூமியில் உள்ள பாவம் நிறைந்த உயிரினங்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(41) ஓ! மன்னா, அவர்கள் தென் பகுதியில் பிறந்தவர்களான ஆந்திரகர்கள், குஹர்கள், புளிந்தர்கள், சபரர்கள், சூசுபர்கள் மத்ரகர்கள் ஆகியோர் ஆவர்.(42) வட பகுதியில் பிறந்தவர்களையும் நான் சொல்வேன். அவர்கள் யவனர்கள், காம்போஜர்கள், காந்தாரர்கள், கிராதர்கள், பர்ப்பரர்கள் ஆகியோராவர்.(43) ஓ! ஐயா, பாவிகளான அவர்கள் அனைவரும் சண்டாளர்கள், காக்கைகள் மற்றும் கழுகுகளுக்கு ஒப்பான நடைமுறைகளைக் கொண்டவர்களாக இந்தப் பூமியில் திரிகிறார்கள்.(44) ஓ! ஐயா, கிருத யுகத்தில் அவர்கள் இந்தப் பூமியில் எங்கேயும் இல்லை. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, திரேத யுகத்திலே தோன்றிய அவர்கள் பல்கிப் பெருகத் தொடங்கினர்.(45) திரேதா யுகமும், துவாபர யுகமும் சேர்ந்த பயங்கரக் காலத்தில், க்ஷத்திரியர்கள் ஒருவரையொருவர் அணுகி போரிட்டனர்[5].(46)ஓ! குருகுலத்தின் தலைவா, இவ்வாறே இந்த அண்டம் உயர் ஆன்ம கிருஷ்ணனால் தொடக்கி வைக்கப்பட்டது. உலகங்கள் அனைத்தையும் காண்பவரான தெய்வீக முனிவர் நாரதர், கிருஷ்ணனே உயர்ந்த தேவன் என்பதைச் சொல்லியிருக்கிறார். ஓ! மன்னா, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாரதக் குலத் தலைவா, கிருஷ்ணனின் மேன்மையையும், அவனது நித்தியத்தன்மையையும் நாரதரே ஏற்றுக் கொள்கிறார்[6].(48) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, கேசவன் வெல்லப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனாவான். அந்தத் தாமரைக் கண்ணன் வெறும் மனிதனல்ல. அவன் நினைத்தற்கரியவனாவான்” என்றார் {பீஷ்மர்}.(49)

பிரஜாபதிகளும், சாக்ஷீபூதங்களும்! – சாந்திபர்வம் பகுதி – 208-மரீசி முதலிய பிரஜாபதிகளையும், ஒவ்வொரு திக்கிலும் உள்ள முனிவர்களையும் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே முதல் பிரஜாபதிகள் யாவர்? இருப்பில் உள்ளவர்களான உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்கள் யாவர்? அவர்கள் ஒவ்வொருவரும் எந்தத் திசைப்புள்ளிகளில் {திக்குகளில்} வசிக்கிறார்கள்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதர்களின் தலைவா, நீ கேட்பதைக் குறித்துச் சொல்கிறேன், என்னிடம் இருந்து கேட்பாயாக. அந்தப் பிரஜாபதிகள் யாவர், அடிவானின் எந்தப் புள்ளியில் {திக்கில்} எந்தெந்த முனிவர்கள் வசிக்கிறார்கள் என்பதைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) நித்தியமானவனும், தெய்வீகமானவனும், தான் தோன்றியுமான {சுயம்புவான} பிரம்மனே முதலில் இருந்தான். தான் தோன்றியான அந்தப் பிரம்மன் சிறப்புமிக்க ஏழு மகன்களைப் பெற்றான்.(3) அவர்கள் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது மற்றும் அந்தத் தான்தோன்றிக்கே இணையானவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான வசிஷ்டர் ஆகியோராவர்.(4) இந்த ஏழு மகன்களே புராணங்களில் ஏழு பிரம்மர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களுக்குப் பின் வந்த பிரஜாபதிகள் அனைவரையும் நான் இப்போது சொல்லப் போகிறேன்.(5)

அத்ரியின் குலத்தில், நித்தியமானவரும், தெய்வீகமானவரும், தவங்களையே தமது மூலமாகக் கொண்டவரும், பழமையானவருமான பர்ஹி {பராசீனபர்ஹி} பிறந்தார். {ப்ரசேதஸின் மகனான} பர்ஹியில் இருந்து பழமையானவர்களான பத்துப் பிரசேதகர்கள் எழுந்தனர்.(6) அந்தப் பத்து பிரசேதகர்களும் தங்களுக்கு மத்தியில் தக்ஷன் என்றழைக்கப்பட்ட பிரஜாபதியை ஒரு மகனாகக் கொண்டிருந்தனர். இந்த இறுதியானவருக்கு இவ்வுலகில் ’தக்ஷன்’ என்றும், ’க’ என்றும் இரண்டு பெயர் உண்டு.(7)

மரீசி, கசியபர் என்றழைக்கப்பட்ட ஒரு மகனைக் கொண்டிருந்தார். இவருக்கும் இரண்டு பெயர்கள் இருந்தன. சிலர் அவரை ’அரிஷ்டநேமி’ என்றும், சிலர் ’கசியபர்’ என்றும் அழைக்கிறார்கள்.(8)

அத்ரி, தன் மடியில் பிறந்தவனும், அழகனும், பெரும் சக்தி கொண்ட இளவரசனுமான சோமன் {சந்திரன்} என்ற மற்றொரு மகனை {ஔரசப் புத்ரனாகக்} கொண்டிருந்தார். அவன் ஓராயிரம் தேவ யுகங்கள் நெடுகிலும் தவங்களைச் செய்து கொண்டிருந்தான்.(9) ஓ! ஏகாதிபதி, தெய்வீகமான அர்யமானும், அவனுக்குப் பிறந்த மகன்களும், உலகங்களைப் படைப்பவர்களென்றும், கட்டளையிடுகிறவர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள்.(10) சசபிந்துவுக்குப் பத்தாயிரம் மனைவியர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது தலைவன் {சசபிந்து} ஓராயிரம் மகன்களைப் பெற்றார்.(11) இவ்வாறே அவருக்கு ஆயிரமாயிரம் {பத்து லட்சம்/ கோடி} மகன்கள் இருந்தனர். அந்த மகன்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் பிரஜாபதி என்று அழைக்க மறுத்தனர்.(12)

பழமையான பிராமணர்கள், சசபிந்துவிடம் இருந்து பெறப்பட்ட பட்டப்பெயரை உலகின் உயிரினங்களுக்கு அளித்தனர். பரந்த அளவில் இருந்த பிரஜாபதியான சசபிந்துவின் குலத்தவரே, காலப்போக்கில் விருஷ்ணி குலத்தின் முன்னோர்களானார்கள்.(13) என்னால் சொல்லப்படும் இவர்கள் சிறப்புமிக்கப் பிரஜாபதிகளாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

இதன் பிறகு நான் மூவுலகங்களின் தலைவர்களாக இருக்கும் தேவர்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(14) பகன், அம்சன், அர்யமான், மித்ரன், வருணன், சவிதன், தாத்ரி {தாதா}, பெரும் வலிமைமிக்க விவஸ்வான்,(15) துவஷ்டிரி {த்வஷ்டா}, பூஷன், இந்திரன், பனிரெண்டாவதாக அறியப்படும் விஷ்ணு ஆகிய இந்தப் பனிரெண்டு ஆதித்தியர்களும் கசியபரில் இருந்து எழுந்தவர்களாவர்.(16) நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அசுவினிகள் இருவராகச் சொல்லப்படுகின்றனர். இவ்விருவரும் மேற்கண்ட வரிசையில் எட்டாவதாக உள்ள {எட்டாவது பிரஜாபதியான} சிறப்புமிக்க மார்த்தாண்டரின் மகன்களாவர்.(17) இவர்களே தேவர்களில் முதல்வர்கள் என்றும், பித்ருக்களின் இரண்டு வர்க்கத்தினர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். துவஷ்டிரிக்குப் பல மகன்கள் இருந்தனர். அழகர்களும், புகழ்மிக்கவர்களுமான அவர்களில் விஸ்வரூபன்,(18) அஜைகபாத், அஹி, பிரத்னன், விரூபாக்ஷன், ரைவதன், ஹரன், பஹுரூபன், தேவர்களின் தலைவனான திரியம்பகன்,(19) சாவித்ரியன், ஜயந்தன், வெல்லப்பட்ட முடியாத பினாகி ஆகியோர் {பதிமூன்று ருத்திரர்களாக அறியப்படும் இவர்கள்} அடங்குவர். உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், எண்ணிக்கையில் எட்டாக இருப்பவர்களுமான வசுக்கள் என்னால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றனர்.(20) பிரஜாபதி மனுவின் காலத்தில் இவர்களே தேவர்களாக அறியப்பட்டனர். இவர்களே தேவர்கள் மற்றும் பித்ருக்களில் முதல்வர்களாக அழைக்கப்பட்டனர்.(21)

சித்தர்கள் மற்றும் சாத்யஸ்களில் நடத்தை மற்றும் இளமையின் விளைவால் இரண்டு வர்க்கத்தினர் இருந்தனர். முன்னர் ரிபுக்கள் மற்றும் மருத்துகள் என்று இரண்டு வர்க்கங்களாகத் தேவர்கள் கருதப்பட்டனர்.(22) விஸ்வர்கள், தேவர்கள்[1], அசுவினிகள் ஆகியோர் இவ்வாறே சொல்லப்படுகின்றனர். இவர்களில் ஆதித்தியர்கள் க்ஷத்திரியர்களும், மருத்துகள் வைசியர்களுமாவர்.(23) கடும் தவங்களில் ஈடுபடுபவர்களான அசுவினிகள் இருவரும் சூத்திரர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அங்கீரஸ குலத்தில் எழுந்த தேவர்கள் பிராமணர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இஃது உறுதியானதாகும்.(24) இவ்வாறே தேவர்களில் நால்வகை வர்ணங்களை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஒரு மனிதன், காலையில் தன் படுக்கையில் இருந்து எழுந்ததும், இந்தத் தேவர்களின் பெயர்களை உரைத்தால்,(25) தெரிந்தோ, தெரியாமலோ, பிறரது சேர்க்கையில் பிறந்தவையோவான தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைகிறான்.யவக்ரீதர், ரைப்யர், அர்வாவசு, பராவசு,(26) ஔஸிஜன், கக்ஷீவான், பலன் ஆகியோர் அங்கீரஸின் மகன்களாகச் சொல்லப்படுகிறார்கள். இவர்களும், முனிவர் மேதாதியின் மகனான கண்வர், பர்ஹிஷதன் ஆகியோரும்,(27) நன்கறியப்பட்டவர்களும், மூவுலகங்களுக்கும் மூதாதையராக இருப்பவர்களுமான ஏழு மனிவர்களும் {சப்தரிஷிகளும்} கிழக்கில் {கிழக்குத் திசையில்} வசிக்கிறார்கள்.

உன்முசர், விமுசர், பெரும் சக்தியைக் கொண்டவரான ஸ்வஸ்தாய்தரேயர், பிரமுசர், இத்மவாஹர், தெய்வீகமானவரான திருடவிரதர், மித்ரவருணர்களின் மகனும், பெரும் சக்தியைக் கொண்டவருமான அகஸ்தியர்(29) ஆகிய இந்த மறுபிறப்பாள முனிவர்கள் அனைவரும் தெற்கில் வசிக்கிறார்கள்.

உஷங்கு, கருஷர் {கவஷர்}, தௌம்யர், பெரும் சக்தியைக் கொண்டவரான பரிவ்யாதர்,(30) ஏகதர், திவிதர், திரிதர், அத்ரியின் மகனும், சிறப்புமிக்கவரும், பலமிக்கவருமான சாரஸ்வதர் {துர்வாசர்},(31) ஆகிய இந்த உயரான்மாக்களைக் கொண்டவர்கள் மேற்கில் வசிக்கிறார்கள்.

ஆத்ரேயர் {அத்ரி}, வசிஷ்டர், பெரும் முனிவரான காஸ்யபர்,(32) கௌதமர், பரத்வாஜயர், குசிகனின் மகனான விஷ்வாமித்திரர், உயர் ஆன்மா கொண்டவரும், ரிசீகரின் சிறப்புமிக்க மகனுமான ஜமதக்நி(33) ஆகிய இந்த எழுவரும் வடக்கில் வாழ்கிறார்கள்.

இவ்வாறே, திசைகளின் பல்வேறு புள்ளிகளில் {திக்குகளில்} வாழும் கடும் சக்தி கொண்ட பெரும் முனிவர்களைக் குறித்து நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(34) அந்த உயர் ஆன்மாக்களே, இந்த அண்டத்தின் சாட்சிகளாகவும், உலகங்கள் அனைத்தையும் படைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறே அவர்கள் தங்கள் தங்களுக்குரிய பகுதிகளில் வசித்து வருகிறார்கள்.(35) இவர்களது பெயர்களைச் சொல்வதால் ஒருவன், தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அந்தந்தத் திசைகளில் பயணிக்கும் ஒரு மனிதன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, பாதுகாப்பாக வீட்டை அடைவதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}[2].(36)

வராஹ அவதாரம்! – சாந்திபர்வம் பகுதி – 209-விஷ்ணுவின் வராஹ அவதாரம் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானமும், போரில் வெல்லப்பட முடியாத ஆற்றலும் கொண்டவரே, மாற்றமில்லாதவனும், எல்லாம் வல்லவனுமான கிருஷ்ணனைக் குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ! மனிதர்களில் காளையே, அவனது பெருஞ்சக்தி மற்றும் பழங்காலத்தில் அவனால் அடையப்பட்ட பெரும் சாதனைகள் குறித்த அனைத்தையும் எனக்கு உண்மையாகச் சொல்வீராக.(2) ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக அந்தப் பலமிக்கவன் ஏன் ஒரு விலங்கின் வடிவை ஏற்றான்? ஓ! வலிமைமிக்கப் போர்வீரரே இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “முன்பொரு காலத்தில் நான் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, மார்க்கண்டேயரின் ஆசிரமத்தை அடைந்தேன். அங்கே பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தவசிகள் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.(4) அந்த முனிவர்கள் எனக்குத் தேனும், தயிர்க்கடைசலும் கொடுத்து என்னைக் கௌரவித்தனர். அவர்களது வழிபாட்டை ஏற்றுக் கொண்ட நான், பதிலுக்கு அவர்களை மரியாதையுடன் வணங்கினேன்.(5) அங்கே பெரும் முனிவரான கசியபர் உரைத்ததை நான் சொல்லப் போகிறேன். இனிமையான அந்தச் சிறந்த கதையைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(6)

முன்பொரு காலத்தில், கோபமும், பேராசையும் நிறைந்த முக்கியத் தானவர்களும், நூற்றுக்கணக்கானவர்களும், வலிமையில் போதையுண்டவர்களும், நரகனைத் தங்கள் முதல்வனாகக் கொண்டவர்களுமான வலிமைமிக்க அசுரர்களும்,(7) போரில் வெல்லப்பட முடியாத எண்ணற்ற தானவர்கள் பிறரும், தேவர்களின் ஒப்பற்ற செழிப்பில் பொறாமை கொண்டனர்.(8) (இறுதியாக) அந்தத் தானவர்களால் ஒடுக்கப்பட்ட தேவர்களும், தெய்வீக முனிவர்களும், அமைதியடையத் தவறிவர்களாக அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினார்கள்.(9) பூமியானவள் புண்பட்ட நிலையில் துயரத்தில் மூழ்கியிருப்பதைச் சொர்க்கவாசிகள் {தேவர்கள்} கண்டனர். பயங்கர முகத்தோற்றத்தைக் கொண்ட வலிமைமிக்கத் தானவர்களால் நிறைந்திருந்த பூமி, பெரும் கனத்தால் ஒடுக்கப்படுவதாகத் தெரிந்தது. உற்சாகமிழந்தவளாகவும், துயரால் பீடிக்கப்பட்டவளாகவும் இருந்த அவள், பாதாளங்களின் ஆழங்களுக்குள் மூழ்கி விடுபவளைப் போலத் தெரிந்தாள்.(10)

அச்சத்தால் பீடிக்கப்பட்ட ஆதித்தியர்கள், பிரம்மனிடம் சென்று, அவனிடம், “ஓ! பிரம்மா, தானவர்களின் ஒடுக்குமுறையை நாங்கள் எவ்வாறு தொடர்ந்து தாங்கிக் கொள்வது?” என்று கேட்டனர்.(11) அதற்கு அந்தத் தான்தோன்றி {பிரம்மன்}, “இக்காரியத்தில் செய்ய வேண்டியதை நான் ஏற்கனவே செய்துவிட்டேன்.(12) வரங்களையும், வலிமையையும் கொண்டு, செருக்கில் பெருகியிருக்கும் உணர்வற்றவர்களான இந்த இழிந்தவர்கள், புலப்படாத வடிவைக் கொண்டவனும்,(13) ஒன்று சேர்ந்த தேவர்களாலும் வெல்லப்பட்ட முடியாத தேவனுமான விஷ்ணு, பன்றியின் வடிவை ஏற்றிருப்பதை அறிய மாட்டார்கள். அந்த உயர்ந்த தேவன் {விஷ்ணு}, பயங்கரத் தன்மையைக் கொண்டவர்களும், பூமிக்கடியில் ஆயிரக்கணக்கில் வாழ்பவர்களுமான தானவர்களில் இழிந்தவர்களின் இடத்திற்கு விரைந்து சென்று, அவர்கள் அனைவரையும் கொல்லப் போகிறான்” என்றான். பெரும்பாட்டனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்களில் முதன்மையானோர் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர்.(14,15)

சில காலம் கழித்து, பன்றியின் வடிவத்தில் பொதிந்திருந்தவனும், வலிமைமிக்க சக்தி கொண்டவனுமான விஷ்ணு, பாதாள உலகத்திற்குள் ஊடுருவி, அந்தத் திதியின் வாரிசுகளை எதிர்த்து விரைந்தான்.(16) இயல்புக்குமீறிய வகையில் இருந்த அந்த விலங்கைக் கண்ட தைத்தியர்கள் அனைவரும், காலத்தால் மயங்கியவர்களாக, ஒன்றாகச் சேர்ந்து, தங்கள் பலத்தை முயற்சி செய்து பார்க்க அதனை எதிர்த்து விரைந்து, அதைச் சூழ்ந்து கொண்டனர்.(17) பிறகு விரைவில் அந்தப் பன்றியை எதிர்த்து விரைந்த அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அதைக் கைப்பற்றினர். சினத்தால் நிறைந்த அவர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அந்த விலங்கை இழுக்க முயற்சி செய்தனர்.(18) ஓ! ஏகாதிபதி, வலிமையும், சக்தியும் கொண்டவர்களும், பலத்தால் பெருகியவர்களும், பேருடல்களைப் படைத்தவர்களுமான அந்தத் தானவர்களில் முதன்மையானவர்களால் அந்தப் பன்றியை ஏதும் செய்ய முடியவில்லை.(19) இதனால் மிகவும் ஆச்சரியமடைந்த அவர்கள், அச்சத்தால் நிறைந்தனர். எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் இருந்த அவர்கள் தங்கள் இறுதி வேளை வந்துவிட்டதெனக் கருதினார்கள்.(20)

பிறகு, ஓ! பாரதர்களின் தலைவா, யோகத்தைத் தன் ஆன்மாவாகக் கொண்டவனும், யோகத்தையே தன் தோழனாகக் கொண்டவனும், தேவர்கள் அனைவரிலும் உயர்ந்த தேவனுமான அவன், யோகத்தில் மெய்மறந்து, அந்தத் தைத்தியர்களையும், தானவர்களையும் கலங்கடித்தபடியே மகத்தான முழக்கங்களை வெளியிடத் தொடங்கினான்.(21) உலகங்கள் அனைத்தும், திசைகளின் பத்து புள்ளிகளும் இந்த முழக்கங்களை எதிரொலித்தன, அதன் காரணமாகக் கலக்கமடைந்த உயிரினங்கள் அனைத்தும் அச்சத்தால் நிறைந்தன.(22) இந்திரனின் தலைமையிலான தேவர்களே கூட அச்சத்தால் பீடிக்கபட்டனர். அவ்வொலியின் விளைவால் மொத்த அண்டமே அசையாதிருந்தது. அது பயங்கரமான வேளையாக இருந்தது.(23) அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் யாவும் அவ்வொலியால் திகைப்படைந்தன. அவ்வொலியால் அச்சமடைந்த தானவர்கள்,(24) விஷ்ணுவின் சக்தியால் முடக்கம் அடைந்து உயிரற்றுக் கீழே விழத் தொடங்கினர். அந்தப் பன்றியானது {வராஹமானது}, தேவர்களின் எதிரிகளும், பாதாளலோகவாசிகளுமான அவர்களைத் தன் குளம்படிகளால் துளைக்கத் தொடங்கி, அவர்களது தசை, கொழுப்பு மற்றும் எலும்புகளைக் கிழிக்கத் தொடங்கியது.(25)

அந்த {பன்றியின்} மகத்தான முழக்கங்களின் விளைவால் அந்த விஷ்ணு, சனாதனன் என்ற பெயரால் அழைக்கப்படலானான்.(26) அவன் பத்மநாபன் என்றும் அழைக்கப்படுகிறான். யோகியரில் அவனே முதன்மையானவனாக இருக்கிறான். அவனை அனைத்துயிரினங்களின் குருவாகவும், அவர்களது உயர்ந்த தலைவனாகவும் இருக்கிறான். அப்போது, தேவ இனங்கள் அனைத்தும் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றனர்.(27)

அந்த அண்டத்தின் தலைவனிடம் {பிரம்மனிடம்} வந்த அந்தச் சிறப்புமிக்கவர்கள் {தேவர்கள்}, “ஓ! பலமிக்கவரே, என்ன வகை ஒலியிது? இஃதை எங்களால் புரிந்து கொள்ள முடியவிலை. இது யார்? அல்லது அண்டமே திகைப்படையும் வகையில் உள்ள இந்த ஒலி யாருடையது?(28) இந்த ஒலி, அல்லது இதைச் செய்பவனின் சக்தி மூலம் தேவர்கள் மற்றும் தானவர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழக்கின்றனர்” என்றனர்.(29) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அதே வேளையில், பன்றிக்குரிய வடிவில் இருந்த விஷ்ணு, கூடியிருந்த தேவர்களின் பார்வையிலேயே, அவனது புகழைச் சொல்லும் துதிகளைக் கொண்டு பெரும் முனிவர்களால் பாடப்பட்டான்.(30)

பெரும்பாட்டன் {பிரம்மன்}, “அனைத்தையும் படைத்தவனும், அனைத்துயிரினங்களின் ஆன்மாவும், யோகியர் அனைவரிலும் முதன்மையானவனுமான அவனே உயர்ந்த தேவனாவான். பெரும் உடலையும், பெரும் பலத்தையும் கொண்ட அவன் {விஷ்ணு}, தானவர்களில் முதன்மையானோரைக் கொன்றுவிட்டு இங்கே வந்து கொண்டிருக்கிறான்.(31) அனைத்தின் தலைவனும், யோகத்தின் குருவும், பெரும் தவசியும், அனைத்து உயிரினங்களின் ஆன்மாவும் அவனே ஆவான். நீங்கள் அனைவரும் அசையாதிருப்பீராக. அவனே, தடைகள் மற்றும் இடையூறுகள் அனைத்தையும் அழிக்கும் கிருஷ்ணன் ஆவான்.(32) அனைத்து ஆசிகளின் பெரும்புகலிடமும், அளவில்லா காந்தியைக் கொண்டவனுமான அந்த உயர்ந்த தேவன், பிறரால் நிறைவேற்ற முடியாத மிகக் கடினமான சாதனையைச் செய்து விட்டு, கலப்பில்லாத தன் சொந்த இயல்புக்கே திரும்பியிருக்கிறான்.(33) அவனுடைய தொப்புளில் {நாபியில்} இருந்தே தொடக்கக் காலத் தாமரை {ஆதி தாமரை} எழுந்தது. அவனே யோகியரில் முதன்மையானவன். பரமாத்மாவான அவனே அனைத்து உயிரினங்களின் படைப்பாளனாவான்.(34) அவனே விதி சமைப்பவன். அவனே படைப்புக் கோட்பாடாவான். அவனே அனைத்தையும் அழிக்கும் காலம் ஆவான். அவனே அனைத்து உலகங்களையும் தாங்குபவனாவான். உங்களை அச்சுறுத்தும் இந்த முழக்கங்களை அந்த உயர் ஆன்மாவே செய்கிறான்.(35) வலிய கரங்களைக் கொண்ட அவனே உலகளாவிய வழிபாட்டுக்குத் தகுந்தவனாவான். சிதைவடைய இயலாதவனான அந்தத் தாமரைக் கண்ணனே அனைத்துயிரினங்களின் மூலமும், அவர்களது தலைவனுமாவான்” என்றான் {பிரம்மன்}” என்றார் {பீஷ்மர்}.(36)

யோகம்! – சாந்திபர்வம் பகுதி – 210-ஓர் ஆசானுக்கும், அவரது சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்; முற்பிறவியின் விருப்பங்களும், உள்ளுணர்வுகளும் புதிய பிறவியில் எவ்வாறு ஆன்மாவைப் பாதிக்கிறது என்பது குறித்துச் சொன்னது

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, ஓ! பாரதரே, நான் விடுதலையை {முக்தியை} அடைய வகைச் செய்யும் உயர்ந்த யோகத்தைக் குறித்து எனக்குச் சொல்வீராக. ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, யோகம் குறித்த அனைத்தையும் நான் அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகவும், விடுலை {முக்தி / மோக்ஷம்} குறித்தும் ஓர் ஆசானுக்கும், ஒரு சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒரு பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) முனிவர்களில் முதன்மையான ஒருவர் மறுபிறப்பாள ஆசானாகவும் இருந்தார். அவர் காந்தியின் திரளைப் போலத் தெரிந்தார். உயர்ந்த ஆன்மாவைக் கொண்ட அவர், உண்மையில் உறுதியுள்ளவராகவும், தன் புலன்களின் முற்றான தலைவனாகவும் இருந்தார்.(3)

ஒரு காலத்தில், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நல்ல கவனம் கொண்டவனுமான சீடன் ஒருவன் தன் ஆசானின் பாதங்களைத் தீண்டி, அவர் முன்பு குவிந்த கரங்களுடன் நின்று,(4) “ஓ! சிறப்புமிக்கவரே, என் வழிபாட்டில் நீர் நிறைவடைந்தீரென்றால், என் பெரும் ஐயம் ஒன்றைத் தீர்த்து வைப்பதே உமக்குத் தகும்.(5) நான் எங்கிருந்து வந்தேன்? நீர் எங்கிருந்து வந்தீர்? இதை எனக்கு முழுமையாகச் சொல்வீராக. இறுதிக் காரணம் யாது என்பதையும் எனக்குச் சொல்வீராக. ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அனைத்து உயிரினங்களின் பொருள் காரணம் ஒன்றாக இருக்கும்போது, அவற்றின் தோற்றமும், அழிவும் இத்தகைய வேறுபட்ட வழிகளில் நேர்வதேன்? ஓ! பெரும் கல்வியைக் கொண்டவரே, (பல்வேறு வகை மனிதர்களுக்குச் சொல்லப்பட்டுள்ள பல்வேறு சடங்குகள் குறித்து) வேதங்களில் உள்ள தீர்மானங்களின் நோக்கம், அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தும் ஸ்மிருதி கட்டளைகளின் பொருள் ஆகியவற்றை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்[1].(6,7)

ஆசான், “ஓ!! சீடா, ஓ! பெரும் ஞானியே, கேட்பாயாக. நீ என்னிடம் கேட்பது வேதங்களில் வெளிப்படுத்தப்பட்டிருப்பதும் {வேத ரஹஸ்யமும்}, சிந்தனை, அல்லது உரையாடலுக்குத் தகுந்த உயர்ந்த காரியமும் ஆகும். அஃது அத்யாத்மா என்றழைக்கப்படுகிறது, மேலும் கல்விக் கிளைகள் மற்றும் புனித நிலைகள் அனைத்திலும் அது மதிப்புமிக்கதாக இருக்கிறது.(8) வாசுதேவனே இந்த அண்டத்தில் ({அண்டக்} காரணத்தில்) உயர்ந்தவனாவான். அவனே வேதங்களின் மூலம் ({மூலச் சொல்லான} ஓம்) ஆவான். அவனே வாய்மை, அறிவு, வேள்வி, துறவு, தற்கட்டுப்பாடு, அறம் ஆகியவை ஆவான்.(9) வேதங்களை அறிந்த மனிதர்கள், அனைத்திலும் படர்ந்தூடுருவியிருப்பவனாக, அழிவில்லாதவனாக, எங்கும் படர்ந்திருப்பவனாக, அழிப்பவனாக, புலப்படாதவனாக, பிரம்மமாக, மாறும் இயல்பற்றவனாக அவனையே அறிகிறார்கள்.(10)

விருஷ்ணி குலத்தில் பிறந்தவனின் {விஷ்ணுவின்} கதையைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஒரு பிராமணன், அளவிலா சக்தி கொண்டவனும், தேவர்களுக்குத் தேவனும், விஷ்ணு என்றழைக்கப்படுபனுமான அவனின் மகிமையைப் பிராமணர்களின் உதடுகள் மூலம் அறிய வேண்டும். அரச வகையைச் சார்ந்த மனிதனர் அதே வகையைச் சார்ந்த மனிதர்கள் மூலம் கேட்க வேண்டும். ஒரு வைசியன் வைசியர்களின் மூலமும், ஓர் உயர் ஆன்ம சூத்திரன், சூத்திரர்களின் மூலம் அதைக் கேட்க வேண்டும்.(11,12) நீ அதைக் கேட்கத் தகுந்தவனே. கதைகள் அனைத்திலும் முதன்மையான கதையான கிருஷ்ணனின் மங்கலக் கதையை இப்போது கேட்பாயாக.

வாசுதேவன், தொடக்கமும் முடிவும் இல்லாத காலச்சக்கரமாவான். இருப்பு, இல்லாமை ஆகிய குணங்களின் மூலமே அவனது உண்மையான இயல்பை அறிந்து கொள்ள முடியும்.(13) அனைத்து உயிரினங்களின் தலைவனான அவனைச் சார்ந்தே இந்த அண்டமானது சக்கரம் போலச் சுழல்கிறது. ஓ! மனிதர்களில் சிறந்தவனே, உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான கேசவன், அழிவற்றவனாகவும், புலப்படாதவனாகவும், அழிவில்லாதவனாகவும், பிரம்மமாகவும், மாறும் இயல்பற்றவனாகவும் சொல்லப்படுகிறான்.(14) உயர்ந்ததில் உயர்ந்தவனும், மாற்றமும், சிதைவும் அற்றவனுமான அவனே, பித்ருக்கள், தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், நாகர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களைப் படைத்தான்.(15) வேதங்களையும், அழிவற்ற கடமைகளையும், மனிதர்களின் பழக்கவழக்கங்களையும் அவனே படைத்தான். அனைத்தையும் இல்லாமைக்குள் குறைக்கும் {அழிக்கும்} அவன், மீண்டும் (புதிய) யுகத் தொடக்கத்தில் (தொடக்கப் பருப்பொருளான) பிரக்ருதியைப் படைக்கிறான்.(16) பருவகாலத்தின் படி, ஒன்றன்பின் ஒன்றாகப் பல பருவங்களில் தோன்றும் பல்வேறு தோற்றங்களைப் போன்ற வகையிலேயே ஒவ்வொரு (தேவ) யுகத்தின் தொடக்கத்திலும் உயிரினங்கள் தோன்றுகின்றன.(17) புதிதாகப் பிறக்கும் உயிரினங்கள் தொடர்புடையதே, உலக நடைமுறையின் ஒழுங்கை நோக்கமாகக் கொண்ட விதிகள் மற்றும் கடமைகளைக் குறித்த அறிவாகும்[2].(18)(தேவ) யுகங்கள் ஒவ்வொன்றின் முடிவிலும் (பிரளயம் தோன்றும்போது), வேதங்களும், பிற சாத்திரங்கள் அனைத்தும் (எஞ்சியவை போல) காணாமல் போகின்றன. பெரும் முனிவர்கள், தான்தோன்றியின் {சுயம்புவின்} அருளின் விளைவால், தங்கள் தவங்களின் மூலம், முதலில் தொலைந்து போன வேதங்களையும், சாத்திரங்களையும் மீண்டும் அடைகின்றனர்.(19) தான்தோன்றியே (பிரம்மனே) முதலில் வேதங்களை அடைந்தான். அங்கங்கள் என்றழைக்கப்படும் அவற்றின் கிளைகளை {வேதங்கங்களை} (தேவ குருவான) பிருஹஸ்பதி முதலில் அடைந்தார். அண்டத்திற்கு நன்மை பயக்கும் அறநெறி அறிவியலை {நீதி சாத்திரத்தை} பிருகுவின் மகன் (சுக்கிரன்) முதலில் அடைந்தார்.(20) இசை அறிவியல் {சங்கீத சாஸ்திரம்} நாரதரால் அடையப்பட்டது; ஆயுத அறிவியல் {தனுர் வேதம்} பரத்வாஜரால் அடையப்பட்டது; தெய்வீக முனிவர்களின் வரலாறு {சோதிடம் / வானியல்} கர்க்கரால் அடையப்பட்டது; மருத்துவ அறிவியல் கரிய நிறத்தவரான அத்ரியின் மகனால் {கிருஷ்ணாத்ரேயரால்} அடையப்பட்டது.(21) நியாயம் (வைசேஷிகம், சாங்கியம், பாதஞ்சலம் முதலியவை) போன்ற பல்வேறு பிற அறிவியல்களை அதன் தொடர்புடைய பெயரைக் கொண்ட பல்வேறு முனிவர்கள் அறிவித்தனர். வேதங்களின் மூலமும், புலன்களின் நேரடி சாட்சியம் மூலம் பெறப்பட்ட உள்ளுணர்வின் மூலமும் அறிவில் இருந்து ஈர்க்கப்பட்ட வாதங்களைக் கொண்டு அந்த முனிவர்களால் குறிப்பிடப்படும் பிரம்மம் துதிக்கப்படட்டும்[3].(22)(“கௌதமரானவர் ந்யாயசாஸ்திரமுழுமையையும் உண்மையாய் அறிந்தார். வேதங்களையறிந்தவரும், பிரம்மத்தையறிந்தவரும் பிரபுவுமான ஸ்ரீ வ்யாஸரானவர் வேதாந்தத்தையும், கர்மயோகத்தையும் அறிந்தார். ப்ருகுவானவர் சில்பசாஸ்த்ரத்தை அறிந்தார். அந்த அந்த வாதிகளால் பல தர்க்க சாஸ்த்ரங்களும் கற்பிக்கப்பட்டன. எது யுக்தியுடனும், ஆகமத்துடனும், ஸதாசாரத்துடனும் கூறப்பட்டதோ அஃது ஆதரிக்கப்படுகிறது”)தொடக்கமில்லாததும், உயர்ந்ததில் உயர்ந்ததுமான பிரம்மத்தைத் தேவர்களோ, முனிவர்களோ (முதலில்) அறியவில்லை. அனைத்தையும் படைத்தவனும், தெய்வீகமானவனும், பலமிக்கவனுமான நாராயணன் மட்டுமே பிரம்மத்தைக் குறித்த அறிவைப் பெற்றிருந்தான்.(23) முனிவர்கள், தேவர்களில் முதன்மையானோர், அசுரர்கள், பழங்காலத்தின் அரசமுனிகள் ஆகியோர் நாராயணனிடமிருந்தே கவலைத் தீர்க்கும் உயர்ந்த மருந்தின் அறிவை அடைந்தனர்.(24) தொடக்கத்திலிருந்த பருப்பொருள், தொடக்க சக்தியின் செயல்பாட்டின் மூலம் இருப்புகளை உண்டாக்கும்போது, அதிலிருந்து திறன்கள் அனைத்துடன் கூடிய அண்டமானது உண்டாகிறது[4].(25) ஒளி ஏற்றப்பட்ட ஒரு விளக்கிலிருந்து, ஆயிரக்கணக்கான பிற விளக்குகள் ஒளியேற்றப்படவல்லனவாக உள்ளன. அதே வகையிலேயே, தொடக்ககாலப் பருப்பொருள் இருப்புக்குரிய ஆயிரக்கணக்கான பொருட்களை உண்டாக்குகிறது. மேலும், அதன் முடிவிலாத் தன்மையின் விளைவால் அந்தப் பொருள் ஒருபோதும் தீர்ந்து போவதில்லை.(26)(“ப்ரக்ருதியானது எப்பொழுது ஈசனென்னும் புருஷனால் ஆலோசிக்கப்பட்ட பொருள்களை உண்டுபண்ணத் தொடங்குகிறதோ அப்பொழுது (தர்மம் அதர்மம் என்ற) காரணங்களுடன் கூடிய உலகமானது இந்த ப்ரக்ருதியினிடத்திலிருந்து முதலில் உண்டாகிறது)புலப்படாததில் {பரம்பொருளில்}<1> இருந்து தீர்மானிக்கப்பட்ட செயல்களால் புத்தி<2> எழுகிறது. புத்தி நனவுநிலையை {அஹங்காரத்தை}<3> உண்டாக்குகிறது. நனவுநிலையிலிருந்து {அஹங்காரத்திலிருந்து} ஆகாயம்<4> உண்டாகிறது. ஆகாயம் காற்றை<5> உண்டாக்குகிறது.(27) காற்று வெப்பத்தை<6> உண்டாக்குகிறது. வெப்பம் நீரை<7> உண்டாக்குகிறது, நீரானது பூமியை {நிலத்தை}<8> உண்டாக்குகிறது. இந்த எட்டும் தொடக்ககாலப் பிரகிருதியில் இருக்கின்றன. இந்த அண்டம் அவற்றையே சார்ந்திருக்கிறது.(28) இந்த எட்டிலிருந்தே ஐந்து அறிவுப்புலன்களும் {ஞானேந்திரியங்களும்}, ஐந்து செயற்புலன்களும் {கர்மேந்திரியங்களும்}, (முதல் ஐந்து) புலன்களுக்குரிய புலன்நுகர் பொருட்களும் {விஷயங்களும்}, பதினாறாவதாக அவற்றின் மாற்றத்தின் விளைவால் உண்டான ஒரு மனமும் {சேர்ந்து பதினாறு காரியங்களாகத்} தோன்றுகின்றன.(29) காது, தோல், இரு கண்கள், நாக்கு, மூக்கு ஆகியனவே ஐந்து அறிவுப்புலன்களாகும் {ஞானேந்திரியங்களாகும்}. இரு கால்கள், குதம் {பாயு}, பிறப்புறுப்பு {உபஸ்தம்}, இரு கரங்கள், வாக்கு ஆகியனவே ஐந்து செயற்புலன்களாகும் {கர்மேந்திரியங்களாகும்}.(30) ஒலி, தீண்டல் {ஊறு}, வடிவம் {ஒளி}, சுவை, மணம் ஆகியவையே அனைத்தையும் மறைத்திருப்பவையும், புலன்களுக்குரியவையுமான புலன் நுகர் பொருட்கள் {விஷயங்களாகும் [தன்மாத்திரைகள்]} ஆகும். மனமானது அனைத்துப் புலன்களிலும், அவற்றுக்குரிய பொருட்களிலும் {விஷயங்களிலும்} வசிக்கிறது.(31) சுவை என்ற உணர்வில் மனமே நாவாக இருக்கிறது, வாக்கில் இந்த மனமே வார்த்தைகளாகிறது. பல்வேறு புலன்களுடன் கூடிய மனமே, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் உணர்கிறது.(32)

தங்கள் தங்களுக்குரிய வடிவங்களில் இருக்கும் இந்தப் பதினாறும் தேவர்களாக அறியப்பட வேண்டும். எவன் அறிவுகள் அனைத்தையும் படைத்தவனோ, எவன் உடலுக்குள் வசிக்கிறானோ அவனையே {பரமாத்மா / ஆத்மா} இவை வழிபடுகின்றன.(33) சுவையானது நீரின் குணமாகவும்; மணமானது பூமியின் {நிலத்தின்} குணமாகவும்; கேள்வியானது ஆகாயத்தின் குணமாகவும்; பார்வையானது {வடிவமானது} நெருப்பு அல்லது ஒளியின் குணத்தைக் கொண்டதாதாகவும்;(34) தீண்டல் {ஊறு} என்பது காற்றின் குணத்தைக் கொண்டதாகவும் அறியப்பட வேண்டும். இதுவே அனைத்துக் காலங்களிலும் அனைத்து உயிரினங்களின் வழக்காகும்.(35) மனமானது, இருப்பின் குணமாகச் சொல்லப்படுகிறது. இருப்பானது, இருப்பிலுள்ள அனைத்துக்கும் ஆன்மாவாக இருக்கும் புலப்படாததிலிருந்து {பரமாத்மாவிலிருந்து} (அல்லது பிரகிருதியிலிருந்து} உண்டாகிறது என்பதை நுண்ணறிவுமிக்க ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டும்.(36) பிரகிருதிக்கு மேலானதாக இருக்கும் உயர்ந்த தெய்வீகத்தைச் சார்ந்தவையும், செயல்படாமல் இருப்பவையுமான இந்த இருப்புகளே {அவ்யக்தம் முதலிய பொருட்களே}, அசையும் மற்றும் அசையாதன அடங்கிய மொத்த அண்டத்தையே தாங்கிப் பிடிக்கின்றன.(37) இந்தப் புனிதமான மாளிகையின் {உடலின்} ஒன்பது வாயில்களும் இந்த இருப்புகள் அனைத்தையும் கொண்டவையே. அவற்றிலும் உயர்ந்ததான ஆன்மாவானது, அதற்குள்ளேயே {உடலிலேயே} வசித்துக் கொண்டு, முழுமையாக அதனுள் படர்ந்தூடுருவி இருக்கிறது. இதன் காரணமாகவே அது {ஆன்மா} புருஷன் என்றழைக்கப்படுகிறது.(38)

ஆன்மாவானது சிதைவற்றதும், மரணத்திற்கு உட்படாததுமாகும். புலப்படும் மற்றும் புலப்படாதவற்றைக் குறித்த அறிவு அதற்கு இருக்கிறது. மேலும் அஃது அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதாகவும், குணங்களைக் கொண்டதாகவும், நுட்பமானதாகவும், இருப்புகள் மற்றும் குணங்கள் அனைத்திற்கும் புகலிடமாகவும் இருக்கிறது.(39) பெரியதாக அல்லது சிறியதாக இருக்கும் பொருட்கள் அனைத்தையும் (அதனதன் அளவைப் பொருட்படுத்தாமல்) காணச் செய்யும் ஒரு விளக்கைப் போலவே அனைத்து உயிரினங்களில் உள்ள ஆன்மாவும், (அதம உயிரினங்களின் குணங்களைக் கருத்தில் கொள்ளாத) அறிவின் கோட்பாடாக இருக்கிறது.(40) கேட்பதைக் கேட்க காதைத் தூண்டி ஆன்மாவே கேட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோலக் கண்ணைப் பயன்படுத்தி ஆன்மாவே பார்க்கிறது. ஆன்மா அடையும் அறிவுக்கு இந்த உடலே வழிமுறைகளைக் கொடுக்கிறது. உடலில் உள்ள உறுப்புகள் செயல்படுபவையல்ல. ஆன்மாவே அனைத்துச் செயல்களையும் செய்வதாக இருக்கிறது.(41) மரத்திற்குள் நெருப்பு இருக்கிறது, ஆனால் அந்த மரத்துண்டை வெட்டித் திறந்தால் அதைக் காண முடியாது. அதே போலவே ஆன்மா உடலுக்குள் வசித்தாலும், உடலைக் கூறுபோடுவதால் அஃதை ஒருபோதும் காணமுடியாது.(42) மரத்தை மற்றொரு மரத்துடன் சரியான வழிமுறைகளின்படி உரசும்போது மரத்திற்குள் வசிக்கும் நெருப்பானது காணப்படுகிறது. அதே வகையில், உடலுக்குள் வசிக்கும் ஆன்மாவும், யோகம் எனும் சரியான வழிமுறைகளைப் பயன்படுத்தும்போது காணப்படும்.(43)

நீரானது ஆறுகளில் இருக்கிறது. ஒளிக்கதிர்கள் எப்போதும் சூரியனையே பற்றியிருக்கிறது. அதே வகையிலேயே ஆன்மாவுக்கும் ஓர் உடல் இருக்கிறது. ஆன்மாவானது அடுத்தடுத்த உடல்களில் நுழைய வேண்டிய காரணதால் இந்தத் தொடர்பு நிற்காமல் தொடர்கிறது[5].(44) ஒரு கனவில், ஐந்து வகைப் புலன்களுடன் கூடிய ஆன்மாவானது, உடலைவிட்டகன்று பரந்த பகுதிகளில் திரிகிறது. அதே வகையிலேயே மரணம் ஏற்படும்போதும், (நுண்ணிய வடிவங்களிலான புலன்களுடன் கூடிய) ஆன்மாவானது, மற்றொரு உடலுக்குள் நுழைவதற்காக, {தானிருக்கும்} ஓர் உடலைக் கடந்து செல்கிறது.(45) ஆன்மாவானது அதன் முற்பிறவி செயல்களுக்குக் கட்டுப்பட்டிருக்கிறது. ஓர் இருப்பு நிலையில் செய்யப்பட்ட செயல்களுக்குக் கட்டுப்பட்டிருக்கும் அது, மற்றொரு நிலையை அடைகிறது. உண்மையில், பலமிக்க விளைவுகளைக் கொண்டவையான தன் செயல்களின் மூலமே அஃது ஓர் உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு வழிநடத்தப்படுகிறது.(46) ஒரு மனித உடலுக்குச் சொந்தக்காரன் {ஆன்மாவானது}, தன் உடலை விட்டகன்று, எவ்வாறு மற்றொரு உடலுக்குள் நுழைகிறான்? உண்மையில் (கடந்த கால மற்றும் தற்கால வாழ்வுகளில்) தங்கள் தங்களுக்குரிய செயல்களின் விளைவால் எவ்வாறு மொத்த உயிரினங்களும் உண்டாகின்றன? என்பதைக் குறித்து இப்போது நான் உனக்குச் சொல்லப்போகிறேன்” என்றார் {அந்த ஆசான்}(47).(“ஆறுகளில் ஜலங்களும், ஸூர்யனிடத்தில் கிரணங்களும் சேர்ந்து கொண்டு தொடர்ந்தவைகளாக எவ்விதம் செல்லுகின்றனவோ அவ்விதம் சரீரிகளுக்குச் சரீரங்கள் செல்லுகின்றன)

ஆத்ம தத்துவம்! – சாந்திபர்வம் பகுதி – 211-செயல்களின் பிறப்பு மற்றும் ஞானத்தின் இயல்பு ஆகியவற்றைக் குறித்து ஓர் ஆசானுக்கும் சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{ஆசான் தன் சீடனிடம் தொடர்ந்தார்}, “நான்கு வகைகளில் பிரிந்திருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும், புலப்படாத பிறப்பையும், புலப்படாத மரணத்தையும் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. புலப்படாத ஆன்மாவில் மட்டுமே இருக்கும் மனமானது, புலப்படாத குணங்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது[1].(1) மலராத அஸ்வத மலருக்குள் பதுங்கிருந்த ஒரு பெரிய மரம், வெளியே வரும்போது மட்டுமே புலப்படுவதைப் போலவே, புலப்படாததிலிருந்து பிறப்பு நேர்கிறது.(2) அசைவற்றதாக இருக்கும் இரும்புத் துண்டானது, காந்தத் துண்டை நோக்கி ஓடும். அதே போலவே, இயற்கையான உள்ளுணர்வுகளின் மூலமான விளையும் விருப்பங்கள், மனச்சார்புகள் மற்றும் யாவும் புதுப்பிறவியில் ஆன்மாவை நோக்கி ஓடுகின்றன[2].(3) உண்மையில், அந்த மனச்சார்புகளும், உடைமைகளும், அறியாமை மற்றும் மாயையிலிருந்து உண்டாகி, இயல்பில் அசைவற்றவனவாக இருந்தாலும், அந்த ஆன்மாவானது மீண்டும் {புதிய} பிறப்பை அடையும்போது, ஆன்மாவில் கலந்துவிடுவதைப் போல, பிரம்மத்தில் இருந்தே நேரடியாக வரும் அந்த ஆன்மாவின் மனச்சார்புகளும், நாட்டங்களும் பிரம்மத்தை நோக்கித் தங்கள் பார்வையைச் செலுத்தி, தங்களை அதனுடன் இணைத்துக் கொள்கின்றன[3].(4) சித் எனும் ஆன்மாவை {ஜீவனைத்} தவிரப் பூமியோ, வானமோ, சொர்க்கமோ, பொருட்களோ, உயிர்மூச்சுகளோ, அறம் மற்றும் மறமோ, வேறு எதுவுமோ முன்பு இருந்ததில்லை. அறியாமையால் மாசடைந்த சித் எனும் ஆன்மாவிடம் {ஜீவனிடம்} அவை எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை[4].(5)ஆன்மா நித்தியமானதாகும் {நிலையானதாகும்}. அஃது அழிவற்றதாகும். ஒவ்வொரு உயிரினத்திலும் அது தோன்றுகிறது. மனத்திற்கு அதுவே காரணமாக இருக்கிறது. அது குணங்களற்றதாக இருக்கிறது. நாம் காணும் இந்த அண்டமானது, அறியாமை அல்லது மாயையின் காரணமாக விளைவது என்று (வேதங்களில்) தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஆன்மாவானது, முற்பிறவி விருப்பங்களின் காரணமாகவே, வடிவம் முதலியவற்றை உணர்கிறது[5].(6) ஆன்மாவானது, அந்தக் காரணங்களுடன் (விருப்பங்களுடன்) கூடியதாகும்போது, செயல்களில் ஈடுபடும் நிலைக்கு வழிநடத்தப்படுகிறது. (அந்தச் செயல்கள் மீண்டும் ஆசைகளை உண்டாக்கி புதிய செயல்களைச் செய்ய வைக்கும்) அந்நிலையில் விளைவால், இருப்பெனும் {வாழ்வெனும்} இந்தப் பெருஞ்சக்கரம் தொடக்கமும், முடிவும் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கிறது[6].(7) புலப்படாதது (ஆசைகளுடன் கூடிய புத்தியானது), அந்தச் சக்கரத்தின் அச்சாக இருக்கிறது. புலப்படக்கூடியது (புலன்களுடன் கூடிய உடலானது) அதன் ஆரங்களின் கூட்டமாக இருக்கிறது. உணர்வுகளும் {ஞானமும்}, செயல்களும் {கர்மமும்} அதன் சுற்றளவாக {சக்கரத்தின் வட்டையாக} இருக்கின்றன. ரஜஸ் (ஆசை) குணத்தால் உந்தப்படும் ஆன்மாவானது (அதன் சுழற்சியைப் பார்த்துக் கொண்டே) அதைச் சுழலச் செய்கிறது.(8) காணிகர்கள் {எண்ணெய் ஆட்டுபவர்கள்} தங்கள் செக்கில் எள்ளையிட்டு ஆட்டுவதைப் போல, அறியாமையில் பிறந்த விளைவுகள் {காரியங்கள்}, ரஜஸ் {ஆசை} குணத்தால் நனைக்கப்பட்ட (உயிரினங்களுடன் கூடிய) அண்டத்தை அந்தச் சக்கரத்தில் இட்டு, அதைத் தாக்கி, நசுக்கவோ, அரைக்கவோ செய்கின்றன.(9) உயிரினமானது {ஜீவனானது}, இந்த அடுத்தடுத்த இருப்புகளில், ஆசையின் விளைவால் உண்டான சுயக் கருத்தால் பற்றப்பட்டுச் செயல்களில் ஈடுபடுகிறது. காரணம் மற்றும் விளைவின் {காரியத்தின்} கலப்பில் அந்தச் செயல்கள் மேலும் (புதிய) செயல்களை உண்டாக்குகின்றன[7].(10)விளைவுகள் {காரியங்கள்} காரணங்களுக்குள் நுழைவதில்லை. அல்லது காரணங்களும், விளைவுகளுக்குள் {காரியங்களுக்குள்} நுழைவதில்லை. விளைவுகளை {காரியங்களை} உண்டாக்குவதில் காலமே காரணமாக இருக்கிறது[8].(11) காரணங்களால் நிறைந்தவையாக இருக்கும் தொடக்ககாலச் சாரங்களும் (முன்னர்க் குறிப்பிட்ட எட்டு காரணங்கள்), அவற்றின் (பதினாறு) மாறுதல்களும் {காரியங்களும்} ஆன்மாவால் எப்போதும் நடத்தப்படுவதன் விளைவால் {காரணங்களும், காரியங்களும்} ஒன்றுகலந்த நிலையிலேயே இருக்கின்றன[9].(12) புழுதியானது காற்றால் அசைக்கப்பட்டு, அதைப் பின்தொடர்ந்து செல்வதைப் போலவே, உடலை இழந்ததும், இன்னும் ஆசை {ரஜஸ்} குணம் மற்றும் இருள் {தமோ} குணத்தில் பிறந்த விருப்பங்களுடன் கூடியதும், முடிந்து போன பிறவியில் செய்த செயல்களுக்கான காரணக் கோட்பாடுகளுடன் கூடியதுமான ஜீவாத்மாவும், பரமாத்மாவால் அசைக்கப்பட்டு, அது {பரமாத்மா} காட்டும் திசையில் செல்கிறது.(13) எனினும், ஆன்மாவானது, ஒருபோதும் அந்த விருப்பங்கள் மற்றும் மனச்சார்புகளால் தீண்டப்படுவதில்லை. அதேபோல இவற்றிலும் மேன்மையான ஆன்மாவால் இவை தீண்டப்படுவதுமில்லை. தூய இயல்பைக் கொண்ட காற்றானது ஒருபோதும் அது தாங்கிச் செல்லும் காற்றால் களங்கமடைவதில்லை[10].(14)(“அவ்யக்தமான வாஸனையைக் குடமாகவும், வ்யக்தமான சரீர முதலியவைகளை ஆர்களாகவும், ஞானம் கர்மம் முதலிய காரியங்களைச் சுற்றிலுமுள்ள வட்டையாகவும், ஆசையென்ற பசையுள்ள ரஜோகுணத்தை அச்சாகவும் கொண்ட சம்ஸாரசக்ரமானது க்ஷேத்ரஜ்ஞனான ஜீவனால் ஏறப்பட்டு உறுதியாயிருக்கிறது. எண்ணெயென்னும் ஸ்நேகமுள்ளதாயிருப்பதால் எள்ளானது செக்கார்களால் பீடிக்கப்படுவது போல இவ்வுலகம் யாவும் ஆசையென்னும் ஸ்நேகமுள்ளதாயிருப்பதனால் அஜ்ஞானத்தாலுண்டாகும் போகங்களால் ஆக்ரமித்து இந்த ஸம்ஸாரசக்ரத்தில் பீடிக்கப்படுகிறது. இந்த உலகமானது போக விருப்பத்தாலுண்டான அபிமானத்தால் பிடிகப்பட்டுக் கர்மத்தைச் செய்கிறது. அந்தக் கர்மமானது அஜ்ஞானத்திற்கும் சரீரத்திற்கும் சேர்க்கையுண்டாவதற்குக் காரணமென்று உபதேசிக்கப்படுகிறது. காரணமானது கார்யத்தைப் போய் அடைகிறதில்லை. அதுபோலக் கார்யமும் காரணத்தை அடைவதில்லை. இக்கார்யங்கள் காரணத்திலிருக்கின்றன. இதர காரணங்களுடன் கூடிய காலமானது (அவைகளை வெளிபண்ணக்) காரணமாயிருக்கிறது”பரம்பொருள், புத்தி, நனவுநிலை {அஹங்காரம்}, ஆகாயம், காற்று, வெப்பம், நீர், பூமி ஆகிய எட்டும் தொடக்கக் காலப்ரகிருதியின் சாரங்களாகும் {காரணங்களாகும்}. அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} ஐந்தும், செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தும், புலன்களுக்குரிய பொருட்கள் {விஷயங்கள்} ஐந்தும், மனமும் சேர்ந்த பதினாறும் காரியங்களாகும்.)காற்றானது, அது சுமந்து செல்லும் புழுதியில் இருந்து உண்மையில் தனித்திருப்பதைப் போலவே, ஒரு ஞானியானவன், இருப்பு அல்லது வாழ்வு என்றழைக்கப்படும் ஒன்றுக்கும், ஆன்மாவுக்கும் இடையில் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள வேண்டும். உடல், புலன்கள், பிற மனச்சார்புகள், நம்பிக்கைகள், நம்பிக்கையின்மைகள் ஆகியவற்றுடன் ஆன்மாவானது வெளிப்படையாகக் கலந்திருப்பதன் விளைவால், அதற்கு {ஆன்மாவுக்கு} அவை அவசியமானவை மற்றும் முழுமையான குணங்களாக இருப்பவை என்று உண்மையில் ஒருவரும் எடுத்துக் கொள்ளக்கூடாது. மறுபுறம், ஆன்மாவானது தன்னியல்பிலேயே இருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார் {ஆசான்}.(15) இவ்வாறே அந்தத் தெய்வீக முனிவர் தமது சீடனின் மனத்தில் இருந்த ஐயத்தைத் தீர்த்தார். இவை யாவும் இருந்த போதிலும், துன்பத்தைக் கைவிடுவதற்கும், மகிழ்ச்சியை வெல்வதற்கும் செயல்கள் மற்றும் சாத்திரச் சடங்குகள் அடங்கிய வழிமுறைகளையே மக்கள் சார்ந்திருக்கின்றனர்.(16) நெருப்பால் எரிக்கப்பட்ட வித்துகள் முளைப்பதில்லை. அதே வகையில், துன்பத்தை அளிக்கும் அனைத்தும் உண்மை ஞானம் என்ற நெருப்பால் எரிக்கப்பட்டால், ஆன்மாவானது இவ்வுலகில் மறுபிறவி என்ற கடப்பாட்டில் இருந்து தப்பித்துவிடும் {விடுதலை பெறும் / முக்தி அடையும்}” என்றார் {பீஷ்மர்}.(17)

தோஷங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 212-அறியாமையின் மூலம் பிறக்கும் களங்கங்கள்; மாயைகளை உண்டாக்கும் தமோ குணம்; களங்கங்களை விரட்டப் பயன்படும் ஆய்வு; குணங்களில் பிறக்கும் களங்கங்களை விரட்டி முக்தி அடையும் ஆன்மா ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனிடம் பேசிய பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “செயல்களை {கர்மங்களைச்} செய்வதில் ஈடுபடுபவர்கள் {ப்ரவ்ருத்தி தர்மத்திலிருப்பவர்கள்}, செயல்களைச் செய்வதையே உயர்வாகக் கருதுகிறார்கள். அதுபோலவே, அறிவில் ஈடுபாடு கொண்டவர்கள் {ஞானநிஷ்டையிலுள்ளவர்கள்} அறிவைத் தவிர வேறு எதையும் கருதுவதில்லை.(1) வேதங்கள் மற்றும் அவற்றில் சொல்லப்பட்டவற்றைச் சார்ந்தவைகளை முழுமையாக அறிந்தவர்கள் மிக அரிதானவர்களே. நுண்ணறிவுமிக்கவர்கள், சொர்க்கம் மற்றும் விடுதலை {முக்தி} ஆகிய இரண்டைவிடச் சிறந்த பாதையாகச் செயல்களைத் துறக்கும் பாதையையே {ஞான வழியையே} விரும்புகிறார்கள்[1].(2) பெரும் ஞானம் கொண்டவர்களாலேயே செயல்களில் துறவு நோற்கப்படுகிறது. எனவே, அந்த ஒழுங்கே மெச்சத்தகுந்ததாகும். செயல்களில் இருந்து விடுபடத் தூண்டும் புத்தியாலேயே ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(3) உடலைக் கொண்ட ஒரு மனிதன், கோபம், பேராசை ஆகியவற்றுடனும், ஆசை {ரஜஸ்} குணம் மற்றும் இருள் {தமோ} குணத்தில் பிறந்த மனச்சார்புகள் அனைத்துடனும், மடமையின் மூலமும், உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களிலும் பற்று கொள்கிறான்.(4) எனவே, ஒருவன், தன் உடலுடன் கொண்ட தொடர்பை அழிக்க விரும்பினால், அவன் தூய்மையற்ற எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடாது[2].(5)தங்கமானது, இரும்புடன் சேரும்போது, அதன் தூய்மையை இழந்து ஒளிரத் தவறுவதைப் போலவே, ஞானமானது, உலகம் சார்ந்த பற்று மற்றும் அத்தகைய களங்கங்களுடன் {தோஷங்களுடன்} இருக்கும்போது, காந்தியை வெளியிடத் தவறுகிறது.(6) பேராசையின் ஆதிக்கத்தில், கோபம் மற்றும் ஆசையின் ஆணைகளைப் பின்பற்றி, மறம் {அதர்மம்} பயின்று, அறத்தின் பாதையை மீறிச் செல்லும் ஒருவன் முற்றான அழிவையே அடைகிறான்.(7) தனக்கு நன்மை செய்து கொள்ள விரும்பும் ஒருவன், உலகம் சார்ந்த உடைமைகளைப் பிரதிபலிக்கும் புலன்நுகர் பொருட்களில் ஒருபோதும் அதீதப் பற்றுக் கொள்ளக்கூடாது. ஒருவன் அதைச் செய்வானானால், கோபம், இன்பம் மற்றும் துன்பம் ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்றாக எழும் (அவ்வாறு எழுந்து ஒருவனைத் துன்புறுத்தும்).(8) ஒவ்வொருவரின் உடலும், மூலமான ஐந்து பூதங்களாலும், நற்குணம் {சத்வகுணம்}, ஆசை {ரஜோ} குணம், இருள் {தமோ} குணம் ஆகிய குணங்களாலும் அமைக்கப்பட்டிருக்கும்போது, ஒருவன் யாரைத் துதிக்க வேண்டும்? எந்த வார்த்தைகளால் யாரை நிந்திக்க வேண்டும்?(9) மூடர்கள் மட்டுமே புலன்நுகர் பொருட்களில் பற்றுடன் இருக்கிறார்கள். மடமையின் விளைவால் அவர்கள், தங்கள் உடலானது, பூமியின் மாறுதல்கள் {பூமியில் உண்டான காரியங்கள்} மட்டுமே என்பதை அறியாதிருக்கிறார்கள்[3].(10)மண்ணால் அமைக்கப்பட்ட வீடானது, மண்ணால் பூசப்படுவதைப் போலவே, மண்ணாலான இந்த உடலும், பூமியின் மாறுதலான {காரியமான} உணவின் மூலம் அழிவில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.(11) தேன், எண்ணெய், பால், நெய், இறைச்சி, உப்பு, வெல்லம், அனைத்துவகைத் தானியங்கள், கனிகள், கிழங்குகள் ஆகிய அனைத்தும் நீருடன் கூடி பூமியின் மாறுதல்களே {காரியங்களே} ஆகும்.(12) காட்டில் வாழும் துறவிகள், (ஆடம்பர மற்றும் சுவைமிக்க உணவுக்கான) ஏக்கங்கள் அனைத்தையும் கைவிட்டு, உடலைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே சுவையற்ற எளிய உணவை உண்கின்றனர்.(13) அதே வகையில், உலகின் காடுகளில் வசிக்கும் மனிதன், உழைப்புக்குத் தயாராக இருந்து, வாழ்வைக் கடந்து செல்வதற்காக மருந்தை உட்கொள்ளும் நோயாளியைப் போலவே உணவை உட்கொள்ள வேண்டும்[4].(14)உன்னத ஆன்மா கொண்ட மனிதன், தன்னிடம் வரும் உலகம்சார்ந்த பொருட்கள் அனைத்தின் இயல்பையும் ஆய்வு செய்து, வாய்மை, தூய்மை, வெளிப்படைத்தன்மை {நேர்மை}, துறவு {தியாகம்}, ஞானம், துணிவு, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உறுதி {தைரியம்}, நுண்ணறிவு {புத்தி}, சிந்தனை {மனம்}, தவங்கள், ஆகியவற்றின் உதவியுடனும், அமைதியை அடையும் விருப்பத்துடனும் தன் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.(15,16) அறியாமையின் விளைவால் திகைப்படையும் உயிரினங்கள் அனைத்தும், நற்குணம் {சத்வகுணம்}, ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருளின் {தமோ குணத்தின்} மூலம் ஒரு சக்கரத்தைப் போலத் தொடர்ந்து சுழன்று {செயல்களில் ஈடுபட்டு} வருகின்றன.(17) எனவே அறியாமையில் பிறக்கும் களங்கங்கள் {தோஷங்கள்} அனைத்தையும் மிகக் கவனமாக ஆய்வு செய்து, அறியாமையைத் தோற்றுவாயாகக்கொண்டதும், துன்பத்தை உண்டாக்குவதுமான தன்னுணர்வைத் தவிர்க்க வேண்டும்.(18) ஐவகைப் பூதங்கள், புலன்கள், நற்குணம் {சத்வகுணம்}, ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {ரஜோ} குணங்கள், பரம்பொருளுடன் கூடிய மூவுலகங்கள், செயல்கள் ஆகிய அனைத்தும் தன்னுணர்வை {சுயப்ரக்ஞையைச்} சார்ந்தவையாக இருக்கின்றன[5].(19) காலமானது, தன் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, எப்போதும் பருவகாலத் தோற்றங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டுவதைப் போலவே, அனைத்து உயிரினங்களிலும் உள்ள தன்னுணர்வானது, செயல்களைச் செய்யத் தூண்டுகிறது[6].(20)(எதில் தன்னுணர்வு பிறக்கிறதோ அந்த) தமஸ் {இருள் குணம்}, மாயைகளை உண்டாக்கவல்லது என்பது அறியப்பட வேண்டும். அஃது {இருள் குணமானது} இருளைப் போன்றதும் அறியாமையில் பிறந்ததும் ஆகும். நற்குணம், ஆசை குணம், இருள் குணங்கள் ஆகிய மூன்று குணங்களுடன் (உயிரினங்களின்) இன்ப துன்பங்கள் அனைத்தும் பிணைக்கப்பட்டிருக்கின்றன.(21) நற்குணம், ஆசை குணம் மற்றும் இருள் குணங்களில் இருந்து எழும் விளைவுகளை இப்போது கேட்பாயாக. மனநிறைவு, இன்பத்தில் இருந்து எழும் திருப்தி, உறுதித்தன்மை {ஐயமில்லாமை}, நுண்ணறிவு {தைரியம்}, நினைவு ஆகிய இவை நற்குணத்தில் பிறந்த விளைவுகளாகும். நான் இப்போது ஆசை மற்றும் இருள் குணங்களின் விளைவுகளைச் சொல்லப் போகிறேன்.(22) ஆசை, கோபம், குற்றம், பேராசை, மலைப்பு, அச்சம், களைப்பு ஆகியவை ஆசை குணத்துக்குச் சொந்தமான விளைவுகளாகும். உற்சாகமின்மை, துயரம், நிறைவின்மை, வறட்டுப் பெருமை, செருக்கு, தீமை ஆகிய அனைத்தும் இருள் குணத்துக்குச் சொந்தமான விளைவுகளாகும்.(23) இவற்றின் கனம், அல்லது கனமின்மையையும், ஆன்மாவில் வசிக்கும் பிற குறைகளையும் ஆய்வு செய்யும் ஒருவன், (அவற்றில் எவை இருக்கின்றன, எவை பலமானவை, எவை பலவீனமானவை, எவை விரட்டப்பட்டுவிட்டன, எவை இன்னும் எஞ்சியிருக்கின்றன என்பது உறுதி செய்வதற்காக) ஒன்றன்பின் ஒன்றாக அவை ஒவ்வொன்றையும் குறித்துச் சிந்திக்க வேண்டும்” என்றார் {பீஷமர்}.(24)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “விடுதலையை {முக்தியை} விரும்பும் மனிதர்கள் எந்தக் களங்கங்களைக் கைவிடுகிறார்கள்? எவற்றை அவர்கள் பலவீனப்படுத்துகிறார்கள். (கைவிட இயலாத வகையில்) மீண்டும் மீண்டும் திரும்ப வரும் களங்கங்கள் யாவை?(25) உண்மையில், ஒரு ஞானியாவன், நுண்ணறிவும் மற்றும் காரணங்களின் துணையுடன் எந்தக் களங்கங்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்துச் சிந்திக்க வேண்டும்? இவை குறித்து எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. ஓ! பாட்டா, இவை குறித்து என்னிடம் உரையாடுவீராக” என்றான்.(26)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தூய ஆன்மா கொண்ட ஒரு மனிதன், தன் களங்கங்கள் அனைத்தையும் வேருடன் பிடுங்குவதன் மூலம், விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான். இரும்பாலான கோடரியொன்று இரும்புச் சங்கிலியைப் பிளப்பதைப் போலவே, தூய ஆன்மா கொண்ட ஒரு மனிதன், இருள் குணத்தில் உதித்தவையும், (மறுபிறவியில்) ஆன்மாவுடன் சேர்ந்து பிறப்பவையுமான அந்தக் களங்கங்கள் அனைத்தையும் அழித்து, உடலுடன் கூடிய தன் தொடர்பைக் கரைப்பதில் வெல்கிறான் (விடுதலையை {முக்தியை} அடைகிறான்).(27) ஆசையில் இருந்து பிறக்கும் குணங்களும், இருளில் இருந்து பிறக்கும் குணங்களும், தூய்மையில் இருந்து பிறக்கும் களங்கமற்றவைகளும் (நற்குணத்தின் கீழ் சேர்க்கப்படுபவையும்), உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் எதில் வளர்கின்றனவோ அந்த வித்திலேயே இருக்கின்றன. இவற்றில், நற்குணம் மட்டுமே, தூய ஆன்மாக்களைக் கொண்டோர் விடுதலை {முக்தி} அடைவதற்குக் காரணமாக இருக்கிறது.(28) எனவே, தூய்மைடைந்த ஆன்மா கொண்ட ஒரு மனிதன், ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {தமோகுணம்} ஆகிய குணங்களில் பிறக்கும் அனைத்தையும் கைவிட வேண்டும். மேலும், ஆசை மற்றும் இருள் சார்ந்தவற்றிலிருந்து நற்குணம் விடுபெறும்போது, அது {அந்த நற்குணம்} மேலும் ஒளிர்வடைகிறது {பிரகாசிக்கிறது}.(29) மந்திரங்களின் உதவியுடன் செய்யப்படும் பிற செயல்கள், வேள்விகள், ஆன்ம தூய்மைக்கு நிச்சய காரணமாக இருப்பவை ஆகியவை தீய அல்லது கொடுஞ்செயல்கள் என்று சிலர் சொல்கின்றனர். (இக்கருத்து சரியானதல்ல). மறுபுறம் அச்செயல்கள், உலகப்பற்றுகள் அனைத்திலிருந்தும் ஆன்மாவின் தொடர்பை அறுப்பதற்கும், அமைதி அறம் நோற்பதற்கும் முக்கிய வழிமுறைகளாக இருக்கின்றன[7].(30)ஆசையில் பிறக்கும் குண ஆதிக்கத்தின் மூலம், மறச்செயல்கள் {அதர்ம செயல்கள்} அனைத்தும் செய்யப்படுகின்றன, மேலும் உலகம் சார்ந்த நோக்கங்கள் நிறைந்த அனைத்தும் செயல்களும், ஆசையில் இருந்து பிறக்கும் அத்தகைய செயல்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன.(31) இருளில் பிறக்கும் குணங்களின் மூலம் ஒருவன், பேராசை நிறைந்தவையும், கோபத்தில் பிறப்பவையுமான செயல்கள் அனைத்தையும் செய்கிறான். இருள் குணத்தின் விளைவால் ஒருவன் உறக்கம் மற்றும் தாமதிக்கும் இயல்பு ஆகியவற்றைத் தழுவி, கொடூரச் செயல்கள் மற்றும் உடல் இன்பத்திற்கான செயல்கள் அனைத்தையும் செய்கிறான்.(32) எனினும், நம்பிக்கையுள்ளவனும், சாத்திர அறிவுள்ளவனும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தை} நோற்பவனுமான ஒருவன், நற்காரியங்கள் அனைத்தையும் செய்து, (அக) அழகுடன் கூடியவனாகவும், ஒவ்வொரு களங்கத்திலிருந்தும் விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனாகவும் மாறுகிறான்” என்றார் {பீஷ்மர்}.(33)

புலன்களை வெற்றிகொள்! – சாந்திபர்வம் பகுதி – 213-ஆன்ம மயக்கம்; அதில் பிறக்கும் உணர்வுகள்; உணர்வுகளின் மூலம் ஏற்படும் பற்று; பற்றில் பிறக்கும் செயல்; குணங்களின் சார்பு நிலைகள்; அவற்றின் காரணமாகப் பிறக்கும் புலனுறுப்புகள்; மறுபிறப்பில் இருந்து விடுதலை அடைந்து முக்தி அடைவதற்குப் புலன்களை வெற்றி கொள்வதன் அவசியம் ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஆசை குணத்தின் {ரஜோ குணத்தின்} மூலம் மயக்கம் அல்லது தீர்மான இழப்பு எழுகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இருள் குணத்தில் {தமோகுணத்தில்} இருந்து கோபம், பேராசை, அச்சம் மற்றும் செருக்கு ஆகியன எழுகின்றன. இவை யாவும் அழிக்கப்படும்போது ஒருவன் தூய்மையடைகிறான்.(1) தூய்மை அடைவதன் மூலம் ஒரு மனிதன், புலப்படாதவனான முதன்மையான தேவனின் புகலிடத்தை அடைந்து, காந்தியுடன் ஒளிர்வதும், சிதைவடைய இயலாததும், மாற்றமில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதுமான பரமாத்ம ஞானத்தை அடைவதில் வெல்கிறான்.(2) மாயையில் விழுந்த மனிதர்கள், அறிவில் இருந்து வீழ்ந்து, அறிவற்றவர்களாகி, அவர்களது ஞானம் இருளடைவதன் விளைவால் கோப வசப்படுகிறார்கள்[1].(3) கோபத்தின் மூலம் அவர்கள், ஆசையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிறார்கள். ஆசையில் இருந்து பேராசை, மாயை, வீண் தற்பெருமை, செருக்கு, தன்னலம் ஆகியவை எழுகின்றன. இத்தகைய தன்னலத்தில் இருந்து பல்வேறு செயல்கள் பிறக்கின்றன[2].(4) செயல்களில் இருந்து பல்வேறு பற்றுகளும், பிணைப்புகளும் எழுகின்றன, அந்தப் பற்றுப் பிணைப்புகளில் இருந்து துன்பம் எழுகிறது. இன்பமும், துன்பமும் நிறைந்த செயல்களில் இருந்து பிறப்பு மற்றும் இறப்புக்கான கடப்பாடு எழுகிறது.(5)பிறப்புக் கடமையின் விளைவால், உயிர்வித்து {சுக்லம்} மற்றும் குருதியின் {சோணிதத்தின்} கலவையின் மூலம் கருவறையில் வசிக்கும் கடப்பாடு நேர்கிறது. அந்த வாசமானது {கருவறையில் வசிக்கும் நிலையானது}, மலம், சிறுநீர் மற்றும் சளி ஆகியவற்றுடன் {மலஜலசிலேத்தமங்களுடன்} சேர்ந்து மாசடைந்து, அங்கே உற்பத்தியாகும் குருதியால் எப்போதும் கசடுள்ளதாகிறது.(6) தாகத்தில் {ஏக்கத்தில்} மூழ்கும் சித்-ஆன்மா {ஜீவன்} கோபத்திலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எஞ்சியவற்றிலும் கட்டப்படுகிறது. எனினும், அத்தீமைகளில் இருந்து தப்புவதற்கு அது முனைகிறது. இதன் காரணமாகவே, படைப்பு எனும் ஓடையை ஓடச் செய்யும் கருவிகளாகப் பெண்கள் கருதப்பட வேண்டும்.(7) பெண்கள் தங்கள் இயல்பில் க்ஷேத்திரமாகவும், ஆண்கள் தங்கள் குணங்களைப் பொறுத்தவரையில் க்ஷேத்ரஜ்ஞனாகவும் இருக்கிறார்கள். இந்தக் காரணத்திற்காகவே, (உலகப் பொருட்கள் பிறவற்றுக்கு மத்தியில்) குறிப்பாகப் பெண்களை ஞானிகள் பின்தொடரக்கூடாது[3].(8) உண்மையில் பெண்கள் பயங்கரமான மந்திர சக்திகளைப் போன்றவர்களாவர். ஞானமற்ற மனிதர்களை அவர்கள் திகைப்படையச் செய்கிறார்கள். அவர்கள் ஆசை குணத்தில் {ரஜோ குணத்தில்} மூழ்கியிருக்கிறார்கள். அவர்கள் புலன்களின் நித்தியமான உடல்வடிவங்களாவர்[4].(9) பெண்களுக்காக ஆண்கள் அடையும் ஆசையின் விளைவாலும், உயிர் வித்தின் (செயல்பாட்டின்) காரணமாகவும் அவர்களில் இருந்து வாரிசுகள் உண்டாகின்றனர். ஒருவன் தன் உடலில் இருந்து பிறக்கும் புழுக்களைத் தங்களில் ஒருபகுதியாகக் கருதாமல் அவற்றைக் கைவிடுவதைப் போலவே, அவனது சுயமாகக் கருதப்படுபவர்களும், உண்மையில் அவ்வாறு அல்லாதவர்களுமான பிள்ளைகள் என்றழைக்கப்படும் அந்தப் புழுக்களையும் அவன் கைவிட வேண்டும்.(10)வியர்வையின் (மற்றும் பிற மாசுகளின்) மூலமாக உடலில் இருந்து உயிரினங்கள் எழுவதைப் போலவே, முற்பிறவிச் செயல்களின் ஆதிக்கத்தில் அல்லது இயற்கையின் போக்கில் உயிர்வித்தில் {உயிர் நீரில்} இருந்தும் அவை {உயிரினங்கள் / பிள்ளைகள்} எழுகின்றன. எனவே, ஞானம் கொண்ட மனிதன் ஒருவன், அவர்களிடம் ஒரு மதிப்பையும் உணரக்கூடாது[5].(11) ஆசை குணம் {ரஜோ குணம்} அந்த இருளையே {இருள் குணத்தையே} சார்ந்திருக்கிறது. மேலும் நற்குணமோ {சத்வ குணமோ} அந்த ஆசையையே {ஆசை குணத்தையே} சார்ந்திருக்கிறது. புலப்படாத இருளானது, ஞானத்தை மறைத்து, புத்தி மற்றும் நனவுநிலை {அஹங்காரம்} எனும் குறிப்பிடத்தக்க கூறுகளை உண்டாக்குகிறது[6].(12) புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களைக் கொண்ட அறிவே, உடல்கொண்ட ஆன்மாக்களின் வித்தாகச் சொல்லப்படுகிறது. மேலும், எது அத்தகைய ஞானத்தின் வித்தாக இருக்கிறதோ, அது ஜீவன் (அல்லது சித்-ஆன்மா) என்று அழைக்கப்படுகிறது[7]. செயல்கள், கால ஒழுங்கு ஆகியவற்றின் விளைவால் ஆன்மாவானது, பிறப்பையும், மீண்டும் மீண்டும் மறுபிறப்பெனும் சுழற்சியையும் அடைகிறது.(13) கனவில் ஆன்மாவானது, உடலைக் கொண்டிருப்பது போல், மனச் செயல்பாட்டின் மூலம் விளையாடிக் கொண்டிருப்பதைப் போல (முற்பிறவி) செயல்களைத் தங்கள் மூலமாகக் கொண்ட குணங்கள் மற்றும் மனச்சார்புகளின் விளைவாக, அஃது {ஆன்மா} ஒரு தாயின் கருவறையில் ஓர் உடலை அடைகிறது.(14) அஃது அங்கே இருக்கும்போது, முற்பிறவிச் செயல்களையே செயல்படும் காரணமாகக் கொண்டு விழிப்படையும் புலன்கள் அனைத்தும், பற்றுகளுடன் கூடிய மனத்தின் விளைவால் நனவுநிலையை {அஹங்காரத்தை} அடைகிறது[8].(15)ஆன்மாவானது, ஒலி குறித்த முற்பிறவி எண்ணங்களின் விளைவால் விழிப்படைந்து, அத்தகைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிந்து, கேட்கும் உறுப்பைப் பெறுகிறது. அதே போலவே, வடிவங்களில் உள்ள பற்றின் மூலம், அதன் கண்கள் உண்டாகிறது, மணத்தில் உள்ள ஏக்கத்தின் மூலம், நுகரும் உறுப்பையும் அது பெறுகிறது.(16) தீண்டல் குறித்த எண்ணங்களின் மூலம் அது தோலை அடைகிறது. அதே வழியில், உடலைச் செயல்படச் செய்வதில் பங்காற்றும் பிராணன், அபானன், வியானன், உதானன் மற்றும் சமானன் ஆகிய ஐவகை மூச்சுகளும் {வாயுக்களும்} அதனால் அடையப்படுகிறது.(17) (முன்னர்ச் சொன்னதுபோல) முற்பிறவி செயல்களின் விளைவால் முழுதாக வளர்ந்த உறுப்புகள் அனைத்துடன் கூடிய உடலில் பொதிந்திருக்கும் ஆன்மாவானது, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் உடல் மற்றும் மனத் துன்பத்துடன் கூடிய பிறப்பை எடுக்கிறது.(18) (கருவறையில்) உடலை ஏற்கிறது என்ற உண்மையிலிருந்தே கவலையும் எழுகிறது என்பது அறியப்பட வேண்டும். அது தன்னுணர்வை அதிகரிக்கச் செய்கிறது. இவற்றில் இருந்து (பிறப்புக்குக் காரணமான பற்றுகளைத்) துறப்பதன் மூலமே கவலைக்கு ஒரு முடிவு ஏற்படுகிறது. கவலையின் முடிவைக் குறித்து அறிந்தவன் விடுதலையை {முக்தியை} அடைவான்.(19) புலன்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகிய இரண்டும் ஆசை குணத்தை {ரஜோ குணத்தைச்} சார்ந்திருக்கிறது. ஞானம் கொண்ட மனிதன், சாத்திரங்களால் அமைக்கப்பட்ட கண்ணின் உதவியுடனும், தகுந்த ஆய்வுடனும் செயல்பட வேண்டும்[9].(20) அறிவுப் புலன்கள் {ஞானேந்திரியங்கள்} தங்கள் நோக்கங்கள் அனைத்தையும் ஈட்டினாலும், தாகமில்லாத {ஏக்கமில்லாத} மனிதனை நிறைவு செய்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. உடல்கொண்ட ஆன்மாவானது, அதன் புலன்களைப் பலவீனமடையச் செய்து, மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து தப்பிக்கிறது” என்றார் {பீஷ்மர்}.(21)

பிரம்மச்சரியம்! – சாந்திபர்வம் பகுதி – 214-பிரம்மத்தை அடைவதற்கான வழிமுறை; பிரம்மச்சரியம் என்றால் என்ன? பிரம்மச்சரியமும் பெண்களும்; சுக்லம் பிரியும் முறை; பிறப்பறுக்கும் உயர்ந்த நிலை ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “சாத்திரக் கண் கொண்டு காணும்போது, (புலன்களை வெற்றிகொள்ளக்கூடிய) வழிமுறைகள் என்ன, என்பது குறித்து இப்போது நான் சொல்லப்போகிறேன். ஓ! மன்னா, அத்தகைய அறிவின் துணையுடனும், அதன் படியும் தன் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்வதன் மூலமும் ஒரு மனிதன் உயர்ந்த கதியை அடைவான்.(1) வாழும் உயிரினங்கள் அனைத்திலும் மனிதனே முதன்மையானவனாகச் சொல்லப்படுகிறான். மனிதர்களில் மறுபிறப்பாளர்களே முதன்மையானவர்கள் என்றழைக்கப்படுகிறார்கள்; மறுபிறப்பாளர்களில், வேதங்களை அறிந்தோரே முதன்மையானவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(2) இறுதியாகச் சொல்லப்படும் இவர்களே வாழும் உயிரினங்கள் அனைத்தின் ஆன்மாக்களாகக் கருதப்படுகிறார்கள். உண்மையில், வேதங்களை அறிந்த பிராமணர்கள், அனைத்தையும் கண்டவர்களாகவும், அனைத்தும் அறிந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அவர்கள் பிரம்மத்தை அறிந்த மனிதர்களாவர்.(3) வழிகாட்டியில்லாத பார்வையிழந்த மனிதன் ஒருவன், சாலைகளில் பல சிரமங்களுக்கு ஆளாவதைப் போலவே, அறிவற்ற மனிதனும் இவ்வுலகில் பல இடையூறுகளைச் சந்திப்பான். இதன் காரணமாகவே எஞ்சியோரைக் காட்டிலும் அறிவுடையோர் மேன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(4) அறமீட்ட விரும்புவோர், சாத்திர விதிகளின்படியான பல்வேறு வகைச் சடங்குகளைச் செய்கிறார்கள். எனினும், அவர்கள் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்வதில்லை. அந்த நற்குணங்களைக் கொண்டு அவர்கள் ஈட்டுவது அனைத்தையும் குறித்து நான் இப்போது பேசப் போகிறேன்[1].(5)இருவகை அறங்களை நோற்கும் அறவோரும், வாக்கு, உடல் மற்றும் மனத்தூய்மை, மன்னிக்கும் தன்மை, வாய்மை, நிலைமாறாவுறுதி {மனத்துணிவு}, புத்தி ஆகிய இந்த நற்குணங்களையே வெளிப்படுத்துகிறார்கள்.(6) எது பிரம்மச்சரியம் (விலகும் அறம், அல்லது யோகம்) என்றழைக்கப்படுகிறதோ, அது பிரம்மத்தை அடைவதற்கான வழிமுறையாகக் கருதப்படுகிறது. அதுவே அறங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். அந்த அறத்தை நோற்பதாலேயே ஒருவன் உயர்ந்த கதியை (விடுதலையை {முக்தியை}) அடைகிறான்.(7) ஐந்து முக்கிய மூச்சுக்காற்றுகள், மனம், புத்தி, ஐந்து அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} மற்றும் ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஆகியவற்றுடன் கூடிய அனைத்துத் தொடர்புகளும் அற்ற நிலையே பிரம்மச்சரியமாகும். உள்ளுணர்வுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட காரணத்தாலேயே புலன்கள் அந்நிலையை {பிரம்மச்சரிய நிலையைக்} கொடுக்கின்றன. அஃது ஒரு சொல்லாகக் கேட்கப்படுகிறது.(8) புலப்படாத அதன் வடிவத்தைக் கருத்தால் மட்டுமே உணர முடியும். அது புலன்களுடனான அனைத்துத் தொடர்புகளில் இருந்தும் விடுபட்ட ஒரு நிலையாகும். அந்தப் பாவமற்ற நிலையைப் புத்தியால் மட்டுமே அடைய முடியும்.(9) எவன் அதை முறையாகப் பயில்கிறானோ, அவன் பிரம்மத்தை அடைகிறான்; அதைப் பாதியே பயில்பவன், தேவர்களின் நிலையை அடைகிறான்; அதே வேளையில் அஃதை அலட்சியமாகப் பயில்பவன், பிராமணர்களுக்கு மத்தியில் பிறப்பையும், கல்வியையும் அடைந்து, உயர்ந்த நிலையை அடைகிறான்.(10)

பிரம்மச்சரியம் நோற்பது மிகக் கடினமானதாகும். அதன் {அஃதை ஒருவன் பயிலத்தக்க} வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. அதைச் செய்வதில் ஈடுபடும் மறுபிறப்பாளன் {பிராமணன்}, ஆசை குணம் {ரஜோ குணம்} தோன்றும்போதெல்லாம், அல்லது பலமிக்கதாகும்போதெல்லாம் அஃதை அடக்க வேண்டும்.(11) அந்நோன்பை நோற்பவர்கள் பெண்களுடன் பேசக் கூடாது. ஆடையற்ற பெண்களின் மீது அவன் ஒருபோதும் கண்களைச் செலுத்தக் கூடாது. அக்கறையற்ற சூழ்நிலைகளிலும்கூடப் பெண்களைப் பார்க்கும்போது, பலவீன மனம் கொண்ட மனிதர்கள் அனைவரையும் ஆசை {ரஜோ குணம்} நிறைகிறது.(12) (இந்நோன்பை நோற்கும்போது) ஒரு மனிதன், தன் இதயத்தில் பெண்ணுக்கான விருப்பத்தை உணர்ந்தால், அவன் (அதற்கு ஈடு செய்ய {பரிகாரமாக}) கிருச்சரம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்று, மூன்று நாட்களை நீரில் கடத்த வேண்டும்[2]. அந்த ஆசையானது கனவில் தோன்றினால், அவன் நீருக்குள் பாய்ந்து, அகமர்ஷணரின் மூன்று ரிக்குகள் மூன்று முறை மனத்தில் சொல்ல வேண்டும்[3].(13) இந்நோன்பை {பிரம்மச்சரிய நோன்பை} நோற்கும் ஞானியானவன், ஆசை {ரஜோ} குணத்தின் மூலம் தன் மனத்தில் உண்டான பாவங்கள் அனைத்தையும் ஞானத்துடன் கூடிய பரந்த மனத்துடன் எரிக்க வேண்டும்.(14) உடலின் கழிவை {மலத்தைச்} சுமந்து செல்லும் நாளமானது {குழாயானது [குணபம் என்ற பையானது]}, உடலுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பதைப் போலவே, உடல் படைத்த ஆன்மாவும், அது பொதியப்பட்டிருக்கும் உடலின் நெருக்கமான தொடர்பிலேயே இருக்கிறது {இடைவெளியில்லாமல் கட்டப்பட்டிருக்கிறது}.(15)தமனிப் பிணையத்தின் {நாடிக் கூட்டத்தின்} வழியாகக் கடந்து செல்லும் பல்வேறு வகையான சாறுகள் {ரசங்கள்}, மனிதர்களின் காற்று {வாதம்}, பித்தநீர் {பித்தம்}, சளி {கபம்}, குருதி {உதிரம்}, தோல், இறைச்சி, குடல்கள், எலும்புகள், மஜ்ஜை மற்றும் மொத்த உடலுக்கும் உணவூட்டுகின்றன.(16) பத்து முக்கிய நாளங்கள் {நாடிகள்} இருக்கின்றன என்பதை அறிவாயாக. இவை ஐம்புலன்களின் செயல்பாட்டுக்கும் உதவி செய்கின்றன. இந்தப் பத்தில் {பத்து நாளங்களில்} இருந்து நுண்ணிய வடிவிலான ஆயிரக்கணக்கான பிற நாளங்கள் {நாடிகள்} கிளைகளாகப் பிரிந்து செல்கின்றன.(17) உரிய பருவகாலத்தில் பெருங்கடலை நிறைக்கும் ஆறுகளைப் போலவே, சாறுகளைக் கொண்ட இந்த நாளங்கள் அனைத்தும் உடலுக்கு உணவூட்டுகின்றன.(18) மனோவஹம் என்ற பெயரில் இதயத்துக்குச் செல்லும் ஒரு நாளமிருக்கிறது. மனித உடலின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஆசையில் பிறக்கும் உயிர் வித்தை அது திரட்டுகிறது.(19) முக்கியமான அந்தவொன்றில் இருந்து, கிளைகளாகப் பிரிந்து செல்லும் எண்ணற்ற நாளங்கள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் விரிந்தபடியே வெப்பமுன் பூதத்தைச் சுமந்து சென்று, பார்வை (உள்ளிட்ட பிற) புலனுணர்வுகளுக்குக் காரணமாக அமைகின்றன.(20)

பாலில் மறைந்திருக்கும் நெய்யானது மத்தால் கடைந்து எடுக்கப்படுவதைப் போலவே, (பெண்களைப் பார்ப்பது, அல்லது அவர்களைக் குறித்து எண்ணுவதன் மூலம்) மனத்தில் உண்டாகும் ஆசைகளும், உடலுக்குள் கிடக்கும் உயிர் வித்துகளை {சுக்லத்தை} ஒன்றாகத் திரட்டுகின்றன.(21) நமது கனவுகளுக்கு மத்தியிலும், கற்பனையில் பிறக்கும் ஆசையானது {ரஜோ குணமானது} மனத்தைத் தாக்கி, மனோவஹம் என்று ஏற்கனவே பெயரிடப்பட்ட அந்த நாளத்தின் விளைவால், ஆசையில் பிறக்கும் உயிர்வித்தை {சுக்லத்தை} வெளியேற்றுகிறது.(22) மகத்தானவரும், தெய்வீகமானவருமான அத்ரி முனிவர், உயிர் வித்தின் {சுக்கிலத்தின்} உற்பத்தி குறித்த காரியத்தை நன்கறிந்தவராக இருந்தார். உணவால் பெறப்படும் சாறுகள் {ரஸங்கள்}, மனோவஹம் என்றழைக்கப்பட்ட நாளம் {நாடி}, கற்பனையில் பிறக்கும் ஆசை ஆகிய இம்மூன்றும் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட உயிர்வித்தை {சுக்கிலத்தைத்} தோற்றுவிக்கும் காரணங்களாக இருக்கின்றன. எனவேதான் இந்தத் திரவத்தை வெளியேற்ற உதவும் ஆசையானது, இந்திரியம் என்றழைக்கப்படுகிறது.(23) உயிர்வித்தின் போக்கே, சாதிக் கலப்பு (என்றழைக்கப்படும் பாவகர நிலைக்குக்) காரணம் என்பதை அறிந்த மனிதர்கள், ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களாவர்[4]. அவர்களது பாவங்கள் எரிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது, அவர்கள் ஒருபோதும் மறுபிறப்புக்கு ஆளாவதில்லை.(24) தன் உடலைத் தாங்கிக் கொள்ளும் நோக்கத்திற்காக மட்டுமே செயலில் ஈடுபடுபவன், மனத்தின் துணையுடன் (நற்குணம் {சத்வம்}, ஆசை குணம் {ரஜஸ்}, இருள் குணம் {தமஸ்} ஆகிய மூன்று) குணங்களைச் சீரான நிலைக்குக் குறைத்து, தன் இறுதிக் கணங்களில் மனோவஹம் என்றழைக்கப்படும் நாளத்திற்கு உயிர்மூச்சுகளைக் கொண்டுவந்து, மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து தப்பிக்கிறான்[5].(25)மனமானது நிச்சயம் அறிவை ஈட்டும். மனமே அனைத்துப் பொருட்களின் வடிவத்தை ஏற்கிறது. உயர் ஆன்ம மனிதர்கள் அனைவரின் மனங்களும், தியானத்தின் மூலம் வெற்றியை அடைந்து, ஆசையில் இருந்து விடுபட்டு, நித்தியமானதாகவும், ஒளிபொருந்தியதாகவும் ஆகின்றன.(26) எனவே, (மனமாக இருக்கும்) மனத்தை அழிப்பதற்காக ஒருவன் பாவமற்ற செயல்களை மட்டுமே செய்து, ஆசை மற்றும் இருள் குணங்களில் {ரஜோ மற்றும் தமோ குணங்களில்} இருந்து விடுபெற்றால், அவன் நிச்சயம் மிக உயர்ந்த கதியை அடைவான்.(27) (சாதாரணமாக) இளமையில் அடையப்படும் ஞானமானது முதுமையில் பலவீனமடைகிறது. எனினும், கனிந்த புத்தியைக் கொண்ட ஒரு மனிதன், முற்பிறவி மங்கல விளைவுகளின் மூலம் தன் ஆசைகளை அழிப்பதில் வெற்றி அடைகிறான்.(28) அத்தகைய மனிதன், இடையூறுகள் நிறைந்த ஒரு பாதையைக் கடக்கும் பயணி, தான் காணும் தடைகள் அனைத்தையும் மீறிச் செல்வதைப் போலவே, உடல்கட்டுகள் மற்றும் புலன்களை விஞ்சுவதன் மூலம், (விடுதலையெனும் {முக்தியெனும்}) அமுதத்தைச் சுவைப்பதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(29)

வைராக்கியம்! – சாந்திபர்வம் பகுதி – 215-அனைத்து உயிரினங்களிடமும் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளும் மனப்பயிற்சி; அறிவை நோக்கிச் செலுத்தப்பட வேண்டிய மனம்; புலன் கட்டுப்பாட்டில் உறுதி; வைராக்கியத்தின் மூலம் அடையும் பிரம்மநிலை ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வாழும் உயிரினங்கள், எப்போதும் தீமை நிறைந்தவையான புலன்நுகர் பொருட்களில் பற்றுடன் இருப்பதால் ஆதரவற்றவையாகின்றன. எனினும், அவற்றில் பற்று கொள்ளாத உயர் ஆன்ம மனிதர்கள், உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(1) நுண்ணறிவுமிக்க மனிதன், இவ்வுலகமானது பிறப்பு, இறப்பு, முதுமை, துன்பம், நோய், கவலைகள் ஆகிய தீமைகள் நிறைந்தது என்பதைக் கண்டு, விடுதலையை {முக்தியை} அடைய முயல வேண்டும்.(2) அவன் பேச்சு, எண்ணம், உடல் ஆகியவற்றில் தூய்மையுள்ளவனாக; செருக்கில் இருந்து விடுபட்டவனாக இருக்க வேண்டும். அமைதிமிக்க ஆன்மாவையும், அறிவையும் கொண்ட அவன், பிச்சையெடுக்கும் வாழ்வை நோற்று, உலகப் பொருட்கள் எதனிலும் பற்றுக் கொள்ளாமல் மகிழ்ச்சியைப் பின்தொடர வேண்டும்.(3) மேலும், உயிரினங்கள் மீது கொண்ட கருணையின் விளைவால், பற்றானது ஒருவனது மனத்தைப் பீடிக்கிறதென்றால், அவன் இந்த அண்டமே செயல்களின் விளைவெனக் கருதி, அந்தக் கருணையையும் புறக்கணிக்க வேண்டும்[1].(4) என்னென்ன நற்செயல்கள் செய்யப்பட்டாலும், அல்லது பாவங்கள் இழைக்கப்பட்டாலும், அதைச் செய்பவன், அதனதன் விளைவுகளைச் சுவைக்கிறான். எனவே, ஒருவன் வாக்காலும், எண்ணத்தாலும், செயலாலும் நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.(5)(பிறருக்கு) தீங்கிழைப்பதில் இருந்து விலகல், பேச்சில் வாய்மை, அனைத்து உயிரினங்களிடமும் நேர்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, கவனம் ஆகியவற்றைப் பயில்பவன் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான்.(6) எனவே, தன் நுண்ணறிவை {புத்தியைப்} பயன்படுத்தும் ஒருவன், தன் மனத்திற்குப் பயிற்சி அளித்து, அனைத்து உயிரினங்களிடமும் அமைதியை ஏற்படுத்திக் கொள்வதில் அதை {மனத்தை} நிலைநிறுத்துவான்.(7) எந்த மனிதன் மேலே பட்டியலிடப்பட்டுள்ள அறங்களைப் பயில்வதை உயர்ந்த கடமையாகவும், அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சி உண்டாக்குவதாகவும் கருதுகிறானோ அவன் உயர்ந்த அறிவை அடைந்தவனாக, மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான். எனவே (ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல) தன் நுண்ணறிவை {புத்தியைப்} பயன்படுத்தும் ஒருவன், தன் மனத்திற்குப் பயிற்சி அளித்து, அனைத்து உயிரினங்களிடமும் அமைதியை ஏற்படுத்திக் கொள்வதில் அதை {மனத்தை} நிலைநிறுத்த வேண்டும்.(8) ஒருவன் பிறருக்குத் தீங்கிழைக்க ஒருபோதும் நினைக்கக்கூடாது. ஒருவன், தன் சக்திக்கு அப்பாற்பட்ட எதனிலும் பேராசை கொள்ளக்கூடாது. இல்லாத பொருட்களை நோக்கி அவன் தன் எண்ணங்களைத் திருப்பக்கூடாது. மறுபுறம், அவன், நிச்சயம் வெல்லத்தக்க தொடர் முயற்சியுடன் தன் மனத்தை அறிவை நோக்கிச் செலுத்த வேண்டும்[2].(9)ஸ்ருதிகளின் தீர்மானங்கள் மற்றும் வெற்றியை அடைய கணக்கிடப்பட்ட தொடர் முயற்சிகள் ஆகியவற்றின் உதவியுடன் அந்த அறிவும் நிச்சயம் பாயும். நற்சொற்களைச் சொல்ல, அல்லது கசடுகள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்த ஓர் அறத்தைப் பயில விரும்பும் ஒருவன்,(10) எந்த வன்மமோ, நிந்தனையோ இல்லாத உண்மையை மட்டுமே பேச வேண்டும். நல்ல இதயத்தைக் கொண்ட ஒருவன், நேர்மையின்மையற்றவையும் {நேர்மையானவற்றையும்}, கடுமையற்றவையும் {மென்மையானவற்றையும்}, கொடூரமற்றவையும் {அன்பானவற்றையும்}, தீமையற்றவையும் {நல்லவற்றையும்}, வம்பளக்கும் இயல்பற்றவையுமான {நல்லியல்பைக் கொண்டவையுமான} வார்த்தைகளையே பேச வேண்டும். இந்த அண்டமானது பேச்சிலேயே கட்டப்பட்டிருக்கிறது. ஒருவன், (உலகப் பொருட்கள் அனைத்திலும்) துறவைக் கொண்டால்,(11,12) பணிவு நிறைந்த மனத்துடனும், தூய்மையடைந்த புத்தியுடனும், தன் சொந்த தீச்செயல்களை அறிக்கையிடவேண்டும்[3]. செயல்களில் ஈடுபடுபவன், ஆசை {ரஜோ} குணத்துடன் கூடிய மனச் சார்புகளால் தூண்டப்பட்டு,(13) இவ்வுலகில் துன்பத்தை அடைந்து, இறுதியாக நரகத்தில் வீழ்கிறான். எனவே அவன், உடல், வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றில் தற்கட்டுப்பாட்டைப் பயில வேண்டும்.(14) உலகச் சுமைகளைச் சுமக்கும் அறியாமை கொண்டோர், (மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லப்பட்ட மந்தையில் இருந்து தனிமைப்பட்ட) ஆட்டைத் தங்கள் கொள்ளைப் பொருளாகத் திருடிச் சுமந்து செல்லும் கள்வர்களைப் போன்றவர்களாவர். கள்வர்கள், தங்களுக்குச் சாதகமற்றவையாக இருக்கும் சாலைகளில் (மன்னனின் கண்காணிப்பில் அவை உள்ளதால்) எப்போதும் மிகக் கவனமாக இருப்பார்கள்[4].(15)உண்மையில் அந்தக் கள்வர்கள் தங்கள் பாதுகாப்பை விரும்பி, அவர்களது கொள்ளைப் பொருளை வீசிவிடுவதைப் போலவே, ஒரு மனிதன், இன்ப நிலையை அடையவிரும்பினால், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களுக்குரிய செயல்கள் அனைத்தையும் கைவிட வேண்டும்.(16) உலகப் பற்றுகளில் இருந்து விடுபட்டவனும், ஆசையற்றவனும், தனிமைவாழ்வில் நிறுவுடையவனும், சொற்ப உணவை உண்பவனும், தவங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளவனும்,(17) (தான் அடைந்த) ஞானத்தால் தன் துன்பங்கள் அனைத்தையும் எரித்தவனும், யோக ஒழுக்கத்தின் விவரங்கள் அனைத்தையும் பயில்வதில் இன்புற்றிருப்பவனும், தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவனுமான மனிதன், தன் மனத்தை அதற்குள்ளேயே ஈர்த்ததன் விளைவால் பிரம்மத்தை, அல்லது விடுதலையை {முக்தியை} அடைவதில் நிச்சயம் வெல்வான்.(18) தூய்மையடைந்த ஆன்மாவையும், பொறுமையையும் கொண்ட ஒருவன், தன் புத்தியை நிச்சயம் கட்டுப்படுத்துவான். (இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட) புத்தியுடன் கூடிய ஒருவன், அடுத்ததாகத் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி, அதன் பிறகு தன் மனத்தைக் கொண்டு புலன்நுகர் பொருட்களை வெல்ல வேண்டும்.(19) இவ்வாறு மனமானது கட்டுப்படுத்தப்பட்டு, புலன்கள் அனைத்தும் வெல்லப்பட்டதும், அந்தப் புலன்கள் ஒளிர்ந்து மகிழ்ச்சியாகப் பிரம்மத்திற்குள் நுழைகின்றன.(20)

ஒருவனுடைய புலன்கள் மனத்திற்குள் ஈர்க்கப்பட்டதும், அதன் விளைவாக, பிரம்மமே அதற்குள் {மனத்திற்குள்} வெளிப்படுகிறது. உண்மையில் புலன்கள் அழிக்கப்பட்டதும், ஆன்மாவானது தூய இருப்பெனும் குணத்தை மீண்டும் அடைந்து, பிரம்மமாகவே மீண்டும் மாற்றப்பட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது.(21) ஒருவன் தனது யோக சக்தியை ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது. மறுபுறம் அவன், யோக விதிகளைப் பயில்வதன் மூலம் எப்போதும் தன் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். உண்மையில், யோக விதிகளைப் பயிலும் ஒருவன், எந்தச் செயல்களின் மூலம் தன் ஒழுக்கமும், மனநிலையும் தூய்மையடையுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும்.(22) அவன் (தனது யோக சக்திகளைத் தனது வாழ்வாதாரமாகக் கொள்ளாமல்), பிச்சையாக அடையப்படும் அவல், சுண்டல், பிண்ணாக்கு, கீரைகள், {காய்கள்}, பிட்டு {யாவகம்}, {வறுத்த பருப்பின்} மாவு, கனிகள் மற்றும் கிழங்கு ஆகியவற்றை உண்டு வாழ வேண்டும்.(23) காலம் மற்றும் இடத்தின் பண்புகளைக் கருத்தில் கொண்டும், உரிய ஆய்வுக்குப் பிறகும் ஒருவன் நோன்புகள், மற்றும் உபவாசங்களின் விதிகளைத் தன் விருப்பத்தின்படி நோற்க வேண்டும்.(24) நோற்றல் தொடங்கிய பிறகு அஃதை அவன் நிறுத்தக்கூடாது. மெதுவாக நெருப்பை உண்டாக்குபவனைப் போல அவன், அறிவால் தூண்டப்பட்ட ஒரு செயலைப் படிப்படியாகச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால், அவனுக்குள் உள்ள பிரம்மமானது சூரியனைப் போலப் படிப்படியாக ஒளிரத் தொடங்குகிறது.(25)

அறிவையே தன் சார்பு நிலமாகக் கொண்ட அறியாமையானது, (விழிப்பு, கனவு மற்றும் கனவற்ற ஆழ்ந்த உறக்கம் ஆகிய) மூன்று நிலைகளின் மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. புத்தியைப் பின்பற்றிச் செல்லும் அறிவானது {ஞானமானது}, அறியாமையால் தாக்கப்படுகிறது.(26) தீய இதயம் படைத்த மனிதர்கள், உண்மையில் ஆன்ம அறிவானது, அம்மூன்று நிலைகளையும் கடந்ததாக இருந்தாலும், அவற்றுடன் ஒன்று கலந்திருக்கிறது என நினைத்துக் கொள்வதன் விளைவால் அவர்கள் அஃதை {ஆன்ம அறிவை} அடையத் தவறுகிறார்கள். எனினும் ஒருவன், அந்த மூன்று நிலைகளுடன் கலப்பு மற்றும் அவற்றில் இருந்து பிரிவு ஆகிய இரண்டு எல்லைகள் வெளிப்பட்டு, அவற்றை உணர்வதில் வெல்லும்போது, அவன் பற்றை இழந்து, விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(27) அத்தகைய உணர்வு அடையப்பட்ட பிறகு, வயதின் எல்லைகளை விஞ்சும் அவன், முதுமை, மரணம் ஆகியவற்றின் விளைவுகளில் இருந்து மேன்மையடைந்து, நித்தியமானதும், மரணமற்றதும், மாறும் இயல்பற்றதும், சிதைவற்றதுமான பிரம்மத்தை அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}.(28)

பிரம்மஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 216- கனவுகள் தோன்றும்போது உடலின் நிலை; கனவுகள் தோன்றும் காரணம்; மனமும் கனவும்; மனப்பதிவுகளுடைய குணத்தின் மூலம் மனம் ஏற்படுத்தும் தோற்றங்கள்; கனவுகளின் கதவாகச் செயல்படும் உடல்; ஆன்மாவில் நுழையும் மனம் விழிப்புடன் இருப்பது; தவத்தின் வல்லமை; பிரம்ம ஞானம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பாவமற்ற பிரம்மச்சரியத்தையே எப்போதும் பயில விரும்புபவனும், கனவுகளின் தொடர்புடைய களங்களின் மனப்பதிவுகளைக் கொண்டவனுமான ஒரு யோகி, தன் முழு இதயத்துடன் உறக்கத்தைக் கைவிட முனைய வேண்டும்.(1) கனவுகளில், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களால் பாதிப்படைந்த உடல் படைத்த ஆன்மாவானது, மற்றொரு உடலைக் கொள்வது போல் தோன்றுவதுடன், ஆசையின் ஆதிக்கத்தில் அசைந்து செயல்படுகிறது.(2) ஞானம் பெறுதல், தொடர்ந்த சிந்தனை, தொகுத்துரைத்தல் ஆகியவற்றைச் செய்வதன் விளைவால் யோகியானவன், ஞானத்திற்குத் தன்னை அர்ப்பணித்துத் தொடர்ந்து விழிப்புடன் இருக்கலாம்.(3) இக்காரியத்தில், உடல்படைத்த உயிரினமானது {ஜீவாத்மாவானது}, எந்தச் சூழ்நிலையில், எந்த நோக்கங்கள் மற்றும் செயல்களில் ஈடுபடுவதாக நினைக்கிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. உண்மையில், செயல்முடக்கப்பட்ட புலன்களைக் கொண்ட உடல்படைத்த உயிரினமானது, அறிவுப்புலன்கள் மற்றும் செயற்புலன்களுடன் {ஞான மற்றும் கர்மேந்திரியங்களுடன்} கூடிய உடலைத் தான் கொண்டிருப்பதாகவே கருதுகிறது.(4) இங்கே எழுப்பப்பட்ட கேள்வியைப் பொறுத்தவரையில், ஹரி என்ற பெயரைக் கொண்ட யோகத்தின் தலைவனே, அஃது எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் புரிந்தவன் எனச் சொல்லப்படுகிறது. ஹரியால் சொல்லப்பட்ட விளக்கம் சரியானதாகவும், அறிவுக்குப் பொருத்தமானதாகவும் இருப்பதாகப் பெரும் முனிவர்கள் சொல்கிறார்கள்.(5)

களைப்படைந்த புலன்களின் விளைவாலேயே உயிரினங்கள் அனைத்தும் கனவுகளைக் காண்கின்றன என்று கல்விமான்கள் சொல்கிறார்கள். (புலன்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும்) மனமானது, ஒருபோதும் மறைவதில்லை (அல்லது செயல்படாமல் இருப்பதில்லை), எனவே கனவுகள் எழுகின்றன. கனவுக்கான குறிப்பிட்ட காரணம் என்று இதையே அனைவரும் சொல்கிறார்கள்.(6) விழிப்புநிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுடைய கற்பனைகள், மனத்தின் படைப்பு சக்தியால் மட்டுமே உண்டாவதைப் போல, கனவில் தோன்றும் மனப்பதிவுகளும் மனம் தொடர்புடையனவாக மட்டுமே இருக்கின்றன.(7) ஆசை மற்றும் பற்றுடன் கூடிய ஒரு மனிதன், எண்ணற்ற முற்பிறவிகளின் மனப்பதிவுகளின் அடிப்படையில் (கனவுகளில்) அந்தக் கற்பனைகளை அடைகிறான். ஒரே ஒரு முறை மனத்தில் பதிந்த எதுவும் ஒருபோதும் தொலைந்துபோவதில்லை, மேலும், அந்த மனப்பதிவுகள் அனைத்தையும் அறிந்த ஆன்மாவானது, இருண்மையில் {தெளிவற்ற நிலையில்} இருந்து அவற்றை முன்னே கொண்டு வருகிறது[1].(8) நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} ஆகிய மூன்று குணங்களில் முற்பிறவி செயல்களின் ஆதிக்கத்தால் எது கொண்டு வரப்படுகிறதோ, இவற்றில் {இந்த மூன்று குணங்களில்} எதனால் எவ்வழியிலாவது மனம் பாதிப்படைந்திருக்கிறதோ, அதன்படியே (நுட்பமான வடிவில் உள்ள) பூதங்களாக {பொருட்களாக} (தோற்றங்களின் வடிவில்) அவை {மனப்பதிவுகள்} வெளிப்படுகின்றன[2].(9) இவ்வாறு தோற்றங்கள் உண்டான பிறகு, முற்பிறவி செயல்களால் கொண்டுவரப்படும் சத்வம், ரஜஸ், அல்லது தமஸ் என்ற அந்தக் குறிப்பிட்ட குணம் மனத்தில் எழுந்து இன்பம், அல்லது துன்பம் என்ற விளைவை விளைவிக்கிறது.(10)அறியாமையின் மூலமும், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் நிறைந்த மனச் சார்புகளின் விளைவாலும், காற்று {வாதம்}, பித்தம், சளி {கபம்} ஆகியவற்றைத் தங்கள் முக்கியக் காரணங்களாகக் கொண்ட அந்தத் தோற்றங்களை எளிதாக விலக்கிவிட முடியாது என்று சொல்லப்படுகிறது[3].(11) (விழித்திருக்கும் நிலையில்) ஒரு மனிதன், நுண்ணறிவின் நிலையிலுள்ள புலன்களின் மூலம் தன் மனத்தில் காணும் பொருட்கள் யாவும், தெளிவற்ற நிலையில் அந்தப் புலன்கள் செயல்படும்போது, {அதே பொருட்கள்} மனத்தால் கனவுகளில் உண்டாக்கப்படுகின்றன.(12) மனமானது அனைத்துப் பொருட்களிலும் தடையற்ற நிலையிலேயே இருக்கிறது. இஃது ஆன்மாவின் இயல்பினால் விளைவதாகும். ஆன்மாவானது புரிந்து கொள்ளப்பட்ட வேண்டும். பூதங்கள் அனைத்தும், அவை தொகுக்கும் பொருட்களும் ஆன்மாவிலேயே இருக்கின்றன[4].(13) கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கம் (ஸுஸுப்தி) என்றழைக்கப்படும் நிலையில், கனவுகளின் கதவான வெளிப்படையான மனித உடலானது, மனத்திற்குள் மறைகிறது. உடலுக்குள் வசிக்கும் மனமானது, புலப்படாதிருப்பதும், இருக்கும் மற்றும் இல்லாத பொருட்கள் அனைத்தும் சார்ந்திருப்பதுமான ஆன்மாவுக்குள் நுழைந்து, குறிப்பிட்ட வகை உணர்வுடன் விழிப்புநிலையில் உள்ள சாட்சியாக அது {மனம்} மாறுகிறது. இவ்வாறு, அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மாவாக இருக்கும் தூய நனவுநிலையில் வசிக்கும் அது, நனவுநிலை மற்றும் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் விஞ்சியிருப்பதாகக் கல்விமான்களால் கருதப்படுகிறது[5].(14) எந்த யோகி, ஆசையின் விளைவால் (ஞானம், துறவு முதலிய) தெய்வீகக் குணங்களில் பேராசை கொள்கிறானோ, அவன், தான் ஆசைப்படும் பொருளுக்குச் சமமானதாகத் தூய மனத்தைக் கருத வேண்டும் அனைத்துப் பொருட்களும் தூய மனம், அல்லது ஆன்மாவையே சார்ந்திருக்கின்றன[6].(15)தவங்களில் ஈடுபடும் ஒருவன் இந்த விளைவையே அடைகிறான். எனினும், இருள் அல்லது அறியாமையைக் கடந்த யோகியானவன், மேம்பட்ட ஒளியுடன் கூடியவனாகிறான். இருள் அல்லது அறியாமை கடக்கப்படும்போது உடல் படைத்த ஆன்மாவானது, அண்டத்தின் காரணமாக இருக்கும் பரப்ரம்மம் ஆகிறது.(16) தேவர்கள், தவங்களையும், வேத சடங்குகளையும் கொண்டிருக்கின்றனர். முந்தையதை அழிக்கும் இருளானது {செருக்கு, கொடூரம் முதலியன), அசுரர்களால் பின்பற்றப்படுகிறது. அறிவை மட்டுமே தன் குணமாகக் கொண்ட பிரம்மமானது, தேவர்களாலோ, அசுரரர்களாலோ அடைவதற்குக் கடினமானதாக இருக்கிறது.(17) நல்லியல்பு {சத்வம்}, ஆசை{ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்கள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சொந்தமானவை என்பது அறியப்பட வேண்டும். நல்லியல்பு {சத்வம்} தேவர்களின் குணமாகும்; அதே வேளையில் மற்ற இரு குணங்களும் அசுரர்களுடையவையாகும்.(18) பிரம்மம் அந்தக் குணங்கள் அனைத்தையும் கடந்ததாகும். அது தூய அறிவாகும். அது மரணமற்ற நிலையாகும். அது தூய ஒளிநிலையாகும். அது சிதைவற்றதாகும். பிரம்மத்தை அறிந்தவர்களும், தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான மனிதர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(19) அறிவையே தன் கண்ணாகக் கொண்ட ஒருவனால், ஆய்வறிவு மற்றும் ஒத்திசைவு ஆகியவற்றின் துணையுடன் இவ்வளவே சொல்ல முடியும். அழிவற்றதான பிரம்மமானது, புலன்கள் மற்றும் மனத்தை (புறப் பொருட்களில் இருந்து ஆன்மாவுக்குள்) ஈர்ப்பதன் மூலம் மட்டுமே அடையப்படமுடியும்” என்றார் {பீஷ்மர்}.(20)

நிர்க்குண, சகுன பிரம்மம்! – சாந்திபர்வம் பகுதி – 217-நிவிருத்தி மற்றும் பிரவிருத்தி அறங்கள்; பிரகிருதி மற்றும் புருஷன்; நிர்க்குண மற்றும் சகுன பிரம்மம்; ஆன்மாவுக்குக் குணங்கள் ஏற்படும் முறை; பிரம்மச்சரியம் மற்றும் அஹிம்சை ஆகிய யோகங்கள்; சகுன பிரம்மத்தின் குணங்களை முக்குணங்களில் இருந்து வேறுபட்டதாக அறிய வேண்டியதன் அவசியம்; முக்தியை அடைதல்..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “(கனவுகள், கனவுகளற்ற ஆழ்நிலை உறக்கம், குணங்களால் குறிப்பிடப்படும் பிரம்மம், குணங்கள் அனைத்தையும் விஞ்சிய பிரம்மம் ஆகிய) நான்கு காரியங்களையும், புலப்படுவது (உடல்), தத்துவம் எனப் பெரும் முனிவரால் (நாராயணனால்) விளக்கப்பட்ட புலப்படாதது (சித்-ஆன்மா) ஆகியவற்றையும் அறியாதவனைப் பிரம்மத்தை அறிந்தவன் என்று சொல்ல முடியாது[1].(1) எது புலப்படுமோ அது மரணத்திற்கு உட்பட்டதாகும். எது புலப்படாததோ, அது (சித்-ஆன்மா) மரணத்தைக் கடந்தது என்று அறியப்பட வேண்டும். முனிவன் நாராயணன் நிவிருத்தி அறத்தை விளக்கியிருக்கிறான்.(2) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டமும் அதனிலேயே நிலைத்திருக்கிறது. மேலும், நிவிருத்தி அறமானது புலப்படாததும், அழிவற்றதுமான பிரம்மத்திற்கு வழிவகுக்கிறது[2].(3) படைப்பாளன் (பிரம்மன்) பிரவிருத்தி அறத்தை விளக்கியிருக்கிறான். பிரவிருத்தியானது மறுபிறவி, அல்லது திரும்புதலைக் குறிப்பால் உணர்த்துகிறது. மறுபுறம் நிவிருத்தியோ, உயர்ந்த கதியைக் குறிப்பால் உணர்த்துகிறது.(4) நன்மை மற்றும் தீமைக்கிடையிலான நிச்சய வேறுபாடுகளைப் பகுத்துப் பார்க்க விரும்புபவனும், ஆன்மாவின் இயல்பைப் புரிந்து கொள்ள எப்போதும் முயல்பவனும், நிவிருத்தி அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவனுமான தவசி உயர்ந்த கதியை அடைகிறான்[3].(5)இதை நிறைவேற்ற விரும்பும் ஒருவன், நான் தற்போது பேசிக் கொண்டிருக்கும் புலப்படாதது மற்றும் புருஷன் குறித்த இரண்டையும் அறிய வேண்டும். மேலும், புலப்படாதது மற்றும் புருஷன் ஆகிய இரண்டிலிருந்தும் எது வேறுபட்டிருக்கிறது, அவை இரண்டையும் எது கடந்திருக்கிறது,(6) அனைத்தில் இருந்தும் எது தனிப்பட்டதாக இருக்கிறது என்பனவற்றை நுண்ணறிவுடன் கூடிய அவன் குறிப்பாகக் கவனிக்க வேண்டும்[4]. பிரகிருதி, புருஷன் ஆகிய இரண்டும் தொடக்கமும் முடிவும் அற்றனவாக இருக்கின்றன. அவற்றுக்கிடையிலுள்ள ஒற்றுமைகளை அறியாதவகையிலேயே அவ்விரண்டும் இருக்கின்றன.(7) இரண்டும் நித்தியமானவையும், அழிவற்றவையுமாக இருக்கின்றன. இரண்டும் பெரியனவற்றில் பெரியனவாக இருக்கின்றன. இவற்றில் அவை ஒரே தன்மையைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவற்றுக்கிடையில் சில வேறுபாடுகளும் இருக்கின்றன. (அதைக் குறித்து இப்போது நான் பேசப் போகிறேன்).(8) பிரகிருதியானது, (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} என்ற) மூன்று குணங்களால் நிரம்பியதாக இருக்கிறது. அது படைப்பிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. க்ஷேத்திரக்ஜனின் (புருஷன், அல்லது ஆன்மாவின்) உண்மைக் குணங்கள் வெவ்வேறானவையாக அறியப்பட வேண்டும்[5].(9) புருஷனானவன், பிரகிருதியின் மாற்றங்கள் அனைத்தையும் உணர்பவனாக இருக்கிறான் (ஆனால் {பிறவற்றால்} உணரப்படாதவனாக இருக்கிறான்). (உண்மை இயல்பைப் பொறுத்தவரையில்) அவன் அனைத்துக் குணங்களையும் கடந்தவனாக {நிர்க்குண பிரம்மமாக} இருக்கிறான். மேலும், புருஷன் மற்றும் பரமாத்மாவைப் பொறுத்தவரையில், அவை இரண்டும் புரிந்து கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. வேறுபாடு காண குணங்கள் எவற்றையும் அவை கொண்டிருக்காததால், அவை இரண்டும் அனைத்திலும் மிகவும் வேறுபட்டிருக்கின்றன[6].(10)தலைப்பாகை அணிந்த மனிதன், தன் தலையைச் சுற்றிலும் மூன்று வகைத் துணிகளால் சுற்றியிருக்கிறான். (எனினும், அவன் அணிந்திருக்கும் தலைப்பாகையானது அந்த மனிதனல்ல).(11) அதேவகையிலேயே உடல்படைத்த ஆன்மாவானது, நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} ஆகிய முக்குணங்களைக் கொண்டிருக்கிறது. அவ்வாறு கொண்டிருந்தாலும் ஆன்மாவும், அந்தக் குணங்களும் ஒன்றல்ல.(12) இதனால், நான்கு வகைக் கருத்துகளைக் கொண்ட இந்த நான்கு காரியங்களும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்[7]. இவை யாவற்றையும் புரிந்து கொள்ளும் ஒருவன், (அனைத்தையும் விசாரிப்பதைப் பொறுத்தவரையில்) தீர்மானத்தை எட்ட வேண்டிய தருணத்தில் ஒருபோதும் திகைப்படைய மாட்டான்.(13) உயர்ந்த செழிப்பை அடைய விரும்பும் ஒருவன், மனத்தில் தூய்மையடைந்தவனாக, உடல் மற்றும் புலன்களைப் பொறுத்தவரையில் தவப்பயிற்சிகளில் ஈடுபட்டு, கனிகளில் {பலன்களில்} எந்த விருப்பமும் இல்லாமல் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.(14) யோக சக்தியானது, அண்டத்தில் மறைமுகமாகப் படர்ந்தூடுருவி, அதன் {அண்டத்தின்} ஒவ்வொரு பகுதியிலும் சுழன்று கொண்டு, அதைப் பிரகாசமாக ஒளிரச் செய்து கொண்டிருக்கிறது.(15)யோகத்தின் விளைவு ஞானமாகும். உலகத்தில் யோகம் மிக உயர்வாகச் சொல்லப்படுகிறது. உண்மைப் பண்பைப் பொறுத்தவரையில், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களை எந்தெந்த செயல்கள் அழிக்கின்றனவோ அவை யோகமாக அமைகின்றன.(16) பிரம்மச்சரியம், தீங்கிழையாமை {அஹிம்சை} ஆகியன உடலின் யோகமாக அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது; அதே வேளையில், முறையான மனக்கட்டுப்பாடு மற்றும் பேச்சுக் கட்டுப்பாடு ஆகியன மனத்தின் யோகமாக அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.(17) சடங்குகளை அறிந்த மறுபிறப்பாளர்களிடம் இருந்து பிச்சையாகப் பெறப்படும் உணவானது, மற்ற உணவுகள் அனைத்திலும் இருந்து வேறுபட்டிருக்கிறது. அந்த உணவைச் சொற்பமாக உண்டாலும், ஆசை {ரஜோ} குணத்தில் பிறந்தவையான ஒருவனின் பாவங்கள் மங்கத் தொடங்குகின்றன.(18) அத்தகைய உணவில் வாழும் ஒரு யோகி, அவனது புலன்கள், தங்களுக்குரிய புலனுணர்வுப் பொருட்களில் இருந்து படிப்படியாக விலகுவதைக் காண்கிறான். எனவே அவன், தன் உடலைத் தாங்கிக் கொள்ளத் தேவையான அளவுக்கு மட்டுமே அத்தகைய உணவையும் உண்ண வேண்டும்.(19) யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனத்தின் மூலம், ஒருவன் படிப்படியாக அடையும் ஞானமானது, அவனது இறுதித் தருணங்களில் வலுக்கட்டாயமாகவும், உற்சாகமாகவும் அடையப்பட வேண்டும் (என்று மற்றொரு ஆசோலனையும் வழங்கப்படுகிறது)[8].(20)உடல்படைத்த ஆன்மாவானது, ரஜஸ் {ஆசை} குணமற்றிருக்கும்போது, (உடனடியாக விடுதலையை {முக்தியை} அடையாமல், புலனுணர்வுகளனைத்தின் நுண்ணிய வடிவை ஏற்று, வெளியில் {ஆகாயத்தில்} அசைந்து கொண்டிருக்கிறது. அவனது {அந்த ஆன்மாவின்} மனம் செயல்களால் பாதிப்படையாதபோது, அத்தகைய துறவின் விளைவால் அவன் (அந்த நுண்ணிய வடிவை இழந்து) பிரகிருதியில் கலக்கிறான் (எனினும் அவன், பிரகிருதிக்கும் மேன்மையான பிரம்மம், அல்லது விடுதலையை அடைவதில்லை).(21) இந்த உடல் திரட்டு அழிந்த பிறகு, கவனமற்ற தன்மை இல்லாமையின் மூலம், (திரள், நுட்பம் மற்றும் காரணம் என்ற) மூன்று உடல்களில் இருந்து தப்பி, விடுதலையை {முக்தியை} அடைவதில் அவன் வெல்கிறான்[9]. உயிரினங்களின் இறப்பும், பிறப்பும், அவற்றின் மூலமான அறியாமையில் (அல்லது அவித்யையில்) அமைந்த காரணத்தைச் சார்ந்தே இருக்கின்றன.(22) பிரம்மஞானம் எழும்போது, அம்மனிதனைத் தேவையேதும் பின்தொடர்வதில்லை. எனினும் (உண்மையில் சுயமல்லாததைச் சுயம் என்று நம்புவதன் மூலம்) உண்மைக்கு நேர்மாறானதை ஏற்கும் மனிதர்கள், இருக்கும் அனைத்துப் பொருட்களின் பிறப்பு மற்றும் இறப்பிலேயே எப்போதும் தங்கள் புத்தியைச் செலுத்துகின்றனர். (அத்தகைய மனிதர்கள் கனவில் கூட விடுதலையை ஒருபோதும் காண்பதில்லை)[10].(23) சில யோகிகள், பொறுமையின் துணை மூலம், தங்கள் உடல்களைத் தாங்கிக் கொண்டு, தங்கள் புத்தியின் துணை மூலம் (புறப்பொருட்கள் அனைத்தில் இருந்தும்) தங்கள் இதயங்களை விலக்கிக் கொண்டு, புலன்களின் உலகில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, நுட்பமாக இருப்பதன் விளைவால் அந்தப் புலன்களையே துதிக்கின்றனர்[11].(24) அவர்களில் சிலர், யோகத்தால் தூய்மையடைந்த மனத்துடன் சாத்திரங்களின்படி (சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள நிலைகளின்படி) செயல்பட்டு, புத்தியின் உதவியால் உயர்வானதை அறிவதில் வென்று, உயர்ந்ததை அடைந்து, வேறு எந்தப் பொருளையும் சாராமல் தன்னிலேயே நிலைத்திருக்கும் அந்த உயர்ந்ததிலேயே வசிக்கிறார்கள்[12].(25)சிலர் பிரம்மத்தைத் தோற்றங்களாக {வடிவங்களாக / சிலைகளாக} வழிபடுகின்றனர். சிலர் குணங்களுடன் கூடியவனாக {சகுன பிரம்மமாக} அவனை வழிபடுகிறார்கள். சிலர், அழிவற்றதும், மின்னலின் கீற்றைப் போன்றதுமாக விளக்கப்படும் அந்த உயர்ந்த தெய்வீகத்தை மீண்டும் மீண்டும் உணர்கிறார்கள்[13].(26) தவங்களின் மூலம் தங்கள் பாவங்கை எரித்தவர்களான வேறு சிலர், முடிவில் பிரம்மத்தையே அடைகிறார்கள். இந்த உயர் ஆன்ம மனிதர்கள் அனைவரும் உயர்ந்த கதியையே அடைகிறார்கள். சாத்திரக்கண் கொண்ட ஒருவன், பல்வேறு வடிவங்களிலான நுண்ணியக் குணங்களை, மனிதர்களால் வழிபடப்படும் பிரம்மத்தில் இருந்து வேறுபட்ட குணங்களாகக் காண வேண்டும். உடலைச் சார்ந்திருக்கும் தேவையைக் கடந்தவனும், பற்றுகள் அனைத்தையும் கைவிட்டவனும், தியானயோகத்தில் அர்ப்பணிப்புள்ள {தாரணையில் பற்றுள்ள} மனத்தைக் கொண்டவனுமான யோகியானவன், பரம்பொருள் அல்லது புலப்படாததைப் போன்ற மற்றொருவனாகவே கருதப்பட வேண்டும்.(28) ஞானம் அடைவதில் அர்ப்பணிப்புள்ள இதயங்களைக் கொண்டோர், மனிதர்களின் உலகில் இருந்து விடுபடுவதிலேயே முதலில் வெல்கிறார்கள். அடுத்தபடியாகப் பற்றுகளைக் கைவிட்டு, பிரம்மத்தின் இயல்பில் கலந்து, இறுதியாக அவர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(29) வேதங்களை அறிந்த மனிதர்கள், பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கும் அறத்தைக் குறித்து இவ்வாறே சொல்லியிருக்கின்றனர். தங்கள் தங்கள் அறிவின் அளவுக்குத் தக்கபடி அவ்வறத்தைப் பின்பற்றுபவர்கள், உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறார்கள்.(30)(ஐயுறுவாதத்தின் தாக்குதல்கள் மூலம்) அசைக்கப்பட முடியாததும், உடையவர்களை அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபடச் செய்வதுமான அறிவை அடைவதில் வெல்லும் மனிதர்கள், மரணத்திற்குப் பிறகு பல்வேறு உயர்ந்த உலகங்களை அடைந்து, தங்கள் ஞானத்தின் அளவுக்குத்தக்கபடி விடுதலை {முக்தி} அடைகிறார்கள்.(31) அறிவின் மூலம் நிறைவை உள்ளீர்த்துக் கொள்பவர்களும், ஆசைகள் மற்றும் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டவர்களுமான தூய இதயம் கொண்டோர், தங்கள் இயல்பின்படி, புலப்படாத குணத்தைக் கொண்டதும், தெய்வீகமானதும், பிறப்பும் இறப்பும் அற்றதுமான பிரம்மத்தின் அருகே படிப்படியாக நெருக்கமடைந்து செல்கிறார்கள்.(32) தங்கள் ஆன்மாக்களில் வசிக்கும் {நிர்க்குண} பிரம்மத்தை உணர்ந்து, தாங்களே மாறும் இயல்பற்றவர்களாகும் அவர்கள் (பூமிக்கு) மீண்டும் திரும்ப வேண்டியதில்லை. அழிவற்றதும், நித்தியமானதுமான பரம நிலையை அடைந்த அவர்கள் அந்த இன்பநிலையிலேயே நிலைத்திருப்பார்கள்.(33)

இவ்வுலகத்தைப் பொறுத்தவரையில் ஞானமென்பது (பிழை செய்பவர்களின் வழக்கில்) இவ்வளவுதான். (பிழையால் திகைப்படையாதோர் வழக்கில்) அஃது {ஞானம்} இருப்பில் இருப்பதில்லை. ஆசையில் கட்டப்பட்டுள்ள மொத்த அண்டமும் ஒரு சக்கரத்தைப் போலச் சுழன்று கொண்டிருக்கிறது[14].(34) தாமரைத்தண்டின் இழைகள், அத்தண்டின் அனைத்து பகுதிகளிலும் படர்ந்திருப்பதைப் போலவே, ஆசை இழைகளும், தொடக்கமும் முடிவும் இல்லாமல் உடலில் படர்ந்திருக்கிறது.(35) நெசவாளன் ஒருவன், தனது நூல்களைத் தன் ஓடத்தின் {ஊசியின்} மூலம் ஓர் ஆடையில் நெய்வதைப் போலவே, அண்டமெனும் துணியில் உள்ள நூல்கள் {ஸம்ஸாரமெனும் நூலானது} ஆசையெனும் ஓடத்தால் {ஊசியால்} {அண்டத்திற்குள்} நெய்யப்படுகிறது.(36) பிரகிருதி, பிரகிருதியின் மாறுதல்கள் {விகாரம்} மற்றும் புருஷன் {பரமாத்மா} ஆகியவற்றை முறையாக அறிந்த ஒருவன், ஆசையில் இருந்து விடுபட்டவனாக விடுதலையை {முக்தியை} அடைகிறான்[15].(37) தெய்வீக முனிவரும், அண்டத்தின் புகலிடமுமான நாராயணன், அனைத்து உயிரினங்களிடமும் கொண்ட கருணையின் நிமித்தமாக, அழிவின்மையை {மரணமில்லா நிலையை} அடைவதற்கான இந்த வழிமுறைகளைத் தெளிவாக வெளியிட்டிருக்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(38)

நாஸ்திக மறுப்பு! – சாந்திபர்வம் பகுதி – 218-வேள்விகளும், சடங்குகளும் மாயையின் விளைவுகள் என்று சொன்ன பஞ்சசிகர்; ஆன்மா என்ற தனிப்பட்ட இருப்புக் கிடையாது என்ற நாத்திகர்களின் கோட்பாடு; இவ்வாதத்தால் அறச் செயல்கள் மற்றும் ஒழுக்கம் ஆகியவை பொருளற்றுப் போவதை விளக்கும் பஞ்சசிகர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஒழுக்கவழிமுறைகள் அனைத்தையும் அறிந்தவரே, விடுதலை {முக்தி / மோக்ஷ} அறத்தை நன்கறிந்தவனும் மிதிலையின் ஆட்சியாளனுமான ஜனகன், உலகம் சார்ந்த இன்பங்கள் அனைத்தையும் கைவிட்டபிறகு, எந்த ஒழுக்கத்தைப் பின்பற்றி விடுதலையை {முக்தியை} அடைவதில் வென்றான்?” எனக் கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒழுக்க வழிமுறைகள் அனைத்தையும் முற்றிலும் அறிந்தவனான அந்த ஆட்சியாளன் {ஜனகன்}, எந்தக் குறிப்பிட்ட ஒழுக்கத்தின் மூலம் உயர்ந்த இன்பநிலையை அடைவதில் வென்றான் என்பது தொடர்பான பின்வரும் உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது.(2) மிதிலையில், ஜனக குலத்தைச் சேர்ந்தவனும், ஜனதேவன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் ஆட்சியாளன் இருந்தான். பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒழுக்க வழிமுறைகளைக் குறித்துச் சிந்திப்பதில் அவன் எப்போதும் ஈடுபட்டு வந்தான்.(3) பல்வேறு வகை வாழ்வுமுறைகளை நோற்கும் மக்களால் பின்பற்றப்படும் பல்வேறு கடமைகளின் வழிமுறைகளை அவனுக்குப் போதிக்க, அவனது அரண்மனையில் எப்போதும் நூறு ஆசான்கள் இருந்து வந்தனர்[1].(4) வேத கல்வியில் ஈடுபட்டிருந்த அவன் {ஜனதேவன்}, ஆன்மாவின் குணம் குறித்துத் தனது ஆசான்களின் ஊகங்கள் மற்றும் உடலை இழந்த பிறகு ஏற்படும் அழிவு அல்லது மரணத்திற்குப் பிறகான மறுபிறவி குறித்த அவர்களின் கோட்பாடுகளில் நிறைவடையாதவனாக இருந்தான்[2].(5)ஒரு காலத்தில், கபிலையின் மகனும், பஞ்சசிகர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பெருந்தவசி, உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தபோது மிதிலையை வந்தடைந்தார்.(6) துறவு தொடர்புடைய பல்வேறு கடமைகள் குறித்த அனைத்து ஊகங்களிலும் {ஸந்யாச தர்மங்கள் அனைத்திலும்} சரியான தீர்மானங்களைக் கொண்டிருந்த அவர், (வெப்பம் மற்றும் குளிர், இன்பம் மற்றும் துன்பம் போன்ற) முரண்பட்ட இரட்டைகள் {துவந்துவங்கள்} அனைத்தையும் கடந்தவராகவும், ஐயங்களேதும் இல்லாதவராகவும் இருந்தார்.(7) அவர் முனிவர்களில் முதன்மையானவராகக் கருதப்பட்டார். விரும்பிய இடத்தில் வசிக்கும் அவர், மனிதர்கள் அனைவரும் அடைவதற்கு மிகக் கடினமான இன்ப நிலையை அவர்கள் எட்டும்படி செய்ய விரும்பினார்.(8) சாங்கிய கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள், கபிலர் என்ற பெயரில் யாரை அறிவார்களோ, உயிரினங்களின் தலைவரான அந்தப் பெரும் முனிவரின் வடிவை ஏற்று உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியபடி அந்தப் பஞ்சசிகர் திரிந்து கொண்டிருந்தார் என்று தெரிகிறது[3].(9) ஆசுரியின் சீடர்கள் அனைவரிலும் முதன்மையானவராக இருந்த அவர் {பஞ்சசிகர்}, மரணமற்றவர் {சிரஞ்சீவி} என்றும் அழைக்கப்பட்டார். அவர் ஆயிரம் ஆண்டுகள் நீடித்த மனோவேள்வி {மானஸயாகம் / சத்ரயாகம்} ஒன்றைச் செய்தார்[4].(10)அவர் உறுதியுள்ள மனத்தைக் கொண்டவராக இருந்து, சாத்திரங்களோடு இணைந்தவையும், பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுப்பவையுமான சடங்குகள் மற்றும் வேள்விகள் அனைத்தையும் நிறைவு செய்தார். அவர், ஆன்மாவை மறைக்கும் ஐந்து உறைகளையும் {உடல்களையும்} முழுமையாக அறிந்தவராக இருந்தார்[5]. பிரம்மத் துதியுடன் தொடர்புடையவையும், (அமைதி, தற்கட்டுப்பாடு முதலிய {சமம், தமம், உபரதி, திதிக்ஷை மற்றும் ஸமாதானம் ஆகிய) ஐந்து குணங்களைக் கொண்டவையுமான ஐந்து செயல்களில் அர்ப்பணிப்புள்ளவராக அவர் இருந்தார். (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) பஞ்சசிகர் என்ற பெயரில் அறியப்பட்டிருந்த அவர், {முன்பு} ஒருநாள், சாங்கிய கோட்பாடுகளைப் பின்பற்றும் பெரும் முனிவர்க்கூட்டத்தை அணுகி, புலப்படாததும், அல்லது ஐந்து புருஷர்களோ (ஏற்கனவே {அடிக்குறிப்பு 5ல்} பெயர் சொல்லப்பட்ட) உறைகளோ சார்ந்திருப்பதும், மனிதர்கள் அடையத்தக்க உயர்ந்த நோக்கமுமான ஒன்றை {பிரம்மத்தைக்} குறித்து அவர்களிடம் விசாரித்தார்[6].(11,12) ஆன்ம ஞானம் அடைவதன் நிமித்தமாக, ஆசுரி என்பவர் ஏற்கனவே தமது ஆசானிடம் விசாரித்திருந்தார். பின்னவரின் {ஆசுரியுடைய ஆசானின்} போதனைகள் மற்றும் தன் சொந்த தவங்கள் ஆகியவற்றின் விளைவால் அந்த ஆசுரி, உடல் மற்றும் ஆன்மாவுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொண்டு, தெய்வீகப் பார்வையை அடைந்திருந்தார்.(13) மாறும் இயல்பற்றதும், ஒன்றேயானதும், அழிவில்லாததும், பல்வேறு வடிவங்களில் காணப்படுவதுமான பிரம்மம் குறித்து {இப்போது} அந்த முனிவர்க்கூட்டத்தில் ஆசுரி தமது விரிவுரையை அளித்தார்.(14) {அந்தக் கூட்டத்தில் இருந்த} பஞ்சசிகர் ஆசுரியின் சீடரானார். அவர் மானுடப் பாலில் {மானுடப்பெண்ணின் பாலை உணவாகக் கொண்டு} வாழ்ந்தார். கபிலை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட பிராமணி இருந்தாள். அவள் ஆசுரியின் மனைவியாக இருந்தாள்[7].(15)பஞ்சசிகர் அவளால் ஒரு மகனாக ஏற்கப்பட்டார், அவர் அவளது முலைப்பால் அருந்தினார் {ஸ்தன்யாபானம் செய்தார்}. இதன் விளைவால் அவர், கபிலையின் மகன் {காபிலேயர்} என்று அறியப்பட்டார். அவரது புத்தி பிரம்மத்தில் நிலைத்திருந்தது.(16) அவரது பிறப்பு மற்றும் அவர் கபிலையின் மகனானது {காபிலேயரானது} ஆகிய சூழ்நிலைகள் குறித்த இவை யாவையும் எனக்குத் தெய்வீக முனிவரால் {மார்க்கண்டேயரால் / சனத்குமாரரால்} சொல்லப்பட்டது[8]. அவரே அனைத்தையும் அறிந்தவரான பஞ்சசிகர் குறித்து எனக்குச் சொன்னார்.(17) கடமைகள் அனைத்தின் வழிமுறைகளையும் அறிந்த பஞ்சசிகர், உயர்ந்த ஞானத்தை {ஆசுரியிடமிருந்து} அடைந்த பிறகு, (ஜனகனிடம் {ஜனதேவனிடம்} வந்து), அந்த மன்னன் தன் ஆசான்கள் அனைவரையும் சமமாக மதிப்பவன் என்பதை அறிந்து, அபரிமிதமான காரணங்களால் {பலயுக்திகளால்} அந்த நூறு ஆசான்களையும் வியக்கச் செய்தார்.(18) காபிலேயரின் {பஞ்சசிகரின்} திறன்களைக் கண்ட ஜனகன் {ஜனதேவன்}, அவரிடம் அதீதப் பற்றைக் கொண்டு, தன் நூறு ஆசான்களையும் கைவிட்டு, குறிப்பாக அவரையே பின்பற்றத் தொடங்கினான்.(19) அப்போது காபிலேயர் {பஞ்சசிகர்}, (ஒரு சீடன் செய்ய வேண்டிய முறையில்) தம்மிடம் விதிப்படி தலை வணங்கியவனும், அந்தத் தவசியின் போதனைகளைப் புரிந்து கொள்ளும் முழுத் தகுதி கொண்டவனுமான ஜனகனிடம் {ஜனதேவனிடம்}, சாங்கிய ஆய்வேடுகளில் விளக்கப்பட்டுள்ள விடுதலை {முக்தி / மோக்ஷம்} எனும் உயர்ந்த அறத்தைக் குறித்து உரையாடத் தொடங்கினார்.(20)முதலிடத்தில் பிறப்பின் துன்பங்களைச் சொன்ன அவர், அடுத்ததாக (அறச்) செயல்களின் துன்பங்களைக் குறித்துப் பேசினார். அக்காரியத்தை நிறைவு செய்த அவர், படைப்பாளனின் உயர்ந்த உலகத்திலேயே முடிவடையும் வாழ்வின் அனைத்து நிலைகளுக்குரிய துன்பங்களையும் விளக்கினார்[9].(21) அற நடைமுறை {வேள்விகள் / சடங்குகள்}, செயல்கள் மற்றும் அவற்றின் கனிகள் {பலன்கள்} ஆகியவை எதன் நிமித்தமாகச் செய்யப்படுகிறதோ, எது நம்பிக்கைக்குத் தகாததோ, அழியவல்லதோ, நிலையற்றதோ, நிச்சயமற்றதோ அந்த மாயையைக் குறித்தும் சொன்னார்[10].(22) {பஞ்சசிகர்} “(உடலின்) மரணம் அனைவராலும் காணப்படும்போது, உடலில் இருந்து வேறுபட்டதும், ஆன்மா என்று அழைக்கப்படுவதுமான ஒன்று இருக்கிறது என்று, சாத்திரங்களில் உள்ள நம்பிக்கையின் விளைவால் நம்புபவர்கள் {நாஸ்திகர்களின் எதிர்} வாதத்தில் வெல்லப்படுகிறார்கள் என்று ஐயுறுவாதிகள் {நாஸ்திகர்கள்} சொல்கிறார்கள்.(23) ஒருவன் இறந்துவிட்டால், அவனது ஆன்மாவும் அழிகிறது என்றும், எனவே, துன்பம், முதுமை, நோய் ஆகியன ஆன்மாவின் (பகுதியளவு) மரணத்தையே குறிக்கிறது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். உடலில் இருந்து ஆன்மா வேறானது, உடலின் இழப்பிற்குப் பிறகும் அது நீடிக்கிறது என்று பிழையாகக் கருதுபவன், அறிவுக்குப் பொருந்தாத கருத்தைப் பேணி வளர்க்கிறான் {என்று அவர்கள் சொல்கிறார்கள்}.(24) உலகில் உண்மையில் இல்லாத அஃது {ஆன்மா}, இருக்கிறது என்று கருதப்பட்டால், மன்னனும்கூட முதுமைக்கோ, மரணத்திற்கோ ஆட்படமாட்டான் என்றும் குறிப்பிடலாம். ஆனால், அந்தக் காரியத்தில் அவன் தன்னை முதுமையையும், மரணத்தையும் கடந்தவனாக உண்மையில் நம்புவானா? {என்றும் அவர்கள் கேட்கிறார்கள்}[11].(25)ஒரு பொருள் இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வி எழுகையில், உறுதிகூறப்பட்ட அதன் இருப்பானது, இல்லாமையின் அனைத்துக் குறியீடுகளையும் அளிக்கிற போது, சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கைக் காரியங்களைத் தீர்மானிக்க எதனைச் சார்ந்திருப்பார்கள்?[12](26) உள்ளுணர்வு {அனுமானம்} மற்றும் சாத்திரங்கள் {ஆகமம்} ஆகிய இரண்டிலும் நேரடி சாட்சியங்களே {பிரத்யக்ஷங்களே} வேராக இருக்கின்றன. சாத்திரங்கள் {ஆகமங்கள்} நேரடி சாட்சியத்தின் மூலம் மறுத்துக்கூற வல்லனவாக இருக்கின்றன. உள்ளுணர்வை {அனுமானத்தைப்} பொறுத்தவரையில், அதன் சாட்சிய பாதிப்பு அதிகமானதாக {போதுமானதாக} இல்லை.(27) எந்தக் காரியமாக இருந்தாலும், உள்ளுணர்வை மட்டுமே காரணமாகக் கொள்வது நிறுத்தப்பட வேண்டும். இந்த உடலைத் தவிர ஜீவன் என்றழைக்கப்படும் வேறேதும் இல்லை {என்றும் அவர்கள் சொல்கிறார்கள்}.(28)ஓர் ஆலமர விதையானது, இலைகள், மலர்கள், கனிகள், வேர்கள் மற்றும் பட்டை ஆகியவற்றை உண்டாக்கும் திறனைத் தன்னுள் கொண்டுள்ளது. ஒரு பசு உண்டு பருகும், புல் மற்றும் நீரின் மூலம், உற்பத்திக்கான காரணங்களில் இருந்து வேறுபட்ட இயல்பைக் கொண்ட பொருட்களான பாலும், நெய்யும் உண்டாக்கப்படுகின்றன. நீரில் சில காலத்திற்கு அழுக விடப்படும் பல்வேறு வகைப்பட்ட பொருட்கள், தங்கள் இயல்பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மதுவை உண்டாக்குகின்றன. அதேவகையில், உயிர் வித்தில் இருந்து, உடலும், புத்தியுடன் கூடிய அதன் குணங்களும், நனவுநிலையும் {அஹங்காரமும்}, மனமும், பிற உடைமைகளும் உண்டாகின்றன. இரண்டு மரத்துண்டுகள் உரசப்படும்போது அவை நெருப்பை உண்டாக்குகின்றன. சூரிய காந்தம் என்றழைக்கப்படும் கல்லானது, சூரியக் கதிர்களின் தொடர்பேற்படும்போது நெருப்பை உண்டாக்குகிறது. கடினமான நீரில் சுடப்பட்ட எந்த உலோகப் பொருளும், நீருடன் தொடர்பேற்படும்போது அதை {நீரை} வற்ற செய்கிறது. அதே போலவே, பொருளாலான உடலானது, மனத்தையும், உணர்வு, நினைவு, கற்பனை முதலியவற்றுக்கான அதன் {மனத்தின்} குணங்களையும் உண்டாக்குகிறது. காந்தக் கல்லானது இரும்பை அசைப்பதைப் போலவே, புலன்களும் மனத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன {என்றும் அவர்கள் சொல்கிறார்கள்}[13].(29)இவ்வாறே ஐயுறுவாதிகள் {தர்க்க மதத்தார் / நாத்திகர்கள்} காரணம் கூறுகின்றனர். எனினும் இந்த ஐயுறுவாதிகள் {தர்க்க மதத்தால் / நாத்திகர்கள்} பிழை செய்கின்றனர். உடல் (உடலின் அசைவு சக்தி மட்டுமே) மறைவதன் மூலம் உயிரற்றதாவதே (அந்த நிகழ்வு {மரணம்} நேரும் அதே நேரத்தில் உடல் அழியாததே) அதற்கு {அந்தப் பிழைக்கு} ஆதாரமாகும். (உடலானது, ஆன்மாவல்ல. ஆன்மாவானது உடலில் இருந்து தனிப்பட்ட ஒன்று, அது நிச்சயம் கடந்து வாழ்கிறது என்ற உண்மைக்கு இதுவே ஆதாரம். உண்மையில் உடலும், ஆன்மாவும் ஒரே பொருளாக இருந்தால், அவை இரண்டும் ஒரே நேரத்தில் மறைந்திருக்கும். அதற்குப் பதில், மரணம் நேர்ந்த பிறகும் சடலம் {உயிரற்ற உடல்} சிலகாலத்திற்குக் காணப்பட்டுகிறது. எனவே, உடலிலிருந்து வேறுபட்ட ஏதோவொரு பொருள் அந்த உடலில் இருந்து தப்புவதே மரணம் என்றாகிறது). ஆன்மாவின் தனிப்பட்ட இருப்பை மறுக்கும் மனிதர்கள் {தர்க்க மதத்தார்} தேவர்களிடம் வேண்டுவது (ஆன்மாவானது உடலில் இருந்து தனிப்பட்டது, அல்லது பொருள் திரட்டின் சார்பற்ற தனியிருப்பு என்ற கூற்றுக்கு) மற்றொரு நல்ல வாதமாக அமையும். (இந்த மனிதர்கள் வேண்டும் தேவர்கள் காணப்படவோ, தீண்டப்படவோ இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நுட்பமான வடிவங்களில் இருப்பதாக நம்பப்படுகிறார்கள். உண்மையில் பொருள்திரள் வடிவங்களற்ற தேவர்களின் மீதுள்ள நம்பிக்கை அறிவுக்கு எந்தக் குந்தகத்தையும் விளைவிக்கவில்லையெனில், பொருளற்றதான ஆன்மாவின் இருப்பு மட்டும் அந்த அறிவுக்கு ஏன் குந்தகத்தை விளைவிக்க வேண்டும்?). ஐயுறுவாதியின் கருத்தே செயல்களின் அழிவைக் குறிப்பிடுகிறது என்பது அவருக்கு எதிரான மற்றொரு வாதமாகும். (ஏனெனில், உடலும், ஆன்மாவும் ஒன்றாகவே இறந்தால், இப்பிறவி வாழ்வின் செயல்களும் அழிந்து போகும். இக்கருத்து, அண்டத்தில் காணப்படும் சமமற்ற நிலைகளை எந்த மனிதனாலும் விளக்கப்படச் சாத்தியமில்லாத நிலையை உண்டாக்கும்)[14].(30)இவ்வாறு குறிப்பிடப்படுபவையும், பொருள்வடிவங்களைக் கொண்டவையுமான இவை {ஜடவஸ்துக்கள்}, (பொருளற்ற {வடிவமற்ற} ஆன்மா மற்றும் பொருளற்றவையான {ஜடமல்லாதவையான} உணர்வு, நினைவு போன்றவற்றுக்கு) காரணங்களாக அமைய சாத்தியமில்லை. பொருள்வடிவமற்ற இருப்புகளைப் பொருள் வடிவமுள்ள பொருட்களுடன் அடையாளம் கண்டு அறிந்து கொள்ள முடியாது. (எனவே, பொருள்வடிவமுள்ள பொருட்கள் எவ்வழியிலும் பொருள் வடிவமில்லாத பொருட்களை உண்டாக்கும் காரணங்களாக இருக்க முடியாது).(31) சிலர், மறுபிறப்பு இருக்கிறது, மேலும் அஃது, அறியாமை, செயல்களில் உள்ள விருப்பம், பேராசை, கவனமின்மை, பிற குற்றங்களில் ஈடுபாடு ஆகியனவற்றால் உண்டாகிறது என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.(32) அவர்கள் அறியாமையே (அவித்யையே) மண் {இடம் / க்ஷேத்ரம்} என்று சொல்கிறார்கள். செயல்கள், அந்த மண்ணில் விதைக்கப்படும் விதையாகும். ஆசையென்பது, அந்த விதையை வளரச் செய்யும் காரணமான நீராக அமைகிறது. இவ்வழியிலேயே அவர்கள் {தர்க்க மதத்தார் / ஐயுறுவாதிகள் / நாத்திகர்கள்} மறுபிறப்பை விளக்குகிறார்கள்.(33) அந்த அறியாமையானது, புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு வழியில் உள்தோய்ந்து, ஒரு மனித உடல் அழிந்ததும், உடனே மற்றொறு உடல் பிறக்கிறது’ அது ஞானத்தின் துணையுடன் எரிக்கப்படும்போது, இருப்பின் அழிவே தொடர்கிறது, அல்லது அந்த மனிதன் நிர்வாணம் என்றழைக்கப்படும் நிலையை அடைகிறான் என அவர்கள் {தர்க்க மதத்தார்} வாதிடுகின்றனர்.(34) இக்கருத்துப் பிழையுள்ளதாகும். (இது பௌத்தர்களின் கோட்பாடாகும்). இவ்வாறு மீண்டும் பிறக்கும் ஒன்றின் இயல்பு, பிறப்பு, அறம் மற்றும் மறம் தொடர்புடைய நோக்கங்கள் வேறுபட்டிருக்கும்போது, அஃது ஏற்கனவே இருந்த ஒன்றின் எந்த அடையாளத்தையும் கொண்டிருப்பதாக ஏன் கருதப்பட வேண்டும்? உண்மையில், குறிப்பிட்ட ஒன்றில் மொத்தமாக இருக்கும் இருப்புகளின் சங்கிலியானது, உண்மையான தொடர் இணைப்புகளைக் கொண்ட ஒரு சங்கிலி கிடையாது (ஆனால் அந்த அடுத்தடுத்த இருப்புகள், ஒன்றோடொன்று தொடர்பற்றவையாக இருக்கின்றன) என்ற உள்ளுணர்வை {அனுமானத்தை} மட்டுமே அடையச் செய்யும்[15].(35)மேலும், மறுபிறப்பின் விளைவாக இருக்கும் ஒன்று, உண்மையில் முந்தைய இருப்பில் வேறாக இருக்கும்போது, ஒருவன் செய்யும் செயல்கள், அடுத்த இருப்பில் (அவற்றை அனுபவிக்க அந்தச் செயலைச் செய்தவன் இல்லாமல்) மற்றொருவனின் மீது குவிவதால், ஈகை பயில்வது, அல்லது அறிவு, தவசக்தி ஆகியவற்றை அடைவது ஆகியவை ஒரு மனிதனிடம் என்ன நிறைவை ஏற்படுத்த முடியும்?(36) இப்பிறவியில் ஒருவன், முற்பிறவியில் மற்றொருவனால் செய்யப்பட்ட செயல்களுக்காகத் துன்பத்தை அடைவான், அல்லது துன்பத்தை அடைந்து மீண்டும் இன்பத்தை அடைவான் என்ற விளைவை இப்போது மறுக்கப்படும் இந்தக் கோட்பாடு முன்வைக்கிறது. எனினும், இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைக் காண்பதன் மூலம், புலப்படாததைக் குறித்த சரியான தீர்மானத்தை நாம் அடைய முடியும்[16].(37) (பௌத்த வாழ்வுக் கோட்பாட்டின்படி) மறுபிறவியின் விளைவால் உண்டாகும் தனிப்பட்ட நனவுநிலை, முற்பிறவியில் இருந்த நனவுநிலையில் இருந்து வேறுபட்டதாகும். எனினும், அந்தத் தனிப்பட்ட நனவுநிலையின் எழுச்சி, அல்லது தோற்றம் குறித்து அந்தக் கோட்பாட்டில் விளக்கப்படுவதும் அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லை. (முற்பிறவியில் இருந்த) நனவுநிலையானது, உடல் அழிவது வரை மட்டுமே இருந்து நிலையற்றதாக மட்டுமே இருப்பதால் அது நித்திய தன்மைக்கு முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது. எதற்கு முடிவு உண்டோ, அஃது அதன் முடிவுக்குப் பிறகு இரண்டாம் நனவுநிலையை உண்டாக்கவல்லது என்பது ஏற்புடையதல்ல. மேலும், இரண்டாம் நனவுநிலை உண்டாவதன் காரணமாக முந்தைய நனவுநிலை அழிகிறது எனக் கொண்டால், அப்போது, ஒரு கனத்த தடியின் மூலம் மனித உடல் இறந்தவுடன், அசைவிழந்த அந்த உடலில் இருந்து உடனே இரண்டாவது உடல் எழ வேண்டும்[17].(38)மேலும், அவர்களது உயிர் அழிவு (அல்லது நிர்வாணம், அல்லது சத்வசங்கியக்) கோட்பாடானது, பருவகாலங்கள், அல்லது வருடம், அல்லது யுகம், அல்லது வெப்பம், அல்லது குளிர், அல்லது ஏற்படைய, ஏற்பில்லாத பொருட்களைப் போல மீண்டும் மீண்டும் தோன்றும் தோற்றப்பாடே அழிவு என்பதற்கான மறுப்புக்கு வெளிப்பட்டிருக்கிறது[18].(39) இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள், இந்த மறுப்புகளைத் தவிர்க்கும் நோக்கத்துடன், ஒவ்வொரு புதிய நனவு நிலையும் பற்றிக் கொள்ளும் நிரந்தரமான ஓர் ஆன்மாவின் இருப்பை உறுதிசெய்தால், நிரந்தரமான ஒரு பொருள் முதுமைக்கும், மரணத்திற்கும் ஆட்பட்டு அழிவைக் கொண்டுவந்து, அதே வேளையில் தானும் பலவீனமடைந்து அழிகிறது என்ற புதிய மறுப்புக்கு வெளிப்பட்டு நிற்பார்கள். ஒரு மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்கள் காலப்போக்கில் பலவீனமடைந்தால், இறுதியில் அந்த மாளிகையே விழப்போவது நிச்சயம்[19].(40) புலன்கள், மனம், காற்று, குருதி, இறைச்சி, எலும்புகள் அகியன (மற்றும் உடலில் உள்ளடங்கிய அனைத்தும்) ஒன்றன் பின் ஒன்றாக அழிவையடைந்து, அவை ஒவ்வொன்றும் தங்கள் தங்கள் உற்பத்திக் காரணங்களுக்குள் நுழைகின்றன[20].(41)மேலும், மாற்றப்பட முடியாததும், புத்தி, நனவுநிலை {அஹங்காரம்} மற்றும் வழக்கமான பிற குணங்கள் ஆகியவற்றின் புகலிடமும், இவை யாவற்றில் இருந்தும் பிரிந்திருப்பதும், நித்தியமானதுமான ஆன்மாவின் இருப்பு உறுதி செய்யப்பட்டால், அஃது இவ்வுலகில் வழக்கமாகச் செய்யப்படும் அனைத்தையும் பொருளற்றதாக்கும், குறிப்பாக ஈகை மற்றும் பிற அறச்செயல்களின் கனிகளைப் பொருளற்றதாக்கும் அத்தகைய உறுதிப்பாடு மற்றொரு மிக முக்கிய மறுப்புக்கு வெளிப்பட்டு நிற்கும். அச்செயல்களையும், உலகின் மனித ஒழுக்கம் தொடர்புடைய செயல்கள் அனைத்தையும் தூண்டும் ஸ்ருதிகளின் தீர்மானங்களும் பொருளற்றவையாகும். ஏனெனில், புத்தி மற்றும் மனத்தில் இருந்து ஆன்மாவின் தொடர்பறுந்தால், நற்செயல்கள் மற்றும் வேத சடங்குகளின் கனிகளை அனுபவிக்க ஒருவனும் இருக்கமாட்டான்[21].(42) இவ்வாறு பல்வேறு வகையான ஊகங்கள் மனத்தில் எழுகின்றன. இக்கருத்து சரியா, அக்கருத்து சரியா என்பதைத் தீர்மானிக்க எவ்வழியும் இல்லை.(43) இக்கருத்துகளைச் சிந்திப்பதில் ஈடுபடும் குறிப்பிட்ட மனிதர்கள், ஊகத்தின் அடிப்படையிலான குறிப்பிட்ட வரிகளையே பின்பற்றுகிறார்கள். குறிப்பிட்ட கோட்பாடுகளை நோக்கி செலுத்தப்படும் இவற்றைக் குறித்த புரிதல்கள் {புத்தி}, முற்றிலும் அவற்றிலேயே ஈடுபட்டு, இறுதியில் அவற்றிலேயே தொலைந்து போகின்றன.(44) இவ்வாறே மனிதர்கள் அனைவரும் நன்மை அல்லது தீமையின் தொடர்ச்சியால் துன்பத்தை அடைகிறார்கள். வேதங்களே, யானைகளை வழிநடத்தும் யானைவளர்ப்பவர்களைப் போல அவற்றை {தர்க்க மதக் கருத்துகளைச்} சரியான பாதைக்குக் கொண்டுவருகின்றன[22].(45)பலவீனமான மனம் படைத்த பல மனிதர்கள், பெரும் மகிழ்ச்சி நிறைந்த பொருட்களில் பேராசை கொள்கிறார்கள். எனினும், விரைவில் அவர்கள் அதைவிடப் பெரிய துயரத்தைச் சந்தித்து, ஆசைப்பட்ட இறைச்சியிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிந்து, மரணத்தைச் சந்திக்கிறார்கள்.(46) மரணத்திற்கு விதிக்கப்பட்டவனும், நிலையற்ற வாழ்வைக் கொண்டவனும், சொந்தங்கள், நண்பர்கள், மனைவியர் போன்ற பிற வகை உடைமைகளைக் கொண்டவனுமான ஒருவனுக்கு இவற்றால் என்ன பயன்? இவை அனைத்தையும் கைவிட்டு மரணத்தைச் சந்திக்கும் ஒருவன், இவ்வுலகை எளிதாகக் கடந்து, மீண்டும் திரும்பாமல் இருக்கிறான்.(47) பூமி {நிலம்}, வெளி {ஆகாயம்}, நீர், வெப்பம் {நெருப்பு}, காற்று ஆகியன எப்போதும் உடலை ஆதரித்து வளப்படுத்துகின்றன. இதைச் சிந்திக்கும் ஒருவனால் எவ்வாறு ஒருவனுடைய உடலில் பற்றுக் கொள்ள முடியும்? உண்மையில், அழிவுக்கு உள்ளாகும் உடலில் எந்த இன்பமுமில்லை” {என்றார் பஞ்சசிகர்}.(48) கபடத்தில் இருந்து விடுபட்டவையும், (வேள்விகள் மற்றும் பிற வேதச் செயல்பாடுகளுக்கு உற்சாகமளிக்காமல்) மாயையின் தொடர்பற்றவையும், உயர்ந்த மதிப்பு கொண்டவையும், ஆன்மாவைக் குறித்தவையுமான பஞ்சசிகரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஜனதேவன் ஆச்சரியத்தால் நிறைந்து மீண்டும் அந்த முனிவரிடம் பேச ஆயத்தமானான்” என்றார் {பீஷ்மர்}[23].(49)

கர்மபலன்கள்! – சாந்திபர்வம் பகுதி – 219- கர்ம பலன்களை ஜனதேவனுக்குச் சொன்ன பஞ்சசிகர்; அறியாமைக்கும் அறிவுக்கும் இடையிலான வேறுபாடு என்ன? மனிதர்கள் ஏன் செயலை விரும்ப வேண்டும்? உயர்ந்த கதியை அடைய அவர்கள் ஏன் முயற்சிக்க வேண்டும்? என்பவை குறித்த ஜனதேவனின் ஐயங்களுக்கு விடையளித்த பஞ்சசிகர்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு பெரும் முனிவர் பஞ்சசிகரால் போதிக்கப்பட்ட ஜனக குலத்தின் ஜனதேவன், மீண்டும் அவரிடம் மரணத்திற்குப் பிறகான இருப்பு மற்றும் இல்லாமை குறித்துக் கேள்வி கேட்டான்.(1)

ஜனகன் {ஜனதேவன் பஞ்சசிகரிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, இப்போது இருக்கும் நிலையில் இருந்து எந்த மனிதனும் எந்த ஞானத்தையும் தக்க வைத்துக் கொள்ளவில்லையெனில், உண்மையில், இஃது உண்மையெனில், அறியாமைக்கும், அறிவுக்கும் இடையிலான வேறுபாடு என்ன? ஞானத்தால் நாம் ஈட்டுவதென்ன? அறியாமையால் நாம் இழப்பதென்ன?(2) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, விடுதலை {முக்தி} என்பது இத்தகையதென்றால், அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்தும் முடிவில் அழிவை மட்டுமே அடையும். கவனமின்மை மற்றும் கவனமிக்கத்தன்மை ஆகியவற்றின் வேறுபாட்டால் என்ன பயன் விளைகிறது?(3) இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தின் தொடர்பறுப்பதும், அல்லது, இல்லாத பொருட்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும்தான் விடுதலை {முக்தி} எனில், மனிதர்கள் ஏன் செயலைச் செய்ய விரும்ப வேண்டும்? அல்லது செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர்கள், விரும்பத்தக்க கதிகளை அடையத் தேவையான வழிமுறைகளை ஏன் தொடர்ந்து வகுக்க வேண்டும்? (இக்காரியம் தொடர்பான) உண்மைதான் என்ன?” என்று கேட்டான்”.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “கல்விமானான பஞ்சசிகர், அடர்ந்த இருளில் மறைந்திருப்பவனும், பிழையால் திகைப்படைந்தவனும், ஆதரவற்றவனுமான அந்த மன்னனை {ஜனதேவனைக்} கண்டு, பின்வரும் வார்த்தைகளைப் பேசி அவனை அமைதிப்படுத்தினார்.(5)

{பஞ்சசிகர்}, “இதில் (விடுதலையில் {முக்தியில்}) உறவு என்பது அழிவல்ல. அதே வேளையில் உறவு என்பது (ஒருவன் உடனடியாகக் காணத்தக்க) எந்த வகை இருப்பும் அல்ல. உடல், புலன்கள் மற்றும் மனத்தின் கலவையையே நாம் காண்கிறோம். எந்தச் சார்பும் இல்லாமலும் {சுதந்திரமாகவும்}, ஒன்றையொன்று கட்டுப்படுத்திக் கொண்டும் இவை செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன[1].(6) நீர், வெளி {ஆகாயம்}, காற்று {வாயு}, வெப்பம் {அக்னி}, பூமி {நிலம்} ஆகிய பொருட்களே உடலை அமைக்கின்றன. இவை தங்கள் தங்கள் இயல்பின்படியே (உடலாக அமைந்து) ஒன்றாக நீடித்திருக்கின்றன. இவை மீண்டும் தங்கள் சொந்த இயல்பின்படியே பிரிகின்றன.(7) வெளி, காற்று, வெப்பம், நீர் மற்றும் பூமி ஆகிய இந்த ஐந்து பொருட்களும் கலந்த நிலையிலேயே உடல் அமைகிறது. உடலானது ஒரு பூதத்தால் ஆனதல்ல.(8) புத்தி, குடல்வெப்பம் {ஜாடராக்னி}, பிராணன் முதலியவைகளாக அழைக்கப்படும் காற்றுகள் {வாயுக்கள்} என்ற உயிர்மூச்சுகள் ஆகிய இவை மூன்றும் செயல்படும் உறுப்புகளாக {கர்ம காரணங்களெனச்} சொல்லப்படுகின்றன. புலன்கள், (ஒலி, வடிவம் முதலிய) பொருள் நுகர் பொருட்கள், எதன் மூலம் அவை உணரத்தக்கவையாக மாறுகின்றனவோ (அந்தப் பொருட்களில் வசிக்கும்) அந்தச் சக்தி, எதன்மூலம் உணர முடிகிறதோ அந்த (புலன்களில் வசிக்கும்) திறன்கள், மனம், பிராணன், அபானன் முதலியவையாக அழைக்கப்படும் உயிர்மூச்சுகள், செரிமான உறுப்புகளின் விளைவாக இருக்கும் பல்வேறு சாரங்கள் ஆகியன ஏற்கனவே சொல்லப்பட்ட மூன்று உறுப்புகளில் இருந்து பாய்கின்றன[2].(9) கேள்வி {காது}, தீண்டல் {ஊறு / தோல்}, சுவை {நாக்கு}, பார்வை {கண்கள்}, மணம் {மூக்கு} ஆகியவை ஐம்புலன்களாகும் {ஐம்புலன்களால் உணரப்படுபவை}. அவை தங்கள் குணங்களை, தங்களுக்குக் காரணமாக இருக்கும் மனத்தில் இருந்து பெறுகின்றன.(10)சித் எனும் ஒரு குணமாக இருக்கும் மனத்திற்கு, இன்பம், துன்பம் மற்றும் இன்பதுன்பம் இல்லாமை ஆகிய மூன்று நிலைகள் இருக்கின்றன.(11) ஒருவன் மரணமடையும் தருணம் வரை பிரிக்கப்பட முடியாமல் உள்பொதிந்திருக்கும் ஒலி, தீண்டல் {ஊறு}, வடிவம், சுவை, மணம் மற்றும் பிற பொருட்களே, ஒருவனுக்கு ஞானம் உண்டாக்கும் காரணங்களாக இருக்கின்றன.(12) (சொர்க்கத்திற்கு வழிவகுக்கும்) செயல்கள் அனைத்தும், (பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கும்) துறவும், விசாரிக்கும் அனைத்துக் காரியங்களிலும் உண்மையை உறுதி செய்வதும் புலன்களையே சார்ந்திருக்கின்றன. (உண்மையை) உறுதி செய்வதே இருப்பின் உயர்ந்த நிலை, அதுவே விடுதலையின் {முக்தியின்} விதை அல்லது வேர் என்று கல்விமான்கள் சொல்கின்றனர். புத்தியானது, விடுதலை {முக்தி} மற்றும் பிரம்மத்தை நோக்கி அவற்றை வழிநடத்துகிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்[3].(13) (உடல் என்றும், புலன்நுகர் பொருட்கள் என்று அழைக்கப்படும்) அழியத்தக்க குணங்களுடன் சேர்ந்த இந்தக் கலவையை {உடலை} ஆன்மாவாகக் கருதும் மனிதன், அத்தகைய தவறான ஞானத்தின் விளைவால் முடிவில்லாத துன்பத்தை உணர்கிறான்.(14) மறுபுறம், உலகம் சார்ந்த பொருட்கள் எதுவும் ஆன்மாவல்ல என்று கருதுபவர்களும், எந்தப் பற்றும் இல்லாமல் இருப்பவர்களுமான மனிதர்களின் வழக்கில், துன்பம் சார்ந்திருக்க ஓர் அடித்தளம் தேவை என்பதால் அவர்கள் எந்தத் துன்பத்தையும் ஒருபோதும் அனுபவிக்கமாட்டார்கள்.(15)இது தொடர்பாகத் துறவு சம்பந்தமான ஒப்பற்ற ஒரு ஞானக்கிளையொன்று இருக்கிறது. அது சம்யாகவாதம் {மோக்ஷசாஸ்திரம்} என்றழைக்கப்படுகிறது. அது குறித்துச் சொல்லப் போகிறேன். உன் விடுதலையின் நிமித்தமாக அதைக் கேட்பாயாக.(16) மனிதர்கள் அனைவருக்கும் (விதிக்கப்பட்டிருக்கும்) செயல்களில் துறவென்பது, மெய்யுறுதியுடன் விடுதலைக்காக முனையும் மனிதர்கள் அனைவருக்குமானதாகும் {விதிக்கப்பட்டதாகும்}. எனினும், சரியாகக் கற்பிக்கப்பட்டோர் (துறவின் மூலம் அமைதியை அடைய முடியும் என நினைப்போர்), துன்பத்தின் கனத்த சுமையைச் சுமக்க வேண்டும்.(17) வேத வேள்விகளும், பிற சடங்குகளும், செல்வம் மற்றும் பிற உடைமைகளின் துறவுக்காகவே இருக்கின்றன. அனைத்து இன்பங்களையும் துறப்பதற்காகவே, பல்வேறு நோன்புகளும், உபவாசங்களும் இருக்கின்றன. இன்பத்தையும், மகிழ்ச்சியையும் துறப்பதற்காகவே தவங்களும், யோகமும் இருக்கின்றன. எனினும், அனைத்தையும் துறப்பதே உயர்ந்த வகைத் துறவாகும்.(18) இப்போது நான் உனக்குச் சொல்லப்போவது, அனைத்தையும் துறப்பதற்காகக் கல்விமான்களால் சுட்டிக்காட்டப்படும் ஒரு பாதையாகும். அந்தப் பாதையில் செல்வோர், அனைத்து துன்பங்களையும் விரட்டுவதில் வெல்கிறார்கள். எனினும், அதனிலிருந்து விலகுவோர், துன்ப துயரங்களையே அறுவடை செய்கிறார்கள்[4].(19)ஆறாவதாக மனத்தைக் கொண்ட ஐந்து அறிவுப் புலன்களையும் {ஞானேந்திரியங்களையும்}, புத்தியில் வசிக்கும் அனைத்தையும் முதலில் சொன்னேன். ஆறாவதாகப் பலத்தைக் கொண்ட ஐந்து செயற்புலன்களையும் {இப்போது} நான் உனக்குச் சொல்லப்போகிறேன்.(20) இரு கரங்களும் செயல்பாட்டின் ஈருறுப்புகளாக இருக்கின்றன. இரு கால்களும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரச் செய்யும் இரண்டு உறுப்புகளாக இருக்கின்றன. இன்பம் மற்றும் இனத் தொடர்ச்சி ஆகிய இரண்டிற்காக இருப்பது பிறப்புறுப்பாகும். வயிற்றில் இருந்து வரும் குதம், பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பொருட்களையும் வெளியே கழிக்கும் உறுப்பாகும்.(21) பேச்சுறுப்பு {வாய்}, ஒலி உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக இருக்கிறது. இந்த ஐந்து செயற்புலன்களும் {கர்மேந்திரிங்களும்}, மனத்திற்குச் சொந்தமானது அல்லது மனத்தின் தொடர்புடையது என அறிவாயாக. (மனத்தோடு கணக்கிடப்படும்) இவையே அறிவு மற்றும் செயலுக்குரிய பதினோரு உறுப்புகளாகும். ஒருவன் புத்தியுடன் கூடிய மனத்தை விரைவாகக் கைவிட வேண்டும்[5].(22) கேட்கும் செயலுக்கு, இரு காதுகள், ஒலி மற்றும் மனம் ஆகிய மூன்று காரணங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்; அதே போலவே ஒலி உணர்விற்கும்; வடிவத்தை உணர்வதற்கும், சுவை மற்றும் மணத்தை உணர்வதற்கும் அவை {அந்த மூன்று காரணங்கள்} வேண்டும்[6].(23) குறிப்பிடப்பட்ட பல்வேறு வகை உணர்வுகளை உணர இந்தப் பதினைந்து {ஐந்து மூன்று காரணங்கள்} சாதனங்கள், அல்லது குணங்கள் வேண்டும். இவற்றின் விளைவால் ஒவ்வொரு மனிதனும், அந்த உணர்வுகளைப் பொறுத்தவரையில் மூன்று தனிப்பட்ட நனவுநிலைகளை (அஃதாவது, ஓர் உறுப்பு, அதன் குறிப்பிட்ட செயல்பாடு மற்றும் அந்தச் செயல்கள் செயல்படும் மனம் ஆகியவற்றை) அடைகிறான்.(24) மேலும் (மனத்தின் உணர்வுகள் அனைத்தையும் பொறுத்தவரையில்) நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களுக்குரிய மூன்று வகை உணர்வுகள் {சாதனங்கள்} இருக்கின்றன. அவற்றினுள், உணர்வுகள் அனைத்தும் உள்ளிட்ட மூவகை நனவுநிலைகள் {அனுபவங்கள்} இயங்குகின்றன.(25)உணரத்தக்க காரணம், அல்லது வெளிப்படையான எந்தக் காரணமும் இன்றி மனத்தில் எழும் பேரானந்தம், நிறைவு, மகிழ்ச்சி, இன்பம் மற்றும் அமைதி ஆகியவை நல்லியல்புக்குரியவையாகும் {சத்வ குணத்திற்கு உரியவையாகும்}.(26) காரணமில்லாமல் அல்லது உணரத்தக்க எந்தக் காரணத்தின் மூலமும் நேரும், நிறைவின்மை, வருத்தம், துன்பம், பேராசை, வன்மம் ஆகியவை ஆசை {ரஜஸ்} என்று அறியப்படும் குணத்தின் குறியீடுகளாகும்.(27) தவறான தீர்மானம், மயக்கம், கவனமின்மை, கனவுகள், உறக்கக்கலக்கம் ஆகிவை எவ்வாறு உண்டானாலும், அவை இருள் {தமஸ்} குணத்திற்குரியவையாகும்.(28) உடல் அல்லது மனத்தைப் பொறுத்தவரையில், இன்பம் அல்லது நிறைவுடன் கலந்து எந்த நனவுநிலை நீடித்தாலும், அது நல்லியல்பின் {சத்வ} குணத்தின் மூலம் உண்டானது எனக் கருதப்பட வேண்டும்.(29) நிறைவின்மை, அல்லது உற்சாகமின்மை கொண்ட எந்த உணர்வுடனும் கலந்து எந்த நனவுநிலை நீடித்தாலும், அஃது ஆசை {ரஜஸ்} குணத்தினால் மனத்தில் நேர்ந்தவை என்று கருதப்பட வேண்டும்.(30) உடல், அல்லது மனத்தைப் பொறுத்தவரையில் பிழை, அல்லது கவனமின்மையுடன் கலந்து எந்நிலை நீடித்தாலும், அது புரிந்து கொள்ள முடியாததும், விவரிக்க இயலாததுமான இருளை {தமஸ் குணத்தைக்} குறிப்பிடுவதாக அறியப்பட வேண்டும்.(31)

கேட்கும் உறுப்பு {காது} வெளியை {ஆகாயத்தைச்} சார்ந்திருக்கிறது; அஃது (எல்லைகளுக்குட்பட்ட) வெளியே {ஆகாயமே} ஆகும். ஒலியானது அந்த உறுப்பையே {காதையே} தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. ஒலியை உணர்வதால் ஒருவன் கேட்கும் உறுப்பு {காது} மற்றும் வெளியைக் குறித்த அறிவை உடனே அடைய மாட்டான். ஆனால் ஒலி உணரப்படும்போது, கேட்கும் உறுப்பும், வெளியும் வெகு நாளைக்கு அறியப்படாமல் நீடிக்கு முடியாது. (காதை அழிப்பதால், ஒலியும் வெளியும் அழிக்கப்படலாம்; இறுதியாக மனத்தை அழிப்பதால் அனைத்தையும் அழிக்கலாம்).(32) {செவி}, தோல், கண்கள், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு ஆகியவற்றின் வழக்கிலும் இதுவே பொருந்தும். அவை தீண்டல் {ஊறு}, வடிவம், சுவை மற்றும் மணமாக இருக்கின்றன[7].(33) செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தும், அறிவுப்புலன்கள் {ஞானேந்திரிங்கள்} ஐந்தும் சேர்ந்த இந்தப் பத்தின் கலவையில் வசிக்கும் பதினொன்றாவதான மனமும், மனத்தில் பனிரெண்டாவது வசிக்கும் புத்தியும் என ஒவ்வொன்றும் அதனதன் குறிப்பிட்ட செயல்பாட்டில் ஈடுபடுகின்றன.(34) இந்தப் பனிரெண்டும் ஒன்றாக நீடித்தால், அதனால் விளையும் விளைவானது, கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் மரணத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் மரணம் ஏற்படாமல், இந்தப் பனிரெண்டையும் பொறுத்தவரையில் ஒன்றாக இருக்கின்றன. ஆனால் அவை ஆன்மாவில் இருந்து தனியாக இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பனிரெண்டும் ஆன்மாவுடன் இணைந்திருக்கின்றன என்று பொதுவாகப் பேசுவது, உலகின் சாதாராண நோக்கங்களுக்காகப் பேசப்படும் தாழ்ந்த வடிவிலான சாதாரணப் பேச்சு மட்டுமே ஆகும்.(35)கடந்தகாலப் புலனின்ப உணர்வுகளின் விளைவால் கனவு காண்பவன், நுட்பமான வடிவிலிருக்கும் அவனது புலன்களை உணர்ந்து, ஏற்கனவே (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} என்ற) மூன்று குணங்களைக் கொண்டவனாக, தன் புலன்கள் தங்கள் தங்கள் பொருட்களில் இருப்பதாகவும், எனவே, விழித்திருக்கும் போது செயல்படுவதைப் போலவே கற்பனை உடலுடன் அசைந்து செயல்படுவதாகவும் கருதுகிறான்[8].(36) விரைவில் மறைவதும், நிலையற்றதும், இருளின் {தமோ குணத்தின்} ஆதிக்கத்தில் மட்டுமே மனத்தால் உண்டாக்கப்படுவதுமான புலன்களுடன் {புலனுணர்வுகளுடன்} கூடிய புத்தி மற்றும் மனத்தில் இருந்து ஆன்மா விடுபட்டிருக்கும் நிலையானது, கல்விமான்கள் சொல்வதைப் போல, இருளின் இயல்பைக் கொண்டதும், திரள் உடலால் மட்டுமே அனுபவிக்கப்படுவதுமான இன்பநிலையாகும். (விடுதலையின் இன்பநிலை நிச்சயம் இதிலிருந்து மாறுபட்டதாகும்)[9].(37) முக்தியால் கிட்டும் இன்பநிலையிலும், வேத கல்வியில் ஈர்க்கப்பட்ட விழிப்புநிலையில் கிட்டும் இன்பத்திலும், எவ்வாறு ஒருவன் துன்பத்தைக் கிஞ்சிற்றும் காண்பதில்லையோ, அவ்வாறே விவரிக்கப்பட முடியாததும், உண்மையை மறைப்பதுமான இருள் பரவுவதாக {கிட்டச்செய்வதுபோலத் தோற்றமளிப்பதாகத்} தெரிகிறது. (ஆனால் உண்மையில் முக்தியால் கிட்டும் இன்பநிலை இருளால் களங்கப்படாததாகும்)[10].(38) கனவுகளற்ற உறக்கநிலையில் தோன்றுவதைப் போலவே, விடுதலையிலும் {முக்தி நிலையிலும்}, ஒருவனின் செயல்களைத் தங்கள் தோற்றுவாயாகக் கொண்ட அக மற்றும் புறநிலை இருப்புகள் (நனவுநிலையிலிருந்து புலன்நுகர் பொருட்கள் வரை சேர்ந்த அனைத்தும்) அனைத்தும் விலக்கப்படுகின்றன. அவித்யையில் மூழ்கிய சிலரில், அவற்றுடன் இவை நீடித்திருக்கின்றன. அவித்யையைக் கடந்து அறிவை வென்றவர்களைப் பொறுத்தவரையில், அவை எந்நேரத்தில் அவர்களுக்கு நேராது[11].(39) ஆன்மா {ஆத்மா}, ஆன்மாவற்றது {அனாத்மா} குறித்த ஊகங்களை அறிந்தவர்கள், (புலன்கள் முதலிய) இந்தத் தொகையே உடல் (க்ஷேத்திரம்) என்று சொல்கிறார்கள். மனத்தைச் சார்ந்திருக்கும் இருப்புப் பொருள் ஆன்மா (க்ஷேத்ரக்ஜன்) என்றழைக்கப்படுகிறது.(40)இச்சூழ்நிலையில், (ஆன்மா மற்றும் உடல் கலந்த நிலை என்ற) நன்கறியப்பட்ட காரணத்தின் விளைவாகவும், அடிப்படை இயல்பின் மூலமும் ஒருவன் நீடித்திருக்கும்போது, (இவை இரண்டில் {அதாவது ஆன்மா மற்றும் உடல் ஆகிய இரண்டில்}) நித்தியமாகச் சொல்லப்படுவது {ஆன்மா} எவ்வாறு அழிவடைய முடியும்?[12](41) சிற்றாறுகள் பெரியனவற்றுக்குள் பாய்ந்து தங்கள் வடிவங்களையும், பெயர்களையும் இழக்கின்றன. (இவ்வாறு பெரிதாகிய) பெரியனவெல்லாம் {பெரிய ஆறுகள் அனைத்தும்} பெருங்கடலுக்குள் விழுந்து தங்கள் வடிவங்களையும், பெயர்களையும் இழக்கிறன்றன. அதே வகையிலேயே விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் உயிர் இழப்பின் வடிவமும் நேர்கிறது[13].(42) இவ்வாறிருக்கையில், குணங்களின் மூலம் வகைப்படுத்தப்படும் ஜீவனானது, அண்ட ஆன்மாவுக்குள் {பரமாத்மாவுக்குள்} அடையப் பெறும்போதும், அதன் குணங்கள் அனைத்தும் மறையும்போதும், வேறுபாட்டினால் குறிப்பிடப்படக்கூடிய பொருளாக அஃது எவ்வாறு இருக்க முடியும்[14]?(43) விடுதலை {முக்தி} அடைவதை நோக்கிச் செலுத்தப்பட்ட புத்தியை அறிந்தவனும், ஆன்மாவை அறிந்து கொள்வதற்காகக் கவனமாக முனைபவனுமான ஒருவன், தண்ணீரில் நனைக்கப்பட்டாலும் ஒருபோதும் அதனால் நனையாத தாமரை இலையைப் போலவே, தன் செயல்களின் தீய கனிகளால் ஒருபோதும் களங்கப்படாதிருப்பான்.(44) ஒருவன், மிக வலுவானவையும், எண்ணிக்கையில் பலவாக இருப்பவையும், பிள்ளைகள், மனைவியரிடம் கொண்ட அன்பு, வேள்வி மற்றும் பிற சடங்குகளில் உள்ள பற்று ஆகிய பற்றுகளில் இருந்து விடுபடும்போதும், அவன் இன்ப துன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, அனைத்துப் பற்றுகளையும் கடக்கும்போதும், உயர்ந்த கதியை அடைந்து, அண்ட ஆன்மாவுக்குள் {பரமாத்மாவுக்குள்} நுழைந்து பாகுபாடற்றவனாகிறான்.(45) (பிரம்மத்தைக் குறித்த) சரியான உள்ளுணர்வுகளுக்கு வழிவகுக்கும் ஸ்ருதிகளின் தீர்மானங்களை ஒருவன் புரிந்து கொண்டு, அறங்களும், பிற சாத்திரங்களும் கற்பிக்கும் அந்த மங்கள அறச் செயல்களைச் செய்யும்போது, அவன் முதுமை மற்றும் மரணம் குறித்த அச்சங்களைத் தவிர்த்துச் சுகமாக இருப்பான். தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் பாவங்களும், இன்ப துன்பங்களின் வடிவங்களில் இருக்கும் அவற்றின் கனிகளும் {பலன்களும்} மறைந்து அழிவடையும்போது, அனைத்திலும் பற்றற்ற மனிதர்கள் அஃதிலிருந்து எழுந்து, ஆளுமை கொண்ட பிரம்மத்தை முதலில் புகலிடமாக அடைந்து, தங்கள் புத்திகளின் மூலம் பொருள்சாரா பிரம்மத்தைக் காண்கிறார்கள்[15].(46)ஜீவன், தன் கீழ்நோக்கிய இறக்கத்தில் (செயல்களால் அமைக்கப்பட்ட உயிரணுவுக்குள்) அவித்யையின் ஆதிக்கத்தின் கீழ், தான் விரித்த வலைகளுக்குள்ளேயே வசிக்கும் பட்டுப்பூச்சியைப் போலவே இம்மையில் {இவ்வுலகில்} வாழ்கிறது. அந்தப் பட்டுப்பூச்சி அதன் உயிரணுக்களைக் கைவிட்டு விடுபடுவதைப் போலவே, ஜீவனும் செயல்களால் உண்டாக்கப்பட்ட அதன் வீட்டைக் கைவிடுகிறது. அதன் இறுதி விளைவாக, மண்குவியல் பாறைத் திரளில் வேகமாக விழுந்து அழிவதைப் போலவே அதன் துன்பங்களும் அழிவை அடைகின்றன[16].(47) ருரு மான் தனது பழைய கொம்புகளைக் கைவிடுவதைப் போலவோ, பாம்பானது எந்த அறிவிப்பும் கொடுக்காமல் தன் சட்டையைக் கைவிடுவதுபோலவோ, பற்றறுத்த மனிதன் தன் துன்பங்கள் அனைத்தையும் கைவிடுகிறான்.(48) ஒரு பறவையானது, நீருக்குள் விழப்போகும் மரத்தை விட்டு அகன்று, தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, (புதிய) ஓய்விடத்தில் இறங்குவதைப் போலவே, பற்றுகளில் இருந்து விடுபட்ட ஒரு மனிதனும், இன்ப துன்பங்களைக் கைவிட்டுத் தனது நுட்பமான, மற்றும் நுட்பத்திலும் நுட்பமான வடிவங்களில் இருந்து தொடர்பை அறுத்துக் கொண்டு, செழிப்பைக் கொண்ட உயர்ந்த கதியை அடைகிறான்[17].(49) மிதிலையின் தலைவனான ஜனகன், தன் நகரம் எரிவதைக் கண்டு, “இந்தத் தீயில் என்னுடையது எதுவும் எரியவில்லை” என்று அறிவித்தான்” என்று {ஜனதேவனிடம் பஞ்சசிகர்} சொன்னார்[18].(50)இறவாமையை வழங்கவல்லவையும், பஞ்சசிகரால் சொல்லப்பட்டவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஜனதேவன், பஞ்சசிகர் சொன்ன அனைத்தையும் கவனமாகச் சிந்தித்துப் பார்த்து, உண்மையை அடைந்து, தன் துயரங்கள் அனைத்தையும் கைவிட்டு, பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்துவந்தான்.(51) ஓ! மன்னா, விடுதலையை {முக்தியை} மதித்து, எவன் இந்த உரையைப் படிக்கிறானோ, எவன் அதைக் குறித்து எப்போதும் சிந்திக்கிறானோ, அவன், பஞ்சசிகரைச் சந்தித்த மிதிலையின் ஆட்சியாளனான ஜனதேவனைப் போலவே, எந்தத் துயரிலும் துன்புறாமல், கவலையில் இருந்து விடுபட்டு விடுதலையை {முக்தியை} அடைவான்” என்றார் {பீஷ்மர்}.(52)

தமம் – தற்கட்டுப்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 220-தற்கட்டுப்பாடு கொண்டவனின் குறியீடுகளையும், தற்கட்டுப்பாட்டின் சிறப்புகளையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எதைச் செய்வதன் மூலம் மகிழ்ச்சியையும், எதைச் செய்வதன் மூலம் துன்பத்தையும் ஒருவன் அடைகிறான்? ஓ! பாரதரே, எதைச் செய்வதன் மூலம் ஒருவன் அச்சத்தில் இருந்து விடுபட்டு, (வாழ்வின் நோக்கங்களைப் பொறுத்தவரையில்) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக இங்கே பயணிக்கிறான்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஸ்ருதிகளை நோக்கிச் செலுத்தப்பட்ட புத்தியைக் கொண்டிருந்த பழங்காலத்தவர், பொதுவாக அனைத்து வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்}, மிகக் குறிப்பாகப் பிராமணர்களுக்கும் தற்கட்டுப்பாடு {தமம்} எனும் கடமையையே உயர்வாக மெச்சினார்கள்.(2) அறச்சடங்குகளைப் பொறுத்தவரையில் தற்கட்டுப்பாடு {தமம்} இல்லாதவர்களால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. அறச்சடங்குகள், தவங்கள், வாய்மை ஆகிய இவை அனைத்தும் தற்கட்டுப்பாட்டிலேயே நிறுவப்பட்டுள்ளன.(3) தற்கட்டுப்பாட்டு ஒருவனின் சக்தியை அதிகரிக்கிறது. தற்கட்டுப்பாடு புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன் பாவமற்றவனாகவும், அச்சமற்றவனாகவும் ஆகி பெரும் விளைவுகளை வெல்கிறான் {அடைகிறான்}.(4) தற்கட்டுப்பாடு உடையவன் மகிழ்ச்சியாக உறங்கி, மகிழ்ச்சியாக விழிக்கிறான். அவன் இவ்வுலகில் மகிழ்ச்சியாகவே திரிகிறான், அவனது மனம் எப்போதும் உற்சாகமாக இருக்கிறது.(5)

தற்கட்டுப்பாடு கொண்டவனால் அனைத்துவகைக் கிளர்ச்சிகளும் அமைதியாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. தற்கட்டுப்பாடு இல்லாத ஒருவன் அதே போன்ற முயற்சியில் தவறுகிறான். தற்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதன், (காமம், ஆசை, கோபம் முதலிய வடிவங்களில் இருக்கும்) தனது எண்ணற்ற எதிரிகளைத் தனிப்பட்ட உடல்களாக வசிப்பவையாகக் காண்கிறான்.(6) தற்கட்டுப்பாடு இல்லாத மனிதர்கள், புலிகளையும், ஊனுண்ணும் பிற விலங்குகளையும் போல எப்போதும் அனைத்து உயிரினங்களையும் அச்சத்தில் ஆழ்த்துகின்றனர். {தற்கட்டுப்பாடு இல்லாத} இம்மனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே சுயம்பு (பிரம்மன்) மன்னர்களைப் படைத்தான்.(7) (நான்கு) வாழ்வு முறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திலும், பிற அறங்கள் அனைத்தைக் காட்டிலும் தற்கட்டுப்பாட்டைப் பயில்வதே தனிச்சிறப்புடையது. அனைத்து வாழ்வு முறைகளின் {ஆசிரமங்களின்} மூலமும் அடைவதைவிடத் தற்கட்டுப்பாட்டின் மூலம் அடையப்படும் கனிகள் {பலன்கள்} மிக அதிகமாகும்.(8) நான் இப்போது, தற்கட்டுப்பாட்டை உயர்வாக மதிக்கும் மனிதர்களின் குறியீடுகளைக் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்[1]. உயர்ந்த பண்பு, அமைதியான மனநிலை {பரபரப்பின்மை}, மனநிறைவு, நம்பிக்கை,(9) மன்னிக்கும் தன்மை, மாறாத எளிமை, அதிகம் பேசாமை, பணிவு, பெரியோர்களிடம் மரியாதை, நலநாட்டம், அனைத்து உயிரினங்களிடமும் கருணை, வெளிப்படைத்தன்மை,(10) மன்னர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்போரைக் குறித்த பேச்சையும், போலியான, பயனற்ற விவாதங்களையும், பிறரைப் புகழ்வதையும், இகழ்வதையும் தவிர்த்தல் ஆகியவையே அவை {தற்கட்டுப்பாடு கொண்டவர்களின் குறியீடுகளாகும்}. தற்கட்டுப்பாட்டுடன் கூடிய மனிதன், விடுதலையை {முக்தியை} விரும்பி, தற்போதைய இன்பங்களையும், துன்பங்களையும் அமைதியாகத் தாங்கிக் கொள்பவனாக, எதிர்பார்ப்புகளைக் கொண்டோரின் மூலம் ஒருபோதும் கிளர்ச்சியடையவோ, சோர்வடையவோ மாட்டான்.(11)பழிவாங்கும் குணம் மற்றும் அனைத்து வகை வஞ்சனைகள் அற்றவனாக, புகழ்ச்சியாலோ, பழியாலோ அசைக்கப்பட முடியாதவனாக இருக்கும் அத்தகைய மனிதன், நன்னடத்தை, நல்ல பழக்கவழக்கம், தூய ஆன்மா, உறுதிப்பாடு ஆகியவற்றைக் கொண்டவனாகவும், தன் ஆசைகளின் முற்றான தலைவனாகவும் இருப்பான்.(12) அத்தகைய மனிதன் இவ்வுலகில் வெகுமதிகளைப் பெற்று, மறுமையில் சொர்க்கத்திற்குச் செல்வான். அடைய முடியாதவற்றைத் தன் உதவியின் மூலம் அனைத்து உயிரினங்களையும் அடையச் செய்யும் அத்தகைய மனிதன், மகிழ்ச்சிக் களிப்படைபவனாகிறான்[2].(13) உலகளாவிய நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் அத்தகைய மனிதன், எவருடனும் ஒருபோதும் பகையை வளர்க்க மாட்டான். ஆழ்ந்த அமைதி கொண்ட பெருங்கடலைப் போல அமைதியான அவன், ஞானத்தால் ஆன்மா நிறைந்தவனாகவும், எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாகவும் இருப்பான்.(14) புத்தியைக் கொண்டவனும், உலகளாவிய மதிப்புக்குத் தகுந்தவனுமான அத்தகைய தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன், எந்த உயிரினத்திடமும் அச்சத்தையூட்டாதவனாகவும், தானும் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ளாதவனாகவும் இருப்பான்.(15)பெரும் பொருள்களை அடைகையில் ஒருபோதும் மகிழ்சியடையாமலும், துயரத்தில் ஒருபோதும் துன்பங்கொள்ளாமலும் இருக்கும் அவன், நிறைவான ஞானத்தைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். அத்தகைய மனிதனே தற்கட்டுப்பாடு உடையவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில் அத்தகைய மனிதனே மறுபிறப்பாளனாகச் சொல்லப்படுகிறான்.(16) சாத்திரங்களை அறிந்தவனாக, தூய ஆன்மா கொண்டவனாக இருக்கும் தற்கட்டுப்பாடுடைய மனிதன், நன்மைக்காகச் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும் செய்து, உயர்ந்த கனிகளை {பலன்களை} அனுபவிக்கிறான்.(17) எனினும், தீய ஆன்மா கொண்டவர்களோ, நலநாட்டம், மன்னிக்கும்தன்மை, அமைதி, நிறைவு, இனிய பேச்சு, வாய்மை, ஈகை, ஆறுதல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் பாதையில் செல்ல மாட்டார்கள்.(18) அவர்களுடைய பாதையானது, காமம், கோபம், பேராசை, பிறரிடம் பொறாமை, தற்புகழ்ச்சி ஆகியவற்றைக் கொண்டதாகும். காமம் மற்றும் கோபத்தை அடக்கி, பிரம்மச்சரிய நோன்பைப் பயின்று, தன் புலன்களின் முற்றான தலைவனாகும் ஒரு பிராமணன்,(19) தன்னை மிகக் கடுமையான தவங்களில் ஈடுபடுத்திக் கொண்டும், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டும், தனக்கு முழுமையான அழிவு கிடையாது என்பதை அறிந்தாலும் தன் காலம் வரும் வரை உடலைத் தாங்கிக் கொண்டிருப்பவனாகக் காத்திருந்து இந்த உலகில் வாழ்ந்து வர வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(20)

தவமும், உபவாசமும்! – சாந்திபர்வம் பகுதி – 221-தவம் மற்றும் உண்ணாநோன்பின் முறைகளையும், அவற்றின் பயன்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “வேள்விகள் மற்றும் பிற சடங்குகளுக்கு அடிமைகளாக உள்ள மூன்று மறுபிறப்பாள வகையினரும், வேள்விகளில் தேவர்களுக்கான படையலாக வைக்கப்பட்டு எஞ்சும் இறைச்சி மற்றும் மது ஆகியவற்றை, பிள்ளைகள் மற்றும் சொர்க்கத்தை அடையும் நோக்கத்துடன் உண்கிறார்கள். ஓ! பாட்டா, இந்தச் செயலின் பண்பியல்பு யாது?” எனக் கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வேதங்களில் விதிக்கப்பட்ட வேள்விகளையும், நோன்புகளையும் நோற்காமல், தடைசெய்யப்பட்ட உணவை உண்பவர்கள் வேண்டுமென்றே அவ்வாறு செய்யும் மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். (அவர்கள் இம்மையிலேயே வீழ்ந்துவிட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்). மறுபுறம், வேத வேள்விகள், நோன்புகளை நோற்கவும், சொர்க்கத்தின் வடிவிலான கனிகளில் உள்ள விருப்பத்தாலும், பிள்ளைகளைப் பெறுவதில் உள்ள விருப்பத்தாலும் உந்தப்பட்டு அத்தகைய உணவை உண்பவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள், ஆனால் அவர்களின் தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்ததும் கீழே வீழ்வார்கள்” என்றார்.(2)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உண்ணாநோன்பும் {உபவாசமும்} தபமே {தவமே} என்று சாதாரண மக்கள் சொல்கிறார்கள். எனினும், உண்ணாநோன்பு அவ்வாறானதா? அல்லது தவம் வேறேதும் ஒன்றா?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மாதங்கள், பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, நாட்கள் ஆகியவற்றால் அளக்கப்படும் உண்ணாநோன்பை மக்கள் தவமாகக் கருதுகிறார்கள். எனினும், நல்லோரின் கருத்தின் படி அது தவமாகாது. மறுபுறம், உண்ணாநோன்பென்பது {உபவாசம் என்பது}, ஆன்மா ஞானம் அடைவதற்கான ஒரு தடையாகும்[1].(4) (அனைத்திலும் கடினமான ஒன்றான) செயல்களைத் துறப்பது, (அனைத்துயிரினங்களையும் சமமாகக் கருதி அவை அனைத்தையும் வழிபடுவதை உள்ளடக்கிய) பணிவு ஆகியவையே உயர்ந்த தவங்களாகும். இது தவங்கள் அனைத்திலும் மேன்மையான தனிச்சிறப்புக் கொண்டதாகும். அத்தகைய தவத்தைச் செய்பவன் எப்போதும் உபவாசம் இருப்பவனாகவும், எப்போதும் பிரம்மச்சரிய வாழ்வை நோற்பவனாகவும் கருதப்படுகிறான்.(5) எப்போதும் உறக்கமற்றவனும், எப்போதும் அறத்தைச் செய்வதில் மட்டுமே ஈடுபடுபவனுமான ஒரு பிராமணன், குடும்பத்தின் மையத்தில் வாழ்ந்து வந்தாலும் அவன் எப்போதும் ஒரு முனியாகவும், தேவனாகவும், அதற்கு மேலானவனாகவும் ஆகிறான்.(6) அவன் எப்போதும் அமுதத்தை உண்பவனாகவும், எப்போதும் தேவர்கள் மற்றும் விருந்தினர்களைத் துதிப்பவனாகவும் ஆகிறான்.(7) உண்மையில் அவன், எப்போதும் வேள்வியில் எஞ்சியவற்றை மட்டுமே உண்டு வாழ்பவனாகவும், விருந்தோம்பல் கடமையில் எப்போதும் ஈடுபடுபவனாகவும், நம்பிக்கை நிறைந்தவனாகவும், தேவர்கள் மற்றும் விருந்தினர்களை எப்போதும் வழிபடுபவனாகவும் கருதப்படுகிறான்” என்றார் {பீஷ்மர்}.(8)யுதிஷ்டிரன், “அத்தகைய தவத்தைப் பயில்பவன், எப்போதும் உண்ணா நோன்பிருப்பவனாகவோ, எப்போதும் பிரம்மச்சரிய நோன்பில் அர்ப்பணிப்பு கொண்டவனாகவோ, வேள்வியில் எஞ்சுபவற்றை எப்போதும் உண்டு வாழ்பவனாகவோ, விருந்தினர்களை எப்போதும் மதிப்பவனாகவும் எவ்வாறு கருதப்படலாம்?” என்று கேட்டான்.(9)

பீஷ்மர், “ஒருவன் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் பகலில் ஒருமுறையும், இரவில் ஒருமுறையும் உண்டு, இடைவேளையில் எதையும் உண்ணாதிருந்தால், அவன் எப்போதும் உண்ணாநோன்பு {உபவாசம்} இருப்பவனாகக் கருதப்படுவான்.(10) அத்தகைய பிராமணன், எப்போதும் வாய்மை பேசுவதன் மூலமும், எப்போதும் ஞானத்தை ஒட்டி ஒழுகுவது, வேறுகாலங்களில் அல்லாமல் பருவகாலத்தில் மட்டும் தன் மனைவியிடம் செல்வது ஆகியவற்றின் மூலமும் பிரம்மச்சாரி ஆகிறான்.(11) வேள்வியில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் உண்ணாமல் இருப்பதன் மூலம், அவன் புலால் உண்ணாதவனாகிறான்[2]. ஈகையாளனாக இருப்பதன் மூலம் அவன் எப்போதும் தூய்மையானவனாகவும், பகலில் உறக்கத்தைத் தவிர்ப்பதன் மூலம் அவன் எப்போதும் விழிப்புடைபவனாகவும் ஆகிறான்.(12) ஓ! யுதிஷ்டிரா, தன் பணியாட்கள் மற்றும் விருந்தினர்கள் உண்ட பிறகு மட்டுமே உண்ணும் மனிதன், எப்போதும் அமுதத்தை உண்பவனாகிறான்.(13) தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் உணவு அளிக்கும் வரை உண்ணாதிருக்கும் பிராமணன், அத்தகைய நோன்பின் மூலம் சொர்க்கத்தையே வெல்கிறான்.(14) தேவர்கள், பித்ருக்கள், பணியாட்கள், விருந்தினர்கள் ஆகியோருக்கு உணவளித்த பிறகு எஞ்சியவற்றை மட்டுமே உண்பவன் வேள்வி எச்சங்களில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறான்.(15)அத்தகைய மனிதர்கள், மறுமையில் எண்ணற்ற இன்ப உலகங்களை வெல்கிறார்கள். அவர்களுடைய இல்லங்களுக்குப் பிரம்மனுடன் கூடிய தேவர்களும், அப்சரஸ்களும் வருகிறார்கள்.(16) தேவர்கள் மற்றும் பித்ருக்களுடன் தங்கள் உணவைப் பகிர்ந்து கொள்பவர்கள், தங்கள் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் நிலையான மகிழ்ச்சியுடன் தங்கள் நாட்களைக் கடத்தி, இறுதியாக இவ்வுடலை விட்ட மிக உயர்ந்த கதியை அடைகிறார்கள்” என்றார் {பீஷ்மர்}.(17)

ஸ்வபாவம் – இயல்பு! – சாந்திபர்வம் பகுதி – 222-உண்மையில் மனிதனே செயல்படுபவனாகக் கருதப்பட வேண்டுமா என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பிரஹலாதனுக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, இன்புறவோ, பொறுத்துக் கொள்ளவோ கனிகளை உண்டாக்கும் நோக்கத்தில், நற்செயல்களும், தீச்செயல்களும் மனிதனைப் பற்றுகின்றன.(1) எனினும், மனிதனையே செயல்படுபவனாகக் கருதலாமா? அல்லது அவன் அவ்வாறு கருதப்படக்கூடாதா? இக்கேள்வியில் என் மனம் ஐயத்தால் நிறைகிறது. ஓ! பாட்டா, இதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக, பழங்கதையில் பிரஹலாதனுக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) தைத்தியர்களின் தலைவனான பிரஹலாதன் உலகப் பொருட்கள் அனைத்திலும் பற்றில்லாதவனாக இருந்தான். அவனது பாவங்கள் கழுவப்பட்டன. நற்குலத்தில் பிறந்த அவன், பெரும் கல்வியைக் கற்றிருந்தான். மயக்கம் மற்றும் செருக்கில் இருந்து விடுபட்டவனாகவும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தை} எப்போதும் நோற்பவனாகவும், பல்வேறு நோன்புகளை அர்ப்பணிப்புடன் நோற்பவனாகவும்(4) இருந்த அவன், புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் சமமாகக் கருதினான். தற்கட்டுப்பாடுடைய அவன், ஒரு வெற்று அறையில் {சிறையில்} தன் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தான். படைக்கப்பட்ட அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் தோற்றம் மற்றும் அழிவை அறிந்த அவன்,(5) தனக்கு நிறைவு தராதவற்றில் ஒருபோதும் கோபம் கொள்ளாதவனாகவும், ஏற்புடைய பொருட்களை அடையும்போது ஒருபோதும் மகிழாதவனுமாக இருந்தான். அவன் தங்கத்தையும், மண்ணையும் சமமான பார்வையுடன் பார்ப்பவனாக இருந்தான்.(6) ஆன்மா குறித்த கல்வி, விடுதலையை {முக்தியை} அடைவது, உறுதியான ஞானம் ஆகியவற்றில் நிலையாக ஈடுபட்ட அவன் வாய்மையைக் குறித்த நிலையான தீர்மானங்களை அடைந்தவனாக இருந்தான்.(7)

பொருட்கள் அனைத்திலும் உயர்வானது, உயர்வல்லாதது ஆகியவற்றை அறிந்தவனாக, அனைத்துமறிந்தவனாக, உலகளாவிய பார்வை கொண்டவனாக இருந்த அவன், ஒருநாள் தன் புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்திய நிலையில் ஒரு தனிமையான அறையில் இருந்தபோது, அவனை விழிப்படையச் செய்ய விரும்பிய சக்ரன் {இந்திரன்} அவனை அணுகி இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(8) “ஓ! மன்னா {பிரஹலாதா}, ஒரு மனிதன் அனைவரின் மதிப்பை வெல்லத்தக்க அனைத்துக் குணங்களும் உன்னுள் நிரந்தரமாக இருப்பதை நான் காண்கிறேன்.(9) உன் புத்தியானது, ஒரு குழந்தையுடையதைப் போலப் பற்று மற்றும் வெறுப்பில் {விருப்புவெறுப்பில்} இருந்து விடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. நீ ஆன்மாவை அறிந்திருக்கிறாய். ஆன்மா குறித்த அறிவை அடைய எது சிறந்த வழிமுறையென நீ கருதுகிறாய்?(10) நீ உனது முந்தைய நிலையில் இருந்து வீழ்ந்தவனாக, உனது எதிரிகள் {தேவர்கள்} கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவனாக, செழிப்பை இழந்தவனாகக் கயிறுகளால் கட்டப்பட்டவனாக இப்போது இருக்கிறாய். நீ இருக்கும் தற்போதைய சூழ்நிலை துன்பத்தைத் தரவல்லது. இருப்பினும், ஓ! பிரஹலாதா நீ எவ்வாறு துன்பங்கொள்ளாமல் இருக்கிறாய்?(11) ஓ! திதியின் மகனே, இந்நிலை ஞானத்தை அடைந்ததால் ஏற்படுகிறதா? அல்லது உன் மனோவுறுதியால் ஏற்படுகிறதா? ஓ! பிரஹலாதா, உனக்கு நேர்ந்த பேரிடர்களைப் பார், இருப்பினும் நீ மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருப்பவனைப் போலத் தெரிகிறாயே” என்று கேட்டான் {இந்திரன்}.(12)

இவ்வாறு இந்திரனால் தூண்டப்பட்டவனும், உறுதியும், வாய்மையில் தீர்மானமான முடிவுகளைக் கொண்டவனுமான அந்தத் தைத்தியர்களின் தலைவன் {பிரஹலாதன்}, முன்னவனிடம் {இந்திரனிடம்}, பெரும் ஞானத்தைக் குறிக்கும் இந்த இனிய வார்த்தைகளில் மறுமொழி கூறினான்.(13)

பிரஹலாதன் {இந்திரனிடம்}, “படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகியவற்றை அறியாதவன், அந்த அறியாமையின் மூலம் திகைப்படைகிறான். எனினும், அந்த இரண்டையும் அறிந்தவன் ஒருபோதும் திகைப்படைவதில்லை.(14) அனைத்து வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கும் உள்ள பொருட்கள், இல்லாத பொருட்கள் ஆகியவை தங்கள் சொந்த இயல்பின் விளைவால் தோன்றுகின்றன, அல்லது மறைகின்றன. (அத்தகைய தோற்றப்பாடு உண்டாவதற்கு) எந்தத் தனிப்பட்ட முயற்சியும் தேவைப்படுவதில்லை[1].(15) எனவே, தனிப்பட்ட முயற்சியேதும் இல்லாத போது, நாம் காணும் இவை அனைத்தையும் எந்த ஒரு தனிப்பட்டவனும் உண்டாக்கவில்லை {எந்த மனிதனின் செயலிலும் இவை உண்டாகவில்லை} என்பது வெளிப்படை. ஆனால், (உண்மையில்) அந்த ஒருவன் (அல்லது சித்) ஒருபோதும் எதையும் செய்வதில்லை, இருப்பினும் (அறியாமையின் ஆதிக்கத்தின் மூலம்) நாமே நிறுவுகிறோம் என்ற ஒரு நனவுநிலை {அஹங்காரம்} தானே படர்கிறது.(16) நல்ல அல்லது தீய செயல்களைச் செய்பவனாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் ஒருவன், குறை ஞானத்தைக் கொண்டவனாவான். என் தீர்மானத்தின்படி அத்தகைய மனிதன் உண்மையை அறிந்தவனல்ல[2].(17)ஓ! சக்ரா {இந்திரா}, ஒருவன் {மனிதன்} என்றழைக்கப்படுபவன் உண்மையில் செயல்படுபவனாக இருந்தால், தன் நன்மைக்காக அவன் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட வேண்டும். அந்தச் செயல்கள் ஏதும் தோல்வியடையக் கூடாது.(18) இயன்றதில் உயர்ந்த அளவுக்குப் போராடுபவர்களுக்கு மத்தியிலும், விரும்பப்படாதது நடக்காததும், விரும்புவது நடப்பதும் காணப்படவில்லை. அவ்வாறிருக்கையில், தனிப்பட்ட முயற்சியால் என்ன பயன் ஏற்படுகிறது?(19) சிலரின் வழக்கில், அவர்களது பங்காக எந்த முயற்சியும் செய்யப்படாமலே விரும்பாதது நடக்காததையும், விரும்புவது நிறைவேறுவதையும் நாம் காண்கிறோம். அவ்வாறெனில், இஃது இயற்கையின் {ஸ்வபாவத்தின்} விளைவாகவே இருக்க முடியும்.(20) இயல்புக்குமிக்கத் தன்மைகளை வெளிப்படுத்தும் சிலர், மேன்மையான புத்தியைக் கொண்டவர்களாக இருந்தாலும், இழிந்த குணமும், சிறுமதியும் கொண்ட பிறரிடம் இருந்து செல்வத்தை வேண்டி நிற்பதையும் காண முடிகிறது.(21) உண்மையில், இயற்கையின் தூண்டுதலின் பேரில், ஒருவனுக்குள் நல்ல, அல்லது கெட்ட குணங்கள் அனைத்தும் நுழையும்போது, அவன் (தன் மேன்மையான உடைமைகளைக் குறித்து) தற்புகழ்ச்சி செய்து கொள்வதற்கு என்ன இருக்கிறது?(22) இவை அனைத்தும் இயற்கையில் {ஸ்வபாவத்தில்} இருந்து பாய்கின்றன. இதுவே என் தீர்மானமான முடிவாகும். என்னைப் பொறுத்தவரையில் விடுதலையும் {முக்தியும்}, தன்னறிவும் {சுயஞானமும் / ஆன்ம ஞானமும்} அதே மூலத்தில் இருந்தே பாய்கின்றன.(23)

இவ்வுலகில், மனிதர்களைப் பற்றியிருக்கும் நல்ல அல்லது தீய கனிகள் அனைத்தும், செயல்களின் விளைவுகளாகவே கருதப்படுகின்றன. நான் இப்போது செயல்களைக் குறித்து முழுமையாக உனக்குச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(24) ஒரு காகம், ஏதோ உணவை உண்ணும்போது, மீண்டும் மீண்டும் கரைந்து (தன் இனத்தைச் சேர்ந்த பிற காகங்களுக்கு) அந்த உணவின் இருப்பை அறிவிக்கிற வகையிலேயே நம் செயல்கள் அனைத்தும் இயற்கையின் அறிகுறிகளை மட்டுமே அறிவிக்கின்றன.(25) உயர்ந்ததும், தானே நிலைத்திருப்பதுமான இயற்கையை அறியாமல், அவளது {இயற்கையின்} மாறுபாடுகளை மட்டுமே அறிந்தவன், தனது அறியாமையின் விளைவால் திகைப்படைகிறான். எனினும், இயற்கை மற்றும் அதன் மாறுபாடுகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளும் ஒருவன் ஒருபோதும் திகைப்படைவதில்லை.(26) இருக்கும் பொருட்கள் அனைத்தும் இயற்கையையே தங்கள் தோற்றுவாயாகக் கொண்டுள்ளன. இதில் ஒருவன் அடையும் தீர்மான உறுதியின் விளைவால் அவன் செருக்காலோ, ஆணவத்தாலோ ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.(27) அறவிதிகள் அனைத்தின் தோற்றுவாயும் எதுவென நான் அறியும்போதும், அனைத்துப் பொருட்களின் நிலையில்லாமையையும் நான் அறியும்போதும், ஓ! சக்ரா, துயரில் ஈடுபட இயலாதவனாகிறேன். இவை அனைத்தும் ஓர் எல்லைக்குட்பட்டவையாக {முடிவு கொண்டவையாக} இருக்கின்றன.(28)

பற்றில்லாமல், செருக்கில்லாமல், ஆசையும், நம்பிக்கையும் {எதிர்பார்ப்பும்} இல்லாமல், கட்டுகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு, அனைத்தில் இருந்தும் தொடர்பறுத்துக் கொண்டு, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் தோன்றுவதையும், மறைவதையும் பார்த்துக் கொண்டு பெரும் மகிழ்ச்சியுடன் நான் என் காலத்தைக் கடத்தி வருகிறேன்.(29) ஓ! சக்ரா {இந்திரா}, ஞானம், தற்கட்டுப்பாடு, நிறைவு ஆகியவற்றைக் கொண்டவனும், ஆசையும், எதிர்பார்ப்பும் இல்லாதவனும், தன்னறிவின் {சுயஞானத்தின்} ஒளியில் அனைத்துப் பொருட்களையும் காண்பவனுமான ஒருவனுக்கு எந்தத் தொல்லையோ கவலையோ இருக்காது.(30) இயற்கையின் மீதோ, அவளது {இயற்கையின்} மாற்றங்களின் மீதோ நான் எந்த விருப்பையோ, வெறுப்பையோ கொள்வதில்லை. இப்போது நான் ஒருவரையும் என் பகைவராகவோ, என் சொந்தக்காரனாகவோ காணவில்லை.(31) ஓ! சக்ரா, எக்காலத்திலும் நான் சொர்க்கத்திலோ, இவ்வுலகிலோ, பாதாள உலகங்களிலோ பேராசை கொள்ளவில்லை. ஆன்மாவைப் புரிந்து கொள்வதில் எந்த மகிழ்ச்சியும் இல்லை என்ற நிலையேதும் கிடையாது. ஆனால் அனைத்தில் இருந்தும் தொடர்பறுந்த நிலையில் உள்ள ஆன்மாவால் பேரின்பத்தை அனுபவிக்க முடியாது. எனவே நான் எதையும் விரும்புவதில்லை” என்றான் {பிரஹலாதன்}[3].(32)சக்ரன் {இந்திரன் பிரஹலாதனிடம்}, “ஓ பிரஹலாதா, எந்த வழிமுறைகளின் மூலம் இவ்வகை ஞானத்தை அடையலாம், எதன் மூலம் இவ்வகை அமைதியை ஒருவன் தனதாக்கிக் கொள்ளலாம் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.(33)

பிரஹலாதன் {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா {இந்திரா}, எளிமை, கவனமிக்கத் தன்மை, ஆன்மாவைத் தூய்மையாக்கல், ஆசைகளைத் திறமையாகக் கட்டுப்படுத்தல், பெரியோர்களுக்காகக் காத்திருத்தல் {பெரியோர்களுக்குப் பணிவிடை செய்தல்} ஆகியவற்றின் மூலம் ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்லலாம்.(34) இயற்கையிலிருந்தே ஒருவன் ஞானம் அடைகிறான் என்பதையும், அதே காரணத்தின் மூலமே அமைதியையும் அடைகிறான் என்பதையும் அறிவாயாக. உண்மையில், அனைத்தையும் நீ இயற்கையின் மூலமே பார்க்கிறாய்” என்றான்.(35)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவ்வாறு தைத்தியர்களின் தலைவனால் {பிரஹலாதனால்} சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, ஆச்சரியத்தால் நிறைந்து, உற்சாகமிக்க இதயத்துடன் அவ்வார்த்தைகளைப் பாராட்டினான்.(36) பிறகு, அந்த மூவுலகங்களின் தலைவன் {இந்திரன்}, தைத்தியர்களின் தலைவனை {பிரஹலாதனை} வழிபட்டு, அவனிடம் விடைபெற்றுக் கொண்டு, தன் சொந்த வசிப்பிடத்தை நோக்கிச் சென்றான்” என்றார் {பீஷ்மர்}.(37)

இந்திரனும் பலியும்! – சாந்திபர்வம் பகுதி – 223-இந்திரனுக்கும், பலிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பலியைத் தேடிய இந்திரன்; பிரம்மனிடம் விசாரித்தது; பலி இருக்கும் இடத்தைச் சொன்ன பிரம்மன்; கழுதையாகப் பிறந்திருந்த பலியைக் கண்ட இந்திரன் அவனை எள்ளி நகையாடியது; காலத்தின் வன்மை குறித்து இந்திரனுக்குப் பதிலளித்த பலி…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, செழிப்பை இழந்தவனும், காலத்தின் கனத்த தண்டத்தால் நொறுக்கப்பட்டவனுமான ஓர் ஏகாதிபதி, எவ்வகைப் புத்தியைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பூமியில் அதற்கு மேலும் வாழ முடியும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்கதையில் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்}, விரோசனனின் மகனான பலிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) வாசவன், அசுரர்கள் அனைவரையும் அடைக்கிய பிறகு, ஒரு நாள், பிரம்மனிடம் சென்று, கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கி, பலி எங்கிருக்கிறான் என்பது குறித்து விசாரித்தான்.(3)

{இந்திரன் பிரம்மனிடம்}, “ஓ! பிரம்மா, தான் விரும்பிய அளவுக்குப் பெரிதாகத் தானம் செய்யப்பட்டாலும் வற்றாத செல்வத்தைக் கொண்டிருந்த பலியை எங்குக் காண முடியும் என்பதை எனக்குச் சொல்வீராக.(4) அவன் காற்றின் தேவனாக இருந்தான். அவன் வருணனாக இருந்தான். அவன் சூரியனாக இருந்தான். அவன் சோமனாக இருந்தான். அனைத்து உயிரினங்களுக்கும் வெப்பமூட்டக்கூடிய அக்னியாக அவன் இருந்தான். (நம் அனைவரின் பயன்பாட்டுக்கான) நீராகவும் ஆனான். இப்போது அவன் எங்கிருக்கிறான் என்பதை நான் காணவில்லை.(5) முன்பு அவன் (சூரியனாக) திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டி (மாலையில்) மறைந்தான். சோம்பலைக் கைவிட்ட அவன், உரிய காலங்களில் அனைத்து உயிரினங்களின் மீதும் மழையாகப் பொழிந்தான். அந்தப் பலியை நான் இப்போது காணவில்லை. ஓ! பிரம்மா, உண்மையில் இப்போது நான் அந்த அசுரர்களின் தலைவனை {பலியை} எங்கே காண முடியும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(6)

பிரம்மன் {இந்திரனிடம்}, “ஓ! மகவத் {இந்திரா}, இப்போது நீ இவ்வாறு பலியைக் குறித்து விசாரிப்பது உனக்குத் தகாது. எனினும், ஒருவனால் கேட்கப்படும்போது மற்றொருவன் பொய் பேசக்கூடாது என்ற காரணத்தினால் நான் பலி எங்கிருக்கிறான் என்பதை உனக்குச் சொல்வேன்.(7) ஓ! சச்சியின் தலைவா, பலி இப்போது ஓட்டகங்களிலோ, காளைகளிலோ, கழுதைகளிலோ, குதிரைகளிலோ தன் பிறப்பை எடுத்து, தன் இனத்தில் முதன்மையானவனாக ஒரு வெற்று அறையில் இருக்கலாம்” என்றான்.(8)

சக்ரன் {இந்திரன்}, “ஓ! பிரம்மா, நான் பலியை ஒரு வெற்று அறையில் சந்தித்தால், அவனை நான் கொல்லவேண்டுமா? அல்லது விட வேண்டுமா? நான் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(9)

பிரம்மன், “ஓ சக்ரா, பலிக்குத் தீங்கிழைக்காதே. பலி மரணத்திற்குத் தகுந்தவனல்ல. ஓ வாசவா, ஓ சக்ரா {இந்திரா}, மறுபுறம், அவனிடம் அறநெறி குறித்த போதனையை நீ விருப்பத்துடன் வேண்ட வேண்டும்” என்றான்”.(10)

பீஷ்மர் தொடர்ந்தார், “தெய்வீகமான படைப்பாளனால் {பிரம்மனால்} இவ்வாறு சொல்லப்பட்ட இந்திரன், பெரும் காந்தியுடன் கூடிய சூழ்நிலையில் ஐராவதத்தின் முதுகில் அமர்ந்து கொண்டு உலகத்தில் திரிந்தான்.(11) படைப்பாளன் சொன்னது போலவே அவன் {இந்திரன்}, ஒரு கழுதையின் வடிவத்தை உடுத்தி ஒரு வெற்று அறையில் வாழ்ந்திருந்த பலியைச் சந்தித்தான்.(12)

சக்ரன் {பலியிடம்}, “ஓ! தானவா, நீ இப்போது உமிகளை உணவாக உண்டு வாழும் ஒரு கழுதையாகப் பிறந்திருக்கிறாய். நீ இவ்வகையில் பிறந்தது நிச்சயம் ஓர் இழிநிலையே. இதற்காக நீ வருந்துகிறாயா? இல்லையா?(13) நான் இதற்கு முன் ஒருபோதும் காணாததைக் காண்கிறேன். செழிப்பு, நண்பர்கள் ஆகியவற்றை இழந்தவனாக, சக்தி மற்றும் ஆற்றல் குறைந்தவனாக உன் எதிரிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் உன்னை நான் காண்கிறேன்.(14) ஆயிரம் வாகனங்கள் மற்றும் ஆயிரம் சொந்தக்காரர்களுடன் உன் காந்தியினால் அனைவரையும் எரித்தபடி, எங்களை ஒன்றுமில்லாதவர்களாகக் கணக்கிட்டு முன்பு உலகங்கள் முழுவதும் திரிந்து கொண்டிருந்தாய். (15) உன்னையே தங்கள் பாதுகாவலனாகக் கருதிய தைத்தியர்கள், உன் ஆட்சியின் கீழ் வாழ்ந்தார்கள். உன் சக்தியின் மூலம், பூமியானது உழவுக்குக் காத்திராமலே பயிர்களை விளைவித்தது. எனினும், இன்றோ நீ பேரிடரில் மூழ்கியிருப்பதை நான் காண்கிறேன். இதற்காக நீ துன்புறுகிறாயா? இல்லையா?(16) முன்பு நீ செருக்கு படர்ந்த முகத்துடன், கிழக்குக் கடற்கரையில் உன் உற்றாருக்கு மத்தியில் பெருஞ்செல்வங்களைப் பிரித்துக் கொடுத்த போது உன் மனநிலை என்னவாக இருந்தது?(17)

முன்பெல்லாம் சுடர்மிக்கக் காந்தியுடன் இருந்த நீ உன் முன் நடனமிடும் ஆயிரக்கணக்கான தெய்வீகக் காரிகைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாய்.(18) அவர்கள் அனைவரும் தாமரை மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் தங்கத்தைப் போன்ற பிரகாசமிக்கத் தோழிகளையும் கொண்டிருந்தனர். ஓ! தானவர்களின் தலைவா, அப்போதெல்லாம் உன் மனநில்லை என்னவாக இருந்தது? இப்போது என்னவாக இருக்கிறது?(19) தங்கத்தாலானதும், ரத்தினங்கள் மற்றும் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பெரிய குடையை நீ கொண்டிருந்தாய். அந்நாட்களில் முழுமையாக நாற்பத்திரண்டாயிரம் கந்தர்வர்கள் உன் முன் நடனமிடுவார்கள்[1].(20) உன் வேள்விகளில் நீ மிகப் பெரியதும், முழுமையாகத் தங்கத்தாலானதுமான யூபத்தைக் கொண்டிருந்தாய். அத்தகைய தருணங்களில் நீ ஆயிரம் லட்சம் பசுக்களைத் தானமாக அளித்தாய். ஓ! தைத்தியா, அப்போது உன் மனநிலை என்னவாக இருந்தது?(21) முன்பு நீ வேள்வியில் ஈடுபட்டு, சம்யையைச் சுழற்றும் விதியைப் பின்பற்றி முழுப் பூமியையும் வலம் வந்தாய். அப்போது உன் மனநிலை என்னவாக இருந்தது?[2](22) நான் இப்போது அந்தத் தங்கக் கலனையோ {தங்க ஜாடியையோ}, உனது குடையையோ, உனது விசிறிகளையோ காணவில்லை. மேலும், ஓ! அசுரர்களின் மன்னா, பெரும்பாட்டனால் {பிரம்மனால்} உனக்குக் கொடுக்கப்பட்ட உன் மலர்மாலையையும் நான் காணவில்லை” என்றான் {இந்திரன்}.(23)பலி {இந்திரனிடம்}, “ஓ! வாசவா {இந்திரா}, நீ இப்போது என் கலனையும், குடையையும், விசிறிகளையும் காணவில்லை. பெரும்பாட்டனால் எனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட எனது மலர்மாலையையும் நீ காணவில்லை.(24) நீ கேட்கும் அந்த என் மதிப்புமிக்க உடைமைகள் இப்போது ஒரு குகையின் இருளுக்குள் புதைக்கப்பட்டிருக்கின்றன. மீண்டும் என் நேரம் வரும்போது நான் அவற்றை நிச்சயம் காண்பேன்.(25) எனினும், இந்த உன் நடத்தை உன் புகழுக்கோ, பிறப்புக்கோ தகுந்ததல்ல. செழிப்பில் இருக்கும் நீ, வறுமையில் மூழ்கியிருக்கும் என்னைக் கேலி செய்ய விரும்புகிறாய்.(26) ஞானத்தை அடைந்தவர்கள், அதன் மூலம் நிறைவை அடைந்தவர்கள், அமைதிமிக்க ஆன்மாக்கள், உயிரினங்களுக்கு மத்தியில் அறவோராகவும், நல்லோராகவும் இருப்பவர்கள், ஒருபோதும் துயரில் துன்புறுவதோ, இன்பத்தில் மகிழ்வதோ கிடையாது.(27) எனினும், ஓ! புரந்தரா, இழிபுத்தியினாலே நீ தற்புகழ்ச்சியில் ஈடுபடுகறாய். என்னைப் போல நீ ஆகும்போது, இது போன்ற பேச்சுகளில் நீ ஈடுபடமாட்டாய்” என்றான் {பலி}” என்றார் {பீஷ்மர்}.(28)

காலம்! – சாந்திபர்வம் பகுதி – 224-வாழும் உயிரினங்கள் இதையும், அதையும் தாங்களே செய்வதாகத் தற்புகழ்ச்சி செய்து கொண்டாலும், அனைத்துப் பொருட்களைப் படைப்பதும் அழிப்பதும் காலமே என்ற உண்மையை இந்திரனுக்குப் பலி விளக்கியதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த பலியைக் கண்டு சிரித்த சக்ரன் {இந்திரன்}, தான் முன்பு சொன்னதைவிடக் கூர்மையான ஒன்றைச் சொல்ல அவனிடம் மீண்டும் பேசினான்.(1)

சக்ரன் {இந்திரன் பலியிடம்}, “முந்தைய காலத்தில், ஆயிரம் வாகனங்கள் மற்றும் ஆயிரம் சொந்தக்காரர்கள் புடைசூழ, உன் காந்தியினால் அனைவரையும் எரித்தபடி, எங்களைப் புல்லாக மதித்து, உலகங்கள் முழுவதும் திரிந்து கொண்டிருந்தாய்.(2) எனினும், இப்போது நீ உற்றார் மற்றும் நண்பர்கள் ஆகிய இருவராலும் கைவிடப்பட்டிருக்கிறாய். உனக்கு நேர்ந்திருக்கும் இந்த வருந்தத்தக்க நிலையைக் கண்டு, நீ துயருறுகிறாயா? இல்லையா?(3) முன்பு உலகங்கள் முழுவதும் உன் ஆட்சியின் கீழ் இருந்தன, உன் இன்பமும் பெரிதாக இருந்தது. புற காந்தியில் உனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த வீழ்ச்சிக்காக நீ துயருறுகிறாயா? இல்லையா? என நான் கேட்கிறேன்” என்று கேட்டான்.(4)

பலி {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா, உண்மையில், காலத்தின் போக்கில் அவை யாவற்றையும் நிலையற்றதாகக் கருதுவதால் நான் துயருறவில்லை. இந்தப் பொருட்களுக்கு ஓர் எல்லை இருக்கிறது.(5) ஓ! தேவர்களின் தலைவா, உயிரினங்கள் கொண்டிருக்கும் இவ்வுடல்கள் அனைத்தும் நிலையற்றவையாகும். ஓ! சக்ரா, இந்தக் காரணத்தினால் (இந்த என் கழுதைத் தோற்றத்திற்காக) நான் வருந்தவில்லை. இந்த வடிவமும் என் தவறு எதனாலும் ஏற்படவில்லை.(6) இயக்கக் கோட்பாடும், உடலும் தங்கள் சொந்த இயல்பின் விளைவாலேயே ஒன்றாகின்றன. அவை ஒன்றாகவே வளர்ந்து, ஒன்றாகவே அழிவை அடைகின்றன.(7) இருப்பினும், இவ்வடிவை {கழுதை வடிவை} ஏற்ற நான், நிரந்தரமாக இதனுடனே பிணைக்கப்பட்டிருக்கவில்லை. ஞானத்தின் விளைவாக இஃதை அறிந்திருப்பதால் கவலைக்கான எந்தக் காரணமும் எனக்கில்லை.(8) ஆறுகள் அனைத்தின் இறுதி ஓய்விடமாகப் பெருங்கடல் இருப்பதைப் போல, உடல் படைத்த உயிரினங்கள் அனைத்தின் கதியும் மரணம்தான். ஓ! வஜ்ரதாரியே, இதை நன்கறிந்த மனிதர்கள் ஒருபோதும் திகைப்படைவதில்லை.(9) எனினும், ஆசை {ரஜோ குணம்} மற்றும் தீர்மான இழப்பில் மூழ்குபவர்கள், இஃதை அறிவதில்லை. புத்தியை இழந்தவர்கள் பேறின்மையுடைய கனத்தின் அடியில் மூழ்கித் தொலைகிறார்கள்.(10)

கூரிய புத்தியை அடையும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தையும் அழிப்பதில் வெல்கிறான். பாவமற்ற ஒருவன் நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தை} அடைந்து, அஃதை அடைந்ததன் மூலம் உற்சாகம் நிறைந்தவனாகிறான்.(11) எனினும், நல்லியல்பின் குணத்தில் இருந்து வழுவி மீண்டும் மீண்டும் மறுபிறப்பை அடைபவர்கள், ஆசை மற்றும் புலன்நுகர் பொருட்களால வழிநடத்தப்பபட்டு, கவலை மற்றும் துயரில் ஈடுபடும் கடப்பாட்டை அடைகிறார்கள்.(12) ஆசைக்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைவதில் வெற்றி, அல்லது தோல்வி, வாழ்வு, அல்லது மரணம், இன்பம், அல்லது துன்பத்தைக் கொடுக்கும் செயல்பாட்டின் கனிகள் ஆகியவற்றை நான் வெறுப்பதோ, விரும்புவதோ இல்லை.(13) ஒருவன் மற்றொருவனைக் கொல்லும்போது, அவன் அந்த மற்றொருவனின் உடலை மட்டுமே கொல்கிறான். தானே மற்றொருவனைக் கொன்றதாக நினைக்கும் மனிதன், தானே கொல்லப்படுகிறான். உண்மையில், அவர்களில் கொல்பவன் மற்றும் கொல்லப்படுபவன் ஆகிய இருவரும் உண்மையை அறியாதவர்களே[1].(14) ஓ! மகவத் {மகவான் / இந்திரா}, எவன் கொன்றானோ, அல்லது தன் ஆண்மையைத் தற்புகழ்ச்சி செய்து கொள்வதற்காக எவரையும் வென்றானோ, அவன், தான் செயல்படுபவனல்ல, (தான் எதைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்து கொள்கிறானோ) அது (முற்றிலும் வேறுபட்ட) உண்மையான இயக்குனரால் {கர்த்தாவால்} நிறைவேற்றப்பட்டது என்பதை அறியவேண்டும்.(15)இவ்வுலகில் உள்ள பொருட்களைப் படைப்பதற்கும், அழிப்பதற்கும் காரணமாக இருப்பது யார் என்ற கேள்வி எழும்போது, (தானே உண்டான, அல்லது தன்னைத் தானே படைத்துக் கொண்ட) எவனோ ஒருவன் அச்செயலுக்குக் காரணம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும், அவ்வாறு கருதப்படுபவன் (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) ஒரு படைப்பாளனைக் கொண்டிருக்கிறான் என்பதை அறிவாயாக.(16) பூமி, ஒளி அல்லது வெப்பம், வெளி, நீர், ஐந்தாவதாகக் காற்று ஆகிய இவற்றிலிருந்தே அனைத்து உயிரினங்களும் எழுகின்றன. (இஃது என்னால் அறியப்பட்டிருக்கும்போது, என் நிலையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்காக) என்ன துயரத்தை நான் உணர்வேன்?(17) பெரும் கல்வியைக் கொண்டவன், அதிகம் கல்லாதவன், பலம் கொண்டவன், பலமற்றவன், மேனி அழகுடையவன், கோரமானவன், நற்பேற்றைக் கொண்டவன், பேறற்றவன்(18) ஆகியோர் அனைவரும், அளக்க முடியாத ஆழம் கொண்ட காலத்தின் சக்தியால் அடித்துச் செல்லப் படுகிறார்கள். காலத்தால் நான் வெல்லப்பட்டேன் என்பதை நான் அறியும்போது, (என் சூழ்நிலைகளில் உள்ள இந்த மாற்றத்திற்காக) என்ன துயரத்தை நான் உணர்வேன்?(19) எதையும் எரிக்கும் ஒருவன், ஏற்கனவே எரிக்கப்பட்டதையே எரிக்கிறான். கொல்பவன், ஏற்கனவே கொல்லப்பட்ட ஒன்றை மட்டுமே கொல்கிறான். அழிவடைந்த ஒருவன், ஏற்கனவே அழிக்கப்பட்டவனாவான். ஒருவனால் அடையப்பட்ட பொருள், அவன் அஃதை அடையும் நோக்கத்திற்காகவே ஏற்கனவே வந்திருந்தது.(20)

இந்தக் காலமானது ஒரு பெருங்கடலைப் போன்றதாகும். அதில் எந்தத் தீவும் கிடையாது. உண்மையில் அதன் மறுகரை எங்கே இருக்கிறது? அதன் எல்லைகளைக் காண முடியாது. இன்னும் ஆழமாகச் சிந்தித்தாலும், அனைத்துப் பொருட்களின் பேரியக்கமாக இருப்பதும், நிச்சயமாக தெய்வீகமானதுமான இந்தத் தொடரோடையின் எல்லையை என்னால் காண முடியவில்லை. (21) ஓ! சச்சியின் தலைவா, காலமே அனைத்து உயிரினங்களையும் அழிக்கிறது என்பதை நான் புரிந்து கொள்ளாமல் இருந்தால், ஒருவேளை நான் மகிழ்ச்சி, செருக்கு, கோபம் ஆகிய உணர்வுகளை உணர்ந்திருப்பேன்.(22) உமியை உண்டு வாழ்வதும், மனிதர்களின் வசிப்பிடங்களில் இருந்து தனியான ஓரிடத்தில் தன் நாட்களை இப்போது கழித்துக் கொண்டிருப்பதுமான கழுதையின் வடிவை நான் இப்போது சுமந்து கொண்டிருக்கிறேன் என்பதை உறுதி செய்து கொண்டு, நீ என்னை நிந்திக்க வந்திருக்கிறாயா?(23) எந்த வடிவங்களைக் கண்டால், நீ என் முன்னிலையில் இருந்து வெகுவிரைவாக ஓடிவிடுவாயோ, அந்தப் பயங்கர வடிவங்களை இப்போதும் நான் விரும்பினால் என்னால் ஏற்க முடியும்.(24) காலமே அனைத்தையும் கொடுக்கிறது, மீண்டும் அதுவே அனைத்தையும் எடுத்துக் கொள்கிறது. காலமே அனைத்துப் பொருட்களையும் விதிக்கிறது. ஓ! சக்ரா, உன் ஆண்மை குறித்துத் தற்புகழ்ச்சி செய்யாதே.(25)

ஓ! புரந்தரா, முற்காலதில் நான் கோபப்படும் தருணங்களில் அனைத்தும் கலக்கமடையும். எனினும், ஓ! சக்ரா, இவ்வுலகில் அனைத்துப் பொருட்களின் நித்திய குணத்தை {ஸனாதனமான தர்மத்தை} நான் அறிந்திருக்கிறேன்.(26) நீயும் உண்மையை அறிவாயாக. ஆச்சரியத்தால் நிறையாதே. செழிப்பும், அதன் தோற்றமும் ஒருவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதில்லை.(27) உன் மனம் ஒரு குழந்தையுடைய மனம் போல் இருப்பதாகத் தெரிகிறது. அது முன்பு போலவே இன்னும் இருக்கிறது. ஓ! மகவத் {மகவான் / இந்திரா}, உன் கண்களைத் திறந்து, உறுதியுணர்வு மற்றும் வாய்மையில் நிறுவப்பட்ட புத்தியைப் பின்பற்றுவாயாக.(28) தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும் சென்ற காலங்களில் என் ஆட்சியின் கீழ் இருந்தார்கள். ஓ! வாசவா {இந்திரா}, இதை நீ அறிவாய்.(29) அறியாமையால் திகைப்படைந்த புத்தியைக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும், “விரோசனனின் மகனான பலி இப்போது எந்தத் திசைப்புள்ளியில் இருப்பானோ, அதை வணங்குகிறேன்” என்று சொல்லி என்னைத் துதித்தன.(30)

ஓ! சச்சியின் தலைவா, (இப்போது கிடைக்காத) அந்த மரியாதையை நினைத்து ஒருபோதும் நான் வருந்துவதில்லை. எனது இந்த வீழ்ச்சிக்காக நான் எந்த வருத்தத்தையும் உணரவில்லை. இயக்குபவனுடைய ஆளுகைக்குக் கீழ்ப்படிந்து வாழ்வேன் என்பதில் என் புத்தி உறுதியாக இருக்கிறது.(31) உன்னதப் பிறப்பு, அழகிய பண்புகள், பேராற்றல் ஆகியவற்றைக் கொண்டவனும், ஆலோசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் கூடியவனுமான எவனோ ஒருவன், அவலநிலையில் வாழும் நிலை காணப்படுகிறது. இவ்வாறு விதிக்கப்பட்டிருப்பதாலேயே இது நேர்கிறது[2].(32) அதே போலவே, ஓ சக்ரா, உன்னதமற்ற குலத்தில் பிறந்தவனும், அறிவற்றவனும், பிறப்பில் களங்கமுடையவனுமான எவனோ ஒருவன், தன் ஆலோசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் காணப்படுகிறது. இவ்வாறு விதிக்கப்பட்டதாலேயே இதுவும் நேர்கிறது.(33) ஓ சக்ரா, மங்கலமான ஓர் அழகிய பெண்மணி, அவலநிலையில் தன் வாழ்வைக் கடத்துவதைக் காண முடிகிறது. அதேபோலவே, அனைத்து மங்கலமற்ற குறிகளையும் கொண்ட, கோரமான ஒரு பெண் பேரின்பத்தில் தன் நாட்களைக் கடத்துவதும் காணப்படுகிறது.(34) ஓ! சக்ரா, நம் செயல்பாடுகள் எதனாலும் நாம் இந்நிலையை அடையவில்லை. ஓ! வஜ்ரபாணியே, நீ இப்போது இருக்கும் இந்நிலை உனது எந்தச் செயலாலும் உண்டானதில்லை.(35)ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரனே}, நீ இப்போது அனுபவிக்கும் இந்தச் செழிப்புக்குக் காரணமாக இருக்கும் எந்தச் செயலையும் நீ செய்யவில்லை. இப்போதைய எனது செழிப்பற்ற நிலைக்குக் காரணமாக இருக்கும் எதையும் நானும் செய்யவில்லை. செழிப்பும், வறுமையும் ஒன்றன்பின் ஒன்றாக நேர்கின்றன.(36) காந்தியில் சுடர்விடுபவனாக, செழிப்புடையவனாக, அழகைக் கொண்டவனாக, தேவர்கள் அனைவருக்கும் தலைமைப் பொறுப்பில் நிறுவப்பட்டவனாக, என்னிடம் முழங்கிக் கொண்டிருப்பவனாக இப்போது நான் உன்னைக் காண்கிறேன்.(37) காலமே என்னைத் தாக்கி நிற்கிறது என்ற உண்மையைத் தவிர இதில் வேறொன்றுமில்லை. உண்மையில், காலம் என்னைத் தாக்காதிருந்தால், நீ கையில் வஜ்ரம் தரித்தவனாகவே இருந்தாலும் கூட, என் புறங்கையின் ஒரே குத்தில் இன்று உன்னை வீழ்த்திக் கொன்றிருப்பேன்.(38) எனினும், இஃது என் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான காலமில்லை. மறுபுறம், அமைதியான நடத்தையைப் பின்பற்றுவதற்கான காலமே வாய்த்திருக்கிறது. காலமே அனைத்துப் பொருட்களையும் நிறுவுகிறது. காலமே அனைத்துப் பொருட்களிலும் இயங்கி, அவற்றின் இறுதி உறவிற்கு அவற்றை வழிநடத்துகிறது[3].(39) நான் தானவர்களால் வழிபடப்பட்ட அவர்களுடைய தலைவனாவேன். என் சக்தியால் அனைத்தையும் எரித்தபடி, பலத்துடனும், செருக்குடனும் நான் முழங்கிக் கொண்டிருந்தேன். {அப்படிப்பட்ட} என்னையே காலம் தாக்கியிருக்கும்போது, எவன்தான் அதனால் தாக்கப்படாதிருப்பான்?(40)சிறப்புமிக்க ஆதித்தியர்களில் ஒருவனான உன்னையும் சேர்த்து, அவர்களில் பன்னிருவரின் சக்தி அனைத்தையும் முற்காலத்தில் தனியாக நான் தாங்கினேன்.(41) ஓ! வாசவா, நீரைத் தாங்கிப் பிடித்து மழையாகவும் நானே பொழியச்செய்தேன். மூவுலகங்களுக்கமான ஒளியையும், வெப்பத்தையும் நானே கொடுத்து வந்தேன்.(42) நானே பாதுகாப்பவனாகவும், அழிப்பவனாகவும் இருந்தேன். நானே கொடுப்பவனாகவும், எடுப்பவனாகவும் இருந்தேன். நானே கட்டுபவனாகவும், கட்டறுப்பவனாகவும் இருந்தேன். அனைத்து உலகங்களிலும் நானே பலமிக்க ஒரு தலைவனாக இருந்தேன்.(43) ஓ! தேவர்களின் தலைவா, அப்போது நான் கொண்டிருந்த அரசாட்சி இப்போது என்னிடம் இல்லை. நான் இப்போது காலத்தின் சக்திகளால் தாக்கப்படுகிறேன். எனினும், அப்பொருட்கள் இப்போது என்னில் ஒளிரவில்லை.(44) (வெளிப்படையாக என்னால் செய்யப்படும் செயல்களையும்) செய்பவன் நானில்லை. (உன்னால் செய்யப்படும் செயல்களையும்) செய்பவன் நீயில்லை. ஓ! சச்சியின் தலைவா, (அந்தச் செயல்களைச்) செய்பவன் வேறு எவனும் இல்லை. ஓ! சக்ரா, காலமே அனைத்துப் பொருட்களையும் பாதுகாக்கவும், அழிக்கவும் செய்கிறது.(45)வேதங்களை அறிந்த மனிதர்கள் காலமே (நித்தியமானதே) பிரம்மம் என்று சொல்கின்றனர். பிறைநாட்களும் {பக்ஷங்களும்}, மாதங்களும் அதன் உடலாகும். அந்த உடல், பகல்களையும், இரவுகளையும் தன் ஆடைகளாகக் கொண்டிருக்கிறது. பருவகாலங்களே அதன் புலன்களாகும். வருடமே அதன் வாயாகும்.(46) சிலர், இவை அனைத்தையும் (இந்த மொத்த அண்டத்தையும்) பிரம்மமாகவே காண வேண்டும் என்று தங்கள் மேன்மையான புத்தியின் விளைவால் சொல்கின்றனர். எனினும், வேதங்களோ, ஆன்மாவின் ஐந்து உறைகளே பிரம்மமாகக் கருதப்பட வேண்டும் எனப் போதிக்கின்றன.(47) பிரம்மமானது, பரந்த நீர்ப்பரப்பைக் கொண்ட பெருங்கடலைப் போல ஆழமானதும், அடைதற்கரியதுமாகும். அதற்குத் தொடக்கமோ முடிவோ இல்லை, அஃது அழியத்தகாததும் {ஆன்மாவாகவும்}, அழியத்தக்கதுமாக {பிரபஞ்சமாகவும்} இருக்கிறது என்று சொல்லப்படுகிறது[4].(48) அது தானே குணங்களற்றதாக இருப்பினும், இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களுக்குள்ளும் நுழைந்து, அந்தந்தப் பொருளுக்குரிய குணங்களை ஏற்கிறது. வாய்மையை அறிந்தோர் பிரம்மத்தை நித்தியமானதாகக் கருதுகிறார்கள்.(49) அறியாமையுடன் கூடிய செயல்பாட்டின் மூலம், அந்தப் பிரம்மம், (ஞானத்தை மட்டுமே குணமாகக் கொண்ட) பொருளற்ற ஆவியான சித் அல்லது ஆன்மாவுக்குரிய பொருட்பாட்டுக் குணங்களை உண்டாக்குகிறது. எனினும், அனைத்தின் உண்மைக் காரணம் குறித்த அறிவு தோன்றும்போது, அந்தப் பொருட்பாடு ஆன்மாவுக்கு உரியதாக இல்லாமல் போவதால், அஃது {அந்தப் பொருட்பாடு} ஆன்மாவின் இன்றியமையாத குணமல்ல என்றாகிறது[5].(50)காலத்தின் வடிவிலுள்ள பிரம்மமே அனைத்து உயிரினங்களின் புகலிடமாக இருக்கிறது. அந்தக் காலத்தைக் கடந்து எங்கே நீ செல்வாய்? உண்மையில், ஓடுவதாலோ நிற்பதாலோ காலம், அல்லது பிரம்மத்தைத் தவிர்க்க முடியாது.(51) ஐம்புலன்கள் அனைத்தும் பிரம்மத்தை உணர இயன்றவை அல்ல. சிலர் பிரம்மத்தை நெருப்பு {அக்னி} என்று சொல்கிறார்கள்; சிலர் பிரஜாபதி என்றும்;(52) சிலர் பருவகாலங்கள் என்றும்; சிலர் மாதம் என்றும்; சிலர் பிறைநாட்கள் {பக்ஷம்} என்றும்; சிலர் நாட்கள் என்றும்; சிலர் மணிநேரங்கள் என்றும்; சிலர் முற்பகல் என்றும், சிலர் நன்பகல் என்றும்; சிலர் பிற்பகல் என்றும்;(53) சிலர் கணம் என்றும் சொல்கிறார்கள். இவ்வாறு ஒன்றேயான அதைக் குறித்துப் பலவாறாகப் பல்வேறு மக்கள் பேசுகிறார்கள். அது {பிரம்மம்} நித்தியமானதென்றும், அனைத்துப் பொருட்களையும் ஆள்வதென்றும் அறிவாயாக.(54) ஓ! வாசவா, பெரும் பலத்தையும், பேராற்றலையும் கொண்ட பல்லாயிரம் இந்திரர்கள் கடந்து சென்று விட்டார்கள். ஓ! சச்சியின் தலைவா, நீயும் அவ்வழியிலேயே கடந்து செல்வாய்.(55)

உனக்கான காலம் வரும்போது, ஓ! சக்ரா, அனைத்திலும் வலிமையான காலமானது, பெருகும் வலிமையைக் கொண்டவனும், தேவர்களின் தலைவனாக இருப்பவனுமான உன்னையும் கூட அழித்துவிடும்.(56) காலம் அனைத்துப் பொருட்களையும் அடித்துச் செல்கிறது. இக்காரணத்தினால், ஓ! இந்திரா, நீ தற்புகழ்ச்சியில் ஈடுபடாதே. உன்னாலோ, என்னாலோ, நமக்குமுன்பு சென்றுவிட்டவர்களாலோ காலம் அடக்கப்பட முடியாததாகும்.(57) ஒப்பிலாததாக உன்னால் கருதப்படுவதும், நீ அடைந்திருப்பதுமான இந்த அரச செழிப்பானது, முன்பு என்னால் கொள்ளப்பட்டிருந்தது. இது திடமற்றதும், உண்மையற்றதுமாகும் {போலியானதுமாகும்}. இவள் {செழிப்பின் தேவி} நீண்டகாலம் ஓரிடத்தில் இருப்பதில்லை.(58) உண்மையில், உனக்கு முன்பிருந்தவர்களும், உன்னிலும் மிக மேன்மையானவர்களுமான ஆயிரக்கணக்கான இந்திரர்களிடம் இவள் வசித்திருந்தாள். ஓ! தேவர்களின் தலைவா, நிலையற்றவளான இவள், என்னைக் கைவிட்டு இப்போது உன்னிடம் வந்திருக்கிறாள்.(59) ஓ! சக்ரா, இத்தகைய தற்புகழ்ச்சியில் மீண்டும் ஈடுபடாதே. நீ அமைதிநிலையை அடைவதே உனக்குத் தகும். வீண் தற்பெருமை கொண்டவனாக உன்னை அவள் {செழிப்பின் தேவியானவள்} அறிந்தால், வெகு விரைவில் உன்னைக் கைவிடுவாள்” என்றான் {பலி}” {என்றார் பீஷ்மர்}.(60)

ஸ்ரீ! – சாந்திபர்வம் பகுதி – 225-பலியின் உடலில் இருந்து வெளியேறிய பெண்ணிடம் அவள் யார் என்பதைக் கேட்ட இந்திரன்; பலியின் உடலைவிட்டு வெளியேறிய காரணத்தைச் சொன்ன ஸ்ரீ; ஸ்ரீயை நான்கு இடங்களில் பிரித்து நிறுவிய இந்திரன்; ஸ்ரீக்கு எதிராகக் குற்றமிழைப்போரைத் தண்டிக்கப்போவதாகச் சொன்ன இந்திரன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அதன்பிறகு, உயர் ஆன்ம பலியின் வடிவத்தில் இருந்து, சுடர்மிக்கக் காந்தியுடன் கூடிய உடலுடன் செழிப்பின் தேவி வெளிவருவதை நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} கண்டான்.(1) பாகனைத் தண்டித்தவனான அந்தச் சிறப்புமிக்கவன், ஒளியுடன் சுடர்விடும் அந்தத் தேவியைக் கண்டு, ஆச்சரியத்தால் விரிந்த கண்களுடன், பலியிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்.(2)

சக்ரன் {இந்திரன் பலியிடம்}, “ஓ! பலியே, உன் உடலில் இருந்து வெளிப்படும் தன் சக்தியின் விளைவால் இவ்வாறு காந்தியுடன் சுடர்விடுபவளும், மகுடத்தால் தலை அலங்கரிக்கப்பட்டவளும், தோள்வளைகளை அணிந்தவளும், அனைத்துப் பக்கங்களிலும் மகிமையின் ஒளியை வெளியிடுபவளுமான இவள் யார்?” என்று கேட்டான்.(3)

பலி {இந்திரனிடம்}, “இவள் அசுர வனிதையா, தேவியா, மனிதப் பிறவியா என்பதை நானறியேன். நீ இவளிடம், கேட்கலாம், அல்லது கேட்காமலும் இருக்கலாம். உனக்கு விருப்பமானதைச் செய்வாயாக” என்றான்.(4)

சக்ரன் {இந்திரன் பலியிடம்}, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, இத்தகைய ஒளியுடன் கூடியவளும், மகுடம் சூடியவளும், பலியின் உடலில் இருந்து இவ்வாறு வெளிவந்தவளுமான நீ யார்? நான் உன்னை அறியேன். கருணைகூர்ந்து எனக்கு உன் பெயரைச் சொல்வாயாக.(5) உண்மையில், தைத்தியர்களின் தலைவனைக் {பலியைக்} கைவிட்டு வந்த மாயா தேவியைப் போல, சுயகாந்தியில் சுடர்விட்டுக் கொண்டு இங்கே நிற்கும் நீ யார்? ஓ! கேட்கும் எனக்கு நீ சொல்வாயாக” என்றான்.(6)

ஸ்ரீ {செழிப்பின் தேவி / லட்சுமி}, “விரோசனன் என்னை அறியமாட்டான். விரோசனனின் மகனான இந்தப் பலியும் என்னை அறியமாட்டான். கல்விமான்கள் என்னைத் துஸ்ஸஹை என்ற பெயரைச் சொல்லி அழைத்தார்கள்[1]. சிலர் என்னை விதித்ஸை என்ற பெயரில் அறிவார்கள்[2].(7) ஓ! வாசவா, எனக்கு வேறு பெயர்களும் உண்டு. அவை பூதி, லக்ஷ்மி மற்றும் ஸ்ரீ என்பவையாகும்[3]. ஓ சக்ரா, நீயும் என்னை அறியமாட்டாய். தேவர்களில் எவரும் என்னை அறியமாட்டார்கள்” என்றாள்.(8)சக்ரன் {செழிப்பின் தேவியான ஸ்ரீயிடம்}, “ஓ! சுமக்கக் கடினமான பெண்ணே, நீண்ட காலம் பலிக்குள் வாழ்ந்திருந்த நீ இப்போது ஏன் அவனைவிட்டு அகன்று செல்கிறாய்? இஃது என் செயலின் நிமித்தமாக நேர்கிறதா? அல்லது பலி செய்த எந்தச் செயலுக்காகவாவது நேர்கிறதா?” என்று கேட்டான்.(9)

ஸ்ரீ {இந்திரனிடம்}, “படைப்பாளனோ, விதி சமைப்பவனோ என்னை ஆள்வதில்லை. காலமே என்னை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரச் செய்கிறது. ஓ! சக்ரா, பலியை அவமதியாதே” என்றாள்.(10)

சக்ரன் {ஸ்ரீயிடம்}, “ஓ! மகுடத்தால் அலங்கரிக்கப்பட்ட தேவி, என்ன காரணத்திற்காக நீ பலியைக் கைவிடுகிறாய்? (என்னுடன் வாழ்வதற்காக) ஏன் என்னை நீ அணுகுகிறாய்? ஓ! இனிய புன்னகை கொண்டவளே, இதை எனக்குச் சொல்வாயாக” என்றான்.(11)

ஸ்ரீ {இந்திரனிடம்}, “வாய்மை, கொடைகள், நன்னோன்புகள், தவங்கள், ஆற்றல் மற்றும் அறம் ஆகியவற்றில் நான் வாழ்கிறேன். பலி இவை அனைத்தில் இருந்து வீழ்ந்துவிட்டான்.(12) முன்பு அவன் பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு மிக்கவனாக இருந்தான். அவன் உண்மைநிறைந்தவனாகவும், ஆசைகளைக் கட்டுப்படுத்தியவனாகவும் இருந்தான். எனினும், பின்னாட்களில் அவன் பிராமணர்களிடம் பகையுணர்வை வளர்த்தான், மேலும் தெளிந்த நெய்யை அழுக்கான கரங்களுடன் தீண்டினான்[4].(13) முன்பு அவன் எப்போதும் வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுவான். இறுதியாக, காலத்தால் பீடிக்கப்பட்டு அறியாமையில் குருடான அவன், என்னை இடையறாமல் துதிப்பதாக அனைவரிடமும் தற்புகழ்ச்சி செய்யத் தொடங்கினான்.(14) ஓ! சக்ரா, (இந்தக் குற்றங்களுக்காக) இவனைக் கைவிடும் நான், இதுமுதல் உன்னிடம் வசிக்கப் போகிறேன். நீ கவனமாகவும், தவங்கள் மற்றும் ஆற்றலுடனும் என்னைச் சுமக்க வேண்டும்” என்றாள்.(15)

சக்ரன், “ஓ! தாமரைகளுக்கு மத்தியில் வசிப்பவளே, உன்னை எப்போதும் சுமப்பதற்குத் தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் ஒருவர் கூட இல்லை” என்றான்.(16)

ஸ்ரீ, “ஓ! புரந்தரா {இந்திரா}, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், அல்லது ராட்சசர்களில் எவராலும் என்னை எப்போதும் சுமக்க முடியாது” என்றாள்.(17)

சக்ரன், “ஓ மங்கலமான பெண்ணே, நீ எப்போதும் என்னிடமே வசிப்பதற்கு நான் என் நடத்தையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் நிச்சயம் உன் ஆணைகளை ஏற்பேன். எனக்கு உண்மையாகப் பதிலளிப்பதே உனக்குத் தகும்” என்றான்.(18)

ஸ்ரீ, “ஓ! தேவர்களின் தலைவா, நான் எப்போதும் உன்னுடன் எவ்வாறு இருக்க முடியும் என்பதைச் சொல்கிறேன். வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் விதியின் படி என்னை நான்கு பகுதிகளாகப் பிரிப்பாயாக” என்றாள்.(19)

சக்ரன், “நான் என் சக்திக்கும் பலத்துக்கும் தக்கபடியான வசிப்பிடங்கள் உனக்கு ஒதுக்குகிறேன். ஓ! லக்ஷ்மி, என்னைப் பொருத்தவரையில், எவ்வழியிலாவது உனக்குக் குற்றமிழைக்காதவாறு எப்போதும் கவனத்துடன் இருக்கப் போகிறேன்.(20) மனிதர்களுக்கு மத்தியில் உள்ளவளும், அனைத்துப் பொருட்களின் மூதன்னையுமான பூமியானவள் அவர்கள் அனைவரையும் சுமக்கிறாள். அவள் உன்னில் நான்கில் ஒரு பகுதியைச் சுமப்பாள். அதற்கான பலம் அவளுக்கு இருக்கிறதென நான் நினைக்கிறேன்” என்றான்.(21)

ஸ்ரீ, “இதோ என்னில் ஒரு கால் பகுதியைக் கொடுத்தேன். இது பூமியில் நிறுவப்படட்டும். ஓ! சக்ரா, இதன்பிறகு, எனது இரண்டாம் பகுதிக்கு உரிய நிலையை அமைப்பாயாக” என்றாள்.(22)

சக்ரன், “மனிதர்களுக்கு மத்தியில் உள்ள திரவ வடிவில் உள்ள நீர்நிலைகள் மனிதர்களுக்குப் பல்வேறு தொண்டுகளைச் செய்கின்றன. அந்த நீர் நிலைகள் உன் மேனியின் நான்கில் ஒரு பகுதியைச் சுமக்கட்டும். உன்னில் ஒரு பகுதியைச் சுமக்கும் பலம் அவற்றுக்கு இருக்கிறது” என்றான்.(23)

ஸ்ரீ, “நீர்நிலைகளில் நிறுவப்படுவதற்காக எனது மற்றொரு கால்பகுதியையும் நான் கொடுத்தேன். ஓ! சக்ரா, இதன் பிறகு, எனது மூன்றாம் பகுதிக்குரிய இடத்தை ஒதுக்குவாயாக” என்றாள்.(24)

சக்ரன், “வேதங்கள், வேள்விகள் ஆகியவையும், தேவர்கள் அனைவரும் நெருப்பிலேயே நிறுவப்பட்டுள்ளனர். உனது மூன்றாம் பகுதியை நெருப்பில் இடும்போது அதனை அது சுமக்கும்” என்றான்.(25)

ஸ்ரீ, “நெருப்பிலிடப்போகும் எனது மூன்றாம் பகுதியை இதோ கொடுத்தேன். ஓ! சக்ரா, இதன்பிறகு, எனது இறுதி பகுதிக்குரிய இடத்தை ஒதுக்குவாயாக” என்றாள்.(26)

சக்ரன், “நல்லோர், பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டோர், பேச்சில் உண்மை நிறைந்தோர் ஆகியோர் உன்னில் நான்காம் பகுதியைச் சுமக்கட்டும். அதைச் சுமக்கும் சக்தி நல்லோருக்குண்டு” என்றான்.(27)

ஸ்ரீ, “நல்லோருக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட இருக்கும் எனது நான்காம் பகுதியை இதோ கொடுத்தேன். ஓ! சக்ரா, பல்வேறு உயிரினங்களுக்கு என் பகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன, நீ என்னைத் தொடர்ந்து பாதுகாப்பாயாக” என்றாள்.(28)

சக்ரன், “எனது இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக. நான் இவ்வாறே உன்னைப் பல்வேறு உயிரினங்களுக்கு மத்தியில் பிரித்துக் கொடுத்துவிட்டேன். அந்த உயிரினங்களுக்கு மத்தியில் உனக்கு எதிராகக் குற்றமிழைப்போர் என்னால் தண்டிக்கப்படுவார்கள்” என்றான்.

தைத்தியர்களின் தலைவன் பலி, ஸ்ரீயால் இவ்வாறு கைவிடப்பட்ட பிறகு, இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(29)

பலி, “தற்போது சூரியன், மேற்கைப் போலவே கிழக்கிலும், தெற்கைப் போலவே வடக்கிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(30) எனினும், இந்தச் சூரியன் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு, சுமேருவுக்கு மத்தியில் உள்ள பிரம்மலோகத்தில் மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருக்கும்போது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நேரப்போகும் பெரும்போரில் நான் நிச்சயம் உங்கள் அனைவரையும் முறியடிப்பேன்.(31) அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு பிரம்மலோகத்தில் மட்டுமே நிலையாக ஒளிரும்போதும் மீண்டும் அசுரர்கள் மற்றும் தேவர்களுக்கு இடையில் தோன்றும் பெரும்போரில் நான் நிச்சயம் உங்கள் அனைவரையும் வெற்றிக் கொள்வேன்” என்றான்[4].(32)சக்ரன் {பலியிடம்}, “பிரம்மன் உன்னை ஒருபோதும் கொல்லக்கூடாது என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ஓ! பலியே இந்தக் காரணத்தினாலேயே நான் உன் தலையில் என் வஜ்ரத்தை வீசாமல் இருக்கிறேன்.(33) ஓ! தைத்தியர்களின் தலைவா, நீ விரும்பும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ! பேரசுரா, உன்னில் அமைதி நிலைக்கட்டும். நெடுங்கோட்டில் {தீர்க்கரேகையில்} மட்டுமே சூரியன் ஒளிரும் எந்தக் காலமும் நேராது.(34) சூரியனின் இயக்கத்தை முறைப்படுத்தும் சட்டங்களை ஏற்கனவே சுயம்பு (பிரம்மன்) விதித்திருக்கிறார். அனைத்து உயிரினங்களுக்கும் ஒளியையும், வெப்பத்தையும் கொடுத்தபடியே அவன் {சூரியன்} இடையறாமல் இயங்குவான்.(35) ஆறு மாதங்கள் வடக்கு நோக்கிய {உத்தராயண} போக்கிலும், அடுத்த ஆறு மாதங்கள் தெற்கு நோக்கிய {தக்ஷிணாயணப்) போக்கிலும் அவன் {சூரியன்} பயணிப்பான். சூரியன் (ஒன்றன்பின் ஒன்றாக) இவ்வழியிலேயே பயணித்து, உயிரினங்கள் அனைத்திற்காகக் குளிர்காலத்தையும் வெயில் காலத்தையும் உண்டாக்குவான்” என்றான்”.(36)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இவ்வாறு இந்திரனால் சொல்லப்பட்ட தைத்தியர்களின் தலைவனான பலி, தெற்கு நோக்கிச் சென்றான். புரந்தரன் வடக்கு நோக்கிச் சென்றான்.(37) ஆயிரங்கண் இந்திரன், முற்றிலும் செருக்கற்ற வகையில் அமைந்த பலியின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு வானத்திற்கு உயர்ந்தான்” {என்றார் பீஷ்மர்}.(38)

நமுசியின் ஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 226- இந்திரனுக்கும், நமுசிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சோகத்தை விலக்க வேண்டிய காரணத்தை இந்திரனுக்குச் சொன்ன நமுசி…

[1]பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பழங்கதையில் நூறு வேள்விகளைச் செய்தவனுக்கும் {இந்திரனுக்கும்}, அசுரன் நமுசிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(1) அனைத்து உயிரினங்களின் பிறப்பு மற்றும் மரணம் குறித்து அறிந்தவனான அசுரன் நமுதி, செழிப்பை இழந்தவனாக இருந்தும், முற்றிலும் அசைவற்றதாக இருக்கும் பரந்த பெருங்கடலைப் போலக் கலங்காத இதயத்துடன் இருந்த போது, புரந்தரன் {இந்திரன்} இந்த வார்த்தைகளை அவனிடம் {நமுசியிடம்} சொன்னான்:(2) “ஓ! நமுசியே, உன் நிலையில் இருந்து வீழ்ந்து, கயிறுகளால் கட்டப்பட்டு, உன் எதிரிகளின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டு, செழிப்பை இழந்தவனாக இருக்கும் நீ, துயரத்தில் ஈடுபட்டு வருகிறாயா? அல்லது உன் நாட்களை உற்சாகமாகக் கழித்து வருகிறாயா?” என்று கேட்டான்.(3)நமுசி {இந்திரனிடம்}, “விலக்கப்பட முடியாத இத்தகைய துயரத்தில் ஈடுபடுவதன் மூலம் ஒருவன் தன் உடலை வீணாக்கிக் கொண்டு, தன் பகைவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறான். மேலும், அடுத்தவனின் துயரத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு எவனாலும் அதைக் குறைக்க முடியாது. ஓ! சக்ரா, இந்தக் காரணங்களினால் நான் துயரில் ஈடுபடுவதில்லை. நீ காணும் இவை யாவற்றுக்கும் ஓர் எல்லை இருக்கிறது[2].(4) ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, துயரில் ஈடுபடுவதால், அது மேனி அழகு, செழிப்பு, வாழ்வு {உயிர்}, அறம் ஆகியவற்றை அழிக்கிறது.(5) உண்மை ஞானம் கொண்ட ஒருவன், சரியில்லாத மனநிலையில் பிறக்கும் துயரத்தை நிச்சயம் அடக்கி, உயர்ந்த நன்மையைத் தரவல்லதும், இதயத்தில் வசிப்பதுமான ஒன்றை அவனது மனத்தில் நன்றாகச் சிந்திக்க வேண்டும்.(6) ஒருவன் தன் மனத்தை உயர்ந்த நன்மையில் நிலைபெறச் செய்யும்போது, அவனது நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை[3].(7) ஆணை விதிப்பவன் ஒருவனே, இரண்டாமவன் எவனும் கிடையாது. கருவறைக்குள் கிடக்கும் உயிர் வரை அவனது கட்டுப்பாடு பரந்து விரிந்திருக்கிறது. அந்தப் பேரியக்குனரால் கட்டுப்படுத்தப்படும் நான், அவன் என்னை நிறுவியிருப்பதைப் போலவே கீழ் நோக்கி ஓடும் ஓடை நீரைப் போல ஓடிக் கொண்டிருக்கிறேன்.(8)

இருப்பு என்றால் என்ன? விடுதலை {முக்தி} என்றால் என்ன? என்னவற்றை அறிந்து, முன்னதை {இருப்பை} விடப் பின்னதே {விடுதலையே} மேன்மையானது என்பதையும் புரிந்து கொண்டாலும், இன்னும் நான் அஃதை அடைய முனையவில்லை. அறத் திசையை நோக்கிச் செய்யப்படும் செயல்களையும், அதற்கு எதிர்மறையானவற்றையும் செயல்களையும் செய்ய முனையும் நான், அவன் என்னை நிறுவியபடியே ஓடிக் கொண்டிருக்கிறேன்.(9) ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட பொருட்களையே அடைகிறான். எது நடைபெற வேண்டுமோ, அதுவே நடைபெறுகிறது.(10) விதிப்பவன் நிறுத்தும் கருவறைகளிலே அவன் மீண்டும் மீண்டும் வசிக்க வேண்டியிருக்கிறது. இக்காரியத்தில் அவனுக்கு வேறு வாய்ப்பேதும் இல்லை.(11) எந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் நிறுத்தப்பட்டாலும், தனக்கு விதிக்கப்பட்ட நிலையை அப்படியே ஏற்றுக் கொள்பவன் அதனால் திகைப்படைவதில்லை.(12) காலத்தின் போக்கில் மீண்டும் மீண்டும் வரும் இன்பம் மற்றும் துன்பத்தால் மனிதர்கள் பாதிப்பை அடைகின்றனர். இதில் (யார் ஒருவருக்கும் ஏற்படும் இன்ப துன்பங்களில்) தனிப்பட்ட யாதொன்றும் இல்லை. துன்பத்தை விரும்பாதவன் செயல்படுபவனாகத் தன்னைக் கருதிக் கொள்வதிலேயே இந்தத் துயரம் இருக்கிறது[4].(13)

முனிவர்கள், தேவர்கள், பேரசுரர்கள் ஆகியோருக்கு மத்தியில் மூன்று வேதங்களையும் முழுமையாக அறிந்தவர்களும், காட்டில் உள்ள தவசிகளிலும் யாரைத் தான் துயரங்கள் அணுகாது? எனினும், ஆத்மா, அனாத்மா ஆகியவற்றை அறிந்தோர் ஒருபோதும் துயர்களில் அஞ்சுவதில்லை.(14) இயல்பாகவே இமயத்தைப் போல அசையாதவனாக இருக்கும் ஞானி ஒருபோதும் கோபவசப்படமாட்டான்; புலன் நுகர் பொருட்களில் பற்றுதலுடன் ஒருபோதும் துன்புறமாட்டான்; அவன் ஒருபோதும் சோகத்தில் ஒப்பாரி வைப்பதோ, மகிழ்ச்சியில் இன்புறுவதோ கிடையாது. அத்தகைய மனிதன் பெரும் துன்பங்களில் பீடிக்கப்படும்போதும் ஒருபோதும் துயருக்கு வசப்படுவதில்லை.(15) பெரும் வெற்றிகளால் மகிழ்ச்சியடையாதவனும், பேரிடர்களில் திகைப்படையாதவனும், இன்பத்தையும், துன்பத்தையும் தாங்கிக் கொள்பவனும், அசையாத இதயத்துடன் அவை இரண்டுக்கும் நடுவான நிலையில் இருப்பவனுமான ஒருவன் மிக மேன்மையானவன் ஆவான்.(16) ஒருவன் எந்நிலைக்கு வீழ்ந்தாலும், அவன் துயரின் வசப்படாமல் உற்சாகமாக இருக்க வேண்டும். உண்மையில் ஒருவன், தன் மனத்தால் சுமக்கப்படுவதும், பெருகுவதும், (விலக்கப்படாமல் இருந்தால்) நிச்சயம் துன்பத்தைத் தரவல்லதுமான தனது துயரை இவ்வாறே விரட்ட வேண்டும்.(17)ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகள் ஆகிய இரண்டின் அடிப்படையில் கடமைகளைக் குறித்த விவாதங்களை நடத்தும் கல்விமான்களின் எந்தச் சபையில் ஒரு தீய மனிதன் நுழைந்தால் அச்சப்படவில்லையோ, அது நல்ல சபையல்ல, உண்மையில், அது சபை என்ற பெயரில் அழைக்கப்படத் தகாததாகும். எந்த மனிதன், அறம் குறித்த விசாரணையில் நுழைந்து, தான் அடைந்த தீர்மானங்களின் அடிப்படையில் செயல்படுவதில் வெல்வானோ அவன் தன் இனத்தில் முதன்மையானவன் ஆவான்[5].(18) ஒரு ஞானியின் செயல்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளக்கூடியனவல்ல. ஞானியானவன், தனக்குத் துன்பங்கள் நேர்கையில் ஒருபோதும் திகைப்படைவதில்லை. அவன் முதிர் வயது கௌதமரைப் போல, மிகப் பயங்கரப் பேரிடரின் விளைவால், தன் நிலையில் இருந்து வீழ்ந்துவிட்டாலும் கூட ஒருபோதும் திகைப்படையாதவனாகவே இருப்பான்[6].(19)

மந்திரங்கள், பம், சக்தி, ஞானம், ஆற்றல், நடத்தை, ஒழுக்கம், செல்வச்செழிப்பு ஆகிய இவற்றில் எதைக் கொண்டும் ஒரு மனிதனால், தனக்கு விதிக்கப்படாத ஒன்றை அடையமுடியாது. பிறகு, ஒருவன் தன் இதயத்தை எதில் நிலைநிறுத்தியிருந்தானோ, அஃதை அடையாததில் என்ன சோகம் இருக்க முடியும்?(20) நான் பிறப்பதற்கு முன்னால், எவை தங்கள் கரங்களில் காரியங்களை வைத்திருந்தனவோ அவையே நான் என்ன செய்ய வேண்டும், துன்புற வேண்டும் என்பதை விதித்திருக்கின்றன. இவ்வாறு எனக்காக விதிக்கப்பட்டதையே நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். பிறகு, மரணத்தால் என்னை என்ன செய்ய முடியும்?(21) ஒருவன் தனக்காக விதிக்கப்பட்டதை மட்டுமே அடைகிறான். அவன் எங்கே செல்ல வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அங்கேயே செல்கிறான். விதிக்கப்பட்ட இன்ப துன்பங்கள் மட்டுமே அடையப்படுகின்றன.(22) எந்த மனிதன், இதை முழுமையாக அறிந்து திகைப்படையாமல் இருக்கிறானோ, எவன் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டிலும் நிறைவுடன் இருக்கிறானோ, அவன் தன் இனத்தில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான்” என்றான் {நமுசி}” {என்றார் பீஷ்மர்}.(23)

காலவொழுக்கம்! – சாந்திபர்வம் பகுதி – 227-பயங்கரத் துயரில் மூழ்கியவனுக்கு நன்மையெது எனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; மனோவுறுதி குறித்த பீஷ்மரின் உரையாடல்; பலி மற்றும் இந்திரனின் உரையாடலை மீண்டும் சொன்ன பீஷ்மர், நித்தியத்தன்மை குறித்து பலியின் பெரும் உரையாடல்; பலியைப் புகழ்ந்த இந்திரன்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஏகாதிபதி, பயங்கரத் துயரத்தில் மூழ்கியிருக்கும் மனிதனுக்கு நண்பர்களின் இழப்போ, நாட்டின் இழப்போ ஏற்படும்போது உண்மையில் நன்மையானது எது?(1) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவ்வுலகில் நீரே எங்கள் ஆசான்களில் முதன்மையானவராவீர். இதையே நான் கேட்கிறேன். கேட்கும் எனக்குப் பதில் அளிப்பதே உமக்குத் தகும்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, மகன்கள், மனைவியர், அனைத்து வகை இன்பங்கள், செல்வம் ஆகியவற்றை இழந்தவனும், பயங்கரத் துயரில் மூழ்கியவனுமான ஒருவனுக்கு மனோவுறுதியே உயர்ந்த நன்மையாகும். எப்போதும் மனோவுறுதி கொண்ட ஒருவனின் உடல் ஒருபோதும் இளைத்துப் போவதில்லை.(3) துயரற்றநிலையானது மகிழ்ச்சியையும், மேன்மையான உடைமையான உடல்நலத்தையும் {ஆரோக்கியத்தையும்} தன்னுள் கொண்டுள்ளது. உடல் நலத்தின் விளைவால் ஒருவன் மீண்டும் செழிப்பை அடைகிறான்.(4) ஓ! ஐயா, அறவொழுக்கம் ஒழுகும் ஞானியானவன், செழிப்பு, பொறுமை, தன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(5) இது தொடர்பாகப் பழங்கதையில் பலிக்கும், வாசவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் மீண்டும் குறிப்பிடப்படுகிறது.(6)

பெரும் எண்ணிக்கையிலான தைத்தியர்களும், தானவர்களும் வீழ நேர்ந்த தேவாசுரப் போர் முடிந்தபோது, பலி மன்னனாக இருந்தான். உலகங்கள் அனைத்திலும் தன் ஆட்சியை மீண்டும் நிறுவிய விஷ்ணுவால் அவன் வஞ்சிக்கப்பட்டான். நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரனே} மீண்டும் தேவர்களின் அரசில் நிறுவப்பட்டான்.(7) தேவர்களின் அரசாட்சி இவ்வாறு மீண்டும் நிறுவப்பட்டபிறகு, நால்வகை {நான்கு வர்ணங்களைச் சேர்ந்த) மனிதர்களும் தங்கள் தங்கள் கடமைகளில் மீண்டும் நிறுவப்பட்டு, மூவுலகங்களும் மீண்டும் செழிப்பில் பெருகியதால், சுயம்புவானவன் இதயத்தில் மகிழ்ச்சியடைந்தான்.(8) அந்த நேரத்தில், ருத்ரர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், அசுவினிகள், தெய்வீக முனிவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், மேலும் உயர்ந்த வகை உயிரினங்கள் ஆகியவர்களுடன் கூடிய பலமிக்கச் சக்ரன் {இந்திரன்}, நான்கு தந்தங்களையுடையதும், ஐராவதம் என்றழைக்கப்படுவதுமான யானைகளின் இளவரசனின் மேல் காந்தியுடன் அமர்ந்து கொண்டு உலகங்கள் முழுவதிலும் பவனிவந்தான்.(10)

ஒருநாள், இவ்வாறான பவனியின்போது, அந்த வஜ்ரதாரி {இந்திரன்}, கடற்கரையிலுள்ள ஒரு குறிப்பிட்ட மலைக்குகைக்குள் விரோசனன் மகனான பலியைக் கண்டான். அந்தத் தானவர்களின் இளவரசனைக் கண்டு அவனிடம் சென்றான்.(11) தேவர்களின் தலைவனான இந்திரன் இவ்வாறு ஐராவதத்தின் முதுகில் அமர்ந்திருப்பதையும், பல்வேறு வகைத் தேவர்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்ட அந்தத் தைத்தியர்களின் இளவரசன் {பலி}, கவலை, அல்லது கலக்கத்திற்கான எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டவில்லை.(12) இந்திரன், கலங்காமல், அஞ்சாமல் நிற்கும் பலியைக் கண்டு, தன் முதன்மையான யானையின் முதுகில் இருந்தபடியே அவனிடம் பேசினான்,(13) “ஓ! தைத்தியா, எவ்வாறு நீ கலக்கமடையாமல் இருக்கிறாய்? இதற்குக் காரணம் உன் வீரமா? பெரியோர்களுக்கு நீ செய்த பணிவிடையா {புண்ணியமா}? அல்லது தவங்களின் மூலம் தூய்மையடைந்த உன் மனம் இதற்குக் காரணமா? அஃது எக்காரணமாக இருந்தாலும், இந்த மனோநிலையை அடைவது மிகக் கடினமானதாகும்.(14) உண்மையில் உயர்ந்த நிலையில் இருந்து வீழ்த்தப்பட்ட நீ, இப்போது உடைமைகள் அனைத்தையும் இழந்தவனாவும், உன் எதிரிகளின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டவனாகவும் இருக்கிறாய். ஓ! விரோசனன் மகனே, துயர்மிக்கத் தருணத்திலும் துயரமடையாதிருக்கும் வகையில் நீ என்ன வழிவகையை அடைந்திருக்கிறாய்?(15)

முன்பு உன் வகைக்கான அரசுரிமையில் நீ நிறுவப்பட்டிருந்தபோது, ஒப்பற்ற இன்பங்கள் உனதாயிருந்தன. எனினும், இப்போதோ உன் செழிப்பு, தங்கம், அரசுரிமை ஆகியவற்றை நீ இழந்திருக்கிறாய். நீ ஏன் கலங்காமல் இருக்கிறாய் என்பதை எங்களுக்குச் சொல்வாயாக.(16) நீ இதற்கு முன்பு உன் தந்தை மற்றும் பாட்டன்களின் அரியணையில் ஒரு தேவனாக அமர்ந்திருந்தாய். இன்று உன் எதிரிகளால் வீழ்ச்சியை அடைந்திருக்கும் நீ ஏன் வருந்தாமல் இருக்கிறாய்?(17) வருணனின் பாசக்கயிறுகளால் நீ கட்டப்பட்டவனாக, என் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டவனாக இருக்கிறாய். உன் மனைவியரும், செல்வமும் அபகரிக்கப்பட்டவனாக இருக்கிறாய். நீ ஏன் துயரமடையவில்லை என்பதை எங்களுக்குச் சொல்வாயாக.(18) செழிப்பையும், செல்வாக்கையும் இழந்தும் நீ துயருறாமல் இருக்கிறாய். உண்மையில் இஃது ஏதோ தனிச்சிறப்புடைய ஒன்றாகும். ஓ பலியே, மூவுலகங்களின் அரசுரிமையை இழந்த பிறகும், இருப்பெனும் சுமையைத் தாங்கவல்லவனாக உன்னையன்றி வேறு எவனால் இருக்க முடியும்?” என்று கேட்டான்.(19)

இந்திரனின் இந்த வார்த்தைகளையும், தன் மேன்மையைப் பறைசாற்றிப் பிளப்பவையான இன்னும் பிறவற்றையும் கேட்டும், விரோசனனின் மகனான பலி தன்னைக் கேள்வி கேட்பவனிடம் {இந்திரனிடம்} பின் வரும் வார்த்தைகளில் பதிலளித்தான்.(20)

பலி {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா, துயரங்கள் என்னை ஒதுக்கும்போது, நீ ஏன் இத்தகைய தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய்? ஓ! புரந்தரா, என் முன்னே கையில் வஜ்ரத்தை உயர்த்திப் பிடித்தவனாக உன்னைக் காண்கிறேன்.(21) எனினும், முன்பு உன்னால் இவ்வாறு உன்னைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. இப்போதோ நீ எவ்வழிமுறைகளினாலோ அதிகாரத்தை ஈட்டிவிட்டாய். உண்மையில், இத்தகைய கொடுஞ்சொற்களை உன்னைத் தவிர வேறு எவனால் பேச முடியும்?(22) எந்த மனிதன், தண்டிக்க வல்லவனாக இருந்தும், தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டவனும், வீழ்த்தப்பட்டவனும், வீரனுமான ஓர் எதிரியிடம் கருணை காட்டுகிறானோ அவனே உண்மையில் மிக மேன்மையானவனாவான்.(22) இரு மனிதர்கள் போரிடும்போது, போர்க்கள வெற்றியானது நிச்சயம் ஐயத்திற்கிடம் கொண்டதாகும். இருவரில் ஒருவன் நிச்சயம் வெற்றியாளனாகவும், மற்றவன் வெல்லப்பட்டவனாகவும் ஆவான்.(24) ஓ! தேவர்களின் தலைவா, உன் மனநிலை இவ்வாறாக வேண்டாம். உன் வலிமை மற்றும் ஆற்றலால் அனைத்தையும் கைப்பற்றிய பிறகு, அனைத்துயிரினங்களுக்கும் அரசனாக உன்னை நீ கருதிக் கொள்ள வேண்டாம்.(25) ஓ! சக்ரா, நமது {எமது} எந்தச் செயலின் விளைவாகவும் இவ்வாறு நேர்ந்ததெனக் கருதாதே[1]. ஓ வஜ்ரதாரியே {இந்திரனே}, உனது செயல் எதனாலும் நீ இவ்வாறு ஆகிவிட்டாயெனக் கருதாதே.(26)நான் இப்போது இருப்பது போல எதிர்காலத்தில் நீ இருப்பாய். நீ செயற்கரிய பெரிய செயலைச் செய்துவிட்டதாகக் கருதி என்னை அவமதிக்காதே.(27) ஒரு மனிதன் காலத்தின் போக்கில் இன்பத்தையும், துன்பத்தையும் மாறி மாறி அடைகிறான். ஓ! சக்ரா, காலத்தின் போக்கிலேயே நீ அண்டத்தின் அரசுரிமையை அடைந்திருக்கிறாயே அன்றி உனது குறிப்பிட்ட எந்த ஒரு தகுதியின் விளைவாலும் அல்ல.(28) காலமே என்னை இவ்வழியில் நடத்துகிறது. அந்தக் காலமே உன்னையும் வழிநடத்துகிறது. இதன் காரணமாகவே, நீ இன்று எவ்வாறிருக்கிறாயோ அவ்வாறு நானும், நாங்கள் எவ்வாறு இருக்கிறோமோ அவ்வாறு நீயும் இல்லை.(29) பெற்றோருக்குச் செய்யும் பணிவிடை, தேவ வழிபாடு, எந்த நல்ல குணத்தையும் பயில்வது ஆகியவற்றில் எதனாலும் எவன் ஒருவனுக்கும் இன்பத்தை அளிக்க முடியாது.(30)

காலத்தால் பீடிக்கப்பட்ட ஒருவனை, அறிவு, தவங்கள், கொடைகள், நண்பர்கள் மற்றும் உற்றார் என எதனாலும் காக்க முடியாது.(31) எக்கணத்திலும் நிகழவல்ல ஒரு துயரை ஆயிரம் வழிமுறைகளினாலும் மனிதர்கள் தடுக்கவல்லவர்கள் அல்லர். இத்தகைய காரியங்களில் புத்தியும், பலமும் ஒன்றுமில்லாமல் போகின்றன.(32) காலத்தின் போக்கால் பீடிக்கப்பட்ட மனிதரை எவராலும் காக்க முடியாது. ஓ! சக்ரா, செயல்படுபவன் நீயே என்று கருதுவதிலேயே அனைத்துத் துன்பங்களின் வேரும் கிடக்கிறது.(33) மேம்போக்காக ஒரு செயலைச் செய்பவனே உண்மையாகச் செயல்படுபவன் என்றால், அவன் வேறொன்றின் (பரமாத்மாவின்) படைப்பாக இருக்க மாட்டான். எனவே, மேம்போக்காகச் செயல்படுபவனே மற்றொருவனின் படைப்பாக இருப்பதால், அந்த மற்றொருவன், உயர்ந்த வேறேதும் இல்லாத பரம்பொருளாக இருக்கிறான்.(34) காலத்தின் துணையுடன் நான் உன்னை வென்றேன். காலத்தின் துணையுடனே நீயும் என்னை வென்றாய். அசையும் உயிரினங்கள் அனைத்தையும் காலமே அசைக்கிறது. அனைத்து உயிரினங்களையும் காலமே அழிக்கிறது.(35)

ஓ! இந்திரா, நீ இழிபிறவின் புத்தியைக் கொண்டதன் விளைவால், அனைத்திற்கும் காத்திருக்கும் அழிவை நீ காணாதிருக்கிறாய். உண்மையில், நீ உன் சொந்த செயல்களின் மூலம் அண்டத்தின் ஆட்சியுரிமையை அடைந்தாய் என உன்னை உயர்வாகக் கருதுவோர் சிலர் இருக்கின்றனர்.(36) இவை யாவற்றுக்காகவும் உலகின் போக்கை அறிந்த எம்மைப் போன்ற ஒருவன், காலத்தால் பீடிக்கப்பட்டதன் விளைவால் எவ்வாறு துயரில் ஈடுபடவோ, புத்தி கலக்கமடையவோ, பிழையின் ஆதிக்கத்திற்கு வசப்படும் நிலையை அடையவோ செய்வான்?(37) காலத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும்போதும் கூட, கடலில் உடையும் கப்பலைப் போல எனது புத்தியோ, என்னைப் போன்ற ஒருவனின் புத்தியோ அழிவை அடையுமா?(38) ஓ! சக்ரா, நானும், நீயும், எதிர்காலத்தில் தேவர்களின் தலைவர்களாக வரப்போகும் அனைவரும், உனக்கு முன்பு ஏற்கனவே நூறு இந்திரர்கள் எவ்வழியில் சென்றார்களோ அவ்வழியிலேயே செல்வோம்.(39) இப்போது வெல்லப்பட முடியாதவனாக, ஒப்பற்ற காந்தியுடன் சுடர்விடுபவனாக உள்ள நீயும் கூட உனக்கான நேரம் கனியும்போது, என்னைப் போலவே நிச்சயம் அழிவை அடைவாய்.(40)

காலத்தின் போக்கில் பல்லாயிரம் இந்திரர்களும், தேவர்களும், யுகந்தோறும் அடித்துச் செல்லப்படுகிறார்கள். உண்மையில் காலம் தடுக்கப்பட முடியாததாகும்.(41) உனது தற்போதைய நிலையை அடைந்த பிறகு, உன்னை நீயே அனைத்து உயிரினங்களின் படைப்பாளனாகவும், தெய்வீகமானவனாகவும், நித்தியமான பிரம்மனாகவும் மிக உயர்வாகக் கருதிக் கொள்கிறாய்.(42) இந்த உனது நிலையை உனக்கு முன்பே பலர் அடைந்திருக்கின்றனர். எவரிடமும் அது நிலையானதாகவோ, முடிவற்றதாவோ இருந்ததில்லை. எனினும், மூடப் புத்தியின் விளைவால் நீ மட்டுமே அதை {இந்த உன் நிலையை} மாறும் இயல்பற்றதாகவும், நித்தியமானதாகவும் கருதுகிறாய்.(43) நம்பத்தகாததை நீ நம்புகிறாய். நித்திமில்லாததை நீ நித்தியமானதாக மதிக்கிறாய். ஓ தேவர்களின் தலைவா, காலத்தால் மூழ்கடிக்கப்பட்டுக் கலக்கமடைந்திருக்கும் ஒருவன், இவ்வகையிலேயே தன்னைக் கருதிக் கொள்வான்.(44) மடமையினால் வழிநடத்தப்படும் நீ தற்போதைய உன் அரச செழிப்பை உனதாகக் கருதுகிறாய். எனினும், அஃது உன்னிலோ, என்னிலோ, பிறரிடத்திலோ ஒருபோதும் நிலையானதாக இருக்காது என்பதை அறிவாயாக.(45)

அஃது உனக்கு முன்பு எண்ணற்றவர்களுக்குச் சொந்தமானதாக இருந்திருக்கிறது. அவர்களைக் கடந்து வந்த அஃது இப்போது உனதாகியிருக்கிறது. ஓ! வாசவா, அஃது உன்னிடம் சில காலம் இருந்த பிறகு தனது நிலையில்லாமையை உறுதிசெய்யும். பசுவானது, {நீரருந்த} மற்றொரு தாழியை அடைவதற்காகத் தன் தாழியைக் கைவிடுவதைப் போலவே அதுவும் வேறொருவனுக்காக உன்னை நிச்சயம் கைவிடும்.(46) உனக்கு முன்பே சென்றுவிட்ட அரசுகளின் பட்டியலை நான் சொல்லத் துணியேன். ஓ! புரந்தரா, எதிர்காலத்திலும் உனக்குப் பிறகு எண்ணற்ற அரசுகள் எழும்.(47) மரங்கள், செடிகள், ரத்தினங்கள், வாழும் உயிரினங்கள், நீர்நிலைகள், சுரங்கங்கள் ஆகியவற்றுடன் கூடிய இந்தப் பூமியை முன்பு ஆண்ட அந்த ஆட்சியாளர்களை நான் இப்போது காணவில்லை.(48) பிருது, ஐலன், மயன், பீமன், நரகன், சம்பரன், அஸ்வக்ரீவன், புலோமன், அளவற்ற உயரத்துடன் கூடிய கொடிமரத்தைக் கொண்டிருந்த ஸ்வர்ப்பானு, பிரஹ்லாதன், நமுசி, தக்ஷன், விப்ரசித்தி, விரோசனன், ஹ்ரீநிஷேவன், ஸுஹோத்ரன், பூரிஹன், புஷ்பவான், விருஷன்,(49,50) ஸத்யேஷு, விருஷபன், பாஹு, கபிலாஸ்வன், விரூபகன், பாணன், கார்த்தஸ்வரன், வஹ்நி, விஸ்வதம்ஷ்ட்ரன், நைரிதி {நைருருதி},(51) ஸங்கோசன், வரீதாக்ஷன், வராஹன், அஸ்வன், ருசிப்ரபன், விஸ்வஜித், பிரதிரூபன், விருஷாண்டன், விஷ்கரன், மது,(52) ஹிரண்யகசிபு, தானவன் கைடபன், மேலும் தைத்தியர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்களாக இருந்த பலரும்,(53) இவர்களுடன் சேர்த்து நெடுகிலும் நெடுங்காலத்திற்கு முன்பிருந்த பெயர் குறிப்பிடப்படாத இன்னும் பலரும், நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கும் பெயர்களைக் கொண்ட பெரும் தைத்தியர்களும்,(54) தானவர்களில் முதன்மையானோரும் இந்தப் பூமியைவிட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரும் காலத்தாலேயே பீடிக்கப்பட்டனர். காலம் அவர்கள் அனைவரையும் விடத் தானே பலமிக்கது என்பதை உறுதி செய்தது.(55)

அவர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான வேள்விகளில் படைப்பாளனை வழிப்பட்டிருக்கின்றனர். நீ மட்டுமே இவ்வாறு செய்தவன் கிடையாது. அறப்பற்றுடன் கூடிய அவர்கள் அனைவரும் எப்போதும் பெரும் வேள்விகளைச் செய்பவர்களாக இருந்தனர்.(56) அவர்கள் அனைவரும் வானத்தில் உலாவ வல்லவர்களாகவும், போர்க்களத்தில் புறமுதுகிடாதவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் மிகப் பலத்த உடற்கட்டுகளைக் கொண்டவர்களாகவும், கனத்த தடிகளுக்கு ஒப்பான கரங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(57) அவர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான மாயைகளில் திறமிக்கவர்களாகவும், தாங்கள் விரும்பிய வடிவங்களை ஏற்க வல்லவர்களாகவும் இருந்தனர். எந்தப் போரில் அவர்கள் தோல்வியுற்றதாக நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.(58) அவர்கள் அனைவரும் வாய்மை நோன்பை உறுதியாக நோற்பவர்களாகவும், தாங்கள் விரும்பியபடி விளையாடுபவர்களாகவும் இருந்தனர். வேதங்கள் மற்றும் வேதச்சடங்குகளில் பற்றுதலுடன் இருந்த அவர்கள் அனைவரும் பெரும் கல்வியைப் பெற்றவர்களாக இருந்தனர்.(59) பெரும் வலிமையைக் கொண்டிருந்த அவர்கள் அனைவரும் உயர்ந்த செழிப்பையும், செல்வாக்கையும் பெற்றிருந்தனர். ஆனால் அந்த உயர் ஆன்ம அரசர்களில் எவரும், தங்கள் அரசுரிமையின் விளைவால் சிறு அளவிலான செருக்கையும் கொண்டிருக்கவில்லை.(60)

அவர்கள் அனைவரும் ஈகையாளர்களாகவும், தகுந்தர்களுக்குத் தகுந்ததைக் கொடுப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் அனைத்து உயிரினங்களிடத்திலும் முறையாகவும், சரியாகவும் நடந்து கொண்டனர்.(61) அவர்கள் அனைவரும் தக்ஷன் மகள்களின் வாரிசுகளாக இருந்தனர். பெரும் பலம் கொண்ட அவர்கள் அனைவரும் படைப்பின் தலைவர்களாக இருந்தனர். தங்கள் சக்தியால் அனைத்தையும் எரித்த அவர்கள் அனைவரும், சுடர்மிக்கக் காந்தியைக் கொண்டவர்களாக இருந்தனர். இருப்பினும் அவர்கள் அனைவரும் காலத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்.(62) ஓ! சக்ரா, உன்னைப் பொறுத்தவரையில், பூமியை அனுபவித்த பிறகு அவளை விட்டகலும்போது உன்னால் உன் துயரைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.(63) பற்று மற்றும் இன்பத்திற்குரிய பொருட்களில் நீ வளர்த்துவரும் ஆசையைக் கைவிடுவாயாக. செழிப்பில் இருந்து பிறக்கும் இந்தச் செருக்கைக் கைவிடுவாயாக. நீ இவ்வகையில் நடந்து கொண்டால், அரசிழப்பு அளிக்கும் துயரை உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.(64) துயர்மிக்க நேரம் வரும்போது, துன்பத்திற்கு வசப்படாதே. அதேபோல இன்பமிக்க நேரம் வரும்போது திளைத்துப் போகாதே. கடந்தகாலம், எதிர்காலம் ஆகிய இரண்டையும் அலட்சியம் செய்து, நிகழ்காலத்தில் நிறைவுடன் வாழ்வாயாக.(65)

ஒருபோதும் உறங்காத காலம், கடமைகளில் எப்போதும் கவனத்துடன் இருந்த என்னிடமே வந்த அதே காலம், ஓ! இந்திரா, உன்னையும் மிகவிரைவில் அடையும் என்பதால் அமைதி வழிகளில் உன் இதயத்தைத் திருப்புவாயாக.(66) நீ உன் வார்த்தைகளால் என்னைத் துளைக்கிறாய், மேலும், என்னுள் நீ நடுக்கத்தை விதைப்பதாகவும் தெரிகிறது. உண்மையில், அடங்கி இருக்கும் என்னைக் கண்டு உன்னை நீயே உயர்வாகக் கருதிக் கொள்கிறாய்.(67) காலமே என்னை முதலில் தாக்கிற்று. அஃது இப்போது உன்னருகில்தான் இருக்கிறது. நான் முதலில் காலத்தாலேயே வெல்லப்பட்டேன். அதன்காரணமாகவே பிறகு நீ என்னை வென்றாய். அதனால் இவ்வாறு செருக்குடன் முழங்குகிறாய்.(68) முந்தைய காலத்தில், நான் கோபப்பட்டால், என்னெதிரே நின்று போரிட பூமியில் எவன் இருந்தான்? எனினும், காலம் வலிமையானது. அவனே {காலமே} என்னை மூழ்கடித்தான். ஓ! வாசவா, இதன்காரணமாகவே உன்னால் என் முன்னிலையில் நிற்க முடிகிறது. உன் ஆளுகையின் அளவான ஆயிரமும் (ஆயிரம் தெய்வீக வருடங்களும்) நிச்சயம் ஒரு முடிவுக்கு வரும்.(69) வலிமையும், சக்தியும் கொண்டவனாக இருந்தாலும், நான் இப்போது துயர்மிக்க நிலையில் இருப்பதைப் போலவே நீயும் வீழ்வாய், உன் அங்கங்களும் துயருறும். மூவுலகங்களின் ஆட்சிக்கட்டிலை ஆக்கிரமித்திருந்த உயர்ந்த இடத்தில் இருந்து நான் வீழ்ந்துவிட்டேன். நீயே இப்போது சொர்க்கத்தின் உண்மையான இந்திரனாக இருக்கிறாய்.(70)

காலப்போக்கின் விளைவால் உயிரினங்களின் இந்த இனிய உலகில் உலகளாவிய புகழுக்கான பொருளாக நீ இப்போது இருக்கிறாய். என்ன செய்ததன் மூலம் நீ இன்று இந்திரனானாய் என்பதை உன்னால் சொல்ல முடியுமா? யாம் என்ன செய்ததனால் எமது நிலையில் இருந்து வீழ்ந்தோம் என்பதையும் சொல்ல முடியுமா?(71) காலன் ஒருவனே படைப்பாளனாகவும், அழிப்பவனாகவும் இருக்கிறான். (இவ்வண்டத்தில் எந்த விளைவையும் உண்டாக்க) வேறேதும் காரணமில்லை. சரிவு, வீழ்ச்சி, அரசு, இன்பம், துன்பம், பிறப்பு இறப்பு ஆகிய இவற்றில்(72) எதனையும் எதிர்கொள்ளும் கல்விமான் திளைப்பதோ, துயரில் ஈடுபடுவதோ இல்லை. ஓ! இந்திரா, நீ எமை அறிவாய். ஓ! வாசவா, நாமும் உன்னை அறிவோம்.(73) ஓ! வெட்கங்கெட்டவனே, நீ என்னவாக இருக்கிறாயோ அதைக் காலமே தந்தது என்பதை மறந்து நீ ஏன் என் முன்னிலையில் இவ்வாறு தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய்? அந்தக் காலங்களில் என் ஆற்றல் யாது என்பதை நீ கண்டிருக்கிறாய்.(74) நான் செய்த போர்கள் அனைத்திலும் நான் வெளிப்படித்திய சக்தியும் வலிமையும் போதுமான சான்றுகளை அளிப்பனவாகும். ஓ! சச்சியின் தலைவா, ஆதித்யர்கள், ருத்திரர்கள், சாத்யஸ்கள், வசுக்கள்,(75) மருத்துக்கள் ஆகியோர் அனைவரும் என்னால் வெல்லப்பட்டனர். ஓ! சக்ரா, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த பெரும்மோதலில்,(76) என் தாக்குதலின் மூர்க்கத்தால் தேவர்கள் விரைவாக முறியடிக்கப்பட்டனர் என்பதை நீயே நன்கறிவாய். காடுகள் மற்றும் அந்தக் காடுகளில் வசிப்பவர்களுடன் கூடிய மலைகள், எம்மால் மீண்டும் மீண்டும் சுழற்றி வீசப்பட்டன.(77) நான் உன் தலையில் உடைத்தவையும், செங்குத்தான முனைகளைக் கொண்டவையுமான மலைமுகடுகள் பலவாகும். எனினும், என்னால் இப்போது என்ன செய்ய முடியும்? காலம் தடுக்கப்பட முடியாததாகும்.(78)

இஃது இவ்வாறில்லையென்றால், வஜ்ரதாரியாக இருக்கும் உன்னை என் புறங்கையின் ஒரே குத்தில் வீழ்த்திக் கொல்லத் துணிந்திருக்க மாட்டேன் என்று நினைக்காதே. எனினும், தற்போது என் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான நேரம் இல்லை. இப்போது நான் அமைதியைப் பின்பற்றவும், அனைத்தையும் பொறுத்துக் கொள்வதற்குமான நேரமே வந்திருக்கிறது. ஓ! சக்ரா, இந்தக் காரணத்தினாலேயே நான் உன் அவமானம் அனைத்தையும் தாங்கிக் கொள்கிறேன். எனினும், நான் உன்னைவிடவும் ஆணவத்தைத் தாங்கிக் கொள்ள இயலாதவன் என்பதை அறிவாயாக.(79) காலத்தின் கட்டுகளால் பலமாகக் கட்டப்பட்டவனும், காலமெனும் நெருப்பால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனும், காலம் கனிந்தவனுமான ஒருவன் முன்பு நீ தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய்.(80) உலகத்தால் தாங்கிக் கொள்ள இயலாதவனான கரியவன் அதோ நிற்கிறான். இழிந்த விலங்கைப் போல என்னைக் கயிறுகளால் கட்டி கடும் வடிவத்துடன் அங்கே நிற்கிறான்.(81) ஈட்டல், இழத்தல், இன்பம், துன்பம், காமம், கோபம், பிறப்பு, இறப்பு, சிறைபடுதல், விடுதலையடைதல் ஆகிய இவை அனைத்தையும் ஒருவன் காலத்தின் போக்கில் சந்திக்கவே வேண்டும்.(82) நான் செயல்படுபவனல்ல. நீயும் செயல்படுபவனல்ல. உண்மையில் அனைத்தையும் அறிந்தவனே செயல்படுபவனாவான். மரத்தில் தோன்றிய ஒரு கனியைப் போல இப்போது (என்னை வீழ்த்துவதற்காகக்) காலம் என்னைக் கனியச் செய்கிறது.(83)

காலத்தின் போக்கில் ஒரு மனிதன் இன்பத்தை அடைவதற்குச் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட செயல்கள் இருக்கின்றன. அதே செயல்களைக் காலப்போக்கில் மற்றொருவன் செய்வதன் மூலம் அவன் துன்பத்தையே அடைகிறான்.(84) காலத்தின் அறங்களை {காலத் தர்மங்களை} அறிந்த நான் காலத்தால் தாக்கப்படும்போது துயருறக் கூடாது. ஓ! சக்ரா, இதன்காரணமாகவே நான் வருந்தாமல் இருக்கிறேன். துயரத்தால் நமக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது. துயரில் ஈடுபட்டு ஒருவன் அடையும் வருத்தத்தால் அவனைத் துன்பத்தில் இருந்து ஒருபோதும் காக்க முடியாது. மறுபுறம், துயரம் ஒருவனுடைய சக்தியை அழிக்கிறது. இதன்காரணமாகவே நான் துயரில் ஈடுபடவில்லை” என்றான் {பலி}”.(85,86)

இவ்வாறு தைத்தியர்களின் தலைவனால் {பலியால்} சொல்லப்பட்டவனும், பலமிக்கவனும், ஆயிரங்கண் கொண்டவனும், பாகனைத் தண்டித்தவனுமான நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(87)

சக்ரன் {இந்திரன் பலியிடம்}, “வஜ்ரந்தரித்தபடி உயர்த்தப்பட்டிருக்கும் எனக் கரங்களையும், வருணனின் பாசக்கயிறுகளையும் கண்டு, அனைத்து உயிரினங்களுக்கும் அழிவைத் தரும் யமன் உட்பட எவனுடைய புத்தி கலக்கமடையாதிருக்கும்?(88) எனினும், மிக உறுதியானதும், உண்மைப் பார்வைகளைக் கொண்டதுமான உனது புத்தி கலக்கமடையாதிருக்கிறது. ஓ! வெல்லப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே, உன் மனோவுறுதியின் விளைவாலேயே நீ இன்று கலக்கமடையாதிருக்கிறாய்.(89) இந்த அண்டத்தில் உள்ள பொருட்கள் யாவும் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டும், உடல்படைத்த எவன்தான், தனது உடலின் மீதோ, தன் ஆசைக்குரிய அனைத்துப் பொருட்களின் மீதோ நம்பிக்கையை வைக்கத் துணிவான்?(90) பார்வையில் இருந்து மறைக்கப்பட்டிருந்தாலும், பயங்கரமானதாக இருக்கும் காலநெருப்பினுள் வீசப்பட்டதும், தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதும், உண்மையில் முடிவில்லாததுமான இந்த அண்டம் நிலையில்லாதது என்பதை உன்னைப் போலவே நானும் அறிவேன்.(91) இங்கே ஒவ்வொருவனும் காலத்தால் தாக்கப்படுகிறான். உயிரினங்களில் நுட்பமானவையோ, திரளானவையோ காலத்தின் ஆட்சியில் எந்த எதிர்ப்புணர்வையும் கொள்வதில்லை. அனைத்துப் பொருட்களும் காலத்தின் கொப்பரையில் {கொதிகலனில்} சமைக்கப்படுகின்றன.(92) காலத்திற்குத் தலைவன் எவனும் இல்லை. காலம் எப்போதும் கவனத்துடன் இருக்கிறது. காலம் எப்போதும் தன்னுள் அனைத்துப் பொருட்களையும் சமைத்துக் கொண்டிருக்கிறது. நிற்காமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் காலத்தின் ஆளுகைக்குள் நுழைந்த எவனும், அங்கிருந்து தப்பியதில்லை.(93)

உடல்படைத்த அனைத்தும் கவனமில்லாமல் இருக்கலாம், ஆனால் காலமானது எப்போதும் கவனமாகவும் விழித்தநிலையிலும் அவைகளுக்குப் பின்னால் இருக்கிறது. எவனும் தன்னில் இருந்து காலத்தை விரட்டிவிட்டதாகக் காணப்படுவில்லை.(94) பழமையானதும், நித்தியமானதும், நீதியின் உடல்வடிவமுமான காலமானது அனைத்து உயிரினங்களிலும் சீராகவே இருக்கிறது. காலம் தவிர்க்கப்பட முடியாததாகும், அதன் போக்கும் பின்னோக்கிச் செல்வதில்லை.(95) ஈட்டிக்காரன் {வட்டிக்குக் கடன் கொடுப்பவன்} தன் வட்டியைக் கூட்டிக் கொள்வதைப் போலவே காலமும், கலைகள், லவங்கள், காஷ்டைகள், க்ஷணங்கள், மாதங்கள், பகல்கள் மற்றும் இரவுகள் எனத் தன் நுண்ணியப் பகுதிகளைச் சேர்த்துக் கொள்கிறது.(96) மரங்களின் வேர்களை அடையும் ஓர் ஆற்றின் நீரோட்டம் அம்மரத்தையே அடித்துச் செல்வதைப் போலவே, காலமானது, “இன்று இதைச் செய்வேன், இந்த மற்றொரு செயலை நாளை செய்வேன்” என்று சொல்லிக் கொள்ளும் ஒருவனை அடித்துச் செல்கிறது.(97) “சற்றுமுன்தான் அவனைப் பார்த்தேன். அதற்குள் எவ்வாறு அவன் இறந்தான்?” என்று கேட்பவர்களையும் காலம் அடித்துச் செல்கிறது.(98)

செல்வம், வசதிகள் {போகங்கள்}, பதவி, செழிப்பு ஆகிய அனைத்தும் காலத்திற்கு இரையாகின்றன. ஒவ்வொரு உயிரினத்தையும் அணுகும் காலம் அதன் உயிரைப் பறித்துச் செல்கிறது. செருக்குடன் தங்கள் தலைகளை உயர்த்தும் அனைத்தும் வீழவே விதிக்கப்பட்டிருக்கின்றன.(99) எது இருப்பில் இருக்கிறதோ, அஃது இல்லாமையின் மற்றொரு வடிவம் மட்டுமே ஆகும். அனைத்தும் நிலையற்றவையாகவும், உறுதியற்றவையாகவுமே இருக்கின்றன. எனினும் அத்தகைய தீர்மானத்தை அடைவது மிக அரிதான காரியமாகும்.(100) இவ்வளவு உறுதியுடனும், உண்மைப் பார்வையுடனும் கூடிய உனது புத்தி கலக்கமடையாமல் இருக்கிறது. சிலகாலத்திற்கு முன்பு நீ எவ்வாறு இருந்தாய் என்பதை நீ மனத்தால் உணரவில்லை.(101) பலமிக்கக் காலமானது, அண்டத்தைத் தாக்கி, அதைத் தன்னுள்ளேயே சமைத்து வயதின் முதுமையையோ, இளமையையோ கருதிப்பாராமல் அனைத்தையும் அடித்துச் செல்கிறது. இவ்வளவுக்கும், காலத்தால் இழுத்துச் செல்லப்படும் ஒருவன், தன் கழுத்தில் வீசப்பட்டிருக்கும் சுருக்கை {பாசக்கயிற்றை} அறியாதவனாகவே இருக்கிறான்.(102) பொறாமை, பகட்டு, பேராசை, காமம், கோபம், அச்சம், ஆசை, கவனமின்மை, செருக்கு ஆகியவற்றில் பற்றுடன் இருக்கும் மக்களே கலக்கமடைகிறார்கள்.(103)

எனினும், நீ இருப்பின் உண்மையை அறிந்தவனாக இருக்கிறாய். கல்வியைப் பெற்றிருக்கும் நீ, ஞானமும், தவமும் கொண்டவனாக இருக்கிறாய். உள்ளங்கையில் இருக்கும் ஒரு நெல்லிக்கனியைக் காண்பதைப் போலக் காலத்தை நீ தெளிவாகக் காண்கிறாய்.(104) ஓ! விரோசனன் மகனே {பலியே}, நீ காலவொழுக்கம் குறித்து முழுமையாக அறிந்தவனாக இருக்கிறாய். அனைத்து வகை ஞானங்களையும் நன்கறிந்திருக்கிறாய். தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட நீ, உன் ஆசைகளுக்கு முற்றான தலைவனாகவும் இருக்கிறாய். இதன் காரணமாக நீ ஞானியர் அனைவரின் பற்றுக்குரியவனாகவும் இருக்கிறாய்.(105) நீ உன் புத்தியைக் கொண்டு மொத்த அண்டத்தையும் முழுமையாக உணர்ந்திருக்கிறாய். அனைத்து வகை இன்பங்களை அனுபவித்தவனாக இருப்பினும், எதிலும் பற்று கொள்ளாதவனாக இருப்பதால் நீ எதனாலும் கறைபடிந்தவனாக இல்லை.(106) நீ உன் புலன்களை வென்றிருப்பதால், ஆசை மற்றும் இருள் {ரஜஸ் மற்றும் தமஸ்} குணங்கள் உன்னைக் களங்கப்படுத்தவில்லை. இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டும் அற்ற உன் ஆன்மாவுக்கு மட்டுமே நீ பணிவிடை செய்கிறாய்.(107) பகையில்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருந்து, அமைதியில் உன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கும் உன்னை இவ்வாறாகக் காண்பதன் மூலம் என் இதயம் உன்னிடம் கருணை கொள்கிறது.(108)

ஞானமடைந்த உன்னைப் போன்ற ஒருவனைச் சங்கிலியால் பிணைத்துச் சிறையில் அடைத்துத் துன்புறுத்த நான் விரும்பவில்லை. தீங்கிழையாமை {அஹிம்சையே} உயர்ந்த அறமாகும். நான் உன்னிடம் இரக்கம் கொள்கிறேன்.(109) உன்னைக் கட்டியிருக்கும் இந்த வருண பாசங்கள், காலப்போக்கில் ஏற்படும் மனிதர்களின் ஒழுக்கக்கேட்டின் விளைவால் தளர்வடையும். ஓ! பேரசுரா, நீ அருளப்பட்டிருப்பாயாக.(110) எப்போது ஒரு மருமகள், முதிர்ந்த மாமியாரை வேலைவாங்குவாளோ, எப்போது ஒரு மகன் எண்ண மயக்கத்தால் தனது தந்தையை வேலை வாங்குவானோ,(111) எப்போது சூத்திரர்கள் தங்கள் கால்களைப் பிராமணர்களைக் கொண்டு கழுவிக் கொள்கிறார்களோ, எப்போது அவர்கள் {சூத்திரர்கள்} மறுபிறப்பாள வகைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுடன் அச்சமில்லாமல் கலவியில் ஈடுபடுவார்களோ,(112) எப்போது மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டிய கருவறைகளில் தங்கள் உயிர் நீரை வெளியிடுவார்களோ, எப்போது வீட்டின் கழிவுகள் வெங்கலப் பாத்திரங்கள் மற்றும் தட்டுகளில் தாங்கப்படுமோ, எப்போது தேவர்களுக்காகப் படைக்கப்பட்ட வேள்விக் காணிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டிய பாத்திரங்களில் ஏந்தப்படுமோ,(113) எப்போது நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நால்வகையினரும் மீறுவார்களோ, அப்போது உன்னைக் கட்டியிருக்கும் பாசங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தளர்வடையும்.(114) எம்மிடம் உனக்கு அச்சமேதும் வேண்டியதில்லை. அமைதியாகக் காத்திருப்பாயாக. மகிழ்ச்சியாயிருப்பாயாக. கவலைகள் அனைத்தையும் விடுவாயாக. உன் இதயம் உற்சாகம் நிறைந்ததாக இருக்கட்டும். உடல்நலக் குறைவேதும் உனதாகாதிருக்கட்டும்” என்றான் {இந்திரன்}.(115)

யானைகளின் இளவரசனை {ஐராவதத்தைத்} தன் வாகனமாகக் கொண்ட அந்தத் தெய்வீக இந்திரன், இந்த வார்த்தைகளை அவனிடம் {பலியிடம்} சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றான். அசுரர்கள் அனைவரையும் வென்று மகிழ்ச்சியில் திளைத்த தேவர்களின் தலைவன், உலகங்கள் அனைத்தின் ஒரே தலைவனானான்.(116) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களின் தலைவனான அவனைத் துதித்துப் பெரும் முனிவர்கள் பாடினார்கள். நெருப்பின் தேவன் {அக்னி}, காணத்தக்க தன் வடிவத்தில் (அனைவராலும்) ஊற்றப்படும் தெளிந்த நெய்யை மீண்டும் சுமக்கத்தொடங்கினான். மேலும் அந்தப் பெருந்தேவன் {இந்திரன்} தன் கவனிப்பில் விடப்பட்டிருந்த அமுதத்தைக் காக்கும் பொறுப்பையும் எடுத்துக் கொண்டான்.(117) வேள்விகளில் ஈடுபடும் முதன்மையான பிராமணர்களால் புகழ்ந்து பாடப்பட்ட தலைவன் இந்திரன், சுடர்மிக்கக் காந்தியுடன் தன் கோபம் தணிக்கப்பட்டு, தன் இதயம் அமைதியடைந்து, சொர்க்கத்திலுள்ள தன் வசிப்பிடத்திற்கு மகிழ்ச்சியுடன் சென்று பேரின்பத்துடன் தன் நாட்களைக் கடத்தத் தொடங்கினான்” என்றார் {பீஷ்மர்}.(118)

செழிப்பு மற்றும் வறுமைக்கான அறிகுறிகள்! – சாந்திபர்வம் பகுதி – 228-லக்ஷ்மிதேவி அசுரர்களை விட்டு விலகிய காரணத்தை இந்திரனுக்குச் சொன்னது; செழிப்பு மற்றும் வறுமையின் அறிகுறிகள்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஒரு மனிதனைப் பொறுத்தவரையில் எதிர்கால மேன்மை மற்றும் எதிர்கால வீழ்ச்சிக்கான அறிகுறிகளை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நீ அருளப்பட்டிருப்பாயாக, ஒருவனுடைய எதிர்காலச் செழிப்பு மற்றும் எதிர்கால வீழ்ச்சிக்கான முற்குறிகளை அவனது மனமே குறிப்பிடும்.(2) இது தொடர்பாக ஸ்ரீக்கும், சக்ரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(3) பிரம்மாவைப் போன்றே அளவிலா பிரகாசத்துடன் கூடிய சக்தியைக் கொண்டவரும், தன் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டவரும், தன் தவச் செழிப்பின் மூலம் இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டையும் உடனே காணவல்லவரும், படைப்பாளனின் உலகத்தில் வசிக்கும் தெய்வீக முனிவர்களுக்கு இணையானவருமான பெருந்தவசி நாரதர், மூவுலகங்களிலும் தன் விருப்பப்படி உலவிக் கொண்டிருந்தார்.(4,5) ஒரு நாள் அதிகாலையில் விழித்தெழுந்த அவர், தூய்மைக்கான சடங்குகளைச் செய்ய விரும்பி, துருவம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட கணவாயின் {துவாரத்தின்} வழியே வெளிவந்த கங்கையாற்றுக்கு அந்நோக்கத்துடனே சென்று அந்த ஓடையில் மூழ்கினார்[1].(6)

ஆயிரம் கண்களைக் கொண்டவனும், வஜ்ரந்தரித்தவனும், சம்பரன் மற்றும் பாகனைக் கொன்றவனுமான இந்திரன், நாரதர் இருந்த அதே கரைக்கு அந்த நேரத்தில் வந்தான்.(7) ஆன்மாக்களை முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த முனிவர் மற்றும் தேவன் ஆகிய அவர்கள் இருவரும், அமைதியாகத் தங்கள் ஜபங்களைச் செய்துவிட்டு ஒன்றாக அமர்ந்தனர்.(8) அவர்கள் அந்த நேரத்தில் ஜபிப்பதிலும், பெரும் தெய்வீக முனிவர்களால் சொல்லப்பட்ட பல நல்ல மற்றும் உயர்ந்த செயல்களைக் கொண்ட சிறந்த கதைகளைக் கேட்பதிலும் ஈடுபட்டனர். உண்மையில், அவர்கள் இருவரும் பழைய வரலாறு குறித்த இனிய உரையாடலில் இவ்வாறு ஈடுபட்டனர்.(9) அவ்வாறு அங்கே அமர்ந்திருந்தபோது, தங்கள் முன்னிலையில் ஆயிரங்கதிர்களைப் பொழிந்து கொண்டு உதிக்கும் சூரியனை அவர்கள் கண்டனர். அந்தக் கோளை முழுமையாகக் கண்ட அவர்கள் எழுந்து நின்று அவனது புகழ்பாடினார்கள்.(10)

சரியாக அதே நேரத்தில், அந்நாளில் உதிக்கும் நட்சத்திரத்திற்கு நேரெதிர் திசையில், சுடர்மிக்க நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் கூடியதும், அந்த நாளின் இரண்டாவது நட்சத்திரத்தைப் போலத் தெரிந்ததுமான ஏதோ ஓர் ஒளிப்பொருளை அவர்கள் கண்டனர். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்த ஒளிப்பொருள் படிப்படியாகத் தங்களை நோக்கி வருவதையும் அவர்கள் கண்டனர்.(11) கருடன் மற்றும் சூரியனால் அலங்கரிக்கப்பட்டிருந்த விஷ்ணுவில் அந்தப் பொருள், ஒப்பற்ற காந்தியுடன் சுடர்விட்டபடி, மூவுலகங்களுக்கு ஒளியூட்டிக் கொண்டிருப்பதைப் போலத் தெரிந்தது.(12) அவர்கள் கண்ட பொருளானவள், அபார அழகைக் கொண்ட அப்சரஸ்கள் பலருடன் கூடிய ஸ்ரீயைத் தவிர வேறு எவருமல்ல. உண்மையில், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் இருந்த அவள், தானே ஒரு பெரிய சூரிய வட்டிலைப் போலத் தெரிந்தாள்.(13) முழுமையான நட்சத்திரங்களைப் போலத்தெரிந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவள், முத்து மாலைகளுக்கு ஒப்பான மாலையை அணிந்திருந்தாள். இந்திரன், தாமரைகளுக்கு மத்தியில் தனது வசிப்பிடத்தைக் கொண்டிருந்த பத்மை என்றழைக்கப்படும் தேவியைக் கண்டான்.(14) தனது முதன்மையான தேரில் இருந்து இறங்கிய அந்த ஒப்பற்ற பெண்மணி, மூவுலகங்களின் தலைவன் மற்றும் தெய்வீக முனிவர் நாரதர் ஆகியோரை நோக்கி வரத் தொடங்கினாள்.(15) நாரதரால் பின்தொடரப்பட்ட மகவானும் {மகவத் / இந்திரனும்} அந்தப் பெண்மணியை நோக்கிச் சென்றான். அனைத்தையும் அறிந்தவனான அவன், கூப்பிய கரங்களுடன் அவளிடம் சென்று, விஞ்சமுடியாத மதிப்பு மற்றும் மனநேர்மையுடன் அவளை வழிபட்டான். துதிகள் முடிந்ததும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களின் தலைவனான அவன், அந்த ஸ்ரீயிடம் பின்வரும் வார்த்தைகளைப் பேசினான்.(16,17)

சக்ரன் {இந்திரன் ஸ்ரீயிடம்}, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே, நீ யார்? உண்மையில் என்ன காரியத்திற்காக இங்கே வந்திருக்கிறாய்? ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, ஓ! மங்கலமான பெண்ணே, எங்கிருந்து வருகிறாய்? எங்கே செல்லப் போகிறாய்?” என்று கேட்டான்.(18)

ஸ்ரீ, “மங்கல வித்துகள் நிறைந்த மூவுலங்களில் உள்ள அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் தங்கள் மொத்த இதயத்தைக் கொண்டும், என்னுடன் தொடர்பை ஏற்படுதிக் கொள்ள முனைகின்றன.(19) நான் தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீயும், அனைத்து உயிரினங்களின் செழிப்பின் நிமித்தமாகச் சூரியக் கதிர்களின் தீண்டலால் மலரும் தாமரையில் உதிப்பவளுமா பத்மையும் ஆவேன்.(20) ஓ! பலனைக் கொன்றவனே {இந்திரனே}, லக்ஷ்மி, பூதி, ஸ்ரீ என்று நான் அழைக்கப்படுகிறேன். நானே நம்பிக்கை {ஸ்ரத்தை}, நானே புத்தி {மேதை}, நானே செல்வாக்கு {ஸன்னதி}, நானே வெற்றி {விஜிதி}, நானே மாற்றமில்லாதவளுமாவேன் {ஸ்திதியுமாவேன்}.(21) நானே பொறுமை {தருதி}, நானே வெற்றி {ஸித்தி}, நானே செழிப்புமாவேன் {ஸம்பூதியுமாவேன்}. நானே ஸ்வாஹா, நானே ஸ்வதா, நானே மதிப்பு {ஸம்ஸ்துதி}, நானே விதி {நியதி}, நானே நினைவுமாவேன் {கிருதியுமாவேன்}.(22) நான் படைமுகப்பிலும், வெற்றிமிக்கக் கொடிமரங்களிலும், அறம்சார்ந்த அரசுகளிலும், அவற்றின் இல்லங்கள், நகரங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளிலும் வசிக்கிறேன்.(23) ஓ! பலனைக் கொன்றவனே, வெற்றியடைந்த பிறகு மூச்சை விடுபவர்களும் {சுவாசிப்பவர்களும்}, போர்க்களத்தில் இருந்து பின்வாங்காதவர்களுமான முதன்மையான மனிதர்களிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(24) அறப்பற்றில் உறுதியுடன் இருப்பவர்கள், பெரும் நுண்ணறிவைக் கொண்டவர்கள், பிரம்மத்தில் பற்றுடையவர்கள், பேச்சில் வாய்மை நிறைந்தவர்கள், பணிவுடையவர்கள், ஈகையாளர்கள் ஆகியோரிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(25) முன்பு என் மனநிலையானது, உண்மை மற்றும் புண்ணியத்தில் கட்டப்பட்டிருந்ததன் விளைவால், அசுரர்களிடம் வசித்து வந்தேன். எனினும், அசுரர்கள் முரணியல்களை ஏற்பதைக் கண்டதால் அவர்களை விட்டு வந்திருக்கும் நான் உன்னில் வசிக்க விரும்புகிறேன்” என்றாள்.(26)

சக்ரன், “ஓ! அழகிய முகம் கொண்டவளே, அசுரர்களின் எந்த நடத்தையால் நீ அவர்களிடம் வசித்தாய்? அவர்களிடம் எதைக் கண்டதால் நீ தைத்தியர்களையும், தானவர்களையும் கைவிட்டு இங்கே வந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.(27)

ஸ்ரீ, “தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், பொறுமையை இழக்காதவர்கள், சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் பாதையில் நடப்பதில் மகிழ்ச்சியடைபவர்கள் ஆகியோரிடம் நான் என்னை நிலையுறுதியுடன் இணைத்துக் கொள்வேன்.(28) சாத்திரக் கல்வி, வேதங்கள், வேதச் சடங்குகள், பித்ரு, தேவ, ஆசான், பெரியோர், விருந்தினர் வழிபாடுகள் ஆகியவற்றுக்காக ஈகையளிப்பதில் புகழ்பெற்றவர்களிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.(29) முந்தைய காலத்தில் தானவர்கள் தங்கள் வசிப்பிடங்களைத் தூய்மையாக வைப்பவர்களாக, தங்கள் பெண்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களாக, வேள்வி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவர்களாக, தங்கள் பெரியோருக்குப் பணிவிடை செய்பவர்களாக, தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர்களாக, பிராமணர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, பேச்சில் வாய்மை நிறைந்தவர்களாக இருந்தனர்.(30)

நம்பிக்கை நிறைந்தவர்களாக; கோபத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களாக; ஈகையறம் பயில்பவர்களாக; பிறரிடம் ஒருபோதும் பகை கொள்ளாதவர்களாக; நண்பர்கள், ஆலோசகர்கள், மனைவிகள் ஆகியோரைப் பராமரிப்பவர்களாக; ஒருபோதும் பொறாமை கொள்ளாதவர்களாக இருந்தனர்.(31) முந்தைய காலத்தில் அவர்கள் கோபத்தால் நிறைந்து ஒருபோதும் ஒருவரையொருவர் தாக்குபவர்களாக இல்லை. அவர்கள் அனைவரும் நிறைவுடையவர்களாகவும், பிற மக்களின் செழிப்பையும், செல்வாக்கையும் கண்டு துன்புறாதவர்களாகவும் இருந்தனர்.(32) அவர்கள் அனைவரும் அறப்பண்புடையவர்களாக, சிக்கனம் கொண்டவர்களாக, மதிப்பிற்குரிய நடத்தை கொண்டவர்களாக, கருணை கொண்டவர்களாக இருந்தனர். அருள், எளிய நடத்தை, நம்பிக்கையில் நிலையுறுதி ஆகியவற்றை அதிகம் கொண்டிருந்தனர், மேலும் அவர்கள் தங்கள் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.(33) அவர்கள் தங்கள் பணியாட்கள் மற்றும் ஆலோசகர்களை நிறைவுடன் வைத்திருந்தனர், மேலும் அவர்கள் நன்றியுடையவர்களாகவும், இனிய பேச்சைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஒவ்வொருவரின் நிலை {பதவி} மற்றும் மதிப்பிற்குத் தகுந்த பணிவிடைகளை அவர்கள் செய்து வந்தனர். அவர்கள் நாணம் கொண்டவர்களாக இருந்தனர். கடும் நோன்புகளை அவர்கள் நோற்றனர்.(34) புனிதமான ஒவ்வொரு நாளிகளும் அவர்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்தனர். அவர்கள் தங்கள் மேனியில் நறுமணப் பொருட்களையும், மங்கலமான களிம்புகளையும் முறையாகப் பூசிக் கொள்பவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் மேனியை நன்றாக அலங்கரித்துக் கொள்பவர்களாக இருந்தனர். உபவாசங்கள், தவங்களை நோற்பவர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக, வேத பாடல்களைப் பாடுபவர்களாக அவர்கள் இருந்தனர்.(35)

அவர்கள் உறங்கிக் கிடந்தபோது சூரியன் ஒருபோதும் உதித்ததில்லை. அவர்கள் ஒருபோதும் நிலவு உறங்கிய பிறகு {விடியற்காலையில்} உறங்கியதில்லை. அவர்கள் எப்போதும் {இரவில்} தயிர் மற்றும் சத்துமாவைத் தவிர்த்தனர்.(36) அவர்கள் ஒவ்வொரு காலையிலும் தெளிந்த நெய் மற்றும் பிற மங்கலப் பொருட்களைக் கண்டனர், புலன்களில் இருந்து விடுபட்டு வேதங்களை உரைத்து, பிராமணர்களுக்குக் கொடை அளித்து வழிபாடு செய்தனர்.(37) அவர்களது உரையாடல்கள் எப்போதும் அறம்சார்ந்தவையாக இருந்தன, அவர்கள் ஒருபோதும் கொடைகளை ஏற்றதில்லை. அவர்கள் எப்போதும் நடுஇறவிலேயே உறங்கச் சென்றனர், பகலில் ஒருபோதும் உறங்கியதில்லை.(38) துயரடைந்தோர், ஆதரவற்றோர், முதியோர், பலவீனர், நோய்வாய்ப்பட்டோர், பெண்கள் ஆகியோரிடம் கருணை காட்டுவதில் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியடைந்தனர், மேலும் தங்கள் உடைமைகளை அனைத்தையும் அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தும் இன்புற்றிருந்தனர்.(39) கலக்கமடைந்தோர், உற்சாகமிழந்தோர், கவலையடைந்தோர், அச்சமடைந்தோர், நோயால் பீடிக்கப்பட்டோர், பலவீனர், உடல் இளைத்தவர்கள், களவு கொடுத்தோர் மற்றும் துன்பத்திலிருப்போர் ஆகியோருக்கு அவர்கள் எப்போதும் ஆறுதலளித்து உறுதியடையச் செய்தனர்.(40)

அறவிதிகளைப் பின்பற்றிய அவர்கள் ஒருபோதும் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்ததில்லை. அவர்கள் (நிறைவேற்றத்தகுந்த) அனைத்தை வகைச் செயல்களைச் செய்யும் நல்ல மனநிலையில் ஆயத்தமாக இருந்தனர். அவர்கள் வயதில் முதிர்ந்தோர் மற்றும் பெரியோருக்கு எப்போதும் பணிவிடை செய்பவர்களாக இருந்தனர்.(41) அவர்கள் பித்ருக்கள், தேவர்கள், விருந்தினர்கள் ஆகியோரை முறையாக வழிபட்டு, இவர்களை நிறைவு செய்தபிறகு எஞ்சியவற்றையே ஒவ்வொரு நாளும் உண்டனர். அவர்கள் வாய்மை மற்றும் தங்களில் உறுதியான பற்றுடன் இருந்தனர்.(42) அவர்களில் எவரும் நல்ல உணவைத் தனியாக உண்ணவில்லை, பிறர் மனைவியரிடம் கலவியில் ஈடுபடவில்லை. தங்களிடம் கொண்டதைப் போலவே அவர்கள் பிற உயிரினங்களிடமும் கருணை கொண்டிருந்தனர்.(43) அவர்கள் ஒருபோதும் தங்கள் உயிர்வித்தை வெட்டவெளியிலோ, இழிந்த விலங்குகளிலோ, தவிர்க்கப்பட்ட கருவறைகளிலோ, புனிதமான நாட்களிலோ விட்டதில்லை {வெளியேற்றியதில்லை}.(44) அவர்கள் எப்போதும் கொடைகள், புத்திசாலித்தனம், எளிமை, நம்பிக்கைநிறைந்த முயற்சி, பணிவு, நட்பு, மன்னிக்கும் தன்மை ஆகியவற்றுக்காகப் புகழ்பெற்றவர்களாக இருந்தனர்.(45)

ஓ! பலமிக்கவனே {இந்திரனே}, வாய்மை, ஈகை, தவம், தூய்மை, கருணை, மென்மையான பேச்சுகள், நண்பர்களிடம் பகையில்லாமை ஆகிய இவை அனைத்தும் அவர்களிடம் இருந்தன.(46) குறைதூக்கம், எப்போதும் தாமதம் செய்தல், எரிச்சல், பொறாமை, முன்னறிதிறனின்மை, நிறைவின்மை, மனக்கவலை, பேராசை ஆகியவை ஒருபோதும் அவர்களைத் தாக்கியதில்லை.(47) இந்தப் பண்புகளுக்காகத் தானவர்கள் புகழ்பெற்றிருந்ததன் விளைவால் படைப்பின் தொடக்கமுதல், தொடர்ந்து பற்பல யுகங்களாக நான் அவர்களுடன் வசித்து வந்தேன்.(48) காலம் மாறியது, அந்த மாற்றம் தானவர்களின் பண்பிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அறமும், அறநெறியும் அவர்களைக் கைவிட்டுச் செல்வதையும், அவர்கள் காமம் மற்றும் கோபத்தின் வசப்படுவதையும் நான் கண்டேன்.(49) சாதனைகளில் தாழ்ந்தவர்களாக இருப்பினும்கூட, மேலான தகுதிகளைக் கொண்ட பெரியோரிடம் பகை வளர்க்கத் தொடங்கினர். மேலும் அறம் மற்றும் புண்ணியத்தைக் கொண்ட அந்தப் பெரியோர் சபைகளுக்கு மத்தியில் வைத்து முறையான காரியங்களைப் பேசும்போது அவர்களைக் கேலி பேசவும், அவர்களைப் பார்த்துச் சிரிக்கவும் தொடங்கினர்.(50)

வயதில் பெரியோர்கள் வரும்போது, இளையோர் வசதியாக அமர்ந்து கொண்டு, மரியாதையுடன் எழுந்திருந்து அவர்களை வணங்க மறுத்தனர்.(51) தந்தைமாரின முன்னிலையில் மகன்கள் (தந்தைக்கு மட்டுமே உரிய காரியங்களில்) ஆளுமையை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். கூலி பெறாதவர்களின் தொண்டுகளை ஏற்றுக் கொண்டு வெட்கமில்லாமல் அந்த உண்மையைச் சொல்பவர்களாக இருந்தனர்.(52) நீதியற்ற வகையில் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்து பெருஞ்செல்வத்தைத் திரட்டுவதில் வென்றவர்கள் உயர்வாக மதிக்கப்பட்டனர்[2].(53) இரவு நேரத்தில் உரக்கக் கூச்சலிட்டு, அலறுவதிலும், கதறுவதிலும் ஈடுபடத் தொடங்கினார்கள். அவர்களது ஹோம நெருப்புகள் மேல்நோக்கிய பிரகாசமான தழல்களை வெளியிடுவதை நிறுத்தின. மகன்கள் தந்தைமாரிடம் அதிகாரம் செலுத்த தொடங்கினர், மனைவியர் கணவர்களை அடக்கி ஆண்டனர்.(54) தாய்மார், தந்தைமார், வயதில் முதிர்ந்த பெரியோர், ஆசான்கள், விருந்தினர்கள், வழிகாட்டிகள் மேன்மையான நிலையில் இருந்து அதிகாரம் செய்வதை நிறுத்தினர். மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றுடன் வளர்ப்பதை நிறுத்தி அவர்களைக் கைவிடத் தொடங்கினர்.(55)பிச்சையளிக்க ஒரு பகுதியைக் கொடாமலும், தேவர்களுக்குக் காணிக்கையளிப்பதற்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியைக் கொடாமலும் அனைவரும் தங்களிடம் இருந்ததை மொத்தமாக உண்டனர். உண்மையில், வேள்விகளில் தங்கள் பொருட்களைத் தேவர்களுக்குக் கொடாமல், அவற்றைப் பித்ருக்கள், தேவர்கள், விருந்தினர்கள், மதிப்பிற்குரிய பெரியோர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் வெட்கமில்லாமல் தங்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே வைத்துக் கொண்டனர்.(56) அவர்களது சமையற்காரர்கள், மனம் செயல் மற்றும் சொல்லில் தூய்மையைக் கருத்தில் கொள்பவர்களாக இருக்கவில்லை. மூடப்படாமல் இருப்பவற்றையே அவர்கள் உண்டனர்.(57) அவர்களது தானியங்கள், காகங்களாலும், எலிகளாலும் பாழாகும்படி வயல்களில் திறந்த வெளியில் கிடந்தன. அவர்களது பால் திறந்தே கிடந்தது, உண்டபிறகு கை கழுவாமல் தெளிந்த நெய்யைத் தீண்டத் தொடங்கினர்[3].(58) அவர்களது மண்வெட்டி, சமையல் கத்தி, கூடைகள், பாத்திரங்கள், வெங்கலக் கிண்ணங்கள் மற்றும் பிற சமையலறை பொருட்கள் வீடுகளில் சிதறியிருக்கத் தொடங்கின.(59) அவர்களது இல்லத்தரசிகள் அவற்றைக் கவனிக்காமல் தவிர்ந்திருந்தனர். அவர்கள் வீடுகளையும், சுவர்களையும் மராமத்துச் செய்யாமல் இருந்தனர். விலங்குகளைக் கட்டி வைத்துவிட்டு அவற்றுக்கு உணவும் நீரும் கொடுக்காமல் இருந்தனர்[4].(60)உணவுக்காகக் காத்திருக்கும் குழந்தைகளைக் கருத்தில் கொள்ளாமல் அந்தத் தானவர்கள் தாங்களே உண்டு கொண்டிருந்தார்கள்.(61) அவர்கள் பாயசம், கிரிசரம், புலாலுணவு, காஷ்குளி {அப்பம்} ஆகியவற்றை (தேவர்களுக்காகவோ, விருந்தினர்களுக்காகவோ இல்லாமல்) தங்களுக்காகவே தயாரிக்கத் தொடங்கினர். வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சிகளையும் உண்ணத் தொடங்கினர்[5].(62) சூரியன் உதித்த பிறகும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் இரவுகளையே பகலாக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய வீட்டில் இரவும் பகலும் சண்டைகளும், சச்சரவுகளும் பெருகிக் கொண்டிருந்தன.(63) அவர்களில் மதிக்கத்தகாதோர், மதிக்கத்தகுந்தவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை மதிப்பளிக்காமல் இருந்தனர். தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழ்ந்த அவர்கள், அமைதியான வாழ்வை வாழவும், தெய்வீக தியானத்தில் இருக்கவும் காடுகளுக்குச் சென்றவர்களை மதிப்பதை நிறுத்தினர். அவர்களுக்கிடையில் வர்ணக்கலப்புச் சாதாரணமாக நடக்கத் தொடங்கியது. மேனி மற்றும் மனத்தூய்மை பராமரிப்பதை அவர்கள் நிறுத்தினர்.(64) வேதங்களைக் கற்ற பிராமணர்களுக்கு அவர்கள் மத்தியில் எந்த மரியாதையும் இல்லாமல் இருந்தது. ரிக்குகளை அறியாத பிராமணர்கள் கண்டிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை. {பிராமணர்களில்} மதிக்கத்தகுந்தோர், மதிக்கத்தகாதோர் ஆகிய இருவரும் சமமான வகையில் தாழ்வாகவே நடத்தப்பட்டனர்.(65)அவர்களது பணிப்பெண்கள் தீய நடத்தை கொண்டவர்களாகி, தங்க ஆபரணங்கள் மற்றும் சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டு, தங்கள் இல்லங்களில் இருந்தார்கள், அல்லது அவர்களது கண் முன்பாகவே செல்வார்கள்.(66) அவர்களில் பெண்கள் ஆண்களாகவும், ஆண்கள் பெண்களாகவும் உடை உடுத்தி விளையாடி பெரும் இன்பத்தை அடையத் தொடங்கினர்.(67) அவர்களது மூதாதையரில் செழிப்புடன் இருந்தவர்கள் தகுந்த மனிதர்களுக்குச் செல்வக்கொடை அளித்தார்கள். அந்தக் கொடையாளிகளின் வழித்தோன்றல்கள், தாங்கள் செழிப்பான நிலையில் இருந்தாலும் கூட, தாங்கள் கொண்ட நம்பிக்கையின்மையால் {நாத்திக நிலைப்பாட்டால்}, அந்தக் கொடைகளைத் திரும்பப்பெறத் தொடங்கினர்.(68) எந்தக் காரியத்தையும் நிறைவேற்றுவதில் சிரமம் இருக்கையில் ஒரு நண்பனிடம் இன்னொரு நண்பன் ஆலோசனை கேட்கும்போது, அக்காரியத்தை நிறுத்துவதால் எந்தப் பயனும் இல்லையென்றாலும் அதை நிறுத்தினர்.(69) அவர்களில் சிறந்தோரில் கூட அடுத்தவர் செல்வத்தை அபகரிக்கும் எண்ணம் கொண்ட வணிக்கர்களும், வியாபாரிகளும் தோன்றினர். அவர்களில் சூத்திரர்கள் தவப்பயிற்சி செய்யத் தொடங்கினர்.(70)

அவர்களில் சிலர், தங்கள் நேரத்தையும், உணவையும் ஒழுங்கு படுத்திக் கொள்ள விதிகளை அமைக்காமலேயே கல்வியைத் தொடங்கினர். வேறு சிலர் பயனற்ற விதிகளை அமைத்துக் கொண்டு கல்வியைத் தொடங்கினர். சீடர்கள் ஆசான்களுக்குக் கீழ்ப்படியாதவர்களாகத் தொண்டாற்றாதவர்களாக இருந்தனர். ஆசான்களும் தங்கள் சீடர்களை நட்புடன் கூடிய தோழர்களாக நடத்தத் தொடங்கினர்.(71) வேலையால் களைத்துப் போன தந்தைமாரும், தாய்மாரும் விழா கொண்டாட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தனர். முதிர்வயது கொண்ட பெற்றோர், தங்கள் மகன்களால் அதிகாரத்தை இழந்து, உணவுக்காகப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.(72) அவர்களில் வேதங்களை அறிந்தவர்களும், ஒழுக்க ஆழத்தில் கடலுக்கு ஒப்பானவர்களுமான ஞானியர் கூட உழவு மற்றும் அத்தகைய பிற தொழில்களில் ஈடுபடத் தொடங்கினர். கல்லாதவர்கள் அறியாமை கொண்டோருமான மனிதர்கள் சிராத்தங்களில் உணவு படைக்கப்பட்டனர்[6].(73) ஒவ்வொரு நாள் காலையிலும், சீடர்கள், கடமைகள் குறித்து விசாரிப்பதற்கும், செய்ய வேண்டிய செயல்களை உறுதிசெய்வதற்கும், ஆணைகளை வேண்டி ஏற்பதற்கும் ஆசான்களை அணுகுவதற்குப் பதிலாக, அவர்களே ஆசான்களின் பணிவிடைகளை ஏற்றார்கள்.(74) மருமகள்கள், தங்கள் கணவர்களின் தாய்மார் மற்றும் தந்தைமாரின் முன்னிலையே தங்கள் பணியாட்களையும், பணிப்பெண்களையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்து, தங்கள் கணவர்களை அழைத்துப் பேசி அவர்களையும் கண்டித்தனர்.(75)தந்தைமார், தங்கள் மகன்களைப் பெருங்கவனத்துடன் நல்ல மனநிலையில் வைத்துக் கொண்டோ, அச்சத்தால் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் செல்வத்தைப் பிரித்துக் கொடுத்தோ, துன்பம் மற்றும் துயரத்துடன் வாழ்ந்தனர்.(76) தீ, அல்லது கள்வர்கள், அல்லது மன்னனின் மூலம் செல்வத்தை இழந்தவர்களுடன் நட்பாயிருப்பவர்கள், அவர்களது இழப்பைக் கண்டு கேலியாகச் சிரிப்பதில் ஈடுபடத் தொடங்கினர்.(77) அவர்கள் நன்றிகெட்டவர்களாகவும், நாத்திகர்களாகவும், பாவிகளாகவும், ஆசான்களின் மனைவியருடன் கூட முறைகேடான கலவி புரியும் அடிமைகளாகவும் இருந்தார்கள். தடைசெய்யப்பட்ட உணவை உண்பவர்களானார்கள். நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் அவர்கள் மீறினார்கள். முன்பு அவர்களைத் தனித்துக் காட்டிய காந்தி இப்போது அவர்களிடம் இல்லாமல் போனது.(78) ஓ! தேவர்களின் தலைவா, இவற்றின் விளைவாலும், முந்தைய இயல்புக்கு முரணான பிற தீய ஒழுக்கங்களின் அறிகுறிகளினாலும், நான் இனியும் அவர்களுடன் வசிக்க மாட்டேன்.(79)

எனவே, நானே என் சொந்த விருப்பத்தின் பேரில் உன்னிடம் வந்துவிட்டேன். ஓ! சச்சியின் தலைவா, என்னை மதிப்புடன் ஏற்பாயாக. ஓ! தேவர்களின் தலைவா, உன்னால் கௌரவிக்கப்படும் நான் பிற தேவர்கள் அனைவரிடமும் கௌரவத்தை அடைவேன்.(80) நான் எங்கு வசிக்கிறேனோ, அங்கே என்னுடன் இணைபிரியாதவர்களாக இருப்பவர்களும், என்னையே சார்ந்திருப்பவர்களுமான ஜெயாவை எட்டாவதாகக் கொண்ட மற்ற ஏழு தேவிகளும் வாழ விரும்புவார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு {ஆசை}, நம்பிக்கை {ஸ்ரத்தை}, புத்தி {த்ருதி}, நிறைவு {க்ஷாந்தி}, வெற்றி {விஜிதி}, முன்னேற்றம் {ஸன்னதி}, மன்னிப்பு {க்ஷமை} ஆகியோராவர். ஓ பாகனைத் தண்டித்தவனே, அவர்களில் எட்டாவதாக இருக்கும் ஜெயா {விருத்தி} முதன்மையான இடத்தைப் பெறுவாள்.(82) அவர்கள் அனைவரும், நானும் அசுரர்களைக் கைவிட்டுவிட்டு உன் ஆட்சிப்பகுதிக்குள் வந்திருக்கிறோம். இனிமேல் நாங்கள், அறம் மற்றும் நம்பிக்கைக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்களான தேவர்களுக்கு மத்தியிலேயே வசிப்போம்” என்றாள் {ஸ்ரீ}”. (83)

அந்தத் தேவி இவ்வாறு சொன்ன பிறகு, அவளை மகிழ்ச்சியடையச் செய்வதற்காக தெய்வீக முனிவர் நாரதரும், விருத்திரனைக் கொன்றவனான வாசவனும் மகிழ்ச்சிமிக்க வரவேற்பை அவளுக்கு அளித்தனர்.(84) அப்போது அக்னியின் நண்பனான வாயு தேவன், இனிய நறுமணங்களைச் சுமந்தபடி மென்மையாகச் சொர்க்கத்தில் வீசி அனைத்து உயிரினங்களுக்கு உற்சாகத்தை அளித்து, புலன்கள் அனைத்திற்கும் இன்பத்தை அளித்தான்.(85) (இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட) தேவர்கள் அனைவரும் மகவத்தின் {இந்திரனின்} அருகில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மியைக் காணும் எதிர்பார்ப்பில் ஒரு தூய்மையான, இனிய இடத்தில் கூடி அங்கேயே காத்திருந்தனர்.(86) அப்போது, ஆயிரம் கண்களைக் கொண்டவனான தேவர்களின் தலைவன், தன்னுடன் ஸ்ரீயையும், தனது நண்பரான பெரும் முனிவரையும் அழைத்துக் கொண்டு, பச்சை குதிரைகளால் இழுக்கப்பட்ட அற்புதத் தேரைச் செலுத்திக் கொண்டு, அனைவரின் மதிப்பையும் ஏற்றபடியே தேவர்களின் சபைக்கு வந்தான்.(87) எவருடைய ஆற்றலை தேவர்கள் அனைவரும் அறிவார்களோ அந்தப் பெரும் முனிவர் நாரதர், ஸ்ரீயின் அங்கீகாரத்துடன் வஜ்ரதாரி செய்த சைகையைக் கண்டு, அங்கே அந்தத் தேவியின் வரவை வரவேற்று, அது மிக மங்கலமானது என்பதை அறிவித்தார்.(88) சொர்க்கத்தின் ஆகாயம் தெளிவானதாகவும், பிரகாசமானதாகவும் இருந்து, சுயம்புவான பெரும்பாட்டனின் உலகத்தில் அமுதத்தைப் பொழியத் தொடங்கியது. தெய்வீகத் துந்துபிகள் எவராலும் முழக்கப்படாமலே முழங்கத் தொடங்கின. அடிவானின் புள்ளிக்ள அனைத்தும் தெளிவடைந்து காந்தியில் சுடர்விடுனவாகத் தெரிந்தன.(89)

இந்திரன் உரிய காலங்களில் தோன்றி பயிர்களின் மேல் மழையைப் பொழிந்தான். அறப்பாதையில் இருந்து எவரும் வழுவவில்லை. பூமி பல சுரங்கங்களால் அலங்கரிக்கப்பட்டு, ரத்தினங்கள் மற்றும் தங்கத்தாலும், வேத ஒலிகள் மற்றும் இன்னும் பிற இனிய ஒலிகளாலும் நிறைந்து, தேவர்களின் வெற்றியால் பெருகிக் கொண்டிருந்தது.(90) உறுதியான மனங்களைக் கொண்டவர்களும், நல்லோரால் நடக்கப்படும் மங்கலப்பாதையைப் பின்பற்றுபவர்களுமான மனிதர்கள் அனைவரும், வேதங்கள், அறச்சடங்குகள் மற்றும் அறச்செயல்களில் இன்பங்கொள்ளத் தொடங்கினர். மனிதர்கள், தேவர்கள், கிண்ணரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும் செழிப்புடன் உற்சாகம் நிறைந்தவர்கள் ஆனார்கள்.(91) காற்று தேவன் ஒரு மரத்தைப் பலமாகக் குலுக்கினாலும் அகாலத்தில் எந்த மலரும் விழாது எனும்போது, கனிகளைக்குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது. பசுக்கள் அனைத்தும் மனிதர்களால் கறக்கப்படும்போது இனிமைமிக்கப் பாலைக் கொடுக்கத் தொடங்கின. கடும் மொழிகளும் கொடுமொழிகளையும் எவரும் சொல்லவில்லை.(92) முன்னேற விரும்புபவர்கள், பிராமணர்களின் சபையை அணுகி, அனைத்து விருப்புங்களையும் அருள வல்ல தேவர்கள் அனைவரின் தலைமையில் உள்ள இந்திரனையும், ஸ்ரீயையும் புகழும் இந்தக் கதையைப் படித்தால், பெருஞ்செழிப்பை வெல்வார்கள்.(93) ஓ! குருக்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இவையே செழிப்பு மற்றும் வறுமைக்கான முதன்மையான அறிகுறிகளாகும். உன்னால் தூண்டப்பட்ட நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன். இங்கே சொல்லப்பட்ட போதனைகளைக் கவனமாகச் சிந்தித்து அதன்படி உன்னை அமைத்துக் கொள்வதே உனக்குத் தகும்” என்றார் {பீஷ்மர்}.(94)

பிரம்மஞானியின் அறிகுறிகள்! – சாந்திபர்வம் பகுதி – 229-பிரம்ம ஞானிகளின் குறியீடுகளைப் பற்றித் தேவலருக்கும் ஜைகீஷவ்யருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எந்த மனநிலை, கடமைகளின் எந்த வழிமுறை, எந்த ஞானம், எந்தச் சக்தி ஆகியவற்றைக் கொண்டு ஒருவன், மாற்றமில்லாததும், தொடக்ககால இயற்கைக்கு {பிரகிருதிக்கு} எட்டாததுமான பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்?” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நிவிருத்தி எனும் அறமொழுகுவதில் ஈடுபடுபவனும், குறைவாக உண்பவனும், புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியவனுமான ஒருவனால், மாற்றமில்லாததும், தொடக்ககால இயற்கைக்கு மேலானதுமான பிரம்மத்தை அடையமுடியும்.(2) ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் ஜைகீஷவ்யருக்கும், அசிதருக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) ஒரு காலத்தில் பெரும் ஞானம் கொண்டவரும், கடமை மற்றும் அறநெறி குறித்த உண்மைகளை முழுமையாக அறிந்தவருமான ஜைகீஷவ்யரிடம் அசித தேவலர் பேசினார்.(4)

தேவலர் {ஜைகீஷவ்யரிடம்}, “புகழப்படும்போது நீர் மகிழ்ச்சியடைவதில்லை. பழிகூறப்படும்போதோ, நிந்திக்கப்படும்போதோ நீர் கோபவசப்படுவதில்லை. உண்மையில் உமது ஞானம்தான் என்ன? இஃதை எங்கிருந்து பெற்றீர்? உண்மையில் அந்த ஞானத்தின் புகலிடம் எது?” எனக் கேட்டார்”.(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு தேவலரால் கேட்கப்பட்டவரும், கடும் தவங்களை உடைய தூய்மையானவருமான ஜைகீஷவ்யர் நம்பிக்கை நிறைந்தவையும், ஆழமான கருத்தைக் கொண்டவையும், உயர்ந்த முக்கியத்துவம் கொண்டவையுமான வார்த்தைகளைச் சொன்னார்.(6)

ஜைகீஷவ்யர் {அசித தேவலரிடம்}, “ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அறச்செயல்களைச் செய்வோர் அனைவரின் மதிப்பீட்டில் எது உயர்ந்த கதியோ, எது உயர்ந்த லட்சியமோ, எது அமைதி நிலையோ அஃதை உமக்குச் சொல்லப் போகிறேன்.(7) ஓ! தேவலரே, புகழ்வோரிடமும், பழிப்போரிடமும் ஒன்றாகவே நடந்து கொள்பவர்களும், தங்கள் சொந்த நோன்புகள் மற்றும் நற்செயல்களை மறைப்பவர்களும்,(8) பதில்குற்றச்சாட்டுகளை வைப்பதில் ஒருபோதும் ஈடுபடாதவர்களும், நன்மையாக இருந்தாலும் (நன்மையை உண்டாக்குவதற்குப் பதில்) தீமையை உண்டாக்கும் என்று கணக்கிடப்படுபவற்றை ஒருபோதும் செய்யாதவர்களும், அடைந்த தீங்கிற்குப் பதில்தீங்கு செய்ய விரும்பாதவர்களுமான மனிதர்களே ஞானம் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்[1].(9) வரப்போவதை நினைத்து அவர்கள் ஒருபோதும் வருந்துவதில்லை. தங்கள் முன்னிலையில் இருப்பவற்றை மட்டும் கருத்தில் கொண்டு செய்ய வேண்டியதைச் செய்வார்கள். கடந்த காலத்தில் நடந்தவற்றுக்காக ஒருபோதும் அவர்கள் துயரில் ஈடுபட மாட்டார்கள், அல்லது அவற்றைத் தங்கள் மனங்களில் நினைத்தும் பார்க்க மாட்டார்கள்.(10)ஓ! தேவலரே, சக்தியையும், ஒழுங்குபடுத்தப்பட்ட மனங்களையும் கொண்ட அவர்கள், மரியாதையுடன் வேண்டிக் கொள்ளப்பட்டால், எது எவ்வழியில் செய்யப்பட வேண்டுமோ, அஃதை அவர் அனைத்துப் பொருட்களைப் பொறுத்தவரையில் எவை அவர்களுக்காகக் காத்திருக்குமோ அவற்றைத் தங்கள் விருப்பப்படியே செய்வார்கள்[2].(11) முதிர்ந்த அறிவு, பெரும் ஞானம், முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்ட கோபம் ஆகியவற்றுடன் ஆசைகளைத் தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருக்கும் அவர்கள் எவருக்கும் எண்ணத்திலோ, சொல்லிலோ, செயலிலோ தீங்கிழைப்பதில்லை.(12) பொறாமை அற்ற அவர்கள் எவருக்கும் தீங்கிழைக்கமாட்டார்கள். தற்கட்டுப்பாடு கொண்ட அவர்கள், அடுத்தவரின் செழிப்பைப் பார்த்து ஒருபோதும் துன்பப்பட மாட்டார்கள்.(13) அத்தகைய மனிதர்கள் மிகைப்படுத்திப் பேசுவதையோ, மற்றவர்களைத் துதிபாடுவதில் ஈடுபடுவதையோ, அவர்களைக் குறித்துத் தவறாகப் பேசுவதையோ ஒருபோதும் செய்ய மாட்டார்கள். தங்களைப் புகழ்பவர்களாலோ, பழிப்பவர்களாலோ அவர்கள் ஒருபோதும் பாதிப்படைவதில்லை.(14) அவர்கள் தங்கள் ஆசைகள் அனைத்தையும் பொறுத்தவரையில் அமைதியான மனநிலையில் இருந்து, அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதிலேயே ஈடுபடுவார்கள். அவர்கள் ஒருபோதும் கோப வசப்படுவதோ, மகிழ்ச்சிக்கூத்தாடுவதோ, எவ்வுயிருக்கும் தீங்கிழைப்பதோ கிடையாது.(15)அவர்கள், தங்கள் இதய முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்த்து மிக மகிழ்ச்சியாகக் கடந்து செல்வார்கள். அவர்களுக்கு நண்பர்கள் எவருமில்லை, அதே போல அவர்களும் பிறருக்கு நண்பராயிருப்பதில்லை.(16) அவர்களுக்கு எதிரிகள் எவரும் கிடையாது, அதே போல அவர்களும் பிற உயிரினங்களுக்கு எதிரிகளாக இருப்பதில்லை. உண்மையில், இவ்வழியில் வாழக்கூடிய மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே தங்கள் வாழ்வைக் கடத்துவார்கள்[3].(17) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அறம் மற்றும் அறநெறிகளின் விதிகளில் ஞானத்தை அடைவோரும், அவ்விதிகளை நடைமுறையில் பயில்வோரும் இன்பத்தை அடைவதில் வெல்வார்கள், அதே வேளையில் அறவழியில் இருந்து வீழ்ந்தவர்கள் துன்பங்கள் மற்றும் துயரங்களால் பீடிக்கப்படுவார்கள்.(18) நான் இப்போது அறவழியைப் பின்பற்றுகிறேன். பிறரால் இகழப்படுவதன் மூலம், அவர்களிடம் நான் ஏன் எரிச்சல் அடைய வேண்டும்? அல்லது பிறரால் புகழப்படுவதன் மூலம், அவர்களிடம் நான் ஏன் நிறைவு கொள்ள வேண்டும்?(19) மனிதர்கள் தாங்கள் ஈடுபடும் செயல்களில் இருந்து அவர்கள் விரும்பிய எந்தப் பொருளையும் அடையட்டும். (ஈட்டல் மற்றும் இழத்தலில் நான் வேறுபாடற்றவனாக இருக்கிறேன்). புகழும், இகழும் என் வளர்ச்சிக்கோ, குறைவிற்கோ பங்களிக்க இயலாதவையாக இருக்கின்றன[4].(20)பொருட்களின் உண்மைகளைப் புரிந்து கொண்டவன், அவமதிப்பையே கூட அமுதமாக எண்ணி நிறைவை அடைவான். அறிவுள்ள மனிதன், மதிப்பையே நஞ்சாக எண்ணி உண்மையில் எரிச்சலடைவான்.(21) இந்தக் களங்கங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவன் பிறரால் அவமதிக்கப்பட்டாலும் இம்மையிலும், மறுமையிலும் அச்சமில்லாமல் உறங்குவான். மறுபுறம், அவனை அவமதிப்பவனோ அழிவை அடைவான்.(22) எந்த ஞானியர் உயர்ந்த கதியை அடைய முனைவார்களோ அவர்கள் இத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றியே வெற்றியை அடைவார்கள்.(23) தன் புலன்கள் அனைத்தையும் வென்ற மனிதன், வேள்விகள் அனைத்தையும் செய்தவனாகக் கருதப்படுகிறான். அத்தகைய மனிதன், அழிவில்லாத்தும், தொடக்கக் கால இயற்கையும் {பிரகிருதியும்} எட்டமுடியாமல் விஞ்சி நிற்கும் உயர்ந்த ஏணியுமான பிரம்மத்தை அடைவான்.(24) தேவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள் ஆகியோராலும் கூட இந்த உயர்ந்த கதியை அடைந்தவனின் ஏணியை எட்ட முடியாது” என்றார் {ஜைகீஷவ்யர்}”.(25)

நாரதரின் பெருமை! – சாந்திபர்வம் பகுதி – 230-நற்குணங்களே உலகை வசப்படுத்தும் என்பதைச் சொல்ல நாரதரைக் குறித்து உக்ரசேனருக்கும், கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அனைவரின் அன்புக்குரியவனாக, அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துபவனாக, அனைத்துத் தகுதிகளையும் {புண்ணியங்களையும்}, அனைத்து சாதனைகளையும் கொண்டவனாக எவன் இருக்கிறான்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக முந்தைய சந்தர்ப்பம் ஒன்றில் உக்ரசேனனால் கேட்கப்பட்டுக் கேசவனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்ட வார்த்தைகளை இப்போது நான் சொல்லப் போகிறேன்.(2)

உக்ரசேனன் {கிருஷ்ணனிடம்}, “மனிதர்கள் அனைவரும் நாரதரின் தகுதிகளைக் குறித்துப் பேசுவதில் பேராவல் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அந்தத் தெய்வீக முனிவர் உண்மையில் அனைத்து வகைத் தகுதிகளையும் கொண்டவராக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஓ! கேசவா, இதைக் குறித்த யாவையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(3)

வாசுதேவன், “ஓ! குகுரர்களின் தலைவரே {உக்ரசேனரே}, ஓ! மன்னா, நான் அறிந்த வரையில் நாரதரின் நற்பண்புகளைக் குறித்துச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக. நாரதர் எந்த அளவுக்கு ஒழுக்கத்தில் நல்லவராகவும், பக்திமானாகவும் இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் சாத்திரங்களைக் கற்றவராக இருக்கிறார்.(4) இருப்பினும், அவரது ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில், அவர் ஒருவனின் குருதியைக் கொதிக்கச் செய்யும் செருக்கை ஒருபோதும் பேணிவளர்ப்பதில்லை. இதன்காரணமாகவே அவர்கள் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(5) நிறைவின்மை, கோபம், அலட்சியப் போக்கு {சபலம்}, அச்சம் ஆகியவை நாரதரிடம் கிடையாது. அவர்கள் காரிய தாமதம் செய்வதில் இருந்து விடுபட்டவராகவும், துணிவுமிக்கவராகவும் இருக்கிறார். இதன் காரணமாகவே அவர் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(6) நாரதர் அனைவரின் மதிப்புமிக்க வழிபாட்டுக்கும் தகுந்தவரே. ஆசை அல்லது பேராசையின் மூலம் அவர் தனது வார்த்தைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(7) அவர், ஆன்ம ஞானத்திற்கு வழிவகுக்கும் கோட்பாடுகளை முழுமையாக அறிந்தவராகவும், அமைதியான மனநிலை கொண்டவராகவும், பெருஞ்சக்தியைக் கொண்டவராகவும், தன் புலன்களுக்குத் தலைவராகவும் இருக்கிறார். அவர் வஞ்சனையில் இருந்து விடுபட்டவராக, பேச்சில் வாய்மைநிறைந்தவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(8) சக்தி, புகழ், நுண்ணறிவு, ஞானம், பணிவு, நற்பிறப்பு, தவங்கள் மற்றும் வயதால் அவர் புகழ்பெற்றவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(9) அவர் நன்னடத்தைக் கொண்டவராக இருக்கிறார். அவர் நன்றாக உடுத்தி நன்றாக அலங்கரித்துக் கொள்கிறார். தூய்மையான உணவை அவர் உண்கிறார். அவர் அனைவரிடமும் அன்புள்ளவராக இருக்கிறார். அவர் உடலாலும் மனத்தாலும் தூய்மையானவராக இருக்கிறார். அவர் இனிய பேச்சைக் கொண்டவராக இருக்கிறார். அவர் பொறாமை மற்றும் வன்மத்தில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(10)

நிச்சயமாக அவர் எப்போதும் அனைத்து மக்களின் நன்மையில் ஈடுபடுகிறார். அவரிடம் எந்தப் பாவமும் வசிப்பதில்லை. பிறரின் தீப்பேற்றில் அவர் ஒருபோதும் மகிழ்ச்சியடைவதில்லை. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(11) வேத மந்திரங்களைக் கேட்பதன் மூலமும், புராணங்களைக் கவனிப்பதன் மூலமும் அவர் உலகம் சார்ந்த ஆசைகள் அனைத்தையும் வெல்ல எப்போதும் முனைகிறார். அவர் பெருந்துறவியாவார், மேலும் அவர் எவரையும் ஒருபோதும் அவமதிப்பதில்லை. இதன் காரணமாகவும் அவர் எப்போதும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(12) அவர் அனைவரையும் சமமாகப் பார்க்கிறார்; எனவே, அவர் எவரிடமும் அன்பு கொள்வதுமில்லை எவரையும் வெறுப்பதுமில்லை. அவர் எப்போதும் கேட்பவனுக்கு இனிமையானவற்றையே பேசுகிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(13) அவர் சாத்திரங்களின் பெரும் கல்வியைக் கொண்டவராக இருக்கிறார். அவர் பல்வேறு இனிமையான காரியங்களைக் குறித்து உரையாடுகிறார். அவரது அறிவும், ஞானமும் பெரியனவாகும். அவர் பேராசையில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். வஞ்சனையில் இருந்தும் விடுபட்டவராக இருக்கிறார். பெரிய இதயம் கொண்டவராக இருக்கிறார். கோபத்தையும், பேராசையையும் வென்றவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(14) ஈட்டல் அல்லது இன்பம் தொடர்புடைய எந்தக் காரியத்திற்காகவும் அவர் ஒருபோதும் எவரிடமும் சச்சரவு செய்ததில்லை. அனைத்துக் களங்கங்களும் அவரிடம் இருந்து கிழித்து எறியப்பட்டன. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(15)

(பிரம்மத்திடம்) அவரது அர்ப்பணிப்பு உறுதியானதாகும். அவர் ஆன்மா பழியற்றதாகும். அவர் ஸ்ருதிகளை நன்கறிந்தவராக இருக்கிறார். கொடுமையில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். வஞ்சனை அல்லது குற்றங்களின் ஆதிக்கத்தைக் கடந்தவராக அவர் இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(16) (பிறரின்) பற்றுக்குரிய அனைத்துப் பொருட்களிலும் அவர் பற்றில்லாதவராக இருக்கிறார்.[1] அவர் ஒருபோதும் நீண்ட காலம் ஐயத்தின் ஆதிக்கத்திற்கு அடங்கியதில்லை. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(17) அவர் ஈட்டல் மற்றும் இன்பம் தொடர்புடைய பொருட்களில் எந்த ஏக்கமும் கொள்பவரில்லை. அவர் தன்னைத்தானே ஒருபோதும் புகழ்ந்து கொள்வதில்லை. அவர் வன்மத்தில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். பேச்சில் மென்மை கொண்டவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(18) அவர் ஒன்றுக்கொன்று வெவ்வேறான மனிதர்கள் அனைவரின் இதயங்களிலும் எந்தப் பழியும் சொல்லாமல் அவற்றை {அவர்களின் இதயங்களைக்} கவனிக்கிறார். பொருட்களின் தோற்றம் தொடர்புடைய அனைத்து காரியங்களையும் அவர் நன்கறிந்தவராக இருக்கிறார்.(19) அவர் எவ்வகை அறிவியலையும் ஒருபோதும் அலட்சியம் செய்வதில்லை, அல்லது அவற்றில் வெறுப்பைக் காட்டுவதில்லை. அவர் தனது சொந்த தகுதிக்குரிய அறநெறியின்படி வாழ்கிறார். அவர் ஒருபோதும் கனியற்ற வகையில் காலத்தைக் கடத்துவதில்லை. அவரது ஆன்மா எப்போதும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(20)

உழைப்பைச் செலுத்த வேண்டிய காரியங்களில் அவர் எப்போதும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். அவர் அறிவையும், ஞானத்தையும் ஈட்டியிருக்கிறார். அவர் யோகத்தில் ஒரு போதும் தணிவடைந்ததில்லை. அவர் எப்போதும் கவனத்துடனும், முயற்சிக்கான ஆயத்தத்துடனும் இருக்கிறார். அவர் எப்போதும் கவனமிக்கவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(21) அவர் தன் குறைகள் எதற்காகவும் ஒருபோதும் நாணமடைந்ததில்லை. அவர் மிகுந்த கவனம் கொண்டவராக இருக்கிறார். அவர் எப்போதும் பிறருக்கான நன்மையில் அவர்களுடன் சேர்ந்து எப்போதும் ஈடுபடுகிறார். அவர் பிறரது இரகசியங்களை ஒருபோதும் வெளியிடுவதில்லை. இதன் காரணமாகவும் அவர் எப்போதும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(22) மதிப்புமிக்கப் பொருட்களை அடையும் சந்தர்ப்பங்களிலும் அவர் ஒருபோதும் திளைப்பின் வசப்படுவதில்லை. எந்த இழப்பிலும் அவர் ஒருபோதும் வருந்துவதுமில்லை. அவரது புத்தி உறுதியானதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது. அவரது ஆன்மா அனைத்துப் பொருட்களிலும் பற்றில்லாமல் இருக்கிறது. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(23) இவ்வாறு அனைத்துத் தகுதிகளையும், சாதனைகளையும் கொண்டவரும், அனைத்து காரியங்களிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்பவரும், தூய்மையான உடலும் மனமும் கொண்டவரும், முற்றிலும் மங்கலகரமானவரும், காலத்தின் போக்கு மற்றும் குறிப்பிட்ட செயல்களின் வாய்ப்புக்குரிய காலங்களையும் நன்கறிந்தவரும், இனிமையான பொருட்கள் அனைத்தையும் நன்கறிந்தவருமான அவரிடம் எவர்தான் அன்புபாராட்டாமல் இருப்பார்கள்?” என்று கேட்டான் {கிருஷ்ணன்}”.(24)

வியாசரும், சுகமுனியும்! – சாந்திபர்வம் பகுதி – 231-வியாசருக்கும் அவரது மகன் சுகருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; காலத்தின் பல்வேறு பிரிவினைகள், ஒவ்வொரு யுகத்தின் கால அளவு, பல்வேறு யுகங்களில் மனிதர்களின் வாழ்நாட்கள் ஆகியவற்றை வியாசர் சுகருக்கு உரைப்பது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தவரே, உயிரினங்கள் அனைத்தின் தோற்றத்தையும், முடிவையும் குறித்தும்; அவற்றின் தியான இயல்பு மற்றும் அவற்றின் செயல்கள் குறித்தும்; காலப்பிரிவினைகள் மற்றும் ஒவ்வொரு யுகங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட வாழ்நாள் காலங்கள் குறித்தும் நான் அறிய விரும்புகிறேன்.(1) உலகத்தின் தோற்றம் மற்றும் ஒழுக்கம் குறித்தும்; உயிரினங்களின் வருகை மற்றும் அவை செயல்படும் விதம் குறித்துமான முழு உண்மையையும் நான் அறிய விரும்புகிறேன். உண்மையில், அவற்றின் படைப்பும், அழிவும் எங்கிருந்து நடைபெறுகின்றன?(2) ஓ! அறவோரில் சிறந்தவரே, நீர் எங்களுக்கு உதவ எண்ணினால், நான் கேட்பது குறித்து எங்களுக்குச் சொல்வீராக.(3) இதற்கு முன்பு நீர் சொன்னவகையில் பிருகுவுக்கும், மறுபிறப்பாள தவசியான பரத்வாஜருக்கும் இடையில் நடந்த சிறந்த உரையாடலைக் கேட்டு என் புத்தி அறியாமையில் இருந்து நீங்கி,(4) உலகம் சார்ந்த பொருட்களில் இருந்து விலகி, யோகத்தில் மிகவும் பற்றுக் கொண்டு, தெய்வீகத் தூய்மையில் நிலைத்திருக்கிறது. எனவே, இக்காரியம் குறித்து மீண்டும் உம்மிடம் நான் கேட்கிறேன். (இது குறித்து மேலும் விரிவாக) என்னிடம் உரையாடுவதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக தெய்வீகமான வியாசரிடம் அவரது மகனான சுகர் கேள்வி கேட்ட போது அவர் சொன்ன பழைய உரையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(6) எல்லையற்ற வேதங்களையும், அதன் அங்கங்களையும், உபநிஷத்துகளையும் கற்று, சிறந்த அறத்தகுதியை ஈட்டியதன் விளைவால் பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்க விரும்பிய சுகர்,(7) தீவில் பிறந்த முனிவரான தன் தந்தையிடம் {வியாசரிடம்} இதே கேள்விகளையே கேட்டு, அவரால் ஐயங்கள் தீர்க்கப்பட்டார். அவர் (கல்வி மற்றும் தியானத்தின் மூலம்) கடமைகளைக் குறித்த உண்மைகள் தொடர்பான அனைத்து ஐயங்களையும் நீக்கினார்.(8)

சுகர் {வியாசரிடம்}, “கால அறிவால்[1] அனைத்து உயிரினங்களின் படைப்பாளனென உறுதிசெய்யப்பட்டவன் எவன் என்பதையும், ஒரு பிராமணனால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டார்”.(9)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மகனால் {சுகரால்} கேள்வி கேட்கப்பட்டவரும், கடந்த காலம் மற்றும் எதிர் காலம் ஆகிய இரண்டின் அறிவைக் கொண்டவரும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், முற்றறிவு பெற்றவருமான தந்தை {வியாசர்}, அக்காரியம் குறித்து இவ்வாறே உரைத்தார்.(10)

வியாசர் {சுகரிடம்}, “தொடக்கமும் முடிவும் இல்லாததும், பிறப்பில்லாததும், ஒளியுடன் சுடர்விடுவதும், சிதைவுக்கு அப்பாற்பட்டதும், மாற்றமில்லாததும், அழிவில்லாததும், புலப்படாததும், மேன்மையான அறிவுமான பிரம்மம் மட்டுமே படைப்புக்கு முன்பே இருக்கிறது.(11) முனிவர்கள், காலத்தை அளந்து குறிப்பிட்ட பகுதிகளுக்குக் குறிப்பிட்ட பெயர்களை அளித்துள்ளனர். பதினைந்து கண் சிமிட்டல்களின் {கால} அளவு ஒரு காஷ்டை என்று அழைக்கப்படுகிறது. முப்பது காஷ்டைகள் ஒரு கலை என்று அழைக்கப்படுகிறது. முப்பது கலைகளும், கலைகளில் பத்தில் ஒரு பகுதியும் சேர்த்து ஒரு முகூர்த்தம் என்றறியப்படுகிறது. முப்பது முகூர்த்தங்கள் ஒரு பகலையும் இரவையும் உண்டாக்குகின்றன. முப்பது பகல்களும் இரவுகள் ஒரு மாதம் என்றழைக்கப்படுகிறது. பனிரெண்டு மாதங்கள் ஒரு வருடங்கள் என்றழைக்கப்படுகிறது.(12,13) கணித அறிவியலை அறிந்த மனிதர்கள், (சூரியனின் போக்கைச் சார்ந்து) ஒரு வருடத்திற்கு வடக்கு மற்றும் தெற்கு {உத்தராயணம், தக்ஷிணாயனம்} என்ற இரண்டு அயணங்களை அமைத்திருக்கின்றனர்.(14) சூரியன் மனித உலகிற்கான பகலையும், இரவையும் அமைக்கிறான். இரவானது அனைத்து உயிரினங்களும் உறங்குவதற்காகவும், பகலானது செயல்படுவதற்காகவும் இருக்கிறது.(15)

மனிதர்களின் ஒரு மாதமானது பித்ருக்களின் ஒரு பகலுக்கும் இரவுக்கும் {ஒரு நாளுக்கு} இணையானதாகும். (பித்ருக்களைப் பொறுத்தவரையில்) அந்தப் பிரிவானது, (மனிதர்களின்) வளர்பிறை நாட்கள் {சுக்லபக்ஷம்} செயல்படுவதற்கானதாகவும் {பித்ருக்களின் பகலாகவும்}; தேய்பிறை நாட்கள் {கிருஷ்ணபக்ஷம்} உறங்குவதற்காகவும் {பித்ருக்களின் இரவாகவும்} இருக்கிறது.(16) (மனிதர்களின்) ஒரு வருடம் தேவர்களின் ஒரு பகல் மற்றும் இரவுக்கு {ஒரு நாளுக்கு} இணையானதாகும். (தேவர்களைப் பொறுத்தவரையில்) அந்தப் பிரிவானது, இளவேனில் காலத்தில் இருந்து கூதிர் காலம் வரையில் சூரியன் பயணிக்கும் அரை வருடம் {உத்தராயணம்} தேவர்களின் பகலாகவும், கூதிர் காலத்தில் இருந்து இளவேனில் காலம் வரையில் அவன் பயணிக்கும் அரை வருடம் {தக்ஷிணாயனம்} அவர்களின் இரவாகவும் இருக்கிறது.(17) நான் உன்னிடம் சொன்னவாறு மனிதர்களின் பகலிரவுகளைக் கணக்கிடுவதன் மூலம், பிரம்மனின் பகலிரவு மற்றும் அவனுடைய வருடங்களையும் நான் சொல்லப் போகிறேன்.(18) கிருதம், திரேதம், துவாபரம் மற்றும் கலியுகங்களைப் பொறுத்தவரையில், (இவ்வாறு) பல்வேறு காரணங்களுக்காகப் பலவாறு கணக்கிடப்படும் வருடங்களின் எண்ணிக்கையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(19) (தேவர்களின்) நாலாயிரம் வருடங்கள் முதல் அல்லது கிருத யுகத்தின் காலமாகும். அந்த யுகத்தின் காலைப் பொழுது நானூறு வருடங்களையும், அதன் மாலைப் பொழுது நானூறு வருடங்களையும் கொண்டதாகும். (எனவே கிருத யுகத்தின் மொத்த கால அளவானது தேவர்களின் வருடங்களில் நாலாயிரத்து எண்ணூறு {4800} வருடங்ளாகும்).(20)

பிற யுகங்களைப் பொறுத்தவரையில், அவை ஒவ்வொன்றின் கால அளவும் ஒன்றிணைந்த பகுதியுடன் தனித்திருக்கும் நிலை மற்றும் ஒன்றிணைந்த பகுதி ஆகிய இரண்டையும் சேர்த்து கால்பகுதி அளவுக்குப் படிப்படியாகக் குறைகிறது. (இவ்வாறு கணக்கிட்டால் திரேதா யுகமானது மூவாயிரம் வருடங்களும், அதன் காலைப் பொழுது முன்னூறு வருடங்களும், மாலைப் பொழுது முன்னூறு வருடங்களும் சேர்த்து மூவாயிரத்து அறுநூறு {3600} வருடங்களாகும்.

துவாபர யுகமானது இரண்டாயிரம் வருடங்களும், அதன் காலைப் பொழுது இருநூறு வருடங்களும், மாலைப்பொழுது இருநூறு வருடங்களும் சேர்த்து இரண்டாயிரத்து நானூறு {2400} வருடங்களாகும்.

கலியுகத்தின் கால அளவானது, ஆயிரம் வருடங்களும், அதன் காலைப் பொழுது நூறு வருடங்களும், மாலைப்பொழுது நூறு வருடங்களும் சேர்த்து ஆயிரத்து இருநூறு {1200} வருடங்களாகும்)[2].(21) இந்த யுகங்கள் முடிவில்லாதவையும், நித்தியமானவையுமான உலகங்களை எப்போதும் நீடிக்கச் செய்கின்றன. ஓ! குழந்தாய், பிரம்மத்தை அறிந்தவர்கள் இதையே மாற்றமில்லாத பிரம்மமாகக் கருதுகிறார்கள்.(22) கிருத யுகத்தில் வாய்மையுடன் சேர்த்து அனைத்து கடமைகளும் {தர்மங்களும்} முழுமையாக இருந்தன. நீதியற்ற அல்லது தடுக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம் மனிதர்களிடம் எந்த அறிவும், பொருளும் சேரவில்லை.(23) பிற யுகங்கள் ஒவ்வொன்றிலும், வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் படிப்படியாகக் கால் பகுதி குறைவது காணப்படுகிறது. களவு, பொய்மை, வஞ்சகம் ஆகியவற்றின் விளைவால் பாவம் வளர்கிறது.(24) கிருத யுகத்தில், மனிதர்கள் அனைவரும் நோயற்றவர்களாக, அவர்களது நோக்கங்கள் அனைத்திலும் வெற்றிபெற்றவர்களாக நானூறு வருடங்கள் வாழ்கிறார்கள். திரேதா யுகத்தில் கால்பகுதி வாழ்நாள் அளவு குறைகிறது {அதாவது மனிதர்கள் முன்னூறு வருடங்கள் வாழ்கிறார்கள்}.(25)(கிருத யுகம் 4,800 வருடங்கள் கொண்டதாகும். திரேதா யுகம் 3,600; துவாபர யுகம் 2,400; கலியுகம் 1,200 வருடங்களைக் கொண்டதாகும். எனினும் இவை தேவ வருடங்களாகும் {தேவர்களின் ஒரு வருடம் மனிதர்களின் 360 வருடங்களைக் கொண்டதாகும்}. இங்கே சொல்லப்படும் 15-17 மற்றும் 20-21 சுலோகங்கள் மனுசாத்திரம் அதிகாரம் 1ல் இருக்கின்றன. கும்பகோணம் பதிப்பில், “கிருதயுகமானது நாலாயிரம் வருஷங்களென்று கூறுகிறார்கள். அந்த யுகத்தின் ஸந்தியாகாலம் நானூறு வருஷங்களும், அப்படியே ஸந்தியாம்சம் நானூறுவருஷங்களுமாகும். அதைவிட வேறான மூன்று யுகங்களிலும் அவைகளின் ஸந்தியைகளிலும் ஸந்தியாம்சங்களிலும் ஒவ்வொன்று குறையக் கூறிய ஆயிரம் வருஷங்களும் நூறு வருஷங்களும் நூறு வருஷங்களுமாகும்”)அடுத்தடுத்த யுகங்களில் வேதங்களின் வார்த்தைகள், வாழ்நாள் காலம், (பிராமணர்கள் சொல்லும்) அருளாசிகள், வேத சடங்குகளின் கனிகள் ஆகியன அனைத்தும் படிப்படியாகக் குறைவதாக நாம் கேள்விப்படுகிறோம்.(26) கிருத யுகத்திற்காக நிறுவப்பட்டுள்ள கடமைகள் ஒருவகையாக உள்ளன. திரேதா யுகத்திற்காக நிறுவப்பட்டவை மறு வகையாக உள்ளன. துவாபர யுகத்திற்காக நிறுவப்பட்டவை வேறு வகையாக உள்ளன. மேலும் கலியுகத்திற்காக நிறுவப்பட்டவை மறுவகையாக உள்ளன. இவை அடுத்தடுத்த யுகங்களில் நேரும் வீழ்ச்சி குறிக்கும்படி அமைகின்றன.(27) கிருத யுகத்தில் தவமே முதன்மையான இடத்தைப் பெறுகிறது. திரேதா யுகத்தில் அறிவே முதன்மையானதாக இருக்கிறது. துவாபர யுகத்தில் வேள்வி முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. கலியுகத்தில் தானமே ஒரே பொருளாக விதிக்கப்பட்டிருக்கிறது.(28)
(தேவர்களின்) இந்தப் பனிரெண்டாயிரம் வருடங்களே யுகங்கள் என்றழைக்கப்படுபவையாக அமைகின்றன {ஒரு தேவயுகம் என்றழைக்கப்படுகிறது} எனக் கல்விமான்கள் சொல்கிறார்கள். இத்தகைய ஆயிரம் யுகங்களே பிரம்மனின் ஒரு பகல் வேளையாக அமைகிறது[3].(29) பிரம்மனின் இரவும் அதே கால அளவைக் கொள்கிறது. பிரம்மனின் பகல் தொடங்கியதும், அண்டம் உயிர்பெறத் தொடங்குகிறது. அண்டத்தின் அழிவுக்காலத்தில், படைப்பாளன் {பிரம்மன்} தியான யோகத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறான். உறக்க காலம் முடிந்ததும் அவன் விழிப்படைகிறான்.(30) இத்தகைய ஆயிரம் யுகங்கள் பிரம்மனின் ஒரு பகலாகின்றன. அதே போல ஆயிரம் யுகங்கள் அவனது ஓரிரவு ஆகின்றன. இஃதை அறிந்தவர்களே பகல் மற்றும் இரவை அறிந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(31) பிரம்மன், இரவு கடந்து விழித்ததும், அழிவற்ற சித்-ஐ அவித்யையால் மறைத்துத் திருத்தி அமைக்கிறான். பிறகு அவன் எழச்செய்யும் நனவுநிலையில் இருந்து, புலப்படுபவைக்கு ஒப்பான மனம் உண்டாகிறது” என்றார் {வியாசர்}[4].(32)

யுகத்தன்மைகள்! – சாந்திபர்வம் பகுதி – 232-படைப்பு எழுந்த வகை; பல்வேறு யுகங்களின் தன்மைகள்; பல்வேறு யுகங்களில் விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு கடமைகள் ஆகியவற்றைத் தன் மகனான சுகருக்கு விளக்கிச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “தானே நீடித்துச் செயல்படும் பிரகாசமிக்க வித்தான பிரம்மனே, அசையும் மற்றும் அசையாத இருவகை உயிரினங்கள் இரண்டையும் கொண்ட மொத்த அண்டத்தையும் எழச் செய்கிறான்[1].(1) அவனது பகலின் அதிகாலையில் விழித்தெழும் அவன் அவித்யையின் உதவியுடன் இவ்வண்டத்தைப் படைக்கிறான். முதலில் மஹத் என்றழைக்கப்படுவது எழுகிறது. அந்த மகத்தே விரைவாகப் புலப்படுவதன் ஆன்மாவான {ஸ்தூலமான உருவமுள்ள} மனமாக விரைவாக மாறுகிறது[2].(2) மனமானது, பிரகாசமான சித்-ஐ அவித்யையால் மறைத்து ஏழு பெரும் பூதங்களைப் படைக்கிறது[3]. எட்டாததை எட்டுவதும், பல வழிமுறைகளைக் கொண்டதும், தனது அடிப்படை குறியீடுகளாக ஆசையையும், ஐயத்தையும் கொண்டதுமான மனமானது, படைக்கும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, தன்னைத் தானே திருத்தி அமைத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு வகைப் பொருட்களைப் படைக்கிறது. அதனிலிருந்து முதலில் வெளி {ஆகாயம்} எழுகிறது. அதன் குணம் ஒலி என்பதை அறிவாயாக.(3,4) மேலும் திருத்தி அமைத்துக் கொள்வதன் மூலம் அந்த வெளியில் இருந்து, அனைத்து மணங்களையும் சுமப்பதும், தூய்மையானதும், வலிமைமிக்கதுமான காற்று எழுகிறது. அது தீண்டலின் குணத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.(5)மேலும் திருத்தி அமைக்கப்படுவதன் மூலம் காற்றிலிருந்தும் பிரகாசத்துடன் கூடிய ஒளி எழுகிறது. அழகை வெளிப்படுத்துவதும், சுக்ரம் என்றழைக்கப்படுவதும், இவ்வாறு இருப்பில் எழுவதுமான அது, வடிவத்தைத் தன் குணமாகக் கொண்டிருக்கிறது.(6) மேலும் திருத்தி அமைக்கப்படுவதன் மூலம் ஒளியில் இருந்து சுவையைத் தன் குணமாகக் கொண்ட நீர் எழுகிறது. நீரிலிருந்து மணத்தைக் குணமாகக் கொண்ட பூமி எழுகிறது. இவையே தொடக்கப் படைப்பைக் குறிக்கின்றன என்று சொல்லப்படுகின்றன.(7) இவை ஒன்றன்பின் ஒன்றாகத் தங்களுக்கு முந்தையதும், தனது பிறப்பிடமுமான பூதங்களின் குணங்களை அடைகின்றன. இவை ஒவ்வொன்றும் தங்களுக்குண்டான குறிப்பிட்ட குணத்தை மட்டுமல்லாமல் தங்களுக்கு முந்தைய பூதங்களின் குணங்களையும் கொண்டிருக்கின்றன[4]. (எனவே, வெளியானது ஒலியை மட்டுமே தன் குணமாகக் கொண்டிருக்கிறது. வெளிக்குப் பிறகே காற்று {வாயு} வருவதால், அஃது ஒலி மற்றும் தீண்டல் என்ற குணங்களைக் கொண்டிருக்கிறது. காற்றில் இருந்து வரும் ஒளி அல்லது நெருப்பானது, ஒலி, தீண்டல் மற்றும் வடிவம் என்ற குணங்களைக் கொண்டிருக்கிறது. ஒளியில் இருந்து வந்த நீரானது ஒலி, தீண்டல், வடிவம் மற்றும் சுவை ஆகியவற்றைத் தன் குணங்களாகக் கொண்டிருக்கிறது. நீரில் இருந்து வந்த பூமியானது, ஒலி, தீண்டல், வடிவம், சுவை, மணம் ஆகியவற்றைத் தன் குணங்களாகக் கொண்டிருக்கிறது).(8) நீரில் மணத்தை உணரும் எவரும் அறியாமையால் அது {மணமானது} நீருக்குச் சொந்தமானது என்றால் பிழையில் வீழ்ந்தவனாகிறான், ஏனெனில், மணம் என்பது நீர் மற்றும் காற்றிலும் பற்றுக் கொண்ட நிலையில் நீடித்திருந்தாலும், அது {மணம் என்பது} பூமியின் குணமே ஆகும்.(9)பல்வேறு வகைச் சக்திகளைக் கொண்ட இந்த ஏழுவகை இருப்புகளும் முதலில் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாகவே இருந்து வந்தன. இவை அனைத்தும் ஒன்று கலந்த நிலையை அடையாமல் அவற்றால் எந்தப் பொருளையும் படைக்க முடியாது.(10) இந்தப் பெரும் இருப்புகள் அனைத்தும் ஒன்றாகத் திரண்டு, ஒன்றோடொன்று கலப்பதாலேயே அங்கங்கள் {அவயவ்யம்} என்றழைக்கப்படும் உடலின் பகுதிகள் அமைகின்றன[5].(11) அந்த அங்கங்கள் ஒருங்கிணைவதால் விளையும் இந்த மொத்த கூட்டுத் தொகையும் பதினாறு {16} கூறுகளைக் கொண்ட வடிவத்தை அடைந்து உடல் என்று அழைக்கப்படுகிறது. (திரள் உடல் இவ்வாறு அமையும்போது), நுட்பமான மஹத்-ஆனது வற்றாத செயல்களின் எச்சங்களுடன் திரள் உடல் என்றழைக்கப்படும் கலவைக்குள் நுழைகிறது[6].(12) அனைத்துப் பொருட்களையும் உண்மையில் படைத்தவன், தன் மாயையைக் கொண்டு தன்னைப் பிரித்துக் கொண்டு அனைத்தையும் பார்ப்பதற்காகவும், ஆய்வு செய்வதற்காகவும் அந்த நுட்பமான வடிவங்களுக்குள் நுழைகிறான். அவனே அனைத்து உயிரினங்களையும் உண்மையாகப் படைப்பவனாக இருப்பதால், அவன் அனைத்து உயிரினங்களின் தலைவன் என்று அழைக்கப்படுகிறான்[7].(13) அவனே அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் படைக்கிறான். இவ்வாறு பிரம்ம வடிவை ஏற்கும் அவன், தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், மற்றும் மனிதர்களின் உலகங்களைப் படைக்கிறான்.(14) ஆறுகள், கடல்கள், பெருங்கடல்கள், அடிவானின் புள்ளிகள் {திசைகள்}, நாடுகள், மாகாணங்கள், குன்றுகள், மலைகள், பெரும் மரங்கள், மனிதர்கள், கின்னரர்கள், ராட்சசர்கள், பறவைகள், வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் பாம்புகள் ஆகியவற்றையும் படைக்கிறான்.(15)உண்மையில் அவன், அசைவன, அசையாதன என்றும், அழியத்தக்கன, அழிவில்லாதன என்றும் இருப்பின் இருவகைப் பொருட்களைப் படைக்கிறான். படைக்கப்பட்ட இந்தப் பொருட்கள் ஒவ்வொன்றும், படைப்புக்கும் முன்பு இருந்த அந்தக் குறிப்பிட்ட குணங்களை அடைகின்றன;(16) உண்மையில் அவை ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த ஒவ்வொரு படைப்பில் அதே குணங்களையே அடைகின்றன. தீங்கிழைப்பது அல்லது அமைதி, மென்மை அல்லது கடுமை, அறம் அல்லது மறம், வாய்மை அல்லது பொய்மை ஆகியவற்றில் ஏதோ ஒரு குணத்தைத் தீர்மானித்துக் கொள்ளும் ஒவ்வொரு உயிரினமும், ஒவ்வொரு புதிய படைப்பிலும், ஏற்கனவே அவை பேணி வளர்த்து வந்த அந்தக் குறிப்பிட்ட குணத்தையே அடைகின்றன. இதன் விளைவாகவே அந்தக் குறிப்பிட்ட குணம் அதனைப் பற்றுகிறது.(17) விதி சமைப்பவனே, (வெளி, பூமி முதலிய) அந்தப் பெரும் இருப்புகளை, இருப்பில் உள்ள பொருளின் (வடிவம் முதலிய) புலனுக்குரிய பொருட்களிலும், அளவுகளிலும் இணைத்து, பல்வேறு வடிவங்களைக் கொண்ட இருப்புகளுடன் கூடிய உயிரினங்களின் உறவுகளை நியமனம் செய்கிறான்.(18) பொருள் அறிவியலுக்குத் தங்களை அர்ப்பணித்த மனிதர்களுக்கு மத்தியில் உள்ள சிலர், விளைவுகளை உண்டாக்குவதில் முயற்சியே {மனித உழைப்பே} உயர்வானதெனச் சொல்கிறார்கள். சில கல்விமான்கள், விதியே {தெய்வமே} உயர்வானதெனவும், சிலர் இயற்கையே {பூதத் தொகுப்பே} செயல்படும் ஒன்றாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.(19) மேலும் சிலர், (உடல்) உழைப்பு, விதி ஆகியவற்றில் இருந்து எழும் செயல்களே, இயற்கையின் துணையுடன் விளைவுகளை உண்டாக்குகின்றன எனச் சொல்கிறார்கள். இவற்றில் எதுவும் விளைவுகளைத் தனியாக உண்டாக்கவல்லவை என்று கருதுவதற்குப் பதிலாக இவை மூன்றின் கலவையே விளைவுகள் அனைத்தையும் உண்டாக்குகின்றன என்று அவர்கள் சொல்கிறார்கள்[8].(20)இக்காரியத்தைப் பொறுத்தவரையில்[9], இதுவே நேர்கிறது எனச் சிலர் சொல்கிறார்கள்; சிலர் இது நேர்வதில்லை என்று சொல்கிறார்கள்; சிலர் இவை இரண்டுமில்லை என்கிறார்கள்; சிலர் இவற்றின் முரண்நிலைகள் நேர்வதில்லை என்கிறார்கள். பொருட்களைப் பொறுத்தவரையில், செயல்களைச் சார்ந்திருப்போரின் வாதங்களே இவை. எனினும், உண்மையை நோக்கி பார்வை கொண்டோர், பிரம்மமே காரணம் என்று கருதுகின்றனர்[10].(21) வாழும் உயிரினங்களுக்குத் தவமே உயர்ந்த நன்மையாகும். அமைதி மற்றும் சுயக்கட்டுப்பாடே தவத்தின் வேர்களாகும். தவத்தின் மூலம் ஒருவன் தன் மனத்தில் விரும்பும் அனைத்தையும் அடைகிறான்.(22) தவத்தின் மூலம் அவன் இந்த அண்டத்தைப் படைப்பவனையே அடைகிறான். எவன் (தவத்தின் மூலம்) அவனை அடைவதில் வெல்கிறானோ, அவன் அனைத்து உயிரினங்களின் பலமிக்கத் தலைவனாகிறான்.(23) முனிவர்கள் தங்கள் தவத்தின் மூலமே வேதங்களை இடையறாமல் படிக்க இயன்றவர்களாகிறார்கள். சுயம்பு தொடக்கத்திலேயே, அறிவின் வடிவங்களும், தொடக்கமும் முடிவும் இல்லாதவையும், (குருவிடம் இருந்து சீடனுக்கும்} பாய்கின்றவையுமான அந்தச் சிறந்த வேத ஒலிகளை உண்டாக்கினான். அந்த ஒலிகளில் இருந்து அனைத்தை வகைச் செயல்பாடுகளும் உண்டாகின.(24) முனிவர்களின் பெயர்கள், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் இருப்பில் தெரியும் பல்வேறு வடிவங்கள், செயல்பாடுகள் அனைத்தின் நடைமுறைகள் ஆகியன வேதங்களிலேயே தங்கள் தோற்றுவாயைக் கொண்டிருக்கின்றன[11].(25)

உண்மையில், அனைத்துப் பொருட்களின் உயர்ந்த தலைவன், தொடக்கத்தில் வேத வார்த்தைகளில் இருந்தே அனைத்துப் பொருட்களையும் உண்டாக்கினான். உண்மையில், முனிவர்களின் பெயர்களும், படைக்கப்பட்ட வேறு அனைத்தும் வேதங்களில் இருக்கின்றன. படைக்கப்படாதவனான பிரம்மன் தன் இரவு கடந்ததும் (விடியற்காலையில்), ஏற்கனவே இருந்த மூலப் படிமங்களில் இருந்து, உண்மையில் ஏற்கனவே அவனால் உண்டாக்கப்பட்டவையேயான அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான்[12].(26) வேதங்களில், இல்லற வாழ்வுமுறையைப் பின்பற்றுதல் {கிருகஸ்தாஸ்ரமம்}, தவங்கள், வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்தின் பொதுவான கடமைகளை நோற்பது, வேள்விகள், தூய புகழுக்கு வழிவகுக்கும் செயல்கள் அனைத்தையும் செய்தல், மூவகைத் தியானங்கள், இம்மையிலேயே வெற்றி (ஸித்தி) என்று அழைக்கப்படும் ஒருவகை விடுதலை என வேத கல்வியின் மூலம் அமையும் பத்து வழிமுறைகளுடன் சேர்த்து ஆன்ம விடுதலை {முக்தி} குறித்தும் சொல்லப்படுகிறது[13].(27) வேத வார்த்தைகளில் அறிவிக்கப்படுவதும், வேதங்களில் கூர்மதி கொண்டோரின் மூலம் உபநிஷத்துகளில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்படுவதும், புரிந்துகொள்ளப்பட முடியாததுமான பிரம்மத்தை, மேலே குறிப்பிடப்படும் நடைமுறைகளைப் பின்பற்றியே படிப்படியாக உணரலாம்.(28) தான் ஓர் உடலைக் கொண்டிருப்பதாக நினைக்கும் ஒரு மனிதனிடம், முரண்பட்ட இரட்டைகள் நிறைந்த இந்த இரட்டை நனவுநிலையானது, அவன் ஈடுபடும் செயல்களின் மூலம் மட்டுமே பிறக்கிறது. (அந்த இரட்டை நனவுநிலையானது, கனவுகளற்ற உறக்கத்திலோ, விடுதலை {முக்தி} அடையப்படும்போதோ மறைகிறது). எனினும், விடுதலையை {முக்தியை} அடைந்த ஒருவன், தன் அறிவின் துணை கொண்டு, அந்த இரட்டை நனவுநிலையை விரட்டுகிறான்.(29) (வேதங்கள் எனும்) ஒலியின் மூலமாகத் தெரியும் பிரம்மம் மற்றும் இரண்டாவதாக வேதங்கள் மற்றும் பரம்பொருளைக் கடந்த பிரம்மம் என்ற இரு பிரம்மங்கள் அறியப்பட வேண்டும். ஒலியில் தெரியும் பிரம்மத்தை அறிந்தவன் பரம்பொருளான பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்[14].(30)விலங்குகளைக் கொல்வதே {உயிரினங்களைக் கொல்வதே} க்ஷத்திரியர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது. தானியங்கள் வளர்ப்பதே வைசியர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது. மூவகையினருக்கும் தொண்டாற்றுவதே சூத்திரர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது. தவங்கள் (அல்லது பிரம்ம வழிபாடே) பிராமணர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது.(31) கிருத யுகத்தில் வேள்விகள் செய்வதற்கான தேவை ஏதும் இல்லாதிருந்தது. அத்தகய செயல்பாடு திரேதா யுகத்தில் அவசியமானது. துவாபர யுகத்தில் வேள்விகள் வீழத் தொடங்கின. கலியிலும் வீழ்ந்து கொண்டே இருக்கிறது.(32) கிருத யுகத்தில் மனிதர்கள் பிரம்மம் ஒன்றை மட்டுமே வழிபட்டு, முன்னேற்றம் காணும் பெரும் நோக்கத்தோடு செயல்படும் ரிக்குகள், யஜுஸ்கள், சடங்குகள், வேள்விகள் ஆகிய அனைத்தையும் தங்கள் வழிபாட்டில் இருந்து அந்நியமாகக் கருதி தவங்களின் மூலமாக யோகத்தை மட்டுமே செய்துவந்தனர்.(33) திரேதா யுகத்தில், பெரும் வலிமைமிக்க மனிதர்கள் பலர் தோன்றி அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் ஆட்சி செய்தனர். (பொதுவாக அந்த யுகத்தின் மனிதர்கள் இயல்பாகவே அறம் சார்ந்த நடைமுறைகளைச் செய்யவில்லையெனினும், பெரும் தலைவர்கள் அத்தகைய நடைமுறைகளிலேயே அவர்களைச் செலுத்தினர்). அதன்படி அந்த யுகத்தில் வேதங்கள், வேள்விகள் மற்றும் பல்வேறு வகையினருக்கிடையிலான வேறுபாடுகள், நான்கு வாழ்வு முறைகள் {ஆசிரமங்கள்} ஆகியன ஒரு கச்சிதமான நிலையிலேயே இருந்தன. எனினும், துவாபர யுகத்தில் வாழ்நாள் காலம் குறைந்ததன் விளைவால் இவை அனைத்தும் அந்த யுகத்தில் {துவாபர யுகத்தில்} அந்தக் கச்சிதமான நிலையில் இருந்து வீழ்ந்தன.(34,35)

கலியுகத்தில், வேதங்கள் அனைத்தும் மனிதர்களால் காணப்பட முடியாதபடிக்கு மிக அரிதானதாகிவிடும். கொடுமையால் பீடிக்கப்படும் அவர்கள் {கலி யுகத்தில் வாழும் மனிதர்கள்} தங்களுக்காக விதிக்கப்பட்ட சடங்குகள் மற்றும் வேள்விகளுடன் சேர்த்து அழிவை அடைகிறார்கள்.(36) கிருத யுகத்தில் காணப்படும் அறம், இப்போது {இந்தக் கலியுகத்தில்} தூய்மையான ஆன்மாக்களைக் கொண்டவர்களும், தவங்களுக்கும், சாத்திரக் கல்விக்கும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான அத்தகைய பிராமணர்களிடம் மட்டுமே காணப்படும்.(37) பிற யுகங்களைப் பொறுத்தவரையில் மனிதர்கள், ஒரேயடியாகத் தங்கள் கடமைகளையும், அறச்செயல்களையும் விட்டுவிடாமல், வேத விதிகளை அறிந்து, தங்கள் தங்களுக்குரிய நடைமுறைகளை நோற்று, சாத்திரங்களின் அதிகாரத்தில் வழிநடத்தப்பட்டு முன்னேறும் நோக்கத்தாலும் விருப்பத்தால் வேள்விகளையும் நோன்புகளையும் செய்து, புனித நீர்நிலைகள் மற்றும் புனிதத் தலங்களுக்குச் செல்வார்கள்[15].(38)மழைக்காலத்தில், அசையாத வகையைச் சார்ந்த பெரும் எண்ணிக்கையிலான பல்வேறு புதிய பொருட்கள், மேகத்தில் இருந்து பொழியும் மழையின் மூலம் உயிர்பெறுவதைப் போலவே ஒவ்வொரு புதிய யுகத்திலும் பல்வேறு வகைப் புதி கடமைகளும், அறநோன்புகளும் தோன்றுகின்றன.(39) குறிப்பிடத்தக்க அதேவகைத் தோற்றப்பாடுகள் பருவகாலங்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதுடன் சேர்ந்து மீண்டும் தோன்றுவதைப் போலவே ஒவ்வொரு புதிய படைப்பின்போதும், ஒவ்வொரு புதிய பிரம்மன் மற்றும் ஹரனில் அதே குணங்கள் தோன்றுகின்றன.(40) இதற்கு முன்பே நான், தொடக்கமும், முடிவும் இல்லாததும், அண்டத்தில் இந்தப் பல்வேறு வகைகளை விதிப்பதுமான காலம் குறித்தும் உன்னிடம் பேசியிருக்கிறேன். அந்தக் காலமே உயிரினங்கள் அனைத்தையும் படைக்கவும் விழுங்கவும் செய்கிறது.(41) முரண்பட்ட இரட்டைகளுக்கு ஆட்படும் எண்ணற்றவையும் இருப்பில் இருப்பவையுமான உயிரினங்கள் அனைத்தும், தங்கள் தங்களுக்குரிய இயல்புகளின்படியே காலத்தைத் தங்கள் புகலிடமாகக் கொள்கின்றன.(42) ஓ! மகனே, இவ்வாறே படைப்பு, காலம், வேள்விகள், பிற சடங்குகள், வேதங்கள், அண்டத்தில் உண்மையில் செயல்படும் இருப்பு, செயல்பாடு, செயல்பாட்டின் விளைவுகள் குறித்து நீ கேட்ட அனைத்து காரியங்களையும் குறித்துப் பேசிவிட்டேன்” என்றார் {வியாசர்}.(43)

பிரளயம்! – சாந்திபர்வம் பகுதி – 233-அண்டமே அழிந்து போகம் பிரளயம் எவ்வாறு நேர்கிறது என்பதைச் சுகருக்கு விளக்கிச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “உயர்ந்த தலைவனின் {ஈஸ்வரனின்} பகல் கடந்து, அவனது இரவு வேளை வரும்போது, அனைத்துப் பொருட்களையும் அவன் தன்னுள் எவ்வாறு ஈர்த்துக் கொள்கிறான், அல்லது அவன் திரளாக இருக்கும் இந்த அண்டத்தை மிக நுட்பமானதாக்கி, அனைத்தையும் எவ்வாறு தன் ஆன்மாவுக்குள் கலக்கச் செய்கிறான் என்பதை இப்போது நான் உனக்குச் சொல்லப்போகிறேன். அண்ட அழிவுக்கான {பிரளயத்துக்கான} காலம் வரும்போது, பனிரெண்டு சூரியர்களும், ஏழு தழல்களுடன் கொண்ட அக்னியும் எரியத் தொடங்குகின்றன. அந்தத் தழல்களால் மறைக்கப்படும் மொத்த அண்டமும், பெருந்தீயாகச் சுடர்விட்டு எரியத் தொடங்கும்.(2) பூமியில் உள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும், இந்தக் கோளானது எந்தப் பொருளால் ஆனதோ அதற்குள் முதலில் கலந்து மறையும்.(3) இவ்வாறு அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் மறைந்தபிறகு, மரம் செடி கொடிகளை இழந்த பூமியானது வெறுமையான ஆமை ஓட்டைப் போலத் தெரியும்.(4)

அப்போது நீரானது, பூமியின் குணமான மணத்தை ஏற்கிறது. பூமி தன் அடிப்படை குணத்தை இழக்கும்போது அந்தப் பூதம் {நிலமெனும் பூதம்} அழிவின் விளிம்பில் நிற்கும்.(5) அப்போது நீரே மேலோங்கி நிற்கிறது. பெரும் அலைகள் பெருகி, பயங்கர முழக்கங்களை உண்டாக்கி இந்த வெளியை நீரே நிரப்பி அசையும் அல்லது அசையாமல் நிற்கும்.(6) பிறகு நீரின் குணம் வெப்பத்தால் எடுத்துக் கொள்ளப்படும். தன் குணத்தை இழக்கும் நீரானது அந்தப் பூதத்திலேயே ஓய்வெடுக்கும்.(7) சுற்றிலும் சுடர்விட்டெழும் பிரகாசமான நெருப்பின் தழல்கள் வெளியின் மையத்தில் உள்ள சூரியனை மறைக்கும். உண்மையில் அப்போது, சீற்றமிகு தழல்கள் நிறைந்த வெளியானது பெருந்தீயாக எரியும்.(8)

காற்று {வாயு} வந்து வெப்பம், அல்லது ஒளியின் குணமான வடிவத்தை எடுத்துக் கொள்ளும். இதனால் பெரும் வலிமை கொண்ட காற்றின் வசப்பட்டுத் தணிவடையும் அது {வெப்பம் / ஒளி}, பயங்கரமாகக் கலக்கமடையத் தொடங்கும்.(9) காற்றானது தன் சொந்த குணமாக ஒலியை அடைந்து மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் பத்துப் புள்ளிகள் அனைத்திலும் கடந்து செல்லும்.(10) அப்போது காற்றின் குணமான ஒலியை எடுத்துக் கொள்ளும் வெளியினால் தணிவடையும் அது, கேள்விப்படாத, அல்லது சொல்லப்படாத ஒலிக்கு ஒப்பான இருப்பு வட்டத்திற்குள் நுழையும்.(11) அப்போது வெறும் வெளி மட்டுமே எஞ்சும், ஒலியைத் தன் குணமாகக் கொண்ட அந்தப் பூதமானது, எவ்வகை வடிவமும் கொள்ளாமல், வடிவம், சுவை, தீண்டல், மணம் ஆகிய பண்புகளை இழந்த பிற பூதங்கள் அனைத்துடன் சேர்ந்து இருப்பின் புலப்படா நிலையான ஒலியைப் போல வசிக்கும்.(12)

பிறகு, வெளியின் பண்பான ஒலியானது, புலப்படும் பொருட்கள் அனைத்தின் சாரமாக இருக்கும் மனத்தால் விழுங்கப்படுகிறது. தானே புலப்படாததாக இருக்கும் மனமானது, இவ்வாறே மனத்தின் மூலம் வெளிப்பட்ட அனைத்தையும் தனக்குள் ஈர்த்துக் கொள்கிறது. புலப்படாததாக, அல்லது நுட்பமானதாக மனத்தில் தெரியும் இந்த மன ஈர்ப்புநிலையே பரந்த புற அண்ட அழிவு என்றழைக்கப்படுகிறது[1].(13) அப்போது சந்திரமாஸ் {சந்திரன்}, (இவ்வாறு) மனத்தை அதன் குணத்திற்குள் தானே ஈர்க்கும்படி செய்து அதை விழுங்குகிறது. சந்திரமாஸுக்குள் நுழைந்து மனம் இருப்பில் இல்லாமல் போகும்போது, ஈஸ்வரனுக்குச் சொந்தமான பிற குணங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.(14) சங்கல்பம் என்றழைக்கப்படும் இந்தச் சந்திரமாஸ், சித்தம் அல்லது தீர்மானம் என்ற அழைக்கப்படும் செயல்பாட்டில் ஈடுபடும் புலங்களை அழிப்பது என்ற மிகக் கடினமான செயலைச் செய்ய வேண்டிய காரணத்தால். மிக நீண்ட காலத்திற்குப் பிறகு, அந்தச் சங்கல்பம் ஈஸ்வரனின் ஆளுகைக்குள் கொண்டுவரப்படுகிறது. இதுவும் விளைந்த பிறகு அடையப்படும் நிலையென்பது உயர்ந்த அறிவு என்று சொல்லப்படுகிறது.(15) காலம் இந்த அறிவை விழுங்குகிறது, மேலும் ஸ்ருதியில் அறிவிக்கப்பட்டுள்ளதைப் போலக் காலமும் தனக்கான வேளையில் வலிமை அல்லது சக்தியால் விழங்கப்படுகிறது. எனினும் வலிமை அல்லது சக்தியானது, மீண்டும் காலத்தால் விழுங்கப்பட்டு, இறுதியில் வித்யையின் ஆளுகைக்குள் கொண்டுவரப்படுகிறது.(16)வித்யையைக் கொண்ட ஈஸ்வரன், அந்த இல்லாமையையே தன் ஆன்மாவுக்குள் விழுங்கிக் கொள்கிறான். அதுவே புலப்படாததும் உயர்ந்த பிரம்மமுமாகும். அதுவே நித்தியமானதும், உயர்ந்ததில் உயர்ந்ததுமாகும்.(17) இவ்வாறே இருப்பில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படுகின்றன.(18) உண்மையில், அறிவியல் காரியமும், (சாத்திரங்களின் துணையுடன்) உணரப்பட வேண்டியதுமான இஃது, உண்மையான அனுபவத்திற்குப் பிறகு, பரம ஆத்மாக்களைக் கொண்ட யோகியரால் இவ்வாறே அறிவிக்கப்பட்டிருக்கிறது.(19) இவ்வாறே, புலப்படாத பிரம்மமானது விரிந்து சுருங்கும் (அதாவது, படைத்து, அழிக்கும்) செயல்பாட்டை மீண்டும் மீண்டும் செய்கிறது. இவ்வாறே ஆயிரம் யுகங்களைக் கொண்ட பிரம்மனின் பகலும், இரவும் இருக்கின்றன” என்றார் {வியாசர்}[2].(20)

பிராமணக் கடமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 234-பிராமணர்களின் கடமைகள் குறித்தும், பிராமணர்களுக்குக் கொடையளித்து உயர்ந்த நிலையை அடைந்த மனிதர்களைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டது குறித்து நீ கேட்டதை இப்போது முழுமையாகச் சொல்லிவிட்டேன். ஒரு பிராமணனின் கடமைகள் யாவை என்பதை இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.(1) ஜாதகர்மம் தொடங்கி, சமாவர்த்தனம் வரையில் உள்ள விழாக்கள் அனைத்தின் சடங்குகளுக்குரிய வேள்விக் கட்டணம் {தக்ஷிணை}, வேதங்களில் தகுதிவாய்ந்த ஓர் ஆசானின் செயல்திறனைச் சார்ந்ததாகும்[1].(2) வேதங்கள் அனைத்தையும் கற்று, ஆசானிடம் வசிக்கும் காலத்தில் அவரிடம் பணிவுடன் நடந்து கொண்டு, ஆசானுக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, வேள்விகள் அனைத்தின் முற்றான அறிவுடன் அந்த இளைஞன் வீடு திரும்ப வேண்டும் {ஸமாவர்த்தனம் செய்து கொள்ள வேண்டும்}[2].(3) தனது ஆசானின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் அவன், நான்கு வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} ஏதாவதொன்றைப் பின்பற்றி, தன் உடலைக் கைவிடும்வரை அதற்குரிய கடமைகளை நோற்று வாழ வேண்டும்.(4) அவன் மனைவியருடன் சேர்ந்து இல்லற {கிருஹஸ்த} வாழ்வை வாழ்ந்து வாரிசுகளை உண்டாக்க வேண்டும், அல்லது பிரம்மச்சரியத்தை நோற்று வாழ வேண்டும்; அல்லது காட்டில் தன் ஆசானின் துணையுடனோ, ஒரு யதிக்கு {ஸந்நியாசிக்கு} விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைப் பயின்றோ வாழ வேண்டும்.(5)இல்லறவாழ்வானது {கிருஹஸ்தாஸ்ரமமானது}, பிற வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திற்கும் வேராகச் சொல்லப்படுகிறது. சுயக்கட்டுப்பாட்டை உடையவனும், உலகப் பொருட்களில் உள்ள பற்றுகள் அனைத்தையும் வென்றவனுமான ஓர் இல்லறத்தான் {கிருஹஸ்தன்} (வாழ்வின் பெரும் நோக்கத்தைப் பொறுத்தவரையில்) வெற்றியை அடைவான்.(6) ஒரு பிராமணன், பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலமும், வேத அறிவைப் பெறுவதன் மூலமும், வேள்விகளைச் செய்வதன் மூலமும், தான் பட்டிருக்கும் மூன்று கடன்களை அடைக்கிறான்[3]பிறகு அவன், தன் செயல்களின் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வேறு வாழ்வுமுறைக்குள் {ஆசிரமத்திற்குள்} நுழைய வேண்டும்.(7) அவன், பூமியில் எதை மிகப் புனிதமான தலம் என்று உறுதி செய்வானோ, அங்கே வசித்து, மேன்மையான நிலையை அடைவதற்காகப் புகழுக்கு வழிவகுக்கும் அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.(8) பிராமணர்களின் புகழானது, மிகக் கடுமையான தவங்களின் மூலமும், அறிவின் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெறுவதன் மூலமும், வேள்விகள் மூலமும், கொடைகள் மூலமும் அதிகரிக்கிறது.(9) உண்மையில் ஒரு மனிதன், இவ்வுலகில் தன் செயல்களோ, நினைவோ நீடிக்கும் வரை (மறுமையில்) அறவோரின் முடிவிலா உலகங்களில் இன்புறுகிறான்.(10)ஒரு பிராமணன், கல்வி கற்பிக்கவும், கற்கவும், பிற மக்களின் வேள்விகளை நடத்திக் கொடுக்கவும், தானே வேள்வி செய்யவும் வேண்டும். அவன் வீணான தானத்தை அளிக்கக்கூடாது, அல்லது பிறரிடம் இருந்து வீணான தானத்தை {வீணானப்ரதிக்ரகத்தைப்} பெறக் கூடாது.(11) ஒருவனுக்கு வேள்வியில் துணை புரிந்ததன் மூலமும், சீடனின் மூலமும், (திருமணத்தால்) மகளின் (உறவினர்) மூலமும் போதுமான அளவுக்குச் செல்வம் வருமென்றால், அது வேள்வி செய்வதற்கோ, தானமளிப்பதற்கோ செலவழிக்கப்பட வேண்டும். இந்த ஆதாரங்கள் எதனிலிருந்தும் வரும் செல்வம், ஒரு பிராமணனால் ஒருபோதும் தனியாக அனுபவிக்கப்படக்கூடாது[4].(12) இல்லற வாழ்வை வாழும் {கிருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ள} பிராமணன் ஒருவனுக்கு, தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், ஆசான், பெரியோர், நோய்வாய்ப்பட்டோர், பசித்தோருக்காக தானங்களை ஏற்று வாழ்வதைத் தவிர வேறு வழிமுறையேதும் கிடையாது[5].(13) புலப்படாத எதிரிகளின் மூலம் தண்டிக்கப்பட்டோருக்கு, அல்லது தங்கள் சக்திக்குரிய அளவில் அறிவை அடைய முயற்சிப்போருக்கு, சமைத்த உணவு உள்ளிட்ட தன் உடைமைகளில் இருந்து ஒருவன் தன்னால் இயன்ற அளவுக்கும் அதிகமாகத் தானமளிக்க வேண்டும்.(14) தகுதிநிறைந்த ஒரு மனிதனுக்குக் கொடுக்கப்படக்கூடாதது எதுவுமில்லை. நல்லோராகவும், ஞானிகளாகவும் இருப்பவர்கள், இந்திரனுக்குச் சொந்தமான உச்சைஸ்வர என்றழைக்கப்படும் குதிரைகளின் இளவரசனைப் பெறுவதற்கும் தகுந்தவர்களே[6].(15)உயர்ந்த நோன்புகளைக் கொண்டவனும், பணிவுடையவனுமான (மன்னன்) சத்யசந்தன், ஒரு பிராமணனைக் காப்பதற்காகத் தன் உயிர் மூச்சையே காணிக்கையளித்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(16) சங்கிருதியின் மகனான ரந்திதேவன், உயர் ஆன்ம வசிஷ்டருக்கு இளஞ்சூட்டுடன் கூடிய நீரை மட்டுமே கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்து, அங்கே உயர்ந்த வெகுமதிகளைப் பெற்றான்.(17) அத்ரியின் அரசமகனும் {ஆத்ரேயனும்}, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான இந்திரதமனன், தகுந்த ஒரு மனினுக்குப் பல்வேறுவகைச் செல்வங்களை அளித்து மறுமையில் பல்வேறு இன்ப உலகங்களை அடைந்தான்.(18) உசீனரனின் மகனான சிபி, ஒரு பிராமணனுக்காகத் தன் அங்கங்களையும், தன் மடியில் பிறந்த அன்புக்குரிய மகனையும் கொடுத்து இவ்வுலகில் இருந்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(19) காசியின் ஆட்சியாளனான பிரதர்த்தனன், ஒரு பிராமணனுக்குத் தன் கண்களையே கொடுத்து இம்மையிலும், மறுமையிலும் பெரும்புகழை அடைந்தான்.(20)

மன்னன் தேவாவிருதன், தங்கத்தாலான எட்டுக் கம்பிகளுடன் கூடியதும், விலைமதிப்புமிக்கதுமான ஓர் அழகிய குடையைக் கொடுத்து, தன் நாட்டு மக்கள் அனைவருடன் சேர்ந்து சொர்க்கத்திற்குச் சென்றான்.(21) அத்ரி குலத்தைச் சேர்ந்தவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான சாங்கிருதி, குணமற்ற {நிர்குண} பிரம்மத்தைக் குறித்த காரியத்தைத் தன் சீடர்களுக்குப் போதித்துப் பேரின்பத்திற்குரிய உலகங்களுக்குச் சென்றார்.(22) பேராற்றலைக் கொண்ட அம்பரீஷன், பதினோரு அர்ப்புதங்கள்{11,00,00,000} [7] அளவுக்குப் பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடுத்துத் தன் நாட்டு மக்கள் அனைவருடன் சொர்க்கத்திற்குச் சென்றார்.(23) காது குண்டலங்களைக் கொடுத்த சாவித்ரி, தன் சொந்த உடலையே கொடுத்த மன்னன் ஜனமேஜயன் ஆகிய இருவரும் உயர்ந்த பேரின்ப உலகங்களுக்குச் சென்றனர்.(24) விருஷாதபனின் மகனான யுவனாஸ்வன், பல்வேறு வகை ரத்தினங்கள், ஓர் அழகிய மாளிகை மற்றும் பல அழகிய பெண்களைக் கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(25)

விதேஹர்களின் ஆட்சியாளனான நிமி தன் நாட்டையும், ஜமதக்னியின் மகன் (ராமர் ), மொத்த பூமியையும், கயன், நகரங்கள் மற்றும் ஊர்கள் அனைத்துடன் கூடிய பூமியையும் பிராமணர்களுக்குக் கொடுத்தனர்.(26) ஒருகாலத்தில் மேகங்கள் பொழிவதை நிறுத்திக் கொண்டபோது, பிரம்மனுக்கே ஒப்பான வசிஷ்டர், ஒரு பிரஜாபதியைப் போல (தன் சக்தி மற்றும் அன்பின் மூலம்) அனைத்து உயிரினங்களையும் உயிரோடு பாதுகாத்தார்.(27) கரந்தனின் {கரந்தமனின்} மகனும், தூய்மையடைந்த ஆன்மா கொண்டவனுமான மருத்தன், தன் மகளை அங்கிரஸுக்குக் கொடுத்து விரைவாகச் சொர்க்கத்தை அடைந்தான்.(28) பாஞ்சாலர்களின் ஆட்சியாளனும், மேன்மையான புத்தியைக் கொண்டவனுமான பிரம்மதத்தன், நிதி என்றும் சங்கம் என்றும் அழைக்கப்பட்ட மதிப்புமிக்க இரு ரத்தினங்களைப் பிராமணர்களில் முதன்மையான சிலருக்குக் கொடுத்து பல்வேறு இன்ப உலகங்களை அடைந்தான்.(29) மன்னன் மித்ரஸஹன், தன் அன்புக்குரிய மனைவியான மதயந்தியை உயர் ஆன்ம வசிஷ்டருக்குக் கொடுத்து, அந்தத் தன் மனைவியுடனே சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(30)

அரசமுனியும், பெரும்புகழைக் கொண்டவனுமான சஹஸ்ரஜித், ஒரு பிராமணனுக்காகத் தன் அன்புக்குரிய உயிரையே கைவிட்டு, பேரின்ப உலகங்களுக்கு உயர்ந்தான்.(31) மன்னன் சத்யத்யும்னன், முத்கலருக்குத் தங்கத்தாலானதும் அனைத்து வசதிகளையும் கொண்டதுமான ஒரு மாளிகையை அளித்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(32) தியூதிமான் என்ற பெயரில் அறியப்பட்டவனும், பேராற்றலைக் கொண்டவனுமான சால்வர்களின் மன்னன், ரிசீகருக்குத் தன் மொத்த நாட்டையும் கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(33) அரசமுனியான மதிராஸ்வன், கொடியிடையாளான தன் மகளை ஹிரண்யஹஸ்தருக்குக் கொடுத்து, தேவர்களாலேயே பெரிதும் மதிக்கப்படும் உலகங்களுக்கு உயர்ந்தான்.(34) அரசமுனியும், பேராற்றலைக் கொண்டவனுமான லோம்பாதன், தன் மகள் சாந்தையை ரிஷ்யசிருங்கருக்குக் கொடுத்துத் தன் விருப்பங்கள் அனைத்தின் கனிகளையும் அடைந்தான்.(35)

பெருஞ்சக்தியைக் கொண்ட பிரஸேனஜித், கன்றுகளுடன் கூடிய ஒரு லட்சம் பசுக்களைக் கொடுத்து பேரின்பத்திற்குரிய சிறந்த உலகங்களுக்கு உயர்ந்தான்.(36) பெருமை கொண்டவர்களும், நன்கு அமைக்கப்பட்ட ஆன்மாக்களைக் கொண்டவர்களும், புலன்களைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தவர்களுமான இவர்களும், இன்னும் பிறரும், தானங்கள் மற்றும் தவங்களின் மூலம் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(37) அவர்களது புகழ் இந்தப் பூமி உள்ள வரையில் நீடித்திருக்கும். அவர்கள் அனைவரும், தாங்கள் கொடுத்த கொடைகள், வேள்விகள் மற்றும் சந்ததி உருவாக்கல் ஆகியவற்றின் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றனர்” என்றார் {வியாசர்}.(38)

ஞானத்தின் சிறப்பு! – சாந்திபர்வம் பகுதி – 235-பிராமணர்களின் கடமைகள் குறித்தும், ஞானத்தின் சிறப்பைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “வேதங்களிலும் அவற்றின் அங்கங்களிலும் தோன்றும் த்ரயி என்றழைக்கப்படும் அறிவு அடையப்பட வேண்டும். அவ்வறிவு ரிக்குகள், சாமங்கள், மற்றும் வர்ணம் என்றும் அக்ஷரம் என்றும் அழைக்கப்படும் அறிவியல்களில் இருந்து பெறப்படுகிறது. இதைத் தவிர யஜுஸ்கள் மற்றும் அதர்வணங்களும் இருக்கின்றன. இவற்றில் குறிப்பிடப்படும் ஆறு வகைச் செயல்களிலேயே {ஷட்கர்மங்களிலேயே}[1] தெய்வீகமானவன் வசிக்கிறான்.(1) வேத தீர்மானங்களை நன்கறிந்தோர், ஆன்ம அறிவைக் கொண்டோர், நற்குணத்தில் {சத்வ குணத்தில்} பற்றுடையோர், உயர்ந்த அருளைக் கொண்டோர் ஆகியோர் அனைத்துப் பொருட்களின் தோற்றத்தையும் கதியையும் புரிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(2) ஒரு பிராமணன் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நோற்றபடியே வாழ வேண்டும். அவன் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட நல்லோனைப் போலத் தன் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். அவன் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்காமல் தன் வாழ்வாதாரங்களை ஈட்ட வேண்டும்.(3) நல்லோர் மற்றும் ஞானியரிடமிருந்து அறிவைப் பெறும் அவன், தன் ஆசைகளையும், மனச்சார்புகளையும் கட்டுப்படுத்த வேண்டும். சாத்திரங்களை நன்கறிந்தவனான அவன், தனக்காக விதிக்கப்பட்டிருக்கும் அக்கடமைகளைப் பயின்று, நற்குணத்தினால் வழிநடத்தப்பட்டு உலகச் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். இல்லறவாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் பிராமணனும், ஏற்கனவே செல்லப்பட்ட ஆறு செயல்களைச் செய்ய வேண்டும்.(4)அந்தப் பிராமணன், நம்பிக்கை நிறைந்த இதயத்துடன் அவன் நன்கறியப்பட்ட ஐந்து வேள்விகளில் தேவர்களை வழிபட வேண்டும். பொறுமை, கவனம், தற்கட்டுப்பாடு, கடமைகளை அறிதல் ஆகியவற்றுடனும், தூய்மையடைந்த ஆன்மாவுடனும், மகிழ்ச்சி, செருக்கு, கோபம் ஆகியவை இல்லாமல் ஒருபோதும் தளர்வுறாமல் இருக்க வேண்டும்.(5) கொடைகள், வேத கல்வி, வேள்விகள், தவங்கள், பணிவு, வஞ்சனையின்மை, தற்கட்டுப்பாடு ஆகியவை ஒருவனின் சக்தியைப் பெருக்கி அவனது பாவங்களை அழிக்கின்றன.(6) புத்தியுடன் கூடிய ஒருவன், குறைந்த உணவை உண்டு தன் புலன்களை வெல்ல வேண்டும். உண்மையில், காமம் கோபம் ஆகிய இரண்டையும் அடக்கி, தன் பாவங்கள் அனைத்தையும் கழுவி கொண்டு பிரம்மத்தை அடைய அவன் முயற்சிக்க வேண்டும்.(7) அவன் நெருப்பையும், பிராமணர்களையும் வழிபட்டு, தேவர்களை வணங்க வேண்டும். மங்கலமற்ற அனைத்து வகை உரையாடல்களையும், நீதியற்றவையும், தீங்கிழைப்பவையுமான அனைத்து செயல்களையும் தவிர்க்க வேண்டும். இந்த அடிப்படை ஒழுக்கமே ஒரு பிராமணனுக்கு முதலில் விதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக ஞானத்தை அடைந்ததும் அவன், செயல்களிலேயே வெற்றி இருப்பதால் தன்னைச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்[2].(9)புத்தியுடன் கூடிய ஒரு பிராமணன், கடப்பதற்கு அரிதானதும், கடுமையானதும், பயங்கரமானதும், ஐம்புலன்களையே நீராகக் கொண்டதும், பேராசையையே ஆதாரமாகக் கொண்டதும், கோபத்தையே சகதியாகக் கொண்டதுமான வாழ்வெனும் ஓடையைக் கடப்பதில் வெல்கிறான்.(10) அனைத்துப் பொருட்களையும் கலங்கடிப்பதும், விதி சமைப்பவனிடம் இருந்து வெளிவரும் தடுக்கப்பட முடியாத பெருஞ்சக்தியைக் கொண்டதுமான காலமானது, அச்சுறுத்தும் தன்மையுடன் தன் பின்னால் நின்று கொண்டிருக்கிறது என்ற உண்மையைக் கண்டு அவன் தன் கண்களை மூடிக் கொள்ளக்கூடாது.(11) இயற்கையின் போக்கில் உண்டாகும் அண்டமானது இடையறாமல் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.(12) வருடங்களெனும் சுழிக்காற்றுகள் நிறைந்திருக்கும் பெரும் ஆறெனும் காலமானது {காலவெள்ளமானது}, மாதங்களையே தன் அலைகளாகவும், பருவகாலங்களையே தன் நீரோட்டமாகவும், பிறைநாட்களையே {பக்ஷங்களையே} தன்னில் மிதக்கும் புற்களாகவும், துரும்புகளாகவும்,(13) இமைகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் {இமைப்பொழுது / நிமிடங்களைத்} தன் நுரையாகவும், பகலிரவைத் தன் நீராகவும், ஆசை மற்றும் காமத்தை தன்னில் உள்ள பயங்கர முதலைகளாகவும், வேதங்கள் மற்றும் வேள்விகளைத் தன்னில் உள்ள தெப்பங்களாகவும்,(14) உயிரினங்களின் அறத்தையே தீவுகளாகவும், ஈட்டல் மற்றும் இன்பத்தைத் தன் நீரூற்றுகளாகவும், பேச்சில் வாய்மை மற்றும் விடுதலையை {முக்தியைத்} தன் கரைகளாகவும், நன்மையைத் தன்னில் மிதக்கும் மரங்களாகவும்,(15) யுகங்களைத் தன் போக்கில் நேரும் ஏரிகளாகவும் கொண்டுள்ளது. பிரம்மத்தைப் போன்றே உணரப்பட முடியாத தோற்றத்தைக் கொண்ட வலிமைமிக்க ஆறான காலமானது, விதிசமைப்பவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களையும் இடையறாமல் யமனின் வசிப்பிடத்தை நோக்கிச் சுமந்து செல்கிறது.(16)

ஞானமும், பொறுமையும் கொண்ட மனிதர்கள் அறிவு மற்றும் ஞானம் எனும் தெப்பங்களைப் பயன்படுத்தி, இந்தப் பயங்கர ஆற்றைக் கடப்பதில் எப்போதும் வெல்கிறார்கள். எனினும், (அந்தப் பயங்கர ஓடைக்குள் வீசப்படும்போது) இத்தகைய தெப்பங்கள் இல்லாமல் அறிவற்ற மூடர்களால் என்ன செய்ய முடியும்?(17) ஞானம் கொண்ட மனிதன் மட்டுமே இந்த ஓடையைக் கடப்பதில் வெல்கிறான்; அறிவுக்குப் பொருந்தும் ஞானம் இல்லாதவன் இவ்வாறு வெல்வதில்லை. முன்னவன் {ஞானம் கொண்டவன்} அனைத்தின் தகுதிகளையும், குறைகளையும் தொலைவிலிருந்தே கண்டு கொள்கிறான். (அதன்படியே அவன் பின்பற்றத் தகுந்ததைப் பின்பற்றுவதிலும், புறக்கணிக்கத்தக்கதைப் புறக்கணிப்பதிலும் வெல்கிறான்).(18) எனினும் நிலையற்ற குறை புத்தி கொண்டவனும், ஆசை மற்றும் பேராசை நிறைந்த ஆன்மாவைக் கொண்டவனுமான மனிதன், எப்போதும் ஐயங்களாலேயே நிறைந்திருக்கிறான். எனவே, ஞானமற்ற மனிதன் அந்த ஆற்றைக் கடப்பதில் ஒருபோதும் வெல்வதில்லை. மேலும் (ஐயத்துடன்) செயல்படாமல் அமர்ந்திருக்கும் அவனால் ஒருபோதும் அதைக் கடக்க முடியாது.(19) ஞானமெனும் தெப்பம் இல்லாத மனிதன், பெரும் குறைகளின் கனத்தைச் சுமப்பதால் மூழ்கிவிடுகிறான். ஆசையெனும் முதலையால் பற்றப்பட்ட ஒருவன், ஞானத்தைக் கொண்டிருப்பவனாக இருந்தாலும் கூடத் தன் தெப்பம் எதுவென ஒருபோதும் அறிந்து கொள்ள மாட்டான்.(20)

ஞானமும், புத்தியும் கொண்ட ஒரு மனிதன் இந்தக் காரணங்களுக்காகவே காலமெனும் ஓடையில் (மூழ்கிவிடாமல்) மிதக்க முயற்சிக்க வேண்டும். உண்மையில், பிரம்மத்தை அறிந்தவனே {காலவெள்ளத்தில்} தன்னை மிதக்கச் செய்து கொள்வதில் வெல்கிறான்.(21) உன்னதக் குலத்தில் பிறந்த ஒருவன், இந்தக் காரணங்களுக்காகவே, கற்பித்தலின் மூன்று கடமைகளையும், பிறரின் வேள்விகளை நடத்துவதையும், கொடைகளை ஏற்பதையும் தவிர்த்து, கற்றல், வேள்வி செய்தல், கொடை அளித்தல் என்ற மூன்று செயல்களை மட்டுமே செய்து அந்த ஓடையில் {கால வெள்ளத்தில்} மிதக்க முயற்சிக்க வேண்டும். அத்தகைய மனிதன், ஞானமெனும் தெப்பத்தின் உதவியால் அதை நிச்சயம் கடப்பான்.(22) ஒழுக்கத்தில் தூய்மையாக இருப்பவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், நல்ல நோன்புகளை நோற்பவனும், ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவனும், ஞானம் கொண்டவனுமான ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் நிச்சயம் வெல்வான்[3].(23) இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றுபவன், கோபம் மற்றும் பொறாமையை வென்று, ஏற்கனவே சொல்லப்பட்ட அறங்களைப் பயின்று, ஐந்து வேள்விகளில் தேவர்களை வழிபட்டு, தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்களுக்கு உணவளித்த பிறகு உண்பவனாக இருக்க வேண்டும்.(24)

நல்லோரால் பின்பற்றப்படும் கடமைகளையே அவன் பின்பற்ற வேண்டும்; ஆளுமை செலுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட மனிதனைப் போல அவன் தன் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்; அவன் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்காமல், நிந்திக்கப்படாத வழிமுறையைப் பின்பற்றித் தன் வாழ்வாதாரத்தை ஈட்ட வேண்டும்.(25) வேதங்கள் மற்றும் பிற அங்கங்களில் உள்ள ஞானத்தின் உண்மைகளை நன்கறிந்தவனும், நன்கு ஆளப்படும் ஆன்மாவைக் கொண்ட ஒருவனைப் போன்ற நடத்தையைக் கொண்டவனும், தெளிவான பார்வையைக் கொண்டவனும், தன் வகைக்காக விதிக்கப்பட்ட கடமைகளை நோற்பவனும், தன் செயல்களின் மூலம் கடமைகளில் {தர்மங்களில் / அறங்களில்} எந்தக் கலப்பையும் உண்டாக்காதவனும்,(26) சாத்திரங்களில் நிறுவப்பட்டுள்ளவற்றை நோற்பவனும், நம்பிக்கை நிறைந்தவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், ஞானம் கொண்டவனும், பொறாமை மற்றும் வன்மம் இல்லாதவனும், நீதி மற்றும் அநீதிக்கிடையிலான வேறுபாட்டை நன்கறிந்தவனுமான ஒருவன் தன் சிரமங்களை அனைத்தையும் கடப்பதில் வெல்கிறான்.(27) மனோவுறுதி கொண்டவனும், எப்போதும் கவனம் மிக்கவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், அறத்தை {நீதியை} அறிந்தவனும், தன் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், மகிழ்ச்சி, செருக்கு, கோபம் ஆகியவற்றைக் கடந்தவனுமான ஒரு பிராமணன், துயரால் ஒருபோதும் தளர்வடைய மாட்டான்.(28)

பழங்காலத்தில் ஒரு பிராமணனுக்கு இவ்வகை ஒழுக்க நடைமுறையே விதிக்கப்பட்டது. அவன் ஞானத்தை அடைய முயற்சி செய்து, சாத்திரச் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். இவ்வாறு வாழ்வதன் மூலம் அவன் நிச்சயம் வெற்றியை அடைவான்.(29) தெளிவான பார்வையில்லாத ஒருவன் {அறிவில்லாதவன்}, சரியானதையே செய்ய விரும்பினாலும் தவறையே செய்வான். அத்தகைய மனிதன், தன் அறிவைப் பயன்படுத்தினாலும், அநீதியின் இயல்பைக் கொண்ட அறச்செயல்களையே செய்கிறான்.(30) சரியானதைச் செய்ய விரும்பினாலும் அவன் தவறானதையே செய்கிறான். அதேபோலத் தவறானதைச் செய்ய விரும்பி, சரியானதைச் செய்கிறான். அத்தகைய மனதின் மூடனாவான். இருவகைச் செயல்களை அறியாதவன், மீண்டும் மீண்டும் மறுபிறவிகளையும் மரணங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார் {வியாசர்}.(31)

மோக்ஷகாரணம்! – சாந்திபர்வம் பகுதி – 236-முக்திக்கு வழிவகுக்கும் ஞானம்; யோக முன்னேற்றத்தின் பல்வேறு நிலைகள் ஆகியவற்றைச் சுகருக்கு விளக்கிச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “விடுதலை {முக்தி} விரும்பத்தக்கதானால் ஞானம் அடையப்பட வேண்டும். காலம் அல்லது வாழ்வெனும் ஓடையில் மேலும் கீழுமாக அலைக்கழிக்கப்படும் ஒருவன் கரையை அடைவதற்கு ஞானமே தெப்பமாகும் {படகாகும்}.(1) (உயிர் என்று அழைக்கப்படும் ஒன்று மற்றும் ஆன்மாவின் குணத்தைப் பொறுத்தவரையில்) ஞானத்தின் துணை கொண்டு குறிப்பிட்ட தீர்மானங்களை அடைந்த ஞானிகள், அந்த ஞானமெனும் தெப்பத்தைக் கொண்டு அறியாமை கொண்டோரைக் காலம் அல்லது வாழ்வெனும் ஓடையைக் கடக்க உதவ வல்லவர்களாக இருக்கிறார்கள். எனினும் அறியாமை கொண்டோர் தங்களையோ, பிறரையோ காத்துக் கொள்ள இயன்றவர்கள் அல்ல.(2) ஆசை மற்றும் பிற குறைகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டவனும், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுதலை அடைந்தவனுமான ஒருவன், இடம் {தேசம்}, செயல்கள் {கர்மா}, பற்று {அனுராகம்}, பொருட்கள் {திரவியம்}, வழிமுறைகள் {உபாயம்}, அழிவு {அபாயம்}, நிச்சயத்தன்மை {நிச்சயம்}, கண்கள், உணவு {ஆகாரம்}, ஒடுக்குமுறை {ஸம்ஹாரம்}, மனம் மற்றும் ஆய்வு {தரிசனம்} ஆகிய பனிரெண்டு யோகத் தேவைகளைக் கவனிக்க வேண்டும்[1].(3) மேன்மையான அறிவை அடைய விரும்புபவன், தன் புத்தியின் துணை கொண்டு, பேச்சு மற்றும் மனம் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டும். அமைதிநிலையை விரும்பும் ஒருவன் தன் அறிவின் துணை கொண்டு தன் ஆன்மாவைக் கட்டுப்படுத்த வேண்டும்.(4)கருணையுள்ளவனாகவோ, கொடூரனாகவோ, வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனாகவோ, ரிக்குகளை அறியாதவனாகவோ, அறவோனாகி வேள்விகளைச் செய்பவனாகவோ, இழிந்த பாவியாகவோ, ஆற்றல் மற்றும் செல்வத்தில் மேம்பட்டவனாகவோ, துன்பத்தில் மூழ்கியவனாகவோ ஒருவன் இருந்தாலும், (நான் சொல்லும் குணங்களான) இவற்றை {யோகத் தேவைகளை / யோக சாதனங்களை} நோக்கி மனத்தைத் திருப்பும் அவன், கடப்பதற்கரிதான வாழ்வெனும் பெருங்கடலை நிச்சயம் கடப்பான்.(5,6) யோகத்தின் மூலம் பிரம்மத்தை அடைவதன் விளைவுகளைக் குறித்துப் பேசாமல், ஆன்ம விசாரணையில் மட்டுமே தன்னை நிறுவி கொள்ளும் ஒருவன், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களின் தேவைகளைக் கடந்தவனாகிறான் என்று சொல்லப்படுகிறது.(7) ஜீவனைத் தன்னுள்ளே கொண்ட உடல் ஓர் அற்புதத் தேராகும். வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளைச் செய்கையில் அவை அதன் {உடலெனும் அந்த அற்புதத்தேரின்} உபஸ்தமாகவும் {அமரும் இடமாகவும்}, வெட்கம் அதன் வரூதமாகவும் {தேரைக் காக்கும் ஒரு பகுதியாகவும்}, உபாயம் மற்றும் அபாயம் ஆகியன அதன் கூபரமாகவும் {மூக்கணையாகவும்}, அபானன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்று அதன் அக்ஷமாகவும் {அச்சாகவும்}, பிராணன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்று அதன் யுகமாகவும் {நுகமாகவும்}, அறிவு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இருப்புக் காலம் ஆகியன குதிரைகளைக் கட்டும் அதன் நுகத்தடியாகவும் {பிடிப்பாகவும்}, கவனம் அதன் அழகிய வந்தூரமாகவும் {சேர்க்கையாகவும்}, நன்னடத்தையை ஏற்றல் அதன் நேமியாகவும் {கட்டாகவும்}, பார்வை, தீண்டல், மணம், கேள்வி ஆகியன அதன் குதிரைகள் நான்காகவும், ஞானம் அதன் நாபியாகவும் {குடமாகவும்}, சாத்திரங்கள் அனைத்தும் அதன் பிரடோதமாகவும் {சாட்டையாகவும்}, குறிப்பிட்ட சாத்திரத் தீர்மானங்களின் அறிவு அதன் சாரதியாகவும், ஆன்மா உறுதியான இருக்கையைக் கொண்ட அதன் பயணியாகவும், நம்பிக்கை மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியன அதன் முன்னோடியாகவும், துறவானது பின்னால் தொடர்ந்து வந்து நன்மை செய்யும் அதன் இணைபிரியாத் தோழனாகவும், தூய்மை அது செல்லும் பாதையாகவும், தியானம் (அல்லது பிரம்மத்தில் கலப்பது) இலக்காகவும் அமையும்போது, {உடலெனும்} அந்தத் தேரானது பிரம்மத்தை அடைந்து அங்கே பிரகாசத்துடன் ஒளிர்கிறது[2].(8-11)முதுமை, மரணம் ஆகியவற்றுக்கு மேலான பிரம்மமெனும் இலக்கை அடைவதற்காக இந்த உலகமெனும் காட்டைக் கடக்கும் வகையில் {உடலெனும்} தன் தேரை ஆயத்தம் செய்வதற்கான வேகமான வழிமுறைகளை நான் இப்போது சொல்லப் போகிறேன்.(12) ஒரு நேரத்தில் ஒரே பொருளில் மனத்தை நிலை நிறுத்துவது தாரணை என்றழைக்கப்படுகிறது[3]. நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை முழுமையாக நோற்கும் யோகியானவன் ஏழு வகைத் தாரணைகளைப் பயில்கிறான். மேலும், அருகாமை மற்றும் தொலைவு ஆகிய காரியங்களைப் பொருத்து அவற்றிலிருந்து பல்வேறு வகையான தாரணைகள் எழுகின்றன[4].(13) யோகியர் இதன் மூலம், பூமி {ப்ருதிவி}, காற்று {வாயு}, வெளி {ஆகாயம்}, நீர் {அப்பு}, நெருப்பு {தேயு}, நனவுநிலை {அகங்காரம்} மற்றும் புத்தியில் படிப்படியாகத் தேர்ச்சி பெறுகின்றனர். அதன் பிறகு அவன் படிப்படியாகப் புலப்படாததில் {அவ்யக்தத்தில்} தேர்ச்சியடைகிறான்.(14) விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி யோகத்தில் ஈடுபடும் குறிப்பிடப்பட்ட தனிநபர்களால் உணரப்படும் கருத்துகளின் வகையை முறையே நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். மேலும், தன்னையே உள்நோக்கும் ஒருவனால் (விதிகளின் படி) தொடங்கப்படும் யோகத்தில் கிடைக்கும் வெற்றியின் இயல்பைக் குறித்தும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்[5].(15)

தன் திரள் உடலைக் கைவிடும் யோகி, தன் ஆசானின் போதனைகள் பின்பற்றிப் பின்வரும் நுட்பமான வடிவங்களை வெளிப்படுத்தும் தன் ஆன்மாவைக் காண்கிறான். முதல் நிலையில் அவனுக்கு ஆகாயம் என்பது பனி நிறைந்த ஆவி {புகை} போன்ற ஒரு நுட்பமான பொருளால் நிரம்பியதாகத் தெரிகிறது.(16) உடலில் இருந்து விடுபட்ட ஆன்மாவின் வடிவமும் இத்தகையதாகவே இருக்கிறது. இந்தப் பனி மறையும்போது இரண்டாவது (அல்லது புதிய) தோற்றம் {உடல்} தென்படுகிறது.(17) அப்போது யோகி தன் இதயமெனும் ஆகாயத்தில் நீரின் வடிவத்தைக் காண்கிறான். அந்த நீர் மறைந்ததும், நெருப்பெனும் வடிவம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.(18) இது மறைந்ததும் உணரப்படும் வடிவம் நன்கு கடினமாக்கப்பட்டதும் பளபளப்பானதுமான ஓர் ஆயுதத்தைப் போன்ற பிரகாசமான காற்றாகும். காற்றால் வெளிப்படுத்தப்படும் அந்த வடிவம் மெல்ல மெல்ல சிலந்தி நூலை {ஆட்டு மயிரைப்} போல மெலிதாகிறது.(19) வெண்மையையும், காற்றின் நுட்பமான தன்மையையும் அடைந்த பிரம்மனின் ஆன்மா, மேலான வெண்மையையும், வெளியின் {ஆகாயத்தின்} நுட்பமான தன்மையையும் அடைவதாகச் சொல்லப்படுகிது.(20)

இந்தப் பல்வேறு சூழ்நிலைகளின் விளைவுகளை அவை நேர்வது போலவே உனக்குச் சொல்கிறேன்; கேட்பாயாக. பூமி எனும் பூதத்தை வெற்றிக் கொண்ட யோகியானவன், படைப்பு சக்தியின் தலைமைப் பொறுப்பை அடைகிறான்.(21) இரண்டாவது பிரஜாபதியைப் போல, எளிதில் கலக்கமடையாத முற்றிலும் அமைதியான இயல்பைக் கொண்ட அவனால் தன் உடலில் இருந்து பல்வேறு வகை உயிரினங்களைப் படைக்க முடியும். {வாயு எனும் பூதத்தை வென்று} காற்றின் தலைமைப் பொறுப்பை ஒருவன் அடைந்தால், அந்த மனிதனால், தன் கட்டைவிரல், அல்லது கை, அல்லது கால் ஆகியவற்றை மட்டுமே கொண்டு மொத்த பூமியையும் நடுங்கச் செய்ய முடியும்.(22) ஸ்ருதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளபடி இதுவே காற்றின் குணமாகும். வெளியின் தலைமைப் பொறுப்பை அடைந்த யோகி, அந்தப் பூதத்தில் கலப்பது அல்லது விரும்பியபடி மறைவது ஆகியவற்றை அடைந்ததன் விளைவால், வெளியிலேயே {ஆகாயத்திலேயே} பிரகாசமாக நிலைத்திருக்க முடியும்.(23) நீரின் தலைமைப் பொறுப்பை ஒருவன் அடைந்தால் (அகஸ்தியரைப் போல) ஆறுகள், தடாகங்கள் மற்றும் பெருங்கடலையே கூடக் குடித்துவிட முடியும். நெருப்பின் மீதான தலைமைப் பொறுப்பை அடையும் யோகி, பார்க்கப்பட முடியாத {புலப்படாத} வடிவத்தை அடைந்து பிராகாசிக்கிறான். அவன் தன்னுள் உள்ள நெருப்பை அணைத்தால் மட்டுமே புலப்படுவான். யோகி தன் தனிப்பட்ட நனவுநிலையை {அகங்காரத்தை} அழிப்பதில் வென்றால் இந்த ஐம்பூதங்களும் அவனது ஆளுகையின் கீழ் வரும்.(24) ஐம்பூதங்கள் மற்றும் தனிப்பட்ட நனவுநிலை {அகங்காரம்}[6] ஆகியவற்றின் ஆன்மாவான புத்தியானது யோகியால் வெல்லப்படும்போது, அவன் அனைத்தையும் அறிந்தவனாக, (ஐயம் மற்றும் நிச்சமின்மையில் இருந்து விடுபட்ட உணர்வுள்ளவனாக) தன்னிடம் வரும் அனைத்துப் பொருட்களின் முற்றான அறிவைக் கொண்டவனாக ஆகிறான்.(25)

இதன் விளைவாகப் புலப்படும் நிலையில் இருக்கும் ஒன்று {ஸ்தூலமாகக் காணப்படும் ஆத்ம ரூபம்}, எதில் இருந்து இந்த உலகம் உண்டாகி புலப்பட்ட நிலையை அடைந்ததோ அந்தப் புலப்படாதது {ஸுக்ஷமம்}, அல்லது பரமாத்மாவுக்குள் கலக்கிறது[7].(26) புலப்படாதது குறித்த அறிவியலை இப்போது விரிவாக விளக்கப் போகிறேன் கேட்பாயாக. ஆனால் அனைத்திற்கும் முன்பாகச் சாங்கிய தத்துவ அமைப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி புலப்படும் அனைத்தையும் குறித்து என்னிடம் இருந்து கேட்பாயாக.(27) யோகம் மற்றும் சாங்கியம் என்ற ஈரமைப்புகளிலும் {கோட்பாடுகளிலும்}, இருபத்தைந்து வகை அறிவுகள் {தத்துவங்கள்} கிட்டத்தட்ட இதே வகையிலேயே சமமானவையாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றின் முக்கியப் பண்புகளைக் குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக.(28) எது புலப்படுவது {விக்தம்} என்று சொல்லப்படுகிறதோ அது பிறப்பு, வளர்ச்சி, சிதைவு {மூப்பு}, மற்றும் மரணம் என்ற நான்கு பண்புகளைக் கொண்டதாக இருக்கிறது.(29) எதில் இந்தப் பண்புகள் இல்லையோ அது புலப்படாதது {அவ்யக்தம்} என்று சொல்லப்படுகிறது. வேதங்களிலும், அறிவியல்களிலும் குறிப்பிடப்படும் ஈரான்மாக்கள் இவற்றின் அடிப்படையிலானவையே.(30)முதலாவதானது (ஜீவாத்மா என்றழைக்கப்படுவது) ஏற்கனவே குறிப்பிடப்பட்ட நான்கு பண்புகளையும், (அறம், பொருள், இன்பம், வீடு என்ற) நான்கு நோக்கங்களுக்கான ஏக்கத்தையும் கொண்டதாகும். ஆன்மாவானது புலப்படுவது (வ்யக்தம்) என்றழைக்கப்படுகிறது, மேலும் அது புலப்படாததிலிருந்து (பரமாத்மாவிலிருந்து) {அவ்யக்தத்திலிருந்து} பிறந்ததுமாயிருக்கிறது. அது புத்தியுள்ளதாகவும், புத்தியில்லாததாகவும் இருக்கிறது.(31) இவ்வாறே நான் சத்வம் (செயலற்ற பொருள்) {புத்தி}, க்ஷேத்ரக்ஜ்ஞன் (பொருளற்ற ஆவி) {ஜீவாத்மா} ஆகியவற்றைக் குறித்துச் சொன்னேன்[8]. வேதங்களில் இந்த இருவகை ஆன்மாக்களும் புலன்களுக்குரிய பொருட்களில் பற்றுடையவையாகவே சொல்லப்பட்டுள்ளன.(32) ஒருவன் புலன்நுகர் பொருட்களில் இருந்து தொடர்பறுந்தவனாகத் தனிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதே சாங்கியர்களின் கோட்பாடாகும். பற்று, செருக்கு ஆகியவற்றில் இருந்து விடுபட்டவனும், இன்பம் துன்பம், வெப்பம் குளிர், ஆகிய முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், கோபத்திற்கோ, வெறுப்புக்கோ வசப்படாதவனும், ஒருபோதும் பொய்மை பேசாதவனும்,(33) அவதூறு கூறப்பட்டாலோ, தாக்கப்பட்டாலோ கூட அவதூறு செய்தவன் அல்லது தாக்கியவனிடம் நட்பை வெளிப்படுத்துபவனும், பிறருக்கு ஒருபோதும் தீங்கு நினையாதவனும், சொல், செயல் மற்றும் சிந்தை ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்துபவனும்,(34) அனைத்து உயிரினங்களிடமும் சமமாக நடந்து கொள்பவனுமான யோகி பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்.பூமி சார்ந்த பொருட்கள் எதனிலும் ஆசையை வளர்க்காதவனும், வருவனவற்றை விருப்பமுடன் ஏற்பவனும், தன் உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே பூமிசார்ந்த பொருட்களைச் சார்ந்திருப்பவனும்,(35) பேராசையில் இருந்து விடுபட்டவனும், துயரங்கள் அனைத்தையும் விரட்டியவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், அவசியமான செயல்கள் அனைத்தையும் செய்பவனும், மேனியின் தோற்றம் மற்றும் உடுப்பு {உடை அலங்காரங்களைக்} கருத்தில் கொள்ளாதவனும், (வாழ்வின் உண்மையான நோக்கங்களில் அர்ப்பணிப்புடன்) தன் புலன்கள் அனைத்தையும் குவித்தவனும், நிறைவேறாத காரியம் ஏதும் இல்லாதவனும்,(36) அனைத்து உயிரினங்களிடமும் சமமான நட்பைக் கொண்டவனும், மண்ணாங்கட்டியையும், தங்கக்குவியலையும் சமமான கண்ணுடன் கருத்தில் கொள்பவனும், நண்மன் மற்றும் எதிரிக்கிடையில் சமமான மனநிலையைக் கொண்டவனும், பொறுமையைக் கொண்டவனும், புகழையும் பழியையும் ஒன்றாகவே ஏற்பவனும்,(37) ஆசைக்குரிய பொருட்கள் அனைத்திலும் உள்ள ஏக்கங்களில் இருந்து விடுபட்டவனும், பிரம்மச்சரியத்தைப் பயில்பவனும், தன் நோன்புகள் மற்றும் பயிற்சிகள் அனைத்திலும் உறுதியாகவும், நிலையாகவும் இருப்பவனும், இவ்வண்டத்தில் உள்ள எந்த உயிரினத்திடமும் வன்மமோ, பொறாமையோ இல்லாதவனுமான ஒரு யோகியானவன், சாங்கிய அமைப்புமுறையின்படி வீடுபேற்றை {விடுதலையை / முக்தியை} அடைவதில் வெல்கிறான்.(38)

(பதஞ்சலியின் அமைப்பு முறை அல்லது) யோகத்தின் மூலம் விடுதலையை {முக்தியை} வெல்லும் மனிதனின் வழிகள் மற்றும் வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. (தொடக்கப் படிநிலைகளில்) யோகப் பயிற்சி அளிக்கும் பலத்தைக் கடந்து செயல்படுபவன், விடுதலை {முக்தி} அடைவதில் வெல்கிறான்[9].(39) (சாங்கியம், யோகம் என்ற அமைப்புமுறைகளின்படி விடுதலையை அடைவது என்பது குறித்துப்) பேசுபவர்களால் வெவ்வேறானவையாகச் சொல்லப்படும் (ஆனால் உண்மையில் ஒன்றேயான) இந்தக் காரியங்களைக் குறித்து உள்ளபடியே சொல்லிவிட்டேன்[10]. இவ்வாறே ஒருவன் முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடக்கலாம். இவ்வாறே ஒருவன் பிரம்மத்தையும் அடையலாம்” என்றார் {வியாசர்}.(40)

யார் பிராமணன்? – சாந்திபர்வம் பகுதி – 237-முக்திக்கு வழிவகுக்கும் ஞானத்தின் தன்மையைக் குறித்து வியாசரிடம் விசாரித்த சுகார்; செயல்கள் கட்டாயக் கடமையா, அல்லது விருப்பத்திற்குரியதா என்பது குறித்துச் சொன்ன வியாசர், உயிரினங்களின் உயர்வு தாழ்வையும், ஞானத்தின் சிறப்பையும் சுகருக்குச் சொன்னது…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “தியானம் செய்ய வல்லவனான ஒருவன், வாழ்வெனும் பெருங்கடலில், மேலும் கீழும் சுமந்து செல்லப்படும்போது,  (வேறு எந்த ஆதரவையும் பற்றிக்கொள்வதற்காக அங்கேயும், இங்கேயும் தன் கரங்களையும் நீட்டாமல்) அறிவெனும் தெப்பத்தைப் பற்றிக் கொண்டு, விடுதலையை {முக்தியை} அடைவதற்காக அந்த அறிவையே கடைப்பிடிக்கிறான்” என்றார்.(1)

சுகர் {வியாசரிடம்}, “அந்த அறிவானது யாது? அது, பிழைகள் அகன்று உண்மை காணப்படும்போது அடையப்படும் கல்வியா? அல்லது புரிந்து கொள்ளப்படும், அல்லது அடையப்படும் எந்தப் பொருளின் உதவியின் மூலமாவது செய்யப்படும், அல்லது அடையப்படும் செயல்களைக் கொண்ட கடமைகளின் வழிமுறையா {பிரவிருத்தியா}? அல்லது, ஆன்ம அழிவை நாடுவதன் மூலம், செயல்களைத் தவிர்த்தல் என்றழைக்கப்படும் கடமைகளின் வழிமுறையா {நிவிருத்தியா}? பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய இரண்டும் எதன் உதவியின் மூலம் தவிர்க்கப்படுமோ அஃது என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார் {சுகர்}[1].(2)

வியாசர் {சுகரிடம்}, “உண்மையில் எந்தப் புகலிடமோ, அடித்தளமோ இல்லாமல், அனைத்தும் தங்கள் இயல்பின் {ஸ்வபாவத்தின்} விளைவாலேயே நிலைத்திருக்கின்றன என்று நம்பும் {சூன்யவாதியான} மூடன், சீடர்களின் நாட்டத்தை இத்தகைய போதனையால் நிறைத்து, தன் வாதத் திறமையால் அந்தச் சீடர்கள் முன்வைக்கும் முற்றிலும் முரண்பட்ட காரணங்களைப் புறக்கணித்து, எந்த உண்மையையும் அடையாமல் போகிறான்[2].(3) மேலும், பொருட்களின் இயல்பின் {ஸ்வபாவத்தின்} மூலமே அனைத்துக் காரணங்களும் உண்டாகின்றன என்று உறுதியாக நம்புபவர்கள் {லோகாயதவாதிகள்}, (ஞானமுள்ள) மனிதர்களின், அல்லது (அவர்களுக்குப் போதிக்கவல்ல) முனிவர்களின் கூற்றைக் கேட்டாலும் உண்மையை அடைவதில் தவறுகிறார்கள்.(4) இந்த இரு கோட்பாடுகளில் ஒன்றைப் பின்பற்றி (தங்கள் ஊகங்களை) நிறுத்துபவர்களும், உண்மையில் இயற்கையே {அண்டத்திற்கான} காரணம் எனக் கருதுபவர்களுமான மனிதர்கள் {சூன்யவாதிகளும், லோகாயதவாதளும்}, தங்களுக்கான நன்மையை அடைவதில் ஒருபோதும் வெல்வதில்லை[3].(5)இயற்கையே {ஸ்வபாவமே} (படைப்பிற்கும், அது நீடித்திருப்பதற்கும்) காரணம் என்ற இந்த நம்பிக்கையானது, பிழையின் ஆதிக்கத்தினால் மனத்தில் எழுந்து, அதை {அந்த நம்பிக்கையைப்} பேணி வளர்ப்பவர்களுக்கு அழிவைக் கொண்டு வருகிறது. பொருட்கள் தங்கள் சொந்த இயல்பிலேயே இருக்கின்றன என்றும்{1}, அவை {பொருட்கள்} (தங்கள் சொந்த இயல்பின் விளைவால்) தங்களுக்கு முந்தைய வேறெதனிலும் இருந்து உண்டாகின்றன என்றும்{2} {வேறு சொற்களில் ஸ்வபாவவாதம் என்றும் பரிபாவவாதம் என்றும்} சொல்லப்படும் இந்த இரு கோட்பாடுகளைக் குறித்த உண்மையை இப்போது கேட்பாயாக[4].(6) ஞானிகள், வேளாண்மை, உழவு (என்ற வழிமுறைகளின் மூலம்) பயிர் சேகரிப்பு, வாகனங்கள், இருக்கைகள், விரிப்புகள், வீடுகள் அமைத்தல் ஆகியவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.(7) மேலும் அவர்கள், இன்பத்தோட்டங்கள் அமைத்தல், மாடமாளிகைகளைக் கட்டுதல், அனைத்து வகை நோய்களுக்குமான மருந்துகளைத் தயாரித்தல் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.(8) (வழிமுறைகளைப் பயன்படுத்தும்) ஞானமே காரியங்கள் கனிவதற்கு வழிவகுக்கிறது. ஞானமே நன்மையான விளைவுகளை வென்றெடுக்கிறது. மன்னர்கள், தாங்கள் ஆட்சி செய்யும் மனிதர்களைப் போன்ற அதே பண்புகளைக் கொண்டிருந்தாலும், இந்த ஞானமே அரசுரிமையை அனுபவிக்கவும், அரசைச் செலுத்தவும் அவர்களுக்குத் தகுதியைக் கொடுக்கிறது[5].(9) இந்த ஞானத்தின் மூலமே உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் அடையாளங்காணப்படுகிறார்கள். படைக்கப்பட்ட பொருட்களில் மேன்மையானவையும், தாழ்ந்தவையும் இந்த ஞானத்தின் மூலமே புரிந்து பார்க்கப்படுகிறது. இந்த ஞானம் அல்லது அறிவே அனைத்துப் பொருட்களுக்கும் உயர்ந்த புகலிடமாக இருக்கிறது[6].(10)படைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகைப் பொருட்கள் {உயிரினங்கள்} அனைத்தும் நான்கு வகைப் பிறவிகளைக் கொண்டிருக்கின்றன. அவை கன்றீனும் பாலூட்டிகள் {ஜராயுஜம்}, முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை {அண்டஜம்}, காய்கறிகளில் பிறப்பவை {தாவரங்கள் / உத்பிஜ்ஜம்}, {வியர்வை, மலம் போன்ற} கழிவில் பிறப்பவை {ஸ்வேதஜம்} ஆகியவையாகும். மேலும் உயிரினங்களில் அசையாதனவற்றை விட அசைவன மேன்மையானவையாக அறியப்பட வேண்டும். (புத்தியில்லாத பொருளில் இருந்து) வேறுபட்டிருப்பதும், அறிவுக்குப் பொருத்தமானதுமான புத்தியுள்ள ஆற்றலே (புத்தியில்லாத) பொருளைவிட மேன்மையானதாகக் கருதப்பட வேண்டும்[7].(12) எண்ணற்றவையாக இருக்கும் அசையும் உயிரினங்களில் பல கால்களைக் கொண்டவை மற்றும் இரு கால்களைக் கொண்டவை என்ற இரு வகைகள் உள்ளன. எனினும், பிந்தையதே {இரு கால்களைக் கொண்டதே} முந்தையதைவிட மேன்மையானதாகும்.(13) மேலும் இரு கால் கொண்ட உயிரினங்களில் நிலத்தில் வாழ்பவை, பிறவற்றில் வாழ்பவை என்று ஈரினங்கள் உள்ளன. இவற்றில் முந்தையதே பிந்தையதைவிட மேன்மையானதாகும். மேன்மையானவை சமைக்கப்பட்ட பல்வேறு வகை உணவுகளை உண்கின்றன.(14) நிலத்தில் திரியும் இரு கால் உயிரினங்களிலும், நடுத்தரமானவை, முதன்மையானவை என்று இரு வகைகள் உள்ளன. இவற்றில், தங்கள் வகைக்கான கடமைகளை நோற்பதன் விளைவால் நடுத்தரமானவையே {முதன்மையானவற்றைவிட} மேன்மையானவை என்று கருதப்படுகின்றன[8].(15)நடுத்தரமானவர்களிலும், கடமைகளை அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று இருவகையாகச் சொல்லப்படுகின்றனர். அவர்களில், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற வேறுபாட்டை அறிந்திருப்பதால் முந்தைய வகையினரே, பிந்தையவர்களைவிட மேன்மையானவர்களாவர்.(16) கடமைகளை அறிந்தவர்களிலும், வேதங்களை அறிந்தவர்கள், அவற்றை அறியாதவர்கள் என இருவகையினராகச் சொல்லப்படுகின்றனர். அவர்களில் முந்தைய வகையினரிலேயே வேதங்கள் வசிப்பதால் அவர்களே முதன்மையானவர்களாகச் சொல்லப்படுகின்றனர்[9].(17) வேதங்களை அறிந்தோரிலும், வேதங்களை உரைப்போர், அல்லாதோர் என இரு வகையினர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்களில் வேதங்களை, அவற்றின் கடமைகள் மற்றும் அவற்றில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள், அந்தச் சடங்குகள் மற்றும் கடமைகளின் கனிகள் ஆகியவற்றை முழுமையாக அறிந்த முந்தைய வகையினரே, அந்தக் கடமைகளையும், சடங்குகளையும் வெளியிடுபவர்களாக இருப்பதால் அவர்களே மேன்மையானவர்களாகச் சொல்லப்படுகின்றனர். உண்மையில், கடமைகள் மற்றும் அவற்றில் உள்ள விதிகள் ஆகியவற்றுடன் சேர்ந்த வேதங்கள் அனைத்தும் அவர்களில் இருந்து பாய்வதாகச் சொல்லப்படுகிறது.(18,19) வேத ஆசான்களிலும், ஆன்மாவை அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று இருவகையினர் உள்ளனர். இவர்களில், பிறப்பு மற்றும் மரணம் என்பவை என்ன என்ற அறிவைக் கொண்டிருப்பதால் முந்தையவர்களே மேன்மையானவர்களாவர்[10].(20)கடமைகளைப் பொறுத்தவரையில், அவை (பிரவிருத்தி மற்றும் நிவிருத்தி என்று) இரு வகைகளில் இருக்கின்றன. கடமைகளை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகவோ அண்ட அறிவைக் கொண்டவனாகவோ கருதப்படுகிறான். அத்தகைய மனிதனே துறவியாவான். அத்தகைய மனிதனே தன் நோக்கங்களை நிறைவேற்றுவதில் உறுதியுள்ளவன் ஆவான். அத்தகைய மனிதனே உண்மை நிறைந்தவனும், (அகம் மற்றும் புறம் ஆகிய இரண்டிலும் தூய்மையானவனும்), {யோக சக்தியால் உண்டாகும்} பலம்படைத்தவனுமாவான்.(21) (பிரவிருத்தியின் கடமைகளை மட்டுமே அறிந்தவனாக இல்லாமல்} பிரம்ம அறிவுக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஒரு பிராமணனாக அவனைத் தேவர்கள் அறிவார்கள். அத்தகைய மனிதன் வேதங்களையும் நன்கறிந்தவனாக, ஆன்ம கல்வியில் மெய்யுறுதியான அர்ப்பணிப்புடன் கூடியவனாகவும் இருப்பான்.(22) உண்மையான ஞானத்தைக் கொண்டவர்கள் தங்கள் ஆன்மாவானது, அகம், புறம் என்ற இரண்டிலும் இருப்பதைக் காண்பார்கள். ஓ! குழந்தாய், அத்தகை மனிதர்களே உண்மையில் மறுபிறப்பாளர்கள், மேலும் அத்தகைய மனிதர்களே தேவர்களும் ஆவர்[11].(23) உயிரினங்களின் இந்த உலகம் இவர்களையே சார்ந்திருக்கிறது, இவர்களிலேயே மொத்த அண்டமும் வசிக்கிறது. இவர்களது மகிமைக்கு இணையான வேறேதும் கிடையாது.(24) பிறப்பு, இறப்பு, வேறுபாடுகள், அனைத்து வகைச் செயல்கள் ஆகியவற்றைக் கடந்த அவர்கள் நால்வகை உயிரினங்களின் தலைவர்களும், சுயம்புவுக்கே இணையானவர்களும் ஆவர்” என்றார் {வியாசர்}[12].(25)

யுக வேற்றுமை! – சாந்திபர்வம் பகுதி – 238-செயல்கள், ஞானம் மற்றும் யுக வேற்றுமைகள் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்..

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “பிராமணர்கள் கட்டாயமாகச் செய்ய வேண்டிய செயல்களாக இவையே விதிக்கப்பட்டிருக்கின்றன. ஞானம் கொண்ட ஒருவன் எப்போதும் (பரிந்துரைக்கப்பட்ட) செயல்களின் மூலமே வெற்றியை அடைவான்.(1) செயல்களில் ஐயம் எழவில்லையெனில், அப்போது செய்யப்படும் செயல்கள் நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும். செயல்கள் கட்டாயமானவையா, வாய்ப்பிருந்தால் மட்டும் செய்யப்படுபவையா {கட்டாயமில்லாதவையா} என்ற ஐயமே இங்கே குறிப்பிடப்படுகிறது[1].(2) (செயல்களின் உண்மைப் பண்பில் கொள்ளும் ஐயமான) இதைப் பொறுத்தவரையில், (எதனைக் கொண்டு மட்டுமே பிரம்மமோ, விடுதலையோ {முக்தியோ} அடையப்படுமோ அந்த) ஞானத்தை அடைவதற்கு மனிதனுக்குச் செயல்கள் விதிக்கப்பட்டிருக்கிறதென்றால், அவை (வாய்ப்புள்ளபோது செய்யப்படக்கூடியவையாக இல்லாமல்) கட்டாயமானவையாகவே கருதப்பட வேண்டும். உள்ளுணர்வுகள் மற்றும் அனுபவத்தின் வெளிச்சத்தில் நான் அஃதை இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக[2].(3) செயல்களைப் பொறுத்தவரையில் சில மனிதர்கள், முயற்சியே {புருஷ ஸாமர்த்தியமே} அவற்றின் காரணம் என்று சொல்கின்றனர். பிறரோ தேவையே {தெய்வமே / காலமே} அதன் காரணம் என்கின்றனர். இன்னும் பிறர், இயல்பே {ஸ்வபாவமே} அதன் காரணம் என்கின்றனர்.(4) சிலரோ முயற்சி மற்றும் தேவை {காலம்} ஆகிய இரண்டின் விளைவே செயல்கள் என்று சொல்கின்றனர். மேலும் சிலர், காலம், முயற்சி, இயல்பு ஆகியவற்றில் இருந்து செயல்கள் பாய்கின்றன என்று சொல்கின்றனர். (முயற்சி, தேவை {காலம்} மற்றும் இயல்பு ஆகிய) இம்மூன்றில் (வேறு இரண்டும் காரணமல்ல, அம்மூன்றில்) ஒன்று மட்டுமே காரணம் என்று சிலர் சொல்கின்றனர். இவை மூன்றும் சேர்ந்துதான் காரணம் உண்டாகிறது என்று சிலர் கருதுகிறார்கள்[3].(5)செயல்களைச் செய்வதில் ஈடுபடும் சில மனிதர்கள், அனைத்துப் பொருட்களையும் பொறுத்த வரையில், அவை {பொருட்கள்} இருக்கின்றன, அவை இல்லை, அவை இருக்கின்றன என்று சொல்ல முடியாது, அவை இல்லை என்று சொல்லமுடியாது, இருக்கின்றன என்று சொல்ல முடியாது என்பதல்ல, மற்றும் இறுதியாக இல்லை என்று சொல்ல முடியாது என்பதல்ல என்று சொல்கிறார்கள். (இவையே மனிதர்களால் சொல்லப்படும் பல கருத்துகளாகும்). எனினும், யோகியராக இருப்பவர்கள், பிரம்மத்தையே அண்டத்தின் காரணமாகக் காண்கிறார்கள்[4].(6) திரேத, துவாபர, கலி யுகங்களைச் சேர்ந்த மனிதர்கள் ஐயங்களால் அகத்தூண்டல் பெற்றவர்கள் ஆவர். எனினும் கிருத யுகத்தைச் சேர்ந்த மனிதர்கள் தவங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களாக, அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்களாக, அறம் நோற்பவர்களாக இருந்தார்கள்[5].(7) அந்த யுகத்தில் மனிதர்கள் அனைவரும், ரிக்குகள், சாமங்கள் மற்றும் யஜுஸ்கள் ஆகியவை வெளிப்படையாகவே வெவ்வேறானவையாக இருந்தாலும் ஒன்றெனவே கருதினார்கள். ஆசை மற்றும் பேராசையை ஆய்வு செய்த அவர்கள் தவத்தை மட்டுமே வழிபாடு செய்தனர்[6].(8) தவப்பயிற்சிகளை அர்ப்பணிப்புடனும், அவற்றில் நிலையுறுதியுடனும், கடுமையுடனும் நோற்கும் ஒருவன், தன் ஆசைகள் அனைத்தின் கனிகளைத் தவங்களால் மட்டுமே அடைகிறான்.(9) தவத்தின் மூலம் ஒருவன் அண்டத்தைப் படைத்தவனின் நிலையை அடைகிறான். தவத்தின் மூலம் அனைத்துப் பொருட்களின் பலமிக்கத் தலைவனாகிறான்[7].(10)அந்தப் பிரம்மம், வேதத் தீர்மானங்களில் {கர்மகாண்டத்தில்} விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வளவையும் மீறி, அந்தத் தீர்மானங்களை அறிந்தவர்களால் கூடப் பிரம்மம் உணரப்பட முடியாததாக இருக்கிறது. மீண்டும் அந்தப் பிரம்மம் வேதாந்தத்தில் அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், பிரம்மத்தைச் செயல்களின் வழிமுறைகளால் காண முடியாது[8].(11) பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வேள்வியானது, யபத்தை (தியானம் மற்றும் ஜெபத்தைக்) கொண்டது, க்ஷத்திரியர்களுக்கானது {க்ஷத்திரியர்களுக்கான வேள்வியானது} தேவர்களை நிறைவு செய்வதற்கு (தூய) விலங்குகளைக் கொல்வதைக் கொண்டது; வைசியர்களுக்கானது பயிர்களை உண்டாக்குதல் மற்றும் வீட்டு விலங்குகளை வளர்த்தலைக் கொண்டது; சூத்திரர்களுக்கானது மூவகையினருக்குத் தொண்டு செய்வதைக் கொண்டது.(12) ஒருவன் தனக்காக விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நோற்பது, வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களைக் கற்பது ஆகியவற்றின் மூலம் ஒரு துவிஜன் {இரு பிறப்பாளன்} (மறுபிறப்பாளன்) ஆகிறான். ஒருவன் வேறு எந்தச் செயலையும் செய்கிறானோ இல்லையோ, அவன் அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாவதன் மூலம் ஒரு பிராமணனாகிறான்.(13) திரேதா யுகத்தின் தொடக்கத்தில் வேதங்கள், வேள்விகள், வர்ணபேதங்கள் மற்றும் பல்வேறு வகையான வாழ்வுமுறைகள் அதனதன் வகையில் முழுமையாக இருந்தன. எனினும், துவாபர யுகத்தில் வாழ்நாள் காலத்தின் அளவு குறைந்ததன் விளைவால் அவையும் சரிவை அடைந்தன.(14) துவாபர யுகத்திலும், கலியுகத்திலும் வேதங்கள் மனக்கலக்கத்தால் மூழ்கடிக்கப்படுகின்றன. மேலும் கலியுகத்தின் முடிவில், அவை கண்ணுக்காவது தென்படுமா என்பது ஐயம்நிறைந்த ஒன்றுதான்.(15)

அந்த யுகத்தில் ஒவ்வொரு வகைக்குமுரிய கடமைகள் மறைந்து, மனிதர்கள் கொடுமையால் பீடிக்கப்படுகிறார்கள். பசு, பூமி, நீர் மற்றும் (மருத்துவக் குணம் கொண்ட உண்ணத்தக்க) மூலிகைகளில் அவற்றின் சாறு கொண்ட தன்மை மறைந்து போகின்றன[9].(16) (உலகளாவிய) கொடுமையின் மூலம் வேதங்கள் மறைகின்றன, அவற்றோடு சேர்ந்து, அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் நான்கு வாழ்வுமுறைகளுக்கான கடமைகளும் மறைந்து போகின்றன. தங்கள் வகைக்கான கடமைகளைச் செய்து கொண்டிருப்பவர்கள் பீடிக்கப்படுகின்றனர், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் இழிவான மாற்றத்தை அடைகின்றன.(17) சொர்க்கத்தின் மழை பூமியில் பொருட்கள் அனைத்தையும் வளரச் செய்வதைப் போலவே வேதங்களும் ஒவ்வொரு யுகத்திலும் அங்கங்கள் அனைத்தையும் வளரச்செய்கின்றன.(18) காலம் பல்வேறுவடிவங்களை ஏற்கிறது என்பதில் ஐயமில்லை. அதற்குத் தொடக்கமோ முடிவோ கிடையாது. காலமே அனைத்து உயிரினங்களையும் படைத்து அவற்றை மீண்டும் விழுங்குகிறது. நான் இது குறித்து உன்னிடம் ஏற்கனவே பேசியிருக்கிறேன்.(19) அனைத்து உயிரினங்களின் தோற்றுவாயும் காலமே ஆகும்; காலமே அவற்றை வளரச் செய்கிறது; காலமே அவற்றை அழிக்கவும் செய்கிறது; இறுதியாகக் காலமே அவற்றின் ஆட்சியாளனாகவும் இருக்கிறது. முடிவிலா வகைகளிலான உயிரினங்கள், (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலியவை போன்ற) முரண்பட்ட இரட்டைகளுக்கு ஆட்பட்டு, (பரப்பிரம்மத்தால் விதிக்கப்பட்டதைப்போலவே இருந்து, வேறுவகையில் இல்லாமல்) தங்கள் சொந்த இயல்புகளின் படியே காலத்தைச் சார்ந்திருக்கின்றன” என்றார் {வியாசர்}”.(20)

ஞானக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 239-ஞானம், தவங்கள், புலனடக்கம், துறவு ஆகியவை இல்லாமல் வெற்றியை அடைய முடியாது என்பதையும், சாங்கிய அமைப்பில் விளக்கப்படும் அறிவுக் கோட்பாட்டையும், பிரம்மஞானத்தை அடையு வழி குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு (தன் தந்தையால் {வியாசரால்}) சொல்லப்பட்ட சுகர், அந்தப் பெருமுனிவரின் {வியாசரின்} போதனைகளை உயர்வாக மெச்சி, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் கடமைகளைக் குறித்த பின்வரும் கேள்விகளைக் கேட்டார்.(1)

சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “ஞானம் கொண்டவனும், வேதங்களை அறிந்தவனும், வேள்விகளைச் செய்பவனும், வன்மத்திலிருந்து விடுபட்டவனுமான ஒருவன், நேரடி சாட்சியம் மூலமோ, உள்ளுணர்வின் மூலமோ உணர முடியாததும், வேதங்களில் இவ்விதம் இருக்கிறது என்று குறிப்பிட்டுக் காட்ட முடியாததுமான பிரம்மத்தை அடைவதில் எந்த வழிமுறைகளினால் வெற்றியடைகிறான்?(2) என்னால் கேட்கப்படும் நீர் எந்த வழிமுறைகளின் மூலம் பிரம்மத்தை உணரலாம் என்பதைச் சொல்வீராக. தவம், பிரம்மச்சரியம், அனைத்தையும் துறத்தல், புத்தி, சாங்கிய தத்துவத்தின் உதவி, யோகம் ஆகியவற்றின் மூலம் அஃதை உணர முடியுமா?(3) மனம் மற்றும் புலன்கள் ஆகிய இரண்டைப் பொறுத்தவரையில், எந்த வழிமுறைகளின் மூலம் எந்த வகைக் காரிய ஒருமை {ஒரே காரியத்தில் நிலையுறுதியுடன் இருத்தல்} மனிதர்களால் அடையப்படுகிறது? இவை யாவற்றையும் எனக்கு விவரித்துச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டார்.(4)

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஞானம் அடைதல் {வித்தை}, தவம், புலனடக்கம், அனைத்தையும் துறத்தல் ஆகியவை இன்றி வேறு எந்த வழிமுறையினாலும் எந்த மனிதனாலும் ஒருபோதும் வெற்றியடைய முடியாது[1].(5) (எண்ணிக்கையில் ஐந்தாக உள்ள) பெரும்பூதங்கள் சுயம்புவின் முதல் (அல்லது அடிப்படை) படப்பைப் பிரதிபலிக்கின்றன. அவை உலக வாழ்வில் உள்ள உடல் படைத்த உயிரினங்களில் மிகப்பெரும் அளவில் அமைந்திருக்கின்றன.(6) உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் உடல்களும் பூமியில் இருந்தே பெறப்படுகின்றன. அவற்றின் உதிரம் நீரில் இருந்து பெறப்படுகிறது. அவற்றின் கண்கள் ஒளியில் இருந்து பெறப்படுவதாகச் சொல்லப்படுகிறது. பிராணன், அபானன், (இன்னும் மூன்று மூச்சுக்காற்றுகள்) வாயுவைத் தங்கள் புகலிடமாகக் கொண்டிருக்கின்றன. இறுதியாக, அவற்றின் உள்ளிருக்கும் (மூக்குத்துளைகள், காது துளைகள் முதலிய) வெற்றிடங்கள் வெளியாக இருக்கின்றன.(7) (உயிரினங்களின்) பாதத்தில் விஷ்ணு இருக்கிறான். அவற்றின் கரங்களில் இந்திரன் இருக்கிறான். உண்ண விரும்பும் அக்னி அவற்றின் வயிற்றுக்குள் இருக்கிறான். காதுகளுக்குள், செவிப்புலனைப் பிரதிபலிக்கும் திசைப்புள்ளிகள் இருக்கின்றன. நாவில் வாக்காகச் சரஸ்வதி இருக்கிறாள்[2].(8)காதுகள், தோல், கண்கள், நாவு, ஐந்தாவதாக மூக்கு ஆகியன அறிவுப்புலன்களாக {ஞானேந்திரியங்களாகச்} சொல்லப்படுகின்றன. இவை தங்கள் தங்களுக்குரிய பொருட்களை உணரும் நோக்கத்திற்காக இருக்கின்றன.(9) ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை ஐந்தாவதாக மணம் ஆகியன (ஐந்து) புலன்களுக்கு உரிய பொருட்களாக இருக்கின்றன. இவை புலன்களில் இருந்து தனிப்பட்டவையாகவே (அல்லது சார்பற்றவையாகவே) எப்போதும் கருதப்பட வேண்டும்.(10) தேரோட்டியானவன், தான் விரும்பும் பாதையில் நன்கு கட்டுப்படுத்தப்பட்ட அவனது குதிரைகளைச் செலுத்துவதைப் போலவே, மனமும் (தான் விரும்பும் திசைகளில்) இந்தப் புலன்களைச் செலுத்துகிறது. இதயத்தில் அமர்ந்திருக்கும் புத்தியோ மனத்தைச் செலுத்துகிறது[3].(11) புலன்கள் அனைத்தையும் அதன் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதிலும், வழிநடத்துவதிலும் அல்லது அவற்றைக் கட்டுப்படுத்துவதிலும் மனமே அவற்றுக்கு {புலன்களுக்குத்} தலைவனாக இருக்கிறது. அதேபோலவே, புத்தியே மனத்தின் தலைவனாக (அவற்றை எதிலும் ஈடுபடுத்துவதிலும், வழிநடத்துவதிலும், அல்லது கட்டுப்படுத்துவதிலும் தலைவனாக) இருக்கிறது[4].(12)

புலன்கள், புலன்நுகர் பொருட்கள், இயல்பு {ஸ்வபாவம்} என்ற வார்த்தையில் சொல்லப்படும் அந்தப் பொருட்களின் குணங்கள், புத்தி, மனம், உயிர்மூச்சுகள், மற்றும் ஜீவன் ஆகியன உடல் கொண்ட அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் வசிக்கின்றன[5].(13) புத்தியானது எதற்குள் வசிக்கிறதோ அந்த உடலுக்கு உண்மையில் இருப்பு என்ற ஏதும் கிடையாது. எனவே, உடலானது புத்தியின் புகலிடம் கிடையாது. (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} என்ற) முக்குணங்களைக் கொண்ட தொடக்கக் காலப் பிரகிருதியே, ஒலிவடிவமாக மட்டும் இருக்கும் புத்தியின் புகலிடமாக இருக்கிறது. ஆன்மாவும் புத்தியின் புகலிடமாக இல்லை. ஆசையே புத்தியை உண்டாக்குகிறது. எனினும், ஆசையானது ஒருபோதும் முக்குணங்களை உண்டாக்குவதில்லை[6].(14) புலன்களைக் கட்டுப்படுத்தவல்ல ஞானியானவன், பதினாறு குணங்கள் சூழ பதினேழாவதாகத் தன் புத்தியில் இருக்கும் ஆன்மாவை தன் மனத்தின் உதவியுடன் காண்கிறான்.(15) கண்கள் அல்லது புலன்கள் அனைத்தின் உதவியினாலும் ஆன்மாவைக் காண முடியாது. அனைத்தையும் கடந்த ஆன்மாவானது, மனமெனும் விளக்கின் ஒளியில் மட்டுமே புலப்படுகிறது.(16) அதே போலவே, ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம் ஆகிய தன்மைகளை இழந்து, சுவையும் மணமும் இல்லாமல், அழிக்கப்பட முடியாததாக, (திரளான அல்லது நுட்பமான) உடலற்றதாக, புலன்களற்றதாக இருக்கும் அஃது {ஆன்மாவானது} உடலுக்குள் காணப்படுவதில்லை.(17) புலப்படாததாகவும், உயர்ந்ததாகவும் இருக்கும் அஃது {ஆன்மாவானது}, மடியக்கூடிய உடல்கள் அனைத்திலும் வசிக்கிறது. ஆசான் மற்றும் வேதங்களின் வழிகாட்டலைப் பின்பற்றி அஃதை {ஆன்மாவைக்} காணும் ஒருவன், அதன் பிறகு பிரம்மமாகவே ஆகிறான்.(18)ஞானிகள், அறிவு மற்றும் சீடர்களைக் கொண்ட ஒரு பிராமணனையும், ஒரு பசுவையும், ஒரு யானையையும், ஒரு நாயையும், ஒரு சண்டாளனையும் சம கண்ணுடன் ஒன்றாகவே பார்ப்பார்கள்[7].(19) அனைத்துப் பொருட்களையும் கடந்திருக்கும் ஆன்மாவனாது, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்திலும் வசிக்கிறது. உண்மையில், அனைத்துப் பொருட்களும் அதனால் படர்ந்தூடுருவப்பட்டிருக்கிறது.(20) ஓர் உயிரினமானது, அனைத்துப் பொருட்களிலும் தன் சொந்த ஆன்மாவைக் காணும்போதும், அனைத்துப் பொருட்களையும் தன் ஆன்மாவில் காணும்போதும் அவன் பிரம்மத்தை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(21) வேத ஒலியின் மூலம் ஒருவனுடைய ஆன்மாவிற்குள் எது நிறைகிறதோ அதற்கு ஒப்பிடத்தக்க அளவில் அவன் பரமாத்மாவை நிரப்புகிறான் {பரமாத்மாவில் அந்த அளவுக்கான இடத்தைப் பெறுகிறான்}[8]. எவன் எப்போதும் அனைத்துப் பொருட்களையும் தன் சுயத்துடன் அடையாளம் காண்கிறானோ அவன் நிச்சயம் அழிவின்மையை அடைகிறான்.(22) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவில் தன்னை அமைத்துக் கொள்பவனும், அனைத்துயிரினங்களில் நன்மையில் ஈடுபடுபவனும், (அனைத்துப் பொருட்களின்) இறுதி கதியை (பிரம்மத்தை) அடைய விரும்புபவனுமான பாதையற்ற மனிதனின் பாதையில் தேவர்களே கூடக் கலக்கமடைகின்றனர் {மயக்கமடைகின்றனர்}[9].(23) உண்மையில், ஞானம் கொண்ட மனிதனால் பின்பற்றப்படும் பாதையானது, வானத்தில் பறவைகள் செல்லும் பாதை, அல்லது நீரில் மீன்கள் செல்லும் பாதையைப் போலப் புலப்படாததாகும்.(24)காலமானது தன் சொந்த சக்தியில் தனக்குள்ளேயே அனைத்தையும் சமைக்கிறது. எனினும், எந்தக் காலத்தில் எவரெவர் சமைக்கப்படுவர் என்பதை ஒருவரும் அறிவதில்லை[10].(25) (நான் எதைக் குறித்துப் பேசுகிறேனோ) அஃது {ஆத்மாவானது}, மேலேயோ, நடுவிலோ, கீழேயோ, குறுக்காகவோ, வேறு எந்தத் திசையிலோ தோன்றுவதில்லை. நிலையற்றதான அஃது எந்த இடத்திலும் காணப்படுவதில்லை[11].(26) இந்த உலகங்கள் அனைத்தும் அதற்குள்ளேயே இருக்கின்றன. அதற்கு வெளியே உள்ள எதுவும் இந்த உலகங்களில் இல்லை. வில்லின் நாணிலிருந்து தூண்டப்பட்ட ஒரு கணையின் வேகத்தில் நிற்காமல் ஒருவன் சென்று கொண்டே இருந்தாலும்,(27) மனோவேகத்திலேயே அவன் சென்றாலும், இவை அனைத்திற்கும் காரணமான அதன் {ஆத்மாவின்} எல்லையை அவன் ஒருபோதும் அடையமாட்டான்[12].(28) வேறெதுவும் திரளானதில்லை என்ற அளவுக்கு அது திரளானதாக இருக்கிறது. அதன் கரங்களும், பாதங்களும் எங்கும் நீண்டிருக்கின்றன. அதன் கண்கள், தலை மற்றும் முகம் ஆகியன எங்குமிருக்கின்றன. அதன் காதுகள் அண்டத்தில் எங்குமுள்ளன. அஃது அனைத்துப் பொருட்களையும் கடந்து நிலைத்திருக்கிறது.(29)

அது நுட்பத்திலும் நுட்பமானதாகவும், அனைத்தின் இதயமாகவும் இருக்கிறது. புலப்படாத நிலையிலேயே அஃது இருக்கிறது என்பதில் ஐயமில்லை.(30) இவையே (பரம) ஆத்ம இருப்பின் அழியத்தக்கன {க்ஷரம்}, அழியத்தகாதன {அக்ஷரம்} என்ற இரு வடிவங்களாகும். அசைவன மற்றும் அசையாதன என்ற அனைத்திலும் அஃது அழியத்தக்க இருப்பை வெளிப்படுகிறது; அதே வேளையில், தெய்வீக சைதன்யத்தில் அஃது அழிவில்லாத மற்றும் அழியத்தகாத இருப்பை வெளிப்படுத்துகிறது.(31) இருப்பில் உள்ள அசையும் மற்றும் அசையாதவை அனைத்தின் தலைவனாக இருப்பினும், செயலற்றதாக, குணங்களற்றதாக இருப்பினும், அஃது ஒன்பது வாயில்களைக் கொண்ட நன்கறியப்பட்ட மாளிகையில் நுழைந்து, செயல்பாட்டில் ஈடுபடுகிறது.(32) அடுத்தக் கரையைக் காணவல்ல ஞானம் கொண்ட மனிதர்கள், பிறப்பில்லாதவன் (அல்லது பரமாத்மா) அசைவு {சலனம்}, இன்பம், துன்பம், பல்வேறு வடிவங்கள், நன்கறியப்பட்ட ஒன்பது உடைமைகள் ஆகியவற்றின் விளைவால் செயல்பாடெனும் குணத்தைக் கொள்கிறான் என்று சொல்கின்றனர்[13].(33) செயல்பாடெனும் குணத்தை அடைவதாகச் சொல்லப்படும் அழிவற்ற ஆத்மாவானது, செயலில்லாததாகச் சொல்லப்படும் அழிவற்ற அதே ஆத்மாவேயன்றி வேறில்லை. ஞானம் கொண்ட மனிதன், அந்த அழிவற்ற சாரத்தை அடைவதன் மூலம், வாழ்வு மற்றும் பிறவி {ஜனனம் மற்றும் மரணம்} என்ற இரண்டையும் நன்மைக்காகக் கைவிடுகிறான்” என்றார் {வியாசர்}.(34)

யோகக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 240-யோக வழிமுறையையும், செயல்கள் மற்றும் செயல்களில் இருந்து விலகுதல் குறித்த வேத அறிவுப்புகளையும் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஓ! அருமை மகனே, உன்னால் கேட்கப்பட்ட நான், உன் கேள்விக்கான பதிலை உண்மையில் சாங்கிய அமைப்பில் விளக்கப்பட்டுள்ள ஞானக் கோட்பட்டின்படியே சொன்னேன்.(1) (அதே கதிக்காக) யோகக் கோட்பாட்டின்படி செய்யப்படும் அனைத்தையும் நான் இப்போது விளக்கப்போகிறேன்; கேட்பாயாக. புத்தி, மனம், புலன்கள்,(2) அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் {நீக்கமற நிறைந்திருக்கும்} ஆன்மா ஆகியவற்றின் கலவையே ஞானத்தில் முதன்மையான வகையாகச் சொல்லப்படுகிறது. அமைதியான மனநிலையைக் கொண்டவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தி ஆள்பவனும், (தியானத்தின் மூலம்) ஆன்மாவை நோக்கித் தன் பார்வையைத் திருப்பவல்லவனும், (அத்தகைய) தியானத்தில் இன்புறுபவனும், புத்தியைக் கொண்டவனும், செயல்பாடுகளில் தூய்மையானவனுமான ஒருவன், (தன் ஆசானின் உதவியுடன்) அந்த ஞானத்தை அடைய வேண்டும். விவேகிகளால், யோகத்தின் ஐந்து களங்கங்கள் என்று அறியப்படும் ஆசை, கோபம், பேராசை, அச்சம் மற்றும் உறக்கம் ஆகியவற்றைக் கைவிட்டு இந்த ஞானத்தை அடைய அவன் முயல வேண்டும். அனைத்துக் காரியங்களைக் கைவிடுவதால் ஆசை வெல்லப்படுகிறது.(3-5)

பொறுமை கொண்ட ஒருவன், புத்தியின் துணை கொண்டு சிந்திக்கத்தகுந்தவற்றைச் சிந்திப்பதன் மூலம் உறக்கத்தைக் கைவிடுவதில் வெல்கிறான். அவன் உறுதியான முயற்சியின் மூலம் தன் பிறப்புறுப்பு மற்றும் வயிற்றை (தகாத பாவகர ஈடுபாடுகளில் இருந்து) கட்டுப்படுத்த வேண்டும். அவன் தன் கண்களின் (கண்களைப் பயன்படுத்துவதன்) மூலம் தன் கரங்களையும், கால்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவன் தன் மனத்தின் துணை கொண்டு, தன் கண்களையும், காதுகளையும், தன் செயல்களின் துணை கொண்டு தனது மனத்தையும் பேச்சையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வால் அச்சத்தையும், விவேகிகளுக்குப் பணிவிடை செய்வதால் செருக்கையும் தவிர்க்கவேண்டும்.(7) தாமதம் செய்வதை அடக்கும் அவன் இவ்வழிமுறைகளின் மூலம் இந்த யோகக் களங்கங்களை அடக்க வேண்டும். அவன் நெருப்பையும், பிராமணர்களையும் துதித்து, தேவர்களுக்குத் தலைவணங்க வேண்டும்.(8) அவன் மங்கலமற்ற அனைத்துவகை உரையாடல்களையும், வன்மம் நிறைந்த பேச்சுகளையும், பிறரின் மனங்களைப் புண்படுத்தும் சொற்களையும் தவிர்க்க வேண்டும்.

பிரம்மமே (அனைத்துப் பொருட்களின்) பிரகாசமிகு வித்தாக இருக்கிறது. மேலும் இந்த வித்தின் சாரத்திலேயே இவை அனைத்தும் இருக்கின்றன.(9) எதில் அனைத்தும் பிறக்கின்றனவோ அந்த அசைவற்ற, அசையாத அண்ட வடிவத்தில் பிரம்மமே கண்ணானது. தியானம், கல்வி, கொடை, வாய்மை, பணிவு, எளிமை, மன்னிக்கும் தன்மை,(10) உடல் தூய்மை, ஒழுக்கத் தூய்மை, புலனடக்கம் ஆகியன ஒருவனின் சக்தியைப் பெருக்கி, (அவ்வாறு பெருகும்போதே) அவனது பாவங்களை அழிக்கின்றன.(11) அனைத்து உயிரினங்களிடமும் சமமாக நடந்து கொள்வதன் மூலமும், எந்த முயற்சியும் இல்லாமல் எளிதாக அடையப்படுபவற்றைக் கொண்டு மனநிறைவுடன் வாழ்வதன் மூலமும் ஒருவன் தன் நோக்கங்கள் அனைத்தின் கனிகளையும் அடைந்து, ஞானத்தைப் பெறுவதிலும் வெல்கிறான்.(12) அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தும், சக்தியுடனும், எளிய உணவை உண்டும், புலன்களை முற்றான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஒருவன், ஆசை மற்றும் கோபம் ஆகிய இரண்டையும் அடக்கிய பிறகு பிரம்மத்தை அடைவதில் முனைய வேண்டும்.(13) புலன்களையும், மனத்தையும் (புறப்பொருட்கள் அனைத்தில் இருந்தும் விலக்கியப் பிறகு அவற்றை) உறுதியாக ஒன்றிணைத்து, உள்நோக்கிய நிலையான பார்வையுடன், மாலை அல்லது அதிகாலையின் அமைதியான வேளைகளில் தன் மனத்தைப் புத்தியில் நிறுத்த வேண்டும்.(14) மனிதனின் ஐம்புலன்களில் ஒன்றேனும் கட்டுப்படுத்தப்படாமல் இருக்குமேயானால், ஒரு தோற்பையின் அடியில் உள்ள தடுக்கப்பட முடியாத துளையின் வழியே ஒழுகும் நீரைப் போல, அதன் {அந்தப் புலனின்} வழியே அவனது ஞானமனைத்தும் தப்பிச் செல்லும்.(15)

ஒரு மீனவன், தன் வலைகளுக்குப் பேராபத்தைத் தரும் சக்தியற்ற மீனை முதலில் பிடிக்க முனைவதைப் போலவே, ஒரு யோகியும், முதல் தருணத்திலேயே தன் மனத்தைக் கட்டுப்படுத்து முனைய வேண்டும். முதலில் மனத்தை அடக்கிவிட்ட யோகி, அடுத்ததாகத் தன் காதுகளையும், கண்களையும், அதன் பிறகு தன் நாவையும், பிறகு தன் மூக்கையும் அடக்க வேண்டும்.(16) இவை அனைத்தையும் கட்டுப்படுத்திய பிறகு, அவன் அவற்றைத் தன் மனத்தில் நிலைக்கச் செய்ய வேண்டும். பிறகு அனைத்துக் காரியங்களில் இருந்து மனத்தை விலக்கும் அவன் அதைப் புத்தியில் நிலைநிறுத்த வேண்டும்.(17) உண்மையில், ஐம்புலன்களைக் கட்டுப்படுத்திய யதியானவன், அவற்றை மனத்திலேயே நிலைநிறுத்த வேண்டும். தங்களுடன் ஆறாவதாக மனத்தைக் கொண்ட இவை {புலன்கள்} புத்தியில் ஒருங்கே குவிந்து,(18) இவ்வாறு கலக்கமில்லாமல் அவை நிலையாகக் குவிவதால், பிரம்மமானது, சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட புகையற்ற நெருப்பைப் போலவோ, பிரகாசமான ஒளியைக் கொண்ட சூரியனைப் போலவோ உணரத்தக்கதாகிறது.(19) உண்மையில் அவன், வானத்தில் உள்ள மின்னலெனும் நெருப்பைப் போல, தன் ஆன்மாவுக்குள் தன்னையே காண்கிறான். பிறகு அதன் முடிவற்ற தன்மையின் விளைவால் அனைத்தும் அதனுள் தோன்றுகிறது, மேலும் அஃது அனைத்திலும் தோன்றுகிறது.(20)

ஞானமும், மனோவுறுதியும், உயர்ந்த அறிவையும் கொண்டவர்களும், அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபடுபவர்களுமான உயர் ஆன்ம பிராமணர்கள், அதை {ஆன்மாவைக்} காண்பதில் வெல்கிறார்கள்.(21) இவ்வாறு ஆறுமாதங்கள் கடுந்தவத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு யோகி, {யாருமற்ற} தனியான இடத்தில் அமர்ந்து, அந்த அழிவற்றதுடன் {பிரம்மத்துடன்} சமத்தன்மையை அடைவதில் {அதனுடன் கலப்பதில்} வெல்கிறான்.(22) அழிவு, வரிவு, ஒரே மனிதன் அல்லது உடலுக்குள் பல்வேறு தன்மைகளை அளிக்கும் சக்தி, தெய்வீக மணங்கள், ஒலிகள், பார்வைகள், சுவை மற்றும் தீண்டலின் இனிய உணர்வுகள், குளிர் மற்றும் வெப்பத்தின் இன்பமான உணர்வுகள், காற்றுடனான சமத்தன்மை,(23) (உள்நோக்கிய ஒளியின் மூலம்) சாத்திரங்களையும், மேதைகளின் அனைத்து படைப்புகளையும் புரிந்து கொள்ளும் வல்லமை, தெய்வீகக் காரிகையரின் தோழமை ஆகிய இவை அனைத்தையும் யோகத்தின் மூலமாக அடையும் யோகி, அவற்றை அலட்சியம் செய்து, அவை அனைத்தையும் தன் புத்தியில் கலக்க வேண்டும்[1].(24) ஒருவன் பேச்சையும், புலன்களையும் கட்டுப்படுத்தி அந்தி இருளுக்குப் பின்பும், விடியலுக்கு முன்பும், விடியலின் போதும் மலை முகட்டிலோ, ஒரு நல்ல மரத்தினடியிலோ, ஒரு மரத்திற்கு முன்பாகவோ அமர்ந்து யோகம் பயில வேண்டும்.(25)தன் புலன்கள் அனைத்தையும் இதயத்துக்குள் கட்டுப்படுத்தும் ஒருவன், புலங்கள் குவிந்த நிலையில், உலகின் மனிதன் செல்வத்தைக் குறித்தும், பிற மதிப்புமிக்க உடைமைகளைக் குறித்தும் சிந்திப்பதைப் போல நித்தியமானதும், அழிவற்றதுமான ஒன்றை {பிரம்மத்தைச்} சிந்திக்க வேண்டும். ஒருவன் யோகம் பயிலும்போது ஒருபோதும் தன் மனத்தை அதிலிருந்து விலக்கக்கூடாது.(26) யோகியானவன், அலைபாயும் மனத்தை எந்த வழிமுறைகளினால் கட்டுப்படுத்துவதில் வெல்ல முடியுமோ, அந்த வழிமுறைகளை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். அவன் அதிலிருந்து ஒருபோதும் விழுந்துவிடத் தன்னை அனுமதிக்கக்கூடாது.(27) அனைத்திலிருந்தும் புலன்களும், மனமும் விடுபட்ட யோகி, (பயிற்சிக்காக) வெறுமையான மலைக்குகைகளுக்கும், தேவர்களுக்காக நேர்ந்துவிடப்பட்ட கோவில்களுக்கும், வெறுமையான வீடுகள் அல்லது அறைகளுக்கோ சென்று, அங்கே வாழ வேண்டும்.(28) அவன் மற்றொருவனுடன் பேச்சிலோ, செயலிலோ, எண்ணத்திலோ தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. அனைத்துப் பொருட்களையும் அலட்சியம் செய்து, மிகச் சொற்பமாக உண்ணும் யோகி அடைந்த அல்லது இழந்த பொருட்களின் மீது சமமான கண்களையே செலுத்த வேண்டும்.(29)

தன்னைப் புகழ்பவனிடமும், பழிப்பவனிடமும் ஒரே வகையிலேயே நடந்து கொள்ள வேண்டும். அவன் எவருக்கும் நன்மையையோ தீமையையோ நாடக்கூடாது.(30) ஒன்றை அடைவதால் மகிழ்ச்சியையோ, தோல்வி அல்லது இழப்பால் கவலையையோ அடையக்கூடாது. அவன் காற்றை {வாயுவைப்} போல அனைத்து உயிரினங்களிடமும் சீரான நடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும்[2].(31) தன்னை நோக்கிய மனம் கொண்டவனும், தூய்மையான வாழ்வை வாழ்பவனும், அனைத்துப் பொருட்களின் மீதும் சமமாகக் கண்களைச் செலுத்துபவனும், உண்மையில் இவ்வகையிலேயே ஆறு மாதங்கள் யோகத்தில் ஈடுபடுபவனுமான ஒருவனுக்கு, ஒலியால் பிரதிபலிக்கப்படும் பிரம்மமானது மிக விளக்கமாக {பேரொளிமயமாகத்} தோன்றும்[3].(32) (செல்வம் மற்றும் வசதிகளை ஈட்டுவதில்) கவலையால் பீடிக்கப்படும் மனிதர்கள் அனைவரையும் காணும் யோகியானவன், மண்ணாங்கட்டியையும், ஒரு கல் துண்டையும், தங்கக் குவியலையும் ஒரே சமமான கண்ணுடன் பார்க்க வேண்டும். உண்மையில் அவன் (செல்வமீட்டும்) இந்தப் பாதையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அதன் மீது வெறுப்பை அடைந்து, ஒருபோதும் திகைப்படையாதவனாக இருக்க வேண்டும்.(33) ஒருவன் {வர்ணத்தால்} தாழ்ந்த வகையைச் சார்ந்தவனாகவே இருப்பினும், ஒருத்தி பெண்ணாகவே இருப்பினும் அவர்கள் இருவரும் மேலே குறிப்பிடப்பட்ட பாதையைப் பின்பற்றினால் நிச்சயம் உயர்ந்த கதியை அடைவார்கள்[4].(34) எவன் தன் மனத்தை அடக்குவானோ, அவன், நிலையுறுதியுடனான புலன்களைத் தவிர வேறு எதனைக் கொண்டும் அடைய முடியாததும், நுட்பத்திலும் நுட்பமானதும், திரளிலும் திரளானதும், விடுதலையேயானதும் {முக்தியேயானதும்}, படைக்கப்படாததும், பழமையானதும், சிதைவில்லாததும், நித்தியமானதுமான பிரம்மத்தைத் தன் புத்தியின் துணையால் தன்னிடமே காண்பான்” என்றார் {வியாசர்}”.(35)பீஷ்மர் தொடர்ந்தார், “ஞானம் கொண்ட மனிதர்கள், ஆசான்களின் வாயால் உறுதி செய்து கொள்வதன் மூலமும், உயர் ஆன்மாக் கொண்ட பெருமுனிவரால் இவ்வளவு சரியாகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைத் தங்கள் மனத்தில் சிந்தித்துப் பார்ப்பதன் மூலமும், (சாத்திரங்கள் சொல்லும் வகையில்) பிரம்மத்துடனான சமநிலையை அடைந்து, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் விழுங்கும் பிரளய காலம் வரும்வரை அங்கேயே இருப்பார்கள்” {என்றார் பீஷ்மர்}.(36)

ஞானமும், கர்மமும்! – சாந்திபர்வம் பகுதி – 241-கர்மம் மற்றும் ஞானம் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “வேத அறிவிப்புகள் இருவகையில் இருக்கின்றன. ஒருமுறை “செயல்கள் அனைத்தையும் செய்” என்று அவை கட்டளையிடுகின்றன. மறுமுறை (இதற்கு முரணாக) “செயல்கள் அனைத்தையும் கைவிடு” என்றும் அவை சொல்கின்றன. ஞானத்தின் துணை மூலம் மனிதர்கள் எங்கே செல்கின்றனர் {எந்த கதியை அடைகின்றனர்}[1]? செயல்களின் துணை மூலம் அவர்கள் எங்கே செல்கின்றனர் {எந்த கதியை அடைகின்றனர்}?(1) நான் இதைக் கேட்க விரும்புகிறேன். நீர் எனக்குச் சொல்வீராக. உண்மையில் ஞானம் மற்றும் செயல்கள் {கர்மம்} குறித்த இந்த அறிவிப்புகள் மாறுபாடு கொண்டவையாகவும், முரணானவையாகவும் இருக்கின்றன” என்று கேட்டார்”.(2)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பராசரர் மகன் {வியாசர்}, தன் மகனிடம் {சுகரிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார்: “முறையே செயல்கள் மற்றும் ஞானத்தைச் சார்ந்திருக்கும் அழியக்கூடிய மற்றும் அழிவற்ற இரு பாதைகளை நான் உனக்கு விளக்கப் போகிறேன். ஓ! குழந்தாய், ஞானத்தின் துணை மூலம் ஒருவன் அடையும் இடத்தையும் {கதியையும்}, செயல்களின் துணை மூலம் அவன் அடையும் வேறு இடத்தையும் {கதியையும்} நான் உனக்குச் சொல்கிறேன்; குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. இந்த இரண்டு இடங்களுக்கு இடையிலான வேறுபாடானது எல்லையற்ற வானைப் போன்று மிகப் பெரிதானதாகும்.(3,4) நீ என்னிடம் கேட்டிருக்கும் இந்தக் கேள்வியானது, நம்பிக்கை கொண்ட ஒரு மனிதனுக்கு ஒரு நாத்திகனின் உரை அளிக்கும் வலியை எனக்குத் தருகிறது.(5)

வேதங்களில் நிறுவப்பட்டிருக்கும் இருவழிகள், பிரவிருத்தியின் மூலம் குறிப்பிடப்படும் (செயல்கள்) கடமைகள் மற்றும் நிவிருத்தியின் அடிப்படையிலான சிறப்புக் கடமைகள் ஆகியனவே ஆகும்.(6) செயல்களின் மூலம் ஓர் உயிரினம் அழிவடைகிறது. எனினும், ஞானத்தின் மூலம் அது விடுதலையடைகிறது {முக்தியடைகிறது}. இதன் காரணமாகவே, வாழ்வெனும் பெருங்கடலின் அடுத்தக் கரையைக் காணும் யோகியர், ஒருபோதும் தங்களைச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்வதில்லை.(7) செயல்களின் மூலம், ஒருவன் தனது மரணத்திற்குப் பிறகு, பதினாறு உட்பொருள்களால்[1] தொகுக்கப்பட்ட உடலுடன் மறுபிறப்பெடுக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகிறான். எனினும் ஞானத்தின் மூலம் அவன், எது நித்தியமானதோ, புலப்படாததோ, அனைத்தையும் அறிந்ததோ அதுவாகவே {பிரம்மமாகவே} மாற்றமடைகிறான்.(8) குறைந்த அறிவுள்ள ஒருவகை மனிதர்கள் செயல்களை மெச்சுகின்றனர். இதன் விளைவால் அவர்கள் (ஒன்றன்பின் ஒன்றாக) இடையறாமல் உடல்களை ஏற்கின்றனர்.(9) கடமைகளைப் பொறுத்தவரையில் கூரிய உள்ளுணர்வுகளைக் கொண்டவர்களும், (ஞானத்திற்கு வழிவகுக்கும்) உயர்ந்த புத்தியை அடைந்தவர்களுமான மனிதர்கள், ஓடைகளில் நீர் அருந்துபவர்கள், எவ்வாறு கிணறுகள் மற்றும் குளங்களின் நீரை ஒருபோதும் மெச்சுவதில்லையோ அவ்வாறே செயல்களை ஒருபோதும் மெச்சுவதில்லை.(10)செயல்களின் மூலம் ஒருவன் அடையும் கனியானது, இன்பம் மற்றும் துன்பம், இருப்பு மற்றும் இல்லாமை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. ஞானத்தின் மூலமோ, எங்கே எந்தத் துன்பமும் இல்லையோ;(11) எங்கே ஒருவன் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிவற்றில் இருந்து விடுபடுவானோ; எங்கே ஒருவன் முதுமைக்கு ஆட்படுவதில்லையோ; எங்கே ஒருவன் நனவுநிலையிருப்பை {அகங்காரத்தைக்} கடந்த நிலையை அடைகிறானோ;(12) எங்கே உயர்வானதும், புலப்படாததும், அனைத்தையும் அறிந்ததும், எப்போதும் இருப்பதும், உணரப்பட முடியாததும், துன்பத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதும், அழிவில்லாததும், அழிவை விஞ்சி இருப்பதுமான பிரம்மம் இருக்கிறதோ;(13) எங்கே (இன்பம் மற்றும் துன்பம் முதலிய) அனைத்து முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கத்தில் இருந்தும், விருப்பம் அல்லது நோக்கத்தில் இருந்தும் அனைவரும் விடுபடுவார்களோ அந்த இடத்தை {பிரம்ம ஸ்வரூபத்தை ஞானத்தினால்} அவன் அடைகிறான். அவர்கள், அந்த நிலையை அடைந்து, அனைத்துப் பொருட்களின் மீதும் சமமான கண்களைச் செலுத்தி, உலகளாவிய நண்பர்களாகி, அனைத்து உயிரினங்களின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் ஆகிறார்கள். ஓ! மகனே, ஞானத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனுக்கும், செயல்களில் அர்ப்பணிப்புள்ளவனுக்கும் இடையில் ஒரு பெரிய வளைகுடா இருக்கிறது.(14) ஞானம் கொண்ட மனிதன் அழிவை அடையாமல், தேய்பிறையின் இறுதி இரவில் (அழிவடையாத) நுட்பமான வடிவில் இருக்கும் சந்திரனைப் போல எப்போதும் {நுட்பமாகவே} நீடித்திருக்கிறான்.(15)

(பிருஹதாரண்யகத்தில் யாக்ஞவல்கியர் எனும்) பெரும் முனிவர் இதைக் குறித்து இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கிறார். செயல்களில் அர்ப்பணிப்புள்ள மனிதனைப் பொறுத்தவரையில், அவனது இயல்பானது {ஸ்வபாவமானது}, புதிதாகப் பிறந்த நிலவானது, ஆகாயத்தில் வளைவான நூலாகத் தெரிவதைப் போல ஊகித்தறியப்படுகிறது[2].(16) ஓ! மகனே, செயல்களைச் செய்யும் மனிதன் {கர்மமயமான புருஷன்}, மாறுதலின் விளைவுகளான பதினோரு உட்பொருள்களுடனும், பதினாறு நுட்பமான வடிவங்களுடனும் மறுபிறப்பெடுக்கிறான் என்பதை அறிவாயாக.(17) தாமரை இலையில் தண்ணீர் துளியைப் போல, அந்த (பொருள்) வடிவத்தில் {உயிரினத்தில்} புகலிடம் கொள்ளும் தேவன், நித்தியமானதும், மனம் மற்றும் புத்தியைக் கடந்து யோகத்தில் வெல்வதுமான க்ஷேத்ரஜ்ஞனாக (ஆன்மாவாக) அறியப்பட வேண்டும்[3].(18) தமஸ், ரஜஸ் மற்றும் சத்வம் ஆகியன புத்தியின் குணங்களாகும். புத்தியானது, உடலுக்குள் வசிக்கும் தனிப்பட்ட ஆத்மாவின் குணமாகும். மேலும், தனிப்பட்ட ஆன்மாவோ பரமாத்மாவில் {பரமாத்மாவின் குணத்தில்} இருந்து வருகிறது[4].(19) ஆன்மாவுடன் கூடிய உடலானது, ஜீவனின் குணமெனச் சொல்லப்படுகிறது. ஜீவனே செயல்பட்டு, அனைத்து உடல்களையும் உயிர்வாழச் செய்கிறது. எது க்ஷேத்திரம் (என்றும், எது க்ஷேத்ரஜ்ஞன்) என்று{ம்} அறிந்தவர்கள், ஏழு உலகங்களையும் படைத்தவனே {பரமாத்மாவே} மேற்கண்ட ஜீவன் {ஆத்மா} என்று சொல்கிறார்கள்” என்றார் {வியாசர்}[5].(20)

பிரம்மச்சரியம்! – சாந்திபர்வம் பகுதி – 242-செயல் பண்புகளின் கடமைகளை மீறாமல் எவ்வாறு முக்தியை அடைய முடியும் என்பது குறித்து வியாசரிடம் கேட்ட சுகர்; ஆசிரமங்களைக் குறித்தும், நான்கு வகை ஆசிரமங்களில் பிரம்மச்சரியத்தின் நடைமுறை குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்…

சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “(அண்டம் தழுவிய) க்ஷரம் என்பதோடு தொடங்கும் ஒன்று, (அண்ட) ஆன்மாவிலிருந்து மற்றொன்று என இருவகைப் படைப்புகள் இருப்பதாக நான் இப்போது புரிந்து கொள்கிறேன். புலன்கள் மற்றும் அவற்றுக்குரிய பொருட்களைக் கொண்ட அந்த மற்றொன்று புத்தியின் பலத்தால் காணத்தக்கதாக இருக்கிறது. இந்த இறுதியானது மற்றதைக் கடந்து இருப்பதாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுகிறது[1].(1) எனினும் நான், எது இந்த உலகத்தை இயக்குகிறதோ, எது காலதர்மத்தால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகிறதோ, எதனைக் கொண்டு நல்லோர் அனைவரும் தங்கள் ஒழுக்கத்தை {நடத்தையை} அமைத்துக் கொள்கின்றனரோ அந்த அறவொழுக்கத்தைக் குறித்து நான் மீண்டும் கேட்க விரும்புகிறேன்[2].(2) வேதங்களில், செயல்களைச் செய் என்றும், செயல்களைதப் புறக்கணி என்றும் இரு வகைத் தீர்மானங்கள் இருக்கின்றன. இஃது அல்லது அது குறித்த உண்மை உறுதி செய்வதில் நான் எவ்வாறு வெல்ல முடியும்? இதைத் தெளிவாக விளக்குவதே உமக்குத் தகும்[3].(3) உமது போதனைகளின் மூலம் மனித ஒழுக்கத்தின் முழுமையான நடைமுறை ஞானத்தை அடைந்து, அறம் மட்டுமே பயின்று என்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, என் புத்தியையும் தூய்மையாக்கிக் கொண்டு என் உடலைக் கைவிட்டு, அழிவற்ற ஆன்மாவை நான் காணப் போகிறேன்” என்றார் {சுகர்}[4].(4)வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “பிரம்மனால் முதலில் நிறுவப்பட்ட ஒழுக்க நடைமுறையே {விருத்தியே}, பழங்காலத்தின் பக்திமான்களும், விவேகிகளுமான புராதானப் பெரும் முனிவர்களால் முறையாகப் பின்பற்றப்பட்டன.(5) பெரும் முனிவர்கள் பிரம்மச்சரியம் பயில்வதன் மூலம் அனைத்து உலகங்களையும் வெல்கிறார்கள். தன் நன்மைக்கான அனைத்து பொருட்களையும் நாடி, மனத்தைப் புத்தியில் நிலைக்கச் செய்து, காட்டில் வசித்துக் கடும் தவங்களைப் பயின்று, கனி மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்ந்து, புனிதத் தலங்களுக்குச் சென்று, உலகளாவிய நன்மையைப் பயின்று,(7) புகையில்லாத, உலக்கையொலி ஓய்ந்த காலத்தில் காட்டில் உள்ள குடில்களில் பிச்சையெடுக்கச் செல்லும் மனிதன் பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்[5].(8) முகத்துதியைத் தவிர்த்து, பிறருக்குத் தலைவணங்குவதையும் தவிர்த்து, நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டையும் தவிர்த்து, வழியில் நேரும் எந்த வழிமுறையினாலும் பசியைத் தணித்துக் கொண்டு நீ காட்டில் வாழ்வாயாக” என்றார் {வியாசர்}.(9)சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “(செயல்களின் அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட) வேத தீர்மானங்கள், இழிந்தோரின் கருத்துப்படி முரணானவையே. இஃது அதிகாரம் பெற்றதா அல்லது அஃது அதிகாரம் பெற்றதா? என்ற முரண் இருக்கும் போது எவ்வாறு அவற்றைச் சாத்திரம் என்று சொல்வது?(10) இரண்டும் எவ்வாறு அதிகாரம் பெற்றவை என்பதைக் கேட்க விரும்புகிறேன். உண்மையில், செயற்பண்புகளின் கடப்பாடு குறித்த விதிகளை மீறாமல் {கர்மங்களுக்கு விரோதமில்லாமல்} எவ்வாறு விடுதலையை {முக்தி / மோக்ஷத்தை} அடைய முடியும்?” என்று கேட்டார்”.(11)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டவரும், காந்தவதியின் மகனுமான அம்முனிவர் {வியாசர்}, அளவில்லா சக்தி கொண்ட தன் மகனின் {சுகரின்} இந்த வார்த்தைகளை மெச்சி, பின்வருமாறு அவருக்குப் பதிலுரைத்தார்.(12)

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “பிரம்மச்சாரி, இல்லறவாசி {கிருஹஸ்தன்}, காட்டில் வாழ்பவன் {வானப்பிரஸ்தன்}, (அறம்சார்ந்து) பிச்சையெடுக்கும் வாழ்வை வாழ்பவன் {ஸன்னியாஸி} ஆகிய அனைவரும் தங்கள் தங்களுக்குரிய வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களை} முறையாக நோற்பதன் மூலம் ஒரே உயர்ந்த கதியையே அடைகின்றனர்.(13) அல்லது, ஒரே மனிதன், விருப்பு வெறுப்பில் இருந்து விடுபட்டு இந்த வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} நான்கையும் (ஒன்றன்றபின் ஒன்றாக) அதனதன் விதிப்படி பயின்றால், (அத்தகைய ஒழுக்கத்தின் மூலம்) நிச்சயம் அவன் பிரம்மத்தைப் புரிந்து கொள்ளத் தகுந்தவனாகிறான்.(14) நான்கு வாழ்வுமுறைகளும் ஏணியையோ, படிகளையோ கொண்டிருக்கின்றன. அந்த ஏற்றம் பிரம்மத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அந்த ஏற்றத்தில் ஏறுவதன் மூலம் ஒருவன் பிரம்ம லோகத்தை அடைவதில் வெல்கிறான்.(15)

கடமைகளில் உள்ள வேறுபாடுகளை அறிந்தவனும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனுமான பிரம்மச்சாரியானவன், தன் வாழ்வின் நான்கில் ஒரு பங்கைத் தன் ஆசான் அல்லது ஆசானின் மகனுடன் வசிக்க வேண்டும்.(16) அவன் தன் ஆசானின் வீட்டில் வசிக்கும்போது, ஆசான் படுக்கைக்குச் சென்ற பிறகே அவன் செல்ல வேண்டும், ஆசான் எழுவதற்கு முன்பே அவன் எழ வேண்டும். சீடனால் செய்யத்தக்கவையும், பணியாளால் செய்யபட வேண்டியவையுமான செயல்கள் அனைத்தும் அவனால் {பிரம்மச்சாரியால்} செய்யப்பட வேண்டும்.(17) அவன், இவற்றை முடித்துவிட்டுத் தன் ஆசானின் அருகில் பணிவுடன் நிற்க வேண்டும். அனைத்துவகைப் பணிகளிலும் தேர்ச்சி பெறும் அவன், தன் ஆசானின் செயல்கள் அனைத்தையும் செய்து, ஒரு பணியாளாகவே நடந்து கொள்ள வேண்டும்.(18) (எதையும் விட்டுவிடாமல்) அனைத்துச் செயல்களையும் நிறைவு செய்து, தன் ஆசானின் காலடியில் அமர்ந்து, கற்றுக் கொள்ளும் ஆவல் மற்றும் விருப்பத்துடன் அவன் கல்வி பயில வேண்டும். எளிமையுடனும், தீய பேச்சைத் தவிர்த்தும் நடந்து கொள்ளும் அவன், தன் ஆசான் அழைக்கும்போது மட்டும் பாடங்களைப் போதிக்க வேண்டும்.(19) உடலும் மனமும் தூய்மையடைந்து, புத்திசாலித்தனம் மற்றும் விரும்பத்தக்க பிற ஒழுக்கங்களையும் அடையும் அவன், இப்போதும் எப்போதும் ஏற்புடையதையே {இனிமையானவற்றையே} பேச வேண்டும். தன் புலன்களை அடக்கும் அவன், ஏக்கமில்லாத கண்களுடன் தன் ஆசானைக் காண வேண்டும்[6].(20)அவன் தன் ஆசான் உண்பதற்கு முன் உண்பதோ, தன் ஆசான் பருகுவதற்கு முன் பருகுவதோ, தன் ஆசான் அமர்வதற்கு முன் அமர்வதோ, அதன் ஆசானை படுக்கைக்குச் செல்லும் முன் படுக்கச் செல்வதோ ஒருபோதும் கூடாது.(21) அவன் நிமிர்ந்த உள்ளங்கைகளைக் கொண்டு, தன் ஆசானின் வலக்காலை வலக்கையாலும், இடக்காலை இடக்கையாலும் மென்மையாகத் தீண்ட வேண்டும்.(22) மதிப்புடன் தன் ஆசானை வணங்கும் அவன், அவரிடம், “ஓ! சிறப்புமிக்கவரே, எனக்குக் கற்பிப்பீராக. ஓ! சிறப்புமிக்கவரே, நான் இதை (இந்தப் பணியைச்) செய்வேன். இஃது (இந்த வேலை) ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. ஓ! மறுபிறப்பாளரே, மரியாதைக்குரிய நீர் விரும்பி இடும் எந்த ஆணையையும் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்” என்று சொல்ல வேண்டும்.(23) இவை அனைத்தையும் சொல்லி, (இவ்வாறு) முறையாகத் தன்னை அவரிடம் ஒப்படைக்கும் அவன், தன் ஆசான் செய்ய வேண்டிய எந்தச் செயலையும் செய்து, அவற்றைச் செய்த பிறகு, தன் ஆசானிடம் மீண்டும் ஒருமுறை அந்தச் செயல் முடிவடைந்ததைக் குறித்துச் சொல்ல வேண்டும்.(24) பிரம்மச்சரிய வாழ்வு முறையை நோற்கும்போது அந்தப் பிரம்மச்சாரியால் தவிர்க்கப்பட்ட மணங்கள் அல்லது சுவைகள் அனைத்தும், அவன் தன் ஆசானின் இல்லத்தில் இருந்து திரும்பிய பிறகு பயன்படுத்தப்படலாம். இது விதிக்கு இசைவானதே.(25)

(சாத்திரங்களில்) பிரம்மச்சாரிகளுக்கென விரிவாக விதிக்கப்பட்ட வழக்கங்கள் அனைத்தும் அவனால் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். மேலும் அவன் (அழைப்பிற்குத் தயாராகத்) தன் ஆசானின் அருகிலேயே எப்போதும் இருக்க வேண்டும்.(26) தன் சக்தியில் சிறந்த வகையில் தன் ஆசானின் நிறைவுக்கான பங்கை அளிக்கும் சீடனானவன், அந்த வாழ்வுமுறையில் இருந்து (ஒன்றன்பின் ஒன்றாக) அடுத்தடுத்த வாழ்வுமுறைகளை அதனதனுக்குரிய கடமைகளுடன் பயில வேண்டும்.(27) (இவ்வாறு) தான் வாழ்வின் நான்கில் ஒரு பகுதியை வேத கல்வியில் கடத்தி, நோன்புகள் மற்றும் உபவாசங்களை நோற்று, ஆசானுக்கு (இறுதி) கட்டணத்தைக் கொடுக்கும் சீடன், இல்லற வாழ்வு {கிருஹஸ்தனாக} வாழ விதிப்படி விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்ப வேண்டும்[7].(28) பிறகு, விதிப்படி மனைவிகளைப் பெற்று, கவனமாக இல்லற நெருப்பை நிறுவிக் கொள்ளும் அவன், எப்போதும் நோன்புகளையும் உபவாசங்களையும் கடைப்பிடித்து இல்லறவாசியாகி {கிருஹஸ்தனாகி} தன் வாழ்வின் இரண்டாம் கட்டத்தைக் கடத்த வேண்டும்” என்றார் {வியாசர்}.(29)

கிருஹஸ்தம்! – சாந்திபர்வம் பகுதி – 243-கிருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ள நான் வகை விருத்திகள்; இல்லறத்தானின் கடமைகள்; விருந்தினர்கள் மேன்மை; விகஸம் மற்றும் அமுதம் போன்ற உணவுகள்; அவன் ஆதரிக்க வேண்டிய உற்றார் உறவினரால் அவனுக்குக் கிடைக்கும் வெற்றி; ஓர் இல்லறத்தான் அடையும் உயர்ந்த கதி ஆகியவற்றைச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “தகுதி {புண்ணியங்களைத்} தரும் நோன்புகளை நோற்கும் இல்லறத்தான், தன் வாழ்வின் இரண்டாம் கட்டத்தில், விதி குறிப்பிடும் வழிகளின்படி மனைவிகளை ஏற்று, (தனக்கான) நெருப்பை நிறுவி {அக்னியை ஆதானஞ்செய்து}, தன் இல்லத்தில் வசிக்க வேண்டும்.(1) இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பொறுத்தவரையில், கல்விமான்களால் நான்கு வகை ஒழுக்கங்கள் {விருத்திகள்} விதிக்கப்பட்டுள்ளன. முதல் வகையானது, மூன்று வருடங்கள் நீடிக்கும் அளவுக்குப் போதுமான தானியங்களைக் கிடங்கில் வைத்துக் கொள்வதைக் கொண்டதாகும். இரண்டாவது, ஒரு வருடம் நீடிக்கும் கிடங்கை வைத்துக் கொள்வதைக் கொண்டதாகும்.(2) மூன்றாவது, நாளையைக் குறித்துச் சிந்திக்காமல் இன்றைக்கானதைக் கொள்வதைக் கொண்டதாகும். நான்காவது, புறாவின் முறைப்படி தானியங்களைச் சேகரிப்பதைக் கொண்டதாகும்[1]. இவை ஒவ்வொன்றிலும் தனக்கும் முந்தையதைவிடப் பிந்தையதே சாத்திர விதிப்படி தகுதி வாய்ந்ததாகும் {புண்ணியம் நிறைந்ததாகும்}[2].(3) முதல் வகை ஒழுக்கத்தைப் பயிலும் இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, (தானே வேள்வி செய்வது, பிறருக்கு வேள்வி செய்து கொடுப்பது, கற்பிப்பது, கற்பது, கொடையளிப்பது, கொடையேற்பது ஆகிய) நன்கறியப்பட்ட ஆறு கடமைகளையும் செய்ய வேண்டும். இரண்டாம் வகை ஒழுக்கதை {விருத்தியைப்} பின்பற்றுபவன், இவற்றில் (கற்பது, கொடுப்பது, ஏற்பது ஆகிய) மூன்றை மட்டுமே செய்யலாம். மூன்றாம் வகை ஒழுக்கத்தை {விருத்தியைக்} கடைப்பிடிப்பவன் இல்லறக் கடமைகளில் (கற்பது, கொடுப்பது ஆகிய) இரண்டை மட்டுமே செய்யலாம். இல்லறத்தின் நான்காம் வகையைக் கடைப்பிடிக்கும் இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, (சாத்திரங்களைக் கற்பது என்ற) ஒரே ஒரு கடமையை மட்டுமே செய்ய வேண்டும்.(4) ஓர் இல்லறத்தானின் கடமைகள் அனைத்தும் மிகத் தகுதி வாய்ந்தவையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஓர் இல்லறத்தான் தன் பயன்பாட்டுக்காக மட்டுமே எந்த உணவையும் சமைக்கக்கூடாது; அதேபோல, வேள்விகளில் தவிர (உணவுக்காக) விலங்குகளைக் கொல்லவும் கூடாது[3].(5)ஓர் இல்லறத்தான் (உணவுக்காக) ஒரு விலங்கைக் கொல்ல விரும்பினாலோ, (விறகுக்காக) ஒரு மரத்தை வெட்ட விரும்பினாலோ, அசையும் மற்றும் அசையாத இருப்புகளுக்கு முறையாக யஜுஸ்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி அவன் செயல்பட வேண்டும். ஓர் இல்லறத்தான் பகல் பொழுதிலோ, இரவின் முதல் பகுதியிலோ, இறுதிப் பகுதியிலோ உறங்கக்கூடாது[4].(6) காலை வேளைக்கும், மாலை வேளைக்கும் இடையில் அவன் ஒருபோதும் இருமுறை உண்ணக்கூடாது[5]. பருவகாலமின்றி அவன் தன் மனைவியை ஒருபோதும் படுக்கைக்கு அழைக்கக்கூடாது. அவனது வீட்டில் எந்தப் பிராமணனும் உணவு கொடுக்கப்படாமலோ, வழிபடப்படாமலோ துன்புறக்கூடாது.(7) அத்தகைய விருந்தினர்கள், வேள்விக் காணிக்கைகளை அளிப்பவர்களாகவும், வேதங்கள் மற்றும் சிறந்த நோன்புகளை நோற்பதன் மூலம் தூய்மையடைந்தவர்களாகவும், நற்பிறப்பு கொண்டவர்களாகவும், சாத்திரங்களை அறிந்தவர்களாகவும்,(8) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்பவர்களாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களாகவும், அறச்சடங்குகள் அனைத்திலும் கவனம் கொண்டவர்களாகவும், தவங்களில் பற்றுள்ளவர்களாகவும் இருப்பதால் அவர்களை அவன் {இல்லறத்தான்} எப்போதும் வழிபட வேண்டும். வேள்விகளிலும், விருந்தினர்களுக்குத் தொண்டாற்றுவதற்காக உள்ள இது போன்ற அறச்சடங்குகளிலும் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கை அளிக்க வேண்டும்.(9) இந்த வாழ்வுமுறையில் {கிருஹஸ்தாஸ்ரமத்தில்}, (சமைக்கப்படும்) உணவின் ஒரு பகுதியை, (ஒருவனின் பிறப்பு அல்லது குணத்தை அலட்சியம் செய்துவிட்டு), வெளிப்பகட்டுக்காக நகங்களும், தாடியும் வளர்ப்பவன், செருக்குடன் தன் (அறப்) பயிற்சிகளை வெளிக்காட்டுபவன், முறையில்லாமல் தன் புனித நெருப்பைக் கைவிட்டவன், தன் குருவுக்கே தீங்கிழைத்தவன் என அனைத்து உயிரினங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று சாத்திரங்கள் விதிக்கின்றன. இல்லற வாழ்வுமுறையைப் பின்பற்றுபவன், பிரம்மச்சாரிகளுக்கும், சந்நியாசிகளுக்கும் (உணவு) கொடுக்க வேண்டும்.(10,11)ஓர் இல்லறத்தான் ஒவ்வொரு நாளும் விகஸம் உண்பவனாகவும், ஒவ்வொரு நாளும் அமுதத்தை உண்பவனாகவும் இருக்க வேண்டும். வேள்விகளில் காணிக்கையளிக்கப்படுவதில் எஞ்சுவதில் தெளிந்த நெய்யைக் கலந்த உணவு அமுதமாகும்[6].(12) (அனைத்து உறவினர்கள் மற்றும்) பணியாட்களுக்கு உணவளித்த பிறகு உண்ணும் இல்லறத்தான் விகஸம் உண்பவனாகச் சொல்லப்படுகிறான். பணியாட்களுக்கு உணவளித்த பிறகு எஞ்சும் உணவே விகஸம் என்றழைக்கப்படுகிறது. வேள்விக் காணிக்கைகளை அளித்த பிறகு எஞ்சுபவை அமுதம் என்றழைக்கப்படுகிறது.(13) இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் ஒருவன் தான் மணந்து கொண்ட மனைவியுடனே மனநிறைவுடன் இருக்க வேண்டும். அவன் தற்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அவன் வன்மத்தைத் தவிர்த்து, புலன்களை அடக்கிக் கொள்ள வேண்டும்.(14)

அவன், ரித்விக், புரோகிதர், ஆசான், தாய்மாமன், விருந்தினர்கள், முதியோர் மற்றும் வயதில் இளையோராகத் தன்னைச் சார்ந்திருப்பவர்கள், நோயால் பீடிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், பெற்றோர், தந்தைவழி குடும்பத்தில் வந்த பெண்கள், உடன்பிறந்தான், மகன், மனைவி, மகள் மற்றும் தன் பணியாட்களுடன் ஒருபோதும் சச்சரவில் ஈடுபடக்கூடாது.(15,16) சச்சரவுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஓர் இல்லறத்தான் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அத்தகைய சச்சரவுகளை வெல்வதன் மூலம் அவன், (இம்மைக்குப் பின்பான மறுமையில்) இன்ப உலகங்கள் அனைத்தையும் வெல்வான். இதில் எந்த ஐயமும் கிடையாது[7].(17) ஆசானானவர் (முறையாக மதிக்கப்பட்டால்) பிரம்மலோகத்திற்கே வழிகாட்டக் கூடியவராவார். தந்தையானவர் (மதிக்கப்பட்டால்) பிரஜாபதியின் உலகங்களுக்கு வழிகாட்டக் கூடியவராவார். ஒரு விருந்தினர், இந்திலோகத்திற்கு வழிகாட்டக்கூடிய பலம் கொண்டவராவார். தேவலோத்தைப் பொறுத்தவரையில் ஒரு ரித்விக்குக்கு அந்தச் சக்தியுண்டு. தந்தைவழி வந்த பெண் உறவினர்களுக்கு, அப்சரஸ்களின் உலக முகரிமை {தலைமை} உண்டு. (குருதியின் மூலமான) உற்ற சொந்தங்களுக்கு விஸ்வதேவர்களின் உலக முகரிமை உண்டு.(18) திருமணத்தின் மூலம் உண்டான உறவினர்கள் மற்றும் இணை உறவினர்களுக்கு {தூரத்து சொந்தங்களுக்கு} (வடக்கு உள்ளிட்ட) பல்வேறு திசைகளிலும், தாய் மற்றும் தாய்மாமனுக்கு உலகிலும் முகரிமை {தலைமை} உண்டு. முதிர்ந்தோர், இளையோர், துன்புறுவோர், வீணானோர் ஆகியோருக்கு வானத்தில் சக்தியுண்டு[8].(19)

மூத்த தமையன் (தனக்கு இளைய தம்பிகள் அனைவருக்கும்) தந்தையைப் போன்றவனே ஆவான். மனைவியும், மகனும் ஒருவனின் சொந்த உடலே ஆவர். பணியாட்கள் தன் நிழலே ஆவர். மகளானவள் பெரும் அன்புக்குரியவளாவாள்.(20) கல்விமானும், கடமைகளை நோற்பவனும், நீடித்திருக்கும் திறன் கொண்டவனுமான ஓர் இல்லறத்தான், இறுதியாகப் பெயர் குறிப்பிடப்பட்ட உறவினர்களைப் பொறுத்தவரையில், அவர்களே தன்னை நிந்தித்தாலும் இந்தக் காரணங்களினால் இதயத்தில் கவலையையோ வருத்தமோ அடையாமல் அவர்களை அவன் பொறுத்துக் கொள்ள வேண்டும்.(21) அறம்சார்ந்த எந்த இல்லறத்தானும், செல்வத்தைக் கருத்தில் கொண்டு அத்தூண்டுதலின் பேரில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது. இல்லற வாழ்வைப் பொறுத்தவரையில் கடமை வழிமுறைகள் மூன்று இருக்கின்றன. அவற்றில் (பட்டியல் வரிசையில்) அடுத்தடுத்து வருவது, அதனதற்கு முந்தையதைவிடப் பெரிதும் தகுதிவாய்ந்ததாகும் {புண்ணியம் நிறைந்ததாகும்}[9].(22) (அடிப்படையான) நான்கு வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைப்} பொறுத்தவரையிலும் கூட, பிந்தி வருவது முந்தையதைவிட மேன்மையானது என்ற இதே தகுவிதி பின்பற்றப்படுகிறது. (அதன்படியே, பிரம்மச்சரியத்தை விட இல்லறம் மேன்மையானது, இல்லறத்தைவிட வானப்பிரஸ்தம் மேன்மையானது, வானப்பிரஸ்தத்தைவிடப் பிச்சையெடுத்து வாழ்வது, அல்லது முற்றிலும் துறவு கொண்டு வாழ்வது மேன்மையானது).(23) செழிப்பில் விருப்பமுள்ளவன், அந்தந்த வாழ்வுமுறைகளைப் பொறுத்தவரையில் சாத்திரங்கள் விதித்திருக்கும் கடமைகள் மற்றும் சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.(24)கும்பதானிய வகை, உஞ்ச வகை மற்றும் காபோடி வகைகளின் படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டு இல்லறவாழ்வை வாழும் உயர்ந்த தகுதியுடையவர்கள் வாழும் நாடு செழிப்பில் வளரும்[10].(25) எந்த மனிதன் அக்கடமைகளை நோற்று இல்லற வாழ்வை உற்சாகமாக வாழ்கிறானோ அவன் தனக்கு முந்தைய பத்துத் தலைமுறை மூதாதையர்களையும், தனக்குப் பிந்தைய பத்துத் தலைமுறை வழித்தோன்றல்களையும் புனிதப்படுத்துகிறான்.(26) ஓர் இல்லறத்தான் தன் இல்லறக் கடமைகளை முறையாக நோற்பதன் மூலம், பெரும் மன்னர்களும், பேரரசர்களும் அடையும் உலகங்களுக்கு இணையான இன்பத்தை விளைவிக்கும் கதியை அடைகிறான். புலன்களை அடக்கியவர்களுக்கும் இதே கதியே விதிக்கப்பட்டிருக்கிறது.(27) உயர் ஆன்மா கொண்ட இல்லறத்தார் அனைவருக்கும் சொர்க்கமானது விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சொர்க்கமானது, (செலுத்துபவனின் விருப்பப்படி நகரும்) இனிமை நிறைந்த தேர்களைக் கொண்டதாக இருக்கிறது. அதுவே வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இனிமைநிறைந்த சொர்க்கமாகும்.(28) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட இல்லறத்தார் அனைவருக்கும் சொர்க்கலோகமே உயர்ந்த வெகுமதியாக இருக்கிறது.(29) சுயம்புவான பிரம்மன் இல்லற வாழ்வுமுறையே சொர்க்கத்தை உண்டாக்கும் காரணமாக இருக்க வேண்டும் என்று விதித்திருக்கிறான். இவ்வாறு விதிக்கப்பட்டிருப்பதால், படிப்படியாக இரண்டாம் வாழ்வுமுறையை அடையும் மனிதன் சொர்க்கத்தில் இன்பத்தையும், மதிப்பையும் அடைகிறான்.(30) இதன்பிறகு, தங்கள் உடல்களைக் கைவிட விரும்புவோருக்காக, உயர்ந்ததும், மேன்மையானதுமான மூன்றாவது என்றழைக்கப்படும் வாழ்வுமுறை {வானப்பிரஸ்தாஸ்ரமம்} வருகிறது. (பல்வேறு வகைத் தவங்களின் மூலம்) தங்கள் உடல்களைக் காய்ந்த தோலால் போர்த்தப்பட்ட எலும்புகளாகக் குறைத்துக் கொள்ளும் வானப்பிரஸ்த வாழ்வுமுறையானது, இல்லறத்தைவிட {கிருஹஸ்தாஸ்ரமத்தைவிட} மேன்மையானதாகும். அதைக் குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக” என்றார் {வியாசர்}”.(31)

வானப்ரஸ்தம்! – சாந்திபர்வம் பகுதி – 244-காட்டில் ஒதுங்கி வாழும் வாழ்வுமுறைக்கான நடைமுறைகள், உணவுப் பழக்கங்கள், கடமைகள், கட்டுப்பாடுகள்; வானப்ரஸ்த வாழ்வுமுறையைப் பின்பற்றி வெற்றி கண்ட முனிவர்களின் பட்டியல்; நான்காவது வாழ்வுமுறையான துறவறத்தைப் பின்பற்ற வேண்டிய வேளை ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நல்லோரால் விதிக்கப்பட்ட இல்லறவிதிகள் உனக்குச் சொல்லப்பட்டது. ஓ! யுதிஷ்டிரா, அடுத்ததாகச் சொல்லப்பட்ட கடமைகளைக் குறித்து இப்போது கேட்பாயாக.(1) ஒருவன் படிப்படியாக இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைக்} கைவிட்டு, சிறந்ததான மூன்றாம் வாழ்வு முறைக்குள் நுழைய வேண்டும். தவங்களின் மூலம் தங்களைத் துன்புறுத்திக் கொண்டு, மனைவியரோடு சேர்ந்து வாழும் மனிதர்களுக்குச் சொந்தமானதே இந்த வாழ்வுமுறை {ஆசிரமம்} ஆகும். காட்டில் ஒதுங்கி வாழ்வோரால் {வானப்ரஸ்தர்களால்} பயிலப்படுவதே இந்த வாழ்வுமுறையாகும்.(2) ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, அனைத்து மனிதர்களின் நடைமுறைகளையும் {ஒழுக்கங்களையும்}, அனைத்து வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்} சந்திக்க நேரும் இந்த வாழ்வுமுறையில் வாழ்பவர்களால் நோற்கப்படும் கடமைகளைக் குறித்துக் கேட்பாயாக. உண்மையில், புனிதத்தலங்களில் வசிப்போருக்கும், உரிய ஆலோசனைக்குப் பிறகு இந்த வாழ்வுமுறையில் வாழ்பவர்களுக்குமான கடமைகளைக் குறித்துக் கேட்பாயாக.(3)

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஓர் இல்லறத்தான் தன் உடலில் சுருக்கங்களையும், தன் தலையில் நரைத்த முடியையும், தன் பிள்ளைகளின் பிள்ளைகளையும் {பேரர்களையும்} கண்ட பிறகு காட்டில் ஓயச் செல்ல வேண்டும்.(4) அவன், தன் வாழ்வின் மூன்றாம் பாகத்தை வானப்ரஸ்த வாழ்வுமுறையை நோற்பதில் கடத்த வேண்டும். அவன் இல்லறத்தானாக இருந்தபோது, கவனித்த {பராமரித்த ஹோம} நெருப்புகளை இப்போதும் கவனிக்க வேண்டும். வேள்வி செய்ய விரும்பும் அவன், (சடங்குகளின் விதிப்படி) தேவர்களைத் துதிக்க வேண்டும்.(5) நோன்புகளை நோற்று, எளிய உணவை உண்ணும் அவன், நாளின் ஆறாம் பாகத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே உண்ண வேண்டும்[1]. அவன் எப்போதும் கவனம் நிறைந்தவனாக இருக்கவேண்டும். தன் நெருப்புகளைக் கவனித்துக் கொள்ளும் {பராமரிக்கும்} அவன், சில பசுக்களையும் வைத்துக் கொண்டு, கடமை உணர்வுடன் அவற்றைப் பராமரிக்க வேண்டும்[2]. வேள்விச் சடங்குகள் அனைத்திலும் அவன் கவனமாக இருக்க வேண்டும்.(6) தான் இருக்கும் பகுதியில் (எவரின் உடைமையாகவும் இல்லாமல்) {உழவின்றி} தானாக விளையும் அரிசி, கோதுமை மற்றும் பிற வகைத் தானியங்களிலேயே அவன் வாழ வேண்டும். விருந்தினர்களுக்கு உணவூட்டிய பிறகு, எஞ்சுவதையே அவன் உண்ண வேண்டும். இந்த மூன்றாம் வாழ்வு முறையில் {வானப்ரஸ்தாஸ்ரமத்தில்}, அவன் நன்கறியப்பட்ட ஐந்து வேள்விகளில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக அளிக்க வேண்டும்[3].(7)வானப்ரஸ்த வாழ்வுமுறைக்கென்று நான்கு வகை ஒழுக்க நெறிகள் விதிக்கப்பட்டுள்ளன. சிலர் அந்த நாளுக்குத் தேவையானதை மட்டுமே திரட்டுகின்றனர். சிலர் ஒரு மாதம் நீடிக்கும் அளவுக்குத் திரட்டிச் சேமிக்கின்றனர்.(8) {சிலர் ஓராண்டு நீடிக்கும் அளவுக்குப் போதுமானவற்றைச் சேமிக்கின்றனர்}[4]. சிலர் பனிரெண்டு ஆண்டுகள் நீடிக்கும் அளவுக்குப் போதுமான தானியங்களையும், தேவையான பிற பொருட்களையும் சேகரிக்கின்றனர். காட்டில் ஒதுங்கி வாழ்பவர்கள் {வானப்ரஸ்தர்கள்}, விருந்தினர்களை வழிபடவும், வேள்விகளைச் செய்யவும் இவ்வழிமுறைகளில் செயல்படலாம்.(9) அவர்கள், மழைக்காலங்களில் தங்களை மழைக்கு வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும், கூதிர் காலத்தில் {பனிக்காலத்தில்} நீரில் மூழ்க வேண்டும். வேனிற்காலத்தில் அவர்கள் தலைக்கு மேலே சூரியன் சுட்டெரிக்க நான்கு நெருப்புகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்க வேண்டும். எனினும், வருடம் முழுவதும் அவர்கள் உணவில் எளிமையானவர்களாகவே இருக்க வேண்டும்.(10) அவர்கள் வெறுந்தரையிலேயே அமரவும், உறங்கவும் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் கால் கட்டைவிரல்களில் {கால் நுனிகளில்} மட்டுமே நிற்கிறார்கள். (வேறு எந்த இருக்கையோ, படுக்கையோ கொள்ளாமல்) வெறுந்தரை மற்றும் சிறிய புல் விரிப்பிலேயே நிறைவடைபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் காலை, நடுப்பகல் மற்றும் மாலை வேளைகளில் (வேள்விக்குத் தயாராவதற்கான) தங்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்கிறார்கள்.(11)அவர்கள் தானியங்களைத் தூய்மையாக்க தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வேறு சிலர் அக்காரியத்திற்குக் கற்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்[5]. அவர்களில் சிலர், மிதமாகக் கொதிக்க வைக்கப்பட்ட கோதுமை (அல்லது பிற தானியக்) கஞ்சியை வளர்பிறையில் மட்டுமே குடிக்கிறார்கள்.(12) வேறு சிலர் அதே போன்ற கஞ்சியைத் தேய்பிறையில் மட்டுமே குடிக்கிறார்கள். சிலர் (எதையும் அடைய நாடாமல்) தானாக வருவதை மட்டுமே உண்கிறார்கள். கடும் நோன்புகளைப் பின்பற்றும் சிலர் கிழங்குகளை மட்டுமே, சிலர் கனிகளை மட்டுமே, சிலர் மலர்களை மட்டுமே உண்டு, வைகானசர்களால் பின்பற்றப்படும் வழிமுறையை முறையாக நோற்கிறார்கள்.(13) விவேகமும், பக்தியும் கொண்ட மனிதர்களால் இவையும் இன்னும் பல்வேறு நோன்புகளும் பின்பற்றப்படுகின்றன. (துறவறம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையான) நான்காவது உபநிஷத்துகளின் அடிப்படையிலானதாகும்.(14) அதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் சமமாக அனைத்து வாழ்வுமுறைகளிலும் நோற்கப்படலாம். பிறவற்றில் இருந்து வேறுபட்ட இந்த முறை, இல்லறம் மற்றும் காட்டுவாழ்வு ஆகியவற்றுக்குப் பிறகு வருகிறது.(15)ஓ! மகனே {சுகரே}, இந்த யுகத்திலேயே கூட, அனைத்துப் பொருட்களின் உண்மைகளை அறிந்தவர்களும், கல்விமான்களுமான பல பிராமணர்கள் இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றியதாக அறியப்படுகிறார்கள். அகஸ்தியர், {சப்தரிஷிகளான அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், வசிஷ்டர், நாரதர் மற்றும் கிரது ஆகிய} ஏழு முனிவர்கள், மதுச்சந்தர், அகமர்ஷணர்,(16) ஸாங்கிருதி, விரும்பிய எங்கும் வசித்தவரும், (எதையும் நாடிப் பெறாமல்) தானாக வந்ததை எடுத்துக் கொண்டவருமான {யதாவாஸரும், அக்ருதஸ்ரமருமான} சுதிவாதண்டி[6], அஹோவீர்யர், காவ்யர், தாண்டியர், கல்விமானான மேதாதி,(17) வலிமையும் சக்தியும் கொண்டவரான {புதரும், பலவானுமான} கர்மநிர்வாஹர், தவ வலிமையைப் பெறுவதற்காகப்) பெரிதும் முயற்சி செய்தவரான {கிருதஸ்ரமரான} சூன்யபாலர் ஆகியோர் அனைவரும் இந்தக் கடமை நடைமுறைகளின் ஆசான்களாகவும், அவற்றைப் பின்பற்றிச் சொர்க்கத்தை அடைந்தவர்களாகவும் இருக்கின்றனர்.(18) ஓ! மகனே, தங்கள் தவத்தகுதியின் கனிகளை உடனே காணும் பலம் கொண்ட பெரும் முனிவர்கள் பலர்[7], யாயாவரர்கள் என்ற பெயரில் அறியப்படும் எண்ணற்ற தவசிகள், கடமைகளின் வேறுபாடுகளைக் குறித்த துல்லிய அறிவைக் கொண்டவர்களும் மிகக்கடுமையான தவங்களைச் செய்தவர்களுமான முனிவர்கள் பலர்,(19) குறிப்பிட எண்ணற்றவர்களாக இருக்கும் வேறு பிராமணர்கள் பலர் ஆகியோர் காட்டு வாழ்வுமுறையை {வானப்ரஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றினர். கடுந்தவங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அறத்தில் நிலையுறுதியுடன் கூடியவர்களும், புலன்களை அடக்கியவர்களும், தங்கள் தவங்களின் கனிகளை உடனே காண வல்லவர்களுமான வைகானஸர்கள், வாலகில்யர்கள், சைகதர்கள் ஆகியோர் அனைவரும் இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றி இறுதியாகச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(21)அச்சத்தில் இருந்து விடுபட்டவர்களாக, நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கிடையில் கணக்கிடப்படாமல் உள்ள அவர்கள், ஆகாயத்தில் ஒளியுடல்களாகத் தெரிகின்றனர். வாழ்வின் நான்காவது அல்லது இறுதிப் பகுதியை அடைந்ததும், முதுமையால் பலவீனமடைந்து, நோயால் பீடிக்கப்பட்ட ஒருவன் (துறவறம் என்றழைக்கப்படும் நான்காம் முறைக்காக) காட்டு வாழ்வு முறையைக் கைவிட வேண்டும். அவன், ஒரே நாளில் நிறைவடையக்கூடியதும், தனது உடைமைகள் அனைத்தையும் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டிய நிகழ்வுமான ஒரு வேள்வியைச் செய்து,(22,23) தன் ஸ்ராத்தத்தையும் செய்ய வேண்டும். அனைத்துப் பொருள்களில் இருந்து விலகும் அவன், தன்னிடம் மட்டுமே அர்ப்பணிப்புக் கொண்டு, தன்னில் மட்டுமே இன்பமடைந்து, தன்னிடமே ஓய்வு கொள்ள வேண்டும்[8]. அவன் (அதுமுதல்) தன் வேள்வி நெருப்புகள் அனைத்தையும் தன்னிலேயே நிறுவி, அனைத்து வகைப் பற்று மற்றும் பந்தங்களைக் கைவிட வேண்டும்.(24) (ஒருவேளை முற்றான துறவை அடையத் தவறினால்) அவன் ஒரே நாளில் நிறைவடையக்கூடிய அத்தகைய வேள்விகளையும், சடங்குகளையும் எப்போதும் செய்ய வேண்டும்[9]. எனினும், வேள்வி செய்பவர்களின் (பொதுவான) வேள்விகளைச் செய்யும்போது அதிலிருந்து சுய வேள்வி பிறந்தால்,(25) அப்போது (அவன் பொதுவான அனைத்து வேள்விகள் செய்வதையும் தொடராமல்) தன் விடுதலையின் {முக்தியின்} நிமித்தமாக, தன் சுயத்தையே மூன்று நெருப்புகளில் வேள்வி {தியாகம்} செய்யலாம்[10]. அவன், தன் உணவில் குறை காணாமல், (ஒவ்வொரு முறையும் நன்கறியப்பட்ட) யஜுர்வேத மந்திரங்களைச் சொல்லி, அஃதை {அந்த உணவை} ஐந்து அல்லது ஆறு வாய்நிறைய {கவளம்} உண்டு, அவற்றை முறையாக ஐந்து உயிர் காற்றுகளுக்குக் காணிக்கையாக்க வேண்டும்[11].(26)காட்டில் ஒதுங்கி வாழும் வாழ்வைப் பின்பற்றும்போது, தவம் நோற்பதில் ஈடுபடும் ஒருவன், தன் தலைமுடி, உடலில் உள்ள மயிர் ஆகியவற்றைச் சிரைத்து, தன் நகங்களை உரித்து, செயல்களின் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பெரும் புனிதம் நிறைந்த நான்காம் மற்றும் இறுதியான வாழ்வுமுறைக்குள் {ஸந்நியாச ஆசிரமத்திற்குள் / துறவறத்திற்குள்} கடந்து செல்ல வேண்டும்.(27) நான்காம் வாழ்வுமுறைக்குள் நுழையும் மறுபிறப்பாளன், அனைத்து உயிரினங்களுக்கும் (அபயமளிக்கும் {தீங்கிழையாமை / அஹிம்சை என்ற}) உறுதிமொழியைக் கொடுத்து, மறுமையில் சுடர்மிக்க ஒளியுலகங்கள் பலவற்றை ஈட்டுவதில் வென்று, இறுதியாக முடிவிலியை அடைகிறான்.(28) பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டு, சிறந்த மனநிலையையும், ஒழுக்கத்தையும் கொண்டவனும், தன்னை அறிந்தவனுமான மனிதன், இம்மைக்கோ மறுமைக்கோ தேவையான எந்தச் செயலையும் செய்ய ஒருபோதும் விரும்பமாட்டான். கோபமில்லாதவனாக, பிழை தவிர்த்தவனாக, கவலை மற்றும் நட்பில்லாதவனாக இருக்கும் அத்தகைய மனிதன், இவ்வுலகக் காரியங்களில் முற்றாக எந்த விருப்பமும் இல்லாத ஒருவனைப் போல வாழ்கிறான்.(29) (சந்நியாசத்தை நோற்கும்) ஒருவன், யமம், மற்றும் அவற்றுக்குப் பின்னே நடக்கும் (நியமத்திலடங்கிய) கடமைகளை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டக்கூடாது. அத்தகைய ஒருவன், தன் வாழ்வுமுறைக்கான விதியின் படி வாழ்ந்து, வேத கல்வியையும், தன் பிறப்பின் வகையைக் குறிக்கும் புனித நூலையும் சக்தியுடன் வீசியெறிய வேண்டும். அறத்திற்கு அர்ப்பணிப்புடனும், முழுமையான கட்டுப்பாட்டின் கீழுள்ள புலன்களுடனும் கூடியவனும், தன்னறிவைக் கொண்டவனுமான அவன், தான் அடைய விரும்பும் கதியை ஐயமற அடைகிறான்[12].(30) இது மூன்றாம் வாழ்வுமுறைக்கு {வானப்ரஸ்தாஸ்ரமத்திற்குப்} பிறகு வரும் நான்காவது வாழ்வுமுறையாகும் {சந்நியாசாஸ்ரமமாகும்}. இது மிக மேன்மையானதும், எண்ணற்ற உயர்ந்த அறங்கள் நிறைந்ததுமாகும். மற்ற மூன்று வகை வாழ்வுமுறைகளில் உள்ள தகுதியில் இஃது அவற்றை விஞ்சியிருக்கிறது. இதுவே மிக உயர்ந்த இடத்தைப் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. அறிவொழுக்கத்தில் சிறந்ததும், அனைவருக்கும் உயர்ந்த புகலிடமாக இருப்பதுமான அந்த வாழ்வுமுறைக்குரிய கடமைகளைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக” என்றார் {வியாசர்}.(31)

ஸந்நியாஸம்! – சாந்திபர்வம் பகுதி – 245-சன்னியாச வாழ்வுமுறைக்கான நடைமுறைகள், உணவுப் பழக்கங்கள், கடமைகள், கட்டுப்பாடுகள்; மறுபிறப்பாளர்களும், பிராமணர்களும் யார் என்பது குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “காட்டு வாழ்வுமுறையின் கடமைகளை நோற்று வாழும்போது, உயர்ந்த ஞானப்பொருளை அடைய முனையும் ஒருவன், எவ்வாறு தன்னால் இயன்ற அளவுக்கு, யோகத்தில் தன் ஆன்மாவை நிறுவிக் கொள்ள முடியும்?” என்று கேட்டார்.(1)

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “பிரம்மச்சரியம் மற்றும் இல்லறம் என்ற முதல் இரண்டு வாழ்வுமுறைகளைச் செய்வதன் மூலம் (உடலும் ஒழுக்கமும்) தூய்மையடைந்த ஒருவன், அதன் பிறகு வரும் மூன்றாம் வாழ்வு முறையில் {வானப்ரஸ்தாஸ்ரமத்தில்} யோகத்தில் தனது ஆத்மாவை நிறுவிக் கொள்ள வேண்டும். உயர்ந்த இலக்கை உடைமையாக அடைவதற்குச் செய்ய வேண்டியதைக் குவிந்த கவனத்துடன் இப்போது கேட்பாயாக.(2) மனம் அல்லது இதயத்தின் களங்கங்கள் அனைத்தையும் முதலில் சொல்லப்பட்ட (பிரம்மச்சரியம், இல்லறம் {கிருஹஸ்தம்}, காட்டறம் {வானப்ரஸ்தம்} என்ற) மூன்று வாழ்வு முறைகளின் நடைமுறையெனும் எளிய வழிமுறைகளில் அடக்கி, அனைத்து வாழ்வுமுறைகளிலும் மிகச் சிறந்ததும், மிக மேம்பட்டதுமான சந்நியாசம் அல்லது துறவறத்திற்குச் செல்ல வேண்டும்.(3) அவ்வாறாகத் தூய்மையை அடைந்து, நீ உன் நாட்களைக் கடத்துவாயாக. நான் சொல்வதைக் கேட்பாயாக. ஒருவன், தனக்கு உதவி செய்யவோ, தனக்குத் துணை புரியவோ ஒருவரும் இல்லாமல், (அவனது உயர்ந்த இலக்கை அடைவதைப் பொறுத்த வரையில்) வெற்றியை அடைவதற்காகத் தனியொருவனாக யோகம் பயில வேண்டும்.(4) தோழமை இல்லாமல் யோகம் பயில்பவனும், தனது பிரதிபலிப்பாகவே அனைத்தையும் காண்பவனும், (அண்ட ஆத்மாவால் அனைத்துப் பொருட்களும் படரந்தூடுருவியிருக்கும் {நீக்கமற நிறைந்திருப்பதன்} விளைவால்) ஒருபோதும் எதையும் அலட்சியம் செய்யாதவனுமான ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைவதில் இருந்து ஒருபோதும் வீழ்வதில்லை. வேள்வி நெருப்பைப் பராமரிக்காமல், நிலையான வசிப்பிடம் ஏதுமில்லாமல் உள்ள அத்தகைய மனிதன் {ஒரு சந்நியாசி}, தன் உணவுக்காகப் பிச்சையெடுக்க மட்டுமே ஒரு கிராமத்திற்குள் நுழைய வேண்டும்.(5)

அவன் நாளைக்காகச் சேர்த்து வைக்காமல் அன்றைய நாளுக்குத் தேவையானதை மட்டுமே பெற வேண்டும். அவன் உயர்ந்ததில் {பரத்தில்} இதயத்தை நிலைநிறுத்தியபடி, தவங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். உரிய ஒழுங்குமுறையின்படி சிறிதளவே உண்ணும் அவன், ஒருநாளைக்கு ஒரு முறைக்கு மேல் உண்ணக்கூடாது.(6) மண்டையோடு, மரத்தடியில் உறைவிடம், அணிந்து கொள்ளக் கந்தை, எத்தோழமையுமின்றித் தனித்திருத்தல், அனைத்து உயிரினங்களிடமும் பாகுபாடில்லாமை ஆகியன (அறம் பயிலும் ஒரு) துறவியின் பிற குறியீடுகளாகும்.(7) அச்சமடைந்த யானைகள் கிணற்றுக்குள் விழுவதைப் போல வார்த்தைகள் எவனிடம் நுழையுமோ, எவனிடம் இருந்து அவை மீண்டும் பேசுபவனிடம் திரும்பி வராதோ, அவனே விடுதலையை {முக்தியை} இலக்காகக் கொண்ட இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றத் தகுந்தவனாவான்[1].(8) ஆண்டியானவன் (அல்லது துறவியானவன்) எந்த மனிதனின் தீச்செயல்களையும் ஒருபோதும் கவனிக்கக்கூடாது. பிறரை இகழ்ந்து சொல்லப்படும் எதையும் அவன் ஒருபோதும் கேட்கக்கூடாது. குறிப்பாக அவன் ஒரு பிராமணனைக் குறித்துத் தீமையாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.(9) அவன் எப்போதும் பிராமணர்களுக்கு ஏற்படையவற்றை மட்டுமே பேச வேண்டும். (தன்னைக் குறித்து) இகழ்வாக ஏதும் சொல்லப்படும்போது, அவன் (பதிலளிக்காமல்) முற்றான அமைதியை நீட்டிக்க வேண்டும். உண்மையில் அத்தகைய அமைதியே அவனுக்குப் பரிந்துரைக்கப்படும் மருத்துவச் சிகிச்சையாகும்.(10)எவன் கிழக்கு வானைப் போலத் தன் ஒருவனாலேயே தான் இருக்கும் இடத்தை நிறைக்கிறானோ, தனக்கு முற்றிலும் தனிமையான அல்லது வெறுமையாகத் தோன்றும் இடத்தை எவனால் ஆயிரக்கணக்கான மனிதர்களும், பொருட்களும் நிறைந்ததாக்க முடியுமோ, அவனே உண்மையான பிராமணன் என்று தேவர்களால் கருதப்படுகிறான்[2].(11) எவன் தானாகக் கிடைக்கும் எதையும் உடுத்திக் கொள்கிறானோ, எவன் தானாகக் கிடைக்கும் எதையும் உண்டு வாழ்கிறானோ, எவன் தான் காணும் எந்த இடத்திலும் உறங்குகிறானோ அவனையே தேவர்கள் பிராமணன் என்று அறிகிறார்கள்.(12) பாம்பைப் போன்றதே தோழமை என்றும்; (இனிய பண்டம் மற்றும் பானங்களில் இருந்து கிடைக்கும்) முழு அளவு நிறைவானது நரகம் என்றும்; சவத்தைப் போன்றவளே பெண் என்றும் எவன் அச்சம் கொள்கிறானோ, அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(13) எவன் கௌரவிக்கப்படுகையில் ஒருபோதும் மகிழ்வதில்லையோ, எவன் அவமதிக்கப்படுகையில் ஒருபோதும் கோபம் கொள்வதில்லையோ, எவன் அனைத்து உயிரினங்களுக்கும் கருணையை உறுதியளித்திருக்கிறானோ {அபயம் அளித்திருக்கிறானோ}, அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(14) இறுதி வாழ்வுமுறையை {ஸந்நியாச வாழ்வுமுறையை} நோற்கும் ஒருவன், மரணத்தை மகிழ்ச்சியாகக் காணக்கூடாது. அதே வேளையில் அவன் வாழ்வையும் மகிழ்ச்சியாகக் காணக்கூடாது. அவன் (தலைவனின்) ஆணைக்காகக் காத்திருக்கும் பணியாளைப் போலத் தன் வேளைக்காக மட்டுமே காத்திருக்க வேண்டும்.(15)அவன் தன் இதயக் களங்கங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் தன் வாக்கின் களங்கங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் தன் பாவங்கள் அனைத்தையும் கழுவிக் கொள்ள வேண்டும். எதிரிகள் அற்றவனான அவனுக்கு எது அச்சத்தை ஏற்படுத்த முடியும்?(16) எவனுக்கு எந்த உயிரினத்திடமும் அச்சமில்லையோ, எவனிடம் எந்த உயிரினமும் அச்சங்கொள்வதில்லையோ அவன் அனைத்து வகைக் குற்றங்களில் இருந்தும் விடுபட்டிருப்பதால் எந்த இடத்தில் இருந்தும் அவனுக்கு அச்சம் ஏற்பட முடியாது.(17) காலால் நகரும் பிற உயிரினங்கள் அனைத்தின் காலடித் தடங்களும் யானையின் காலடித்தடம் விழுங்கிவிடுவதை போலவே அனைத்துப் பதவிகளும் நிலைகளும் யோகத்திற்குள் ஈர்க்கப்படும்[3].(18) அதே போலவே, பிற கடமைகள் மற்றும் நோன்புகள் எதுவும் (அனைத்து உயிரினங்களுக்கும்) தீங்கிழையாமை என்ற ஒற்றைக் கடமைக்குள் அடங்கிவிடும். பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பதைத் தவிர்ப்பவன் எப்போதும் நீடித்திருக்கும் இன்ப வாழ்வை வாழ்வான்.(19) தீங்கிழையாமல் இருப்பவனும், அனைத்து உயிரினங்களிடமும் சம பார்வை கொண்டவனும், வாய்மையில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், மனோவுறுதியுடன் கூடியவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், அனைத்து உயிரினங்களுக்கும் பாதுகாப்பை வழங்குபவனுமான ஒருவன், ஒப்பீட்டைக் கடந்த கதியை அடைகிறான்.(20)மரணம் என்றழைக்கப்படும் நிலையானது, தன்னறிவில் நிறைவுடன் உள்ளவனும், அச்சத்திலிருந்து விடுபட்டவனும், விருப்பம் மற்றும் எதிர்பார்ப்புகள் அற்றவனுமான ஒரு மனிதனைக் கடப்பதில் வெல்வதில்லை. மறுபுறம் அத்தகைய மனிதனே மரணத்தைக் கடந்து செல்வதில் வெல்கிறான்.(21) எவன் அனைத்து வகைப் பற்றுகளில் இருந்து விடுபட்டவனோ, எவன் தவங்களைச் செய்பவனோ, எவன் அனைத்துப் பொருட்களையும் பற்றியிருந்தாலும், பற்றில்லாமல் இருக்கும் வெளியைப் போல வாழ்கிறானோ, எவனுக்குத் தான் என்று அழைப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லையோ, எவன் தனிமையான வாழ்வை வாழ்வானோ, எவனுடைய ஆன்மா அமைதியானதோ அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(22) எவனுடைய வாழ்வு அறப்பயிற்சிக்கானதாக இருக்கிறதோ, எவனுடைய அறம், தன்னிடம் கடமையுணர்வுடன் பணி செய்பவர்களின் நன்மைக்கானதாக இருக்கிறதோ, எவனுடைய பகல்களும், இரவுகளும் தகுதியை {புண்ணியத்தை} அடைவதற்காக மட்டுமே இருக்கின்றனவோ அவனையே தேவர்கள் பிராமணன் என்று அறிகிறார்கள்[4].(23) எவன் ஆசையிலிருந்து விடுபட்டவனோ, எவன் (உலக மனிதர்களால் செய்யப்படும் செயல்களைச் செய்ய) ஒருபோதும் முயற்சி செய்வதில்லையோ, எவன் எவனுக்கும் தலைவணங்குவதில்லையோ, எவன் மற்றொருவனைத் துதிபாடுவதில்லையோ, எவன் அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனோ அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(24) அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியில் நிறைவடைந்து, துன்ப எதிர்பார்ப்பில் அச்சத்தால் நிறைகின்றன. எனவே, பிற உயிரினங்களைத் துன்பத்தில் நிறைக்கும் வாய்ப்பில் துயரடையுபவனான நம்பிக்கையுள்ள மனிதன், அனைத்து வகைச் செயல்களிலும் இருந்தும் முற்றாக விலக வேண்டும்.(25)எந்த உயிரினத்துக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதிக்கொடையானது, அனைத்துக் கொடைகளையும் கடந்து நிற்பதாகும். எவன் தொடக்கத்திலேயே தீங்கிழைக்கும் அறத்தைக் கைவிடுகிறானோ, அவன் அனைத்து உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதியை அளிக்கும்போது விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான்.(26) எந்த மனிதன் திறந்திருக்கும் தன் வாயில், காட்டில் ஒதுங்கி வாழ்வோருக்கு {வானப்ரஸ்தர்களுக்காக} விதிக்கப்பட்டிருக்கும் ஐந்து அல்லது ஆறு வாய்நிறையக்கூட உண்ணவில்லையோ அவன் உலகத்தின் நாபி என்றும், இந்த அண்டத்தின் புகலிடம் என்றும் சொல்லப்படுகிறான். {அவனது} தலை, பிற அங்கங்கள், நல்ல மற்றும் தீய செயல்கள் ஆகியன நெருப்பைக் கொண்டதாகின்றன.(27) தன்னைத்தானே தியாகம் செய்யும் அத்தகைய மனிதன், தன் புலன்களையும், மனத்தையும் தன் இதய வெளிக்குள் வசிக்கும் நெருப்பில் ஆகுதி செய்கிறான். தனக்குள் உள்ள அத்தகைய நெருப்புக்குள் அத்தகைய ஆகுதியை ஊற்றுவதன் விளைவால், தேவர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களுடன் கூடிய இந்த அண்டமே நிறைவடைகிறது[5].(28) ஒளியுடன் கூடியதும், மூன்று உறைகளில் மறைக்கப்பட்டதும், பரமாத்மாவின் முதன்மையான இயல்பைப் பகிர்ந்து கொள்ளும் ஈஸ்வரனின் தன்மைகளான முக்குணங்களுடன் கூடியதுமான ஜீவாத்மாவைப் புரிந்து கொண்டவர்கள், அனைத்து உலகங்களிலும் பெருமதிப்பிற்குரியவர்களாகிறார்கள். மனிதர்கள் அனைவருடன் கூடிய தேவர்களும் அவர்களது தகுதிகளை உயர்வாகப் பேசுகின்றனர்.(29) எவன் தன் உடலுக்குள் வசிக்கும் ஆன்மாவில், வேதங்கள் அனைத்தையும், வெளியையும் {ஆகாயத்தையும்}, உணரத்தக்க பிற பொருட்களையும், சாத்திரங்களில் தோன்றும் சடங்குகளையும், ஒலியால் உணரப்படும் யாவற்றையும், பரமாத்மாவின் மேன்மையான இயல்பையும் காண்பதில் வெல்கிறானோ, அவன் உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனாகத் தேவர்களாலும் வழிபடப்படுகிறான்.(30)எவன் தன் உடலுக்குள் வசிக்கும் ஆன்மாவில், (அளவில்லா) ஆகாயத்தாலும் அளக்க முடியாததும், தங்கமயமானதும், முட்டையில் இருந்து பிறந்ததும், முட்டைக்குள்ளேயே வசிப்பதும், பல சிறகுகளைக் கொண்டதும், இரு சிறகுகளைக் கொண்ட ஒரு பறவையைப் போன்றதும், பல ஒளிக்கதிர்களால் ஒளிமயமானதும், பூமியில் பற்றில்லாததுமான முதன்மையான பொருளை {பரமாத்மாவைக்} காண்கிறானோ, அவன் உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனாகத் தேவர்களாலும் வழிபடப்படுகிறான்[6].(31) தொடர்ந்து சுழல்வதும், சிதைவற்றதும், அனைத்து உயிரினங்களின் இருப்புக் காலத்தை விழுங்குவதும், ஆறு பருவ காலங்களை அச்சாகக் கொண்டதும், பனிரெண்டு மாதங்களாலான பனிரெண்டு ஆரங்களைக் கொண்டதும், சிறந்த இணைப்புகளைக் கொண்டதும், எதன் திறந்த வாய்க்குள் (விழுங்கப்படத் தயாராக) இந்த அண்டம் செல்கிறதோ அந்தக் காலச்சக்கரத்தில் நிறுவப்பட்டிருக்கும் புத்தியைக் கொண்டவனைத் தேவர்களும் வழிபடுகிறார்கள்.(32) கனவற்ற உறக்க நிலையே  அகன்ற உணர்வற்ற பரமாத்ம நிலையாக இருக்கிறது. அந்த உணர்வற்ற நிலையே இந்த அண்டத்தின் உடலாக இருக்கிறது. அது படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. உணர்வற்ற அந்தப் பரந்த நிலையில் ஒரு பகுதியை அடையும் ஜீவன் தேவர்களை நிறைவடையச் செய்கிறது. இறுதியாக நிறைவடையும் அவர்கள், அந்த உணர்வற்ற நிலையின் திறந்த வாயை நிறைவு செய்கிறார்கள்.(33) ஒளியுடனும், நித்தியக் கொள்கையுடனும் கூடிய ஜீவன் தொடக்கமில்லாததாகும். அது (குறிப்பிட்ட பாதைகளைப் பின்பற்றுவதன் மூலம்) நித்திய மகிழ்ச்சியுடைய முடிவிலா உலகங்களை அடைகிறது. எவனைக் கண்டு எந்த உயிரினமும் அஞ்சாதோ, அவன் ஒருபோதும் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ளத் தேவையில்லை.(34) நித்திக்கத்தக்க எதையும் ஒருபோதும் செய்யாதவனும், மற்றொருவனை ஒருபோதும் நிந்திக்காதவனுமான ஒருவனே உண்மையில் மறுபிறப்பாளனாகச் சொல்லப்படுகிறான். அத்தகைய மனிதன் பரமாத்மாவைக் காண்பதில் வெல்கிறான். அறியாமை விலகியவனும், பாவங்கள் கழுவப்பட்டவனுமான ஒருவன், பிறரால் அனுபவிக்கப்படும் இன்பத்தை இம்மையிலும், மறுமையிலும் அனுபவிப்பதில்லை (ஆனால் அவன் முற்றான விடுதலையை {முக்தியை} அடைகிறான்).(35) நான்காம் வாழ்வுமுறையை {சந்நியாஸாஸ்ரமத்தை} நோற்கும் ஒருவன், அனைத்திலும் தொடர்பற்றவனாகப் பூமியில் உலவிக் கொண்டிருக்கிறான். அத்தகைய ஒருவன், கோபம் மற்றும் குற்றத்தில் இருந்து விடுதலை பெற்றவனாக இருக்கிறான். அத்தகைய ஒருவன் மண்ணாங்கட்டியையும், தங்கக் குவியலையும் சம கண்ணுடனே பார்ப்பான். அத்தகைய மனிதன் தன் பயன்பாட்டுக்காக ஒருபோதும் எதையும் சேகரிக்க மாட்டான். அத்தகைய ஒருவன் நண்பர்களையோ, பகைவர்களையோ கொள்ள மாடடான். அத்தகைய ஒருவன் புகழ் அல்லது பழி மற்றும் ஏற்புடையது மற்றும் ஏற்பில்லாதது ஆகியவற்றில் முற்றிலும் கவனமற்றவனாக இருப்பான்” என்றார் {வியாசர்}.(36)

ஆத்மஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 246-ஆத்மாவை அறிந்த கொள்ள இந்திரியங்கள், தன்மாத்திரைகள், மனம், புத்தி, சித்தம் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஜீவாத்மாவானது, பிரகிருதியின் மாற்றங்கள் யாவற்றுடன் கூடியதாக இருக்கிறது. இவை {பிரகிருதியின் மாற்றங்கள்} ஆன்மாவை அறிவதில்லை, ஆனால் இவையனைத்தையும் ஆன்மா அறிந்திருக்கிறது.(1) பலமானவையும், நன்கு பழக்கப்பட்டவையும், பேருறுதி கொண்டவையுமான குதிரைகளைத் தான் தேர்ந்தெடுக்கும் பாதையில் செலுத்தும் ஒரு நல்ல சாரதியின் செயல்பாட்டைப் போலவே, ஆன்மாவும், ஆறாவதாக மனத்தைக் கொண்ட புலன்கள் என்றழைக்கப்படுவனவற்றின் துணையுடன் செயல்படுகிறது.(2) புலன் நுகர் பொருட்களானவை {தன்மாத்திரைகளானவை}, புலன்களைவிட {இந்திரியங்களைவிட} மேன்மையானவையாக இருக்கின்றன[1]. அந்தப் பொருட்களைவிட {தன்மாத்திரைகளைவிட} மனம் மேன்மையானதாக இருக்கிறது. மனத்தைவிடப் புத்தி மேன்மையானதாக இருக்கிறது. மஹத் என்றும் அழைக்கப்படும் ஆன்மாவானது, புத்தியைவிட மேன்மையானதாக இருக்கிறது.(3) மஹத்தைவிட மேன்மையானதாகப் புலப்படாதது (அல்லது பிரகிருதி) இருக்கிறது. அந்தப் புலப்படாததுக்கும் மேன்மையானதாகப் பிரம்மம் இருக்கிறது. பிரம்மத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை. அதுவே சிறப்பின் உயர்ந்த எல்லையும், உயர்ந்த கதியுமாக இருக்கிறது.(4) பரமாத்மாவானது ஒவ்வொரு உயிரினத்திலும் மறைந்திருக்கிறது. சாதாரண மனிதர்கள் அதைக் காண்பதில்லை. நுட்பமான பார்வை கொண்ட யோகியர் மட்டுமே தங்கள் கூரிய நுண்ணியப் புத்தியின் துணையுடன் பரமாத்மாவைக் காண்கிறார்கள்.(5)தங்களில் ஆறாவதாக மனத்தைக் கொண்ட புலன்களையும், புலன்நுகர் பொருட்களையும், புத்தியின் துணையுடன் உள் ஆன்மாவில் கலந்து, சிந்தனையின் நோக்கம், சிந்தனை, சிந்திப்பவன் என்ற மூன்று நனவுநிலைகளைக் குறித்துச் சிந்தித்து,(6) தியானத்தின் மூலம் அனைத்து வகை இன்பங்களிலிருந்தும் விலகி, தானே பிரம்மம் என்ற அறிவை மனத்தில் தரித்து, அதே வேளையில் பலத்தின் நனவுநிலைகள் {அகங்காரங்கள்} அனைத்தையும் புறந்தள்ளி, அதன் மூலம் தன் ஆன்மாவை முற்றான அமைதியடையச் செய்யும் யோகி, அழிவின்மையை அடைகிறான்.(7) எனினும் தன் புலன்கள் அனைத்திற்கும் அடிமையாக இருப்பவனும், சரி மற்றும் தவறு என்ற கருத்துகளில் குழப்பமுள்ளவனும், ஏற்கனவே மரணமடையக்கூடிய நிலையிலுள்ளவனுமான மனிதன், உண்மையில் (ஆசைகளுக்கு) சுயத்தை அடிபணியச் செய்வதன் மூலமே மரணத்தைச் சந்திக்கிறான்.(8) ஒருவன் தன் ஆசைகள் அனைத்தையும் அழித்து, திரள் புத்தியை {சித்தத்தை} நுணுக்கமான புத்திக்குள் {சத்வத்திற்குள்} கலக்க வேண்டும். இவ்வாறு திரள் புத்தியை {சித்தத்தை} நுண்ணியப் புத்தியில் கலப்பதன் மூலம், ஒருவன் இரண்டாவது காலஞ்சர மலையாகிறான்[2].(9) யோகியானவன், தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதன் மூலம் அறம் மற்றும் மறம் ஆகிய இரண்டையும் கடந்தவனாகிறான். தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதன் மூலமும், தன் உண்மையான இயல்பில் வாழ்வதன் மூலமும் அவன் உயர்ந்த மகிழ்ச்சியை அடைகிறான்[2].(10)நான் சொன்ன அந்த இதயத் தூய்மை என்பது, ஒருவன் கனவற்ற தூக்கத்தில் (சுற்றமனைத்தையும் மறந்த) நனவற்ற நிலையில் உணர்வற்ற நிலையை அனுபவிப்பதாகும். அந்நிலையை அடைந்த யோகி, முற்றமைதியான சூழல் உள்ள இடத்தில் நிலையாக எரியும் விளக்கின் தழலைப் போல வாழ்கிறான்.(11) உணவில் எளிமையடைந்து, தன் இதயத்தைத் தூய்மை செய்து கொண்ட யோகி, தன் ஆன்மாவை ஆன்மாவுக்குள் செலுத்துவதால், ஆன்மாவுக்குள் ஆன்மாவைக் காண்பதில் வெல்கிறான்[4].(12) ஓ! மகனே, உனக்குப் போதிப்பதற்கான இந்த உரையாடல் வேதங்கள் அனைத்தின் சாரமாகும். இங்கே வெளிப்படுத்தப்படும் உண்மைகள், உள்ளுணர்வின் துணையால் மட்டுமோ, வெறும் சாத்திரக் கல்வியாலோ புரிந்து கொள்ள இயலாதனவாக இருக்கின்றன. ஒருவன் நம்பிக்கையின் துணை கொண்டே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்[5].(13) அறப்பணிகள் மற்றும் உண்மையின் அடிப்படையிலான உரையாடல்கள் அனைத்திலும் உள்ள செல்வத்தைக் கடைவதன் மூலமும், பத்தாயிரம் ரிக்குகளைக் கடைவதன் மூலமும் இந்த அமுதம் எழுகிறது {உதிக்கிறது}.(14)  உண்மையான அனைத்து விவேகிகளின் அறிவையும் கொண்ட இஃது, தயிரிலிருந்து வெண்ணெயைப் போலவும், மரத்திலிருந்து நெருப்பைப் போலவும் என் மகனுக்காகவே எழுந்திருக்கிறது {உதித்திருக்கிறது}.(15)ஓ! மகனே, திடமான போதனைகள் நிறைந்த இந்த உரையாடலானது, ஸ்நாதகர்களுக்குச் சொல்லப்படும் நோக்கம் கொண்டவையாகும்[6]. அமைதியான ஆன்மா இல்லாதவன், அல்லது தற்கட்டுப்பாடு இல்லாதவன், அல்லது தவங்களைச் செய்யாதவன் ஆகியோருக்கு இஃதை ஒருபோதும் சொல்லக்கூடாது.(16) வேதங்களை அறியாதவன், அல்லது பணிவுடன் தன் ஆசானுக்குப் பணி செய்யாதவன், அல்லது வன்மத்திலிருந்து விடுபடாதவன், அல்லது உண்மையும், கபடமற்றநிலையும் கொள்ளாதவன், அல்லது ஒழுக்கம் குறித்த கவலையில்லாதவன் ஆகியோருக்கு இஃதை ஒருபோதும் சொல்லக்கூடாது.(17) விவாத அறிவியலின் மூலம் விழங்கப்படும் அறிவைக் கொண்ட ஒருவனுக்கோ, இழிந்த அல்லது தாழ்ந்த ஒருவனுக்கோ இஃதை ஒருபோதும் சொல்லக்கூடாது. எனினும், புகழ்கொண்டவன், (தன்னொழுக்கத்திற்காக) மெச்சத்தகுந்தவன், அல்லது அமைதியான ஆன்மாவைக் கொண்டவன், அல்லது தவத்தகுதியைக் கொண்ட(18) ஒரு பிராமணன், அல்லது தனது மகன், அல்லது கடமையுணர்வுமிக்கச் சீடன் ஆகியோருக்கு கடமைகளின் சாரத்தையே கொண்ட இந்த உரையாடலைச் சொல்லலாமேயன்றி, எக்காரணம் கொண்டும் வேறு யாருக்கும் இதைச் சொல்லக் கூடாது.(19) எந்த மனிதனும் செல்வங்கள் அனைத்துடன் கூடிய மொத்த பூமியையும், உண்மையை அறிந்த ஒருவனுக்குக் கொடையாக அளித்தாலும், {உண்மையை அறிந்தவனான} அவன் அந்த {செல்வக்} கொடையைவிட இந்த அறிவுக்கொடையையே மேன்மையானதாகக் கருதுவான்.(20)இதைவிடப் பெரிய புதிரானதும், ஆன்மா தொடர்புடையதும், மனிதர்களின் சாதாரணப் புத்தியைக் கடந்ததும், முதன்மையான முனிவர்களால் காணப்பட்டதும், உபநிஷத்துகளில் சொல்லப்பட்டதும், உன் கேள்வியின் பொருளாக அமைந்திருப்பதுமான காரியம் குறித்து நான் உன்னிடம் இப்போது உரையாடப் போகிறேன்.(21) இன்னும் உனக்கு எதனில் ஐயம் உள்ளது என்பதை எனக்குச் சொல்வாயாக? ஓ! மகனே, உனக்கு முன்பே அமர்ந்திருக்கிறேன், கேட்பாயாக. உண்மையில், எதைக் குறித்து நான் உன்னிடம் மீண்டும் ஒருமுறை பேச வேண்டும்?” என்று கேட்டார் {வியாசர்}.(22)

ஐம்பூத குணங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 247-அத்யாத்மா என்றால் என்ன? வெவ்வேறு பொருட்களில் ஐம்பூதங்களின் வெவ்வேறான பகிர்மானத்தைப் புரிந்து கொள்வது எவ்வாறு? என்பன குறித்து வியாசரிடம் கேட்ட சுகர்; வியாசரின் பதில்; மனம், புத்தி மற்றும் ஆன்மா குறித்த வியாசரின் அவதானிப்புகள்…

சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அத்யாத்மா குறித்து இன்னும் விரிவாக மீண்டும் எனக்குச் சொல்வீராக. உண்மையில் அத்யாத்மா என்பது என்ன? எங்கிருந்து அது வருகிறது?” என்று கேட்டார்[1].(1)வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஓ! மகனே, மனிதர்களின் அத்யாத்மா என்று கருதப்படுவதைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன், (அத்யாத்மா குறித்து) நான் தரப்போகும் விளக்கத்தைக் கேட்பாயாக.(2) நிலம், நீர், ஒளி, காற்று, வெளி ஆகியன அனைத்து உயிரினங்களுக்குள்ளும் அடங்கிய பெரும்பூதங்களாகும். ஒன்றாகவே இருப்பினும் அவை பெருங்கடலின் அலைகளைப் போல வெவ்வேறானவையாகக் கருதப்படுகின்றன (உள்ளடக்கப் பொருளால் ஒன்றாகவே இருப்பினும் அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாகவே கணக்கிடப்படுகின்றன).(3) ஓர் ஆமையானது தனது அங்கங்களை நீட்டி, மீண்டும் அவற்றைச் சுருக்கிக் கொள்வதைப் போலவே, (ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட) பெரும்பூதங்களும், எண்ணிலா சிறு வடிவங்களில் வசிப்பதன் மூலம், (படைப்பு என்றும் அழிவு என்றும் அழைக்கப்படும்) மாற்றங்களுக்கு உட்படுகின்றன.(4) அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய இந்த அண்டம் முழுமையும் இந்த ஐம்பூதங்களே இருக்கின்றன. படைப்பு மற்றும் அழிவு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அனைத்திலும், இந்த ஐந்துவகைப் பூதங்களே குறிப்பிடத்தக்கனவாக இருக்கின்றன.(5) இந்த ஐம்பூதங்களும் இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் இருக்கின்றன. எனினும், அனைத்துப் பொருட்களையும் படைத்தவன், (வெவ்வேறு பொருட்களில் வெவ்வேறு அளவுகளில் அமைத்ததன் மூலம்) வெவ்வேறு முடிவுகளை எட்டுவதற்காக அந்தப் பூதங்களைச் சமமற்ற வகையில் பகிர்ந்திருக்கிறான்” என்றார் {வியாசர்}.(6)

சுகர், “அண்டத்தின் பல்வேறு பொருட்களில் (நீர் சொல்லும் இந்த ஐம்பெரும் பூதங்களின்) சமமற்ற பகிர்வை ஒருவன் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? அவற்றில் புலன்கள் எவை? குணங்கள் எவை? இஃதை எவ்வாறு புரிந்து கொள்வது?” எனக் கேட்டார்.(7)

வியாசர், “இவற்றை முறையாக ஒன்றன்பின் ஒன்றாக உனக்கு விளக்குகிறேன். உண்மையில் எவ்வாறு, என்ன நடக்கிறது என்பதை நான் விளக்கும்போது, அதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(8) ஒலி {சப்தம்}, கேள்விப் புலன் {செவி /ஸ்ரோதரம்}, உடலில் உள்ள துளைகள் அனைத்தும் என இம்முன்றும் வெளியையே {ஆகாயத்தையே} தங்கள் தோற்றுவாயாகக் கொண்டுள்ளன. உயிர் மூச்சுகள் {வாயுக்கள் / பிராணன்}, அங்கங்களின் செயல்பாடு {சேஷ்டை}, ஊறு {தீண்டல் /ஸ்பர்சம்} ஆகியன காற்றின் குணத்தைக் கொண்டுள்ளன.(9) வடிவம் {ரூபம்}, கண்கள் {நேத்ரம்}, குடலுக்குள் உள்ள செரிமான நெருப்பு {அக்னி} ஆகியன ஒளியால் {தேயுவால்} தோன்றுகின்றன. சுவை, நாக்கு மற்றும் உடல் நீர்மங்கள் அனைத்தும் அடங்கிய இம்மூன்றும் நீரில் இருந்து வந்தனவாகும்.(10) மணம், மூக்கு மற்றும் உடலென்ற இம்மூன்றும் பூமியின் குணங்களாக இருக்கின்றன. நான் உனக்குச் சொன்ன இவையே புலன்களுடன் தொடர்புடைய ஐம்(பெரும்)பூதங்களின் மாற்றங்கள் ஆகும்.(11)

தீண்டல் காற்றின் குணமாகவும்; சுவை நீரின் குணமாகவும், வடிவம் ஒளியின் குணமாகவும் சொல்லப்படுகின்றன. ஒலி தன் தோற்றுவாயை வெளியில் {ஆகாயத்தில்} கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது, மணமோ பூமியின் {நிலத்தின்} தன்மையாகச் சொல்லப்படுகிறது.(12) மனம், புத்தி, இயற்கை ஆகிய இம்மூன்றும் தங்கள் முந்தைய நிலைகளில் இருந்து எழுந்து, (ஒவ்வொரு மறுபிறவியிலும் தங்களுக்குரிய) குணங்களை விட உயர்ந்த நிலையை அடைந்து, அந்தக் குணங்களைக் கடந்து செல்லாமல் இருக்கின்றன[2].(13) ஆமையானது தனது அங்கங்களை நீட்டி மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்வதைப் போலவே புத்தியும், புலன்களைப் படைத்து மீண்டும் தனக்குள்ளேயே அவற்றை இழுத்துக் கொள்கிறது[3].(14) உள்ளங்காலுக்கு {பாதங்களுக்கு} மேலும், உச்சந்தலைக்குக் கீழும் உள்ள பகுதியில் இருந்து எழும் தனிப்பட்ட அடையாளத்தின் நனவுநிலையானது, அடிப்படையில் புத்தியின் செயல்பாட்டாலேயே உண்டாகிறது[4].(15)புத்தியே (வடிவம், மணம் முதலிய ஐந்து) பண்புகளாக மாற்றமடைகிறது. புத்தியே, ஆறாவதாக மனத்தைக் கொண்டிருக்கும் (ஐந்து) புலன்களாக மாற்றமடைகிறது. புத்தி இல்லாத போது இந்தப் பண்புகள் எங்கே போகின்றன?[5](16) மனிதனில் ஐம்புலன்கள் இருக்கின்றன. மனமானது ஆறாவதாக (ஆறாம் புலனாகச்) அழைக்கப்படுகிறது. புத்தியானது ஏழாவதாக அழைக்கப்படுகிறது. ஆன்மாவானது எட்டாவதாகும்.(17) கண்கள் (முதலிய புலன்கள்), வடிவ (மற்றும் மணம் முதலிய) உணர்வுகளைப் பெறுவதற்காக மட்டுமே உள்ளன. மனமானது, (அந்த உணர்வுகளின் துல்லியத்தில்) ஐயங்கொள்வதற்காக இருக்கிறது. புத்தியானது இந்த ஐயங்களைத் தீர்க்கிறது {அந்த ஐயங்களில் ஒரு தீர்மானத்தை எட்டுகிறது}. ஆன்மாவானது, அவற்றுடன் கலந்துவிடாமல் சாட்சியாக மட்டுமே இருந்து செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் காண்கிறது.(18) ரஜஸ், தமஸ், சத்வம் ஆகிய இம்மூன்றும் தங்கள் தங்களுக்கு ஏற்றபகுதிகளில் இருந்து உண்டாகின்றன. இவை (தேவர்கள் மற்றும் மனிதர்கள் முதலிய) அனைத்து உயிரினங்களிலும் சமமாகவே இருக்கின்றன. இவை குணங்கள் என்றழைக்கப்படுகின்றன. மேலும் இவை தூண்டும் செயல்களின் மூலம் இவற்றை அறியலாம்[6].(19)அந்தச் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், ஒருவன் தன்னை உற்சாகம் அல்லது மகிழ்ச்சி, அமைதி மற்றும் தூய்மையுடன் கலந்து {செயல்பட்டு} உணரும் நிலைகள் அனைத்தும் சத்வ குணம் என்று அறியப்படுகிறது.(20) கவலையுடன் கலந்த உடல் அல்லது மன நிலைகள் அனைத்தும், ரஜஸ் என்றழைக்கப்படும் குணத்தின் ஆதிக்கத்தால் விளைவதாகக் கருதப்பட வேண்டும்.(21) உறுதியற்ற தன்மையைக் காரணமாகக் கொண்டு (புலன்கள், மனம் அல்லது புத்தி கொள்ளும்) மயக்கத்தோடு கூடியவையும், (அறிவின் மூலமோ உள்ளொளியின் மூலமோ) புரிந்து கொள்ள முடியாதவையுமான நிலைகள் அனைத்தும் தமஸ் செயல்பாட்டைச் சார்ந்தவையாக அறியப்பட வேண்டும்.(22) அறிந்த அல்லது அறியாத எந்தக் காரணங்களாலும் உண்டாகும் மகிழ்ச்சி {ஸந்தோஷம்}, உற்சாகம் {ப்ரீதி), இன்பம் {ஆனந்தம்}, உள்ளச்சமநிலை {ஸம்பாவனை}, இதய நிறைவு {மனத்தின் தெளிவு} ஆகியன அனைத்தும் சத்வ குணத்தின் விளைவுகளாகும்.(23) அறிந்த அல்லது அறியாத எந்தக் காரணங்களாலும் உண்டாகும் செருக்கு {அபிமானம்}, வாக்கில் பொய்மை {பொய்யுரைத்தல்}, பேராசை {லோபம்}, மயக்கம் {மோகம்}, பழியுணர்ச்சி {பொறாமை} ஆகியன ரஜஸ் குணத்தின் குறியீடுகளாகும்.(24) எந்தவொரு காரணத்திலுமிருந்து எழும், தீர்மான மயக்கம் {மோகம்}, கவனமின்மை {அஜாக்ரதை}, உறக்கம் {நித்ரை}, மயக்கநிலை {அறியாமை}, சோம்பல் ஆகியவற்றைத் தமஸ் குணத்தின் குறீயீடுகளாக அறியப்பட வேண்டும்” என்றார் {வியாசர்}.(25)

புத்தி! – சாந்திபர்வம் பகுதி – 248-மனம், புத்தி மற்றும் ஆன்மா குறித்த வியாசரின் அவதானிப்புத் தொடர்ச்சி…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “மனமானது, (பொருட்கள் அல்லது இருப்பிலுள்ளவற்றைக் குறித்த) எண்ணற்ற கருத்துகளை (தனக்குள்ளேயே) உண்டாக்கிக் கொள்கிறது. புத்தியானது எது, எதுவாக இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது. எது ஏற்புடையது, எது ஏற்பில்லாதது என்பதை இதயம் {அகங்காரம்} பகுத்தறிகிறது. இந்த மூன்று சக்திகளே செயல்களைத் தூண்டுகின்றன[1].(1) புலன்களைவிடப் புலன்நுகர் பொருட்கள் {தன்மாத்திரைகள்} மேன்மையானவை. அந்தப் பொருட்களை {தன்மாத்திரைகளை} விட மனம் மேன்மையானது. மனத்தை விடப் புத்தி மேன்மையானது. புத்தியைவிட ஆன்மா மேன்மையானதாகக் கருதப்படுகிறது.(2) (மனிதனின் பொதுவான காரியங்களைப் பொறுத்தவரையில்) புத்தியே ஒருவனின் ஆன்மாவாகும். புத்தியானது தன்னியக்கமாக (பொருட்களைக் குறித்த) கருத்துகளைத் தனக்குள்ளேயே அமைத்துக் கொள்ளும்போது அது மனம் என்று அழைக்கப்படுகிறது[2].(3) (நோக்கம் மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டிலும்) புலன்கள் ஒன்றுக்கொன்று வெவ்வேறானவையாக இருப்பதன் விளைவால், (ஒன்றாகவே இருக்கும்) புத்தியானது, பல்வேறு மாறுபாடுகளின் விளைவால் வெவ்வேறு தன்மைகளை வெளிப்படுத்துகிறது. கேட்கும்போது அது செவிப்புலனாகிறது, தீண்டும் போது அஃது ஊறுபுலனாகிறது {தீண்டல் புலனாகிறது}.(4) அதேபோலவே, காணும்போது அது பார்வைப்புலனாகிறது, சுவைக்கும்போது சுவைப்புலனாகிறது, நுகரும்போது அது மணப்புலனாகிறது. (பல்வேறு செயல்பாடுகளுக்காக) மாறுபடும்போது புத்தியே அவ்வாறு பல்வேறு தோற்றங்களில் தோன்றுகிறது.(5) புத்தியின் இந்த மாறுபாடுகளே புலன்களாக அழைக்கப்படுகின்றன. புலப்படாத ஆன்மாவானது அவற்றுக்கு மேலான தலைமைப் பொறுப்பில் (அல்லது கண்காணிப்பாளராக) நிறுத்தப்பட்டிருக்கிறது. உடலில் வசிக்கும் புத்தியானது (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) மூன்று நிலைகளில் நீடிக்கிறது[3].(6)சில வேளைகளில் அது {புத்தி} உற்சாகமடைகிறது, சிலவேளைகளில் துன்பவயப்படுகிறது; சில வேளைகளில் அது மகிழ்ச்சியோ துன்பமோ இல்லாத நிலையை அடைகிறது.(7) எனினும், (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) மூன்று காரியங்களை {குணங்களை} உண்டாக்கும் புத்தியானது, ஆறுகளின் தலைவனான பெருங்கடல், தனக்குள் விழும் ஆறுகளின் வலிமைமிக்க நீரோட்டங்களை எதிர்த்து நீடித்திருப்பதைப் போலவே அந்த மூன்று நிலைகளையும் {முக்குணங்களையும்} விஞ்சியிருக்கிறது[4].(8) புத்தியானது எதையும் விரும்பும்போது மனம் என்ற பெயரால் அஃது அழைக்கப்படுகிறது. மேலும் புலன்கள் அனைத்தும், (வெளிப்படையாக ஒன்றுக்கொன்று வெவ்வேறானவையாக இருந்தாலும்) புத்திக்குள் அடங்கியவையாகவே கொள்ளப்பட வேண்டும்.(9) வடிவம், மணம் முதலிய உணர்வுகளைப் பெறுவதில் ஈடுபடும் புலன்கள் அனைத்தும் அடக்கப்பட வேண்டும்.(10)ஒரு குறிப்பிட்ட புலனானது, புத்தியில் அடங்கியொடுங்கும்போது, உண்மையில் புத்தியானது (அந்தப் புலனிலிருந்து) வேறுபட்டதில்லை என்றாலும், இருப்பில் உள்ள பொருட்களின் வடிவில் அது மனத்துக்குள் நுழைகிறது. அவற்றை {இருப்பில் உள்ள பொருட்களைத்} தொடர்ந்து வருவதாகச் சொல்லப்படும் கருத்துகளின் அடிப்படையிலேயே, (உடன் நிகழ்வாக இல்லாமல் தனித்தனியாக) அடுத்தடுத்த புலன்களுக்கும் இதுவே நேர்கிறது[5].(11) தேர்ச்சக்கரத்தின் சுற்றளவில் தாங்கள் கொண்டுள்ள பற்றின் விளைவால் செயல்படும் ஆரங்களைப் போல, (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) முக்குணங்களும், (மனம், புத்தி, நனவுநிலை [அகங்காரம்] என்ற} இந்த மூன்றையும் பற்றிக் கொண்டு, (மனம், புத்தி மற்றும் நனவுநிலையில் இருக்கும்) பல்வேறு பொருட்களைப் பின்தொடர்கின்றன[6].(12) சிறந்த யோக காரியத்தின் துணையுடன் யோகியரால் அடையப்படும் இந்த ஞானமானது, மனிதர்களின் எந்தச் சிறப்பான முயற்சியுமின்றி உலகம் சார்ந்த பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் அடையப்படுகிறது[7].(13) அண்டமானது (புத்தியின் படைப்பான) இவ்வியல்பின்படியே இருக்கிறது. எனவே, ஞானம் கொண்ட ஒரு மனிதன் (உலகப் பொருட்களின் மீது பற்று கொள்வதன் மூலம்) ஒருபோதும் திகைப்படைவதில்லை {மயக்கமடைவதில்லை}. அத்தகைய மனிதன் ஒருபோதும் துன்புறாதவனாகவும், ஒருபோதும் மகிழாதவனாகவும், (அதிக அளவு உலகப் பொருட்களைக் கொண்டிருக்கும் மற்றொருவரைக் கண்டு உண்டாகும்) பொறாமையில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறான்.(14) ஆசைக்குரிய (உலகம் சார்ந்த) பொருட்கள் அனைத்தின் மத்தியிலும் திரியும் இயல்பைக் கொண்ட புலன்களின் துணை மூலம் ஆன்மா காணப்பட முடியாததாக இருக்கிறது. தூய்மையான புலன்களைக் கொண்ட அறவோரும் கூட ஆன்மாவைக் காணத் தவறுகிறார்கள் என்றால், தூய்மையற்ற புலன்களைக் கொண்ட தீயோரைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?(15)எனினும், ஒருவன் தன் மனத்தின் துணையுடன், அவற்றின் {புலன்களின்} கடிவாளங்களை இறுகப் பற்றிக் கொள்ளும் போதுதான், அவனது ஆத்மாவானது, (பார்க்க முடியாத இருளில்) விளக்கொளியின் விளைவால் காட்சியில் தோன்றும் ஒரு பொருளைப் போலத் தன்னையே கண்டடைகிறது.(16) உண்மையில் அனைத்துப் பொருட்களும் அவற்றைச் சூழ்ந்திருக்கும் இருள் அகன்று தென்படுவதைப் போலவே, ஆத்மாவும் அதனைச் சூழ்ந்திருக்கும் இருள் அகலும்போது தென்படுகிறது[8].(17) நீரில் நகரும் நீர்க்கோழியானது அந்தப் பூதத்தால் நனைக்கப்படாததைப் போலவே விடுதலையடைந்த ஆன்மாவைக் கொண்ட யோகியானவன், (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) முக்குணங்களின் குறைபாடுகளால் ஒருபோதும் களங்கப்படுவதில்லை.(18) அதே வகையிலேயே, உலகம் சார்ந்த பொருட்கள் அனைத்திலும் எந்தப் பற்றும் கொள்ளாமல் அவற்றை அனுபவிக்கும் ஞானியும் (பிறரின் வழக்கில் இத்தகைய இன்பத்தால் எழும்) எந்த வகைக் குற்றங்களாலும் களங்கப்படாதிருப்பான்.(19) எவன் செயல்களை முறையாகச் செய்த பிறகு அவற்றைத் தவிர்த்து, உண்மையாக இருப்பிலுள்ள ஆன்மா ஒன்றில் மட்டுமே திளைப்படைகிறானோ, எவன் படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்கிறானோ[9], எவன் முக்குணங்களில் இருந்து தன்னைத் தனித்திருக்கச் செய்து கொள்வதில் வெல்கிறானோ,(20) அவன் ஆன்மாவால் உண்டாக்கப்படும் புத்தியையும், புலன்களையும் பெறுகிறான்.குணங்கள் ஆன்மாவைப் புரிந்து கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. எனினும் ஆன்மாவானது, எப்போதும் அவற்றை {குணங்களைப்} புரிந்து கொள்கிறது. ஆன்மாவானது சாட்சியாக இருந்து குணங்களைக் கண்டு, முறையாக அவற்றை இருப்புக்கு அழைக்கிறது. மிக நுட்பமானவையான புத்தி மற்றும் ஆன்மா ஆகிய இரண்டிற்கும் இடையிலான இந்த வேறுபாட்டைக் காண்பாயாக.(22) அவற்றில் ஒன்றே {புத்தியே} குணங்களைப் படைக்கிறது. மற்றது {ஆன்மாவானது} அவற்றை ஒருபோதும் படைப்பதில்லை. இயல்பாகவே அவை ஒன்றுக்கொன்று வெவ்வேறானவையாக இருப்பினும் எப்போதும் ஒன்றாகவே இருக்கின்றன.(23) நீரில் வாழும் மீனானது, அது வாழும் {நீரெனும்} அந்தப் பூதத்தில் இருந்து வேறானதாகும். ஆனால், மீனும் அதன் வீடான நீரும் எப்போதும் ஒன்றாக இருக்கும் வகையிலேயே சத்வமும், க்ஷேத்ரஜ்ஞனும் {ஆன்மாவும்} கலந்த நிலையில் ஒன்றாகவே நீடிக்கின்றன. அழுகிய அத்திப்பழத்தில் பிறந்த கொசுவானது, அதனிலிருந்து வேறானதேயன்றி உண்மையில் அஃது அத்தியல்ல. கொசுவும், அத்தியும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதைப் போலவே சத்வமும், க்ஷேத்ரஜ்ஞனும் {ஆத்மாவும்} இணைந்திருக்கின்றன.(24) {முஞ்சப்} புற்கட்டில் உள்ள ஒரு புல்லானது, அந்தப் புற்கட்டில் தனித்திருந்தாலும், அதனுடன் கலந்த நிலையில் நீடித்திருப்பதைப் போலவே, இவை ஒவ்வொன்றும் வெவ்வேறானவையாக இருப்பினும், தங்கள் சுயத்திலேயே நீடித்து, நிலையாக ஒன்றுகலந்த நிலையிலேயே காணப்படுகின்றன” என்றார் {வியாசர்}.(25)

ஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 249-ஞானம் மற்றும் ஞானியின் பெருமைகளைச் சுகருக்கு எடுத்துச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “ஒருவனைச் சூழ்ந்திருக்கும் பொருட்கள் புத்தியால் படைக்கப்படுகின்றன. ஆன்மாவானது, அவற்றுடன் தொடர்பு கொள்ளாமல் தனித்திருந்து அவற்றைக் கண்காணிக்கிறது. புத்தியே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறது. (பொருட்களின் உற்பத்திக்காக) மூன்று அடிப்படை குணங்களும் மாற்றமடைகின்றன. பலம்பொருந்திய க்ஷேத்ரஜ்ஞன் அல்லது ஆன்மாவானது, அவற்றுடன் கலக்காமலேயே அவையனைத்தையும் கண்காணிக்கிறது.(1) புத்தியால் படைக்கப்படும் பொருட்கள் தங்கள் சொந்த இயல்பை அடைகின்றன. உண்மையில், சிலந்தியானது (தன் உடல் பொருளைக் கொண்டே) இழைகளைப் படைப்பதைப் போலவே, புத்தியால் படைக்கப்படும் பொருட்களும், புத்தியின் இயல்பைக் கொள்கின்றன.(2) யோகம் அல்லது அறிவால் விரட்டப்படும் குணங்கள் இல்லாமல் போவதில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அவை சென்ற பிறகு, அவை திரும்புவதற்கான குறியீடுகள் மட்டுமே காணப்படுவதில்லை (ஆனால் அவை உண்மையாக அழிந்ததற்கான எந்தச் சாட்சியமும் கிடையாது). ஞானத்தால் விரட்டப்படும்போது, அவை ஒருபோதும் திரும்பாமல் அழிந்தே போகின்றன என்று வேறு சிலர் சொல்கிறார்கள்.(3) ஒருவன் இவ்விரு கருத்துகளையும் முறையாகச் சிந்தித்து, எதைச் சரியென அவன் நினைக்கிறானோ அதன்வழியே சிறப்பாக முயற்சிக்க வேண்டும். அவன் அவ்வழியிலேயே மேம்பட்டு தன் சொந்த ஆன்மாவில் மட்டுமே புகலிடம் கொள்ள வேண்டும்[1].(4)ஆன்மாவானது தொடக்கமும் முடிவுமற்றதாகும். மனிதன் தன் ஆன்மாவை முறையாக அறிந்து கொண்டு, கோபவசப்படாமல், இன்பத்தில் மூழ்காமல், பொறாமையில் இருந்து விடுபட்டவனாகத் திரிந்து செயல்பட வேண்டும்.(5) புத்திப் புலங்களின் செயற்பாட்டில், இருப்பாக விளைவதும், (அறுப்பதற்குக்) கடினமானதும், அறிவால் அழியக்கூடியதுமான முடிச்சை இவ்வழிமுறையின் மூலம் அறுக்கும் ஒருவன், (எந்த நிகழ்விலும்) வருத்தங்கொள்ளாமல், ஐயங்கள் விலகியவனாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.(6) இவ்வுலகக் காரியங்களில் கலப்பவர்கள், நிலத்திலிருந்து ஆழமான பெரிய ஆற்றில் விழும் நீச்சல் தெரியாதவர்களைப் போல, உடலாலும் மனத்தாலும் துன்புறுவார்கள்.(7) எனினும் உண்மையை அறிந்த கல்விமான், திடமான தரையில் நடக்கும் ஒருவனைப் போலத் தன்னை உணர்வதால் ஒருபோதும் துன்புறுதவதில்லை. உண்மையில் அவன், அறிவை மட்டுமே குறியீடாகக் கொண்ட சித்-ன் குணத்தை மட்டுமே வெளிப்படுத்தும் ஒன்றாக ஆத்மாவைப் புரிந்து கொள்வதால் ஒருபோதும் துன்புறுவதில்லை.(8)

உண்மையில், அனைத்து உயிரினங்களின் தோற்றத்தையும் மறைவையும், அவற்றின் ஏற்றத்தாழ்வுகளையும், வேறுபாடுகளையும் இவ்வாறு புரிந்து கொள்ளும் ஒருவன், உயர்ந்த இன்பநிலையை அடைவதில் வெல்கிறான்.(9) குறிப்பாக அறத்தையே தன் பிறப்பாகக் கொண்ட பிராமணனுக்கு இந்த அறிவே உடைமையாகும். ஆன்மாவையும், இவ்வாறு சொல்லப்படும் இன்பநிலை ஆகியவற்றின் ஞானங்கள் ஒவ்வொன்றும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கப் போதுமானவையாக இருக்கின்றன.(10) அத்தகைய ஞானத்தை அடைவதால் ஒருவன் கல்விமானாகிறான். ஒரு ஞானியின் குறியீடாக வேறு எது இருக்க முடியும்? அத்தகைய ஞானத்தை அடைந்த பிறகு அவர்களில் விவேகமிக்கவர்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களாகத் தங்களைக் கருதி விடுதலையை {முக்தியை} அடைகிறார்கள்.(11)

ஞானமற்ற மனிதர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பொருட்கள் ஞானிகளுக்கு ஒருபோதும் அச்சத்தை ஏற்படுத்துவதில்லை. ஒரு ஞானியால் அடையப்படும் அழிவற்ற கதியை விட உயர்ந்த கதி வேறேதும் இல்லை.(12) உண்மையில் ஒருவன், அனைத்துவகைக் குற்றங்களும் நிறைந்த பூமிசார்ந்த இன்பப் பொருட்கள் அனைத்தையும் வெறுப்புடன் காண்பான். பிறரைக் கண்டு அத்தகைய பொருட்களில் இன்பங்கொள்ளும் மற்றொருவன் துயரத்தால் நிறைகிறான். இக்காரியத்தைப் பொறுத்தவரையில், கற்பனையான மற்றும் அதற்கு மாறான இரு பொருட்களையும் அறிந்தவர்கள் ஒருபோதும் துயரில் ஈடுபடாமல் உண்மையில் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண்பாயாக.(13) கனிகளை எதிர்பாராமல் ஒரு மனிதன் செய்யும் எதுவும், அவனது முற்பிறவிச் செயல்களை அழிக்கும். எனினும், அத்தகைய மனிதன் இப்பிறவியிலும், முற்பிறவியிலும் செய்த செயல்களால் விடுதலைக்கு {முக்திக்கு} வழிகாட்ட முடியாது. மறுபுறம், ஒரு ஞானி செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், முற்பிறவி மற்றும் இப்பிறவியின் செயல்களுக்கு நேரும் இத்தகைய அழிவால் அவனை ஏற்பில்லாத ஒன்றுக்கு (நரகத்திற்கு} வழிநடத்திச் செல்ல முடியாது” என்றார் {வியாசர்}.(14)

ஆத்மஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 250- கடமைகள் அனைத்திலும் உயர்ந்த தவம்; ஆத்மஞானம்; ஆத்மஞானத்தை அடையும் வழி ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, “இவ்வுலகில் இருப்பனவற்றில் எந்தக் கடமை உயர்ந்ததோ, கடமைகள் அனைத்திலும் எது முதன்மையானதோ, அதை மதிப்பிற்குரிய நீர் எனக்குச் சொல்ல வேண்டும்” என்று கேட்டார்.(1)

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “புராதானத் தோற்றுவாயைக் கொண்டவையும், முனிவர்களால் விதிக்கப்பட்டவையும், அனைத்திற்கும் மேலாகத் தனித்திருப்பவையுமான கடமைகளை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(2) பல்வேறு தீய பழக்கங்களில் வீழக்கூடிய அனுபவமற்ற பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும் ஒரு தந்தையைப் போல, பித்துக் கொள்ளச் செய்யும் புலன்களைப் புத்தியின் மூலம் கவனமாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.(3) தகுதியற்ற அனைத்துப் பொருட்களில் இருந்து மனத்தையும், புலன்களையும் விலக்கிக் கொள்வதும், (தகுந்த பெருட்களில்) முறையாகக் கவனத்தைக் குவிப்பதுமே உயர்ந்த தவமாகும். அதுவே கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாகும். உண்மையில் அதுவே உயர்ந்த கடமையாகச் சொல்லப்படுகிறது.(4)

ஆறாவதாக மனத்தைக் கொண்ட புலன்களைப் புத்தியின் துணை கொண்டு, எண்ணற வகைச் சிந்தனைகளைத் தூண்டுந்தன்மை கொண்ட உலகப் பொருட்களைக் குறித்துச் சிந்திக்காமல், ஒருவன் தன்னிலேயே நிறைவை அடைந்து வாழ வேண்டும்.(5) புலன்களும் மனமும், வழக்கமாகத் தறிகெட்டு ஓடும் மேய்ச்சல் இடங்களில் இருந்து விலக்கப்பட்டு, தங்களுக்கு உரிய வசிப்பிடத்தில் அவற்றை வசிக்கச் செய்யும் போதுதான் நித்தியமானதையும், பரமாத்மாவையும் நீ உனக்குள்ளேயே காண்பாய்[1].(6) ஞானம் கொண்ட உயர் ஆன்ம பிராமணர்கள், பிரகாசத்தில் சுடர்மிக்க நெருப்பாகவும், உயர்ந்ததாகவும் அண்ட ஆன்மாவாகவும் இருக்கும் அதைக் காண்பதில் வெல்கிறார்கள்.(7) எண்ணற்ற கிளைகளையும், பல மலர்கள் மற்றும் கனிகளையும் கொண்ட ஒரு பெரிய மரமானது, தன்னுடைய எந்தப் பகுதியில் மலர்களையும், எந்தப் பகுதியில் கனிகளையும் கொண்டிருக்கிறது என்பதை அறியாததைப் போலவே,(8) ஆன்மாவும் {புத்தியும்}, பிறப்பு மற்றும் பிற குணங்களால் மாற்றமடைந்து, அஃது எங்கிருந்து வந்தது? எங்குச் செல்லப்போகிறது என்பதை அறியாமல் இருக்கிறது[2].(9) ஒருவன் ஞானம் எனும் விளக்கின் துணையால் தன் ஆன்மாவைக் காண்கிறான். எனவே, உன்னை உன்னிலேயே கண்டு, உனது உடலை நீ என்று கருதுவதை நிறுத்தி, அனைத்தையும் அறிந்த நிலையை அடைவாயாக.(10)சட்டையை உரித்த பாம்பைப் போலப் பாவங்கள் அனைத்தையும் கழுவிய ஒருவன், இங்கேயே உயர்ந்த புத்தியை அடைந்து, ஒவ்வொரு கவலையில் இருந்தும், (மறுபிறவியில்} புதிய உடலை அடையும் கடப்பாட்டில் இருந்தும் வடுபடுகிறான்.(11) பல்வேறு திசைகளில் பரந்து விரிந்து ஓடும் நீரோட்டங்களைக் கொண்டதும், தன் போக்கில் இவ்வுலகைச் சுமந்து செல்வதுமான வாழ்வெனும் ஆறு அச்சம்நிறைந்ததாக இருக்கிறது. ஐம்புலன்களே அதன் முதலைகளாக இருக்கின்றன. மனமும், அதன் காரணமும் கரைகளாக இருக்கின்றன.(12) பேராசையும், தீர்மான மயக்கமும் அதை மறைத்து மிதக்கும் புல்லாகவும், துரும்பாகவும் இருக்கின்றன. காமமும், கோபமும், அதனில் வாழும் சீற்றமிகு பாம்புகளாக இருக்கின்றன. வாய்மை அதன் சேறுநிறைந்த கரைகளில் தீர்த்தமாக அமைந்திருக்கிறது.(13) புலப்படாததிலிருந்து பிறக்கும் அதன் நீரோட்டம் வேகமானதாகவும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் கடக்க முடியாததாகவும் இருக்கிறது. நீ புத்தியின் துணை கொண்டு, ஆசைகளையே முதலைகளாகக் கொண்ட அந்த ஆற்றைக் கடப்பாயாக.(14) உலகமும், அதன் காரியங்களும் அந்த ஆறு எதை நோக்கி ஓடுமோ அந்தப் பெருங்கடலாக இருக்கிறது. உயிரினங்களும், பேருயிரினங்களும், ஒருவராலும் புரிந்து கொள்ளப்பட முடியாத அதன் ஆழமாக இருக்கின்றன. ஓ குழந்தாய், அந்த ஓடையானது ஒருவனின் பிறப்பையே தோற்றுவாயாகக் கொண்டிருக்கிறது. வாக்கே அதன் சுழல்களாகும். கடப்பதற்கு அரிதான அதை,(15) கல்வி, ஞானம் மற்றும் புத்தியைக் கொண்ட மனிதர்களே கடக்கிறார்கள்.

அதைக் கடந்து, அமைதியான இதயத்தை அடைந்து, ஆன்மாவை அறிந்தவனாக, ஒவ்வொரு தன்மையிலும் தூய்மையடைந்தவனாக, ஒவ்வொரு பற்றில் இருந்தும் விடுபடுவதில் வெற்றியடைவாயாக.(16) தூய்மையடைந்த, மேன்மையான புத்தியைச் சார்ந்து, பிரம்மமாகவே ஆவதில் நீ வெல்வாயாக. ஒவ்வொரு உலகப் பற்றிலிருந்தும் தொடர்பறுத்துக் கொண்டு, தூய்மையடைந்த ஆன்மாவை அடைந்து, ஒவ்வொரு வகை பாவத்தையும் கடந்து,(17) மலையுச்சியில் இருந்து பூமியின் பரப்பில் ஊர்ந்து செல்லும் உயிரினங்களைக் காணும் ஒருவனைப் போல நீ இந்த உலகைக் காண்பாயாக. கோபத்துக்கோ, மகிழ்ச்சிக்கோ வசப்படாமல், கொடூரமான ஆசை எதையும் அமைத்துக் கொள்ளாமல், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தோற்றத்தையும், அழிவையும் காண்பதில் வெற்றியடைவாயாக.(18) ஞானம் கொண்ட மனிதர்கள், இத்தகைய செயலையே அனைத்திலும் முதன்மையானதாகக் கருதுகிறார்கள். உண்மையில், அறவோரில் முதன்மையானோராலும், உண்மையை அறிந்த தவசிகளாலும், வாழ்வெனும் ஆற்றைக் கடக்கும் இச்செயலே ஒருவன் நிறைவேற்ற வேண்டிய அனைத்து செயல்களிலும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.(19) அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் {நீக்கமற நிறைந்திருக்கும்} ஆன்மாவைக் குறித்த இந்த அறிவே, ஒருவனுடைய மகனுக்குக் கொடுக்கப்பட வேண்டியதெனக் கருதப்படுவதாகும். புலன்களைக் கட்டுப்படுத்தி, நேர்மையான நடத்தையுடனும், அடக்கம் அல்லது பணிவுடனும் இருக்கும் ஒருவனுக்கு இதை {இந்த அறிவை} மனத்தில் ஆழப் பதிய வைக்கப்பட வேண்டும்.(20)

ஓ! குழந்தாய், நான் இப்போது உன்னிடம் சொன்னதும், ஆன்மாவின் மூலமே உண்மையாகச் சாட்சி காணப்படுவதுமான இந்த ஆன்ம அறிவானது, புதிர்கள் அனைத்திலும் பெரியதும், ஒருவன் அடையக்கூடியதிலேயே மிக உயர்ந்த அறிவுமாகும்.(21) ஆண், பெண், அலி என்ற பாலினமேதும் பிரம்மத்திற்குக் கிடையாது. அதற்குத் துன்பமோ இன்பமோ கிடையாது. அது தன் சாரமாகக் கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தைக் கொண்டிருக்கிறது.(22) பிரம்ம அறிவை அடைபவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ, எந்தப் பாலினமாகவோ இருந்தாலும், அவர்கள் ஒருபோதும் மறுபிறப்பை அடைய வேண்டியதில்லை. மறுபிறவியைத் தவிர்க்கும் நிலையை அடைவதற்காக இந்தக் கடமை (யோகக் கடமை) மனத்தில் ஆழப் பதிய வைக்கப்பட வேண்டும்.(23) இக்காரியத்தில் பல்வேறு தவசிகளின் சொன்ன பல்வேறு மேம்பட்ட கருத்துகள் வழிவகுக்கும் வகையிலேயே உன் கேள்விக்குப் பதிலளிக்க நான் பயன்படுத்திய இந்த வார்த்தைகளும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும். இக்காரியம் எவ்வாறு விளக்கப்பட வேண்டுமோ அவ்வகையிலேயே நான் உனக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறேன். அக்கருத்துகள் சில வேளைகளில் கனியை உண்டாக்கின்றன, சில வேளைகளில் உண்டாக்குவதில்லை. (எனினும், நான் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் வேறுவகையைச் சார்ந்தவை, ஏனெனில், இவை நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும்).(24) ஓ! நற்குழந்தாய், இந்தக் காரணத்தினாலேயே, நிறைவு, தகுதி மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மகன் அல்லது ஒரு சீடனால் கேட்கப்படும்போது, ஓர் ஆசான் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், என் மகனான உனது நன்மைக்காக என்னால் மனத்தில் ஆழப் பதிய வைக்கப்பட்ட இந்தப்போதனைகளை, உண்மையில் உள்ளது உள்ளபடியே அவனது மனத்தில் ஆழப் பதிய வைக்க வேண்டும்” என்றார் {வியாசர்}.(25)

வைராக்யம்! – சாந்திபர்வம் பகுதி – 251-எவன் பிராமணன்? பிராமண நிலையை அடைவதெவ்வாறு? முக்திக்கு வழிவகுக்கும் மனோவுறுதி ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “மணம், சுவை மற்றும் பிறவகை இன்பங்களில் ஒருவன் எந்தப் பற்றையும் வெளிக்காட்டக்கூடாது. மேலும் அவன் ஆபரணங்களையும், மணம் மற்றும் சுவைப் புலன்களால் நுகரும் பிற பொருட்களையும் ஏற்கக் கூடாது. அவன் கௌரவம், சாதனை மற்றும் புகழில் பேராசை கொள்ளக்கூடாது. கருத்துடைய பிராமணனின் ஒழுக்கம் இதுவேயாகும்.(1) வேதங்கள் அனைத்தையும் கற்று, தன் ஆசானிடம் கடமையுணர்வுடன் பணி செய்து, பிரம்மச்சரிய நோன்பை நோற்றவனும், ரிக்குகள், யஜுஸ்கள் மற்றும் சாமங்கள் அனைத்தையும் அறிந்தவனுமான ஒருவன் மறுபிறப்பாளன் {பிராமணன்} ஆகமாட்டான்[1].(2) அனைத்து உயிரினங்களிடமும் சொந்தக்காரனைப் போல நடந்து கொள்பவனும், பிரம்மத்தை அறிந்தவனுமான ஒருவனே வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான். ஆசையற்றவனாக, (ஆத்ம ஞானத்தில் நிறைவடைந்தவனாக) இருக்கும் ஒருவன் ஒருபோதும் இறப்பதில்லை. இத்தகைய ஒழுக்கமும், இத்தகைய மனோநிலையும் கொண்டவனே உண்மையில் மறுபிறப்பாளனாவான்.(3) கருணையற்றவனாகவும், ஆசையைக் கைவிடாதவனாகவும் இருக்கும் ஒருவன், பல்வேறு வகை அறச்சடங்குகளையும், தக்ஷிணையுடன் கூடிய பல்வேறு வேள்விகளையும் நிறைவு செய்வதால் மட்டுமே பிராமண நிலையை அடைந்துவிடமுடியாது. அனைத்து உயிரினங்களையும் அச்சுறுத்துவதையும், அனைத்து உயிரினங்களிடமும் அச்சங்கொள்வதையும் ஒருவன் நிறுத்தும்போதும், எதையும் விரும்பாமலும், எதையும் வெறுக்காமலும் இருக்கும்போதும், அவன் பிராமண நிலையை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(5)

எண்ணத்தாலும், வாக்காலும், செயலாலும் ஒருவன் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் இருக்கும்போது அவன் பிராமண நிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(6) இவ்வுலகில் ஆசைப் பிணைப்பு என்ற ஒரே வகையின்றி வேறு பிணைப்பேதும் கிடையாது. அந்த ஆசைப் பிணைப்பில் இருந்து விடுபட்ட ஒருவன் பிராமண நிலையை அடைகிறான்.(7) இருளடைந்த மேகங்களில் இருந்து வெளிவரும் நிலவைப் போல ஆசையில் இருந்து விடுபட்ட ஞானியானவன், களங்கங்கள் அனைத்தையும் நீக்கி, தன் காலத்தை எதிர்பார்த்து பொறுமையுடன் வாழ்ந்திருப்பான்.(8) அனைத்து வகை ஆசைகளையும் மனத்துக்குள் நுழைத்துக் கொள்ளும் ஒருவனால் கூட, பல்வேறு ஆறுகள் பாய்ந்தும் தன் எல்லைகளைப் பெருக்கிக் கொள்ள இயலாத பெருங்கடலைப் போன்ற அமைதியை அடையலாம்; ஆனால் பூமி சார்ந்த அனைத்துப் பொருட்களிலும் ஆசையைப் பேணி வளர்த்துக் கொள்பவனால் அமைதியை அடையவே முடியாது.(9) அத்தகைய மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனிவதன் விளைவால் மகிழ்ச்சியை அடைகிறான்; ஆனால் பூமி சார்ந்த பொருட்களில் ஆசையைப் பேணி வளர்ப்பவனால் அம்மகிழ்ச்சியை அடையவே முடியாது. பின்னவன் சொர்க்கத்தையே அடைந்தாலும், அதனிலிருந்து வீழவே நேரிடும்.(10)

வேதங்கள், உண்மையைத் தங்கள் மறைபொருளாகக் கொண்டுள்ளன. உண்மை, புலனடக்கத்தைத் தன் மறைபொருளாகக் கொண்டிருக்கிறது. புலனடக்கம், ஈகையைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. ஈகை, தவத்தைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது.(11) தவம், துறவைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. துறவு, மகிழ்ச்சியைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. மகிழ்ச்சி, சொர்க்கத்தைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. சொர்க்கம், அமைதியைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது[2].(12) நீ மனநிறைவை அடைவதற்காக, மதிப்புமிக்க உடைமையும், விடுதலையை {முக்தியைச்} சுட்டுவதும், துன்பம் மற்றும் ஆவலுடன் {எதிர்பார்ப்புடன்} கூடிய ஐயங்கள் அல்லது நோக்கங்கள் அனைத்தையும் சுடுவதும் {எரிப்பதும்}, இறுதியில் அவற்றை முற்றாக அழிப்பதுமான அமைதியான புத்தியை அடைய விரும்ப வேண்டும்[3].(13) மனநிறைவு, துயரின்மை, பற்றிலிருந்து விடுதலை, அமைதி, உற்சாகம், பொறாமையில் இருந்து விடுதலை ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவர்கள் நிச்சயம் முழுமையடைவார்கள், அல்லது நிறைவடைவார்கள்[4].(14) உடலின் நனவுநிலைகள் அனைத்தையும் கடந்தவர்கள், சத்வ குணத்தோடு இருக்கும்போது, உடலுக்குள் வசிப்பதும், (ஏற்கனவே சொல்லப்பட்ட வேதங்கள், உண்மை முதலிய) ஆறு காரியங்களின் துணையுடனும், (கல்வி, தியானம் மற்றும் யோகம் ஆகிய) இன்னும் மூன்று காரியங்களின் துணையுடனும் ஞானிகளால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியதுமான ஆன்மாவை அறிந்து, விடுதலையை அடைவதில் வெல்கிறார்கள்.(15)உடலுக்குள் தலைமை கொள்வதும், பிறப்பு மற்றும் இறப்பு எனும் பண்புகளற்றதும், தன்னியல்பிலேயே நிலைத்திருப்பதும், தூய்மைப்படுத்தும் எந்தச் செயலும் தேவைப்படாத குணங்களற்ற நிலையில் இருப்பதும், பிரம்மத்தைப் போன்றதுமான ஆன்மாவைப் புரிந்து கொள்வதன் மூலம் ஞானியானவன், முடிவை அறியாத பேரின்பத்தை அடைகிறான்.(16) அனைத்துத் திசைகளிலும் திரியும் மனத்தைக் கட்டுப்படுத்தி, ஆத்மாவில் மொத்தமாக நிலைக்கச் செய்வதன் மூலம் ஞானி அடையும் நிறைவானது, வேறு எந்த வழிமுறைகளினாலும் எவனாலும் அடையப்பட முடியாததாகும்.(17) வெறுமையான வயிற்றோடு இருப்பவனை எது நிறைவடையச்செய்யுமோ, ஏழ்மையில் இருப்பவனை எது நிறைவடையச்செய்யுமோ, பசையற்ற அங்கங்களைக் கொண்டவனை எது பலமடையச் செய்யுமோ, அதை {பிரம்மத்தை} அறிந்தவனே உண்மையில் வேதங்களை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(18) தகுதியற்ற ஈடுபாட்டில் இருந்து முறையாகக் கட்டுப்படுத்தப்பட்ட தன் புலன்களை நிறுத்தி, தியான யோகத்தில் ஈடுபட்டு வாழும் ஒருவனே பிராமணனாகச் சொல்லப்படுகிறான். அத்தகையவன் பிறரைக் காட்டிலும் புகழ்பெற்றவன் எனச் சொல்லப்படுகிறான். அத்தகையவன் தன் ஆன்மாவில் இருந்து இன்பத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறான்.(19)

ஆசைகளைக் குறைத்து, இருப்பில் உள்ள உயர்ந்த காரியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒருவனைப் பொறுத்தவரையில், அவனது மகிழ்ச்சியானது, (வளர்பிறைச்) சந்திரனைப் போலத் தொடர்ந்து அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.(20) அந்தப் பேரின்ப நிலையானது, திரள் மற்றும் நுட்பமான இருவகைப் பூதங்களையும், மகத்தையும், புலப்படாததையும் {பிரகிருதி / அவ்யக்தத்தையும்} கடந்த யோகியின் துயரங்களை, இருளை விலக்கும் சூரியனைப் போல அகற்றும்[5].(21)செயல்களைக் கடந்தவனும், குண அழிவைக் கடந்தவனும், உலகம்சாந்த பொருட்களில் பற்றில்லாதவனுமான ஒரு பிராமணனை முதுமையும், மரணமும் அடைவதில்லை.(22) உண்மையில், யோகியானவன் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, பற்று மற்றும் வெறுப்பு ஆகிய இரண்டையும் கடந்த நிலையில் வாழும்போது, அவன் இவ்வாழ்விலேயே தன் புலன்களையும், அவற்றுக்குரிய பொருட்கள் அனைத்தையும் கடப்பதாகச் சொல்லப்படுகிறான்.(23) பிரகிருதியைக் கடந்து உயர்ந்த காரணத்தை அடைந்த யோகி, அந்த உயர்ந்ததை அடைந்ததன் விளைவால் இவ்வுலகத்திற்குத் திரும்பும் கடப்பாட்டில் இருந்து விடுபடுகிறான்” என்றார் {வியாசர்}.(24)

புலன்கள், தன்மாத்திரைகள், பூதங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 252-புலன்கள், தன்மாத்திரைகள் மற்றும் ஐம்பூதங்களுக்கிடையில் உள்ள உறவு; ஐம்பூதங்களின் குணங்கள் ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்து, அறம், பொருள் ஆகிய இரண்டு காரியங்களையும் நிறைவேற்றிய ஒரு சீடனிடம், திறம்பெற்ற ஓர் ஆசான் அத்யாத்மா குறித்து முன்சொன்ன பகுதியில் சொல்லப்பட்ட அனைத்தையும் முதலில் சொல்ல வேண்டும்.(1) ஐந்து பொருட்களை உள்ளடக்கமாகக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் வெளி {ஆகாயம்}, காற்று {வாயு}, ஒளி, நீர், ஐந்தாவதாகக் கணக்கிடப்படும் பூமி, பாவம், அபாவம் ஆகியற்றைக் கொண்டுள்ளது[1].(2) வெளியானது {நிரம்பாமல்} வெறுமையாக இருக்கும் இடைவெளியாகும். கேள்விப் புலன்கள் வெளியைக் கொண்டிருக்கின்றன. வடிவம் கொண்ட பொருள்களின் அறிவியலை அறிந்தவர்கள், வெளியானது ஒலியைத் தன் குணமாகக் கொண்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.(3)

(இடம்பெயர்வதில் துணைபுரியும்) கால்கள், காற்றையே {வாயுவையே} தங்கள் சாரமாகக் கொண்டுள்ளன. முக்கிய மூச்சுக்காற்றுகள் காற்றாலானவையாகும்.

ஊறுபுலன் {தீண்டலை உணரும் புலன்} (தோல்) தீண்டலைத் தன் குணமாகக் கொண்டுள்ளது.(4)

வெப்பம், வயிற்றில் உள்ள செரிமான நெருப்பு, அனைத்துப் பொருட்களைக் காணும் ஒளி, உடலில் உள்ள சூடு, ஐந்தாவதாகக் கண் ஆகியன அனைத்தும் பல்வேறு நிறவடிவங்களைத் தன் குணமாகக் கொண்ட ஒளியாகும்.(5)

வெளியேறும் திரவங்கள் {வியர்வை, சிறுநீர்}, பசை, அனைத்து வகைத் திரவங்கள் ஆகியன நீராகும். குருதி, மஜ்ஜை, (உடலுக்குள்) பசையுடன் இருக்கும் அனைத்தும் நீரைத் தங்கள் சாரமெனக் கொண்டவையாக அறியப்பட வேண்டும். சுவைப்புலன் நாவாகும், சுவையானது நீரின் குணமாகக் கருதப்படுகிறது.(6)

எலும்புகள், பற்கள், நகங்கள், தாடி, உடலில் உள்ள முடிகள், தலை முடி, நரம்புகள், தசைநார்கள், தோல் ஆகியவற்றைப் போலவே திடப்பொருட்கள் அனைத்தும் பூமியாலானவை.(7)

மூக்கு மணப்புலனாக அழைக்கப்படுகிறது. அப்புலனின் நுகர் பொருளான மணமே பூமியின் குணமாக அறியப்பட வேண்டும்.(8)

அடுத்தடுத்த பூதங்கள் ஒவ்வொன்றும், தன் குணத்தையும் தவிர, தனக்கு முந்தைய பூதத்தின் குணத்தையும் பெற்றிருக்கின்றன. வாழும் உயிரினங்கள் அனைத்திலும், (அவித்யை {அறியாமை}, காமம் {ஆசை}, கர்மம் {செயல்} என்ற மூன்று) அடிப்படை காரியங்களும் இருக்கின்றன. ஐம்பூதங்களையும், அவற்றின் விளைவுகளையும், அவற்றில் இருந்து பாயும், அல்லது அவற்றுக்குச் சொந்தமான குணங்களையும் முனிவர்கள் இவ்வாறே சொல்லியிருக்கின்றனர்.(9)

{ஐம்பூதங்கள் மற்றும் மூன்று காரியங்களைப் பொறுத்த} கணக்கீட்டில் மனமானது ஒன்பதாவதாக அமைகிறது, புத்தியானது பத்தாவதாகக் கருதப்படுகிறது. முடிவிலியாக உள்ள ஆன்மாவானது பதினொன்றாவதாக அழைக்கப்படுகிறது. இவை அனைத்தும் உயர்ந்தவையாகச் சொல்லப்படுகின்றன.(10) மனமானது ஐயத்தைத் தன் சாரமாகக் கொண்டுள்ளது. புத்தியானது, பகுத்தறிந்து, நிச்சயத்தன்மையை உண்டாக்குகிறது. (ஏற்கனவே முடிவிலியாகச் சொல்லப்பட்ட) ஆன்மாவனது, செயல்களில் இருந்து பெறப்பட்ட விளைவுகள் மூலம் உடல்படைத்த ஜீவன் (அல்லது ஜீவாத்மன்) என அழைக்கப்படுகிறது[2].(11) உயிரினங்கள் அனைத்தும், காலத்தைத் தங்கள் சாரமாகக் கொண்ட இவை அனைத்தையும் கொண்டிருந்தாலும், {முன் சொன்னவற்றால்} அவற்றால் களங்கப்படாதனவாக அவற்றை {அந்த உயிரினங்களைப்} பார்க்கும் மனிதன், குற்றத்தால் பாதிப்படைந்த செயல்களை ஒருபோதும் தொடர வேண்டியிருக்காது {ஒருபோதும் செயல்களில் கலக்கமடைய வேண்டியதில்லை}[3]” என்றார் {வியாசர்}.(12)

யோகதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 253-யோகதர்மம் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “சாத்திரங்களை அறிந்தோர், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களின் துணை கொண்டு, நுண்ணியவுடலை உடுத்திக் கொண்டதும், மிக நுட்பமானதும், திரள் உடலுக்குள் வசித்துக் கொண்டே அதனுடன் தொடர்பறுந்த நிலையில் இருப்பதுமான ஆத்மாவைக் காண்கிறார்கள்[1].(1) அடர்த்தியான திரளாக ஆகாயத்தின் ஒவ்வொரு பகுதியிலும் திரியும் சூரியக் கதிர்களின் இருப்பை அறிவால் உள்ளுணர முடியுமென்றாலும் வெறுங்கண்களுக்கு அவை தெரியாததைப் போலவே, இருப்பிலுள்ளவை {உயிரினங்கள்} தங்கள் திரள் உடல்களில் இருந்து விடுபட்டு அண்டத்தில் திரிந்து கொண்டிருப்பதைக் காண்பது மனிதக் கண்களின் உற்றறியும் திறனுக்கு அப்பாற்பட்டதாகும்[2].(2) சூரியனின் பிரகாசமான வட்டில் நீரின் எதிரொளியில் {பிரதிபிம்பத்தில்} தென்படுவதைப் போலவே, யோகியும் திரளுடல்களினுள் இருப்பிலுள்ள சுயத்தை அதன் எதிரொளியில் காண்கிறான்.(3)மேலும் நுண்ணிய உடல்களில் பொதிந்திருக்கும் அந்த ஆன்மாக்கள் அனைத்தும், தாங்கள் வசித்த திரள் உடல்களில் இருந்து விடுபட்ட பிறகு, புலன்களை அடக்கியவர்களும், ஆன்ம அறிவைப் பெற்றவர்களுமான யோகிகளால் உணரத்தக்கனவாக இருக்கின்றன. உண்மையில் யோகிகள் தங்கள் ஆன்மாக்களின் துணையுடனே புலப்படாத அப்பொருட்களைக் காண்கின்றனர்.(4) பகலில் இரவு போலும், இரவில் பகலைப் போலும் உறங்கிக் கொண்டிருந்தாலும், விழித்துக் கொண்டிருந்தாலும், புத்தி, ரஜஸில் பிறந்த செயல்கள், யோகம் தரும் பலம் ஆகியவற்றால் உண்டான அனைத்தையும் கைவிட்டு யோகத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள், தங்கள் லிங்க வடிவத்தை முற்றான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் வெல்கிறார்கள்.(5,6)

அத்தகைய யோகியரில் வசிப்பதும், எப்போதும் (மகத், நனவுநிலை {அகங்காரம்}, ஐந்து அடிப்படை புலன்களின் ஐந்து தன்மாத்திரைகள் உள்ளிட்ட) நுட்பமான ஏழு காரியங்களுடன் கூடியதுமான ஜீவனானது, முதுமை மற்றும் மரணத்தில் இருந்து விடுபட்டு, அருள் உலகங்கள் அனைத்திலும் உலவிக் கொண்டிருக்கிறது. “எப்போதும்” என்றும் “மரணத்தில் இருந்து விடுபட்டு” என்றும் பொதுவான பேச்சு வழக்கிலேயே நான் சொல்கிறேன். ஏனெனில் உண்மையில் அந்த லிங்க வடிவமும் தற்காலிகமானதே.(7) எனினும், (அவற்றைக் கடக்க இயலாமல்) மனம் மற்றும் புத்தியின் ஆதிக்கத்தில் இருக்கும் மனிதன், தன் கனவுகளில் கூடத் தன் உடலின் வடிவத்தையும், பிறவற்றையும் பகுத்துப்பார்த்து, இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான்.(8) ஆம், அவனது கனவுகளில் கூட அவன் இன்பத்தையும் துன்பத்தை அனுபவிக்கிறான்; கோபம் மற்றும் பேராசையின் வசப்பட்டு அவன் பல்வேறு வகைப் பேரிடர்களைச் சந்திக்கிறான்.(9)

அவனது கனவுகளில் அவன் பெருஞ்செல்வத்தை அடைந்து பெரும் நிறைவை உணர்கிறான்; விழித்திருக்கும் வேளைகளில் போலவே அவன் தகுதிமிக்கச் செயல்களைச் செய்கிறான், பார்க்கிறான் (கேட்கிறான், இன்னும் பிறவற்றையும் செய்கிறான்).(10) கருப்பைக்குள்ளும், அதிகமான உள் வெப்பத்துக்கு மத்தியிலும் கிடக்க வேண்டியதும், முழுமையாகப் பத்து மாதங்களை அவ்விடத்திலேயே கடத்த வேண்டியதுமான ஜீவனானது, வயிற்றுக்குள்ளேயே உணவைப் போலச் செரித்து அழியாமல் போவதைக் காண்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.(11) உயரொளியுடன் கூடிய பரமாத்மாவின் ஒரு பகுதியும், அனைத்து உயிரினங்களின் இதயங்களுக்குள் கிடப்பதுமான ஜீவாத்மாவானது, தங்கள் திரளுடலுக்குள் இருப்பதைக் காண்பதில் ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் மூழ்கிய மனிதர்கள் ஒருபோதும் வெல்வதில்லை.(12)

ஆன்மாவை (ஆன்மாவைக் குறித்த அறிவை) அடையும் நோக்கத்தில் யோக அறிவியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள், உயிரற்ற திரள் உடலையும், உணரப்பட முடியாத லிங்க உடலையும், அண்ட அழிவின் போதும் அழியாத காரண உடலையும் கடப்பதில் வெல்கிறார்கள்[3].(13) நான்காவது வாழ்வுமுறை (அல்லது சந்நியாச{ஆசிரம}ம்) உள்ளிட்ட பல்வேறு வாழ்வுமுறைகளில் விதிக்கப்பட்ட கடமைகளில், யோகத்தைத் தங்களில் முதன்மையானதாகக் கொண்டவையும், மனம் மற்றும் புத்தியின் ஒவ்வொரு செயல்பாட்டையும் நிறுத்துபவையுமான நான் சொன்ன இவை {இந்தக் கடமைகள்} (சாந்தோக்ய உபநிஷத்தில்) சாண்டில்யரால் விதிக்கப்பட்டவையாகும்[4].(14) (மனத்தின் பொருட்களான புலன்கள், மனம், புத்தி, மஹத், புலப்படாதது அல்லது பிரகிருதி மற்றும் புருஷன் உள்ளிட்ட) ஏழு நுட்பமான காரியங்களைப் புரிந்து கொண்டும், (அனைத்தின் அறிவு, மனநிறைவு, அளவற்ற அறிவு, சார்பற்ற நிலை {சுதந்திரம்}, நித்திய விழிப்புத்தன்மை, எல்லையற்ற ஆற்றல் என்ற) ஆறு குணங்களுடன் கூடிய உயர்ந்த காரணத்தை {சகுன பிரம்மத்தைப்} புரிந்து கொண்டும், முக்குணங்களுடன் கூடிய அவித்யையின் மாறுபாடே அண்டம் என்பதையும் இறுதியாகப் புரிந்து கொள்ளும் ஒருவன், (சாத்திரத்தின் மூலம் வழிநடத்தப்பட்டு) உயர்ந்த பிரம்மத்தை {பரப்ரம்மத்தை} அடைவதில் வெல்கிறார்” என்றார் {வியாசர்}.(15)

புத்தியும், மனமும்! – சாந்திபர்வம் பகுதி – 254-ஆசையை வெல்லும் காரியம் குறித்தும், மனம், புத்தி, புலன்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்…

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, “மனிதனின் இதயத்தில் ஆசை {காமம்} என்றழைக்கப்படும் ஆச்சரியமான ஒரு மரம் இருக்கிறது. அது பிழை {மோகம்} என்றழைக்கப்பட்ட வித்தில் இருந்து பிறந்ததாகும். கோபமும், செருக்கும் அதன் பெரிய அடிமரமாக இருக்கின்றன. செயல்பாட்டு விருப்பம், (அதை வளர்க்கும் நீரைத் தக்க வைத்துக் கொள்ள) அதனடியைச் சுற்றி வடிநிலமாக {பாத்தியாக} இருக்கிறது.(1) அறியாமையே அம்மரத்தின் வேராகும், கவனமின்மை அதற்கு ஊட்டமளிக்கும் நீராக இருக்கிறது. பொறாமை அதன் இலைகளாக இருக்கிறது. முற்பிறவிகளின் தீச்செயல்கள் அதற்கு உயிர்வளத்தைக் கொடுக்கிறது.(2) தீர்மானமிழப்பு {மயக்கம்} மற்றும் கவலை ஆகியன அதன் கொப்புகளாக இருக்கின்றன; துயரம் அதன் பெரும் கிளைகளாக அமைகின்றன; அச்சம் அதன் முளையாக இருக்கிறது. (வெளிப்படையாகப் பல்வேறு பொருள்களில் உள்ள) ஏற்புடைய தாகம் அனைத்துப் புறத்தில் அதன் சுற்றிப் பிணைக்கும் கொடிகளாக அமைகிறது.(3)

இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்ட பேராசை கொண்ட மனிதர்கள், கனிகொடுக்கும் அம்மரத்தைச் சுற்றி அமர்ந்து கொண்டு, அதனிடமிருந்து கனியைப் பெறும் எதிர்பார்ப்பில் அதற்குத் தங்கள் வணக்கங்களைச் செலுத்துகின்றனர்.(4) எவன் அந்தச் சங்கிலிகளை வென்று, அம்மரத்தை வெட்டி, இன்ப துன்பம் இரண்டையும் கைவிட முயற்சிக்கிறானோ அவன் இரண்டு கதியையும் அடைவதில் வெல்கிறான்.(5) புலன்நுகர் பொருட்களில் ஈடுபடுவதன் மூலம் இம்மரத்தை வளர்க்கும் மூடன், விஷமுள்ள மருந்து நோயாளியை அழிப்பதைப் போலவே அவன் ஈடுபாடு காட்டும் {புலன் நுகர்} பொருட்களாலேயே அழிகிறான்.(6)

எனினும், கைத்திறன்மிக்க ஒருவன், யோகத்துணையின் மூலம் வலுவடைந்தவனாக, அடியாழம் வரை செல்லும் அம்மரத்தின் வேரை சமாதி எனும் வாளால் வெட்டி வீழ்த்துகிறான்.(7) கனியில் உள்ள விருப்பத்தால் மட்டுமே செய்யப்படும் செயல்கள் அனைத்தின் கதியையும் மறுபிறவி அல்லது கட்டும் சங்கிலி என அறிந்த ஒருவன், கவலைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறான்.(8) உடல் ஒரு நகரமாகச் சொல்லப்படுகிறது. புத்தியே அதன் தலைவியாக {அரசியாகச்} சொல்லப்படுகிறது. உடலுக்குள் வசிக்கும் மனமானது, தீர்மானிப்பதையே முக்கியச் செயலாகக் கொண்ட அந்தத் தலைவியின் அமைச்சராகச் சொல்லப்படுகிறது.(9)

மனத்தால் (தலைவியின் தொண்டில்) ஈடுபடுத்தப்படும் புலன்களே அதன் குடிகளாகும். அந்தக் குடிகளைப் பேணி வளர்ப்பதற்காக மனமானது பல்வேறு வகைச் செயல்களில் பலமான விருப்பத்தை வெளிக்காட்டுகிறது. அச்செயல்களின் காரியத்தில் தமஸ், ரஜஸ் எனும் இரு பெரும்பிழைகள் காணக்கிடைக்கின்றன[1].(10) அச்செயல்களின் கனிகள், (மனம், புத்தி மற்றும் நனவுநிலை என்ற) அந்நகரின் தலைவர்களோடு கூடிய குடிகளிடமே இருக்கின்றன. (ஏற்கனவே சொல்லப்பட்ட) இரு பிழைகள், தடைசெய்யப்பட்ட வழிமுறைகளின் மூலம் நிறைவேறப்பட்டும் அச்செயல்களின் கனிகளிலேயே வாழ்கின்றன.(11) இவ்வாறிருக்கையில், (ரஜஸாலோ, தமஸாலோ) வெல்லப்படமுடியாத புத்தியானது, (தனக்குத் தொண்டாற்றும் மனத்தின் அளவுக்குக் களங்கமடைந்து அந்த) மனத்திற்கு இணையான ஒரு சமநிலைக்கு இறங்குகிறது. களங்கப்பட்ட மனத்தால் கலக்கமடையும் புலன்களும் தங்கள் நிலையுறுதியை இழக்கின்றன.(12)

புத்தியானது (நன்மையெனக் கருதி) அடைய விரும்பும் பொருட்கள் துன்பத்தை உண்டாக்குவதாக அமைந்து இறுதியில் அழிவைக் கொண்டு வருகிறது. அழிவடைந்த பிறகு, மனத்தால் மீண்டும் நினைத்துப் பார்க்கப்படும் அப்பொருட்கள், அவ்வாறே அழிந்த பிறகும் மனத்தைப் பீடிக்கின்றன.(13) மனமானது, தீர்மானிக்க முடியாத நிச்சயத்தன்மையற்ற உணர்வுகளை அடையும் தன் முக்கியச் செயல்பாட்டைச் செய்யும்வரையில் மட்டுமே புத்தியில் இருந்து வேறுபட்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும் உண்மையில் மனமும் புத்தியும் ஒன்றாகவே இருக்கின்றன. புத்தியில் (துன்பத்தையும், அனைத்து வகைத் தீமைகளையும் மட்டுமே உண்டாக்கியபடி) இருக்கும் ரஜஸ், நிலைக்கண்ணாடியில் உள்ள பிம்பத்தைப்போல ரஜஸால் களங்கப்பட்ட புத்தியில் கிடக்கும் ஆன்மாவை அப்போது மறைக்கிறது[2].(14) மனமே ரஜஸுடன் முதலில் நட்பில் கலக்கிறது. அவ்வாறு தன்னைக் கலந்த பிறகு, (பகைவனுடன் சதியில் ஈடுபடும் போலி அமைச்சன் மன்னனையும் அதன் குடிமக்களையும் கைப்பற்றுவதைப் போல) ஆன்மா, புத்தி மற்றும் புலன்களைக் கைப்பற்றிப் பற்றி, அவற்றை (மனம் எதனுடன் கலந்ததோ அந்த) ரஜஸிடமே அளிக்கிறது” என்றார் {வியாசர்}”.(15)

எழுபத்தோரு தனியுருக்கள்! – சாந்திபர்வம் பகுதி – 255-ஐம்பூதங்களின் ஐம்பது குணங்களையும், மனத்தின் ஒன்பது குணங்களையும், புத்தியின் ஐந்து குணங்களையும், ஐம்பூதங்களையும் உள்ளடக்கிய எழுபத்தோரு தனியுருக்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, ஓ! பாவமற்றவனே, பூதங்களின் கணக்கீட்டைக்குறித்துத் தீவிற்பிறந்த முனிவரின் {துவைபாயனரின் / வியாசரின்} உதடுகளிலிருந்து விழுந்த வார்த்தைகளை மிக்கப் பெருமையுடன் மீண்டும் கேட்பாயாக.(1) (அறியாமைகள் அனைத்தையும் கடந்து) சுடர்மிக்க நெருப்பைப் போல இருந்த அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, புகையால் மூடப்பட்ட நெருப்புக்கு ஒப்பான தனது மகனிடம் {சுகரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார். ஓ! மகனே, அவர் சொன்னவற்றில் கற்பிக்கப்பட்ட நானும் கூட (அறியாமையை அகற்றும்) அந்தக் குறிப்பிட்ட ஞானத்தை மீண்டும் விளக்கப் போகிறேன்.(2)

அசையாமை, கனம், கடினத்தன்மை, படைக்குந்தன்மை, மணம், அடர்த்தி, அனைத்து வகை மணங்களையும் ஈர்க்கும் வல்லமை, இணக்கம் {பிணைப்பு}, (காய்கறிகள் மற்றும் விலங்குகளைப் பொறுத்தவரையில்) வசிக்கும்தன்மை, பொறுமை அல்லது தாங்கிக் கொள்ளும் வல்லமை என்றழைக்கப்படும் மனப்பண்பு ஆகியவை பூமியின் குணங்களாகும்.(3)

குளிர்ச்சி, சுவை, ஈரம், நீர்மை, மென்மை, ஏற்புடைமை, நாவு, பாயுந்தன்மை {பெருகுதல்}, உறையச் செய்யுந்தன்மை, பூமிய சார்ந்த பொருட்கள் பலவற்றை உருக்கும் சக்தி ஆகியவை நீரின் குணங்களாகும்.(4)

தடுக்கப்பட முடியாத சக்தி, எரியும் தன்மை, வெப்பம், மென்மையாக்கும் வல்லமை {சமைத்தல்}, ஒளி, துக்கம், நோய், வேகம், சீற்றம் மற்றும் மாற்றமில்லாத மேல்நோக்கிய அசைவு ஆகியன நெருப்பின் {தேயுவின்} குணங்களாகும்.(5)

வெப்பமும் {உஷ்ணமும்}, குளிர்ச்சியும் {சீதமும்} இல்லாத தீண்டல் {ஸ்பரிசம்}, பேச்சுப் புலனுக்குத் துணை செய்யும் வல்லமை, (அசைவைப் பொறுத்தவரையில்) சார்பற்றிருக்கும் {சுதந்திரத்} தன்மை, பலம், வேகம், {மலஜலம் உள்ளிட்ட} அனைத்து வகை உமிழ்வுக்கும், வெளியேற்றத்திற்கும் துணைபுரியும் சக்தி, பிற பொருட்களை உயர்த்தும் சக்தி, உள்ளிழுத்து வெளியிடும்மூச்சுகள், (சித்தின் குணமான) உயிர், (மரணத்தோடு கூடிய) பிறப்பு ஆகியவை காற்றின் {வாயுவின்} குணங்களாகும்.(6)

ஒலி, விரிவு {படர்ந்திருத்தல்}, உள்ளடக்கும் வல்லமை {துவாரத்தன்மை}, தேவைகளுக்கு ஆதாரமாக இல்லாத புகலிடமின்மை, புலப்படா நிலை, மாறும் வல்லமை, தடுப்பை உண்டாக்க இயலாமை, கேள்விப் புலனை உண்டாக்கும் பொருள் காரணம், மனித உடலில் உள்ள வெறுமையான இடங்கள் {துவாரங்கள்} ஆகியன வெளியின் {ஆகாயத்தின்} குணங்களாகும்.(7)

அறிவிக்கப்பட்டபடி இவையே ஐந்து அடிப்படை பூதங்களின் சாரங்களாக அமையும் ஐம்பது குணங்களாகும்[1].(8)பொறுமை, ஆராய்தல் அல்லது நீண்ட வாதம், நினைத்தல், மறதி அல்லது பிழை {ப்ரமம்}, கற்பனை {மனோரதம்}, பொறை {தாங்குந்திறன்}, நன்மை நோக்கிய மனச்சார்பு, தீமை நோக்கிய மனச்சார்பு, நிலையில்லாமை ஆகியவை மனத்தின் {ஒன்பது} குணங்களாகும்.(9)

நல்ல மற்றும் தீய சிந்தனைகள் இரண்டின் அழிவு (கனவற்ற உறக்கம்), விடாமுயற்சி, கவனக்குவிப்பு, தீர்மானம், நேரடி சான்றைச் சார்ந்து அனைத்து பொருட்களையும் உறுதிசெய்து கொள்வது ஆகியன புத்தியின் ஐந்து குணங்களாகும்” என்றார் {பீஷ்மர்}.(10)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “புத்திக்கு ஐந்து குணங்கள் இருக்கின்றன என எவ்வாறு சொல்லப்படுகிறது? மேலும், ஐம்புலன்களும் எவ்வாறு (ஐம்பூதங்களின்) குணங்களாகச் சொல்லப்படுகின்றன? ஓ! பாட்டா, இவை அனைத்தையும் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருப்பதால் எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(11)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “புத்தியானது, ஐம்பூதங்களையும் தன்னகத்தைக் கொண்டுள்ளதால் அது {புத்தி} மொத்தமாக அறுபது குணங்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது[2]. அந்தக் குணங்கள் அனைத்தும் ஆன்மாவோடு கலந்த நிலையிலேயே நீடித்திருக்கின்றன. ஓ! மகனே, பூதங்கள், அவற்றின் ( ஐம்பது) குணங்கள், (அவற்றோடு மனத்தின் ஒன்பது குணங்கள் மற்றும் புத்தியின் ஐந்து குணங்கள்) ஆகிய அனைத்தும் சிதைவடையாதவனால் படைக்கப்பட்டன என்று வேதங்கள் அறிவிக்கின்றன. எனவே இந்த எழுபத்தோரு {71} தனியுருக்களும் (ஆன்மாவைப் போல) நித்தியமானவை அல்ல[3].(12) ஓ! மகனே, (அண்டத்தின் தோற்றம் மற்றும் பிற நிகழ்வுகளைக் குறித்து) உன் முன்பு முன் சொன்ன சுலோகங்களில் வைக்கப்பட்ட வெளிப்பாடுகளுக்கு முரண்பட்ட கோட்பாடுகள் அனைத்தும் அறிவுக்கண்ணின் முன்பு பழுதானவையாக இருக்கின்றன. எனினும், பரப்பிரம்மம் குறித்து நான் சொன்ன அனைத்தையும் இவ்வுலகில் மிகக் கவனமாகக் கவனித்து, பிரம்மஞானம் அளிக்கும் பலத்தை அடைந்த பிறகு, இதய அமைதியை வெல்ல {அமைதியான புத்தியை அடைய} முனைவாயாக”[4] என்றார் {பீஷ்மர்}.(13)

பிரம்மனின் கோபாக்னி! – சாந்திபர்வம் பகுதி – 256-மரணம் குறித்துப் பீஷ்மரிடம் வினவிய யுதிஷ்டிரன்; நாரத முனிவர் மன்னன் அனுகம்பகனுக்குச் சொன்ன கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பிரம்மன் தன் கோபத்தீயால் உயிரினங்களை எரித்தது; அத்தீயைத் தணிக்கப் பிரம்மனிடம் சென்ற ஸ்தாணு…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தங்கள் தங்கள் படைகளுக்கு மத்தியில் பூமியின் பரப்பில் கிடக்கும் பூமியின் தலைவர்களும், பெரும் வலிமையைக் கொண்டவர்களுமான இந்த இளவரசர்கள் இப்போது அசைவற்றவர்களாக இருக்கிறார்கள்.(1) இந்த வலிமைமிக்க ஏகாதிபதிகள் ஒவ்வொருவரும் பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். ஐயோ, சம ஆற்றலும் வலிமையும் கொண்ட மனிதர்களால் இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(2)  இந்த மனிதர்களைப் போரில் கொல்லக்கூடிய ஒருவரையும் நான் (இவ்வுலகத்தில்) காணவில்லை[1]. இவர்கள் அனைவரும் பேராற்றலையும், பெரும் சக்தியையும், பெரும்பலத்தையும் கொண்டவர்களாவர்.(3)  பெரும் ஞானத்தைக் கொண்ட இவர்கள், இப்போது உயிரை இழந்து வெறுந்தரையில் கிடக்கிறார்கள். உயிரை இழந்து கிடக்கும் இந்த மனிதர்கள் அனைவரையும் குறிக்க இறந்தவர்கள் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.(4) பயங்கர ஆற்றலைக் கொண்ட இந்த மன்னர்கள் அனைவரும் இறந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இக்காரியத்தில், என் மனத்தில் ஓர் ஐயம் எழுகிறது. அசைவு எங்கே இருந்து வருகிறது? மரணம் {மிருத்யு} எங்கே இருந்து வருகிறது?(5) இறப்பவன் யார்? (இறப்பது திரள் உடலா? நுண்ணுடலா? அல்லது ஆத்மாவா?) மரணம் எங்கே இருந்து வருகிறது? எக்காரணத்தினால் (வாழும் உயிரினங்களை) மரணம் அபகரித்துச் செல்கிறது? ஓ! பாட்டா, ஓ! தேவனுக்கு ஒப்பானவரே, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(6)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, பழங்காலத்தில், கிருத யுகத்தில் அனுகம்பகன்[2] என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். போரில் அவனது தேர்கள், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து இறுதியில் அவனும் எதிரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டான்.(7) ஹரி என்ற பெயரில், பலத்தில் நாராயணனுக்கு ஒப்பானவனாக இருந்த அவனது மகன், அந்தப் போரில் தனது பணியாட்கள் மற்றும் துருப்பினருடன் சேர்த்து தனது எதிரிகளால் கொல்லப்பட்டான்.(8) மகனின் மரணத்தால் உண்டான துயரால் பீடிக்கப்பட்டவனும், தானே எதிரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டவனுமான அந்த மன்னன் {அனுகம்பகன்}, அதுமுதல் அமைதியான வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்தான். ஒருநாள் எக்காரியமும் இன்றி உலவிக் கொண்டிருந்தபோது, தவசியான நாரதரைப் பூமியில் சந்தித்தான்.(9) அந்த ஏகாதிபதி {அனுகம்பகன்}, போரில் நேர்ந்த தன் மகனின் மரணம் மற்றும் எதிரிகளால் தான் கைப்பற்றப்பட்டது என நடந்ததனைத்தையும் நாரதரிடம் சொன்னான்.(10) அவனது வார்த்தைகளைக் கேட்டவரும், தவமெனும் செல்வத்தைக் கொண்டவருமான நாரதர், மகனின் மரணத்தால் நேர்ந்த அவனது துயரை விலக்க பின்வரும் கதையை உரைத்தார்.(11)நாரதர், “ஓ! ஏகாதிபதி {அனுகம்பகா}, நீண்ட விவரங்களைக் கொண்ட பின்வரும் கதையை அது நேர்ந்தவாறே இப்போது கேட்பாயாக. ஓ! மன்னா, நானே இதை முன்பு கேட்டிருக்கிறேன்(12) பெரும் சக்தியைக் கொண்ட பெரும்பாட்டன் {பிரம்மன்}, அண்டத்தைப் படைத்த வேளையில் பெரும் எண்ணிக்கையிலான உயிரினங்களைப் படைத்தான். அவை பல்கிப் பெருகின, அவற்றில் ஒன்றும் மரணமடையவில்லை.(13) ஓ! மங்கா மகிமை கொண்டவனே {அனுகம்பகா}, அண்டத்தில் உயிரினங்களால் நிரம்பாத எந்தப் பகுதியும் இருக்கவில்லை. உண்மையில், ஓ! மன்னா {அனுகம்பகா}, மூவுலகங்களும் உயிரினங்களால் நிறைந்து, மூச்சுவிடக் கூட இடமில்லாமல் இருந்ததாகத் தெரிந்தது.(14) அப்போது, ஓ! ஏகாதிபதி {அனுகம்பகா}, பல்கிப்பெருகியிருக்கும் உயிரினங்களின் தொகையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} மனத்தில் உதித்தது.(15)

ஓ! மன்னா, அதன்பேரில் பிரம்மன் கோபமடைந்ததால், அந்தக் கோபத்தின் விளைவாக அவனது உடலில் இருந்து ஒரு நெருப்பு வெளிப்பட்டது. ஓ! ஏகாதிபதி, பெரும்பாட்டன் {பிரம்மன்}, தனது கோபத்தில் பிறந்த நெருப்பைக் கொண்டு அண்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் எரித்தான்.(16) உண்மையில், ஓ! மன்னா, தெய்வீகத் தலைவனின் {பிரம்மனின்} கோபத்தில் பிறந்த அந்த நெருப்பானது, சொர்க்கம், பூமி மற்றும் ஆகாயத்தையும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்துடன் கூடிய மொத்த அண்டத்தையும் எரித்தது.(17) உண்மையில், இவ்வாறு பெரும்பாட்டன் கோப வசப்பட்டபோது, அந்த ஆசையின் தடுக்கப்பட முடியாத சக்தியால் அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் எரியத் தொடங்கின.(18)

அப்போது, தெய்வீகமானவனும், மங்கலமானவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் தலைவனுமான ஸ்தாணு {சிவன்}, கருணையால் நிறைந்து, பிரம்மனை நிறைவு செய்ய முனைந்தான்.(19) ஸ்தாணு, நன்மைக்கான நோக்கங்களுடன் பிரம்மனிடம் வந்தபோது, சக்தியுடன் எரிந்து கொண்டிருந்த அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்} அவனிடம் {சிவனிடம்},(20) “என்னிடம் இருந்து வரங்களுக்குத் தகுந்தவன் நீ. உனது எந்த விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும்? உன் இதயத்தில் இருக்கும் எதையும் நிறைவேற்றுவதன் மூலம் நான் உனக்கு நன்மை செய்வேன்” என்றான் {பிரம்மன்}.(21)

மிருத்யு – மரணதேவி! – சாந்திபர்வம் பகுதி – 257-பிரம்மன் மிருத்யுவைப் படைத்து உயிரினங்களைக் கொல்ல ஏவிய கதையை அனுகம்பகனுக்குச் சொன்ன நாரதர்…

ஸ்தாணு, “ஓ! தலைவா {பிரம்மனே}, அண்டத்தில் படைக்கப்பட்ட உயிரினங்களின் சார்பாக என் வேண்டுதலை அறிவாயாக. இந்த உயிரினங்கள் உன்னாலேயே படைக்கப்பட்டன. ஓ! பாட்டா, அவற்றிடம் கோபங்கொள்ளாதே.(1) ஓ! சிறப்பானவனே, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும், உன் சக்தியில் பிறந்த நெருப்பின் மூலம் எரிக்கப்படுகின்றன. இத்தகைய அவல நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் அவற்றைக் கண்டு நான் கருணை கொள்கிறேன். ஓ! அண்டத்தின் தலைவா, அவற்றிடம் கோபங்கொள்ள வேண்டாம்” என்றான்.(2)

படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தின் தலைவன் {பிரம்மன்}, “நான் கோபமடையவில்லை; படைக்கப்பட்டவை அழிய வேண்டும் என்பது என் விருப்பமுமல்ல. பூமியின் கனத்தைக் குறைப்பதற்காக மட்டுமே இந்த அழிவு விரும்பத்தக்கதாகிறது.(3) ஓ மஹாதேவா, உயிரினங்களின் கனத்தால் பீடிக்கப்பட்டவளும், நீரில் மூழ்கி விடும் வகையில் காணப்பட்டவளுமான பூமாதேவியே, அவற்றை அழிக்குமாறு என்னிடம் வேண்டினாள்.(4) நீண்ட காலம் இது குறித்துச் சிந்தித்த பிறகும், இப்படிப் பல்கிப் பெருகியிருக்கும் தொகைக்கு அழிவை உண்டாக்கும் வழிமுறையேதும் அகப்படாததால், என் இதயத்தைக் கோபம் தன் உடைமையாக்கியது” என்றான்.(5)

ஸ்தாணு, “ஓ! தேவர்களின் தலைவா, உயிரினங்களை அழிக்கும் இக்காரியத்தில் கோபவசப்படாதே. நிறைவு கொள்வாயாக. அசைவனவாகவும், அசையாதனவாகவும் இருக்கும் இவ்வுயிரினங்கள் அழிய வேண்டாம்.(6) அனைத்துக் குளங்களும், அனைத்து வகைப் புல் மற்றும் தாவரங்களும், அசைவற்ற அனைத்து இனங்களும், அசையும் நால்வகை உயிரினங்கள் அனைத்தும் எரிக்கப்படுகின்றன.(7) மொத்த அண்டமும் உயிரினங்களற்றதாகப் போகிறது. ஓ! தெய்வீகத் தலைவா, நிறைவு கொள்வாயாக. ஓ! நீதிமிக்க இதயம் கொண்டவனே, இதுவே உன்னிடம் நான் கேட்கும் வரமாகும்.(8) இவ்வுயிரனங்கள் அழிக்கப்பட்டால் மீண்டும் திரும்பாது. எனவே, இந்த உனது சக்தி அதனிலேயே தணிவடையட்டும்.(9) ஓ! பாட்டா, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தினிடமும் கருணை கொண்டு, இவை எரியாத வேறு வழிவகைகளைக் காண்பாயாக. ஓ! அண்டத் தலைவர்கள் அனைவருக்கும் தலைவா {பிரம்மா}, அனைத்து உயிரினங்களின் நனவுநிலைகளுக்குத் தலைமைதாங்குபவனாக என்னை நீயே நியமித்தாய்.(11) ஓ! அண்டத்தின் தலைவா, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் கொண்ட இந்த அண்டம் உன்னில் இருந்தே பிறந்தது. ஓ தேவர்களின் தேவா, இந்த உயிரினங்கள் மீண்டும் மீண்டும் பிறந்த இறக்கும் தன்மையுடன் இவ்வுலகில் மீண்டும் தோன்றச் செய்து நீ அமைதியடைய வேண்டும் என நான் உன்னை வேண்டிக் கேட்கிறேன்” என்றான் {ஸ்தாணு}”.(12)

நாரதர் {அனுகம்பகனிடம்} தொடர்ந்தார், “ஸ்தாணுவின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், வாக்கு மற்றும் மனக் கட்டுப்பாடு கொண்டவனுமான தெய்வீகப் பிரம்மன், அந்தச் சக்தியைத் தன் இதயத்திற்குள்ளேயே ஒடுக்கினான்.(13) இந்த அண்டத்தை அழித்துக் கொண்டிருந்த அந்நெருப்பை ஒடுக்கிய சிறப்புமிக்கவனும், அனைவராலும் துதிக்கப்படுபவனும், எல்லையற்ற பலம் கொண்டவனுமான பிரம்மன், அதன் பிறகு அனைத்து உயிரினங்களுக்கும் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய இரண்டையும் ஏற்பாடு செய்தான்.(14) சுயம்பு {பிரம்மன்} அந்நெருப்பை ஒடுக்கி விலக்கிக் கொண்ட பிறகு, கருப்பு மற்றும் சிவப்பாடைகள் உடுத்தியவளும், கரிய கண்களைக் கொண்டவளும், கரிய உள்ளங்கைகளைக் கொண்டவளும், சிறந்த காதுகுண்டலங்கள் இரண்டை அணிந்தவளும், தெய்வீக ஆபரணங்கள் சூடியவளுமாக, அவனது உடலின் அனைத்துத் துளைகளில் இருந்தும் ஒரு பெண் வெளியே வந்தாள்.(15,16) பிரம்மனின் உடலில் பிறந்த அந்தப் பெண், அவனது வலப்புறத்தில் நின்றாள்[1]. முதன்மையானவர்களான அந்த இரு தேவர்களும் {பிரம்மனும், ஸ்தாணுவும்} அவளைக் கண்டனர்.(17)அப்போது, ஓ! மன்னா{அனுகம்பகா}, பலமிக்கவனும், உலகங்கள் அனைத்திற்கும் மூல காரணனுமான சுயம்பு {பிரம்மன்} அந்தப் பெண்ணை வணங்கி அவளிடம், “ஓ! மரணமே {மிருத்யு}, இந்த அண்டத்தின் உயிரினங்களைக் கொல்வாயாக.(18) கோபத்தில் நிறைந்து, படைப்புகளுக்கு அழிவைக் கொண்டுவரும் தீர்மானத்துடனே நான் உன்னை அழைத்தேன்.[2] எனவே, மூடராகவோ கல்விமானாகவோ உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கத் தொடங்குவாயாக.(19) ஓ! பெண்ணே, எவருக்கும் உதவுவதை {அனுகூலம் செய்வதைத்} தவிர்த்து, அனைத்து உயிரினங்களையும் கொல்வாயாக. என் ஆணையின் பேரில் பெருஞ்செழிப்பை வெல்வாயாக” என்றான்.(20)இவ்வாறு சொல்லப்பட்டவளும், தாமரை மாலையால் அலங்கரிக்கப்பட்டவளுமான அந்த மரணதேவி {மிருத்யு}, கவலையுடன் சிந்திக்கத் தொடங்கிக் கண்ணீரை அபரிமிதமாகச் சிந்தினாள்.(21) எனினும், ஓ! மன்னா {அனுகம்பகா}, அந்தக் கண்ணீர் கீழே சிந்தாமல் அதைத் கூப்பிய கரங்களில் ஏந்தினாள். பிறகு அவள், மனிதகுலத்துக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டுச் சுயம்புவிடம் வேண்டினாள்” என்றார் {நாரதர்}.(22)

மிருத்யுவின் தவங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 258-பிரம்மனுக்கும் மிருத்யுதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல்களையும், அவளது தவங்களையும், இறுதியில் உயிர்களை வதைக்க அவள் சம்மதித்த காரணத்தையும் அனுகம்பகனுக்குச் சொன்ன நாரதர்…

நாரதர் {அனுகம்பனிடம்}, “தன் சக்தியால் துயரை அடக்கியவளும், பெரிய கண்களைக் கொண்டவளுமான அந்தப் பெண் {மிருத்யுதேவி}, ஒரு கொடியைப் போன்ற பணிவான தன்மையுடனும், கூப்பிய கரங்களுடனும் பெரும்பாட்டனை {பிரம்மனை} வணங்கி, அவனிடம் பேசினாள்.(1) அவள், “ஓ! பேசுபவர்களில் சிறந்தவரே, உம்மிலிருந்து பிறந்த என்னைப் போன்ற ஒரு பெண்ணால், அனைத்து உயிரினங்களையும் பீதியில் உறையவைக்கும் இந்தப் பயங்கரச் செயலை எவ்வாறு செய்ய இயலும்?(2) சிறுகொடுமையையும் செய்ய நான் அஞ்சுகிறேன். அறப்பணியில் என்னை நியமிப்பீராக. அஞ்சியவளாக என்னை நீர் காண்கிறீர். ஓ!, என் மேல் உமது கருணைப் பார்வையைச் செலுத்துவீராக.(3) குழந்தைகள், இளைஞர்கள், முதியோரென எனக்குத் தீங்கிழைக்காத உயிரினங்களை என்னால் அழிக்க இயலாது. ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, நான் உம்மை வணங்குகிறேன், என்னிடம் நிறைவு கொள்வீராக.(4)

அன்பு மகன்களையும், அன்புக்குரிய நண்பர்கள், சகோதரர்கள், தாய்மார் மற்றும் தந்தைமாரையும் என்னால் அழிக்க முடியாது. (என் செயலின் மூலமாக) இவர்கள் அழிய நேர்ந்தால், அவர்களது உறவினர்களில் எஞ்சியிருப்போர் என்னை நிச்சயம் சபிப்பார்கள். இத்தன்மையில் நான் அச்சத்தால் நிறைந்திருக்கிறேன்.(5) உயிரோடு எஞ்சியவர்களின் கண்ணீர் என்னைக் காலத்திற்கும் எரித்துக் கொண்டிருக்கும். அவர்களிடம் (நான் கொல்ல வேண்டியவர்களின் உறவினர்களிடம்) நான் அச்சங்கொள்கிறேன். நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன்.(6) (என்னால் கொல்லப்படும்) பாவம் நிறைந்த உயிரினங்கள் அனைத்தும் நரகலோகங்களில் மூழ்க வேண்டியிருக்கும்[1]. ஓ! வரமளிக்கும் தேவா, நான் உம்மை நிறைவு செய்ய முனைகிறேன். ஓ! பலமிக்கத் தலைவா, உமது கருணையை எனக்களிப்பீராக. ஓ! உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டா, என் இந்த விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுகிறேன். ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, உமது அருளின் மூலம் கடுந்தவங்களைச் செய்யும் அனுமதியை நான் கோருகிறேன்” என்றாள் {மிருத்யு}.(8)பெரும்பாட்டன் {பிரம்மன்}, “ஓ! மரணமே {மிருத்யு}, அனைத்து உயிரினங்களின் அழிவுக்காகவே நீ என்னால் நினைக்கப்பட்டாய். செல்வாயாக, அனைத்தையும் கொல்லும் பணியில் உன்னை நிறுவிக் கொள்வாயாக. (இந்தச் செயலின் உரிமை அல்லது பிறவற்றைக் குறித்துச்) சிந்திக்காதே.(9) இது நிச்சயம் நடக்க வேண்டும். மாறாக இருக்க முடியாது. ஓ! பாவமற்றவளே, ஓ! பழுதற்ற அங்கங்களைக் கொண்டவளே, நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவாயாக” என்றான்.(10)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பகை நகரங்களைக் கைப்பற்றுபவனே {அனுகம்பகா}, மரணம் {மிருத்யு} என்றழைக்கப்படும் அந்தப் பெண் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஒருவார்த்தையும் பேசாமல் உயிரினங்கள் அனைத்தின் பலமிக்கத் தலைவனை {பிரம்மனை} நோக்கிய கண்களுடன் பணிவுடன் அங்கே நின்றாள்.(11) பிரம்மன் மீண்டும் மீண்டும் அவளிடம் பேசினாலும், அந்தப் பெண் உயிரற்றவளைப் போலத் தெரிந்தாள். அவளை இவ்வாறு கண்ட தேவர்களின் தேவனான அந்தத் தலைவர்களின் தலைவன் {பிரம்மன்} அமைதியடைந்தான்.(12) உண்மையில் அந்தச் சுயம்பு, தன் விருப்பத்தின் முயற்சியால் நிறைவடைந்தான். உலகங்கள் அனைத்தின் தலைவனான அவன் புன்னகைத்தபடியே அண்டத்தில் தன் கண்களைச் செலுத்தினான்.(13) வெல்லப்பட முடியாதவனும், சிறப்புமிக்கவனுமான அந்தத் தேவன் தன் கோபத்தை அடக்கிய போது, (மரணம் என்றழைக்கப்பட்ட) அந்தப் பெண் அவனருகில் இருந்து சென்றுவிட்டாள் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(14) ஓ! மன்னா, உயிரினங்களை அழிப்பதாக உறுதிகூறாமலேயே பிரம்மனிடம் இருந்து விடைபெற்றுச் சென்ற மரணம் {மிருத்யு}, தேணுகம்[2] என்றழைக்கப்படும் ஒரு புனிதத்தலத்துக்குச் சென்றாள். அங்கே அந்தத் தேவி ஒற்றைக் காலில் நின்று கொண்டு ஆயிரத்தைநூறு கோடி ஆண்டுகளுக்குக் கடுந்தவத்தைப் பயின்றாள்[3].(16)அவ்விடத்தில் இத்தகைய கடுந்தவத்தைப் பயின்றபிறகு, பெருஞ்சக்தி கொண்ட பிரம்மன் மீண்டும் அவளிடம்,(17) “ஓ! மரணமே, என் ஆணையை நிறைவேற்றுவாயாக” என்றான். அவனது {பிரம்மனது} கட்டளையை அலட்சியம் செய்த அந்தப் பெண், ஓ! கௌரவங்களை அளிப்பவனே, மீண்டும் ஒற்றைக் காலில் நின்றபடியே இரண்டாயிரம் கோடி வருடங்கள் கடுந்தவம் இருந்தாள். ஓ! மகனே {அனுகம்பகா}, பிறகு அவள் பத்து லட்சம் கோடி வருடங்கள் அடங்கிய நீண்ட காலத்திற்கு மான்களோடு {விலங்குகளோடு விலங்காகக்} காட்டில் வாழ்ந்து வந்தாள்[4].(18,19) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அனுகம்பகா}, மீண்டும் அவள் இருபதாயிரம் வருடங்கள் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தாள். ஓ! ஏகாதிபதி, பிறகு அவள் எட்டாயிரம் வருடங்கள் முழுமையாக நீரில் கழித்தபடியே சிறந்த அமைதி நோன்பை நோற்றாள். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {அனுகம்பகா}, அதன்பிறகு அந்தக் கன்னிகை {மிருத்யு} கௌசிகி ஆற்றுக்குச் சென்றாள்.(20,21) அங்கே நீர் மற்றும் காற்றை மட்டுமே உண்டபடி மற்றொரு நோன்பை நோற்று தன் நாட்களைக் கடத்தினாள். ஓ! ஏகாதிபதி, அதன் பிறகு அந்த அருள்நிறைந்த கன்னிகை {மிருத்யு}, கங்கைக்கும், அதன் பிறகு மேரு மலைக்கும் சென்றாள்.(22) அங்கே அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தோடு ஒரு மரத்துண்டைப் போல முற்றிலும் அசையாத நிலையில் நின்றாள். அதன் பிறகு, தேவர்கள் பெருவேள்வி செய்யும் இமயச் சிகரத்திற்குச் சென்ற அவள், கடுந்தவத்தின் மூலம் பெரும்பாட்டனை {பிரம்மனை} நிறைவு செய்யும் நோக்குடன், தன் காலின் கட்டைவிரலால் மட்டுமே தன் கனத்தைத் தாங்கியபடி பத்தாயிரம் கோடி வருடங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.(24)அண்டத்தைப் படைத்து அழிப்பவன் {பிரம்மன்} அங்கே சென்று மீண்டும் அவளிடம், “ஓ! மகளே, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என் வார்த்தைகளை நிறைவேற்றுவாயாக” என்றான்.(25)

மீண்டும் அந்தக் கன்னிகை {மிருத்யு} பெரும்பாட்டனிடம், “ஓ! தேவா, நான் உயிரினங்களைக் கொல்லவல்லவள் அல்ல. (இந்தக் கட்டளையில் இருந்து தப்பும் வகையில்) நான் உம்மை நிறைவு செய்யவே முனைகிறேன்” என்றாள்.(26)

கொடுந்தன்மையில் அச்சமடைந்தவளாகவும், பெரும்பாட்டனின் ஆணையில் இருந்து தப்ப அவனை வேண்டிக் கொண்டிருந்தவளுமான அந்தப் பெண்ணை அமைதியடையச் செய்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, மீண்டும் அவளிடம்,(27) “ஓ! மரணமே {மிருத்யு}, எக்கொடுமையும் உனதாகாது. ஓ! மங்கலக் கன்னியே, உயிரினங்களை அழிக்கும் பணியில் உன்னை நீ நிறுவிக் கொள்வாயாக. ஓ! இனிய பெண்ணே, நான் சொன்னது நிச்சயம் பொய்யாகாது.(28) இப்போது நித்திய அறம் உன்னைப் புகலிடமாகக் கொள்ளட்டும். நானும் தேவர்கள் அனைவரும் உன் நன்மையை நாடுவதிலேயே எப்போதும் ஈடுபட்டிருப்போம்.(29) உன் இதயத்தில் உள்ள மற்றொரு விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன். வாழும் உயிரினங்கள் நோயால் பீடிக்கப்படும், (அவ்வாறு இறப்பவர்கள்) உன்னைப் பழி சொல்ல முடியாது.(30) நீ ஆண்களில் ஆணாகவும், பெண்களில் பெண்ணாகவும், அலியில் அலியாகவும் இருப்பாயாக” என்றான்[5].(31)ஓ! மன்னா {அனுகம்பகா}, இவ்வாறு பிரம்மனால் சொல்லப்பட்ட அந்தக் கன்னிகை உயர் ஆன்மாவும், தேவர்கள் அனைவரின் அழிவில்லாத் தலைவனுமானவனிடம் இறுதியில் கூப்பிய கரங்களுடன், “நான் உமது கட்டளைக்குக் கீழ்ப்படிய இயலாதவளாக இருக்கிறேன்” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னாள்.(32)

அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்}, மனம் இரங்காமல், மீண்டும் அவளிடம், “ஓ! மரணமே {மிருத்யு} மனிதர்களைக் கொல்வாயாக.(33) ஓ! மங்கலப் பெண்ணே, இதனால் நீ எக்கொடுமையையும் ஈட்டாத வகையில் நான் விதிப்பேன். கூப்பிய உன் கரங்களுக்குள் நீ இன்னும் ஏந்திக் கொண்டிருக்கும் அந்தக் கண்ணீர் துளிகள் பயங்க நோய்களின் வடிவை ஏற்று, காலம் நேர்கையில் அவையே மனிதர்களை அழிக்கும்.(34) உயிரினங்களுக்கு முடிவு நேரும்போது, நீ அவற்றிடம் இருக்கும் ஆசை மற்றும் கோபத்தை விரட்டுவாய். அளவிலாத் தகுதி {புண்ணியம்} உனதாகும். முற்றிலும் பாகுபாடற்ற ஒழுக்கம் கொண்ட நீ எந்தக் கொடுமையையும் {பாவத்தையும்} ஈட்டமாட்டாய்.(35) இதைச் செய்வதன் மூலம் நீ கொடுமையில் மூழ்காமல் அறம் மட்டுமே நோற்றவளாவாய். எனவே, ஆசை மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உயிரினங்களைக் கொல்லத் தொடங்கி, உன் பணியில் உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக” என்றான்.(36)

இவ்வாறு சொல்லப்பட்டவளும், மரணம் {மிருத்யு} என்ற பெயரில் அழைக்கப்படுபவளுமான அந்தப் பெண், பிரம்மனின் சாபத்திற்கு அஞ்சி, “சரி!” என்று அவனுக்குப் பதிலளித்தாள். அக்காலத்தில் இருந்து அவள், உயிரினங்களின் இறுதிக் காலத்தில் ஆசை மற்றும் கோபத்தை விரட்டத் தொடங்கி, அதன் மூலம் அவற்றின் உயிர்மூச்சை நிறுத்தினாள்.(37) மரணம் சிந்திய கண்ணீரே மனிதர்களின் உடலைப் பீடிக்கும் நோய்களாயிற்று. எனவே, உயிரினங்கள் அழியும்போது ஒருவன், புத்தியின் துணையுடன் இதைப் புரிந்து கொண்டு, துன்பவசப்படாமல் இருக்க வேண்டும்.(38) ஓ! மன்னர்களில் சிங்கமே! அனைத்து உயிரினங்களும் கனவுகளற்ற உறக்கத்தில் புலன்கள் மறைந்து, விழிப்புநிலையில் மீண்டும் தோன்றுவதைப் போலவே அவற்றின் உடல்களின் அழிவில், அவை மறு உலகத்திற்குச் சென்று மீண்டும் இங்கே திரும்ப வேண்டிருக்கிறது.(39) பயங்கர சக்தி, வலிமையான ஆற்றல் மற்றும் செவிடாகச் செய்யும் முழக்கம் ஆகியவற்றைக் கொண்ட காற்று {வாயு} என அழைக்கப்படும் பூதமே, அனைத்து உயிரினங்களிலும் உயிராக இயங்கிக் கொண்டிருக்கிறது. உயிரினங்களின் உடல்கள் அழியும்போது, பழைய உடலில் இருந்து தப்பும் அந்தக் காற்று {வாயு} பல்வேறு புதிய உடல்களில் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. இதன் காரணமாகவே காற்றானது {வாயுவானது}, திரள் உடலில் அமைந்துள்ள பிற பூதங்களில் இருந்து வேறுபட்டு புலன்களின் தலைவனாக அழைக்கப்படுகிறது.(40) தேவர்களும் கூடத் தகுதிகள் {புண்ணியங்கள்} தீரும்போது) பூமியில் அழியத்தக்க {இறப்புடைய} உயிரினங்களாகப் பிறப்பை எடுக்கின்றனர். அதே போலவே அழியத்தக்க உயிரினங்களும் கூட (போதிய தகுதியை {புண்ணியத்தை} அடையும்போது) தேவர்களின் நிலையை அடைவதில் வெல்கின்றன. எனவே, ஓ! மன்னர்களில் சிங்கமே {அனுகம்பகா}, உன் மகனுக்காக வருந்தாதே. உன் மகன் சொர்க்கத்தை அடைந்து, அங்கே பேரின்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறான்.(41) ஓ! ஏகாதிபதி {அனுகம்பகா}, இவ்வாறே சுயம்புவால் மரணம் {மிருத்யு} படைக்கப்பட்டாள், மேலும் இவ்வழியிலேயே அவள் உயிரினங்களின் காலம் முடிவுக்கு வரும் வேளையில் அவை அனைத்தையும் முறையாக அழிக்கிறாள். அவள் சிந்திய கண்ணீரே நோய்களாகி, உயிரினங்களின் இறுதி வேளை வரும்போது அவை அனைத்தையும் அபகரித்துச் செல்கிறாள்” என்றார் {நாரதர்}”.(42)

தர்மலக்ஷணம்! – சாந்திபர்வம் பகுதி – 259-நல்லோரின் ஒழுக்கம், ஸ்மிருதிகள், வேதங்கள், நன்னோக்கம், களவு செய்யாமை, தீங்கிழையாமை, ஈகை முதலியவையே அறத்தின் குறியீடுகளென யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இந்தப் பூமியில் வசிக்கும் மனிதர்கள் அனைவரும், அறத்தின் {தர்மத்தின்} இயல்பு குறித்த ஐயங்களால் நிறைந்திருக்கின்றனர். அறம் என்றழைக்கப்படும் இஃது என்ன? அறம் எங்கிருந்து வந்தது? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) அறம் இவ்வுலகத் தொண்டுக்குரியதா? மறுமைக்கான தொண்டுக்குரியதா? அல்லது இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிற்குமான தொண்டுக்குரியதா? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(2)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நல்லோரின் ஒழுக்கம், ஸ்மிருதிகள், வேதங்கள் ஆகிய இம்மூன்றும் அறத்தின் (மூலக்) குறியீடுகளாகும். இவை தவிர, கல்விமான்கள் (ஒரு செயலை நிறைவேற்றும்) நோக்கத்தை நான்காவதாக {மூலக் குறியீடாக} அறிவித்திருக்கிறார்கள்.(3) பழங்காலத்தின் முனிவர்கள் எவை அறச்செயல்கள் என்பதை அறிவித்து, தகுதியின் {புண்ணியத்தின்} அடிப்படையில் அவற்றை மேன்மையானவை, தாழ்ந்தவை என்றும் வகுத்திருக்கிறார்கள். உலகக் காரியங்களின் ஒழுங்கிற்காகவே அறவிதிக்ள விதிக்கப்பட்டுள்ளன.(4) இம்மை மற்றும் மறுமை என்ற ஈருலகங்களிலும் அறமானது மகிழ்ச்சியையே தன் கனியாக விளைவிக்கிறது. நுட்பமான வழிகள் மூலம் தகுதியை {புண்ணியத்தை} அடைய இயலாத பாவம்நிறைந்த மனிதர்கள், பாவத்தால் மட்டுமே களங்கமடைகிறார்கள்.(5)

பாவிகளைத் தங்கள் பாவங்களில் இருந்து ஒருபோதும் தூய்மைப்படுத்த முடியாது என்ற கருத்தைச் சிலர் கொண்டுள்ளனர். அறமற்ற செயலைச் செய்தும், அதே வழிமுறையின் மூலம் அறச்செயலுக்கான தகுதியை ஒருவன் அடைவதைப் போலவே, ஆபத்துக் காலங்களில் பொய் பேசும் ஒருவன், மெய் பேசும் ஒருவனின் தகுதியை அடைகிறான். ஒழுக்கமே அறத்தின் புகலிடமாகும். ஒழுக்கத்தின் துணையுடன் கூடிய அறம் யாது என்பதை நீ அறிய வேண்டும்.(6) (தன் களங்கங்களைக் காணாமலும், அறிவிக்காமலும், பிறரின் களங்கங்களை அறிவிப்பது மனிதனின் இயல்பாகும்). {மறைமுகமாகப்} பிறருக்கு உடைமையானவற்றைக் களவு செய்யும் கள்வன், தன் களவால் உண்டான பயன்களை வெளிப்படையான அறச்செயல்களுக்குச் செலவிடுகிறான். அரசற்ற காலத்தில் பிறர் உடைமைகளை அபகரிப்பதில் அக்கள்வன் பேரின்பம் கொள்கிறான்.(7) எனினும், களவின் மூலம் தான் அடைந்ததைப் பிறர் களவாடும்போது, அவனே (அக்குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்க) ஒரு மன்னனை விரும்புகிறான். உடைமையின் உரிமையில் குற்றமிழைக்கப்பட்டதாகப் பெரிய அளவில் உளக் கொதிப்படையும் அத்தகைய வேளையிலும் கூட, தங்கள் உடைமைகளில் நிறைவுடன் வாழ்வோரின் செல்வத்தில் அவனே ரகசியமாகப் பேராசை கொள்கிறான்.(8) (தானே களவால் பாதிப்படைந்தவனாக இருக்கும்போதும்) அவன், அச்சமில்லாமலும், தன் மனத்தில் எந்த ஐயமும் இல்லாமலும், பாவம் அனைத்தும் கழுவப்பட்ட மனத்துடன் மன்னனின் அரண்மனைக்குச் செல்கிறான். அவன் எந்தப் பாவச்செயலின் களங்கத்தையும் தன் இதயத்திற்குள் காண்பதில்லை.(9) உண்மை பேசுவதே தகுதிவாய்ந்ததாகும் {புண்ணியம் நிறைந்ததாகும்}. வாய்மையைவிட உயர்ந்தது வேறேதும் இல்லை. வாய்மையாலேயே அனைத்தும் தாங்கப்படுகின்றன, அனைத்தும் வாய்மையையே சார்ந்திருக்கின்றன.(10)

பாவம் நிறைந்த கொடியவர்கள் கூட, தங்களுக்குள் உண்மையை {சத்தியத்தைக்} காக்க உறுதிபூண்டு, அனைத்து வகைச் சச்சரவுகளையும் புறந்தள்ளி, ஒற்றுமையடைந்து வாய்மை சார்ந்து தங்கள் (பாவச்) செயல்களில் தங்களை நிறுவிக் கொள்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் போலியாக நடந்து கொண்டால், நிச்சயம் அவர்கள் அழிவையே அடைவார்கள்.(11) பிறருக்குச் சொந்தமானதை ஒருவன் அபகரித்துக் கொள்ளக்கூடாது. இஃது ஒரு நித்தியக் கடப்பாடாகும். இது பலவீனரால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என வலிய மனிதர்கள் கருதுகிறார்கள்.(12) எனினும், இம்மனிதர்களின் விதி எதிராக மாறும்போது, இந்தத் தடையாணை அவர்களது அங்கீகாரத்தைப் பெறுகிறது. மேலும் பலத்திலோ, ஆற்றலிலோ பிறரை விஞ்சி நிற்போர் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள் என்ற அவசியமேதுமில்லை.(13) எனவே, நீ எந்தத் தீய செயலிலும் ஒருபோதும் உன் இதயத்தை நிலைநிறுத்தாதே. இவ்வழியில் நடந்து கொள்பவனுக்கு நேர்மையற்ற மனிதர்களிடமோ, கள்வர்களிடமோ, மன்னனிடமோ அச்சமேதும் ஏற்படுவதில்லை. எவருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதன் தூய இதயத்துடன் அச்சமில்லாமல் வாழ்கிறான்.(14) காட்டில் இருந்து வசிப்பாரற்ற ஒரு கிராமத்திற்கு விரட்டப்பட்ட மானைப் போலவே ஒரு கள்வன் அனைவரையும் {கண்டு} அஞ்சுவான். அவன் பிற மக்களையும் தன்னைப் போலப் பாவிகளாகவே நினைக்கிறான்.(15)

தூய இதயம் கொண்ட ஒருவன் எப்போதும் உற்சாகத்தில் நிறைந்தவனாக எத்திக்கிலும் அச்சமில்லாதவனாக இருப்பான். அத்தகையவன் ஒருபோதும் தன் ஒழுங்கீனத்தைப் பிறரிடம் காணமாட்டான்[2].(16) அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபடுவோர், ஈகை பயில்வதும் மற்றொரு உயர்ந்த கடமையெனச் சொல்லியிருக்கின்றனர். செல்வம் படைத்தோர், வறியவர்களே இந்தக் கடமையை விதித்திருக்கின்றனர் என நினைக்கிறார்கள்.(17) எனினும், அந்தச் செல்வந்தர்களின் ஊழில் திருப்பம் நேர்வதன் விளைவால் வறுமையைச் சந்திக்கும்போது ஈகை பயிற்சியானது தன்னை அவர்களுக்குப் பரிந்துரைக்கிறது. மிகப் பெரும் செல்வந்தர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள் என்ற அவசியமேதுமில்லை.(18) இஃது எவ்வளவு வலியைத் தரவல்லது என்பதையறிந்த ஒருவன், பிறர் தனக்கு இழைக்கும் போது விரும்பாத எதையும் ஒருபோதும் பிறனுக்கு இழைக்கக்கூடாது.(19) மாற்றான் மனைவியை விரும்பும் {காதலிக்கும்} ஒருவனால், (அதே வரம்புமீறலைச் செய்யும்) வேறொருவனுக்கு என்ன சொல்ல முடியும்? {அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது?}. எனினும், அத்தகைய மனிதனும்கூடத் தன் மனைவியை மற்றொரு காதலனுடன் காணும்போது, அச்செயலை மன்னிக்க இயலாததைக் காணமுடிகிறது[3].(20)மூச்சு விட வேண்டும் என விரும்பும் ஒருவன், அதே செயலைச் செய்யும் மற்றொருவனை ஒரு கொலைபாதகச் செயலின் மூலம் எவ்வாறு தடுக்க நினைக்கலாம்?[4] ஒருவன் எதை எதைத் தனக்கு விரும்புவானோ, அவற்றை நிச்சயம் அடுத்தவருக்கும் விரும்ப வேண்டும்.(21) ஒருவன் தான் உடைமையாகக் கொண்டுள்ள அபரிமிதமான செல்வத்தைக் கொண்டு, வறியோரின் தேவைகளில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். இதன் காரணமாகவே (வணிகம் அல்லது வட்டிக்கு விடுதல் ஆகியவற்றின் மூலம்) ஒருவனுடைய செல்வத்தைப் பெருக்கும் நடைமுறையைப் படைப்பாளன் ஏற்படுத்தினான்.(22) ஒருவன் எவ்வழியில் நடந்தால் தேவர்களைச் சந்திப்பான் என்று நம்புவானோ அவ்வழியிலேயே நடக்க வேண்டும்; அல்லது செல்வம் ஈட்டப்படும் வேளைகளில், வேள்வி மற்றும் கொடை முதலிய கடமைகளைப் பின்பற்றுவது மெச்சத்தகுந்ததாகும்[5].(23)ஏற்புடைய (அமைதியான) வழிமுறைகளின் மூலம் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதே அறம் எனத் தவசிகள் சொல்லியிருக்கிறார்கள். ஓ! யுதிஷ்டிரா, அறம் மற்றும் மறத்தின் {அநீதியின்} குறியீடுகளைத் தீர்மானிப்பதில் இதுவே நோக்கில் கொள்ளப்படும் அடிப்படைத் தத்துவம் என்பதைக் காண்பாயாக.(24) பழங்காலத்தில் படைப்பாளன் {பிரம்மன்}, உலகை ஒன்றாகத் தாங்கிக் கொள்ளும் ஊட்ட சக்தியுடன் அறத்தை {தர்மத்தை} ஏற்படுத்தினான். சிறப்புகள் நிறைந்த நல்லோரின் ஒழுக்கமானது, நுட்பமான பல கருத்துகளைச் சார்ந்த அறத்தை அடைவதற்கு (எண்ணற்ற) நலம்தரும் கட்டுப்பாடுகளைக் கொண்டதாகும்.(25) ஓ! குருகுலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அறத்தின் குறியீடுகளே உனக்கு இப்போது மீண்டும் சொல்லப்பட்டது. எனவே, ஒருபோதும் நீ உன் புத்தியைத் தீச்செயலில் நிலைக்கச் செய்யாதே” என்றார் {பீஷ்மர்}.(26)

தர்மபிரமாணாக்ஷேபணை! – சாந்திபர்வம் பகுதி – 260-ஷ்மர் சொன்ன அறம் நிர்ணயிக்கும் வழிமுறைகளில் தன் மறுப்பைத் தெரிவித்த யுதிஷ்டிரன் …

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அறம் அல்லது கடமை என்பது நுட்பமான கருத்துகளைச் சார்ந்தது என்றும், நல்லோர் என்றழைக்கப்படுவோரின் ஒழுக்கத்தால் குறிப்பிடப்படுகிறது என்றும், (எண்ணற்ற செயல்களில்) நலம் தரும் கட்டுப்பாடுகள் நிறைந்ததென்றும், அதன் குறியீடுகளை வேதங்களும் கொண்டிருக்கின்றன என்றும் நீர் சொல்கிறீர். எனினும், சரியான மற்றும் தவறான காரியங்களை உள்ளுணர்வின் மூலம் பகுத்தறிவதன் விளைவால் நிச்சயமாக நான் உள்ளொளியைக் கொண்டிருக்கிறேன் என்றே எனக்குப் படுகிறது[1].(1) நான் கேட்க நினைத்த எண்ணற்ற கேள்விகள் அனைத்திற்கும் நீர் பதிலளித்திருக்கிறீர். எனினும், தற்போதும் உம்மிடம் கேட்க எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ஓ! மன்னா {பீஷ்மரே}, வெற்றுச் சச்சரவு செய்யும் விருப்பத்தால் அது {அக்கேள்வி} தூண்டப்பட்டதில்லை.(2) உடல்படைத்த இந்த உயிரினங்கள் அனைத்தும், தங்கள் இயல்பிலேயே பிறப்பை அடைந்து, {சிறிது காலம்} நிலைத்திருந்து, உடல்களை விடுவதாகத் தெரிகிறது. எனவே, ஓ! பாரதரே, கடமையையும் அதற்கு முரணானதையும் {அறம் மற்றும் மறம் ஆகியவற்றை}, சாத்திரக் கல்வியால் மட்டுமே உறுதி செய்ய முடியாது[2].(3) நல்ல நிலையில் உள்ள ஒருவனின் கடமைகள் ஒரு வகையானவை. துயரில் வீழ்ந்த ஒருவனின் கடமைகளோ மற்றொரு வகையிலானவை. துயர்மிக்கக் காலங்களைப் பொறுத்தவரையில் சாத்திரங்களைப் படிப்பதால் மட்டுமே கடமையை {அறத்தை} எவ்வாறு உறுதிசெய்ய முடியும்?[3](4)நல்லோரின் செயல்கள் அறம் (அல்லது கடமையைக்) கொண்டவை என்று நீர் சொல்கிறீர். எனினும், நல்லோரை அவர்களின் செயல்களாலேயே உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது. எனவே, நல்லோரின் ஒழுக்கம் யாது என்ற கேள்விக்கு, அது தீர்மானிக்கப்பட முடியாது என்ற முடிவின் அடிப்படையிலேயே இவ்விளக்கம் இருக்கிறது.(5) சில சாதாரண மனிதர்கள் அறமற்ற செயலைச் செய்தாலும் வெளிப்படையாக அறமீட்டுவதைக் காண முடிகிறது. மேலும் இயல்புக்கு மீறிய சில மனிதர்கள் வெளிப்படையாக அறமற்ற செயல்களைச் செய்வதன் மூலம் அறமீட்டுவதையும் காணமுடிகிறது[4].(6) மேலும் (நான் சொல்வதற்கு) ஆதாரமாகச் சாத்திரத்தை நன்கறிந்தோரே சான்று பகர்கின்றனர். ஏனெனில், அடுத்தடுத்த ஒவ்வொரு யுகத்திலும் வேத விதிகள் படிப்படியாக மறைகின்றன என்று நாம் கேள்விப்படுகிறோம்.(7) கிருத யுகத்தின் கடமைகள் ஒருவகையானவை. திரேதா யுகத்தின் கடமைகள் மற்றொரு வகையிலானவே, துவாபர யுகத்திற்கானவை மேலும் வேறுபட்டவை. கலியுகத்தின் கடமைகளோ முற்றிலும் வேறொரு வகையிலானவை. எனவே, ஒவ்வொரு யுகத்தின் கடமைகளும், ஒவ்வொரு யுக மனிதர்கள் கொண்ட சக்தியின்படியே விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.(8)எனவே, வேத தீர்மானங்கள் அனைத்தும், அனைத்து யுகங்களுக்கும் சமமான அளவில் பொருந்தாதபோது, வேத தீர்மானங்கள் உண்மையானவை என்ற சொலவடையானது வெகுமக்கள் நிறைவுக்காகச் சொல்லப்படும் பிரபல பேச்சுவடிவமாக மட்டுமே இருக்கிறது. ஸ்ருதிகளில் இருந்து தோன்றிய ஸ்மிருதிகளின் எல்லையும் மிக விரிவானதாக இருக்கிறது.(9) வேதங்களே அனைத்திற்குமான அதிகாரமெனில், அந்த அதிகாரம் ஸ்ருதியின் அடிப்படையிலான ஸ்மிருதிகளுக்கும் பொருந்தும். எனினும், ஸ்ருதிகளும், ஸ்மிருதிகளும் முரண்படும் போது அவை இரண்டும் எவ்வாறு அதிகாரம் பெற்றவையாக இருக்க முடியும்?(10) மேலும், பெரும் வலிமை கொண்ட சில தீய மனிதர்கள், குறிப்பிட்ட அறச்செயல்களின் குறிப்பிட்ட நடைமுறை பகுதிகளை நிறுத்திவிட்டால் இவை என்றைக்கும் அழிந்து போகும்[5].(11) நாம் அறிந்தாலும், அறியாவிட்டாலும், உறுதி செய்தாலும் உறுதி செய்யாவிட்டாலும் கடமையின் வழியானது கத்தியின் முனையைவிடக் கூர்மையானதாகவும், மலையை விடவும் திரளானதாகவும் இருக்கிறது.(12)(வேள்விகள் மற்றும் பிற அறச்செயல்களின் வடிவில் உள்ள) அறமானது தொலைவானில் காணப்படும் நீராவியாலான நயமிக்க மாளிகையின் வடிவில் முதலில் தோன்றுகிறது. எனினும், கல்விமான்களால் ஆய்வு செய்யப்படும்போது அது புலப்படாமல் மறைந்துபோகிறது[6].(13) கால்நடைகள் நீரருந்தும் சிறு குட்டைகள், அல்லது விளைநிலங்களோடு உள்ள ஆழமற்ற வாய்க்கால்கள் வெகுவிரைவில் வற்றிவிடுவதைப் போல, ஸ்மிருதிகளில் குறிப்பிடப்படும் நித்திய நடைமுறைகளும் தொடர்பறுந்தவையாக (கலியுகத்தில்) மொத்தமாக மறைந்து போகின்றன.(14) நல்லோருக்கு மத்தியிலும் சிலர் ஆசையின் தூண்டுதலின் பேரில் (ஆறமீட்டுவதற்காகத்} துன்புறுவதன் மூலம் கபடதாரிகளாகக் காணப்படுகின்றனர். மேலும் சிலர் பிறரின் ஆசைகளால் தூண்டப்படுகின்றனர். எண்ணிக்கையில் பலராக இருக்கும் வேறு சிலரும், அதே வகையிலான பல்வேறு நோக்கங்கள் பிறவற்றின் ஆதிக்கத்தால் அதே வழியிலேயே நடக்கின்றனர்[7].(15) (தீய ஆசைகளின் ஆதிக்கத்தின் கீழுள்ள மனிதர்களால் செய்யப்பட்டாலும்) அத்தகைய செயல்கள் அறமே என்பதை மறுக்க முடியாது. மேலும், நல்லோர் என்றழைக்கப்படுவோருக்கும் மத்தியில் ஒலிக்கும் வெற்றொலியே அறமென மூடர்கள் சொல்கிறார்கள். அவர்கள் அத்தகைய மனிதர்களைக் கேலி செய்து, அவர்களை அறிவற்றவர்களாகவே கருதுகிறார்கள்.(16)மேலும், பெரிய மனிதர்கள் பலர், (தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து) நடைபிறழ்ந்து அரச வகைக்கான கடமைகளைச் செய்கின்றனர். எனவே, (எந்த மனிதனும் பின்பற்றும்) உலகளாவிய நன்மை நிறைந்த எந்த ஒழுக்கமும் காணப்படவில்லை[8].(17) குறிப்பிட்ட ஓர் ஒழுக்க வழிமுறையின் மூலம் ஒருவன் உண்மையிலேயே தகுதிவாய்ந்தவனாகிறான். அதே ஒழுக்க வழிமுறையானது, மற்றொருவன் அறமீட்டுவதைத் தடை செய்கிறது. அவ்வொழுக்கத்தைத் தன் விருப்பப்படி பயிலும் மற்றொருவன் மாறாமல் அப்படியே இருப்பதும் காணப்படுகிறது[9].(18) எனவே எந்த ஒழுக்கத்தின் மூலம் ஒருவன் தகுதிவாய்ந்தவனாகிறானோ அதுவே மற்றொருவன் அறமீட்டுவதைத் தடுக்கிறது. இவ்வாறே ஒழுக்க நடைமுறைகள் அனைத்தும் காரியத்திலும், தன்மையிலும் தங்கள் தனித்தன்மையை இழப்பதைக் காணமுடிகிறது.(19) எனவே, பழங்காலத்தின் கல்விமான்களால் அறமென அழைக்கப்பட்டதே இந்த நாள் வரை அறமாக இருக்கிறது; (கல்விமான்களால் தீர்மானிக்கப்பட்ட) அந்த ஒழுக்க நடைமுறையின் மூலம் (உலகத்தை ஆளும்) வேறுபாடுகளும், வரம்புகளும் நிலைத்தவையாகிவிட்டன[10]” என்றான் {யுதிஷ்டிரன்}.(20)

ஜாஜலியும் துலாதாரனும்! – சாந்திபர்வம் பகுதி – 261-அறமீட்டல் அல்லது தகுதியடைதல் குறித்த யுதிஷ்டிரனின் ஐயத்திற்கு விடையளிப்பதற்காக தவசி ஜாஜலி மற்றும் வணிகன் துலாதாரனின் கதையைச் சொன்ன பீஷ்மர்; ஜாஜலி செய்த கடுந்தவங்கள்; அவரது தலையில் குருவிகள் கட்டிய கூடு; செருக்கடைந்த ஜாஜலி; வணிகனான துலாதாரனின் பெருமையை ஜாஜலிக்குச் சொன்ன வானொலி; கோபமடைந்த ஜாஜலி துலாதாரனைத் தேடிச் சென்றது; ஜாஜலியின் வரவை அறிந்த துலாதாரன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இதுதொடர்பாகப் பழங்கதையில் துலாதாரனுக்கும், ஜாஜலிக்கும் இடையில் அறக்காரியம் குறித்து நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காட்டில், ஜாஜலி என்ற பெயரைக் கொண்டவரும், காட்டுத் துறவின் {வானப்பிரஸ்த வாழ்வுமுறையின்} வழிகளைப் பயின்று வந்தவருமான ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார்.(1) கடுந்தவங்களைக் கொண்ட அவர், ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் கடற்கரையை நோக்கிச் சென்று அங்கே மிகக் கடுமையான தவங்களைப் பயிலத் தொடங்கினார்.(2) பல நோன்புகளையும், நலந்தரும் கட்டுப்பாடுகளையும் நோற்றவரும், உபவாச விதிகள் பலவற்றால் ஒழுங்கமைக்கப்பட்ட உணவைக் கொள்பவரும், மரவுரி மறும் தோல்களை உடுத்திய உடலைக் கொண்டவரும், தலையில் சடாமுடி தரித்தவரும், உடல் முழுவதும் புழுதியாலும், களிமண்ணாலும் பூசப்பட்டவரும், புத்திமானுமான அந்தப் பிராமணர் {ஜாஜலி}, (தியான யோகத்தில் ஈடுபட்டபடியே) பேச்சை நிறுத்தி {மௌன விரதத்துடன்} பல வருங்களை அங்கே கடத்தி வந்தார்.(3) ஓ! ஏகாதிபதி, பெருஞ்சக்தியைக் கொண்ட அந்த மறுபிறப்பாளர், (கடலின்) நீருக்குள் வசித்து வந்த போது, அனைத்துப் பொருட்களையும் காணும் விருப்பத்தால் மனோவேகத்தில் உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தார்.(4) கடலால் சூழப்பட்டதும், ஆறுகள், தடாகங்கள், காடுகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான மொத்த பூமியையும் கண்ட பிறகு ஒருநாள், அந்தத் தவசி நீருக்கடியில் அமர்ந்தபடியே இவ்வகையில் நினைக்கத் தொடங்கினார்.(5)

{அவர் தமக்குள்ளேயே}, “அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இவ்வுலகில் எனக்கு இணையாக ஒருவரும் இல்லை. ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு மத்தியில் என்னுடன் உலவவும், நீருக்கடியில் வசிக்கவும் எவரால் முடியும்?” {என்று நினைத்தார்}.(6) ராட்சசர்களால் காணப்படாதவாறு அவர் தமக்குக்குள் இதை மீண்டும் சொல்லிக் கொண்டபோது, பிசாசங்கள் அவரிடம், “இவ்வாறு சொல்வது உமக்குத் தகாது. பெரும் புகழைக் கொண்டவனும், வாங்கி விற்கும் வணிகத்தில் ஈடுபடுபவனும், துலாதாரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மனிதன் {வாராணசியில்} இருக்கிறான். ஓ மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அவனே கூட நீர் சொன்ன வார்த்தைகளைச் சொல்லத் தகுந்தவனல்ல” என்றன.(8) அந்தப் பூதங்களால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், கடுந்தவங்களைச் செய்தவருமான ஜாஜலி அவற்றிடம், “அத்தகைய ஞானம் கொண்டவனும், புகழ்பெற்றவனுமான துலாதாரனை நான் காண வேண்டும்” என்றார்.(9) அந்த முனிவர் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட அந்தப் பூதங்கள் அவரைக் கடலில் இருந்து உயர்த்தி, அவரிடம், “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, இந்தச் சாலைவழியே செல்வீராக” என்றன.(10) இவ்வாறு அந்தப் பூதங்களால் சொல்லப்பட்ட ஜாஜலி, உற்சாகமற்ற இதயத்துடன் முன்னேறிச் சென்றார். வாராணசியை அடைந்த அவர், துலாதாரனைச் சந்தித்துப் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் சொன்னார்” என்றார் {பீஷ்மர்}.(11)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, ஜாஜலி அத்தகைய உயர்ந்த வெற்றியை அடைவதற்குக் காரணமான அந்தக் கடினமான சாதனைகள் என்னென்ன? அவற்றை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஜாஜலி கடுந்தவங்களில் ஈடுபட்டு வந்தார். அவர் காலையிலும் மாலையிலும் தூய்மைச் சடங்குகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.(13) தன் நெருப்புகளை {ஹோமத்தீயைக்} கவனமாக வளர்த்த அவர், வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்தார். வானப்பிரஸ்தர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நன்கறிந்தவரான ஜாஜலி, (தமது நடைமுறைகளின் விளைவாக) பிரகாசத்துடன் சுடர்விடுபவராகத் தெரிந்தார்.(14) அவர் தவங்களைச் செய்தபடியே காடுகளில் வாழ்ந்து வந்தார். தமது செயல்களின் மூலம் எந்தத் தகுதியையும் அடைந்தவராகத் தம்மை ஒருபோதும் அவர் கருதிக் கொண்டதில்லை. மழைக்காலங்களில் அவர் திறந்த வானத்துக்கு அடியிலேயே உறங்கினார். கூதிர் காலத்தில் அவர் நீரில் அமர்ந்திருந்தார்.(15) கோடை காலத்தில் அவர் தம்மைச் சூரியனுக்கும், காற்றுக்கும் வெளிப்படுத்திக் கொண்டார். எனினும் அத்தகைய செயல்களின் மூலமும் எந்தத் தகுதியையும் ஈட்டிவிட்டதாக அவர் ஒருபோதும் கருதியதில்லை. அவர் துன்பம் மிகுந்த பல்வேறு வகைப் படுக்கையிலும், வெறுந்தரையிலும் உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.(16)

ஒரு மழைக்காலத்தில் அவர் வானத்திற்கு அடியில் நின்று கொண்டிருந்தபோது, அவரது தலையில் மேகங்களில் இருந்து தொடர்ச்சியாக மழைத்துளிகள் விழுந்தன.(17) அவர் காடுகளின் ஊடாக மீண்டும் மீண்டும் கடந்து செல்ல வேண்டியிருந்தது. மழைக்கு வெளிப்பட்டதாலும், புழுதியடைந்ததாலும் அந்தப் பாவமற்ற முனிவரின் மயிர்கள் ஒன்றோடொன்று சிக்கிக் கொண்டு சடைபிடித்தன.(18) ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பெருந்தவசி உணவை முற்றும் துறந்து, காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து, ஒரு மரக்கட்டையைப் போலக் காட்டில் நின்று கொண்டிருந்தார். அவர், இதயத்தில் அசைவற்றவராகவும், ஓர் அங்குலமும் ஒரு முறை கூட நகராதவராகவும் அங்கே நின்று கொண்டிருந்தார்.(19) அவர் ஒரு மரக்கட்டையைப் போல முற்றிலும் அசையாமல் நின்று கொண்டிருந்தபோது, ஓ! பாரதா, ஓ! மன்னா, குளிங்கப் பறவைகளின் {சிட்டுக்குருவிகளின்} ஒரு ஜோடி அவரது {ஜாஜலி} தலையில் தங்கள் கூட்டைக் கட்டின.(20) கருணையால் நிறைந்த அந்தப் பெரும் முனிவர் {ஜாஜலி}, இறகு படைத்தவையான அந்த ஜோடி புற்கற்றைகளாலான தங்கள் கூட்டை அவரது சடாமுடியில் கட்டியதைப் பொறுத்துக் கொண்டார்.(21) அந்தத் தவசி மரக்கட்டை போல அங்கே நின்று கொண்டிருக்கையில், அந்த இரு பறவைகளும் முழு நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக அவரது தலையில் வாழ்ந்து வந்தன.(22)

மழைக்காலம் முடிந்து கூதிர் காலம் தொடங்கியது. ஓ! மன்னா, ஆசையால் தூண்டப்பட்ட அந்த ஜோடி, படைப்பாளனின் விதிக்கிணங்க ஒன்றையொன்று அணுகி, முழு நம்பிக்கையுடன் தங்கள் முட்டைகளை அந்த முனிவரின் தலையில் இட்டன.(23) கடும் நோன்புகளையும் சக்தியையும் கொண்ட அந்தத் தவசி இஃதை அறிந்தார். பறவைகளின் இச்செயலை அறிந்த ஜாஜலி அசையாமலேயே இருந்தார். பிறருக்கு சிறு தீங்கையும் இழைக்கும் எந்தச் செயலையும் செய்யாமல் அறமீட்டுவதில் அவர் உறுதி பூண்டார்.(24) ஓ! பலமிக்க மன்னா, இறகுபடைத்த அந்த ஜோடி, ஒவ்வொரு நாளும் அவரது தலையில் இருந்து வெளியே சென்றும், திரும்பியும் முழு நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக அங்கே வாழ்ந்து வந்தன.(25) ஜாஜலி சிறிதும் அசையாமல் இருந்ததால், காலம் கனிந்ததும் அந்த முட்டைகள் முதிர்ந்து குஞ்சுகள் வெளியே வந்து, அந்தக் கூட்டிலேயே வளரத் தொடங்கின.(26) தமது நோன்புகளில் உறுதியானவரும் உயர் ஆன்மா கொண்டவருமான அந்த முனிவர், தொடர்ந்து அந்தக் குஞ்சுகளைத் தாங்கியபடியே முற்றிலும் அசைவற்றவராக அந்த இடத்திலேயே தியான யோகத்தில் மூழ்கி நின்றிருந்தார்.(27)

காலப்போக்கில் அந்தக் குஞ்சுகள் வளர்ந்து, சிறகுகள் படைத்தவை ஆகின. குளிங்கக் குஞ்சுகள் வளர்ந்து விட்டதை அம்முனிவர் அறிந்தார்.(28) புத்திசாலி மனிதர்களில் முதன்மையான அவர், ஒரு நாள் அந்தக் குஞ்சுகளைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தார்.(29) தாய்தந்தை பறவைகள், தங்கள் குஞ்சுகள் சிறகு படைத்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, நிறைவான முழு நம்பிக்கையுடன் அந்த முனிவரின் தலையிலே அவற்றுடன் வசிக்கத் தொடங்கின.(30) கல்விமானான ஜாஜலி, அந்தப் பறவைக்குஞ்சுகள் சிறகுபடைத்ததும் ஒவ்வொரு மாலையும் பறந்து சென்று, (வெகு தொலைவுக்குச் சென்றுவிடாமல்) மீண்டும் தம் தலைக்குத் திரும்பிவிடுவதைக் கண்டார். அவர் அந்த இடத்திலேயே இன்னும் அசைவற்றவராகவே நின்று கொண்டிருந்தார்.(31) சில காலத்திற்குப் பிறகு தாய் தந்தையர் இல்லாமலேயே அவை போவரும் வருவதுமாக இருப்பதை அவர் கண்டார். அப்போதும் ஜாஜலி அசையாமலேயே இருந்தார்.(32)

சில காலம் கழித்து, அந்தக் குஞ்சுகள் காலையில் சென்றபிறகு, முழு நாளையும் அவர் பார்வையில் இருந்து வெளியே கழித்து மாலையில் கூட்டில் வசிப்பதற்காகத் திரும்பி வந்தன.(33) மேலும் சில காலம் கழித்து, கூட்டிலிருந்து சென்று ஐந்து நாள் கழித்து ஆறாம் நாளில் அவை திரும்பின. ஜாஜலி அப்போதும் அசையவில்லை.(34) அடுத்ததாகப் பலத்தில் அவை முழுமையாக வளர்ந்து அவரை விட்டுச் சென்ற பின் பல நாட்கள் ஆகியும் திரும்பி வரவில்லை.(35) இறுதியாக ஒரு சந்தர்ப்பத்தில் அவரைவிட்டுச் சென்று ஒருமாதமாகியும் அவை திரும்பி வரவில்லை. ஓ! மன்னா, அப்போது ஜாஜலி அந்த இடத்தைவிட்டு அகன்றார்.(36) இவ்வாறு நன்மைக்காக அவை வெளியே சென்ற பிறகு மிகவும் ஆச்சரியமடைந்த ஜாஜலி, தவ வெற்றியைத் தாம் அடைந்துவிட்டதாகக் கருதினார். அப்போது அவரது இதயத்திற்குள் செருக்கு ஊடுருவியது.(37) நோன்புகளை உறுதியாக நோற்ற அந்தப் பெரும் தவசி, தம் தலையில் வளர்ந்த அந்தப் பறவைகள் இவ்வாறு அவரைவிட்டுச் சென்றதைக் கண்டு, தம்மைத் தாமே உயர்வாக நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் நிறைந்தார்.(38) பிறகு அவர், ஓடைக்குச் சென்று நீராடி, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி, உதிக்கும் சூரியனுக்குத் தம் வணக்கங்களைச் செலுத்தினார்.(39)

உண்மையில், இவ்வாறு அந்தச் சாதகப் பறவைகளைத் தம் தலையில் வளரச் செய்தவரும், தவசிகளில் முதன்மையானவருமான அந்த ஜாஜலி, தமது கக்கங்களில் அறையத் தொடங்கி {தோள்களைதட்டத் தொடங்கி}, “நான் பெரும் தகுதியை வென்றேன்” என்று வானத்தினூடாக உரக்க அறிவித்தார்.(40)

அப்போது வானத்தில் இருந்து புலப்படாத ஒரு குரல் எழுந்தது, ஜாஜலியும் அவ்வார்த்தைகளைக் கேட்டார். “ஓ! ஜாஜலி, அறத்தின்கண் நீர் துலாதாரனுக்கு இணையாகமாட்டீர்.(41) பெரும் ஞானம் கொண்ட அந்தத் துலாதாரன் வாராணசியில் வாழ்கிறான். ஓ! மறுபிறப்பாளரே, அவனும் கூட நீர் சொல்வதைச் சொல்லத் தகுந்தவனாகான்” {என்று அக்குரல் சொன்னது}.(42)

இவ்வார்த்தைகளைக் கேட்ட ஜாஜலி, ஓ! ஏகாதிபதி, கோபத்தில் நிறைந்தவராக, துலாதாரனைச் சந்திக்கும் விருப்பத்தோடு, அமைதி நோன்பை {மௌன விரதத்தை} நோற்றும், மாலைவேளை சந்திக்கும் இடத்திலேயே அவ்விரவை கழித்தும் மொத்த பூமியிலும் திரிந்து கொண்டிருந்தார்.(43) ஒரு குறிப்பிட்ட அளவுக்கான காலத்திற்குப் பிறகு அவர் வாராணசி நகரத்தை அடைந்து சில்லறைப் பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துலாதாரனைக் கண்டார்[1].(44) கடைக்காரனான துலாதாரன், தன் இடத்திற்கு வந்த பிராமணரைக் கண்டதும், உற்சாகமாக எழுந்திருந்து, விருந்தினருக்கு உரிய வணக்கங்களுடன் அவரை வழிபட்டான்[2].(45)துலாதாரன் {ஜாஜலியிடம்}, “ஓ! பிராமணரே {ஜாஜலியே}, நீர் என்னிடம் வருகிறீர் என்பதை நான் அறிந்தேன். ஐயமில்லை. எனினும், ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் சொல்வதைக் கேட்பீராக.(46) கடற்கரையின் அருகே பள்ளத்தாக்கில் வாழ்ந்து கொண்டே நீர் கடுந்தவங்களைச் செய்து வந்தீர். அறத்தையோ, தகுதியையோ குறித்த எந்த நினைவும் இல்லாமல் இருந்தீர்.(47) இறுதியாக நீர் தவ வெற்றியை அடைந்த போது, குறிப்பிட்ட பறவைகளை நீர் உமது தலையில் தாங்கினீர். நீர் அந்தச் சிறு பறவைகளிடம் பெரும் கவனம் செலுத்தினீர்.(48) இறுதியில் அந்தப் பறவைகள் சிறகுகளைப் பெற்ற போது, இரை தேடி அங்கேயும் இங்கேயும் செல்வதற்காக அவை உமது தலையை விட்டுச் சென்ற போதும், ஓ! பிராமணரே, அந்தச் சாதகப் பறவைகளின் பிறப்புக்கு இவ்வாறு துணை புரிந்ததன் விளைவால், பெரும் தகுதியை அடைந்துவிட்டதாக நினைத்து, செருக்கின் தூண்டுதலை நீர் உணரத் தொடங்கினீர்.(49) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அப்போது என்னைக் குறிப்பிடும் வானொலி ஒன்றை நீர் கேட்டீர். நீர் கேட்ட வார்த்தைகள் உம்மைச் சினத்தில் நிறைத்தன, அதன் விளைவாக நீர் இங்கே வந்திருக்கிறீர். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, உமது எந்த விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்றான் {தூலாதாரன்}”.(50)

தீங்கிழையாமை! – சாந்திபர்வம் பகுதி – 262-ஜாஜலிக்கு அறமுறைத்த துலாதாரன்; தீங்கிழையாமையே உயர்ந்த அறம் எனச் சொன்ன துலாதாரன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “புத்திசாலியான துலாதாரனால் அந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வாறு சொல்லப்பட்டவரும், தவசிகளில் முதன்மையானவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான ஜாஜலி, இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(1)

ஜாஜலி {துலாதாரனிடம்}, “ஓ! வணிகனின் மகனே {வைஸ்யபுத்ரா}, சாறுகளும், நறுமணமும் கொண்ட அனைத்து வகைப் பொருட்களையும், பெரும் மரங்களின் கனிகளையும், (மரப்பட்டைகளையும், இலைகளையும்), கிழங்குகளையும் நீ விற்பனை செய்கிறாய்.(2) {இவ்வாறிருக்கையில்} மெய்யுறுதி அல்லது நிலைத்த புத்தியை அடைவதில் நீ எவ்வாறு வென்றாய்? இந்த ஞானம் எங்கிருந்து உன்னிடம் வந்தது? ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, இவை யாவற்றையும் எனக்கு விளக்கமாகச் சொல்வாயாக” என்று கேட்டார்”.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பெரும் புகழைக் கொண்ட அந்தப் பிராமணரால் {ஜாஜலியால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும், வைசிய வகையை {வர்ணத்தைச்} சார்ந்தவனும், அறநெறி விளக்கங்களின் உண்மைகளை நன்கறிந்தவனும், ஞானத்தில் நிறைவு கொண்டவனுமான துலாதாரன், கடுந்தவங்களை மேற்கொண்ட ஜாஜலியிடம் அறத்தின் வழிமுறைகளைக் குறித்து உரையாடினான்.(4)

துலாதாரன், “ஓ! ஜாஜலி, நித்தியமான அறத்தை அதன் புதிர்கள் அனைத்துடன் நான் அறிவேன். அஃது உலகளாவிய நட்புறவு மற்றும் அனைத்துயிரினங்களுக்கான நன்மை ஆகியவற்றைக் கொண்டதும், அனைவராலும் அறியப்பட்டதுமான பழங்கால அறத்தை {சனாதன தர்மத்தைத்} தவிர வேறேதும் இல்லை.(5) அனைத்து உயிரினங்களுக்கு முற்றாகத் தீங்கிழையாமல் இருப்பது, அல்லது (உண்மையில் தேவைப்படும் இடங்களில் மட்டும்) குறைந்த அளவு தீங்கைச் செய்வது எனும் அடிப்படையில் அமைந்த வாழ்வுமுறையே உயர்ந்த அறமாகும். ஓ! ஜாஜலி, நான் அந்த வாழ்வுமுறையின்படியே வாழ்கிறேன்.(6) என்னுடைய இவ்வீடு, மரத்தையும், புல்லையும் பயன்படுத்திப் பிறரின் கைகளால் கட்டப்பட்டதாகும். ஓ! மறுபிறப்பாள முனிவரே, செம்பஞ்சு, நீலோத்பலமலரின் வேர் {பத்மகம்}, தாமரை இதழ்கள் {துங்கம்}, பல்வேறு வகையிலான நல்ல நறுமணப் பொருட்கள், மது தவிர்த்த பல்வேறு வகைத் திரவங்கள்[1] ஆகியவற்றை நான் பிறரிடம் இருந்து கொள்முதல் செய்து, வஞ்சனை ஏதுமின்றி விற்பனை செய்து வருகிறேன்.(8) ஓ! ஜாஜலி, அனைத்து உயிரினங்களுக்கு எப்போதும் நண்பனாக இருப்பவன் எவனோ, எண்ணம், வாக்கு, செயல் ஆகியவற்றில் அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவன் எவனோ, அவனே அறமறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(9) நான் எவரிடமும் ஒருபோதும் எதையும் வேண்டுவதில்லை, எவரிடமும் ஒருபோதும் சச்சரவில் ஈடுபடுவதில்லை; நான் ஒருபோதும் எவரையும் வெறுப்பதுமில்லை. நான் ஒருபோதும் எதனிலும் ஆசையை வளர்த்துக் கொள்வதில்லை. அனைத்துப் பொருட்கள் மற்றும் அனைத்து உயிர்களின் மீதும் நான் சமமான பார்வையையே செலுத்துகிறேன். ஓ! ஜாஜலி, இஃது என் நோன்பு என்பதைக் காண்பீராக.(10)ஓ! ஜாஜலி அனைத்து உயிரினங்களைப் பொறுத்தவரையிலும் என் தராசு முற்றிலும் சமமாகவே இருக்கும்.(11) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, வானத்தில் தென்படும் ஆச்சரியங்களைப் போலவே உலகின் வகைகளையும் காண்பதால் நான் பிறரின் செயல்களைப் புகழ்வதோ, பழிப்பதோ இல்லை[2].(12) ஓ! ஜாஜலி, நான் அனைத்து உயிரினங்களிடமும் சமமான பார்வையைச் செலுத்துகிறேன் என்பதை அறிவீராக. ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவரே, மண்ணாங்கட்டி, சல்லிக்கற்கள் மற்றும் பொற்குவியல் ஆகியவற்றுக்கிடையில் நான் எந்த வேறுபாட்டையும் காண்பதில்லை.(13) குருடர்கள், செவிடர்கள் மற்றும் அறிவிழந்தவர்கள் ஆகியோர் தங்கள் புலன்களை இழந்தததில் முற்றிலும் ஆறுதலடைவதைப் போலவே நானும் (இன்பங்களைத் தவிர்ப்பதில்) ஆறுதலடைகிறேன்[3].(14) முதுமையடைந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், பலவீனர்கள், மெலிந்தவர்கள் ஆகியோர் எந்த வகை இன்பத்தையும் அனுபவிக்காததைப் போலவே, நானும் செல்வம் அல்லது இன்பத்தை அனுபவிப்பதை நிறுத்திவிட்டேன்.(15)ஒரு மனிதன் எப்போது எதையும் அச்சுறுத்தாமலும், எதற்கும் அஞ்சாமலும் இருக்கிறானோ, எப்போது அவன் ஆசையேதும் வளர்க்காமலும், வெறுப்பேதும் கொள்ளாமலும் இருக்கிறானோ, அப்போது அவன் பிரம்மத்தை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(16) ஒரு மனிதன் எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ பாவம்நிறைந்தவனாக எந்த உயிரினத்திடமும் நடந்து கொள்ளாதபோது, அவன் பிரம்மத்தை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(17) கடந்த காலமோ, எதிர்காலமோ ஏதுமில்லை. அறமோ, மறமோ ஏதுமில்லை. எந்த உயிரினத்தின் அச்சத்திற்குரிய பொருளாகவும் இல்லாதவனே, அச்சமற்ற நிலையை அடைவதில் வெல்கிறான்[4].(18) மறுபுறம், பேச்சில் கடுமையும், தீவிரக் கோபமும் கொண்ட மனிதன், மரணத்தைப் போலவே அனைத்து உயிரினங்களின் தொல்லைக்கு மூலமாக அமைந்து, அச்சம் நிறைந்த நிலையை நிச்சயம் அடைகிறான்.(19) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதியை முறையாக நோற்றுப் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளின் பிள்ளைகள் {பேரர்கள்} ஆகியோருடன் சேர்ந்து வாழும் உயர் ஆன்ம நல்லோரின் நடைமுறைகளையே நான் பின்பற்றுகிறேன்.(20)உள்ளபடியே நல்லோராகவும், விவேகிகளாகவும் இருப்போரின் ஒழுக்கத்தில் காணப்படும் சில பிழைகளால் {குற்றங்களால்} திகைப்படையும் ஒருவன், (வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள) நித்திய நடைமுறைகளை முற்றிலும் கைவிடுகிறான். எனினும் கல்விமானான ஒருவன், அல்லது புலன்களை அடக்கிய ஒருவன், அல்லது மனோபலம் கொண்ட ஒருவன், அவ்வொழுக்கத்தால் வழிநடத்தப்பட்டே விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான்[5].(21) ஓ! ஜாஜலி, தன் புலன்களை அடக்கி, பிறருக்குத் தீங்கிழைக்கும் ஆசைகள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்த இதயத்துடன் நல்லோர் என்றழைக்கப்படுவோரால் பின்பற்றப்படும் ஒழுக்கத்தை நடைமுறையில் நோற்கும் ஞானியானவன் நிச்சயம் அறத்தகுதியை (அறத்தகுதியையும், அதன் கனியான விடுதலையையும் {முக்தியையும்}) ஈட்டுவான்.(22) ஆற்று நீரோட்டத்தின் போக்கில் அடித்துச் செல்லப்படும் மரத்துண்டு, அதே போல அடித்துவரப்படும் மற்றொரு துண்டுடன் (சில காலத்திற்குத்) தொடர்பில் இருப்பது இவ்வுலகில் காணப்படுகிறது. அந்நீரோட்டத்தில் அவ்வாறு சேர்ந்த மரத்துண்டுகள் மீண்டும் ஒன்றையொன்று விட்டுப்பிரிவதும் காணப்படுகிறது. புற்கள், குச்சிகள் மற்றும் சாணம் ஆகியவை ஒன்றோடொன்று கலப்பதும் காணப்படுகிறது. இந்தச் சேர்கை விபத்தின் மூலம் நேர்வதேயன்றி, அதற்கு ஒரு நோக்கமோ வடிவமைப்போ கிடையாது[6].(23,24) ஓ! தவசியே {ஜாஜலியே}, எவனைக் கண்டு எந்த உயிரினமும் கிஞ்சிற்றும் அஞ்சுவதில்லையோ, அவன் ஒருபோதும் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ள மாட்டான்.(25)மறுபுறம், ஓ! கல்விமானே, எவனைக் கண்டதும் ஓநாயைக் கண்டது போல ஒவ்வொரு உயிரினமும் அஞ்சுகிறதோ, அவன் முழங்கும் வடவாக்னியிடம் கொண்ட அச்சத்தின் மூலம் கரைக்குத் தாவ நிர்ப்பந்திக்கப்படும் நீர்வாழ் விலங்கினங்களைப் போல அச்சத்தால் நிறைந்தவனாகிறான்.(26) அண்டந்தழுவிய {உலகந்தழுவிய} தீங்கிழையாமை நடைமுறை இவ்வாறே எழுந்தது. ஒருவன் தன் சக்திக்குத்தக்க அனைத்து வழிமுறைகளினாலும் இதைப் பின்பற்றலாம். தொண்டர்களுடையவனும், செல்வமுடையவனும் இதைப் பின்பற்ற முனையலாம். இது நிச்சயம் செழிப்புக்கும், சொர்க்கத்திற்கும் வழிவகுக்கும்.(27) செல்வமும் தொண்டர்களும் படைத்த மனிதர்கள், பிறரின் அச்சத்தை விலக்க இயன்றதன் விளைவாகக் கல்விமான்களால் முதன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். சாதாரண மகிழ்ச்சிக்காகவும், புகழுக்காகவும் மனிதர்கள் அண்டந்தழுவிய தீங்கிழையாமை எனும் கடமையைப் பயில்கிறார்கள்; அதே வேளையில் உண்மையில் திறனுடையவர்கள், பிரம்மத்தை அடைவதற்காக அதையே {உலகந்தழுவிய தீங்கிழையாமையை} பயில்கிறார்கள்.(28) தவங்கள், வேள்விகள், ஈகை, ஞானம் ஆகியவற்றின் மூலம் ஒருவன் என்னென்ன கனிகளை அனுபவிக்கிறானோ, அவை அனைத்தையும் தீங்கிழையாமை என்ற கடமையைப் பயில்வதால் பெறலாம்.(29) தீங்கிழைக்க மாட்டேன் என்ற உறுதியை அனைத்து உயிரினங்களுக்கு அளிப்பவன், வேள்விகள் அனைத்தின் மூலம் கிட்டும் தகுதியை அடைந்து, இறுதி வெகுமதியாக அச்சமற்ற தன்மையை அடைகிறான். பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பதைத் தவிர்ப்பதைத் தவிர மேன்மையான கடமையேதும் கிடையாது.(30)

ஓ! பெரும் தவசியே, எவனைக் கண்டு எந்த உயிரினமும் கொஞ்சமும் அஞ்சவில்லையோ, அவன் அனைத்து உயிரினங்களிடம் இருந்தும் அச்சமில்லாத தன்மையை அடைகிறான்.(31) (உறங்கும்) அறைக்குள் {படுக்கையறைக்குள்} புகுந்த பாம்பைப் போல எவனைக் கண்டு அனைவரும் அஞ்சுகிறார்களோ, அவன் இம்மையிலோ மறுமையிலோ ஒருபோதும் எந்தத் தகுதியையும் அடைய மாட்டான்.(32) எந்த மனிதன் அனைத்து நிலைகளையும் விஞ்சி இருக்கிறானோ, எவன் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்கிறானோ, எவன் அனைத்து உயிரினங்களையும் தன்னைப் போலவே நினைக்கிறானோ அந்த மனிதனின் பாதையில் தேவர்களே கூடத் திகைப்படைகிறார்கள்.(33) கொடைகள் அனைத்தைக் காட்டிலும், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமையை உறுதியளிப்பதே (தகுதியின் அடிப்படையில்) உயர்ந்த கொடையாகும். ஓ! ஜாஜலி, நான் உமக்கு உண்மையைச் சொல்கிறேன் என்னை நம்புவீராக.(34) செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன், முதலில் செழிப்பை வெல்கிறான், ஆனால் (தன் தகுதி {புண்ணியம்} தீரும்போது) அவன் மீண்டும் வறுமையையே அடைகிறான்.(35)

செயல்களில் (அவற்றின் தகுதிகளில்) அழிவைக் காணும் ஞானிகள், செயல்களை மெச்சுவதில்லை.(36) ஓ! ஜாஜலி, (மகிழ்ச்சிக்கான) ஏதோ ஒரு நோக்கத்தால் தூண்டப்படாத எந்தக் கடமையும் இங்கில்லை. எனினும் கடமை {அறம்} மிக நுட்பமானது. பிரம்மம் மற்றும் சொர்க்கம் ஆகிய இரண்டின் நிமித்தமாகவும் வேதங்களில் கடமைகள் {தர்மங்கள்} விதிக்கப்பட்டிருக்கின்றன.(37) கடமையின் காரியங்கள் பல ரகசியங்களையும், புதிர்களையும் கொண்டிருக்கின்றன. அவை எளிதில் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிக நுட்பமானவையாக இருக்கின்றன. முரண்பட்ட பல்வேறு விதிகளுக்கு மத்தியில், நல்லோரின் செயல்களைக் காண்பதன் மூலம் சிலர் கடமையைப் புரிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(38) காளைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வோர், அவற்றின் நாசிகளில் துளையிடுவோர், அவற்றைப் பெருஞ்சுமைகளைச் சுமக்கச் செய்வோர், அவற்றைக் கட்டி, பல்வேறு வகைக் கட்டுப்பாடுகளில் அவற்றை நிறுத்துவோர்,(39) அவற்றைக் கொன்று உயிரினங்களின் இறைச்சியை உண்போர் ஆகியோரை நீர் ஏன் எரிக்காமலிருக்கிறீர் {நிந்திக்காமலிருக்கிறீர்}? மனிதர்கள் சக மனிதர்களை அடிப்பதன் மூலமும், கட்டுவதன் மூலமும், கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமும் அவர்களை அடிமையாக்கி, பகலும் இரவும் அவர்களைப் பணியில் ஈடுபடுத்துவது காணப்படுகிறது. இம்மனிதர்கள், அடிப்பது மற்றும் சங்கிலிகளில் பிணைப்பது ஆகியவற்றின் விளைவால் உண்டாகும் வலியை அறியாதவர்கள் அல்ல.(41)

ஐம்புலன்களோடு கூடிய ஒவ்வொரு உயிரினத்தினுள்ளும் தேவர்கள் அனைவரும் வாழ்கின்றனர். சூரியன், சந்திரன், வாயு, பிரம்மன், பிராணன், கிரது, யமன் ஆகியோர் (வாழும் உயிரினங்களுக்குள்) வசிக்கின்றனர்.(42) உயிரினங்களைக் கொண்டு வாணிபம் செய்வதன் மூலம் வாழும் மனிதர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ஒரு பாவம் நிறைந்த நடைமுறையின் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை ஈட்டும்போது, உயிரற்ற உடல்களை {இறைச்சியை} விற்பதில் அவர்கள் ஐயமேதும் உணர்வார்களா? வெள்ளாடு அக்னியாகும். செம்மறி ஆடு வருணனாகும். குதிரை சூரியனாகும். பூமி விராட் தேவனாகும்.(43) பசுவும் கன்றும் சோமன் {சந்திரன்} ஆகும். இவற்றை விற்கும் மனிதர்கள் ஒருபோதும் வெற்றியை அடைவதில்லை. ஆனால், ஓ! மறுபிறப்பாளரே, எண்ணெய் {தைலம்}, கிருதம் {நெய்}, தேன், மருந்துகள் ஆகியவற்றை விற்பதில் என்ன களங்கம் இருக்கிறது?(44) கொசுக்களும், கடிக்கும் பூச்சிகளும் இல்லாத இடங்களில் பல விலங்குகள் சுகமாகவும், வசதியாகவும் வளர்கின்றன. அவை தங்கள் தாய்க்கு அன்புக்குரியவை என்பதை அறிந்தும் மனிதர்கள் அவற்றைப் பல்வேறு வகைகளில் தண்டித்து,(45) கடிக்கும் பூச்சிகள் உள்ள புழுதிகளுக்குள் அவற்றைச் செலுத்துகின்றனர். வண்டியிழுக்கும் பல விலங்குகள் கனமிக்கச் சுமைகளால் மிகவும் ஒடுக்கப்படுகின்றன. மேலும் வேறு சில, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படாத வகையில் நடத்தப்படுவதன் விளைவால் தளர்வடையச் செய்யப்படுகின்றன.(46) விலங்குகளுக்குத் தீங்கிழைக்கும் இத்தகைய செயல்கள், கருவைக் கொல்லும் செயலில் இருந்து எவ்வகையிலும் வேறுபட்டதில்லை என்று நான் நினைக்கிறேன்.

உழவுத்தொழில் பாவமற்றது என மக்கள் கருதுகிறார்கள். எனினும் அத்தொழிலும் நிச்சயம் கொடுமை நிறைந்ததாகும்.(47) இரும்புக்கொழுவுடன் சேர்ந்த கலப்பையானது, மண்ணுக்கும், மண்ணில் வாழும் பல உயிரினங்களுக்கும் காயத்தை ஏற்படுத்துகிறது. ஓ ஜாஜலி, கலப்பையில் பூட்டப்படும் எருதுகளில் உமது கண்களைச் செலுத்துவீராக.(48) ஸ்ருதிகளில் பசுக்கள் கொல்லத்தகாதன என்றழைக்கப்படுகின்றன. ஒரு காளையையோ, பசுவையோ கொல்வதன் மூலம் அந்த மனிதன் பெரும்பாவத்தை இழைக்கிறான்.(49)

பழங்காலத்தில் புலனக்கம் கொண்ட பல முனிவர்கள் நஹுஷனிடம், “ஓ! மன்னா, சாத்திரங்களில் ஒருவனின் தாயைப் போன்ற ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு பசுவைக் கொன்றிருக்கிறாய். படைப்பாளனையப் போன்றே ஒன்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு காளையையும் கொன்றிருக்கிறாய்[7].(50) ஓ! நஹுஷா, {இதன் மூலம்} நீ தீச்செயலைச் செய்திருக்கிறாய், அதைக் கண்டு நாங்கள் மிகவும் துன்புறுகிறோம்” என்றனர். எனினும், அவர்கள் அந்த நஹுஷனைத் தூய்மைப்படுத்துவதற்காக, அந்தப் பாவத்தை நூற்றொரு பாகங்களாகப் பிரித்து, அவற்றை நோய்களாக்கி அனைத்து உயிரினங்களுக்கு மத்தியில் விட்டனர்[8].(51) ஓ! ஜாஜலி, இவ்வாறு அந்த உயர் ஆன்ம முனிவர்கள் அனைத்து உயிரினங்களின் மேலும் அந்தப் பாவத்தைச் செலுத்தி, கருவைக் கொன்ற குற்றத்தைச் செய்தவனான நஹுஷனிடம், “உன் வேள்வியில் நாங்கள் ஆகுதிகளை ஊற்ற இயலாது” என்றனர்[9].(52)உயர் ஆன்ம முனிவர்களும், அனைத்துப் பொருட்களின் உண்மைகளை அறிந்தவர்களான யதிகளும், மன்னன் நஹுஷன் வேண்டுமென்றே அந்தப் பாவத்தைச் செய்ய வில்லை என்பதைத் தங்கள் தவச் சக்தியின் மூலம் உறுதி செய்த பிறகே இவ்வாறு சொன்னார்கள்[10].(53) ஓ! ஜாஜலி, இவை இப்போதும் இந்த உலகத்தில் உள்ள சில தீய மற்றும் பயங்கர நடைமுறைகளாகும். இவை பழங்காலத்தில் இருந்து அனைத்து மனிதர்களாலும் செய்யப்படுகிறது என்பதாலேயே நீர் அவற்றைச் செய்கிறீரேயல்லாமல், தூய்மையாக்கப்பட்ட உமது புத்தியின் விதிகளுக்கு ஏற்புடைய எந்தக் காரணத்தாலும் அல்ல.(54) ஒருவன், உலக நடைமுறைகளைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதற்குப் பதிலாக அறிவின் மூலம் வழிநடத்தப்பட்டு எதைத் தன் கடமையாகக் கருதுகிறானோ அதையே செய்ய வேண்டும். ஓ! ஜாஜலி, தீங்கிழைப்பவன் மற்றும் என்னைப் புகழ்பவன் ஆகியோரிடம் என் நடத்தை என்ன என்பதை இப்போது சொல்கிறேன் கேட்பீராக.(55) அவை இரண்டையும் நான் ஒரே ஒளியிலேயே கருத்தில் கொள்கிறேன். நான் எவரையும் விரும்பவுமில்லை, எவரையும் வெறுக்கவுமில்லை. இத்தகைய ஒழுக்க நடைமுறையானது கடமை அல்லது அறத்திற்கு இணக்கமானது என ஞானிகள் மெச்சுகின்றனர்.(56) இந்த ஒழுக்க நடைமுறையே யதிகளால் பின்பற்றப்படுவதும், அறிவுக்கு இணக்கமானதுமாகும். மேன்மையான பார்வை கொண்ட கண்களுடன் எப்போதும் அறத்தை நோற்பீராக” என்றான் {துலாதாரன்}.(57)

புரோடாசயாகம்! – சாந்திபர்வம் பகுதி – 263-வேள்வியின் முக்கியத்துவத்தைத் துலாதாரனிடம் எடுத்துச் சொன்ன ஜாஜலி; வேள்விகளையும் அவற்றின் தன்மைகளையும் குறித்து ஜாஜலிக்குச் சொன்ன துலாதாரன் இறுதியில் மனோவேள்வியே அனைத்து வேள்விகளிலும் முதன்மையானது என்றது…

ஜாஜலி {துலாதாரனிடம்}, “ஓ! தராசை ஏந்துபவனே {துலாதாரா}, நீ சொல்லும் இந்தக் கடமையின் போக்கு அனைத்து உயிரினங்களுக்கும் எதிராகச் சொர்க்கத்தின் வாயிலை மூடி, அவற்றின் வாழ்வுத் தேவைக்கான வழிமுறைகளைத் தடை செய்கிறது.(1) உழவில் இருந்தே உணவு தோன்றுகிறது. உனக்கும்கூட அவ்வுணவே வாழ்வாதாரத்தைத் தருகிறது. ஓ! வணிகனே, விலங்குகள், பயிர்கள் {தானியங்கள்} மற்றும் மூலிகைகளின் துணை கொண்டு மனிதர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்.(2) விலங்குகள் மற்றும் உணவில் இருந்தே வேள்விகள் தோன்றுகின்றன. உன் கோட்பாடுகள் நாத்திகத்தின் மணத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. வாழ்வாதார வழிமுறைகள் கைவிடப்பட்டால் இவ்வுலகமே ஒரு முடிவுக்கு வந்துவிடும்” என்றார் {ஜாஜலி}.(3)

துலாதாரன் {ஜாஜலியிடம்}, “வாழ்வாதார வழிமுறைகள் குறித்து நான் இப்போது சொல்லப்போகிறேன். ஓ! பிராமணரே, நான் நாத்திகனல்ல. நான் வேள்விகளைப் பழிக்கவுமில்லை. எனினும், {உள்ளபடியே} வேள்வியை அறிந்த மனிதன் மிக அரிதானவன்.(4) பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வேள்வியை நான் வணங்குகிறேன். அவ்வேள்வியை அறிந்தவர்களையும் நான் வணங்குகிறேன். ஐயோ, பிராமணர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வேள்வியைக் கைவிட்டு க்ஷத்திரியர்களுக்குரிய வேள்விகளைச் செய்து வருகிறார்கள்[1].(5)ஓ! மறுபிறப்பாளரே, பேராசையும், செல்வத்தில் விருப்பமும் கொண்ட நம்பிக்கையாளர்கள் பலர், ஸ்ருதிகளில் உள்ள தீர்மானங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ளாமல், உண்மை போலத் தோன்றுபவையும், உண்மையில் போலியானவையுமானவற்றை அறிவித்து, பல்வேறு வகை வேள்விகளையும் அறிமுகம் செய்து,(6) “இந்த வேள்வியில் இதைக் கொடுக்க வேண்டும். இந்த மற்றொரு வேள்வியில் இந்த மற்றொரு பொருள் கொடுக்கப்பட வேண்டும். இதில் முதலில் வருவது மெச்சத்தகுந்தது” என்று சொல்கிறார்கள். எனினும், ஓ! ஜாஜலி, இவையனைத்தின் விளைவாக, களவும், பல தீச்செயல்களும் எழுகின்றன[2].(7) நீதிமிக்க வழிமுறைகளில் அடையப்பட்டும் வேள்விக் காணிக்கை மட்டுமே தேவர்களை நிறைவு செய்யும் என்பது அறியப்பட வேண்டும். தேவர்களை வழிபடுவதற்குரிய வணக்கங்கள், நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள், வேதம் ஓதல், செடிகள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைக் குறித்து  சாத்திரங்களில் அபரிமிதமான குறிப்புகள் இருக்கின்றன.(8) அறமில்லா மனிதர்கள் தங்கள் அறச்செயல்களின் மூலம் தீய வாரிசுகளை {சந்ததிகளைப்} பெறுகின்றனர். பேராசை கொண்ட மனிதர்களில் இருந்து பேராசைமிக்கப் பிள்ளைகள் தோன்றுகின்றனர், நிறைவானவர்களிடம் இருந்து நிறைவுடைய பிள்ளைகள் பிறக்கின்றனர்.(9) வேள்வி செய்பவனும், புரோகிதரும் கனியில் உள்ள விருப்பத்தால் தூண்டப்பட்டு (அவர்கள் செய்யும் வேள்விகள் அல்லது துணைபுரியும் வேள்விகளில்) செயல்பட்டால், அவர்களது பிள்ளைகள் களங்கமடைவார்கள். மறுபுறம், அவர்கள் கனியின் மீது ஆசை கொள்ளவில்லையெனில் அவ்வாறான ஆசையில்லாத பிள்ளைகள் அவர்களுக்குப் பிறப்பார்கள். ஆகாயத்தில் இருந்து தெளிந்த நீர் உண்டாவதைப் போல, வேள்விகளில் இருந்தே சந்ததி உண்டாகிறது.(10)வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள் சூரியனை நோக்கி எழுகின்றன. சூரியனில் இருந்து மழை எழுகிறது. மழையிலிருந்து உணவு எழுகிறது. உணவிலிருந்து உயிரினங்கள் பிறக்கின்றன.(11) பழங்காலங்களில்  நீதிமிக்க அர்ப்பணிப்புடன் வேள்விகளைச் செய்த மனிதர்கள், தங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனிவதையே அவற்றில் இருந்து வழக்கமாகப் பெற்றனர். உழாமலேயே பூமி பயிர்களை விளைவித்தது. முனிவர்கள் சொல்லும் வாழ்த்துகளே செடிகளையும், மூலிகைகளையும் உண்டாக்கின.(12) பழங்கால மனிதர்கள் ஒருபோதும், கனிகளின் மீதுள்ள விருப்பத்தால் வேள்விகளைச் செய்யவில்லை, மேலும், அவர்கள் கனிகளை அனுபவிப்பவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டதுமில்லை. தங்கள் திறனில் ஐயங்கொண்டிருந்தாலும், ஏதோவொரு வகையில் வேள்விகளைச் செய்வோர்,(13) தங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் நேர்மையற்றவர்களாகவும், வஞ்சகர்களாகவும், செல்வத்தில் மிகுந்த ஆசை கொண்ட பேராசைக்காரர்களாகவும் பிறக்கிறார்கள். அங்கீகாரம்பெற்ற சாத்திரங்கள் அனைத்தும் தீமையால் நிறைந்தவை என்று போலி அறிவின் துணையுடன் சொல்லும் மனிதன், இத்தகைய அவனது பாவச்செயலுக்காகப் பாவம் நிறைந்த உலகங்களுக்கே நிச்சயம் செல்வான். ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, அத்தகைய மனிதன் நிச்சயம் பாவம் நிறைந்த ஆன்மாவாவான், மேலும் அவன் எப்போதும் இங்கேயே ஞானமற்றவனாக இருப்பான்[3].(14,15)எந்த மனிதன், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளன செயல்கள் தினமும் நிறைவேற்றப்பட வேண்டியன என்று கருதுகிறானோ, எந்த மனிதன் எந்த நாளிலாவது அவற்றை நிறைவேற்றாமல் போனால் அச்சத்தால் நிறைகிறானோ, வேள்விக்கு அடிப்படையான அனைத்தையும் பிரம்மத்தைப் போன்றே எவன் பொருள் கொள்கிறானோ, தானே செயல்புரிபவன் என்று எவன் ஒருபோதும் கருதவில்லையோ, அவனே உண்மையில் பிராமணனாவான்.(16) அத்தகைய மனிதனின் செயல்கள் {வேள்விகள்} நிறைவுபெறாமல் போனாலோ, தூய்மையற்ற விலங்குகள் அனைத்தினாலும் அவற்றின் நிறைவுக்கு முன் தடுக்கப்பட்டாலோ கூட அந்தச் செயல்கள் மேன்மையான திறம்பெற்றவையே என்று நாம் கேள்விப்படுகிறோம். எனினும், அச்செயல்களின் கனியில் உள்ள விருப்பத்தின் மூலம் (அவை நிறைவடைவதற்கு முன்பு இத்தகைய தடங்கல்களால் தடை) செய்யப்பட்டால், பாவக்கழிவு {பரிகாரம்} நிச்சயம் தேவை.(17) வாழ்வின் உயர்ந்த நோக்கமான (விடுதலையை) அடைய ஆசைப்படுபவர்கள், உலகம் சார்ந்த அனைத்து வகைச் செல்வத்திலும் ஆசையற்றவர்கள், எதிர்காலத் தேவைகள் அனைத்தையும் அலட்சியம் செய்பவர்கள், பொறாமையில் இருந்து விடுபட்டவர்கள் ஆகியோர் வாய்மையையும், தற்கட்டுப்பாட்டையும் தங்கள் வேள்வியாக எடுத்துக் கொள்கிறார்கள்.(18) உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்தவர்கள், யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்கள், பிரணவத்தைத் தியானிப்பவர்கள் ஆகியோர் எப்போதும் பிறரை நிறைவு செய்வதில் வெல்கிறார்கள்.(19) தேவர்கள் அனைவரின் ஆன்மாவாகிய அண்டந்தழுவிய பிரம்மம் (பிரணவம்), பிரம்மத்தை அறிந்தவனிடமே வசிக்கிறது. எனவே, ஓ! ஜாஜலி அத்தகைய மனிதன் உண்டு நிறைவடையும்போது, தேவர்கள் அனைவரும் நிறைவடைந்தவர்களாகிறார்கள்.(20)

அனைத்து வகைச் சுவைகளிலும் நிறைவடைந்த ஒருவன், எந்த ஒரு குறிப்பிட்ட சுவையையும் விரும்பாததைப் போலவே ஞானத்தால் நிறைவடைந்தவன், முற்றான அருள் ஊற்றாக நீடிக்கும் நிறைவை அடைகிறான்.(21) அறத்தின் புகலிடமாக இருப்பவர்களும், அறத்தில் திளைப்பவர்களுமான ஞானிகளே, எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்ற நிச்சயமான ஞானத்தை அடைந்தவர்களாவர். அத்தகைய ஞானத்தைக் கொண்ட ஒருவன், இந்த அண்டத்தில் உள்ள அனைத்தும் தன்னில் இருந்து எழுந்ததாகவே எப்போதும் கருதுவான்[4].(22) (வாழ்வெனும் இந்தப் பெருங்கடலின்) மறுகரையை அடைய முயல்பவர்களும், நம்பிக்கை நிறைந்தவர்களும், ஞானம் கொண்டவர்களுமான சிலர், பேரருளை உண்டாக்குவதும், மிகப் புனிதமானதும், அறவோர் வசிப்பதும், கவலையில் இருந்து விடுபட்டு, எவ்வகையான கலக்கமோ, வலியோ இல்லாத, திரும்ப வேண்டிய அவசியமில்லாத இடமான பிரம்மலோகத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(23,24) அத்தகைய மனிதர்கள் சொர்க்கத்திற்கு ஆசைப்படுவதில்லை. அவர்கள் ஆடம்பர வேள்விகளில் பிரம்மத்தைத் துதிப்பதில்லை. அவர்கள் அறவோரின் பாதையிலேயே நடக்கிறார்கள். அவர்கள் செய்யும் வேள்விகள் எவ்வுயிரினத்திற்கும் தீங்கிழைக்காமலேயே செய்யப்படுகின்றன.(25)இம்மனிதர்கள், மரங்கள், மூலிகைகள், கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே வேள்விக் காணிக்கையாக அறிகிறார்கள். பேராசைமிக்கப் புரோகிதர்கள், செல்வத்தை விரும்புபவர்களாக இருப்பதால், இந்த (ஏழை) மனிதர்களின் வேள்விகளை ஒருபோதும் செய்து கொடுப்பதில்லை.(26) இந்த மறுபிறப்பாளர்களோ, தங்கள் செயல்கள் அனைத்தும் நிறைவடைந்தாலும்கூட, உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்வதற்காகவும், தங்களையே வேள்விக் காணிக்கையாக்கும் விருப்பத்தாலும் வேள்விகளைச் செய்து கொண்டே இருக்கிறார்கள்.(27) இந்தக் காரணத்தினால், பேராசைமிக்கப் புரோகிதர்கள், தவறாக வழிநடத்தப்படுபவர்களின் வேள்விகளில் மட்டுமே செயல்பட்டு, விடுதலையை அடைய முயற்சி செய்யாமல் சொர்க்கத்தை நாடுகிறார்கள். எனினும், உண்மையில் நல்லவர்களாக இருப்போர், தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் பிறரைச் சொர்க்கத்திற்கு உயரச் செய்கிறார்கள். ஓ ஜாஜலி, இந்த இருவகை நடத்தைகளையும் பார்த்து, (உலகில் உள்ள எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல்) சமமான இதயத்துடன் அனைத்து உயிரினங்களையும் நான் கருத்தில் கொள்கிறேன்.(28) ஞானம் கொண்ட முதன்மையான பிராமணர்கள் பலர், (சிலருக்குத் திரும்ப வேண்டிய அவசியமில்லாத விடுதலைக்கு வழிவகுப்பற்றையும், சிலருக்கு திரும்ப வேண்டிய அவசியமில்லாத அருள் உலகங்களுக்கு வழிவகுப்பவற்றையும் என இரு வகைக் கனிகளைத் தர வல்ல) வேள்விகளைச் செய்கிறார்கள். ஓ! பெரும் தவசியே, அவ்வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்கள் நடந்த பாதையில் அவர்கள் நடக்கிறார்கள்.(29) வேள்வி செய்பவர்களில் ஒருவகையினருக்கு (கனியில் உள்ள விருப்பத்தால் வேள்வி செய்பவர்களுக்கு, அவர்கள் செல்லும் உலகத்தில் இருந்து) திரும்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. எனினும், உண்மையில் ஞானிகளாக இருப்போருக்கு (கனியில் உள்ள விருப்பத்தின் மூலம் தூண்டப்படாமல் வேள்வி செய்பவர்களுக்கு) திரும்ப வேண்டிய அவசியமில்லை. ஓ ஜாஜலி, வேள்வி செய்பவர்களில் இரு வகையினரும் (அவர்கள் செய்யும் வேள்விகளின் விளைவால்) தேவர்கள் நடந்த பாதையிலேயே நடந்தாலும், அவர்கள் அடையும் இறுதி கதிகளில் இத்தகைய வேறுபாடு இருக்கிறது.(30)

அத்தகைய மனிதர்கள், தங்கள் மனங்களில் அமையும் காரியங்களுக்குக் கிடைக்கும் வெற்றியின் விளைவால், உழவிற்குத் துணைபுரிவதற்காக காளைகள் எந்தவித கட்டாயமுமின்றித் தாங்களே தங்கள் தோள்களில் கலப்பையைச் சுமந்து, வண்டிகளை இழுக்கின்றன, பசுக்களும் மனிதக் கரங்களின் தீண்டலில்லாமலேயே தங்கள் மடியில் பாலைச் சுரந்து கொடுக்கின்றன.(31) அவர்கள், மனவிருப்பமெனும் எளிய செயலின் மூலம் வேள்விக் கம்புகளையும் {யூபங்களையும்} (வேள்விக்குத் தேவையான இன்னும் பிற பொருட்களையும்) உண்டாக்கி அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பல்வேறு வகை வேள்விகளைச் செய்கிறார்கள்[5]இத்தகைய தூய ஆன்மாவைக் கொண்ட ஒருவனே (வேள்விக் காணிக்கையாக) ஒரு பசுவைக் கொல்லலாம்[6].(32) எனவே, அவ்வகையல்லாதோர் (விலங்குகள் இல்லாமல்) செடிகொடி மூலிகைகளுடன் கூடிய வேள்விகளையே செய்ய வேண்டும். துறவுக்கு இத்தகைய தகுதி {புண்ணியம்} இருக்கும் காரணத்தாலேயே உம்மிடம் பேசும்போது அஃதை என் கண்முன் நிறுத்தினேன்[7].(33) கனியில் {பலனில்} உள்ள விருப்பமனைத்தையும் எவன் கைவிடுகிறானோ, உலகக் காரியங்களில் எவன் எம்முயற்சியும் செய்வதில்லையோ, எவனிடமும் தலைவணங்காமல் எவன் இருக்கிறானோ, எவன் ஒருபோதும் பிறரைத் துதிப்பதில்லையோ, தனது செயல்கள் அனைத்தும் பலவீனமடைந்தாலும் எவன் பலவானாக இருக்கிறானோ அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(34) ஓ! ஜாஜலி, வேதங்களைப் பிறருக்கு எவன் உரைப்பதில்லையோ, வேள்விகளை எவன் (முறையாகச்) செய்வதில்லையோ, (தகுந்த பிராமணர்களுக்கு) எவன் கொடைகள் அளிப்பதில்லையோ, அனைத்து வகை ஆசைகளையும் கொண்ட வாழ்வமைப்பை எவன் பின்பற்றுகிறானோ அவன் அடையப் போகும் கதி என்ன? எனினும், துறவு தொடர்பான கடமைகளை முறையாக மதிப்பதன் மூலம் ஒருவன் நிச்சயம் பிரம்மத்தை அடைவான்” என்றான் {துலாதாரன்}.(35)ஜாஜலி, “ஓ!வணிகனின் மகனே {வைஸ்யா}, மனோவேள்விகளை மட்டுமே செய்யும் தவசிகளின் இந்த மறைபொருள் கோட்பாடுகளை இதற்கு முன்னர் நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இந்தக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதாக இருக்கிறது. இந்தக் காரணத்தினாலேயே நான் (அவற்றைக் குறித்து) உன்னிடம் கேட்கிறேன். பழங்காலத்தின் தவசிகள் இந்த யோகக் கோட்பாடுகளைப் பின்பற்றியவர்களில்லை. எனவே அவர்களுக்கு அடுத்த வந்த தவசிகள் (பொதுவான ஏற்புக்கு) அவற்றை எடுத்துரைக்கவில்லை.(36) அறிவற்ற மனம் கொண்டோர் மட்டுமே ஆன்ம மண்ணில் வேள்விகளைச் செய்யத் தவறுபவர்கள் என நீ சொல்வாயென்றால், ஓ! வணிகனின் மகனே {துலாதாரா}, அவர்கள் எச்செயல்களைச் செய்வதன் மூலம் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறார்கள்? ஓ பெரும் ஞானியே, இஃதை எனக்குச் சொல்வாயாக. உன் வார்த்தைகளில் எனக்குப் பெரிதான நம்பிக்கை இருக்கிறது” என்றார் {ஜாஜலி}.(37)

துலாதாரன், “சில வேளைகளில் சிலரால் செய்யப்படும் வேள்விகள் (அவற்றைச் செய்பவர்களுடைய நம்பிக்கையின்மையின் விளைவால்) வேள்விகளாவதில்லை. இந்த மனிதர்கள் (அகம் மற்றும் புறமென) எந்த வேள்வியையும் செய்யத் தகாதவர்கள் என்று சொல்லப்பட வேண்டும். எனினும், நம்பிக்கை நிறைந்தவர்களைப் பொறுத்தவரையில், பசுவானவள் தன்னிடமிருந்து தெளிந்த நெய், பால், தயிர், வால் முனையிலுள் முடி, கொம்புகள், குளம்புகள் ஆகியவற்றை முழுமையாகக் காணிக்கை அளிப்பதன் மூலம் அவள் {பசு} மட்டுமே அனைத்து வேள்விகளையும் தாங்கத் தகுந்த ஒரே பொருளாக இருக்கிறாள்[8].(38) (திருமணமாகாத மனிதர்கள் வேள்விகளைச் செய்யக் கூடாது என வேதங்கள் அறிவிக்கின்றன). எனினும், நான் சொன்னபடியே (விலங்குகளைக் கொல்லாமல், தெளிந்த நெய் முதலிய காணிக்கைகளை மட்டுமே அர்ப்பணித்துச் செய்யப்படும்) வேள்விகளைச் செய்வதால் ஒருவன், தன் நம்பிக்கையையே மனைவியாகக் கொண்டு இத்தகைய (குற்றமற்ற) காணிக்கைகளைத் தேவர்களுக்கு அர்ப்பணிக்கலாம் . இத்தகைய வேள்விகளை முறையாக மதிப்பதால், ஒருவன் நிச்சயம் பிரம்மத்தை அடைகிறான்.(39) (வேள்விக் காணிக்கையாக அளிக்கப்பட நிச்சயம் தூய்மையற்றவையான) விலங்குகள் அனைத்தையும் தவிர்த்து, வேள்விகளில் அரிசிப் பந்தைக் காணிக்கையாக அளிப்பதே {புரோடாசயாகமே} தகுந்ததாகும். அனைத்து ஆறுகளும் சரஸ்வதியைப் போன்று புனிதமானவையே, அனைத்து மலைகளும் புனிதமானவையே.(40) ஓ ஜாஜலி, ஆன்மாவே தீர்த்தமாகும் {புண்ணியத்தலமாகும்}. புனிதத்தலங்களுக்குச் செல்வதற்காக உலகில் திரியாதீர். (எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல் நான் சொன்ன வகையில்) இக்கடமைகளைச் செய்வதன் மூலமும், தன் திறனுக்குத்தகுந்த தகுதியை ஈட்டுவதன் மூலமும் ஒருவன் மறுமையின் அருள் உலகங்களை அடைவதில் நிச்சயம் வெல்கிறான்” என்றான் {துலாதாரன்}.(41)பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, அறிவுக்குப் பொருத்தமானவையும், நல்லோர் மற்றும் ஞானிகளால் எப்போதும் பயிலப்படுபவையுமான இந்தக் கடமைகளையே துலாதாரன் மெச்சினான்” என்றார்.(42)

தர்மதர்சனர்! – சாந்திபர்வம் பகுதி – 264-ஜாஜலி உண்மையை அறிந்து கொள்ள, அவர் வளர்த்த பறவைகளை அழைக்குமாறு அவரிடம் சொன்ன துலாதாரன்; கொல்லாமையின் முக்கியத்துவம் குறித்து ஜாஜலியிடம் பறவைகள் பேசிய நீதிமொழி; தர்மதர்சனர் உரைத்த நீதிகள் என பறவைகள் சொன்னது; ஜாஜலியும், துலாதாரனும் சொர்க்கத்தை அடைந்தது…

துலாதாரன், “ஓ! ஜாஜலி, நான் சொன்ன கடமையின் பாதையைப் பின்பற்றிய நல்லோரும், அல்லோரும் யாவர் என்பதை உமது கண்களாலேயே காண்பீராக. அப்போதுதான் உண்மையின் நிலை என்ன என்பதை நீர் முறையாகப் புரிந்து கொள்வீர்.(1) வானத்தில் வட்டமிடும் பறவைகள் பலவற்றைக் காண்பீராக. அவற்றுக்கு மத்தியில் உமது தலையில் வளர்ந்த பறவைகளும், பருந்துகள் பலவும், பிற இனங்களைச் சேர்ந்தவை பலவும் இருக்கின்றன.(2) ஓ! பிராமணரே, அந்தப் பறவைகள் தங்கள் தங்களுக்குரிய கூடுகளில் நுழைய தங்கள் சிறகுகளையும், கால்களையும் சுருக்குவதைப் பாரும். ஓ! மறுபிறப்பாளரே, அவற்றை அழைப்பீராக.(3) உம்மால் பாசத்துடன் வளர்க்கப்பட்ட அந்தப் பறவைகள் தங்கள் தந்தையான உம்மீது தாங்கள் கொண்ட அன்பை அங்கே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஓ! ஜாஜலி, நீரே அவற்றின் தந்தை என்பதில் ஐயமில்லை. உமது பிள்ளைகளை அழைப்பீராக” என்றான்”.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அப்போது ஜாஜலியால் அழைக்கப்பட்ட அந்தப் பறவைகள், எவ்வுயிருக்கும் எத்தீங்குமிழைக்காத அவ்வறத்தின் விதிகளுக்கு ஏற்ப பதிலளித்தன.(5) {அப்போது அந்தப் பறவைகள்}[1]“எவ்வுயிரினுக்கும் தீங்கிழைக்காமல் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் (அவற்றைச் செய்தவனுக்கு) பயன்படத்தக்கனவாக இருக்கின்றன. எனினும், பிறருக்குத் தீங்கு செய்து செய்யப்படும் செயல்களோ, நம்பிக்கையை அழிக்கின்றன, நம்பிக்கை அழிந்ததும், அஃதை அழித்தவனும் {அந்தச் செயல்களைச் செய்தவனும்} அழிவடைகிறான்.(6) அடைவதையும், அடையாமல் போவதையும் ஒரே ஒளியில் கருதுவோர், நம்பிக்கையுடன் கூடியோர், தற்கட்டுப்பாடுடையோர், அமைதியான மனம் கொண்டோர், (கனியின் மீது கொண்ட விருப்பத்தால் அல்லாமல்) கடமையுணர்வால் வேள்விகளைச் செய்வோர் ஆகியோரால் செய்யப்படும் வேள்விகள் கனியை உண்டாக்குகின்றன.(7) ஓ! மறுபிறப்பாளரே, பிரம்மத்தைப் பொறுத்தவரையில் நம்பிக்கை {ஸ்ரத்தை} என்பவள் சூரியனின் மகளாவாள். நம்பிக்கை என்பது (வேத) மந்திரங்கள் மற்றும் தியானத்தின் மூலம் பிறக்கும் தகுதியை {புண்ணியத்தை} விட மிக மேன்மையானதாகும்.(8) பேச்சுக் குறைபாட்டால் தரமிழந்த ஒரு செயலானது நம்பிக்கையின் மூலம் காக்கப்படுகிறது. மனக்குறைபாட்டால் தரமிழந்த ஒரு செயலும் நம்பிக்கையால் காக்கப்படுகிறது. ஆனால் நம்பிக்கை இன்மையால் தரம் தாழ்ந்த ஒரு செயலை வாக்காலோ, மனத்தாலோ ஒருபோதும் காக்க முடியாது[2].(9)பழங்காலத்தில் நேர்ந்தவற்றை அறியும் மனிதர்கள், இது தொடர்பாகப் பிரம்மன் பாடிய பின்வரும் ஸ்லோகத்தைக் குறிப்பிடுகின்றனர். (உடலாலும் செயல்களாலும்) தூய்மையான, ஆனால் நம்பிக்கையில்லாத {ஸ்ரத்தையில்லாத / அக்கறையில்லாத} ஒரு மனிதனின் வேள்விக் காணிக்கைகளையும், (உடலாலும், செயல்களாலும்) தூய்மையற்ற, ஆனால் நம்பிக்கையுள்ள {ஸ்ரத்தையுள்ள / அக்கறையுள்ள} மற்றொருவனின் வேள்விக் காணிக்கைகளையும் தேவர்கள் (ஏற்பதற்கான தகுதியின் அடிப்படையில்) ஒன்றாகவே கருதினார்கள். வேதங்களை அறிந்தவனும் கஞ்சனுமான ஒருவனின் உணவையும், வட்டித் தொழில் செய்பவனும் தயாளனுமான மற்றொருவனின் உணவையும்(10,11) கவனமாகக் கருத்தில் கொண்ட தேவர்கள் தேவர்கள் (ஏற்பதற்கான தகுதியின் அடிப்படையில்) அவற்றை ஒன்றாகவே ஏற்றனர். அப்போது, உயிரினங்கள் அனைத்தின் உயர்ந்த தலைவன் (பிரம்மன்) அவர்கள் பிழை செய்துவிட்டதாக அவர்களிடம் சொன்னான்.(12) தயாளனின் உணவு நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டது. எனினும், நம்பிக்கையற்றவனின் உணவோ அத்தகைய நம்பிக்கையின்மையின் விளைவால் ஒன்றுக்குமாகாததாகிறது. வட்டிக்கு விடும் தயாளனின் உணவு ஏற்புடையது, ஆனால் கஞ்சனின் உணவோ ஏற்பில்லாததாகும்.(13) இவ்வுலகில், நம்பிக்கையில்லாதவன் {ஸ்ரத்தையில்லாதவன் / அக்கறையில்லாதவன்} என்ற ஒருவன் மட்டுமே தேவர்களுக்குக் காணிக்கையளிக்கத் தகாதவனாவான். அத்தகைய மனிதனின் உணவு மட்டுமே உண்ணத்தகாததாகும். இதுவே கடமைகள் அறிந்த மனிதர்களின் கருத்தாகும்.(14)

நம்பிக்கையின்மை {ஸ்ரத்தையின்மை / அக்கறையின்மை} பெரும்பாவமாகும். நம்பிக்கையே பாவங்களைக் கழுவுகிறது. பாம்பு தனது சட்டையை உரிப்பதைப் போலவே, நம்பிக்கையுள்ள ஒரு மனிதன் தன் பாவங்கள் அனைத்தையும் விலக்குகிறான்.(15) நம்பிக்கையுடன் கூடிய துறவறமானது, புனிதமாகக் கருதப்படும் அனைத்துப் பொருட்களைக் காட்டிலும் மேன்மையானதாகும். நடத்தையில் உள்ள களங்கள் அனைத்தையும் தவிர்க்கும் ஒருவன் நம்பிக்கையுடன் இருப்பதால் புனிதமடைகிறான்.(16) அத்தகைய மனிதனுக்குத் தவங்கள், நடத்தை அல்லது பொறை ஆகியவற்றிற்கான தேவையென்ன இருக்கிறது? மனிதர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டவர்களே. எனினும், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களால் பாதிக்கப்பட்ட மூன்று வகை நம்பிக்கைகள் இருக்கின்றன. அதன்படியாக ஒருவன் கொண்ட நம்பிக்கை வகையின் அடிப்படையிலேயே அவன் அழைக்கப்படுகிறான்.(17) நல்லியல்பு மற்றும் அறநெறியின் உண்மையான உள்ளொளியைக் கொண்டவர்களே இவ்வாறான கடமைகளை விதித்திருக்கின்றனர். எங்கள் விசாரணையின் விளைவால் இவை யாவற்றையும் தர்மதர்சனர் என்ற தவசியிடம் இருந்து நாங்கள் பெற்றோம்.(18) ஓ! பெரும் ஞானியே {ஜாஜலியே}, நம்பிக்கை கொண்டால் மேன்மையான நிலையை {பரத்தை} அடைவீர்; எனவே நம்பிக்கை கொள்வீராக. எவன் (ஸ்ருதிகளின் தீர்மானங்களில்) நம்பிக்கையுடனிருக்கிறானோ, (அவை தனக்கான நன்மைக்கானவை என்ற நம்பிக்கையில்) அவை சொன்னவற்றின்படி எவன் செயல்படுகிறானோ அவன் நிச்சயம் அற ஆன்மா {தர்மாத்மா} ஆவான். {நம்பிக்கையுடன் கூடிய இந்த வணிகன் {துலாதாரன்}, நம்பிக்கையெனும் அறத்தைப் பின்பற்றுகிறான்}. ஓ! ஜாஜலி, எவன் (நம்பிக்கையின் ஆதிக்கத்தின் கீழ்) தன் பாதையைப் பின்பற்றுவானோ அவன் மேன்மையானவனாவான்” {என்றன அப்பறவைகள்}”.(19)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சிறிது காலத்திற்குப் பிறகு, பெரும் ஞானம் கொண்டவர்களான துலாதாரன் மற்றும் ஜாஜலி ஆகிய இருவரும் சொர்க்கத்திற்கு உயர்ந்து,(20) தாங்கள் செய்த செயல்களால் ஈடப்பட்ட தங்களுக்குரிய இடங்களை அடைந்து அங்கேயே மகிழ்ச்சியில் திளைத்தனர்.[3] இந்த வகையிலான பல உண்மைகள் துலாதாரனால் சொல்லப்பட்டன.(21) அந்தத் திறமிக்க மனிதன் (தீங்கிழையாமை என்ற) இவ்வறத்தை முழுமையாகப் புரிந்து கொண்டான். இந்த நித்திய கடமைகள் அவனாலேயே {துலாதாரனாலேயே} அறிவிக்கப்பட்டன.(22) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, கொண்டாடத்தக்க சக்தியைக் கொண்ட துலாதாரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு மறுபிறப்பாளரான ஜாஜலி அமைதியடைந்தார். இவ்வழியில் துலாதாரன் சொன்ன பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பல உண்மைகள் போதனைக்கான உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீ கேட்க விரும்பும் பிற உண்மைகள் யாவை?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(23)

உடல் வாடா அறமீட்டல்! – சாந்திபர்வம் பகுதி – 265-கொல்லாமை குறித்து மன்னன் விசரக்கு சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; கொல்லாமையைப் பயிலும்போது, உடலுக்குத் துன்பத்தைக் கொடுக்காமல் அறம் செய்ய வேண்டும் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

{யுதிஷ்டிரன் பீஷ்மரிடம்}, “ஒரு விதமான தீங்கையும் செய்யாதவர்கள் தங்கள் உடலையும், ஆபத்துகளையும் அறியாமல் இருக்கிறார்கள். தொழில் இல்லாதவனுக்கு உடற்பயணம் எவ்வாறு நடக்கும்?” என்று கேட்டான்}.[1]பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இதுதொடர்பாக, உயிரினங்கள் அனைத்திடமும் தான் கொண்ட கருணையின் மூலம் மன்னன் விசரக்கு {விசக்யு / விசக்நு /விசக்கண்ணன்} சொன்ன பழைய உரை குறிப்பிடப்படுகிறது.(1) உடல் சிதைக்கப்பட்ட ஒரு காளையைக் கண்டும், பசுவேள்வியில் கொல்லப்படும் பசுக்களின் வலிமிக்க வேதனைக் குரலைக் கேட்டும்,[2] விழாக்களில் துணைபுரிய அங்கே திரளும் கொடூரப் பிராமணர்களைக் கண்டும் அம்மன்னன் {விசரக்கு} இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “உலகில் உள்ள பசுக்கள் அனைத்தும் செழிக்கட்டும்” {என்றான்}. கொல்லத்தொடங்கும்போது (அந்த ஆதரவற்ற விலங்களுக்கு) ஆசி கூறும் இவ்வார்த்தைகள் சொல்லப்பட்டன.(3) மேலும் அந்த ஏகாதிபதி, “வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறுபவர்கள், புத்தியற்றவர்கள், நாத்திகர்கள் மற்றும் ஐயுறுவாதிகள், வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளின் மூலம் புகழை அடைய விரும்புவோர் ஆகியோர் மட்டுமே வேள்விகளில் விலங்குகள் கொல்லப்படுவதை உயர்வாகப் பேசுகிறார்கள்.(4) அற ஆன்மாவான மனு, (அறச்) செயல்கள் அனைத்திலும் தீங்கிழையாமையை மெச்சுகிறார். உண்மையில் மனிதர்கள், கனியிலுள்ள {பலனில்} விருப்பத்தால் தூண்டப்பட்டே வேள்விகளில் விலங்குகளைக் கொல்கிறார்கள்.(5)எனவே, (கொலை மற்றும் கொல்லாமை அல்லது தீங்கிழையாமை ஆகியவற்றைப் பொறுத்தவரையில்) அதிகாரமுடையவற்றை (சாத்திரங்களை) அறிந்த ஒருவன், அவற்றால் வழிநடத்தப்பட்டு, இந்த மிக நுட்பமான, உண்மையான கடமையின் போக்கையே பின்பற்ற வேண்டும். உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழைக்காமல் இருப்பதே கடமைகள் அனைத்திலும் உயர்ந்ததாகும்.(6) ஒருவன், வசிப்பாரற்ற இடத்தின் அருகில் வாழ்ந்து, கடும் நோன்புகளைப் பயில்வதைப் பழகி, வேதச் செயல்களால் {அறச்சடங்குகளில்} குறிப்பிடப்படும் கனிகளை {பலன்களை} அலட்சியம் செய்து, இல்லறத்தைக் கைவிட்டு துறவற வாழ்வுமுறையைப் பின்பற்ற வேண்டும்.(7) வேள்விகள், மரங்கள் மற்றும் யூபங்களை உயர்வாக மதிப்பிடும் மனிதர்கள் களங்கமுடைய இறைச்சியை {மட்டும்} உண்ணமாட்டார்கள். எனினும், இந்நடைமுறை மெச்சத்தகுந்ததில்லை[3].(8) கள், மீன், இறைச்சி, மது {ஆஸவம் / சாராயம்}, அரிசியைக் கொண்டு தயாரிக்கப்படும் பண்டங்கள், எள் {திலான்னம்} ஆகியன கபடர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. (வேள்விகளில்) இவற்றைப் பயன்படுத்த வேதங்களில் விதிக்கப்படவில்லை.(9) செருக்கு, தீர்மானப்பிழை {மயக்கம்} மற்றும் பேராசை ஆகியவற்றிலிருந்து இவற்றின் மீது விருப்பம் ஏற்படுகிறது[4].உண்மையான பிராமணர்கள், ஒவ்வொரு வேள்வியிலும் விஷ்ணுவின் இருப்பை உணர்கிறார்கள்.(10) இனிய பாயசத்துடன் அவனது {விஷ்ணுவின்} வழிபாடு செய்யப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்களும் (அவற்றின் இலைகள் மற்றும் மலர்கள்),(11) தூய இதயம் கொண்டோர், தூய இயல்பு கொண்டோர் மற்றும் திறன்மிக்க ஞானமும், புனிதமும் கொண்டோரால் தகுந்ததாகக் கருதப்படும் எந்தச் செயலும், அவர்களால் தூய்மையானதாகக் கருதப்படும் வேறு எதுவும் அந்த உயர்ந்த தேவனுக்குக் காணிக்கையாக அளிக்கத்தகுந்தவையே; இவை அவன் ஏற்கத் தகாதவையல்ல” என்றார் {பீஷ்மர்}.(12)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உடலும், அனைத்து வகை ஆபத்துகளும், பேரிடர்களும் தொடர்ந்து ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டே இருக்கின்றன. எனவே, தீங்கு செய்யும் விருப்பத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவனும், இக்காரியத்தில் செயல்பட இயலாதவனுமான ஒருவன் தன் உடலைப் பராமரித்துக் கொள்வதில் எவ்வாறு வெல்ல முடியும்?” என்று கேட்டான்[5].(13)பீஷ்மர், “ஒருவன் தகுதியை அடைய இயலும்போது, தன் உடல் நலிவுறாமலும், வலியை அனுபவிக்காமலும், அவனுக்கு மரணம் நேராத வகையிலும் செயல்பட வேண்டும்” என்றார்[6].(14)

கௌதமர் அகலிகை! – சாந்திபர்வம் பகுதி – 266-காரணங்களை ஆராய்ந்து காரியம் செய்வதற்கு உதாரணமாகச் சிரகாரினின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சிரிகாரினிடம் அவரது தாய் அஹல்யையின் தலையை வெட்ட உத்தரவிட்ட கௌதமர்; தாமதித்த சிரகாரின்; வருந்திய கௌதமர்; சிரிகாரின் அகலிகையைக் கொல்லாததைக் கண்டு மகிழ்ந்த கௌதமர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, (ஒருபுறம் பெரியோரின் கட்டளைகளும், மறுபுறம் அவற்றில் உள்ள கொடூரங்களும் இருக்கும் விளைவால்) நிறைவேற்றக் கடினமான செயல்கள் அனைத்தின் காரியத்திலும் நீரே எங்களுடைய பேராசானாக {உத்தம குருவாக} இருக்கிறீர். ஒரு செயலானது ஒருவனுடைய கடமையா? அல்லது தவிர்க்கப்பட வேண்டியதா என்பதை அவன் எவ்வாறு தீர்மானிக்க வேண்டும்? அது விரைவாகத் தீர்மானிக்கப்பட வேண்டுமா, தாமதமாகத் தீர்மானிக்கப்பட வேண்டுமா?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக அங்கிரஸக் குலத்தில் பிறந்த சிரகாரினின் {சிரகாரி} பழைய கதை குறிப்பிடப்படுகிறது.(2) செயல்படுவதற்கு முன்னால் நீண்ட காலம் சிந்திப்பவன் இரட்டிப்பாக அருளப்படுவானாக. செயல்படுவதற்கு முன்னால் நீண்ட காலம் சிந்திப்பவன் நிச்சயம் பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாவான். அத்தகைய மனிதன் எந்தச் செயலிலும் ஒருபோதும் குற்றமிழைப்பதில்லை.(3) ஒரு காலத்தில் கௌதமரின் மகனும், சிரகாரின் என்ற பெயரைக் கொண்டவரும், பெரும் விவேகியுமான ஒரு மனிதர் இருந்தார். அவர் தாம் செய்ய வேண்டிய அனைத்துச் செயல்களையும் மிகக் கவனமாகக் கருத்தில் கொண்டு, நீண்ட காலம் சிந்தித்த பிறகே அவற்றைச் செய்து வந்தார்.(4) அனைத்துக் காரியங்களிலும் நீண்ட காலம் சிந்திப்பதாலும், நீண்ட காலம் விழித்திருப்பதாலும், நீண்ட காலம் உறங்குவதாலும், தாம் நிறைவேற்றும் காரியங்கள் அனைத்திலும் தம்மை நிறுவி கொள்ள நீண்ட காலம் எடுத்துக் கொள்வதாலும் {ஒரு வேலையை நீண்ட காலம் செய்வதாலும்} சிரகாரின் என்ற பெயரால் அவர் அழைக்கப்படலானார்.(5)

இதனால் அவர் சோம்பேறி என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளானார். சிறுமதி கொண்ட, முன்னறிதிறன் அற்ற ஒவ்வொருவராலும் அவர் மூடர் என்றே கருதப்பட்டார்.(6) ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் தந்தை கௌதமர், தமது மனைவியிடம் {அகலிகையிடம் / அஹல்யையிடம்} பெரும் செயற்பிழையொன்றைக் கண்டு, தமது பிள்ளைகள் பிறரைக் கடந்து சென்று இந்தச் சிரகாரினிடம் கோபத்துடன், “இந்தப் பெண்ணைக் கொல்வாயாக” என்று சொன்னார்.(7) கல்விமானும், யோகப் பயிற்சியில் ஈடுபடுவோரில் முதன்மையானவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான கௌதமர், பெரிதாகச் சிந்திக்காமல் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு காட்டுக்குச் சென்றுவிட்டார்.(8) “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி ஏற்றுக் கொண்ட சிரிகாரின், தம் இயல்பின் விளைவாலும், நீண்ட காலம் சிந்திக்காமல் ஒருபோதும் எந்தவொரு செயலையும் செய்யாத அவரது வழக்கத்தாலும், (தமது தந்தை சொன்னதில் உள்ள முறைமை மற்றும் முறையின்மை குறித்து) நீண்ட காலம் சிந்திக்கத் தொடங்கினார்.(9)

{அவர் தமக்குள்ளேயே}, “என் தந்தையின் கட்டளைக்கு எவ்வாறு நான் கீழ்ப்படியப் போகிறேன்? என் தாயைக் கொல்வதை எவ்வாறு தவிர்க்கப் போகிறேன்? முரண்பட்ட கடமைகள் எதிரெதிர் திசையில் என்னை இழுக்கும் இந்தச் சூழ்நிலையில், தீய மனிதனைப் போல மூழ்கப் போவதை நான் எவ்வாறு தவிர்க்கப் போகிறேன்?(10) தந்தையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே உயர்ந்த தகுதியாகும் {புண்ணியமாகும்}. தாயைப் பாதுகாப்பதும் தெளிவாகக் கடமையே ஆகும். ஒரு மகனின் நிலை சார்பு நிறைந்ததாகும். பாவம் பீடிப்பதை எவ்வாறு நான் தவிர்க்கப் போகிறேன்?(11) ஒரு பெண்ணை, அதிலும் தன் தாயைக் கொன்றுவிட்டு எவனால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? மேலும் தன் தந்தையை அலட்சியம் செய்வதன் மூலம் எவனால் செழிப்பையும், புகழையும் அடைய முடியும்?(12) தந்தையின் ஆணையை மதிப்பதே கடமையாகும். என் தாயைக் காப்பதும் அதற்கு இணையான கடமையே ஆகும். இரு கடமைகளையும் செய்யும் வகையில் நான் எவ்வாறு என் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்ளப் போகிறேன்?(13) தந்தையானவர், தமது நடைமுறைகள் {சீலம்}, ஒழுக்கம் {ஆசாரம்}, பெயர் {கோத்ரம்} மற்றும் குலம் ஆகியவற்றைத் தொடர்வதற்காகத் தாயின் கருவறையில் தம்மையே வைத்து மகனாகப் பிறக்கிறார்.(14) நான் என் தாயாலும், தந்தையாலும் அவர்களது மகனாகப் பெறப்பட்டேன். என் தோற்றத்தை அறிந்த நான் (அவர்கள் இருவரிடம் நான் கொண்ட உறவுமுறை குறித்த) இந்த அறிவை ஏன் கொள்ளக் கூடாது?(15)

பிறப்புக்குப் பிறகு நடக்கும் முதல் சடங்கை {ஜாதகர்மத்தைச்} செய்யும்போது தந்தையால் சொல்லப்பட்ட வார்த்தைகளும், (ஆசானின் வசிப்பிடத்தில் இருந்து திரும்பிய பிறகு நடக்கும்) துணைச் சடங்கில் {உபகர்மத்தில்} அவரால் சொல்லப்பட்ட வார்த்தைகளும், அவருக்குரிய மரியாதையைத் தீர்மானிப்பதில் போதுமானவையாகவும் (போதுமான சாட்சியாகவும்), உண்மையில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை உறுதி செய்யும் வகையிலும் இருக்கின்றன[1].(16) மகனை வளர்த்து, அவனுக்குப் போதிக்கும் விளைவால் பெரியோர் அனைவரிலும் முதன்மையானவராக, உயர்ந்த அறமுமாகத் தந்தையே இருக்கிறார். தந்தை சொல்வதையே தன் உயர்ந்த கடமையாக மகன் கருத வேண்டும் என்று வேதங்களே விதித்திருக்கின்றன.(17) தந்தைக்கு மகன் மட்டுமே இன்பத்தின் ஊற்றுக்கண்ணாவான். எனினும் மகனுக்கோ அத்தந்தையே அனைத்துமாவார். மகன் கொண்ட உடலையும், வேறு அனைத்தையும் கொடுத்தவர் தந்தையே ஆவார்.(18) எனவே, ஒருபோதும் சிறு கேள்வியேனும் கேட்காமல் அவரது கட்டளைகள் அனைத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும். தன் தந்தைக்குக் கீழ்ப்படிபவனின் பாவங்கள் (அத்தகைய கீழ்ப்படிதலால்) கழுவப்படுகின்றன.(19) அனுபவிக்கத்தக்க பொருட்கள் அனைத்தையும், உணவுப் பொருட்கள் அனைத்தையும், வேத போதனைகளையும், உலகம் குறித்த பிற அறிவு அனைத்தையும் தந்தையே கொடுக்கிறார். (மகன் பிறப்பதற்கு முன்னர்) கர்பாதானம் மற்றும் சீமாந்தோன்னயனம் ஆகிய சடங்குகளைத் தந்தையே செய்கிறார்[2].(20)தந்தையே அறமாவார். தந்தையே சொர்க்கமாவார். தந்தையே உயர்ந்த தவமுமாவார். தந்தை நிறைவடைந்தால் தேவர்கள் அனைவரும் நிறைவடைவார்கள்.(21) தந்தையால் சொல்லப்படும் எந்த வார்த்தைகளும், மகனுக்கு ஆசிகளாகவே அமையும். தந்தை மகிழ்ந்து சொல்லும் வார்த்தைகள் அவனது பாவங்கள் அனைத்தையும் கழுவிவிடும்.(22) தண்டில் இருந்து மலர் விழுவது காணப்படுகிறது. மரத்தில் இருந்து கனி விழுவதும் காணப்படுகிறது. ஆனால் எத்துயரிலிருந்தாலும் ஒரு தந்தை பெற்றபாசத்தால் தம் மகனை ஒருபோதும் கைவிட மாட்டார்.(23) ஒரு மகன் தன் தந்தைக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் குறித்த என் சிந்தனைகள் இவையே. தந்தையானவர் ஒரு மகனுக்குச் சாதாரணப் பொருளல்ல {மதிப்புமிக்கப் பொருளாவார்}.

தாயை (தாய்க்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக்) குறித்து இப்போது நான் சிந்திக்கப் போகிறேன்.(24) நெருப்புக்குத் தீக்குச்சிகளைப்[3] போல, மனிதனாகப் பிறந்த என்னில் உள்ள இந்த ஐம்பூதக் கலவைக்குத் தாயே (முக்கிய) காரணமாவாள்.(25) மனிதர்கள் அனைவரின் உடலைப் பொறுத்தவரையில், தாயே தீக்குச்சி {அரணிக் கட்டையாவாள்} ஆவாள். அனைத்து வகைப் பெருந்துயரங்களுக்கும் அவளே மருந்தாவாள் {சர்வரோகநிவாரணியாவாள்}. தாயின் இருப்பே ஒருவனைப் பாதுகாக்கிறது {அவனை ஸ்னாதன் ஆக்குகிறது}. {அவள்} இல்லாமை {அவனது} பாதுகாப்புகள் அனைத்தையும் இழக்கச் செய்கிறது {அவனை அநாதனாக்குகிறது}.(26) ஒரு மனிதன், தன் செழிப்பை இழந்திருந்தாலும், “ஓ! தாயே {அம்மா}” என்ற வார்த்தைகளைச் சொல்லி தன் வீட்டிற்குள் நுழைந்தால், அவன் எத்துயரையும் அடையமாட்டான். மேலும் முதுமையும் அவனை அண்டுவதில்லை.(27) ஒருவன் மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் கொண்டிருந்தாலும், அவனுக்கு நூறு வயதே ஆகியிருந்தாலும், தாயிருப்பவன் இரு வயது குழந்தையைப் போலவே தெரிவான்.(28) மகனானவன் இயன்றவனானாலும், இயலாதவனானாலும், மெலிந்தவனானாலும், திடமானவனானாலும் தாயால் எப்போதும் பாதுகாக்கப்படுவான். விதியின்படி, {தாயைத் தவிர} வேறு எவரும் மகனின் பாதுகாவலர் ஆக முடியாது.(29) மகன் தன் தாயை இழக்கும்போதே, முதுமையடைகிறான், துயரமடைகிறான், அவன் கண்ணுக்கு உலகமே வெறுமையாகத் தெரிகிறது.(30)தாயைப் போன்ற உறைவிடமேதும் கிடையாது. தாயைப் போன்ற புகலிடம் வேறேதும் கிடையாது. தாயைப் போன்ற பாதுகாப்பு வேறேதும் கிடையாது. தாயைப் போன்று அன்புக்குரியவர் வேறு யாரும் கிடையாது.(31) மகனைத் தன் கருவறையில் சுமப்பதால் அவளே அவனின் தாத்ரீயாவாள். அவனுடைய பிறப்புக்கு மூல காரணமானதால் அவளே அவனது ஜநநீ ஆவாள். அவனது இளம் அங்கங்களை வளரச் செய்வதால் அவள் அம்பை என்றழைக்கப்படுகிறாள். ஒரு பிள்ளையை வீரத்துடன் வளர்ப்பதால் அவள் வீரஸூ என்றழைக்கப்படுகிறாள்.(32) செவிலிப் பணி செய்து அவனைக் கவனித்துக் கொள்வதால் அவள் சுஸ்ரூ என்றழைக்கப்படுகிறாள். தாயே ஒருவனுடைய சொந்த உடலாகும். எவருடைய கவனிப்பால் மட்டுமே ஒருவனின் தலை உலர்ந்த சுரைக்காயைப் போலத் தெருவோரத்தில் உருளாமல் இருக்கிறதோ அந்தத் தாயை எந்த அறிவுள்ள மனிதன் கொல்வான்?(33)

உற்பத்திக்காகக் கணவனும் மனைவியும் கலக்கும்போது, (பிறக்கப் போகும்) மகனுக்காக அவர்கள் இருவராலும் ஆசைகள் வளர்க்கப்பட்டாலும், அவை கனிவது தந்தையைவிடத் தாயையே அதிகம் சார்ந்திருக்கிறது[4].(34) மகன் எந்தக் குடும்பத்தில் பிறந்தான் என்பதையும், அவனைப் பெற்ற தந்தையையும் தாயே அறிவாள். கருவுற்ற கணத்தில இருந்து தாயானவள் தன் பிள்ளையிடம் அன்பைக் காட்டவும், அவனால் மகிழ்ச்சி கொள்ளவும் தொடங்குகிறாள். (இந்தக் காரணத்திற்காகவே மகனானவன {தந்தையிடம் நடந்து கொள்வதைப் போலவே} அவளிடமும் சமமாக நடந்து கொள்ள வேண்டும்). மறுபுறம், சந்ததி தந்தைக்கு மட்டுமே உரியது எனச் சாத்திரங்கள் அறிவிக்கின்றன.(35)மனிதர்கள், திருமணத்தில் மனைவியரின் கரங்களை ஏற்று, அவர்களிடம் பிரியாமல் இருந்து அறமீட்டுவதாக உறுதியளித்த பிறகு, பிறர் மனைவியருடன் கலவியை நாடினால், அப்போது அவர்கள் தங்கள் மதிப்பையும், தகுதியையும் இழக்கிறார்கள்[5].(36) மனைவியை ஆதரிப்பதால் கணவன் பர்த்திரீ {பர்த்தா} என்றழைக்கப்படுகிறான். அவன் அவளைப் பாதுகாப்பதன் காரணமாகப் பதி என்றழைக்கப்படுகிறான். இந்த இரு செயல்பாடுகளும் அவனிடம் காணாமல் போகும்போது, அவன் பர்த்திரீ மற்றும் பதி என்ற இரண்டாகவும் இருக்க மாட்டான்[6].(37) மேலும் பெண் எப்பிழையையும் செய்வதில்லை. ஆண் மட்டுமே பிழைகளைச் செய்கிறான். முறைகெட்ட ஒரு செயலைச் செய்வதன் மூலம் ஆண் மட்டுமே குற்றத்தால் களங்கமடைகிறான்[7].(38) கணவனே மனைவியின் உயர்ந்த பொருளும், உயர்ந்த தெய்வமுமாவான் என்று சொல்லப்படுகிறது. என் அன்னை தன் கணவரைப் போன்ற வடிவிலும், தோற்றத்திலும் தம்மிடம் வந்த ஒருவனிடம் தன் புனித உடலைக் கொடுத்தாள்.(39) பெண்கள் குற்றமிழைப்பதில்லை. ஆணே குற்றத்தால் களங்கமடைகிறான். உண்மையில், பெண்கள் தங்கள் பாலின பலவீனத்தை ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்தும் விளைவால், அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதவே முடியாது.(40)பழங்காலத்தில் பெண்களால் இந்திரனிடம் வேண்டப்பட்டது (இந்திரன் செய்த பிராமணக் கொலையின் {பிரம்மஹத்தியின்} பாவத்தில் மூன்றில் ஒரு பகுதி பெண் பாலினத்திற்குக் கொடுக்கப்பட்டது) நினைவுகூரப்படுகையில், அவனே பாவம் நிறைந்தவன் என்பது (இவ்வழக்கில்) தெளிவாகிறது. என் தாய் அப்பாவி என்பதில் எந்த ஐயமும் கிடையாது.(41) எவளைக் கொல்ல ஆணையிடப்பட்டேனோ, அவள் ஒரு பெண்ணாவாள். அந்தப் பெண்ணும் என் தாயாக இருக்கிறாள். எனவே, அவள் பெரும் மதிப்பிற்குரிய ஓரிடத்தை என்னிடம் பெறுகிறாள். தாய் கொல்லத்தகாதவள் என்பதை அறிவற்ற விலங்குகள் கூட அறியும்.(42) தந்தையோ, தேவர்கள் அனைவரின் கலவையாக அறியப்பட வேண்டியவர். எனினும் தாயானவள், உயிரினங்கள் மற்றும் தேவர்கள் அனைத்தின் கலவையாக இருக்கிறாள்[8]” {என்று சிரகாரின் தமக்குள்ளேயே நினைத்தார்}.(43)நீண்ட காலம் சிந்திக்கும் பழக்கத்தின் விளைவால் கௌதமரின் மகனான சிரகாரின் (தமது தந்தை செய்ய ஆணையிட்ட செயலைச் செய்யாமல்) இச்சிந்தனைகளில் ஈடுபட்டே நீண்ட காலத்தைக் கழித்தார். பல நாட்கள் கழிந்ததும் அவரது தந்தை கௌதமர் திரும்பினார்.(44) கௌதம குலத்தைச் சேர்ந்தவரும், தவப்பயிற்சியில் ஈடுபடுபவரும், பெரும் ஞானியுமான மேதாதிதி {கௌதமர்} (தமது ஆசிரமத்திற்குத்) திரும்பி, நீண்ட காலம் சிந்தித்துப் பிறகு, தமது மனைவியைப் பீடிக்கச் சொல்லி தாம் சொன்ன தண்டனை முறையற்றது என நினைத்தார்.(45) துயரால் எரிந்து, சாத்திர அறிவால் அடைந்த அமைதியான மனநிலையின் நன்மையான விளைவுகளின் காரணமாக அவர் வருத்தமடைந்ததால் பெரும் அளவில் கண்ணீரைச் சிந்தினார்.(46) அவர் {கௌதமர்}, “மூவுலகின் தலைவன் புரந்தரன் {இந்திரன்}, விருந்தோம்பலை வேண்டும் ஒரு பிராமணத் தோற்றத்தில் என் ஆசிரமத்திற்கு வந்தான்.(47) (உரிய) வார்த்தைகளால் ஏற்கப்பட்டு, (உரிய) வரவேற்பால் கௌரவிக்கப்பட்ட அவனுக்கு, கால் கழுவ நீரும், வழக்கமான அர்க்கிய காணிக்கைகளும் வழங்கப்பட்டன. அவன் கேட்ட ஓய்வையும் நான் அவனுக்கு அளித்தேன்.(48) அதற்கு மேலும் அவனைப் பாதுகாவலனாக அடைந்திருப்பதாக அவனிடமே நான் சொன்னேன். அத்தகைய நடத்தை அவனை என்னிடம் ஒரு நண்பனாக நடக்கத் தூண்டும் என்று எண்ணினேன். எனினும், இவை யாவற்றுக்கும் பிறகும், அவன் {இந்திரன்} தவறாக நடந்திருக்கும்போது, என் மனைவி அஹல்யை {அகலிகை} எக்குற்றத்தையும் இழைத்ததாகக் கருதப்படலாகாது.(49) என் மனைவியோ, நானோ, வானத்தினூடாகச் சென்று கொண்டிருந்த போது என் மனைவியைக் {அகலிகையைக்} கண்ட (என் மனைவியின் இயல்புக்கு மீறிய அழகைக் கண்டு புலன்களை இழந்த) இந்திரனோ குற்றவாளிகள் அல்ல என்றே தெரிகிறது. என் யோக பலத்தின் கவனமின்மையே உண்மையில் பழிக்கத்தக்கது[9].(50)அனைத்துத் துயரங்களும் பொறாமையில் இருந்தே எழுகின்றன, அதன் விளைவாகத் தீர்மானப் பிழையும் எழுகிறது. பாவக்கடலில் மூழ்கியிருந்த நான் (மனைவியைக் கொல்வது என்ற வடிவில்) அந்தப் பொறாமையின் மூலமே இழுக்கப்பட்டிருக்கிறேன்.(51) ஐயோ, நான் ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டேன். அதிலும் தன் தலைவனின் துயரங்களைப் பகிர்ந்து கொள்வதால் வாசிஷ்டை என்றழைக்கப்படுபவளும், என்னால் ஆதரித்துப் பாதுகாக்கத் தகுந்தவள் என்ற கடமையின் விளைவால் பார்யை என்றும் அழைக்கப்படுபவளுமான ஒரு பெண்ணான என் மனைவியைக் கொன்றுவிட்டேன். இப்பாவத்திலிருந்து யாரால் என்னைக் காக்க முடியும்?(52) உயர் ஆன்ம சிரகாரினிடம் (என் மனைவியைக் கொல்லுமாறு) ஆணையிட்டுக் கண்மூடித்தனமாகச் செயல்பட்டிருக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் அவன் தன் பெயரை மெய்ப்பித்திருந்தால் இந்தக் குற்றத்திலிருந்து என்னைக் காத்தவனாவான்.(53) ஓ! சிரகாரிகா, உனக்கு இரட்டிப்பான அருள் கிட்டட்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் அப்பணியை நிறைவேற்றுவதில் நீ தாமதித்திருந்தால், உண்மையில் நீ உன் பெயருக்குத் தகுந்தவனாகவே இருப்பாய்.(54) என்னையும், உன் அன்னையையும், நான் அடைந்த தவங்களையும், உன் தவங்களையும் பெரும் பாவங்களில் இருந்து காப்பாயாக. இன்று நீ உண்மையிலேயே சிரகாரிகனாக இருப்பாயாக.(55) சாதாரணமாக, உன் பெரும் ஞானத்தின் விளைவால் எந்தச் செயலையும் செய்வதற்கு முன்னர் நீண்ட காலம் ஆலோசிப்பாய். இன்று உன் நடத்தை வேறுவகையில் இருக்க வேண்டாம். இன்று நீ உண்மையான சிரகாரிகனாகவே இருப்பாயாக.(56)

உன் அன்னை உன் வரவை நெடுங்காலம் எதிர்பார்த்திருந்தாள். அவள் உன்னைத் தன் கருவறையில் நெருங்காலம் சுமந்திருந்தாள். ஓ! சிரகாரிகா, செயல்படுவதற்கு முன் நெடுங்காலம் சிந்திக்கும் உன் வழக்கம் இன்று நன்மையான விளைவுகளை உண்டாக்கட்டும்.(57) ஒருவேளை என் மகன் சிரகாரிகன் (அந்த ஆணையை அவன் செயல்படுத்துவதைக் கண்டு) நான் வருத்தமடைவேன் என்ற காரணத்தால் இன்றுவரை தாமதித்துக் கொண்டிருக்கலாம். ஒருவேளை, (நினைவுடன் செயல்படுத்தும் எந்த நோக்கமும் இல்லாமல்) அந்த ஆணையைத் தன் இதயத்தில் சுமந்தபடி அவன் உறங்கிக் கொண்டிருக்கலாம். ஒருவேளை, அவனுக்கும் எனக்கும் உண்டாகப்போகும் துயரத்தைக் கருத்தில் கொண்டும், வழக்கின் சூழ்நிலைகளைச் சிந்தித்தும் தாமதித்துக் கொண்டிருக்கலாம்” என்று {தனக்குத் தானே} சொல்லிக் கொண்டார்.(58)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா{, இத்தகைய வருத்தத்தில் ஈடுபட்ட பெரும் முனிவர் கௌதமர், தன் மகன் சிரகாரின் தன் அருகிலேயே அமர்ந்திருப்பதைக் கண்டார்.(59) தங்கள் தந்தை திரும்பி வந்ததைக் கண்ட மகனான சிரகாரின், துயரத்தில் மூழ்கி, (தாம் ஏந்திய) ஆயுதத்தை வீசிவிட்டு, தலைவணங்கி கௌதமரை தணிவடையச் செய்யத் தொடங்கினார்.(60) தமது மகன் தம் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து தலைவணங்குவதையும், அவமானத்தால் கிட்டத்தட்டக் கல்லாகிப் போயிருந்த தன் மனைவியையும் கண்டும் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தார்.(61) அந்தக் காலத்தில் இருந்து அந்த உயர் ஆன்ம முனிவர் {கௌதமர்}, தன் மனைவியிடமிருந்தோ, கவனமிக்கத் தன் மகனிடமிருந்தோ பிரிந்து வாழாமால் அந்தத் தனிமையான ஆசிரமத்திலேயே வசித்து வந்தார்.(62) தமது மனைவியைக் கொல்ல வேண்டும் என்ற ஆணையைச் சொல்லிவிட்டு, தமது காரியம் எதையோ நிறைவேற்றிக் கொள்ள ஆசிரமத்தைவிட்டு அவர் சென்றிருந்தார். அந்தக் காலத்தில் இருந்து அவரது மகன் கையில் ஆயுதத்துடன் தமது தாயாரிடம் அந்தக் கட்டளையை நிறைவேற்ற பணிவுடன் நின்று கொண்டிருந்தார்.(63) மகன் தமது பாதத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்ததைக் கண்ட தந்தை {கௌதமர்}, ஆயுதமேந்தி (தன் தாயையைக் கொன்ற) குற்றத்திற்காக அவர் மன்னிப்புக் கேட்பதாக {அக்கணத்தில்} நினைத்து விட்டார்.(64) பிறகு தமது மகனை நீண்ட நேரம் புகழ்ந்து கொண்டிருந்த அந்தத் தந்தை, நீண்ட நேரம் அவரது உச்சியை முகர்ந்து, “நீண்ட காலம் வாழ்வாயாக” என்ற ஆசி கூறும் வார்த்தைகளைச் சொன்னார்.(65)

பிறகு, ஓ! பெரும் ஞானியே {யுதிஷ்டிரா}, மகிழ்ச்சியால் நிறைந்தவரும், நேர்ந்த காரியத்தால் நிறைவடைந்தவருமான கௌதமர், தமது மகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(66) “ஓ! சிரகாரிகா, நீ அருளப்பட்டிருப்பாயாக. செயல்படுவதற்கு முன் எப்போதும் நீண்ட நேரம் சிந்திப்பாயாக. என் ஆணையை நிறைவேற்றுவதில் நீ தாமதித்ததன் மூலம் இன்று நீ என்னை எப்போதும் மகிழ்ச்சியுடையவனாகச் செய்துவிட்டாய்” {என்றார் கௌதமர்}.(67) முனிவர்களில் சிறந்தவரும், கல்விமானுமான அவர், பிறகு, எந்தச் செயல்பாட்டிலும் நீண்ட காலம் சிந்திக்கும் அமைதியான மனிதர்கள் அடையும் தகுதிகளை {புண்ணியங்களைக்) குறித்த இந்த ஸ்லோகங்களைச் சொன்னார்.(68) {கௌதமர்}, “ஒரு நண்பனின் மரணக் காரியமென்றால், ஒருவன் அதை நீண்ட காலத்திற்குப் பிறகே நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டத்தைக் கைவிடும் காரியமென்றால், அவன் நீண்ட காலத்திற்குப் பிறகே அதைக் கைவிட வேண்டும். நீண்ட சோதனைகளுக்குப் பிறகு அமைந்த ஒரு நட்பே நீண்ட காலத்திற்கு நிலைக்கும்.(69) கோபம், அகந்தை, செருக்கு, சச்சரவுகள், பாவச் செயல்கள் ஆகியவற்றின் வசப்படாமல், ஏற்கத்தகாத பணிகளை நிறைவேற்றும் காரியங்கள் அனைத்திலும் தாமதிப்பவன் மெச்சத்தகுந்தவனாவான்.(70) ஓர் உறவினர், நண்பர், பணியாள், அல்லது மனைவி ஆகியவர்களுக்கெதிரான குற்றம் தெளிவாக மெய்ப்பிக்கப்படாத போது, அவர்களைத் தண்டிப்பதில் தாமதிப்பவன் மெச்சத்தகுந்தவனாவான்” {என்றார் கௌதமர்}.(71)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஓ! குரு குலத்தோனே, இவ்வாறே தமது ஆணையை நிறைவேற்றுவதில் தாமதம் செய்தத் தமது மகனிடம் நிறைவடைந்தார் அந்தக் கௌதமர்.(72) ஒரு மனிதன் அனைத்துச் செயல்களிலும் இவ்வழியில் நீண்ட காலம் சிந்தித்து, தீர்மானத்தை அடைந்த பிறகே செயல்பட வேண்டும். இவ்வழியில் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளும் ஒருவன், நீண்ட காலத் துன்பங்களை நிச்சயம் தவிர்ப்பான்.(73) எந்த மனிதன் நீண்ட காலம் கோபத்தைப் பணியச் செய்கிறானோ, எவன் எச்செயலையும் செய்வதற்கு முன்னால் நீண்ட காலம் ஆலோசிக்கிறானோ அவன் வருத்தம் தரும் எந்தச் செயலையும் ஒருபோதும் செய்யமாட்டான்.(74) ஒருவன் பெரியோரிடம் நீண்ட காலம் காத்திருந்து {பணிவிடை செய்து}, அவர்களின் அருகே அமர்ந்து அவர்களிடம் மதிப்பைக் காட்ட வேண்டும். ஒருவன் தனது கடமைகளை நீண்ட காலம் கவனித்து, அவற்றை உறுதி செய்வதில் நீண்ட காலம் ஈடபட வேண்டும்.(75)

கல்விமான்களிடம் நீண்ட காலம் காத்திருந்து, நடத்தையில் நல்லோராக இருப்போரிடம் நீண்ட காலம் மதிப்புடன் பணி செய்து, தன் ஆன்மாவை நீண்ட காலம் முறையான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஒருவன், நீண்ட காலம் உலகால் மதிக்கப்படும் நிலையை அனுபவிப்பதில் வெல்வான்.(76) அறம் மற்றும் கடமை குறித்த காரியங்களில் ஈடுபடும் ஒருவன், அக்காரியங்களின் செய்தியை மற்றொருவன் கேட்கும்போது, அவனுக்குப் பதிலைக் கொடுப்பதற்கு முன் நீண்ட காலம் சிந்திக்க வேண்டும். அப்போது (பாவத்திற்கு வழிவகுக்கும் நடைமுறை விளைவுகளைக் கொண்ட தவறான பதிலைக் கொடுக்கும்) வருந்தத்தக்க நிலையை அவன் தவிர்க்கலாம்.(77) கடுந்தவங்களைக் கொண்ட கௌதமரைப் பொறுத்தவரையில், அம்முனிவர் நீண்ட காலம் தமது ஆசிரமத்தில் தேவர்களைத் துதித்து, இறுதியாகத் தம் மகனுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தார்” என்றார் {பீஷ்மர்}.(78)

சத்தியவான் தியுமத்சேனன்! – சாந்திபர்வம் பகுதி – 267-குடிமக்களைத் துன்புறுத்தாமல் அவர்களைப் பாதுகாக்கும் காரியத்தில் சத்தியவானுக்கும் தியுமத்சேனனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உண்மையில் ஒரு மன்னனால் எவருக்கும் தீங்கிழைக்காமல் எவ்வாறு தன் குடிமக்களைப் பாதுகாக்க முடியும்? ஓ! பாட்டா, ஓ! நல்லோரில் முதன்மையானவரே, நான் இஃதை உம்மிடம் கேட்கிறேன், எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்கதையில் தியுமத்சேனனுக்கும், மன்னன் சத்தியவானுக்கும் இடையில் நடந்த பழைய உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) தந்தையின் {தியுமத்சேனனுடைய} ஆணையின் பேரில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களைக் கொல்வதற்காக அவர்களைக் கொண்டு வரும்போது, அதற்கு முன் எவராலும் சொல்லப்படாத குறிப்பிட்ட வார்த்தைகளை இளவரசன் சத்தியவான் சொன்னான்[1].(3) {சத்தியவான்}, “சிலவேளைகளில் அறமானது கொடுமையின் வடிவையும், கொடுமையானது அறத்தின் வடிவையும் ஏற்கின்றன. தனி நபர்களைக் கொல்வது ஒருபோதும் அறச்செயலாகும் சாத்தியமில்லை” {என்றான்}.(4)தியுமத்சேனன் {சத்தியவானிடம்}, “கொல்லத்தகுந்தவர்களை விடுவது அறமென்றால், ஓ! சத்தியவான், கள்வர்களைத் தண்டிக்காமல் விட்டால், (அறத்திற்கும், மறத்திற்கும் இடையிலான) வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து போகும்.(4) (தீயோரைத் தண்டிக்காமல் விட்டால்) “இஃது என்னுடையது, இஃது என்னுடையதில்லை” (என்ற உடைமை ரீதியிலான) கருத்துகள் கலியுகத்தில் நீடிக்காது.(5) (தீயோர் தண்டிக்கப்படாமல் விடப்பட்டால்) உலகக் காரியங்கள் முடங்கிப் போகும் நிலையை எட்டும். (தீயோரைத் தண்டிக்காமல்) உலகத்தை எவ்வாறு நடத்தலாம் என்பதை நீ அறிந்தால், அது குறித்து எனக்குச் சொல்வாயாக” என்றான்.(6)

சத்தியவான் {தியுமத்சேனனிடம்}, “மூவகையினரும் (க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரரும்) பிராமணர்களின் கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்தப்பட வேண்டும். இந்த மூவகையினரும் அறத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டால், அவர்களின் நடைமுறைகளை (கலப்பால் உண்டான) துணை வகையினர் பின்பற்றுவார்கள்[2].(7) அவர்களுக்கு மத்தியில் (பிராமணர்களின் ஆணைகளை) மீறுவோரைக் குறித்து மன்னனிடம் புகாரளிக்க வேண்டும். “இவன் என் ஆணைகளைக் கேட்கவில்லை” என்று ஒரு பிராமணனால் சொல்லப்படும் புகாரின் பேரில் அந்தக் குற்றவாளிக்கு மன்னன் தண்டனை அளிக்க வேண்டும்.(8) மன்னன், அந்தக் குற்றவாளியின் உடலை அழிக்காமல், சாத்திரங்களில் குறிப்பிடப்படும் தண்டனைகளை அளிக்க வேண்டும். மன்னன், குற்றத்தின் தன்மையை முறையாகச் சிந்திப்பது, அறநெறி ஆகியவற்றைப் புறக்கணித்துவிட்டு வேறு வகையில் நடந்து கொள்ளக்கூடாது.(9) மன்னன் தீயோனைக் கொல்வதன் மூலம் (நடைமுறையில்) பெரும் எண்ணிக்கையிலான தனிப்பட்ட அப்பாவிகளைக் கொல்கிறான். ஒரு கள்வனைக் கொல்வதன் மூலம், அவனது மனைவி, தாய், தந்தை, பிள்ளைகள் ஆகிய அனைவரும் (அவர்கள் வாழ்வதற்கான வழிமுறைகளை இழக்கும் காரணத்தால்) கொல்லப்படுகின்றனர் என்பதைக் காண்பீராக. எனவே, தீய மனிதனால் தீங்கை அடையும்போது, தண்டனை வழங்கும் கேள்வியில் மன்னன் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.(10)சில வேளைகளில் ஒரு தீயவன், அறவோன் ஒருவனின் நன்னடத்தையை ஈர்த்துக் கொள்வதைக் காண முடிகிறது. மேலும் சில தீய மனிதர்களிடம் இருந்து நல்ல பிள்ளைகள் பிறப்பதும் காணப்படுகிறது.(11) எனவே, தீயவர்கள் வேரோடு அழிக்கப்படக்கூடாது. தீயோரைக் கொல்வது நித்திய நடைமுறைக்கு {ஸநாதன தர்மத்துக்கு} இணக்கமானதல்ல. சிறு தண்டனைகள் மூலம் அவர்களின் குற்றங்களை ஈடு செய்ய வேண்டும்.(12) அவர்களது செல்வம் அனைத்தையும் இழக்கச் செய்தல், சங்கிலியில் பிணைத்து நிலவறைகளில் சிறைவைத்தல், அவர்களது வடிவத்தை இழக்கச் செய்தல் {உடல் உறுப்புகளை அகற்றுதல்} ஆகியவற்றின் மூலம் அவர்களது குற்றம் ஈடுசெய்யப்பட வேண்டும். அவர்களுக்கு மரணத் தண்டை அளிப்பதன் மூலம், அவர்களது உறவினர்கள் தண்டிக்கப்படக்கூடாது. பாதுகாப்பை அடையும் விருப்பத்தால், புரோகிதர்கள் மற்றும் பிறரின் முன்னிலையில் அவர்கள், “ஓ! பிராமணரே, நாங்கள் மீண்டும் ஒருபோதும் எந்தப் பாவச் செயலையும் செய்ய மாட்டோம்” என்று சொல்லி உறுதி அளித்தால், அவர்களுக்கு எந்தத் தண்டனையும் அளிக்காமல் விடுவதே தகுந்ததாகும்.(13,14) இதுவே படைப்பாளனின் ஆணையாகும். மான்தோலுடுத்தி, (துறவிகளுக்கான) தண்டம் தரித்து, தலைமழித்தவர்களாக இருக்கும் பிராமணனாகவே ஒருவன் இருந்தாலும் கூட, (அவன் வரம்பை மீறும்போது) தண்டிக்கப்பட வேண்டும்[3].(15) பெரிய மனிதர்கள் வரம்புமீறினால் அவர்களது பெருமைக்குத் தக்க அளவில் தண்டனை இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் முதல் தருணத்தில் விடப்படுவது போலத் தண்டனையின்றி விடத்தகாதவர்கள் ஆவர்” என்றான் {சத்தியவான்}.(16)

தியுமத்சேனன் {சத்தியவானிடம்}, “மனிதர்கள் தாங்கள் இருக்க வேண்டிய வரம்புகளை மீறாதவரை அவர்கள் அறத்தின் பெயரால் அமர்த்தப்படலாம்.(17) அந்த வரம்புகளை மீறும்போது, மரணத்தைக் கொண்டு அவர்களைத் தண்டிக்கவில்லையெனில், அந்த வரம்புகள் விரைவில் அழிந்துவிடும். நெடுங்காலத்துக்கு முந்தைய மனிதர்கள் வெகு எளிதாக ஆளப்படத் தகுந்தவர்களாக இருந்தனர்[4].(18) அவர்கள் (பேச்சிலும், ஒழுக்கத்திலும்) மிக உண்மையுள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் சச்சரவுகளிலும், சண்டைகளிலும் குறைவாகவே ஈடுபட்டனர். அவர்கள் எப்போதாவதுதான் கோபவசப்பட்டார்கள், அல்லது அவர்களது கோபம் அடக்கத்தகாததாக ஒருபோதும் இருந்ததில்லை. அந்தக் காலங்களில் “சீ” என்று சொல்வதே குற்றவாளிகளுக்குப் போதுமான தண்டனையாக இருந்தது. அதன் பிறகு, கடுமொழிகள் அல்லது நிந்தனைகளே தண்டனைகளாகின.(19) அதன் பிறகு, அபராதங்களும், பறிமுதல்களும் தண்டனைகளாகப் பின்தொடர்ந்தன. எனினும், இக்காலத்தில் மரணமே தற்போதைய தண்டனையாக இருக்கிறது. ஒருவரை மட்டும் கொல்வதாலேயே பிறரைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்ற அளவுக்குத் தீமையின் அளவு அதிகரித்திருக்கிறது[5].(20) கள்வனுக்கு மனிதர்களுடனோ, தேவர்களுடனோ, கந்தர்வர்களுடனோ, பித்ருக்களுடனோ தொடர்பேதும் கிடையாது. அவன் யாருக்கு என்னவாக இருக்கிறான்? அவன் எவருக்கும் எவருமாக இல்லை. இதுவே ஸ்ருதிகளின் தீர்மானமாகும்[6].(21) கள்வன் இடுகாடுகளில் உள்ள சடலங்களின் ஆபரணங்களையும் எடுத்துக் கொள்கிறான், பிசாசுகளால் பீடிக்கப்பட்டவர்களின் (அதனால் அறிவிழந்தவர்களின்) உடைகளை அணிந்து கொள்கிறான். இந்த இழிந்த பாவிகளிடம் எந்த உடன்படிக்கையையோ, (அதைச் சார்ந்திருப்பதற்காக) அவர்களிடம் இருந்து எந்த உறுதிமொழியையோ ஏற்று ஏற்படுத்திக் கொள்ளும் மனிதன் மூடனாவான்” என்றான் {தியுமத்சேனன்}[7].(22)

சத்தியவான், “அந்த நேர்மையற்றமுரடர்களில் இருந்து நேர்மையான மனிதர்களை உருவாக்குவதிலும், கொலையோடு தொடர்பில்லாத வழிமுறைகளின் மூலம் அவர்களைக் காப்பதிலும் நீர் வெல்லவில்லையெனில், வேள்வி எதையாவது ஏற்பாடு செய்து அவர்களை அழிப்பீராக[8].(23) குடிமக்கள் தங்கள் வாழ்வின் தொழிலில் செழிக்க வேண்டும் என்பதற்காக மன்னர்கள் கடுந்தவங்களைப் பயில்கிறார்கள். அவர்களது நாடுகளில் கொள்ளையர்களும், கள்வர்களும் பெருகும்போது அவர்கள் {மன்னர்கள்} அவமானமடைகிறார்கள். எனவே, கொள்ளையையும், களவையும் ஒடுக்குவதற்காகவும், தங்கள் குடிமக்களை மகிழ்ச்சியாக வாழச் செய்யவும் அவர்கள் தவங்களைச் செய்கிறார்கள்.(24) அச்சுறுத்துவதால் மட்டுமே குடிமக்களை (மன்னனால்) நேர்மையானவர்களாக மாற்ற முடியும். நல்ல மன்னர்கள் பழிக்கு பழி செய்யும் நோக்கத்துடன் தீயவர்களை ஒருபோதும் கொல்வதில்லை. (மறுபுறம், அவர்கள் கொல்வார்கள் என்றாலும், கொல்லப்படுபவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு வேள்வியிலேயே அவர்களைக் கொல்வார்கள்). நல்ல மன்னர்கள் (கொடுமையான தண்டனைகளுக்குப் பதிலாக) நல்லொழுக்கத்தின் துணையுடன் தங்கள் குடிமக்களை முறையாக ஆள்வதன் மூலமே பெரும் வெற்றியை அடைகிறார்கள்.(25) மன்னர்கள் முறையுடன் செயல்பட்டால், மேன்மையான குடிமக்கள் அவர்களை {அந்த மன்னர்களைப்} போலவே செயல்படுவார்கள். தாழ்ந்த மக்களோ, தங்கள் பங்குக்கு, தங்களுக்கு அடுத்தபடியில் மேன்மையானவர்களாக இருப்போரைப் போலவே செயல்படுவார்கள். மனிதர்கள் தங்களைவிடச் சிறந்தவர்கள் என்று யாரைக் கருதுவார்களோ, அவர்களைப் போலவே செயல்படும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறார்கள்[9].(26) கட்டுப்பாடு இல்லாத மன்னன், (தீய வழிகளில் இருந்து) பிறரைத் தடுக்க முனைந்தால், புலன்களுக்கு அடிமையாக உலக இன்பங்கள் அனைத்திலும் ஈடுபடும் இயல்பின் விளைவால், அவன் மனிதர்கள் அனைவரின் பரிகாசத்திற்கான பொருளாகவே ஆவான்.(27) அகங்காரம் அல்லது தீர்மானப்பிழையின் மூலம் மன்னனுக்கெதிராக எவ்வழியிலாவது குற்றமிழைக்கும் மனிதன் அனைத்து வழிமுறைகளின் மூலமும் தடுக்கப்பட வேண்டும்.(28) இவ்வழியின் மூலமே புதிய குற்றங்களில் ஈடுபடுவதிலிருந்து அவனைத் தடுக்க முடியும். (தேவைப்பட்டால்) அவன் நண்பர்களையும், நெருக்கமான உறவினர்களையும் கூடக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.(29) ஒரு வெறுக்கத்தக்க குற்றவாளி எந்த நாட்டில் கடும் தண்டனைகளைச் சந்திக்கவில்லையோ, அங்கே குற்றங்கள் பெருகி, அறம் குறையும் என்பதில் ஐயமில்லை.(30)

கருணை கொண்டவரும், கல்விமானுமான ஒரு பிராமணர் முற்காலத்தில் இஃதை எனக்குப் போதித்தார். உண்மையில், ஓ! தந்தையே, மக்களிடம் கருணையால் உந்தப்பட்ட நமது முப்பாட்டன்களும், இதே அளவுக்கான தீங்கிழையாமையை அவர்களுக்கு உறுதி செய்திருக்கின்றனர்.(31) அவர்களது வார்த்தைகள், “கிருதயுகத்தில், முற்றிலும் தீங்கிழைக்காத வழிகளைப் பின்பற்றியே மன்னர்கள் தங்கள் குடிமக்களை ஆள வேண்டும்.(32) திரேதா யுகத்தில், முழு நிறைவில் இருந்து நான்கில் ஒரு பகுதி விழுந்த அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியே மன்னர்கள் தங்கள் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். துவாபர யுகத்தில், பாதி அளவுக்கு விழுந்துவிட்ட அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியும், அதைத் தொடர்ந்து வரும் {கலி} யுகத்தில் நான்கில் மூன்று பகுதிகள் விழுந்துவிட்ட அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியும் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.(33) கலியுகம் நேரும்போது, மன்னர்களின் தீய தன்மையின் மூலமும், அந்த யுகத்திற்கே உரிய இயல்பின் விளைவாகவும் அறத்தின் நான்காவது பகுதியிலும் பதினைந்து பகுதிகள் மறைந்து, அதனில் பதினாறாவது பகுதி மட்டுமே எஞ்சியிருக்கும்.(34) ஓ! சத்தியவான், இதில் குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் குழப்பம் நேர்ந்தால், அம்மன்னன், மனித வாழ்வின் கால அளவையும், மனிதர்களின் பலத்தையும், நேரும் நேரத்தின் இயல்பையும் கருத்தில் கொண்டு தண்டனைகளை அளிக்க வேண்டும்” {என்று முன்னோர்கள் சொன்னார்கள்}.(35) உண்மையில், சுயம்புவின் {பிரம்மனின்} மகனான மனு, மனிதர்களிடம் தாம் கொண்ட கருணையால், எந்த வழிமுறைகளின் மூலம் (தீங்கிற்குப் பதிலாக) விடுதலைக்கான {முக்திக்கான} அறிவை அவர்கள் அடைவார்களோ அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்” என்றான் {சத்தியவான்}”.(36)

கபிலர், ஸ்யூமரஸ்மி! – சாந்திபர்வம் பகுதி – 268-விலங்குகளைக் கொல்லாமல் வேள்வி செய்ய வேண்டும் என்பது குறித்து கபிலருக்கும் ஸ்யூமரஸ்மிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நன்கறியப்பட்ட ஆறு குணங்களுக்கு {செல்வம் [ஐஸ்வர்யம்], ஞானம், புகழ் [கீர்த்தி], அமைதி [சாந்தி], மனோவுறுதி [வைராக்யம்], அறம் [தர்மம்] என்ற ஆறு குணங்களுக்கு} வழிவகுக்கும் யோக அறத்தை எவ்வாறு பின்பற்றலாம்? எந்த உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் எவ்வாறு அதைப் பயிலலாம் என்பது குறித்து நீர் ஏற்கனவே எனக்கு விளக்கிச் சொன்னீர். ஓ! பாட்டா, இன்பம் மற்றும் விடுதலை {முக்தி} ஆகிய இரண்டு விளைவுகளுக்கும் வழிவகுக்கும் அறத்தைக் குறித்து எனக்குச் சொல்வீராக.(1) ஒரே கதியையே அடையச் செய்யும் இல்லறக்கடமைகள் {கிருகஸ்ததர்மம்} மற்றும் யோகக்கடமைகள் {யோகதர்மம்} ஆகிய இரண்டில் எது மேன்மையானது?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இந்தக் கடமை நடைமுறைகள் இரண்டும் உயர்ந்த அருளைக் கொண்டவையே. இவை இரண்டும் சாதிப்பதற்கு மிகக் கடினமானவையே. இரண்டும் உயர்ந்த கனிகளை உண்டாக்கவல்லவையே. இவை இரண்டும் மறுப்பிற்கிடமின்றி நல்லோராக இருப்போரால் பயிலப்படுபவையே.(3) நான் இப்போது இந்தக் கடமை நடைமுறைகள் இரண்டின் உண்மைக் கருத்தில் நீ கொண்டுள்ள ஐயங்களை விலக்குவதற்காக அவற்றின் முக்கியத்துவத்தை உனக்குச் சொல்லப் போகிறேன்.(4) இது தொடர்பாகக் கபிலருக்கும், ஒரு பசுவுக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(5)

பழங்காலத்தில், மன்னன் நஹுஷனின் அரண்மனைக்குத் தேவன் தாஷ்டிரி {த்வஷ்டா} வந்த போது, அவன் {நஹுஷன்} தன் விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்துவதற்காக உண்மையானதும், புராதனமானதும், நித்திய தடையாணையுமான வேதங்களுக்கு ஏற்புடைய வகையில் ஒரு பசுவைக் கொல்ல ஆயத்தமானான்.(6) பரந்தமனம் கொண்டவரும், சத்வக் கடமைகளை எப்போதும் நோற்பவரும், தமது புலன்களைக் கட்டுப்படுத்துவதில் எப்போதும் ஈடுபடுபவரும், உண்மை ஞானம் கொண்டவரும், எளிய உணவை உண்பவரும்,(7) நம்பிக்கையுடன் கூடிய சிறந்த அறிவை அடைந்தவரும், முற்றிலும் அச்சமற்றவரும், நன்மையானவரும், உறுதியானவரும், எப்போதும் உண்மையை நோக்கித் தம்மைச் செலுத்திக் கொள்பவருமான கபிலர், கொல்வதற்காகக் கட்டப்பட்டுள்ள பசுவைக் கண்டு, “ஐயோ, வேதங்களே” என்ற வார்த்தைகளை ஒருமுறை சொன்னார். அந்த நேரத்தில, ஸ்யூமரஸ்மி என்ற பெயரைக் கொண்ட ஒரு முனிவர் (யோக சக்தியின் மூலம்) அந்தப் பசுவின் வடிவத்திற்குள் நுழைந்து, யதியான அந்தக் கபிலரிடம், “ஓ! கபிலரே, ஆச்சரியமாக இருக்கிறது.(8) வேதங்கள் (அவற்றில் உள்ள தீர்மானங்களின் மூலம் உயிரினங்களைக் கொல்ல அனுமதிப்பதன் விளைவால்) நிந்திக்கத்தகுந்தவையென்றால், (உயிரினங்கள் அனைத்திற்கும் முற்றிலும் தீங்கிழையாமையைக் கொடுக்கும்) பிற கடமைகளை அதிகாரம் பெற்றவையாக எதைக் கொண்டு கருத முடியும்?[1](9) தவங்களுக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களும், நுண்ணறிவுடன் கூடியவர்களும், ஸ்ருதிகளையும், ஞானத்தையும் தங்கள் கண்களாகக் கொண்டவர்களுமான மனிதர்கள், முனிவர்களால் தொகுக்கப்பட்டுத் தீர்மானிக்கப்பட்ட வேதங்களின் தடையாணைகளை தெய்வத்தின் வார்த்தைகளாகவே கருதுகிறார்கள்.(10) வேதங்களின் உட்பொருளைப் பொறுத்தவரையில், கனியின் விருப்பில் விடுபட்டவனும், (பொறாமை மற்றும் வெறுப்பு என்ற) நோயற்றவனும், எதற்கும் அடிமையாக இல்லாதவனும், (தன் விருப்பங்கள் அனைத்தும் உடனே கனிவதன் விளைவால்) எந்த முயற்சியும் இல்லாதவனுமான பரம்பொருளின் வார்த்தைகளாகவே அவை இருக்கும்போது (அவற்றை நிந்திப்பதாலோ, புகழ்வதாலோ) எவராலும் என்ன சொல்ல முடியும்?” என்று கேட்டார் {ஸ்யூமரஸ்மி}[2].(11)கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “நான் வேதங்களை நிந்திக்கவில்லை. எவ்வகையிலும் அவற்றைக் குறைத்துப் பேசவும் நான் விரும்பவில்லை. பல்வேறு வாழ்வுமுறைகளுக்கு {ஆசிரமங்களுக்கு} விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு கடமைகளின் நடைமுறைகளும் ஒரே கதிக்கே வழிவகுக்கின்றன என நாம் கேள்விப்படுகிறோம்.(12) ஒரு சந்நியாசி உயர்ந்த கதியை அடைகிறார். ஒரு காட்டுவாசியும் {வானப்ரஸ்தனும்} உயர்ந்த கதியை அடைகிறான். இல்லறத்தான் {கிருஹஸ்தன்} மற்றும் பிரம்மச்சாரியாகிய மற்ற இருவரும் கூட அதே கதியையே அடைகின்றனர்.(13) வாழ்வுமுறைகள் நான்கும் எப்போதும் தேவையான வழிகளாகவே கருதப்படுகின்றன[3]. ஒப்பீட்டளவில் இவற்றின் பலம், அல்லது பலவீனமானது, அவற்றுக்குரிய கதிகளின் தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது.(14) ‘இவற்றை அறிந்து கொண்டு, சொர்க்கத்திற்கும் மற்ற அருள்களுக்கும் வழிவகுக்கும் செயல்களை நிறைவேற்றுவாயாக’ என்பது வேதத் தீர்மானத்தில் ஒன்றாகும். ’செயல்களைச் செய்யாதே’ என்பதும் மற்றொரு வேத தீர்மானமே ஆகும்.(15) செயல்களைத் தவிர்ப்பது தகுதியுடையதென்றால், அவற்றை நிறைவேற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். சாத்திரங்களின் நிலை இவ்வாறு இருக்கும்போது, குறிப்பிட்ட தீர்மானங்களின் பலம், அல்லது பலவீனத்தை உறுதி செய்வது மிகக் கடினமாகவே இருக்க வேண்டும்.(16) சாத்திரங்களில் அல்லாமல் நேரடி சாட்சியம் சார்ந்த, தீங்கிழையாமை எனும் அறத்தை விட மேன்மையான கடமையின் நடைமுறை எதனையும் நீர் அறிவீரென்றால், அஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார் {கபிலர்}.(17)ஸ்யூமரஸ்மி, “’ஒருவன் சொர்க்கத்ததில் உள்ள விருப்பத்தால் வேள்விகளைச் செய்ய வேண்டும்’ என்ற இந்த ஸ்ருதி நம்மால் அடிக்கடி கேட்கப்படுகிறது. (அடையப்பட வேண்டிய) கனியை முதலில் நினைத்தே ஒருவன் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்கிறான்.(18) வெள்ளாடு, குதிரை, செம்மறியாடு, பசு, பறவையினங்கள் அனைத்தும், வளர்ப்பு விலங்குகள், காட்டு விலங்குகள், செடி கொடிகள் ஆகியன வாழும் உயிரினங்கள் பிறவற்றின் உணவாகின்றன. இதை நாம் கேள்விப்படுகிறோம்[4].(19) உணவானது, தினத்திற்கு தினம் காலையும் மாலையும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல ஸ்ருதியானது, விலங்குகள் மற்றும் தானியங்கள் வேள்விகளின் அங்கங்களாகும் எனத் தீர்மானிக்கிறது[5].(20)அண்டத்தின் தலைவன் அவற்றை {அந்த உயிரினங்களை} வேள்வியோடு சேர்த்துப் படைத்தான். அனைத்து உயிரினங்களின் பலமிக்கத் தலைவன், அவற்றின் உதவியுடனே தேவர்களை வேள்விகள் செய்ய வைத்தான்.(21) மொத்தம் ஏழு (வளர்ப்பு விலங்குகளும்), ஏழு (காட்டு) விலங்குகளும் வேள்விக்குத் தகுந்தவை எனக் குறிப்பிடப்படுகின்றன. அவை அனைத்தும் இணையான தகுதியைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அடுத்தடுத்தவை ஒவ்வொன்றும் தங்களுக்கு முந்தையவற்றுக்குத் தாழ்ந்தவையாக இருக்கின்றன. அதே போல, மொத்த அண்டமே வேள்விக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது என வேதங்கள் அறிவிக்கின்றன. எவன் புருஷன் என்று அழைக்கப்படுகிறானோ, அவனையும் அதே காரியத்திற்காகவே வேதங்கள் நியமித்திருக்கின்றன[6].(22) மிகப் பழங்காலத்து மனிதர்களால் இஃது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கல்விமானான எந்த மனிதன், தன் திறனுக்குத் தக்கபடி வேள்விக்கான உயிரினங்களில் குறிப்பட்டவற்றைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பான்?(23) தாழ்ந்த விலங்குகள், மனிதர்கள், மரங்கள், செடிகள் ஆகிய அனைத்தும் சொர்க்கத்தை அடைவதை விரும்புகின்றன. எனினும், அவை அஃதை அடைவதற்கு வேள்வியைத் தவிர வேறெந்த வழிமுறையும் கிடையாது.(24)உதிர்ந்த செடிகள், விலங்குகள், மரங்கள், கொடிகள், தெளிந்த நெய், பால், தயிர், இறைச்சி மற்றும் (வேள்வி நெருப்பில் ஊற்றப்படும்) அங்கீகரிக்கப்பட்ட பிற பொருட்கள், நிலம், திசைப்புள்ளிகள், நம்பிக்கை, காலம் எனப் பனிரெண்டும்,(25) அவற்றுடன் ரிக்குகள், யஜுஸ்கள், சாமங்கள், வேள்வி செய்பவன் ஆகியவற்றைச் சேர்த்தால் பதினாறும், இல்லறத்தானாக அறியப்படும் நெருப்பும் சேர்ந்த இந்தப் பதினேழும்(26) வேள்வியின் அங்கங்கள் எனச் சொல்லப்படுகின்றன. வேள்வியே உலகின் வேரென்றும், அதன் நடைமுறை என்றும் ஸ்ருதி {வேதம்} தீர்மானிக்கிறது. பசுக் கொடுக்கும் தெளிந்த நெய், பால், தயிர், சாணம், பாலுடன் கலந்த தயிர், தோல், வால்மயிர், கொம்புகள் மற்றும் குளம்புகள் ஆகியவற்றால் மட்டுமே வேள்விக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்துவிட முடியும். இவற்றில் குறிப்பிட்ட வேள்விகளுக்கு விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்டவையும்,(27,28) ரித்விஜர்களும், (புரோகிதர்கள் மற்றும் பிற பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும்) கொடைகளும் சேர்ந்தே வேள்விகளை நீடிக்கச் செய்கின்றன[8]. மனிதர்கள் இவற்றை ஒன்றாகத் திரட்டி வேள்விகளைச் செய்கிறார்கள்.(29) வேள்வி செய்வதற்காகவே அனைத்துப் பொருட்களும் படைக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மைக்கு இணக்கமாக இந்த ஸ்ருதி கேட்கப்படுகிறது. இவ்வாறே பழங்காலத்தின் மனிதர்கள் அனைவரும் தங்களை வேள்வி செய்வதில் நிறுவிக் கொண்டார்கள்.(30)

எனினும், வேள்விகளைக் கனிக்காகவோ, வெகுமதிக்காகவோ செய்யாமல், அவை செய்யப்பட வேண்டும் என்ற உள்ளுணர்வின் காரணமாகச் செய்யும் மனிதனைப் பொறுத்தவரையில், அவன் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்கவோ, எதனுடனும் பகைமை பாராட்டவோ, எந்த உலகக் காரியத்திலும் தன்னை நிறுவிக் கொள்ளவோ செய்வதில்லை என்பதே காணப்படுகிறது.(31) வேள்வியின் அங்கங்களென மேலே குறிப்பிடப்பட்ட பொருட்கள், வேள்விக்குத் தேவையானவை எனச் சொல்லப்பட்ட பிற பொருட்கள், விதிகளில் குறிப்பிடப்பட்டவை ஆகிய அனைத்தும், (வேள்விகளின் நிறைவுக்கான) அங்கீகரிக்கப்பட்ட சடங்கிற்காகப் பயன்படுத்தப்படும்போது ஒன்றையொன்று தாங்கிப் பிடிக்கின்றன.(32) முனிவர்களால் எவை தொகுக்கப்பட்டவையோ, வேதங்களை எவை அறிமுகப்படுத்துகின்றவோ அந்த ஸ்மிருதிகளையும் நான் காண்கிறேன். அவை பிராமணங்களைப் பின்பற்றுவதன் விளைவால் கல்விமான்களால் அதிகாரமிக்கவையாகக் கருதப்படுகின்றன.(33) வேள்விகள் பிராமணங்களையே தங்கள் மூலமாகக் கொண்டிருக்கின்றன, அவை உண்மையில் பிராமணங்களையே சார்ந்திருக்கின்றன. மொத்த அண்டமும் வேள்வியைச் சார்ந்திருக்கிறது, வேள்வியும் அண்டத்தைச் சார்ந்திருக்கிறது.(34) ஓம் என்ற அசையே வேதங்கள் எழுந்த வேராக இருக்கிறது. (எனவே, பெரும் கருத்தைக் கொண்ட அந்த அசையைச் சொல்லியே எந்தவொரு சடங்கும் தொடங்கப்பட வேண்டும்). ஓம், நமஹ, ஸ்வாஹா, ஸ்வதா, வஷட் என்ற அசைகளைச் சொல்பவனும், தன் திறனுக்குத் தக்க வகையில் வேள்விகளையும் பிற சடங்குகளையும் செய்பவனுமான ஒருவனுக்கு(35) அடுத்தப் பிறவியில் நேரப்போகும் மூவுலகங்கள் அனைத்திலும் அச்சமேதும் ஏற்படாது. இவ்வாறே வேதங்களும், தவவெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட தவசிகளும், முதன்மையான முனிவர்களும் சொல்கின்றனர்.(36)

எவனிடம் ரிக்குகள், யஜுஸ்கள், சாமங்கள் மற்றும் வேத இலக்கணத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின் படி சாமப்பாடல்களை நிறைவு செய்யத் தேவைப்படும் அசைநிலை {சொல்லின் தன்மை} ஆகியவை இருக்கின்றவோ அவனே உண்மையில் பிராமணனாவான்.(37) ஓ! துதிக்கத்தக்க பிராமணரே, அக்னிஹோத்ரம், சோம வேள்வி மற்றும் பெரும் வேள்விகள் பிறவற்றின் கனிகளை நீர் அறிவீர்.(38) இதன் காரணமாகவே, எவ்வகை ஐயுணர்வுமின்றி ஒருவன் வேள்வி செய்யவும், பிற மக்களின் வேள்விகளில் துணை புரியவும் வேண்டும் என நான் சொல்கிறேன். சொர்க்கத்திற்கு வழிவகுக்கத்தக்க (யோதிஷ்டோமம் முதலிய) வேள்விகளைச் செய்யும் ஒருவன், தெய்வீகப் பேரின்பத்தின் வடிவிலான உயர்ந்த வெகுமதிகளை அடைகிறான்.(39) வேள்விகளைச் செய்யாதவர்களுக்கு இம்மையுமில்லை மறுமையுமில்லை என்பது நிச்சயமானதாகும். வேதங்களின் தீர்மானங்களை உண்மையில் நன்கறிந்தவர்கள், (செயல்படத் தூண்டுபவை, அவற்றைச் செய்வதைத் தவிர்க்க போதிப்பவை ஆகிய) இரண்டு வகைத் தீர்மானங்களையும் சம அதிகாரம் கொண்டவையாகவே கருதுகின்றனர்” என்றார் {ஸ்யூமரஸ்மி}.(40)

சாத்திரக் கள்வர்கள், பிரம்மக் கொள்ளையர்கள்! – சாந்திபர்வம் பகுதி – 269-இல்லறத்தைவிடத் துறவறம் ஏன் மேன்மையானது என்பதைச் சொன்ன கபிலர்; இல்லறவாழ்வின் முக்கியத்துவத்தையும், துறவின் தாழ்வையும் எடுத்துக் காட்டிய ஸ்யூமரஸ்மி; துறவின் பெருமையையும், எவன் பிராமணன் என்பதையும், பிராமண ஒழுக்கத்தையும் எடுத்துச் சொன்ன கபிலர்; முக்தியில் ஐயங்கொள்ளும் ஸ்யூமரஸ்மி.

கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “சுயக்கட்டுப்பாட்டையும், அமைதியையும் பின்பற்றும் யதிகள், செயல்களால் அடையப்படும் கனிகள் அனைத்தும் அழிவற்றவையாக இல்லாமல் நிலையற்றவையாகவே இருக்கின்றன என்பதைக்கண்டு, அறிவுப்பாதையின் மூலமாகப் பிரம்மத்தை அடைகிறார்கள். (விரும்பியதும் அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் வெற்றியால் மகுடம் சூடப்படுவதால்) அவர்களைத் தடுக்கக்கூடிய எதுவும் எந்த உலகத்திலும் கிடையாது.(1) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் ஆதிக்கத்திலிருந்தும் அவர்கள் விடுபடுகிறார்கள். அவர்கள் எதற்கும், அல்லது எந்த உயிரினத்திற்கும் ஒருபோதும் தலைவணங்குவதில்லை. அவர்கள் பந்த பாசங்கள் அனைத்தையும் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஞானம் அவர்களுடையதாக இருக்கிறது. அவர்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தூய்மையான, களங்கமற்ற வாழ்வை வாழ்ந்து, (பெரும் மகிழ்ச்சியுடன்) திரிந்து கொண்டிருக்கிறார்கள்.(2) அவர்கள் அழிவடையக்கூடிய அனைத்துப் பொருட்கள் மற்றும் துறவு வாழ்வு (ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம்) தங்கள் புத்தியினால் தீர்மானமான முடிவுகளை அடைந்திருக்கிறார்கள். பிரம்மத்திடம் அர்ப்பணிப்புடன், பிரம்மத்தைப் போன்று ஏற்கனவே ஆகிவிட்ட அவர்கள் பிரம்மத்திலேயே தங்கள் புகலிடத்தை அமைத்துக் கொள்கிறார்கள்.(3) துன்பத்தைக் கடந்து, ரஜஸிலிருந்து (ரஜஸ் என்ற குணத்தில் இருந்து) விடுபட்ட அவர்கள், அழிவற்றவற்றையே தங்கள் உடைமைகளாகக் கொள்கின்றனர். உயர்ந்த கதியானது இந்த மனிதர்கள் அடையும் தொலைவுக்குள் இருக்கும்போது, அவர்களுக்கு இல்லற வாழ்வுமுறையின் கடமைகளைப் பயிலும் தேவை என்ன இருக்கிறது?” என்று கேட்டார் {கபிலர்}[1].(4)

ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “உண்மையில், அதுவே {முக்தியே} அடையத்தக்க உயர்ந்த பொருளாக இருந்தால், உண்மையில் (துறவை பயில்வதால் அடையப்படும்) உயர்ந்த கதி அதுவேயென்றால், அப்போதும் இல்லற வாழ்வுமுறையின் முக்கியத்துவமே புலப்படுகிறது. ஏனெனில் இல்லற வாழ்வுமுறையில்லாமல் எந்த வாழ்வுமுறையும் சாத்தியமில்லை.(5) உண்மையில், உயிரினங்கள் அனைத்தும், அவற்றுக்குரிய தாய்மாரைச் சார்ந்திருப்பதன் விளைவாலே வாழ இயல்வதைப் போலவே, இல்லறவாழ்வுமுறையைச் சார்ந்திருக்கும் விளைவால் மட்டுமே பிற மூன்று வாழ்வுமுறைகளும் நீடித்திருக்கின்றன.(6) இல்லற வாழ்வுமுறையை நோற்கும் ஓர் இல்லறத்தான், வேள்விகளைச் செய்து, தவங்களையும் பயில்கிறான். மகிழ்ச்சிக்கான விருப்பத்தின் பேரில் எவராலும் செய்யப்படும் எதுவும், இல்லற வாழ்வுமுறையிலேயே தனது வேரைக் கொண்டிருக்கிறது.(7) சந்ததிகளை உண்டாக்குவதையே பேரின்பத்தின் ஊற்றுக்கண்ணாக உயிரினங்கள் அனைத்தும் கருதுகின்றன. எனினும், (இல்லற வாழ்வுமுறையைத் தவிர) பிற வாழ்வுமுறைகள் எதனிலும் சந்ததிகளை உண்டாக்குவது சாத்தியமற்றதாகிறது.(8) அனைத்து வகைப் புல்லும், துரும்பும், (தானியங்களையும், பயிர்களையும் விளைவிக்கும்) செடி கொடிகள் அனைத்தும், குன்றுகளிலும், மலைகளிலும் வளரும் அதே வகையைச் சார்ந்த பிறவும் தங்கள் வேர்களை இல்லற வாழ்வுமுறையிலேயே கொண்டுள்ளன. உயிரினங்கள் வாழ்வு இவற்றையே சார்ந்திருக்கிறது. (இந்த அண்டத்தில்) உயிரைத் தவிர வேறு எதுவும் காணப்படாததால், இந்த அண்டம் முழுமைக்குமான புகலிடமாக இல்லறமே பார்க்கப்படுகிறது.(9) இவ்வாறிருக்கையில், இல்லறமானது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்காது என்று சொல்லும் உண்மையைக் குறித்து யாரால் பேச முடியும்?

நம்பிக்கையற்றவர்கள், ஞானமற்றவர்கள், {சிந்தனையில்} ஆழமற்றவர்கள்,(10) மதிப்பற்றவர்கள், சோம்போறிகள், உழைப்பால் களைத்தவர்கள், கடந்த காலச் செயல்களின் விளைவால் துயரமடைந்தவர்கள் ஆகியோராலும் மட்டுமே துறவு வாழ்வில் பெரும் அமைதியைக் காண முடியும்.(11) (வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள) குறிப்பிட்ட அழிவற்ற வேறுபாடுகளே மூவுலகங்களையும் தாங்கிப் பிடிக்கும் காரணங்களாக இருக்கின்றன. உயர்ந்த வகையைச் சார்ந்தவனும், வேதங்களை அறிந்தவனுமான சிறந்த மனிதன், தான் பிறந்த நாள் முதலே வழிபடப்படுகிறான்.(12) கர்ப்பாதானம் செய்தலைத் தவிர, மறுபிறப்பாளர்களை இம்மையிலும் மறுமையிலும் செயல்களனைத்தையும் செய்ய வல்லவர்களாக்க வேத மந்திரங்களும் அவசியமாகின்றன[2].(13) (அவர்களின் மரணத்திற்குப் பிறகு) உடலைத் தகனம் செய்வது, இரண்டாவது உடலை அடையச் செய்வது, அத்தகைய அடைதலுக்குப் பிறகு பானம் மற்றும் உணவைக் கொடுப்பது, வாழும் உலகத்தையும் யமலோகத்தையும் பிரிக்கும் ஆற்றைக் கடக்க உதவும் பசுக்களையும் பிற விலங்குகளையும் கொடை அளிப்பது, ஈமப் பிண்டங்களை நீரில் மூழ்கச் செய்வது ஆகியவற்றில் வேத மந்திரங்கள் அவசியமாகின்றன.(14) இறந்தோரின் வழக்கில், அர்ச்சிஷ்மான்கள், பர்ஹிஷத்துக்கள், கிரவியாதர்கள் என்ற மூவகைப் பித்ருக்கள் மந்திரங்களின் தேவையை அங்கீகரிக்கின்றனர், மேலும் மந்திரங்களும் திறன்மிக்கக் காரணங்களாகக் கொள்ளப்பட்டு (நோக்கங்களை அடைவதற்காக இந்த விழாக்களையும் சடங்குகளையும் செய்ய வழிகாட்டப்பட்டு) அனுமதிக்கப்படுகின்றன.(15) வேதங்கள் இஃதை இவ்வளவு உரக்கச் சொல்லும்போதும், பித்ருக்கள், முனிவர்கள், தேவர்கள் ஆகியோருக்கு மனிதர்கள் கடன்பட்டிருக்கின்றனர் என்று சொல்லப்படும்போதும், எவராலும் விடுதலையை {முக்தியை} எவ்வாறு அடைய முடியும்?(6)வேத தீர்மானங்களின் உண்மைக் கருத்தை நிலைகுலைப்பதாக இருந்தாலும், (விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் அருவ இருப்பைக் குறித்த) இந்தப் போலிக் கோட்பாடானது, செழிப்பிழந்தவர்களும், சோம்பலால் உண்ணப்பட்டவர்களுமான கல்விமானங்களால் வெளிப்படையாக உண்மையின் வண்ணங்களில் போர்த்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது[4].(17) வேத தீர்மானங்களின் அடிப்படையில் வேள்விகளைச் செய்யும் பிராமணன், ஒருபோதும் பாவத்தால் குற்றஞ்செய்யத் தூண்டப்படுவதில்லை. அத்தகைய மனிதன், வேள்விகள் மூலம், தான் வேள்விகளில் கொன்ற அந்த விலங்குகளுடன் சேர்ந்து இன்பலோகங்களை அடைந்து, தன் விருப்பங்கள் அனைத்தையும் அடைவதன் மூலம் நிறைவடைந்து, அவ்விலங்குகளின் விருப்பங்களையும் நிறைவேற்றி, அவற்றையும் நிறைவுகொள்ளச் செய்வதில் வெல்கிறான்.(18) வேதங்களை அலட்சியம் செய்வதன் மூலமும், வஞ்சனை மற்றும் தவறான வழிகாட்டுதலின் மூலமும் ஒருவன் உயர்ந்ததை {பரமனை} அடைவதில் வெல்வதில்லை. மறுபுறம், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைச் செய்வதன் மூலமே ஒருவன் பிரம்மத்தை அடைகிறான்” என்றார் {ஸ்யூமரஸ்மி}.(19)கபிலர், “(செயல்களே கடமை {கர்மமே தர்மம்} ஆனால்), நுண்ணறிவு கொண்ட மனிதன் செய்யத் தர்சம், பௌர்ணமாஸம், அக்னிஹோத்ரம், சாதுர்மாஸ்யம் மற்றும் பிற செயல்கள் இருக்கின்றன. அதைச் செய்வதில் அழிவில்லாத தகுதியும் {புண்ணியமும்} இருக்கிறது. (பிறகு, அவன் கொடுமை நிறைந்த செயல்களை ஏன் செய்ய வேண்டும்?).(20) செயல்கள் அனைத்தில் இருந்தும் விலகியவர்களாக, பொறுமையுடன் கூடியவர்களாக, (கோபம் மற்றும் அனைத்துக் களங்கங்களில் இருந்தும்) தூய்மையடைந்தவர்களாக, பிரம்மத்தை அறிந்தவர்களாகச் சந்நியாச வாழ்வுமுறையை ஏற்றுக் கொண்டவர்கள், அத்தகைய பிரம்ம அறிவாலேயே வேள்விகளில் ஊற்றப்படும் ஆகுதிகளை மிகவும் விரும்பும் தேவர்களிடம் (முனிவர்களிடமும், பித்ருக்களிடமும்) பட்டிருக்கும் கடன்களை அடைப்பதில் வெல்கிறார்கள்.(21) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருப்பவனும், அனைத்து உயிரினங்களையும் சமமான கண்ணில் பார்ப்பவனுமான பாதையற்ற ஒருவனின் {வித்வானின்} பாதையை அறிவதில் தேவர்களேகூட மலைத்துப் போகிறார்கள்.(22) ஆசான்களிடம் பெற்ற போதனைகளின் மூலம் ஒருவன், நான்கு வாயில்களையும், நான்கு வாய்களையும் கொண்டதும், நான்கு வகை இயல்பைக் கொண்டதுமான இந்தச் சட்டகத்திற்குள் {உடற்கட்டுக்குள்} வசிக்கும் ஒன்றை {ஆத்மாவை} அறிகிறான். இரு கரங்கள், வாக்கு புலன் {நாக்கு}, வயிறு, இன்ப புலன் ஆகியவற்றின் (ஆகியவற்றைக் கொண்டதன்) விளைவால் தேவர்களும் நான்கு வாயில்களைக் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். எனவே ஒருவன் அந்த வாயில்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்குத் தன்னால் இயன்ற அளவு சிறப்பாக முனைய வேண்டும்[5].(23) ஒருவன் பகடையைக் கொண்டு சூதாடக்கூடாது. அவன் பிறருக்குச் சொந்தமானதை அபகரிக்கக்கூடாது. உன்னதமற்ற பிறப்பைக் கொண்ட ஒரு மனிதனின் வேள்வியில் அவன் துணைபுரியக்கூடாது. அவன் கோபவசப்பட்டு மற்றொருவனைக் கைகளாலோ, கால்களாலோ தாக்கக்கூடாது. எந்தப் புத்திமான் இவ்வாறு தன் நடத்தையை அமைத்துக் கொள்கிறானோ, அவன் தன் கைகளையும், கால்களையும் கட்டுப்படுத்தியவனாகச் சொல்லப்படுகிறான்.(24) ஒருவன் உரத்துக் கூக்குரலிடும் நிந்தனையிலோ, கண்டிப்பதிலோ ஈடுபடக்கூடாது. அவன் வீணான வார்த்தைகளைப் பேசக்கூடாது. குறும்புகள் செய்வதில் இருந்தும், பிறரைப் பழித்துக் கூறுவதில் இருந்தும் விலக வேண்டும். அவன் வாய்மை நோன்பை நோற்று, மிகக் குறைந்த அளவில் பேசி, எப்போதும் கவனம் நிறைந்தவனாக இருக்க வேண்டும். இவ்வழியில் ஒருவன் தன்னை அமைத்துக் கொண்டால் அவன் தன் வாக்குப் புலனைக் கட்டுப்படுத்திக் கொள்வான்.(25)

ஒருவன் உணவை முற்றிலும் தவிர்க்கக்கூடாது. அவன் அதிகமாகவும் உண்ணக்கூடாது. அவன் பேராசையைக் கைவிட்டு, எப்போதும் நல்லோரின் தோழமையை நாட வேண்டும். அவன் தன் உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே உண்ண வேண்டும். இவ்வழியில் ஒருவன் தன்னை அமைத்துக் கொள்வதால் வயிறு எனும் வாயிலை முறையாகக் கட்டுப்படுத்தவதில் அவன் வெல்கிறான்.(26) ஓ வீரரே, ஒருவன் மணந்து கொண்ட மனைவி இருக்கும்போது மற்றொருவனுடைய மனைவியைக் காமத்துடன் அபகரித்துக் கொள்ளக்கூடாது. அவன் ஒரு பெண்ணை அவளது பருவ காலத்திலன்றி ஒருபோதும் படுக்கைக்கு அழைக்கக்கூடாது. அவன் பிற பெண்களுடன் கலவியை நாடாமல் தன் சொந்த மனைவியிடம் மட்டுமே தன்னை வரையறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வழியில் தன்னை அமைத்துக் கொள்ளும் ஒருவன், தன் இன்ப உறுப்பை முறையாகக் கட்டுப்படுத்தியவனாகச் சொல்லப்படுகிறான்.(27) ஞானம் கொண்ட எந்த மனிதன், தன் இன்ப உறுப்பு, வயிறு, இரு கரங்கள் (மற்றும் இரு கால்கள்), வாக்கு உறுப்பு ஆகிய நான்கு வாயில்களில் அனைத்தையும் முறையாகக் கட்டுப்படுத்துகிறானோ, அவனே உண்மையில் ஒரு மறுபிறப்பாளனாவான்.(28) நன்கு கட்டுப்படுத்தப்படாத வாயில்களைக் கொண்ட மனிதன் அனைத்திலும் பயனற்றவனாவான். அத்தகைய மனிதனின் தவங்களால் என்ன செய்ய முடியும்? அவனது வேள்விகள் எதைக் கொண்டுவரும்? அவனது உடலால் எதை அடைய முடியும்?(29) தன் மேலாடையைக் கைவிட்டவன் எவனோ, தன் கரத்தையே தலையணையாகக் கொண்டு வெறுந்தரையில் உறங்குபவன் எவனோ, அமைதிநிறைந்த இதயத்தைக் கொண்டவன் எவனோ, அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(30)

தியானத்திற்குத் தன்னை அர்ப்பணித்த எந்த மனிதன், மணந்து கொண்ட இணையர் அனுபவிக்கும் இன்பம் அனைத்தையும் தனியாகவே அனுபவிக்கிறானோ, பிறரின் இன்ப துன்பங்களில் எவன் தன் கவனத்தைச் செலுத்தவில்லையோ அவனே பிராமணனாக அறியப்பட வேண்டும்[6].(31) எந்த மனிதன் இவை அனைத்திலும் உண்மையில் உள்ளவற்றை உள்ளபடியே அவற்றின் பல வடிவ மாறுதல்களுடன் சரியாகப் புரிந்து கொள்கிறானோ, எவன் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தின் கதியையும் அறிந்து கொள்கிறானோ, அவனே தேவர்களால் பிராமணனாக அறியப்படுகிறான்[7].(32) எவனுக்கு எந்த உயிரினத்திடமும் அச்சமில்லையோ, எவனிடம் எந்த உயிரினிமும் அச்சங்கொள்வதில்லையோ, எவன் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்கிறானோ அவனே பிராமணனாக அறியப்பட வேண்டும்.(33) கொடைகள், வேள்விகள் போன்ற பக்திச் செயல்கள் அனைத்தின் உண்மை விளைவான இதயத் தூய்மையை அடையாத மூட புத்தி கொண்ட மனிதர்கள், ஆசான்களால் விளக்கப்பட்டாலும், ஒரு பிராமணனாவதற்குத் தேவையான ஞானத்தை அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டார்கள். இவை யாவற்றின் அறிவும் இல்லாத இந்த மனிதர்கள், சொர்க்கம் மற்றும் அதன் இன்பங்களின் பல்வேறு வகைக் கனிகளையே விரும்புகிறார்கள்.(34)பழங்காலத்தில் இருந்தே தொடர்வதும், நித்தியமானதும், நிச்சயத்தன்மையை இயல்பாகக் கொண்டதும், நமது கடமைகள் அனைத்திலும் ஓர் இழையாக நுழைந்திருப்பதும், அனைத்து வகை வாழ்வுமுறைகளிலும் உள்ள ஞானிகள், எதைக் கொண்டு தங்கள் வகைக்குரிய கடமைகள் மற்றும் தவங்கள் ஆகியவற்றை அறியாமையையும் உலகத் தீமைகளையும் அழிக்கும் பயங்கர ஆயுதங்களாக மாற்றிக் கொள்வார்களோ, அந்த நன்னடத்தையின் ஒரு சிறுபகுதியைக் கூட நடைமுறையில் பயில இயலாத மூட புத்தி கொண்ட மனிதர்கள், புலப்படும் கனிகளை உண்டாக்குவதும், உயர்ந்த பலம் நிறைந்ததும், மரணமற்றதுமான அந்நிலையை {ஒழுக்கத்தைக்} கனியற்றதாகவும், சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படாததாகவும், (முறையான போக்கின்) பிறழ்வாகவும் கருதுகிறார்கள். எனினும் உண்மையில் அவ்வொழுக்கமானது, துயரில் காணப்படுவதற்கு எதிரான நடைமுறைகளைத் தழுவி, விழிப்புணர்வின் சாரமாகவும், காமத்தாலும், கோபத்தாலும், அதே வகையைச் சார்ந்த பிற ஆசைகளாலும் பாதிக்கப்படாததாகவும் இருக்கிறது.(36,37) வேள்விகளைப் பொறுத்தவரையில் அவற்றின் குறிப்புகள் அனைத்தையும் உறுதி செய்வது மிகக் கடினமாக இருக்கிறது. உறுதி செய்யப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்துவது மிகக் கடினமாக இருக்கிறது. நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அவை வழிவகுக்கும் கனிகள் நிலையில்லாதவையாக இருக்கின்றன. இதை நன்றாகக் குறித்துக் கொள்வீராக. (இதைக் குறித்துக் கொண்டு, ஞானப்பாதையில் நடப்பீராக” என்றார் {கபிலர்}.(38)ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “வேதங்கள் செயல்களை முகத்தோற்றமாகக் கொள்ளவும் செய்கின்றன, அவற்றைப் புறக்கணிக்கவும் செய்கின்றன. அவற்றின் தீர்மானங்கள் இவ்வாறு ஒன்றோடொன்று முரண்படும்போது அவற்றில் அதிகாரம் எங்கே இருக்கிறது? மேலும் செயல்களைத் துறப்பதும் பெரும் நன்மையை உண்டாக்குகிறது. இந்த இரு பாதைகளும் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. ஓ! பிராமணரே, இக்காரியம் குறித்து எனக்குச் சொல்வீராக” என்றார்.(39)

கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “நல்ல பாதையில் (யோகத்தில்) உங்களைச் செலுத்திக் கொண்டு, உங்களது புலன்களின் நேரடி சாட்சியத்தின் மூலம் இவ்வாழ்விலேயே அதன் கனிகளை உணர்வீர்களாக. எனினும், (செயல்களைச் செய்யும் மனிதர்களான) நீங்கள் தொடரும் பிற நோக்கங்களில் புலப்படும் விளைவுகள் என்னென்ன?” என்று கேட்டார்.(40)

ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “ஓ! பிராமணரே, என் பெயர் ஸ்யூமரஸ்மி ஆகும். நான் ஞானத்தை அடைவதற்காக இங்கு வந்தேன். எனக்கு நன்மை செய்து கொள்ள விரும்பிய நான், சச்சரவு செய்யும் விருப்பத்தால் அல்லாமல், கபடமற்ற வெளிப்படைத்தன்மையுடனேயே இந்த விவாதத்தைத் தொடங்கினேன்.(41) இந்த இருண்ட ஐயம் என் மனத்தைப் பீடித்திருக்கிறது. ஓ! சிறப்புமிக்கவரே, அஃதை எனக்குத் தீர்ப்பீராக. எதைக் கொண்டு பிரம்மம் அடையப்படுமோ, அந்த (யோகம் எனும்) நல்லோரின் பாதையில் நடப்பவர்கள், தங்கள் புலன்களின் நேரடி சாட்சியத்தின் மூலம் அதன் கனிகளை உணர்வார்கள் என்று நீர் சொன்னீர். உண்மையில், புலன்களின் நேரடி சாட்சியத்தின் மூலம் உணரப்படுவது எது? எதை நீர் பின்தொடர்கிறீர்?(42) சொற்போரை {தர்க்கத்தை} மட்டுமே தங்கள் முதன்மையான நோக்கமாகக் கொண்ட அறிவியல்கள் அனைத்தையும் தவிர்த்து, ஆகமத்தின் உண்மைப் பொருளை முறையாகப் புரிந்து கொள்ளும் வகையில் நான் அதை {ஆகமத்தைப்} படித்திருக்கிறேன். ஆகமத்தின் மூலமே நான் வேதத் தீர்மானங்களைப் புரிந்து கொள்கிறேன். வேதங்களின் உண்மைப் பொருளை வெளிக்கொணரும் நோக்கத்தைக் கொண்ட தர்க்கத்தின் அடிப்படையிலான அறிவியல்களை {ஆகமம் என்ற} அந்தச் சொல்லில் நான் சேர்க்கிறேன்[8].(43) ஒரு குறிப்பிட்ட வாழ்வுமுறைக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைத் தவிர்க்காமல், ஆகமத்தில் விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளையே ஒருவன் பின்தொடர வேண்டும். ஆகமங்களில் விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை நோற்பது, ஒருவனுக்கு வெற்றி மகுடத்தைச் சூட்டுகிறது. ஆகமத் தீர்மானங்களுடைய நிச்சயத்தன்மையின் விளைவால், அது வழிவகுக்கும் வெற்றியானது, நேரடியான சாட்சியத்தின் மூலம் கிட்டத்தட்ட உணரத்தக்கது என்று சொல்லப்படுகிறது.(44) ஒரு துறைக்குச் செல்ல இருக்கும் படகில் கட்டப்பட்ட மற்றொரு படகால், பயணிகள் அடைய விரும்பும் துறைக்கு இட்டுச் செல்ல முடியாததைப் போலவே, கடந்த கால ஆசைகளின் மூலம் செய்யப்பட்ட எங்கள் செயல்களால் இழுக்கப்படும் நாங்கள், பிறப்பு மற்றும் இறப்பு என்ற முடிவற்ற ஆற்றை ஒருபோதும் கடக்க முடியாதவர்களாக (மேலும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ள ஓய்வு மற்றும் அமைதியின் புகலிடத்தையும் அடைய முடியாதவர்களாக) இருக்கிறோம். ஓ! சிறப்புமிக்கவரே, இக்காரியத்தைக் குறித்து எனக்குச் சொல்வீராக. ஓர் ஆசான் தன் சீடனுக்குப் போதிப்பதைப் போல எனக்குப் போதிப்பீராக.(45)

மனிதர்களுக்கு மத்தியில், உலகம் சார்ந்த பொருட்கள் அனைத்தையும் முற்றிலும் துறந்தவர், தமக்குள்ளேயே முற்றிலும் நிறைவுடன் இருப்பவர், துயரத்தைக் கடந்தவர், நோயில் இருந்து முற்றிலும் விடுபட்டவர், (தம் சொந்த நன்மைக்காக) செயல்படும் விருப்பத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவர், தோழமையில் முற்றாகச் சுவையிழந்தவர், அனைத்து வகைச் செயல்களையும் முற்றிலும் தவிர்த்தவரென எவரையும் காண முடியவில்லை.(46) உம்மைப் போன்ற மனிதர்களும்கூட எங்களைப் போலவே இன்பத்திற்கு வசப்படுவதும், துயரத்தில் ஈடுபடுவதும் காணப்படுகிறது. உம்மைப் போன்ற மனிதர்களின் புலன்களும், பிற உயிரினங்களைப் போலவே தங்கள் செயல்பாடுகளிலும், நோக்கங்களிலும் ஈடுபடுகின்றன.(47) இன்பம் குறித்த கேள்வியை நாம் ஆராய்ந்தால், விருப்பங்களையும், ஒரே கதியையும் கொண்ட மனிதர்களின் நான்கு வகைகளுக்கும் {வர்ணங்களுக்கும்}, நான்கு வாழ்வுமுறைகளுக்குமான {ஆசிரமங்களுக்குமான} தூய இன்பநிலை எதனில் இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார் {ஸ்யூமரஸ்மி}.(48)

கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “ஒருவன் எந்தச் சாத்திரத்தின் அடிப்படையில் செயல்களில் ஈடுபட விரும்பினாலும், அந்தச் செயல்களை ஒழுங்குமுறைப்படுத்த அதில் {அந்த சாத்திரத்தில்} விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் கனியற்றவையாவதில்லை. எந்தக் கருத்தின்படி ஒருவன் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டாலும், சுயக்கட்டுப்பாடு, அல்லது யோகக் கடமைகளை நோற்பதால் மட்டுமே அவனால் உயர்ந்த கதியை அடையமுடியும்.(49) ஞானத்தைத் தேடும் மனிதனுக்கு,(பிறப்பு மற்றும் இறப்பு என்ற முடிவிலாத ஆற்றைக்) கடந்து செல்ல அந்த ஞானமே துணைபுரிகிறது. எனினும், ஞானத்தின் பாதையில் இருந்து விலகிய பிறகு மனிதர்கள் தேடும் ஒழுக்கமானது, (பிறப்பு மற்றும் இறப்பு என்ற தீமைகளுக்கு உள்ளாக்கி) அவர்களைப் பீடிக்கவே செய்கிறது.(50) நீர் அறிவைக் கொண்டிருக்கிறீர், துன்பத்தை உண்டாக்கும் உலகம் சார்ந்த பொருட்களின் தொடர்பில்லாமல் இருக்கிறீர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உங்களில் எவரேனும், ஒரே அண்ட ஆன்மாவைப் போல அனைத்தையும் காணச்செய்யும் அறிவை அடைவதில் எப்போதாவது வென்றிருக்கிறீர்களா?[9](51)சச்சரவில் மட்டுமே ஈடுபடும் விருப்பத்தில், சாத்திரங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், விருப்புவெறுப்பில் மூழ்குவதன் விளைவால் செருக்குக்கும், ஆணவத்திற்கும் அடிமையாகும் சிலர் இருக்கிறார்கள்.(52) சாத்திரத் தீர்மானங்களின் பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளாத இந்தச் சாத்திரக் கள்வர்கள், இந்தப் பிரம்மக் கொள்ளையர்கள், ஆணவம் மற்றும் பிழையின் ஆதிக்கத்தால் அமைதியைத் தேடவும், தற்கட்டுப்பாட்டைப் பயிலவும் மறுக்கிறார்கள்[10].(53) இம்மனிதர்கள் அனைத்துப் புறங்களிலும் கனியற்ற நிலையையே காண்கிறார்கள், (ஏதோ வாய்ப்பின் மூலம்) அவர்கள் ஞானப் பலத்தை அடைவதில் வென்றால், பிறரைக் காக்க ஒருபோதும் அவர்களுக்கு அதைச் சொல்லமாட்டார்கள். முற்றிலும் தமஸ் குணத்தாலான அவர்கள், தமஸை மட்டுமே தங்கள் புகலிடமாகக் கொள்கிறார்கள்.(54) ஒருவன் உள்ளீர்த்துக் கொள்ளும் இயல்பின் அனைத்து நிகழ்வுகளுக்கும் அவன் வசப்படுகிறான். அதன்படி, ஒருவனுடைய குணங்களே அவனுடைய இயல்பாக எழுகிறது என்பதால், தமஸைத் தன் புகலிடமாகக் கொண்ட ஒருவனிடம், பொறாமை உணர்வுகள் {பகை}, காமம் {விருப்பு}, கோபம் {சினம்}, செருக்கு {டம்பம்}, பொய்மை, போலித்தனம் {மதம்} ஆகியவை தொடர்ந்து வளர்கின்றன.(55) உயர்ந்த கதியை விரும்பும் யதிகள், இவ்வகையிலேயே சிந்தித்து, (ஆசான்களுடைய போதனைகளின் துணையால்) இந்தக் களங்கங்களைக் கண்டு, நன்மை தீமை ஆகிய இரண்டையும் விட்டு யோகத்தில் ஈடபடுகின்றனர்” என்றார் {கபிலர்}.(56)

ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “ஓ! பிராமணரே, (செயல்களின் மெச்சத்தக்க தன்மை, துறவின் முரண் தன்மை ஆகியவற்றைக் குறித்து) நான் சொன்ன அனைத்தும் கண்டிப்பாகச் சாத்திரங்களுக்குப் பொருந்தக் கூடியவையே ஆகும். எனினும், சாத்திரங்களின் பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒருவன், சாத்திரங்கள் உண்மையில் எதை அறிவிக்கிறதோ அதற்குக் கீழ்ப்படிய விரும்புவதில்லை என்பது நிச்சயம் உண்மையே.(57) நேர்மை நெறிக்கு இணங்கும் எந்த ஒழுக்கமும், சாத்திரங்களுக்கு இணக்கமாகவே இருக்கிறது. இதையே ஸ்ருதியும் தீர்மானிக்கிறது. அதே போல, நேர்மை நெறிக்கு இணங்காத எந்த ஒழுக்கமும், சாத்திரங்களுக்கு இணக்கமாக இருப்பதில்லை. இதுவும் ஸ்ருதியில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.(58) சாத்திரங்களை மீறுவதன் மூலம் சாத்திரச் செயலெதையும் ஒருவனாலும் செய்ய முடியாது. மேலும் சாத்திரத்திற்குப் புறம்பானது நிச்சயம் வேதங்களுக்கு எதிரானதே. இதை ஸ்ருதி அறிவிக்கிறது[11].(59) புலன்களை எது நேரடியாகக் கவர்கிறதோ, அதை மட்டுமே நம்பும் பல மனிதர்கள், (நம்பிக்கைக்காக {எதிர்பார்ப்புக்காக} சாத்திரங்களில் சொல்லப்பட்டதைக் காணாமல்) இவ்வுலகத்தை மட்டுமே காண்கிறார்கள். சாத்திரங்கள் எவற்றைக் களங்கங்கள் என்று அறிவிக்கிறதோ, அவற்றைக் அவர்கள் காண்பதில்லை. அதன்படியே, எங்களைப் போலவே அவர்களும் துயரத்தின் வசப்படுகிறார்கள். உம்மைப்போன்ற மனிதர்கள் கவலைப்படும் புலன்நுகர் பொருட்களும், பிற உயிரினங்களும் கவலைப்படும் பொருட்களும் ஒன்றே. (இருப்பினும், ஆன்மா குறித்த உமது அறிவாலும், அவற்றின் {பிற உயிரினங்களின்} அறியாமையாலும், உமக்கும் அவற்றுக்கும் இடையில் உள்ள வேறுபாடு எவ்வளவு பெரியது?(60)

நான்கு வகை மனிதர்கள் அனைவரும், நான்கு வகை வாழ்வுமுறைகள் அனைத்தும் எவ்வளவுதான் தங்கள் கடமைகளில் வேறுபட்டிருந்தாலும் அவை அனைத்தும் (பேரின்ப நிலை என்ற) ஒரே கதியையே நாடுகின்றன. கேள்விக்கப்பாற்பட்ட திறன்களையும், ஆற்றல்களையும் நீர் கொண்டிருக்கிறீர். (பல்வேறு கடமைகளுக்கு மத்தியில்) விரும்பும் கதியை நிறைவேற்ற, நன்கு கணிக்கப்பட்ட, குறிப்பிட்ட ஒழுக்க நடைமுறையை உறுதி செய்வதற்காக, முடிவிலியை (பிரம்மத்தைக்) குறித்து எனக்குச் சொன்னதன் மூலம், என் ஆன்மாவை அமைதியால் நீர் நிறைத்துவிட்டீர். எங்களைப் பொறுத்தவரையில், ஆன்மாவைப் புரிந்து கொள்ள இயலாததன் விளைவால், நாங்கள் உண்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறோம். எங்கள் ஞானம், தாழ்ந்த பொருட்களின் தொடர்புடையதாக இருக்கிறது, நாங்கள் அடர்த்தியான இருளில் மூழ்கியிருக்கிறோம்.(61,62) (எனினும், விடுதலையை அடைய ஒருவனைத் தகுதியாக்குமென நீர் குறிப்பிட்ட ஒழுக்க நடைமுறையைப் பயில மிகக் கடினமாக இருக்கிறது). எவன் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கிறானோ, எவன் தன் கடமைகள் அனைத்தையும் செய்கிறானோ, எவன் தன் உடலை மட்டுமே சார்ந்து எங்கும் திரிய வல்லவனாக இருக்கிறானோ, எவன் தன் ஆன்மாவை முற்றான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறானோ, எவன் அறநெறிகளின் தேவையைக் கடந்தவனாக இருக்கிறானோ, எவன் மொத்த உலகையும் (அதற்குச் சொந்தமான அனைத்தையும்) அலட்சியம் செய்கிறானோ, அவனால் மட்டுமே செயல்கள் குறித்த வேத தீர்மானங்களை மீறி, விடுதலை {முக்தி} இருக்கிறதென்று சொல்ல முடியும்[12].(63,64)

எனினும், உறவினர்களுக்கு மத்தியில் வாழும் ஒருவனுக்கு, இவ்வொழுக்க நடைமுறையைப் பின்பற்றுவது மிகக் கடினமாக இருக்கும். கொடை, வேதகல்வி, வேள்விகள், சந்ததியைப் பெறுதல், எதையும் கையாள்வதில் எளிமை,(65) ஆகிய இவற்றைப் பயின்றும் ஒருவனால் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்ல முடியவில்லையெனில், அந்த விடுதலையை அடைய முனைபவனுக்கும், வேண்டப்படும் அந்த விடுதலைக்கும் ஐயோ. அஃதை அடைய கொடுக்கப்படும் உழைப்பனைத்தும் கனியற்றதாகவே தெரிகிறது.(66) வேதங்களை அவமதித்து, அவை சொல்லும் செயல்களைச் செய்யாமல் இருக்கும் ஒருவன் நாத்திகனாகக் குற்றஞ்சாட்டத் தகுந்தவனே. ஓ! சிறப்புமிக்கவரே, செயல்களுக்குச் சாதகமான வேத தீர்மானங்களுக்குப் பிறகு வருவதை (விடுதலையை {முக்தியைக்}) குறித்து நான் தாமதமில்லாமல் கேட்க விரும்புகிறேன்.(67) ஓ! பிராமணரே, எனக்கு உண்மையைச் சொல்வீராக. ஒரு சீடனாக நான் உமது காலடியில் அமர்கிறேன். தயவுடன் எனக்குப் போதிப்பீராக. ஓ! கல்விமானே, விடுதலையை {முக்தியைக்} குறித்து நீர் அறிந்த அளவுக்கு நானும் அறிய விரும்புகிறேன்” என்றார் {ஸ்யூமரஸ்மி}.(68)

பிரம்மம், முக்தி! – சாந்திபர்வம் பகுதி – 270-வர்ணாசிரமங்களால் அடையத்தக்க முக்தி மற்றும் பிரம்மம் குறித்து ஸ்யூமரஸ்மிக்கும் கபிலருக்கும் இடையில் நடந்த உரையாடல்…

கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “வேதங்களே அதிகாரம் பெற்றவையாக அனைவராலும் கருதப்படுகிறது. மக்கள் அவற்றை ஒருபோதும் அலட்சியம் செய்வதில்லை. ஒலியாலான பிரம்மம் {சப்தப்ரம்மம்}, (உணர்ந்தறிய முடியாத) உயர்ந்த பிரம்மம் {பரப்ரம்மம்} என்ற இருவகைப் பிரம்மங்கள் இருக்கின்றன[1].(1) ஒலியாலான பிரம்மத்தை அறிந்தவன், உயர்ந்த பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான். கர்ப்பதானச் சடங்கில் தொடங்கி, வேத மந்திரங்களின் துணையுடன் தந்தை உண்டாக்கிய உடல், (பிறப்புக்குப் பிறகு) வேத மந்திரங்களின் மூலம் தூய்மைப்படுத்தப்படுகிறது.(2) (வேத மந்திரங்களின் துணையுடன் செய்யப்பட்ட) தூய்மைச் சடங்குகளால் உடல் தூய்மை ஆகும்போது, (அந்த உடலின்) உரிமையாளன் அதுமுதல் ஒரு பிராமணன் என்று அழைக்கப்பட்டு, பிரம்ம அறிவைப் பெறத் தகுந்த பாத்திரமாகிறான். செயல்களின் வெகுமதியானது, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் இதயத் தூய்மை என்பதை அறிவீராக. நான் தற்போது அதுகுறித்து உம்மிடம் பேசப் போகிறேன்.(3) (செயல்களைச் செய்வதால்) இதயத் தூய்மையானது அடையப்பட்டதா, அடையப்படவில்லையா என்பது எந்த மனிதன் அஃதை அடைந்தானோ அவனால் அறியப்படும். வேதங்கள் அல்லது உள்ளுணர்வின் துணையால் அஃதை அறியமுடியாது. எந்த எதிர்பார்ப்புகளையும் வளர்க்காதவர்கள், எதிர்காலப் பயன்பாட்டுக்குச் சேர்க்காமல் எந்த வகைச் செல்வங்களையும் துறப்பவர்கள், ஆசையற்றவர்கள், அனைத்து வகை விருப்பு மற்றும் வெறுப்பு ஆகியவற்றில் இருந்து விடுபட்டவர்கள், வேள்விகள் செய்வது கடமை என்ற திடமான நம்பிக்கையின் காரணமாக அவற்றைச் செய்கிறார்கள். தகுந்தவர்களுக்குக் கொடையளிப்பதே செல்வங்கள் அனைத்தின் (சரியான பயன்பாட்டுக்குரிய) கதியாகும்.(4,5)எந்தக் காலத்திலும் பாவம் நிறைந்த செயல்களுக்கு அடிமையாகாமல், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள அந்தச் சடங்குகளை நோற்று, தங்கள் விருப்பங்கள் அனைத்தின் கனியால் மகுடம் சூட வல்லவர்களாக, தூய அறிவின் மூலம் குறிப்பிட்ட தீர்மானங்களை உடையவர்களாக,(6) ஒருபோதும் கோபத்திற்கு வசப்படாதவர்களாக, பொறாமையில் ஒருபோதும் ஈடுபடாதவர்களாக, செருக்கு மற்றும் வன்மத்தில் இருந்து விடுபட்டவர்களாக, யோகத்தில் உறுதியுடன் கூடியவர்களாக, களங்கமில்லா பிறவியுடைவர்களாக, களங்கமில்லா ஒழுக்கம் கொண்டவர்களாக, களங்கமில்லா கல்வியைக் கொண்டவர்களாக, அனைத்து உயிரினங்களின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக,(7) இல்லற வாழ்வு வாழ்பவர்களாக, தங்கள் கடமைகளில் முற்றிலும் அர்ப்பணிப்பு கொண்டவர்களாகப் பழங்காலத்தில் பல மனிதர்கள் இருந்தனர். அதே தகுதிகளைக் கொண்டவர்களாகவும், யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், (ஜனகன் முதலியவர்கள் போன்ற) பல மன்னர்களும் இருந்தனர். அதே பண்புகளைக் கொண்ட (யாஜ்ஞவல்கியர் மற்றும் பிறரைப் போன்ற) பிராமணர்கள் பலரும் இருந்தனர்[2].(8) அவர்கள் அனைத்து உயிரினங்களுடனும் சமமாகப் பழகுபவர்களாகவும், முற்றிலும் நேர்மையானவர்களாகவும் இருந்தார்கள். மனநிறைவு மற்றும் நிச்சய ஞானம் ஆகியவை அவர்களுடையவையாக இருந்தன. அவர்களுடைய அறத்திற்கான வெகுமதிகள் புலப்படுவனவாக இருந்தன, அவர்களது நடத்தையும், இதயமும் தூய்மையானவையாக இருந்தன. அவர்கள் இரு வடிவிலான பிரம்மத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்[3].(9) முதலில் தங்கள் இதயங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளும் அவர்கள், (சிறந்த) நோன்புகள் அனைத்தையும் முறையாக நோற்கிறார்கள். அவர்கள் எதனில் இருந்தும் வீழ்ந்துவிடமால் துயரம் மற்றும் பெருங்கடினமான சந்தர்ப்பங்களிலும் அறக்கடமைகளை நோற்றனர்.(10)அவர்கள் ஒற்றுமையுடன் சேர்ந்து தகுதிமிக்கச் செயல்களைச் செய்தனர். இதில் அவர்கள் பெரும் மகிழ்ச்சியைக் கண்டனர். அவர்கள் ஒருபோதும் பிறழாதவர்களான இருந்ததால், எந்தப் பாவக்கழிப்புகளையும் ஒருபோதும் செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை.(11) அறத்தின் உண்மை வழியைச் சார்ந்திருந்த அவர்கள், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டவர்களாகினர். தகுதி ஈட்டும் காரியத்தில் தன் புத்தியை ஒருபோதும் பின்பற்றாமல், அந்தக் கதியை அடைவதற்குச் சாத்திர விதிகளை மட்டுமே பின்பற்றினர். அதன்படி அவர்கள் அறச் செயல்களைச் செய்யும் காரியத்தில் வஞ்சிக்கும் குற்றமுள்ளவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை[4].(12) வேறு எதனிலும் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைச் செய்யாமல் சாத்திரங்களின் மொத்த விதிகளையும் ஒற்றுமையுடன் நோற்பதன் விளைவால், அவர்களுக்குப் பாவக்கழிப்புச் செய்ய வேண்டிய தேவை ஒருபோதும் ஏற்பட்டதில்லை.(13) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளை நோற்று வாழும் மனிதர்களுக்கு எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது. பலவீனர்கள், புனித சட்டத்திலுள்ள முழுமையான, உறுதியான விதிகளைப் பின்பற்ற இயலாத மனிதர்களுக்கு மட்டுமே ஸ்ருதி பாவக்கழிப்பை அறிவித்திருக்கிறது.(14) வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவர்களாக, வேதங்களின் ஆழ்ந்த அறிவுள்ளவர்களாக, தூய்மையும், நன்னடத்தையும் கொண்டவர்களாக, புகழ்மிக்கவர்களாகப் பல பிராமணர்கள் பழங்காலத்தில் இருந்தனர்.(15)அவர்கள் எப்போதும் வேள்விகளில் பிரம்மத்தை வழிபட்டு, ஆசையில் இருந்து விடுபட்டவர்களாக இருந்தனர். கல்விமான்களான அவர்கள், வாழ்வின் கட்டுகள் {பற்றுகள்} அனைத்தையும் கடந்தவர்களாக இருந்தனர். இம்மனிதர்களின் வேள்விகள், அவர்களது (அறிவு), விதிகளுக்குக் கீழ்ப்படிந்து அவர்களால் செய்யப்பட்ட செயல்கள்,(16) குறிப்பிட்ட நேரங்களில் அவர்களது சாத்திரக் கல்வி, அவர்களுடைய விருப்பங்கள், காமம் கோபத்தில் இருந்து அவர்கள் பெற்றிருந்த விடுதலை, அவர்களது பக்தி நடத்தை, அனைத்துச் சிரமங்களையும் கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்ட அவர்களது செயல்கள்,(17) தங்கள் வகை {வர்ணம்} மற்றும் தங்கள் வாழ்வுமுறை {ஆசிரமங்களின்} கடமைகளைச் செய்வதால் பெறும் புகழ், அவர்களது சொந்த இயல்பின் விளைவால் கிட்டும் ஆன்மத் தூய்மை, மிக நேர்மையான அவர்களது பண்பு, அமைதியில் அவர்கள் கொண்ட அர்ப்பணிப்பு, தங்கள் நடைமுறைகளில் அவர்கள் கொண்ட கவனம்(18) ஆகியவை முடிவிலா பிரம்மத்தைப் போன்றே இருந்தன. இதுவே நித்தியமான ஸ்ருதி என்று நாம் கேள்விப்படுகிறோம்[5]. உயர் ஆன்மா கொண்ட மனிதர்கள், செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் கடினமான நடத்தை மற்றும் செயல்களைக் கொண்ட மனிதர்கள்,(19) தங்கள் கடமைகளைக் கறாராக வெளிப்படுத்துவதன் விளைவால் கனிகளால் மகுடம் சூட்டப்பட்ட விருப்பங்களைக் கொண்ட மனிதர்கள் ஆகியோரின் தவங்களே, உலக ஆசைகள் அனைத்தையும் அழிப்பதற்கான விளைவைத் தரவல்ல ஆயுதங்களாகின. அற்புதமானதும், பழங்காலத்திலேயே தோற்றம் காணப்பட்டும், நித்தியமானதும், மாற்றமில்லா பண்புகளைக் கொண்டதும், துன்பகாலங்களில் நல்லோரும் ஈடுபடும் நடைமுறையில் இருந்து வேறுபட்டு, பிற சூழ்நிலைகளில் அவர்கள் {அந்த நல்லோர்கள்} செய்யும் செயல்களைப் பிரதிபலிப்பதும், காமம், கோபம் மற்றும் பிற தீய ஆசைகள் மேம்பட முடியாத நிலையைத் தரும் கவனம் நிறைந்த தன்மையைப் போன்றதும், (ஒருகாலத்தில்) மனிதகுலம் அனைத்திலும் எந்த வரம்புமீறலையும் இல்லாமல் செய்த விளைவுமான அந்த நல்லொழுக்கமே, அதன் கடமைகளின் நுண்விபரங்களையும், அதன் தொகையையும் செயல்படுத்த இயலாத மனிதர்களால், நான்கு வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} தொடர்பான நான்கு உபபிரிவுகளாகப் பின்னர்ப் பிரிக்கப்பட்டது என்று பிராமணர்கள் சொல்கிறார்கள்[6].(20-22)

நல்லோர், சந்நியாச வாழ்வுமுறையைப் பின்பற்றிய பிறகு, நன்னடத்தையின் அந்தப் போக்கை முறையாக நோற்பதன் மூலம் உயர்ந்த கதியை அடைகிறார்கள். காட்டு வாழ்வு முறையை {வானப்ரஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுவோரும் கூட (அவ்வொழுக்கத்தை முறையாக நோற்பதன் மூலம்) அதே உயர்ந்த கதியை அடையலாம்.(23) இல்லற வாழ்வு முறையை {கிருஹஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுவோரும் கூட (அதே ஒழுக்கத்தை முறையாக நோற்பதன் மூலம்) அதே உயர்ந்த கதியை அடையலாம்; இறுதியாக, பிரம்மச்சரிய வாழ்வு முறையைப் பின்பற்றுவோரும் கூட (அதே ஒழுக்கத்தை முறையாக நோற்பதன் மூலம்) அதே உயர்ந்த கதியை அடையலாம். அந்தப் பிராமணர்களே ஆகாயத்தில் சுற்றிலும் நன்மையான ஒளிக்கதிர்களைப் பொழிந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒளிக் கோள்களாகக் காணப்படுகிறார்கள்.(24) அந்த எண்ணற்ற பிராமணர்கள், நிலைத்த பாதையில் நிறுவப்பட்ட விண்மீன்களாகவும், நட்சத்திரக்கூட்டங்களாகவும் ஆனார்கள். மனநிறைவின் (அல்லது துறவின்) விளைவால் அவர்கள் அனைவரும் வேதங்கள் அறிவித்த படியே முடிவிலாத் தன்மையை அடைந்தனர்.(25) அத்தகைய மனிதர்கள் உயிரினங்களின் கருவறைகள் மூலம் உலகிற்குத் திரும்பினால், முந்தைய செயல்களை மூலக்காரணமாகக் கொண்ட வற்றாத எச்சங்களான பாவங்களால் அவர்கள் ஒருபோதும் களங்கப்படுவதில்லை.(26) பிரம்மச்சரிய வாழ்வை வாழ்ந்து, கடமையுணர்வுடன் தன் ஆசானிடம் காத்திருந்து {பணிவிடை செய்து கொண்டிருந்து}, (ஆன்மா குறித்த) தீர்மானமான முடிவுகளை அடைந்து, அவ்வாறே யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்த ஒருவனே உண்மையில் பிராமணனாவான். பிராமணன் என்றழைக்கப்பட வேறு எவன் தகுந்தவன்?(27)

எவன் பிராமணன், எவன் அல்ல என்பதைச் செயல்கள் மட்டுமே தீர்மானிக்கும் எனும்போது, (நல்ல அல்லது தீய) செயல்கள் ஒரு மனிதனின் இன்பம் அல்லது துன்பத்தைச் சுட்டிக்காட்டுவனவாக இருக்க வேண்டும். தீய ஆசைகள் அனைத்தையும் வெல்வதன் மூலம் தூய இதயத்தை அடைந்தவர்களைப் பொறுத்தவரையில், (அண்ட ஆன்மாவைக் காண்பதன் மூலம் அவர்கள் அடையும் முடிவிலாத் தன்மை மற்றும் (ஸ்ருதிகளுடைய தீர்மானங்களின் மூலம் அவர்கள் அடைந்த) பிரம்ம அறிவின் விளைவால், அவர்கள் அனைத்தையும் பிரம்மமாகவே காண்கிறார்கள் என்று சொல்லும் நித்தியமான {அழிவற்ற} ஸ்ருதியை நாம் கேள்விப்படுகிறோம்.(28) தூய இதயம் கொண்டவர்களும், ஆசையில் இருந்து விடுபட்டவர்களும், பிரம்ம அறிவை அடைவதற்காக விடுதலை {முக்தி} ஒன்றையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்களுமான மனிதர்களால் பின்பற்றப்படும் (அமைதி, தற்கட்டுப்பாடு, செயல்விலக்கம், துறவு, அர்ப்பணிப்பு {பக்தி}, சமாதியின் முழுமை ஆகியவற்றின்) கடமைகள், நால்வகை மனிதர்களுக்கும், நான்கு வாழ்வுமுறைகளுக்கும் சமமாகவே விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிவானது, உண்மையில் தூய இதயங்களையும், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களையும் பிராமணர்களால் எப்போதும் அடையப்படுகிறது[7].(29,30) மனநிறைவின் அடிப்படையிலான துறவிற்கான ஆன்மாவைக் கொண்ட ஒருவன், உண்மை ஞானத்தின் புகலிடமாகக் கருதப்படுகிறான். விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் அறிவைக் கொண்டதும், பிராமணர்களுக்கு மிகத் தேவையானதுமான துறவு, (எப்போதும் வழிவழியாக ஆசானிடம் இருந்து சீடனிடம் வந்து சேரும்) நித்தியமான {அழிவற்ற} ஒன்றாகும்.(31) துறவானது, சில வேளைகளில், பிற வாழ்வுமுறையின் கடமைகளுடன் கலந்திருக்கிறது. அந்நிலையில் இருந்தாலும், தனியாகவே இருந்தாலும், ஒருவன் (உலகம் சார்ந்த ஆசையின்மை அளவைச் சார்ந்த) தன் பலத்தின் அளவுக்குத் தக்கவே அதை {துறவை} நடைமுறைப்படுத்துகிறான். அனைத்து வகை மனிதர்களுக்கும் உயர்ந்த நன்மையைச் செய்வதற்கான விளைவே துறவாகும். பலவீனன் மட்டுமே அதைப் பயில்வதில் தவறுகிறான். பிரம்மத்தை அடைய முனையும் தூய இதயமுள்ள மனிதன் (துன்பங்களுடன் கூடிய) உலகில் இருந்து மீட்கப்படுகிறான்” என்றார் {கபிலர்}.(32)ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “(உடைமையை) அனுபவிப்பதைக் கைவிட்டவர்குக்கு மத்தியில், கொடையளிப்பவர்கள், வேள்வி செய்பவர்கள், வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள், செல்வத்தை அடைந்து, அதன் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்த பிறகு துறவு வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ஆகியோரில்,(33) {மரணமடைந்து} இவ்வுலகில் இருந்து செல்லும்போது சொர்க்கத்தில் முதன்மையான இடத்தை யார் அடைவார்? ஓ! பிராமணரே, இதை நான் உம்மிடம் கேட்கிறேன். எனக்கு உண்மையைச் சொல்வீராக” என்று கேட்டார்.(34)

கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, “இல்லற வாழ்வை வாழ்பவர்களே நிச்சயம் மங்கலமானவர்களாக, அனைத்துவகைச் சிறப்புகளையும் அடைகிறார்கள். எனினும், துறவு தொடர்புடைய பேரின்பத்தை அனுபவிக்க இயலாமல் போகிறார்கள். நீரும் இதைக் காணலாம்” என்றார்.(35)

ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, “நீங்கள் (விடுதலையை {முக்தியை}) அடைவதற்கு வழிமுறையாக ஞானத்தையே சார்ந்திருக்கிறீர்கள். இல்லற வாழ்வை வாழ்பவர்களோ செயல்களில் தங்கள் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள். எனினும், விடுதலையே {முக்தியே} அனைத்து வாழ்வுமுறைகளின் கதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.(36) எனவே, பலத்தின் மேன்மை அல்லது குறைவில் அவற்றுக்கிடையில் எந்த வேறுபாடும் காணப்படவில்லை. ஓ! சிறப்புமிக்கவரே, அவ்வாறெனில் உண்மைக் காரியம் எவ்வாறு நிலைபெறும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(37)

கபிலர் {ஸ்யூரஸ்மியிடம்}, “செயல்கள் உடலை மட்டுமே தூய்மைப்படுத்துகின்றன. எனினும், ஞானமோ (எவரும் அடைய முனையும் ஓர்) உயர்ந்த கதியாக இருக்கிறது. இதயத்தின் களங்கங்கள் அனைத்தும் (செயல்களால்) குணமாகும்போதும், பிரம்மத்தின் இன்பநிலை ஞானத்தில் நிறுவப்படும்போதும்,(38) நல்லுணர்வு, மன்னிக்கும் தன்மை, அமைதி, கருணை, வாய்மை, வெளிப்படைத்தன்மை, தீங்கிழையாமை, செருக்கின்மை, பணிவு, துறவு, செயல்விலக்கம் ஆகியவை அடையப்படுகின்றன.(39) இவையே பிரம்மத்திற்கு வழிவகுக்கும் பாதையாக அமைகின்றன. ஒருவன் அவற்றைக் கொண்டு உயர்ந்த நிலையை அடைகிறான். இதயக்களங்கங்கள் அனைத்தும் செயல்களின் விளைவால் குணமாவது இவற்றை {நல்லுணர்வு முதலியவற்றை} அடையும்போதே ஞானிகளுக்கும் புரிகிறது.(40) ஞானத்துடன் கூடியவர்களும், செயல்கள் அனைத்தில் இருந்தும் விலகியவர்களும், தூய்மை மற்றும் ஞானத்தின் நிச்சயத்தன்மை {உறுதியுணர்வு} ஆகியவற்றைக் கொண்ட பிராமணர்களால் அடையப்படுவதே உண்மையில் உயர்ந்த கதியாகக் கருதப்படுகிறது.(41) வேதங்கள், வேதங்களில் சொல்லப்படுபவை (செயல்களில் உள்ள பிரம்மம்) {கர்மப்ரம்மஸ்வரூபம்}, செயல்களின் நுண்விவரங்கள் ஆகியவற்றின் அறிவை அடைவதில் வெல்லும் ஒருவனே வேதங்களை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான். வேறு எவனும் கற்றாலான தோல்துருத்தி மட்டுமே ஆவான்[8].(42)வேதங்களில் அனைத்தும் நிறுவப்பட்டிருப்பதால், வேதங்களை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாவான். தற்காலம், கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் ஆகியவை அனைத்தும் வேதங்களில் இருக்கின்றன.(43) இவ்வண்டம் இருக்கிறது, இல்லை என்ற ஒரு தீர்மானத்தையே சாத்திரங்கள் அனைத்தில் இருந்தும் உய்த்தறிய முடிகிறது. ஒரு ஞானிக்கு இது (உணரப்படும் அனைத்தும்) சத் மற்றும் அசத் ஆகிய இரண்டாகும். அவனுக்கு இவை அனைத்தும் முடிவும் நடுவுமாக இருக்கிறது.(44) முற்றான துறவு நேர்கையில் ஒருவன் போதுமானதை அடைகிறான் என்ற இந்த உண்மை வேதங்கள் அனைத்தையும் சார்ந்திருக்கிறது. அதற்குப் பிறகு பின்தொடரும் மனநிறைவானது, முழுமையானதும், அழிவடையும் மற்றும் அழிவடையாத பொருட்கள் அனைத்தின் ஆன்மாவாக இருப்பதும் அண்ட ஆன்மாவாக நன்கறியப்பட்டதும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் உயர்ந்த ஞானப்பொருளும், நிறைவானதும், பேரின்பநிலையும், இரண்டற்றதும், அனைத்துப் பொருட்களிலும் முதன்மையானதும், பிரம்மமேயானதும், புலப்படாததும், புலப்படாதது பிறக்கும் இடத்தின் காரணமாக இருப்பதும், எவ்வகைச் சிதைவுமற்றதுமான விடுதலையை {முக்தியைச்} சார்ந்திருக்கிறது[9].(45,46) புலன்களை அடக்கும் திறன், மன்னிக்கும் தன்மை, ஆசையின்மையின் விளைவால் செயல்பாடு தவிர்த்தல் ஆகிய இம்மூன்றும் முற்றான பேரின்ப நிலையின் காரணிகளாகும். அறிவையே தங்கள் கண்களாகக் கொண்ட மனிதர்கள், இந்த மூன்று குணங்களின் துணையுன், படைக்கப்படாததும், அண்டத்தின் முதன்மை காரணமாக இருப்பதும், மாற்றமில்லாததும், அழிவைக் கடந்ததுமான பிரம்மத்தை அடைவதில் வெல்கிறார்கள். அஃதை அறிந்தவனைப் போன்றதேயான பிரம்மத்தை நான் வணங்குகிறேன்” என்றார் {கபிலர்}[10].(47)

குண்டதாரன்! – சாந்திபர்வம் பகுதி – 271-அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில் அறமே உயர்ந்தது என்பதை எடுத்துக் காட்ட குண்டதாரனிடம் பக்தி கொண்ட ஒரு பிராமணரின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, அறம், பொருள் மற்றும் இன்பம் குறித்து வேதங்கள் பேசுகின்றன. எனினும், ஓ! பாட்டா, (இவை மூன்றில்) எதை அடைவது மேன்மையானதாகக் கருதப்படுகிறது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்காலத்தில் தன்னிடம் அர்ப்பணிப்புடன் இருந்த ஒருவனுக்குக் குண்டதாரன் செய்த நன்மை குறித்த பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2)

ஒரு காலத்தில், செல்வமற்ற ஒரு பிராமணர், கனியில் {பலனில்} உள்ள விருப்பத்தால் தூண்டப்பட்டு அறமீட்ட முற்பட்டார்[1]வேள்விகளைக் கொண்டாடுவதற்குத் தேவைப்படும் செல்வத்தில் அவர் தொடர்ந்து தம் இதயத்தை நிலைநிறுத்தினார். அவர், தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகக் கடுந்தவப்பயிற்சியில் தம்மை நிறுவிக்கொண்டார்.(3) நன் நோக்கத்தைச் சாதிக்கத் தீர்மானித்த அவர் தேவர்களைப் பெரும் அர்ப்பணிப்புடன் வழிபடத் தொடங்கினார். ஆனால் அத்தகைய தேவ வழிபாட்டின் மூலம் அவர் செல்வத்தை அடையத் தவறினார்.(4) அப்போது அவர், “இதுவரை மனிதர்களால் துதிக்கப்படாத எந்தத் தேவன் இருக்கிறான்? தாமதமில்லாமல் எனக்கு உதவக்கூடிய எந்தத் தேவன் இருக்கிறான்?” என்று தமக்குள்ளேயே சிந்திக்கத் தொடங்கினார்.(5)பொறுமையான மனத்துடன் இவ்வகையில் சிந்தித்துக் கொண்டிருந்த அவர், தம் முன்பு இருப்பவனும், தேவர்களைத் தக்க வைத்துக் கொள்பவனுமான குண்டதாரன் என்று அழைக்கப்படுபவனைக் கண்டார்.(6) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அவனைக் கண்டதும் அந்தப் பிராமணரின் பற்றுணர்வுகள் {பக்தி} தூண்டப்பட்டு, அவர் தமக்குள்ளேயே, “இவன் நிச்சயம் எனக்குச் செல்வத்தை அளிப்பான். உண்மையில் இவனது வடிவமே அதைக் குறிப்பிடுகிறது.(7) இவன் தேவர்களுடன் மிக நெருக்கமாக வாழ்கிறான். மேலும் இவன் இன்னும் பிற மனிதர்களால் துதிக்கப்படவில்லை. இவன் தாமதமில்லாமல் நிச்சயம் அபரிமிதமான செல்வங்களை எனக்கு அளிப்பான்” என்று நினைத்தார்.(8) இவ்வாறு தீர்மானித்துக் கொண்ட அந்தப் பிராமணர், தூபங்கள், நறுமணப்பொருட்கள், மேன்மையான வகையைச் சார்ந்த மலர் மாலைகள் மற்றும் பல்வேறு வகைக் காணிக்கைகளுடன் {குண்டதாரன் என்ற} அந்த மேகத்தை வழிபட்டார்.(9) இவ்வாறு வழிபடப்பட்ட அம்மேகமானவன் {குண்டதாரன்}, தன்னை வழிபட்டவனிடம் மிகவிரைவில் நிறைவடைந்து, அந்தப் பிராமணனுக்கு நன்மை நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(10)

{குண்டதாரன்}, “பிராமணக் கொலை {பிரம்மஹத்தி செய்தவன்}, மதுபானம் பருகல் {ஸுராபானம் செய்தவன்}, களவு செய்தல், தகுதிவாய்ந்த நோன்புகள் அனைத்தையும் புறக்கணித்தல் ஆகிய குற்றங்களுக்கு ஞானிகள் பாவக்கழிப்புகளை விதித்திருக்கின்றனர். எனினும் நன்றிமறந்தவர்களுக்கு எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது.(11) எதிர்பார்ப்புக்கு, அநீதி என்ற பெயரைக் கொண்ட ஒரு பிள்ளை உண்டு. மேலும் கோபமானது, பொறாமையின் பிள்ளை என்று கருதப்படுகிறது. பேராசையானது வஞ்சனையின் பிள்ளையாகும். எனினும், நன்றி மறத்தலானது (சந்ததி இல்லாத) தரிசு நிலையாகும்” என்றான்.(12)

இதன்பிறகு, அந்தப் பிராமணர் குசப் புல்லாலான படுக்கையை விரித்து, குண்டதாரனின் சக்தியால் ஊடுருவப்பட்டு, ஒரு கனவில் உயிரினங்கள் அனைத்தையும் கண்டார்.(13) உண்மையில், தூய்மையான ஆன்மாவைக் கொண்டவரும், (உடல்சார்ந்த) இன்பங்கள் அனைத்திலிருந்தும் தனித்திருந்தவருமான அந்தப் பிராமணரிடம், ஆசை, தவங்கள், அர்ப்பணிப்பு ஆகியவை இல்லாததன் விளைவால், அவ்விரவில் குண்டதாரனிடம் தாம் கொண்ட அர்ப்பணிப்பின் விளைவைக் கண்டார்.(14) உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, அவர் பெரும் ஒளியைக் கொண்ட உயர் ஆன்ம மாணிபத்ரன், தேவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு, தன் ஆணைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.(15) அங்கே மனிதர்கள் செய்த நற்செயல்களால் தூண்டப்பட்டு அவர்களுக்கு நாடுகளையும், செல்வங்களையும் அளிக்கவும், நல்லியல்பில் இருந்து வீழ்ந்துவிட்டவர்களிடம் இருந்து அவற்றை எடுப்பதிலும் அவர்கள் ஈடுபடுவதாகத் தெரிந்தது.(16) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே, பேரொளி கொண்ட குண்டதாரன், யக்ஷர்கள் அனைவரின் முன்னிலையில் தேவர்களுக்கு முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.(17)

தேவர்களுடைய ஆணையின் பேரில் அந்த உயர் ஆன்மா மாணிபத்ரன், நெடுஞ்சான் கிடையாகக் கிடந்த குண்டதாரனிடம், “குண்டதாரனுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.(18) அதன் பேரில் குண்டதாரன், “உண்மையில், தேவர்கள் என்னிடம் நிறைவு கொண்டிருப்பதால்தான், அங்கே அந்தப் பிராமணர் என்னைப் பெரிதும் மதிக்கிறார். அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஏதாவதொன்றைக் கொடுத்து உதவ வேண்டும் என நான் வேண்டுகிறேன்” என்றான்.(19)

இதைக் கேட்ட மாணிபத்ரன், தேவர்களின் உத்தரவின் பேரில் மீண்டும் பெரும் நுண்ணறிவைக் கொண்ட குண்டதாரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(20) “ஓ! குண்டதாரா, எழு, எழுவாயாக. உன் காரியம் வெற்றியடைந்தது. மகிழ்ச்சியடைவாயாக. செல்வத்தில் விருப்பமுள்ள இந்தப் பிராமணன் எவ்வளவு செல்வத்தை விரும்புவானோ, அவ்வளவு அவனுக்குக் கொடுக்கப்படும். தேவர்களின் ஆணையின் பேரில் நான் அவனுக்குச் சொல்ல முடியாத அளவுக்குச் செல்வத்தைக் கொடுப்பேன்” என்றான் {மாணிபத்ரன்}.(21,22)

அப்போது குண்டதாரன், மனிதத்தன்மையின் உண்மையற்ற நிலையையும், நிலையில்லாமையையும் சிந்தித்து, அந்தப் பிராமணரை தவங்களை நோக்கிச் செலுத்த தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(23) உண்மையில் குண்டதாரன், “ஓ! செல்வங்களை அளிப்பவரே, நான் இந்தப் பிராமணரின் சார்பாகச் செல்வத்தை வேண்டவில்லை. அவருக்கு மற்றொரு உதவியை அளிக்க விரும்புகிறேன்.(24) என் பக்தருக்காக நான் முத்துக்கள் மற்றும் ரத்தினங்கள் நிறைந்த மலைகளையோ, செல்வங்கள் அனைத்துடன் கூடிய மொத்த பூமியையோ வேண்டவில்லை. எனினும், அவர் நல்லவராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது இதயம் அறத்தில் இன்பத்தைக் காணட்டும்.(25) அவர் அறத்தைத் தம்முள் கொண்டிருக்கட்டும். அவரிடம் உள்ள பொருட்கள் அனைத்திலும் அறமே முதன்மையானதாக இருக்கட்டும். இந்த உதவியே எனக்கு ஏற்புடையதாகும்” என்றான்.(26)

மாணிபத்ரன் {குண்டதாரனிடம்}, “அரசுரிமையும், பல்வேறு வகை இன்பமும் எப்போதும் அறத்தின் கனிகளாக இருக்கின்றன. இவன் எப்போதும் அனைத்து வகை உடல் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு அக்கனிகளை அனுபவிக்கட்டும்” என்றான் {மாணிபத்ரன்}”.(27)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டும், பெரும்புகழைக் கொண்டவனான குண்டதாரன் மீண்டும் மீண்டும் அந்தப் பிராமணருக்கு அறத்தை மட்டுமே வேண்டினான். இதனால் தேவர்கள் பெரிதும் நிறைவடைந்தனர்.(28)

மாணிபத்ரன் {குண்டதாரனிடம்}, “உன்னிடமும், அந்தப் பிராமணனிடமும் தேவர்கள் பெரிதும் நிறைவடைந்திருக்கின்றனர். அவன் அறவோனாவான். அவன் தன் மனத்தை அறத்திற்கே அர்ப்பணிப்பான்” என்றான்.(29)

ஓ! யுதிஷ்டிரா, மேகமான அந்தக் குண்டதாரன், தன் விருப்பம் வெற்றியடைந்ததால் பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். அவன் பெற்ற அந்த வரம், வேறு எவராலும் அடையப்பட முடியாததாகும்.(30) அப்போது அந்தப் பிராமணர் தம்மைச் சுற்றிலும் நுட்பமான ஆடைகள் {ஸூக்ஷ்மமான மரவுரிகள்} சிதறிக் கிடப்பதைக் கண்டார். (அவை விலைமதிப்புமிக்கவையாக இருந்தாலும்) அவற்றில் மனத்தைச் செலுத்தாத அந்தப் பிராமணர் உலகச் சுவையை இழந்தார்.

அந்தப் பிராமணர், “இவன் {குண்டதாரன்} என் நற்செயல்களில் எந்த மதிப்பையும் கொள்ளவில்லையெனில், வேறு எவன் கொள்வான்? அறவாழ்வை நோற்க நான் கானகம் செல்வதே சிறந்தது” என்றார்”[2].(32)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உலகம் சார்ந்த சுவையின்மை வளர்ந்ததாலும், தேவர்களுடைய அருளின் மூலமும் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் காட்டுக்குள் நுழைந்து, கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினார்.(33) ஓ! ஏகாதிபதி, தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் கொடுத்த பிறகு எஞ்சிய கனிகள் மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்ந்து வந்த அந்த மறுபிறப்பாளரின் மனம் அறத்தில் உறுதியாக நிலைத்தது.(34) அந்தப் பிராமணர் படிப்படியாகக் கனிகளையும், கிழங்குகளையும் கூடத் துறந்து, மரங்களின் இலைகளை மட்டுமே தமது உணவாகக் கொண்டார். பிறகு இலைகளையும் துறந்து, நீரை மட்டுமே தம் உணவாகக் கொண்டார்.(35) அதன் பிறகு அவர் காற்றை மட்டுமே உண்டு பல வருடங்களைக் கழித்தார். எனினும் இக்காலம் முழுவதிலும் அவரது பலம் குன்றவில்லை. இது மிக அற்புதமான ஒன்றாகத் தெரிந்தது.(36) அறத்தில் அர்ப்பணிப்புடன், கடுந்தவங்களைச் செய்வதில் ஈடுபட்ட அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு ஆன்மப் பார்வையைப் பெற்றார்.(37)

பிறகு அவர் {அந்தப் பிராமணர்}, “நான் எவரிடமாவது நிறைவடைந்து செல்வத்தைக் கொடுத்தால், என் பேச்சு ஒருபோதும் பொய்யாகாது” என்று சொல்லித் தமக்குள்ளேயே சிந்தித்தார்[3].(38) புன்னகையால் ஒளிர்ந்த முகத்துடன் அவர் மீண்டும் கடுந்தவங்களில் ஈடுபட்டார்.(39) மீண்டும் (உயர்ந்த) வெற்றியை அடைந்த அவர், தாம் விரும்புவதன் மூலமே மிக உயர்ந்த பொருட்களைத் தம்மால் உண்டாக்க முடியும் என்று நினைத்தார். “நான் எவரிடமாவது நிறைவடைந்து அரசுரிமையைக் கொடுத்தாலும் கூட, என் வார்த்தைகள் பொய்க்காது என்பதால் அவன் உடனே மன்னனாவான்” {என்று நினைத்தார்}.(40)அந்தப் பிராமணர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்த போதே, குண்டதாரன், அவரிடம் கொண்ட நட்பாலும், அந்தப் பிராமணர் அடைந்த தவ வெற்றியாலும் தூண்டப்பட்டு, (தன் நண்பரும், பக்தருமான அவரிடம்) தன்னைக் காட்டிக் கொண்டான்.(41) அவனைச் சந்தித்த அந்தப் பிராமணர், நடைமுறை விதிகளின் படி அவனுக்குண்டான வழிபாடுகளைச் செய்தார். எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பிராமணர் சற்றே ஆச்சரியமடையவும் செய்தார்.(42)

அப்போது, குண்டதாரன் அந்தப் பிராமணரிடம், “நீர் இப்போது சிறந்த ஆன்மக் கண்ணை அடைந்திருக்கிறீர். உமக்குக் கிட்டிய இந்தப் பார்வையைக் கொண்டு மன்னர்களால் அடையப்படும் கதியைக் காண்பீராக. அதையும் தவிர்த்து உலகங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வீராக” என்றான்.(43) அப்போது அந்தப் பிராமணர், நரகத்தில் மூழ்கிய ஆயிரக்கணக்கான மன்னர்களைத் தமது ஆன்மப் பார்வையால் தொலைவில் இருந்தே கண்டார்.(44)

குண்டதாரன் {பிராமணரிடம்}, “பக்தியுடன் என்னை வழிபட்ட பிறகு, உமது பங்காக நீர் கவலையையே அடைந்தீரென்றால், நான் உமக்குச் செய்த நன்மை என்ன? நான் செய்த உதவியின் மதிப்பென்ன?(45) பாரும், என்ன கதியை அடைவதற்காக மனிதர்கள் உடல்சார்ந்த இன்பங்களில் நிறைவை விரும்புகிறார்கள் என்பதைப் பாரும். சொர்க்கத்தின் கதவு மனிதர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கிறது” என்றான்”.(46)

பீஷ்மர் தொடர்ந்தார், “பிறகு அந்தப் பிராமணர், இவ்வுலகில் காமம், கோபம், பேராசை, அச்சம், செருக்கு, உறக்கம், எதிலும் தாமதம் {மயக்கம்}, செயலின்மை {சோம்பல்} ஆகியவற்றைத் தழுவி வாழும் மனிதர்கள் பலரைக் கண்டார்.(47)

குண்டதாரன், “மனிதர்கள் அனைவரும் இவற்றால் ({காமம் முதலிய} தீய ஒழுக்கங்களால்) கட்டப்பட்டிருக்கிறார்கள். மனிதர்களைக் கண்டு தேவர்கள் அஞ்சுகின்றனர். தேவர்களின் ஆணையின் பேரில் இந்தத் தீயொழுக்கங்கள் அனைத்துப் புறங்களிலும் அழித்துக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன[4].(48) தேவர்களின் அனுமதி இல்லாமல் எந்த மனிதனும் அறவோனாவதில்லை. (அவர்களுடைய அனுமதியின் விளைவால்) உமது தவங்களின் மூலம் நீர் நாடுகளையும், செல்வங்களையும் கொடுக்கும் தகுதியை அடைந்திருக்கிறீர்” என்றான்”.(49)பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டவரும், அற ஆன்மா கொண்டவருமான அந்தப் பிராமணர், அம்மேகத்திடம் {குண்டதாரனிடம்} தலைவணங்கி, நெடுஞ்சாண்கிடையாகத் தம்மைத் தரையில் கிடத்திக் கொண்டு, “உண்மையில், நீ எனக்குப் பேருதவியைச் செய்திருக்கிறாய்.(50) நீ என்னிடம் கொண்ட பெரும் பற்றை உணராமல், ஆசை மற்றும் பேராசையின் ஆதிக்கத்தால் நான் உனக்கு நன்மதிப்பைக் காட்டத் தவறிவிட்டேன் {நன்றி மறந்துவிட்டேன்}” என்றார்.(51)

அப்போது குண்டதாரன் அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரிடம், “நான் உம்மை மன்னித்தேன்” என்று சொல்லி அவரைத் தன் கரங்களால் ஆரத்தழுவிக் கொண்டு அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(52) பிறகு, குண்டதாரனுடைய அருளின் மூலம் தவ வெற்றியை அடைந்த அந்தப் பிராமணர், உலகங்கள் அனைத்திலும் திரிந்து கொண்டிருந்தார்.(53) அறம் மற்றும் தவங்களின் மூலம் பலத்தை ஈட்டிய ஒருவன், வானத்தில் மிதந்து பயணிக்கும் {கமனம் செய்யும்} தகுதியையும், தன் விருப்பங்கள் மற்றும் நோக்கங்கள் அனைத்தையும் கனியச் செய்யும் தகுதியையும் அடைந்து, இறுதியாக உயர்ந்த கதியை அடைகிறான்.(54) தேவர்கள், பிராமணர்கள், யக்ஷர்கள், நல்லோர், சாரணர்கள் ஆகியோர் எப்போதும் அறவோரைத் துதிப்பாரேயன்றி, ஒருபோதும் வளமானவரையோ, ஆசைகளில் ஈடுபாடு கொள்பவர்களையோ துதிப்பதில்லை.(55) உன் மனம் அறத்தில் அர்ப்பணிப்புடன் இருப்பதால் தேவர்கள் உண்மையில் உனக்குச் சாதகமானவர்களாக இருக்கிறார்கள். செல்வத்தால் சிறு மகிழ்ச்சி ஏற்படலாம், ஆனால் அறத்தால் கிட்டும் இன்பத்தின் அளவு மிகப் பெரியதாகும்” என்றார் {பீஷ்மர்}.(56)

வேள்வியும் பிரம்மமும்! – சாந்திபர்வம் பகுதி – 272-வேள்வியில் உயிர்க்கொலை நேர்வதால் அஃது இழிந்ததென்பற்காக நாரதர் சொன்ன உஞ்சவிருத்தி பிராமணரின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “(இதயத் தூய்மை, அல்லது தேவ மகிமை என்ற) ஒரே நோக்கத்திற்காக உள்ளவை எனக் கருதப்படும் பல்வேறு வகை வேள்விகளில், ஓ! பாட்டா, எந்த வேள்வியானது, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ அடைவதற்காக அல்லாமல் அறத்திற்காக (அல்லது அறமீட்டுவதற்காக) மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, வேள்விகளைச் செய்வதற்காக உஞ்ச முறையின்படி வாழ்ந்து வந்த ஒரு பிராமணரைக் குறித்து முன்பு நாரதரால் சொல்லப்பட்ட வரலாற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2)

நாரதர் {பீஷ்மரிடம்}, “அறத்திற்காகத் தனித்தறியப்பட்ட ஒரு முதன்மையான நாட்டில் {விதர்ப்ப நாட்டில்} ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார்[1]. தவங்களில் அர்ப்பணிப்புடன், உஞ்ச முறையின் படி வாழ்ந்து வந்த அந்தப் பிராமணர், வேள்விகளில் விஷ்ணுவைத் துதிப்பதில் மெய்யுறுதிப்பாட்டுடன் ஈடுபட்டு வந்தார்[2].(3) அவர், சியாமாகம் {சாமைத்தானியம்}, ஸூர்யபர்ணி {மாஷபருணி [ஒரு பயறு வகை]}, ஸுவர்ச்சலை {பிராமிசகம் / ஆளிவிதைகள்} மற்றும் கசப்பானவையும், சுவையில் இனிமையற்றவையுமான வேறுவகைக் கீரைகளை {சாகங்களையும்} தம் உணவாகக் கொண்டார். எனினும், அவரது தவத்தின் விளைவாக இவை அனைத்தும் இனிமையாகச் சுவைத்தன.(4) எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல், வானப்பிரஸ்த வாழ்வை வாழ்ந்த அவர் தவ வெற்றியை அடைந்தார். ஓ! எதிரிகளை எரிப்பவரே {பீஷ்மரே}, கிழங்குகளையும், கனிகளையும் கொண்டு அவர், தமக்குச் சொர்க்கத்தை அளிக்கவல்ல வேள்விகளில் விஷ்ணுவைத் துதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்[3].(5)சத்தியர் என்ற பெயரைக் கொண்ட அந்தப் பிராமணருக்கு, பஷ்கரதாரிணி {புஷ்கரமாலினி / புஷ்கரசாரினி} என்ற பெயரில் ஒரு மனைவி இருந்தாள். அவள் தூய மனதைக் கொண்டவளாக இருந்தாள், மேலும் அவள் கடும் நோன்புகள் பலவற்றால் தன்னை மெலியச் செய்திருந்தாள். (அவள் நன்மையைத் தரும் மனநிலையில் இருந்தாலும், அவளது கணவர், இவ்வாறு கொடூரமான வேள்விகளுக்கு அடிமையாக இருந்தார்). அவள் தன் தலைவரின் ஒழுக்கத்தை அங்கீகரிக்கவில்லை. எனினும், (வேள்வி செய்வதற்காக) அவரது மனைவியாக அவரருகில் அமர அழைக்கும்போது, அவரது சாபத்திற்கு அஞ்சிய அவள், அவரது நடத்தைக்குத் தக்கவே தன்னைத் தகவமைத்துக் கொண்டாள். அவளது உடலை மறைத்திருந்த ஆடைகள் மயில்களின் (உதிர்ந்த) தோகைகளாலானதாக இருந்தது.(6,7) இதில் அவள் விருப்பமில்லாதவளாக இருந்தாலும், ஹோத்ரியாக {தீக்ஷிதராக} இருந்த தன் தலைவரின் ஆணையின் பேரில் அந்த வேள்வியைச் செய்தாள். அந்தக் காட்டில், அந்தப் பிராமணரின் ஆசிரமத்திற்கருகில், மானின் வடிவத்தை ஏற்றவரும் சுக்ர குலத்தைச் சேர்ந்தவரும், அறம்சார்ந்தவருமான பர்னாதர் என்பவர் வாழ்ந்து வந்தார்[4]. அவர் {பர்னாதர்}, சத்தியர் என்ற பெயர் கொண்ட அந்தப் பிராமணரிடம் வெளிப்படையாகப் பேசும் வகையில், “மந்திரங்கள் மற்றும் சடங்குகளுக்குரிய பிற பொருட்களில் குறைபாடுள்ள இதுபோன்ற வகையில் உமது வேள்வி நிறைவடைந்தால், நீர் மிகவும் முறையற்ற வகையில் செயல்பட்டவராவீர். எனவே, உமது வேள்வி நெருப்புக்கான ஆகுதிகளைச் செய்வதற்காக என்னைக் கொன்று துண்டுகளாக வெட்டுவீராக. இதைச் செய்து, பழியற்றவராகி, சொர்க்கத்திற்கு உயர்வீராக” என்றார்.(8-10)அப்போது சூரிய வட்டிலின் தலைமைத் தேவியான சாவித்திரி உடல் கொண்ட வடிவத்துடன் அந்த வேள்விக்கு வந்து, அந்த மான் செய்யச் சொன்னதை அந்தப் பிராமணர் {சத்தியர்} செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினாள். இவ்வாறு வற்புறுத்திய அந்தத் தேவியிடம் அந்தப் பிராமணர், “நான் வசிக்குமிடத்திற்கு அருகிலேயே வாழும் இந்த மானை நான் கொல்ல மாட்டேன்” என்று மறுமொழி கூறினார்.(11)

இவ்வாறு அந்தப் பிராமணரால் சொல்லப்பட்ட தேவி சாவித்திரி, விலகியவளாக அந்த வேள்வியின் (பிற) குறைகளைக் காண்பதைத் தவிர்க்கவும், பாதாள உலகை ஆய்வு செய்யவும் விரும்பி அந்த வேள்வி நெருப்புக்குள் நுழைந்தாள்.(12) பிறகு அந்த மானானது {கலைமானானது}, (தன்னைத் துண்டுகளாக வெட்டி வேள்வி நெருப்பில் ஊற்றுமாறு) சத்தியரிடம் மன்றாடிக் கேட்டது. எனினும், நட்புடன் அவரை {மானின் வடிவத்தில் இருந்த பர்னாதரை} ஆரத்தழுவி, “செல்வீராக” என்று சொல்லி விடைகொடுத்து அனுப்பினார்.(13) இதனால் அந்த மான் அந்த இடத்தை விட்டுச் செல்வதாகத் தெரிந்தது. ஆனால் எட்டு அடி எடுத்து வைத்ததும் மீண்டும் திரும்பி, “உண்மையில் என்னை நீர் கொல்வீராக. உம்மால் கொல்லப்படும் நான் நியாயமான கதியை நிச்சயம் அடைவேன் என்று உமக்கு உண்மையாகச் சொல்கிறேன். நான் உமக்கு (தெய்வீகப்) பார்வைக் கொடுக்கிறேன். தெய்வீக அப்சரஸ்களையும், உயர் ஆன்ம கந்தர்வர்களின் அழகிய வாகனங்களையும் காண்பீராக” என்றது.(15)

ஏக்கத்துடன் கூடிய கண்களால், நீண்ட நேரம் (அந்தக் காட்சியைக்) கண்டும், (வேள்விக்காக வேண்டும்) அந்த மானைக் கண்டும், கொலையால் மட்டுமே சொர்க்கவாசத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையிலும், (அந்த மான் சொன்ன ஆலோசனையை) அவர் அங்கீகரித்தார் {தீர்மானம் கொண்டார்}.(16) தர்மனே மானாகி அந்தக் காட்டில் பல வருடங்கள் மானாக வாழ்ந்து வந்தான். (வாய்ப்பைக் கண்டு மயங்கிய பிராமணரைக் கண்ட) தர்மன், அவரது விடுதலைக்கான ஆலோசனைகளைச் சொல்லும் வகையில், “வேள்வி குறித்த விதிகளுக்கு இஃது (உயிரினங்களைக் கொல்வது) இணக்கமானதில்லை” என்றான்[5].(17)அந்தப் பிராமணரின் மனம் மானைக் கொல்ல விரும்பிய இந்தச் சிந்தனையின் விளைவால், அவர் செய்த பெரிய அளவிலான தவங்கள் மிகவும் குறைந்த நிலையை அடைந்தன. எனவே, உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பது வேள்வியின் எந்தப் பகுதியுமாகாது[6].(18) சிறப்புமிக்கத் தர்மன், (தன் உண்மை வடிவை ஏற்று), அந்தப் பிராமணர் வேள்வி செய்வதற்காகப் புரோஹித அலுவலைச் செய்து துணைபுரிந்தான். அதன் பிறகு, அந்தப் பிராமணர் (புத்துயிர் பெற்ற) தமது தவங்களின் விளைவால், தமது மனைவியின் மனநிலையை அடைந்தார்[7]“.(19) வெகுமதிகளைப் பொறுத்தவரையில் தீங்கிழையாமை என்ற அறமே முழுமையானதாகும். எனினும், கொடுமையைக் கொண்ட அறமானது, (முடிவுடன் கூடிய) சொர்க்கம் என்ற அளவுக்கு மட்டுமே நன்மையைத் தரும். நான் உம்மிடம் பிரம்மத்தை உச்சரிப்பவர்களின் அறமான வாய்மை அறத்தைக் குறித்துப் பேசிருக்கிறேன்” {என்றார் நாரதர்}.(20)

அறத்தின் மேன்மை! – சாந்திபர்வம் பகுதி – 273-ஒருவன் மேன்மையடைவதற்கு அறமே காரணமென யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எந்த வழிமுறைகளின் மூலம் ஒரு மனிதன் பாவம் நிறைந்தவனாகிறான்? எதன் மூலம் அவன் அறமீட்டுகிறான்? எதன் மூலம் அவன் துறைவை அடைகிறான்? எதன் மூலம் அவன் விடுதலையை {முக்தியை} வென்றெடுக்கிறான்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நீ கடமைகள் அனைத்தையும் அறிவாய். உன் தீர்மானங்களை உறுதி செய்து கொள்வதற்காக மட்டுமே நீ இக்கேள்வியைக் கேட்கிறாய். விடுதலை {முக்தி}, துறவு, பாவம், அறம் ஆகியவற்றை, அவற்றின் வேர் வரை இப்போது கேட்பாயாக.(2) ஐந்து {புலன் நுகர்} பொருட்களை (வடிவம் {ஒளி}, சுவை, மணம், ஒலி, தீண்டல் {ஊறு})[1] உணரும் எவனுடைய விருப்பமும் முதலில் அவற்றின் பின்னால் ஓடுவதிலேயே இருக்கிறது. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் தலைவா, புலன்களின் அகப்பாட்டெல்லைக்குள் அவை வந்ததும், விருப்போ வெறுப்போ எழுகிறது.(3) ஒருவன், அந்தப் பொருளை அடைவதற்காக (விரும்பியதை அடைவதற்காகவும், வெறுப்பதைத் தவிர்ப்பதற்காகவும்) முனைந்து, அதிக உழைப்பைக் கோரும் செயல்களைத் தொடங்குகிறான். அவனுக்கு மிக ஏற்புடையவையாகத் தோன்றும் வடிவங்களையும், மணங்களையும் (எஞ்சிய மூன்று புலன்களுக்குரிய மூன்று பொருட்களையும்) மீண்டும் மீண்டும் அனுபவிப்பதற்காகத் தன்னால் முடிந்த சிறந்த முறையில் முயற்சிக்கிறான்.(4)படிப்படியாக, பற்று {ராகம்}, வெறுப்பு {த்வேஷம்}, பேராசை {லோபம்}, தீர்மானப்பிழை {மோகம்} ஆகியவை எழுகின்றன.(5) பேராசை மற்றும் பிழையில் மூழ்கியதும், பற்று மற்றும் வெறுப்பினால் பாதிப்படைந்ததுமான மனம் ஒருபோதும் அறத்தை நோக்கிச் செல்லாது.(6) உண்மையில், அவன் கபடமான முறையில் அறத்தை அடைய முயற்சிக்கிறான், கபடமான முறையில் செல்வத்தை அடைய விரும்புகிறான். ஓ! குருகுலத்தின் மகனே {யுதிஷ்டிரனே}, கபடத்தால் செல்வத்தை ஈட்டுவதில் ஒருவன் வெல்லும்போது,(7) அத்தகைய ஈட்டலில் முழுமையாகத் தன் இதயத்தை நிறுத்துகிறான். அப்போதுதான் அவன், நலன்விரும்பிகள் மற்றும் விவேகிகளால் நயமாகக் கண்டிக்கப்பட்டாலும், அறிவுக்குச் சரியாகப் பொருந்தக்கூடியவையும், சாத்திரவிதிகளுக்கு இணங்கக்கூடியவையுமான பதில்களை அனைவருக்கும் அளித்து, பாவம் நிறைந்த செயல்களைச் செய்யத் தொடங்குகிறான்.(8)

அவன் பாவம் நிறைந்த வகையில் சிந்திப்பதாலும், பாவம் நிறைந்த வகையில் பேசுவதாலும், பாவம் நிறைந்த வகையில் செயல்படுவதாலும், பற்று மற்றும் பிழையில் பிறந்த அவனது மூவகைப் பாவங்கள் மிக வேகமாக அதிகரிக்கின்றன.(9) அவன் பாவ வழியில் நடக்கத் தொடங்கும்போதே, நல்லோர் அவனது தீய தன்மையைக் குறித்துக் கொள்கின்றனர். எனினும், அந்தப் பாவம் நிறைந்த மனிதனுக்கு ஒப்பான மனநிலையுடன் கூடியவர்கள், அவனுடன் நட்பு கொள்கின்றனர்.(10) அவன் இம்மையில் மகிழ்ச்சி அடைவதில் வெல்வதில்லை. அவ்வாறிருக்கையில், மறுமையில் எவ்வாறு மகிழ்ச்சியை அடைவான்? இவ்வாறே ஒருவன் பாவம் நிறைந்தவனாகிறான். அறவோர் குறித்து இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(11) அத்தகைய மனிதன் எந்த அளவுக்குப் பிறரின் நன்மையை நாடுகிறானோ, அந்த அளவுக்குத் தனக்கான நன்மையை அடைவதில் வெல்கிறான். பிற மக்களுக்கான நன்மை நிறைந்த கடமைகளைப் பயில்வதன் மூலம், அவன் மிக உயர்ந்த கதியை இறுதியில் அடைகிறான்.(12)

எவன், தன் ஞானத்தின் உதவியுடன் மேற்குறிப்பிட்ட குற்றங்களைக் காண்கிறானோ, எவன் மகிழ்ச்சி எது, துன்பம் எது, அவை ஒவ்வொன்றும் எவ்வாறு அடையப்படுகிறது என்பதைத் தீர்மானிப்பதில் திறம் பெற்றவனாக இருக்கிறானோ, எவன் நல்லோரிடம் மதிப்புடன் காத்திருக்கிறானோ {பணிவிடை செய்கிறானோ},(13) அவன் நல்லோருடனான பழக்கம் மற்றும் அத்தகைய தோழமை ஆகிய இரண்டின் விளைவால் அறத்தை ஈட்டுவதில் முன்னேற்றமடைகிறான். அத்தகையவனின் மனமானது, அறத்தில் திளைக்கும், அவன் அறத்தையே தன் ஆதரவாகச் செய்து கொண்டு வாழ்வான்.(14) அவன் செல்வத்தை ஈட்டுவதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினால், அத்தகைய செல்வத்தை நல்வழிகளில் அடைவதற்கு மட்டுமே அவன் விரும்புவான்.(15) உண்மையில், அவன் தகுதியை {புண்ணியத்தைக்} காணும் பொருட்களின் வேர்களில் மட்டுமே நீரை ஊற்றுவான். இவ்வழியிலேயே ஒருவன் அறவோனாகி, நல்லோரைத் தன் நண்பர்களாக அடைகிறான்.(16)

நண்பர்கள், செல்வம், பிள்ளைகள் ஆகியவற்றை அடைவதன் விளைவால் அவன் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறான். (இன்பத்தைப் பொறுத்தவரையில்) எந்த உயிரினமும், தான் பெறும் ஒலி, தீண்டல், சுவை, வடிவம் மற்றும் மணம் ஆகியவற்றில் சிறப்பாளுமையை அறத்தின் கனியாக {தர்ம பலமாக} அடைகிறது. இதை நினைவில் கொள்வாயாக. ஓ! யுதிஷ்டிரா, அறத்தின் கனியை {தர்மபலத்தைப்} பெற்ற மனிதன் இன்பத்திற்கு வசப்படுவதில்லை.(17,18) (புலப்படத்தக்க) இத்தகைய அறத்தின் கனிகளில் நிறைவடையாமல், ஞானக்கண்ணால் வழிநடத்தப்படும் அவன் துறவை மேற்கொள்கிறான். அவன் ஞானக்கண்ணை அடையும்போது, சுவை மற்றும் மணம் முதலிய ஆசைகளின் நிறைவில் இன்பங்கொள்வதை நிறுத்துகிறான்.(19) அவன் தன் மனத்தை ஒலி, தீண்டல், வடிவம் முதலியவற்றை நோக்கி ஓட அனுமதிக்காத போதுதான், ஆசையில் இருந்து விடுபடுவதில் வெல்கிறான். எனினும் அவன் அறத்தையோ, அறச்செயல்களையோ ஒருபோதும் கைவிடமாட்டான்.(20)

பிறகு, உலகங்கள் அனைத்தும் அழியத்தக்கனவே என்பதைக் காணும் அவன், (சொர்க்கம் மற்றும் இன்பம் ஆகிய வடிவங்களிலான வெகுமதிகளுடன் கூடிய) அறத்தைக் கைவிட முனைந்து, (நன்கறியப்பட்ட) வழிமுறைகளின் மூலம் விடுதலையை {முக்தியை} அடைய முயற்சிக்கிறான்.(21) பாவம் நிறைந்த அனைத்துச் செயல்களையும் படிப்படியாகக் கைவிடும் அவன், துறவை மேற்கொண்டு, அற ஆன்மாவாகி, இறுதியில் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான்.(22) ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, ஓ! பாரதா, நீ கேட்ட பாவம், அறம், துறவு, விடுதலை {முக்தி} ஆகியவற்றைக் குறித்து நான் இப்போது சொன்னேன்.(23) எனவே, ஓ! யுதிஷ்டிரா, நீ அனைத்துச் சூழ்நிலைகளிலும் அறத்தையே பின்பற்ற வேண்டும். ஓ! குந்தியின் மகனே, அறத்தைப் பின்பற்றும் உனக்கு வெற்றி நித்தியமானதாகும்” என்றார் {பீஷ்மர்}[2].(24)

முக்தி! – சாந்திபர்வம் பகுதி – 274-முக்தி அடைவதற்கான வழிமுறைகள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, விடுதலையை {முக்தியை} வழிமுறைகளால் வென்றெடுக்க முடியுமேயன்றி வேறு வகையிலல்ல என்று நீர் சொன்னீர். அவ்வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து நான் முறையாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் ஞானியே, வழிமுறைகளைச் செயல்படுத்துவதன் மூலம் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்ற எப்போதும் முனைபவனாக நீ இருப்பதால், ஓ! பாமற்றவனே, நுட்பமான காரியத்தைக் குறித்து நீ செய்யும் இந்த விசாரணை உண்மையில் உனக்குத் தகுந்ததே ஆகும்.(2) ஒருவன் தன் பயன்பாட்டுக்காக மண் குடத்தைச் செய்யும்போது இருந்த மனநிலை, அந்தக் குடம் {மண்குடத்தைச் செய்யும் அந்தப் பணி} நிறைவடைந்ததும் மறைந்தது போகிறது. அதே வகையிலேயே, எந்தக் காரணம் ஒரு மனிதனை முன்னேற்றத்திற்கும், செழிப்புக்குமான வேராக அறத்தைக் கருதச் செய்யுமோ, அது {அந்தக் காரணம்} விடுதலையை அடைய முனைபவர்களிடம் இல்லாமல் போகிறது[1].(3) கிழக்கத்திப் பெருங்கடலுக்கு வழிவகுக்கும் பாதையின் மூலம் ஒருவன் மேற்கத்திப் பெருங்கடலுக்குச் செல்ல முடியாது. விடுதலைக்கான {முக்திக்கான} வழிவகுக்க ஒரே பாதை மட்டுமே இருக்கிறது. (அடையத்தக்க வேறு எந்தப் பொருளுக்கும் வழிவகுக்கும் எதுவும் அதனோடு ஒப்பிடத்தக்கதல்ல). இது குறித்து விளக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)பிழைபொறுத்தல் பயில்வது {மன்னிப்பது}, கோபத்தை அழிப்பது, அனைத்து நோக்கங்களையும் கைவிடுவது ஆகியவற்றின் மூலம் ஒருவன் ஆசையை வேரறுக்க வேண்டும். சத்வ குணத்தைப் பயில்வதன் மூலம்[2] ஒருவன் உறக்கத்தை {சோம்பலை} வெல்ல வேண்டும்.(5) விழிப்புணர்வின் மூலம் ஒருவன் அச்சத்தை விலக்க வேண்டும், ஆன்ம சிந்தனையின் மூலம் ஒருவன் மூச்சை வெல்ல வேண்டும்[3]. பொறுமையின் மூலம் ஒருவன் விருப்பு, வெறுப்பு, காமம் ஆகியவற்றை விலக்க வேண்டும்;(6) பிழை {குற்றம்}, அறியாமை, ஐயம் ஆகியவற்றை உண்மை கல்வியின் மூலம் விலக்க வேண்டும். ஞானத்தைத் தேடுவதன் மூலம் ஒருவன் அக்கறையின்மை மற்றும் விருப்பமில்லாத பொருட்களைக் குறித்த விசாரணை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்[4].(7) மிகக் குறைந்த அளவில் எளிய, செரிக்கத்த உணவின் மூலம் ஒருவன் சீரின்மை மற்றும் நோய்கள் அனைத்தையும் விலக்க வேண்டும். நிறைவின் மூலம் ஒருவன் பேராசை மற்றும் தீர்மான மயக்கம் ஆகியவற்றையும், உண்மை ஞானத்தின் மூலம் உலகம் சார்ந்த அனைத்து காரியங்களையும் தவிர்க்க வேண்டும்[5].(8)நல்லுணர்வைப் பயில்வதன் மூலம் ஒருவன் அநீதியை வெல்ல வேண்டும். அனைத்து உயிரினங்களையும் மதிப்பதன் மூலம் ஒருவன் அறத்தை ஈட்ட வேண்டும். எதிர்பார்ப்பு எதிர்காலம் தொடர்புடையது என்பதைச் சிந்திப்பதன் மூலம் ஒருவன் அதைத் தவிர்க்க வேண்டும்; ஆசையைக் கைவிடுவதன் மூலம் அவன் செல்வத்தைக் கைவிட வேண்டும்.(9) (இம்மையில் உள்ள) அனைத்தும் நிலையற்றவை என்பதைச் சிந்திப்பதன் மூலம் நுண்ணறிவு கொண்ட ஒரு மனிதன் பற்றைக் கைவிட வேண்டும். அவன் யோகம் பயில்வதன் மூலம் பசியை அடக்க வேண்டும். நல்லுணர்வைப் பயில்வதன் மூலம் அவன் தன்முக்கியத்துவம் கொண்ட கருத்துகளை அனைத்தையும் விலக்கி, மனநிறைவின் மூலம் அனைத்து வகைத் தீவிர நாட்டங்களையும் விரட்ட வேண்டும்.(10) உழைப்பின் மூலம் ஒருவன் காரிய தாமதத்தையும், உறுதிப்பாட்டின் மூலம் அனைத்து வகை ஐயங்களையும், எண்ணங்களை வெளியிடாததன் மூலம் அளப்பளத்தலையும் {அதிகம் பேசுவதையும்}, துணிவின் மூலம் அனைத்து வகை அச்சங்களையும் அடக்க வேண்டும்[6].(11) புத்தியின் மூலம் வாக்கும், மனமும் அடக்கப்பட வேண்டும். ஞானக்கண்ணின் மூலம் புத்தி அடக்கப்பட வேண்டும். ஆன்ம அறிவின் மூலம் ஞானமும், இறுதியாக ஆன்மாவின் {பரமாத்மாவின்} மூலம் ஆன்மாவும் {அகங்காரம்} கட்டுப்படுத்தப்பட வேண்டும்[7].(12)தூய செயல்களையும், அமைதியான ஆன்மாவையும்[8] கொண்டோர், கல்விமான்களால் சொல்லப்படும் யோகத்தின் ஐந்து தடைகளை அடக்குவதன் மூலம் இந்த இறுதியான நிலையை {ஆன்மாவில் ஆன்மா கலக்கும் நிலையை} அடைகின்றனர்.(13) ஆசை, கோபம், பேராசை, அச்சம், உறக்கம் {சோம்பல்} ஆகியவற்றைக் கைவிடுவதன் மூலம் ஒருவன் பேச்சைக் கட்டுப்படுத்தி, யோகத்திற்குச் சாதகமான பழக்கங்களான(14) தியானம், கல்வி, கொடை, வாய்மை, பணிவு, வெளிப்படைத்தன்மை, பிழைபொறுக்கும் {மன்னிக்கும்} தன்மை, இதயத் தூய்மை, உணவுத்தூய்மை, புலனடக்கம் ஆகியவற்றைப் பயில வேண்டும்.(15) இவற்றின் மூலம் ஒருவனுடைய சக்தி பெருகி, பாவங்கள் அகன்று, விருப்பங்கள் கனியால் மகுடம் சூட்டப்பட்டு, (பல்வேறு வகைகளிலான) ஞானம் அடையப்படுகிறது.(16)ஒருவன் தன் பாவங்கள் கழுவப்பட்டு, சக்தி மற்றும் எளிய உணவைக் கொண்டு தன் புலன்களுக்குத் தலைவனாகி, ஆசை மற்றும் கோபம் ஆகிய இரண்டையும் வெல்லும்போது, பிரம்மத்தை அடைய முனைகிறான்.(17) (சாத்திரங்களைக் கேட்பது மற்றும் கற்பதன் மூலம் கிட்டும்) அறியாமை தவிர்ப்பு, (துறவின் விளைவால் உண்டாகும்) பற்றின்மை, (மனநிறைவு மற்றும் பிழைபொறுத்தலைப் பின்பற்றுவதன் மூலம் கிட்டும்) கோபம் மற்றும் ஆசையில் இருந்து விடுதலை {கோபமின்மை மற்றும் ஆசையின்மை}, யோகத்தின் மூலம் வெல்லப்படும் பலம், செருக்கு மற்றும் அலட்சியம் இன்மை, (அனைத்து வகை அச்சத்தையும் அடக்குவதன் மூலம் கிட்டும்) கவலையில் இருந்து விடுதலை {கவலையின்மை} இல்லம் மற்றும் குடும்பம் போன்ற எதனிலும் பற்றின்மை(18) ஆகியவையே விடுதலையின் {முக்தியின்} பாதையாக அமைகின்றன. அந்தப் பாதை இனிமைநிறைந்ததும், களங்கமற்றதும், தூய்மையானதுமாகும். அதேபோல, ஆசையின்மையின் மூலம் செய்யப்படும் வாக்கு, உடல் மற்றும் மனக்கட்டுப்பாடு ஆகியவையும் விடுதலையின் பாதையாக அமைகின்றன” என்றார் {பீஷ்மர்}.(19)

பிறப்பிறப்பு! – சாந்திபர்வம் பகுதி – 275-யிரினங்களின் பிறப்பு இறப்பு குறித்து நாரதருக்கும் தேவலருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்கதையில் நாரதருக்கும் அசித-தேவலருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(1) ஒரு காலத்தில் நாரதர், நுண்ணறிவு மிக்க மனிதர்களில் முதன்மையானவரும், முதிர்ந்த வயதைக் கொண்டவருமான தேவலர் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரிடம் உயிரினங்கள் அனைத்தின் தோற்றம் மற்றும் முறைவு குறித்துக் கேட்டார்.(2)

நாரதர் {அசிதரிடம்}, “ஓ! பிராமணரே, அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட இந்த அண்டம் எதிலிருந்து உண்டானது? அனைத்தையும் தழுவும் அழிவானது எப்போது நேர்கிறது? எதனுள் அது கலக்கிறது? கல்விமானான நீர் இது குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(3)

அசிதர் {நாரதரிடம்}, “வேளை நேர்கையில், பல்வேறு வடிவங்களிலான இருப்பை விரும்பிய பரமாத்மாவால், எவற்றில் இருந்து அனைத்து உயிரினங்களும் உண்டாக்கப்பட்டனவோ, அவை ஐந்து பெரும் சாரங்களே {ஐம்பெரும்பூதங்களே} என்று பொருட்களை அறிந்த மனிதர்களால் சொல்லப்படுகிறது.(4) (அதன் பிறகு) புத்தியால் தூண்டப்பட்ட காலமானது, அவற்றில் இருந்து (அந்த ஐந்து அடிப்படை சாரங்களில் இருந்து) பிற பொருட்களை உண்டாக்குகிறது. எவன் இவற்றை (ஐந்து அடிப்படை சாரங்கள் {பூதங்கள்}, காலம் மற்றும் புத்தி ஆகியவற்றைத்) தவிர வேறெதனையும் சொல்கிறானோ அவன் உண்மையல்லாததைச் சொல்கிறான்.(5) ஓ! நாரதரே, இவ்வைந்தும் {இந்த ஐந்து பூதங்களும்} நித்தியமானவை, அழிவற்றவை, தொடக்கமும் முடிவும் அற்றவை என்பதை அறிவீராக. காலத்தை ஆறாவதாகக் கொண்ட இந்த ஐந்து அடிப்படை சாரங்களும் {பூதங்களும்} இயல்பாகவே பெருஞ்சக்தியைக் கொண்டிருக்கின்றன.(6) நீர், ஆகாயம், பூமி, காற்று மற்றும் வெப்பம் ஆகியவையே அந்த ஐந்து சாரங்களாகும். (பலத்திலோ, சக்தியிலோ) இவற்றுக்கு உயர்ந்தவையோ, மேன்மையானவையோ வேறெவையும் கிடையாது என்பதில் ஐயமில்லை.(7) ஸ்ருதிகளில் இருந்து அடையப்படும் தீர்மானங்கள் அல்லது அறிவில் இருந்து உண்டாகும் வாதங்களுக்கு ஏற்புடைய வகையில் (இந்த ஐந்தைத் தவிர) வேறெதன் இருப்பையும் எவராலும் உறுதி செய்ய முடியாது. எவராவது வேறெதன் இருப்பையும் உறுதி செய்தால், அவனது உறுதிப்பாடு வீணானதாகும். இந்த ஆறும் சேர்ந்து அனைத்து விளைவுகளையும் உண்டாக்குகின்றன. (நீர் உணரும்) இவை அனைத்தும் அசத் என்று அழைக்கப்படுகின்றன[1].(8)இந்த ஐந்தும், காலமும் (அல்லது ஜீவனும்), முற்பிறவி செயல்களின் ஆற்றலும், அறியாமையும் என்ற இந்த எட்டும் அனைத்து உயிரினங்களின் பிறப்பு மற்றும் அழிவை உண்டாக்கும் நித்திய சாரங்களாகும்[2].(9) உயிரினங்கள் அழிவடையும்போது இவற்றுக்குள்ளேயே அவை நுழைகின்றன; அவை பிறப்படையும்போது அவற்றில் இருந்தே அவை பிறக்கின்றன. உண்மையில், ஓர் உயிரினம் அழிவுக்குப் பிறகு அந்த ஐந்து அடிப்படை சாரங்களிலேயே {பூதங்களிலேயே} உறுதியடைகிறது.(10) அவனது உடல் பூமியால் ஆகிறது; அவனது காது ஆகாயத்தால் உண்டாகிறது; அவனது கண் ஒளியால் உண்டாகிறது; அவனது உயிர் (அசைவு) காற்றால் உண்டாகிறது; அவனது குருதி நீரால் உண்டாகிறது என்பதில் ஐயமில்லை.(11) இரண்டு கண்கள், மூக்கு, இரண்டு காதுகள், தோல், (ஐந்தாவதாக அமையும்) நாக்கு ஆகியவையே புலன்களாகும். இவை, அதனதனுக்குரிய பொருட்களை உணர்வதற்காக இருக்கின்றன எனக் கல்விமான்கள் அறிகிறார்கள்.(12) பார்வை, கேள்வி, நுகர்வு, தீண்டல், சுவை ஆகியன புலன்களின் செயல்பாடுகளாகும். ஐம்புலன்களும், ஐந்து வழிகளில் ஐந்து பொருட்களோடு தொடர்பு கொள்கின்றன. அறிவின் உள்ளுணர்வால் அவற்றின் குண ஒப்புமையை அறிவீராக[3].(13)வடிவம், மணம், சுவை, தீண்டல் மற்றும் ஒலி ஆகியன ஐந்து வெவ்வேறு வழிகளில் ஐம்புலன்களால் உணரப்படும் ஐந்து குணங்களாகும் {தன்மைகளாகும்}.(14) இந்த ஐந்து தன்மைகளான வடிவம், மணம், சுவை, தீண்டல் மற்றும் ஒலி ஆகியன (புலன்கள் செயலாற்றலற்றவை என்பதால்) உண்மையில் புலன்களால் உணரப்படுவதில்லை, புலன்களின் மூலம் ஆன்மாவை அவற்றை உணர்கின்றன.(15) சித்தம் என்று அழைக்கப்படும் ஒன்று, புலன்கூட்டத்தைவிட {ஐம்புலன்களைவிட} மேன்மையானதாகும். மனமானது சித்தத்தைவிட மேன்மையானதாகும். புத்தியானது மனத்தைவிட மேன்மையானதாகும். க்ஷேத்ரக்ஞன் புத்தியைவிட மேன்மையானதாகும்[4].(16) முதலில் ஓர் உயிரினம் பல்வேறு பொருட்களைப் புலன்களின் மூலம் உணர்கிறது. மனத்தைக் கொண்டு அவற்றைக் குறித்துச் சிந்திக்கிறது. பிறகு புத்தியின் துணை கொண்டு ஓர் உறுதியான அறிவை அடைகிறது. புத்தியுடைய ஒருவன், புலன்களின் மூலம் உணரப்படும் பொருட்களில் உறுதியான தீர்மானங்களை எட்டுகிறான்.(17) ஐம்புலன்கள், சித்தம், மனம், (இப்பட்டியலில் எட்டாவதான) புத்தி ஆகிய இவையே அத்யாத்ம அறிவியலை அறிந்தவர்களால் அறிவுப்புலன்களாக {ஞானேந்திரிங்களாகக்} கருதப்படுகின்றன.(18) கரங்கள், கால்கள், குதம், பிறப்புறுப்பு, (இப்பட்டியலில் ஐந்தாவதாக அமையும்) வாய் ஆகியவை செயற்புலன்களாக {கர்மேந்திரியங்களாக} இருக்கின்றன.(19)வாயானது, பேச்சு மற்றும் உண்ணும் கருவியைக் கொண்டிருப்பதால் அது செயற்புலன் {கர்மேந்திரயம்} என்றழைக்கப்படுகிறது. கால்கள் இடம்பெயரச் செய்யும் புலனாகவும், கரங்கள் பல்வேறு வகைப் பணிகளைச் செய்யும் புலனாகவும் இருக்கின்றன.(20) குதமும், பிறப்புறுப்பு கழிவுகளை வெளியேற்றும் ஒரே காரியத்திற்கு நீடிக்கும் இரு புலன்களாக இருக்கின்றன. முதலில் இருப்பது {குதம்} மலத்தை வெளியேற்றவும், இரண்டாவது {பிறப்புறுப்பு}, சிறுநீர் கழிக்கவும், ஒருவன் ஆசையின் ஆதிக்கத்தை உணரும்போது உயிர் வித்தைக் கழிக்கவும் இருக்கின்றன. இவற்றைத் தவிர ஆறாவதாக ஒரு செயற்புலன் இருக்கிறது. அது தசை சக்தி என்றழைக்கப்படுகிறது. இக்காரியத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) உடன்பாடுகளின் படி இவையே ஆறு செயற்புலன்களின் பெயர்களாகும். நான் இப்போது ஞானப்புலன்கள், செயற்புலன்கள் மற்றும் ஐந்து (அடிப்படை) சாரங்களின் {பூதங்களின்} அனைத்து குணங்களின் பெயர்களை உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(22) இந்தப் புலன்கள் களைப்படைவதன் விளைவாலும், அதனதனுக்குரிய செயல்பாடுகள் நின்று, அவை இடைநிற்பதன் காரணத்தாலும், அந்தப் புலன்களுக்குரியவன் உறங்குவதாகச் சொல்லப்படுகிறது.(23) இந்தப் புலன்களின் செயல்பாடுகள் இடைநிற்கும்போது, மனத்தின் செயல்பாடு நிற்காமல் அதனுக்குரிய பொருட்களுடன் தொடர்ந்து வினையாற்றிக் கொண்டிருந்தால், அந்த நனவுநிலையே கனவு என்றழைக்கப்படுகிறது.(24)

விழிப்பு நிலையில், நல்லியல்பு {சத்வ}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருளோடு {தமஸ் குணங்களோடு} தொடர்புடைய மூன்று மனநிலைகள் இருக்கின்றன. கனவிலும் மனமானது அதே மூன்று நிலைகளுடன் தொடர்புகொள்கிறது. அந்த நிலைகளே இன்பத்திற்குரிய செயல்பாடுகளின் தொடர்புடன் கனவில் தோன்றும்போது, அவை மெச்சத்தகுந்ததாகக் கருதப்படுகிறது.(25) மகிழ்ச்சி, வெற்றி, அறிவு, பற்றின்மை ஆகியவை (விழித்த நிலையில் உள்ள மனிதனில் இருக்கும்) நல்லியல்பு {சத்வ} குணத்தின் குறியீடுகளாகும். உயிரினங்களால் அனுபவிக்கப்படும் (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, அல்லது இருள் {தமஸ் குணத்தின்}) எந்த நிலைகளும், அவை விழித்திருக்கும் நேரங்களின் செயல்களின் வெளிப்பட்டு, உறக்கத்தில் கனவு காண்கையில் அவற்றின் நினைவில் மீண்டும் தோன்றுகின்றன. விழிப்பு நிலையில் இருப்பது போலவே கனவில் தோன்றும் நம் கருத்துகளும், கனவு நிலையில் இருப்பது போலவே விழிப்புநிலையில் தோன்றும் கருத்துகளும், கனவுகளற்ற உறக்கம் என்றழைக்கப்படும் நனவுநிலையில் நேரடியாகப் புரிந்து கொள்ளத்தக்கனவாகின்றன. அதுவே நித்தியமானதும், அதுவே விரும்பத்தக்கதுமாகும்[5].(26,27) அறிவுப்புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, தசை சக்தி, மனம், புத்தி, சித்தம், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்கள் என இப்பட்டியல் பதினேழு வரை வருவதாகச் சொல்லப்படுகிறது. இப்பட்டியலில் பதினெட்டாவதாக உடலுக்குச் சொந்தக்காரன் {தேஹி} வருகிறான். உண்மையில், எவன் அந்த உடலுக்குள் வாழ்கிறானோ அவன் நித்தியமானவனாவான்.(28)உடலுக்குள் வசிக்கும் அந்தப் பதினேழும் (அவித்யை அல்லது அறியாமையுடன் சேர்த்து பதினெட்டும்), உடலுக்கு உரியவனைப் பற்றிக் கொண்டிருக்கின்றன. உடலில் இருந்து அதற்கு உரியவன் மறையும்போது, (அவித்யையுடன் சேர்த்து எண்ணப்படும்) அந்தப் பதினெட்டும், அவ்வுடலில் வசிப்பதை ஒன்றாக நிறுத்துகின்றன.(29) அல்லது, ஐந்து (அடிப்படை) சாரங்களாலான {பூதங்களாலான} இந்த உடலானது (கரைந்து போக வேண்டிய) கலவை மட்டுமே. (அவித்யை உள்ளிட்ட) அந்தப் பதினெட்டுக் குணங்கள், உடலுக்கு உரியவன், இப்பட்டியலில் இருபதாவதாக எண்ணப்படும் குடல் வெப்பம் ஆகியவற்றைச் சேர்த்து ஐந்தின் கலவை {பஞ்சபூதவிகாரக் கூட்டம்} என்று அறியப்படும் ஒன்றாக {உடலாக} அமைகின்றன.(30) மஹத் என்றழைக்கப்படும் ஒன்று, (பிராணன் என்றழைக்கப்படும்) காற்றின் {வாயுவின்} துணையுடன், பெயர் செல்லப்பட்ட இந்த இருபதைக் கொண்ட கலவையைத் தாங்கிப் பிடிக்கிறது. அந்த உடல் அழியும் காரியத்தில், (அதற்குக் காரணமெனப் பொதுவாகச் சொல்லப்படும்) காற்றானது {வாயுவானது}, அதே மஹத்தின் கருவியாக மட்டுமே இருக்கிறது.(31) பிறக்கும் எந்த உயிரினமும், தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் தீர்ந்ததும், ஐந்து உறுப்புக்கூறுகளுக்குள் மீண்டும் கரைகிறது, பிறகு அந்த வாழ்வில் செயல்களின் விளைவால் வெல்லப்பட்ட தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளின் மூலம் மீண்டும் மற்றொரு உடலுக்குள் நுழைகிறது.(32) அவித்யை, ஆசை, செயல்கள் ஆகியவற்றில் இருந்தே எப்போதும் விளையும் அவனது வசிப்பிடங்களால் அவன் ஒவ்வொரு உடலையும் கைவிட்டு, காலத்தின் தூண்டுதலின் பேரில், வீடு விட்டு வீடு அடுத்தடுத்து மாறும் மனிதனைப் போல மீண்டும் மீண்டும் வெவ்வேறு உடலுக்குள் மாறுகிறான்.(33)

ஞானமும், உறுதியான அறிவும் கொண்டவர்கள், இதை (இந்த இடப்பெயர்வைக்} கண்டு துயருக்கு வசப்படாமல் இருக்கிறார்கள். அத்தகைய வசிப்பிட மாறுதல்களைக் கண்டு, (உண்மையில் உறவுநிலைகள் ஏதுமில்லாத போது) உறவுகளைப் பிழையாகக் கருதி மூடர்கள் மட்டுமே துயரில் ஈடுபடுகிறார்கள்.(34) இந்த ஜீவன் எவருடைய உறவுமல்ல; மேலும் அவனுக்கு உரியவரென்று சொல்ல எவரும் இல்லை. அவன் எப்போதும் தனியனாகவே இருக்கிறான், அவன் தானே தன்னுடலையும், தனது இன்ப துன்பங்களையும் படைத்துக் கொள்கிறான்.(35) ஜீவன் ஒருபோதும் பிறப்பதுமில்லை, ஒருபோதும் இறப்பதுமில்லை. உடல் பந்தத்திலிருந்து விடுபடும் அவன், சில வேளைகளில் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறான்.(36) தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளின் விளைவான உடல்களின் செயல்கள் தீர்ந்து போவதன் மூலம் {உடலில் இருந்து} விடுபட்டு உடலை இழக்கும் ஜீவன், இறுதியாகப் பிரம்மத்தை அடைகிறான்.(37) சாங்கியப் பள்ளியில், தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் தகுதியின்மைகள் {பாவங்கள்} தீர ஞானமே காரணமாக விதிக்கப்பட்டிருக்கிறது. (சாத்திரங்களைக் கற்றவர்கள்), தங்கள் தகுதி மற்றும் தகுதியின்மை தீர்ந்து, ஜீவன் பிரம்ம நிலையை அடையும்போது, ஜீவன் உயர்ந்த கதியை அடைவதைக் (சாத்திரங்களின் கண்களைக் கொண்டு) காண்கிறார்கள்” என்றார் {அசித-தேவலர்}”.(38)

பேரின்பம்! – சாந்திபர்வம் பகுதி – 276- ஆசையைக் கைவிடுவதே சுகத்திற்குக் காரணமென மாண்டவ்யரிடம் ஜனகன் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஐயோ, கொடூரர்களும், பாவிகளுமான நாங்கள் எங்கள் சகோதரர்கள், தந்தைமார், பேரர்கள், உற்றார், நண்பர் மற்றும் மகன்களைக் கொன்றோம்.(1) ஓ! பாட்டா, செல்வத்திற்கான தாகத்தை எவ்வாறு நாங்கள் தணிக்க வேண்டும்? ஐயோ, அந்தத் தாகத்தால் நாங்கள் பல பாவச் செயல்களை இழைத்துவிட்டோம்” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக விசாரித்த மாண்டவ்யரிடம் விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்} சொன்னது பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(3) விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்}, “(இவ்வுலகில்) எனக்கு ஏதும் இல்லை, இருப்பினும் நான் பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன். (என் நாடு எனச் சொல்லப்படும்) மொத்த மிதிலையும் எரிந்தாலும், என்னுடையது எதுவும் எரிவதில்லை.(4) எவ்வளவு மதிப்புமிக்கவையாக இருப்பினும் உறுதியான {தொட்டரியக்கூடிய} உடைமைகளே ஞானிகளின் கவலைக்கான ஊற்றுக்கண்ணாக இருக்கும்; அதே வேளையில் சிறு மதிப்பைக் கொண்ட உடமையும் மூடர்களை ஆட்கொள்கிறது[1].(5)இம்மையில் உள்ள மகிழ்ச்சிகள் யாவும், ஆசைகளை நிறைவு செய்வதன் மூலம் அடையத்தக்கன, உயர் மதிப்பைக் கொண்ட தெய்வீக இன்பமேதும் கூட, முற்றான ஆசையின்மையில் கிட்டும் இன்பத்தின் பதினாறில் ஒரு பங்கிற்கு ஈடாகாது.(6) மாட்டின் வளர்ச்சியுடன் சேர்ந்தே அதன் கொம்புகளும் வளர்வதைப் போல, செல்வம் ஈட்டல் பெருகுவதுடன், செல்வத்திற்கான தாகமும் பெருகுகிறது.(7) ஒருவன் பற்றுக் கொள்ளும் எந்தப் பொருளானாலும், அந்தப் பொருள் தொலையும்போது அதுவே துன்பத்திற்கான ஊற்றுக்கண்ணாகிறது.(8) ஒருவன் ஆசையைப் பேணி வளர்க்கக்கூடாது. ஆசையில் பற்று கவலைக்கே வழிவகுக்கும். செல்வம் ஈட்டப்படும்போது ஒருவன் அதை அறக்காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அவன் ஆசையைக் கைவிடுவான்[2].(9) ஞானியானவன், பிற உயிரினங்களைத் தன்னைப் போலவே எப்போதும் பார்க்கிறான். தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வெற்றியை அடையும் அவன் இம்மையிலேயே அனைத்தையும் கைவிடுகிறான்[3].(10)வாய்மை மற்றும் பொய்மை, துன்பம் மற்றும் இன்பம், ஏற்புடையவை மற்றும் ஏற்பில்லாதவை, அச்சமின்மை மற்றும் அச்சம் ஆகிய இரட்டைகளைக் கைவிடுவதன் மூலம் ஒருவன் அமைதியை அடைந்து, அனைத்து வகைக் கவலையில் இருந்தும் விடுபடுகிறான்.(11) மூடப்புத்தி கொண்டவர்களுக்குக் கைவிடக் கடினமானதும், உடல் மெலிந்தாலும் குறையாததும், (ஞானிகளால்) மரண நோய் எனக் கருதப்படுவதுமான (உலகம் சார்ந்த பொருட்களுக்கான) அந்தத் தாகத்தை ஒருவன் கைவிட்டால் அவன் நிச்சயம் இன்பத்தைக் காண்பான்.(12) அற ஆன்மா கொண்ட மனிதன், நிலவைப் போலப் பிரகாசமானதும், அனைத்து வகைத் தீமையில் இருந்து விடுபட்டதுமான தன் நடத்தையைக் கண்டு, இம்மையிலும், மறுமையில் பெரும்புகழை மகிழ்ச்சியுடன் அடைவதில் வெல்கிறான்” என்றான் {ஜனகன்}.(13)

மன்னனின் {ஜனகனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பிராமணர் மாண்டவ்யர் மகிழ்ச்சியால் நிறைந்தவராகி, தாம் கேட்டவற்றை மெச்சி, விடுதலைக்கான {முக்திக்கான} பாதையில் தம்மைச் செலுத்தினார்” என்றார் {பீஷ்மர்}.(14)

காலத்தின் வேகம்! – சாந்திபர்வம் பகுதி – 277-காலம் வேகமாகக் கடந்து செல்வதால் நற்கதிக்குரிய காரியத்தை உடனே செய்ய வேண்டும் என்று ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அனைத்து உயிரினங்களையும் அச்சத்தில் நிறையச் செய்யும் காலம் தன் போக்கில் ஓடுகிறது. ஒருவன் முயற்சிக்க வேண்டிய நன்மைக்கான ஊற்றுக்கண் எது? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(2) ஓ! பிருதையின் மகேன {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில் வேத கல்விக்கு மட்டுமே தம்மை அர்ப்பணித்திருந்த ஒரு மறுபிறப்பாளர் மேதாவி என்ற பெயரில் அறியப்பட்ட ஒரு புத்திசாலி மகனைக் கொண்டிருந்தார்.(3) விடுதலை அறத்தை அறிந்தவனான அந்த மகன், அறத்தை அறியாதவரும், வேத கட்டளைகளைச் செய்வதில் ஈடுபடுபவருமான தன் தந்தையிடம் ஒரு நாள் இந்தக் கேள்வியைக் கேட்டான்.(4)

மகன் {மேதாவி}, “ஓ! ஐயா, மனிதர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருப்பின் காலம் மிக வேகமக ஓடுவதை அறிந்த புத்தியுள்ள மனிதன் செய்ய வேண்டியது என்ன? ஓ! தந்தையே, உமது போதனைகளால் வழிநடத்தப்பட்டு, அறமீட்டுவதில் என்னை நான் நிறுவிக் கொள்ளும் வகையில் இஃதை உண்மையாகவும், முறையான வரிசையிலும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)

தந்தை, “ஓ! மகனே {மேதாவியே}, எப்போதும் பிரம்மச்சரிய கடமைகளை நோற்று வேதங்களைக் கற்ற ஒருவன், தன் தந்தையைக் காக்கும் நிமித்தமாகச் சந்ததியில் விருப்பம் கொள்ள வேண்டும். தன் நெருப்பை நிறுவி, தனக்கு விதிக்கப்பட்ட வேள்விகளைச் செய்து, (வானப்பிரஸ்தனாக வாழ) காட்டுக்குள் ஓய்ந்து, (அனைத்தையும் கைவிட்டு, பிரளயத்திற்காக அமைதியாகக் காத்திருப்பதன் மூலம்) முனிவனாக வேண்டும்” என்றார்.(6)

மகன், “உலகம் இவ்வாறு தாக்கப்படும்போது, அனைத்துப் புறங்களிலும் முற்றுகையிடப்படும்போது, அனைத்துத் திசைகளிலும் தடுக்கப்படமுடியாத (வஜ்ரங்கள்) விழுந்து கொண்டிருக்கும்போது, எவ்வாறு உம்மால் இப்படி அமைதியாகப் பேச முடிகிறது?” என்று கேட்டான்.(7)

தந்தை, “உலகம் எவ்வாறு தாக்குதலுக்குள்ளாகிறது? எதனால் அது முற்றுகையிடப்படுகிறது? அனைத்துப் பக்கங்களிலும் விழுந்து கொண்டிருக்கும் தடுக்கப்படமுடியாத வஜ்ரங்கள் எவை? உன் வார்த்தைகளால் நீ என்னை அச்சுறுத்துகிறாயா?” என்று கேட்டார்.(8)

மகன், “உலகம் காலனால் தாக்கப்படுகிறது. அது முதுமையால் முற்றுகையிடப்படுகிறது. பகல்களும், இரவுகளும் (வஜ்ரங்களைப் போலத்) தொடர்ந்து விழுகின்றன. இவற்றை ஏன் நீர் கவனிக்கவில்லை?(9) காலன் எவருக்காகவும் இங்கே காத்திருப்பதில்லை (ஆனால், திடீரென எந்த அறிவிப்புமின்றிக் கவர்ந்து செல்கிறான்) என்பதை நான் அறியும்போது, (விழிப்புணர்வில்லாமல்) அறியாமையெனும் திரையில் மூழ்கி என் காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் என்னால் (அவன் வருகிறான் என்பதை அறிந்தும்) எவ்வாறு காத்திருக்க இயலும்?(10) ஒவ்வொரு இரவும் கடக்கையில், ஒவ்வொருவரின் வாழ்வுக்காலமும் கடந்து போகும்போது, ஆழமற்ற நீரில் இருக்கும் ஒரு மீனைப் போன்ற நிலையில் எவன் மகிழ்ச்சியடையமுடியும்?(11) மலர்களைக் கொய்யும் கவனமற்ற மனிதனைப் போலத் தன் காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒருவன் தனது நோக்கங்களை அடையும் முன்பே காலன் அவனை அடைகிறான்[1].(12) எது நாளை செய்யப்பட வேண்டுமோ, அஃது இன்றே செய்யப்பட வேண்டும்; ஒருவன் பிற்பகலில் செய்ய நினைப்பது முற்பகலிலேயே செய்யப்பட வேண்டும். ஒருவனுடைய பணி முடிந்து விட்டது அல்லது முடிவடையவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு காலன் காத்திருப்பதில்லை.(13) உமக்கான நன்மையை (நாளை வரை விட்டு வைக்காமல்) இன்றே செய்வீராக. தடுக்கப்பட முடியாதவனான காலன், (உமது செயல்களை நிறைவேற்றும் முன்பே) உம்மை வெல்லாமல் பார்த்துக் கொள்வீராக. காலன் இன்று வரமாட்டான் என்று எவன் அறிவான்?(14) ஒருவனின் செயல்கள் நிறைவடையுமுன்பே, காலன் அவனை இழுத்துச் செல்வான். எனவே, இவ்வகையில் வாழ்வு உறுதியற்றது என்பதால், (தனது முதிர் வயது வரை காத்திராமல்) ஒருவன் இளமையிலேயே அறம் பயில வேண்டும்.(15)அறமீட்டுவதன் மூலம் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் நித்தியமான மகிழ்ச்சியை நிச்சயம் வெல்வான். மடமையின் ஆதிக்கத்தில் ஒருவன் தன் மகன்களுக்காகவும், மனைவியருக்காகவும் செயல்படத் தன் இடைக்கச்சையை உயர்த்திக் கொள்கிறான் {உயர்த்திக் கொண்டு செயல்பட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறான்}.(16) குற்றச் செயல்கள் அல்லது நற்செயல்களைச் செய்வதன் மூலம் ஒருவன் இவர்களை (உறவினர்களை) நிறைவு செய்கிறான். மகன்களையும், விலங்குகளையும் கொண்டவனும், அவற்றிடம் பற்றும், அர்ப்பணிப்பும் கொண்ட மனத்துடன் கூடியவனுமான ஒருவனை,(17) உறங்கும் மானை அபகரித்துச் செல்லும் புலியைப் போலக் காலன் பற்றுகிறான்[2]. ஆசைக்குரிய பல்வேறு பொருட்களை வெல்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே, அனுபவிப்பது தணிவடையாதபோதே,(18) செம்மறியாட்டைக் கைப்பற்றியோடும் பெண் ஓநாயைப் போலக் காலன் அவனைக் கைப்பற்றுகிறான். “இது செய்யப்பட்டது, இது செய்யப்படாமல் எஞ்சியிருக்கிறது, இது பாதிச் செய்யப்பட்டுள்ளது”(19) என்று ஒருவன் தனக்குள் சொல்லலாம்; ஆனால் காலன், நிறைவுறாத செயல்களை முடிக்கும் அவனது ஆசையைக் கவனத்தில் கொள்ளாமல், அவனைக் கைப்பற்றி இழுத்துச் செல்கிறான். செயலோடு தொடர்புடையவற்றில் ஏற்கனவே செய்யப்பட்ட ஒன்றின் கனியை அடையாமல் இருக்கும் ஒருவன்,(20) களம், கடை அல்லது வீட்டில் மும்முரமாக இருக்கும் ஒருவன் ஆகியோரைக் கைப்பற்றிக் காலன் கொண்டு போகிறான்.பலவீனன், பலவான், ஞானி, துணிவுமிக்கவன், மூடன், கல்விமான்,(21) அல்லது தன் ஆசைகள் எதனிலும் நிறைவுறாத ஒருவன் ஆகியோரையும் கைப்பற்றிக் காலன் கொண்டு போகிறான். மரணம், முதுமை, நோய், கவலை, அதே வகையான பல காரியங்கள் ஆகியவற்றை(22) மனிதர்கள் தவிர்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். உடல் படைத்த உயிரினம் பிறந்தவுடனேயே, முதுமையும், மரணமும் வந்து அழிவுக்காகவே அவனைப் பற்றுகின்றன.(23) அசைவன, அசையாதன என்ற இருப்பின் இந்த வடிவங்கள் அனைத்தும் இவை இரண்டாலும் (முதுமை மற்றும் மரணத்தால்) பற்றப்படுகின்றன. வாய்மையில் மட்டுமே அழிவின்மை வசிப்பதால், காலனின் படையினரான போர்வீரர்கள் அணிவகுக்கும்போது, வாய்மையின் சக்தி ஒன்றைத் தவிர அவர்களை வேறு எதனாலும் தடுக்க இயலாது. மனிதர்களுக்கு மத்தியில் வசிப்பதில் ஒருவன் கொள்ளும் இன்பமே காலனின் வசிப்பிடமாகும்.(24,25)

காடு என்று அழைக்கப்படுவதே தேவர்கள் உண்மையில் கூடுமிடமாகும், அதே வேளையில், மனிதர்களுக்கு மத்தியில் வசிப்பதில் ஒருவன் கொள்ளும் இன்பமானது, அப்படி வசிப்பவனை (ஆதரவற்றவனாக்கிக்) கட்டும் பாசம் {கயிறு} போன்றதாகும் என்று ஸ்ருதி அறிவிக்கிறது[3].(26) பாவம் நிறைவந்தவர்கள் அதை வெட்டுவதில் வெல்வதில்லை (அவற்றிலிருந்து விடுதலையும் பெறுவதில்லை). எண்ணம், சொல் மற்றும் செயலில் எவன் பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைக்கவில்லையோ,(27) பிறரின் வாழ்வாதாரங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் எவன் ஒருபோதும் எவருக்கும் தீங்கிழைக்காமல் இருக்கிறானோ, அவன் எந்த உயிரினத்தினாலும் தீங்கிழைக்கப்படுவதில்லை. இந்தக் காரணங்களினால், ஒருவன் வாய்மை நோன்பைப் பயின்று, வாய்மை நோன்பிற்கு உறுதியான அர்ப்பணிப்புடன்,(28) வாய்மையைத் தவிர வேறு எதையும் விரும்பாமல் இருக்க வேண்டும். தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, அனைத்து உயிரினங்களையும் சமமான கண்ணுடன் கண்டு, அவன் வாய்மையின் துணையுடன் காலனை வெல்ல வேண்டும். மரணமின்மையும், மரணமும் உடலிலேயே நடப்பட்டிருக்கின்றன {நிறுவப்பட்டிருக்கின்றன}.(29)மடமையினால் மரணம் எதிர்கொள்ளப்படுகிறது, வாய்மையினால் மரணமின்மை வெல்லப்படுகிறது. ஆசை மற்றும் கோபத்தைக் கடந்து, தீங்கிழைப்பதைத் தவிர்த்து என் நன்மையை மகிழ்ச்சியுடன் அடைவதற்காகவும், ஒரு தேவனைப் போல மரணத்தைத் தவிர்ப்பதற்காகவும் நான் வாய்மையைப் பின்பற்றப் போகிறேன். அமைதியால் அமைக்கப்பட்ட வேள்வியில் ஈடுபட்டு, பிரம்ம வேள்வியிலும் ஈடுபட்டு, என் புலன்களை அடக்கி,(30,31) சூரியன் வடபாதையில் திரும்பும்போது, வாக்கு, மனம் மற்றும் செயல்கள் எனும் வேள்விகளை நான் செய்யப் போகிறேன்[4]. என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு கொடுமை நிறைந்த விலங்கு வேள்வியைச் செய்ய முடியும்?(32) ஞானம் கொண்ட என்னைப் போன்ற ஒருவனால், க்ஷத்தியர்களுக்காக விதிக்கப்பட்டதும், நிலையில்லாத வெகுமதிகளைக் கொண்டதும், கொலை வேள்வியும், கொடுமை நிறைந்ததுமான பிசாச வேள்வியைப் போன்ற ஒன்றைச் செய்ய முடியும்? என்னிடம் நானே என்னைப் பெற்றுக் கொண்டேன். ஓ! தந்தையே, சந்ததியை உண்டாக்க நாடாமல் என்னில் நானே ஓயப்போகிறேன். என்னைக் காக்க என் சந்ததி வேண்டாம், நான் தன் வேள்வியைச் செய்யப் போகிறேன்[5]. எவனுடைய வார்த்தைகளும், எண்ணங்களும் எப்போதும் நன்கு கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றனவோ,(34) தவங்களையும், துறவையும், யோகத்தையும் கொண்ட அவன் நிச்சயம் அவற்றின் மூலம் அனைத்தையும் அடைவான். ஞானத்திற்கு இணையான கண்ணேதும் கிடையாது. ஞானத்திற்கு இணையான வெகுமதியேதும் கிடையாது.(35)பற்றுக்கு இணையான கவலையேதும் கிடையாது. துறவுக்கு இணையான மகிழ்ச்சியேதும் கிடையாது.(36) ஒரு பிராமணனுக்குத் தனிமைவாசம், அனைத்துயிரனங்களையும் சமமான மதிப்பது, பேச்சில் வாய்மை, நல்லொழுக்கத்தின் உறுதி {சீலம்}, தண்டத்தை {தண்டனையை} முற்றாகக் கைவிடல், எளிமை, செயல்கள் அனைத்தில் இருந்தும் படிப்படியாக விலகல் ஆகியவற்றைப் போன்ற செல்வங்களேதும் கிடையாது.(37) செல்வத்தைக் கொண்டு உமக்கு என்ன தேவை இருக்கிறது? உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மனைவியராலும் என்ன தேவை இருக்கிறது? நீர் ஒரு பிராமணராவீர், காலனை நீர் எதிர்கொள்ள வேண்டும். குகைக்குள் {உடலுக்குள்} மறைந்திருக்கும் சுயத்தைத் தேடுவீராக உமது பாட்டன்மாரும், தந்தையும் எங்கே சென்றார்கள்?” என்று கேட்டான் {மேதாவி}”.(38)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, தமது மகனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தந்தை, சுட்டிக்காட்டப்பட்ட வழியில் செயல்பட்டார். நீயும் வாய்மை அறத்திற்கு அர்ப்பணிப்புடன் அதே வழியில் செயல்படுவாயாக” என்றார்[6].(39)

சந்நியாச வாழ்வுமுறை! – சாந்திபர்வம் பகுதி – 278-பிரம்மத்தை அடையத்தக்க நடத்தை, செயல்கள் மற்றும் ஞானம் ஆகியவற்றைக் குறித்துக் கேட்ட யுதிஷ்டிரன்; சந்நியாச வழிமுறையை அவனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பிரகிருதியைக் கடந்ததும், மாற்றமில்லாததுமான பிரம்மத்தின் இடத்தை அடைய ஒரு மனிதன் என்ன நடத்தையை, என்ன செயல்களை, என்ன வகை ஞானத்தைக் கொண்டிருக்க வேண்டும், அவன் எதனிடம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “விடுதலை அறத்தில் அர்ப்பணிப்புள்ளவனாக, எளிய உணவை உண்பவனாகத் தன் புலன்களை ஆள்பவனாக உள்ள ஒருவன் பிரகிருதியைக் கடந்து, உயர்ந்த இடத்தை அடைந்து, மாற்றமடையாதவனாகிறான்[1].(2) ஒருவன் தன் இல்லத்தில் இருந்து ஓய்ந்து, ஈட்டலையும், இழத்தலையும் ஒரே ஒளியில் கண்டு, புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆசைக்குரிய பொருட்கள் (அனுபவிக்கத்தகுந்த வகையில் ஆயத்தமாக இருக்கும்போதும் அவை) அனைத்தையும் அலட்சியம் செய்து, துறவு வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.(3) கண்ணாலோ, சொல்லாலோ, எண்ணத்தாலோ அவன் மற்றொருவனை இழிவாகக் கருதக் கூடாது. எந்த மனிதனும் கேட்கும்படியோ, இல்லாமலோ அவனைக் குறித்துத் தீமையாகப் பேசக்கூடாது.(4) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைப்பதைத் தவிர்த்து, ஒழுக்கத்தில் சூரியனின் பாதையைப் பின்பற்ற வேண்டும்[2]. இந்த வாழ்வில் உள்ள ஒருவன் எந்த உயிரினத்திடமும் நட்பற்ற முறையில் நடந்து கொள்ளக் கூடாது.(5)அவன் கடுமொழிகளை அலட்சியம் செய்து, அகங்காரத்துடன் தன்னை மற்றொருவனைவிட மேன்மையானவனாக மதித்துக் கருதிக்கொள்ளக்கூடாது. மற்றொருவனின் மூலம் கோபம் தூண்டப்படும்போதும், அவன் இனிமையான பேச்சுகளை மட்டுமே உதிர்க்க வேண்டும். தானே பழிக்கப்படும்போதும், அவன் பதிலுக்குப் பழித்துரைக்கக்கூடாது.(6) அவன் மனிதர்களுக்கு மத்தியில் நட்புடனோ, நட்பில்லாமலோ பழகக்கூடாது. அவன் பிச்சையெடுக்கச் செல்லும் ஒரு வலத்தில் பல வீடுகளுக்குச் செல்லக்கூடாது. அதே போல, முன்கூட்டியே (உணவுக்கு) அழைக்கப்பட்டு எந்த வீட்டுக்கும் செல்லக்கூடாது.(7) (பிறரால்) புழுதி வாரி இறைக்கப்படும்போதும், அவன் தன் கடமைகளில் உறுதியாக இருந்து, அத்தகைய ஏற்பில்லாத பேச்சுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். அவன் கருணையுள்ளவனாக இருக்க வேண்டும். அவன் பதிலுக்குப் பழிதீர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அச்சமற்றவனாக இருக்க வேண்டும்; தற்புகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும்.(8) கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்ட மனிதன், ஓர் இல்லறத்தானின் வசிப்பிடத்தில் புகை எழுவது நின்று, உலக்கையொலி அடங்கி, அடுப்பில் நெருப்பு அணைந்து, அங்கே வசிப்பவர்கள் அனைவரும் தங்கள் உணவை முடித்த பிறகு, அல்லது உணவுக்கான நேரம் கடந்ததும் அங்கே ஈகை இரத்தலுக்கு {பிச்சை எடுக்கச்} செல்ல வேண்டும்.(9) அவன் தன் உடலையும், ஆன்மாவையும் ஒன்றாகப் பராமரித்துக் கொள்ளத் தேவையான அளவுக்கு மட்டும் {உணவில்} நிறைவடைய வேண்டும். நிறைவை உண்டாக்கும் அளவுக்கான உணவுக்குக்கூட அவன் ஆசைப்படக்கூடாது. அவன் தன் தேவையை அடையத் தவறும்போது, நிறைவின்மையை வளர்க்கக்கூடாது. மேலும் தன் தேவையை அடையும்போது அவன் மகிழக்கூடாது.(10)

சாதாரண மனிதர்களால் விரும்பப்படும் பொருட்களில் ஒருபோதும் அவன் விரும்பங்கொள்ளக்கூடாது. மரியாதையுடன் அழைக்கப்படும்போதும் அவன் எவனுடைய வீட்டிலும் ஒருபோதும் உண்ணக்கூடாது. அவனைப் போன்ற ஒருவன், கௌரவத்துடன் அடையப்படும் அத்தகைய ஆதாயங்களைப் புறக்கணிக்க வேண்டும்[3].(11) அவன் தனக்கு முன்பு வைக்கப்பட்ட உணவில் ஒரு போதும் குறை காணக்கூடாது, மேலும் தகுதிகளையும் பாராட்டக்கூடாது. மனிதர்களின் தேவைகளில் இருந்து விலக்கப்பட்ட படுக்கையையும், ஆசையையும் அவன் விரும்ப வேண்டும்.(12) கைவிடப்பட்ட வீடு, மரத்தடி, காடு, குகை போன்ற இடங்களையே அவன் நாட வேண்டும். தன் நடைமுறைகளைப் பிறர் அறியாவண்ணம், அல்லது பிறரால் (வெறுக்கத்தக்க அல்லது ஒதுக்கத்தக்கவற்றைப்) பின்பற்றுவதன் மூலம் தன் உண்மை இயல்பை மறைத்துக் கொண்டு அவன் தன் சுயத்துக்குள் நுழைய வேண்டும்[4].(13) யோகத் தொடர்பு மற்றும் தோழமை தொடர்பற்றல் ஆகியவற்றின் மூலம் அவன் முற்றிலும் சமமான, உறுதியான, சீரான நிலையை அடைய வேண்டும். அவன் தன் செயல்களின் மூலம் தகுதி, அல்லது தகுதியின்மையை ஈட்டக்கூடாது[5].(14) அவன் மனநிறைவு, நல்ல உள்ளடக்கம், எப்போதும் உற்சாகம் நிறைந்த முகம் மற்றும் புலன்களுடன், அச்சமற்றவனாக, மனத்தில் எப்போதும் புனித மந்திரங்களை உரைப்பவனாக, அமைதிநிறைந்தவனாக, துறவு வாழ்வை மேற்கொள்பவனாக இருக்க வேண்டும்.(15)அடிப்படை சாரங்களின் {ஐம்பூதங்களின்} விளைவால் உண்டாகி அதனிலேயே கரைந்து போகும் புலன்களின் மூலம் தன் உடலின் தோற்றத்தையும் அழிவையும் கண்டும், (பிற) உயிரினங்களின் பிறப்பையும் இறப்பையும் கண்டும், அவன் ஆசையில் இருந்து விடுபட்டு, சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத இருவகை உணவுகளையும் உண்டு அனைத்தின் மீதும் சம பார்வையைச் செலுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். மிகக் குறைந்த உணவை உண்டு, தன் புலன்களை அடக்கும் அவன் சுயத்தின் மூலம் ஆன்ம அமைதியை அடைகிறான்.(16) ஒருவன், {தனக்குள்} (எழுச்சியடையும்) சொற்கள், மனம், கோபம், பொறாமை, பசி மற்றும் காமம் ஆகிவற்றின் தூண்டல்களை அடக்க வேண்டும். இதயத் தூய்மைக்காகத் தவத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கும் அவன், (பிறரின்) நிந்தனைகள் தன் இதயத்தைப் பீடிக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.(17) ஒருவன் அனைத்து உயிரினங்களிடமும் {பாரபட்சமில்லாத} நடுவுநிலைமையை அடைந்து புகழையும், பழியையும் சமமாகக் கருத வேண்டும். உண்மையில் இதுவே புனிதமான, உயர்ந்த பாதையான சந்நியாச வாழ்வுமுறையாகும்.(18)

உயர்ந்த ஆன்மாவைக் கொண்ட ஒரு சந்நியாசி அனைத்துப் பொருட்களில் இருந்தும் தன் புலன்களை விலக்கி, பற்றுகள் அனைத்திலிருந்தும் தனித்திருக்க வேண்டும். அவன் முந்தைய வாழ்வுமுறைகளில் வாழ்ந்த போது அறிந்த மனிதர்களிடம் அல்லது சென்ற இடங்களுக்கு ஒருபோதும் மீண்டும் செல்லக் கூடாது. அவன், அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்புடைய வகையில், ஒரு நிலையான வீடு இல்லாமல் சுயத்தின் தியானத்தில் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.(19) அவன் இல்லறத்தாருடனோ {கிருஹஸ்தர்களுடனோ}, காட்டுவாசிகளுடனோ {வானப்ரஸ்டர்களுடனோ} ஒருபோதும் கலந்திருக்கக் கூடாது. (முன்பே சிந்திக்கப்படாமல்) முயற்சியில்லாமல் அடையப்படும் உணவையே அவன் உண்ண வேண்டும். மகிழ்ச்சி தன் இதயத்தைப் பீடிக்க அவன் ஒருபோதும் அனுமதிக்ககூடாது.(20) ஞானிகளுக்கு, இத்தகைய துறவு வாழ்க்கையே விடுதலையை அடையும் வழிமுறையாகும். எனினும், மூடர்களுக்கு இந்தக் கடமைகளின் நடைமுறைகள் மிகச் சுமை நிறைந்ததாகவே தெரியும். தவசி ஹாரீதர் இவை அனைத்தையுமே விடுதலையை அடையும் பாதையாக அறிவித்தார்.(21) எவன் தன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, அனைத்து உயிரினங்களுக்குத் தீங்கிழையாமையை உறுதிகூறுவானோ, அவன் முடிவில்லாத, அல்லது நித்தியமான இன்பமயமான பிரகாச உலகங்கள் பலவற்றை அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}.(22)

அறிவு! – சாந்திபர்வம் பகுதி – 279- இன்ப துன்பங்களுக்குக் காரணமாக இருக்கும் அறிவைக் குறித்துச் சுக்ராச்சாரியருக்கும், விருத்திரனுக்கு இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உயர்ந்த நற்பேற்றை அடைந்தவர்களாக மனிதர்கள் அனைவரும் எங்களைக் குறித்துப் பேசுகின்றனர். எனினும் உண்மையில், எங்களைப் போல அதிகத் துக்கத்தை அடைந்தவர்கள் வேறெவரும் இல்லை.(1) ஓ! குருக்களில் சிறந்தவரே, ஓ! பாட்டா, உலகமனைத்திலும் மதிக்கப்பட்டாலும், தேவர்களால் பெறப்பட்டு மனிதர்களுக்கு மத்தியில் நாங்கள் பிறந்திருந்தாலும், ஓ! மதிப்பிற்குரிய தலைவரே, எங்கள் பங்காக நாங்கள் பெரும் துன்பத்தையே அடைந்திருக்கும்போது, பிறப்பால் உடலைப் பெறுவது மட்டுமே துன்பம் அனைத்திற்கும் காரணமாகத் தெரிகிறது. ஐயோ, துன்பத்தை அழிக்கும் துறவு வாழ்வை நாங்கள் எப்போதும் பின்பற்றப் போகிறோம்?(3) கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள், (ஐந்து மூச்சுகள், மனம், புத்தி, அறிவு மற்றும் செயற்புலன்கள் பத்து என்ற) பதினேழில் இருந்தும், (மனிதனை மீண்டும் மீண்டும் உலகம் சார்ந்த வாழ்வில் கட்டும்) முக்கியக் காரணங்களாக அமைந்த (ஆசை, கோபம், பேராசை, அச்சம், உறக்கம் {சோம்பல்} ஆகிய) யோகக் களங்கங்கள் ஐந்தில் இருந்தும், {ஒலி, தீண்டல், வடிவம், சுவை மற்றும் மணம் ஆகிய} புலன் நுகர் பொருட்கள் ஐந்தும், (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) குணங்கள் மூன்றும் சேர்ந்த எட்டில் இருந்தும் விடுபட்டு, மீண்டும் ஒருபோதும் மறுபிறப்பை அடைவதில்லை. ஓ! எதிரிகளை எரிப்பவரே, நாங்கள் அரசுரிமையைக் கைவிட்டு எப்போது துறவு வாழ்வைப் பின்பற்றப் போகிறோம்?” என்று கேட்டான்.(4,5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் ஏகாதிபதியே, அனைத்திற்கும் ஒரு முடிவு இருக்கிறது. அனைத்திற்கும், அதனதனுக்குரிய எல்லைகள் இருக்கின்றன. மறுபிறப்புக்கும் ஒரு முடிவு இருக்கிறது என்பது நன்கறியப்பட்டிருக்கிறது. இவ்வுலகில் எந்தப் பொருளும் நிலையானதல்ல.(6) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இஃது (உனக்கிருக்கும் செல்வாக்கு) ஒரு களங்கமென நீ நினைக்கிறாய். நமது ஆய்வுக்குரிய இக்காரியத்தில் அஃது அவ்வாறில்லை என்பது உண்மையல்ல {அஃது அவ்வாறென்பது உண்மையே}. எனினும், நீங்கள் அறம் அறிந்தவர்களாகவும், ஆயத்தமானவர்களாகவும் இருக்கிறீர்கள். எனவே, காலத்தில் நீங்கள் உங்கள் துன்பத்திற்கான முடிவை (விடுதலையை) அடையப்போகிறீர்கள்[1].(7) ஓ! மன்னா, உடலுடன் கூடிய ஜீவன், தகுதி {புண்ணியம்} மற்றும் தகுதியின்மை {பாவம்} ஆகியவற்றுக்கு (அல்லது அவற்றின் கனியாக வரும் இன்பதுன்பங்களுக்கு) உரிமையாளனல்ல. மறுபுறம், அவன் {ஜீவன்}, தகுதி மற்றும் தகுதியின்மையால் பிறக்கும் இருளில் (விருப்பு வெறுப்பைத் தன் சாரமாகக் கொண்ட அறியாமையில்) மூழ்குகிறான்[2].(8) அஞ்சனப்பொடியுடன் கூடிய காற்றானது, மனோசிலையின் தூள்களைப் பற்றி (தானே {காற்று} நிறமற்ற ஒன்றாக இருப்பினும்), தான் பற்றும் பொருட்களின் நிறங்களை ஏற்று, பல்வேறு திசைப்புள்ளிகளில் மாறுதலை ஏற்படுத்துவதைப் போலவே,(9) ஜீவனும், நிறமற்றதாக இருந்தாலும், அறியாமை மற்றும் செயல்களின் கனிகளால் பல நிறங்களை ஏற்று (களங்கமற்ற, நிலையான தன்மை கொண்ட தன் மூதாதையைக் {சித்-ஐ} களங்கமுடையதாக, மாறும் இயல்புள்ளதாகத் தோன்றச் செய்யும் வகையில்) உடலில் இருந்து மற்றொரு உடலுக்குப் பயணிக்கிறான்[3].(10)ஜீவன், அறியாமையின் விளைவால் தன்னைப் பீடித்த இருளை ஞானத்தின் மூலம் விலக்குவதில் வெல்லும்போது, நிலையான பிரம்மமானது (தன் முற்றான மகிமையுடன்) வெளிப்படுத்தப்படுகிறது.(11) நிலையான பிரம்மத்திற்கு முன்னிலை மீள்வது, செயல்களின் மூலம் இயலாது எனத் தவசிகள் சொல்கின்றனர். நீயும், இந்த உலகில் உள்ள பிறரும், தேவர்களும் கூட, விடுதலையை {முக்தியை} அடைந்தவர்களை மதிக்க வேண்டும். பெரும் முனிவர்கள் அனைவரும் பிரம்மப் பண்பாட்டில் இருந்து ஒருபோதும் விலகுவதில்லை[4].(12) இது தொடர்பாகப் பழங்காலத்தில் (தைத்தியர்களின் ஆசானால் {சுக்ராச்சாரியரால்}) பாடப்பட்டது குறிப்பிடப்படுகிறது. ஓ! ஏகாதிபதி, தைத்தியன் விருத்திரன், தன் செழிப்பனைத்தையும் இழந்தபோது பின்பற்றிய ஒழுக்க நடைமுறையைச் சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(13) ஓ! பாரதா, தன் புத்தியை மட்டுமே சார்ந்திருந்த அவன், தான் வீழ்த்தப்பட்டிருந்தாலும், நண்பர்களற்றவனாக இருந்தாலும், அரசுரிமையை இழந்திருந்தாலும் எதிரிகளுக்கு மத்தியில் கவலையில் ஈடுபடாமல் இருந்தான்.(14) பழங்காலத்தில் விருத்திரன் அரசுரிமையை இழந்திருந்தபோது, (அவனது ஆசானான) உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, “ஓ! தானவா, உன் தோல்வியின் விளைவால் நீ துயரமெதையும் வளர்க்கவில்லை என நான் நம்புகிறேன்” என்று கேட்டார்.(15)விருத்திரன் {சுக்கிராச்சாரியாரிடம்}, “வாய்மை மற்றும் தவங்களின் துணையுடன் உயிரினங்கள் அனைத்தின் தோற்றத்தையும் மறைவையும் ஐயமில்லாமல் புரிந்து கொண்டு, இன்பத்திலோ, துன்பத்திலோ ஈடுபடுவதை நான் நிறுத்திக் கொண்டேன்.(16) காலத்தால் தூண்டப்பட்ட உயிரினங்கள் ஆதரவற்ற நிலையில் நரகத்தில் மூழ்குகின்றன. மேலும் சில சொர்க்கத்திற்குச் செல்கின்றன என்று தவசிகள் சொல்கின்றனர். இவை யாவும் தங்கள் காலத்தை அடக்கத்துடன் கழிக்கின்றன.(17) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலத்தைச் சொர்க்கத்திலும், நரகத்திலும் கழிக்கும் அவை, தங்கள் பங்கான தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் தகுதியின்மைகள் {பாவங்கள்} (இன்ப துன்பங்களின் மூலம்) தீர்ந்த பிறகு, காலத்தால் தூண்டப்பட்டு மீண்டும் மீண்டும் பிறப்பை எடுக்கின்றன.(18) ஆசை எனும் சங்கிலிகளால் கட்டப்பட்ட உயிரினங்கள், இடைநிலை வாழ்வுகளில் ஆயிரமாயிரம் பிறவிகளைக் கடந்து ஆதரவற்ற நிலையில் நரகத்தில் விழுகின்றன[5].(19) இவ்வாறு உயிரினங்கள் வருவதையும், போவதையும் நான் காண்கிறேன். ஒருவனுடைய செயல்களின் அடிப்படையிலேயே அவன் எதையும் அடைகிறான் என்பது சாத்திரங்களில் உள்ள பாடம்[6].(20)உயிரினங்கள் மனிதர்களாகவோ, இடைநிலை விலங்குகளாகவோ, தேவர்களாகவோ பிறப்பை எடுத்து நரகத்திற்குச் செல்கின்றன. தங்களுக்குத் தகுந்த வகையில் முற்பிறவிகளில் செயல்பட்ட உயிரினங்கள் அனைத்தும், காலனின் விதிகளுக்கு உட்பட்டு, இன்ப துன்பங்களையும், ஏற்புடையவற்றையும், ஏற்பில்லாதவற்றையும் அடைகின்றன. தங்கள் செயல்களின் அளவுக்குத்தக்க இன்ப துன்பங்களை அனுபவிக்கும் உயிரினங்கள், செயல்களின் அலகுகளால் அளக்கப்படும் பழைய பாதையின் மூலம் எப்போதும் மீண்டும் வருகின்றன” என்றான் {விருத்திரன்}.(21,22)

அப்போது சிறப்புமிக்கவரான உசனஸ் {சுக்ராச்சாரியர்}, படைப்பின் உயர்ந்த புகலிடத்தைக் குறித்து இவ்வாறு பேசிக்கொண்டிருந்த அசுரன் விருத்திரனிடம், “ஓ! தைத்திய புத்திமானே, ஓ! குழந்தாய், இத்தகைய மூடக் கற்பனைகளை நீ ஏன் சொல்கிறாய்?” என்று கேட்டார்.(23)

விருத்திரன், “வெற்றியின் மீது கொண்ட பேராசையின் காரணமாக நான் செய்த கடுந்தவங்களையும், நீரும் தவசிகள் பிறரும் அறிவீர்.(24) பிற உயிரினங்கள் இன்புறும் பல்வேறு சுவைகளையும், பல்வேறு மணங்களையும் என் சக்தியால் அபகரித்த நான், மூவுலகங்களையும் பீடித்துக் கொண்டிருந்தேன்.(25) பிரகாசமான பல்லாயிரம் கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட நான் (என் தெய்வீகத் தேரில்), எந்த உயிரினத்தாலும் வீழ்த்தப்பட முடியாதவனாக, எவனுக்கும் அஞ்சாதவனாக வானத்தில் திரிந்திருந்தேன்.(26) என் தவங்களின் மூலம் பெருஞ்செழிப்பை அடைந்தேன், என் செயல்களால் நான் அஃதை இழந்தேன். எனினும், என் மனோவுறுதியைச் சார்ந்திருந்த நான் இந்த மாற்றத்தினால் துயருறவில்லை.(27)

(பழங்காலத்தில்) சொர்க்கங்களின் உயர் ஆன்ம ஆட்சியாளனான பேரிந்திரனுடன் {மஹேந்திரனுடன்} போரிட விரும்பிய நான் அந்தப் போரில் சிறப்புமிக்கவனும், பலமிக்கவனும், ஹரி {பாவங்கள் அனைத்தையும் அபகரிப்பவன்},(28) வைகுந்தன் {தடையில்லாத சமர்த்தன்}, புருஷன் {பரிபூர்ணன்}, அனந்தன் {முடிவற்றவன்}, சுக்லன் {சுத்தன்}, விஷ்ணு {வியாபகன்}, சநாதனன் {அனாதியானவன் / மிகப் பழமையானவன்}, முஞ்சகேசன் {பழுத்த தர்ப்பை போலப் பொன்னிறமான மயிரைக் கொண்டவன்}, ஹரிஸ்மஸ்ரு {மஞ்சள் நிற மீசையுடையவன் [தாடியுடையவன்]}, அனைத்துயிரினங்களின் பெரும்பாட்டன் {பிதாமஹன்} என்றும் எவன் அழைக்கப்பட்டானோ, அந்த நாராயணனைக் கண்டேன்.(29)

அந்தப் பெரும் ஹரியின் காட்சி கிட்டியதற்கான அந்தத் தவத்தோடு கூடிய வெகுமதிகள் (அனுபவிக்கத்தக்க வகையில்) என்னிடம் இன்னும் எஞ்சியிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. ஓ! சிறப்புமிக்கவரே, அது தீராமல் எஞ்சியிருப்பன் விளைவாலேயே நான் உம்மிடம் செயல்களின் கனிகளைக் குறித்துக் கேட்கும் விருப்பம் கொண்டேன்[7].(30) (மனிதர்களின்) எந்த வகையில் {வர்ணத்தில்} உயர்ந்த பிரம்ம செழிப்பு நிறுவப்பட்டிருக்கிறது? மேலும் அநத உயர்ந்த செழிப்பு எவ்வகையில் வீழ்ச்சியடையும்?(31) எவனிடம் இருந்து உயிரினங்கள் தோன்றி வாழ்கின்றன? எவன் மூலம் அவை செயல்படுகன்றன? எந்த உயர்ந்த கனியை அடைவதன் மூலம் ஓர் உயிரினம் நித்தியமாகப் பிரம்மத்துடன் வாழ்வதில் வெல்லும்?(32) எந்தச் செயலின் மூலம், அல்லது அந்த அறிவின் மூலம் அந்தக் கனியை அடைய முடியும்? ஓ! கல்விமானான பிராமணரே, இவற்றை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான் {விருத்திரன்}”.(33){பீஷ்மர் தொடர்ந்தார்}, “ஓ! மன்னர்களில் சிங்கமே, ஓ! மனிதர்களில் காளையே, தானவர்களின் இளவரசனால் {விருத்திரனால்} இவ்வாறு கேட்கப்பட்ட பிறகு தவசி உசனஸ் {சுக்கிராச்சாரியர்} என்ன சொன்னார் என்பது என்னால் தொகுத்துரைக்கப்படும்போது உன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து, சிதறாத கவனத்துடன் கேட்பாயாக” {என்றார் பீஷ்மர்}.(34)

விஷ்ணுவின் மகிமை – ஸனத்குமாரர்! – சாந்திபர்வம் பகுதி – 280-விஷ்ணுவின் மகிமையையும், பிறப்பின் கணக்கையும், ஜீவன்களின் நிறம் முதலியவற்றையும், சுக்ரருக்கும், விருத்திரனுக்கும் எடுத்துச் சொன்ன ஸனத்குமாரரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, “ஆகாயத்துடன் கூடிய இந்தப் பூமியைத் தன் கரங்களில் தாங்கும் பலமிக்கவனும், சிறப்புமிக்கவனுமான அந்தத் தெய்வீகமானவனை {விஷ்ணுவை} நான் வணங்குகிறேன்.(1) ஓ! தானவர்களில் சிறந்தவனே, (விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும்) முடிவிலா இடத்தைத் தலையாகக் கொண்டவனும், அதியனுமான {அனைத்திலும் மேம்பட்டவனான} அந்த விஷ்ணுவின் மகிமையைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றார் {சுக்கிராச்சாரியார்}.(2)

அவர்கள் ஒருவரோடொருவர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களின் ஐயங்களை விலக்கும் நோக்கம் கொண்டவரும், அற ஆன்மாவும், பெருந்தவசியுமான ஸனத்குமாரர் அங்கே அவர்களிடம் வந்தார்[1].(3) அசுரர்களின் இளவரசனாலும் {விருத்திரனாலும்}, தவசியான உசனஸாலும் {சுக்கிராச்சாரியராலும்} வழிபடப்பட்ட அந்தத் தவசிகளில் முதன்மையாவன் {ஸனத்குமாரர்}, ஒரு விலைமதிப்புமிக்க இருக்கையில் அமர்ந்தார்.(4)பெரும் ஞானம் கொண்ட குமாரர் {ஸனத்குமாரர்} (சுகமாக) அமர்ந்தபிறகு, அவரிடம் உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, “அதியனான விஷ்ணுவின் மகிமையை இந்தத் தானவர்களின் தலைவனுக்கு {விருத்திரனுக்கு} உரைப்பீராக” என்றார்.(5)

இவ்வார்த்தைகளைக் கேட்ட ஸனத்குமாரர், புத்திமானான அந்தத் தானவர்களின் தலைவனிடம் {விருத்திரனிடம்}, அதியனான விஷ்ணுவின் மகிமை குறித்தவையும், பெரும் முக்கியத்துவம் நிறைந்தவையுமான பின்வருவனவற்றைச் சொன்னார்.(6)

{ஸனத்குமாரர்}, “ஓ! தைத்தியா {திதியின் மகனே}, விஷ்ணுவின் மகிமை குறித்த அனைத்தையும் கேட்பாயாக. ஓ! எதிரிகளை எரிப்பவனே, மொத்த அண்டமே விஷ்ணுவைச் சார்ந்திருக்கிறது என்பதை அறிவாயாக.(7) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அசைவன மற்றும் அசையாதன உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தையும் படைப்பவன் அவனே. காலத்தின் போக்கில் அனைத்துப் பொருட்களையும் உள்ளீர்த்துக் கொள்பவனும், காலத்தில் அவற்றை முன்னே விடுபவனும் {உண்டாக்குபவனும்} அவனே.(8) அண்ட அழிவின் போது அனைத்துப் பொருட்களும் அந்த ஹரியிலேயே கலக்கின்றன, பிறகு அந்தப் பொருட்கள் அனைத்தும் அவனிலிருந்தே உதிக்கின்றன. சாத்திரங்களை அறிந்த மனிதர்களால் அத்தகைய சாத்திரத்தின் மூலம் அவனை அடைய முடியாது. அதேபோல, தவங்கள் மற்றும் வேள்வியின் மூலமும் அவனை அடைய முடியாது. புலன்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறையின் மூலமே அவன் அடையத்தக்கவனாக இருக்கிறான்.(9) அத்தகைய கதியை அடைவதில் சாத்திரங்கள் முற்றிலும் பயனற்றவை என்பதல்ல. புற மற்றும் அகச் செயல்கள் இரண்டையும், தன் மனத்தையும் சார்ந்திருப்பதாலும், தன் புத்தியின் மூலமும் ஒருவனால் (அவற்றை {புலன்களைத்}) தூய்மைப்படுத்த முடியும். அத்தகைய வழிமுறைகளால் அவன் இவ்வுலகில் முடிவின்மையை அனுபவிப்பதில் வெல்வான்[2].(10)பொற்கொல்லன் ஒருவன், பெரும் முயற்சியோடு கூடிய பெருஞ்செய்கையால் உலோகத்தை {தங்கத்தை} மீண்டும் மீண்டும் நெருப்பில் இட்டு அதன கசடுகளைத் தூய்மைப்படுத்துவதைப் போல,(11) ஜீவன் நூறு பிறவிகளை எடுக்கும் தன் போக்கின் மூலம், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் வெல்கிறது. ஒரே ஒரு பிறவியில் பெரும் முயற்சிகளோடு தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளக்கூடிய சிலர் காணப்படுகின்றனர்.(12) ஒருவன் தன் மேனியில் உள்ள கறை அடர்த்தியாவதற்குள் கவனத்துடன் துடைப்பதைப் போலவே, ஒருவன் பெரும் முயற்சிகளைச் செய்து தன் களங்கங்களைக் கழுவிக்கொள்ள வேண்டும்.(13) எள் தானியங்களுடன் சில மலர்களைக் கலப்பதால் மட்டுமே அவை தங்கள் சொந்த மணத்தை விடாது (விட்டுவிட்டு உடனே மணமிக்கவையாக மாறிவிட முடியாது). அதே போலவே, ஒருவன் தன் இதயத்தைச் சிறிது தூய்மைப்படுத்திக் கொள்வதால் மட்டுமே ஆன்மாவைக் காண்பதில் வெல்ல முடியாது.(14) எனினும், அந்தத் தானியங்கள், பெரும் அளவிலான மலர்களுடன் மீண்டும் மீண்டும் மணமூட்டப்படும்போதுதான் அவை தங்கள் சொந்த மணத்தை விட்டு, தங்களுடன் கலந்த மலர்களின் மணத்தை ஏற்கும்.(15)

அதே வகையிலேயே, நமது சூழ்நிலைகளின் மேல் பற்று கொள்வதால் ஏற்படும் களங்கங்கள், பல பிறவிகளின் போக்கில் ஏற்படும் புத்தியின் மூலமும், பெரும் அளவிலான சத்வ குணத்தின் துணை மூலமும், பயிற்சியில் பிறக்கும் முயற்சியெனும் வழிமுறையின் மூலமும் களையப்படுகின்றன[3].(16) ஓ! தானவா, செயல்களில் பற்றுக் கொள்ளும் உயிரினங்களும், அவற்றில் பற்று கொள்ளாதவையும் தங்கள் தங்கள் மனோநிலைகளுக்கு வழிநடத்தப்படும் காரணங்களை {கர்மவிசேஷங்களை} எந்த வழிமுறைகளின் மூலம் அடைகின்றன என்பதைக் கேட்பாயாக[4].(17) ஓ! பலமிக்கத் தானவா, உயிரினங்கள் எவ்வாறு செயல்களைச் செய்கின்றன, எவ்வாறு அவை விடுகின்றன என்பதை முறையான வரிசையில் சொல்லப் போகிறேன். சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(18) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் உயர்ந்த தலைவனே {பரமனே} படைக்கிறான். அவன் தொடக்கமும், முடிவும் இல்லாதவனாவான். எவ்வகைக் குணங்களும் அற்றவனான {நிர்க்குண பிரம்மமான} அவன், (படைப்பை உண்டாக்கும்போது) குணங்களை ஏற்கிறான். அவனே அண்டத்தை அழிப்பவனும், அனைத்துப் பொருட்களின் புகலிடமும், விதி சமைக்கும் உயர்ந்தவனும், தூய சித்-ம் ஆவான்[5].(19) அனைத்து உயிரினங்களிலும் மாறக்கூடியவனாகவும் {க்ஷதரதேகமாகவும்}, மாற்றமில்லாதவனுமாக {அக்ஷரஜீவனுமாக} அவனே {ஸ்ரீ ஹரியே} வசிக்கிறான். பதினோரு மாறுபாடுகளை {விகாரங்களைக்} கொண்டவனான அவனே, தன் கதிர்களால் இந்த அண்டத்தைப் பருகுகிறான்[6].(20)பூமி அவனது பாதம் என்பதை அறிவாயாக. அவனது தலையே சொர்க்கமாக இருக்கிறது. ஓ! தைத்தியனே, அவனது கரங்களே பல்வேறு திசைப்புள்ளிகளாக இருக்கின்றன. இடைவெளி {ஆகாயம்} அவனது காதுகளாகும்.(21) அவனது கண்களின் ஒளியே சூரியனாகும், அவனது மனத்தின் ஒளியே சந்திரனாகும். அவனது புத்தி எப்போதும் அறிவிலேயே வசிக்கிறது, அவனது நாவு நீரில் வசிக்கிறது.(22) ஓ! தானவர்களில் சிறந்தவனே, கோள்கள் அவனது புருவமத்தியில் இருக்கின்றன. விண்மீன்களும், நட்சத்திரக்கூட்டங்களும் அவனது கண்களின் ஒளியில் இருந்து வந்தன. ஓ! தானவா, இந்தப் பூமி அவனது பாதத்தில் இருக்கிறது.(23) ரஜஸ், தமஸ் மற்றும் சத்வ குணங்கள் அவனிடம் இருந்தே வந்தன என்பதை அறிவாயாக. அவனே அனைத்து வாழ்வுமுறைகளின் கனியாவான் (அல்லது கதியாவான்), (ஜபம் மற்றும் வேள்விகள் முதலிய) செயல்கள் அனைத்தின் கனியாக (வெகுமதியாக) அவனே அறியப்பட வேண்டும்.(24) உயர்ந்தவனும், மாற்றமிலாதவனுமான அவன், செயல்கள் அனைத்தில் இருந்து விலகுவதன் கனியாகவும் இருக்கிறான். சந்தங்கள் அவனது உடலின் முடியாக இருக்கின்றன, அக்ஷரம் (அல்லது பிரணவம்) அவனது சொல்லாக இருக்கிறது.(25)

(மனிதர்களில்) பல்வேறு வகையினரும், வாழ்வு முறைகளும் அவனது புகலிடமாக இருக்கின்றன. அவனது வாய்கள் {முகங்கள்} பலவாகும். கடமை (அல்லது) அறம் அவனது இதயத்தில் நடப்பட்டிருக்கிறது {நிறுவப்பட்டிருக்கிறது}. அவனே பிரம்மமும், உயர்ந்த அறமாகவும், சத்-ஆகவும், அசத்-ஆகவும் இருக்கிறான்.(26) ஸ்ருதி அவனே. சாத்திரங்கள் அவனே. வேள்விப் பாத்திரங்கள் அவனே, பதினாறு ரித்விஜர்கள் அவனே. வேள்விகள் அனைத்தும் அவனே, பெரும்பாட்டன் (பிரம்மன்) அவனே, விஷ்ணு அவனே, அஸ்வினி இரட்டையர்கள் அவனே, புரந்தரன் {இந்திரன்} அவனே.(27) மித்ரன் அவனே, வருணன் அவனே, யமன் அவனே, கருவூலத் தலைவனான குபேரன் அவனே. ரித்விஜர்களால் அவன் தனித் தனியாகக் காணப்பட்டாலும், அவர்களால் அவன் ஒருவனாகவே அறியப்படுகிறான். இந்த மொத்த அண்டமும் அந்த ஒரே தெய்வீமானவனின் கட்டுப்பட்டின் கீழ் இருப்பதை அறிவாயாக.(28) ஓ! தைத்தியர்களின் இளவரசனே, ஆன்மாவில் உள்ள வேதம், பல்வேறு உயிரினங்களின் ஒற்றுமையைக் கருத்தில் கொள்கிறது. ஓர் உயிரினம் இந்த ஒற்றுமையை உணரும்போது, அது பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(29) ஒரு படைப்பு நீடிக்க வேண்டிய காலம், அல்லது அழிய வேண்டிய காலமே கல்பம் என்றழைக்கப்படுகிறது. அத்தகைய கோடிக்கணக்கான கல்பங்களில் உயிரினங்கள் நீடித்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட படைப்பானது, (பின்வரும் வழியில்) பல ஆயிரம் தடாகங்களாகக் அளவிடப்படுகிறது.(30)

ஒரு யோஜனை அகலமும், ஒரு குரோசம் ஆழமும், ஐநூறு யோஜனைகள் நீளமும் கொண்ட ஒரு தடாகத்தைப் பார். அத்தகைய பல்லாயிரம் தடாகங்களைக் கற்பனை செய்து பார்.(31) அவற்றில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒற்றை முடியின் நுனியைக் கொண்டு ஒரே ஒருமுறை மட்டும் இறைத்து, அந்தத் தடாகங்களின் நீரை வற்றச் செய்ய முனைந்து பார். அந்தச் செயல்பாட்டில் அந்தத் தடாகங்களை வற்றச் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படுமோ, அத்தனை நாட்கள் ஒரு படைப்பின் தொடக்கம் முதல் முடிவு வரையிலான காலமாகும்.(32) (அனைத்துப் பொருட்களின்) உயர்ந்த சாட்சியமானது {பிரமாணமானது}, கருப்பு, பழுப்பு {தூம்ரம்}, {நடுத்தரமான} நீலம், {மிகவும் ஸஹிக்கக்கூடிய} சிவப்பு, {சுகமான} மஞ்சள் மற்றும் {மிகச் சுகமான} வெள்ளை என ஆறு நிறங்களை {வர்ணங்களை} உயிரினங்கள் கொண்டிருப்பதாகச் சொல்கிறது. இந்த நிறங்கள் ரஜஸ், தமஸ் மற்றும் சத்வம் என்ற முக்குணங்களின் பல்வேறு அளவுகளிலான கலவையில் இருந்து கிடைக்கின்றன. எங்கே தமஸ் பெருந்தொகையாகவும், சத்வம் அளவுக்குக் கீழேயும், ரஜஸ் அளவோடும் இருக்கிறதோ அங்கே கருப்பு என்றழைக்கப்படும் நிறமே விளைகிறது. முன்பு போலவே, தமஸ் பெருந்தொகையாகவும், சத்வமும், ரஜஸும் மேற்சொல்லப்பட்டதற்கு முரணாகவும் இருந்தால், பழுப்பு என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. ரஜஸ் பெருந்தொகையாகவும், சத்வம் அளவுக்குக் கீழேயேயும், தமஸ் அளவாகவும் இருக்கும்போது, நீலம் என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. ரஜஸ் பெருந்தொகையாகவும், சத்வமும், ரஜஸும் மேற்சொன்னதற்கு முரண்பட்டுமிருந்தால், சிவப்பு என்றழைக்கப்படும் இடைநிலை நிறம் விளைகிறது. இந்த நிறம் (முன் சொன்ன நிறத்தை விட) ஏற்புடையதாகும். சத்வம் பெருந்தொகையாகவும், ரஜஸ் அளவுக்குக் கீழேயும், தமஸ் அளவாகவும் இருக்கும்போது மஞ்சள் என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. அது மகிழ்ச்சியை உண்டாக்கும் நிறமாகும். சத்வம் பெருந்தொகையாகவும், ரஜஸும், தமஸும் மேற்சொன நிலைக்கு முரண்பட்டதாகவும் இருந்தால், வெள்ளை என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. அது பேரின்பத்தை உண்டாக்குகிறது[7].(33)வெண்மையே முதன்மையான நிறமாகும். விருப்பு, வெறுப்பில் இருந்து விடுபட்டிருக்கும் விளைவால் அது பாவமற்றதாக இருக்கிறது. அது துன்பமற்றதாகவும், பிரவிருத்தி தொடர்புடைய கடுமையான உழைப்பில் இருந்து விடுபட்டதாகவும் இருக்கிறது. எனவே, ஓ! தானவர்களின் இளவரசே, வெண்மையே வெற்றிக்கு (அல்லது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கிறது. ஓ! தைத்தியா, கருவறைமூலமாகப் பல்லாயிரம் பிறவிகளெடுத்த ஜீவன் வெற்றியை அடைகிறது.(34) மங்கல சாத்திரக் கோட்பாடுகள் பலவற்றைப் படித்த பிறகு தெய்வீக இந்திரனால் அறிவிக்கப்பட்டதும், ஆன்ம அறிவைத் தன் சாரமாகக் கொண்டதும், வெற்றியும் ஒரே முடிவுகளைக் கொண்டவையே. உயிரினங்கள் அடையும் கதியானது, அவற்றின் நிறத்தைச் சார்ந்திருக்கிறது, ஓ தைத்தியா, நிறமானது, நேரும் காலத்தின் தன்மையைச் சார்ந்திருக்கிறது.(35) ஓ தைத்தியா, ஜீவன் கடக்க வேண்டிய இருப்பின் நிலைகள் {கதிகள்} அளவற்றவையல்ல. அவை பதினான்கு லட்சம் என்ற எண்ணிக்கையைக் கொண்டவையாகும். அவற்றின் விளைவால் ஜீவனானது, வழக்குக்கேற்றபடி உயரவோ, நிலைக்கவோ, வீழவோ செய்கிறது[8].(36) கரிய நிறம் கொண்ட ஒரு ஜீவன், நரகத்திற்கு வழிவகுக்கவும், நரகத்திலேயே அழுகிப் போகவும் செய்யும் செயல்களுக்கு அடிமையாக இருப்பதால், அதனால் அடையப்படும் கதி மிக இழிந்ததாகும். அந்த ஜீவனுடைய தீமையின் விளைவால், அது பல்லாயிரம் கல்பங்களின் அளவுக்கு (அத்தகைய வடிவில்) தொடர வேண்டியிருக்கும்.(37) அந்நிலையிலே பல லட்சம் வருடங்கள் கடந்ததும் அந்த ஜீவன் (இடைநிலை நிலை பிறவியில்) பழுப்பு என்றழைக்கப்படும் நிறத்தை அடைகிறது. அந்நிலையிலேயே அது (நீண்ட பல வருடங்கள்) முற்றிலும் ஆதரவற்ற நிலையில் இருக்கிறது. இறுதியாக, அதன் பாவங்கள் தீர்ந்ததும், பற்றுகள் அனைத்தையும் கைவிடம் அதன் மனம் துறவை வளர்க்கிறது.(38)ஜீவன், சத்வ குணத்தைப் பெறும்போது, அது தன் புத்தியின் துணியின் மூலம் தமஸோடு தொடர்புடைய அனைத்தையும் விலக்கி (தனக்கான நன்மையை அடைய) முயற்சிக்கிறது. இதன் விளைவாக அந்த ஜீவன் சிவப்பு என்றழைக்கப்படும் நிறத்தை அடைகிறது. எனினும் சத்வ குணத்தை அடைவது சாத்தியப்படவில்லையெனில், அந்த ஜீவன், நீலம் என்றழைக்கப்படும் நிறத்தை அடைந்து, மறுபிறவிகளில் சுழல வேண்டிய மனிதர்களின் உலகில் பிறக்கிறது.(39) (மனிதன் என்ற) அந்தக் கதியை அடைந்து, தன் செயல்களால் பிறந்த பற்றுகளின் மூலம் ஒரு படைப்பின் காலத்திற்குப் பீடிக்கப்பட்ட அந்த ஜீவன், மஞ்சள் என்றழைக்கப்படும் நிறத்தை அடைகிறது (அல்லது தேவத் தன்மையை அடைகிறது). நூறு படைப்புக் காலங்களுக்கு அந்நிலையில் நீடிக்கும் அந்த ஜீவன் (மீண்டும் மனிதத் தன்மையை அடைவதற்காக) அந்நிறத்தை விடுகிறது.(40) மஞ்சள் நிறத்தை அடைந்த ஜீவன், ஆயிரக்கணக்கான கல்பங்களுக்கு அந்நிலையிலேயே நீடித்து, ஒரு தேவனாக இருக்கிறது. எனினும் (அப்போதும் கூட), கடந்த கல்பங்களில் தான் செய்த செயல்களின் கனிகளை அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்து, பத்தாயிரத்து ஒன்பது வழிகளில் திரிந்து விடுதலையை {முக்தி} அடையாமல், நரகத்தையே அடைகிறது. சொர்க்கம் அல்லது தேவத் தன்மையால் அது, (செயல்கள் எனும்) நரகத்தில் இருந்து விடுபடுகிறது என்பதை அறிவாயாக. அதே வகையில், அந்த ஜீவன் (பிற நிறங்களோடு தொடர்பு கொண்டு) பிற பிறவிகளில் இருந்து விடுபடுகிறது.(41,42) ஜீவன் பல நீண்ட கல்பங்கள் தேவர்களின் உலகில் திளைக்கிறது. அங்கிருந்து விழும் அந்த ஜீவன் மீண்டும் மனிதத் தன்மையை அடைகிறது. அதன் பிறகு, நூற்றியெட்டுக் கல்பங்களுக்கு அந்நிலையிலேயே அது நீடிக்கிறது. பிறகு அந்த ஜீவன் மீண்டும் தேவ நிலையை அடைகிறது. (இரண்டாம் முறையாக) மனித நிலையில் இருக்கும்போது, அந்த ஜீவன் (கலியின் வடிவிலான) காலனிடம் (தன் தீய செயல்களின் மூலம்) விழுந்தால், அது கரிய நிறத்திலேயே மூழ்கி, இருப்பின் அனைத்து நிலைகளிலும் மிகத் தாழ்ந்த இழிந்த நிலையை அடைகிறது. இனி, அந்த ஜீவன் எவ்வாறு விடுதலையை {முக்தியை} என்பதை உனக்குச் சொல்லப்போகிறேன்.(43,44)

விடுதலையை விரும்பும் ஜீவன், சத்வ குணத்தைப் பெருந்தொகையாகக் கொண்ட எழுநூறு வகைச் செயல்களைச் சார்ந்து, படிப்படியாகச் சிவப்பு, மஞ்சகள் நிறங்களை அடைந்து, இறுதியாக வெள்ளை நிறத்தை அடைகிறது. அந்நிறத்தை அடைந்ததும் அந்த ஜீவன், இன்ப உலகங்கள் எட்டைத் தங்களுக்குக் கீழே கொண்ட துதிக்கத்தக்க பல்வேறு பகுதிகளை அடைந்து, விடுதலையேயான களங்கங்களற்ற, ஒளிவடிவத்தில் அங்கேயே நீடித்திருக்கிறது[9].(45) (ஏற்கனவே சொல்லப்பட்ட) எட்டும், ஆறாயிரமும் (உட்பிரிவுகளைக் கொண்டதும்), அந்த உயர்ந்த பிரகாசத்திற்கு ஒப்பானதும், (உண்மை நிலை, அல்லது எதனையும் சாராதிருக்கும் எந்த நிலையும் இல்லாமல்) மனத்தின் படைப்புகளாக மட்டுமே இருக்கின்றன. வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒருவன் அடையத்தக்க உயர்ந்த பொருளானது, விழிப்பு, கனவு மற்றும் கனவற்ற உறக்கம் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்த (துரியம் என்றழைக்கப்படும்) நிலையாக இருக்கிறது[10].(46) யோக பலம் கொண்டு வரும் இன்பநிலையைக்கைவிட இயலாத யோகியைப் பொறுத்தவரையில், அந்த ஜீவன் (அதே ஒரே உடலில்) மங்கல நிலையில் {ஜீவன் முக்தனாக} நூறு கல்பங்கள் வசித்திருந்து, அதன் பிறகு (மஹா, ஜன, தப, சத்ய லோகங்கள் என்றழைக்கப்படும்) நான்கு உலகங்களுக்குச் செல்கிறது. பற்றுகள் மற்றும் ஆசைகள் அனைத்தையும் கடந்தவனும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டாலும் வெற்றியடையாமல் இருப்பவனும், ஆறாவது நிறத்தை அடைந்தவனுமான ஒருவனுக்கு இதுவே உயர்ந்த கதியாகும்.(47) (ஏற்கனவே சொல்லப்பட்டது போல உரிய திறனை அடைந்த பிறகு) யோகப் பயிற்சியில் இருந்து வீழ்ந்த யோகியானவன், தன் முற்பிறவி செயல்களின் எச்சம் தீராமல் நூறு கல்பங்கள் சொர்க்கத்தில் வசித்து, சத்வ குணத்தில் உள்ள முந்தைய மனோநிலையின் விளைவால் (அறிவுப்புலன்கள் ஐந்து, மனம் மற்றும் புத்தி ஆகிய) ஏழைக் கொண்டு களங்கங்கள் அனைத்தையும் அழிக்கிறான். அந்தக் காலம் கடந்ததும், அத்தகைய மனிதன் மீண்டும் மனிதர்களின் உலகில் பிறந்து பெரும் மேன்மையை அடைகிறான்.(48)பிறகு மனிதர்களின் உலகில் இருந்து திரும்பும் அவன், மேல் நோக்கிய அளவில் உயர்ந்து உயர்ந்து செல்லும் இருப்பின் புதிய வடிவங்களை அடைவதற்காக மறைந்து போகிறான். இவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவன் ஏழு முறை ஏழு உலகங்களையும் கடந்து சென்று, சமாதியின் விளைவால் எப்போதும் பலம் பெருகி, அதிலிருந்து விழித்தெழுகிறான்.(49) இறுதி விடுதலையில் {முக்தியில்} விருப்பமுள்ள யோகி, அந்த ஏழையும் யோக அறிவால் அடக்கி, பற்றுகளில் இருந்து விடுபட்டு உலக வாழ்வில் தொடர்ந்து வசித்து, அந்த ஏழையும் கைவிட்ட பிறகு, அழிவற்ற முடிவிலா நிலையை அடைகிறான். சிலர் அதை மஹாதேவனுக்கு உரிய உலகம் என்றும்; சிலர் விஷ்ணுவுக்குரியது என்றும்; சிலர் பிரம்மனுக்குரியது என்றும்; சிலர் சேஷனுக்குரியதென்றும்; சிலர் நரனுக்கு உரியதென்றும்; சிலர் பிரகாசமான சித்-க்கு உரியதென்றும்; சிலர் முழுவதும் பரவியிருப்பவனுக்குரிய உலகமென்றும் சொல்கிறார்கள்[11].(50) அண்ட அழிவுக்கான நேரம் வரும்போது, திரள் உடல், நுட்பவுடல் மற்றும் காரண உடல்களை ஞானத்தின் மூலம் முற்றாக எரிப்பதில் வென்ற மனிதர்கள் பிரம்மத்திற்குள் நுழைகின்றனர். பிரம்மத்தோடு ஒவ்வாதவையும், செயல்களைத் தங்கள் சாரமாகக் கொண்டவையுமான அவர்களது புலன்கள் அனைத்தும் கூட அதனுள்ளேயே கலக்கின்றன.(51) அண்ட அழிவுக்கான நேரம் வரும்போது, தேவ நிலையை அடைந்தவையும், அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ கூடிய செயல்களுடைய கனிகளின் எச்சம் தீராதவையுமான ஜீவன்கள், அடுத்து வரும் கல்பத்தில் தங்கள் முற்பிறவியில் இருந்த நிலையை அடைகின்றன. அடுத்தடுத்த நேரும் கல்பம் தனக்கு முந்தைய கல்பத்தைப் போன்றே இருப்பதன் மூலம் இது நேர்கிறது.(52)அண்ட அழிவுக்கான நேரம் வரும்போது, அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ கூடிய செயல்களுடைய கனிகளின் எச்சம் தீர்ந்த ஜீவன்கள், சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்து, நூறு கல்பங்களானாலும் ஒருவன் செய்த செயல்களை ஞானமில்லாமல் அழிக்க முடியாது என்பதால், அடுத்தக் கல்பத்தில் மனிதர்களுக்கு மத்தியில் பிறக்கிறது. ஒரே தன்மையிலான சக்திகளையும், ஒரே வடிவங்களையும் கொண்ட மேன்மையான உயிரினங்கள் அனைத்தும், அண்ட அழிவுக்குப் பிறகு நேரும் புதிய படைப்பில் தங்கள் தங்களுக்குரிய விதிகளின்படியே மீண்டு, அழிந்தது போன்றே படைப்பின் போது இருந்த அதே வகையிலேயே உயரவும், தாழவும் செய்கின்றன.(53) மேலும், பிரம்மத்தை அறிந்த மனிதனைப் பொறுத்தவரையில், முந்தைய கல்பங்களில் செய்த செயல்களின் எச்சங்கள் தீராமல், அவன் அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் செய்யும்வரை, அனைத்து உயிரினங்களும், களங்கமற்ற அறிவியல்கள் இரண்டும் அவனது உடலிலேயே வாழ்கின்றன என்று சொல்லப்படுகிறது. அவனது சித்தம் யோகத்தால் தூய்மையடையும்போதும், சம்யாமத்தை அவன் பயிலும்போதும், புலப்படத்தக்க இந்த அண்டமானது அவனுக்கு ஐவகைப் புலன்களாக மட்டுமே தெரிகிறது[12].(54) தூய்மையான மனத்துடன் விசாரிக்கும் ஜீவன் உயர்ந்த களங்கமற்ற கதியை அடைகிறது. அதன் பிறகு அஃது அழிவற்ற இடத்தை அடைந்து, அங்கிருந்து அடைவதற்கரிதான நித்திய பிரம்மத்தை அடைகிறது.(55) ஓ! பெரும் வலிமை கொண்டவனே, இவ்வாறே நான் நாராயணனின் மேன்மையைக் குறித்து உனக்குச் சொல்லிவிட்டேன்” என்றார் {ஸனத்குமாரர்}.(56)

விருத்திரன், “உமது இந்த வார்த்தைகளை முற்றிலும் உண்மையாகக் காண்கிறேன். உண்மையில், இஃது இவ்வாறு இருக்கும்போது, நான் கவலைப்பட (காரணம்) ஏதும் இல்லை. ஓ! பெரும் மனோ சக்திகளைக் கொண்டவரே, உமது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, கவலை மற்றும் அனைத்து வகைப் பாவத்தில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன்.(57) ஓ! சிறப்புமிக்க முனிவரே, ஓ! புனிதமானவரே, மிகப்பிரகாசமானவனும், முடிவிலியுமான விஷ்ணுவின் பெரும் சக்தி வாய்ந்த இந்தக் காலச்சக்கரம் இயங்கிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அந்த நித்தியமான இடத்தில் இருந்து அனைத்து வகைப் படைப்பும் எழுகிறது. அந்த விஷ்ணுவே பரமாத்மா ஆவான். அவனே அனைத்திலும் முதன்மையானவன் ஆவான். அவனிலேயே இந்த மொத்த அண்டமும் ஓய்ந்திருக்கிறது {நிலைத்திருக்கிறது}” என்றான் {விருத்திரன்}”.(58)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! குந்தியின் மகனே, இந்த வார்த்தைகளைச் சொன்னதும், விருத்திரன் தன் உயிர் மூச்சுகளைக் கைவிட்டு, தன் ஆன்மாவை (யோகத்தில் பரமாத்மாவுடன்) ஒன்றிணைத்து, அந்த உயர்ந்த இடத்தை அடைந்தான்” என்றார்.(59)

யுதிஷ்டிரன், “ஓ! பாட்டா, பழங்காலத்தில் விருத்திரனிடம் ஸனத்குமாரர் சொன்ன அந்தச் சிறப்புமிக்க, பலமிக்கத் தலைவன் இந்த ஜனார்த்தனனா (கிருஷ்ணனா) என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(60)

பீஷ்மர், “(பலம் முதலிய) ஆறு குணங்களுடன் கூடிய உயர்ந்த தெய்வம் வேரில் இருக்கிறது {அனைத்திற்கும் வேராக இருக்கிறது}. அங்கிருந்தே பரமாத்மா இருப்பில் உள்ள பல்வேறு பொருட்களைத் தன் சக்தியின் மூலம் படைக்கிறான்.(61) அழிவில்லாதவனான இந்தக் கேசவன், அவனது எட்டாம் பகுதி ஆவான். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட இந்தக் கேசவனே (அவனது சக்தியில்) எட்டில் ஒரு பகுதியைக் கொண்டு மூவுலகங்களையும் படைப்பவனாவான்.(62) வேரில் கிடப்பவனுக்கு அடுத்து இருப்பவனும், (இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒப்பிடுகையில்) நித்தியமானவனுமான இந்தக் கேசவன், ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் மாற்றமடைகிறான். எனினும், உயர்ந்த வலிமை மற்றும் பலத்துடன் வேரில் கிடப்பவனோ, அண்டம் அழியும்போது (அனைத்துப் பொருட்களுடைய ஆற்றல்வித்தின் வடிவில்) நீரில் கிடக்கிறான். நித்தியமான உலகங்கள் அனைத்தின் ஊடாகச் செல்லும் தூய ஆன்மாவைப் படைப்பவன் இந்தக் கேசவனே ஆவான்.(63) முடிவற்றவனும், நித்தியமானவனுமான அவன், (தன்னில் உள்ள வெளிப்பாட்டுடன்) வெளியனைத்தையும் {ஆகாயமனைத்தையும்} நிறைத்து, (அண்டத்தில் உள்ள ஒவ்வொரு வடிவத்திலும்) அண்டத்தில் திரிகிறான். குணங்களை உடைமையாக்குவதைக் குறிப்பது போன்ற அனைத்து வகை வரம்புகளில் இருந்தும் விடுபட்ட அவன், அவித்யையால் பீடிக்கப்படுபவனாகவும், நனவுநிலையால் விழிப்பவனாகவும் தன்னை அமைத்துக் கொள்கிறான். பரமாத்மாவான கேசவனே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான். இந்த அற்பத அண்டம் முழுமையும் அவனிலேயே நிறுவப்பட்டிருக்கிறது” என்றார் {பீஷ்மர்}.(64)

யுதிஷ்டிரன், “ஓ! ஞானத்தின் உயர்ந்த பொருளை அறிந்தவரே, விருத்திரன் தனக்காகக் காத்திருந்த சிறந்த கதியை முன்பே கண்டுவிட்டான் என்று நான் நினைக்கிறேன். ஓ! பாட்டா, அதன் காரணமாகவே அவன் (வரப் போகும் மரணத்தை எண்ணி) துயரப்படாமல் மகிழ்ச்சியாக இருந்தான்.(65) ஓ! பாவமற்றவரே, {ஆன்மாவில்} வெள்ளை நிறம் கொண்டவனும், தூய்மையான, அல்லது களங்கமற்ற குலத்தில் பிறந்தவனும், சாத்யன் என்கிற நிலையை அடைந்தவனுமான ஒருவன், (மறுபிறவியின் மூலம் இந்த உலகத்திற்குத்) திரும்பி வருவதில்லை. ஓ! பாட்டா, அத்தகைய மனிதன், நரகம் மற்றும் இடைநிலை உயிரினங்களாகப் பிறக்கும் நிலை ஆகிய இரண்டில் இருந்தும் விடுபடுகிறான்.(66) எனினும், ஓ! மன்னா, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை அடைந்தவர்களும் கூட, சில வேளைகளில் தமஸ் குணத்தில் மூழ்கி இடைநிலை உயிரினங்களின் வகையில் {விலங்குகளாகவும், பறவைகளாகவும்} வீழ்வதும் காணப்படுகிறது.(67) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் பெரிதும் பீடிக்கப்பட்டுள்ளோம். துன்பம், அல்லது அலட்சியம், அல்லது இன்பம் ஆகியவற்றை உண்டாக்கும் பொருட்களில் பற்றுக் கொண்டிருக்கிறோம். ஐயோ, நாங்கள் அடையப்போகும் கதிதான் என்ன? அது நீலமா? அல்லது நிறங்கள் அனைத்திலும் இழிந்த கருப்பு நிறமா?” என்று கேட்டான்.(68)

பீஷ்மர் தொடர்ந்தார், “பாண்டவர்களே, நீங்கள் களங்கமற்ற குலத்தில் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் கடும் நோன்புகளைக் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். தேவர்களின் உலகில் இன்பத்தில் திளைத்திருந்து பிறகு நீங்கள் மீண்டும் மனிதர்களின் உலகத்திற்குத் திரும்பி வருவீர்கள்.(69) இந்தப் படைப்பு நீடிக்கும்வரை மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்து, அடுத்தப் புதிய படைப்பில் நீங்கள் தேவர்களுக்கு மத்தியில் அனுமதிக்கப்பட்டு, அனைத்து வகை இன்பநிலைகளையும் அனுபவித்து, இறுதியாகச் சித்தர்களாகக் கணக்கிடப்படுவீர்கள். ஒருபோதும் அச்சம் உனதாக வேண்டாம். உற்சாகமாக இருப்பாயாக” {என்றார் பீஷ்மர்}.(70)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்-பகுதி 1-ஸ்ரீ ஆபத்தர்மாநுசாஸன உப பர்வம் —

October 16, 2025

பிரிவினை! – சாந்திபர்வம் பகுதி – 131- மன்னன் பலவீனமாக இருக்கும்போது ஏற்படும் எதிரிகளின் படையெடுப்பு, பிரிவினை ஆகியவற்றின் போது அவன் என்ன செய்ய வேண்டும் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பலவீனமானவனும், அடிபணிந்தவனும், நண்பர்களின் உயிர் குறித்த கவலையால் போரில் ஈடுபடாதவனும், எப்போதும் அச்சத்தின் வசப்பட்டிருப்பவனும், தன் ஆலோசனைகளை இரகசியமாக வைத்துக் கொள்ள முடியாதவனுமான மன்னனால் இதைத் தவிர வேறு என்ன செய்யப்பட வேண்டும்?(1) நகரங்களும், நாடுகளும் எதிரிகளால் பிரிக்கப்படும், கைப்பற்றப்படும் நிலைக்கு உள்ளானவனும், செல்வத்தை இழந்தவனும், தன் நண்பர்களையும், தன்னோடுள்ளவர்களையும் (வறுமை நிலை காரணமாக) கௌரவிக்க முடியாதவனும், ஒற்றுமையின்மை கொண்ட, அல்லது எதிரிகளால் வாங்கப்பட்ட அமைச்சர்களைக் கொண்டவனும், எதிரியின் முகத்துக்கு முன்பு அடிபணிந்து நிற்க வேண்டியவனும், படை சிறுத்தவனும், பலமிக்க எதிரியால் இதயம் கலங்கடிக்கப்பட்டவனுமான மன்னன் உண்மையில் என்ன செய்ய வேண்டும்??” என்று கேட்டான்.(2,3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “படையெடுத்து வரும் எதிரி, தூய இதயம் கொண்டவனாகவும், அறநெறி மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் அறிந்தவனாகவும் இருந்தால், நீ குறிப்பிடும் வகையில் உள்ள ஒரு மன்னன், தாமதம் செய்யாமல் படையெடுத்துவருபவனிடம் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, ஏற்கனவே வெல்லப்பட்ட தன் நாட்டின் பகுதிகளை மீட்க வேண்டும்.(4) படையெடுப்பாளன் பலமிக்கவனாகவும், பாவியாகவும், நியாயமற்ற வழிமுறைகளில் வெற்றியை அடைய முயல்பவனாகவும் இருந்தால், தன் ஆட்சிப்பகுதிகளில் ஒரு பகுதியைக் கைவிட்டு அவனிடமும் அமைதியையே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(5) படையெடுப்பாளன் அமைதியை ஏற்படுத்த விரும்பவில்லை என்றால், மன்னன் ஆபத்தில் இருந்து தப்பிக்க, தன் தலைநகரையும், தன் உடைமைகளையும் கைவிட வேண்டும். அவன் தன் உயிரைக் காத்துக் கொள்ள முடிந்தால், எதிர்காலத்தில் அதே போன்ற உடைமைகளை அடையும் நம்பிக்கையுடன் இருக்கலாம்.(6) கருவூலம் மற்றும் படையைக் கைவிடுவதால் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம் என்றால், அறநெறி அறிந்த எந்த மனிதன்தான் மிக மதிப்புமிக்க உடைமையான தன் சுயத்தைத் தியாகம் செய்வான்?(7) ஒரு மன்னன் தன் வீட்டின் பெண்மணிகளைப் பாதுகாக்க வேண்டும். இவர்கள் எதிரியின் கரங்களில் வீழ்ந்தால் (அவர்களை விடுவிப்பதற்காகத் தானே பிடிபடும் ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில்) அவர்களிடம் எந்தக் கருணையும் காட்டக்கூடாது” என்றார்.(8)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தன்னுடையவர்களே நிறைவில்லாதவர்களாக இருக்கும்போதும், படையெடுப்பாளர்களால் ஒடுக்கப்படும்போதும், தன் கருவூலம் தீர்ந்த போதும், தன் ஆலோசனைகள் வெளிப்படும்போதும் ஒரு மன்னன் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(9)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்தகு சூழ்நிலைகளில் உள்ள ஒரு மன்னன் (தன் எதிரி நேர்மையானவனாக இருந்தால்) அவனுடன் அமைதி ஏற்படுத்திக் கொள்ள முனைய வேண்டும். (எதிரி நியாயமற்றவனாக இருந்தால்) அவன் தன் வீரத்தை வெளிப்படுத்த வேண்டும். இத்தகு வழிமுறைகளால் அன் எதிரியைத் தன் நாட்டில் இருந்து பின்வாங்கச் செய்ய வேண்டும்; அல்லது துணிச்சலுடன் போரிட்டு, தன் உயிரை விட்டுச் சொர்க்கத்திற்கு உயர வேண்டும்.(10) பற்றுறுதிமிக்கவர்களும், உற்சாகம் நிறைந்தவர்களும், தன் நன்மையில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும் நிறைந்த ஒரு சிறு படையின் உதவியைக் கொண்டே கூட ஒரு மன்னனால் மொத்த பூமியையும் வெல்ல முடியும்.(11) போரில் கொல்லப்பட்டால் அவன் நிச்சயம் சொர்க்கத்திற்கு உயர்வான். (எதிரிகளைக்) கொல்வதில் வென்றாலோ, அவன் நிச்சயம் பூமியை அனுபவிப்பான். போரில் தன் உயிரை விடுவதால், ஒருவன் இந்திரனின் தோழமையையே அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}.(12)

அறநெறிக் கோட்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 132-துன்ப காலங்களில் மன்னனின் நடைமுறை; ஏன் ஒருவன் அவதூறு பேசக்கூடாது? மன்னன் பின்பற்ற வேண்டிய அறநெறிக் கோட்பாடு ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உயர்ந்த நெறி நிறைந்தவையும், (அற ஆட்சிக்குரியவையும்) உலகத்திற்கு நன்மையானவையுமான நடைமுறைகள் மறையும் போது, வாழ்வைத் தாங்கிக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் வளங்கள் அனைத்தும் கள்வர்களின் கைகளால் வீழும்போது,(1) உண்மையில், அத்தகு பேரிடர்மிக்கக் காலம் வரும்போது, ஓ! பாட்டா, மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளைப் பாசத்தால் கைவிட முடியாத நிலையில் இருக்கும் ஒரு பிராமணன், எந்த வழிமுறையில் தன்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்தகு நேரம் வரும்போது, அந்தப் பிராமணன் தன் அறிவின் உதவியைக் கொண்டு வாழ வேண்டும். இவ்வுலகில் உள்ள அனைத்தும் நல்லோருக்கானதே. தீயோருக்கோ இங்கேதும் இல்லை.(3) எவன் தீயவர்களிடம் இருந்து செல்வத்தை எடுத்து, நல்லோருக்கு அதைக் கொடுக்கிறானோ, அவன் ஆபத்து கால அறநெறியை அறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(4) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் மன்னன், தன் மக்களைக் கடுஞ்சீற்றமடையவும், கடும் எதிர்ப்பில் ஈடுபடவும் தள்ளாமல், உடைமையாளனால், “இஃது எனது” என்று சொல்லி கொடுக்கப்படாமல் உள்ளவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.(5) வேறு காலங்களில் அறிவால் தூய்மையடைந்தவனும், வலிமை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டவனுமான ஒரு ஞானமிக்க மனிதன், இத்தகு காலங்களில் நிந்தனைக்குள்ளாகும் வகையில் நடந்து கொண்டால், உண்மையில் அவன் நிந்தனைக்குத் தகுந்தவனல்ல.(6) எப்போதும் தங்கள் வலிமையை வெளிப்படுத்தித் தங்களைத் தாங்கிக் கொள்பவர்கள், ஒருபோதும் வேறு எந்த வழிமுறையைக் கொண்டும் வாழ விரும்பமாட்டார்கள். ஓ! யுதிஷ்டிரா, வலிமை கொண்டவர்கள், தங்கள் ஆற்றலின் உதவியைக் கொண்டே எப்போதும் வாழ்வார்கள்.(7)

(துன்ப காலங்களில்) எந்த வகை விலக்கும் இல்லாத பொதுவான சாத்திரங்களை (அத்தகு காலங்களில்) மன்னன் நடைமுறைப்படுத்த வேண்டும். நுண்ணறிவுமிக்க ஒரு மன்னனோ, அந்தச் சாத்திரங்களைப் பின்பற்றுகையில், மேலும் அதிகமாகச் செய்யலாம்[1].(8) எனினும் மன்னன், கௌரவிக்கப்பட வேண்டியவர்களும், மதிப்புமிக்கவர்களுமான ரித்விஜர்கள், புரோகிதர்கள், ஆசான்கள், பிராமணர்கள் ஆகியோரை அத்தகு நேரங்களிலும் ஒடுக்காமல் இருக்க வேண்டும். அத்தகு காலங்களிலும் அவர்களை ஒடுக்கினால் அவன் பழியையும், பாவத்தையும் இழைத்தவனாவான்.(9) உன்னிடம் நான் சொல்லும் இவை இவ்வுலகில் சட்டத்தோடு ஒட்டிய உரிமையாகக் கருதப்படுகிறது. உண்மையில் இதுவே (துன்ப கால நடைமுறைகளைக் காணக்கூடிய) நித்திய கண்ணாகும். ஒருவன் இந்த உரிமையின்படியே வழிநடத்தப்பட வேண்டும். ஒரு மன்னனை நல்லவன் என்றோ, தீயவன் என்றோ அழைக்க இதைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.(10)

கிராமங்களிலும், நகரங்களிலும் வசிக்கும்பல மனிதர்கள், பொறாமையாலும், கோபத்தாலும் ஊக்கமடைந்து, ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வதைக் காண முடிகிறது. மன்னன் அவர்களின் வார்த்தைகளைக் கொண்டு ஒருபோதும் எவரையும் கௌரவிக்கவோ, தண்டிக்கவோ கூடாது.(11) ஒருபோதும் அவதூறு பேசப்படக்கூடாது. பேசப்பட்டாலும், அஃது ஒருபோதும் கேட்கப்படக்கூடாது. அவதூறுகள் தொடர்ந்தால், ஒருவன் தன் காதுகளை மூடிக் கொள்ள வேண்டும், அல்லது அந்த இடத்தை விட்டு அகல வேண்டும்.(12) அவதூறு பேசுவது தீய மனிதர்களின் பண்பாகும். அஃது ஒழுக்கச் சீர்கேட்டின் குறியீடாகும். மறுபுறம், ஓ! மன்னா, நல்லோரின் சபைகளில் பிற மனிதர்களின் நற்குணங்களைக் குறித்துப் பேசுபவர்களே நல்ல மனிதர்கள்.(13) அடக்கத்தக்கவையும், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும்,, நன்றாக இழுக்கத்தக்கவையுமான இரு காளைகள், நுகத்தில் தங்கள் கழுத்துகளை நுழைத்து விருப்பத்துடன் வண்டியை இழுப்பதைப் போலவே மன்னனும் (துன்ப காலங்களில்) தன் சுமைகளைச் சுமக்க வேண்டும்.(14)

சிலர், ஒரு மன்னன் (அத்தகு காலங்களில்) பெரும் எண்ணிக்கையிலான கூட்டாளிகளை ஈட்டும் வகையில் தன்னை நடத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். சிலர் பழைய நடைமுறையே, அறத்தின் உயர்ந்த குறியீடு எனக் கருதுகின்றனர்.(15) சங்கர் மற்றும் லிகிதர் சொல்லும் நடத்தைக்கு ஆதரவாக இருக்கும் வேறு சிலர், இக்கருத்தை ஏற்பதில்லை. அவர்கள் வன்மத்தாலோ, பேராசையாலோ அக்கருத்தை ஏற்கவில்லை[2].(16) தீய நடைமுறைகளுக்கு அடிமையாக இருந்தால் ஆசான்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பெரும் முனிவர்கள் விதித்திருக்கும் எடுத்துக்காட்டுகளும் காணப்படுகின்றன. ஆனால் அத்தகு கருத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட சட்ட உரிமை ஏதும் இல்லை.(17) அத்தகு மனிதர்கள், வெறுக்கத்தக்க தீய நடைமுறைகள் குறித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது, தேவர்களின் தண்டனைக்கு அவர்களை விட வேண்டும்[3]கபடப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் தன் கருவூலத்தை நிறைக்கும் மன்னன் நிச்சயம் அறத்திலிருந்து விழுந்தவனாவான்.(18)நல்லோரால் அனைத்து வகையிலும் கௌரவிக்கப்படுவதும், வளமையான சூழ்நிலைக்குரியதும், நேர்மையான இதயம் ஒவ்வொன்றாலும் அங்கீகரிக்கப்படுவதுமான அறநெறிக் கோட்பாடே பின்பற்ற வேண்டும்.(19) நான்கு அடித்தளங்களைச் சார்ந்த கடமையை அறிந்தவனே கடமையை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான். பாம்பின் கால்களைக் கண்டுபிடிப்பது எப்படிக் கடினமானதோ, அப்படியே, கடமைகளைத் தாங்கும் காரணங்களைக் கண்டுபிடிப்பதும் கடினமானதாகும்[4].(20) விலங்குகளை வேட்டையாடும் ஒருவன், கணையால் தாக்கப்பட்ட மானின் பாதையைத் தரையில் உள்ள குருதிக் கறைகளைக் கொண்டு கண்டடைவதைப் போலவே, ஒருவன் கடமையின் காரணங்களைக் கண்டுபிடிக்க முயல வேண்டும்.(21) இவ்வாறே ஒரு மனிதன் நல்லோர் நடந்த பாதையில் அடக்கத்துடன் நடக்க வேண்டும். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்தைச் சேர்ந்த பெரும் அரச முனிகளின் நடத்தை அவ்வாறானதேயாகும்” என்றார் {பீஷ்மர்}.(22)

கருவூலமும், களவும்! – சாந்திபர்வம் பகுதி – 133-கருவூலத்தின் அவசியம்; அதைப் பாதுகாப்பதன் அவசியம்; களவு; கள்வர்கள்; கள்வர்களைத் தண்டிக்கும் முறை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னன், தன் நாட்டில் இருந்தும், பகைவரின் நாடுகளில் இருந்தும் செல்வத்தைக் கவர்ந்து, தன் கருவூலத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும். அந்தக் கருவூலத்தில் இருந்தே அவனது அறத்தகுதி எழுகிறது. ஓ! குந்தியின் மகனே, கருவூலத்தின் விளைவாலேயே அவனுடைய நாட்டின் வேர்கள் விரிவடைகின்றன.(1) இந்தக் காரணங்களால் கருவூலம் நிரப்பப்பட வேண்டும்; நிரப்பப்பட்டதும், (பயனில்லா செலவினங்களை நிறுதி) அதைக் கவனமாகப் பாதுகாத்துப் பெருக்க வேண்டும். இதுவே நித்திய கடமையாகும்.(2) தூய்மை மற்றும் நியாயமான செயல்பாட்டாலோ, இதயமற்ற கொடூர செயல்பாட்டாலோ கருவூலத்தை நிரப்ப முடியாது. {இவற்றுக்கிடையில் உள்ள} நடுப்பாதையைப் பின்பற்றி அது நிரப்பப்பட வேண்டும்.(3) பலவீனமான மன்னன் எவ்வாறு கருவூலத்தை வைத்துக் கொள்ள முடியும்? பலவீனமான மனிதன் எவ்வாறு ஒரு நாட்டை வைத்துக் கொள்ள முடியும்? நாடில்லாமல் ஒருவன் எங்கிருந்து செழிப்பை அடைவான்?(4) உயர்ந்த அணிவரிசையில் உள்ள ஒரு மனிதனுக்கு ஆபத்து மரணத்தைப் போன்றதாகும். இதன் காரணமாக மன்னன், தன் கருவூலம், படை, கூட்டாளிகள் மற்றும் நண்பர்களை எப்போதும் பெருக்கிக் கொள்ள வேண்டும்.(5)

வெற்றுக் கருவூலத்தைக் கொண்ட மன்னனை மனிதர்கள் அனைவரும் அலட்சியம் செய்வார்கள். அத்தகு மன்னன் கொடுக்கும் சொற்பமானவற்றால் நிறைவடையாத அவனுடைய பணியாட்கள், ஒருபோதும் அவனுடைய தொழிலில் எந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்த மாட்டார்கள்.(6) மன்னன் தன் செழிப்பின் விளைவாலேயே பெரும் கௌரவங்களை அடைகிறான். உண்மையில், பார்வைக்கு வெளிப்படுத்தக்கூடாத பெண்வடிவ மறைவங்கங்களை மறைக்கும் ஆடைகளைப் போலச் செல்வமானது அவனுடைய பாவங்களை மறைக்கிறது.(7) மன்னன் முன்பு யாரோடெல்லாம் சச்சரவில் ஈடுபட்டிருந்தானோ, அவர்கள் அவனது புதிய செழிப்பைக் கண்டு துயரால் நிறைவார்கள். அவர்கள் அவனைக் கொல்லும் வாய்ப்புக்காக மட்டுமே காத்திருப்பவர்களாக இருப்பினும், நாய்களைப் போல மீண்டும் அவனுக்குப் பணி செய்வார்கள், அவனும் ஏதும் நடக்காததைப் போல அவர்களை ஏற்றுக் கொள்வான்.(8) ஓ! மன்னா, அத்தகு மன்னனால் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும்? மன்னன் எப்போதும் பெருமையை அடையவே முயற்சிக்க வேண்டும்.(9) அவன் ஒருபோதும் பணிவாக வணங்கியிருக்கக்கூடாது. உழைப்பே {முயற்சியே} ஆண்மையாகும். சாதகமற்ற தருணத்தில் அவன் எவருக்கும் முன் வளைவதைவிட உடைந்தே போகலாம். அதற்குப் பதில் அவன் காட்டுக்குச் சென்று காட்டு விலங்குகளுடன் வாழலாம்.(10)

ஆனால் அவன், கள்வர்களைப் போல அனைத்துக் கட்டுப்பாடுகளையும் உடைக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மத்தியில் வாழவே கூடாது. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, காட்டைச் சார்ந்த கள்வர்களே கூடக் கடுஞ்செயல்களை நிறைவேற்ற பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்களைக் கொடுக்கலாம்.(11) நலன்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மன்னனே மீறினால், மக்கள் அனைவரும் அச்சத்தால் நிறைவார்கள். கருணையே அறியாத கள்வர்களே கூட இத்தகு மன்னனைக் கண்டு அஞ்சுவார்கள்[1].(12) இதன் காரணமாக, மன்னன் தன் மக்களின் இதயங்களை மகிழ்வுறச் செய்வதற்காக விதிகளையும் கட்டுப்பாடுகளையும் நிறுவவேண்டும். சின்னஞ்சிறு காரியங்களுக்கு விதிக்கப்படும் விதிகளைக்கூட மக்கள் மகிழ்ச்சியுடன் போற்றுவார்கள்.(13) இந்த உலகம் ஒன்றுமில்லாதது, எதிர்காலமும் தொன்மமே {இம்மையும், மறுமையும் கட்டுக்கதை} என்று நினைக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். அத்தகையவன் ரகசிய அச்சங்களால் இதயம் கலங்கடிக்கப்பட்டவனாக இருப்பினும், இவ்வகை நாத்திகனை ஒருவன் ஒருபோதும் நம்பக்கூடாது[2].(14) காட்டில் உள்ள கள்வர்கள், பிற அறங்களைப் பின்பற்றி, உடைமகளை மட்டும் களவு செய்பவர்களாக இருந்தால், அந்தக் கொள்ளைகளைத் தீங்கற்றவையாகக் கருதலாம். கள்வர்கள் அத்தகு கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதன் விளைவால் பல்லாயிரம் உயிரினங்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.(15)போரில் இருந்து தப்பி ஓடும் எதிரியைக் கொல்வது, {பிறன்} மனைவியரைக் கற்பழிப்பது, நன்றியின்மை, ஒரு பிராமணனின் உடைமையைச் சூறையாடுவது, ஒரு மனிதனின் மொத்த உடைமைகளையும் பறிப்பது,(16) கன்னியரைக் கெடுத்தல், கிராமங்கள் மற்றும் நகரங்களின் சட்டப்பூர்வமான தலைவர்களாகத் தொடர்ந்து நீடித்தல், பிறன் மனைவியருடன் ஒழுங்கங்கெட்ட கலவி ஆகியவற்றைக் கள்வர்களே கூடத் தீச்செயல்களாகக் கருதுகிறார்கள். கள்வர்கள் அவற்றை எப்போதும் தவிர்க்க வேண்டும்.(17) மேலும் மன்னர்கள், ({கள்வர்களுடன்} அமைதியை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம்) கள்வர்களுடைய இதயங்களில் நம்பிக்கை ஏற்படுத்த முயன்று, அவர்களுடைய போக்குவரத்துகள் அனைத்தையும் கண்காணித்த பிறகு, அவர்களை அழிப்பதில் வெல்வார்கள் என்பது நிச்சயம்.(18) இந்தக் காரணத்தால், கள்வர்களைக் கையாளும் காரியத்தில் அவர்களை உடனே {ஒரேயடியாக} அழிக்கும் தேவையில்லை[3]. அவர்களை மன்னனின் ஆளுகைக்குள் கொண்டு வர முயல வேண்டும். மன்னன், தானே அவர்களைவிடப் பலமிக்கவன் என்று கருதிக் கொண்டு, அவர்களிடம் ஒருபோதும் கொடுமையாக நடந்து கொள்ளக் கூடாது.(19) அவர்களை ஒரேயடியாக அழிக்காத மன்னர்களுக்குத் தாங்கள் அழிந்து விடுவோம் என்ற அச்சமில்லை. எனினும், அவர்களை {கள்வர்களை} அழித்தவர்கள், அந்தச் செயலின் விளைவால் எப்போதும் அச்சத்துடன் வாழ வேண்டியிருக்கும்” என்றார் {பீஷ்மர்}[4].(20)(ஆகையால் திருடன் இவைகளை விலக்க வேண்டும். ஓ பாரதா, மிச்சமின்றித் திருடினால், இந்தத் திருடனை அடுத்துக் கொல்ல வேண்டி (இவனுக்கு ஸ்நேஹமுண்டாகும்படி செய்துகொள்ள)க் கருதுகிறார்கள். பிறகு, இவனுடைய இடமுதலியவற்றைத் தெரிந்து கொண்டு இவனுடைய பொருளையும் மிச்சமில்லாமல் செய்துவிடுவார்கள் என்பது நிச்சயம். ஆகையால் திருடர்கள் தம்மிஷ்டப்படி செய்யத்தக்க பொருளையும் மிச்சமுள்ளதாகச் செய்ய வேண்டும். “நான் பலமுள்ளவனாயிருக்கிறேன்” என்று தீங்குகளைச் செய்யக்கூடாது. மிச்சமுள்ளதாகச் செய்யுந்திருடர்கள் எல்லாவிதத்தாலும் (தமக்கும்) மிச்சமிருப்பதைக் காண்பார்கள். மிச்சமின்றிச் செய்பவனுக்கு எப்பொழுதும் மிச்சமின்றிச் செய்வதால் பயமுண்டு” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “ஓ பாரதக் குலத்தோனே, அவர்கள் இவற்றை {சில தீமைகளைத்} தவிர்ப்பதால், ஒருவன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டால், அவர்களை அவன் முற்றாக அழிக்கக்கூடாது. அது தீர்மானிக்கப்பட்டதாகும். அவர்களை முற்றாக அழிப்பதற்குப் பதிலாக, அவர்கள் அவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அவன் பலவானாக இருந்தால், அவன் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம். ஓ மகனே, அவர்களை அழிப்பவர்கள், தங்கள் அழிவையே அனைத்துத் திசையிலும் காண்பார்கள். அழிப்பவர்கள் எப்போதும், அழித்த அச்செயலின் விளைவால் அச்சத்துடன் வாழ வேண்டும்)

பலமும், பாவத்தணிப்பும்! – சாந்திபர்வம் பகுதி – 134-அறத்திற்கும், செல்வத்திற்கும் பலமே வேர் என்றும், அந்தப் பலத்தை அடைய முயற்சிக்க வேண்டும் என்றும், தீச்செயல்கள் பலவற்றைச் செய்த பாவிகள் தங்கள் பாவத்தைத் தணிக்க வேண்டிய முறைகள் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நுண்ணறிவும், ஞானமும் மிக்க ஒரு க்ஷத்திரியனுக்கு, அறத்தகுதி (ஈட்டல்), செல்வம் (அடைதல்) ஆகியவை முக்கியக் கடமைகளாகும் எனக் கடமை குறித்து அறிவிக்கும் இந்த உரையைச் சாத்திரங்களை அறிந்தோர் சொல்கின்றனர். கடமை {தர்மம்} குறித்த நுண்ணிய விவாதங்கள், எதிர்கால உலகம் {மறுமை} குறித்த காணாத விளைவுகள் ஆகியவற்றின் நிமித்தமாக இந்த இரு கடமைகளையும் நிறைவேற்றுவதை அவன் தவிர்க்கக்கூடாது.(1) தரையில் உள்ள காற்தடங்களைக் கண்டு, அவை ஓநாயுடையவையா? இல்லையா? என்று விவாதிப்பது வீண் என்பதைப் போல அறம் மற்றும் மறத்தின் இயல்பு குறித்த விவாதங்கள் அனைத்தும் வீணே. அறம் மற்றும் மறத்தின் கனிகளை இவ்வுலகில் எவரும் ஒருபோதும் காண்பதில்லை[1].(2) எனவே, ஒரு க்ஷத்திரியன் அதிகாரத்தை {பலத்தை} அடையவே முயற்சிக்க வேண்டும். எவன் பலவானோ அவனே அனைத்தின் தலைவனாவான். ஒரு படையை அடைய செல்வம் வழிவகுக்கும். பலவோன் நுண்ணறிவுமிக்க ஆலோசகர்களை அடைவான்[2].(3) செல்வம் இல்லாதவன் உண்மையில் வீழ்ந்தவனே. குறைவாக இருக்கும் எதுவும், ஒரு விருந்தில் எஞ்சிய கழிவுக்கு{எச்சிலுக்கு} ஒப்பானதாகக் கருதப்படுகிறது[3]ஒரு பலமிக்க மனிதன் தீச்செயல்கள் பலவற்றைப் புரிந்தாலும், அச்சத்தின் காரணமாக எவரும் (அவனை நிந்திக்கவோ, தடுக்கவோ செய்யும்) எதையும் சொல்லவோ, செய்யவோ மாட்டார்கள். அறமும், பலமும் உண்மையுடன் தொடர்புடையதாக இருந்தால், அவர்களால் பேராபத்துகளில் இருந்து மக்களைக் காக்க முடியும்.(4) எனினும், இவ்விரண்டையும் ஒப்பிட்டால், பலமே அறத்தைவிட மேன்மையானதாகத் தோன்றும். பலத்திலிருந்தே அறம் எழுகிறது. அசையாத பொருட்கள் அனைத்தும் பூமியில் நிலைத்திருப்பதைப் போலறம் பலத்திலேயே நிலைத்திருக்கிறது.(5)புகையானது, (தன் அசைவுக்காக) காற்றைச் சார்ந்திருப்பதைப் போல, அறமும் பலத்தைச் சார்ந்திருக்கிறது. இவ்விரண்டில் பலவீனமான அறம், கொடியானது மரத்தைச் சார்ந்திருப்பதைப் போலப் பலத்தையே சார்ந்திருக்கிறது.(6) மகிழ்ச்சியானவர்களைச் சார்ந்திருக்கும் இன்பத்தைப் போல அறமானது பலமிக்கவர்களைச் சார்ந்திருக்கிறது. பலமிக்க மனிதர்களால் செய்யமுடியாதது ஏதுமில்லை. பலமிக்கவர்களிடம் உள்ள அனைத்தும் தூய்மையானதே.(7) ஒரு பலமற்ற மனிதன் தீச்செயல்களைச் செய்தால் ஒருபோதும் தப்ப முடியாது. அவனது நடதையைக் காணும் மனிதர்கள், ஓநாயைக் கண்டதைப் போல அதிர்ச்சியடைவார்கள்.(8) செல்வநிலையில் இருந்து வீழும் ஒருவன், அவமானமும், கவலையும் நிறைந்த வாழ்வை வாழ்கிறான். அவமானமும் நிந்தனையும் நிறைந்த வாழ்வானது மரணத்தைப் போன்றதாகும்.(9) ஒருவனுடைய பாவ நடத்தையின் விளைவால், அவன் நண்பர்கள் மற்றும் தோழர்களால் கைவிடப்படுகிறான், பிறரின் வார்த்தைக் கணைகளால் அவன் மீண்டும் மீண்டும் துளைக்கப்படுகிறான். அதன் நிமித்தமாக அவன் துயரில் எரிய வேண்டியிருக்கும்.(10)

(பாவத்தால் கறைபடிந்தவனாக இருந்தால் அந்தப்) பாவத்தைத் தணிப்பதற்கு ஒருவன் மூன்று வேதங்களைப் பயின்று, பிராமணர்களை வழிபட்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்து,(11) பார்வை, சொல், செயல் ஆகியவற்றால் அனைத்து மனிதர்களையும் நிறைவு செய்து, கபடங்கள் அனைத்தையும் கைவிட்டு, உயர்ந்த குடும்பங்களில் திருமணம் செய்து கொண்டு,(12) தன் சிறுமைக்கு வருந்தி, பிறர் பெருமைகளை அறிக்கையிட்டு, மந்திரங்களை ஓதி, வழக்கமான நீர்ச்சடங்குகளைச் செய்து, மென்மையான நடத்தையை ஏற்று, அதிகமாகப் பேசுவதைத் தவிர்த்து,(13) கடுந்தவங்களைச் செய்து, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் புகலிடத்தை நாட வேண்டும். உண்மையில், தீச்செயல்கள் பலவற்றைச் செய்த ஒருவன், மனிதர்களால் சொல்லப்படும் நிந்தனைகளுக்குக் கோபப்படாமல் இவை அனைத்தையும் செய்ய வேண்டும்.(14) தன்னை இவ்வழியில் நடத்திக் கொள்வதால், ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, உலக மதிப்பை மீண்டும் அடைவான். உண்மையில், அவன் இவ்வுலகில் {இம்மையில்} பெரும் மதிப்பையும், அடுத்த உலகில் {மறுமையில்} பெரும் கௌரவத்தையும் வென்று, இத்தகு நடத்தையைப் பின்பற்றுவதன் மூலமும், தன் செல்வத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலமும் அவன் இங்கே {இம்மையில்} பல்வேறு வகையான் இன்பங்களை அனுபவிப்பான்” என்றார் {பீஷ்மர்}.(15)

கள்வன் காயவ்யன்! – சாந்திபர்வம் பகுதி – 135-சாத்திர விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவன் கள்வனாகயிருப்பினும், முக்தியை அடைவான் என்பதை விளக்க காயவ்யனின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, இவ்வுலகில் {இம்மையில்} கட்டுப்பாடுகளை நோற்று, அடுத்த உலகில் {மறுமையில்} அழிவை அடையாத ஒரு கள்வனின் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) காயவ்யன் {காபச்யன் / காபவ்யன்} என்ற பெயரில், ஒரு க்ஷத்திரிய தந்தைக்கும், ஒரு நிஷாதத் தாய்க்கும் பிறந்த ஒரு கள்வனிருந்தான். காயவ்யன் க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றுபவனாகவே இருந்தான். தாக்கவல்லவனும், நுண்ணறிவையும், துணிவையும் கொண்டவனும், பெரியோர் மற்றும் ஆசான்களை வழிபடுபவனாகவும் இருந்த அவன் {காயவ்யன்}, தவசிகளின் நடைமுறைகளைப் பின்பற்றுவோரைக் காத்து வந்தான். அவன் கள்வனாகவே இருப்பினும், சொர்க்கத்தில் புகழை வென்றான்.(2,3) காலையிலும், மாலையிலும் மான்களை விரட்டி அவற்றின் கோபத்தைத் தூண்டுபவனாக இருந்தான். நிஷாதர்கள் மற்றும் காட்டில் வாழும் விலங்குகளின் நடைமுறைகள் அனைத்தையும் நன்கறிந்தவனாக அவன் இருந்தான்.(4) காலம் மற்றும் இடத்துக்குத் தக்க தேவைகளை நன்கறிந்த அவன், மலைகளின் மீது உலாவி வந்தான். விலங்குகள் அனைத்தின் பழக்கவழக்கங்களை அறிந்திருந்தவனான அவனுடைய கணைகள் இலக்கை ஒருபோதும் தவறாதவையாகவும், அவனுடைய ஆயுதங்கள் பலமானவையாகவும் இருந்தன.(5)

தனியொருவனாகவே பல நூற்றக்கணக்கான துருப்புகளை வெல்லவல்லவனாகவும் அவன் இருந்தான். வயது முதிர்ந்தவர்களும், கண்பார்வையற்றவர்களும், செவிகேள்வியற்றவர்களுமாக இருந்த அவனது பெற்றோரைத் தினமும் காட்டில் வழிபட்டுவந்தான்.(6) கௌரவிக்கத் தகுந்த மனிதர்கள் அனைவரையும், தேன், இறைச்சி, கனிகள், கிழங்குகள், பிற வகைச் சிறந்த உணவுகள் ஆகியவற்றைக் கொண்டு விருந்தோம்பலுடன் மகிழ்வித்து, அவர்களுக்குப் பல நல்ல அலுவல்களையும் {பணிகளையும்} செய்து கொடுத்தான்.(7) உலகில் இருந்து ஓய்ந்து காடுகளில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்ட பிராமணர்களிடம் அவன் பெரும் மரியாதையை வெளிப்படுத்தினான்.(8) அவன் செய்த தொழிலின் நிமித்தமாகவும், பிறர் மேல் கொண்ட அச்சத்தின் காரணமாகவும், அவனிடம் இருந்து கொடைகளைப் பெற விருப்பமில்லாமல் இருந்தவர்களைப் பொறுத்தவரையில், பொழுது விடிவதற்கு முன்பே அவர்களுடைய வசிப்பிடங்களுக்குச் சென்று அவர்களின் வாசல்களில் இறைச்சியை விட்டு வருவான்[1].(9) ஒரு நாள், பண்பில் கருணையற்றவர்களும், கட்டுப்பாடுகளை அனைத்தையும் அலட்சியம் செய்பவர்களுமான பல்லாயிரம் கள்வர்கள், அவனைத் தங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுக்க விரும்பினர்.(10)

அந்தக் கள்வர்கள், “காலம் மற்றும் இடத்துக்குத் தக்க தேவைகளை நீ அறிந்திருக்கிறாய். விவேகத்தையும், துணிவையும் கொண்டவனாகவும் இருக்கிறாய். நீ மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களிலும் நீ கொண்ட உறுதி பெரியதாக இருக்கிறது. எங்கள் அனைவராலும் மதிக்கப்படும் நீ, எங்கள் தலைவர்களில் முதன்மையானவனாக இருப்பாயாக. நீ வழிநடத்துவதைப் போலவே நாங்கள் செயல்படுவோம். ஒரு தந்தை, அல்லது தாயைப் போல நீ எங்களை முறையாகக் காப்பாயாக” என்றனர்.(12)

காயவ்யன், “பெண்களையோ, அச்சத்தால் சச்சரவில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களையோ, குழந்தையையோ, தவசியையோ ஒருபோதும் கொல்லாதீர்கள். போரிடுவதைத் தவிர்க்கும் எந்த ஒருவனும் {உங்களால்} ஒருபோதும் கொல்லப்படக்கூடாது, அதே போல எந்தப் பெண்ணும் கைப்பற்றப்படவோ, பலவந்தமாகக் கடத்தப்படவோ கூடாது.(13) பிராமணர்கள் அருளப்பட்டவர்களாகவே இருக்கட்டும், அவர்களின் நன்மைக்காகவே நீங்கள் எப்போதும் போரிட வேண்டும்.(14) உண்மை ஒருபோதும் தியாகம் செய்யப்படக்கூடாது. மனிதர்களின் திருமணங்கள் ஒருபோதும் தடுக்கப்படக்கூடாது. தேவர்களும், பித்ருக்களும், விருந்தினர்களும் வழிபடப்படும் வீடுகளுக்கு {உங்களால்} எந்தத் தீங்கும் இழைக்கப்படக்கூடாது.(15) உயிரினங்களுக்கு மத்தியில் பிராமணர்கள், உங்கள் கொள்ளைப்பவனியில் உங்களால் தவிர்க்கப்படத் தகுந்தவர்களாவர். உங்களுடையவை அனைத்தையும் அவர்களுக்குக் கொடுத்து, நீங்கள் அவர்களை வழிபட வேண்டும்.(16) எவன் பிராமணர்களின் கோபத்தைத் தூண்டுவானோ, எவனுடைய தோல்வியை அவர்கள் {பிராமணர்கள்} விரும்புவார்களோ, அவன் மூவுலகங்களிலும் ஒரு மீட்பனைக் காணத் தவறுவான்.(17) எவன் பிராமணர்களை இழிவாகப் பேசி, அவர்களுடைய அழிவை விரும்புவானோ, அவன், சூரியன் எழும்போதான இருளைப் போலவே அழிவை அடைவான்.(18) இங்கே வசித்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வீரத்தின் கடிகளை அடையலாம். உங்களுக்கு உரியதைக் கொடுக்க மறுப்பவர்களுக்கு எதிராகத் துருப்புகள் அனுப்பப்படும்.(19) தண்டக்கோலானது தீயவர்களுக்காகவே திட்டமிடப்பட்டதாகும். தன்வளர்ச்சிக்காக அது திட்டமிடப்பட்டதில்லை. நல்லோரை ஒடுக்குபவர்கள் கொல்லப்படத் தகுந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.(20) தீவினைக்கஞ்சாத வழிகளால் நாடுகளைப் பீடிப்பதன் மூலம் தங்கள் நற்பேற்றை வளர்த்துக் கொள்ள முனைவோர், வெகுவிரைவில் சடலத்தில் முளைத்த புழுக்களாகக் கருதப்படுவார்கள்.(21) சாத்திரங்களில் உள்ள கட்டுப்பாடுகளான இவற்றுக்கு உடன்பட்டுத் தங்களை நடத்திக் கொள்ளும் கள்வர்கள், கொள்ளையிடும் வாழ்வை வாழ்ந்தாலும்கூட வெகுவிரைவில் விடுதலையை {முக்தியை} அடைவார்கள்” என்றான் {காயவ்யன்}”.(22)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட அந்தக் கள்வர்கள், காயவ்யனின் கட்டளைகள் அனைத்துக்குக் கீழ்ப்படிந்த நடந்தார்கள். பாவத்தைத் தவிர்த்த அவர்கள் பெருஞ்செழிப்பையும் அடைந்தார்கள்.(23) இத்தகு வழியில் நடந்து கொண்டு, நேர்மையானவர்களுக்கு இவ்வாறு நன்மை செய்து, அதன் மூலம் கள்வர்களிடம் உள்ள தீய நடைமுறைகளை இவ்வாறு கட்டுப்படுத்திய காயவ்யன், (மறுமையில்) பெரும் வெற்றியை அடைந்தான்.(24) காயவ்யனின் இந்தக் கதையை எப்போதும் நினைக்கும் ஒருவன், எந்தக் காட்டுவாசிகளிடமிருந்தும் {காட்டு விலங்குகளிடம் இருந்தும்}, பூமி சார்ந்த எந்த உயிரினிடமிருந்தும் எந்த அச்சத்தையும் அடையமாட்டான்.(25) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இத்தகு மனிதனுக்கு எந்த உயிரினத்திடமும் அச்சம் இருக்காது. தீய மனிதர்களிடமும் அவன் எந்த அச்சத்தையும் அடைய மாட்டான். {காயவ்யனின் கதை கேட்ட} இத்தகு மனிதன் காட்டுக்குச் சென்றால், ஒரு மன்னனுக்கான பாதுகாப்போடு அவனால் அங்கே வாழ முடியும்[2]” என்றார் {பீஷ்மர்}.(26)

அறத்தின் நுட்பம்! – சாந்திபர்வம் பகுதி – 136-கருவூலத்தைப் பெருகச் செய்யக் கைப்பற்றத்தகுந்த மற்றும் கைப்பற்றத்தகாத பொருட்களைப் பகுத்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு மன்னன் தன் கருவூலத்தை நிறைத்துக் கொள்வது தொடர்பாக, பழங்காலத்துச் சாத்திரங்களை அறிந்தோர், பிரம்மன் பாடிய பின்வரும் வரிகளை {சுலோகங்களைப்} குறிப்பிடுகின்றனர்.(1) – வேள்விகளைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களின் செல்வம், தேவர்களுக்குக் காணிக்கையாக்கப்பட்ட செல்வம் ஆகியவை ஒருபோதும் கைப்பற்றப்படக்கூடாது. அறச்சடங்குகள் மற்றும் வேள்விகளை ஒருபோதும் செய்யாதோர் கள்வர்களுக்கு இணையாகக் கருதப்படுவதால், ஒரு க்ஷத்திரியன் அவர்களின் செல்வத்தைக் கைப்பற்றலாம்.(2) –

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும், அரசுரிமை தொடர்புடைய இன்பங்கள் அனைத்தும் க்ஷத்திரியர்களுக்குச் சொந்தமானவையே. பூமியின் செல்வங்கள் அனைத்தும் க்ஷத்திரியர்களுக்குச் சொந்தமானவையேயன்றி வேறு எவருக்கும் அல்ல.(3) அந்தச் செல்வத்தை க்ஷத்திரியன், தன் படைகளைப் பராமரிக்கவும், வேள்விகளைச் செய்யவும் பயன்படுத்த வேண்டும். எந்தப் பயனும் இல்லாத செடிகொடிகளைப் பறித்து, உணவாகப் பயன்படக்கூடிய காய்கறிகளைச் சமைப்பதற்காக அவற்றை மனிதர்கள் எரிக்கின்றனர்[1].(4)தெளிந்த நெய் ஆகுதிகளின் மூலம் தேவர்கள், பித்ருக்கள் மற்றும் மனிதர்களுக்கு உணவளிக்காதவனின் செல்வம் பயனற்றது என்று கடமைகளை அறிந்த மனிதர்கள் சொல்கின்றனர்.(5) ஓ! மன்னா, ஓர் அறம்சார்ந்த மன்னன் இத்தகையோரின் செல்வத்தைக் கைப்பற்ற வேண்டும். அந்தச் செல்வத்தைக் கொண்டு பெரும் எண்ணிக்கையிலான நன்மக்களை நிறைவுசெய்ய முடியும். எனினும், அவன் செல்வத்தைத் தன் கருவூலத்தில் பதுக்கி வைக்கக் கூடாது.(6)

தீயோரிடம் இருந்து செல்வத்தை அடைந்தும், பறித்தும் நல்லோருக்குக் கொடுப்பதில் தன்னைக் கருவியாக்கிக் கொள்ளும் ஒருவன், மொத்த அறநெறிகளையும் அறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(7) காய்கறிப் பொருட்கள் படிப்படியாக வளர்வது காணப்படுவதைப் போலவே மன்னன் தன் சக்தியின் அளவுக்கேற்ப, தன் படையெடுப்புகளை அடுத்த உலகிற்கும் நீட்டிக்க வேண்டும். போதுமான எந்தக் காரணமுமின்றி எறும்புகள் வளர்வது காணப்படுவதைப் போலவே, வேள்வியும் எந்தப் போதுமான காரணமும் இன்றியே எழுகிறது[2].(8)பால் கறக்கப்படும்போது) பசுக்கள் மற்றும் வளர்ப்பு விலங்குகளின் உடல்களில் இருந்து ஈக்கள், பூச்சிகள், எறும்புகள் ஆகியன விரட்டப்படுவதைப் போலவே வேள்வி செய்வதில் வெறுப்புள்ள மனிதர்கள் அனைவரும் நாட்டில் இருந்து விரட்டப்பட வேண்டும். இஃது அறநெறிக்கு இசைவானதே.(9) பூமியில் கிடக்கும் புழுதியானது, இரு கற்களுக்கிடையே அரைக்கப்படும்போது, மேலும் மேலும் நுண்ணியதாவதைப் போலவே, அறநெறி குறித்து மேலும் மேலும் சிந்தித்து விவாதிக்கப்படும்போதும் அது மேலும் மேலும் நுட்பமடைகிறது” என்றார் {பீஷ்மர்}.(10)

சகுல மீன்கள்! – சாந்திபர்வம் பகுதி – 137-வரப்போகும் ஆபத்திலிருந்து விடுபடத்தக்க வழிமுறைகளை முன்பே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்குச் சகுல மீன்களின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனுக்கு}, “எதிர்காலத்துக்குத் தேவையானதைக் கொடுப்பவன், விழித்த மனம் {நேரத்திற்கேற்ற நுண்ணறிவை / சமயோசித புத்தியைக்} கொண்டவன் ஆகிய இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனினும், காரிய தாமதம் செய்யும் மனிதன், தொலைந்து போகிறான்.(1) இது தொடர்பானதும், செயல்படும் வழியைத் தீர்மானிக்கும் காரியத்தில் காலதாமதம் செய்யும் ஒரு மனிதனைக் குறித்ததுமான பின்வரும் சிறந்த கதையைக் கவனமாகக் கேட்பாயாக.(2)

வெகு ஆழமில்லாததும், மீன்கள் நிறைந்ததுமான ஒரு தடாகத்தில் {குட்டையில்}, நண்பர்களும், நிலைத்த தோழர்களுமான மூன்று சகுல[1] மீன்கள் வசித்து வந்தன.(3) அந்த மூன்றில் ஒன்று, முன்னறிவு கொண்டதாகவும், வரப்போவதற்கு {எதிர்காலத்திற்குத்} தேவையானதை எப்போதும் தர {செய்ய} விரும்புவதகாவும் இருந்தது. மற்றொன்று பெரும் விழிப்புடைய மனத்தைக் கொண்டிருந்தது. மூன்றாவது {எதிலும்} காலதாமதம் செய்வதாக இருந்தது.(4)

ஒரு நாள் அத்தடாகத்திற்கு வந்த குறிப்பிட்ட மீனவர்கள், பல்வேறு வடிகால்களின் மூலம் அதில் இருந்த நீரை ஒரு தாழ்வான பகுதிக்கு வடியச் செய்தார்கள்.(5) முன்னறிவு கொண்ட மீனானது, தடாகத்தின் நீர் படிப்படியாகக் குறைவதைக் கண்டு, ஆபத்தான அச்சந்தர்ப்பத்தில் தன் தோழர்கள் இருவரிடமும்,(6) “இந்தத் தடாகத்தில் வாழும் நீர்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பேராபத்து நேரப்போகிறது. நம் பாதை தடைபடும் முன்னர் வேகமாக நாம் வேறு ஏதாவது இடத்திற்குச் சென்று விடுவோம்.(7) நல்ல கொள்கையின் {நீதியின்} துணையுடன் எதிர்காலத் தீமையைத் தடுப்பவன், பயங்கர ஆபத்துகளுக்கு ஒருபோதும் ஆட்படமாட்டான். என் ஆலோசனைகள் உங்களிடம் மேலோங்கட்டும். நாம் அனைவரும் இந்த இடத்தை விட்டுச் செல்வோமாக” என்றது.(8)

அப்போது அந்த மூன்றில் காலத் தாமதம் செய்வது, “நன்றாகச் சொன்னாய். எனினும், இத்தகு அவசரத்திற்கு எந்தத் தேவையுமில்லை. இஃதுவே என் திட்டமான கருத்தாகும்” என்றது[2].(9)விழித்த மனம் கொண்டதாகக் குறிப்பிடப்பட்ட மற்றொரு மீனானது, காலதாமதம் செய்யும் தன் தோழனிடம், “எதற்கான நேரமும் வாய்க்கும்போது, கொள்கையின்படி அதற்குரியதைத் தர {நேரத்திற்குத் தகுந்ததைச் செய்ய} நான் ஒருபோதும் தவறியதில்லை” என்றது[3].(10)முன்னறிவையும், குறிப்பிடத்தக்க நுண்ணறிவையும் கொண்டது {மீனானது}, தன் தோழர்கள் இருவரின் பதில்களையும் கேட்டு, ஓர் ஓடையின் {வாய்க்காலின்} வழியாக உடனடியாகப் புறப்பட்டு மற்றொரு ஆழமான தடாகத்தை அடைந்தது.(11)

நீர் வற்றியதைக் கண்ட மீனவர்கள், பல்வேறு வழிமுறைகளின் மூலம் எஞ்சியிருந்த மீன்களை அடைத்தனர்.(12) எஞ்சியிருக்கும் குறைந்த அளவு தண்ணீரை அவர்கள் கலக்கியபோது, காலதாமதம் செய்யும் சகுலம் {மீன்} மற்ற மீன்களுடன் சேர்ந்து {அவர்களிடம்} பிடிபட்டது.(13)

நீண்ட கயிறுகளைக் கொண்டு, தாங்கள் பிடித்த மீன்களை மீனவர்கள் கட்டியபோது, விழித்த மனம் {சமயோசித புத்தி} படைத்த சகுலம், அவ்வாறு கட்டப்பட்டவற்றோடு {மீன்களோடு} தன்னைத் திணித்துக் கொண்டு தான் பிடிபட்டதாகக் காட்டிக் கொள்வதற்காகக் கயிற்றைக் கடித்துக் கொண்டு, அவற்றுக்கு மத்தியில் அமைதியாகக் கிடந்தது. மீனவர்கள், கயிற்றோடு கட்டப்பட்டிருந்த மீன்கள் அனைத்தும் பிடிபட்டிருப்பதாகக் கருதினர்.(14,15) பிறகு அவர்கள், அவற்றைக் கழுவுவதற்காக ஆழமான நீர் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றனர். சரியாக அந்த நேரத்தில், விழித்த மனம் படைத்த சகுலம், கயிற்றை விட்டு விரைவாகத் தப்பிச் சென்றது.(16)

எனினும், காலதாமதம் செய்த மீனானது, மடமை கொண்டதாகவும், அறிவற்றதாகவும், புத்தியற்றதாகவும் இருந்ததால், தப்பிக்க இயலாமல் மரணத்தைச் சந்தித்தது.(17)

இவ்வாறு, அந்தக் காலதாமதம் செய்யும் மீனைப் போலவே புத்தியில்லாத ஒவ்வொருவரும், ஆபத்துக் காலத்தில் தப்பிக்க இயலாமல் அழிவைச் சந்திக்கிறார்கள்.(18) மேலும், எந்த மனிதன் தன்னைப் புத்திசாலியாகக் கருதிக் கொண்டு, சரியான நேரத்தில் தனக்கான நன்மையை நாடவில்லையோ, அவன் {மேலே குறிப்பிடப்பட்ட} விழித்த மனம் கொண்ட சகுலத்தைப் போலவே பேராபத்துக்கு உள்ளாவான் {அப்போது அவன் விழித்த மனத்துடன் இருந்தால் தப்புவான்}.(19) எனவே, முன்னறிவு கொண்டவன், விழித்த மனம் கொண்டவன் ஆகிய இருவர் மட்டுமே மகிழ்ச்சியை அடைவதில் வெல்வார்கள்.(20)

காஷ்டை, கலை, மாதம், முகூர்த்தம், பகல், இரவு, லவம், மாதம், அரைமாதம் {பிறைநாட்கள்}, ஆறு பருவகாலங்கள் {ருது}, கல்பம், வருடம் என்று காலம் பல்வேறு பிரிவுகளாக இருக்கிறது.(21) பூமியின் பிரிவுகளே இடம் என்றழைக்கப்படுகிறது. காலம் கண்ணுக்குத் தெரியாதது. எந்தப் பொருள் அல்லது எந்த நோக்கத்தின் வெற்றியைப் பொறுத்தவரையிலும், மனம் அதைக் குறித்து எவ்வகையில் நினைக்க நிறுவப்பட்டுள்ளதோ, அந்த வகையிலேயே அஃது {வெற்றி} அடையப்படுகிறது, அல்லது அடையப்படாமல் போகிறது.(22) 

முன்னறிவு கொண்டவன், விழித்த மனம் கொண்டவன் ஆகிய இந்த இருவரே, அறம் பொருள் விடுதலை {முக்தி / மோட்சம்} குறித்த அனைத்து உடன்பாடுகளிலும் முதன்மையான மனிதர்கள் என்று முனிவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.(23) எனினும், சிந்தித்து, ஆய்வு செய்த பிறகே அனைத்தையும் செய்யும் ஒருவன், அவனுடைய நோக்கங்களை {இன்பங்களை} நிறைவேற்றும் சரியான வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு, எப்போதும் அவற்றை அதிகமாக அடைவதில் வெல்கிறான். மேலும், காலம் மற்றும் இடத்திற்குரிய மதிப்புடன் செயல்படுபவர்களோ, வெறுமனே முன்னறிவும், விழித்த மனமுன் கொண்ட மனிதர்களைவிடச் சிறந்த விளைவுகளை அடைவதில் வெல்வார்கள்” என்றார் {பீஷ்மர்}.(24)

பூனையும், எலியும் – நட்பும், பகையும்! – சாந்திபர்வம் பகுதி – 138-ஆபத்துக் காலத்தில் எவ்வாறு எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்குப் பூனை மற்றும் எலியின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக்குலத்தின் காளையே, எதிர்காலத்திற்குத் தேவையானதைத் தருவதும் {அடைவதும்}, அவசர காலங்களை எதிர்கொள்வதுமான நுண்ணறிவே எங்கும் மேலானது, அதே வேளையில், காலதாமதம் அழிவையே கொண்டு வரும் என்று நீர் சொல்கிறீர்.(1) ஓ! பாட்டா, சாத்திரங்களை நன்கறிந்தவனும், அறம் மற்றும் பொருளை நன்கு அறிந்தவனுமான மன்னன், எந்த மேன்மையான நுண்ணறிவின் துணையுடன் இருந்தால், பல எதிரிகளால் சூழப்படும்போதும் கலங்காமல் இருப்பான் என்பதைக் கேட்க விரும்புகிறேன்.(2) ஓ! குருக்களின் தலைவரே {பீஷ்மரே}, இதையே நான் கேட்கிறேன். இது குறித்து உரையாடுவதே உமக்குத் தகும்.(3) ஒரு மன்னன் பல எதிரிகளால் தாக்கப்படும்போது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளவற்றுக்கு இசைவாக அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்த அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(4) ஒரு மன்னன் துயரில் வீழும்போது, கடந்த காலத்தில் அவனது செயல்களால் தூண்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான எதிரிகள், அவனுக்கு எதிராகப் படையெடுத்து அவனை வெல்ல முனைவார்கள்.(5)

பலவீனனும், தனியொருவனுமான மன்னன், அணிதிரண்டிருக்கும் பலமிக்க மன்னர்களால் அனைத்துப் பக்கங்களில் இருந்து அறைகூவியழைக்கப்படும்போது எவ்வாறு தன் தலையை உயர்த்த முடியும்?(6) அத்தகைய நேரங்களில் ஒரு மன்னன் நண்பர்களையும், பகைவர்களையும் எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?((7) நண்பர்களுக்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டவர்கள் அவனுடைய எதிரிகளாகும்போது, ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைய என்ன செய்ய வேண்டும்?(8) அவன் எவனிடம் போரிட வேண்டும்? எவனிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அவன் பலவானாகவே இருப்பினும், எதிரிகளுக்கு மத்தியில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?(9) ஓ! எதிரிகளை எரிப்பவரே, அரச கடமைகளைச் செயல்படுத்துவது தொடர்பான அனைத்துக் கேள்விகளிலும் இதையே நான் உயர்ந்ததாகக் கருதுகிறேன். இந்தக் கேள்விக்கான பதிலைக் கேட்கக்கூடியவர்கள் சிலரே, பதிலளிக்கவோ, உண்மையில் உறுதியான பற்று கொண்டவரும், அனைத்து உணர்வுகளையும் கட்டுப்படுத்தியவருமான சந்தனுவின் மகன் பீஷ்மரைத் தவிர வேறு யாருமில்லை. ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, இதைக் குறித்துச் சிந்தித்து, என்னுடன் உரையாடுவீராக” என்று கேட்டான்.(11)

பீஷ்மர், “ஓ! யுதிஷ்டிரா, உனக்குத் தகுந்த கேள்வியே இஃது. இதற்கான பதில் பேரின்பம் நிறைந்ததாகும். ஓ! மகனே, ஓ! பாரதா, துன்ப காலங்களில் {ஆபத்துக் காலங்களில்} நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவையும், பொதுவாக அறியப்படாதவையுமான கடமைகள் அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக.(12) ஓர் எதிரி நண்பனாகக் கூடும், ஒரு நண்பனும் எதிரியாகக் கூடும். சூழ்நிலைகளின் தொகையால் உண்டாகும் மனிதச் செயற்பாடுகளின் போக்கு, மிக மிக நிச்சயமற்றதாகும்.(13) எனவே, எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதைப் பொறுத்தவரையில், காலம் மற்றும் இடத்துக்குத் தகுந்த தேவைகளில் அவசிய கவனத்தைச் செலுத்தி, ஒருவன் தன் எதிரிகளை நம்ப வேண்டும், அல்லது போரிட வேண்டும்.(14) ஒருவன் தன்னால் செய்ய முடிந்ததில் சிறந்ததை வெளிப்படுத்தி, நலம் நாடும் விருப்பம் கொண்ட நுண்ணறிவு மிக்கவர்கள் மற்றும் அறிவுமிக்கவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். ஓ! பாரதா, ஒருவன் தன் உயிரைக் காத்துக் கொள்ள முடியாத போது, எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(15) எதிரிகளுடன் ஒருபோதும் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளாத மூட மனிதன், ஒருபோதும் எதையும் வெல்லவோ, பிற முயற்சிகளின் எந்தக் கனிகளையும் அடையவோ மாட்டான்.(16) மேலும், சூழ்நிலைகளை முழுமையாகக் கருத்தில் கொண்டு எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, நண்பர்களிடம் சச்சரவில் ஈடுபடுபவன் பெரும் கனிகளை அடைவதில் வெல்கிறான்.(17) இது தொடர்பாக ஓர் ஆலமரத்தினடியில் ஒரு பூனைக்கும், எலிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது”.(18)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஒரு பெரிய காட்டுக்கு மத்தியில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. பல வகைக் கொடிகளால் மறைக்கப்பட்டிருந்த அது, பல்வேறு வகைப் பறவைகளுக்கான ஓய்விடமாக இருந்தது.(19) அனைத்துத் திசைகளிலும் பரந்து விரிந்த எண்ணற்ற கிளைகளுடன் கூடிய பெரும் தண்டை {நடுமரத்தை} அது கொண்டிருந்தது. காண்பதற்கு இனிமையான அதன் நிழல் பெரும் புத்தணர்வை அளிப்பதாக இருந்தது. அது காட்டின் மத்தியில் நின்று கொண்டிருந்தது, மேலும் பல்வேறு இனங்களைச் சார்ந்த விலங்குகளும் அதில் வாழ்ந்து வந்தன.(20) பலிதன் என்ற பெயருடையதும், பெரும் ஞானம் கொண்டதுமான ஓர் எலி, அந்த மரத்தினடியில் நூற்றுக்கணக்கான வாயில்களைக் கொண்ட ஒரு பொந்தை அமைத்து வாழ்ந்து வந்தது.(21) லோமசன் என்ற பெயரைக் கொண்ட ஒரு பூனை, அந்த மரத்தின் கிளைகளில் தினமும் பெரும் எண்ணிக்கையிலான பறவைகளை விழுங்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.(22) சில காலம் கழித்து, அந்தக் காட்டு வந்த சண்டாளன் ஒருவன், தனக்கென அங்கே ஒரு குடிலைக் கட்டிக் கொண்டான். அவன், ஒவ்வொரு மாலைப்பொழுதிலும் சூரியன் மறைந்த பிறகு தனது கண்ணிகளை {உயிரினங்களைச் சிக்க வைக்கும் பொறிகளை} பரப்பினான். உண்மையில் தோல் இழைகளால் அமைக்கப்பட்ட தன் வலைகளைப் விரித்துவிட்டு, இரவை மகிழ்ச்சியாக உறங்கிக் கழித்து, நாளின் விடியலில் அந்த இடத்திற்கு மீண்டும் வந்தான்.(24) ஒவ்வோர் இரவிலும் பல்வேறு வகை விலங்குகள் அவனது கண்ணிகளில் சிக்கன. ஒரு நாள், ஒரு கணக் கவனக்குறைவால் பூனை அந்தக் கண்ணியில் சிக்க நேர்ந்தது.(25)

ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, எலியான பலிதன், எக்காலத்திலும் எலிகளினத்தின் எதிரியும், தனது பகைவனுமாக இருந்த பூனை அந்த வலையில் அகப்பட்டதும், பொந்தைவிட்டு வெளியே வந்து, அச்சமில்லாமல் திரியத் தொடங்கியது.(26) உணவைத் தேடி நம்பிக்கையுடன் காட்டில் திரிந்து வந்த அந்த எலி, சிறிது நேரம் கழித்து (அந்தச் சண்டாளன் கண்ணியாகப் பரப்பி வைத்திருந்த) இறைச்சியைக் கண்டது.(27) அந்தக் கண்ணியிடம் சென்ற அந்தச் சிறு விலங்கு {எலி} அந்த இறைச்சியை உண்ணத் தொடங்கியது. மனத்திற்குள் சிரித்துக் கொண்டே, ஆதரவற்ற நிலையில் வலையில் சிக்கியிருக்கும் தன் எதிரியைத் தாண்டிச் சென்றது.(28) இறைச்சி உண்ணும் நோக்கத்தில், தனக்கு வரவிருக்கும் ஆபத்தை அது கவனிக்கவில்லை. அந்த இடத்திற்கு வந்திருந்த ஒரு பயங்கரமான எதிரியின் மேல் திடீரென அது தன் கண்களைச் செலுத்தியது(29) அந்த எதிரியானது, அமைதியற்றதும், தாமிரக் கண்களைக் கொண்டதும், ஹரிதன் என்ற பெயரைக் கொண்டதுமான கீரிப்பிள்ளையேயன்றி வேறேதும் அல்ல. பாதாளப் பொந்துகளில் வாழும் அதன் உடல், நாணல் மலருக்கு ஒப்பானதாக இருந்தது.(30)எலியின் மணத்தால் அந்த இடத்திற்கு இழுத்துவரப்பட்ட அந்த விலங்கு {கீரி}, தன் இரையை விழுங்குவதற்காகப் பெரும் வேகத்தில் அங்கே வந்தது. அது தன் தலையை உயர்த்தி இடுப்பை நிமிர்த்தி நின்று, தன் கடைவாயை நாவால் நனைத்துக் கொண்டிருந்தது.(31) அதே நேரத்தில் அந்த எலி, அந்த மரப்பொந்துகளில் வாழ்ந்து வரும் மற்றொரு எதிரியானது அந்த ஆலமரத்தின் கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டது. இரவு உலாவியும், கூரிய அலகைக் கொண்டதும், சந்திரகன் என்ற பெயரைக் கொண்டதுமான அஃது ஓர் ஆந்தையாகும்.(32) கீரி மற்றும் ஆந்தை ஆகிய இரண்டின் பார்வைக்குத் தான் இலக்காகியிருப்பதைக் கண்ட எலியானது, பேரச்சத்துடன் இந்த வகையில் சிந்திக்கத் தொடங்கியது:(33) ”அனைத்துப் பக்கங்களிலும் அச்சம் இருக்கும்போதும், காலனே முகத்துக்கு நேராக என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதுமான இத்தகைய பேராபாத்துக் காலத்தில், தன் நன்மையை விரும்பும் ஒருவன் எவ்வாறு செயல்பட வேண்டும்?” என்று நினைத்தது.(34)

அனைத்துப் பக்கங்களிலும் ஆபத்தால் சூழப்பட்டு, அனைத்துத் திசைகளிலும் அச்சத்தைக் கண்ட அந்த எலியானது, தன் பாதுகாப்புக்கான அச்சத்தால் நிறைந்து, ஒரு பெரும் தீர்மானத்தைச் செய்தது:(35) “ஒருவன் நூற்றுக்கணக்கான வழிமுறைகளைக் கொண்டு, எண்ணற்ற ஆபத்துகளை விரட்டி, தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தற்போது அனைத்துப் பக்கங்களிலும் ஆபத்து என்னைச் சூழ்ந்துள்ளது.(36) போதுமான முன்னெச்சரிக்கையின்றி இந்தக் கண்ணியில் இருந்து நான் தரைக்குச் சென்றால், கீரியானவன் நிச்சயம் என்னைப் பிடித்து விழுங்கிவிடுவான். இந்தக் கண்ணியிலேயே நான் இருந்தாலோ, இந்த ஆந்தையானவன் என்னை நிச்சயம் பிடித்துவிடுவான். பூனையானவன் வலையில் இருந்து விடுபடுவதில் வென்றால், அவனும் நிச்சயம் என்னை விழுங்கிவிடுவான்.(37) எனினும், நம்மைப் போன்ற நுண்ணறிவு மிக்க ஒருவன், தன் அறிவை இழப்பது முறையாகாது. எனவே, உரிய வழிமுறைகள் மற்றும் நுண்ணறிவின் துணை கொண்டு, என் உயிரைப் பாதுகாப்பதற்கான சிறந்த முயற்சியை நான் செய்வேன்.(38) நுண்ணறிவு மற்றும் ஞானத்தைக் கொண்டவனும், கொள்கையறிவியலை அறிந்தவனுமான ஒருவன், தன்னை அச்சுறுத்தும் ஆபத்து எவ்வளவு பெரியதாக, பயங்கரமானதாக இருந்தாலும், ஒருபோதும் அதில் மூழ்கிப்போக மாட்டான்.(39) எனினும் தற்போது, இந்தப் பூனையானவனைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் நான் காணவில்லை. அவன் என் எதிரிதான். ஆனால் அவனும் துயரில் இருக்கிறான். நான் அவனுக்குச் செய்ய இருக்கும் தொண்டு மிகப் பெரியதாகும்.(40)

மூன்று எதிரிகளால் இரையாக்கப்பட முயலப்படும் நான் இப்போது என் உயிரைக் காத்துக் கொள்ள எவ்வாறு செயல்பட வேண்டும்? அந்த எதிரிகளில் ஒருவனான பூனையின் பாதுகாப்பையே இப்போது நான் நாட வேண்டும்.(41) இந்த மூவரிடம் இருந்தும் நான் தப்பும் வகையில், கொள்கை அறிவியலின் துணைகொண்டும், என் நுண்ணறிவைப் பயன்படுத்தியும், பூனையின் நன்மைக்கான ஆலோசனையை அவனிடம் கூறப் போகிறேன்.(42) பூனையே என் மிகப் பெரும் எதிரியாக இருந்தாலும், இப்போது அவன் வீழ்ந்திருக்கும் துயரானது மிகப் பெரியதாகும். இந்த மூட விலங்கைத் தனது நன்மைக்கான காரியங்களைப் புரிந்து கொள்ள வைக்க முடியுமா என்று நான் முயற்சிக்கப்போகிறேன். இத்தகைய துயரில் வீழ்ந்திருக்கும் அவன், என்னுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.(43) பலவானால் பீடிக்கப்படும் ஒருவன், எதிரியுடன் கூட அமைதியை ஏற்படுத்திக் கொள்ளலாம். துயரில் வீழ்ந்து தன் உயிருக்கான பாதுகாப்பை நாடும் ஒருவனுடைய நடத்தை இவ்வாறே இருக்க வேண்டும் என்று கொள்கை அறிவியலின் ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.(44) மூடனை நண்பனாகக் கொண்டிருப்பதைவிட, கல்விமானை எதிரியாகக் கொண்டிருப்பதே சிறந்தது. என்னைப் பொறுத்தவரையில், என் உயிரானது என் எதிரியான அந்தப் பூனையிடமே மொத்தமாக இருக்கிறது.(45) நான் இப்போது அந்தப் பூனையானவனிடம், அவனுடைய விடுதலையைக் குறித்துப் பேச வேண்டும். ஒருவேளை இந்தக் கணத்தில், பூனையை நுண்ணறிவுமிக்க, கல்விமானான எதிரியாகக் கொள்வதில் எந்தப் பிழையுமில்லை” என்று தீர்மானித்தது. இவ்வாறே எதிரிகளால் சூழப்பட்ட அந்த எலி சிந்தித்துக் கொண்டிருந்தது.(46)

பொருள் அறிவியலையும், எப்போதும் போரிடத் தீர்மானிக்க வேண்டும், எப்போது அமைதியை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை நன்கறிந்ததுமான எலி, இவ்வாறு சிந்தித்து, அந்தப் பூனையிடம் மென்மையாக,(47) “ஓ! பூனையே, நான் நட்பால் உன்னிடம் பேசுகிறேன். நீ உயிருடன் இருக்கிறாயா? நீ வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் நம் இருவரின் நன்மையையும் விரும்புகிறேன்.(48) ஓ இனிமையானவனே, நீ எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. நீ மகிழ்ச்சியுடன் வாழ்வாய். உண்மையில், நீ என்னைக் கொல்லாமல் இருந்தால், நான் உன்னை மீட்பேன்.(49) நீ தப்பிக்கவும், நான் பெரும் நன்மையை அடையவும், ஒரு சிறந்த தகுமுறை இருப்பதாக எனக்குத் தெரிகிறது.(50)

உனக்காகவும், எனக்காகவும் மெய்யுறுதியுடன் சிந்தித்து, நம்மிருவருக்கும் நன்மையைச் செய்யும் தகுமுறை ஒன்றை நான் கண்டடைந்திருக்கிறேன்.(51) கீரி மற்றும் ஆந்தை ஆகிய இருவரும், தீய நோக்கத்துடன் காத்திருக்கின்றனர். ஓ! பூனையே, அவ்விருவரும் என்னைத் தாக்காத மட்டுமே என் உயிர் பாதுகாப்புடன் இருக்கும்.(52) அந்த மரத்தின் கிளையில் இருக்கும் இழிந்த ஆந்தையானவன், அமைதியற்ற பார்வையுடனும், பயங்கர அலறல்களுடனும் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதனால் நான் பேரச்சத்துடன் இருக்கிறேன்.(53) நல்லோரைப் பொறுத்தவரையில் எட்டு அடி {நடையடி} கொண்டதே நட்பு[1]. ஞானம் கொண்டவனாக நீ என் நண்பனாவாய். நான் உன்னிடம் நண்பனாக நடந்து கொள்வேன். உனக்கு இப்போது எந்த அச்சமும் தேவையில்லை.(54) ஓ! பூனையே என் உதவி இல்லாமல் உன்னால் இந்த வலையைக் கிழிக்க முடியாது. எனினும், நீ என்னைக் கொல்லாதிருந்தால், உனக்குத் தொண்டாற்ற நானே வலையை அறுப்பேன்.(55)நீ இந்த மரத்தில் வாழ்ந்து வந்தாய், நானும் அதனடியில் வாழ்ந்து வந்தேன். நாமிருவரும் இங்கே நீண்ட வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். இவை யாவற்றையும் நீ அறிவாய்.(56) ஒருவராலும் நம்பப்படாதவன், ஒருவரையும் நம்பாதவன் ஆகியோரை ஞானிகள் ஒருபோதும் மெச்சுவதில்லை. இருவரும் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருப்பார்கள்.(57) இந்தக் காரணத்திற்காக, நம் இருவருக்குள்ளும் அன்பு பெருகட்டும், நம் இருவருக்குள் ஒற்றுமை ஏற்படட்டும். வாய்ப்பு கடந்த பிறகு செய்யப்படும் முயற்சியை ஞானிகள் மெச்சுவதில்லை.(58) இது போன்ற ஒரு புரிதல் நமக்குள் ஏற்படுவதற்கு இதுவே சரியான நேரம் என்பதை அறிந்து கொள்வாயாக. நீ வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் வாழ வேண்டும் என்று நீயும் விரும்ப வேண்டும்.(59) மனிதன் மரத்தை அக்கரைக்கு எடுத்துச் செல்வதையும், மரம் மனிதனை அக்கரைக்கு இட்டுச் செல்வதையும் காண்கிறோம்.(60) அதைப் போலவே, நமது உடன்படிக்கை நம்மிருவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நான் உன்னைக் காப்பேன், நீயும் என்னைக் காக்க வேண்டும்” என்றது.(61) இரண்டிற்கும் நன்மையை ஏற்படுத்துபவையும், அறிவு நிறைந்தவையும், முற்றிலும் ஏற்புடையவையுமான இவ்வார்த்தைகளைச் சொன்ன பலிதன் என்ற அந்த எலி, ஒரு பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தது.(62)

எலி சொன்னவையும், நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டவையும், அறிவு நிறைந்தவையும், மிகவும் ஏற்புடையவையுமான இந்த வார்த்தைகளைக் கேட்டதும், நல்ல கருத்து முடிவையும், முன்னறிவையும் கொண்டதுமான பூனையானது, பதிலுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னது.(63) பெரும் நுண்ணறிவைக் கொண்டதும், நாவன்மை கொண்டதுமான பூனை, தன் நிலையை நினைத்துப் பார்த்து, அவ்வார்த்தைகளைச் சொன்ன எலியைப் புகழ்ந்து, மென்மையான வார்த்தைகளைக் கொண்டு அதனிடம் பதிலுரைத்தது.(64) கூரிய பற்களைக் கொண்டதும், வைடூரியக் கற்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டதும், லோமசன் என்றழைக்கப்பட்டதுமான அந்தப் பூனை, எலியை மெதுவாகப் பார்த்துப் பின்வருமாறு பதிலளித்தது:(65) “ஓ! இனியவனே, நான் உன்னிடம் மகிழ்ச்சியடைந்தேன். நான் வாழ வேண்டும் என்று விரும்பும் நீ அருளப்பட்டிருப்பாயாக. நல்ல விளைவுகளை உண்டாக்கும் என்று நீ கருதுபவற்றை எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்வாயாக.(66) நான் நிச்சயம் பெருந்துயரில் இருக்கிறேன். நீயும் பெருந்துயரத்திலேயே இருக்கிறாய். தாமதமில்லாமல் நமக்குள் ஓர் உடன்பாடு உண்டாகட்டும்.(67) ஓ! பலமிக்கவனே, நம் காரிய நிறைவேற்றத்திற்குத் தேவையானதை வாய்ப்பு வரும்போது நான் செய்வேன். நீ என்னைக் காத்தால், உன் தொண்டு ஒன்றுமில்லாமல் போகாது.(68) நான் என்னை உன் கரங்களில் ஒப்படைக்கிறேன். நான் உன்னிடம் அர்ப்பணிப்புக் கொள்கிறேன். நான் உன்னிடம் ஒரு சீடனைப் போலக் காத்திருந்து உனக்குத் தொண்டு புரிவேன். உன் பாதுகாப்பை நாடும் நான் எப்போதும் உன் கட்டகளைகளுக்குக் கீழ்ப்படிவேன்” என்றது.(69)

இவ்வாறு சொல்லப்பட்ட பலிதன் என்ற எலி, முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் இருந்த பூனையிடம், முக்கியத்துவம் வாய்ந்தவையும், உயர்ந்த ஞானத்தைக் கொண்டவையுமான இவ்வார்த்தைகளைப் பதிலுக்குச் சொன்னது:(70) “நீ மிகவும் பெருந்தன்மையுடன் பேசினாய். உன்னைப் போன்ற ஒருவனிடம் இதை எதிர்பார்க்காமல் இருக்க முடியாது. எனக்குத் தெரிந்து நம் இருவருக்கும் நன்மையை உண்டாக்கப்போகும் தகுமுறையை உனக்கு வெளிப்படுத்துகிறேன், கேட்பாயாக.(71) நான் உன் உடலின் அடியில் பதுங்கிக் கொள்கிறேன். நான் அந்தக் கீரியிடம் பெரும் அச்சமடைந்திருக்கிறேன். நீ என்னைக் காப்பாயாக. என்னைக் கொல்லாதிருப்பாயாக. நான் உன்னைக் காப்பதற்கு இயன்றவனாவேன்.(72) அந்த ஆந்தையும் என்னை இரையாகக் கொள்ள விரும்புவதால், அந்த அற்பனிடம் இருந்தும் என்னைக் காப்பாயாக. நீ சிக்கியிருக்கும் கயிற்றை நான் அறுப்பேன். ஓ! நண்பா, உண்மையின் பேரில் நான் உறுதிகூறுகிறேன்” என்றது.(73)

அறிவுநிறைந்த, நீதிமிக்க இவ்வார்த்தைகளைக் கேட்ட லோமசன், மகிழ்ச்சியால் நிறைந்து, தன் கண்களைப் பலிதன் மேல் செலுத்தி, நல்வரவு கூறி அதனை மெச்சியது.(74) பலிதனை மெச்சிய பூனை, தன் நட்பை வெளிப்படுத்தி, ஒரு கணம் சிந்தித்து, நேரமெதையும் இழக்காமல் மகிழ்ச்சியாக,(75) “என்னிடம் விரைந்து வா. நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ என் உயிரைப் போன்ற அன்புக்குரிய நண்பனாவாய். ஓ! பெரும் ஞானியே, உன் அருளால் நான் என் உயிரைக் கிட்டத்தட்ட மீண்டும் அடைந்துவிட்டேன்.(76) என் சக்திக்குத் தக்க நான் இப்போது உனக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் சொல்வாயாக, நான் அதைச் செய்வேன். ஓ! நண்பா, நமக்குள் அமைதி நிலைக்கட்டும்.(77) ஆபத்திலிருந்து விடுபட்டதும், என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து நான் உனக்கு ஏற்புடைய, நன்மையான அனைத்தையும் செய்வேன்.(78) ஓ! இனியவனே, இத்துயரில் இருந்து விடுபட்டதும், நான் நிச்சயம் உன்னை மகிழ்ச்சிப்படுத்த முனைந்து, வழிபட்டு, உன் தொண்டுக்கான பதிலுதவியை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் செய்வேன்.(79) ஒருவன், அபரிமிதமான தொண்டுகளைப் பதிலுக்குச் செய்தாலும், முதல் முறையாகச் செய்யப்படும் நன்மைக்கு அஃது இணையாகாது. முன்னவன் தான் பெற்ற தொண்டுகளுக்காகவே அந்தத் தொண்டுகளைச் செய்கிறான். எனினும், அத்தகு நோக்கமேதும் இல்லாமல் செயல்பட்ட பின்னவனே கௌரவிக்கப்பட வேண்டும்” என்றது”.(80)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்தப் பூனைக்குத் தன்னலன்களை இவ்வாறு புரிய வைத்த அந்த எலி, தன் எதிரியின் உடலுக்கடியில் நம்பிக்கையுடன் பதுங்கியது.(81) அறிவு கொண்டதும், பூனையால் இவ்வாறு உறுதிகூறப்பட்டதுமான எலியானது, தன் தந்தை, அல்லது தாயின் மடியில் இருப்பதைப் போல அந்தப் பூனையின் மார்புக்கடியில் நம்பிக்கையுடன் தன்னைக் கிடத்திக் கொண்டது.(82) இவ்வாறு அந்தப் பூனையின் உடலுக்கடியில் பதுங்கிய எலியைக் கண்ட கீரியும், ஆந்தையும், தங்கள் இரையைப் பிடிப்பதில் நம்பிக்கையிழந்தன.(83) உண்மையில், அந்த எலிக்கும், பூனைக்குமிடையிலான நெருக்கத்தைக் கண்ட ஹரிதனும், சந்திரகனும், அச்சமடைந்து, ஆச்சரியத்தால் நிறைந்தன.(84) அவை இரண்டும் பலத்தையும், நுண்ணறிவையும் கொண்டிருந்தன. தங்கள் இரையைப் பிடிப்பதில் நுண்ணறிவுமிக்கக் கீரியும், ஆந்தையும் இரை அருகில் இருந்தாலும், எலி மற்றும் பூனைக்கிடையிலான உடன்பாட்டில் இருந்து அவற்றைப் பிரிக்க இயலாது என்பதை உணர்ந்தன.(85) உண்மையில், அந்தப் பூனையும் எலியும் தங்கள் தகுமரபின் முடிவுகளை நிறைவேற்றிக் கொள்ள ஏதுவாக, கீரியும், ஆந்தையும் அந்த இடத்தைவிட்டு அகன்று தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பின.(86)

அதன்பிறகு, காலம் மற்றும் இடத்தின் தேவைகளை அறிந்த பலிதன் என்ற எலி, பூனையின் உடலுக்கடியில் கிடந்து கொண்டே, அந்தக் கயிற்றின் இழைகளை மெதுவாக அறுக்கத் தொடங்கி, தன் வேலையை முடிக்கச் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது.(87) தன்னைச் சுற்றியிருக்கும் இழைகளால் துயரடைந்த பூனை, கயிற்றை மெதுவாக அறுத்துக் கொண்டிருக்கும் எலியிடம் பொறுமையை இழந்து கொண்டிருந்தது.(88) எலி மெதுவாக வேலை செய்வதைக் கண்ட பூனை, அப்பணியை முடிப்பதில் அதை விரைவுப்படுத்த விரும்பி,(89) “ஓ! இனியவனே, நீ உன் பணியை எவ்வாறு விரைவாகச் செய்யாமல் இருக்கிறாய்? உன் நோக்கம் நிறைவேறியதும் இப்போது நீ என்னை அலட்சியம் செய்கிறாயா? ஓ! எதிரிகளைக் கொல்பவனே, இந்த இழைகளை வேகமாக அறுப்பாயாக. விரைவில் வேடன் இங்கே வந்துவிடுவான்” என்றது.(90)

பொறுமையிழந்த பூனையால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நுண்ணறிவைக் கொண்டதுமான எலி, அதிக ஞானம் இல்லாததாகத் தெரிந்த அந்தப் பூனையிடம், தன்னலம் நிறைந்த இந்த நன்மையான வார்த்தைகளைச் சொன்னது:(81) “ஓ! இனியவனே, அமைதியாகக் காத்திருப்பாயாக. வேகம் தேவையில்லை. அச்சங்கள் அனைத்தையும் விரட்டுவாயாக. காலத்தின் தேவைகளை நாம் அறிவோம். காலமெதையும் நாம் வீணாக்கவில்லை.(92) முறையற்ற காலத்தில் தொடங்கப்பட்ட செயல் நிறைவடையும்போது ஒருபோதும் பொருளை ஈட்டித்தராது. மறுபுறம், முறையான காலத்தில் தொடங்கப்பட்ட செயலோ, எப்போதும் அற்புதக் கனிகளை உண்டாக்கும்.(93) முறையற்ற காலத்தில் நீ விடுபட்டால், நான் உன்னிடம் பேரச்சத்துடன் நிற்க வேண்டியிருக்கும். எனவே, முறையான காலத்திற்காகக் காத்திருப்பாயாக. ஓ! நண்பா, பொறுமையிழக்காதே.(94) ஆயுதங்களுடன் கூடிய வேடன் இந்த இடத்திற்கு வருவதை நான் கண்டதும், நம் இருவருக்கும் அச்சத்தைக் கொடுக்கும் அந்தக் கணத்தில் நான் இந்த இழைகளை அறுத்துவிடுவேன்.(95) அப்போது விடுபடும் நீ மரத்தின் மீது ஏறுவாய். அந்நேரத்தில், உன் உயிரின் பாதுகாப்பைத் தவிர நீ வேறு எதைக் குறித்தும் சிந்திக்கமாட்டாய்.(96) ஓ! லோமசா, நீ அச்சத்துடன் அவ்வாறு தப்பி ஓடும்போது, நான் என் பொந்துக்குள் நுழைவேன், நீயும் மரத்தின் மீது ஏறிவிடுவாய்” என்றது.(97)

எலியால் சொல்லப்பட்டவையும், தனக்கு நன்மையானவையுமான வார்த்தைகளைக் கேட்டதும், நுண்ணறிவு மற்றும் நாவன்மையைக் கொண்டதும், தன் உயிரைக் காத்துக் கொள்வதில் பொறுமையிழந்ததுமான பூனை, பின் வரும் வார்த்தைகளால் அந்த எலிக்குப் பதிலுரைத்தது. உண்மையில், உடன்பாட்டில் தனக்குரிய பங்கை வேகமாகவும், முறையாகவும் செய்த பூனை, தன் பங்கை விரைவாகச் செய்யாத எலியிடம்,(99) “நான் உன்னைப் பேராபத்தில் இருந்து கணிசமான அளவில் உடனடியாகக் காத்தேன். ஐயோ, நேர்மையானவர்கள் தங்கள் நண்பர்களின் காரியத்தை இவ்வழியில் ஒருபோதும் செய்யமாட்டார்கள். அதைச் செய்யும்போது மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், {தாங்கள் செய்யும்போது} அதை வேறுவகையிலேயே செய்கிறார்கள்.(100) நீ எனக்கு நன்மையானதை மிக வேகமாகச் செய்ய வேண்டும். ஓ! பெரும் ஞானியே, நம்மிருவருக்கும் நன்மை ஏற்படும் வகையில் இன்னும் சற்று {விரைவாக} முயற்சிப்பாயாக.(101) மறுபுறம், நம் பழைய பகைமையை நினைத்துக் கொண்டு காலத்தைப் போக்குவாயெனில், ஓ! தீய அற்பனே, அந்த உன் செயலின் விளைவால், உன் வாழ்வு காலத்தையே நீ குறுக்கிக் கொள்வாய்[2].(102) நான் இதற்கு முன்பு அறியாமல் உனக்குத் தீங்கேதும் செய்திருந்தால், அதை நீ உன் நினைவில் கொள்ளாதே. நான் உன்னிடம் மன்னிப்பைக் கோருகிறேன். என்னிடம் நிறைவு கொள்வாயாக” என்றது.(103)பூனை இவ்வார்த்தைகளைச் சொன்னதும், நுண்ணறிவும், ஞானமும், சாத்திர அறிவும் கொண்ட எலியானது, அதனிடம் இந்தச் சிறந்த வார்த்தைகளைச் சொன்னது:(104) “ஓ! பூனையே, நீ உன் நோக்கத்தின் முன்னேற்றத்தைக் குறித்துக் கேட்கிறாய். எனினும் நான், என் நோக்கங்களுக்கு இசைவானதைச் சொல்கிறேன், கேட்பாயாக.(105) எந்த நட்பில் அச்சம் உண்டோ, எதில் அச்சத்தை விலக்கமுடியாதோ, பாம்பின் நச்சுப் பற்களிடம் இருந்து (பாம்பாட்டியின்) கையைக் காத்துக் கொள்வதைப் போலப் பெரும் எச்சரிக்கையுடன் {அந்த நட்பு} கையாளப்பட வேண்டும்.(106) பலமிக்க ஒருவனிடம் உடன்பாடு கொண்ட ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவில்லையெனில், அந்த உடன்பாடு நன்மைக்குப் பதிலாகத் தீங்கை உண்டாக்கக்கூடும்.(107) ஒருவரும் ஒருவருக்கும் நண்பனுமில்லை; ஒருவரும் ஒருவருக்கும் நலம்விரும்பியுமில்லை; காரிய நோக்கங்களுக்காக மட்டுமே நண்பர்களோ, எதிரிகளோ உண்டாகிறார்கள்.(108) பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் தங்கள் வகையைச் சேர்ந்த காட்டு யானைகளைப் பிடிப்பதைப் போலவே காரியங்களே காரியங்களைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், ஒரு செயலை நிறைவேற்றிய பிறகு, அந்தச் செயலைச் செய்தவன் அரிதாகவே மதிக்கப்படுகிறான். இதன் காரணமாக, ஏதாவதொன்றை மிச்சம் வைத்தே அனைத்துச் செயல்களும் செய்யப்பட வேண்டும்.(109) நான் உன்னை விடுவிக்கும்போது, வேடனிடம் கொண்ட அச்சத்தால் பீடிக்கப்படும் நீ, என்னைப் பிடிக்க நினைக்காமல் உன் உயிரைக் காத்துக் கொள்ளவே தப்பி ஓடுவாய். இன்னும் ஒன்றுதான் {ஓர் இழைதான்} அறுக்கப்படாமல் மிச்சம் இருக்கிறது. அதை நான் வேகமாக அறுத்துவிடுவேன். ஓ! லோமசா, ஆறுதலடைவாயாக” என்றது.(111)

பயங்கர ஆபத்தில் இருந்த அந்த எலியும், பூனையும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, படிப்படியாக இரவு தேய்ந்தது. எனினும், பூனையின் இதயத்தில் பேரச்சம் ஊடுருவியது.(112) இறுதியாகக் காலை விடிந்ததும், பரிகன் என்ற பெயரைக் கொண்ட அந்தச் சண்டாளன் காட்சியில் தோன்றினான். அவனுடைய முகத்தோற்றம் பயங்கரமானதாக இருந்தது. அவனுடைய தலைமுடி கருப்பும், பழுப்புமாக இருந்து. அவனது இடை மிக அகண்டதாகவும், அவனுடைய குணங்கள் மிகக் கடுமையானவையாகவும் இருந்தன. காதிலிருந்து காதுவரை நீண்டிருந்த வாயையும், நீண்ட காதுகளையும் கொண்டிருந்த அவன் அருவருப்பான வடிவத்தைக் கொண்டிருந்தான். ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, நாய்க்கூட்டத்தின் துணையுடன் இருந்தவனும், இரக்கமற்றவனாகத் தெரிந்தவனுமான அந்த மனிதன் காட்சியில் தோன்றினான்.(113,114)

யம தூதனுக்கு ஒப்பான அவனைக் கண்ட பூனை அச்சத்தால் நிறைந்தது. அச்சமடைந்த அது {பூனை எலியிடம்} பலிதனிடம், “நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டது. எலியானது பூனையைப் பற்றி எஞ்சியிருந்த அந்த ஓர் இழையை மிக வேகமாக அறுத்தது. அந்தச் சுருக்கிலிருந்து {கயிற்றிலிருந்து} விடுபட்ட பூனை வேகமாக ஓடிச்சென்று ஆலமரத்தில் ஏறிக் கொண்டது.(116) ஆபத்தான சூழ்நிலையில் இருந்தும், ஒரு பயங்கரமான எதிரியின் முன்னிலையில் இருந்தும் விடுபட்ட பலிதனும், வேகமாகத் தப்பி ஓடி தன் பொந்துக்குள் புகுந்து கொண்டது. அதே வேளையில் லோமசனும் அந்த உயர்ந்த மரத்தில் ஏறியிருந்தது.(117) அனைத்தையும் கண்ட வேடன், தன் வலையை எடுத்தான். நம்பிக்கையிழந்த அவன் வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.(118) ஓ! பாரதக் குலத்தின் காளையே, உண்மையில் அந்தச் சண்டாளன் தன் வசிப்பிடத்திற்கே திரும்பிவிட்டான். பேராபத்தில் இருந்து விடுபட்டு, மிகுந்த மதிப்புமிக்கத் தன் இன்னுயிரைத் திரும்பவும் அடைந்த பூனை, அந்த மரக்கிளைகளில் இருந்து கொண்டு, பொந்துக்குள் இருந்த எலியான பலிதனிடம்,(119) “என்னிடம் ஏதும் உரையாடாமல் நீ திடீரென ஓடிவிட்டாய். நான் எந்தத் தீய நோக்கமும் கொண்டிருப்பதாக நீ ஐயுறவில்லை என நான் நம்புகிறேன். நான் நிச்சயம் நன்றியுடையவனாக இருப்பேன், நீ எனக்குப் பெருந்தொண்டைச் செய்திருக்கிறாய்.(120) என்னில் நம்பிக்கையை ஊட்டி, எனக்கு உயிரையும் கொடுத்த நீ, நண்பர்களாக நட்பின் இனிமையை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் என்னை ஏன் அணுகாமல் இருக்கிறாய்?(121)

நண்பர்களிடம் நட்பு பூண்ட பிறகு, அவர்களை மறப்பவன் தீயவனாகக் கருதப்படுகிறான். ஆபத்து மற்றும் தேவைக்கான அவசியம் உள்ள நேரங்களில் அவன் நண்பர்களை அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(122) ஓ! நண்பா, நான் உன்னால் கௌரவிக்கப்பட்டு, உன் சக்தியில் சிறந்ததைக் கொண்டு உன்னால் அளிக்கப்பட்ட தொண்டையும் அடைந்தேன். உன் நண்பனாகியிருக்கும் இந்த எளியோனின் தோழமையில் நீ இன்புற்றிருப்பதே உனக்குத் தகும்.(123) ஆசான்களை வழிபடும் சீடர்களைப் போலவே, எனக்கிருக்கும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் உன்னைக் கௌரவித்து வழிபடுவார்கள்.(124) நானும் கூட என் நண்பர்கள் மற்றும் சொந்தங்களுடன் சேர்ந்து உன்னை வழிப்பட்டிருப்பேன். நன்றியறிதலையுடைய எவன்தான், தனக்கு உயிரைக் கொடுத்தவனை வழிபடாமல் இருப்பான்?(125)

நீ என் உடல் மற்றும் இல்லத்தின் தலைவனாக இருப்பாயாக. என் செல்வத்தையும், உடைமைகள் அனைத்தையும் பயன்படுத்துபவனாக நீ இருப்பாயாக.(126) என் மதிப்பிற்குரிய ஆலோசகனாய் இருந்து, ஒரு தந்தையைப் போல நீ என்னை ஆட்சி செய்வாயாக. என் உயிரின் மீது ஆணையாகச் சொல்கிறேன் எங்களிடம் இருந்து உனக்கு அச்சமேதும் ஏற்படாது.(127) நுண்ணறிவில் நீ உசனஸே {சுக்கிராச்சரியரே} ஆவாய். உன் அறிவின் ஆற்றலால் நீ எங்களை வென்றுவிட்டாய். கொள்கை பலம் கொண்ட நீ எங்களுக்கு உயிரை அளித்திருக்கிறாய்” என்றது.(128)

பூனையால் இந்த ஆறுதல் வார்த்தைகள் சொல்லப்பட்டதும், உயர்ந்த நன்மையை உண்டாக்கும் அனைத்தையும் அறிந்த எலியானது, தனக்கு நன்மை விளைவிக்கும் இனிய சொற்களை மறுமொழியாகக் கூறியது:(129) “ஓ! லோசமசா, நீ சொன்னதனைத்தையும் நான் கேட்டேன். எனக்குத் தோன்றுவதை நான் சொல்கிறேன், இப்போது கேட்பாயாக.(130) நண்பர்கள் நன்கு சோதிக்கப்பட வேண்டும். எதிரிகளும் நன்கு ஆய்வு செய்யப்பட வேண்டும். இவ்வுலகில், கூரிய நுண்ணறிவைச் சார்ந்திருக்கும் இதுபோன்றதொரு பணி கடினமானது என்று கல்விமான்களாலேயே கூடக் கருதப்படுகிறது.(131) நண்பர்கள் எதிரிகளின் தோற்றத்திலும், எதிரிகள் நண்பர்களின் தோற்றத்திலும் இருப்பார்கள். நட்பின் உடன்பாடுகள் ஏற்படுத்தப்படும்போது, ஒரு தரப்பு உண்மையில் காமமும் {ஆசையும்}, கோபமும் கொண்டிருக்கிறதா என்பதை மற்றொரு தரப்பு புரிந்து கொள்வது மிகக் கடினமானதாகும்.(132)

எதிரியென்ற எவரும் இல்லை. நண்பர்களென்ற எவரும் இருப்பில் இல்லை. சூழ்நிலைகளின் சக்தியே நண்பர்களையும், எதிரிகளையும் உண்டாக்குகிறது.(133) ஒருவன், மற்றொருவன் உயிரோடிருக்கும் வரை தன் காரியங்கள் உறுதியாக நடக்கும், அவன் இல்லாமல் போனால் அவை ஆபத்துக்குள்ளாகும் என்று நினைத்தால், அவனை நண்பனாக ஏற்றுக் கொண்டு, தனது காரியங்களுக்கு எந்தப் பாதகமும் ஏற்படாத வரை அவனை அவ்வாறே கருதிக் கொண்டிருப்பான்.(134) எந்த நிலையும், நட்பு, அல்லது பகை என்ற பெயரை நிரந்தரமாகக் கொள்ளத் தக்கது கிடையாது {நட்பும், பகையும் நிரந்தரமானதல்ல}. காரியம் மற்றும் ஆதாயம் கருதியே நண்பர்களும், பகைவர்களும் எழுகிறார்கள்.(135) காலத்தின் போக்கில் நட்பும் பகையாக மாறுகிறது. ஒரு பகைவனும் நண்பனாகிறான். தன்னலம் பெரும் சக்திவாய்ந்ததாகும்.(136) எவன், கொள்கைக் கருத்துகளில் எந்தக் கவனமும் செலுத்தாமல், குருட்டுத்தனமாக நண்பர்களிடம் நம்பிக்கை வைத்து, எப்போதும் எதிரிகளை நம்பாமல் இருக்கிறானோ, அவன் தன் உயிரைப் பாதுகாப்பற்றதாகக் காண்பான் {அவனுடைய உயிர் நிலையானதல்ல}.(137) எவன் கொள்கைக் கருத்துகள் அனைத்தையும் அலட்சியம் செய்து நண்பர்களிடமோ, பகைவர்களிடமோ அன்புப்பிணைப்பைத் தன் இதயத்தில் நிலைக்கச் செய்கிறானோ, அவன் நிலையில்லாத புத்தியுள்ளவனாகக் கருதப்படுவான்.(138) நம்பத்தகாதவனிடம் ஒருவன் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது, அதேபோல, நம்பத்தகுந்தவனையும் மிக அதிகமாக நம்பிவிடக்கூடாது. குருட்டு நம்பிக்கையால் எழும் ஆபத்தானது (அத்தகைய நம்பிக்கையை வைத்திருக்கும்) ஒருவனுடைய வேரையே அறுத்துவிடும்.(139)

தந்தை, தாய், மகன், தாய்மாமன், சகோதரியின் மகன், பிற உறவினர்கள், சொந்தக்காரர்கள் ஆகியோர் அனைவரும் காரியம் மற்றும் ஆதாயத்தாலேயே வழிநடத்தப்படுகிறார்கள்.(140) அன்புக்குரிய மகன் வீழ்ந்துவிட்டால் அவனைத் தந்தையும், தாயும் கைவிடுவதைக் காண்கிறோம்[3]. மக்கள் தன்னலத்தையே {தன் காரியங்களையே} கவனிக்கிறார்கள் {தங்களையே பாதுகாத்துக் கொள்கிறார்கள்}. தன்னலத்தில் {சுயகாரியங்களின்} உச்சவினையை {பலாபலனைப்} பார்.(141) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, ஆபத்திலிருந்து விடுபட்டவுடன் எவன் தன் எதிரியின் மகிழ்ச்சிக்கான வழிமுறைகளை நாடுகிறானோ அவன் தப்புவது மிகக் கடினமானதாகும்(142) நீ மரத்தின் உச்சியில் இருந்து இந்த இடத்திற்கு வந்தாய். இங்கே விரிக்கப்பட்டிருந்த வலையை இயல்பான {பொதுவான} உன் புத்தியைக் கொண்டு உன்னால் உறுதி செய்து கொள்ள முடியவிலை. (143) இயல்பான புத்தியைக் கொண்ட ஒருவன், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறுகிறான். அவனால் எவ்வாறு பிறரைப் பாதுகாக்க முடியும்? அத்தகைய ஒருவன், தன் செயல்பாடுகள் அனைத்தையும் கெடுத்துக் கொள்வான் என்பதில் ஐயமில்லை.(144) நான் உனக்கு மிக அன்பானவன் என்ற இனிய வார்த்தைகளை நீ எனக்குக் கூறுகிறாய். எனினும், ஓ! நண்பா, என் தரப்பில் இருக்கும் காரணங்களையும் கேட்பாயாக.(145)

போதுமான காரணத்தாலேயே ஒருவன் அன்புக்குரியவனாகிறான். உயிரினங்களைக் கொண்ட இந்த மொத்த உலகமும், (ஒரு வடிவத்திலாவது, அல்லது வேறு வடிவத்திலாவது) ஆதாய விருப்பத்தாலேயே நகர்கிறது {செயல்படுகிறது}. ஒருவன் (காரணமில்லாமல்) மற்றொருவரின் அன்புக்குரியவனாக {நண்பனாக} ஆக மாட்டான்.(146) உடன்பிறந்தோர் இருவருக்கிடையில் உள்ள நட்பு, கணவன் மனைவிக்கிடையில் உள்ள அன்பு ஆகியவையும் காரியம் சார்ந்ததே. ஏதாவதொரு தன்னல நோக்கமில்லாமல், எவருக்கும் இடையில் உள்ள எந்த வகை அன்பையும் நான் அறிந்ததில்லை {காரணமில்லாத / ஆதாயமில்லாத அன்பை நான் அறிந்ததில்லை}.(147) உடன் பிறந்தோர், அல்லது கணவன் மனைவி ஆகியோர் சச்சரவு செய்த பிறகு, இயற்கையான அன்பின் மூலம், மீண்டும் ஒன்றுசேர்வதைப் போலக் காணப்படும் நிலையானது, ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்களிடம் காணப்படுவதில்லை.(148) ஒருவனுடைய வள்ளன்மையாலேயே {கொடைப் பண்பாலேயே} மற்றொருவனுக்கு அன்புக்குரியவனாகிறான். மற்றொருவன் அவனுடைய இனிய சொற்களுக்காக அன்புக்குரியவனாகிறான். மூன்றாமவன் அறச்செயல்களின் விளைவாக அவ்வாறு ஆகிறான். பொதுவாகவே ஒருவன் தான் தொண்டாற்றும் காரியத்திற்காகவே அன்புக்குரியவனாகிறான்.(149) நமக்கிடையிலான அன்பு போதுமான காரணத்தினாலேயே எழுந்தது. அந்தக் காரணம் இப்போதும் நீடிக்கவில்லை. மறுபுறம், போதுமான காரணத்தினாலேயே நமக்கிடையிலான அந்த அன்பும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.(150)

நான் கேட்கிறேன், நீ என்னை உன் இரையாக்கிக் கொள்ள விரும்புவதைத் தவிர, உனக்கு நான் அன்புக்குரியவனாக இருக்க வேறு என்ன காரணமிருக்கிறது? நான் இதை மறந்துவிடமாட்டேன் என்பதை நீ அறிய வேண்டும்.(151) காலமானது காரணங்களைக் கெடுக்கும் {மாறச் செய்யும்}. நீ உன் தன்னலத்தையே {காரியத்தையே} நாடுகிறாய். எனினும், ஞானம் கொண்ட பிறரும் தங்கள் காரியங்களையே புரிந்து கொள்வார்கள். இந்த உலகம் ஞானிகளின் எடுத்துக்காட்டையே சார்ந்திருக்கிறது. கல்விமானும், தன்னலங்களை {தன் காரியங்களைப்} புரிந்து கொள்ளத் தகுந்தவனான ஒருவனிடம் நீ இத்தகைய வார்த்தைகளைப் பேசக்கூடாது.(152) நீ பலமிக்கவன். நீ என்னிடம் அன்பு காட்டும் இந்தக் காலம் சரியானது அல்ல. எனினும், என் காரியங்களால் வழிநடத்தப்படும் நான், நிலையற்றவையான அமைதி {நட்பு} மற்றும் போர் {பகை} ஆகியவற்றில் உறுதியுடன் இருக்கிறேன்.(153) எந்தச் சூழ்நிலையில் அமைதி ஏற்படுத்தப்பட வேண்டும், அல்லது போர் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பன மேகங்கள் தங்கள் வடிவை மாற்றிக் கொள்வதைப் போலவே விரைவில் மாற்றமடைகின்றன. இந்த நாளில் நீ என் எதிரியாக இருந்தாய். அதுபோலவே இந்த நாளிலேயே நீ எனக்கு நண்பனாகவும் இருந்தாய். மீண்டும் இந்த நாளிலேயே என் எதிரியாகிவிட்டாய். உயிரினங்கள் இயங்கும் கருத்துகளின் இயல்பை {பொதுத்தன்மையைப்} பார்.(154) நட்புக்கு ஒரு காரணம் இருந்தவரை நம்மிடையே அஃது இருந்தது. காலத்தைச் சார்ந்திருக்கும் அந்தக் காரணம் இப்போது கடந்து சென்று விட்டது. அஃது இல்லாததால், அந்த நட்பும் கடந்து சென்றுவிட்டது.(155)

இயற்கையாகவே நீ என் எதிரியாவாய். சூழ்நிலையின் காரணமாக நீ என் நண்பனானாய். அந்த நிலை இப்போது கடந்து சென்றுவிட்டது. இயற்கையான பழைய பகைமை நிலையே இப்போது திரும்பியிருக்கிறது.(156) இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள கொள்கைவிதிகளை முற்றாக நான் அறிந்திருக்கிறேன்; எனக்குச் சொல்: எனக்காக விரிக்கப்பட்டிருக்கும் வலையில், உனக்காக நான் ஏன் நுழைய வேண்டும்?(157) உன் பலத்தின் மூலம் பேராபத்தில் இருந்து நான் விடுபட்டேன். என் பலத்தால் அதேபோன்ற ஆபத்தில் இருந்து நீயும் விடுபட்டாய். இருவரும் ஒருவருக்கொருவர் தொண்டாற்றிக் கொண்டோம். நாம் மீண்டும் நட்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டிய எந்தத் தேவையும் {அவசியமும்} இல்லை.(158) ஓ! இனியவனே, உன் நோக்கம் நிறைவடைந்தது. நான் கொண்ட நோக்கமும் நிறைவடைந்தது. நீ என்னை உன் உணவாக்கிக் கொள்வதைத் தவிர வேறு எந்தத் தேவையும் இப்போது உனக்கில்லை.(159) நான் உன் உணவாக இருக்கிறேன். நீ உண்பவனாக இருக்கிறாய். நான் பலவீனன், நீயோ பலவான். இணையில்லாத நிலையில் நாம் இருக்கையில், நமக்குள் ஒற்றுமையான நட்பு இருக்க முடியாது.(160)

நான் உன் ஞானத்தைப் புரிந்து கொள்கிறேன். வலையில் இருந்து மீட்கப்பட்டதும், நீ என்னை எளிதாக உணவாக்கிக் கொள்ளலாம் என்பதாலேயே நீ என்னைப் புகழ்கிறாய்.(161) நீ உணவைத் தேடியே வலையில் சிக்கினாய். அதிலிருந்து விடுபட்டுவிட்டாய். நீ இப்போது பசியின் கொடுமையை உணர்வாய். சாத்திரக் கல்வியில் இருந்து எழும் அந்த ஞானத்தைக் கொண்டு, நீ என்னை இன்று உண்ணவே முயல்வாய்.(162) நீ பசித்திருக்கிறாய் என்பதை நான் அறிவேன். இப்போது நீ உணவு உண்ண வேண்டிய நேரம் என்பதையும் நான் அறிவேன். என் மீது உன் கண்களைச் செலுத்தும் நீ, உன் இரையையே தேடிக் கொண்டிருக்கிறாய்.(163) உனக்கு மகன்களும், மனைவியரும் இருக்கின்றனர். இருப்பினும், என்னுடன் நட்பு கொள்ளவும், என்னை அன்புடன் நடத்தவும், எனக்குத் தொண்டுகள் செய்யவும் நீ விரும்புகிறாய். ஓ! நண்பா, இந்தக் கோரிக்கைக்கு இணங்க இயலாதவனாக நான் இருக்கிறேன்.(164) உன்னுடன் என்னைக் காணும் உன் அன்பு மனைவியும், அன்புக்குரிய பிள்ளைகளும் உற்சாகத்துடன் என்னை உண்ண மாட்டார்களா?(165) எனவே, நான் உன்னுடன் நட்பாக இருக்க முடியாது. இந்த ஒற்றுமைக்கான எந்தக் காரணமும் இப்போது இல்லை. உண்மையில், நீ என் நல்ல அலுவல்களை மறக்கவில்லையென்றால், எனக்கு நன்மையானதை நினைத்து ஆறுதலடைவாயாக.(166)

ஞானம் கொண்ட எவன்தான், அறப்புகழ் இல்லாதவனும் {நீதிக்காகத் தனித்துத் தெரியாதவனும்}, பசிக்கொடுமையில் இருப்பவனும், இரைதேடிக் கொண்டிருப்பவனுமான ஒரு பலமிக்க எதிரியின் கீழ் தன்னை நிறுத்திக் கொள்வான்?(167) மகிழ்ச்சியாக இருப்பாயாக, நான் உன்னைவிட்டுத் தற்போது செல்கிறேன். தொலைவில் இருந்து உன்னைக் கண்டாலே நான் அச்சத்தால் நிறைகிறேன். ஓ! லோமசா, என்னால் உன்னோடு சேர முடியாது, உன் முயற்சிகளைக் கைவிடுவாயாக.(168) நான் உனக்குத் தொண்டு செய்திருக்கிறேன் என்று நீ நினைப்பாயானால், நம்பிக்கையுடனோ, கவனமில்லாமலோ நான் உலவ நேர்கையில் நட்பின் விதிகளைப் பின்பற்றுவாயாக. அதுவே உனது செய்நன்றியாக இருக்கும்.(169) பலமும், சக்தியும் கொண்ட ஒருவனின் அருகில் வசிப்பது ஒருபோதும் மெச்சப்படுவதில்லை. ஏற்கனவே இருந்த ஆபத்து கடந்து விட்டாலும், என்னைவிடப் பலமிக்கவனைக் குறித்த அச்சத்துடனேயே நான் இருக்க வேண்டும்.(170)

(குறிப்பிடப்பட்ட) உன் காரியங்களைச் செய்ய நீ முயலவில்லையெனில், நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் என் உயிரைத் தவிர நிச்சயம் உனக்கு அனைத்தையும் கொடுப்பேன்.(171) ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தன் பிள்ளைகள், நாடு, ஆபரணங்கள் மற்றும் செல்வம் ஆகியவற்றையும் கைவிடலாம். ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தன்னிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யலாம்.(172) ஒருவன் தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக எதிரிக்குக் கொடுக்கும் அனைத்து செல்வத்தையும் அவன் உயிரோடு இருந்தால் மீட்டுக் கொள்ளலாம்.(173) செல்வத்தைக் கொடுப்பது போல ஒருவன் உயிரைக் கொடுப்பது விரும்பத்தக்கதல்ல. உண்மையில், நான் ஏற்கனவே சொன்னதுபோல், ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தன் மனைவியரையும், செல்வத்தையும் கைவிடலாம்.(174) தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக இருப்பவர்கள், சீரிய ஆலோசனை மற்றும் ஆய்வுக்குப் பிறகு தங்கள் செயல்கள் அனைத்தையும் செய்பவர்கள் ஆகியோர் தங்கள் செயல்களின் விளைவால் ஒருபோதும் ஆபத்தை அடைய மாட்டார்கள்.(175) பலவீனர்கள், பெரும் பலம் கொண்டவனை எப்போதும் ஓர் எதிரியாகவே அறிவார்கள். சாத்திரங்களின் உண்மைகளில் உறுதியாக இருக்கும் அவர்களது அறிவு ஒருபோதும் தன் உறுதியை இழப்பதில்லை” என்றது {எலியான பலிதன்}.(176)

இவ்வாறு எலியான பலிதனின் வன்மையான கடிந்துரைக்கு ஆளான அந்தப் பூனை, நாணத்தால் வெட்கமடைந்து, பின்வரும் வார்த்தைகளை அந்த எலியிடம் சொன்னது.(177) லோமசன் {என்ற அந்தப் பூனை எலியிடம்}, “உண்மையில், உன் மேல் ஆணையாகச் சொல்கிறேன், நண்பனுக்குத் தீங்கிழைத்தல் மிகவும் நிந்திக்கத்தக்கது என்பது என் கணிப்பு. நான் உன் ஞானத்தை அறிவேன். நீ என் நன்மையில் அர்ப்பணிப்புடன் இருப்பதையும் நான் அறிவேன்.(178) பொருளறிவியலால் வழிநடத்தப்படும் நீ, உனக்கும் எனக்கும் இடையில் அத்துமீறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று சொல்லியிருக்கிறாய். எனினும், ஓ! நல்ல நண்பனே, நான் எவ்வாறு இல்லையோ அவ்வாறு இருப்பதாக எடுத்துக் கொள்வது உனக்குத் தகாது.(179) எனக்கு நீ உயிரை அளித்ததன் விளைவால் நான் உன்னிடம் பெரும் நட்புணர்வை வளர்க்கிறேன். மேலும் நான் கடமைகளையும் அறிந்திருக்கிறேன். நான் பிறரின் தகுதிகளை மெச்சுபவனுமாவேன். நான் அடைந்த தொண்டுகளுக்குப் பெரிதும் நன்றியுடன் இருக்கிறேன்.(180) நண்பர்களின் தொண்டில் நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். மேலும், குறிப்பாக உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டிருக்கிறேன். இந்தக் காரணங்களுக்காக, ஓ! நல்ல நண்பனே, நீ என்னுடன் மீண்டும் சேர்வதே உனக்குத் தகும்.(181) நீ ஆணையிட்டால், என் உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய நான் என் உயிரையே உனக்காகத் தருவேன். கல்வியும், ஞானமும் கொண்டவர்கள், இத்தகைய மனோநிலை கொண்ட எங்களிடம் நம்பிக்கை வைக்கப் போதிய அளவுக்குக் காரணங்களைக் காண்கிறார்கள். ஓ! அறநெறியின் உண்மைகளை அறிந்தவனே, என்னைப் பொறுத்தவரையில் நீ எந்த ஐயத்தையும் வளர்த்துக் கொள்வது உனக்குத் தகாது” என்றது.(182)

பூனையால் இவ்வாறு சொல்லப்பட்ட எலி, சற்றே சிந்தித்து, பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வார்த்தைகளை அதனிடம் {பூனையிடம்} சொன்னது.(183) “நீ மிகவும் நல்லவனாக இருக்கிறாய். நீ சொன்னதனைத்தையும் கேட்ட நான், உன்னிடம் கேட்டதிலிருந்து மகிழ்ச்சியை அடைகிறேன். எனினும், அவை யாவற்றிற்காகவும் கூட நான் உன்னை நம்ப முடியாது. இத்தகைய துதிகளாலோ, பெரும் செல்வத்தைக் கொடைகளாகக் கொடுப்பதாலோ, என்னை மீண்டும் உன்னுடன் சேர வைப்பது உனக்குச் சாத்தியப்படாது.(184) ஓ! நண்பா, ஞானம் கொண்டவர்கள், போதிய காரணம் ஏதும் இல்லாதபோது, ஓர் எதிரியின் சக்தியின் கீழ் தங்களை ஒருபோதும் நிறுத்திக் கொள்ள மாட்டார்கள் என்று உனக்கு நான் சொல்கிறேன்.(185) இருவரும் எதிரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது, ஒரு பலவீனன், ஒரு பலவானுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, (அந்தப் பொது ஆபத்துக் கடந்ததும்) கொள்கைகளைக் கருத்தில் கொண்டு கவனமாக நடந்து கொள்ள வேண்டும். தன் நோக்கம் நிறைவேறியதும், இருவரில் பலவீனன், மீண்டும் அந்தப் பலவானிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது.(186)

நம்பத்தகாதவனை ஒருவன் ஒருபோதும் நம்பக்கூடாது. அதே போல, நம்பத்தகுதவனிடமும் ஒருவன் குருட்டு நம்பிக்கையை வைத்துவிடக்கூடாது. ஒருவன் பிறரை தன்னிடம் நம்பிக்கைகொள்ளச் செய்வதற்காக எப்போதும் முயற்சிக்க வேண்டும். எனினும், அவன் எதிரிகளிடம் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது.(187) இந்தக் காரணங்களாலேயே ஒருவன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடைமைகள், பிள்ளைகள் மற்றும் மதிப்புமிக்க அனைத்தும் அவன் உயிரோடு உள்ளவரையே இருக்கும்.(188) சுருங்கச் சொல்லின், நம்பிக்கையின்மையே கொள்கை ஆய்வுகள் அனைத்தின் உயர்ந்த உண்மையாகும். இந்தக் காரணத்தால், அனைவரின் நம்பிக்கையின்மையும், பெரும் நன்மையை உண்டாக்க வல்லவையே.(189) எவ்வளவுதான் பலவீனமானவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் எதிரிகளிடம் நம்பிக்கை வைக்கவில்லையெனில், எதிரி பலவானாக இருந்தாலும், அவர்களைத் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(190) ஓ! பூனையே, என்னைப் போன்ற ஒருவன், எப்போதும் உன்னைப் போன்றவர்களிடம் இருந்து தன் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும். நீயும் கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும் அந்தச் சண்டாளனிடம் இருந்து உன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வாயாக” என்றது.(191)

எலி இவ்வாறு பேசிய போது, வேடனைக் குறித்து அச்சமடைந்த அந்தப் பூனை, மரத்தின் கிளையை விட்டு அகன்று, பெரும் வேகத்துடன் தப்பி ஓடியது.(192) இவ்வாறு தன் அறிவின் சக்தியை வெளிப்படுத்தியதும், சாத்திரங்களின் உண்மைகளை அறிந்ததும், ஞானத்தைக் கொண்டதும், எலியுமான அந்தப் பலிதன், மற்றொரு பொந்துக்குள் நுழைந்தது”.(193)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறே ஞானம் கொண்ட பலிதன் என்ற எலி, பலவீனமாகவும், தனியனாகவும் இருந்தாலும், பலமிக்கப் பல எதிரிகளைக் கலங்கடிப்பதில் வென்றது.(194) நுண்ணறிவும், கல்வியும் கொண்ட ஒருவன், ஒரு பலமிக்க எதிரியிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்வான். அந்த எலியும் பூனையும், தங்கள் ஒவ்வொருவரின் தொண்டைச் சார்ந்து தாங்கள் தப்பிப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொண்டன.(195) க்ஷத்திரியக் கடமைகளின் போக்கை இவ்வாறே பெரும் நீளத்தில் நான் உனக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(196) ஒருவருக்கொருவர் பகை கொண்ட இருவர் தங்களுக்குள் அமைதியை ஏற்படுத்திக் கொண்டால், ஒவ்வொருவரும் பிறரின் மிகைப் பாய்ச்சலை {வஞ்சனையைத்} தங்கள் இதயத்தில் கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்.(197) அத்தகைய வழக்கில் ஞானம் கொண்டவன், தன் அறிவின் சக்தியால் அடுத்தவனை மீறி {வஞ்சித்து} வெற்றியடைவான். மறுபுறம், ஞானமற்றவனோ, தன் கவனக்குறைவின் விளைவால் ஞானியால் மீறப்படுவான் {வஞ்சிக்கப்படுவான்}.(198) எனவே, அச்சத்தில் உள்ள ஒருவன், அச்சமில்லாதவனைப் போலத் தெரிவது அவசியம், அதே வேளையில் பிறரை நம்பாத ஒருவன், நம்பிக்கை நிறைந்தவனாகவும் தெரிய வேண்டும். இத்தகைய கவனத்துடன் செயல்படுபவன், ஒருபோதும் பிறழமாட்டான், அல்லது பிறண்டாலும் ஒருபோதும் அழிவடையமாட்டான்.(199) அதற்கான நேரம் வரும்போதும், ஒருவன் பகைவனுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அதே போல நேரம் வரும்போது, நண்பனுடனும் ஒருவன் போர் தொடுக்க வேண்டும். ஓ மன்னா, ஒருவன் இவ்வாறு தன்னை நடத்திக் கொள்ள வேண்டும் என்று அமைதி (மற்றும் போரின்) கருத்துகளை அறிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.(200)

ஓ! ஏகாதிபதி, இஃதை அறிந்து கொண்டும், சாத்திர உண்மைகளை மனத்தில் கொண்டும் ஒருவன், தன் புலன்கள் அனைத்தாலும், எந்தக் கவனக் குறைவும் இல்லாமல், அச்சத்திற்கான காரணம் வருவதற்கு முன்பே அச்சத்திலிருக்கும் ஒருவனைப் போலச் செயல்பட வேண்டும்.(201) அச்சத்திற்கான காரணம் உண்மையில் வருவதற்கு முன்பே ஒருவன் அச்சத்திலிருப்பவனைப் போலச் செயல்பட்டு எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய அச்சமும், கவனமும், அறிவுக்கூர்மைக்கு வழிவகுக்கும்.(202) அச்சத்திற்கான காரணம் வருமுன்பே அச்சத்திலிருக்கும் மனிதனைப் போலச் செயல்படும் ஒருவன், அந்தக் காரணம் உண்மையில் வரும்போது ஒருபோதும் அச்சத்தால் நிறைய மாட்டான். எனினும், அச்சமில்லாமல் எப்போதும் செயல்படும் ஒருவனுடைய அச்சத்தின் மூலம் பேரச்சம் எழுவதும் காணப்படுகிறது.(203) “ஒருபோதும் அச்சத்தை வளர்த்துக் கொள்ளாதே” என்ற ஆலோசனை எவருக்கும் வழங்கப்படக்கூடாது. தன் பலவீனத்தை உணர்ந்து அச்சமடையும் ஒருவன் எப்போதும் ஞானிகள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளை நாட வேண்டும்.(204) இந்தக் காரணங்களுக்காக ஒருவன் அச்சத்திலிருக்கும்போது, அச்சமில்லாதவனாகவும், (பிறரை) நம்பாதபோது, நம்பிக்கை நிறைந்தவனாகவும் தெரிய வேண்டும். ஒருவன், முக்கியமான செயல்களை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், பிறரிடம் பொய்மையுடன் நடந்து கொள்ளக்கூடாது.(205)

அந்தக் கதையில் இருந்து உயர்ந்த அறிவை அடைந்தும், நண்பனுக்கும், எதிரிக்குமிடையிலான வேறுபாட்டை அறிந்து கொண்டும், உரிய நேரத்தில் போரையும், அமைதியையும் ஏற்படுத்திக் கொண்டால், நீ ஆபத்திலிருக்கும்போது, தப்புவதற்கான வழிமுறைகளைக் கண்டடைவாய்.(207) பொதுவான ஆபத்தில் பலவானுடன் அமைதியை ஏற்படுத்திக்கொள்ளும் நீ, (அந்தப் பொது ஆபத்து கடந்து சென்றதும்), எதிரியுடன் சேரும் காரியத்தில் உரிய ஆலோசனைகளுக்குப் பிறகே செயல்பட வேண்டும். உண்மையில் உன் நோக்கத்தை அடைந்த பிறகு, நீ உன் எதிரியை மீண்டும் நம்பக்கூடாது.(208) ஓ! மன்னா, இந்தக் கொள்கையின் பாதை, மூன்று தொகுப்புகளுக்கும் (அறம், பொருள் மற்றும் இன்பத்திற்கும்) இசைவானதாகும். இந்தச் சுருதியால் வழிநடத்தப்படும் நீ, மீண்டும் உன் குடிமக்களைப் பாதுகாத்துச் செழிப்பை அடைவாயாக.(209) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, உன் செயல்கள் அனைத்திலும் பிராமணர்களின் தோழமையை எப்போதும் நாடுவாயாக. பிராமணர்கள், இம்மையிலும், மறுமையிலும் நன்மையின் பேரூற்றாக இருப்பார்கள்.(210) அவர்களே கடமை மற்றும் அறநெறிகளின் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். ஓ! பலமிக்கவனே, அவர்கள் எப்போதும் நன்றியுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வழிபடப்பட்டால், நிச்சயம் அவர்கள் நன்மையையே செய்வார்கள். எனவே, ஓ! மன்னா, நீ எப்போதும் அவர்களை வழிபட வேண்டும்.(211) ஓ! மன்னா, அப்போது நீ, உன் நாடு, பெரும் நன்மை, புகழ், சாதனைகள், உரிய வரிசையிலான வாரிசுகள் ஆகியவற்றை முறையாக அடைவாய்.(212) ஒரு மன்னன், எலி மற்றும் பூனைக்கிடையில் நடந்ததும், சிறந்த வார்த்தைகளில் சொல்லப்பட்டதும், நுண்ணுறிவைக் கூர்மைப்படுத்துவதுமான இந்த வரலாற்றில் தன் கண்களைச் செலுத்தியே தன் எதிரிகளின் மத்தியில் தன் நடத்தையை எப்போதும் அமைத்துக் கொள்ள வேண்டும்” {என்றார் பீஷ்மர்}.(213)

பிரம்மதத்தனும் பூஜனியும்! – சாந்திபர்வம் பகுதி – 139-ஏன் அதிக நம்பிக்கை கொள்ளக் கூடாது என்பதற்கு, மன்னன் பிரம்மதத்தனுக்கும், பூஜனி என்ற பறவைக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! வலிமைமிக்கவரே, எதிரிகள் மீது நம்பிக்கை வைக்கக்கூடாது என்று நீர் விதித்திருக்கிறீர். ஆனால், ஒரு மன்னன் யாரையும் நம்பவில்லையென்றால் எவ்வாறு அவன் தன்னைப் பராமரித்துக் கொள்ள முடியும்?(1) ஓ! மன்னா {பீஷ்மரே}, நம்பிக்கையிலிருந்தே மன்னர்களுக்குப் பேராபத்து எழுகிறது என்று சொல்கிறீர். ஆனால், ஓ! ஏகாதிபதி, ஒரு மன்னன் பிறரை நம்பாமல் எவ்வாறு தன் எதிரிகளை வெல்ல முடியும்?(2) அன்புகூர்ந்து என் இந்த ஐயத்தை நீர் விலக்குவீராக. ஓ! பாட்டா, நம்பிக்கையின்மை குறித்து நீர் சொன்னதைக் கேட்டு என் மனம் குழம்பியிருக்கிறது” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, பிரம்மதத்தனின் வசிப்பிடத்தில் மன்னன் பிரம்மதத்தனுக்கும் பூஜனிக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கேட்பாயாக.(4) காம்பில்யத்தில் உள்ள மன்னன் பிரம்மதத்தனின் அரண்மனை அந்தப்புரத்தில் பூஜனி என்ற பறவையும் அவனுடன் வெகுகாலம் வாழ்ந்து வந்தது.(5) ஜீவ ஜீவகப் பறவையைப் போலப் பூஜனியும் பலவிலங்குகளின் குரல்களில் பேசக்கூடியவளாக இருந்தாள். பிறப்பால் ஒரு பறவையாக இருப்பினும், அவள் பேரறிவு படைத்தவளாகவும், அனைத்து உண்மைகளையும் அறிந்தவளாகவும் இருந்தாள்.(6) அங்கே வாழ்ந்து வந்தபோது, அவள் பெரும் காந்தி கொண்ட ஒரு வாரிசை ஈன்றாள். அதே வேளையில் மன்னனும் தன் ராணியிடம் ஒரு மகனைப் பெற்றான்.(7) மன்னனின் மேற்கூரையில் புகலிடம் பெற்றதால் நன்றி நிறைந்திருந்த பூஜனி, தினமும் கடற்கரைக்குச் சென்று, தன் குஞ்சுக்கும், குழந்தையான இளவரசனுக்கும் என இரண்டு கனிகளைக் கொண்டு வந்ததாள்.(8) அதில் ஒன்றை தன் பிள்ளைக்கும், மற்றொன்றை இளவரசனுக்கும் கொடுத்தாள்.(9) அவள் கொண்டுவந்த கனிகள் அமுதம் போன்ற இனிமையுடனும், பலம் மற்றும் சக்தியைப் பெருக்கும் வல்லமையுடனும் இருந்தன. இப்படியே தினமும் அவள் அவற்றைக் கொண்டு வந்து கொடுத்தாள். பூஜனி கொடுத்த கனியை உண்டு அந்தக் குழந்தை இளவரசன் பெரும் பலத்தை அடைந்தான்.(10)

ஒரு நாள், செவிலியின் கரங்களில் இருந்த அந்தக் குழந்தை இளவரசன், பூஜனியின் சிறு பறவைக் குஞ்சைக் கண்டான். செவிலியின் கரங்களில் இருந்து கீழே இறங்கிய அந்தப் பிள்ளை, சிறுபிள்ளைத்தனமான உந்துதலால் உந்தப்பட்டு, அதனுடன் விளையாடிக் களித்தான்.(11) இறுதியாகத் தன் வயதே ஆன அந்தப் பறவையைக் கையில் உயர்த்திய அந்த இளவரசன், அந்தப் பிஞ்சின் உயிரை நசுக்கி வெளியே எடுத்துவிட்டு, மீண்டும் தன் செவிலியிடம் வந்தான்.(12) ஓ! மன்னா, வழக்கமாகக் கொண்டுவரும் கனிகளைத் தேடி வெளியே சென்றிருந்த அந்தப் பெண்பறவையானவள், {திரும்பி வந்ததும்} தன் குஞ்சு இளவரசனால் கொல்லப்பட்டுத் தரையில் கிடப்பதைக் கண்டாள்.(13)

தன் மகன் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட பூஜனி, கன்னங்களில் நீர் வடிய, துயரத்தால் எரிந்த இதயத்துடன், அதிகமாக அழுது,(14) “ஐயோ, ஒருவனும் ஒரு க்ஷத்திரியனுடன் வாழவோ, அவனுடன் நட்பு கொள்ளவோ, அவனுடனான எந்தத் தொடர்பிலும் இன்பம் கொள்ளவோ கூடாது. அவர்களுக்குத் தொண்டாற்ற வேண்டிய நோக்கம் ஏதும் இருந்தால், அவர்கள் மதிப்புடன் நடந்து கொள்வார்கள். அவர்களது நோக்கம் நிறைவேறியதும், அவர்கள் அந்தக் கருவியைக் கைவிடுவார்கள்.(15) க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் தீமை செய்வார்கள். அவர்களை ஒருபோதும் நம்பக்கூடாது. ஒரு தீங்கைச் செய்த பிறகும், அவர்கள் எப்போதும் தேற்ற முனைந்து, தீங்குக்கு உள்ளானவனுக்கு ஏதுமில்லாமலே உறுதிமொழி கூறுவார்கள். நன்றி கொன்ற, நம்பிக்கைதுரோகம் செய்த இந்தக் கொடூரனை நான் நிச்சயம் பழிவாங்குவேன்.(17) தான் பிறந்த அதே நாளில் பிறந்து, அதே இடத்தில் வளர்ந்தவனும், தன்னுடன் சேர்ந்து உண்பவனும், தனது பாதுகாப்பைச் சார்ந்திருந்தவனுமான ஒருவனின் உயிரை எடுத்து மூன்று பாவங்களை இவன் செய்திருக்கிறான்” என்றது.(18)

இவ்வார்த்தைகளைத் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்ட பூஜனி, தன் உகிர்களைக் கொண்டு அந்த இளவரசனின் கண்களைத் துளைத்து, அந்தப் பழிச்செயலால் ஆறுதலை அடைந்து, மீண்டும்,(19) “வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு பாவச்செயலானது, கால இழப்பேதுமில்லாமல் அதைச் செய்தவனைத் தண்டிக்கும். மறுபுறம், ஒரு தீங்குக்காகப் பழிதீர்த்தவர்கள், அத்தகைய நடத்தையால் ஒருபோதும் தங்கள் தகுதியை இழக்கமாட்டார்கள்.(20) ஓ! மன்னா, ஒருவன் செய்த பாவச்செயலின் விளைவு அதை இழைத்தவனிடம் தென்படவில்லையெனினும், அஃது அவனுடைய மகன்கள், மகனுடைய மகன்கள், அல்லது மகளுடைய மகன்களிடம் நிச்சயம் தென்படும்.(21)

பிரம்மதத்தன், பூஜனியால் தனது மகன் குருடாக்கப்பட்டதைக் கண்டும், தன் மகன் செய்ததற்கான சரியான பழிதீர்ப்பாகவே அச்செயலைக் கருதியும் பூஜனியிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(22) பிரம்மதத்தன், “எங்களால் உனக்கு ஒரு தீங்கு செய்யப்பட்டது. பதிலுக்கு ஒரு தீங்கைச் செய்து நீ அதற்குப் பழிவாங்கிவிட்டாய். கணக்குத் தீர்ந்துவிட்டது. உன் வசிப்பிடத்தை விட்டுச் செல்லாதே. மறுபுறம், ஓ! பூஜனி, இங்கேயே தொடர்ந்து வசிப்பாயாக” என்றான்.(23)

பூஜனி {மன்னன் பிரம்மதத்தனிடம்}, “ஒருவனுக்கு ஒருமுறை தீங்கிழைத்துவிட்டு, அங்கேயே ஒருவன் தொடர்ந்து வசித்தால், அவனது அந்த நடத்தையைக் கல்விமான்கள் ஒருபோதும் மெச்சுவதில்லை. அத்தகைய சூழ்நிலைகளில், தீங்கிழைத்தவன் தன் பழைய இடத்தை விட்டுச் செல்வதே எப்போதும் சிறந்ததாகும்.(24) தீங்குக்கு உள்ளான தரப்பிடம் இருந்து பெறப்படும் தேறுதல் உறுதிமொழிகளில் ஒருவன் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது. அத்தகைய உறுதிமொழிகளை நம்பும் மூடன், விரைவில் அழிவையே அடைவான். கடும்பகையை ஒருபோது உடனே தணிக்கமுடியாது.(25) ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொண்டோரின் மகன்களும், பேரப்பிள்ளைகளும் (பரம்பரைச் சண்டையின் விளைவால்) அழிவை அடைவார்கள். தங்கள் வாரிசின் அத்தகைய அழிவின் விளைவால், அவர்கள் மறுமையையும் இழப்பார்கள்.(26) ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொண்ட மனிதர்களுக்கு இடையில், நம்பிக்கையின்மையே மகிழ்ச்சியை உண்டாக்கும். நம்பிக்கை துரோகம் செய்தவனை ஒருபோதும் கொஞ்சமேனும் நம்பக்கூடாது.(27) நம்பிக்கைக்குத் தகாத ஒருவன் ஒருபோதும் நம்பப்படக்கூடாது; அதே போல, நம்பத்தகுந்த மனிதனும் மிக அதிகமாக நம்பப்படக்கூடாது. ஒருவன் தன் மீது கொண்ட நம்பிக்கையால் அடுத்தவர்களை ஈர்க்க முயல வேண்டும். எனினும், அவன் அடுத்தவர்களை ஒருபோதும் நம்பக்கூடாது.(28) தந்தையும் தாயும் மட்டுமே முதன்மையான நண்பர்கள். மனைவியானவள் வித்துகளை விளையச் செய்யும் வெறும் பாத்திரம் {வயல்} மட்டுமே. மகன் என்பவன் வெறுமனே ஒருவனின் வித்து மட்டுமே. உடன் பிறந்தவனோ {பொருளைப் பங்கிட்டுக் கொண்டு போவதால்} ஒரு பகைவனாவான். நண்பனோ, தோழனோ, அவ்வாறே இருக்க வேண்டுமெனில் தன் உள்ளங்களில் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும் {பசையுடன் இருக்க வேண்டும்}[1]. மகிழ்ச்சியையோ, துன்பத்தையோ அனுபவிப்பது ஒருவனின் சுயமே {ஆத்மாவே}.(29)

ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொண்ட மனிதர்களுக்கு மத்தியில், (உண்மையில்) அமைதியேற்படுவது பரிந்துரைக்கத் தகாததாகும். நான் இங்கே வாழ்வதற்கான காரணம் ஏதும் இப்போது இல்லை.(30) மற்றவனுக்குத் தீங்குக்கு உள்ளானவன் கொடைகளின் மூலமோ, கௌரவங்களின் மூலமோ தன்னை வழிபட்டால், தீங்கிழைத்த மனிதனின் மனமானது, இயற்கையாகவே நம்பிக்கையின்மையால் நிறைகிறது. அதிலும் குறிப்பாக, அத்தகைய நடத்தை பலமானவர்களால் வெளிப்படுத்தப்பட்டால், அது பலவீனர்களை நிச்சயம் அச்சத்தாலேயே நிறைக்கும்.(31) முதலில் கௌரவமடைந்து, பிறகு அங்கே அவமதிப்பையும், தீங்கையும் அடைந்தால், நுண்ணறிவுமிக்க ஒருவன் அந்த இடத்தைவிட்ட அகல வேண்டும். தன் எதிரியிடம் இருந்து அடுத்தடுத்துக் கௌரவத்தை அடைந்தாலும் அவன் இவ்வழியிலேயே நடந்து கொள்ள வேண்டும்.(32) உன் வசிப்பிடத்தில் உன்னால் கௌரவிக்கப்பட்டு நான் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். எனினும், இறுதியில் பகைக்கான ஒரு காரணம் எழுந்துவிட்டது. எனவே, எந்தத் தயக்கமும் இல்லாமல் நான் இந்த இடத்தைவிட்டு அகலவே வேண்டும்” என்றது.(33)

பிரம்மதத்தன் {பறவையான பூஜனியிடம்}, “ஒருவன் தான் அடைந்த தீங்குக்குப் பதிலாக ஒரு தீங்கைச் செய்தால், அஃது ஒருபோதும் குற்றமாகக் கருதப்படுவதில்லை. உண்மையில், பழிதீர்த்தவன், அத்தகைய நடத்தையால் {பாவக்} கணக்கையே தீர்க்கிறான். எனவே, ஓ! பூஜனி, இந்த இடத்தைவிட்டுச் செல்லாமல் தொடர்ந்து இங்கேயே வசிப்பாயாக” என்றான்.(34)

பூஜனி {மன்னன் பிரம்மதத்தனிடம்}, “தீங்கிழைத்தவனுக்கும், பதிலுக்குத் தீங்கிழைத்தவனுக்கும் இடையில் மீண்டும் எந்த நட்பும் உறுதியடைய முடியாது. இருவரின் இதயமும் நடந்ததை ஒருபோதும் மறக்காது” என்றது.(35)

பிரம்மதத்தன், “தீங்கிழைத்தவன் மற்றும் அந்தத் தீங்குக்குப் பழிதீர்த்தவன் ஆகியோருக்கிடையில் ஒற்றுமை ஏற்படுவது அவசியமாகும். அத்தகைய சேர்க்கையால், பரஸ்பர பகையும் தணிவது காணப்படுகிறது. அத்தகைய வழக்குகளில் புதிய தீங்குகளும் பின்தொடர்வதில்லை” என்றான்.(36)

பூஜனி, “(பரஸ்பரத் தீங்குகளால் எழும்) பகைமையை ஒரு போதும் சாகாது. தீங்குக்கு உள்ளானவன், “ஓ!, நல்லெண்ணத்துடன் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளால் நான் தேற்றப்பட்டேன்” என்றெண்ணி ஒருபோதும் தன் எதிரிகளை நம்பக்கூடாது. (தவறாக வைக்கப்படும்) நம்பிக்கையின் விளைவாலேயே இவ்வுலகில் மனிதர்கள் அடிக்கடி அழிவடைகிறார்கள். இந்தக் காரணத்தால், நாம் இனிமேல் ஒருபோதும் ஒருவரையொருவர் சந்திக்காமல் இருப்பதே அவசியமானதாகும்.(37) பலம் மற்றும் கூரிய ஆயுதங்களால் அடக்கப்பட முடியாதவன் கூட, (பழக்கப்படுத்தப்பட்ட) மலாகையின் {பெண் யானையின்} மூலம் (காட்டு) யானைகள் வெல்லப்படுவதைப் போல, (உண்மையற்ற) சமரசத்தின் பேரில் வெல்லப்படலாம்” என்றது.(38)

பிரம்மதத்தன், “ஒன்றாக வசிக்கும் இருவரில் ஒருவர் மற்றவருக்குப் பயங்கரத் தீங்கை இழைத்துவிட்டாலும் கூட, சண்டாளனுக்கும், நாய்க்கும் இடையிலான வழக்கைப் போல[2], அவர்களுக்கிடையில் அன்பும், பரஸ்பர நம்பிக்கையும் இயற்கையாகவே எழுகிறது.(39) ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொண்டவர்கள் ஒன்றாக வசிக்கும்போது, பகையின் கூர்மை மழுங்குகிறது. உண்மையில் அந்தப் பகைமை, தாமரை இதழின் மீது ஊற்றப்பட்ட நீரைப் போல வெகு காலம் நீடிக்காமல் உடனே மறைந்துவிடுகிறது” என்றான்.(40)பூஜனி {மன்னன் பிரம்மதத்தனிடம்}, “பகைமை ஐந்து காரணங்களால் எழுகிறது. கல்விமான்கள் அஃதை அறிவார்கள். பெண், நிலம், கடுஞ்சொல், இயல்பான ஒவ்வாமை, தீங்கு ஆகியவையே அந்த ஐந்து காரணங்களாகும்[3].(41) பகைமை நேரக்கூடிய மனிதன் தயாளனாக இருந்தால், வெளிப்படையாகவோ, மறைமுக வழிமுறைகளாலோ அவன் ஒருபோதும் கொல்லப்படக்கூடாது, அதிலும் குறிப்பாக க்ஷத்திரியனால் கொல்லப்படக்கூடாது. அத்தகைய ஒரு வழக்கில், மனிதனின் குற்றத்தை {துலாக்கோலில் எடைபார்ப்பது போல்} முறையாக நிறுத்திப் பார்க்க வேண்டும்[4].(42) கடலின் நீரில் இருக்கும் ஔர்விய நெருப்பைப் போல, பகையெனும் நெருப்பை, செல்வத்தின் கொடைகளாலோ, ஆற்றலை வெளிப்படுத்துவதாலோ, சமரசத்தாலோ, சாத்திரக் கல்வியினாலோ ஒருபோதும் தணிக்க முடியாது.(44) ஒருமுறை செய்யப்பட்ட தீங்கின் விளைவால் பகையெனும் நெருப்பானது ஒருமுறை பற்றிக் கொண்டால், ஓ! மன்னா, ஒருதரப்பை எரிக்காமல் அஃது ஒருபோதும் தணியாது.(45) ஒருவனுக்குத் தீங்கிழைத்தவன், (தீங்கிழைக்கப்பட்ட பிறகும்) அவன் செல்வத்தாலும், கௌரவங்களாலும் தன்னை வழிபட்டாலும், அவனை ஒருபோதும் தன்னுடைய நண்பனாகக் கருதக்கூடாது. தீங்கின் உண்மை, அத்தீங்குக்கு உள்ளானவனை அச்சத்தால் நிறைக்கிறது.(46) நான் உனக்கு ஒருபோதும் தீங்கிழைக்கவில்லை. நீயும் எனக்கு ஒருபோதும் தீங்கிழைத்ததில்லை. அதன் காரணமாகவே நான் உன் வசிப்பிடத்தில் வசித்தேன். அவை அனைத்தும் மாறிவிட்டது, தற்போது என்னால் உன்னை நம்ப முடியாது” என்றது.(47)பிரம்மதத்தன் {பறவை பூஜனியிடம்}, “காலமே ஒவ்வொரு செயலையும் செய்கிறது. பல்வேறு வகைச் செயல்களும், காலத்தில் இருந்தே எழுகின்றன. எனவே யார், யாருக்குத் தீங்கிழைப்பது[5]?(48) பிறப்பும், இறப்பும் இவ்வழியிலேயே நேர்கின்றன. காலத்தின் விளைவாலேயே உயிரினங்கள் செயல்படுகின்றன, காலத்தின் விளைவாலேயே அவை வாழ்வை நிறுத்தவும் செய்கின்றன (அதாவது பிறப்பையும், இறப்பையும் அடைகின்றன).(49) சிலர் உடனே {ஒன்றாகவே} இறப்பது காணப்படுகிறது. சிலர் ஒவ்வொரு காலத்தில் தனித்தனியாகவும் இறக்கின்றனர். சிலர், நீண்ட காலம் வாழ்வதும் காணப்படுகிறது. விறகை எரிக்கும் நெருப்பைப் போலவே, காலமானது அனைத்து உயிரினங்களையும் பற்றுகிறது.(50) ஓ! அருளப்பட்ட மங்கையே, எனவே, உன் கவலையின் காரணம் நானல்ல, அதே போல நீயும் என் துயருக்கான காரணமல்ல. உடல் படைத்த உயினிங்களின் இன்பத்தையும், துன்பத்தையும் காலமே எப்போதும் விதிக்கிறது.(51) என்னிடம் அன்புடனும், நான் உனக்குத் தீங்கு செய்வேன் என்ற அச்சம் ஏதும் இல்லாமலும் நீ இங்கே தொடர்ந்து சுகமாக வசிப்பாயாக. நீ செய்தது என்னால் மன்னிக்கப்பட்டது. ஓ! பூஜனி நீயும் என்னை மன்னிப்பாயாக” என்றான்.(52)பூஜனி, “உன்னைப் பொறுத்தவரையில், காலமே அனைத்திற்கும் காரணமென்றால், உண்மையில் பூமியில் எவரும் பகைமை உணர்வுகளை வளர்க்க முடியாது. எனினும், நண்பர்களும், சொந்தங்களும் கொல்லப்படும்போது, ஏன் நண்பர்களும், சொந்தங்களும் பழிவாங்குகின்றனர்?(53) மேலும், பழங்காலத்தில் ஏன் தேவர்களும், அசுரர்களும் ஒரைவரையொருவர் தாக்கிக் கொண்டு போரிட்டனர்? இன்பம் மற்றும் துன்பம், பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றுக்குக் காலமே காரணம் என்றால்,(54) ஏன் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்தளிக்கின்றனர்? காலம் தான் அனைத்தையும் சமைக்கிறது என்றால், மருந்துகளுக்கான அவசியம்தான் என்ன?(55) மக்கள், துயரால் புலனுணர்வுகளை இழந்து, அறிவுபிறழ்ந்த அத்தகைய கொந்தளிப்பான பேச்சுகளில் ஏன் ஈடுபடுகின்றனர்? உன்னைப் பொறுத்தவரையில் காலமே செயல்களின் காரணமென்றால், அறச்செயல்களைச் செய்யும் நபர்கள் எவ்வாறு தங்கள் அறத்தகுதியை ஈட்ட முடியும்?(56) உன் மகன் என் பிள்ளையைக் கொன்றான். அதற்காக நான் அவனுக்குத் தீங்கிழைத்தேன். ஓ! மன்னா, அந்தச் செயலால் நான் உன்னால் கொல்லப்படத்தக்கவளானேன்.(57) என் மகனுக்கான துயரத்தால் உந்தப்பட்டு நான் உன் மகனுக்கு இந்தத் தீங்கைச் செய்துவிட்டேன். நான் ஏன் உன்னால் கொல்லப்படத்தக்கவளானேன் என்பதை இப்போது கேட்பாயாக.(58)

மனிதர்கள் தங்கள் உணவுக்காகக் கொல்லவோ, விளையாட்டுக்காகக் கூண்டில் அடைத்துவைக்கவோதான் பறவைகளை விரும்புகின்றனர். இத்தகைய கொலை, அல்லது அடைத்துவைத்தல் ஆகியவற்றுக்காகவே மனிதர்கள் என் இனத்தில் ஒவ்வொருவரையும் தேடுகிறார்களேயன்றி வேறு மூன்றாவது காரணம் ஏதும் கிடையாது.(59) மேலும் பறவைகளும், மனிதர்களால் கொல்லப்படுவோம், அல்லது அடைத்துவைக்கப்படுவோம் என்ற அச்சத்தால் பாதுகாப்பை நாடி தப்பி ஓடுகின்றனர். இறப்பு மற்றும் சிறை ஆகிய இரண்டும் வலிமிக்கவை என்று வேதங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.(60) உயிர் என்பது அனைவருக்கும் அன்புக்குரியது {விருப்பத்திற்குரியது}. துயரத்தாலும், வலியாலும் அனைத்து உயிரினங்களும் துன்புறுகின்றன. அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியையே விரும்புகின்றன.(61) பல்வேறு மூலங்களில் இருந்து துன்பம் எழுகிறது. ஓ! பிரம்மதத்தா, முதுமை துன்பமே. செல்வமிழப்பு துன்பமே. ஏற்பில்லாத, அல்லது தீயவற்றுக்கு நெருக்கமான எதுவும் துன்பமே. நண்பர்கள் மற்றும் ஏற்புடைய பொருட்களில் இருந்து பிரிவோ, தொடர்பின்மையோ ஏற்படுவது துன்பமே.(62) இறப்பு மற்றும் சிறையில் துன்பமே எழுகிறது. பெண்கள் தொடர்புடைய காரணங்களாலும், பிற இயற்கையான காரணங்களாலும் துன்பம் எழுகிறது. பிள்ளைகளின் இறப்பால் எழும் துன்பமானது அனைத்துயிரினங்களையும் வெகுவாகப் பீடித்து அவற்றை {தங்கள் இயல்புகளில் இருந்து} மாறச் செய்கின்றன. (63)

சில மூட மனிதர்கள், பிறரின் துன்பங்கள் துன்பங்களே இல்லை என்று சொல்கின்றனர்[6]. மனிதர்களுக்கு மத்தியில் எந்தத் துன்பத்தையும் அனுபவிக்காதவன் மட்டுமே இவ்வாறு சொல்ல முடியும்.(64) எனினும் கவலையையும், துன்பத்தையும் அனுபவித்தவன் ஒருபோதும் அவ்வாறு சொல்லத் துணிய மாட்டான். அனைத்து வகைத் துன்பங்களின் வலியையும் உணர்ந்தவன், அடுத்தவரின் துன்பங்களைத் தன் துன்பத்தைப் போலவே உணர்வான்.(65) ஓ! மன்னா, நான் உனக்குச் செய்ததும், நீ எனக்குச் செய்ததும் நூறு வருடங்கள் ஆனாலும் {பாவங்கள்} கழுவப்பட முடியாதனவாகும்.(66) நாம் ஒருவருக்கொருவர் என்ன செய்து கொண்டோமோ, அதற்குப் பிறகு நமக்குள் எந்த இணக்கமும் ஏற்பட முடியாது. உன் மகனுக்கு ஏற்பட்டதை நீ அடிக்கடி சிந்திக்கும்போதெல்லாம், என் மீது நீ கொண்ட பகை புத்துயிர் பெறும்.(67) ஒருவன் ஒரு தீங்குக்காகப் பழிதீர்த்தபிறகு, தீங்குக்குள்ளானவனுடன் அமைதி ஏற்படுத்திக் கொள்ள விரும்பினால், உடைந்து போன மண் பாத்திரத்தைப் போலவே அத்தரப்புகளால் சரியாகச் சேர முடியாது.(68)நம்பிக்கையானது ஒருபோதும் மகிழ்ச்சியை உண்டாக்காது என்று சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் விதித்திருக்கிறார்கள். பழங்காலத்தில் உசனஸே {சுக்கிராச்சாரியரே} பிரகலாதனிடம் இரண்டு ஸ்லோகங்களைப் பாடியுள்ளார்.(69) எதிரியின் உண்மையான, அல்லது பொய்யான வார்த்தைகளை எவன் நம்புவானோ, அவன் தேனைத் தேடும் ஒருவன் காய்ந்த புற்களால் மறைக்கப்பட்ட குழியில் விழுவதைப்போல அழிவையே அடைவான்[7].(70) உயிரோடு இருக்கும் பிள்ளைகளிடம் இறந்து போன அவர்களுடைய தந்தை செய்த சச்சரவுகளைக் குறித்து மனிதர்கள் பேசவே செய்வார்கள், எனவே பகைவர்கள் இறந்த பின்னரும் பகைகள் நீடிக்கின்றன[8].(71) மன்னர்கள் இணக்கம் செய்து கொண்டு பகைகளைத் தணித்தாலும், வாய்ப்பு ஏற்படும்போது நீர் நிறைந்த மண்குடங்களைக் கல்லில் மோதி உடைப்பதைப் போல அவர்கள் தங்கள் எதிரிகளை அழிப்பார்கள்.(72) ஒரு மன்னன் எவனுக்காவது தீங்கிழைத்துவிட்டால், அவன் மீண்டும் அவனை ஒருபோதும் நம்பக்கூடாது. தீங்கிழைக்கப்பட்டவனை ஒருவன் நம்புவதன் மூலம் அவன் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்” என்றான்.(73)பிரம்மதத்தன், “எந்த மனதனும், (பிறரிடம்) நம்பிக்கை வைக்காமல் எந்த நோக்கத்தின் கனியையும் அடையமுடியாது. அச்சத்தை வளர்த்துக் கொள்வதால் ஒருவன் சவத்தைப் போலவே வாழ நேரிடும்” என்றான்.(74)

பூஜனி, “எவனுடைய பாதமாவது புண்ணானால், அவன் எவ்வளவுதான் எச்சரிக்கையுடன் நடந்தாலும் {ஓடினாலும்}, அவன் நிச்சயம் விழுவான்.(75) கண்கள் எரிச்சல் கொண்ட ஒரு மனிதன் காற்றை எதிர்த்து தன் கண்களைத் திறந்தால், அந்தக் காற்றின் மூலம் அதிக வலியை உணர்வான்.(76) தன் பலத்தை அறியாமல், தீய பாதையில் கால் வைக்கும் ஒருவன், பிடிவாதமாக நடந்து சென்றால், அதன் விளைவாக அவன் விரைவில் தன் உயிரையே இழப்பான்.(77) முயற்சியற்ற ஒரு மனிதன், மழைக்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் தன் நிலத்தை உழுதால் , அவர் ஒருபோதும் அறுவடையை அடையான்.(78) கசப்போ, துவர்ப்போ, ஏற்றுக்கொள்ளக்கூடியதோ, இனிமையானதோவான ஊட்டச்சத்துள்ள உணவை தினமும் உண்பவன் நீண்ட வாழ்வை வாழ்வான்.(79) மறுபுறம், நலந்தரும் உணவை அலட்சியம் செய்து, விளைவுகளைப் பார்க்காமல் தீங்கானவற்றை உண்ணும் ஒருவன் விரைவில் மரணத்தை அடைவான்.(80)

விதியும், முயற்சியும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டோர் நல்ல மற்றும் பெரும் சாதனைகளைச் செய்கின்றனர், அதே வேளையில் ஆண்மையற்றவர்கள் விதியைக் கொண்டாடுகின்றனர்[9].(81) நன்மையான ஒரு செயல் கடுமையானதோ, மென்மையானதோ, அது செய்யப்படவே வேண்டும். எனினும், செயலின்மையுடன் இருக்கும் நல்லூழற்ற மனிதன் எப்போதும் அனைத்துவகை இடர்களிலும் மூழ்கியிருப்பான்.(82) எனவே, ஒருவன் அனைத்தையும் கைவிட்டு தன் சக்தியை வெளிப்படுத்த வேண்டும். உண்மையில் மனிதர்கள் அனைத்தையும் அலட்சியம் செய்து, தங்களுக்கு நன்மையை உண்டாக்குபவற்றையே செய்ய வேண்டும்.(83)அறிவு, துணிவு, புத்தி, பலம், பொறுமை ஆகியன ஒருவனின் இயற்கையான நண்பர்களாக இருக்கின்றன. ஞானம் கொண்டோர் தங்களது இவ்வுலக வாழ்வை இவ்வைந்தின் துணையுடன் கடக்கிறார்கள்.(84) வீடுகள், மதிப்புமிக்க உலோகங்கள், நிலம் {வயல்}, மனைவி, நண்பர்கள் ஆகியன நன்மையின் இரண்டாம் மூலங்களாகக் கல்விமான்களால் சொல்லப்படுகின்றன. ஒரு மனிதன் இவற்றை எங்கும் அடையலாம்.(85) ஞானம் கொண்ட மனிதன், எங்கும் மகிழ்ச்சியாக இருப்பான். அத்தகைய மனிதன் எங்கும் ஒளிர்ந்து கொண்டே இருப்பான். அவன் ஒருபோதும் பிறரை அச்சமடையச் செய்யமாட்டான். அவனை அச்சப்படுத்த முயன்றால், ஒருபோதும் அவன் அச்சத்திற்கு வசப்படமாட்டான்.(86) ஒரு புத்திசாலியால் எந்தக் காலத்தில் உடைமையாகக் கொள்ளப்படும் செல்வமானது, சிறியதாக இருப்பினும் அது நிச்சயம் பெருகும். அத்தகைய மனிதன் அனைத்துச் செயல்களையும் புத்திசாலித்தனத்துடன் செய்வான். தற்கட்டுப்பாட்டின் விளைவால் அவன் பெரும் புகழை அடைவதிலும் வெல்வான்.(87)

வீட்டைப்பார்த்துக் கொள்ளும் சிறுமதியாளர்கள், தன் அன்னைகளையே உண்ணும் ஒரு நண்டின் குஞ்சுகளைப்போலத் தங்கள் சதைகளையே உண்ணும் அடங்காப்பிடாரி மனைவிகளைக் கொள்வார்கள்[10].(88) அறிவை இழந்ததன் மூலம் தங்கள் விட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பில் உற்சாகமிழக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள்ளேயே, “இவர்கள் எங்கள் நண்பர்கள், இஃது எங்கள் நாடு. ஐயோ, இவற்றை நாங்கள் எவ்வாறு விட்டுச் செல்வோம்?” என்று சொல்கிறார்கள். ஒருவனுடைய நாடானது தொற்றுநோய், அல்லது பஞ்சத்தால் பீடிக்கப்பட்டால் அவன் அதை விட்டுச் செல்லவே வேண்டும். ஒருவன் தன் நாட்டில் அனைவராலும் மதிக்கப்பட்டு வாழவேண்டும், அல்லது அந்நிய நாட்டிற்குச் சென்று வாழ வேண்டும்.(90) இதன் காரணமாக நான் வேறு பகுதிக்குச் செல்லப்போகிறேன். ஓ! மன்னா, நான் உன் பிள்ளைக்குப் பெரும் தீங்கைச் செய்திருப்பதால் இந்த இடத்தில் இன்னும் இருக்க நான் துணியேன்.(91) கெட்ட மனைவி, கெட்ட மகன், கெட்ட மன்னன், கெட்ட நண்பன், கெட்ட கூட்டணி, கெட்ட நாடு ஆகியவற்றை ஒருவன் தொலைவிலேயே கைவிட வேண்டும்.(92) ஒரு கெட்ட மகனிடம் ஒருவன் நம்பிக்கை வைக்கக்கூடாது. கெட்ட மனைவியிடம் அவனுக்கு என்ன இன்பம் இருக்க முடியும்? கெட்ட நாட்டால் எந்த மகிழ்ச்சியும் இருக்க முடியாது. ஒரு கெட்ட நாட்டில் வாழ்வாதாரத்தை அடைவோம் என ஒருவனும் நம்ப முடியாது.(93) நிச்சயமற்ற பற்றுடன் கூடிய ஒரு கெட்ட நண்பனிடம் தோழமை இருக்க முடியாது. அவசியம் இல்லாதபோது ஏற்படும் ஒரு கெட்ட கூட்டணியால் அவமானமே ஏற்படும்.(94)(“வீட்டிலுள்ள ஸ்நேஹத்தால் கட்டுப்பட்டவர்களும் அல்பபுத்தியுள்ளவர்களுமான மனிதர்களின் மாம்ஸங்களைக் கெட்டஸ்திரீயானவள், பெண் நண்டை அதன் குஞ்சுகள் மாய்ப்பது போல நாசமடையச் செய்வாள்”அவர்கள், பெண் நண்டுகளையும், இளம் நண்டுகளையும்போலத் தங்கள் சதைகளையே உண்ணும் கெட்ட மனைவியரை அடைவார்கள்” என்றிருக்கிறது. அடிக்குறிப்பில் இந்த ஸ்லோகத்தை விளக்கும் திப்ராய், “இந்த இளம் நண்டுகள் குஞ்சுகள்தான் என்று இந்த உரை குறிப்பதாகச் சொல்வதற்கு ஏதும் இல்லை. எனவே, இது சில நண்டுகள், சிறு நண்டுகளை உண்பதைச் சொல்கிறதே தவிர வேறில்லை”)உண்மையில் எவை ஏற்புடையவையோ, அவற்றை மட்டுமே பேசுபவளே மனைவியாவாள். எவன் தந்தையை மகிழ்ச்சியுறச் செய்வானோ, அவனே மகனாவான். எவனிடம் நம்பிக்கை வைக்கமுடியுமோ அவனே நண்பனாவான். உண்மையில் எங்கே ஒருவனால் வாழ்வை ஈட்டமுடியுமோ, அதுவே அவனுடைய நாடாகாகும்.(95) {தன் மக்களை} ஒடுக்காமல், ஏழைகளைப் பேணி, தன் ஆட்சிப் பகுதிகளில் அச்சமேதும் இல்லாமல் பார்த்துக் கொள்பவனே மன்னன் ஆவான்.(96) தன் மன்னன் சாதனைகளைக் கொண்டவனாகவும், அறக்கண்களைக் கொண்டவனாகவும் இருந்தால், மனைவி, நாடு, நண்பர்கள், மகன், மன்னன் மற்றும் உறவினர்கள் ஆகிய அனைத்தையும் ஒருவன் பெறலாம்.(97) மன்னன் பாவம் நிறைந்தவனாக இருந்தால், அவனது ஒடுக்குமுறையின் விளைவால் அவனுடைய குடிமக்கள் அழிவை அடைவார்கள். ஒருவனுடைய முத்தொகுப்புக்கு (அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றுக்கு) மன்னனே வேராவான். அவன் தன் குடிமக்களைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.(98) அவன் {மன்னன்}, தன் குடிமக்களின் செல்வத்தில் ஆறில் ஒரு பங்கைப் பெற்றுக் கொண்டு, அவர்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். எந்த மன்னன் தன் குடிமக்களைப் பாதுகாக்கவில்லையோ, அவன் உண்மையில் கள்வனாவான்.(99) எந்த மன்னன், பாதுகாப்பதாக உறுதியளித்துவிட்டு, ஆதாய வேட்டையினால் அதை நிறைவேற்றவில்லையென்றால், பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட அந்த ஆட்சியாளன், தன் குடிமக்கள் அனைவரின் பாவங்களையும் தனதாக ஏற்று, முற்றாக நரகத்தில் மூழ்குவான்.(100) மறுபுறம், எந்த மன்னன், பாதுகாப்பதாக உறுதி அளித்துவிட்டு, அதை நிறைவேற்றுகிறானோ அவன் தன் குடிமக்களைப் பாதுகாப்பதன் விளைவால் அண்டத்திற்கே நன்மை செய்தவனாகக் கருதப்படுவான்.(101)

அனைத்து உயிரினங்களின் தலைவரான மனு, மன்னனுக்கு ஏழு பண்புநிலைகள் உண்டெனச் சொல்லியிருக்கிறார், தாய், தந்தை, ஆசான், பாதுகாவலன், நெருப்பு, வைஸ்வரவணன் {குபேரன்} மற்றும் யமன் ஆகிய நிலைகளே அவை.(102) ஒரு மன்னன் தன் மக்களிடம் கருணையுடன் நடந்து கொள்வதால் அவர்களுடைய தந்தையாக அழைக்கப்படுகிறான். அவனிடம் பொய்மையுடன் நடந்து கொள்ளும் குடிமகன், தன் அடுத்தப் பிறவியில் ஒரு விலங்காகவோ, ஒரு பறவையாகவோ பிறப்பை அடைகிறான்.(103) மன்னன், தன் மக்களுக்கு நன்மை செய்வதன் மூலமும், ஏழைகளைப் பேணிக் காப்பதன் மூலமும் அவர்களுக்குத் தாயாகிறான். தீயோரைச் சுடுவதன் மூலம் அவன் நெருப்பாகக் கருதப்படுகிறான், பாவம் நிறைந்தோரைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவன் யமன் என அழைக்கப்படுகிறான்.(104) தன் அன்புக்குரியவர்களுக்குச் செல்வக் கொடை அளிப்பதன் மூலம், அந்த மன்னன் விருப்பங்களை அளிப்பவனான குபேரனாகக் கருதப்படுகிறான். நெறி மற்றும் அறம் குறித்துப் போதிப்பதனால் அவன் ஆசானாகிறான். பாதுகாக்கும் கடமையை நடைமுறைப்படுத்துவதால் அவன் காவலனாகிறான்.(105)

தன் நகரங்கள் மற்றும் மாகாணங்களின் மக்களை மகிழ்ச்சியுறச் செய்யும் மன்னன், அத்தகையைக் கடமையை நோற்பதன் விளைவால் ஒருபோதும் தன் நாட்டை இழக்கமாட்டான்.(106) தன் குடிமக்களை எவ்வாறு கௌரவிக்க வேண்டும் என்பதை அறிந்த மன்னன், இம்மையிலும், மறுமையிலும் ஒருபோதும் துயருற மாட்டான்.(107) எந்த மன்னனின் குடிமக்கள் எப்போதும் கவலையில் நிறைவார்களோ, அதிக வரிச்சுமைக்கு உள்ளாகிறார்களோ, அனைத்து வகைத் தீமைகளிலும் மூழ்குகிறார்களோ, அவன் தன் எதிரிகளின் கரங்களில் தோல்வியை அடைவான்.(108) மறுபுறம், எந்த மன்னனின் குடிமக்கள் ஒரு தடாகத்தில் வளரும் பெரிய தாமரையைப் போல வளர்கிறார்களோ, அவன் {அந்த மன்னன்} இம்மையில் அனைத்து வெகுமதிகளையும் அடைந்து, இறுதியில் சொர்க்கத்திலும் கௌரவத்தை அடைவான்.(109) ஓ! மன்னா, பலவானோடு பகைமை ஒருபோதும் மெச்சப்படுவதில்லை. எந்த மன்னன், தன்னைவிடப் பலவானோடு பகைமை கொள்வானோ, அவன் தன் நாடு மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் இழப்பான்” என்றது {பூஜனி என்ற பறவை}”.(110)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னன் பிரம்மதத்தனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பறவை, மன்னனிடம் விடைபெற்றுக் கொண்டு, தான் தேர்ந்தெடுத்த பகுதிக்குச் சென்றுவிட்டாள்.(111) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இவ்வாறே பிரம்மதத்தனுக்கும் பூஜனிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் சொல்லிவிட்டேன். நீ வேறு என்ன கேட்க விரும்புகிறாய்?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(112)

பாரத்வாஜரும் சத்ருஞ்சயனும்! – சாந்திபர்வம் பகுதி – 140-பாரத்வாஜர் மற்றும் சத்ருஞ்சயன் ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடலின் மூலம் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டிய செங்கோல், மன்னர்களின் பல்வேறு கடமைகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, படிப்படியாக யுகம் குறைவதன் விளைவால், அறம் மற்றும் மனிதர்கள் ஆகிய இரண்டும் அழியும்போதும், உலகம் கள்வர்களால் பீடிக்கப்படும்போதும், ஓ! பாட்டா, ஒரு மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, அத்தகைய துன்பத்தில் மன்னன் பின்பற்ற வேண்டிய கொள்கை குறித்து நான் உனக்குச் சொல்கிறேன்.(2) அத்தகைய நேரத்தில், கருணையைக் கைவிட்டு அவன் எவ்வாறு தன்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை உனக்குச் சொல்கிறேன். இது தொடர்பாகப் பாரத்வாஜருக்கும், மன்னன் சத்ருஞ்சயனுக்கும் இடையில் நடந்த உரையாடலைப் பழங்கதை குறிப்பிடுகிறது.(3)

சௌவீரர்களுக்கு மத்தியில் சத்ருஞ்சயன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பெருந்தேர்வீரனாகவும் இருந்தான். பாரத்வாஜரிடம் சென்ற அவன், பொருளறிவியலின் உண்மைகளைக் குறித்து அந்த முனிவரிடம் கேட்கும் வகையில்,(4) “அடையப்படாத பொருளை எவ்வாறு அடைய வேண்டும்? மேலும் அடைந்த பிறகு, அஃதை எவ்வாறு பெருக்க வேண்டும்? பெருக்கப்பட்ட பிறகு, அஃதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? மேலும் பாதுகாக்கப்பட்ட பிறகு, அஃதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?” என்று கேட்டான். பொருளறிவியலின் உண்மைகளைக் குறித்து இவ்வாறு கேட்கப்பட்டதும் அந்த மறுபிறப்பாள முனிவர் {பாரத்வாஜர்}, அவ்வுண்மைகளை அந்த ஆட்சியாளனுக்கு விளக்கும் வகையில் சிறந்த அறிவு நிரம்பிய பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார்.(6)

முனிவர் {பாரத்வாஜர்}, “ஒரு மன்னன் எப்போதும் தன் கரங்களில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடனே {செங்கோலுடனே} இருக்க வேண்டும். அவன் எப்போதும் தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். எந்தத் தவறும் இல்லாதவனாகத் தான் இருந்து கொண்டு, தன் எதிரியின் தவறுகளைக் கவனிக்க வேண்டும். உண்மையில், அவனது கண்ணானது இந்தக் காரியத்திற்கே எப்போதும் பயன்படுத்தப்பட வேண்டும்.(7) கரத்தில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடன் மன்னனைக் காணும்போது, அனைவரும் அச்சத்தால் தாக்கப்படுவார்கள். இந்தக் காரணத்தால் மன்னன் தண்டக் கோலைக் கொண்டு அனைத்து உயிரினங்களையும் ஆள வேண்டும்.(8) கல்வி மற்றும் உண்மை ஞானம் கொண்ட மனிதர்கள் தண்டனையை மெச்சுகிறார்கள். எனவே, விதியின் நான்கு தேவைகளான இணக்கம் {சாமம்}, கொடை {தானம்}, வேற்றுமை உண்டாக்கல் {பேதம்}, தண்டனை {தண்டம்} ஆகியவற்றில் தண்டனையே முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது.(9) புகலிடத்தின் அடித்தளங்கள் வெட்டப்படும்போது, ஏதிலிகள் அனைவரும் அழிவை அடைவார்கள். ஒரு மரத்தின் வேர்கள் வெட்டப்படும்போது, கிளைகளால் எவ்வாறு வாழ முடியும்?(10) ஞானம் கொண்ட ஒரு மன்னன், தன் எதிரியின் வேர்களையே அறுக்க வேண்டும். பிறகு அவனை வெற்றிக் கொண்டு, அந்த எதிரியின் கூட்டாளிகளையும், சார்பாளர்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வர வேண்டும்.(11)

மன்னனுக்குப் பேரிடர் ஏற்படும்போது, அவன் காலமேதும் இழக்காமல், ஞானத்துடன் ஆலோசித்து, முறையாகத் தன் ஆற்றலை வெளிப்படுத்தி, திறனுடன் போரிட்டு, ஞானத்துடன் பின்வாங்கவும் வேண்டும்.(12) பேச்சில் மட்டுமே மன்னன் தன் பணிவை வெளிப்படுத்த வேண்டுமேயன்றி, இதயத்தில் கத்தியின் கூர்மையுடன் இருக்க வேண்டும். அவன் காமம், கோபம் ஆகியவற்றைக் கைவிட்டு, இனிமையாகவும் மென்மையாகவும் பேச வேண்டும்.(13) ஒரு பகைவனுடன் சேர்க்கை உண்டாகும்போது, முன்னறிவு கொண்ட ஒரு மன்னன், அவனிடம் குருட்டு நம்பிக்கை ஏதும் வைக்காமல் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காரியம் முடிந்ததும், தன் புதுக் கூட்டாளியிடம் இருந்து வேகமாக விலக வேண்டும்.(14) ஒருவன் தன் பகைவனிடம் ஒரு நண்பனைப் போல இனிய உறுதிமொழிகளைக் கொடுத்து இணக்கம் கொள்ள வேண்டும். எனினும், அறையில் உள்ள ஒரு பாம்பைப் போலவே அந்த எதிரியிடம் எப்போதும் அச்சத்துடன் இருக்க வேண்டும்.(15)

எவனுடைய புத்தி (உன்னுடைய புத்தியால்) ஆதிக்கம் செய்யப்படுமோ, அவனிடம், கடந்த காலங்களைக் குறிப்பிட்டு உறுதி கூற வேண்டும். தீய புத்தியைக் கொண்டவனிடம் எதிர்கால நன்மைகளைக் குறிப்பிட்டு உறுதி கூற வேண்டும்.(16) எனினும், ஞானம் கொண்ட மனிதனிடம், தற்காலத் தொண்டுகளைக் குறிப்பிட்டு உறுதி கூற வேண்டும். செழிப்பை அடைய விரும்பும் மனிதன், தன் கரங்களைக் கூப்ப வேண்டும், உறுதிமொழி கூற வேண்டும், இனிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும், தலைவணங்கி வழிபட வேண்டும், மேலும் கண்ணீரும் சிந்த வேண்டும்[1].(17) காலம் சாதகமாக இல்லாதவரை ஒருவன் தன் எதிரியைத் தன் தோள்களிலும் தாங்கலாம். எனினும், வாய்ப்பு ஏற்படும்போது, ஒரு மண்குடத்தைக் கல்லில் மோதுவதைப் போல அவனைத் துண்டுகளாக உடைத்துவிட வேண்டும்.(18) ஓ! ஏகாதிபதி, ஒரு மன்னன் உமியிலுள்ள நெருப்பைப் போலப் பிரகாசமில்லாமல் நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதைவிட ஒரு கணமே என்றாலும் திந்துக மரத்திலெடுத்த கரியைப் போலச் சுடர்விட்டெரியவதே சிறந்தது.(19) பல காரியங்களைச் செய்ய வேண்டிய மனிதன், ஒரே ஒரு நன்றியற்ற மனிதனிடம் எந்தக் காரியத்தையும் செய்யாமல் இருப்பதில் ஐயங்கொள்ளக்கூடாது. வெற்றியடைந்தால் ஒருவன் மகிழ்ச்சியாக இருப்பான். வெற்றியடையாவிட்டால் அவன் மதிப்பை இழப்பான்.(20) எனவே, அத்தகைய மனிதர்களின் செயல்களை நிறைவேற்றுவதைப் பொறுத்தவரையில், ஒருவன், அவற்றை முழுமையாக நிறைவேற்றாமல் ஏதாவதொன்றை முடிக்காமல் மிச்சம் வைக்க வேண்டும். கோகிலம் {குயில்}, பன்றி, மேரு மலை, வெற்று அறை ஆகியவற்றையும், நடிகன் மற்றும் அர்ப்பணிப்புள்ள நண்பன் ஆகியோரையும் போல, ஒரு மன்னன், தனக்கான நன்மையைச் செய்து கொள்ள வேண்டும்[2].(21)மிகக் கவனமாக நடந்து கொள்ளும் மன்னன், தனக்கு இடரே ஏற்பட்டாலும், அடிக்கடி தன் எதிரிகளின் வீடுகளுக்குச் சென்று, அவர்களது நன்மையைக் குறித்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும்.(22) செயல்படாமல் இருப்பவர்களால் ஒருபோதும் செழிப்பை வெல்ல முடியாது; ஆண்மையும் முயற்சியும் அற்றவர்களாலும்; பகட்டு எனும் களங்கம் கொண்டவர்களாலும், செல்வாக்கின்மையில் அச்சம் கொண்டவர்களாலும்; எப்போதும் காலந்தாழ்த்துபவர்களாலும் ஒருபோதும் செழிப்பை வெல்ல முடியாது.(23) தன் தவறுகளை எதிரி கணிக்காதவகையில் ஒரு மன்னன் செயல்பட வேண்டும். எனினும், அவன் தன் எதிரிகளின் தவறுகளைக் கண்டு கொண்டே இருக்க வேண்டும். அவன் தன் அங்கங்களை மறைத்துக் கொள்ளும் ஆமையைப் போலச் செயல்பட வேண்டும். உண்மையில் அவன் தன் ஓட்டைகள் அனைத்தையும் எப்போதும் மறைத்துக் கொள்ள வேண்டும்.(24) அவன் ஒரு நாரையைப் போலப் பொருளாதாரம் தொடர்புடைய அனைத்துக் காரியங்களைக் குறித்தும் சிந்திக்க வேண்டும்[3]. அவன் தன் ஆற்றலை ஒரு சிங்கத்தைப் போல வெளிப்படுத்த வேண்டும்.அவன் ஓர் ஓநாயைப் போலக் காத்துக் கிடந்து, பாய வேண்டும். ஒரு கணையைப் போல அவன் தன் எதிரிகளைத் துளைக்க வேண்டும்.(25)குடி {மது}, பகடை {சூது}, பெண்கள், வேட்டை, இசை ஆகியவற்றை முறையாக அனுபவிக்க வேண்டும். இவற்றுக்கு அடிமையாவது தீமையையே உண்டாக்கும்.(26) அவன் விற்களை மூங்கில்களால் செய்து கொள்ள வேண்டும். அவன் மானைப் போல உறங்க வேண்டும்; தேவைப்படும் நேரத்தில் அவன் குருடனாகவும், செவிடனாகவும் இருக்க வேண்டும்.(27) ஞானம் கொண்ட ஒரு மன்னன் காலம் மற்றும் இடத்தைக் கருத்தில் கொண்டு தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். இவை சாதகமாக இல்லையெனில், ஆற்றல் வீணாகும்.(28) மன்னன், {நல்ல} காலத்தையும், சாதகமில்லாத காலத்தையும் குறித்துக் கொண்டு, தன் பலம் மற்றும் பலவீனங்களைச் சிந்தித்து, எதிரியுடன் ஒப்பிடுகையில் தன் பலத்தைப் பெருகச் செய்து செயல்பட வேண்டும்.(29) படைபலத்தின் மூலம் அடக்கப்பட்ட ஓர் எதிரியை நொறுக்காமல் இருக்கும் மன்னன், கருவுறும் நண்டைப் போலத் தன் மரணத்தையே தேடிக் கொள்வான்.(30)

மன்னன் மலர்களையன்றி கனிகளைக் காட்டக் கூடாது. கனிகளைக் காட்டினால் அடைய முடியாத உயரத்தில் இருக்கவேண்டும்; கனியாமல் {முதிராமல்} இருப்பினும், கனிந்ததாக {முதிர்ந்ததாகக்} காட்ட வேண்டும். இத்தகைய வழியில் அவன் தன்னை நடத்திக் கொண்டால், தன் எதிரிகள் அனைவரையும் எதிர்த்து உயர்வான்.(31) மன்னன் முதலில் (உறவை நாடித் தன்னை அணுகுவோரிடம்) நம்பிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும். பிறகு, அந்த நம்பிக்கைகளின் நிறைவேற்றத்திற்கான வழியில் அவன் தடைகளை ஏற்படுத்த வேண்டும். அவன் அந்தத் தடைகள் வெறும் சந்தர்ப்பவசத்தாலேயே ஆனவை என்று சொல்ல வேண்டும். அடுத்ததாக அவன் அந்தச் சந்தர்ப்பங்களும் உண்மையில் முக்கியமான காரணங்களாலேயே விளைந்தவை என்பதைச் சொல்ல வேண்டும்.(32) அச்சத்திற்கான காரணமேதும் உண்மையில் வராமல் இருக்கும் வரை, மன்னன் அச்சத்திலிருப்பவனைப் போலத் தன் ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ய வேண்டும். எனினும், அச்சத்திற்கான காரணம் தோன்றியதும், அவன் அச்சமில்லாமல் தாக்க வேண்டும்.(33) எந்த மனிதனும் ஆபத்துக்கு உள்ளாகாமல் நன்மைய அறுவடை செய்ய முடியாது. மேலும், ஆபத்துக்கு மத்தியில் அவன் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதில் வென்றால், அவன் பெரும் நன்மைகளை ஈட்டுவது நிச்சயம்[4].(34) ஒரு மன்னன் எதிர்கால அச்சங்கள் அனைத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவை இருக்கும்போது அவற்றை வெல்ல வேண்டும்; அவை மீண்டும் வளர்ந்நால், அவற்றை வென்ற பிறகும், வெல்லப்படாதவையாக அவற்றைக் கருத வேண்டும்.(35)எதிர்கால மகிழ்ச்சியைத் தேடி நிகழ்கால மகிழ்ச்சியைக் கைவிடுவது ஒருபோதும் நுண்ணறிவு கொண்ட ஒரு மனிதனின் கொள்கையாக இருக்க முடியாது.(36) எந்த மன்னன் ஓர் எதிரியுடன் அமைதி ஏற்படுத்திக் கொண்டு நம்பிக்கையுடன் உறங்குவானோ, அவன் மரத்தின் உச்சியில் தூங்கி, விழுந்த பிறகு விழிக்கும் மனிதனைப் போன்றவனாவான்(37) ஒருவன் துயரில் வீழும்போது, அவன் மென்மையான, அல்லது கடுமையான சக்தியின் எந்த வழிமுறைகளிலாவது தானாக எழு வேண்டும்; அவ்வாறு எழுந்ததும் தகுதி வாய்ந்தவனாக ஆன பிறகு, அவன் அறத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.(38) மன்னன் எப்போதும் தன் எதிரிகளின் எதிரிகளைக் கௌரவிக்க வேண்டும். அவன் தன் ஒற்றர்களையே எதிரிகளால் நியமிக்கப்பட்ட முகவர்களாகவே கருத வேண்டும்.(39) மன்னன் தன் ஒற்றர்களை எதிரி அடையாளம் காணாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் நாத்திகர்களையும், தவசிகளையும் ஒற்றர்களாக்கி தன் எதிரியின் ஆட்சிப்பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும்.(40)

நந்தவனங்கள், கேளிக்கையிடங்கள், பயணிகளின் தாகத்திற்காகக் குடிநீர் கொடுக்கும் இல்லங்கள், தீர்த்தங்கள், பொதுச் சபைகள் ஆகிய இடங்களில், அறவிதிகளுக்கு எதிராகக் குற்றமிழைப்பவர்களும், அனைவரின் தரப்பினருக்கும் முள்ளாக இருப்பவர்களுமான பாவம் நிறைந்த கள்வர்கள் நுழைவார்கள். அவர்கள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.(41,42) மன்னன் நம்பத்தகாதவர்களை நம்பக்கூடாது; அதேபோல நம்பத்தகுந்தவர்களிடமும் அதிக நம்பிக்கை வைக்கக்கூடாது. நம்பிக்கையிலிருந்தே ஆபத்து எழுகிறது. முன்பே எதையும் சோதிக்காமல் {எதன்மேலும்} நம்பிக்கை வைக்கப்படக்கூடாது.(43) மன்னன், சரியாகத் தோன்றும் காரணங்களால் எதிரிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, அவன் தவறான அடியெடுத்து வைக்கும்போது அவனைத் தாக்க வேண்டும்.(44) எவனிடம் எந்த அச்சமுமில்லையோ, அவனிடம் மன்னன் அஞ்ச வேண்டும்; அச்சத்தக்கவர்களுக்கு அவன் எப்போதும் அஞ்சவே வேண்டும். அஞ்சத்தகாதவர்களிடம் எழும் அச்சமானது மொத்த அழிவுக்கு வழிவகுத்துவிடும்.(45)

(அறத்தகுதி அடைவதில்) கவனம், எண்ணங்களை வெளியிடாமை, தவசிகளின் சிவப்பு {காவி} உடை {காஷாய வஸ்திரம்}, சடாமுடி மற்றும் தோல்களைத் தரித்தல் ஆகியவற்றின் மூலம் ஒருவன் தன் எதிரியை நம்ப வைக்க வேண்டும். பிறகு (வாய்ப்பு ஏற்படும்போது) ஓர் ஓநாயைப் போல அவன் மீது பாய வேண்டும்.(46) செழிப்பை விரும்பும் மன்னன், தன் நோக்கங்களைத் தடைசெய்ய முனையும் மகனையோ, உடன்பிறந்தவனையோ, தந்தையையோ, நண்பனையோ கொல்லத் தயங்கக் கூடாது.(47) ஆசானே கூட ஆணவம் கொண்டவராகவும், எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதை அறியாதவராக, அறமற்ற பாதைகளில் நடப்பவராக இருந்தால், அவரும் தண்டனையின் மூலம் கட்டுப்படுத்தப்படத் தகுந்தவரே ஆவார்.(48) கூரிய கொடுக்குகளைக் கொண்ட பூச்சிகள், தாங்கள் அமரும் மரத்தின் பூக்கள் மற்றும் கனிகள் அனைத்தையும் வெட்டுவதைப் போலவே மன்னனும், கௌரவங்கள், வணக்கம், கொடைகள் ஆகியவற்றின் மூலம் எதிரியை நம்பிக்கை கொள்ளச் செய்து, அவனுக்கு எதிராகத் திரும்பி அவனிடம் உள்ள அனைத்தையும் கைப்பற்ற வேண்டும்.(49) பிறரின் முக்கிய அங்கங்களைத் துளைக்காமல், பல கடுஞ்செயல்களைச் செய்யாமல், மீனவனைப் போல உயிரினங்களைக் கொல்லாமல் ஒருவனாலும் பெருஞ்செழிப்பை அடைய முடியாது.(50)

உயிரினங்களில் பகைவர்கள், அல்லது எதிரிகள் என்றழைக்கப்படும் தனிவகை இனங்கள் ஏதும் கிடையாது. சூழ்நிலையின் சக்திக்கு ஏற்றபடியே மனிதர்களுக்கு நண்பர்களோ, பகைவர்களோ ஏற்படுகிறார்கள்.(51) மன்னன், தன் எதிரி எவ்வளவுதான் பரிதாபகரமான புலம்பல்களில் {அழுவதில்} ஈடுபட்டாலும், அவனை ஒருபோதும் தப்பிக்க அனுமதிக்கக்கூடாது. மறுபுறம், அவற்றால் அசைக்கப்படாமல், தனக்குத் தீங்கிழைத்த மனிதனை அழிப்பதே அவனது கடமையாகும்.(52) செழிப்பை விரும்பும் மன்னன் தன்னால் எவ்வளவு மனிதர்களை இணைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு பேரைத் தன்னோடு இணைத்துக் கொண்டு , அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். தன் குடிமக்களிடம் நடந்து கொள்ளும் முறையில் அவன் எப்போதும் வன்மத்தில் இருந்து விடுபட்டவனாக இருக்கவேண்டும். அவன் செல்வத்தை எடுக்க எண்ணும்போது, எது ஏற்புடையதோ அதையே அவன் பேச வேண்டும். செல்வத்தை எடுத்த பிறகு, அவன் அதே போன்றவற்றையே பேச வேண்டும். ஒருவனுடைய தலையை வீழ்த்திய பிறகு, அவன் அதற்காக வருந்தி, கண்ணீர் சிந்த வேண்டும்.(54)

செழிப்பை விரும்பும் மன்னன், இனிய சொற்கள், கௌரவங்கள், கொடைகள் ஆகியவற்றின் மூலம் பிறரைத் தன்னை நோக்கி இழுக்க வேண்டும். இவ்வாறே அவன் மனிதர்களைத் தன் தொண்டில் கட்ட வேண்டும்.(55)

மன்னன் ஒருபோதும் கனியற்ற சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது. தன் இரு கரங்களின் துணையை மட்டுமே கொண்டு அவன் ஒருபோதும் ஓர் ஆற்றைக் கடக்கக்கூடாது. மாட்டுக் கொம்புகளை உண்பது கனியற்றதும், ஒருபோதும் வலுவூட்டாததுமாகும். அவற்றை உண்டால், ஒருவனின் பற்கள் உடைவதோடு, சுவையாலும் அவன் நிறைவடைய மாட்டான்.(56) முத்தொகையானது {அறம், பொருள், இன்பம்}, பிரிக்கப்படமுடியாத மூன்று துணைப் பண்புகளுடன்கூடிய மூன்று தீமைகளைக் கொண்டிருக்கிறது. கவனமான அந்தத் துணைப் பண்புகளைக் கருத்தில் கொண்டு, அந்தத் தீமைகள் தவிர்க்கப்பட வேண்டும்[5].(57) திரும்பச் செலுத்தப்படாத கடன், தணிக்கப்படாமல் எஞ்சியிருக்கும் நெருப்பு ஆகியவையும் எதிரிகளில் கொல்லப்படாமல் எஞ்சியிருப்போரும் மீண்டும் மீண்டும் வளர்ந்து பெருகுபவையாகும். எனவே, இவை அனைத்தும் முற்றாகத் தணிக்கப்பட்டு, அழிக்கப்பட வேண்டும்.(58) எப்போதும் வளர்வதான கடனானது, மொத்தமாகத் தணிக்கப்படாதவரை நிச்சயம் நீடிக்கும். தோற்கடிக்கப்பட்ட எதிரிகளின், புறக்கணிக்கப்பட்ட நோய்களின் வழக்கும் அதே போன்றவையே. இவை எப்போதும் பேரச்சத்தையே உண்டாக்கும். (எனவே, ஒருவன் இவற்றை எப்போதும் வேரோடு அழிக்கப்பட வேண்டும்).(59) அனைத்துச் செயல்களும் முழுமையாகச் செய்யப்பட வேண்டும். ஒருவன் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு முள்ளைப் போன்ற ஒரு சிறிய பொருளே கூட, சரியாகப் பிடுங்கப்படவில்லையென்றால், விடாப்பிடியான செத்தையாக {அழுகலுக்கு} வழிவகுக்கும்.(60)மக்கள் தொகையைக் கொல்வது, அதன் சாலைகளைச் சிதைப்பது, அல்லது அவற்றுக்குத் தீங்கிழைப்பது, அவற்றின் வீடுகளை இடிப்பது, எரிப்பது ஆகியவற்றின் மூலம் ஒரு மன்னன் ஒரு பகை நாட்டை அழிக்க வேண்டும்.(61) ஒரு மன்னன் ஒரு கழுகைப் போலத் தொலைநோக்குப் பார்வை கொண்டவனாக இருக்க வேண்டும், நாரையைப் போல அசைவற்றவனாக, நாயைப் போல எச்சரிக்கையுள்ளவனாக, சிங்கத்தைப் போலத் துணிவுள்ளவனாக, காக்கையைப் போல அச்சமுள்ளவனாக, கவலையில்லாமல் பகைவர்களின் ஆட்சிப்பகுதிகளுக்குள் எளிதாக நுழையும் ஒரு பாம்பைப் போலவும் இருக்க வேண்டும்.(2) ஒரு மன்னன், ஒரு வீரனிடம் கரங்கூப்பியும், ஒரு கோழையிடம் அச்சத்தை ஏற்படுத்தியும், பேராசைக்காரனிடம் செல்வக்கொடை கொடுத்தும் சமமானவனிடம் போர் தொடுத்தும் அவர்களை வெல்ல வேண்டும்.(63) குழுக்களின் தலைவர்களுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்குவதிலும், தனக்கு அன்பானவர்களிடம் இணக்கத்தை ஏற்படுத்துவதிலும் அவன் கவனமாக இருக்க வேண்டும். அவன் தன் அமைச்சர்களை ஒற்றுமையின்மையிலும், அழிவிலும் இருந்து காக்க வேண்டும்.(64) மன்னன் மென்மையாக இருந்தால் மக்கள் அவனை அவமதிப்பார்கள். அவன் கடுமையாக இருந்தாலோ, மக்கள் தங்களைப் பீடிப்பதாகக் கருதுவார்கள். அவன் கடுமை தேவைப்படும் நேரங்களில் கடுமையாகவும், மென்மை தேவைப்படும் நேரங்களில் மென்மையாகவும் இருக்க வேண்டும் என்பதே விதி.(65) மென்மையால் மென்மை வெட்டப்பட வேண்டும். மென்மையைக் கொண்டு ஒருவனால் கடுமையானதையும் அழிக்க முடியும். மென்மையால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. இதன்காரணமாகக் கடுமையைவிட மென்மையே கூர்மையானதாகச் சொல்லப்படுகிறது.(66)

எந்த மன்னன், மென்மை தேவைப்படும் நேரத்தில் மென்மையாகவும், கடுமை தேவைப்படும் நேரத்தில் கடுமையாகவும் நடந்து கொள்கிறானோ, அவன் தன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டு, தன் எதிரிகளைத் தண்டிக்க வேண்டும்.(67) அறிவும், ஞானமும் கொண்ட மனிதனிடம் பகையை உண்டாக்கிக் கொள்ளும் ஒருவன், (தன் எதிரியிடம் இருந்து) தொலைவாக இருக்கிறோம் என்று நம்பிக்கையில் ஆறுதலடையக் கூடாது. நுண்ணறிவுமிக்க மனிதனின் கரங்கள், தனக்குத் தீங்கிழைத்தவனுக்குத் தொலைவிலிருந்தே தீங்கிழைக்கவல்லவையாகும் {அவை நீண்டவையாகும்}.(68) உண்மையில் கடக்க முடியாததைக் கடக்க முயற்சிக்கக்கூடாது. எதிரியால் மீட்க இயன்றவற்றை அவனிடம் இருந்து பறிக்கக்கூடாது. தோண்டுவதால் ஒன்றின் வேரை அடைய முடியாது என்றால், அவன் தோண்டுவதற்கு முயற்சிக்கவே கூடாது. எவனுடைய தலையை வெட்ட முடியாதோ, அவனை ஒருவன் ஒருபோதும் தாக்கக்கூடாது.(69) ஒரு மன்னன் எப்போதுமே இவ்வழியில் நடந்து கொள்ளக்கூடாது. நான் சொல்லும் இந்த நடத்தைகளைத் துன்ப காலங்களில் மட்டுமே பின்பற்ற வேண்டும். எதிரிகளால் தாக்கப்படும்போதும், எவ்வாறு நீ உன்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை உனது நன்மையின் பொருட்டே நான் சொல்கிறேன்” என்றார் {பாரத்வாஜர்}.(70)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சௌவீரர்களின் ஆட்சியாளன் {சத்ருஞ்சயன்} தனக்கான நன்மையை வேண்டி அந்தப் பிராமணரால் {பாரத்வாஜரால்} சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவரது அறிவுரைகளை உற்சாகமாக ஏற்று, தன் சொந்தங்கள், நண்பர்களுடன் சேர்ந்து சுடர்மிக்கச் செழிப்பை அடைந்தான்” {என்றார் பீஷ்மர்}.(71)

விஷ்வாமித்திரரும், நாய் இறைச்சியும்! – சாந்திபர்வம் பகுதி – 141-உண்ணத்தகாததை உண்டாவது உயிரைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் விஷ்வாமித்திரருக்கும், நாயின் இறைச்சியை உண்ணும் சண்டாளனுக்கும் இடையில் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உயர்ந்த அறம் சிதைந்து, அனைவராலும் அது மீறப்படும்போதும், மறமே {அதர்மமே} அறமாகும் {தர்மம்} போதும், அறமானது நேர் எதிரான வடிவத்தை ஏற்கும்போதும்,(1) நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் மறைந்து, அறம் தொடர்புடைய உண்மைகள் அனைத்தும் கலங்கி குழப்பமடையும்போதும், மன்னர்களாலும், கள்வர்களாலும் மக்கள் ஒடுக்கப்படும்போதும்,(2) நால்வகை வாழ்வுமுறைகளை {ஆசாரங்களைச்} சார்ந்த மனிதர்களின் கடமைகளில் கலக்கமடைந்து, செயல்கள் அனைத்தும் தங்கள் தகுதியை இழக்கும்போதும், காமம், பேராசை, மடமை ஆகியவற்றின் விளைவால் அனைத்துத் திசைகளிலும் மனிதர்கள் அச்சமடையும்போதும்,(3) அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று நம்பாதபோதும், பரஸ்பர காரியங்களில் அவை ஒன்றையொன்று வஞ்சித்து, வஞ்சனை நிறைந்த வழிமுறைகளால் ஒன்றையொன்று கொல்லும்போதும்,(4)

நாடு முழுவதும் வீடுகள் கொளுத்தப்படும்போதும், பிராமணர்கள் பெரிதும் பீடிக்கப்படும்போதும், மேகங்கள் ஒரு துளி மழையையும் பொழியாத போதும், ஒவ்வொருவரின் கரங்களும் அயலகத்தவனுக்கு எதிராகத் திரும்பும்போதும்,(5) வாழ்வின் தேவைகள் அனைத்தும் கள்வர்களின் ஆதிக்கத்திற்குள் வீழும்போதும், உண்மையில், அத்தகைய துன்ப காலம் நேரும்போதும், கருணையையும், தன் பிள்ளைகளையும் கைவிட விரும்பாத ஒரு பிராமணன் வாழ வேண்டிய வழிமுறைகள் என்ன? உண்மையில் ஒரு பிராமணன் அத்தகைய ஒரு காலத்தில் தன்னை எவ்வாறு பராமரித்துக் கொள்ள வேண்டும்? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக.(6,7) உலகத்தைப் பாவம் பீடிக்கும் அத்தகைய காலத்தில் ஒரு மன்னன் எவ்வாறு வாழ வேண்டும்? ஓ! எதிரிகளை எரிப்பவரே, அறம் பொருள் ஆகிய இரண்டையும் இழக்காமல் மன்னன் எவ்வாறு வாழ வேண்டும்?” என்று கேட்டான்.(8)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, குடிமக்களின் அமைதி, செழிப்பு[1], நிறைவு, காலத்திற்கேற்ற மழை, நோய், மரணம், வேறு அச்சங்கள் ஆகியன அனைத்தும் மன்னையே சார்ந்திருக்கின்றன[2].(9) ஓ! பாரதக் குலத்தின் காளையே, கிருதம், திரேதை, துவாபரம், கலி ஆகிய யுகங்கள் அனைத்தும் மன்னனின் நடத்தையைச் சார்ந்தே நேர்கின்றன என்பதில் எனக்கு ஐயம் ஏதும் இல்லை.(10) உன்னால் விளக்கப்பட்டது போன்ற அவல காலம் நேரும்போது, அறவோர் மதிப்பீடுகளின் {ஞானப் பலத்தின்} துணை கொண்டு தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.(11) இது தொடர்பாகப் பழங்கதையில் வரும் விஷ்வாமித்திரருக்கும், சண்டாளர்கள் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சண்டாளனுக்கும் இடையில் உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(12)திரேதையின் {திரேதா யுகத்தின்} முடிவில், துவாபரத்தின் தொடக்கத்தில் தேவர்களுடைய அணையின் விளைவால் பனிரெண்டு {12} வருடங்களுக்கு நீண்ட ஒரு பயங்கரப் பஞ்சம் நேர்ந்தது.(13) திரேதையின் முடிவும், துவாபரத்தின் தொடக்கமுமாக இருந்த அந்தக் காலத்தில், பல உயிரினங்களுக்குத் தங்கள் உயிரை விட வேண்டிய முதிர்ந்த காலம் தோன்றிய போது,(14) சொர்க்கத்தின் ஆயிரங்கண் தேவன் மழையேதும் பொழியவில்லை. கோளான பிருஹஸ்பதி {குரு கிரகம்} பின்னோக்கி {வக்கிரகதியில்} நகரத் தொடங்கினான், சோமன் தன் சுற்றவட்டப் பாதையைக் கைவிட்டு, தெற்கு நோக்கி பின்வாங்கினான்.(15) ஒரு பனித்துளி கூடக் காணப்படவில்லையெனும் போது, மேகங்கள் திரள்வதைக் குறித்து என்ன சொல்ல முடியும்? ஆறுகள் அனைத்தும் சிறுத்து குறுகிய சிற்றோடைகளாகின.(16) குளங்கள், ஆறுகள், கிணறுகள், மலை அருவிகள் ஆகியன மறைந்து, தேவர்கள் செய்த காரிய வரிசையின் {குற்றத்தின்} விளைவால் தங்கள் அழகை இழந்தன.(17) நீர் வற்றியதால், நீர் விநியோகத்திற்காக ஈகையின் மூலம் நிறுவப்பட்ட இடங்கள் {தண்ணீர்ச்சாலைகள்} தனித்துவிடப்பட்டன[3].பிராமணர்கள், வேள்விகள் செய்வதையும், வேதங்கள் ஓதுவதையும் தவிர்த்தனர். அவர்கள் வசட்களையும் {வஷட்காரத்தையும்}, மற்ற தணிவுச் சடங்குகளையும் அதற்கும் மேலும் செய்யவில்லை.(18) உழவும், ஆநிரை வளர்த்தலும் கைவிடப்பட்டன. சந்தைகளும், கடைகளும் கைவிடப்பட்டன. வேள்வி விலங்குகளைக் கட்டும் கம்பங்களும் மறைந்தன. மக்கள் அதற்கு மேலும் வேள்விக்கான பல்வேறு வகைப் பொருட்களைத் திரட்டவில்லை. விழாக்கள் மற்றும் கேளிக்கைகள் அனைத்தும் அழிந்தன.(19) எங்கும் எலும்புக் குவியல்கள் தென்பட்டன, அனைத்து இடங்களிலும் உயிரினங்களின் கதறல்களும், அலறல்களும் எதிரொலித்தன. பூமியின் நகரங்கள் மற்றும் சிறுநகரங்கள் வசிப்பவர்கள் இல்லாமல் வெறுமையடைந்தன. கிராமங்களும், குக்கிராமங்களும் எரிக்கப்பட்டன.(20) கள்வர்களால் பீடிக்கப்பட்டுச் சிலரும், ஆயுதங்கள் மூலம் சிலரும், தீய மன்னர்களால் சிலரும், ஒருவருக்கொருவர் அச்சம் கொண்ட சிலரும் தப்பி ஓடத் தொடங்கினர்.(21) கோவில்களும், வழிபாட்டுத்தலங்களும் தனித்துவிடப்பட்டன.

முதிர்ந்தவர்கள் பலவந்தமாகத் தங்கள் வீட்டைவிட்டு விரட்டப்பட்டனர். பசுக்கள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், எருமைகள் ஆகியன (உணவுக்காகப்) போரிட்டு, பெரும் எண்ணிக்கையில் அழிவையடைந்தன. அனைத்துப் பக்கங்களிலும் பிராமணர்கள் இறக்கத் தொடங்கினர்.(22) பாதுகாப்பே இல்லாமல் போனது. செடிகொடிகள் காய்ந்தன. பூமாதேவி தன் பொலிவனைத்தையும் இழந்து, சுடலையில் நிற்கும் மரங்களைப் போல மிகப் பரிதாபமாக இருந்தாள்.(23) இங்கும் அறமில்லாத அந்தப் பயங்கரக் காலத்தில், ஓ! யுதிஷ்டிரா, பசியால் தங்கள் உணர்வுகளை இழந்த மனிதர்கள், ஒருவரையொருவர் உண்ணத் தொடங்கினர்.(24) முனிவர்களே கூடத் தங்கள் நோன்புகளைக் கைவிட்டு, தங்கள் நெருப்புகளையும், தேவர்களையும் கைவிட்டு, காடுகளில் உள்ள தங்கள் ஆசிரமங்களையும் கைவிட்டு, (உணவைத் தேடி) அங்குமிங்கும் திரியத் தொடங்கினர்.(25)

பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், புனிதமானவருமான பெரும் முனிவர் விஷ்வாமித்திரர், பசியால் பீடிக்கப்பட்டு, வீடற்றவராகத் திரிந்து கொண்டிருந்தார்.(26) அந்த முனிவர் {விஷ்வாமித்திரர்}, தமது மனைவி மற்றும் மகனை வேறொரு உறைவிடத்தில் விட்டுவிட்டு, நெருப்பற்றவராக,[4] வீடற்றவராக, தூய மற்றும் தூய்மையற்ற உணவில் அலட்சியம் கொண்டவராக இருந்தார்.(27) அவர் ஒருநாள், உயிரினங்களைக் கொல்வதற்கு அடிமையான கொடூர வேட்டைக்காரர்கள் வசிப்பதும், காட்டுக்கு மத்தியில் இருப்பதுமான ஒரு குக்கிராமத்தை அடைந்தார்.(28) அந்தச் சிறு குக்கிராமத்தில் உடைந்த கலன்கள் மற்றும் குடங்கள் நிறைந்திருந்தன. நாய்த்தோல்கள் அங்குமிங்கும் பரவிக் கிடந்தன. பன்றிகள், கழுதைகளை ஆகியவற்றின் எலும்புகளும், மண்டையோடுகளும் குவியல்களாகத் திரட்டப்பட்டுப் பல்வேறு இடங்களில் கிடந்தன.(29) சடலங்களில் இருந்து உருவப்பட்ட துணிகள் அங்கேயும், இங்கேயும் கிடந்தன, பயன்படுத்தப்பட்ட மலர்களாலான மாலைகளால் குடிசைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன[5]. பாம்புகள் உரித்த சட்டைகளைக் கொண்டு ஒப்பனைகள் செய்யப்பட்ட வீடுகளும் அங்கே இருந்தன.(30)பேரொலியுடன் சேவல்கள் மற்றும் கோழிகள் கரைதலும், கழுதைகள் கரடுமுரடாகக் கத்துவதும் அந்த இடத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. ஊர்வாசிகள் இங்கேயும், அங்கேயும் சச்சரவு செய்யும் கடும் குரல்களும் அங்கே கேட்கப்பட்டன.(31) ஆந்தைகள் மற்றும் பிற பறவைகளைக் கொண்ட தேவர்களின் கோவில்களும் இங்கேயும் அங்கேயும் இருந்தன. இரும்பு மணிகளால் எதிரொலித்துக் கொண்டிருந்த அந்தக் குக்கிராமத்தில், அனைத்துப் பக்கங்களிலும் நாய்க்கூட்டங்கள் நின்றுகொண்டிருந்தன, அல்லது படுத்துக் கிடந்தன.(32) பெரும் முனிவரான விஷ்வாமித்திரர், பசிக்கொடுமையால் உந்தப்பட்டும், உணவைத் தேடுவதில் ஈடுபட்டு, அந்தக் குக்கிராமத்தில் நுழைந்து, உண்பதற்கு எதையாவது கண்டுபிடிக்கச் சிறந்த முயற்சியைச் செய்தார்.(33) குசிகரின் மகன் {விஸ்வாமித்திரர்} தொடர்ந்து பிச்சையெடுத்தாலும், இறைச்சி, அல்லது சோறு, அல்லது கனி, அல்லது கிழங்கு, அல்லது எந்தப் பிற வகை உணவையும் அவர் அடையத் தவறினார்.(34)

அப்போது அவர் {விஷ்மாமித்திரர்}, “ஐயோ, எனக்குப் பெரும் துன்பம் வந்ததே” என்று வருந்தி, பலவீனத்தால் அந்தச் சண்டாளக் குக்கிராமத்திலேயே கீழே விழுந்தார்.(35) மேலும் அந்தத் தவசி, “நான் இப்போது எதைச் செய்வது சிறந்தது?” என்று சொல்லி தமனக்குள்ளேயே நினைக்கத் தொடங்கினார்.(35) உண்மையில், ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, உடனடி மரணத்தைத் தவிக்கும் வழிமுறைகளே அவரது எண்ணத்தை ஆட்கொண்டன.(36) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு சண்டாளனின் குடிசையில், ஆயுதத்தால் அண்மையில் கொல்லப்பட்ட ஒரு நாயின் பெரிய இறைச்சித் துண்டு தரையில் கிடப்பதைக் கண்டார்[6].(37) அந்தத் தவசி, சிந்தித்து, அந்த இறைச்சியைத் திருடுவது என்ற தீர்மானத்தை அடைந்தார். அவர் தமக்குள்ளேயே, “இப்போது உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக எந்த வழிமுறையும் எனக்கில்லை.(38) மேன்மையானவர்களுக்குக் கூடத் துன்பகாலத்தில் திருட்டு அனுமதிக்கப்பட்டதே. அஃது அவனது மகிமையைக் குறைக்காது. ஒரு பிராமணன்கூடத் தன் உயிரைக் காத்துக் கொள்ள அதைச் செய்யலாம். இஃது உறுதியானதாகும்.(39) ஒருவன் முதலிடத்தில் ஓர் இழிந்தவனிடம் திருட வேண்டும். அதில் தவறினால் தனக்குச் சமமானவனிடம் திருட வேண்டும். இணையானவனிடமும் தவறினால், மேன்மையான அறவோனிடம் இருந்தும் ஒருவன் திருடலாம்.(40) என் உயிர் போகப்போகும் இத்தருணத்தில் நான் அந்த இறைச்சியைத் திருடப் போகிறேன். இத்தகைய திருட்டில் நான் எந்தத் தகுதியிழப்பையும் காணவில்லை. எனவே, நாயின் அடிமுதுகுப்பகுதியான[7] இந்த இறைச்சியை நான் திருடப் போகிறேன்” என்று நினைத்தார்.(41)

பெரும் தவசியான விஷ்வாமித்திரர், இந்தத் தீர்மானத்தை அடைந்து, சண்டாளன் இருந்த இடத்தில் உறங்குவதற்காகத் தன்னைக் கிடத்திக் கொண்டார்.(42) சிறிது நேரம் கழித்து, மொத்த சண்டாளக் குக்கிராமமும் உறங்கிய பிறகு, நள்ளிரவாவதைக் கண்டு, புனிதரான விஷ்வாமித்திரர், அமைதியாக எழுந்து அந்தக் குடிசைக்குள் நுழைந்தார்.(43) அதற்கு {அந்தக் குடிசைக்கு} உரிமையாளனான அந்தச் சண்டாளன், பீளை நிறைந்த கண்களுடன் உறங்குபவனைப் போல அங்கே கிடந்தான். விரும்பத்தகாத முகத்தோற்றம் கொண்ட அவன், உடைந்த மற்றும் ஒவ்வாத குரலில் இந்தக் கடும் வார்த்தைகளைச் சொன்னான்.(44)

அந்தச் சண்டாளன், “தாழ் திறப்பவன் எவன்? மொத்தச் சண்டாளக் குக்கிராமமும் உறங்கிக் கொண்டிருக்கிறது. எனினும் நான் விழிப்புடன் உறங்காதிருக்கிறேன். நீ யாராக இருப்பினும் கொல்லப்படுவாய்” என்றான். இந்த வார்த்தைகளே அந்தத் தவசியின் காதுகளை வரவேற்றன.(45)

அச்சத்தால் நிரம்பியவரும், வெட்கத்தால் முகம் சிவந்தவரும், திருட முயற்சித்த செயலின் விளைவால் கவலையில் இதயம் கலங்கியவருமான அவர்,(46) “ஓ! நீண்ட வாழ்வை அருளாகக் கொண்டவனே, நான் விஷ்வாமித்திரன். நான் பசிக் கொடுமையால் இங்கே வந்தேன். ஓ! நல்ல புத்தி கொண்டவனே, உன் பார்வை தெளிவாக இருந்தால் என்னைக் கொல்லாதிருப்பாயாக” என்று பதிலுரைத்தார்.(47)

தூய ஆன்மா கொண்ட அந்தப் பெரும் முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சண்டாளன், அச்சத்தால் தன் படுக்கையில் இருந்து எழுந்து அந்தத் தவசியை அணுகினான். மரியாதையால் தன் கரங்களைக் குவித்து, கண்ணீரால் குளித்த கண்களுடன் அவன் குசிகரின் மகனிடம் {விஷ்வாமித்திரரிடம்}, “ஓ! பிராமணரே, இந்த இரவில் நீர் இங்கே என்ன தேடுகிறீர்?” என்று கேட்டான்.(49)

அந்தச் சண்டாளனை[8] இணங்கச் செய்யும் வகையில் விஷ்வாமித்திரர், “நான் மிகவும் பசித்திருக்கிறேன், பசிக்கொடுமையால் இறக்கப் போகிறேன். நாயின் அடிமுதுகுப்பகுதியான[9] அந்த இறைச்சியை அபகரிக்க விரும்பினேன்.(50) பசித்தவனான நான் பாவியானேன். உணவை வேண்டுபவனுக்கு வெட்கம் ஏதும் கிடையாது. பசியே என்னை இந்தத் தீச்செயலைச் செய்யத் தூண்டியது. அதன் காரணமாகவே, நாயின் அடிமுதுகுப்பகுதியான அந்த இறைச்சியை {நாய்வால் இறைச்சியை} அபகரிக்க விரும்பினேன்.(51) எனது உயிர்மூச்சு அடங்குகிறது. பசியானது என் வேத கல்வியை அழித்தது. பலவீனனான நான், என் உணர்வுகளை இழந்துவிட்டேன். உணவின் தூய்மை, அல்லது தூய்மையின்மை குறித்து நான் கவலைப்படவில்லை.(52) உங்கள் குக்கிராமத்தில் வீடுவீடாகத் தெரிந்தும் எந்தப் பிச்சையும் அடையத்தவறிய நான், நாயின் அடிமுதுகுப்பகுதியான இந்த இறைச்சியை அபகரிக்கும் இந்தப் பாவச் செயலில் என் இதயத்தை நிலைநிறுத்தினேன்.(53) அக்னி, தேவர்களின் வாயாவான். அவன் அவர்களுடைய புரோஹிதனுமாவான். எனவே, தூய்மையான, சுத்தமான பொருட்களைத் தவிர வேறு எதையும் அவன் எடுத்துக் கொள்ளக்கூடாது. இருப்பினும் சில வேளைகளில் அந்தப் பெருந்தேவன் அனைத்தையும் உட்கொள்பவன் ஆகிறான். அந்த வகையில் நான் இப்போது அவனைப் போலவே இருக்கிறேன் என்பதை அறிவாயாக” என்றார்.(54)

அந்தப் பெரும் முனிவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சண்டாளன் {மதங்கன்}, “நான் சொல்வதைக் கேட்பீராக. நான் சொல்லப்போகும் உண்மையின் வார்த்தைகளைக் கேட்டு, உமது அறத்தகுதி அழியாத வகையில் செயல்படுவீராக.(55) ஓ! மறுபிறப்பாள முனிவரே, உமது கடமை குறித்து நாம் உமக்குச் சொல்வதைக் கேட்பீராக. ஒரு நாயானது, ஒரு நரியைவிடத் தூய்மையற்றதாகும் என ஞானியர் சொல்கின்றனர்[10]. மேலும் ஒரு நாயின் அடிமுதுகு {வால்} பகுதியானது, அதனுடைய உடலின் பிற பகுதிகளைவிட மிகவும் இழிந்தது.(56) ஓ! பெரும் முனிவரே, ஒரு சண்டாளனுக்குச் சொந்தமானதைத் திருடுவது, அதையும் தவிர, தூய்மையற்ற உணவைத் திருடுவது போன்ற அறத்திற்கு ஒவ்வாத இந்தச் செயல், ஞானத்துடன் உம்மால் தீர்மானிக்கப்படவில்லை.(57) நீர் அருளப்பட்டிருப்பீராக, உமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேறு வழிமுறைகளைக் காண்பீராக. ஓ! பெரும்தவசியே, நாய் இறைச்சியில் கொண்ட கடும் விருப்பத்தின் விளைவால் உமது தவங்கள் {தவத்தகுதிகளான புண்ணியங்கள்} அழிவடைய வேண்டாம்.(58) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை அறிந்தவரான நீர், கடமை குழப்பத்தால் விளைந்த செயலைச் செய்யக்கூடாது.[11] அறம் நோற்போர் அனைவரிலும் முதன்மையான நீர் அறத்தைக் கைவிடாதீர்” என்றான் {மதங்கன் என்ற சண்டாளன்}.(59)

ஓ! மன்னா, இவ்வாறு சொல்லப்பட்டவரும், பெரும் முனிவருமான விஷ்வாமித்திரர் ஓ! பாரதக் குலத்தின் காளையே, பசியால் பீடிக்கப்பட்டவராக மீண்டும்,(60) “நீண்டகாலமாக நான் உணவேதும் உண்ணவில்லை. என் உயிரைத் தக்கவைத்துக்கொள்ளும் வேறு எந்த வழிமுறைகளையும் நான் காணவில்லை.(61) ஒருவன் இறந்து கொண்டிருக்கும்போது, அவனது சக்தியின் எந்த வழிமுறைகளையும், அவற்றின் பண்புகளைக் குறித்து மதிப்பிடாமல் பயன்படுத்தித் தன் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும். தகுந்த நிலையை அடைந்த பிறகு அவன் தகுதி {புண்ணியம்} அடைய முயற்சிக்க வேண்டும்.(62) க்ஷத்திரியர்கள் இந்திரனின் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பிராமணர்களின் கடமையானது, அக்னியைப் போல நடந்து கொள்வதாகும். வேதங்களே நெருப்பாகும். அவையே பலம் கொண்டவையாகும். எனவே, என் பசியைத் தணித்துக் கொள்ள இந்தத் தூய்மையற்ற {நாய் கறி} உணவை நான் உண்ணப் போகிறேன்.(63) எதைக் கொண்டு உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமோ, அதைத் தயக்கமில்லாமல் செய்ய வேண்டும். வாழ்வது இறப்பை விடச் சிறப்பானது. வாழ்ந்தால் ஒருவன் அறம் ஈட்டலாம்.(64) என் உயிரைப் பாதுகாக்க வேண்டும் நான், என் புத்தி முழுவதையும் பயன்படுத்திய பிறகே, இந்தத் தூய்மையற்ற உணவை உண்ண விரும்புகிறேன். எனக்கு உன் அனுமதியைக் கொடுப்பாயாக.(65) உயிர்வாழ்வைத் தொடர்ந்தால், அறமீட்ட முயலும் நான், ஆகாயத்து ஒளிக்கோள்கள் அடர்த்தியான இருளையும் அழிப்பதைப் போல, பேரிடரின் விளைவாக நேரும் என் தற்போதை நடத்தையைத் தவங்களாலும், அறிவாலும் அழிப்பேன்” என்றார்.(66)

சண்டாளன் {விஷ்வாமித்திரரிடம்}, “(உம்மைப் போன்ற ஒருவர்) இந்த உணவை உண்பதனால் நீண்ட வாழ்வை அடைய முடியாது. அதே போல (உம்மைப் போன்ற ஒருவர், இத்தகு உணவிலிருந்து) பலத்தையும் அடையமுடியாது, அமுதம் கொடுக்கும் நிறைவையும் அடைய முடியாது. நீர் வேறு வகை உணவைப் பிச்சையெடுக்க முனைவீராக. நாயின் இறைச்சியை உண்பதில் உமது இதயம் செல்லாதிருக்கட்டும். மறுபிறப்பாள வகையினருக்கு நாய் தூய்மையற்ற உணவாகும்” என்றான்.(67)

விஷ்வாமித்திரர், “இது போன்ற பஞ்சகாலத்தில் எந்த வகை இறைச்சியும் எளிதாகக் கிடைப்பதில்லை. ஓ! சண்டாளா, மேலும் (உணவை விலை கொடுத்து வாங்க) என்னிடம் செல்வம் ஏதும் இல்லை. நானோ மிகவும் பசித்திருக்கிறேன். என்னால் இனியும் தாங்கிக் கொள்ள முடியாது. நான் முற்றிலும் நம்பிக்கையிழந்திருக்கிறேன். ஆறு வகைச் சுவைகள் அனைத்தும் இந்த நாயின் இறைச்சித்துண்டில் இருப்பதாக நான் நினைக்கிறேன்[12]” என்றார்.(68)சண்டாளன், “ஐந்து நகம் கொண்ட விலங்குகளில் ஐந்து வகை மட்டுமே[13] பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களுக்குத் தூய்மையான உணவாகச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளது. (உமக்கு) தூய்மையற்றதில் உமது இதயத்தை நிலைக்கச் செய்யாதீர்” என்றான்.(69)விஷ்வாமித்திரர், “பெரும் முனிவரான அகஸ்தியர், பசித்திருந்தபோது, வாதாபி என்ற பெயர் கொண்ட அசுரனை உண்டார். நான் துன்பத்தில் வீழ்ந்திருக்கிறேன். நான் பசித்திருக்கிறேன். எனவே, நாயின் அடிமுதுகான இந்த இறைச்சியை உண்ணப்போகிறேன்” என்றார்.(70)

சண்டாளன், “வேறு பிச்சைகளை நாடுவீராக. இத்தகைய காரியம் உமக்குத் தகாது. மேலும் இது போன்ற செயல் உம்மால் ஒருபோதும் செய்யப்படக்கூடாது. எனினும், {இதற்குப் பிறகும்} உமக்கு விருப்பமென்றால் இந்த நாய் இறைச்சியை நீர் எடுத்துக் கொள்ளலாம்” என்றான்.(71)

விஷ்வாமித்திரர், “நல்லோர் என்று அழைக்கப்படுபவரே, கடமை குறித்த காரியங்களில் உரிமை கொண்டவர்களாவர். அவர்களின் எடுத்துக்காட்டையே நான் பின்பற்றுகிறேன். நான் இப்போது இந்த நாய் அடிமுதுகை {நாய் வாலை} வேறு எந்த உயர்ந்த தூய்மையான உணவைவிடச் சிறந்ததாகக் கருதுகிறேன்” என்றார்.(72)

சண்டாளன், “நீதியற்றவனின் செயல்பாடு நித்திய நடைமுறையாக ஒருபோதும் கருதப்படாது. முறையற்ற செயலானது ஒருபோதும் முறையாகாது. மாயையால் பாவம் நிறைந்த ஒரு செயலைச் செய்யாதீர்” என்றான்.(73)

விஷ்வாமித்திரர், “முனிவனாக இருக்கும் மனிதன் பாவம் நிறைந்த செயலைச் செய்ய முடியாது. தற்போதைய வழக்கில், மானும், நாயும் (இரண்டும் விலங்குகள் என்பதால்) ஒன்றெனக் கருதுகிறேன். எனவே, நான் இந்த நாயின் அடிமுதுகை உண்ணப் போகிறேன்” என்றார்.(74)

சண்டாளன், “பிராமணர்கள் கேட்டுக் கொண்டதாலேயே, முனிவர் (அகஸ்தியர்) அந்தச் செயலைச் செய்தார். அந்தச் சூழ்நிலையில் அது பாவமாகாது. எதில் பாவமில்லையோ அதுவே அறம். தவிரவும், மூவகையினரின் ஆசான்களான பிராமணர்கள் அனைத்து வகையில் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றான்.(75)

விஷ்வாமித்திரர், “நானொரு பிராமணன். இந்த என் உடல் எனக்கு நண்பனே. இஃது எனக்கு மிகவும் அன்புக்குரியதும், உயர்ந்த மதிப்புக்குரியதுமாகும். உடலைத் தாங்கிக் கொள்ளும் விருப்பத்தாலேயே நான் இந்த நாயின் அடிமுதுகை எடுத்துக் கொள்ளப் போகிறேன். இனியும் உன்னிலும், உன் கடும் தோழர்களிடமும் எந்த அச்சமும் கொள்ளாத வகையில் என் ஆவல் அதிகரித்துவிட்டது” என்றார்[14].(76)

சண்டாளன் {விஷ்வாமித்திரரிடம்}, “மனிதர்கள் தங்கள் உயிரையும் கொடுப்பார்கள், ஆனால் தூய்மையற்ற உணவில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்ய மாட்டார்கள். அவர்கள் பசியை வென்றே இவ்வுலகில் தங்கள் விருப்பங்கள் அனைத்தையும் அடைகிறார்கள். நீரும் பசியை வென்று அந்த வெகுமதிகளை அடைவீராக” என்றான்.(77)

விஷ்வாமித்திரர், “என்னைப் பொறுத்தவரையில், நான் கடும் நோன்புகளை நோற்பவன். என் இதயம் அமைதியிலேயே நிலைத்திருக்கிறது. அறத்தகுதிகள் அனைத்தின் வேரையும் பாதுகாப்பதற்காக, நான் தூய்மையற்ற உணவை உண்ணப் போகிறேன்.(78) தூய்மையான ஆன்மா கொண்ட மனிதன், இந்தச் செயலை நீதியென்றே கருதுவான். எனினும், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனுக்கு, நாயின் இறைச்சியை உண்பது பாவமாகத் தோன்றும். நான் அடைந்திருக்கும் இந்தத் தீர்மானம் தவறாகவே இருப்பினும், (நான் இந்த நாயிறைச்சியை உண்டாலும்) அந்தச் செயலால் நான் உன்னைப் போன்ற ஒருவனாக {சண்டாளனாக} ஆக மாட்டேன்” என்றார்.(79)

சண்டாளன், “என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாக முயற்சி செய்து, உம்மை இந்தப் பாவத்தில் இருந்து தடுப்பதே என் முடிவான தீர்மானமாகும். ஒரு பிராமணன் தீச்செயலைச் செய்வதால் உயர்ந்த நிலையில் இருந்து வீழ்கிறான். இதற்காகவே நாம் உம்மை நிந்திக்கிறேன்” என்றான்.(80)

விஷ்வாமித்திரர், “தவளைகள் கத்துவதைக் கருத்தில் கொள்ளாமல் பசுக்கள் {நீரைக்} குடிப்பதைத் தொடரும். எது நீதி (எது {நீதி} இல்லை) என்று உன்னால் உரிமை கேட்க முடியாது. தற்புகழ்ச்சி கொண்டவனாக இராதே” என்றார்.(81)

சண்டாளன், “நான் உமது நண்பனாகிவிட்டேணேன். இதன் காரணமாகவே நான் உமக்கு அறவுரை கூறுகிறேன். எது நன்மையோ, அதைச் செய்வீராக. {ஆசை} மயக்கத்தினால் பாவம் நிறைந்த செயலைச் செய்யாதீர்” என்றான்.(82)

விஷ்வாமித்திரர், “நீ என் மகிழ்ச்சியை விரும்பும் நண்பனாக இருந்தால், என்னை இந்தத் துன்பத்தில் இருந்து எழுப்புவாயாக. இந்த நாயின் அடிமுதுகை உண்டு, (பாவத்தால் அல்லாமல்) அறத்தின் உதவியால் காக்கப்பட்டதாகவே நான் கருதுவேன்” என்றார்(83).

சண்டாளன், “இந்த இறைச்சித் துண்டை உமக்குக் கொடுக்க நான் துணியேன், அதேபோல, நீர் என் உணவை திருடிக் கொள்ள அனுமதித்துத் துன்புறவும் மாட்டேன். நான் இந்த இறைச்சியை உம்மிடம் கொடுத்தாலும், ஒரு பிராமணராக இருந்து நீர் என்னிடம் இருந்து இதைப் பறித்தாலும், மறுமையில் நாம் இருவரும் துன்பலோகங்களிலேயே மூழ்குவோம்” என்றான்.(84)

விஷ்வாமித்திரர், “இன்று இந்தப் பாவச் செயலைச் செய்வதால், நான் மிகப் புனிதமான என் உயிரை நிச்சயம் காத்துக் கொள்வேன். என் உயிரைக் காத்துக் கொண்ட பிறகு, அறம்பயின்று என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்வேன். எனக்குச் சொல், (உணவில்லாமல் இறப்பது, அல்லது தூய்மையற்ற இந்த உணவை உண்டு என் உயிரைக் காத்துக் கொள்வது ஆகிய) இந்த இரண்டில் எது உகந்தது?” என்று கேட்டார்.(85)

சண்டாளன், “ஒருவன் தன் வகை, அல்லது தன் குலத்திற்கான கடமைகளை வெளிப்படுத்துவதில், (தனக்கு உரிய, அல்லது உரிமையில்லாத {கடமைகளைத் தீர்மானிப்பதில்}) அவனது சுயமே {ஆன்மாவே} சிறந்த நீதிபதியாகும். இந்த இரு செயல்களில் எது பாவம் நிறைந்தது என்பதை நீரே அறிவீர். எவன் நாயிறைச்சியைத் தூய்மையான உணவாகக் கருதுவானோ, அவன் உணவுக் காரியங்களில் எதையும் தவிர்க்க மாட்டான் என்று நான் நினைக்கிறேன்” என்றான்.(86)

விஷ்வாமித்திரர், “(தற்போது தூய்மையற்றதாக இருப்பதை) ஏற்பதிலும், (தூய்மையற்ற உணவை) உண்பதிலும் பாவம் இருக்கிறது. எனினும், ஒருவனுடைய உயிர் ஆபத்தில் இருக்கும்போது, இத்தகைய ஒன்றை ஏற்பதிலோ, இத்தகைய உணவை உண்பதிலோ எந்தப் பாவமும் இல்லை. தவிரவும், தூய்மையற்ற உணவை உண்பதானது, கொலை மற்றும் வஞ்சனையின் துணையில்லாமல் செய்யப்படும்போதும், மென்மையான கண்டனத்தையே அந்தச் செயல் தூண்டும் எனும்போதும், அது பெரிய விளைவெதையும் ஏற்படுத்தாது” என்றார்.(87)

சண்டாளன், “தூய்மையற்ற உணவை உண்பதற்கு இதுவே உமது காரணமாக இருக்குமானால், நீர் வேதங்களையும், ஆரிய[15] அறநெறியையும் மதிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, நீர் செய்யப்போகும் செயலில் இருந்து பாடங்கற்கப் போகும் நான், தூய்மையான மற்றும் தூய்மையற்ற உணவில் உள்ள வேறுபாடுகளை அலட்சியம் செய்வதில் எந்தப் பாவமும் இல்லை என்றே கருதுவேன்” என்றான்.(88)

விஷ்வாமித்திரர், “(தவிர்க்கப்பட்ட உணவை) உண்பதால் ஒரு மனிதன் பெரும்பாவத்தை அடைந்தான் என்று எங்கும் காணப்படுவதில்லை. மதுவைக் குடிப்பதால் ஒருவன் வீழ்வான் என்பது (மனிதர்களைக் குடிக்காமல் தடுப்பதற்கான) ஒரு வார்த்தை ஆணை மட்டுமே. (அதே வகைச் சார்ந்த) தவிர்க்கப்பட வேண்டிய பிற செய்பாடுகள், அவை எவையாக இருப்பினும், உண்மையில் ஒவ்வொரு பாவத்தாலும், ஒருவனுடைய தகுதியை {புண்ணியத்தை} அழிக்க முடியாது” என்றார்.(89)

சண்டாளன், “(இதுபோன்ற) தகாத இடத்தில் இருந்து, (என்னைப் போன்ற) தூய்மையற்ற அற்பனிடமிருந்து, (என்னைப் போன்ற) தீய வாழ்வு வாழும் ஒருவனிடமிருந்து நாயிறைச்சியை அபகரிக்கும் கல்விமான், நல்லோர் என்றழைக்கப்படுவோரின் நடத்தைக்கு எதிரான செயலையே செய்கிறான். மேலும், இதன் விளைவாகவும், இத்தகை ஒரு செயலின் தொடர்பாலும், அவன் நிச்சயம் வருந்த வேண்டிய நிலை உண்டாகும்” என்றான்”.(90)

பீஷ்மர் தொடர்ந்தார், “அந்தச் சண்டாளன், குசிகரின் மகனிடம் {விஷ்வாமித்திரரிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லி விட்டு அமைதியடைந்தான். அப்போது, பண்படுத்தப்பட்ட புத்தியைக் கொண்ட விஷ்வாமித்திரர், நாயின் முதுகான அந்த இறைச்சியை எடுத்துக் கொண்டார்.(91) அந்தப் பெரும் தவசி {விஷ்வாமித்திரர்}, தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நாயிறைச்சியை எடுத்துக் கொண்டு, காட்டுக்குச் சென்று தன் மனைவியுடன் உண்ண விரும்பினார்.(92) உரிய சடங்குகளுடன் தேவர்களை முதலில் நிறைவு செய்த பிறகு, தன் விருப்பப்படி நாயின் அடிமுதுகிலான அந்த இறைச்சியைத் தான் உண்ண வேண்டும் என்று தீர்மானித்தார்.(93) பிரம்ம சடங்குகளின்படி நெருப்பை மூட்டி, ஐந்திராக்நேயம் என்ற பெயரிலான ஏற்புடைய சடங்குளைச் செய்து, சரு வேள்வியில் அந்த இறைச்சியைத் தானே சமைக்கத் தொடங்கினார்[16].(94) ஓ! பாரதா, பிறகு அவர், தேவர்கள், பித்ருக்கள் ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில் சாத்திரங்களில் சொல்லப்பட்ட படி அந்தச் சருவை தேவையான அளவில் பல பாகங்களாகச் செய்து, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களை (தங்கள் பங்குகளை ஏற்பதற்காக) அழைக்கும் வகையில் சடங்குகளைச் செய்யத் தொடங்கினார்.(95)அதேவேளையில், தேவர்களின் தலைவன் மழையைப் பொழியத் தொடங்கினான். அந்த மழையால், அனைத்து உயிரினங்களையும் மீட்ட அவன், மீண்டும் செடிகொடிகளைத் தழைத்து வளரும்படி செய்தான்.(96) எனினும், தேவர்களையும், பித்ருக்களையும் கௌரவித்துச் சடங்குகளைச் செய்த விஷ்வாமித்திரர், அவர்களை உரிய முறையில் நிறைவு செய்த பிறகு, அந்த இறைச்சியைத் தானே உண்டார்.(97) பிறகு தன் பாவங்கள் அனைத்தையும் தன் தவங்களால் எரித்த அந்தத் தவசி, நீண்ட காலத்திற்குப் பிறகு, மிக ஆச்சரியமான (தவ) வெற்றியை அடைந்தார்.(98) உயிரைத் தாங்கிக் கொள்வதைக் கருத்தில் கொள்ளும்போது, உயர் ஆன்மா கொண்டவனும், கல்விமானும், துன்பத்தில் வீழும்போது உற்சாகமிழந்த தன்னை மீட்டுக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்தவனுமான ஒருவன், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிமுறைகளைக் கொண்டும் இவ்வாறான முடிவையே எட்ட வேண்டும்.(99) இந்தப் புத்தியை அடைந்த ஒருவன் எப்போதும் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உயிரோடு இருக்கும் ஒருவனால் அறத்தகுதியை வென்று, மகிழ்ச்சியையும், செழிப்பையும் அடை முடியும்.(100) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இந்தக் காரணத்தினால், தூய்மையான ஆன்மா கொண்டவனும் கல்விமானுமான ஒருவன், அறம் மற்றும் அதன் எதிர் நிலை {மறம்} ஆகியவற்றைப் பகுத்தறியும் தன் நுண்ணறிவைச் சார்ந்த இவ்வுலகில் வாழவும் செயல்படவும் வேண்டும்” {என்றார் பீஷ்மர்}.(101)

ஞானத்திரட்டு! – சாந்திபர்வம் பகுதி – 142-யுதிஷ்டிரனின் மறுப்பு; பல்வேறு மூலங்களில் இருந்து அடையப்பட வேண்டிய அறிவுத்திரட்டு; சாத்திரங்களைக் குறை சொல்லும் கல்வி வணிகர்களின் போக்கு; க்ஷத்திரியனின் கடமை; அமைச்சர்கள் நியமனம்; கடுமையும், மென்மையும் கையாளப்பட வேண்டிய தருணங்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எது பயங்கரமானதோ, எது பொய்மை போல் ஒருபோதும் கருத்தில் கொள்ளப்படக்கூடாதோ, அதுவே (கடமையாக) குறிப்பிடப்பட்டால், நான் தவிர்க்க வேண்டிய செயல்தான் என்ன? பிறகு, கள்வர்களும் ஏன் மதிக்கப்படக்கூடாது?(1) நான் மயக்கமடைகிறேன். என் இதயம் வலிக்கிறது[1] அறநெறியில் என்னைக் கட்டும் முடிச்சுகள் அனைத்தும் தளர்கின்றன. என் மனத்தை அமைதிப்படுத்தவும், உம்மால் பரிந்துரைக்கப்படும் வழியில் செயல்படத் துணியவும் என்னால் இயலவில்லை” என்றான்.(2)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கடமை குறித்து வேதங்களில் கேட்டு கற்றவற்றில் இருந்து மட்டுமே நான் உனக்குப் போதிக்கவில்லை. நான் எதைச் சொன்னேனோ, அதை ஞானம் மற்றும் அனுபவத்தின் விளைவால் சொல்லியிருக்கிறேன். இது கல்விமான்களால் திரட்டப்பட்ட தேனாகும் {ஞானத்திரட்டாகும்}.(3) மன்னர்கள் பல்வேறு மூலங்களில் இருந்து ஞானத்தைத் திரட்ட வேண்டும். ஒரு தரப்பிலான அறநெறியின் துணை கொண்டு ஒருவனால் உலகத்தில் நடைபோட முடியாது.(4) புத்தியில் இருந்தே கடமை எழ வேண்டும்; ஓ! குருக்களின் மகனே, நல்லோரின் நடைமுறைகளே எப்போதும் உறுதி செய்யப்பட வேண்டும். என் வார்த்தைகளைக் கவனிப்பாயாக.(5) மேன்மையான புத்தி கொண்ட மன்னர்களால் மட்டுமே, வெற்றியை எதிர்பார்த்து ஆட்சி செய்ய முடியும். புத்தியின் துணையுடனும், பல்வேறு மூலங்களில் இருந்து திரட்டப்பட்ட அறிவால் வழிநடத்தப்பட்டும் ஒரு மன்னன் அறநெறியை நோற்க வேண்டும்.(6)

ஒரு தரப்பைச் சார்ந்த அறநெறிகளில் பெறப்பட்ட விதிகளைக் கொண்டு ஒருவன் மன்னனுக்குரிய கடமைகளை ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது. பலவீனமனம் கொண்ட மன்னன், தன் முன்னுள்ள எடுத்துக்காட்டுகளில் இருந்து எந்த ஞானத்தையும் பெறாததன் விளைவால், (தன் கடமைகளை வெளிப்படுத்துவதில்) ஒருபோதும் அவனால் ஞானத்தை வெளிப்படுத்த முடியாது.(7) அறம் {தர்மம்} சில வேளைகளில் மறத்தின் {அதர்மத்தின்} வடிவை ஏற்கிறது. மறமும் சில வேளைகளில் அறத்தின் வடிவை ஏற்கிறது. இஃதை அறியாதவன், அவ்வகையில் எழும் உண்மையான நிகழ்வைச் சந்திக்கும்போது குழப்பமடைவான்.(8) இந்த அறிவை அடைந்த ஒரு ஞானமுள்ள மன்னன், சந்தர்ப்பம் நேரும்போது, தன் மதிப்பீட்டின் துணை கொண்டு அதன்படியே செயல்பட வேண்டும். அத்தகைய நேரத்தில் அவன் செய்யும் செயலானது, சாதாரண மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும்.(9) சிலர் உண்மை அறிவைப் பெற்றிருக்கிறார்கள். சிலர் போலி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு வகை அறிவின் இயல்பையும் உண்மையில் உறுதி செய்து கொள்ளும் ஒரு ஞானமிக்க மன்னன், நல்லோராகக் கருதப்படுவோரிடமிருந்து அறிவை அடைகிறான்.(10)

அறநெறிகளை உண்மையில் உடைப்பவர்களே, சாத்திரங்களில் குறை காண்கிறார்கள். செல்வமில்லாதவர்கள், செல்வத்தை அடையும் உடன்படிக்கைகளில் உள்ள முரண்களை அறிவிக்கின்றனர்.(11) தங்களைத் தாங்கிக் கொள்ளும் நோக்கத்தில் மட்டுமே அறிவை அடைய முயல்வோர், ஒருபுறம் அறநெறிக்கு எதிரிகளாக இருந்தாலும், அவர்கள் பாவம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(12) சாத்திரங்களை அறியாதோரால், அறிவின் வழிகாட்டுதலுடன் தங்கள் செயல்கள் அனைத்திலும் இயங்க இயலாததைப் போலவே, முதிரா {பண்படாத} புத்தி கொண்ட தீய மனிதர்களால், ஒருபோதும் உண்மைப் பொருட்களை அறிய முடியாது.(13) அவர்கள், சாத்திரங்களின் குறைகளில் மட்டுமே செலுத்தப்படும் கண்களைக் கொண்டு சாத்திரங்களைக் குறை கூறுகிறார்கள். அவர்கள் சாத்திரங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொண்டாலும் கூட, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள தடையாணைகள் நல்லவை அல்ல என்று அறிவிக்கும் தங்கள் வாடிக்கையான பழக்கத்தையே தொடர்வார்கள்.(14) அத்தகைய மனிதர்கள், பிறரின் அறிவை குறைகூறுவதன் மூலம், தங்கள் அறிவின் மேன்மையையே அறிவித்துக் கொள்கிறார்கள். வார்த்தைகளையே தங்கள் கணைகளாகக் கொள்ளும் அவர்கள், தாங்களே அறிவியலின் உண்மையான தலைவர்களைப் போலப் பேசுவார்கள்.(15)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அவர்களைக் கல்வி வணிகர்களாகவும்[2], மனிதர்களில் ராட்சசர்களாகவும் அறிவாயாக. வெறும் போலிக்காரணங்களின் துணையின் மூலம், நல்லோராலும், ஞானியராலும் நிறுவப்பட்ட அறநெறியை அவர்கள் கைவிடுகிறார்கள் {ஏளனம் செய்வார்கள்}.(16) விவாதம், அல்லது ஒருவனுடைய சொந்த புத்தி ஆகிய இரண்டாலும் அறநெறிகளின் உரைகளைப் புரிந்து கொள்ள முடியாது என்று நாம் கேள்விப்படுகிறோம். இதுவே பிருஹஸ்பதியின் கருத்தாகும் என இந்திரனே {நேரடியாக என்னிடம்} சொல்லியிருக்கிறான்.(17) எந்தச் சாத்திர உரையும், காரணமில்லாமல் விதிக்கப்படவில்லை என்று சிலர் கருதுகிறார்கள். மேலும் சிலர், சாத்திரங்களை முறையாகப் புரிந்து கொண்டாலும், ஒருபோதும் அதன்படி செயல்படாமல் இருக்கிறார்கள்.(18) ஞானியரில் ஒரு வகையினர், அறநெறியானது, உலக நடைமுறைக்காக அங்கீகரிக்கப்படதேயன்றி வேறெதற்காகவும் இல்லை என்று அறிவிக்கிறார்கள். உண்மை ஞானியானவன், நன்மைக்காக விதிக்கப்பட்ட அறநெறியைத் தானே அறிந்து கொள்ள வேண்டும்.(19) கோபம், அறிவுக் குழப்பம், அறியாமை ஆகியவற்றின் ஆதிக்கத்தில் ஒரு ஞானியே அறநெறி குறித்துப் பேசினாலும், அந்த உரையும் ஒன்றுக்கும் உதவாமலே போகும்[3].(20)சாத்திரங்களின் உண்மையான எழுத்திலும், உண்மையான தன்மையிலும் இருந்து பெறப்பட்ட நுண்ணறிவின் துணையுடன் அறநெறி குறித்துச் செய்யப்படும் உரையாடல்கள் போற்றத்தகுந்தவையே அன்றி வேறெதன் உதவியுடனும் செய்யப்படுபவை அல்ல. அறியாமையில் இருப்பவனின் வார்த்தைகளைக் கேட்டாலும், அறிவு நிறைந்தவனாக இருந்தாலும், அவன் நல்லவனாகவும், ஞானியாகவும் கருதப்படுவான்.(21) பழங்காலத்தில் உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, “அறிவுச் சோதனையில் நிற்க முடியாத சாத்திரங்கள் சாத்திரங்களே அல்ல” என்று ஐயங்கள் அனைத்தையும் விலக்கவல்ல இந்த உண்மையைத் தைத்தியர்களுக்குச் சொன்னார்[4].(22) ஐயங்களுடன் கலந்த அறிவுடைமையோ, இல்லாமையோ அதே பொருளைக் கொண்டவையே. வேர்களைக் கிழித்து அத்தகைய {ஐயம் கொண்ட} அறிவை விரட்டுவதே உனக்குத் தகும்.(23) இந்த என வார்த்தைகளைக் கேளாதவன் தவறாக வழியில் செல்ல முனைபவனாகக் கருதப்பட வேண்டும். கடுஞ்செயல்களைச் செய்வதற்காகவே அவை உண்டாக்கப்பட்டன என்பதை நீ காணவில்லையா?(24)ஓ! அன்புக்குழந்தாய், என் பிறப்பின் வகைக்கான கடமைகளைச் செய்து, எண்ணற்ற க்ஷத்திரியர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பிய என்னைப் பார். இதற்காக என்னிடம் மகிழ்ச்சி கொள்ளாத சிலர் இருக்கின்றனர்.(25) ஆடு, குதிரை ஆகியவையும் க்ஷத்திரியனும் அதே போன்ற காரியத்திற்காகவே (அனைவருக்கும் பயன்படுவதற்காக) பிரம்மனால் படைக்கப்பட்டனர். எனவே, ஒரு க்ஷத்திரியன் இடையறாமல் அனைத்து உயிரினங்களின் மகிழ்ச்சியையே நாட வேண்டும்.(26) கொல்லத்தகாதவனைக் கொல்லும் பாவமும், கொல்லத்தகுந்தவனைக் கொல்லாமல் விடும் பாவமும் ஒன்றே. நிறுவப்பட்ட காரியங்களின் வரிசை இவ்வாறே இருக்கையில், பலவீன மனம் கொண்ட ஒரு மன்னன் அதை ஒருபோதும் கவனிக்காமல் இருக்கவே நினைக்கிறான்.(27) எனவே ஒரு மன்னன் தன் குடிமக்கள் அனைவரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்யக் கடுமையை வெளிப்படுத்த வேண்டும்[5]. இது செய்யப்படவில்லையெனில், அவர்கள் ஒருவரையொருவர் விழுங்க ஓநாய்களைப் போல எந்நோக்கமுமின்றித் திரிவார்கள்.(28) எவனுடைய ஆட்சிப்பகுதிகளில், நீரில் உள்ள சிறு மீன்களை அபகரிக்கும் காகங்களைப் போலக் கள்வர்கள் பிறர் பொருளைக் கொள்ளையிடுவார்களோ, அவன் க்ஷத்திரியர்களில் இழிந்தவனாவான்.(29)நீ, உயர்ந்த பிறப்பையும், வேத அறிவையும் கொண்ட மனிதர்களை உன் அமைச்சர்களாக நியமித்துக் கொண்டு, உன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்து, பூமியை ஆட்சி செய்வாயாக.(30) நிறுவப்பட்ட பழக்கவழக்கங்களையும், திட்டங்களையும் அறியாதவனான ஒரு க்ஷத்திரியன், தன் மக்களுக்கு முறையற்ற வரிகளை விதித்தால், அவன் தன் வகையில் ஆண்மையற்றவனாக {நபும்ஸகனாக / அலியாகக்} கருதப்படுகிறான்.(31) ஒரு மன்னன் கடுமையாகவும் இருக்கக்கூடாது, மென்மையானவனாகவும் இருக்கக்கூடாது. அவன் நீதியுடன் ஆண்டால் புகழத்தகுந்தவனாகிறான். இந்த இரு பண்புகளையும் மன்னன் கைவிடக் கூடாது; மறுபுறம் அவன் (கடுமை தேவைப்படும் சந்தர்ப்பங்களில்) கடுமையாகவும், தேவையான நேரங்களில் மென்மையாகவும் இருக்க வேண்டும்.(32) க்ஷத்திரியக் கடமைகளை நோற்பது வலிநிறைந்ததாகும். நான் உன்னிடம் பெரும் அன்பு கொண்டிருக்கிறேன். நீ கடும் செயல்களைச் செய்ய உண்டாக்கப்பட்டவனாவாய். எனவே, நீ உன் நாட்டை ஆள்வாயாக.(33) பெரும் நுண்ணறிவைக் கொண்ட சக்ரன் {இந்திரன்}, துன்ப காலங்களில் தீயோரைத் தண்டிப்பதும், நல்லோரைப் பாதுகாப்பதுமே ஒரு மன்னனுடைய பெருங்கடமை என்று சொல்லியிருக்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(34)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “(அரசகடமைகளைப் பொறுத்தவரையில்) எந்தச் சூழ்நிலையிலும் மீறப்படக்கூடாத விதி ஏதும் இருக்கிறதா? ஓ! அறவோரில் முதன்மையானவரே, நான் உம்மைக் கேட்கிறேன். ஓ! பாட்டா, எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(35)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன், கல்விக்காகவும், அர்ப்பணிப்புள்ள தவங்களுக்காகவும், வேத விதிகளுக்கு இசைவான நடத்தையில் கொண்ட வளத்துக்காகவும் மதிப்புக்குரிய பிராமணர்களை எப்போதும் வழிபட வேண்டும். உண்மையில் இஃது உயர்ந்த மற்றும் புனிதமான கடமையாகும்.(36) தேவர்களிடம் நீ நடந்து கொள்வதைப் போலவே பிராமணர்களுடனான உன் நடத்தையும் இருக்கட்டும். ஓ! மன்னா, பிராமணர்கள் கோபமடைந்தால் பல்வேறு தீமைகளை இழைக்க முடியும்.(37) அவர்கள் நிறைவு செய்யப்பட்டால், உயர்ந்த புகழ் உனது பங்காகும். மாறாக இருந்தால், உன் அச்சம் பெரிதாக இருக்கும். நிறைவுடன் இருந்தால், பிராமணர்கள் அமுதமாவார்கள். கோபமடைந்தால் அவர்களே நஞ்சுமாவார்கள்”[6] என்றார் {பீஷ்மர்}.(38)

வேடனும் புறாவும்! – சாந்திபர்வம் பகுதி – 143-வேடன் புறா கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! சாத்திரங்கள் அனைத்திலும் பெரும் ஞானம் கொண்டவரே, பாதுகாப்புக்காக ஏங்கும் சரணடைந்தவனைப் பேணிக் காப்பவனுக்குக் கிடைக்கும் தகுதி {புண்ணியம்} என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, சரணடைந்தவனைப் பேணிக் காப்பதில் உள்ள தகுதி பெரியதாகும். ஓ! பாரதர்களில் சிறந்தவனே, இத்தகு கேள்விக் கேட்பதற்கு நீ தகுந்தவனே.(2) பழங்காலத்தைச் சேர்ந்த சிபி மற்றும் பிறரைப் போன்ற உயர் ஆன்ம மன்னர்கள், சரணடைந்தவர்களைப் பாதுகாத்துச் சொர்க்கத்தில் பெரும் அருளை அடைந்தார்கள்.(3) சரணடைந்த ஓர் எதிரியைப் பொறுத்தவரையில், அவனை முறையான சடங்குகளுடன் ஏற்று, தன் சொந்த சதையையே அவனுக்கு உணவாகக் கொடுத்த புறாவைக் குறித்து நாம் கேள்விப் படுகிறோம்” என்றார்.(4)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உண்மையில், பழங்காலத்தில் சரணடைந்த ஓர் எதிரிக்கு எவ்வாறு அந்தப் புறா தன் சதையைக் கொடுத்தது? ஓ! பாரதரே, அத்தகைய நடத்தையால் அடைந்த கதிதான் என்ன?” என்று கேட்டான்.(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிருகுவின் மைந்தர் (ராமரால் {பரசுராமரால்})[1] மன்னன் முசுகுந்தனுக்குச் சொல்லப்பட்டதும், கேட்பவரின் பாவங்கள் அனைத்தையும் கழுவவல்லதுமான இந்த அற்புதக் கதையைக் கேட்பாயாக. உரிய பணிவுடன் கூடிய முசுகுந்தனால், பிருகுவின் மைந்தரிடம் {பரசுராமரிடம்} இதே கேள்வி முன்வைக்கப்பட்டது.(7) ஓ! ஏகாதிபதி, பிருகுவின் மைந்தர் {பரசுராமர்}, பணிவாகக் கேட்க விரும்பிய அவனிடம் {முசுகுந்தனிடம்}, ஒரு புறா (சொர்கத்தின் உயர்ந்த அருளை அடைவதில்) எவ்வாறு வெற்றியை அடைந்தது என்ற இந்தக் கதையைச் சொன்னார்.(8)அந்தத் தவசி {பரசுராமர் முசுகுந்தனிடம்}}, “ஓ! வலிய கரங்களைக் கொண்ட ஏகாதிபதி {முசுகுந்தா}, அறம், பொருள், இன்பம் தொடர்பான உண்மைகள் நிறைந்த இந்தக் கதையை உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(9) தீயவனும், பயங்கரமானவனும், அந்தகனுக்கு ஒப்பானவனுமான ஒரு வேடன், பழங்காலத்தில் ஒரு பெருங்காட்டில் திரிந்து கொண்டிருந்தான்.(10) அவன் கருங்காக்கையைப் போலக் கருப்பாக இருந்தான், இரத்த நிறத்திலான கண்களைக் கொண்டவனாகவும் இருந்தான். அவன் யமனைப் போலவே தெரிந்தான். அவனது கால்கள் நீண்டிருந்தன, பாதங்கள் குறுகியவையாக இருந்தன, அவனது வாய்ப் பெரியதாக இருந்தது, தாடை துருத்திக் கொண்டிருந்தது.(11) அவனுக்கு நண்பனோ, உறவினனோ, சொந்தக்காரனோ எவனுமில்லை. அவன் வாழ்ந்த மிகக் கொடூரமான வாழ்க்கையால் அவர்கள் அனைவரும் அவனைக் கைவிட்டார்கள்.(12) உண்மையில், தன்னைத் தானே அழித்துக் கொள்பவனால் பிறருக்கு எந்த நன்மையும் செய்ய முடியாதாகையால், தீய நடத்தை கொண்ட மனிதனை ஞானிகள் மிகத் தொலைவிலேயே கைவிடுவார்கள்.(13) பிற உயிரினங்களை எடுத்து வாழும் கொடூரமானவர்களும், தீய ஆன்மா கொண்டவர்களுமான மனிதர்கள், அனைத்து உயிரினங்களின் துன்பங்களுக்கும் மூலமாக இருப்பதால், அவர்கள் எப்போதும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவர்களே.(14)

ஓ! மன்னா {முசுகுந்தா}, அவன், தன் வலைகளை எடுத்துக் கொண்டு, காடுகளில் உள்ள பறவைகளைக் கொன்று, (தன் வாழ்வாதாரத்திற்காக) சிறகு படைத்த அந்த உயிரினங்களின் இறைச்சியை விற்று வந்தான்.(15) தீய ஆன்மா கொண்ட அந்த அற்பன், அத்தகைய நடத்தையைப் பின்பற்றி, தன் பாவ வாழ்வைப் புரிந்து கொள்ளாமலேயே நெடுங்காலம் வாழ்ந்து வந்தான்.(16) இத்தொழிலைப் பின்பற்றி நீண்ட காலம் தன் மனைவியுடன் இன்புற்று வந்த அவன், விதியால் மயக்கமடைந்து வேறு தொழில் எதையும் விரும்பாதிருந்தான்.(17) ஒரு நாள், தொழிலினிமித்தமாக அவன் காட்டில் திரிந்து கொண்டிருந்தபோது, மரங்களைக் குலுக்கி, அவற்றை வேரோடு சாய்த்துவிடுவதைப் போல ஒரு சூறாவளி தோன்றிற்று.(18) ஒரு கணத்தில், வணிகர்களின் படகுகள் மற்றும் கப்பல்களால் மறைக்கப்படும் கடலின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில், அடர்த்தியான மேகத்திரள்கள் தங்களுக்கு மத்தியில் விளையாடும் மின்னலின் கீற்றுகளுடன் வானத்தில் தோன்றின.(19) மேகங்களுக்குள் நுழைந்திருந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, பெரும் மழையைப் பொழிந்ததால், ஒரு கணத்தில் பூமியானது வெள்ளக்காடாக ஆனது.(20)

அவ்வாறு மழையானது தாரைத் தாரையாகப் பொழிந்து கொண்டிருந்தபோது, வேடன் அச்சத்தால் தன் புலன் உணர்வுகளை இழந்தான். குளிரால் நடுங்கி, அச்சத்தால் கலங்கி அவன் காட்டின் ஊடாக உலவிக் கொண்டிருந்தான்.(21) பறவைகளைக் கொல்பவனான அவன், (நீரில்லாத) உயர்ந்த பகுதி எதையும் காணத் தவறினான்.(22) கடும் மழையின் விளைவால், பல பறவைகள் உயிரை இழந்து தரையில் விழுந்தன. சிங்கங்கள், கரடிகள் மற்றும் பிற விலங்குகள், உயர்ந்த இடங்களுக்குச் சென்று அங்கே ஓய்ந்து கிடந்தன.(23) பயங்கரப் புனல் மற்றும் மழையின் விளைவால் காட்டுவாசிகள் அனைத்தும் அச்சத்தால் நிறைந்திருந்தன. அச்சத்திலும், பசியிலும் இருந்த அவை, சிறு கூட்டங்களாகவும், பெருங்கூட்டங்களாகவும் காடுகளில் திரிந்து கொண்டிருந்தன.(24) எனினும், குளிரால் விறைத்துப் போன அங்கங்களைக் கொண்ட வேடனால், அவன் எங்கிருந்தானோ அங்கு நிற்கவும் முடியவில்லை, நகரவும் முடியவில்லை. அதே வேளையில், குளிரால் விறைத்து, தரையில் கிடக்கும் ஒரு பெண் புறாவை அவன் கண்டான்.(25)

அற்பனான அந்தப் பாவி, தானே அதே இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், அந்தப் பறவையைக் கண்டதும், அதை எடுத்து ஒரு கூண்டில் அடைத்தான். அவன், தானே துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்தாலும், தன் சக உயிரினம் ஒன்றைத் துன்பத்தால் பீடிக்கத் தயங்கவில்லை.(26) உண்மையில், அந்த அற்பன், அத்தகைய நேரத்திலும் கூடத் தான் அடிமையாகியிருந்த பழக்கவழக்கத்தின் சக்தியால் மட்டுமே அந்தப் பாவத்தை இழைத்தான். அப்போது அவன் அந்தக் காட்டுக்கு மத்தியில் மேகங்களைப் போன்ற நீல நிறத்தில் ஒரு பெரிய மரத்தைக் கண்டான்.(27) நிழலையும், உறைவிடத்தையும் விரும்பிய பறவைக் கூட்டங்களின் வசிப்பிடமாக அஃது இருந்தது. அஃது உலகத்தில் உள்ள ஒரு நல்ல மனிதனைப் போல அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகப் படைப்பாளனால் {பிரம்மனால்} அங்கே நிறுத்தப்பட்டிருந்தது.(28) விரைவில் வானம் தெளிந்து, நட்சத்திரக்கூட்டங்கள் மினுமினுங்க, மலர்ந்திருக்கும் அல்லி மலர்களுடன் சிரித்திருக்கும் ஒரு பெரிய தடாகத்தின் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.(29)

நட்சத்திரங்கள் நிறைந்த தெளிந்த வானை நோக்கித் தன் கண்களைச் செலுத்திய வேடன், குளிரில் நடுங்கிக் கொண்டே முன்னேறத் தொடங்கினான். மேகங்கள் அற்ற வானத்தைக் கண்ட அவன், அனைத்துப் புறங்களிலும் தன் கண்களைச் செலுத்தி, ஏற்கனவே இரவாகிவிட்டதையும் கண்டு,(30) “நான் இப்போது இருக்கும் இடத்தில் இருந்து என் வீடு மிகத் தொலைவில் இருக்கிறது” என்று நினைக்கத் தொடங்கினான். பிறகு அவன் அந்த இரவை அந்த மரத்தினடியிலேயே கழிப்பது எனத் தீர்மானித்தான்.(31) அதை {அந்த மரத்தைக்} கரங்கள் கூப்பி வணங்கிய அவன், அந்தக் காட்டின் ஏகாதிபதியிடம் {மரத்திடம்}, “இந்த மரத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட தேவர்கள் அனைவரிடமும் உறைவிடம் வேண்டி நான் சரணடைகிறேன்” என்றான்.(32) இந்த வார்த்தைகளைச் சொன்ன அவன், படுக்கைக்காகச் சில இலைகளைப் பரப்பி, ஒரு கல்லில் தன் தலையை வைத்துக் கொண்டு, தன்னைக் கிடத்திக் கொண்டான். துன்பத்தால் பீடிக்கப்பட்டிருந்தாலும், அந்த மனிதன் விரைவில் உறக்கத்தில் வீழ்ந்தான்” என்றார் {பீஷ்மர்}.(33)

ஆண்புறாவின் புலம்பல்! – சாந்திபர்வம் பகுதி – 144-வேடன் புறா கதையைச் சொல்லிக் கொண்டிருந்த பரசுராமர், இரைதேடிச் சென்ற பெண்புறா வீடுதிரும்பாததால், அழுது கொண்டிருந்த ஆண்புறாவின் புலம்பலை முசுகுந்தனுக்கு எடுத்துச் சொன்னது..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, அந்த மரத்தில் இருந்த கிளைகளில் ஒன்றில், அழகிய இறகுகளைக் கொண்ட புறா ஒன்று, தன் குடும்பத்தோடு பல வருடங்களாக வாழ்ந்து வந்தது.(1) காலையில் இரைதேடிச் சென்ற அதன் மனைவி இன்னும் திரும்பாமல் இருந்தது. இரவாகியும் தன் மனைவி திரும்பாததைக் கண்ட அந்தப் பறவை, புலம்பல்களில் ஈடுபடத் தொடங்கியது,(2) “ஓ!, இன்று நேர்ந்த புயல் பெரியது, மழை துன்பம் மிகுந்தது. ஐயோ, ஓ! அன்பு மனைவியே, நீ இன்னும் திரும்பவில்லையே.(3) இந்தக் காட்டில் என் அன்பு மனைவி நலமாக இருக்கிறாளா? அவளிடம் இருந்து பிரிந்த என் வீடு வெறுமையாகத் தோன்றுகிறதே.(4) இல்லறத்தானின் வீடானது, மகன்கள், பேரப்பிள்ளைகள், மருமகள்கள், பணியாட்கள் ஆகியோரால் நிரம்பியிருந்தாலும், இல்லத்தரசி இல்லாதிருந்தால் அது வெறுமையானதாகவே கருதப்படுகிறது.(5) 

ஒருவனுடைய வீடு அவனுடைய இல்லமாகாது; ஒருவனுடையே மனைவி மட்டுமே அவனுடைய இல்லமாகிறாள். மனைவியில்லாத ஒரு வீடு காட்டைப் போல வெறுமையானது.(6) கண்கள் சிவந்தவளும், பல்வேறு வண்ண இறகுகளைக் கொண்டவளும், இனிய குரலை உடையவளுமான என் அன்பு மனைவி திரும்பவில்லையெனில், என் வாழ்வே எந்த மதிப்புமில்லாததாகப் போகும்.(7) சிறந்த நோன்புகளைக் கொண்ட அவள், ஒரு போதும் நான் உண்பதற்கு முன் உண்டதுமில்லை, நான் நீராடுவதற்கு முன் நீராடியதுமில்லை. நான் அமர்வதற்கு முன் அவள் ஒருபோதும் அமர்ந்ததில்லை, நான் படுப்பதற்கு முன் ஒருபோதும் படுத்ததுமில்லை.(8) நான் மகிழ்ந்தாள் அவளும் மகிழ்வாள், நான் வருந்தினால் அவளும் வருந்துவாள். நான் இல்லாத போது அவள் உற்சாகம் இழப்பாள், நான் கோபமாக இருந்தாலும், அவள் இனிமையாகப் பேசுவதை நிறுத்தியதில்லை.(9) தன் தலைவனுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடனும், தன் தலைவனையே எப்போதும் சார்ந்தும் இருந்த அவள், தன் தலைவனுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் மட்டுமே எப்போதும் செய்து வந்தாள். பூமியில் இத்தகைய மனைவி கிடைத்த எந்த மனிதனும் புகழத்தக்கவனே.(10)

அந்த இனிமையான உயிரினம் நாள் களைத்தும், பசித்தும் இருப்பதை அறிவாள். என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவளும், அன்பில் நிலையானவளும், மிக இனிய இயல்பைக் கொண்டவளும், போற்றுதலுக்குரியவளுமான என் மனைவி, பக்தியுடன் என்னை வழிபட்டு வந்தாள்.(11) ஒருவன் தன் மனைவியின் தோழமையுடன் ஒரு மரத்தக்கடியில் வாழ்ந்தாலும், அதுவே அவனுடைய வீடாகும். மனைவியில்லாமல் மாளிகையில் வாழ்ந்தாலும், அஃது உண்மையில் வெறும் காடே ஆகும்.(12) ஒருவனுடைய மனைவியானவள், அறம், பொருள் மற்றும் இன்பம் சார்ந்த அவனுடைய செயல்கள் அனைத்திலும் துணைவியாக இருக்கிறாள். ஒருவன் அந்நிய நிலத்திற்குப் புறப்படும்போது அவனுடைய மனைவியே அவனது நம்பிக்கைக்குரிய தோழியாக இருப்பாள்.(13) ஒரு மனைவியே தன் தலைவனின் விலைமதிப்புமிக்க உடைமை என்று சொல்லப்படுகிறாள். இவ்வுலக வாழ்வின் அனைத்துக் காரியங்களிலும் மனைவி மட்டுமே தன் தலைவனின் துணையாவாள்[1].(14)நோயிலும், துயரிலும் ஒருவனுக்கு அவனுடைய மனைவியே சிறந்த மருந்தாக இருக்கிறாள்.(15) மனைவியைப் போல வேறு எந்த நட்பும் கிடையாது. மனைவியை விடச் சிறந்த புகலிடம் வேறேதும் கிடையாது. அறத்தகுதி ஈட்டும் செயல்களில் இவ்வுலகில் மனைவியை விடச் சிறந்த கூட்டாளி வேறு யாரும் கிடையாது.(16) எவனுடைய வீட்டில் கற்புக்கரசியும், ஏற்புடைய பேச்சைக் கொண்டவளுமான ஒரு மனைவி இல்லையோ, அவன் காடுகளுக்குச் செல்வதே சிறந்தது. அத்தகைய மனிதனுக்கு, வீட்டுக்கும், காட்டுக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது” {என்று சொல்லி ஆண் புறா புலம்பியது என்றார் பரசுராமர்}.(17)

பெண்புறா வழங்கிய ஆலோசனை! – சாந்திபர்வம் பகுதி – 145-புலம்பிக் கொண்டிருந்த ஆண்புறாவைக் கண்ட பெண்புறா, சரணடைந்தவனைக் காப்பதே உயர்ந்த கடமை என்று அதற்குச் சொல்லி வேடனை விருந்தோம்பலுடன் உபசரிக்கும்படி அந்த ஆண்புறாவை அறிவுறுத்தியது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, வேடனால் {வேடன் லூப்தகனால்} பிடிக்கப்பட்டிருந்த பெண்புறாவானது, மரத்திலுள்ள {ஆண்} புறாவின் பரிதாபகரமான புலம்பல்களைக்கேட்டு, தனக்குள்ளேயே பின்வருமாறு சொல்லத் தொடங்கியது[1].(1)அந்தப் பெண்புறா, “எனக்குத் தகுதியேதும் இருக்கிறதோ, இல்லையோ, அன்புக்குரிய என் தலைவர் {கணவர்}, என்னைக் குறித்து இவ்வாறு பேசுகிறார் என்றால், என் நற்பேற்றுக்கு அளவே இல்லை என்பது உண்மையே.(2) எவளிடம் அவளது தலைவன் நிறைவடையவில்லையோ அவள் மனைவியே அல்ல. பெண்களின் வழக்கில், அவர்களது தலைவர்கள் அவர்களிடம் மனநிறைவுடன் இருந்தால், அவளிடம் தேவர்கள் அனைவரும் அவ்வாறே இருப்பார்கள்.(3) நெருப்பின் முன்னிலையில் திருமணச் சேர்க்கை நடைபெறுவதால், கணவனே, மனைவியின் உயர்ந்த தேவனாவான்.(4) எந்த மனைவியிடம் அவளது கணவன் நிறைவில்லாமல் இருக்கிறானோ, அவள் மலர்களுடன் பூத்துக் குலுங்கும் கொடியானது காட்டுத்தீயில் கருகுவதைப் போலச் சாம்பலாகவே ஆவாள்” {என்று நினைத்தது}.(5)

வேடனால் கூட்டுக்கள் அடைக்கப்பட்ட பெண்புறா, இவ்வாறு சிந்தித்து, துன்பத்தால் பீடிக்கப்பட்டு, துயரில் பீடிக்கப்பட்டிருக்கும் தன் தலைவனிடம்,(6) “உமக்கு நன்மையானதை இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்டு என் ஆலோசனையின்படி செயல்படுவீராக. ஓ! அன்புத் தலைவரே, சரணடைந்த ஒருவனைக் காப்பராவீராக.(7) இந்த வேடன், குளிராலும், பசியாலும் பீடிக்கப்பட்டு, இங்கே உமது வசிப்பிடத்தில் கிடக்கிறான். இவனுக்கு விருந்தோம்பல் கடமைகளைச் செய்வீராக.(8) (உதவி நாடி) சரணடைந்தவனை அழிய விடும் ஒருவன், ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்துக்கோ, உலகின் தாயான பசுவைக் கொன்ற பாவத்துக்கோ இணையான பாவத்தை இழைக்கிறான்.(9) நீர் தன்னறிவு கொண்டவராவீர். எனவே, பிறப்பின் வகையில் புறாக்களான நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறையைப் பின்பற்றுவதே உம்மைப் போன்ற ஒருவருக்குத் தகும்[2].(10)எந்த இல்லறத்தான், தன்னால் இயன்ற அளவுக்கு அறம் பயில்கிறானோ, அவன் மறுமையில் வற்றாத அருள் உலகங்களை வெல்வான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(11) உமக்கு மகன்கள் இருக்கிறார்கள். உமக்குப் பரம்பரையும் இருக்கிறது. எனவே, ஓ! பறவையானவரே, அறம் மற்றும் பொருள் ஈட்டுவதற்காக உமது உடலுக்கான விருப்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, இந்த வேடனின் இதயம் நிறைவுறுமாறு இவனை வழிபடுவீராக.(12) ஓ! பறவையானவரே, என்னைக் குறித்து வருந்தாதீர். (நான் முக்கியமில்லாதவள் என்பதைக் காண்பீராக), வேறு மனைவியரை ஏற்று நீர் தொடர்ந்து வாழ வேண்டும்”[3] {என்றது அந்தப் பெண்புறா}.(13)அந்த இனிய பெண்புறா, தான் அடைபட்டிருந்த வேடனின் கூட்டிலிருந்து தன் தலைவனின் மீது  கண்களைச் செலுத்தி, கவலையால் உந்தப்பட்டு, அதனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னது” {என்றார் பரசுராமர்}.(14)

நெருப்பில் விழுந்த ஆண் புறா! – சாந்திபர்வம் பகுதி – 146-தன் மனைவியின் அறிவுரைப்படி விருந்தோம்பலில் ஈடுபட்ட ஆண்புறா, வேடன் குளிர்காய நெருப்பை மூட்டிக் கொடுத்தது; உணவு கேட்ட வேடனுக்கு ஒன்றும் கொடுக்க முடியாததால் தானே நெருப்புக்குள் புகுந்தது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, தன் மனைவி பேசியவையும், நெறிகளும், அறிவும் நிறைந்தவையுமான இந்த வார்த்தைகளைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சியடைந்த அந்தப் புறாவின் {ஆண்புறாவின்} கண்கள் கண்ணீரால் குளித்தன.(1) பறவைகளைக் கொல்வதையே தொழிலாகக் கொண்ட வேடனைக் கண்ட அந்தப் புறா, விதிப்படியான சடங்குகளின் அடிப்படையில் தயக்கமில்லாமல் அவனைக் கௌரவித்தது.(2)

அவனிடம் பேசிய அஃது {அந்த ஆண்புறா}, “உனக்கு நல்வரவு. நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நீ மனநிறைவற்றவனாக இருக்கக்கூடாது. இஃது உன் இல்லமாகும்.[1](3) நான் என்ன செய்ய வேண்டும்? உன் விருப்பம் யாது என்பதை விரைவாகச் சொல்வாயாக. எங்கள் கரங்களில் புகலிடத்தை நீ வேண்டியதால் கொண்ட அன்பின் காரணமாகவே நான் உன்னைக் கேட்கிறேன்.(4) ஒருவனுடைய வீட்டுக்கு அவனுடையே எதிரியே வந்தாலும், அவன் விருந்தோம்பலுடன் வரவேற்கப்பட வேண்டும். இந்த மரம், இதை வெட்டுபவன் மேல் விழும் தன் நிழலை விலக்கிக் கொள்வதில்லை.(5) உறைவிடத்திற்காக ஏங்குபவனுக்கு, ஒருவன் விருந்தோம்பலின் கடமைகளைத் தவறில்லாமல் கவனத்தோடு செய்ய வேண்டும். உண்மையில், ஐந்து வேள்விகளைக்[2] கொண்ட இல்லற {கிருஹஸ்த} வாழ்வை நோற்கும் ஒருவன் இவ்வாறே செயல்பட வேண்டும்.(6) இல்லற வாழ்வை நோற்றும் விவேகமில்லாமல் சாத்திரங்களின்படியான ஐந்து வேள்விகளைச் செய்யாதிருந்தால், இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டையும் அவன் இழப்பான்.(7) உன் விருப்பங்கள் என்ன என்று நம்பிக்கைநிறைந்த, புத்தியுடனும் கூடிய வார்த்தைகளால் சொல்வாயாக. உன் இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாதே” என்றது {ஆண்புறா}.(8)அந்தப் பறவையின் வார்த்தைகளைக் கேட்ட அந்த வேடன், அதனிடம், “நான் குளிரால் விறைத்துப் போயிருக்கிறேன். நான் குளிர்காய்வதற்கு வெப்பம் வேண்டும்” என்றான்.(9)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பறவை தரையில் இருந்து எண்ணற்ற காய்ந்த இலைகளைத் திரட்டி, நெருப்பைக் கொண்டு வர ஒரேயோர் இலையை மட்டும் தன் அலகில் எடுத்துச் சென்றது.(10) நெருப்பு இருக்கும் இடத்திற்குச் சென்ற அது,[3] சிறிது நெருப்பை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தது. பிறகு அந்தக் காய்ந்த இலைகளைக் கொண்டு நெருப்பை மூட்டியது,(11) அது பெரும் நெருப்பாகச் சுடர்விட்டெரிந்த போது, தன் விருந்தாளியிடம் அது, “நம்பிக்கையுடனும், அச்சமில்லாமலும் உன் அங்கங்களுக்கு வெப்பமூட்டுவாயாக {குளிர்காய்வாயாக}” என்றது.(12)இவ்வாறு சொல்லப்பட்ட அந்த வேடன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி விறைத்துப் போன தன் அங்கங்களுக்கு வெப்பமூட்டினான். (ஏற்கனவே இருந்ததுபோல்) தன் உயிர் மூச்சை மீண்டும் அடைந்த அந்த வேடன், தனக்கு விருந்துபசரிப்பதும், இறகு படைத்ததுமான அதனிடம் {அந்தப் பறவையிடம்},(13) “பசி என்னை வாட்டுகிறது. நீ எனக்கு உணவு ஏதாவது கொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்” என்றான்.

அவனது வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பறவை,(14) “உன் பசியைப் போக்குவதற்குரிய கிடங்குகள் ஏதும் என்னிடம் இல்லை. காட்டுவாசிகளாகிய நாங்கள், எப்போதும் தினமும் கிடைப்பதைக் கொண்டே வாழ்கிறோம்.(15) காட்டின் தவசிகளைப் போலவே நாங்களும் நாளைக்கென ஒருபோதும் சேகரித்து வைப்பதில்லை” என்றது. இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பறவைக்கு (வெட்கத்தால்) முகம் வெளிறிப்போனது. பிறகு தான் என்ன செய்ய வேண்டும் என்று அமைதியாக ஆலோசித்த அது, விருப்பத்திற்குரியதாக இல்லாத தன் வாழ்வு முறையை மனத்தில் நினைத்துப் பார்க்கத் தொடங்கியது.(17) எனினும் விரைவில் அதன் மனம் தெளிவடைந்தது. பிறகு அந்தப் பறவை, தன் இனத்தைக் கொல்பவனான அவனிடம் {வேடனிடம்}, “நான் உன்னை நிறைவு செய்கிறேன். ஒரு கணம் பொறுப்பாயாக” என்றது.(18)

இதைச் சொன்ன அது, சில காய்ந்த இலைகளைக் கொண்டு நெருப்பை மூட்டி, மகிழ்ச்சியால் நிறைந்து,(19) “பழங்காலத்தின் உயர் ஆன்ம முனிவர்கள், தேவர்கள் மற்றும் பித்ருக்களிடம் இருந்து ஒரு விருந்தினரை உபசரிப்பதில் பெரும் தகுதி {புண்ணியம்} உண்டு என்பதை அறிந்து கொண்டேன்.(20) ஓ! இனியவனே, என்னிடம் கருணை கொள்வாயாக. என் விருந்தினராக இருக்கும் உன்னை உபசரிப்பதிலேயே என் இதயம் நிலைத்திருக்கிறது என்ற உண்மையை உனக்குச் சொல்கிறேன்” என்றது.(21) இந்தத் தீர்மானத்தை அடைந்த அந்த உயர் ஆன்மப் பறவை, சிரித்த முகத்துடன் அந்நெருப்பை மூன்று முறை வலம் வந்து, அதன் தழல்களுக்குள் நுழைந்தது.(22)

அந்தப் பறவை நெருப்புக்குள் நுழைவதைக் கண்ட அந்த வேடன் தனக்குள்ளேயே, “நான் என்ன செய்துவிட்டேன்.(23) ஐயோ, என் செயல்களின் விளைவால் வந்த இந்தப் பாவம் இருள் நிறைந்ததும், பயங்கரமானதுமாகும் என்பதில் ஐயமில்லை. நான் மிகக் கொடூரனும், புறக்கணிக்கப்படத் தகுந்தவனுமாவேன்” என்று நினைக்கத் தொடங்கினான்.(24) உண்மையில், அந்தப் பறவை தன் உயிரையே விட்டதைக் கண்ட அந்த வேடன், தன் செயல்களில் விருப்பமில்லாதவனாக இது போல {பின்வருமாறு} பெரும் புலம்பலில் ஈடுபடத் தொடங்கினான்” {என்றார் பரசுராமர்}.(25)

வேடன் அடைந்த உறுதி! – சாந்திபர்வம் பகுதி – 147-நெருப்பில் விழுந்த ஆண் புறாவைக் கண்டு ஞானம் அடைந்த வேடன்; தன் கொடூரத் தன்மையையும், பாவம் நிறைந்த தொழிலையும் நினைத்து அனைத்தையும் கைவிட்டு, பெண்புறாவை விடுவித்தது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, அந்தப் புறா நெருப்புக்குள் விழுவதைக் கண்ட வேடன், கருணையால் நிறைந்தவனாக மீண்டும்,(1) “ஐயோ, கொடூரனும், அறிவற்றவனுமான நான் என்ன காரியம் செய்து விட்டேன்? நிச்சயம் நான் ஓர் இழிந்த அற்பனே. நெடுங்காலம் நீடிக்கும் அளவுக்கு என் பாவம் மிகப் பெரியதாகும்” என்றான்.(2)

இத்தகைய சுய நிந்தனையில் ஈடுபட்ட அவன், மீண்டும் மீண்டும், “எந்த நன்மைக்கும் நான் தகுந்தவனல்ல. என் புத்தி தீயது. என் ஆதாரங்களில் நான் எப்போதும் பாவம் நிறைந்தவனாகவே இருக்கிறேன்.(3) ஐயோ, மதிக்கத்தக்க அனைத்து வகைத் தொழில்களையும் கைவிட்டு, நான் ஒரு வேடனானேன். கொடூரனும், இழிந்தவனுமான எனக்கு, இந்த உயர் ஆன்மப் பறவை தன் உயிரை விட்டு ஒரு முக்கிய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.(4) நான் என் மனைவியரையும், மகன்களையும் கைவிட்டுவிட்டு, அன்புக்குரிய என் உயிர் மூச்சையே நான் நிச்சயம் விடப் போகிறேன். இந்த உயர் ஆன்ம புறா எனக்கு அந்தக் கடமையைப் போதித்திருக்கிறது.(5)

இந்த நாளில் இருந்து, என் உடலுக்கான வசதிகள் அனைத்தையும் மறுத்து, கோடை காலத்து வறண்ட குளத்தைப் போலவே அதை {உடலை} மெலியச்செய்யப் போகிறேன்.(6) பசி, தாகம், தவங்கள் ஆகியவற்றைத் தாங்கவல்லவனாகி, உடலெங்கும் நரம்புகள் தெரிய மெலிந்தவனாகி, மறுமையைக் குறிக்கும் நோன்புகளை நோற்கப் போகிறேன்.(7) ஐயோ, இந்தப் புறா தன் உடலைக் கைவிட்டு, ஒரு விருந்தினனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய வழிபாட்டை எடுத்துக் காட்டியிருக்கிறது. இந்த எடுத்துக் காட்டிலிருந்து போதனை பெற்ற நான், இதுமுதல் அறம் பயலப் போகிறேன். அறமே, (அனைத்து உயிரினங்களுக்கும்) உயர்ந்த புகலிடமாக இருக்கிறது. இறகு படைத்த உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான இந்த நல்ல புறாவிடம் காணப்பட்ட இத்தகைய அறத்தையே நான் பயிலப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டான்.(8)

இத்தகைய தீர்மானத்தை அமைத்துக் கொண்டவனும், இந்த வார்த்தைகளைச் சொன்னவனும், முன்பு கடும் காரியங்களைச் செய்தவனுமான அந்த வேடன், மிகக் கடுமையான நோன்புகளை நோற்றுக் கொண்டே இவ்வுலகத்தில் திரும்பா பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கினான்[1].(9) அவன் தன் தடித்த தடியையும், கூர்முனை கொண்ட இரும்புத் தடியையும் {சலாகத்தையும்}, வலைகள் மற்றும் சுருள்களையும், தன் இரும்புக்கூட்டையும் கைவிட்டு, தான் பிடித்து {அந்தக் கூண்டில்} அடைத்து வைத்திருந்த பெண்புறாவை விடுவித்தான்” {என்றார் பரசுராமர்}.(10)

சொர்க்கத்தை அடைந்த புறாக்கள்! – சாந்திபர்வம் பகுதி – 148-வேடன் விடுவித்துவிட்டுச் சென்ற பெண்புறா, கணவனின் பிரிவைத் தாளாமல் தானும் நெருப்பில் விழுந்து இறந்தது; ஆண்புறாவை சொர்க்கத்தில் கண்ட பெண்புறா; சொர்க்கத்தில் இன்புற்றிருந்த புறாக்கள்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, அவ்விடத்தை விட்டு அந்த வேடன் அகன்றதும், பெண்புறாவானது, தன் கணவனை நினைத்துத் துயரில் அழுது, இந்தப் புலம்பல்களில் ஈடுபட்டது:(1) “ஓ! அன்புத் தலைவா, நீர் எனக்கு எந்தத் தீங்கையும் செய்ததாக ஒரேயொரு நிகழ்வையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. விதவைகள், பல குழந்தைகளுக்குத் தாய்மாராக இருந்தாலும், அவர்கள் நிலை பரிதாபகரமானதே. கணவனை இழந்த ஒரு பெண், ஆதரவற்றவளாகவும், தன் நணபர்களின் பரிதாபத்திற்குரிய ஒரு பொருளாகவும் இருக்கிறாள்.(2) நான் எப்போதும் உம்மால் பேணிக் காக்கப்பட்டேன், என் மீது நீர் கொண்ட பெருமதிப்பின் விளைவாக, இனிய, ஏற்புடைய, அழகிய, மகிழ்ச்சிகரமான வார்த்தைகளால் உம்மால் நான் கௌரவிக்கப்பட்டேன்.(3) பள்ளத்தாக்குகளிலும், ஆறுகளின் நீரோடைகளிலும், இனிமையான மர உச்சிகளிலும் நான் உம்மோடு விளையாடிக் களித்திருந்தேன்.(4)

வானத்தில் உலவும்போதும் நான் உம்மால் மகிழ்ச்சியாக வைக்கப்பட்டிருந்தேன். ஓ! அன்புத் தலைவா, ஆனால், உம்மோடு நான் முன்பு விளையாடியிருந்த அந்த இன்பங்கள் இப்போது எங்கே போயின?(5) தந்தை, உடன்பிறந்தவன், மகன் ஆகியோரிடம் இருந்து ஒரு பெண் பெறும் கொடைகள் ஒரு வரம்புக்குட்பட்டதே. அவளது கணவன் தரும் கொடைகள் மட்டுமே அவளுக்கு அளவற்றவையாகத் தெரியும். எனவே, தன் கணவனைப் புகழாத எந்தப் பெண்தான் இந்த உலகத்தில் இருப்பாள்?(6) ஒரு பெண்ணுக்குத் தன் தலைவனைப் போன்ற ஒரு பாதுகாவலும் கிடையாது, தன் தலைவனைப் போன்ற ஒரு மகிழ்ச்சியும் கிடையாது. தன் செல்வம், உடைமைகள் ஆகிய அனைத்தையும் கைவிடும் ஒரு பெண், தன் தலைவனை மட்டுமே ஒரே புகலிடமாகக் கொள்கிறாள்.(7) ஓ! தலைவா, இப்போது நான் உம்மிடம் இருந்து பிரிந்துவிட்டதால் இங்கே உயிரோடிருப்பது எனக்கு எந்தப் பயனையும் தராது. தன் தலைவனை இழந்த எந்தக் கற்புடைய பெண்தான், உயிரெனும் சுமையைத் தாங்கிக் கொள்ளத் துணிவாள்?” என்று புலம்பியது {அந்தப் பெண்புறா}.(8)

தன் கணவனிடம் அர்ப்பணிப்புக் கொண்டிருந்த அந்தப் பெண்புறா, கவலையால் நிறைந்து, இத்தகைய பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டு, இறுதியில் சுடர்மிக்க நெருப்புக்குள்ளேயே விழுந்தது.(9) அப்போது அவள், (இறந்து போன) தன் கணவன், கங்கணங்களால் அலங்கரிக்கப்பட்டு, உயர் ஆன்மா கொண்டோரால் புகழப்பட்டு, தகுதிமிக்கோர் சூழ ஒரு (தெய்வீகத்) தேரில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.(10) உண்மையில் அவன், சிறந்த மலர்மாலைகளால் அலங்கரிக்கப்படவனாக, சிறந்த ஆடைகளை உடுத்தியவனாக, அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவனாக ஆகாயத்தில் இருந்தான். இவ்வுலகத்தில் தகுதியுடன் செயல்பட்டவர்களால் செலுத்தப்பட்ட எண்ணற்ற தெய்வீகத் தேர்கள் அவனைச் சுற்றிலும் இருந்தன.(11) தெய்வீகத் தேரொன்றில் அமர்ந்திருந்த அந்தப் பறவையானவன், இவ்வுலகில் தான் செய்த செயல்களுக்கு உரிய கௌரவங்களை அடைந்து, சொர்க்கத்திற்கு உயர்ந்து, தன் மனைவியின் துணையுடன் தொடர்ந்து இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தான்” {என்றார் பரசுராமர்}.(12)

வேடனின் கதி! – சாந்திபர்வம் பகுதி – 149-புறாக்கள் அடைந்த நற்பேற்றைக் கண்ட வேடன், தானும் அதே கதியை அடைய வேண்டும் என்றெண்ணி நெடும்பயணம் மேற்கொண்டான்; இறுதியில் ஒரு பெருங்காட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் நுழைந்து சொர்க்கத்தை அடைந்தான்; இந்தக் கதையைச் சொல்லி, இதனைக் கேட்பதன் மூலம் ஒருவன் அடையும் பலனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, ஓ! மன்னா, அந்த இணை {புறாக்கள்} தெய்வீகத் தேரில் அமர்ந்திருப்பதை வேடன் கண்டான். அந்த இணையைக் கண்ட அவன் {வேடன்}, (தன் பேறின்மையை நினைத்துக்) கவலையில் நிறைந்தவனாக, அதே கதியை அடையும் வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(1) அவன் தனக்குள்ளேயே, “அந்தப் புறாவைப் போன்ற துறவுகளின் மூலம் நான் அத்தகைய உயர்ந்த கதியை அடைய வேண்டும்” என்று நினைத்தான். பறவைகளைக் கொன்று வாழ்ந்த அந்த வேடன் இந்தத் தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, திரும்பி வராத பயணத்திற்குப் புறப்பட்டான்.(2) (உணவை அடைவதற்கு) எந்த முயற்சியும் செய்யாமல், காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த அவன், சொர்க்கத்தை அடையும் விருப்பத்தால் தன் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டான்.(3)

சிறிது தொலைவுக்குச் சென்றதும், பரந்ததும், குளுமையான தூய நீர் நிறைந்ததும், தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதும், பல்வேறு வகை நீர்க்கோழிகளால் நிறைந்ததுமான ஓர் இனிமையான தடாகத்தைக் கண்டான்.(4) அத்தகைய தடாகத்தைப் பார்ப்பதாலேயே ஒருவனுடைய தாகம் தணிந்து விடும் என்பதில் ஐயமில்லை. ஓ! மன்னா {முசுகுந்தா}, எனினும் நோன்புகளால் மெலிந்திருந்த அந்த வேடன்,(5) அதில் தன் கண்களைச் செலுத்தாமல், இரைதேடும் விலங்குகள் வசித்த ஒரு காட்டின் பெரும்பரப்பை முன்கூட்டிய உறுதி செய்துகொண்டு, அதற்குள் மகிழ்ச்சியாக நுழைந்தான். அந்தக் காட்டுக்குள் நுழைந்தபிறகு, அவன் கூர் முனைகளைக் கொண்ட முட்களால் பெரிதும் பீடிக்கப்பட்டான்.(6)

அந்த முட்களால் கிழிபட்டு, புண்ணடைந்து, மேனியெங்கும் குருதியால் மறைக்கப்பட்ட அவன், பல்வேறு வகை விலங்குகள் நிறைந்ததும், மனிதர்களற்றதுமான அந்தக் காட்டில் திரியத் தொடங்கினான்.(7) பலமிக்கக் காற்றால் பெருமரங்களுக்கிடையில் நடந்த உராய்வின் விளைவாக ஒரு பெரிய காட்டுத்தீ எழுந்தது.(8) சீற்றமிக்க அந்தப் பூதம் {அக்னி}, யுக முடிவில் ஏற்படுவதைப் போலத் தன் காந்தியை வெளிப்படுத்திக் கொண்டு, நெடுமரங்கள், அடர்த்தியான புதர்கள் மற்றும் கொடிகளால் நிறைந்த அந்தப் பெருங்காட்டை எரிக்கத் தொடங்கியது.(9)

உண்மையில், காற்றின் மூலம் வீசப்பட்ட தழல்களுடனும், அனைத்துத் திசைகளிலும் பறக்கும் கீற்றுக் கூட்டங்களுடனும் கூடியவனும், அனைத்தையும் எரிப்பவனுமான அந்தத் தேவன் {அக்னி}, பறவைகளும், விலங்குகளும் நிறைந்த அந்த அடர்த்தியான காட்டை எரிக்கத் தொடங்கினான்.(10) தன் உடலைக் கைவிட விரும்பிய அந்த வேடன், பரவும் தீயை நோக்கி மகிழ்ச்சியான இதயத்துடன் ஓடினான்” {என்றார் பரசுராமர்}.(11) ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்நெருப்பால் எரிக்கப்பட்ட அந்த வேடன், தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்தவனாக, உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(12)

அவனது இதய நோய் விலகியது; இறுதியில் அவன், யக்ஷர்கள், கந்தர்வர்கள் மற்றும் தவ வெற்றியால் மகுடம்சூட்டப்பட்டவர்களுக்கு மத்தியில் இந்திரனைப் போன்ற காந்தியுடன் சொர்க்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருப்பவனாகத் தன்னைத் தானே கண்டான்.(13) இவ்வாறு அந்தப் புறாவும், அர்ப்பணிப்புமிக்க அதன் மனைவியும், அந்த வேடனுடன் சேர்ந்து தங்கள் தகுதிமிக்கச் செயல்களால் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(14) இவ்வாறு தன் தலைவனைப் பின்தொடரும் {தன் தலைவனிடம் அர்ப்பணிப்பு கொண்ட} ஒரு பெண், விரைவாகச் சொர்க்கத்தை அடைந்து, நான் சொன்ன பெண்புறாவைப் போலக் காந்தியுடன் ஒளிர்வாள்[1].(15)இதுவே அந்த உயர் ஆன்ம வேடன் மற்றும் புறாவின் பழைய வரலாறாகும். இவ்வாறே அவர்கள் தங்கள் அறச் செயல்களால் உயர்ந்த தகுதியுள்ள கதியை அடைந்தனர்.(16) இந்தக் கதையைத் தினமும் கேட்கவோ, தினமும் உரைக்கவோ செய்பவனின் மனத்தில் தவறுகள் ஊடுருவினாலும் அவனுக்கு எந்தத் தீங்கும் நேராது.(17) ஓ! யுதிஷ்டிரா, ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவனே, சரணடைந்த ஒருவனைக் காப்பது உண்மையில் தகுதியுடையவோரின் உயர்ந்த செயலாகும். பசுவைக் கொன்றவனும், இந்தக் கடமையைச் செய்தால், அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடைவான்.(18) எனினும், சரணடைந்தவனைக் கொல்லும் மனிதனோ, ஒருபோதும் {அந்தப் பாவத்திலிருந்து} தூய்மையடையமாட்டான். புனிதமானதும், பாவத்தைத் தூய்மைப்படுத்துவதுமான இந்தக் கதையைக் கேட்பதன் மூலம் ஒருவன் துன்பத்தில் இருந்து விடுபட்டு, இறுதியில் சொர்க்கத்தை அடைவான்” என்றார் {பீஷ்மர்}.(19)

இந்திரோதரின் வன்கண்டனம்! – சாந்திபர்வம் பகுதி – 150-அறியாமல் செய்யப்பட்ட பாவத்தைத் தணிக்கும் காரியத்தை விளக்க ஜனமேஜயனின் வரலாற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதர்களில் சிறந்தவரே, அறியாமையால் ஒருவன் பாவமிழைத்துவிட்டால், அவனால் எவ்வாறு அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடைய முடியும்? இது குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, சுனகரின் மகனான மறுபிறப்பாளர் இந்திரோதரால் ஜனமேஜயனுக்குச் சொல்லப்பட்டதும், முனிவர்களால் புகழப்படுவதுமான பழைய உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில் பரிக்ஷித்தின் மகனும், ஜனமேஜயன்[1] என்றழைக்கப்பட்டவனும், பெரும் சக்தியுடையவனுமான ஒரு மன்னன் இருந்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பூமியின் தலைவன், அறியாமல் ஒரு பிராமணனைக் கொன்ற குற்றவாளியானான்.(3) இதனால், அவனது புரோகிதரோடு சேர்ந்து பிராமணர்கள் அனைவரும் அவனைக் கைவிட்டனர். பகலும் இரவும் வருத்தத்தால் எரிந்த அந்த மன்னன் காடுகளுக்குள் ஓயச் சென்றான்.(4) குடிமக்களாலும் கைவிடப்பட்ட அவன், உயர்ந்த தகுதியை அடைவதற்காக இந்த நடவடிக்கையை எடுத்தான். வருத்ததால் எரிந்த அந்த ஏகாதிபதி, கடுந்தவங்களைச் செய்தான்.(5)

[1] இந்தப் பரிக்ஷித்தும், ஜனமேஜயனும், அர்ஜுனனின் பேரனும், கொள்ளுப் பேரனும் கிடையாது. பழங்காலத்தைச் சேர்ந்த இவர்கள் வேறு.

பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} செய்த பாவத்தைக் கழுவுவதற்காகப் பல பிராமணர்களை விசாரித்தபடி நாடுவிட்டு நாடு சென்று மொத்த உலகத்திலும் திரிந்து கொண்டிருந்தான்.(6) அவன் பாவக்கழிப்படைந்த கதையை இப்போது நான் உனக்குச் சொல்கிறேன். தன் பாவச் செயலை நினைத்து எரிந்து கொண்டிருந்த ஜனமேஜயன், அவ்வாறு திரிந்து கொண்டே இருந்தான்.(7) ஒருநாள் அவ்வாறு அவன் திரிந்து கொண்டிருந்தபோது, கடும் நோன்புகளைக் கொண்டவரும், சுனகரின் மகனுமான இந்திரோதரைச் சந்தித்து, அவரை அணுகி அவரது பாதங்களைத் தீண்டினான்.(8)

தன் முன்னே இருக்கும் மன்னனைக் கண்ட அந்தத் தவசி அவனை வன்மையாகக் கண்டிக்கும் வகையில், “நீ பெரும் பாவத்தை இழைத்தவனாவாய். நீ கருவைக் கொன்ற குற்றவாளியாவாய். நீ ஏன் இங்கு வந்தாய்?(9) எந்தக் காரியம் உன்னை இங்கே கொண்டு வந்தது? எந்த வழிமுறைகளிலும் நீ என்னைத் தீண்டாதே. போ, சென்றுவிடு. நீ இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை.(10) உன் மேனி குருதியைப் போல நாறுகிறது. உன் தோற்றம் சவத்தைப் போல இருக்கிறது. தூய்மையற்றவனாக இருப்பினும் தூயவன் போலத் தெரியும் நீ, இறந்தும் உயிருள்ளவன் போல நகர்ந்து கொண்டிருக்கிறாய்.(11) எப்போதும் பாவத்தையே நோக்கமாகக் கொண்டதால் உள்ளூர இறந்தவனான நீ தூய்மையற்ற ஆன்மா கொண்டவனாவாய். உறங்கி விழிப்பவனாக இருப்பினும், உன் வாழ்வு பெருந்துயரிலேயே கடக்கிறது.(12) ஓ! மன்னா, உன் வாழ்வு பயனற்றதாகும். மிக அவலமான வாழ்வை நீ வாழ்கிறாய். உன்னதமற்ற பாவ காரியங்களுக்காகவே நீ படைக்கப்பட்டிருக்கிறாய். தந்தைமார், பல்வேறு வகை அருள்களை அடைவதற்காக மகன்களை விரும்புகிறார்கள். அவர்கள் வேள்விகளையும், தவங்களையும் செய்வார்கள் என்று நம்பி, தேவர்களை வழிபட்டு, துறவைப் பயில்கிறார்கள்.(14)

உன் மொத்த குலத்தின் மூதாதையரும் உன் செயல்களின் விளைவால் நரகத்தில் வீழ்ந்துவிட்டதைப் பார். உன் தந்தைமார் {மூதாதையர்} வைத்திருந்த நம்பிக்கைகள் அனைத்தும் கனியற்றவையாகின.(15) பிற மனிதர்கள் யாரை வழிபட்டு நீண்ட வாழ்வையும், புகழையும், சொர்க்கத்தையும் அடைகிறார்களோ, அந்தப் பிராமணர்களிடம் நீ எப்போதும் வெறுப்பும், வன்மமும் கொண்டவனாக இருப்பதால் நீ வீணாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.(16) (நேரம் வரும்போது) இவ்வுலகத்தை விட்டுச் செல்லும் நீ, உன் பாவச் செயல்களின் விளைவால், தலைகுப்புற (நரகத்தில்) விழுந்து, அந்நிலையிலேயே எண்ணற்ற ஆண்டுகள் நீடித்திருப்பாய்.(17) அங்கே இரும்பு அலகுகளைக் கொண்ட கழுகுகள் மற்றும் மயில்களால் நீ துன்புறுத்தப்படுவாய். அதன் பிறகு அங்கிருந்து இந்த உலகத்திற்கு வரும் நீ, இழிந்த வகை உயிரினங்களில் உன் பிறப்பை எடுப்பாய்.(18) ஓ! மன்னா, இந்த உலகம் {இம்மை} ஒன்றுமில்லாதது, அடுத்த உலகம் {மறுமை} நிழலின் நிழலாகும் என நீ நினைத்தால், நரக உலகங்களின் யம தூதர்கள், உன் நம்பிக்கையின்மையைக் களைந்து, உன்னை நம்ப வைப்பார்கள்” என்றார் {இந்திரோதர்}.(19)

ஜனமேஜயன் ஏற்ற உறுதிமொழி! – சாந்திபர்வம் பகுதி – 151-தான் செய்த பாவங்களுக்காக வருந்துவதாகவும், தன்னைக் கண்டிப்பது தகுந்ததே என்றும் இந்திரோதரிடம் ஜனமேஜயன் சொல்வது; பிராமணர்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன் என்ற உறுதிமொழியேற்றுக் கொண்டால் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொள்வதாகச் சொன்ன இந்திரோதர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு சொல்லப்பட்ட ஜனமேஜயன், அந்தத் தவசியிடம் {இந்திரோதரிடம்}, “கண்டிக்கத் தகுந்தவனையே நீர் கண்டிக்கிறீர். பழிக்கத்தக்கவனையே நீர் பழிக்கிறீர்.(1) என்னையும், என் செயல்களையும் நீர் கடிந்துரைக்கிறீர். என்னிடம் கருணை கொள்ளுமாறு நான் உம்மை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். என் செயல்கள் அனைத்தும் பாவம் நிறைந்தவையே. எனினும், நெருப்புக்கு மத்தியில் இருப்பவனைப் போல நான் வருந்துகிறேன்.(2) என் செயல்களை நினைத்து என் மனம் மிகவும் உற்சாகமிழக்கிறது. உண்மையில் நான் யமனைக் குறித்து அதிகம் அஞ்சுகிறேன்.(3) என் இதயத்தில் இருந்து அந்தக் கணையைப் பிடுங்காமல் என்னால் எவ்வாறு உயிரைத் தாங்கிக் கொள்ள முடியும்? ஓ! சௌனகரே {சுனகரின் மகனே [இந்திரோதரே]}, உமது கோபத்தை அடக்கி, இப்போது எனக்குப் போதிப்பீராக.(4) முந்தைய காலத்தில் பிராமணர்களிடம் நான் பெரும் மதிப்பைக் காட்டினேன். அவர்களிடம் அதே மதிப்பையே மீண்டும் காட்டுவேன் என நான் உளமாற அறிவிக்கிறேன். என் குலம் அழிய வேண்டாம். நான் பிறந்த குலம் புழுதியில் மூழ்க வேண்டாம்.(5)

பிராமணர்களுக்குத் தீங்கிழைத்தவர்கள், அதன் காரணமாக, வேத ஆணைகளின் விளைவால் உலகம் குறித்த அனைத்து உரிமைகளையும், சக மனிதர்களுடனான சமூகச் சேர்க்கையையும் இழந்தவர்கள், தங்கள் குலங்கள் தொடரத் தங்கள் பெயர்களைத் தாங்கும் எவனையும் கொண்டிருப்பது முறையாகாது.(6) நான் துயரில் மூழ்கியிருக்கிறேன். எனவே, (என் நடத்தையைச் சரி செய்து கொள்வதைக் குறித்த) என் தீர்மானங்களை நான் மீண்டும் சொல்கிறேன். ஏழைகளைப் பாதுகாப்பதற்காகக் கொடைகளை ஏற்காத தவசிகளைப் போல என்னைப் பாதுகாக்குமாறு நான் உம்மை வேண்டுகிறேன்.(7) பாவிகளான அற்பர்கள், வேள்விகளைத் தவிர்ப்பதால் ஒருபோதும் சொர்க்கத்தை அடைவதில்லை.[1] (இந்த உலகத்தை விட்டுச்) சென்றதும், புளிந்தர்களையும், காசர்களையும் போல அவர்கள் நரகக் குழிகளிலேயே தங்கள் காலத்தைக் கழிப்பார்கள்[2].(8) கல்விமானான ஓர் ஆசான் தன் சீடனுக்கோ, ஒரு தந்தையானவர் தனது மகனுக்கோ ஞானத்தைக் கொடுப்பதைப் போல அறியாமை கொண்ட எனக்கு நீர் அதை {ஞானத்தைக்} கொடுப்பீராக. ஓ! சௌனகரே, என்னிடம் நிறைவு கொள்வீராக” என்றான் {ஜனமேஜயன்}.(9)சௌனகர் {இந்திரோதர் ஜனமேஜயனிடம்}, “ஞானமில்லாத ஒருவன், பல முறையற்ற செயல்களைச் செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? இஃதை அறிந்த ஒரு ஞானமுள்ள மனிதன், உயிரினங்கள் (மடமையால் செய்யும் குற்றங்களில்) ஒருபோதும் கோபமடைவதில்லை[3].(10) ஞான மாளிகையின் உச்சியில் ஏறிய ஒருவன், பிற மக்களின் துயருக்கான பொருளாகி, அவர்களுககாக வருந்தினால், அவனது சுயம் {ஆன்மா} மிகத் தூய்மையானதாக இருக்க வேண்டும். ஒருவனுடைய ஞானத்தின் விளைவால் அவன் மலையுச்சியில் இருந்து கொண்டு கீழிருக்கும் மக்களை ஆய்வு செய்பவனைப் போல, உலகின் உயிரினங்கள் அனைத்தையும் ஆய்வு செய்கிறான்.(11) எவன் நல்லோரின் கடிந்துரைக்குப் பொருளாகிறானோ, எவன் நல்லோரை வெறுப்பானோ, எவன் அவர்களின் பார்வையில் இருந்து தன்னை மறைத்துக் கொள்வானோ அவனால் ஒருபோதும் எந்த அருளையும் அடைவதில் வெல்ல முடியாது, அவன் ஒருபோதும் செயல்களின் முறைமைகளை {ஒழுங்குமுறைகளைப்} புரிந்து கொள்ளவே மாட்டான்[4].(12) வேதம் மற்றும் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி பிராமணனின் சக்தியையும், உன்னதத்தன்மையையும் நீ அறிவாய். எந்த வழியில் உன் இதயம் அமைதியை அடையமோ அஃதை இப்போதே செய்து, பிராமணர்களையே உன் புகலிடமாக்கிக் கொள்வாயாக.(13) உன் மேலுள்ள கோபத்தைப் பிராமணர்கள் நிறுத்திக் கொண்டால், அதுவே சொர்க்கத்தில் உன் இன்பநிலையை உறுதிசெய்யும். மேலும், பாவத்துக்கு நீ வருந்துவாயானால், உன் பார்வை தெளிவடையும், அறங்காண்பதில் நீ வெல்வாய்” என்றார் {இந்திரோதர்}.(14)ஜனமேஜயன், “நான் என் பாவங்களுக்காக வருந்துகிறேன். அறத்தை அழிக்க நான் ஒருபோதும் முயல மாட்டேன். நான் அருளை அடையவே விரும்புகிறேன். என்னிடம் நீர் நிறைவு கொள்வீராக” என்றான்.(15)

சௌனகர் {இந்திரோதர்}, “ஓ! மன்னா, ஆணவத்தையும், செருக்கையும் அகற்றி, நீ என்னிடம் மரியாதை காட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன்[5]. அறக்கட்டளைகளை எப்போதும் நினைவுகூர்பவனாக, அனைத்து உயிரினங்களின் நன்மையில் நீ ஈடுபடுவாயாக.(16) அச்சத்தாலோ, குறுகிய மனத்தாலோ, பேராசையாலோ நான் உன்னைக் கண்டிக்கவில்லை. நான் சொல்லப்போகும் உண்மையின் வார்த்தைகளை இங்கிருக்கும் பிராமணர்களோடு சேர்ந்து கேட்பாயாக.(17) நான் எதையும் கேட்கவில்லை. எனினும், அறவழிகளை நான் உனக்குப் போதிப்பேன். (நான் இப்போது செய்யப் போகும் செயலுக்காக) அனைவரும் என்னை நிந்தித்து {தவளைகள் போல், கழுதைகள் போல்) கத்தவும், கதறவும் செய்வார்கள்.(18) அவர்கள் என்னைப் பாவி என்றும் அழைக்கக்கூடும். என் சொந்தங்களும், நண்பர்களும் என்னை விலக்கக்கூடும்[6]. எனினும், என் சொந்தங்களும், நண்பர்களும், நான் பேசப்போகும் வார்த்தைகளைக் கேட்டு, வாழ்வின் கடினங்களை நிச்சயம் விரைவாகக் கடப்பார்கள்.(19) பெரும் ஞானம் கொண்ட சிலர் (என் நோக்கங்களைச்) சரியாகப் புரிந்து கொள்வார்கள். ஓ! குழந்தாய், ஓ! பாரதா, பிராமணர்களைக் குறித்த என் பார்வைகள் என்ன என்பதை அறிந்து கொள்வாயாக.(20) என் முயற்சிகளின் மூலம் (நான் சொல்வதைக் கேட்ட பிறகு) அவர்கள் அனைத்து அருளையும் அடையும் வகையில் செயல்படுவாயாக. ஓ! மன்னா, பிராமணர்களுக்கு மீண்டும் தீங்கிழைக்கமாட்டேன் என்ற உறுதிமொழியையும் நீ அளிப்பாயாக” என்றார் {இந்திரோதர்}.(21)ஜனமேஜயன், “எண்ணத்தாலோ, வார்த்தையாலோ, செயலாலோ, நான் இனி ஒருபோதும் பிராமணர்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன் என்று உமது பாதங்களைத் தீண்டி உறுதிமொழியேற்கிறேன்” என்றான்.(22)

இந்திரோதரின் நீதி! – சாந்திபர்வம் பகுதி – 152-இந்திரோதர் ஜனமேஜயனுக்குச் சொன்ன அறிவுரைகள்; ஜனமேஜயனைப் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து, அவனுக்குக் குதிரை வேள்வி செய்து கொடுத்த இந்திரோதர்…

சௌனகர் {இந்திரோதர் ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்தக் காரணங்களுக்காக, மிகக் கலங்கிய இதயம் கொண்ட உன்னிடம் நான் அறம் குறித்து உரையாடப்போகிறேன். அறிவையும், பெரும்பலத்தையும், நிறைவான இதயத்தையும் கொண்ட நீ, அறத்தைத் தானாக விரும்பி நாடுகிறாய்.(1) ஒரு மன்னன், முதலில் மிகக் கடுமையானவனாகி, பிறகு கருணையைக் காட்டி, தன் செயல்களின் மூலம் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையைச் செய்கிறான். இது நிச்சயம் மிக ஆச்சரியமானதே ஆகும்.(2) நீ முதலில் கடுமையானவனாக இருந்தாய். ஆனால் இப்போதோ, அறம் நோக்கி உன் கண்களைத் திருப்பியிருக்கிறாய்.(3) ஆடம்பர உணவு மற்றும் இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் கைவிட்டு, நீண்ட காலமாகவே நீ கடுந்தவங்களைச் செய்து வருகிறாய். ஓ! ஜனமேஜயா, பாவத்தில் மூழ்கியிருக்கும் மன்னர்களிடம் இவையனைத்தும் {காணப்படுவது} நிச்சயம் ஆச்சரியமானதே.(4)

செல்வமிக்கவன் பரந்த மனம் கொண்டவனாவதோ, தவத்தைச் செல்வமாகக் கொண்ட ஒருவன், அதை {தவசக்தியைச்} செலவு செய்யத் தயங்குவதோ ஒருபோதும் ஆச்சரியமானதில்லை. ஒருவர் மற்றொருவரிடமிருந்து தொலைவில் வாழ்வதில்லை என்று சொல்லப்படுகிறது[1].(5) எது தவறாகத் தீர்மானிக்கப்படுகிறதோ, அஃது அதிகமான துன்பத்தையே உண்டாக்கும். மறுபுறம், எது நல்ல உறுதியான தீர்மானத்தின் துணையுடன் நிறைவேற்றப்படுகிறதோ, அது சிறப்பான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது[2].(6) ஓ! பூமியின் தலைவா, வேள்வி, கொடை, கருணை, வேதங்கள், உண்மை ஆகிய இவ்வைந்தும் தூய்மைப்படுத்துவனவாகும். ஆறாவதானது, நன்றாகச் செய்யப்படும் தவமாகும். ஓ! ஜனமேஜயா, இறுதியானது {தவமானது} மன்னர்களுக்கு உயர்வான தூய்மையைத் தரும்.(7) அதை நீ முறையாகக் கைக்கொண்டால், நீ நிச்சயம் பெரும் தகுதியையும் {புண்ணியத்தையும்}, அருளையும் ஈட்டுவாய். புனிதத் தலங்களுக்குப் பயணம் செய்வதும் உயர்ந்த தூய்மையைத் தரும் என்று சொல்லப்படுகிறது.(8)இது தொடர்பாக யயாதி பாடிய பின்வரும் சுலோகம் குறிப்பிடப்படுகிறது: “எந்த மனிதன் உயிரையும், நீண்ட வாழ்வையும் ஈட்டுவானோ, அவன் அர்ப்பணிப்புடன் வேள்விகளைச் செய்த பிறகு, அவற்றை (முதிர்ந்த வயதில்) கைவிட்டு {துறந்து}, தவங்களைச் செய்ய வேண்டும்” {என்பது அந்த ஸ்லோகம்}.(9) குருவின் களம் {குருக்ஷேத்திரம்} புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. சரஸ்வதி ஆறு அதைவிடப் புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. சரஸ்வதியைவிட, சரஸ்வதியில் உள்ள தீர்த்தங்கள் இன்னும் அதிகமான புனிதம் கொண்டதாகச் சொல்லப்படுகிறது; சரஸ்வதியில் உள்ள தீர்த்தங்கள் அனைத்தையும்விடப் பிருதூதகம்[3] என்றழைக்கப்படும் தீர்த்தம் மிகப் புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. பிருதூதகத்தில் நீராடி, அதன் நீரைப் பருகிய ஒருவன், அகால மரணமடையமாட்டான்.(10) மஹாஸரஸுக்கும், புஷ்கரை என்ற பெயரில் இருக்கும் தீர்த்தங்கள் அனைத்திற்கும், பிரபாஸத்துக்கும், மானஸத்தின் {மானசரோவரின்} வடக்குத் தடாகத்துக்கும் {உத்தர மானஸத்துக்கும்}, காலோதகத்துக்கும் நீ செல்ல வேண்டும். அதன் பிறகு, நீ உயிரையும், நீண்ட வாழ்நாளையும் அடைவாய்.(11) சரஸ்வதியும், திருஷத்வதியும் ஒன்றுகலக்கும் இடத்திலேயே மானஸத் தடாகம் இருக்கிறது[4]. வேத அறிவைக் கொண்ட மனிதர்கள் இந்த இடங்கள் அனைத்திலும் நீராட வேண்டும். கடமைகள் அனைத்திலும் ஈகையே சிறந்தது என்றும், ஈகையைவிடத் துறவு சிறந்ததென்றும் மனு சொல்லியிருக்கிறார்.(12)இது தொடர்பாகச் சத்தியவான் செய்த பின்வரும் ஸ்லோகம் குறிப்பிடப்படுகிறது. “ஒரு குழந்தையைப் போல எளிமைமிக்கவனாகவும், தகுதியோ {புண்ணியமோ}, பாவமோ அற்றவனாகவும் (ஒருவன்) செயல்பட வேண்டும்.(13) அனைத்து உயிரினங்களையும் பொறுத்தவரையில், இவ்வுலகில் துன்பமோ இன்பமோ கிடையாது. (துன்பம் என்று அழைக்கப்படுவதும், இன்பம் என்று அழைக்கப்படுவதும், தவறாக உண்டான கற்பனையின் விளைவுகளே ஆகும்). இதுவே அனைத்து உயிரினங்களின் உண்மையான இயல்பாகும்.(14) அனைத்து உயிரினங்களிலும், துறவை மேற்கொண்டு, தகுதிமிக்க {புண்ணியமான}, பாவம் நிறைந்த செயல்கள் இரண்டையும் தவிர்ப்பவர்களின் வாழ்வே மேன்மையானதாக இருக்கிறது” {இதுவரை உள்ளதே சத்தியவானின் ஸ்லோகமாக இருக்க வேண்டும்}. ஒரு மன்னனுக்குச் சிறப்புடைய செயல்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன்.(15) ஓ! மன்னா {ஜனமேஜயா}, வலிமையையும், ஈகையையும் வெளிப்படுத்தி நீ சொர்க்கத்தை வெல்வாயாக. வலிமை மற்றும் சக்தியின் பண்புகளைக் கொண்ட மனிதனே அறமீட்டுவதில் வெல்கிறான்[5].(16)ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிராமணர்களுக்காகவும், இன்பத்துக்காகவும் இந்தப் பூமியை நீ ஆள்வாயாக. நீ முன்பு பிராமணர்களைப் பழித்தாய். இப்போது அவர்களை நிறைவு செய்வாயாக.(17) {முன்பு} உனக்கு ஐயோ என்று அவர்கள் கதறி இருந்தாலும், அவர்களை நீ கைவிட்டிருந்தாலும், தன்னறிவால் வழிநடத்தப்படும் நீ, ஒருபோதும் அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்லை என்று முழுப் பற்றுடன் உறுதியேற்பாயாக. உனக்குத் தகுந்த செயல்களில் ஈடுபட்டு, உனக்கான உயர்ந்த நன்மையை நாடுவாயாக.(18) ஆட்சியாளர்களில் சிலர் பனிபோல் குளுமையாக இருக்கிறார்கள்; சிலர் நெருப்பைப் போலச் சீற்றத்துடன் இருக்கிறார்கள்; சிலர் ஏரை {கலப்பையைப்} போல (தங்கள் எதிரிகளை வேரோடு பிடுங்குபவர்களாக) இருக்கிறார்கள்; மேலும் சிலரோ இடியைப் போல (திடீரெனத் தங்கள் எதிரிகளை எரிப்பவர்களாக) இருக்கிறார்கள்.(19) தன்னழிவைத் தவிர்க்க விரும்புபவன், பொதுவாகவோ, சிறப்பான காரணங்களுக்காகவோ தீய அற்பர்களுடன் ஒருபோதும் கலவாமல் இருக்க வேண்டும்.(20)

ஒரு முறை மட்டுமே செய்யப்பட்ட பாவச் செயலுக்காக ஒருவன் வருந்துவதன் மூலம் அவன் தூய்மையடையலாம். இருமுறை செய்யப்பட்ட பாவச் செயலுக்காக, இனி ஒருபோதும் அதைச் செய்வதில்லை என்று உறுதியேற்பதன் மூலம் அவன் தூய்மையடையலாம்.(21) மும்முறை செய்யப்பட்ட பாவச் செயலுக்காக, இனி எப்போதும் அறம் மட்டுமே பயில்வேன் என்ற தீர்மானத்தின் மூலம் அவன் தூய்மையடையலாம். அத்தகைய செயலை மீண்டும் மீண்டும் செய்திருந்தால், அவன் புனிதத் தலங்களுக்குப் பயணிப்பதன் மூலம் தூய்மையடையலாம். செழிப்பில் விருப்பம் உள்ள ஒருவன், அருள்நிலையையே விளைவாகக் கொண்ட அனைத்தையும் செய்ய வேண்டும்.(22) நறுமணங்களுக்கு மத்தியில் வாழ்பவர்கள் அதன் விளைவாக நறுமணமாகவே இருப்பார்கள். மறுபறம் கடும் நாற்றத்திற்கு மத்தியில் வாழ்பவர்கள் இழிவாகவே இருப்பார்கள்.(23) தவத்துறவுகளைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ள ஒருவன், விரைவில் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். (ஹோம) நெருப்பை ஒரு வருடம் வழிபடுவதன் மூலம் ஒருவன் பல்வேறு வகைப் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(24)

கருவைக் கொன்ற குற்றத்தைச் செய்த ஒருவன், நெருப்பை மூன்று வருடங்கள் வழிபடுவதன் மூலம் தூய்மையடைகிறான். கருவைக் கொன்ற குற்றவாளியானவன், மஹாசரஸ், புஷ்கரை, பிரபாசம், வட மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தங்களுக்குப் புறப்பட மட்டுமே செய்தாலும், அவற்றில் இருந்து ஒரு நூறு யோஜனைகள் தொலைவிலேயே தூய்மையடைகிறான்[6].(25) உயிரினங்களைக் கொன்றவன், எத்தனை உயிரினங்களைக் கொன்றானோ, அதே அளவுக்கு அந்த வகை உயிரினங்களைக் கடும் துன்பத்தில் இருந்து காப்பதன் மூலம் தன் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(26) அகமர்ஷன மந்திரங்களை மூன்று முறை உரைத்த பிறகு, நீரில் மூழ்குவதன் மூலம் ஒருவன், ஒரு குதிரை வேள்வியில் {அஸ்வமேத யாகத்தில்} இறுதி நீராடிய கனிகளை அறுவடை செய்யலாம் என்று மனு சொல்லியிருக்கிறார்[7].(27) அத்தகைய செயலானது ஒருவனுடைய பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்குவதன் விளைவாக, அவன் உலகில் மதிப்பையும் அடைகிறான். (தங்களைச் சுற்றியிருப்போருக்குக் கீழ்ப்படியும்) ஆதரவற்ற மூடர்களைப் போல அனைத்து உயிரினங்களும் அத்தகைய மனிதனுக்குக் கீழ்ப்படியும்.(28)ஓ! மன்னா {ஜனமேஜயா}, பழங்காலத்தில், தேவர்களும், அசுரர்களும், தேவர்களின் ஆசானான பிருஹஸ்பதியை அணுகி அவரிடம் பணிவாக, “ஓ! பெரும் முனிவரே, அறத்தின் கனிகளை நீர் அறிவீர், அதேபோல, மறுமையில் நரகத்திற்கு வழிவகுக்கும் பிற செயல்களின் கனிகளையும் நீர் அறிவீர்.(29) எவனிடம் (துன்பம் மற்றும் இன்பம் ஆகிய) இரண்டும் இணையாக இருக்கிறதோ, அவன் தகுதி {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகிய இரண்டில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள மாட்டானா? ஓ! பெரும் முனிவரே, அறவோரின் கனிகள் என்ன என்பதையும், ஓர் அறவோன் தன் பாவங்களை எவ்வாறு அகற்றுகிறான் என்பதையும் எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டனர்.(30)

பிருஹஸ்பதி, “மடமையினால் ஒருவன் பாவம் செய்திருந்தால், அவன் தகுதிவாய்ந்த {புண்ணியமான} செயல்களின் இயல்பைப் புரிந்து கொண்டு அவற்றைச் செய்வான் என்றால், காரங்களின் மூலம் அழுக்குத் துணியை வெளுப்பதைப் போல அவன் அத்தகைய அறத்தின் மூலம், தன் பாவத்திலிருந்து தூய்மையடையலாம்.(31) பாவத்தை இழைத்துவிட்டு ஒருவன் தற்புகழ்ச்சி செய்யக்கூடாது. நம்பிக்கையின் மூலமும், வன்மத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலமும் அவன் அருள்நிலையை அடைவதில் வெல்வான்.(32) நல்லோரின் குற்றங்கள் வெளிப்படும்போது, அதை மறைப்பவன், குற்றங்களை இழைத்தவனாக இருந்தாலும் அருள்நிலையை அடைவான்.(33) காலையில் எழும் சூரியன், இருளனைத்தையும் விலக்குவதைப் போலவே, அறச்செயல்களின் மூலம் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தையும் விலக்கிக் கொள்கிறான்” என்று பதிலுரைத்தார் {என்றார் இந்திரோதர்}”.(34)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சுனகரின் மகனான இந்திரோதர், மன்னன் ஜனமேஜயனிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, குதிரை வேள்வியைச் செய்து கொடுப்பதில் அவனுக்குத் துணையாக இருந்தார்.(35) தன் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தவனும், அருள் நிலையை மீண்டும் அடைந்தவனும், சுடர்மிக்க நெருப்பைப் போலக் காந்தியுடன் ஒளிர்ந்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த மன்னன் {ஜனமேஜயன்}, முழுவடிவைக் கொண்ட சோமன் சொர்க்கத்தில் நுழைவதைப் போலத் தன் நாட்டுக்குள் நுழைந்தான்” {என்றார் பீஷ்மர்}.(36)

மாண்டோர் மீள்வரோ? – சாந்திபர்வம் பகுதி – 153-இறந்து போன ஒரு பிராமணப் பிள்ளைக்கு இறுதி காரியங்களைச் செய்யச் சுடுகாட்டுச் சென்ற உற்றார் உறவினர்; துயர் தாளாமல் அழுது கொண்டிருக்கும் அவர்களை விரைவில் அங்கிருந்து போகச் சொன்ன கழுகு; பிள்ளை மீது கொண்ட பாசத்தை நினைவுகூரச் செய்து அவர்களை அங்கேயே தங்கச் செய்த நரி; சாத்திரங்களை அறிந்த ஞானமிக்கக் கழுகும், நரியும் மீண்டும் மீண்டும் அவர்களுக்குப் போதித்த அறிவுரைகள்; செய்வதறியாமல் திகைத்து நின்ற உற்றார் உறவினர்; கழுகு மற்றும் நரியின் தந்திரங்கள்; மகாதேவன் சங்கரனின் பெருமை.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மரணமடைந்த பிறகு உயிர் மீண்ட எந்த மனிதனையாவது நீர் பார்த்ததோ, கேட்டதோ உண்டா?”(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, பழங்காலத்தில் ஒரு கழுகுக்கும், நரிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட இந்தக் கதையைக் கேட்பாயாக. உண்மையில், இந்தக் கதை நைமிசக்காட்டில் {வைதிச நகரத்தில்}[1] நடைபெற்றது.(2) ஒரு காலத்தில் ஒரு பிராமணன், பெரும் சிரமங்களுக்குப் பிறகு, அகன்ற விழிகளைக் கொண்ட ஒரு மகனை அடைந்தான். அந்தப் பிள்ளை, குழந்தை பருவத்திற்குரிய உடல் வலிப்பால் மரணமடைந்தான்.(3) (அவனுடைய சொந்தக்காரர்கள்) சிலர், துயரால் மிகவும் கலக்கமடைந்து, உரத்த புலம்பல்களில் ஈடுபட்டு, அந்தக் குடும்பத்தின் ஒரே செல்வமான அந்த இளம்பிள்ளையை எடுத்துச் சென்றனர்.(4) இறந்து போன அந்தப் பிள்ளையை எடுத்துக் கொண்டு, சுடலையின் {சுடுகாட்டின்} திசையை நோக்கி அவர்கள் சென்றனர். அங்கே வந்து அந்தப் பிள்ளையை ஒருவர் மார்பில் ஒருவர் கிடத்திக் கொண்டு துயரால் கசந்து பெரிதும் அழுதார்கள்.(5) தங்கள் அன்புக்குரிய அந்தப் பிள்ளையின் முந்தைய பேச்சுகளைக் கனத்த இதயத்துடன் நினைவுகூர்ந்த அவர்களால், அவனது உடலை வெறுந்தரையில் விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்ப முடியவில்லை.(6)அவர்களது கதறல்களால் அழைக்கப்பட்ட ஒரு கழுகு அங்கே வந்து, இந்த வார்த்தைகளைச் சொன்னது: “இங்கிருந்து சென்றுவிடுங்கள், தாமதிக்காதீர்கள், ஒரே பிள்ளையாக இருந்தாலும் நீங்கள் இவனைக் கைவிடவே வேண்டும்.(7) காலப்போக்கில் இங்கே கொண்டுவரப்படும் ஆயிரக்கணக்கான ஆண்களையும், ஆயிரக்கணக்கான பெண்களையும் எப்போதும் இந்த இடத்திலே விட்டுவிட்டுச் சொந்தக்கார்கள் {உற்றார் உறவினர்} சென்றுவிடுவார்கள்.(8) இந்த மொத்த அண்டமும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் கட்டுப்பட்டது என்பதைக் காண்பீராக. சேர்க்கையும், பிரிவும் மீண்டும் மீண்டும் நேர்வதே காணப்படுகிறது.(9) சொந்தங்களின் சடலங்களைச் சுடலைக்குக் கொண்டுவருபவர்களும், (பற்றால்) அந்த உடல்களின் அருகில் அமர்ந்திருப்பவர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாழ்வுக்காலம் முடிந்ததும், தங்கள் செயல்களின் விளைவால் இந்தப் பூமியில் இருந்து {அவர்களும்} மறையவே செய்கிறார்கள்.(10) கழுகுகளும், நரிகளும், எலும்புகளும் நிறைந்ததும், ஒவ்வொரு உயிரினத்தையும் அச்சத்தில் ஆழ்த்துவதும், பயங்கரமான இடமுமான இந்தச் சுடலையில் நீங்கள் காலந்தாழ்த்துவதற்கு எந்த அவசியமும் இல்லை.(11) நண்பனோ, பகைவனோ, காலத்தின் ஆதிக்கத்திற்கு ஒருமுறை அடிபணிந்துவிட்டால், மீண்டும் அவனால் ஒருபோதும் உயிரோடு வர முடியாது. உண்மையில், உயிரினங்கள் அனைத்தின் விதியும் அத்தகையதே.(12) இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் இறப்பான். இறந்து, காலனால் விதிக்கப்பட்ட வழியில் சென்றவனை உயிருடன் மீட்பவன் எவன் இருக்கிறான்?(13) மனிதர்கள் தங்கள் தினசரி உழைப்பை முடிக்கும் இந்தக் காலத்தில், சூரியன் அஸ்த மலைகளுக்கு ஓயச் செல்கிறான். இந்தப் பிள்ளையிடம் கொண்ட பற்றைக் கைவிட்டு உங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வீராக” என்றது {கழுகு}.(14)

கழுகின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சொந்தக்காரர்களின் துன்பம் விலகுவதாகத் தெரிந்தது, அந்தப் பிள்ளையை வெறுந்தரையில் கிடத்திவிட்டு அவர்கள் செல்லத் தயாரானார்கள்.(15) பிள்ளை இறந்துவிட்ட உண்மையைத் தங்களுக்குத் தாங்களே உறுதி செய்து கொண்டு, அவனை மீண்டும் காண்பதில் நம்பிக்கையிழந்து, உரத்த புலம்பல்களில் ஈடுபட்டபடி, அவர்கள் தாங்கள் வந்த பாதையிலேயே செல்லத் தொடங்கினர்.(16) ஐயங்கடந்த உறுதியுடன், இறந்தவனை மீட்பதில் நம்பிக்கையிழந்து, தங்கள் குலத்தின் வாரிசைக் கைவிட்ட அவர்கள், அந்த இடத்தைவிட்டுத் திரும்ப ஆயத்தமாகினர்.(17)

அந்த நேரத்தில் அண்டங்காக்கையைப் போன்று கரிய நிறத்தைக் கொண்ட ஒரு நரியானது, தன் வளைக்குள் இருந்து வெளியே வந்து, அவ்வாறு சென்று கொண்டிருந்த அந்தச் சொந்தக்காரர்களிடம், “இறந்து போன அந்தப் பிள்ளையின் சொந்தக்காரர்களான உங்களுக்கு அவனிடம் நிச்சயம் எந்தப் பற்றும் இல்லை.(18) மூடர்களே, அங்கே வானத்தில் சூரியன் இன்னும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான். அச்சமில்லாமல் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். காலத்தின் பண்புகள் பல்வேறு வகைப்பட்டனவாக இருக்கின்றன. இவன் மீண்டும் உயிர்பெறக்கூடும்.(19) தலையில் சில குசப் புற்களைக் கிடத்தி, இந்த அன்புக்குரிய பிள்ளையைச் சுடலையில் கைவிட்டுவிட்டு, இந்த அன்புக்குரியவனிடம் உள்ள பற்றனைத்தையும் கைவிட்டு, இரும்பாலான இதயங்களுடன் நீங்கள் ஏன் செல்கிறீர்கள்?(20) எவனுடைய உதடுகளில் இருந்து சொற்கள் பிறந்தவுடன், அவை உங்களைப் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினவோ, அந்த இனிய பேச்சைக் கொண்ட இளம்பிள்ளையிடம் நிச்சயம் உங்களுக்கு அன்பேதும் இல்லை.(21)

பறவைகளும், விலங்குகளும் கூடத் தங்களின் வாரிசுகளிடம் கொள்ளும் அன்பைப் பாருங்கள். அவை தங்கள் குட்டிகளை வளர்ப்பதால் அவற்றுக்கு எந்தப் பயனும் கிடையாது.(22) (கனி {பலன்}, அல்லது வெகுமதி மீது கொண்ட விருப்பத்தால் ஒருபோதும் செய்யப்படாத) முனிவர்களின் வேள்விகளைப் போல, நான்கு கால் உயிரினங்கள், பறவைகள், பூச்சிகள் ஆகியவற்றின் பற்றுக்குச் சொர்க்கத்தில் எந்த வெகுமதியும் கிடையாது.(23) அவை தங்கள் பிள்ளைகளின் மூலம் மகிழ்ந்தாலும், அவற்றிடமிருந்து இம்மையிலோ, மறுமையிலோ எந்தப் பலனையும் அடைவது காணப்படவில்லை. இருப்பினும் அவை தங்கள் பிள்ளைகளைப் பற்றுடன் பேணி வளர்க்கின்றன.(24) அவற்றின் பிள்ளைகளோ வளர்ந்த பிறகு, அவற்றினுடைய {பெற்றோரின்} முதிர்ந்தவயதில் ஒருபோதும் அவற்றைப் பேணிக் காப்பதில்லை. இருப்பினும் அவை தங்கள் பிள்ளைகளைக் காணாமல் வருத்தமடைவதில்லையா?(25) துன்பத்தின் ஆதிக்கத்தை அடையும் மனிதர்களிடம் உண்மையில் எங்கே பற்றுக் காணப்படுகிறது? உங்கள் குலத்தைத் தழைக்கச்செய்பவனான இந்தப் பிள்ளையை இங்கே விட்டுவிட்டு நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள்?(26)

சிறிது காலம் இவனுக்காகக் கண்ணீர் சிந்துங்கள், இன்னும் சற்று நேரம் இவனைப் பற்றுடன் பார்த்துக் கொள்ளுங்கள். உண்மையில், அன்புக்குரிய பொருட்களைக் கைவிடுவது மிகக் கடினமான காரியமாகும்.(27) பலவீனன், சட்டப்படி தண்டிக்கப்பட்டவன், சுடலைக்குச் சுமந்து செல்லப்படுபவன் ஆகியோரின் அருகில் நண்பர்கள் காத்திருப்பார்களேயன்றி வேறு யாரும் காத்திருப்பதில்லை.(28) உயிர் மூச்சு அனைவருக்கும் அன்புக்குரியதே, அனைவரும் பற்றின் ஆளுகையை உணரவே செய்கிறார்கள். இடைநிலை உயிரினங்களைச் சார்ந்த இவற்றால்கூட[2] பேணப்படும் பற்றைக் காண்பீராக.(29) தாமரை இதழ்களைப் போன்ற பெரிய கண்களைக் கொண்டவனும், நீராடி, மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, புதிதாகத் திருமணம் செய்த இளைஞனைப் போல அழகாக இருக்கும் இந்தச் சிறுவனைக் கைவிட்டுவிட்டு, உண்மையில் உங்களால் எவ்வாறு செல்ல முடிகிறது?” என்று கேட்டது {நரி}.(30) துயரைத் தூண்டும் இத்தகைய உணர்வெழுச்சியில் ஈடுபட்ட நரியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மனிதர்கள், சடலத்தை நோக்கித் திரும்பினார்கள்.(31)அப்போது கழுகு, “ஐயோ, மனோபலமற்ற மனிதர்களே, கொடூரமானதும், இழிந்ததும், சிறுமதி படைத்ததுமான நரியின் பேச்சைக் கேட்டு நீங்கள் ஏன் திரும்புகிறீர்கள்?(32) , (ஆன்மா) ஏதும் இல்லாததும், அசைவற்றதும், மரக்கட்டை போல விறைத்துப் போனதும், ஐம்பூதங்களின் தலைமையான தேவர்களால் {ஐம்பூதங்களால்} கைவிட்ட ஒரு பூதத்தொகுப்புக்காக {உடலுக்காக} நீங்கள் ஏன் துக்கத்தில் ஈடுபடுகிறார்கள்? நீங்கள் ஏன் உங்களுக்காக வருந்தவில்லை?(33) பாவத்திலிருந்து உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள நீங்கள் கடுந்தவங்களைச் செய்வீர்களாக? தவமுறைகளின் மூலம் அனைத்தையும் அடையலாம். புலம்பல்களால் என்ன செய்ய முடியும்?(34) உடலோடு தீயூழும் பிறக்கிறது. அந்தத் தீயூழின் விளைவாலேயே, இந்தச் சிறுவன் உங்களை முடிவிலா துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறந்துவிட்டான்.(35)

செல்வம், பசுக்கள், தங்கம், விலைமதிப்புமிக்க ரத்தினங்கள், பிள்ளைகள் ஆகிய அனைத்தும் தவங்களிலேயே தங்கள் வேர்களைக் கொண்டிருக்கின்றன. மேலும் தவங்களோ (பரமாத்மாவையும் ஆன்மாவையும் ஒன்றிணைக்கும்) யோகத்தின் விளைவால் நேர்பவையாகும்.(36) உயிரினங்களுக்கு மத்தியில் இன்பம் மற்றும் துன்பத்தின் அளவானது, முற்பிறவியின் செயல்களைச் சார்ந்தே அமைகிறது.(37) தந்தையின் செயல்களால் மகனோ, மகனின் செயல்களால் தந்தையோ {எந்தப் பாவத்திலும்} கட்டுப்படுவதில்லை. நன்மையும், தீமையுமான தங்கள் சொந்தச் செயல்களுக்குக் கட்டுப்பட்டே அனைவரும் இந்தப் பொது வழியைக் கடக்க வேண்டும்.(38) கடமைகள் அனைத்தையும் முறையாகச் செய்து நீதியற்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். சாத்திர வழிகாட்டுதலின்படி தேவர்களிடமும், பிராமணர்களிடமும் மரியாதையாகக் காத்திருக்க வேண்டும்.(39) கவலையையும், உற்சாகமின்மையையும் கைவிட்டு, பெற்ற பாசத்தைத் தவிர்ப்பீராக. பிள்ளையை இந்தத் திறந்தவெளியில் விட்டுவிட்டு, தாமதமில்லாமல் இங்கிருந்து செல்வீராக.(40)

செயலைச் செய்தவனே, தான் செய்த நன்மையான, அல்லது தீமையான செயலின் கனிகளை {பலன்களை} அனுபவிப்பான். அவற்றோடு சொந்தங்களின் தொடர்பு என என்ன இருக்கிறது?(41) (இறந்து போன) சொந்தக்காரன் எவ்வளவுதான் அன்புக்குரியவனாக இருப்பினும், அவனை இந்த இடத்தில் சொந்தக்காரர்கள் கைவிட்டு செல்ல வேண்டும். கண்ணீரால் குளித்த கண்களுடன் அவர்கள், இறந்தவனிடம் கொண்ட பற்றை வெளிப்படுத்துவதை நிறுத்தி சென்றுவிடுவார்கள்.(42) ஞானியோ மூடனோ, செல்வந்தனோ ஏழையோ, நல்ல மற்றும் தீய செயல்களைச் செய்யும் அனைவரும் காலத்திற்கு அடிபணியவே வேண்டும்.(43) துக்கம் அனுசரிப்பதன் மூலம் நீங்கள் என்ன செய்வீர்கள்? இறந்து போன ஒருவனுக்காக ஏன் நீங்கள் வருந்துகிறீர்கள்? அனைத்திற்கும் காலனே தலைவனாவான், அவனது இயல்புக்குத்தக்கவே அவன் அனைத்தின் மீதும் தன் கண்களைச் சமமாகச் செலுத்துகிறான்.(44) இளமைச் செருக்குக் கொண்ட, அல்லது ஆதரவற்ற குழந்தைப்பருவத்தில் உள்ள, பல வருடங்கள் சுமையைத் தாங்குபவர், அல்லது தாயின் கருவறையில் கிடப்பவர் என அனைவரும், காலத்தின் தண்டனைக்கு உட்பட்டவர்களே. உண்மையில், உலகத்தின் போக்கு அத்தகையதாகவே இருக்கிறது” என்றது {கழுகு}.(45)

நரி, “ஐயோ, பிள்ளையிடம் கொண்ட பாசத்தின் காரணமாகந் துன்பத்தால் அழுது மிகவும் வருந்தும் உங்கள் பற்றானது, சிறுமதி கொண்ட கழுகால் குறைக்கப்படுகிறதே.(46) அமைதி நிரம்பியவையும், ஆறுதலுண்டாக்க வல்லவையும், நன்கு பயன்படுத்தப்படுபவையுமான அதன் {கழுகுடைய} வார்த்தைகளின் விளைவால்தான், கைவிடுவதற்குக் கடிமானப் பற்றைக் கைவிட்டு, அதோ ஒருவன் நகரத்திற்குச் செல்கிறான்.(47) ஐயோ, சுடலையில் கிடக்கும் பிணமான இறந்து போன பிள்ளைக்காக, உரக்க அழுத மனிதர்களின் துயரமானது, கன்றை இழந்த பசுவைப் போன்றது என நான் நினைத்தேன்.(48) எனினும், பூமியில் உள்ள மனிதர்களுடைய துயரத்தின் அளவு என்ன என்பதை நான் இன்று புரிந்து கொண்டேன்.(49) (எனினும், அவர்களுடைய பற்று பலமானதில்லை என்றே தெரிகிறது). ஒருவன் எப்போதும் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் விதியை அவனால் வெல்ல முடியும். முயற்சியும், விதியும் ஒன்று சேர்ந்த கனிகளை {பலன்களை} உண்டாக்குகின்றன.(50) ஒருவன் எப்போதும் நம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும். மனத்தளர்ச்சியுடன் எவ்வாறு மகிழ்ச்சியை அடைய முடியும்? மன உறுதியின் மூலமே விருப்பத்திற்குரிய பொருட்களை {நோக்கங்களை} வெல்ல முடியும். பிறகு ஏன் நீங்கள் இதயம் இல்லாதவர்களாக இவ்வாறு செல்கிறீர்கள்?(51) உங்கள் மடியில் பிறந்தவனும், தன் தந்தைமாரின் {மூதாதையரின்} குலங்களைத் தழைக்கச் செய்பவனுமான இந்த மகனைக் காட்டில் கைவிட்டு நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?(52) சூரியன் மறைந்து, மாலை சந்தி வரும் வரையில் இங்கே இருப்பீராக. அதன்பிறகு, நீங்கள் இந்தச் சிறுவனை எடுத்துச் செல்லுங்கள், அல்லது இங்கேயே இவனுடன் இருங்கள்” என்றது {நரி}.(53)

கழுகு, “மனிதர்களே, எனக்கு இன்று முழுமையாக ஆயிரம் ஆண்டு வயதாகிறது, ஆனால், உயிரினங்களில் இறந்த போன ஆணோ, பெண்ணோ, உறிதியற்ற பாலினமோ, அவை இறந்து போன பிறகு உயிரோடு மீண்டதை நான் ஒருபோதும் கண்டதில்லை.(54) சில கருவறையில் இறக்கின்றன; சில பிறந்ததும் இறக்கின்றன; சில (குழந்தை பருவத்திலேயே) தவழும்போது இறக்கின்றன; சில இளமையில் இறக்கின்றன; மேலும் சில முதுமையில் இறக்கின்றன.(55) விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தின் நல்லூழும் நிலையற்றவையாகும். அசையும், மற்றும் அசையாத உயிரினங்களின் வாழ்வுக் காலங்கள் முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.(56) மனைவியர், அன்புக்குரியவர்கள் ஆகியவர்களை இழந்து, பிள்ளைகள் (இறந்த) கவலையால் நிறையும் மனிதர்கள், தினமும் இந்த இடத்தை விட்டு கவலை நிறைந்த இதயத்துடன் வீட்டுக்குச் செல்கின்றனர்.(57) துயரால் பீடிக்கப்பட்ட சொந்தங்கள், எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கானோரான நண்பர்கள் மற்றும் பகைவர்களை இந்த இடத்தில் விட்டு விட்டு, தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர்.(58) விலங்கின் வெப்பமில்லாததும், உயிரற்றதும், மரக்கட்டை போல விறைத்திருப்பதுமான இந்த உடலைக் கைவிடுவீராக. மரக்கட்டை போல ஆகிவிட்டதும், வேறு புதிய உடலில் உயிர் நுழைந்துவிட்டதுமான இந்தப் பிள்ளையின் உடலைவிட்டுவிட்டு நீங்கள் ஏன் செல்லாமல் இருக்கிறீர்கள்?(59) (நீங்கள் காட்டிவரும்) இந்தப் பற்றுப் பொருளற்றதாகும், பிள்ளையை ஆரத்தழுவிக் கொள்வதும் கனியற்றதே ஆகும். அவன் தன் கண்களால் காணவோ, தன் காதுகளால் கேட்கவோ இல்லை.(60) நீங்கள் இவனை இங்கேயே விட்டுவிட்டு, தாமதமில்லாமல் இங்கிருந்து செல்வீராக.(61) வெளிப்படையாகக் கொடூரமாகத் தெரிவதும், ஆனால் உண்மையில் அறிவு நிறைந்திருப்பதுமான என் வார்த்தைகளைக் கேட்டு, உயர்ந்த அறமான முக்தி {மோட்சம்} குறித்து நேரடியாகப் புரிந்து கொண்டு, உங்களுக்குரிய இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வீராக” என்றது {கழுகு}.(62)

ஞானம் மற்றும் அறிவைக் கொண்டதும், நுண்ணறிவைக் கொடுக்க வல்லதும், அறிவை விழிப்படையச் செய்வதுமான கழுகால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மனிதர்கள், அந்தச் சுடலையை விட்டு அகலத் தயாரானார்கள். உண்மையில், துன்பத்திற்குரிய பொருளை {உடலைப்} பார்ப்பதாலும், அந்தப் பொருளின் முந்தைய செயல்களை நினைப்பதாலும், துன்பமானது இரட்டிப்பாகவே செய்கிறது.(63) கழுகின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மனிதர்கள், அந்த இடத்தைவிட்டுச் செல்லத் தீர்மானித்தனர். சரியாக அதே நேரத்தில் விரைந்த நடையுடன் அங்கே வந்த நரியானது, மரண உறக்கத்தில் கிடந்த அந்தப் பிள்ளையின் மீது தன் கண்களைச் செலுத்தியது.(64)

அந்த நரி, “கழுகு சொல்வதைக் கேட்டு, தங்க நிறம் கொண்டவனும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், தன் மூதாதையர்களுக்கு ஈமப்பிண்டம் கொடுக்க வல்லவனுமான இந்தப் பிள்ளையைக் கைவிட்டுச் செல்வதேன்?(65) நீங்கள் இவனைக் கைவிட்டுவிடுவதால், உங்கள் பற்றோ, உங்களது பரிதாபகரமான புலம்பல்களோ முடிவை எட்டப்போவதில்லை. மறுபுறம், உங்கள் துயரம் நிச்சயம் அதிகரிக்கவே செய்யும்.(66) சம்புகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு சூத்திரன், உண்மை ஆற்றலைக் கொண்டவனான ராமனால் கொல்லப்பட்டு அறம் உயர்த்திப் பிடிக்கப்பட்டபோது, (இறந்து போன) ஒரு பிராமணப் பிள்ளை உயிரோடு மீட்கப்பட்டான்[3].(67) அதே போலவே, அரசமுனியான ஸ்வேதனின் மகன் (அகாலத்தில்) மரணமடைந்தான். ஆனால் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த ஏகாதிபதி, இறந்து போன தன் பிள்ளையை மீட்பதில் வெற்றியடைந்தான்.(68) அதேபோலவே, உங்கள் வழக்கிலும், ஏதோ ஒரு தவசியோ, தேவனோ, உங்களுக்கு உங்கள் விருப்பத்தை அளிக்க விரும்பி, பரிதாபமாக அழும் உங்களிடம் கருணை காட்டலாம்” என்றது {நரி}.(69) இவ்வாறு நரியால் சொல்லப்பட்ட மனிதர்கள் பிள்ளையின் மீது கொண்ட பற்றினாலும், பீடித்த துயரத்தினாலும் மீண்டும் வந்து அந்தப் பிள்ளையின் தலையைத் தங்கள் மடியில் கிடத்திக் கொண்டு, அதிகமாக அழுது புலம்பத் தொடங்கினர். அவர்களின் கதறல்களால் அழைக்கப்பட்ட கழுகானது, அந்த இடத்திற்கு வந்து, மீண்டும் அவர்களிடம் பின்வரும் வார்த்தைகளைப் பேசியது.(70)கழுகு, “இந்தப் பிள்ளையை ஏன் நீங்கள் உங்கள் கண்ணீரால் நீராட்டுகிறீர்கள்? உங்கள் உள்ளங்கைகளால் ஏன் இவனை இவ்வாறு நசுக்குகிறீர்கள்? கடுமைமிக்க நீதிமன்னனுடைய {தர்மராஜாவான யமனின்} கட்டளையின் பேரில் இந்தப் பிள்ளை, விழிப்பறியா உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறான்.(71) தவத்தகுதியைக் கொண்டோரும், செல்வத்தைக் கொண்டோரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டோரும் என அனைவரும் மரணத்திற்கு அடிபணிகிறார்கள். இந்த இடமே கூட இறந்தவர்களுக்கானதுதான்.(72) இளமையான, முதுமையான ஆயிரக்கணக்கான சொந்தங்களைக் கைவிட்டு, வெறுந்தரையில் உருளும் மற்ற சொந்தங்கள், தங்கள் இரவுகளையும், பகல்களையும் துயரத்தில் கழிப்பது காணப்படுகிறது.(73) துன்பப் பொறிகளில் சிக்கவைக்கும் இந்தப் பற்றுணர்வை நிறுத்துவீராக. இந்தப் பிள்ளை உயிருடன் மீண்டு வருவான் என்பது நம்பிக்கையையும் கடந்த ஒரு நிலையாகும்.(74) நரி சொல்வதால் இவன் உயிரை மீண்டும் அடைந்துவிட மாட்டான். ஒருவன் ஒரு முறை இறந்து, தன் உடலை விட்டுச் சென்றுவிட்டால், அவனது உடல் மீண்டும் ஒருபோதும் அசைவை அடைவதில்லை.(75) நூற்றுக்கணக்கான நரிகள் தங்கள் உயிரையே விட்டாலும், நூறு வருடங்களேயானாலும் இந்தப் பிள்ளையை அவற்றால் உயிர்மீட்க முடியாது.(76) எனினும், ருத்திரன், குமாரன், பிரம்மன், அல்லது விஷ்ணு ஆகியோரில் எவரும் இந்தப் பிள்ளைக்கு வரமளித்தால் மட்டுமே, இவன் மீண்டும் உயிர் பெற முடியும்.(77)

கண்ணீர் சிந்துவதோ, நீண்ட பெருமூச்சுகளை விடுவதோ, அதிகமாக அழுது புலம்புவதோ ஒருவனுடைய உயிரை மீட்டுத் தராது.(78) நான், நரி, நீங்கள், இவனுடைய சொந்தங்கள் என நாம் அனைவரும் நம் தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் பாவங்கள் அனைத்துடன் (இவன் சென்ற) அதே வழியிலேயே செல்லப்போகிறோம்.(79) ஞானம் கொண்ட ஒருவன், இந்தக் காரணத்திற்காகவே, பிறர் விரும்பாத நடத்தை, கடுஞ்சொற்கள், பிறருக்குத் தீங்கிழைப்பது, அடுத்தவரின் மனைவியரிடம் இன்புற்றிருப்பது, பாவம் மற்றும் பொய்மை ஆகியவற்றைத் தொலைவிலேயே தவிர்க்க வேண்டும்.(80) அறம், உண்மை, பிறருக்கான நன்மை, நீதி, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, மனத்தூய்மை, நேர்மை ஆகியவற்றைக் கவனமாக நாடுவீராக.(81) தாய்மாரும், தந்தைமாரும், சொந்தங்களும், நண்பர்களும் உயிரோடு இருக்கும்போது, அவர்கள் மீது கண்களைச் செலுத்தாதவர்கள் பாவத்தையே இழைக்கிறார்கள்.(82) இறந்த பிறகு, கண்களால் காணாமலும், சிறிதும் கலங்காமலும் உள்ள நிலையை அடைந்திருக்கும் அவர்களுக்காக அழுவதால் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டது {கழுகு}.(83) இவ்வாறு சொல்லப்பட்ட மனிதர்கள், தங்கள் பிள்ளை மீது கொண்ட பற்றின் காரணமாகத் துயரத்தில் எரிந்து, கவலையில் நிறைந்து (சுடலையில்) அந்த உடலை விட்டுவிட்டுத் தங்கள் இல்லங்களுக்குச் செல்ல நினைத்தனர்.(84)

நரி, “ஐயோ, மனிதர்களின் உலகம் பயங்கரமானது. இங்கே எந்த உயிரினத்தாலும் தப்ப முடியாது. மேலும் ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்நாள் காலமும் குறைவானது. அன்புக்குரிய நண்பர்கள் {மரணத்தால்} எப்போதும் பிரிகிறார்கள்.(85) இது வன்மங்களும், பொய்மைகளும், அவதூறுகளும், தீய செய்திகளும் நிறைந்த உலகமாக இருக்கிறது. துயரையும், வலியையும் அதிகரிக்கும் இந்தச் சம்பவத்தைக் கண்ட பிறகு, ஒருக்கணமும் நான் இந்த மனிதர்களின் உலகத்தை விரும்பமாட்டேன்.(86) ஐயோ, இந்தப் பிள்ளையின் மரணத்தால் வருந்தி எரிந்து கொண்டிருந்தாலும், கழுகின் சொல்கேட்டு இவ்வாறு திரும்பிச் செல்லும் மூட மனிதர்களே உங்களுக்கு ஐயோ.(87) தீய அற்பர்களே, தூய்மையற்ற ஆன்மா கொண்டதும் பாவம் நிறைந்ததுமான கழுகின் வார்த்தைகளைக் கேட்டு, பெற்ற பாசத்தைக் கைவிட்டு நீங்கள் எவ்வாறு செல்லலாம்?(88) இன்பமானது, துன்பத்தாலும், துன்பமானது இன்பத்தாலும் பின்தொடரப்படுகிறது. இன்பமும், துன்பமும் நிறைந்த இந்த உலகத்தில், இந்த இரண்டும் ஒருபோதும் இடையறாமல் நேர்வதில்லை.(89) அற்ப புத்தி கொண்ட மனிதர்களே, இவ்வளவு அழகுடையவனும், உங்கள் குலத்தின் ரத்தினமும், உங்கள் மகனுமான இந்தப் பிள்ளையை வெறுந்தரையில் கைவிட்டுவிட்டு எங்கே செல்வீர்கள்?(90) அதியழகும், இளமையும், சுடர்மிக்கத் தோற்றமும் கொண்ட இந்தப் பிள்ளை இன்னும் உயிரோடிருக்கிறான் என்ற கருத்தை உண்மையில் என் மனத்தில் இருந்து அகற்றவே முடியவில்லை.(91) இவன் இறந்திருக்கக்கூடாது[4]. நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சியை அடையப் போகிறீர்கள் என்பது தெரிகிறது. இந்தப் பிள்ளையின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருக்கும் நீங்கள் நிச்சயம் இன்று நல்லூழை அடைவீர்கள்.(92) (இரவில் நீங்கள் இங்கே இருந்தால்) வசதியின்மை மற்றும் வலிக்கான வாய்ப்புகளை எதிர்பார்க்க வேண்டும் என்பதால், சொந்த வசதியில் உங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, அற்ப புத்தி கொண்டவர்களைப் போல இந்த அன்புக்குரியவனை விட்டுவிட்டு எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டது {நரி}”.(93)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இறந்து போன அந்தப் பிள்ளையின் சொந்தங்கள், ஏற்புடைய பொய்மைகளைச் சொல்லும் பாவியும், ஒவ்வொரு இரவும் உணவு தேடித் திரியும் இந்தச் சுடலைவாசியுமான நரியால், அந்த இடத்திலேயே இருக்குமாறு தூண்டப்பட்டு, என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் இருந்தனர்.(94,95)

அந்தக் கழுகு, “ஆந்தைகளின் அலறல்களை எதிரொலிப்பதும், பூதங்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோரால் நிரம்பியதுமான இந்தக் காட்டில் உள்ள இந்த இடம் பயங்கரமானதாகும்.(96) நீல மேகத் திரள்களைப் போல இதன் தன்மை அச்சந்தருவதும், பயங்கரமானதுமாகும். சடலத்தைக் கைவிட்டு, இறுதிச் சடங்குகளை நிறைவு செய்வீராக.(97) உண்மையில், உடலைக் கைவிட்டு, சூரியன் மறைந்து அடிவானம் இருளடைவதற்கு முன்பே அந்தச் சடங்குகளை நிறைவு செய்வீராக.(98) பருந்துகள் கடுமையாகக் கத்துகின்றன. நரிகள் சீற்றத்துடன் ஊளையிடுகின்றன. சிங்கங்கள் முழங்குகின்றன. சூரியன் மறைகிறான்.(99) ஈமச்சிதைகளின் நீலப் புகையின் விளைவால் சுடலையின் மரங்கள் கரிய வண்ணத்தை ஏற்று வருகின்றன. இந்த இடத்தில் உள்ள ஊனுண்ணும் விலங்குகள், பசியால் பீடிக்கப்பட்டு, சீற்றத்துடன் கதறுகின்றன.(100) இந்த அச்சந்தரும் இடத்தில் வாழ்கின்ற பயங்கர வடிவங்களைக் கொண்ட அந்த உயிரினங்கள் அனைத்தும், கடுமையான பண்புகளைக் கொண்ட ஊனுண்ணும் விலங்குகள் அனைத்தும் உங்களை விரைவில் தாக்கும்.(101) இந்தப் பயங்கரக் காடு உண்மையில் அச்சம் நிறைந்ததாகும். உங்களை ஆபத்து அணுகும்.(102) உண்மையில், உங்கள் நல்லுணர்வுக்கு எதிரானவையும், போலியானவையும், கனியற்றவையுமான இந்த நரியின் வார்த்தைகளை நீங்கள் கேட்டால், நிச்சயம் நீங்கள் அனைவரும் அழிவையே அடைவீர்கள்” என்றது {கழுகு}.(103)

அப்போது நரி, “எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே நில்லுங்கள். சூரியன் ஒளிரும் வரை இந்தப் பாலைவனத்தில் எந்த அச்சமும் கிடையாது. பகலின் தேவன் மறையும்வரை, பெற்ற பாசத்தால் தூண்டப்பட்டு இங்கே நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.(104) நீங்கள் விரும்பியவாறு அழுது புலம்பி, எந்த அச்சமும் இல்லாமல் இந்தப் பிள்ளையைக் கருணைக் கண்ணுடன் நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம். இந்தக் காடு அச்சந்தருவதாக இருப்பினும், உங்களை எந்த ஆபத்தும் அணுகாது.(105) உண்மையில் இந்தக் காடானது, அழகு மற்றும் அமைதியின் பண்புகளை எடுத்து இயம்புகிறது. இங்கேதான் ஆயிரக்கணக்கான பித்ருக்கள் இந்த உலகத்தை விட்டுச் சென்றனர். சூரியன் ஒளிரும் வரை இங்கே காத்திருங்கள். இந்தக் கழுகின் வார்த்தைகள் என்ன செய்துவிடும்?(106) கலங்கிய புத்தியுடன் நீங்கள் இந்தக் கழுகின் கொடூரமான கடுஞ்சொற்களைக் கேட்டால், உங்கள் பிள்ளை ஒருபோதும் உயிருடன் மீண்டு வர மாட்டான்” என்றது {நரி}”.(107)

பீஷ்மர் தொடர்ந்தார், “அப்போது கழுகு, அந்த மனிதர்களிடம் சூரியன் மறைந்துவிட்டதாகச் சொன்னது. நரியோ அவ்வாறு இல்லை என்றது. கழுகு, நரி ஆகிய இரண்டும் பசியின் கொடுமையை உணர்ந்து, இறந்த பிள்ளையின் சொந்தங்களிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தன[5].(108) அவை இரண்டும் தங்கள் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தங்கள் மடிக்கச்சையை உயர்த்திக் கொண்டன. பசியாலும், தாகத்தாலும் களைத்திருந்த அவை, சாத்திரங்களைச் சொல்லி இவ்வாறு தங்களுக்குள் சச்சரவு செய்து கொண்டன.(109) ஞானம் கொண்டவையும், பறவை மற்றும் விலங்கு ஆகிய இந்த இரண்டு உயிரினங்களின் அமுதம் போன்ற இந்த இனிய வார்த்தைகளால் (மாறி மாறி) தூண்டப்பட்ட {இறந்த போன பிள்ளையின்} சொந்தங்கள் ஒரு முறை செல்லவும், மறுமுறை காத்திருக்கவும் விரும்பினர்.(110) இறுதியாகத் துயராலும், உற்சாகமின்மையாலும் அசைக்கப்பட்ட அவர்கள் அங்கேயே காத்திருந்து, அழுது புலம்பிக் கொண்டிருந்தனர். தங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதில் திறம் மிக்க அந்த விலங்கும், பறவையும் (தங்களிடம் பேசி) தங்களை மயக்க மட்டுமே செய்திருக்கின்றன என்பதை அவர்கள் அறியவில்லை.(111) ஞானம் கொண்டவையான அந்த விலங்கும், பறவையும் இவ்வாறு சச்சரவு செய்து கொண்டிருந்த போது, இறந்து போன பிள்ளையின் சொந்தங்கள் அவை பேசியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, பெருந்தேவனான சங்கரன், தன் தெய்வீகத் துணையால் (உமையால்) தூண்டப்பட்டு, கருணைக் கண்ணீரால் குளித்த கண்களுடன் அங்கே வந்தான்.(112)இறந்து போன பிள்ளையின் சொந்தங்களிடம் பேசிய அந்தத் தேவன் {சிவன்}, “நான் வரங்களை அளிக்கும் சங்கரன்” என்றான். துயரால் கனத்த இதயத்துடன் இருந்த அந்த மனிதர்கள், அந்தப் பெருந்தேவனின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, அவனிடம் மறுமொழியாக,(113) “ஒரே பிள்ளையான இவனை இழந்த நிலையில் நாங்கள் அனைவரும் மரணத்தருவாயில் இருக்கிறோம். எங்கள் மகனான இவனுக்கு உயிரை அளித்து, எங்கள் அனைவருக்கும் உயிரை அளிப்பதே உனக்குத் தகும்” என்றனர்.(114) இவ்வாறு வேண்டப்பட்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன், தன் கரங்களில் சிறிது நீரை எடுத்து, இறந்து போன அந்தப் பிள்ளைக்கு நூறு வருட வாழ்வை அருளினான்.(115) எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபடுபவனான அந்தச் சிறப்புமிக்கப் பிநாகைதாரி {சிவன்}, நரி, கழுகு ஆகிய இரண்டுக்கும் அவற்றின் பசி தணியுமாறு ஒரு வரத்தை அருளினான்.(116) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட அவர்கள், பெரும் மகிழ்ச்சியுடன் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.(117) விடாப்பிடியான நம்பிக்கையாலும், உறுதியான தீர்மானத்தாலும், பெருந்தேவனின் அருளாலும், ஒருவனுடைய செயல்களின் கனிகள் {பலன்கள்} தாமதமில்லாமல் அடையப்படும்.(118)

சூழ்நிலைகளின் சேர்க்கையையும், அந்தச் சொந்தங்களின் {அந்தப் பிள்ளையின் உற்றார் உறவினருடைய} உறுதியையும் பார். கவலைநிறைந்த இதயங்களுடன் அவர்கள் அழுது கொண்டிருந்தபோது, அவர்களுடைய கண்ணீர் துடைக்கப்பட்டு, வற்றச் செய்யப்பட்டது.(119) குறுகிய காலத்திற்குள், அவர்களின் உறுதியான தீர்மானத்தின் மூலம் அவர்கள் எவ்வாறு சங்கரனின் அருளை அடைந்தார்கள், அவர்களது துன்பங்கள் எவ்வாறு அகன்றன, அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சியடைந்தனர் என்பதைப் பார்.(120) ஓ! பாரதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, உண்மையில், கவலையில் இருந்த அந்தச் சொந்தங்கள், சங்கரனின் அருளின் மூலம், பிள்ளையின் உயிர் மீட்கப்பட்டத்தில் ஆச்சரியத்தால் நிறைந்து, மகிழ்ச்சியடைந்தனர்.(121) ஓ! மன்னா, பிள்ளையின் காரணமாகத் தாங்கள் அடைந்திருந்த துயரைக் கைவிட்ட அந்தப் பிராமணர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, உயிர் மீட்கப்பட்ட அந்தப் பிள்ளையை எடுத்துக் கொண்டு தங்கள் நகரத்திற்குத் திரும்பச் சென்றனர். நான்கு வகையினர் அனைவருக்கும் இதைப் போன்ற நடத்தையே விதிக்கப்பட்டிருக்கிறது.(122) அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு {முக்தி} ஆகியவை நிறைந்த இந்த மங்கலமான கதையை மீண்டும் மீண்டும் கேட்பதன் மூலம் ஒரு மனிதன் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் மகிழ்ச்சியை அடைவான்” {என்றார் பீஷ்மர்}[6].(123)

ஓர் இலவம்! – சாந்திபர்வம் பகுதி – 154-ஒரு பலவீனமான மன்னன், பலமிக்க ஒருவனின் கோபத்துக்கு ஆளானால், அந்த ஆபத்தான வேளையில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; இந்தக் கேள்விக்கான விடையை விளக்க, ஓர் இலவ மரத்திற்கும், நாரதருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பலவீனமானவனும், பயனற்றவனும், மென்மையான இதயம் கொண்டவனுமான ஒருவன், விவேகமில்லாமலும், தற்புகழ்ச்சிமிக்கப் பேச்சுகளின் மூலமும், மடமையினாலும், (விரும்பினால்) நன்மை செய்ய வல்லவனும், (விரும்பவில்லையெனில்) தண்டிக்கவல்லவனும், எப்போதும் செயல்படத் தயாராக இருப்பவனும், எப்போதும் தன் அருகிலேயே வசிப்பவனுமான பலமிக்க ஓர் எதிரியின் கோபத்தைத் தூண்டிவிட்டால், அந்தப் பலமிக்கவன் கோபத்தோடும், அவனை அழிக்கும் நோக்கோடும் எதிர்த்துப் படையெடுத்து வரும்போது, அந்தப் பலவீனமானவன், தன் பலத்தைச் சார்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும்?[1](1-3)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, சால்மலிக்கும் {இலவ மரத்திற்கும்}, பவனத்துக்கும் {காற்றுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(4) இமய மலையின் உச்சிகளில் ஒன்றில், ஒரு பெரிய (சால்மலி {இலவ}) மரம் இருந்தது. பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்த அது, தன் கிளைகளைச் சுற்றிலும் பரப்பி விரிந்திருந்தது. மேலும் அதன் தண்டு பெரியதாகவும், அதன் கிளைகளும், இலைகளும் எண்ணற்றவையாகவும் இருந்தன.(5) உழைப்பால் களைத்தவையும், வியர்வையில் நீராடியவையுமான யானைகளும், பிற வகை விலங்குகள் பலவும் அதன் நிழலின் கீழ் வழக்கமாக இளைப்பாறின.(6) அதன் தண்டின் சுற்றளவு நானூறு முழங்களைக் கொண்டதாக இருந்தது, அதனைக் கிளைகளும், இலைகளும் பரப்பிய நிழல் அடர்த்தியாக இருந்தது. மலர்களும், கனிகளும் நிறைந்ததாக இருந்த அஃது, எண்ணற்ற ஆண், பெண் கிளிகளுக்கு வசிப்பிடமாக இருந்தது.(7) நீண்ட வழியில் பயணம் செய்யும் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களின் சிவிகைளும், காடுகளில் வசிக்கும் தவசிகளும், காட்டின் இனிய ஏகாதிபதியாக இருந்த அதன் நிழலின் கீழ் இளைப்பாறினர்.(8)ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒருநாள், தவசி நாரதர், அந்த மரத்தின் பரந்து விரிந்த எண்ணற்ற கிளைகளையும், அதன் தண்டின் சுற்றளவையும் கண்டு, அஃதை அணுகி, அதனிடம், “ஓ!, நீ இனிமை நிறைந்திருக்கிறாய். ஓ!, நீ வனப்புடன் இருக்கிறாய். ஓ! மரங்களில் முதன்மையானவனே, ஓ! சால்மலி {இலவ மரமே}, உன்னைக் காணும்போதெல்லாம் நான் மகிழ்ச்சியடைகிறேன்.(10) ஓ! அழகான மரமே, பல்வேறு வகைகளைச் சார்ந்த இனிமைநிறைந்த பறவைகளும், யானைகளும், பிற விலங்குகளும் உன் கிளைகளிலும், அவற்றுடைய நிழலின் கீழும் மகிழ்ச்சியாக வாழ்கின்றன.(11) ஓ! பரந்த கிளைகளைக் கொண்ட காட்டின் ஏகாதிபதியே, உன் கிளைகளும், உன் தண்டும் பெரியவையாக இருக்கின்றன. காற்றுத் தேவனால் {வாயுவால்} அவற்றில் ஏதும் முறிந்ததை நான் ஒருபோதும் கண்டதில்லை.(12)

ஓ! குழந்தாய் {இலவ மரமே}, பவனன் {வாயு} உன்னிடம் நிறைவடைந்து, உன் நண்பனாக இருப்பதால், இந்தக் காட்டில் உன்னை எப்போதும் பாதுகாக்கிறானா? பெரும் வேகமும், பலமும் கொண்ட சிறப்புமிக்கப் பவனன், நெடிய, பலமான மரங்களையும், ஏன் மலைச்சிகரங்களையே கூட அவற்றின் இடங்களில் இருந்து அசைத்துவிடுகிறான்.(14) நறுமணங்களைச் சுமக்கும் அந்தப் புனிதமானவன், (தான் விரும்பும்போது) வீசி, ஆறுகள், தடாகங்கள், கடல்கள் உள்ளிட்ட பாதாள உலகத்தையும் வற்றச் செய்துவிடுகிறான்.(15) நிச்சயம் நட்பாலேயே பவனன் உன்னைப் பாதுகாக்கிறான். இதன் காரணமாகத் தான் நீ எண்ணற்றக் கிளைகளைக் கொண்டவனாக இருப்பினும், இன்னும் இலைகளுடனும், மலர்களுடனும் அருளப்பட்டிருக்கிறாய்.(16)

ஓ! காட்டின் ஏகாதிபதியே {இலவ மரமே}, ஓ! குழந்தாய், இந்த இறகு படைத்த உயிரினங்கள், மகிழ்ச்சியால் நிறைந்து உன் கொப்புகளிலும், கிளைகளிலும் விளையாடிக் கொண்டிருப்பதால், இந்த உன் பசுமை இனிமையானதாக இருக்கிறது.(17) நீ பூத்துக் குலுங்கும் பருவத்தில், உன் கிளைகளில் வசிக்கும் இவை மென்மையாகப் பாடும்போது தோன்றும் இனிய இசை தனியாகக் கேட்கிறது.(18) ஓ! சால்மலி {இலவ மரமே}, தங்கள் இனங்களின் ரத்தினங்களான இந்த யானைகள், வியர்வையில் குளித்து, (மகிழ்ச்சிப்) பிளிறல்களில் ஈடுபட்டு, உன்னை அணுகி, இங்கே மகிழ்ச்சியைக் கண்டடைகின்றன.(19) அதேபோலக் காடுகளில் வசிக்கும் பிற இனத்தைச் சேர்ந்த பல்வறு விலங்குகளும், உன்னை அலங்கரிப்பதில் பங்காற்றுகின்றன. ஓ மரமே, உண்மையில் அனைத்து வகை உயிரினங்களும் உள்ள மேரு மலைகளைப் போலவே நீயும் மிக அழகாகத் தெரிகிறாய்.(20) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிராமணர்களாலும், தவங்களில் ஈடுபடும் பிறராலும், தியானத்தில் அர்ப்பணிப்புள்ள யதிகளாலும் நீ நாடப்படுவதால், இந்த உன் பகுதி சொர்க்கத்திற்கு ஒப்பாக இருக்கிறதென நான் நினைக்கிறேன்” என்றார் {நாரதர்}.(21)

இலவத்தின் விபரீத எண்ணம்! – சாந்திபர்வம் பகுதி – 155-இலவ மரத்தின் கிளைகள் ஏதும் ஒடியாமல் இருப்பதைக் கண்ட நாரதர், அதற்கும், வாயு தேவனுக்கும் இடையில் உள்ள நட்பைக் குறித்து வினவுதல்; அதற்கு அந்த இலவ மரம் தானே வாயுவை விட பலவான் என்றது; இலவம் வாயுவை இகழ்ந்ததை வாயுவிடம் சொல்லப்போகவதாகச் சொன்ன நாரதர்…

நாரதர், “ஓ! சால்மலி {இலவ மரமே}, பயங்கரமானவனும், தடுக்கப்பட முடியாதவனுமான காற்று தேவன் {வாயு}, நட்பினாலோ, நல்லுறவினாலோ எப்போதும் உன்னைப் பாதுகாக்கிறான் என்பதில் ஐயமில்லை.(1) ஓ! சால்மலி, காற்றுக்கும், உனக்கும் இடையில் நெருக்கமான உறவிருப்பதாகவே தெரிகிறது. “நான் உன்னவன்” என்ற இந்த வார்த்தைகளை நீ அவனிடம் சொன்னதாகவும், அதன்காரணமாகவே காற்று தேவன் உன்னைப் பாதுகாக்கிறான் எனவும் தெரிகிறது.(2) இவ்வுலகத்தில் காற்றினால் முறிக்கப்படாத மரத்தையோ, மலையையோ, மாளிகையையோ நான் கண்டதில்லை என்று நினைக்கிறேன்.(3) ஓ! சால்மலி, (எங்களுக்குத்தெரியாத) ஏதோ காரணத்தால், அல்லது காரணங்களால் காற்று உன்னைப் பாதுகாப்பதாலேயே நீ உன் கிளைகள், கொப்புகள் மற்றும் இலைகள் அனைத்துடன் இங்கே நிற்கிறாய் என்பதில் ஐயமில்லை” என்றார் {நாரதர்{.(4)

சால்மலி {அந்த இலவ மரம் நாரதரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, காற்றானவன் {வாயே தேவன்} என் நண்பனோ, தோழனோ, நலன் விரும்பியோ கிடையாது. உண்மையில் அவன், என்னைப் பாதுகாத்து ஆணையிடும் அளவுக்குப் பெரியவனும் அல்ல.(5) ஓ! நாரதரே, என் கடும் சக்தியும், வலிமையும் காற்றைவிடப் பெரியவையாகும். உண்மையில், காற்றின் பலமானது, என் பலத்தில் பதினெட்டில் ஒரு பாகத்துக்கு மட்டுமே ஒப்பாகும்.(6) காற்றானவன் சீற்றத்துடன் மரங்கள், மலைகள் மற்றுப் பிற பொருட்களைக் கிழித்துக் கொண்டு வரும்போதும், நான் என் பலத்தை வெளிப்படுத்தி அஃதை அடக்குகிறேன்.(7) உண்மையில், பல பொருட்களை உடைக்கும் காற்றானவன் மீண்டும் மீண்டும் என்னால் முறிக்கப்பட்டிருக்கிறான். ஓ! தெய்வீக முனிவரே, இந்தக் காரணத்தினால் நான் அவன் கோபத்துடன் வரும்போதும் அஞ்சுவதில்லை” என்றது {இலவ மரம்}.(8)

நாரதர், “ஓ! சால்மலி, உன்னுடைய உள்ளுணர்வு முற்றாகப் பிறழ்ந்திருப்பதாக {விபரீதமானதாகத்} தெரிகிறது. இதில் எந்த ஐயமுமில்லை. காற்றின் பலத்துக்கு இணையானதாகப் படைக்கப்பட்ட எந்தப் பொருளும் கிடையாது.(9) இந்திரனோ, யமனோ, வைஸ்ரவணனோ {குபேரனோ}, நீர்நிலைகளின் தலைவனான வருணனோ கூடக் காற்று தேவனின் {வாயுவின்} வலிமைக்கு இணையானவர்கள் இல்லை. எனவே, வெறும் மரமான உன்னைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?(10) ஓ! சால்மலி, இவ்வுலகின் எந்த உயிரினமும், எந்தச் செயலைச் செய்தாலும், உயிரை அளிப்பவனான காற்று தேவனே அனைத்து வேளைகளிலும் அந்தச் செயலின் காரணமாக இருக்கிறான்.(11) அந்தத் தேவன் முறைமையுடன் முயலும்போது, அவன் அனைத்து உயிரினங்களையும் எளிதாக வாழ வகைச் செய்கிறான். எனினும், அவன் முறையில்லாமல் முயன்றால், உலக உயிரினங்களுக்குப் பேரிடரே விளையும்.(12) வழிபாட்டுக்குத் தகுந்தவனும், அண்டத்தின் உயிரினங்களில் முதன்மையானவனுமான காற்று தேவனை வழிபடாமல் இருக்க உன்னைத் தூண்டுவது, உன் அறிவின் பலவீனமன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?(13) உண்மையில் நீ வீணான தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். ஓ! சால்மலி, உன் நுண்ணறிவானது, கோபத்தாலும், பிற தீய ஆசைகளாலும் குழப்பப்பட்டிருப்பதால் நீ பொய்மைகளை மட்டுமே பேசுகிறாய்.(14)

இத்தகைய பேச்சுகளில் நீ ஈடுபடுவதில் நான் நிச்சயம் உன்னிடம் கோபமே அடைகிறேன்.(15) நீ சொன்ன இந்த இழிவான வார்த்தைகள் அனைத்தையும் நானே காற்றுத் தேவனிடம் தெரிவிக்கப் போகிறேன்.(16) ஓ! சால்மலி {இலவ மரமே}, ஓ! தீய புத்தியைக் கொண்டவனே, உன்னைவிடப் பலமிக்கவையான சந்தனங்கள் {சந்தன மரங்கள்}, சியந்தனங்கள், சாலங்கள், சரளங்கள், தேவதாரங்கள், வேதாசங்கள் {நீர்நொச்சி மரங்கள்}, தன்வனங்கள் மற்றும் நல்லான்மாக்களைக் கொண்ட பல மரங்கள் ஒருபோதும் காற்றுக்கு எதிராக இத்தகைய வசைமாரிகளைச் சொன்னதில்லை.(17) அவை அனைத்தும், காற்றின் வலிமையையும், தாங்கள் ஒவ்வொருவரும் கொண்ட பலத்தையும் அறியும். இந்தக் காரணங்களுக்காக அந்த முதன்மையான மரங்கள், அந்தத் தேவனைப் பொறுத்தவரையில் தங்கள் தலைகளை வணங்குகின்றன.(18) எனினும், மடமையால் நீ காற்றின் எல்லையற்ற வலிமையை அறியவில்லை. எனவே, (நீ அவனைக்குறித்து இகழ்ந்ததைச்சொல்வதற்காகச்} நான் அந்தத் தேவனின் முன்னிலைக்குச் செல்லப்போகிறேன்” என்றார் {நாரதர்}.(19)

இலவமும் வாயுவும்! – சாந்திபர்வம் பகுதி – 156-இலவ மரத்தின் வார்த்தைகளை வாயுத் தேவனிடம் தெரிவித்த நாரதர்; கோபமடைந்த வாயு, அந்த இலவமரத்தைத் தான் இதுவரை ஒன்றும் செய்யாமல் இருந்ததற்கான காரணத்தைச் சொல்லி, இனி அதற்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கப்போவதாகச் சொன்னது; வாயுவை எவ்வாறு சமாளிப்பது என்று மனத்திற்குள் திட்டம்போட்ட இலவமரம்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சால்மலியிடம் {அந்த இலவ மரத்திடம்} இவ்வாறு சொன்னவரும், பிரம்மத்தை அறிந்தோரில் முதன்மையானவருமான நாரதர், காற்று தேவனைக் குறித்துச் சால்மலி சொன்னதனைத்தையும் அவனிடம் {வாயுவிடம்} சொன்னார்.(1)

நாரதர் {வாயுதேவனிடம்}, “இமயத்தின் சாரலில், கிளைகளாலும், இலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட சால்மலி {இலவ மரம்} இருக்கிறது. அதன் வேர்கள் பூமிக்குள் ஆழமாக நீண்டு விரிந்து செல்கின்றன, அதன் கிளைகள் சுற்றிலும் பரந்து விரிந்திருக்கின்றன. ஓ! காற்று தேவா {வாயு தேவா}, அந்த மரம் உன்னை அவமதிக்கிறது.(2) உன்னைக் குறித்து நிந்தனை நிறைந்த வார்த்தைகள் பலவற்றை அது பேசுகிறது. ஓ! காற்றே, நீ கேட்குமாறு, நான் அதைத் திரும்பச் சொல்வது முறையாகாது.(3) ஓ! காற்றே, படைக்கப்பட்ட பொருட்கள் யாவிலும் நீ முதன்மையானவன் என்பதை நான் அறிவேன். நீ மிக மேன்மையானவன் என்பதையும், மிகப் பெரும் வலிமைமிக்கவன் என்பதையும், கோபத்தில் நீ அந்தகனுக்கு நிகரானவன் என்பதையும் நான் அறிவேன்” என்றார் {நாரதர்}”.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “நாரதரின் வார்த்தைகளைக் கேட்ட காற்று தேவன், அந்தச் சால்மலியிடம் சென்று, அதனிடம் சினத்துடன் பின்வருமாறு பேசினான்.(5)

காற்று தேவன் {இலவமரத்திடம்}, “ஓ! சால்மலி, நாரதரின் முன்பு நீ என்னை இழிவாகப் பேசியிருக்கிறாய். நான் காற்று தேவன் என்பதை அறிவாயாக. நான் என் பலத்தையும், வலிமையையும் உனக்கு நிச்சயம் காட்டுவேன்.(6) நான் உன்னை நன்கறிவேன். நீ எனக்கு அந்நியன் இல்லை. பலமிக்கப் பெரும்பாட்டன் {பிரம்மன்} இந்த உலகைப் படைப்பதில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிலகாலம் உனக்குக் கீழே ஓய்ந்திருந்தார்.(7) இந்நிகழ்வின் விளைவாலேயே நான் இதுவரை உனக்குக் கருணை காட்டி வந்தேன். ஓ! மரங்களில் இழிந்தவனே, இதன் காரணமாகவே நீ தீங்குக்கு உள்ளாகாமல் இருக்கிறாயேயன்றி, உன் சொந்த வலிமையின் விளைவாலல்ல.(8) அவமரியாதைக்குரிய பொருளாக என்னை நீ அற்பமாகக் கருதுகிறாய். நீ மீண்டும் என்னை அவமதிக்காத வகையில் நான் உனக்கு என்னை வெளிப்படுத்துகிறேன்” என்றான் {வாயு}”.(9)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டதும், ஏளனமாகச் சிரித்த அந்தச் சால்மலி, “ஓ! காற்று தேவா, நீ என்னிடம் கோபமாக இருக்கிறாய். என்னைப் பொறுத்துக்கொள்ளாதே, உன் வலிமையின் எல்லையைக் காட்டுவாயாக.(10) உன் கோபமனைத்தையும் என் மீது கக்குவாயாக. நீ கோபவசப்படுவதால் எனக்கு நீ என்ன செய்துவிடுவாய்? உன் வலிமையானது (தருவிக்கப்படுவதற்குப் பதிலாக) உனக்குச் சொந்தமானதாக இருந்தாலும் கூட, நான் உன்னிடம் அச்சம் கொள்ள மாட்டேன். நான் விலையில் உன்னை விட மேன்மையானவன் ஆவேன். உன்னைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்.(11) நுண்ணறிவில் பலமிக்கவர்களே உண்மையில் பலவான்களாவர். மறுபுறம், உடல் பலத்தை மட்டுமே கொண்டவர்கள் பலவான்களாகக் கருதப்படுவதில்லை” என்றது.(12)

இவ்வாறு சொல்லப்பட்ட காற்று தேவன் {இலவ மரத்திடம்}, “நாளை நான் உன் பலத்தைச் சோதிக்கிறேன்” என்று சொன்னான். அதன் பிறகு இரவு வந்தது.(13) காற்றின் பலத்தையும், தன் பலத்தின் எல்லையையும் மனத்தால் தீர்மானித்த அந்தச் சால்மலி, தன் பலம் அந்தத் தேவனைவிடக் குறைவானதே என்பதைக் கண்டு, தனக்குள்ளேயே,(14) “நாரதரிடம் நான் சொன்னதனைத்தும் பொய்யே. நான் நிச்சயமாகக் காற்றைவிடப் பலம் குறைந்தவனே. உண்மையில், அவன் தன் பலத்தில் வலிமையாகவே இருக்கிறான்.(15) நாரதர் சொன்னதைப் போல, காற்றானவன் {வாயு தேவன்} எப்போதும் வலிமைமிக்கவனே. வேறு மரங்களை விட நான் பலவீனமானவன் என்பதில் ஐயமில்லை.(16) ஆனால் நுண்ணறிவில் எனக்கு எந்த மரமும் நிகரானதில்லை. எனவே, காற்றிடம் இருந்து எழும் இந்த அச்சத்தை என் நுண்ணறிவைச் சார்ந்து கவனித்துக் கொள்வேன்.(17) காட்டில் உள்ள பிற மரங்கள் அனைத்தும், இதே வகை நுண்ணறிவைச் சார்ந்திருந்தால், காற்று தேவன் கோபமடைந்தாலும் கூட அதிலிருந்து எந்தத் தீங்கும் நிச்சயம் நேராது.(18) எனினும், அவை அனைத்தும் அறிவற்றவையாக இருக்கின்றன, எனவே, காற்றுத் தங்களை அசைப்பதிலும், கிழிப்பதிலும் ஏன்? எவ்வாறு? வெல்கிறது என்பதை நான் அறிவதை போல அவற்றால் அறிய முடியவில்லை” என்று நினைக்கத் தொடங்கியது” {என்றார் பீஷ்மர்}.(19)

அர்ஜுனனின் மேன்மை! – சாந்திபர்வம் பகுதி – 157-இலவ மரம் வாயு வருவதற்கு முன்பே தன் கிளைகளைத் தானே உதிர்த்துக் கொண்டது; சினத்துடன் வந்த வாயு தேவன் இலவமரத்தை எள்ளி நகையாடியது; பலவீனமான மன்னன், தன்னை நோக்கி பலவான் படையெடுத்து வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்க இந்த இலவ மரத்தின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர், இறுதியில் அர்ஜுனனின் மேன்மையை எடுத்துரைத்தது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “இதை மனத்திற்குள் தீர்மானித்துக்கொண்ட அந்தச் சால்மலி {இலவமரம்}, கவலையுடன் தன் முக்கிய மற்றும் துணைக் கிளைகள் அனைத்தையும் கீழே உதிர்த்தது.(1) தன் கிளைகள், இலைகள் மற்றும் மலர்களை உதிர்த்த அந்த மரம், தன்னை நோக்கி வரும் காற்றை உறுதியுடன் பார்த்தது.(2) சினத்தால் நிறைந்து, பெரும் மூச்சுவிட்டுக்கொண்டு, பெரும் மரங்களை வீழ்த்தியபடி அந்தச் சால்மலியை நின்ற இடத்தை நோக்கி விரைந்து வந்தது. காற்று.(3) உச்சி, கிளைகள், இலைகள் மற்றும் மலர்களை இழந்து நிற்கும் அதைக் கண்ட காற்றானவன் {வாயு தேவன்}, மகிழ்ச்சியால் நிறைந்து, முன்பு பெரும் வடிவத்தில் இருந்த அந்தக் காட்டின் தலைவனிடம் சிரித்துக் கொண்டே இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(4)

காற்றானவன் {இலவமரத்திடம்}, “ஓ! சால்மலி, சினத்தால் நிறைந்து வந்த நான், சரியாக நீ செய்தது போலவே உன் கிளைகள் அனைத்தையும் வெட்டியிருப்பேன்.(5) நீ இப்போது உன் செருக்குமிக்க உச்சியையும், மலர்களையும் இழந்திருகிறாய். உன் குருத்துகளும், இலைகளும் அற்றிருக்கிறாய். உன் தீய ஆலோசனைகளின் விளைவால் நீ என் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டாய்” என்றான் {வாயு தேவன்}”.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “காற்றின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சால்மலி பெரும் நாணத்தை உணர்ந்தது. நாரதர் சொன்ன வார்த்தைகளையும் நினைத்துப் பார்த்த அது {இலவமரம்}, தன் மடமைக்காகப் பெரிதும் வருந்தத் தொடங்கியது.(7) ஓ! மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, இவ்வழியிலேயே பலவீனமான ஒரு மூடன், பலமிக்க எதிரியின் கோபத்தைத் தூண்டி, இறுதியில் கதையில் வந்த சால்மலியை {இலவ மரத்தைப்} போல வருந்த வேண்டியிருக்கும்.(8) மனிதர்கள் இணையான வலிமையைக் கொண்டிருந்தாலும், தங்களுக்குத் தீங்கிழைத்தவர்கள் மீது திடீரெனப் பகைமை பாராட்டக் கூடாது. மறுபுறம், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்கள் தங்கள் வலிமையைப் படிப்படியாக வெளிக்காட்ட வேண்டும்.(9) மூட மதி கொண்டவன், நுண்ணறிவு மிக்க ஒருவனிடம் ஒருபோதும் பகைமையைத் தூண்டக்கூடாது. அத்தகைய வழக்குகளில், நுண்ணறிவுமிக்க மனிதன், காய்ந்த புற்குவியலை ஊடுருவும் நெருப்பைப் போல (தன் எதிரியை) ஊடுருவுவான்.(10)

ஒருவன் கொண்டதில் நுண்ணறிவே விலைமதிப்புமிக்க உடைமையாகும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அதே போல, வலிமையை விட மதிப்புமிக்க வேறெதையும் ஒரு மனிதன் இங்கே {இம்மையில்} அடைய மாட்டான்.(11) எனவே, குழந்தை, மூடன், குருடன், அல்லது செவிடனின் செயல்களை ஒருவன் (கருணையுடன்) பொறுப்பதைப் போலவே, அவன் பலத்தின் மேன்மையானவனால் இழைக்கப்படும் தவறுகளையும் பொறுக்க வேண்டும். ஓ! பகைவர்களைக் கொல்பவனே, இந்தக் கூற்றின் நீதி உன் வழக்கிலும் காணப்படுகிறது.(12) ஓ! பெரும் காந்தி கொண்டவனே, (துரியோதனனின்) பதினோரு அக்ஷௌஹிணிகளும், (உன்னால் திரட்டப்பட்ட) ஏழு அக்ஷௌஹிணிகளும் {ஆக மொத்தம் பதினெட்டு அக்ஷௌஹிணி படைகளும்}, தனியொருவனான உயர் ஆன்ம அர்ஜுனனின் வலிமைக்கு இணையானவையல்ல.(13) எனவே, தன் பலத்தைச் சார்ந்து போர்க்களத்தில் திரிபவனும், பகனைத் தண்டித்தவனின் {இந்திரனின்} மகனுமான அந்தச் சிறப்புமிக்கப் பாண்டவனாலேயே {அர்ஜுனனாலேயே} (துரியோதனனின்) துருப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.(14) ஓ! பாரதா, மன்னர்களின் கடமைகள் மற்றும் கடமைகளின் அறநெறிகள் ஆகியவற்றை உன்னிடம் விரிவாக உரையாடிவிட்டேன். ஓ! மன்னா, நீ கேட்க விரும்புவது வேறென்ன இருக்கிறது” {என்றார் பீஷ்மர்}.(15)

பாவத்தின் வேர் – பேராசை! – சாந்திபர்வம் பகுதி – 158-பாவத்தின் மூலம் மற்றும் அதன் அடித்தளத்துக் குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பேராசையே பாவத்தின் மூலமும், அடித்தளமுமாக இருக்கிறது என்பதையும், நல்லோரின் இயல்புகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, எந்த மூலத்திலிருந்து பாவம் உண்டாகிறது, அதன் {பாவத்தின்} அடித்தளம் எதில் இருக்கிறது என்பதை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, பாவத்தின் அடித்தளம் எது என்பதைக் கேட்பாயாக. பேராசை மட்டுமே (தகுதிக்கும் {புண்ணியத்துக்கும்}, நன்மைக்கும்) பேரழிவை ஏற்படுத்துகிறது. பேராசையிலிருந்தே பாவம் உண்டாகிறது.(2) {பேராசை எனும்} இந்த மூலத்தில் இருந்தே பெரும் துன்பத்துடன் சேர்ந்து பாவமும், மறமும் {அதர்மமும்} பாய்கின்றன. இந்தப் பேராசையே, உலகில் காணப்படும் தந்திரங்கள் மற்றும் பாசாங்குகள் {போலித்தனம்} ஆகியவற்றின் ஊற்றாக இருக்கிறது. பேராசையே மனிதர்களைப் பாவமிழைக்கச் செய்கிறது.(3) பேராசையில் இருந்து கோபம் உண்டாகிறது; பேராசையில் இருந்து காமம் பாய்கிறது; பேராசையில் இருந்தே விவேகமின்மை, வஞ்சனை, செருக்கு, ஆணவம், வன்மம்,(4) பழி உணர்ச்சி, வெட்கமின்மை, செழிப்பிழப்பு, அறமிழப்பு {நற்பண்பிழப்பு}, கவலை, புகழ்க்கேடு ஆகியன எழுகின்றன.(5)

கஞ்சத்தனம், குதர்க்கம், முறையற்ற அனைத்து வகை ஆசைகள், பிறவிச் செருக்கு, கல்விச் செருக்கு, அழகுச் செருக்கு, செல்வச்செருக்கு,(6) அனைத்து உயிரினங்களிடமும் பரிதாபமின்மை, அனைத்திலும் தீமை, அனைத்திலும் நம்பிக்கையின்மை, அனைத்திலும் நேர்மையின்மை,(7) பிறரின் செல்வத்தைக் கவர்தல், பிறரின் மனைவியரை அபகரித்தல், கடுஞ்சொல், கவலை, பிறரைக் குறித்துத் தீங்காகப் பேசுதல்,(8) காம வேட்கை, பெருந்தீனி, அகால மரணம், வன்ம வேட்கை, பொய்மையில் தடுக்கப்பட முடியாத விருப்பம், ஆசைப்பசியை வெல்ல முடியாமை, தணியாத ஆசைகளில் காதுகளை ஈடுபடுத்தல்,(9) தீப்பேச்சு, தற்பெருமை, ஆணவம், கடமைகளைச் செய்யாதிருத்தல், மூர்க்கம், அனைத்துவகைத் தீச்செயல்களையும் செய்தல் ஆகிய இவை அனைத்தும் பேராசையில் இருந்தே எழுகின்றன.(10)

குழந்தைகள், அல்லது இளைஞர்கள், அல்லது முதியவர்களாக இருந்தாலும் மனிதர்களால் பேராசையைக் கைவிடமுடிவதில்லை. வாழ்வே சிதைந்தாலும் சிதையாமல் இருப்பதே பேராசையின் இயல்பாகும்.(11) அளவிடமுடியாத ஆழம் கொண்ட எண்ணற்ற ஆறுகள் தொடர்ந்து வெளியிடும் நீராலும் ஒருபோதும் நிறைவடையாத பெருங்கடலைப் போலவே, எந்த அளவுக்கு உடைமைகளை அடைந்தாலும் பேராசையானது நிறைவுபெற முடியாததாக இருக்கிறது.(12) எனினும், உடைமைகளால் ஒருபோதும் எது நிறைவடையாதோ, ஆசைகளை அடைவதால் எது தணிவடையாதோ, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், பெரும்பாம்புகள், உண்மையில் அனைத்து வகை உயிரினங்களாலும் எதன் உண்மை இயல்பைப் புரிந்து கொள்ள முடியாதோ, எது தடுக்கப்பட முடியாதோ, எது உலகின் பொய்மைகளை இதயத்தில் உண்டாக்கும் மடமையுடன் கூடியதோ அந்தப் பேராசையானது, தூய்மையடைந்த ஆன்மா கொண்டவனால் எப்போதும் வெல்லப்பட வேண்டும்.(13,14) செருக்கு, வன்மம், அவதூறு, கோணல்புத்தி, அடுத்தவரின் நன்மையைக் கேட்க இயலாமை ஆகியன, பேராசையின் ஆதிக்கத்தின் கீழ் தூய்மையற்ற ஆன்மாக்களாக இருப்போரிடம் காணப்படும் தீமைகளாகும்.(15)

மிகப் பெரிய அளவுகளிலான சாத்திரங்களைத் தங்கள் மனங்களில் கொண்டிருப்பவர்களும், பிறரின் ஐயங்களை விலக்கவல்லவர்களுமான பெரும் கல்விமான்களே கூட, இந்த ஆசையின் {அற்ப பொருளில் ஆசையுள்ளவர்களாக} விளைவால் பெரும் துன்பத்தை உணரும் பலவீனமான புத்தி கொண்டவர்களாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.(16) பேராசைக்கார மனிதர்கள் பொறாமையுள்ளவர்களாகவும், கோபக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் நன்னடத்தையற்றவர்களாக இருக்கிறார்கள். குறுகிய இதயங்களைக் கொண்ட அவர்களது பேச்சுகள் இனிமையானவையாக இருக்கும். எனவே அவர்கள், புற்களால் மறைக்கப்பட்ட இருள்நிறைந்த குழிகளுக்கு ஒப்பானவர்களாக இருக்கிறார்கள்.(17) அவர்கள் அறப்போர்வையைப் போலியாக உடுத்திக் கொள்கிறார்கள். இழிந்த மனம் கொண்ட அவர்கள், (தேவைப்படும்போது) அறம் மற்றும் நற்குணத்தின் கொடியைத் தாங்கி இந்த உலகைக் களவாடுகிறார்கள். வெளிப்படையான காரணங்களின் பலத்தைச் சார்ந்திருக்கும் அவர்கள், அறத்தில் பல்வேறு வகையான தீய வழிகளை உண்டாக்குகிறார்கள். பொருளாசையின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதில் எண்ணம் கொண்ட அவர்கள், அறவழிகளை அழிக்கவே செய்கிறார்கள்.(18) பேராசையின் ஆதிக்கத்தின்கீழ் உள்ள தீய ஆன்மா கொண்டவர்கள் வெளிப்படையாக அறக்கடமைகளைச் செய்யும்போது, அதன் விளைவாக அவர்களால் இழைக்கப்பட்ட கேடுகள் மனிதர்களுக்கு மத்தியில் விரைவில் புழக்கத்திற்கு வருகின்றன.(19) ஓ! குருவின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரனே}, செருக்கு, கோபம், ஆணவம், உணர்வின்மை, இன்பம் மற்றும் துன்பத்தின் அடுக்குகள் {தாங்கிக் கொள்ள முடியாத இன்பங்கள் மற்றும் தாங்கிக் கொள்ள முடியாத துன்பங்கள்}, இறுமாப்பு {சுயமுக்கியத்துவம்} ஆகிய அனைத்தும் பேராசையின் ஆளுகையில் உள்ளோரிடம் காணப்படுகின்றன.(20)

பேராசையின் ஆதிக்கத்தில் எப்போதும் இருப்போரைத் தீயவர்கள் என்று அறிவாயாக. தூய நடைமுறைகளைக் கொண்ட நல்லோர் என்று அழைக்கப்படுபவர்களைக் குறித்து நீ கேட்டவற்றை உனக்கு இப்போது சொல்கிறேன்.(21) (மரணத்திற்குப் பிறகு) இவ்வுலகத்திற்குத் திரும்பும் கடமையில் அச்சமேதும் இல்லாதவர்களாக, அடுத்த உலகத்தில் {மறுமையில்} அச்சமேதும் இல்லாதவர்களாக, விலங்குணவுக்கு அடிமையாகாதவர்களாக, ஏற்புடையவற்றில் எந்த விருப்பம், மாறானவற்றில் விருப்பமின்மை ஆகியன இல்லாதவர்களாக,(22) நன்னடத்தையை விருப்பத்திற்குரியதாகக் கருதுபவர்களாக, தற்கட்டுப்பாடு உடையவர்களாக, இன்பத்தையும், துன்பத்தையும் இணையாகக் கருதுபவர்களாக, உண்மையைத் தங்கள் புகலிடமாகக் கொண்டவர்களாக,(23) பெற்றுக் கொள்ளாமல் {கொடை} கொடுப்பவர்களாக, கருணையுள்ளவர்களாக, பித்ருக்கள், தேவர்கள், விருந்தினர்களை வழிபடுபவர்களாக, (பிறரின் நன்மைக்காக) எப்போதும் முயற்சி செய்யத் தயாராக இருப்பவர்களாக,(24) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அண்டத்திற்கு எப்போதும் நன்மை செய்பவர்களாக, (மனத்தில்) பெருந்துணிவு கொண்டவர்களாக, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும் நோற்பவர்களாக, அனைவரின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக, தங்களிடம் உள்ள அனைத்தையும் கொடுக்கவல்லவர்களாக, பிறருக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கவல்லவர்களாக இருப்போர், நல்லோர் என்றும், அறவோர் என்றும் கருதப்படுகிறார்கள்.(25)

அறத்தை மேம்படுத்தும் அவர்கள், அறவழியில் இருந்து விலக இயலாதவர்களாவர். அவர்களது நடத்தையானது, பழங்காலத்தின் அறம்சார்ந்த மனிதர்களால் நிறுவப்பட்ட மாதிரிக்கு இசைவாக இருக்குமேயன்றி ஒருபோதும் வேறாக இருக்காது.(26) அவர்கள் முற்றிலும் அச்சமற்றவர்கள்; அவர்கள் அமைதி நிறைந்தவர்கள்; அவர்கள் மென்மையானவர்கள்; அவர்கள் சரியான பாதையையே எப்போதும் பின்பற்றுவார்கள். கருணை நிறைந்த அவர்கள், நல்லோரால் எப்போதும் வழிபடப்படுவார்கள்.(27) அவர்கள் காமம் மற்றும் கோபத்தில் இருந்து விடுபட்டிருப்பார்கள். அவர்கள் உலகம் சார்ந்த எந்தப் பொருளோடும் பிணைப்பில்லாதவர்கள். அவர்களிடம் செருக்கிருக்காது. அவர்கள் சிறந்த நோன்புகளை நோற்பார்கள். அவர்கள் எப்போதும் மதிப்பிற்குரியவர்களாக இருப்பார்கள். எனவே, நீ எப்போதும் அவர்களுக்காகக் காத்திருந்து {அவர்களுக்குப் பணிவிடை செய்து}, அவர்களிடம் இருந்து அறிவுரைகளை நாடுவாயாக.(28) ஓ! யுதிஷ்டிரா, அவர்கள் செல்வத்திற்காகவோ, புகழுக்காகவோ ஒருபோதும் அறம் ஈட்டுவதில்லை. மறுபுறம் அவர்கள், உடலைப் பேணிக் கொள்வதைப் போன்ற ஒரு கடமையாகவே அதைச் செய்வார்கள்.(29) அச்சம், கோபம், அமைதியின்மை, கவலை ஆகியவை அவர்களிடம் எப்போதும் இருக்காது. அவர்கள் தங்கள் சக மனிதர்களைத் தவறாக வழிநடத்துவதற்காகப் புறத்தோற்றத்தில் அறப்போர்வை போர்த்திக் கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் எந்தப் புதிரும் {மர்மங்களும்} இருக்காது.(30)

அவர்கள் எப்போதும் முற்றான நிறைவுடன் இருப்பார்கள். பேராசையால் எழும் தீர்மானப்பிழை அவர்களிடம் இருக்காது. அவர்கள் எப்போதும் உண்மைக்கும், நேர்மைக்கும் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களது இதயம் ஒருபோதும் அறத்தில் இருந்து வீழாது. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, நீ எப்போதும் அவர்களை மதிக்க வேண்டும்.(31) {எதையும்} அடையும்போதோ, {எதையும்} இழக்கும்போதோ அவர்கள் ஒருபோதும் திளைக்கமாட்டார்கள். எதிலும் பற்றில்லாமல், செருக்கிலிருந்து விடுபட்ட அவர்கள், நற்பண்பின் {சத்வ} குணத்துடன் அனைத்திடமும் சம பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள்.(32) உறுதியான நடை கொண்டவர்களும், (தெய்வீக) அறிவைத் தேடுவதில் ஈடுபடுபவர்களும், அமைதி மற்றும் அறப்பாதையில் அர்ப்பணிப்புள்ளவர்களுமான அவர்களின் பார்வையில், ஈட்டலும் இழப்பும், இன்பமும் துன்பமும், ஏற்புடைமையும், ஏற்பில்லாமையும், வாழ்வும் மரணமும் இணையானவையாகவே இருக்கின்றன.(33) அறத்தின் கண் அத்தகை அன்பைக் கொண்ட அந்த உயர் ஆன்ம மனிதர்களை நீ உன் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கவனமின்மைக்குப் பலியாகாமல் எப்போதும் வழிபட வேண்டும். ஓ! அருளப்பட்டவனே, ஒருவனுடைய சொற்கள், தேவர்களுடைய உதவியின் மூலம் மட்டுமே நன்மையை உண்டாக்குகின்றன. பிற சூழ்நிலைகளின் கீழ் சொற்கள் தீய விளைவுகளையே உண்டாக்குகின்றன[1]” என்றார் {பீஷ்மர்}.(34)

அறியாமை! – சாந்திபர்வம் பகுதி – 159-அறியாமை குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அறியாமையின் பண்புகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பேராசையே அனைத்துத் தீமைகளுக்கும் அடித்தளம் என்று நீர் சொல்லியிருக்கிறீர். ஓ! ஐயா, அறியாமையைக் குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “முடிவு அருகிலேயே இருக்கிறது என்பதை அறியாதவனும், நன்னடத்தைக் கொண்டோரை எப்போதும் வெறுப்பவனுமான ஒருவன் அறியாமையின் மூலம் பாவமிழைத்தால், அவன் விரைவில் இவ்வுலகில் புகழ்க்கேட்டை ஈட்டுகிறான்.(2) அறியாமையின் விளைவால் ஒருவன் நரகில் மூழ்குகிறான். அறியாமையில் இருந்தே துன்பம் எழுகிறது. அறியாமையின் மூலமே ஒருவன் துன்பங்களை அனுபவித்துப் பேராபத்தை அடைகிறான்” என்றார்.(3)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா {பீஷ்மரே}, அறியாமையின் தோற்றம், இடம், வளர்ச்சி, சிதைவு, எழுச்சி, வேர், பிரிக்கமுடியாத பண்பு, போக்கு, காலம், காரணம், விளைவு ஆகியவற்றை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். இங்கே {இம்மையில்} உணரப்படும் துன்பமனைத்தும் அறியாமையிலேயே பிறக்கிறது” என்று கேட்டான்[1]. (4,5)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பற்று, வெறுப்பு, கருத்தில் முடிவின்மை {குழப்பம் / அவிவேகம்}, இன்பம், துன்பம், வீண் தற்பெருமை, காமம், கோபம், செருக்கு, எதிலும் தாமதம், செயலின்மை {சோம்பல்}, ஆசை, பகைமை, பொறாமை, எரிச்சல், மற்றும் பிற வகையைச் சார்ந்த அனைத்துப் பாவச் செயல்களும் அறியாமை என்ற பொதுப் பெயராலேயே அறியப்படுகினறன[2].(7) ஓ! மன்னா, நீ கேட்ட அதன் {அறியாமையின்} போக்கு, வளர்ச்சி மற்றும் பிற பண்புகளைக் குறித்து இப்போது கேட்பாயாக.(8) ஓ! மன்னா, அறியாமை மற்றும் பேராசை ஆகிய இரண்டும் (பொருளில்) ஒன்றேயென அறிவாயாக. ஓ! பாரதா, இரண்டும் அதே கனிகளையும், அதே குற்றங்களையும்தான் உண்டாக்கும்.(9) அறியாமையானது, பேராசையையே தன் மூலமாகக் கொண்டிருக்கிறது. பேராசை வளர வளர, அறியாமையும் வளர்கிறது. பேராசை இருக்கும் இடங்களில் எல்லாம் அறியாமையும் இருக்கிறது. பேராசை குறையும்போது, அறியாமையும் குறைகிறது. பேராசையின் எழுச்சியில் அதுவும் எழுகிறது. அதன் போக்குப் பலவிதமாக இருக்கிறது.(10)பேராசையின் வேராக கருத்தில் முடிவின்மை {குழப்பம் [அ] விவேகமில்லாமை} இருக்கிறது. மேலும் கருததில் முடிவின்மையே அதன் {பேராசையின்} பிரிக்கப்பட முடியாத பண்பாக இருக்கிறது. அறியாமையின் போக்கு அழிவில்லாததாகும் {நித்தியமானதாகும்}. எந்தக் காலத்தில் அறியாமை தோன்றுமோ, அப்போது பேராசைக்குரிய நோக்கங்கள் வெல்லப்படுவதில்லை.(11) ஒருவனுடைய அறியாமையிலிருந்து பேராசை எழுகிறது, பேராசையில் இருந்து அறியாமை எழுகிறது. (எனவே, பேராசையானது, அறியாமையின் காரணம் மற்றும் விளைவு ஆகிய இரண்டாகவும் இருக்கிறது). பேராசையே அனைத்துக் குற்றங்களையும் உண்டாக்குகிறது. இந்தக் காரணங்களுக்காகவே அனைவரும் பேராசையைத் தவிர்க்க வேண்டும்.(12) ஜனகன், யுவனாஸ்வன், பிருஷதஸ்வன், பிரஸேனஜித் ஆகியோரும், பிற மன்னர்களும், பேராசையை அடக்கியதன் விளைவாலேயே சொர்க்கத்தை அடைந்தனர்.(13) ஓ! குருக்களின் தலைவா {யுதிஷ்டிரா}, நீ அனைவரின் பார்வையிலும் உறுதியான தீர்மானத்துடன் பேராசையைத் தவிர்ப்பாயாக. பேராசையைத் தவிர்த்தால், நீ இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியை அடைவாய்” என்றார் {பீஷ்மர்}.(14)

தமம் – புலனடக்கம்! – சாந்திபர்வம் பகுதி – 160-கடமைகளில் முக்கியமானது எதுவெனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; தற்கட்டுப்பாடு எனும் புலனடக்கமே அறங்களில் பேரறம் என்றும், தற்கட்டுப்பாட்டில் உள்ள ஒரேயொரு குறையையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! அற ஆன்மாவே, வேத கல்வியிலும், அறமீட்டும் விருப்பத்திலும் கவனமாக ஈடுபடும் ஒருவனுக்கு, எது பெரும் தகுதியை[1] {புண்ணியத்தை} உண்டாக்குவதாகச் சொல்லப்படுகிறது?(1) இவ்வுலகில் உயர்ந்த தகுதியை உண்டாக்கவல்லதாகக் கருதப்படுவது, சாத்திரங்களின் பல்வேறு வகைகளில் நிறுவப்பட்டிருக்கிறது. ஓ! பாட்டா, இம்மை, மறுமை ஆகிய இரண்டியலும் எது அதிகம் மதிக்கப்படுகிறது என்பதை எனக்குச் சொல்வீராக.(2) ஓ! பாரதரே, கடமையெனும் பாதையானது நீண்டதாகவும், எண்ணற்ற பல கிளைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. உம்மைப் பொறுத்தவரையில், அக்கடமைகளில், பிற அனைத்தையும்விட எந்தச் சில கடமைகள் விரும்பத்தக்கன?(3) ஓ! மன்னா, விரிவானதும், பல கிளைகளைக் கொண்டதுமான அதைக் குறித்து எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “எதைக் கொண்டு நீ உயர்ந்த தகுதியை அடையலாம் என்பது குறித்து நான் உன்னிடம் பேசப் போகிறேன். ஞானம் கொண்ட நீ, நான் சொல்லப் போகும் அறிவால் அமுதம் பருகியவனைப் போல நிறைவடையப் போகிறாய்.(5) பெரும் முனிவர்களால் சொல்லப்பட்ட கடமைகளின் விதிகள் பலவற்றில் ஒவ்வொன்றும் அவரவர்களின் சொந்த ஞானத்தைச் சார்ந்தே இருக்கிறது. அவை {கடமைகள்} அனைத்திலும் உயர்ந்தது தற்கட்டுப்பாடு {தமம் – புலனடக்கம்}[2] ஆகும்.(6) உண்மையை அறிந்தவர்களான பழங்காலத்தினருக்கு மத்தியில் தற்கட்டுப்பாடே உயர்ந்த தகுதிக்கு {மோட்சத்திற்கு} வழிவகுக்கிறது என்று சொல்லப்பட்டது. ஒரு பிராமணனைப் பொறுத்தவரையில், தற்கட்டுப்பாடானது அவனது நித்திய கடமையாகும்.(7) தற்கட்டுப்பாட்டில் இருந்தே அவன் தன் செயல்களின் முறையான கனிகளை அடைகிறான். அவனது வழக்கில், தற்கட்டுப்பாடானது, (தகுதியில்) ஈகை, வேள்வி மற்றும் வேத கல்வி ஆகியவற்றையும் விஞ்சி நிற்கிறது.(8) தற்கட்டுப்பாடே (அவனது) சக்தியை அதிகரிக்கிறது. தற்கட்டுப்பாடு உயர்ந்ததும், புனிதமானதுமாகும். தற்கட்டுப்பாட்டின் மூலம் ஒரு மனிதன் தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையும் சக்தியும் அடைந்து, அதன் விளைவாக உயர்ந்த அருள்நிலையை அடைகிறான்.(9) இந்த உலகத்தில் தற்கட்டுப்பாட்டுக்கு இணையாக வேறு எந்தக் கடமையும் இருப்பதாக நாம் கேள்விப்படவில்லை. அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரின்படியும், தற்கட்டுப்பாடே இவ்வுலக அறங்களில் உயர்ந்ததாகும்.(10)ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, தற்கட்டுப்பாட்டின் மூலமே ஒருவன் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் உயர்ந்த மகிழ்ச்சியை {பேரின்பத்தை} அடைகிறான். தற்கட்டுப்பாடு கொண்டவன் பேரறத்தை ஈட்டுகிறான்.(11) தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன் இன்பநிலையில் உறங்குகிறான், இன்பநிலையில் விழிக்கிறான், இன்ப நிலையிலேயே இவ்வுலகில் திரிகிறான். அவனது மனம் எப்போதும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கிறது.(12) தற்கட்டுப்பாடு இல்லாத மனிதன் எப்போதும் துன்பத்தை அனுபவிக்கிறான். அத்தகைய மனிதன், தன் குற்றங்களால் பிறக்கும் பேரிடர்கள் பலவற்றை உண்டாக்குகிறான்.(13) நம் வாழ்வுமுறைகளிலும் {ஆசிரமங்களிலும்}, தற்கட்டுப்பாடே சிறந்த நோன்பாகச் சொல்லப்படுகிறது. தற்கட்டுப்பாடு என்று அழைக்கப்படும் குறியீடுகளின் மொத்த தொகையை நான் இப்போது சொல்லப் போகிறேன்.(14) மன்னிக்கும் தன்மை, பொறுமை, தீங்கிழையாமை, பாகுபாடின்மை, உண்மை, நேர்மை, புலன்களை வெற்றிக் கொள்வது, புத்திசாலித்தனம், மென்மை, பணிவு, உறுதி,(15) ஈகை, கோபத்திலிருந்து விடுபடுவது, நிறைவு, இனிய பேச்சு, நல்லுணர்வு, வன்மத்திலிருந்து விடுதலை ஆகிய இவை அனைத்தின் சேர்க்கையே தற்கட்டுப்பாடாகும் {தமமாகும்}.(16)

ஓ! குருவின் மகனே {யுதிஷ்டிரனே}, ஆசானை மதித்தலும், உலகளாவிய கருணையும் அதில் அடங்கும். தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன், முகத்துதி, அவதூறு ஆகிய இரண்டையும் தவிர்ப்பான். மனமாசு, புகழ்க்கேடு, பொய் பேச்சு,(17) காமம், பேராசை, செருக்கு, ஆணவம், தற்புகழ்ச்சி, அச்சம், பொறாமை, அவமதிப்பு ஆகிய இவை அனைத்தும் தற்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதனால் தவிர்க்கப்பட வேண்டும்.(18) அவன் {தற்கட்டுப்பாடு கொண்டவன்} ஒருபோதும் அவதூறில் ஈடுபடமாட்டான். அவன் பொறாமையில் இருந்து விடுபட்டவனாக இருப்பான். அவன் அற்ப பொருள்களால் (உலகளாவிய இன்பங்களில் எந்த வடிவத்தைச் சேர்ந்த பொருளாக இருந்தாலும்) ஒருபோதும் நிறைவடையமாட்டான். அவன் ஒருபோதும் நிறைவடையாத பெருங்கடலைப் போன்றவனாவான்[3].(19) “நான் உன்னவன், நீ என்னவன், அவர்கள் என்னிடம் இருக்கிறார்கள், நான் அவர்களிடம் இருக்கிறேன்” என்பது போன்ற பூமிசார்ந்த தொடர்புகளில் இருந்து எழும் பற்றுகளில் அவன் ஒருபோதும் கட்டுப்பட மாட்டான்.(20)நகரங்கள், அல்லது காடுகளின் நடைமுறைகளைப் பின்பற்றுபவனும், அவதூறிலோ, முகத்துதியிலோ ஒருபோதும் ஈடுபடாதவனுமான மனிதன், முக்தியை அடைவான்.(21) உலகளாவிய நட்பைப் பயின்று, அறம்சார்ந்த நடத்தையும், உற்சாகமிக்க ஆன்மாவையும், ஆன்மாவின் அறிவையும் கொண்டு, பூமியின் பற்றுகள் அனைத்திலிருந்தும் விடுபட்ட மனிதன் மறுமையில் பெரும் வெகுமதியை அடைகிறான்.(22) சிறப்பான நடத்தையுடனும், கடமைகளை நோற்றும், உற்சாகமிக்க ஆன்மாவுடனும், கல்வி மற்றும் தன்னறிவுடனும் கூடிய மனிதன், இம்மையில் உயர்ந்த மதிப்பையும், மறுமையில் உயர்ந்த கதியையும் அடைகிறான்.(23) பூமியில் நல்லவை என்று கருதப்படும் செயல்கள் அனைத்தும், நல்லோரால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும், ஞானம் கொண்ட தவசியின் பாதையை அமைக்கின்றன. நல்லோன் ஒருவன் ஒருபோதும் அந்தப் பாதையில் இருந்து விலக மாட்டான்.(24) உலகில் இருந்து ஓய்ந்து, காட்டு வாழ்வைப் பின்பற்றி, புலன்களில் முழுக் கட்டுப்பாட்டுடன், தன் மரணத்தை எதிர்பார்த்து அமைதியாக அந்தப் பாதையில் நடக்கும் கல்விமான், நிச்சயம் பிரம்ம நிலையை அடைவான்.(25)

எந்த உயிரினத்திடமும் அச்சமில்லாதவனும், எந்த உயிரினத்தையும் அச்சுறுத்தாதவனுமான ஒருவனுக்கு, தன் உடலைவிட்ட பிறகு எந்த அச்சத்தையும் சந்திக்க வேண்டியதில்லை[4].(26) தன் தகுதிகளைத் தேக்க முனையாமல் (உண்மையான இன்பத்தில்) அதைத் தீர்ப்பவனும், அனைத்து உயிரினங்களிடமும் சம பார்வை கொண்டவனும், உலகளாவிய நட்பெனும் போக்கைப் பயில்பவனுமான ஒருவன் பிரம்மத்தை அடைகிறான்.(27) வானில் உள்ள பறவைகளின் பாதையையோ, நீரின் பரப்பில் நீர்க்கோழியின் பாதையையோ பகுத்தறிய முடியாததைப் போலவே, (பூமியில்) அத்தகைய மனிதனின் பாதையும் கவனத்தை ஈர்க்காது.(28) ஓ! மன்னா, இல்லத்தைக் கைவிட்டு, துறவறத்தைப் பின்பற்றுபவன் இன்புற அழிவில்லாத பிரகாச உலகங்கள் பல காத்திருக்கின்றன.(29) செயல்களை அனைத்தையும் கைவிட்டு, முறையான போக்கில் தவங்களையும் கைவிட்டு, கல்வியின் பல்வேறு கிளைகளைக் கைவிட்டு, உண்மையில் (பூமியைச் சேர்ந்த மனிதர்கள் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்யும்) அனைத்துப் பொருட்களையும் கைவிடும் ஒருவன்,(30) தன் ஆசைகளில் தூய்மையானவனாக, அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்தும் விடுபட்டவனாக[5], உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடனும், தன்னறிவுடனும், தூய்மையான இதயத்துடனும் கூடியவனாகி, இவ்வுலகில் பெரும் மதிப்பை வென்று, இறுதியாகச் சொர்க்கத்தை அடைகிறான்.(31)வேத தவங்களில் இருந்து எழுந்ததும், குகைக்குள் மறைக்கப்பட்டதுமான பெரும்பாட்டனின் அழிவில்லா உலகத்தை, தற்கட்டுப்பாடு கொண்ட ஒருவனால் மட்டுமே வெல்ல முடியும்[6].(32) உண்மை அறிவில் இன்பம் கொள்பவனும், தெளிவடைந்தவனும், எவ்வுயிருக்கும் தீங்கிழையாதவனுமான ஒருவன், இவ்வுலகிற்குத் திரும்புவதில் எந்த அச்சமும், வேறு எந்த அச்சமும் கொள்ளமாட்டான்[7] {அவனுக்கு மறுபிறவி குறித்த அச்சமேதும் இல்லை}.(33) தற்கட்டுப்பாட்டில் ஒரே ஒரு குறை {தோஷம்} உள்ளது. இரண்டாவது குறை என்று அதில் ஏதும் காணப்படவில்லை. தற்கட்டுப்பாடுடைய மனிதன் பலவீனனாகவும், மூடனாகவும் கருதப்படுகிறான்.(34) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இந்தப் பண்பு ஒரே ஒரு குறையை மட்டுமே கொண்டுள்ளது. அதன் தகுதிகளோ {புண்ணியங்களோ} பலவாகும்.(35) தற்கட்டுப்பாடுடைய மனிதனுக்குக் காட்டின் தேவைதான் என்ன இருக்கிறது? ஓ! பாரதா, அதேபோல, தற்கட்டுப்பாடு இல்லாதவனுக்கும், காட்டினால் என்ன பயன் இருக்க முடியும்? தற்கட்டுப்பாடுடையவன் வசிக்கும் இடமே காடாகும், அதுவே புனிதமான ஆசிரமமுமாகும்” என்றார் {பீஷ்மர்}”.(36)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பீஷ்மரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், அமுதத்தைப் பருகியவனைப் போல மிகுந்த நிறைவடைந்தான்.(37) மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த அறவோர்களில் முதன்மையானவரிடம் {பீஷ்மரிடம்} கேள்விகளைக் கேட்டான். (தன் பேரனால் கேட்கப்பட்ட) அந்தக் குருகுல வழித்தோன்றல் {பீஷ்மர்}, (கேட்கப்பட்ட கேள்விகளின் பேரில்) மீண்டும் உற்சாகமாக உரையாடத் தொடங்கினார்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

தவத்தின் மகிமை! – சாந்திபர்வம் பகுதி – 161-தவத்தின் பெருமையை யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் தொடர்ந்தார்}, பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அனைத்தும் தவத்தையே வேராகக் கொண்டிருக்கின்றன என்று அறிவுபடைத்தோர் கூறுகின்றனர். தவங்களைச் செய்யாத மூடன், தன் செயல்களுக்கான வெகுமதிகளை அடைவதில்லை.(1) பலமிக்கப் படைப்பாளன் {பிரம்மன்}, தவங்களின் உதவியாலேயே இந்த அண்டமனைத்தையும் படைத்தான். அதே வகையிலேயே முனிவர்களும், தவங்களின் சக்தியால் வேதங்களை அடைந்தனர்.(2) தவங்களின் உதவியாலேயே பெரும்பாட்டன் {பிரம்மன்} உணவு, கனிகள் மற்றும் கிழங்குகளைப் படைத்தான். ஆழ்ந்த சிந்தனையுள்ள ஆன்மாக்களுடன் {மன அடக்கத்துடன் கூடிய} தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், தவங்களின் மூலமே மூவுலகங்களையும் காண்கின்றனர்.(3)

{அகதம் முதலிய} மருந்துகளும், தீங்கிழைக்கும் சாரப்பொருட்களுக்கான முறிமருந்துகளும், (இங்கே காணப்படும்) பல்வேறு செயல்களும் தவ உதவியின் மூலமே எதிர்பார்க்கும் விளைவுகளை உண்டாக்குகின்றன. அனைத்துக் காரியங்களின் நிறைவும் தவத்தைச் சார்ந்தே இருக்கிறது.(4) வெளிப்படையாக அடைதற்கரிதாகத் தெரியும் எந்தப் பொருளும், தவத்தின் உதவியால் நிச்சயம் வெல்லப்படும். முனிவர்கள் தங்கள் ஆறுவகைத் தெய்வீகப் பண்புகளையும் தவத்தின் மூலமே அடைந்தார்கள் என்பதில் ஐயமில்லை.(5)

எழுச்சியைத் தூண்டும் மதுவைப் பருகும் ஒருவன், பிறரின் ஏற்பில்லாமல் அவர்களது உடைமைகளைப் பறிப்பவன், கருவைக் கொன்ற குற்றவாளி, ஆசானின் படுக்கைக்குக் களங்கம் செய்தவன் ஆகியோர் அனைவரும் முறையாகச் செய்யப்படும் தவத்தின் மூலம் {தங்கள் பாவங்களில் இருந்து} தூய்மையடைகின்றனர்.(6) தவங்கள் பல வகைப்படும். அவை பல்வேறு வெளிப்பாடுகளின் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. எனினும் தவங்கள் அனைத்தைக் காட்டிலும், இன்பம், மகிழ்வு, உணவு ஆகியவற்றைத் தவிர்த்துச் செய்யப்படும் தவமே உயர்வானதும், சிறந்ததுமாகும்.(7)

ஓ! மன்னா, கருணை, உண்மைநிறைந்த பேச்சு, கொடை மற்றும் புலனடக்கம் ஆகியவற்றை விடவும், உணவைத் தவிர்த்துச் செய்யப்படும் தவமே {உபவாஸவிரதமே} மேன்மையானதாகும்.(8) கொடையைவிட {தானத்தைவிட} செய்வதற்கரிய வேறு செயலேதும் இல்லை. தாய்க்குத் தொண்டாற்றுவதைவிட மேன்மையான வாழ்வுமுறை {ஆசிரமம்} ஏதும் இல்லை. மூன்று வேதங்களை அறிந்தோரைவிட மேன்மையான வேறு உயிரினம் ஏதும் இல்லை. அதே போலவே, துறவே உயர்ந்த தவமாக அமைகிறது.(9)

தன்னறத்தையும், சொர்க்கத்தையும் கவனத்தில் கொள்ளவே மக்கள் தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்துகின்றனர். அத்தகைய கட்டுப்பாட்டையும், அறமீட்டலையும் பொறுத்தவரையில், உணவைத் தவிர்ப்பதைக் காட்டிலும் வேறு உயர்ந்த தவமேதுமில்லை.(10) முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியோரும், விலங்குகள், பறவைகள் மற்றும் அசையும், அல்லது அசையாத எந்த உயிரினமாக இருப்பினும்,(11) அனைத்தும் தவங்களில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றன, அவர்கள் அடையும் எந்த வெற்றியும் தவத்தின் மூலமே வெல்லப்படுகிறது.(12) இன்பநிலையில் தங்கள் பங்குகளைப் பெற்ற இவை (ஆகாயத்து ஒளிக்கோள்கள்), எப்போதும் தவத்தின் விளைவுகளாகவே இருக்கின்றன. தவத்தின் மூலம் இறைநிலையே {தேவத்தன்மையைக்} கூட அடையலாம் என்பதில் ஐயமில்லை” என்றார் {பீஷ்மர்}.(13)

வாய்மை! – சாந்திபர்வம் பகுதி – 162-வாய்மையின் பெருமைகளையும், பதிமூன்று வகை உண்மைகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பிராமணர்கள், முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் வாய்மையின் கடமையை {சத்தியத்தைத் தர்மமென்று} மெச்சுகிறார்கள். நான் வாய்மையை {சத்தியத்தைக்} குறித்துக் கேட்க விரும்புகிறேன். ஓ! பாட்டா, அது குறித்து என்னிடம் உரையாடுவீராக. ஓ! மன்னா, வாய்மையின் குறியீடுகள் என்ன? அஃது எவ்வாறு அடையப்பட முடியும்? வாய்மையைப் பயில்வதால் ஈட்டப்படுவதென்ன? அஃதை எவ்வாறு ஈட்ட முடியும்? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நால்வகையினரின் கடமைகளில் குழப்பம் ஏற்படுவது ஒருபோதும் மெச்சப்படுவதில்லை. வாய்மை என்று அழைக்கப்படுவது, இந்த நான்கு வகைகளிலும் கலப்படமில்லாத தூய நிலையில் எப்போதும் இருக்கிறது.(3) நல்லோரிடம் வாய்மையானது எப்போதும் ஒரு கடமையாகவே இருக்கிறது. உண்மையில், வாய்மை ஒரு நித்திய கடமையாகும். ஒருவன் வாய்மையை மதிப்புடன் வணங்க வேண்டும். வாய்மையே (அனைத்திற்கும்) உயர்ந்த புகலிடமாக இருக்கிறது.(4) வாய்மையே கடமை {தர்மம்}; வாய்மையே தவம்; வாய்மையே யோகம்; வாய்மையே அழிவில்லா பிரம்மம். வாய்மையானது உயர்ந்த வகையைச் சேர்ந்த ஒரு வேள்வியாகச் சொல்லப்படுகிறது. அனைத்தும் வாய்மையைச் சார்ந்தே இருக்கின்றன.(5) நான் இப்போது ஒன்றன்பின் ஒன்றாக வாய்மையின் வடிவங்களையும், அதன் முறைப்படியான வரிசையிலான குறியீடுகளையும் சொல்லப் போகிறேன்.(6)

வாய்மையை எவ்வாறு அடையலாம் என்பது குறித்தும் கேட்பது உனக்குத் தகும். ஓ! பாரதா, இவ்வுலகில் வாய்மையானது பதிமூன்று {13} வகைகளில் இருக்கிறது.(7) பாகுபாடின்மை, தற்கட்டுப்பாடு, {வன்மமின்மை [நல்லெண்ணம்]}, மன்னிக்கும்தன்மை, பணிவு, பொறை {தாங்கும் ஆற்றல்}, நற்பண்பு,(8) துறவு, தியானம், கண்ணியம், உறுதி, கருணை, தீங்கிழையாமை ஆகியன வாய்மையின் வடிவங்களாகும்[1]. ஓ! பெரும் ஏகாதிபதி, இவையே வாய்மையின் பதிமூன்று வடிவங்களாகும்.(9) வாய்மையானது, நிலையானதாகவும், அழிவில்லாததாகவும், மாற்றமில்லாததாகவும் இருக்கிறது. பிற அறங்களை எதிர்க்காத நடைமுறைகளின் மூலம் அஃது அடையப்படலாம் {எந்த தர்மத்திற்கும் விரோதமில்லாதது வாய்மை}. யோகத்தின் மூலமும் அஃது அடையப்படலம்.(10)விருப்பும் வெறுப்பும், காமமும் கோபமும் அழிவடையும்போது, எந்தப் பண்பின் விளைவால் ஒருவன் தனக்கும், தன் எதிரிக்கும் இடையிலும், தனக்கான நன்மைக்கும், தனக்கான தீமைக்கும் இடையில் மாற்றமில்லாத கண்ணுடன் காண இயன்றவனாகிறோனோ அதுவே பாகுபாடின்மை {ஸமதை} என்று அழைக்கப்படுகிறது.(11) அடுத்தவரின் பொருட்களை ஒருபோதும் விரும்பாமை, ஈர்ப்பு, பொறுமை, தன்னிடம் பிறர் கொள்ளும் அச்சங்களைத் தணிக்கும் வல்லமை, நோயிடம் எதிர்ப்புணர்வு[2] ஆகியவை அடங்கியதே தற்கட்டுப்பாடாகும் {தமமாகும்}. அறிவின் முலம் இஃதை {தற்கட்டுப்பாட்டை} அடையலாம்.(12) ஈகை பயில்வதில் அர்ப்பணிப்பு, அன்னைத்துக் கடமைகளையும் நோற்றல் ஆகியவை நல்லெண்ணம் {வன்மமின்மை / அமார்ஸர்யம்} என்று ஞானமுள்ளோரால் கருதப்படுகிறது. வாய்மையில் இடையறாத அர்ப்பணிப்பு கொள்வதன் மூலம் ஒருவன் உலகளாவிய நல்லெண்ணத்தை {வன்மமின்மையை} அடைகிறான்.(13) மன்னிக்கும் மற்றும் மன்னிக்காத தன்மைகளைப் பொறுத்த வரையில், எந்தப் பண்பின் மூலம் மதிக்கத்தக்க நல்லவன் ஒருவன், ஏற்புடையதையும், ஏற்பில்லாததையும் தாங்கிக் கொள்வானோ, அதுவே மன்னிக்கும் தன்மை {க்ஷமை} என்று சொல்லப்படுகிறது. இந்த அறம் {மன்னிக்கும் தன்மை}, மெய் நடைமுறையின் மூலம் நன்கு அடையப்படுகிறது.(14) எந்த அறத்தின் விளைவால், ஒரு நுண்ணறிவு மிக்க மனதன், மனத்திலும், பேச்சிலும் அடக்கமுள்ளவனாக, பல நற்செயல்களைச் செய்து, பிறரின் நிந்தனையை ஒருபோதும் ஈட்டுவதில்லையோ அதுவே பணிவு {லஜ்ஜை} என்றழைக்கப்படுகிறது. அற உதவியின் மூலம் இஃது அடையப்படும்.(15)அறத்திற்காகவும், பொருளுக்காவும் எந்த அறம் மன்னிக்கச் செய்யுமோ அதுவே பொறை {தாங்கும் ஆற்றல் / திதிக்ஷை} என்று அழைக்கப்படுகிறது. இது மன்னிக்கும் தன்மையின் ஒரு வடிவமே ஆகும். இது பொறுமையினால் அடையப்படுகிறது, இது மக்களைத் தன்னோடு இணைக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.(16) பற்றுகளையும், உலகம் சார்ந்த போருட்கள் அனைத்தையும் கைவிடுவது துறவு {த்யாகம்} என்றழைக்கப்படுகிறது. ஒருவன் கோபம் மற்றும் வன்மத்தை விலக்காமல் ஒருபோதும் துறவை அடைய முடியாது.(17) எந்த அறத்தின் விளைவால் ஒருவன் விழிப்புடனும், கவனத்துடனும் அனைத்து உயிரினங்களுக்கு நன்மை செய்வானோ, அது நற்பண்பு {ஆர்யத்தன்மை} என்றழைக்கப்படுகிறது. இதற்குக் குறிப்பிட்ட வடிவமேதும் கிடையாது, தன்னலப் பற்றுகள் அனைத்தையும் கைவிடுவதில் இஃது அடங்கியிருக்கிறது.(18) எந்த அறத்தின் மூலம் ஒருவன் மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் மாற்றமில்லாதவனாக இருக்கிறானோ, அது மனோவுறுதி {த்ருதி} என்று அழைக்கப்படுகிறது. எந்த ஞானி தன் நன்மையை விரும்புவானோ, அவன் எப்போதும் இந்த அறத்தைப் பயில்வான் {மனோவுறுதியுடனிருப்பான்}.(19) ஒருவன் எப்போதும், மன்னிக்கும் தன்மையைப் பயில்பவனாகவும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருக்க வேண்டும். எந்த ஞானி, இன்பம், அச்சம், கோபம் ஆகியவைற்றைக் கைவிடுவதில் வெல்கிறானோ அவன் மனோவுறுதியை அடைவதில் வெல்கிறான்.(20) அனைத்து உயிரினங்களையும் பொறுத்தவரையில் எண்ணம், சொல், செயல், ஆகியவற்றில் தீங்கிழையாமை {அஹிம்ஸை} மற்றும் அன்பு {கருணை / தயை}, கொடை ஆகியவையே நல்லோரின் அழிவில்லாக் கடமைகளாக இருக்கின்றன[3].(21)வெளிப்படையாக இந்தப் பதிமூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டதாகத் தெரிந்தாலும், அவை வாய்மை {சத்தியம்} என்ற ஒன்றாகவே இருக்கின்றன. ஓ! பாரதா, இவை அனைத்தும் வாய்மையை ஆதரித்து, அதற்கு வலுவூட்டுகின்றன.(22) ஓ! ஏகாதிபதி, வாய்மையின் தகுதிகளை {சத்தியத்தின் புண்ணியங்களைத்} தீர்ப்பது இயலாததாகும். இந்தக் காரணங்களுக்காகவே பிராமணர்களும், பித்ருக்களும், தேவர்களும் வாய்மையைப் போற்றுகின்றனர்.(23) வாய்மையை {சத்தியத்தை} விட உயர்ந்த கடமையேதும் கிடையாது, பொய்மையைவிடப் பயங்கரப் பாவம் வேறேதும் கிடையாது. உண்மையில், அறத்தின் அடித்தளமாகவே வாய்மை இருக்கிறது. இதன் காரணமாக ஒருபோதும் எவனும் வாய்மையை அழிக்கக்கூடாது.(24) வாய்மையில் இருந்தே, தானங்களும், வேள்விக் கொடைகளும், மூன்று வகை அக்னிஹோத்திரங்களும், வேதங்களும், அறத்திற்கு வழிவகுக்கும் அனைத்தும் எழுகின்றன.(25) ஒரு காலத்தில் ஆயிரம் குதிரை வேள்விகளைத் தராசின் ஒரு தட்டிலும், வாய்மையை மறுதட்டிலும் வைத்த போது, ஆயிரம் குதிரை வேள்விகளை விட வாய்மையே கனமிக்கத்தாக இருந்தது” என்றார் {பீஷ்மர்}.(26)

தீமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 163-தீமையின் பலத்தையும், பதிமூன்று வகைத் தீமைகளையும், இத்தீமைகளுக்குக் காரணமான அறியாமையையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, கோபம், காமம், கவலை, கருத்துமுடிவின்மை {குழப்பம் / அவிவேகம்}, (பிறருக்குத் தீமை செய்யும்) முயற்சி {தீய இயல்பு ப்ரவிருத்தி}, பொறாமை, வன்மம் {மதம்}, செருக்கு, எரிச்சல், அவதூறு, பிறரின் நன்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாமை {அஸூயை}, அன்பின்மை, அச்சம் ஆகியவை {இந்தப் பதிமூன்று தீமைகளும்} எவற்றிலிருந்து எழுமோ, அவை அனைத்தையும் {அந்த அஞ்ஞானங்களை} எனக்குச் சொல்வீராக. இவை அனைத்தின் உண்மையை விரிவாக எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1,2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இந்தப் பதிமூன்று தீமைகளும் உயிரினங்கள் அனைத்தின் வலிமைமிக்கப் பகைவர்களாகக் கருதப்படுகின்றன. ஓ! ஏகாதிபதி, இவை மனிதர்களை அனைத்துப் புறங்களில் இருந்தும் அணுகி மயக்குகின்றன.(3) உணர்வற்றவனாகவோ, கவனமற்றவனாக இருக்கும் ஒரு மனிதனை இவை தூண்டி துன்புறுத்துகின்றன. உண்மையில், இவை ஒருவனைக் கண்டதும், தங்கள் இரையின் மீது பாயும் ஓநாய்களைப் போலப் பாய்ந்து வலுவாகத் தாக்குகின்றன.(4) இவற்றில் இருந்தே அனைத்து வகைத் துன்பங்களும் உண்டாகின்றன. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அனைத்து மனிதர்களும் இஃதை எப்போதும் அறிந்திருக்க வேண்டும்.(5) ஓ! பூமியின் தலைவா, நான் இப்போது அவற்றின் மூலத்தையும், அவை சார்ந்திருக்கும் பொருட்களையும், அவற்றை அழிக்கும் வழிமுறைகளைக் குறித்துச் சொல்லப் போகிறேன். ஓ! மன்னா, முதலில் கோபத்தின் மூலத்தைப் பற்றி உண்மையாகவும் விரிவாகவும் சொல்கிறேன், பிளவுபடாத கவனத்துடன் கேட்பாயாக.(6)

கோபம்<1> பேராசையில் இருந்து எழுகிறது. அது பிறரின் குற்றங்களில் இருந்து பலமடைகிறது. மன்னிக்கும் தன்மையினால் {பொறுமையினால்} அது செயலிழந்து மறைகிறது.(7)

காமத்தைப்<2> பொறுத்தவரையில் அது தீர்மானத்தில் இருந்து எழுகிறது. ஞானமுள்ள மனிதன் அதிலிருந்து தீர்மானத்துடன் திரும்பினால் அது மறைந்து, மரணமடைகிறது.(8)

பொறாமை<3> என்பது கோபம் மற்றும் பேராசையில் இருந்து உண்டாகிறது. கருணை மற்றும் தன்னறிவின் விளைவால் அது மறைகிறது. அனைத்து உயிரினங்களிடம் உண்டாகும் கருணையின் விளைவாலும், (அதன் தொடர்ச்சியாக வரும் ஞானத்தால்) உலகப் பொருட்கள் அனைத்தையும் அலட்சியம் செய்வதாலும் அது மறைகிறது. பிற மக்களின் குறைகளைக் காணும்போதும் அஃது எழுகிறது. ஆனால், நுண்ணறிவு கொண்ட மனிதர்களின் உண்மை ஞானத்தின் விளைவால் அது விரைவாக மறைகிறது.(9)

கருத்தில் முடிவின்மை {குழப்பம் / அவிவேகம்}<4> அறியாமையில் தன் மூலத்தைக் கொண்டு, பாவம் நிறைந்த நடத்தையின் மூலம் உண்டாகிறது. இதனால் தாக்குண்ட மனிதன் அறிவிற் சிறந்தவர்களிடம் (அவர்களின் தோழமையிலும், ஆலோசனையிலும்) மகிழ்ச்சியடையும்போது, அந்தத் தீமை உடனே தன் தலையை மறைத்துக் கொள்கிறது.(10)

ஓ குரு குலத்தவனே, மனிதர்கள் முரண்பட்ட சாத்திரங்களைக் காண்கிறார்கள். அந்தச் சூழ்நிலையில் இருந்து பல்வேறு வகையான செயல்பாடுகளில் விருப்பம் {தீய இயல்பு / ப்ரவ்ருத்தி}<5> எழுகிறது. உண்மை ஞானம் ஈட்டப்படும்போது, அந்த விருப்பம் தணிக்கப்படுகிறது.(11) உடல் படைத்த ஓர் உயிரினத்தின் கவலை {சோகம்}<6>, பிரிவால் விழிப்படையும் பற்றிலிருந்து உண்டாகிறது. எனினும், மாண்டோர் மீள்வதில்லை என்பதை ஒருவன் அறியும்போது (அவன் உணரும் எந்தக் கவலையும்) தணிவடைகிறது.(12) பிற மக்களின் நன்மையைத் தாங்கிக் கொள்ள இயலாமை {பொறையின்மை / பரசவசத்தன்மை}<7>, கோபம் மற்றும் பேராசையில் இருந்து உண்டாகிறது. அனைத்து உயிரினங்களிடமும் கொள்ளும் கருணையின் மூலமும், பூமி சார்ந்த அனைத்து பொருட்களையும் அலட்சியம் செய்வதாலும் அது தணிவடைகிறது.(13)

வன்மமானது {மாத்ஸர்யமானது}<8>, வாய்மையைக் கைவிட்டு, தீமையில் ஈடுபடுவதால் உண்டாகிறது. ஓ! குழந்தாய், இந்தத் தீமை, ஞானிகளுக்காகவும், நல்லோருக்காகவும் காத்திருப்பதன் {அவர்களுக்குப் பணிவிடை செய்வதன்} விளைவால் மறைகிறது.(14)

மனிதர்களில் உள்ள செருக்கானது {மதமானது}<9>, பிறப்பு, கல்வி, செழிப்பு ஆகியவற்றில் இருந்து உண்டாகிறது. எனினும், இந்த மூன்றும் உண்மையில் அறியப்படும்போது, இந்தத் தீமையானது உடனே மறைகிறது.(15)

எரிச்சலானது {ஈர்ஷையானது}<10>, காமம், இழிந்த மற்றும் அற்ப மனிதர்களின் தோழமையில் மகிழ்ச்சியடைவது ஆகியவற்றால் எழுகிறது. ஞானத்தின் விளைவால் அஃது அழிவடைகிறது.(16)

அவதூறானது {நிந்தை}<11>, மனிதர்களின் இயல்பான நடையிலிருந்து {போக்கிலிருந்து} முரண்பட்ட (நடத்தைப்) பிழைகளில் இருந்தும், வெறுப்பை வெளிப்படுத்தும் ஏற்பில்லா {இனிமையற்ற} பேச்சுகளின் மூலமும் எழுகிறது. ஓ! மன்னா, மொத்த உலகத்தையும் ஆய்வு செய்வதால் {உலகத்தை நன்றாகப் பார்த்த பின்} அது மறைகிறது.(17)

தீங்கிழைப்பவன் பலமிக்கவனாக இருக்கும்போதும், தீங்கிழைக்கப்பட்டவன் அத்தீங்குக்குப் பழிதீர்க்க இயலாதபோதும் வெறுப்பு {அஸூயை}<12> வெளிப்படுகிறது. எனினும் அன்புடைமையின் மூலம் அஃது அடக்கப்படுகிறது.(18)

யாவரால் இவ்வுலகம் நிறைந்திருக்கிறதோ, அந்த ஆதரவற்ற, பரிதாபத்திற்குரிய மக்களைக் காணும்போது இரக்கம் {தயை}<13> உண்டாகிறது. ஒருவன் அறத்தின் வலிமையைப் புரிந்து கொள்ளும்போது உணர்ச்சிவயம் மறைகிறது[1].(19)பேராசையானது {அச்சம்}<14>, அறியாமையில் இருந்தே அனைத்து உயிரினங்களிலும் எழுகிறது. இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தின் நிலையாமையைக் கண்டு அதுவும் அழிவடைகிறது[2].(20) ஆன்ம அமைதியால் மட்டுமே இந்தப் பதிமூன்று குற்றங்களையும் அடக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பதிமூன்று குற்றங்களும்தான் திருதராஷ்டிரன் மகன்களைக் களங்கப்படுத்தின. வாய்மையை எப்போதும் விரும்பிய நீ, பெரியோரிடம் நீ கொண்ட மதிப்பின் விளைவால் இந்தத் தீமைகள் அனைத்தையும் வென்றிருக்கிறாய்” என்றார் {பீஷ்மர்}.(21)

கொடூரன்! – சாந்திபர்வம் பகுதி – 164-கொடூரர்களின் இயல்புகளையும், குறியீடுகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “நல்லோரை நான் கண்டதன் விளைவால் நல்லுறவு என்ன என்பதை நான் அறிவேன். இருப்பினும், ஓ! பாரதரே, தீங்கு செய்பவரையோ {கொடூரர்களையோ}, அவர்களது செயல்களின் இயல்பையோ நான் அறிந்ததில்லை.(1) உண்மையில் கொடூரச் செயல்களைச் செய்யும் தீய மனிதர்களை, முட்கள், குழிகள் மற்றும் நெருப்பைத் தவிர்ப்பது போல மக்கள் தவிர்க்கிறார்கள்.(2) ஓ! பாரதரே, தீங்கு செய்பவன் {கொடூரன்}, இம்மை மற்றம் மறுமை ஆகிய இரண்டிலும் (துன்பத்தில்) எரிவான் என்பது நிச்சயம் தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஓ! குருகுலத்தவரே, உண்மையில் அத்தகையவர்களின் செயல்கள் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(3)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீமை விளைவிப்போர் {குரூரர்கள்} எப்போதும் தீய செயல்களைச் செய்பவர்களாகவும், அவற்றைச் செய்வதற்குத் தடுக்கப்பட முடியாத உணர்வைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் பிறரைப் பழித்து, அவதூறு செய்வதில் ஈடுபடுவார்கள். தங்களுக்கு உரியவை கிடைக்காமல் வஞ்சிக்கப்படுவதாகத் தங்களை எப்போதும் கருதிக் கொள்வார்கள்.(4)

கொடூரன், தன் ஈகைச் செயல்களைத் தானே தற்பெருமை பேசுவான். அவன் மிக இழிந்தவனாவான். அவன் வஞ்சனை நிறைந்தவனாகவும், தந்திரம் நிரம்பியவனாகவும் இருப்பான். பிறருக்கு உரியவற்றை அவன் ஒருபோதும் கொடுக்கமாட்டான். அவன் ஆணவம் கொண்டவனாக இருப்பான். அவன் தீய தோழமையுடன் சேர்ந்து எப்போதும் தற்பெருமை நிறைந்தவனாக இருப்பான்[2].(5)தான் சந்திக்கும் அனைவரையும் ஐயுற்று, அவர்களிடம் அச்சமடைபவனாக இருப்பான். அவன் மூட புத்தி கொண்டவனாக இருப்பான். அவன் கஞ்சத்தனத்துடன் இருப்பான். அவன் தன் உதவியாளர்களைப் புகழ்வான். காடுகளில் ஓய்ந்திருக்கும் துறவிகள் அனைவரிடமும் இயல்புக்கு மாறான பகைமையையும், வெறுப்பையும் வளர்ப்பான்.(6)

அவன் பிறருக்குத் தீங்கிழைத்து மகிழ்வான். அவன், பிறரின் தகுதிகளையும், குற்றங்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதில் முற்றான அலட்சியத்துடன் இருப்பான். அவன் பொய்மை நிறைந்தவனாக இருப்பான். அவன் நிறைவில்லாதவனாக இருப்பான். அவன் ஆதீத பேராசையுடையவனாக எப்போதும் கொடூரச் செயல்களையே செய்வான்.(7)

அத்தகைய மனிதன், பிறர் அனைவரையும் தன்னைப் போலவே {கொடூரர்களாக} நினைத்துக் கொண்டு, ஒருவரையும் ஒருபோதும் நம்பாமல், அறம் சார்ந்தவர்களையும், சாதனையாளர்களையும் ஒரு பூச்சியைப் போல மதிப்பான்.(8)

அத்தகைய மனிதன் {கொடூரன்}, பிற மக்கள் மீது சாட்டப்படும் குற்றங்கள் ஐயுறத்தக்க அளவில் இல்லையெனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை அறிவித்துக் கொண்டே இருப்பான். எனினும், அத்தகைய குற்றங்களில் தானே களங்கமுடையவனாக இருப்பினும், அவற்றில் இருந்து தான் அறுவடை செய்யும் பயன்களின் காரணமாக, அவற்றைக் குறித்துச் சிறிதும் குறிப்பிடாமல் இருப்பான்.(9)

தனக்கு நன்மை செய்தவனை, புத்திசாலித்தனத்துடன் வஞ்சித்து அவனை ஏமாளியாகக் கருதுவான். நன்மை செய்தவனுக்கு எந்தக் காலத்திலாவது எந்தக் கொடையாவது கொடுத்திருந்தால் அவன் வருத்தத்தால் நிறைவான்.(10)

விருப்பம் நிறைந்த கண்களுடன் மனிதர்கள் நின்று கொண்டிருந்தாலும் கூடத் தனிமையில் அமைதியாக உண்ணத்தக்கவற்றையும், பானங்களையும், பிறவகை உணவுகளையும் உண்பவனைக் கொடூரனெனவும், தீயோனெனவும் அறிவாயாக.(11)

மறுபுறம், எவன் {உணவின்} முதல் பகுதியைப் பிராமணர்களுக்குக் காணிக்கையளித்து, எஞ்சியவற்றை நண்பர்கள், சொந்தங்கள் ஆகியவர்களுடன் பகிர்ந்து உண்கிறானோ, அவன் மறுமையில் பேரின்ப நிலையையும், இம்மையில் முடிவிலா மகிழ்ச்சியையும் அடைவான்.(12)

ஓ! பாரதர்களின் தலைவா, நான் இப்போது தீய மற்றும் கொடூர மனிதனின் குறியீடுகளைக் குறித்துச் சொல்லியிருக்கிறேன். அத்தகையவன் எப்போதும் ஞானியால் தவிர்க்கப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(13)

பிராமண விதிமுறைகள்! – சாந்திபர்வம் பகுதி – 165-பிராமணர்கள் தொடர்புடைய நித்திய விதிமுறைகளை யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, (கள்வர்களால்) பொருள் கொள்ளையடிக்கப்பட்டவர்களும், வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுபவர்களும், வேதங்கள் அனைத்தையும் நன்கறிந்தவர்களும், அறத்தகுதியை ஈட்ட விரும்புபவர்களும், ஆசான்களுக்கும், பித்ருக்களுக்கும் உரிய தங்கள் கடமைகளை வெளிப்படுத்துபவர்களும், சாத்திரங்களையும் ஓதுவதிலும், கற்பதிலும் தங்கள் நாட்களைக் கடத்துபவர்களுமான பக்திமிக்க ஏழை பிராமணர்களுக்கு, செல்வமும், அறிவும் கொடுக்கப்பட வேண்டும்[1].(1,2) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, ஏழ்மையில் இல்லாத பிராமணர்களுக்குத் தக்ஷிணை[2] மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். (தங்கள் பாவச் செயல்களின் விளைவால்) பிராமண நிலையில் இருந்து வீழ்ந்துவிட்டவர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு வேள்விப் பீடத்தின் எல்லைகளுக்கு வெளியே சமைக்கப்படாத உணவு கொடுக்கப்பட வேண்டும்[3].(3) வேதங்களும், பெருங்கொடைகளுடன் கூடிய வேள்விகள் அனைத்தும் பிராமணர்களே ஆகும்[4]. அற உந்துதல்களால் தூண்டப்படும் அவர்கள் வேள்விகளைச் செய்வதில் ஒருவரையொருவர் விஞ்சவே விரும்புகின்றனர். எனவே, மன்னன் பல்வேறு வகைகளிலான மதிப்புமிக்கச் செல்வத்தை அவர்களுக்குக் கொடைகளாகக் கொடுக்க வேண்டும்.(4) மூன்று வருடங்கள், அல்லது அதற்கு மேலும் தன் குடும்பத்திற்கு உணவூட்டும் வகையில் போதுமான கிடங்குகளைக் கொண்ட பிராமணன், சோமத்தைப் பருகத் தகுந்தவனாவான்[5].(5)

அரியணையில் ஓர் அறம்சார்ந்த மன்னனே இருந்த போதிலும், எவராலும், அதிலும் குறிப்பாக ஒரு பிராமணனால் தொடங்கப்பட்ட வேள்வி, மதிப்பீடு செய்யப்பட்ட செலவில் நான்கில் ஒரு பாகம் இல்லாததால் நிறைவடையாமல் இருந்தால்,(6) அப்போது மன்னன், அந்த வேள்வியை நிறைவு செய்வதற்காக, பெருமளவில் கால்நடைகளை வைத்திருப்பவனும், வேள்வி செய்யாமல் இருப்பவனும், சோமம் பருகுவதைத் தவிர்ப்பவனுமான ஒரு வைசியனின் சொந்தங்களிடமிருந்து {குடும்பத்திலிருந்து} செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம்.(7) ஒரு சூத்திரனுக்கு ஒரு வேள்வியைச் செய்யும் ஆற்றல் கிடையாது. எனவே, ஒரு மன்னன், நமது சூத்திர வீடு ஒன்றில் இருந்து (அத்தகைய காரியத்திற்காகச் செல்வத்தை) எடுத்துக் கொள்ளலாம்[6].(8) நூறு பசுக்களை வைத்திருந்தாலும் வேள்வி செய்யாதவன், ஆயிரம் பசுக்களை வைத்திருந்தாலும் வேள்வி செய்யாமல் தவிர்ப்பவன் ஆகியோரின் சொந்தங்களிடம் இருந்து மன்னன் எந்தத் ஐயுணர்வுமின்றிச் செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம்.(9) ஈகை பயிலாத அத்தகையவனின் செல்வத்தை மன்னன் எப்போதும் வெளிப்படையாகவே எடுக்க வேண்டும். இவ்வழியில் செயல்படுவதால் அந்த மன்னன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(10)நான் சொல்வதை இன்னும் கேட்பாயாக. எந்தப் பிராமணன் இல்லாமையால் ஆறு வேளை உணவைத் தவிர்த்திருப்பானோ[7], அவன் நாளைக்கான சிந்தனை ஏதுமில்லாமல் இன்றைய காரியத்தில் மட்டுமே கவனம் கொள்ளும் மனிதனின் விதிப்படி {அஸ்வஸ்த விதிப்படி}[8], உமித் தொட்டியில், அல்லது களத்தில், அல்லது தோட்டத்தில், அல்லது ஒரு தாழ்ந்த மனிதனின் வேறு எந்த இடத்தில் இருந்தும் கூட ஒரே ஒரு வேளைக்குத் தேவையான உணவை மட்டும் அனுமதியில்லாமல் எடுத்துக் கொள்ளலாம். எனினும், கேட்கப்பட்டாலும், கேட்கப்படாவிட்டாலும் இந்தத் தன் செயலைக் குறித்து மன்னனுக்குத் தெரிவிக்க வேண்டும்.(11,12) மன்னன் கடமையை அறிந்தவனாக இருந்தால், அத்தகைய பிராமணனுக்கு எந்தத் தண்டனையும் வழங்கக்கூடாது. அவன் ஒரு பிராமணன், ஒரு க்ஷத்திரியனின் குற்றத்தினால் மட்டுமே பசியால் பீடிக்கப்படுகிறான் என்பதை நினைவுகூர வேண்டும்[9].(13) மன்னன் ஒரு பிராமணனின் கல்வி மற்றும் நடத்தையை உறுதி செய்து கொண்டு, அவனுக்கு வாழ்வாதாரத்தை அளித்து, தன் மடியில் பிறந்த பிள்ளையைப் பாதுகாக்கும் ஒரு தந்தையைப் போலவே அவனைப் பாதுகாக்க வேண்டும்.(14) ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒருவன் (விலங்கு அல்லது சோம வேள்வியைச் செய்ய முடியாதவனாக இருந்தால்} வைசியாநர {வைஸ்வாநரி} வேள்வியைச் செய்ய வேண்டும். அறமறிந்தோர், மாற்றாக விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறையானது, அறத்தை அழிக்காது என்று சொல்கின்றனர்.(15)விஸ்வதேவர்கள், சத்யஸ்கள், பிராமணர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர், துயர்மிக்கக் காலங்களில் மரணத்திற்கு அஞ்சி, சாத்திரங்களில் மாற்றாக விதிக்கப்பட்டிருக்கும் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்வதில் எந்த ஐயுணர்வு கொள்வதில்லை.(16) எனினும், எந்த மனிதன் தொடக்க நிலையில் வாழ இயன்றவனாக இருப்பினும், மாற்றைக் கைக்கொள்கிறானோ அவன் தீய மனிதனாகக் கருதப்படுகிறான், மேலும் அவன் ஒருபோதும் சொர்க்கத்தில் எந்த இன்பத்தையும் அடைய மாட்டான்.(17) வேதங்களை அறிந்தவனான ஒரு பிராமணன், ஒரு மன்னனிடம் தன் சக்தியையும், அறிவையும் குறித்து ஒருபோதும் பேசக்கூடாது. (இஃதை ஒரு மன்னன் தானே உறுதி செய்ய வேண்டும்).(18) மேலும் ஒரு பிராமணனின் சக்தியையும், மன்னனின் சக்தியையும் ஒப்பிட்டால், முன்னவனே {பிராமணனே} பின்னவனை {மன்னனை} விட மேன்மையானவனாக எப்போதும் காணப்படுவான்.(19) இந்தக் காரணத்தினாலேயே பிராமணர்களின் சக்தியை மன்னன் தாங்கிக் கொள்வதோ, தடுப்பதோ அரிதானதாக இருக்கும். பிராமணன் படைப்பாளனாகவும், ஆட்சியாளனாகவும், விதிசமைப்பவனாகவும், தேவனாகவும் கருதப்படுகிறான்.(20)

ஒரு பிராமணனிடம் இழிமொழியோ, வெற்றுப் பேச்சுக்களோ பேசப்படக்கூடாது. க்ஷத்திரியன் தன் கடினங்கள் அனைத்தையும் தன் கரங்களின் வலிமையாலேயே கடக்க வேண்டும்.(21) வைசியனும், சூத்திரனும் தங்கள் கடினங்களைச் செல்வத்தின் மூலம் வெல்ல வேண்டும்; பிராமணன் மந்திரங்களாலும், ஹோமங்களாலும் வெல்ல வேண்டும். கன்னிகை, இளம்பெண், மந்திரங்களை அறியாதவன், அறியாமை கொண்ட அற்பன்,(22) அல்லது தூய்மையற்றவன் ஆகிய இவர்கள் வேள்வி நெருப்பில் காணிக்கைகளை ஊற்றத்தகுந்தவர்களல்ல {ஆகுதி அளிக்கத்தக்கவர்களல்ல}. இவர்களில் எவராவது அவ்வாறு செய்தால், யாருக்காக அதைச் செய்தார்களோ அவர்களோடு சேர்ந்து அவனோ, அவளோ, நிச்சயம் நரகத்தில் வீழ்வார்கள். இதன் காரணமாகவே, வேதங்களை அறிந்தவனும், வேள்விகள் அனைத்திலும் திறம்பெற்றவனுமான ஒரு பிரமாணனைத் தவிர வேறு எவனும், வேள்விக் காணிக்கைகளை ஊற்றுபவனாகக் கூடாது.(23) வேள்வி நெருப்பைத் தூண்டியவனுக்கு, {வேள்வியில்} அர்ப்பணிக்கப்பட்ட உணவைத் தக்ஷிணையாகக் கொடுக்கவில்லையெனில் அவன் வேள்வி நெருப்பைத் தூண்டுபவனாக மாட்டான் என்று சாத்திரம் அறிந்தோர் சொல்கின்றனர்.(24) ஒருவன், தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, உரியஅர்ப்பணிப்புடன் (சாத்திரங்களில் சுட்டிக்காட்டப்படும்) தகுந்த செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். எந்த வேள்விகளில் தக்ஷிணை கொடுக்கப்படவில்லையே, அந்த வேள்வியின் தேவர்களை ஒருவன் ஒருபோதும் வணங்கக்கூடாது[10].(25)தக்ஷிணையுடன் நிறைவு செய்யப்படாத ஒரு வேள்வியானது, (புண்ணியத்தை உண்டாவக்குவதற்குப் பதில்) ஒருவனுடைய பிள்ளைகள், விலங்குகள் மற்றும் சொர்க்கத்திற்கு அழிவையே உண்டாக்கும். அத்தகைய ஒரு வேள்வி ஒருவனுடைய புலன்கள், புகழ், சாதனைகள், ஆயுள் ஆகியவற்றை அழிக்கும்.(26) பருவகாலத்தில் {மாதவிடாய் காலத்தில்} உள்ள பெண்களுடன் கிடக்கும் பிராமணர்கள், அல்லது வேள்விகளை ஒருபோதும் செய்யாதவர்கள், அல்லது வேதங்களை அறியாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செயல்பாட்டில் சூத்திரர்களாகவே கருதப்படுகிறார்கள்[11].(27) ஒரு சூத்திரப் பெண்ணை மணந்து கொண்ட பிராமணன், நீருக்காக ஒரே ஒரு கிணறு மட்டுமே கொண்ட ஒரு கிராமத்தில் பனிரெண்டு வருடங்கள் வசித்தால், அவன் செயல்பாட்டில் சூத்திரனாகிறான்.(28) திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு கன்னிப்பெண்ணைத் தன் படுக்கைக்கு அழைக்கும் பிராமணன், மதிக்கத்தக்கவன் என்றெண்ணி ஒரு சூத்திரனுடன் ஒரே பாயில் அமர்ந்த பிராமணன், காய்ந்த புற்களாலான படுக்கையில் ஏதாவதொரு க்ஷத்திரியன் அல்லது வைசியனின் அருகிலும் அமர்ந்து, அவனையும் அதே வகையில் மதிக்க வேண்டும். இவ்வழியில் ஒருவன் தூய்மையடைகிறான். ஓ! மன்னா, இது குறித்து என் வார்த்தைகளைக் கேட்பாயாக.(29) தாழ்ந்த வகையைச் சேர்ந்த ஒருவனுக்குத் தொண்டாற்றியோ, அல்லது ஒரே விளையாட்டு விளையாடியோ, அல்லது ஒரே படுக்கையில் கிடந்தோ ஓர் இரவைக் கழிப்பதால் ஒரு பிராமணனுக்கு உண்டாகும் பாவமானது, காய்ந்த புற்களாலான படுக்கையில் ஒரு க்ஷத்திரியன், அல்லது ஒரு வைசியனின் பின்னால் மூன்று வருடங்கள் தொடர்ந்து அமர்வதன் மூலம் தூய்மையடைகிறது.(30)கேலிக்காகப் பேசப்படும் பொய் பாவமாகாது; ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு பெண்ணிடமோ, திருமணத்தின்போதோ, தன் ஆசானின் நன்மைக்காகவோ, தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காகவோ சொல்லப்படும் பொய்களும் பாவமாகாது. இந்த ஐவகைப் பொய்களும் பாவமாகாது என்று சொல்லப்படுகின்றன.(31) இழிதொழில் செய்வோனிடம் இருந்தும் கூட, அர்ப்பணிப்பு மற்றும் மதிப்புடன் கூடிய ஒருவனால் பயன்நிறைந்த அறிவை அடையமுடியும். ஒருவன் தங்கத்தைத் தூய்மையற்ற ஓர் இடத்தில் இருந்தும் எந்த ஐயுணர்வு இன்றி எடுக்கலாம். தன் பாலினத்தில் {பெண்களில்} ரத்தினமான ஒரு பெண்ணை ஒரு தீய இனத்தில் இருந்தும்கூட (மனைவியாக) எடுத்துக் கொள்ளலாம். நஞ்சில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அமுதம் பருகப்படலாம் எனும்போது; சாத்திரங்களின் படி பெண்கள், ரத்தினங்கள் மற்றும் பிற மதிப்புமிக்கப் பொருட்கள், தண்ணீர் ஆகியனவும் தூய்மையற்றவையல்ல.(33) பிராமணர்கள் மற்றும் பசுக்களின் நன்மைக்காகவும், வர்ணக்கலப்பேற்படும் சந்தர்ப்பங்களிலும், ஒரு வைசியன் கூடத் தன் பாதுகாப்புக்காக ஆயுதங்களை எடுக்கலாம்.(34) மதுபானம் பருகுவது, ஒரு பிராமணனைக் கொல்வது, ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்துவது ஆகிய பாவங்கள் தெரிந்து செய்யப்பட்டால் அதற்கான பாவக்கழிப்பு {பரிகாரம்} ஏதும் இல்லை. அவர்களுக்கான ஒரே பாவக்கழிப்பு மரணமேயாகும்.(35)

தங்கத்தைக் களவாடுவது, ஒரு பிராமணனின் உடைமையைக் களவாடுவது ஆகியவற்றுக்கும் அதேயே {மரணத்தையே பரிகாரமாகச்} சொல்லலாம். மதுபானம் பருகுவது, கலவியிலிருந்து விலக்கப்பட்டோருடன் கலவி கொள்வது,(36) வீழ்ந்தோருடன் கலப்பது, (பிற மூன்று வகையினரில் ஒருவன்) ஒரு பிராமணிப் பெண்ணுடன் கலவி கொள்வது ஆகியவற்றின் மூலம் அவன் தவிர்க்கவேமுடியாத அளவுக்கு வீழ்கிறான்.(37) வீழ்ந்தோருடன் வேள்வி காரியங்கள், கல்வி மற்றும் கலவியில் ஒரு முழு வருடம் கலந்திருந்தால், அவன் வீழ்ந்தவனாகிறான் {பதிதனாகிறான்}. எனினும், வீழ்ந்தோருடன் ஒருவன் ஒரே வாகனத்தில் செல்வது, ஒரே இருக்கையில் அமர்வது, ஒரே வரிசையில் உண்பது ஆகிய கலப்பினால் அவன் வீழ்ந்தவனாகமாட்டான்.(38) மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து முக்கியப் பாவங்களைத் தவிர்த்து, மற்ற பாவங்கள் அனைத்திற்கும் பாவக்கழிப்புகள் {பரிகாரங்கள்} கொடுக்கப்பட்டிருக்கின்றன. விதிப்படி அந்தப் பாவங்களுக்கான பாவக்கழிப்புகளைச் செய்த பிறகு, ஒருவன் மீண்டும் அவற்றில் ஈடுபடக்கூடாது.(39) இந்த ஐந்து பாவங்களில் முதல் மூன்று பாவங்களில் (மதுபானம் பருகுவது, ஒரு பிராமணனைக் கொல்வது, ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தல்) குற்றவாளிகளாக இருப்போரின் வழக்கில், அவர்கள் இறந்து அவர்களது ஈமச்சடங்குகள் செய்யப்படாமல் இருந்தாலும்கூட (உயிரோடு இருக்கும்) அவர்களது சொந்தங்கள் உணவை எடுத்துக் கொள்வதிலோ, ஆபரணங்களை அணிந்து கொள்வதிலோ எந்தத் தடையும் இல்லை. உயிரோடு இருக்கும் சொந்தங்கள் அத்தகைய சந்தர்ப்பங்களில் இதுபோன்ற காரியங்களில் எந்த ஐயுணர்வு கொள்ளக்கூடாது.(40)

உண்மையில், அந்தப் பாவிகள் பாவத்தணிப்புச் செய்வது வரை, அறவோர் அவர்களுடன் பேசவும் கூடாது[12]. பாவம் நிறைந்து செயல்பட்ட ஒரு மனிதன், அதற்பிறகு அறம்சார்ந்து நடந்தும், தவங்களின் மூலமும் தன் பாவத்தை அழிக்க வேண்டும்.(41) ஒரு திருடனைத் திருடன் என்று அழைப்பதால் ஒருவன் திருட்டின் பாவத்தை இழைக்கிறான். எனினும், திருடனல்லாத ஒருவனைத் திருடன் என்று அழைப்பதன் மூலம் ஒருவன் திருட்டின் இரண்டு மடங்கு பாவத்தை இழைக்கிறான்.(42) கற்பை இழக்கும் கன்னி பிரம்மஹத்தியின் {பிராமணனைக் கொன்ற பாவத்தில்} நான்கில் மூன்று பாகப் பாவத்தை செய்தவளாகிறாள், அதேவேளையில் அவளது கற்பழித்தவன் பிரம்மஹத்தியில் நான்கில் ஒரு பாகப் பாவத்தை செய்தவனாகிறான்.(43) பிராமணர்களை அவதூறு செய்வதன் மூலம், அல்லது அவர்களைத் தாக்குவதன் மூலம் ஒருவன் நூறு வருடங்கள் புகழ்க்கேட்டில் மூழ்குகிறான்.(44) ஒரு பிராமணனைக் கொல்வதால் ஒருவன் ஆயிரம் வருடங்களுக்கு நரகில் மூழ்குகிறான். எனவே, ஒருவரும் பிராமணனை இழித்துப் பேசவோ, கொல்லவோ கூடாது.(45)ஒருவன் ஒரு பிராமணனை ஆயுதத்தால் தாக்கினால், அவனது காயத்தில் இருந்து பாய்ந்த குருதியில் நனைந்த மண்ணின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்களுக்கு அவன் நரகத்தில் வாழ வேண்டும்.(46) கருவைக் கொன்ற குற்றவாளி ஒருவன், பசுகளுக்காகவும், பிராமணர்களுக்காகவும் போரிட்டு அடையும் காயங்களால் மரணமடைந்தால் தூய்மையடைகிறான். அவன் சுடர்மிக்க நெருப்புக்குள் தன்னை வீழ்த்திக் கொள்வதன் மூலமும் தூய்மையடையலாம்[13].(47) மதுபானம் பருகுபவன், கொதிக்கும் மதுபானத்தைப் பருகுவதால் தூய்மையடைகிறான். அந்தச் சூடான பானத்தால் எரிக்கப்பட்டு அடையும் மரணத்தினால் அவன் மறுமையில் தூய்மையடைகிறான்[14]. இத்தகைய பாவத்தால் களங்கமடைந்த ஒரு பிராமணன், இத்தகைய போக்கின் மூலம் இன்ப உலகங்களை அடைவானேயன்றி வேறு வகையில் இல்லை.(48)ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்திய தீய ஆன்மா கொண்ட இழிந்த அற்பன், கொதிக்கும் இரும்பு பெண் சிலையை அணைத்துக் கொள்வதன் விளைவால் ஏற்படும் மரணத்தின் மூலம் தூய்மையடைகிறான்.(49) அல்லது தன் அங்கத்தையும் {ஆண்குறியையும்}, விதைப்பையையும் வெட்டிக் கொண்டு அவற்றைத் தன் கரங்களில் ஏந்தியபடியே தென்மேற்காகச் சென்று அவன் தன் உயிரை விட வேண்டும்.(50) அல்லது, ஒரு பிராமணனுக்கு நன்மை செய்வதின் மூலம் மரணத்தைச் சந்தித்தும் அவன் தன் பாவத்தைக் கழுவிக் கொள்ளலாம். அல்லது ஒரு குதிரை வேள்வி, அல்லது கோஸவ வேள்வி, அல்லது அக்நிஷ்டோம {மருத்ஸோம} வேள்வி ஆகியவற்றைச் செய்து அவன் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த மதிப்பை மீட்கலாம்.(51)

பிராமணனைக் கொன்றவன், பனிரெண்டு வருடங்களுக்குப் பிரம்மச்சரிய நோன்பைப் பயின்று, தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, கொல்லப்பட்டவனின் மண்டையோட்டை எப்போதும் தன் கரங்களில் ஏந்திக் கொண்டு அனைவருக்கும் தன் பாவத்தை அறிவிக்க வேண்டும்.(52) இவ்வழியைப் பின்பற்றித் தவங்களுக்கு அர்ப்பணிப்புடன் அவன் ஒரு தவசியின் வாழ்வை வாழ வேண்டும். கருவுற்றிருக்கும் பெண்ணை, அவள் நிலையை அறிந்தே கொன்றவனுக்கு இந்தப் பாவக்கழிப்பே கொடுக்கப்பட்டிருக்கிறது.(53) அத்தகைய பெண்ணை அறிந்தே கொல்பவன் பிரம்மஹத்தியைப் போன்று இருமடங்கு பாவம் செய்தவனாவான். மதுபானம் பருகியவன், அற்ப அளவே உணவை உண்டு, பிரம்மச்சரிய நோன்புகளைப் பயின்று, வெறுந்தரையில் உறங்கி,(54) அக்நிஷ்டோமத்துக்கு அடுத்த வேள்வியை மூன்று வருடங்களுக்கு மேல் செய்ய வேண்டும். பிறகு அவன் (ஒரு நல்ல பிராமணனுக்கு) ஆயிரம் பசுக்களைக் கொடையாகக் கொடுக்க வேண்டும். இவை யாவற்றையும் செய்வதால் அவன் தன் தூய்மையை மீண்டும் அடைவான்.(55)

ஒரு வைசியனைக் கொன்றால், அவன் இரண்டு வருடங்களுக்கு அத்தகைய வேள்வியைச் செய்து, நூறு பசுக்கள் மற்றும் ஒரு காளையைக் கொடையாகக் கொடுக்க வேண்டும். ஒரு சூத்திரனைக் கொன்றால், அவன் ஒரு வருடத்திற்கு அத்தகைய வேள்வியைச் செய்து, நூறு பசுக்களையும், ஒரு காளையையும் கொடையாகக் கொடுக்க வேண்டும். ஒரு நாய், அல்லது கரடி, அல்லது ஒட்டகம் ஆகியவற்றைக் கொன்ற ஒருவன், ஒரு சூத்திரனைக் கொன்றதற்கு விதிக்கப்பட்ட அதே தவத்தைச் செய்ய வேண்டும்.(56) ஓ! மன்னா, பூனை, காடை, தவளை, காக்கை, பாம்பு, எலி ஆகியவற்றைக் கொன்றால், ஒருவன் விலங்கைக் கொன்ற பாவத்தை அடைகிறான் என்று சொல்லப்படுகிறது.(57) நான் இப்போது பிறவகைப் பாவக்கழிப்புகளை வரிசையாகச் சொல்லப் போகிறேன். சிறு பாவங்கள் அனைத்திற்கும், ஒருவன் வருந்த வேண்டும், அல்லது ஒருவருடம் ஏதாவது நோன்பை நோற்க வேண்டும்.(58) வேதங்களை அறிந்த ஒரு பிராமணனின் மனைவியோடு கலவி கொண்ட ஒருவன், நாளின் நான்காம் பகுதியில் சிறு உணவை மட்டுமே எடுத்துக் கொண்டு மூன்று வருடங்கள் பிரம்மச்சரிய நோன்பிருக்க வேண்டும். (தன் மனைவியல்லாத) வேறு பெண்ணுடன் கலவி கொண்ட ஒருவன் அதே போன்ற நோன்பை இரு வருடங்கள் இருக்க வேண்டும்.(59) ஒரு பெண்ணின் தோழமையில், அவள் அமர்ந்த அதே இடத்தில் அவளோடு அமர்ந்து, அல்லது அதே இருக்கையில் அமர்ந்து இருந்தால், ஒருவன் மூன்று நாட்கள் நீரை மட்டுமே உண்டு வாழ வேண்டும். இதைச் செய்வதன் மூலம் அவன் தன் பாவத்திலிருந்து தூய்மையடையலாம். சுடர்மிக்க நெருப்பை (தூய்மையற்ற பொருட்களை வீசுவதன் மூலம்) களங்கப்படுத்துபவனுக்கும் அதே பாவக்கழிப்பே சொல்லப்பட்டிருக்கிறது.(60)

ஓ! குரு குலத்தோனே, போதுமான காரணமின்றித் தன் தந்தை, அல்லது தாய், அல்லது ஆசான் ஆகியோரைக் கைவிடுபவன், நிச்சயம் வீழ்ந்தவனாவான் என்பதே சாத்திரங்களின் முடிவு. பிறமனையுறவு கொண்ட {விபச்சாரம் செய்த} குற்றவாளியான ஒரு மனைவி, அல்லது சிறையில் அடைக்கப்பட்ட ஒருவன் ஆகியோருக்கு விதிப்படி உணவு மற்றும் உடைகள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். உண்மையில், பிறமனையுறவு குற்றத்தில் ஓர் ஆணுக்கு விதிக்கப்பட்ட நோன்புகள், அதே குற்றத்தைச் செய்த ஒரு பெண்ணாலும் நோற்கப்பட வேண்டும்.(61,62) மேன்மையான வர்ணத்தைச் சேர்ந்த கணவனைக் கைவிட்டு, (தாழ்ந்த வகையைச் சேர்ந்த) ஒரு தீயவனுடன் கலவி புரிந்த ஒரு பெண், ஒரு பெரிய பார்வையாளர் கூட்டத்தைக் கொண்ட ஒரு பொதுவான இடத்தில் வைத்து நாய்களால் கடிக்கச் செய்யப்பட வேண்டும்.(63) ஒரு ஞானமிக்க மன்னன், பிறமனையுறவு கொண்ட ஆணை, பழுக்கக் காய்ச்சிய இரும்புப் படுக்கையில் கிடத்தி, அதன் கீழே விறகுகளை வைத்து அந்தப் பாவியை எரிக்க வேண்டும்.(64) ஓ! மன்னா, பிறமனையுறவு கொண்ட பெண் குற்றவாளிக்கும் இதே தண்டையே விதிக்கப்பட்டிருக்கிறது. எந்தத் தீய பாவி, தனக்குச் சொல்லப்பட்ட பாவக்கழிப்பை ஒரு வருடத்திற்குள் செய்யவில்லையோ, அவனை அந்தப் பாவத்தைப் போன்ற இரு மடங்கு பாவம் பீடிக்கும்.(65)

அத்தகைய மனிதனோடு தொடர்புடைய ஒருவன் இரண்டு வருடங்கள் தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்துப் பிச்சையெடுத்து வாழ்ந்து இந்தப் பூமியில் உலவ வேண்டும். நான்கு வருடங்களாக ஒரு பாவியோடு தொடர்புடைய ஒருவன், ஐந்து வருடங்களுக்கு அத்தகைய வாழ்வு முறையைப் பின்பற்றி வாழ வேண்டும்.(66) அண்ணனுக்கு முன்பு தம்பி திருமணம் செய்து கொண்டால், அந்தத் தம்பி, அண்ணன், அந்தப் பெண் ஆகிய மூவரும், அத்தகைய திருமணத்தின் விளைவால் வீழ்ந்தவர்களாவார்கள்.(67) இவர்கள் அனைவரும், வேள்வி நெருப்பைப் புறக்கணித்தவனுக்குப் பரிந்துரைக்கப்படும் நோன்புகளை நோற்க வேண்டும், அல்லது, ஒரு மாதத்திற்குச் சாந்திராயண[15] நோன்பைப் பயில வேண்டும், அல்லது, வேறு எந்த வலிமிக்க நோன்பையாவது பயின்று தன் பாவத்திலிருந்து தூய்மையடைய வேண்டும்.(68) திருமணம் செய்து கொண்ட தம்பி, திருமணமாகாத தன் அண்ணனுக்குத் தன் மனைவியை {மருமகளாகக்} கொடுக்க வேண்டும். அதன் பிறகு தன் அண்ணனின் அனுமதியோடு, அவன் தன் மனைவியைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்[16]. இத்தகைய வழிமுறைகளின் மூலம் அந்த மூவரும் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடையலாம்.(69) ஒரு பசுவைத் தவிர வேறு விலங்குகளைக் கொல்வதன் மூலம் அந்தக் கொலையாளி களங்கப்பட்டவனாக மாட்டான். தாழ்ந்த விலங்குகள் அனைத்தின் மீதும் மனிதனுக்கு ஆளுமை உண்டு என்பதைக் கற்றோர் அறிவர்.(70)ஒரு பாவி, தன் கரத்தில் சாமரத்தையும்[17], மண்குடத்தையும் ஏந்திக் கொண்டு தன் பாவத்தை அறிவித்துக் கொண்டே அலைய வேண்டும். அவன் ஒரு நாளைக்கு, ஏழு குடும்பங்களில் மட்டுமே பிச்சையெடுத்து,(71) அவ்வாறு ஈட்டப்பட்டதைக் கொண்டு மட்டுமே வாழ வேண்டும். இவ்வாறு பனிரெண்டு நாட்கள் செய்வதன் மூலம் அவன் தன் பாவத்தில் இருந்து தூய்மையடைவான். தன் கரத்தில் சாமரத்தை ஏந்த முடியாதவன், இந்த நோன்பைப் பயிலும்போது, (மேற்குறிப்பிட்டவாறு) பிச்சையெடுக்கும் நோன்பை ஒரு முழு வருடத்திற்கு நோற்க வேண்டும்.(72) மனிதர்களுக்கு மத்தியில் இத்தகைய பாவக்கழிப்புகளே சிறந்தவை. ஈகை பயில இயன்றவர்கள், இத்தகைய வழக்குகள் அனைத்திலும் விதிக்கப்பட்ட ஈகையைப் பயில வேண்டும்.(73) நம்பிக்கையும், நன்னடத்தையும் கொண்டவர்கள், ஒரு பசுவை மட்டுமே கொடுப்பதால் தூய்மையடைவார்கள்.(74) நாய், பன்றி, மனிதன், சேவல், ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சியையோ, உடல் கழிவுகளையோ உண்டாலும் சிறுநீரைக் குடித்தாலும் ஒருவன் புனித நூல் {பூணூல்} அணியும் நிகழ்வை {உபநயனத்தை} மீண்டும் செய்து கொள்ள வேண்டும்.(75) சோமம் பருகும் பிராமணன், மது அருந்தியவனின் வாயில் இருந்து மதுவின் மணத்தை நுகர்ந்தால், அவன் மூன்று நாளைக்கு வெண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும்.(76) அல்லது, மூன்று நாட்களுக்கு வெண்ணீரைக் குடித்தும், காற்றை உண்டும் வாழ வேண்டும். அறியாமையிலோ, மடமையினாலோ ஒருவனால், அதிலும் குறிப்பாக ஒரு பிராமணனால் செய்யப்படும் பாவங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் நித்திய விதிமுறைகளே இவை” என்றார் {பீஷ்மர்}”[18].(77)

வாளின் வரலாறு! – சாந்திபர்வம் பகுதி – 166-வாள் எவ்வாறு உண்டானது, அதன் ஆசான் யார் எனப் பீஷ்மரிடம் கேட்ட நகுலன்; வாளின் மூலம் உள்ளிட்ட வரலாற்றை நகுலனுக்குச் சொன்ன பீஷ்மர்..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் செய்த} இந்த உரையாடல் முடிந்ததும், சாதனை செய்த வாள்வீரனான நகுலன், கணைப்படுக்கையில் கிடக்கும் குரு குலத்துப் பாட்டனிடம் இவ்வாறு கேள்வி கேட்டான்.(1)

நகுலன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, இவ்வுலகில் முதன்மையான ஆயுதமாக வில் கருதப்படுகிறது. எனினும், ஓ! மன்னா, வில் வெட்டப்படவோ, முறிக்கப்படவோ நேரும்போதும், குதிரைகள் கொல்லப்படவோ, பலவீனப்படவோ நேரும்போதும், வாளில் நல்ல பயிற்சி கொண்ட ஒரு நல்ல போர்வீரனால் தன் வாளின் மூலமாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதால், என்மனம் வாளையே விரும்புகிறது.(2,3) வாள் தரித்த வீரனால், பல வில்லாளிகளையும், கதாயுதங்கள் மற்றும் ஈட்டிகளைத் தரித்த பல எதிரிகளையும் தனியொருவனாகவே தாக்குப்பிடிக்க முடியும்.(4) எனக்கு இந்த ஐயம் இருக்கிறது. உண்மையை அறிந்து கொள்வதில் நான் ஆவல் கொள்கிறேன். ஓ! மன்னா, உண்மையில் போர்கள் அனைத்திலும் முதன்மையான ஆயுதம் எது?(5) வாளானது முதன்முதலாக எப்போது படைக்கப்பட்டது, என்ன நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டது? அந்த ஆயுதத்தின் முதல் ஆசான் யார்? ஓ3! பாட்டா, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான் {நகுலன்}”.(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நுண்ணறிவு கொண்ட மாத்ரி மகனின் {நகுலனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவரும், வில் அறிவியலில் முற்றான திறம்படைத்தவரும், கணைப்படுக்கையில் நீண்டு கிடந்தவருமான அறம்சார்ந்த பீஷ்மர், திறம் மிக்கப் பயிற்சி கொண்டவனும், துரோணரின் சீடனுமான உயரான்ம நகுலனிடம் குறிப்பிடத்தக்க திறனை வெளிப்படுத்தும் வகையில், காதுக்கினிய உயிரெழுத்துகள் முறையாக அமைக்கப்பட்டதும், மகிழ்ச்சிமிக்கச் சொற்கள் நிறைந்ததுமான இந்தப் பதிலை அளித்தார்.(7-9)

பீஷ்மர் {நகுலனிடம்}, “ஓ! மாத்ரியின் மகனே, நீ என்னிடம் கேட்டதற்கான உண்மையைக் கேட்பாயாக. ஒரு செஞ்சுண்ண மலை போல உன் கேள்வியால் நான் உற்சாகம் அடைகிறேன்[1].(10) பழங்காலத்தில் இந்த அண்டம் முழுவதும் ஒரே நீர்ப்பரப்பாக, அசைவற்றதாக, வானமற்றதாக, இந்தப் பூமிக்கான இடம் ஏதுமில்லாததாக இருந்தது.(11) இருளில் மூழ்கி, உணர்ந்தறியமுடியாத வகையில் இருந்த அதன் தன்மை மிகப் பயங்கரமானதாக இருந்தது. முற்றான அமைதியின் ஆளுகையில் இருந்த அதன் பரப்பு அளவிடமுடியாததாக இருந்தது. சரியான நேரத்தில் (அண்டத்தின்) பெரும்பாட்டன் {பிரம்மன்} தன் பிறப்பை அடைந்தான்.(12) பிறகு அவன், காற்றையும், நெருப்பையும், பெரும் சக்தி கொண்ட சூரியனையும் உண்டாக்கினான். மேலும் அவன் வானத்தையும், சொர்க்கங்களையும், பாதாளங்களையும், பூமி, திசைகள்,(13) நிலவு, விண்மீன்கள், விண்மீன்கூட்டங்கள், கோள்கள் ஆகியவற்றுடன் கூடிய ஆகாயத்தையும், வருடம், பருவ காலங்கள், மாதங்கள், இரண்டு அரைத்திங்கள்கள்{பக்ஷங்கள்}, காலத்தின் சிறிய பிரிவுகள் ஆகியவற்றையும் உண்டாக்கினான்.(14)தெய்வீகப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, பிறகு, காணத்தக்க வடிவத்தை அடைந்து, (தன் விருப்ப சக்தியின் விளைவால்) பெரும் சக்தி கொண்ட சில மகன்களைப் பெற்றான்.(15) அவர்கள், மரீசி, {பிருகு}, அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர், அங்கிரஸ், வலிமையும் பலமுமிக்க ருத்திரன்[2],(16) பிரசேதஸ் ஆகியோர் ஆவர். இறுதியானவன் {பிரசேதஸ்} தக்ஷனைப் பெற்றான், அவன் {தக்ஷன்} அறுபது மகள்களைப் பெற்றான். பிள்ளைகளைப் பெறும் நோக்கம் கொண்ட மறுபிறப்பாள முனிவர்கள் அந்த மகள்கள் அனைவரையும் {மனைவியாக} எடுத்துக் கொண்டனர்.(17) அவர்களில் இருந்தே அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தும், தேவர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் பல்வேறு வகைகளிலான ராட்சசர்கள்,(18) பறவைகள், விலங்குகள், மீன்கள், குரங்குகள், பெரும்பாம்புகள், காற்றிலும், நீரிலும் விளையாடும் பல்வேறு வகை இனங்களிலான கோழிகள்,(19) காய்கறிகள், முட்டையிடும் இனங்களும், பாலூட்டிகளும், கழிவுகளில் {வியர்வை, மலம், அழுகல் உள்ளிட்டவற்றில்} பிறக்கும் அனைத்தும் உயிரினங்களும் பிறந்தன. இவ்வழியிலேயே அசையும், மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டம் இருப்புக்கு வந்தது.(20)அண்டத்தின் பெரும்பாட்டன் {பிரம்மன்} இவ்வாறு அசையும், மற்றும் அசையாத உயிரினங்களை இருப்புக்கு இழைத்து, வேதங்களில் விதிக்கப்பட்ட அழிவில்லா அறத்தை {சாஸ்வத தர்மத்தை} அறிவித்தான்.(21) அந்த அறமானது, தேவர்கள், அவர்களுடைய ஆசான்கள், புரோகிதர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், ருத்திரர்கள், சத்யஸ்கள், மருத்துகள், அசுவினிகள்,(22) பிருகு, அத்ரி, அங்கிரஸ், சித்தர்கள், தவ வளம் கொண்ட கசியபர், வசிஷ்டர், கௌதர், அகஸ்தியர், நாரதர், பர்வதர்,(23) வாலகில்ய முனிவர்கள், பிரபாசர்கள் என்ற பெயர்களில் அறியப்பட்ட முனிவர்கள், சிகதர்கள், கிருதபர்கள், சோமவாயவ்யர்கள், வைஸ்வானர்கள், மரீசிபர்கள்,(24) ஆகிருஷதர்கள், ஹம்சர்கள், நெருப்பில் பிறந்தோர் {அக்னியோனிகள்}, வானப்ரஸ்தர்கள், பிருஸ்னிகள் ஆகியோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவரும் பிரம்மனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தனர்.(25)

எனினும், தானவர்களில் முதன்மையானோர், பெரும்பாட்டனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல், கோபத்துக்கும், பேராசைக்கும் வசப்பட்டவர்களாக, அறத்திற்கு அழிவுண்டாக்கத் தொடங்கினர்.(26) அவர்கள் {அந்தத் தானவர்கள்} ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன், விரோசனன், சம்பரன், விப்ரசித்தி, பிரகலாதன், நமுசி, பலி ஆகியோராவர்.(27) இவர்களும், இன்னும் பல தைத்திய தானவர்களும், கடமை மற்றும் அறத்தின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறி, அனைத்து வகைத் தீச்செயல்களிலும் இன்புற்று விளையாடிக் கொண்டிருந்தனர்.(28) பிறப்பால் தேவர்களுக்கு இணையானவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்ட அவர்கள், தேவர்களையும், தூய நடத்தை கொண்ட தவசிகளையும் அறைகூவி அழைக்கத் தொடங்கினர்.(29) அவர்கள் அண்டத்தின் எந்த உயிரினத்திற்கும் ஒருபோதும் நன்மையையோ, அவர்களில் எவருக்கும் கருணையையோ காட்டவில்லை. நன்கு அறியப்பட்ட மூன்று வழிமுறைகளை அலட்சியம் செய்த அவர்கள், தண்டக்கோலை மட்டுமே தரித்துக் கொண்டு அனைத்து உயிரினங்களையும் பீடித்து அழிக்கத் தொடங்கினர்.(30)

உண்மையில், செருக்கால் நிறைந்திருந்த அந்த அசுரர்களில் முதன்மையானோர், பிற உயிரினங்களுடனான நட்புரீதியான அனைத்து தொடர்புகளையும் கைவிட்டனர். அப்போது, மறுபிறப்பாள தவசிகளுடன் கூடிய தெய்வீகப் பிரம்மன்,(31) நூறு யோஜனைகள் பரப்பளவுக்கு, பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தடாகத்தில் உள்ள தாமரை மலர்களைப் போலத் தன் பரப்பில் நட்சத்திரங்களைக் கொண்டதாகத் தெரிந்ததுமான இமயத்தின் இனிமைநிறைந்த சிகரத்திற்குச் சென்றான்.(32) ஓ! ஐயா, மலர்ந்திருக்கும் மரங்கள் அடர்ந்த காடுகளைக் கொண்ட அந்த மலைகளின் இளவரசனின் மீதிருந்த முதன்மையான தேவனான பிரம்மன், உலகின் காரியத்தை நிறைவு செய்வதற்காகச் சில காலம் தங்கியிருந்தான்.(33) ஆயிரம் வருடங்கள் கழிந்ததும், அந்தப் பலமிக்கத் தலைவன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி ஒரு மகத்தான வேள்வியைச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.(34) வேள்வி செய்வதில் திறம்பெற்றவர்களும், விறகுகளையும், சுடர்மிக்க நெருப்பையும் கொண்டு, அது {வேள்வி} தொடர்பான செயல்கள் அனைத்தையும் செய்ய வல்லவர்களுமான முனிவர்கள் வேள்விப்பீடத்தை அலங்கரித்தனர்.(35)

வேள்விப் பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்ததன் விளைவால் அது {வேள்விப்பீடம்} மிக அழகாகத் தெரிந்தது. தேவர்களில் முதன்மையானோர் அனைவரும் அதில் {வேள்விப்பீடத்தில்} அமர்ந்தனர்.(36) மேலும் உயர்ந்த மறுபிறப்பாள முனிவர்களைக் கொண்ட சத்யஸ்கள் அனைவராலும் அந்த மேடை அலங்கரிக்கப்பட்டது. விரைவில் அந்த வேள்வியில் மிகப் பயங்கரமான ஒன்று நடந்ததாக முனிவர்களின் மூலம் நான் கேள்விப்பட்டேன்.(37) (வேள்வி நெருப்பில் இருந்து) ஆகாயத்தில் சிதறியிருக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் எழும் சந்திரனுக்கு ஒப்பான காந்தியுடன் கூடிய ஓர் உயிரினம் தன்னைச் சுற்றிலும் உள்ள தழல்களைச் சிதறடித்தபடி எழுந்தது.(38) அதன் நிறம் நீலத் தாமரை {கருங்குவளை} இதழ்களைப் போலக் கரியதாக இருந்தது. அதன் பற்கள் கூர்மையானவையாக இருந்தன. அதன் வயிறு மெலிந்ததாக இருந்தது. அதன் வடிவம் உயர்ந்ததாக இருந்தது. அது தடுக்கப்பட முடியாத மிதமிஞ்சிய சக்தியைக் கொண்டதாக இருந்தது.(39) அந்த உயிரினம் தோன்றியதும் பூமாதேவி நடுங்கினாள். மலைபோன்ற அலைகளையும், பயங்கர நுரைகளையும் கொண்ட பெருங்கடல் கலக்கமடைந்தது.(40)

பேராபத்துகளை முன்னறிவித்துக் கொண்டு வானத்தின் எரிநட்சத்திரங்கள் விழுந்து கொண்டிருந்தன. மரங்களின் கிளைகள் கீழேவிழத் தொடங்கின. திசைகளின் புள்ளிகள் அனைத்தும் அமைதியற்றவையாகின. மங்கலமற்ற காற்றுகள் வீசத் தொடங்கின. ஒவ்வொரு கணமும் அனைத்து உயிரினங்களும் அச்சத்தால் நடுங்கத் தொடங்கின.(41) அண்டத்தின் பயங்கரக் கலக்கத்தையும், வேள்வி நெருப்பில் இருந்து எழுந்த அந்த உயிரினத்தையும் கண்ட பெரும்பாட்டன், அங்கே இருந்த பெருமுனிவர்கள், தேவர்கள் மற்றும் கந்தர்வர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான், “இந்த உயிரினம் என்னால் எண்ணப்பட்டது. பெரும் சக்தி கொண்ட இதன் பெயர் அஸி (வாளாகும்) ஆகும். உலகத்தைப் பாதுகாப்பதற்காகவும், தேவர்களின் எதிரிகளை அழிப்பதற்காகவும் நான் இதை உண்டாக்கினேன்” என்றான்.(43) பிறகு அந்த உயிரினம் தான் முதலில் ஏற்றிருந்த வடிவத்தைக் கைவிட்டு, பெரும் காந்தியுடையதும், மிகப் பளபளப்பானதும், கூர்முனைகளைக் கொண்டதும், யுக முடிவில் அனைத்தையும் அழிக்க எழுந்ததைப் போலவும் ஒரு வாளின் வடிவத்தை ஏற்றது.(44) அப்போது பிரம்மன், மறம் {அதர்மம்}, பாவம் ஆகியவற்றை அழிக்கத்தகுந்தவனாக்குவதற்காக, முதன்மையான காளையைத் தன் கொடியில் கொண்டவனும், நீலமிடறு கொண்டவனுமான ருத்திரனிடம் அந்தக் கூரிய ஆயுதத்தைக் கொடுத்தான்.(45)

இதன்பேரில், அளவிலா ஆன்மா கொண்டவனும், பெரும் முனிவர்களால் புகழப்பட்டவனுமான தெய்வீக ருத்திரன், அந்த வாளை எடுத்துக் கொண்டு, வேறொரு வடிவத்தை ஏற்றான்.(46) நான்கு கரங்களை வெளிப்படுத்திக் கொண்ட அவன், பூமியில் நின்று கொண்டிருந்தாலும், தலை சூரியனையே தொடும் அளவுக்கு நெடியவனானான். மேல்நோக்கிய விழிகளுடனும், பரந்து விரிந்த அங்கங்களுடனும் அவன் தன் வாயில் இருந்து நெருப்பின் தழல்களைக் கக்கத் தொடங்கினான்.(47) நீலம், வெள்ளை, சிவப்பு எனப் பல்வேறு நிறங்களை ஏற்று, தங்க நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட கருப்பு மான் தோலை உடுத்தியிருந்த அவன்,(48) சூரியனின் காந்திக்கு ஒப்பான மூன்றாவது கண்ணைத் தன் நெற்றியில் கொண்டிருந்தான். ஒன்று கருப்பாகவும், ஒன்று பழுப்பாகவும் இருந்த அவனது மற்ற இரு விழிகள் மிகப் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன.(49) சூலபாணியும், பகனின் கண்ணைக் கிழித்தவனுமான தெய்வீக மகாதேவன், அனைத்தையும் அழிக்கும் யுக நெருப்புக்கு ஒப்பான காந்தியைக் கொண்ட அந்த வாளை எடுத்துக் கொண்டு,(50) மின்னலின் கீற்றுகளால் அலங்கரிக்கப்பட்ட கரிய மேகத் திரள்களைப் போன்றிருந்த மூன்று உயர்ந்த குமிழ்களைக் கொண்ட கேடயத்தையும் எடுத்துக் கொண்டு பல்வேறு வகையான பரிமாணங்களை வெளிப்படுத்தத் தொடங்கினான்.

பேராற்றல் கொண்ட அவன் {ருத்திரன்}, ஒரு மோதலை விரும்பி வானத்தில் அந்த வாளைச் சுழற்றத் தொடங்கினான்.(51) அவன் வெளியிட்ட முழக்கங்கள் உரத்தவையாகவும், அவனது சிரிப்பின் ஒலி பயங்கரமானதாகவும் இருந்தது. உண்மையில், ஓ! பாரதா {நகுலா}, ருத்திரன் அப்போது ஏற்றிருந்த வடிவம் மிகப் பயங்கரமானதாக இருந்தது.(52) ருத்திரன் கடுஞ்செயல்களை நிறைவேற்றும் வடிவத்தை ஏற்றிருப்பதைக் கேட்ட தானவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, பெரும் பாறைகளையும், சுடர்மிக்கக் கொள்ளிகளையும், பல்வேறு வகையிலான இரும்பாலான பயங்கர ஆயுதங்களையும், கூர்முனை கொண்ட கத்திகளுடன் கூடிய ஆயுதங்களையும் பொழிந்து கொண்டே அவனை நோக்கிப் பெரும் வேகத்தில் வரத் தொடங்கினர்.(53,54) எனினும், அந்தத் தானவப் படையானது, உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அழிக்கப்பட முடியாதவனுமான ருத்திரன் வலிமையில் பெருகுவதைக் கண்டு, மலைப்படைந்து, நடுங்கத் தொடங்கினர்.(55)

ருத்திரன் தனியொருவனாக இருந்தாலும், கையில் வாளுடன் போர்க்களத்தில் அவன் நகர்ந்த போது, தங்களுடன் ஆயிரம் ருத்திரர்கள் போரிடுவதாக அசுரர்களுக்குத் தெரிந்தது.(56) அந்தப் பெருந்தேவன், கிழித்துக் கொண்டும், துளைத்துக் கொண்டும், பீடித்தும், வெட்டியும், துண்டித்தும், கலங்கடித்தபடியும், சுற்றிலும் பரவியிருக்கும் காய்ந்த புற்குவியலுக்கு மத்தியில் உள்ள காட்டுத்தீயைப் போல அடர்த்தியாக இருந்த தன் பகைவர்களின் கூட்டத்திற்கு மத்தியில் நகர்ந்து கொண்டிருந்தான்.(57) வலிமைமிக்க அசுரர்கள், அந்தத் தேவனின் வாள்வீச்சால் கரங்கள், தொடைகள், மார்புகள் வெட்டப்பட்டு, துளைக்கப்பட்டு, தங்கள் உடல்களில் இருந்து தலைகள் கொய்யப்பட்டு, பூமியில் விழத் தொடங்கினர்.(58) தானவர்களில் வேறு சிலர், அந்த வாள்வீச்சுகளால் பீடிக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் உற்சாகமளித்தபடியே அனைத்துத் திசைகளிலும் பிளந்து தப்பி ஓடினர்.(59) சிலர் பூமியின் குடல்களுக்குள் ஊடுருவினர்; வேறு சிலர் மலைகளின் அடியில் சென்றனர். இன்னும் சிலர் மேல்நோக்கிச் சென்றனர்; வேறு சிலர், கடலின் ஆழத்திற்குள் நுழைந்தனர்.(60)

கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, சதையாலும், குருதியாலும் பூமி சகதியானது, அனைத்துப் பக்கங்களிலும் பயங்கரக் காட்சிகள் தென்பட்டன.(61) குருதியால் மறைக்கப்பட்ட வீழ்ந்த தானவர்களின் உடல்கள் விரவிக்கிடந்த பூமியானது, கின்சுகங்கள் {பலாச மரங்கள்} நிறைந்த மலைச்சிகரத்தைப் போலத் தெரிந்தது.(62) ஊனீரால் நிறைந்த பூமியானது, மது போதையில் உள்ளவளும், அடர் சிவப்பு ஆடைகளை உடுத்தியிருந்தவளும், அழகிய நிறம் கொண்டவளுமான ஒரு மங்கையைப் போலத் தெரிந்தது.(63) தானவர்களைக் கொன்று, பூமியில் மீண்டும் அறத்தை நிறுவிய மங்கலமான ருத்திரன், தன் பயங்கர வடிவைக் கைவிட்டு, மீண்டும் தன் நல்வடிவை அடைந்தான்.(64) அப்போது, முனிவர்கள் மற்றும் தேவர்கள் அனைவரும் அந்தத் தேவாதி தேவனுக்கு வெற்றியை விரும்பி பாராட்டுப் பேரொலியுடன் துதித்தனர்.(65)

இதன்பிறகு, அந்தத் தெய்வீக ருத்திரன், அறத்தைப் பாதுகாத்ததும், தானவர்களின் குருதியால் வண்ணம் தீட்டப்பட்டதுமான அந்த வாளை, உரிய துதிகளுடன் விஷ்ணுவுக்கு அளித்தான்.(66) விஷ்ணு அதை மரீசிக்குக் கொடுத்தான். தெய்வீக மரீசி அதைப் பெரும் முனிவர்கள் அனைவருக்கும் கொடுத்தார். அவர்கள் அதை வாசவனுக்கு {இந்திரனுக்குக்} கொடுத்தனர்.(67) வாசவன் அதை லோகபாலர்களுக்குக் கொடுத்தான். ஓ! மகனே {நகுலா}, லோகபாலர்கள் அந்தப் பெரும் வாளை சூரியனின் மகனான மனுவுக்குக் கொடுத்தனர்.(68) அதை மனுவுக்குக் கொடுத்தபோது அவர்கள், “நீயே மனிதர்கள் அனைவருக்கும் தலைவனாவாய். அறத்தைத் தன் கருவறையில் கொண்டிருக்கும் இந்த வாளைக் கொண்டு அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பாயாக.(69) உடலின் நிமித்தமாகவோ, மனத்தாலோ அறத்தடைகளை மீறுவோரை முறையாகத் தண்டித்து, உறுதியின்மையால் ஒருபோதும் அல்லாமல், விதிகளுக்கு இசைவானபடியே அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.(70) சிலர் சொல்லாலான நிந்தனைகளாலும், அபராதங்களாலும், பறிமுதல்களாலும் தண்டிக்கப்படவேண்டும். சிறிய காரணங்களுக்காக {தண்டனையாக} ஒருபோதும் அங்க இழப்போ, மரணமோ கொடுக்கப்படக்கூடாது” என்றனர்.(71)

சொல்லாலான நிந்தனைகளை முதலாகக் கொண்ட இந்தத் தண்டனைகளே, அந்த வாளின் பல்வேறு வடிவங்களாகக் கருதப்படுகின்றன. (மன்னனின்) பாதுகாப்பின் கீழுள்ள மனிதர்கள் அத்துமீறுவதன் விளைவால், அந்த வாள் இந்த வடிவங்களையே ஏற்கிறது.(72) மனு, தன் மகனான க்ஷுபனை அனைத்துயிரினங்களின் அரசுரிமையில் நிறுவிய நேரத்தில், அவர்களின் பாதுகாப்புக்காக இந்த வாளை அவனிடம் கொடுத்தார்.(73) க்ஷுபனிடமிருந்து இக்ஷ்வாகுவும், இக்ஷ்வாகுவிடமிருந்து புரூரவசும் எடுத்துக் கொண்டனர். பிறகு புரூரவசிடம் இருந்து ஆயுசும், ஆயுசிடமிருந்து நகுஷனும் எடுத்துக் கொண்டனர்.(74) பிறகு நகுஷனிடமிருந்து யயாதியும், யயாதியிடமிருந்து பூருவும் எடுத்துக் கொண்டனர். பூருவிடமிருந்து ஆமூர்த்தனும் {ஆதூர்த்தனும்}, ஆமூர்த்தனிடமிருந்து பூமிசயனும் பெற்றுக் கொண்டனர்.(75)

பூமியசயனிடமிருந்து துஷ்யந்தன் மகனான பரதன் அதைப் பெற்றுக் கொண்டான். ஓ! ஏகாதிபதி, பரதனிடமிருந்து அறம்சார்ந்த ஐலபிலன் பெற்றுக் கொண்டான்.(76) ஐலபிலனிடமிருந்து மன்னன் துந்துமாரன் பெற்றுக் கொண்டான். துந்துமாரனிடமிருந்து காம்போஜனும், காம்போஜனிடமிருந்து முசுகுந்தனும் பெற்றுக் கொண்டனர்.(77) முசுகுந்தனிடமிருந்து மருத்தனும், மருத்தனிடமிருந்து ரைவதனும் பெற்றுக் கொண்டனர். ரைவதனிடம் இருந்து யுவனாஸ்வனும், யுவனாஸ்வனிடமிருந்து ரகுவும் பெற்றுக் கொண்டனர்.(78) ரகுவிடமிருந்து வீரனான ஹரிணாஸ்வன் பெற்றுக் கொண்டான். ஹரிணாஸ்வனிடமிருந்து அந்த வாள் சுனகனால் எடுத்துக் கொள்ளப்பட்டது, சுனகனிடமிருந்து அற ஆன்மாவான உசீநரன் எடுத்துக் கொண்டான். அவனிடமிருந்து அது போஜர்களாலும், யாதவர்களாலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.(79) யதுக்களிடமிருந்து அதைச் சிபி எடுத்துக் கொண்டான். சிபியிடமிருநு அது பிரதர்த்தனனிடம் சென்றது. பிரதர்த்தனனிடமிருந்து அதை அஷ்டகன் பெற்றுக் கொண்டான். அஷ்டகனிடமிருந்து பிருஷதாஸ்வன் பெற்றுக் கொண்டான்.(80)

பிருஷதாஸ்வனிடமிருந்து பரத்வாஜர் அதைப் பெற்றுக் கொண்டார், அவரிடமிருந்து துரோணர் அதைப் பெற்றுக் கொண்டார். துரோணரிடமிருந்து அது கிருபரால் எடுத்துக் கொள்ளப்பட்டது. கிருபரிடமிருந்த அந்தச் சிறந்த வாளை, உன் சகோதரர்களுடன் கூடிய நீ {நகுலன்} அடைந்தாய்.(81) அந்த வாள் பிறந்த நட்சத்திரக்கூட்டமானது கிருத்திகையாகும். அக்னியே அதன் தேவனாவான், ரோஹிணியே அதன் கோத்ரமாகும் {குடும்பமாகும்}. ருத்ரனே அதன் உயர்ந்த ஆசானாவான்.(82) அந்த வாளானது பொதுவாக அறியப்படாத எட்டுப் பெயர்களைக் கொண்டதாகும். அதை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! பாண்டுவின் மகனே {நகுலனே}, இந்தப் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் எப்போதும் வெற்றியை அடைவான்.(83) அஸி, வைசஸனம் {விசஸனம்}, கட்கம், கூர்முனை கொண்டது {தீக்ஷ்ணஸர்மம்}, அடைவதற்கரிதானது {துராஸதம்}, ஸ்ரீகர்ப்பம், வெற்றி {விஜயம்}, அறப்பாதுகாவலன் {தர்ம்பாலம்} ஆகியவையே அந்தப் பெயர்களாகும்.(84) ஓ! மத்ராவதியின் {மாத்ரியின்} மகனே, ஆயுதங்கள் அனைத்திலும் வாளே முதன்மையானது. அது முதலில் மஹாதேவனாலேயே தரிக்கப்பட்டதும் என்று புராணங்களே உண்மையில் அறிவிக்கின்றன.(85)

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, வில்லைப் பொறுத்தவரையில், அது முதலில் பிருதுவால் உண்டாக்கப்பட்டது. இந்த ஆயுதத்தின் உதவியுடனே அந்த வேனன் மகன் {பிருது}, பல வருடங்களுக்குப் பூமியை அறம்சார்ந்து ஆண்ட போது, அவளது {பூமியின்} பயிர்களையும், தானியங்களையும் அபரிமிதமாகக் கறந்தான்.(86) ஓ! மாத்ரியின் மகனே, முனிவர்கள் சொல்வதை முடிவான ஆதாரமாகக் கருதுவதே உனக்குத் தகும். போரில் திறம்பெற்ற அனைவரும் வாளை வழிபட வேண்டும்.(87) ஓ! பாரதக் குலத்தின் காளையே, வாளின் மூலம் மற்றும் படைப்பைக் குறித்த உன் கேள்வியின் முதல் பகுதியை உண்மையில் விரிவாக நான் சொல்லிவிட்டேன்.(88) வாளின் மூலம் தொடர்பான இந்தச் சிறந்த கதையைக் கேட்பதன் மூலம் ஒரு மனிதன் இம்மையில் புகழை வென்று, மறுமையில் அழிவில்லா இன்பத்தை அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}”.(89)

அறம், பொருள், இன்பம், வீடு! – சாந்திபர்வம் பகுதி – 167-அறம், பொருள், இன்பம் ஆகியவை குறித்து விதுரர், அர்ஜுனன், நகுல சகாதேவர்கள், பீமசேனன் ஆகியோர் பேசியது; வீடு குறித்து யுதிஷ்டிரன் பேசியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இதை {வாளின் வரலாற்றைச்} சொல்லிவிட்டு பீஷ்மர் அமைதியானபோது, யுதிஷ்டிரன் (அவனும் பிறரும்) தன் இல்லத்துக்குத் திரும்பினான். மன்னன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகளிடமும், அவர்களோடு ஐந்தாவதாக இருந்த விதுரனிடமும்,(1) “உலகின் போக்கு அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இம்மூன்றின் முக்கியத்துவத்தில், எது முதன்மையானது, எது இரண்டாவது, எது மூன்றாவது?(2) மூன்று திரட்டுகளை (காமம், கோபம் மற்றும் பேராசை ஆகியவற்றை) அடக்குவதற்கு, மூன்றில் (அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில்) எதில் முதலில் மனத்தை நிலைக்கச் செய்ய வேண்டும்?[1] நீங்கள் அனைவரும் இந்தக் கேள்விக்கு உண்மையான வார்த்தைகளில் பதிலளிப்பதே தகும்” என்று கேட்டான்.(3) குரு தலைவனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், உலகின் போக்கு, (பொருட்களின் உண்மையான இயல்பைக் குறித்த) உண்மை ஆகியவற்றுடன் கூடிய பொருள் அறிவியலையும் அறிந்தவனும், அறிவில் பெரும்பொலிவு கொண்டவனுமான விதுரன், சாத்திரங்களில் உள்ள பொருட்களை நினைவுகூர்ந்து, இந்த வார்த்தைகளை முதலில் சொன்னான்.(4)விதுரன், “பல்வேறு சாத்திரங்களைக் கற்றல், தவம், கொடை, நம்பிக்கை, வேள்விகளைச் செய்தல், மன்னிக்கும் தன்மை, நேர்மையான மனநிலை, கருணை, வாய்மை, தற்கட்டுப்பாடு ஆகிய இவை அறத்தின் உடைமைகளாகும்.(5) நீ அறத்தைக் கைகொள்வாயாக. உன் இதயம் அதைவிட்டு விலகாதிருக்கட்டும். அறம், பொருள் ஆகிய இரண்டும் இவற்றிலேயே தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே காலத்தில் {தவணையில்} சேர்க்கப்படக்கூடியவை என்று நான் நினைக்கிறேன்.(6) அறத்தின் மூலமே முனிவர்கள் (உலகத் துன்பங்கள் அனைத்தையும்) கடந்து சென்றனர். அனைத்து உலகங்களும் (நிலையாக இருப்பதற்கு) அறத்தையே சார்ந்திருக்கின்றன. அறத்தின் மூலமே தேவர்கள் தன் மேலான நிலையை அடைந்தனர். அறத்தின் மீதே பொருள் அல்லது செல்வம் நிலைத்திருக்கிறது(7) ஓ! மன்னா, அறமே தகுதியில் {புண்ணியத்தில்} முதன்மையானதாகும். பொருள் நடுநிலைமை கொண்டது என்று சொல்லப்படுகிறது. இன்பமே மூன்றிலும் கீழானது என ஞானிகளால் சொல்லப்படுகிறது.(8) இதன்காரணமாக ஒருவன், அறத்தில் முக்கியக் கவனம் செலுத்தி, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் வாழ வேண்டும். அவன் தன்னைப் போலவே பிற உயிரினங்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்” என்றான் {விதுரன்}”.(9)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “விதுரர் தான் சொல்ல வந்ததைச் சொல்லி முடித்ததும், பொருள் அறிவியலில் நன்கு திறம்பெற்றவனும், அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டின் உண்மைகளையும் அறிந்தவனுமான பிருதையின் மகன் அர்ஜுனன், (யுதிஷ்டிரனுடைய கேள்வியின் ஓட்டத்தால்) தூண்டப்பட்டு, இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(10)

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இந்த உலகமே செயல்களின் களமாகும். எனவே இங்கே செயலே மெச்சப்பட வேண்டும். உழவு, வணிகம், ஆநிரை வளர்த்தல், பல்வேறு வகையான கலைகள் {கைத்தொழில்கள்},(11) ஆகியன உள்ளடங்கியதே பொருள் {அர்த்தம்} என்றழைக்கப்படுகிறது. மேலும் பொருளே அத்தகைய செயல்கள் அனைத்திற்கும் எல்லையாக இருக்கிறது. பொருள், அல்லது செல்வமின்றி, அறம் மற்றும் இன்பம் (இன்பத்திற்குரி பொருட்கள்) ஆகியவற்றை வெல்லமுடியாது. இதுவே ஸ்ருதியின் அறிவிப்பாகும்.(12) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரும் கூட, பல்வேறு வகையான செல்வங்களைக் கொண்டிருந்தால், அறத்தின் உயர்ந்த செயல்களைச் செய்ய வல்லவர்களாகவும், நிறைவுசெய்வதற்குக் கடினமான ஆசைகளையும் நிறைவு செய்பவர்களாகவும் ஆவார்கள்.(13) ஸ்ருதி அறிவிக்கும் வகையில், அறமும், இன்பமும் செல்வத்தின் அங்கங்களாகவே இருக்கின்றன. செல்வத்தை அடைந்தால், அறத்தையும், ஆசைக்குரிய பொருட்களையும் வெல்லலாம்.(14) அனைத்து உயிரினங்களும் பிரம்மனை வழிபடுவதைப் போலவே, மேன்மையான பிறவிகளாகப் பிறந்தோரும், செல்வம்படைத்த மனிதனை வழிபடுவார்கள்.(15)

மான்தோல் உடுத்தியவர்களும், தலையில் சடாமுடி தரித்தவர்களும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களும், உடல் முழுவதும் புழுதி பூசப்பட்டவர்களும், புலன்களைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டவர்களும், வழுக்கைத் தலை கொண்டவர்களும், அர்ப்பணிப்புள்ள பிரம்மச்சாரிகளும், ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்து வாழ்பவர்களும் கூடச் செல்வத்தை அடைய விரும்புகிறார்கள்.(16) மஞ்சள் ஆடை {காஷாயம்} உடுத்தியவர்களும், நீண்ட தாடிகளைக் கொண்டவர்களும், பணிவுடையவர்களும், கல்விமான்களும், உள்ளடக்கம் கொண்டவர்களும், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவர்களும்கூடச் செல்வத்தை அடைய விரும்புகிறார்கள். முன்னோரின் நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களும், தங்களுக்குரிய கடமைகளை நோற்பவர்களும், சொர்க்கத்தில் விருப்பமுள்ளவர்களும் அவ்வாறே செய்கிறார்கள்.(18) நம்பிக்கையுள்ளவர்களும், நம்பிக்கையற்றவர்களும், உயர்ந்த வகை யோகத்தைக் கடுமையாகப் பயில்பவர்களும் என அனைவரும், செல்வத்தின் சிறப்புக்குச் சான்றளிக்கிறார்கள்.(19) எவன் தன்னைச் சார்ந்திருப்பவர்களின் இன்பத்திற்குரிய பொருட்களைக் கொடுத்துப் பேணி வளர்த்து, தண்டனைகளால் தன் எதிரிகளைப் பீடிக்கிறானோ, அவனே உண்மையில் செல்வம்படைத்தவன் என்று சொல்லப்படுகிறான். ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, இதுவே என் உண்மையான கருத்தாகும்.(20) எனினும், இந்த இருவரும் (நகுலனும், சகாதேவனும்) சொல்லப் போவதையும் கேட்பீராக” என்றான் {அர்ஜுனன்}”.(21)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அர்ஜுனன் நிறுத்தியதும், மாத்ரியின் மகன்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்.(22)

நகுலனும் சகாதேவனும், “அமர்ந்தோ, கிடந்தோ, நின்றோ, நடந்தோ ஒருவன் மிகக் கடுமையான வழிமுறைகளில் முயற்சி செய்தாவது செல்வத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.(23) அடைவதற்கு அரிதானதும், மிகவும் ஏற்புடையதுமான செல்வம் ஈட்டப்பட்டால், அஃதை ஈட்டிய மனிதன் நிச்சயம் ஆசைக்குரிய {இன்பத்திற்குரிய} பொருட்கள் அனைத்தையும் அடைவது காணப்படுகிறது.(24) எந்தச் செல்வம் அறத்துடன் தொடர்புடையதோ, எந்த அறம் செல்வத்தோடு தொடர்புடையதோ, அவை நிச்சயம் அமுதத்தைப் போன்றவையே. இதன் காரணமாக என்கள் கருத்துகள் பின்வருமாறு இருக்கின்றன.(25)

செல்வமில்லாத மனிதனால் எந்த ஆசையையும் நிறைவு செய்து கொள்ள முடியாது; அதே போல அறமற்ற ஒருவனிடமும் செல்வமேதும் இருக்க முடியாது. எனவே, அறம் மற்றும் பொருள் ஆகியவற்றில் இருந்து விலகியிருப்பவன் உலகத்திற்கு அச்சத்தை ஏற்படுத்துபவனாக இருப்பான்.(26) இந்தக் காரணத்திற்காக ஒருவன், அறத்தேவைகளை அலட்சியம் செய்யாமல், அர்ப்பணிப்பு நிறைந்த மனத்துடன் செல்வத்தை அடைய முனைய வேண்டும். (ஞான) மொழியை நம்புபவர்கள், தாங்கள் விரும்பிய எதையும் அடைவதில் வெல்கிறார்கள்.(27) ஒருவன் முதலில் அறம்பயில வேண்டும்; அடுத்ததாக அறத்தைத் தியாகம் செய்யாமல் செல்வத்தை அடைய வேண்டும்; பிறகு தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முனைய வேண்டும்; செல்வத்தை அடைவதில் வெற்றி அடையும் ஒருவனிடம் இதுவே தன் {ஆசையை நிறைவேற்றிக் கொள்வதே மூன்றிலும்} இறுதிச் செயலாக இருக்க வேண்டும்” என்றனர் {நகுலனும், சகாதேவனும்}”.(28)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “அசுவினிகளின் இரட்டை மகன்கள் {நகுல சகாதேவன்} இவ்வார்த்தைகளைப் பேசியதும் அமைதியடைந்தனர். பிறகு, பீமசேனன் பின்வருவதைச் சொல்லத் தொடங்கினான்.(29)

பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஆசையில்லாதவன் செல்வத்தை ஒருபோதும் விரும்புவதில்லை. ஆசையில்லாத ஒருவன் ஒருபோதும் அறத்தை விரும்புவதில்லை. அசையற்றவனால் எந்த விருப்பத்தையும் உணரமுடியாது. இதன்காரணமாக, ஆசையே {இன்பமே} மூன்றிலும் முதன்மையானதாகும்.(30) ஆசையின் ஆதிக்கத்தின் கீழேயே முனிவர்களும், கனிகளையோ, கிழங்குகளையோ, காற்றை மட்டுமே உண்டு, தங்களைத் தவங்களுக்கு அர்ப்பணிக்கிறார்கள்.(31) வேதத்தை நன்கறிந்தவர்கள், வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும், அல்லது நம்பிக்கையின் சடங்குகள் மற்றும் வேள்விச் செயல்களிலும், அல்லது கொடைகளைக் கொடுப்பதிலும், பெறுவதிலும் ஈடுபடுகிறார்கள்.(32) வணிகர்கள், உழவர்கள், ஆநிரை வளர்ப்போர், கலைஞர்கள், கைவினைஞர்கள், தணிவுச் சடங்குகளில் ஈடுபடுவோர் ஆகிய அனைவரும் ஆசையினாலேயே {காமத்தினாலேயே} செயல்படுகிறார்கள்.(33) சிலர் ஆசையால் தூண்டப்பட்டு, பெருங்கடலின் ஆழத்தில் குதிக்கிறார்கள். உண்மையில், ஆசையானது {காமமானது} பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. ஆசையின் கொள்கையானது அனைத்திலும் படர்ந்தூடுருவி இருக்கிறது.(34) ஆசையிலிருந்து விலகியிருப்பவன் என்று எவனும், இவ்வுலகில் இருப்பதாகவோ, இருந்ததாகவோ, இருக்கப்போவதாகவோ காணப்படவில்லை. ஓ! மன்னா, இதுவே உண்மையாகும். அறம், செல்வம் {பொருள்} ஆகிய இரண்டும் இன்பத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.(35)

வெண்ணையானது, தயிரின் சாரத்தை வெளிப்படுத்துவதைப் போலவே ஆசையும், பொருள் மற்றும் அறத்தின் சாரத்தை வெளிப்படுத்தும். எண்ணெய் விதைகளைவிட {பிண்ணாக்கைவிட} எண்ணெய் சிறந்ததாகும். நீர்மோரைவிட நெய் சிறந்ததாகும்.(36) மலர்களும், கனிகளும், மரத்தைவிடச் சிறந்தவையாகும். அதே போல, ஆசையே {காமமே} அறம் மற்றும் பொருளைவிடச் சிறந்ததாகும். மலர்களின் இருந்து தேன் சாறு பிரித்தெடுக்கப்படுவதைப் போலவே, ஆசையானது இவ்விரண்டில் இருந்தே பிரித்தெடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆசையே அறம், பொருள் ஆகிய இரண்டின் மூலமாகும். ஆசையே இவ்விரண்டின் ஆன்மாவாகும்.(37) பிராமணர்களுக்கு ஆசையில்லாதிருந்தால், அவர்கள் பிரம்மவாதிகளுக்கு இனிப்புகளையோ, செல்வத்தையோ ஒருபோதும் கொடுக்கமாட்டார்கள்[2]. ஆசையில்லாமல் இருந்தால், உலகத்தில் காணப்படும் பல்வேறு வகைச் செயல்பாடுகளும் காணப்படாமல் போகும். இந்தக் காரங்களினால், ஆசையே முத்தொகையிலும் முதன்மையானதாகத் தெரிகிறது.(38) சிறந்த ஆடைகளை உடுத்தியிருப்பவர்களும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர்களும், இனிய மதுவினால் போதையுண்டிருப்பவர்களுமான அழகி காரிகைகளை அணுகி, அவர்களோடு நீர் விளையாடிக் கொண்டிருப்பீராக. ஓ! மன்னா, நமக்கு ஆசையே மூன்றில் முதன்மையானதாகும்.(39) இந்தக் கேள்வியை வேர்வரை சிந்தித்ததனால், நான் இந்த முடிவை அடைந்திருக்கிறேன். ஓ! தர்மனின் மகனே, இந்த முடிவை ஏற்கத் தயங்காதீர். இந்த என் வார்த்தைகள் வெற்று வார்த்தைகளல்ல. அறம் நிறைந்த அவற்றை, நல்லோர் அனைவரும் ஏற்றுக் கொள்வர்.(40) அறம், பொருள், இன்பம் ஆகிய அனைத்தும் சமமாகவே கவனிக்கப்பட வேண்டும். எந்த மனிதன் இவ்வற்றில் ஏதாவது ஒன்றில் மட்டும் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, அவன் மேன்மையான மனிதனல்ல. இவற்றில் இரண்டில் மட்டுமே அர்ப்பணிப்பு கொண்டவன் நடுத்தரமானவனாகச் சொல்லப்படுகிறான். மறுபுறம் மூன்றையும் கவனிப்பவனே, தன் இனத்தில் சிறந்தவனாவான்” என்றான் {பீமசேனன்}.(41)ஞானம் கொண்டவனும், நண்பர்களால் சூழப்பட்டவனும், சந்தனம் பூசியிருந்தவனும், சிறந்த மாலைகளாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தவனுமான பீமன், இவ்வார்த்தைகளை அந்த வீரர்களிடம் சுருக்கமாகவும், விரிவாகவும் சொன்னதும் அமைதியடைந்தான்.(42) அப்போது, அறவோரில் முதன்மையானவனும், பெரும் கல்விமானும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அவர்கள் அனைவராலும் பேசப்பட்ட வார்த்தைகளை முறையாக நினைவுகூர்ந்து, அந்தப் பேச்சுகள் அனைத்தும் போலி தத்துவங்களே என எண்ணி, பின்வருமாறு பேசினான்.(43)

யுதிஷ்டிரன், “சாத்திரங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் அனைவரும் முடிவான தீர்மானத்தைக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் அனைவரும் அவற்றின் அதிகாரங்களை அறிந்திருக்கிறீர்கள் என்பதில் ஐயமில்லை. நீங்கள் பேசிய நிச்சயத்தன்மை நிறைந்த வார்த்தைகள் என்னால் கேட்கப்பட்டன.(44) இப்போது நான் உங்களுக்குச் சொல்லப் போவதைக் குவிந்த கவனத்தோடு கேட்பீராக. எவன் தகுதியிலோ {புண்ணியத்திலோ}, பாவத்திலோ ஈடுபடவில்லையோ, எவன் பொருளையோ, அறத்தையோ, ஆசையையோ {இன்பத்தையோ} கவனிக்கவில்லையோ, எவன் அனைத்துக் களங்களுக்கும் அப்பாற்பட்டவனாக இருக்கிறானோ, எவன் தங்கத்தையும், செங்கற்களையும் ஒன்றாகக் கருதுகிறானோ, அவன், இன்பம், துன்பம் மற்றும் காரிய நிறைவுக்கான தேவை ஆகியவற்றிலிருந்து விடுபட்டவனாகிறான்.(45) அனைத்து உயிரினங்களும் பிறப்புக்கும், இறப்புக்கும் ஆட்படுகின்றன. அனைத்தும் வீணாதல் {கிழத்தன்மை} மற்றும் மாற்றத்திற்கு {விகாரங்களுக்கு} உட்பட்டவையாக இருக்கின்றன. வாழ்வின் பல்வேறு நன்மைகள் மற்றும் தீமைகளால் மீண்டும் மீண்டும் விழிப்படையும் அனைவரும் முக்தியை {விடுதலையை / மோட்சத்தை} மெச்சுகிறார்கள். எனினும், நாம் முக்தியை அறியவில்லை.(46)

தான்தோன்றியும், தெய்வீகமானவனுமான பிரம்மன், எவன் பற்று மற்றும் பாசத்தின் கட்டுகளில் கட்டப்பட்டிருக்கிறானோ அவன் ஒருபோதும் முக்தியை அடைவதில்லை என்று சொல்லியிருக்கிறான். எனினும், கல்விமான்கள் முக்தியையே நாடுகிறார்கள். இந்தக் காரணத்திற்காக, ஒருவன் எதையும் ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ ஒருபோதும் கருதக்கூடாது.(47) இந்தப் பார்வையே சிறந்ததாகத் தெரிகிறது. இவ்வுலகில் உள்ள எவனாலும் தான் விரும்பியவாறு செயல்பட முடியாது. (மேன்மையான ஒரு சக்தியால்) எவ்வாறு செயல்படுவதற்காக நான் உண்டாக்கப்பட்டேனோ, அவ்வாறே துல்லியமாகச் செயல்படுகிறேன். விதி சமைக்கும் பெரியவன் தான் விரும்பியவாறே அனைத்து உயிரினங்களையும் செயல்படச் செய்கிறான். விதி சமைப்பவனே {பரமனே} உயர்ந்தவன். நீங்கள் அனைவரும் இஃதை அறிவீராக.(48) எவனாலும் தன் செயல்களால் அடையப்பட முடியாததை அடைய முடியாது. எது நடக்க வேண்டுமோ அதுவே நடைபெறும். இஃதை அறிவீராக. முத்தொகையிலிருந்தும் விடுபட்ட ஒருவனால் முக்தியை வெல்ல முடியும் என்பதால், முக்தியே உயர்ந்த நன்மையை உண்டாக்கவல்லதாகத் தெரிகிறது” என்றான் {யுதிஷ்டிரன்}”.(49)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “காரணம் நிறைந்ததும், இதயத்துக்கு ஏற்புடையதுமான இந்த முதன்மையான வார்த்தைகளைக் கேட்ட பீமனும், பிறரும், மகிழ்ச்சியால் நிறைந்து, தங்கள் கரங்களைக் கூப்பி, அந்தக் குருகுல இளவரசனை {யுதிஷ்டிரனை} வணங்கினார்கள்.(50) ஓ! மன்னா {ஜனமேஜயா}, உண்மையில், இனிய எழுத்துகளாலும், அசைகளாலும் நன்கு அலங்கரிக்கப்பட்டும், இதயத்துக்கு ஏற்புடையதும், ஒவ்வாத ஒலிகளும் வார்த்தைகளும் இல்லாததுமான ஏகாதிபதியின் {யுதிஷ்டிரனின்} இந்தப் பேச்சைக் கேட்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன் {பீமன்}, யுதிஷ்டிரனை உயர்வாக மெச்சத் தொடங்கினான்.(51) உயர் ஆன்மாவையும், பெரும் சக்தியையும் கொண்ட அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, பதிலுக்கு இணங்கிய தணிக்கையாளர்களைப் புகழ்ந்தான். பிறகு மன்னன், மீண்டும் உயர் ஆன்மாகக் கொண்ட நதிகளில் முதன்மையானவளுடைய மகனிடம் {பீஷ்மரிடம்} கடமைகளைக் குறித்து விசாரிப்பதற்காகப் பேசினான்” {என்றார் வைசம்பாயனர்}.(52)

வேடனான பிராமணன்! – சாந்திபர்வம் பகுதி – 168-நட்புக்குத் தக்கவர்கள் மற்றும் தகாதவர்களின் குறியீடுகைளக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மர் சொன்னதை விளக்கிக் கூறுமாறு கேட்ட யுதிஷ்டிரன்; கௌதமன் என்ற ஒரு பிராமணனின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, நான் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன். ஓ! குருக்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவரே, அது குறித்து நீர் என்னிடம் முழுமையாக உரையாடுவதே உமக்குத் தகும்.(1) எந்த வகை மனிதர்கள் மென்மையான மனநிலை கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்? எவரிடம் மிக இனிமையான நட்பு இருக்கும்? எவர் நிகழ்காலத்திலும், எதிர் காலத்திலும் நன்மை செய்ய வல்லவர்கள் என்பதையும் எங்களுக்குச் சொல்வீராக.(2) பெருகும் செல்வமோ, உற்றார் உறவினர்களோ, நலன் விரும்பிகளான நண்பர்களின் இடத்தைப் பெற மாட்டார்கள் என்று நான் கருதுகிறேன்.(3) நல்லாலோசனைகளைக் கேட்க வல்லனும், நன்மையைச் செய்பவனுமான ஒரு நண்பன் மிக அரிதானவனாவான். ஓ! அறவோரில் முதன்மையானவரே, இவை குறித்து நீர் முழுமையாக உரையாடுவதே உமக்குத் தகும்” என்றான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, எந்த மனிதர்களுடன் நட்பு கொள்ள முடியும், எந்த மனிதர்களிடம் நட்பு கொள்ளக்கூடாது என்பது குறித்து நான் உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக.(5) பேராசைமிக்கவன், இரக்கமற்றவன், தன் வகைக்கான கடமைகளைத் துறந்தவன், நேர்மையற்றவன், கபடன், அற்பன், பாவம்நிறைந்த செயல்பாடுகளைக் கொண்டவன் {பாவி}, அனைத்தையும் ஐயுறுபவன், செயல்படாதவன் {சோம்பேறி},(6) எதிலும் தாமதம் செய்பவன், கோணல்புத்தி கொண்டவன், உலகளாவிய அளவில் அவதூறு செய்வதை நோக்கமாகக் கொண்டவன், ஆசானை மதிக்காதவன், நன்கறியப்பட்ட ஏழு தீமைகளுக்கு[1] அடிமையாயிருப்பவன், துயரிலுள்ள நண்பர்களைக் கைவிடுபவன், தீய ஆன்மா கொண்டவன், வெட்கமற்றவன்,(7) எப்போதும் பாவத்தை நோக்கியே பார்வையைச் செலுத்துபவன், நாத்திகன், வேதங்களை அவதூறு செய்பவன், கட்டுப்படுத்தப்படாத புலன்களைக் கொண்டவன், கட்டுபாடற்ற காமத்தில் ஈடுபடுபவன்,(8) பொய்மைநிறைந்தவன், அனைவராலும் கைவிடப்பட்டவன், அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மீறுபவன், பொறாமை கொண்டவன், பாவத்தையே செய்பவன்,(9) தீய நடத்தை கொண்டவன், தூய்மையடையாத ஆன்மா கொண்டவன், கொடூரன், சூதாடி, நண்பர்களுக்கு எப்போதும் தீங்கிழைப்பவன், பிறர் செல்வத்தின் மேல் பேராசை கொள்பவன்,(10) தன்னால் முடிந்த அளவுக்குப் பிறனால் கொடுக்கப்படும் எதிலும் ஒருபோதும் நிறைவை வெளிப்படுத்தாத தீய ஆன்மா கொண்ட அற்பன், நண்பர்களிடம் ஒருபோதும் நிறைவு கொள்ளாதவன், ஓ! மனிதர்களில் காளையே,(11) கோபப்படத் தேவையில்லாத சந்தர்ப்பங்களில் கோபப்படுபவன், அமைதியற்ற மனம் கொண்டவன், காரணமேதுமில்லாமல் சச்சரவில் ஈடுபடுபவன், நல்ல நண்பர்களைக் கைவிட எந்தத் தயக்கமும் கொள்ளாதவன்,(12) தன் நலன்களை மட்டுமே எப்போதும் மனத்தில் கொள்ளும் இழிந்தவன், ஓ! மன்னா, தெரிந்தோ, தெரியாமலோ நண்பர்கள் இழைக்கும் சிறு தீங்குக்காகச் சச்சரவில் ஈடுபடுபவன்,(13) எதிரியைப் போலச் செயல்பட்டு, நண்பனைப் போலப் பேசுபவன், பிறழ்நடை {வக்கிரமான} உள்ளுணர்வு கொண்டவன், (தன் நன்மையில்) குருடாக இருப்பவன், தனக்கும், பிறருக்கும் நன்மையானவற்றில் ஒருபோதும் மகிழ்ச்சி கொள்ளாதவன் ஆகியோர் தவிர்க்கப்பட வேண்டும்.(14) மதுபானம் பருகுபவன், பிறரை வெறுப்பவன், கோபம்நிறைந்தவன், கருணையற்றவன், பிறரின் இன்பத்தைக் கண்டு துன்புறுபவன், நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன், வாழும் உயிரினங்களின் உயிரை எடுப்பதிலேயே எப்போதும் ஈடுபடுபவன்,(15) நன்றியற்றவன், தீயவன் ஆகியோர் தவிர்க்கப்பட வேண்டும். இவர்களில் எவரிடமும் ஒருபோதும் (நட்புடன்) கூட்டணி அமைத்துக் கொள்ளக்கூடாது. அதே போலவே, பிறரின் குற்றங்களைக் குறிப்பதையே எப்போதும் நோக்கமாகக் கொண்டவனிடமும் (நட்புடன்) கூட்டணி அமைத்துக் கொள்ளக்கூடாது.

இப்போது, (நட்புடன்) கூட்டணி அமைத்துக்கொள்ளக்கூடிய மனிதர்களைக் குறிப்பிடுகிறேன் கேட்பாயாக.(16) நற்பிறவி கொண்டவர்கள், நாநலம் மற்றும் பேச்சில் பணிவு கொண்டவர்கள், அறிவியலையும் ஞானத்தையும் கொண்டவர்கள், அழகிய ஏற்றுக்கொள்ளக்கூடிய பண்புகளைக் கொண்டவர்கள், தகுதியையும், பிற சாதனைகளையும் கொண்டவர்கள், பேராசையில் இருந்து விடுபட்டவர்கள், உழைப்பால் களைக்காதவர்கள்,(17) நண்பர்களுடன் நலமாக இருப்பவர்கள், நன்றி நிறைந்தவர்கள், பல்வேறு தகவல்களையும், ஞானத்தையும் கொண்டவர்கள், பொருளாசையற்றவர்கள், ஏற்புடைய பண்புகளைக் கொண்டவர்கள், வாய்மையில் உறுதியாக இருப்பவர்கள், தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தியவர்கள்,(18) உடற்பயிற்சிகள் மற்றும் பிற பயிற்சிகளில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், நல்ல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் குலங்களைத் தழைக்கச் செய்பவர்கள்[2], களங்கமற்றவர்கள், புகழுடையவர்கள் ஆகியோருடன் மன்னர்கள் (நட்புடன்) கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.(19)மேலும், ஓ! ஏகாதிபதி, தன் சக்திக்குத் தக்கபடி செயல்படுபவனிடம் நிறைவடைந்து மகிழ்பவர்கள், கோபத்திற்கு அவசியமில்லாத சந்தர்ப்பங்களில் ஒருபோதும் கோபமடையாதவர்கள், போதுமான காரணமேதுமில்லாமல் ஒருபோதும் சலிப்படையாதவர்கள்,(20) பொருளறிவியலை நன்கறிந்தவர்கள், எரிச்சலில் இருக்கும்போதும் தங்கள் மனங்களை அமைதியாக வைத்துக் கொள்ளக்கூடியவர்கள், தனிப்பட்ட தியாகம் செய்து நண்பர்களின் தொண்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள்,(21)  மனவேற்றுமை கொண்டு நண்பர்களிடம் இருந்து ஒருபோதும் பிரியாதவர்கள், (எளிதில் நிறம் மாறாத) கம்பளியால் ஆன சிவப்புத் தரைவிரிப்பைப் போலத் (தங்கள் பற்றில்) மாற்றமில்லாமல் தொடர்பவர்கள், கோபத்தால் ஒருபோதும் ஏழைகளை அவமதிக்காதவர்கள், காமம் மற்றும் குழப்ப வசப்பட்டு ஒருபோதும் இளம்பெண்களை அவமதிக்காதவர்கள், தவறான பாதைகளை ஒருபோதும் நண்பர்களுக்குக் காட்டாதவர்கள், நம்பிக்கைக்குத் தகுந்தவர்கள், அறநடத்தையில் பற்றுடையவர்கள், தங்கத்தையும் செங்கற்கட்டிகளையும் ஒரே கண்ணால் {ஒன்றாகப்} பார்ப்பவர்கள், நண்பர்களிடமும், நலம்விரும்பிகளிடமும் உறுதியான பிணைப்பு கொண்டவர்கள்,(23) தங்கள் மதிப்புக்குறிகள் அனைத்தையும் கைவிட்டு மக்களைத் திரட்டி, நண்பர்களின் காரியத்தை நிறைவுசெய்ய முயல்பவர்கள் ஆகியோர் (நட்புடன்) கூட்டணி அமைத்துக்கொள்ளத்தக்க மனிதர்களாகக் கருதப்பட வேண்டும்.(24) உண்மையில், எந்த மன்னன், இத்தகைய மேன்மையான மனிதர்களுடன் நட்புக்கூட்டணி அமைத்துக் கொள்கிறானோ, அவனுடைய ஆட்சிப்பகுதிகள், விண்மீன்களின் தலைவனையுடைய {நிலவுடைய} ஒளிபோல அனைத்துத் திசைகளிலும் பரந்து விரிவடையும்.(25)

ஆயுதங்களில் நல்ல பயிற்சி பெற்றவர்கள், கோபத்தை முற்றிலும் கட்டுப்படுத்தியவர்கள், போரில் எப்போதும் வலுத்தவர்கள், உயர்ந்த குடிபிறப்பு, நல்ல நடத்தை மற்றும் பல்வேறு சாதனைகளைச் செய்தவர்கள் ஆகிய மனிதர்களுடனே கூட்டணிகள் அமைக்கப்பட வேண்டும்.(26) ஓ! பாவமற்றவனே, நான் குறிப்பிட்ட குற்றமுள்ள மனிதர்களில், ஓ! மன்னா, நன்றியற்றவர்களும், நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவர்களுமே பெரும் குற்றமுள்ளவ்வர்கள். தீய நடத்தை கொண்ட அந்த மனிதர்கள் அனைவராலும் தவிர்க்கப்பட வேண்டும். உண்மையில், இதுவே தீர்மானிக்கப்பட்ட முடிவாகும்” என்றார் {பீஷ்மர்}.(27)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இந்த விளக்கத்தை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவர்கள் என்றும், நன்றியற்ற மனிதர்கள் என்றும் அழைக்கப்படுவோர் யார் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(28)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, வடக்கில் இருக்கும் மிலேச்சர்களின் நாட்டில் நடந்த சம்பவங்கள் அடங்கிய ஒரு பழங்கதையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(29) நடுநாட்டை {மத்தியதேசத்தைச்} சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பிராமணன் இருந்தான். அவன் {அந்த பிராமணன்} வேத கல்வியற்றவனாக இருந்தான். (ஒருநாள்) அந்த மனிதன், ஒரு செழிப்பான கிராமத்தைக் கண்டு, ஈகை பெறும் விருப்பத்தில் அதற்குள் நுழைந்தான்.(30) பெரும் செல்வத்தைக் கொண்டவனும், (மனிதர்களின்) வகைகள் அனைத்தின் தனிப்பட்ட பண்புகளை அறிந்தவனும், பிராமணர்களிடம் பற்று மிக்கவனும், வாய்மையில் உறுதியானவனும், எப்போதும் கொடைகளை அளிப்பவனுமான ஒரு கள்வன் அந்தக் கிராமத்தில் வாழ்ந்து வந்தான்.(31) அந்தப் பிராமணன், அந்தக் கள்வனின் வசிப்பிடத்திற்குச் சென்று பிச்சை கேட்டான். உண்மையில் அவன், ஒரு வருடத்திற்கு வாழ வேண்டியதற்குத் தேவையான பொருட்களையும், ஒரு வீட்டையும் கேட்டான்.(32) இவ்வாறு அந்தப் பிராமணனால் கேட்கப்பட்ட கள்வன், {அதற்கு மேலும்} நுனி முழுமையான புதிய துணியையும்[3]இளமை கொண்ட ஒரு கைம்பெண்ணையும் {விதவைப் பெண்ணையும்} கொடுத்தான்.(33) அவை அனைத்தையும் கள்வனிடம் இருந்து பெற்றுக் கொண்ட பிராமணன் மகிழ்ச்சியால் நிறைந்தான். உண்மையில் அந்தக் கௌதமன்[4], கள்வன் அவனுக்குக் கொடுத்த வசதியான வீட்டில் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினான்.(34) அவன், கள்ளர் தலைவனிடம்[5] இருந்து பெற்ற பெண் அடிமையின் {பணியாளின்} உற்றார் உறவினருக்கு உதவிபுரியத் தொடங்கினான். இவ்வழியில் அவன் அந்தச் செழிப்புமிக்க வேடர்களின் கிராமத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்தான்.(35)அவன் {கௌதமன்}, பெரும்பற்றுடன் வில் ஏவும் கலையைப் பயிலத் தொடங்கினான். கௌதமன், அங்கே வசித்த பிற கள்வர்களைப் போல, ஒவ்வொருநாளும் காட்டுக்குச் சென்று, காட்டு நாரைகளை {அன்னபக்ஷிகளை} அபரிமிதமாகக் கொன்றான். உயிரினங்களைக் கொல்வதில் எப்போதும் ஈடுபட்ட அவன், விரைவில் அச்செயலில் நல்ல திறம்பெற்றவனாகி, கருணைக்கு விடைகொடுத்தனுப்பினான். கள்வர்களுடன் அவன் கொண்ட நெருக்கத்தின் விளைவால், அவன் அவர்களில் ஒருவனாகவே ஆனான்.(36,37) அந்தக் கள்வர் கிராமத்தில் பல மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த அவனால் கொல்லப்பட்ட காட்டு நாரைகளின் எண்ணிக்கை மிகப் பெரியதாக இருந்தது.(38) ஒருநாள் அந்தக் கிராமத்திற்கு மற்றொரு பிராமணன் வந்தான். அவன் மரவுரியும் மான்தோலும் உடுத்தி, தன் தலையில் சடாமுடி தரித்தவனாக இருந்தான். மிக உயர்ந்த தூய நடத்தை கொண்ட அவன் வேத கல்வியில் பற்றுடன் இருந்தான்.(39) அவன் அடக்கமான மனோநிலை மற்றும் உணவில் சிக்கனம் கொண்டவனாக, பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாக, வேதங்களை முற்றாக அறிந்தவனாக, பிரம்மச்சரிய நோன்புகளைப் பயில்பவனாக, கௌதமன் எங்கிருந்து வந்தானோ அந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தான்.(40)

ஏற்கனவே சொன்னதுபோலத் தான் திரிந்து கொண்டிருந்த போக்கில் அந்தப் பிராமணன், கௌதமன் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட அந்தக் கள்ளர் கிராமத்திற்கு வந்து சேர்ந்தான். ஒரு சூத்திரனால் கொடுக்கப்பட்ட உணவை ஏற்காத அவன், (விருந்தோம்பலின் கடமைகளை ஏற்றுக் கொள்வதற்காக) அங்கே இருக்கக்கூடிய ஒரு பிராமணனின் வீட்டைத் தேடத் தொடங்கினான்[6].(41) அதன்படி அவன் கள்வர் குடும்பங்கள் நிறைந்த அந்தக் கிராமத்தின் அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தான். இறுதியாக அந்தப் பிராமணர்களில் முதன்மையானவன், கௌதமனுக்குச் சொந்தமான வீட்டுக்கு வந்தான்.(42) சரியாக அதே நேரத்தில், கௌதமனும் காட்டிலிருந்து தன் வசிப்பிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். இரு நண்பர்களும் சந்தித்துக் கொண்டனர்.(43) வில்லும், வாளும் தரித்திருந்த அவன், கொல்லப்பட்ட நாரைகளைத் தன் தோள்களில் சுமந்து கொண்டு இருந்தான். அவனது தோள்களில் இருந்த பையில் இருந்து சொட்டி குருதியால் அவனது உடல் பூசப்பட்டிருந்தது.(44) புதிதாக வந்த அந்த விருந்தினன், தன்னினத்தைத் தின்னும் விலங்குக்கு ஒப்பாக, தன் பிறப்பின் வகைக்கான தூய நடைமுறைகளில் இருந்து வீழ்ந்துவிட்டவனாக இருந்த அந்த மனிதன், தன் வீட்டுக்குள் நுழைவதைக் கண்டு, ஓ! மன்னா, அவனை அடையாளங்கண்டு கொண்டு இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(45){அவன்}, “மடமையினால் நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ ஒரு பிராமணனும், பிராமணக் குடும்பத்தைத் தழைக்கச் செய்பவனுமாவாய். நடுநாட்டை {மத்திய தேசத்தைச்} சேர்ந்த மதிப்புமிக்கக் {பிராமணக்} குடும்பத்தில் பிறந்த உன்னால் எவ்வாறு நடைமுறைகளில் ஒரு கள்வனாக முடிந்தது?(46) ஓ! மறுபிறப்பாளனே, வேதங்களில் கரைகண்டவர்களும், புகழ்மிக்கவர்களும், பழங்காலத்தைச் சேர்ந்தவர்களுமான உற்றார் உறவினரை நினைவுகூர்வாயாக. அவர்களின் குலத்தில் பிறந்த நீ, ஐயோ, அதற்கொரு கறையாக வந்து சேர்ந்திருக்கிறாய்.(47) உன் முயற்சியால் விழிப்படைவாயாக. ஓ! மறுபிறப்பாளனே, (நீ பிறந்த வகைக்கான) சக்தி, நடத்தை, கல்வி, தற்கட்டுப்பாடு மற்றும் கருணையை நினைவுகூர்ந்து தற்போதைய உன் வசிப்பிடத்தை விட்டு அகல்வாயாக” என்றான்.(48)

ஓ! மன்னா, இவ்வாறு நல்ல மனம் கொண்ட தன் நண்பனால் சொல்லப்பட்ட கௌதமன், இதயத்தில் பெரும் துன்பத்துடன் அவனுக்குப் பதிலளித்தான்,(49) “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, நான் ஓர் ஏழை. நான் வேத அறிவற்றவன். ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, செல்வத்துக்காக மட்டுமே நான் இங்கே வசிப்பிடத்தை அடைந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக.(50) எனினும், உன்னைக் கண்டதால் நான் இன்று அருளப்பட்டவனானேன். நாளை நாம் இருவரும் இந்த இடத்தைவிட்டு ஒன்றாகப் புறப்படுவோம். நீ இந்த இரவை என்னோடு கழிப்பாயாக” என்றான்.(51)

புதிதாக வந்த பிராமணன் இவ்வாறு சொல்லப்பட்டதும், கருணை நிறைந்தவனாகி, அங்கே எதையும் தொடுவதைத் தவிர்த்து, அந்த இரவை அங்கே கழித்தான். உண்மையில் பசித்தாலும், மீண்டும் மீண்டும் வேண்டிக் கொள்ளப்பட்டாலும், அந்த விருந்தினன் அந்த வீட்டில் இருந்த எந்த உணவையும் தீண்ட மறுத்துவிட்டான்” என்றார் {பீஷ்மர்}.(52)

ராஜதர்மன் என்ற நாடீஜங்கன்! – சாந்திபர்வம் பகுதி – 169-வேடனான இருந்த கௌதமன் என்ற பிராமணன், பெருங்கடலை நோக்கிச் சென்றது; வழியில் அவன் கண்ட அற்புதங்கள்; காட்டுக்கு மத்தியில் ஓரிடத்தில் ஓர் அழகிய ஆலமரத்தைக் கண்டது; அதன் அடியில் உறங்கியது; ராஜதர்மன் என்ற பெயரைக் கொண்ட நாரை அங்கே வந்தது; தன் வசிப்பிடத்தில் விருந்தினராக அன்றிரவு தங்குமாறு கௌதமனைக் கேட்டுக் கொண்ட தெய்வீக நாரை..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாராதா, அந்த இரவு கடந்து, அந்தப் பிராமணர்களில் சிறந்தவன் அந்த வீட்டை விட்டைச் சென்றதும், தன் வசிப்பிடத்தை விட்டு வெளியே வந்த கௌதமன், கடலை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.(1) வழியில் அவன் கடற்பயணங்களை மேற்கொள்ளும் சில வணிகர்களைக் கண்டான். அவன் {பிராமணன்} அந்த வணிகர் கூட்டத்துடன் சேர்ந்து பெருங்கடலை நோக்கிச் சென்றான்.(2) ஓ! மன்னா, அந்தப் பெரிய கூட்டம் ஒரு மலை பள்ளத்தாக்கைக் கடக்கும்போது ஒரு மதங்கொண்ட யானையால் தாக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைவரும் கொல்லப்பட்டனர்.(3) எவ்வாறோ பேராபத்தில் இருந்து தப்பிய அந்தப் பிராமணன் {கௌதமன்}, எங்கே செல்கிறோம் என்பதை அறியாமல் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடக்கு நோக்கி ஓடினான்.(4) {வணிகக்) கூட்டத்திடம் இருந்து பிரிந்து அந்த இடத்தில் இருந்து வெகு தொலைவுக்கு வந்த அவன், ஒரு கிம்புருஷனைப் போலக் காட்டில் தனியொருவனாகத் திரியத் தொடங்கினான்[1].(5)இறுதியாகப் பெருங்கடலை நோக்கிச் செல்லும் சாலையை அடைந்த அவன், இனிமை நிறைந்ததும், பூத்துக்குலுங்கும் மரங்கள் அடர்ந்ததுமான ஒரு தெய்வீகக் காட்டை அடையும் வரை பயணித்தான்.(6) வருடம் முழுவதும் மலர்களாலும், கனிகளாலும் பூத்துக் குலுங்கும் மாமரங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. (சொர்க்கத்தின்) நந்தனத் தோப்புகளுக்கு ஒப்பான அதில், யக்ஷர்களும், கின்னரர்களும் வசித்து வந்தனர்.(7) சாலங்கள், பனைமரங்கள், தமாலங்கள் {வெள்வேல் மரங்கள்}, {அரசு, ஆல், அகில்}, கரும் கற்றாழைகள், பெரும் சந்தன மரங்கள் ஆகியவற்றால் அஃது {அந்தக் காடு} அலங்கரிக்கப்பட்டிருந்தது.(8) இனிமைநிறைந்த அந்த மேட்டுச் சமவெளியில் பல்வேறு வகைகளிலான மணங்களுடன் கூடிய நறுமணப் பொருட்களைக் கண்டான், முதன்மையான இனங்களைச் சேர்ந்த பறவைகளின் இனிய மெல்லிசைகளையும் கேட்டான்.(9) பாருண்டங்கள்[2] என்றழைக்கப்படுபவையும், மனித முகங்களுக்கு ஒப்பான முகங்களைக் கொண்டவையும், புலிங்கங்கள்[3] என்று அழைக்கப்படுபவையும், மலைப்பகுதிகள் மற்றும் கடற்பகுதிகளைச் சேர்ந்த சிறகு படைத்த பிற காற்றுவாசிகள் {பறவைகள்} அங்கே இனிமையான அதிர்குரல்களை எழுப்பிக் கொண்டிருந்தன.(10)

இயற்கை இசைக்கலைஞர்களான இந்த இனிமை நிறைந்த அழகான இசையைக் கேட்டுக் கொண்டே கௌதமன் அந்தக் காட்டின் வழியே சென்றான்.(11) ஓ! மன்னா, அப்படிச் செல்லும் வழியில் அவன், தங்க மணல்களால் மறைக்கப்பட்டதும், அழகில் சொர்க்கத்திற்கே இணையானதுமான சமதளம் கொண்டதுமான ஓர் இனிமையான இடத்தைக் கண்டான்.(12) அந்த நிலத்தில், கோளவடிவமான உச்சியைக் கொண்டதும், பெரியதுமான ஓர் அழகிய ஆல மரத்தைக் கண்டான். தாய்மரத்தோடு தொடர்ந்து சென்ற பல கிளைகளைக் கொண்ட ஆலமரமானது, அழகிலும், வடிவத்திலும் சமவெளியில் அமைக்கப்பட்ட ஒரு குடையைப் போலத் தெரிந்தது.(13) அந்த மகத்தான மரத்தின் கீழிருந்த இடமானது, பெரும் நறுமணமிக்கச் சந்தன நீரால் நனைக்கப்பட்டிருந்தது. பேரழகைக் கொண்டதும், சுற்றிலும் இனிமையான மலர்களால் சூழப்பட்டதுமான அந்த இடம், பெரும்பாட்டனின் சபையைப் போலவே காட்சியளித்துக் கொண்டிருந்தது.(14) மலர்ந்திருக்கும் மரங்கள் நிறைந்ததும், புனிதமானதும், தேவர்களின் வசிப்படத்தைப் போலத் தெரிந்ததுமான அந்த அழகான, ஒப்பற்ற இடத்தைக் கண்ட கௌதமன் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(15)

அங்கே வந்த அவன், மிகவும் நிறைவான இதயத்துடன் கீழே அமர்ந்தான். ஓ! குந்தியின் மகனே, அங்கே அவன் அமர்ந்திருந்தபோது, வனப்பும், மங்கலமும் மிக்க ஓர் இனிய தென்றலானது, ஓ! ஏகாதிபதி, பல்வேறு வகை மலர்களின் நறுமணத்தைச் சுமந்தபடியும், கௌதமனின் அங்கங்களுக்குக் குளிர்வூட்டியபடியும், தெய்வீக இன்பத்தில் அவனை நிறைத்தபடியும் அங்கே வீசத் தொடங்கியது.(16,17) நறுமணமிக்கத் தென்றலால் தாலாட்டப்பட்ட அந்தப் பிராமணன், புத்துணர்வை அடைந்தான், மேலும், அவன் உணர்ந்த இன்பத்தின் விளைவால் அவன் விரைவில் உறக்கத்திலும் வீழ்ந்தான். அதே வேளையில் சூரியன் அஸ்த மலைகளுக்குப் பின்னால் மறைந்தான்.(18) அந்த ஒளிக்கோளானவன், மேற்கிலிருக்கும் தன் அறைகளுக்குள் நுழைந்து, மாலை சந்தி ஏற்பட்ட போது, தன் இனத்தில் முதன்மையான ஒரு பறவையானவன், பிரம்மனின் உலகங்களில் இருந்து தன் இல்லமான அந்த இடத்திற்குத் திரும்பினான்.(19) நாடீஜங்கன் என்ற பெயரைக் கொண்ட அவன், அது படைப்பாளனின் {பிரம்மனின்} அன்புக்குரிய நண்பனாக இருந்தான். பெரும் ஞானம் கொண்டவனும், (தவசி) கசியபரின் மகனுமான அவன், நாரைகளின் இளவரசனாக இருந்தான்.(20) மேலும் அவன், பூமியில் ராஜதர்மன் என்ற பெயரில் பரந்து அறியப்பட்டிருந்தான். உண்மையில், அவன் பூமியில் புகழிலும், ஞானத்திலும் அனைவரையும் விஞ்சியவனாக இருந்தான். தெய்வீக கன்னிகையின் மகனும், பேரழகும், கல்வியும் கொண்டவனான அவன், காந்தியில் ஒரு தேவனுக்கு ஒப்பானவனாக இருந்தான்.(21) சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் அவன் அணிந்திருந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தெய்வீகப் பெண்ணின் பிள்ளை அழகில் சுடர்விடுபவனாகத் தெரிந்தான்.(22) அந்த இடத்திற்கு வந்த பறவையைக் கண்ட கௌதமன் ஆச்சரியத்தால் நிறைந்தான். பசியாலும், தாகத்தாலும் களைத்திருந்த அந்தப் பிராமணன், அவனைக் கொல்ல விரும்பி அந்தப் பறவையானவன் மீது தன் கண்களைச் செலுத்தத் தொடங்கினான்.(23)

ராஜதர்மன் {என்ற அந்த நாரையானவன்}, “ஓ! பிராமணரே, உமக்கு நல்வரவு. நான் கொண்ட நற்பேற்றினாலேயே இன்று நீர் என் வசிப்பிடத்திற்கு வரப் பெற்றேன். சூரியன் மறைந்துவிட்டான். மாலை சந்தியும் வந்துவிட்டது.(24) என் வசிப்பிடத்திற்கு வந்திருக்கும் நீர், இன்று என் அன்புக்குரிய சிறந்த விருந்தினராக இருக்கப் போகிறீர். சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படியான என் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு, நாளை காலையில் நீர் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம்” என்றான்.(25)

ராட்சச மன்னன் விருபாக்ஷன்! – சாந்திபர்வம் பகுதி – 170-கௌதமனுக்கு உண்ண மீன்களும், படுக்க மென்மையான படுக்கையும் கொடுத்த ராஜதர்மன் என்ற நாரை; செல்வமீட்டும் வழியைச் சொன்ன ராஜதர்மன்; ராட்சச மன்னன் விருபாக்ஷனைக் காணச் சென்ற கௌதமன்; செல்வச்செழிப்பில் இருந்த மேருவ்ரஜ நகரத்தைக் கண்ட கௌதமன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இந்த இனிய வார்த்தைகளைக் கேட்ட கௌதமன், ஆச்சரியத்தால் நிறைந்தான். அதேநேரத்தில் பெரும் ஆவலை உணர்ந்த அவன், ராஜதர்மனிடம் {நாரையிடம்} இருந்து பார்வை எடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.(1)

ராஜதர்மன் {என்ற நாரையானவன்}, “ஓ! பிராமணரே, நான் கசியபருக்கும், (தவசி) தக்ஷனின் மகள்களில் ஒருத்திக்குப் பிறந்த மகனாவேன். பெரும் தகுதிகளையுடைய நீர் இன்று என் விருந்தினராகியிருக்கிறீர். ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, உமக்கு நல்வரவு” என்றான்”.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி விருந்தோம்பலை அளித்த அந்த நாரையானவன், சுற்றிலும் கிடந்த சால மலர்களால் ஒரு சிறந்த படுக்கையை அமைத்துக் கொடுத்தான். மேலும் அவன், பாகீரதியின் ஆழமான நீரில் இருந்து பிடிக்கப்பட்ட பல பெரிய மீன்களையும் அவனுக்குக் கொடுத்தான்.(4) உண்மையில், அந்தக் கசியபரின் மகன் {நாரையான ராஜதர்மன்}, தன் விருந்தினனான கௌதமன் ஏற்றுக் கொள்வதற்காகச் சுடர்மிக்க நெருப்பையும், குறிப்பிட்ட பெரிய மீன்களையும் கொடுத்தான்.(5) அந்தப் பிராமணன் உண்டு, நிறைவடைந்த பிறகு, தவங்களைச் செல்வமாகக் கொண்ட அந்தப் பறவையானவன், களைப்பு நீங்க தன் சிறகுகளால் அவனுக்கு விசிறத் தொடங்கினான்.(6)

தன் விருந்தினன் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட அவன் {ராஜதர்மன்}, அவனது குடிவழி குறித்துக் கேட்டான். அதற்கு அந்த மனிதன் {கௌதமன்}, “நான் கௌதமன் என்ற பெயரால் அறியப்படும் ஒரு பிராமணனாவேன்” என்றான் சொல்லி அமைதியடைந்தான்.(7)

அந்தப் பறவையானவன், இலைகளாலும், நறுமணமிக்க மலர்கள் பலவற்றாலுமான மென்மையான படுக்கையைத் தன் விருந்தினனுக்குக் கொடுத்தான். கௌதமன் அதில் தன்னைக் கிடத்திக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.(8) கௌதமன் அவ்வாறு தன்னைக் கிடத்திக் கொண்ட போது, கடமைகளின் அறிவில் யமனுக்கு ஒப்பானவனான கசியபரின் நானலமிக்க மகன் {ராஜதர்மன்}, அவன் அங்கே வந்ததற்கான காரணத்தைக் குறித்துக் கேட்டான்.(9)

கௌதமன் {நாரையிடம்}, “ஓ! பெரும் ஆன்மா கொண்டவனே, நான் ஏழ்மைமிக்கவன். செல்வம் ஈட்டுவதற்காக நான் கடலுக்குச் செல்ல விரும்புகிறேன்” என்று பதிலுரைத்தான்.(10)

கசியபரின் மகன் உற்சாகமாக, “நீர் கவலையேதும் கொள்வது உமக்குத் தகாது. ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, நீர் வெற்றியடைந்து, உடைமைகளுடன் இல்லம் திரும்புவீர்.(11) மரபுரிமை, நற்பேறு அல்லது தேவர்களின் உதவி மூலமான திடீர் உடைமையீட்டல், உழைப்பு, நண்பர்களின் உதவி, அல்லது அன்பு ஆகிய நான்கு வழிமுறைகளின் மூலம் ஒருவன் செல்வத்தை ஈட்டலாம் என்று தவசி பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார்.(12) நான் உமது நண்பனாகியிருக்கிறேன். நான் உம்மிடம் நல்லெண்ணங்களை வளர்க்கிறேன். எனவே, நீர் செல்வமடைவதில் வெல்லும் வழியில் நான் முயற்சி செய்வேன்” என்றான் {நாரையான ராஜதர்மன்}.(13)

தன் விருந்தினன் படுக்கையிலிருநு உற்சாகமாக எழுவதைக் கண்ட அந்தப் பறவையானவன், அவனிடம் {கௌதமனிடம்}, “ஓ! இனிமையானவரே, இந்த வழியாகச் சென்றால் நிச்சயம் நீர் வெற்றியடைவீர்.(14) இந்த இடத்தில் இருந்து மூன்று யோஜனைகள் தொலைவில் ராட்சசர்களின் வலிமைமிக்க மன்னன் ஒருவன் இருக்கிறான். பெரும்பலம் கொண்ட அவனது பெயர் விருபாக்ஷனாகும். மேலும் அவன் எனது நண்பனுமாவான்.(15) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, அவனிடம் செல்வீராக. என் வேண்டுகோளால் துண்டப்படும் அந்தத் தலைவன், நீர் விரும்பும் அளவுக்குச் செல்வத்தை உமக்குக் கொடுப்பான்” என்றான்.(16)

ஓ! மன்னா, இவ்வாறு சொல்லப்பட்ட கௌதமன், வழியில் அமுதம் போன்ற இனிமையான கனிகளை நிறைவாக உண்டு கொண்டே அந்த இடத்திற்கு உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்றான்.(17) சாலை நெடுகிலும் வளர்ந்திருந்த சந்தனம், அகில், இலவங்க மரங்களைக் கண்டு, அவற்றின் புத்துணர்வு மிக்க நிழல்களை அனுபவித்தபடியே அந்தப் பிராமணன் விரைவாகச் சென்றான்.(18) பிறகு அவன் {கௌதமன்} மேருவ்ரஜம் என்ற பெயரில் அறியப்பட்ட நகரத்தை அடைந்தான். அது கற்களால் செய்யப்பட்ட பெரிய கட்டட முகப்புகளையும், அதே பொருளாலான {கற்களாலான} உயர்ந்த சுவர்களையும் கொண்டிருந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் அஃது அகழியால் சூழப்பட்டிருந்தது, மேலும் மதில்களில் பெரிய பாறைத் துண்டுகள் மற்றும் பல்வேறு வகைகளிலான இயந்திரங்கள் தயார் நிலையில் இருந்தன.(19) ஓ! மன்னா, தன் நண்பனால் (நாரையால்) தன்னிடம் விருந்தினனாக அனுப்பப்பட்டவன் அவன் என்பதைப் பெரும் நுண்ணறிவு கொண்ட ராட்சசத் தலைவன் {விருபாக்ஷன்} விரைவில் அறிந்து கொண்டான். அந்தத் தலைவன் கௌதமனை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.(20)

அப்போது, ஓ! யுதிஷ்டிரா, அந்த ராட்சசர்களின் மன்னன், தன் பணியாட்களிடம், “வாயிலில் இருந்து கௌதமர் இங்கே விரைவில் கொண்டுவரப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டான். மன்னனின் ஆணையின் பேரில், பருந்துகளைப் போல வேகமிக்கக் குறிப்பிட்ட மனிதர்கள், தங்கள் ஆட்சியாளனின் அற்புத அரண்மனையில் இருந்து வெளியே வந்து, கௌதமன் இருந்த வாயிலுக்குச் சென்றனர்.(22)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த அரசத் தூதுவர்கள், அந்தப் பிராமணனிடம், “விரைவாக வாரும், மன்னன் உம்மைக் காண விரும்புகிறார்.(23) விருபாக்ஷன் என்ற பெயரைக் கொண்ட பெரும் துணிவுமிக்க ராட்சசர்களின் மன்னனைக் குறித்து நீர் கேள்விப்பட்டிருப்பீர். அவரே உன்னை உடனடியாகக் காண விரும்புகிறார். தாமதிக்காதீர், விரைவாக வாரும்” என்று சொன்னார்கள்.(24)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணன், ஆச்சரியத்தால் தன் களைப்பை மறந்து அந்தத் தூதுவர்களுடன் ஓடினான். அந்த நகரின் பெருஞ்செழிப்பைக் கண்ட அவன் {கௌதமன்} ஆச்சரியத்தால் நிறைந்தான்.(25) ராட்சசர்களின் மன்னனைப் பார்க்க வேண்டி, தூதுவர்களின் துணையுடன் அம்மன்னனின் அரண்மனைக்குள் விரைவாக நுழைந்தான்” {என்றார் பீஷ்மர்}.(26)

கொடூரத் திட்டம்! – சாந்திபர்வம் பகுதி – 171-கௌதமனை வரவேற்றுக் கௌரவித்த விருபாக்ஷன்; பெரும் செல்வத்தை எடுத்துச் சென்ற கௌதமன்; அதே ஆலமரத்தடியை அடைந்து களைத்துச் சாய்ந்தது; ராஜதர்மன் வந்து தன் சிறகுகளால் விசிறி அவனது களைப்பகற்றி உணவு ஊட்டியது; நெடும் வழி செல்ல வேண்டியுள்ளதால் உணவுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணிய கௌதமனின் மனத்தில் உதித்த கொடூரத் திட்டம்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு பெரிய அறைக்குள் வழிநடத்தப்பட்ட கௌதமன், ராட்சசர்களின் மன்னனிடம் அறிமுகப்படுத்தப்பட்டான். (வழக்கமான காணிக்கைகளுடன்) பின்னவனால் {ராட்சச மன்னன் விருபாக்ஷனால்} வழிபடப்பட்ட அவன், ஓரு சிறந்த இருக்கையில் அமர்ந்தான்.(1) மன்னன், அவன் பிறந்த குலம், நடைமுறைகள், வேத கல்வி, பிரம்மச்சரிய நோன்பு ஆகியவற்றைக் குறித்து விசாரித்தான். எனினும், அந்தப் பிராமணன் பிற கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தன் பெயரையும், குலத்தையும் மட்டுமே சொன்னான்.(2) தன் விருந்தினனுடைய பெயர் மற்றும் குலத்தை மட்டுமே உறுதி செய்து கொண்ட மன்னன், அவனிடம் பிராமணக் காந்தியும், வேத கல்வியும் இல்லாதிருப்பதைக் கண்டு, அடுத்ததாக அவன் சார்ந்த நாட்டைக் குறித்துக் கேட்டான்.(3)

அந்த ராட்சசன் {விருபாக்ஷன் கௌதமனிடம்}, “ஓ! அருளப்பட்டவரே, உமது வசிப்பிடம் எங்கே இருக்கிறது, உமது மனைவி எந்தக் குலத்தைச் சார்ந்தவர்? எங்களுக்கு உண்மையைச் சொல்வீராக. அஞ்சாதீர். கவலையில்லாமல் எங்களை நம்புவீராக” என்று கேட்டான்.(4)

கௌதமன் {விருபாக்ஷனிடம்}, “பிறப்பால் நான் நடுநாட்டை {மத்திய தேசத்தைச்} சேர்ந்தவன். நான் வேடர்களின் கிராமத்தில் வசிக்கிறேன். நான் விதவையாக இருந்த ஒரு சூத்திர மனைவியைத் திருமணம் செய்து கொண்டேன். நான் உன்னிடம் சொல்லும் இவை அனைத்தும் உண்மையே” என்றான்”.(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “மன்னன், என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்கத் தொடங்கினான். உண்மையில், தகுதியை அடைவதில் எவ்வாறு வெல்வது என்பதைக் குறித்து எண்ணத் தொடங்கினான்.(6) அவன் தனக்குள்ளேயே, “இந்த மனிதர் பிறப்பால் ஒரு பிராமணராவார். மேலும் இவர் உயர் ஆன்ம ராஜதர்மனின் நண்பராக இருக்கிறார். அந்தக் கசியபரின் மகனால் இவர் என்னிடம் அனுப்பப்பட்டிருக்கிறார்.(7) என் நண்பனுக்கு ஏற்புடையதையே நான் செய்ய வேண்டும். அவன் எனக்கு மிக நெருக்கமானவன். உண்மையில் அவன் என் சகோதரனும், என் அன்புக்குரிய உறவினனுமாவான். உண்மையில் என் இதயத்தின் நண்பனாவான்.(8) கார்த்திகை மாதத்தின் இந்த நாளில் {பூர்ணிமா திதியில் / முழு நிலவில் / பௌர்ணமியில்}, முதன்மையான வகையைச் சேர்ந்த ஆயிரம் பிராமணர்கள் என் வீட்டில் ஆதரிக்கப்படுகின்றனர். இந்தக் கௌதமரும் அவர்களோடு என் ஆதரவைப் பெறட்டும். நான் இவருக்குச் செல்வத்தையும் அளிப்பேன்.(9) இஃது ஒரு புனிதமான நாள். கௌதமர் இங்கே விருந்தினராக வந்திருக்கிறார். (பிராமணர்களுக்குக்) கொடுக்கப்பட வேண்டிய செல்வம் தயாராக இருக்கிறது. இனி இது குறித்துச் சிந்திக்க என்ன இருக்கிறது” என்று நினைத்தான்.(10)

சரியாக அதே நேரத்தில் பெரும் கல்விமான்களும், நீராடி தூய்மையடைந்து (சந்தனக்குழம்பு மற்றும் மலர்களால்) அலங்கரிக்கப்பட்டவர்களும், நீண்ட பட்டாடைகள் உடுத்தியவர்களுமான ஆயிரம் பிராமணர்கள் அந்த அரண்மனைக்கு வந்தனர்.(11) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ராட்சச மன்னன் விருபாக்ஷன், அங்கே வந்த விருந்தினர்களைச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி முறையாக வரவேற்றான்.(12) மன்னனின் உத்தரவின் பேரில் அங்கே அவர்களுக்காகத் தோல்விரிப்புகள் பரப்பப்பட்டன. ஓ! பாரதர்களில் சிறந்தவனே, அப்போது அரச பணியாட்கள் தரையில் குசப் புற்களால் ஆன பாயை {கோரைப்பாயை} விரித்தனர்[1].(13) மன்னனால் முறையாக வழிபடப்பட்ட அந்தப் பிராமணர்களில் முதன்மையானோர், அந்த ஆசனங்களில் அமர்ந்தார்கள். மீண்டும் ஒருமுறை அந்த ராட்சசத் தலைவன், எள், தர்ப்பை மற்றும் நீர் கொடுத்து தன் விருந்தினர்களைவிதிப்படி வழிபட்டான்.(14) அவர்களில் சிலர் விஸ்வதேவர்கள், பித்ருக்கள் மற்றும் அக்னி தேவர்களைப் பிரதிபலிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள், சந்தனக்குழம்பால் பூசப்பட்டு, அவர்களுக்கு மலர்களும் கொடுக்கப்பட்டன. மேலும் அவர்கள் விலைமதிப்புமிக்கப் பிற வகைக் காணிக்கைகளாலும் துதிக்கப்பட்டனர்.(15)இத்தகைய வழிபாட்டுக்குப் பிறகு, ஒவ்வொருவரும் ஆகாயத்தில் உள்ள நிலவைப் போல ஒளிமிக்கவர்களாகத் தெரிந்தனர். பிறகு, பிரகாசமானவையும், சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், பளபளப்பானவையுமான தங்கத் தட்டுகளில், நெய்யுடனும், தேனுடனும் தயாரிக்கப்பட்ட சிறந்த உணவு நிரப்பப்பட்டு அந்தப் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு வருடமும் (முழு நிலவு {பௌர்ணமி} நாட்களில்) ஆஷாட {ஆடி}, மாக {மாசி} மாதங்களில், பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு ராட்சசத் தலைவன் உரிய கௌரவங்களை அளித்த பிறகு, அவர்கள் விரும்பிய சிறந்த வகை உணவுகளைப் பெறுவது வழக்கமாக இருந்தது. அதிலும் குறிப்பாகக் கார்த்திகை மாதத்தின் முழு நிலவு நாளில், கூதிர் காலம் முடிந்ததும், அந்த மன்னன், தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், முத்துகள்,(17-19) பெரும் மதிப்பிலான வைரங்கள், பல்வேறு வகையிலான வைடூரியக் கற்கள், மான் தோல்கள், ரங்கு மான் தோல்கள் உள்ளிட்ட பல்வேறு செல்வங்களைப் பிராமணர்களுக்கு அபரிமிதமாகக் கொடுப்பான்.

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உண்மையில், பல்வேறு வகைச் செல்வக் குவியல்களை (தன் மறுபிறப்பாள விருந்தினர்களுக்குத்) தக்ஷிணையாகக் கொடுத்த(20) வலிமைமிக்க விருபாக்ஷன், அந்தப் பிராமணர்களில் முதன்மையானோரிடம் பேசும்போது, “இந்த நகைகள் மற்றும் ரத்தினங்களில், நீங்கள் விரும்பிய அளவுக்கு, உங்களால் எவ்வளவு சுமந்து செல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்வான்.(21) ஓ! பாரதா, மேலும் அவன், “ஓ! பிராமணர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் உணவுண்ண பயன்படுத்திய தங்கத்தட்டுகளையும், பாத்திரங்களையும் உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்” என்ற வார்த்தைகளையும் சொல்வான்.

(அந்தக் குறிப்பிட்ட விருந்து நிகழ்வில்) உயர் ஆன்ம ராட்சச மன்னனால் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டபோது, அந்தப் பிராமணர்களில் காளையர் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய அளவுக்குச் செல்வத்தை எடுத்துக் கொண்டனர்.(23) விலைமதிப்புமிக்க நகைகள் மற்றும் ரத்தினங்களால் வழிபடப்பட்டவர்களும், சிறந்த ஆடைகளை உடுத்தியிருந்தவர்களுமான அந்தப் பிராமணர்களில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(24)

பல்வேறு நிலங்களில் இருந்து தன் அரண்மனைக்கு வந்திருந்த ராட்சசர்களைத் தடுத்த அந்த ராட்சச மன்னன் மீண்டும் ஒருமுறை அந்தப் பிராமணர்களிடம்,(25) “மறுபிறப்பாளர்களே, இந்த ஒரு நாளைக்கு இங்கே இருக்கும் ராட்சசர்களிடம் நீங்கள் அச்சங்கொள்ளத் தேவையில்லை. நீங்கள் விரும்பியவாறு விளையாடிய பிறகு, இங்கிருந்து வேகமாகச் செல்லலாம்” என்றான்.(26)

பிறகு அந்தப் பிராமணர்கள் அந்த இடத்தை விட்டகன்று பெரும் வேகத்துடன் அனைத்துத் திசைகளிலும் சென்றனர். கௌதமனும், நேரம் எதையும் வீணாக்காமல் கனம் மிக்க பெரும் அளவுக்கு தங்கத்தை எடுத்துச் சென்றான்.(27) அநதக் கடினச் சுமையைச் சுமந்து சென்ற அவன், (ஏற்கனவே நாரையைச் சந்தித்த) அதே ஆல மரத்தை அடைந்தான். களைப்புடனும், களைப்பின் வாட்டத்துடனும், பசியுடனும் அவன் கீழே அமர்ந்தான்.(28) கௌதமன் அங்கே ஓய்ந்திருந்தபோது, ஓ! மன்னா, பறவைகளில் சிறந்தவனான ராஜதர்மன் அங்கே வந்தான். நண்பர்களிடம் பற்றுக் கொண்ட அவன், கௌதமனை வரவேற்று மகிழ்ச்சி அடைந்தான்.(29) அவன் {ராஜதர்மன்}, தன் சிறகுகளை அசைத்து, தன் விருந்தினனுக்கு விசிறி, அவனது களைப்பைப் போக்கத் தொடங்கினான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன் கௌதமனை வழிபட்டு, அவனது உணவுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தான்.(30)

உண்ட பிறகு, புத்துணர்வை அடைந்த கௌதமன், “பேராசையாலும், மடமையினாலும் உந்தப்பட்டு இந்த அளவுக்குப் பசும்பொன்னை எடுத்து வந்துவிட்டேன். நான் நீண்ட வழியில் பயணிக்க வேண்டியுள்ளது. என் வழியில் என் உயிரைத் தாங்கிக் கொள்ள உணவேதும் கொள்ளவில்லை.(31,32) என் உயிரைத் தாங்கிக் கொள்ள என்ன செய்யப் போகிறேன்?” என்று சிந்திக்கத் தொடங்கினான். அப்போது அவனுடைய எண்ணங்கள் இவ்வாறே இருந்தன. பெரும் சிந்தனைக்குப் பிறகும், வழியில் உண்பதற்கான உணவு எதையும் அவன் காணத் தவறினான்(33). ஓ! மனிதர்களில் புலியே, நன்றியற்றவனான அவன், அப்போது இவ்வாறே எண்ணினான், “என் அருகில் இருக்கும் இந்த நாரைகளின் இளவரசன், இவ்வளவு பெரியதாகவும், இறைச்சிக் குவியலைக் கொண்டதாகவும் இருக்கிறான்.(34) இவனைக் {நாரையான ராஜதர்மனைக்} கொன்று, பையில் போட்டுக் கொண்டு,பெரும் வேகத்தோடு நான் இந்த இடத்தைவிட்டுச் செல்லப் போகிறேன்” {என்று நினைத்தான் கௌதமன்}.(35)

கௌதமகதி! – சாந்திபர்வம் பகுதி – 172-திட்டம்போட்டபடியே ராஜதர்மனைக் கொன்று, இறைச்சியை வறுத்து பயண வழிக்கான உணவாக எடுத்துச் சென்ற கௌதமன்; ராஜதர்மனைக் காணாது வருந்திய விருபாக்ஷன்; ராஜதர்மனின் கதியை உணர்ந்து கௌதமனைத் துரத்திப் பிடித்த ராட்சசர்கள்; கௌதமனை உண்ண மறுத்த ராட்சசர்கள்; அவனைத் துண்டுகளாக வெட்டி கள்வர்களுக்குக் கொடுத்தது; நன்றியற்றவனின் இறைச்சியை உண்ண மறுத்த தன்னின உன்னிகள்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தப் பறவைகளின் இளவரசன் {நாரையான ராஜதர்மன்}, அங்கே அந்த ஆலமரத்தடியில் தன் விருந்தினனின் பாதுகாப்புக்காகச் சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட பெரும் நெருப்பை மூட்டி வைத்திருந்தான்[1].(1) மறுபுறத்தில் அந்தப் பறவையானவன் நம்பிக்கையுடன் உறங்கிக் கொண்டிருந்தான். நன்றியற்றவனும் தீய ஆன்மா கொண்டவனுமான அந்த இழிந்தவன் {கௌதமன்}, விருந்தோம்பி உறங்கிக் கொண்டிருக்கும் அவனைக் கொல்லத் தயாரானான்.(2) நம்பிக்கைநிறைந்த அந்தப் பறவையைச் சுடர்மிக்க நெருப்பின் துணையுடன் கொன்று, தான் செய்தது ஒரு பாவம் என்பதை ஒருபோதும் நினைக்காமல் அவனைக் கொன்றதும் மகிழ்ச்சியால் நிறைந்தான்.(3) இறகுகளை உரித்தெடுத்து அவன், அந்த நெருப்பிலேயே இறைச்சியை வறுத்தான். பிறகு தான் கொண்டு வந்த தங்கத்தோடு சேர்த்து அதையும் எடுத்துக் கொண்ட அந்தப் பிராமணன் அந்த இடத்தில் இருந்து வேகமாக ஓடினான்.(4)அடுத்த நாள், ராட்சச மன்னன் விருபாக்ஷன் தன் மகனிடம், “ஐயோ, ஓ! மகனே, நான் இன்று பறவைகளில் சிறந்த ராஜதர்மனைக் காணவில்லை.(5) ஒவ்வொரு நாள் காலையும் அவன் பெரும்பாட்டனை {பிரம்மனைத்} துதிப்பதற்காகப் பிரம்மலோகம் செல்வான். திரும்பும்போது, என்னைச் சந்திக்காமல் ஒருபோதும் அவன் சென்றதில்லை.(6) அவன் என் வசிப்பிடத்திற்கு வராமலேயே இரண்டு காலைகளும், இரண்டு இரவுகளும் கடந்துவிட்டன. எனவே, என் மனம் அமைதியடையவில்லை. என் நண்பனைக் குறித்து விசாரிக்க வேண்டும். இங்கே வந்த கௌதமன், வேத கல்வியற்றவனும், பிராமணக் காந்தியில்லாதவனுமாவான். அவன் என் நண்பனின் வசிப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றான். அந்த இழிந்த பிராமணன் ராஜதர்மனைக் கொன்றுவிட்டான் என நான் பெரிதும் அஞ்சுகிறேன்.(8) தீய நடைமுறைகளையும், தீ அறிவும் கொண்ட அவனை, அவன் வெளிப்படுத்திய குறிப்புகளின் மூலம் நான் உணர்ந்து கொண்டேன். கருணையற்றவனும், கொடூரனும், கடுமுகம் கொண்டவனும், தீயவனுமான அந்த மனிதர்களில் இழிந்தவன் ஒரு கள்வனைப் போன்றவனாவான். அந்தக் கௌதமன் என் நண்பனின் வசிப்பிடத்திற்குச் சென்றான். இந்தக் காரணத்தால் என் இதயம் மிகவும் கவலை கொள்கொள்கிறது.(9) எனவே ஓ! மகனே, பெரும் வேகத்துடன் ராஜதர்மனின் வசிப்பிடத்திற்குச் சென்று, தூய ஆன்மா கொண்ட அந்தப் பறவையானவன் இன்னும் உயிருடன் இருக்கிறானா என்பதை உறுதி செய்வாயாக. தாமதிக்காதே” என்றான்{விருபாக்ஷன்}.(10)

இவ்வாறு தன் தந்தையால் சொல்லப்பட்ட அந்த இளவரசன், பிற ராட்சசர்களின் துணையுடன் அங்கிருந்து பெரும் வேகத்தில் சென்றான். அந்த ஆலமரத்தடியை அடைந்த அவன், ராஜதர்மனின் எஞ்சிய பாகங்களைக் கண்டான்.(11) நுண்ணறிவுமிக்க ராட்சசர்களின் மன்னனுடைய மகன் துயரத்தால் வெகுவாக அழுது, கௌதமனைப் பிடிப்பதற்காகத் தன் சக்தி அனைத்தையும் பயன்படுத்தி வெகு வேகமாக ஓடினான்.(12) வெகு தொலைவிற்குச் செல்லும் முன்பே ராட்சசர்கள் அந்தப் பிராமணனைப் பிடித்து, இறகுகள், எலும்புகள் மற்றும் கால்களற்ற ராஜதர்மனின் உடலைக் கண்டார்கள்.(13) சிறைபிடிக்கப்பட்டவனைக் கூட்டிக் கொண்டு பெரும் வேகத்தோடு மேருவ்ரஜத்திற்குத் திரும்பி அந்த ராட்சசர்கள், ராஜதர்மனின் சிதைந்த உடலையும், நன்றியற்றவனும், இழிந்த பாவியுமான கௌதமனையும் மன்னனுக்குக் காட்டினார்கள்.(14) தன் நண்பனின் எஞ்சிய {உடல்} பாகங்களைக் கண்ட மன்னன், தன் அமைச்சர்கள் மற்றும் புரோஹிதருடன் சேர்ந்து உரக்க அழத் தொடங்கினான். உண்மையில், அவனுடைய வசிப்பிடத்தில் கேட்கப்பட்ட ஓலம் பேரொலிமிக்கதாக இருந்தது.(15,16)

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ராட்சச மன்னனின் மொத்த நகரமும் துயரத்தில் ஆழ்ந்தது. அப்போது மன்னன் தன் மகனிடம், “இந்த இழிந்த பாவி கொல்லப்பட வேண்டும். இங்கே இருக்கும் ராட்சசர்கள் இவனது இறைச்சியை மகிழ்ச்சியாக உண்ணட்டும்.(17) பாவச் செயல்கள், பாவம் நிறைந்த பழக்கவழக்கங்கள், பாவம் நிறைந்த ஆன்மா கொண்டவனும், பாவத்திற்குப் பழக்கப்பட்டவனுமான இந்த இழிந்தவன் உங்களால் கொல்லப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என்றான்.(18)

ராட்சச மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், பயங்கர ஆற்றலைக் கொண்டவர்களான ராட்சசர்கள் பலர், அந்தப் பாவியின் இறைச்சியை உண்பதில் தங்களுக்குள்ள விருப்பமின்மையைத் தெரிவித்தனர்.(19) உண்மையில் அந்த இரவு உலாவிகள் தங்கள் மன்னனிடம், “இந்த இழிந்த மனிதனை கள்வர்களுக்குக் கொடுத்துவிடுவீராக” என்றனர்.(20) மேலும் அவர்கள் தங்கள் மன்னனுக்குத் தலைவனங்கி, “பாவம் நிறைந்த இந்த இழிந்தவனை எங்களுக்கு உணவாகக் கொடுப்பது உமக்குத் தகாது” என்றனர்.(21)

மன்னன் அவர்களிடம், “அப்படியே ஆகட்டும். இந்த நன்றியற்ற அற்பனை, தாமதமில்லாமல் கள்வர்களுக்குக் கொடுப்பீராக” என்றான்.(22)

இவ்வாறு சொல்லப்பட்டவர்களும், வேல்களையும், போர்க்கோடரிகளையும் தரித்தவர்களுமான அந்த ராட்சசர்கள் அந்த இழிந்த அற்பனை துண்டுகளாக வெட்டி அவற்றைக் கள்வர்களுக்குக் கொடுத்தனர்.(23) எனினும், அந்தக் கள்வர்களும், அந்த இழிந்த மனிதனின் இறைச்சியை உண்ண மறுத்துவிட்டனர். தன்னின உன்னிகளாக {மனித இறைச்சி உண்பவர்களாக} இருந்தாலும் அவர்கள் {அந்தக் கள்வர்கள்}, அந்த நன்றியற்ற மனிதனை உண்ணவில்லை.(24) ஓ! மன்னா, பிராமணனைக் கொன்றவன், மதுபானம் பருகியவன், களவாடியவன், நோன்பில் இருந்து விழுந்தவன் ஆகியோருக்கும் பாவக்கழிப்பு உண்டு, ஆனால் ஒரு நன்றியற்றவனுக்கு எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது.(25) எந்தக் கொடூரமான மனிதன், ஒரு நண்பனுக்குத் தீங்கிழைத்து, நன்றியற்றவனாகிறானோ, அந்தத் தீயவனைத் தன்னின உன்னிகளோ, பிணந்தின்னிப் புழுக்களோ கூட உண்பதில்லை” என்றார் {பீஷ்மர்}.(26)

நல்லோர் இயல்பு! – சாந்திபர்வம் பகுதி – 173-ஈமச்சிதை வளர்த்து தன் நண்பனுக்குரிய இறுதி சடங்குகளைச் செய்த விருபாக்ஷன்; வானத்தில் தோன்றிய சுரபி; அமுதப் பொழிவால் உயிர்பெற்ற ராஜதர்மன்; கௌதமனை உயிர்மீட்க வேண்டியது; நரகத்தில் மூழ்கிய கௌதமன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிறகு அந்த ராட்சச மன்னன் {விருபாக்ஷன்}, அந்த நாரைகளின் இளவரசனுக்காக {ராஜதர்மனுக்காக} ஓர் ஈமச்சிதையை ஏற்படுத்தி, தங்கம், ரத்தினங்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் விலைமதிப்புமிக்க ஆடைகள் ஆகியவற்றால் அஃதை அலங்கரித்தான்.(1) அந்தப் பறவைகளின் இளவரசனுடன் {ராஜதர்மனுடன்} கூடிய அதற்கு {அந்தச் சிதைக்கு} நெருப்பிட்ட அந்த வலிமைமிக்க ராட்சசர்களின் தலைவன் {விருபாக்ஷன்}, விதிப்படி தன் நண்பனுக்குச் {ராஜதர்மனுக்குச்} செய்ய வேண்டிய ஈமக்கடனக்குரிய சடங்குகளைச் செய்தான்.(2) அந்த நேரத்தில், தக்ஷனின் மகளான மங்கலமான {பசுவான} சுரபி தேவி அந்தச் சிதை அமைக்கப்பட்ட இடத்திற்கு மேலே வானத்தில் தோன்றினாள். அவளுடைய மார்புகள் பால் நிறைந்தவையாக இருந்தன {அவளுடைய மடி பால் நிறைந்ததாக இருந்தது}[1].(3) ஓ! பாவமற்ற ஏகாதிபதி, அவளுடைய வாயிலிருந்து பாலுடன் கலந்த நுரையானது ராஜதர்மனின் ஈமச்சிதையில் விழுந்தது.(4) அதன் மூலம் அந்த நாரைகளின் இளவரசன் {ராஜதர்மன்} மீண்டும் உயிர்பெற்றான். அவன் எழுந்து, ராட்சசர்களின் மன்னனான தன் நண்பன் விருபாக்ஷனிடம் சென்றான்[2].(5)அந்த நேரத்தில் தேவர்களின் தலைவனே {இந்திரனே} விருபாக்ஷனின் நகரத்திற்கு வந்தான். ராட்சச மன்னனிடம் பேசிய இந்திரன், “நற்பேற்றாலேயே நீ இந்த நாரைகளின் இளவரசனுடைய உயிரை மீட்டாய்” என்றான்.(6) பிறகு தேவர்களின் தலைவன் {இந்திரன்}, பறவைகளில் சிறந்தவனான ராஜதர்மனுக்குப் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} சாபம் கிடைத்த பழங்கதையை விருபாக்ஷனுக்குச் சொன்னான்.(7) மன்னனிடம் {விருபாக்ஷனிடம்} பேசிய அவன் {இந்திரன்}, “ஓ! ஏகாதிபதி {விருபாக்ஷனே}, ஒரு காலத்தில் இந்த நாரைகளின் இளவரசன், பிரம்மலோகத்தில் (இவனது வரவு எதிர்பார்க்கப்பட்டபோது) வரவில்லை. கோபமடைந்த பெரும்பாட்டன் {பிரம்மன்} இந்த நாரைகளின் இளவரசனிடம்,(8) “இன்று இந்த அற்ப நாரை என் சபைக்கு வராததால், அந்தத் தீய ஆன்மா கொண்டவன் (பூமியை விட்டு அகலும் வகையில்) விரைவில் இறப்பான்”[3] என்றார்.(9) பெரும்பாட்டனின் இந்த வார்த்தைகளின் விளைவாலேயே, நாரைகளின் இளவரசன், கௌதமனால் கொல்லப்பட்டாலும், அமுதத்தில் உடல் நனைந்ததன் மூலம் மீண்டும் உயிரை அடைந்தான்” என்றான் {இந்திரன்}.(10)

இந்திரன் அமைதியானதும், தேவர்களின் தலைவனை வணங்கிய ராஜதர்மன், “ஓ! தேவர்களில் முதல்வனே, உன் இதயம் எனக்கு அருள்தர விரும்பினால், என் அன்புக்குரிய நண்பன் கௌதமன் உயிர் பெற்று எழட்டும்” என்று கேட்டான்.(11)

ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட வாசவன் {இந்திரன்}, அந்தப் பிராமணனான கௌதமன் மீது அமுதத்தைத் தெளித்து, அவனை உயிரோடு மீட்டெடுத்தான்.(12) அந்த நாரைகளின் இளவரசன், (ராட்சச மன்னன் கொடுத்த) தங்கச் சுமையை இன்னும் தன் தோள்களில் சுமந்து கொண்டிருந்த கௌதமனை ஆரத்தழுவிக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.(13) பிறகு, நாரைகளின் இளவரசனான அந்த ராஜதர்மன், பாவச்செயல்களைச் செய்த கௌதமனை, அவன் வைத்திருந்த செல்வத்தோடு அனுப்பிவைத்து தன் வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(14) (அடுத்த நாள்) உரிய நேரத்தில் அந்தப் பறவையானவன் பெரும்பாட்டனின் {பிரம்ம} உலகத்திற்குச் சென்றான். பின்னவன் {பிரம்மன்} ஒரு விருந்தினருக்குக் காட்டப்பட வேண்டிய கவனத்தோடு அந்த உயர் ஆன்மப் பறவையைக் கௌரவித்தான்.(15) கௌதமனும், வேடர்களின் கிராமத்தில் இருந்த தன் இல்லத்துக்குத் திரும்பி, தன் சூத்திர மனைவியிடம் பாவம்நிறைந்த பல பிள்ளைகளைப் பெற்றான்.(16) சில வருடங்களுக்குள், தான் மறுமணம் செய்து கொண்ட தன் மனைவியிடம் பல பிள்ளைகளைப் பெற்ற அந்த நன்றியற்ற பாவி, பல வருடங்களுக்குப் பயங்கர நரகத்தில் மூழ்குவான் எனத் தேவர்களால் பெரும் சாபமிடப்பட்டது.(17)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இவை யாவும் முன்பு ஒரு சமயம் நாரதரால் எனக்குச் சொல்லப்பட்டது. ஓ! பாரதக் குலத்தின் காளையே இந்த முக்கியமான கதையின் சம்பவங்களை நினைவுகூர்ந்து அனைத்து விபரங்களையும் நான் உனக்கு முறையாகச் சொல்லியிருக்கிறேன்.(18) நன்றியற்றவனால் எவ்வாறு புகழடையமுடியும்? நன்றியற்றவன் நம்பத்தகாதவனாவான். நன்றியற்ற ஒருவனால் ஒருபோதும் தப்ப முடியாது.(19) எந்த மனிதனும் ஒரு நண்பனுக்குத் தீங்கிழைக்கக்கூடாது. எவன் ஒரு நண்பனுக்குத் தீங்கிழைப்பானோ, அவன் நீடித்த, நிலைத்த பயங்கர நரகத்தில் மூழ்குவான்.(20) அனைவரும் நன்றிநிறைந்தவர்களாக இருக்க வேண்டும், அனைவரும் தன் நண்பர்களுக்கு நன்மையை நாட வேண்டும். ஒரு நண்பனிடம் இருந்து அனைத்தையும் அடையலாம். நண்பர்களின் மூலம் கௌரவங்களை அடையலாம்.(21) நண்பர்களின் விளைவால் ஒருவன் பல்வேறு இன்பநுகர் பொருட்களை அனுபவிக்கலாம். நண்பர்களுடைய முயற்சியின் மூலம் ஒருவன் பல்வேறு வகை ஆபத்துகள் மற்றும் துன்பங்களில் இருந்து தப்பிக்கலாம். ஞானமுள்ள ஒருவன் தன் நண்பர்களைச் சிறந்த கவனத்துடன் கௌரவிப்பான்.(22)

நன்றியற்ற, வெட்கங்கெட்ட, பாவம் நிறைந்த அற்பன், ஞானியரால் புறக்கணிக்கப்படுவான். நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன், தன் குலத்தில் இழிந்தவனாவான். அத்தகைய பாவம் நிறைந்த அற்பன் மனிதர்களிலேயே தீயவன் ஆவான்.(23) ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, நன்றியின்மையால் களங்கப்பட்டவனும், தன் நண்பனுக்குத் தீங்கிழைப்பவனுமான பாவம் நிறைந்த ஓர் இழிந்தவனின் பண்புகளை இவ்வாறே நான் உனக்குச் சொல்லிவிட்டேன். நீ இன்னும் வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” என்றார் {பீஷ்மர்}”.(24)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஜனமேஜயா, உயர் ஆன்ம பீஷ்மரால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டு யுதிஷ்டிரன் பெரும் நிறைவடைந்தான்”.(25)

ஆபத்தர்மாநுசாஸன உப பர்வம் முற்றிற்று

சாந்தி பர்வம் – பாகம் 1 முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்–ஸ்ரீ ராஜதர்மாநுசாஸன பர்வம் —

October 16, 2025

கர்ணரைக் காணும்போதெல்லாம் அமைதியடைந்தேன்! – சாந்திபர்வம் பகுதி – 01-யுதிஷ்டிரனைத் தேடி வந்த முனிவர்கள்; யுதிஷ்டிரனின் நலம் விசாரித்த நாரதர்; நாரதரிடம் தன் மனக்குறைகள் அனைத்தையும் சொன்ன யுதிஷ்டிரன்; கர்ணன் தங்கள் அண்ணன் என்பதைத் தான் அறிய வந்த சூழ்நிலையை நாரதருக்கு எடுத்துச் சொன்னது; கர்ணனின் பாதங்களும், குந்தியின் பாதங்களும் ஒன்றுபோல் இருப்பது தனக்கு ஏற்கனவே ஐயத்தை ஏற்படுத்தியதைச் சொன்னது; இந்தக் காரியத்தில் நாரதர் அறிந்த அனைத்தையும் தனக்குச் சொல்லுமாறு வேண்டிக் கேட்ட யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் நீர்க்காணிக்கைகளை அளித்த பாண்டுவின் மகன்கள், விதுரன், திருதராஷ்டிரன் மற்றும் பாரதக் குலப் பெண்கள் ஆகியோரனைவரும்,(1) (அந்தப் புனிதமான ஓடையின் கரையிலேயே) வசித்தனர். பாண்டுவின் உயரான்ம மகன்கள் {தீட்டிலிருந்து} தூய்மையடைவதற்காக ஒரு மாத காலத்தை, குரு நகருக்கு {குருஜாங்கலத் தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கு} வெளியே கடத்த விரும்பினர்.(2) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் நீர்ச்சடங்குகளைச் செய்த பிறகு, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட உயரான்ம தவசியர் பலரும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் பலரும் அந்த ஏகாதிபதியை {யுதிஷ்டிரனைக்} காண அங்கே வந்தனர்.(3) அவர்களில் தீவில் பிறந்தவர் {துவைபாயனரான} (வியாசர்), நாரதர், பெரும் முனிவரான தேவலர், தேவஸ்தானர் மற்றும் கண்வர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் சிறந்த சீடர்களையும் தங்களுடன் அழைத்து வந்திருந்தனர்.(4)

ஞானம் கொண்டவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், இல்லறவாழ்வை நோற்பவர்களுமான மறுபிறப்பாளர்கள் {பிராணர்கள்}, அல்லது ஸ்நாதக வகையைச்[1] சேர்ந்தோர் பலரும் குரு மன்னனை {யுதிஷ்டிரனைக்} காண அங்கே வந்தனர்.(5) அந்த உயரான்மாக்கள் வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் (யுதிஷ்டிரனால்) முறையாக வழிபடப்பட்டார்கள். பிறகு அந்தப் பெரும் முனிவர்கள் விலைமதிப்புமிக்கத் தரைவிரிப்புகளில் அமர்ந்தனர்.(6) அவர்கள், (தூய்மையற்ற அந்தத் துக்கக் காலத்திற்கு) தகுந்த வகையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வழிபாட்டை ஏற்றுக் கொண்டு, முறையான வரிசையில் மன்னனைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.(7) துயரில் கலங்கிய இதயத்துடன் பாகீரதியின் புனிதமான கரையில் வசித்து வந்த மன்னர்களின் மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} ஆயிரக்கணக்கான பிராமணர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அவனுக்கு ஆறுதலளித்தனர்.(8)அப்போது, நாரதர், முதலில் அங்கு வந்திருந்தவர்களும், தீவில் பிறந்தவரை {துவைபாயனரான வியாரசரைத்} தங்களில் முதன்மையானவராகக் கொண்டவர்களுமான முனிவர்களைக் கரங்கூப்பி வணங்கிய பிறகு, சரியான நேரத்தில், தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் பேசினார்.(9) அவர் {நாரதர்}, “ஓ! யுதிஷ்டிரா, உன் கரங்களின் வலிமையாலும், மாதவனின் {கிருஷ்ணனின்} அருளாலும், உன்னால் மொத்த பூமியும் நேர்மையாக {அறவழியில்} வெல்லப்பட்டிருக்கிறது.(10) இந்தப் பயங்கரப் போரில் இருந்து நீ உயிருடன் தப்பியது நற்பேற்றாலேயே. ஓ! பாண்டுவின் மகனே, க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும் உனக்கு, இதனால் மகிழ்ச்சியில்லையா?(11) ஓ!மன்னா, உன் எதிரிகள் அனைவரையும் கொன்ற பிறகு, உன் நண்பர்களை நிறைவு செய்ய வேண்டாமா? இந்தச் செழிப்பை அடைந்த பிறகும், உன்னைத் துயரம் பீடிக்காதிருக்கும் என நான் நம்புகிறேன்” என்றார்.(12)

யுதிஷ்டிரன் {நாரதரிடம்}, “உண்மையில், கிருஷ்ணனுடைய கரவலிமையின் மீது கொண்ட என் நம்பிக்கை, பிராமணர்களின் அருள், பீமன் மற்றும் அர்ஜுனனின் வலிமை ஆகியவற்றாலேயே இந்த மொத்த பூமியும் என்னால் வெல்லப்பட்டது.(13) எனினும், பேராசையின் காரணமாக உறவினர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திவிட்டேன் என்ற கனமான துயரம் என் இதயத்தில் எப்போதும் இருக்கிறது. சுபத்திரையின் அன்புக்குரிய மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள் ஆகியோரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த இந்த வெற்றியானது, எனக்குத் தோல்வியின் ஒளியிலேயே புலப்படுகிறது.(14,15) விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவளும், என் கொழுந்தியாளுமான சுபத்திரை என்னிடம் என்ன கேட்பாள்? மதுசூதனன் {கிருஷ்ணன்} இங்கிருந்து துவாரகைக்குச் செல்லும்போது, அங்கு வசிக்கும் மக்கள் அவனிடம் என்ன கேட்பார்கள்?(16) எங்களுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்து வருபவளான இந்தத் திரௌபதி, மகன்கள் மற்றும் உறவினர்களை இழந்தவளாக நிற்பது எனக்குப் பெரும் வலியைத் தருகிறது.(17) ஓ! புனித நாரதரே, மேலும் வேறொன்றையும் நான் உமக்குச் சொல்கிறேன். குந்தி, மிக முக்கியமான காரியத்தின் ஆலோசனைகளைத் தனக்குள்ளேயே கமுக்கமாக வைத்துக் கொண்டதில் என் துயரம் மிகப் பெரிதானதாக இருக்கிறது.(18)

பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவரும், இவ்வுலகின் தேர்வீரர்களில் ஒப்பற்றவரும், சிங்கத்தின் நடையையும், செருக்கையும் கொண்டவரும், பெரும் நுண்ணறிவையும், கருணையையும் கொண்டவரும், பெரிதான தயாள குணத்தைக் கொண்டவரும், உயர்ந்த நோன்புகளை நோற்றவரும்,(19) தார்தராஷ்டிரர்களின் புகலிடமாக இருந்தவரும், தமது கௌரவத்தில் உணர்வுமிக்கவராக இருந்தவரும், ஆற்றலில் தடுக்கப்பட முடியாதவரும், தம் காயங்கள் அனைத்திற்கும் பழிதீர்க்கத் தயாராக இருந்தவரும், (போரில்) எப்போதும் கோபம் நிறைந்தவராக இருந்தவரும், மீண்டும் மீண்டும் மோதல்களில் எங்களை வீழ்த்தியவரும்,(20) ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் வேகம் கொண்டவரும், அற்புதமான வீரத்தைக் கொண்டவருமான அந்த வீரர் (கர்ணர்), குந்திக்கு இரகசியத்தில் பிறந்த மகனும், அதன் காரணமாக எங்கள் உடன்பிறந்த சகோதரனுமாவார்.(21) இறந்தோருக்கான நீர்த்தர்ப்பணங்களை நாங்கள் செய்து கொண்டிருந்தபோது, குந்தி அவரைச் சூரியனின் மகன் என்றாள். அனைத்து அறத்தையும் கொண்ட அவர் குழந்தைப் பருவத்திலேயே நீரில் விடப்பட்டிருக்கிறார்.(22) குந்தி, எடை குறைந்த பொருட்களால் தயாரிக்கப்பட்ட கூடையில் இட்டு, அவரைக் கங்கையின் ஓடையில் விட்டிருக்கிறாள். ராதைக்குப் பிறந்த சூதப் பிள்ளை என்று இவ்வுலகத்தில் எவர் கருதப்பட்டாரோ,(23) அவர் உண்மையில் குந்தியின் மூத்த மகனும், அதனால் எங்கள் உடன் பிறந்த அண்ணனுமாவார். ஐயோ, நாட்டின் மீது கொண்ட பேராசையால், அறியாமையில் நான் என் அண்ணனைக் {கர்ணரைக்} கொன்றுவிட்டேன். பஞ்சுக் குவியலை எரிக்கும் நெருப்பைப் போல இதுவே {இந்த நினைப்பே} என் அங்கங்களை எரிக்கிறது.(24)

வெண்குதிரைகளைக் கொண்டவனான அர்ஜுனனும், அவரைத் தன் அண்ணனாக அறிய மாட்டான், நானோ, பீமனோ, இரட்டையர்களோ கூட அவ்வாறு அவரை {கர்ணரை} அறியவில்லை. எனினும், சிறந்த வில்லைக் கொண்டவரான அவர் எங்களை (அவரது தம்பிகளாக) அறிந்திருந்தார்.(25) ஒரு சந்தர்ப்பத்தில் பிருதை {குந்தி} அவரிடம் {கர்ணரிடம்} சென்று, எங்கள் நலனை வேண்டி, “நீ என் மகன்” என்று சொன்னதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்.(26) எனினும், அந்தச் சிறப்புமிக்க வீரர், பிருதையின் விருப்பங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அதற்கடுத்து அவர், தமது தாயாரிடம் {குந்தியிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார் என நாங்கள் கேள்விப்படுகிறோம்.(27) அவர் {கர்ணர் குந்தியிடம்}, “போரில் என்னால் துரியோதனனைக் கைவிடமுடியாது. அப்படி நான் செய்தால், அது மதிப்பற்ற, கொடூரமான, நன்றியற்ற செயலாகும்.(28) உன் விருப்பங்களுக்கு நான் சம்மதித்து யுதிஷ்டிரனுடன் அமைதியை ஏற்படுத்திக் கொண்டால், வெண்குதிரைகள் கொண்ட அர்ஜுனனுக்கு நான் அஞ்சிவிட்டதாக மக்கள் பேசுவார்கள்.(29) கேசவனோடு {கிருஷ்ணனோடு} கூடிய அர்ஜுனனைப் போரில் வென்ற பிறகு, நான் தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} அமைதியை ஏற்படுத்திக் கொள்வேன்” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம்.(30)

இப்படிச் சொல்லப்பட்ட பிருதை {குந்தி}, அகன்ற மார்பைக் கொண்ட தன் மகனிடம் {கர்ணரிடம்} மீண்டும், “பல்குனனுடன் {அர்ஜுனனோடு} போரிடு, ஆனால் என் மற்ற நான்கு மகன்களையும் விட்டுவிடுவாயாக” என்று கேட்டிருக்கிறாள்[2]. அதற்கு நுண்ணறிவைக் கொண்ட அந்தக் கர்ணர், தன் கரங்களைக் கூப்பித் தன் தாயாரிடம் நடுங்கியவாறே, “உன் மற்ற நான்கு மகன்களையும் நான் என் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தாலும், நிச்சயம் அவர்களைக் கொல்லமாட்டேன். ஓ! தேவி, நீ எப்போதும் ஐந்து மகன்களைக் கொண்டிருப்பாய் என்பதில் ஐயமில்லை. கர்ணன் கொல்லப்பட்டால் அர்ஜுனனோடு ஐவரையும், அர்ஜுனன் கொல்லப்பட்டால் என்னோடு சேர்த்து ஐவரையும் நீ கொண்டிருப்பாய்” என்றிருக்கிறான்.(33) தன் பிள்ளைகளுக்கு நன்மையை வேண்டிய அவனது தாய் {குந்தி}, மீண்டும் அவனிடம், “செல், ஓ! கர்ணா, நீ எப்போதும் யாருக்கு நன்மையை விரும்புவாயோ அந்த உன் சகோதரர்களுக்கு நன்மையைச் செய்வாயாக” என்றிருக்கிறாள்.(34) இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவனிடம் விடைபெற்றுக் கொண்டு தன் வசிப்பிடத்திற்குத் திரும்பியிருக்கிறாள் {குந்தி}.அந்த வீரர் {கர்ணர்}, உடன் பிறந்த தம்பியால் கொல்லப்படும் அண்ணனாக அர்ஜுனனால் கொல்லப்பட்டிருக்கிறார்.(35) ஓ! தலைவரே {நாரதரே}, பிருதையோ {குந்தியோ}, அவரோ {கர்ணரோ} இந்த இரகசியத்தை ஒருபோதும் வெளியிட்டதில்லை. எனவே, பெரும் வில்லாளியான அவர், போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டார்.(36) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அதன் பின்பே அவர் என் உடன் பிறந்த அண்ணன் என்பதை நான் அறிய வந்தேன். உண்மையில் பிருதையின் வார்த்தைகளுக்குப் பின்பே, கர்ணர் எங்கள் அனைவருக்கும் மூத்த சகோதரர் என்பதை நான் அறிய வந்தேன்.(37) என் அண்ணனைக் கொல்ல நானே காரணமாக இருந்ததால், என் இதயம் அதிகமாக எரிகிறது. எனக்கு உதவி செய்யக் கர்ணர், அர்ஜுனன் ஆகிய இருவரையும் நான் கொண்டிருந்தால், என்னால் வாசுதேவனையே {கிருஷ்ணனையே} வெல்ல முடியும்.(38) தீய ஆன்மா கொண்ட திருதராஷ்டிரர் மகன்களால் சபைக்கு மத்தியில் நான் கொடுமையை அனுபவித்தபோது, திடீரென என் கோபம் தூண்டப்பட்டாலும், கர்ணரைக் கண்டதும் நான் அமைதியடைந்துவிட்டேன்.(39) எங்களுக்கிடையில் பகடையாட்டம் நடந்தபோது, துரியோதனனுக்கு ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தில் கர்ணரே கொடுமை நிறைந்த கடும் வார்த்தைகளைப் பேசியபோதும், அவரை {கர்ணரைக்} கண்டதும் என் கோபம் தணிவடைந்தது. {அப்போது} கர்ணரின் பாதங்கள் எங்கள் தாயாரான குந்தியின் பாதங்களுக்கு ஒப்பாக இருப்பதாக எனக்குத் தெரிந்தது.(40,41) அவருக்கும், எங்கள் தாயாருக்கும் இடையில் உள்ள அந்த ஒற்றுமைக்கான காரணத்தைக் காணும் விருப்பத்தில் நான் நீண்ட நேரம் சிந்தித்திருக்கிறேன்.(42) இவ்வாறு நன்கு முயற்சி செய்தும் என்னால் அக்காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.(42)

உண்மையில், போர்க்காலத்தில் ஏன் அவரது தேர்ச்சக்கரங்களைப் பூமி விழுங்கியது? என் அண்ணன் ஏன் சபிக்கப்பட்டார்? இவை அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(42) ஓ! புனிதமானவரே {நாரதரே}, உம்மிடம் இருந்து அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன். கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தையும், இவ்வுலகில் உள்ள அனைத்தையும் நீர் அறிந்திருக்கிறீர்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(43)

கர்ணன் அடைந்த பிராமணச் சாபம்! – சாந்திபர்வம் பகுதி – 02-துரோணரிடம் சீடனாக இருந்த கர்ணன்; துரோணரிடம் பிரம்மாஸ்திரம் வேண்டியது; துரோணர் மறுத்தது; பிரம்மாஸ்திரம் வேண்டி பரசுராமரிடம் தன் பிறப்பில் பொய்யுரைத்த கர்ணன்; கர்ணனுக்கு நேர்ந்த பிராமணச் சாபம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பேசுபவர்களில் முதன்மையானவரான தவசி நாரதர், இவ்வாறு கேட்கப்பட்டதும், சூதன் மகன் என்று நம்பப்பட்டவன் {கர்ணன்} (முன் நாட்களில்) எவ்வாறு சபிக்கப்பட்டான் என்பது குறித்த அனைத்தையும் சொல்லத் தொடங்கினார்.(1)

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. போரில் கர்ணனையும், அர்ஜுனனையும் எதனாலும் தடுக்க முடியாது.(2) ஓ! பாவமற்றவனே, நான் உனக்கு என்ன சொல்லப்போகிறேனோ, அதைத் தேவர்களும் அறியார்கள். ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, முன் நாட்களில் என்ன நடந்தது என்பதைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(3) ஆயுதங்களின் மூலம் க்ஷத்திரியர்கள் அனைவரும் துடைத்தழிக்கப்பட்டு அவர்கள் எவ்வாறு அருள் உலகங்களை அடைய வேண்டும் என்பதே {அப்போது} கேள்வியாக இருந்தது. இதற்காகவே குந்தியின் கன்னிப்பருவத்தில், போரைத் தூண்ட வல்ல ஒரு பிள்ளை அவளிடம் கருத்தரிக்கப்பட்டான்.(4) பெரும் சக்தி கொண்ட அந்தப் பிள்ளை, சூத நிலையை அடைய வேண்டியிருந்தது {சாரதியின் பிள்ளை என்ற நிலையை அடைய வேண்டியிருந்தது}. அதற்கடுத்து அவன் {கர்ணன்}, அங்கீரச குலக்கொழுந்துகளில் முதன்மையான உன் ஆசானிடமே (துரோணரிடம்) ஆயுத அறிவியலை அடைந்தான்.(5)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பீமசேனனின் வலிமையையும், ஆயுதப்பயன்பாட்டில் அர்ஜுனனின் வேகத்தையும், உன் நுண்ணறிவையும், இரட்டையர்களின் {நகுல சகாதேவர்களின்} பணிவையும், இளமைக் காலம் முதலே வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் காண்டீவதாரி {அர்ஜுனன்} ஆகியோருக்குள் ஏற்பட்ட நட்பையும், மக்கள் உங்கள் அனைவரிடமும் கொண்டுள்ள அன்பையும் கண்டு அந்த இளைஞன் {கர்ணன்} பொறாமையில் எரிந்தான்.(6,7) இளமைப் பருவத்திலேயே தற்செயலாகவும், அவனது சொந்த இயல்பின் காரணமாகவும், உங்கள் அனைவரிடமும் அவன் கொண்ட வெறுப்பின் காரணமாகவும் அவன் மன்னன் துரியோதனனுடன் நட்பு பூண்டான்.(8)

தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஆயுத அறிவியலில் அனைவருக்கும் மேம்பட்டவனாக இருப்பதைக் கண்ட கர்ணன், ஒரு நாள் துரோணரைத் தனிமையில் அணுகி, அவரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(9) “நான் அர்ஜுனனுடன் போரிட விரும்புவதால், பிரம்ம ஆயுதத்தை, அதன் மந்திரங்கள் அனைத்துடனும், அதைத் திரும்பப் பெறும் சக்தியுடனும் நான் அறிய விரும்புகிறேன்.(10) உமது சீடர்கள் ஒவ்வொருவரிடம் நீர் கொண்டிருக்கும் அன்பும், உமது சொந்த மகனிடம் {அஸ்வத்தாமரிடம்} நீர் கொண்டிருக்கும் அன்பும் இணையானதே என்பதில் ஐயமில்லை. ஆயுத அறிவியலை அறிந்த திறன்மிக்கவர்கள் அனைவரும், உமது அருளின் மூலம் என்னை ஆயுதங்களில் சாதித்தவனாகக் கருத வேண்டும் என நான் வேண்டுகிறேன்” என்று கேட்டான்.(11)

இவ்வாறு சொல்லப்பட்ட துரோணர், பல்குனன் {அர்ஜுனன்} மீது கொண்ட அன்பினாலும், கர்ணனின் தீய குணம் குறித்து தாம் அறிந்திருந்ததாலும், அவனிடம்,(12) “முறையாக நோன்புகள் அனைத்தையும் நோற்ற ஒரு பிராமணனையோ, கடுந்தவங்களை இயற்றிய ஒரு க்ஷத்திரியனையோ தவிரப் பிரம்மாயுதத்தை வேறு எவராலும் அறிய முடியாது” என்றார்.(13)

துரோணர் இவ்வாறு பதிலளித்ததும், கர்ணன் அவரை வழிபட்டு விடைபெற்றுக் கொண்டு, அப்போது மஹேந்திர மலைகளில் வசித்து வந்த ராமரிடம் {பரசுராமரிடம்} தாமதமில்லாமல் சென்றான்.(14) அந்த ராமரை அணுகி, தலைவணங்கி, அவரிடம் {பரசுராமரிடம்}, “நான் பிருகு குலத்தைச் சேர்ந்த ஒரு பிராமணனாவேன்” என்றான். இஃது அவனுக்குக் கௌரவத்தைப் பெற்றுத் தந்தது.(15) அவனது பிறப்பையும் {குலத்தையும்}, குடும்பத்தையும் இவ்வாறு அறிந்த ராமர், அவனை அன்புடன் வரவேற்கும் வகையில், “நீ வரவேற்கப்படுகிறாய் {உனக்கு நல்வரவு}” என்று சொன்னார். இதன் காரணமாகக் கர்ணன் பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.(16) சொர்க்கத்திற்கு ஒப்பான அந்த மகேந்திர மலையில் வசித்துவந்தபோது, கர்ணன், பல கந்தர்வர்களையும், யக்ஷர்களையும், தேவர்களையும் சந்தித்து அவர்களோடு {நட்புடன்} ஒன்றுகலந்தான்.(17) அங்கே {மஹேந்திர மலையில்} வசித்த அவன் {கர்ணன்}, அனைத்து ஆயுதங்களையும் முறையாக அடைந்து, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் ராட்சசர்களுக்கு மிகவும் பிடித்தமானவனாக ஆனான்.(18)

ஒருநாள், அவன் அந்த ஆசிரமத்திற்கு அருகே இருந்த கடற்கரையில் திரிந்து கொண்டிருந்தான். உண்மையில் அந்தச் சூரியனின் மகன் {கர்ணன்}, கையில் வில்லுடனும், வாளுடனும் தனியொருவனாகவே உலவித் திரிந்தான்.(19) ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, இவ்வாறு அவன் உலவிக் கொண்டிருந்த போது, அக்னிஹோத்திரச் சடங்கை தினமும் செய்பவரும், பிரம்மத்தை ஓதுபவருமான ஒரு குறிப்பிட்ட மனிதரின் ஹோமத்திற்குரிய மாட்டைத் தனது கவனக்குறைவினாலும், விருப்பமில்லாமலும் {அறியாமையால்} கொன்றுவிட்டான்.(20) கவனக்குறைவினால் செய்துவிட்ட அந்தச் செயலை அவன் அந்தப் பிராமணரிடம் தெரிவித்தான். உண்மையில், {அதன்} உரிமையாளரை மனநிறைவு கொள்ளச்செய்யும் நோக்கில் மீண்டும் மீண்டும் கர்ணன்,(21) “ஓ! புனிதமானவரே, விருப்பமில்லாமலே {அறியாமையால்} இந்த உமது மாட்டை நான் கொன்றுவிட்டேன். இந்தச் செயலை மன்னிப்பீராக” என்று சொன்னான்.(22)

கோபத்தில் நிறைந்த அந்தப் பிராமணர், அவனை நிந்திக்கும் வகையில் இந்த வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! தீய நடத்தை கொண்டவனே, நீ கொல்லப்படத் தகுந்தவனாவாய். ஓ! தீய ஆன்மா {தீய புத்தி} கொண்டவனே, இந்தச் செயலின் கனி உனதாகட்டும்.(23) ஓ! பாவி, எவனை நீ எப்போதும் அறைகூவியழைப்பாயோ எவனுக்காக இந்தநாள் வரை நீ முயற்சி செய்து கொண்டிருக்கிறாயோ, அவனோடு போரிடுகையில் உனது தேர்ச்சக்கரத்தை பூமி விழுங்கட்டும்.(24) அந்தச்சக்கரம் இவ்வாறு பூமியால் விழுங்கப்பட்டதும், திகைப்படைந்திருக்கும் உனது தலையை அந்தப் பகைவன் வெட்டுவான். ஓ! மனிதர்களில் இழிவானவனே, என்னைவிட்டுச் செல்வாயாக.(25) கவனக்குறைவால் என்னுடைய இந்த மாடு உன்னால் எவ்வாறு கொல்லப்பட்டதோ, அவ்வாறே நீ கவனக்குறைவுடன் இருக்கும்போது உன்னுடைய தலையை அவன் கொய்வான்” என்று சபித்தார்.(26)

கர்ணன் இவ்வாறு சபிக்கப்பட்டாலும், அந்தப் பிராமணர்களில் முதன்மையானவருக்குப் பசுக்களையும், செல்வத்தையும், ரத்தினங்களையும் காணிக்கையாக்கி அவரை நிறைவு கொள்ளச் செய்ய முயன்றான். எனினும் அவர், மீண்டும் அவனிடம்,(27) “உலகங்கள் அனைத்தாலும் என்னால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைப் பொய்யாக்க முடியாது. எனவே, நீ செல்வாயாக, அல்லது இருப்பாயாக, அல்லது நீ விரும்பிய எதையும் செய்வாயாக” என்று பதிலளித்தார்.(28) அந்தப் பிராமணரால் இவ்வாறு சொல்லப்பட்ட கர்ணன், உற்சாகம் குறைந்தவனாகத் தன் தலையைத் தொங்கப்போட்டவாறு, மருட்சியுடன் {அச்சத்துடன்} ராமரிடம் {பரசுராமரிடம்} திரும்பி, அக்காரியம் குறித்துச் சிந்திக்கலானான்” என்றார் {நாரதர்}.(29)

தொடையைத் துளைத்த புழு! – சாந்திபர்வம் பகுதி – 03-கர்ணனின் மடியில் தலை வைத்து உறங்கிய பரசுராமர்; கர்ணனின் தொடையைத் துளைத்த புழு; குருதியில் நனைந்து விழித்தெழுந்த பரசுராமர்; பரசுராமரின் கோபத்தால் அப்புழு உயிரை விட்டது; புழுவிலிருந்து வெளிப்பட்ட ராட்சசன்; கர்ணனைச் சபித்த பரசுராமர்; தன் நகரத்திற்குத் திரும்பிய கர்ணன்…

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “கர்ணனின் கரவலிமை, (பரசுராமரிடம்) அவன் கொண்டிருந்த அன்பு, தற்கட்டுப்பாடு, தன ஆசானுக்கு அவன் செய்த தொண்டுகள் ஆகியவற்றில் அந்தப் பிருகு குலத்தின் புலி {பரசுராமர்} நிறைவு கொண்டார்.(1) தவநேன்புகளை நோற்றவரான ராமர் {பரசுராமர்}, தவம் நோற்ற தன் சீடனுக்கு உரிய வடிவிலான பிரம்ம ஆயுதத்தை, அதன் மந்திரங்களுடனும், அதைத் திரும்ப அழைக்கும் மந்திரங்களுடனும் உற்சாகமாகப் போதித்தார்.(2) அவ்வாயுதத்தைக் குறித்த அறிவை அடைந்த கர்ணன், பிருகுவின் {பிருகு முனிவரின் வாரிசான பரசுராமரின்} ஓய்வில்லத்தில் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான். அற்புத ஆற்றலைக் கொண்ட அவன் {கர்ணன்}, பெரும் ஆவலுடன் தன்னை அந்த ஆயுத அறிவியலுக்கு அர்ப்பணித்துக் கொண்டான்.(3)

ஒரு நாள், பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான ராமர், தம் ஓய்வில்லத்தின் அருகிலேயே கர்ணனுடன் உலவிக் கொண்டிருந்தபோது, தாம் நோற்று வந்த நோன்புகளின் விளைவால் மிகவும் பலவீனமாகத் தம்மை உணர்ந்தார்.(4) களைப்படைந்திருந்த அந்த ஜமதக்னியின் மகன் {ராமர்}, நம்பிக்கையின் விளைவால் அடையப்பட்ட அன்பின் காரணமாகக் கர்ணனின் மடியில் தலை வைத்து நன்றாக உறங்கினார்.(5) அவனது ஆசான் இவ்வாறு அவனுடைய மடியில் (தலைவைத்து) உறங்கிக் கொண்டிருந்தபோது, கடித்தால் பெரும் வலியைத் தரக்கூடியதும், சளி, கொழுப்பு, சதை மற்றும் குருதியை உண்டு வாழக்கூடியதுமான ஒரு பயங்கரமான புழுவானது கர்ணனின் அருகில் வந்தது.(6) குருதி குடிக்கும் அந்தப் புழுவானது, கர்ணனின் தொடையை அணுகி, அதைத் துளைக்கத் தொடங்கியது. (விழித்தெழப் போகும்) தன் ஆசானிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகக் கர்ணன் அந்த விலங்கைத் தூக்கி வீசவோ, கொல்லவோ இல்லை.(7) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் புழுவால் தன் அங்கம் துளைக்கப்பட்டாலும், தன் ஆசான் விழித்துவிடப் போகிறார் என்பதால் அது தன் விருப்பப்படிச் செய்யுமாறு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.(8) வலியானது தாங்கிக் கொள்ள முடியாததாக இருப்பினும், வீரக் கர்ணன் அதைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு, கொஞ்சமும் நடுங்கிவிடாதவாறும், வலியின் எந்த அடையாளத்தையும வெளிக்காட்டாமலும், பிருகுவின் மகனை {பரசுராமரைத்} தன் மடியில் தொடர்ந்து தாங்கினான்.(9)

இறுதியில், குருதியானது பெரும் சக்தி கொண்ட ராமரின் உடலைத் தீண்டிய போது, விழித்தெழுந்த அவர், அச்சத்தால் இவ்வார்த்தைகளைச் சொன்னார்,(9) “ஐயோ, நான் தூய்மையற்றவனாக்கப்பட்டேன். நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அச்சமனைத்தையும் விட்டு, இக்காரியத்தில் உண்மை என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றார்.(11) அப்போது கர்ணன் புழு கடித்துக் கொண்டிருப்பதை அவருக்குத் தெரிவித்தான். பன்றியின் வடிவத்திற்கு ஒப்பான அந்தப் புழுவை ராமர் கண்டார்.(12) அஃது எட்டு கால்களையும், மிகக்கூரிய பற்களையும் கொண்டிருந்தது. மேலும் அஃது ஊசிகளைப் போன்ற முனை கொண்ட தடித்த மயிரால் மறைக்கப்பட்டிருந்தது. அளர்க்கம் என்ற பெயரால் அழைக்கப்படும் அதன் அங்கங்கள் (அச்சத்தால்) சுருங்கிப் போயிருந்தன.(13) ராமர் {பரசுராமர்} தமது கண்களை அதன் மேல் செலுத்தியதும், அந்தப் புழுவானது தான் உறிஞ்சிய குருதியிலேயே உருகி உயிரைவிட்டது. இவையாவும் ஆச்சரியமானவையாகத் தெரிந்தன.(14) அப்போது, கரிய நிறம் கொண்டவனும், சிவந்த கழுத்தைக் கொண்டவனும், விருப்பப்படி எவ்வடிவையும் ஏற்கவல்லவனும், பயங்கர வடிவத்தைக் கொண்டவனுமான ஒரு ராட்சசன் ஆகாய மேகங்களில் நின்று கொண்டிருந்தான்.(15)

தன் நோக்கம் நிறைவேறிய அந்த ராட்சசன், கூப்பிய கரங்களுடன் ராமரிடம் {பரசுராமரிடம்}, “ஓ! தவசிகளில் சிறந்தவரே, இந்நரகில் இருந்து என்னை நீர் மீட்டீர். எனக்கு நன்மையைச் செய்திருக்கும் உம்மை நான் துதிக்கிறேன், நீர் அருளப்பட்டிருப்பீராக” என்றான்.(17)

பெரும் சக்தியையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்டவரான அந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, அவனிடம் {ராட்சசனிடம்}, “யார் நீ? ஏன் நீ நரகில் வீழ்ந்தாய்? இவையனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார்.(18)

அதற்கு அவன் {ராட்சசன் பரசுராமரிடம்}, “முற்காலத்தில் நான், தம்சன் என்ற பெயரைக் கொண்ட பெரும் அசுரனாக இருந்தேன். ஓ! ஐயா, கிருத யுகத்தில்*, நான் பிருகுவின் வயதைக் கொண்டவனாக இருந்தேன்.(19) அந்தத் தவசியின் {பிருகுவின்} அன்புக்குரிய மனைவியை நான் அபகரித்துச் சென்றேன். அவரது {பிருகுவின்} சாபத்தின் மூலமாக நான் புழுவின் வடிவில் கீழே விழுந்தேன்.(20)

கோபங்கொண்ட உமது அந்த மூதாதை {பிருகு}, “ஓ! இழிந்தவனே, சிறு நீர் மற்றும் சளியை உண்டு, நீ நரக வாழ்வை நோற்பாயாக” என்று சொன்னார். நான் அவரிடம் {பிருகுவிடம்}, “ஓ! பிராமணரே, எப்போது எனது சாபத்திற்கு ஒரு முடிவு ஏற்படும்?” என்று கேட்டான். அதற்கு அவர் {பிருகு} என்னிடம், “என் குலத்தின் ராமன் {பரசுராமன்} மூலமாக இந்தச் சாபத்திற்கு முடிவேற்படும்” என்றார்.(22) இதன் காரணமாகவே நான், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனைப் போல இத்தகு வாழ்வின் போக்கை அடைந்தேன். ஓ! அறவோரே, எனினும் அந்தப் பாவகரமான வாழ்வில் இருந்து நான் உம்மால் மீட்கப்பட்டு விட்டேன்” என்றான்.(23) இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பேரசுரன், ராமருக்குத் தலைவணங்கிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டான்.

பிறகு கோபம் நிறைந்தவரான ராமர், அந்தக் கர்ணனிடம்,(24) “ஓ! மூடா, இத்தகு வலியை ஒரு பிராமணனால் தாங்கிக் கொள்ள முடியாது. உன் பொறுமையானது ஒரு க்ஷத்திரியனைப் போல இருக்கிறது. அச்சமில்லாமல் எனக்கு உண்மையைச் சொல்வாயாக” என்று கேட்டார்.(25) இவ்வாறு கேட்கப்பட்ட கர்ணன், சாபத்திற்கு அஞ்சியும், அவரை நிறைவு செய்ய வேண்டியும், இந்த வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! பிருகு குலத்தவரே, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் கலப்பில் உண்டான குலத்தில் பிறந்த ஒரு சூதனாக என்னை அறிந்து கொள்வீராக.(26) மக்கள் என்னை ராதையின் மகனான கர்ணன் என்றழைக்கிறார்கள். ஓ! பிருகு குலத்தவரே, ஆயுதங்களை அடையும் விருப்பத்துடன் இவ்வாறு செயல்பட்ட அடியேனிடம் நிறைவு கொள்வீராக.(27) வேதங்கள் மற்றும் பிற அங்கங்களை அறிந்த ஒரு மதிப்புக்குரிய ஆசான் ஒருவனுக்குத் தந்தையுமாவார் என்பதில் ஐயமில்லை. இதன் காரணமாகவே நான் என்னை உமது குலத்தைச் சேர்ந்தவனாக அறிமுகம் செய்து கொண்டேன்” என்றான்.(28)

அந்த முதன்மையான பிருகு குலத்தவர் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்திருந்தாலும், உற்சாகமற்றவனாக, நடுங்கிக் கொண்டிருப்பவனாகக் கரங்களைக் கூப்பி, பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த கர்ணனிடம் புன்னகையுடன் {எரிச்சலுடன்}, “ஓ! இழிந்தவனே, ஆயுதங்கள் மீது கொண்ட பேராசையின் காரணமாக நீ பொய்யுரைத்ததால், இந்தப் பிரம்மாயுதம் உன் நினைவில் தங்காது[1].(30) நீ பிராமணனாக இல்லாததால், உனக்குச் சமமான ஒரு போர்வீரனுடன் நீ போரிட்டுக் கொண்டிருக்கும்போது, மரணம் உன்னை நெருங்கும்வரை இஃது உன்னிடம் தங்காது[2].(31) செல்வாயாக, பொய் நடத்தை கொண்டோருக்கான இடம் இஃதல்ல. இந்தப் பூமியில், உனக்கு இணையான எந்த க்ஷத்திரியனும் இருக்க மாட்டான்” என்றார்.(32)ராமரால் {பரசுராமரால்} இவ்வாறு சொல்லப்பட்ட கர்ணன், முறையாக அவரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றான். பிறகு துரியோதனனின் முன்னிலைக்கு வந்த அவன் {கர்ணன்}, “நான் ஆயுதங்கள் அனைத்தையும் திரட்டிவிட்டேன்” என்று சொன்னான்”.(33)

பானுமதியின் சுயம்வரம்! – சாந்திபர்வம் பகுதி – 04-சுயம்வரத்திற்காகக் கலிங்கத் தலைநகர் ராஜபுரத்திற்குச் சென்ற துரியோதனன்; துரியோதனனைக் கடந்து சென்ற இளவரசி பானுமதி; பலவந்தமாக அந்த இளவரசியைத் தூக்கிச் சென்ற துரியோதனன்; எதிர்த்த மன்னர்கள்; துரியோதனனுக்குத் துணையாக நின்ற கர்ணன்; வெற்றியுடன் ஹஸ்தினாபுரம் திரும்பிய துரியோதனனும், கர்ணனும்..

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு பிருகு குலத்தைச் சேர்ந்த அவரிடம் {பரசுராமரிடம்} ஆயுதங்களை அடைந்த கர்ணன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, துரியோதனன் துணையுடன் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான்.(1) ஓ! ஏகாதிபதி, ஒரு சமயத்தில், கலிங்க நாட்டை ஆண்ட சித்திராங்கதனின் தலைநகரத்தில்[1] நடந்த சுயம்வரத்திற்குப் பல மன்னர்கள் சென்றனர்.(2) ஓ! பாரதரா, பெருஞ்செல்வச் செழிப்பில் திளைத்த அந்நகரம் ராஜபுரம் என்ற பெயரில் அறியப்பட்டிருந்தது. அந்தக் கன்னிகையின்[2] கரத்தை அடைவதற்காக நூற்றுக்கணக்கான ஆட்சியாளர்கள் அங்கே சென்றனர்.(3) பல்வேறு மன்னர்கள் அங்குக் கூடுவதைக் கேட்ட துரியோதனனும், கர்ணனின் துணையுடன் தனது தங்கத்தேரில் அங்கே சென்றான்.(4)ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, சுயம்வரவிழா தொடங்கியபோது, அந்தக் கன்னிகையின் {பானுமதியின்} கரத்திற்காகப் பல்வேறு ஆட்சியாளர்கள் அங்கே வந்திருந்தனர். அவர்களில் சிசுபாலன், ஜராசந்தன்[3], பீஷ்மகன், வக்ரன், கபோதரோமன், நீலன், உறுதியும் ஆற்றலும் கொண்டவனான ருக்மி,(6) பெண்களின் நாட்டை ஆட்சி செய்த ஸ்ருகாலன்[4], அசோகன் {விசோகன்}, சததந்வன், போஜர்களின் வீர ஆட்சியாளன்[5] ஆகியோரும் இருந்தனர்.(7) இவர்களைத் தவிர்த்து, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தெற்கு நாடுகளில் வசித்த பலர், மிலேச்ச இனக்குழுக்களைச் சேர்ந்த (ஆயுத) ஆசான்கள் பலர், கிழக்கு மற்றும் வடக்கைச் சேர்ந்த பல ஆட்சியாளர்கள் ஆகியோரும் அங்கே வந்திருந்தனர்.(8) அவர்கள் அனைவரும் பசும்பொன்னின் காந்தியைக் கொண்ட தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். பிரகாசமான உடல்களைக் கொண்ட அவர்கள் கடும் வலிமையைக் கொண்ட புலிகளைப் போல இருந்தனர்.(9)அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் ஆசனங்களில் அமர்ந்ததும் அந்தக் கன்னிகை {பானுமதி}, தனது செவிலியின் துணையுடனும், அலிகளின் பாதுகாவலுடனும் அரங்கினுள் நுழைந்தாள்.(10) (அவ்வாறு, அவள் {அரங்கை} வலம் வருகையில்) அவளுக்கு மன்னர்களின் பெயர்கள் சொல்லப்பட்டபோது, அழகிய நிறம் கொண்டவளான அந்தக் கன்னிகை, பிறரைக் கடந்து வந்ததைப் போலவே திருதராஷ்டிரன் மகனையும் {துரியோதனனையும்} கடந்து சென்றாள்.(11) எனினும், குருகுலத்தின் துரியோதனனால் இந்தப் புறக்கணிப்பை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மன்னர்கள் அனைவரையும் அவமதிக்கும் வகையில் அவன் {துரியோதனன்}, அந்தக் கன்னிகையை நிற்குமாறு ஆணையிட்டான்.(12) மன்னன் துரியோதனன், சக்தி எனும் செருக்கில் போதை கொண்டும், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோரை நம்பியும், அந்தக் கன்னிகையைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு {அங்கிருந்து} அவளைப் பலவந்தமாகக் கடத்திச் சென்றான்.(13) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான கர்ணன், வாளைத் தரித்துக் கொண்டும், கவசத்தைப் பூண்டு கொண்டும், தன் விரல்களில் தோலுரைகளைப் பூட்டிக் கொண்டும், துரியோதனனின் பின்புறத்தில் தன் தேரைச் செலுத்திக் கொண்டு சென்றான்.(14)

போரிடும் விருப்பத்தால் தூண்டப்பட்ட மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் பேராரவாரம் எழுந்தது. “கவசத்தைப் பூட்டிக் கொள்வீராக”, “தேர்களை ஆயத்தம் செய்வீராக” (இவையே அங்கே கேட்கப்பட்ட ஒலிகளாகும்).(15) கோபத்தால் நிறைந்த அவர்கள், இரண்டு மலைகளின் மீது மழையைப் பொழியும் மேகத்திரள்களைப் போலக் கர்ணன் மற்றும் துரியோதனன் மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்து, அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(16) இவ்வாறு அவர்கள் பின்தொடர்ந்து சென்றபோது, கர்ணன் அவர்களது விற்களையும், கணைகளையும் ஒரே கணையால் தரையில் வீழ்த்தினான்.(17) அவர்களில் சிலர் விற்களற்றவர்களாகவும், சிலர் கையில் வில்லுடனும் விரைந்தனர். சிலர் தங்கள் கணைகளை ஏவும் தருவாயிலும், சிலர் ஈட்டிகள் மற்றும் கதாயுதங்களைத் தரித்துக் கொண்டும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(18)

பெருங்கரநளினத்தைக் கொண்டவனும், தாக்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணன், அவர்கள் அனைவரையும் பீடித்தான். அவன், மன்னர்கள் பலரையும், தங்கள் சாரதிகளை இழக்கச் செய்தான். இவ்வாறே அந்தப் பூமியின் தலைவர்களை அவன் வென்றான்.(19) பிறகு அவர்கள், தங்கள் குதிரைகளின் கடிவாளங்களைத் தாங்களே எடுத்துக் கொண்டு, “ஓடு, ஓடு” என்று சொல்லி, உற்சாகமற்ற இதயங்களுடன் போரில் இருந்து திரும்பினார்கள்.(20) கர்ணனால் பாதுகாக்கப்பட்ட துரியோதனனும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} அந்தக் கன்னிகையை {பானுமதியைக்} கொண்டு வந்தான்” என்றார் {நாரதர்}.(21)

ஜராசந்தனின் நட்பு! – சாந்திபர்வம் பகுதி – 05-கர்ணனை எதிர்த்த ஜராசந்தன்; ஜராசந்தனைப் பிளக்க ஆயத்தமான கர்ணன்; கர்ணனின் தோழமையை வேண்டி அவனுக்கு மாலினி என்ற நகரத்தைக் கொடுத்த ஜராசந்தன்; கர்ணனின் மரணத்துக்கான காரணங்கள்…

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “மகதர்களின் ஆட்சியாளனான மன்னன் ஜராசந்தன், கர்ணனின் வலிமை குறித்த புகழைக் கேட்டு அவனோடு தனிப்போரில் ஈடுபட அவனை அறைகூவி அழைத்தான்.(1) தெய்வீக ஆயுதங்களை அறிந்தவர்களான அவர்கள் இருவருக்கிடையில் ஒரு கடும்போர் நடந்தது. அதில் அவர்கள் பல்வேறு வகை ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கினர்.(2) இறுதியாக அவர்களது கணைகள் தீர்ந்து, விற்களும், வாள்களும் உடைந்து, அவர்கள் இருவரும் தேரற்றவர்கள் ஆன பிறகு, வலிமைமிக்கவர்களான அவர்கள் வெறுங்கரங்களால் போரிடத் தொடங்கினர். தன் எதிராளியுடன் வெறுங்கரங்களால் தனிப்போரில் {மற்போரில்} ஈடுபட்ட கர்ணன், ஜரையால் ஒருங்கிணைக்கப்பட்ட அவனது {ஜராசந்தனின்} உடலை இரண்டாகப் பிளக்கஆயத்தமானான்[1].(4)அப்போது அந்த (மகத) மன்னன் {ஜராசந்தன்}, பெரும் வலியை உணர்ந்து, பகைமைக்கான விருப்பம் அனைத்தையும் கைவிட்டு, கர்ணனிடம், “நான் நிறைவடைந்தேன்” என்று சொன்னான்.(5) பிறகு நட்பின் நிமித்தம் அவன் {ஜராசந்தன்} மாலினி என்ற நகரத்தை கர்ணனுக்கு அளித்தான். அதற்கு முன்புவரை, எதிரிகள் அனைவரையும் அடக்குபவனான அந்த மனிதர்களில் புலி (கர்ணன்) அங்கத்திற்கு (அங்க நாட்டிற்கு) மட்டுமே மன்னனாக இருந்தான். ஆனால் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பகைவரின் படையைக் கலங்கடிப்பவனா அவன் {கர்ணன்}, நீ அறிந்திருப்பதைப் போலவே, துரியோதனனின் விருப்பத்திற்கு ஏற்றபடி, சம்பையிலிருந்தும்[2] ஆளத் தொடங்கினான்.(7)இவ்வாறு கர்ணன் தன் கரங்களின் ஆற்றலால் பூமியில் புகழ்பெற்றவனாகத் திகழ்ந்தான். தேவர்களின் தலைவன் {இந்திரன்}, உன் நன்மைக்காக அவனது (இயற்கை) கவசத்தையும், காது குண்டலங்களையும் கேட்ட போது,(8) தெய்வீக மாயையால் திகைப்படைந்த அவன், தன் மதிப்புமிக்க உடைமைகளான அவற்றை {இந்திரனிடம்} கொடுத்துவிட்டான்.(9) காதுகுண்டலங்களை இழந்தவனும், இயற்கைக் கவசத்தை இழந்தவனுமான  அவன் {கர்ணன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(10)

பிராமணனின் சாபம், சிறப்புமிக்க ராமரின் சாபம், குந்திக்கு அளித்திருந்த வரம், இந்திரனால் அவனிடம் எற்படுத்தப்பட்ட மாயை,(11) ரதர்கள் மற்றும் அதிரதர்களைக் கணக்கெடுக்கும்போது, பீஷ்மரால் அரைத் தேர்வீரன் என்று சொல்லப்பட்டதால் உண்டான மனத்தளர்ச்சி, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} கொள்கை மூலமாகச் சல்லியனால் (சல்லியனின் கூரிய பேச்சுகளால்) தன் சக்திக்கு உண்டான அழிவு,(12) இறுதியாக, ருத்திரன், இந்திரன், யமன், வருணன், குபேரன், துரோணர், சிறப்புமிக்கக் கிருபர் ஆகியோரிடம் அர்ஜுனன் அடைந்திருந்த தெய்வீக ஆயுதங்கள் ஆகியவற்றாலேயே(13) சூரியப்பிரகாசம் கொண்ட அந்த விகர்த்தனன் மகனை {கர்ணனை} அந்தக் காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} கொல்ல முடிந்தது.(14) இவ்வாறு உன் அண்ணன் {கர்ணன்}, பலரால் சபிக்கவும் வஞ்சிக்கவும் பட்டான். எனினும், அந்த மனிதர்களில் புலி {கர்ணன்} போரில் வீழ்ந்துவிட்டதால், இனியும் நீ அவனுக்காக வருந்தலாகாது” என்றார் {நாரதர்}”.(15)

பெண்களைச் சபித்த யுதிஷ்டிரன்! – சாந்திபர்வம் பகுதி – 06-யுதிஷ்டிரின் சோகத்தைக் கண்டு அவனைத் தேற்றிய குந்தி; குந்தியின் பிழையால் உலகத்தின் பெண்கள் அனைவரையும் சபித்த யுதிஷ்டிரன்; உறவினர்களின் மரணத்தை எண்ணி மனத்தளர்ச்சியடைந்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தெய்வீக முனிவரான நாரதர் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தார். அரசமுனியான யுதிஷ்டிரன், துயரால் நிறைந்து, தியானத்தில் மூழ்கினான்.(1) உற்சாகமற்று, கவலையில் மூழ்கி, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்த(2) அவ்வீரனை {யுதிஷ்டிரனைக்} கண்ட குந்தி, தானே துயரில் மூழ்கியவளாக, கவலையில் கிட்டத்தட்ட தன் உணர்வுகளை இழந்தவளாக, அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தவையும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையுமான இந்த இனிய வார்த்தைகளைக் கொண்டு அவனிடம் பேசினாள்:(3) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, நீ இத்தகு கவலையில் மூழ்குவது உனக்குத் தகாது. ஓ! பெரும் ஞானியே, இந்த உன் கவலையைக் கொன்று, நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(4) கர்ணனை, உன்னுடனான சகோதரத்துவத்தை ஏற்கும்படி செய்யக் கடந்த காலங்களில் நான் முயற்சி செய்தேன். ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவனே, தேவன் சூரியனும் அதையே செய்தார்.(5)

அந்தத் தேவன் {சூரியன்}, நலன் விரும்பும் ஒரு நண்பன், ஒருவனுக்கான நன்மையை விரும்பி சொல்லக்கூடியவை அனைத்தையும் கர்ணனிடம் கனவிலும், மீண்டும் ஒரு முறை என் முன்னிலையிலும் சொன்னார்.(6) சூரியனாலோ, என்னாலோ, துன்புறுத்தியோ {பாசத்தாலோ}, காரணங்களாலோ {உண்மைகளாலோ}, அவனைத் தணிப்பதிலோ, உன்னோடு அவனை ஒன்றிணைக்கச் செய்வதிலோ வெற்றி பெற முடியவில்லை[1].(7) அவன், காலத்தின் ஆளுகைக்கு உட்பட்டு, உன்னுடனான பகைமையை வெளிக்காட்டுவதில் உறுதியடைந்தான். உங்கள் அனைவருக்கும் தீங்கிழைப்பதிலேயே அவன் முனைந்து கொண்டிருந்ததால், நான் என் முயற்சியைக் கைவிட்டேன்” என்றாள்.(8)இவ்வாறு தன் தாயால் சொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், கண்ணீர் நிறைந்த கண்களுடனும், துயரால் கலக்கமடைந்த இதயத்துடனும், இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(9) “உன் ஆலோசனைகளை நீ மறைத்ததன் விளைவால், இந்தப் பெருந்துன்பம் என்னை அடைந்தது” {என்று சொன்னான்}. பெருஞ்சக்தியைக் கொண்டவனும் நீதிமானுமான அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, “இதுமுதல் எந்தப் பெண்ணும் இரகசியம் காப்பதில் வெல்லமாட்டாள்” என்று சொல்லி உலகத்தின் பெண்கள் அனைவரையும் சபித்தான்.(10) பிறகு அந்த மன்னன், தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை நினைவுகூர்ந்து துயராலும், கவலையாலும் நிறைந்தான்.(11) கவலையால் பீடிக்கப்பட்டவனும், புகையால் மறைக்கப்பட்ட நெருப்புக்கு ஒப்பானவனுமான அந்த நுண்ணறிவு கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்} இவ்வாறு மனத்தளர்ச்சியை அடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(12)

காட்டுக்குச் செல்லப்போகிறேன்! – சாந்திபர்வம் பகுதி – 07-உறவினர்களின் அழிவை எண்ணி மனம்வருந்திய யுதிஷ்டிரன்; தந்தையும், தாயும் என்ன நினைப்பில் துன்பப்பட்டுப் பிள்ளைகளை வளர்க்கின்றனர் என்பதைச் சொல்வது; அப்படிப்பட்ட பிள்ளைகளைக் கொன்றதால் அவர்களின் பெற்றோர் கைவிடப்பட்டு அவல நிலையை அடைந்ததைச் சொல்வது; இந்தப் பாங்களுக்குத் தானே காரணமென்பதால் காட்டுக்குச் செல்லப்போவதாகச் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அற ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன் கலங்கிய இதயத்துடன், சோகத்தில் எரிந்து, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனுக்காகத் துயருறத் தொடங்கினான்.(1) மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்ட அவன், அர்ஜுனனிடம், “ஓ! அர்ஜுனா, நாம் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் நகரங்களில் பிச்சையெடுத்து வாழ்ந்திருந்தாலும், நம் உறவினர்களை இழந்த இந்தப் பரிதாப நிலையை அடைந்திருக்கமாட்டோம்.(2,3) நம் எதிரிகளான குருக்கள் செழிப்பையீட்டியிருக்கும் அதே வேளையில் நாம் நம் வாழ்வின் பொருட்கள் அனைத்தையும் இழந்திருக்கிறோம். {நம்மை நாமே கொன்று} தற்கொலை செய்து கொண்ட குற்றம் நமதாயிருக்கும்போது அறத்தின் எக்கனிகள் நமதாயிருக்கக்கூடும்[1]?(4) இந்தப் பேரிடரில் நாம் மூழ்கியிருப்பதால், க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு ஐயோ, வலிமை மற்றும் வீரத்திற்கு ஐயோ.(5)மன்னிக்கும் தன்மை, தற்கட்டுப்பாடு, தூய்மை, காட்டில் வாழும் துறவியரால் நோற்கப்படும் துறவு, பணிவு, தீங்கிழையாமை, அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மைநிறைந்த பேச்சு ஆகியனவே அருளப்பட்டவையாகும் {அறங்களாகும்}.(6) எனினும் நாம், செருக்காலும், ஆணவத்தாலும் நிறைந்து, பேராசை மற்றும் மடமையின் மூலமும், அரசுரிமையின் இனிமைகளை அனுபவிக்கும் விருப்பத்தினாலும் இந்த அவலநிலையில் விழுந்துவிட்டும்.(7) உலகின் அரசுரிமையை அடைய விரும்பிய நம் உறவினர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டதை நாம் கண்டது, மூவுலகங்களின் அரசுரிமையைக் கொடுத்தாலும் எவனாலும் நம்மை மகிழ்விக்க முடியாது என்ற அளவுக்குத் துயரமானதாகும்.(8) ஐயோ, பூமியின் நிமித்தமாக, நம்மால் கொல்லத்தகாத பூமியின் தலைவர்களைக் கொன்று, நண்பர்களை இழந்து, வாழ்வின் நோக்கத்தை இழந்து இருப்பின் சுமையை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.(9) இறைச்சித்துண்டிற்காகச் சண்டையிடும் நாய்க்கூட்டத்துக்கு நேர்வது போன்று நம்மை இந்தப் பேரழிவு மூழ்கடித்தது. அந்த இறைச்சித் துண்டு இனியும் நமது விருப்பத்திற்குரியதல்ல. மறுபுறம், அதை வீசியெறிந்துவிடலாம்.(10)

மொத்த உலகத்திற்காகவோ, தங்கமலைகளுக்காகவோ, இந்த உலகத்தில் உள்ள குதிரைகள் மற்றும் பசுக்கள் அனைத்தின் நிமித்தமாகவோ கூட இப்போது கொல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கக்கூடாது.(11) பொறாமையில் நிறைந்தவர்களும், உலகப் பொருட்கள் அனைத்திலும் பேராவல் கொண்டவர்களும், கோபம் மற்றும் இன்பத்திற்கு வசப்பட்டவர்களுமான அவர்கள் அனைவரும், மரணமெனும் நெடுஞ்சாலையில் நடந்து, யமலோகத்தை அடைந்துவிட்டனர்.(12) தவம், பிரம்மச்சரியம், உண்மை, துறவு ஆகியவற்றைப் பயிலும் தந்தைமார், அனைத்து வகையான செழிப்புடன் கூடிய மகன்களை அடைய விரும்புகின்றனர்.(13) அதேபோலவே, உண்ணாநோன்புகள், வேள்விகள், விரதங்கள், புனிதச் சடங்குகள், மங்கல காரியங்கள் ஆகியவற்றின் மூலம் தாய்மாரும் கருத்தரிக்கின்றனர். பிறகு அவர்கள் அந்தக் கருவைப் பத்து மாதங்கள் சுமக்கின்றனர்.(14) கனியின் எதிர்பார்பார்ப்பில் பேரிடரில் தங்கள் காலத்தைக் கடத்தும் அவர்கள், தங்களுக்குள், “இந்தக் கருவை பாதுகாப்பாக ஈன்றெடுப்போமா? பிறப்புக்குப் பிறகு இவை வாழுமா? வலிமையில் வளர்ந்து இவர்கள் பூமியில் மரியாதைக்குரியவர்களாக இருப்பார்களா? இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் இவர்களால் நமக்கு இன்பத்தை அளிக்க முடியுமா?” என்று கேட்டுக் கொள்கின்றனர்.(15)

{அப்படிப்பட்ட அந்தப் பெற்றோர்}, ஐயோ, வயதால் இளைமை நிரம்பியவர்களும், காது குண்டலங்களுடன் பிரகாசமாக இருந்தவர்களுமான தங்கள் மகன்கள் கொல்லப்பட்டு, தங்கள் எதிர்பார்ப்புகள் கனியற்றுப் போன அவர்கள் {இப்போது} கைவிடப்பட்ட நிலையை அடைந்திருக்கின்றனர்.(16) இவ்வுலகத்தில் இன்பத்தை அனுபவிக்காமல், தங்கள் தந்தைமாருக்கும், தேவர்களுக்கும் தாங்கள் பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் அவர்கள் {அந்தப் பிள்ளைகள்} யமலோகம் சென்றுவிட்டனர்.(17) ஐயோ, ஓ! தாயே, அந்த மன்னர்களின் வலிமை மற்றும் செல்வத்தின் கனிகளை அறுவடை செய்ய அவர்களின் பெற்றோர் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்[2].(18) அவர்கள் எப்போதும் பொறாமை நிறைந்தவர்களாகவும், உலகப் பொருட்களில் பேராவல் கொண்டவர்களாகவும், கோபம் மற்றும் இன்பத்தின் வசப்பட்டவர்களாகவும் இருந்தனர். இதன் காரணமாக அவர்களால் வெற்றியின் கனிகளை எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும் அனுபவிக்க முடியாமல் போனது.(19) (இந்தப் போரில்) பாஞ்சாலர்கள் மற்றும் குருக்களில் வீழ்ந்து தொலைந்தவர்கள், அல்லது கொல்லப்பட்டவர்கள் அனைவரும், அவர்களது அந்தச் செயலால் அருள் உலகங்களை அடைந்திருக்கூடும் என்று நான் நினைக்கிறேன்[3].(20)உலகத்தின் அழிவுக்குக் காரணமாக நாம் கருதப்படுகிறோம். எனினும், உண்மையில் இந்தக் குற்றம் திருதராஷ்டிரரின் மகன்களின் மீதே சுமத்தப்பட வேண்டும்.(21) துரியோதனன் எப்போதும் தன் இதயத்தை வஞ்சனையிலேயே நிலைக்கச் செய்திருந்தான். எப்போதும் கெடுநோக்கை வளர்த்த அவன் {துரியோதனன்}, வஞ்சனைக்கே அடிமையாக இருந்தான். நாம் அவனுக்கு ஒருபோதும் தீங்கிழைக்காமல் இருந்த போதும், அவன் நம்மிடம் பொய் நடத்தையுடனே நடந்து கொண்டான்.(22) நாமும் நமது நோக்கை அடையவில்லை, அவர்களும் அவர்களுடைய நோக்கை அடையவில்லை. நாமும் அவர்களை வெல்லவில்லை, அவர்களும் நம்மை வெல்லவில்லை. தார்தராஷ்டிரர்கள் இந்தப் பூமியை அனுபவிக்கவில்லை, பெண்களையும், இசையையும் அனுபவிக்கவில்லை.(23) அவர்கள், தங்கள் மந்திரிகள், நண்பர்கள் மற்றும் சாத்திரங்களைக் கற்றோரின் ஆலோசனைகளைக் கேட்கவில்லை. உண்மையில், அவர்களால், தங்கள் விலைமதிப்புமிக்க ரத்தினங்களையும், நன்கு நிறைக்கப்பட்ட கருவூலத்தையும், பரந்த ஆட்சிப் பகுதிகளையும் அனுபவிக்க முடியவில்லை.(24) தங்கள் வெறுப்பால் நம்மை எரித்த அவர்களால் இன்பத்தையோ, அமைதியையோ அடையமுடியவில்லை. நம் செல்வாக்குப் பெருகுவதைக் கண்ட துரியோதனன் நிறமற்றவனாக, வாடிப்போனவனாக, மெலிவடைந்தான்.(25)

பாசம் நிறைந்த ஒரு தந்தையாக, திருதராஷ்டிரர் தம் மகனின் தீய கொள்கைகளைப் பொறுத்து வந்தார்.(26) விதுரர் மற்றும் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} ஆகியோரை அலட்சியம் செய்து, ஆசைகளாலேயே ஆளப்பட்டவனும், பேராசை கொண்டவனுமான தமது தீய மகனைத் {துரியோதனனைத்} தடுக்காமல் புறக்கணித்ததன் விளைவாக மன்னரும் என்னைப் போலவே அழிவைச் சந்தித்தார் என்பதில் ஐயமில்லை.(27) சுயோதனன், தன் உடன்பிறந்த தம்பிகள் கொல்லப்படக் காரணமாக அமைந்தும், எப்போதும் பாவம் நிறைந்த இதயத்துடனேயே இருந்து, நம் மீது கொண்ட வெறுப்பால் எரிந்து, இந்த முதிர்ந்த தம்பதியரைத் துயரில் எரியவிட்டுவிட்டான். உயர் பிறப்புக் கொண்ட வேறு எந்த உறவினன், போரின் மீது கொண்ட விருப்பத்தால், கிருஷ்ணனின் முன்னிலையில், அத்தகு வார்த்தைகளை உறவினர்களிடம் பேச முடியும்?(29) சுற்றிலும் இருக்கும் அனைத்தையும் தம் சொந்த சக்தியால் எரிக்கும் சூரியர்களைப் போல, நாமும், துரியோதனனின் குற்றத்தின் மூலம் அழிவின்மையை இழந்துவிட்டோம்[4].(30)தீய ஆன்மா கொண்டவனும், பொல்லாதவனும், பகைமையின் வடிவமுமான அவனே நமது தீய நட்சத்திரமானான். ஐயோ, அந்தத் துரியோதனனின் செயல்களால் மட்டுமே நமது குலம் நிர்மூலமாக்கப்பட்டது.(31) கொல்லத்தகாதவர்களைக் கொன்று நாம் உலகத்தின் நிந்தனையை அடைந்தோம்.(32) மன்னர் திருதராஷ்டிரர், தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவனும், குலத்தை அழிப்பவனுமான அந்த இளவரசனை {துரியோதனனை} அரசுரிமையில் நிறுவியதால், இன்று இந்தத் துயரத்தை அடைந்திருக்கிறார்.(33) வீரர்களான நம் எதிரிகள் கொல்லப்பட்டனர். நாம் பாவம் இழைத்துவிட்டோம். அவனது உடைமைகளும், நாடும் தொலைந்து போயின. அவர்களைக் கொன்று நமது கோபம் தணிவடைந்திருக்கிறது. ஆனால் துயரமான என்னைத் திகைப்படையச் செய்கிறது.(34) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, இழைக்கப்பட்ட பாவமானது, அனைத்தையும் துறந்து தீர்த்தங்களுக்குப் பயணிப்பது, சாத்திரங்களைத் தொடர்ந்து தியானிப்பது போன்ற மங்கலச் செயல்களால் நிவர்த்திச் செய்யப்படுகிறது. இவை யாவற்றிலும், துறவை பயில்பவன், புதிய பாவங்களை இழைப்பதில்லை என்று நம்பப்படுகிறது.(35)

நிலைத்த ஆன்மாவுடன் துறவை பயில்பவன், பிறப்பு மற்றும் இறப்பிலிருந்து தப்பித்து, சரியான சாலையை அடைந்து, பிரம்மத்தை அடைகிறான் என்று சுருதிகள் அறிவிக்கின்றன.(36) எனவே, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, ஓ! எதிரிகளை எரிப்பவனே, நான் உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, எண்ணங்களை வெளியிடாப் பேசா நோன்பைப் பின்பற்றி, அறிவு சுட்டிக் காட்டும் பாதையில் நடக்கப் போகிறேன்[5].(37) ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, சுருதிகள் இதையே சொல்கின்றன. இப்பூமியில் பற்றுக் கொண்ட ஒருவன், எந்த வகை அறத் தகுதியையும் {புண்ணியத்தையும்} ஒரு போதும் அடைவதில்லை என்பதை நானும் கண்டுவருகிறேன்.(38) இந்தப் பூமியின் பொருட்களை அடையும் என் விருப்பத்தின் மூலம், நான் பாவத்தை இழைத்திருக்கிறேன். எது, பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கொண்டு வருகிறது எனச் சுருதிகள் அறிவிக்கின்றனவோ, அந்தப் பாவத்தையே, இந்தப் பூமியின் பொருட்கள் மீது கொண்ட விருப்பத்தால் நானும் இழைத்திருக்கிறேன். எனவே, நான் என் மொத்த நாட்டையும், இந்தப் பூமியின் பொருட்களையும் கைவிட்டு, இவ்வுலகப் பற்றில் இருந்து தப்பி, துன்பத்தில் இருந்து விடுபட்டு, எப்பொருளிலும் விருப்பமில்லாதவனாகக் காட்டுக்குச் செல்லப் போகிறேன்.(40) அமைதி மீட்கப்பட்டதும், முட்கள் அனைத்தும் களையப்பட்டதுமான இந்தப் பூமியை நீ ஆள்வாயாக[6]. ஓ! குருகுலத்தில் சிறந்தவனே {அர்ஜுனா}, எனக்கு நாட்டிற்கான, அல்லது இன்பத்திற்கான எந்தத் தேவையும் இல்லை” என்றான் {யுதிஷ்டிரன்}.(41) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இந்த வார்த்தைகளைச் சொல்லி நிறுத்திக் கொண்டான். பிறகு அவனது தம்பியான அர்ஜுனன் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் பேசினான்” {என்றார் வைசம்பாயனர்}.(42)

பெருஞ்சீற்றமடைந்த அர்ஜுனன்! – சாந்திபர்வம் பகுதி – 08-துறவறத்தை ஏற்கப்போவதாகச் சொன்ன யுதிஷ்டிரனை நிந்தித்த அர்ஜுனன்; செல்வத்தின் பெருமை, தேவர்களின் நடைமுறை, மன்னர்களின் கடமை ஆகியவற்றைச் சொன்னது; குதிரைவேள்வி செய்யுமாறு யுதிஷ்டிரனை வற்புறுத்தியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கூரிய பேச்சு, ஆற்றல் மற்றும் சக்தியைக் கொண்ட அர்ஜுனன், அவமதிப்பை மன்னிக்க விரும்பாத ஒரு மனிதனைப் போல, தன் கடைவாயை நாவால் நனைத்துக் கொண்டு, பெருஞ்சீற்றத்தை வெளிக்காட்டியபடியே, முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளைப் புன்னகையுடன் சொன்னான்:(1,2)

{அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! இஃது எவ்வளவு வலிநிறைந்ததாக இருக்கிறது? எவ்வளவு துயரைத் தருவதாக இருக்கிறது? மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனையைச் செய்துவிட்டு, இந்தப் பெருஞ்செழிப்பைக் கைவிட நினைப்பதால், உமது இதயத்தில் உள்ள இந்தப் பெருங்கலக்கத்தைக் கண்டு நான் வருந்துகிறேன்.(3) உமது எதிரிகளைக் கொன்று, உமது {க்ஷத்திரிய} வகைக்கான கடமையை நோற்றதன் மூலம், பூமியின் அரசுரிமையை அடைந்த பிறகு, உமது இதயத்தின் நிலையின்மையால், நீர் அடைந்த அனைத்தையும் ஏன் நீர் கைவிட வேண்டும்?(4) ஓர் அலியோ, எதிலும் தாமதம் செய்பவனோ இந்தப் பூமியில் அரசுரிமையை எங்கேயாவது, எப்போதாவது அடைந்திருக்கிறானா? பிறகு, சினத்தால் உணர்வை இழந்த நீர், ஏன் பூமியின் மன்னர்கள் அனைவரையும் கொன்றீர்?(5)

பிச்சையெடுத்து வாழும் ஒருவனால் எப்போதும் தன் எந்தச் செயலாலும், பூமியில் நல்ல பொருட்களை அனுபவிக்க முடியாது. செழிப்பை இழந்து, எந்த வளமும் அற்றவனான அவனால் ஒருபோதும் பூமியில் புகழை வெல்லவோ, மகன்கள் மற்றும் விலங்குகளை அடையவோ முடியாது.(6) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பெருகும் இந்த நாட்டைக் கைவிட்டு, நீர் துறவியின் அற்ப வாழ்வை வாழ்ந்தால், இந்த உலகம் உம்மைப் பற்றி என்ன சொல்லும்?(7) பூமியின் நல்ல பொருட்கள் அனைத்தையும் கைவிட்டு, செழிப்பை இழந்து, வளமற்ற இழிந்த மனிதனைப் போலப் பிச்சையெடுத்து வாழும் வாழ்வை நோற்கப் போவதாக நீர் ஏன் சொல்கிறீர்?(8) நீர் மன்னர்களின் இந்தக் குலத்தில் பிறந்திருக்கிறீர். படையெடுத்து மொத்த பூமியையும் வென்ற பிறகு, அறம், பொருள் சம்பந்தமான அனைத்தையும் கைவிட்டுக் காட்டில் வாழ விரும்புவது உமது மடமையே.(9) (நீர் காட்டுக்கு ஓய்ந்து சென்றால்), நீர் இல்லாத போது, வஞ்சகர்கள் வேள்விகளை அழிப்பார்கள். அந்தப் பாவம் நிச்சயம் உம்மைக் களங்கப்படுத்தும்.(20)

மன்னன் நகுஷன் {நஹுஷன்} ஏழ்மை நிலையில் தீய செயல்கள் பலவற்றைச் செய்துவிட்டு, அந்நிலை நிந்திக்கத்தக்கது என்று கதறி, ஏழ்மையானது தனித்து ஒதுங்கி துறவியாக வாழ்பவர்களுக்கானதே என்று சொன்னான்[1].(11) நாளைக்கென்று எந்த ஏற்பாட்டையும் செய்து கொள்ளாதது, முனிவர்களுக்குத் தகுந்த நடைமுறையாகும். இதை நீர் நன்கறிவீர். எனினும், அரச அறம் என்று சொல்லப்படுவது முற்றிலும் செல்வத்தை நம்பியே இருக்கிறது.(12) மற்றொருவனிடம் இருந்து செல்வத்தைத் திருடும் ஒருவன், அவனிடம் இருந்து அறத்தையும் சேர்த்தே திருடுகிறான்[2]. எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நம்மைக் கொள்ளையிட்ட ஒரு செயலை நம்மில் எவரால் மன்னிக்க முடியும்?(13) ஏழையானவன் அருகில் இருந்தாலும், பொய்யாகக் குற்றஞ்சாட்டப்படுகிறான்[3]ஏழ்மை என்பது பாவம் நிறைந்த ஒரு நிலையாகும். எனவே, ஏழ்மையைப் புகழ்வது உமக்குத் தகாது.(14) ஓ! மன்னா, {அறம் வழுவி} வீழ்ந்து விட்ட ஒரு மனிதன், ஏழையைப் போலவே வருந்துகிறான். வீழ்ந்துவிட்ட ஒரு மனிதனுக்கும், ஓர் ஏழைக்கும் இடையில் என்னால் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.(15)தகுதிவாய்ந்த அனைத்து வகைச் செயல்களும், மலையில் இருந்து பாய்வது போல, பெருஞ்செல்வத்தில் இருந்தே உண்டாகின்றன.(16) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, செல்வத்திலிருந்தே அனைத்து அறச்செயல்களும், அனைத்து இன்பங்களும், சொர்க்கமும் எழுகின்றன. செல்வம் இல்லாமல் ஒரு மனிதனால், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ளும் வழிமுறைகளையே கூடக் கண்டறிய முடியாது.(17) கோடை காலத்தில் நீர் வற்றிய ஆழமற்ற ஓடைகளைப் போல, சிறுமதி கொண்டோன் ஒருவன், தன் செயல்களால், தனது செல்வத்தை இழக்கும் நிலையை அடைகிறான்.(18)

செல்வம் கொண்டவனே நண்பர்களைக் கொண்டவனாவான். செல்வம் கொண்டவன் உறவினர்களையும் கொண்டவனாவான். செல்வம் கொண்டவனே உண்மையான மனிதனாக இவ்வுலகில் கருதப்படுகிறான். செல்வம் கொண்டவன் எவனோ, அவனே கல்விமானாகவும் கருதப்படுகிறான்.(19) செல்வமற்ற ஒருவன் எந்தக் குறிப்பிட்ட நோக்கத்தையாவது அடைய விரும்பினால், அவன் தோல்வியையே சந்திக்கிறான். யானைகள், காட்டு யானைகளைக் கைப்பற்றுவதைப் போல, செல்வமே, செல்வத்தைப் பெருக வைக்கவும் செய்கிறது.(20)

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} அறச்செயல்கள், இன்பங்கள், மகிழ்ச்சி, துணிவு, கோபம், கல்வி, கௌரவம் ஆகிய அனைத்தும் செல்வத்தில் இருந்தே உண்டாகின்றன.(21) செல்வத்தாலேயே ஒருவன் குடும்பக் கௌரவத்தையும் அடைகிறான். செல்வத்தாலேயே ஒருவனின் அறத்தகுதிகள் பெருகுகின்றன. ஓ! மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, செல்வமில்லாதவனுக்கு இவ்வுலகமோ, மறு உலகமோ கிடையாது.(22) மலையிலிருந்து ஊற்றெடுக்கும் ஆறுகளைப் போல, செல்வத்தில் இருந்தே அறச்செயல்கள் ஊற்றெடுப்பதால், செல்வமில்லாத மனிதன் அறச்செயல்களைச் செய்வதில் வெல்வதில்லை.(23) குதிரைகள், பசுக்கள், பணியாட்கள் மற்றும் விருந்தினர்கள் ஆகியவற்றில் (ஆகியவற்றைக் கொள்வதில்) மெலிந்தவனே உண்மையில் மெலிந்தவனாவான், அங்கங்களால் மட்டுமே மெலிந்தவன் அவ்வாறாகமாட்டான்.(24)

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தேவர்கள் மற்றும் தானவர்களின் நடைமுறைகளைக் கண்டு உண்மையைத் தீர்மானித்துக் கொள்வீராக. ஓ! மன்னா, தேவர்கள், தங்கள் உறவினர்களை (அசுரர்களைக்) கொல்வதைத் தவிர வேறு எதையாவது எப்போதும் விரும்புகிறார்களா?(25) அடுத்தவரின் செல்வத்தை அடைவது அறமாகக் கருதப்படவில்லையெனில், ஓ! ஏகாதிபதி, மன்னர்களால் எவ்வாறு இந்தப் பூமியில் அறம்பயில முடியும்? கல்விமான்கள், வேதங்களில் இருந்து {பின்வரும்} இந்தத் தீர்மானங்களையே விதித்திருக்கின்றனர்.(26) மன்னர்கள், தினமும் மூன்று வேதங்களையும் உரைத்து, செல்வத்தை அடைய முனைந்து, அவ்வாறு அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டு கவனமாக வேள்விகளைச் செய்து வாழ வேண்டும் என்று அக்கல்விமான்கள் விதித்திருக்கின்றனர்.(27) தேவர்கள், உறவினர்களுடன் {அசுரர்களுடன்} கொண்ட பகையின் மூலமே சொர்க்கத்தில் தங்கள் பாதங்களைப் பதித்தனர். தேவர்களே தங்கள் செழிப்பை உறவினர்களுடன் {தானவர்களுடன்} கொண்ட பகையால் அடைந்தார்கள் என்றால், அத்தகு பகையில் என்ன தவறு இருக்க முடியும்?(28) தேவர்கள் இவ்வாறு செயல்படுவதையே நீர் காணலாம். வேதங்களின் அழிவில்லா விதிகளும் அஃதை அங்கீகரிக்கின்றன. கற்பது, போதிப்பது, வேள்வி செய்வது, பிறரின் வேள்விகளில் உதவி செய்வது ஆகிய இவையே நமது முக்கியக் கடமைகளாகும். பிறரிடம் இருந்து மன்னர்கள் அடையும் செல்வம்தான், அவர்களது செழிப்பின் ஆதாரங்களாகின்றன. பிறருக்கு எந்தத் தீங்கையும் செய்யாமல் ஈட்டப்பட்ட செல்வத்தை நாம் ஒருபோதும் கண்டதில்லை.(29,30)

இவ்வாறே மன்னர்கள் இந்தப் பூமியைக் கைப்பற்றுகின்றனர். கைப்பற்றிய பிறகு, மகன்கள் தங்கள் தந்தைமாரின் செல்வத்தை {தங்கள் செல்வமாகவே} சொல்வதைப் போல, அவர்கள் அதைத் தங்களுக்குச் சொந்தமானது என்று சொல்கின்றனர். சொர்க்கத்திற்குச் சென்றிருக்கும் அரச முனிகள், இதையே மன்னர்களின் கடமையாக அறிவித்திருக்கின்றனர்.(31) பெருகும் கடலின் அனைத்துத் திசைகளிலும் நீர் பாய்வதைப் போல, செல்வமானது, மன்னர்களின் கருவூலங்களில் இருந்து அனைத்துத் திசைகளிலும் பாய்கிறது.(32) இந்தப் பூமியானவள், முன்பு மன்னன் திலீபனுக்கும், நகுஷனுக்கும், அம்பரீஷனுக்கும், மாந்தாதாவுக்கும் சொந்தமானவளாக இருந்தாள். இப்போது அவள் உம்முடையவளாகியிருக்கிறாள்.(33)

எனவே, அனைத்து வகைக் கொடைகளை அபரிமிதமாகக் கொண்டதும், பூமியின் உற்பத்தியில் ஒரு பெருங்குவியலைத் தேவையாகக் கொண்டதுமான ஒரு பெரும் வேள்வி உமக்காகக் காத்திருக்கிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் அந்த வேள்வியைச் செய்யவில்லையெனில், இந்த நாட்டின் பாவங்கள் அனைத்தும் உமதேயாகும்.(34) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய ஒரு குதிரை வேள்வியை {அஸ்வமேத யாகத்தைச்} செய்த ஒரு மன்னனின் குடிமக்கள் அனைவரும், அவ்வேள்வியின் முடிவில் தூய்மையடைந்தவர்களாக, புனிதமடைந்தவர்களாக ஆகிறார்கள்.(35) அண்ட வடிவிலான மகாதேவனே, அனைத்து வகை இறைச்சிகளும் ஆகுதிகளாகத் தேவைப்படும் {ஸர்வமேதம் என்றழைக்கப்படும்} ஒரு பெரும் வேள்வியில், அனைத்து உயிரினங்களையும், அதன் பிறகு தன்னையும் வேள்விக் காணிக்கையாக அஃதில் ஊற்றினான்.(36) இந்த மங்கலகரமான பாதையே அழிவில்லாததாகும். இதன் கனிகள் ஒருபோதும் அழிவடைவதில்லை. இந்தப் பெரும்பாதையே தாசரதம் {அழிவில்லாத பாதை} என்றழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, இதைக் கைவிட்டுவிட்டு, நீர் எந்தப் பாதையை அடையப் போகிறீர்?” என்று கேட்டான் {அர்ஜுனன்}.(37)

துறவின் நடைமுறை! – சாந்திபர்வம் பகுதி – 09-துறவில் தனக்கிருக்கும் உறுதியை வெளிக்காட்டிய யுதிஷ்டிரன்; துறவின் தன்மைகளையும், உலக இயல்புகளையும் எடுத்துரைத்தது…

யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! அர்ஜுனா, சிறிது நேரம் உன் கவனத்தைக் குவித்து, உன் மனத்தையும், கேட்கும் திறனையும் உனக்குள் இருக்கும் ஆன்மாவில் நிலைக்கச் செய்வாயாக. நீ என் வார்த்தைகளை அத்தகு மனநிலையில் கேட்டால், அவை உன் ஏற்பைப் பெறும்.(1) உலக இன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, நல்லோர் செல்லும் பாதையில் நான் செல்லப் போகிறேன். உனக்காக நான், நீ பரிந்துரைக்கும் பாதையில் செல்ல மாட்டேன்.(2) எந்த மங்கலப்பாதையில் ஒருவன் தனியாக நடக்க வேண்டும் என்று நீ கேட்டால், நான் உனக்கு அதைச் சொல்வேன். நீ என்னிடம் கேட்க விரும்பவில்லை எனினும், உன்னால் கேட்கப்படாதபோதும் நான் அஃதை உனக்குச் சொல்வேன்.(3) இன்பங்களையும், உலக மனிதர்களின் நடைமுறைகளையும் கைவிட்டு, கடுந்தவங்களைச் செய்து, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, காட்டில் வசிக்கும் விலங்குகளுடன் நான் திரியப் போகிறேன்.(4) முறையான நேரங்களில் நெருப்பில் காணிக்கைகளை {ஆகுதிகளை} ஊற்றி, காலையிலும், மாலையிலும் தூய்மைச் சடங்குகளைச் செய்து, தோல்களால் என்னை மறைத்துக் கொண்டு, என் தலையில் சடாமுடி தரித்துக் கொண்டு, குறைவாக உட்கொள்ளும் உணவுமுறையால் என்னை நானே மெலியச் செய்து கொள்ளப் போகிறேன்.(5)

குளிர், காற்று, வெப்பம், பசி, தாகம், களைப்பு ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள நோன்புகளால் நான் என் உடலை மெலியச் செய்யப் போகிறேன்.(6) காட்டில் வசித்து, இதயத்துக்கும், காதுக்கும் இனிமையாக இருக்கும் மகிழ்ச்சிகரமான பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகளை நான் தினமும் கேட்கப்போகிறேன்.(7) காட்டில் மலர்களால் கனக்கும் மரங்கள், செடிகொடிகள் மற்றும் அங்கே வளரும் பல்வேறு வகை அழகிய பொருட்களின் நறுமணத்தை நான் நுகரப் போகிறேன.(8) காட்டில் நான் சிறந்த பல ஆசிரமங்களையும் காணப் போகிறேன். எந்த ஓர் உயிரினத்திற்கும் சிறு தீங்கையும் இழைக்காமல் இருக்கப் போகிறேன் என்று சொல்லும்போது, கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிப்போரைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன?[1](9) ஓய்ந்த வாழ்வை நோற்று, சிந்தனைக்கு {தியானத்திற்கு} என்னை அர்ப்பணித்துக் கொண்டு, கனிந்த மற்றும் கனியாத கனிகளை உண்டு, காட்டுக் கனிகளையும், ஊற்றின் தண்ணீரையும் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கையளித்தும், நன்றியுடன் கூடிய பாடல்கள் பாடியும் அவர்களை நான் நிறைவு செய்வேன்.(10)காட்டு வாழ்வின் தவ விதிமுறைகளை இவ்வழிகளில் நோற்று, என் உடல் அழிவதற்காகப் பொறுமையாகக் காத்திருந்து என் நாட்களை நான் கடத்தப் போகிறேன்.(11) அல்லது, தனியாக வாழ்ந்து, எண்ணங்களை வெளியிடாமல் பேசா நோன்பிருந்து, என் தலையை முற்றாக மழித்துக் கொண்டு, ஒரே ஒரு மரத்திடம் மட்டுமே ஒவ்வொரு நாளும் இரந்து என் உணவை நான் அடையப் போகிறேன்[2].(12) என் உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக் கொண்டு, கைவிடப்பட்ட வீடுகளை உறைவிடமாகக் கொண்டோ, மரத்தடிகளில் கிடந்தோ, அன்புக்குரிய அல்லது வெறுப்புக்குரிய அனைத்துப் பொருட்களைக் கைவிட்ட நிலையில் நான் வாழப்போகிறேன்.(13) துன்பத்திலோ, இன்பத்திலோ ஈடுபடாமல், நிந்தனையையும், பாராட்டையும், நம்பிக்கையையும், பாசத்தையும் சமமாகக் கருதி, முரண்பட்ட இரட்டைகளைக் கடந்து, உலகப் பொருட்கள் அனைத்தையும் கைவிட்ட நிலையில் நான் வாழப்போகிறேன்.(14) எவரிடமும் உரையாடாமல், வெளிப்படையாக ஒரு குருட்டு, செவிட்டு மூடனின் வடிவத்தை ஏற்றுக் கொண்டு, என் ஆன்மாவிலேயே இன்புற்று, உள்ள நிறைவுடன் நான் வாழப் போகிறேன்.(15)அசையும் மற்றும் அசையாத நால்வகை உயிரினங்களுக்கும் சிறு தீங்கையும் செய்யாமல், தங்கள் கடமைகளில் மனநிறைவுடன் இருக்கும் அல்லது உணர்வுகளின் ஆணைகளைப் பின்பற்றும் உயிரினங்கள் அனைத்திடமும் சமமாக நடந்து கொள்ளப் போகிறேன்.(16) நான் எவரிடமும் ஏளனமோ, முகச் சுளிப்போ செய்ய மாட்டேன். என் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு, எப்போதும் மகிழ்வான முகத்துடன் நான் இருக்கப் போகிறேன்.(17) எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று நான் சந்திக்கும் யாரிடமும் கேட்காமல், நாட்டையோ, திசையையோ கருத்தில் கொள்ளாமல் நான் பயணித்துக் கொண்டே இருக்கப் போகிறேன்.(18) நான் எங்கே செல்லப்போகிறேன் என்பதைக் கருத்தில் கொள்ளாமலும், திரும்பிப் பாராமலும் நான் செல்லப் போகிறேன். ஆசை, கோபம் ஆகியவற்றைக் கைவிட்டு, என் பார்வையை உள்நோக்கிச் செலுத்தி, ஆன்மா மற்றும் உடலின் செருக்கைக் கைவிட்டுவிட்டு நான் செல்லப் போகிறேன்.(19) இயற்கை எப்போதும் முன்பே நடக்கிறது. எனவே, உணவும், நீரும் ஏதோ ஒரு வகையில் கிடைக்கும். அத்தகு வாழ்வுமுறையின் வழியில் நிற்கும் முரண்பட்ட இரட்டைகளைக் குறித்து நான் சிந்திக்கப் போவதில்லை.(20)

(நான் செல்லும்) முதல் வீட்டில் சிறு அளவு தூய உணவும் கிட்டவில்லையெனில், நான் வேறு வீடுகளுக்குச் சென்று அஃதை அடைவேன். அப்படி வலம் வந்தும் அது கிட்டவில்லையெனில், என் ஆவலை நிறைவு செய்ய அடுத்தடுத்து ஏழு வீடுகளுக்குச் செல்வேன்.(21) பரபரப்பான சாலைகளைத் தவிர்த்து, வீடுகளில் புகை அடங்கியதும், அடுப்பங்கரையில் நெருப்புத் தணிந்ததும், வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் உண்டு முடிந்ததும், பிச்சைக்காரர்களும், உறவினர்களும் திரிவது நின்றதும்,(22) பிச்சையெடுக்கும் கணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, இரண்டு, மூன்று, அல்லது அதிகபட்சம் ஐந்து வீடுகளில் நான் பிச்சை கேட்பேன். ஆசையின் பற்றுகளை அறுத்து நான் இவ்வுலகில் திரியப் போகிறேன்.(23) வெற்றி மற்றும் தோல்வியில் சமமான நிலையைத் தக்க வைத்துக் கொண்டு பெரும் தவத் தகுதியை நான் ஈட்டப் போகிறேன். உயிரில் ஆசை கொண்டவனைப் போலவோ, சாகப்போகிறவனைப் போலவோ நான் நடந்து கொள்ள மாட்டேன்.(24) உயிர் வாழும் விருப்பம், அல்லது மரணத்தில் வெறுப்பு ஆகிய எதையும் நான் வெளிக்காட்ட மாட்டேன். ஒருவன் என் ஒரு கரத்தை வெட்டினாலும், மற்றொருவன் என் மற்றொரு கரத்தை சந்தனக் குளம்பினால் பூசினாலும், அவர்களில் எவருக்கும் நான் நன்மையையோ, தீமையையோ விரும்பமாட்டேன்.(25)

ஒருவனது வாழ்வில் செய்யக்கூடிய செழிப்புக்கு உகந்த செயல்கள் அனைத்தையும் தள்ளி, கண்களைத் திறக்கவும், மூடவும் செய்யும் வேலைகளை மட்டுமே செய்து, உயிரைத் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கும் மட்டுமே உணவையும், நீரையும் நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்.(26) செயலில் ஒருபோதும் பற்றுக் கொள்ளாமல், எப்போதும் புலன்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, என் ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, அசுத்தங்கள் அனைத்தில் இருந்தும் என் ஆன்மாவை நான் தூய்மையடையச் செய்யப் போகிறேன்.(27) பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, கட்டுகள் அனைத்தையும் அறுத்து, காற்றைப் போல நான் சுதந்திரமாக வாழப் போகிறேன்.(28) பற்றில் இருந்து விடுபடும் எனக்கு, என்றும் நிலைத்திருக்கும் துறவே வாழ்வாக இருக்கப் போகிறது. ஆசையாலும், அறியாமையாலும் நான் பெரும்பாவங்களை இழைத்துவிட்டேன்.(29)

மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட வகையினர், மங்கல மற்றும் மங்கலமற்ற செயல்கள் ஆகிய இரண்டையும் இங்கே செய்து, காரணம் மற்றும் விளைவுகளின் அடிப்படையிலான உறவுகளாகத் தங்கள் மனைவியர், பிள்ளைகள், உறவினர்கள் ஆகியோர் அனைவரையும் கட்டிக் காத்து வருகின்றனர்[3].(30) அவர்களது வாழ்வின் காலம் முடிந்ததும், தங்கள் பலவீனமான உடல்களைக் கைவிட்டு, தங்கள் பாவம் நிறைந்த செயல்களின் விளைவுகளை அவர்கள் ஏற்கின்றனர். தன் செயல்களின் விளைவால் வந்த சுமையை அந்தச் செயலைச் செய்தவனே சுமக்கிறான்.(31) இவ்வாறே, செயல்களுடன் கூடிய உயிரினங்கள், தேர்ச்சக்கரத்தைப் போல, இந்த வாழ்வெனும் சக்கரத்தைத் தொடர்ச்சியாகச் சுழற்றி, இங்கே வந்து தங்கள் சக உயிரினங்களைச் சந்திக்கின்றன.(32)அழிவற்றதாகத் தெரிவதும், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிவற்றால் பீடிக்கப்படுவதுமான மாயை நிறைந்த இவ்வுலகம் சார்ந்த வாழ்வு முறையைக் கைவிடுபவன், நிச்சயம் மகிழ்ச்சியையே அடைகிறான்.(33) மேலும், தேவர்கள் சொர்க்கத்தில் இருந்தும், பெரும் முனிவர்கள் தங்கள் மதிப்பிற்குரிய நிலைகளிலிருந்தும் விழுவார்கள் எனில், காரணங்களின் (மற்றும் காரியங்களின்) உண்மைகளை அறிந்த எவன் சொர்க்கத்தின் செழிப்பை அடைய விரும்புவான்?(34) முக்கியத்துவமற்ற மன்னர்கள், ஆட்சித்திறனின் பல்வேறு வழிகள் சம்பந்தமான (ஒப்பந்தம், கொடை என்ற பெயர்களில் அறியப்படும்) பல்வேறு செயல்களைச் செய்து, ஏதாவது சதியின் மூலம் பெரும் மன்னர்களைக் கொல்கின்றனர்.(35) இச்சூழ்நிலைகளைச் சிந்தித்ததினாலேயே இந்த ஞான அமுதம் என்னிடம் வந்திருக்கிறது. இஃதை அடைந்த நான், நிலையானதும், அழிவற்றதும், மாற்றமில்லாததுமான ஓர் இடத்தை (எனக்காக) விரும்புகிறேன்.(36) இத்தகு ஞானத்திலேயே எப்போதும் (என்னை ஈடுபடுத்திக் கொண்டு), இவ்வழியிலேயே எப்போதும் செயல்பட்டு, வாழ்வெனும் இந்த அச்சமற்ற பாதையில் சென்று, பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் மற்றும் வலிக்கு ஆட்படும் இந்த உடலில் இருந்து விடுபடப் போகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(37)

ஓர் அலிக்குக் கீழ்ப்படிந்து ஆதரவற்றவர்களானோம்! – சாந்திபர்வம் பகுதி – 10-க்ஷத்திரியனுக்குத் துறவு தகாது என யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்துக் கண்டித்த பீமசேனன்; தன் வகைக்கான கடமைகளே ஒருவன் செய்யத்தக்கது என்று சொன்னது; துறவே வெற்றியைத் தரும் என்றால் மரங்களும், மலைகளும் சொர்க்கத்தை அடைந்திருக்க வேண்டும் என்று யுதிஷ்டிரனிடம் சொன்ன பீமசேனன்…

பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மூடனும், அறிவற்றவனுமான ஒருவன் மீண்டும் மீண்டும் குருட்டுப் பாடமாக வேதம் ஓதுவதால் உண்மையைக் காணாததைப் போலவே, உமது புரிதலும் இருக்கிறது.(1) ஓ! பாரதக் குலத்தின் காளையே, மன்னர்களின் கடமைகளை நிந்தித்துக் கொண்டு, சோம்பேறியின் வாழ்வை நீர் நோற்றால், இந்தத் தார்தராஷ்டிரர்களின் அழிவானது தேவையே இல்லாததாகும்.(2) மன்னிக்கும் இயல்பு, கருணை, இரக்கம், தீங்கிழையாமை ஆகியவை க்ஷத்திரியக் கடமைகளின் பாதையில் நடப்போர் எவரிடமும் காணப்படவில்லையா?(3) இதுவே உமது நோக்கம் என்பதை நாங்கள் அறிந்திருந்தால், நாங்கள் ஒருபோதும் ஆயுதமெடுத்திருக்க மாட்டோம்; ஓருயிரையும் கொன்றிருக்க மாட்டோம்.(4) இந்த உடல் அழியும்வரை நாங்கள் பிச்சைக்காரர்களாகவே வாழ்ந்திருப்போம். பூமியின் ஆட்சியாளர்களுக்கிடையிலான இந்தப் பயங்கரப் போரும் ஒருபோதும் நடந்திருக்காது.(5)

நாம் காணும் அனைத்தும் பலவான்களின் உணவே என்று கல்விமான்கள் சொல்கின்றனர். உண்மையில், அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இவ்வுலகமானது, பலவானின் இன்பநுகர் பொருளாகும்.(6) க்ஷத்திரியக்கடமைகளை அறிந்த ஞானியர், பூமியின் அரசுரிமையை எடுக்க முனையும் ஒரு மனிதனின் வழியில் தடையாக இருக்கக்கூடியவன் கொல்லத்தக்கவன் என்று சொல்கிறார்கள்.(7) அந்தக் குற்றத்தைச் செய்து, நமது நாட்டின் எதிரிகளாக நின்றோர் அனைவரும் நம்மால் கொல்லப்பட்டனர். ஓ! யுதிஷ்டிரரே, அவர்களைக் கொன்ற பிறகு, இந்தப் பூமியை நேர்மையாக ஆட்சி செய்வீராக.(8)

(நாட்டை மறுக்கும்) இந்த நமது செயலானது, ஒரு மனிதன் கிணற்றைத் தோண்டி விட்டு, நீரை அடையும் முன்னர், தன் பணியை நிறுத்திவிட்டு, சேறு பூசப்பட்டு வெளியே வருவதைப் போன்றதாகும்.(9) அல்லது, இந்தச் செயல்பாடானது, ஒரு மனிதன், நெடுமரத்தில் ஏறி தேனையும் எடுத்துவிட்டு, அதைச் சுவைப்பதற்கு முன் இறப்பதைப் போன்றதாகும்.(10) அல்லது, அது நீண்ட பயணத்திற்குப் புறப்பட்ட ஒரு மனிதன், சேருமிடத்தை அடையாமல் துயருடன் திரும்பி வருவதைப் போன்றதாகும்.(11) அல்லது, ஓ! குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, அது தன் எதிரிகள் அனைவரையும் கொன்ற ஒரு மனிதன், இறுதியில் தன் கையாலேயே இறப்பதை {தற்கொலை செய்து கொள்வதைப்} போன்றதாகும்.(12) அல்லது, அது பசியால் துன்பப்படும் ஒரு மனிதன், உணவை அடைந்துவிட்டு, உண்ண மறுப்பதைப் போன்றதோ, ஆசையின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு மனிதன், தன் ஆசைக்குகந்த பெண்ணை அடைந்தும், அவளைச் சந்திக்க மறுப்பதைப் போன்றதோ ஆகும்.(13)

ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, ஓ! மன்னா, நீர் எங்கள் மூத்த அண்ணன் ஆனதன் விளைவால், மந்தமான புரிதல் {மந்தபுத்தி} கொண்ட உம்மைப் பின்தொடர்ந்து நாங்கள் நிந்திக்கத்தக்கவர்கள் ஆகிவிட்டோம்.(14) நாங்கள் வலிய கரங்களைக் கொண்டிருக்கிறோம்; நாங்கள் அறிவுடனும், பெருஞ்சக்தியுடனும் இருக்கிறோம். இருப்பினும், ஓர் அலியின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து ஏதோ முற்றிலும் ஆதரவற்றவர்களைப் போன்று இருக்கிறோம்.(15) ஆதரவற்ற மனிதர்கள் அனைவருக்கும் நாங்கள் புகலிடமாக இருக்கிறோம். இருப்பினும், மக்கள் எங்களை இவ்வாறு பார்க்கும்போது, எங்கள் நோக்கங்களை அடைவதில் நாங்கள் முற்றிலும் சக்தியற்றவர்கள் என்று அவர்கள் ஏன் சொல்லமாட்டார்கள்? நான் சொல்லும் இவற்றை நினைத்துப் பாரும்.(16)

முதுமையை அடைந்த, அல்லது எதிரிகளிடம் தோல்வியுற்ற மன்னர்கள் துயர்நிறைந்த காலங்களில் மட்டுமே துறவை (துறவு வாழ்வைப்) பின்பற்ற வேண்டும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது.(17) எனவேதான், ஞானியர், துறவை க்ஷத்திரியனின் கடமையாக மெச்சுவதில்லை. மறுபுறம், தெளிவான பார்வையைக் கொண்ட அவர்கள், (ஒரு க்ஷத்திரியன்) அந்த வாழ்வு முறையை {துறவு வாழ்வைப்} பின்பற்றுவது அறத்தை இழப்பது என்றே கருதுகின்றனர்.(18) அந்த வகையில் {க்ஷத்திரிய வகையில்} பிறந்தவர்களும், அந்த வகையின் நடைமுறைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், அவற்றையே தங்கள் புகலிடமாகக் கொண்டவர்களால் எவ்வாறு அந்தக் கடமைகளை நிந்திக்க முடியும்?(19) செழிப்பு, செல்வம் ஆகியவற்றை இழந்தவர்களும், நம்பிக்கையற்றவர்களுமான மனிதர்கள் மட்டுமே, (துறவு வாழ்வைப் பின்பற்றும் ஒரு க்ஷத்திரியனின் ஒழுங்குமுறை குறித்து) வேதங்களில் சொல்லப்பட்டுள்ள இந்த ஆணைகளை உண்மையென அறிவிக்கிறார்கள். எனினும் உண்மையில் அஃது ஒரு போதும் க்ஷத்திரியன் செய்வதற்கு உகந்ததல்ல.(20)

ஆற்றலினால் தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ளத் தகுந்தவனும், தன் சொந்த முயற்சிகளால் தன்னைத் தாங்கிக் கொள்ளக்கூடியவனுமான ஒருவன், துறவு வாழ்வின் போலி வெளிப்பாடுகளால், வாழமுடியாமல் உண்மையில் வீழ்ந்தே போகிறான்.(21) தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், தேவர்கள், முனிவர்கள், விருந்தினர்கள், பித்ருக்கள் ஆகியோரை ஆதரிக்க இயலாத மனிதனே காட்டில் வாழும் தனிமையான வாழ்வில் மகிழ்ச்சியடைய முடியும்.(22) (காட்டு வாழ்வை வாழும்) மான், பன்றிகள், பறவைகள் ஆகியன சொர்க்கத்தை அடைய முடியாததைப் போலவே, காட்டு வாழ்வை வாழ்பவர்களும், ஆற்றலற்றவர்களுமான க்ஷத்திரியர்களும் சொர்க்கத்தை அடைய முடியாது.(23) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, துறவின் மூலம் யாராவது வெற்றியடைய முடியுமென்றால், இந்த மலைகளும், மரங்களும் நிச்சயம் அஃதை அடைந்திருக்கும்.(24) அவை யாருக்கும் தீங்கிழைப்பதில்லை. மேலும் அவை அனைத்தும் உலகக் காரியங்களில் இருந்து விலகி, பிரம்மச்சாரிகளைப் போல இருக்கின்றன.(25)

ஒருவனின் வெற்றியானது, மற்றவர்களின் வாழ்வைச் சாராமல், அவனது சொந்த வாழ்வைச் சார்ந்தே அமையும் என்றால், (க்ஷத்திரிய வகையில் பிறந்த ஒருவராக) நீர் செயல்பாட்டையே தேர்ந்தெடுக்க வேண்டும். செயலற்றவனால் ஒருபோதும் வெல்ல முடியாது.(26) தன் வயிற்றை மட்டும் நிறைத்துக் கொள்பவர்கள் வெற்றியை அடைய முடியும் என்றால், நீர் வாழ் உயிரினங்கள் அனைத்தும் தங்களைத் தவிர வேறு யாரையும் ஆதரிக்க வேண்டிய தேவை இல்லாததால் அவை வெற்றியை அடைந்து விடும்.(27) இந்த உலகமானது, தன் இயல்புக்கு ஏற்ற செயல்களில் ஈடுபட்டுவரும் உயிரினங்களுடன் சேர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதைப் பாரும். எனவே, ஒருவன் செயலிலேயே ஈடுபட வேண்டும். செயல்பாடு அற்றவனால் ஒருபோதும் வெற்றியை அடைய முடியாது” என்றான் {பீமசேனன்}.(28)-

இல்லறமே நல்லறம்! – சாந்திபர்வம் பகுதி – 11-செயல்ளைச் செய்வதே க்ஷத்திரிய அறம் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன அர்ஜுனன்; ஒரு பறவைக்கும், முனிவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்னது; இல்லறமே நல்லறம் என்றது…

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, இது சம்பந்தமாகக் குறிப்பிட்ட சில தவசிகளுக்கும், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழைய வரலாறுகளில் தென்படுகிறது.(1) நற்குடியில் பிறந்தோரும், சிறுமதி கொண்டோரும், ஆண்மைக்கான அடையாளமான மீசை இல்லாதவர்களுமான குறிப்பிட்ட சில பிராமண இளைஞர்கள், தங்கள் வீடுகளைக் கைவிட்டு, காட்டு வாழ்வை வாழ்வதற்காகக் காடுகளுக்கு வந்தனர்.(2) அபரிமிதமான வளங்களைக் கொண்ட அந்த இளைஞர்கள், அதையே {காட்டு வாழ்வையே} அறமெனக் கருதி, பிரம்மச்சாரிகளாக வாழ விரும்பி தங்கள் சகோதரர்களையும், தந்தைமாரையும் கைவிட்டனர். ஒரு சமயம், இந்திரன் அவர்களிடம் கருணை கொண்டான்.(3) தங்கப் பறவையின் வடிவத்தை ஏற்ற அந்தப் புனிதமான சக்ரன், அவர்களிடம், “வேள்வியில் எஞ்சியவற்றை உண்போர் செய்யும் செயலே, மனிதர்கள் செய்யக்கூடிய செயல்களிலேயே மிகக் கடினமான செயல்களாகவும்[1].(4) அத்தகு செயலே உயர்ந்த தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்டதாகும். அத்தகு மனிதர்களின் வாழ்வே அனைத்து புகழுக்கும் தகுந்ததாகும். வாழ்வின் நோக்கத்தை அடையும் அம்மனிதர்கள் அறத்திற்கு அர்ப்பணிப்புடன் உயர்ந்த கதியை அடைகின்றனர்” என்றான் { பறவை வடிவில் இருந்த இந்திரன்}.(5)அவ்வார்த்தைகளைக் கேட்ட முனிவர்கள், “இதோ, இந்தப் பறவையானவன் வேள்விகளில் எஞ்சியவற்றை உண்டு வாழ்வோரைப் புகழ்கிறது. நாம் அப்படி எஞ்சியவற்றில் வாழ்வதால் இதை நம்மிடம் சொல்கிறான்” என்றனர்[2].(6)அப்போது அந்தப் பறவை, “நான் உங்களைப் புகழவில்லை. நீங்கள் புழுதியால் கறைபடிந்தவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் {இறைச்சிக்} கழிவை[3] உண்டு வாழும் தீயவர்கள். நீங்கள் வேள்வியில் எஞ்சியதை உண்டு வாழும் மனிதர்களல்லர்” என்றது.(7)முனிவர்கள், “நாங்கள் எங்கள் வாழ்வுமுறையை உயர்வாக அருளப்பட்ட வாழ்வுமுறையாகக் கருதுகிறோம். ஓ! பறவையே, எங்களுக்கான நன்மை எது என்பதை எங்களுக்குச் சொல்வாயாக. உன் வார்த்தைகளில் நாங்கள் பெரும் நம்பிக்கை கொள்கிறோம்” என்றனர்.(8)

அந்தப் பறவை, “{உள்ளொன்றும் புறமொன்றும் சொல்லி} நீங்கள் உங்களுக்கு எதிரான நிலையை எடுத்து உங்களுக்குள் கொண்டுள்ள நம்பிக்கையை எனக்கு மறுக்காதிருந்தால், நான் உங்களுக்கு உண்மையான, நன்மையான வார்த்தைகளைச் சொல்வேன்” என்றது.(9)

முனிவர்கள், “ஓ! ஐயா, வேறுபட்ட பாதைகள் அனைத்தையும் நீ அறிந்திருப்பதால், நாங்கள் உன் வார்த்தைகளைக் கேட்போம். ஓ! அற ஆன்மா கொண்டோனே, நாங்கள் உன் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய விரும்புகிறோம். இப்போது எங்களுக்குக் கற்பிப்பாயாக” என்றனர்.(10)

அதற்கு அந்தப் பறவை, “நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்களில் பசுவே முதன்மையானது. உலோகங்களில் தங்கம் முதன்மையானது. வார்த்தைகளில் மந்திரங்கள் முதன்மையானவை. இரு கால் கொண்ட உயிரினங்களில் பிராமணர்கள் முதன்மையானவர்கள்.(11) ஒரு பிராமணனின் வாழ்வில், பிறப்பு தொடங்கி, அதற்கடுத்து வரும் காலம் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்குத் தொடர்புடையன மற்றும் சுடலையில் செய்ய வேண்டியது வரை உள்ள சடங்குகள் அனைத்தையும் இந்த மந்திரங்கள் முறைப்படுத்துகின்றன.(12) இந்த வேதச் சடங்குகளே அவனது சொர்க்கமும், பாதையும், முதன்மையான வேள்வியுமாகும்[4]. இது வேறுவகையானால், (சொர்க்கத்தைத் தேடும் மனிதர்களின்) செயல்கள் மந்திரங்கள் மூலம் வெற்றிபெறுவதை என்னால் எவ்வாறு காண இயலும்?(13) எவன் இவ்வுலகில் தன் ஆன்மாவை ஒரு குறிப்பிட்ட வகைத் தேவனாக உறுதியாகக் கருதுகிறானோ, அவன், அந்தக் குறிப்பிட்ட தேவனின் இயல்பின்படியே முரணற்ற வெற்றியை அடைகிறான்[5]. அரைமாதங்களால் அளக்கப்படும் பருவகாலங்கள் சூரியன், சந்திரன், அல்லது நட்சத்திரங்களுக்கு வழிகாட்டுகின்றன[6].(14) வெற்றியடையும் நிலையைச் சார்ந்திருக்கும் இந்த மூவகை வெற்றிகளை அனைத்துயிரினங்களும் விரும்புகின்றன. மிக மேன்மையானதும், புனிதமானதுமான இல்லறம், வெற்றியின் (வெற்றியை அறுவடை செய்யும்) களம் என்றழைக்கப்படுகிறது.(15)நிந்திக்கத்தக்க செயல்பாட்டைக் கொண்ட மனிதர்கள் எப்பாதையில் செல்கின்றனர்? சிறுமதியைக் கொண்ட அவர்கள், செல்வத்தை இழந்து பாவத்தையே ஈட்டுகிறார்கள்.(16) அந்தச் சிறு மதி கொண்டோர் தேவர்களின் அழிவில்லா பாதைகளையும், முனிவர்களின் பாதைகளையும், பிரம்ம பாதைகளையும் கைவிட்டு வாழ்வதால், அவர்கள் சுருதிகள் அங்கீகரிக்காத பாதைகளையே அடைகின்றனர்[7].(17) “வேள்விசெய்பவனே, நீ மதிப்புமிக்கப் பொருட்களைக் கொடையாக அளித்து வேள்வியைச் செய்வாயாக. மகன்கள், விலங்குகள் மற்றும் விலங்குகளால் கிடைக்கப்பெறும் மகிழ்ச்சியை நான் உனக்குத் தருவேன்” என்றொரு விதி மந்திரங்களில் சொல்லப்படுகிறது. விதித்த விதியின்படி வாழ்வதே தவசிகளின் உயர்ந்த தவம் என்று சொல்லப்படுகிறது. எனவே, நீங்கள் கொடைகளின் வடிவில் அதுபோன்ற வேள்விகளையும், அதுபோன்ற நோன்புகளையும் செய்ய வேண்டும்.(18) தேவர்களை வழிபடுவது, வேதங்களைக் கற்பது, பித்ருக்களை நிறைவு கொள்ளச்செய்வது, ஆசானிடம் மரியாதையுடன் தொண்டாற்றுவது என்ற இந்த அழிவில்லா கடமைகளை முறையாகச் செய்வதே தவங்களில் கடுமையானதாக அழைக்கப்படுகிறது.(19) இவ்வளவு கடினமான தவங்களைச் செய்தே தேவர்கள் உயர்ந்த மகிமையையும், சக்தியையும் அடைந்தார்கள். எனவே, இல்லறத்தின் கடமைகளுடைய கனத்த சுமையைச் சுமக்கும்படியே நான் உங்களுக்குச் சொல்கிறேன்.(20)தவங்களே அனைத்திலும் முதன்மையானவை, அவையே அனைத்துயிர்களுக்கும் வேர் போன்றவை என்பதில் ஐயமில்லை. எனினும், எதைச் சார்ந்து அனைத்தும் இருக்கிறதோ, அந்த இல்லற வாழ்வை நோற்று அந்தத் தவம் அடையப்பட {சாதிக்கப்பட} வேண்டும்.(21) காலையும், மாலையும் உறவினர்களுக்கு முறையாக உணவளித்து, அந்த விருந்தில் எஞ்சியதை உண்போர், அடைவதற்கு மிகக் கடினமான உயர்ந்த கதியை அடைகின்றனர்.(22,23) விருந்தினர்கள், தேவர்கள், முனிவர்கள் மற்றும் உறவினர்களின் பசியாற்றிய பிறகு உண்பவர்களே, {நான் முன்னர்ச் சொன்னதைப் போல} விருந்தில் {வேள்வியில்} எஞ்சியவற்றை உண்பவர்கள் {விகஸாசிகள்} என்று அழைக்கப்படுகிறார்கள்.(24) எனவே, தங்கள் கடமைகளை முறையாக நோற்பவர்களும், அற்புத நோன்புகளைப் பயின்று உண்மை நிறைந்த பேச்சுடன் இருப்பவர்களும், தங்கள் நம்பிக்கையில் அதிகப் பலமடைந்தவர்களாக இவ்வுலகில் பெரும் மரியாதைக்கு உரியவர்கள் என்ற நிலையை அடைகிறார்கள்.(25) அடைவதற்கரிதான சாதனைகளைச் செய்யும் அவர்கள், செருக்கில் இருந்து விடுபட்டுச் சொர்க்கத்தை அடைந்து, இந்திரலோகத்தில் முடிவிலா காலம் வாழ்கிறார்கள்” என்றது {என்றான் பறவை வடிவில் இருந்த இந்திரன்}”.(26)

அர்ஜுனன் தொடர்ந்தான், “நன்மையானவையும், நீதி நிறைந்தவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தவசிகள், “அஃதில் {துறவில்} ஏதும் இல்லை” என்று சொல்லித் தங்கள் துறவறத்தைக் கைவிட்டு, இல்லற வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.(27) எனவே, ஓ! அறமறிந்தவரே, ஓ! ஏகாதிபதி, அழிவில்லா ஞானத்தை உமது துணைக்கழைத்துக் கொண்டு, இப்போது எதிரிகளற்றதாயிருக்கும் இந்தப் பரந்த உலகை ஆட்சி செய்வீராக” {என்றான் அர்ஜுனன்}”.(28}

நகுலனின் ஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 12-துறவைக் காட்டிலும் செயலே மேன்மையானது என யுதிஷ்டிரனிடம் சொன்ன நகுலன்; நான்கு வாழ்வுமுறைகளிலும் இல்லறமே மேன்மையானது எனச் சொன்னது; இல்லத்தைக் கைவிட்டுக் காட்டில் திரிவதாலேயே ஒருவன் துறவியாகிவிட மாட்டன் என்று சொன்னது; மன்னர்களின் கடமை இல்லறம் நோற்று வேள்விகளை ஆதரிப்பதே என்பதை அழுத்தமாகச் சொன்ன நகுலன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, வலிமைமிக்கக் கரங்கள், அகன்ற மார்பு ஆகியவற்றைக் கொண்டவனும், அளவாகப் பேசுபவனும், பெரும் ஞானம் கொண்டவனும், தாமிரத்திற்கு ஒப்பான நிறத்தில் முகத்தைக் கொண்டவனுமான நகுலன், அர்ஜுனனின் வார்த்தைகளைக் கேட்டு, நீதிமான்கள் அனைவரிலும் முதன்மையான மன்னனைப் {யுதிஷ்டிரனைப்} பார்த்து, தன் அண்ணனின் இதயத்தை (அறிவால்) முற்றுகையிட்டபடியே இவ்வார்த்தைகளைப் பேசினான்.(1,2)

நகுலன் {யுதிஷ்டிரனிடம்}, “விசாகயூபம் என்ற இடத்தில் தேவர்கள் தங்கள் நெருப்புகளை {யாக அக்னிகளை} நிறுவியுள்ளனர். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தேவர்களே தங்கள் செயல்பாடுகளின் கனிகளைச் சார்ந்தே இருக்கின்றனர் என்பதை அறிவீராக.(3) ஓ! மன்னா, நம்பிக்கையற்றோர் அனைவரின் வாழ்வையும் (மழையால்) ஆதரிக்கும் பித்ருக்கள், (படைப்பாளனால் வேதங்களில் அறிவிக்கப்பட்ட) விதிகளை நோற்றபடியே செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.(4) (செயல்களை மனத்தில் ஆழப் பதியச் செய்யும்) வேதங்களின் தீர்மானங்களை மறுப்போரை ஒளிவுமறைவற்ற நாத்திகர்களாக அறிவீராக. ஓ! பாரதரே, வேதங்களைக் கற்ற மனிதன், தன் செயல்பாடுகள் அனைத்திலும் அதன் தீர்மானங்களைப் பின்பற்றி,(5) தேவர்களின் வழியில் உயர்ந்த சொர்க்கலோகத்தை அடைகின்றனர். மேலும் இது (இந்த இல்லற வாழ்வானது), வேத உண்மைகளை அறிந்தவர்கள் அனைவராலும் (பிற) வாழ்க்கை முறைகள் அனைத்திலும் மேன்மையானதாகச் சொல்லப்பட்டுள்ளது.(6)

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நீதியுடன் தன்னால் அடையப்பட்ட செல்வத்தை, வேதங்களை நன்கறிந்த பிராமணர்களுக்குத் தானமளிப்பவனே,(7) ஓ! ஏகாதிபதி, தன் ஆன்மாவைக் கட்டுப்படுத்திய உண்மையான துறவியாகக் கருதப்படுகிறான்.(8) எனினும், பெரும் இன்பத்தின் ஊற்றை (இல்லற வாழ்வுமுறையை) அலட்சியம் செய்பவன், தன்னையே துறக்கும்[1] அடுத்த வாழ்வுமுறைக்குக் குதித்து, இருளின் தன்மையிலான {தமோகுணத்திலான} துறவையே கைக்கொள்கிறான்.(9) எவன் வீடற்றவனாக இருக்கிறானோ, எவன் இவ்வுலகத்தில் (பிச்சையெடுப்பவனாகத்) திரிகிறானோ, எவன் தன் உறைவிடத்தை மரத்தடியில் கொண்டுள்ளானோ, எவன் எண்ணங்களை வெளியிடாமல் அமைதி காக்கும் பேசா நோன்பை (மௌன விரதத்தை) நோற்கிறானோ, எவன் தன் புலன்களின் செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறானோ, அவனே பிச்சாடன {பிச்சையெடுத்து வாழும் துறவு} வாழ்வை நோற்கும் ஒரு துறவியாவான்[2].(10)எந்தப் பிராமணர், கோபம் மற்றும் இன்பம் ஆகியவற்றையும், குறிப்பாக வஞ்சனையையும் அலட்சியம் செய்து, எப்போதும் தன் நேரத்தை வேத கல்வியில் ஈடுபடுத்திக் கொள்கிறானோ, அவனே பிச்சாடன நோன்பை நோற்கும் ஒரு துறவியாவான்[3].(11) ஒரு காலத்தில் நான்கு வாழ்வு முறைகளும் தராசில் எடைகாண நிறுத்திப் பார்க்கப்பட்டன. ஓ! மன்னா, தராசின் ஒரு பக்கத்தில் இல்லறத்தை வைத்தபோது, அதைச் சரியாக நிறுத்த, மறுபக்கத்தில் மற்ற மூன்று வாழ்வுமுறைகளையும் வைக்க வேண்டியிருந்தது என்று ஞானியர் சொல்கின்றனர்.(12) ஓ! பார்த்தரே, ஓ பாரதரே, மேலும், சொர்க்கமும், இன்பமும் இல்லறத்தில் மட்டுமே இருக்கிறது என்பதைக் கண்டதால், அதுவே {இல்லறமே} பெரும் முனிவர்களும், உலக வழிகளை அறிந்த மனிதர்கள் அனைவரின் புகலிடமாக இருப்பவர்களும் நோற்கும் வழியானது.(13) எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்த வாழ்வுமுறையில் வாழ்ந்து, அதையே தன் கடமையாக எண்ணி, கனியின் மீது கொண்ட விருப்பம் அனைத்தையும் எவன் கைவிடுகிறானோ, அவனே உண்மையான துறவியாவான். இல்லறத்தையும், சுற்றத்தையும் கைவிட்டு மூட புத்தியுடன் காட்டுக்குச் செல்லும் மனிதன் துறவியாகமாட்டான்.(14) மேலும், போலியாக அறப்போர்வைக்குள் இருக்கும் ஒருவன் (காட்டில் வாழ்ந்தாலும்) தன் ஆசைகளை மறக்க முடியாமல், தன் கழுத்தைச் சுற்றி இரக்கமற்றவனான யமனின் பயங்கரத் தளையால் கட்டப்படுகிறான்.(15)பகட்டால் செய்யப்படும் செயல்கள் கனியை விளைவிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. ஓ! ஏகாதிபதி, மறுபுறம் துறவெண்ணத்துடன் செய்யப்படும் அந்தச் செயல்கள், அபரிமிதமான கனிகளைக் கொண்டு வருகிறது.(16) அமைதி, தற்கட்டுப்பாடு, மனோவுறுதி, உண்மை, தூய்மை, எளிமை, வேள்விகள், விடாமுயற்சி, நீதி ஆகியவையே எப்போதும் முனிவர்களால் நல்லறங்களாகக் கருதப்படுகின்றன.(17) இல்லறத்தில் பித்ருக்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர்களுக்காகவே செயல்கள் செய்யப்படுகின்றன. ஓ! ஏகாதிபதி, இந்த வாழ்வு முறையில் மட்டுமே மூவகைக் குறிக்கோள்களும் அடையப்படுகின்றன[4].(18) அனைத்துச் செயல்களையும் கட்டுப்பாடில்லாமல் செய்யும் வாழ்வுமுறையைக் கடுமையாகப் பின்பற்றும் ஒரு துறவி, இம்மையிலோ மறுமையிலோ அழிவைச் சந்திப்பதில்லை.(19) அனைத்துயிரினங்களின் பாவமற்ற தலைவனான அற ஆன்மா {பரமாத்மா}, உயிரினங்கள், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளால் தன்னைத் துதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவற்றை உண்டாக்கினான்.(20)தூய்மையாக இருக்கும் மரங்கள், செடி, கொடிகள், விலங்குகள் ஆகியனவும், தெளிந்த நெய்யும், வேள்வியின் உட்பொருளாகவே உண்டாக்கப்பட்டன.(21) இல்லறம் நோற்பவன், தடைகள் நிறைந்த வேள்வியைச் செய்ய வேண்டும். இதன் காரணமாகவே, அவ்வாழ்வு முறை மிகக் கடினமானதும், அடைதற்கரியதுமாகும்.(22) ஓ! ஏகாதிபதி, எனவே, செல்வம், தானியம் மற்றும் விலங்குகளைக் கொண்டவர்களும் இல்லறம் நோற்பவர்களுமான மனிதர்கள், வேள்விகளைச் செய்யவில்லையெனில் அழிவில்லா பாவத்தையே ஈட்டுவார்கள்.(23) முனிவர்களில் சிலர் வேத கல்வியையே வேள்வியாகக் கருதுகின்றனர்; சிலர் தங்கள் மனங்களில் செய்யும் தியானத்தையே பெரும் வேள்வியாகக் கருதுகின்றனர்.(24) ஓ! ஏகாதிபதி, குவிந்த மனநிலையைக் கொண்ட இந்தப் பாதையில் நடப்பதன் விளைவால் பிரம்மனுக்கு இணையான நிலையை அடையும் இது போன்ற மறுபிறப்பாள மனிதனின் தோழமையைத் தேவர்களே நாடுகின்றனர்.(25)

உமது எதிரிகளிடம் இருந்து நீர் அடைந்த பல்வேறு வகையான செல்வங்களை வேள்வியில் செலவிட மறுத்தால், நீர் நம்பிக்கையில்லாதவர் என்பதை மட்டுமே வெளிக்காட்டுகிறீர்.(26) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இல்லறம் நோற்கும் ஒரு மன்னன், தன் செல்வத்தை ராஜசூயம், அஸ்வமேதம் மற்றும் பிற வகை வேள்விகளைத் தவிர்த்து வேறு வழியில் தனது செல்வத்தைத் துறப்பதை ஒரு போதும் நான் கண்டதில்லை.(27) ஓ! ஐயா, தேவர்களின் தலைவனான சக்ரனைப் போல, பிராமணர்களால் புகழப்படும் பிற வேள்விகளைச் செய்வீராக.(28) எவனுடைய அலட்சியத்தின் விளைவாகக் கள்வர்களால் குடிமக்கள் கொள்ளையடிக்கப் படுகின்றனரோ, தன்னை ஆட்சி செய்ய அழைப்போருக்கு எவன் பாதுகாப்பை வழங்கவில்லையோ, அந்த மன்னன், கலியின் வடிவமானவன் என்று சொல்லப்படுகிறான்.(29) குதிரைகள், பசுக்கள், பெண் பணியாட்கள், இழைகளால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், கிராமங்கள், ஊர்கள், களங்கள் வீடுகள் ஆகியவற்றைப் பிராமணர்களுக்குக் கொடாமலும், உறவினர்களிடம் நட்புணர்வில்லாமலும் நாம் காட்டுச் சென்றோமானால், நாமும் அரச வகையைச் சேர்ந்த கலிகளே ஆவோம்.(30,31)

(பிறருக்குப்) பாதுகாப்பை வழங்காத, ஈகைபயிலாத அரச வகையினர் பாவத்தையே இழைக்கின்றனர். மறுமையில் அவர்களுக்குத் துயரே அல்லாமல் அருளில்லை.(32) ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, பெரும் வேள்விகளையும், இறந்து போன உமது மூதாதையருக்கான சடங்குகளைச் செய்யாமல், புனித நீர்நிலைகளில் நீராடாமல், காட்டில் திரியும் வாழ்வை நீர் கைக்கொண்டால்,(33) திரளில் இருந்து பிரியும் சிறு மேகமானது காற்றால் அலைக்கழிக்கப்படுவதைப் போல நீரும் அழிவையே அடைவீர். இம்மையிலும், மறுமையிலும் {அறம் வழுவி} வீழ்ந்து, பிசாசங்களின் வகையில் நீர் பிறப்பை எடுக்க வேண்டியிருக்கும்.(34) வெறுமனே இல்லத்தைக் கைவிட்டுக் காட்டில் வசிப்பதால் மட்டும் அல்ல; அக மற்றும் புறப்பற்றுகள் அனைத்தையும் கைவிடும் மனிதனே உண்மையான துறவியாகிறான்.(35)

எந்தத் தடங்கலும் இல்லாத இந்த விதிமுறைகளை நோற்று வாழும் ஒரு பிராமணன், இம்மையிலோ, மறுமையிலோ வீழ்வதில்லை.(36) பழங்காலத்தவரால் மதிக்கப்படும், மனிதர்களில் சிறந்தோரால் பயிலப்படும் கடமைகளான ஒருவனுடைய சொந்த கடமைகளை நோற்றால், ஓ! பார்த்தரே, தைத்தியப்படையைக் கொன்ற சக்ரனைப் போலச் செழிப்பில் பெருகியவர்களான தன் எதிரிகளைப் போரில் கொன்றபிறகும் எவனாவது வருந்துவானா?(37) க்ஷத்திரியக் கடமைகளை நோற்று, உமது ஆற்றலின் துணை கொண்டு உலகத்தை அடக்கிய நீர், ஓ! ஏகாதிபதி, வேதங்களை அறிந்தோருக்கு கொடைகளை அளித்த பிறகு, சொர்க்கத்தை விட உயர்ந்த உலகங்களுக்குச் செல்லலாம். ஓ! பார்த்தரே, வருந்துவது உமக்குத் தகாது” {என்றான் நகுலன்}.(38)

எனது என்ற மரணமும், எனதற்ற பிரம்மமும்! – சாந்திபர்வம் பகுதி – 13-மிருத்யு மற்றும் பிரம்மம் குறித்து யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்த சகாதேவன்; இவ்விரண்டும் கலந்த ஆத்மாவானது அழிவற்றதானாலும், அழிவையுடையதானாலும் செயலே ஒருவனுக்குச் சிறந்தது என்று சொன்னது; தன் வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ளுமாறு யுதிஷ்டிரனிடம் வேண்டிய சகாதேவன்…

சகாதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே, புறப்பொருட்கள் அனைத்தையும் கைவிடுவதால் மட்டுமே ஒருவன் வெற்றியை அடைந்துவிடுவதில்லை. அகப்பற்றுகளைக் {மனப்பற்றுகளைக்} கைவிட்டாலும் கூட வெற்றியை அடைவது ஐயத்திற்கிடமானதே.(1) மனத்தின் அகத்தில் ஆசைகளைக் கொண்டு, புறப்பொருட்களைக் கைவிடுபவனின் அறத்தகுதியும், மகிழ்ச்சியும் நமது எதிரிகளுடைய பங்காக இருக்கட்டும்.(2) மறுபுறம், அகப்பற்றையும் கைவிட்டு, பூமியை ஆள்பவனுடைய அறத்தகுதியும், மகிழ்ச்சியும், நமது நண்பர்களின் பங்காக இருக்கட்டும்.(3) மம (எனது) என்ற ஈரெழுத்துகளைக் கொண்ட வார்த்தையானது மிருத்யுவாகும்; அதே வேளையில் அதன் எதிர்ச்சொல்லான நமம (எனதில்லை) என்று மூன்று எழுத்துகளைக் கொண்ட வார்த்தையானது அழிவில்லா பிரம்மமாகும்[1].(4) ஓ! மன்னா, பிரம்மமும், மிருத்யுவும் கண்ணுக்குப் புலனாகாதவகையில் அனைத்து ஆன்மாவுக்குள்ளும் நுழைந்து, அனைத்துயிரினங்களையும் செயல்பட வைக்கின்றன என்பதில் ஐயமில்லை.(5)ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, {பிரம்மமும் மிருத்யுவும் கலந்த} இதுவே ஆன்மா என்றழைக்கப்படுமானால், இஃது அழிவடையக்கூடியதில்லை. இவ்வாறெனில் உடல்களை அழிப்பதால் ஒருவன் கொலைக்குற்றத்திற்கு ஆளாகமாட்டான்.(6) மறுபுறம், ஒருவனின் ஆன்மாவும், உடலும் ஒன்றாகப் பிறந்தோ, இறந்தோ போகின்றன என்றால், உடல் அழியும்போது, ஆன்மாவும் அழிவை அடைகிறது. அவ்வாறெனில், (சாத்திரங்களில் பரிந்துரைக்கப்படும்) சடங்குகள் மற்றும் செயல்களும் பயனற்றனவாகிவிடும்.(7) எனவே, நுண்ணறிவு கொண்ட ஒரு மனிதன், ஆன்மாவின் அழியாத் தன்மை குறித்த ஐயங்கள் அனைத்தையும் விலக்கிவிட்டு, பழங்காலத்தில் பெரியோர்களால் நடக்கப்பட்ட பாதையையே பின்பற்ற வேண்டும்.(8) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த பூமியையும் அடைந்த ஒரு மனிதன், அவளை {பூமியை} அனுபவிக்காமல் போவானெனில் அவனது வாழ்வு நிச்சயம் பயனற்றதே.(9) காட்டுக் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு காட்டில் வாழ்ந்தாலும், உலகப்பொருட்களின் மீது கொண்ட பற்றை விடாத ஒரு மனிதனைப் பொறுத்தவரை, ஓ! மன்னா, அவன் மிருத்யுவின் கோரப்பற்களுக்கிடையில் வாழ்பவனே ஆவான்.(10)

ஓ! பாரதரே, உயிரினங்கள் அனைத்தின் இதயங்களும், அவற்றின் வெளித்தோற்றங்களும், உமது சொந்த வெளிப்பாடுகளேயன்றி வேறில்லை என்பதைக் காண்பீராக. அனைத்துயிரையும் தங்களைப் போலவே காண்பவர்கள் (அழிவின்) பேரச்சத்திலிருந்து விடுபடுகிறார்கள்[2].(11) நீர் எனது தந்தையும், {தாயும்}, பாதுகாவலரும், தமையனும், மூத்தவரும், ஆசானுமாவீர். எனவே, துன்பத்தில் பீடிக்கப்பட்டுச் சோகத்தில் நான் சொல்லும் தொடர்பற்ற வார்த்தைகளை மன்னிப்பதே உமக்குத் தகும் {பொறுத்தருள்வீராக}.(12) ஓ! பூமியின் தலைவரே, ஓ! பாரதர்களில் சிறந்தவரே, நான் சொல்வது உண்மையோ, பொய்யோ, இவற்றை உம்மிடம் கொண்ட பெருமதிப்பாலேயே நான் உம்மிடம் சொல்கிறேன்” என்றான் {சகாதேவன்}”.(13)

பித்தனாகாதீர், ஆட்சிசெய்வீராக! – சாந்திபர்வம் பகுதி – 14-யுதிஷ்டிரனைச் சமாதானப்படுத்திய திரௌபதி; தண்ட நீதி மற்றும் மன்னரின் சிறப்பைச் சொன்னது; தார்தராஷ்டிரர்கள் நியாயமாகவே கொல்லப்பட்டதாகச் சொன்னது; ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்படி யுதிஷ்டிரனிடம் சொன்ன திரௌபதி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குந்தியின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், வேதங்களில் உள்ள இந்த உண்மைகளைச் சொல்லிக் கொண்டிருந்த தன் தம்பிகள் சொல்வதைப் பேச்சற்றவனாகக் கேட்டுக் கொண்டிருந்தபோது,(1) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெண்களில் முதன்மையானவளும், அகன்ற கண்களைக் கொண்டவளும், பேரழகியும், உன்னதப் பிறப்பைக் கொண்டவளுமான திரௌபதி, பல சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் ஒப்பானவர்களான தன் தம்பியருக்கு மத்தியில் யானை மந்தையின் தலைமையானையைப் போல அமர்ந்திருந்த அந்த மன்னர்களில் காளையிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னாள்.(2,3)

தன் கணவர்கள் அனைவரிடமும், குறிப்பாக யுதிஷ்டிரனிடம் எப்போதும் அன்பை எதிர்பார்த்தவளான அவள் {திரௌபதி}, அம்மன்னனால் எப்போதும் அக்கறையுடனும், பாசத்துடனும் நடத்தப்பட்டாள். கடமைகளை அறிந்தவளும், அவற்றை நடைமுறையில் நோற்பவளும், பெரிய இடைகளை {பின்புறத்தைக்} கொண்டவளுமான அந்த மங்கை, தன் தலைவனின் {யுதிஷ்டிரனின்} மீது கண்களைச் செலுத்தி, ஆறுதலளிக்கும் இனிய வார்த்தைகளில் அவனது கவனத்தை {திருப்ப} விரும்பி, பின்வருமாறு சொன்னாள்.(5)

திரௌபதி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, சாதகப் பறவைகளைப் போல விழிகள் வற்ற உமது தம்பியர் அழுதாலும், நீர் அவர்களை மகிழ்விக்கவில்லை.(6) ஓ! ஏகாதிபதி, (ஆற்றலில்) மதங்கொண்ட யானைகளுக்கு ஒப்பானவர்களும், எப்போதும் துன்பக் கோப்பையையே அருந்திய வீரர்களுமான இந்த உமது தம்பிகளை முறையான வார்த்தைகளால் மகிழ்ச்சியடைச் செய்வீராக.(7)

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, துவைதத் தடாகத்தில் குளிர், காற்று மற்றும் சூரியனால் துன்புற்ற உமது தம்பிகள், உம்முடனிருந்தபோது, “வெற்றியடையும் விருப்பத்துடன் போரிட விரைந்து, துரியோதனனைக் கொன்று, அனைத்து விருப்பங்களையும் அருளவல்ல இந்தப் பூமியை நாம் அனுபவிப்போம். எதிரிகளைத் தண்டிப்பவர்களே, பெரும் தேர்வீரர்களை அவர்களது தேரை இழக்கச் செய்து, பெரும் யானைகளைக் கொன்று, தேர்வீரர்கள், குதிரை வீரர்கள் மற்றும் குதிரைகளின் உடல்களால் போர்க்களத்தை விரவிக் கிடக்கச் செய்து, பல்வேறு வகைகளிலான அபரிமிதமான கொடைகளால் பெரும் வேள்விகளை நீங்கள் செய்யப் போகிறீர்கள். நாடுகடத்தப்பட்டு காட்டில் வாழ்வதால் ஏற்படும் இந்தத் துன்பங்கள், இறுதியில் மகிழ்ச்சியிலேயே முடிவடையும்” என்று அவர்களிடம் நீர் சொல்லவில்லையா?(8-11)

ஓ! அறம்பயில்வோர் அனைவரிலும் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஓ! வீரரே, அப்போது உமது தம்பிகளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன நீர், இப்போது எங்கள் இதயங்களைத் துயரில் ஆழ்த்துவதேன்?(12) ஓர் அலியால் செல்வத்தை அனுபவிக்க முடியாது. (நீரற்ற) சேற்றில் மீன்கள் இல்லாததைப் போலவே, ஓர் அலியால் பிள்ளைகளைப் பெற முடியாது[1].(13) தண்டிக்கும் கோலில்லா {தண்டம் இல்லாத} க்ஷத்திரியன் ஒருவனால் ஒருபோதும் ஒளிர முடியாது. தண்டிக்கும் கோலில்லா க்ஷத்திரியன் ஒருவனால் ஒருபோதும் பூமியை அனுபவிக்க முடியாது. தண்டிக்கும் கோலில்லா மன்னன் ஒருவனின் குடிமக்கள் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைய முடியாது.(14) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, அனைத்துயிரினங்களிடமும் நட்பு, ஈகை, வேத கல்வி, தவங்கள் ஆகிய இவை ஒரு பிராமணனின் கடமைகளேயன்றி ஒரு மன்னனுக்குரியவையல்ல.(15) தீயோரைத் தடுப்பது, நேர்மையானவர்களைப் பாதுகாப்பது, போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதிருப்பது ஆகிய இவையே மன்னர்களுக்குரிய உயரிய கடமைகளாகும்[2].(16)மன்னிக்கும் தன்மையும் {பொறுமையும்} கோபமும், கொடுப்பதும் எடுப்பதும், பயங்கரமும் அச்சமற்றதன்மையும், தண்டனையும் வெகுமதியும் எவனிடம் இருக்கிறதோ, அவனே கடமைகளை அறிந்தவன் என்று சொல்லப்படுகிறது.(17) கல்வியாலோ, கொடையாலோ, துறவாலோ நீர் இந்தப் பூமியை அடையவில்லை.(18) ஓ! வீரரே, வலிமை அனைத்தையும் கொண்டு உம்மீது வெடித்துச் சிதற இருந்ததும், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவை நிறைந்திருந்ததும், மூவகைப் பலங்களைக் கொண்டிருந்ததும்,[3] துரோணர், கர்ணன், அஸ்வத்தாமர், கிருபர் ஆகியோரால் பாதுகாக்கப்பட்டதுமான எதிரியின் படையானது, உம்மால் வீழ்த்தப்பட்டு, கொல்லப்பட்டது. இதன் காரணமாகவே நான் உம்மை இந்தப் பூமியை அனுபவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.(19,20)ஓ! பலமிக்கவரே {யுதிஷ்டிரரே}, ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் புலியே, மக்கள் தொகை அதிகம் கொண்ட மாவட்டங்கள் {ஊர்கள்} நிறைந்ததும், ஜம்பு என்றழைக்கப்பபடுவதுமான பகுதியை (முன்னர்) நீர் வலிமையுடன் அடக்கி ஆண்டீர்.(21) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, மகாமேருவுக்கு மேற்கில் அமைந்திருப்பதும், ஜம்புத்வீபத்திற்கு இணையானதுமான கிரௌஞ்சத்வீபம் என்ற பகுதியையும் நீர் வலிமையுடன் அடக்கி ஆண்டீர்.(22) ஓ! மன்னா, மகாமேருவின் கிழக்கில் இருப்பதும், கிரௌஞ்சத்வீபத்திற்கு இணையானதுமான சாகத்வீபமும் உம்மால் வலிமையுடன் அடக்கி ஆளப்பட்டது.(23) ஓ! மனிதர்களில் புலியே, மகாமேருவுக்கு வடக்கில் இருப்பதும், சாகத்வீபத்துக்கு இணையானதுமான பத்ராஸ்வம் என்ற பகுதியையும் நீர் அடக்கி ஆண்டீர்.(24) ஓ! வீரரே, பல ஊர்கள் அமைந்த தீவுகளும், பெருங்கடலில் உள்ள தீவுகளும் உம்மால் அடக்கி ஆளப்பட்டன.(25)

ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, இத்தகு அளவிலா சாதனைகளை அடைந்து, (அவற்றின் மூலம்) பிராமணர்களால் புகழப்பட்டும், உமது ஆன்மா நிறைவடையாததேன்?(26) ஓ! பாரதரே, வலிமையில் பெருகியவர்களும், (ஆற்றலில்) காளைகளுக்கோ, மதங்கொண்ட யானைகளுக்கோ ஒப்பானவர்களுமான இந்த உமது தம்பிகளைக் கண்டும், அவர்களிடம் இனிமை நிறைந்த சொற்களை ஏன் நீர் பேச மறுக்கிறீர்?(27) நீங்கள் அனைவரும் தேவர்களைப் போன்றவர்களாவீர். நீங்கள் அனைவரும் எதிர்களைத் தடுக்கவல்லவர்களாவீர். நீங்கள் அனைவரும் உங்கள் எதிரிகளை எரிக்கவல்லவர்களாவீர். உங்களில் ஒருவர் மட்டுமே எனது கணவராகியிருந்தாலும், என் மகிழ்ச்சி மிகப் பெரியதாகவே இருந்திருக்கும்.(28) ஓ! மனிதர்களில் புலியே, உடற்கட்டை ஈர்க்கும் ஐந்து புலன்களைப் போல நீங்கள் அனைவரும் என் கணவர்களாயிருக்கும்போது நான் என்ன சொல்வேன்?(29) பேரறிவும், பெரும் முன்னறிதிறனும் கொண்ட என் மாமியாரின் {குந்தியின்} வார்த்தைகளைப் பொய்க்க முடியாது. என்னிடம் பேசும்போது, அவள் {குந்தி}, “ஓ! பாஞ்சால இளவரசி {திரௌபதி}, ஓ! சிறந்த பெண்ணே, யுதிஷ்டிரன் உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பான்” என்றாள்.(30)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, சுறுசுறுப்பையும், ஆற்றலையும் கொண்ட ஆயிரக்கணக்கான மன்னர்களைக் கொன்ற பிறகு, அந்தச் சாதனையை வீணாகச் செய்யும் உமது மடமையை நான் காண்கிறேன்.(31) யாவருடைய அண்ணன் பித்தராகிறாரோ, அவர்களும் அவரைத் தொடர்ந்து பித்தராகிறார்கள். ஓ! மன்னா, உமது பித்தால், பாண்டவர்கள் அனைவரும் பித்தர்களாகப்போகிறார்கள்.(32) ஓ! ஏகாதிபதி, இந்த உமது தம்பியர் புலனுணர்வு கொண்டவர்களாக இருப்பின், அவர்கள் உம்மை நாத்திகர்கள் அனைவரோடும் சேர்த்து (ஒரு சிறையில்) அடைத்து வைத்து, பூமியின் அரசாட்சியை அவர்களே எடுத்துக் கொண்டிருப்பார்கள். அறிவு மங்கிய நிலையில் இவ்வழியில் செயல்படும் மனிதன் ஒருபோதும் செழிப்பை வெல்வதில்லை.(33) பித்துப் பாதையில் நடக்கும் மனிதன், சாம்பிராணி மற்றும் அஞ்சனம் ஆகியவற்றின் துணை கொண்டும், மூக்கின் மூலம் செலுத்தப்படும் மருந்துகள் மற்றும் பிற மருந்துகளின் துணைகொண்டும் மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.(34) ஓ! பாரதர்களில் சிறந்தவரே, பிள்ளைகளை இழந்தவளான நான் இன்னும் வாழ விரும்புவதால், நான் பெண்கள் அனைவரிலும் இழிந்தவளாவேன்.(35)

என்னாலும், (உமது நோக்கத்தில் இருந்து உம்மை விலகச் செய்ய) இவ்வாறு முயன்றுவரும் உமது சகோதரர்களாலும் சொல்லப்படும் வார்த்தைகளை நீர் அலட்சியம் செய்யாதீர். உண்மையில், மொத்த உலகத்தையும் கைவிடுவதால், நீர் கேட்டையும், உமக்கு ஆபத்தையும் வரவேற்கிறீர்.(36) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பூமியின் தலைவர்கள் அனைவராலும் மதிக்கப்படும் சிறந்த மன்னர்களான மாந்தாதா மற்றும் அம்பரீஷன் ஆகிய இருவரைப் போல நீர் இப்போது பிரகாசிக்கிறீர்.(37) உமது குடிகளை நீதியுடன் பாதுகாத்து, மலைகள், காடுகள் மற்றும் தீவுகளுடன் கூடிய பூமாதேவியை நீர் ஆட்சி செய்வீராக. ஓ! மன்னா, உற்சாகமிழக்காதீர்.(38) பல்வேறு வேள்விகளில் தேவர்களைத் துதிப்பீராக. உமது எதிரிகளுடன் போரிடுவீராக. ஓ! மன்னர்களில் சிறந்தவரே, செல்வம், துணிகள் மற்றும் பிற இன்பநுகர் பொருட்களைப் பிராமணர்களுக்குக் கொடையளிப்பீராக” என்றாள் {திரௌபதி}”.(39)

செங்கோல் சிறப்பு! – சாந்திபர்வம் பகுதி – 15-செங்கோலின் சிறப்பை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன அர்ஜுனன்; தண்ட முறைகளின் அவசியம்; ஆன்மாவின் கொல்லப்பட முடியாத நிலை ஆகியவற்றை எடுத்துரைத்து யுதிஷ்டிரனை அரசாளும்படி சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யக்ஞசேனன் மகளின் {திரௌபதியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், மங்கா புகழையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட தன் அண்ணனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} முறையான மதிப்பளித்து மீண்டும் பேசினான்.(1)

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “தண்டக்கோலே (தண்டக்கோலைத் தரித்தவனே), தன் குடிகள் அனைத்தையும் ஆட்சி செய்து, அவர்களைப் பாதுகாக்கிறது {றான்}. அனைத்தும் உறங்கும்போது தண்டக்கோல் விழித்திருக்கிறது. இதன் காரணமாகவே, அந்தத் தண்டக் கோலை {செங்கோலை} ஞானியர் நீதிமிக்கது என்கின்றன.(2) தண்டக்கோலே நீதியையும், பொருளையும் பாதுகாக்கிறது. ஓ! மன்னா, அதுவே இன்பத்தையும் பாதுகாக்கிறது. இதன் காரணமாகவே, அந்தத் தண்டக்கோல் வாழ்வின் மூன்று நோக்கங்களோடு அடையாளங்காணப்படுகிறது.(3) தானியம், செல்வம் ஆகிய இரண்டும் தண்டக்கோலால் பாதுகாக்கப்படுகின்றன. ஓ! கல்வியறிவு கொண்டவரே, இஃதை அறிந்து, தண்டக்கோலை எடுத்துக் கொண்டு, உலகின் போக்கைக் கண்காணிப்பீராக.(4) ஒருவகைப் பாவிகள், மன்னனின் கரங்களில் இருக்கும் தண்டக்கோலிடம் கொண்ட அச்சத்தால் பாவத்தில் இருந்து விலகுகிறார்கள். மற்றொரு வகையினர் யமனின் தண்டத்தில் கொண்ட அச்சத்தாலும், மற்றொரு வகையினர் மறுமையில் கொண்ட அச்சத்தாலும் அதே போன்ற பாவச் செயல்களில் இருந்து விலகுகின்றனர்.(5) மேலும் வேறு வகையினர் சமூகத்திடம் கொண்ட அச்சத்தால் பாவச் செயல்களில் இருந்து விலகுகின்றனர். ஓ! மன்னா, இவ்வாறே இவ்வுலகின் போக்கில் உள்ள அனைத்தும் தண்டக்கோலைச் சார்ந்தே இருக்கின்றன.(6)

தண்டக்கோலால் மட்டுமே ஒருவரையொருவர் விழுங்கி விடுவதில் இருந்து தடுக்கப்படும் ஒருவகையினரும் இருக்கின்றனர். தண்டக்கோல் மக்களைப் பாதுகாக்கவில்லையெனில், அவர்கள் நரக இருளில் மூழ்குவார்கள்.(7) தண்டக்கோலானது, அடங்காதவர்களைத் தடுக்கவும், தீயவர்களைத் தண்டிக்கவும் பயன்படுவதாலேயே ஞானியரால் அவ்வாறு பெயரிடப்பட்டது.(8) பிராமணர்களுக்கு வாய்ச்சொல்லாலும்; க்ஷத்திரியர்களுக்கு, அவர்களின் உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு உணவைக் கொடுத்தும்; வைசியர்களுக்கு அபராதமளித்தும், உடைமைகளைப் பறிமுதல் செய்தும் தண்டனை அளிக்க வேண்டும். சூத்திரர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது[1].(9) மனிதர்களை (தங்கள் கடமைகளில்) விழிப்புணர்வுடன் வைத்திருப்பதற்காகவும், உடைமைகளைப் பாதுகாப்பதற்காகவும், தண்டம் என்ற பெயரில் இவ்வுலகில் விதிகள் (தண்டனை சட்டங்கள்) நிறுவப்பட்டுள்ளன.(10)எங்கே தண்டமானது, கரிய நிறத்துடனும், சிவந்த கண்களுடனும் (ஒவ்வொரு குற்றவாளியையும்) பற்றத் தயாராக நற்கிறதோ, எங்கே மன்னன் நீதிப் பார்வையுடன் இருக்கிறானோ, அங்கே குடிமக்கள் ஒருபோதும் தங்களை மறக்காமல் இருக்கிறார்கள் {தன்னிலை இழக்காது விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்}.(11) பிரம்மச்சாரி, இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, காட்டுத்துறவி {வானப்பிரஸ்தன்} மற்றும் அறத்தவசி {ஸந்யாசி} ஆகியோர் அனைவரும் தங்கங்கள் தங்கள் வாழ்வுமுறைகளைத் தண்டத்தில் கொண்ட அச்சத்தின் மூலமே நோற்கின்றனர்.(12) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அச்சமில்லாதவன் ஒருபோதும் வேள்வியைச் செய்வதில்லை. அச்சமில்லாதவன் ஒருபோதும் கொடை கொடுப்பதில்லை. அச்சமில்லாத மனிதன் ஒருபோதும், எந்தச் செயலையோ, ஒப்பந்தத்தையோ பின்பற்ற விரும்புவதில்லை.(13) மற்றவர்களின் முக்கிய அங்கங்களைப் பிளக்காமல், அரிய சாதனைகளை அடையாமல், (மீனைக் கொல்லும்) மீனவனைப் போல உயிரினங்களைக் கொல்லாமல், எந்த மனிதனாலும் பெருஞ்செழிப்பை அடைய முடியாது[2].(14) கொலை செய்யாமல் ஒரு மனிதனால், இவ்வுலகில் புகழையோ, செல்வத்தையோ, குடிமக்களையோ அடைய முடியாது. இந்திரனே கூட, விருத்திரனைக் கொன்றதால்தான் மஹேந்திரனானான்.(15)தேவர்களில் பிறரைக் கொன்றவர்களே, மனிதர்களால் அதிகமாகத் துதிக்கப்படுகிறார். ருத்திரன், ஸ்கந்தன், சக்ரன், அக்னி, வருணன் ஆகியோர் அனைவரும் கொலைகாரர்களாவர்.(16) ஓ! பாரதரே, காலன், மிருத்யு, வாயு, குபேரன், சூரியன், வசுக்கள், மருத்துக்கள், சத்தியஸ்கள், விஸ்வதேவர்கள் ஆகியோர் அனைவரும் கூடக் கொலைகாரர்களே[3].(17) இந்தத் தேவர்களின் ஆற்றலால் பணிவடைந்து மக்கள் அனைவரும் அவர்களைத் வணங்குகிறார்களேயன்றி பிரம்மனையோ, தாத்ரியையோ, பூஷனையோ ஒருபோதும் வழங்குவதில்லை.(18) தேவர்களில் அனைத்துயிர்களையும் சமமாக மதித்து, சுயக்கட்டுப்பாடு மற்றும் அமைதியுடன் இருக்கும் தேவர்களை ஒரு சிலரே தங்கள் செயல்களாலும் உன்னத மன நிலைப்பாட்டாலும் வணங்குகின்றனர்.(19) பிறருக்குத் தீங்கிழைக்கும் செயலெதையும் செய்யாத ஓருயிரினத்தையும் நான் இவ்வுலகில் காணவில்லை. விலங்குகள், விலங்குகளைச் சார்ந்தும், பலசாலிகள் பலவீனர்களைச் சார்ந்தும் வாழ்கிறார்கள்.(20)கீரிப்பிள்ளை பூனையை விழுங்குகிறது; பூமையானது கீரிப்பிள்ளையை விழுங்குகிறது; நாய் பூனையை விழுங்குகிறது; மேலும் அந்த நாயும் சிறுத்தையால் விழுங்கப்படுகிறது.(21) மேலும் காலன் வரும்போது அனைத்துப் பொருட்களும் அவனால் விழுங்கப்படுகின்றன என்பதையும் காண்பீராக. அசைவதும், அசையாததுமான இவ்வண்டமே வாழும் உயிரினங்களின் உணவாகிறது.(22) இதுவே தேவர்களால் விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஒரு ஞானி இதில் திகைப்படைவதில்லை. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் எவ்வாறு பிறந்தீரோ அவ்வாறாவதே உமக்குத் தகுந்தது.(23) (க்ஷத்திரிய) மடையர்கள் மட்டுமே, கோபத்தையும், இன்பத்தையும் விலக்கி, காடுகளைப் புகலிடமாக அடைகின்றனர். தவசிகளே கூட உயிரினங்களைக் கொல்லாமல் தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள முடியாது.(24) நீரிலும், பூமியிலும், கனிகளிலும் எண்ணற்ற உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றை ஒருவன் கொல்லவில்லை என்பது உண்மையில்லை. ஒருவனுடைய வாழ்வைத் தாங்கிக் கொள்வதை விட உயர்ந்த கடமை வேறென்ன இருக்க முடியும்?[4](25)அடையாளம் காண முடியாத அளவும் பல உயிரினங்கள் மிக நுண்ணியவையாக இருக்கின்றன. கண்ணிமைப்பதால் மட்டுமே கூட அவை அழிக்கப்படுகின்றன.(26) கோபம் மற்றும் செருக்கைக் கைவிட்டு, தவசியின் வாழ்வுமுறையை நோற்கும் மனிதர்கள், கிராமங்களையும், நகரங்களையும் விட்டு வனத்திற்குச் செல்கின்றனர். அங்கே சென்றதும் அம்மனிதர்கள் திகைப்படைந்து மீண்டும் இல்லற வாழ்வையே நோற்கின்றனர்.(27) (இல்லறத்தை நோற்கும்) பலர் மண்ணை உழுது, மூலிகைகளைப் பறித்து, மரங்களை வெட்டி, பறவைகள் மற்றும் விலங்குகளையும் கொன்று வாழும் பலர் வேள்விகளைச் செய்து இறுதியில் சொர்க்கத்தை அடைகிறார்கள்.(28) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, உயிரினங்கள் அனைத்தின் செயல்களும், தண்டமுறை கொள்கை முறையாகப் பயன்படுத்தப்படும் போது மட்டுமே வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றன என்பதில் நான் எந்த ஐயமும் கொள்ளவில்லை.(29) இவ்வுலகில் இருந்து தண்டமுறை {தண்டிக்கும் சட்டம்} நீக்கப்பட்டால் விரைவில் உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிடும். நீரில் உள்ள மீன்களைப் போல, வலிமையான விலங்குகள், பலவீனமானவற்றை உணவாகக் கொள்கின்றன.(30)

அணைந்துவிட்ட நெருப்புகளே கூட ஊதப்படும்போது அச்சத்தால் மீண்டும் சூடர்விடுகின்றன. இது பலம் அல்லது தண்டனையின் மீது கொண்ட அச்சத்தாலேயே விளைகிறது.(31) தீமையிலிருந்து நன்மையை வேறுபடுத்திப் பார்க்க இவ்வுலகில் தண்டமில்லையென்றால், மொத்த உலகும் இருளில் மூழ்கி, அனைத்துப் பொருட்களும் குழப்பத்தை அடைந்திருக்கும்.(32) விதிகளை மீறுபவர்களும், நாத்திகர்களும், வேதங்களை ஏளனம் செய்பவர்களும் தண்டத்தால் பீடிக்கப்பட்டால், விரைவில் அவர்கள் விதிகளையும், வரைமுறைகளையும் கடைப்பிடிக்கத் தொடங்குகிறார்கள்.(33)இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் தண்டமுறையால் ஒழுங்கமைக்கப்படுகிறார்கள். தண்டத்தில் கொண்ட அச்சத்தால் ஒரு மனிதன் விதிகளையும், வரைமுறைகளையும் பின்பற்றுகிறான்.(34) தண்டமானது, நால்வகையினரின் அறம், பொருள் மற்றும் இன்பத்தைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களை நல்லோராக, பணிவுள்ளோராக மாற்றவும் படைப்பாளனால் விதிக்கப்பட்டிருக்கிறது.(35)

தண்டத்தால் அச்சத்தைத் தூண்டமுடியவில்லையெனில், அண்டங்காக்கைகளும், இரைதேடும் விலங்குகளும், பிற உயிரினங்கள் அனைத்தையும், மனிதர்களையும், வேள்விக்குத் தேவையான தெளிந்த நெய்யையும் உண்டிருக்கும்.(36) தண்டமுறை எவரையும், ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், ஒருவரும் வேதங்களைக் கற்க மாட்டார்கள், ஒருவரும், காரம்பசுவில் பால் கறக்க மாட்டார்கள், ஒரு கன்னிகையும் திருமணம் செய்துகொள்ள மாட்டாள்[5].(37) தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், அனைத்துப் பக்கங்களிலும் குழப்பமும் அழிவும் நேர்ந்து, அனைத்து வேலிகளும் அகற்றப்பட்டு, உடைமை என்ற கருத்தே காணாமல் போயிருக்கும்.(38) தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வருடாந்தர வேள்விகளை ஒருபோதும் மக்களால் முறையாகச் செய்ய முடியாது.(39) தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், எந்த வாழ்வுமுறையைச் சேர்ந்தவரும், (சாத்திரங்களில்) அறிவிக்கப்பட்டிருக்கும் அவனது வாழ்வுமுறைக்கான கடமைகளை நோற்க முடியாது, அவன் ஒருபோதும் அறிவை அடையவும் முடியாது.(40)ஒட்டகங்களோ, காளைகளோ, குதிரைகளோ, கோவேறு கழுதைகளோ, கழுதைகளோ தேரில் பூட்டப்பட்டாலும் தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், அவை அந்தத் தேர்களையும், வண்டிகளையும் இழுக்காது.(41) தண்டனையைச் சார்ந்த அனைத்துயிரினங்களும் இருக்கின்றன. எனவே, கல்விமான்கள் தண்டனையே அனைத்திற்கும் வேராக இருக்கிறது என்று சொல்கின்றனர். மனிதர்கள் விரும்பும் சொர்க்கமும், இந்த உலகமும் கூட அந்தத் தண்டத்திலேயே இருக்கிறது.(42) எங்கே எதிரிகளை அழிக்கும் தண்டமுறை நன்றாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அங்கே பாவமோ, வஞ்சனையோ, எந்தத் தீமையோ காணப்படாது.(43) தண்டக் கோல் உயர்த்தப்படவில்லையெனில், நாயும் வேள்வி நெய்யை நக்கும். முதல் (வேள்விக்) கொடையைக் காகங்கள் எடுத்துச் சென்றுவிடும்.(44) நியாயமான முறையிலேயோ, நியாயமற்ற முறையிலேயோ, இப்போது இந்த நாடு நமதாகியிருக்கிறது. எனவே, நீர் அதை அனுபவித்து வேள்விகளைச் செய்வீராக.(45)

தங்கள் அன்பு மனைவியருடன் (மற்றும் பிள்ளைகளுடன்) வாழும் நற்பேறு பெற்ற மனிதர்கள், நல்ல உணவை உண்டு, சிறந்த ஆடைகளை உடுத்தி, மகிழ்ச்சிகரமாக அறத்தை அடைகின்றனர்.(46) நமது செயல்கள் அனைத்தும் செல்வத்தைச் சார்ந்தே இருக்கின்றன என்பதிலும், அந்தச் செல்வமானது தண்டமுறையைச் சார்ந்திருக்கிறது என்பதிலும் ஐயமில்லை எனவே, தண்டமுறையின் முக்கியத்துவத்தைக் காண்பீராக.(47) உலகத்தின் உறவுகளைப் பராமரிக்க மட்டுமே கடமைகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. தீங்கிழையாமை மற்றும் நல்ல நோக்கங்களால் தூண்டப்பட்ட தீங்கிழைப்பு ஆகிய இரண்டு காரியங்கள் இருக்கின்றன. இவை இரண்டில் எதனால் அறத்தை அடையமுடியுமோ அதுவே மேன்மையானதாகும்.(48) எந்தச் செயலும் முற்றாகத் தகுதி நிறைவுற்றதுமல்ல; அதே போல எதுவும் முற்றான தீமையும் அல்ல. செயல்கள் அனைத்திலும் நல்லது, அல்லது ஆகிய இரண்டும் காணப்படுகின்றன.(49) விதை நீக்கலுக்கு உட்படுத்தப்படும் விலங்குகளின் கொம்புகளும் வெட்டப்படுகின்றன. பிறகு அவை பளு சுமப்பதற்காகக் {மூக்கணாங்கயிற்றால்} கட்டப்படவும் தண்டிக்கப்படவும் {அடிக்கப்படவும்} செய்யப்படுகின்றன.(50)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, உறுதிப்பாடில்லாத போலியான, நிந்தனைகளால் அழுகுகின்ற, வலிநிறைந்த இவ்வுலகில், மேலே குறிப்பிட்ட விதிகள் மற்றும் உறவுகளைப் பின்பற்றிப் பழங்காலத்து மனிதர்களின் பழக்க வழங்கங்களைப் பயில்வீராக.(51) வேள்விகளைச் செய்வீராக, கொடையளிப்பீராக, உமது குடிகளைக் காப்பீராக, அறம்பயில்வீராக. ஓ! குந்தியின் மகனே, உமது எதிரிகளைக் கொன்று உமது நண்பர்களைக் காப்பீராக.(52) ஓ! மன்னா, எதிரிகளைக் கொல்லும்போது உற்சாகத்தை இழக்காதீர். ஓ! பாரதரே, அதைச் செய்பவன் ஒரு போதும் சிறு பாவத்தையும் ஈட்டமாட்டான்.(53) தன்னை எதிர்த்து வருவதும், ஆயுதந்தரித்ததுமான படையை ஆயுதத்தை எடுத்து, கொல்லும் ஒருவனுக்கு கருவைக் கொன்ற பாவம் நேராது. ஏனெனில், முன்னேறி வரும் எதிரியே, கொல்பவனின் கோபத்தைத் தூண்டுகிறான்.(54) ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் இருக்கும் ஆன்மாவானது கொல்லப்பட முடியாததாகும். ஆன்மாவைக் கொல்ல முடியாது எனும்போது, ஒருவன் மற்றொருவனால் எவ்வாறு கொல்லப்பட முடியும்?(55) புதிய வீட்டிற்குள் நுழையும் ஒரு மனிதனைப் போலவே உயிரினங்கள் அடுத்தடுத்த உடல்களில் நுழைகின்றன.(56) சிதைந்த வடிவங்களைக் கைவிடும் ஓர் உயிரினம் புதிய வடிங்களை அடைகிறது. உண்மையைக் காண இயலும் மக்கள் இந்த மாற்றத்தையே மரணமாகக் கருதுகிறார்கள்” என்றான் {அர்ஜுனன்}”.(57)

திரௌபதியுடைய குழலின் நிலை! – சாந்திபர்வம் பகுதி – 16-கடந்த கால அவமதிப்புகளை யுதிஷ்டிரனுக்கு நினைவூட்டிய பீமன்; உடல், மனம் ஆகியவற்றின் தன்மைகளையும், நோய்களையும் விவரிப்பது; உடலுக்கு மனமும், மனத்திற்கு உடலும் தீர்வாக இருப்பதைச் சொல்லி பழைய அவமதிப்புகளை நினைத்துப்பார்த்தால் செய்யப்பட்ட படுகொலைகள் அனைத்தும் நியாயமானவையே எனச் சொன்னது..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அர்ஜுனன் பேசி முடித்ததும், பெரும் கோபமும் சக்தியும் கொண்டவனான பீமசேனன், தன் பொறுமை அனைத்தையும் திரட்டிக் கொண்டு, தன் அண்ணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நீர் கடமைகள் அனைத்தையும் அறிந்தவராவீர். நீர் அறியாதது ஏதுமில்லை. நாங்கள் எப்போதும் உமது நடத்தையையே பின்பற்றி நடக்கவே விரும்புகிறோம், ஆனால், ஐயோ, எங்களால் இதைச் செய்ய முடியாது.(2) “நான் எதுவும் சொல்ல மாட்டேன். நான் எதுவும் சொல்லமாட்டேன்” என்பதே எனது மனத்தின் விருப்பம். எனினும், பெருந்துயரால் உந்தப்பட்டு எதையாவது சொல்லும் கட்டாய நிலையை நான் அடைந்திருக்கிறேன். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, என் வார்த்தைகளைக் கேட்பீராக. உமது அறிவு மயக்கத்தால், அனைத்தும் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது, நாங்களும் உற்சாகமற்றவர்களாவும், பலவீனர்களாகவும் ஆக்கப்படுகிறோம்.(4) உலகின் ஆட்சியாளராக, ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவராக இருக்கும் நீர் உற்சாகமற்றதன் விளைவால் எவ்வாறு ஒரு கோழையைப் போல அறிவு மயக்கத்தை அடைந்தீர்?(5)

உலகத்தின் நேர்மையான வழியையும், நேர்மையற்ற வழிகளையும் நீர் அறிந்திருக்கிறீர். ஓ! பலமிக்கவரே, தற்காலத்திற்கோ, எதிர்காலத்திற்கோ சொந்தமானது ஏதுமில்லை என்பதையும் நீர் அறிந்திருக்கிறீர்.(6) ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, அரசுரிமையை நீர் ஏற்க வேண்டிய காரணங்களை உமக்குச் சொல்கிறேன். சிதறாத கவனத்தோடு கேட்பீராக.(7) உடல் சார்ந்த, மனம் சார்ந்த இரண்டு வகை நோய்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் மற்றதிலிருந்தே உதிக்கிறது. அவற்றில் ஏதும் தனித்திருப்பதைக் காண முடியாது. மனநோய்கள் உடல் சார்ந்தவற்றில் இருந்தே உதிக்கின்றன என்பதில் ஐயமில்லை. அதேபோல உடல் நோய்களும் மனம் சார்ந்தவற்றில் இருந்தே உதிக்கின்றன. இதுவே உண்மை.(9) கடந்த கால உடல் துயரம் அல்லதும் மனத்துயரின் காரணமாக வருந்துபவன், அந்தத் துயரத்தால் துயரத்தையே அறுவடை செய்து, இரு மடங்கு துயரை அடைகிறான்.(10)

குளிர், வெப்பம், காற்று, ஆகிய மூன்றும் உடலின் தன்மைகளாகும்[1]. அவை இணக்கத்துடன் ஒத்திசைந்திருப்பது உடல் நலத்தின் அடையாளமாகும்.(11) இம்மூன்றில் ஒன்று மற்றவைகளுக்கு விஞ்சியிருந்தால், அதற்குத் தீர்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குளிர் வெப்பத்தால் தடுக்கப்படுகிறது, வெப்பமும் குளிரால் தடுக்கப்படுகிறது.(12) நற்குணம், ஆசை, இருள் ஆகிய இம்மூன்றும் மனத்தின் தன்மைகளாகும். இம்மூன்றும் இணக்கத்துடன் ஒத்திசைந்திருப்பதே (மன) நலத்திற்கான அடையாளமாகும்.(13) இம்மூன்றில் ஒன்று மற்றவைகளுக்கு விஞ்சியிருந்தால், அதற்குத் தீர்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. துன்பம் இன்பத்தால் தடுக்கப்படுகிறது, இன்பமும் துன்பத்தால் தடுக்கப்படுகிறது.(14) தற்காலத்தில் இன்பமாக வாழும் ஒருவன், கடந்த காலத் துன்பங்களை நினைத்துப் பார்க்க விரும்புகிறான். தற்போது துன்பத்தில் வாழும் மற்றொருவன், தனது கடந்த கால அருளை நினைத்துப் பார்க்க விரும்புகிறான்.(15)எனினும், துயரத்தின் போது கவலையாகவோ, அருளின் போது மகிழ்ச்சியாகவோ நீர் ஒருபோதும் இருந்ததில்லை. எனவே, அருட்காலத்தில் கவலையடையவோ, துன்பகாலத்தில் மகிழ்ச்சியடையவோ நீர் உமது நினைவுத்திறனைப் பயன்படுத்தக் கூடாது. விதியே அனைத்திலும் வலிமைமிக்கதாகத் தெரிகிறது. அல்லது, இவ்வாறு பாதிப்படைந்திருப்பதன் விளைவால் உண்டான உமது இயல்பாக இஃது இருக்குமானால்,(16-17) சொற்ப ஆடையுடுத்தியிருந்த கிருஷ்ணை {திரௌபதி}, தனது மாதவிடாய் காலத்தில் சபைக்கு இழுத்து வரப்பட்டதைக் கண்டதை நினைக்க இயலாதவராக நீர் எவ்வாறு இருக்கிறீர்[2].(18) நாம் (குரு) நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதையும், நாம் நாடு கடந்து, மான்தோலுடுத்தி (காட்டுக்குள்) இருந்ததையும், அந்த நமது காட்டு வாழ்வையும் நீர் ஏன் நினைக்கவில்லை.(19) ஜடாசுரன் ஏற்படுத்திய துன்பங்களையும், சித்திரசேனனுடனான போரையும், சிந்து மன்னனின் {ஜெயத்ரதனின்} கரங்களில் அடைந்த துயரத்தையும் நீர் ஏன் மறந்துவிட்டீர்?(20) தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் இளவரசி திரௌபதி கீசகனால் உதைக்கப்பட்டதை நீர் ஏன் மறந்தீர்?(21)-ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, பீஷ்மருடனும், துரோணருடனும் நீர் போரிட்டதைப் போன்ற கடுமையான போரே இப்போது உம் முன்னிலையில் இருக்கிறது. இதனுடன் நீர் உமது மனத்தைக் கொண்டே போரிட வேண்டும்.(22) உண்மையில், இப்போது உம்முன்னிலையில் இருக்கும் போரில், கணைகள், நண்பர்கள், உறவினர்கள் சொந்தங்கள் ஆகியவற்றுக்கான தேவையில்லை, ஆனால் அதில் நீர் உமது மனத்தால் மட்டுமே போரிட வேண்டும்.(23) இந்தப் போரில் நீர் வெல்வதற்கு முன்பே உமது உயிர்மூச்சைவிட்டுவிட்டால், பிறகு மற்றொரு உடலை அடைந்து நீர் இதே எதிரிகளுடன் நீர் போரிட வேண்டியிருக்கும்[3].(24) எனவே, ஓ! பாரதரே, அந்தப் போரை இன்றே போரிட்டு, உடல் குறித்த அக்கறையில்லாமல் உமது செயல்பாடுகளின் மூலம் உமது மனத்தின் எதிரிகளை அடையாளம் கண்டு அவற்றை வெல்வீராக. அந்தப் போரை உம்மால் வெல்ல முடியவில்லையெனில், உமது நிலை என்னவாகும்? மறுபுறம், ஓ! ஏகாதிபதி, அதை நீர் வென்றால், வாழ்வில் உயர்ந்த கதியை அடைவீர்.(26)இதில் உமது அறிவைச் செலுத்தி, உயிரினங்களின் சரியான மற்றும் தவறான பாதைகளை உறுதி செய்து கொண்டு, உமக்கு முன்னால் உமது தந்தையர் ஏற்று நடந்த பாதையைப் பின்பற்றி, உமது நாட்டை முறையாக ஆள்வீராக.(27) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பாவி துரியோதனனும், அவனது தொண்டர்கள் அனைவரும் கொல்லப்பட்டது நற்பேற்றாலேயே. திரௌபதியின் குழல்களின் நிலையை நீர் அடைந்ததும் நற்பேற்றினாலேயே[4].(28) முறையான சடங்குகளுடனும், அபரிமிதமான கொடைகளுடன் ஒரு குதிரை வேள்வியைச் செய்வீராக. ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே, நாங்களும், பெரும் சக்தி கொண்டவனான வாசுதேவனும் {கிருஷ்ணனும்} உமது பணியாட்களாவோம்” என்றான் {பீமன்}.(29)

அனைத்தும் அறிவில் நிலைத்திருக்கின்றன! – சாந்திபர்வம் பகுதி – 17-துறவே சிறந்ததெனப் பீமனுக்குச் சொன்ன யுதிஷ்டிரன்; பசியை வெல்ல வேண்டும்; ஆசை மற்றும் இன்பங்களைத் துறக்க வேண்டும் என்று சொன்னது; பண்பட்ட அறிவிலேயே அனைத்தும் நிலைத்திருக்கின்றன என்று சொன்ன யுதிஷ்டிரன்…

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “ஓ! பீமா, நிறைவின்மை, அலட்சியம், பூமிசார்ந்த பொருட்களில் பற்று, அமைதியின்மை, வலிமை, மடமை, போலிச் செருக்கு {வறட்டு பெருமை}, கவலை ஆகிய இந்தப் பாவங்களால் பீடிக்கப்பட்டு, நீ அரசுரிமையில் நாட்டங்கொள்கிறாய். ஆசையில் இருந்து விடுபட்டு, இன்பம் மற்றும் துன்பம் ஆகியவற்றைக் கடந்து, அமைதியை அடைந்து, மகிழ்ச்சியடைய {சுகமாக இருக்க} முயல்வாயாக.(1,2)  கட்டற்ற இந்தப் பூமியை எந்த ஒப்பற்ற ஏகாதிபதி ஆட்சி செய்வானோ, அவனும் ஒரே வயிற்றைத் தான் கொண்டிருப்பான். பிறகு ஏன் நீ இந்த வாழ்வுமுறையைப் புகழ்கிறாய்?(3) ஓ! பாரதர்களில் காளையே {பீமா}, ஒருவனுடைய ஆசைகள் ஒரு நாளிலோ, பல மாதங்களிலோ நிறைவடையாது. உண்மையில், நிறைவடைய இயலா ஆசையானது, ஒருவனுடைய மொத்த வாழ்நாளிலும் கூட நிறைவையடையாது.(4) நெருப்பில் விறகு ஊட்டப்படும்போது அது சுடர்விட்டு எரிகிறது; ஊட்டப்படாதபோதோ அணைந்துவிடுகிறது. எனவே, உன் வயிற்றில் நெருப்பு எரியும்போது {பசிக்கும்போது}, சொற்ப உணவே  அளித்து {உணவைக் குறைத்து} அஃதை அணைப்பாயாக.(5) ஞானமற்றவனே தன் வயிற்றுக்கு அதிக உணவைத் தேடுகிறான். முதலில் உனது வயிற்றை வெல்வாயாக. (பிறகு உன்னால் இந்தப் பூமியையே வெல்ல இயலும்). உனது நிரந்தர நன்மைக்கான பூமியை, அப்போது உன்னால் வெல்ல முடியும்[1].(6)உலகம் சார்ந்த ஆசைகள், இன்பங்கள் மற்றும் செழிப்பை நீ புகழ்கிறாய். எனினும், அனைத்து இன்பங்களையும் துறந்தவர்கள், தவங்களால் தங்கள் உடல்களைக் குறைத்துக் கொண்டு பேரின்பம் நிறந்த உலகங்களை அடைகின்றனர்.(7) நாட்டை அடைந்து அதைப் பராமரிப்பதில் நியாயமான மற்றும் நியாயமில்லா இரண்டு வழிகளும் பின்பற்றப்படுகின்றன. அவற்றிற்கான ஆசை உன்னுள் இருக்கிறது[2]. எனினும், உன் பெருஞ்சுமைகளில் இருந்து உன்னை விடுவித்துக் கொண்டு நீ துறவை பின்பற்றுவாயாக.(8) ஒரு புலியானது, தன் வயிற்றை நிரப்புவதற்காகப் பல விலங்குகளைக் கொல்கிறது. பலமற்ற பிற விலங்குகள், உயிர்வாழும் ஆசையால் உந்தப்பட்டு, புலியின் இரையாக வாழ்கின்றன.(9) உலகம் சார்ந்த பொருட்களை ஏற்கும் மன்னர்கள் துறவை பயின்றால், அவர்களால் ஒருபோதும் மனநிறைவை அடைய முடியாது. அவர்களின் புத்தியின்மையைப் பார்.(10) எனினும், மரத்தின் இலைகளை உண்டு வாழ்பவர்களோ, தானியங்களில் உமி நீக்க இரு கற்களை மட்டுமே, அல்லது தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்துபவர்களோ, நீரை மட்டுமே உட்கொண்டு வாழ்பவர்களோ, காற்றை மட்டுமே உட்கொண்டு வாழ்பவர்களோ, நரகத்தை வெல்கிறார்கள் {நரகை அடையாமல் சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள்} என்பது உண்மைச் செய்தியாகும்.(11) கட்டற்ற இந்தப் பரந்த உலகை ஆள்பவனான மன்னனும், தங்கத்தையும், கூழாங்கற்களையும் சமமாகக் கருதும் ஒரு மனிதனு ஆகிய இவர்கள் இருவருக்குள், பின்னவனே {துறவியே} தன் வாழ்வின் நோக்கத்தையடைந்ததாகச் சொல்லப்படுகிறானேயன்றி முன்னவன் {மன்னன்} அல்ல.(12)எனவே, நீ இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தைத் தரும் நிரந்தர புகலிடத்தைச் சார்ந்தவனாகி, செயலை நிறுத்தி, ஆசைகளில் கொண்டுள்ள பற்றைத் துறப்பாயாக.(13) ஆசையையும், இன்பத்தையும் கைவிட்டவர்கள் ஒருபோதும் வருந்த வேண்டியதில்லை[3]. எனினும், நீ இன்பங்களுக்காக வருந்துகிறாய். ஆசையையும், இன்பத்தையும் விலக்கினால், பொய் பேச்சில் இருந்து விடுபடுவதில் நீ வெல்லலாம்[4].(14) பித்ருக்களின் பாதை மற்றும் தேவர்களின் பாதை என நன்கறியப்பட்ட இருபாதைகள் (நமக்காக) இருக்கின்றன. வேள்விகளைச் செய்வோர் பித்ரு பாதையில் செல்கின்றனர், அதே வேளையில், விடுதலை {முக்தியை} வேண்டுவோர், தேவ பாதையில் செல்கின்றனர்[5].(15) தவங்கள், பிரம்மச்சரியம், (வேத) கல்வி, ஆகியவற்றின் மூலம் தங்கள் உடல்களைத் துறக்கும் பெரும் முனிவர்கள், காலனின் சக்திக்கும் மேலான உலகங்களுக்குச் செல்கின்றனர்.(16)உலகம் சார்ந்த இன்பங்கள் கட்டுகளின் {பற்றின்} தன்மையைக் கொண்டனவாகும். அவை செயல்பாடு என்றும் அழைக்கப்படுகின்றன. (பற்று மற்றும் செயல்பாடு ஆகிய) அவ்விரு பாவங்களில் இருந்து விடுபடும் ஒருவனே உயர்ந்த கதியை அடைகிறான்[6].(17) முரண்பட்ட இரட்டைகளிலிருந்து {த்வந்துவங்களில் இருந்து} விடுபட்டவனும், ஆசை மற்றும் இன்பங்களில் இருந்து விடுபட்டவனும், மோக்ஷதர்மத்தை நோற்பவனுமான ஜனகனால் (பழங்காலத்தில்) பாடப்பட்ட ஒரு வரியில் இக்குறிப்பிருக்கிறது.(18) (அவ்வாறு இவ்வாறு அமைந்திருக்கிறது:) “என் செல்வங்கள் ஏராளம், இருப்பினும் என்னிடம் ஒன்றுமில்லை. மேலும், மொத்த மிதிலையும் எரித்துச் சாம்பாலக்கப்பட்டாலும், என்னுடையது ஏதும் எரிக்கப்படவில்லை” {என்றிருக்கிறது}.(19)மலையின் உச்சியில் இருக்கும் ஒரு மனிதன், சமவெளியில் இருக்கும் மனிதர்களைக் கீழ் நோக்கிப் பார்ப்பதைப் போல, அறிவு மாளிகையின் உச்சத்தை அடைந்த ஒருவன், துன்பப்பட்ட சொல்லாத {துன்பப்படத்தகாத} பொருட்களுக்காக மக்கள் துன்புற்றுக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.(20) {கண்களுக்குப்} புலப்படும் பொருட்களில் தன் கண்களைச் செலுத்தி, அவற்றை உண்மையில் காணும் ஒருவனே கண்களையும், அறிவையும் கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்[7]. அறிவு என்றழைக்கப்படும் புலமானது, அறியப்படாத, புரிந்து கொள்ளமுடியாத பொருட்களைக் குறித்து அது கொடுக்கும் அறிவாலும், புரிதலாலுமே அவ்வாறு அழைக்கப்படுகிறது.(21) தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், பிரம்ம நிலையை அடைந்தவர்களுமான கல்விமான்களின் வார்த்தைகளை அறிந்த ஒருவன், உயர்ந்த பெருமைகளை அடைவதில் வெல்கிறான்.(22) ஒருவன், முடிவிலா வேற்றுமைகளைக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் ஒன்றெனவும், ஒரே சாற்றின் பல்வேறு வெளிப்பாடுகளே அவை {அவ்வுயிரினங்கள்} எனவும் காணும்போது, அவன் பிரம்மத்தை அடைந்தவனாகச் சொல்லப்படுகிறான்[8].(23) இந்த உயர்ந்த பண்பட்ட நிலைய அடைபவர்களே, மிக உயர்ந்த, அருள்நிறைந்த கதியை அடைகிறார்களேயன்றி, அறிவற்றவர்களோ, குறுகிய ஆன்மா கொண்டவர்களோ, சிற்றறிவு கொண்டவர்களோ, தவங்களற்றவர்களோ அல்ல {அந்நிலையை அடைவதில்லை}. உண்மையில், அனைத்தும் (பண்பட்ட) அறிவிலேயே {புத்தியிலேயே} நிலைத்திருக்கின்றன” என்றான் {யுதிஷ்டிரன்}”.(24)

ஜனகனின் மனைவி! – சாந்திபர்வம் பகுதி – 18-ஜனகனின் மனைவியான சுநைனா, சந்நியாசம் செல்ல விரும்பிய ஜனகனிடம் கேட்ட கேள்விகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன அர்ஜுனன்

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தபோது, மன்னனின் அப்பேச்சால் பீடிக்கப்பட்ட அர்ஜுனன், சோகத்தாலும், துயராலும் எரிந்து மீண்டும் தன் அண்ணனிடம்,(1) “ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, விதேஹர்களின் ஆட்சியாளனுக்கும் {ஜனகனுக்கும்}, அவனது ராணிக்குமிடையில் {சுநைனாவுக்கும் இடையில்} நடைபெற்ற உரையாடல் அடங்கிய இந்தப் பழைய வரலாற்றை மக்கள் உரைக்கின்றனர்.(2) விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்} தன் நாட்டைத் துறந்து, பிச்சாடன வாழ்வை நோற்கத் தீர்மானித்த போது, அவனுடைய மனைவி துயரால் பீடிக்கப்பட்டுச் சொன்ன வார்த்தைகளின் குறிப்பு அவ்வரலாற்றில் இருக்கிறது.(3) மன்னன் ஜனகன், தனது செல்வம், பிள்ளைகள், மனைவியர், பல்வேறு வகை உடைமைகள், அறத்தகுதியையும், நெருப்பையும் அடைய நிறுவப்பட்ட வழி ஆகியவற்றைத் துறந்து, தன் தலையைச் சிரைத்துக் கொண்டான் (பிச்சைக்காரத் தோற்றத்தை {துறவியின் வடிவை} ஏற்றுக் கொண்டான்). அவனது துணைவியானவள் {சுநைனா}, செல்வத்தை இழந்தவனாக, பிச்சைக்கார நோன்பை நோற்பதில் நிறுவப்பட்டவனாக, எந்த வகைத் தீங்கையும் பிறருக்கு இழைப்பதில் இருந்து விலகும் தீர்மானத்துடன் கூடியவனாக, அனைத்து வகைப் போலித்தனங்களையும் கைவிட்டவனாக, தண்டில் இருந்து விழுந்தவையும், (வயலின் பிளவுகளில் இருக்கும் தானியங்களைப் பொறுக்கிப் பெறப்பட்ட) கைநிறைந்தவையுமான தானியங்களை உண்டு வாழத் தயாராக இருப்பவனாகவும் அவனைக் கண்டாள்.(5)

தன் தலைவனுடன் யாருமற்ற வேளையில் அவனை {ஜனகனை} அணுகிய ராணி {சுநைனா}, பெரும் மனோ பலத்துடனும், அச்சமற்ற வகையிலும், கோபத்துடனும், அறிவு நிறைந்த இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னாள்:(6) “செல்வமும், தானியமும் நிறைந்த உமது நட்டைக் கைவிட்டு, பிச்சைக்கார வாழ்வை ஏன் நோற்கிறீர்? கைநிறைந்தவையும், வீழ்ந்தவையுமான {உதிர்ந்தவையுமான} தானியங்கள் உமக்குப் போதுமானவையல்ல.(7) ஓ! மன்னா, உமது பெரும் நாட்டைக் கைவிட்டு, கைப்பிடி தானியதை விரும்புகிறீராதலால், உமது தீர்மானமும், உமது செயல்களும் பொருந்தவில்லை.(8) ஓ! மன்னா, இந்தக் கைப்பிடி தானியத்தைக் கொண்டு, உம்மால் உமது விருந்தினர்களையும், தேவர்களையும், முனிவர்களையும், பித்ருக்களையும் நிறைவு செய்ய முடியுமா? எனவே, இந்த உமது முயற்சி புதைமிதியற்றதாகும் {வீணானதாகும்}.(9) ஐயோ, தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோர் அனைவராலும் கைவிடப்பட்டு, செயல்பாடு அனைத்தையும் கைவிட்டுத் திரியும் பிச்சாடன வாழ்வை நோற்கப் போகிறீர்.(10)

முன்பு நீர் மூன்று வேதங்களை அறிந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களையும், இன்னும் பலரையும் ஆதரித்து வந்தீர். இன்று உமது உணவுக்காக அவர்களிடம் நீர் எவ்வாறு பிச்சை எடுப்பீர்?(11) இந்தச் சுடர்மிகு செழிப்பைக் கைவிட்டு, ஒரு நாயைப் போல (உணவுக்காகச்) சுற்றிலும் கண்களைச் சுழல விடப்போகிறீர். இப்போது இந்த உமது தாய் உம்மால் மகனற்றவளானால், உமது மனைவியான கோசல இளவரசியோ ஒரு விதவையானாள் {சுநைனா ஆகிய நானோ இப்போது கணவனற்ற விதவையானேன்}.(12) இந்த ஆதரவற்ற க்ஷத்திரியர்கள், கனியையும், அறத்தகுதியையும் எதிர்பார்த்து, தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் உம் மேல் கொண்டு உமக்காகக் காத்திருக்கின்றனர்.(13) ஓ! மன்னா, அவர்களது அந்த நம்பிக்கைகளைக் கொன்றுவிட்டு, நீர் எந்த உலகத்திற்குச் செல்லப் போகிறீர்? அதிலும் குறிப்பாக விடுதலை {முக்தியானது} ஐயம் நிறைந்தது, உயிரினங்கள் அனைத்தும் செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன எனும்போது நீர் எங்குச் செல்லப் போகிறீர்?[1](14) நீர் மணந்து கொண்ட மனைவியைக் கைவிட்டு வாழ விரும்புவதால், பாவம் நிறைந்த உமக்கு இம்மையோ மறுமையோ கிடையாது[2].(15)உண்மையில், பல்வேறு வகையான மாலைகள், நறுமணப்பொருட்கள், ஆபரணங்கள், ஆடைகள் ஆகியவற்றைத் தவிர்த்து, நீர் ஏன் பிச்சாடனராகத் திரியப் போகிறீர்?(16) அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு பரந்த புனிதமான தடாகத்தைப் போல இருந்துவிட்டு, (அனைவருக்கும் உறைவிடத்தைத் தரும்) புகழத்தக்க ஒரு பெரும் மரமாக இருந்துவிட்டு, எவ்வாறு உம்மால் மற்றவர்களுக்காகக் காத்திருக்கவும், அவர்களை வழிபடவும் முடியும்?(17) ஒரு யானையானது தனது வேலைகள் அனைத்தையும் தவிர்த்தால், கூட்டமாக வரும் ஊனுண்ணும் விலங்குகளும், எண்ணற்ற புழுக்களும் அஃதை உண்டுவிடும். அவ்வாறிருக்கையில், சக்தியற்றவரான உம்மைக் குறித்து என்ன சொல்வது?[3](18) மண்குடத்தையும், மூன்றுதலை கொண்ட தண்டத்தையும் பரிந்துரைப்பதும், தன் ஆடைகளையே கைவிடச் சொல்வதும்,(19) அனைத்தையும் துறந்த பிறகு கைப்பிடி தானியத்தை மட்டுமே ஏற்க அனுமதிப்பதுமான இந்த வாழ்வுமுறையில் உமது இதயம் எவ்வாறு நிலைக்கலாம்? மேலும், நாடும், கைப்பிடி தானியமும் ஒன்றேயென நீர் சொல்வீரானால், முன்னதை {நாட்டை} நீர் ஏன் கைவிடவேண்டும்?[4](20)மேலும், கைப்பிடி தானியமானது பற்றுக்கான பொருள் ஆகுமென்றால், (அனைத்தையும் கைவிட்ட) உமது உண்மை தீர்மானம் தரையில் விழுந்துவிடும். அனைத்தையும் கைவிடும் உமது தீர்மானத்தின்படி நீர் செயல்பட்டால், உமக்கு நான் யார்? எனக்கு நீர் யார்? நீர் என்னிடம் கொண்டுள்ள அருள் என்னவாக இருக்க முடியும்?(21) நீர் அருளைக் கொள்ள விரும்பினால், இந்தப் பூமியை ஆள்வீராக. வறுமை நிறைந்த ஏழையாக, நண்பர்களால் கைவிடப்பட்டவர்களாக இருப்பவர்கள், மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் துறவை பின்பற்றலாம்.(22) அரண்மனை போன்ற மாளிகைகளையும், படுக்கைகளையும், வாகனங்களையும், ஆடைகளையும், ஆபரணங்களையும் கைவிடுவதாக நடிக்கும் மனிதர்கள் உண்மையில் முறையற்றே செயல்படுகிறார்கள்.(23) ஒருவன் எப்போதும் பிறரால் கொடுக்கப்படும் கொடைகளை ஏற்கிறான்; மற்றொருவன் எப்போதும் கொடைகளை அளிக்கிறான். இந்த இருவருக்குள்ளும் உள்ள வேறுபாடுகளை நீர் அறிவீர். உண்மையில் இவர்கள் இருவரில் எவர் மேன்மையாக மதிக்கப்பட வேண்டும்?(24) எப்போதும் கொடைகளை ஏற்பவர்களுக்கோ, செருக்குடையவனுக்கோ ஒரு கொடை கொடுக்கப்படுமாயின், அந்தக் கொடையானது காட்டு நெருப்பில் ஊற்றப்பட்ட தெளிந்த நெய்யைப் போல வீணாகவே ஆகும்.(25)

ஓ! மன்னா {ஜனகரே}, தனக்குள் வீசப்படும் அனைத்தையும் எரிக்காமல் அடங்காத நெருப்பைப் போல, நன்கொடையைப் பெறாமல் ஒருபோதும் ஒரு பிச்சைக்காரன் {யாசகன்} அமைதியடையமாட்டான்.(26) இவ்வுலகில், ஈகையாளன் ஒருவனால் கொடுக்கப்படும் உணவே, நிச்சயம் பக்திமான்களை ஆதரிக்கும். எனவே, ஒரு மன்னன் (உணவைக்) கொடுக்கவில்லையெனில், முக்தியை விரும்பும் பக்திமான்கள் எங்கே செல்வார்கள்?(27) (தங்கள் இல்லங்களில்) உணவைக் கொண்டிருப்போர் இல்லறவாசிகளாவர். அவர்களே பிச்சைக்காரர்களை {சந்நியாசிகளை} ஆதரிக்கிறார்கள். உணவிலிருந்தே உயிர் பாய்கிறது. எனவே, உணவைக் கொடுப்பவன், உயிரைக் கொடுப்பவனாவான்.(28) இல்லற வாழ்வை நோற்போரிடம் இருந்து வெளியேறும் துறவிகள் {பிச்சைக்காரர்கள்}, அவர்கள் எங்கிருந்து {எவர்களிடமிருந்து} வந்தனரோ அவர்களைச் சார்ந்தே இருக்கிறார்கள். தன்னடக்கம் கொண்ட மனிதர்கள் இதைச் செய்வதால் புகழையும், பலத்தையும் அடைந்து இன்புறுகிறார்கள்.(29) தன் உடைமைகளை மட்டுமே துறப்பதாலோ, பிச்சையேற்கும் வாழ்வை நோற்க ஆயத்தமடைவதாலோ ஒருவன் துறவி என்றழைக்கப்பட மாட்டான். உண்மையான மனநிலையுடன் தன் உடைமைளையும், இவ்வுலக இன்பங்களையும் துறப்பவனே உண்மையான துறவியாகக் கருதத்தக்கவனாவான்.(30) வெளிப்பார்வையில் பற்றுடன் இருப்பதாகத் தெரிந்தாலும், இதயத்தில் பற்றற்றவனாகவும், உலகத்தில் இருந்து தனித்து நிற்பவனாகவும், பற்றுகள் அனைத்தையும் உடைத்தெறிந்தவனாகவும், நண்பனையும், எதிரியையும் சமமாகக் கருதுபவனாகவும் இருக்கும் மனிதனே உண்மையில் துறவியாகக் கருதத்தக்கவனாவான்.(31)

பல்வேறு பற்றுகளில் கட்டப்பட்டவர்களாக, வீணாகப் போகும் செல்வத்தைத் தேடுபவர்களாக இருந்தாலும், தங்கள் தலைகளைச் சிரைத்துக் கொண்டு, காவியுடை உடுத்திக் கொண்டு துறவியாகத் திரியும் மனிதர்களை நாம் காணலாம்.(32) மூன்று வேதங்களையும், தங்கள் வழக்கமான தொழில்களையும், பிள்ளைகளையும் கைவிட்டு மூன்று தலை தண்டத்தை எடுத்துக் கொண்டு, காவி உடை உடுத்திக் கொண்டு, துறவு வாழ்வைப் பின்பற்றுபவர்களான அவர்கள் உண்மையில் சிறுமதி கொண்ட மனிதர்களே.(33) ஓ! மன்னா {ஜனகரே}, கோபத்தையும், பிற குற்றங்களையும் கைவிடாத அவர்கள், வாழ்வாதாரத்தை ஈட்டும் விருப்பத்தால் மட்டுமே காவி உடை உடுத்தியவர்கள் என்பதை அறிவீராக. முற்றாக மழிக்கப்பட்ட தலைகளுடன் அறக்கொடியை நிறுவும் அவர்கள், இதை (வாழ்வாதாரத்தை அடைவதை) மட்டுமே தங்கள் வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர்களாவர்.(34) எனவே, ஓ !மன்னா {ஜனகரே}, சடாமுடி தரித்தோ, முற்றாக மழிக்கப்பட்ட தலைகளுடனோ, மரவுரி தரித்தோ, தோலாடை தரித்தோ, காவி உடை தரித்தோ இருக்கும் உண்மையான பக்திமான்களை ஆதரித்து, உமது ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மறுமையில் அருள் உலகங்களை வெல்வீராக.(35) தன் புனித நெருப்பைப் பராமரிப்பவனும், விலங்குகளையும், தக்ஷிணைகளையும் கொடுத்து வேள்விகள் செய்பவனும், பகலும் இரவும் ஈகையில் ஈடுபடுபவனுமான ஒருவனை {ஒரு நல்ல மன்னனை} விட மேம்பட்ட அறவோன் வேறு எவன் இருக்க முடியும்?” என்று கேட்டாள் {ஜனகனின் மனைவி சுநைனா}”.(36)

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மன்னன் ஜனகன் இவ்வுலகில் உண்மையறிந்த மனிதனாகக் கருதப்படுகிறான். அவனே கூட (கடமையை உறுதி செய்யும்) இக்காரியத்தில் திகைப்படைந்தான். {அவனைப் போலவே} நீர் திகைப்படையாதீர்.(37) இவ்வாறே இல்லறத்தின் கடமைகளை ஈகையாளர்கள் நோற்கின்றனர். அனைத்து வகைகளிலான தீங்குகளையும் தவிர்த்து, ஆசை மற்றும் கோபத்தைக் கைவிட்டு,(38) அனைத்து உயிரினங்களையும் காப்பதில் ஈடுபட்டு, பெரியோரையும், வயதால் முதிர்ந்தோரையும் பேணியபிறகு, இறுதியாக நாம் அடைய விரும்பும் அருள் உலகங்களை அடைவதில் வெல்வோம்.(39) தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும் முறையாக நிறைவு கொள்ளச் செய்து, பிராமணர்களை வழிபட்டு, பேச்சில் உண்மையுடன் நாம் நிச்சயம் விரும்பத்தக்க அருள் உலகங்களை அடைவோம்” {என்றான் அர்ஜுனன்}.(40)

விவாத அறிவில் சாதிக்கும் மூடர்கள்! – சாந்திபர்வம் பகுதி – 19-அர்ஜுனன் ஆயுதங்களையும் போரையும் மட்டுமே அறிந்தவன் என்றும், அவனால் தவத்துறவுகளின் உண்மையை உணர முடியாது என்றும் அவனிடம் சொன்ன யுதிஷ்டிரன்; முக்தியை அடைய யோகமே சிறந்த வழிமுறை; சாத்திரங்கள் அறிந்தவர்களும் முற்பிறவி வினையால் உண்மையை அறிந்து கொள்வதில்லை; பற்றைத் துறந்து, ஆன்மாவைத் தன்னை நோக்கித் திருப்பினால் முக்தி அடையலாம் என்றது…

யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “பிரம்மத்தை அடைய வழிகோலும் வேதங்களையும், சாத்திரங்களையும் நான் அறிவேன். செயல்பாடு, துறவு ஆகிய இரண்டு வகை விளக்கங்களும் வேதங்களில் இருக்கின்றன.(1) அறிவை அடிப்படையாகக் கொண்ட சாத்திரங்களின் தீர்மானங்கள் குழப்பத்தை ஏற்படுத்துபவையாகவே இருக்கின்றன. எனினும், உண்மையில் நான் மந்திரங்களை முறையாக அறிந்திருக்கிறேன்.(2) நீ ஆயுதங்களை மட்டுமே அறிந்தவனாக, வீரர்களின் நடைமுறைகளை நோற்கிறாய். சாத்திரங்களின் உண்மைப்பொருளை நீ புரிந்து கொள்ள இயலாதவனாக இருக்கிறாய்.(3) நீ உண்மையில் கடமையை அறிந்தவனாக இருந்தால், சாத்திரங்களின் உண்மைப் பொருளையும், அறத்தின் உண்மைகளையும் தெளிவாக அறிந்த ஒருவனைப் போல என்னிடம் பேசியிருப்பாய்.(4) எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, சகோதரப்பாசத்தால் தூண்டப்பட்டு, முறையான தகுந்த வார்த்தைகளை நீ பேசியிருக்கிறாய். ஓ! அர்ஜுனா, நான் உன்னிடம் நிறைவடைந்தேன்.(5)

போரோடு தொடர்புடைய கடமைகள் அனைத்திலும், பல்வேறு செயல்களின் திறனைப் பொறுத்தவரையிலும் மூவுலகங்களிலும் உனக்கு இணையானவன் எவனும் இல்லை.(6) எனவே, பிறரால் ஊடுருவிப் பார்க்கமுடியாத நுணக்கங்களைக் கொண்ட அக்காரியங்களுடன் தொடர்புடைய நுணுக்கங்களைக் {போர் நுணுக்கங்களைக்} குறித்து நீ பேசலாம். எனினும், என் நுண்ணறிவில் ஐயங்கொள்வது உனக்குத் தகாது.(7) நீ போரறிவியலை அறிந்தவனே, ஆனால் ஒருபோதும் பெரியோருக்காகக் காத்திருந்தவனில்லை. அக்காரியத்தைக் குறித்து விரிவாகக் கற்ற பெரியோரின் தீர்மானங்களை நீ அறியமாட்டாய். தவம், துறவு, பிரம்ம அறிவு ஆகியவற்றில் முதலை விட இரண்டாவது மேன்மையானது, இரண்டாவதை விட மூன்றாவது மேன்மையானது.(8,9) எனினும், செல்வத்தை விட மேன்மையானது ஏதுமில்லை என நீ நினைப்பது பிழையே. செல்வமானது, அவ்வொளியில் {அவ்வாறு மேன்மையானதாக} உனக்குத் தோன்றாதவாறு உன்னை என்னால் நம்ப வைக்க முடியும்.(10)

அறவோர் அனைவரும் தவத்துறவுகளிலும், வேதகல்வியிலும் அர்ப்பணிப்புடன் இருப்பதைக் காணலாம். அழியாத உலகங்கள் பலவற்றைக் கொண்ட முனிவர்களும் கூட, தவத்தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்டிருக்கின்றனர்.(11) ஆன்ம அமைதி கொண்டவர்களும், எதிரிகளற்றோரும், வனங்களில் வசிப்போருமான வேறு சிலர் {சில ஆரியர்கள்}, தவங்கள் மற்றும் வேத கல்வியின் மூலம் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர்.(12) உலகம் சார்ந்த உடைமைகளில் உள்ள ஆசையைத் தவிர்த்து, மடமையில் பிறக்கும் இருளை {அறியாமையை} விலக்கி, வடக்கு நோக்கி (ஒளிப்பாதைகளில் சென்று) துறவிகளுக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அடைகின்றனர்.(13) தெற்கில் கிடப்பதும், ஒளி உலகங்களுக்கு வழிகோலுவதுமான பாதையானது, செயலில் அர்ப்பணிப்பு கொண்டோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பிறப்புக்கும், இறப்புக்கும் உடன்படும் மனிதர்கள் அதையே {தென்திசையில் இருக்கும் யமலோகத்தையே} அடைகின்றனர்.(14) எனினும், முக்தியில் விருப்பம் கொண்டோர் தங்கள் கண்களுக்கு முன்பு வைத்திருக்கும் {சொல்லையும், மனத்தையும் கடந்த} எல்லையானது விவரிக்க முடியாததாகும். அதை அடைவதற்கு யோகமே சிறந்த வழிமுறையாகும். அதை (உனக்கு) விளக்கிச் சொல்வது எளிதானதல்ல.(15)

கல்விமான்கள், எது உண்மையல்ல என்பதைக் கண்டுபிடிக்கும் விருப்பத்தில் சாத்திரங்களை நினைவுகூர்ந்து வாழ்கின்றனர். எனினும், பெரும்பாலும் அவர்கள் இதில் வழி தவறி, தாங்கள் தேடும் பொருளானது, இதிலிருக்கிறது, அதிலிருக்கிறது என்று நம்புகின்றனர்.(16) வேதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் பிற சாத்திரங்களில் இருந்து பலவற்றைத் திரட்டினாலும், வேரறுந்த வாழை மரத்தில் கடினமான மரப்பகுதியை {அதன் சாரத்தைக்} காண முடியாத மனிதர்களைப் போல, அவர்கள் உண்மையைக் காணத் தவறுகின்றனர்.(17) ஆன்மாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கையில்லாத சிலர், அதை {அந்த ஆன்மாவை}, ஆசை மற்றும் வெறுப்பு (மற்றும் பிற) தன்மைகளை {குணங்களைக்} கொண்டதாகவும், ஐம்பூதங்களாலான இந்த உடற்கட்டுக்குள் இருப்பதாகவும் கருதுகின்றனர்[1].(18) கண்ணால் காணப்பட இயலாத, வார்த்தைகளால் சொல்லப்பட இயலாத, மிக நுணுக்கமான அது {ஆன்மா}, செயலின் வேரைத் தன் முன்னிலையில் கொண்டு, உயிரினங்களுக்கு மத்தியில் (மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும்) வட்டத்தில் சுழன்று வருகிறது[2].(19) ஒருவன், தனது மனத்தின் ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, அனைத்து வகை அருளையும் ஊற்றெடுக்கச் செய்யும் ஆன்மாவைத் தன்னை நோக்கித் திரும்பச் செய்தால், அவன் முற்றிலும் விடுதலையடைந்தவனாகப் பேரின்பத்தை அடைவான்.(20)நல்லோரால் பின்பற்றப்படுவதும், ஞானிகளால் அடையப்படுவதுமான அத்தகு பாதை இருக்கும்போது, ஓ! அர்ஜுனா, அனைத்து வகைப் பேரிடரும் நிறைந்த செல்வத்தை நீ ஏன் மெச்சுகிறாய்?(21) ஓ! பாரதா, சாத்திரங்களை அறிந்தவர்களும், கொடைகள், வேள்விகள், செயல்பாடு ஆகியவற்றில் எப்போதும் ஈடுபடுபவர்களுமான பழங்காலத்து மனிதர்களும், {உன்னைப் போன்றே} இந்தக் கருத்தையே கொண்டிருந்தனர்.(22) ஓ! பாரதா, முறைப்படி விவாதிக்கும் அறிவியலில் {தர்க்க சாஸ்திரத்தில்} சாதிக்கும் சில மூடர்கள், தங்கள் முற்பிறவி குற்றங்களுடைய வலிமையின் விளைவால், ஆன்மாவின் இருப்பை மறுக்கின்றனர். இறுதி விடுதலையை {முக்தியைக்} குறித்த இந்த உண்மையை அவர்களை ஏற்கச் செய்தல் மிகக் கடினமானதாகும்[3].(23) அந்தத் தீய மனிதர்கள், பெரும் கல்வியறிவைக் கொண்டவர்களாயிருப்பினும், பூமி முழுவதும் பயணித்து, சபைகளில் உரையாற்றி, விடுதலை {முக்தி} குறித்த உண்மைக் கோட்பாட்டை மறுக்கின்றனர்.(24) ஓ! பார்த்தா, நாம் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை, வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்? உண்மையில், அதைப் போலவே (அந்த மனிதர்களால் சாத்திரங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ள முடியாததைப் போலவே), சாத்திரங்களை ஆழமாகப் புரிந்து கொண்ட ஞானியரையும், பக்திமான்களையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியாது.(25) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உண்மையை அறிந்த மனிதர்கள், தவத்தினாலும், நுண்ணறிவினாலும் பிரம்மத்தை அடைந்து, துறவினால் பேரின்பத்தை அடைகின்றனர்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(26)

வேள்வியும், செல்வமும்! – சாந்திபர்வம் பகுதி – 20-செல்வம் ஏன் உயர்வானது என யுதிஷ்டிரனுக்கு விளக்கிய முனிவர் தேவஸ்தானர்; வேள்விகளின் அவசியத்தைச் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யுதிஷ்டிரன் நிறுத்திய பிறகு, நாநயமிக்கப் பெருந்துறவி தேவஸ்தானர், அறிவு நிறைந்த இவ்வார்த்தைகளை மன்னனிடம் சொன்னார்.(1)தேவஸ்தானர் {யுதிஷ்டிரனிடம்}, “செல்வத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை என்று பல்குனன் {அர்ஜுனன்} உன்னிடம் சொன்னான். அக்காரியம் குறித்தே நானும் உன்னிடம் உரையாடப் போகிறேன். சிதறாத கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக.(2) ஓ! அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ நியாயமாக இந்தப் பூமியை வென்றிருக்கிறாய். ஓ! மன்னா, அவளை {பூமியை} வென்ற பிறகு, காரணமேதுமில்லாமல் அவளைக் கைவிடுவது உனக்குத் தகாது.(3) வேதங்களில் நான்கு வகை வாழ்வுமுறைகள் குறிப்பிடப்படுகின்றன. ஓ! மன்னா, நீ ஒன்றன்பின் ஒன்றாக முறையாக அவற்றைக் கடந்து செல்ல வேண்டும்.(4) எனவே, அபரிமிதமான கொடைகளுடன் பெரும் வேள்விகளையே நீ தற்போது செய்ய வேண்டும். முனிவர்களிலேயே கூட, சிலர் வேத கல்வி சொல்லும் வேள்வியில் ஈடுபடுகின்றனர், சிலர் அது சொல்லும் அறிவில் ஈடுபடுகின்றனர்.(5)

ஓ! பாரதா, எனவே, தவசிகளே கூடச் செயல்பாட்டுக்கு {கர்மத்திற்கு} அடிமையாக இருக்கிறார்கள் என்பதை நீ அறிய வேண்டும். எனினும், வைகானசர்கள் {வானப்ரஸ்தர்கள்} ’செல்வத்தைத் தேடாதவனே, தேடுபவனைக் காட்டிலும் மேன்மையானவன்’ என்று அறமுரைப்பதாகச் சொல்லப்படுகிறது[1]. அந்தக் கட்டளையைப் பின்பற்றுபவன் குற்றங்கள் இழைக்கக்கூடும் என்றே நான் நினைக்கிறேன்.(6,7) வேத விதிகளின் பொருட்டு, (வேள்விகளைச் செய்வதற்காக) மனிதர்கள் பல்வேறு பொருட்களை ஒன்றாகத் திரட்டுகின்றனர். தன் அறிவால் களங்கப்பட்டவன், செல்வத்தைத் தகுந்தோருக்கு அளிக்காமல், தகாதவர்களுக்கு அளிப்பதால், அவன் கருவைக் கொன்ற குற்றத்தை இழைக்கிறான் என்பதை அறியாதிருக்கிறான்[2].(8) தகுந்தவர்களுக்கும், தகாதவர்களுக்கும் இடையில் வேறுபாட்டைக் கண்டு, முறையாக ஈகைக் கடமையாற்றுவது எளிதானதல்ல. விதிசமைக்கும் உயர்ந்தவன் {பிரம்மன்}, வேள்விக்காகவே செல்வத்தைப் படைத்தான். செல்வத்தைக் கவனிக்கவும், வேள்வியைச் செய்யவும் அவன் மனிதர்களையும் படைத்தான். இதன் காரணமாக ஒருவனுடைய மொத்த செல்வத்தையும் வேள்விக்குப் பயன்படுத்தலாம். இயற்கையின் விளைவாக இன்பமே அதைப் பின்தொடரும்.(10)பெரும் சக்தி படைத்த இந்திரன், மதிப்புமிக்க அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பல்வேறு வேள்விகளைச் செய்தே தேவர்கள் அனைவரையும் விஞ்சினான். அவன், அந்த வழிமுறையிலேயே அவர்களின் தலைமைப் பதவியை அடைந்து சொர்க்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான். எனவே, அனைத்தும் வேள்விகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்.(11) மான் தோல் உடுத்தியவனான உயர் ஆன்ம மஹாதேவன், சர்வம் என்றழைக்கப்படும் வேள்வியில் {சர்வமேத யாகத்தில்} தன்னையே காணிக்கையாக {ஆகுதியாக} ஊற்றி, தேவர்களில் முதல்வனாகி, அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தையும் விஞ்சி, அச்சாதனையால் அவர்களைவிட மேன்மையடைந்து, பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(12) அவிக்ஷித்தின் மகனான மன்னன் மருத்தன், {வேள்விகளில் கொடுக்கப்படும்} அபரிமிதமான செல்வத்தால் தேவர்கள் தலைவனான சக்ரனையே {இந்திரனையே} வென்றான். அவன் செய்த பெரும் வேள்வியில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தாலானவையாக இருந்தன, ஸ்ரீயும் {லட்சுமியும் உடல் கொண்டவளாக} நேரடியாக அங்கே வந்தாள்.(13) மாமன்னன் ஹரிச்சந்திரன், வேள்விகளைச் செய்து, பெரும் தகுதியையும், பெரும் மகிழ்ச்சியையும் ஈட்டினான் என்பதை நீ கேட்டிருக்கிறாய். மனிதனாக இருப்பினும் அவன் தனது செல்வத்தால் சக்ரனையே {இந்திரனையே} வென்றான். வேள்வியில் அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இவையே காரணங்கள்” {என்றார் தேவஸ்தானர்}.(14)

தேவஸ்தானர் அறிவுரை! – சாந்திபர்வம் பகுதி – 21-ஆட்சியேற்று அறம்பயில வேண்டியதன் அவசியத்தைச் சொல்லி யுதிஷ்டிரனை அறிவுறுத்திய முனிவர் தேவஸ்தானர்…

தேவஸ்தானர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக இந்திரனால் கேட்கப்பட்டு, பிருஹஸ்பதியால் அவனுக்கு அளிக்கப்பட்ட உரை ஒரு பழைய வரலாற்றில் தென்படுகிறது.(1) பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “மனநிறைவே உயர்ந்த சொர்க்கம், மனநிறைவே உயர் அருள். மனநிறைவை விட உயர்ந்தது ஏதுமில்லை. மனநிறைவே உயர்ந்த நிலையில் நிற்கிறது.(2) ஆமையானது தனது அங்கங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்வதைப் போல ஒருவன் தனது ஆசைகள் அனைத்தையும் அடக்கிக் கொள்ளும்போது, அவனது ஆன்மாவின் இயற்கையான பிரகாசம் வெளிப்படுகிறது.(3)  ஒருவன் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ளாத போது, எந்த உயிரினமும் அவனிடம் அச்சங்கொள்ளாத போது, அவன் ஆசையையும், வெறுப்பையும் வெல்லும்போது, தனது ஆன்மாவைக் காண்கிறான் எனச் சொல்லப்படுகிறது.(4)  செயல், சொல், மனம் ஆகியவற்றால் ஒருவன் எவருக்கும் தீங்கிழைக்க நினைக்காத போது, அவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது” என்றார்.(5)

ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இவ்வாறு உயிரினங்கள் எந்த அறத்தைப் பின்பற்றினாலும், அவை அதற்குரிய கனிகளை {பலன்களை} அடைகின்றன. ஓ! பாரதா, இதைக் கருத்தில் கொண்டு விழிப்படைவாயாக[1].(6) சிலர் அமைதியைப் புகழ்கின்றனர், சிலர் விடாமுயற்சியையும், சிலர் அமைதி மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டையும் புகழ்கின்றனர். சிலர் வேள்வியைப் புகழ்கின்றனர்[2]; வேறு சிலர் துறவைப் புகழ்கின்றனர். சிலர் கொடைகளையும், வேறு சிலர் அதை ஏற்பதையும் புகழ்கின்றனர்.(7,8) சிலர், (எதிரிகளைக்) கொன்று, வெட்டி, துளைத்து அடையப்படும் அரசுரிமையையும், குடிமக்களைப் பேணுவதையும் புகழ்கிறார்கள்.(9) சிலர் தங்கள் நாட்களை ஓய்வில் கழிப்பதைப் புகழ்கிறார்கள். இவையனைத்தையும் கண்காணித்த கல்விமான்கள்,(10) எந்த உயிரினத்துக்கும் தீங்கிழைக்காமல் இருக்கும் அறமே நல்லோரால் மெச்சத்தகுந்தது என்று தீர்மானிக்கின்றனர்[3].தான்தோன்றியான {சுயம்புவான} மனுவால் சொல்லப்படுவது போல, தீங்கிழையாமை, உண்மை நிறைந்த பேச்சு, நீதி, கருணை, தன்னடக்கம்,(11) தன் மனைவியரிடம் (வாரிசுகளை) உண்டாக்கல், இனிமை, பணிவு, பொறுமை ஆகியவற்றைப் பயில்வதே அனைத்து அறங்களிலும் சிறந்ததாகும். எனவே, ஓ! குந்தியின் மகனே, இந்த அறத்தையே நீ கவனமாக நோற்பாயாக.(12) அரசக் கடமைகளின் உண்மைகளை அறிந்த க்ஷத்திரியன் எவனோ, அரசுரிமையே ஏற்று, அனைத்து நேரங்களிலும் தன் ஆன்மாவைக் கட்டுபடுத்தி,  அன்புக்குரியவை, அல்லாதவை ஆகியவற்றைச் சமமாகக் கருதி, வேள்வி விருந்துகளில் எஞ்சியவற்றை உண்டு,(13) தீயோரை அடக்கி, நல்லோரை பேணிக் காத்து, அறத்தின் பாதையில் தன் குடிமக்களை நடைபோடச் செய்து, தானும் அவ்வழியிலேயே நடந்து,(14) தன் மகுடத்தைத் தன் மகனிடம் ஒப்படைத்த பிறகு, காட்டுக்குச் சென்று, காட்டின் பொருட்களை உண்டு, அங்கேயே வாழ்ந்து, வேத விதிகளின்படி சோம்பலனைத்தையும் களைந்த க்ஷத்திரியன் எவனோ,(15) நன்கறியப்பட்ட மன்னர்களின் கடமைகள் அனைத்துக்கும் கீழ்ப்படியும் க்ஷத்திரியன் எவனோ, அவன் இம்மையிலும், மறுமையிலும் அற்புதக் கனிகளை அடைவான் என்பது உறுதியாகும்.

நீ எதைக் குறித்துப் பேசுகிறாயோ அந்த இறுதி விடுதலை {முக்தி} அடைவதற்கரியதாகும். அதைத் தொடர்வதில் பல தடைகள் ஏற்படும்.(16) அத்தகு கடமைகளைப் பின்பற்றி, ஈகையும், தவமும் பயின்று, இரக்க குணத்துடன் கூடி, ஆசை மற்றும் கோபத்தில் இருந்து விடுபட்டு,(17) நேர்மையாகத் தங்கள் குடிமக்களை ஆட்சி செய்து, பசுக்கள் மற்றும் பிராமணர்களுக்காகப் போரிடுபவர்கள் மறுமையில் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(18) ஓ! எதிரிகளை எரிப்பவனே {யுதிஷ்டிரனே}, இதற்காகவே ருத்திரர்களும், வசுக்களும், ஆதித்தியர்களும், சத்யசுகளும், மன்னர்க்கூட்டமும் இவ்வறத்தைப் பின்பற்றுகின்றனர். அறத்தால் மனத்தில் ஆழப்பதிந்திருக்கும் கடமைகளை எந்த அலட்சியமும் இல்லாமல் பயில்வோர், தங்களுடைய அந்தச் செயல்களின் மூலமே சொர்க்கத்தை அடைகிறார்கள்” என்றார் {தேவஸ்தானர்}.(19)

நோயிலிருந்து விடுபடுவீராக! – சாந்திபர்வம் பகுதி – 22-யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூறி, க்ஷத்திரியக்கடமைகளையும், பிராமணக் கடமைகளையும் அவனுக்கு நினைவுறுத்தி, வேள்விகளைச் செய்யுமாறு சொன்ன அர்ஜுனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதன் பிறகு அர்ஜுனன், மங்கா புகழ் கொண்டவனும், உற்சாகமற்ற இதயம் கொண்டவனும், தன் அண்ணனுமான மன்னன் யுதிஷ்டிரனிடம், இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! அனைத்து வகைக் கடமைகளையும் அறிந்தவரே, க்ஷத்திரியக் கடமைகளைப் பயின்று, அடைவதற்கரிதான ஆட்சியுரிமையை அடைந்து, உமது எதிரிகள் அனைவரையும் வென்ற பிறகும், நேர் என் துன்பத்தில் எரிகிறீர்?(2) ஓ! மன்னா, க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரை, போரில் மரணமானது, பல்வேறு வேள்விகளைச் செய்வதை விடத் தகுதி வாய்ந்ததாக {புண்ணியம் நிறைந்ததாகக்} கருதப்படுகிறது. க்ஷத்திரியக்கடமைகள் சொல்லப்பட்டிருக்கும் விதிகளில் இஃது அறிவிக்கப்பட்டிருக்கிறது.(3) தவங்கள், துறவு ஆகியவை பிராமணர்களின் கடமைகளாகும். இவையே ({க்ஷத்திரிய மற்றும் பிராமண} இரு வகைகளையும் பீடித்திருக்கும்) மறுமை குறித்த விதியாகும். உண்மையில், ஓ! பலமிக்கவரே, க்ஷத்திரியர்களுக்குப் போர்க்கள மரணமே விதிக்கப்பட்டிருக்கிறது.(4) க்ஷத்திரியர்களின் கடமைகள் மிகவும் கடுமையானவையும், ஆயுதங்களோடு எப்போதும் தொடர்புடையவையும் ஆகும். ஓ! பாரதர்களின் தலைவரே, நேரம் வரும்போது அவர்கள் போர்க்களத்தில் ஆயுதங்கள் மூலம் மரணமடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(5)

ஓ! மன்னா, க்ஷத்திரியர்கள் பிராமணர்களில் இருந்தே உதித்தவர்கள் என்பதால், ஒரு பிராமணன் க்ஷத்திரியக் கடமைகளை நோற்று வாழ்ந்தாலும், அது நிந்திக்கத்தக்கதல்ல.(6) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, துறவோ, வேள்வியோ, தவங்களோ, பிறரின் செல்வத்தைச் சார்ந்திருப்பதோ க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்படவில்லை.(7) ஓ! பாரதக் குலத்தின் காளையே, நீர் கடைமைகள் அனைத்தையும் அறிந்த அற ஆன்மாவாவீர். அனைத்துச் செயல்களிலும் திறன்மிக்கவரும், ஞானியுமான மன்னன்னுமாவீர். இவ்வுலகில் சரியானது மற்றும் தவறானதுக்கிடையில் உம்மால் வேறுபாட்டைக் காணமுடியவில்லை.(8) துக்கத்தால் உண்டான மனத்தளர்வைக் கைவிட்டு, செயல்பாட்டில் பலமான விருப்பம் கொள்வீராக. குறிப்பாக க்ஷத்திரியனின் இதயமானது வஜ்ரத்தைப் போன்று கடுமையானதாகும்.(9) க்ஷத்திரியக் கடமைகளைப் பயின்று உமது எதிரிகளை வென்ற பிறகு, முட்களற்ற பேரரசை அடைந்த நீர், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, உமது ஆன்மாவை வென்று வேள்விகளைச் செய்வதிலும், ஈகை பயில்வதிலும் ஈடுபடுவீராக.(10)

இந்திரன், பிராமணனாக இருப்பினும், தன் செயல்பாடுகளாக ஒரு க்ஷத்திரியனாகி, எண்ணிக்கையில் எண்ணுற்று பத்து {810} மடங்கு இருந்த பாவிகளான தன் சொந்தங்களுடன் போரிட்டான்.(11) ஓ! ஏகாதிபதி, அவனது அந்தச் செயல்கள் புகழத்தக்கனவும், பாராட்டுக்குத் தகுந்தனவும் ஆகும். நாம் கேள்விப்படுவதன்படியே அவன் தேவர்களின் தலைமைப் பதவியையும் அதன் மூலமே அடைந்தான்.(12) எனவே, ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, அந்த இந்திரன் செய்ததைப் போலவே அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்து, உமது நோயிலிருந்து விடுபடுவீராக.(13) ஓ! க்ஷத்திரியர்களில் காளையே கடந்த காலத்திற்காக இவ்வாறு வருந்தாதீர். கொல்லப்பட்டவர்கள் ஆயுதங்களால் தூய்மையடைந்து, க்ஷத்திரிய அறத்தின் விதிகளுக்கு ஏற்புடைய உயர்ந்த கதியை அடைந்திருக்கிறார்கள்.(14) எது நடந்ததோ அதுவே நடப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தது. ஓ! மனிதர்களில் புலியே, விதியானது தடுக்கப்பட இயலாததாகும்” என்றான் {அர்ஜுனன்}”.(15)

சங்கர், லிகிதர் மற்றும் சுத்யும்னன்! – சாந்திபர்வம் பகுதி – 23-திஷ்டிரனிடம் அர்ஜுனனின் வார்த்தைகளை ஆதரித்துப் பேசிய வியாசர்; மன்னர்களின் செங்கோலின் சிறப்பைச் சொல்வதற்காகச் சங்கர், லிகிதர் என்ற இரு தவசிகள் மற்றும் மன்னன் சுத்யும்னன் ஆகியோரின் கதையைச் சொன்னது; குற்றத்திற்கான தண்டனை வழங்கும் மன்னன் நன்னிலை அடைவான் என்றது

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சுருட்டை முடி கொண்ட அர்ஜுனனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், குந்திக்குப் பிறந்த அந்தக் குரு மன்னன் {யுதிஷ்டிரன்} பேச்சற்றவனாக அமைதியாக இருந்தான். பிறகு தீவில் பிறந்தவர் (வியாசர்) இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! இனிய யுதிஷ்டிரா, அர்ஜுனனின் வார்த்தைகள் உண்மையானவை. சாத்திரங்கள் தீர்மானிக்கும் உயர்ந்த அறமானது இல்லறக் கடமைகளைச் சார்ந்தே இருக்கிறது. நீ அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனாவாய். உனக்காகப் பரிந்துரைக்கப்படும் (இல்லறக்) கடமைகளை முறையாக நோற்பாயாக. இல்லறக் கடமைகளைத் துறந்து காட்டுக்குள் ஓயும் வாழ்வானது உனக்காக விதிக்கப்படவில்லை.(3) தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள் ஆகியோர் அனைவரும் (தங்கள் வாழ்வாதாரத்தை அடைய) இல்லற வாழ்வை வாழ்வும் மனிதனைச் சார்ந்தே இருக்கின்றனர்.(4) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, பறவைகள், விலங்குகள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் ஆகியனவும் இல்லற வாழ்வு வாழும் மனிதர்களாலேயே தாங்கப்படுகின்றன. எனவே, அவ்வாழ்வு முறைக்குச் சொந்தமானவனே (பிறர் அனைவரிலும்) மேன்மையானவன் ஆவான்.(5)

நால்வகை வாழ்வு முறைகளிலும், இல்லற வாழ்வே மிகக் கடினமானதாகும். ஓ! பாரத்தா, புலனடக்கம் இல்லா மனிதர்கள் பயில்வதற்குக் கடினமான அந்த வாழ்வு முறையையே நீ நோற்பாயாக.(6) நீ வேதங்கள் அனைத்திலும் நல்ல அறிவைக் கொண்டிருக்கிறாய். பெரும் தவத் தகுதியையும் ஈட்டியிருக்கிறாய். எனவே, உன் மூதாதையரின் நாட்டுச் சுமையை ஓர் எருதைப் போலச் சுமப்பதே உனக்குத் தகுந்ததாகும்.(7) வெற்றியடைவதற்காகத் தவங்கள், வேள்விகள், மன்னிக்கும் தன்மை {பொறுமை}, கல்வி, துறவு, புலனடக்கம், மனநிறைவு, தனிமையில் வாழ்தல், ஆழ்ந்த தியானம், (பிரம்ம) அறிவு ஆகியற்றை, தங்கள் சிறப்பான முயற்சியால் பிராமணர்களே நோற்க வேண்டும்.(8)

நான் இப்போது உனக்கு க்ஷத்திரியர்களின் கடமைகளைச் சொல்லப் போகிறேன். அவை நீ அறியாதனவல்ல. வேள்வி, கல்வி, முயற்சி {உழைப்பு}, குறிக்கோள்[1],(9) “தண்டக்கோல் {செங்கோல்} தரித்தல், கடுமை, குடிகளைக் காத்தல், வேதங்களில் அறிவு, அனைத்து வகை நோன்புகளையும் பயிலல், நன்னடத்தை, செல்வமீட்டல், தகுந்த மனிதர்களுக்குக் கொடையளித்தல் ஆகியவை,(10) அரச வகையைச் சேர்ந்தவர்களால் அடையப்பட்டு, நன்றாகச் செய்யப்பட்டால், அவை அவர்களை இம்மையிலும், மறுமையிலும் பாதுகாக்கும் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(11) ஓ! குந்தியின் மகனே, இவற்றில் தண்டக்கோலை {செங்கோலைத்} தரித்தலே முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. ஒரு க்ஷத்திரியனுக்குள் பலமும், அந்தப் பலத்திற்குள் தண்டமும் எப்போதும் வசித்திருக்க வேண்டும்.(12) ஓ! மன்னா, நான் சொல்லும் இந்தக் கடமைகள் க்ஷத்திரியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையும், அவர்களது வெற்றியில் பெரும் பங்காற்றுபவையுமாகும். இது தொடர்பாகப் பிருஹஸ்பதி ஒரு வரியைப் பாடியிருக்கிறார்.(13) “எலியை விழுங்கும் பாம்பைப் போல, அமைதியை விரும்பும் ஒரு மன்னனையும், இல்லறத்தில் மிகுந்த பற்றைக் கொண்ட ஒரு பிராமணனையும் பூமி விழுங்கிவிடும்” என்று பாடியிருக்கிறார்.(14) அரசமுனியான சுத்யும்னன், தண்டக்கோலை {செங்கோலை} மட்டுமே தரித்து, பிரசேதசின் மகனான தக்ஷனைப் போல உயர்ந்த வெற்றியை அடைந்தான் என நாம் கேள்விப்படுகிறோம்” என்றார் {வியாசர்}.(15)யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! புனிதமானவரே, பூமியின் தலைவனான சுத்யும்னன் எந்தச் செயல்களால் அந்த உயர்ந்த வெற்றியை அடைந்தான்? அம்மன்னனின் வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(16)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக இந்தப் பழைய வரலாறு சொல்லப்படுகிறது. கடும் நோன்புகளை நோற்பவர்களாகச் சங்கன் மற்றும் லிகிதன் என இரு சகோதரர்கள் இருந்தனர்.(17) அந்த இரு சகோதரர்களும், அழகிய இரு வசிப்பிடங்களைத் தனித்தனியே கொண்டிருந்தனர். பாஹுதை என்றழைக்கப்படும் ஓடையின் கரையில் அமைந்திருந்த அந்த வசிப்பிடங்கள், மலர்கள் மற்றும் கனிகளை எப்போதும் சுமந்திருக்கும் மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(18) ஒரு சமயம், லிகிதர் என்பவர், தமது சகோதரரான சங்கரின் வசிப்பிடத்திற்கு வந்தார். அந்நேரத்தில் ஏதோ காரியத்திற்காகச் சங்கர் தமது ஆசிரமத்தை விட்டு வெளியே சென்றிருந்தார்.(19) தமது சகோதரரின் ஆசிரமத்திற்கு வந்த லிகிதர் கனிந்த பல கனிகளைப் பறித்தார்.(20) அவற்றை அடைந்த அந்த மறுபிறப்பாள {பிராமண} லிகிதர், மனசாட்சியின் எந்த ஐயவுணர்வும் இன்றி அவற்றை உண்டார். அப்படி அவர் உண்டு கொண்டிருந்தபோது, சங்கர் தமது ஓய்வில்லத்திற்கு வந்தார்.(21)

அவ்வாறு உண்டுகொண்டிருக்கும் தமது சகோதரனைக் கண்ட சங்கர், அவனிடம், “இக்கனிகளை எங்கே நீ அடைந்தாய்? எக்காரணத்திற்காக இவற்றை உண்கிறாய்?” என்று கேட்டார்.(22) தமது அண்ணனை அணுகி, அவரை வணங்கிய லிகிதர், சிரித்துக் கொண்டே அவரிடம், “நான் இவற்றை இந்த ஓய்வில்லத்திலேயே அடைந்தேன்” என்றார்.(23) பெரும் சினத்தில் நிறைந்த சங்கர் அவரிடம், “இக்கனிகளை எடுத்ததால் நீ திருட்டுக் குற்றத்தை இழைத்திருக்கிறாய்.(24) செல்வாயாக, மன்னனிடம் சென்று, நீ செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வாயாக. அவனிடம் {மன்னனிடம்}, “ஓ! மன்னர்களில் சிறந்தவனே, எனக்குக் கொடுக்கப்படாததை அடைந்து குற்றத்தை இழைத்துவிட்டேன்.(25) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, என்னைக் கள்வனாக அறிந்து கொண்டு, உன் வகைக்கான கடமையை நோற்று, கள்வனுக்கான தண்டனையை எனக்கு வழங்குவாயாக” எனச் சொல்” என்றார் {சங்கர்}.(26)

இவ்வாறு சொல்லப்பட்டவரும், கடும் நோன்புகளைக் கொண்டவருமான லிகிதர், தமது அண்ணனின் ஆணையின் பேரில் மன்னன் சுத்யும்னனிடம் சென்றார்.(27) மன்னன் சுத்யும்னன், லிகிதர் வந்திருக்கிறார் என்பதை வாயில்காப்போரிடம் இருந்த கேட்டு, (அந்தத் தவசியை) வரவேற்பதற்காகத் தன் அமைச்சர்களுடன் சென்றான்.(28) அவரைச் சந்தித்த அம்மன்னன், கடைமைகளை அறிந்த மனிர்கள் அனைவரிலும் முதன்மையான அவரிடம், “ஓ! மரியாதைக்குரியவரே, உமது வருகையின் காரணத்தைச் சொல்வீராக. அஃது ஏற்கனவே நிறைவடைந்ததாகக் கருதுவீராக” என்றான்.(29) இவ்வாறு கேட்கப்பட்ட அந்த மறுபிறப்பாள தவசி {லிகிதர்}, அந்தச் சுத்யும்னனிடம், “நீ அதை நிறைவேற்றுவாய் என்று முயலில் உறுதியளிப்பாயாக. நான் சொன்ன பிறகு, அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதே உனக்குத் தகும்.(30) ஓ! மனிதர்களில் காளையே, என் அண்ணனால் எனக்குக் கொடுக்கப்படாத சில கனிகளை நான் உண்டேன். ஓ! ஏகாதிபதி, அதற்காக எந்தத் தாமதமும் இல்லாமல் என்னைத் தண்டிப்பாயாக” என்றார்.(31)

சுத்யும்னன் {தவசி லிகிதரிடம்}, “மன்னன் தண்டக்கோலைத் தரிக்கத் தகுந்தவன் என்று கருதப்பட்டால், ஓ! பிராமணர்களில் காளையே, மன்னிப்பு வழங்குவதற்கும் அவன் தகுந்தவனே.(32) ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே, உமது செயலால் தூய்மையடைந்த நீர், மன்னிக்கப்பட்டதாகக் கருதுவீராக. {எனவே}, உமது வேறு விருப்பங்களை இப்போது எனக்குச் சொல்வீராக. அந்த உமது ஆணைகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்று பதிலுரைத்தான்”.(33)

வியாசர் தொடர்ந்தார், “மறுபிறப்பாள தவசியான லிகிதர், அந்த உயர் ஆன்ம மன்னனால் இவ்வாறு கௌரவிக்கப்பட்டாலும், வேறு எந்த உதவியையும் அவனிடம் கேட்கவில்லை {தமது கோரிக்கையிலேயே உறுதியாக இருந்தார்}.(34) பிறகு அந்தப் பூமியின் ஆட்சியாளன் {சுத்யும்னன்}, அந்த உயர் ஆன்ம லிகிதரின் இரு கரங்களையும் அறுத்தான். பின்னவர் {லிகிதர்} அந்தத் தண்டனையை ஏற்று, அங்கிருந்து சென்றார்.(35) தமது அண்ணன் சங்கரிடம் திரும்பிய லிகிதர், பெரும் துன்பத்துடன், “(செய்த குற்றத்திற்காக) முறையாகத் தண்டிக்கப்பட்ட இந்த இழிந்தவனை இப்போது மன்னிப்பதே உமக்குத் தகும்” என்றார்.(36)

சங்கர் {லிகிதரிடம்}, “ஓ! கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் உன்னிடம் கோபங்கொள்ளவுமில்லை, நீ எனக்குத் தீங்கிழைக்கவும் இல்லை. எனினும், உன் அறம் தவறியது. அந்த அவலநிலையில் இருந்து நான் உன்னை மீட்டேன்.(37) பாஹுதை ஆற்றுக்குத் தாமதமின்றிச் சென்று, தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள் ஆகியோருக்கு முறையாக நீர்க்காணிக்கை செலுத்தி {தர்ப்பணஞ்செய்து} அவர்களை நிறைவு கொள்ளச் செய்து, இனி ஒருபோதும் உன் இதயத்தைப் பாவத்தில் நிலைக்கச் செய்யாதிருப்பாயாக[2]” என்றார்.(38)

சங்கரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட லிகிதர், அந்தப் புனித ஓடையில் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, நீர்க்கடனைச் செலுத்த தொடங்கினார்.(39) அப்போது, அவரது {லிகிதரின்} தோள்களின் நுனிப்பகுதியில் இரு தாமரைகளுக்கு ஒப்பான இரு கரங்கள் தோன்றின. ஆச்சரியத்தில் நிறைந்த அவர் {லிகிதர்}, தமது தமையனிடம் {சங்கரிடம்} வந்து, தன்னிரு கரங்களையும் அவருக்குக் காட்டினார்.(40) சங்கர் அவரிடம் {லிகிதரிடம்}, “இவையாவும் என் தவங்களின் மூலம் அடையப்பட்டன. இதில் ஆச்சரியங்கொள்ளாதே. முன்னறிவே இங்கே கருவியாக இருக்கிறது” என்றார்.(41)

லிகிதர் {சங்கரிடம்}, “ஓ! பெரும் காந்தி கொண்டவரே, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, உமது தவங்களின் சக்தி இத்தகையதாக இருக்கையில், முதலிலேயே என்னை ஏன் நீர் தூய்மையாக்கவில்லை?” என்று கேட்டார்.(42)

சங்கர் {லிகிதரிடம்}, “நான் வேறு வகையில் செயல்படக்கூடாது. நான் தண்டிப்பவனல்ல. (உன்னைத் தண்டித்த) ஆட்சியாளனும், நீயும், பித்ருக்களுடன் சேர்ந்து தூய்மையடைந்தீர்கள்” என்றார்”.(43)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாண்டுவின் மூத்த மகனே {யுதிஷ்டிரா}, அம்மன்னன் {சுத்யும்னன்}, தன் செயலால் மேன்மையடைந்து, தலைவன் தக்ஷனைப் போலவே உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(44) குடிகளை ஆள்வதே க்ஷத்திரியர்களின் கடமையாகும். ஓ! ஏகாதிபதி, வேறு எதுவும் அவர்களுக்குத் தவறான பாதையாகவே கருதப்படும். உன் இதயத்தைத் துயரில் நிலைகொள்ளச் செய்யாதே.(45) கடமையை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவனே, உன் சகோதரனின் இந்த நல்ல வார்த்தைகளைக் கேட்பாயாக. ஓ! மன்னா, தண்டக்கோல் {செங்கோல்} தரிப்பதே மன்னர்களின் கடமையாகும்; தலையை மழித்துக் கொள்வது அவர்களுக்கான கடமையல்ல” {என்றார் வியாசர்}”.(46)

மன்னன் ஹயக்ரீவன்! – சாந்திபர்வம் பகுதி – 24-மன்னனின் கடமைகளை யுதிஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்ன வியாசர்; ஹயக்ரீவனின் கதையைச் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் தவசியான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, மீண்டும் குந்தியின் மகனான அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்},(1) “ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களின் தலைவனான யுதிஷ்டிரா, அபரிமிதமான சக்தி கொண்டவர்களும், பெரும் தேர்வீரர்களுமான உனது தம்பியர் காடுகளில் வசித்திருந்தபோது பேணி வளர்த்த விருப்பங்களை அடையட்டும். ஓ! பிருதையின் மகனே, நகுஷனின் மகனான (மற்றொரு) யயாதியைப் போல இந்தப் பூமியை நீ ஆட்சி செய்வாயாக.(2,3) முன்பு காட்டில் வசித்துத் தவம் செய்து கொண்டிருந்தபோது பேரிடர் உங்களுடையதாக இருந்தது. ஓ! மனிதர்களில் புலியே, அந்தப் பேரிடர் முடிந்துவிட்டது. எனவே, சிலகாலம் இன்புற்றிருப்பாயாக.(4) ஓ! பாரதா, சிலகாலத்திற்கு, அறத்தகுதி, செல்வம் மற்றும் இன்பத்தை உன் தம்பிகளோடு சேர்ந்து ஈட்டிபிறகு நீ காட்டுக்கு ஓயச் செல்லலாம்.(5)

ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, உன்னிடம் இரந்து கேட்பவர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்களுக்கு நீ பட்டிருக்கும் கடனிலிருந்து முதலில் விடுபடுவாயாக. ஓ! குந்தியின் மகனே, பிறகு நீ பிற வாழ்வுமறைகள் அனைத்தையும் பயிலலாம்.(6) ஓ! குருகுலத்தின் மகனே, சர்வமேதம் மற்றும் அஸ்வமேதம் ஆகிய வேள்விகளை நீ செய்வாயாக. ஓ! ஏகாதிபதி, நீ மறுமையில் உயர்ந்த கதியை அடைவாய்.(7) ஓ! பாண்டுவின் மகனே, (பிராமணர்களுக்குப்) பெருங்கொடை அளிக்கும் பெரும் வேள்விகளில் உன் தம்பிகளையும் நிறுவச் செய்து பெரும் புகழை அடைவாயாக.(8) ஓ! மனிதர்களில் புலியே, குருக்களில் சிறந்தவனே, ஒரு பழமொழி இருக்கிறது. ஓ! மன்னா, அதன்படி நடந்தால் நீ அறத்தின்கண் பிறழமாட்டாய் என்பதால் அதைக் கேட்பாயாக.(9) ஓ! யுதிஷ்டிரா, ஓ! மனிதர்களின் மன்னா, போரிட்டு வெற்றியடைந்து நாட்டைப் பெற்றவனுடைய அறத்தை அறமறிந்தோர் தீர்மானித்திருக்கின்றனர்[1].(10)ஒரு மன்னன், இடம் மற்றும் நேரம் ஆகிய கருதுகோள்களால் வழிநடத்தப்பட்டு, சாத்திரங்களைச் சார்ந்து ஒரு புரிதலை அடைந்து, பெரும் எண்ணிக்கையிலான கொள்ளையர்களைத் தண்டித்தாலும்கூட அவன் பாவமிழைத்தவனாக மாட்டான்[2].(11) எந்த மன்னன், ஆறில் ஒரு பங்கை {16%} வரியாகப் பெற்றும், தன் நாட்டைக் காக்காமல் இருக்கிறானோ, அவன் தன் நாட்டின் {நாட்டு மக்களின்} பாவங்களில் நான்கில் ஒரு பங்கை {25%} அடைகிறான்.(12) எதன் மூலம் ஒரு மன்னன் அறத்தின் கண் பிறழமாட்டேன் என்பதையும் கேட்பாயாக. சாத்திரங்களை மீறுவதால் ஒருவன் பாவமிழைக்கிறான். அதே வேளையில் அதற்குக்கீழ்ப்படிபவன் அச்சமில்லாமல் வாழ்கிறான்.(13) எந்த மன்னன், சாத்திரங்களின் அடிப்படையிலான அறிவால் வழிநடத்தப்பட்டு, காமம் மற்றும் கோபத்தை அலட்சியம் செய்து, தன் குடிமக்கள் அனைவரிடமும் ஒரு தந்தையைப் போல வேறுபாடில்லாமல் நடந்து கொள்வானோ, அவன் ஒருபோதும் பாவமிழைக்கமாட்டான்.(14) ஓ! பெருங்காந்தி கொண்டவனே, ஒரு மன்னன் விதியால் பீடிக்கப்பட்டு, ஒரு செயலை நிறைவேற்றுவதில் தவறுவானென்றால், அத்தகு தோல்வியானது மீறல் என்று அழைக்கப்படாது.(15)பலம், கொள்கை ஆகியவற்றால் அந்த மன்னன் தன் எதிரிகளை அடக்க வேண்டும். அவன் தன் நாட்டில் பாவம் இழைக்க அனுமதிக்காமல், அறம் பயில வழிவகைச் செய்ய வேண்டும்.(16) ஓ! யுதிஷ்டிரா, துணிச்சல்மிக்க மனிதர்கள், தங்கள் நடைமுறைகளில் மரியாதைக்குரியவர்களாக இருப்போர், தங்கள் செயல்களில் நல்லோனாக இருப்போர், கல்வியறிவு படைத்தோர், வேத உரைகள் மற்றும் சடங்குகளை அறிந்த பிராமணர்கள், ஆகியோர் பாதுகாக்கப்பட வேண்டும்.(17) பொருத்தமானவற்றைத் தீர்மானிப்பதிலும், அறச்செயல்களை நிறைவேற்றுவதிலும், பெருக் கல்வியறிவு படைத்தோர் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும். மதிநுட்பம் நிறைந்த ஒரு மன்னன், எவ்வளவுதான் சாதித்தவனாக இருப்பினும் ஒரே ஒரு தனிமனிதன் மீது ஒரு போதும் நம்பிக்கை வைக்க மாட்டான்.(18) தன் குடிகளைப் பாதுகாக்காதவனும், அடங்காத ஆசைகளைக் கொண்டவனும், போலித் தன்மை நிறைந்தவனும், அகந்தை மற்றும் கெட்ட நோக்கம் கொண்டவனுமான ஒரு மன்னன், பாவம் இழைத்தவனாகக் கொடுங்கோன்மைக்கான நிந்தனையை ஈட்டுகிறான்.(19) ஓ! ஏகாதிபதி, ஒரு மன்னனின் குடிமக்கள், பாதுகாப்பை அடையாமல், தேவர்களால் பீடிக்கப்பட்டு, கள்வர்களால் வீழ்த்தப்பட்டால், அந்தப் பாவம் அனைத்தும் மன்னனையே களங்கப்படுத்தும்.(20)

ஓ! யுதிஷ்டிரா, ஆழ்ந்து ஆய்வு செய்து, நல்லறிவுரை வழங்கவல்ல மனிதர்களோடு ஆலோசித்த பிறகு, முழு இதயத்தோடு செய்யப்படும் ஒரு செயலில் எந்தப் பாவமும் சேராது.(21) விதியின் மூலமாக நமது பணிகள் தோல்வியோ, வெற்றியோ அடையலாம். எனினும், முயற்சி செய்யும் மன்னனை பாவம் தீண்டாது.(22) ஓ! மன்னர்களில் புலியே, ஹயக்ரீவன் என்ற பெயரில் இருந்த ஒரு பழங்கால மன்னனுக்கு என்ன நடந்தது என்ற கதையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(23) ஓ! பாண்டுவின் மகனே, களங்கமில்லா செயல்பாடுகளைக் கொண்ட வீர ஹயக்ரீவன், போரில் பெரும் எண்ணிக்கையிலான தன் எதிரிகளைக் கொன்ற பிறகு, தன் தரப்பில் ஒரு தொண்டனும் இல்லாத நிலையில் கொல்லப்பட்டு வீழ்ந்த கதையை உனக்குச் சொல்கிறேன்.(24) தன் எதிரிகளைத் தடுக்க என்ன செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்து, மனிதர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முதன்மையான வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிய ஹயக்ரீவன், அவன் செய்த போர்களால் பெரும் புகழை அடைந்து இப்போது சொர்க்கத்தில் பேரருளை அடைந்து இன்புற்று இருக்கிறான்.(25)

(மன்னர்களுக்கான) கடமைகளை எப்போதும் கவனமாகச் செய்து வந்த அந்த உயர் ஆன்ம ஹயக்ரீவன், கள்வர்களின் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டும், அவர்களோடு துணிச்சலாகப் போரிட்டு, போர்க்களத்தில் தன் உயிரை விட்டு, தன் வாழ்வின் நோக்கத்தை அடைந்து இப்போது சொர்க்கத்தின் பேரருளில் இன்புற்றிருக்கிறான்.(26) வில்லே அவனது (வேள்வி) கம்பாகவும் {ஸ்தம்பமாகவும்}, வில்லின் நாண்கயிறே, தனது பலிகளைக் கட்டும் கயிறாகவும் இருந்தன. கணைகள் சிறு கரண்டியாகவும், வாளானது பெரிய கரண்டியாகவும், குருதியே அவன் ஊற்றிய தெளிந்த நெய்யாகவும் இருந்தன. தேரானது வேள்விப்பீடமாகவும், போரில் அவன் உணர்ந்த கோபமே நெருப்பாகவும், அவனது வாகனத்தில் பூட்டப்பட்ட நான்கு முதன்மையான குதிரைகளே, நான்கு ஹோத்ரிகளாகவும் இருந்தன.(27) அந்த வேள்வி நெருப்பில் தன் எதிரிகளைக் காணிக்கையாக ஊற்றிய பிறகு, வேள்வியின் முடிவில் தன் உயிரையே அதில் ஊற்றியவனும், மன்னர்களில் சீற்றமிக்கச் சிங்கமுமான அந்த ஹயக்ரீவன், பாவங்களில் இருந்து விடுபட்டு, இப்போது, தேவர்களின் உலகங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(28) கொள்கையாலும், நுண்ணறிவாலும் தன் நாட்டைப் பாதுகாத்தவனும், செருக்கற்றவனும், பெரும் மனோபலம் கொண்டவனும், வேள்விகளைச் செய்வதைப் பழக்கமாகக் கொண்டவனுமான அந்த உயர் ஆன்ம ஹயக்ரீவன், தன் புகழை உலகமனைத்திலும் நிறைத்து இப்போது தேவர்களின் உலகில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(29)

வேள்விகள் செய்வதைச் சார்ந்த தகுதியையும், மனித காரியங்களில் தொடர்புடைய அனைத்து வகைத் தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அடைந்த அவன், தண்டக்கோலை {செங்கோலைத்} தரித்து, செருக்கில்லா வீரத்துடன் இந்தப் பூமியை ஆட்சி செய்தான். அதன் காரணமாக, உயர்ந்த நல்லான்மாவான ஹயக்ரீவன் தேவர்களின் உலகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(30) கல்வியறிவைக் கொண்டவனும், துறவை பயின்றவனும், நம்பிக்கையால் தூண்டப்பட்டவனும், நன்றியுணர்வு நிறைந்தவனும், பல்வேறு வேள்விகளைச் செய்தவனுமான அந்த மன்னன் {ஹயக்ரீவன்}, மனிதர்களின் இவ்வுலகை விட்டு, நல்லோருக்கும் ஞானியருக்கும், ஏற்புடைய பழக்க வழக்கங்களைக் கொண்டோருக்கும், போரில் தங்கள் உயிரைவிடத் தயாராக இருப்பவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதிகளை வென்றான்.(31) வேதங்களையும், பிற சாத்திரங்களையும் நன்கு அறிந்து, தன் நாட்டை முறையாக ஆண்டு, நால்வகையினரையும் முறையாகத் தங்கள் கடமைகளை நோற்கச் செய்த அந்த உயர் ஆன்ம ஹயக்ரீவன் இப்போது தேவர்களின் உலகில் விளையாடிக் கொண்டிருக்கிறான். அம்மன்னன், பல போர்களை வென்று, தன் குடிமக்களைப் பேணிக் காத்து, வேள்விகளின் சோமச்சாற்றைப் பருகி, முதன்மையான பிராமணர்களைக் கொடைகளால் நிறைவு செய்து, தன் ஆளுகையின் கீழ் இருந்தோரிடம் தண்டக்கோலை {செங்கோலை} நீதியுடன் செலுத்தி, இறுதியாகப் போரில் தன் உயிரை விட்டு இப்போது சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான்.(32) அவனது வாழ்வு அனைத்துப் பாராட்டுக்கும் தகுந்ததாகும். அனைத்து பாராட்டுக்கும் தகுந்த அதைக் கல்விமான்களும் நீதிமான்களும் பாராட்டுகின்றனர். சொர்க்கத்தை வென்று, வீரர்களுக்காக ஒதுக்கப்படும் பகுதிகளை அடைந்த அந்த உயர் ஆன்ம ஏகாதிபதி, இவ்வாறே தனது நற்செயல்களால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டான்” என்றார் {வியாசர்}.(33)

காலத்தின் வலிமை! – சாந்திபர்வம் பகுதி – 25-பெண்களின் நிலை கண்டு தன் மனம் அமைதியடையவில்லை என வியாசரிடம் சொன்ன யுதிஷ்டிரன்; காலமே அனைத்திற்கும் காரணம், காலமே வலிமைமிக்கது, காலம் ஒன்றே சாதிக்கும் வழிமுறை என்று யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; இன்பதுன்பங்கள் ஏற்படும் வகையை உணர்த்தி, எவன் மகிழ்ச்சியடைவான் என்பதைச் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} வார்த்தைகளைக் கேட்டும், கோபமாக இருக்கும் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், வியாசரை வணங்கி, பின்வரும் பதிலை அளித்தான்.(1)யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “பூமி சார்ந்த இந்த அரசுரிமை, (அதைத் தொடர்ந்த) பல்வேறு இன்பங்கள் ஆகியன என் இதயத்திற்கு எந்த மகிழ்சியையும் அளிக்கத் தவறுகின்றன. மறுபுறம், (என் சொந்தங்களை இழந்ததன் விளைவால் உண்டான) இந்தக் கடும் துயரம் இதயத்தையின் மையத்தையே உண்கிறது.(2) ஓ! தவசியே, வீரக் கணவர்களையும், பிள்ளைகளையும் இழந்த இந்தப் பெண்களின் ஒப்பாரியைக் கேட்டு, நான் அமைதியை அடைவதில் தவறுகிறேன்” என்றான்”.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டவரும், யோகத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், பெரும் ஞானம் கொண்டவரும், வேதங்களை உள்ளார்ந்த பொருளுடன் அறிந்தவரும், அறவோருமான வியாசர், (பின்வரும் வார்த்தைகளை) யுதிஷ்டிரனிடம் சொன்னார்.(4)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “தன் செயல்களாலோ, வேள்விகள் மற்றும் வழிபாட்டாலோ எந்த மனிதனும் எதையும் அடைந்துவிட முடியாது. எந்த மனிதனும் தனது சக மனிதனுக்கு எதையும் தந்துவிட முடியாது. மனிதன் அனைத்தையும் காலத்தின் மூலமே அடைகிறான். விதிசமைக்கும் உயர்ந்தவன் {பிரம்மன்}, கால ஓட்டத்தையே அதை அடையும் வழிமுறையாக அமைத்திருக்கிறான்.(5) காலம் சாதகமாக இல்லாவிட்டால், வெறும் புத்தி, அல்லது சாத்திரங்களால் மட்டுமே மனிதன் பூமி சார்ந்த எந்த உடைமையையும் அடைந்துவிட முடியாது. சில வேளைகளில் அறியாமை கொண்ட மூடனே கூடச் செல்வமடைவதில் வெல்கிறான். அனைத்து செயல்களின் நிறைவுக்கும் காலமே பயனைத் தரும் வழிமுறையாக இருக்கிறது.(6) ஆபத்துக் காலங்களில், அறிவியலோ, மந்திரங்களோ, மருந்துகளோ எந்தக் கனியையும் விளைவிக்காது. எனினும் வளம் நிறைந்த காலங்களில் அதே பொருட்களே, சரியாகச் செயல்படுத்தப்பட்டு, எதிர்பார்க்கும் பலனையும், வெற்றியையும் தருகிறது.(7)

காலத்தாலேயே காற்றுப் பலமாக வீசுகிறது; காலத்தாலேயே மேகங்கள் மழைநிறைந்தவையாகின்றன; காலத்தாலேயே பல்வேறு வகைத் தாமரைகளால் குளங்கள் அலங்கரிக்கப்படுகின்றன; காலத்தாலேயே காட்டிலுள்ள மரங்கள் மலர்களால் நிறைகின்றன.(8) காலத்தாலேயே இரவுகள் இருளாகவோ {தேய்பிறையாகவோ}, ஒளியாகவோ {வளர்பிறையாகவோ} ஆகின்றன. காலத்தாலேயே நிலவும் முழுமையடைகிறது. அதற்கான காலம் வரவில்லையெனில், மரங்கள் மலர்களையோ, கனிகளையோ தாங்குவதில்லை. அதற்கான காலம் வரவில்லையெனில், ஆற்றின் ஓடைகள் கடுமையடைவதில்லை.(9) பறவைகள், பாம்புகள், மான்கள், யானைகள் மற்றும் பிற விலங்குகள் ஆகியனவும் அவற்றுக்கான காலம் வரவில்லையெனில் ஒருபோதும் தூண்டப்படுவதில்லை. அதற்கான காலம் வரவில்லையெனில் பெண்கள் கருத்தரிப்பதில்லை. காலத்தாலேயே குளிர், கோடை மற்றும் மழைக்காலங்கள் நேர்கின்றன.(10) அதற்கான காலம் வரவில்லையெனில் ஒருவரும் பிறப்பதுமில்லை, எவரும் இறப்பதுமில்லை. காலம் வரவில்லையெனில், குழந்தை, பேசும் சக்தியை அடைவதில்லை. காலம் வரவில்லையெனில் எவனும் இளமையடைவதில்லை. காலத்தாலேயே, தூவப்படும் விதைகள் முளைக்கின்றன.(11) காலம் வரவில்லையெனில், அடிவானுக்கு மேலே சூரியன் தோன்றாது, அல்லது அதற்கான காலம் வரவில்லையெனில், அஸ்த மலைகளையும் அவன் அடையமாட்டான். அதற்கான காலம் வரவில்லையெனில், நிலவானது தேயவோ வளரவோ செய்யாது, பெருங்கடலிலும் உயரமான அலைகள் உயர்ந்த அடங்காது.(12)

ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பழங்கதையில், மன்னன் சேனஜித்தனின் துயரம் சொல்லப்படுகிறது.(13) காலத்தில் தடுக்கப்பட முடியாத போக்கு, இறந்து பிறக்கும் அனைத்து உயிரினங்களையும் பாதிக்கிறது. பூமி சார்ந்த அனைத்துப் பொருட்களும் காலத்தாலேயே கனிகின்றன, அல்லது அழிகின்றன.(14) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சிலர், சில மனிதர்களைக் கொல்கிறார்கள், மேலும் அந்தக் கொலையாளிகளும், பிறரால் கொல்லப்படுகிறார்கள். இதுவே உலகின் மொழியாகும். எனினும், உண்மையில், எவரும் எவரையும் கொல்வதில்லை.(15) சிலர், மனிதர்கள் (தங்கள் சக மனிதர்களைக்) கொல்வதாக நினைக்கின்றனர். உண்மையோ, அனைத்து உயிரினங்களின் பிறப்பும், அழிவும், விதிக்கப்பட்ட படியே அவற்றின் இயல்பின் விளைவாலேயே ஏற்படுகின்றன.(16) ஒருவனுடைய செல்வம் இழக்கப்படும்போதோ, ஒருவனுடைய மனைவி, அல்லது மகன், அல்லது தந்தை இறக்கும்போதோ, “ஐயோ, இஃது என்ன துயரம்” என்று சொல்லி, ஒருவன் அழுது கொண்டே இருந்தால், அந்தத் துயரம் அதிகரிக்கவே செய்யும்.(17)

மூடனைப் போல நீ ஏன் துயரில் ஈடுபடுகிறாய்? துயரப்படுபவர்களுக்காக நீ ஏன் வருந்துகிறாய்[1]? அச்சமானது அச்சத்தையே கொடுப்பதைப் போல, துயரத்தில் ஈடுபடுவதால் அஃது அதிகரிப்பதைப் பார்.(18) இந்த உடலானது எனதில்லை. இவ்வுலகில் உள்ள எதுவும் எனதில்லை. அல்லது, இவ்வுலகில் உள்ள பொருட்கள் எந்த அளவுக்குப் பிறருக்குச் சொந்தமோ அதே அளவுக்கே எனக்கும் சொந்தமாகும். இதைக் காணும் ஞானியர், இதில் மயக்கமடைவதில்லை.(19) கவலை அடைவதற்கு ஆயிரங்காரணங்களும், மகிழ்ச்சி அடைவத்றகு நூறு காரணங்களும் உண்டு. அறியாமை கொண்டோரையே இவை தினமும் பாதிக்கச் செய்கின்றனவேயொழிய ஞானியரையல்ல.(20) இவையே, காலத்தின் ஓட்டத்தில், பற்று, அல்லது வெறுப்பின் பொருட்களாகி, (சக்கரத்தைப் போலச்) சுழலும் அருளாகவோ, துயரமாகவோ பாதிக்கப்படும் உயிரினங்களுக்குத் தோன்றுகின்றன.(21)இவ்வுலகில் கவலை மட்டுமே உண்டு, மகிழ்ச்சியில்லை. இதன்காரணமாகவே கவலை மட்டுமே உணரப்படுகிறது. உண்மையில், ஆசை என்றழைக்கப்படும் துன்பத்தில் இருந்தே இந்தக் கவலை உதிக்கிறது, கவலை என்றழைக்கப்படும் துன்பத்தில் இருந்தே மகிழ்ச்சி உதிக்கிறது.(22) இன்பத்திற்குப் பிறகு கவலையும், அதன் பிறகு இன்பமும் நேர்கின்றன. ஒருவன் எப்போதுமே கவலையையோ, எப்போதுமே மகிழ்ச்சியையோ அடைவதில்லை.(23) மகிழ்ச்சி எப்போதுமே கவலையிலேயே முடிவடைகிறது, சில வேளைகளில் அது கவலையில் இருந்தும் உண்டாகிறது. எனவே, அழிவில்லா {நிலையான} மகிழ்ச்சியை விரும்புபவன், {மகிழ்ச்சி, கவலை ஆகிய} அந்த இரண்டையுமே கைவிட வேண்டும்.(24) இன்பம் தீர்ந்ததும் கவலை எழுகிறது, கவலை தீர்ந்ததும் மகிழ்ச்சி எழுகிறது எனும்போது ஒருவன், (பாம்பால் கடிபட்ட) ஒருவனுடைய உடலின் அங்கத்தைக் கைவிடுவதைப் போல, அவன் எதனில் இருந்து கவலையையோ, கவலையால் வளர்க்கப்படும் இதய எரிச்சலையோ, தன் கவலையின் வேரையோ அடைகிறானோ அதைக் கைவிட வேண்டும்.(25)

இன்பமோ, துன்பமோ, ஏற்புடையதோ, ஏற்பில்லாததோ எது வந்தாலும், அது பாதிக்கப்படாத இதயத்துடன் தாங்கிக் கொள்ளப்பட வேண்டும்.(26) ஓ! இனியவனே, உன் மனைவியர், பிள்ளைகள் ஆகியோருக்கு ஏற்புடையதைச் செய்வதில் இருந்து நீ சிறிதளவேகூட விலகினாலும், யார் எவருடையவர்? ஏன் அப்படி? எதற்காக? என்பதை நீ அப்போது அறிந்து கொள்வாய்.(27) பெரும் மூடர்களும், தங்கள் ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவர்களும் இங்கேயே மகிழ்ச்சியை அடைகிறார்கள். எனினும், இடைப்பட்ட நிலையை அடைபவர்களே இங்கே துன்பத்தை அடைகிறார்கள்.(28) ஓ! யுதிஷ்டிரா, பெரும் ஞானியும், இவ்வுலகில் எது நல்லது, அல்லது தீயது என்பதையும், கடமைகளையும், இன்பதுன்பங்களையும் அறிந்தவனுமான சேனஜித் இதையே சொன்னான்.(29) அடுத்தவரின் துயருக்காக வருந்துபவன் ஒருபோதும் மகிழ்ச்சியடைய முடியாது. துயருக்கு ஓர் எல்லையே கிடையாது, துயரம் மகிழ்ச்சியிலிருந்தே எழுகிறது.(30) இன்பம், துன்பம், செழிப்பு, ஆபத்து, ஈட்டல், இழப்பு, மரணம், வாழ்வு ஆகியன அதற்குரிய காலங்களில் உயிரினங்கள் அனைத்திற்காகவும் காத்திருக்கின்றன. அமைதியான ஆன்மா கொண்ட ஞானியர் இதன் காரணமாகவே மகிழ்ச்சியில் திளைக்கவோ, கவலையில் தளரவோ மாட்டார்கள்.(31)

போரில் ஈடுபடுவதே வேள்வி என ஒரு மன்னனுக்குச் சொல்லப்படுகிறது; தண்ட அறிவியலை {தண்டநீதியை} உரிய முறையில் நோற்பதே அவனது யோகமாகும்; தக்ஷிணையின் வடிவில் வேள்விகளில் கொடுக்கப்படும் செல்வக் கொடையே அவனது துறைவாகும். இவை அனைத்தும் ஒருவனைப் புனிதப்படுத்தும் செயல்பாடுகளாகக் கருதப்பட வேண்டும்.(32) நுண்ணறிவுடனும், கொள்கையுடனும் நாட்டை ஆட்சி செய்து, செருக்கைக் கைவிட்டு, வேள்விகளைச் செய்து, அனைத்தையும், அனைத்து மனிதர்களையும் அன்புடனும் பாரபட்சமின்றியும் காணும் ஓர் உயர் ஆன்ம மன்னன், தன் இறப்புக்குப் பிறகு, தேவர்களின் உலகில் விளையாடுவான்.(33) போர்களை வென்று, தன் நாட்டைக் காத்து, சோமச்சாற்றைப் பருகி, தன் குடிமக்களை முன்னேறச் செய்து, தண்டக்கோலை நீதியுடன் தரித்து, இறுதியாகப் போரில் தன்னுடலைக் கைவிடும் ஒரு மன்னன் சொர்க்கத்தில் இன்பத்தை அனுபவிக்கிறான்.(334) வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்கள் அனைத்தையும் முறையாககப் பயின்று, முறையாக நாட்டைக் காத்து, நான்வகை மனிதர்களையும் தங்கள் வகைக்குரிய கடமைகளைச் செய்யச் செய்யும் ஒரு மன்னன், புனிதமடைந்தவனாக இறுதியில் சொர்க்கத்தில் விளையாடுகிறான்.(35) எவனுடைய நடத்தையானது, அவனது இறப்பிற்குப் பிறகு, நகர மற்றும் நாட்டுவாசிகளாலும், அவனது அமைச்சர்கள் மற்றும் நண்பர்களாலும் கொண்டாடப்படுகிறதோ அவனே மன்னர்களில் சிறந்தவனாவான்” என்றார் {வியாசர்}”.(36)

செல்வத்தின் களங்கங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 26-தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுபவர்கள் யார்? அறவோர் யார்? சூரியனின் தென் பாதை மற்றும் வட பாதை; வடபாதையின் சிறப்பு; மனநிறைவின் உயர்வு; பிரம்மம் மற்றும் பிரம்ம நிலை; செல்வத்தின் தூண்டல்; செல்வத்தின் பயனற்ற நிலை; ஈகையறம் ஏன் கடினமானது? செல்வத்தின் களங்கங்கள் ஆகியவற்றை அர்ஜுனனுக்குச் சொல்லும் யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இது தொடர்பாக உயர் ஆன்ம யுதிஷ்டிரன், அறிவு நிறைந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான்:(1) {அவன்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, செல்வத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை என்றும், ஓர் ஏழையால் சொர்க்கத்தையோ, மகிழ்ச்சியையோ, தனது விருப்பங்களையோ அடைய முடியாது என்றும் நீ நினைக்கிறாய்.(2) எனினும், இஃது உண்மையல்ல. வேத கல்வியின் வடிவிலான வேள்வியின் மூலமாக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மனிதர்கள் பலர் உண்மையில் காணப்படுகிறார்கள். தவத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பல முனிவர்கள் அழிவில்லா (அருள்) உலகங்களை அடைவதும் காணப்படுகிறது.(3) ஓ! தனஞ்சயா, முனிவர்களின் நடைமுறையை எப்போதும் நோற்று, பிரம்மச்சரியத்தைக் கைக்கொண்டு, அனைத்துக் கடமைகளை அறிவோரே தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுகிறார்கள்.(4) ஓ! தனஞ்சயா, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருக்கும் முனிவர்களையும், உண்மை ஞானத்தை அடைவதில் அர்ப்பணிப்புடன் இருப்போரையும் உண்மையில் அறவோராக எப்போதும் நீ கருதவேண்டும்.(5)

ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உண்மை ஞானத்தை அடைவதில் அர்ப்பணிப்பு கொண்டோரைச் சார்ந்தே நமது செயல்கள் அனைத்தும் இருக்கின்றன[1]. ஓ! பலமிக்கவனே, இதுவே வைகானஸர்களின் {வானப்ரஸ்தர்களின்} கருத்து என்று நாம் அறிகிறோம்.(6) ஓ! பாரதா, அஜர்கள், பிருஸ்னிகள், ஸிகதர்கள், அருணர்கள், கேதவர்கள் ஆகியோர் அனைவரும் வேதகல்வியின் தகுதியின் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டனர்.(7) ஓ! தனஞ்சயா, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போர், வேத கல்வி, வேள்விகள், புலனடக்கம் போன்ற கடுமையான செயல்களைச் செய்வதால்,(8) ஒருவன் சூரியனின் தென் பாதையின் மூலமாகச் சொர்க்கத்துக்குச் செல்கிறான். (வேதத்தின் படியான) செயல்களைச் செய்வோர் அந்தப் பகுதிகளுக்கே செல்வார்கள் என்று நான் முன்பு சொல்லியிருக்கிறேன்.(9) எனினும், வடபாதையில், யோக தவங்களில் அர்ப்பணிப்புடையோர் பயணிப்பதை நீ காண்பாய். அழிவில்லாத பிரகாசமான அந்த உலகங்களுக்குச் செல்லும் அந்தப் பாதையே யோகம் செய்யும் மனிதர்களுக்குச் சொந்தமானதாகும்.(10)

இவை இரண்டிலும், வட பாதையே புராணங்களை அறிந்தோரால் மெச்சப்படுகிறது. மனநிறைவின் மூலமே ஒருவர் சொர்க்கத்தை அடைகிறான் என்பதை நீ அறிய வேண்டும். மனநிறைவிலிருந்தே பேரின்பம் உதிக்கிறது.(11) மனநிறைவைவிட உயர்ந்தது ஏதுமில்லை. கோபம் மற்றும் இன்பத்தைக் கட்டுப்படுத்திய ஒரு யோகிக்கு, மனநிறைவே உயர்ந்த புகழும், வெற்றியுமாகும்.(12) இது தொடர்பாக யயாதியின் பழைய உரையாடல் ஒன்று சொல்லப்படுகிறது. இந்த உரையைக் கேட்கும் ஒருவன், தன் அவையங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்ளும் ஓர் ஆமையைப் போலத் தன் விருப்பங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்வான்.(13) ஒருவன் எதனிடமும், எதனாலும் அச்சமடையாதபோதும், ஒருவன் எந்த ஆசையும், வெறுப்பும் கொள்ளாதபோதும், அவன் பிரம்ம நிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(14) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் செயலாலோ, சிந்தையாலோ, சொல்லாலோ தீங்கிழையாதிருக்கும்போது, அவன் பிரம்மத்தை அடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.(15)

ஒருவன் செருக்கையும், மடமையையும் கட்டுப்படுத்தி, பற்றுகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டால், ஒளிபொருந்திய ஆன்மா கொண்ட அந்தப் பக்திமான், தனி இருப்பை அழித்த நிலையான முக்தியை அடையத் தகுந்தவனாகிறான்.(16) ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இப்போது நான் உனக்குச் சொல்லப் போவதை, குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. சிலர் அறத்தையும், சிலர் நன்னடத்தையையும், சிலர் செல்வத்தையும் விரும்புகின்றனர்.(17) ஒருவன் (அறத்தை அடையும் வழிமுறையாக) செல்வத்தை விரும்பலாம். எனினும், அத்தகு விருப்பத்தையும் கைவிடுவதே அவனுக்குச் சிறந்ததாகும்[2]. செல்வத்துடன் பல களங்கங்கள் இணைந்திருக்கின்றன, அதன் விளைவாக அந்தச் செல்வத்தால் செய்யப்படும் அறச்செயல்களிலும் அவை இணைந்தேயிருக்கின்றன.(18) இதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். இதை நீயும் காண்பதே உனக்குத் தகும். செல்வத்தை விரும்பும் ஒருவன், எந்த வழிமுறையிலேனும் கைவிட வேண்டியவற்றைக் கைவிடுவதற்கு மிகவும் கடினமானதாகக் காண்கிறான்.(19) வளங்களுக்கு மத்தியில் இருப்போர் நற்செயல் செய்வது அரிதே. பிறருக்குத் தீங்கிழைக்காமல் செல்வத்தை ஒருபோதும் அடைய முடியாது என்றும், அஃதை ஈட்டுபோது, அஃது எண்ணற்ற தொல்லைகளையே கொண்டு வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.(20)பாவங்களுக்கு வருந்தும் அச்சத்தைச் சிறிதளவும் கொள்ளாத குறுகிய இதயம் படைத்தவன், சிறு செல்வத்திலும் மயக்கமுற்று, தன் செயல்களின் மூலம் பிராமணனைக் கொன்ற பாவத்தை {பிரம்மஹத்தியை} இழைக்கிறோம் என்பதையும் முற்றிலும் அறியாமல் பிறருக்குத் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்கிறான்.(21) அடைவதற்கரிதான செல்வத்தை அடைந்த ஒருவன், அதில் ஒரு பகுதியைத் தனது பணியாட்களுக்குக் கொடுக்கும்போது, கொள்ளையர்களால் களவாடப்படுபவன் உணர்வதற்கு இணையான துன்பத்தை அடைகிறான். மறுபுறம், ஒருவன் தன் செல்வத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பானானால், அவன் மக்களின் கண்டனத்தையே தன் பங்காகக் கொள்கிறான்.(22) எனினும், செல்வமில்லாத ஒருவனோ, ஒரு போதும் நிந்தனைக்கான பொருளாவதில்லை. பற்றுகள் அனைத்திலிருந்தும் விலகிய ஒருவன், பிச்சையெடுத்து அடையும் சிறிதளவைக் கொண்டு தன் உயிரைத் தாங்கிக் கொண்டு அனைத்து வகையிலும் அவன் மகிழ்ச்சியை அடைகிறான். செல்வத்தை அடைவதாலோ எவராலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.(23) பழங்காலச் சாத்திரங்களை அறிந்தோரால் இது தொடர்பாக வேள்விகளுக்குச் சம்பந்தமான குறிப்பிட்ட வரிகள் சொல்லப்படுகின்றன.(24) செல்வமானது படைப்பாளனால் வேள்விகளின் நிமித்தமாகப் படைக்கப்பட்டது, அந்தச் செல்வத்தைக் காக்கவும், வேள்விகளைச் செய்வதற்காகவும் தான் மனிதன் படைக்கப்பட்டான். இதன் காரணமாகச் செல்வமனைத்தும் வேள்விகளுக்கே செலவிடப்பட வேண்டும். ஒருவனுடைய இன்ப நிறைவுக்கான ஆசைக்காக அது செலவிடப்படுவது முறையாகாது.(25)

அவ்வாறெனில், படைப்பாளன் வேள்வியின் நிமித்தமாகவே மனிதர்களுக்குச் செல்வத்தைக் கொடுக்கிறான். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, செல்வந்தர்கள் அனைவரிலும் நீயே முதன்மையானவன் என்பதை நீ அறிவாயாக.(26) செல்வமானது, இப்பூமியில் உள்ள யாருக்கும் சொந்தமானதல்ல என்று இதன் காரணமாகவே ஞானியர் சொல்கின்றனர். ஒருவன் அதைக் கொண்டு வேள்விகளைச் செய்து, நம்பிக்கை மிகுந்த இதயத்துடன் அதைக் கொடையாக அளிக்க வேண்டும்.(27) ஒருவன் தான் அடைந்ததை (தானமாகச்) செலவிடவேண்டுமேயொழிய, வீணாக்கவோ, தன் இன்ப நுகர்ச்சிக்காகவோ செலவிடக்கூடாது. எதில் செலவிட வேண்டும் என்ற இத்தகு முறையான பொருட்கள் இருக்கும்போது, செல்வத்தைக் குவிப்பதில் என்ன பயன் இருக்கிறது?(28) தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து தவறிய மனிதர்களுக்கு, (செல்வத்தைக்) கொடையளிக்கும் சிறுமதியாளர்கள், அதன் பிறகு நூறாண்டுகள், கழிவுகளிலும் புழுதியிலும் உழல வேண்டியிருக்கும்.(29) மனிதர்கள், தகுந்தவர்களையும், தகாதவர்களையும் பகுத்தறியும் இயலாமையினாலேயே, தகாதவர்களுக்குக் கொடுத்துத் தகுந்தவர்களுக்குக் கொடுக்காமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக ஈகை எனும் அறமே கூடப் பயில்வதற்கு மிகக் கடினமானதாகிறது.(30) செல்வம் அடையப்பட்டாலும், தகாதவனுக்குக் கொடையளிப்பது, தகுந்தவருக்குக் கொடாமலிருப்பது ஆகிய இந்த இரு களங்கங்களைக் கொண்டதாகவே அஃது இருக்கிறது” என்றான் {யுதிஷ்டிரன்}[3].(31)

சாகப் போகிறேன்! – சாந்திபர்வம் பகுதி – 27-அபிமன்யு, பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரின் படுகொலைகளுக்காக வருந்திய யுதிஷ்டிரன்; திரௌபதியின் துயருக்காக வருந்தியது; அனைத்துக்கும் காரணமான தான் இருந்த இடத்திலேயே அமர்ந்து, உணவில்லாமல் சாகப் போவதாகச் சொன்னது; அது நடக்காது என்று சொல்லி, சோம்பலை அகற்றிச் செயல்படுமாறு யுதிஷ்டிரனைத் தூண்டிய வியாசர்..

யுதிஷ்டிரன், “இளம் வயதிலேயே அபிமன்யுவும், திரௌபதி, திருஷ்டத்யும்னன், விராடர், மன்னர் துருபதர்,(1) அனைத்துக் கடமைகளையும் அறிந்த திருஷ்டத்யும்னன், அரசன் திருஷ்டகேது, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பிற மன்னர்கள் ஆகியோருடைய மகன்களும் போரில் வீழ்ந்த துயரமானது,(2) உறவினர்களைக் கொன்றவனும், இழிந்தவனுமான என்னைவிட்டு அகலவில்லை. உண்மையில், நான் நாட்டின் மீது இயல்பற்ற பேராசை கொண்டவனும், என் சொந்த குலத்தையே அழித்தவனுமாவேன்.(3)

எவருடைய மார்பிலும், அங்கங்களிலும் உருண்டு விளையாடினேனோ, ஐயோ, அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அரசுரிமையின் மீது நான் கொண்ட ஆசையினால் போரில் என்னால் கொல்லப்பட்டார்.(4) மனிதர்களில் சிங்கமான எங்கள் பாட்டன் {பீஷ்மர்}, சிகண்டியால் தாக்கப்பட்டு, சக்தியில் வஜ்ரத்துக்கு ஒப்பான பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளின் விளைவால் நடுங்கிச் சுழன்று கொண்டிருப்பதையும், நெடும் வடிவம் கொண்ட அவரது அங்கங்கள் முழுவதும் சுடர்மிக்கக் கணைகளால் துளைக்கப்பட்டிருப்பதையும், அந்த முதிர்ந்த சிங்கம் பலவீனமடைவதையும் நான் கண்டபோது, ஆழமான வலியை என் இதயம் உணர்ந்தது.(5,6) பகைவரின் தேர்களைப் பீடிப்பவரான அவர் {பீஷ்மர்}, கிழக்கு நோக்கித் திரும்பி தன் வாகனத்தின் தட்டில் பலமற்று ஒரு மலைச்சிகரத்தைப் போல வீழ்ந்தபோது, என் புலன்கள் திகைப்படைந்தன.(7)

{மன்னன்} குருவால் புனிதமடைந்த களத்தில் {குருக்ஷேத்திரத்தில்}, பிருகு குலத்தின் ராமரை {பரசுராமரை} எதிர்த்து, கையில் வில் மற்றும் கணையுடன், பல நாட்கள் கடும்போரிட்டவர் எவரோ அந்தக் குரு குலக் கொழுந்து {பீஷ்மர்},(8) மணப்பெண்களின் நிமித்தமாகத் தனித்தேரில் வாரணாசிக்குச் சென்று, அங்கே திரண்டிருந்த உலகின் க்ஷத்திரியர்களைப் போருக்கு அறைகூவி அழைத்தவர் எவரோ அந்தக் கங்கையின் மைந்தர், (9) தடுக்கப்பட முடியாதவரும், மன்னர்களில் முதன்மையானவருமான உக்ராயுதரை தன் ஆயுதங்களில் சக்தியால் எரித்தவர் எவரோ, ஐயோ, அந்த வீரரைப் போரில் நான் கொல்லச் செய்தேன்.(10) பாஞ்சால இளவரசன் சிகண்டியே தன்னை அழிக்கப் போகிறவன் என்பதை நன்றாக அறிந்தும், அந்த வீரர் தன் கணைகளால் அவ்விளவரசனைக் கொல்லவில்லை. ஐயோ, அத்தகு மகத்தான போர்வீரர் அர்ஜுனனால் கொல்லப்பட்டார்.(11) ஓ! தவசிகளில் சிறந்தவரே {வியாசரே}, குருதியில் மறைக்கப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் பாட்டனை நான் கண்ட போது, கடும் நோயானது எனது இதயத்தைப் பீடித்தது.(12) நாங்கள் பிள்ளைகளாய் இருந்தபோது எங்களைப் பாதுகாத்து வளர்த்தவர் எவரோ, ஐயோ அவர், நாட்டின் மீது பேராசை கொண்டவனும், மதிப்பு மிக்கப் பெரியோரைக் கொன்றவனும், முற்றான மூடனும், பாவியுமான என்னால், சில நாட்களே நீடிக்கபோகும் அரசுரிமைக்காகக் கொல்லப்பட்டார்.(13)

எங்கள் ஆசானும், பெரும் வில்லாளியும், மன்னர்கள் அனைவராலும் புகழப்படுபவருமான துரோணரை நான் அணுகி, அவரது மகனைக் {அஸ்வத்தாமனைக்} குறித்துப் போலியாகப் பேசினேன் {பொய்யுரைத்தேன்}.(14) நான் செய்த அச்செயலின் நினைவு என் அங்கமனைத்தையும் எரிக்கிறது. ஆசான் {துரோணர்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, என் மகன் உயிருடன் இருக்கிறானா என்று உண்மையைச் சொல்வாயாக” என்று என்னிடம் கேட்டார்.(15) அந்தப் பிராமணர் {துரோணர்}, உண்மையை எதிர்பார்த்தே, பிறர் அனைவரையும் விட்டுவட்டு என்னிடம் கேட்டார். யானை என்ற சொல்லை அமைதியாக {ஒலி குறைவாகச்} சொல்லி நான் அவரிடம் போலியாக {பொய் நடத்தை} நடந்து கொண்டேன்.(16) நாட்டின் மீது அதிகப் பேராசை கொண்டவனும், மதிப்புமிக்க என் பெரியோர்களைக் கொன்றவனும், பாவம் நிறைந்தவனுமான நான், உண்மையில் அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானை கொல்லப்பட்டிருக்கையில், (நான் அணிந்திருந்ததாக நம்பப்பட்ட) உண்மையெனும் ஆடையைத் தூக்கி வீசிவிட்டு, அஸ்வத்தாமனே கொல்லப்பட்டான் என்று என் ஆசானிடம் சொன்னேன். போரில் இவ்வாறே நான் என் ஆசானிடம் நடந்து கொண்டேன்.(17)

இத்தகு இகழச்சியானச் செயல்களைச் செய்த நான், (மறுமையில்) எந்த உலகங்களை அடைவேன்? போரில் பின்வாங்காதவரும், பயங்கரமான போர்வீரருமான என் அண்ணன் கர்ணரையும் நான் போரில் கொல்லச் செய்தேன். என்னை விட இங்கே வேறு எந்தப் பாவி இருக்கிறான்?(18) மலைகளில் பிறந்த சிங்கத்திற்கு ஒப்பானவனும், இளம் வயதினனுமான அபிமன்யுவை துரோணரால் பாதுகாக்கப்பட்ட {பத்ம} வியூகத்திற்குள் ஊடுருவும்படி பேராசையின் காரணமாகவே சொன்னேன்.(19) நான் கருவைக் கொன்ற குற்றவாளியைப் போன்றவனாவேன். நான் பாவம் நிறைந்தவனாக இருப்பதாலேயே, அர்ஜுனன், அல்லது தாமரை கண்களைக் கொண்ட கிருஷ்ணன் ஆகியோரின் முகங்களை அப்போதிலிருந்தே என்னால் {நேராகப்} பார்க்க முடியவில்லை.(20)

ஐந்து மலைகளை இழந்த பூமியைப் போல, தன் ஐந்து மகன்களை இழந்த திரௌபதிக்காகவும் நான் துயரமடைகிறேன். நான் ஒரு பெரும் குற்றவாளி, பெரும் பாவி மற்றும் இந்தப் பூமியை அழித்தவனுமாவேன். இப்போது நான் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் இருந்து எழாமல், (பட்டினி கிடந்து) என் உடலை பலவீனமடையச் செய்து நான் சாகப் போகிறேன்.(22) என் ஆசானைக் கொன்றவனான என்னைப் பிராய நோன்பு நோற்று அமர்ந்திருக்கும் ஒருவனாக அறிவீராக. குலத்தை அழித்தவனான நான், எந்த வகை உயிரினமாகவும் மீண்டும் பிறக்காதிருக்க இதைச் செய்தே ஆக வேண்டும்[1].(23) ஓ! பெரும் தவசியே {வியாசரே}, உணவு மற்றும் நீர் அனைத்தையும் கைவிட்டு, இவ்விடத்தில் இருந்து நகராமல் பெரும் அன்புக்குரிய என் உயிர்மூச்சை நான் வற்றச் செய்யப் போகிறேன்.(24) இதற்கு எனக்கு அனுமதியளித்து, நீங்கள் விரும்பும் இடத்திற்குச் செல்ல வேண்டுமென நான் உம்மைப் பணிவுடன் வேண்டுகிறேன். அனைவரும் எனக்கு அனுமதியளிப்பீராக. நான் இந்த என் உடலை விடப் போகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(25)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தவசிகளில் சிறந்தவரான வியாசர், தன் உறவுகளின் நிமித்தமான கவலையில் திகைத்து இத்தகு வார்த்தைகளைச் சொல்லும் அந்தப் பிருதையின் மகனை {யுதிஷ்டிரனைத்} தடுக்கும் வகையில், “இது நடக்காது” என்று முதலில் சொல்லிவிட்டுப் பின்வருமாறு பேசினார்.(26)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, இத்தகு கடுந்துயரில் ஈடுபடுவது உனக்குத் தகாது. நான் ஏற்கனவே சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். ஓ! பலமிக்கவனே, இவையனைத்தும் விதியே.(27) பிறக்கும் உயிரினங்கள் அனைத்தும், (பல்வேறு பொருட்கள் மற்றும் சக்திகளின்) ஒருங்கிணைப்பையே முதலில் வெளிக்காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. எனினும், இறுதியில் அழிவே அவற்றுக்கு நேர்கிறது. நீரில் உள்ள குமிழிகளைப் போல அவை எழுந்து மறைகின்றன.(28) ஒன்றாகத் திரளும் பொருட்கள் அனைத்தும் நொறுங்கி விழும் என்பதும், எழும் அனைத்துப் பொருட்களும் விழ வேண்டும் என்பது நிச்சயமானதாகும். கூட்டம் இறுதியில் அழிவடையும், பிறப்பும் இறப்பிலேயே முடிவடையும்.(29) தற்காலிகமாக ஏற்கத்தக்கதாக இருப்பினும் சோம்பல், பேரிடரில் முடிகிறது, தற்காலிக வலியைக் கொண்டதாகினும் திறனுடன் கூடிய முயற்சியானது மகிழ்ச்சியிலேயே முடிகிறது. வளம், செழிப்பு, பணிவு, மனநிறைவு மற்றும் புகழ் ஆகியன முயற்சி மற்றும் திறனிலேயே வசிக்கின்றவே ஒழிய சோம்பலில் அல்ல.(30)

நண்பர்கள் மகிழ்ச்சி அளிக்கவும், எதிரிகள் பேரிடரால் பீடிக்கவும் தகுந்தோரல்ல. அதேபோல், ஞானம் செல்வத்தைக் கொண்டு வராது, செல்வமும் மகிழ்ச்சியைக் கொண்டுவராது.(31) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, செயலில் ஈடுபடுவதற்காகவே நீ படைப்பாளனால் உண்டாக்கப்பட்டிருக்கிறாய். செயலில் இருந்தே வெற்றி எழுகிறது. ஓ! மன்னா, செயலைத் தவிர்க்க நீ தகுந்தவனல்ல” என்றார் {வியாசர்}”.(32)

காலமெனும் பெருங்கடல்! – சாந்திபர்வம் பகுதி – 28-ஞானியான அஸ்மருக்கும், மன்னன் ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; மனத்தின் வீண் செருக்கு, வளமை, வறுமை, மனக்கவலைக்கான காரணம், முதுமை, மரணம், காலத்தின் போக்கு ஆகியவற்றைக் குறித்து ஜனகனிடம் உரையாடிய அஸ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு வியாசர், தன் உறவினர்களின் படுகொலையின் நிமித்தமாகக் கவலையில் எரிந்து, தன் உயிர் மூச்சை விடத் தீர்மானித்திருந்த பாண்டுவின் மூத்த மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} துயரை அகற்ற முயன்றார்.(1)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே, இது தொடர்பாகப் பழங்கதையில் அஸ்மரின் உரையாடல் என்ற பெயரில் ஓர் உரையாடல் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா அதைக் கேட்பாயாக.(2) ஓ! மன்னா, விதேஹர்களின் ஆட்சியாளனான ஜனகன், கவலையாலும், துயராலும் நிறைந்து, தன் ஐயங்களைத் தீர்க்க அஸ்மர் என்ற பெயருடைய ஒரு பிராமண ஞானியிடம் கேள்விகள் கேட்டான்.(3)

ஜனகன் {அஸ்மரிடம்}, “உறவினர்களையும், செல்வத்தையும் அடையும்போதும், அவை அழிவடையும்போதும், தன் நலத்தை விரும்பும் ஒரு மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(4)

அஸ்மர் {ஜனகனிடம்}, “ஒரு மனிதனின் உடல் உண்டான பிறகு, இன்பங்களும், துன்பங்களும் அதைப் பற்றுகின்றன.(5) இவற்றில் ஏதாவதொன்று அம்மனிதனைப் பற்றும் வாய்ப்பு இருந்தாலும், அவனை எது பற்றுகிறதோ, ஒன்று திரண்டிருக்கும் மேகங்களை விரட்டும் காற்றைப் போல அதுவே விரைவாக அம்மனிதனிடம் உள்ள அறிவைக் களவாடிவிடும்.(6) (வளமையான காலங்களில்) ஒரு மனிதன், “நான் உயர்பிறப்பாளன் {நற்பிறவி கொண்டவன்}”, “நான் விரும்புவதை என்னால் செய்ய முடியும்”, “நான் சாதாரண மனிதன் கிடையாது” என்பது போலச் சிந்திக்கிறான். அவனது மனமானது வீண் செருக்கான இம்மூன்றில் ஊறுகிறது. {இவ்வாறு மூன்று வகைகளில் வீண்செருக்கு கொள்கிறது}.(7) பூமி சார்ந்த இன்பங்கள் அனைத்திற்கும் அடிமையாகும் அவன், தன் முன்னோர்களால் சேமிக்கப்பட்ட செல்வத்தை வீணாக்கத் தொடங்குகிறான். காலப்போக்கில் வறிய நிலையை அடையும் அவன், பிறருக்குச் சொந்தமானவற்றை அபகரிப்பதை மெச்சத்தகுந்ததாகவே கருதுகிறான்.(8) ஒரு மன்னன், சட்டங்களையும், விதிகளையும் மீறி அடுத்தவர் பொருளைக் களவாடும் அந்தத் தீயவனை, மானைத் தன் கணைகளால் துளைக்கும் வேடனைப் போலத் தண்டிக்கிறான்.(9) அத்தகு மனிதர்கள், (வழக்கமாக மனிதர்கள் வாழும்) நூறு வருடங்களை அடையாமலே, இருபது, அல்லது முப்பது வயதிற்கு மேல் வாழாமல் போகிறார்கள் {அதற்குள் இறந்து விடுகிறார்கள்}.(10) அனைத்து உயிரினங்களின் நடத்தையையும் கவனமாகக் காணும் ஒரு மன்னன், தன் நுண்ணறிவைப் பயன்படுத்தி, தன் குடிமக்களின் பெருந்துயரங்களைத் தணிக்கத் தகுந்த தீர்வுகளைச் செய்ய வேண்டும்.(11)

மனக் கவலை அனைத்திற்கும், மனத்தின் மயக்கம் மற்றும் துயரடைதல் ஆகிய இரண்டும் காரணங்களாகின்றன. மூன்றாவதாக வேறேதும் காரணமில்லை.(12) பல்வேறு வகைத் துயரங்களும், பூமி சார்ந்த இன்பங்களில் மனிதன் கொள்ளும் பற்றிலிருந்தே எழுகின்றன.(13) முதுமை, மரணம் ஆகியன இரண்டு ஓநாய்களைப் போல, பலமான, அல்லது பலமற்ற, குட்டையான, அல்லது நெடிய உயிரினங்கள் அனைத்தையும் விழுங்குகின்றன.(14) எந்த மனிதனாலும், ஏன் கடலை கச்சையாக அணிந்த மொத்த பூமியையும் அடக்கியாண்டவனாலும் கூட முதுமை மற்றும் மரணத்தில் இருந்து தப்ப முடியாது.(15) உயிரினங்களுக்கு ஏற்படும் இன்பமோ, துன்பமோ எந்தவித எழுச்சியும், தளர்ச்சியும் கொள்ளாமல் அனுபவிக்கப்படவோ, தாங்கிக் கொள்ளவோ படவேண்டும். அவற்றில் இருந்து தப்பும் வழிமுறை ஏதும் இல்லை.(16) ஓ! மன்னா {ஜனகனே}, வாழ்வின் தீமைகள் இளமையிலோ, நடு வயதிலோ, முதுமையிலோ ஒருவனை வந்தடைகின்றன. ஆசைப்பட்டவற்றை (அருள்களை) அடையமுடியவில்லையெனினும், இவற்றை ஒருபோதும் தவிர்க்க முடியாது[1].(17)ஏற்புடையவற்றின் இல்லாமையும், ஏற்பில்லாதவற்றின் இருப்பும், நன்மையும், தீமையும், அருளும், துயரும் விதியையே பின்பற்றி வருகின்றன.(18) அதேபோல, உயிரினங்களின் பிறப்பும், அவற்றின் இறப்பும், ஈட்டலும், இழப்பும் ஆகிய அனைத்தும் முன்பே தீர்மானிக்கப்பட்டவையாகும்.(19) மணம், நிறம், சுவை, தீண்டல் ஆகியன இயல்பாக எழுவதைப் போலவே, இன்பமும், துன்பமும், ஏற்கனவே விதிக்கப்பட்டவற்றில் இருந்து எழுகின்றன.(20) இருக்கைகள், படுக்கைகள், வாகனங்கள், செழிப்பு, பானம், உணவு ஆகியன காலப்போக்கில் உயிரினங்களை அணுகுகின்றன[2].(21) மருத்துவர்களும் நோய்வாய்ப்படுகிறார்கள். பலமானவர்களும் பலமிழக்கிறார்கள். செழிப்பை அனுபவிப்போர், அவை அனைத்தையும் இழந்து, வறுமையை அடைகிறார்கள்.(22) உயர்ந்த பிறப்பு {நற்குடி பிறப்பு}, உடல் நலம், அழகு, செழிப்பு, இன்ப நுகர் பொருட்கள் ஆகியன அனைத்தும் விதியின் மூலமே பெறப்படுகின்றன.(23) வறியோர் விரும்பவில்லையெனினும் பல பிள்ளைகளைப் பெறுகிறார்கள். செல்வந்தர்கள் பிள்ளை இல்லாமலும் இருக்கிறார்கள். விதியின் போக்கு ஆச்சரியம் நிறைந்ததாகும்.(24)நோய், நெருப்பு, ஆயுதங்கள், பசி, நஞ்சு, காய்ச்சல், மரணம், உயர்ந்த இடங்களில் இருந்து வீழ்தல் போன்றவற்றால் உண்டாகும் தீமைகள், பிறப்பை அடையும் விதியின்படியே ஒரு மனிதனை அடைகின்றன. பாவம் செய்யாத சிலர் பல்வேறு தீமைகளில் துன்புறும்போது, பாவிகளோ துயரின் சுமையைத் தாங்காமல் இருக்கும் நிலை இவ்வுலகில் காணப்படுகிறது.(25,26) செல்வத்தில் இன்புறும் சிலர் இளமையில் அழிகின்றனர்; சில வறிவர்கள், முதுமையின் சுமையைத் தாங்கிக் கொண்டு நூறு வருடங்களுக்குத் தங்கள் இருப்பை நீட்டிக்கின்றனர்.(27) இழிந்த குலத்தில் பிறந்த ஒருவன் நீண்ட வாழ்நாளோடு இருக்கிறான், அதே வேளையில் உன்னதக் குலத்தில் பிறந்தவன் ஒரு பூச்சியைப் போல விரைவில் அழிந்து போகிறான்.(28) இவ்வுலகில், செல்வச்சூழலில் இருக்கும் மனிதர்களுக்குப் பசிப்பதில்லை, அதே வேளையில் வறியவர்களோ மரத்துண்டுகளையும் செரிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.(29)

தீய ஆன்மா கொண்ட மனிதன், விதியால் உந்தப்பட்டுத் தன் நிலையில் நிறைவில்லாமல், “நான் இதைச் செய்கிறேன்” என்று சொல்லி, எந்தப் பாவத்தை இழைத்தாலும், அது தனது நன்மைக்கானதே என்று கருதுகிறான்.(30) வேட்டை, பகடை, பெண்கள், மது, பூசல்கள் ஆகியன ஞானியரால் நிந்திக்கப்படுகின்றன. எனினும், சாத்திரங்களில் பரந்த அறிவைக் கொண்ட பல மனிதர்கள் கூட, அவற்றுக்கு அடிமையாக இருப்பது காணப்படுகிறது.(31) உயிரினங்கள் பொருட்களை ஆசைப்பட்டாலும், படாவிட்டாலும் காலத்தின் போக்கில் அவை அவற்றை அடைகின்றன. வேறு எந்தத் தடத்தையும் {காரணத்தையும்} காணமுடியாது.(32) காற்று, வெளி {வானம்}, நெருப்பு, நிலவு, சூரியன், பகல், இரவு (ஆகாயத்தின்) ஒளிக்கோள்கள், ஆறுகள், மலைகள் ஆகியவற்றை எவன் படைக்கிறான்? எவன் அவற்றைத் தாங்கி வருகிறான்?(33)

குளிர், வெப்பம், மழை ஆகியன காலப்போக்கின் விளைவால் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து வருகின்றன. ஓ! மனிதர்களில் காளையே {ஜனக மன்னா}, அதுபோலவே, மனித குலத்திலும் இன்பமும், துன்பமும் {மாறி மாறி} வருகின்றன.(34) முதுமையால் துன்புறும், அல்லது மரணத்தால் பற்றப்படும் மனிதனை மருந்துகளாலோ, மந்திரங்களாலோ காப்பாற்ற முடியாது.(35) பெருங்கடலில் மிதக்கும் இரு மரத்துண்டுகள் ஒன்றோடொன்று சேர்ந்து மீண்டும் (காலப்போக்கில்) பிரிவதைப் போலவே உயிரினங்களும் ஒன்றாகச் சேர்ந்து, மீண்டும் (காலம் வரும்போது) பிரிவை அடைகின்றன.(36) (செல்வச் சூழலில்) பாடல் மற்றும் ஆடல்களிலும், பெண்களின் துணையிலும் இன்புற்று இருப்பவனிடமும், பிறர் கொடுக்கும் உணவை உண்டு வாழும் ஆதரவற்ற மனிதனிடமும் {வேறுபாடின்றி} காலம் சமமாகவே {ஒரே விதத்திலேயே} செயல்படுகிறது.(37)

தாய் என்றும், தந்தை, மகன் மற்றும் மனைவி என்றும் இவ்வுலகில் ஆயிரம் உறவுகள் சொல்லப்படுகின்றன. எனினும் உண்மையில், அவர்கள் யாருடையவர்கள்? நாமும் யாருடையவர்கள்?(38) எவரும் எவருக்கும் சொந்தமாகவோ, எவரும் வேறு எவருக்கும் சொந்தமாகவோ முடியாது. மனைவியர், சொந்தங்கள், மற்றும் நலன்விரும்பிகளோடு நாம் இணைவது, சாலையோர விடுதியில் பயணிகளைச் சந்திப்பதைப் போன்றதாகும்.(39) “நான் எங்கிருக்கிறேன்?”, “நான் எங்குச் செல்லப்போகிறேன்?”, “நான் யார்?”, “நான் எவ்வாறு இங்கே வந்தேன்?”, “எதற்காக, யாருக்காக நான் வருந்த வேண்டும்?” என்பது போன்ற கேள்விகளைச் சிந்திக்கும் ஒருவன் அமைதியை அடைகிறான்.(40) வாழ்வும், அதன் சுற்றுச்சூழலும் ஒரு சக்கரத்தைப் போலத் தொடர்ந்து சுழல்கின்றன, அன்புக்குரியோரின் தோழமை தோன்றி மறையக்கூடியது {சிறிது காலம் நீடிக்கக்கூடியதே}. சகோதரன், தாயார், தந்தையார், நண்பன் ஆகியோர் விடுதியில் உள்ள பயணிகளைப் போன்றோராவர்.(41) {எனவே, அவர்களின் இழப்புக்காக வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை}.

ஞானம் கொண்ட மனிதர்கள், காணப்படாத அடுத்த உலகத்தைத் தங்கள் ஊன்கண்களாலேயே காண்கிறார்கள். அறிவை விரும்பும் ஒருவன், சாத்திரங்களை அலட்சியம் செய்யாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.(42) அறிவைக் கொண்ட ஒருவன், பித்ருக்கள், தேவர்கள் ஆகியோர் சம்பந்தமாக விதிக்கப்பட்டிருக்கும் சடங்குகளைச் செய்து, அறக்கடமைகள் அனைத்தையும் பயின்று, வேள்விகளைச் செய்து, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை நீதியுடன் பின்தொடர வேண்டும்.(43) ஐயோ, பெரும் ஆழம் கொண்டதும், முதுமை மற்றும் மரணம் என்றழைக்கப்படும் பெரும் முதலைகள் நிறைந்ததுமான காலமெனும் பெருங்கடலில் இவ்வுலகம் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை.(44)

மருத்துவ அறிவியலைக் கவனமாகக் கற்றிருந்தாலும் பல மருத்துவர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நோயினால் பீடிக்கப்படுவது காணப்படுகிறது.(45) பெருங்கடலானது கரைகளைக் கடக்க முடியாததைப் போலவே, கசப்பானவையும், பிசுபிசுப்பவையுமான பல்வேறு வகை மருந்துகளை உட்கொண்டாலும் இவர்கள் மரணத்தை விஞ்சுவதில் வெல்வதில்லை.(46) வேதியியலை நன்கறிந்த மனிதர்கள், நியாயமாக {விதிதவறாமல்} வழங்கப்படும் வேதியியல் சேர்மங்களைத்[3] தாக்குப் பிடிக்கமுடியாமல் யானைகளால் முறிக்கப்படும் மரங்களைப் போல முதுமையால் நொறுங்கி வீழ்வதும் காணப்படுகிறது.(47) அதேபோலவே, வேத கல்வியில் அர்ப்பணிப்பு மிக்கோரும், தவத்தகுதி கொண்டவர்களுமான மனிதர்களும் கூட, ஈகை பயின்று, அடிக்கடி வேள்விகளைச் செய்தாலும் முதுமை மற்றும் மரணத்தில் இருந்து தப்புவதில் வெல்வதில்லை.(48) பிறப்பை அடைந்திருக்கும் அனைத்து உயிரினங்களைப் பொறுத்தவரையில், ஒரு முறை கடந்து போகும் வருடங்களோ, மாதங்களோ, அரைத்திங்களோ {பக்ஷங்களோ}, பகல்களோ, இரவுகளோ மறுபடி திரும்புவதில்லை.(49) நிலையில்லாத இருப்பைக் கொண்ட மனிதன், விரும்பினாலும், விருப்பாவிட்டாலும், அனைத்து உயிரினங்களாலும் நடக்கப்படும் தவரிக்கப்பட முடியாத, அகன்ற பாதையை அடைய காலப்போக்கால் பலவந்தமாக இழுக்கப்படுகிறான்[4].(50)உடலானது உயிரினங்களில் இருந்து உதிக்கிறதோ, உயிரினங்கள் உடலில் இருந்து உதிக்கின்றனவோ, மனைவியர் மற்றும் பிற நண்பர்களுடனான ஒருவனின் உறவு விடுதியில் உள்ள பயணிகளைப் போன்றதே ஆகும்[5].(51) எவனாலும் எவனுடனும் நீடித்த தோழமையைப் பெற முடியாது. எவனாலும் தன் சொந்த உடலுடனேயே அத்தகு தோழமையைக் கொள்ள முடியாது. அவ்வாறிருக்கையில் வேறு எவரிடும் எவ்வாறு அவன் தோழமையை {உறவை} அடைவான்?(52) ஓ! மன்னா {ஜனகா}, இன்று உன் தந்தை எங்கே? உன் பாட்டன்கள் எங்கே? ஓ! பாவமற்றவனே, நீ இன்று அவர்களைக் காணவில்லை, அவர்களும் உன்னைக் காணவில்லை.(53) எந்த மனிதனாலும் சொர்க்கத்தையோ, நரகத்தையோ பார்க்க முடியாது. எனினும், சாத்திரங்களே அறவோரின் கண்களாகும். ஓ! மன்னா, சாத்திரங்களின் படி உன் நடத்தையை அமைத்துக் கொள்வாயாக.(54)ஒருவன் தூய்மையான இதயத்துடன் முதலில் பிரம்மச்சரிய நோன்பை நோற்று, பிறகு பிள்ளைகளைப் பெற்று, பிறகு பித்ருக்கள், தேவர்கள் மற்றும் மனிதர்களுக்குத் தான் பட்ட கடனைச் செலுத்துவதற்காக வேள்விகளைச் செய்ய வேண்டும்.(55) முதலில் ஒருவன், பிரம்மச்சரிய நோன்பை நோற்று, வேள்விகளைச் செய்து, பிள்ளைகளைப் பெறுவதில் ஈடுபட்டு, அறிவையே கண்களாகக் கொண்டு, இதயத் துயரம் அனைத்தையும் கைவிட்டு, சொர்க்கத்திலும், இவ்வுலகத்திலும், தன் சொந்த ஆன்மாவிலும் கவனம் செலுத்த வேண்டும்[6].(56) சொர்க்கம், பூமி ஆகியவற்றை நியாயமாக அடைய அறம்பயில முனைந்து, சாத்திரங்களில் (மன்னனின் பங்காக) விதிக்கப்பட்ட உலகப் பொருட்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும் மன்னன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் மற்றும் உலகங்கள் அனைத்தின் மத்தியிலும் பரவும் புகழை வெல்கிறான்” என்றார் {அஸ்மர்}.(57)தெளிந்த அறிவைக் கொண்ட விதேஹர்களின் ஆட்சியாளன் {மன்னன் ஜனகன்}, அறிவு நிறைந்த இந்த வார்த்தைகளைக் கேட்டு, துயரில் இருந்து விடுபட்டு, அஸ்மரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு தன் வசிப்பிடத்தை நோக்கிச் சென்றான்.(58) ஓ! மங்கா புகழ் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, உன் துயரங்களைக் கைவிட்டு எழுவாயாக. நீ சக்ரனுக்கே {இந்திரனுக்கே} இணையானவனாவாய். உன் ஆன்மாவில் இன்புற்றிருப்பாயாக. க்ஷத்திரியக் கடமைகளின் நடைமுறையின்படியே இந்தப் பூமி உன்னால் வெல்லப்பட்டது. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, அதை அனுபவிப்பாயாக. என் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே” என்றார் {வியாசர்}”.(59)

நாரதர் சிருஞ்சயன் உரையாடல்! – சாந்திபர்வம் பகுதி – 29-யுதிஷ்டிரன் அமைதியடையாததைக் கண்ட அர்ஜுனன், கிருஷ்ணனிடம் அவனைத் தேற்றச் சொன்னது; சிருஞ்சயனிடம் நாரதர் உரைத்ததை யுதிஷ்டிரனுக்குச் சொன்னது; மருத்தன், சஹோத்ரன், அங்க மன்னன் பிருஹத்ரதன், சிபி, துஷ்யந்தன், தசரதராமன், பகீரதன், திலீபன், மாந்தாதா, யயாதி, அம்பரீஷன், சசபிந்து, கயன், ரந்திதேவன், சகரன், பிருது ஆகிய பதினாறு மன்னர்களின் கதைகளைச் சுருக்கமாகச் சொன்ன நாரதர்..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னர்களில் முதன்மையானவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், பேச்சற்றவனாக அமைதியாக இருந்த போது, பாண்டுவின் மகனான அர்ஜுனன், கிருஷ்ணனிடம் பின்வருமாறு பேசினான்.(1)

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “எதிரிகளை எரிப்பவரான இந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரர்}, உறவினர்களின் (அவர்கள் கொல்லப்பட்டதன்) நிமித்தமாகத் துயரில் எரிகிறார். ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவரைத் தேற்றுவாயாக.(2) ஓ! ஜனார்த்தனா, மீண்டும் நாங்கள் அனைவரும் பேராபத்தில் விழுகிறோம். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவரது துயரை அகற்றுவதே உனக்குத் தகும்” என்றான்”.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம அர்ஜுனனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், தாமரைக் கண்ணையும், மங்கா மகிமை கொண்டவனுமான கோவிந்தன் அம்மன்னனை நோக்கி தன் முகத்தைத் திருப்பினான்.(4) கேசவன் எவ்வழியிலும் யுதிஷ்டிரனால் அலட்சியம் செய்யத்தக்கவனல்ல. தொடக்கக் காலத்திலிருந்தே அர்ஜுனனை விடக் கோவிந்தனே யுதிஷ்டிரனுக்கு அன்புக்குரியவனாக இருந்தான்.(5) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான சௌரி {கிருஷ்ணன்}, சந்தனக்குழம்பால் அலங்கரிக்கப்பட்டவையும், சலவைக்கல்லாலான தூணைப் போலத் தெரிந்தவையுமான மன்னனின் கரங்களைப் பற்றிக் கொண்டு (கேட்பவர் அனைவரின் இதயங்களையும்) மகிழ்விக்கும் வகையில் பேசத் தொடங்கினான்.(6) அழகான பற்களாலும், கண்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவனது முகமானது, சூரிய உதயத்தின் போது முற்றாக மலர்ந்த தாமரையைப் போல மிகப் பிரகாசமாக ஒளிர்ந்தது.(7)

வாசுதேவன், “ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, உமது உடலை மெலியச் செய்யும் இத்தகு துயரில் ஈடுபடாதீர். இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களை எக்காரியத்தாலும் திரும்ப அடைய முடியாது.(8) ஓ! மன்னா, இந்தப் பெரும்போரில் வீழ்ந்த க்ஷத்திரியர்கள், ஒருவன் விழித்தெழும்போது மறைந்து போகும் கனவில் அடையப்படும் பொருட்களைப் போன்றவர்களாவர்[1].(9) அவர்கள் அனைவரும், வீரர்களும், போர்க்கள ரத்தினங்களுமாவர். அவர்கள் தங்கள் எதிரிகளை முகமுகமாக நோக்கி விரைந்த போதே வீழ்த்தப்பட்டார்கள். அவர்களில் எவரும், முதுகில் காயங்களுடனோ, தப்பி ஓடும்போதோ கொல்லப்படவில்லை.(10) அவர்கள் அனைவரும் இந்தப் போரில் வீரர்களுடன் மோதி, ஆயுதங்களால் புனிதமடைந்து தங்கள் உயிர்மூச்சுகளை விட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டனர். அவர்களுக்காக வருந்துவது உமக்குத் தகாது.(11) க்ஷத்திரியக் கடமைகளுக்கு அர்ப்பணிப்புடனும், துணிவுடனும், வேதங்களையும் அதன் அங்கங்களையும் சரியாக அறிந்தும் அவர்கள் அனைவரும் வீரர்களால் அடையப்படும் அருள்நிலையை அடைந்துவிட்டனர். உயர் ஆன்மா கொண்டவர்களும், இவ்வுலகில் இருந்து சென்றுவிட்டவர்களுமான பழங்காலத்தின் பூமியின் தலைவர்களைக் குறித்துக் கேட்ட பிறகு அவர்களுக்காக வருந்துவது உமக்குத் தகாது.(12) சிருஞ்சயன் தன் மகனின் {சுவர்ணஷ்டீவினின்} மரணத்தின் நிமித்தமாக ஆழமான துயரில் பீடிக்கப்பட்டிருந்தபோது, அவனுக்கு முன்னிலையில் நடந்த நாரதரின் பழைய உரையாடல் இது தொடர்பானதே.(13)(நாரதர் சொன்னார்), “ஓ! சிருஞ்சயா, இன்பத்திற்கும் துன்பத்திற்கு ஆட்படுபவர்களான, நானும், நீயும், அனைத்து உயிரினங்களும் இறக்கவே போகிறோம். பிறகு கவலைக்கான காரணம் என்ன?(14) (சில) பழங்காலத்து மன்னர்களின் பேரருள் நிலையைச் சொல்கிறேன் கேட்பாயாக. குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, பிறகு நீ உன் துயரைக் கைவிடலாம்.(15) உயர் ஆன்மா கொண்ட அந்தப் பூமியின் தலைவர்களுடைய கதையைக் கேட்டு உன் சோகத்தைத் தணிப்பாயாக. ஓ!, அவர்களின் கதையை விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(16) பழங்காலத்தைச் சேர்ந்த அந்த மன்னர்களின் இனிமைநிறைந்த அழகிய வரலாற்றைக் கேட்பதால், தீய நட்சத்திரங்கள் {தீக்கோள்களின் வினைகள்} தணிவடையச் செய்து அமைதிப்படுத்தப்பட்டு, ஒருவனின் வாழ்நாள் {ஆயுள்} அதிகரிக்கப்படும்.(17)

ஓ! சிருஞ்சயா, அவிக்ஷித்தின் மகனான மருத்தன்[2] என்ற பெயருடைய மன்னன் ஒருவன் இருந்தான். அவனும் மரணத்திற்கு இரையாக வேண்டியிருந்தது. இந்திரன், வருணன், பிருஹஸ்பதி ஆகியோரின் தலைமையிலான தேவர்கள், அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியால் செய்யப்பட்ட விஸ்வஸ்ரீஜ்[3] என்றழைக்கப்படும் வேள்விக்கு வந்தனர். அம்மன்னன் {மருத்தன்}, தேவர்களின் தலைவனான சக்ரனை {இந்திரனை} போருக்கு அறைகூவியழைத்து அவனை வென்றான்.(18,19) கல்விமானான பிருஹஸ்பதி, இந்திரனுக்கு நன்மை செய்ய விரும்பி, மருத்தனின் வேள்வியை நடத்திக் கொடுக்க மறுத்தார். அதன் பேரில், பிருஹஸ்பதியின் தம்பியான சம்வர்த்தர் மன்னனின் வேண்டுகோளை ஏற்றார்[4].(20) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {சிருஞ்சயா}, அம்மன்னனின் {மருத்தனின்} ஆட்சியின் போது, உழாமலேயே பூமியானது பயிர்களை விளைவித்தது; பல்வேறு ஆபரணங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(21) அம்மன்னனின் வேள்வியில், விஸ்வேதேவர்கள் அவை உறுப்பினர்களாக அமர்ந்திருந்தனர், மருத்தர்கள் (உணவு மற்றும் கொடைகளை) விநியோகிப்பவர்களாகச் செயல்பட்டனர், உயர் ஆன்ம சத்யஸ்களும் அங்கே இருந்தனர்.(22) மருத்தனின் அந்த வேள்வியில் மருத்தர்கள் சோமத்தைக் குடித்தனர். மன்னன் {மருத்தன்} அளித்த வேள்விக் கொடைகள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோரால் கொடுக்கப்பட்டதைவிட (மதிப்பில்) விஞ்சியதாக இருந்தன.(23) ஓ! சிருஞ்சயா, அறத்தகுதி, அறிவு, துறவு, செல்வம் ஆகியவற்றால் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்த மன்னனே {மருத்தனே} மரணத்துக்கு இரையானான்; எனவே, உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக} வருந்தாதே.(24)அதிதியின் மகனாகச் சுஹோத்ரன்[5] என்ற பெயரில் மற்றுமொரு மன்னன் இருந்தான். ஓ! சிருஞ்சயா, அவனும் மரணத்திற்கு இரையானதாகவே நாம் கேட்கிறோம். அவனது ஆட்சி காலத்தில், மகவத் {இந்திரன்}, அவனது நாட்டில் ஒரு முழு வருடத்திற்குத் தங்க மழை பொழிந்தான்.(25) அந்த மன்னனைத் தன் தலைவனாக அடைந்த பூமியானவள், (ஏற்கனவே இருந்தது போலப் பெயரில் மட்டுமே அல்லாமல்) உண்மையிலேயே வசுமதியானாள்[6]. அம்மன்னனின் ஆட்சியின் போது இந்திரன் தங்க மழை பொழிந்ததால் ஆறுகளின் ஆமைகள், நண்டுகள், முதலைகள், சுறாக்கள், கடற்பன்றிகள் ஆகினவனவும் தங்கமயமாகின.(26,27) அதிதியின் மகன் {சுஹோத்ரன்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அந்தத் தங்க மீன்கள், சுறாக்கள் மற்றும் ஆமைகளைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான்.(28) சுஹோத்ரன், பூமியை மறைத்த அந்தப் பரந்த செல்வமான தங்கத்தைத் திரட்டி குருஜாங்கலத்தில் ஒரு வேள்வியைச் செய்து, பிராமணர்களுக்கு அதைக் கொடையாக அளித்தான்.(29) ஓ! சிருஞ்சய, அறத்தகுதி, அறிவு, துறவு, செல்வம் ஆகிய நான்கு பண்புகளிலும் உன்னை விட விஞ்சியிருந்தவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்த மன்னனே {சுஹோத்ரனே} மரணத்திற்கு இரையானான்; (எனவே இறந்து போன) உன் மகனுக்காக வருந்தாதே.(30) உன் மகன், வேள்வி எதையும் செய்யவில்லை, ஒருபோதும் கொடையளித்ததில்லை. இதை அறிந்து கொண்டு, துயரத்தில் வீழாமல் உன் மனத்தை அமைதியடையச் செய்வாயாக.ஓ! சிருஞ்சயா, அங்கர்களின் மன்னனான பிருஹத்ரதனும்[7] மரணத்திற்கு இரையானதாக நாம் கேள்விப்படுகிறோம்.(31) அவன் நூறாயிரம் குதிரைகளைக் கொடையாக அளித்தான். அவன் செய்த வேள்வியில் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூறாயிரம் கன்னிகையரையும் கொடையாக அளித்தான்.(32) அவனால் செய்யப்பட்ட மற்றொரு வேள்வியில், நற்குலத்தில் பிறந்த நூறாயிரம் யானைகளையும் கொடையாகக் கொடுத்தான்.(33) தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் லட்சம் காளைகளுடன் அவற்றுடன் சேர்த்து ஆயிரக்கணக்கான பசுக்களையும் அவன் வேள்விக் கொடைகளாகக் கொடுத்தான்.(34) அந்த அங்க மன்னன் {பிருஹத்ரதன்}, விஷ்ணுபதம் என்றழைக்கப்படும் மலையில் வைத்து தன் வேள்வியைச் செய்து கொண்டிருந்தபோது,(35) இந்திரன் தான் குடித்த சோமத்தாலும், பிராமணர்கள் தாங்கள் பெற்ற கொடைகளாலும் போதையுண்டார்கள். ஓ! ஏகாதிபதி, இந்த மன்னனால் பழங்காலத்தில் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வேள்விகளில்,(36) அவன் அளித்த கொடைகள் தேவர்கள், கந்தர்கள் மற்றும் மனிதர்களை விஞ்சியதாக இருந்தன. அங்கர்களின் அந்த மன்னன், சோமச்சாற்றுடன் தான் செய்த ஏழு வேள்விகளில் அவனால் கொடுக்கப்பட்ட செல்வத்தைப் போலக் கொடுத்த, அல்லது கொடுக்கக்கூடிய எந்த மனிதனும் பிறக்கவோ, பிறக்கப்போவதோ இல்லை[8].(37) ஓ! சிருஞ்சயா, நான்கு பண்புகளினும் உன்னிலும் உயர்ந்தவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்தப் பிருஹத்ரதனே மரணத்திற்கு இரையானான்; {எனவே} இறந்து போன உன் மகனுக்காக வருத்தமடையாதே.(38)ஓ! சிருஞ்சயா, உசீநரனின் மகனான சிபியும்[8] மரணத்திற்கு இரையானதாக நாம் கேள்விப்படுகிறோம். தன் கையிலுள்ள தோல் கவசத்தை ஆள்வதைப் போல அந்த மன்னன் மொத்த பூமியையும் ஆண்டான்.(39) அந்த மன்னன் சிபி, ஒவ்வொரு போரிலும் வெற்றியையளித்த ஒரே தேரைச் செலுத்திக் கொண்டு, தன் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் மொத்த உலகையும் எதிரொலிக்கச் செய்து, ஏகாதிபதிகள் அனைவரையும் அடக்கினான்.(40) உசீநரனின் மகனான அந்தச் சிபி, ஒரு வேள்வியில் தன்னிடம் இருந்த காட்டு மற்றும் வீட்டுப் பசுக்கள் மற்றும் குதிரைகள் அனைத்தையும் கொடையாக அளித்தான்(41) ஓ! சிருஞ்சயா, இந்திரனுக்கு இணையான ஆற்றலைக் கொண்ட வீரனும், மன்னர்களில் முதன்மையானவனும், உசீநரனின் மகனுமான அந்தச் சிபி சுமந்ததைப் போல, கடந்த கால, எதிர்கால மன்னர்கள் எவராலும் சுமையைச் சுமக்க முடியாது என்று படைப்பாளனே அவனை {சிபியைக்} குறித்து நினைத்தான். எனவே, எந்த வேள்வியும் செய்யாதவனும், எந்தக் கொடையையும் அளிக்காதவனுமான உன் மகனுக்காக வருந்தாதே.(42,43) உண்மையில், நான்கு பண்புகளிலும் உன்னைவிட மேன்மையானவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்தச் சிபியே மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்தாதே.(44)ஓ! சிருஞ்சயா, துஷ்யந்தன் மற்றும் சகுந்தலையின் மகனும், நன்கு நிரப்பப்பட்ட பரந்த கருவூலத்தையும், உயர் ஆன்மாவைக் கொண்டவனுமான பரதனும்[9] மரணத்திற்கு இரையானான் என்று நான் கேள்விப்படுகிறோம்.(45) யமுனையின் கரையில் தேவர்களுக்காக முன்னூறு குதிரைகளையும், சரஸ்வதியின் கரைகளில் இருபதையும், கங்கையின் கரைகளில் பதினான்கையும் அர்ப்பணித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அம்மன்னன் {பரதன்},(46) பழங்காலத்தில் ஓராயிரம் குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூய வேள்விகளையும் செய்தவனாவான்.(47) எந்த மனிதனாலும் தனது கரங்களின் வலிமையைப் பயன்படுத்தி ஆகாயத்தில் பறக்க முடியாததைப் போலவே, பூமியின் எந்த மன்னனாலும் பரதனின் பெருஞ்செயல்களைப் போலச் செய்யவே முடியாது.(48) எண்ணற்ற வேள்விப்பீடங்களை நிறுவிய அவன், முனிவர் கண்வருக்கு எண்ணற்ற குதிரைகளையும், விவரிக்க முடியாத அளவுக்குச் செல்வத்தையும் கொடையாக அளித்தான்.(49) ஓ! சிருஞ்சயா, நான்கு பண்புகளிலும் உன்னைவிட மேம்பட்டவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்தாதே.(50)ஓ! சிருஞ்சயா, தசரதனின் மகனான ராமனும்[10] கூட மரணத்திற்கு இரையானதாவே நாம் கேள்விப்படுகிறோம். அவன், தனது குடிமக்களைத் தன் மடியில் பிறந்த மகன்களைப் போலவே எப்போதும் பேணிப் பாதுகாத்தான்.(51) அவனது ஆட்சிப் பகுதிகளில் விதவைகளோ, ஆதரவற்றவர்களோ எவரும் இல்லை. உண்மையில், அந்த ராமன், தன் நாட்டை ஆள்வதில், தன் தந்தையான தசரதனைப் போலவே எப்போதும் செயல்பட்டான்.(52) பருவகாலந்தவறாமல் பொழிந்த மேகங்கள், பயிர்களை அபரிமிதமாக வளரச் செய்தன. அவனது ஆட்சி காலத்தில், அவனது நாட்டில் உணவு எப்போதும் அபரிமிதமாகவே இருந்தது.(53) நீரில் மூழ்கியோ, நெருப்பில் வெந்தோ மரணமேதும் நேரவில்லை. ராமன் ஆண்டவரை, அவனது நாட்டில் எந்த நோயைக் குறித்தும் அச்சமேதும் இருக்கவில்லை.(54) ஒவ்வொரு மனிதனும் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தான். ஒவ்வொரு மனிதனும் ஆயிரம் பிள்ளைகளால் அருளப்பட்டவனாக இருந்தான். ராமனின் ஆட்சி காலத்தில், மனிதர்கள் அனைவரும் கூட்டமாக இருந்தனர், மனிதர்கள் அனைவரும் தங்கள் விருப்பங்களின் கனியை அடைந்தனர்.(55) பெண்கள் ஒருவரோடொருவர் சச்சரவு கொள்ள மாட்டார்கள் எனும்போது ஆண்களைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது? அவனது ஆட்சிக்காலத்தில் அவனது குடிமக்கள் எப்போதும் அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டோராக இருந்தனர்.(56) ராமன் ஆண்ட நாட்டின் மக்கள் அனைவரும், தங்கள் விருப்பப் பொருட்கள் அனைத்தையும் அடைந்தவர்களாக, மனம் நிறைந்தவர்களாக, அச்சமற்றவர்களாக, விடுதலை கொண்டவர்களாக, உண்மையெனும் நோன்பை நோற்றவர்களாக இருந்தனர்.(57) மரங்கள் எப்போதும் மலர்கள் மற்றும் கனிகளைச் சுமந்தவையாக, எந்த விபத்துகளுக்கும் உட்படாதவையாக இருந்தன. ஒவ்வொரு பசுவும் ஒரு துரோணத்தின் {குடத்தின்} விளிம்பு வரை பாலைக் கொடுத்தன.(58) கடுந்தவங்களை நோற்று பதினான்கு வருடங்கள் காட்டில் வசித்தவனான ராமன், யாவருங் கலந்து கொள்ளக்கூடிய பெரும் ஒளிபொருந்திய பத்து குதிரைவேள்விகளைச் செய்தான்.(59) கரிய நிறத்தவனும், கண்கள் சிவந்தவனும், இளமை கொண்டவனுமான அவன், யானைக்கூட்டத்தின் தலைமை யானையைப் போலத் தெரிந்தான். கால் முட்டிகள் வரை கரங்கள் நீண்டவனும், அழகிய முகம் கொண்டவனுமான அவனது தோள்கள் சிங்கத்தைப் போன்றனவாகவும், அவனது கரங்களின் வலிமை பெரியதாகவும் இருந்தன.(60) அயோத்யையின் அரியணையில் ஏறிய அவன் பதினோராயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.(61) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {ராமனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்தாதே.(62)ஓ! சிருஞ்சயா, மன்னன் பகீரதனும்[11] இறந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அம்மன்னனின் வேள்விகளில் ஒன்றில், தான் குடித்த சோமத்தால் போதையுண்டவனும்,(63) தேவர்களின் தலைவனும், பகனைத் தண்டித்த புகழத்தக்கவனுமான இந்திரன், தன் கரங்களின் வலிமையை வெளிப்படுத்திப் பல்லாயிரக்கணக்கான அசுரர்களை வென்றான்.(64) மன்னன் பகீரதன், தான் செய்த வேள்விகளில் ஒன்றில், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பத்து லட்சம் கன்னிகையரைக் கொடையளித்தான்.(65) அந்தக் கன்னியர் ஒவ்வொருவரும் ஒரு தேரில் அமர்ந்திருந்தனர், அந்த ஒவ்வொரு தேரிலும் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு தேருடனும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தனவும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான நூறு யானைகளும் இருந்தன.(66) ஒவ்வொரு யானையின் பின்பும் ஆயிரம் குதிரைகளும், ஒவ்வொரு குதிரைகளுக்குப் பின்னும் ஆயிரம் பசுக்களும், ஒவ்வொரு பசுவின் பின்னும் ஆயிரம் செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் இருந்தன.(67) (முன்பிருந்தே) பாகீரதி என்று பெயரிடப்பட்ட (நதிதேவியான) கங்கை, (தன் ஓடையின்) அருகே வசித்து வந்த இந்த மன்னனின் மடியில் அமர்ந்ததன் விளைவால் ஊர்வசி என்றும் அழைக்கப்பட்டாள்[12].(68) மூவழிப்பாதை கொண்ட கங்கை[13], இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்தவனும், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடும் ஏகாதிபதியுமான பகீரதனுக்கு மகளாவதை ஏற்றுக் கொண்டாள்.(69) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளைப் பொறுத்தவரை உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே மரணத்திற்கு இரையானான் எனும்போது, உன் மகனுக்காக நீ வருந்தாதே.(70)ஓ! சிருஞ்சயா, உயர் ஆன்ம திலீபனும்[14] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அவனது எண்ணற்ற செயல்களை உரைப்பதற்குப் பிராமணர்கள் விரும்புவார்கள்.(71) அந்த மன்னன் {திலீனன்} தன்னுடைய பெரும் வேள்விகள் ஒன்றில், செல்வம் நிறைந்த மொத்த உலகத்தையும் முழு இதயத்துடன் பிராமணர்களுக்குக் கொடையாள அளித்தான்.(72) அவன் செய்த ஒவ்வொரு வேள்வியிலும், தலைமைப் புரோகிதர் தன் வேள்விக்கூலியாகத் தங்கத்தாலான ஆயிரம் யானைகளைப் பெற்றார்.(73) அவனுடைய வேள்விகளில் ஒன்றில், (பலிகளுக்காக நிறுவப்பட்ட) கம்பம் தங்கத்தால் செய்யப்பட்டு மிகவும் அழகாக இருந்தது. தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடமைகளை ஆற்றியவர்களும், சக்ரனைத் தங்கள் தலைவனாகக் கொண்டவர்களுமான தேவர்கள், அந்த மன்னனின் {திலீபனின்} பாதுகாப்பையே எப்போதும் நாடினார்கள்.(74) பெரும் பிரகாசம் கொண்டதும், வளையத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தங்கக் கம்பத்தில், ஆறாயிரம் தேவர்களும் கந்தர்வர்களும் மகிழ்ச்சியில் ஆடினர், அவர்களுக்கு மத்தியில் விஸ்வாவசு ஏழு சுவரங்களின் விதிகளின் படி வீணையை இசைத்துக் கொண்டிருந்தான். விஸ்வாசுவுடைய இசையின் தன்மையானது, ஒவ்வொரு உயிரினமும் (அஃது எங்கிருந்தாலும்) அந்தப் பெரும் கந்தர்வன் {விஸ்வாவசு} தனக்காக மட்டுமே இசைக்கிறான் என்று எண்ணும் அளவுக்கு இருந்தது.(75,76) மன்னன் திலீபனின் சாதனையே வேறு எந்த ஏகாதிபதியாலும் செய்ய முடியாது. தங்க அம்பாரிகளால் ஆலங்கரிக்கப்பட்டு மதங்கொண்டிருந்த அந்த மன்னனின் யானைகள், சாலையில் படுத்துக் கிடந்தன[15].(77) பேச்சில் எப்போதும் உண்மை நிறைந்தவனும், நூறு அனந்தங்களின் சக்திக்கு இணையான நூறு பகைவர்களைத் தாங்கக் கூடிய வில்லைக் கொண்டனும், உயர் ஆன்மாவுமான மன்னன் திலீபனைக் கண்டவர்கள் சொர்க்கத்தை அடைந்தனர்.(78) வேதமோதும் குரல், விற்களின் நாணொலி, கொடுக்கப்படட்டும் என்ற ஆணை ஆகிய மூன்று ஒலிகளும் திலீபனின் வசிப்பிடத்தில் எப்போதும் ஓய்ந்ததில்லை.(79) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {திலீபனே} மரணத்துக்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(80)ஓ! சிருஞ்சயா, யுவனாஸ்வனின் மகனான மாந்தாதாவும்[16] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். மருத்தர்கள் என்ற பெயரைக் கொண்ட தேவர்கள், அந்தப் பிள்ளையை அவனது தந்தையின் விலாவில் இருந்து பிரித்தெடுத்தனர்.(81) மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட தெளிந்த நெய்யில் (தாயார் குடிக்கவேண்டியதைத் தவறுதலாகத் தந்தை குடித்ததால்) உதித்த மாந்தாதா, உயர் ஆன்மா யுவனாஸ்வனின் வயிற்றில் பிறந்தான். பெரும் செழிப்பைக் கொண்டவனான மன்னன் மாந்தாதா மூவுலகங்களையும் கைப்பற்றினான்.(82) தந்தையின் மடியில் கிடக்கும் தெய்வீக அழகுடைய பிள்ளையைக் கண்ட தேவர்கள், ஒருவருக்கொருவர், “இந்தப் பிள்ளை யாரிடம் பால் குடிக்கும்?” என்று கேட்டனர்.(83) அவனை {மாந்தாதாவை} அணுகிய இந்திரன், “என்னிடமே குடிப்பான்” என்றான். இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து அந்தத் தேவர்களின் தலைவன் அந்தப் பிள்ளையை மாந்தாதா[17] என்ற பெயரில் அழைக்கத் தொடங்கினான்.(84) யுவனாஸ்வனின் உயர் ஆன்மப் பிள்ளைக்கான ஊட்டச்சத்திற்காக, இந்திரன் தன் விரலை அவனது {மந்தாதாவின்} வாயில் வைத்ததும், அது பாலூற்றைப் பொழிந்தது.(85) இந்திரனின் விரலைப் பருகிய அவன் நூறு நாட்களில் (இளமை பருவமடைந்து) வளர்ந்துவிட்டான். பனிரெண்டு நாட்களில் அவன் பனிரெண்டு வயதுடையவனைப் போல வளர்ந்தான்.(86) உயர் ஆன்மா கொண்டவனும், ஆறவோனும், துணிச்சல்மிக்கவனும், போராற்றலில் இந்திரனுக்கே ஒப்பானவனுமான அந்த மன்னனின் ஆளுகைக்குள் ஒரே நாளில் மொத்த பூமியும் வந்தது.(87) மன்னன் அங்காரன், மருத்தன், அசிதன், கயன் அங்கர்களின் மன்னனான பிருஹத்ரதன் ஆகியோரை அவன் வென்றான்[18].(88) யுவனாஸ்வனின் மகன் {மாந்தாதா} அங்காரனோடு போரிட்ட போது, அவனது வில்லின் நாணொலியால் வானமே உடையப் போகிறது எனத் தேவர்கள் நினைத்தனர்.(89) சூரியன் உதிக்கும் இடத்தில் இருந்து அவன் மறையும் இடம் வரை உள்ள மொத்த பூமியும் மாந்தாதாவின் நிலம் என்று சொல்லப்படுகிறது.(90) நூற்றுக்கணக்கான குதிரை வேள்விகளையும், ராஜசூய வேள்விகளையும் செய்த அவன், பிரமணர்களுக்கு பல ரோகித மீன்களைக் கொடையாகக் கொடுத்தான்.(91) அந்த மீன்கள் ஒவ்வொன்றும் பத்து யோஜனை நீளத்தையும், ஒரு யோஜனை அகலத்தையும் கொண்டிருந்தன. பிராமணர்களை நிறைவு செய்த பிறகு எஞ்சியவை பிற வகையினரால் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளப்பட்டன[19].(92) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {மாந்தாதாவே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(93)ஓ! சிருஞ்சயா, நகுஷனின் மகனான யயாதியும்[20] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். கடல்களுடன் கூடிய மொத்த உலகையும் அடக்கிய அவன்,(94) உலகம் முழுவதும் பயணித்து, மரத்துண்டை வீசியெறிந்தால் செல்லுத் தூரத்தை இடைவெளியாகக் கொண்டு, அடுத்தடுத்த வேள்விப்பீடங்களால் அதை {பூமியை} அலங்கரித்தான். உண்மையில், அவன் இப்படி (தன் வழியில் பீடங்களை நிறுவி) பெரும் வேள்விகளைச் செய்தே கடலின் கரையை அடைந்துவிட்டான்[21].(95) ஆயிரம் வேள்விகளையும், நூறு வாஜபேயங்களையும் செய்த அவன் {யயாதி}, முதன்மையான பிராமணர்களை மூன்று தங்க மலைகளால் நிறைவு செய்தான்.(96) நகுஷனின் மகனான யயாதி, போரில் முறையாக அணிவகுத்து வந்த பல தைத்தியர்களையும், தானவர்களையும் கொன்று, மொத்த பூமியையும் (தன் பிள்ளைகளுக்குப்) பிரித்துக் கொடுத்தான்.(97) இறுதியாக யது மற்றும் திரஹ்யு ஆகியோரின் தலைமையிலான தன் மற்ற மகன்களை அலட்சியம் செய்து, (தன் இளைய மகனான) பூருவைத் தன் அரியணையில் அமர்த்திவிட்டு, தன் மனைவியின் துணையுடன் கானகம் புகுந்தான்.(98) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {யயாதியே} மரணத்துக்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(99)ஓ! சிருஞ்சயா, நாபாகனின் மகனான அம்பரீஷனும்[22] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். மன்னர்களில் முதன்மையான அந்த (பூமியின்) பாதுகாவலனை {அம்பரீஷனை}, அவனது குடிமக்கள் அறத்தின் வடிவமாகக் கருதினர்.(100) அந்த ஏகாதிபதி, தனது வேள்விகளில் ஒன்றில், ஆயிரக்கணக்கான வேள்விகளைச் செய்தவர்களான பத்து லட்சம் மன்னர்களைப் பிராமணர்களுக்காகக் காத்திருக்கச் செய்தான் {அம்மன்னர்களைப் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்ய வைத்தான்}.(101) பக்திமான்கள், “அத்தகு சாதனைகள் கடந்த காலத்திலும் நடக்கவில்லை, எதிர்காலத்திலும் நடக்காது” என்று சொல்லி நாபாகனின் மகனான அம்பரீஷனைப் புகழ்ந்தார்கள்.(102) (அம்பரீஷனின் ஆணைக்கிணங்க அவனது வேள்விகளில் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்த) நூற்றுக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரத்திற்கும் ஆயிரக்கணக்கான மன்னர்கள், குதிரை வேள்வியின் கனிகளை (அந்த அம்பரீஷனின் தகுதிகளின் {புண்ணியங்களின்} மூலம்) அடைந்து, தென்பாதையில் (ஒளியும் அருளும் நிறைந்த உலகங்களுக்கு) தங்கள் தலைவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(103) ஓ! சிருஞ்சயா, நான் முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {அம்பரீஷனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(104)ஓ! சிருஞ்சயா, சித்திரரதனின் மகனான சசபிந்துவும்[23] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். அந்த உயர் ஆன்ம மன்னனுக்கு {சசபிந்துவுக்கு}, நூறாயிரம் {ஒரு லட்சம்} மனைவியரும்,(105) பத்து லட்சம் மகன்களும் இருந்தனர். தங்கக் கவசம் பூண்டவர்களான அவர்கள் அனைவரும் சிறந்த வில்லாளிகளாக இருந்தனர்.(106) அந்த இளவரசர்களில் ஒவ்வொருவரும் நூறு இளவரசிகளை மணந்தனர், அவர்களில் ஒவ்வொரு இளவரசியும், நூறு யானைகளைக் கொண்டு வந்தனர். அந்த யானைகள் ஒவ்வொன்றுடனும் நூறு தேர்கள் இருந்தன.(107) தேர்கள் ஒவ்வொன்றுடனும் நல்ல இனத்தில் பிறந்தவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான நூறு குதிரைகள் இருந்தன. குதிரைகள் ஒவ்வொன்றுடனும் நூறு பசுக்கள் இருந்தன, பசுக்கள் ஒவ்வொன்றுடனும் நூறு வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் இருந்தன.(108) ஓ! ஏகாதிபதி {சிருஞ்சயா}, இந்தக் கணக்கிலடங்கா செல்வங்களையும் அந்தச் சசபிந்து, ஒரு குதிரை வேள்வியில் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்துவிட்டான்.(109) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {சசபிந்துவே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(110)ஓ! சிருஞ்சயா, அமூர்த்தரயசின் {அமார்த்தரயஸ், அதூர்த்தரஜஸின்} மகனான கயனும்[24] மரணத்திற்கு இரையானதாக நாம் கேள்விப்படுகிறோம். வேள்வியில் எஞ்சியவற்றை உண்டே அம்மன்னன் நூறு வருடங்கள் வாழ்ந்தான்.(111) (அத்தகு அர்ப்பணிப்பில் நிறைவு கொண்ட) அக்னி, அவனுக்கு வரங்களை அளிக்க விரும்பினான். கயன், “தடையில்லாமல் நான் கொடுத்து வந்தாலும் என் செல்வம் வற்றாததாக இருக்கட்டும். அறத்தின் மீது நான் கொண்ட மதிப்பு எப்போதும் நீடித்திருக்கட்டும்[24].(112) ஓ! வேள்விக் காணிக்கைகளை உண்பவனே, உன் அருளால் என் இதயம் எப்போதும் உண்மையில் திளைக்கட்டும்” என்ற வரங்களைக் கேட்டான். அந்த விருப்பங்கள் அனைத்தையும் மன்னன் கயன் அக்னியிடம் இருந்து அடைந்தான் என நாம் கேள்விப்படுகிறோம்.(113) கயன், புதுநிலவு {அமாவாசை} நாட்களிலும், முழு நிலவு {பௌர்ணமி} நாட்களிலும், ஒவ்வொரு நான்காம் மாதத்திலும், குதிரை வேள்விகளை ஆயிரம் வருடங்களுக்கு மீண்டும் மீண்டும் செய்தான்.(114) இந்தக் காலத்தில் அவன், (ஒவ்வொரு வேள்வி நிறைவிலும்) எழுந்து, நூறாயிரம் {ஒரு லட்சம்} பசுக்களையும், நூற்றுக்கணக்கான கோவேறு கழுதைகளையும் (பிராமணர்களுக்குக்) கொடுத்தான்.(115) அந்த மனிதர்களில் காளை {கயன்}, தேவர்களைச் சோமத்தாலும், பிராமணர்களைச் செல்வத்தாலும், பித்ருக்களைச் சுவாதாக்களாலும், பெண்களை அவர்களுடைய விருப்பங்களை அனைத்தையும் நிறைவேற்றுவதாலும் நிறைவு கொள்ளச் செய்தான்.(116) மன்னன் கயன், தனது பெரும் குதிரை வேள்வியில், நூறு முழம் நீளமும், ஐம்பது முழம் அகலமும் கொண்ட தங்கக் களம் {பொற்பூமி} ஒன்றை அமைத்து, அதை வேள்விக்கூலியாகக் கொடையளித்தான்.(117) ஓ மன்னா {சிருஞ்சயா}, மனிதர்களில் முதன்மையானவனும், அமூர்த்தரயசிஸ் மகனுமான கயன், கங்கையாற்றின் மணற்பருக்கைகளின் அளவுக்குப் பல பசுக்களைக் கொடையாக அளித்தான்.(118) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {கயனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன்மகனைக் குறித்து நீ வருந்துவது தகாது.(119)ஓ! சிருஞ்சயா, சங்கிருதியின் மகனான ரந்திதேவனும்[25] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். கடந்தவத்தில் ஈடுபட்டு, சக்ரனைப் பெருமதிப்புடன் வழிபட்ட அவன், அவனிடம் இருந்து வரங்களைப் பெற வேண்டி,(120) “நாங்கள் அபரிமிதமான உணவையும், அபரிமிதமான விருந்தினர்களையம் பெற வேண்டும். என் நம்பிக்கை சிதைவடையாமல் இருக்க வேண்டும். எந்த மனிதனிடம் இருந்தும் நாங்கள் எந்தப் பொருளையும் கேட்காமல் இருக்க வேண்டும்” என்று சொன்னான்.(121) உயர் ஆன்மா கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான ரந்திதேவனின் வேள்வியில் கொல்லப்படும் நாட்டு மற்றும் காட்டு விலங்குகள் தாமாகவே அவனிடம் வந்தன.(122) (அவனது வேள்விகளில் கொல்லப்படும்) வலிங்குகளின் தோல்களில் இருந்து பாயும் சுரப்பி நீரில் உண்டானதே சர்மண்வதி என்ற பெயரில் அறியப்பட்டு இந்த நாள் வரை கொண்டாடப்பட்டு வரும் ஆறாகும்.(123) மன்னன் ரந்திதேவன் தனிப்பட்ட அறைகளில் வைத்து பிராமணர்களுக்குக் கொடையளித்தான். மன்னன், “நான் உமக்கு நூறு நிஷ்கங்கள் கொடுக்கிறேன். நான் உமக்கு நூறு நிஷ்கங்கள் கொடுக்கிறேன்” என்று சொன்ன போது, (கொடுக்கப்பட்டதை ஏற்காமல் மறுக்கும் வகையில்) ஒலியெழுப்பினர்.(124) எனினும், மன்னன், “நான் உமக்கு ஆயிரம் நிஷ்கங்கள்” கொடுக்கிறேன் என்று சொன்ன போது அந்தக் கொடைகள் அனைத்தும் ஏற்கப்பட்டன[26]. ரந்திதேவனின் அரண்மனையில் உணவையும், பிற பொருட்களையும் கொள்ள இருந்த பாத்திரங்கள் மற்றும் தட்டுகள் அனைத்தும்,(125) நீர்க்கலன்கள், குடங்கள், சட்டிகள், தட்டுகள், கோப்பைகள் ஆகியன அனைத்தும் தங்கத்தாலானவையாக இருந்தன.(126) ரந்திதேவனின் வசிப்பிடத்தில் ஓரிரவில் தங்கும் விருந்தினர்களுக்காக இருபதாயிரத்து நூறு பசுக்கள் கொல்லப்பட்டன[27].(127) இருப்பினும் காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சமையற்கலைஞர்கள், சில சமயங்களில், “குழம்பு நிறைய இருக்கிறது. விரும்பிய அளவு உண்ணுங்கள். ஆனால் முன்பு போல் இன்று அதிக இறைச்சி இல்லை” என்று (இரவு உணவு உண்பதற்காக அமர்பவர்களிடம்) அறிவிப்பார்கள்[28].(128) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைக் காட்டிலும் தூய்மையானவனுமான அவனே {ரந்திதேவனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(129)ஓ! சிருஞ்சயா, உயர் ஆன்ம சகரனும்[29] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்தவனான அவன் மனிதர்களில் புலியாகவும், மனித சக்திக்கு மீறிய ஆற்றலைக் கொண்டவனாகவும் இருந்தான்.(130) கூதிர்கால மேகமற்ற வானில் சந்திரனுக்காகக் காத்திருக்கும் கூட்டங்கூட்டமான நட்சத்திரங்களைப் போல அவனுக்குப் பின்னால் அறுபதாயிரம் {60000} மகன்கள் நடப்பார்கள்.(131) அவனது ஆட்சி பூமி முழுவதிலும் பரந்திருந்தது. ஆயிரம் குதிரைவேள்விகளைச் செய்து அவனும் தேவர்களை மனநிறைவு கொள்ளச் செய்தான்.(132) தங்கத்தாலான தூண்களைக் கொண்டவையும், (பிற பகுதிகள் அனைத்தும்) முழுக்க முழுக்க மதிப்புமிக்க உலோகங்களால் ஆனவையும், விலைமதிப்புமிக்கப் படுக்கைகள், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்ட அழகிய மங்கையரின் பெருங்கூட்டம் மற்றும் இன்னும் பிற வகை விலைமதிப்புமிக்கப் பல்வேறு பொருட்கள் ஆகியவை நிறைந்தவையும், அரண்மனை போன்றவையுமான மாளிகைகளைத் தகுந்த பிராமணர்களுக்குக் கொடையாக அளித்தான். அவனது ஆணையின் பேரில் அந்தப் பிராமணர்கள் தங்களுக்கு அந்தக் கொடைகளைப் பகிர்ந்து கொண்டனர்.(133,134) கோபத்தால் அந்த மன்னன் பூமியைத் தோண்டிய போது, அவள் தன் மார்பில் பெருங்கடலை அடைந்தாள். அதன் காரணமாகவே பெருங்கடலானது சாகரம் என்று அவனது பெயரில் அழைக்கப்படுகிறது.(135) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைக் காட்டிலும் தூய்மையானவனுமான அவனே {சகரனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(136)ஓ! சிருஞ்சயா, வேனனின் மகனான பிருதுவும்[30] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். ஒரு பெருங்காட்டில் ஒன்றாகக் கூடிய பெரும் முனிவர்கள், அவனைப் பூமியின் அரசுரிமையில் நிறுவினார்கள்.(137) மனித குலம் அனைத்தையும் முன்னேறச் செய்வான் என்ற எண்ணத்தினாலாயே (முன்னேறுபவன் என்ற பொருளில்) பிருது என்று அவன் அழைக்கப்பட்டான். மேலும் காயங்களில் (க்ஷதத்தில் {ஆபத்துகளில்}) இருந்து மக்களை அவன் பாதுகாத்த காரணத்தால் (காயங்களில் இருந்து பாதுகாப்பவன் என்ற பொருளில்) க்ஷத்திரியன் என்றும் அழைக்கப்பட்டான்.(138) வேனனின் மகனான பிருதுவைக் கண்டு, பூமியின் உயிரினங்கள் அனைத்தும், “நாங்கள் அன்பால் இவனுடன் பிணைக்கப்பட்டிருக்கிறோம்” என்றன. (உயிரினங்கள் அனைத்திடமும்) பாசப் பிணைப்புக் கொண்ட இந்தச் சூழ்நிலையிலிருந்து, அவன் “ராஜா” என்று அழைக்கபட்டான்[31].(139) அவன் ஆண்ட போது, பூமியானது உழப்படாமலேயே பயிர்களை விளைவித்தது, மரங்கள் கொண்ட இலைகள் அனைத்தும் தேனைச் சுமந்திருந்தன; ஒவ்வொரு பசுவும் கலன் நிறைந்த பாலைக் கொடுத்தன.(140) மனிதர்கள் அனைவரும் குறையற்ற நலம் கொண்டவர்களாகவும், விருப்பங்கள் அனைத்தம் நிறைவேறியவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு எதனிடமிருந்தும் எந்த அச்சமும் ஏற்படவில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல அவர்கள் வெளிகளிலும் வீடுகளிலும் வாழ்ந்தனர்.(141) பிருது கடலில் செல்ல விரும்பிய போது, அதன் நீர் திடமான நிலையை அடைந்தது. அவன் ஆறுகளைக் கடக்கும்போது, அவை ஒருபோதும் பெருகாமல் அமைதியாக இருந்தன. அவனுடைய தேரின் கொடிக்கம்பம் (எந்தத் தடையாலும் தடுக்கப்படாமல்) எங்கும் சுதந்திரமாக நகர்ந்தது.(142) மன்னன் பிருது, தனது மகத்தான குதிரை வேள்விகள் ஒன்றில், மூன்று நல்வங்கள்[32] அளவுள்ள இருபத்தோரு தங்க மலைகளைப் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்தான்.(143) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்துபோன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது[33].(144)ஓ! சிருஞ்சயா, நீ எதைக் குறித்து அமைதியாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்? ஓ! மன்னா, என் வார்த்தைகளை நீ கேட்பதாக எனக்குத் தெரியவில்லை. இதை நீ கேட்கவில்லையென்றால், இந்த எனது உரையானது, மரணத்தருவாயில் ஒருவனுக்குக் கொடுக்கப்படும் மருந்து, அல்லது உணவைப் போன்று கனியற்ற வீரகாவியமாகவே ஆகும்” {என்றார் நாரதர்}.(145)

சிருஞ்சயன் {நாரதரிடம்}, “ஓ! நாரதரே, சிறந்த செய்திகளைக் கொண்டதும், மலர்களின் மாலையைப் போன்று நறுமணமிக்கதும், தகுதி வாய்ந்த செயல்களைச் செய்தவர்களும், பெரும்புகழையுடையவர்களுமான உயர் ஆன்ம அரச முனிகளின் நடத்தை சம்பந்தமானதும், நிச்சயம் துயரை அகற்றவல்லதுமான இந்த உமது உரையைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.(146) ஓ! பெரும் தவசியே, உமது உரை கனியற்ற வீர காவியம் கிடையாது. நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் துயரில் இருந்து விடுபட்டேன். அமுதைப் பருகுவதால் தாகம் தணியாதவனைப் போல உமது வார்த்தைகளில் நான் தாகம் தணியவில்லை.(147) ஓ! மெய்ப்பார்வை கொண்டவரே, ஓ! தலைவா, மகனின் மரணத்தால் துயரில் எரிந்து கொண்டிருக்கும் என்னிடம் நீர் கருணை காட்ட விரும்பினால், உமது அருளின் மூலம் அந்த மகன் நிச்சயம் மீண்டு, மீண்டும் என்னுடன் (என் வாழ்வில்) கலப்பான்” என்றான்.(148)

நாரதர் {சிருஞ்சயனிடம்}, “பர்வதரால் உனக்கு அளிக்கப்பட்டவனும், உயிரை இழந்தவனும், சுவர்ணஷ்டீவின் என்ற பெயரைக் கொண்டவனுமான உன் மகனை நான் உனக்குக் கொடுப்பேன். தங்கத்தின் காந்தியைக் கொண்ட அந்தப் பிள்ளை ஆயிரம் வருடங்கள் வாழ்வான்” என்றார்”.(149)

நாரதரின் திருமணமும்! சாபங்களும்!! – சாந்திபர்வம் பகுதி – 30-சுவர்ணஷ்டீவினின் கதையைச் சொல்லுமாறு கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்; சிருஞ்சயனை அடைந்த நாரதரும், பர்வதரும்; தன் மகள் சுகுமாரியை அவர்களின் பணிவிடைக்கு நியமித்த சிருஞ்சயன்; சுகுமாரியிடம் மையல் கொண்ட நாரதர்; உடன்படிக்கையை மீறியதாக நாரதரைச் சபித்த பர்வதர்; பதிலுக்குச் சபித்த நாரதர்; இருவரும் சாபங்களை விலக்கிக் கொண்டது…

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “சிருஞ்சயனின் மகன் எவ்வாறு சுவர்ணஷ்டீவின் ஆனான்? பர்வதர் அந்தப் பிள்ளையைச் சிருஞ்சயனுக்கு ஏன் கொடுத்தார்? அவன் ஏன் இறந்தான்?(1) அந்தக் காலத்தில் மனிதர்களின் வாழ்நாள் ஆயிரம் {1,000} வருடங்கள் என நீண்டிருந்த போது, சிருஞ்சயனின் மகன் ஏன் குழந்தை பருவத்திலேயே இறந்தான்?(2) அல்லது அவன் பெயரளவில் மட்டுமே சுவர்ணஷ்டீவினாக இருந்தானா? அவன் எவ்வாறு அப்படி அழைக்கப்படலானான்? இவை யாவையும் அறிய நான் விரும்புகிறேன்” என்று கேட்டான்.(3)

கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, “நடந்தவற்றை நடந்தவாறே நான் உமக்குச் சொல்கிறேன். நாரதர் மற்றும் பர்வதர் என்று உலகில் முதன்மையான இரு முனிவர்கள் இருந்தனர்.(4) நாரதர் தாய்மாமனாவார், பர்வதர் அவரது சகோதரியின் மகனாவார். ஓ! மன்னா, பழங்காலத்தில் மாமன் நாரதரும், மருமகன் பர்வதரும் தெளிந்த நெய்யையும், அரிசியையும் உண்பதற்காகவும், உலகில் இன்பச் சுற்றுலா செல்லவும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சொர்க்கத்தில் இருந்து புறப்பட்டனர்.(5,6) தவத்தகுதி கொண்ட அவர்கள் இருவரும் மனிதர்களின் உணவை உண்டு பூமியில் திரிந்து வந்தனர்.(7) மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாகவும், ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாகவும் இருந்த அவர்கள், நன்மையோ, தீமையோ அதை {மனத்தில் உதிக்கும் எதையும்} ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதென்றும், அவர்களில் யாராவது ஒருவர் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டால், அவர் மற்றவரின் சாபத்திற்கு ஆளாவார் என்றும் அவர்களுக்குள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.(8)

உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவர்களும், இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டவர்களுமான அந்தப் பெரும் முனிவர்கள் இருவரும், சுவித்யன் மகனான மன்னன் சிருஞ்சயனிடம் சென்று, அவனிடம்,(9) “உன் நன்மைக்காக நாங்கள் இருவரும் உன்னுடன் சில நாட்கள் வசிக்கப் போகிறோம். ஓ! பூமியின் தலைவா, எங்கள் தேவைகள் அனைத்தையும் முறையாகக் கவனிப்பாயாக” என்றனர். “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்ன மன்னன் {சிருஞ்சயன்} நல்ல விருந்தோம்பலுடன் அவர்களைக் கவனித்துக் கொண்டான்.(10) சில காலம் கழித்து ஒரு நாள், மகிழ்ச்சியால் நிறைந்திருந்த மன்னன் {சிருஞ்சயன்}, அழகிய நிறம் கொண்ட தன் மகளை {சுகுமாரியை} அந்தச் சிறப்புமிக்கத் தவசிகளிடம் அறிமுகப்படுத்தி, “என் மகளான இவள் உங்கள் இருவருக்கும் பணிவிடை செய்வாள்.(11) தாமரை இதழ்களைப் போன்ற பிரகாசம் கொண்டவளும், அழகியும், களங்கமற்ற அங்கங்கள் கொண்டவளும், இனிய பண்புகளைக் கொண்டவளுமான இவள் சுகுமாரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறாள்” என்றான். அம்முனிவர்கள் “மிக்க நன்று” என்று மறுமொழி கூறினார்கள். மன்னன் தன் மகளிடம் {சுகுமாரியிடம்}, “ஓ! குழந்தாய், நீ தேவர்களையோ, உனது தந்தையையோ எவ்வாறு கவனிப்பாயோ அவ்வாறே இந்தப் பிராமணர்கள் இருவரையும் கவனிப்பாயாக” என்றான்.(12,13)

அறம்சார்ந்த அந்த இளவரசி {சுகுமாரி}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி தன் தந்தையின் கட்டளைக்கு இணங்கி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அவர்களைக் கவனித்துவரத் தொடங்கினாள்.(14) கடமையுணர்வு நிறைந்த அவளது தொண்டுகளும், அவளது {சுகுமாரியின்} ஒப்பற்ற அழகும், {காமமெனும்} இளம் நெருப்பால், நாரதரை வெகு விரைவில் அவளிடம் ஈர்த்தன.(15) அந்தச் சிறப்புமிக்கத் தவசியின் இதயத்தில் அந்த இளம் உணர்ச்சி {காமம்}, வளர்பிறை நிலவைப் போல வளரத் தொடங்கியது.(16) எனினும், அறம்சார்ந்த நாரதர், அந்த எரியும் பற்றைத் தன் சகோதரியின் மகனான உயர் ஆன்ம பர்வதரிடம் வெட்கத்தால் சொல்லவில்லை.(17) பர்வதரும் தன் தவச் சக்தியாலும், சில அறிகுறிகளாலும் அனைத்தையும் அறிந்தார். சினத்தால் தூண்டப்பட்ட அவர் {பர்வதர்}, காதலால் பீடிக்கப்பட்டிருக்கும் நாரதரைச் சபிக்கத் தீர்மானித்தார்.(18)

அவர் {பர்வதர், நாரதரிடம்}, “நன்மையோ, தீமையோ அதை {மனத்தில் உதிக்கும் எதையும்} ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதென்ற உமது உடன்படிக்கையே நீர் மீறியிருக்கிறீர். ஓ! பிராமணரே {நாரதரே}, இதன் காரணமாக நான் உம்மைச் சபிக்கப் போகிறேன்.(19,20) கன்னிகையான சுகுமாரியின் அழகால் உமது இதயம் துளைக்கப்பட்டிருக்கிறது என்பதை முன்பே எனக்கு நீர் சொல்லவில்லை. இதன் காரணமாகவே நான் உம்மைச் சபிக்கப் போகிறேன்.(21) நீர் ஒரு பிரம்மச்சாரி. எனது ஆசானாகவும் இருக்கிறது. நீர் ஒரு பிராமணரும், தவசியும் கூட. இருப்பினும் என்னுடன் கொண்ட உடன்படிக்கையை நீர் மீறியிருக்கிறீர்.(22) இதன்காரணமாகச் சினத்தில் நிறையும் நான் உம்மைச் சபிக்கப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பீராக. இந்தச் சுகுமாரி உமது மனைவியாவாள் என்பதில் ஐயமில்லை.(23) எனினும், ஓ! பலமிக்கவரே {நாரதரே}, உமது திருமணத்திற்குப் பிறகு உம்மை ஒரு குரங்காக மக்கள் அனைவரும் காண்பார்கள். உமது உண்மை பண்புகள் மறைந்ததால் அனைவருக்கும் குரங்கே தெரியும்” என்றார் {பர்வதர்}.(24)

அவரது {பர்வதரது} இந்த வார்த்தைகளைக் கேட்ட அவரது மாமன் நாரதர், கோபத்தால் நிறைந்து, தமது மருமகனான பர்வதரைப் பதிலுக்குச் சபித்தார். {நாரதர்}, “தவத்தகுதி, பிரம்மச்சரியம், உண்மை, தற்கட்டுப்பாடு, ஆகியவற்றைக் கொண்டவனாக இருந்தும், அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவனாக இருந்தும், உன்னால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது” என்றார்.(26)

மதங்கொண்ட இரு யானைகளைப் போலச் சினத்தால் நிறைந்தும், பழிதீர்க்க விரும்பியும் அவர்கள் இவ்வாறு ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர்.(27). ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, அந்த நேரத்தில் இருந்து உயர் ஆன்ம பர்வதர், தமது சக்திக்குத் தகுந்த மதிப்புடன் பூமியில் திரியத் தொடங்கினார்.(28) பிராமணர்களில் முதன்மையான நாரதர், சிருஞ்சயனின் மகளான களங்கமற்ற சுகுமாரியின் கரங்களை முறையான சடங்குகளின்படி அடைந்தார்.(29) எனினும், அந்த இளவரசி {சுகுமாரி}, நாரதர் அடைந்த சாபத்தின்படியே அவரைக் {குரங்காகக்} கண்டாள். உண்மையில் திருமணத்தின் இறுதி மந்திரத்தைச் சொன்னதற்குச் சற்று பிறகு, சுகுமாரி, அந்தத் தெய்வீக முனிவரை {நாரதரைக்} குரங்கின் முகத்தைக் கொண்டவராகக் கண்டாள். எனினும், இதன் காரணமாக அவள் தன் தலைவனை அலட்சியம் செய்யவில்லை. மறுபுறம், அவள் தன் அன்பையே அவருக்கு அர்ப்பணித்தாள்.(30,31) உண்மையில் அந்த இளவரசி, தன் இதயத்தில் தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள் ஆகியோரில் எவரையும் கணவனாக அடையவிரும்பாமல் மொத்தமாகத் தன்னைத் தன் தலைவனுக்கே {நாரதருக்கே} அர்ப்பணித்தாள்.(32)

சிறப்புமிக்கவரான பர்வதர் தமது பயணத்தின்போது ஒரு நாள் ஒரு தனிமையான காட்டில் நுழைந்து அங்கே நாரதரைக் கண்டார்.(33) அவரை வணங்கிய பர்வதர், “ஓ! பலமிக்கவரே, சொர்க்கத்திற்குச் செல்வதற்கு என்னை அனுமதித்து என்னிடம் உமது கருணையைக் காட்டுவீராக” என்றார்.(34)

பர்வதர் உற்சாகமற்றவராகத் தம் முன் கூப்பிய கரங்களுடன் மண்டியிடுவதைக் கண்ட நாரதர், தாமும் உற்சாகமிழந்தவராக, “நீயே முதலில் என்னை “குரங்காவீராக” என்று சபித்தாய். நீ அவ்வாறு என்னிடம் சொன்ன பிறகே நான் கோபத்தில், “இந்நாளில் இருந்து நீ சொர்க்கத்தில் வசிக்கமாட்டாய்” என்று உன்னைச் சபித்தேன். நீ என் மகனைப் போன்றவனாதலால் அஃது உனக்குத் தகாது” என்றார். பிறகு அந்தத் தவசிகள் இருவரும் தங்களைத் தங்களின் சாபங்களில் இருந்து விடுவித்துக் கொண்டனர்.(37)

தெய்வீக வடிவையும், சுடர்மிக்க அழகையும் கொண்டவராகத் தன் கணவரைக் {நாரதரைக்} கண்ட சுகுமாரி, அவர் தன் தலைவரில்லை வேறு எவரோ என்று நினைத்து அவரிடம் இருந்து விலகி ஓடினாள்.(38) அந்த அழகான இளவரசி தன் தலைவனிடம் இருந்து விலகுவதைக் கண்ட பர்வதர், அவளிடம் {சுகுமாரியிடம்}, “இவர் உன் கணவரே. உனக்கு எந்த ஐயுணர்வும் வேண்டாம். அறவோரில் முதன்மையானவரும், சிறப்புமிக்கவரும், பலமிக்க முனிவருமான நாரதர் இவரே. உன் ஆன்மாவில் ஒன்றாகக் கலந்த உன் தலைவர் இவரே. இதில் நீ எந்த ஐயமும் கொள்ள வேண்டாம்” என்றார்.(40)

உயர் ஆன்ம பர்வதரால் பல்வேறு வழிகளில் உறுதி சொல்லப்பட்டு, அவளது தலைவரின் சாபத்தைக் குறித்தும் சொல்லப்பட்ட பிறகே அந்த இளவரசி தன் மனத்தில் அமைதியை அடைந்தாள். பிறகு பர்வதர் சொர்க்கத்திற்கும், நாரதர் தமது இல்லத்திற்கும் சென்றனர்” {என்றான் கிருஷ்ணன்}”.(41)

வாசுதேவன் தொடர்ந்தான், “இக்காரியத்தில் பங்குபெற்றவரும், சிறப்புமிக்க முனிவருமான நாரதரும் இங்கே இருக்கிறார். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மால் கேட்கப்பட்டால், நடந்தது அனைத்தையும் அவரே உமக்குச் சொல்வார்” {என்றான் கிருஷ்ணன்}(42).

சுவர்ணஷ்டீவின்! – சாந்திபர்வம் பகுதி – 31-சிருஞ்சயனுக்கு வரமளித்த பர்வதர்; அவனுக்குப் பிறந்த சுவர்ணஷ்டீவின்; சுவர்ணஷ்டீவினைக் கொன்ற புலி; மகனின் மறைவால் வருந்திய சிருஞ்சயன்: சுவர்ணஷ்டீவினை உயிர்மீட்டளித்த நாரதர்; யுதிஷ்டிரனை அரசகனம் ஏற்கும்படி வற்புறுத்தியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, நாரதரிடம், “ஓ! புனிதமானவரே, உடற்கழிவுகளைப் பொன்னாகக் கொண்ட அந்தப் பிள்ளையின் {சுவர்ணஷ்டீவின்} பிறப்பைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு கேட்கப்பட்ட தவசி நாரதர், உடற்கழிவைத் தங்கமாகக் கொண்ட அந்தப் பிள்ளை தொடர்பாக நடந்தவை அனைத்தையும் அவனுக்குச் சொல்லத் தொடங்கினார்.(2)

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, கேசவன் {கிருஷ்ணன்} சொன்னது போலவேதான் நடந்தது. இந்தக் கதையில் எஞ்சியிருக்கும் பகுதியைக் கேட்கின்ற உனக்கு இப்போது நான் சொல்லப் போகிறேன்.(3) நானும், என் சகோதரியின் மகனான பெருந்தவசி பர்வதனும், வெற்றியடைந்த மன்னர்கள் அனைவரிலும் முதன்மையான சிருஞ்சயனுடன் வசிப்பதற்காக (ஒரு சந்தர்ப்பத்தில்) அவனிடம் வந்தோம்.(4) முறையான சடங்குகளுடன் அவனால் கௌரவிக்கப்பட்டும், எங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறியும் இருந்த நாங்கள், அவனது வசிப்பிடத்தில் தங்கினோம்.(5) மழைக்காலம் சென்ற பிறகு, நாங்கள் செல்வதற்கான நேரம் வந்தபோது, அந்த நேரத்திற்குத் தகுந்த வார்த்தைகளைச் சொல்லும் வகையில் பர்வதன் என்னிடம்,(6) “ஓ! பிராமணரே, மன்னனால் உயர்வாகக் கௌரவிக்கப்பட்ட நிலையில் நாம் சிறுது காலம் அவனது வசிப்பிடத்தில் தங்கினோம். நாம் அதற்கு என்ன கைம்மாறு செய்யபோகிறோம் என்பதை நினைப்பீராக” என்றான்.(7)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அப்போது நான் அருள் தன்மை கொண்ட பர்வதனிடம், “ஓ! மருமகனே, அதற்குத் தகுந்தவன் நீயே, ஓ! பெருஞ்சக்திகொண்டவரே, இவை அனைத்தும் உன்னை நம்பியே இருக்கின்றன.(8) உன் வரங்களின் மூலம் மன்னன் மகிழ்ச்சி அடையட்டும், அவன் தன் விருப்பங்களை அடையட்டும். அல்லது, நீ விரும்பினால் நம் இருவரின் தவத் தகுதிகளின் மூலம் அவன் வெற்றியால் மகுடம் சூடப்படட்டும்” என்று சொன்னேன்.(9)

அதன் பிறகு, ஓ! குரு குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, வெற்றியாளர்களில் முதன்மையானவனான மன்னன் சிருஞ்சயனை அழைத்த பர்வதன், அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! மன்னா {சிருஞ்சயா}, உண்மையுடனும், விருந்தோம்பலுடனும் கூடிய உனது கவனிப்புகளில் நாங்கள் பெரும் நிறைவடைந்திருக்கிறோம். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, என்ன வரம் வேண்டுவது என எங்கள் அனுமதியுடன் சிந்திப்பாயாக.(11) எனினும், அந்த வரமானது தேவர்களுடன் பகையையோ, மனிதர்களுக்கு அழிவையோ ஏற்படுத்தாதவாறு இருக்கட்டும். ஓ! மன்னா, வரம்பெறத் தகுந்தவன் என உன்னை நாங்கள் கருதுவதால் அஃதை ஏற்பாயாக” என்றான்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட சிருஞ்சயன்,(12) “நீங்கள் என்னிடம் மனநிறைவு கொண்டால், அதுவே என் நோக்கம் நிறைவேறிய நிலையாகும். அதுவே எனக்குப் பெரிய பேறாகும். என் விருப்பங்கள் அனைத்தின் கனியாக அதையே நான் கருதுகிறேன்” என்றான்.(13)

இவ்வாறு சொன்ன சிருஞ்சயனிடம் மீண்டும் பர்வதன், “ஓ! மன்னா {சிருஞ்சயா}, நீண்ட காலமாக நீ உன் இதயத்தில் பேணிப் பாதுகாக்கும் விருப்பத்தின் கனியை வேண்டுவாயாக” என்றான்.(14)

சிருஞ்சயன் {பர்வதரிடம்}, “வீரனாகவும், பெருஞ்சக்தி கொண்டவனாகவும், தன் நோன்புகளில் உறுதி மிக்கவனாகவும், நீண்ட வாழ்வு கொண்டவனாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவனாகவும், தேவர்களின் தலைவனுக்கு நிகரான காந்தியைக் கொண்டவனாகவும் ஒரு மகனை நான் விரும்புகிறேன்” என்றான்.(15)

அதற்குப் பர்வதன் {சிருஞ்சயனிடம்}, “உனது இவ்விருப்பம் நிறைவேறும். எனினும், உன் மகன் தேவர்களின் தலைவனை விஞ்சும் அளவில் இருக்க வேண்டும் என்று நீ விரும்புவதால் அவன் நீண்ட வாழ்நாள் கொண்டவனாக இருக்க மாட்டான்.(16) உன் மகன் சுவர்ணஷ்டீவின் என்ற பெயரால் அறியப்படுவான். தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போன்ற காந்தி கொண்டவனாக அவன் இருந்தாலும், நீ அந்தத் தேவனிடம் {இந்திரனிடம்} இருந்து அவனை எப்போதும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்” என்றான்.(17)

உயர் ஆன்ம பர்வதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட சிருஞ்சயன், வேறு வகையில் விதிக்குமாறு அந்தத் தவசியை வேண்டத் தொடங்கினான், {அவன்}, “ஓ! முனிவரே, உமது தவத் தகுதியின் மூலம் அவன் நீண்ட வாழ்நாள் கொண்டவனாக இருக்கட்டும்” என்று கேட்டான். எனினும், பர்வதன், இந்திரனிடம் தான் கொண்ட சார்பு நிலையினால் ஏதும் பேசாதிருந்தான்.(18)

மன்னன் {சிருஞ்சயன்} மிகவும் உற்சாகமற்றிருப்பதைக் கண்ட {நாரதனாகிய} நான், அவனிடம், “ஓ! மன்னா {சிருஞ்சயா}, (உனது துயர் காலத்தில்) நீ என்னை நினைப்பாயாக. உன்னால் அழைக்கப்படும்போது நான் உன்னிடம் வருவேன் என உறுதியளிக்கிறேன். உன் அன்புக்குரிய மகன் {சுவர்ணஷ்டீவின்} இறந்தாலும் கூட, நான் அவனை உயிருடன் கூடியவனாக உனக்குத் தருவேன்” என்றேன். அந்த ஏகாதிபதியிடம் இவ்வாறு சொல்லிவிட்டு நாங்கள் இருவரும் விரும்பிய இடத்திற்குச் செல்வதற்காக அவனது முன்னிலையில் இருந்து அகன்றோம், சிருஞ்சயனும் அவன் விரும்பியவாறு அவனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(22)

சில காலம் கழிந்ததும், பேராற்றல் கொண்டவனும், சக்தியால் சுடர்விடுபவனுமான ஒரு மகன் அரச முனியான சிருஞ்சயனுக்குப் பிறந்தான்.(23) அந்தப் பிள்ளை தடாகத்தில் வளரும் பெரிய தாமரையைப் போல வளர்ந்து, தன் பெயரைப் போலவே உண்மையிலேயே சுவர்ணஷ்டீவின் ஆனான்.(24) ஓ! குருக்களில் சிறந்தவனே, இயல்புக்கு மிக்க இந்தச் செய்தி வெகுவிரைவில் உலகம் முழுவதும் பரவியது. தேவர்களின் தலைவனும் {இந்திரனும்}, இது பர்வதனுடைய வரத்தின் விளைவு என்பதை அறிய வந்தான்.(25) (அந்தப் பிள்ளை வளர்ந்ததும், அவனால் ஏற்படப்போகும்) அவமதிப்புக்கு அஞ்சியவனும், பலனையும், விருத்திரனையும் கொன்றவனுமான இந்திரன், அந்த இளவரசனின் சிறு குறைகளையும் கவனமாகக் காணத் தொடங்கினான்.(26) அவன் {இந்திரன்}, தன் முன்னே உடல் கொண்டு வந்து நின்ற தன் தெய்வீக ஆயுதமான வஜ்ரத்திடம், “ஓ! பலமிக்கவனே {வஜ்ரனே}, புலியின் வடிவை ஏற்றுச் சென்று இந்த இளவரசனைக் {சுவர்ணஷ்டீவினை} கொல்வாயாக.(27) ஓ! வஜ்ரனே, பர்வதர் சொன்னதைப் போல இந்தப் பிள்ளை வளர்ந்ததும், தனது சாதனைகளால் என்னை அவமதிக்கக்கூடும்” என்றான்.(28) தெய்வீக ஆயுதமும், பகை நகரங்களை அடக்குவதுமான வஜ்ரம், சக்ரனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த நாளிலிருந்து அந்த இளவரசனின் குறைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தது.(29)

அதேவேளையில், சிருஞ்சயன், இந்திரனின் காந்திக்கு ஒப்பான பிள்ளையைப் பெற்றதால் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தான். தன் மனைவியரின் துணையோடும், தன் இல்லத்தைச் சேர்ந்த வேறு பெண்களின் துணையோடும், காட்டுக்கு மத்தியில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(30)

ஒருநாள் செவிலியின் துணையுடன் கூடிய அந்தப் பிள்ளை, பாகீரதியின் கரைகளில் அங்கேயும், இங்கேயும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தான்.(31) ஐந்து வயதே ஆனவனாக இருப்பினும் அவனது ஆற்றல் ஒரு வலிமைமிக்க யானைக்கு ஒப்பானதாக இருந்தது. அவ்வாறு அவன் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அந்தப் பிள்ளை ஒரு பலமிக்கப் புலியைச் சந்தித்தான்.(32) அந்தப் புலியால் சிதைக்கப்பட்டபோது, குழந்தையாக இருந்த அந்த இளவரசன் {சுவர்ணஷ்டீவின்} பயங்கரமாக நடுங்கி, விரைவில் உயிரை இழந்து பூமியில் விழுந்தான். இந்தக் காட்சியைக் கண்ட செவிலி, உரத்த குரலில் துன்பத்துடன் அழுதாள்.(33) புலியானது, அந்த இளவரசனைக் கொன்றபிறகு, இந்திரனின் மாயையின் மூலம் அங்கேயே அப்போதே மறைந்து போனது.(34)

அழுது கொண்டிரக்கும் செலவிலியின் குரலைக் கேட்ட மன்னன் {சிருஞ்சயன்} பெருஞ்சோகத்தோடு அந்த இடத்தை நோக்கி ஓடிச் சென்றான்.(35) அங்கே இரத்தம் குடிக்கப்பட்டு, ஒளியிழந்தவனாக ஆகாயத்திலிருந்து விழுந்த நிலவைப் போலத் தன் மகன் கிடப்பதைக் கண்டான்.(36) குருதியில் மறைந்த சிறுவனைத் தன் மடியில் ஏந்திய மன்னன், துயரால் பீடிக்கப்பட்ட இதயத்துடன் பரிதாபகரமாகப் புலம்பத் தொடங்கினான்.(37) அரச மகளிர் துயரால் பீடிக்கப்பட்டு அழுதுகொண்டே மன்னன் சிருஞ்சயன் இருக்கும் இடத்திற்கு ஓடிச் சென்றனர்.(38) அந்தச் சூழ்நிலையில் மன்னன் {சிருஞ்சயன்} குவிந்த கவனத்துடன் {நாரதனாகிய} என்னைச் சிந்தித்தான். மன்னன் என்னைக் குறித்துச் சிந்திப்பதை அறிந்து நான் அங்கே சென்றேன்.(39) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரனே}, துயரால் பீடிக்கப்பட்டிருந்த அந்த மன்னன்னுக்கு {சிருஞ்சயனுக்கு}, இந்த யதுகுல வீரன் {கிருஷ்ணன்} இப்போது சொன்ன கதைகள் அனைத்தையும் நான் சொன்னேன்.(40) பிறகு இந்திரனின் அனுமதியுடன் நான் சிருஞ்சயனின் பிள்ளையை உயிரோடு மீட்டெடுத்தேன். விதிக்கப்பட்டது நடந்தே தீரும். வேறு வகையில் நடக்க இயலாது.(41)

இதன்பிறகு பெரும் புகழும் சக்தியும் கொண்ட அந்த இளவரசன் சுவர்ணஷ்டீவின் தன் பெற்றோரின் இதயங்களை மகிழ்ச்சியில் திளைக்கச்செய்தான்.(42) பேராற்றலைக் கொண்ட அவன், தன் தந்தை சொர்க்கத்திற்குச் சென்றதும் அரியணை ஏறி, ஆயிரத்து நூறு {1,100} வருடங்கள் ஆட்சி செய்தான்.(43) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பெரும் வேள்விகள் பலவற்றில் அவன் தேவர்களை வழிபட்டான். பெருங்காந்தி கொண்ட அவன், தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவுகொள்ளச் செய்தான்.(44) பல மகன்களைப் பெற்று, அவர்கள் மூலம் குலத்தைப் பெருக்கிய அவன் {சுவர்ணஷ்டீவின்} பல வருடங்களுக்குப் பிறகு இயற்கையின் வழியில் சென்றான்[1].(45)ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, கேசவனும் {கிருஷ்ணனும்}, கடுந்தவங்களைச் செய்த வியாசரும் ஆலோசனை கூறியதைப் போல உன் இதயத்தில் இருக்கும் இந்தத் துயரை அகற்றுவாயாக.(46) ஓ! மன்னா, எழுவாயாக. உன் மூதாதையருடைய நாட்டின் சுமையை ஏற்று, (மறுமையில்) உன்னால் விரும்பப்படும் எந்த உலகத்தையும் அடைய உயர்ந்த பெரும் வேள்விகளைச் செய்வாயாக” என்றார் {நாரதர்}”.(47)

பாவங்கழி! – சாந்திபர்வம் பகுதி – 32-கடமைகள், அறநெறி ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; தன்னை எரிக்கும் காரணங்களைச் சொன்ன யுதிஷ்டிரன்; செயல்களில் பரம்பொருள் மற்றும் மனிதனின் பொறுப்பு, பாவங்கழிக்கும் பிராயச்சித்தங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்.

வைசம்பாயனர் சொன்னார், “தீவில் பிறந்தவரும், அறவுண்மைகள் அறிந்த பெரும் தவசியுமான வியாசர், பேச்சற்றவனாகவும், துயரில் மூழ்கியவனாகவும் நீடித்திருந்த மன்னன் யுதிஷ்டிரனிடம் மீண்டும் பேசினார்.(1)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, குடிமக்களைப் பாதுகாப்பதும் மன்னர்களின் கடமையாகும். எப்போதும் கடமையை நோற்கும் மனிதர்கள், கடமையே அனைத்திலும் சக்திமிக்கது எனக் கருதுகின்றனர்.(2) எனவே, ஓ! மன்னா, உன் முன்னோர்களின் பாதச்சுவடுகளில் நீ நடப்பாயாக. பிராமணர்களுக்குத் தவங்களே கடமையாகும். இதுவே வேதங்களில் உள்ள நித்திய விதியாகும்.(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே, தவங்களே பிராமணர்களின் நித்திய கடமையாகிறது. மக்கள் அனைவரையும் காப்பதே ஒரு க்ஷத்திரியனின் கடமையாகும்[1].(4) பூமிசார்ந்த உடைமைகளுக்கு அடிமையாகி, கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுபவனும், சமூக இணக்கத்திற்கு எதிரான குற்றவாளியுமான ஒரு மனிதன் வலிய கரம் கொண்டு தண்டிக்கப்பட வேண்டும்.(5)அதிகாரத்தை மீறும் உணர்வற்ற மனிதன், தன் பணியாளாகவோ, மகனாகவோ, தவசியாகவோ இருந்தாலும் கூட, பாவம் நிறைந்த அத்தகு இயல்புடைய மனிதர்கள் அனைவரும் அனைத்து வழிகளிலும் தண்டிக்கப்படவோ, கொல்லப்படவோ வேண்டும். வேறுவகையில் நடந்து கொள்ளும் மன்னன் பாவமிழைத்தவனாவான்.(6,7) அறநெறி அலட்சியம் செய்யப்படும்போது, அதைப் பாதுகாக்காதவனும் அறநெறியை மீறியவனே ஆவான். கௌரவர்கள் அறநெறியை மீறியவர்களாவர். அவர்களும், அவர்களுடைய தொண்டர்களும் உன்னால் கொல்லப்பட்டனர்.(8) நீ உன் வகைக்கான கடமையை நோற்றிருக்கிறாய். ஓ! பாண்டுவின் மகனே, பிறகு ஏன் நீ இத்தகு துயரத்தில் ஈடுபடுகிறாய்? ஒரு மன்னன், சாகத் தகுந்தவர்களைக் கொல்லவும், ஈகைக்குத் தகுந்தோருக்குக் கொடைகள் அளிக்கவும்ம், தன் குடிமக்களை விதிப்படி பாதுகாக்கவும் வேண்டும்” என்றார் {வியாசர்}.(9)

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! பெரும் தவத்தகுதி கொண்டவரே, உமது உதடுகளில் இருந்து உதிரும் வார்த்தைகளில் நான் ஐயங்கொள்ளமாட்டேன். ஓ! அறநெறி மற்றும் கடமை குறித்து அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, அறநெறி மற்றும் கடமை தொடர்பான அனைத்தும் உம்மால் அறியப்பட்டிருக்கிறது.(10) எனினும், நாட்டின் நிமித்தமாக நான் பல மனிதர்களைக் கொல்லச் செய்துவிட்டேன். ஓ! பிராமணரே {வியாசரே}, அந்தச் செயல்களே என்னை எரித்து உட்கொள்கின்றன” என்றான்.(11)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, செயல்படுவது பரம்பொருளா? {பரமாத்மாவா?} மனிதனா? இவ்வுலகில் அனைத்தும் வாய்ப்பின் விளைவுகளா? அல்லது (முந்தைய) செயல்பாடுகளின் விளைவுகளால் உண்டான இன்ப துன்பங்களின் கனிகளா?(12) ஓ! பாரதா, ஒரு மனிதன், பரம்பொருளால் உந்தப்பட்டு நன்மையோ, தீமையோவான அனைத்து செயல்களையும் செய்தால், அந்தச் செயல்களின் கனிகள் அந்தப் பரம்பொருளையே பற்ற வேண்டும்.(13) ஒரு மனிதன் காட்டில் உள்ள ஒரு மரத்தைக் கோடரியால் வெட்டினால், அந்த மனிதன் பாவமிழைக்கிறானேயன்றி, எவ்வழியிலும் அந்தக் கோடரி பாவமிழைக்கவில்லை.(14) அல்லது அந்தக் கோடரி பொருட்காரணமாக மட்டுமே இருக்கிறது, (வெட்டிய) அந்தச் செயலின் விளைவு, (அசையாத {தானாகச் செயல்படாத} கருவியை அல்லாமல்) அசையும் {தானாகச் செயல்படும்} செயலியையே பற்ற வேண்டும் என்று சொன்னால், அந்தப் பாவம் அந்தக் கோடரியைச் செய்த மனிதனையே சாரும். எனினும் இஃது ஒருக்காலும் உண்மையாக முடியாது.(15) மற்றவனால் செய்யப்பட்ட செயலின் விளைவு வேறொரு மனிதனைப் பற்றுவது அறிவார்ந்ததாக இல்லையெனில், ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இதனால் வழிகாட்டப்படும் நீ பொறுப்புகள் அனைத்தையும் பரம்பொருளிடமே விட்டுவிட வேண்டும்[2].(16) மேலும், நல்ல மற்றும் பாவச் செயல்கள் அனைத்தையும் செய்பவன் மனிதனேயென்றால் பரம்பொருளேதும் இல்லை என்றாகிறது, எனவே, நீ செய்த அனைத்தும், உனக்குத் தீய விளைவுகளை உண்டாக்க முடியாது.(17)ஓ! மன்னா {யுதிஷ்டிரனே}, விதிக்கப்பட்டதில் இருந்து எவனாலும் ஒருபோதும் விலக முடியாது. மேலும், முந்தைய வாழ்வு {முற்பிறவிச்} செயல்களின் விளைவுகளே விதி என்றால், மரத்தை வெட்டுவதால் உண்டாகும் பாவம், கோடரியைச் செய்தவனைத் தீண்டாததைப் போலவே, இவ்வாழ்வில் ஒருவனை எந்தப் பாவமும் பற்றாது.(18) வாய்ப்பு மட்டுமே உலகில் செயல்படுகிறது என்று நீ நினைத்தால், அப்போது அத்தகு அழிவுச் செயல் ஒரு போதும் நடைபெற முடியாது, அல்லது ஒரு போதும் நடக்காது.(19) உலகில் எது நன்மை, எது தீமை என்று உறுதி செய்யும் அவசியம் இருந்தால், சாத்திரங்களைக் கவனிப்பாயாக. அந்தச் சாத்திரங்களில், மன்னர்கள், தங்கள் கரங்களில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடன் நிற்க வேண்டும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது.(20)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நல்ல மற்றும் தீய செயல்கள் சக்கரம் போல் தொடர்ந்து சுழல்கின்றன என்றும், தாங்கள் செய்யும் அந்த நல்ல, அல்லது தீய செயல்களின் கனிகளையே மனிதர்கள் அடைகிறார்கள் என்றும் நான் நினைக்கிறேன்.(21) பாவம் நிறைந்த ஒரு செயல் மற்றொன்றில் {மற்றொரு பாவத்தில்} இருந்தே விளைகிறது. எனவே, ஓ! மன்னர்களில் புலியே, தீச்செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பாயாக. மேலும் உன் இதயத்தை இவ்வாறான துயரில் நிலைக்கச் செய்யாதே.(22) ஓ! பாரதா, உன் வகைக்குரிய கடமைகள் நிந்திக்கத்தக்கவையே ஆனாலும் அவற்றைப் பின்பற்றுவாயாக. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்தத் தன்னழிவு {உடலைத் துறக்கும் தற்கொலை} உனக்குத் தகுந்ததாகத் தெரியவில்லை.(23) ஓ! மன்னா, (தீய) செயல்களுக்கான பாவக்கழிவுகளும் {பிராயச்சித்தங்களும்} விதிக்கப்பட்டிருக்கின்றன. உயிரோடிருப்பவனால் அவற்றைச் செய்ய முடியும், இறந்தவன் அதைச் செய்யத் தவறுகிறான்.(24) எனவே, ஓ! மன்னா, உன் உயிரை விடாமல், அந்தப் பாவம் கழிக்கும் செயல்களை {பிராயச்சித்தங்களைச்} செய்வாயாக. நீ அவற்றைச் செய்யவில்லையெனில், அடுத்த உலகில் {மறுமையில்} நீ வருந்த வேண்டியிருக்கும்” என்றார் {வியாசர்}”.(25)

கடமையைச் செய்! – சாந்திபர்வம் பகுதி – 33-தன் துயரையும், தாங்கள் அடையப் போகும் நிந்தனையையும் நினைத்து துறவே கதி என வியாசரிடம் சொன்ன யுதிஷ்டிரன்; பலரைக் கொன்றது காலமேயன்றி அவனில்லை என்றும், இறந்தவர்கள் தங்கள் செயல்களின் பலனாகவே இறந்தார்கள், கொல்லத்தக்கவர்களே கொல்லப்பட்டார்கள் என்றும், நண்பர்களின் நாடுகளில் அவர்களது வாரிசுகளை அரியணையில் நிறுவச் செய்வதும், தான் அடைந்த நாட்டை ஆள்வதுமே யுதிஷ்டிரனின் கடமை, துறவல்ல என்றும் அவனிடம் சொன்ன வியாசர்…

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! பாட்டா {வியாசரே}, மகன்கள், பேரப்பிள்ளைகள, சகோதரர்கள், தந்தைமார்கள், மாமன்மார்கள், ஆசான்கள், தாய்மாமன்கள், பாட்டன்கள்,(1) உயர் ஆன்ம க்ஷத்திரியர்கள் பலர், (திருமண உறவால் உண்டான) உறவினர்கள் பலர், நண்பர்கள், தோழர்கள், சகோதரியின் மகன்கள்,(2) பல்வேறு நாடுகளில் இருந்து வந்த முதன்மையானோர் பலரும் வீழ்ந்துவிட்டனர். ஓ! பாட்டா, நாடு அடையும் ஆசை கொண்ட என்னால் மட்டுமே இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(3) ஓ! பெரும் தவசியே, அறத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களும், வேள்விகளில் சோமம் பருகியவர்களுமான வீர மன்னர்கள் பலரைக் கொல்லச் செய்த நான் இறுதியில் என்ன கதியை அடையப் போகிறேன்?(4) ஓ! பாட்டா, பெருஞ்செழிப்பில் திளைத்த மன்னர்களில் சிங்கங்களான பலரை இந்தப் பூமி இழந்துவிட்டதே என்ற நினைப்பில் இந்த நாள் வரை நான் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறேன்.(5) உறவினர்களும், லட்சக்கணக்கான பல மனிதர்களும் கொல்லப்பட்டதைக் கண்டு துயரத்தில் நான் எரிந்து கொண்டிருக்கிறேன்.(6)

ஓ!, மகன்கள், கணவர்கள், சகோதரர்கள் ஆகியோரை இழந்த முதன்மையான பெண்கள் அடையப்போகும் அவலநிலை என்ன?(7) உடல் மெலிந்த அந்தப் பெண்கள், பாண்டவர்களையும், விருஷ்ணிகளையும் கொடூரக் கொலைகாரர்களாக நிந்தித்துத் துயரில் மூழ்கி பூமியில் விழப்போகிறார்கள்.(8) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {வியாசரே}, தங்கள் தந்தைமார், சகோதரர்கள், கணவர்கள் மற்றும் மகன்களைக் காணாத அந்த மகளிர், துயரத்தை அடைந்து, தங்கள் உயிர் மூச்சுகளை விட்டு, யமலோகம் செல்லப் போகிறார்கள். இதில் எனக்கு ஐயமேதுமில்லை. அறநெறியின் பாதையானது மிகவும் நுட்பமானது. இதன் காரணமாகப் பெண்களைக் கொன்ற குற்றத்தால் நாங்கள் களங்கப்படுவோம் என்பது வெளிப்படையானது.(9,10) உறவினர்களையும், நண்பர்களையும் கொன்று, அதன்மூலம் கழிக்கப்படவே முடியாத {பரிகாரமில்லாத} பாவத்தைச் செய்த நாங்கள் நரகிற்குள் தலைக்குப்புற விழப் போகிறோம்.(11) எனவே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, கடுந்தவங்களின் மூலம் நாங்கள் எங்கள் அங்கங்களை வீணாக்கப் போகிறோம். ஓ! பாட்டா, இப்போது நான் எந்த வாழ்வு முறையை நோற்க வேண்டும் என்பதைச் சொல்வீராக” என்று கேட்டான்.(12)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தீவில் பிறந்த முனிவர் {வியாசர்}, யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, சிறிது நேரம் கூர்மையாகச் சிந்தித்து, பின்வருமாறு பாண்டுவின் மகனிடம் பேசினார்.(13)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நினைவுகூர்வாயாக. துயரில் மூழ்காதே. ஓ! க்ஷத்திரியர்களில் காளையே, அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் தங்களுக்கு முறையான கடமைகளை நோற்றே வீழ்ந்தனர்.(14) பூமியில் பெருஞ்செழிப்பையும், பெரும்புகழையும் தொடர்ந்து சென்றவர்களும், மரணக்கடப்பாடு கொண்டவர்களுமான அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், காலத்தின் ஆதிக்கத்தின் மூலமே அழிந்தனர்[1].(15) நீயோ, இந்தப் பீமனோ, அர்ஜுனனோ, இரட்டையர்களோ {நகுல சகாதேவர்களோ} அவர்களைக் கொன்றவர்களில்லை. மாற்றம் என்ற பெரும் விதியின்படி காலமே அவர்களது உயிர் மூச்சுகளை எடுத்தது.(16) காலனுக்குத் தாயோ, தந்தையோ, எந்தக் கருணையும் காட்ட வேறு எவருமோ கிடையாது. அவனே {காலனே} அனைத்து உயிரினங்களின் செயல்களுக்கான சாட்சியாக இருக்கிறான். அவர்கள் அவனாலேயே எடுத்துக் கொள்ளப்பட்டனர்.(17) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்தப் போரானது அவனால் விதிக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பம் மட்டுமே. உயிரினங்களெனும் கருவிகளின் மூலம் அவனே உயிரினங்களைக் கொல்லச் செய்கிறான். இந்த வகையிலேயே காலமானது தடுக்கப்பட முடியாத தன் பலத்தை வெளிப்படுத்துகிறது.(18)காலமானது (உயிரினங்களின் பிறப்பு மற்றும் இறப்பில்) செயல்பாடுகளில் உள்ள பற்றைச் சார்ந்திருக்கிறது, மேலும் நல்ல மற்ற தீய செயல்கள் அனைத்தின் சாட்சியாக இருக்கிறது என்பதை அறிவாயாக. அருள், அல்லது துயர் நிறைந்த நமது செயல்பாடுகளின் கனியைக் கொண்டு வருவது காலமே.(19) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, வீழ்ந்துவிட்ட அந்த க்ஷத்திரியர்களின் செயல்பாடுகளை நினைவுகூர்வாயாக. அந்தச் செயல்பாடுகளே அவர்களுடைய அழிவுக்கான காரணங்களாகும். அவற்றின் விளைவாகவே அவர்கள் அழிவை அடைந்தனர்.(20) தற்கட்டுபாட்டுடன் கூடிய நோன்புகளை நோற்றுச் செய்யப்பட்ட உன் செயல்களையும் நினைத்துபார். (மனிதர்கள் பலரைக் கொல்லும் வகையில்) இத்தகு செயலைச் செய்யுமாறு விதிசமைத்த உயர்ந்தவனால் எவ்வாறு நீ பலவந்தப்படுத்தப்பட்டாய் என்பதையும் நினைத்துப் பார்.(21) கொல்லனாலோ, தச்சனாலோ செய்யப்பட்ட ஆயுதமானது, அதைப் பயன்படுத்தும் மனிதனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து, அவன் பயன்படுத்துவற்குத்தக்க வகையில்  பயன்படுவதைப் போலவே இந்த அண்டமும் காலத்தின் செயல்களால் கட்டுப்படுத்தப்பட்டு, அந்தச் செயல்பாடுகள் தன்னைப் பயன்படுத்துவதற்குத்தக்கவே பயன்படுகிறது[2].(22) தூண்டலற்றவகையில், எந்த (குறிப்பிட்ட) காரணமும் இல்லாமல் உயிரனங்களின் பிறப்பும், இறப்பும் நேர்வதைக் காணும்போது, துன்பமும் இன்பமும் முற்றிலும் தேவையற்றனவாகத் தெரிகின்றன.(23) உன் இதயத்தின் சிக்கல் வெறும் மாயையே என்றாலும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, (ஒரு வகையில் பாவம் என்றழைக்கப்படுவதில் இருந்து விடுபட்டு உன்னைக் கழுவிக் கொள்வதற்கு வேண்டிய) பாவக்கழிவு சடங்குகளைச் செய்வாயாக.(24)ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, தேவர்களும், அசுரர்களும் ஒருவரோடொருவர் போரிட்டனர் என்று கேள்விப்படுகிறோம். அசுரர்கள் மூத்த சகோதரர்களாகவும், தேவர்கள் இளைய சகோதரர்களாகவும் இருந்தனர்.(25) செழிப்பில் பேராசை கொண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட போரானது மிகக் கடுமையானதாக இருந்தது. அந்தப் போர் முப்பத்திரண்டாயிரம் {32,000} வருடங்கள் நீடித்தது.(26) தேவர்கள், பூமியை ஒரே இரத்தக்கடலாகச் செய்து, தைத்தியர்களைக் கொன்று சொர்க்கத்தை உடைமையாக அடைந்தனர்.(27) பூமியை உடைமையாகக் கொண்டிருந்தவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், பெரும் எண்ணிக்கையிலானவர்களுமான பிராமணர்கள், செருக்கில் மயங்கி, ஆயுதங்கள் தரித்துக் கொண்டு தானவர்களுக்கு உதவும் வகையில் அவர்களோடு சேர்ந்து போரிட்டனர்.(28) எண்ணிக்கையில் எண்பத்தெட்டாயிரம் {86,000} பேரான அவர்கள் {பிராமணர்கள்} சாலாவிருகர்கள் என்ற பெயரில் அறியப்பட்டனர். எனினும் அவர்கள் அனைவரும் தேவர்களால் கொல்லப்பட்டனர்.(29) அறத்திற்கு அழிவை உண்டாக்க விரும்புபவர்களும், பாவம் செய்பவர்களுமான அந்தத் தீய ஆன்மாக்கள் {பிராமணர்கள்}, தேவர்களால் கொல்லப்பட்ட கடுந்தைத்தியர்களைப் போலவே கொல்லப்படத்தகுந்தவர்களே ஆவர்.(30)

தனிப்பட்ட ஒருவனைக் கொல்வதால் ஒரு குடும்பத்தைக் காக்கமுடியும் என்றால், அல்லது ஒரு தனிப்பட்ட குடும்பத்தைக் கொல்வதன் மூலம் மொத்த நாட்டையும் காக்க முடியும் என்றால், அந்தப் படுகொலைகள் அறமீறலாகாது.(31) ஓ! மன்னா, சில வேளைகளில் பாவமானது அறத்தின் வடிவை ஏற்கிறது, சில வேளைகளில் அறமும் பாவ வடிவை ஏற்கிறது. எனினும் கல்விமான்கள் அவை எவை என்பதைப் பகுத்தறிவார்கள்[3].(32) எனவே, ஓ! பாண்டுவின் மகனே, சாத்திரங்களை நன்கறிந்தவனான நீ ஆறுதலடைவாயாக. ஓ! பாரதா, தேவர்கள் சென்ற பாதையையே நீயும் பின்பற்றியிருக்கிறாய்.(33) ஓ! பாண்டு குலத்தின் காளையே உன்னைப் போன்றோர் ஒருபோதும் நரகை அடைவதில்லை. ஓ! எதிரிகளை எரிப்பவனே, உன் சகோதரர்களையும், உன் நண்பர்கள் அனைவரையும் தேற்றுவாயாக.(34) தெரிந்தே பாவகரச் செயல்களில் ஈடுபட்டும், பாவகரச் செயல்களைச் செய்து வெட்கமேதும் அடையாமல் முன்பைப் போலவே இருப்பவன் (சாத்திரங்களின்படி) பெரும்பாவி என்றழைக்கப்படுகிறான். பாவம் கழிக்கும் எந்த வழியும் {பரிகாரமேதும்} அவனுக்கு இல்லை. {பாவக் கழிப்புச் சடங்குகள் செய்தாலும்} அவனது பாவங்களும் குறைவடைவதில்லை.(36)நீ உன்னதக் குலத்தில் பிறந்திருக்கிறாய். பிறரின் குற்றங்களால் வலுகட்டாய நிலையை அடைந்தும், விருப்பமில்லாமலுமே நீ இதைச் செய்தாய், இதைச் செய்த பிறகு நீ வருந்தலாகாது.(37) பெருஞ்சடங்கான குதிரைவேள்வியே உனக்கான பாவக்கழிப்பாகச் சொல்லப்படுகிறது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்வாயாக, நீ உன் பாவங்களில் இருந்து விடுபடுவாய்.(38) பகனைத் தண்டித்த தெய்வீகமானவன் {இந்திரன்}, மருத்துக்களின் துணையுடன் தன் எதிரிகளை வென்று, படிப்படியாக நூறு வேள்விகளைச் செய்து சதக்ரதுவானான்[4].(39) பாவத்திலிருந்து விடுபட்டுச் சொர்க்கத்தை அடைந்து, பல அருள் உலகங்களையும், பெரும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அடைந்த சக்ரன் {இந்திரன்}, மருத்துகளால் சூழப்பட்டவனாக, அழகில் ஒளிர்ந்து கொண்டே, தன் காந்தியால் நான்கு பகுதிகளுக்கும் ஒளியூட்டிக் கொண்டிருக்கிறான்.(40) சச்சியின் தலைவனான அவன் {இந்திரன்} சொர்க்கத்தில் அப்சரஸ்களால் துதிக்கப்படுகிறான். முனிவர்களும், பிற தேவர்கள் அனைவரும் அவனை மதிப்புடன் வணங்குகின்றனர்.(41)நீ இந்தப் பூமியை உன் ஆற்றலால் அடைந்திருக்கிறாய். ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, உன் ஆற்றலின் மூலம் நீ மன்னர்கள் அனைவரையும் வென்றாய்.(42) ஓ! மன்னா, உன் நண்பர்களுடன் அவர்களின் நாட்டுக்குச் சென்று, அவர்களது சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளை அவர்களது அரியணையில் நிறுவுவாயாக.(43) கருவில் இருக்கும் குழந்தையிடமும் கருணையோடு நடந்து கொண்டு, உன் குடிமக்களை மகிழ்ச்சியடையச் செய்து பூமியை ஆள்வாயாக.(44) மகனில்லாதவர்களின் அரியணைகளில் அவர்களது மகள்களை நிறுவுவாயாக. பெண்கள் இன்பத்தையும், அதிகாரத்தையும் விரும்புபவர்களாவர். இந்த வழிமுறையின் மூலம் அவர்கள் தங்கள் கவலைகளை விட்டு, மகிழ்ச்சி அடைவார்கள்.(45) ஓ! பாரதா, இவ்வழியில் பேரரசு முழமைக்கும் ஆறுதலளித்து, வெற்றியாளனான பழங்காலத்து இந்திரனைப் போல ஒரு குதிரை வேள்வியில் தேவர்களைத் துதிப்பாயாக. ஓ! க்ஷத்திரியக் காளையே, (போரில் வீழ்ந்துவிட்ட) உயர் ஆன்ம க்ஷத்திரியர்களுக்காக நீ வருந்துவது முறையாகாது.(46) யமனின் சக்தியால் திகைப்படைந்த அவர்கள், தங்கள் சொந்த கடமைகளை நோற்றதிலேயே அழிவை அடைந்தார்கள்.(47) நீ ஒரு க்ஷத்திரியனுக்குரிய கடமைகளைச் செய்து, முள்ளில்லா {எதிரிகளில்லா} பூமியை அடைந்திருக்கிறாய். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஓ! பாரதா, உன் சொந்த கடமைகளை நீ நோற்றால்தான் மறுமையில் இன்பத்தை அடைய முடியும்” என்றார் {வியாசர்}.(48)

பாவக்கழிப்புக்குத் தகுந்த செயல்கள்! – சாந்திபர்வம் பகுதி – 34-பாவக்கழிப்பைச் செய்யத்தக்கவர்கள் எவர்? மனிதர்களுக்குத் தடைசெய்யப்பட்ட செயல்கள் யாவை? தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்தாலும் பாவத்தின் கறைபடாத சந்தர்ப்பங்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன வியாசர்…

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “எந்தச் செயல்களைச் செய்த பிறகு ஒரு மனிதன் பாவக்கழிப்பு {பரிகாரம்} செய்யத்தக்கவனாகிறான்? பாவத்தில் இருந்து விடுபட அவன் எந்தச் செயல்களைச் செய்ய வேண்டும்? ஓ! பாட்டா, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “விதிக்கப்பட்ட செயல்களைத் தவிர்த்து, தடை செய்யப்பட்ட செயல்களைச் செய்து, வஞ்சகம் நிறைந்த நடத்தை கொண்ட ஒரு மனிதன் பாவக்கழிப்பைச் செய்யத்தக்கவனாகிறான்.(2) சூரியன் உதித்த பிறகு தன் படுக்கையில் இருந்து எழுபவன், அல்லது சூரியன் மறையும்போது படுக்கைக்குச் செல்பவன், சொத்தை நகமோ, கருப்பு பல்லோ கொண்டவன்,(3) தனக்கு முன்பே தம்பி திருமணம் செய்து கொண்ட நிலையில் இருப்பவன், மூத்தவன் திருமணம் செய்து கொள்ளும் முன்பே தான் திருமணம் செய்து கொள்பவன், பிராமணனைக் கொன்ற குற்றவுணர்வு கொண்டவன், பிறரை இழிவாகப் பேசுபவன், {பெண்ணெடுக்கும் இல்லத்தில் உள்ள} மூத்தவள் {தமக்கை} திருமணம் முடிப்பதற்கு முன்பே அவளது தங்கையைத் திருமணம் செய்பவன், தங்கையைத் திருமணம் செய்த பிறகு, அவளது மூத்தவளை {தமக்கையைத்} திருமணம் செய்பவன்,(4) உறுதிமொழி தவறியவன், மறுபிறப்பாள வகைகளில் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த ஒருவனைக் கொல்பவன்[1]தகாதவர்களுக்கு வேத அறிவைப் போதிப்பவன், (5) பல உயிர்களை எடுப்பவன், இறைச்சி விற்பவன், தன் (புனித) நெருப்பைக் கைவிட்டவன், வேத அறிவை விற்பவன்[2],(6) தன் ஆசானையோ, ஒரு பெண்ணையோ கொல்பவன், பாவம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவன், விருப்பத்துடன் ஒரு விலங்கைக் கொல்பவன்[3], குடியிருக்கும் வீட்டுக்கு நெருப்பு வைப்பவன்,(7) வஞ்சகத்தையே வாழ்வாகக் கொண்டவன், தன் ஆசானுக்கு எதிராகச் செயல்படுபவன், ஒப்பந்தத்தை மீறுபவன் ஆகியோர் அனைவரும் பாவக்கழிப்பு {பரிகாரம்} தேவைப்படும் குற்றவாளிகளாவர்.(8)உலகம் மற்றும் வேதங்கள் ஆகிய இரண்டால் மனிதர்களுக்குத் தடைசெய்யப்பட்ட செயல்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக.(9) தன் சமய நம்பிக்கையை மறுப்பது, பிற மக்களின் சமய நம்பிக்கையைப் பயில்வது[4], உதவத் தகாத ஒருவனின் வேள்வி அல்லது அறச்சடங்குகளில் உதவி செய்வது, விலக்கப்பட்ட உணவை உண்பது,(10) பாதுகாப்பை நாடும் ஒருவனைக் கைவிடுபவன், பணியாட்களையும், தன்னை நம்பியிருப்பவர்களையும் பராமரிக்காமல் புறக்கணிப்பது, உப்பு, புளி (மற்றும் அது போன்ற பொருட்களை) விற்பது, பறவைகளையும், விலங்குகளையும் கொல்வது,(11) இயன்றவனானாலும், தன்னிடம் வேண்டும் பெண்ணிடம் பிள்ளையைப் பெற மறுப்பது, (பசுவுக்குக் கைநிறைய புல்லைக் கொடுப்பது போன்ற) தினக்கொடைகள் கொடுப்பதைத் தவிர்ப்பது,(12) தக்ஷிணை கொடுப்பதைத் தவிர்ப்பது, ஒரு பிராமணனை அவமதிப்பது ஆகிய இவை அனைத்தும் யாராலும் செய்யக்கூடாத செயல்கள் எனக் கடமைகளை அறிந்த மனிதர்களால் சொல்லப்படுகிறது.(13) ஓ! மனிதர்களில் புலியே, தந்தையுடன் சச்சரவு செய்யும் மகன், தன் ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்துபவன், தான் மணந்து கொண்ட மனைவியிடம் வாரிசை உண்டாக்காமல் புறக்கணிப்பவன் ஆகியோர் பாவம் நிறைந்தவர்களாவர்.(14) பாவக்கழிப்புச் செய்யத் தகுந்த மனிதர்களின் செயல்பாடுகள் மற்றும் செயல்படாமை ஆகியவற்றைக் குறித்துச் சுருக்கமாகவும் விரிவாகவும் சொல்லிவிட்டேன்.(15)இப்போது, இந்தச் செயல்களைச் செய்தாலும் கூட மனிதர்கள் பாவத்தின் கறைபடாமல் இருக்கும் சந்தர்ப்பங்களைச் சொல்லப்போகிறேன்.(16) வேதங்களை நன்கறிந்த ஒரு பிராமணன் உன்னைக் கொல்வதற்காக எதிர்த்துப் போரிட வந்தால், நீயும் அவனது உயிரை எடுக்க அவனை எதிர்க்க வேண்டும். அத்தகு செயலைச் செய்வதால் அவனைக் கொல்பவன், பிராமணனைக் கொன்ற குற்ற உணர்வுக்கு ஆளாகமாட்டான்.(17) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே} வேதங்களில் உள்ள ஒரு மந்திரத்தில் இது விதிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களால் அதிகாரத்துடன் அனுமதிக்கப்படும் நடைமுறைகளை மட்டுமே நான் உனக்கு அறிவிக்கிறேன்.(18) தன் கடமைகளில் இருந்து வழுவிய பிராமணன், கொலை செய்யும் நோக்குடனும், கையில் ஆயுதத்துடனும் முன்னேறி வருபவன் ஆகியோரைக் கொன்றால், உண்மையில் அது பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} ஆகாது. அப்படிப்பட்ட வழக்கில் கொல்பவனின் கோபமே, கொல்லப்படுபவனின் கோபத்தை எதிர்த்துச் செல்கிறது.(19) அறியாமையாலோ, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு நல்ல மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஒருவன் ஊக்கம்தரும் மதுபானம் அருந்தினால், அவனது வழக்கில் மீண்டும் மீள்பிறப்புச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்[5].(20)ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, தடுக்கப்பட்ட உணவை உண்பது குறித்து நான் உன்னிடம் சொன்னது அனைத்திலிருந்தும் இத்தகு பாவக்கழிப்பு சடங்குகளின் மூலம் தூய்மையடையலாம்.(21) ஆசானின் ஆணைப்படி ஆசானின் மனைவியுடன் கலப்பது அம்மாணவனைக் களங்கப்படுத்தாது. தவசியான உத்தாலகர், ஒரு சீடனின் மூலமே தன் மகன் ஸ்வேதகேதுவைப் பெற்றார்.(22) துயர் நிறைந்த காலத்தில் தன் ஆசானுக்காகத் திருடுபவன் பாவக்கறை அடைய மாட்டான். எனினும், தன் இன்பங்களுக்காகத் திருடுபவன் பாவத்தால் கறைபட்டவனே ஆவான்.(23) (துயர் நிறைந்த காலத்தில், தன் ஆசானுக்காக) பிராமணர்களைத் தவிர வேறு எவரிடம் திருடுபவனும் கறைபடிந்தவனாக மாட்டான். அத்தகு சூழ்நிலையில் தனக்கென எந்தப் பங்கையும் எடுத்துக் கொள்ளாத ஒருவன் மட்டுமே பாவத்தால் தீண்டப்படாமல் இருப்பான்.(24) ஒருவன், தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பொய் சொல்லலாம், அல்லது ஒருவனுடைய ஆசானுக்காக, அல்லது ஒரு பெண்ணை நிறைவு செய்வதற்காக, அல்லது திருமணம் செய்வதற்காகப் பொய் சொல்லலாம்.(25) ஈரக்கனவுகளால் ஒருவன் தன் பிரம்மச்சரிய நோன்பை உடைத்தவனாக மாட்டான். அத்தகு வழக்குகளில், சுடர்மிக்க நெருப்பில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக ஊற்றுவதே பாவக்கழிப்பாக விதிக்கப்படுகிறது[6].(26)மூத்தவன் {அண்ணன்} வீழ்ந்துவிட்டாலோ, உலகைத் துறந்துவிட்டாலோ, இளையவன் {தம்பி} திருமணம் செய்து கொள்வதால், அவன் எந்தப் பாவத்தையும் இழைத்தவனாக மாட்டான். ஒரு பெண்ணால் வேண்டப்பட்டு, அவளுடன் கலப்பது அறத்திற்கு அழிவைத் தராது.(27) வேள்வியைத் தவிர வேறு எதற்காகவும் ஒருவன் விலங்குகளைக் கொல்லவோ, கொல்லப்படச் செய்யவோ கூடாது. படைப்பாளனால் விதிக்கப்பட்ட விதியின் படி அவனால் வெளிப்படுத்தப்படும் கருணையால் விலங்குகள் புனிதமடைகின்றன (வேள்விக்குத் தகுந்தவையாகின்றன).(28) தகாத பிராமணருக்கு அறியாமையால் கொடையளிப்பவன் பாவத்துக்கு உள்ளாக மாட்டான். தகுந்தோரிடம் (அறியாமையினால்) தயாளமில்லாமல் நடந்து கொள்ளும் ஒருவன் பாவத்துக்கு உள்ளாகமாட்டான்.(29) ஒழுக்கங்கெட்ட மனைவியிடம் இருந்து விலகும் ஒருவன் பாவத்துக்கு உள்ளாகமாட்டான். அப்படி நடத்துவதால் அந்தப் பெண் மாசகற்றப்பட்டவளாவாள், அதேவேளையில் கணவனும் பாவத்தைத் தவிர்ப்பான்[7].(30) சோமச்சாற்றின் உண்மை பயனை அறிந்த ஒருவன், அதை விற்பதால் பாவத்தை அடைய மாட்டான்[8]. தொண்டு செய்ய இயலாத பணியாளை நீக்குவதால் ஒருவன் பாவத்தால் தீண்டப்படமாட்டான்.(31) எவற்றைச் செய்தால் ஒருவன் பாவத்திற்கு உள்ளாக மாட்டானோ அந்தச் செயல்களையே இப்போது நான் உனக்குச் சொன்னேன். இனி பாவக்கழிப்பை {பரிகாரங்களைக்} குறித்து உனக்கு விரிவாகச் சொல்லப்போகிறேன்” என்றார் {வியாசர்}[9].(32)

பாவங்களும், பாவக்கழிப்புகளும்! – சாந்திபர்வம் பகுதி – 35-பாவங்கழிக்கும் முறைகள்; பிராமணக் கொலை, மதுவுண்ணல், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்துவது; ஆசானுக்கு எதிராகச் செயல்படுவது; பிறன்மனையுறவு, களவு, பெண்களின் பாவங்கள் ஆகியவற்றுக்கான பாவக்கழிப்புகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; அவன் செய்தது குற்றமாகாது, அஃது அவனது கடமை என விளக்கி, அப்படியே அவன் குற்றவுணர்வைக் கொண்டிருந்தாலும் அதற்கான பாவக்கழிப்பைச் செய்துவிட்டு நாடாளுமாறு யுதிஷ்டிரனை வலியுறுத்திய வியாசர்…

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தவங்கள், அறச்சடங்குகள் {வேள்விகள்} மற்றும் கொடைகளின் மூலம் ஒரு மனிதன் தான் இழைத்த பாவங்களைக் கழுவிக் கொள்கிறான்.(1) ஒரு நாளைக்கு ஒரே ஒரு முறை மட்டுமே உணவு உண்டு, பிச்சையெடுத்து உணவுண்டு, (பணியாளின் உதவியை எதிர்பாராமல்) தன் செயல்களனைத்தையும் தானே செய்து, ஒரு கரத்தில் மனித மண்டையோட்டையும், மறு கரத்தில் கட்வாங்கத்தையும்[1] எடுத்துக் கொண்டு பிச்சைக்காரனாய் வலம் வந்து, பிரம்மச்சரிய நிலையடைந்து, எப்போதும் உழைப்புக்கு ஆயத்தமாக இருந்து,(2) தீமைகள் அனைத்தையும் கைவிட்டு, வெறுந்தரையில் உறங்கி, தன் குற்றங்களை {பாவங்களை} உலகத்திற்கு வெளியிட்டு, என இவை யாவற்றையும் முழுமையாகப் பனிரெண்டு {12} ஆண்டுகள் செய்யும் மனிதன் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைகிறான்.(3) ஆயுதப்பயன்பாட்டில் வாழும் மனிதனின் ஆயுதத்தாலோ, ஒருவனுடைய சுய விருப்பத்தாலோ, சாத்திரங்களைப் பயின்ற மனிதர்களின் ஆலோசனையின் பேரிலோ அழிவை அடைபவன், அல்லது சுடர்மிக்க நெருப்பில் மூன்று முறை தலைகுப்புற விழுபவன்,(4) அல்லது வேதங்களை ஓதிக்கொண்டே நூறு யோஜனைகள் நடப்பவன், அல்லது வேதங்களை அறிந்த ஒரு பிராமணனுக்குத் தன் மொத்த உடைமைகளையும் கொடையாகக் கொடுப்பவன், (5) அல்லது உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்காவது அவனுக்குக் கொடுப்பவன், அல்லது முறையாக அமைக்கப்பட்ட ஒரு வீட்டைக் கொடுத்து பிராமணர்களையும், பசுக்களையும் பாதுகாப்பவன், ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைவான்.(6)

[1] “கட்வாங்கம் என்பது மண்டையோடு பொருத்தப்பட்ட ஒரு தடி” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்

ஆறு வருட காலத்திற்கு மிகக் குறைந்த உணவையே தினமும் உண்டு வாழ்வதாலும் ஒரு மனிதன் அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடையமுடியும்[2]. உணவைப் பொறுத்தவரையில், இதைவிடக் கடுமையான நோன்பை நோற்பதால் அவன் மூன்று வருடங்களிலேயே தூய்மையடையலாம்[3].(7) ஒரு மாதத்தில் ஒரே ஒரு முறை உண்டு வாழ்ந்தால் ஒருவன் ஒரே வருடத்தில் தூய்மையடையலாம். முற்றாகப் பட்டினி கிடந்தால், ஒருவன் மிகக் குறுகிய காலத்திலேயே தூய்மையடையலாம்.(8) மேலும், ஒரு குதிரை வேள்வியைச் செய்வதால் ஒருவன் தூய்மையடைவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பிராமணனைக் கொன்ற குற்ற உணர்வு கொண்ட மனிதர்கள், குதிரை வேள்வியை நிறைவு செய்து, இறுதி நீராடலை முடித்தால்,(9) அவர்களுடைய பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடையலாம். இது ஸ்ருதிகளின் பேரதிகாரத்தில் உள்ள ஒரு தடையாணையாகும். மேலும், போரில் ஒரு பிராமணனுக்காகத் தன் உயிரை விடுபவன், ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைகிறான்.(10)

[2] “முதல் மூன்று நாள் காலையில் உண்ண வேண்டும், இரண்டாவது மூன்று நாட்கள் மாலையில் உண்ண வேண்டும், அடுத்த மூன்று நாட்கள் வேண்டாமல் கிட்டும் எதையும் உண்ணலாம் வேறேதும் உண்ணக்கூடாது, அடுத்து வரும் மூன்று நாட்கள் எதையுமே உண்ணாதிருக்க வேண்டும் என்பதே அவ்விதி. இவ்விதி கிருச்சிரபோஜனம் Kricchra-bhojana என்று அழைக்கப்படுகிறது. இவ்விதியை ஆறு வருடங்களுக்கு நோற்கும் ஒருவன், பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைவான்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “மூன்று நாள் காலையில் மாத்திரமும், பின் மூன்று நாள் மாலையில் மாத்திரமும், பின் மூன்று நாள் தன் முயற்சியின்றிக் கிடைத்ததை மாத்திரமும் புஜித்துக் கொண்டு பின்மூன்று நாள் உண்ணாவிரதமுள்ளவனாக இருக்க வேண்டுமென்பது கிருச்சிரவிதி” என்று அடிக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

[3] “ஏழு நாட்கள் காலையில் மட்டுமே உண்ண வேண்டும்; அடுத்த ஏழு நாட்கள் மாலையில் மட்டுமே உண்ண வேண்டும்; அடுத்த ஏழு நாட்கள் (வேண்டாமல்) கிட்டுவதை உண்ணலாம்; அடுத்த ஏழு நாட்கள் மொத்தமாக எதையும் உண்ணாதிருக்க வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தகுந்தோருக்கு நூறாயிரம் {1,00,000} பசுக்களைக் கொடையாக அளிப்பவன், பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்தும், உண்மையில் அவன் செய்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(11) கன்றீன்ற இருபத்தைந்தாயிரம் கபிலைப் பசுக்களை {காராம்பசுக்களைக்} கொடையாக அளிப்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்து தூய்மையடைவான்.(12) ஒருவன் உயிரைவிடும் தருவாயில், கன்றுகளுடன் கூடிய ஓராயிரம் பசுக்களைத் தகுந்தோருக்குக் கொடையாகக் கொடுத்தால் பாவத்தில் இருந்து விடுபடுவான்.(13) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒழுக்கத்துடன் கூடிய பிராமணர்களுக்கு நூறு காம்போஜக் குதிரைகளைக் கொடையளிக்கும் மனிதன் தன் பாவத்தில் இருந்து விடுபடுகிறான்.(14) ஒரே ஒருவனுக்காவது, அவன் கேட்கும் அனைத்தையும் கொடுத்து, அதைக் குறித்து வேறு யாரிடமும் பேசாத {சொல்லாத} ஒரு மனிதன் பாவத்தில் இருந்து விடுபடுகிறான்.(15)

ஒரு முறை மதுவுண்ட ஒருவன், (பாவக்கழிப்பாக) காய்ச்சிய மதுவைக் குடித்தால், அவன் இம்மையிலும், மறுமையிலும் தன்னைத் தூய்மையாக்கிக் கொள்கிறான்[4].(16) மலைச்சிகரத்தில் இருந்து குதித்தோ, சுடர்மிக்க நெருப்பில் நுழைந்தோ, உலகைத் துறந்து எப்போதும் நீடிக்கும் பயணத்தை மேற்கொண்டோ ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்து விடுபடலாம்.(17) பிருஹஸ்பதியால் விதிக்கப்பட்டுள்ள வேள்வியைச் செய்வதன் மூலம் மதுபானம் உண்ணும் ஒரு பிராமணனால் பிரம்மலோகத்தை அடைவதில் வெல்ல முடியும்[5]. இதைப் பிரம்மனே சொல்லியிருக்கிறான்.(18) மதுவுண்ட பிறகு ஒரு மனிதன், அடக்கமாக நிலக்கொடையளித்து, பிறகு எப்போதும் அதிலிருந்து விலகியிருந்தால், அவன் தூய்மையும், புனிதமும் அடைகிறான்.(19)

[4] கும்பகோணம் பதிப்பில், “ஒருமுறை ஸுரையைப் பானஞ்செய்தவன் அந்த ஸுரையை நெருப்பு போலக் காய்ச்சிப் பானஞ்செய்தோ, அல்லது மலையிலிருந்து பாலைநிலத்தில் விழுந்தோ அல்லது அக்னியில் விழுந்தோ அல்லது மஹாபத யாத்திரை செய்தோ தன் சரீரத்தைத் தியாகஞ்செய்தால் பாவங்களிலிருந்து விடுபட்ட இரண்டு உலகிலும் சக்தி பெறுவான்” என்றிருக்கிறது.தனது ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்திய மனிதன், பழுக்கக் காய்ச்சிய இரும்புத் தகட்டில் கிடந்து, தன் பாலினச் சின்னத்தை அறுத்து, எப்போதும் மேல்நோக்கிய கண்களுடன் காடுகளில் வாழ்ந்து இந்த உலகை விட்டுச் செல்ல வேண்டும்[6].(20] ஒருவன் தன் உடலைக் கைவிடுவதால் அவன் தன் தீச்செயல்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். பெண்கள், ஒரு வருடகாலம் ஒழுங்குபடுத்திய வாழ்வை வாழ்ந்தால் தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவார்கள்.(21) ஒரு மனிதன் மிகக் கடுமையான நோன்பை நோற்பதாலோ, தன் செல்வம் முழுவதையும் கொடையாகக் கொடுப்பதாலோ, தன் ஆசானுக்காகப் போரிட்டுப் போரில் அழிவடைவதாலோ தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(22) தன் ஆசானின் முன்பு பொய் பேசுபவன், அல்லது அவருக்கு எதிராகச் செயல்படும் ஒருவன், தனது ஆசானுக்கு ஏற்புடைய ஏதாவதொன்றைச் செய்து அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடையலாம்.(23) (பிரம்மச்சரிய) நோன்பிலிருந்து விழுந்தவன், மாட்டுத் தோலை ஆறு மாதங்களுக்கு உடுத்தி, பிராமணக்கொலைக்கு விதிக்கப்பட்ட தவங்களைப் பயின்றால் அந்தப் பாவத்திலிருந்து அவன் தூய்மையடைவான்[7].(24)பிறன்மனையுறவு, அல்லது களவு குற்றம் செய்தவன், ஒரு வருட காலம் கடும் நோன்புகளை நோற்று தூய்மையடையலாம்.(25) மற்றொருவனின் உடைமையைத் திருடியவன், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் களவு செய்ததற்கு இணையான மதிப்புடைய உடைமையைத் திரும்பக் கொடுக்க வேண்டும். அப்போது அவன் (களவின்) பாவத்திலிருந்து தூய்மையடைவான்.(26) மூத்தவன் {அண்ணன்} திருமணம் செய்வதற்கு முன்பே திருமணம் செய்து கொள்ளும் இளையவனும் {தம்பியும்}, தனக்கு முன்பே திருமணம் செய்து கொண்ட தம்பியை உடைய மூத்தவனும் {அண்ணனும்}, பனிரெண்டு இரவுகளுக்கு ஆன்மத் திரட்சியுடன் கடும் நோன்பை நோற்று தூய்மையடையலாம்.(27) எனினும், தம்பியானவன், தன் பித்ருக்களைக் காப்பதற்காக மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அந்த இரண்டாவது திருமணத்தின் மூலம் முதல் மனைவி தூய்மையடைகிறாள், அவளது கணவன் அவளை அடைவதனால் பாவமிழைத்தவனாக மாட்டான்[8].(28) பெண்கள், மிகக்குறைந்த அளவிலான, தூய்மையான உணவை உண்டு சாதுர்மாஸ்ய நோன்பை நோற்பதால், அவர்கள் பெரும்பாவங்களில் இருந்தும் தூய்மையடைவார்கள் என்று சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் அறிவிக்கின்றனர்.(29) பெண்கள், தங்கள் இதயத்தால் இழைக்கும் பாவங்களைச் சாத்திரங்களை அறிந்தோர் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. (இந்த விபரத்துக்குட்பட்ட) அவர்களுடைய எந்தப் பாவமும், சாம்பலால் தேய்க்கப்பட்ட உலோகத் தட்டைப் போல அவர்களது சூதகச் சுழலால் {மாதவிடாயால்} தூய்மையடைகிறார்கள்.(30)சூத்திரன் உண்டதால் கறைபடிந்த (பித்தளை மற்றும் தாமிரம் சேர்ந்த கலப்பு உலோகத்தால் செய்யப்பட்ட) தட்டுகள், அல்லது மாட்டால் நுகரப்பட்ட, அல்லது பிராமணனின் கண்டூஷத்தால் {எச்சிலால்} கறைபடிந்த அதே உலோகப் பாத்திரங்கள் {வெண்கலப் பாத்திரங்கள்}, தூய்மையாக்கும் பத்து பொருட்களின் மூலம் தூய்மையடையும்[9].(31) ஒரு பிராமணன் முழு அளவிலான அறத்தைப் பயின்று அடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. மன்னர் வகையைச் சேர்ந்த ஒரு மனிதன், நாலில் ஒரு பாகம் குறைந்த அளவுக்கு {அறத்தைப்} பயின்று அடைய வேண்டும்.(32) ஒரு வைசியன் இன்னும் நாலில் ஒரு பாகம் (க்ஷத்திரியனைவிடக் கால் பாகம்) குறைந்த அளவுக்கும், ஒரு சூத்திரன் அதனிலும் நாலில் ஒரு பாகம் (வைசியனைவிடக் கால் பாகம்) குறைந்த அளவுக்கு அடையலாம். (பாவக்கழிப்பை உறுதி செய்யும்போது) நால்வகையினரில் ஒவ்வொரு வகையினரும் செய்யும் பாவங்களின் கனம் மற்றும் கனமின்மையை இந்தக் {மேற்கண்ட} கொள்கையின்படியே தீர்மானிக்க வேண்டும்.(33) ஒரு மனிதன், பறவை, அல்லது விலங்கைக் கொன்றுவிட்டாலோ, உயிருடன் கூடிய மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டாலோ, அவன் தான் செய்த பாவத்தை வெளியிட்டு மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(34) புணரக்கூடாதாரோடு புணர்ந்த ஒருவன், ஈர ஆடைகளுடன் திரிந்து, சாம்பல் படுக்கையில்[10] உறங்குவதே அவனுக்குப் பாவக்கழிப்பாகும் {பரிகாரமாகும்}.(35) ஓ! மன்னா, முன்னுதாரணங்கள், அறிவு, சாத்திரங்கள், பிரம்மனின் விதிகள் ஆகியவற்றின் படி பாவம் நிறைந்த செயல்களுக்கான பாவக்கழிப்புகள் {பரிகாரங்கள்} இவையே.(36)ஒரு பிராமணன், தீமைகள் அனைத்தையும் விலக்கி, கோபத்தையும், வெறுப்பையும் கைவிட்டு, புகழ், பழி ஆகியவற்றை அலட்சியம் செய்து, எப்போதும் சொற்ப உணவையே உண்டு வாழ்ந்து, பேசுவதைத் தவிர்த்து {மௌனவிரதம் இருந்து}, ஒரு புனிதமான இடத்தில் காயத்திரி மந்திரத்தை ஓதினால் அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவான்.(37) பகல்வேளையில் அவன் வானத்தையே உறைவிடமாகக் கொள்ளவேண்டும், இரவிலும் அத்தகு இடத்திலேயே அவன் படுக்க வேண்டும். அவன் பகலில் மூன்று முறையும், இரவில் மூன்று முறையும் ஓடையிலோ, தடாகத்திலோ ஆடைகளுடன் மூழ்கி தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.(38) கடும் நோன்புகளை நோற்கும் அவன் {பிராமணன்}, பெண்கள், சூத்திரர்கள் மற்றும் வீழ்ந்துவிட்ட மனிதர்கள் ஆகியோரோடு பேசாமல் விலக வேண்டும். அத்தகு ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமணன், அவனால் அறியாமல் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைவான்.(39) ஒரு மனிதன், ஐம்பூதங்களின் சாட்சியாகச் செய்த நல்ல, அல்லது தீய செயல்களின் கனியை மறுமையில் {அடுத்த உலகில்} அடைகிறான். அறமோ, மறமோ அவ்விரண்டை ஒருவன் எவ்வளவு அடைகிறானோ, அவற்றின் விளைவுளான இன்பத்தையோ, துன்பத்தையோ அதே அளவுக்கு அவன் (இங்கேயே) அடைகிறான்.(40) எனவே, ஒருவன் ஞானம், தவங்கள், அறச்செயல்களின் மூலம் (இங்கேயே) அவன் இன்பத்தை அதிகரித்துக் கொள்கிறான். அதேபோல அவன், தீச்செயல்களுக்கான துன்பங்களையும் அடைகிறான்.(41) எனவே ஒருவன் எப்போதும் அறச்செயல்களைச் செய்து, அறமற்ற செயல்களை மொத்தமாகத் தவிர்க்க வேண்டும்.(42)

குறிப்பிட்ட பாவங்களுக்கான பாவக்கழிப்புகள் என்னென்ன என்பதை இப்போது சொல்லிவிட்டேன். மஹாபாதகங்கள் (கடுமையும் கொடுமையும் நிறைந்த பாவங்கள்) என்றழைக்கப்பம் பாவங்களைத் தவிர அனைத்து பாவத்திற்கும் பாவக்கழிப்புகள் உண்டு.(43) தூய்மையற்ற உணவு மற்றும் முறையற்ற பேச்சுகள் போன்ற பாவங்களைப் பொறுத்தவரையில், அவை அறிந்து செய்யப்பட்டவை, அறியாமல் செய்யப்பட்டவை என்று இரு வகைப்படும்.(44) அறிந்து செய்யப்பட்ட பாவங்கள் கொடியவையாகும், அதே வேளையில், அறியாமல் இழைக்கப்பட்ட பாவங்கள் அற்பமானவையே. அவ்விரண்டிற்கும் பாவக்கழிப்புகள் இருக்கின்றன.(45) உண்மையில் பாவமானது, சொல்லப்பட்டிருக்கும் விதிகளால் (அவற்றை நோற்பதால்) கழுவிக்கொள்ளத்தக்கதாக இருப்பினும், அந்த விதிகள் (தெய்வத்தை) நம்புபவர்களுக்காகவும், {பாவக்கழிப்பில்} நம்பிக்கையுள்ளவர்களுக்காகவும் விதிக்கப்பட்டிருக்கின்றன.(46) அவை நாத்திகர்களுக்கோ, நம்பிக்கையற்றவர்களுக்கோ, செருக்கும், தற்பெருமையும் கொண்டவர்களுக்கோ விதிக்கப்படவில்லை.(47)

ஓ! மனிதர்களில் புலியே, ஓ! அறவோரில் முதன்மையானவனே, இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை விரும்பும் ஒரு மனிதன், அறத்தின்படியும், அறவோரின் (ஆலோசனையின்) படியும், தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளின்படியும் நடப்பவனாக இருக்க வேண்டும்.(48) எனவே, ஓ! மன்னா, ஏற்கனவே (என்னால்) சொல்லப்பட்ட காரணங்களின் படி, நீ மன்னனின் கடமைகளைச் செய்யும்போதும், உங்கள் உயிர் மூச்சுகளையும், வாரிசுரிமையையும் பாதுகாக்கும்பொருட்டும் உன் எதிரிகளைக் கொன்றிருப்பதால் உன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைவாய்.(49) அல்லது, இவையாவற்றுக்கும் பிறகும் நீ பாவம் நிறைந்தவன் என்று உன்னைக் கருதுவாயானால், பாவக்கழிப்பைச் செய்வாயாக. ஞானிக்குத் தகாத முறையில் துயரின் விளைவால் உன் உயிரை விடாதே” என்றார் {வியாசர்}”.(50)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், புனிதமான அந்த முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, அந்தத் தவசியிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.”(51)

உணவும், கொடையும்! – சாந்திபர்வம் பகுதி – 36-உண்ணத்தக்கவை, உண்ணத்தகாதவை, அதற்குரிய பாவக்கழிப்புகள், கொடைக்குத் தகுந்தவர், கொடைக்குத்தகாதவர் ஆகியவற்றைக் குறித்துத் தவசிகளிடம் மனு ஆற்றிய உரையை யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர் …

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! பாட்டா, எந்த உணவு தூய்மையானது? எது தூய்மையற்றது? எந்தக் கொடை புகழத்தக்கது? (கொடைகளுக்குத்) தகுந்தவராக எவரைக் கருதலாம்? எவரைக் கருதலாகாது?” என்று கேட்டான்.(1)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகத் தவசிகளுக்கும், படைப்பின் தலைவனான மனுவுக்கும் இடையில் நடந்த ஒரு பழைய உரையாடல் இருக்கிறது.(2) கிருத காலத்தில் {யுகத்தில்} கடும் நோன்புகளைக் கொண்ட ஒரு முனிவர் கூட்டமானது, சுகமாக அமர்ந்திருப்பவரும், படைப்பின் பெரிய பலமிக்கத் தலைவருமான மனுவை அணுகி, கடமைகளைக் குறித்து உரையாற்றும்படி கேட்டுக் கொண்டனர்.(3) {அவர்கள்}, “எந்த உணவை உண்ண வேண்டும்? (கொடைகளுக்குத்) தகுந்த மனிதராக எவர் கருதப்பட வேண்டும்? என்ன கொடைகள் கொடுக்கலாம்? ஒரு மனிதன் எவ்வாறு படிக்க {பயில} வேண்டும்? ஒருவன் என்ன தவங்கள் செய்ய வேண்டும்? என்ன செயல்கள், எவ்வாறு செய்யப்பட வேண்டும்? எந்தச் செயல்கள் செய்யப்படக்கூடாது?” என்று கேட்டனர்.(4)

இவ்வாறு அவர்களால் கேட்கப்பட்டவரும், தெய்வீகமானவரும், தான்தோன்றியுமான மனு, அவர்களிடம், “கடமைகளைக் குறித்துச் சுருக்கமாகவும், விரிவாகவும் விளக்கப் போகிறேன், கேட்பீராக.(5) {அறத்தொடர்பிலிருந்து} விலக்கப்பட்ட பகுதிகளில் (புனித மந்திரங்களை) அமைதியாக ஓதுதல், ஹோமங்கள், நோன்புகள், தன்னைக் குறித்த அறிவு, புனித ஆறுகள், பக்திச் செயல்பாடுகளுக்கு அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் வசிக்கும் பகுதிகள் ஆகியன(6) தூய்மையாக்கும் செயல்பாடுகளாகவும், பொருட்களாகவும் சொல்லப்படுகின்றன. குறிப்பிட்ட சில மலைகளும் தூய்மையாக்குபவையே, தங்கம் உண்ணுதல், ரத்தினங்களும், மதிப்புமிக்கக் கற்களும் மூழ்கிய நீரில் நீராடுதல் ஆகியனவும் தூய்மையாக்குபவையே[1].(7) புனிதத்தலங்களுக்குப் பயணிப்பது மற்றும் புனித நெய்யை உண்பது ஆகியனவும், விரைவாக மனிதனைத் தூய்மையாக்கவல்லவையே என்பதில் ஐயமில்லை.(8) செருக்குடைய {அகங்காரம் கொண்ட} எந்த மனிதனும் எப்போதும் ஞானியெனச் சொல்லப்பட மாட்டான். அவன் நீண்ட நாட்கள் வாழ விரும்பினால், (தன் செருக்குக்கான பாவக்கழிப்பாக) மூன்று இரவுகள் வெண்ணீரைக் குடிக்க வேண்டும்[2].(9)கொடுக்கப்படாதவற்றை ஏற்க மறுப்பது, கொடை, (சாத்திரக்) கல்வி, தவம், தீங்கிழையாமை {அஹிம்சை}, உண்மை, கோபத்திலிருந்து விடுதலை, வேள்விகளில் தேவர்களை வழிபடுதல் ஆகியவையே அறத்தின் பண்புகளாகும்.(10) இருப்பினும், காலம் மற்றும் இடத்திற்கு ஏற்ப அந்த அறமே கூடப் பாவமாகக்கூடும். இவ்வாறே (அடுத்தவருக்குச் சொந்தமானவற்றை) ஏற்பது, பொய்மை, தீங்கிழைத்தல், கொலை செய்தல் ஆகியவையும் கூடச் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அறமாகக் கூடும்[3].(11) நீதியைத் தீர்மானிக்க இயன்ற மனிதர்களைப் பொறுத்தவரை, செயல்கள் என்பன அறம் சார்ந்தவை {நல்லவை}, மறம் சார்ந்தவை {பாவம் நிறைந்த தீயவை} என இரு வகைப்படும். மேலும் உலகம் சார்ந்த மற்றும் வேதம் சார்ந்த கண்ணோட்டத்தில், அறமும், பாவமும் (விளைவுகளின் அடிப்படையில் நல்லவையாகவோ, தீயவையாகவோ அமைகின்றன. வேதத்தின் கண்ணோட்டத்தில் அறமும், பாவமும், (ஒரு மனிதன் செய்யும், அல்லது செய்யாத அனைத்தும்) செயல் மற்றும் செயலின்மை என்ற இருவகையில் வகுக்கப்படுகின்றன. (வேதச்சடங்குகளைச் செய்யாமல், தியான வாழ்வைப் பின்பற்றி) செயல்பாடின்றி இருப்பது (மறுபிறப்பில் இருந்து) விடுதலையளிக்கிறது; அதே வேளையில் (வேதச் சடங்குகளைப் பயில்வதால் உண்டாகும்) செயல்பாட்டின் விளைவுகள் மீண்டும் மீண்டும் இறப்பையும், மறுபிறப்பையும் தருகின்றன. உலகப் பார்வையில் கண்டால், தீச்செயல்கள் தீமைக்கும், நற்செயல்கள் நன்மைக்கும் இட்டுச் செல்கின்றன. எனவே உலகக் கண்ணோட்டத்தில் அறத்தையம், பாவத்தையும், அவற்றின் விளைவுகளால் உண்டான நல்ல மற்றும் தீய தன்மைகளைக் கொண்டு வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்[4].(12,13)(வெளிப்படையாகவே) தீமையாகத் தெரியும் செயல்களை, தேவர்கள், சாத்திரங்கள், உயிர், உயிர்வாழ்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைக் கருதி செய்யும்போது, அவை நன்மையான விளைவுகளையே உண்டாக்கும்.(14) எதிர்பார்ப்புடன் செய்யப்படும் செயல்களுக்கும், ஐயம் நிறைந்ததாக இருப்பினும், எதிர்காலத்தில் (யாரோ ஒருவருக்கு) காயத்தை ஏற்படுத்தும், அல்லது காயமேற்படுத்தும் விளைவுகளைத் தரும் என்று தெரிந்தே செய்யப்படும் செயல்களுக்கும் பாவக்கழிப்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.(15) கோபத்தாலோ, தீர்மானிக்க முடியாத குழப்பத்தாலோ ஒரு செயல் செய்யப்படும்போது, பாவக்கழிப்பானது, உள்ளுணர்வு, சாத்திரங்கள் மற்றும் அறிவு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படியும், உடலுக்கு வலியைத் தரும்படியும் செய்யப்பட வேண்டும். மேலும் மனத்திற்கு ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ ஏதாவது செய்யப்பட்டால், அதனால் உண்டாகும் பாவம் புனிதமாக்கப்பட்ட உணவு மற்றும் மந்திரங்களை ஓதுதல் ஆகியவற்றின் மூலம் தூய்மையடையும்.(16,17)

(ஏதோ ஒரு குறிப்பிட்ட வழக்கில்) தன் தண்டக் கோலை புறந்தள்ளும் மன்னன், ஓரிரவு உண்ணா நோன்பிருக்க வேண்டும். (ஏதோ ஒரு குறிப்பிட்ட வழக்குக்கான) தண்டனை வழங்குவதில் மன்னனுக்கு அறிவுரைகூறாமல் தவிர்க்கும் புரோகிதர், பாவக்கழிப்பாக மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(18) துயரத்தின் காரணமாக ஆயுதம் மூலமாகத் தற்கொலை செய்ய முயன்ற மனிதன், {பாவக்கழிப்பாக} மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(19) தங்கள் கடமைகளையும், தங்கள் வகை {வர்ணம்}, குலம், நாடு, குடும்பம் சம்பந்தப்பட்ட நடைமுறைகளையும் கைவிடுபவர்களுக்கும், தங்கள் சொந்த அறத்தையே {தர்மத்தையே}[5] கைவிடுபவர்களுக்கும் எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது.(20)ஒரு சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற ஐயம் எழும்போது, வேத சாத்திரங்களை அறிந்த பத்து பேரோ, அவற்றை {வேத சாத்திரங்களை} அடிக்கடி உரைக்கும் மூன்று பேரோ தீர்மானிக்க {ஐயத்தைத் தெளிவிக்க} வேண்டும் என்ற சாத்திரங்களின் ஆணை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.(21) காளை, பூமி, சிற்றெறும்புகள், புழுதியில் உதிக்கும் புழுக்கள், நஞ்சு ஆகியவை பிராமணர்களால் உண்ணப்படக்கூடாது.(22) செதில்களற்ற மீன்களையும், தவளைகளையும், நான்கு கால் கொண்ட நீர்விலங்குகளில் ஆமைகளைத்தவிர வேறு எந்த விலங்கையும் அவர்கள் {பிராமணர்கள்} உண்ணக்கூடாது[6].(23) பாசங்கள் என்றழைக்கப்படும் நீர்க்கோழிகள், வாத்துகள், சுபர்ணங்கள், சக்கரவாகங்கள், மீன்கொத்திப்பறவைகள், நாரைகள், காக்கைகள், நீர்க்காகங்கள், கழுகுகள், பருந்துகள், ஆந்தைகள்,(24) மற்றும் ஊன் உண்பவையும், கூரிய நீண்ட பற்களைக் கொண்டவையுமான நான்கு கால் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றையும் உண்ணக்கூடாது,(25) செம்மறி ஆடு, பெண்கழுதை, பெண் ஒட்டகம், புதிதாகக் கன்றீன்ற பசு, {மனிதப்} பெண்கள், மான்கள் ஆகியவற்றின் பாலையும் ஒரு பிராமணன் பருகக் கூடாது.(26) இதைத்தவிரவும், பித்ருக்களுக்குக் காணிக்கையளிக்கப்பபட்ட உணவு, அண்மையில் பிள்ளை ஈன்ற பெண்ணால் சமைக்கப்பட்ட உணவு, அறியாத மனிதரால் சமைக்கப்பட்ட உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது. அண்மையில் கன்றீன்ற பசுவின் பாலும் பருகப்படக்கூடாது.(27)ஒரு க்ஷத்திரியனால் சமைக்கப்பட்ட உணவை ஒரு பிராமணன் உண்டால், அஃது அவனது சக்தியைக் குறைக்கும்; ஒரு சூத்திரனால் அளிக்கப்பட்ட உணவை உண்டால், அவனிடம் பிரம்ம ஒளி குன்றும், கொல்லன், அல்லது கணவனோ, பிள்ளையோ இல்லாத பெண் கொடுக்கும் உணவை அவன் உண்டால், அஃது அவனது வாழும் காலத்தைக் குறைக்கும்.(28) வட்டிக்குப் பணம் தருபவனால் அளிக்கப்படும் உணவு புழுதிக்குச் சமமானது, அதே வேளையில், பரத்தமையினால் வாழும் ஒரு பெண்ணால் கொடுக்கப்படும் உணவு விந்துக்குச் சமமானது. தங்கள் மனைவியரின் கற்பில்லாமையைச் சகித்துக் கொள்ளும் மனிதர்களால் அளிக்கப்படும் உணவும், தங்கள் துணைவிகளால் ஆளப்படும் மனிதர்களால் அளிக்கப்படும் உணவும் தவிர்க்கப்பட வேண்டியன.(29)

வேள்வியின் குறிப்பிட்ட பகுதியில் (கொடைகள் பெற) தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதன் {யாகத்தில் தீக்ஷை பெற்றவன்}, தன் செல்வத்தை அனுபவிக்காதவன், அல்லது கொடைகள் அளிக்காதவனால் கொடுக்கப்படும் உணவு, சோமத்தை விற்பவன், காலணி செய்பவன், கற்பற்ற பெண், வண்ணான்,(30) மருத்துவன், காவலாளி, மனிதக் கூட்டம், மொத்த கிராமத்தால் சுட்டப்படும் ஒருவன், ஆடல் மகளிரின் ஆதரவில் வாழ்பவன்,(31) அண்ணனுக்கு முன்பு மணமுடித்த தம்பி, பாணர்கள், வந்திகள், சூதாடிகள் ஆகியோரால் கொடுக்கப்படும் உணவு, இடது கையால் பெறப்பட்ட உணவு, நாள்பட்ட உணவு,(32) மதுவில் கலந்த உணவு, ஏற்கனவே உண்ணப்பட்ட உணவின் பகுதி, விருந்தில் எஞ்சிய உணவு ஆகியவற்றை (ஒரு பிராமணன்) உண்ணக்கூடாது. பணியாரங்கள், கரும்பு, அறைக்கீரை, இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்கவைக்கப்பட்ட அரிசி {பால்சோறு/பாயாசம்} ஆகியவை தங்கள் இன்சுவையை இழந்தால் உண்ணப்படக்கூடாது.(33) தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்படாத வறுத்த வாற்கோதுமை மாவு {சத்துமாவு}, வறுக்கப்பட்ட பிறவகைத் தானியங்கள், தயிரில் கலந்தவை ஆகியவை நாட்பட்டதனால் உண்ணப்படக்கூடாது, இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசி {பாயாசம்}, எள் கலந்த உணவு, இறைச்சி, அப்பங்கள் ஆகியவை இல்லற நோன்பு நோற்கும் பிராமணர்களால் உண்ணப்படக்கூடாது. தன் இல்லத்தில் இவ்வாறு வாழும் ஓர் இல்லறத்தான், உலகைத் துறந்த பிக்ஷுவைப் போல ஆகிறான்.(34-36) வீட்டில் தன் மனைவியரோடு வாழும் இத்தகு நடத்தை கொண்ட மனிதன், பெரும் அறத்தகுதியை ஈட்டுகிறான்.

புகழ் அடைவதற்காகவோ (நிந்தனை போன்ற) அச்சத்தின் காரணமாகவோ, ஒரு நலம் விரும்பிக்காகவோ ஒருவன் கொடையளிக்கக்கூடாது.(37) பாடல், ஆடல் செய்து வாழ்பவருக்கோ, தொழில்முறை கோமாளிகளுக்கோ, போதையுண்டவனுக்கோ, அறிவு குலைந்தவனுக்கோ, கள்வனுக்கோ, பழுதூற்றுபவனுக்கோ,(38) முட்டாளுக்கோ, நிறம் மங்கியவனுக்கோ, அங்கப்பழுதுள்ளவனுக்கோ, உயரம் குறைந்தவனுக்கோ {குள்ளனுக்கோ}, தீயவனுக்கோ, இழிந்த தீய குடும்பத்தில் பிறந்தவனுக்கோ, நோன்புகள் நோற்று புனிதமடையாதவனுக்கோ நல்லோன் எவனும் கொடையளிக்க மாட்டான்.(39) வேத அறிவில்லாத பிராமணனுக்கு எந்தக் கொடையும் அளிக்கப்படக்கூடாது. ஸ்ரோத்ரியனாக[7] இருந்தால் மட்டுமே அவனுக்குக் கொடைகள் அளிக்கப்படலாம். முறையற்ற கொடையும், முறையற்ற கொடையேற்பும், கொடுப்பவனுக்கும், பெறுபவனுக்கும் தீய விளைவுகளையே உண்டாக்கும்.(40) பாறை, அல்லது கருங்காலி மரத்தின் துணை கொண்டு பெருங்கடலைக் கடக்க முயல்பவன் மூழ்குவதைப் போலவே, (இத்தகு வழக்கில்) கொடுப்பவனும், அதைப் பெறுபவனும் என இருவரும் சேர்ந்தே மூழ்குவார்கள்.(41)ஈர விறகால் மறைக்கப்படும் நெருப்பு சுடர்விடாததைப் போலவே தவம், கல்வி, பக்தி ஆகியவை அற்ற கொடையேற்பாளன், (கொடையாளனின்) கொடையால் எந்த நன்மையையும் அடைய முடியாது.(42) (மனித மண்டை) ஓட்டில் உள்ள நீரும், நாயின் தோலில் செய்யப்பட்ட துருத்தியில் உள்ள பாலும், அவை ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் விளைவால் தூய்மையற்றதாவதைப் போலவே, நன்னடத்தை இல்லாதவரிடம் வேதங்களும் கனியற்றதாகப் போகும்.(43) மந்திரங்கள் அறியாதவனும், சாத்திரங்களை அறியாதவனும், பொறாமை குணம் கொண்டவனுமான ஓர் இழிந்த பிராமணனுக்குக் கருணையின் அடிப்படையில் ஒருவன் கொடையளிக்கலாம்.(44) ஏழை, அல்லது துன்பப்படுபவன், அல்லது நோயாளி மனிதனுக்கு ஒருவன் கருணையின் மூலம் கொடையளிக்கலாம். ஆனால், அத்தகு மனிதனுக்குக் கொடுப்பதால் (ஆன்ம) நன்மை பெற முடியும் என்ற நம்பிக்கையிலோ, அதன் மூலம் அறத்தகுதி ஈட்ட முடியும்என்ற நம்பிக்கையிலோ கொடையளிக்கக்கூடாது.(45)

வேதங்களை அறியாத பிராமணனுக்குக் கொடையளிப்பது பெறுபவனுடைய குறையின் விளைவால் முற்றிலும் கனியற்றதாகிறது என்பதில் எந்த ஐயமும் கிடையாது.(46) மரத்தால் செய்யப்பட்ட யானையையோ, தோலால் செய்யப்பட்ட மானையோ போன்றவனே வேத கல்வியற்ற பிராமணன். மேற்கண்ட மூன்றிடமும் பெயரையன்றி வேறேதும் இருப்பதில்லை.(47) மகளிரிடம் உற்பத்தி செய்ய முடியாத அலியைப் போலவோ, பசுவிடம் உற்பத்தி செய்ய முடியாத பசுவைப் போலவோ, இறகுகளற்று வாழும் ஒரு பறைவையைப் போலவோ மந்திரங்கள் இல்லாத பிராமணனும் வாழ்வான்.(43) பருப்பற்ற தானியம், நீரற்ற கிணறு, சாம்பலில் ஊற்றப்படும் நீர்க்காணிக்கைகளைப் போன்றதே கல்வியில்லாத பிராமணனுக்கு அளிக்கப்படும் கொடையாகும்.(49) கல்லாத பிராமணன், தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கொடுக்கப்படும் உணவை அழிப்பவனும், (அனைவரின்) எதிரியுமாவான். அத்தகு மனிதனுக்குக் கொடுக்கப்படும் கொடை ஏதிலியாகப் போகும். எனவே, அவன் (அடுத்தவர் செல்வத்தைக் கொள்ளையடிக்கும்) கள்வனாவான். மறுமையில் அருள் உலகங்களை அடைவதில் அவன் வெல்லவே முடியாது” {என்றார் மனு}.(50)

ஓ! யுதிஷ்டிரா, (அந்தச் சந்தர்ப்பத்தில்) மனுவால் சொல்லப்பட்ட அனைத்தையும் உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்த உயர்ந்த உரையாடல் அனைவராலும் கேட்கப்பட வேண்டும்” {என்றார் வியாசர்}.(51)

தலைநகர் நுழைந்த நீதிமகன்! – சாந்திபர்வம் பகுதி – 37-மன்னனின் கடமைகள் மற்றும் அறநெறி குறித்துப் பீஷ்மர் விளக்குவார் எனச் சொன்ன வியாசர்; நாடாளச் சொல்லி மீண்டும் யுதிஷ்டிரனிடம் வற்புறுத்திய கிருஷ்ணன்; வியாசர் மற்றும் கிருஷ்ணனின் சொற்களைக் கேட்டு மனத்தில் அமைதியை அடைந்த யுதிஷ்டிரன், தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கள் தன் பரிவாரங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நுழைந்தது .

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! புனிதமான பெருந்தவசியே, மன்னர்களின் கடமைகள் மற்றும் நால்வகையினரின் கடமைகள் அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, துயர் நிறைந்த காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறையையும், அறநெறியின் பாதையில் பயணித்து நான் எவ்வாறு உலகை அடக்க முடியும் என்பதையும் நான் கேட்க விரும்புகிறேன்.(2) பாவக்கழிப்பு {பரிகாரங்கள்}, உண்ணாநோன்புகள் நோற்பது, ஆகியவற்றைக் குறித்ததும், பெரும் ஆவலைத் தூண்டவல்லதுமான இந்த உரை என்னை மகிழ்ச்சியில் நிறைக்கிறது.(3) அறப்பயிற்சியும், மன்னர்களுக்கான கடமைகளையாற்றுவதும் எப்போதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருக்கின்றன. இவ்விரண்டையும் இணங்கச் செய்யும் நினைப்பே என் மனத்தை அடிக்கடி திகைக்கச் செய்கிறது” என்றான்.(4)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அப்போது வேதங்களை அறிந்தோரில் முதன்மையானவரான வியாசர், பழமையானவரும், அனைத்தையும் அறிந்தவருமான நாரதரின் மீது தன் கண்களைச் செலுத்தியவாறே {யுதிஷ்டிரனிடம்},(5) “ஓ! மன்னா, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே, கடமைகளையும், அறநெறியையும் குறித்து முழுமையாக நீ கேட்கவிரும்பினால் குருக்களின் பாட்டனான கிழவர் பீஷ்மரிடம் கேட்பாயாக.(6) கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், உலகளாவிய அறிவைக் கொண்டவருமான பாகீரதியின் {கங்கையின்} மைந்தர், கடமைகள் குறித்து நீ இதயத்தில் கொண்டிருக்கும் கடினமான ஐயங்கள் அனைத்தையும் போக்குவார்.(7) மூவழிகளில் செல்லும் தெய்வீக ஆறானவளும், நுண்ணறிவு கொண்டவளுமான அந்தத் தேவியே {கங்கையே} அவரை ஈன்றெடுத்தாள். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரையும் அவர் {பீஷ்மர்} தன் கண்களால் கண்டவராவார்.(8) அவர், பிருஹஸ்பதியைத் தலைமையாகக் கொண்ட தெய்வீக முனிவர்களைத் தன் கடமையுணர்வு மிக்கத் தொண்டுகளால் நிறைவு செய்து, மன்னர்களின் கடமைகள் குறித்த அறிவை அடைந்தார்.(9) குருக்களில் முதன்மையான அவர் {பீஷ்மர்}, உசனஸும் {அசுரகுரு சுக்கிரரும்}, மறுபிறப்பாளரான தேவர்களின் ஆசானும் {பிருஹஸ்பதியும்} அறிந்த அறிவியல் மற்றும் அதன் பொருள் விளக்கங்களின் அறிவை அடைந்தவராவார்.(10) அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர், கடும் நோன்புகள் நோற்று, வசிஷ்டர் மற்றும் பிருகு குலத்தின் சியவனர் ஆகியோரிடம் இருந்து வேதங்கள் அனைத்தையும், அவற்றின் அங்கங்களையும் குறித்த அறிவை அடைந்தார்.(11)

பெரும்பாட்டனின் {பிரம்மனின்} மூத்த மகனும், சுடர்மிக்கக் காந்தி கொண்டவரும், ஆன்ம மற்றும் மனோ அறிவியல் குறித்த உண்மைகளை அறிந்தவருமான சனத்குமாரரிடம் அவர் {பீஷ்மர்} பழங்காலத்தில் கல்வி பயின்றார்.(12) யதிகளின் {துறவிகளின்} கடமைகளைக் குறித்து மார்க்கண்டேயரின் உதடுகள் மூலமாகவே முற்றிலுமாக அறிந்தார். அந்த மனிதர்களில் காளை, ராமர் {பரசுராமர்} மற்றும் சக்ரன் {இந்திரன்} ஆகியோரிடம் இருந்து ஆயுதங்கள் அனைத்தையும் அடைந்தார்.(13) மனிதர்களுக்கு மத்தியில் பிறந்தவராக இருப்பினும், மரணம் இன்னும் அவரது கட்டுக்குள்ளேயே இருக்கிறது. பிள்ளையற்றவராக இருப்பினும், மறுமையில் அவருக்குப் பல அருளுலகங்கள் காத்திருக்கின்றன என்று நாங்கள் கேள்விப்படுகிறோம்.(14) பெரும் தகுதி படைத்த மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களே அவரது ஆலோசகர்களாக எப்போதும் இருந்துள்ளனர். அவர் அறியாதது என்று {இனி} அறியப்பட வேண்டும் என்றும் இங்குப் பொருளேதும் இல்லை.(15) கடமைகள் அனைத்தையும் உணர்ந்தவரும், அறநெறியின் நுண்ணிய உண்மைகள் அனைத்தையும் அறிந்தவருமான அவரே {பீஷ்மரே} உன்னிடம் கடமை மற்றும் அறநெறி குறித்து உரையாற்றுவார். அவர் {பீஷ்மர்} தனது உயிர்மூச்சைக் கைவிடுமுன் அவரிடம் செல்வாயாக” என்றார் {வியாசர்}.(16) அவரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பேரறிஞனுமான உயர் ஆன்ம குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, நாநயமிக்கவர்களில் முதன்மையானவரும், சத்தியவதியின் மகனுமான வியாசரிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(17)

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “அருவருப்பை ஏற்படுத்தக் கூடியதும், பெரியதுமான உறவினர்கள் படுகொலையைச் செய்து, அனைத்திற்கு எதிரான குற்றவாளியாகவும், பூமியை அழித்தவனாகவும் நான் இருக்கிறேன்.(18) நேர்மையாகப் போரிட்ட போர்வீரரான பீஷ்மரை, வஞ்சகத்தின் உதவியால் கொன்ற பிறகு, (கடமைகள் மற்றும் அறநெறி குறித்த) கேள்விகளைக் கேட்பதற்காக என்னால் அவரை எவ்வாறு அணுக முடியும்?” என்று கேட்டான்.(19)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “வலிய கரங்களைக் கொண்ட யது குலத்தின் உயர் ஆன்மத் தலைவன் {கிருஷ்ணன்}, நால்வகையினர் அனைவரும் {நான்கு வர்ணங்களும்} நன்மை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்டு, மீண்டும் அந்த மன்னர்களில் முதன்மையானவனிடம் {யுதிஷ்டிரனிடம்} (பின் வரும் வார்த்தைகளைப்) பேசினான்.(20)

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “துயரத்தில் இத்தகு பிடிவாதம் செய்வது உமக்குத் தகாது. ஓ! மன்னர்களில் சிறந்தவரே, புனிதமான வியாசர் சொன்னதைச் செய்வீராக.(21) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, பிராமணர்களும், பெரும் சக்தி கொண்ட உமது இந்தச் சகோதரர்களும், கோடையின் முடிவில் மேகங்களின் தேவனை வேண்டும் மனிதர்களைப் போல உம்மை வேண்டி உம்முன்னால் நிற்கின்றனர்.(22) ஓ! மன்னா, {போருக்குத்} திரண்ட மன்னர்களில் கொல்லப்படாமல் எஞ்சியோர் மற்றும் குருஜாங்கல நாட்டின் நால்வகை மக்கள் அனைவரும் இங்கே இருக்கின்றனர்.(23) ஓ! எதிரிகளை எரிப்பவரே, ஓ! எதிரிகளைக் கொல்பவரே, இந்த உயர் ஆன்ம பிராமணர்களுக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகவும், அளவிலா சக்தி கொண்ட மதிப்பிற்குரிய பெரியவர் வியாசரின் ஆணைக்குக் கீழ்ப்படிந்தும்,(24) உமது நலன்விரும்பிகளான எங்களின், மற்றும் திரௌபதியின் வேண்டுகோளின்படியும், எங்களுக்கு ஏற்புடையவற்றையும், உலகத்திற்கு நன்மையளிப்பனவற்றையும் செய்வீராக” என்றான் {கிருஷ்ணன்}.(25)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனான அந்த உயர் ஆன்ம மன்னன் (யுதிஷ்டிரன்), கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மொத்த உலகத்தின் நன்மைக்காகத் தன் இருக்கையில் இருந்து எழுந்தான்.(26) பெரும்புகழைக் கொண்டவனும், மனிதர்களில் புலியுமான அந்த யுதிஷ்டிரன், கிருஷ்ணனாலும், தீவில் பிறந்தவராலும் (வியாசராலும்), தேவஸ்தானர், ஜிஷ்ணு {அர்ஜுனன்} ஆகியோராலும், இன்னும் பலராலும் வேண்டிக் கொள்ளப்பட்டதால், தன் துயரையும், கவலையையும் கைவிட்டான்.(27,28) வழக்கமாக மனிதர்கள் அனைவராலும் கேட்கப்படுவதும், அனைவரும் கேட்கத்தகுந்ததுமான சுருதிகளின் தீர்மானங்களையும், அந்தத் தீர்மானங்களின் விளக்கங்கள் குறித்த அறிவியலையும் முழுமையாக அறிந்தவனான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மனோ அமைதியை அடைந்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தான்.(29) நட்சத்திரங்களால் சூழப்பட்ட நிலவைப் போல, அவர்களால் சூழப்பட்டிருந்த மன்னன், வரிசையின் தலைமையில் திருதராஷ்டிரனை முன்னிட்டு, நகருக்குள் நுழைவதற்காகப் புறப்பட்டான்.(30)

கடமைகள் அனைத்தையும் அறிந்தவனும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரன், நகருக்குள் நுழைய விரும்பி, தேவர்களுக்கும், ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கும் தன் வழிபாட்டைக் காணிக்கையாக்கினான்.(31) பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, மங்கலக் குறிகளைக் கொண்டவையும், வெள்ளை நிறத்திலானவையுமான பதினாறு இளங்காளைகள் பூட்டப்பட்டதும், வெள்ளை விரிப்புகளாலும், மான் தோல்களாலும் மறைக்கப்பட்டதும், வேத மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்டதுமான ஒரு புதிய தேரில் ஏறினான். பாணர்களாலும், வந்திகளாலும் துதிக்கப்பட்ட அந்த மன்னன், அமுத வாகனத்தைச் செலுத்தும் சோமனைப் {இந்திரனைப்} போல அந்தத் தேரில் ஏறினான்.(32,33) பயங்கர ஆற்றலைக் கொண்டவனும், அவனது தம்பியுமான பீமன், கடிவாளங்களை ஏந்தினான். அர்ஜுனன், பெரும் பிரகாசம் கொண்ட வெண்குடையை அவனது தலைக்கு மேல் ஏந்தினான்.(34) தேரில் இருந்த அந்த வெண்குடையானது, ஆகாயத்தில் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வெண்மேகத்தைப் போல அழகானதாக இருந்தது.(35) மாத்ரியின் வீர மகன்களான நகுலன், சகாதேவன் ஆகியோர் இருவரும், நிலவின் கதிர்களைப் போல வெண்மையானவையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான வெண்சாமரங்கள் இரண்டால் மன்னனுக்கு விசிறி விட்டனர்.(36) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ஐந்து சகோதரர்களும் (ஒவ்வொருவரின் உடல் தொகுப்பிலும் நுழைந்திருக்கும்) ஐம்பூதங்களைப் போலத் தெரிந்தனர்.(37)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, மனோவேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்ட மற்றொரு வெண்தேரைச் செலுத்தி வந்த யுயுத்சு, பாண்டுவின் மூத்த மகனுக்குப் {யுதிஷ்டிரனுக்குப்} பின்னால் தொடர்ந்து சென்றான்.(38) சாத்யகியுடன் கூடிய கிருஷ்ணன், சைவியம், சுக்ரீவம் ஆகியவை பூட்டப்பட்ட தன்னுடைய பிரகாசமான தேரில் குருக்களைப் பின்தொடர்ந்து சென்றான்.(39) ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிருதையுடைய {குந்தியுடைய} மகனின் பெரியப்பன் {திருதராஷ்டிரன்}, மனிதர்களின் தோள்களில் சுமக்கப்படும் பல்லக்கில் வரிசையின் தலைமையிலும், காந்தாரியின் துணையுடனும் சென்று கொண்டிருந்தான்.(40) குரு அரச குடும்பத்தின் பிற பெண்கள், குந்தி, கிருஷ்ணை {திரௌபதி} ஆகியோர் அனைவரும், விதுரனின் தலைமையிலான சிறந்த வாகனங்களில் சென்றனர்.(41) பெரும் எண்ணிக்கையிலான தேர்களும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், காலாட்படை வீரர்களும், குதிரைகளும் பின்னால் தொடர்ந்து சென்றன.(42) பாணர்களும், வந்திகளும் இனிய குரலில் மன்னனின் புகழைப் பாடிக் கொண்டிருக்க, அவன் {மன்னன்}, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரை {ஹஸ்தினாபுரத்தை} நோக்கிச் சென்றான்.(43)

ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {ஜனமேஜயா}, பூமியில் இதுவரை எப்போதும் காணப்படாததைப் போல மன்னன் யுதிஷ்டிரனின் பயணம் மிக அழகானதாக இருந்தது. உடல்நலமிக்க, உற்சாகமான மனிதர்கள் கூட்டம், எண்ணற்ற குரல்களில் பாடிக் கொண்டிருப்பது அங்கே கேட்கப்பட்டது.(44) பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} முன்னேறிச் செல்கையில், நகரமும், அதன் தெருக்களும், (மன்னனைக் கௌரவிப்பதற்காக வெளியே வந்திருந்த) மகிழ்ச்சியான குடிமக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(45) மன்னன் கடந்து சென்ற இடங்கள் வெண்ணிறத்திலான அழகிய மலர்த்தோரணங்களாலும், எண்ணற்ற கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நகரத்தின் வீதிகள் நறுமணப் பொருட்களால் மணமூட்டப்பட்டிருந்தன.(46) அரண்மனையைச் சுற்றிலும் நறுமணப்பொடிகளும், மலர்களும், நறுமணம் வீசும் செடிகளும் நிறைந்திருந்தன; மலர்மாலைகளும், தோரணங்களும் தொங்கிக் கொண்டிருந்தன.(47) ஒவ்வொரு வீட்டின் வாசலிலும், விளிம்பு வரை நீர் நிறைந்த புதிய உலோகக் கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட இடங்களில் நல்ல நிறம் கொண்ட அழகிய கன்னிகையர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.(48) நண்பர்களுடன் கூடியவனும், இனிய சொற்களால் புகழப்படுபவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்த நகரவாயிலுக்குள் நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(49)

சார்வாகன்! – சாந்திபர்வம் பகுதி – 38-திரௌபதியைப் புகழ்ந்த மகளிர்; அரண்மனையை அடைந்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனைப் புகழ்ந்த குடிமக்கள்; ஆசி வழங்கிய பிராமணர்கள்; பிராமணனாக வேடம் பூண்டு வந்த ராட்சசன்; யுதிஷ்டிரனை நிந்தித்த சார்வாகன்; அவனைப் பணிந்து வணங்கிய யுதிஷ்டிரன்; சார்வாகனின் பேச்சை மறுத்து, தங்கள் குரலொலியாலேயே சார்வாகனைக் கொன்ற பிராமணர்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பார்த்தர்கள் நகருக்குள் நுழைந்த நேரத்தில், அக்காட்சியைக் காண ஆயிரக்கணக்கான குடிமக்கள் வெளியே வந்தனர்.(1) ஒவ்வொரு கனமும் பெருகும் கூட்டத்தைக் கொண்டவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையான சதுக்கங்களும், வீதிகளும், நிலவின் எழுச்சியில் பெருகும் பெருங்கடலைப் போல அழகாகத் தெரிந்தன.(2) ஓ! பாரதா {ஜனமேஜயா}, வீதியோரங்களில் நின்றவையும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையும், மகளிர் நிறைந்தவையுமான பெரும் மாளிகைகள், இந்தப் பெரும் கூட்டத்தால் நடுங்குவதாகத் தெரிந்தன.(3) அவர்கள் {அந்தப் பெண்கள்} பணிவான அடக்கமான வார்த்தைகளில் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுல, சகாதேவன்} ஆகியோரைப் புகழ்ந்தனர்.(4)

அவர்கள், “ஓ! அருளப்பட்ட பாஞ்சால இளவரசியே {திரௌபதியே}, (ஏழு) முனிவர்களின் அருகில் இருக்கும் கௌதமியைப் போலவே இந்த மனிதர்களில் முதன்மையானோருக்குப் பணிவிடை செய்யும் நீ அனைத்துப் புகழுக்கும் தகுந்தவளாவாய்.(5) ஓ! மங்கையே {திரௌபதியே}, உன் செயல்களும், நோன்புகளும் உனக்கு அவற்றின் கனிகளைப் பெற்றுத் தந்தன” என்றனர். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வகையிலேயே இளவரசியான கிருஷ்ணையை {திரௌபதியை} அந்தப் பெண்கள் புகழ்ந்தனர்.(6)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தப் புகழ்ச்சிகள், ஒருவருடனொருவர் பேசும் அவர்களது பேச்சுகள், (மனிதர்களால் உண்டான) மகிழ்ச்சிக் கூச்சல் ஆகியவற்றின் விளைவால் அந்நகரமே பேராரவாரத்தால் நிறைந்தது.(7) தனக்குத் தகுந்த நடத்தையுடன் வீதிகளின் ஊடாகக் கடந்து சென்ற யுதிஷ்டிரன், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட (குருக்களின்) அழகிய அரண்மனைக்குள் நுழைந்தான்.(8) நகரத்தையும், மாகாணங்களையும் சார்ந்த மக்கள் அந்த அரண்மனையை அணுகி, காதுகளுக்கு ஏற்புடுயை பேச்சுகளைப் பேசினர்.(9)

அவர்கள், “ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, நற்பேற்றாலேயே நீ உன் எதிரிகளை வென்றாய். நற்பேற்றாலே அறம் மற்றும் ஆற்றலின் மூலம் உன் நாட்டை நீ மீட்டாய்.(10) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, (சொர்க்கவாசிகளைக்) காக்கும் இந்திரனைப் போல உன் குடிமக்களை அறம்சார்ந்து பாதுகாத்து, நூறு ஆண்டுகளுக்கு எங்கள் ஏகாதிபதியாக இருப்பாயாக” என்றனர்.(11)

அரண்மனை வாயிலில் இவ்வாறு அருள்நிறைந்த பேச்சுகளால் புகழப்பட்டும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பிராமணர்களின் ஆசிகளை ஏற்றுக் கொண்டும்,(12) வெற்றியாலும், தன் மக்களின் ஆசிகளாலும் அருளப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இந்திரனின் மாளிகைக்கு ஒப்பான அந்த அரண்மனைக்குள் நுழைந்து, தன் தேரில் இருந்து இறங்கினான்.(13) அருளப்பட்டவனான யுதிஷ்டிரன், அறைகளுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்த தேவர்களை அணுகி, ரத்தினங்களாலும், நறுமணப்பொருட்களாலும், மலர் மாலைகளாலும் அவர்களை வழிபட்டான்.(14) பெரும் புகழையும், செழிப்பையும் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் வெளியே வந்து, (அவனுக்கு ஆசி கூறுவதற்காகத்) தங்கள் கரங்களில் மங்கலப் பொருட்களுடன் காத்திருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களைக் கண்டான்.(15) ஆசி கூற விரும்பி அவ்வாறு சூழ்ந்திருந்த பிராமணர்களுடன் பார்ப்பதற்கு அந்த மன்னவன், நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள களங்கமில்லா நிலவைப் போல அழகாகத் தெரிந்தன்.(16)

தனது புரோகிதர் தௌமியர், தன் பெரியப்பன் {திருதராஷ்டிரன்} ஆகியோரின் துணையுடன் இருந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணர்களுக்கு இனிப்பு, ரத்தினங்கள், அபரிமிதமான தங்கம், பசுக்கள், ஆடைகள் மற்றும் அவர்களில் ஒவ்வொருவரும் விரும்பிய பல்வேறு பொருட்கள் ஆகியவற்றை முறையான சடங்குகளுடன் (கொடையாகக்) கொடுத்தான்.(17,18) அப்போது, ஓ! பாரதா {ஜனமேஜயா}, மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும்படி, “இஃது அருளப்பட்ட தினம்” என்ற உரத்த கூச்சல் எழுந்தது. காதுக்கு இனிமையான அந்தப் புனிதமான ஒலி (பாண்டவர்களின்) நண்பர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் மிகுந்த மனநிறைவைத் தந்தது.(19) அன்னங்களின் கூட்டம் வெளியிடும் ஒலியைப் போலக் கல்விமான்களான அந்தப் பிராமணர்கள் வெளியிட்ட ஒலியானது உரக்கவும், தெளிவாகவும் இருந்ததை மன்னன் {யுதிஷ்டிரன்} கேட்டான். வேதங்களை நன்கறிந்த மனிதர்களின் முக்கியத்துவம் வாய்ந்தவையும் இனிமையானவையுமான அந்த வார்த்தைகளை மன்னன் கேட்டான்.(20) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, வெற்றியின் குறியீடாகப் பேரிகை முழக்கங்களும், சங்குகளின் இனிய ஒலியும் எழுந்தன.(21)

சிறிது நேரம் கழித்துப் பிராமணர்கள் அமைதியடைந்தபோது, சார்வாகன்[1] என்ற பெயருடைய ராட்சசன், பிராமண வேடத்தில் வந்து மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசினான்.(22) துரியோதனனின் நண்பனான அவன், துறவியின் ஆடையில் அங்கே நின்று கொண்டிருந்தான். ஜபமாலைகளுடனும்[2], தலையில் குடுமியுடனும், கையில் திரி தண்டத்துடனும் கூடிய அவன், தவங்களுக்கும், நோன்புகளுக்கும் தங்களை அர்ப்பணித்தவர்களும், (மன்னனுக்கு) ஆசி கூற வந்தவர்களுமான அந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு மத்தியில் அச்சமில்லாமல் செருக்குடன் நின்று கொண்டிருந்தான்.(23,24) உயர் ஆன்ம பாண்டவர்களுக்குத் தீமையை விரும்பிய அந்தப் பொல்லாத்தீயவன், அந்தப் பிராமணர்களுடன் ஆலோசிக்காமலேயே மன்னனிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்.(25)சார்வாகன் {யுதிஷ்டிரனிடம்}, “இந்தப் பிராமணர்கள் அனைவரும் என்னைத் தங்கள் பேச்சாளனாக நியமித்து, ʻதீய மன்னனான உனக்கு ஐயோ. நீ உறவினர்களைக் கொன்றவனாவாய்.(26) ஓ! குந்தியின் மகனே, உன் குலத்தையே இவ்வாறு அழித்துவிட்டு நீ என்ன ஈட்டிவிடப் போகிறாய்? பெரியோரையும், ஆசானையும் கொன்ற நீ உன் உயிரை விடுவதே முறையாகும்’ என்று சொல்கின்றனர்” என்றான்.(27) அந்தத் தீய ராட்சசனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பிராமணர்கள் மிகவும் கலக்கமடைந்தனர். அந்தப் பேச்சால் குட்டுபட்ட அவர்கள் உரத்த ஆரவாரம் செய்தனர்.(28) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனுடன் கூடிய அவர்கள், கவலையாலும், வெட்கத்தாலும் பேச்சற்றவர்களானார்கள்.(29)

யுதிஷ்டிரன் {ராட்சசன் சார்வாகனிடம்}, “நான் உம்மை வணங்கி, பணிந்து, வேண்டி கேட்டுக் கொள்கிறேன். என்னிடம் நிறைவு கொள்வீராக. என்னை நிந்தனை செய்வது உமக்குத் தகாது. நான் விரைவில் என் உயிரை விடுவேன்” என்றான்”[3].(30)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, அப்போது அந்தப் பிராமணர்கள் அனைவரும், “இவை எங்களுடைய வார்த்தைகளல்ல. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, செழிப்பு உனதாகட்டும்” என்றனர்.(31) வேதங்களை அறிந்தோரும், தவங்களால் அறிவு தெளிவடைந்தோருமான அந்த உயர் ஆன்ம மனிதர்கள், இவ்வாறு பேசியவனின் {ராட்சசன் சார்வாகனனின்} வேடத்தைத் தங்கள் ஆன்மப் பார்வையின் மூலம் ஊடுருவினர்.(32) பிறகு அவர்கள், “இவன் துரியோதனனின் நண்பனான ராட்சசன் சார்வாகனாவான்[4]. அறத்துறவியின் ஆடையை அணிந்து கொண்டு, தன் நண்பன் துரியோதனனின் நன்மைக்காக இவ்வாறு முயற்சிக்கிறான். ஓ! அற ஆன்மாவே, நாங்கள் இவ்வகையில் ஏதும் பேசவில்லை. இந்த உன் கவலை அகலட்டும். உன் தம்பிமாருடன் கூடிய நீ செழிப்பை அடைவாயாக” என்றனர்”[5].(34)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அப்போது சினத்தால் உணர்விழந்தவர்களான அந்தப் பிராமணர்கள் “ஹும்” என்ற ஒலியை வெளியிட்டனர். பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைந்தவர்களான அவர்கள், பாவம் நிறைந்த அந்த ராட்சசனை நிந்தித்து, (அந்தத் தங்கள் ஒலியாலேயே) அவனை அங்கேயே கொன்றனர்[6].(35) பிரம்மத்தை ஓதுபவர்களான அவர்களின் சக்தியால் எரிக்கப்பட்ட சார்வாகன், குருத்துகளுடன் {தளிர்களுடன்} கூடிய மரமானது இந்திரனின் வஜ்ரத்தால் {இடியால்} வெடிப்பதைப் போல உயிரை இழந்து கீழே விழுந்தான்.(36) அந்தப் பிராமணர்கள், முறையாக வழிபடப்பட்டு, தங்கள் ஆசிகளால் மன்னனை மகிழ்வித்த பிறகு அங்கிருந்து சென்றனர். தன் நண்பர்களுடன் கூடிய பாண்டுவின் அரசமகனும் {யுதிஷ்டிரனும்}, பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(37

சார்வாகன் வரலாறு! – சாந்திபர்வம் பகுதி – 39- சார்வாகனுடைய வரலாற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது உலகளாவிய அறிவு படைத்தவனான தேவகியின் மகன் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் தம்பிகளுடன் அங்கே நின்று கொண்டிருந்த மன்னன் யுதிஷ்டிரனிடம்,(1) “ஓ! ஐயா, இவ்வுலகில் பிராமணர்கள் எப்போதும் என் வழிபாட்டுக்குரியவராவர். பேச்சில் நஞ்சு கொண்டவர்களும், நிறைவு செய்ய எளிதானவர்களுமான அவர்களே {பிராமணர்களே} இந்தப் பூமியில் தேவர்களாவர்.(2) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, முன்பு கிருத காலத்தில், சார்வாகன் என்ற பெயருடைய ராட்சசன் ஒருவன், பதரியில் பல வருடங்கள் கடுந்தவமிருந்தான்.(3) தம்மிடம் வரங்களை வேண்டுமாறு பிரம்மன் மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தான். இறுதியாக அந்த ராட்சசன், அண்டத்தின் அனைத்துயிரிடம் கொண்ட அச்சத்திலிருந்தும் எதிர்ப்புணர்வு கொள்ளும் {எவ்வுயிரிடமும் அச்சமடையாமல் இருக்கும்} வரத்தை வேண்டினான்.(4) அண்டத்தின் தலைவன் {பிரம்மன்}, பிராமணர்களுக்குக் குற்றமிழைக்காமல் கவனத்துடன் இருக்கும்வரை, அனைத்துயிரிடமும் அச்சமடையாத எதிர்ப்புணர்வைக் கொள்வான் என்ற உயர்ந்த வரத்தை அவனுக்கு அளித்தான்.(5)

பாவம் நிறைந்தவனும், வலிமைமிக்கவனும், கொடுஞ்செயல்களைப் புரிபவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்த ராட்சசன் {சார்வாகன்}, வரத்தை அடைந்ததும் தேவர்களுக்குத் துன்பத்தை அளிக்கத் தொடங்கினான்.(6) அந்த ராட்சசனின் வலிமையால் துன்புற்ற தேவர்கள் ஒன்றாகக் கூடி தங்கள் எதிரியின் அழிவைத் தீர்மானிக்கப் பிரம்மனை அணுகினர்.(7) ஓ! பாரதரே, அழிவில்லாதவனும், மாற்றமற்றவனுமான அந்தத்தேவன் {பிரம்மன்} அவர்களிடம், “இந்த ராட்சசன் விரைவில் இறப்பதற்கான வழிமுறைகளை நான் ஏற்கனவே ஏற்பாடு செய்துவிட்டேன்.(8) துரியோதனன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருப்பான். மனிதர்களுக்கு மத்தியில் அவன் {துரியோதனன்} இந்தப் பொல்லாதவனின் {சார்வாகனனின்} நண்பனாக இருப்பான். அவன் {துரியோதனன்} மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த ராட்சசன் பிராமணர்களை அவமதிப்பான்.(9) அவர்களுக்கு இவன் இழைக்கும் தீமையால் குட்டப்படுபவர்களும், பேச்சையே தங்கள் வலிமையாகக் கொண்டவர்களுமான அந்தப் பிராமணர்கள், கோபத்தால் இவனை {சார்வாகனை} நிந்திப்பார்கள், அதன் பேரில் அவன் அழிவைச் சந்திப்பான்” என்றான்.(10)

ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {ஜனமேஜயா}, அந்த ராட்சசன் சார்வாகனே இப்போது பிராமணர்களின் சாபத்தால் உயிரை இழந்து கீழே கிடக்கிறான். ஓ! பாரதக் குலத்தின் காளையே துயருக்கு ஆளாகாதீர்.(11) ஓ! மன்னா, உமது உறவினர்கள் அனைவரும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும்போதே அழிவடைந்தனர். க்ஷத்திரியர்களில் காளைகளும், உயர் ஆன்ம வீரர்களுமான அவர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர். இப்போது நீர் உமது கடமைகளை ஆற்றுவீராக. ஓ! மங்காப் புகழ் கொண்டவரே, துயரம் உமதாகாதிருக்கட்டும். உமது எதிரிகளைக் கொன்று, உமது குடிமக்களைக் காத்து, பிராமணர்களை வழிபடுவீராக” என்றான் {கிருஷ்ணன்}”.(13)

யுதிஷ்டிரனின் முடிசூட்டுவிழா! – சாந்திபர்வம் பகுதி – 40-கிருஷ்ணனின் ஆணைப்படி வேள்விப்பீடத்தை அமைத்த தௌமியர்; சங்கிலிருந்த மங்கல நீரை யுதிஷ்டிரனின் தலையில் ஊற்றிய கிருஷ்ணன்; குடிமக்கள் கொடுத்த பரிசை ஏற்றுக் கொண்டு, பதிலுக்கு அவர்களைக் கௌரவித்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை வாழ்த்திய குடிமக்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “துயரத்திலிருந்தும், இதயத்தின் நோயிலிருந்தும் {துன்பத்திலிருந்தும்} விடுபட்ட குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, தங்கத்தாலான ஒரு சிறப்பான இருக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்தான்.(1) எதிரிகளைக் கொல்பவர்களான சாத்யகி மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும், அழகானதும், சுடர்மிக்கதும், தங்கத்தாலானதுமான மற்றொரு இருக்கையில், அவனது {யுதிஷ்டிரனின்} முகம் நோக்கி அமர்ந்தனர்.(2) பீமனும், அர்ஜுனனும், மன்னனைத் தங்களுக்கு மத்தியில் அமர்த்திக் கொண்டு, அவனுக்கு இருபுறத்திலும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய இருக்கைகள் இரண்டில் அமர்ந்தனர்.(3) தந்தத்தாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வெண்ணிறத்திலானதுமான அரசக் கட்டிலில் சகாதேவன் மற்றும் நகுலனுடன் பிருதையும் {குந்தியும்} சேர்ந்து அமர்ந்திருந்தாள்.(4) சுதர்மர்[1], விதுரன், தௌமியர், குருமன்னன் திருதராஷ்டிரன் ஆகியோர் ஒவ்வொருவரும் நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட தனித்தனி இருக்கைகளில் தனியாக அமர்ந்தனர்.(5) யுயுத்சு, சஞ்சயன், பெரும்புகழ் கொண்ட காந்தாரி ஆகியோர் அனைவரும் மன்னன் திருதராஷ்டிரன் எங்கு அமர்ந்திருந்தானோ அங்கேயே அமர்ந்திருந்தனர்.(6)அங்கே அமர்ந்திருந்த அற ஆன்மா கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அழகிய வெண்மலர்கள், ஸ்வஸ்தீகங்கள் {ஸ்வஸ்திக் சின்னங்கள்}, பல்வேறு பொருட்களால் நிறைந்திருந்த பாத்திரங்கள், பூமி, (தன் முன்னே வைக்கப்பட்டிருந்த) தங்கம், வெள்ளி மற்றும் ரத்தினங்கள் ஆகியவற்றைத் தீண்டினான்.(7) பிறகு புரோகிதரின் தலைமையிலான குடிமக்கள் அனைவரும், பல்வேறு வகையான மங்கலப் பொருட்களுடன் மன்னனைக் காண அங்கே வந்தனர்.(8) அப்போது பூமி {மண்}, தங்கம், பல வகைகளிலான ரத்தினங்கள் ஆகியவையும், மூடிசூட்டும் சடங்குக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அங்கே அபரிமிதமான அளவில் கொண்டு வரப்பட்டன.(9) அங்கே விளிம்பு வரை (நீரால்) நிறைந்திருந்த தங்கக் கலசங்கள், தாமிரம், வெள்ளி மற்றும் மண்ணால் செய்யப்பட்ட கலசங்கள், மலர்கள், பொரி, குசப் புல் {தர்ப்பை}, பசும்பால்,(10) (வேள்விக்கான) விறகுகளான சமி {வன்னி}, பிப்பலம் {அரசு}, பலாசு மரங்கள், தேன், தெளிந்த நெய், உடும்பரத்தால் {அத்தி மரத்தால்} செய்யப்பட்ட வேள்விக் கரண்டிகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சங்குகள் ஆகியன இருந்தன.(11)அப்போது புரோகிதர் தௌமியர், கிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில், கிழக்கு மற்றும் வடக்கை நோக்கி படிப்படியாக உயரும் பீடத்தை விதிப்படி கட்டமைத்தார்[2].(12) புலித்தோலால் மறைக்கப்பட்டதும், சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டதும் சர்வதோபத்திரம் என்றழைக்கப்படுவதுமான ஓர் அழகிய இருக்கையில் உயர் ஆன்ம யுதிஷ்டிரனையும், துருபதன் மகளான கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} உறுதியான பாதங்களுடன் அமரச் செய்து, உரிய மந்திரங்களுடன் தெளிந்த நெய்யை (வேள்வித்தீயில்) ஆகுதியாக ஊற்றத் தொடங்கினார்.(13,14) அப்போது தன் இருக்கையில் இருந்து எழுந்த தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, புனிதமாக்கப்பட்ட சங்கை எடுத்து, அதில் இருந்த நீரை, பூமியின் தலைவனும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரனின் தலையில் ஊற்றினான். கிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில் அரச முனியான திருதராஷ்டிரனும், குடிமக்கள் அனைவரும் அதையே செய்தனர்.(15) சங்கிலிருந்த புனிதமாக்கப்பட்ட நீரில் இவ்வாறு தன் தம்பிகளுடன் குளித்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மிகவும் அழகு நிறைந்தவனாகத் தெரிந்தான்.(16)அப்போது, பணவங்களும், ஆனகங்களும், பேரிகைகளும் முழக்கப்பட்டன. நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், குடிமக்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகளை முறையாக ஏற்றுக் கொண்டான். தன் வேள்விகள் அனைத்திலும் எப்போதும் அபரிமிதமாகக் கொடையளிக்கும் மன்னன், தன் குடிமக்களைப் பதிலுக்குக் கௌரவித்தான்.(17) தனக்கு (சிறப்பான) ஆசிகளைக் கூறிய பிராமணர்களுக்கு ஓராயிரம் நிஷ்கங்களைக் கொடுத்தான். அவர்கள் அனைவரும் வேதங்களைக் கற்றறிந்தவர்களாகவும், ஞானமும், நன்னடத்தையும் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(18) ஓ! மன்னா, (கொடைகளால்) நிறைவடைந்த பிராமணர்கள், செழிப்பையும், வெற்றியையும் அடையுமாறு அவனை வாழ்த்தி, அன்னங்களைப் போன்ற இனிமையான குரலில் அவனைப் புகழ்ந்தனர்.(19)

{அவர்கள்}, “ஓ! வலிமையான கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, ஓ! பாண்டுவின் மகனே, நற்பேற்றாலே வெற்றி உனதானது, ஓ! பெரும் காந்தி கொண்டவனே, நற்பேற்றாலேயே, ஆற்றலின் மூலம் உன் நிலையை மீண்டும் அடைந்தாய்.(20) நற்பேற்றாலேயே, காண்டீவதாரியும் {அர்ஜுனனும்}, பீமசேனனும், நீயும், மாத்ரியின் மகன்கள் இருவரும் உங்கள் எதிரிகள் அனைவரையும் கொன்று, வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் போரில் இருந்து உயிருடன் தப்பி, நலமாக இருக்கிறீர்கள். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அடுத்து செய்யப்பட வேண்டிய செயல்களைத் தாமதமில்லாமல் கவனிப்பாயாக” என்றனர்.(21,22) ஓ! பாரதா {ஜனமேஜயா}, தன் நண்பர்களுடன் கூடியவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் பக்திமான்களால் இவ்வாறு துதிக்கப்பட்டு, அந்தப் பெரிய நாட்டின் அரியணையில் நிறுவப்பட்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(23)

அமைச்சரவை அமைப்பு! – சாந்திபர்வம் பகுதி – 41-குடிமக்களுக்கு விடைகொடுத்தனுப்பிய யுதிஷ்டிரன்; பீமன், விதுரன், சஞ்சயன், நகுலன், அர்ஜுனன், தௌமியர், சகாதேவன், யுயுத்சு ஆகியோரை நாட்டின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமானதும், தன் குடிமக்களால் சொல்லப்பட்டதுமான இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், பின்வரும் வார்த்தைகளால் அவர்களுக்குப் பதிலளித்தான்.

{யுதிஷ்டிரன்}, “பாண்டு மகன்களின் தகுதிகள் உண்மையோ, பொய்யோ, இவ்வாறு திரண்டிருக்கும் முதன்மையான பிராமணர்களால் இவ்வாறு ஆறுதல் சொல்லப்படுவதற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.(2) இத்தகு பண்புகளைக் கொண்டோராக எங்களை நீங்கள் வெளிப்படையாகச் சொல்வதால் உங்கள் கருணைக்கு நாங்கள் பாத்திரமாக இருக்கிறோம் என்பதில் ஐயமில்லை.(3) எனினும், மன்னர் திருதராஷ்டிரர் எங்களுக்குத் தந்தையும், தேவரும் ஆவார். எனக்கு ஏற்புடையதைச் செய்ய நீங்கள் விரும்பினால், நீங்கள் எப்போதும் அவருக்கு ஏற்புடையதைச் செய்து, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.(4) என் உறவினர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, நான் அவருக்காக மட்டுமே உயிருடன் வாழ்கிறேன். அனைத்து வகையிலும் விழிப்புணர்வுடன் எப்போதும் அவருக்குத் தொண்டாற்றுவதே என் பெருங்கடமை.(5)

நீங்களும் என் நண்பர்களும் நான் உங்கள் கருணைக்குப் பாத்திரமானவன் என்று கருதினால், திருதராஷ்டிரரிடம் நீங்கள் முன்பு நடந்து கொண்ட அதே நடத்தையுடன் நடந்துகொள்ளுமாறு உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்வேன்.(6) அவர் இந்த உலகத்திற்கும், உங்களுக்கும் எனக்கும் தலைவராவார். பாண்டவர்களுடன் கூடிய மொத்த உலகமும் அவருக்குச் சொந்தமானதாகும்.(7) இந்த என் வார்த்தைகளை நீங்கள் எப்போதும் மனத்தில் தாங்க வேண்டும்” என்று சொன்னான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அவர்களை விரும்பிய இடத்திற்குச் செல்லுமாறு விடைகொடுத்தனுப்பினான்.(8)

குருக்களைத் திளைக்கச் செய்பவனான அவன் {யுதிஷ்டிரன்}, குடிமக்கள் மற்றும் மாகாணங்களின் மக்களுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, தன் தம்பியான பீமசேனனை யுவராஜாவாக {இளவரசனாக} நியமித்தான்.(9) தன் கலந்துரையாடலில் துணை புரியவும், மாநிலத்தின் ஆறு வகைத் தேவைகளைப் பார்த்துக் கொள்ளவும் கூடிய பொறுப்பில்[1] பெரும் நுண்ணறிவு கொண்ட விதுரனை நியமித்தான்.(10) மேலும் அவன், வயதில் முதிர்ந்தவனும், அனைத்து சாதனைகளையும் கொண்டவனுமான சஞ்சயனை, நிதித்துறையின் கண்காணிப்பாளராகவும், பொது இயக்குனராகவும் நியமித்தான்.(11) மேலும் மன்னன், படைகளின் பதிவேடுகளைப் பராமரிக்கவும், அவர்களுக்கு உணவு மற்றும் கூலி வழங்கவும், படையின் பிற காரியங்களைக் கண்காணிக்கவும் நியமித்தான்.(12) மன்னன் யுதிஷ்டிரன், பகைவரின் படையைத் தடுக்கவும், தீயவர்களைத் தண்டிக்கவும் பல்குனனை {அர்ஜுனனை} நியமித்தான்.(13) மேலும் அவன், பிராமணர்களைத் தினமும் கவனித்துக் கொள்ளவும், தேவர்களுக்கான சடங்குகள் அனைத்தையும் செய்யவும், அறச் செயல்கள் அனைத்தையும் கவனித்துக் கொள்ளவும் புரோகிதர்களில் முதன்மையான தௌமியரை நியமித்தான்.(14) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மேலும் அம்மன்னன், தான் எப்போதும் சகாதேவனால் காக்கப்பட வேண்டும் என்று எண்ணியதால், அவனை எப்போதும் தன்னருகிலேயே இருக்குமாறு நியமித்தான்.(15) மேலும் அம்மன்னன், வேறு பிற காரியங்களில் அவரவர்க்குத் தகுந்தது எனத் தான் கருதியவற்றில் அவரவரை நியமித்தான்.(16)பகைவீரர்களைக் கொல்பவனும், எப்போதும் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவனும், அற ஆன்மா கொண்டவனுமான மன்னன் யுதிஷ்டிரன், விதுரன், உயர் ஆன்ம யுயுத்சு ஆகியோரை அழைத்து,(17) “என் அரச தந்தையான திருதராஷ்டிரரின் விருப்பங்கள் அனைத்தையும், எப்போதும் கவனமாகவும், விரைவாகவும் நீங்கள் செய்யுங்கள்.(18) குடிமக்கள் மற்றும் மாகாணங்களில் வசிப்பரைப் பொறுத்தவரை என்ன செய்யப்பட வேண்டுமோ அவை அனைத்தும், மன்னரின் {திருதராஷ்டிரரின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு உங்களின் துறைகளின் மூலம் உங்களால் நிறைவேற்றப்பட வேண்டும்[2]” என்றான் {யுதிஷ்டிரன்}”.(19)

சிரார்த்தச் சடங்குகள்! – சாந்திபர்வம் பகுதி – 42-போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களது ஈமக்கடன்களைச் செய்யச் செய்த யுதிஷ்டிரன்; போரின் காரணமாக விதவைகளான பெண்டிருக்குக் கருணை காட்டியது..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இதன்பிறகு, மகத்தான ஆன்மா கொண்டவனான மன்னன் யுதிஷ்டிரன், போரில் கொல்லப்பட்ட உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் சிரார்த்தச் சடங்குகளைச் செய்ய {ஈமக்கடன்களைச் செலுத்தச்} செய்தான்.(1) பெரும்புகழைக் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனும், அடுத்த உலகில் இருக்கும் தன் மகன்களின் நன்மைக்காகச் சிறந்த உணவு, பசுக்கள், அதிகச் செல்வம், விலைமதிப்புமிக்க அழகிய ரத்தினங்கள் பல ஆகியவற்றை (பிராமணர்களுக்குக்) கொடையாக அளித்தான்.(2) திரௌபதியின் துணையுடன் கூடிய யுதிஷ்டிரன், துரோணர், உயர் ஆன்ம கர்ணன், திருஷ்டத்யும்னன், அபிமன்யு, ஹிடிம்பையின் மகனான ராட்சசன் கடோத்கசன், விராடன், தனக்கு மாறாப்பற்றுடன் தொண்டு புரிந்த நலன் விரும்பிகள் பிறர், துருபதன், திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோருக்காக அதிகச் செல்வத்தைக் கொடையளித்தான்.(3,4) இவர்கள் ஒவ்வொருவருக்காகவும் மன்னன், செல்வத்தையும், ரத்தினங்களையும், பசுக்களையும், துணிமணிகளையும் ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்குக் கொடையளித்தான்.(5) எந்த உறவினரையும், நண்பரையும் விட்டுவிடாமல் போரில் வீழ்ந்த மன்னர்கள் ஒவ்வொருவரும் அடுத்த உலகில் நன்மை பெறுவதற்காகச் சிரார்த்தச் சடங்கைச் செய்தான்.(6)

மேலும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, தன் நண்பர்கள் அனைவருடைய ஆன்மாக்களின் நன்மைக்காக, அவர்களுடைய பெயரிலேயே உணவு விநியோகத்திற்கான வீடுகளையும், நீர் விநியோகத்திற்கான இடங்களையும் நிர்மாணித்து, {அவர்களது பெயரிலேயே} குளங்களையும் வெட்டினான்.(7) இவ்வாறு அவர்களுக்குத் தான் பட்ட கடனை செலுத்தி, உலகத்தின் நிந்தனையைத் தவிர்த்த மன்னன்[1], மகிழ்ச்சியடைந்தவனாகி, தன் குடிமக்களை அறம்சார்ந்து காப்பதைத் தொடர்ந்தான்.(8) அவன் முன்பு போலவே, திருதராஷ்டிரன், காந்தாரி, விதுரன், கௌரவப் பெரியோர்கள், மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் உரிய மதிப்பை வழங்கினான்.(9) அன்பு நிறைந்தவனான அந்தக் குரு மன்னன் {யுதிஷ்டிரன்}, போரின் விளைவால் தங்கள் வீரக் கணவர்களையும், மகன்களையும் இழந்த பெண்கள் அனைவரையும் பாதுகாத்து அவர்களுக்கு மதிப்பளித்தான்.(10) பெருங்கருணை கொண்ட அந்தப் பலமிக்க மன்னன், யாருமற்றவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கு உணவு, உடை மற்றும் உறைவிடத்தைக் கொடுத்து உதவி செய்தான்.(11) எதிரிகளிடம் இருந்து விடுபட்டு, மொத்த பூமியையும் வென்ற மன்னன் யுதிஷ்டிரன், பெரும் மகிழ்ச்சியில் இன்புறத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(12)

சதநாமாவளி! – சாந்திபர்வம் பகுதி – 43-நூறு பெயர்களால் கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்; மனம் நிறைந்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் ஞானியும், தூய்மையானவனுமான மன்னன் யுதிஷ்டிரன், நாட்டை மீண்டும் அடைந்து, முடிசூட்டுவிழாவும் முடிந்த பிறகு, தாமரைக் கண்ணனும், தசார்ஹ குலத்தோனுமான கிருஷ்ணனிடம் கரங்களைக் கூப்பி,(1) “ஓ! கிருஷ்ணா, ஓ! யதுக்களில் புலியே, உன் அருளாலும், உன் கொள்கை, வலிமை, நுண்ணறிவு, ஆற்றல் ஆகியவற்றாலுமே நான் என் மூதாதையரின் நாட்டை மீண்டும் அடைந்தேன். ஓ! தாமரைக் கண்ணனே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே நான் உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.(2,3) நீயே ஒரே தலைவன்[1] என்று அழைக்கப்படுகிறாய். மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} உன்னை எண்ணற்ற பெயர்களால் அழைக்கின்றனர்.(4)அண்டத்தின் படைப்பாளனே, உனக்கு வணக்கம். நீயே அண்டத்தின் ஆன்மாவாக இருக்கிறாய், அண்டமானது உன்னிலிருந்தே எழுந்திருக்கிறது. விஷ்ணு நீயே, ஜிஷ்ணு நீயே, ஹரி நீயே, கிருஷ்ணன் நீயே, வைகுண்டன் நீயே, உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே {புருஷோத்தமன் நீயே}.(5) புராணங்களில் சொல்லப்படுவதைப் போல அதிதியின் கருவறையில் ஏழு முறை பிறப்பை எடுத்தவன் நீயே. பிருஸ்னியின் கருவறையில் பிறப்பெடுத்தவன் நீயே[2]. கல்விமான்களால் மூன்று யுகங்கள் {திரியுகன்} என்று சொல்லப்படுபவன் நீயே[3].(6) சாதனைகள் அனைத்தாலும் புனிதமானவன் {சுசிஸ்ரவஸ்} நீயே. எங்கள் புலன்களின் தலைவன் {ஹ்ருஷீகேசன்} நீயே. வேள்விகளில் வழிபடப்படும் பெருந்தலைவன் {க்ருதார்ச்சிஸ்} நீயே. பெரும் அன்னம் {ஹம்சன்} என்றழைக்கப்படுபவன் நீயே, முக்கண் சம்பு நீயே. விபு மற்றும் தாமோதரன் என்று அழைக்கப்பட்டாலும் ஒருவனாகவே இருப்பவன் நீயே.(7) பெரும்பன்றி {வராகன்} நீயே, நெருப்பு {அக்னி} நீயே, சூரியன் {பிருஹத்பானு} நீயே, கொடியில் காளைச் சின்னத்தைக் கொண்டவன் {ரிஷபன்} நீயே, கருடனையும் சின்னமாகக் கொண்டவன் {தார்க்ஷ்யலக்ஷணன்} நீயே. பகைவரின் படைகளைக் கலங்கடிப்பவன் {அநீகஸாஹன்} நீயே, அண்டத்தின் அனைத்து வடிவங்களிலும் படர்ந்தூடுருவியிருப்பவன் {புருஷன்} நீயே, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் {சிபிவிஷ்டன்} நீயே.(8) அனைத்துப் பொருட்களிலும் முதன்மையானவன் {உருக்ரமன்} நீயே, கடுமையானவன் {வரிஷ்டன்} நீயே, போரின் படைத்தலைவன் {உக்ரஸேநாநீ} நீயே, உண்மை {ஸத்யன்} நீயே, உணவை அளிப்பவன் {வாஜஸநி} நீயே, (தேவர்களின் படைத்தலைவனான) குஹன் நீயே, எதிரிகளின் ஒளியை மங்கச் செய்து அவர்களை வீணாகச் செய்யும் மங்காதவன் {அச்சுதன்} நீயே, தூய இரத்தம் கொண்ட பிராமணன் {ஸம்ஸ்கிருதன்} நீயே, கலப்பில் பிறந்தவன் {விக்ருதி} நீயே, பெரியவன் {வ்ருஷன்} நீயே.(9) உயர்வாக நடப்பவன் {கிருஷ்ணதர்மன்} நீயே, மலைகள் {ஆதி} நீயே, விருஷதர்ப்பன் என்றும், வ்ருஷாகபி என்றும் அழைக்கப்படுபவன் நீயே, பெருங்கடல் {ஸிந்து} நீயே, பண்புகளற்றவன் {விதூர்மி} நீயே, மூன்று கூன்களைக் கொண்டவன் {த்ரிககுப்} நீயே, மூன்று வசிப்பிடங்களைக் கொண்டவன் {த்ரிதாமா} நீயே, சொர்க்கத்தில் இருந்து இறங்கி பூமியில் மனித வடிவங்களை எடுப்பவன் {த்ரிவ்ருத்} நீயே.(10) பேரரசன் {ஸம்ராட்} நீயே, விராட் நீயே, ஸ்வராட் நீயே[4]. ஸ்வாராட் நீயே, தேவர்களின் தலைவன் நீயே, அண்டம் உதித்த காரணம் {பூதமயன்} நீயே, எல்லாம் வல்லவன் {பவன்} நீயே, எல்லாம் வல்லவன் {விபு} நீயே, அனைத்து வடிவிலும் இருப்பவன் {பூ} நீயே, வடிவமற்றவனும் {அதிபூவும்} நீயே, கிருஷ்ணன் நீயே, நெருப்பு {கிருஷ்ணவர்த்மா} நீயே.(11)படைப்பாளன் {ஸ்விஷ்டகிருத்} நீயே, தெய்வீக மருத்துவர்களின் தந்தை {பிஷஜாவர்த்தன்} நீயே, (தவசி) கபிலன் நீயே. உயரம் குறைந்தவன் {வாமனன்} நீயே[5].(12) வேள்வியின் வடிவம் {யக்ஞன்} நீயே, துருவன்[6] நீயே, கருடன் {பதங்கன்} நீயே, யக்ஜசேனன் {ஜயத்ஸேனன்} என்றழைக்கப்படுபவன் நீயே. சிகண்டி நீயே, நகுஷன் நீயே, பப்ரு நீயே, ஆகாயத்தில் விரிந்திருக்கும் புநர்வஸு நீயே,(13) பழுப்புநிறம் கொண்டவன் {ஸுபப்ரு} நீயே, உக்தம் என்ற பெயரில் அறியப்படும் வேள்வி {ருக்மயஜ்ஞன்} நீயே, ஸுஷேணன் நீயே, அனைத்துப் பக்கங்களிலும் ஒலியை எழுப்பும் பேரிகை {துந்துபி} நீயே. எடை குறைந்த தேர்ச்சக்கரத்தைக் கொண்டவன் {கபஸ்திநேமி} நீயே, செழிப்பின் தாமரை {ஸ்ரீ பத்மன் நீயே}, புஷ்கரன் என்றழைக்கப்படுபவன் நீயே, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவன் {சுஷ்மதாரணன்} நீயே.(14) செழிப்புமிக்கவன் {ருபு} நீயே, பலமிக்கவன் {விபு} நீயே, மிக நுட்பமானவன் {ஸர்வஸூக்ஷ்மன்} நீயே, வேதங்களை விளக்குபன் {தரித்ரீ} நீயே. பெரிய நீர் கொள்ளிடம் {அம்போநிதி} நீயே, பிரம்மன் நீயே, புனிதமான புகலிடம் {பவித்ரதாமன்} நீயே, அனைத்து வசிப்பிடங்களையும் அறிந்தவன் {தாமவித்து} நீயே, ஹிர்ணயகர்ப்பன் நீயே, ஸ்வதா நீயே, ஸ்வாஹா நீயே, கேசவனும் நீயே.(15) இவ்வுலகத்துடைய இருப்பின் {உற்பத்திக்குக்} காரணமும், இல்லாமையின் {அழிவின்} காரணமும் நீயே. முதலில் இந்த உலத்தைப் படைத்தவன் நீயே. ஓ! அண்டத்தைப் படைத்தவனே, இவ்வண்டம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஓ! சாரங்கம், சக்கரம் மற்றும் வாளைத் தரிப்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}[7].(16)சபைக்கு மத்தியில் வைத்து நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு துதிக்கப்பட்ட தாமரைக்கண்ணனான கிருஷ்ணன் நிறைவடைந்தான். பிறகு அந்த யாதவர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, ஏற்புடைய பேச்சுகள் பலவற்றால் பாண்டுவின் மூத்த மகனைத் திளைக்க வைக்கத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

அரண்மனைகள் ஒதுக்கீடு! – சாந்திபர்வம் பகுதி – 44-போரில் கொல்லப்பட்ட குரு இளவரசர்களின் அரண்மனைகளைத் தன் தம்பிகளின் முறையான வசிப்பிடங்களாக ஒதுக்கிக் கொடுத்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனின் அரண்மனையில் தங்கிய கிருஷ்ணனும், சாத்யகியும்; தங்கள் தங்கள் வசிப்பிடங்களில் இரவைக் கழித்த இளவரசர்கள்..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் {யுதிஷ்டிரன்} தன் குடிமக்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பினான். அவர்களும் அந்த ஏகாதிபதியின் ஆணைக்கிணங்க தங்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர்.(1) சுடர்மிகும் அழகு கொண்ட யுதிஷ்டிரன், பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகிய தன் தம்பியரிடம், அவர்களுக்கு ஆறுதலிக்கும் வகையில் (2) “இந்தப் பெரும்போரில் எதிரியின் பல்வேறு வகை ஆயுதங்களால் உங்கள் உடல்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் களைப்பை அடைந்திருக்கிறீர்கள். உங்கள் இதயங்கள் துயரத்தாலும், கோபத்தாலும் எரிகின்றன.(3) பாரதக் குலத்தின் காளைகளே, நான் செய்த குற்றத்தால், நீங்கள் இழிந்த மனிதர்களைப் போல நாடுகடத்தப்பட்டுக் காடுகளில் பேரிடரை அனுபவித்தீர்கள்.(4) (வெற்றியடைந்தவர்களான நீங்கள்) இப்போது இந்த வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாடித் திளைப்பீராக. ஓய்வையும், உங்களுக்குத் தேவையானவற்றின் முழுப் பயனையும் அடைந்த பிறகு, காலையில் மீண்டும் என்னைச் சந்தியுங்கள்” என்றான்.(5)

அதன்பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான விருகோதரன் {பீமன்}, திருதராஷ்டிரனின் சம்மதத்தின் பேரில் யுதிஷ்டிரனால் தனக்கு ஒதுக்கப்பட்டதும், சிறந்த கட்டடங்கள் மற்றும் அறைகளால் {உப்பரிகைகளால்} அலங்கரிக்கப்பட்டதும், பல்வேறு வகையான ரத்தினங்களால் நிறைந்ததும், ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் நிறைந்ததுமான துரியோதனனின் அரண்மனைக்குள், மகவத் {இந்திரன்} தன் கோவிலுக்குள் நுழைவதைப்போல நுழைந்தான்.(6,7) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான அர்ஜுனனும், மன்னனின் ஆணைப்படி, சிறந்த கட்டுமானங்கள் பலவற்றைக் கொண்டதும், தங்க வாயிலால் அலங்கரிக்கப்பட்டதும், செல்வத்தால் நிறைந்ததும், இரு பாலினங்களையும் சேர்ந்த பணியாட்கள் நிறைந்ததும், துரியோதனனின் அரண்மனைக்குச் சற்றும் குறையாததுமான துச்சாசனனின் அரண்மனையை அடைந்தான்.(8,9) துர்மர்ஷணனின் அரண்மனை துச்சாசனின் அரண்மனையைவிட மேன்மையானதாக இருந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, அனைத்து வகை ரத்தினங்களுடன் கூடிய அது குபேரனின் மாளிகையைப் போலத் தெரிந்தது.(10) மன்னன் யுதிஷ்டிரன், அதைக் கொள்ளச் சிறந்த தகுதி கொண்டவனும், பெருங்காட்டினால் (அதன் இடர்பாடுகளால்) மெலிந்தவனுமான நகுலனுக்கு மகிழ்ச்சியுடன் கொடுத்தான்.(11) துர்முகனின் முதன்மையான அரண்மனை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு மிக அழகானதாக இருந்தது. அதில் படுக்கைகளும் இருந்தன, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர்களான அழகிய பெண்களும் இருந்தனர்.(12) மன்னன், தனக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்பவனான சகாதேவனுக்கு அதைக் கொடுத்தான். அஃதை அடைந்த சகாதேவன், கைலாசத்தை அடைந்த பொக்கிஷத் தலைவனை {குபேரனைப்} போலத் திளைப்படைந்தான்.(13)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, யுயுத்சு, விதுரன், சஞ்சயன், சுதர்மர், தௌமியர் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குச் சொந்தமான வசிப்பிடங்களுக்குச் சென்றனர்[1].(14) மனிதர்களில் புலியான சௌரின் {கிருஷ்ணன்}, மலையில் உள்ள தன் குகைக்குள் நுழையும் புலியைப் போலச் சாத்யகியின் துணையுடன் அர்ஜுனனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(16) (அவர்களுக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த) உணவு மற்றும் பானங்களை விருந்துண்ட அந்த இளவரசர்கள், தங்கள் இரவை மகிழ்ச்சியாகக் கழித்தனர். நிறைவான இதயத்துடன் காலையில் விழித்து, மன்னன் யுதிஷ்டிரனின் முன்னிலையை அடைந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(16)

ஆழ்தியானத்தில் கிருஷ்ணன்! – சாந்திபர்வம் பகுதி – 45- பிராமணர்களுக்கும், குடிமக்களுக்கும் பெரும் தானங்களைச் செய்த யுதிஷ்டிரன்; கிருஷ்ணன் இருந்த இடத்திற்குச் சென்று அவனைத் துதித்தது; ஆழ்ந்த தியானத்தில் இருந்த கிருஷ்ணன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! கற்ற பிராமணரே, தர்மனின் மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான யுதிஷ்டிரன் தன் நாட்டை மீட்ட பிறகு என்ன செய்தான் என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்.(1) ஓ! முனிவரே {வைசம்பாயனரே}, மூவுலகங்களின் உயர்ந்த தலைவனான வீர ரிஷிகேசன் {கிருஷ்ணன்} இதன் பிறகு என்ன செய்தான் என்பதையும் எனக்கு நீர் சொல்ல வேண்டும்” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாவமற்றவனே, வாசுதேவனின் தலைமையிலான பாண்டவர்கள், இதன்பிறகு என்ன செய்தனர் என்பதைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(3) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, குந்தியின் மகனான யுதிஷ்டிரன் தன் நாட்டை அடைந்ததும், நால்வகை மனிதர்களுள் ஒவ்வொருவரையும் அவரவர்களுக்குரிய கடமைகளில் நியமித்தான்.(4) அந்தப் பாண்டுவின் (மூத்த) மகன் {யுதிஷ்டிரன்}, ஸ்நாதக வகையைச் சேர்ந்த ஆயிரம் உயர் ஆன்ம பிராமணர்களில் ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் நிஷ்கங்களைக் கொடுத்தான்.(5) பிறகு அவன் தன்னை நம்பியிருந்த பணியாட்களுக்கும், தன்னிடம் வந்த தகாதோர் மற்றும் வழக்கத்திற்கு மாறான கொள்கைகளை உடையோர் உள்ளிட்ட விருந்தினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களை மனம் நிறையச் செய்தான்.(6)

அவன், தனது புரோகிதரான தௌமியருக்கு, ஆயிரக்கணக்கான பசுக்களையும், அதிகமான செல்வம், தங்கம், வெள்ளி மற்றும் பல்வேறு வகையான ஆடைகளையும் கொடுத்தான்.(7) ஓ! ஏகாதிபதி, கிருபரிடம் அவன் ஓர் ஆசானிடம் ஒருவன் நடந்து கொள்ள வேண்டிய வழியில் நடந்து கொண்டான். நோன்புகளை நோற்பவனான அம்மன்னன், விதுரனைப் பெரிதும் கௌரவிப்பதைத் தொடர்ந்தான்.(8) ஈகையாளர்களில் முதன்மையானவனான அவன் {யுதிஷ்டிரன்}, உணவு, பானம், பல்வேறு வகையான ஆடைகள், படுக்கைகள் மற்றும் இருக்கைகள் ஆகியவற்றால் அனைத்து மனிதர்களையும் நிறைவு செய்தான்.(9) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, தன் நாட்டில் அமைதியை நிலைநாட்டியவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான அம்மன்னன், யுயுத்சு மற்றும் திருதராஷ்டிரனுக்கு உரிய கௌரவங்களை அளித்தான்.(10) திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் விதுரனின் உத்தரவிற்குக் கீழ் தன் நாட்டை வைத்த மன்னன் யுதிஷ்டிரன் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான்.(11)

ஓ! பாரதக் குலத்தின் காளையே, குடிமக்கள் உள்ளிட்ட அனைவரையும் இவ்வழியில் நிறைவு செய்த யுதிஷ்டிரன், கூப்பிய கரங்களுடன் உயர் ஆன்ம வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலைக்குச் சென்றான்.(12) நீலமேக வண்ணனான கிருஷ்ணன், தங்கம் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய இருக்கையில் அமர்ந்திருப்பதை அவன் கண்டான்.(13) மஞ்சள் பட்டாடையுடுத்தி, தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அவனது மேனி, தங்கத்தின் காந்தியுடன் பிரகாசித்தது.(14) கௌஸ்துப ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்ட மார்புடைய அவன், உதயச் சூரியனால் அலங்கரிக்கப்பட்ட உதய மலையைப் போலத் தெரிந்தான்.(15) மூவுலகங்களிலும் தனக்கு நிகரில்லாதவன் போல அவன் மிக அழகாக இருந்தான். விஷ்ணுவின் அவதார வடிவமான அந்த உயர் ஆன்மாவை அணுகிய மன்னன் யுதிஷ்டிரன், சிரித்துக் கொண்டே இனிமையாக, “ஓ! நுண்ணறிவு கொண்டோரில் முதன்மையானவனே, இரவை மகிழ்ச்சியாகக் கடத்தினாயா?(16,17) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் புலன்கள் அனைத்தும் முழு வீரியத்துடன் இருக்கின்றனவா? ஓ! நுண்ணறிவு கொண்டோரில் முதன்மையானவனே, உன் புத்தி சரியாக {தெளிவாக} இருக்கிறதா?(18) ஓ! தெய்வீகத் தலைவா ஓ! மூவுலகங்களின் புகலிடமே, ஓ! மூன்று {நடை} அடிகளைக் கொண்டவனே, உன் அருளின் காரணமாகவே நாங்கள் எங்கள் நாட்டை மீண்டும் அடைந்து, இந்த மொத்த பூமியும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தோம். உன் அருளால் நாங்கள் வெற்றியையும், பெரும் புகழையும் அடைந்து, எங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து வழுவாமல் இருக்கிறோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.(19)

எதிரிகளைத் தண்டிப்பவனான தெய்வீகக் கிருஷ்ணனிடம், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, அவன் {கிருஷ்ணன்} ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் ஒரு வார்த்தையும் பேசாதிருந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(20)

பீஷ்மரை நினைத்துக் கொண்டிருந்தேன்! – சாந்திபர்வம் பகுதி – 46-கிருஷ்ணன் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டு வியந்து, அவனைத் துதித்த யுதிஷ்டிரன்; பீஷ்மர் தன்னை நினைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்ன கிருஷ்ணன்; பீஷ்மர் மறைவதற்குள் அவரிடமிருக்கும் அறிவுக்களஞ்சியத்தை அவரிடம் கற்றுப் பெறுமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன்; இருவரும் சேர்ந்து செல்லலாம் என்று சொன்ன யுதிஷ்டிரன்..

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! அளவிலா ஆற்றல் கொண்டோனே, நீ ஆழ்ந்த தியானத்தில் இருப்பது அற்புதம். ஓ! அண்டத்தின் பெரும்புகலிடமே, மூவுலகங்களும் நலமா?(1) ஓ! தேவா, ஓ! மனிதர்களில் காளையே, (இவ்வுலகில் இருந்து) நான்காம் நிலையைப் பின்பற்றி நீ உன்னை விலக்கிக் கொள்ளும்போது, என் மனம் ஆச்சரியத்தால் நிறைகிறது[1].(2) உடலுக்குள் செயல்படும் ஐந்து உயிர் மூச்சுகள் அசைவில்லாத உன்னால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இன்பத்தில் திளைத்திருக்கும் உன் புலன்கள் உன் மனத்திற்குள் உன்னால் குவிக்கப்படுகின்றன.(3) ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, பேச்சும், மனமும் உன் புத்திக்குள் குவிக்கப்படுகின்றன. உண்மையில் உன் புலன்கள் அனைத்தும் உன் மனத்திற்குள் இழுக்கப்படுகின்றன[2].(4) உன் உடலில் உள்ள மயிர் சிலிர்த்திருக்கிறது. உன் மனமும், புத்தியும் அசைவற்றிருக்கின்றன. ஓ! மாதவா {கிருஷ்ணா}, ஒரு மரத்தைப் போலவோ, பாறையைப் போலவோ நீ அசைவற்றவனாக இருக்கிறாய்.(5)ஓ! சிறப்புமிக்கத் தேவா {கிருஷ்ணா}, காற்றில்லாத இடத்தில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் தழலைப் போல நீ அசைவற்றவனாக இருக்கிறாய். ஒரு பாறைக்குவியலைப் போல நீ அசைவற்றவனாக இருக்கிறாய்.(6) ஓ! தேவா, இதன் காரணத்தைக் கேட்க நான் தகுந்தவனென்றால், இதில் உன் இரகசியமேதும் இல்லையென்றால், என் ஐயத்தை விலக்க வேண்டும் என்ற உதவியை நான் உன்னிடம் இரந்து கேட்கிறேன்.(7) படைப்பவனும், அழிப்பவனும் நீயே. அழியக்கூடியனவும், அழிவற்றனவும் நீயே. தோற்றமும் {ஆதியும்}, மறைவும் {அந்தமும்} அற்றவன் நீயே. உயிரினங்களில் முதல்வனும், முதன்மையானவனும் நீயே.(8) ஓ! நீதியாளர்களில் முதன்மையானவனே, இந்த நுண்மமயத்தின் (யோகத்தின்) காரணத்தை நீ எனக்குச் சொல்வாயாக. நான் உன் உதவியை நாடுபவனும், உனக்கு அர்ப்பணிப்புள்ள வழிபாட்டினனும், சிரம் தாழ்த்தி உன்னை வணங்குபவனும் ஆவேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(9) இவ்வாறு சொல்லப்பட்ட வாசவனின் {இந்திரனின்} சிறப்புமிக்கத் தம்பி {கிருஷ்ணன்}, தன் மனத்தையும், புத்தியையும், புலன்களையும் மீண்டும் தங்கள் வழக்கமான செயற்களத்திற்கு அழைத்து, மெல்லிய புன்னகையுடன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(10)

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “இப்போது கணைப்படுக்கையில் கிடப்பவரும், அணையப்போகும் நெருப்பைப் போல இருப்பவரும், மனிதர்களில் புலியுமான பீஷ்மர் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, என் மனமும் அவரிடம் குவிந்திருந்தது.(11) எவருடைய நாண்கயிற்றின் நாணொலியையும், உள்ளங்கைகளின் ஒலிகளையும் இந்திரனாலேயே தாங்கிக் கொள்ள முடியாதோ அவரிடமே நான் என் மனத்தைக் குவித்திருந்தேன்.(12) (ஒரு சுயம்வரத்தின்போது, காசி மன்னனின் மகள்களான) மூன்று இளவரசிகளைத் தன் தம்பி விசித்திரவீரியனின் திருமணத்திற்காகக் கடத்தி, அங்கே கூடியிருந்த மன்னர்கள் அனைவரையும் வென்றவர் எவரோ, அவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(13) பிருகு குல ராமரிடம் {பரசுராமரிடம்} இருபத்து மூன்று {23} நாட்கள் தொடர்ந்து போரிட்டவர் எவரோ, எவரை ராமராலேயே வெல்ல இயலவில்லையோ, அவரைக் {பீஷ்மரைக்} குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(14) தம் புலன்கள் அனைத்தையும் திரட்டி, புத்தியின் உதவியுடன் தம் மனத்தைக் குவித்து (என்னைக் குறித்துச் சிந்திப்பதால்) அவர் {பீஷ்மர்} என்னிடம் புகலிடத்தை நாடுகிறார். அதன் காரணமாகவே நான் என் மனத்தை அவரிடம் மையம் கொள்ளச் செய்தேன்.(15)

எவரைக் கங்கையீன்று, சாதாரண மனித விதிகளின்படி வளர்த்தாளோ, எவரை வசிஷ்டர் தமது சீடராகக் கொண்டாரோ, அவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(16) எவர் தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும், நான்கு வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் அறிந்தவரோ, வலிமை, சக்தி, பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்ட அந்த வீரரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(17) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, ஜமதக்னியின் மகனான ராமருக்குப் {பரசுராமருக்கு} பிடித்தமான சீடர் எவரோ, அறிவியல்கள் அனைத்தின் கொள்ளிடம் எவரோ, அவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.(18) ஓ! பாரதக் குலத்தின் காளையே, கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியவற்றையும், அறநெறி மற்றும் கடமைகளையும் நன்கறிந்த அந்த மனிதர்களில் முதன்மையானவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(19)

ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, அந்த மன்னர்களில் புலி சொர்க்கத்திற்குச் சென்றதும், பூமியானது, நிலவற்ற இரவைப் போலத் தெரியும்.(20) எனவே, ஓ! யுதிஷ்டிரரே, பயங்கர ஆற்றலைக் கொண்டவரும், கங்கையின் மைந்தருமான பீஷ்மரைப் பணிவுடன் அணுகி, நீர் கற்க விரும்பும் எதையும் கேட்பீராக.(21) ஓ! பூமியின் தலைவரே, (அறநெறி, பொருள் ஆதாயம், இன்பம் மற்றும் முக்தி ஆகியவற்றைப் பொருத்தவரையிலான) அறிவின் நான்கு கிளைகளையும, நான்கு வகையினருக்காக விதிக்கப்பட்ட வேள்விகள் மற்றும் சடங்குகள் குறித்தும், வாழ்வின் நான்கு வாழ்வுமுறைகள், மன்னர்களின் கடமைகள் ஆகியவற்றைக் குறித்து முழுமையாக அவரிடம் கேட்பீராக.(22) குரு குலத்தில் முதன்மையானவரான பீஷ்மர் இவ்வுலகில் இருந்து மறைந்துவிட்டால், அவருடன் சேர்ந்து அனைத்து வகை அறிவும் {ஞானமும்} மறைந்துவிடும். இதன் காரணமாகவே நான் (இப்போதே அவரிடம் செல்லுமாறு) உம்மைத் தூண்டுகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.(23)

உயர்ந்தவையும், முக்கியமானவையுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இந்த நல்ல வார்த்தைளைக் கேட்டவனும், நீதிமானுமான யுதிஷ்டிரன், கண்ணீரால் தடைப்பட்ட குரலுடன் ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} பதிலுரைத்தான்.(24) {அவன்}, “ஓ! மாதவா பீஷ்மரின் சிறப்பைக் குறித்து நீ சொன்னதனைத்தும் முற்றிலும் உண்மையே. அதில் நான் சிறு ஐயமும் கொள்ளவில்லை.(25) உண்மையில், உயர் ஆன்ம பிராமணர்கள், சிறப்புமிக்கப் பீஷ்மரின் உயர்ந்த அருளையும், பெருமையையும் குறித்துப் பேசும்போது அவற்றை நான் கேட்டிருக்கிறேன்.(26) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உலகங்கள் அனைத்தின் படைப்பாளன் நீயே. எனவே, ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, நீ சொல்வதில் சிறு ஐயத்தையும் கொள்ள மடியாது.(27) ஓ! மாதவா, உன் இதயம் அருளுமென்றால், உன் தலைமையில் நாம் பீஷ்மரிடம் செல்வோம்.(28) தெய்வீகமான சூரியன் வடக்குத் திரும்பினால், பீஷ்மர் (இவ்வுலகை விட்டு) தான் வென்றிருக்கும் அருள் உலகங்களுக்குச் சென்றுவிடுவார். எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, அந்தக் குருகுலத்தின் கொழுந்து உன் காட்சியைப் பெறத் தகுந்தவராவார்.(29) (நீ என் வேண்டுதலை அருளினால்), அழியக்கூடியவையாகவும், அழிவற்றவையாகவும் இருப்பவனும், தேவர்களில் முதல்வனுமான உன்னுடைய காட்சியைப் பீஷ்மர் பெறுவார். ஓ! தலைவா, உண்மையில் பிரம்மத்தின் பரந்த கொள்ளிடம் நீயே” என்றான் {யுதிஷ்டிரன்}”.(30)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, தன்னருகே அமர்ந்திருந்த சாத்யகியிடம், “என் தேர் ஆயத்தமாகட்டும் {தேரில் குதிரைகள் பூட்டப்படட்டும்}” என்றான்.(31) இதைக் கேட்ட சாத்யகி, விரைவாகக் கேசவனின் முன்னிலையை விட்டகன்று வெளியே சென்று தாருகனிடம், “கிருஷ்ணனின் தேர் ஆயத்தமாகட்டும்” என்று உத்தரவிட்டான்.(32) சாத்யகியின் வார்த்தைகளைக் கேட்ட தாருகன், விரைவாகக் கிருஷ்ணனின் தேரை ஆயத்தம் செய்தான். தங்கத்தாலானதும், வைடூரியங்கள், சந்திரகாந்தங்கள் மற்றும் சூரிய காந்தங்களால் அலங்கரிக்கப்பட்டதும், தங்கத்தால் மறைக்கப்பட்ட சக்கரங்களைக் கொண்டதும், பிரகாசமுடையதும், மனோவேகமுடையதும், சாரதிக்கு மத்தியில் வேறு பிற ரத்தினங்கள் நிறுவப்பட்டதும், காலைச் சூரியனைப் போல அழகானதும், உச்சியில் கருடனைக் கொண்ட அழகிய கொடிமரத்தைக் கொண்டதும், எண்ணற்ற கொடிகளைக் கொண்டதுமான தேரில், தங்க இழைகளைக் கொண்டவையும், மனோ வேகம் கொண்டவையும், குதிரைகளில் முதன்மையானவையுமான சுக்ரீவம், சைவியம் மற்றும் இன்னும் இரண்டு குதிரைகளும் பூட்டப்பட்டன. ஓ! மன்னர்களில் புலியே, அவற்றை ஆயத்தம் செய்த தாருகன், கூப்பிய கரங்களுடன் சென்று, இந்தச் செய்தியை கிருஷ்ணனிடம் தெரிவித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(33-36)

பீஷ்மரின் துதி – ஸ்ரீ விஷ்ணு ஸ்தவராஜம்! – சாந்திபர்வம் பகுதி – 47-பீஷ்மர் எவ்வாறு உயிர்துறந்தார் என வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; பாவங்களை அழிக்கும் ஸ்ரீவிஷ்ணுஸ்வராஜம் என்ற பீஷ்மரின் துதியை ஜனமேஜயனுக்கு உரைத்த வைசம்பாயனர்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “கணைப்படுக்கையில் கிடந்தவரான பாரதர்களின் பாட்டன் {பீஷ்மர்} எவ்வாறு தன் உடலை விட்டார்? அவர் என்ன வகை யோகத்தைப் பின்பற்றினார்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! குருக்களில் புலியே, உயர் ஆன்ம பீஷ்மர் எவ்வாறு தன் உடலை விட்டார் என்பதைத் தூய்மையான இதயத்துடனும், குவிந்த கவனத்துடனும் கேட்பாயாக.(2) சூரியன் துருவத்தைக் கடந்து வட பாதையில் {உத்தராயணத்தில்} நுழைந்தபோது, பீஷ்மர் குவிந்த கவனத்துடன், (உடலில் இருந்து விடுபட்டாலும் தொடர்புடன் கூடிய) தமது ஆன்மாவை (முழுமையாக விடுபட்ட நிலையுடன் கூடிய) தமது ஆன்மாவுக்குள் நுழையச்செய்தார்[1].(3) முதன்மையான பிராமணர்கள் பலரால் சூழப்பட்டிருந்த அந்த வீரர், எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டிருந்த உடலுடன், எண்ணற்ற கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலப் பேரழகுடன் பிரகாசித்தார்.(4)வேதங்களை அறிந்த வியாசர், தெய்வீக முனிவரான நாரதர், தேவஸ்தானர், அஸ்மகர், சுமந்து,(5) ஜைமினி, உயர் ஆன்ம பைலர், சாண்டில்யர், தேவராதர், பெரும் நுண்ணறிவைக் கொண்ட மைத்திரேயர்,(6) அசிதர், வசிஷ்டர், உயர் ஆன்ம கௌசிகர், ஹரிதர், லோமசர், பெரும் நுண்ணறிவைக் கொண்ட அத்ரியின் மகன்,(7) பிருஹஸ்பதி, சுக்கிரர், பெரும் தவசியான சியவனர், சனத்குமாரர், கபிலர், வால்மீகி, தும்புரு, குரு,(8) மௌத்கல்யர், பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்}, பெருந்தவசியான திருணபிந்து, பிப்பலாதர், வாயு, ஸம்வர்த்தர், புலஹர், கதர் {கசர்},(9) காசியபர், புலஸ்தியர், கிரது, தக்ஷன், பராசரர், மரீசி, அங்கிரஸ், காஸ்மியர், கௌதமர், தவசி காலவர்,(10) தௌம்யர், விபாண்டர், மாண்டவ்யர், தௌம்ரர், கிருஷ்ணாநுபௌதிகர், பிராமணர்களில் முதன்மையான உலூகர், பெருந்தவசி மார்க்கண்டேயர், பாஸ்கரி, புராணர் {பூர்ணர்}, கிருஷ்ணன், சூதர் ஆகிய அறவோர்களில் முதன்மையானோரான இவர்களாலும்,(11) நம்பிக்கையும், தற்கட்டுப்பாடும், மனோ அமைதியையும், உயர்ந்த அருளையும் கொண்ட இன்னும் பலராலும் சூழப்பட்டிருந்த அந்தக் குருவீரர் {பீஷ்மர்}, கோள்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போலத் தெரிந்தார்.(12)

கணைப்படுக்கையில் நீண்டு கிடந்தவரும், மனிதர்களில் புலியுமான பீஷ்மர், தூய்மையான இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும், மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் கிருஷ்ணனை நினைத்தார்.(13) அவர், யோகத்தின் தலைவனும், நாபியில் தாமரையைக் கொண்டவனும், அண்டத்தின் தலைவனும், விஷ்ணு என்றும், ஜிஷ்ணு என்றும் அழைக்கப்படுபவனுமான மதுசூதனனின் புகழை உற்சாகமான பலத்த குரலில் பாடினார்.(14) நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரும், பலமிக்கவரும், உயர்ந்த அற ஆன்மாவுமான பீஷ்மர், குவிந்த கரங்களுடன் இவ்வாறே வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்தார்.(15)

பீஷ்மர், “ஓ! கிருஷ்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னைப் புகழும் விருப்பத்தால் சுருக்கமாகவும், விரிவாகவும் என்னால் சொல்லப்படும் இவ்வார்த்தைகளில் மகிழ்வாயாக.(16) தூய்மையானவனும், தூய்மையேயானவனும் நீயே. அனைத்தையும் கடந்தவன் நீயே. அஃது என மக்களால் சொல்லப்படுபவன் நீயே. உயர்ந்த தலைவன் நீயே. ஓ! அண்டத்தின் ஆன்மாவும், அனைத்துயிரினங்களின் தலைவனும் ஆனவனே, முழு இதயத்துடன் நான் உனது புகலிடத்தை நாடுகிறேன் {உன்னைச் சரணடைகிறேன்}[2].(17) தொடக்கமும் {ஆதியும்}, முடிவும் {அந்தமும்} அற்றவன் நீயே. உயர்ந்தனவற்றிலும் உயர்ந்தவனும், பிரம்மமும் {பரப்பிரம்மமும்} நீயே. தேவர்களும், முனிவர்களும் கூட உன்னை அறியமாட்டார்கள். நாராயணன் என்றும், ஹரி என்றும் அழைக்கப்படும் தெய்வீகப் படைப்பாளன் மட்டுமே உன்னை அறிவான்.(18) முனிவர்கள், சித்தர்கள், பெரும் நாகர்கள், தேவர்கள் மற்றும் தெய்வீக முனிவர்கள் நாராயணன் மூலமே உன்னைக் குறித்துச் சிறிது அறிவார்கள். உயர்ந்தனவற்றில் உயர்ந்தவனும், சிதைவை அறியாதவனும் நீயே.(19) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள் ஆகியோரும் நீ யார் என்பதையும், எங்கிருந்து வந்தாய் என்பதையும் அறியமாட்டார்கள்.(20)அனைத்து உலகங்களும், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் உன்னுள் வாழ்ந்து, (அழிவுக்காலம் வரும்போது) உன்னிலேயே நுழைகின்றன. நூலில் கோர்க்கப்பட்ட ரத்தினங்களைப் போல, பண்புகள் கொண்ட அனைத்துப் பொருட்களும் உயர்ந்த தலைவனான உன்னிலேயே வசிக்கின்றன[3].(21) உனது செயல்பாடும், உனது உறுப்புகளானதும், மனம் மற்றும் பொருள்களாலானதுமான இவ்வண்டம், வலுவான நூலில் கோர்க்கப்பட்ட மலர்ச்சரத்தைப்போல, படர்ந்தூடுருவி அழியாமல் நிலைத்திருக்கும் ஆன்மாவான உன்னில் வசிக்கிறது.(22) ஆயிரக்கணக்கான தலைகளையும், கால்களையும், கண்களையும், கரங்களையும், மகுடங்களையும், பிரகாசமிக்க முகங்களையும் கொண்ட ஹரி என்று அழைக்கப்படுபவன் நீயே. தெய்வீகமானவனும், அண்டத்தின் புகலிடமுமான நாராயணன் என்று அழைக்கப்படுபவன் நீயே.(23) நுண்ணியவற்றில் நுண்ணியமானவனும், திரள்களில் {பெரியவற்றில்} திரளானவனும் {பெரியவனும்}, கனமானவற்றில் கனமானவனும், உயர்ந்தவற்றில் உயர்வானவனும் நீயே.(24) வாக்குகள் {மந்திரங்கள்}, அனுவாக்குகள் {பிராம்மணங்கள்}, நிஷதங்கள் {உபாஸனாவிதிகள்}, உபநிஷதங்கள் ஆகியவற்றில் கருதப்படும் தடுக்கப்படமுடியாத பரம்பொருள் நீயே. எப்போதும் உண்மையையே அறிவிக்கும் சாமங்களிலும் {சாம வேதத்திலும்} கருதப்படும் உண்மையின் வடிவம் நீயே[4].(25)நான்கு பகுதிகளாலான ஆன்மாவைக் கொண்டவன் நீயே. (அனைத்து உயிரினங்களின்) புத்தியில் மட்டுமே வெளிப்படுபவன் நீயே. நம்பிக்கையில் கட்டுப்பட்டிருப்போரின் தலைவன் நீயே. ஓ! தேவா, (நம்பிக்கை நிறைந்தோரால்) சிறந்த, உயர்ந்த, இரகசியமான நான்கு பெயர்களால் புகழப்படுபவன் நீயே[5].(26) தவங்கள் எப்போதும் உன்னில் நிலைத்திருக்கின்றன. (உன்னை நிறைவு செய்வதற்காக உயிரினங்களால்) செய்யப்படும் தவங்கள், உன் வடிவிலேயே வாழ்கின்றன. அண்டத்தின் ஆன்மா நீயே. அண்ட அறிவு நீயே. அண்டமே ஆனவனும் நீயே. அனைத்துமறிந்தவன் நீயே. அண்டத்தில் அனைத்தையும் படைத்தவன் நீயே[6].(27) சுடர்மிக்க நெருப்பை உண்டாக்கும் இரு கட்டைகளை {அரணிக்கட்டைகளைப்} போல, பூமியில் பிரம்மத்தைக் காக்க தெய்வீகமானவர்களான தேவகி மற்றும் வசுதேவரிடத்தில் பிறந்தவன் நீயே[7].(28) ஓ! கோவிந்தா, அர்ப்பணிப்புள்ள ஒரு வழிபாட்டினன் {பக்தன்} தன் நித்திய முக்திக்காக மனத்தில் இருந்து அனைத்தையும் விலக்கி, விருப்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, தூய ஆன்மாவான உன்னையே தன் ஆன்மாவில் காண்கிறான்.(29) மகிமையில் சூரியனுக்கும் மேம்பட்டவன் நீயே. புலன்கள் மற்றும் அறிவுக்கு அப்பாற்பட்டவன் நீயே. ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, நான் உன் கரங்களில் என்னை நிறுத்துகிறேன் {கொடுக்கிறேன்}.(30)(அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஆன்மாவான) புருஷன் என்று புராணங்களில் சொல்லப்படுபவன் நீயே. யுகங்களின் தொடக்கத்தில் பிரம்மன் என்றும், அண்ட அழிவின் போது சங்கர்ஷணன் என்றும் சொல்லப்படுபவன் நீயே. புகழத்தக்கவனான உன்னை நான் துதிக்கிறேன்.(31) ஒருவனேயானாலும், எண்ணற்ற வடிவங்களில் இன்னும் பிறந்து கொண்டிருப்பவன் நீயே. விருப்பங்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவன் நீயே. ஓ! அனைத்து விருப்பங்களையும் அளிப்பவனே, உன்னிடம் அர்ப்பணிப்புள்ள வழிபாட்டினர் {பக்தர்கள்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளை நம்பிக்கையுடன் செய்து தங்களைத் தியாகம் செய்கின்றனர்.(32) அண்டம் கிடக்கும் உறையென அழைக்கப்படுபவன் நீயே. நீரில் நீந்தும் அன்னங்களையும், வாத்துகளையும் போல உலகங்கள் அனைத்தும் உன்னிலேயே மிதக்கின்றன.(33) உண்மை நீயே. ஒருவனும், அழிவற்றவனும் நீயே. பிரம்மம் நீயே. மனத்திற்கும், பொருளுக்கும் அப்பாற்பட்ட “அது” நீயே. தொடக்கமும், நடுநிலையும், முடிவும் இல்லாதவன் நீயே. தேவர்களும், முனிவர்களும் உன்னை அறியமாட்டார்கள்.(34) தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், முனிவர்கள், பெரும் உரகர்கள் ஆகியோர் குவிந்த ஆன்மாக்களோடு எப்போதும் உன்னைத் துதிக்கின்றனர். கவலைகள் அனைத்திற்கும் பெரும் மருந்து நீயே.(35) பிறப்பும், இறப்பும் அற்றவன் நீயே. தெய்வீகமானவன் நீயே. தான்தோன்றி நீயே. அழிவற்றவன் நீயே. புலப்படாதவனும், அறிவுக்கு எட்டாதவனும் நீயே. ஓ! பலமிக்கவனே, ஹரி என்றும் நாராயணன் என்றும் அழைக்கப்படுபவன் நீயே[8].(36)அண்டத்தின் படைப்பாளனாகவும், அண்டத்தில் இருக்கும் அனைத்துக்கும் தலைவனாகவும் வேதங்களால் அறிவிக்கப்படுபவன் நீயே. அண்டத்தின் உயர்ந்த பாதுகாவலன் நீயே. சிதைவற்றவன் நீயே. உயர்ந்தவன் {பரம்} என்று அழைக்கப்படுபவன் நீயே.(37) தங்க நிறம் கொண்டவன் நீயே, அசுரர்களைக் கொல்பவன் நீயே. ஒருவனேயாயினும், அதிதியால் பனிரெண்டு வடிவங்களில் பெறப்பட்டவன் நீயே.(38) வளர்பிறையில் தேவர்களை அமுதத்தால் நிறைவு செய்பவனும், தேய்பிறையில் பித்ருக்களை நிறைவு செய்பவனும், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அனைவரின் தலைவனுமான சோமனாக இருக்கும் உனது அந்த வடிவத்தை நான் வணங்குகிறேன்.(39) அடர்ந்த இருளுக்கு மறுபுறத்தில் வசிக்கும் பெரும் பிரகாசத்துடன் கூடிய ஒரே ஒருவன் நீயே. உன்னை அறிந்து கொள்ளும் ஒருவன், மரணம் குறித்த எந்த அச்சத்தையும் விடுகிறான். அறிவை அடையச் செய்யும் பொருளாக இருக்கும் அந்த உன் வடிவத்தை நான் வணங்குகிறேன்[9].(40)மகத்தான உக்தவேள்வியில், பிராமணர்கள் பெரும் ரிக்காக உன்னைத் துதிக்கின்றனர். பெரும் நெருப்பு வேள்வியில் {அக்நிசயன யாகத்தில்} அவர்கள் உன்னைத் தலைமை அத்யர்யுவாக (புரோகிதராகப்) பாடுகிறார்கள். வேதங்களின் ஆன்மா நீயே. உன்னை நான் வணங்குகிறேன். ரிக்கும், யஜுரும், சாமங்களும் உன் வசிப்பிடங்களாகும்[10]. (வேள்விகளில் பயன்படுத்தப்படும்) ஐந்து வகைப் புனித காணிக்கைகள் {ஆகுதிகள்} நீயே. வேதங்களில் பயன்படுத்தப்படும் ஏழு ஊடுகள் {சந்தங்கள்} நீயே. வேள்வியாலான உனது அந்த வடிவை நான் வணங்குகிறேன்[11].(42) பதினேழு ஓரசை ஒலிகளுடன் ஹோம நெருப்பில் காணிக்கைகள் {ஆகுதிகள்} ஊற்றப்படுகின்றன. ஹோமத்தின் ஆன்மாவானவன் நீயே. நான் உன்னை வணங்குகிறேன்.(43) வேதங்கள் பாடும் புருஷன் நீயே. யஜுஸ் என்பது உனது பெயராகும். வேத சந்தங்கள் உன் அங்கங்களாகும். மூன்று வேதங்களிலும் விதிக்கப்பட்டிருக்கும் வேள்விகள் உனது மூன்று தலைகளாகும். ரதந்தரம் என்றழைக்கப்படும் பெரும் வேள்வி நிறைவை வெளிப்படுத்தும் உன் குரலாகும். புனிதப் பாடல்களாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்.(44) அண்டப் படைப்பாளர்களால் செய்யப்பட்டு, ஆயிரம் வருடங்கள் நீடித்த பெரும் வேள்வியில் தோன்றிய முனிவன் நீயே. தங்கச் சிறகுகள் கொண்ட பெரும் அன்னம் நீயே. அன்னத்தாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்[12].(45)வேர்களுடன் கூடிய அனைத்து வகை இணை மற்றும் பின்னொட்டு சொற்களும் உனது அங்கங்களாகும். சந்திகள் உன் மூட்டுகளாகும். மெய்யெழுத்துகளும், உயிரெழுத்துகளும் உன் ஆபரணங்களாகும். வேதங்கள் உன்னைத் தெய்வீகச் சொல்லென அறிவிக்கின்றன. சொல்லாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[13].(46) மூவுலகங்களின் நன்மைக்காக வேள்வியாலான அங்கங்களுடன் கூடிய ஒரு பன்றியின் வடிவையேற்று, {நீரில்} மூழ்கியிருந்த பூமியை உயர்த்தியவன் நீயே. முடிவிலா ஆற்றலாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(47) பாம்பால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் ஆயிரந்தலைகளுடன் யோகத்தில் உறங்குபவன் நீயே. உறக்கத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(48) எவ்வழிகளால் முக்தி அடையப்படுமோ, எவ்வழிகளால் புலன்கள் கட்டுப்படுத்தப்படுமோ அந்த வழிகளுடனும், உண்மையுடனும் (வாழ்வெனும் பெருங்கடலைக் கடக்கும்) நல்லோருக்கான பாலத்தை {அணையைக்} கட்டுபவன் நீயே. உண்மையாலான அந்த உனது வடிவை நான் வணங்குகிறேன்.(49) பல்வேறு அறங்களை {சமயங்களைப்} பயிலும் மனிதர்கள், பல்வேறு கனிகளின் விருப்பத்தால் செயலூக்கம் பெற்று, பல்வேறு சடங்குகளுடன் உன்னை வழிபடுகின்றனர். அறத்தாலான அந்த உன் வடிவை {தர்மஸ்வரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்[14].(50)உன்னிலிருந்தே அனைத்துப் பொருள்களும் உண்டாகின. ஆசையெனும் கொள்கையை உடைய உடற்கட்டுகளுடன் கூடிய உயிரினங்கள் அனைத்தையும் தூண்டுபவன் நீயே. தூண்டலாலான அந்த உன் வடிவை {காமரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்.(51) பெருமுனிவர்கள், வடிவமில்லாத உன்னை வடிவங்களுக்குள் தேடுகின்றனர். க்ஷேத்ரஜனன் என்றழைக்கப்படும் நீ க்ஷேத்திரத்தில் அமர்ந்திருக்கிறாய். க்ஷேத்திரத்தாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்[15].(52) விழிப்புடன் தன்னில் நிலைத்திருப்பவனானாலும், விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளில் இருப்பவனாகச் சாங்கியர்கள் உன்னை விவரிக்கின்றனர். மேலும் அவர்கள் உன்னைப் பதினாறு பண்புகளைக் கொண்டவனாகவும், பதினேழாம் {17} எண்ணைக் குறிப்பனவாகவும் சொல்கின்றனர்[16].(53) கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்ட யோகியர்கள், தங்கள் உறக்கத்தைக் கைவிட்டு, மூச்சைத் தவிர்த்து, தமக்குள் ஒடுங்கி அழிவில்லா ஒளியாகவே உன்னைக் காண்கின்றனர்.(54) அமைதி நிறைந்த சந்நியாசிகள், தங்கள் பாவபுண்ணியங்கள் அனைத்தையும் அழித்ததன் விளைவால் மறுபிறவி எனும் அச்சத்திலிருந்து விடுபட்டு உன்னை அடைகின்றனர். முக்தியாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[17].(55)ஆயிரம் யுகங்களின் முடிவில், சுடர்மிகும் தழல்களுடன் உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் நெருப்பின் வடிவை ஏற்பவன் நீயே. கடுமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(56) அனைத்து உயிரினங்களையும் எரித்து, அண்டத்தைப் பரந்த நீர்க்கொள்ளிடமாக்கி, அந்நீரில் குழந்தையின் வடிவில் உறங்குபவன் நீயே. மாயையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(57) தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தான்தோன்றியின் நாபியில் ஒரு தாமரை உதித்தது. அந்தத் தாமரையிலேயே இவ்வண்டம் நிறுவப்பட்டது. தாமரையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(58) ஆயிரம் தலைகள் கொண்டவன் நீயே. அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பவன் நீயே. அளவிலா ஆன்மா கொண்டவன் நீயே. நான்கு பெருங்கடல்களைப் போலப் பரந்தவையான நான்கு வகை ஆசைகளையும் அடக்கியவன் நீயே. யோக உறக்கத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(59) மேகங்கள் உன் தலையின் மயிரில் இருக்கின்றன. ஆறுகள் உன் அங்கங்களின் பல்வேறு மூட்டுகளில் இருக்கின்றன. நான்கு பெருங்கடல்களும் உனது வயிறாகும். நீராலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(60)

பிறப்பு மற்றும் இறப்பால் உண்டாகும் மாற்றம் உன்னிலிருந்தே எழுகிறது. மேலும், அண்ட அழிவின் போது அனைத்துப் பொருட்களும் மீண்டும் மீண்டும் உன்னில் கலக்கின்றன. காரணத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(61) இரவில் உறங்காதவன் நீயே. பகலிலும் செயல்படுபவன் நீயே. (அனைத்தின்) நல்ல மற்றும் தீய செயல்களை நோக்குபவன் நீயே. (அண்டத்தை) நோக்கும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(62) உன்னால் செய்ய முடியாத செயலேதும் இல்லை. மேலும் நல்ல செயல்களைச் சாதிக்க எப்போதும் தயாராக இருப்பவன் நீயே. செயலின் வடிவமான, வைகுண்டன் என்றழைக்கப்படும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(63) அறத்தையும், அதிகாரத்தையும் தங்கள் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருந்த க்ஷத்ரியர்களைப் போரில் கோபத்துடன் இருபத்தோரு முறை அழித்தவன் நீயே. கொடூரத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(64) ஐந்து பாகங்களாக உன்னையே வகுத்துக் கொண்டு, அனைவரின் உடலுக்குள் செயல்படும் ஐந்து உயிர்மூச்சுகளாக {பிராண வாயுக்களாக} இயங்கி, அனைத்து உயிரினங்களும் அசைவதற்குக் காரணமானவன் நீயே. காற்றாலான {வாயுவாலான} அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(65)

மாதங்கள் என்றழைக்கப்படும் வடிவங்களிலும், பருவங்கள், அயணங்கள், வருடங்கள் ஆகிய வடிவங்களிலும் யுகந்தோறும் தோன்றி, படைப்பு மற்றும் அழிவுக்குக் காரணமாக இருப்பவன் நீயே. காலத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(66) பிராமணர்கள் உனது வாயாகவும், க்ஷத்திரியர்கள் உன் இரு கைகளாகவும், வைசியர்கள் உன் வயிறு மற்றும் தொடைகளாகவும், சூத்திரர்கள் உன் பாதங்களாகவும் வாழ்கின்றனர். வர்ணத்தாலான அந்த உன் வடிவை {வர்ணரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்.(67) நெருப்பே உன் வாயாகும். சொர்க்கங்கள் உன் தலையின் மகுடமாகும். வானம் உனது நாபியாகும். பூமி உனது பாதங்களாகும். சூரியன் உனது கண்ணாகும். திசைப்புள்ளிகள் உனது காதுகளாகும். (மூன்று) உலகங்களாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(68) காலத்திலும் மேன்மையானவன் நீயே. உயர்ந்தவற்றில் உயர்ந்தவன் நீயே. அண்டத்தின் தொடக்கமாக இருக்கும் தொடக்கமில்லாதவன் நீயே. அண்டத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(69) வைசேஷிக தத்துவத்தின் படி உன் பண்புகளைத் தீர்மானிக்கும் இவ்வுலகின் மனிதர்கள், உன்னையே உலகின் பாதுகாவலனாகக் கருதுகிறார்கள். பாதுகாவலனாக இருக்கும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[18].(70)உணவு, பானம், எரிபொருள் {விறகு} ஆகிய வடிவங்களை ஏற்கும் நீ, இன்பங்களையும், உயிரினங்களின் உயிர் மூச்சுகளையும் {பிராண வாயுக்களையும்} அதிகரித்து, அவர்களின் இருப்பைத் தாங்கிப் பிடிக்கிறாய். உயிராலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(71) உயிர் மூச்சுகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக நான்கு வகை உணவுகளை[19] நீ உண்கிறாய். வயிற்றில் அக்னியின் வடிவை ஏற்று அந்த உணவை நீயே செரிக்கிறாய். செரிமான வெப்பத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(72) பாதி மனிதன், பாதிச் சிங்கம் என்ற வடிவை ஏற்று, பழுப்புக் கண்கள் மற்றும் பழுப்பு பிடரி மயிர் ஆகியவற்றைக் கொண்டு, பற்களையும், நகங்களையும் ஆயுதமாகக் கொண்டு அசுரர்களின் தலைவனுடைய உயிரை எடுத்தவன் நீயே. பெருகும் வலிமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(73) தேவர்களோ, கந்தர்வர்களோ, தைத்தியர்களோ, தானவர்களோ உண்மையில் உன்னை அறியமாட்டார்கள். நுட்பமேயான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(74) பாதாளலோகத்தில், சிறப்புமிக்க, பலமிக்க, அழகிய அனந்தனின் வடிவை ஏற்று, உலகைத் தாங்குபவன் நீயே. வலிமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(75)படைப்பின் தொடர்ச்சிக்காக, அன்பு, பாசமெனும் பற்றுகளால் உயிரினங்கள் அனைத்தையும் திகைக்கச் செய்பவன் நீயே. (யோகிகள் எதற்காக முயல்கின்றனரோ அந்த) உண்மையான தன்னறிவு ஐம்பூதங்களே என்பதை அறியும் அந்த அறிவைக் கருதியே, அறிவுக்காக மக்கள் உன்னை அணுகுகின்றனர். அறிவாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(77) உன் உடல் அளவில்லாததாகும். உன் அறிவும் கண்களும் அனைத்திற்கும் அர்ப்பணிப்புள்ளவையாகும். எல்லைகள் அனைத்திற்கும் அப்பால் உள்ள எல்லையற்றவன் நீயே. பரந்த தன்மையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(78) சடாமுடிதரித்து, கையில் தண்டத்துடனும், நீண்ட வயிற்றுடனும் {தொங்கும் தொந்தியுடனும்}, அம்பறாத்தூணியையே இரக்கும் ஓடாகவும் கொண்ட துறவியின் வடிவை ஏற்றவன் நீயே. பிரம்மத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[20].(79) திரிசூலதாரியும், தேவர்களின் தலைவனும், முக்கண்ணனும், உயர்ந்த ஆன்மா கொண்டவனும் நீயே. உன் உடல் எப்போதும் சாம்பலால் {திருநீற்றால்} பூசப்பட்டிருக்கிறது. உனது லிங்கச் சின்னம் எப்போதும் மேல்நோக்கியே இருக்கிறது. ருத்திரன் என்ற அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(80)அரைபிறை வடிவங்கள் உன் நெற்றியின் ஆபரணங்களாகும். கழுத்தைச் சுற்றும் புனித நூலாகப் பாம்புகளைக் கொண்டவன் நீயே. பிநாகை மற்றும் திரிசூலதாரி நீயே. கடூரத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(81) அனைத்து உயிரினங்களின் ஆன்மா நீயே. அனைத்துயிரினங்களைப் படைப்பவனும், அழிப்பவனும் நீயே. கோபம், பகை, பாசம் ஆகியவை அற்றவன் நீயே. அமைதியாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(82) அனைத்தும் உன்னில் இருக்கின்றன. ஒவ்வொரு பொருளும் நீயே. எங்கும் இருப்பவன் நீயே. எங்கும், எப்போதும் அனைத்துமாக இருப்பவன் நீயே. ஒவ்வொரு பொருளிலும் இருக்கும் உன் வடிவை நான் வணங்குகிறேன்.(83) அண்டத்தையே செயலாகக் கொண்டவனும், அண்டத்தின் ஆன்மாவாக இருப்பவனும், அண்டம் எழுந்த பொருளாக இருப்பவனும், அனைத்துப் பொருள்களுக்கும் அழிவாக இருப்பவனும், (அனைத்துப் பொருட்களில் இருக்கும் பூதங்களான) ஐந்தைக் கடந்தவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(84) மூவுலகங்களாய் இருப்பவனும், மூவுலகங்களிலும் மேன்மையானவனுமான உன்னை நான் வணங்குகிறேன். திசைகள் அனைத்துமான உன்னை நான் வணங்குகிறேன். அனைத்தும் நீயே, அனைத்தின் ஒரே கொள்ளிடம் நீயே.(85)

ஓ! தெய்வீகத் தலைவா, ஓ! விஷ்ணு, ஓ! அனைத்து உலகங்களின் நித்திய மூலமே உன்னை நான் வணங்குகிறேன். ஓ! ரிஷிகேசா, படைப்பவனும் நீயே, அழிப்பவனும் நீயே, வெல்லப்படமுடியாதவன் நீயே.(86) கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றில் வெளிப்படும் உன் தெய்வீக வடிவை என்னால் காண முடியவில்லை. எனினும், (உனது செயல்களில் நம்பிக்கையுடன்) உன் நித்திய வடிவை என்னால் உண்மையில் காண முடியும்.(87) உன் தலையால் சொர்க்கத்தையும், பாதத்தால் பூமியையும், ஆற்றலால் மூவுலகங்களையும் நிறைத்திருப்பவன் நீயே. அழிவற்றவனும், அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் படர்ந்தூடுருவி இருப்பவனும் நீயே.(88) திசைகளே உனது கரங்களாகும், சூரியனே உனது கண்ணாகும், ஆற்றலே உனது உயிர்நீராகும். அனைத்து உயிரினங்களின் தலைவன் நீயே. அளவிலா சக்தி கொண்ட காற்றின் {வாயுவின்} ஏழு பாதைகளையும் அடைத்து நிற்பவன் நீயே.(89) ஓ! மங்கா மகிமை கொண்ட கோவிந்தா, காயாம்பூவைப் போன்ற நிறம் கொண்ட மஞ்சள் ஆடை உடுத்தியவனான உன்னை, அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவர்களே வழிபடுகின்றனர்.(90)

ஓ! கிருஷ்ணா, ஒரே முறை உன்னிடம் தலைவணங்கினாலும், அது பத்து குதிரை வேள்விகளின் நிறைவுக்கு இணையானதாகும். பத்து குதிரைவேள்விகளைச் செய்தவனும், மறுபிறவி என்ற கடமையில் இருந்து விடுபட மாட்டான். எனினும், கிருஷ்ணனை வழிபடும் மனிதன் மறுபிறவியில் இருந்து தப்புகிறான்.(91) தங்கள் நோன்பாகக் கிருஷ்ணனையே கொண்டோரையும், இரவின்போதும், உறக்கத்திலிருந்து விழிக்கும்போதும் கிருஷ்ணனையே நினைப்போரையும் கிருஷ்ணனையே தங்கள் மேனியாகக் கொண்டவர்கள் என்று சொல்லலாம்., மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட தெளிந்த நெய்யாகுதிகள் சுடர்மிக்க நெருப்பில் நுழைவதைப் போல, அம்மனிதர்கள் (மரணத்திற்குப் பிறகு) கிருஷ்ணனுக்குள்ளேயே நுழைகின்றனர்.(92) ஓ! விஷ்ணுவே, நரகத்தின் அச்சத்தை விலக்குபவனும், உலகவாழ்வெனும் பெருங்கடலின் சுழியில் மூழ்கியவனை, ஒரு படகைப் போல நரகின் அச்சத்தில் இருந்து விடுவிப்பவனான உன்னை நான் வணங்குகிறேன்.(93) ஓ! தேவா, பிராமணனின் நிலையைக் கொண்டவனும், பிராமணர்கள் மற்றும் பசுக்களுக்கு நன்மை செய்பவனும், அண்டத்திற்கு நன்மை செய்பவனும், கிருஷ்ணன் மற்றும் கோவிந்தனாக இருப்பவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(94) ஹரி என்ற ஈரெழுத்தானவை, காட்டுவழியில் பயணிக்கும் வணிகர்களையும், சோகம் மற்றும் துயரங்களைக் கொண்ட உலகின் நோய்கள் அனைத்தையும் நன்கு குணமடையச் செய்யும் மருந்தையும் தனக்குள் கொண்டவையாகு[21].(95)உண்மையானது விஷ்ணுவால் நிறைந்திருப்பைத் போலவும், அண்டமானது விஷ்ணுவால் நிறைந்திருப்பதைப் போலவும், அனைத்தும் விஷ்ணுவால் நிறைந்திருப்பதைப் போலவும், என் ஆன்மாவும் விஷ்ணுவால் நிறைந்து, என் பாவங்கள் அழிவையடையட்டும்.(96) உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட நான், மகிழ்ச்சியான முடிவை அடைய விரும்பி, உனது பாதுகாப்பை நாடுகிறேன். ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, ஓ! தேவர்களில் சிறந்தவனே, எது எனக்கு நன்மையோ, அதையே எனக்கு {செய்ய} நினைப்பாயாக.(97) ஓ! விஷ்ணுவே, அறிவுக்கும், தவங்களுக்கும் பிறப்பிடமான பிறப்பற்றவன் நீயே. இவ்வாறே நீ புகழப்படுகிறாய். ஓ! ஜனார்த்தனா, ஓ! தேவா, பேச்சை (மட்டுமே) கொண்ட வேள்வியால் இவ்வாறு என்னால் வழிபடப்படும் நீ என்னிடம் நிறைவு கொள்வாயாக.(98) வேதங்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவையாக இருக்கின்றன. தவங்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவையாக இருக்கின்றன. தேவர்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றனர். எங்கும், எப்போதும் அனைத்தும் நாராயணனே” என்று துதித்தார் {பீஷ்மர்}”.(99)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன பீஷ்மர், குவிந்த மனத்துடன் கிருஷ்ணனிடம், “கிருஷ்ணனை வணங்குகிறேன்” என்று சொல்லி வணங்கினார்.(100) பீஷ்மரின் வழிபாட்டைத் தன் யோக ஆற்றலால் அறிந்தவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான மாதவன், (அவரது {பீஷ்மரது} உடலுக்குள் நுழைந்து), கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலம் ஆகியவற்றின் தெய்வீக அறிவை அவருக்கு அளித்து அங்கிருந்து சென்றான்.(101) பீஷ்மர் அமைதியடைந்தபோது, (அவரைச் சுற்றிலும் அமர்ந்து) பிரம்மத்தை ஓதிக்கொண்டிருந்தவர்கள், கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன், அந்தக் குருக்களின் உயர் ஆன்மத் தலைவரை {பீஷ்மரைச்} சிறந்த வார்த்தைகளால் துதித்தனர்.(102) பிராமணர்களில் முதன்மையானோரான அவர்கள், உயிரினங்களில் முதன்மையான கிருஷ்ணனையும் புகழ்ந்தபடியே, மெல்லிய குரல்களால் பீஷ்மரை மீண்டும் மீண்டும் பாராட்டினர்.(103) உயிரினிங்களில் முதன்மையான மாதவன் {கிருஷ்ணன்}, தன்னிடம் பீஷ்மர் கொண்ட அர்ப்பணிப்பை (தனது யோக சக்தியால்) அறிந்து, தன் ஆசனத்தில் இருந்து திடீரென எழுந்து தன் தேரில் ஏறினான்.(104) {அப்போது} கேசவனும், சாத்யகியும் ஒரே தேரில் சென்றனர். சிறப்பு மிக்க இளவரசர்களான யுதிஷ்டிரனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} மற்றொரு தேரில் சென்றனர்.(105) பீமசேனனும், இரட்டையர்களும் {நகுல சகாதேவனும்} மூன்றாவதிலும், மனிதர்களில் காளையரான கிருபர், எதிரிகளை எரிப்பவனான யுயுத்சு, சூதனான சஞ்சயன் ஆகியோர், ஒரு நகரத்தைப் போலத் தெரிந்த தங்கள் தங்கள் தேர்களிலும் சென்றனர். அவர்கள் அனைவரும், தங்கள் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே சென்றனர்.(106,107) அந்த மனிதர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, பிராமணர்களால் சொல்லப்பட்ட தனக்கான புகழுரைகளைக் கேட்டபடியே மகிழ்ச்சியாகச் சென்றான். அந்தக் கேசியைக் கொன்றவன் {கிருஷ்ணன்}, (வீதியெங்கும்) கூப்பிய கரங்களுடனும், வணங்கிய தலைகளுடனும் காத்திருந்த மக்களை மகிழ்ச்சியான இதயத்துடன் வணங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}[22].(108)“இவ்விதம் பீஷ்மரால் சொல்லப்பட்ட ஸ்ரீகிருஷ்ணஸ்துதியைப் பக்தியுடன் படிப்பவனும், கேட்பவனும், ஸ்ரீகிருஷ்ணனுடைய அனுக்ரஹத்தால் பாபங்களெல்லாம் அற்று, முடிவில் ஸ்ரீ கிருஷ்ணபகவானை அடைகிறான். யோகிகள் உயிர்நீங்குங்காலத்தில் மிக்கப் பிரயத்தனத்துடன் மனத்தில் எந்தப் பகவானை நிலைக்கப் பாவனைச் செய்கிறார்களோ அந்த ஹரியைப் பீஷ்மர் எதிரிற்கண்டு கிருதார்த்தராயத் தம்முயிரைவிட்டார். முன்காலத்தில் பீஷ்மராற் சொல்லப்பட்டதும் மஹாபாபங்களை நாசஞ்செய்வதும், ஆச்சர்யமான செய்கையுள்ள ஸ்ரீ விஷ்ணுவைப் பற்றியதுமான இந்த ஸ்தவராஜம் முடிவுபெற்றது. பரிசுத்தனாகி மோக்ஷவிருப்பமுள்ள மனிதன் நிந்திக்கப்பட்ட பாவங்களை விலக்கும் இந்த ஸ்தவராஜத்தைப் படித்துத் தாமாகக் கிடைத்த அழிவுள்ள உலகங்களைக் கடந்து மஹாத்மாவினுடைய அழிவற்ற பதத்தைப் பெறுகிறான்”

க்ஷத்திரியர்கள் மீண்டதெவ்வாறு? – சாந்திபர்வம் பகுதி – 48-பீஷ்மரைக் காணச் சென்ற கிருஷ்ணனும், யுதிஷ்டிரனும் வழியில் பேசிக் கொண்டது; பரசுராமரால் உண்டாக்கப்பட்ட தடாகங்களை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணன்; பரசு ராமர் க்ஷத்திரியர்களை இருபத்தோரு முறை அழித்ததும், க்ஷத்திரியர்கள் மீண்டும் வளர்ந்ததும் எவ்வாறு என்று கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ரிஷிகேசனும் {கிருஷ்ணனும்}, மன்னன் யுதிஷ்டிரனும், கிருபரின் தலைமையிலானவர்கள் அனைவரும், நான்கு பாண்டவர்களும், கொடிகள், கொடிமரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், அரணமைக்கப்பட்ட நகரங்களைப் போலத் தெரிந்தவையுமான தங்கள் தங்கள் தேர்களில், வேகமான குதிரைகளின் உதவியுடன் குருக்ஷேத்திரத்தை நோக்கி வேகமாகச் சென்றனர்.(1,2) மயிர், ஊனீர், எலும்புகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டதும், உயர் ஆன்மாக்களைக் கொண்டோரான லட்சோபலட்சம் க்ஷத்திரியர்கள் தங்கள் உடல்களை விட்ட இடமுமான அந்தக் களத்தில் இறங்கினர்.(3) மேலும் அது {அந்தக் களம்}, யானைகள், குதிரைகளின் எலும்புகளாலும் அமைந்த பல மலைகளாலும், சங்குகளைப் போலச் சிதறிக் கிடக்கும் மனிதத் தலைகளாலும், மண்டை ஓடுகளாலும் நிறைந்திருந்தது.(4) ஆயிரக்கணக்கான ஈமச்சிதைகளாலும், கவசங்கள் மற்றும் ஆயுதங்களின் குவியல்களாலும் நிறைந்திருந்த அந்தப் பரந்த களம், குடிப்பதற்காக அந்தகனால் பயன்படுத்தப்பட்டதும், அண்மையில் கைவிடப்பட்டதுமான அவனுடைய பானசாலையைப் போலத் தெரிந்தது.(5)

அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், பூதக்கூட்டங்களாலும், ராட்சசர்களாலும் மொய்க்கப்பட்ட அந்தப் போர்க்களத்தைப் பார்த்தபடியே வேகமாகச் சென்றனர்.(6) அப்படிச் சென்று கொண்டிருந்தபோது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், யாதவர்களைத் திளைக்கச் செய்பவனுமான கேசவன், ஜமதக்னி மகனின் {பரசுராமரின்} ஆற்றலைக் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்னான்.(7) {கிருஷ்ணன்}, “ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, அதோ தொலைவில் காணப்படுவதே ராமரின் {பரசுராமரின்} ஐந்து தடாகங்களாகும். அங்கேதான் ராமர், க்ஷத்திரியர்களின் குருதியைக் கொண்டு தமது மூதாதையரான பித்ருக்களுக்குக் காணிக்கையளித்தார். பலமிக்கவரான அந்த ராமர் {பரசுராமர்}, இருபத்தோரு {21} முறை க்ஷத்திரியர்களிடம் இருந்து இந்தப் பூமியை விடுவித்த பிறகு, அங்கேதான் தனது பணியைக் கைவிட்டார்” என்றான் (9)

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “பழங்காலத்தில் க்ஷத்திரியர்களை இருபத்தோரு முறை ராமர் அழித்தார் என்று நீ சொல்வதில் எனக்குப் பேரையங்கள் {பெரும் சந்தேகங்கள்} இருக்கின்றன.(10) ஓ! யதுக்களில் காளையே, ஓ! அளவிலா ஆற்றலைக் கொண்டோனே க்ஷத்திரிய வித்தே ராமரால் அழிக்கப்பட்டது எனில், க்ஷத்திரிய வகையினர் மீண்டதெவ்வாறு?(11) ஓ! யதுக்களில் காளையே, சிறப்புமிக்க, உயர் ஆன்ம ராமரால் க்ஷத்திரிய வகை எவ்வாறு முற்றாக அழிக்கப்பட்டது? மேலும் அது மீண்டும் எவ்வாறு வளர்ந்தது?(12) பயங்கரமான தேர் மோதல்களில் கோடிக்கணக்கான க்ஷத்திரியர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர்? ஓ! நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, க்ஷத்திரியர்களின் சடலங்களால் பூமி விரவிக் கிடந்தது.(13) ஓ! யதுக்களில் புலியே, பழங்காலத்தில் உயர் ஆன்ம பிருகு குல வழித்தோன்றலான ராமரால் க்ஷத்திரிய வகையானது என்ன காரணத்தால் இவ்வாறு நிர்மூலமாக்கப்பட்டது? ஓ! விருஷ்ணி குலத்தோனே, ஓ! பறவைக் கொடி கொண்டோனே, இந்த என் ஐயத்தை நீக்குவாயாக. ஓ! கிருஷ்ணா, ஓ! வாசவனின் {இந்திரனின்} தம்பியே[1], உயர் அறிவு உன்னில் இருந்தே கிடைக்கிறது” என்றான் {யுதிஷ்டிரன்}.(தக்ஷனின் முதல் மகளான} அதிதியிலிருந்து இந்த அண்டத்தின் தலைவர்களான {லோக ஈஸ்வரர்களான} பனிரெண்டு ஆதித்யர்கள் தோன்றினர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெயர் வரிசையில் உனக்கு அவர்களை விவரித்துச் சொல்கிறேன்.(14) தாத்ரி {தாதா}, மித்ரன், அர்யமா, சக்ரன் {இந்திரன்}, வருணன், அம்சன், பகன், விவஸ்வத் {விவஸ்வான்}, உஷா {பூஷா}, சாவித்ரி {சவிதா},(15) த்வஷ்த்ரி {த்வஷ்டா} மற்றும் விஷ்ணு ஆகியோரே அவர்கள். எனினும், இளையவன் {விஷ்ணு} தகுதியால் அவர்கள் அனைவரையும் விட மேன்மையானவனாக இருந்தான்.)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு கதனின் பலமிக்க அண்ணன், ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட யுதிஷ்டிரனிடம், பூமியில் க்ஷத்திரியர்கள் மீண்டும் எவ்வாறு நிறைந்தனர் என்பது குறித்த அனைத்தையும் உள்ளபடியே சொன்னான்”.(14-16)

பரசுராமர்! – சாந்திபர்வம் பகுதி – 49-பரசுராமரின் கதையைச் சொன்ன கிருஷ்ணன்; காதிக்குப் பிறந்த விஷ்வாமித்திரர்; காதியின் மகள் சத்தியவதிக்குப் பிறந்த ஜமதக்னி; ஜமதக்னிக்குப் பிறந்த பரசுராமர்; ஹைஹய குல க்ஷத்திரியர்களால் கொல்லப்பட்ட ஜமதக்னி; கோபத்தால் க்ஷத்திரிய குலத்தை அழித்த பரசுராமர்; கசியபருக்குப் பூமியைத் தானமளித்த பரசுராமர்; கசியபரிடம் இரந்து கேட்ட பூமாதேவி; பூமாதேவி குறிப்பிட்ட மன்னர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை மன்னர்களாக்கிய கசியபர்…

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குந்தியின் மகனே, ராமரின் {பரசுராமரின்} சக்தி, ஆற்றல் மற்றும் பிறப்பைக் குறித்துப் பெருமுனிவர்களுடன் உரையாடும்போது நான் கேட்டவாறே சொல்கிறேன்; கேட்பீராக.(1) ஜமதக்னியின் மகனால் {பரசுராமரால்} கோடிக்கணக்கான க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு? மேலும், பல்வேறு அரச குலங்களில் மீண்டும் பிறந்தவர்கள் எவ்வாறு மீண்டும் கொல்லப்பட்டனர்? என்பதைக் கேட்பீராக.(2) ஜாஹ்னுவுக்கு, ரஜன் {அஜன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். ரஜனுக்குப் பலாகாஸ்வன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். மன்னன் பலாகாஸ்வனுக்கு, நன்னடத்தைக் கொண்டவனாகக் குசிகன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான்.(3) பூமியில் ஆயிரங்கண் இந்திரனுக்கு ஒப்பானவனாக இருந்த குசிகன், மூவுலகங்களுக்குத் தலைவனாகும் மகனை விரும்பி கடுந்தவங்களைச் செய்து வந்தான்.(4)கடுந்தவங்களைச் செய்பவனும், ஒரு மகனைப் பெறுவதற்குத் தகுந்தவனுமான அவனைக் {குசிகனைக்} கண்ட ஆயிரங்கண் புரந்தரன் {இந்திரன்}, (தன் சக்தியால்) அம்மன்னனை ஈர்த்தான்.(5) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பகனைக் கொன்றவனான அந்த மூவுலகங்களின் பெருந்தலைவனே, காதி என்ற பெயரில் அறியப்பட்டவனாகவும் குசிகரின் மகனாகவும் ஆனான்.(6) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, காதிக்கு, சத்தியவதி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள். பலமிக்கக் காதி, பிருகுவின் வழித்தோன்றலான ரிசிகருக்கு அவளை (மனைவியாகக்) கொடுத்தான்.(7) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, பிருகு குலத்தவரான அவளது தலைவர் {ரிசிகர்}, அவளது நடத்தையின் தூய்மையில் நிறைவு கொண்டவராக இருந்தார். அவர், (அவளது தந்தையான) காதிக்கு ஒரு மகனைக் கொடுப்பதற்காகப் பால் மற்றும் அரிசி கலந்த வேள்வி உணவைச் சமைத்தார்.(8)

பிருகு குலத்தின் ரிசிகர், தமது மனைவியை {சத்தியவதியை} அழைத்து, “புனிதமாக்கப்பட்ட உணவின் இப்பகுதி உன்னால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், (மறுபாதியான) இந்தப் பகுதி உன் தாயால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அவளுக்குச் {மன்னன் காதியின் மனைவிக்குச்} சுடர்மிக்கப் பிரகாசத்துடன் ஒரு மகன் பிறந்து, க்ஷத்திரியர்களில் காளையாக இருப்பான். பூமியில் க்ஷத்திரியர்களால் வெல்லப்பட முடியாத அவன், க்ஷத்திரியர்களில் முதன்மையானோரைக் கொல்பவனாக இருப்பான்.(10)

உன்னைப் பொறுத்தவரையில், ஓ! அருளப்பட்ட மங்கையே, உணவின் இப்பகுதியானது, பெரும் ஞானம் கொண்டவனும், அமைதியின் வடிவமும், தவத்துறவுகளுடன் கூடியவனும், பிராமணர்களில் முதன்மையானவனுமான ஒரு மகனை உனக்குக் கொடுக்கும்” என்றார்.(11) பிருகு குலத்தைச் சேர்ந்தவரான அந்த அருளப்பட்ட ரிசிகர், தமது மனைவியிடம் {சத்தியவதியிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, தவங்களில் தன் இதயத்தை நிலைநிறுத்தி காட்டுக்குச் சென்றுவிட்டார்.(12)

அதேநேரத்தில், மன்னன் காதி, புனித நீர்நிலைகளுக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்து, ரிசிகரின் ஆசிரமத்திற்குத் தன் ராணியுடன் வந்தான்.(13) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அப்போது சத்தியவதி, புனிதமாக்கப்பட்ட உணவின் இரு பகுதிகளையும் எடுத்துக் கொண்டு, பெரும் அவசரத்துடன் தன் தலைவர் சொன்ன வார்த்தைகளைத் தன் தாயிடம் சொன்னாள்.(14) ஓ! குந்தியின் மகனே, அப்போது அந்த அரசத்தாய் {ராஜமாதா}, அறியாமையால் தனக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த பகுதியைத் தன் மகளுக்குக் கொடுத்து, தன் மகளுக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த பகுதியைத் தனக்கு எடுத்துக் கொண்டாள்.(15) இதன்பேரில், க்ஷத்திரியர்களை நிர்மூலம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த பயங்கர வடிவிலான பிள்ளையைத் தன் கருவில் கொண்ட சத்தியவதியின் உடல் பிரகாசத்தால் ஒளிவீசியது.(16)

அவளது கருவறைக்குள் கிடக்கும் பிராமணப் பிள்ளையைக் கண்ட அந்தப் பிருகுக்களில் புலி {ரிசிகர்}, தெய்வீக அழகுடையவளான தன் மனைவியிடம் {சத்தியவதியிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(17) “ஓ! அருளப்பட்ட பெண்ணே, புனிதமாக்கப்பட்ட உணவுக் கவளங்களை மாற்றியதன் விளைவால் உன் தாய் உன்னை வஞ்சித்துவிட்டாள். உன் மகன் கொடுஞ்செயல்களைச் செய்பவனாகவும், இதயத்தில் பழியுணர்ச்சி கொண்டவனாகவும் இருப்பான். அதே போல (உன் தாய்க்குப் பிறக்கப்போகும்) உன் சகோதரனோ, தவத்துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பிராமணனாக இருப்பான்.(18) உனக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த புனிதமாக்கப்பட்ட உணவில் உயர்ந்ததும், உலகளாவியதுமான பிரம்மத்தின் வித்து வைக்கப்பட்டிருந்தது. அதே வேளையில், உன் தாய்க்காக நிர்ணயிக்கப்பட்டதில் க்ஷத்திரிய சக்தியின் மொத்த தொகையும் வைக்கப்பட்டிருந்தது.(19) எனினும், ஓ! அருளப்பட்ட மங்கையே {சத்தியவதியே}, அந்த இரண்டு பகுதிகளும் மாற்றப்பட்டதன் விளைவால், என்ன நினைத்து இது செய்யப்பட்டதோ அது நடக்காது. ஒரு தாய் பிராமணப் பிள்ளையை அடைவாள், நீயோ ஒரு க்ஷத்திரியனை மகனாக அடைவாய்” என்றார்.(20)

தன் தலைவரால் இவ்வாறு சொல்லப்பட்ட உயர்ந்த அருளைக் கொண்ட சத்தியவதி, நெடுஞ்சாண்கிடையாக அவரது பாதத்தில் தன் தலையை வைத்து நடுங்கிக் கொண்டே,(21) “ஓ! புனிதமானவரே, பிராமணர்களில் இழிந்தவனை (உமது மகனாக) அடைவேன் என்ற இத்தகு வார்த்தைகளை என்னிடம் சொல்வது உமக்குத் தகாது” என்றாள்.(22)

ரிசிகர் {சத்தியவதியிடம்}, “ஓ! அருளப்பட்ட மங்கையே, உன்னைப் பொறுத்தவரை இஃது என்னால் நினைக்கப்பட்டதன்று. புனிதமாக்கப்பட்ட உணவுக்கவளங்களை மாற்றியதன் விளைவாலேயே கடுஞ்செயல்களைச் செய்யக்கூடிய மகனை நீ கருவில் கொண்டிருக்கிறாய்” என்றார்.(23)

சத்தியவதி {ரிசிகரிடம்}, “ஓ! தவசியே, நீர் விரும்பினால் உம்மால் அவளுக்கு உலகங்களையே படைத்துத் தர முடியும் எனும்போது ஒரு பிள்ளையைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஓ! சக்திமிக்கவரே, அறவோனும், அமைதிக்குத் தன்னை அர்ப்பணித்தவனுமான ஒரு மகனை எனக்குக் கொடுப்பதே உமக்குத் தகும்” என்றாள்.(24)

ரிசிகர் {சத்தியவதியிடம்}, “ஓ! அருளப்பட்ட மங்கையே, இதற்கு முன் கேலிக்காகக் கூட என்னால் பொய்மை பேசப்பட்டது கிடையாது. நெருப்பை மூட்டி, வேத சூத்திரங்களின் உதவியுடன் புனிதமாக்கப்பட்ட உணவைச் சமைத்ததில் (அந்த உள்ளார்ந்த நிகழ்வில்) என்ன சொல்ல முடியும்?(25) ஓ !இனியவளே, இது பழங்காலத்திலேயே விதிக்கப்பட்ட விதியாகும். நான் என் தவங்களின் மூலம் இவை அனைத்தையும் உறுதி செய்திருக்கிறேன். உன் தந்தையின் வழித்தோன்றல்கள் அனைவரும் பிராமணத் தன்மைகளையே கொண்டிருப்பார்கள்” என்றார்.(26)

சத்தியவதி {ரிசிகரிடம்}, “ஓ! சக்திமிக்கவரே, ஓ! தவசிகளில் முதன்மையானவரே, நமது பேரப்பிள்ளை அவ்வாறு இருக்கட்டும், ஆனால் எனக்கு, அமைதியில் நாட்டம் கொண்ட ஒரு மகன் பிறக்க வேண்டும்” என்றாள்.(27)

ரிசிகர் {சத்தியவதியிடம்}, “ஓ! அழகிய நிறம் கொண்டவளே, ஒரு மகனுக்கும், பேரப்பிள்ளைக்கும் இடையில் நான் எந்த வேறுபாட்டையும் காணவில்லை. ஓ! இனிமையானவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும்” என்றார்”.(28)

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு சத்தியவதி, தவங்களில் அர்ப்பணிப்பு கொண்டவரும், அமைதியில் நாட்டம் கொண்டவரும், நெறிப்படுத்தப்பட்ட நோன்புகளை நோற்பவருமான ஜமதக்னியை பிருகு குலத்தின் மகனாக ஈன்றெடுழுத்தாள்.(29) குசிகனின் மகன் காதி, விஷ்வாமித்திரர் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். ஒரு பிராமணனின் ஒவ்வொரு பண்பையும் கொண்ட அந்த மகன் (க்ஷத்திரிய வகையில் பிறந்தவராக இருப்பினும்) ஒரு பிராமணனுக்கு இணையானவராகவே இருந்தான்.(30) (இவ்வாறே) ரிசிகர், ஜமதக்னி என்ற தவக்கடலை மகனாகப் பெற்றார். ஜமதக்னி கடுஞ்செயல்களைச் செய்யவல்ல ஒரு மகனைப் பெற்றார்.(31) மனிதர்களில் முதன்மையானவனான அந்த மகன் {பரசுராமர்}, ஆயுத அறிவியல் உள்ளிட்ட அறிவியல்களில் திறம்பெற்று இருந்தார். சுடர்மிக்க நெருப்பைப் போன்றவரான அந்த மகனே, க்ஷத்திரியர்களை நிர்மூலமாக்கிய ராமராவார் {பரசுராமராவார்}.(32)

கந்தமாதன மலைகளில் மஹாதேவனை நிறைவு செய்த அவர் {பரசுராமர்}, அந்தப் பெருந்தேவனிடம் ஆயுதங்களை, அதிலும் குறிப்பாகக் கடுஞ்சக்தி கொண்ட கோடரியை இரந்து கேட்டார்.(33) நெருப்பின் சக்தியையும், தாங்கிக் கொள்ளப்பட முடியாத கூர்மையையும் கொண்ட அந்த ஒப்பற்ற கோடரியின் விளைவால் அவர் உண்மையில் ஒப்பற்றவரானார்.(34) அதே வேளையில், கிருதவீர்யனின் வலிமைமிக்க மகனும், க்ஷத்திய வகையைச் சேர்ந்தவனும், ஹைஹயர்களின் ஆட்சியாளனும், (பெரும் முனிவரான) தத்தாத்ரேயரின் அருளால் ஆயிரம் கரங்களை அடைந்தவனும், உயர்ந்த அறம்சார்ந்த நடத்தை கொண்டவனுமான அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, தன் கரங்களின் வலிமையால் மலைகளுடனும், ஏழு தீவுகளுடனும் கூடிய மொத்த பூமியையும் போரில் அடக்கி, பலமிக்கப் பேரரசனாகி, (இறுதியில்) ஒரு குதிரை வேள்வியில் பூமியை பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுத்தான்.(35-37)

ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஒரு குறிப்பட்ட சந்தர்ப்பத்தில், பெரும் ஆற்றலைக் கொண்டவனும், ஆயிரங்கரங்களைக் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி, தாகமடைந்தவனான நெருப்புத் தேவனால் வேண்டப்பட்டு அந்தத் தேவனுக்குப் பிச்சையளித்தான்.(38) அவனது கணைகளின் முனைகளில் இருந்து உதித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த நெருப்பு தேவன் {அக்னி}, (தனக்குக் கொடுக்கப்பட்டதை) எரிக்க விரும்பி, கிராமங்களையும், நகரங்களையும், நாடுகளையும், மாட்டிடையர்களின் சிற்றூர்களையும் எரித்தான்.(39) மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தக் கார்த்தவீரியனின் ஆற்றலின் மூலம் அந்த நெருப்பு தேவன் மலைகளையும், பெருங்காடுகளையும் எரித்தான்.(40)

ஹைஹயர்களுடைய மன்னனின் துணையோடும், காற்றால் உண்டான சக்தியுடனும் சுடர்விட்டெரிந்த நெருப்பு தேவன், உயர் ஆன்ம ஆபவரின் இனிய ஆசிரமத்தை எரித்தான்.(41) ஓ! வலிய கரங்களைக் கொண்ட மன்னா {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி கொண்டவரான ஆபவர், பலமிக்க அந்த க்ஷத்திரியனால் {கார்த்தவீரியனால்} தன் ஆசிரமம் எரிக்கப்பட்டதைக் கண்டு, கோபத்தால் அந்த ஏகாதிபதியிடம்,(42) “ஓ! அர்ஜுனா, கண்ணுக்கினியதான என் வனத்தையும் தவிர்க்காமல் நீ அவற்றை எரித்ததால், (பிருகு குல) ராமன், உன் (ஆயிரம்) கரங்களைத் துணிப்பான்” என்று சபித்தார்.(43) எனினும், ஓ! பாரதரே, பேராற்றல் கொண்டவனும், வலிமைமிக்கவனும், அமைதிக்கு எப்போதும் அர்ப்பணிப்பு உள்ளவனும், பிராமணர்களை எப்போதும் மரியாதையுடன் நடத்துபவனும், (அனைத்து வகையினருக்கும்) பாதுகாப்பை அளித்தவனும், ஈகையாளனும், துணிச்சல்மிக்கவனுமான அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, அந்த உயர் ஆன்ம முனிவரால் இடப்பட்ட சாபத்தை எண்ணியும் பார்க்கவில்லை. எப்போதும் செருக்குடையவர்களும், கொடூரர்களுமான அவனது பலமிக்க மகன்கள், அந்தச் சாபத்தின் விளைவாக அவனது மரணத்திற்கு மறைமுகக் காரணமானார்கள். ஓ! பாரதக் குலத்தின் காளையே, அந்த இளவரசர்கள், ஹைஹயர்களின் ஆட்சியாளனான கார்த்தவீரியன் அறியாமலேயே, ஜமதக்னியுடைய ஹோமப் பசுவின் கன்றைக் கவர்ந்து சென்றனர். இதன் காரணமாக உயர் ஆன்ம ஜமதக்னிக்கும் ஹைஹயர்களுக்குமிடையில் சச்சரவு தோன்றியது.(44-47)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஜமதக்னியின் மகனான சக்திமிக்க ராமர் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்து, அர்ஜுனனின் {கார்த்தவீரியார்ஜுனனின்} கரங்களைத் துண்டித்து, அம்மன்னனின் அரண்மனையில் திரிந்து கொண்டிருந்த தமது தந்தையின் கன்றை மீட்டுக் கொண்டு வந்தார்.(48) ஓ! மன்னா, கொண்டாடப்பட்ட ராமர் {பரசுராமர்} புனித விறகும், புல்லும் சேகரிக்கச் சென்றிருந்தபோது, அர்ஜுனனின் மூட மகன்கள் ஒன்றாகச் சேர்ந்து, உயர் ஆன்ம ஜமதக்னியின் ஆசிரமத்திற்குச் சென்று, தங்கள் வேல்களின் முனைகளால் அந்த முனிவரின் {ஜமதக்னியின்} தலையை அவரது உடலில் இருந்து வீழ்த்தினர்.(49,50) தமது தந்தையின் மரணத்தால் கோபமடைந்து, பழி தீர்க்க நினைத்த ராமர், க்ஷத்திரியர்களிடம் இருந்து பூமியை விடுவிக்கச் சபதமேற்று ஆயுதங்களை எடுத்தார்.(51) பிறகு, பெரும் சக்தி கொண்ட அந்தப் பிருகுக்களில் புலி {பரசுராமர்}, தன் ஆற்றலை வெளிப்படுத்தி, கார்த்தவீரியனின் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவரையும் விரைவில் கொன்றார்.(52)

ஓ! மன்னா, சினத்தால் ஆயிரக்கணக்கான ஹைஹயர்களைக் கொன்ற அந்தப் பிருகுவின் வழித்தோன்றல், பூமியைக் குருதியால் சகதியாக்கினார்.(53) பெரும் சக்தி கொண்ட அவர், விரைவில் பூமியை க்ஷத்திரியர்கள் எவரும் அற்றதாகச் செய்தார். பிறகு கருணையால் நிரம்பிய அவர் காட்டுக்கு ஓய்ந்து சென்றார்.(54) பிறகு, ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர், இயல்பிலேயே கோபம் நிறைந்தவரான ராமர் {பரசுராமர்}, (கோழைத்தனம் கொண்டவர்) எனக் குற்றம் சுமத்தப்பட்டார்.(55) ஓ! ஏகாதிபதி, விஷ்வாமித்திரரின் பேரனும், ரைப்பியரின் மகனும், பராவசு என்ற பெயரைக் கொண்டவருமான பெருந்துறவி ஒருவர்,(56) “ஓ! ராமரே {பரசுராமரே}, யயாதியின் வீழ்ச்சியின்போது, வேள்வியில் கூடியிருந்த அறவோரான பிரதர்த்தனன் மற்றும் பிறர், பிறப்பால் க்ஷத்திரியர்களில்லையோ?(57) ஓ! ராமரே, நீர் உண்மை நோன்புகளைக் கொண்டவரல்ல. மக்களுக்கு மத்தியில் நீர் வெறும் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறீர். க்ஷத்திரிய வீரர்களிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகவே நீர் மலைகளில் இருக்கிறீர்” என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.(58)

பராவசுவின் வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பிருகுவின் வழித்தோன்றல் {பரசுராமர்}, மீண்டும் ஆயுதமெடுத்து, மீண்டும் பூமியை நூற்றுக்கணக்கான க்ஷத்திரியர்களின் உடல்களால் விரவிக் கிடக்கச் செய்தார்.(59) எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ராமரால் தப்ப விடப்பட்டவர்களும், எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கானவர்களுமான க்ஷத்திரியர்கள் (காலத்தின் போக்கில்) பல்கிப் பெருகி, பூமியில் வலிமைமிக்க ஏகாதிபதிகளாகினர்.(60) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மீண்டும் ராமர் {பரசுராமர்}, பிள்ளைகளைக் கூடத் தப்ப விடாமல் அவர்களைக் கொன்றார். உண்மையில், பூமியானது முற்றாபிறவி கொண்ட க்ஷத்திரிய பிள்ளைகளின் உடல்களால் மீண்டும் விரவிக் கிடந்தது.(61) ராமர் {பரசுராமர்}, க்ஷத்திரியப் பிள்ளைகள் பிறந்த உடனேயே அவர்களைக் கொன்றார். எனினும், சில க்ஷத்திரியப் பெண்டிர், (ராமரின் கோபத்திலிருந்து) தங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்வதில் வென்றனர்.(62)

இருபத்தோரு {21} முறை பூமியை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்த பலமிக்கப் பார்க்கவர் {பரசுராமர்}, ஒரு குதிரை வேள்வி நிறைவின்போது, கசியபரின் வேள்விக் கொடையாகப் பூமியை அளித்தார்.(63) ஓ! மன்னா, எஞ்சியிருக்கும் க்ஷத்திரியர்களைக் காக்க நினைத்த கசியபர், வேள்விக்கரண்டியுடன் கூடிய தன் கரங்களால் சுட்டிக்காட்டியபடி இந்த வார்த்தைகளைச் சொன்னார்,(64) “ஓ! பெரும் தவசியே, தென்கடலின் கரைகளுக்குச் செல்வாயாக. ஓ! ராமா, (எது) என் ஆட்சிப்பகுதியாக இருக்கிறதோ, அதில் வசிப்பது உனக்குத் தகாது” என்றார்.(65) இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டதும், பெருங்கடலானது, தனது மறுகரையில் சூர்ப்பாரகம் என்றழைக்கப்படும் பகுதியை {நாட்டைத்} திடீரென உண்டாக்கியது.(66) கசியபரும், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பூமியைக் கொடையாக ஏற்று, அதைப் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்துவிட்டுப் பெருங்காட்டுக்குள் நுழைந்தார்.(67)

பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே, சூத்திரர்கள், வைசியர்கள் ஆகியோர், வேண்டுமென்றே பிராமணர்களின் மனைவியரோடு தங்களை இணைத்துக் கொள்ளத் தொடங்கினர்.(68) பூமியில் அரசற்ற நிலை தோன்றும்போது, வலியோரால் வலிமையற்றவர்கள் ஒடுக்கப்பட்டு, எந்த மனிதனும் தன் உடைமைக்குத் தலைவனாக இல்லாத நிலையை அடைந்தான்.(69) அந்தக் குழப்பமான சூழ்நிலையின் விளைவால், பூமியானது அறம் நோற்கும் க்ஷத்திரியர்களால் முறையாகப் பாதுகாக்கப்படாமல், தீயோரால் ஒடுக்கப்பட்டு, விரைவில் மிகக் கீழான நிலையில் {பாதாளத்திற்குள்} மூழ்கியது.(70) அச்சத்தால் மூழ்கும் பூமியைக் கண்ட உயர் ஆன்மக் கசியபர், அவளைத் {பூமாதேவியைத்} தன் மடியில் தாங்கினார்; அந்தப் பெரும் முனிவர் பூமியைத் தன் மடியில் தாங்கியதிலிருந்தே அவள் உர்வி என்ற பெயரில் அறியப்படுகிறாள்.(71) அந்தப் பூமாதேவி, தன் பாதுகாப்புக்காகக் கசியபரிடம் ஒரு மன்னனை இரந்து கேட்டாள்[1].(72)(பிறகு, இவ்வுலகம் அராஜகமானதும், சூத்திரர்களும், வைஸ்யர்களும் தம்மிஷ்டப்படி மேற்குலத்தார் தாரங்களிடம் செல்லத் தொடங்கினார்கள். ஓ! பரதரேறே! பலமுள்ளவர்கள் பலம் குறைந்தவர்களை அடிக்கத் தொடங்கினார்கள். அக்காலம் பொருள்களால் பிரபுத்தன்மை எவனிடமும் நிலைத்திருக்கவில்லை. மூர்க்கர்களான சில பிராம்மணர்கள் தாம் பண்டிதரென்னும் அகங்காரமுள்ளவராய்க் கள்ளைக் குடிக்கத் தலைப்பட்டார்கள். பிராம்மணர்கள், க்ஷத்திரியர்கள், வைசையர்கள், சூத்திரர்கள் யாவரும் கெட்ட வழியிற் சென்று ஒருவரையொருவர் அடுத்துக் கொலைசெய்ய முயன்றார்கள். கெட்டவழியிற் சென்ற பிராம்மணர்கள் தம்தர்மத்தைவிட்டுப் பாஷண்டர்களானார்கள். எல்லோரும் திருட்டு, பொய் மாயைகளைச் செய்தார்கள். தமது ஜாதிதர்மங்களையும் ஆஸ்ரமதர்மங்களையும் ஸரிவரநடத்தி நல்வழிச் செல்லும் பிராம்மணர்களையும், வைசியர்களையும் தர்மஞ்செய்யும் சூத்திரர்களையும், கெட்ட நடையுள்ள சிலர் யாதொரு பயமுமின்றிக் கொலை செய்தார்கள். வேறு சிலர் யாகத்தையும் அத்தியயனத்தையும் செய்பவர்களையும், ஆஸ்ரமத்திலிருக்கும் தவஞ்செய்பவர்களையும், பசுக்கள், பாலர்கள், கிழவர்கள், ஸ்திரீகள் ஆகிய இவர்களையும் நாசஞ்செய்தார்கள். வேதமும், தர்மசாஸ்திரமும், ராஜநீதியும் அக்காலம் ஒளித்துப் போயின. கீழ்மேலான கெட்ட செய்கையால் பல துவிஜர்கள் பெரும்பாலும் விராத்தியர்களும், மிலேச்சர்களுமானார்கள். தர்மத்தைப் பாதுகாக்கும் க்ஷத்திரியர்களால் நீதிப்படி காக்கப்படாத பூமிதேவியும் அக்காலத்தில் துஷ்டமனிதர்களின் தீச்செயல்களால் பீடிக்கப்பட்டுப் பாதாளஞ் செல்லத் தொடங்கினாள். அப்படிப் பயந்து ஓடிப் பாதாளத்தில் முழுகக்கூடிய பூமியைக் கண்டு பெரிய மனுமுள்ள கஸ்யபர் தமது தொடையில் தாங்கித் தூக்கினார்)பூமாதேவி {கசியபரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் சிலர் என்னால் பெண்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஹைஹயர்களின் குலத்தில் பிறந்தவர்கள். ஓ! தவசியே, அவர்கள் என்னைப் பாதுகாக்கட்டும்.(73) ஓ! சக்திமிக்கவரே, புருவின் குலத்தில் விதுரதனின் மகன் என்றொருவன், ரிக்ஷவான் மலைகளில் கரடிகளுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான்.(74) சௌதாசனின் மகனான மற்றொருவன், அளவிலா சக்தி கொண்டவரும், எப்போதும் வேள்விகளில் ஈடுபடுபவருமான பராசரரின் கருணையால் பாதுகாக்கப்பட்டு வருகிறான்.(75) அவன் மறுபிறப்பாள வகைகளிலொன்றில் பிறந்திருந்தாலும், ஒரு சூத்திரனைப் போல அந்த முனிவருக்கு அனைத்துப் பணிவிடைகளையும் செய்து வருவதால் அவன் சர்வகர்மன் (அனைத்துப் பணிகளையும் செய்யும் பணியாள்) என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறான்.(76) பெரும் சக்தி கொண்ட சிபியின் மகன் கோபதி என்ற பெயரில் காட்டில் பசுக்களுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான். ஓ! தவசியே, அவன் என்னைப் பாதுகாக்கட்டும்.(77)

பெரும் வலிமை கொண்ட பிரதர்த்தனன் மகன், வத்சன் என்ற பெயரில் மாட்டுக்கொட்டிலில் கன்றுகளுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான். அரச வகையைச் சேர்ந்த அவன் என்னைப் பாதுகாக்கட்டும்.(78) திவிரதனின் பேரனும், ததிவாஹனனின் மகனுமான ஒருவன், தவசியான கௌதமரால் கங்கைக்கரையில் பாதுகாக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறான்.(79) அவனுடைய பெயர் பிருஹத்ரதன் என்பதாகும். பெரும் சக்தியாலும், எண்ணற்ற அருள் குணங்களாலும் அருளப்பட்டிருக்கும் அந்த அருள் நிறைந்த இளவரசன் கிருத்ரக்கூடம் என்ற மலையில் ஓநாய்களால்[2] பாதுகாக்கப்படுகிறான்.(80) மருத்த குலத்தைச் சேர்ந்த பல க்ஷத்திரியர்களும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர். சக்தியில் மருத்த தேவனுக்கே இணையான அவர்கள், பெருங்கடலால் வளர்க்கப்பட்டிருக்கின்றனர்.(81) இந்த க்ஷத்திரிய வகைப் பிள்ளைகள் பல்வேறு இடங்களில் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள், கைவினைஞர்கள் மற்றும் பொற்கொல்லர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் என்னைப் பாதுகாத்தால், நான் அசைவில்லாமல் நிலைபெற்றிருப்பேன்.(82) அவர்களுடைய தந்தைமாரும், பாட்டன்மாரும் பேரன்மாரும் பேராற்றல் கொண்ட ராமரால் {பரசுராமரால்} என் பொருட்டுக் கொல்லப்பட்டனர். ஓ! பெரும் தவசியே {கசியபரே}, அவர்களது ஈமச் சடங்குகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது என் கடமையாகும்.(83) தற்போதைய ஆட்சியாளர்களால் நான் பாதுகாக்கப்பட விரும்பவில்லை. ஓ! தவசியே, நான் (முன்பு போலவே) நீடிக்க வேண்டிய ஏற்பாடுகளை விரைவாகச் செய்வீராக” என்றாள்.(84)வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது, தவசியான கசியபர், அந்தத் தேவி {பூமாதேவி} குறிப்பிட்ட பெருஞ்சக்தி கொண்ட க்ஷத்திரியர்களைத் தேடி (அவளைப் பாதுகாப்பதற்கான) மன்னர்களாக முறையாக அவர்களை நிறுவினார்.(85) இப்போது வரை நீடித்திருக்கும் அந்த க்ஷத்திரிய குலங்களைச் சேர்ந்தோர், அந்த இளவரசர்களின் வாரிசுகளே ஆவர். ஓ! பாண்டுவின் மகனே, எவற்றை நீர் கேட்டீரோ, அவை பழங்காலத்தில் இவ்வாறே நடந்தன” என்றான் {கிருஷ்ணன்}.(86)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அறவோரில் முதன்மையான அந்த உயர் ஆன்ம யாதவ வீரன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனுடன் இவ்வாறு பேசிக் கொண்டே, திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டும் தெய்வீகச் சூரியனைப் போல அந்தத் தேரில் வேகமாகச் சென்று கொண்டிருந்தான்”.(87)

பீஷ்மரின் மகிமை! – சாந்திபர்வம் பகுதி – 50-பீஷ்மரின் அருகாமையை அடைந்து அவரைச் சுற்றி அமர்ந்து கொண்ட கிருஷ்ணன், யுதிஷ்டிரன் மற்றும் பிறர்; பீஷ்மரைப் புகழ்ந்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ராமரின் {பரசுராமரின்} சாதனைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், ஆச்சரியத்தால் நிறைந்து, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்},(1) “ஓ! விருஷ்ணி குலத்தோனே, கோபத்தில் க்ஷத்திரயர்களிடம் இருந்து பூமியை விடுவித்த உயர் ஆன்ம ராமரின் {பரசுராமரின்} ஆற்றல் சக்ரனுக்கே {இந்திரனுக்கே} இணையானது.(2) க்ஷத்திரிய குலக்கொழுந்துகள், ராமர் {பரசுராமர்} மீது கொண்ட அச்சத்தால், பசுக்கள், பெருங்கடல், சிறுத்தை புலிகள் கரடிகள், குரங்குகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டனர் (மறைக்கப்பட்டு வளர்த்து வரப்பட்டனர்).(3) ஒரு பிராமணரால் அறச்சாதனை நிறைவேறும்போது, இவ்வுலகில் வசித்த மனிதர்கள் அனைத்துப் புகழுக்கும் தகுந்தவர்களாவர்” என்றான்.(4) இந்த உரையாடல் முடிந்த போது, மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணன் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய அந்தச் சிறப்புமிக்க மனிதர்கள், பலமிக்கக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} கணைகளின் படுக்கையில் கிடக்கும் இடத்திற்குச் சென்றனர்.(5)

பிறகு அவர்கள், கதிர்களால் மறைக்கப்பட்ட மாலை சூரியனின் காந்திக்கு ஒப்பாகக் கணைப்படுக்கையில் நீண்டு கிடக்கும் பீஷ்மரைக் கண்டனர்.(6) நூறு வேள்விகளைச் செய்த சொர்க்கத்தின் தேவனை {இந்திரனைப்} போல அந்தக் குருவீரர் தவசிகள் பலரால் சூழப்பட்டிருந்தார். ஓகவதி ஆற்றின் கரையில் அமைந்திருந்ததான அவர் {பீஷ்மர்} கிடந்த இடம் மிகப் புனிதமானதாக இருந்தது.(7) தொலைவிலேயே அவரைக் கண்ட கிருஷ்ணன், தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, நான்கு பாண்டவர்கள் மற்றும் சரத்வான் {கிருபர்} தலைமையிலான பிறர் ஆகியோர் தங்கள் வாகனங்களில் இருந்து கீழே இறங்கி, குழப்பமான தங்கள் மனங்களை ஒன்றுதிரட்டி, தங்கள் புலன்களை அனைத்தையும் குவித்துக் கொண்டு அந்தப் பெரும் முனிவர்களை அணுகினர்.(8,9) கோவிந்தன் {கிருஷ்ணன்}, சாத்யகி மற்றும் பிறர், வியாசரின் தலைமையிலான அந்த முனிவர்களில் முதன்மையானோரை வணங்கிவிட்டு, கங்கையின் மைந்தரை அணுகினர்.(10)

மனிதர்களில் முதன்மையானோரான அந்த யது மற்றும் குரு இளவரசர்கள், பெரும் தவத்தகுதி கொண்ட கங்கையின் மைந்தரைக் கண்டு, அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.(11) அணைந்து போகும் நெருப்பாகத் தெரிந்த பீஷ்மரைக் கண்ட கேசவன் {கிருஷ்ணன்}, உற்சாகமற்ற இதயத்துடன் பின்வருமாறு அவரிடம் பேசினான்.(12) கேசவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, “உமது உள்ளுணர்வுகள் முன்பு போல இப்போது தெளிவாக இருக்கின்றனவா? ஓ! நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, உமது புத்தி மயங்காதிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.(13) கணைகளால் பீடிக்கப்பட்ட காயங்களில் இருந்து எழும் வலி உம்மைத் துன்புறுத்தவில்லை என நான் நம்புகிறேன். மனத்துயரால் உடல் பலவீனமடைகிறது.(14) ஓ! பலமிக்க வீரரே, அறவோரான உமது தந்தை சந்தனு உமக்களித்த வரத்தின் விளைவால், மரணமானது உமது விருப்பதைச் சார்ந்தே இருக்கிறது. நீர் அடைந்திருக்கும் இந்த வரத்தின் விளைவால் உண்டாகும் தகுதியை நான் அடையவில்லை.(15)

(உள்செலுத்தப்படும்) மிக நுண்ணிய ஊசி உடலுக்கு வலியை உண்டாக்கும். ஓ! மன்னா {பீஷ்மரே}, அவ்வாறிருக்கையில், நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டிருக்கும் உம்மிடம்என்ன கேட்க முடியும்?(16) வலி உம்மைப் பீடித்திருக்கிறது எனச் சொல்லமுடியாது என்பது நிச்சயம். ஓ! பாரதரே {பீஷ்மரே}, உயிரினங்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகியவற்றைக் குறித்துத் தேவர்களுக்கே போதிக்க நீர் தகுந்தவர்.(17) பெரும் ஞானம் கொண்ட உமக்கு, கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியவை குறித்த அனைத்தும் உமக்கு நன்றாகத் தெரியும்.(18) ஓ! பெரும் ஞானியே, அறம் மற்றும் கடை ஆகியவற்றின் பெருங்கடலான நீ, படைக்கப்பட்ட உயிரினங்களின் அழிவு, அறவோருக்கான வெகுமதி ஆகியவற்றையும் நன்கறிவீர்.(19) நலமிக்க அங்கங்கள் மற்றும் முற்றான உடல் நலத்துடனும், பெருகும் அரசின் இன்பத்தில் நீர் வாழ்ந்த போது, பெண் தோழிகளால் சூழப்பட்டிருந்தாலும், பெண் உறவை நீர் மறுத்ததை நான் கண்டேன்.(20)

பெரும் சக்தியும், அறத்தில் உறுதியான அர்ப்பணிப்பும், வீரமும், அறத்தையே தமது தொடர்செயலாகக் கொண்டவரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மரைத் தவிர, கணைகளின் படுக்கையில் கிடக்கும் மரணத் தருவாயிலும், தனது தவசக்தியின் மூலமாக மரணத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்கொண்ட வேறு எந்த மனிதனையும் மூவுலகிலும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(21,22) உண்மை, தவம், கொடை, வேள்விகள், ஆயுத அறிவியல், வேதங்கள், பாதுகாப்பு வேண்டுவோரைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு இவ்வளவு அர்ப்பணிப்புடனும், உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழைக்காமலும், உயிரினங்கள் அனைத்தின் நன்மையில் ஈடுபாட்டுடனும் கூடிய உம்மைப்போன்ற பெரிய தேர்வீரர் எவரையும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(23,24) தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களை ஒரே தேரில் சென்று அடக்கக்கூடியவர் நீர் என்பதில் ஐயமில்லை.(25)

ஓ! வலிய கரங்களைக் கொண்ட பீஷ்மரே, உம்மை ஒன்பதாவது வசு என்றே பிராமணர்கள் எப்போதும் சொல்கிறார்கள். எனினும், உமது நற்பண்புகளால் அவர்கள் அனைவரையும் விஞ்சி நிற்கும் நீர், வாசவனுக்கே இணையானவராவீர்.(26) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! உயிரினங்களில் முதன்மையானவரே, உமது ஆற்றலுக்காகத் தேவர்களாலும் கூடக் கொண்டாடப்படுபவர் நீர் என்பதை நான் அறிவேன்.(27) ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, பூமியில் உள்ள மனிதர்களுக்கு மத்தியில், உம்மைப் போன்ற இத்தகு பண்புகளைக் கொண்ட வேறு எவரையும் நாங்கள் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை.(28) ஓ! அரசவகையைச் சேர்ந்தவரே ஒவ்வொரு பண்பையும் பொறுத்தவரையில் நீர் தேவர்களையும் விஞ்சி நிற்கிறீர். உமது தவச் சக்தியின் மூலம் உம்மால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களை உண்டாக்க முடியும். அவ்வாறிருக்கையில், உமது முதன்மையான நற்பண்புகளால் அருள் உலகங்கள் பலவற்றை நீர் அடைந்திருப்பதைக் குறித்து வேறு என்ன சொல்ல முடியும்?(29) தமது உறவினர்களைக் கொன்றதால் உண்டான கவலையில் எரிந்து கொண்டிருக்கும் பாண்டுவின் மூத்த மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} துயரத்தை இப்போது அகற்றுவீராக.(30)

நால்வகையினரைப் பொறுத்தவரையில் அறிவிக்கப்பட்டிருக்கும் கடமைகள் அனைத்தையும், நான்கு வகை வாழ்வுமுறைகளைக் குறித்தும் நீர் நன்கறிந்திருக்கிறீர்.(31) ஓ! பாரதரே நால்வகை அறிவுக்கிளைகளில், நான்கு ஹோத்திரங்களில் அறிவிக்கப்பட்டவை அனைத்தும், யோகம் மற்றும் சாங்கிய தத்துவங்களில் விதிக்கப்பட்டுள்ள நித்திய கடமைகள்,(32) ஓ! பாரதரே {பீஷ்மரே}, ஓ! கங்கையின் மைந்தரே, நான்கு வகையினரின் கடமைகளையும், அறிவிக்கப்பட்டிருக்கும் அவர்களது நடைமுறைகளுக்குப் பொருந்தாத கடமைகளையும், அதனதன் விளக்கங்களோடு அறிந்தவர் நீர்.(33) நால் வகையினரின் கலப்பில் உதித்தவர்களுக்காக விதிக்கப்பட்ட கடமைகளையும், குறிப்பிட்ட நாடுகள், குலங்கள், குடும்பங்கள் ஆகியவற்றுக்காக விதிக்கப்பட்ட, வேதங்களாலும், ஞானிகளாலும் அறிவிக்கப்பட்ட கடமைகள் யாவற்றையும் நன்கறிந்தவர் நீர்.(34) வரலாறுகளையும், புராணங்கள் அனைத்தையும் நன்கறிந்தவர் நீர். கடமை மற்றும் நடைமுறைகள் குறித்த சாத்திரங்கள் அனைத்தும் உமது மனத்திலேயே வசிக்கின்றன.(35) ஓ! மனிதர்களில் காளையே, உலகில் கற்கப்படும் அறிவைப் பொறுத்தவரையில் எழும் ஐயங்களை அகற்றக் கூடியவர் உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை.(36) ஓ! மனிதர்களின் இளவரசரே {பீஷ்மரே}, பாண்டு மகன் {யுதிஷ்டிரன்} உணரும் துயரை, உமது நுண்ணறிவின் உதவியைக் கொண்டு விரட்டுவீர். பெரியவையும், பலதரப்பட்டவையுமான இத்தகு அறிவைக் கொண்டோர், திகைப்படைந்த மனங்களைக் கொண்ட மனிதர்களைத் தேற்றுவதற்காகவே வாழ்கிறார்கள்” என்றான் {கிருஷ்ணன்}”[1].(37)

மன்னரின் மயக்கத்தை விலக்குவீராக! – சாந்திபர்வம் பகுதி – 51-கிருஷ்ணனைத் துதித்த பீஷ்மர்; பீஷ்மரின் துதிகளை ஏற்று, அவரைப் புகழ்ந்து, மன்னன் யுதிஷ்டிரனின் அறிவு மயக்கத்தை விலக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர், தன் சிரத்தை சற்றே உயர்த்தி, கூப்பிய கரங்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)

பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! தெய்வீகக் கிருஷ்ணா, உனக்கு வணக்கம். உலகங்கள் அனைத்தின் தொடக்கமும், முடிவும் நீயே. படைப்பாளன் நீயே, அழிப்பவனும் நீயே. ஓ! ரிஷிகேசா, எவராலும் வெல்லப்பட இயலாதவன் நீயே.(2) இந்த அண்டம் உன் கைத்திறனே. அண்டத்தின் ஆன்மா நீயே. அண்டம் எழுந்த பொருளும் நீயே. உன்னை வணங்குகிறேன். படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் முடிவு நீயே. ஐம்பூதங்களையும் விஞ்சியவன் நீயே.(3) மூவுலகங்களே ஆனவனும், மூவுலகங்களுக்கும் மேம்பட்டவனுமான உன்னை நான் வணங்குகிறேன். ஓ! யோகினிகளின் தலைவனே, அனைத்திற்கும் புகலிடமாக இருக்கும் உனக்கு என் வணக்கம்.(4) ஓ! உயிரினங்களில் முதன்மையானவனே, என்னைக் குறித்து நீ சொன்ன வார்த்தைகள், மூவுலகங்களில் வெளிப்படும் உன் தெய்வீகப் பண்புகளைக் காண இயன்றவனாக என்னை ஆக்கியிருக்கின்றன. ஓ! கோவிந்தா, (அந்தக்கருணையின் விளைவால்), நான் உன் அழிவற்ற வடிவத்தைக் காண்கிறேன்.(5,6)

அளவிலா சக்தி கொண்ட காற்றின் {வாயுவின்} ஏழு பாதைகளையும் அடைத்து நிற்பவன் நீயே. உன் தலை ஆகாயத்தில் இருக்கிறது, உன் பாதங்கள் பூமியில் இருக்கின்றன.(7) திசைப்புள்ளிகள் உன்னிரு கரங்களாக இருக்கின்றன, சூரியன் உன் கண்களாகவும், சக்ரன் {சுக்ரன்} உன் ஆற்றலாகவும் இருக்கிறான். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, காயாம்பூவின் வண்ணத்திற்கு ஒப்பான மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்திய உன் மேனி, மின்னலின் கீற்றுகளால் சக்தியூட்டப்பட்ட ஒரு மேகத்தைப் போல எங்களுக்குத் தெரிகிறது. ஓ! தேவர்களில் சிறந்தவனே, ஓ! தாமரைக் கண்ணனே, உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், உனது பாதுகாப்பை நாடுபவனும், அருள்நிறைந்த முடிவை அடைய விரும்புபவனும், எளியவனுமான எனக்கு நன்மையை நினைப்பாயாக” என்றார் {பீஷ்மர்}.(8,9)

வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மர்}, “ஓ! மனிதர்களில் காளையே, ஓ!இளவரசரே {பீஷ்மரே}, நீர் என்னிடம் கொண்ட அர்ப்பணிப்பு {பக்தி} மிகப் பெரியதாக இருப்பதால், நான் என் தெய்வீக வடிவை உமக்கு வெளிப்படுத்தினேன்.(10) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, ஓ! பாரதரே, என்னிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொள்ளாதவனிடமோ, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா இல்லாதவனிடமோ நான் என்னை வெளிப்படுத்துவதில்லை.(11) நீர் என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவராகவும், எப்போதும் அறம் நோற்பவராகவும் இருக்கிறீர். தூய இதயம் கொண்ட நீர் எப்போதும் தற்கட்டுப்பாடு கொண்டவராகவும், தவங்களையும், தானங்களையும் நோற்பவராகவும் இருக்கிறீர்.(12) ஓ! பீஷ்மரே, உமது சொந்த தவங்களின் மூலமே நீர் என்னைக் காணத் தகுந்தவரானீர். ஓ! மன்னா, திரும்பி வராத {மறுபிறவியை ஏற்படுத்தாத} உலகங்கள் உமக்காகக் காத்திருக்கின்றன.(13) ஓ! குருக்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, நீர் உயிர் வாழ இன்னும் ஐம்பத்தாறு {56} நாட்கள்[1] இருக்கின்றன.(14) நெருப்பின் வடிவிலான தேவர்கள் மற்றும் வசுக்கள் அனைவரும், சூரியன் வட பாதையில் நுழையும் காலம் வரை {கண்களுக்குப்} புலனாகாத நிலையில் உமக்காகக் காத்திருக்கின்றனர்.(15)ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, அண்டத்தின் காலத்திற்குக்கட்டுப்பட்டு, சூரியன் வடபாதைக்குத் திரும்பும்போது, இந்தப் பூமிக்கு எப்போதும் திரும்பிவராத அறிவுடையோரின் பகுதிகளுக்கு {ஞானிகளின் உலகங்களுக்கு} நீர் செல்வீர்.(16) ஓ! பீஷ்மரே, நீர் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது, இங்குள்ள ஞானங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். இதன்காரணமாகவே, இந்த மனிதர்கள் யாவரும் கடமை மற்றும் அறநெறிகள் குறித்த உமது உரையைக் கேட்க உம்மை அணுகியிருக்கின்றனர்.(17) உண்மையில் உறுதியுடன் இருப்பவரும், தன் உறவினர்களைக் கொன்றதன் காரணமாக அறிவு மறைக்கப்பட்டவருமான யுதிஷ்டிரரிடம், அறம், பொருள் மற்றும் யோகம் குறித்த உண்மையான வார்த்தைகளைப் பேசி, அதன் காரணமாக அவரது துயரை விலக்குவீராக” என்றான் {கிருஷ்ணன்}.(18)

பீஷ்மருக்கு வரமளித்த கிருஷ்ணன்! – சாந்திபர்வம் பகுதி – 52-கிருஷ்ணனை மீண்டும் துதித்து, அவன் கேட்டதைச் செய்ய இயலாத தமது பலவீனத்தைச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மரின் களைப்பகற்ற அவருக்கு வரமளித்த கிருஷ்ணன்; சூரியன் மறைந்ததும் பீஷ்மரை விட்டகன்று தங்கள் மாளிகைகளுக்கு வந்த பாண்டவர்களும் கிருஷ்ணனும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அறம் மற்றும் பொருள் நிறைந்த கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்ட சந்தனுவின் மைந்தர் பீஷ்மர் பின்வரும் வார்த்தைகளில் அவனுக்குப் பதிலளித்தார்.(1)

பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! உலகங்கள் அனைத்தின் தலைவா, ஓ! வலிய கரத்தோனே, ஓ! சிவா, ஓ! நாராயணா, ஓ! மங்கா மகிமை கொண்டோனே, நீ பேசும் வார்த்தைகளைக் கேட்டு நான் இன்பத்தில் நிறைந்திருக்கிறேன்.(2) ஓ! பேச்சின் தலைவனே, உன் முன்னிலையில், அதிலும் குறிப்பாகச் சொல்லத்தக்க அனைத்தும் உன் பேச்சிலேயே அடங்கியிருக்கும்போது, நான் என்ன {போதனைகளை} வார்த்தைகளைச் சொல்ல முடியும்?[1](3) ஓ! தேவா, இம்மையிலும், மறுமையிலும் என்ன செய்ய வேண்டுமோ, என்ன செய்யப்படுகிறதோ அஃது உன் நுண்ணறிவின் வடிவில் இருந்தே எழுகிறது.(4) தேவர்களின் தலைவனுக்கு முன்னிலையில் சொர்க்கம் குறித்து எந்த மனிதன் பேசத்தகுந்தவனோ, அவனே உன் எதிரில் அறநெறி, இன்பம், பொருள் மற்றும் முக்தி குறித்துப் பேசத் தகுந்தவனாவான்.(5) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, என் மனம் கணை தைத்த காயங்களால் உண்டான வலியால் மிகவும் கலக்கமடைந்திருக்கிறது. என் உறுப்புகள் பலவீனமாக இருக்கின்றன. என் புத்தி தெளிவாக இல்லை.(6)நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான இந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டிருக்கும் எனக்கு எதையும் சொல்லும் சக்தியில்லை.(7) என் பலம் என்னைக் கைவிடுகிறது. உன் உயிர்மூச்சு என்னைவிட்டகல விரைகிறது. என் உடலின் முக்கிய அங்கங்கள் எரிகின்றன. என் புத்தி மயக்கமடைகிறது.(8) பலவீனத்தால் என் பேச்சுத் தெளிவற்றதாக இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் நான் எவ்வாறு பேசத் துணிவேன்?(9) ஓ! வலிய கரத்தோனே, நான் எதையும் சொல்ல மாட்டேன். (என் விருப்பமின்மைக்காக) என்னை மன்னிப்பாயாக. பேச்சின் தலைவனே (பிருஹஸ்பதியே) உன் எதிரில் பேசத் தயங்குவான்.(10) என்னால் இப்போது பூமியிலிருந்து திசைப்புள்ளிகளையோ, வானத்தையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஓ! மதுசூதனா, உன் சக்தியால் மட்டுமே நான் உயிரை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.(11) எனவே, விதிகள் அனைத்தையும் விதித்தவன் நீயே என்பதால் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் நன்மைக்காக நீயே பேசுவாயாக.(12) ஓ! கிருஷ்ணா, அண்டத்தின் அழிவில்லா படைப்பாளனான நீ இருக்கும்போது, ஆசானின் முன்பு பேசும் சீடனைப் போல எவனால் பேச முடியும்” என்று கேட்டார் {பீஷ்மர்}”.(13)

வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, “குரு குலத்தில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவரும், பெரும் ஆன்மா கொண்டவரும், பெரும் பொறுமையும், அனைத்தைக் குறித்த அறிவும் கொண்டவருமான உம்மால் உமக்குத் தகுந்த வார்த்தைகளே பேசப்பட்டன.(14) ஓ! பீஷ்மரே, கணைக் காயங்களால் உண்டான வலி குறித்து நீர் சொன்னீர். ஓ! பலமிக்கவரே, கருணையால் நான் உமக்கு அளிக்கும் இந்த வரத்தைப் பெற்றுக் கொள்வீராக.(15) ஓ! கங்கையின் மைந்தரே, ஓ! மங்கா மகிமை கொண்டவரே, சோர்வு, மயக்கம், எரிச்சல், வலி, பசி, தாகம் ஆகியன உமக்கு உண்டாகாதிருக்கட்டும்.(16) ஓ! பாவமற்றவரே, உள்ளுணர்வுகளும், நினைவும் தெளிவு அடையட்டும்[2]. உமது புத்தி உம்மைக் கைவிடாதிருக்கட்டும்.(17) ஓ! பீஷ்மரே, மேகங்களில் இருந்து வெளிப்படும் நிலவைப் போல, உமது மனம் ஆசை {ரஜோகுணம்}, இருள் {தமோகுணம்} ஆகிய பண்புகளில் இருந்து விடுபட்டு, எப்போதும் நற்பண்புடன் {சத்வகுணத்துடன்} இருக்கட்டும்.(18) கடமை, அறநெறி, பொருள் என நீர் நினைப்பனவற்றுக்குத் தொடர்புடைய அனைத்திலும் உமது புத்தி ஊடுருவட்டும்.(19) ஓ! மன்னர்களில் புலியே, ஓ! அளவிலா ஆற்றல் கொண்டவரே, தெய்வீகப் பார்வையை அடைந்து, படைப்பின் நால்வகைப் பொருட்களைக் காண்பதில் வெல்வீராக.(20) ஓ! பீஷ்மரே அறிவுக் கண் கொண்ட நீர், தெளிந்த நீரில் உள்ள மீன்களைப் போல, நீர் நினைக்க முயலும் படைப்பின் பொருட்கள் அனைத்தையும் காண்பீராக” என்றான்{கிருஷ்ணன்}”.(21)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அப்போது வியாசருடன் கூடிய பெரும் முனிவர்கள், ரிக், யஜுர், சாமங்களின் பாடல்களைக் கொண்டு கிருஷ்ணனைத் துதித்தனர்.(22) கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} மற்றும் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} ஆகியோரோடு அந்த விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} இருந்த இடத்தில் அனைத்து பருவகாலத்தையும் சேர்ந்த மலர்களின் தெய்வீகமாரி பொழிந்தது.(23) ஆகாயத்தில் அனைத்துவகைத் தெய்வீக இசைக்கருவிகளும் முழங்கின, அப்சரஸ் இனங்கள் பாடத்தொடங்கின. எந்தத் தீமையோ, தீய வகைச் சகுனமோ அங்கே காணப்படவில்லை.(24) அனைத்து வகை நறுமணத்தையும் தாங்கியபடி மங்கலமான, இனிமையான தூய தென்றல் அங்கே வீசத்தொடங்கியது. திசைப்புள்ளிகள் அனைத்தும் தெளிவையும், அமைதியையும் அடைந்தன. விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் அமைதியாகத் திரியத் தொடங்கின.(25)

விரைவில், பெருங்காட்டின் விளிம்பில் உள்ள நெருப்பைப் போல ஆயிரங்கதிர்களைக் கொண்ட தெய்வீக சூரியன் மேற்கில் இறங்குவது காணப்பட்டது.(26) அப்போது பெரும் முனிவர்கள் எழுந்து நின்று, ஜனார்த்தனன், பீஷ்மர் மற்றும் மன்னன் யுதிஷ்டிரனை வணங்கினர்.(27) அதன் பேரில், பாண்டுவின் மகன்கள், சாத்யகி, சஞ்சயன், சரத்வானின் மகன் கிருபர் ஆகியோருடன் கூடிய கேசவன், பதிலுக்கு மரியாதையுடன் அத்துறவிகளை வணங்கினான்.(28) அறப்பயிற்சியில் அர்ப்பணிப்புமிக்க அந்தத் தவசியர், கேசவனாலும், பிறராலும் இவ்வாறு வணங்கப்பட்டு, “நாளை திரும்புகிறோம்” என்று சொல்லிவிட்டு, தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்றனர்.(29) அதன்பிறகு, பீஷ்மரை வணங்கி, அவரை வலம் வந்த கேசவனும், பாண்டவர்களும், தங்கள் அழகிய தேர்களில் ஏறினர்.(30)

தங்கக் கூபரங்களால் அலங்கரிக்கப்பட்ட வேறு பல தேர்கள், மலைகளைப் போலத் தெரிந்த மதங்கொண்ட யானைகள், கருடர்களைப் போன்ற வேகமான குதிரைகள், விற்கள் மற்றும் ஆயுதங்கள் தரித்த காலாட்படை வீரர்கள் ஆகியோருடன் அந்த வீரர்கள் சென்றனர்.(31) பெரும் வேகத்தில் நகர்ந்த அந்தப் படை, இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து, ஒன்று அந்த இளவரசர்களின் முன்பும், மற்றொன்று அவர்களுக்குப் பின்பும் சென்றன. ஓரிடத்தில் குறுக்கே நிற்கும் ரிக்ஷவான் மலைகளால் பிரிக்கப்பட்ட பெரும் ஆறான நர்மதையின் இரண்டு ஓடைகளைக்கு ஒப்பாக அக்காட்சி இருந்தது.(32) அந்தப் பெரும்படையைத் திளைக்கச் செய்யும் வகையில், சூரியனின் வெப்பத்தால் சாறு உறிஞ்சிப்பட்ட மூலிகைகளைத் தன் சக்தியால் ஈரப்பதமடையச் செய்தபடியே அவர்களுக்கு முன்பு சந்திரமாஸ் {சந்திரன்} எழுந்தான்.(33) அப்போது, அந்த யதுகுலக் காளையும் {கிருஷ்ணனும்}, பாண்டுவின் மகன்களும், இந்திரனின் நகரத்திற்கு {அமராவதிக்கு} ஒப்பான காந்தியுடன் கூடிய (குரு) நகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்து, தங்கள் குகைகளை நாடும் களைத்த சிங்கங்களைப் போலத் தங்கள் தங்கள் மாளிகைகளுக்குச் சென்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(34)

துயிலெழுந்த கிருஷ்ணன்! – சாந்திபர்வம் பகுதி – 53-கிருஷ்ணனின் திருப்பள்ளியெழுச்சி; அதிகாலையில் விழித்தெழுந்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனிடம் சாத்யகியை அனுப்பிய கிருஷ்ணன்; கிருஷ்ணன் பீஷ்மரிடம் செல்லக் காத்திருப்பதாக யுதிஷ்டிரனிடம் சொன்ன சாத்யகி; பாதுகாவலர்கள் வேண்டாம் என அர்ஜுனனிடம் மறுத்த யுதிஷ்டிரன்; பீஷ்மரை அடைந்து முனிவர்களை வணங்கிய கிருஷ்ணன், சாத்யகி மற்றும் பாண்டவர்கள் ஆகியோர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மதுசூதனன் {கிருஷ்ணன்} தன் படுக்கைக்குச் சென்று மகிழ்ச்சியாக உறங்கினான்.(1) பொழுது விடிய அரை யாமம் {ஜாமம்} இருக்கும்போது, அவன் ஆழ்ந்த தியானத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். அவன் {கிருஷ்ணன்}, தன் புலன்கள் அனைத்தையும் நிலைநிறுத்தி, அழிவற்ற பிரம்மத்தைத் தியானித்தான்.(2) நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களும், பாடல்கள் மற்றும் புராணங்களை அறிந்தவர்களுமான ஒரு குழுவினர், உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், அண்டத்தின் படைப்பாளனுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} புகழைச் சொல்லத் தொடங்கினர்.(3) வேறு சிலர் கைகளைத் தட்டிக் கொண்டு இனிய பாடல்களைப் பாடத் தொடங்கினர். வாய்ப்பாட்டுக்காரர்களும் பாடத் தொடங்கினர். சங்குகளும், பேரிகைகளும் ஆயிரக்கணக்கில் முழக்கி இசைக்கப்பட்டன.(4) வீணைகள், பணவங்கள், மூங்கில் புல்லாங்குழல்கள் ஆகியவற்றின் இனிய ஒலியும் கேட்கப்பட்டது. இவற்றின் விளைவால் கிருஷ்ணனின் அகன்ற அறையானது, இசையால் சிரிப்பது போலத் தெரிந்தது.(5)

மன்னன் யுதிஷ்டிரனின் அரண்மனையிலும், மங்கல வாழ்த்துகளைச் சொல்லும் இனிய குரல்களும், பாடல்கள், மற்றும் இசைக்கருவிகளின் ஒலிகளும் கேட்கப்பட்டன.(6) பிறகு தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தான். மங்கா மகிமை கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் தன் கரங்களைக் கூப்பி அமைதியாகத் தன் இரகசிய மந்திரங்களைச் சொல்லி, ஒரு நெருப்பை மூட்டி, அதில் தெளிந்த நெய்க்காணிக்கைகளை ஊற்றினான்.(7) நான்கு வேதங்களையும் முழுமையாக அறிந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு ஓராயிரம் பசுக்களைக் கொடையளித்து, அவர்களைத் தன்னை வாழ்த்தச் செய்தான்.(8) அடுத்தாகக் கிருஷ்ணன், பல்வேறு வகை மங்கலப் பொருட்களைத் தீண்டி, ஒரு தெளிவான கண்ணாடியில் தன்னையே கண்ட பிறகு, சாத்யகியிடம்,(9) “ஓ! சிநியின் வழித்தோன்றலே, யுதிஷ்டிரரின் வசிப்பிடத்திற்குச் சென்று, பெருஞ்சக்தி கொண்ட அம்மன்னர் பீஷ்மரைச் சந்திப்பதற்கு உடுத்திவிட்டாரா என்பதை உறுதி செய்வாயாக” என்றான்.(10)

கிருஷ்ணனின் இந்த வார்த்தைகளின் பேரில் பாண்டுவின் அரச மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} விரைவாகச் சென்ற சாத்யகி, அவனிடம்,(11) “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ஜனார்த்தனர் {கிருஷ்ணர்}, கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} காணச் செல்கிறார் என்பதால், பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த வாசுதேவருடைய முதன்மையான தேர் ஆயத்தமாக இருக்கிறது. (12) ஓ !பெரும் காந்தி கொண்ட அறமன்னா {தர்மராஜா}, அவர் உமக்காகக் காத்திருக்கிறார். அடுத்ததாக என்ன செய்யப்பட வேண்டுமோ, அதைச் செய்வதே உமக்குத் தகும்” என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட தர்மனின் மகனான யுதிஷ்டிரன் பின்வருமாறு பதிலளித்தான்.(13)

யுதிஷ்டிரன், “ஓ! ஒப்பற்ற காந்தி கொண்ட பல்குனா {அர்ஜுனா}, என் முதன்மையான தேர்கள் ஆயத்தமாகட்டும். நாம் (இன்று) படைவீரர்களின் துணையில்லாமல் தனியாகவே செல்ல வேண்டும்.(14) அறவோரில் முதன்மையான பீஷ்மர் எரிச்சலடையக்கூடாது. எனவே, ஓ! தனஞ்சயா, இன்று பாதுகாவலர்கள் வர வேண்டாம்.(15) இந்த நாள் முதல் பெரும் புதிர்களாலான பொருள்களைக் குறித்துக் கங்கையின் மைந்தர் பேசப்போகிறார். எனவே, ஓ! குந்தியின் மகனே, வேறு கூட்டம் (பீஷ்மரின் முன்னிலையில்) அங்கிருப்பதை நான் விரும்பவில்லை” என்றான்”.(16)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மனிதர்களில் முதன்மையானவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, மன்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, (வெளியே சென்று, திரும்பி வந்து) சிறந்த தேர்களில் சேணம் பூட்டப்பட்டத்தைத் தெரிவித்தான்.(17) ஐம்பூதங்களுக்கு ஒப்பான மன்னன் யுதிஷ்டிரன், இரட்டையர்கள் {நகுல சகாதேவன்}, பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகிய ஐவரும், கிருஷ்ணனின் வசிப்பிடத்தை நோக்கிச் சென்றனர்.(18) உயர் ஆன்ம பாண்டவர்கள் வந்து கொண்டிருந்தபோது, சிநியின் பேரனுடனும் {சாத்யகியுடனும்}, பெரும் நுண்ணறிவுடனும் கூடிய கிருஷ்ணன் தன் தேரில் ஏறினான்.(19) தங்கள் தேர்களில் இருந்து ஒருவரையொருவர் வணங்கி, இரவு மகிழ்ச்சியாகக் கடந்ததா என்பதை விசாரித்துக் கொண்ட அந்த மனிதர்களில் காளையர், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான ஒலியைக் கொண்ட முதன்மையான தேர்களில் நிற்காமல் சென்றனர்.(20)

கிருஷ்ணனின் குதிரைகளான வலாஹம், மேகபுஷ்பம், சைப்யம் மற்றும் சுக்ரீவம் ஆகியன தாருகனால் தூண்டப்பட்டன.(21) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவனால் தூண்டப்பட்ட விலங்குகள், தங்கள் குளம்புகளால் பூமியைப் பறித்துக் கொண்டு சென்றன.(22) பெரும் பலமும், பெரும் வேகமும் கொண்டு, வானத்தையே விழுங்கிவிடுவன போல அவை வேகமாகச் சென்றன. குருவின் புனிதக் களத்தின் ஊடாகச் சென்ற அந்த இளவரசர்கள்,(23) தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் பிரம்மனைப் போலப் பலமிக்கப் பீஷ்மர், பெருமுனிவர்கள் சூழ தமது கணைப்படுக்கையில் கிடக்கும் இடத்திற்குச் சென்றனர்.(24)

பிறகு, தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கிய கோவிந்தன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரன், பீமன், காண்டீவதாரி {அர்ஜுனன்}, இரட்டையர்கள் {நகுல சகாதேவன்}, சாத்யகி ஆகியோர், தங்கள் வலக் கரங்களை உயர்த்தி முனிவர்களை வணங்கினர்[1].(25) அவர்களால் சூழப்பட்டு, நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் நிலவைப் போல இருந்த மன்னன் யுதிஷ்டிரன், பிரம்மனை நோக்கிச் செல்லும் வாசவனைப் {இந்திரனைப்} போலக் கங்கையின் மைந்தரை நோக்கிச் சென்றான்.(26) அச்சத்தால் பீடிக்கப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, ஆகாயத்தில் இருந்து விழுந்திருக்கும் சூரியனைப் போலக் கணைப் படுக்கையில் கிடக்கும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரரின் மேல் மருட்சியுடன் தன் கண்களைச் செலுத்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(27)

அறம் போதிப்பீராக! – சாந்திபர்வம் பகுதி – 54- பீஷ்மரிடம் அறம் வினவும்படி யுதிஷ்டிரன் மற்றும் பிறரிடம் கேட்டுக் கொண்ட நாரதர்; கிருஷ்ணனே முதலில் கேட்க வேண்டும் என்று சொன்ன யுதிஷ்டிரன்; மன்னர்களுக்கு அறம்போதிக்கப் பீஷ்மரைக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணன்..

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பெரும் தவசியே {வைசம்பாயனரே}, அற ஆன்மாவும், பெரும் சக்திகொண்டவரும், உண்மையை உறுதியுடன் பின்பற்றுபவரும், ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவரும், மங்காமகிமை கொண்டவரும், சந்தனு மற்றும் கங்கையின் மைந்தரும், தேவவிரதன், அல்லது பீஷ்மர் என்ற பெயரைக் கொண்டவருமான அந்த மனிதர்களில் புலி, தம்மைச் சுற்றி பாண்டு மகன்கள் அமர்ந்திருக்க, வீரர்களின் படுக்கையில் கிடந்தபோது, துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு நேர்ந்த அந்த வீரர்களின் சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1-3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, குருக்களின் தலைவரான பீஷ்மர், தமது கணைப்படுக்கையில் கிடந்தபோது, நாரதர் தலைமையிலான முனிவர்கள் மற்றும் சித்தர்கள் பலரும் அந்த இடத்திற்கு வந்தனர்.(4) (போரில் திரண்டு) கொல்லப்படாமல் எஞ்சியவர்களும், யுதிஷ்டிரனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களுமான மன்னர்கள், திருதராஷ்டிரன், கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகியோரும் அங்கே வந்தனர்.(5) ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனைப் போலத் தெரிந்த பாரதர்களின் பாட்டனை {பீஷ்மரை} அணுகிய அந்த உயர் ஆன்ம மனிதர்கள், அவருக்காகப் புலம்பல்களின் ஈடுபட்டனர்.(6) அப்போது தேவ பண்புகளைக் கொண்ட நாரதர், சிறிது நேரம் சிந்தித்து, பாண்டவர்கள் அனைவரிடமும், கொல்லப்படாமல் எஞ்சியிருந்த மன்னர்களிடமும்,(7) “மறையும் நேரத்திலான சூரியனைப் போலக் கங்கையின் மைந்தர் மறையப் போவதால், நீங்கள் பீஷ்மரிடம் (அறம் மற்றும் அறநெறி தொடர்பான காரியங்களில்) கேள்வி கேட்பதற்கான நேரம் வந்துவிட்டதென நான் நினைக்கிறேன்.(8) அவர் {பீஷ்மர்} தன் உயிர் மூச்சை விடப்போகிறார். எனவே, நீங்கள் அனைவரும், உங்களிடம் உரையாடும்படி அவரிடம் வேண்டுங்கள். நால்வகைகளின் பல்வேறு கடமைகள் அனைத்தையும் அவர் அறிந்தவராவார்.(9) வயதால் முதிர்ந்த அவர், தமது உடலைக் கைவிட்டு உயர்ந்த அருள் உலகங்களை அடையப் போகிறார். எனவே, உங்கள் மனங்களில் இருக்கும் ஐயங்கள் தெளிவடையத் தாமதமில்லாமல் அவரை வேண்டுவீராக” என்றார்.(10)

நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த இளவரசர்கள், பீஷ்மரை அணுகியும், அவரிடம் எதையும் கேட்க முடியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(11) அப்போது பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்}, “பாட்டனிடம் {பீஷ்மரிடம்} கேள்வி கேட்க தேவகியின் மகனை {கிருஷ்ணனைத்} தவிர வேறு எவனும் கிடையாது.(12) எனவே, ஓ! யது குலத்தில் முதன்மையானவனே, ஓ! மதுசூதனா, நீயே முதலில் கேட்பாயாக. ஓ! ஐயா, எங்கள் அனைவரிலும் நீயே முதன்மையானவனும், கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் அறிந்தவனும் ஆவாய்” என்றான்.(13) மங்கா மகிமை கொண்டவனும், சிறப்புமிக்கவனுமான கேசவன், பாண்டு மகனால் இவ்வாறு சொல்லப்பட்டு, வெல்லப்பட முடியாத பீஷ்மரை அணுகி, அவரிடம் பின்வருமாறு பேசினான்.(14)

வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, “ஓ! மன்னர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, இரவை மகிழ்ச்சியாகக் கழித்தீரா? உமது புத்தி மயங்காதிருக்கிறதா? ஓ! பாவமற்றவரே, உள்ளொளியால் உமது அறிவு உம்மில் ஒளிவிடுகிறதா? உமது இதயம் இனியும் வலியை உணராது என்றும், உமது மனம் கலங்காது என்றும் நான் நம்புகிறேன்” என்றான்.(17)

பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! விருஷ்ணி குலத்தோனே, எரிச்சல், திகைப்பு, களைப்பு, தளர்ச்சி, நோய் மற்றும் வலி ஆகிய அனைத்தும் ஒரே நாளில் உன் அருளால் என்னை விட்டு அகன்றுவிட்டன.(18) ஓ! ஒப்பற்ற காந்தியைக் கொண்டவனே, கடந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் ஆகிய அனைத்தையும் உள்ளங்கை {நெல்லிக்} கனியைப் போலத் தெளிவாகக் காண்கிறேன்.(19) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, வேதங்களில் அறிவிக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும், வேதாந்தங்களில் விதிக்கப்பட்டிருப்பவை அனைத்தையும், நீ எனக்கு அருளிய வரத்தின் விளைவால் நான் தெளிவாகக் காண்கிறேன்.(20) கல்விமான்கள் மற்றும் அறவோர் அறிவித்திருக்கும் கடமைகள் என் நினைவில் வசிக்கின்றன. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, குறிப்பிட்ட நாடுகள், குறிப்பிட்ட இனங்கள் மற்றும் குடும்பங்களில் நிலவும் கடமைகள் மற்றும் நடைமுறைகளையும் நான் அறிவேன்.(21) நால்வகை வாழ்வுமுறைகள் தொடர்பான அனைத்தும் என் நினைவுக்குத் திரும்பிவிட்டன. ஓ! கேசவா, ஆட்சித்திறம் தொடர்பான கடமைகளையும் நான் அறிவேன்.(22) ஓ! ஜனார்த்தனா, எந்தெந்த நேரங்களில் என்னென்ன சொல்லப்பட வேண்டும் என்பதை நான் சொல்வேன். உன் அருளால், மங்கலமான புத்தியை நான் அடைந்திருக்கிறேன்.(23) உன்னைத் தியானித்துப் பலமடைந்த நான், மீண்டும் இளைஞனாகிவிட்டதைப் போல உணர்கிறேன். ஓ! ஜனார்த்தனா, உன் ஆதரவினால், (உலகிற்கு) எது நன்மையானது என்பதைக் குறித்து உரையாடும் தகுதியை நான் அடைந்திருக்கிறேன்.(24) எனினும், ஓ! புனிதமானவனே, நன்மையான அனைத்தையும் பாண்டுவின் மகனுக்கு நீயே ஏன் உரைக்கவில்லை? இது குறித்து நீ என்ன விளக்கமளிக்கப் போகிறாய்? ஓ! மாதவா {கிருஷ்ணா}, எனக்கு விரைவாகச் சொல்வாயாக” என்றார்.(25)

வாசுதேவன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தவரே, புகழுக்கும், நன்மைக்கும் வழிகோலும் அனைத்துக்கும் நானே வேராவேன் என்பதை அறிவீராக. நல்லது, அல்லது யாவும் என்னிலிருந்தே உண்டாகின்றன.(26) நிலவு குளிர்ந்த கதிர்களைக் கொண்டது என்று சொன்னால் பூமியில் எவன் ஆச்சரியப்படுவான்? அதே போல, நானே புகழ் மொத்தமும் கொண்டவனெனச் சொல்லப்பட்டால் எவன் ஆச்சரியப்படப் போகிறான்?[1](27) எனினும், ஓ! பெரும் காந்தி கொண்டவரே, நான் உமது புகழை அதிகரிக்கத் தீர்மானித்திருக்கிறேன். ஓ! பீஷ்மரே, அதன் காரணமாகவே நான் உமக்குப் பெரும் நுண்ணறிவை வாய்க்கச் செய்திருக்கிறேன். ஓ! பூமியின் தலைவரே, இந்தப் பூமி நீடித்திருக்கும் வரையில், உமது புகழ் மங்கா ஒளியுடன் உலகங்கள் அனைத்திலும் பயணிக்கும்.(29) ஓ! பீஷ்மரே, உம்மை விசாரிக்கும் பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரரிடம்} நீர் சொல்லப் போகும் அனைத்தும், வேதங்களின் அறிவிப்புகளைப் போலத் தகுதி படைத்தவையாகப் பூமியில் கருதப்படப் போகின்றன.(30)உமது அறிவிப்புகளின்படி தன் நடத்தையை அமைத்துக் கொள்பவன், ஒவ்வொரு தகுதி வாய்ந்த செயலுக்குமான வெகுமதியை மறுமையில் பெறுவான்.(31) ஓ! பீஷ்மரே, பூமியில் உமது புகழ் மேன்மையடையும்பொருட்டே நான் உமக்குத் தெய்வீக அறிவைக் கொடுத்திருக்கிறேன்.(32) ஒரு மனிதனின் புகழ் இவ்வுலகில் நீடிக்கும்வரை, அவனது சாதனைகளும் வாழும் எனச் சொல்லப்படுகிறது.(33) (திரண்டு வந்த) மன்னர்களில் கொல்லப்படாமல் எஞ்சியோர், அறநெறி மற்றும் கடமை குறித்த உமது உரையாடலைக் கேட்கும் விருப்பத்தில் உம்மைச் சுற்றி அமர்ந்திருக்கின்றனர். ஓ! பாரதரே {பீஷ்மரே}, அவர்களிடம் பேசுவீராக.(34) நீர் வயதால் முதிர்ந்தவராக இருக்கிறீர். உமது நடத்தையும் சுருதிகளின் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் இருக்கிறது. மன்னர்களுக்கான கடமைகளையும், கடமை குறித்த வேறு பிற அறிவியல்களையும் நீர் நன்கறிந்திருக்கிறீர்.(35)

உமது பிறப்பிலிருந்தே, உம்மில் எந்த ஒரு சிறு மீறலையும் எவரும் கண்டதில்லை. அறநெறி மற்றும் கடமை குறித்த அறிவியல்கள் அனைத்தையும் அறிந்தவர் நீர் என்பதை மன்னர்கள் யாவரும் அறிவார்கள்.(36) எனவே, ஓ! மன்னா, ஒரு தந்தை தன் மகன்களுக்குச் செய்வதைப் போல, உயர்ந்த அறநெறி குறித்து அவர்களிடம் உரையாடுவீராக. நீர் எப்போதும் முனிவர்களையும், தேவர்களையும் வழிபடுபவராவீர்.(37) அறநெறி மற்றும் கடமைகள் குறித்த உரையாடலைக் கேட்க விரும்பும் மனிதர்களுக்கு அக்காரியங்களை விரிவாக உரைப்பது உமது கடப்பாடாகும். ஒரு கல்விமான், குறிப்பாக நல்லோரால் வேண்டப்படும்போது அவை குறித்து அவர்களுக்கு உரைக்க வேண்டும். தவசிகள் இதை ஒரு கடமையாகவே அறிவித்திருக்கிறார்கள்.(38) ஓ! பலமிக்கவரே, நீர் இக்காரியங்களைக் குறித்துப் பேசவில்லையெனில் நீர் பாவமிழைத்தவராவீர். எனவே, ஓ! கல்விமானே, ஓ! பாரதர்களில் காளையே, (மனிதர்களின்) நித்திய கடமைகள் குறித்து உமது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளால் கேட்கப்பட்டு, அவை குறித்து அவர்களுக்கு நீர் உரைப்பீராக” என்றான் {கிருஷ்ணன்}”.(39)

போரில் கொலையே அறம்! – சாந்திபர்வம் பகுதி – 55-யுதிஷ்டிரனைக் கொண்டாடிய பீஷ்மர்; உறவினர்களின் கொலைக்குக் காரணமாக அமைந்ததால் யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் பேச நாணுவதாகத் தெரிவித்த கிருஷ்ணன்; போரில் கொலையே அறமெனச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மரை வணங்கிய யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் சக்தியுடன் கூடியவரும், குருக்களைத் திளைக்கச் செய்பவருமான அவர் (பீஷ்மர்), “கடமைகள் {தர்மங்கள்} குறித்து நான் உரையாடப் போகிறேன். ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அனைத்துப் பொருளின் நித்திய ஆன்மாவாக நீயே இருப்பதால், உன் அருளின் மூலம் என் பேச்சும், மனமும் உறுதியடைந்திருக்கின்றன.(1) அற ஆன்மாவான யுதிஷ்டிரன், அறநெறி மற்றும் கடமை குறித்து என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும். அதனால் நிறைவடைந்து கடமைகள் அனைத்தையும் குறித்து நான் பேசுவேன்.(2)

எவன் பிறப்பால் விருஷ்ணிகள் அனைவரும் மகிழ்ச்சியில் நிறைந்தனரோ அந்த நல்ல பேரான்மா கொண்ட அரச முனியான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(3) குருக்கள் அனைவரின் மத்தியிலும், நன்னடத்தைக் கொண்டோர் அனைவரின் மத்தியிலும், பெரும் புகழைக் கொண்டோர் அனைவரின் மத்தியிலும் எவனுக்கு இணையில்லையோ அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(4) நுண்ணறிவு, தற்கட்டுப்பாடு, பிரம்மச்சரியம், மன்னிக்கும் தன்மை {பொறுமை}, நீதி, மனோபலம் மற்றும் சக்தி ஆகியன எவனிடம் உண்டோ அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(5)

உறவினர்கள், விருந்தினர்கள், பணியாட்கள், தன்னை நம்பியிருக்கும் பிறர் ஆகியோரிடம் எப்போதும் நல்ல செல்வாக்கு எவனிடம் உண்டோ அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(6) உண்மை, ஈகை, தவம், வீரம், அமைதி, புத்தி, அச்சமின்மை ஆகியவை எவனிடம் உண்டோ, அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(7) இன்பத்திலுள்ள விருப்பம், ஆதாயம், அச்சம் ஆகியவற்றின் ஆதிக்கத்தால் ஒரு போதும் எவன் எந்தப் பாவத்தையும் இழைக்கவில்லையோ அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(8) உண்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, அறிவு ஆகியவற்றிற்கும், விருந்தினர்களுக்கும் எப்போதும் எவன் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, நல்லோருக்கு எப்போதும் எவன் கொடையளிக்கிறானோ, அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(9) வேள்விகள், வேத கல்வி, அறநெறி நடைமுறை, கடமை ஆகியவற்றில் எப்போதும் எவன் ஈடுபடுகிறானோ, எவன் எப்போதும் அமைதி நிறைந்தனவோ, எவன் புதிர்கள் {சாத்திரங்கள்} அனைத்தையும் கேட்டிருக்கிறானோ, அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்” என்றார் {பீஷ்மர்}.(10)

வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, “நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர், பெரும் வெட்கமடைந்தும், (உமது) சாபத்திற்கு அஞ்சியும், உம்மை அணுகத் துணியவில்லை.(11) ஓ! ஏகாதிபதி {பீஷ்மரே}, அந்தப் பூமியின் தலைவர் {யுதிஷ்டிரர்}, பெரும் படுகொலைகளை ஏற்படுத்திவிட்டதால், (உமது) சாபத்திற்கு அஞ்சி உம்மை அணுகத் துணியவில்லை.(12) தமது வழிபாட்டிற்கு உரியோரையும், தம்மிடம் அர்ப்பணிப்புமிக்கோரையும், தமது ஆசான்களையும், தமது உறவினர்கள், சொந்தங்களையும், உயர்ந்த மதிப்புக்குத் தகுந்தோரையும் தமது கணைகளால் துளைத்திருப்பதால், அவர் உம்மை அணுகத் துணியவில்லை” என்றான்.(13)

பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, பிராமணர்களுக்கு ஈகை, கல்வி, தவம் ஆகியவை கடமையானதைப் போலவே, க்ஷத்திரியர்களுக்குப் போரில் தங்கள் உடல்களைக் கைவிடுவது கடமையாகும்.(14) நீதியற்ற முறையில் போரில் ஈடுபடும் தந்தைமார், பாட்டன்மார், சகோதரர்கள், ஆசான்கள், உறவினர்கள், சொந்தங்கள் ஆகியோரை ஒரு க்ஷத்திரியன் கொல்லவே வேண்டும். இஃது அவர்களுக்கான அறிவிக்கப்பட்ட கடமையாகும்.(15) ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாவம் நிறைந்தவர்களும், பேராசை கொண்டவர்களும், கட்டுப்பாடுகள் மற்றும் நோன்புகளில் அலட்சியம் நிறைந்தவர்களும் போர் தொடுத்து வந்தால், அவர்கள் தன் ஆசான்களேயானாலும், அவர்களைப் போரில் கொல்லும் க்ஷத்திரியன், தன் கடமையை அறிந்தவன் என்றே சொல்லப்படுகிறான்.(16)

பேராசையினால் நித்திய அறவரம்புகளை அலட்சியம் செய்யும் எந்த மனிதனையும் போரில் கொல்லும் க்ஷத்திரியன், தன் கடமையை அறிந்தவன் என்றே சொல்லப்படுகிறான்.(17) கொல்லப்பட்ட போர்வீரர்களின் தலை முடிகளையே புற்களாகவும், யானைகளைப் பாறைகளாகவும், கொடிமரங்களையே கரைகளின் மரங்களாகவும் கொண்ட குருதித் தடாகத்தைப் போரில் பூமியில் உண்டாக்கும் க்ஷத்திரியன் தன் கடமையை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(18) நியாயமான போர் சொர்க்கத்துக்கும், பூமியில் புகழுக்கும் வழிவகுக்கும் என மனு சொல்வதால், போருக்கு அறைகூவி அழைக்கப்படும் ஒரு க்ஷத்திரியன், எப்போதும் போரில் ஈடுபடவே வேண்டும்” என்றார் {பீஷ்மர்}”.(19)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பீஷ்மர் இவ்வாறு பேசியதும், தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பெரும்பணிவுடன் அந்தக் குரு வீரரை அணுகி, அவரது பார்வைக்கெதிரில் நின்றான்.(20) அவன் பீஷ்மரின் பாதத்தைப் பற்றினான். அவர் பாசமிகு வார்த்தைகளால் அவனைப் பதிலுக்குத் திளைக்கச் செய்தார். பீஷ்மர் யுதிஷ்டிரனை உச்சிமுகர்ந்து அவனை அமரச் சொன்னார். பிறகு வில்லாளிகளில் முதன்மையான அந்தக் கங்கையின் மைந்தர், யுதிஷ்டிரனிடம், “ஓ! குருக்களில் சிறந்தவனே, அஞ்சாதே. ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, எந்தக் கவலையுமின்றி என்னிடம் கேள்வி கேட்பாயாக” என்றார்”.(22)

ராஜநீதியுரைக்கத் தொடங்கிய பீஷ்மர்! – சாந்திபர்வம் பகுதி – 56-ராஜநீதியை உரைக்குமாறு பீஷ்மரிடம் கேட்டுக் கொண்ட யுதிஷ்டிரன்; முயற்சி, விதி, உண்மைக்கு அர்ப்பணிப்பு, மென்மை மற்றும் கடும் நடத்தை ஆகியவற்றைச் சொல்லி, மனு, சுக்ரன் மற்றும் பிருஹஸ்பதி ஆகியோர் பழங்காலத்தில் பாடிய சுலோகங்களைச் சொன்னது; ஒரு மன்னன் தன் குடிமக்களை எவ்வாறு நடத்த வேண்டும்; பணியாட்களிடம் நடந்து கொள்ளக்கூடாத முறை ஆகியவற்றைச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ரிஷிகேசனைப் {கிருஷ்ணனைப்} பணிந்து, பீஷ்மரை வணங்கி, அங்கே கூடியிருந்த பெரியோர் அனைவரிடமும் அனுமதியைப் பெற்றுக்கொண்டு பீஷ்மரிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான் யுதிஷ்டிரன்.(1)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கடமை மற்றம் அறநெறி அறிந்த மனிதர்கள், அரச கடமைகளே கடமைகளின் உயர்ந்த அறிவியல் என்று சொல்கிறார்கள். அந்தக் கடமைகளின் சுமை மிகவும் கடிமானது என்று நானும் நினைக்கிறேன். எனவே, ஓ! மன்னா {பீஷ்மரே}, அந்தக் கடமைகளைக் குறித்து நீர் உரையாடுவீராக.(2) ஓ! பாட்டா, அரச கடமைகளைக் குறித்து விரிவாகப் பேசுவீராக. அரச கடமைகளைக் குறித்த அறிவியலே மொத்த உலக வாழ்வின் புகலிடமாகும்.(3) ஓ! குரு குலத்தவரே, அறம், பொருள், இன்பம் ஆகியவை அரச கடமைகளைச் சார்ந்தே இருக்கின்றன. முக்திக்கு வழிவகுக்கும் நடைமுறைகளும் அவற்றைச் சார்ந்தே இருக்கின்றன.(4)

குதிரைகளுக்குக் கடிவாளம் போலவும், யானைக்கு அங்குசத்தைப் போலவும், அரச கடமைகளின் அறிவியலானது {ராஜநீதி – அரசியல்} உலகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கடிவாளமாகும்.(5) அரசமுனிகளால் நோற்கப்படும் கடமைகளில் ஒருவன் திகைப்படைந்தால், பூமியில் நிலையின்மை தோன்றி அனைத்தும் குழப்பத்திற்குள்ளாகும்.(6) சூரியன் உதித்து மங்கலமற்ற இருளை விலக்குவதைப் போல இந்த அறிவியல் {அரசியல்} உலகின் அனைத்து வகைத் தீய விளைவுகளையும் அழிக்கும்.(7) ஓ! பாரதர்களின் தலைவரே {பீஷ்மரே}, ஓ! பாட்டா, கடமைகளை அறிந்தோர் அனைவரிலும் நீரே முதன்மையானவர் என்பதால் என் பொருட்டு முதலில் அரச கடமைகளை உரைப்பீராக.(8) ஓ! எதிரிகளை எரிப்பவரே, நுண்ணறிவு கொண்டோர் அனைவரிலும் முதல்வராக உம்மையே வாசுதேவன் {கிருஷ்ணன்} கருதுகிறான். எனவே, நாங்கள் அனைவரும் உம்மிடம் இருந்து உயர்ந்த ஞானத்தை எதிர்பார்க்கிறோம்” என்றான்.(9)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உயர்ந்தவனான தர்மனையும் {தர்மத்தையும்}, பிரம்மத்தின் முழு வடிவமான கிருஷ்ணனையும், பிராமணர்களையும் வணங்கி (மனிதர்களின்) நித்திய கடமைகளை {அழிவில்ல நீதிகளைக்} குறித்து நான் உரையாடப் போகிறேன்.(10) ஓ! யுதிஷ்டிரா, துல்லியமான விபரங்களுடன் விளக்கப்படும் மொத்த அளவிலான அரச கடமைகளையும், மற்றும் நீ அறிய விரும்பும் பிற கடமைகளையும், குவிந்த கவனத்துடன் என்னிடமிருந்து கேட்பாயாக.(11) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, முதலிடத்தில், மன்னன் (தன் குடிமக்களை) நிறைவு செய்யும் விருப்பத்திலும், விதிக்கு எப்போதும் ஏற்புடைய வகையிலும் நடந்து கொண்டு, தேவர்கள், பிராமணர்கள் ஆகியோரிடம் பணிவுடன் காத்திருக்க வேண்டும்.(12) ஓ! குருகுலத்தைத் தழைக்கச் செய்பவனே, தெய்வங்களையும், பிராமணர்களையும் மன்னன் வணங்குவதால், கடமை மற்றும் அறத்திற்குத் தான் பட்ட கடனைச் செலுத்தி, தன் குடிமக்களிடம் மதிப்பைப் பெறுகிறான்.(13) ஓ! மகனே, ஓ! யுதிஷ்டிரா, முயற்சி செய்ய {உழைப்பதற்கு} ஆயத்தமாகாமல் வெறும் விதி மட்டுமே மன்னர்களின் நோக்கங்களை நிறைவேற்றாது என்பதால், நீ எப்போதும் உழைப்பதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்.(14) முயற்சி, விதி ஆகிய இரண்டும் (தங்கள் செயலளவில்) இணையானவையே. முயற்சியோடு எது தொடங்கப்பட்டதோ, அதன் விளைவுகளின் மூலமே விதியானது உறுதி செய்யப்படுகிறது என்பதால், அவையிரண்டில் {முயற்சி மற்றும் விதி ஆகிய இரண்டில்} முயற்சியையே நான் மேன்மையானதாகக் கருதுகிறேன்.(15)

தொடங்கப்பட்டது {ஏதோ ஒரு காரியம் தொடங்கப்பட்டு, அது} பேரழிவில் முடியுமென்றாலும் துயரில் ஈடுபடாதே. ஏனெனில், {அப்போதுதான்} நீ அதே காரியத்தை இரட்டிப்பு கவனத்துடன் முயற்சி செய்ய வேண்டும். இதுவே மன்னர்களின் உயர்ந்த கடமையாகும். (16) மன்னர்களின் வெற்றிக்கு உண்மையை {சத்தியத்தைப்} போல வேறெதுவும் பெருமளவில் பங்காற்றுவதில்லை. உண்மைக்கு அர்ப்பணிப்புள்ள மன்னன், இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தையே கண்டடைகிறான்.(17) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முனிவர்களைப் பொறுத்தவரையிலும் கூட, உண்மையே அவர்களது பெருஞ்செல்வமாகும். அதே போலவே, மன்னர்களைப் பொறுத்த வரையிலும், உண்மையைப் போல வேறெதுவும் அவர்களுக்குப் பெருமளவு நம்பிக்கையை ஊட்டாது.(18) அனைத்து சாதனைகளைக் கொண்டவனும், நன்னடத்தையுடன் கூடியவனும், தற்கட்டுப்பாடு, பணிவு, நேர்மை ஆகியவற்றைக் கொண்டவனும், தன் ஆசைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், நற்பண்புகளைக் கொண்டவனும், தயாளனுமான ஒரு மன்னன் ஒருபோதும் தன் செழிப்பை இழப்பதில்லை.(19) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நீதியை நிர்வகித்து, தன் பலவீனத்தை மறைப்பது, எதிரிகளின் பலவீனங்களை உறுதி செய்வது, தன் ஆலோசனைகளைக் கமுக்கமாக வைப்பது ஆகிய மூன்றையும் செய்து, நேரடியான வெளிப்படை நடத்தையோடு கூடிய மன்னன் செழிப்பை அடைகிறான்.(20)

மன்னன் மென்மையாக நடந்து கொண்டால் அனைவரும் அவனை அவமதிப்பார்கள். மறுபுறம் அவன் கடுமையாக இருந்தாலோ, அவனது குடிமக்கள் தொல்லைக்குள்ளாவார்கள். எனவே, நீ இரு வகை நடத்தைகளையும் கைக்கொள்வாயாக.(21) ஓ! முற்போக்காளர்களின் முதன்மையானவனே, ஓ! பாண்டுவின் மகனே, பூமியில் பிராமணனே முதன்மையானவன் என்பதால் பிராமணர்கள் ஒருபோதும் உன்னால் தண்டிக்கப்படக்கூடாது.(22) ஓ! மன்னர்களின் மன்னா, உயர் ஆன்ம மனு இரண்டு சுலோகங்களைப் பாடியிருக்கிறார். ஓ! குருகுலத்தோனே, உன் கடமைகளைப் பொறுத்தவரையில் நீ அவற்றை உன் மனத்தில் எப்போதும் கொள்ள வேண்டும்.(23) {அவ்விரண்டு சுலோகங்கள் [24 மற்றும் 25] பின்வருமாறு} “நெருப்பு நீரிலிருந்து உண்டானது, க்ஷத்திரியன் பிராமணனிலிருந்து உண்டானான், இரும்பு கல்லிலிருந்து உண்டானது. அம்மூன்றும் (நெருப்பு, க்ஷத்திரியன், இரும்பு என்ற மூன்றும்) தங்கள் பலத்தை அனைத்திலும் வெளிப்படுத்த முடியும். ஆனால் தங்கள் தங்கள் முன்னோரின் தொடர்பு அவற்றுக்கு ஏற்படும்போது, அவற்றின் சக்தி தணிவடைகிறது.(24) இரும்பானது கல்லைத் தாக்கும்போதோ, நெருப்பானது நீருடன் மோதும்போதோ, க்ஷத்திரியனொருவன் பிராமணனிடம் பகைமை பாராட்டும்போதோ அந்த மூன்றும் பலமிழக்கின்றன”[1].(25)(“ஜலத்திலிருந்து அக்னியும், பிராம்மணனிடமிருந்து க்ஷத்திரியனும், கல்லிலிருந்து இரும்பும் உண்டானார்கள். அக்னி முதலிய இம்மூன்றுகளின் சக்தி எங்கும் செல்லத்தக்கதாயினும் தம் காரணங்களில் நாசமடையும். கல்லை அடிக்கச் சென்ற இரும்பும், ஜலத்தைக் கொளுத்தச் சென்ற அக்கினியும், பிராம்மணர்களை த்வேஷிக்க முயன்ற க்ஷத்திரியனும் அப்பொழுதே நாசமடைவார்கள்”.மனு வார்த்தை)ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, பெரும் முனிவரான உசனஸ் {சுக்கிரன்}, பழங்காலத்தில் இரு சுலோகங்களைப் பாடியிருக்கிறார். ஓ! மன்னா, அவற்றைக் குவிந்த கவனத்தோடு கேட்பாயாக.(28) {அவ்விரண்டு சுலோகங்கள் [29 மற்றும் 30] பின்வருமாறு} “ஒரு பிராமணன், வேதங்களில் திறன்மிக்கவனாகவே இருப்பினும், உயர்த்திய ஆயுதத்துடன் அவன் போரிட வந்தால், தன் கடமைகளில் கவனமாக இருக்கும் நீதிமிக்க க்ஷத்திரியன் ஒருவன், அவனைத் தண்டிக்கவே வேண்டும்.(29) தண்டிப்பவனின் {மன்னனின்} கோபத்தை, தாக்குபவனின் {பிராமணனின்} கோபமே தீர்மானிக்கிறது என்பதால், கடமைகளை அறிந்தவனான க்ஷத்திரியன், மீறப்படும் நீதியை நிலைநிறுத்தும் அச்செயலால் பாவியாக மாட்டான்”[2].(30)(“யுத்தத்தில் ஆயுதமெடுத்துத் தன்னை எதிர்த்து வரும் பிராம்மணன் வேதாந்தமறிந்தவனானாலும் தர்மத்தை விரும்பும் அரசன் அவனை ஆயுதத்தால் அடக்க வேண்டும். தர்மத்திற்குக்குக் குறைவுவராமல் பாதுகாக்கும் தர்மம் அறிந்த அரசன் அக்காரியத்தால் தர்மத்தைக் கெடுத்தவனாகமாட்டான். ஏனெனில், அந்தப் பிராம்மணன் கோபமே அரசனுடைய கோபத்தை உண்டுபண்ணுகிறது”.சுக்கிரன் சொன்னதாகச் சொல்லப்படும் வார்த்தை)

ஓ! மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, இந்த வரைமுறைகளுக்கு உட்பட்டே பிராமணர்கள் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் குற்றமிழைப்பவர்களானால், உன் ஆட்சிப்பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்.(21) ஓ! மன்னா, தண்டனைக்குத் தகுந்தவர்களாகவே இருப்பினும், நீ அவர்களுக்குக் கருணை காட்ட வேண்டும். ஒரு பிராமணன், பிராமணக்கொலை செய்த குற்றவாளியானாலோ, தன் ஆசான் அல்லது மதிப்புக்குரிய பெரியோரின் படுக்கையைக் களங்கப்படுத்தியவனானாலோ, கருச்சிதைவுக்குக் காரணமானாலோ,(32) மன்னனுக்குத் துரோகமிழைத்தாலோ, அவனது தண்டனையானது உன் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக இருக்க வேண்டும். உடல்சார்ந்த தண்டனைகளேதும் அவர்களுக்கு விதிக்கப்படவில்லை.(33) பிராமணர்களிடம் மதிப்பு காட்டும் மனிதர்கள் (அரசு பொறுப்புகள் கொடுக்கப்பட்டு) உன்னால் ஆதரிக்கப்பட வேண்டும். பணியாட்களைத் தேர்ந்தெடுத்துத் திரட்டுவதைக் காட்டிலும் மன்னர்களுக்குப் பெரும் மதிப்புமிக்கச் செல்வமேதும் இல்லை.(34)

சாத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு வகை அரண்களில்[3], (இந்த ஆறு அரண்களும், “பூமி, நீர், பாலைவனம், காடு, மலை, மனிதர்கள்)உண்மையில் குடிகளைக் கொண்ட அரணே (தொண்டாற்ற ஆயத்தமாக இருக்கும் அன்பு கொண்ட குடிமக்களைக் கொண்ட அரணே) கைப்பற்ற முடியாத அரணாகும்.(35) எனவே, அறிவுடைய மன்னன், நால்வகைக் குடிமக்களிடமும் எப்போதும் கருணை காட்ட வேண்டும். அற ஆன்மா கொண்டவனாகவும், உண்மை நிறைந்த பேச்சு கொண்டவனாகவும் இருக்கும் மன்னன் தன் குடிமக்களை நிறைவு செய்வதில் வெல்கிறான்.(36) எனினும், ஓ! மகனே, சீற்றமில்லா யானை இழிந்ததாகக் கருதப் படுவதைப் போலவே மென்மையான மன்னனும் கருதப்படுகிறான் என்பதால், நீ எப்போதும் அனைவரிடமும் மன்னிக்கும் தன்மையுடன் {பொறுமையோடு} நடந்து கொள்ளக்கூடாது.(37)பிருஹஸ்பதி தொகுத்த சாத்திரங்களில், பழங்காலத்தில் இந்தக் காரியம் குறித்து ஒரு சுலோகம் பாடப்பட்டுள்ளது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் அதைச் சொல்கிறேன், கேட்பாயாக.(38) “ஒரு மன்னன் எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்டவனாக இருப்பானானால், யானையோட்டும் பாகன் அதன் தலைமீது அமர்ந்து அந்த யானையை ஓட்டுவதைப் போலவே, மனிதர்களில் இழிந்தோரும் அவனை இணங்கச் செய்து மேலோங்குவார்கள்”[4].(39) எனவே ஒரு மன்னன் எப்போதும் மென்மையாக இருக்கக்கூடாது. அதேபோல அவன் எப்போதும் கடுமையாகவும் இருக்கக்கூடாது. அவன் அதிகக் குளிர்ச்சியும், வியர்வையை உண்டாக்கும் அதிக வெப்பமும் இல்லாத இளவேனில் சூரியனைப் போல இருக்க வேண்டும்.(40)(“யானையின் தலையில் மாவுத்தன் ஏறுவது போலத் தாழ்ந்த மனிதனும் பொறுமையுள்ள அரசனை அவமதித்துத் தலையிலேற விரும்புவான்”.பிருஹஸ்பதி சொன்னதாகச் சொல்லப்படும் இவ்வார்த்தை)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரனே}, புலனுணர்வுகளின் நேரடி சாட்சிகள், கணிப்பு, ஒப்பீடுகள், சாத்திரங்களின் நெறிமுறைகள் ஆகியவற்றின் மூலம் ஒரு மன்னன் நண்பர்களையும், எதிரிகளையும் பகுத்தறிய வேண்டும்.(41) ஓ! பெரும் முற்போக்காளனே, வியசனங்கள்[5] என்றழைக்கப்படும் தீய நடைமுறைகள் அனைத்தையும் நீ தவிர்க்க வேண்டும். அவற்றில் நீ ஒரு போதும் ஈடுபடலாகாது என்ற, தேவையேதும் இல்லை. இருப்பினும், நீ அவற்றில் பற்று கொள்ளாதிருப்பதே தேவையாகும்.(42) அந்த நடைமுறைகளில் பற்று கொண்டாரை அனைவரும் அடக்கி ஆள்வர். தன் மக்களிடம் அன்பேதும் பேணாத மன்னன் அவர்களைக் கவலையில் ஆழ்த்துவான்.(43)(வ்யஸனங்கள் என்பன பதினெட்டு வகைப்படும்வேட்டை, சொக்கட்டான் {பகடை}, பகலிலுறக்கம், பிறரை நிந்தித்தல், பெண்மயக்கம், மதம், வீணான பாட்டு, கூத்து, வாத்தியங்கள், குடி இப்பத்தும் காமத்தாலுண்டாவன. தெரியாத குற்றத்தை வெளியிடுவது, குற்றமில்லாதவனைத் தண்டிப்பது, கபடமாகக் கொலை செய்வது, பிறர் பெருமையில் பொறாமை, பிறர் குணங்களைத் தோஷமாகக் கூறுதல், பிறர் பொருளை அபகரித்தல், கடுஞ்சொல், கொடுமையான தண்டம் இவ்வெட்டும் கோபத்தாலுண்டவன. இவைகளில் முதல் வகுப்பிலுள்ள குடி, சொக்கட்டான், பெண்மயக்கம், வேட்டை இந்நான்கும், இரண்டாவது வகுப்பில் பிறர்பொருளை அபகரித்தல், கடுஞ்சொல், கடுமையான தண்டம் இம்மூன்றும் மிகக் கஷ்டமானவை. இவை மனுதர்மசாஸ்திரம் ஏழாவது அத்தியாயத்தில் நாற்பத்தைந்தாவது சுலோகமுதல் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன)

ஒரு தாயானவள் தன் பிள்ளையைக் கருவில் தாங்குவதைப் போலவே, மன்னன் எப்போதும் தன் குடிமக்களைத் தாங்க வேண்டும். ஓ! ஏகாதிபதி, இஃது ஏன் விரும்பத்தக்கது என்பதற்கான காரணத்தைக் கேட்பாயாக.(44) ஒரு தாயானவள், தான் மிகவும் விரும்பும் பொருட்களை அலட்சியம் செய்து தன் பிள்ளையின் நன்மையை மட்டுமே நாடுவதைப் போல, மன்னர்களும் (தங்கள் குடிமக்களிடம்) நடந்து கொள்ள வேண்டும் என்பதில் ஐயமில்லை.(45) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, நீதிமிக்க மன்னன், தன் மக்களுக்கு நன்மை செய்வதற்காகத் தனக்குப் பிடித்தமானவற்றைத் தவிர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.(46) ஓ! பாண்டுவின் மகனே, நீ ஒருபோதும் மனோவுறுதியைக் கைவிடக்கூடாது. மனோவுறுதி கொண்டவனும், தீங்கிழைப்பவர்களைத் தண்டனைகளால் பீடிப்பவனாக அறியப்படுபவனுமான ஒரு மன்னனுக்கு அச்சப்பட எந்தக் காரணமும் இருக்காது.(47)

ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, நீ உன் பணியாட்களிடம் கேலிப் பேச்சுகளில் ஈடுபடக்கூடாது. ஓ! மன்னர்களில் புலியே, அத்தகு நடத்தையின் பிழைகளைக் கேட்பாயாக.(48) தலைவன் பணியாட்களுடன் சாதாரணமாகக் கலந்திருந்தால், அவனை அவர்கள் அவமதிக்கத் தொடங்குவார்கள். அவர்கள் தங்கள் நிலையை மறந்து, உண்மையில் அந்தத் தலைவனை மீறிச் செயல்படுவார்கள்.(49) ஒன்றைச் செய்யப் பணிக்கப்பட்டால், அதைச் செய்யத் தயங்கி, தங்கள் தலைவனின் இரகசியங்களைப் பலரறியக் கூறுவார்கள்[6].(50) அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி, தங்கள் தலைவனைவிடத் தங்களை உயர்வாகக் காட்டிக் கொள்ள முயல்வார்கள். கையூட்டுகள் பெற்று, வஞ்சகம் பயின்று, அரசின் பணிக்குத் தடைசெய்யும் விதத்தில் அவர்கள் மன்னனை விட உயர்விடங்கொள்ளக்கூட முனைவார்கள்.(51(“கட்டளையிட்டு அனுப்பினாலும் அக்காரியத்தில் ஸந்தேகப்படுவார்கள்; கேட்கத்தாகாத ரஹஸ்யத்தையும் கேட்பார்கள்; யாசிக்கத்தகாத வஸ்துவையும் யாசிப்பார்கள்; எஜமானன் புஜிக்கத்தக்க வஸ்துக்களைத் தின்பார்கள்”)

பொய்கள் மற்றும் பொய்யாவணங்கள் மூலம் நிந்தித்து, அரசை அழிவடையச் செய்வார்கள்[7]அரண்மனையின் பெண் பாதுகாவலர்களுடன் காதல் பழகி, தங்கள் தலைவனைப் போலவே உடைகளை உடுத்துவார்கள்.(52) ஓ மன்னர்களில் புலியே, ஏப்பம் மற்றும் அது போன்ற காரியங்களில் {கொட்டாவி போன்ற காரியங்களில்} வெட்கமில்லாமல் ஈடுபட்டு, தங்கள் தலைவன் முன்னிலையிலேயே காரி உமிழ்வார்கள். மேலும் அவர்கள் மற்றவர்கள் முன்னிலையில் வைத்து அவனை அலட்சியமாகப் பேசவும் அஞ்சமாட்டார்கள்.(53) மன்னன் மென்மையானவனாக நடந்து கொண்டு நையாண்டிப் பேச்சில் ஈடுபட்டால், அவனது பணியாட்கள் அவனை அலட்சியம் செய்து, மன்னர்களைப் போன்றே சிறந்த குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களைச் செலுத்துவார்கள்[8].(54) சபைகளில் திரளும் அவனது அமைச்சர்கள், “இஃது உமது சக்திக்கு மீறியது”, “இது தீய முயற்சி” என்பது போன்ற பேச்சுகளில் வெளிப்படையாக ஈடுபடுவார்கள்.(55) மன்னன் கோபமடைந்தால் அவர்கள் சிரிப்பார்கள்; மேலும், வேறு பிற காரணங்களுக்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், அவர்களுக்கு {மன்னனால்} அளிக்கப்படும் ஆதரவில் மகிழமாட்டார்கள்.(56)அவர்கள் தங்கள் தலைவனின் இரகசிய ஆலோசனைகளை வெளியிட்டு, மாறுபட்ட ஒலியுடன் {வேடிக்கையாக} அவனது தீய செயல்களைச் சொல்வார்கள். சிறு கவலையுமின்றி அவர்கள் மன்னனின் உத்தரவுகளை மதிக்காமல் இருப்பார்கள்.(57) மன்னனின் நகைகளோ, உணவோ, அவனது குளியலுக்குத் தேவையானவையோ, நறுமணப் பொருட்களோ வரவில்லையென்றாலும், அவனது பணியாட்கள் அவனது முன்னிலையிலேயே சிறு கவலையும் அடையமாட்டார்கள்.(58) அவர்கள் தங்களுக்குச் சேரவேண்டியதை நியாயமாக எடுக்கமாட்டார்கள். மாறாகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதில் நிறைவில்லாத அவர்கள் மன்னனின் உடைமைகளை எடுத்துக் கொள்வார்கள்.(59) அவர்கள் கயிற்றில் கட்டப்பட்ட பறவையோடு விளையாடுவதைப்போல மன்னனுடன் விளையாட விரும்பி, மன்னன் தங்களுடன் நெருக்கமாக இருக்கிறான், அவர்களிடம் மிகவும் அன்பு கொண்டிருக்கிறான் என்று எப்போதும் மக்கள் புரிந்து கொள்ளுமாறு தங்களை வெளிப்படுத்துவார்கள்.(60) ஓ! யுதிஷ்டிரா, மன்னன் மென்மையானவனாக இருந்து, கேலி பேசிக் கொண்டிருந்தால், இவையும் இன்னும் பிற தீமைகளும் அஃதிலிருந்து எழும்” என்றார் {பீஷ்மர்}”.(61)

எவன் சிறந்த மன்னன்? – சாந்திபர்வம் பகுதி – 57-மன்னன் என்பவன் செயல்பட ஆயத்தமாக இருக்க வேண்டும்; குடிமக்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டும்; அரச காரியங்களில் பணியில் அமர்த்தப்பட வேண்டியவர்களின் பண்புகள்; சிறந்த மன்னனுக்குரிய அடிப்படை தேவைகள்; எவன் ஆளத்தகுந்த மன்னன்; தவிர்க்கப்பட வேண்டிய ஆறு மனிதர்கள் ஆகியன குறித்து யுதிஷ்டிரனிடம் உரையாடிய பீஷ்மர்..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, ஒரு மன்னன் எப்போதும் செயல்பட ஆயத்தமாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணைப் போல முயற்சியற்றிருக்கும் மன்னன் புகழத்தகாதவனாவான்.(1) ஓ! ஏகாதிபதி, இது தொடர்பாக, புனிதமான உசனஸ் {சுக்கிரன்} ஒரு சுலோகத்தைப் பாடியிருக்கிறார். ஓ! மன்னா, அதை நான் உரைக்கிறேன் கவனமாகக் கேட்பாயாக.(2) “போரில் வெறுப்புள்ள மன்னன், மனைவியர் மற்றும் பிள்ளைகளிடம் பெரும்பற்றுக் கொண்ட பிராமணன் ஆகிய இருவரையும், எலியை விழுங்கும் பாம்பைப் போலப் பூமியானவள் விழுங்குகிறாள்”.(3) ஓ! மன்னர்களில் புலியே இதை நீ எப்போதும் உன் இதயத்தில் தாங்குவதே உனக்குத் தகும். (விதிப்படி) யாருடன் அமைதி பேணப்பட வேண்டுமோ அந்த எதிரிகளிடம் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, யாருடன் போர்தொடுக்கப்பட வேண்டுமோ அந்த எதிரிகளிடம் போர் தொடுப்பாயாக.(4) ஏழு அங்கங்களுடன்[1] கூடிய உன் நாட்டிடம் பகைமை பாராட்டுபவன் உன் ஆசானோகவோ, உன் நண்பனாகவோ இருந்தாலும் கூட, அவன் உன்னால் கொல்லப்பட வேண்டும்.(5)(மன்னன், அமைச்சர்கள், நண்பர்கள், கருவூலம், நாட்டுக்கு உரிமைப்பட்ட நிலப்பகுதி, கோட்டைகள் படைகள் ஆகியனவே நாட்டின் ஏழு அங்கங்கள்)ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மன்னர்களின் கடமை குறித்து, பிருஹஸ்பதியின் கருத்துக்கு ஏற்புடைய வகையில் மன்னன் மருத்தனால் பாடப்பட்ட பழைய சுலோகம் ஒன்று இருக்கிறது.(6) “ஓர் ஆசான், அகந்தையுடனும், எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதில் அலட்சியத்துடனும் இருந்து வரைமுறைகள் அனைத்தையும் மீறினால் அழிவில்லா வரைமுறைகளின்படி அவருக்கும் தண்டனையுண்டு”.(7) பாஹுவின் மகனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் சகரன், தன் குடிமக்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தன் மூத்த மகனான அசமஞ்சனை நாடு கடத்தினான்.(8) ஓ! மன்னா, அந்த அசமஞ்சன், குடிமக்களின் பிள்ளைகளைச் சரயுவில் {சரயு ஆற்றில்} மூழ்கடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். எனவே அவனது தந்தை {மன்னன் சகரன்} அவனை {அசமஞ்சனை} நிந்தித்து, நாடு கடத்தினான்.(9) முனிவர் உத்தாலகர், தனக்குப் பிடித்தமான மகனும், கடுந்தவங்களைக் கொண்டவருமான சுவேதகேது, பிராமணர்களை மகிழ்விப்பதாக வஞ்சகமாக உறுதி கூறி, அவர்களை அழைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததால் அவரைக் கைவிட்டார்.(10)

குடிமக்களின் மகிழ்ச்சி, உண்மையை நோற்கும் நோன்பு, நடத்தையில் உண்மை மற்றும் நேர்மை ஆகியவையே மன்னர்களின் நித்திய கடமைகளாகும்.(11) ஒரு மன்னன் பிறரின் செல்வத்தில் ஆசை கொள்ளக்கூடாது. எது கொடுக்கப்பட வேண்டுமோ அதைச் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். ஒரு மன்னன் ஆற்றல் கொண்டவனாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவனாகவும், உணர்வால் மன்னிக்கும் இயல்பு கொண்டவனாகவும் இருந்தால் அவன் ஒருபோதும் செழிப்பிலிருந்து வீழமாட்டான்.(12) தீமைகளிலிருந்து தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட மன்னன், தன் கோபத்தைக் கட்டுப்படுத்த இயன்றவனாகவும், சாத்திரங்களுக்கு ஏற்புடைய தீர்மானங்களை எடுப்பவனாகவும் இருப்பான். அவன் எப்போதும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகியவற்றை {தர்மார்த்தகாமமோக்ஷத்தை} (நீதியுடன்) பின்பற்ற வேண்டும்.(13) இவை மூன்றை (அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றைப்) பொறுத்தவரையில் ஒரு மன்னன் தன் ஆலோசனைகளை எப்போதும் மறைக்க வேண்டும். தன் ஆலோசனைகள் வெளிப்படுவதைக் காட்டிலும் ஒரு மன்னனுக்குப் பெரும் தீமை ஏதும் ஏற்பட முடியாது.(14) மன்னர்கள் தங்கள் கடமைகளை ஆற்றுகையில் நால் வகையினரையும் பாதுகாக்க வேண்டும். வேறுபட்ட வகையினரை {நால் வர்ணத்தாரைப்} பொறுத்தவரை கடமைகளில் குழப்பமேற்படாமல் தவிர்ப்பது மன்னர்களின் நித்திய கடமையாகும்.(15)

ஒரு மன்னன் (தன் பணியாட்களைத் தவிர வேறு யாரிடமும்) நம்பிக்கை வைக்கக்கூடாது, அதேபோல (தன் பணியாட்களிடம் கூட) நம்பிக்கை இல்லாமலும் இருக்கக்கூடாது. அவன் தன் புத்தியால், அரசுரிமைக்குத் தேவைப்படும் முக்கியமான ஆறு ஆதாரங்களின்[2] தகுதிகளையும், குறைகளையும் கவனிக்க வேண்டும்.(16) (இந்த ஆறும்: 1. (பலமிக்க எதிரியிடம்) அமைதியைப் பேணல், 2. (சமபலம் கொண்ட எதிரியிடம்) போருக்குத் தயாராக இருத்தல், 3. (பலவீனமானவர்களின் ஆட்சிப்பகுதிகளுக்கு அணிவகுத்து) படையெடுத்தல், 4. இடைத்தங்கல், 5.(பலவீனமாக இருந்தால், தன் கோட்டைக்குள்) பாதுகாப்பை நாடல், 6.(எதிரியின் தலைமை அதிகாரிகளுக்கு மத்தியில்) பிரிவினையைத் தூண்டல்”)தன் எதிரிகளின் கவனக்குறைவுகளைக் கவனிப்பவனும், அறம், பொருள், இன்பத்தில் நீதியைப் பின்பற்றுபவனும், இரகசியங்களை உறுதி செய்யப் புத்திக்கூர்மையுள்ள ஒற்றர்களை நியமிப்பவனும், தன் எதிரிகளுடைய அதிகாரிகளுக்குச் செல்வம் கொடுத்துக் கெடுக்க முயல்பவனுமான மன்னன் பாராட்டுக்குத் தகுந்தவனாவான்.(17) ஒரு மன்னன் யமனைப் போல நீதியை நிர்வகித்து, குபேரனைப் போலச் செல்வத்தைத் திரட்ட வேண்டும். தான் அடைந்தவை, இழந்தவை மற்றும் தன் ஆட்சிப்பகுதிகள் ஆகியவற்றின் நிறை குறைகளை அவன் கண்காணிக்க வேண்டும்.(18) உணவில்லாதவர்களுக்கு அவன் உணவளிக்க வேண்டும். உணவளித்த பிறகு அஃதை அவர்களிடம் விசாரிக்க வேண்டும். அவன் (கடுப்பில்லாத) புன்னகையுடன் கூடிய முகத்துடன் இனிமையாகப்பேச வேண்டும்.(19) அவன், வயதில் பெரியோருக்காக எப்போதும் காத்திருந்து, தன் தாமதத்திற்கு வருந்த வேண்டும். பிறரின் உடைமைகளில் அவன் ஒருபோதும் ஆசை வைக்கலாகாது.(20)அவன் நீதிமான்களின் நடத்தையை உறுதியாகப் பின்பற்றி, அந்நடத்தையைக் கவனமாக நோற்க வேண்டும். நல்லோரின் செல்வத்தை அவன் ஒருபோதும் கைப்பற்றக்கூடாது. நியாயமற்றவர்களிடம் உள்ள செல்வத்தைக் கைப்பற்றி நல்லோரிடம் அவன் கொடுக்க வேண்டும்.(21) ஒரு மன்னன் தானே தாக்குவதில் திறன்கொண்டவனாக இருக்க வேண்டும். அவன் ஈகை பயில வேண்டும். அவன் தன் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அவன் பிரகாசமாக உடை உடுத்த வேண்டும். அவன் சரியான காலங்களில் கொடையளித்து, தன் உணவை முறையான நேரங்களில் உட்கொள்ள வேண்டும். அவன் நன்னடத்தைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.(22) செழிப்பை அடைய விரும்பும் மன்னன், துணிவுமிக்கோர், அர்ப்பணிப்புமிக்கோர், எதிரிகளால் வஞ்சிக்கப்பட முடியாதோர், நற்குடியில் பிறந்தோர், உடல்நலம் கொண்டோர், நன்னடத்தைக் கொண்டோர், நன்னடத்தைக் கொண்ட குடும்பங்களுடன் தொடர்பிலிருப்போர், மரியாதைக்குரியோர், பிறரை அவமதிக்காதோர், அனைத்து அறிவியல்களையும் அறிந்தோர், உலகம் மற்றும் அதன் காரியங்களைக் குறித்த அறிவைக் கொண்டோர், நாட்டின் எதிர்காலம் குறித்து எப்போதும் கவனமாக இருப்போர், தங்கள் கடமைகளை எப்போதும் நோற்போர், நேர்மையானோர், மலைகளைப் போன்ற உறுதியைக் கொண்டோர் ஆகியோரை எப்போதும் தன் பணியில் இணைத்துக் கொள்ள வேண்டும். இன்ப நோக்கங்களைப் பொறுத்தவரையில் அவனுக்கும் அவர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இருக்கக்கூடாது. தன் குடை மற்றும் கட்டளையிடும் அதிகாரம் ஆகியவை மட்டுமே அவர்களுக்குள் ஒரே வேறுபாடாக இருக்க வேண்டும்.(23-25) அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவனுடைய நடத்தையானது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு நடந்து கொள்ளும் மன்னன் ஒருபோதும் துயரடையமாட்டான்.(26)

அனைவரையும் சந்தேகப்பட்டு, தன் குடிமக்களுக்குக் கனமான வரிகளை விதித்து நேர்மையற்றவனாகவும், பேராசைக்காரனாகவும் இருக்கும் மன்னன், விரைவில் தன் பணியாட்கள் அல்லது உறவினர்களாலேயே தன் உயிரை இழப்பான்.(27) நன்னடத்தைக் கொண்டவனும், தன் மக்களின் இதயங்களைக் கவர்வதில் ஈடுபடுபவனுமான மன்னன், எதிரிகளால் தாக்கப்பட்டாலும் ஒருபோதும் அழிவடையமாட்டான். ஒருவேளை வெல்லப்பட்டாலும், அவன் வெகுவிரைவில் தன் நிலையை மீண்டும் அடைவான்.(28) ஒரு மன்னன் கோபம் நிறைந்தவனாக இல்லையென்றால், தீய நடைமுறைகளுக்கு அடிமையாகாமல் இருந்தால், கடும் தண்டனைகளை அளிக்காமல் இருந்தால், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியவனாக இருந்தால், அவன் (அனைத்துயிர்களுக்கும் நம்பிக்கையளிக்கும்) இமய மலைகளைப் போல அனைவரின் நம்பிக்கைக்குரியவனாவான்.(29)

ஞானம், ஈகை, எதிரிகளின் கவனக்குறைவைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆயத்த நிலை, இனிய பண்புகள், நால்வகைசேர்ந்த தன் குடிமக்களுக்கான நன்மையையும், தீமையையும் அறிந்த நிலை, செயலூக்கம், கோபத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், பழியுணர்ச்சி இல்லாமை, உயர்ந்த மனம், கோபம் நிறைந்த மனோநிலை இல்லாமை, வேள்விகளிலும், பிற அறச் செயல்களிலும் ஈடுபாடு, தற்பெருமை பேசாமை, தன்னால் தொடங்கப்பட்ட அனைத்து வேலைகளை நிறைவு செய்யத் தீவிரச் செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டவனே மன்னர்களில் சிறந்தவனாவான்.(30-32) தன் தந்தையின் வீட்டில் இருக்கும் மகனைப் போலத் தன் நாட்டில் உள்ள மக்கள் அச்சமில்லாமல் வாழும் வகைச் செய்பவனே மன்னர்களில் சிறந்தவனாவான்.(33) தங்கள் செல்வத்தை மறைத்து வைக்கும் தேவையில்லாதவர்களும், தங்களுக்கான நன்மை தீமைகளை அறிந்தவர்களுமான குடிமக்களைக் கொண்டிருப்பவனே மன்னர்களில் சிறந்தவனாவான்.(34)

எவனுடைய குடிமக்கள் தங்கள் தங்கள் கடமைகளில் ஈடுபட்டிருக்கின்றனரோ, கடமைக்காகத் தங்கள் உடல்களைக் கைவிடவும் அஞ்சுவதில்லையோ; எவனுடைய மக்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, அமைதி நிறைந்த நடத்தையுடன், கீழ்ப்படிந்தவர்களாக, அடக்கமானவர்களாக, கட்டுப்படுபவர்களாக, சச்சரவுகளில் ஈடுபட விரும்பாதவர்களாக, முற்போக்கானவர்களாக இருக்கின்றனரோ அவனே உண்மையில் மன்னனாவான். எந்த மன்னனின் ஆட்சிப்பகுதிகளில் தீமைகள், கள்ளநடத்தை, வஞ்சகம், பொறாமை ஆகியவை ஏதும் இல்லையோ அந்த மன்னன் அழிவில்லா தகுதியை ஈட்டுகிறான்.(35,36)

எவன் அறிவை மதிக்கிறானோ, எவன் சாத்திரங்களுக்கும், தன் மக்களுக்கான நன்மைக்கும் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, எவன் நீதியின் பாதையில் நடக்கிறானோ, எவன் முற்போக்காளனோ அந்த மன்னனே உண்மையில் ஆளத்தகுந்தவனாவான்.(37) எவனுடைய ஒற்றர்கள், ஆலோசனைகள், நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படாத செயல்கள் ஆகியன எதிரிகள் அறியாதனவாகவே இருக்கின்றனவோ அந்த மன்னனே ஆளத்தகுந்தவனாவான்.(38)

பின்வரும் வரியானது ராமசரிதம்[3] என்றழைக்கப்படும் உரையில் பிருகு குலத்தின் உசனஸால் {சுக்கிரனால்} மன்னர்களின் கடமைகள் என்ற கருத்தில் பாடப்பட்டுள்ளது.(39) “ஒருவன் முதலில் (எவனுடைய ஆட்சிப்பகுதியில் வாழ்வதெனத்) தன் மன்னனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அவன் ஒரு மனைவியைத் தேர்ந்தெடுத்து, பிறகு செல்வம் ஈட்ட வேண்டும். ஒரு மன்னன் இல்லையென்றால் மனைவியும், உடைமைகளும் எவ்வாறு இருக்க முடியும்?”(40) நாட்டின் மீது ஆசை கொண்டோரைப் பொறுத்தவரையில், (குடிமக்களின்) பாதுகாப்பைத் தவிர வேறு எந்தக் கட்டுப்பாடான நித்திய கடமையும் அவர்களுக்குக் கிடையாது. தன் குடிமக்களுக்கு மன்னன் அளிக்கும் பாதுகாப்பே உலகத்தைத் தாங்கிப் பிடிக்கிறது[4].(41)பிசேதசின் மகனான மனு, மன்னர்களின் கடமைகளைக் குறித்து இரு வரிகளைப் பாடியிருக்கிறார். அவற்றைக் கவனமாகக் கேட்பாயாக.(42) கடலில் உள்ள ஓட்டைப் படகைத் தவிர்ப்பதைப் போல இந்த ஆறு மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டும். அவர்கள். பேசாத ஆசான், சாத்திரங்கள் பயிலா புரோகிதன்,(43) பாதுகாப்பை வழங்கா மன்னன், ஏற்பில்லாததைப் பேசும் மனைவி, கிராமத்திற்குள் திரிய விரும்பும் இடையன் மற்றும், காடுகளுக்குச் செல்ல விரும்பும் நாவிதன் ஆகியோராவர்[5]” {என்றார் பீஷ்மர்}.(44)

பாதுகாப்பின் வழிமுறைகள்! – சாந்திபர்வம் பகுதி – 58-நாட்டைப் பாதுகாக்கும் வழிமுறைகள்; முயற்சியின் முக்கியத்துவமும், அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டிய அவசியமும்; மன்னனால் சமயத்திற்கேற்றவாறு கபடமும், கபடமற்ற நிலையும் ஏன் கைக்கொள்ளப்பட வேண்டும் என்பனவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சூரியன் மறையப்போவதால் தன் ஐயங்களை அடுத்த நாள் கேட்பதாகச் சொன்ன யுதிஷ்டிரன்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, குடிமக்களைப் பாதுகாப்பதே அரச கடமைகளில் முக்கியமானது. தெய்வீகமான பிருஹஸ்பதி வேறு எந்தக் கடமையையும் (இந்த ஒன்றைப் போல்) மெச்சவில்லை.(1) அகன்ற கண்களைக் கொண்டவரும், கடுந்தவங்களைக் கொண்டவருமான கவி (உசனஸ் {சுக்கிரன்}), ஆயிரங்கண் இந்திரன், பிரசேதஸின் மகன் மனு,(2) தெய்வீக பரத்வாஜர், தவசி கௌரசிரஸ் மற்றும் பிரம்மத்தை ஓதி, பிரமத்துக்கு அர்ப்பணிப்புடன் கூடிய அனைவரும் மன்னர்களின் கடமைகளைக் குறித்து உடன்படிக்கைகளைத் தொகுத்திருக்கிறார்கள்.(3) ஓ! அறவோரில் முதன்மையானவனே, அவர்கள் அனைவரும், மன்னர்களைப் பொறுத்தவரையில், பாதுகாப்பை வழங்கும் கடமையையே புகழ்ந்திருக்கின்றனர். ஓ! தாமரை இதழ்களைப் போன்றதும், தாமிர வண்ணம் கொண்டதுமான கண்களைக் கொண்டவனே, பாதுகாப்பை முயன்றடையும் வழிமுறைகளைக் குறித்துக் கேட்பாயாக.(4)

ஓ! யுதிஷ்டிரா, ஒற்றர்களையும், பணியாட்களையும் பணியமர்த்தல், அலட்சியமில்லாமல் அவர்களுக்குரியதைக் {கூலிகளைக்} கொடுப்பது, பிறர் நலத்தை எண்ணிப்பார்த்து வரிகளைத் தெளிவாக்குவது {அடைவது}, கணிக்க முடியாத அளவுக்கு (குடிமக்களிடம் இருந்து) காரணமில்லாமல் ஒருபோதும் எதையும் கைப்பற்றாமல் இருத்தல்,(5) (நிர்வாகக் காரியங்களைச் செயல்படுத்த) நேர்மையான மனிதர்களைத் தேர்ந்தெடுத்தல், வீரம், திறம், (தொழில் பரிவர்த்தனையில்) புத்திக்கூர்மை, உண்மை, மக்களின் நன்மையை நாடுவது, நியாயமான மற்றும் நியாயமற்ற வழிமுறைகளில் எதிரிக்கு மத்தியில் வேறுபாட்டையும், ஒற்றுமையின்மையையும் உண்டாக்குவது,(6) பழைய, அல்லது விழும் நிலையில் உள்ள கட்டடங்களைச் செப்பனிடுவது, சமயத்திற்குத் தகுந்தவாறு ஒழுங்கமைக்கப்பட்ட அபராதங்களையும், உடல்சார்ந்த தண்டனைகளை அளிப்பது,(7) நேர்மையாளர்களைக் கைவிடாதிருப்பது, நற்குடியில் பிறந்தோருக்குப் பணியையும், பாதுகாப்பதையும் அளிப்பது, சேமிக்க வேண்டியதைச் சேமிப்பது, புத்திக்கூர்மை கொண்டோரிடம் தோழமை கொள்வது,(8) படைவீரர்களை நிறைவு செய்வது, குடிமக்களைக் கண்காணிப்பது வணிகப் பரிமாற்றங்களில் நிலைமாறா உறுதியோடு இருப்பது, கருவூலத்தை நிறைப்பது,(9) நகரக் காவலர்களிடம் குருட்டு நம்பிக்கை வைக்காமலிருப்பது, பகை நகரக் குடிமக்களிடம் பற்றுறுதியை {விசுவாசத்தைக்} குலையச் செய்வது, எதிரி நாடுகளுக்கு மத்தியில் வாழும் நண்பர்களையும் கூட்டாளிகளையும் கவனமாகப் பார்த்துக் கொள்வது,(10) பணியாட்களையும், அரசு அதிகாரிகளையும் கடுமையாகக் கண்காணிப்பது, நகரத்தைத் தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள்வது, பணியாட்களை நம்பாமல் இருப்பது, உறுதிமொழிகளின் மூலம் எதிரிக்கு ஆறுதலளிப்பது,(11) கொள்கைவிதிகளில் உறுதியோடிருப்பது, செயல்பட ஆயத்தமாக இருப்பது, எந்த எதிரியையும் அலட்சியம் செய்யாதிருப்பது, தீயோரைக் கைவிடுவது ஆகியவையே {பாதுகாப்பை முயன்றடையும்} அந்த வழிமுறைகளாகும்.(12)

முயற்சியில் மன்னர்களின் ஆயத்தமானது அரச கடமைகளின் வேராகும். இது குறித்துப் பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார். அவரால் பாடப்பட்ட வரிகளைக் கேட்பாயாக.(13) “முயற்சியாலேயே அமுதம் அடையப்பட்டது; முயற்சியாலேயே அசுரர்கள் கொல்லப்பட்டனர்; முயற்சியாலே இந்திரன் சொர்க்கம் மற்றும் பூமியின் அரசுரிமையை அடைந்தான்.(14) பேச்சில் வீரர்களை விட முயற்சியில் வீரன் மேன்மையானவனாவான். பேச்சில் வீரர்கள், முயற்சியில் வீரர்களை நிறைவு செய்து அவர்களை வழிபடுவார்கள்[1].(15) முயற்சியற்ற மன்னன், நுண்ணறிவைக் கொண்டவனாகவே இருந்தாலும், நஞ்சிழந்த பாம்பைப் போல எதிரிகளால் எப்போதும் வெல்லப்படுவான்.(16) பலங்கொண்ட ஒரு மன்னன், எதிரி எவ்வளவு பலவீனமாக இருப்பினும், அவனை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. ஒரே ஒரு தீப்பொறியால் காட்டுத்தீயை உண்டாக்க முடியும், ஒரே ஒரு துளி நஞ்சும் கொல்லக்கூடும்.(17) பகைவன் ஒரே ஒரு வகைப் படையுடன் கோட்டைக்குள் இருந்தால், பலமிக்கச் செழிப்பான மன்னனின் மொத்த நாட்டையும் அவனால் பீடிக்க முடியும்.(18)மன்னனின் இரகசியப் பேச்சுகள், வெற்றியை அடைய திரட்டப்படும் துருப்புகள், அவனது இதயத்தில் இருக்கும் கபட நோக்கங்கள், குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உண்டான அதே போன்ற நோக்கங்கள், (19) அவன் செய்யும், அல்லது செய்ய நினைக்கும் தீச்செயல்கள் ஆகியவை கள்ளங்கபடமற்ற தோற்றத்துடனே அவனால் {மன்னனால்} மறைக்கப்பட வேண்டும். தன் மக்களைத் தன் ஆளுகைக்குள் வைப்பதற்கு அவன் நியாயமாகச் செயல்பட வேண்டும்.(20) குறுகிய புத்தி கொண்டோரால் பரந்த பேரரசின் சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது. மென்மையான மன்னனால், உழைப்பைக் கோரும் மேன்மையான தகுதியை அடைய முடியாது.(21) இறைச்சித் துண்டைப் போல அனைவராலும் பேராசை கொள்ளப்படும் நாட்டைக் கள்ளங்கபடமில்லாத, எளிமையான நடத்தையுடன் ஒருபோதும் காக்க முடியாது. எனவே, ஓ! யுதிஷ்டிரா, நீ கள்ளங்கபடமில்லாமலும், கபடத்தோடும் என இரு வகைகளிலும் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும்.(22) குடிமக்களைப் பாதுகாப்பதில் ஒரு மன்னன் ஆபத்தில் விழ நேர்ந்தால் அவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான். அதுவே மன்னர்களின் நடத்தையாக இருக்க வேண்டும்.(23) மன்னர்களின் கடமைகளைக் குறித்த ஒரு பகுதியை மட்டும் நான் இப்போது உன்னிடம் சொல்லியிருக்கிறேன். ஓ! குருக்களின் சிறந்தவனே {யுதிஷ்டிரனே}, நீ அறிய விரும்புவனவற்றை என்னிடம் சொல்வாயாக” என்றார் {பீஷ்மர்}”.(24)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்தார், “சிறப்புமிக்க வியாசர், தேவஸ்தானர், அஸ்வர், வாசுதேவன் {கிருஷ்ணன்}, கிருபர், சாத்யகி, சஞ்சயன் ஆகியோர்(25) முற்றாக மலர்ந்த மலர்களுக்கு ஒப்பான முகங்களுடன் மகிழ்ச்சியால் நிறைந்து, “சிறப்பு! சிறப்பு!”” என்று சொல்லி மனிதர்களில் புலியும், அறவோரில் முதன்மையானவருமான பீஷ்மரைத் துதித்தனர்.(26) அப்போது குரு குலத்தின் தலைவனான யுதிஷ்டிரன் உற்சாகமற்ற இதயத்துடனும், கண்ணீரால் குளித்த கண்களுடனும், மென்மையாகப் பீஷ்மரின் பாதங்களைத் தீண்டி,(27) “ஓ! பாட்டா, சூரியன் பூமியிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிட்டு இன்று (இப்போது) மறையப் போகிறான் என்பதால் என் ஐயங்களை நான் நாளை கேட்கிறேன்” என்று சொன்னான்.(28) பிறகு, கேசவன், கிருபர், யுதிஷ்டிரன் மற்றும் பிறர், (அங்கே கூடியிருந்த) பிராமணர்களை வணங்கி, அந்தப் பெரும் ஆற்றின் மைந்தரை வலம் வந்து, உற்சாகமாகத் தங்கள் தேர்களில் ஏறினர்.(29) சிறந்த நோன்புகளை நோற்கும் அவர்கள் அனைவரும் திருஷத்வதியின் ஓடையில் {ஆற்றில்} நீராடினர். தங்கள் முன்னோருக்கு நீர்க்காணிக்கைகள் அளித்த அந்த எதிரிகளை எரிப்பவர்கள், அமைதியாகப் புனித மந்திரங்களை ஓதி, வேறு பிற மங்கலச் செயல்களையும் செய்து, மாலை சந்தியை உரிய சடங்குகளுடன் துதித்து, யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(30)

பிரம்மனின் தண்டநீதி! – சாந்திபர்வம் பகுதி – 59அ-இரண்டாவது நாளாக பீஷ்மரிடம் போதனை கேட்கச் சென்ற பாண்டவர்களும், யாதவர்களும்; அரசன் என்ற சொல் உண்டானது எவ்வாறு, அரசனுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது எனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அரசோ மன்னனோ அற்றிருந்த உலகில் மெல்ல அறம் வீழத் தொடங்கியது; அதை நிலைநிறுத்த தண்ட நீதியைத் தொகுத்த பிரம்மதேவன்; பிரம்மதேவன் தொகுத்த தண்டநீதியின் உள்ளடக்கங்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் விவரித்த பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அடுத்த நாள் தங்கள் படுக்கையில் இருந்து எழுந்து, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி காலைச் சடங்குகளைச் செய்த பாண்டவர்களும், யாதவர்களும், கோட்டைகளுடன் கூடிய நகரங்களுக்கு ஒப்பான தங்கள் தேர்களில் ஏறி (பீஷ்மர் கிடந்த இடத்திற்குப்) புறப்பட்டுச் சென்றனர்.(1) குருவின் களத்திற்கு {குருக்ஷேத்திரத்திற்குச்} சென்று, பாவமற்ற பீஷ்மரை அணுகிய அவர்கள், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்} இரவை மகிழ்ச்சியாகக் கழித்தாரா என்பதை விசாரித்தனர்.(2) முனிவர்கள் அனைவரையும் வணங்கி, பதிலுக்கு அவர்களால் ஆசி கூறப்பட்ட இளவரசர்கள், பீஷ்மரைச் சுற்றி அமர்ந்தனர்.(3) அப்போது பெரும் சக்தி கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், முறையாகப் பீஷ்மரை வணங்கிய பிறகு, கூப்பிய கரங்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(4)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா {பீஷ்மரே}, ஓ! பாரதரே, பூமியில் {தற்போது} பயன்படுத்துவதைப் போல ராஜன் என்ற சொல் எப்போதிருந்து உண்டானது? ஓ! எதிரிகளை எரிப்பவரே, இதை எனக்குச் சொல்வீராக.(5) பிறரைப் போலவே, கரங்கள், தோள்கள், கழுத்து, புத்தி, புலன்களைக் கொண்டவனும், பிறரைப் போலவே ஒரே வகை இன்ப துன்பங்களை அனுபவிப்பவனும், உலகில் உள்ள பிறரைப் போலவே முதுகு, வாய் மற்றும் வயிற்றைக் கொண்டவனும்,(6) பிறரைப் போலவே உயிர் நீர், எலும்புகள், மஜ்ஜை, சதை, குருதி ஆகியவற்றைக் கொண்டவனும், பிறரைப் போலவே மூச்சை உள்ளிழுத்து, வெளிவிடுபவனும், உயிர் மூச்சைக் கொண்டவனும், பிற மனிதர்களைப் போலவே உடல்களைக் கொண்டவனும்,(7) பிறப்பு, இறப்பு ஆகியவை ஒத்திருப்பவனும், உண்மையில் மனிதப் பண்புகள் அனைத்திலும் பிறருக்கு ஒப்பாகவும் இருக்கும் ஒரு {சாதாரண} மனிதனான மன்னன், என்ன காரணத்தினால், உலகில் பெரும் நுண்ணறிவும், துணிச்சலும் மிக்கப் பல மனிதர்களை ஆள்கிறான்?(8) துணிச்சல் மிக்கவர்களும், சக்தி மிக்கவர்களும், நன்னடத்தைக் கொண்ட உயர்குடி பிறப்பாளர்களும் நிறைந்த இந்தப் பரந்த உலகை ஒரு மனிதன் ஆள்வது எவ்வாறு? மனிதர்கள் அனைவரும் அவனது ஆதரவை அடைய முயல்வது ஏன்?(9) ஒரு மனிதன் மகிழ்ச்சியடைந்ததும், மொத்த உலகும் மகிழ்ச்சியடைவதும், ஒரு மனிதன் தொல்லைக்குட்பட்டால் மொத்த உலகும் தொல்லைக்குள்ளாவதும் ஏன்?(10) ஓ! பாரதக் குலத்தின் காளையே, நான் இதை விரிவாகக் கேட்க விரும்புகிறேன். ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவரே, இது குறித்து என்னுடன் முழுமையாக உரையாடுவீராக.(11) ஓ! மன்னா, தேவனைப் போல மொத்த உலகமும் ஒருவனை வணங்குவது காணப்படுவதால் இவை அனைத்திற்கும் முக்கியக் காரணம் இல்லாமல் இருக்காது” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னர்களில் புலியே, கிருத யுகத்தில் முதலில் அரசுரிமை தோன்றியது எவ்வாறு என்பதைக் குவிந்த கவனத்துடன் விரிவாகக் கேட்பாயாக.(13) முதலில் அரசுரிமையோ, மன்னனோ, தண்டனையோ, தண்டனை வழங்குபவனோ ஏதும், எவரும் கிடையாது. மனிதர்கள் அனைவரும் நீதியுடன் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டனர்.(14) ஓ! பாரதா, இவ்வாறு ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டு அவர்கள் வாழ்ந்து வரும் போது, (சில காலத்திற்குப் பிறகு) அந்தப் பணி வலிநிறைந்ததாக இருப்பதைக் கண்டனர். பிறகு அவர்களது இதயங்களைப் பிழைகள் பீடிக்கத் தொடங்கின.(15) ஓ! இளவரசே, பிழையால் பீடிக்கப்பட்ட மனிதர்களின் அறிவும் குழப்பமடைந்த பிறகு அறம் வீழத் தொடங்கியது.(16) ஓ! பாரதர்களின் தலைவா, அறிவு மங்கி, மனிதர்கள் பிழைக்கு ஆட்பட்ட போது, அவர்கள் அனைவரும் பேராசை கொண்டோராக மாறினர்.(17) தங்களிடம் இல்லாத பொருட்களை மனிதர்கள் அடைய விரும்பியதால், மற்றொரு ஆசையான காமம் அவர்களைப் பற்றியது.(18) அவர்கள் காம வசப்பட்டபோது கோபம் என்ற பெயர் கொண்ட மற்றொரு ஆசை விரைவில் அவர்களை வீழ்த்தியது. கோபவசப்பட்டதும், அவர்கள் அனைவரும் எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதை மறந்தனர்.(19) கட்டுப்பாடில்லாத காம ஈடுபாடு பெருகியது. மனிதர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்ததைப் பேசத் தொடங்கினர். தூய மற்றும் தூய்மையற்ற உணவு, அறம் மற்றும் மறம் ஆகியவற்றுக்கிடையான வேறுபாடுகள் காணாமல் போயின[1].(20)(ஆதியில் கிருதயுகத்தில் அரசனும், ராஜ்யமும், தண்டமும், தண்டிப்பவனுமில்லாமல் பிரஜைகளனைவரும் தர்மத்தாலேயே ஒருவரையொருவர் ரக்ஷித்துவந்தார்கள். ஏ! பாரத! அவ்விதம் தர்மத்தால் ஒருவருக்கொருவர் ரக்ஷிக்கப்பட்டு வரும் மனிதர்கள் மிக்கத் தைன்யத்தை அடைந்தார்கள். சிரமமடைந்த அந்த மனிதர்களை அவிவேகம் பிடித்துக் கொண்டது. அந்த மனிதர்கள் மோகத்துக்கு வசப்பட்டார்கள். மனிதஸ்ரேஷ்டனே! அவிவேகத்தால் அறிவு குறைந்தவுடன் அவர்களுடைய தர்மம் நாசமடைந்தது. பரதஸ்ரேஷ்டனே! தர்மக்குறைவாலும், அறிவின் குறைவாலும் மோகத்திற்கு வசப்பட்ட மனிதர்கள் யாவரும் அப்பொழுது தம்மிடமில்லாத பொருளை அடைய வேண்டுமென்னும் லோபமுள்ளவர்களானார்கள். பிரபுவே! விருப்பமுள்ள வஸ்துக்களை அடைய முயற்சி செய்ய வேண்டுமென்னுங்காமம் லோபத்திற்குள்ளான மனிதர்களைத் தன் வசமாக்கிக் கொண்டது. காமத்திற்குள்ளான அந்த ஜனங்களை ராகமென்னும் போகவிடாயும் கைப்பற்றிக் கொண்டது. இவ்விதம் மேன்மேலும் ஆசைபிடித்து மனிதர்கள் யாவரும் இன்னது செய்யத்தக்கது, இன்னது செய்யத்தகாததென்னும் பகுத்தறிவற்றவர்களானார்கள். ஓ! அங்ஙனமே சேரத்தகாத மடந்தையர்களைச் சேர்ந்தார்கள்; பேசத்தக்கது பேசத்தகாதது புஜிக்கத்தக்கது, புஜிக்கத்தகாதது, குற்றமுள்ளது, குற்றமில்லாதது ஆகிய இவையனைத்தையும் கைப்பற்றினார்கள். இம்மானிடவுலகம் இப்படித் தர்மவரம்பு அற்றுத் தடுமாறுதலும், வேதம் அக்காலத்தில் ஒழிவடைந்தது”)

மனிதர்களுக்கு மத்தியில் இந்தக் குழப்பம் ஏற்பட்டபோது, வேதங்கள் மறைந்தன. வேதங்கள் மறைந்ததும், அறம் காணாமல் போனது.(21) வேதங்களும், அறமும் தொலைந்ததும், தேவர்கள் அச்சமடைந்தனர். ஓ! மனிதர்களில் புலியே, அச்சமடைந்த தேவர்கள் பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள்.(22) அண்டத்தின் தெய்வீகப் பெரும்பாட்டனை நிறைவு செய்த தேவர்கள், துயரால் பீடிக்கப்பட்டு, கூப்பிய கரங்களுடன் அவரிடம்,(23) “ஓ! தேவா, பேராசை மற்றும் குற்றங்களில் ஈடுபடும் உலகின் மனிதர்களால் நித்தியமான வேதங்கள் பீடிக்கப்படுகின்றன. இதனால் நாங்கள் அச்சமடைந்துள்ளோம்.(24) ஓ! உயர்ந்த தலைவா, வேதங்கள் தொலைந்ததன் மூலம் அறமும் தொலைந்திருக்கிறது. ஓ! மூவுலகங்களின் தலைவா, இதன் காரணமாக நாங்கள் மனிதர்களின் அளவுக்குக் கீழிறங்கப் போகிறோம்.(25) மனிதர்கள் மேல்நோக்கிப் பொழிவதும், நாங்கள் கீழ்நோக்கிப் பொழிவதும் இதுவரை வழக்கமாக இருந்தது. எனினும், மனிதர்களுக்கு மத்தியில் பக்திச் சடங்குகள் அனைத்தும் நின்று போனதன் விளைவால், பெரும் துயரம் எங்களுடையதானது[2].(26) ஓ! பெரும்பாட்டனே, உமது சக்தியால் படைக்கப்பட்ட இந்த அண்டம் அழிவடையாமல் இருக்க, எங்களுக்கு நன்மையானதை நினைப்பீராக” என்று கேட்டனர்.(27)(மனிதர்கள், வேள்வி நெருப்புகளில் தெளிந்த நெய்யைக் காணிக்கைகளாக ஊற்றி தேவர்களுக்கு உணவூட்டினர். தேவர்கள் அந்தக் காணிக்கைகளை உண்டு, மனிதர்களின் வாழ்வுக்கு ஆதாரமாகப் பூமியில் மழையைப் பொழிந்தனர். எனவே, மனிதர்கள் மேல்நோக்கிப் பொழிந்தனர், தேவர்கள் கீழ்நோக்கிப் பொழிகின்றனர் என்று சொல்லப் படுகிறது”)

தான்தோன்றியான அந்தத் தெய்வீகத் தலைவன் {பிரம்மன்} இவ்வாறு சொல்லப்பட்டதும், அவன் அவர்களிடம், “அனைவருக்கும் எது நன்மையைப் பயக்குமென நான் சிந்திக்கிறேன். தேவர்களில் முதன்மையானோரே, உங்கள் அச்சம் விலகட்டும்” என்றான்.(28) பிறகு அந்தப் பெரும்பாட்டன், தன் நுண்ணறிவைக் கொண்டு, நூறாயிரம் பாடங்களை {ஒரு லட்சம் அத்தியாயங்களைக்} கொண்ட ஓர் ஆய்வை {சாஸ்திரத்தைத்} தொகுத்தான். அஃதில் அறம், பொருள், மற்றும் இன்பம் ஆகியன விரிவாக உரைக்கப்பட்டிருந்தன.(29) அந்தத் தான்தோன்றி அவற்றை {திரிவர்க்கம் என்றழைக்கப்படும்} மூன்று திரட்டுகளாக அமைத்திருந்தான். மேலும் அவன், இவற்றிலிருந்து பொருளும், பண்புகளும் வேறுபட்ட வீடு {மோட்சம்} என்றழைக்கப்படும் நான்காவது திரட்டையும் அமைத்தான்.(30) நல்ல குணம் {சத்வ குணம்}, ஆசை குணம் {ரஜோ குணம்}, இருள் குணம் {தாமச குணம்} என்ற பண்புகளின் படி வீடும் {மோட்சமும்} மூன்று திரட்டுகளாகவும், மற்றொன்றும் (நான்காவதாகப் பேரின்பத்தில், அல்லது இவ்வுலகிலோ, மறுவுலகிலோ வெகுமதி கிடைக்குமென்ற நம்பிக்கையில்லாமல் கடமை பயில்வது) அதில் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாத்தல், வளர்ச்சி மற்றும் அழிவு ஆகியவற்றைக் கொண்ட தண்டனையோடு தொடர்புடைய மேலும் மூன்று திரட்டுகளும் அதில் அமைக்கப்பட்டிருந்தன.[3](31)(“லக்ஷம் அத்தியாயமுள்ள சாஸ்திரத்தைத் தமது புத்தியால் இயற்றினர். அதில் த்ரிவர்க்கமென்று பிரஸித்தி பெற்ற அறம்பொருளின்பங்கள் அவரால் விரிவாகவுரைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மூன்றைத் தவிர நான்காவதாக மோக்ஷமென்பது வேறென்றும் அதன் காரணமும் பயனும் வேறென்றும் ஸத்வம், ரஜஸ், தமஸென்னும் அதைச் சேர்ந்த திரிவர்க்கம் வேறென்றும் அதில் சொல்லப்படும். ஸமநிலை, வளர்ச்சி, குறையென்னும் த்ரிவர்க்கம், தண்டநீதிக்குரியதாகும்)

மனிதர்களின் இதயங்கள் {மனங்கள்}, இடம், காலம், வழிமுறைகள், கருத்தினைக் காட்டும் செயல்கள், கூட்டணிகள், காரணங்கள் ஆகிய மேலும் ஆறு திரட்டுகளும் அதில் அமைக்கப்பட்டிருந்தன.(32) மூன்று வேதங்களிலும் விதிக்கப்பட்டிருக்கும் அறச்சடங்குகள், அறிவு, வாழ்வைத் தாங்குவதற்கு அவசியமான செயல்கள் (உழவு மற்றும் வணிகம் போன்றவை) ஆகியவையும், ஓ! பாரதக் குலத்தின் காளையே, தண்டனை விதிக்கும் சட்டங்களும் {தண்டநீதியும்} அதில் விதிக்கப்பட்டிருந்தன.(33) ஓ! மன்னா, அமைச்சர்களுடன் நடந்து கொள்ளும் முறை, ஒற்றர்கள், இளவரசர்களின் அறிகுறிகள், பல்வேறு வழிமுறைகளுக்கான இரகசிய முகவர்கள், தூதர்கள், பிறவகை முகவர்கள் ஆகியவையும்,(34) மனவேற்றுமை நீக்கல் {சமரசம்}, முரண்களில் ஒத்திசைவு, கொடைகள், தண்டனை, ஐந்தாவதாகப் பொறுமை ஆகியவை அதில் விரிவாக முழுமையாகச் சொல்லப்பட்டிருந்தன.(35) அனைத்து வகையான ஆழமான ஆய்வுகள், வேற்றுமையை உண்டாக்கும் ஆலோசனைகள், ஆய்வின் பிழைகள், வெற்றியின் விளைவுகள் அல்லது ஆலோசனைகளின் தோல்விகள், அச்சமூட்டவது, பதவிச் செல்வாக்குக் கொடுப்பது, செல்வத்தைக் கொடையளிப்பது ஆகியவற்றின் மூலம் அமைக்கப்பட்ட மூவகையிலான நல்ல, மத்திம மற்றும் தீய ஆய்வுகள் ஆகியன அதில் விரிவாக விளக்கப்பட்டிருந்தன.(36,37)

பயணங்கள் செய்வதற்கான நால்வகைக் காலங்கள், நேர்மையாக அடையப்பட்டவை, செல்வத்தால் வெல்லப்பட்டவை, வஞ்சகமாக அடையப்பட்டவை என்ற மூன்று வகை வெற்றிகள் ஆகியன அதில் விரிவாக விளக்கப்பட்டிருந்தன.(38) (அமைச்சர்கள், நாடு, கோட்டை, படை மற்றும் கருவூலம் ஆகிய) ஐந்து திரட்டுகளின் மூன்று வகைகளிலான தீய, மத்திம, மற்றும் நல்ல பண்புகளும் அதில் சொல்லப்பட்டிருந்தன.(39) வெளிப்படையான மற்றும் மறைமுகமான இருவகைத் தண்டனைகளும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. எட்டு வகையான வெளிப்படை தண்டனைகளும், எட்டு வகையான மறைமுகத் தண்டனைகளும் அதில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தன.(40) ஓ! பாண்டுவின் மகனே, ஓ! கௌரவ்யா {யுதிஷ்டிரா}, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பணிக்குழு, (படைகளில்) ஊதியம் வாங்கும் ஊழியர்கள், போர்ப்பகுதிகள் இருக்கும் நாட்டில் இருந்து கொள்ளப்படும் வழிகாட்டிகள் ஆகியோர் வெளிப்படையான தண்டனையின் கருவிகள் அல்லது வெளிப்படையாகச் செயல்படும் சக்திகள் ஆவர்.(41) {மறைமுகத் தண்டனை என்பது} உடை உடுத்துதல், உணவு மற்றும் மந்திரங்கள் ஆகிய மூவகைப் பொருட்களைப் பொறுத்தவரையும் அசையும் மற்றும் அசையாத நஞ்சை பயன்படுத்துவது மற்றும் செயல்படுத்துவதும் குறிப்பிடப்படுகிறது[4]. எதிரிகள், கூட்டாளிகள், நடுநிலையாளர்கள் குறித்தும் இதில் விளக்கப்படுகிறது.(42,43)(ரஹஸ்யமான தண்டனை ஸர்ப்ப முதலிய ஜங்கவிஷம், வற்சநாப முதலிய ஸ்தாவர விஷம் மற்றும் பல விஷப் பொடிகள், ஆடையாபரண முதலி வஸ்துக்களிலும், அன்ன முதலிய புஜிக்கத்தக்கவைகளிலும், பிரயோகிக்கத்தக்க முறைகள் மற்றும் ஆபிசாரங்கள் எனப் பலவிதமென்றும் விரிவாகக் கூறப்படுகின்றன”விளையாட்டுச் சண்டையிலும், சூதாட்டத்திலும், நம்பிக்கையுடன் கூடியதும் ஒன்பதாவது உபாயமென்று வித்வான்களால் சொல்லப்பட்டதுமான கள்ளத்தனமும், அறம்பொருளின்பங்களைக் கெடுப்பதும் இஷ்டம் அனிஷ்டமென்னும் இவ்விரு விஷயங்களிலுமுள்ளதுமான உபேக்ஷையும், இந்திரஜால முதலிய மாயையும், சுபாசுபங்களைக் குறிப்பிடும் பல சகுனங்களும், வேஷத்தை அடைந்து பகையாளிகளிடம் உபயோக்கத் தக்க டம்பமும், வஞ்சகமும், ஸித்த தோஷத்தால் கெடுப்பதும், சேஷ்டையில்லாமல் செய்வதும் அதில் சொல்லப்படுகின்றன.)

(நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் பிறவற்றைச் சார்ந்து பயணப்படும்) சாலைகளின் பல்வேறு பண்புகள், (முற்றுகை இடப்படும்) மண்ணின் தன்மைகள், தற்பாதுகாப்பு, தேர்கள், போருக்கான பிற உபகரணங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் கண்காணிப்பு, அவற்றை {தேர்கள் மற்றும் போர் உபகரணங்களைப்} பயன்படுத்துதல்,(44) மனிதர்கள், யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவற்றைப் பாதுகாத்து, மேம்படுத்தும் பல்வேறு வழிமுறைகள், பல்வேறு வகையான போர் அணிவகுப்புகள் {வியூகங்கள்}, திட்டங்கள், போர் நகர்வுகள் {அசைவுகள்},(45) தீமையை முன்னறிவிக்கும் கோள்களின் சந்திப்புகள், (நிலநடுக்கங்கள் போன்ற) கடும்துயரை விளைவிக்கும் மேற்பார்வைத் தேர்வாய்வுகள், போர்முறைகளில் மற்றும் பின்வாங்குவதில் திறன் நிறைந்த வழிமுறைகள், ஆயுதங்களின் அறிவு, அவற்றை உரிய முறையில் பாதுகாத்தல்,(46) துருப்புகளின் ஒழுங்கின்மை, அவற்றை {துருப்புகளின் ஒழுங்கின்மையைக்} களைவது, படைக்கு மகிழ்ச்சியையும், உறுதியான நம்பிக்கையையும் அளிக்கவல்ல வழிமுறைகள், நோய்கள், துயர்மிகுந்த ஆபத்தான காலங்கள், போரில் காலாட்படையினரை வழிநடத்தும் அறிவு,(47) ஆபத்தை அறிவிக்கும் ஒலிமுறைகள், குறிப்பாணைகள், கொடிமரங்களை வெளிப்படுத்தி எதிரியை அச்சமூட்டுவது, கள்வர்கள் மற்றும் கடும் காட்டு இனக்குழுக்கள், நெருப்பை வீசுபவர்கள், நஞ்சூட்டுபவர்கள், மோசடி செய்பவர்கள் ஆகியவர்களின் மூலம் எதிரியின் நாட்டைப் பீடிக்கும் பல்வேறு வழிமுறைகள், பகைவர் படையின் முக்கிய அதிகாரிகளுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை உண்டாக்குவது, பயிர்களையும், செடிகளையும் வெட்டி வீழ்த்துவது,(48,49) எதிரி யானைகளின் திறனை அழிப்பது, பீதியை உண்டாக்குவது, படையெடுத்துச் செல்பவனிடம் நல்ல எண்ணம் கொண்ட எதிரியின் குடிமக்களைக் கௌரவிப்பது, எதிரிக்கு நம்பிக்கையளிப்பது,(50) அரசின் ஏழு அடிப்படைத் தேவைகளின்[5] அழிவு, வளர்ச்சி மற்றும் ஒற்றுமை, (எதிர்பார்க்கப்படும்) வேலைத்திறன், அவற்றை நிறைவேற்றும் வழிமுறைகள், நாட்டை விரிவுபடுத்தும் வழிமுறைகள்,(51) பகைவரின் ஆட்சிப்பகுதிகளில் வாழும் மக்களுடைய நம்பிக்கையை வெல்லும் வழிமுறைகள், தண்டனை, பலமிக்கவர்களை அழிக்கும் முறை,(52) நீதியைச் சரியாக நிர்வகிக்கும் முறை, தீயவர்களை அழிப்பது, மற்போர், கணையேவுதல், ஆயுதங்களை வீசுதலும், ஏவுதலும், கொடைகளை அளிக்கும் வழிமுறைகள், தேவையான பொருட்களைச் சேமிக்கும் வழிமுறை,(53) உணவில்லாதவர்களுக்கு உணவூட்டுவது, உணவளிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பது, சரியான காலத்தில் செல்வத்தைக் கொடையளிப்பது, வியசனங்கள் என்றழைக்கப்படும் தீமைகளில் இருந்து விடுபட்டு இருப்பது,(54) மன்னர்களின் பண்புகள், படை அதிகாரிகளின் தகுதிகள், மூன்று தேவைகளின் மூலங்கள், அவற்றின் தகுதிகள் மற்றும் குறைகள்,(55) பல்வேறு வகையான தீய நோக்கங்கள், ஆதரவில் வாழ்வோரின் நடத்தை, அனைவரிடமும் ஐயங்கொள்வது, அலட்சியத்தைத் தவிர்த்தல்,(56) அடையாத பொருட்களை அடைவது, ஏற்கனவே அடையப்பட்ட பொருட்களை மேம்படுத்துவது, அவ்வாறு மேம்படுத்தப்பட்டவற்றைத் தகுந்த நபர்களுக்குக் கொடையளிப்பது,(57) பக்தி நோக்கங்கள், இன்ப நுகர் பொருட்களை அடைவது, ஆபத்து மற்றும் துயரை அகற்றுவது ஆகியவற்றுக்காகச் செல்வத்தைச் செலவு செய்வது, ஆகியவை குறித்தும் அந்த ஆய்வில் {பிரம்மனின் சாத்திரத்தில்} குறிப்பிடப்பட்டிருந்தது.(58)

ஓ! குருக்களின் தலைவா {யுதிஷ்டிரா}, கோபத்தில் இருந்து உண்டாகுபவையும், காமத்திலிருந்து உண்டாகுபவையுமான பத்து வகைக் கடும் தீமைகளும் அந்த ஆய்வில் குறிப்பிட்டப்பட்டிருந்தன.(59) காமத்திலிருந்து பிறப்பதாகக் கல்விமான்களால் சொல்லப்படும் நான்கு வகைத் தீமைகள், வேட்டை, சூது, குடி, பாலியல் ஈடுபாடு ஆகியன எனத் தான்தோன்றியின் {பிரம்மனின்} அந்தப் படைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.(60) கடுஞ்சொல், கொடூரத்தனம், கடும் தண்டனை, உடலுக்கு வலியை அளிப்பது, தற்கொலை, தன் நோக்கங்களையே தடுப்பது ஆகிய இந்த ஆறு வகைக் குற்றங்களும் கோபத்தில் இருந்து பிறக்கின்றன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது[6].(61) பல்வேறு வகை இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் அதில் விளக்கப்பட்டிருந்தன. பகைவரின் ஆட்சிப்பகுதிகளைப் பாழாக்குதல், எதிரிகளைத் தாக்குவது, எளிதில் அடையாளங்காணக்கூடிய நிலக்குறியீடுகளை {நிலத்தின் சின்னங்களை} அழித்தல் மற்றும் நீக்கல், பிற குறிப்புகள்,(62) (எதிரிகளும், எதிரிகளின் குடிமக்களும் நிழலில் புத்துணர்ச்சி பெறாமல் இருக்க) பெரிய மரங்களை வெட்டி வீழ்த்துவது, கோட்டைகளை முற்றுகையிடுவது, உழவைக் கண்காணிப்பது, பிற பயனுள்ள செயல்பாடுகள், (துருப்புகளுக்குத்) தேவையான பொருட்கள், ஆடைகள் மற்றும் துணிகளை) சேகரிப்பது, அவற்றை உற்பத்தி செய்யும் சிறந்த வழிமுறைகள் ஆகியன அனைத்தும் அதில் விளக்கப்பட்டிருந்தன.(63)

ஓ! யுதிஷ்டிரா, பனவங்கள், ஆனகங்கள், சங்குகள், பேரிகைகள் ஆகியவற்றின் தன்மைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவது, (ரத்தினங்கள், விலங்குகள், நிலங்கள், ஆடைகள், பெண் பணியாட்கள், தங்கம் ஆகிய) ஆறுவகைப் பொருட்கள், (ஒருவன் தனக்காக) அவற்றை அடையக்கூடிய வழிமுறைகள், (எதிரிக்குத் தீங்கிழைப்பதற்காக) அவற்றை அழிப்பது,(64) புதிதாக அடையப்பட்ட ஆட்சிப்பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவது, நல்லோரைக் கௌரவிப்பது, கல்விமான்களுடன் நட்பை வளர்ப்பது, கொடைகள் மற்றும் ஹோமம் போன்ற அறச்சடங்குகளின் விதிகளில் ஞானம் கொள்வது,(65) மங்கலப் பொருட்களைத் தீண்டல், உடலைக் கவனித்தல் மற்றும் அலங்காரம், உணவைச் சமைப்பது மற்றும் பயன்படுத்தும் பாங்கு, கடவுள்பற்றுடன் கூடிய நடத்தை,(66) ஒரு வழியைப் பின்பற்றிச் செழிப்பை அடைவது, பேச்சில் உண்மை, பேச்சில் இனிமை, விழாக்காலங்கள் மற்றும் சமூக அவைகளில் செய்யப்பட வேண்டிய செயல்கள், வீட்டில் செய்யப்பட வேண்டிய செயல்கள்,(67) சந்திக்கும் இடங்கள் அனைத்திலும் நபர்கள் செய்யக்கூடிய வெளிப்படையான, மறைமுகமான செயல்கள், மனிதர்களின் நடத்தையை நிலையாகக் கண்காணிப்பது, பிராமணத் தண்டனைக்கு எதிர்ப்பு, நியாயமான தண்டனைகளைக் கொடுப்பது, உறவுமுறை மற்றும் தகுதியின் அடிப்படையில் சார்ந்திருப்போருக்குக் கௌரவங்களை அளிப்பது,(68,69) குடிமக்களைப் பாதுகாப்பது, நாட்டை விரிவாக்கும் வழிமுறைகள், பனிரெண்டு மன்னர்களுக்கு மத்தியில் வாழும் ஒரு மன்னன், நால்வகை எதிரிகள், நால்வகைக் கூட்டாளிகள் மற்றும் நால்வகை நடுநிலைவாதிகள் ஆகியவர்களைப் பொறுத்தவரை எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற ஆலோசனைகள்,(70) பாதுகாப்பு, பயிற்சி, உடல் தேர்ச்சி, குறிப்பிட்ட நாடுகளின் நடைமுறைகள், இனங்கள் மற்றும் குடும்பங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் ஆகியவற்றைக் குறித்த எழுபத்திரண்டு {72} அறச் செயல்கள்[7] ஆகியனவும் அந்தப் படைப்பில் முறையாக விளக்கப்பட்டிருந்தன.(71)ஓ! அபரிமிதமான கொடைகளை அளிப்பவனே {யுதிஷ்டிரனே}, அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவையும் அதில் விளக்கப்பட்டிருந்தது. பல்வேறு ஈட்டல் முறைகள், பல்வேறு வகைச் செல்வங்களின் மீது விருப்பம்,(72) உழவின் முறைகள், வருவாய்க்கான முக்கிய ஊற்றாக அமையும் பிற செயல்முறைகள், மாயைகளை உண்டாக்கவும், பயன்படுத்தவும் கூடிய பல்வேறு வழிமுறைகள், {ஏரி, குளம் போன்று} தேங்கும் நீரைக் கெடுக்கும் வழிமுறைகள் ஆகியனவும் அதில் விதிக்கப்பட்டிருந்தன.(73) ஓ! மனிதர்களில் புலியே, அறம், நேர்மை ஆகிய பாதைகளிலிருந்து மனிதர்கள் வழுவாமல் இருக்கும் வழிமுறைகள் அனைத்தும் அதில் விரிவாக விளக்கப்பட்டிருந்தன.(74)

மிக உயர்ந்த அந்த ஆய்வைத் தொகுத்த பிறகு, அந்தத் தெய்வீகத் தலைவன் {பிரம்மன்}, இந்திரனின் தலைமையிலான தேவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(75) “உலகின் நன்மைக்காகவும் (அறம், பொருள், இன்பம் ஆகிய) மூன்று திரட்டுகளை நிறுவுவதற்காகவும், இந்த அறிவியலை {சாத்திரத்தை} அழகிய உரைநடையில் தொகுத்திருக்கிறேன்.(76) தண்டனையின் துணையால் இந்த அறிவியல் உலகத்தைப் பாதுகாக்கும். இந்த அறிவியலானது, வெகுமதிகள் மற்றும் தண்டனைகளைச் சொல்லி மனிதர்களுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும்.(77) மனிதர்கள் தண்டனையின் மூலமே (தங்கள் இருப்புக்கான பொருட்களை அடைய) வழிநடத்தப்படுகிறார்கள், அல்லது வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், தண்டனையே அனைத்துக்கும் வழிவகுக்கிறது, அல்லது அனைத்தையும் ஆட்சி செய்கிறது, எனவே, இந்த அறிவியலானது தண்டநீதி (தண்டனையின் அறிவியல்) என மூவுலகங்களிலும் அறியப்படும்.(78) ஆறு திரட்டுகளின்[8] பண்புகள் அனைத்தையும் விவரிக்கும் இந்த அறிவியல், உயர் ஆன்ம மனிதர்களால் எப்போதும் பெரிதாக மதிக்கப்படும். அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகியவை அனைத்தும் இதில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன” {என்றான் பிரம்மன்}.(79)

வேனனின் மகன் பிருது! – சாந்திபர்வம் பகுதி – 59ஆ-சிவன், இந்திரன், பிருஹஸ்பதி மற்றும் சுக்கிராச்சாரியரால் சுருக்கப்பட்ட பிரம்மனின் தண்டநீதி; உலகில் உள்ள மனிதர்களை ஆள ஒரு மன்னனைக் கொடுக்கும்படி விஷ்ணுவிடம் வேண்டிய தேவர்கள்; விரஜஸை உண்டாக்கிய விஷ்ணு; அதிபலனுக்கும், மிருத்யுவின் மகளான சுநீதைக்கும் பிறந்த வேனன்; வேனனைக் கொன்ற முனிவர்கள்; வேனனின் தொடையில் இருந்து உண்டான நிஷாதர்களும், மிலேச்சர்களும்; வேனனின் வலக்கரத்தில் இருந்து உண்டான பிருது; பூமியைச் சமமாக்கிய மன்னன் பிருது; ராஜன், க்ஷத்திரியன் ஆகிய சொற்கள் உண்டானதன் வரலாறு; பிருதுவின் பெருமை; தேவர்களுக்கு நிகராக மன்னன் மதிக்கப்படுவதற்கான புதிராதிக்கம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “அதன் {பிரம்மன் தண்ட நீதியைத் தொகுத்த} பிறகு, தெய்வீகமானவனும், அகன்ற கண்களைக் கொண்டவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், அருள் அனைத்தின் இருப்பிடமும், உமையின் தலைவனுமான சிவன், அதை முதலில் கற்று, தேர்ச்சி பெற்றான்.(80) இருப்பினும், அந்தத் தெய்வீக சிவன், படிப்படியாகக் குறைந்து வந்த மனிதனின் வாழ்நாளைக் கருத்தில் கொண்டு, பிரம்மனால் தொகுக்கப்பட்டதும், முக்கியமான கருத்துகளைக் கொண்டதுமான அந்த அறிவியலைச் சுருக்கினான்[1].(81) பத்தாயிரம் {10,000} பாடங்களைக் கொண்ட வைசாலாக்ஷம் என்றழைக்கப்பட்ட அந்தச் சுருக்கம், பிரம்மனுக்கு அர்ப்பணிப்புள்ளவனும், பெரும் தவத்தகுதி கொண்டவனுமான இந்திரனால் பெறப்பட்டது.(82) அந்தத் தெய்வீக இந்திரனும் அந்த ஆய்வை ஐயாயிரம் {5,000} பாடங்களைக் கொண்டதாகச் சுருக்கி, அதைப் பாஹுதந்தகம் என்று அழைத்தான்.(83) அதன்பிறகு பலமிக்கவரும், நுண்ணறிவு கொண்டவருமான {தேவகுரு} பிருஹஸ்பதி, அந்த ஆய்வைக் கொண்ட படைப்பை மூவாயிரம் {3,000} பாடங்கள் கொண்டதாகச் சுருக்கி, அதைப் பார்ஹஸ்பத்தியம் என்றழைத்தார்.(84) அடுத்ததாக, யோகத்தின் ஆசானும், பெரும் புகழைக் கொண்டவரும், அளவிலா ஞானம் கொண்டவருமான {அசுர குரு} கவி {சுக்கிரன்}, அந்தப் படைப்பை ஆயிரம் {1000} பாடங்களைக் கொண்டதாக மேலும் சுருக்கினார்.(85) மனிதனின் வாழ்நாள் காலத்தின் குறைவையும், (அனைத்திடமும் காணப்படும்) பொதுவான குறைவையும் கருத்தில் கொண்டே அந்தப் பெரும் முனிவர்கள் அந்த அறிவியலை இவ்வாறு சுருக்கினர்.(86)

பிறகு தேவர்கள், உயிரினங்களின் தலைவனான விஷ்ணுவை அணுகி, அவனிடம், “ஓ! தேவா, உலகின் மனிதர்களுக்கு மத்தியில் உள்ளோர் அனைவரிலும் எவன் மேன்மையடையத்தக்கவனோ {எவன் எஞ்சியிருப்போரனைவரையும் ஆள்வானோ} அவனைக் குறிப்பிடுவீராக” என்றனர்.(87) பலமிக்கவனும், தெய்வீகமானவனுமான நாராயணன், சிறிது நேரம் சிந்தித்து, அதிகக் காந்தியுள்ள விரஜஸ் என்ற பெயருடைய ஒரு மகனைத் தன் சக்தியின் மூலம் உண்டாக்கினான்.(88) எனினும், உயர்ந்த அருளைக் கொண்ட அந்த விரஜஸ் பூமியின் அரசுரிமையை விரும்பவில்லை. ஓ! பாண்டுவின் மகனே, அவனது மனம் துறவு வாழ்வையே நாடியது.(89) விரஜசுக்கு கீர்த்திமான என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். அவனும் {கீர்த்திமானனும்} கூட மகிழ்ச்சியையும், இன்பத்தையும் துறந்தான். கீர்த்திமானுக்குக் கர்த்தமன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். அந்தக் கர்த்தமனும் கடும் தவங்களைப் பயின்றான்.(90) உயிரினங்களின் தலைவனான கர்த்தமன், அனங்கன் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றான். பக்தியோடு கூடிய நடத்தை கொண்டவனும், தண்ட அறிவியலை முற்றாக அறிந்தவனுமான அந்த அனங்கனே உயிரினங்களின் பாதுகாவலனானான்.(91)

அனங்கன், அரச கொள்கைகளை நன்கறிந்த அதிபலன் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றான். அவன் தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு ஒரு பரந்த பேரரசை அடைந்து, தன் ஆசைகளுக்கு அடிமையானவன் ஆனான்.(92) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மிருத்யுவுக்கு {மிருத்யு தேவிக்கு}, தன் மனத்தில் பிறந்த ஒரு மகள் இருந்தாள். சுநீதை என்ற பெயரிடப்பட்டு, மூவுலகங்களில் கொண்டாடப்பட்ட அவள், (அதிபலனை மணந்து கொண்டு) வேனன் என்ற பெயருடைய ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.(93) கோபத்திற்கும், தீய செயல்களுக்கும் அடிமையாக இருந்த வேனன், அனைத்து உயிரினங்களிடமும் அநீதியாக நடந்து கொண்டான். பிரம்மத்தை ஓதுபவர்களான முனிவர்கள், மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட குசப்புற்களால் {அவற்றையே ஆயுதமாகக் கொண்டு} அவனைக் {வேனனைக்} கொன்றனர்.(94) மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்த அம்முனிவர்கள் வேனனின் வலது தொடையைத் துளைத்தனர். அப்போது அந்தத் தொடையில் இருந்து, இரத்தச் சிவப்பான கண்களுக்கும், கருப்பு முடியும் கொண்டவனும், தீயால் கருகிய பந்தத்திற்கு ஒப்பானவனுமான ஒரு குள்ளமான மனிதன் பூமியில் தோன்றினான். அந்தப் பிரம்மத்தை ஓதுபவர்கள் அவனிடம், “இங்கே நிஷீத {அமர்வாயாக}” என்றனர்.(95,96) மலைகளையும், காடுகளையும் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட தீய இனமான நிஷாதர்களும், விந்திய மலைகளில் வசிக்கும் மிலேச்சர்கள் என்றழைக்கப்படும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிறரும் அவனில் இருந்தே உண்டாகினர்.(97)

பிறகு அந்தப் பெரும் முனிவர்கள், வேனனின் வலக்கரத்தைத் துளைத்தனர். அதிலிருந்து இரண்டாவது இந்திரனின் வடிவிலான ஒரு மனிதன் தோன்றினான்.(98) கவசம், வாள்கள், விற்கள், கணைகள் ஆகியவற்றைத் தரித்தவனும், ஆயுத அறிவியலை நன்கறிந்தவனுமான அவன், வேதங்களையும், அதன் அங்கங்களையும் முற்றாக அறிந்தவனாக இருந்தான்.(99) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தண்டனை அறிவியலுக்கான விதிகள் அனைத்தும் (தங்கள் உடல் கொண்ட வடிவங்களில்) அந்தச் சிறந்த மனிதனிடம் வந்தன. பிறகு, அந்த வேனனின் மகன், அந்தப் பெரும் முனிவர்களிடம் கூப்பிய கரங்களுடன்,(100) “மிகக் கூரியதும், அறம் நோற்க உதவுவதுமான அறிவை நான் அடைந்திருக்கிறேன். அதைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக. எந்தப் பயனுள்ள பணியை நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ, அஃதை எந்தத் தயக்கமும் இல்லாமல் நான் நிறைவேற்றுவேன்” என்றான்.(102)

இவ்வாறு அவனால் சொல்லப்பட்டதும், அங்கிருந்த தேவர்களும், முனிவர்களும் அவனிடம், “எவற்றில் அறம் வசிக்கிறதோ அந்தப்பணிகள் அனைத்தையும் அச்சமில்லாமல் நிறைவேற்றுவாயாக.(103) உனக்கு அன்பானதையும், அல்லாததையும் அலட்சியம் செய்து, வேறுபாடில்லாத கண்களுடன் அனைத்து உயிரனங்களையும் காண்பாயாக. காமம், கோபம், பேராசை, கௌரவம் ஆகியவற்றைத் தொலைவாக வீசி,(104) அறவிதிகளையே எப்போதும் நோற்று, கடமையின் பாதையிலிருந்து வழுவும் எந்த மனிதனையும் உன் கரங்களாலேயே தண்டிப்பாயாக.(105) வேதங்களால் பூமியில் ஆழப் பதிக்கப்பட்ட அறத்தை, உன் மனம், சொல், செயல் ஆகியவற்றில் எப்போதும் கட்டிக்காப்பதாக உறுதியேற்பாயாக.(106) மேலும், வேதங்களால் விதிக்கப்பட்ட கடமைகளை, தண்டனை அறிவியலின் துணையோடு அச்சமில்லமால் கட்டிக்காப்பதாகவும், உறுதியற்ற செயலை ஒருபோதும் செய்வதில்லை எனவும் உறுதியேற்பாயாக.(107) ஓ! பலமிக்கவனே, பிராமணர்கள் தண்டனையிலிருந்து விலக்கப்பட்டவர்கள் என்பதை அறிவாயாக, வர்ணக்கலப்பு ஏற்படாமல் உலகைப் பாதுகாப்பதாகவும் உறுதியேற்பாயாக” என்றனர்.(108)

இவ்வாறு சொல்லப்பட்ட வேனன் மகன், முனிவர்களின் தலைமையிலான தேவர்களிடம், “மனிதர்களில் காளையரான அந்த உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணர்கள் என்னால் எப்போதும் வழிபடப்படுவார்கள்” என்று மறுமொழி கூறினான்.(109) அப்போது பிரம்மத்தை ஓதுபவர்கள் அவனிடம், “அப்படியே ஆகட்டும்” என்றனர். பிறகு, பிரம்மத்தின் பரந்த கொள்ளிடமான சுக்கிரன் அவனது புரோகிதரானார்.(110) வாலகில்யர்கள் அவனது அமைச்சர்களானார்கள், சாரஸ்வதர்கள் அவனது தோழர்களானார்கள். பெரிய சிறப்புமிக்க முனிவர் கர்க்கர், அவனது சோதிடரானார்.(111) தற்போது மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும் சுருதிகளின் உயர்ந்த அறிவிப்பில் {வேனனின் மகனான} அந்தப் பிருதுவே, விஷ்ணுவின் எட்டாம் வடிவமாக இருக்கிறான்.

அதற்குச் சற்று முன், சூதன், மாகதன் என்ற பெயர் கொண்ட இரு மனிதர்கள் தோன்றினர். அவர்கள், அவனது பாணர்களாகவும், வந்திகளாகவும அமைந்தனர்.(112) பேராற்றலைக் கொண்டவனும், வேனனின் அரசமகனுமான பிருது மனம் நிறைந்தவனாக, கடற்கரையருகே இருக்கும் {அநூபம் என்ற நாட்டை} நிலத்தைச் சூதனுக்கும், அப்போதிலிருந்து மகதம் என்றறியப்படும் நாட்டை மாகதனுக்கும் அளித்தான்.(113) முன்பு பூமியின் பரப்பானது சமமற்றதாக இருந்ததாக நாம் கேள்விப்படுகிறோம். இந்தப் பிருதுவே பூமியின் பரப்பை சமமாக்கியவனாவான்.(114) ஒவ்வொரு மன்வந்தரத்தின் போதும் பூமி சமமற்றதாக ஆனது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த வேனன் மகன் {பிருது}, சுற்றிலும் கிடந்த பாறைத்திரள்களையும், பாறைகளையும்,(115) தன் வில்லின் நுனியால் அகற்றினான். இந்த வழிமுறையால் மலைகள் பெரிதாகின.

பிறகு, விஷ்ணு, இந்திரனுடன் கூடிய தேவர்கள்,(116) முனிவர்கள், லோகபாலர்கள், பிராமணர்கள் ஆகியோர் பிருதுவுக்கு (உலகின் மன்னனாக) முடிசூட்ட ஒன்றுதிரண்டனர். ஓ! பாண்டுவின் மகனே, தன் உடல்வடிவத்துடன் கூடிய பூமாதேவி, ரத்தினங்கள் மற்றும் தங்கக் கொடைகளுடன் அவனிடம் வந்தாள்.(117) ஓ! யுதிஷ்டிரா, ஆறுகளின் தலைவனான பெருங்கடல், மலைகளின் மன்னனான இமயம், சக்ரன் ஆகியோர் வற்றாத செல்வத்தை அவனுக்கு அளித்தனர்.(118) மனிதர்களின் தோள்களில் சுமக்கப்பட்டவனும், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் தலைவனுமான தெய்வீகக் குபேரன்,(119) அறம், பொருள் மற்றும் இன்பத்திற்கான தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்குச் செல்வத்தை அவனுக்கு அளித்தான். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, வேனனின் மகன் {பிருது} நினைத்தவுடன், குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவையும் மனிதர்களும் கோடிக்கணக்கில் உயிர்பெற்று வந்தனர். அந்தக் காலத்தில் (பூமியில்) முதுமையோ, பஞ்சமோ, பேரிடரோ, நோயோ ஏதுமில்லாதிருந்தது.(120, 121) அந்த மன்னன் வழங்கிய பாதுகாப்பின் விளைவாக, ஊர்வன, கள்வர்கள் மற்றும் வேறு எந்த ஆதாரத்திடம் இருந்தும் எவரும் எந்த அச்சத்தையும் அடையவில்லை.(122)

அவன் {பிருது} கடலுக்குள் சென்றால், அதன் நீர் உறுதியடைந்து கல்லானது. மலைகள் அவனுக்கு வழிவிட்டன, அவனது கொடிமரமானது எங்கும் ஒருபோதும் தடுக்கப்படவில்லை.(123) பசுவில் இருந்து பாலைக் கறப்பவன் போல அவன், யக்ஷர்கள், ராட்சசர்கள், நாகர்கள் மற்றும் பிற உயிரினங்களின் உணவுக்காகப் பூமியில் இருந்து பதினேழு வகைப் பயிர்களையும்[2] கறந்தெடுத்தான்.(124) அந்த உயர் ஆன்ம மன்னன் {பிருது}, அனைத்து உயிரினங்களையும், அறமே அனைத்திலும் உயர்ந்ததென உணரவைத்தான். மேலும் அவன் {பிருது} மக்கள் அனைவரையும் மனம் நிறையச் செய்தான் என்பதால் அவன் ராஜன் என்று அழைக்கப்பட்டான்[3].(125) மேலும் அவன் {பிருது} பிராமணர்களின் காயங்களை ஆற்றியதால் அவன் க்ஷத்திரியன்[4] என்ற பெயரையும் ஈட்டினான். (அவனது ஆட்சிக்காலத்தில்) பூமியானவள் அறப்பயிற்சிக்காகக் கொண்டாடப்பட்டதால், அவள் பிருத்வி என்று பலரால் அழைக்கப்பட்டாள்[5].(126) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அழிவில்லா விஷ்ணு, “ஓ! மன்னா {பிருதுவே}, எவனால் உன்னை விஞ்ச முடியாது” என்று அவனிடம் சொல்லி அவனது சக்தியை உறுதி செய்தான்.(127) பிறகு அந்தத் தெய்வீக விஷ்ணு அந்த ஏகாதிபதியின் தவத்தின் விளைவாக அவனது உடலுக்குள் நுழைந்தான். இந்தக் காரணத்தினால், இந்த மொத்த அண்டத்திலும், மனித தேவர்களின் எண்ணிக்கையில் ஒருவனாக[6] பிருதுவுக்கு தெய்வீக வழிபாடு செய்யப்பட்டது.(128)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உன் நாடு, தண்டனை அறிவியலின் {தண்ட நீதியின்} துணை கொண்டே எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும். உன் ஒற்றர்களின் நடமாட்டம் மூலம் கவனமாகக் கண்காணிப்புச் செய்து, எவனாலும் உன் நாட்டிற்குத் தீங்கு செய்ய முடியாத வகையில் நீ அதைப் பாதுகாக்க வேண்டும்.(129) ஓ! மன்னா, அனைத்து நற்செயல்களும், (அந்த ஏகாதிபதியின்) நன்மைக்கே வழிவகுக்கும். ஒரு மன்னனின் நடத்தையானது, அவனது சொந்த நுண்ணறிவின் மூலமும், வாய்ப்புகள் மற்றும் எதிர்வரும் வழிமுறைகளின் மூலமும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.(130) ஓர் ஏகாதிபதியின் தெய்வீகத்தன்மையையன்றி வேறு எந்தக் காரணத்தின் விளைவால் ஒரு பெருங்கூட்டம் அவனுக்கு அடிபணிந்து நடக்கக்கூடும். அந்நேரத்தில் விஷ்ணுவின் புருவத்தில் இருந்து ஒரு தங்கத் தாமரை தோன்றியது.(131) அந்தத் தங்கத் தாமரையில் ஸ்ரீதேவி பிறந்தாள். அவள், பெரும் நுண்ணறிவு கொண்ட தர்மத்தின் துணைவியானாள். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, தர்மம் அந்த ஸ்ரீயிடம் அர்த்தத்தை {பொருளை} ஈன்றது.(132) தர்மம், அர்த்தம் மற்றும் ஸ்ரீ ஆகிய மூன்றும் அரசில் நிறுவப்பட்டன[7]. தன் தகுதி {புண்ணியம்} தீர்ந்த ஒருவன், சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு விழுந்து,(133) தண்டனை அறிவியல் அறிந்த ஒரு மன்னனாகப் பிறக்கிறான். அத்தகு மனிதன் பெருமையை அடைந்தவனாக உண்மையில் பூமியில் விஷ்ணுவின் பாகமாகவே {அவதாரமாகவே} ஆகிறான். பெரும் நுண்ணறிவைக் கொள்ளும் அவன், பிறரின் மேல் ஆதிக்கத்தை அடைகிறான்.(134) தேவர்களால் நியமிக்கப்பட்டவனை எவனாலும் விஞ்சமுடியாது. இதன் காரணமாகவே அனைவரும் அவனுக்குக் கீழ்ப்படிந்து செயல்படுகின்றனர், இதன் காரணமாகவே உலகத்தால் அவனுக்குக் கட்டளையிடமுடியாது.(135)ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நற்செயல்கள் நன்மைக்கே வழிகோலுகின்றன. இதன் காரணமாகவே, இந்த உலகைச் சார்ந்தவனாக இருப்பினும், தங்களைப் போன்ற அங்கங்களைக் கொண்டவனாகவே இருப்பினும், அவனது வார்த்தைகளுக்கு மக்கள்கூட்டம் கீழ்ப்படிந்து நடக்கிறது.(136) பிருதுவின் இனிய முகத்தைக் கண்ட எவனும் உடனே அவனுக்குக் கீழ்ப்படிந்தவனானான். அதுமுதல் அவன் {பிருது} தன்னை அழகானவனாகவும், செல்வம் படைத்தவனாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவனாகவும் கருதத் தொடங்கினான்[8].(137) அவனது செங்கோலின் வலிமையின் விளைவால், அறம் மற்றும் நீதியைப் பயிலும் நடைமுறை பூமியில் தெளிவாகக் காணப்பட்டது. அதன் காரணத்தாலேயே பூமி அறத்தால் கவிந்து பரவியிருந்தது.(138) ஓ! யுதிஷ்டிரா, இவ்வாறே, கடந்த கால நிகழ்வுகளின் வரலாறுகள், பெரும் முனிவர்களின் தோற்றம், புனித நீர்நிலைகள், கோள்கள், விண்மீன்கள், நட்சத்திரக்கூட்டங்கள், நால்வகை வாழ்வினரின் கடமைகள், நால்வகை ஹோமங்கள், நால்வகை மனிதர்களின் பண்புகள், கல்வியின் நால்வகைக் கிளைகள் ஆகியவற்றைக் குறித்த அனைத்தும் (பெரும்பாட்டனின் {பிரம்மனின்}) அந்தப் படைப்பில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தன.(139,140)

ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, பூமியில் உள்ள பொருட்கள் யாவும் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} அந்த ஆய்வில் சொல்லப்பட்டிருந்தன. வரலாறுகள், வேதங்கள், நியாய அறிவியல், தவங்கள், அறிவு, அனைத்துயிர்களுக்கும் தீங்கிழையாமை, உண்மை, பொய்மை, உயர்ந்த அறநெறி ஆகியவை அனைத்தும் அதில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தன.(141,142) வயதில் முதிர்ந்தோரை வணங்குதல், கொடைகள், தூய நடத்தை, உழைப்புக்கு ஆயத்தமாக இருத்தல், அனைத்து உயிரினங்களிடமும் கருணை ஆகியவையும் முழுமையாக அதில் விளக்கப்பட்டிருந்தன.(143) இஃதில் எந்த ஐயமுமில்லை. ஓ! ஏகாதிபதி, அந்தக் காலத்திலிருந்தே, கல்விமான்கள், மன்னனுக்கும், தேவனுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்று சொல்லத் தொடங்கினர்.(144) நான் இப்போது மன்னர்களின் பெருமை குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! பாரதர்களின் தலைவா, நான் அடுத்ததாக என்ன உரைக்க வேண்டும்?” என்று கேட்டார் {பீஷ்மர்}”.(145)

சதுர்வர்ணதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 60-பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகிய நான்கு வர்ணங்களின் தனிப்பட்ட கடமைகளைப் பட்டியலிட்ட பீஷ்மர்; பிராமணர்களின் பெருமையையும், வேள்விகளின் பயனையும் சொல்லி, வேள்விகள் அனைவரும் செய்யத்தக்கதே என்று சொன்னது…

வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} சொன்னார், “இதன்பிறகு யுதிஷ்டிரன் தன் கரங்களைக் கூப்பித் தன் பாட்டனான கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} வணங்கி, குவிந்த கவனத்துடன் மீண்டும்,(1) “நால்வகை மனிதர்களின் பொதுவான கடமைகள் எவை? ஒவ்வொரு வகையின் குறிப்பிட்ட கடமைகள் எனென்ன? எவ்வகை மனிதரால் எவ்வகை வாழ்வு முறை நோற்கப்பட வேண்டும்? மன்னர்களின் கடமைகள் எனக் குறிப்பாகச் சொல்லப்படுபவை எவை?(2) எந்த வழிமுறைகளால் ஒரு நாடு வளர்ச்சியை அடையும்? மன்னன் வளர்ச்சியடைவதற்கான வழிமுறைகள் என்ன? ஓ! பாரதக் குலத்தின் காளையே {பீஷ்மரே}, மன்னனின் குடிமக்களும், அவனது பணியாட்களும் வளர்ச்சியடைவது எவ்வாறு?(3) என்ன வகைக் கருவூலங்கள், தண்டனைகள், கோட்டைகள், கூட்டாளிகள், அமைச்சர்கள், புரோகிதர்களை ஒரு மன்னன் தவிர்க்க வேண்டும்?[1](4) எந்தெந்த வகைத் துயரம் மற்றும் ஆபத்துகளில் மன்னன் யாரை நம்ப வேண்டும்? எந்தத் தீமைகளில் இருந்து மன்னன் தன்னை உறுதியாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? ஓ! பாட்டா, இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)(ரித்விஜர் குறிப்பிட்ட நிகழ்வுகளில் மட்டும் ஈடுபடுவார், புரோகிதரோ, நிலையான, நிரந்தரமான தொண்டுகளில் ஈடுபடுவார்)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெருமையுள்ள தர்மத்தையும், பிரம்மமான கிருஷ்ணனையும் வணங்குகிறேன். (இங்கே கூடியிருக்கும்) பிராமணர்களையும் வணங்கி, அழிவில்லா நித்திய கடமைகளை நான் உரைக்கப் போகிறேன்.(6) கோபத்தை அடக்குதல், பேச்சில் உண்மை, நீதி பேணல், மன்னிக்கும் தன்மை, மணந்து கொண்ட மனைவியிடம் பிள்ளைகளைப் பெறுதல், நடத்தையில் தூய்மை, சச்சரவு தவிர்த்தல், எளிமை, சார்ந்தோரைக் கட்டிக்காத்தல் ஆகிய இந்த ஒன்பது கடமைகளும் நால்வகையினர் அனைவருக்கும் (சமமாகவே) பொருந்தும்.(7)

எனினும், பிராமணர்களுக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட கடமைகளைக் குறித்து இப்போது நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! மன்னா, தற்கட்டுப்பாடே பிராமணர்களின் முதற்கடமையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. வேதம் கற்பது, பொறுமையுடன் தவம் செய்வது ஆகியவையும் அவர்களது கடமைகளே. இவை இரண்டையும் செய்தால் அவர்களது செயல்பாடுகள் அனைத்தும் நிறைவடையும்.(8) எந்த முறையற்ற செயலையும் செய்யாமல் தன் கடமைகளை நோற்கும்போது, அந்த அறிவு கொண்ட அமைதியான பிராமணனைத் தேடி செல்வம் வந்தால்,(9) அவன் மணம்புரிந்து கொண்டு, பிள்ளைகளைப் பெற முயன்று, ஈகையும் பயின்று, வேள்விகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு அடையப்படும் செல்வமானது, (தகுந்த மனிதர்களுக்கும், உறவினர்களுக்கும்) பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.(10) அவனது வேத கல்வியின் மூலம், (அந்தப் பிராமணனுக்கு விதிக்கப்பட்ட) அறச் செயல்கள் அனைத்தும் நிறைவடைகிறது. வேறெதையும் அவன் அடைகிறானோ, இல்லையோ, அவன் வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்தால், அவன் பிராமணன் என்றோ, அனைத்துயிர்களுக்கும் நண்பன் என்றோ அறியப்படுவான்.(11)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒரு க்ஷத்திரியனின் கடமைகள் என்னென்ன என்பதையும் நான் உனக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு க்ஷத்திரியன் கொடுக்கவே வேண்டும், இரக்கக் கூடாது. தன் வேள்விகளையே அவன் செய்ய வேண்டும், அடுத்தவரின் வேள்விகளில் ஒரு புரோகிதராகப் பொறுப்பேற்று அவனே அவ்வேள்விகளைச் செய்யக் கூடாது.(12) அவன் {க்ஷத்திரியன்} (வேதங்களைப்) பயிற்றுவிக்கக் கூடாது, (ஒரு பிராமண ஆசானின் மூலம்) அவற்றைப் பயிலவே வேண்டும். அவன் மக்களைப் பாதுகாக்க வேண்டும். கள்வர்களையும், தீய மக்களையும் அழிப்பதில் எப்போதும் முயன்று, போரில் தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.(13) வேதங்களில் அறிவைக் கொண்டவர்களும், போரில் வெற்றியை ஈட்டுபவர்களும், பெரும் வேள்விகளைச் செய்பவர்களுமான க்ஷத்திரிய ஆட்சியாளர்கள், தங்கள் தகுதியின் {புண்ணியத்தின்} மூலம் மறுமையில் அருள் உலகங்கள் பலவற்றைப் பெறுவதில் முதன்மையானோராகத் திகழ்வார்கள்.(14) பழைய சாத்திரங்களை அறிந்த மனிதர்கள், போரில் காயமேற்படாமல் திரும்பும் க்ஷத்திரியனை மெச்சுவதில்லை.(15) அஃது இழிந்த க்ஷத்திரியனின் நடத்தையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கள்வர்களை ஒடுக்குதலைவிட உயர்ந்த கடமையேதும் அவனுக்கு இல்லை.(16) கொடைகள், கல்வி மற்றும் வேள்விகள் ஆகியன மன்னர்களுக்குச் செழிப்பைக் கொண்டு வருகின்றன. எனவே, அறத்தகுதியை அடையவிரும்பும் ஒரு மன்னன் போரில் ஈடுபட வேண்டும்[2].(17) தன் குடிமக்கள் அனைவரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கும்படி நிறுவும் ஒரு மன்னன், அவர்கள் அனைவரையும், அறவிதிகளுக்கு உட்பட்டே அனைத்தையும் செய்ய வைக்க வேண்டும்.(18) அவன் {மன்னன்} வேறேதும் செயலைச் செய்கிறானோ இல்லையோ, தன் குடிமக்களை மட்டும் பாதுகாத்தாலே அவன் தன் அறச் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றியதாகக் கருதப்பட்டு, க்ஷத்திரியன் என்றும், மனிதர்களில் முதன்மையானவன் என்றும் அழைக்கப்படுவான்.(10)ஓ! யுதிஷ்டிரா, வைசியர்களுக்கான நித்திய கடமைகளை இப்போது நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஒரு வைசியன், கொடைகள் அளிப்பது, வேதகல்வி கற்பது, வேள்விகள் செய்வது, நியாயமான வழிமுறைகளில் செல்வத்தை ஈட்டுவது ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.(20) ஒரு தந்தை தம் மகன்களைப் பாதுகாப்பதைப் போல, அவன், (தான் வளர்க்கும்) விலங்குகள் அனைத்தையும் உரிய கவனத்துடன் வளர்த்துப் பாதுகாக்க வேண்டும். வேறெதையும் அவன் செய்வது, அவனுக்கு முறையற்றதாகக் கருதப்படும்.(21) (வீட்டில் வளர்க்கும்) விலங்குகளைப் பாதுகாப்பதால் அவன் பெரும் மகிழ்ச்சியை அடைவான். (வீட்டில் வளர்க்கக்கூடிய) விலங்குகளைப் படைத்த படைப்பாளன், அவற்றைப் பராமரிப்பதை வைசியனுக்கே அளித்திருக்கிறான்.(22) பிராமணனுக்கும், க்ஷத்திரியனுக்கும் அனைத்து உயிரினங்களையும் (பரமாரிப்பதை) அளித்திருக்கிறான். ஒரு வைசியனின் தொழில்கள், மற்றும் அவன் தன் வாழ்வாதாரத்திற்குத் தேவையானதை ஈட்டும் வழிமுறைகள் ஆகியவை என்னென்ன என்பதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(23) அவன் (பிறருக்காக) ஆறு பசுக்களைப் பாதுகாத்தால் {மேய்த்தால்}, தன் உழைப்பூதியமாக ஒரு பசுவின் பாலை அவன் எடுத்துக் கொள்ளலாம்; அவன் (பிறருக்காக) நூறு பசுக்களைப் பாதுகாத்தால் {மேய்த்தால்}, {வருடத்திற்கு} ஒரு ஜோடியை {ஒரு பசு மற்றும் ஒரு காளையை} அத்தகு கட்டணமாக அவன் எடுத்துக் கொள்ளலாம். அவன் {வைசியன்} பிறரின் செல்வத்தைக் கொண்டு வணிகம் செய்தால், பெறுவதில் {லாபத்தில்} ஏழில் ஒரு பங்கை {அவனுடைய பங்காக} எடுத்துக் கொள்ளலாம். கொம்புகளின் வணிகத்தில் எழும் லாபத்திலும் அவன் தன் பங்காக ஏழில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம், ஆனால், குளம்புகளின் வணிகத்தில் அவன் பதினாறில் ஒன்றை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்[3]. அவன் பிறரால் கொடுக்கப்பட்ட விதைகளைக் கொண்டு உழவில் ஈடுபட்டால், கிடைக்கும் விளைச்சலில் அவன் ஏழில் ஒரு பங்கை எடுத்துக் கொள்ளலாம். இதுவே அவனுடையே ஆண்டு உழைப்பூதியமாக இருக்க வேண்டும்.(24) கால்நடை வளர்க்கக்கூடாது என்று ஒரு வைசியன் ஒருபோதும் விரும்பக்கூடது. ஒரு வைசியன் கால்நடை வளர்க்க விரும்பினால், வேறு எவனும் அப்பணியில் ஈடுபடுத்தப்படக்கூடாது.(25)ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, சூத்திரர்களின் கடமைகள் என்ன என்பதை நான் உனக்குச் சொல்கிறேன். ஒரு சூத்திரன் மூன்று பிற வகையினருக்கும் பணியாளாக இருக்க வேண்டும் எனப் படைப்பாளன் கருதினான்.(26) இதனால், மூன்று பிற வகையினருக்கான தொண்டே ஒரு சூத்திரனின் கடமையாயிற்று. மூவகையினருக்கும் இத்தகு தொண்டில் ஈடுபடுவதால், ஒரு சூத்திரன் பெரும் மகிழ்ச்சியை அடைகிறான்.(27) அவன் மூன்று பிற வகையினரிடமும், அவர்களுடைய மூப்பின் அடிப்படையில் பணிசெய்ய வேண்டும். ஒரு சூத்திரன் ஒருபோதும் செல்வம் திரட்டக்கூடாது,(28) அவனுடைய செல்வத்தால் மற்று மூன்று மூத்த வகையினரையும் அவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக ஆக்குகிறான். இதனால் அவன் பாவத்தையே ஈட்டுவான். எனினும், மன்னனின் அனுமதியின் பேரில், அறச்செயல்கள் செய்வதற்காக ஒரு சூத்திரன் செல்வம் ஈட்டலாம்.(29) அவன் செய்ய வேண்டிய தொழிலையும், அவனது வாழ்வாதாரத்திற்குத் தேவையானதை ஈட்டவும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இப்போது உனக்குச் சொல்கிறேன்.(30) சூத்திரர்கள் பிற (மூன்று) வகையினரால் நிச்சயம் பராமரிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.(31)

பழைய குடை, தலைப்பாகைகள், படுக்கைகள், இருக்கைகள், காலணிகள், விசிறிகள் ஆகியன சூத்திரப் பணியாட்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(32) அணிவதற்குப் பொருந்தாத கிழிந்த ஆடைகள் யாவும் மறுபிறப்பாள வகையினரால் {மூன்று பிற வர்ணத்தாரால்} சூத்திரனுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அவை சூத்திரர்களின் சட்டப்படியான உடைமைகளாகும்.(33) ஒரு சூத்திரன், மூவகை மறுபிறப்பாளர்களில் எவரிடம் பணி செய்ய அணுகினாலும், அவர்கள் அவனுக்கு முறையான வேலையை அளிக்க வேண்டும் என்று அறநெறி அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.(34) மகனில்லாத சூத்திரனுக்கு அவனுடைய தலைவனே ஈமப் பிண்டம் அளிக்க வேண்டும். அவர்களில் பலவீனமானவர்களும், முதியவர்கள் {அவர்களுடைய தலைவனால்} பராமரிக்கப்பட வேண்டும்.

ஒரு சூத்திரன், தன் தலைவனுக்கு நேர்ந்த துயரம் என்ன இயல்பில், அல்லது என்ன தன்மையில் இருந்தாலும் அவனை ஒரு போதும் கைவிடக்கூடாது.(35) தலைவன் தன் செல்வத்தை இழந்தாலும், அவன் மிகுந்த பற்றார்வத்துடன் சூத்திரப் பணியாளால் ஆதரிக்கப்பட வேண்டும்[4]. ஒரு சூத்திரன் தனக்கெனச் செல்வம் கொள்ள முடியாது. அவன் கொண்ட எதுவும் சட்டப்படி அவனுடைய தலைவனுடையதே ஆகும்.(36) வேள்வி செய்வது மூன்று பிற வகையினரின் கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அது சூத்திரனுக்கும் விதிக்கப்படுகிறது. எனினும், ஒரு சூத்திரன், சுவாஹா, சதா, அல்லது வேதத்தின் வேறு எந்த மந்திரத்தையும் ஓதத்தகுந்தவனல்ல.(37) இதன்காரணமாக, ஒரு சூத்திரன் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நோன்புகளை நோற்காமல் பாகயக்ஞங்கள் என்றழைக்கப்படும் சிறு வேள்விகளில் தேவர்களை வழிபட வேண்டும். பூர்ண பாத்திரம் என்றழைக்கப்படும் கொடையே அத்தகு வேள்விகளில் தக்ஷிணையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது[5].(38) பழங்காலத்தில் பைஜவனன் என்ற பெயர் கொண்ட ஒரு சூத்திரன் (தன் வேள்விகளில் ஒன்றில்) ஐந்திராக்னி[6] {ஐந்திராக்னம்} என்றழைக்கப்படும் விதியின்படி ஒரு நூறாயிரம் {ஒரு லட்சம்} பூர்ண பாத்திரங்கள் அடங்கிய தக்ஷிணையை அளித்தான் என நாம் கேள்விப்படுகிறோம்.(39) (ஏற்கனவே சொல்லப்பட்டபடி) ஓ! பாரதா, வேள்வி என்பது மற்ற மூன்று வகையினரைப் போலவே சூத்திரனுக்கும் விதிக்கப்படுகிறது. அனைத்து வேள்விகளிலும், அர்ப்பணிப்பே முதன்மையானதாக விதிக்கப்படுகிறது[7].(40)

அர்ப்பணிப்பே உயர்ந்த தெய்வமாகும். அது வேள்வி செய்வோர் அனைவரையும் தூய்மைப்படுத்துகிறது. மேலும் பிராமணர்களே அந்தந்த சூத்திரப் பணியாட்களுக்குத் தேவர்களில் முதன்மையானோராவர்.(41) வேள்விகளில் பல்வேறு விருப்பங்கள் கனிவதற்காக அவர்கள் {பிராமணர்கள்} தேவர்களை வழிபடுகின்றனர். மற்ற மூன்று வகையினரும் பிராமணர்களிலிருந்து உதித்தனர்[8].(42) பிராமணர்கள் தேவர்களுக்கே தேவர்களாவர். அவர்கள் எது சொன்னாலும் உனது பெரும் நன்மைக்கே சொல்வார்கள். எனவே, அனைத்து வகை வேள்விகளும், நால்வகையினர் அனைவருக்கும் இயற்கையாகவே உரித்தாகுகின்றன. விருப்பப்பட்டால் செய்யலாம் என்பது ஒருவனுக்குக் கடமையாகாது.(43) ரிக்குகள், யஜுஸ்கள், சாமன்கள் ஆகியவற்றை அறிந்த பிராமணன், ஒரு தேவனாக வழிபடப்பட வேண்டும். ரிக்குகள், யஜஸ்கள், சாமன்கள் {சாம வேதம்} ஆகியவையற்ற சூத்திரன், பிரஜாபதியைத் தன் தேவனாகக் கொள்கிறான்[9].(44) ஓ! ஐயா, ஓ! பாரதா, மனோவேள்வியானது அனைத்து வகையினருக்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. தேவர்களும், பிற (மேன்மையான) மனிதர்களும், சூத்திரனின் வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகளில் பங்கு பெற விரும்புவதில்லை என்பது உண்மையில்லை[10]. இதன் காரணமாகவே அர்ப்பணிப்பையே வேள்வியாகக் கொள்வது {சூத்திரர்களும் உட்பட} அனைத்து வகையினருக்கும் விதிக்கப்பட்டுள்ளது.(45)பிராமணனே தேவர்களில் முதன்மையானவன். அந்த வகையைச் சார்ந்தவர்கள் மற்ற வகையினரின் வேள்விகளைச் செய்யக்கூடாது என்பது உண்மையில்லை. விதானம் என்றழைக்கப்படும் நெருப்பு, வைசியர்களிடம் இருந்து அடையப்பட்டு, மந்திரங்களால் ஈர்க்கப்பட்டாலும் அதுவும் தாழ்ந்ததே[11]. மற்ற மூன்று வகையினரின் வேள்விகளையும் ஒரு பிராமணனே செய்கிறான்.(46) இதன் காரணமாக நால்வகையைச் சேர்ந்தோர் அனைவரும் புனிதமானவர்களே. இடைப்பட்ட வகையினரின் மூலம் அனைத்து வகையினரும் ஒருவருக்கொருவர் இரத்த உறவு கொண்டவர்களே. அஃதை (பிறப்பின் அடிப்படையில்) உறுதி செய்தால், அனைத்து வகையினரிலும் பிராமணனே முதலில் பிறந்தவன் என்பது வெளிப்படும். முன்பு சாமன் {சாம வேதம்} ஒன்றுதான், யஜுஸ் {யஜுர் வேதம்} ஒன்றுதான், ரிக்கும் {ரிக் வேதம்} ஒன்றுதான்[12].(47) பழைய வரலாறுகளை அறிந்தவர்கள், வைகானச முனிவர்களின் வேள்விகளில் இது தொடர்பாக அவர்களால் புகழ்ந்து பாடப்படும் ஒரு வரியை {சுலோகத்தைக்} காண்கின்றனர்.(48) “புலனடக்கம் கொண்ட ஒரு மனிதன், சூரிய உதயத்திற்கு முன்போ, பின்போ, இதயம் நிறைந்த அர்ப்பணிப்புடன் விதிப்படி (வேள்வி) நெருப்பில் காணைக்கைகளை ஆகுதி செய்கிறன். அர்ப்பணிப்பே வலிமைமிக்கக் காரணியாகும்”.(49) மேலும் ஹோமங்களைப் பொறுத்தவரையில், ஸ்கன்னம் என்றழைக்கப்படும் வகையானதே தொடக்கம், அதே வேளையில் அஸ்கன்னம் என்றழைக்கப்படுவது இறுதியாகும் (ஆனால் தகுதியைப் பொறுத்தவரை முதன்மையானதாகும்). வேள்விகள் பலவகைப்பட்டவை. மேலும் அவற்றின் சடங்குகளும், பலன்களும் பலவகைப்பட்டவை.(50)-அர்ப்பணிப்பும், ஆன்ம கல்வியும் கொண்ட ஒரு பிராமணன் அவை அனைத்தையும் அறிந்தால், அவன் வேள்விகளைச் செய்யத்தகுந்தவனாவான்.(51) ஒருவன் கள்வனாகவோ, பாவியாகவோ, பாவிகளில் இழிந்தவனாகவோ இருந்தாலும் அவன் வேள்வி செய்ய விரும்புவானானால், அவன் நீதிமானாகக் கருதப்படுகிறான்.(52) முனிவர்கள் அத்தகு மனிதனை மெச்சுகிறார்கள். அவர்கள் செய்வது சரி என்பதில் ஐயமில்லை. அவ்வாறெனில், அனைத்து வகையினரும், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும், வேள்விகளைச் செய்ய வேண்டும் என்பதே முடிவான தீர்மானமாக இருக்க முடியும்.(53) மூவுலகிலும் வேள்விக்கு இணையானது ஏதுமில்லை. எனவே, தீமையிலிருந்து விடுபட்ட இதயம் கொண்ட ஒவ்வொருவரும், புனிதமான அர்ப்பணிப்பின் துணையுடன், தன் சக்திக்குட்பட்ட வகையிலும், தனது விருப்பத்தின்படியும் வேள்விகளைச் செய்யவே வேண்டும்” என்றார் {பீஷ்மர்}”.(54)

ஆசிரமதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 61-நான்கு வகை வாழ்வுமுறைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே, ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டோனே {யுதிஷ்டிரா}, நான்கு வாழ்வு முறைகளின் பெயர்களையும், அவை ஒவ்வொன்றின் கடமைகளையும் இப்போது சொல்கிறேன், கேட்பாயாக.(1) பிராமணர்களால் பின்பற்றப்படுவது, வானப்ரஸ்தம், பைக்ஷ்யம் {சந்நியாசம்}, பெரும் தகுதியைத் தரும் கார்ஹஸ்த்யம் {இல்லறம்} மற்றும் பிரம்மச்சரியம் ஆகிய நான்கு வாழ்வு முறைகளாகும்.(2) சடாமுடி தரிப்பதைப் பொறுத்தவரையில், தூய்மைச் சடங்கைச் {சௌளம்} செய்து, {உபநயனவிதியைக் கொண்டு} மறுபிறப்புக்கான சடங்கையும் செய்த பிறகு, சில காலம், புனித நெருப்புக்குச் சில சடங்குகளைச் செய்த பிறகு, வேதங்களைக் கற்று,(3) தூய ஆன்மாவுடனும், புலனடக்கத்துடனும், கார்ஹஸ்த்யம் {இல்லறம்} என்றழைக்கப்படும் வாழ்வுமுறையின் கடமைகள் அனைத்தையும் முதலில் கவனமாகச் செய்த பிறகு, மனைவியுடனோ, மனைவியில்லாமலோ, வானப்ரஸ்தம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைப் பின்பற்ற கானகம் செல்ல வேண்டும்.(4) ஆரண்யகங்கள் என்றழைக்கப்படும் {வானப்ரஸ்த வாழ்வுமுறைக்குரிய} சாத்திரங்களைக் கற்றுத் தன் உயிர் நீரை மேலிழுத்து, உலகக் காரியங்கள் அனைத்தில் இருந்தும் ஓய்ந்த அறம் சார்ந்த துறவி ஒருவன், அழிவில்லா நித்திய ஆன்மாவில் ஒன்றிய நிலையை {பிரம்மஸ்வரூபத்தை} அடையலாம்.(5) இவையே தங்கள் உயிர் நீரை மேலிழுத்த முனிவர்களின் குறியீடுகளாகும். ஓ! மன்னா, கல்விமானான ஒரு பிராமணன் முதலில் அவற்றைப் பயன்று, அவற்றில் ஈடுபட வேண்டும்.(6)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வீடடைய {முக்தியடைய} விரும்பும் ஒரு பிராமணன், பிரம்மச்சரியம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைக் கடந்தபிறகே பைக்ஷ்ய {சந்நியாச} வாழ்வு முறையைப் பின்பற்றத்தகுந்தவனாவான் என்பது நன்கறியப்பட்ட ஒன்றாகும்.(7) கல்விமானான பிராமணன் ஒருவன், (தினமும் தான் திரிகையில்) மாலைவேளை எங்கே ஏற்படுகிறதோ, அந்தச் சூழ்நிலையைச் சிறந்ததாக்க விரும்பாமல் அங்கேயே உறங்கி, {வசிப்பதற்கு} வீடில்லாமல், (ஈகையில்) கிடைக்கும் உணவை உண்டு, தற்கட்டுப்பாட்டுடன் தியானம் பயின்று, ஆசையேதும் இல்லாமல் புலன்களை அடக்கி,(8) அனைத்து உயிரினங்களையும் சமமாகக் கருதி, எதிலும் மகிழ்ச்சியோ வெறுப்போ அடையாமல் இந்த {சந்நியாச} வாழ்வு முறையைப் பின்பற்றி அழிவில்லா நித்திய ஆன்மாவுடன் தோய்ந்த ஒன்றிய நிலையை அடைகிறான்.(9)

கார்ஹஸ்த்திய {இல்லற} வாழ்வுமுறையில் வாழும் மனிதன், வேதங்களைக் கற்று, தனக்காக விதிக்கப்பட்ட அறச்செயல்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். அவன் பிள்ளைகளைப் பெற்று, இன்பங்களையும், வசதிகளையும் அனுபவிக்க வேண்டும். (மீறல்கள் ஏதுமில்லாமல்) வாழ மிகக் கடினமானதும், தவசிகளால் மெச்சப்படுவதுமான அந்த வாழ்வுமுறையின் கடமைகள் அனைத்தையும் அவன் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும்.(10) அவன் தான் மணந்து கொண்ட மனைவியுடனே நிறைவுடன் இருந்து, அவளது பருவ காலமன்றி வேறு காலங்களில் அவளை அணுகாதிருக்க வேண்டும். அவன், தந்திரமாகவோ, வஞ்சகமாகவோ செயல்படாமல் சாத்திரங்களின் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவன் உணவில் சிக்கனமாக இருந்து, தேவர்களுக்கு அர்ப்பணிப்புடன், நன்றி நிறைந்தவனாக, மென்மையானவனாக, கொடூரமற்றவனாக, மன்னிக்கும் தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும்.(11) அவன், இதய அமைதி கொண்டவனாக, கட்டுப்படக்கூடியவனாக, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கைகள் அளிப்பவனாக இருக்க வேண்டும். அவன் பிராமணர்களிடம் எப்போதும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்ள வேண்டும். அவன் செருக்கற்றவனாக இருக்க வேண்டும். அவனுடைய ஈகை ஒரு குழுவினருக்கு மட்டுமே கட்டுப்பட்டதாக இருக்கக்கூடாது. வேத சடங்குகளைச் செய்வதில் அவன் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.(12)

இது தொடர்பாக, பெரும் தவத்தகுதியைக் கொண்டதும், பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததும், நாராயணனால் பாடப்பட்டதுமான ஒரு வரியை சிறப்புமிக்கப் பெரும் முனிவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதைத் திரும்பச் சொல்கிறேன் கேட்பாயாக.(13) “உண்மை, எளிமை, விருந்தினரை வழிபடுவது, அறம் பொருள் அடைதல், தான் மணந்து கொண்ட மனைவியோடு இன்புற்றிருத்தல் ஆகியவற்றின் மூலம் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு வகை இன்பங்களை அனுபவிக்க வேண்டும்” {என்று நாராயணன் பாடியிருக்கிறான்}.(14) மகன்களையும், மனைவியரையும் ஆதரித்தல், வேதங்களைக் கற்றல் ஆகியவை இந்த உயர்ந்த {இல்லற} வாழ்வுமுறையை நோற்போரின் கடமைகளாக அமைகின்றன என்று பெருமுனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.(15) வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடும் பிராமணன், இந்த வாழ்வுமுறையை முறையாக வாழ்ந்து, தன் கடமைகள் அனைத்தையும் முறையாகச் செய்து, சொர்க்கத்தில் அருள்வெகுமதிகளை அடைகிறான்.(16) அவனது இறப்புக்குப் பிறகு, அவனால் விரும்பப்பட்ட வெகுமதிகள் இறவாத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. உண்மையில், அவை தலைவனின் உத்தரவைச் செயல்படுத்த எப்போதும் விழிப்புடன் இருக்கும் பணியாட்களைப் போல நித்தியமாக {அழிவில்லாமல்} எப்போதும் அவனுக்காகக் காத்திருக்கின்றன {பணிவிடை செய்கின்றன}.(17)

பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்கும் ஒருவன், எப்போதும் வேதங்களில் ஈடுபாட்டுடன், தன் ஆசானிடம் இருந்து அடைந்த மந்திரங்களை அமைதியாக ஓதிக் கொண்டு, தேவர்கள் அனைவரையும் வழிபட்டு, உடலில் புழுதி மற்றும் தூசியுடனும்,(18) கடமையுணர்வுடனும் தன் ஆசானுக்குத் தொண்டாற்றி, புலனடக்கத்துடன், தனக்குக் கிடைக்கும் கல்வியில் எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அவன், வேதங்களைக் குறித்துச் சிந்தித்து, (தியானம் மற்றும் வெளிப்படையான செயல்கள் ஆகிய) தன் கடமைகள் அனைத்தையும் செய்து, கடமையுணர்வுடன் தன் ஆசானுக்காகக் காத்திருந்து, அவரை எப்போதும் வணங்கி வாழ வேண்டும். (பிறரின் வேள்விகளைச் செய்து கொடுத்தல் போன்ற) ஆறு வகை வேலைகளில்[1] ஈடுபடாமை, எந்தச் செயல்பாடுகளிலும் ஒருபோதும் பற்று கொள்ளாமை,(19,20) எவருக்கும் ஆதரவோ, ஆதரவில்லா நிலையையோ ஏற்காமை, தன் எதிரிகளுக்கும் நன்மையைச் செய்தல் ஆகிய இவையே ஒரு பிரம்மச்சாரியின் கடமைகளாக விதிக்கப்பட்டிருக்கின்றன” என்றார் {பீஷ்மர்}.(21)(இவை, “பிராணாயாமம், பிரத்யாஹாராம், த்யாநம், தாரணை, தர்க்கம், ஸமாதி”)

நற்செயல்களும், மனச்சார்புகளும்! – சாந்திபர்வம் பகுதி – 62-வர்ணாசிரம தர்மங்களில் யுதிஷ்டிரனுக்கு ஏற்பட்ட ஐயங்களுக்கு விடையளித்த பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எங்களைப் போன்றோருக்கு, எந்தக் கடமைகள் மங்கலமானவை, எதிர்காலத்தில் மகிழ்ச்சியை உண்டாக்குபவை, நன்மை செய்பவை, அனைவராலும் அங்கீகரிக்கப்படுபவை, ஏற்கப்படுபவை, இனிமையானவை என்பதை எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பலமிக்கவனே, நான்கு வாழ்வுமுறைகளும் {ஆசிரமங்களும்} பிராமணர்களுக்கே விதிக்கப்பட்டிருக்கின்றன. ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பிற வகையினர் மூவரும் அவற்றைப் பின்பற்றுவதில்லை.(2) ஓ! மன்னா, குறிப்பாக அரசவகையினருக்கு {க்ஷத்திரியர்களுக்குப்} பொருந்தக்கூடியவையும், சொர்க்கத்திற்கு வழிவகுக்கூடியவையுமான பல செயல்கள் {பிரவிருத்தி சாஸ்திரத்தில்} ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் இரக்கமின்மையை ஏற்காத க்ஷத்திரியர்களுக்கான முறையாக விதிக்கப்பட்டவை என்பதால் அவற்றைத் தற்போதைய உன் கேள்விக்குப் பதிலாகச் சொல்லமுடியாது.(3)

க்ஷத்திரிய, வைசிய, சூத்திர நடைமுறைகளுக்கு அடிமையாக இருக்கும் பிராமணன், நிச்சயமாகப் பூமியில் தீய ஆன்மா என நிந்திக்கப்பட்டு, அடுத்த உலகில் {மறுமையில்} நரகிற்குச் செல்வான்.(4) மனிதர்களுக்கு மத்தியில் பணியாட்கள், நாய்கள், ஓநாய்கள் மற்றும் (பிற) விலங்குகளுக்குச் சூட்டப்படும் பெயர்களே, தனக்குத் தகாத செயல்களில் ஈடுபடும் பிராமணனுக்குச் சூட்டப்படும்.(5)

நான்கு வகை வாழ்வுமுறைகளிலும் (மூச்சை ஒழுங்கமைத்தல் மற்றும் தியானம் போன்ற) ஆறு வகைச் செயல்களில்[1] முறையாக ஈடுபடுபவனும், தன் கடமைகள் அனைத்தையும் செய்பவனும், அமைதியானவனும், தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்தவனும்,(6) எதிர்பார்ப்புகளைச் சிறக்கச் செய்யும் விருப்பம் இல்லாதவனும், ஈகையாளனுமான ஒரு பிராமணன், மறுமையில் அழிவில்லா அருள் உலகங்களை அடைவான்.((7) ஒவ்வொருவனும் தங்களுக்கு அமையும் சூழ்நிலை, இடம், வழிமுறை மற்றும் நோக்கங்களுக்குத்தக்க செய்யும் செயல்களின் இயல்பிலிருந்தே தன் சொந்த இயல்பை {குணத்தை} அடைகிறான்.(8) எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்த தகுதிகள் {புண்ணியங்கள்} நிறைந்த வேத கல்வியானது, அரச அதிகாரத்துடன் கூடிய உழைப்புக்கோ, உழவு, வணிகம் மற்றும் வேட்டைத் தொழில்களுக்கோ இணையானதாக உன்னால் கருதப்பட வேண்டும்[2].(9)உலகம் காலத்தால் இயக்கப்படுகிறது. அதன் இயக்கங்கள் காலத்தின் போக்கிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. மனிதன் செய்யும் நல்ல, தீய மற்றும் அலட்சிய செயல்கள் {நல்லது, தீயது என வேறுபாடற்ற} அனைத்தும் முற்றிலும் காலத்தின் ஆதிக்கத்தால் செய்யப்படுபவையே[3].(10) ஒரு மனிதனின் கடந்த கால {முற்பிறவியின்} நற்செயல்களில் எவை அடுத்தப் பிறவியில் பேராதிக்கம் செலுத்துகின்றனவோ, அவை {அவற்றின் புண்ணியங்கள்} தீர்ந்து விடக்கூடும். எனினும், மனிதர்கள் தங்கள் மனச்சார்புகள் வழிகாட்டும் செயல்களை எப்போதும் செய்து கொண்டே இருக்கின்றனர். மேலும் அந்த மனச்சார்புகளே, ஓர் உயிரினத்தை ஒவ்வொரு திசையிலும் செலுத்திக் கொண்டிருக்கின்றன[4]” என்றார் {பீஷ்மர்}.(11)

ஆசிரம மாற்றங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 63-பிராமணன் செய்யத்தகாத செயல்கள் மற்றும் தொழில்கள்; எந்தப் பிராமணன் சூத்திரனாகிறான்? ஆசிரம மாற்றங்கள்; சூத்திரர்கள், வைசியர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் பின்பற்றத்தக்க வாழ்வு முறைகள்; க்ஷத்திரிய தர்மத்தின் சிறப்பு ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{வில்லின்} நாண்கயிற்றை இழுத்தல், எதிரிகளை அழித்தல், உழவு, வணிகம், கால்நடை வளர்த்தல், செல்வத்துக்காகப் பிறருக்குப் பணிவிடை செய்தல் ஆகிய இவை ஒரு பிராமணனுக்கு முறையற்றவையாகும்.(1) நுண்ணறிவு கொண்ட ஒரு பிராமணன், இல்லற வாழ்வுமுறையை நோற்று, வேதங்கள் சுட்டும் ஆறு செயல்களை[1] முறையாகச் செய்ய வேண்டும். ஒரு பிராமணன், இல்லற வாழ்வுமுறையில் தன் கடமைகள் யாவையும் முறையாகச் செய்த பிறகு, காடுகளுக்குள் ஓயச் செல்லலாம் {வானப்ரஸ்த வாழ்வுமுறையைப் பின்பற்றலாம்}.(2)

ஒரு பிராமணன், மன்னனுக்குப் பணிசெய்தல், உழவால் அடையப்படும் செல்வம், வணிகத்தால் கிடைக்கும் வாழ்வாதாரம், அனைத்து வகைக் கோணல் நடத்தைகள், தான் மணந்து கொண்ட மனைவியரைத் தவிர வேறு துணை, நியாயமற்ற வட்டி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.(3)

ஓ! மன்னா, கடமைகளில் இருந்து வீழ்ந்தவனும், தீய நடத்தை கொண்டவனுமான இழிந்த பிராமணன் ஒருவன் சூத்திரனாகிறான். சூத்திரப் பெண்ணை மணந்து கொள்தல், தீய நடத்தை கொள்தல், ஆடல்கலைஞனாதல், கிராமப் பணியாளாதல், முறையற்ற செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றில் ஏதொன்றையும் செய்யும் ஒரு பிராமணன் சூத்திரனாகிறான்.(4) ஓ! மன்னா, அவன் {பிராமணன்} வேதங்களை உரைத்தாலும், இல்லாவிட்டாலும், முறையற்ற செயல்களைச் செய்பவனானால், அவன் சூத்திரனுக்கு இணையானவனாகிறான், உணவு உண்ணும் சந்தர்ப்பங்களில் அவனுக்குச் சூத்திரர்களுக்கு மத்தியிலேயே இடம் ஒதுக்கப்பட வேண்டும்.(5)ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சூத்திரர்களுக்கு இணையான பிராமணர்கள், தேவர்களின் வழிபாடுகள் நடக்கும் நிகழ்வுகளில் விலக்கப்பட வேண்டும்[2].(6)

கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறியவர்களோ, தூய்மையற்ற நடத்தை கொண்டவர்களோ, தீய தொழில்கள், கொடுஞ்செயல்கள் ஆகியவற்றுக்கு அடிமையானவர்களோ, ஒழுங்குமுறையான கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்டவர்களோவான பிராமணர்களுக்கு, தேவர்கள் மற்றும் பித்ருக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் உணவுகள் கொடுக்கப்பட்டால் அவை (அவற்றைக் கொடுப்பவனுக்கு) எந்தத் தகுதியையும் ஈட்டிக் கொடுக்காது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதன்காரணமாகவே, தற்கட்டுப்பாடு, தூய்மை, எளிமை ஆகியன ஒரு பிராமணனின் கடமைகளாக விதிக்கப்பட்டிருக்கின்றன. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இவற்றைத் தவிர்த்து, நான்கு வாழ்வுமுறைகளும் அவனுக்காகவே பிரம்மனால் விதிக்கப்பட்டன.(7) எவன் தற்கட்டுப்பாட்டுடன், வேள்விகளில் சோமம் குடித்து, நல்ல நடத்தையுடனும், அனைத்து உயிரினங்களிடமும் கருணையுடனும், அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் பொறுமையுடனும், செல்வத்தை அடைவதன் மூலம் தன் நிலையைச் சிறப்பாக்கிக் கொள்ளும் விருப்பம் இல்லாமல், வெளிப்படையானவனாக, எளியவனாக, மென்மையானவனாக, கொடூரங்களில் இருந்து விடுபட்டவனாக, மன்னிக்கும் தன்மை கொண்டவனாக இருக்கிறானோ, அவனே பிராமணனாவான்; பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவன் பிராமணனாக மாட்டான்.(8) ஓ! மன்னா, அறம் ஈட்ட விரும்பும் மனிதர்கள், சூத்திரர்கள், வைசியர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் உதவியை நாடுவார்கள். எனவே, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, இந்த (மூன்று) வகையினரும், அமைதி நிறைந்த கடமைகளைப் பின்பற்றவில்லையெனில், அவர்களுக்கு விஷ்ணு தன் அருளை நீட்டிக்க மாட்டான். விஷ்ணு நிறைவுபெறவில்லையெனில், சொர்க்கத்தில் இருக்கும் மனிதர்கள் அனைவரின் மகிழ்ச்சி, வேதங்களின் தீர்மானங்கள், அனைத்து வகை வேள்விகள், மனிதர்களின் பிற அறச்செயல்கள் அனைத்தும், பல்வேறு வாழ்வுமுறைகளின் கடமைகள் அனைத்தும் தொலைந்துபோகும்[3].(10)ஓ! பாண்டுவின் மகனே, நான்கு வாழ்வுமுறைகளில் நோற்கப்பட வேண்டிய கடமைகளைக் குறித்து இப்போது கேட்பாயாக[4]. ஒரு க்ஷத்திரியன், (தன் நாட்டிலுள்ள மற்ற) மூன்று வகையினரும் {வர்ணத்தாரும்}, அந்த வாழ்வுமுறைகளின் அந்தந்தக் கடமைகளைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என விரும்பினால், இவை {பின்வருவன} அவனால் அறியப்பட வேண்டும்.(11)

(சாத்திரங்களைக்) கேட்க விரும்புபவனும், தன் கடமைகளை நிறைவேற்றியவனும், ஒரு மகனைப் பெற்றவனும், உயர்ந்த வகையினருக்கும் தனக்கும் இடையில் நடத்தையின் தூய்மையில் பெரிய வேறுபாடுகள் இல்லாதவனுமான ஒரு சூத்திரனுக்கு, உலகளாவிய அமைதி, (அவனுக்குத் தேவையில்லாத) தற்கட்டுப்பாடு ஆகியவற்றைத் தவிர்த்து, அனைத்து வாழ்வுமுறைகளும் விதிக்கப்படுகின்றன[5].(12,13) ஓ! மன்னா, இந்தக் கடமைகள் யாவையும் பயிலும் ஒரு சூத்திரனுக்கும், ஒரு வைசியனுக்கும், ஒரு க்ஷத்திரியனுக்கும், {இறுதியாக} பிக்ஷு வாழ்வுமுறை விதிக்கப்பட்டிருக்கிறது.(14)வயதில் முதிர்ந்த ஒரு வைசியன், தன் வகைக்கான கடமைகளைச் செய்த பிறகு, மன்னனுக்கும் தொண்டாற்றிய பிறகு, மன்னனின் அனுமதியுடன், {தான் பின்பற்றி வரும் வாழ்வுமுறையை விட்டு விலகி} மற்றொரு வாழ்வுமுறையை ஏற்கலாம்.(15)

ஓ! மன்னா, ஓ! பாவமற்றவனே, ஒரு வயது முதிர்ந்த க்ஷத்திரியன், வேதங்களையும், மன்னர்களின் கடமைகள் குறித்த ஆய்வுகளையும் முறையாகக் கற்று, பிள்ளைகளைப் பெற்று, அதே இயல்புடைய பிற செயல்களையும் செய்து, சோமத்தைக் குடித்து,(16) ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவனே, நீதியுடன் தன் குடிமக்கள் அனைவரையும் பாதுகாத்து, அவர்களை ஆட்சி செய்து, ராஜசூயம், குதிரை வேள்வி மற்றும் பிற பெரும் வேள்விகளைச் செய்து,(17) சாத்திரங்களை ஓதுவதற்குக் கல்விமான்களான பிராமணர்களை அழைத்து, அவர்களது தகுதிக்குத்தக்க அவர்களுக்குக் கொடைகளை அளித்து, சிறிய அல்லது பெரிய போரில் வெற்றிகளை அடைந்து,(18) தன் மடியில் பிறந்த மகனையோ, நற்குடியில் பிறந்த வேறு க்ஷத்திரியனையோ தன் குடிமக்களைக் காக்க அரியணையில் அமர்த்தி,(19) பித்ருக்களைக் கௌரவிக்கச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளை முறையாகச் செய்து, அவர்களை வணங்கி, வேள்விகளைச் செய்து தேவர்களைக் கவனமாக வணங்கி, வேதங்களைக் கற்று முனிவர்களை வணங்கிய பிறகு,(20) ஓ! மன்னா, அவன் மற்றொரு வாழ்வுமுறையை ஏற்க விரும்பினால், அவன் தற்போது பின்பற்றும் வாழ்வுமுறையைக் கைவிட்டு, உடனே அதற்கடுத்த வாழ்வுமுறையாக இருப்பதைப் பின்பற்றுவதன் மூலம் அவன் (தவ) வெற்றியை அடைகிறான்.(21)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு முனிவரின் வாழ்வை வாழ விரும்பும் ஒரு க்ஷத்திரியன், பிக்ஷு வாழ்வு முறையைப் பின்பற்றலாம்; ஆனால், அவன் உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக ஒருபோதும் அதைச் செய்யக் கூடாது. இல்லறவாழ்வைக் கைவிட்டு, தன் உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே இரக்கும் துறவியின் வாழ்வை அவன் பின்பற்றலாம்.(22) துறவு வாழ்வானது, (க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய) மற்ற மூன்று வகையினருக்கான கடப்பாடாகாது. எனினும், அவர்கள் {க்ஷத்திரியர்கள்} இந்த {துறவு} வாழ்வுமுறையைப் பின்பற்றத் தேர்ந்தெடுப்பதைப் போலவே, இவை நான்கு வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} திறந்தேயிருக்கின்றன.(23)

மனிதர்களுக்கு மத்தியில், க்ஷத்திரியர்களால் பயிலப்படும் கடமைகளே உயர்ந்தவையாகும். மொத்த உலகமும் அவர்களுடைய கரங்களின் வலிமைக்கு அடங்கியதாகும். வேறு மூன்று வகையினரின் முக்கிய மற்றும் துணைக் கடமைகள் அனைத்தும், க்ஷத்திரியக் கடமைகளைச் {அவை நோற்கப்படுவதைச்} சார்ந்தே இருக்கின்றன. இதை வேதங்களே அறிவித்திருக்கின்றன.(24) பிற விலங்குகள் அனைத்தின் காலடித்தடங்களும், யானையின் காலடித்தடத்தால் விழுங்கப்படுவதைப் போலவே, அனைத்துச் சூழ்நிலைகளிலும், பிற வகையினரின் கடமைகள் அனைத்தும், க்ஷத்திரியக் கடமைகளால் விழுங்கப்படுகின்றன.(25) வேறு மூன்று வகையினரின் கடமைகள் சிறு ஆறுதலையோ, பாதுகாப்பையோ அளித்து, சிறு வெகுமதிகளை அளிக்குமெனச் சாத்திரமறிந்த மனிதர்கள் சொல்கின்றனர். க்ஷத்திரியக் கடமைகள், பெரும் ஆறுதலை அளித்துப் பெரும் வெகுமதிகளைக் கொடுக்கும் எனக் கற்றோர் சொல்கின்றனர்.(26)

அனைத்துக் கடமைகளும், தங்களைவிட  அரசகடமைகளையே முதன்மையாகக் கொண்டுள்ளன. அனைத்து வகையினரும் அவற்றால் பாதுகாக்கப்படுகின்றனர். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அரசகடமைகளின் போது துறவு நேர்கிறது, துறவே அழிவில்லா அறமெனவும், அனைத்திலும் முதன்மையானது எனவும் செல்லப்படுகிறது[6].(27) தண்டநீதி மறைந்தால், வேதங்களும் மறையும். மனிதர்களின் கடமைகளைச் சொல்லும் சாத்திரங்கள் அனைத்தும் தொலைந்து போகும். உண்மையில், க்ஷத்திரியர்களுக்குரிய இந்தப் பழங்கடமைகள் கைவிடப்பட்டால், அனைத்து வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} கடமைகளும் மறைந்து போகும்.(28) அரச கடமைகளில் அனைத்து வகைத் துறவும் தென்படுகின்றன; அனைத்து வகைத் தொடக்கங்களும் அவற்றில் தோன்றுகின்றன; அனைத்து வகைக் கல்வியும் அவற்றோடு தொடர்புடையனவாக இருக்கின்றன; அனைத்து வகை உலக நடத்தையும் அவற்றில் நுழையும்.(29)இழிந்தோரால் கொல்லப்படும் விலங்குகள், அறத்தையும், அவர்களின் அறச்செயல்களையும் அழிப்பதைப் போலவே, அரச கடமைகளால் கொடுக்கப்படும் பாதுகாப்பை மனிதர்கள் இழந்தால், அவர்களது பிற கடமைகள் அனைத்தும் தாக்குதலுக்கும், அழிவுக்கும் உள்ளாகி, கவலையில் நிறைந்து, அவர்களுக்காக விதிக்கப்பட்ட நடைமுறைகளை {அறச்செயல்களை} அலட்சியம் செய்வார்கள்” என்றார் {பீஷ்மர்}.(30)

அரசகடமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 64-அரசகடமைகளின் முக்கியத்துவம்; தேவர்களும் க்ஷத்திரியக் கடமைகளையே நோற்றனர்; இந்திரனின் வடிவை ஏற்ற விஷ்ணு; அரச கடமைகள் குறித்து மாந்தாதாவிடம் உரையாடியது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாண்டுவின் மகனே, நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகள், யதிகளின் கடமைகள், மனிதர்களின் பொதுவான நடைமுறை வழக்கங்கள் ஆகிய அனைத்தும் அரச கடமைகளிலும் இருக்கின்றன.(1) ஓ! பாரதர்களின் தலைவா, இந்தச் செயல்கள் அனைத்தும் க்ஷத்திரியக் கடமைகளிலும் நேர்கின்றன. அரச செயல்பாடுகளில் தடங்கலேற்பட்டால், அனைத்து உயிரினங்களுக்கும் தீமை விளைகிறது.(2) மனிதர்களின் கடமைகள் {தர்மங்கள்} வெளிப்படையானவை அல்ல. மேலும் அவை பல கிளைகளைக் கொண்டவையாக இருக்கின்றன[1]. சில வேளைகளில், (தவறான) பல முறைமைகளால் வழிநடத்தப்பட்டு, அவற்றின் நித்திய இயல்பு பாதிக்கப்படுகிறது.(3) உண்மையில், (சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள) கடமைகளைக் குறித்த உண்மைகள் எதையும் அறியாமலேயே, {வெறுமனே} அடுத்தவர்களின் தீர்மானங்களைக் கண்டு நம்பும் மனிதர்கள், இறுதியில், முடிவான தீர்மானங்களை அறியாத நம்பிக்கை குழம்பிய நிலையையே அடைகிறார்கள்[2].(4) க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகள் வெளிப்படையானவையும், பெரும் மகிழ்ச்சியை உண்டாக்குபவையும், தாங்கள் விளைவிக்கும் விளைவுகளைப் பொறுத்தவரையில் தெளிவானவையும், வஞ்சகம் இல்லாதவையும், மொத்த உலகத்திற்கும் நன்மை பயக்கக்கூடியவையுமாக இருக்கின்றன.(5)ஓ! யுதிஷ்டிரா, மூன்று வகையினர், பிராமணர்கள் மற்றும் உலக வாழ்வில் ஓய்ந்து சென்றவர்கள் {துறவிகள்} ஆகியோரின் கடமைகள் அனைத்தும் (கார்ஹஸ்த்யம் என்றழைக்கப்படும்) புனித வாழ்வுமுறைக்குள் அடங்கியிருந்தது என்று சொல்லப்படுவதைப் போலவே, நற்செயல்கள் அனைத்தையும் கொண்ட மொத்த உலகமும் அரசகடமைகளுக்கு அடங்கியதாகும்.(6) ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் எவ்வாறு துணிச்சல்மிக்கப் பல மன்னர்கள், தெய்வீகமானவனும், பலமிக்கவனும், பேராற்றல் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமான விஷ்ணுவிடம் சென்று, தண்ட நீதி {அரச நீதி} குறித்த தங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொண்டனர் என்பதை நான் உனக்குச் சொன்னேன்[3].(7) உதாரணங்களுடன் சொல்லப்பட்டிருக்கும் சாத்திரங்களின் தீர்மானங்களில் கவனமாக இருந்த அம்மன்னர்கள், பழங்காலத்தில், தங்கள் ஒவ்வொரு செயல்பாட்டையும், ஒவ்வொரு வாழ்வுமுறையின் கடமைகளோடு நிகர்த்துப் பார்த்த பிறகு நாராயணனுக்காகக் காத்திருந்தனர்[4].(8) பழங்காலத்தில் தேவர்களில் முதல்வனால் படைக்கப்பட்ட சத்தியஸ்கள், வசுக்கள், அசுவினிகள், ருத்திரர்கள், விஸ்வர்கள், மருத்துகள், சித்தர்கள் ஆகியோருடன் கூடிய தேவர்கள் அனைவரும் க்ஷத்திரியக் கடமைகளையே நோற்று வந்தனர்.(9)பழங்காலத்தில் தானவர்கள் பெருகி, அனைத்துக் கட்டுப்பாடுகளையும், வேறுபாடுகளையும் மீறியபோது[5],(10) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பலமிக்கவனான மாந்தாத்ரி {மாந்தாதா} மன்னனாக ஆனான். பூமியின் ஆட்சியாளனான மன்னன் மாந்தாத்ரி, பலமிக்கவனும், தேவர்களுக்குத் தேவனும், தொடக்கம், நடுநிலை, முடிவு இல்லாதவனுமான நாராயணனைக் காணும் விருப்பத்தில் ஒரு பெரும் வேள்வியைச் செய்தான்.(11,12) அந்த வேள்வியில் அவன் பெருமைமிக்க விஷ்ணுவைப் பணிவுடன் வணங்கினான். அந்த உயர்ந்த தலைவன் {விஷ்ணு}, இந்திரனின் வடிவில் அவன் முன் தோன்றினான்.(13) நல்ல மன்னர்கள் பலரின் துணையுடன் கூடிய அவன் அந்தப் பலமிக்கத் தேவனுக்குத் தன் துதியைக் காணிக்கையாக்கினான்.(14) அந்த மன்னர்களில் சிங்கத்திற்கும் {மாந்தாத்ரிக்கும்}, பெரும் இந்திரனின் வடிவில் இருந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவனுக்கும் இடையில் பிரகாசமிக்க விஷ்ணுவைத் தீண்டும் இந்த உயர்ந்த உரையாடல் நடந்தது.(15)இந்திரன் {இந்திரன் உருவில் வந்த விஷ்ணு மந்தாதாவிடம்}, “ஓ! அறவோரில் முதன்மையானவனே, புராதானமானவனும், தேவர்களில் முதல்வனும், நினைத்தற்கரிய சக்தி படைத்தவனும், முடிவிலா மாயைகளைக் கொண்டவனுமான நாராயணனைக் காண நீ இவ்வாறு முயல்வதன் நோக்கம் யாது?(16) நானோ, பிரம்மனோ கூட அந்தத் தேவனின் உலகளாவிய வடிவைக் காண முடியாது. நீ மனிதர்களில் முதன்மையானவனாக இருப்பதால், உன் இதயத்தில் இருக்கும் வேறு நோக்கங்களுக்கு நான் உனக்கு அருள் செய்வேன்.(17) உன் ஆன்மா அமைதியில் கட்டுப்பட்டிருக்கிறது; நீ நீதிக்கு அர்ப்பணிப்புள்ளவனாக இருக்கிறாய்; உன் புலன்களைக் கட்டுக்குள் கொண்டிருக்கிறாய்; வீரம் கொண்டவனாகவும் இருக்கிறாய். தேவர்களுக்கு ஏற்புடையதைச் செய்யப் பின்வாங்காமல் நீ முயல்கிறாய். உன் நுண்ணறிவு, அர்ப்பணிப்பு, உயர்ந்த நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக உன்னால் விரும்பப்படும் எந்த வரத்தையும் நான் உனக்கு அளிப்பேன்” என்றான்.(18)

மாந்தாத்ரி {மாந்தாதா விஷ்ணுவிடம்}, “உன்னை நிறைவு செய்ய நான் தலைவணங்குகிறேன். எனினும், ஓ! தெய்வீகத் தலைவா, நான் தேவர்களில் முதல்வனைக் {விஷ்ணுவைக்} காணவே விரும்புகிறேன் என்பதில் ஐயமில்லை. (பூமி சார்ந்த) அனைத்து ஆசைகளைக் கைவிட்டு, அறத்தகுதி ஈட்டி, நல்லோரின் பாதைக்கு இட்டுச் செல்லும் முதன்மையான வாழ்வுமுறையைப் பின்பற்றி, அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுபவனாக இருக்க நான் விரும்புகிறேன்.(19) ஒரு க்ஷத்திரியனின் உயர்ந்த கடமைகளைச் செய்து, அடுத்த உலகில் வற்றாத தகுதிகளுடன் கூடிய பல பகுதிகளை ஈட்டியிருக்கிறேன். மேலும், அந்தக் கடமைகளின் மூலம் என் புகழும் பரவியிருக்கிறது. எனினும், தேவர்களில் முதல்வனிடமிருந்து {விஷ்ணுவிடம்} வந்தவையும், உலகில் முதன்மையானவையுமான கடமைகளைச் செய்வது எவ்வாறு என்பதை நான் அறியவில்லை” என்று கேட்டான்.(20)

இந்திரன் {விஷ்ணு மந்தாதாவிடம்}, “மன்னர்களாக இல்லாதோர், தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்தாலும், கடமையின் உயர்ந்த வெகுமதிகளை எளிதில் அடைய முடியாது. மூல தேவனிடமிருந்தே அரச கடமைகள் வாய்த்தன. பிற கடமைகள் அவனது உடலில் இருந்து பிற்பாடு தோன்றின.(21) வானப்ரஸ்த வாழ்வுமுறையுடன் கூடியவையும், பிற்பாடு படைக்கப்பட்டவையுமான பிற கடமைகள் முடிவற்றவையாக இருக்கின்றன. அவை அனைத்தின் கனிகளும் {பலன்களும்} வற்றாதவையாக இருக்கின்றன. அவற்றிலேயே பிற கடமைகள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. இதன் காரணமாகவே அனைத்திலும் முதன்மையானவையாக க்ஷத்திரியக் கடமைகள் சொல்லப்படுகின்றன.(22) பழங்காலத்தில், க்ஷத்திரியக் கடமைகளின்படி செயல்பட்ட விஷ்ணு, தன் எதிரிகளைப் பலவந்தமாக ஒடுக்கி, அழித்து, அளவில்லா சக்தி கொண்ட முனிவர்கள் மற்றும் தேவர்களுக்கும் நிவாரணத்தை அளித்தான்.(23) நினைத்தற்கரிய சக்தி கொண்ட அந்தத் தெய்வீக விஷ்ணு, அசுரர்களுக்கு மத்தியில் இருந்து தன் எதிரிகளைக் கொல்லாமல் இருந்திருந்தால், பிராமணர்கள், உலகங்களின் படைப்பாளன் (பிரம்மன்) ஆகியோருக்கும், க்ஷத்திரியக் கடமைகளும், உயர்ந்த தேவனிடம் இருந்து முதலில் வந்த கடமைகள் அனைத்துக்கும் அழிவு ஏற்பட்டிருக்கும்.(24) தேவர்களில் முதன்மையான அந்த முதல்வன் {விஷ்ணு}, தன் ஆற்றலை வெளிப்படுத்தி அசுரர்களுடன் கூடிய பூமியை அடக்காமல் இருந்திருந்தால், பிராமணர்களுக்கு ஏற்படும் அழிவின் விளைவால், நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகள் அனைத்தும் அழிவை அடைந்திருக்கும்.(25)

(மனிதர்களின்) நித்திய கடமைகள் அனைத்துக்கும் அழிவு ஏற்பட்டது. க்ஷத்திரியக் கடமைகளைச் செய்தே அவை மீட்கப்பட்டன. பிரம்மத்தை அடையும் பிராமணர்களின் கடமைகளே, ஒவ்வொரு யுகத்திலும் முதலில் தோன்றுகின்றன. எனினும் இவை அனைத்தும் அரசகடமைகளாலேயே காக்கப்படுகின்றன. எனவே, அரசகடமைகளே முதன்மையானவையாகக் கருதப்படுகின்றன.(26) போரில் உயிரைக் கைவிடுவது, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொள்வது, உலகக் காரியங்களில் அறிவு, மனிதர்களைப் பாதுகாப்பது, ஆபத்திலிருந்து அவர்களை மீட்பது, துயரில் இருப்போரையும், ஒடுக்கபட்டோரையும் விடுவிப்பது ஆகிய இவை அனைத்தும் மன்னர்களால் செய்யப்படும் க்ஷத்திரியக்கடமைகளில் நேர்கின்றன.(27) நலந்தரும் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொள்ளாதோர், காமம் மற்றும் கோபத்தின் வசப்பட்டோர் ஆகியோர் மன்னர்களிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக வெளிப்படையான பாவச் செயலைச் செய்யாதிருக்கிறார்கள். இதன் காரணமாகவே, க்ஷத்திரியக்கடமைகள் நீதிமிக்கவையாகக் கருதப்படுகின்றன.(28) பெற்றோரால் பாதுகாக்கப்படும் பிள்ளைகளைப் போல க்ஷத்திரியக் கடமைகளைச் செய்யும் மன்னர்களால் பாதுகாக்கப்படுவதாலேயே அனைத்து உயிரினங்களும் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ்கின்றன என்பதில் ஐயமில்லை.(29) கடமைகள் அனைத்திலும் க்ஷத்திரியக் கடமைகளே முதன்மையானவை. உலகில் முதன்மையானவை என்று கருதப்படும் அந்த நித்திய கடமைகளே ஒவ்வொரு உயிரினத்தின் பாதுகாப்பையும் உறுதிசெய்கின்றன. நித்தியமான அவையே, அழிவில்லா பேற்றுக்கு வழிவகுப்பனவாகும்.” என்றான் {இந்திரன்}.(30)

கள்வர்களின் கடமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 65-க்ஷத்திரியக் கடமைகளின் மேன்மை; கள்வர்களும் பின்பற்ற வேண்டிய கடமைகள்; அரசகடமைகள் மற்றும் தண்டநீதியின் முக்கியத்துவம் ஆகியவற்றை மாந்தாதாவுக்குச் சொன்ன இந்திரன்; பழங்காலத்தில் நடந்த இந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

இந்திரன் {மந்தாதாவிடம்}, “ஓ! மன்னா {மந்தாதா}, இத்தகு சக்தியைக் கொண்டவையும், பிற கடமைகள் அனைத்தையும் உள்ளடக்கியவையும், கடமைகள் அனைத்திலும் முதன்மையானவையுமான க்ஷத்திரியக் கடமைகள், உலகின் நன்மையை நாடுபவர்களும், உயர் ஆன்மா கொண்டோர்களுமான உன்னைப் போன்ற மனிதர்களால் நோற்கப்பட வேண்டும். அந்தக் கடமைகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லையென்றால், அனைத்து உயிரினங்களும் அழிவையடையும்.(1) அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட மன்னன், உழவுக்கான நிலத்தை மீட்பது, அதற்கு உரமிடுவது, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளப் பெரும் வேள்விகளைச் செய்வது, கையேந்துவதைப் புறக்கணிப்பது {துறவைப் புறக்கணிப்பது}, குடிமக்களைப் பாதுகாப்பது போன்றவற்றையே தன் முதன்மையான கடமைகளாகக் கருத வேண்டும்.(2) (கொடைபெறுதலைக்) துறப்பதே அறங்களில் முதன்மையானது எனத் தவசிகள் சொல்கின்றனர். அனைத்து வகைத் துறவுகளிலும், போரில் உடலைக் கைவிடுவதே முதன்மையானது. எப்போதும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்றவர்களும்,(3) தங்கள் ஆசான்களிடம் முறையாகக் காத்திருந்தவர்களும், பெரும் கல்வி பெற்றவர்களுமான பூமியின் ஆட்சியாளர்கள், ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டு, இறுதியில் எவ்வாறு தங்கள் உடல்களைத் துறந்தனர் என்பதை உன் கண்களாலேயே கண்டாய். அறத்தகுதி ஈட்ட விரும்பும் க்ஷத்திரியன், பிரம்மச்சரிய வாழ்வுமுறையை வாழ்ந்து, பிறகு எப்போதும் தகுதியைத் தரக்கூடியதான இல்லற வாழ்வையே நோற்க வேண்டும்.(4) (குடிமக்களுக்கிடையே) நீதி தொடர்புடைய சராசரி கேள்விகளின் வழக்கில் தீர்ப்பளிப்பதில் அவன் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். அனைத்து வகையினரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்வதற்கும், அனைவரையும் பாதுகாப்பதற்கும், பல்வேறு திட்டங்கள், வழிமுறைகள், ஆற்றல்,(5) (நோக்கங்கள் நிறைவடைய நாடும்) உழைப்பு ஆகியவற்றுக்கும், அனைத்துக் கடமைகளையும் தங்கள் இலக்கினுள் கொண்ட க்ஷத்திரியக் கடமைகளே முதன்மையானவையாகச் சொல்லப்படுகின்றன. அரச கடமைகளின் விளைவாகவே பிற வகையினர் தங்களுக்குரிய கடமைகளைப் பின்பற்ற இயலும். இதன்காரணமாகவே தகுதியை உண்டாக்குவதில் அரச கடமைகளைச் சார்ந்தே பிற கடமைகள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.(6)

நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் அலட்சியம் செய்வோரும், இவ்வுலகம் சார்ந்த பொருட்களைப் பின்தொடர்ந்து அவற்றில் பெரும்பற்றோடிருப்போரும் அறிவிலிகளின் {விலங்குகளின்} இயல்பைக் கொண்டோராகச் சொல்லப்படுகிறார்கள். அரச கடமைகளின் செயல்பாட்டாலேயே அவர்கள் நீதியுடன் நடந்து கொள்ளும் வற்புறுத்தலுக்கு உட்படுகிறார்கள். எனவே அக்கடமைகளே {அரசகடமைகளே} அனைத்திலும் முதன்மையானவையாகச் சொல்லப்படுகின்றன.(7) மூன்று வேதங்களைப் பின்பற்றும் பிராமணர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் நடத்தைமுறைகளும், பிராமணர்களுக்காக விதிக்கப்படும் வாழ்வுமுறைகளும் அனைத்திற்கும் முன்பாக ஒவ்வொரு பிராமணனாலும் நோற்க வேண்டும். ஒரு பிராமணன் வேறு வகையில் நடந்து கொண்டால், ஒரு சூத்திரனைப் போலவே அவன் தண்டிக்கப்பட வேண்டும்[1].(8) ஓ! மன்னா {மந்தாதா}, நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகளும், வேதங்களால் பரிந்துரைக்கப்படும் சடங்குகளும் எப்போதும் ஒரு பிராமணனால் பின்பற்றப்பட வேண்டும். அவனுக்கு வேறேதும் கடமைகள் கிடையாது என்பதை அறிவாயாக.(9) வேறு வகையில் செயல்படும் பிராமணனுக்கு எந்த வாழ்வாதாரத்தையும் ஒரு க்ஷத்திரியன் அமைத்துக் கொடுக்கக்கூடாது. அவனது அறத்தகுதிகள் அவனது செயல்பாடுகளின் விளைவாகவே வளரும். உண்மையில் ஒரு பிராமணன் தர்மத்தின் தன்வடிவமாவான்.(10) தனக்காக விதிக்கப்படாத செயல்பாடுகளில் ஈடுபடும் பிராமணன் எந்த மதிப்புக்கும் தகுந்தவனாகான். அவன் {பிராமணன்} முறையான செயல்பாடுகளில் ஈடுபடவில்லையெனில், அவனை ஒருபோதும் நம்பக்கூடாது.(11)பல்வேறு வகையினருக்கும் உரிய கடமைகள் இவையே. (மக்களை) அவற்றைக் கடைப்பிடிக்கச் செய்வதில் முன்னேற்றமடையும் வகையில் க்ஷத்திரியர்கள் அவற்றைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இவையே க்ஷத்திரியர்களின் கடமைகளுமாகும். இதன்காரணமாகவே, வேறு எவற்றையும்விட அரசகடமைகளே அனைத்திலும் முதன்மையானவையாகச் சொல்லப்படுகின்றன. இவையே வீரர்களின் கடமைகள் என்றும், வீரர்களே இவற்றை நடைமுறைப்படுத்துவதில் முதன்மையானவர்கள் என்றும் நான் நம்புகிறேன்” என்றான் {இந்திரன்}.(12)

மாந்தாத்ரி {மாந்தாதா இந்திரனிடம்}, “யவனர்கள், கிராதர்கள், காந்தாரர்கள், சீனர்கள், சபரர்கள், பர்ப்பரர்கள், சகர்கள், துஷாரர்கள், கங்கர்கள், பஹ்லவர்கள் {பல்லவர்கள்}[2], ஆந்திரர்கள், மத்ரகர்கள், பௌண்டரர்கள், புளிந்தர்கள் {உஷ்ட்ரர்கள்}, ராமதர்கள், காம்போஜர்கள், {ஆரட்டர்கள், காசர்கள், மிலேச்சர்கள்} ஆகியோராலும், (ஆரிய) மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளில் வசிக்கும் பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களில் இருந்து எழுந்த பலர், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோராலும் செய்யப்பட வேண்டிய கடமைகள் என்ன? மேலும் களவையே வாழ்வாதாரமாகக் கொண்ட இனங்களை அடக்குவோரான எங்களைப் போன்ற மன்னர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் என்ன?(13-15) இவை யாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! சிறப்புமிக்கத் தேவா {இந்திரா}, எனக்கு அறிவுறுத்துவாயாக. ஓ! தேவர்கள் அனைவரின் தலைவனே {இந்திரனே}, க்ஷத்திரியர்களான எங்களின் நண்பன் நீயே” என்றான் {மாந்தாதா}.(16)

இந்திரன் {மந்தாதாவிடம்}, “களவைச் செய்யும் இனக்குழுக்கள் அனைத்தும் தங்கள் தாய்மாருக்கும், தந்தைமாருக்கும், தங்கள் ஆசான்களுக்கும், பெரியோர்களும், காடுகளில் உள்ள ஆசிரமங்களில் வாழும் துறவிகளுக்கும் தொண்டாற்ற வேண்டும்.(17) கள்வர் இனக்குழுக்கள் அனைத்தும் தங்கள் மன்னர்களுக்கும் தொண்டாற்ற வேண்டும். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கடமைகள் மற்றும் சடங்குகள் அவர்களாலும் பின்பற்றப்பட வேண்டும்.(18) அவர்கள் பித்ருக்களைக் கௌரவிக்க வேள்விகளைச் செய்ய வேண்டும், கிணறுகள் வெட்ட வேண்டும், (உலகத் தொண்டில் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்), தாகத்துடன் இருக்கும் பயணிகளுக்கு நீர் கொடுக்க வேண்டும், படுக்கைகள் மற்றும் பருவகாலத்திற்கேற்ற பிற கொடைகளைப் பிராமணர்களுக்கு அளிக்க வேண்டும்.(19) தீங்கிழையாமை, உண்மை, கோபத்தை அடக்குதல், பிராமணர்களுக்கும், சொந்தங்களுக்கும் அவர்களுக்குரியதைக் கொடுத்து ஆதரித்தல், மனைவியர் மற்றும் பிள்ளைகளைப் பராமரித்தல், தூய்மை, அமைதி,(20) அனைத்து வகை வேள்விகளில் பிராமணர்களுக்குக் கொடையளித்தல் ஆகியவை தன் செழிப்பை விரும்பும் இந்த வகையின் ஒவ்வொரு மனிதனாலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்தகு மனிதன் உணவு மற்றும் செல்வத்துடன் கூடிய அனைத்து வகைப் பாகயக்ஞங்களைச் செய்ய வேண்டும்.(21) ஓ! பாவமற்றவனே, இவையும், இன்னும் இதைப் போன்ற கடமைகளும் பழங்காலத்தில் இவ்வகையினருக்காக விதிக்கப்பட்டிருக்கின்றன. ஓ! மன்னா, பிறர் அனைவருக்கும் விதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் அனைத்தும் கள்வர் வகையினராலும் செய்யப்பட வேண்டும்” என்றான் {இந்திரன்}.(22)

மாந்தாத்ரி {இந்திரனிடம்}, “மனிதர்களின் உலகில், நால்வகையினர் மற்றும் நான்கு வாழ்வுமுறைகள் அனைத்திலும் இத்தகு தீய மனிதர்கள் மறைந்து வாழ்வது காணப்படுகிறது” என்றான்.(23)

இந்திரன், “ஓ! பாவமற்றவனே, அரசகடமைகளும், தண்டனை அறிவியலும் {தண்டநீதியும்} மறைந்தால், மன்னர்களின் கொடுங்கோன்மையின் விளைவால் அனைத்து உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்படும்.(24) கிருத யுகத்திற்குப் பிறகு, பல்வேறு வாழ்வுமுறைகளைப் பொறுத்தவரையில் பெருங்குழப்பம் ஏற்படும், பல்வேறு வகைச் சமுதாயக்குழுக்கள் சார்ந்த அடையாளங்களுடன் எண்ணற்ற பிக்ஷுகள் {துறவிகள்} தோன்றுவார்கள்.(25) புராணங்களையும், அறத்தின் உயர்ந்த உண்மைகளையும் அலட்சியம் செய்து, காமம் மற்றும் கோபத்தால் தூண்டப்பட்டுத் தவறான பாதைகளுக்கு மனிதர்கள் பிறழ்வார்கள்.(26) பாவம் நிறைந்த மனிதர்கள், தண்டனை அறிவியலின் துணையுடன் கூடிய உயர் ஆன்ம மனிதர்களால் (தீச்செயல்களிலிருந்து) தடுக்கப்படும்போதுதான், அனைத்திலும் மேன்மையானதும், அழிவற்றதும், அனைத்து நன்மைக்கும் ஊற்றுக்கண்ணாயிருப்பதுமான அறம் உறுதியுடன் நிறுவப்படும்.(27) அனைவருக்கும் மேன்மையான மன்னனை அவமதிக்கும் மனிதன் செய்யும் கொடைகள், ஆகுதிகள், பித்ருக்களுக்கான காணிக்கைகள் ஆகியவை கனியற்றதாகும்.(28) உண்மையில் நித்திய தேவனேயான ஓர் அறம்சார்ந்த மன்னனை தேவர்களேகூட அவமதிக்கமாட்டார்கள்.(29) அனைத்து உயிரினங்களின் தெய்வீகத்தலைவன், அண்டத்தைப் படைத்த பிறகு, மக்களின் கடமைகள் சார்ந்து ஒரு க்ஷத்திரியன் அவர்களை ஆள வேண்டும் என்று விரும்பினான்.(30) மனிதர்கள் செய்யும் கடமைகளின் போக்கைத் தன் அறிவின் துணை கொண்டு கண்காணிக்கும் மனிதனை {மன்னனை} நான் மதிக்கிறேன், வழிபடுகிறேன். அத்தகு கண்காணிப்பிலேயே க்ஷத்திரியக் கடமைகள் இருக்கின்றன” என்றான் {இந்திரன்}”.(31)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்திரனின் வடிவிலிருந்தவனும், பலமிக்கவனுமான அந்தத் தெய்வீக நாராயணன் இந்த வார்த்தைகளைச் சொன்னபிறகு, மருத்துகளின் துணையுடன், வற்றாத அருளுள்ள தன் நித்திய வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(32) ஓ! பாவமற்றவனே, நல்லோரால் பின்பற்றப்படும் கடமைகள் பழங்காலத்தில் இவ்வழியில் இருந்தபோது, தூய ஆன்மாவும், கல்வியும் கொண்ட எந்த மனிதன்தான் ஒரு க்ஷத்திரியனை அலட்சியம் செய்ய முடியும்?(33) பார்வையற்ற மனிதர்கள் தங்கள் வழியில் செல்ல முடியாததைப் போல, நீதியற்ற செயல்பாடும், நீதியற்ற தவிர்த்தலும் அழிவையே அடைகின்றன.(34) ஓ! மனிதர்களில் புலியே, ஆதிகாலத்தில் இருந்து செயல்படத் தொடங்கியதும், முன்னோர்களுக்கு மிக முக்கியமுமான இந்த (கடமைகள் எனும்) சக்கரத்தை {தர்மச்சக்கரத்தை} நீ பின்பற்ற வேண்டும். ஓ! பாவமற்றவனே, இதைச் செய்ய நீ தகுந்தவனாவாய் என்பதை நான் அறிவேன்” என்றார் {பீஷ்மர்}.(35)

வர்ணாசிரமங்களில் ராஜதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 66- வாழ்வுமுறைகள் அனைத்தின் கடமைகளையும் மீண்டும் விரிவாகச் சொல்லும்படி பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பிற கடமைகள் அனைத்தும் அரச கடமைகளிலேயே அடங்கியிருக்கின்றன என்ற பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மனித வாழ்க்கையின் வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைக்} குறித்து நீர் என்னிடம் சொன்னீர். நான் அவற்றைக் குறித்து அதிகம் அறிய விரும்புகிறேன். அவற்றை விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, இவ்வுலகில் நல்லோரால் பயிலப்படும் கடமைகள் அனைத்தையும் நான் அறிந்த அளவுக்கு நீயும் அறிவாய்.(2) ஓ! அறவோரில் முதன்மையானவனே, வேறு வாழ்வுமுறைகளைப் பின்பற்றும் வேறு சிலரால் பயிலப்படும் கடமைகளின் விளைவாக (ஒரு மன்னன்) அடையும் தகுதி குறித்துக் கேட்பாயாக.(3) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகளைப் பயிலும் மனிதர்களுக்குரிய தகுதிகள் அனைத்தும் அறம்சார்ந்த மன்னர்களைப் பற்றுகின்றன.(4)

ஓ! யுதிஷ்டிரா, காமம் மற்றும் வெறுப்பின் ஆளுகைக்குட்படாமல், தண்டனை அறிவியலின் துணை கொண்டு ஆட்சி செய்து, அனைத்து உயிரினங்களையும் சமமாகக் கருதும் ஒரு மன்னன், பைக்ஷிய வாழ்வுமுறையின் இலக்கை (பிரம்மத்தை) அடைகிறான்.(5) அறிவுடையவனும், சரியான சந்தர்ப்பங்களில் தகுந்தோருக்குக் கொடை அளிப்பவனும், எவ்வாறு உதவுவது, எவ்வாறு தண்டிப்பது என்பதை அறிந்தவனும், சாத்திர விதிகளின் படி அனைத்திலும் நடந்து கொள்பவனும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவனுமான மன்னன், கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(6) ஓ! குந்தியின் மகனே, வழிபாட்டுக்குத் தகுந்தோருக்கு உரியதைக் கொடுத்து எப்போதும் வழிபடுபவன் பைக்ஷிய வாழ்வு முறையின் இலக்கை முழுமையாக அடைகிறான்.(7) ஓ! யுதிஷ்டிரா, தன்னாலான சக்தியுடன் தன் சொந்தங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் துயரில் இருந்து மீட்கும் மன்னன், வானப்ரஸ்த வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(8) ஓ! குந்தியின் மகனே, மனிதர்களில் முதன்மையானோரையும், யதிகளில் முதன்மையானோரையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கௌரவிக்கும் மன்னன், வானப்ரஸ்த வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(9) ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, தினமும் பித்ருக்களுக்குக் காணிக்கையளிப்பவனும், மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் காணிக்கைகளை அளிப்பவனுமான மன்னன், அதே {வானப்ரஸ்த} வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(10,11)

ஓ! மனிதர்களில் புலியே, நல்லோரைக் காக்க வேறு நாடுகளைக் கலங்கடிக்கும் மன்னன், அதே {வானப்ரஸ்த} வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(12) அனைத்துயிரினங்களின் பாதுகாப்பின் விளைவாகவும், தன் நாட்டை முறையாகப் பாதுகாப்பதன் விளவாகவும், ஒரு மன்னன், காக்கப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையின் அளவுக்குப் பல வேள்விகளின் தகுதிகளை அடைந்து, அதன்படியே சந்நியாச வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(13) தினமும் வேதங்களைக் கற்பது, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, ஆசான்களை வழிபடுவது, தன் குருவுக்குத் தொண்டாற்றுவது ஆகியன பிரம்மச்சரியத்தின் இலக்கை அடைய வழிவகுக்கும்.(14) ஓ! மனிதர்களில் புலியே, தினமும் தன் மந்திரங்களை அமைதியாக ஓதுபவனும், விதிப்படி தேவர்களை எப்போதும் வழிபடுபவனுமான மன்னன், கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(15)

தன் நாட்டைப் பாதுகாக்கத் தீர்மானித்துப் போரில் ஈடுபடவோ, மரணமடையவோ நேரும் மன்னன் வானப்ரஸ்த வாழ்வு முறையின் இலக்கை அடைகிறான்.(16) ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களிடமும் நேர்மை மற்றும் உண்மையுடன் எப்போதும் நடந்து கொள்பவனான மன்னன் வானப்ரஸ்த வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(17) வானப்ரஸ்த வாழ்வுமுறை வாழ்பவர்களுக்கும், மூன்று வேதங்களை அறிந்த பிராமணர்களுக்கும் கொடையளிக்கும் மன்னன் வானப்ரஸ்த வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(18) ஓ! பாரதா, அனைத்துயிரினங்களிடமும் கருணையைக் காட்டி, கொடூரத்தை முற்றிலும் தவிர்க்கும் மன்னன், அனைத்து வாழ்வுமுறைகளின் இலக்குகளையும் அடைகிறான்.(19) ஓ! யுதிஷ்டிரா, ஓ! குந்தியின் மகனே, அனைத்து சந்தர்ப்பங்களிலும் இளையவர்களுக்கும், முதியவர்களுக்கும் கருணை காட்டும் மன்னன் அனைத்து வாழ்வுமுறைகளின் இலக்குகளையும் அடைகிறான்.(20)

ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, தன் பாதுகாப்பை நாடும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணத்தை வழங்கும் மன்னன் கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(21) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவனும், தகுந்தோரைக் கௌரவிப்பவனுமான மன்னன், கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(22) மூத்த மற்றும் இளைய சகோதரர்களின் மனைவிமார், அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு உதவிகளை அளிப்பதும், தண்டனைகளால் பீடிப்பதும், ஒரு மன்னனின் இல்லறக் கடமைகளாகும், இவையே அவனது சிறந்த தவமுமாகும்[1].(23) ஓ! மனிதர்களில் புலியே, நல்லோரையும், வழிபாட்டுக்குத் தகுந்தோரையும் கௌரவிப்பவனும், (தவத்தின் மூலம்) தன்னறிவு அடைந்தோரைப் பாதுகாப்பவனுமான மன்னன் கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைவான்.(24) ஓ! பாரதா, வானப்ரஸ்த வாழ்வுமுறையில் வாழும் மனிதர்களையும், பிற வாழ்வு முறைகளில் வாழ்வோரையும் தன் இல்லத்துக்கு அழைத்து, அவர்களுக்கு உணவளிப்பது ஒரு மன்னனின் இல்லறக் கடமையாகும்.(25)படைப்பாளனால் விதிக்கப்பட்ட கடமைகளை முறையாகப் பின்பற்றும் மன்னன், அனைத்து வாழ்வுமுறைகளின் அருள் தகுதிகளை அடைகிறான்.(26) ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, எந்த நற்குணமும் அழியாமல் இருக்கும் மன்னன் வானப்ரஸ்தம் மற்றும் வேறு வாழ்வுமுறைகள் அனைத்தையும் நோற்பவனாகக் கல்விமான்களால் சொல்லப்படுகிறான்.(27) குலம், வயது, பதவி, நிலை ஆகியவற்றில் தகுந்தவர்களுக்குக் கௌரவமளிக்கும் மன்னன் அனைத்து வாழ்வு முறைகளிலும் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறான்[2].(28) ஓ! குந்தியின் மகனே, ஓ! மனிதர்களில் புலியே, தன் நாட்டின் கடமைகளையும், தன் குடும்பத்தின் கடமைகளையும் செய்யும் ஒரு மன்னன், அனைத்து வாழ்வுமுறைகளின் தகுதியையும் அடைகிறான்.(29) ஓ! மன்னா, முறையான காலங்களில் நல்லோருக்கு வெகுமதிகளையோ, மதிப்புமிக்கப் பரிசுகளையோ அளிக்கும் மன்னன், அனைத்து வகை வாழ்வுமுறைகளின் தகுதிகளையும் அடைகிறான்.(30)ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஆபத்தையும், அச்சத்தையும் அடைந்த போதிலும், மனிதர்கள் அனைவரின் கடமைகளில் {தர்மத்திலும்} கண் கொண்ட மன்னன், அனைத்து வகை வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} தகுதியையும் ஈட்டுகிறான்.(31) ஒரு மன்னன், தன் ஆட்சிப்பகுதிகளில் உள்ள நல்லோரைப் பாதுகாப்பதால் ஈட்டப்படும் தகுதிகளின் பங்கை அடைகிறான்.(32) மறுபுறம், ஓ! மனிதர்களில் புலியே, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் உள்ள நல்லோரை மன்னர்கள் காக்கவில்லையெனில், அவர்கள் (அந்தச் செயல் அல்லது புறக்கணிப்புக்கான) பாவத்தையே ஈட்டுகிறார்கள்.(33) ஓ! யுதிஷ்டிரா, ஓ! பாவமற்றவனே, (தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதில்) மன்னர்களுக்கு உதவி புரியும் மனிதர்களும், (அந்தப் பாதுகாப்பின் விளைவாக) பிறரால் ஈட்டப்படும் தகுதிகளின் பங்கை அடைவதற்கு {மன்னர்களைப் போலவே} சமமான தகுதியைப் பெறுகிறார்கள்.(34) நாம் பின்பற்றும் கார்ஹஸ்த்தியமே வாழ்வுமுறைகள் அனைத்திலும் மேன்மையானது எனக் கல்விமான்கள் சொல்கின்றனர். அதுகுறித்த தீர்மானங்கள் மிகத் தெளிவானவையாகும். ஓ! மனிதர்களில் புலியே அது நிச்சயம் புனிதமானதே.(35)

தன்னைப் போலவே பிற உயிரினங்கள் அனைத்தையும் கருதுபவனும், எத்தீங்கையும் செய்யாதவனும், கோபத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவனுமான மனிதன் இம்மையிலும், மறுமையிலும் பேரின்பத்தை அடைகிறான்[3].(36) ஒரு மன்னன், தன் அரச கடமைகளையே பெரும் வேகம் மிக்கக் கப்பலாகக் கொண்டு, கொடைகள் எனும் காற்றால் தூண்டப்பட்டு, சாத்திரங்களைத் துடுப்பாகக் கொண்டு, நுண்ணறிவையே கப்பல் அதிகாரியின் பலமாகக் கொண்டு, அறத்தின் சக்தியால் உலகமெனும் பெருங்கடலை எளிதாகக் கடப்பான்[4].(37) ஒருவனுடைய இதயத்தில் உலகப்பொருள் ஒவ்வொன்றின் மீதும் இருக்கும் ஆசை விலகினால் அவன் தன்னறிவை {தன் நற்குணத்தை} மட்டுமே சார்ந்திருப்பவனாகக் கருதப்படுகிறான். இந்நிலையில் அவன் விரைவில் பிரம்மத்தை அடைகிறான்[5].(38) ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, ஒரு மன்னன், இதயத்தில் உள்ள விருப்பங்களையும் ஆசைகளையும் கட்டுப்படுத்தி, தியானத்தின் மூலம் உற்சாகமடைந்து, {குடிமக்களைப்} பாதுகாக்கும் கடமையை வெளிப்படுத்தினால், அவன் பெரும் தகுதியை அடைவதில் வெல்கிறான்.(39) எனவே, ஓ! யுதிஷ்டிரா, பக்தி செயல்பாடுகளைக் கொண்டோரும், வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டோருமான பிராமணர்களையும், பிற மனிதர்கள் அனைவரையும் கவனமாகப் பாதுகாக்க முயல்வாயாக.(40) ஓ! பாரதா, ஒரு மன்னன், பாதுகாப்பு எனும் கடமையைச் செய்வதன் மூலம், காட்டில், ஆசிரமங்களில் உள்ள துறவிகள் ஈட்டும் தகுதியைவிட நூறு மடங்கு தகுதியை ஈட்டுகிறான்.(41)ஓ! பாண்டுவின் மூத்த மகனே {யுதிஷ்டிரனே}, மனிதர்களின் பல்வேறு கடமைகளை நான் உனக்கு விளக்கிவிட்டேன். நித்தியமானவையும், பழங்காலத்தில் இருந்து பெரும் மனிதர்களால் பயிலப்படுபவையுமான அரசகடமைகளை நீ பின்பற்றுவாயாக.(42) ஓ! மனிதர்களில் புலியே, (உன் குடிமக்களைப்) பாதுகாக்கும் கடமையில் குவிந்த கவனத்துடன் நீ ஈடுபட்டால், நான்கு வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} மற்றும் நான்கு வகைகள் {வர்ணங்கள்} சார்ந்த மனிதர்கள் அனைவரின் தகுதியையும் நீ அடைவாய்” என்றார் {பீஷ்மர்}.(43)

அரசற்ற நிலையும், மனுவும்! – சாந்திபர்வம் பகுதி – 67-அரசற்ற நாட்டின் நிலையை வர்ணித்த பீஷ்மர்; மன்னனால் உண்டாகும் நன்மையையும், அரசற்ற நிலையால் உண்டாகும் தீமையையும் சொன்னது; பழங்காலத்தில் அரசற்ற நிலையில் எவ்வாறு மனு மன்னனானான் என்பதைச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “{இதுவரை} நான்கு வாழ்வு முறைகள் மற்றும் நான்கு வகையினரின் கடமைகள் குறித்து நீர் சொன்னீர். ஓ! பாட்டா, ஒரு நாட்டின் முக்கியக் கடமைகள் என்னென்ன என்பதை எனக்கு இப்போது சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு மன்னனை (தேர்ந்தெடுத்து) பட்டமேற்கச் செய்வதே, ஒரு நாட்டின் முதற்கடமையாகும். அரசற்ற நிலையிலேயே தொடரும் நாடு பலவீனமடைந்து விரைவில் கள்வர்களால் பீடிக்கப்படும்.(2) அரசற்ற நிலையால் பீடிக்கப்படும் நாடுகளில் அறம் நிலைபெறாது. குடிமக்கள் ஒருவரையொருவர் விழுங்குவார்கள். சாத்தியமான நிலைகளில் மிகவும் கீழ்நிலை அரசற்ற நிலையே ஆகும்.(3) ஒரு மன்னனுக்கு முடிசூட்டுவதால், (அந்த மன்னனின் உள்ளிருக்கும்) இந்திரனே முடிசூட்டப்படுகிறான் என்று சுருதிகள் {வேதங்கள்} அறிவிக்கின்றன. செழிப்பில் விருப்பம் இருக்கும் ஒரு மனிதன், இந்திரனை வழிபடுவதைப் போலவே மன்னனை வழிபட வேண்டும்.(4) அரசற்ற நிலையால் பீடிக்கப்படும் நாட்டில் ஒருவரும் வசிக்கக்கூடாது. அரசற்ற நிலை நீடிக்கும் நாடுகளில் ஊற்றப்படும் காணிக்கைகளை {ஆகுதிகளை} அக்னி (தேவர்களுக்குக்) கொடுப்பதில்லை.(5)

அரசற்ற நிலையால் பலவீனமடைந்த நாடுகளைத் தன் ஆட்சிப்பகுதிகளோடு இணைத்துக் கொள்ளும் விருப்பத்தோடு ஒரு பலமிக்க மன்னன் அவற்றை அணுகினால், மக்களே முன்வந்து அந்தப் படையெடுப்பாளனை மரியாதையுடன் வரவேற்க வேண்டும். இத்தகு நடத்தையே நல்லறிவுக்குப் பொருந்துவதாக இருக்கும். அரசற்ற நிலையைவிட வேறு பெரிய தீமை எதுவுமில்லை[1].(7) அந்தப் பலமிக்கப் படையெடுப்பாளன் தகைமையாளனாக {நேர்மைநெறியுடன் கூடியவனாக} இருந்தால், அனைத்தும் சரியாக இருக்கும். மறுபுறம் கடும்கோபம் கொண்டவனாக இருந்தால் {கோபம் மூட்டப்பட்டால்} அவன் அவனைவரையும் கொல்லக்கூடும்.(8) எளிதாகப் பால்கறக்க முடியாத பசு அதிகத் துன்பத்துக்கு ஆளாகும். மறுபுறம், எளிதாகப் பாலைக் கறக்கவிடும் பசு, எந்தத் துன்பத்துக்கும் ஆளாக நேராது.(9) எளிதாக வளையும் பொருளைச் சுட வேண்டிய தேவையில்லை. எளிதாக வளையும் மரம், (தோட்டக்காரனின் கைகளில்) எந்தத் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டியதில்லை.(10)ஓ! வீரா {யுதிஷ்டிரா}, இந்த எடுத்துக்காட்டுகளால் வழிநடத்தப்படும் மனிதன், பலமிக்கவர்கள் முன்பு பணிய வேண்டும். பலமிக்க மனிதனின் முன்பு தன் தலையை வணங்கும் மனிதன் உண்மையில் இந்திரனிடமே தலைவணங்குகிறான்.(11) செழிப்பை விரும்பும் மனிதர்கள், இந்தக் காரணங்களுக்காகவே, ஒரு மனிதனை (தேர்ந்தெடுத்து) தங்கள் மன்னனாக முடிசூட்ட வேண்டும். அரசற்ற நாடுகளில் வாழ்வோரால் தங்கள் செல்வத்தையோ, மனைவியரையோ அனுபவிக்க முடியாது.(12) பாவம் நிறைந்த மனிதன், அரசற்ற காலங்களில் பிற மக்களின் செல்வத்தைக் கவர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறான். எனினும் (தவறான வழியில் அடையப்பட்ட) தன் செல்வம் பிறரால் பறிக்கப்படும்போது அவன் ஒரு மன்னனை விரும்புகிறான்.(13) எனவே, அரசற்ற காலங்களில் மிகத் தீமையானவர்கள்கூட மகிழ்ச்சியாக {பாதுகாப்பாக} இருக்கமுடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது[2]. ஒருவனுடைய செல்வமானது இருவரால் பறிக்கப்படும். அந்த இருவருடையது, ஒன்றாகச் செயல்படும் பலரால் பறிக்கப்படும்.(14) அடிமையாக இல்லாதவன் அடிமையாக்கப்படுவான். மேலும் பெண்கள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்படுவார்கள். இந்தக் காரணங்களுக்காகவே, தேவர்கள், மக்களைப் பாதுகாப்பதற்காக மன்னர்களைப் படைத்தார்கள்.(15)பூமியில் தண்டனை வழங்கும் கோலை {செங்கோலைத்} தரித்த மன்னன் எவனும் இல்லையென்றால், நீரில் உள்ள மீன்களைப் போலப் பலமானவர்கள் பலமற்றவர்களை இரையாக்குவார்கள்.(16) நீரில் இருக்கும் பலமிக்க மீன்கள், பலமற்றவையை விழுங்குவதைப் போல, பழங்காலத்தில் அரசற்ற நிலையின் விளைவால் மனிதர்கள் ஒருவரையொருவர் விழுங்கி அழிவைச் சந்தித்தனர் என்று நாம் கேள்விப்படுகிறோம். அப்போது அவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து, சில குறிப்பிட்ட உடன்படிக்கைகளைச் செய்தனர் என்றும் நாம் கேள்விப்படுகிறோம். {அந்த உடன்படிக்கை பின்வருமாறு} அவர்கள் “எவன் கடுஞ்சொல் பேசுகிறானோ, வன்முறை உணர்வு கொள்கிறானோ, எவன் அடுத்தவரின் மனைவியரை நெறிதவறவோ, அபகரிக்கவோ செய்கிறானோ, எவன் பிறருக்குச் சொந்தமான செல்வத்தைக் களவாடுகிறானோ, அவன் நம்மால் கைவிடப்பட வேண்டும்” என்று சொன்னார்கள். அனைத்து வகை மக்களுக்கும் நம்பிக்கை ஊட்டுவதற்காக அவர்கள் இத்தகு உடன்படிக்கையைச் செய்து கொண்டு சில காலம் வாழ்ந்தனர்.(19) அவர்கள் சிலகாலம் கழித்துத் துன்பத்துடன் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று, “ஓ! தெய்வீகத் தலைவா, ஒரு மன்னனில்லாமல் நாங்கள் அழிவடையப் போகிறோம். எவனாவது ஒருவனை எங்கள் மன்னனாக நியமிப்பீராக.(20) நாங்கள் அனைவரும் அவனை வழிபடுவோம். அவன் எங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றனர். இவ்வாறு கேட்கப்பட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்} மனுவிடம் கேட்டார். எனினும், மனு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.(20)

மனு {பிரம்மனிடம்}, “பாவம்நிறைந்த செயல்கள் அனைத்துக்கும் நான் அஞ்சுகிறேன். ஒரு நாட்டை ஆள்வது மிகக் கடினமானதாகும். அதிலும் குறிப்பாக, தங்கள் நடத்தையில் எப்போதும் பொய்யர்களாக, வஞ்சகர்களாக இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் ஒரு நாட்டை ஆள்வது மிகக் கடினமானதாகும்” என்றான்.(22)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அப்போது பூமியில் வசித்தோர் அவனிடம், “அஞ்சாதே. மனிதர்கள் இழைக்கும் பாவங்கள், (உன்னைக் கிஞ்சிற்றும் களங்கப்படுத்தாமல்) அவற்றை இழைப்போரை மட்டுமே தீண்டும். உன் கருவூலத்தைப் பெருக்குவதற்காக நாங்கள் எங்கள் விலங்குகளிலும் மதிப்புமிக்க உலோகங்களிலும் ஐம்பதில் ஒரு {1/50} பங்கைத் தருகிறோம். எங்கள் தானியங்களில் பத்தில் ஒரு {1/10} பங்கைத் தருகிறோம். எங்கள் கன்னிகையர் மணம் செய்து கொள்ள விரும்பும்போது, அவர்களில் மிக அழகானவர்களை உனக்கு அளிக்கிறோம்.(23,24) ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும், விலங்குகள் மற்றும் வாகனங்களைச் செலுத்துவதிலும் முதன்மையானோராக இருக்கும் மனிதர்கள், இந்திரனுக்குப் பின்னால் வரும் தேவர்களைப் போல உனக்குப் பின் நடப்பார்கள்.(25) இவ்வழியில் பெருகும் உன் பலத்துடன், வெல்லப்பட முடியாதவனாகி, பேராற்றலுடன் எங்கள் மன்னனாக இருந்து, யக்ஷர்களையும், ராட்சசர்களையும் காக்கும் குபேரனைப் போல மகிழ்ச்சியாக எங்களைப் பாதுகாப்பாயாக.(26) உன் பாதுகாப்பின் கீழ் மனிதர்கள் ஈட்டும் தகுதியில் {புண்ணியத்தில்}, நான்கில் ஒரு பங்கு உனதாகட்டும்.(27) ஓ! மன்னா {மனு}, உன்னால் எளிதாக அடையப்படும் அத்தகுதியால் பலமடைந்து, ஆயிரம் வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} தேவர்களைக் காப்பதைப் போல எங்களை நீ பாதுகாப்பாயாக.(28) தன் கதிர்களால் அனைத்தையும் எரிக்கப்புறப்படும் சூரியனைப் போல வெற்றிகளை அடையப் புறப்படுவாயாக. எதிரிகளின் செருக்கை நொறுக்குவாயாக. (இவ்வுலகில்) நல்லோர் என்றும் வெல்லட்டும் {வெல்ல வேண்டும்}” என்றனர்.(29)

பூமியில் வசிப்போரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பெருஞ்சக்தி படைத்தவனுமான அந்த மனு, பெரும் படையின் துணையுடன் புறப்பட்டான். உயர் பிறப்பைக் கொண்ட அவன் {மனு}, அப்போது ஆற்றலால் சுடர்விடுவதாகத் தெரிந்தது.(30) இந்திரனின் வலிமையைக் காணும் தேவர்களைப் போல மனுவின் வலிமையைக் கண்ட பூமிவாசிகள், அச்சமடைந்தவர்களாக, தங்கள் தங்களுக்குரிய கடமைகளில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தினர்.(31) பிறகு மனு, அனைத்து இடங்களில் நேரும் தீச்செயல்களைத் தடுத்து, அனைத்து மனிதர்களையும் தங்கள் தங்கள் கடமைகளில் நிறுவி, (நல்ல காரியத்திற்காகத் திரியும்) மழைநிறைந்த மேகத்தைப் போல உலகையே வலம் வந்தான்.(32)

ஓ! யுதிஷ்டிரா, செழிப்பை விரும்புவோரான பூமியில் உள்ள மனிதர்கள் முதலில் ஒரு மன்னனைத் தேர்ந்தெடுத்து, அனைவரின் பாதுகாப்புக்காக அவனுக்கு முடிசூட்ட வேண்டும்.(33) ஆசான்களின் முன்னிலையில் பணியும் சீடர்களைப் போலவோ, இந்திரனின் முன்னிலையில் தேவர்களைப் போலவோ மனிதர்கள் அனைவரும் மன்னனின் முன்பு பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.(34) தன் மக்களால் கௌரவிக்கப்பட்ட ஒருவன், தன் எதிரிகளிடமும் மதிப்புமிக்கவனாவான். தன் மக்களால் அவமதிக்கப்படுபவனோ, எதிரிகளாலும் அவமதிக்கப்படுவான்.(35) மன்னன் தன் எதிரிகளால் அவமதிக்கப்பட்டால், அவனது குடிமக்கள் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களாவார்கள். எனவே, குடைகள், வாகனங்கள், வெளிப்புற ஆபரணங்கள்,(26) உணவு, பானங்கள், மாளிகைகள், இருக்கைகள், படுக்கைகள் மற்றும் பயன்பாட்டுக்கும், காட்சிக்கும் உரிய அனைத்துப் பொருட்களும் மன்னனுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.(37) அத்தகு வழிமுறைகளிலாலேயே ஒரு மன்னன் (சிறந்த) பாதுகாப்பைத் தரும் தன் கடமைகளை ஆற்ற முடிந்தவனாகவும், தடுக்கப்பட முடியாதவனாகவும் ஆக முடியும். அவன் புன்னகையுடனே பேச வேண்டும்(38) பிறரால் இனிமையாகப் பேசப்படும் அவன், பிறரிடம் இனிமையாகவே பேச வேண்டும்.(38) அவன், (தனக்குத் தொண்டாற்றுபவர்களிடம்) நன்றியுணர்வுமிக்கவனாகவும், (தன் மரியாதைக்குரியவர்களிடம்) உறுதியான அர்ப்பணிப்புமிக்கவனாகவும், ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டவனாகவும் இருந்து, அவர்களுக்கு உரியதைக் கொடுக்க வேண்டும். பிறரால் பார்க்கப்படும் அவன், அவர்களை மென்மையாகவும், இனிமையாகவும், அழகாகவும் பார்க்க வேண்டும்” {என்றார் பீஷ்மர்}.(39)

அரசனின் இன்றியமையாத்தன்மை! – சாந்திபர்வம் பகுதி – 68-மன்னர்கள் தேவர்களுக்கு இணையாகப் போற்றப்படுவது ஏன் என்று கேட்ட யுதிஷ்டிரன்; ஒரு நாட்டுக்கு மன்னன் ஏன் அவசியம் என்று வசுமனஸுக்குப் பிருஹஸ்பதி சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் ஒரு தேவன் என்று ஏன் பிராமணர்கள் சொன்னார்கள்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் பிருஹஸ்பதிக்கும், வசுமனசுக்கும்[1] இடையில் நடந்த உரையாடல் தென்படுகிறது.(2) வசுமனஸ் என்ற பெயரில், பெரும் நுண்ணறிவு கொண்ட ஒருவன் கோசலத்தின் மன்னனாக இருந்தான். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அவன் பேரறிவைக் கொண்ட பெரும் தவசி பிருஹஸ்பதியிடம் கேள்வி கேட்டான்.(3) பணிவின் தேவைகளை அறிந்தவனும், அனைவரின் நன்மையிலும் அர்ப்பணிப்புள்ளவனுமான மன்னன் வசுமனஸ் உரிய பணிவுடன் அந்தப் பெரும் தவசியை வலம் வந்து, முறையாக அவரை வணங்கி, மனிதர்கள் மகிழ்ச்சி அடைவதற்கான விருப்பத்தால் உந்தப்பட்டு ஒரு நாட்டிற்கு உண்டான விதிகளைக் குறித்து அந்த அறம்சார்ந்த பிருஹஸ்பதியிடம் விசாரித்தான்.(4,5)வசுமனஸ் {பிருஹஸ்பதியிடம்}, “உயிரினங்கள் என்ன வழிமுறைகளில் வளர்கின்றன? அவை எதனால் அழிவை அடைகின்றன? ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, யாரைத் துதித்து அவை நித்திய மகிழ்ச்சியை அடைகின்றன?” என்று கேட்டான்.(6) அளவிலா சக்தி கொண்ட கோசல மன்னனால் இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் ஞானம் கொண்டவருமான பிருஹஸ்பதி, மன்னர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைக் குறித்துப் பொறுமையாக அவனிடம் உரையாடினார்.(7)

பிருஹஸ்பதி {வசுமனஸிடம்}, “ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, மனிதர்கள் அனைவரின் கடமைகளும் மன்னனிடமே தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. மன்னன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவே மனிதர்கள் ஒருவரையொருவர் விழுங்காதிருக்கிறார்கள்.(8) நலந்தரும் கட்டுப்பாடுகளில் உள்ள அலட்சியத்தையும், அனைத்து வகைக் காமங்களையும் தடுத்துத் தன் கடமைகளை நோற்பதின் மூலம் ஒரு மன்னனே பூமியில் அமைதியைக் கொண்டுவருகிறான். இஃதை அடையும் அவன் மகிமையில் ஒளிர்கிறான்.(9) ஓ! மன்னா {வசுமனஸ்}, சூரியனும், சந்திரனும் எழவில்லையெனில் ஒற்றையொன்று காண முடியாமல் முற்றான இருளில் மூழ்கும் உயிரினங்கள் அனைத்தும்,(10) ஆழமில்லாத நீரில் மீன்களும், ஆபத்தில்லாத இடத்தில் பறவைகளும் (ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத்) தங்கள் விருப்பம் போலத் விளையாடித் திரிந்து, மோதி மீண்டும் மீண்டும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டு உறுதியான அழிவை அடைவதைப் போலவே,(12) தங்களைப் பாதுகாக்க எந்த மன்னனும் இல்லாத மனிதர்கள், இடையனின் கண்காணிப்பில்லாத கால்நடை மந்தையைப் போல இருளில் மூழ்கி அழிவையே அடைவார்கள்.(13)

மன்னன் {குடிமக்களைப்} பாதுகாக்கும் தன் கடமையைச் செய்யவில்லையெனில், பலமிக்கவர்கள் பலவீனமானவர்களின் உடைமைகளைப் பலவந்தமாக அபகரிப்பார்கள், பலவீனர்கள் எளிதாக எதையும் கொடுக்கவில்லையெனில் அவர்களின் உயிரையே கூட எடுப்பார்கள்.(14) எவராலும், தன் உடைமைகளில் எதையும், “இஃது எனது” என்று சொல்ல முடியாது. அப்போது மனைவியர், மகன்கள், உணவு, பிற வகை உடைமைகள் ஆகியன {எவனுக்கும்} நிலைக்காது.(15) மன்னன் பாதுகாப்பை அளிக்கவில்லையெனில் அனைத்தும் அழிவுக்குள்ளாகும். மன்னன் பாதுகாக்கவில்லையெனில் பிறருக்குச் சொந்தமான வாகனங்கள், ஆடைகள், ஆபரணங்கள், மதிப்புமிக்கக் கற்கள், பிறவகை உடைமைகள் ஆகியவற்றைத் தீய மனிதர்கள் பலவந்தமாக அபகரிப்பார்கள்.(16) மன்னனின் பாதுகாப்பில்லாத போது, தங்கள் செயல்பாடுகளில் நியாயமாக நடந்து கொள்வோர் மீது பல்வேறு ஆயுதங்கள் பாயும், அநீதியே அனைவராலும் பின்பற்றப்படும்.(17) அரசபாதுகாப்பில்லாத போது, மனிதர்கள் தங்கள் தாய்மாரையும், வயதுமுதிர்ந்த தங்கள் தந்தைமாரையும் கூட அவமதிக்கவோ, அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ செய்வார்கள். ஆசான்கள் விருந்தினர்கள் மற்றும் முதியோரையும் அவமதிக்கவோ, அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ செய்வார்கள்.(18) மன்னன் பாதுகாப்பை வழங்கவில்லையெனில், செல்வமுடைய அனைவரும், மரணம், அடைக்கப்படுதல் {சிறை}, சமய தண்டனை ஆகியவற்றுக்கு உள்ளாக நேரிடும். உடைமை என்ற கருத்தேகூட மறைந்து போகும்.(19) மன்னன் பாதுகாக்கவில்லையெனில், உரிய காலத்திற்கு முன்பே அனைத்தும் அழிவடையும், நாட்டின் ஒவ்வொரு பகுதியும் கள்வர்களால் மேலாதிக்கம் செய்யப்படும் {ஆளப்படும்}, அனைவரும் பயங்கர நரகில் வீழ்வார்கள்.(20)

மன்னன் பாதுகாக்கவில்லையெனில், திருமணம், கலவி குறித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் (இரத்த உறவு மற்றும் பிற வகை உறவுகள் ஆகியவற்றின் மூலம்) இல்லாமல் போகும்[2]. உழவு, வணிகம் ஆகியன அனைத்தும் குழப்பத்தில் வீழும்; அறநெறி தாழ்ந்து தொலைந்து போகும்; மூன்று வேதங்களும் மறைந்துவிடும்.(21) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் செய்யவில்லையெனில், அதற்கு மேலும் விதிப்படி காணிக்கைகள் அளித்து முறையாக நிறைவு செய்யப்படும் வேள்விகள் ஏதும் நடைபெறாது; திருமணங்கள் நடைபெறாது; சமூகம் என்பதே இல்லாமல் போகும்.(22) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் செய்யவில்லையெனில், காளைகள் பசுக்களை அணையாது, பால்சட்டிகளும் கடையப்படாது. பசு வளர்ப்பில் வாழும் மனிதர்கள் அழிவை அடைவார்கள்.(23) அரச பாதுகாப்பு இல்லாதபோது, அச்சமும் கவலையும் அடையும் அனைவரும், உணர்வையிழந்தவர்களாகத் துன்ப ஓலமிட்டுக் குறைந்த காலத்திலேயே அழிவை அடைவார்கள்.(24) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் செய்யவில்லையெனில், விதிப்படி கொடைகள் அளித்து, ஒரு வருடம் நீளும் வேள்விகள் ஏதும் நிறைவுபெறாது.(25)அரச பாதுகாப்பு இல்லாதபோது, பிராமணர்கள் ஒருபோதும் நான்கு வேதங்களையும் படிக்கவோ, தவங்கள் செய்யவோ, அறிவால் தூய்மையடையவோ, கடும் நோன்புகளை நோற்கவோ மாட்டார்கள்.(26) அரச பாதுகாப்பு இல்லாதபோது, பிராமணனைக் கொன்ற குற்றம் செய்த கொலையாளியைக் கொன்றவன் எந்த வெகுமதியையும் அடைய மாட்டான்; மறுபுறம், பிராமணக்கொலை செய்த குற்றவாளி, முற்றான சட்ட விலக்களிப்பை அனுபவிப்பான்.(27) அரச பாதுகாப்பு இல்லாதபோது, அடுத்தவர் செல்வத்தை அவர்களது கரங்களிலிருந்தே மனிதர்கள் பிடுங்குவார்கள், மேலும் நலம்சார்ந்த கட்டுபாட்டுகள் துடைத்தெறியப்படும், அச்சமடையும் அனைவரும் தப்பி ஓடுவதிலேயே பாதுகாப்பைத் தேடுவார்கள்.(28) அரச பாதுகாப்பு இல்லாதபோது, அனைத்து வகை அநீதிகளும் நடக்கும்; வர்ணக்கலப்பு ஏற்படும்; பஞ்சம் நாட்டைச் சூறையாடும்.(9) அரச பாதுகாப்பின் விளைவால், மனிதர்கள் தங்கள் வீடுகளில் வாயிற்கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டே அச்சமில்லாமல் எங்கும் உறங்கலாம்.(30)

மன்னன் நீதியுடன் பூமியைப் பாதுகாக்கவில்லையெனில், உண்மையாக வலிந்து தாக்குவதைவிடச் சற்றே குறைந்ததான பிறரின் தீய பேச்சை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது[3].(31) மன்னன் பாதுகாப்பை வழங்கும் தன் கடமையைச் செய்தால், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெண்டிர், தங்களைக் கவனித்துக் கொள்ள எந்த ஆண் உறவினர்களும் இன்றி அச்சமில்லாமல் எங்கும் திரிய முடியும்.(32) மன்னன் பாதுகாப்பை வழங்கும் தன் கடமையைச் செய்வதால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் தீங்கிழைக்காமல் ஒருவருக்கொருவர் தொண்டுகளைச் செய்யும் நல்லோராக ஆவார்கள்.(33) அரச பாதுகாப்பின் விளைவால், மூன்று வகையைச் சேர்ந்தோரும், உயர்வான வேள்விகளைச் செய்து, கவனமாகக் கல்வி கற்க தங்களை அர்ப்பணிப்பார்கள்.(34) உழவையும், வணிகத்தையும் சார்ந்திருக்கும் உலகம், வேதங்களால் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இவை அனைத்தும் தன் முக்கியக் கடமையை முறையாகச் செய்யும் மன்னனாலேயே பாதுகாக்கப்படுகின்றன.(35)மன்னன் கடுங்கனத்தைத் தானே ஏற்றுக் கொண்டு, தன் வலிமைமிக்கப் படையின் உதவியைக் கொண்டு தன் குடிமக்களைப் பாதுகாப்பதாலேயே, மக்களால் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.(36) எவனுடைய இருப்பில் மக்கள் இருப்பார்களோ, எவனுடைய அழிவில் மக்கள் அழிவார்களோ, அவனை எவன்தான் வழிபடமாட்டான்?(37) மன்னனுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் எவன் செய்கிறானோ, அனைத்து வர்க்கத்தினருக்கும் அச்சத்தைக்கொடுக்கும் அரசகடமைகளை எவன் சுமக்கிறானோ {அவற்றில் பங்கு கொள்கிறானோ} அவன் இம்மையையும், மறுமையையும் வெல்கிறான்[4].(38) மன்னனுக்குத் தீங்கிழைக்க எந்த மனிதன் நினைக்கிறானோ, அவன் ஐயமில்லாமல் இம்மையில் துன்பத்தை அடைந்து, மறுமையில் நரகத்தை அடைகிறான்.(39) மன்னன் உண்மையில் மனித வடிவில் உள்ள உயர்ந்த தெய்வீகத்தன்மை கொண்டவன் என்பதால், அவனை {மன்னனை} ஒரு மனிதன்தானே என்று நினைத்து அலட்சியம் செய்யக்கூடாது.(40)மன்னன், ஐந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஐந்து வெவ்வேறு வடிவங்களை ஏற்கிறான். அவன் {மன்னன்} அக்னி, ஆதித்யன், மிருத்யு, வைஸ்ரவணன் {குபேரன்}, யமன் ஆகிய வடிவங்களை ஏற்கிறான்.(41) மன்னன் பொய்மையால் வஞ்சிக்கப்பட்டு, தன் முன்னால் இருக்கும் பாவம் நிறைந்த குற்றவாளிகளைத் தன் கடும் சக்தியால் எரிக்கும்போது, அவன் அக்னியின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(42) அவனே தன் ஒற்றர்களின் மூலம் மனிதர்கள் அனைவரின் செயல்பாடுகளைக் கண்காணித்து, பொது நன்மைக்காக எதையும் செய்யும் போது, ஆதித்யனின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(43) அவன், தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் ஆகியோருடன் நூற்றுகணக்கான தீய மனிதர்களைக் கோபத்துடன் அழிக்கும்போது, மிருத்யுவின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(44) அவன், கடுந்தண்டனைகளால் தீயோரைத் தண்டித்து, வெகுமதிகள் கொடுப்பதன் மூலம் நல்லோரை ஆதரிக்கும்போது, யமனின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(45) அவன், தனக்கு மதிப்புமிக்கத் தொண்டாற்றியவர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைக் கொடையளித்து, தனக்குக் குற்றமிழைத்தோரிடம் இருந்து செல்வத்தையும், மதிப்புமிக்கக் கற்களையும் பறிக்கும்போது,(46) ஓ! மன்னா {வசுமனஸ்}, உண்மையில் அவன், சிலருக்குச் செழிப்பை அளித்து, வேறு சிலரிடம் இருந்து அவற்றைப் பறிக்கும்போது, பூமியில் குபேரனின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(47)

புத்திசாலித்தனம் உள்ள எவனும், செயல்படவல்ல எவனும், அறமீட்ட விரும்பும் எவனும், தீயவற்றிலிருந்து விடுபட்ட எவனும் மன்னனைக் குறித்த தீய செய்திகளைப் பரப்பக்கூடாது. மன்னனுக்கு எதிராகச் செயல்படும் எந்த மனிதனும் மகிழ்ச்சியை அடைய முடியாது,(48) அவன் மன்னனின் மகனாகவோ, சகோதரனாகவோ, தோழனாகவோ, தன்னைப்போலவே மன்னன் என்று எண்ணும் எவனுமாகவோ இருப்பினும் {மன்னனுக்கு எதிராகச் செயல்பட்டு} மகிழ்ச்சியை அடைய முடியாது. நெருப்பு கூட, தன்னைத் தூண்டப் பயன்படும் காற்றால் (எரியத்தக்க பொருட்களுக்கு மத்தியில்) சுடர்விட்டு எரிந்து எதையாவது எச்சமாக விடும்[5].(49) மன்னனின் கோபம், அதைத் தூண்டும் மனிதனிடம் எதையும் எஞ்ச விடாது. மன்னனுக்குச் சொந்தமான யாவும் தொலைவிலேயே தவிர்க்கப்பட வேண்டும்[6].(50)ஒருவன் மரணத்திலிருந்து விலகுவதைப் போலவே மன்னனுக்கு உரியவற்றில் இருந்து விலக வேண்டும். மன்னனுக்கு உரியதை அடைய விரும்பும் மனிதன், நஞ்சைத் தீண்டும் {விஷச்செடியை உண்ட} மானைப் போல விரைவாக அழிவை அடைகிறான்.(51) நுண்ணறிவு கொண்ட மனிதன், மன்னனுக்கு உரியவற்றைத் தனக்குரியவை போலவே பாதுகாக்க வேண்டும்.(52) மன்னனுக்கு உரிய செல்வத்தை அடைய விரும்புவோர், நித்திய இருள் மற்றும் புகழ்க்கேடு எனும் ஆழ்ந்த நரகில் உணர்வற்றவர்களாக மூழ்குவார்கள்.(53) மக்களைத் திளைக்கச் செய்பவன், மகிழ்ச்சியை அளிப்பவன், வளவன் {செழிப்பைக் கொண்டவன்}, அனைவரிலும் முதன்மையானவன், காயங்களை ஆற்றுபவன், பூமியின் தலைவன், மனிதர்களின் பாதுகாவலன் என்ற சொற்களால் துதிக்கப்படும் மன்னனை வழிபடாதவன் எவன் இருக்கிறான்?(54) எனவே, தன் செழிப்பை விரும்புபவனும், நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்றுபவனும், தன் ஆன்மாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவனும், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்தி அவற்றுக்குத் தலைவனாக இருப்பவனும், நுண்ணறிவு மற்றும் நினைவுத்திறனைக் கொண்டவனும், (வணிகப் பரிவர்த்தனையில்) புத்திசாலித்தனமிக்கவனுமான ஒரு மனிதன், எப்போதும் மன்னனிடம் பற்றோடு இருக்க வேண்டும்.(55)

நன்றியுணர்வுமிக்கவனும், ஞானம் கொண்டவனும், தாராள மனம் கொண்டவனும், பற்றுறுதிமிக்கவனும், தன்புலன்களைக் கட்டுப்படுத்தி அவற்றை ஆள்பவனும், அறம்சார்ந்தவனும், கொள்கைத் தீர்மானங்களை நோற்பனுமான ஓர் அமைச்சனை மன்னன் முறையாகக் கௌரவிக்க வேண்டும்.(56) தன் செயல்களில் பற்றுறுதிமிக்கவனும், நன்றியுணர்வுமிக்கவனும், அறம்சார்ந்தவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், துணிச்சல்மிக்கவனும், பெருந்தன்மை கொண்டவனும், பிறரின் உதவியேதுமின்றிப் பணிகளை நிறைவேற்றவல்லவனுமான ஒரு மனிதனை மன்னன் எப்போதும் ஊக்கப்படுத்த வேண்டும்.(57) அறிவு மனிதர்களைச் செருக்கடையச் செய்கிறது. மன்னன், மனிதர்களைப் பணிவடையச் செய்கிறான். மன்னனால் பீடிக்கப்படும் மனிதனால் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைய முடியாது. மறுபுறம், மன்னனால் ஆதரிக்கப்படும் மனிதன் மகிழ்ச்சியாகவே இருப்பான்.(58) மன்னனே தன் மக்களின் இதயமாக இருக்கிறான்; அவனே அவர்களது பெரும்புகலிடமாக இருக்கிறான்; அவனே அவர்களது மகிமையாக இருக்கிறான்; அவனே அவர்களது உயர்ந்த மகிழ்ச்சியாகவும் இருக்கிறான். ஓ! ஏகாதிபதி {வசுமனஸ்}, மன்னிடம் பற்றுடன் இருப்போர் இம்மையையும், மறுமையையும் வெல்கிறார்கள்.(59) தற்கட்டுப்பாடு, உண்மை, நட்பு, பெரும் வேள்விகளில் தேவர்களைத் துதிப்பது ஆகிய பண்புகளின் உதவியுடன் பூமியை ஆளும் மன்னன், பெரும் மகிமையை ஈட்டி, சொர்க்கத்தில் ஓர் அழிவில்லா வசிப்பிடத்தையும் அடைகிறான்” என்றார் {பிருஹஸ்பதி}.(60)

ஏகாதிபதிகளில் சிறந்தவனும், கோசலத்தின் ஆட்சியாளனுமான வீர வசுமனஸ், அங்கிரசின் மகனான பிருஹஸ்பதியால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டு, அதுமுதல் தன் குடிமக்களை {கவனத்துடன்} பாதுகாக்கத் தொடங்கினான்” என்றார் {பீஷ்மர்}.(61)

அரசாட்சி முறை! – சாந்திபர்வம் பகுதி – 69-மன்னர்களுக்கான குறிப்பிட்ட கடமைகள்; பலமிக்க ஏகாதிபதி ஒருவன் தன் நாட்டின் மீது படையெடுத்து வரும்போது அதைத் தடுப்பதற்கு ஒரு மன்னன் ஆற்ற வேண்டிய கடமைகள்; கோட்டை பாதுகாப்பு; ஆறு குண்யங்களும், மூன்று வர்க்கங்களும்; நான்கு யுகங்களை உண்டாக்கும் மன்னனின் செயல்கள்; தண்ட நீதியின் அருள்நிலை…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மன்னன் வெளிப்படுத்த வேண்டிய வேறு சிறப்புக் கடமைகள் என்னென்ன? அவன் தன் நாட்டை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? எவ்வாறு தன் எதிரிகளை அடக்க வேண்டும்?(1) அவன் எவ்வாறு தன் ஒற்றர்களை நியமிக்க வேண்டும்? ஓ! பாரதரே {பீஷ்மரே}, தன் நால்வகைக் குடிமக்கள், தன் பணியாட்கள், மனைவியர் மற்றும் மகன்கள் ஆகியோருக்கு அவன் எவ்வாறு நம்பிக்கையளிக்க வேண்டும்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னர்களின் பல்வேறு கடமைகளையும், மன்னன், அல்லது மன்னனின் நிலையில் உள்ள ஒருவன் முதலில் செய்ய வேண்டிய செயல்களையும் கவனமாகக் கேட்பாயாக.(3) மன்னன் முதலில் தன்னையே அடக்க வேண்டும், அதன் பிறகே அவன் தன் எதிரிகளை அடக்க முயல வேண்டும். தன்னையே வெல்ல முடியாத ஒரு மன்னனால் தன் எதிரிகளை எவ்வாறு வெல்ல முடியும்?(4) ஐந்து திரட்டுகளை {புலன்களை} வெல்வதே தன்னை வெல்வதாகக் கருதப்படுகிறது. தன் புலன்களை அடக்குவதில் வெல்லும் மன்னனே தன் எதிரிகளை ஒடுக்கத் தகுந்தவனாகிறான்.(5)

ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அவன், தனது கோட்டைகள், எல்லைப்புறங்கள், பூங்காக்கள் {உபவனங்கள்}, இன்ப நந்தவனங்கள் {உத்யானவனங்கள்} மற்றும் தான் செல்லும் இடங்கள் அனைத்திலும், தன் சொந்த அரண்மனைக்குள்ளும் காலாட்படையினரை நிறுத்த வேண்டும்.(6,7) அவன், முட்டாள்களைப் போலத் தெரிபவர்களையோ, குருடர்கள், செவிடர்களைப் போலத் தெரிபவர்களையோ தன் ஒற்றர்களாக நியமிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் (அவர்களது திறன்களைப் பொறுத்தவரையில்) நன்கு சோதிக்கப்பட்டவர்களாகவும், ஞானம் கொண்டவர்களாகவும், பசி தாகம் ஆகியவற்றைப் பொறுத்துக் கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.(8) மன்னன், தன் நகரத்திலும், மாகாணங்களிலும், தனக்குக் கீழுள்ள தலைவர்களின் ஆட்சிப்பகுதிகளிலும் தன் அமைச்சர்கள், நண்பர்கள் மற்றும் மகன்கள் ஆகியோர் அனைவரிடமும் உரிய கவனத்துடன் ஒற்றர்களை நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுவப்படும் ஒற்றர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அறியக்கூடாது.(9,10)

ஓ! பாரதர்களின் காளையே {யுதிஷ்டிரனே}, மேலும் அவன் தன் எதிரிகளின் ஒற்றர்களை அறிந்து கொள்வதற்காக, கடைகளிலும், கேளிக்கை இடங்களிலும், மக்கள் கூடி பேசும் இடங்களிலும், பிச்சைக்காரர்கள் மத்தியிலும்,(11) தனது இன்ப நந்தவனங்கள், பூங்காக்கள், கூட்டங்கள், கல்விமான்களின் சபைகள், நாடு, பொது இடங்கள், தன் சபைகள் இருக்கும் இடங்கள், குடிமக்கள் இல்லங்கள் ஆகியவற்றிலும் தன் ஒற்றர்களை நிறுவ வேண்டும்.(12) நுண்ணறிவு கொண்ட மன்னன், இவ்வாறே தன் எதிரிகளால் அனுப்பப்படும் ஒற்றர்களை உறுதிசெய்து கொள்ள வேண்டும். ஓ! பாண்டுவின் மகனே, இவற்றை அறிவதன் மூலம் ஒரு மன்னன் பெரும் நன்மையை அடைவான்.(13) ஒரு மன்னன், தன் ஆய்வின் மூலம் தான் பலவீனமாக இருப்பதை அறிந்தால், அவன் தன் அமைச்சர்களுடன் ஆலோசித்துப் பலமிக்க எதிரியுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(14) ஞானமுள்ள மன்னன், தான் பலவீனமாக இல்லை என்பதை அறிந்தாலும், எந்த நன்மையாவது விளையுமென்றால் ஓர் எதிரியுடன் விரைவாக அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(15)

தன் நாட்டை நீதியுடன் பாதுகாப்பதில் ஈடுபடும் மன்னன், அனைத்து சாதனைகளையும் கொண்டோர், பெரும் முயற்சி கொண்டோர், அறம்சார்ந்தோர் மற்றும் நேர்மையானோருடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(16) ஒரு மன்னனுக்கு, ஆபத்து மற்றும் நேரப்போகும் அழிவு ஆகியவற்றால் அச்சமுண்டானால், அவன் முன்பு புறக்கணித்து வந்த குற்றவாளிகள் மற்றும் மக்களால் சுட்டிக்காட்டப்படும் அத்தகு மனிதர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும்.(17) எவனால் தனக்கு நன்மையோ, தீங்கையோ செய்ய முடியாதோ, துயரில் இருந்து தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாதா அந்த மனிதனிடம் மன்னன் செய்வதற்கு ஒன்றுமில்லை.(18) படை நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், தன் சொந்த பலத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு மன்னன், முதலில் தன் சொந்த தலைநகரத்தின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, பெரும்படைக்குத் தலைமையேற்று, தன் இலக்கை அறிவிக்காமல் {எதிரிகளுக்கு முன்னறிவிக்காமல்}, கூட்டாளிகளும் நண்பர்களும் அற்ற ஒருவனையோ, ஏற்கனவே வேறொருவனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் அல்லது (வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆபத்தைக் குறித்து) கவனமில்லாமல் இருக்கும் ஒருவனையோ, தன்னைவிடப் பலவீனமான ஒருவனையோ எதிர்த்து அணிவகுத்துச் செல்வதற்கு உற்சாகத்துடனும், துணிவுடனும் {தன் படைக்கு} ஆணையிட வேண்டும்.(19,20)

ஒரு மன்னன், ஒருபோதும் பேராற்றல் கொண்ட வேறொருவனுக்கு அடங்கி வாழக்கூடாது. அவன், பலவீனமானவனாக இருப்பினும், பலவானைப் பீடிக்க முனையும் தீர்மானத்துடன் தன் ஆட்சியைத் தொடர வேண்டும்.(21) அவன் பலமிக்க ஒருவனின் நாட்டை ஆயுதங்கள், நெருப்பு, நஞ்சூட்டல் ஆகிய வழிமுறைகளின் மூலம் பீடிக்க வேண்டும். மேலும் அவன், அவனுடைய {எதிரியுடைய} அமைச்சர்கள் மற்றும் பணியாட்களிடம் கருத்து வேறுபாடுகளை உண்டாக்க வேண்டும்.(22) நுண்ணறிவைக் கொண்ட ஒரு மன்னன் ஆட்சிப் பகுதிகளை அடைவதற்கான போரை எப்போதும் தவிர்க்க வேண்டும் என்று பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார். (சமரசப் பேச்சு {சாமம்}, கொடை {தானம்}, ஒற்றுமையின்மை {பேதம்} ஆகிய) நன்கறியப்பட்ட மூன்று வழிமுறைகளின் மூலமே ஆட்சிப்பகுதி அடையப்பட வேண்டும்.(23) ஞானம் கொண்ட மன்னன், சமரசப் பேச்சு {சாமம்}, கொடை {தானம்}, ஒற்றுமையின்மை {பேதம்} ஆகிய வழிமுறைகளின் மூலம் அடையப்பட்டவற்றிலேயே நிறைவடைய வேண்டும்.(24)

ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, மன்னன் தன் குடிமக்களின் பாதுகாப்பிற்கான செலவுகளைச் சந்திக்க, அவர்களது வருவாயில் இருந்து ஆறில் ஒரு பங்கைக் கப்பமாக {வரியாகப்} பெற வேண்டும்.(25) அவன் தன் குடிமக்களைப் பாதுகாப்பதற்காக, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள பத்து வகைக் குற்றவாளிகளிடமிருந்து, (அவ்வழக்கின் தேவைக்கேற்ப) அதிகமாகவோ, சிறிதாகவோ செல்வத்தைப் பலவந்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.(26) ஒரு மன்னன் நிச்சயம் தன் குடிமக்களைத் தன் சொந்த பிள்ளைகளைப் போலவே பார்க்க வேண்டும். எனினும், அவர்களுக்குள் உண்டாகும் சச்சரவுகளைத் தீர்மானிப்பதில் அவன் கருணைகாட்டக்கூடாது.(27) நீதியை முறையாக நிர்வகிப்பதைச் சார்ந்துதான் உண்மையில் ஒரு நாடு இருக்க வேண்டும் என்பதால், புகார்களையும், நீதிவழக்குகளில் வழக்கைத் தொடுப்பவர்களின் பதில்களையும் கேட்பதற்காக உலகக் காரியங்களின் ஞானம் கொண்டோரையே ஒரு மன்னன் நியமிக்க வேண்டும்.(28) ஒரு மன்னன், தன் சுரங்கங்கள், உப்பளம், தானியம், படகுத்துறை, யானைக் கூடங்கள் ஆகியவற்றில் நம்பிக்கைக்குரிய நேர்மையான மனிதர்களை நிறுவ வேண்டும்.(29) தகுதியுடன் செங்கோலை {தண்டனை வழங்கும் கோல்} எப்போதும் ஏந்தும் மன்னன் பெரும் தகுதியை ஈட்டுகிறான். தண்டனையை முறையாக ஒழுங்கு செய்வதே மன்னர்களின் உயரிய கடமையும், பெரும் பாராட்டுக்குரிய செயலும் ஆகும்.(30)

ஒரு மன்னன், வேதங்களையும், அதன் அங்கங்களையும் அறிந்தவனாகவும், ஞானம் கொண்டவனாகவும், தவங்களில் ஈடுபடுபவனாகவும், ஈகையாளனாகவும், வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.(31) இந்தப் பண்புகள் யாவும் எப்போதும் மன்னனிடம் குடியிருக்க வேண்டும். மன்னன் நீதியை நிர்வகிப்பதில் தவறினால் அவன் சொர்க்கத்தையோ, புகழையோ அடைய முடியாது.(32) ஒரு மன்னன், நுண்ணறிவுமிக்க மற்றொரு பலவானால் பீடிக்கப்பட்டால், அவன் கோட்டையையே புகலிடமாக நாட வேண்டும்.(33) அவன், தன் நண்பர்களை ஆலோசனைக்காகத் திரட்டி உரிய வழிமுறைகளைத் திட்டமிட வேண்டும். அமைதிக்கொள்கையைப் {சாமத்தைப்} பின்பற்றியும், மன வேறுபாடுகளை {பேதத்தை} உண்டாக்கியும் அவன் தன் எதிராளியை எதிர்த்துப் போர் தொடுக்கும் வழிமுறைகளைத் திட்டமிட வேண்டும்.(34) அவன் காட்டுவாசிகளை நெடுஞ்சாலைகளில் நியமிக்க வேண்டும். தேவையேற்பட்டால், மொத்த கிராமங்களையே அகற்றி, கிராமவாசிகள் அனைவரையும் சிறு நகரங்களுக்கோ, பெருநகரங்களின் புறநகர்களுக்கோ மாற்ற வேண்டும்.(35)

அவன் {மன்னன்}, செழிப்புமிக்கத் தன் குடிமக்களுக்கும், படையின் முக்கிய அதிகாரிகளுக்கும் மீண்டும் மீண்டும் உறுதிகூறி, வெளிப்படையாக நாட்டில் வசித்துக் கொண்டிருந்த அவர்களை நன்கு பாதுகாக்கப்பட்ட கோட்டைகளுக்குள் புகலிடம் கொள்ளச் செய்ய வேண்டும்.(36) (திறந்த நாட்டில் இருந்து தன் கோட்டைகளுக்குள்) தானியங்கள் அனைத்தையும் அவன் கொண்டுவரச் செய்ய வேண்டும். அஃது இயலாமல் போனால் அவன் அவற்றை நெருப்பின் மூலம் முழுமையாக அழிக்க வேண்டும்.(37) மேலும் அவன், (எதிரியின் குடிமக்களிடையே ஒற்றுமையின்மையை உண்டாக்கி) எதிரியின் வயல்களில் உள்ள பயிர்களை அழிக்க மனிதர்களை நிறுவ வேண்டும். இதைச் செய்யத் தவறினால், அவன் தன் துருப்புகளின் மூலமே அந்தப் பயிர்களை அழிக்க வேண்டும்.(38) அவன் தன் நாட்டில் உள்ள ஆறுகளில் மேலுள்ள பாலங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும். தன் ஆட்சிப்பகுதிகளுக்குள் உள்ள குளங்கள் அனைத்திலும் உள்ள நீரை அவன் வெளியேற்ற வேண்டும். அல்லது, வெளியேற்ற முடியாவிட்டால் அவற்றில் நஞ்சைக் கலக்கச் செய்ய வேண்டும்.(39) அவன், தன் நண்பர்களைக் காக்கும் கடமையைக் கருதிப் பாராமல், நிகழ்கால மற்றும் எதிர்காலச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு எதிரியின் எதிரியாகவோ, போர்க்களத்தில் தன் எதிரியை எதிர்கொள்ளத் தகுந்தவனாகவோ இருக்கும் மற்றொரு நாட்டின் ஆட்சியாளனுடைய பாதுகாப்பை நாட வேண்டும்[1].(40)அவன் தன் நாட்டிலுள்ள சிறு கோட்டைகள் அனைத்தையும் அழித்துவிட வேண்டும். சைத்யம்[2] என்றழைக்கப்படும் மரங்களைத் தவிர்த்து சிறு மரங்கள் அனைத்தையும் அவன் வெட்டிவிட வேண்டும்.(41) பெரும் மரங்களின் கிளைகள் அனைத்தையும் அவன் வெட்டிவிட வேண்டும். ஆனால் சைத்தியம் என்றழைக்கப்படும் மரங்களின் இலைகளைக் கூடத் தொடக்கூடாது.(42) தன் கோட்டைகளில் பதுங்கு துளைகளைச்[3] {பிரகண்டிகள், ஆகாசஜநநி} செய்து வெளிப்புற மதில்களை எழுப்ப வேண்டும். அகழிகளின் அடியில் கூரிய சூலங்கள் நிறுவி அவற்றை நீரால் நிறைத்து, அதில் முதலைகளையும், சுறாக்களையும் விட வேண்டும்.(43) அவன் தன் கோட்டையிலிருந்து {பதுங்கி} பாய்வதற்கு ஏதுவாகச் சுவர்களில் சிறு திறப்புகளை {புடைவாயில், கள்ளவழி} வைத்து[4], பெரிய வாயில்களைப் பாதுகாப்பதைப் போல அவற்றையும் பாதுகாக்க தக்க ஏற்பாடுகளைக் கவனமாகச் செய்ய வேண்டும்.(44) அனைத்து வாயில்களிலும் {சிறு திறப்புகளிலும்} அவன் அழிவைத்தரவல்ல இயந்திரங்களை நிறுவ வேண்டும். (தன் கோட்டைகளின்) மதில்களில் அவன் சதக்னிகளையும், பிற ஆயுதங்களையும் நிறுவ வேண்டும்[5].(45)அவன் எரிபொருள் தேவைக்காக விறகைச் சேர்த்து வைக்க வேண்டும் மேலும் கோட்டைக் காவற்படைக்குத் தேவையான நீருக்காகக் கிணறுகளைத் தோண்டவும், சீராக்கவும் வேண்டும்.(46) புல் மற்றும் வைக்கோலால் வேயப்பட்ட வீடுகள் அனைத்தையும் அவன் சேற்றினால் பூச வேண்டும். மேலும், கோடை மாதமாக {சித்திரை, வைகாசி மாதங்களாக} இருந்தால், நெருப்பின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகப் புற்கள் மற்றும் வைக்கோற்கிடங்குகளை (வேறு பாதுகாப்பான இடங்களுக்கு) மாற்ற வேண்டும்.(47) உணவு அனைத்தையும் இரவில் சமைக்குமாறு அவன் ஆணையிட வேண்டும். தினமும் செய்யப்படும் ஹோமத்தையன்றி பகலில் வேறு எதற்காகவும் நெருப்பு மூட்டப்படக்கூடாது.(48) உலோகப் பட்டறைகள் {கொல்லர் பட்டறைகள்}, பிள்ளைப்பேற்றுக்கான அறைகள் ஆகியவற்றில் நெருப்பு தொடர்பாகக் குறிப்பிட்ட கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்குள் வைக்கப்படும் நெருப்புகள் மிகக் கவனமாக மறைக்கப்பட வேண்டும்.(49) நகரத்தைத் திறனுடன் பாதுகாப்பதற்காக, பகலில் நெருப்பு மூட்டும் மனிதர்களுக்குப் பொருத்தமான தண்டனைகளை அறிவிக்க வேண்டும்.(50)

அத்தகு {போர்க்} காலங்களில், பிச்சைக்காரர்கள், வண்டிக்காரர்கள், அலிகள், பைத்தியக்காரர்கள், ஊமைகள் ஆகியோர் நகரத்தைவிட்டே விரட்டப்பட வேண்டும். அவர்கள் அனுமதிக்கப்பட்டால் தீமையே பின்தொடர்ந்து வரும்.(51) பொது இடங்கள், தீர்த்தங்கள்[6], சபைகள், {குறிப்பிட்ட சில} குடிமக்களின் வீடுகள் ஆகியவற்றில் மன்னன் தகுந்த ஒற்றர்களை நிறுவ வேண்டும்.(52) மன்னன் அகன்ற சாலைகளை உண்டாக்கி, கடைகளையும், உகந்த இடங்களில் நீர் விநியோகத்திற்கான நிலைகளையும் திறக்க வேண்டும்.(53) ஓ! யுதிஷ்டிரா, (தேவையான பல்வேறு பொருட்களுக்கான) கிடங்குகள், ஆயுதக்கிடங்குகள், முகாம்கள், படைவீரர்கள் இருக்கும் இடங்கள், குதிரை மற்றும் யானை கொட்டில்கள், படைவீரர்களின் முகாம்கள்,(54) அகழிகள், வீதிகள், கிளைவீதிகள், வீடுகள், ஓய்வு மற்றும் இன்பத்திற்கான நந்தவனங்கள் ஆகியவற்றைப் பிறர் {எதிரிகள்} அறியாவண்ணம் இருக்குமாறு செய்ய வேண்டும்.(55)பகைவரின் படையால் பீடிக்கப்படும் மன்னன், செல்வத்தைத் திரட்ட வேண்டும். மேலும் அவன் எண்ணெய், தேன், தெளிந்த நெய், அனைத்து வகை மருந்துகள்,(56) கரி, முஞ்சா புல், இலைகள், கணைகள், எழுத்தர்கள், வரைகலைஞர்கள், புற்கள், விறகுகள், நஞ்சூட்டப்பட்ட கணைகள்,(57) ஈட்டிகள் போன்ற அனைத்து வகை ஆயுதங்கள், வாள்கள், வேல்கள், மற்றும் பிறவற்றையும் திரட்ட வேண்டும். ஒரு மன்னன் எப்போதும் அவ்வகைப் பொருட்களைச் சேர்க்க வேண்டும்.(58) அதிலும் குறிப்பாக அவன் அனைத்து வகை மருந்துகள், கிழங்குகள், கனிகள் ஆகியவற்றையும், நால்வகை மருத்துவர்கள்,(59) நடிகர்கள், ஆடற்கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள், பல்வேறு வேடங்களை ஏற்கவல்ல மனிதர்கள் ஆகியோரையும் வைத்துக் கொள்ள வேண்டும். அவன் தன் தலைநகரை அலங்கரித்துத் தன் குடிமக்கள் அனைவரையும் மகிழ்ச்சியா வைத்திருக்க வேண்டும்.(60)

மன்னனுக்கு எவரிடம் அச்சமுள்ளதோ, அவர்கள் தன் பணியாட்களாகவோ, அமைச்சர்களாகவோ, குடிமக்களாகவோ, அக்கம்பக்கத்து ஏகாதிபதிகளாகவோ இருப்பினும் அவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் அவன் காலந்தாழ்த்தக்கூடாது.(61) மன்னனின் எந்தப் பணி நிறைவடைந்தாலும், அவன் அதன் நிறைவுக்கு உதவியவர்களுக்குச் செல்வம், விகிதப்படியான பிற கொடைகள் மற்றும் நன்றிநிறைந்த பேச்சுகள் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.(62) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, ஒரு மன்னன் தன் எதிரியைத் தவிடுபொடியாக்கும்போதோ, அவனை ஒரேயடியாகக் கொல்லும்போதோ அவன் தனது கடனையே அடைக்கிறான்[7] என்று சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளன.(63) ஒரு மன்னன் ஏழு காரியங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நான் அதைச் சொல்கிறேன் கேட்பாயாக. அவை தனது சுயம், தனது அமைச்சர்கள், கருவூலம், தண்டனை அளிக்கும் அமைப்பு, நண்பர்கள், மாகாணங்கள் மற்றும் தலைநகரம் ஆகியவையாகும். இந்த ஏழு அங்கங்களைக் கொண்ட தன் நாட்டை அவன் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.(64,65)

ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, ஆறு குண்யங்களையும் {ஷாட்குண்யத்தையும்}, மூன்று வர்க்கங்களையும் {த்ரிவர்க்கத்தையும்}, மூன்று வர்க்கங்களிலும் உயர்ந்ததையும் அறிந்த மன்னன் மொத்த பூமியின் அரசாட்சியை வெல்வான்.(66) ஓ! யுதிஷ்டிரா, ஆறு குண்யங்கள் என்றழைக்கப்படுவதைக் குறித்துக் கேட்பாயாக. அவை, (எதிரியுடன் ஏற்படுத்திக் கொண்ட) ஒப்பந்தத் தீர்மானத்தின்படி அமைதியாக ஆட்சி செய்வது, போரிட அணிவகுத்துச் செல்வது, எதிரிக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை விளைவிப்பது, (67) எதிரியை அச்சமடையச் செய்வதற்குப் படைகளைக் குவிப்பது, அமைதிக்குத் தயாராகப் போருக்கு ஆயத்தமாதல், பிறருடனான கூட்டணிகள் ஆகியனவே ஆகும்.(68) இப்போது மூன்று வர்க்கங்கள் என்றழைக்கப்படுவனவற்றைக் கவனமாகக் கேட்பாயாக. அவை குறை, இருப்பதைப் பாதுகாப்பது, வளர்ச்சி ஆகியவையாகும். இம்மூன்றின் உயர்ந்த திரள்கள், அறம், பொருள் மற்றும் இன்பமாகும். இவை நீதியுடன் பின்பற்றப்பட வேண்டும். அறத்தின் துணையால் ஒரு மன்னன் பூமியை எப்போதும் ஆள்வதில் வெல்வான்.(70)

இது தொடர்பாக அங்கிரசின் மகனான பிருஹஸ்பதி இரண்டு வரிகளைப் பாடியிருக்கிறார். ஓ! தேவகியின் மகனே {கிருஷ்ணா}, அவற்றைக் கேட்பதே உனக்குத் தகும்.(71) ’ஒரு மன்னன், தன் கடமைகள் அனைத்தையும் செய்து, பூமியைப் பாதுகாத்து, தன் நகரங்களையும் பாதுகாப்பதால் சொர்க்கத்தில் பெரும் மகிழ்ச்சியை அடைகிறான்.(72) அவனுக்குத் தவங்களால் ஆவதென்ன? தன் மக்களை முறையாகப் பாதுகாப்பவனுக்கு வேள்விகளால் ஆகப்போவதென்ன? அத்தகு மன்னன் அறங்கள் அனைத்தையும் அறிந்தவனாகக் கருதப்பட வேண்டும்’ {என்பதே பிருஹஸ்பதியின் அவ்விரண்டு வரிகள்}” என்றார் {பீஷ்மர்}.(73)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தண்டனை அறிவியலும் {தண்டநீதியும்}, மன்னன் மற்றும் குடிமக்களும் இருக்கின்றனர். ஓ! பாட்டா {பீஷ்மரே}, இவற்றில் ஒன்றால் பிறரிடம் இருந்து அடையப்படும் பயன் யாது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(74)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பாரதா, பெரும் முக்கியத்துவம் வாய்ந்த புனித வார்த்தைகளில் பேரருள் கொண்ட தண்டனை அறிவியலை {தண்ட நீதியை} உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக.(75) தண்டனை அறிவியலானது, அனைத்து மக்களையும் தங்கள் தங்கள் கடமைகளைச் செய்யக் கட்டாயப்படுத்துகிறது.(76) நான்கு வகையினரும் {வர்க்கத்தினரும்} தங்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போதும், நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் பேணப்படும்போதும், தண்டனை அறிவியலில் இருந்து அமைதியும், மகிழ்ச்சியும் பாயும்போதும், உயர்ந்த மூவகையினர் தங்கள் தங்கள் கடமைகளின்படி நடந்து கொண்டு ஒற்றுமையைப் பேணி அச்சமனைத்திலிருந்தும் மக்கள் விடுபடும்போதும்தான் அவர்கள் {மக்கள்} உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை அறிவாயாக.(77,78) மன்னன் காலத்தை உண்டாக்குகிறானா? அல்லது, காலம் மன்னனை உண்டாக்குகிறதா என்ற கேள்வியில் நீ எந்த ஐயத்தையும் ஊக்கப்படுத்தக்கூடாது. மன்னனே காலத்தை உண்டாக்கிறான் என்பதே உண்மை.(79)

கண்டிப்புடன் தண்டனை அறிவியலைச் சார்ந்து ஒரு மன்னன் முழுமையாக ஆளும்போது, கிருதம் என்றழைக்கப்படும் முதன்மையான காலம் {யுகம்} அப்போது ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது[8].(80) கிருதகாலத்தில் {கிருதயுகத்தில்} அறமே விளைகிறது. நீதியற்றவையேதும் அப்போது இருப்பதில்லை. நால்வகையைச் சேர்ந்த மனிதர்கள் அனைவரின் இதயங்களும், அநீதியில் எந்த இன்பத்தையும் அடையாது.(81) மனிதர்கள் அனைவரும் தாங்கள் விரும்பும் பொருட்களை அடைந்து, தாங்கள் அடைந்ததைப் பாதுகாத்துக் கொள்வார்கள். வேதச் சடங்குகள் அனைத்தும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்கவல்லவையாக இருக்கும்.(82) பருவகாலங்கள் அனைத்தும் இனிமை நிறைந்தவையாக, தீமைகளில் இருந்து விடுபட்டவையாக மாறும். மனிதர்கள் அனைவரின் குரல், உச்சரிப்பு மற்றும் மனங்கள் தெளிவானவையாகவும், உற்சாகம் நிறைந்தவையாகவும் மாறும்.(83) நோய்கள் மறைந்துபோகும், மனிதர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள், மனைவியர் விதவைகளாகமாட்டார்கள், எந்த மனிதனும் கஞ்சனாக இருக்க மாட்டான்.(84) உழாமலேயே பூமி பயிர்களை விளைவிக்கும், செடிகொடிகளும் வளமாக வளரும். மரப்பட்டைகள், இலைகள், கனிகள், கிழங்குகள் ஆகியன வேகமாக அபரிமிதமாக விளையும்.(85) எந்த அநீதியும் தென்படாது. அறத்தைத் தவிர மற்றேதும் நிலைக்காது. ஓ! யுதிஷ்டிரா, இவற்றையே கிருத காலத்தின் பண்புகளாக அறிவாயாக.(86)மன்னன், தண்டனை அறிவியலின் {தண்டநீதியின்} நான்கு பாகங்களில், நான்காவதை விட்டுவிட்டு மூன்றை மட்டுமே சார்ந்திருந்தால் திரேதம் என்றழைக்கப்படும் காலம் ஏற்படுகிறது.(87) அவ்வாறு (தண்டனை அறிவியலின்) மூன்றுபாகங்களை நோற்கும்போது நான்காம் பாகத்தின் அநீதியானது தொடர்ந்துகொண்டிருக்கும். பூமி விளைவிக்கும், ஆனால் உழவுக்காகக் காத்திருக்கும். செடிகொடிகளும் (உழவைச் சார்ந்தே) வளரும்.(88) மன்னன் அந்தப் பெரும் அறிவியலை {தண்டநீதியை} பாதி அளவே நோற்கும்போது, துவாபரம் என்றழைக்கப்படும் காலம் ஏற்படுகிறது.(89) அந்தப் பெரும் அறிவியலை இவ்வாறு பாதி அளவே நோற்கும்போது பாதி அளவுக்கு அநீதியே தொடர்ந்து கொண்டிருக்கும். பூமிக்கு உழவு அவசியம் தேவைப்படும், பயிர்கள் பாதி அளவுக்கே விளையும்.(90)

மன்னன் அந்தப் பெரும் அறிவியலை {தண்டநீதியை} முற்றாகக் கைவிட்டு, பல்வேறு வகைத் தீய வழிமுறைகளால் தன் குடிமக்களை ஒடுக்கும்போது, கலி என்றழைக்கப்படும் காலம் ஏற்படுகிறது.(91) கலி என்றழைக்கப்படும் காலத்தில், அநீதியே முழுமையக இருக்கும், அறமென எதுவும் தென்படாது. அனைத்து வகை மனிதர்களின் இதயங்களும், தங்கள் தங்கள் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிடும்.(92) சூத்திரர்கள் துறவிகளாகவும், பிராமணர்கள் பிறருக்குத் தொண்டுபுரிந்தும் வாழ்வார்கள். மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்குரிய பொருட்களை அடையத் தவறுவார்கள், தாங்கள் ஏற்கனவே அடைந்ததையும் பாதுகாக்கத் தவறுவார்கள். நால்வகையினரின் கலப்பும் ஏற்படும்.(93) வேத சடங்குகள் கனிகளை விளைவிக்கத் தவறும். அனைத்து பருவகாலங்களும் இனிமையை இழந்து, தீமை நிறைந்தவையாக இருக்கும்.(94) மனிதர்களின் குரல், உச்சரிப்பு மற்றும் மனங்கள் ஆகியன சுறுசுறுப்பை இழக்கும். நோய்கள் தோன்றும், மனிதர்கள் முதிரா காலத்திலேயே மாள்வார்கள்.(95)

விதவைகளாகும் மனைவியரும், பல தீய மனிதர்களும் தென்படுவார்கள். மேகங்கள் பருவ காலத்தில் பொழியாது, பயிர்கள் விளையாமல் தவறும்.(96) பெரும் அறிவியலில் {தண்டநீதியில்} உரிய கவனத்துடன் மன்னன் குடிமக்களைப் பாதுகாக்காதபோது, ஈரப்பதங்கள் யாவும் தவறும்.(97) கிருத, திரேத மற்றும் துவாபர காலங்களை மன்னனே உண்டாக்குகிறான். (கலி என்றழைக்கப்படும்) நான்காவது காலத்தையும் மன்னனே உண்டாக்குகிறான்.(98) அவன் கிருத காலத்தை உண்டாக்கினால் நீடித்த சொர்க்கத்தை அடைகிறான். அவன் திரேத காலத்தை உண்டாக்கினால், குறிப்பிட்ட காலத்திற்கான சொர்க்கத்தை அடைகிறான்.(99) துவாபரத்தை உண்டாக்கினால், அவன் தன் தகுதிகளுக்கேற்ப {புண்ணியங்களுக்கேற்ப} சொர்க்கத்தில் அருள்நிலையை அடைகிறான். கலிகாலத்தை உண்டாக்குவதால் அந்த மன்னன் பெரும் சுமைமிக்கப் பாவத்தையே இழைக்கிறான்.(100)

அவன் தன் குடிமக்களைப் பாவங்களில் மூழ்கடிப்பதால், பெரும் பாவத்தை இழைத்து, புகழ்க்கேட்டை அடைந்து, தீமையின் கறைபடிந்து, எண்ணற்ற வருடங்கள் நரகில் அழிவடைவான்.(101) பெரும் அறிவியலை {தண்டநீதியில்} கருத்தில் கொண்டவனும், கல்வியறிவு கொண்டவனுமான க்ஷத்திரியன், தான் விரும்பும் பொருட்களை {நோக்கங்களை} அடைய முனைந்து, ஏற்கனவே அடைந்தவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(102) மக்கள் அனைவரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்வதும், நலந்தரும் மேன்மைகள் அனைத்திற்கும் களப்பணியாகச் செயல்படுவதும், உண்மையில் உலகைத் தாங்கி, அதைச் செயல்பட வைப்பதுமான தண்டனை அறிவியலானது {தண்டநீதியானது}, முறையாகச் செயல்படுத்தப்பட்டால், அது, தாயும் தந்தையும் தங்கள் பிள்ளைகளைக் காப்பதைப் போல மக்கள் அனைவரையும் பாதுகாக்கும்.(103) ஓ! மனிதர்களில் காளையே, உயிரினங்களின் வாழவே அதைச் {தண்டநீதியைச்} சார்ந்துதான் இருக்கிறது என்பதை அறிவாயாக. தண்டனை அறிவியலை அறிவதும், அதை முறையாகச் செயல்படுத்துவதும்தான் ஒரு மன்னனை உயர்ந்த தகுதியை அடையச் செய்யும்.(104) எனவே, ஓ! குருகுலத்தோனே {யுதிஷ்டிரனே}, அந்தப் பெரும் அறிவியலின் துணையுடனும், நீதியுடனும் உன் குடிமக்களைப் பாதுகாப்பாயாக. உன் குடிமக்களைப் பாதுகாத்து, இத்தகு நடத்தையைப் பின்பற்றினால் அடைவதற்கு மிக அரிதான சொர்க்கத்தின் அருள்நிலையை நீ நிச்சயம் அடைவாய்” என்றார் {பீஷ்மர்}.(105)

அரச பண்புகள்! – சாந்திபர்வம் பகுதி – 70- மன்னர்களுக்குரிய முப்பத்தாறு {36} பண்புகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! அனைத்துவகை நடத்தைகளையும் அறிந்தவரே, அந்நடத்தையைப் பின்பற்றுவதால் ஒரு மன்னனால் இம்மையையும், மறுமையையும், முடிவில் மகிழ்ச்சியை அளிக்கும் பொருட்களையும் அடைவதில் வெல்ல முடியுமா?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “(ஒரு மன்னன் நோற்கவேண்டிய) முப்பத்தாறு {36} பண்புகள் இருக்கின்றன. அவை மேலும் முப்பத்தாறுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. ஓர் அறவோன் அப்பண்புகளைக் கைக்கொள்வதால் நிச்சயம் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட முடியும்.(2)

[1] மன்னன் தன் கடமைகளைக் கோபமோ, தீய நோக்கமோ இன்றி ஆற்றவேண்டும்.

[2] அவன் கருணையைக் கைவிடக்கூடாது.

[3] அவன் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

[4]துன்புறுத்தலோ, கொடூரமோ இன்றி அவன் தன் செல்வத்தை அடைய வேண்டும்.

[5]அவன் பற்றுதல் இல்லாமல் இன்பங்களை அனுபவிக்க வேண்டும்.(3)

[6] அவன் ஏற்புடையவற்றை உற்சாக நிறைவுடன் சொல்ல வேண்டும், அவன் தற்புகழ்ச்சி செய்து கொள்ளாமல் துணிவுடன் இருக்க வேண்டும்.

[7] அவன் தாராளவாதியாக இருந்தாலும் கவனமில்லாதோருக்குக் கொடைகளை அளிக்கக்கூடாது.

[8] அவன் கொடூரமில்லா ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும்.(4)

[9] அவன் தீயோரைப் புறக்கணித்துக் கூட்டணிகளை அமைக்க வேண்டும்.

[10] அவன் நண்பர்களிடம் பகைமையுடன் நடந்து கொள்ளக்கூடாது.

[11] தன்னிடம் அர்ப்பணிப்பில்லாதவர்களை ஒருபோதும் அவன் தன் ஒற்றர்களாகவும், இரகசிய முகவர்களாகவும் நியமிக்கக்கூடாது.

[12] துன்புறுத்தலின் மூலம் அவன் தன் நோக்கங்களை ஒருபோதும் நிறைவேற்றிக் கொள்ளக்கூடாது.(5)

[13] அவன் ஒருபோதும் தன் நோக்கங்களைத் தீயோர் முன்பு வெளிப்படுத்தக்கூடாது.

[14] அவன் பிறரின் தகுதிகளையன்றி ஒருபோதும் தன்னுடையவற்றைப் பேசக்கூடாது.

[15] அவன், தன் குடிமக்களிடம் இருந்து செல்வத்தைப் பெறலாமேயன்றி ஒருபோதும் நல்லோரிடம் பெறக்கூடாது.

[16] அவன் ஒருபோதும் தீயோரை வேலையில் அமர்த்தவோ, அவர்களின் உதவியை நாடவோ கூடாது.(6)

[17] கவனமான விசாரணையின்றி அவன் ஒருபோதும் தண்டனையை வழங்கக்கூடாது.

[18]  அவன் ஒருபோதும் தன் ஆலோசனைகளை வெளிப்படுத்தக்கூடாது.

[19] அவன் கொடையளிக்கலாமேயன்றி, பேராசைக்காரர்களுக்கு அளிக்கக்கூடாது.

[20] அவன் பிறரை நம்பலாமேயன்றி தனக்குத் தீங்கிழைத்தோரை ஒருபோதும் நம்பக்கூடாது.(7)

[21] அவன் கெட்ட நோக்கத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது.

[22] அவன், தான் மணந்து கொண்ட மனைவியரைப் பாதுகாக்க வேண்டும்.

[23] அவன் தூய்மையாயிருக்கவேண்டுமேயன்றி ஒருபோதும் கருணையால் உருகக்கூடாது.

[24] அவன் பெண்களிடம் அதிகமாகத் தோழமை பூணக்கூடாது {பெண்களின் துணையை அதிகமாக நாடக்கூடாது}.

[25] அவன், நலம்சார்ந்த உணவையன்றி ஒருபோதும் வேறுவகையானவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது.(8)

[26] அவன் செருக்கில்லாமல் தகுந்தோருக்கு வெகுமதிகளை அளித்து, தன் ஆசான்கள் மற்றும் பெரியோர்களுக்கு உண்மையுடன் தொண்டாற்ற வேண்டும்.

[27] அவன் செருக்கில்லாதவனாகத் தேவர்களை வழிபட வேண்டும்.

[28] அவன் செழிப்பையன்றி ஒருபோதும் புகழ்க்கேட்டைக் கொண்டுவரும் எதையும் நாடக்கூடாது.(9)

[29] அவன், (தன்னைவிடப் பெரியோரிடம்) பணிவுடன் காத்திருக்க வேண்டும்.

[30] அவன் தொழிலில் புத்திசாலியாக இருக்க வேண்டும், ஆனாலும் அவன் தகுந்த காலத்திற்காக எப்போதும் காத்திருக்க வேண்டும்.

[31] அவன் மனிதர்களுக்கு ஆறுதலளிக்க வேண்டும், ஒருபோதும் வெற்று வார்த்தைகளுடன் அவர்களை அனுப்பக்கூடாது.

[32] அவன், ஒரு மனிதனுக்கு ஆதரவளித்துவிட்டு, பிறகு அவனைக் கைவிடக்கூடாது.(10)

[33] அவன் ஒருபோதும் அறியாமையுடன் இருக்கக்கூடாது.

[34] அவன், தன் எதிரியைக் கொன்றுவிட்டு, ஒருபோதும் துயரில் ஈடுபடக்கூடாது.

[35] அவன் கோபத்தை வெளிப்படுத்தலாம், ஆனால் எந்த நிகழ்வும் இல்லாதபோது அதை வெளிப்படுத்தக்கூடாது.

[36] அவன் மென்மையாக இருக்கவேண்டும், ஆனால் ஒருபோதும் குற்றவாளிகளிடம் மென்மையாக இருக்கக்கூடாது.(11)

உன் நாட்டை ஆளும்போது நீ செழிப்பை விரும்பினால் இத்தகு நடத்தையையே நீ பின்பற்றுவாயாக. வேறுமாதிரியாக நடந்து கொள்ளும் மன்னன் பேராபத்தையே அடைவான்.(12) நான் குறிப்பிட்ட இந்தப் பண்புகள் அனைத்தையும் பின்பற்றும் மன்னன் பூமியில் பல அருள்களையும், சொர்க்கத்தில் பெரும் வெகுமதிகளையும் அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}.(13)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அறிவுரைகளைப் பெறுவதில் அடக்கமுள்ளவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், பீமன் மற்றும் பிறரால் பாதுகாக்கப்படுபவனுமான மன்னன் யுதிஷ்டிரன், சந்தனு மகனின் {பீஷ்மரின்} இந்த வார்த்தைகளைக் கேட்டு, தன் பாட்டனை {பீஷ்மரை} வணங்கி, அந்தக் காலம் முதல் அந்தக் கற்பிதங்களின்படியே ஆளத்தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(14)

கடமையைப் புறக்கணிக்காதே! – சாந்திபர்வம் பகுதி – 71-அறப்பிழையேற்படாமல் குடிமக்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; வழிமுறைகளைச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, துயரத்தைத் தவிர்க்கும் வகையிலும், அறத்திற்கு எதிராகக் குற்றமிழைக்காத வகையிலும் ஒரு மன்னன் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய வழியை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த நித்திய கடமைகளை விரிவாகச் சொன்னால் என்னால் அதன் முடிவை எட்ட முடியாது என்பதால் அவற்றைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) தங்கள் கடமைகளில் அர்ப்பணிப்புமிக்கோரும், கல்வியறிவைக் கொண்டவர்களும், தேவர்களைத் தொடர்ந்து வழிபடுபவர்களும், உயர்ந்த நோன்புகளை நோற்பவர்களும், பிற சாதனைகளையும் கொண்டவர்களுமான பிராமணர்கள் உன் வசிப்பிடத்திற்கு வரும்போது நீ அவர்களை வழிபட்டு, உன் வேள்விகளைச் செய்வதில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.(3) அவர்கள் உன்னை அணுகும்போது உன் புரோகிதருடன் கூடிய நீ, எழுந்திருந்து அவர்களது பாதங்களை வழிபட்டு, தேவையான பிற செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்.(4) இந்தப் பக்திச் செயல்களையும், உன் நன்மைக்கான பிற செயல்களையும் செய்து (அவர்களுக்குக் கொடைகளையும் அளித்து) உன் காரியங்களின் வெற்றிக்காக அந்தப் பிராமணர்களை ஆசிகூறச் செய்ய வேண்டும்.(5)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நேர்மை, ஞானம், நுண்ணறிவு ஆகியவற்றுடன் கூடிய நீ உண்மையைப் பின்பற்றி, காமத்தையும், கோபத்தையும் தவிர்க்க வேண்டும்.(6) காமம் மற்றும் கோபத்தைத் தவிர்க்காத மூட மன்னன், அறமீட்டத் தவறி, இறுதியாகப் பொருளையும் இழக்கிறான்.(7) பேராசை கொண்டோரையும், மூடர்களையும் இன்பம் மற்றும் பொருள் சார்ந்த காரியங்களில் ஒருபோதும் ஈடுபடுத்தாதே. பேராசையில் இருந்து விடுபட்டவர்கள் மற்றும் நுண்ணறிவைக் கொண்டோர் ஆகியோரையே நீ எப்போதும் உன் பணிகள் அனைத்திலும் ஈடுபடுத்த வேண்டும்.(8) காமம் மற்றும் கோபத்தின் கறை படிந்தவர்களும், வணிகப் பரிவர்த்தனையில் திறமற்றவர்களுமான மூட மனிதர்களைப் பொருள் சார்ந்த பொறுப்புகளில் ஈடுபடுத்தினால், அவர்கள் எப்போதும் தீமைகளை உண்டாக்கும் பல்வேறு சூழ்ச்சிகளால் மக்களை ஒடுக்குவார்கள்[2].(9) முறையான கணக்கீட்டின்படி, மண்ணில் விளைவதில் ஆறில் ஒரு பகுதியாகப் பெறப்படும் கப்பத்தையும், குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அபராதங்களையும், அவர்களிடம் செய்யப்படும் பறிமுதல்களையும், வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்குப் பதிலாகச் சாத்திரங்களின் படி அவர்களிடம் பெறப்படும் தீர்வைகளையும் கொண்டே ஒரு மன்னன் தன் கருவூலத்தை நிரப்ப வேண்டும்[3].(10)இந்த நியாயமான கப்பத்தை அடைந்து, நாட்டை முறையாகவும், கவனத்துடனும் ஆளும் மன்னன், தன் குடிமக்கள் தேவைக்கான எந்த அழுத்தத்தையும் உணராத {அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லாத} வகையில் செயல்பட வேண்டும்.(11) பாதுகாப்பு வழங்கும் கடமையை முறையாகச் செய்பவனும், தாரளவாதியாக இருப்பவனும், அறம் நோற்பதில் உறுதியுள்ளவனும், எச்சரிக்கை உணர்வுடன் விழிப்புடன் இருப்பவனும், காமம் மற்றும் வெறுப்பில் {ஆசை மற்றும் துறவில்} இருந்து விடுபட்டவனுமான மன்னனிடம் மனிதர்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் கொள்வார்கள்.(12) அநீதியாகவோ, பேராசையாலோ செயல்பட்டு உன் கருவூலத்தை நிரப்ப ஒருபோதும் விரும்பாதே. சாத்திரங்களின்படி செயல்படாத மன்னன் செல்வத்தையும் அறத்தகுதியையும் ஈட்டுவதில் தவறுகிறான்.(13) செல்வம் ஈட்டுவதில் மட்டுமே மனம் கொண்ட மன்னன் அறத்தகுதி மற்றும், செல்வம் ஆகிய இரண்டையும் அடையத் தவறுகிறான். மேலும் (இத்தகு வழிமுறைகளால்) அவன் அடையும் செல்வமானது, தகாத பொருட்களில் வீணாகச் செலவிடப்படுவதே காணப்படுகிறது[4].(14) சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை விதித்து மடமையின் மூலம் தன் குடிமக்களை ஒடுக்கும் பேராசைக்கார மன்னன், தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான் என்று சொல்லப்படுகிறது.(15)பாலை விரும்பும் ஒருவன், பசுவின் மடியை வெட்டி எதையும் அடையாததைப் போலவே ஒரு நாடும் முறையற்ற வழிமுறைகளால் பீடிக்கப்பட்டால், அது மன்னனுக்கு ஒருபோதும் எதையும் ஈட்டித் தருவதில்லை.(16) ஒரு காராம்பசுவை மென்மையாக நடத்துபவன் எப்போதும் அதனிடமிருந்து பாலை அடைகிறான். அதே போலவே, முறையான வழிமுறைகளின் உதவி மூலம் தன் நாட்டை ஆளும் மன்னனும், அதிலிருந்து அதிகக் கலன்களை அறுவடை செய்கிறான்.(17) ஒரு நாட்டை முறையாகப் பாதுகாத்து, நீதிமிக்க வழிமுறைகளின் உதவியுடன் அஃதை ஆண்டால், ஒரு மன்னன் எப்போதும் அதிகச் செல்வத்தையே அடைகிறான்.(18) மன்னனால் நன்கு பாதுகாக்கப்படும் பூமியானது, மனம் நிறைந்த தாயானவள் தன் பிள்ளைக்குப் பாலைத் தருவதைப் போலவே, (அஃதை ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும்) பயிர்களையும், தங்கத்தையும் விளைவிக்கிறது.(19) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பூக்காரனின் உதாரணத்தைப் பின்பற்றுவாயாக, கரி உற்பத்தி செய்பவனைப் பின்பற்றாதே. அவ்வாறு பின்பற்றி, பாதுகாப்பு வழங்கும் கடமையைச் செய்யும் உன்னால் எப்போதும் பூமியில் இன்புற்றிருக்க முடியும்[5].(20)ஓர் எதிரியின் நாட்டைத் தாக்கும்போது உன் கருவூலம் வற்றினால், பிராமணர்களைத் தவிர மற்ற அனைவரின் செல்வங்களையும் எடுத்து நீ அதை நிரப்பலாம்.(21) நீ பெரும் துன்பத்தில் இருக்கும்போது, செல்வம்படைத்த பிராமணர்களைக் கண்டாலும் உன் இதயம் அசையாமல் இருக்கட்டும். நீ செழிப்புடன் இருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை.(22) அவர்களுக்குத் {பிராமணர்களுக்குத்} தகுந்தவாறும், உனது சக்திக்குத்தக்கவாறும் அவர்களுக்குச் {பிராமணர்களுக்குச்} செல்வத்தை அளித்து, பாதுகாத்து, அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு {பிராமணர்களுக்கு} ஆறுதலளிக்க வேண்டும். இவ்வாறு நீ நடந்து கொண்டால், மறுமையில் அடைதற்கரியவற்றை நீ அடைவாய்.(23) அத்தகு நன்னடத்தையைப் பின்பற்றியே நீ உன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது நீ உயர்ந்த, தூய்மையான, நீடித்த புகழை அடைவாய்.(24) ஓ பாண்டுவின் மகனே, உன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்தால் எந்த வருத்தமோ, வலியோ உனதாகாது.(25)

அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்டி, அவற்றைத் தீங்கிலிருந்து காப்பதே உயர்ந்த தகுதி என்று சொல்லப்படுவதால் குடிமக்களைப் பாதுகாப்பதே ஒரு மன்னனின் உயர்ந்த கடமையாகும்.(26) கடமைகளை அறிந்த மனிதர்கள், மன்னன் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதில் ஈடுபடும்போது அவற்றின் மீது தன் கருணையை வெளிப்படுத்துவதால் அதுவே அவனுடைய உயர்ந்த தகுதியாகும் {புண்ணியமாகும்} என்று கருதுகின்றனர்.(27) ஒரு மன்னன் அச்சத்திலிருக்கும் தன் குடிமக்களைப் பாதுகாக்காமல், {அக்கடமையை} ஒரு நாள் புறக்கணித்தாலும், அவன் (அதற்காக) ஆயிரம் வருடங்களுக்கு நரகில் துன்புற்றாலும் அதன் {அந்தப் பாவத்திற்கான} முடிவை அடைய மாட்டான். (28) ஒரு மன்னன் தன் குடிமக்களை நீதியுடன் ஒரு நாள் பாதுகாப்பதால் ஈட்டும் தகுதியால், அவன் சொர்க்கத்தில் பத்தாயிரம் வருடங்களை அதற்கான வெகுமதியாக அனுபவிப்பான்.(29) தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாப்பதால் மட்டுமே ஒரு மன்னன், கார்ஹஸ்த்யம், பிரம்மச்சரியம், வானப்பிரஸ்த வாழ்வுமுறைகளை முறையாகப் பின்பற்றும் மனிதர்கள் அடையும் உலகங்கள் விரைவாக அடைந்துவிடுகிறான்.(30)

ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, எனவே, நீ பெருங்கவனத்துடன் (பாதுகாப்பு எனும்) இந்தக் கடமையை ஆற்றுவாயாக. அப்போதுதான் நீ நீதிக்கான வெகுமதியை அடைவாய், எந்தத் துயரும், எந்த வலியும் உனதாகாது. ஓ! பாண்டுவின் மகனே, சொர்க்கத்தில் நீ பெருஞ்செழிப்பை அடைவாய்.(31) இது போன்ற தகுதியை மன்னர்களாக இல்லாத மனிதர்கள் அடைவது சாத்தியமில்லை. எனவே, வேறெதுவுமாக இல்லாமல் மன்னனாக இருக்கும் ஒருவன், இத்தகு அற வெகுமதியை ஈட்டுகிறான்.(32) நுண்ணறிவைக் கொண்ட நீ ஒரு நாட்டை அடைந்திருக்கிறாய். உன் குடிமக்களை நீதியுடன் பாதுகாப்பாயாக. சோமத்தால் இந்திரனையும், விருப்பத்திற்குரிய பொருட்களால் உன் நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளையும் நிறைவடையச் செய்வாயாக” என்றார் {பீஷ்மர்}.(33)

வாயு சொன்ன நால்வர்ண தாரதம்மியம்! – சாந்திபர்வம் பகுதி – 72-புரூரவஸுக்கும், வாயு தேவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; நான்கு வர்ணங்களின் ஓப்பீட்டு மதிப்பையும், புரோகிதராக இருக்கத் தகுந்த பிராமணனின் பண்புகளையும் புரூரவஸுக்கு விளக்கிய வாயு தேவன்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] “ஓ! மன்னா, எந்த மனிதன் நல்லோரைப் பாதுகாத்துத் தீயோரைத் தண்டிப்பானோ, அவன் மன்னனால் அவனது புரோகிதராக நியமிக்கப்பட வேண்டும்.(1) இது தொடர்பாக, இளையின் மகனான புரூரவஸுக்கும், மாதரிஸ்வானுக்கும் {வாயுவுக்கும்}[2] இடையில் நடந்த உரையாடல் பழங்காலக் கதையில் தென்படுகிறது.(2)புரூரவஸ் {வாயுதேவனிடம்}, “பிராமணன் எங்கிருந்து உண்டானான்? மூவகையினரும் எங்கிருந்து உண்டானார்கள்? எதன் காரணமாகப் பிராமணன் முதன்மையானவனானான்? இவை யாவற்றையும் சொல்வதே உனக்குத் தகும்” என்று கேட்டான்.(3)

மாதரிஸ்வான் {வாயுதேவன் புரூரவஸிடம்}, “ஓ! மன்னர்களில் சிறந்தவனே {புரூரவஸ்ஸே}, பிராமணன், பிரம்மனின் வாயிலிருந்து உண்டானான். க்ஷத்திரியன், அவரது இரு கரங்களிலிருந்து உண்டானான், வைசியன் அவரது இரு தொடைகளில் இருந்து உண்டானான்.(4) ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, இந்த மூவகையினருக்காகக் காத்திருப்பதற்காக {பணிவிடை செய்வதற்காக} உயிர்த்தெழுந்தவனும், நான்காவது வகையைச் சேர்ந்தவனுமான சூத்திரன் (பிரம்மனின்) பாதத்தில் இருந்து உண்டானான்.(5) உண்மையில் இவ்வாறு உண்டான பிராமணன், வேதங்களையும், பிற சாத்திரங்களையும் பராமரிப்பதற்காக, அனைத்து உயிரினங்களின் தலைவனாகப் பூமியில் பிறப்பை எடுத்தான்[3].(6) பிறகு, பூமியை ஆள்வதற்காகவும், தண்டக்கோலை {செங்கோலைத்} தரிக்கவும், அனைத்து உயிரினங்களையும் காக்கவும், இரண்டாவது வகையைச் சேர்ந்த க்ஷத்திரியன் படைக்கப்பட்டான்.(7) வைசியன், உழவு, வணிகம் மூலம் தன்னையும் தாங்கிக் கொண்டு, இந்த இரு வகையினரையும் ஆதரிப்பதற்காகப் படைக்கப்பட்டான். இறுதியாக, சூத்திரன் இந்த மூன்று வகையினருக்கும் கீழ்ப்படிந்து பணிசெய்ய வேண்டும் என்ற பிரம்மனால் விதிக்கப்பட்டான்” என்றான் {வாயு தேவன்}.(8)புரூரவஸ் {வாயுதேவனிடம்}, “ஓ! வாயு தேவா, இந்தப் பூமி நியாயமாக யாருக்குச் சொந்தமானதாகும். {இது சொந்தமானது} பிரமணனுக்கா? க்ஷத்திரியனுக்கா?” என்று கேட்டான்.(9)

வாயு தேவன் {புரூரவஸ்ஸிடம்}, “பிறப்பு மற்றும் முன்னிலையின் விளைவால் இந்த அண்டத்தில் இருக்கும் அனைத்தும் பிராமணனுக்கே சொந்தமானதாகும். அறநெறியறிந்தோர் இதையே சொல்கின்றனர்.(10) பிராமணன் எதை உண்கிறானோ, அஃது அவனுடையதே. அவன் வசிக்கும் இடம் அவனுடையதே. அவன் கொடுப்பதும் அவனுடையதே. அவன், அனைத்து {பிற மூன்று} வகையினரின் மதிப்புக்கும் தகுந்தவனாவான். அவனே முதலில் பிறந்தவனும், முதன்மையானவனும் ஆவான்.(11) கணவன் இல்லாத போது, ஒரு பெண், அவனுக்குப் பதில் அவனது தம்பியை ஏற்பதைப் போலவே, பூமியானவள், பிராமணனுடைய மறுப்பின் காரணமாக, அவனுக்கு அடுத்துப் பிறந்த க்ஷத்திரியனைத் தன் தலைவனாக ஏற்றாள். இதுவே முதல் விதியாகும். எனினும், இடர் காலங்களில் இதற்கு விதிவிலக்கும் உண்டு.(12) நீ, உன் வகைக்குண்டான கடமைகளை வெளிப்படுத்த முனைந்து, சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அடைய விரும்பினால், நீ வெல்லும் நிலங்கள் அனைத்தையும்,(13) கல்வியறிவு கொண்டவனும், அறநடத்தை கொண்டவனும், கடமைகளை அறிந்தவனும், தவங்களை நோற்பவனும், தன் வகைக்கான கடமைகளில் நிறைவடைந்தவனும், செல்வத்தில் பேராசையில்லாதவனுமான பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும்.(14) நற்பிறப்பைக் கொண்டவனும், ஞானம் மற்றும் பணிவைக் கொண்டவனுமான

பிராமணன், தன் பெரும் நுண்ணறிவைக் கொண்டு ஒவ்வொரு காரியத்திலும் மன்னனுக்கு வழிகாட்டுகிறான்.(15) நல்லாலோசனைகளின் மூலமாக அவன் அந்த மன்னனைச் செழிப்பீட்டச் செய்கிறான். மன்னன் ஆற்ற வேண்டிய கடமைகளை அந்தப் பிராமணன் சுட்டிக் காட்டுகிறான்.(16) தன் வகைக்குரிய கடமைகளைச் செய்பவனும், செருக்கற்றவனும், ஞானம் கொண்டவனுமான ஒரு மன்னன், பிராமணனின் அறிவுரைகளை எவ்வளவு காலம் கேட்பானோ, அவ்வளவு காலம் அவன் மதிக்கப்படுகிறான், அவ்வளவு காலம் அவன் புகழை அனுபவிக்கிறான். எனவே, மன்னன் அடையும் தகுதியில் {புண்ணியத்தில்} அவனது புரோகிதனுக்கும் ஒரு பங்குண்டு.(17) மன்னன் இவ்வாறு நடக்கும்போது, அவனைச் சார்ந்திருக்கும் அவனது குடிமக்கள் அனைவரும், தங்கள் நடத்தையில் அறவோராகவும், தங்கள் கடமைகளில் கவனமுள்ளோராகவும், அனைத்து வகை அச்சத்தில் இருந்து விடுபட்டவர்களாகவும் இருப்பார்கள்.(18) மன்னன், தன்னால் முறையாகப் பாதுகாக்கப்படும் தன் குடிமக்களால் தன் நாட்டில் செய்யப்படும் அறச் செயல்களின் நான்கில் ஒரு பாகத்தை அடைகிறான்.(19)

தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள், உரகர்கள் மற்றும் ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும் தங்களைத் தாங்கிக் கொள்ள வேள்விகளையே சார்ந்திருக்கின்றனர். மன்னன் இல்லாத ஒரு நாட்டில், எந்த வேள்வியும் நடைபெறாது.(20) தேவர்களும், பித்ருக்களும் வேள்விகளும் அளிக்கப்படும் காணிக்கைகளாலேயே வாழ்கின்றனர். எனினும் வேள்வியானது மன்னனைச் சார்ந்திருக்கிறது.(21) கோடை காலத்தில், மனிதர்கள், மரத்தின் நிழல், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த தென்றல் ஆகியவற்றின் ஆறுதலை விரும்புவார்கள். குளிர் காலத்தில் அவர்கள் நெருப்பு, கதகதப்பான துணிகள் மற்றும் சூரியன் ஆகியவற்றில் இருந்து ஆறுதலை அடைகிறார்கள்.(22)

மனிதனின் இதயமானது, ஒலி, தீண்டல், சுவை, காட்சி மற்றும் மணம் ஆகியவற்றில் இன்பத்தைக் கண்டடைகிறது. எனினும், அச்சமடைந்த மனிதன் இவையாவற்றிலும் எந்த இன்பத்தையும் காண்பதில்லை.(23) மனிதர்களின் அச்சத்தை விலக்கும் மனிதன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான். உயிர்க்கொடையைப் போன்ற வேறொரு கொடை மூன்று உலகங்களிலும் கிடையாது.(24) மன்னனே இந்திரனாவான். மன்னனே யமனாவான். மன்னனே தர்மனும் ஆவான். மன்னன் பல்வேறு வடிவங்களை ஏற்கிறான். மன்னனே அனைத்தையும் தாக்குப்பிடித்து, அவற்றை ஆதரிக்கிறான்” என்றான் {வாயு தேவன்}”.(25)

பிராமண க்ஷத்திரிய ஒற்றுமை! – சாந்திபர்வம் பகுதி – 73-புரூரவஸுக்கும், கசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுக்கிடையில் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தைச் சொன்ன கசியபர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] “ஓ! மன்னா, அறத்தகுதி மற்றும் செல்வம் ஆகிய இரண்டிலும் கண் கொண்டவனும், மிகச் சிக்கலான கருத்துகளைக் கொண்டவனுமான மன்னன், கல்வியறிவு பெற்றவரும், வேதங்களையும், பிற சாத்திரங்களையும் மிக நெருக்கமாக அறிந்தவருமான ஒரு புரோகிதரைத் தாமதமில்லாமல் நியமித்துக் கொள்ள வேண்டும்.(1) நல்லான்மா கொண்டோரும், கொள்கை அறிந்தவர்களுமான புரோகிதர்களையுடைய மன்னர்கள், தாங்களே அத்தகைய பண்புகளைக் கொண்டோராகி, திசைகள் அனைத்திலும் செழிப்பை அனுபவிப்பார்கள்.(2) மதிக்கத்தக்க பண்புகளைக் கொண்ட புரோகிதர், மற்றும் மன்னன் ஆகிய இருவரும், நோன்புகள் மற்றும் தவங்களை நோற்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் குடிமக்களையும், தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிள்ளைகளையும் பெருக்கிக் கொள்ள முடியும் {அல்லது அவர்களின் தரத்தை உயர்த்த முடியும்}.(3) அவர்கள் ஒரே இதயங்களைக் கொண்டவர்களாகவும், ஒருவருக்கொருவர் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. பிராமணனுக்கும், க்ஷத்திரியனுக்கும் இடையில் உண்டாகும் அத்தகு நட்பின் விளைவாகக் குடிமக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.(4) அவர்கள் ஒருவரையொருவர் மதிக்கவில்லையெனில் மக்களுக்கு அழிவே ஏற்படும். பிராமணனும், க்ஷத்திரியனும் தான் அனைத்து மனிதர்களுக்கும் மூதாதையர்கள் என்று சொல்லப்படுகிறது.(5) இது தொடர்பாக இளையின் மகனுக்கும் {புரூரவஸுக்கும்}, கசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலொன்று பழங்கதையில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(6)

இளையின் மகன் {புரூரவஸ் காசியபரிடம்}, “பிராமணன் க்ஷத்திரியனைக் கைவிடும்போது, அல்லது க்ஷத்திரியன் பிராமணனைக் கைவிடும்போது, அவர்களில் எவன் மேன்மையானவனாகக் கருதப்பட வேண்டும்? அவர்களில் எவருடைய ஆணைகளைச் சார்ந்து பிற வகையினர்கள் தங்களைப் பராமரித்துக் கொள்ள முடியும்?” என்று கேட்டான்.(7)

கசியபர் {புரூரவஸ்ஸ்டம்}“பிராமணனும், க்ஷத்திரியனும் ஒருவரோடொருவர் போரிடும்போது, அந்த க்ஷத்திரியனின் நாடு அழிவடைகிறது. குழப்பமே நீடிக்கும் அந்த நாட்டில் கள்வர்கள் பெருகுவார்கள், நல்லோர் அனைவரும் ஆட்சியாளனை மிலேச்சன் என்று கருதுவார்கள்.(8) அவர்களுடைய {நல்லோரின்} எருதுகள் தழைக்காது, அவர்களின் பிள்ளைகளும் தழைக்கமாட்டார்கள். எந்த நாடுகளில் பிராமணர்கள் க்ஷத்திரியர்களைக் கைவிடுகிறார்களோ, அங்கே {பிராமணப்} பிள்ளைகள் வேதங்களைக் கற்க மாட்டார்கள்.(9) அவர்களது வீடுகளில் செல்வம் பெருகாது. அவர்களது பிள்ளைகள் நல்லோராகமாட்டார்கள், சாத்திரங்களைக் கற்கமாட்டார்கள், வேள்விகளையும் செய்யமாட்டார்கள். பிராமணர்களைக் கைவிடும் க்ஷத்திரியர்கள், தங்கள் குருதியில் மாசடைந்து, கள்வர்களின் இயல்பை அடைவார்கள்.(10) பிராமணனும், க்ஷத்திரியனும் இயல்பிலேயே ஒருவரோடொருவர் தொடர்புடையவர்களும், ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்பவர்களுமாவர். பிராமணனின் வளர்ச்சிக்கான காரணம் க்ஷத்திரியனே, க்ஷத்திரியனின் வளர்ச்சிக்கான காரணம் பிராமணனே.(11) ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளும் போது, அவர்கள் இருவருமே பெருஞ்செழிப்பை அடைவார்கள். பழங்காலத்தில் இருந்து நீடிக்கும் அவர்களது நட்பு உடையுமேயானால், அனைத்திலும் பெருங்குழப்பமே ஏற்படும்.(12)

வாழ்வெனும் பெருங்கடலைக் கடக்க விரும்பும் எந்த மனிதனும், கடலின் பரப்பில் மிதக்கும் சின்னஞ்சிறு படகைப் போலத் தன் பணியில் வெற்றியடைவதில்லை. மனிதர்களில் நால்வகையினரும் குழப்பமடைந்து, அனைவருக்கும் அழிவு ஏற்படுகிறது.(13) ஒரு மரத்தைப் போன்றவனான பிராமணன் பாதுகாக்கப்பட்டால், அது பொன்னையும், தேனையும் பொழியச் செய்கிறது. மறுபுறம் அது பாதுகாக்கப்பட வில்லையெனில், அது கண்ணீரையும், பாவத்தையும் பொழியும்.(14) வேதங்களில் இருந்து வீழ்ந்த பிராமணன், (க்ஷத்திரிய ஆட்சியாளன் இல்லாமல்) சாத்திரங்களின் பாதுகாப்பை நாடும்போது, இந்திரன் பருவ காலத்தில் மழை பொழிய மாட்டான், பல்வேறு வகையான இடர்கள் இடையறாமல் நாட்டைப் பீடித்துக் கொண்டிருக்கும்.(15) இழிந்தவனும், பாவியுமான ஒருவன், ஒரு பெண்ணையோ, பிராமணனையும் கொன்றுவிட்டு, சக மனிதர்களின் சபைகளில் மன்னன் மீதான எந்த அச்சமும் இல்லாமல் நிற்க நேர்ந்தால், அந்த க்ஷத்திரிய ஆட்சியாளனை ஆபத்து அச்சுறுத்தும்.(16) பாவிகளால் இழைக்கப்படும் பாவங்களின் விளைவாக, அந்நாட்டில் தேவன் ருத்ரன் தோன்றுகிறான். உண்மையில், பாவிகள், பழிதீர்க்கும் தேவனையே தங்கள் பாவங்களின் மூலம் கொண்டுவருகிறார்கள். பிறகு அவன் {ருத்ரன்}, நல்லோர் அல்லோர் ஆகியோர் அனைவரையும் ஒன்றாகவே {எந்தப் பாகுபாடுமின்றி} அழிக்கிறான்” என்றார் {கசியபர்}[2].(17)

ஐலன் {இளையின் மகனான புரூரவஸ்}, “ருத்ரன் எங்கிருந்து தோன்றுவான்? அவனுடைய வடிவம் என்ன? உயிரினங்கள் உயிரினங்களாலேயே அழிக்கப்படுவதே காணப்படுகிறது. ஓ! கசியபரே, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக. ருத்ர தேவன் எங்கிருந்து உண்டாகிறான்?” எனக் கேட்டான்.(18)

கசியபர், “ருத்ரன் மனிதர்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறான். அவன் தானிருக்கும் உடல்களையும், பிறரின் உடல்களையும் அழிக்கிறான். {வாயு போன்ற} வழிமண்டலம் சார்ந்த தேர்வாகச் சொல்லப்படுகிறான், அவனது வடிவம் காற்றுத் தேவர்களைப் போன்றதாகும்” என்றார்.(19)

ஐலன், “காற்று வீசுவதால், அஃது அனைத்து சமயங்களிலும் மனிதர்களை அழிப்பதாகக் காண முடியவில்லை. மேகங்களின் தேவனும் மழைப்பொழிவால் அவ்வாறு அழிப்பதில்லை. மறுபுறம், தங்கள் புலனுணர்வுகளை இழக்கும் மனிதர்களே காமத்தினாலும், வன்மத்தினாலும் கொல்லப்படுகிறார்கள்” என்றான்.(20)

கசியபர், “ஒரு வீட்டில் சுடர்விடும் நெருப்பானது, மொத்த பகுதியையோ, மொத்த கிராமத்தையோ எரிக்கிறது. அதே போல, இந்தத் தேவனும், எவனாவது ஒருவனின் புலன்களைத் திகைக்கச் செய்கிறான், அந்தக் குழப்பம் நேர்மையானவர்கள், தீயவர்கள் என எந்த வேறுபாடுமின்றி அனைவரையும் தீண்டுகிறது” என்றார்.(21)

ஐலன், “பாவிகளால் இழைக்கப்படும் பாவங்களின் விளைவால் நேர்மையானவர்கள், தீயவர்கள் என எந்த வேறுபாடுமின்றி அனைவரையும் தண்டனை தீண்டுமேயானால், மனிதர்கள் ஏன் நற்செயல்புரிய வேண்டும்? உண்மையில் அவர்கள் ஏன் தீச்செயல்களில் இருந்து விலக வேண்டும்?” என்று கேட்டான்.(22)

கசியபர், “பாவிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் தூய்மையடைந்தவனாக, களங்கமற்றவனாக ஆகிறான். எனினும், அவர்கள் பாவிகளுடன் கலந்திருப்பதால், பாவமற்றவர்களும் தண்டனையால் தீண்டப்படுகிறார்கள். ஈர விறகு, காய்ந்த விறகோடு கலந்திருந்தால், அத்தகு உடனுறைவின் விளைவால் அது நெருப்பால் எரிக்கப்படுகிறது. எனவே, பாவமற்றவர்கள் ஒருபோதும் பாவிகளுடன் கலந்து இருக்கக்கூடாது” என்றார்.(23)

ஐலன், “பூமியானது நேர்மையானவர்களையும், தீயோரையும் தாங்குகிறது. சூரியன், நேர்மையானவர்களையும், தீயோரையும் வெப்பமடையச் செய்கிறது. காற்றும் சமமாகவே அவர்களுக்கு வீசுகிறது. நீரும் சமமாகவே அவர்களைக் கழுவுகிறது” என்றான்.(24)

கசியபர், “ஓ! இளவரசே, உண்மையில் இதுவே உலகின் நடைமுறை. எனினும், மறுமையில் இஃது அவ்வாறில்லை. மறு உலகத்தில், நேர்மையாகச் செயல்படுபவர்களுக்கும், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவர்களுக்கும் இடையில் சூழ்நிலையிலேயே பெரும் வேறுபாடு இருக்கிறது.(25) தகுதிபடைத்த {புண்ணியம் செய்த} மனிதர்கள், தேர் நிறைந்தவையும், தங்கம், அல்லது தெளிந்த நெய் ஊற்றப்படும் நெருப்பின் காந்தியைக் கொண்டவையுமான உலகங்களை அடைகின்றனர். அந்த உலகங்கள் அமுதத்தின் இருப்பிடங்களைப் போன்றனவாகும். தகுதி படைத்த மனிதன் அங்கே பெரும் இன்ப நிலையை அனுபவிக்கிறான். மரணம், முதுமை, கவலை ஆகியன அங்கே கிடையாது.(26) பாவிகளுக்கான உலகம் நரகமாகும். இருளும், இடையறாத வலியும் {துன்பமும்} அங்கே இருக்கின்றன, அது துயரம் நிறைந்ததாகும். பாவம் நிறைந்த செயல்களைச் செய்த மனிதன், புகழ்க்கேட்டில் மூழ்கி, அங்கே பல வருடங்கள் வருத்தத்தில் ஈடுபடுகிறான்.(27)

பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுக்கிடையிலான ஒற்றுமையின்மையின் விளைவால் மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத துன்பங்களால் பீடிக்கப்படுகிறார்கள். ஒரு மன்னன் இஃதை அறிந்து கொண்டு, அனுபவமும், பரந்த அறிவும் கொண்ட ஒரு (பிராமணப்) புரோகிதனை நியமித்துக் கொள்ள வேண்டும்.(28) ஒரு மன்னன் முதலில் புரோகிதனைத் தன் அலுவலில் நியமித்த பிறகு, அவன் மணிமுடிசூட்டிக்கொள்ள வேண்டும். இதுவே விதியாக விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த விதிகள், பிராமணனே அனைத்து உயிரினங்களிலும் முதன்மையானவன் என்று அறிவிக்கின்றன. வேதங்களை அறிந்த மனிதர்கள், பிராமணனே முதலில் உண்டாக்கப்பட்டான் என்று சொல்கின்றனர்.(29) முந்திப் பிறந்ததன் விளைவால் அவனிடம் இவ்வுலகின் நல்ல பொருட்கள் அனைத்தும் இருக்கின்றன. படைப்பாளன் உண்டாக்கிய சிறந்த பொருட்கள் அனைத்தின் உரிமையாளனான பிராமணன், முந்திப் பிறந்தவனாதலால், அவன் மரியாதைக்குத் தகுந்தவனும், அனைத்து உயிரினங்களின் வழிபாட்டுக்குத் தகுந்தவனுமாவான்.(30) ஒரு மன்னன் பலமிக்கவனாகவே இருந்தாலும், சாத்திரங்களின் ஆணைப்படி, பிற பொருட்களைக் காட்டிலும் தனித்துவமான, புகழ்பெற்ற, சிறந்த பொருட்களைப் பிராமணனுக்கு அளிக்க வேண்டும்.(31) க்ஷத்திரியனின் வளர்ச்சிக்கும் பிராமணன் பங்காற்றுகிறான், பிராமணனின் வளர்ச்சிக்கு க்ஷத்திரியன் பங்காற்றுகிறான். எனவே எப்போதும் பிராமணர்கள் மன்னர்களால் சிறப்பாக வழிபடப்பட வேண்டும்”என்றார் {கசியபர்}”.(32)

முசுகுந்தனும், குபேரனும்! – சாந்திபர்வம் பகுதி – 74-மன்னன் முசுகுந்தனுக்கும், குபேரனுக்கும் இடையில் நடந்த மோதலையும் உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; புரோகிதரால் மன்னனுக்கு நேரும் நன்மைகளை எடுத்துச் சொன்னது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] “நாட்டைப் பேணிக் காத்து, வளர்ச்சியடையச் செய்வது மன்னனைச் சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. மன்னனைப் பேணிக் காத்து, அவனை வளர்ச்சியடையச் செய்வது அம்மன்னனின் புரோகிதரைச் சார்ந்தது.(1) எங்குக் குடிமக்களின் கண்ணுக்குப் புலப்படாத அச்சங்கள் களையப்பட்டு, கண்ணுக்குப் புலப்படும் அச்சங்கள் அனைத்தும் மன்னனின் கர வலிமையால் களையப்படுகின்றனவோ அந்த நாடே உண்மையான இன்பத்தை அனுபவிக்கும்.(2) இது தொடர்பாக மன்னன் முசுகுந்தனுக்கும், வைஸ்ரவணனுக்கும் {குபேரனுக்கும்} இடையில் நடைபெற்ற ஒரு பழைய உரையாடல் தென்படுகிறது.(3)மன்னன் முசுகுந்தன், மொத்த உலகத்தையும் அடக்கிய பிறகு, தன் பலத்தைச் சோதிப்பதற்காக அளகையின் தலைவனிடம் {குபேரனிடம்} சென்றான்.(4) மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்} (தன் ஆன்ம பலத்தால்) ஒரு பெரிய ராட்சசப் படையை உண்டாக்கினான். அவை முசுகுந்தனால் வழிநடத்தப்பட்ட படையைக் கலங்கடித்தது.(5) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரா}, தன் படையினர் கொல்லப்படுவதைக் கண்ட மன்னன் முசுகுந்தன், கல்விமானான தனது புரோகிதர் (வசிஷ்டரைக்) கண்டிக்கத் தொடங்கினான்.(6) அதன்பேரில், நேர்மையான மனிதர்களில் முதன்மையான வசிஷ்டர் கடுந்தவங்களைச் செய்து, ராட்சசர்களைக் கொல்லச் செய்து, முசுகுந்தனின் விருப்பத்திற்கான உண்மையான வழிமுறையை உறுதி செய்தார்.(7) மன்னன் வைஸ்ரவணனின் {குபேரனின்} துருப்பினர் கொல்லப்பட்டபோது, அவன் {குபேரன்} முசுகுந்தனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(8)

அந்தப் பொக்கிஷங்களின் தலைவன் {குபேரன்}, “உன்னைவிடப் பலவான்களான பழங்காலத்து மன்னர்கள், தங்கள் புரோகிதர்களின் துணையுடன் இவ்வாறு ஒருபோதும் என்னை அணுகியதில்லை.(9) அவர்கள் அனைவரும் ஆயுதங்களில் திறன் கொண்டவர்களாகவும் பெரும் வலிமை கொண்டவர்களாகவும் இருந்தனர். இன்ப துன்பங்களை அருள்பவனாக என்னைக் கருதிய அவர்கள், வழிபடுவதற்காகவே என்னை அணுகியிருக்கின்றனர்.(10) உண்மையில், உனக்குக் கரவலிமை உண்டானால், அதை வெளிப்படுத்துவதே உனக்குத் தகும். பிராமண வலிமையின் துணையுடன் கூடிய நீ ஏன் இவ்வாறு செருக்குடன் நடந்து கொள்கிறாய்?” என்று கேட்டான்.(11)

இந்த வார்த்தைகளில் கோபமடைந்த முசுகுந்தன், செருக்கேதும், அச்சமேதும் இல்லாமல் பொக்கிஷத்தலைவனிடம் {குபேரனிடம்} நீதியுள்ள, அறிவார்ந்த இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(12) “தான்தோன்றியான பிரம்மன் பிராமணனையும், க்ஷத்திரியனையும் உண்டாக்கினான். அவர்கள் பொது மூதாதையையே கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் பலங்களைத் தனித்தனியாகப் பயன்படுத்தினால், அவர்களால் உலகத்தைத் தாங்க முடியாது. தவங்கள் மற்றும் மந்திரங்களின் சக்தி பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது; கர மற்றும் ஆயுத வலிமை க்ஷத்திரியர்களுக்கு வழங்கப்பட்டது.(14) மன்னர்கள் இந்த இரு வகைச் சக்திகளையும் பெருக்கிக் கொண்டே தங்கள் குடிமக்களைக் காக்க வேண்டும். நான் அவ்வழியிலேயே செயல்படுகிறேன். எனவே, ஓ! அளகையின் தலைவா {குபேரா}, என்னை இவ்வாறு நிந்திக்காதே” என்றான்.(15)

இவ்வாறு சொல்லப்பட்ட வைஸ்ரவணன் {குபேரன்}, முசுகுந்தனிடமும், அவனது புரோகிதரிடமும் {வசிஷ்டரிடமும்}, “(தான்தோன்றியின்) உத்தரவில்லாமல் நான் எவருக்கும் ஒருபோதும் அரசுரிமையை வழங்குவது கிடையாது. அதே போல, உத்தரவில்லாமல் நான் எவரிடம் இருந்தும் அதைப் பறித்தது கிடையாது. ஓ! மன்னா, இதை அறிவாயாக.(16) கட்டுகள் இல்லாத மொத்த உலகத்தையும் நீ ஆள்வாயாக” என்றான்.

இவ்வாறு சொல்லப்பட்ட முசுகுந்தன் {குபேரனிடம்}, பதிலுரையாக,(17) “ஓ! மன்னா, உன்னிடமிருந்து கொடையாக அளிக்கப்படும் அரசுரிமையை அனுபவிக்க நான் விரும்பவில்லை. நான் என் சொந்த கரவலிமையால் கிடைக்கும் அரசுரிமையையே அனுபவிக்க விரும்புகிறேன்” என்றான்”.(18)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “முசுகுந்தனின் இந்த வார்த்தைகளைக் கேட்டும், அம்மன்னன் {முசுகுந்தன்} அச்சமில்லாமல் க்ஷத்திரியக் கடமைகளை நோற்பதைக் கண்டும் வைஸ்ரவணன் {குபேரன்} மிகுந்த ஆச்சரியத்தால் நிறைந்தான்.(19) க்ஷத்திரியக் கடமைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த மன்னன் முசுகுந்தன், தன் கரவலிமையால் மொத்த உலகத்தையும் அடைந்து அதை ஆளத் தொடங்கினான்.(20) அறம்சார்ந்த எந்த மன்னன், பிராமணனை முன்னிலையில் கொண்டு, அவனது துணையுடன் தன் நாட்டை ஆள்கிறானோ, அவன் மொத்த உலகத்தை அடக்குவதிலும், பெரும் புகழை அடைவதிலும் வெல்கிறான்.(21) ஒரு பிராமணன் தினமும் தன் அறச்சடங்குகளைச் செய்ய வேண்டும். க்ஷத்திரியன் எப்போதும் ஆயுதங்களைத் தரித்தவனாக இருக்க வேண்டும். அவ்விருவரே இந்த அண்டத்தில் உள்ள அனைத்திற்கும் உண்மையான உரிமையாளர்கள்” {என்றார் பீஷ்மர்}.(22)

அரசவொழுக்கம்! – சாந்திபர்வம் பகுதி – 75-அரசன் எவ்வாறான நடத்தைகளைக் கொண்டவனாக இருக்க வேண்டும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தன் குடிமக்களை மேன்மையடையச் செய்வதிலும், மறுமையில் புகழுலகங்களை ஈட்டுவதிலும் எந்த மன்னன் வெல்கிறான் என்பதைச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, மன்னன், பரந்த மனம் கொண்டவனாகவும், வேள்விகளைச் செய்பவனாகவும் இருக்க வேண்டும். அவன் நோன்புகளையும், தவங்களையும் நோற்க வேண்டும், மேலும் அவன் தன் குடிமக்களைப் பாதுகாக்கும் கடமையில் அர்ப்பணிப்புள்ளவனாக இருக்க வேண்டும்.(2) தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாக்கும் அவன், அறவோர் வரும்போது எழுந்திருந்து, அவர்களுக்குக் கொடையளித்து அவர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும்.(3) மன்னன் நேர்மையை {அறத்தை} மதித்தால், எங்கும் அது {நேர்மை} மதிக்கப்படும். மன்னனால் விரும்பப்படும் செயல்கள் மற்றும் பொருட்களை, அவனது குடிமக்களும் விரும்புவார்கள்.(4)

மன்னன், எப்போதும் தன் கரங்களில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடன் இருக்கும் காலனைப் போலத் தன் எதிரிகளிடம் நடந்த கொள்ள வேண்டும். அவன் தன் நாட்டில் கள்வர்கள் எங்கிருப்பினும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டும், உறுதியின்மையால் அவன் ஒருபோதும் அவர்களில் எவரையும் மன்னிக்கக்கூடாது. (5) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, மன்னன் தன் பாதுகாப்பில் இருக்கும் குடிமக்கள் ஈட்டும் தகுதியின் {புண்ணியத்தின்} நான்கில் ஒரு பகுதியை ஈட்டுகிறான்.(6) கல்வி, கொடைகள், ஆகுதிகள், தேவர்களை வழிபடுதல் ஆகியவற்றின் மூலம் தன் குடிமக்கள் அடையும் தகுதியில் நான்கில் ஒரு பகுதியை, அந்தக் குடிமக்களைப் பாதுகாப்பதின் மூலம் மட்டுமே மன்னன் அடைந்துவிடுகிறான்.(7) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் புறக்கணிப்பதால் நாட்டில் எழும் எந்தத் துயரின் விளைவாலும் அவனுடைய குடிமக்கள் செய்யும் பாவத்தில் நான்கில் ஒரு பகுதியையும் அவன் அடைகிறான்.(8) மன்னன், கொடூரனாகவும், பேச்சில் உண்மை இல்லாதவனாகவும் மாறுவதால் உண்டாகும் எந்தப் பாவத்திலும், அவன் ஒரு பகுதியை ஈட்டுகிறான் என்று ஒரு சிலரும், மொத்த பாவத்தையும் அடைகிறான் என்று ஒரு சிலரும் சொல்கிறார்கள்.(9)

அத்தகு பாவங்களிலிருந்து மன்னன் எவ்வாறு தூய்மையடையலாம் என்ற வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. கள்வர்களால் ஒரு குடிமகனிடம் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை மீட்பதில் மன்னன் தவறினால், அவன் தன் கருவூலத்திலிருந்தாவது, அல்லது, அஃது இயலாவிட்டாலும், தன்னைச் சார்ந்திருப்பவர்களிடம் அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டாவது அந்தப் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு இழப்பீடு தர வேண்டும்.(10) அனைத்து வகையினரும், பிராமணர்களின் உடலையோ, உயிரையோ காக்க வேண்டியதைப் போலவே பிராமணர்களின் செல்வத்தையும் காக்க வேண்டும். பிராமணர்களுக்கு எதிராகக் குற்றமிழைக்கும் மனிதன் நாடுகடத்தப்பட வேண்டும்.(11) பிராமணனின் செல்வத்தைப் பாதுகாப்பதன் மூலம் அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறு அடையப்படும் பிராமணனின் அருளால் மன்னன் வெற்றிமகுடம் சூட்டுவான்.(12) மேகங்களிடம் இருந்து நிவாரணத்தை நாடும் உயிரினங்களைப் போலவோ, ஒரு பெரிய மரத்திடம் புகலிடத்தை நாடும் பறவைகளைப் போலவோ மனிதர்கள், தகுந்த மன்னனின் பாதுகாப்பை நாடுகிறார்கள்.(13) காமம் நிறைந்த ஆன்மா கொண்டவனும், தன் இச்சைகளை நிறைவுசெய்யவே எப்போதும் முனைபவனும், பேராசைக்காரனும், கொடூரனுமான ஒரு மன்னன், தன் குடிமக்களைப் பாதுகாப்பதில் ஒருபோதும் வெல்வதில்லை” என்றார் {பீஷ்மர்}.(14)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அரசுரிமை அளிக்கும் மகிழ்ச்சி, அல்லது தன்னலம் பேணும் அந்த அரசுரிமையையே கூட நான் ஒருக்கணமும் விரும்பவில்லை. எனினும், அதன் மூலம் ஒருவன் அடையும் தகுதிக்காகவே {புண்ணியத்துக்காகவே} அதை நான் விரும்பினேன். எந்தத் தகுதிக்கும் {புண்ணியத்துக்கும்} அதனுடன் தொடர்பில்லை என்றே {இப்போது} எனக்குத் தெரிகிறது.(15) எனில், எந்தத் தகுதியும் ஈட்டமுடியாத அரசுரிமைக்கான எந்தத் தேவையும் இல்லை. எனவே, தகுதியை {புண்ணியத்தை} ஈட்டும் விருப்பத்தால் நான் காட்டிற்குள் ஓயப் போகிறேன். செங்கோலைப் புறந்தள்ளி, என் புலன்களை அடக்கி, புனிதமான காடுகளுக்குச் சென்று, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு வாழும் துறவியாகி அறத்தகுதிகளை ஈட்டுவதில் முனையப் போகிறேன்” என்றான்[1].(16,17)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா,, உன் இதயத்தின் இயல்பு என்ன என்பதையும், குற்றமில்லாத உன் மனநிலையையும் நான் அறிவேன். எனினும், குற்றமில்லா தன்மையினால் மட்டுமே உன்னால் உன் நாட்டை ஆள முடியாது.(18) உன் இதயம் மென்மையானதாக இருக்கிறது. நீ கருணையுள்ளவனாகவும், அதீத நீதிமானாகவும் இருக்கிறாய். சக்தி இல்லாதவனாகவும், அறவோனாகவும், கருணை நிரம்பியவனாகவும் நீ இருக்கிறாய். எனவே, மக்கள் உன்னை அதிகமாக விரும்புகின்றனர்.(19) நீ உன் தந்தை மற்றும் பாட்டனின் நடத்தையைப் பின்பற்றுவாயாக. நீ பின்பற்ற விரும்பும் நடத்தையை மன்னர்கள் ஒருபோதும் பின்பற்றக்கூடாது.(20) (உன் கடமையைச் செய்த பிறகு) இதுபோன்ற கவலையால் தீண்டப்பட்டவனாக ஒருபோதும் இராதே. குற்றமற்ற {புண்படுத்தா} நடத்தையை நீ ஒருபோதும் பின்பற்றாதே.(21) உன் புத்தியாலும், ஞானத்தாலும் தூண்டப்பட்டு, நீ பின்பற்ற விரும்பும் நடத்தையானது உன் தந்தை பாண்டுவின் ஆசிகளுக்கோ, உன் தாய் குந்தி உனக்காக வேண்டி வருவதற்கோ தகுந்ததில்லை.(22) துணிவு, வலிமை, உண்மை ஆகியவற்றையே உன் தந்தை எப்போதும் உனக்காக வேண்டினான். உயர்ந்த மனத்தையும், பெரும் தகைமையையுமே குந்தி எப்போதும் உனக்காக வேண்டினாள். சிராத்தங்கள் மற்றும் வேள்விகளில் ஸ்வாஹா மற்றும் ஸ்வாதாக்களுடன் அளிக்கப்படும் காணிக்கைகளை, பித்ருக்களும், தேவர்களும் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து எப்போதும் வேண்டுகின்றனர்.(24)

கொடைகள், கல்வி, வேள்விகள், குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவை தகுதியை {புண்ணியத்தைத்} தருபவையாகவோ, பாவம் நிறைந்தவையாகவோ இருப்பினும், அவற்றைப் பயிலவும், நடைமுறைப்படுத்தவுமே நீ பிறந்திருக்கிறாய்.(25) ஓ! குந்தியின் மகனே, மனிதர்கள் தங்கள் மேல் வைக்கப்பட்ட சுமைகளையும், அவர்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்டவற்றையும் சுமப்பதில் தோல்வியுற்றாலும், அவர்களது புகழ் ஒருபோதும் மங்குவதில்லை.(26) ஒரு குதிரை கூட நன்கு பயிற்சியளிக்கப்பட்டால், விழுந்துவிடாமல் சுமையைச் சுமப்பதில் வெல்லும். (அப்படியிருக்கையில் மனிதனாக இருக்கும் உன்னைக் குறித்த என்ன சொல்ல வேண்டும்?) வெற்றியானது (செயல்களையும், சொற்களையும்} செயல்களைச் சார்ந்ததாகச் சொல்லப்படுவதால், ஒருவனுடைய செயல்களும், வார்த்தைகளும் முறையானவையாக இருந்தால் அவன் ஒருபோதும் நிந்தனைக்குள்ளாக மாட்டான்.(27) இல்லறம் நோற்கும் அறவோனாகவோ, மன்னனாகவோ, பிரம்மச்சாரியாகவோ எவ்வாறானவனாக இருப்பினும் எந்த மனிதனும் இடறாமல் செயல்படுவதில் வென்றதில்லை.(28) செயல்படாமல் இருப்பதே பாவம் நிறைந்தது என்பதால், அனைத்துச் செயல்களில் இருந்தும் விலகாமல், சிறு தகுதியாவது {புண்ணியமாவது} இருக்கும் நன்மையான செயலைச் செய்வதே சிறந்ததாகும்.(29)

நற்பிறவி கொண்டவனும், நீதிமானுமான ஒருவன் செழிப்படைவதில் வெல்கிறான் எனும்போது, மன்னனானவன், தன் காரியங்கள் அனைத்திலும் செழிப்பை அடைவதில் வெல்வான்.(30) ஒரு நாட்டை அடையும் அறம்சார்ந்த மன்னன் ஒருவன், கொடைகளால் {தானத்தால்} சிலரையும், பலத்தால் (தண்டத்தால்) சிலரையும், இனிமையான வார்த்தைகளால் {சாமத்தால்} சிலரையும் அடிபணியச் செய்ய முயல வேண்டும்.(31) நற்பிறவி கொண்டவர்களும், தங்கள் வாழ்வாதார இழப்பை அஞ்சும் கல்விமான்களும் எவனைச் சார்ந்திருக்கிறார்களோ, எவனை நம்பி நிறைவுடன் வாழ்கிறார்களோ, அவனைவிட {அந்த மன்னனைக் காட்டிலும்} அறவோன் வேறு எவனும் இல்லை”[2] என்றார் {பீஷ்மர்}.(32)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ ஐயா, சொர்க்கத்திற்கு உகந்த நடத்தைகள் என்ன? அவற்றில் இருந்து பெறப்படும் பெரும் புகழின் இயல்பு என்ன? அதிலிருந்து அடையப்படும் உயர்ந்த செழிப்பு யாது? நீர் அறிந்தால் இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(33)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அச்சத்திலிருக்கும் ஒருவன் எந்த மனிதனிடம் ஒரு கணமேனும் நிவாரணம் அடைகிறானோ, அவனே நம்மில் சொர்க்கத்திற்கு மிகவும் தகுந்தவனாவான். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(34) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, உற்சாகமாகக் குருக்களின் மன்னன் ஆவாயாக, சொர்க்கத்தை அடைவாயாக, நல்லோரைக் காத்து, தீயோரைக் கொல்வாயாக.(35) மேகங்களின் தலைவனிடம் இருந்து  {வருணபகதேவனிடமிருந்து காக்கப்படும்} அனைத்து உயிரினங்களைப் போலவும், இனிய கனிகளுடன் கூடிய பெருமரத்திடம் இருந்து பறவைகளைப் போலவும், நியாயவான்கள் அனைவருடன் சேர்ந்த உன் நண்பர்கள் யாவரும்  உன்னிடமிருந்து ஆதரவைப் பெற்றுக் கொள்ளட்டும்.(36) கண்ணியமானவனும், துணிவுமிக்கவனும், தாக்கவல்லவனும், கருணை கொண்டவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்பவனும், தகைமையாளனும், நீதிமானுமான ஒருவனின் பாதுகாப்பையே மனிதர்கள் நாடுகிறார்கள்” என்றார் {பீஷ்மர்}.(37)

பிராமணப் பண்புகள்! – சாந்திபர்வம் பகுதி – 76-பிராமணனின் பண்புகளையும், அவன் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பிராமணர்களில் சிலர் தங்கள் வகைக்குரிய கடமைகளில் ஈடுபடுகின்றனர், அதே வேளையில் வேறு சிலரோ வேறு கடமைகளில் ஈடுபடுகின்றனர். இந்த இரண்டு வகையினருக்கிடையிலான வேறுபாட்டை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, கல்விமான்களும், நற்பண்புகளைக் கொண்டோரும், சமபார்வை கொண்டோருமான பிராமணர்கள் பிரம்மனுக்கு இணையானவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(2)
{வேதங்களான} ரிக்குகள், யஜுஸ்கள் மற்றும் சாமங்களை அறிந்தவர்களும், தங்கள் வகைக்கான நடைமுறைகளில் அர்ப்பணிப்பு கொண்டவர்களுமான அவர்கள் தேவர்களுக்கு இணையானவர்களாவர்.(3)

எனினும், அவர்களில் {பிராமணர்களில்} நற்பிறவியற்றோர், தங்கள் வகைக்குரிய கடமைகளில் அர்ப்பணிப்பில்லாதோர், அதையும் தவிரத் தீய நடைமுறைகளைச் செய்வோர் ஆகியோர் சூத்திரர்களைப் போன்றோராவர்.(4)

ஓர் அறம் சார்ந்த மன்னன், வேதமறியாதவர்களும், வழிபடுவதற்குத் தங்கள் சொந்த நெருப்புகள் இல்லாதவர்களுமான பிராமணர்களைக் கப்பம் கட்டும்படியும், கட்டணமில்லாமல் பொதுச் சேவையில் ஈடுபடும்படியும் பணிக்க வேண்டும்.(5)

நீதிமன்றங்களில் மக்களை அழைக்க நியப்பட்டவர்கள் கட்டணத்தின் நிமித்தம் மற்றவர்களுக்காக வழிபாடுகளைச் செய்பவர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திர்களின் வேள்விகளைச் செய்பவர்கள், மொத்த கிராமத்தின் சார்பாக வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுபவர்கள் ஆகிய இந்த ஐவரும் பிராமணர்களுக்கு மத்தியில் சண்டாளர்களாகக் கருதத்தக்கவர்களாவர்[1].(6)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களில் ரித்விக்குகள், புரோகிதர்கள், அமைச்சர்கள், தூதர்கள் ஆகியோர் க்ஷத்திரியர்களுக்கு இணையானவர்களாவார்கள்.(7) 

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களில் குதிரைகள், அல்லது யானைகள், அல்லது தேர்களைச் செலுத்துபவர்களும், காலாட்படை வீரர்களும் வைசியர்களுக்கு இணையானவர்களாவார்கள்.(8)

மன்னனின் கருவூலம் நிரம்பவில்லையெனில், அவன் இவர்களிடம் இருந்து கப்பம் {வரி} வசூலிக்கலாம். எனினும், கப்பம் திரட்டும்போது, அம்மன்னன், தேவர்களுக்கோ, (தங்கள் நடத்தையால்) பிரம்மனுக்கோ இணையான பிராமணர்களைத் தவிர்க்க வேண்டும்.(9) பிராமணர்களைத் தவிர்த்த மற்ற வகையினர் அனைவருடைய செல்வங்களுக்கும் மன்னனே தலைவன் என்று வேதங்கள் சொல்கின்றன. சட்டப்படியான தங்கள் கடமைகளில் இருந்து தவறிய பிராமணர்களின் செல்வத்தையும் அவன் எடுத்துக் கொள்ளலாம். (10)

தங்கள் கடமைகளை நோற்காத பிராமணர்களிடம் ஒரு மன்னன் எந்த அலட்சியமும் கொள்ளக்கூடாது. தன் மக்களை அறம்சார்ந்தவர்களாக்கும் நிமித்தமாக அவன், சிறந்தவர்களிடம் இருந்து அவர்களைப் பிரித்துத் தண்டிக்க வேண்டும்.(11) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, எவனுடைய ஆட்சிப்பகுதியில் ஒரு பிராமணன் கள்வனாகிறானோ, அந்தக் கெட்ட காரியத்திற்குக் காரணம் அந்த மன்னனே என்று கல்விமான்கள் கருதுகின்றனர்.(12) வேதங்களை அறிந்தவனும், நோன்புகளை நோற்பவனுமான ஒரு பிராமணன், தன் வாழ்வாதாரத்தைத் தாங்கிக் கொள்ளும் தேவைகளுக்காக ஒரு கள்வனாக மாறினால், அத்தேவைகளைக் கொடுத்து அவனை ஆதரிக்க வேண்டியது மன்னனின் கடமையாகும்.(13) ஓ! எதிரிகளை எரிப்பவனே, அவனைத் தாங்கிக் கொள்வதற்கான பொருட்களைக் கொடுத்த பிறகும் அவன் களவைத் தவிர்க்கவில்லையெனில், அவன் அவனுடைய சொந்தங்களுடன் சேர்ந்து நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(14)

கைகேய மன்னனும், ராட்சசனும்! – சாந்திபர்வம் பகுதி – 77-எவருடைய செல்வத்துக்கெல்லாம் அரசன் தலைவனாகக் கருதப்படுகிறான் என்பதையும், மன்னன் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்துக் கேகய மன்னனுக்கும் ராட்சசனுக்கும் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்துக் காளையே, எவருடைய செல்வத்திற்கு மன்னன் தலைவனாகக் கருதப்படுகிறான்? மன்னன் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன? ஓ! பாட்டா, இது குறித்து என்னிடம் உரைப்பீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிராமணர்களைத் தவிர்த்து, அனைவருக்குச் சொந்தமான செல்வத்துக்கும், தங்கள் முறையான கடமைகளை நோற்காத பிராமணர்களுக்குச் சொந்தமான செல்வத்துக்கும் மன்னனே தலைவன் என்று வேதங்கள் அறிவிக்கின்றன.(2) தங்கள் கடமைகளை நோற்காத பிராமணர்களை மன்னன் {தண்டனை இல்லாமல் தப்ப} விட்டுவிடக்கூடாது. இதுவே பண்டைய மன்னர்களின் பாரம்பரிய வழக்கமாகும் என்று நீதிமான்கள் சொல்கின்றனர்.(3) ஓ! ஏகாதிபதி, எவனுடைய ஆட்சிப்பகுதியில் உள்ள ஒரு பிராமணன் கள்வனாகிறானோ, அந்த மன்னனே அக்குற்றத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறான். அவ்வழக்கில் அவனே பாவம் நிறைந்தவனாகிறான்.(4) அத்தகு சூழ்நிலையின் விளைவால் மன்னர்கள் தங்களையே நிந்தனைக்குத் தகுந்தவர்களாகக் கருதுகிறார்கள். எனவே நீதிமான்களான மன்னர்கள் அனைவரும், பிராமணர்கள் தங்களைத் தாங்கிக் கொள்வதற்கான வழிமுறைகளை அவர்களுக்கு வழங்குகின்றனர்.(5)

ஒரு ராட்சசன், கைகேயர்களின் மன்னனைக் கடத்தும்போது அவனிடம் அம்மன்னன் பேசியதாக உள்ள ஒரு பழைய உரையாடல் இது தொடர்பாகத் தென்படுகிறது.(6) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, கடும் நோன்புகளைக் கொண்டவனும், வேதங்களை அறிந்தவனுமான கைகேயர்களின் மன்னன், காட்டில் வசித்துவந்தபோது, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒரு ராட்சசனால் பலவந்தமாகக் கைப்பற்றப்பட்டான்.(7) {அப்போது} அம்மன்னன், “என் ஆட்சிப்பகுதிகளில் திருடன் எவனும், தீய நடத்தை கொண்டவன் எவனும், மதுவுண்பவன் எவனும் கிடையாது. புனித நெருப்பு இல்லாதவனோ, வேள்விகளைச் செய்யாதவனோ எவனும் என் ஆட்சிப்பகுதிகளில் கிடையாது. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தை அடைய முடிந்தது?[1](8) கல்வியில்லா, நோன்பு நோற்கா, சோமம் பருகா பிராமணர் எவரும் என் ஆட்சிப்பகுதிகளில் கிடையாது. புனித நெருப்பு இல்லாதவனோ, வேள்விகளைச் செய்யாதவனோ எவனும் என் ஆட்சிப்பகுதிகளில் கிடையாது[2]. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(9) என் ஆட்சிப்பகுதிகளில் தக்ஷிணையுடன் நிறைவுபெறாத வேள்வி ஏதும் செய்யப்படுவதில்லை. என் ஆட்சிப்பகுதிகளில் நோன்புகளை நோற்காதோர் எவரும் வேதங்களைக் கற்பதில்லை. இவ்வாறிருக்கையில், உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(10)

என் நாட்டில் உள்ள பிராமணர்கள் கற்பிக்கவும், கற்கவும், வேள்விகள் செய்யவும், மற்றவர்களின் வேள்விகளைச் செய்து கொடுக்கவும், கொடையளிக்கவும், கொடைபெறவும் செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் அந்த ஆறு செயல்பாடுகளையும் செய்கிறார்கள்.(11) என் நாட்டில் உள்ள பிராமணர்கள் அனைவரும் தங்கள் வகைக்கான கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்கிறார்கள். அவர்கள் மென்மையானவர்களாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவர்களாகவும் இருப்பதால் அனைத்தும் வழங்கப்பட்டவர்களாகவும், வழிபடப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறிருக்கையில், உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(12)

என் நாட்டில் உள்ள க்ஷத்திரியர்கள் அனைவரும், தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஒருபோதும் இரந்து கேட்காமல் கொடுக்கவே செய்கிறார்கள். மேலும் அவர்கள் உண்மையையும், அறத்தையும் அறிந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கற்பிக்காமல் எப்போதும் கற்கவே செய்கிறார்கள். வேள்விகளைச் செய்கிறார்களேயன்று ஒருபோதும் மற்றவர்களின் வேள்வியை நடத்துவதில்லை. அவர்கள் பிராமணர்களைப் பாதுகாக்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் போரில் புறமுதுகிடுவதில்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(13,14)

என் ஆட்சிப்பகுதிகளில் உள்ள வைசியர்கள் அனைவரும் தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கின்றனர். அவர்கள் எளிமையாகவும், வஞ்சகமில்லாமலும் உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியவற்றின் மூலம் தங்கள் வாழ்வாதாரங்களை அடைகின்றனர். அவர்கள் அனைவரும் கவனம் நிறைந்தவர்களாகவும், அறச்சடங்குகளையும், அற்புத நோன்புகளை நோற்பவர்களாகவும், உண்மைநிறைந்த பேச்சு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.(15) அவர்கள், விருந்தினர்களுக்கு உரியதைக் கொடுப்பவர்களாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், தங்கள் உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் பிணைப்புள்ளவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(16)

என் நாட்டில் உள்ள சூத்திரர்கள், தங்கள் வகைக்குரிய கடமையை நோற்பவர்களாகவும், பணிவுடையவர்களாகவும் இருந்து, முறையான தொண்டாற்றி, மூன்று வகையினரிடமும் எந்தத் தீய எண்ணமும் இன்றி அவர்களுக்காகக் காத்திருக்கின்றனர் {அவர்களுக்குப் பணிவிடை செய்கின்றனர்}. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(17)

ஆதரவற்றோர், முதியோர், பலவீனர், நோய்வாய்ப்பட்டார், (பாதுகாப்பவரில்லா) பெண்கள் ஆகியோர் அனைவருக்கும் அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து நான் ஆதரிக்கிறேன். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(18) பழங்காலத்தில் இருந்து வழக்கத்தில் இருந்து வரும் நாடுகள் சார்ந்த, குடும்பங்கள் சார்ந்த, சிறப்புக்குரிய பழக்கவழக்கங்கள் எதையும் ஒருபோதும் நான் ஒழித்ததில்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(19)

என் நாட்டில் உள்ள தவசிகள் பாதுகாக்கப்பட்டும், வழிபடப்பட்டும் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கௌரவிக்கப்படுபவர்களாக, உணவு கொடுத்து பராமரிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(20) பிறருக்குக் கொடுக்காமல் நான் உண்பதில்லை. அடுத்தவரின் மனைவியரிடம் நான் செல்வதில்லை. நான் தனியாக விளையாடுவதோ, மகிழ்வதோ இல்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(21) பிரம்மச்சாரியல்லாத எவரும் என் நாட்டில் உணவுக்கு இரப்பதில்லை. பிக்ஷு வாழ்வு முறையை நோற்பவர்கள் எவரும் பிரம்மச்சாரியாக விரும்புவதில்லை. ரித்விக்காக இல்லாத எவரும் வேள்வி நெருப்பில் (தெளிந்த நெய்யாலான) ஆகுதிகளை ஊற்றுவதில்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(22) கற்றறிந்தோர், முதியோர், தவங்களில் ஈடுபடுவோர் ஆகியோர் நான் ஒருபோதும் அவமதித்ததில்லை. மொத்த மக்களும் உறங்கும்போது, (அவர்களுக்குக் காவலாக) நான் விழித்திருக்கிறேன். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(23)

என் புரோகிதர் தன்னை அறிந்த ஞானியாக இருக்கிறார். அவர் தவங்களைச் செய்பவராகவும், அனைத்து கடமைகளை அறிந்தவராகவும் இருக்கிறார். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவர் என் நாட்டில் முழு அதிகாரம் கொண்டவராக இருக்கிறார்.(24) கொடைகளின் மூலம் அறிவையும், உண்மை மற்றும் பிராமணர்களைப் பாதுகாப்பதன் மூலம் சொர்க்கத்தில் உள்ள அருள் உலகங்களையும் அடைய நான் விரும்புகிறேன். தொண்டால் நான் என் ஆசான்களுடன் பிணைப்புடன் இருக்கிறேன். எனக்கு ராட்சசர்களிடம் எந்த அச்சமும் கிடையாது.(25)

என் நாட்டில் விதவைகளோ, தீய பிராமணர்களோ, தங்கள் கடமைகளில் இருந்து தவறிய பிராமணர்களோ, வஞ்சகர்களோ, கள்வர்களோ, தகாதோரின் வேள்விகளைச் செய்து கொடுக்கும் பிராமணர்களோ, பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் பாவிகளோ எவரும் கிடையாது. எனக்கு ராட்சசர்களிடம் எந்த அச்சமும் கிடையாது.(26)
என் உடலில் ஆயுதங்களால் ஏற்பட்ட காயத்தால் உண்டான வடு இல்லாத இரண்டு விரல் அகல இடம் கூடக் கிடையாது. நான் எப்போதும் அறத்திற்காகப் போரிடுகிறேன். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(27) என் நாட்டின் மக்கள், நான் அவர்களின் பசுக்களையும், பிராமணர்களையும் பாதுகாப்பேன் என்பதாலும், வேள்விகளைச் செய்வேன் என்பதாலும் எப்போதும் எனக்கு ஆசி கூறுகின்றனர். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என்னை அடைய முடிந்தது?” என்று கேட்டான் {கைகேய மன்னன்}.(28)

ராட்சசன், “ஓ! கைகேயர்களின் மன்னா, அனைத்துச் சூழ்நிலைகளிலும் நீ உன் கடமைகளை நோற்றவனாக இருப்பதால், நீ உன் வசிப்பிடத்திற்குச் செல்லலாம். நான் உன்னை விடுகிறேன், நீ அருளப்பட்டிருப்பாயாக.(29) ஓ! கைகேயர்களின் மன்னா, பசுக்கள் மற்றும் பிராமணர்களைப் பாதுகாப்போரும், தங்கள் குடிமக்கள் அனைவரையும் பாதுகாப்போரும் ராட்சசர்களிடமும், பாவம் நிறைந்த மனிதர்களிடமும் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை.(30) எந்த மன்னர்கள் பிராமணர்களை வழிகாட்ட விடுகிறார்களோ, எவர்களின் வலிமை பிராமணர்களைச் சார்ந்து இருக்கிறதோ, எவர்களது குடிமக்கள் விருந்தோம்பும் கடமைகளைச் செய்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தை அடைவதில் எப்போதும் வெல்கிறார்கள்” என்றான்.”(31)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “எனவே, நீ பிராமணர்களைப் பாதுகாக்க வேண்டும். உன்னால் பாதுகாக்கப்படும் அவர்கள், பதிலுக்கு உன்னைப் பாதுகாப்பார்கள். ஓ! மன்னா, அவர்களுடைய ஆசிகள் அறம்சார்ந்த நடத்தை கொண்ட மன்னர்களுக்கு எப்போதும் கிடைக்கும்.(32) தங்கள் கடமைகளை நோற்காத பிராமணர்களை அறத்தின் நிமித்தமாகத் தண்டித்து, சிறந்தவர்களிடம் இருந்து அவர்களைத் (தனிப்பட்ட வகுப்பாக) தனிமைப்படுத்த வேண்டும்.(33) நகர மற்றும் மாகாண மக்களிடம் இவ்வழியில் நடந்து கொள்ளும் மன்னன் ஒருவன் இம்மையில் செழிப்பையும், இந்திரனுடன் கூடிய சொர்க்கத்தில் வசிப்பிடத்தையும் அடைகிறான்” {என்றார் பீஷ்மர்}.(34)

சூத்திரனும் மன்னனாகத் தகுந்தவனே! – சாந்திபர்வம் பகுதி – 78-ஆபத்துக் காலங்களில் பிராமணர்கள் செய்யக்கூடிய, செய்யகூடாத தொழில்கள்; மன்னன் பலவீனமடையும்போது, அவனுக்குப் பலத்தை அளிக்க வேண்டிய பிராமணனின் கடமை; மக்களைப் பாதுகாப்பதே முதல் கடமை, அதைச் சூத்திரன் செய்தாலும், அவன் மன்னனாகலாம் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஆபத்துக் காலங்களில் ஒரு பிராமணன் க்ஷத்திரியக் கடமைகளைப் பயின்று தன்னை ஆதரித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், எந்தக் காலத்திலாவது அவன் வைசியர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பயில முடியுமா?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு பிராமணன் தன் வாழ்வாதாரத்தை இழந்து ஆபத்தில் வீழும்போது, க்ஷத்திரியக் கடமைகளுக்கு அவன் தகுந்தவனாக இல்லையென்றால், நிச்சயம் அவன் வைசியர்களின் நடைமுறைகளைப் பின்பற்றி, உழவு, கால்நடை வளர்த்தல் ஆகியவற்றின் மூலம் தன்னைத் தாங்கிக் கொள்ளலாம்” என்றார்.(2)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு பிராமணன் வைசியக் கடமைகளைப் பின்பற்றி, சொர்க்கம் செல்லும் எதிர்பார்ப்பைத் தொலைக்காமல் அவன் என்னென்ன பொருட்களை விற்கலாம்?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒரு பிராமணன், மதுவகைகள், உப்பு, எள், பிடரி கொண்ட விலங்குகள், காளைகள், தேன், இறைச்சி மற்றும் சமைத்த உணவு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றை விற்பதால் ஒரு பிராமணன் நரகத்தில் மூழ்குவான்.(4,5) ஒரு பிராமணன் ஓர் ஆட்டை விற்பதனால், அவன் அக்னி தேவனை விற்ற பாவத்தை இழைத்தவனாகிறான்; குதிரையை விற்பதனால் சூரிய தேவனை விற்ற பாவத்தையும், சமைத்த உணவை விற்பதனால் நிலத்தை விற்ற பாவத்தையும், ஒரு பசுவை விற்பதனால் வேள்வி மற்றும் சோமச்சாற்றை விற்ற பாவத்தையும் இழைத்தவனாகிறான்.(6) சமைத்த உணவை மற்றாகக் கொடுத்து, சமைக்கப்படாத உணவை வாங்குவதை நல்லோர் மெச்சுவதில்லை. எனினும், ஓ! பாரதா, சமைத்த உணவை அடைவதற்காகச் சமைக்கப்படாத உணவை மாற்றாகக் கொடுக்கலாம்.(7) “சமைக்கப்பட்ட உன் உணவை நாங்கள் உண்கிறோம். (நாங்கள் மாற்றாகக் கொடுக்கும்) இந்தக் கச்சாப் பொருட்களை நீ சமைப்பாயாக” என்ற ஒப்பந்தத்தில் எந்தப் பாவமுமில்லை[1].(8) ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட பழக்கவழக்கங்களின்படி நடந்து கொள்ளும் மனிதர்களின் நித்திய நடைமுறைகளைக் குறித்துச் சொல்கிறேன், கேட்பாயாக.(9) “இதை நான் உனக்குக் கொடுக்கிறேன். பதிலுக்கு இந்தப் பொருளை எனக்குக் கொடுப்பாயாக” என்ற இத்தகு ஒப்பந்தத்தின் மூலம் பரிமாற்றம் செய்து கொள்வது நீதியே. எனினும் பலவந்தமாகப் பொருட்களை எடுத்துக் கொள்வது பாவம் நிறைந்ததாகும்.(10) இதுவே முனிவர்கள் மற்றும் பிறரின் பழங்காலப் பழக்கவழக்கமாகும். இது நீதியே என்பதில் ஐயமில்லை” என்றார் {பீஷ்மர்}.(11)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, அனைத்து வகையினரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைக் கைவிட்டு, மன்னனுக்கு எதிராக ஆயுதம் எடுப்பார்களேயானால், மன்னனின் சக்தி குறைவை அடையும்.(12) அப்போது அம்மன்னனால் எந்த வழிமுறைகளின் மூலம் மக்களின் பாதுகாவலனாகவும், புகலிடமாகவும் ஆக முடியும்? ஓ! மன்னா, என்னிடம் விரிவாகப் பேசி இந்த என் ஐயத்தைத் தீர்ப்பீராக” என்று கேட்டான்.(13)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்தகு சந்தர்ப்பங்களில், பிராமணர்களின் தலைமையிலான அனைத்து வகையினரும் கொடைகள், தவங்கள், வேள்விகள், அமைதி, தற்கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் தங்கள் நன்மையை நாட வேண்டும்.(14) அவர்களில் வேத பலம் கொண்டோர் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எழுந்து, இந்திரனுக்குப் பலமூட்டும் தேவர்களைப் போல, மன்னனின் பலத்தை (வேத சடங்குகளின் மூலம்) மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புக் கொள்ள வேண்டும்.(15) மன்னனின் சக்தி சிதைவுறும்போது பிராமணர்களே அவனது புகலிடமாகச் சொல்லப்படுகிறார்கள். ஞானம் கொண்ட மன்னன், பிராமண சக்தியின் மூலமே தன் சக்தியை மேம்படுத்த முனைய வேண்டும்.(16) வெற்றிமகுடம் சூடிய மன்னன், அமைதியை நிலைநிறுத்த முனையும்போது, அனைத்து வகையினரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும்.(17) கள்வர்கள் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் உடைத்து, எங்கும் அழிவைப் பரப்பும்போது, அனைத்து வகையினரும் ஆயுதம் எடுக்க வேண்டும். ஓ! யுதிஷ்டிரா, அவ்வாறு செய்வதால் அவர்கள் எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை” என்றார்.(18)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “க்ஷத்திரியர்கள் அனைவரும் பிராமணர்களுக்குப் பகைவர்களானால், அப்போது பிராமணர்களையும், வேதங்களையும் எவன் பாதுகாக்க வேண்டும்? அப்போது பிராமணர்களின் கடமையென்ன? எவன் அவர்களுடைய புகலிடமாக இருப்பான்?” என்று கேட்டான்.(19)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தவங்கள், பிரம்மச்சரியம், ஆயுதங்கள், (உடல்) வலிமை ஆகியவற்றின் மூலம், வஞ்சகத்தின் உதவியுடனோ, இல்லாமலோ க்ஷத்திரியர்கள் அடக்கப்பட வேண்டும். க்ஷத்திரியன் தவறாக நடந்து கொண்டால், அதிலும் குறிப்பாகப் பிராமணர்களிடம் தவறாக நடந்து கொண்டால், வேதங்களே அவர்களை அடக்கும். க்ஷத்திரியர்கள் பிராமணர்களிடம் இருந்து உதித்தவர்களே ஆவர்.(21) நெருப்பு நீரிலிருந்து உதிக்கிறது; க்ஷத்திரியன் பிராமணனிலிருந்தும்; இரும்பு கல்லில் இருந்தும் உண்டாகின்றன. ஆனால் இவை தங்கள் பிறப்பின் மூலத்தோடு தொடர்படுகையில் தணிவையடைகின்றன.(22) இரும்பு கல்லைத் தாக்கும்போது, அல்லது நெருப்பு நீருடன் மோதும்போது, அல்லது க்ஷத்திரியன் பிராமணனிடம் பகைமைபாராட்டும்போது, இந்த மூன்றின் பலமும் அழிவடைகிறது.(23) ஓ! யுதிஷ்டிரா, இவ்வாறு சக்தியும், வலிமையும் என்னதான் பெரியனவாகவும், தடுக்கப்பட முடியாதனவாகவும் இருப்பினும், க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்கு எதிராகத் திருப்பப்படும்போது தணிவடைகின்றனர்.(24)

பிராமணர்களின் சக்தி மென்மையடையும்போதும், க்ஷத்திரிய சக்தி பலவீனமடையும்போதும், மனிதர்கள் அனைவரும் பிராமணர்களிடம் தவறாக நடந்து கொள்ளும்போதும்,(25) பிராமணர்களையும், அறநெறியையும், தங்களையும் காப்பாற்றிக் கொள்ளப் பெரும் மனோ பலத்துடன், நீதியின் பாதையில் செல்ல விரும்பும் எவர்கள், மரணம் குறித்த அச்சமனைத்தையும் விடுகிறார்களோ, அவர்கள் மறுமையில் உயர்ந்த அருள் உலகங்களை வெல்வார்கள். பிராமணர்களின் நிமித்தமான அனைத்து மனிதர்களும் ஆயுதமெடுக்க வேண்டும்.(26,27) துணிவுமிக்க எவர்கள் பிராமணர்களுக்காகப் போராடுகிறார்களோ, அவர்கள், வேதங்களை எப்போதும் கவனமாகக் கற்றவர்கள், கடுந்தவங்களைச் செய்தவர்கள், நோன்பிருந்து தங்கள் உடல்களைச் சுடர்மிக்க நெருப்பில் விட்டவர்கள் ஆகியோருக்காகச் சொர்க்கத்தில் ஒதுக்கப்பட்ட புகழுலகங்களை அடைவார்கள்.(28) மற்ற மூன்று வகையினருக்காக ஆயுதம் ஏந்தும் பிராமணன் பாவமிழைத்தவனாக மாட்டான். அத்தகு சூழ்நிலையில் உயிரை விடுவதை விட உயர்ந்த கடமையேதும் இல்லை என்று மக்கள் சொல்கின்றனர்.(29)

பிராமணர்களின் எதிரிகளைத் தண்டிக்க முயன்று, இவ்வாறு தங்கள் உயிரை விடுபவர்கள் அருளப்பட்டிருப்பாராக. நான் அவர்களை வணங்குகிறேன். அவர்களுக்கான உலகத்தை நாம் அடைவோமாக. அந்த வீரர்கள் பிரம்ம லோகத்தை அடைவார்கள் என்று மனுவே சொல்கிறார்.(30) குதிரை வேள்வியில் இறுதி நீராடலைச் செய்து தங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடையும் மனிதர்களைப் போலவே, தீய மனிதரோடு போராடுகையில் ஆயுத முனைகளில் இறப்பவர்களும் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறார்கள்.(31) இடத்திற்கும், காலத்திற்கும் தக்கபடி, நீதி அநீதியாகவும், அநீதி நீதியாகவும் மாறுகின்றன. (மனித செயல்பாட்டின் தன்மைகளைத் தீர்மானிப்பதில்) இடத்திற்கும், காலத்திற்கும் இத்தகு சக்தி இருக்கிறது.(32) மனிதநேயத்திற்கு நட்பாக இருப்பவர்கள், கொடூரச் செயல்களைச் செய்திருந்தாலும் உயர்ந்த சொர்க்கத்தை அடைந்திருக்கிறார்கள். நீதிமிக்க க்ஷத்திரியர்கள், பாவம் நிறைந்த செயல்களைச் செய்தாலும் அருளப்பட்ட முடிவுகளை அடைந்திருக்கிறார்கள்[2].(33) தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, பிற வகையினரை அவர்களது கடமைகளைச் செய்ய வைக்க, கள்வர்களைத் தண்டிக்க என்ற இந்த மூன்று சந்தர்ப்பங்களில் ஆயுதங்களை எடுப்பதால் ஒரு பிராமணன் எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை” என்றார் {பீஷ்மர்}.(34)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கள்வர்கள் தலைதூக்கி, குழப்பத்தின் விளைவால் வகை {வர்ணக்} கலப்பு தொடங்கி, க்ஷத்திரியர்களும் பலவீனமடைந்திருந்தால், ஒரு க்ஷத்திரியனைத் தவிர வேறு ஒரு பலமிக்க மனிதன், மக்களைக் காப்பதற்காக அந்தக் கள்வர்களை அடக்க முனைந்தால்[3],(35) ஓ! மன்னர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, உண்மையில் அந்தப் பலமிக்க மனிதன், பிராமணனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ இருந்தால், மேலும் அவன் நீதியுடன் செங்கோல் தரித்து மக்களைப் பாதுகாப்பதில் வென்றால், அவனது செயல் நியாயமானதாகக் கொள்ளப்படுமா? அல்லது, அந்தக் கடமையை நிறைவேற்றியதற்காக விதிமுறைகளால் அவன் அடக்கப்படுவானா? க்ஷத்திரியர்கள் இழிவடையும்போது, பிற வகையினர் ஆயுதமெடுக்க வேண்டும் என்றே {எனக்குத்} தோன்றுகிறது” என்று சொன்னான்[4].(37)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அவன் சூத்திரனாகவோ, வேறு வகையைச் சார்ந்தவனாகவோ இருப்பினும், தெப்பமில்லா ஓடையில் தெப்பமாகவும், கடப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லாத இடத்தில் கடக்கும் வழிமுறையாகவும் உள்ள அவன், நிச்சயம் அனைத்து வழியிலும் மதிக்கப்படத் தகுந்தவனே.(38) ஓ! மன்னா, ஆதரவற்ற மனிதனும், ஒடுக்கப்பட்டவனும், கள்வர்களால் பீடிக்கப்பட்டவனும் எவனை நம்பி மகிழ்ச்சியாக வாழ்கிறார்களோ, அந்த மனிதன், ஒரு சொந்தக்காரனைப் போலவே அனைவராலும் அன்புடன் வழிபடத்தகுந்தவனாவான். ஓ! குருகுலத்தவனே, பிறரின் அச்சத்தை விலக்குபவன் எவனோ, அவன் எப்போதும் மதிப்புக்குத் தகுந்தவனே ஆவான்.(39,40) சுமைகளைத் தாங்காத காளைகள், அல்லது, பால் கறக்காத பசுக்கள், அல்லது வெறுமையாய் {மலடாய்} இருக்கும் மனைவி ஆகியவற்றால் யாது பயன்? அதே போலவே, பாதுகாப்பை வழங்க முடியாத ஒரு மன்னனால் யாது பயன்?(41) வேத அறிவில்லா பிராமணனும், பாதுகாப்பை வழங்க முடியாத மன்னனும், மரத்தால் செய்யப்பட்ட யானையையோ, தோலால் செய்யப்பட்ட மானையோ, செல்வமற்ற மனிதனையோ, அலியையோ, களர் நிலத்தையோ போன்றவர்களே. அவர்கள் இருவரும் மழைபொழியா மேகத்தைப் போன்றவர்களே.(42,43) எப்போதும் நல்லோரைப் பாதுகாத்து, தீயோரை அடக்கும் எந்த மனிதனும், மன்னனாகவும், உலகை ஆளவும் தகுந்தவனே” என்றார் {பீஷ்மர்}.(44)

வேள்விகளும், தவங்களும்! – சாந்திபர்வம் பகுதி – 79-ரித்விக்குகளின் நடத்தை மற்றும் பண்புககளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; வேள்விகளைக் குறித்தும், தவங்களைக் குறித்தும் சொன்னது; தவத்தின் மேன்மை…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நம் வேள்விகளில் புரோகிதர்களாக {ரித்விக்குகளாக} நியமிக்கப்படும் மனிதர்களின் நடத்தையும், செயல்பாடுகளும் எவ்வாறு இருக்க வேண்டும்? ஓ! மன்னா {பீஷ்மரே}, அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்க வேண்டும்? ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{சாமவேதமான} சாமங்கள் உள்ளிட்ட சந்தங்களையும், சுருதிகளில் சொல்லப்பட்டுள்ள சடங்குகள் அனைத்தையும் அறிந்தோரும், மன்னனின் செழிப்புக்கு வழிவகுக்கும் அறச்செயல்கள் அனைத்தையும் செய்யத்தக்கவர்களுமான பிராமணர்களே புரோகிதர்களாக {ரித்விக்குகளாகத்} தகுந்தவர்கள் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(2) அவர்கள் அர்ப்பணிப்புடன் கூடிய மாறா பற்றுறுதியுடன் கூடியவர்களாகவும், மன்னர்களிடம் ஏற்படைய வகையில் பேசுபவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் நட்புடனும், அனைவரிடமும் சம பார்வையுடனும் இருக்க வேண்டும்.(3) அவர்கள் கொடூரமற்றவர்களாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அநியாய வட்டிக்கு விடுபவர்களாக அவர்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது. அவர்கள் எப்போதும் எளிமையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும்.(4) அமைதி நிறைந்த தன்மை, போலித்தன்மையின்மை, அடக்கம், ஈகைத்தன்மை, தற்கட்டுப்பாடு, நிறைவுடைமை, புத்திக்கூர்மை, உண்மை, நோன்பு நோற்றல், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமை, காமம் மற்றும் தீய நோக்கம் இல்லாமை, மூன்று சிறந்த குணங்களுடைமை,(5) பொறாமையின்மை, அறிவுடைமை ஆகியவற்றைக் கொண்ட ஒருவன் பிரம்மனின் ஆசனத்திற்கே {பிரம்மனின் பதவிக்கே, அதாவது வேள்விகளின் ரித்விக்காகத்} தகுந்தவனாவான்” என்றார்.(6)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “வேள்விகளில் தக்ஷிணைக்கொடையைக் குறித்து வேத உரைகள் இருக்கின்றன. எனினும், எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து எந்த விதியும் இல்லை.(7) செல்வத்தைப் பிரித்துக் கொடுத்தல் தொடர்புடைய நோக்கங்களில் இருந்து (தக்ஷிணைக் கொடை) இவ்விதி பிறக்கவில்லை. கொடுக்க வேண்டிய விளைவால் எழுந்த இவ்விதியின் ஆணை திறனில்லாதவர்களின் வழக்குகளில் பயங்கரமானதாக இருக்கிறது. அந்த ஆணை வேள்வி செய்பவனின் தகுதியைக் காண்பதில்லை[1].(8) ஒரு மனிதன் அர்ப்பணிப்புடன் ஒரு வேள்வியைச் செய்ய வேண்டும் என்ற இந்தத் திறன்தேர்வானது {விதியானது} வேதங்களில் இருக்கிறது. ஆனால், வேள்வியானது பொய்மையினால் கறைபடியும்போது, அர்ப்பணிப்பினால் என்ன செய்ய முடியும்?”[2] என்று கேட்டான்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வேதங்களை அவமதிப்பதாலோ, வஞ்சகத்தாலோ, பொய்மையினாலோ எந்த மனிதனும் அருளையோ, தகுதியையோ {புண்ணியத்தையோ} அடைய முடியாது. இது மாறானது என்று ஒருபோதும் நினைக்காதே.(10) தக்ஷிணை என்பது வேள்வியின் ஓர் அங்கமாகும்; அது வேதங்களின் ஊட்டத்திற்கு வழிவகுக்கிறது. தக்ஷிணையில்லாத வேள்வியானது ஒருபோதும் முக்திக்கு வழிவகுக்காது.(11) எனினும், ஒரு பூர்ணபாத்திரத்தின்[3] உச்சவினையானது, எவ்வளவு செழிப்பான எந்தத் தக்ஷிணைக்கும் இணையானது[4]. எனவே, ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, மூன்று வகையைச் சேர்ந்தோரும் வேள்விகளைச் செய்ய வேண்டும்[5].(12) சோமமானது பிராமணர்களுக்கு மன்னனைப் போன்றது என்று வேதங்கள் தீர்மானிக்கின்றன. இருப்பினும் அவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக இல்லையென்றாலும், வேள்விகளைச் செய்வதற்காக அதை விற்கிறார்கள்.(13) நீதிமிக்க நடத்தை கொண்ட முனிவர்கள் அறநெறிகளின் விதிகளுக்கு ஏற்புடைய வகையில், சோமவிற்பனையின் மூலம் செய்யப்படும் வேள்வியானது, வேள்விகளை நீட்டிக்கவே உதவுகிறது என்று அறிவிக்கிறார்கள்[6].(14) மனிதன், வேள்வி, சோமம் ஆகிய இம்மூன்றும் நற்பண்புடன் இருக்க வேண்டும். தீய பண்பு கொண்ட மனிதன் இம்மைக்கானவனுமில்லை; மறுமைக்கானவனுமில்லை.(15) அதீத உடலுழைப்பால் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு உயர் ஆன்ம பிராமணர்களால் செய்யப்படும் வேள்வியானது பெரும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்குவதில்லை என்ற திறன்தேர்வையும் நாம் கேள்விப்படுகிறோம்[7].(16)வேள்விகளை விடத் தவங்கள் உயர்வானவை என்று வேதங்களில் ஒரு தீர்மானம் இருக்கிறது. நான் இப்போது உனக்குத் தவங்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன். ஓ! கல்விமானான இளவரசனே {யுதிஷ்டிரனே}, நான் சொல்வதைக் கேட்பாயாக.(17) தீங்கிழையாமை, பேச்சில் உண்மை, நல்லுணர்வு, கருணை ஆகியவையே தவங்கள் எனவும், உடல் மெலிவது தவமல்ல எனவும் ஞானிகள் கருதுகின்றனர்.(18) வேதத்தை அவமதிப்பது, சாத்திரவிதிகளுக்குக் கீழ்ப்படியாமை, நலம்சார்ந்த கட்டுப்பாடுகளை மீறல், ஆகியவை  தன்னழிவை உண்டாக்குபவை.(19) ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, நாளின் பத்து வேளைகளில் நெருப்பில் பத்து ஆகுதிகளை ஊற்றுவோர் விதித்தவற்றைக் கேட்பாயாக. தவமெனும் வேள்வியைச் செய்வோருக்கு, அவர்கள் பிரம்மத் திறனுடன் முயலும் யோகமே கரண்டியாகும்; அவர்களது இதயமே தெளிந்த நெய்யாகும்; உயர்ந்த அறிவே பவித்ரமாகும்[8].(20) அனைத்துவகைக் கபடங்களும் மிருத்தியுவாகும், அனைத்து வகை உண்மையும் பிரம்மம் என்றழைக்கப்படுகிறது. இதுவே ஞானத்தை உள்ளடக்கியிருக்கிறது. அமைப்பைக் கட்டுபவர்களின் வீரகாவியங்கள் இதற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்றார் {பீஷ்மர்}[9].(21)

நட்பு, பகை மற்றும் உறவு! – சாந்திபர்வம் பகுதி – 80-நண்பன், எதிரி, உறவினன் ஆகியோரின் பண்புகளையும், அமைச்சர்களாகத் தகுந்தவர்களையும், அவர்களிடம் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய முறையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மிக அற்பமான காரியத்தைக் கூடத் துணையில்லாமல் எந்த மனிதனாலும் நிறைவேற்ற முடியாது. அப்படியிருக்கையில் (நாட்டை ஆளும் காரியத்தில்) மன்னனைக் குறித்து என்ன சொல்வது?(1) மன்னர்களுடைய அமைச்சரின் நடத்தையும், செயல்களும் எவ்வாறு இருக்க வேண்டும்? எவன் மீது மன்னன் நம்பிக்கை வைக்கலாம்? எவன் மீது வைக்கக் கூடாது?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னர்களுக்கு நான்கு வகை நண்பர்கள் உண்டு. 
{1}ஒரே நோக்கம் கொண்டவன் {ஸஹார்த்தன்},
{2}அர்ப்பணிப்புள்ளவன் {பஜமானன்},
{3}பிறப்பால் உறவினன் {ஸஹஜன்} மற்றும்
{4}(கொடைகளாலும், அன்பாலும்) வெல்லப்பட்டவன் {கிருத்திரிமன்} 
ஆகியோரே அவர்கள்[1].(3)
{5}இரு தரப்புக்கும் அல்லாமல், ஒரு தரப்புக்கு சேவை செய்யும் அற ஆன்மா கொண்டவன் மன்னர்களின் நண்பர்களுடைய பட்டியலில் ஐந்தாவதாகச் சேர்த்துக்கொள்ளத் தக்கவனாவான். அத்தகு மனிதன், அறத்தின் தரப்பைப் பின்பற்றி, நீதியுடன் நடந்து கொள்பவனாவான்.(4) அத்தகு மனிதனைப் பொறுத்தவரையில், அவனது பரிவைப் பெறாத எந்தக் காரியத்தையும் மன்னன் அவனிடம் வெளிப்படுத்தக்கூடாது[2]. வெற்றியை விரும்பும் மன்னன் நீதி மற்றும் அநீதி ஆகிய இருபாதைகளையும் பின்பற்றக்கூடிய கடப்பாடுடையவனாவான்.(5) நான்கு வகை நண்பர்களில், இரண்டாவது மற்றும் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் உயர்வானவர்கள் ஆவர். அதேவேளையில் முதல் மற்றும் நான்காவது வகையைச் சேர்ந்தவர்கள் எப்போதும் ஐயத்துடனே கருதப்படத்தக்கவர்கள் ஆவர்.(6)

தன் நண்பர்களைக் கண்காணிக்கும் காரியத்தில் மன்னன் ஒருபோதும் கவனமில்லாமல் செயல்படக்கூடாது. கவனமில்லாமல் இருக்கும் மன்னன் எப்போதும் பிறரால் அவமதிக்கப்படுவான்.(7) தீய மனிதன் நேர்மையெனும் ஆடையை உடுத்தி வருவான், அதே வேளையில் நேர்மையானவர்களும் மாறானவர்களாவார்கள். ஓர் எதிரி நண்பனாவான், ஒரு நண்பனும் எதிரியாவான்.(8) ஒரு மனிதன் எப்போதும் ஒரே மனநிலையில் இருக்க மாட்டான். எவன்தான் அவனை முழுமையாக நம்புவான்? எனவே, முக்கியச் செயல்கள் அனைத்தையும் மன்னன் நேரடியாகத் தன் மேற்பார்வையிலேயே நிறைவேற்ற வேண்டும்.(9) (அமைச்சர்களை) முழுமையாக நம்புவது, அறம், பொருள் ஆகிய இரண்டுக்கும் அழிவைத் தரும். அனைவரிடமும் நம்பிக்கையில்லாமல் இருப்பது காலனைவிடக் கொடியதாகும்.(10)

நம்பிக்கை நிறைந்திருப்பது அகால மிருத்யுவாகும். நம்பிக்கையால் ஒருவன் ஆபத்துக்கு உள்ளாவான். ஒருவன் மற்றொருவனை முழுமையாக நம்பினால் அவன் நம்பும் மனிதனால் பாதிப்பை அடைந்து வாழ்வான் எனச் சொல்லப்படுகிறது.(11) இதன் காரணமாகவே அனைவரையும் நம்ப வேண்டும், அதே வேளையில் நம்பாமலும் இருக்க வேண்டும். ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, கவனத்தில் கொள்ள வேண்டிய கொள்கையில் நித்திய விதியாகும் இது.(12) ஒருவனுடைய இறப்பில், அவனுடைய செல்வத்தை அடையும் மனிதனை ஒருபோதும் நம்பக்கூடாது. அத்தகு மனிதன் அவனுடைய எதிரியாவான் என்று ஞானிகள் அறிவிக்கின்றனர்.(13) மன்னனின் வளர்ச்சியில் கட்டற்ற இன்பத்தையும், மன்னனின் அழிவில் துன்பத்தையும் அடையும் மனிதன் மன்னனுடைய சிறந்த நண்பர்களுக்குரிய குறிப்புகளை வெளிப்படுத்துகிறான்.(14) எவன் உனது வீழ்ச்சியில் வீழ்வானோ, அவனை உனது தந்தையைப் போல முழுமையாக நம்பலாம். நீ வளர்ச்சியடையும் போது, உனது சக்திக்குத் தக்க அளவில் அவனையும் நீ வளரச் செய்ய வேண்டும்.(15,16)

உன் அறச்சடங்குகளில் கூட உன்னைத் தீங்கிலிருந்து காக்க முனையும் ஒருவன், பிற பணிகள் அனைத்திலும் தீங்கான வழியில் இருந்து உன்னைக் காப்பான். மறுபுறம், ஒருவனுடைய தீங்கை விரும்புபவர்கள் அவனுடைய எதிரிகளாவர்.(17) உனக்கு இடரேற்படும்போது அச்சமடைபவனும், நீ செழிப்பாய் இருக்கும் போது மகிழ்பவனுமான ஒரு நண்பன் உன்னைப் போன்றவனே ஆவான் என்று சொல்லப்படுகிறது.(18) அழகு, நல்ல நிறம், சிறந்த குரல், ஈகை, நற்குணம், நற்பிறப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மனிதன் அத்தகு நண்பனாக இருக்க முடியாது[3].(19) நுண்ணறிவு மற்றும் நினைவுத்திறனைக் கொண்டவனும், தொழில் பரிவர்த்தனையில் கெட்டிக்காரனும், இயல்பாகவே கொடுமையில் நாட்டமில்லாதவனும், ஒருபோதும் கோபப்படாதவனும், மதிக்கப்பட்டாலும், அல்லாவிட்டாலும் எப்போதும் நிறைவுடன் இருப்பவனுமான மனிதன்,(20) உன் புரோகிதராகவோ {ரித்விக்காகவோ}, ஆசானாகவோ, மதிப்பிற்குரிய நண்பனாகவோ இருந்தாலும், அவன் உன் அமைச்சராக இருப்பதை ஏற்றாலோ, உன் வசிப்பிடத்தில் இருந்தாலோ அவர்கள் எப்போதும் உனது வழிபாட்டைப் பெற வேண்டும்.(21,22)

அத்தகு மனிதனிடம் மிகக் கமுக்கமான ஆலோசனைகளையும் சொல்லலாம், அறம் மற்றும் பொருள் சார்ந்த உன் காரியங்கள் அனைத்தின் உண்மை நிலையையும் சொல்லலாம். நீ அவனை உன் தந்தையைப் போல நம்பவேண்டும்[4].(23) ஒரு பணியில் ஒருவனே நியமிக்கப்பட வேண்டும், இருவரோ, மூவரோ அல்ல. இவர்கள் ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். ஒரு பணியில் பலரை ஈடுபடுத்தினால், அவர்கள் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதே எப்போதும் காணப்படுகிறது.(24) புகழை அடைபவனும், கட்டுப்பாடுகள் அனைத்தையும் பயில்பவனும், திறன்மிக்கோரிடம் ஒருபோதும் பொறாமை கொள்ளாதவனும், எந்தத் தீய செயலையும் செய்யாதவனும்,(25) காமத்தினாலோ, அச்சத்தினாலோ, பேராசையினாலோ, கோபத்தினாலோ அறத்தை {நீதியைக்} கைவிடாதவனும், தொழில் பரிவர்த்தனையில் கெட்டிக் காரனும், ஞானம் நிறைந்த பேச்சைக் கொண்டவனுமான ஒரு மனிதன் உன் அமைச்சர்களில் முதன்மையானவனாக இருக்க வேண்டும்.(26)

நற்பிறவி, நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டோரும், ஈகையாளர்களும், தற்புகழ்ச்சியில் ஒருபோதும் ஈடுபடாதவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், மதிப்பிற்குரியவர்களும், கல்விமான்களும், வளம் நிறைந்தவர்களும்,(27) உன் காரியங்கள் அனைத்தையும் கண்காணிக்கும் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும். உன்னால் கௌரவிக்கப்பட்டு, செல்வத்தால் நிறைவடைந்த அவர்கள் உன் நன்மைக்காகச் செயல்பட்டு உனக்குப் பேருதவியாக இருப்பார்கள்.(28) பொருள் மற்றும் பிற முக்கியக் காரியங்களின் தொடர்புடைய அலுவல்களில் நியமிக்கப்படும் அவர்கள் எப்போதும் பெருஞ்செழிப்பையே கொண்டு வருவார்கள்.(29) நலமிக்கப் போட்டியுணர்வால் தூண்டப்படும் அவர்கள், தேவையானபோதெல்லாம் ஒருவரோடொருவர் ஆலோசித்துப் பொருள் சார்ந்த கடமைகள் அனைத்தையும் செய்வார்கள்.(30)

காலனையே கண்டதுபோல நீ உன் இரத்த உறவினர்களைக் கண்டு அஞ்ச வேண்டும். தன்மீது மேலாதிக்கம் செலுத்துபவனின் {பேரரசனின்} செழிப்பைப் பொறுக்கமுடியாத சிற்றரசனைப் போல, ஓர் உறவினன் மற்றொரு உறவினனின் செழிப்பைப் பொறுக்க மாட்டான்.(31) நேர்மை, மென்மை, ஈகை, பணிவு, உண்மை நிறைந்த பேச்சு ஆகியவற்றைக் கொண்ட ஓர் உறவினனின் அழிவில் மற்றொரு உறவினனையன்றி வேறு எவனும் மகிழ்ச்சியடையமாட்டான்.(32) அதே போல உறவினர்களே இல்லாதவர்களும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உறவினனற்றவர்களை விட வேறு எந்த மனிதனும் அருவருக்கத்தக்கவன் அல்ல. எந்த உறவினனும் இல்லாத ஒரு மனிதன் எளிதில் எதிரிகளால் வெல்லப்படுகிறான்.(33) ஓர் உறவினன் பிற மக்களால் பீடிக்கப்படுவதை மற்றொரு உறவினனால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதால், பிறரால் பீடிக்கப்படும் ஒருவனுடைய புகலிடமாக ஓர் உறவினனே இருப்பான்.(34) ஓர் உறவினன் அவனுடைய நண்பர்களாலேயே தண்டிக்கப்படும்போது, தண்டிக்கப்படுபவனின் ஒவ்வொரு உறவினனும், தானே அந்தத் தீங்கால் துன்புறுவதாகக் கருதுவான். எனவே, உறவினர்களால் நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகிய இரண்டும் உண்டு.(35)

உறவினர்களற்ற ஒரு மனிதன், வேறு எவனுக்கும் ஒருபோதும் நன்மை செய்வதுமில்லை, எவனிடமும் பணிவு கொள்வதுமில்லை. எனவே, உறவினர்களில் உள்ள நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டும் குறித்துக் கொள்ளப்பட வேண்டும்.(36) இதன் காரணமாகவே ஒருவன் தன் உறவினர்களைச் சொல்லாலும், செயலாலும் எப்போதும் மதிக்கவும் வழிபடவும் செய்து, அவர்களுக்கு ஒருபோதும் தீங்கிழைத்து விடாமல் இனிமையான காரியங்களையே செய்ய வேண்டும்.(37) ஒருவன் இதயத்தால் அவர்களை நம்பாமல், அவர்களை முழுமையாக நம்புவதைப் போலவே அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். அவர்களது {உறவினர்களது} இயல்பைச் சிந்தித்துப் பார்த்தால், அவர்களால் நன்மையும் இல்லை, தீமையும் இல்லை என்றே தோன்றுகிறது.(38) இவ்வழியில் கவனமாக நடக்கும் ஒரு மனிதன், தங்கள் பகைவர்கள் பகைமையை விட்டு, நண்பர்களாக மாறுவதைக் காண்கிறான்.(39) உறவினர்கள் மற்றும் சொந்தங்களுக்கு மத்தியில் எப்போதும் இவ்வழியிலேயே நடக்கும் ஒருவன், இவ்வாறே நண்பர்களிடமும், பகைவர்களிடமும் நடந்து கொண்டு நிலைத்து நீடிக்கும் புகழை அடைவதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(40)

போஜர்கள், விருஷ்ணிகள்: உட்பகை! – சாந்திபர்வம் பகுதி – 81-உறவினர்களை நிறைவுகொள்ளச் செய்ய முடியாதபோது செய்ய வேண்டியது குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; போஜர்களுக்கு, விருஷ்ணிகளுக்குமிடையில் உண்டான உட்பகையால் கிருஷ்ணன் துன்புற்றிருந்தபோது, நாரதர் அவனுக்குச் சொன்ன வழிமுறைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “(இவ்வழியில்) ஒருவனால் தன் இரத்த சொந்தங்களையும், உறவினர்களையும் வெல்லமுடியவில்லையெனில், எவர்கள் நண்பர்களாக வேண்டுமோ அவர்கள் பகைவர்களாகிவிடுகிறார்கள். அப்போது, நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இரு தரப்பின் இதயங்களையும் வெல்லும் வகையில் ஒருவன் தனது நடத்தையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது சம்பந்தமாகப் பழங்கால வரலாற்றில் வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, நாரதருக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் தென்படுகிறது.(2)

ஒரு குறிப்பிட்ட தருணத்தில் வாசுதேவன் {கிருஷ்ணன் நாரதரிடம்}, “ஓ! நாரதரே, கல்லாத மூட நண்பனும், கல்விமானாகவே ஆனாலும் நல்லறிவில்லாத நண்பனும் ஒருவனுடைய கமுக்கமான {இரகசிய} ஆலோசனைகளை அறியத் தகுந்தவர்களல்ல[1].(3) ஓ! தவசியே {நாரதரே}, நீர் என்னிடம் கொண்டுள்ள நட்பை நம்பி, நான் உம்மிடம் ஒன்றைச் சொல்லப் போகிறேன். ஓ! விருப்பம் போல் சொர்க்கத்திற்குச் செல்ல முடிந்தவரே, அடுத்தவன் நுண்ணறிவைக் கொண்டவன் என்ற உறுதியடைந்தால் மட்டுமே ஒருவன் அவனிடம் பேசலாம்.(4) நான் என் உறவினர்களிடம் அவர்களது செல்வத்தைக் குறித்து முகத்துதி செய்து ஒருபோதும் அடிமைத் தொழில் செய்வதில்லை. நான் என்னிடமுள்ளவற்றில் பாதியை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய தீய பேச்சுகளை மன்னிக்கிறேன்[2].(5) நெருப்பை அடைய விரும்பும் ஒரு மனிதனால் அரணிக்கட்டை அரைக்கப்படுவதைப் போலவே, என் இதயமும் என் உறவினர்களின் தீச்சொற்களால் கலங்கடிக்கப்படுகிறது. உண்மையில், ஓ! தெய்வீக முனிவரே, அந்தக் கொடூரப் பேச்சுகள் என் இதயத்தைத் தினமும் எரிக்கின்றன.(6)

சங்கர்ஷணரில் {பலராமன்} வலிமையும், கதனில் மென்மையும் வசிக்கின்றன, பிரத்யும்னனைப் பொறுத்தவரையில், அவன் மேனியழகில் என்னையும் விஞ்சியிருக்கிறான். ஓ! நாரதரே, (இவர்கள் அனைவரும் என் தரப்பில் இருந்தாலும்) நான் ஆதரவற்றவனாகவே இருக்கிறேன்.(7) அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளில், பெருஞ்செழிப்புடையவர்கள், வலிமை நிறைந்தவர்கள், துணிவுமிக்கவர்கள் மற்றும் தொடர்ந்த விடா முயற்சியுடையவர்கள் எனப் பலர் இருக்கின்றனர்.(8) யாருடைய தரப்பில் அவர்கள் இல்லையோ அவர்கள் அழிவை அடைவார்கள், மறுபுறம், யார் தரப்பில் அவர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் அனைத்தையும் அடைகிறார்கள். (ஆஹுகர் மற்றும் அக்ரூரர் ஆகியோர்) இருவராலும் மீண்டும் மீண்டும் விலக்கப்படும் நான், யாருடைய தரப்பையும் அடைந்ததில்லை.(9) ஒருவன் தன் தரப்பில் ஆஹுகர், மற்றும் அக்ரூரர் ஆகிய இருவரையும் கொண்டிருப்பதைவிட வேறு எந்தத் துன்பம் பெரியது? இருவரையும் என் தரப்பில் கொள்ளாமல், அவர்களில் ஒருவரை மட்டுமே கொள்வதை விட வேறு எந்தத் துன்பம் பெரியது?[3](10) ஒருவரோடொருவர் சூதாடிக்கொண்டிருக்கும் இரு சகோதரர்களும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும் அவர்களுடைய தாயைப் போலத்தான் நான் இருக்கிறேன்.(11) ஓ! நாரதரே, இவ்வாறே நான் அவர்கள் இருவராலும் துன்பத்துக்குள்ளாகிறேன். எனக்கும் என் உறவினர்களுக்கும் எது நன்மையோ, அதைச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்{கிருஷ்ணன்}.(12)

நாரதர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, வெளியில் இருந்து வருவது, உள்ளிருந்து வருவது எனத் துன்பங்கள் இருவகைப்படும். ஓ! விருஷ்ணி குலத்தோனே, அவை ஒருவனின் சொந்த செயல்பாடுகளாலோ, பிறரின் செயல்பாடுகளாலோ உண்டாகின்றன.(13) இப்போது உனக்கு நேரும் துன்பமானது, உன் சொந்த செயல்களாலேயே உள்ளிருந்து உண்டானது. அக்ரூரரைச் சார்ந்தவர்களான பலதேவனும் {பலராமனும்}, போஜகுலத்தைச் சேர்ந்த பிறரும்,(14) செல்வம், அல்லது பேராசை, அல்லது {குற்றமுள்ள} சொற்கள், அல்லது வெறுப்பின் நிமித்தமாக அவரது {அக்ரூரரின்} தரப்பைச் சேர்ந்திருக்கிறார்கள். உன்னைப் பொறுத்தவரையில், நீ அடைந்த செல்வத்தை மற்றவருக்கு {ஆஹுகருக்குக்} கொடுத்தாய்.(15) நண்பர்களாக இருக்க வேண்டிய மனிதர்களை நீ கொண்டிருந்தாலும், உன் செயலாலேயே நீ உன் தலைக்கு மேல் துன்பத்தை ஏற்றுக் கொண்டாய். ஒருவன் கக்கிய உணவை மீண்டும் உட்கொள்ள முடியாததைப் போலவே, உன்னால் அந்தச் செல்வத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது.(16)

பப்ருவிடம் இருந்தோ, உக்ரசேனரிடம் இருந்தோ (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) நாட்டையும் திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது. ஓ! கிருஷ்ணா, (அவர்களிடம் இருந்து) அவற்றைத் திரும்ப எடுத்துக் கொள்வது உட்பகையை உண்டாக்கிவிடக்கூடும் என்ற அச்சத்தால் உன்னாலேயே கூட அவ்வாறு செய்யமுடியாது.(17) ஒருவேளை அம்முயற்சி வெற்றிபெற்றாலும், பெரும் பிரச்சனைக்குப் பிறகே, அடைவதற்கரிதான அந்த மிகக் கடும் சாதனையை அடைய முடியும். பெரும் படுகொலைகளும், செல்வத்திற்குப் பேரிழப்பும் நேரிடும், ஒருவேளை மொத்த அழிவும்கூட ஏற்படலாம்.(18) எனவே, இரும்பாலாகாததும், மென்மையானதாக இருப்பினும், இதயங்கள் அனைத்தையும் துளைக்கவல்லதுமான ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்துவாயாக. அவ்வாயுதத்தை மீண்டும் மீண்டும் கூர்த்தீட்டி உன் உறவினர்களின் நாவுகளைச் சீர்திருத்துவாயாக” என்றார்.(19)

வாசுதேவன் {கிருஷ்ணன் வாசுதேவரிடம்}, “ஓ! தவசியே, இரும்பாலாகாததும், மென்மையானதும், இருப்பினும் அனைவரின் இதயங்களையும் துளைக்கவல்லதும், என் உறவினர்களின் நாவுகளைச் சீர்திருத்த நான் பயன்படுத்த வேண்டியதுமான அந்த ஆயுதம் எது?” என்று கேட்டான்.(20)

நாரதர் {கிருஷ்ணரிடம்}, “உன் சக்திக்குத் தக்கபடி உணவளிப்பது, மன்னிப்பது {பொறுமை}, நேர்மை, மென்மை, உரிய மரியாதை கொடுத்து கௌரவித்தல் ஆகியவற்றையே இரும்பாலாகாத அவ்வாயுதம் கொண்டுள்ளது.(21) கொடுஞ்சொற்கள் பேசும் உறவனிரின் கோபத்தையும், அவர்களது இதயங்கள், மனங்கள் மற்றும் இகழும் நாவுகளையும் மென்மையான வார்த்தைகளால் மட்டுமே அடக்குவாயாக.(22) தூய்மையான ஆன்மாவையும், பெருஞ்சாதனைகளையும், நண்பர்களையும் கொண்ட பெரிய மனிதனாக இல்லாத எவராலும், கனமான சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது. நீ (விருஷ்ணிகளை ஆளும்) இந்தப் பெருங்கனத்தை உன் தோள்களில் சுமப்பாயாக.(23) மேடுபள்ளமில்லாத சமமான சாலையில் அனைத்து எருதுகளாலும் கனமான சுமைகளைச் சுமக்க முடியும். அவற்றில் பலமிக்கவையே கடினமான சாலைகளிலும் அத்தகு கனங்களைச் சுமக்கவல்லனவாகும்.(24) ஒற்றுமையின்மையால் போஜர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவருக்கும் அழிவே ஏற்படும். ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ அவர்களில் முதன்மையானவனாவாய். போஜர்களும், விருஷ்ணிகளும் அழியாமல் இருக்கத்தக்கவகையில் நீ செயல்படுவாயாக.(25)

ஞானியான ஒரு மனிதனிடம், நுண்ணறிவு, மன்னிப்பு {பொறுமை}, புலனடக்கம், ஈகை ஆகியவற்றைத் தவிர வேறேதும் இருக்காது.(26) தன் குலத்தை மேன்மையுறச் செய்வதே எப்போதும் புகழத்தக்கதும், மகிமையானதும், நீண்ட வாழ்வை அளிக்கக்கூடியதுமாகும். ஓ! கிருஷ்ணா, உன் உறவினர்களுக்கு அழிவு நேராத வகையில் நீ செயல்படுவாயாக.(27) ஓ! தலைவா, கொள்கை மற்றும் போர்க்கலை ஆகியவற்றைப் பொறுத்தவரையில், நீ அறியாதது ஒன்றுமில்லை[4].(28) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, லோகபாலர்கள் அனைவரையும் நம்பியிருக்கும் அனைத்து உலகங்களையும் போல, யாதவர்கள், குகுரர்கள், போஜர்கள், அந்தகர்கள், விருஷ்ணிகள் ஆகியோர் அனைவரும் உன்னையே நம்பியிருக்கின்றனர். ஓ! மாதவா {கிருஷ்ணா}, முனிவர்கள் எப்போதும் உன் முன்னேற்றத்தையே வேண்டுகின்றனர்.(29) அனைத்து உயிரினங்களின் தலைவன் நீயே. கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர் காலத்தை அறிந்தவன் நீயே. உன்னை நம்பி மகிழ்ச்சியான வாழ்வை எதிர்பார்க்கும் யாதவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் நீயே” என்றார் {நாரதர்}”.(30)

க்ஷேமதர்சினும் காலகவிருக்ஷீயரும்! – சாந்திபர்வம் பகுதி – 82-குற்றம் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கான பாதுகாப்பின் அவசியத்தை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; இதை விளக்குவதற்காகக் கோசல மன்னன் க்ஷேமதர்சின் மற்றும் காலகவிருக்ஷீயர் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற உரையாடலைச் சொன்னது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இப்போது நான் உனக்குச் சொன்னது முதன்மையான வழிமுறைகளாகும். ஓ! பாரதா, இரண்டாம் வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. மன்னனின் நிலை மேன்மையடைய முயற்சிக்கும் ஒரு மனிதன், எப்போதும் அம்மன்னனால் பாதுகாக்கப்பட வேண்டும்.(1) ஓ! யுதிஷ்டிரா, கூலி கொடுக்கப்பட்ட, அல்லது கொடுக்கப்படாத {உன்னிடம் பணியாளாகவோ, இல்லாமலோ உள்ள} ஒரு மனிதன், உன் கருவூலத்தில் உள்ள செல்வங்கள் உன் அமைச்சரால் கையாடல் செய்யப்படுவதைச் சொல்ல வந்தால்,(2) நீ அவனைத் தனிமையில் சந்தித்து {அவன் சொல்வதைக் கேட்டு}, (களங்கம் கற்பிக்கப்பட்ட) அந்த அமைச்சரிடம் இருந்தும் அவனைப் பாதுகாக்க வேண்டும். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நிதியைக் கையாடல் செய்யும் அமைச்சர்கள், அத்தகு தகவல் தருவோரைக் கொல்ல முனைவார்கள்.(3) அரச கருவூலத்தைக் கொள்ளையடிப்போர், அதைக் காக்க முயலும் மனிதனை எதிர்ப்பதற்காக ஒன்றாகச் சேர்வார்கள். பின்னவன் {காக்க முயல்பவன்} பாதுகாப்பில்லாமல் இருந்தால் அவனை நிச்சயம் அழித்துவிடுவார்கள்.(4)

இது தொடர்பாகத் தவசி காலகவிருக்ஷீயர் Kalakavrikshiya, கோசலத்தின் மன்னனிடம் {க்ஷேமதர்சினிடம் Kshemadarsin}  சொன்னது, பழங்கதை ஒன்றில் குறிப்பிடப்படுகிறது.(5) ஒரு காலத்தில் கோசல நாட்டின் அரியணை ஏறிய க்ஷேமதர்சினிடம் காலகவிருக்ஷீயர் எனும் தவசி வந்ததாக நாம் கேளவிப்படகிறோம்.(6) க்ஷேமதர்சினின் அதிகாரிகள் அனைவருடைய நடத்தையையும் ஆய்வு செய்ய விரும்பிய அந்தத் தவசி, தன் கையில் கூண்டுக்குள் அடைபட்ட ஒரு காக்கையுடன், அந்த மன்னனின் {க்ஷேமதர்சினின்} ஆட்சிப்பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் பயணித்தார்.(7) மனிதர்கள் அனைவரிடமும் அவர், “காக அறிவியலைப் படிப்பீராக. காகங்கள் எனக்கு நிகழ்காலத்தையும், கடந்த காலத்தையும், எதிர் காலத்தையும் சொல்கின்றன” என்றார்.(8) அந்த நாட்டில் இவ்வாறு அறிவித்துக் கொண்டு, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களின் துணையுடன் கூடிய அவர், அந்த மன்னனுடைய அதிகாரிகள் அனைவரும் செய்யும் தீச்செயல்களை நோக்கத் தொடங்கினார்.(9) அந்தத் தவசி {காலகவிருக்ஷீயர்} அந்த நாட்டில் நடைபெறும் அனைத்து காரியங்களையும் உறுதி செய்து கொண்டு, மன்னனால் நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகள் அனைவரும் மோசடியில் ஈடுபடுவதையும் அறிந்து கொண்டு,(10) அம்மன்னனைக் காண வந்தார்.

கடும் நோன்புகளைக் கொண்ட அவர் அம்மன்னனிடம், “(உன் நாட்டைக் குறித்த) அனைத்தையும் நான் அறிவேன்” என்றார்.(11) மன்னனிடம் வந்த அவர் {காலகவிருக்ஷீயர்}, அலுவல் முத்திரைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனுடைய அமைச்சனிடம், அவன் இந்த இடத்தில், இந்தத் தீங்கைச் செய்தான் என்பதையும், அரச கருவூலத்தை அவன் கொள்ளையடித்ததை இந்த இந்த மனிதர்கள் அறிவார்கள் என்பதையும் தனது காக்கை தன்னிடம் சொல்லியிருப்பதாகச் சொன்னார். “என் காக்கை இதைச் சொல்கிறது. இந்தக் குற்றத்தை ஏற்பாயாக. அல்லது அது பொய் என்பதை விரைந்து மெய்ப்பிப்பாயாக” என்றார்.(13) பிறகும் அந்தத் தவசி, அதேபோன்ற கையாடல்களைச் செய்த பிற அதிகாரிகளின் பெயர்களையும் அறிவித்து, “என் காகம் ஒருபோதும் எந்தப் பொய்யையும் சொன்னதில்லை” என்றும் சொன்னார்.(14) ஓ! குருகுலத்தோனே {யுதிஷ்டிரா}, இவ்வாறு அந்தத் தவசியால் குற்றஞ்சாட்டப்பட்டு, தீங்கடைந்த அரசு அதிகாரிகள் அனைவரும் (ஒன்றுசேர்ந்து), இரவில் அந்தத் தவசி உறங்கும்போது அந்தக் காகத்தைத் துளைத்தனர் {கொன்றனர்}.(15)

கூண்டுக்குள் துளைக்கப்பட்டுக் கிடக்கும் தன் காகத்தைக் கண்ட அந்த மறுபிறப்பாள {பிராமண} முனிவர் {காலகவிருக்ஷீயர்}, காலையில் க்ஷேமதர்சினிடம் சென்று, அவனிடம்,(16) “ஓ! மன்னா, நான் உன் பாதுகாப்பை நாடுகிறேன். நீ பலமிக்கவன், அனைவரின் வாழ்வு மற்றும் செல்வங்களுக்கும் நீயே தலைவன். எனக்கு உன் உத்தரவு கிடைத்தால், உனக்கான நன்மையை என்னால் சொல்ல முடியும். நான் என் நண்பனாகக் கருதும் உனக்காக வருந்தியும், என் அர்ப்பணிப்பால் தூண்டப்பட்டும், என் முழு இதயத்துடன் உனக்குத் தொண்டாற்றும் ஆயத்தத்துடனும் உன்னிடம் வந்திருக்கிறேன்.(17) உன் செல்வம் களவாடப்படுகிறது. கள்வர்களிடம் எந்தக் கருணையும் காட்டாமல், அஃதை உன்னிடம் வெளியிடவே நான் வந்தேன். என் நண்பனாக நான் கருதும் உன்னை விழிப்படையச் செய்யவே நல்ல குதிரையைத் தூண்டும் ஒரு சாரதியைப் போல நான் இங்கு வந்திருக்கிறேன்.(18) தன் நலனையும், செழிப்பையும், வளர்ச்சியையும் விரும்பும் ஒரு நண்பனானவன், தனக்கு நன்மை செய்வதற்காகவும், அர்ப்பணிப்பு மற்றும் கோபத்தால் உந்தப்பட்டும் அத்துமீறும் மற்றொரு நண்பனை மன்னிக்க வேண்டும் {அவனிடம் பொறுமை காக்க வேண்டும்}” என்றார்.(19)

மன்னன் அவரிடம் {கோசல மன்னன் க்ஷேமதர்சின் தவசிகாலகவிருக்ஷீயரிடம்}, “என் நன்மைக்கானவற்றின் நான் குருடனல்ல என்பதால், நீர் சொல்வதனை நான் ஏன் பொறுத்துக் கொள்ள மாட்டேன்?(20) ஓ! மறுபிறப்பாளரே நான் உமக்கு அனுமதி அளிக்கிறேன். நீர் விரும்பியதை என்னிடம் சொல்லலாம். ஓ! பிராமணரே, நீ சொல்லும் அறிவுரைகளுக்கு நிச்சயம் நான் கீழ்ப்படிவேன்” என்று மறுமொழி கூறினான்.(21)

அந்தத் தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, “உன் பணியாட்களின் நன்மைகளையும், குற்றங்களையும் உறுதி செய்து கொண்டு, அவர்களின் கரங்களில் உனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் உறுதி செய்து கொண்டு, என் அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டு, உன்னிடம் அனைத்தையும் சொல்வதற்காகவே நான் இங்கு வந்தேன்.(22) ஓ! மன்னா, (மனிதகுலத்திற்கான) பழங்காலத்து ஆசான்கள், பிறருக்குத் தொண்டாற்றுவோருக்கான சாபங்கள் என்னென்ன என்பதை அறிவித்திருக்கின்றனர். மன்னனுக்குத் தொண்டாற்றுவோரின் நிலையானது வலிநிறைந்ததும், இழிவானதுமாகும்.(23) எவன் மன்னர்களுடன் தொடர்பைக் கொண்டிருக்கிறானோ, அவன் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுடன் தொடர்புடையவன் என்று சொல்லப்படுகிறான். மன்னர்களுக்குப் பல நண்பர்கள் இருப்பதைப் போலவே பல எதிரிகளும் இருக்கிறார்கள்.(24) மன்னர்களுக்குத் தொண்டாற்றுபவர்கள், அவர்கள் அனைவருக்கும் அஞ்ச வேண்டும். மேலும், ஓ! ஏகாதிபதி, அவர்கள் ஒவ்வொரு கணமும் மன்னனுக்கும் அஞ்ச வேண்டும்.(25)

மன்னனுக்குத் தொண்டாற்றும் ஒரு மனிதன், மன்னனின் வேலையைச் செய்வதில் கவனக்குறைவாக இருக்க முடியாது. உண்மையில், செழிப்பை வெல்ல விரும்பும் ஒரு பணியாள், தன் கடமைகளை ஆற்றுவதில் ஒருபோதும் கவனக்குறைவுடன் இருக்கக்கூடாது.(26) அவனது கவனக்குறைவு {அஜாக்ரதை} மன்னனைக் கோபமடையச் செய்யும், அந்தக் கோபம் (அந்தப் பணியாளுக்கு) அழிவைக் கொண்டுவரும். எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனக் கவனமாகக் கற்கும் ஒருவன், சுடர்மிக்க நெருப்பின் முன் இருப்பதைப் போலவே மன்னனின் முன்பு அமர்ந்திருக்க வேண்டும்.(27) எந்தக் கணத்திலும் உயிரைவிட ஆயத்தமாக இருக்கும் ஒருவன், மன்னனே அனைத்திலும் பலமிக்கவன், அனைவரின் வாழ்வு மற்றும் செல்வத்திற்குத் தலைவன் என்பதாலும், கடும் நஞ்சுமிக்கப் பாம்பைப் போன்றவன் என்பதாலும், அவன் மன்னனிடம் கவனமாகப் பணியாற்ற வேண்டும்.(28) அவன், மன்னனின் முன்னிலையில் தீய பேச்சைப் பேசவோ, உற்சாகமில்லாமல், அல்லது அலட்சியமான நிலையில் அமரவோ, அவமதிக்கும் தன்மையுடன் காத்திருக்கவோ, புறக்கணிக்கும் வகையில் நடக்கவோ, இழிவான நிலைகள் மற்றும் அவமதிக்கும் வகையிலான அங்க அசைவுகளை வெளிக்காட்டவோ எப்போதும் அஞ்ச வேண்டும்.(29) மன்னன் மனம்நிறைந்தால், அவன் ஒரு தேவனைப் போலச் செழிப்பைப் பொழிவான். சீற்றமடைந்தாலோ, சுடர்மிக்க நெருப்பைப் போல அவன் வேர்களையே எரித்துவிடுவான்.(30)

ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, இதை யமன் சொல்லியிருக்கிறான். இதன் உண்மை உலகக் காரியங்களின் தென்படுகின்றன. (இந்தக் கருதுகோள்களின் படி செயல்பட்டு) நான் இப்போது எது உனக்குச் செழிப்பை அளிக்குமோ அதைச் செய்வேன்.(31) என்னைப் போன்ற நண்பர்கள், உன்னைப் போன்ற நண்பர்களின் கேடு காலங்களில் தங்களது நுண்ணறிவால் உதவி செய்வார்கள். ஓ! மன்னா, என் காகமானது உன் காரியத்தைச் செய்ததற்காகக் கொல்லப்பட்டிருக்கிறது.(32) எனினும், இதற்காக உன்னை நான் குற்றஞ்சாட்ட முடியாது. (இந்தப் பறவையைக் கொன்றவர்கள் எவர்களோ) அவர்களால் நீ விரும்பப்படவில்லை. உன் நண்பர்கள் யார், உன் எதிரிகள் யார் என்பதை உறுதி செய்து கொள்வாயாக. நுண்ணறிவுக்காக யாரிடமும் பணியாமல் அனைத்தையும் நீயே செய்வாயாக.(33) உன் நிறுவனத்தில் {அரசு அலுவலகங்களில்) உள்ள அனைவரும் கையாடல் செய்பவர்களே. அவர்கள் உன் குடிமக்களுக்கான நன்மையை விரும்பவில்லை. நான் அவர்களது பகைமைக்கு ஆளாகிவிட்டேன்.(34) உன்னுடன் தொடர்பிலிருக்கும் பணியாட்களுடன் சேர்ந்து சதி செய்யும் அவர்கள், உன்னை அழித்துவிட்டு, உனக்குப் பிறகு இந்த நாட்டை அடைய பேராசைப்படுகிறார்கள். எனினும், எதிர்பாராத சூழ்நிலைகளால் அவர்களது திட்டங்கள் வெற்றியடையவில்லை.(35)

ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, அந்த மனிதர்களிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக நான் உன் நாட்டை விட்டு வேறேதேனும் ஆசிரமத்திற்குச் செல்லப் போகிறேன். எனக்கு உலகம் சார்ந்த விருப்பமேதுமில்லை, இருப்பினும், ஓ! தலைவா, வஞ்சக எண்ணம் கொண்ட அந்த மனிதர்கள் என் காக்கையின் மீது இந்தக் கணையை ஏவி, அப்பறவையை யமலோகம் அனுப்பிவிட்டனர். ஓ! மன்னா, தவங்களால் மேன்மையடைந்த பார்வையைக் கொண்ட கண்களுடன் இதை நான் கண்டேன்.(36,37) முதலைகளும், சுறாக்களும், திமிங்கலங்களும் நிறைந்த ஆற்றைப் போலிருக்கும் உன் நாட்டை இந்தக் காக்கை ஒன்றின் துணையுடன் கடந்திருக்கிறேன்.(38) உண்மையில், (விழுந்த) மரங்கள், சிதறிக்கிடக்கும் பாறைகள், முட்புதர்கள், சிங்கங்கள், புலிகள், மற்றும் பிற இரைதேடும் விலங்குகளின் விளைவால் புகமுடியாததும், அணுகமுடியாததுமான இமாலய பள்ளத்தாக்கைப் போன்ற உன் ஆட்சிப்பகுதிகளை அந்தப் பறவையின் துணையின் மூலமே நான் கடந்து வந்தேன்.(39) இருளின் விளைவால் அணுகமுடியாததாக இருக்கும் ஒரு பகுதியை ஒளியின் உதவியுடனும், கடக்க முடியாத ஆற்றை ஒரு படகின் உதவியுடனும் கடக்க முடியும் என்று கல்விமான்கள் சொல்கின்றனர். எனினும், அரச காரியங்களின் வழியைக் கடக்கவோ, ஊடுருவவோ எந்த வழிமுறைகளும் கிடையாது.(40)

உன் நாடானது, இருளில் மூழ்கியிருக்கும் அணுக முடியாத காட்டைப் போன்றதாகும். (அதன் தலைவனாக இருக்கும்) நீயே அதை நம்ப முடியாது. எனில், என்னால் எவ்வாறு முடியும்?(41) நன்மையும், தீமையும் இங்கே ஒன்றாகவே கருதப்படுகின்றன. எனவே, இங்கே தங்குவது பாதுகாப்பானதில்லை. அறச்செயல்கள் செய்வோர் இங்கே இறக்கின்றனர், அதே வேளையில் நீதியற்ற செயல்களைச் செய்வோருக்கு எந்த ஆபத்தும் இல்லை.(42) நீதியின் தேவைக்கேற்றபடி நீதியற்ற செயல்களைச் செய்வோர் கொல்லப்பட வேண்டுமேயன்றி ஒருபோதும் நல்லோர் தங்கள் செயல்களுக்காகக் கொல்லப்படக்கூடாது. எனவே, இந்த நாட்டில் நீண்ட காலம் தங்குவது எவனுக்கும் நல்லதல்ல. மான உணர்வு கொண்ட எந்த மனிதனும் இந்த நாட்டைவிட்டு விரைவில் அக வேண்டும்.(43) ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, சீதை என்ற பெயரில் ஓர் ஆறு இருக்கிறது. படகும் அதில் மூழ்கிவிடும். இந்த உனது நாடும் அந்த ஆற்றைப் போலவே இருக்கிறது. அதைச் சுற்றிலும் அனைத்தையும் அழிக்கும் வலை இருப்பதாகத் தெரிகிறது.(44) தேன் சேகரிப்பவனுக்காகக் காத்திருக்கும் வீழ்ச்சியைப் போலவோ, நஞ்சைக் கொண்ட கவர்ச்சிகரமான உணவைப் போலவோ நீ இருக்கிறாய். உன் இயல்பானது இப்போது நேர்மையற்ற மனிதர்களுக்கானதைப் போல அன்றி நல்லோருக்கானதாக இல்லை. ஓ! மன்னா, நீ கடும் நஞ்சுமிக்கப் பாம்புகள் நிறைந்த ஒரு குழியைப் போன்றவன்.(45)

ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, இனிய நீரால் நிறைந்திருப்பினும், அணுகுவதற்கு மிகக் கடினமானதும், அடர்ந்து வளர்ந்த காரிரங்கள் {மூங்கில்} மற்றும் முள் பிரம்பு ஆகியவற்றுடன் கூடியதும், ஆழமான கரைகளைக் கொண்டதுமான ஓர் ஆற்றுக்கு ஒப்பாக இருக்கிறாய். நாய்கள், கழுகுகள் மற்றும் நரிகளுக்கு மத்தியில் நீ ஓர் அன்னத்தைப் போல இருக்கிறாய்.(46,47) பெரும் மரத்தில் இருந்து வாழ்வாதாரத்தைப் பெறும் புல்லுருவிகள், அபரிமிதமாக வளர்ந்து பெருகி, இறுதியாக மரத்தையே முழுமையாக மறைத்துவிடும்.(48) காட்டுத்தீ ஏற்படும்போது, அந்தப் புல்லுருவிகளை முதலில் பிடித்தாலும், அவற்றோடு சேர்த்து அந்தத் தலைமை மரத்தையும் எரித்துவிடும். ஓ மன்னா, உன் அமைச்சர்களே நான் சொல்லும் புல்லுருவிகளுக்கு ஒப்பாக இருக்கின்றனர். நீ சோதித்து அவர்களைச் சரி செய்வாயாக.(49) அவர்கள் உன்னால் வளர்க்கப்படுகின்றனர். ஆனால் உனக்கு எதிராகச் சதி செய்யும் அவர்கள் உனது செழிப்பை அழிக்கின்றனர்.(50)

ஒருபாம்புடன் ஓர் அறையில் வாழ்வதைப் போலவோ, ஒரு வீரனுடைய மனைவியின் காதலனை {ஜாரப்புருஷனைப்} போலவோ உன் பணியாட்களின் தவறுகளை (உன்னிடமிருந்து) மறைத்து, தொடர்ச்சியான பயங்கர ஆபத்துடன் உன் வசிப்பிடத்தில் வாழ்கிறேன். என் சகாவாக வசிக்கும் மன்னனின் நடத்தையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதே என் நோக்கம்.(51) மன்னன் தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கிறானா, அவனுடைய பணியாட்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறார்களா, அவர்கள் அவனை விரும்புகிறார்களா, அவன் தன் குடிமக்களை விரும்புகிறானா என்பனவற்றை நான் அறிய விரும்பினேன். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இவற்றை உறுதிசெய்துகொள்ளும் நோக்குடனே நான் உன்னிடம் வந்தேன்.(52) பசித்தவனுக்கு உணவைப் போல நீ எனக்கு அன்பானவனாக இருக்கிறாய். எனினும், தாகமடங்கிய மனிதன் பானத்தை விரும்பாததைப் போல எனக்கு உன் அமைச்சர்களைப் பிடிக்கவில்லை.(53) நான் உன் நன்மைக்கு முனைவதால் அவர்கள் என்னிடம் களங்கம் காண்கின்றனர். என்னுடனான அவர்களது பகைக்கும் வேறேதும் காரணமில்லை என்பதில் ஐயமில்லை.(54) நான் அவர்களுடைய களங்கங்களை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்கிறேன். காயமடைந்த பாம்புக்கு அஞ்சுவதைப் போலத் தீய இதயத்தைக் கொண்ட எதிரியிடம் அச்சம் கொள்ள வேண்டும்” என்றார் {{காலகவிருக்ஷீயர்}.(55)

அதற்கு மன்னன் {மன்னன் க்ஷேமதர்சின் தவசி காலகவிருக்ஷீயரிடம்}, “ஓ! பிராமணரே, என் அரண்மனையில் தங்குவீராக. நான் எப்போதும் உம்மை மதித்து, கௌரவித்து, வழிபட்டு வருகிறேன்.(56) உம்மை விரும்பாதோர் என்னுடன் வசிக்க மாட்டார்கள். (நீர் சொன்ன) அந்த மனிதர்களை என்ன செய்யலாம் என்பதை நீரே சொல்வீராக.(57) ஓ! புனிதமானவரே, தண்டக்கோல் {செங்கோல்} முறையாகத் தரிக்கப்படுகிறதா, என் நாட்டில் அனைத்தும் நன்றாகச் செய்யப்படுகிறதா எனக் காண்பீராக. அனைத்தையும் சிந்தித்து நான் செழிப்பையடையும் வழியில் என்னை வழிநடத்துவீராக” என்றான் {க்ஷேமதர்சின்}.(58)

அதற்குத் தவசி {காலகவிருக்ஷீயர் மன்னன் க்ஷேமதர்சினிடம்}, “அவர்களது குற்றமான இந்த முதல் நிகழ்வுக்குக் கண்ணை மூடிக்கொண்டு {அதை வெளிப்படுத்தாமல்} அவர்களை ஒருவர் பின் ஒருவராகப் பலவீனப்படுத்துவாயாக. அவர்களது குற்றங்களை மெய்ப்பிட்டு ஒருவர் பின் ஒருவராகத் தாக்குவாயாக.(59) பலர் ஒரே குற்றத்தைச் செய்யும்போது, ஒன்றாகச் செயல்படுவதால் அவர்களால் முள்ளின் கூர்மையை மழுங்கடிக்க முடியும். (சந்தேகத்திற்காளாகி உனக்கு எதிராகச் செயல்படும்) உன் அமைச்சர்கள் உன் கமுக்கமான ஆலோசனைகளை வெளியிடும் வரை, அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க உன்னை நான் அறிவுறுத்துவேன்.(60) எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இயல்பிலேயே கருணை கொண்டவர்களும், எவருக்கும் துன்பம் தர விரும்பாதவர்களுமான பிராமணர்கள் ஆவோம். நாங்கள் எங்கள் நன்மையை விரும்புவதைப் போலவே, உன் நன்மையையும், பிறரின் நன்மையையும் விரும்புகிறோம்.(61)

ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, நான் என்னைக் குறித்துச் சொல்கிறேன். நான் உன் நண்பன். தவசி காலகவிருக்ஷீயன் என்ற பெயரில் நான் அறியப்படுகிறேன்.(62) நான் எப்போதும் உண்மையைப் பின்பற்றுகிறேன். உன் தந்தை என்னைத் தமது விருப்பத்திற்குரிய நண்பனாகக் கருதினார். ஓ! மன்னா, உன் தந்தை ஆட்சி செய்கையில் நாட்டுக்குத் துன்பம் நேர்ந்தபோது, (அதை விரட்ட) அனைத்துத் தொழில்களையும் கைவிட்டுத் தவங்கள் பலவற்றைச் செய்தேன். உன் மீது கொண்ட அன்பின் காரணமாக, நீ (தகாத மனிதர்களிடம் நம்பிக்கை வைக்கும்) தவற்றை மீண்டும் இழைக்காமல் இருப்பதற்காக நான் இதைச் சொல்கிறேன்.(64) நீ எந்தத் தொல்லையும் இல்லாமல் நாட்டை அடைந்தாய். அதன் இன்பதுன்பங்களோடு தொடர்புடைய அனைத்தையும் சிந்தித்துப்பார். நீ உன் நாட்டில் அமைச்சர்களைக் கொண்டிருக்கிறாய். ஆனால், ஓ! மன்னா, ஏன் உனக்குக் கவனக்குறைவெனும் குற்றவுணர்வு ஏற்பட வேண்டும்?” என்றார்.(65)

இதன்பிறகு, அந்தக் கோசல மன்னன் க்ஷத்திரிய வகையில் இருந்து ஓர் அமைச்சரையும், அந்தப் பிராமணக் காளையை {காலகவிருக்ஷீயரைத்} தன் புரோகிதராகவும் நியமித்துக் கொண்டான்.(66) இம்மாற்றங்களைச் செய்த பிறகு, அந்தக் கோசலத்தின் மன்னன் {க்ஷேமதர்சின்} மொத்த உலகத்தையும் அடக்கி, பெரும்புகழை அடைந்தான். தவசி காலகவிருக்ஷீயர், மன்னனுக்காகப் பெரும் வேள்விகளைச் செய்து தேவர்களை வழிபட்டார்.(67) அந்தக் கோசல மன்னன், அவரது நல்ல ஆலோசனைகளைக் கேட்டு, மொத்த உலகையும் கைப்பற்றி, அந்தத் தவசி சொன்ன வழியிலே அனைத்து வகையிலும் நடந்து கொண்டான்” என்றார் {பீஷ்மர்}.(68)

ஆலோசிக்கத் தக்கார், தகவிலார்! – சாந்திபர்வம் பகுதி – 83-அரசவையினர், அமைச்சர்கள், படைத்தலைவர்கள் ஆகியோரின் பண்புகளையும், ஒரு மன்னனுக்கு ஆலோசிக்கத்தகுந்தவர் யாவர், தகாதவர் யாவர் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஒரு மன்னனின் சட்டமன்றத்தினர், போர்த்துறை அமைச்சர்கள், அரசவையினர், படைத்தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் எவ்விதப் பண்புகளைக் கொண்டோராக இருக்க வேண்டும்?” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பணிவு, தன்னடக்கம், உண்மை, நேர்மை, சரியானதைச் சொல்லும் துணிவு ஆகிய பண்புகளைக் கொண்டோரே உன் சட்டமன்றத்தினராக {அரசவையோரோக} இருக்க வேண்டும்.(2) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, எப்போதும் உன் தரப்பில் இருப்போரும், பெரும் துணிவு கொண்டோரும், மறுபிறப்பாள வகையைச் சார்ந்தோரும், பெரும் கல்விமான்களும், எப்போதும் உன்னிடம் நிறைவு கொண்டோரும், அனைத்துச் செயல்பாடுகளிலும் விடாமுயற்சியுடன் கூடியவர்களும் துன்பகாலங்கள் அனைத்திலும் உடனிருப்பவனையே போர்த்துறை அமைச்சர்களாக நீ விரும்ப வேண்டும்.(3) உயர்ந்த மரபுவழியில் வந்தவனும், உன்னால் கௌரவிக்கப்படுபவனும், உன்சார்பாக முடிந்த அளவுக்கு எப்போதும் தன் சக்தியை வெளிப்படுத்துபவனும், இன்பத்திலோ துன்பத்திலோ, நோயிலோ, மரணத்திலோ ஒருபோதும் உன்னைக் கைவிடாதவனும் உன் அரசவை உறுப்பினராக ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.(4) உன்நாட்டில் பிறந்த உயர் பிறப்பாளர்களும், ஞானம், அழகிய வடிவம், நற்பண்புகள், பெரும் கல்வி, நடத்தையில் கண்ணியம் ஆகியவற்றைத் தவிர உன்னிடம் அர்ப்பணிப்பும் கொண்டோர் உன் படை அதிகாரிகளாக நியமிக்கப்பட வேண்டும்.(5)

தாழ்ந்த மரபுவழி, பேராசையுடன் கூடிய மனோநிலை ஆகியவற்றைக் கொண்டவர்கள், கொடூரர்கள், வெட்கமில்லாதவர்கள் ஆகியோர், அவர்களது கரங்களில் ஈரம் உள்ள வரையில் உன் அவையில் இருப்பார்கள்[2].(6) நற்பிறவி, நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டோர், குறியீடுகள் மற்றும் சைகைகள் அனைத்தையும் படிப்போர், கொடுமையற்றோர், இடத்திற்கும், காலத்திற்கும் தக்க தேவைகளை அறிந்தோர், அனைத்துச் செயல்பாடுகளிலும் தங்கள் தலைவனின் நன்மையையே எப்போதும் நாடுவோர் ஆகியோரை மன்னன் தன் காரியங்கள் அனைத்திலும் அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்.(7) செல்வக்கொடை, கௌரவங்கள், மரியாதைமிக்க வரவேற்பு, புகழை அடையும் வழிமுறைகள் ஆகியவற்றின் மூலம் வெல்லப்பட்டவர்கள், உன் காரியங்கள் அனைத்திலும் உனக்கு நன்மை செய்வார்கள் என்று கருதப்படத்தக்கவர்கள் ஆகியோர் எப்போதும் உன் மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்.(8) மாறாநடத்தை கொண்டவர்கள், கல்வியும் நல்லொழுக்கமும் படைத்தவர்கள், சிறந்த நோன்புகளை நோற்பவர்கள், பெரிய இதயம் கொண்டவர்கள், பேச்சில் உண்மை நிறைந்தவர்கள் ஆகியோர் எப்போதும் உன் காரியங்களில் கவனம் உள்ளவர்களாகவும், உன்னை ஒருபோதும் கைவிடாதவர்களாகவும் இருப்பார்கள்.(9) மறுபுறம், கௌரவமற்றவர்கள், கட்டுப்பாடுகள் எதையும் நோற்காதவர்கள், தீய ஆன்மா படைத்தவர்கள், நற்செயல்களில் இருந்து வீழ்ந்துவிட்டவர்கள், ஆகியோர் நலம்சார்ந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நோற்கும்படி எப்போதும் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.(10)எத்தரப்பைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழும்போது, ஒரு தரப்பைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பலரை நீ கைவிடக் கூடாது. எனினும், ஒரே ஒரு மனிதன் சாதனைகள் பலவற்றின் விளைவாகப் பலரை விஞ்சியிருக்கும்போது, அந்த ஒருவனுக்காக நீ பலரைக் கைவிட வேண்டும்[3].(11) ஆற்றல், புகழைத் தரும் செயல்களில் அர்ப்பணிப்பு, நலம்சார்ந்த கட்டுப்பாடுகளை நோற்றல் ஆகியவையே மேன்மையின் குறியீடுகளாகக் கருதப்படுகின்றன.(12) மேலும், திறன் கொண்ட மனிதர்கள் அனைவரையும் கௌரவிப்பவன், எந்தத் தகுதியும் இல்லாதவனிடம் ஒருபோதும் போட்டியிடாதவன், காமம், அல்லது அச்சம், அல்லது கோபம், அல்லது பேராசை ஆகியவற்றின் காரணமாக ஒருபோதும் அறத்தைக் கைவிடாதவன்,(13) பணிவால் அலங்கரிக்கப்பட்டவன், பேச்சில் உண்மை நிறைந்தவன், மன்னிக்கும் இயல்பு கொண்டவன், தன் ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டவன், கண்ணிய உணர்வு கொண்டவன், அனைத்துச் சூழ்நிலைகளையும் பயன்படுத்துபவன் ஆகியோர் உன் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும்.(14) ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா} உயர்ந்த மரபுவழி, குருதித்தூய்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, புத்திசாலித்தனம், ஆன்மத்தூய்மை, துணிச்சல், நன்றியுணர்ச்சி, உண்மை ஆகியன மேன்மை மற்றும் நல்லியல்பு ஆகியவற்றின் குறியீடுகளாகும்.(15) இவ்வழியில் தன்னை நடத்திக் கொள்ளும் ஞானி ஒருவன், தன் எதிரிகளிடம் உள்ள பகைமையை அகற்றி, அவர்களைத் தன் நண்பனாக்கிக் கொள்வான்.(16)தன் ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டவன், ஞானம் கொண்டவன், செழிப்பை விரும்புவனான ஒரு மன்னன், தன் அமைச்சர்களின் தகுதிகள் மற்றும் தவறுகளைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.(17) செழிப்பையும், போட்டியாளர்களுக்கு மத்தியில் ஒளிர்வதையும் விரும்பும் மன்னன் ஒருவன், தன் நாட்டில் பிறந்தவர்களும், உயர் குடிபிறப்பு கொண்டவர்களும், பிழை செய்ய இயலாதவர்களும், ஒழுக்கக்கேடு மற்றும் அதுபோன்ற பிற தீமைகளின் களங்கம் படியாதவர்களும், நன்கு பரிசோதிக்கப்பட்டவர்களும், நல்ல குடும்பங்களைச் சார்ந்தவர்களும், கல்வி படைத்தவர்களும், அதே போன்ற அலுவல்களைச் செய்திருந்த தந்தைமார் மற்றும் பாட்டன்மாரிடம் இருந்து உதித்தவர்களும், பணிவால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான தன் நம்பிக்கைகுரிய நண்பர்களுடன் தொடர்புடைய மனிதர்களையே தன் அமைச்சர்களாகக் கொண்டிருக்க வேண்டும்[4].(18,19) செருக்கால் களங்கப்படாத நுண்ணறிவு, நல்ல மனோநிலை, சக்தி, பொறுமை, மன்னிக்கும் தன்மை, தூய்மை, பற்று, உறுதி, துணிவு ஆகியவற்றைக் கொண்டவர்களும், தகுதி மற்றும் பிழைகளுக்காக நன்கு பரிசோதிக்கப்பட்டவர்களும், வயதால் முதிர்ந்தவர்களாக இருப்பவர்களும் {அனுபவமிக்கோர்}, {பணிச்} சுமைகளைச் சுமக்கவல்லவர்களும், வஞ்சனையற்றவர்களுமாக இருப்போரில் ஐந்து பேரை, மன்னன் தன் காரியங்களைக் கவனித்துக் கொள்வதில் நியமிக்க வேண்டும்.(20,21) பேச்சில் ஞானம் கொண்டோர், வீரம் கொண்டோர், கடினமான காலங்களிலும் வளம் நிறைந்தோர், நற்பிறவி கொண்டோர், உண்மை நிறைந்தோர், குறியீடுகளை உணர்ந்து கொள்வோர், கொடூரமற்றோர்,(22) இடம் மற்றும் நேரத்திற்குத் தக்க தேவையானவற்றை அறிந்தோர், தங்கள் தலைவர்களுக்கு நன்மையை விரும்புவோர் ஆகியோர் நாட்டின் அனைத்து காரியங்களையும் கவனிக்கும் அமைச்சர்களாக மன்னனால் நியமிக்கப்பட வேண்டும்.(23)

சக்தியற்றவனாலும், நண்பர்களால் கைவிடப்பட்டவனாலும் விடாமுயற்சியுடன் ஒருபோதும் செயல்பட முடியாது. அத்தகு மனிதனை {அமைச்சனாக} நியமித்தால் அவன் கிட்டத்தட்ட அனைத்து தொழிலிலும் தோல்வியுறவே செய்வான்.(24) குறைந்த கல்வி கொண்ட ஓர் அமைச்சர், நற்பிறவி கண்டவராகவும், அறம், பொருள் மற்றும் இன்ப காரியங்களில் கவனத்துடனும் இருந்தாலும், அவர் சரியான செயல்களைச் செய்யத் தவறுவார்.(25) அதேபோலவே, தாழ்ந்த மரபுவழியில் வந்த ஒரு மனிதன், பெரும் கல்வியைக் கொண்டவனாக இருந்தாலும், அவன் வழிகாட்டியில்லாத ஒரு குருடரைப் போல, திறன்மிக்க இயக்கம் மற்றும் முன்னறிதிறனுக்கான தேவை இருக்கும் செயல்கள் அனைத்திலும் எப்போதும் தவறு செய்வான்.(26) மேலும், உறுதியற்ற நோக்கங்களை {நிலையற்ற எண்ணங்களைக்} கொண்ட ஒரு மனிதன், நுண்ணறிவு, கல்வி ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும், வழிமுறைகளை அறிந்தவனாக இருந்தாலும் நீண்ட காலம் {தேவைப்படும் காரியங்களில்} வெற்றியடையமுடியாது.(27) தீய இதயம் கொண்டவனும், கல்வி இல்லாதவனுமான ஒரு மனிதன், ஒரு வேலையைச் செய்யத் தொடங்கலாம், ஆனால், அவன் தனது பணியின் விளைவுகளை உறுதிசெய்வதில் தவறுவான்.(28)

ஒரு மன்னன், தன்னிடம் அர்ப்பணிப்பில்லாத அமைச்சனிடம் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது. எனவே, அவன் தன்னிடம் அர்ப்பணிப்பில்லாத அமைச்சனிடம் ஒருபோதும் தன் ஆலோசனைகளை வெளிப்படுத்தக்கூடாது.(29) அத்தகு தீய அமைச்சன், மன்னனின் பிற அமைச்சர்களுடன் சேர்ந்து, காற்றின் உதவியுடன் ஏற்பட்ட வழிகளில் மரத்தினுள் சென்று அஃதை எரித்துவிடும் நெருப்பைப் போலவே தன் தலைவனை அழித்துவிடுவான்.(30) ஒரு தலைவன், ஒரு நாள் கோபத்திற்கு ஆட்பட்டு ஒரு பணியாளனை அவனது அலுவலில் இருந்து இறக்கலாம் {பதவி நீக்கலாம்}, அல்லது சீற்றத்துடன் கடும் வார்த்தைகளில் நிந்திக்கவும் செய்யலாம், அவனே மீண்டும் {ஒருநாள்} அதிகாரத்தில் அமர்த்தவும் செய்யலாம்.(31) தலைவனுக்கு அர்ப்பணிப்புள்ள ஒரு பணியாளனால் மட்டுமே இவ்வாறு நடத்தப்படுவதைத் தாங்கிக் கொள்ளவும், மன்னிக்கவும் முடியுமேயன்றி வேறு யாராலும் முடியாது. சில வேளைகளில் அமைச்சர்களும் தங்கள் அரசத் தலைவர்களால் அதிகம் புண்படுத்தப்படுகிறார்கள்.(32) அவர்களில், தன் தலைவனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தன் கோபத்தை அடக்கிக் கொள்பவனும், மன்னனின் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்பவனுமான ஒருவனிடம் மன்னன் தன் காரியங்கள் அனைத்திலும் ஆலோசனை பெற வேண்டும்.(33) தன் தலைவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும், ஞானியாகவும், எண்ணற்ற நற்குணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாகவும் இருந்தாலும்கூட, குறுகிய இதயம் கொண்ட ஒரு மனிதனிடம் மன்னன் ஒருபோதும் எதையும் ஆலோசிக்கக்கூடாது.(34)

எதிரியுடன் கூட்டு சேர்பவனும், மன்னனின் குடிமக்களுக்கான நன்மையைக் கருத்தில் கொள்ளாதவனுமான ஒருவன் எதிரியாகவே அறியப்பட வேண்டும். மன்னன் அவனோடு ஒருபோதும் ஆலோசிக்கூடாது.(35) கல்வியற்றவனும், தூய்மையற்றவனும், செருக்கால் களங்கமடைந்தவனும், மன்னனின் எதிரிகளுடன் கூட்டு சேர்பவனும், தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவனும், நட்புணர்வற்றவனும், கோபம் நிறைந்தவனும், பேராசை கொண்டவனுமான ஒருவனிடம் மன்னன் ஆலோசிக்கக் கூடாது.(36) அயலானான ஒருவன், மன்னனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும், கல்வி மானாகவும் இருந்தாலும் கூட, அவன் மன்னனால் கௌரவிக்கப்படலாம், வாழ்வாதாரத்திற்குத் தேவையான பணிகளை ஒப்படைக்கப்பட்டு நிறைவு செய்யப்படலாம், ஆனால் மன்னன் ஒருபோதும் தன் காரியங்களைக் குறித்து அவனிடம் ஆலோசிக்கக்கூடாது.(37) எந்த மனிதனின் தந்தை அரசாணையின்படி அநீதியாகத் தண்டிக்கப்பட்டானோ, அவனுக்கு மன்னன் கௌரவத்தை அளித்து, வாழ்வாதாரத்திற்கான பணிகளை அவனிடம் ஒப்படைத்தாலும்கூட, அவனிடம் ஆலோசிக்கக்கூடாது.(38) சிறிய மீறலுக்காகச் செல்வம் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு நலன் விரும்பி, அனைத்து சாதனைகளையும் கொண்டவனாகவே இருந்தாலும் கூட, மன்னன் அவனிடம் ஆலோசிக்கக்கூடாது.(39)

ஞானம், நுண்ணறிவு, கல்வி ஆகியவற்றைக் கொண்டவனும், தன் நாட்டிலேயே பிறந்தவனும், தூய்மையானவனும், தன் செயல்கள் அனைத்திலும் நீதியுடன் இருப்பவனுமான ஒரு மனிதனே, மன்னன் ஆலோசிக்கத்தகுந்தவன் ஆவான்.(40) அறிவும், விவேகமும் கொண்டவனும், நண்பர்கள் மற்றும் எதிரிகளின் மனோநிலைகளை அறிந்தவனும், மன்னன் தன்னைப் போலவே கருதிக்கொள்ளும் நண்பனுமான ஒருவன், ஆலோசனைக்குத் தகுந்தவனாவான்.(41) பேச்சில் உண்மையும், பணி மற்றும் மென்மை கொண்டவனும், தலைமுறை தலைமுறையாக மன்னனின் பணியாளுமான ஒருவன், ஆலோசனைக்குத் தகுந்தவனாவான்.(42) நிறைவுடையவனும், கௌரவமிக்கவனும், உண்மை நிறைந்தவனும், கண்ணியமானவனும், தீமையையும், தீய மனிதர்களையும் வெறுப்பவனும், கொள்கை மற்றும் காலத்தின் தேவைகள் ஆகியவற்றை அறிந்தவனும், துணிவுமிக்கவனுமான ஒருவன் ஆலோசனைக்குத் தகுந்தவனாவான்.(43) 

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இணங்கச் செய்வதன் மூலம் மனிதர்கள் அனைவரையும் வெல்லத்தகுந்த ஒருவனிடம், தண்டனை அறிவியலின் ஆணைப்படி ஆள விரும்பும் ஒரு மன்னன் ஆலோசிக்க வேண்டும்.(44) எவனுடைய நியாயமான நடவடிக்கையின் காரணமாக அவன் மீது தலைநகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போர் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, எவன் போரிடத் தகுந்தவனோ, எவன் கொள்கைவிதிகளை அறிந்தவனோ, அவன் மன்னனால் ஆலோசனை கேட்கப்படத் தகுந்தவனாவான்.(45) எனவே, அத்தகு பண்புகளைக் கொண்ட மனிதர்கள், அனைவரின் மனோநிலைகளையும் அறிந்தவர்களும், உயர்ந்த செயல்களைச் செய்ய விரும்புபவர்களுமான மனிதர்கள் மன்னனால் கௌரவிக்கப்பட்டு, அவனது அமைச்சர்களாக்கப்பட வேண்டும். அவர்களுடைய எண்ணிக்கை மூன்றுக்கும் குறைவாக இருக்கக் கூடாது[5].(46)

அமைச்சர்கள், தங்கள் தலைவர்களின் குறைகள், தங்கள் மற்றும் குடிமக்களின் குறைகள் மற்றும் தங்கள் தலைவனுடைய எதிரியின் குறைகளைக் காண நியமிக்கப்பட வேண்டும். அமைச்சர்களிடம் இருந்து பாயும் கொள்கை ஆலோசனைகளே நாட்டின் வேராகும், மேலும் அது நாடு எனும் அந்த மூலத்தில் இருந்தே வளர்கிறது.(47) அமைச்சர்கள், தங்கள் தலைவனுடைய எதிரிகள் தங்கள் குறைகளைக் காண இயலாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். மறுபுறம், அவர்களது குறைகள் வெளிப்படையாகத் தெரிந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஓர் ஆமை தனது அங்கங்களை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப் போலவே, அமைச்சர்கள் தங்கள் ஆலோசனைகளைப் பாதுகாக்க வேண்டும். மேலும் அவர்கள் தங்கள் குறைகளையும் மறைக்க வேண்டும்.(48) தங்கள் ஆலோசனைகளை மறைப்பதில் வெல்லும் ஒரு நாட்டின் அமைச்சர்கள் விவேகிகள் என்று சொல்லப்படுகிறார்கள். ஆலோசனைகள் மன்னனின் கவசமாகவும், குடிமக்கள் மற்றும் அதிகாரிகளின் அங்கங்களாகவும் இருக்கின்றன.(49) ஒரு நாடு, தன் ஒற்றர்கள் மற்றும் இரகசிய உளவாளிகளிடமே தன் வேரைக் கொண்டுள்ளது, அதன் பலம் கொள்கைகளின் ஆலோசனையிலேயே இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. தலைவர்களும், அமைச்சர்கள், செருக்கையும் கோபத்தையும், பகத்தையும், பொறாமையையும் அடக்கி, ஒருவரிடம் இருந்து ஒருவர் ஆதரவைப் பெற்று, ஒருவரையொருவர் பின்பற்றினால் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியடைவார்கள்.(50)

ஒரு மன்னன், ஐந்து வகை வஞ்சகங்களில் இருந்து விடுபட்ட அமைச்சர்களிடமே ஆலோசிக்க வேண்டும்[6].(51) முதல் தருணத்தில், மன்னனுடன் ஆலோசித்தவர்களுள் மூவரின் வெவ்வெறு கருத்துகளை நன்கு உறுதிப்படுத்திக் கொண்டு, அதன் பிறகு உறுதியான தீர்மானத்தை அடையும் மன்னன், தன் ஆசானிடம் சென்று அந்தக் கருத்துகளையும், தன் சொந்தக் கருத்தையும் சொல்ல வேண்டும். அவனது ஆசான், அறம், பொருள் மற்றும் இன்பம் குறித்த அனைத்து காரியங்களையும் நன்கு அறிந்த ஒரு பிராமணராக இருக்க வேண்டும். உறுதியான தீர்மானத்துடன் அவரிடம் செல்லும் மன்னன், குவிந்த மனத்தோடு அவரது கருத்தையும் கேட்க வேண்டும். மன்னன் அவரோடு சேர்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்தபிறகு, எந்தப் பற்றும் இல்லாமல் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.(52,53) ஆலோசனை எனும் அறிவியலின் தீர்மானங்களை நன்கறிந்தோர், மன்னர் எப்போதும் இவ்வழியிலேயே தங்கள் ஆலோசனைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். ஆலோசனைகளை இவ்வழியில் தீர்மானிக்கும் அவர்கள், குடிமக்கள் அனைவரையும் வெல்வதற்காக அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.(54)

மன்னன் தன் ஆலோசனைகளைச் செய்யும் இடத்தில், உயரம் குறைந்தோர் {குள்ளர்கள்}, முதுகு வளைந்தோர் {கூனர்கள்}, மெலிந்த உடல் வாகைக் கொண்டவர்கள், முடமானோர், பார்வையற்றோர் {குருடர்கள்}, மூடர்கள், பெண்கள், அலி ஆகியோரில் எவரும் இருக்கக்கூடாது. அங்கே எதுவும் முன்போ, பின்போ, மேலோ, கீழோ, குறுக்காகவோ நகர்ந்து கொண்டிருக்கக்கூடாது.(55) மன்னன், படகில் ஏறியோ, புல், புதர் அற்ற, சுற்றிலும் தெளிவாகத் தெரியக்கூடிய நிலங்களைக் கொண்ட திறந்தவெளிக்குச் சென்றோ, பேச்சு மற்றும் தோற்றத்தில் குறைகளைத் தவிர்த்து உரிய நேரத்தில் ஆலோசனைகளைச் செய்ய வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(56)

இன்சொல்லும் இனிய நடத்தையும்! – சாந்திபர்வம் பகுதி – 84-இனிமையான பேச்சும், இனிமையான நடத்தையும் சாதிக்கக் கூடியவற்றைப் பிருஹஸ்பதிக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலின் மூலம் யுதிஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பிருஹஸ்பதிக்கும், சக்ரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(1)

சக்ரன் {இந்திரன் பிரஹஸ்பதியிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, ஒரு மனிதன், எந்தக் காரியத்தைக் கவனமாகச் சாதிப்பதன் மூலம், அனைத்து உயிரினங்களின் மதிப்புக்குரியவனாகி பெரும்புகழை அடைய முடியும்?” என்று கேட்டான்.(2)

பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா {இந்திரா}, ஒரு மனிதன் பேச்சில் இனிமையுடையவனாக இருந்தால், அவன் அனைத்து உயிரினங்களின் மதிப்புக்குரியவனாகி, பெரும் புகழை அடைவான்.(3) ஓ! சக்ரா, இதுவே அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒன்றாகும். இதைப் பயில்வதால் ஒருவனால் எப்போதும் அனைத்து உயிரினங்களின் அன்பைப் பெற முடியும்.(4) {இனிய} ஒரு சொல்லும் பேசாதவனும், புருவம் சுருங்கி, முகம் சுழிப்பவனுமான ஒரு மனிதன் அனைத்து உயிரினங்களின் வெறுப்புக்கு ஆளாகிறான். இனிய சொல் பேசாமை அவனை அவ்வாறு ஆக்குகிறது.(5) பிறரைக் கண்டதும், புன்னகையுடன் முதலில் பேசும் மனிதன், அவர்கள் அனைவரையும் தன்னிடம் நிறைவுகொள்ளச் செய்கிறான்.(6)

இனிமையான சொல் இல்லாமல் கொடைகளையே {தானங்களையே} அளித்தாலும்கூட, அது குழம்பில்லாத சோற்றைப் போலப் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காது.(7) ஓ! சக்ரா, இனிய சொற்களுடன் மனிதர்களின் உடைமைகளே பறிக்கப்பட்டாலும்கூட, அத்தகு இனிமையான நடத்தையானது கொள்ளை கொடுத்தவனைச் சமரசம் செய்வதில் வெல்லும்.(8) எனவே, ஒரு மன்னன், தண்டனையையே அளிக்க விரும்பினாலும் இனிமையான வார்த்தைகளிலேயே பேச வேண்டும். பேச்சில் இனிமை ஒருபோதும் காரியங்களில் தவறுவதில்லை. அதே வேளையில், எந்த இதயத்தையும் காயப்படுத்துவதும் இல்லை.(9) நற்செயல்கள் செய்து நல்லவனாக இருக்கும் ஒரு மனிதன், இனிமையானவனாகவும், இனிமையான பேச்சைக் கொண்டவனாகவும் இருந்தால் அவனுக்கு இணையானவன் வேறு எவனும் கிடையாது” என்றார் {பிருஹஸ்பதி}”.(10)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு தன் புரோகிதரால் {பிருஹஸ்பதியால்} சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, அந்த அறிவுரைகளின்படியே செயல்படத் தொடங்கினான். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீயும் இவ்வறத்தைப் பயில்வாயாக” {என்றார்}.(11)

அமைச்சர்கள் நியமனம்! – சாந்திபர்வம் பகுதி – 85-எந்தெந்த வர்ணங்களில் எத்தனை அமைச்சர்களை நியமிக்க வேண்டும்; அவர்கள் எத்தகைய பண்புகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்; குற்றவாளிகளுக்கு எவ்வாறு தண்டனை வழங்க வேண்டும்; தூதர், மெய்க்காப்பாளன், அமைச்சர், படைத்தலைவன் ஆகியோர் என்ன திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பன குறித்து யுதிஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, பேரருளையும், நித்திய புகழையும் அடைய ஒரு மன்னன் தன் குடிமக்களை எவ்வழிமுறையின் ஆள வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தூய ஆன்மாவையும், தன் குடிகளை ஆளும் கடமையில் கவனத்தையும் கொண்ட ஒரு மன்னன், நீதியுடன் தன்னை நடத்திக் கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் அவன் தகுதியையும், புகழையும் ஈட்டுவான்” என்றார்.(2)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மன்னன், எவருடன் எவ்வழியில் நடந்து கொள்ள வேண்டும்? ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, கேட்கும் எனக்கு முறையாக அனைத்தையும் சொல்வதே உமக்குத் தகும்.(3) நீர் ஏற்கனவே சொன்னவற்றில் ஒரு மனிதனுக்கான அறங்களில் {பண்புகளில்} எதுவும் எந்த ஒரு தனி மனிதனிடமும் காணப்படவில்லை என்பதே என் நம்பிக்கை” என்றான்[1].(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, நீ பெரும் நுண்ணறிவு கொண்டவனாக இருக்கிறாய். இது நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. அந்த நற்குணங்கள் அனைத்தையும் கொண்ட மனிதன் மிக அரிதானவனே.(5) சுருக்கமாகச் சொன்னால், கவனமான தேடலுக்குப் பிறகும் கூட {எவனிடமும்} இத்தகு நடந்தை (சொல்லப்படும் அறங்கள் அனைத்தின் இருப்பும்) காணப்படுவது மிக அரிதே. எனினும், உன்னால் எந்த வகையான அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உனக்குச் சொல்கிறேன்.(6)

வேதகல்வி, கண்ணிய உணர்வு ஆகியவற்றைக் கொண்டவர்களும், சனாதக வகையைச் சேர்ந்தவர்களும், தூய நடத்தை கொண்டவர்களுமான நான்கு {4} பிராமணர்களும்; உடல் பலம் கொண்டவர்களும், ஆயுதந்தரிக்க வல்லவர்களுமான எட்டு {8} க்ஷத்திரியர்களும்,(7) செல்வம் படைத்தவர்களான இருபத்தோரு {21} வைசியர்களும், பணிவானவர்களும், தூய நடத்தை கொண்டவர்களும், தினசரி கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மூன்று {3} சூத்திரர்களும்,(8) புராணங்கள் மற்றும் எட்டு முக்கிய அறங்களை[2] {பண்புகளைக்} குறித்த அறிவு கொண்டவனான ஒரு சூதனும் உன் அமைச்சர்களாக இருக்க வேண்டும். {ஆக மொத்தம் 37 அமைச்சர்கள்}. அவர்கள் அனைவரும் ஐம்பது வயதைக் கடந்தவர்களாகவும், கண்ணிய உணர்வு கொண்டவர்களாகவும், பொறாமையில் இருந்து விடுபட்டவர்களாகவும்,(9) சுருதிகள் மற்றும் ஸ்மிருதிகளை அறிந்தவர்களாகவும், பணிவுடையவர்களாகவும், நடுநிலையாளர்களாகவும், வழக்காடுபவர்களின் மத்தியில் செயலின் பல்வேறு வகைகளைக் குறித்துச் சொல்லி தீர்வை எட்ட ஆயத்தமாக இருப்பவர்களாகவும், பேராசையில் இருந்து விடுபட்டவர்களாகவும்,(10) வியசனங்கள் என்று அழைக்கப்படும் ஏழு அதிபயங்கரத் தீமைகளில்[3] இருந்து விடுபட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மன்னன், {வழக்கு விசாரணையின்போது} அந்த எட்டு அமைச்சர்களுக்கு மத்தியில் ஆலோசிக்க வேண்டும்[4].(11) மேலும் அவன் {மன்னன்}, அந்த ஆலோசனையின் விளைவுகளைத் தன் குடிமக்களுக்கான செய்தியாகத் தன் நாட்டில் வெளியிட வேண்டும். நீ எப்போதும் இத்தகு நடத்தையையே பின்பற்றி உன் மக்களைக் கண்காணிக்க வேண்டும்.(12)பொருளின் உரிமை குறித்து இரு மனிதர்களிடையிலான சச்சரவின் பேரில் உன்னிடம் கொடுக்கப்பட்டவற்றை, நீ ஒருபோதும் பறிமுதல் செய்யவோ, உனதாகக் கொள்ளவோ கூடாது. அத்தகு நடத்தை நீதி நிர்வாகத்தைக் கெடுத்துவிடும். உன் நீதி நிர்வாகம் இவ்வாறு பழுதுபட்டால், பாவமே உன்னைப் பீடிக்கும்.(13) அஃது உன் நாட்டையும் பீடித்து, பருந்தைக் கண்ட சிறு பறவைகளைப் போல உன் மக்களை அஞ்சவைக்கும். பிறகு உனது நாடானது, கடலில் உடைந்த படகைப் போல உருகி {அழிந்து} விடும்.(14) மன்னன் தன் குடிகளை அநீதியுடன் ஆண்டால், அவனது இதயம் அச்சத்தால் பீடிக்கப்பட்டு, சொர்க்கத்தின் கதவானது அவனுக்கு எதிராகச் சாத்தப்படும்.(15) ஓ! மனிதர்களில் காளையே, ஒரு நாடானது நீதியிலேயே தன் வேரைக் கொண்டுள்ளது. நீதி வழங்கும் ஆசனத்தில் அமர்ந்து, தன்னலத்துடன், அநீதியாகச் செயல்படும் அமைச்சரும், அல்லது மன்னனின் மகனும் {இளவரசனும்}, காரியங்களின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தன்னலத்தால் உந்தப்பட்டு நியாயமில்லாமல் நடந்து கொள்ளும் அதிகாரிகள் அனைவரும் அந்த மன்னனுடன் சேர்ந்து நரகில் மூழ்குவார்கள்.(16,17)

வலியோரால் ஒடுக்கப்பட்டு, பரிதாபகரமான ஒப்பாரிகளில் ஈடுபடும் ஆதரவற்ற மனிதர்கள் தங்கள் பாதுகாவலனை மன்னனிடமே கொண்டுள்ளனர்.(18) இரு தரப்புகளுக்கிடையிலான சச்சரவு வழக்குகளில், சாட்சிகளின் ஆதார அடிப்படையிலேயே தீர்மானம் எட்டப்பட வேண்டும். வழக்காளிகளில் ஒருவர் சாட்சி ஏதும் இல்லாமல், ஆதரவற்றவராக இருந்தால், மன்னன் அந்த வழக்கில் சிறப்பான கவனத்தைச் செலுத்த வேண்டும்.(19) குற்றவாளிகள் அவர்கள் செய்த குற்றங்களின் அடிப்படையில் தண்டனை பெற மன்னன் ஆவன செய்ய வேண்டும். செல்வந்தர்கள் {குற்றமிழைக்கும்போது}, அபராதங்கள் மற்றும் பறிமுதல்கள் செய்வதன் மூலமும், ஏழைகள் {குற்றமிழைக்கும்போது}, சுதந்திரம் இழக்கச் செய்வதன் மூலமும் தண்டிக்கப்பட வேண்டும்.(20) மிகத்தீய நடத்தை கொண்டோரை, உடற்சார் துன்பங்களின் மூலம் மன்னன் தண்டிக்க வேண்டும். நல்லோர் அனைவரையும் மன்னன் இனிய சொற்கள் மற்றும் செல்வக்கொடைகளின் மூலம் பேணிக் காக்க வேண்டும்.(21) மன்னனைக் கொல்ல முனைபவன், பல்வேறு வழிமுறைகளின் மூலமான மரணத் தண்டனையால் தண்டிக்கப்பட வேண்டும். தீவைத்தல், களவு, வர்ணக்கலப்புக்கு வழிவகுக்கும் வகையில் பெண்களின் துணையை நாடுதல் ஆகிய குற்றங்களைச் செய்பவனும் அதே வகையில் தண்டிக்கப்பட வேண்டும்.

ஓ! ஏகாதிபதி, தண்ட அறிவியலின் விதிகளுக்கு ஏற்புடைய வகையிலும் முறையாகத் தண்டனை அளிக்கும் மன்னன் அச்செயலால் எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை. மறுபுறம், அவன் அழியா தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறான்.(23) காரணமின்றித் தண்டனைகளை விதிக்கும் மூட மன்னன், இம்மையில் புகழ்க்கேட்டை ஈட்டி, மறுமையில் நரகில் மூழ்குகிறான்.(24) ஒருவன் வேறொருவரின் குற்றத்திற்காகத் தண்டிக்கப்படக்கூடாது. (குற்றவியல்) சட்டத்தை நன்கு சிந்தித்துப் பார்த்த பிறகே, ஒரு மனிதன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படவோ, விடுவிக்கப்படவோ வேண்டும்.(25)

ஒரு மன்னன் எந்தச் சூழ்நிலையிலும் ஒரு தூதரைக் கொல்லக்கூடாது. தூதரைக் கொல்லும் மன்னன், தன் அமைச்சர்கள் அனைவருடன் சேர்ந்து நரகில் மூழ்குவான்.(26) தனக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை பற்றுறுதியுடன் சொன்ன ஒரு தூதனைக் கொல்லும் மன்னன், தன் மூதாதையர்களுக்குக் கருவைக் கொன்ற பாவத்தைத் தேடித் தருகிறான்.(27) ஒரு தூதன், உயர்ந்த குடிபிறப்பு, நாநயம், புத்திக்கூர்மை, இனிய பேச்சு, தனக்குக் கொடுக்கப்பட்ட செய்தியைப் பற்றுறுதியுடன் கூறல், நல்ல நினைவுத்திறன் ஆகிய ஏழு திறமைகளைக் கொண்டிருக்க வேண்டும்.(28) மன்னனைப் பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்களும் அதே வகைப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். தலைநகரையோ, நகரரணையோ காக்கும் அதிகாரியும் அதே திறன்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும்.(29)

மன்னனின் அமைச்சர், சாத்திரங்களின் தீர்மானங்களை அறிந்தவராக, போர்களை வழிநடத்துபவராக, உடன்படிக்கைகளை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும். மேலும் அவர், நுண்ணறிவு, துணிவு, பணிவு, ஆகியவற்றைக் கொண்டவராகவும், இரகசியங்களைக் காப்பவராகவும் இருக்க வேண்டும்.(30) அவர் உயர் குடி பிறப்பையும், மனோ பலத்தையும், தூய நடத்தையும் கொண்டவராக இருக்க வேண்டும். இந்தப் பண்புகளைக் கொண்டிருந்தால் அவர் தகுந்தவராகக் கருதப்பட வேண்டும்.

மன்னனுடைய படைகளின் தலைவனும் அதேபோன்ற திறன்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும்.(31) அவன் பல்வேறு வகைப் படை அணிவகுப்புகளை {வியூகங்களை} அறிந்தவனாகவும், இயந்திரங்கள் மற்றும் ஆயுதங்களின் பயன்பாடுகளை அறிந்தவனாகவும் இருக்க வேண்டும். அவன், மழை, குளிர், வெப்பம், காற்று ஆகியவற்றைத் தாங்கிக் கொள்ளக் கூடியவனாகவும், பகைவரின் தவறுகளைக் கவனமாகப் பார்ப்பவனாகவும் இருக்க வேண்டும்.(32)

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஒரு மன்னன், தன் எதிரிகளைப் பாதுகாப்பு உணர்வுடன் அமைதியடையச் செய்ய இயன்றவனாக இருக்க வேண்டும். எனினும், அவன் {மன்னன்} எவனையும் நம்பாமல் இருக்க வேண்டும். தன் சொந்த மகனிடம் நம்பிக்கை கொள்வதே கூட அவனுக்கு அங்கீகரிக்கப்படவில்லை.(33) ஓ! பாவமற்றவனே, சாத்திரங்களின் தீர்மானங்கள் என்ன என்பதை இப்போது நான் உனக்குச் சொன்னேன். எவனையும் நம்ப மறுத்தலே ஆட்சித்திறத்தின் உயர்ந்த புதிர்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}.(34)

அரசநகரத்தின் லக்ஷணம்! – சாந்திபர்வம் பகுதி – 86-மன்னனும், அரச அங்கத்தினரும் வசிக்க வேண்டிய நகரத்திற்குரிய அடையாளங்கள், ஒரு நாடு வலுவூட்டப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டிய வழிமுறைகள்; தவசிகளிடம் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மன்னன் எவ்வித நகரத்திற்குள் வசிக்க வேண்டும்? அவன், ஏற்கனவே உண்டாக்கப்பட்ட ஒரு நகரத்தில் வசிக்க வேண்டுமா? அல்லது அவன் தனியாக ஒன்றைக் கட்ட வேண்டுமா? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, ஓ! குந்தியின் மகனே, ஒரு மன்னன் வசிக்க வேண்டிய நகரத்தைப் பொறுத்தவரையில் கடைப்பிடிக்க வேண்டிய தற்காப்புகளையும், பிற்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளையும் விசாரிப்பதே {விசாரித்தறிவது} முறையாகும்.(2) எனவே, நகரரண்களின் {கோட்டைகளின்} தற்பாதுகாப்பைக் குறித்து நான் உரையாடப்போகிறேன். நான் சொல்வதைக் கேட்ட பிறகு, தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, வழிநடத்தப்படும்படியே கவனமாக உன்னை நடத்திக் கொள்வாயாக.(3) ஆறு வகை அரண்களில் {துருக்கங்களில்} தன் கண்களைச் செலுத்தியபடியே {கவனத்தைக் கொண்டு} மன்னன், அனைத்து வகைச் செழிப்புகளையும், பயன்படுத்துவதற்கான அனைத்து வகைப் பொருட்களையும் அபரிமிதமாகக் கொண்ட தன் நகரங்களைக் கட்ட வேண்டும்.(4) நீர்அரண்கள் {ஜலதுர்க்கம்}, பூமிஅரண்கள் {பூமிதுர்க்கம்}, மலைஅரணங்கள் {கிரிதுர்க்கம்}, மனிதஅரண்கள் {மனுஷ்யதுர்க்கம்}, மண்அரண்கள் {மருதுர்க்கம்}, காட்டுஅரண்கள் {வனதுர்க்கம்} ஆகியனவே அந்த ஆறு வகை அரண்களாகவும் {துருக்கங்களாகும்}[1].(5)

அரணால் பாதுகாக்கப்பட்டதும், அரிசி மற்றும் ஆயுதக் கிடங்குகளை அபரிமிதமாகக் கொண்டதும், ஊடுருவமுடியா சுவர்கள் மற்றும் அகழியால் பாதுகாக்கப்பட்டதும், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்கள் நிறைந்ததும், கல்வி மற்றும் இயந்திரவியல் கலையில் திறன் ஆகியவற்றைக் கொண்ட மனிதர்கள் வசிப்பதும், அனைத்து வகைப் பொருட்கள் நன்கு சேமிக்கப்பட்டதும், அறநடத்தையும், தொழிலில் நுண்ணறிவும், பலமும், சக்தியும் கொண்ட மனிதர்கள் நிறைந்ததும், விலங்குகள் நிறைந்ததும், நேர்மையான நடத்தை கொண்ட மனிதர்கள் இருப்பதும், அமைதி நிலைத்திருப்பதும், ஆபத்தில்லாததும், அழகால் சுடர்விடுவதும், இசை மற்றும் பாடல்களால் எதிரொலிப்பதும், துணிச்சல்மிக்க, செல்வம் நிறைந்த மனிதர்களைக் கொண்டதும், வேத மந்திரங்களின் ஒலியால் எதிரொலிக்கப்படுவதும், விழாக்களும், பண்டிகைகளும் அடிக்கடி நடைபெறுவதும், எப்போதும் தேவர்களின் வழிபாடுகள் நடைபெறுவதுமான ஒரு நகரத்திலேயே மன்னன், அவனது அமைச்சர்கள், பற்றுறுதி கொண்ட அவனது படையினர் ஆகியோர் வசிக்க வேண்டும்[2].(6-10)

அங்கே வசிக்கும் மன்னன், தன் படைகளை அதிகரித்து, தன் நண்பர்களின் எண்ணிக்கையை மேம்படுத்தி, நீதிமன்றங்களை நிறுவி தன் கருவூலத்தை நிறைப்பதில் ஈடுபட வேண்டும். தன் நகரங்கள் மற்றும் மாகாணங்களில் நிந்தனைகள் மற்றும் தீமைகள் அனைத்தையும் அவன் தடுக்க வேண்டும்.(11) அவன் அனைத்துவகைப் பொருட்களையும் முன்னேற்பாட்டுடன் சேகரிப்பதிலும், தன் ஆயுதக்கிடங்குகளைக் கவனத்துடன் நிறைப்பதிலும் ஈடுபட வேண்டும். அரிசி மற்றும் பிற தானியங்களையும் அவனது கிடங்குகளில் அதிகரிக்கச் செய்து, (விவேகத்துடன்) தனது ஆலோசனைகளை உறுதியடையச் செய்ய வேண்டும்.(12) அவன் மேலும் தன் கிடங்குகளில், விறகு, இரும்பு, உமிகள், கரிகள், மரங்கள், கொம்புகள், எலும்புகள், மூங்கில்கள், மஜ்ஜை, எண்ணெய் மற்றும் வெண்ணெய், கொழுப்பு, தேன், மருந்து வகைகள்,(13) பட்டுச்சணல், {ஸர்ஜரம் எனும்} நறுமணத் திரவியம், அரிசி, ஆயுதங்கள், அம்புகள், தோல், (நாண்கயிறுகளுக்கான) நரம்பு, பிரம்பு, முஞ்சப் புல் {ஒரு வகைத் தர்ப்பம்}, பிறவகைச் செடிகொடிகள் {மூலிகைகள்} ஆகியவற்றையும் அதிகரிக்க வேண்டும்.(14) மேலும், பெரும் அளவிலான நீரைக் கொண்ட குளங்கள் {அல்லது தொட்டிகள்} மற்றும் கிணறுகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து, பாலுள்ள மரங்கள் அனைத்தையும் அவன் பாதுகாக்க வேண்டும்[3].(15)

(பல்வேறு அறிவியல் துறைகளில்) ஆசான்களாக இருப்போரையும், ரித்விக்குகள், புரோகிதர்கள், வலிமைமிக்க வில்லாளிகள், கட்டடக் கலைஞர்கள், வானியல் வல்லுனர்கள், சோதிடக் கலைஞர்கள், மருத்துவர்கள் ஆகியோரையும்,(16) ஞானம், நுண்ணறிவு, தற்கட்டுப்பாடு, புத்திக்கூர்மை, துணிவு, கல்வி, உயர்குடி பிறப்பு, மனோசக்தி ஆகியவற்றைக் கொண்டவர்களையும், அனைத்தவகை பணிகளையும் செய்யவல்ல மனிதர்கள் அனைவரையும் கௌரவித்து, கவனத்துடன் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.(17) மன்னன் நல்லோரைக் கௌரவித்து, நியாயமற்றவர்களைத் தண்டிக்க வேண்டும். தீர்மானத்துடன் செயல்படும் அவன், பல்வேறு வகையினரையும் அவரவருக்குரிய கடமைகளில் நிறுவ வேண்டும்.(18) அவன் {மன்னன்}, தன் நகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போரின் வெளிப்புற நடத்தையையும், மனோநிலையையும் ஒற்றர்கள் மூலம் சரியாக உறுதிச் செய்து கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .(19) மன்னன் தானே தன் ஒற்றர்கள், ஆலோசகர்கள், தன் கருவூலம், தண்டனை அளிக்கும் துறைகளைச் சார்ந்தோர் ஆகியோரை நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். அனைத்தும் இவர்களையே சார்ந்திருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.(20)

ஒற்றர்களையே தன் பார்வையாகக் கொள்ளும் மன்னன், தன் எதிரிகள், நண்பர்கள் மற்றும் நடுநிலையாளர்களின் செயல்களை அனைத்தையும், அவர்களது நோக்கங்கள் அனைத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.(21) பிறகு அவன் கவனத்துடன் தன் திட்டங்களை வகுத்து, தன்னிடம் பற்றுறுதியுடன் இருப்பவர்களைக் கௌரவிக்கவும், பகைமையுடன் இருப்பவர்களைத் தண்டிக்கவும் செய்ய வேண்டும்.(22) மன்னன் எப்போதும் வேள்விகளில் தேவர்களைத் துதித்து, எவருக்கும் துன்பமளிக்காமல் கொடைகளைக் கொடுக்க வேண்டும். நீதிக்குத் தடங்கலாகவோ, குறுக்கீடாகவோ ஒருபோதும் எதையும் செய்யாமல் அவன் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும்.(23) ஆதரவற்றோர், தலைவனற்றோர், முதியோர், விதவைகளாக இருக்கும் பெண்டிர் ஆகியோரை அவன் எப்போதும் பாதுகாத்து, அவர்களைப் பராமரிக்க வேண்டும்.(24)

மன்னன் எப்போதும் தவசிகளைக் கௌரவித்து, உரிய காலங்களில் துணிகள், பாத்திரங்கள் மற்றும் உணவை அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும் (25) அவன் (நாட்டில்) தன்னிலை குறித்தும், தன் திட்டங்கள் அனைத்தையும் குறித்தும், தன் நாட்டைக் குறித்தும் மிகுந்த கவனத்துடன் அந்தத் தவசிகளுக்குத் தெரிவித்து, அவர்கள் முன்னிலையில் எப்போதும் அவன் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.(26) உயர்ந்த பிறப்பையும், பெரும் கல்வியையும் கொண்டவர்களும், உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களையும் கைவிட்டவர்களுமான தவசிகளை அவன் காணும்போது, படுக்கைகள், ஆசனங்கள் மற்றும் உணவுக் கொடைகளுடன் அவர்களை அவன் கௌரவிக்க வேண்டும்.(27) எந்த இயல்பிலான துன்பத்தில் அவன் விழுந்தாலும், அஃதை அவன் ஒரு தவசியிடம் நம்பிக்கையுடன் சொல்ல வேண்டும். கள்வர்களே கூட அத்தகைய பண்பு கொண்ட மனிதர்களிடம் நம்பிக்கை கொள்வார்கள்.(28) மன்னன் தன் செல்வத்தை ஒரு தவசியின் பொறுப்பில் கொடுத்து, அவருடைய ஞானத்தை அவன் எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் அவன் அனைத்துச் சந்தர்ப்பங்களில் அவர்களுக்காகக் காத்திருக்கவோ, வழிபடவோ கூடாது[4].(29)தன் நாட்டில் வசிப்போரில் ஒருவரை அவன் தன் நட்புக்கெனத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோலவே, எதிரியின் நாட்டில் வசிப்போரில் மற்றொருவரையும் அவன் தேர்ந்தெடுக்க வேண்டும். காடுகளில் வசிப்போரில் இருந்து மூன்றாமவரையும், தனக்குக் கப்பம் கட்டும் நாடுகளில் வசிப்போரில் ஒருவரை நான்காமவராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும்.(30) அவன், அவர்களிடம் நல்ல விருந்தோம்பலை வெளிப்படுத்தி, அவர்களுக்குக் கௌரவங்களை அளித்து, அவர்களுக்கான வாழ்வாதார வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவன் {மன்னன்} எதிரிகளின் நாடுகளில் வசிக்கும் தவசிகளிடமும், தன் நாட்டில் வசிக்கும் தவசிகளிடமும் ஒரே வழியிலேயே நடந்து கொள்ள வேண்டும்.(31) தவங்கள் மற்றும் கடும் நோன்புகளில் ஈடுபடும் அவர்கள், மன்னனுக்குப் பேரிடர் நேர்ந்து அவன் பாதுகாப்பை நாடும்போது, அவனுக்கு வேண்டியதைக் கொடுப்பார்கள்.(32) மன்னன் வசிக்கத் தகுந்த நகரத்துக்குண்டான குறியீடுகள் நான் இப்போது உனக்குச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்” என்றார் {பீஷ்மர்}.(33)

நிர்வாகம் மற்றும் வரிவிதிப்பு! – சாந்திபர்வம் பகுதி – 87-நாட்டைப் பாதுகாத்து வலுப்படுத்த ஏற்படுத்தப்பட வேண்டிய நிர்வாக முறையையும், வரி, தீர்வைகள் மூலம் நாட்டிலிருந்து பொருளைச் சேர்க்கும் முறையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா {பீஷ்மரே}, ஒரு நாட்டை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும்? அஃதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? நான் இவற்றை அறிய விரும்புகிறேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நான் சொல்வதைக் குவிந்த கவனத்தோடு கேட்பாயாக. ஒரு நாடு எவ்வாறு வலுப்படுத்தப்பட வேண்டும், எவ்வாறு அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உனக்குச் சொல்கிறேன்.(2) ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைவனை நியமிக்க வேண்டும். பத்துக் {10} கிராமங்களுக்கு (அல்லது பத்து தலைவர்களுக்கு) ஒரு கண்காணிப்பாளன் {அதிபதி} இருக்க வேண்டும். இப்படிப்பட்ட இரண்டு கண்காணிப்பாளர்களுக்கு (இருபது {20} கிராமங்களைக் கட்டுப்படுத்த) ஓர் அதிகாரி இருக்க வேண்டும். அந்த அதிகாரிக்கும் மேல் நூறு {100} கிராமங்களைக் கொண்ட ஒருவன் இருக்க வேண்டும்; அவனுக்கும் மேல் ஆயிரம் {1000} கிராமங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்ட ஒருவன் இருக்க வேண்டும்.(3) ஒரு கிராமத் தலைவனானவன், அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனின் பண்புகளையும், திருத்த வேண்டிய குறைகள் அனைத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பிறகு அவன், அதை (தனக்கு மேல்நிலையில் உள்ளவனான) இருபது {20} கிராமங்களுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் சொல்ல வேண்டும்.(4) அந்த அதிகாரி பதிலுக்கு, (தனக்கு மேல்நிலையில் உள்ளவனான) நூறு {100} கிராமங்களுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் தன் ஆட்சிப்பகுதிக்குள் இருக்கும் மனிதர்கள் அனைவரின் நடத்தையையும் தெரிவிக்க வேண்டும்.(5)

கிராமத் தலைவனே அந்தக் கிராமத்தில் உள்ள விளைச்சல் மற்றும் உடைமைகள் ஆகிய அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு தலைவனும், பத்துக் {10} கிராமங்களுக்குத் தலைவனாக இருப்பவனைப் பராமரிப்பதற்கான தன் பங்கைக் கொடுக்க வேண்டும். பின்னவன் {பத்துக் {10} கிராமங்களுக்குத் தலைவன்}, இருபது {20} கிராமங்களின் தலைவனை ஆதரிக்க அதையே செய்ய வேண்டும்.(6)

ஓ! பாரதர்களின் தலைவா, நூறு {100} கிராமங்களுக்குத் தலைவன், மன்னனிடம் இருந்து அனைத்து கௌரவத்தையும் பெற வேண்டும், மேலும் அவன், தன்னை ஆதரித்துக் கொள்ள மக்கள் மற்றும் செல்வம் நிறைந்த ஒரு பெரிய கிராமத்தைக் கொண்டிருக்க வேண்டும்.(7)

எனினும், நூறு {100} கிராமங்களின் தலைவனுக்கு அவ்வாறு ஒதுக்கப்பட்ட ஒரு கிராமமானது, ஆயிரம் {1000} கிராமங்களுக்குத் தலைவனாக இருப்பவனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்.

மேலும், ஆயிரம் {1000} கிராமங்களுக்குத் தலைவனான அந்த மேலதிகாரி, தன்னை ஆதரித்துக் கொள்ள ஒரு சிறு நகரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.(8) அவன் அதிலிருந்து கிடைக்கும் தானியங்கள், தங்கம் மற்றும் பிற உடைமைகளை அனுபவிக்க வேண்டும். அவனே அது தொடர்பான போர்க்கடமைகள் மற்றும் உள் விவகார காரியங்கள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.(9) அந்த அதிகாரிகளுக்கிடையிலான பரஸ்பர உறவுகள் மற்றும் நிர்வாகக் காரியங்களை ஏதோ ஓர் அறம்சார்ந்த அமைச்சர் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு நகரத்திலும், அதன் அதிகார எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு காரியத்தையும் கவனிக்க ஓர் அதிகாரி இருக்க வேண்டும்.(10)

விண்மீன் கூட்டத்திற்கிடையில் நகர்ந்து கொண்டிருக்கும் ஏதோவொரு பயங்கரக் கோளைப் போல, இறுதியாகச் சொல்லப்பட்ட (மட்டுமடங்கற்ற அதிகாரங்களைக் கொண்ட) அந்த அதிகாரியானவன், அவனுக்குக் கீழுள்ள அதிகரிகள் அனைவருக்கும் மேலானவனாகச் செயல்பட்டு, நடந்து கொள்ள வேண்டும். அத்தகு அதிகாரியானவன், தன் ஒற்றர்களின் மூலம் தனக்குக் கீழுள்ளவர்களின் நடத்தையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.(11)

அப்படிப்பட்ட உயரதிகாரிகளானவர்கள், கொலைகார மனோநிலையில் இருக்கும் மனிதர்கள் அனைவரிடம் இருந்தும், தீச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் அனைவரிடம் இருந்தும், பிறரின் செல்வத்தைக் களவாடுவோர் அனைவரிடம் இருந்தும், வஞ்சகம் நிறைந்தோர் அனைவரிடம் இருந்தும், பிசாசின் ஆதிக்கத்திலிருப்போர் எனக் கருதப்படும் அனைவரிடம் இருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும்.(12)

மன்னனானவன், வணிகத்தில் ஈடுபடுவோரின் விற்பனைகள், கொள்முதல்கள், சாலைகளின் நிலை, உணவு, ஆடை, கையிருப்புகள், ஆதாயங்கள் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு அவர்களுக்கு வரி விதிக்க வேண்டும்.(13) மன்னன், உற்பத்தியாளர்களின் பரிணாமத்தையும், உற்பத்தியில் ஈடுபடுவோரின் வரவு செலவுகளையும், கலைகளின் நிலையையும் அனைத்துத் தருணங்களிலும் உறுதி செய்து கொண்டு, கைவினைஞர்கள் {தொழிலாளிகள்} பின்பற்றும் கலைகளுக்கு {தொழிலுக்கு} ஏற்ப அவர்களுக்கு வரிவிதிக்க வேண்டும்.(14) ஓ! யுதிஷ்டிரா, மன்னன் அதிக வரிகளை விதிக்கலாம், ஆனால் தன் மக்களைக் காயடிக்கும் வகையில் அவன் ஒருபோதும் வரிகளை விதிக்கக்கூடாது. (15)

உற்பத்தியின் அளவு, உற்பத்தி செய்யத் தேவைப்படும் உழைப்பின் அளவு ஆகியவற்றை உறுதி செய்து கொள்ளாமல் எந்த வரியும் விதிக்கப்படக்கூடாது. போதிய காரணமில்லாமல் உற்பத்தியைப் பெருக்குவதற்காக எவரும் பணி செய்யவோ, உழைப்பில் ஈடுபடவோ மாட்டார்கள்[1].(16) மன்னன், தானும், பொருளை உற்பத்தி செய்ய உழைத்து வரிவிதிக்கப்படுபவனும் அதன் மதிப்பைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் வரிகளை விதிக்க வேண்டும்.(17) மன்னன் தனக்கிருக்கும் தாகத்தால், தன் {நாடு எனும்} அடித்தளத்தையும், பிறரின் {காரியங்கள் எனும்} அடித்தளங்களையும் அழித்துவிடக்கூடாது. தன் மக்களிடம் வெறுப்புக்குள்ளாகும் எந்தச் செயலையும் எப்போதும் அவன் தவிர்க்க வேண்டும். உண்மையில் இவ்வழியில் நடந்து கொண்டால் அவன் மக்களிடம் செல்வாக்கடைவதில் வெல்வான்.(18) (வரிகள் மற்றும் தீர்வைகளின் காரியத்தில்) தீராப் பெரும்பசி கொண்டவன் என்று கெட்ட பெயர் ஈட்டும் மன்னனை குடிமக்கள் வெறுப்பார்கள். வெறுப்பின் பொருளாக மாறும் ஒரு மன்னனால் எங்கிருந்து செழிப்பை அடைய முடியும்? அப்படிப்பட்ட மன்னனால் ஒருபோதும் தனக்கான நன்மையை அடைய முடியாது.(19)நல்ல நுண்ணறிவு கொண்ட ஒரு மன்னன், கன்றுகளின் (காரியத்தில் மனிதர்கள் நடந்து கொள்ளும்} ஒப்புமையைப் போலத் தன் நாட்டில் இருந்து {வரிகளைக்} கறக்க வேண்டும்.(20) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, பால் குடிக்கக் கன்றை அனுமதித்தால், அது பலமுள்ளதாக வளர்ந்து பெருங்கனங்களைச் சுமக்கும்.(20) மறுபுறம், பசுவிடமிருந்து அதிகமாகப் பால் கறக்கப்பட்டால் கன்று மெலிந்து, தன் தலைவனுக்குத் தொண்டாற்றத் தவறும். அதே போலவே நாட்டில் இருந்து அதிகமாக {வரிகளை} எடுத்தால், குடிமக்கள் எந்தப் பெரிய செயலையும் அடைவதில் தவறுவர்.(21) தன் நாட்டைத் தானே பாதுகாத்து, (வரிகள் மற்றும் தீர்வைகளின் காரியத்தில்) தன் குடிமக்களுக்கு ஆதரவைக் காட்டி, எளிதாக அடைந்தவற்றில் இருந்து தன்னைத் தாங்கிக் கொள்ளும் மன்னன் மகத்தான விளைவுகளை அடைவதில் வெல்கிறான்.(22) அப்போது அந்த மன்னன் தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ளப் போதுமான அளவுக்குச் செல்வத்தை அடைய மாட்டானா?[2] இவ்வழக்கில் மொத்த நாடும் அவனது கருவூலமாகிறது, அதே வேளையில் கருவூலமானது அவனது படுக்கையறையாகிறது.(23) நகரங்கள் மற்றும் மாகாணங்களில் வசிப்போர் மன்னனைச் சார்ந்திருக்கும் ஏழைகளாக இருந்தால், அவன் தனது சக்திக்குத் தகுந்தபடி அவர்களிடம் கருணை காட்ட வேண்டும்.(24) மன்னன், புறநகர்களில் நிறைந்திருக்கும் கள்வர்கள் அனைவரையும் தண்டித்து, தன் கிராமங்களில் இருக்கும் மக்களைப் பாதுகாத்து, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும். அவ்வழக்கில், குடிமக்கள் தங்கள் மன்னனின் இன்ப துன்பங்களில் பங்குதாரர்களாகி அவனிடம் மிகுந்த மனநிறைவடைவார்கள்.(25)செல்வம் சேகரிக்க நினைக்கையில், மன்னன் தன் நாட்டின் தலைமையான மையப் பகுதிகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாகச் சென்று தன் மக்கள் அஞ்சிடுமாறு முயற்சி செய்ய வேண்டும்.(26) அவன் அவர்களிடம், “இதோ பேரிடர் நம்மை அச்சுறுத்துகிறது. எதிரியின் செயல்பாடுகளின் விளைவாகப் பேரச்சம் உண்டாகிறது. எனினும், பூத்திருக்கும் மூங்கில்லைப் போல, எதிரி மிக விரைவில் அழிவை அடைப்போகிறான் என்பதால், இந்த ஆபத்து நம்மைக் கடந்து போவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.(27) எழுச்சி அடைந்திருக்கும் என் எதிரிகள், பெரும் எண்ணிக்கையிலான கள்வர்களுடன் சேர்ந்து, தங்கள் அழிவுக்காகவே நம் நாட்டை இடரில் ஆழ்த்த விரும்புகிறார்கள்.(28) பயங்கர ஆபத்துகள் நிறைந்த இந்தப் பேரிடரைக் கருத்தில் கொண்டும், உங்கள் பாதுகாப்புக்காகவும் நான் உங்கள் செல்வத்தை வேண்டுகிறேன்.(29)

இந்த ஆபத்து கடந்து சென்றதும், நான் இப்போது உங்களிடம் எடுத்துக் கொள்வனவற்றைத் திரும்பக் கொடுத்து விடுவேன். எனினும், எதிரிகள் (எதிர்க்கப்படவில்லையென்றால்), அவர்கள் உங்களிடம் இருந்து பலவந்தமாகப் பிடுங்கும் எதையும் அவர்கள் திரும்பக் கொடுக்க மாட்டார்கள்.(30) மறுபுறம், அவர்கள் (எதிர்க்கப்படவில்லையென்றால்) உங்கள் மனைவியர் உட்பட உங்கள் உறவினர்கள் அனைவரையும் கொல்லக் கூடும். நீங்கள் உங்கள் பிள்ளைகள் மற்றும் மனைவியருக்காகவே செல்வத்தை விரும்புகிறீர்கள் என்பது நிச்சயம்.(31) நான் உங்கள் செழிப்பில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் நான் உங்களை என் சொந்தப் பிள்ளைகளைப் போலவே பார்க்கிறேன். உங்களால் எனக்கு எவ்வளவு கொடுக்க முடியுமோ, அதை நான் பெற்றுக் கொள்ளப் போகிறேன். நான் யாருக்கும் துன்பமளிக்க விரும்பவில்லை.(32) பேரிடர் காலங்களில் பலமிக்கக் காளைகளைப் போல நீங்கள் இத்தகு சுமைகளைச் சுமக்க வேண்டும். துயர்மிக்கக் காலங்களில் செல்வம் உங்களுக்கு விருப்பத்திற்குரியதாக இருக்கக்கூடாது” என்று சொல்ல வேண்டும்.(33)

காலம் தொடர்பான கருத்துகளை அறிந்த மன்னன், இத்தகு ஏற்கத்தக்க, இனிமையான, புகழ்ச்சியான வார்த்தைகளுடன் தன் முகவர்களை அனுப்பித் தன் மக்களிடம் இருந்து தீர்வைகளைத் திரட்ட வேண்டும்.(34) தன் கோட்டைகளைச் செப்பனிடும் தேவை குறித்து அவர்களுக்குச் சுட்டிக்காட்டி, தன் நிறுவனங்கள் மற்றும் பிற தலைமைகளின் செலவுகளைக் கொடுத்துத் தீர்த்து, அந்நிய படையெடுப்பைக் குறித்த அவர்களின் அச்சத்தைத் தூண்டி, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி, அவர்கள் அமைதியாக வாழ வேண்டிய வழிமுறைகளை உறுதி செய்ய வேண்டும் என்று சொல்லி மன்னன் தன் ஆட்சிப்பகுதியில் உள்ள வைசியர்களுக்குத் தீர்வைகளை விதிக்க வேண்டும்.(35)

மன்னன் வைசியர்களை அலட்சியம் செய்தால் அவர்கள் அவனது ஆட்சிப்பகுதிகளைக் கைவிட்டு அங்கிருந்து தொலைந்து காடுகளுக்குச் சென்று விடுவார்கள். எனவே, மன்னன் அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.(36) ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, மன்னன் எப்போதும் வைசியர்களை இணங்கச் செய்து, அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தூண்டி, அவர்களது உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, எப்போதும் அவர்களுக்கு ஏற்புடையதைச் செய்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.(37)

ஓ! பாரதா, மன்னன் எப்போதும் வைசியர்களின் உற்பத்தி சக்திகளைப் பெருக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் பலத்தை அதிகரிப்பதும், வேளாண்மையை முன்னேற்றுவதும், வணிகத்தை வளர்ச்சியடையச் செய்வதும் வைசியர்களே.(38) எனவே, ஞானமுள்ள மன்னன் எப்போதும் அவர்களை மனம் நிறையச் செய்ய வேண்டும். கவனத்துடனும், கனிவுடனும் செயல்படும் அவன், அவர்களுக்கு மென்மையான தீர்வைகளையே விதிக்க வேண்டும்.(39) வைசியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வது எளிதானதே. ஓ! யுதிஷ்டிரா, நாட்டில் உள்ள வைசியர்களிடம் இவ்வாறு நடந்து கொள்வது நாட்டுக்குப் பெரும் நன்மையை உண்டாக்குமேயன்றி வேற்றில்லை” என்றார் {பீஷ்மர்}.(40)

வரியும், பாதுகாப்பும்! – சாந்திபர்வம் பகுதி – 88-குடிமக்களிடம் வரிவாங்கும் முறை குறித்தும், நாட்டை வலுப்படுத்தும் வழிமுறை குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மன்னன் தன்னிடம் பெருஞ்செல்வம் இருந்தபோதிலும், இன்னும் அதிகமாக விரும்பினால், அவன் எவ்வாறு நடந்து கொள்ள {வரி விதிக்க} வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறத்தகுதியை ஈட்ட விரும்பும் ஒரு மன்னன், தன் குடிமக்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் அறிவையும், சக்தியையும் சிறந்த வகையில் பயன்படுத்தி, இடத்தையும் காலத்தையும் கருத்தில் கொண்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.(2) எந்த நடவடிக்கைகள் தனக்கு ஏற்பட்ட நன்மைகளைப் போன்று அவர்களுக்கும் {குடிமக்களுக்கும் நன்மையை} ஏற்படுத்துமோ, அவை அனைத்தையும் அவன் தன் ஆட்சிப்பகுதிகளில் பின்பற்ற வேண்டும்.(3) வண்டானது, செடிகளில் தேனைச் சேகரிப்பதைப் போல, ஒரு மன்னன் தன் நாட்டில் இருந்து {வரியைக்} கறக்க வேண்டும். பசுவின் மடிக்கும் காயமேற்படுத்தாமல், கன்றையும் பட்டினி போடாமல் பால் கறக்கும் ஓர் இடையனைப் போலவே அவன் செயல்பட வேண்டும்.(4) (வரி விதிக்கும் காரியங்களில்) மன்னன், கடுமையில்லாமல் குருதியை உறிஞ்சும் அட்டைப்பூச்சியைப் போலச் செயல்பட வேண்டும். பெண்புலியானது, தன் குட்டிகளைத் தூக்கிச் செல்லும்போது, தன் பற்களால் அவற்றைத் தீண்டினாலும், அவற்றைக் கொண்டு ஒருபோதும் துளைத்திடாததைப் போலவே, அவன் தன் குடிமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.(5) எலியானது கூரிய பற்களைக் கொண்டிருந்தாலும், உறங்கிக்கொண்டிருக்கும் விலங்குகள் அறியாத வண்ணம் அவற்றின் கால்களைக் கடிப்பதைப் போலவே அவன் நடந்து கொள்ள வேண்டும்.(6)

{செழிப்பில்} வளரும் குடிமகனிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகவே எடுக்கவேண்டும், இவ்வழிமுறைகளின் மூலம் அவன் {செல்வத்தை} வெட்டுப்படச் {பகிர்ந்து கொள்ளச்} செய்ய வேண்டும். ஒரு நல்ல விழுக்காட்டை எட்டும் அளவுக்குப் படிப்படியாகத் தேவை {வரி} அதிகரிக்கப்பட்டுப் பெறப்பட வேண்டும்.(7) ஓர் இளங்காளையின் மீது ஒரு மனிதன் படிப்படியாகச் சுமைகளை அதிகரிப்பதைப் போலவே, மன்னனும் தன் குடிமக்களின் மீது படிப்படியாகவே சுமைகளை அதிகரிக்க வேண்டும். அவன், கவனத்துடனும், கடுமையில்லாமலும் செயல்பட்டு, இறுதியாக அவர்களின் மீது கடிவாளங்களைப் பூட்ட வேண்டும்.(8) இவ்வாறு கடிவாளம் பூட்டப்பட்டால், அவர்கள் வசப்படுத்தப்பட முடியாதவர்களாக இருக்க மாட்டார்கள். உண்மையில், அவர்களைக் கீழ்ப்படியச் செய்யப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவர்களைக் கீழ்ப்படிய வைக்க வெறும் கெஞ்சல்கள் மட்டும் போதாது.(9) மனிதர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரியாக, சமமாக நடந்து கொள்வது சாத்தியமில்லாதது. முதன்மையானவர்களை இணங்கச் செய்தால் பொதுமக்களும் கீழ்ப்படிவார்கள்.(10)

மன்னன், சுமைகளைச் சுமக்கப் போகும் பொதுமக்களுக்கு மத்தியில் (அவர்களது தலைவர்களுடைய அமைப்புகளின் மூலம்) ஒற்றுமையின்மையை உண்டாக்கி, தானே முன்வந்து அவர்களோடு இணக்கம் செய்த பிறகு, அவர்களிடம் கிடைப்பவற்றைக் கொண்டு அவன் மகிழ்ச்சியடைய வேண்டும்.(11) மன்னன், உரியதல்லாத காலத்திலும், சுமக்க முடியாத மனிதர்களுக்கும் ஒருபோதும் வரிவிதிக்கக் கூடாது. அவன் படிப்படியாக இணங்கச் செய்வதன் மூலமும், உரிய காலத்திலும், முறையான வடிவங்களிலும் அவற்றை விதிக்க வேண்டும்.(12) நான் அறிவிக்கும் இந்தச் சூழ்ச்சிகள் {திட்டங்கள்} சட்டப்படியான ஆட்சித்திறன் வழிமுறைகளாகும். இவை வஞ்சகம் நிறைந்த வழிமுறைகளாக அறியப்படுவதில்லை. முறையற்ற வழிகளில் குதிரைகளை வசப்படுத்தும் வழிமுறைகள் அவற்றைச் சீற்றமடையவே செய்யும்.(13) மதுவிடுதிகளும், பொது மகளிர், காமத்தரகர்கள், நடிகர்கள், சூதாடிகள், சூதாட்ட விடுதி நடத்துவோர் மற்றும் இதே வகையைச் சேர்ந்த பிறர் அனைவரும் {மன்னனால்} தடுக்கப்பட {தடைசெய்யப்பட} வேண்டும். நாட்டுக்குள்ளேயே வசித்து, குடிமக்களில் சிறந்த வர்க்கத்தினரைப் பீடித்துத் துன்புறுத்துபவர்கள் இவர்களே.(15)

எந்தத் துயரமும் இல்லாதபோது, யாரும் எதையும் யாரிமும் கேட்கக் கூடாது. மனிதர்கள் யாவரையும் குறித்த இந்தத் தடையாணையைப் பழங்காலத்தில் மனுவே விதித்திருக்காறர்[1].(16) மனிதர்கள் யாவரும் பணிசெய்யாமல் யாசித்து, அல்லது பிச்சையெடுத்து வாழ நேர்ந்தால், உலகமே அழிவடையும் என்பதில் ஐயமில்லை.(17) மன்னன் மட்டுமே அடக்கவும், தடுக்கவும் தகுந்தவனாவான். தன் குடிமக்களை (பாவத்திலிருந்து) தடுக்காத மன்னன், (அரச பாதுகாப்பின்மையின் விளைவாக) தன் மக்களால் இழைக்கப்படும் பாவத்தின் நான்கில் ஒரு பகுதியை அடைகிறான். இதுவே சுருதிகளின் தீர்மானமாகும்.(18) குடிமக்களின் தகுதிகளை {புண்ணியங்களைப்} போலவே மன்னன் அவர்களது பாவங்களையும் பகிர்ந்து கொள்வதால், ஓ! ஏகாதிபதி, அவன் தன் குடிமக்களில் பாவிகளை அடக்க வேண்டும்.(19) அவர்களை அடுக்குவதைப் புறக்கணிக்கும் மன்னன் தானே பாவியாகிறான். (ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல) அவன் அவர்களது தகுதிகளில் நான்கில் ஒரு பாகத்தை ஏற்பதைப் போலவே, அவர்களது பாவங்களிலும் நான்கில் ஒரு பாகத்தை ஏற்கிறான்.(20)

நான் சொல்லும் பின்வரும் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். இவை அனைவரையும் வறுமையை அடையச் செய்யும். ஆசையின் {காமத்தின்} ஆளுகைக்குள் இருக்கும் ஒரு மனிதன் எந்தத் தீய செயலைத்தான் செய்ய மாட்டான்?(21) ஆசையால் {காமத்தால்} ஆளப்படும் மனிதன், வினையூக்கிகள் {போதை மருந்துகள்}, இறைச்சி ஆகியவற்றை உட்கொண்டு, பிறரின் மனைவியரையும், செல்வத்தையும் தனதுரிமையாக்கி, (பிறரும் அதுபோலச் செய்யும்படி) ஒரு தீய முன்மாதிரியை நிறுவுகிறான்.(22) பிச்சையெடுத்து வாழாதவர்களும் துயர்மிக்கக் காலங்களில் பிச்சையெடுக்கலாம். அறம் நோற்கும் மன்னன், அச்சத்தாலன்றிக் கருணையால் அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(23) உன் நாட்டில் பிச்சைக்காரர்களோ, கள்வர்களோ இருக்க வேண்டாம். கள்வர்களே பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கிறார்கள் (நல்லோர் அல்ல). அப்படிக் கொடுப்பவர்கள் உண்மையில் மனிதர்களுக்கு நன்மை செய்பவர்களல்ல.(24) உன் ஆட்சிப்பகுதிகளில் பிறர் விருப்பங்களில் முன்னேற்றமேற்படச் செயல்படுபவர்களும், பிறருக்கு நன்மை செய்பவர்களும் வசிக்கட்டும், பிறரை அழிப்பவர்கள் அல்ல.(25)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உரியதற்கு மேல் குடிமக்களிடம் இருந்து பெறும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் உரியதை மட்டுமே எடுத்துக் கொள்ளும் வகையில் நீ பிறரை {அவர்களுக்கு மேல்} நியமிக்க வேண்டும்.(26) உழவு, ஆநிரைவளர்த்தல், வணிகம், அதே போன்ற இயல்புடைய பிற செயல்கள் ஆகியன உழைப்புப் பகுப்பு கொள்கையின்படி பலரால் செய்யப்பட வேண்டும்[2].(27) உழவு, கால்நடை வளர்த்தல், அல்லது வணிகத்தில் ஈடுபடும் மனிதன், (கள்வர்கள் மற்றும் கொடுங்கோல் அதிகாரிகளின் விளைவாக) பாதுகாப்பில்லாத உணர்வை அடைந்தால், அதன் விளைவாக மன்னன் புகழ்க்கேட்டையே ஈட்டுவான்.(28) மன்னன் தன் குடிமக்களில் செல்வந்தர்களை எப்போதும் கௌரவித்து, அவர்களிடம், “என்னோடு சேர்ந்து நீங்களும் மக்கள் விருப்பங்களில் முன்னேற்றமேற்படச் செயல்படுங்கள்” என்று சொல்ல வேண்டும்.(29) அனைத்து நாடுகளிலும் செல்வந்தர்களே அந்த நாட்டின் தோட்டமாக {அங்கமாக} இருக்கிறார்கள். ஒரு செல்வந்தனே மனிதர்களில் முதன்மையானவன் என்பதில் ஐயமில்லை[3].(30)ஞானியாகவோ, துணிவுமிக்கவனாகவோ, செல்வந்தனாகவோ, செல்வாக்குடையவனாகவோ, நீதிமானாகவோ, தவங்களில் ஈடுபடுபவனாகவோ, பேச்சில் உண்மையுள்ளவனாகவோ, நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனாகவோ, இருக்கும் ஒருவனே (சக குடிமக்களைப்) பாதுகாப்பதில் துணைபுரிகிறான்.(31) ஓ! ஏகாதிபதி, இக்காரணங்களுக்காகவே நீ உயிரினங்கள் அனைத்தையும் விரும்புபவனாக, உண்மை, நேர்மை, கோபமின்மை, தீங்கிழையாமை ஆகிய பண்புகளை வெளிப்படுத்துபவனாக இருக்க வேண்டும்.(32) இவ்வாறே தண்டக்கோலை {செங்கோலைத்} தரித்து, உன் கருவூலத்தைப் பெருகச் செய்து, உன் நண்பர்களை ஆதரித்து, உன் நாட்டுக்கு வலுவூட்டும் நீ, உன் நண்பர்கள், கருவூலம் மற்றும் படைகளால் ஆதரிக்கப்பட்டு, உண்மை மற்றும் நேர்மையின் பண்புகளைப் பயில வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(33)

நாட்டின் இயல்பும், பாதுகாப்பு முறைகளும்! – சாந்திபர்வம் பகுதி – 89-நாட்டின் இயல்பையும், பாதுகாப்பு முறைகளையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனுக்கு}, “உன் ஆட்சிப்பகுதிகளில், உண்ணத்தக்க கனிகளைத் தரும் மரங்கள் வெட்டப்பட வேண்டாம். கனிகளும், கிழங்குகளும் பிராமணர்களின் உடைமைகளாகும். தவசிகள் இதை அறவிதியாகவே அறிவித்திருக்கிறார்கள்.(1) பிராமணர்களை ஆதரித்த பின்பு மிகையாக இருப்பவை பிற மக்களை ஆதரிக்கப பயன்பட வேண்டும். எவரும் பிராமணர்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது[1].(2) ஒரு பிராமணன், பிழைத்திருக்க வேண்டிய தேவையால் பீடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை அடைவதற்காக ஒரு நாட்டைக் கைவிட (கைவிட்டு வேறு நாடுகளுக்குச் செல்ல) விரும்பினால், மன்னன் அவனுக்கு வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.(3) மேலும் அவன் அதிலிருந்து (நாட்டைவிட்டுச் செல்வதில் இருந்து) விலகவில்லையெனில், மன்னன் பிராமணர்களின் சபையைக் கூட்டி, “இப்படிப்பட்ட ஒரு பிராமணர் நாட்டை விட்டுச் செல்கிறார். என் மக்கள் தங்கள் வழிகாட்டியாக யாரைக் கண்டடைய வேண்டும்?” என்று கேட்க வேண்டும்[2].(4) இதன் பிறகும் அவன் அங்கிருந்து செல்லும் நோக்கத்தைக் கைவிடாமல் வேறேதும் பேசினால், மன்னன் அவனிடம், “கடந்த காலத்தை மறப்பீராக” என்று சொல்ல வேண்டும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இதுவே அரசகடமையின் அழிவில்லா வழியாகும்[3].(5)

மன்னன் மேலும் அவனிடம், “ஓ! பிராமணரே, உண்மையில் ஒரு பிராமணன் தன்னைப் பராமரித்துக் கொள்வதற்குப் போதுமான அளவு மட்டுமே அவனுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று மக்கள் சொல்கின்றனர். எனினும், நான் அக்கருத்தை ஏற்கவில்லை. மறுபுறம், தன்னைத் தாங்கிக் கொள்ளும் வாழ்வு முறைகளை வழங்காதிருந்த மன்னனின் புறக்கணிப்பிற்காக ஒரு பிராமணன் ஒரு நாட்டை விட்டுச் செல்ல முனைந்தால், அத்தகு வழிமுறைகள் அவனுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அவன் ஆடம்பர வழிமுறைகளை அடையும் நோக்கோடு அதை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றாலும், அவன் தங்குமாறு வேண்டப்பட்டு, அவ்வழிமுறைகள் அவனுக்கு வழங்கப்பட வேண்டும்[4].(6) உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியவையே மனிதர்கள் அனைவருக்கும் வாழும் வழிமுறைகளை வழங்குகின்றன. எனினும் வேத அறிவானது, சொர்க்கத்தை அடையும் வழிமுறைகளை அவர்களுக்கு வழங்குகிறது.(7) எனவே, வேத கல்வியைத் தடுப்பவர்களும், வேத நடைமுறைகளின் காரணத்துக்குத் தடை விதிப்பவர்களும் சமூகத்தின் எதிரிகளாகக் கருதப்பட வேண்டும்[5]. இவர்களை அழிக்கவே பிரம்மன் க்ஷத்திரியர்களை உண்டாக்கினான்.(8) உன் எதிரிகளை அடக்கி, உன் குடிகளைக் காத்து, வேள்வியில் தேவர்களை வழிபட்டு, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, துணிவுடன் போர்க்களங்களில் போரிடுவாயாக.(9) ஒரு மன்னன் பாதுகாக்கத் தகுந்தவர்களைப் பாதுகாக்க வேண்டும். இதைச் செய்யும் மன்னனே ஆட்சியாளர்களில் சிறந்தவனாவான். பாதுகாக்கும் கடமையைப் பயிலாத மன்னர்கள் வீணே வாழ்கிறார்கள்.(10)

ஓ! யுதிஷ்டிரா, மன்னன் தன் குடிமக்கள் அனைவரின் நன்மைக்காக அனைவரின் செயல்பாடுகளையும், எண்ணங்களையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்; அக்காரணத்திற்காகவே அவன் {மன்னன்} ஒற்றர்களையும், இரகசிய முகவர்களையும் நியமிக்க வேண்டும்[6].(11) உன்னவர்களிடம் இருந்து பிறரையும், பிறரிடம் இருந்து உன்னவர்களையும், பிறரிடம் இருந்து பிறரையும், உன்னவரிடம் இருந்து உன்னவரையும் பாதுகாத்து, எப்போதும் உன் மக்களை நீ பேணி வளர்க்க வேண்டும்.(12) மன்னன், முதலில் தன்னை அனைவரிடம் இருந்தும் பாதுகாத்துக் கொண்ட பிறகு பூமியைப் பாதுகாக்க வேண்டும். அனைத்தும் தனக்குள்ளேயே வேரைக் கொண்டுள்ளன என்று ஞானிகள் சொல்கின்றனர்.(13) மன்னன், தன் தவறுகள் என்ன? தான் அடிமைப்பட்டிருக்கும் தீய பழக்கவழக்கங்கள் என்னென்ன? தன் பலவீனத்தின் ஆதாரங்கள் என்னென்ன? தன் தவறுகளின் ஆதாரங்கள் என்னென்ன என்பனவற்றைக் குறித்து எப்போதும் சிந்திக்க வேண்டும்.(14)மன்னன், தான் முந்தைய நாளில் வெளிப்படுத்திய நடத்தையை மக்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக நம்பிக்கைக்குரிய இரகசிய முகவர்களை நாடு முழுவதும் திரிய விட வேண்டும்.(15) உண்மையில் அவன் {மன்னன்}, தன் நடத்தை பொதுவாகப் புகழப்படுகிறதா, இல்லையா, அல்லது மாகாணத்து மக்கள் அதை ஏற்கிறார்களா, இல்லையா, அல்லது நாட்டில் நல்ல பெயரை ஈட்டுவதில் அவன் வென்றிருக்கிறானா, இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும்.(16) ஓ! யுதிஷ்டிரா, நல்லோர், விவேகிகள், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதோர், உன் நாட்டில் வசிக்காதோர் உன்னைச் சார்ந்திருப்போர், உன் அமைச்சர்கள், எத்தரப்பையும் சாராதவர்கள் ஆகியோருக்கு மத்தியில் உன்னைப் புகழவோ, பழிக்கவோ செய்பவர்களை ஒருபோதும் நீ அவமதிக்கக்கூடாது.(17,18) ஓ! ஐயா, உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் நல்ல கருத்தையும் எவனாலும் ஒருபோதும் ஈட்ட முடியாது. ஓ! பாரதா, அனைத்து மனிதர்களும், நண்பர்கள், எதிரிகள் மற்றும் நடுநிலையாளர்களைக் கொண்டுள்ளனர்” என்றார் {பீஷ்மர்}.(19)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கரவலிமை, சாதனை ஆகியவற்றில் இணையாக இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் மத்தியில், ஒருவன் எவ்வாறு எஞ்சிய அனைவரைவிடவும் மேன்மையை அடைகிறான், அவர்களை ஆள்வதில் அவன் வெல்வது எவ்வாறு?” என்று கேட்டான்.(20)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அசையும் உயிரினங்கள், அசையாதனவற்றை விழுங்குகின்றன {உண்கின்றன}; பற்களையுடைய விலங்குகள், பற்களற்றவையை விழுங்குகின்றன; கடும்நஞ்சுமிக்கக் கோபக்கார பாம்புகள் தங்கள் வகையைச் சேர்ந்த சிறு பாம்புகளையே விழுங்குகின்றன. (இந்தக்கொள்கையின்படி மனிதர்களுக்கு மத்தியில் பலவானான மன்னன், பலமற்றவர்களை இரையாகக் கொள்கிறான்).(21) ஓ! யுதிஷ்டிரா, மன்னன், தன் குடிமக்களிடமும், தன் எதரிகளிடமும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவன் கவனமற்றவனாக இருந்தால், அவர்கள் அவன் மீது (அழுகும் பிணங்களின் மீது பாயும்) கழுகுகளாகப் பாய்வார்கள்.(22) ஓ! மன்னா, (விற்பனைக்காக) உயர்வான மற்றும் மலிவான விலைகளில் பொருட்களைக் கொள்முதல் செய்வோரும், தங்கள் பயணங்களின்போது காடுகளிலும், அடைவதற்கரிதான இடங்களிலும் உறங்கவோ, ஓய்வெடுக்கவோ செய்யும் வணிகர்கள், கடும் வரிவிதிப்பால் பீடிக்கப்படாமல் இருக்க வேண்டும்[7].(23) மன்னனின் சுமைகளைச் சுமப்பவர்களும், நாட்டின் பிற குடிமக்களை ஆதரிப்பவர்களுமான உழவர்கள், ஒடுக்குமுறையின் மூலம் உன் நாட்டை விட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும்[8].(24) உன்னால் இவ்வுலகில் கொடுக்கப்படும் கொடைகள், தேவர்களையும், பித்ருக்கள், மனிதர்கள், நாகர்கள், ராட்சசர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளையும் ஆதரிக்கின்றன.(25) ஓ! பாரதா, இவையே ஒரு நாட்டை ஆள்தற்கும், அதன் ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்குமான வழிமுறைகளாகும். ஓ! பாண்டுவின் மகனே, நான் மேலும் இது குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றார் {பீஷ்மர்}.(26)

உதத்தியரும், மாந்தாதாவும்! – சாந்திபர்வம் பகுதி – 90-பிரம்ம முனிவரான உதத்யர், மன்னன் மாந்தாதாவுக்குப் போதித்த அரசநீதியை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “(முன்னொரு காலத்தில்) வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும் அங்கீரச குலத்தவருமான உதத்தியர் {உசத்தியர்}, யுவனாஸ்வனின் மகனான மாந்தாத்ரியிடம் {மன்னன் மாந்தாதாவிடம்} உற்சாகமாக உரையாடினார்.(1) ஓ! யுதிஷ்டிரா, வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரான உதத்தியர், அந்த மன்னனிடம் {மாந்தாதாவிடம்} சொன்ன யாவற்றையும் நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன்.(2)

உதத்தியர் {மன்னன் மந்தாதாவிடம்}, “நீதியின் படி செயல்படவே ஒருவன் மன்னனாகிறானேயன்றி கணிக்கமுடியாதபடி நடந்து கொள்வதற்காக அல்ல. ஓ! மாந்தாத்ரி, உண்மையில் மன்னனே இவ்வுலகின் பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்வாயாக.(3) மன்னன் நீதியுடன் செயல்பட்டால், அவன் தேவ நிலையை அடைகிறான். மறுபுறம், அவன் நீதியில்லாமல் செயல்பட்டாலோ அவன் நரகில் மூழ்குகிறான்.(4) அனைத்துயிர்களும் அறத்திலேயே ஓய்ந்திருக்கின்றன. அறமோ மன்னனில் ஓய்ந்திருக்கிறது. எனவே, அறத்தை உயர்த்திப் பிடிக்கும் மன்னனே, உண்மையில் மன்னனாவான்.(5) நீதிமிக்க ஆன்மாவையும், அருள்கள் அனைத்தையும் கொண்ட மன்னன் அறத்தின் வடிவம் என்றே சொல்லப்படுகிறான். மன்னன், அநீதியை தண்டிக்கத் தவறினால், தேவர்கள் அவனது மாளிகையைக் கைவிடுவார்கள், மேலும் அவன் மனிதர்களுக்கு மத்தியில் கடுங்கண்டனத்தையீட்டுவான்.(6) தங்கள் கடமைகளை நோற்கும் மனிதர்களின் முயற்சிகள் எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படும். இதன் காரணமாகவே மனிதர்கள் அனைவரும் செழிப்பை உண்டாக்கும் அறவிதிகளுக்குக் கீழ்ப்படிந்த நடக்க முனைகிறார்கள்.(7)

பாவத்தைக் கட்டுப்படுத்தாதபோது, நீதிமிக்க நடத்தை முடிவுக்கு வந்து, அநீதி பெருமளவில் அதிகரிக்கிறது.(8) பாவம் கட்டுப்படுத்தப்படாதபோது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள உடைமை உரிமைகளின்படி, “இஃது எனது, இஃது எனதில்லை” என்று எவனாலும் சொல்லமுடியாது.(9) உலகில் பாவமே மேலோங்கியிருக்கும்போது மனிதர்களால் தங்கள் மனைவியர், விலங்குகள், நிலங்கள் மற்றும் வீடுகளை அனுபவிக்க முடியாது.(10) பாவத்தைக் கட்டுப்படுத்தாத போது, தேவர்கள் எந்த வழிபாட்டையும் பெற மாட்டார்கள், பித்ருக்கள் சிராத்தங்களில் எந்தக் காணிக்கைகளையும் பெற மாட்டார்கள், விருந்தினர்கள் விருந்தோம்பலைப் பெற மாட்டார்கள்.(11) பாவத்தைக் கட்டுப்படுத்தாத போது, மறுபிறப்பாள வர்க்கத்தினர் வேதங்களைக் கற்க மாட்டார்கள், அல்லது உயர்ந்த நோன்புகளை நோற்கமாட்டார்கள், அல்லது வேள்விகளைப் பரவ விடமாட்டார்கள்.(12) ஓ! மன்னா {மாந்தாதா}, பாவத்தைக் கட்டுப்படுத்தாத போது, மனிதர்களின் மனமானது, ஆயுதங்களால் காயமடைந்தோரைப் போன்ற, பலவீனத்தையும் குழப்பத்தையும் அடையும் .(13) இம்மையிலும், மறுமையிலும் தங்கள் கண்களைச் செலுத்தும் முனிவர்கள், பூமியில் நீதியின் வடிவமாக இருக்கும் வகையில் மன்னனை மேன்மையானவனாக அமைத்தார்கள்[1].(14) எவனிடம் நீதி ஒளிர்கிறதோ அவனே ராஜன் என்று அழைக்கப்படுகிறான். மேலும் எந்த மன்னனிடம் அறமில்லையோ அவன் விருஷலன் என்று அழைக்கப்படுகிறான்[2].(15)எவன் விருஷத்தை {அறத்தை} பலவீனமடையச் செய்கிறானோ அவன் விருஷலன் என்ற பெயரில் அறியப்படுகிறான். எனவே, ஒரு மன்னன் அறத்திற்கான காரணத்தை முன்னேற்ற வேண்டும்.(16) அனைத்துயிரினங்களும் அறத்தின் வளர்ச்சியில் வளர்கின்றன, அதன் சிதைவில் அழிகின்றன. எனவே, அறம் அழிய ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.(17) செல்வத்தை (தனத்தை) அடைந்து, பாதுகாக்கத் துணைபுரியும் காரணத்தால் நீதியே தர்மம் {அறம்} என்றழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, தவசிகள், தர்மமே மனிதர்களின் அனைத்துத் தீய செயல்களையும் கட்டுப்படுத்தி, எல்லைகளை நிர்ணயிக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள்.(18)தான்தோன்றி (பிரம்மன்), உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காகவே தர்மத்தை {அறத்தை} உண்டாக்கினான். இதன் காரணமாகவே, ஒரு மன்னன், தன் குடிமக்களின் நன்மைக்காக அறவிதிகளின்படி செயல்பட வேண்டும்.(19) மேலும், இதே காரணத்திற்காகவே, ஓ! மனிதர்களில் புலியே {மந்தாதா}, அனைத்திலும் முதன்மையானதாகத் தர்மம் {அறம்} சொல்லப்படுகிறது. மனிதர்களில் முதன்மையான எவன், தன் குடிமக்களை நீதியுடன் ஆள்கிறானோ, அவனே மன்னன் என்று அழைக்கப்படுகிறான்.(20)

காமத்தையும், கோபத்தையும் அலட்சியம் செய்து, அறவிதிகளை நீ நோற்பாயாக. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மன்னர்களின் செழிப்புக்கு உகந்ததாக இருக்கும் அறமே அனைத்திலும் முதன்மையானது.(21) மேலும், தர்மமானது பிராமணனிடம் இருந்து உண்டானது. இதன்காரணமாகவே, எப்போதும் பிராமணன் வழிபடப்பட வேண்டும். ஓ! மாந்தாத்ரி, நீ பிராமணர்களின் விருப்பங்களைப் பணிவுடன் நிறைவு செய்வாயாக.(22) பிராமணர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதைப் புறக்கணித்தால், மன்னன் தனக்கு ஆபத்தை வரவழைத்துக் கொள்கிறான். அத்தகு புறக்கணிப்பின் விளைவால் அவன், நண்பர்கள் எவரையும் அடைவதில் தவறி, தன் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கிறான்.(23)

விரோசனன் மகனான அசுரன் பலியின் {மகாபலியின்}மூடத்தனத்தால் எழுந்த பிராமணர்களுக்கு எதிரான வன்மத்தின் விளைவாக, முன்பு அவனிடமே {மகாபலியிடமே} வசித்திருந்த செழிப்பின் தேவி {திருமகள்} அவனைக் கைவிட்டாள்.(24) அவள் {திருமகள்}, அந்த அசுரனைக் கைவிட்டுத் தேவர்களின் தலைவனான இந்திரனிடம் சென்றாள். புரந்தரனுடன் {இந்திரனுடன்} வாழும் அந்தத் தேவியைக் கண்ட பலி, பலவாறாக வீண் வருத்தமடைந்தான்.(25)

ஓ! பலமிக்கவனே {மந்தாதா}, இதுவே வன்மம் மற்றும் செருக்கின் விளைவாகும். ஓ! மாந்தாத்ரி {மாந்தாதா}, செழிப்பின் தேவி {திருமகள்} கோபத்தில் உன்னைக் கைவிடாதவாறு நீ விழிப்புடன் இருப்பாயாக.(26) அநீதியானது {அதர்மமானது}, செழிப்பின் தேவியிடம் {திருமகளிடம்} செருக்கு {அகங்காரம்} என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றது என்று சுருதிகள் அறிவிக்கின்றன. ஓ! மன்னா {மந்தாதா}, இந்தச் செருக்கே தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு மத்தியில் பலரை அழிவடையச் செய்தது.(27) அவனால் {செருக்கால்} அரசமுனிகள் பலரும் அழிவை அடைந்திருக்கின்றனர். எனவே, ஓ! மன்னா, நீ விழிப்படைவாயாக. அவனை {செருக்கை} வெற்றிகொள்வதில் வெல்பவனே மன்னனாகிறான். மறுபுறம், அவனால் {செருக்கால்} வெற்றி கொள்ளப்படுபவன் எவனோ, அவன் ஓர் அடிமையே ஆகிறான்.(28) ஓ! மாந்தாத்ரி, நீ அழிவில்லா (புகழ்) வாழ்வை விரும்பினால், செருக்கு மற்றும் அநீதி {அதர்மம்} ஆகிய இரண்டிலும் ஈடுபடாத ஒரு மன்னனாக வாழ்வாயாக.(29) (செருக்கால்) போதையுண்டிருப்பவன், (நேர்மையின் விதிகளில்) அலட்சியமாக இருப்பவன், அறத்தை ஏளனம் செய்பவன், உணர்வற்றவன், ஒன்றுசேர்ந்திருக்கும் அவர்கள் அனைவருடனும் சேர்ந்து கொள்பவன் ஆகியோரின் தோழமையைத் தவிர்ப்பாயாக.(30)

முன்பு உன்னால் தண்டிக்கப்பட்டவன், அதிலும் குறிப்பாகப் பெண்களின் நிமித்தமாகத் தண்டிக்கப்பட்ட அமைச்சர்களின் தோழமை, மலைகள், சமமற்ற நிலங்கள், அடைவதற்கரிதான காடுகள், யானைகள், குதிரைகள் மற்றும் நச்சுப்பாம்புகள் ஆகிவற்றிடம் இருந்து விலகிச் செல்வாயாக. நீ இரவில் திரிவதைக் கைவிட வேண்டும். மேலும், கஞ்சத்தனம், பகட்டு, தற்புகழ்ச்சி, கோபம் ஆகிய பிழைகளையும் நீ தவிர்க்க வேண்டும்.(32) அறியாத பெண்களிடமோ, இருபாலினத்தோரிடமோ {பேடிகளிடமோ}, காமவெறிபிடித்தவர்களிடமோ, பிறரின் மனைவியரிடமோ, திருமணமாகாத கன்னியரிடமோ நீ ஒருபோதும் உடலுறவில் ஈடுபடக்கூடாது.(33) தீயொழுக்கத்தை மன்னன் கட்டுப்படுத்தாத போது, வர்ணக் குழப்பம் பின்தொடரும், மதிப்பிற்குரிய குடும்பங்களில் கூட, பாவம் நிறைந்த ராட்சசர்களும், அலிகளும், உறுப்பிழந்த பிள்ளைகளும், தடித்த நா படைத்தவர்களும், மூடர்களும் பிறப்பெடுக்கத் தொடங்குவார்கள்.(34) எனவே, மன்னன் தன் குடிமக்களுக்கு நன்மை செய்வதன் பொருட்டு, நீதியுடன் செயல்படக் குறிப்பான கவனத்தைக் கொள்ள வேண்டும்.(35)

ஒரு மன்னன் கவனமில்லாமல் செயல்பட்டால், அதன் விளைவாகப் பெருந்தீமையே விளையும். அநீதியானது {அதர்மமானது} அதிகரித்தால், அது வர்ணக்குழப்பத்தையே உண்டாக்கும்.(36) கோடைகால மாதங்களில் குளிர் ஏற்பட்டு, அதற்குரிய காலம் வரும்போது மறைந்துபோகும். வறட்சி, வெள்ளம், தொற்றுநோய்கள் ஆகியன மக்களைப் பீடிக்கும்.(37)

அத்தகு தருணங்களில், தீமை விளைவிக்கும் நட்சத்திரங்கள் எழுந்து, பயங்கரமான எரிநட்சத்திரங்கள் தோன்றும். நாட்டின் அழிவைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் பிறவும் தோன்றும்(38) மன்னன் தன் பாதுகாப்புக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், தன் குடிமக்களையும் பாதுகாக்காமல் இருந்தால், முதலில் பின்னவர்களுக்கு {குடிமக்களுக்கு} அழிவு ஏற்பட்டு, பிறகு அந்த அழிவானது மன்னனையே பற்றும்.(39) இரு மனிதர்கள் ஒன்றுசேர்ந்து ஒருவனின் செல்வத்தைப் பறிப்பார்கள், குழுவாகச் செயல்படும் பலர் அந்த இருவரிடமும் கொள்ளையடிப்பார்கள். கன்னியரின் கற்பு அழிக்கப்படும். அத்தகு நிலைகள் மன்னனின் பிழைகளில் இருந்தே உண்டாகின்றன என்று சொல்லப்படுகிறது.(40) மன்னன் அறத்தைக் கைவிட்டு, கவனமில்லாமல் செயல்பட்டால், மனிதர்களுக்கு மத்தியில், உடைமைக்கான உரிமைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விடும்” என்றார் {உதத்தியர்}.(41)

உதத்தியர் சொன்ன அரசகடமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 91-மன்னன் நீதியுடன் செயல்படாவிட்டால் நடப்பதென்ன? பலவீனமே பெரியது என்பதேன்? துன்புறுபவனின் கண்ணீர் செய்வதென்ன? மன்னனின் கடமைகள் என்னென்ன? மன்னனின் நடத்தை இருக்க வேண்டியதெவ்வாறு என்பது குறித்து, உதத்ய முனிவர் மன்னன் மாந்தாதாவுக்குச் சொன்னதைப் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

உதத்தியர் {மன்னன் மந்தாதாவிடம்}, “மேகங்களின் தேவன் {இந்திரன்}, {உரிய} காலத்தில் மழையைப் பொழிந்து, அதே போல, மன்னனும் அறம்சார்ந்த செயல்பட்டால் விளையும் செழிப்பு, குடிமக்களைப் புகழில் நிலைக்கச் செய்யும்.(1) துணியின் சாயத்தை வெளுக்க விடாமல் அழுக்கை அகற்றத் தெரியாத வண்ணான், தன் தொழில் மிகவும் திறனற்றவன் ஆவான்.(2) பிராமணர்களிலோ, க்ஷத்திரியர்களிலோ, வைசியர்களிலோ எந்த மனிதனும், தன் வகைக்கு உரிய கடமைகளில் இருந்து வீழ்ந்து சூத்திரனானால் அவன், உண்மையில் அத்தகு வண்ணானுடன் ஒப்பிடத்தகுந்தவனே. உடல்சார்ந்த தொண்டு சூத்திரனையும்; உழவு வைசியனையும், தண்டனை அறிவியல் க்ஷத்திரியனையும், பிரம்மச்சரியம், தவங்கள், மந்திரங்கள், உண்மை ஆகிய பிராமணனையும் பிணைக்கின்றன.(4) பிறரின் நடத்தையில் உள்ள பிழைகளைத் திருத்தவும், வண்ணானைப்போல அவற்றைத் தூய்மையாக்கவும் அறிந்த க்ஷத்திரியனே உண்மையில் அவர்களின் தந்தையாகவும், அவர்களது மன்னனாகவும் இருக்கத் தகுந்தவனாவான்.(5)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {மாந்தாதா}, முறையே கிருதம், திரேதம், துவாபரம், கலி என்றழைக்கப்படும் காலங்கள் அனைத்தும் மன்னனின் நடத்தையைச் சார்ந்தே இருக்கின்றன. மன்னனே காலமாக இருக்கிறான்[1].(6) மன்னன் கவனமற்றவனாக {அலட்சியம் உள்ளவனாக} இருந்தால், நான்கு வகையினர், வேதங்கள், நான்கு வாழ்வு முறைகளின் கடமைகள் ஆகிய அனைத்தும் குழப்பத்திற்குள்ளாகி பலவீனமடையும்.(7) மன்னன் கவனமற்றவனாக இருந்தால், மூன்று வகை நெருப்புகள், மூன்று வேதங்கள், தக்ஷிணையுடன் கூடிய வேள்விகள் ஆகிய அனைத்தும் தொலைந்து போகும்.(8) மன்னனே அனைத்து உயிரினங்களை உண்டாக்குபவனும், அழிப்பவனும் ஆவான். நீதிமிக்க ஆன்மா கொண்ட மன்னன் படைப்பவனாகக் கருதப்படுகிறான், அதே வேளையில், பாவம் நிறைந்தவனோ அழிப்பவனாகக் கருதப்படுகிறான்.(9) மன்னன் கவனமற்றவனாக இருந்தால், மன்னனின் மனைவியர், மகன்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களாகி துயரில் ஈடுபடுவார்கள்.(10)மன்னன் நீதியற்றவனாக மாறும்போது, யானைகள், குதிரைகள், பசுக்கள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், கழுதைகள் மற்றும் பிற விலங்குகள் அனைத்தும் தங்கள் உடலுறுதியை இழக்கும்.(11) ஓ! மாந்தாத்ரி, பலவீனரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே {பிரம்மன்} படைப்பாளன் (மன்னனின் வடிவில்) பலத்தை உண்டாக்கினான். பலவீனத்தைச் சார்ந்தே அனைத்தும் இருப்பதால், உண்மையில், அதுவே பெரியது[2].(12) அனைத்து உயிரினங்களும் மன்னனை வழிபடுகின்றன. அனைத்து உயிரினங்களும் மன்னனுக்குப் பிள்ளைகளைப் போன்றவர்களே. எனவே, ஓ! ஏகாதிபதி {மந்தாதா}, நீதியில்லாதவனானால், அனைத்து உயிரினங்களும் துயரடையும்.(13) பலவீனர், முனிவர் ஆகியோரின் கண்கள் மற்றும் கடும்நஞ்சுமிக்கப் பாம்பின் கண்கள் ஆகியவை பொறுத்துக்கொள்ள முடியாதவையாகக் கருதப்பட வேண்டும். எனவே, பலவீனரின் அருகே (பகையுடன்) செல்லாதே.(14) பலவீனர்கள் எப்போதும் அவமதிக்கப்படத் தகாதவர்களாக உன்னால் கருதப்பட வேண்டும். பலவீனரின் கண்கள் உன்னையும், உன் உறவினர்களையும் எரித்துவிடாமல் இருக்கக் கவனம் கொள்வாயாக.(15)பலவீனரின் கண்களால் எரிக்கப்பட்ட ஒரு குலத்தில் பிள்ளைகள் பிறப்பதில்லை. அத்தகு கண்கள் குலத்தின் வேரையே அழித்துவிடும். எனவே, பலவீனரின் அருகே (பகையுடன்) செல்லாதே.(16) பலவீனரால் எரிக்கப்படும் பலம் முற்றிலும் அழிவை அடைகிறது என்பதால் எந்தப் பெரும்பலத்தையும்விடப் பலவீனமே பலமிக்கது.(17) அவமதிக்கபடும், அல்லது தாக்கப்படும் மனிதன் ஒருவன், துணைக்காகக் கதறியும் பாதுகாவலனை அடையத் தவறினால், தெய்வீகத் தண்டனை மன்னனை அடையும், அஃதுவே அவனுக்கு அழிவையும் கொண்டுவரும்.(18) ஓ! ஐயா, அதிகாரத்தை அனுபவிக்கும்போது, பலவீனரின் செல்வத்தை ஒருபோதும் அபகரியாதே. சுடர்மிக்க நெருப்பைப் போன்ற பலவீனரின் கண்கள் உன்னை எரித்துவிடாதிருப்பதில் கவனம் கொள்வாயாக.(19) பொய்மையால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் மனிதனின் கண்ணீரானது, அந்தப் பொய்களைச் சொன்னோரின் பிள்ளைகளையும், விலங்குகளையும் கொன்றுவிடும்.(20)

இழைக்கப்பட்ட பாவச்செயல் ஒரு பசுவைப் போல உடனடி பலன்களை உண்டாக்காது[3]. பாவமிழைத்தவனிடம் அப்பலன் தென்படவில்லையென்றால், அஃது அவனது மகன், அல்லது மகனின் மகன், அல்லது மகளின் மகனிடம் தென்படும்.(21) ஒரு பலவீனன் பாதுகாவலனை அடையத் தவறும்போது, தெய்வீகத் தண்டனை என்ற பெரும் தண்டம் (மன்னனின் மீது) {நாட்டின் மீது} பாயும்.(22) ஒரு மன்னனின் குடிமக்கள் அனைவரும் (துன்பத்திற்கு ஆட்பட்டு) பிராமணர்களைப் போலப் பிச்சையெடுக்க நேர்ந்தால், அந்தப் பிச்சையெடுக்கும் நிலையானது மன்னனுக்கு அழிவைக் கொண்டுவரும்.(23) மாகாணங்களில் உள்ள மன்னனின் அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதியில்லாமல் செயல்பட்டால், அம்மன்னன் தன் நாட்டில் கலப்படமில்லாத தீமையைக் கொண்டு வருகிறான் என்று சொல்லப்படுகிறது.(24) மன்னனின் அதிகாரிகள், நியாயமில்லாத வழிமுறைகளின் மூலமோ, காமம் மற்றுப் பேராசையால் செயல்பட்டோ, கருணையை வேண்டும் பரிதாபகரமான மனிதர்களிடம் இருந்து செல்வத்தைப் பறிக்கும்போது, அந்த மன்னனுக்கும் நிச்சயம் பேரழிவு ஏற்படும்.(25)ஒரு பெரிய மரம், முதலில் தன் வாழ்வைத் தொடங்கிப் பெரும் அளவுகளில் வளர்கிறது. அதன்பின், எண்ணற்ற உயிரினங்கள் வந்து அதனிடம் உறைவிடத்தை நாடுகிறார்கள். எனினும், அது வெட்டப்படும்போதோ, காட்டுத்தீயால் எரிக்கப்படும்போதோ, அதனிடம் உறைவிடம் கொண்டவை அனைத்தும் வீடுகளற்றதாகின்றன[4].(26) நாட்டில் வசிப்போர், அறச்செயல்களையும், அறச்சடங்குகள் அனைத்தையும் செய்து, மன்னனின் நற்குணங்களை மெச்சும்போது, அவன் செல்வாக்கை அறுவடைசெய்கிறான். மறுபுறம், குடிமக்கள் அறியாமை கொண்டோராக அறத்தைக் கைவிட்டு, நீதியில்லாமல் நடந்து கொண்டால், அம்மன்னன் துன்பத்துக்கு ஆளாவான்.(27) என்ன செயல் செய்வார்கள் என்று அறியப்பட்ட பாவிகள், (அவர்களது குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படாமல்) நல்லோர் மத்தியில் உலவ அனுமதிக்கப்பட்டால், அந்த நாடுகளின் ஆட்சியாளர்களைக் கலி அடையும். தீயவர்கள் அனைவரையும் மன்னன் தண்டிக்கும்போது, அவனது நாட்டில் செழிப்பு தழைத்தோங்கும்.(28) எந்த மன்னன், தன் அமைச்சர்களுக்கு உரிய கௌரவங்களை அளித்து, கொள்கை நடைமுறைகளிலும், போர்களிலும் அவர்களை நியமிக்கிறானோ, அவனது நாடு நிச்சயம் தழைத்தோங்கும்.(29) எந்த மன்னன், நற்செயல்கள் மற்றும் நற்சொற்கள் அனைத்தையும் முறையாகக் கௌரவிக்கிறானோ, அவன் பெருந்தகுதியை {பெரும்புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான்.(30)பிறருடன் பகிர்ந்து கொண்ட பிறகு நல்ல பொருட்களை அனுபவிப்பது, அமைச்சர்களுக்கு உரிய கௌரவங்களை அளிப்பது, பலம் எனும் போதையில் இருப்போரைஅடக்கி வைத்தல் ஆகியவையே மன்னனின் பெருங்கடமை என்று சொல்லப்படுகிறது.(31) சொற்கள், உடல், செயல்களால் மனிதர்கள் அனைவரையும் பாதுகாத்து, (குற்றமிழைத்தால்) தன் மகனேயானாலும் ஒருபோதும் மன்னிக்காமல் இருப்பதும் மன்னனின் பெரும் கடமையாகும்.(32) பொருட்களைப் பலவீனருடன் பகிர்ந்து கொண்டு பராமரித்து, அதன்மூலம் அவர்களது பலத்தை அதிகரிப்பதும் மன்னனின் கடமையாகும்.(33) நாட்டைப் பாதுகாப்பது, கள்வர்களை அழிப்பது, போரில் வெல்வது ஆகியன மன்னனின் கடமையாகும்.(34) செயலாலோ, சொல்லாலோ அன்புக்குரியவனே கூடக் குற்றமிழைத்தாலும், அவனை ஒரு போதும் மன்னிக்காததும் மன்னனின் கடமையாகும்.(35)

உறைவிடம் வேண்டுவோருக்குப் பாதுகாப்பளித்துத் தன் சொந்த பிள்ளைகளைப் போலவே தன் மக்களைப் பாதுகாக்கும் அவன், ஒருவனுக்கு உரிய கௌரவங்களை ஒருபோதும் பறிக்காமல் இருப்பதும் மன்னனின் கடமையாகும்[5].(36) கொடைகளால் நிறைவுபெறும் வேள்விகளில், காமத்தையும், பொறாமையையும் அடக்கி, அர்ப்பணிப்புமிக்க இதயத்துடன் தேவர்களைத் துதிப்பதும் மன்னனின் கடமையாகும்.(37) துன்புறுவோர், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோரின் கண்ணீரைத் துடைத்து, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வதும் மன்னனின் கடமையாகும்.(38) நண்பர்களை வளர்ப்பதும், எதிரிகளைப் பலவீனப்படுத்தவதும், நல்லோரைக் கௌரவிப்பதும் மன்னனின் கடமையாகும்.(39) உண்மையின் கடப்பாடுகளை உற்சாகமாக நோற்பதும், எப்போதும் நிலக்கொடைகள் அளிப்பதும், விருந்தினர்களை உபசரிப்பதும், சார்ந்தோரை ஆதரிப்பதும் மன்னனின் கடமையாகும்.(40)உதவிகளுக்குத் தகுந்தோருக்கு உதவுபவனும், தண்டைக்குத் தகுந்தோரைத் தண்டிப்பவனுமான மன்னன், இம்மையிலும், மறுமையிலும் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறான்.(41) மன்னனே யமனாவான். ஓ! மாந்தாத்ரி {மாந்தாதா}, நீதிமிக்கவர் அனைவருக்கும் அவனே (அவதாரம் செய்திருக்கும்) தேவனாவான். அவன், தனது புலன்களைக் கட்டுப்படுத்துவதால் பெரும் செல்வாக்கை அடைவதில் வெல்கிறான். அவற்றைக் கட்டுப்படுத்தாததால் பாவத்தையே ஈட்டுகிறான்[6].(42) ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள் மற்றும் அவர்களுக்கு நல்ல அலுவல்களைச் செய்து கொடுப்போர் ஆகியோருக்கு உரிய கௌரவங்களை அளிப்பதும் மன்னனின் கடமையாகும்.(43) யமன் உயிரினங்கள் அனைத்திடமும் எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. மன்னன் தன் குடிமக்கள் அனைவரையும் முறையாகக் கட்டுப்படுத்தும் நடத்தையில் அவனையே {யமனையே} பின்பற்ற வேண்டும்.(44) மன்னனானவன், அனைத்து வகையிலும் ஆயிரங்கண்ணோனுக்கு (இந்திரனுக்கு) ஒப்பானவனாகச் சொல்லப்படுகிறான். நீதியும் அவனால் அதே போலவே கருதப்படுகிறது.(45)நீ கவனமில்லாதவனாக இருக்காமல், மன்னிக்கும் குணம், நுண்ணறிவு, பொறுமை, அனைத்து உயிரினங்களிடமும் அன்பு ஆகியவற்றை வளர்க்க வேண்டும். மேலும் நீ மனிதர்கள் அனைவரின் பலம் மற்றும் பலவீனங்களையும் உறுதி செய்து கொண்டு, நல்லோர் மற்றும் தீயோரை வேறுபடுத்திப் பார்க்க கற்க வேண்டும்.(46) நீ அனைத்து உயிரினங்களிடமும் நியாயமாக நடந்து கொண்டு, கொடைகள் அளித்து, ஏற்புடைய இனிய சொற்களையே பேச வேண்டும். நீ உன் நகரம் மற்றும் மாகாணங்களில் உள்ள குடிமக்களை மகிழ்ச்சியுடன் பராமரிக்க வேண்டும்.(47) புத்திக்கூர்மை இல்லாத மன்னன் தன் குடிமக்களைக் காப்பதில் ஒருபோதும் வெல்ல மாட்டான். ஓ! ஐயா, அரசுரிமை என்பது தாங்கிக் கொள்ளப் மிகக்கனமானதாகும்.(48) ஞானமும், துணிவும் கொண்டவனும், தண்டனை அறிவியலை அறிந்தவனுமான மன்னனால் மட்டும் ஒரு நாட்டைக் காக்க முடியும். மறுபுறம், சக்தியும், நுண்ணறிவு இல்லாதவனும், பெரும் அறிவியலை அறியாதவனுமாக இருந்தால், அவன் அரசுரிமையின் கனத்தைச் சுமக்க இயன்றவனல்ல.(49) நற்பண்புகள் மற்றும் நற்குடி பிறப்பு, தொழில் புத்திக்கூர்மை, தலைவனிடம் அர்ப்பணிப்பு, பெரும் கல்வியுடைமை ஆகியவற்றுடன் கூடிய அமைச்சர்களின் துணை கொண்டு நீ, காடுகளில் உள்ள தவசிகளையும் சேர்த்து மனிதர்கள் அனைவரின் இதயங்களையும், செயல்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.(50)

இவ்வாறு உன்னை நடத்திக் கொண்டால் உன்னால் அனைத்து வகை மனிதர்களின் கடமைகளையும் கற்க முடியும். நீ உன் நாட்டில் இருக்கும் போதோ, அல்லது பிற நாடுகளுக்குச் செல்லும்போதோ உன் கடமைகளை நோற்பதற்கு அஃது {அந்நடத்தை} உதவி செய்யும். (51) அறம், பொருள், இன்பம் ஆகிய இம்மூன்றில் அறமே முதன்மையானதாகும். அற ஆன்மா கொண்ட ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் பெருமகிழ்ச்சியை அடைகிறான்.(52) மனிதர்கள் கௌரவத்துடன் நடத்தப்பட்டால், (நீ அவர்களுக்கு அளிக்கும் கௌரவத்தின் நிமித்தமாக அவர்கள்) தங்கள் மனைவியரையும், மகன்களையும் கூடக் கைவிடுவார்கள். கொடைகள், இனிய சொற்கள், அக்கறை, தூய நடத்தை ஆகியவற்றின் மூலம், (அவர்களுக்கு நல்ல அலுவல்களைச் செய்து கொடுப்பதன் மூலமும்) நல்ல மனிதர்களைத் தன்னோடு இணைத்துக் கொள்ளும் மன்னன் பெருஞ்செழிப்பை வெல்கிறான். எனவே, ஓ! மாந்தாத்ரி {மாந்தாதா}, இந்தப் பண்புகளிலும், செயல்களிலும் அக்கறையில்லாமல் இருக்காதே.(53,54) மன்னன், தன் குறைகளைக் கட்டுப்படுத்துவதிலும், தன் எதிரிகளின் குறைகளைக் கண்காணிப்பதிலும் ஒருபோதும் அக்கறையில்லாம்ல இருக்கக்கூடாது. அவன் தன் எதிரிகள் தன் குறைகளைக் காண முடியாதவாறு செயல்பட்டு, அவர்களுடைய குறைகள் தென்படும்போதெல்லாம் தாக்கவும் வேண்டும்.(55)

வாசவன் {இந்திரன்}, யமன், வருணன் மற்றும் பெரும் அரசமுனிகள் அனைவரும் இவ்வழியிலேயே செயல்பட்டிருக்கின்றனர். நீயும் அதே நடத்தையை நோற்பாயாக.(56) ஓ! பெரும் மன்னா (மாந்தாதா), அந்த அரசமுனிகள் பின்பற்றிய நடத்தையையே நீயும் பின்பற்றுவாயாக. ஓ! பாரதக் குலத்தின் காளையே {மந்தாதா}, நீ விரைவில் இந்தத் தெய்வீகப் பாதையைப் பின்பற்றுவாயாக.(57) பெருஞ்சக்தி கொண்ட தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள் ஆகியோர் நீதிமிக்க நடத்தை கொண்ட மன்னின் புகழை இம்மையிலும், மறுமையிலும் பாடுவார்கள்” என்றார் {உதத்தியர்}”.(58)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உதத்யரால் இவ்வாறு சொல்லப்பட்ட மாந்தாத்ரி {மாந்தாதா}, தயங்காமல் அவர் சொன்னது போலச் செய்து, இந்தப் பரந்த பூமியின் ஒரே தலைவனானான்.(59) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீயும் மாந்தாத்ரியை {மாந்தாதாவைப்} போல நீதியுடன் நடந்து கொள்வாயாக. அப்போதுதான், நீ பூமியை ஆண்ட பிறகு, சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தை அடைவாய்” {என்றார் பீஷ்மர்}.(60)

வாமதேவரும், வசுமனஸும்! – சாந்திபர்வம் பகுதி – 92-செங்கோலின் சிறப்பு மற்றும் கொடுங்கோலின் இழிவு ஆகியவை குறித்து வாமதேவர் வசுமனசுக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அறத்தின் பாதையைப் பின்பற்ற விரும்பும் ஒரு நீதிமிக்க மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, ஓ! பாட்டா {பீஷ்மரே}, கேட்கும் எனக்குப் பதில் அளிப்பீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவரும், பழங்காலத்தில் பாடப்பட்ட அனைத்தின் உண்மையை அறிந்தவருமான வாமதேவர் என்ன சொன்னார் என்பது பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில், அறிவு, மனோவுறுதி, தூய நடத்தை ஆகியவற்றைக் கொண்ட {கோசல நாட்டு} மன்னன் வாசுமனஸ், உயர்ந்த தவத்தகுதியை உடைய பெரும் முனிவர் வாமதேவரிடம்,(3) “ஓ! புனிதமானவரே, எந்த நடத்தையைப் பின்பற்றுவதால் நான் எனக்கு அளிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழாமல் இருப்பேன் என்பதை, முக்கியத்துவமும் அறமும் நிறைந்த வார்த்தைகளில் எனக்குக் கற்பிப்பீராக” என்று கேட்டான்.(4) தவசிகளில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவருமான வாமதேவர், நகுஷனின் மைந்தனான யயாதியைப் போலச் சுகமாக வீற்றிருந்த அந்தத் தங்க நிறத்தோனிடம் {வசுமனஸிடம்} பின்வருமாறு சொன்னார்.(5)

வாமதேவர் {வாசுமனஸ்}, “நீ நீதியுடன் நடந்து கொள்வாயாக. நீதிக்கும் {அறத்துக்கும்} மேன்மையானது ஏதும் இல்லை. அறம் நோற்கும் மன்னர்கள் மொத்த உலகையும் வெற்றி கொள்வதில் வெல்கிறார்கள்.(6) தன் நோக்கங்களைச் சாதிப்பதில் எதிர்பார்க்கும் விளைவைத் தரவல்ல வழிமுறைகளையே நீதியாகக் கருதி, நல்லோரின் ஆலோசனைகளின்படி செயல்படும் மன்னன், நீதியுடன் சுடர்விடுகிறான்.(7) அறத்தை அலட்சியம் செய்து, முரட்டு பலத்துடன் செயல்பட விரும்பும் மன்னன் விரைவில் அறத்திலிருந்து விழுந்து, அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் இழக்கிறான்.(8) குற்றமுள்ளவனும், பாவியுமான ஓர் அமைச்சனின் ஆலோசனைகளின்படி செயல்படும் மன்னன், அறத்தை அழிப்பவனாகி, தன் குடும்பம் அனைத்துடன் சேர்த்து, தன் குடிமக்களால் கொல்லப்படத் தகுந்தவனாகிறான். உண்மையில், அவன் மிக விரைவில் அழிவை அடைவான்.(9) அரசகலையின் கடமைகளை வெளிப்படுத்த இயலாதவனும், தன் செயல்பாடுகள் அனைத்திலும் உறுதியின்மையால் {சபலத்தால்} ஆளப்படுபவனும், தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவனுமான மன்னன் மொத்த பூமியின் ஆட்சியாளனாகவே இருந்தாலும், விரைவில் அழிவை அடைவான்.(10)

மறுபுறம், செழிப்பை விரும்புபவனும், வன்மமற்றவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனுமான மன்னன், நூற்றுக்கணக்கான ஆறுகளால் நிரப்பப்பட்டுப் பெருகும் பெருங்கடலைப் போல வளமையில் தழைத்தோங்குவான்.(11) அவன் அறம், இன்பம், செல்வம், நுண்ணறிவு மற்றும் நண்பர்கள் ஆகியவற்றில் நிறைவு {போதுமான அளவுக்குக்} கொண்டவனாகத் தன்னை ஒருபோதும் கருதக்கூடாது[1].(12) உலகின் ஒழுக்கம் இவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இந்த ஆலோசனைகளைக் கேட்பதால் ஒரு மன்னன், புகழ், சாதனைகள், செழிப்பு மற்றும் குடிமக்களை அடைகிறான்.(13) அறத்திற்குத் தன்னை அற்பணித்துக் கொண்டு, இத்தகு வழிமுறைகளின் மூலம் அறம் மற்றும் செல்வத்தை அடைய முனைபவனும், தன் திட்டங்கள் அனைத்திலும் அவற்றின் நோக்கங்கள் குறித்துச் சிந்தித்தபிறகு தொடங்குபவனுமான மன்னன், பெருஞ்செழிப்பை அடைவதில் வெல்கிறான்.(14)கஞ்சனும், பற்றில்லாதவனும், முறையற்ற தண்டனைகளால் தன் குடிமக்களைப் பீடிப்பவனும், தன் செயல்பாடுகளில் முரடனுமாம மன்னன் விரைவில் அழிவை அடைகிறான்.(15) நுண்ணறிவைக் கொடையாகக் கொள்ளாத மன்னன், தன் குற்றங்களைக் காணத் தவறுகிறான். அவன் இம்மையில் புகழ்க்கேட்டிலும், மறுமையில் நரகிலும் மூழ்குகிறான்.(16) மன்னன், கௌரவிக்கத் தகுந்தவர்களுக்கு அஃதை அளித்து, இனிமையான பேச்சின் மதிப்பை உணர்ந்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் அப்படியே பேசினால், அவனுக்கு ஏற்படும் பேரிடரைத் குடிமக்கள் தங்களுக்கே ஏற்பட்டதாகக் கருதி, அதிலிருந்து அவனை விடுவிப்பார்கள்.(17) அறவழிகள் போதிப்பவர் எவரும் இல்லாதவனும், பிறரின் ஆலோசனைகளை ஒருபோதும் கேளாதவனும், உறுதியற்ற வழிமுறைகளின் மூலம் செல்வத்தை அடைய முனைபவனுமான மன்னன், நீடித்த மகிழ்ச்சியை அனுபவிப்பதில் ஒருபோதும் வெல்வதில்லை.(18) மறுபுறம், அறம் தொடர்புடைய காரியங்களில் தன் ஆசானின் அறிவுரைகளைக் கேட்பவனும், தன் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைத் தானே கண்காணிப்பவனும், அனைத்தையும் அடைவதில் அறக்கருத்துகளால் வழிநடத்தப்படுபவனுமான மன்னன், நீண்டகால மகிழ்ச்சியை அனுபவிப்பதில் வெல்கிறான்” என்றார் {வாமதேவர்}.

அரசதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 93-மன்னனின் நடத்தை இருக்க வேண்டியதெவ்வாறு? மன்னன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்வதெப்போது? மன்னனின் கண்காணிப்பு இருக்க வேண்டியதெப்படு என்பதை வசுமனஸுக்குச் சொன்ன வாமதேவர்…

வாமதேவர் {கோசல நாட்டு மன்னன் வசுமனஸிடம்} தொடர்ந்தார், “பலமிக்கவனான மன்னன், பலவீனரிடம் நீதியில்லாமல் நடந்து கொள்ளும்போது, அவனது குலத்தில் பிறந்தோரும் அதே நடத்தையே பின்பற்றுவார்கள்.(1) மேலும், பாவம் செய்யும் அந்த இழிந்தவனைப் பிறரும் பின்பற்றுவார்கள். அவ்வாறு பின்பற்றும் மனிதன் {மன்னன்}, கட்டுப்பாடுகளால் அடக்கப்படவில்லையென்றால், அவனது அத்தகு செயலே விரைவில் நாட்டுக்கு அழிவைக் கொண்டுவரும்.(2) தனக்குரிய கடமைகளை நோக்கும் மன்னனின் நடத்தையானது, பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டாக மனிதர்களால் பொதுவாக ஏற்கப்படுகிறது. எனினும், தன் கடமைகளில் இருந்து வீழும் ஒரு மன்னன், தன் உறவினர்களால் கூடப் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டான்[1].(3) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள ஆணைகளை அலட்சியம் செய்யும் முரட்டு மன்னன், தன் நாட்டில் வரம்பைமீறிச் செயல்பட்டு, மிகவிரைவில் அழிவை அடைகிறான்.(4)

பழங்காலத்தில் இருந்து வெற்றிகொள்ளப்பட்ட அல்லது வெல்லப்படாத வேறு க்ஷத்திரியர்களின் நடத்தையை எந்த க்ஷத்திரியன் பின்பற்றவில்லையோ, அவன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்[2].(5) ஒரு போரில் வெற்றிக் கொண்ட எந்த மன்னன், முன்னொரு சமயம் தனக்கு ஏதோ நன்மையைச் செய்த அரச எதிரியைக் கைப்பற்றி, வன்மத்துடன் செயல்பட்டு, அவனுக்கு உரிய கௌரவத்தை அளிக்கவில்லையோ, அவன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(6) மன்னன், தன் பலத்தை வெளிக்காட்டி, உற்சாகமாக வாழ வேண்டும், ஆபத்துக் காலங்களில் என்ன தேவையோ, அதையும் செய்ய வேண்டும். அத்தகு ஆட்சியாளன் அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்பட்டு, செழிப்பில் இருந்து ஒரு போதும் வீழாதிருப்பான்.(7) நீ எவனோ ஒருவனுக்குப் பொல்லாங்கு செய்தால், காலம் வரும்போதும் நீ அவனுக்குத் தொண்டு {நல்லது} செய்ய வேண்டும். விரும்பப்படாத ஒருவனும், ஏற்புடையதைச் செய்யும்போது அன்புக்குரியவனாகிறான்[3].(8)பொய்மை தவிர்க்கப்பட வேண்டும். வேண்டப்படாமலேயே {கேட்காமலேயே} நீ பிறருக்கு நன்மை செய்ய வேண்டும். காமத்தாலோ {ஆசையாலோ}, கோபத்தாலோ, வன்மத்தாலோ நீ ஒருபோதும் நீதியைக் கைவிடக்கூடாது.(9) எவராலும் கேள்வி கேட்கப்படும்போது, கடுமையான பதில்களைக் கொடுக்காதே. கண்ணியமற்ற சொற்களைப் பேசாதே. எதையும் செய்ய ஒருபோதும் அவசரப்படாதே. வன்மத்தில் ஒருபோதும் ஈடுபடாதே. இத்தகு வழிமுறைகளால் ஓர் எதிரியும் வெல்லப்படுவான்.(10) ஏற்புடைய ஏதும் நடந்தால் மிகைப்பட்ட வகையில் மகிழ்ச்சியடையாதே, அல்லது ஏற்பில்லாத ஏதும் நடந்தால் துயரில் மூழ்கிவிடாதே. செல்வம்சார்ந்த வளங்கள் தீர்ந்துபோகும்போது ஒருபோதும் துயரில் ஈடுபடாதே. உன் குடிமக்களுக்கு நன்மை செய்யும் கடமையை எப்போதும் நினைவில் கொள்வாயாக.(11) தன் மனோ நிலையின்படி அறத்திற்கேற்புடையதையே எப்போதும் செய்யும் மன்னன், தன் திட்டங்கள் அனைத்திலும் வெற்றியை அடைந்து, ஒரு போதும் செழிப்பை இழப்பதில்லை.(12)

தன் தலைவனுக்குத் தீமை தருபவற்றைத் தவிர்ப்பவனும், அவனது நன்மைக்காகவே எப்போதும் செயல்படுபவனும், அர்ப்பணிப்புள்ளவனுமான பணியாளனை மன்னன் கவனத்துடன் எப்போதும் பேணி வளர்க்க வேண்டும்.(13) தங்கள் புலன்கள அடக்கியவர்களும், அர்ப்பணிப்பும், பற்றுறுதியும் கொண்டவர்களும், தூய நடத்தைக் கொண்டவர்களும், திறன்மிக்கவர்களுமான மனிதர்களையே அவன் அனைத்துக் காரியங்களிலும் நியமிக்க வேண்டும்.(14) இத்தகு தகுதிகளைக் கொண்டு மன்னனை நிறைவு செய்பவனும், தன் தலைவனின் நன்மைகளில் கவனத்துடன் எப்போதும் அக்கறைகொள்பவனுமான மனிதன் எவனோ, அவனை மன்னன் தன் நாட்டின் காரியங்களில் நியமிக்க வேண்டும்.(15) மறுபுறம், மூடர்கள், புலனடிமைகள், பேராசைக்காரர்கள், மதிப்பில்லா நடத்தை கொண்டோர், வஞ்சகர்கள், போலி நடத்தையுள்ள பொய்யர்கள், தீய நோக்குடையோர், தீய ஆன்மா கொண்டோர், அறியாமையில் இருப்போர், இழிந்த மனம் கொண்டோர், மது, சூது, பெண்கள், வேட்டை ஆகியவற்றுக்கு அடிமையாக இருப்போர் ஆகியோரை முக்கிய அலுவல்களில் நியமித்தால் அந்த மன்னன் தன் செழிப்பை இழப்பான்.(16,17)

முதலில் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, பாதுகாக்கத் தகுந்த பிறரையும் பாதுகாக்கும் மன்னன், தன் குடிமக்கள் செழிப்பில் வளர்வதைக் காணும் நிறைவை உணர்வான். அத்தகு மன்னன் மகத்துவத்தை அடைவதிலும் வெல்கிறான்.(18) ஒரு மன்னன், தன்னிடம் அர்ப்பணிப்புள்ள இரகசிய முகவர்கள் {ஒற்றர்கள்} மூலம் பிற மன்னர்களின் நடத்தைகளையும், செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும். அத்தகு வழிமுறைகளின் மூலம் அவன் மேன்மையை அடையலாம்.(19) பலமிக்க ஒரு மன்னனுக்குத் தீங்கிழைத்த ஒருவன் {குறுநில மன்னன்}, தீங்கடைந்தவன் {பலமிக்க மன்னன்} தான் வாழும் இடத்தில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறான் என்று தன்னைத் தேற்றிக் கொள்ளக்கூடாது. அத்தகு மன்னர்கள் {பலமிக்கவர்கள்} தீங்கடையும்போது, இரையின் மீது பாயும் பருந்தைப்போலவே கவனமற்ற கணப்பொழுதில் தீங்கிழைத்தவன் {குறுநில மன்னன்} மீது பாய்வான்.(20)

வலுவூட்டப்பட்ட பலம் கொண்டவனும், தன் பலத்தில் நம்பிக்கை கொண்டவனுமான ஒரு மன்னன், தன்னைவிடப் பலவீனமான அண்டை நாட்டானை {அண்டை நாட்டு மன்னனைத்} தாக்கவேண்டுமேயன்றி ஒருபோதும் பலமிக்கவனையல்ல.(21) அறத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட மன்னன் ஒருவன், ஆற்றலால் பூமியின் அரசுரிமையை அடைந்து, தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்து, எதிரிகளைப் போரில் கொல்ல வேண்டும்.(22) இவ்வுலகத்திற்குச் சொந்தமான அனைத்தும் அழிவடையவே விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கே இருக்கும் எதுவும் நீடித்து நிற்கக்கூடியவையல்ல. இதன் காரணமாகவே, அறத்தைப் பின்பற்றும் மன்னன், தன் மக்களை நீதியுடன் பாதுகாக்க வேண்டும்.(23) கோட்டைகளில் தற்பாதுகாப்பு, போர், நீதி நிர்வாகம், கொள்கை சம்பந்தமான கேள்விகளில் கலந்தோலோசனை செய்தல், குடிமக்களை மகிழ்ச்சியுடன் வைத்திருத்தல் ஆகிய இந்த ஐந்து செயல்களும், ஒரு மன்னனின் ஆட்சிப்பகுதிகளை விரிவடையச் செய்வதில் பங்காற்றுகின்றன.(24)

இவற்றில் உரிய கவனம் செலுத்தும் மன்னனே, மன்னர்களில் சிறந்தவனாகக் கருதப்படுகிறான். இவற்றை எப்போதும் கவனிப்பதால் ஒரு மன்னன் தன் நாட்டைப் பாதுகாப்பதில் வெல்கிறான்.(25) எனினும், அனைத்துக் காலங்களில் இக்காரியங்கள் அனைத்தையும் ஒரே மனிதன் கண்காணிப்பது இயலாதது. ஒரு மன்னன், கண்காணிப்பு செய்யும் அத்தகு பணியைத் தன் அமைச்சர்களிடம் ஒப்படைத்து, பூமியை என்றென்றைக்கும் ஆளலாம்.(26) பரந்த மனமுடையவனும், இன்பம் சார்ந்த பொருட்கள் அனைத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்பவனும், மென்மையான மனோநிலை கொண்டவனும், தூய நடத்தை கொண்டவனும், தன் குடிமக்களை எப்போதும் கைவிடாதவனுமான ஒருவனையே மக்கள் மன்னனாகச் செய்கிறார்கள்.(27) ஞான அறிவுரைகளைக் கேட்டு, அவற்றை ஏற்று, தன் சொந்தக் கருத்துகளைக் கைவிடுபவனுக்கு உலகமே கீழ்ப்படிகிறது.(28)

தன் பார்வைக்கு எதிர் பார்வை கொண்டதன் விளைவாக ஒரு நலன் விரும்பியின் ஆலோசனையைப் பொறுத்துக் கொள்ளாதவனும், தன் பார்வைகளுக்கு எதிராகச் சொல்லப்படுபவற்றைக் கேட்பதில் அக்கறையில்லாதவனும், வெல்லப்பட்ட, அல்லது வெல்லப்படாத உயர்ந்த உன்னதமான மனிதர்களின் நடத்தையைப் பின்பற்றாதவனுமான மன்னன் தன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்[4].(29,30) முன்பொருமுறை தண்டிக்கப்பட்ட அமைச்சர்கள், குறிப்பாகப் பெண்கள் ஆகியோரிடமும், மலைகள், அடைதற்கரிய இடங்கள், யானைகள், குதிரைகள், பாம்புகள் ஆகியவற்றிடமும் இருந்து(31) மன்னன் முழுகவனத்துடன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்[5]. தனது முதன்மையான அமைச்சர்களைக் கைவிட்டு, இழிந்தோரைத் தனக்குப் பிடித்தமானவர்களாக ஆக்கிக்கொள்ளும் மன்னன் விரைவில் துயரில் வீழ்ந்து, (தான் எண்ணியிருந்த) தன் திட்டங்களின் எல்லையை {முடிவை} அடைவதில் ஒருபோதும் வெல்வதில்லை.(32)

உறுதியற்ற ஆன்மா கொண்டவனும், கோபம் மற்றும் வன்மத்தின் வசத்தை அடைபவனும், நற்பண்புகள் கொண்ட தன் உறவினர்களில் எவரையும் விரும்பவும், மதிக்கவும் செய்யாதவனுமான மன்னன், அழிவடையும் தருணத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறான்.(33) சாதனையாளர்கள் எவரையும் தன் இதயதால் விரும்பாவிடினும், அவர்களுக்கு நன்மை செய்து தன்னோடு இணைத்துக் கொள்ளும் மன்னன், நீடித்த புகழை அனுபவிப்பதில் வெல்கிறான்.(34) நீ ஒருபோதும் அகாலத்தில் வரிகளை விதிக்கக்கூடாது. நீ, ஏற்பில்லாதது ஏதும் நேரும்போது துன்பப்படுவதிலும், ஏற்புடைய ஏதும் நேரும்போது மிகைப்பட்ட மகிழ்ச்சியடைவதிலும் ஒருபோதும் ஈடுபடாதே. நற்செயல்களை நிறைவேற்றுவதிலேயே எப்போதும் உன்னை நீ நிறுவிக் கொள்ள வேண்டும்.(35) உன்னைச் சார்ந்திருக்கும் {குறுநில} மன்னர்களில் உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டிருப்பவன் எவன், அச்சத்தால் உன்னிடம் பற்றுறுதியுடன் இருப்பவன், அவர்களில் குற்றங்களையுடையவன் எவன் என்பதை எப்போது நீ உறுதிசெய்து கொள்ள வேண்டும்.(36)

கவனமில்லாத தருணங்களில், கழுகுக்கூட்டம் தங்கள் இரையைப் பற்றுவதைப் போலப் பலவீனர்கள் பலமிக்கவர்களைத் தாக்கக்கூடும் என்பதால், மன்னன் பலவீனர்களை நம்ப வேண்டும்.(37) பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட ஒரு மனிதன், தன் தலைவன் இனிய சொல் பேசுபவனாகவும், அனைத்து சாதனைகளைக் கொண்டவனாகவும் இருப்பினும் அவனைத் தாக்க முயல்வான். எனவே, நீ அத்தகு மனிதர்களிடம் நம்பிக்கை வைக்காதே.(38) நகுஷனின் மகனான யயாதி, அரசகலையின் {ராஜதந்திரத்தின்} புதிர்களை அறிவிக்கும்போது, “மனிதர்களை ஆள்வதில் ஈடுபடும் ஒரு மனிதன், அருவருக்கத்தக்க எதிரிகளையும் கொல்ல வேண்டும்” எனச் சொன்னான்” {என்றார் வாமதேவர்}.(39)

அதிகார உறுதி! – சாந்திபர்வம் பகுதி – 94-உறுதியான அதிகாரம் படைத்த மன்னன் எவன்? வெற்றின் கனிகளைச் சுவைக்கக்கூடிய மன்னன் எவன்? என்பவை குறித்து வசுமனஸுக்குச் சொன்ன வாமதேவர்; அந்த உரையாடலில் வாமதேவர் சொன்னவற்றைக் கடைப்பிடிக்கும்படி யுதிஷ்டிரனைக் கேட்டுக் கொண்ட பீஷ்மர்…

வாமதேவர் {கோசல நாட்டு மன்னன் வசுமனஸிடம்} சொன்னார், “மன்னன் போர்கள் இல்லாமலேயே வெற்றிகளை வென்றெடுக்க வேண்டும். ஓ! ஏகாதிபதி {வசுமனஸே}, போர்களின் மூலம் அடையப்படும் வெற்றிகள் ஞானியரால் புகழப்படுவதில்லை.(1) அரசின் சொந்த பலம் உறுதியாகாதபோது, அவன் புதிய பொருட்களை {உரிமைகளை} அடைவதில் முனையக் கூடாது. அதிகாரம் வலுப்பெறாத மன்னன் அவ்வாறு பொருட்களை {உரிமைகளை} அடைவதில் முனைவது முறையாகாது.(2) எவனுடைய ஆட்சிப்பகுதிகள் பரந்ததாகவும், செல்வம் நிறைந்ததாகவும் இருக்கிறதோ, எவன் பெரும் எண்ணிக்கையிலான அதிகாரிகளைக் கொண்டிருக்கிறானோ, அந்த மன்னனின் அதிகாரமே உறுதியானது என்று சொல்லப்படுகிறது.(3) எந்த மன்னனின் படைவீரர்கள் (ஊதியம் மற்றும் பரிசுகளால்) மனம் நிறைந்தவர்களாக, பகைவர்களை வஞ்சிக்கத் தகுந்தவர்களாக இருக்கிறார்களோ அவன் சிறு படையையே கொண்டிருந்தாலும் மொத்த உலகத்தையும் அடக்குவான்.(4) எந்த மன்னனின் குடிமக்கள், நகரங்களைச் சார்ந்தவர்களாகவோ, மாகாணங்களைச் சார்ந்தவர்களாகவோ இருப்பினும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களாகவும், செல்வம் மற்றும் தானியங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ அவனது அதிகாரமே உறுதியானது என்று சொல்லப்படுகிறது.(5) ஒரு மன்னன், தன் பலம் எதிரியின் பலத்தைவிடப் பெரியது என்று நினைக்கும்போது, தன் நுண்ணறிவின் துணையுடன், பின்னவனின் ஆட்சிப்பகுதிகளையும், செல்வத்தையும் அடைய அவன் முயல வேண்டும்.(6)

வளங்கள் பெருகுபவனும், அனைத்து உயிரினங்களிடம் கருணை கொண்டவனும், காலதாமதத்தால் ஒருபோதும் நேரத்தை இழக்காமல் இருப்பவனும், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனத்துடன் இருப்பவனுமான மன்னன் முன்னேற்றத்தை ஈட்டுவதில் வெல்கிறான்.(7) எந்த மன்னன், எக்குற்றமும் இல்லாத தன் மக்களிடம் வஞ்சகமாக நடந்து கொள்கிறானோ, அவன் கோடரியால் காட்டை அழிக்கும் ஒருவனைப் போலத் தன்னையே வெட்டிக் கொள்கிறான்.(8) மன்னன் தன் எதிரிகளைக் கொல்லும் பணியை எப்போதும் கவனிக்கவில்லையெனில், பின்னவர்கள் {எதிரிகள்} குறையமாட்டார்கள். எந்த மன்னன், தன் கோபத்தைக் கொல்லத் தெரிந்தவனோ, அவனுக்கு எந்த எதிரியும் இருக்க மாட்டான்.(9) மன்னன் ஞானம் கொண்டவனாக இருப்பின், அவன் நல்லோர் அங்கீகரிக்காத எச்செயலையும் ஒருபோதும் செய்யமாட்டான். மறுபுறம், அவன் தனது சொந்த நன்மைக்கும், பிறரின் நன்மைக்கு வழிவகுக்கும் செயல்களையே எப்போதும் செய்பவனாக இருப்பான்.(10) எந்த மன்னன் தன் கடமைகள் யாவையும் நிறைவு செய்து, தன் மனசாட்சியின் ஒப்புதலில் மகிழ்ச்சியடைகிறானோ, அவன் ஒருபோதும் மற்றவரின் நிந்தனைக்கு ஆளாகமாட்டான், எப்போதும் வருத்தமடையவும் மாட்டான்.(11) எந்த மன்னன் மனிதர்களிடம் இத்தகு நடத்தையைக் கடைப்பிடிக்கிறானோ, அவன் இரண்டு உலகங்களையும் அடக்குவதில் வென்று, வெற்றியின் கனிகளைச் சுவைப்பான்” {என்றார் வாமதேவர்}”.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வாமதேவரால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் வசுமனஸ், அவர் வழிநடத்தியதைப் போலவே செய்தான். நீயும் இந்த ஆலோசனைகளைப் பின்பற்றினால், இரண்டு உலகங்களையும் வெற்றி கொள்வதில் நீ வெல்வாய் என்பதில் ஐயமில்லை”.(13)

வெற்றிக்கான வழிமுறைகள்! – சாந்திபர்வம் பகுதி – 95-வெற்றியடைய விரும்பும் மன்னன் செயல்பட வேண்டிய முறை; போரிடச் செல்லும் க்ஷத்திரியனின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்தும், வெற்றி அடையவும், தன் வளங்களை அதிகரிக்கவும் நியாயமான வழிமுறைகளே பின்பற்றப்பட வேண்டும் என்றும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு க்ஷத்திரியன் மற்றொரு க்ஷத்திரியனைப் போரில் அடக்க விரும்பினால், முன்னவன் வெற்றி குறித்த காரியத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்னால் கேட்கப்படும் நீர் இதற்குப் பதிலளிப்பீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தன் பின்னே படையுடனோ, இல்லாமலோ செல்லும் மன்னன், தான் அடக்கப்போகும் மன்னனின் ஆட்சிப்பகுதிக்குள் நுழைந்து, அந்த மக்கள் அனைவரிடமும், “நானே உங்கள் மன்னன், நான் எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன்.(2) எனக்கு உரிய கப்பத்தைக் கொடுங்கள், அல்லது போரில் என்னோடு மோதுங்கள்” என்று சொல்ல வேண்டும். மக்கள் அவனைத் தங்கள் மன்னனாக ஏற்றால், எந்தப் போருக்குமான அவசியமில்லை.(3) பிறப்பால் க்ஷத்திரியர்களாக இல்லாத அவர்கள், பகைமையின் குறியீடுகளை வெளிப்படுத்தும்போது, அவர்கள் தங்களுக்கு விதிக்கப்படாத நடைமுறைகளை நோற்பதால், அனைத்து வழிமுறைகளிலும் அவர்கள் அடக்கப்பட வேண்டும்.(4) எதிரியிடம் அதிகம் எதிர்பார்ப்பவனும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாதவனும், போரிட ஆயுதமின்றி வருபவனுமான க்ஷத்திரியனைக் கண்டால், பிற வகையைச் சேர்ந்த மக்களும் (படையெடுத்து வருபவனைத் தடுப்பதற்காக) ஆயுதங்களை எடுப்பார்கள்[1]” என்றார் {பீஷ்மர்}.(5)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மற்றொரு க்ஷத்திரிய மன்னனை எதிர்த்து போரிடச் செல்லும் க்ஷத்திரிய மன்னன் ஒருவனின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கவசம் பூணாத க்ஷத்திரியனுடன் போரிட அந்த க்ஷத்திரியன் தானும் கவசம் பூணக்கூடாது. ஒருவன் மற்றொருவனோடு போரிட்டு, எதிராளி இயலாமையை அடையும்போது பின்னவனை {எதிராளியைக்} கைவிட வேண்டும்[2].(7) எதிரி கவசம் பூண்டு வந்தால், அவனது எதிராளியும் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். எதிரி ஒரு படையின் பாதுகாப்புடன் முன்னேறி வந்தால், படையின் பாதுகாப்புடன் கூடிய ஒருவன் அவனைப் போருக்கு அறைகூவி அழைக்க வேண்டும்.(8) எதிரி வஞ்சகத்தின் உதவியுடன் போரிட்டால், அவனை வஞ்சகத்தின் உதவியுடனேயே சந்திக்க வேண்டும். மறுபுறம் அவன் நியாயமாகப் போரிட்டால், நியாயமான வழிமுறைகளின்படியே அவன் தடுக்கப்பட வேண்டும்.(9) ஒருவன், ஒரு தேர்வீரனை எதிர்த்து குதிரையின் முதுகில் செல்லக்கூடாது. ஒரு தேர்வீரன் மற்றொரு தேர்வீரனை எதிர்த்தே செல்ல வேண்டும். எதிராளி துயரில் வீழ்ந்தால், அவன் தாக்கப்படக்கூடாது; அச்சத்தில் இருப்பவனும், வெல்லப்பட்டவனும் தாக்கப்படக்கூடாது[3].(10)நஞ்சு தோய்த்த கணைகளோ, முள்பதித்த கணைகளோ {கர்ணிகளோ} பயன்படுத்தப்படக்கூடாது. இவை தீயவர்களின் ஆயுதங்களாகும். ஒருவன் கோபத்திற்கோ, கொல்லும் விருப்பத்திற்கோ வசப்படாமல் நியாயமான முறையில் போரிட வேண்டும்.(11) பலவீனமானவனோ, காயம்பட்டவனோ கொல்லப்படக்கூடாது. அதேபோலவே மகனற்றவனோ, ஆயுதம் முறிந்தவனோ, துயரில் வீழ்ந்தவனோ, நாண்கயிறு அறுந்தவனோ, தன் வாகனத்தை இழந்தவனோ கொல்லப்படக்கூடாது. காயம்பட்ட எதிரியை, அவனது வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும், அல்லது அவன் வெற்றியாளனின் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டால், திறன்மிக்க மருத்துவ நிபுணர்களைக் கொண்டு அவனது காயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.(12) நல்ல மன்னர்களுக்கிடையில் சச்சரவு விளையும்போது, ஒரு நல்ல போர்வீரன் துயரில் விழுந்தால் (அவனது காயங்கள் கவனிக்கப்பட்டு) குணமடைந்தபிறகு அவனைச் சுதந்திரமாக விட வேண்டும். இதுவே நித்திய கடமையாகும் {இதுவே ஸனாதன தர்மமாகும்}.(13) தான்தோன்றியின் (பிரம்மனின்) மகனான மனுவே, போர்கள் நியாயமான முறையில் போரிடப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் {க்ஷத்திரியர்கள்} அறத்தை அழிக்காமல் அதைப் பின்பற்ற வேண்டும்.(14)

நியாயமாகப் போரிடுவதைக் கடமையாகக் கொண்ட ஒரு க்ஷத்திரியன், நியாயமற்ற வழிமுறைகளின்படி வெற்றியடைந்தால் அவன் பாவியாகிறான். வஞ்சக நடத்தை கொண்ட அத்தகு மனிதன் தன்னையே கொல்கிறான் எனச் சொல்லப்படுகிறான்.(15) தீயோரின் நடைமுறை இதுவே. தீயோனும் கூட நியாயமான வழிமுறைகளின்படியே அடக்கப்பட வேண்டும். பாவகரமான வழிமுறைகளில் வெற்றியை அடைவதை விட அறம் நோற்று உயிரைவிடுவதே சிறந்தது.(16) ஓ! மன்னா, இழைக்கப்படும் பாவமானது, ஒரு பசுவைப் போலவே உடனடி பலனை உண்டாக்குவதில்லை. அந்தப் பாவம், அஃதை இழைத்தவனின் வேர்களையும், கிளைகளையும் எரித்த பிறகே அவனை மூழ்கச் செய்கிறது.(17) பாவம் நிறைந்த ஒரு மனிதன், பாவம்நிறைந்த வழிமுறைகளில் செல்வத்தை அடைந்து மிகவும் இன்புற்றிருக்கிறான். ஆனால், பாவம் நிறைந்த வழிமுறைகளில் முன்னேற்றத்தை அடைந்த அந்தப் பாவி அந்தப் பாவத்தையே தொடர்வான்.(18) அறம் எந்த உச்சவினையுமாற்றுவதில்லை என்று நினைக்கும் அவன் நன்னடத்தைக் கொண்ட மனிதரை ஏளனம் செய்கிறான். அறத்தை நம்பாத அவன், இறுதியில் அழிவையடைகிறான்.(19)

அவன், வருணனின் சுருக்கு {பாசக்} கயிற்றில் சிக்கியிருந்தாலும், தன்னை இறவாதவனாகவே கருதுகிறான். காற்றடைக்கப்பட்ட பெரிய தோற்பையைப் போல, அந்தப் பாவி தன்னை அறத்திலிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்கிறான். எனினும், விரைவில் அவன் ஆற்றங்கரை மரமானது, வேருடன் சேர்த்து அடித்துச் செல்லப்படுவதைப் போலவே காணாமல் போகிறான்.(20) அப்போது, கல் தரையில் விழுந்து உடைந்த மண்குடத்துக்கு ஒப்பானவனாக அவனைக் காணும் மக்கள், அவனுக்குத் தகுந்தபடியே அவனைக் குறித்துப் பேசுவார்கள். எனவே, மன்னனானவன், வெற்றி மற்றும் தன் வளங்களை அதிகரித்தல் ஆகிய இரண்டிலும் நியாயமான வழிமுறைகளையே நாட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(21)

வெற்றியாளனின் நடந்தை! – சாந்திபர்வம் பகுதி – 96-வெல்லப்பட்ட எதிரியை நடத்த வேண்டியதெவ்வாறு? கைப்பற்றப்பட்ட கன்னிகையிடம் நடந்து கொள்ளும் முறை என்ன? கைப்பற்றப்பட்ட உடைமைகளை எவ்வாறு கையாள வேண்டும்? எதிரிநாட்டு மக்கள் எவ்வாறு இணங்கச் செய்யப்பட வேண்டும்? வேர்களை உறுதியாகக் கொண்டவனும், உலகின் வழிகளை அறிந்தவனுமான மன்னன் எவன்? பிரதர்த்தன், திவோதாசன் மற்றும் நாபாகன் ஆகியோர் படையெடுத்துச் சென்று செய்ததென்ன?  போன்றவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் ஒடுக்கும் செயல் மொத்த பூமியின் அரசுரிமையையும் ஒரு மன்னனுக்குக் கொடுக்கும் என்றாலும், அவன் ஒருபோதும் அவ்வாறு அடக்க விரும்பக்கூடாது. நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் வெற்றியடையும் எந்த மன்னன்தான் அதன்பிறகு மகிழ்ச்சியடைவான்?(1) அநீதியால் களங்கப்படும் வெற்றியானது, நிச்சயமற்றதும், சொர்க்கத்திற்கு வழிநடத்தாததுமாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அத்தகு வெற்றியானது, மன்னன் மற்றும் பூமி ஆகிய இரண்டையும் பலவீனப்படுத்தும்.(2) கவசம் நழுவிய போர்வீரன், “நான் உன்னவன்” என்று சொல்லி சரணடைந்தவன், கரங்கூப்புபவன், தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டவன் ஆகியோரை வெறுமனே கைப்பற்ற வேண்டுமேயன்றி ஒருபோதும் கொல்லக்கூடாது.(3) ஓர் எதிரி மன்னன், படையெடுப்பாளனின் துருப்புகளால் வெல்லப்பட்டால், பின்னவன் வெல்லப்பட்ட தன் எதிரியுடன் போரிடக்கூடாது. மறுபுறம், அவன் அவனைத் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து, “நான் உன் அடிமை” என்று சொல்லும் வகையில் ஒரு வருடகாலம் அவனை இணங்கியிருக்கச் செய்ய வேண்டும். அவன் அதைச் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், வெற்றியாளனின் வீட்டில் ஒரு வருடம் வாழும் வெல்லப்பட்ட அந்த எதிரி, புதிய வாழ்வுக் காலத்தையே அடைகிறான்[1].(4)

ஒரு மன்னன், வெல்லப்பட்ட எதிரியின் வீட்டில் இருந்து ஒரு கன்னிகையைப் பலவந்தமாகக் கொண்டு வந்தால், அவளை ஒரு வருடம் {பாதுகாப்பாக} வைத்திருந்து, பிறகு அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறாளா, அல்லது வேறு எவரையும் திருமணம் செய்து கொள்கிறாளா என்று கேட்க வேண்டும். அவள் ஏற்கவில்லை என்றால், அவள் {அவளது நாட்டுக்கே} திரும்ப அனுப்பப்பட வேண்டும். பலவந்தமாக அடையப்பட்ட பிற செல்வங்களைப் {அடிமைகள் [பணியாட்கள்]} பொறுத்தவரையிலும் கூட இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்.(5) கள்வர்கள் மற்றும் {மரண} தண்டனைக்குக் காத்திருப்போர் ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்வத்தை மன்னன் ஒருபோதும் தனதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எதிரியிடம் இருந்து பலவந்தமாகக் கைப்பற்றப்பட்ட பசுக்கள், பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அவ்விலங்குகளின் பாலை அருந்துவார்கள். எதிரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காளைகள் உழவுப் பணியில் நிறுவப்பட வேண்டும், அல்லது எதிரியிடமே மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்[2].(6) ஒரு மன்னன், மற்றொரு மன்னனிடமே போரிட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. எவன் மன்னனாக இல்லையோ அவன் வேறொரு மன்னனை ஒருபோதும் தாக்கக்கூடாது.(7) ஒரு பிராமணன், அமைதியை விரும்பியவனாக, போரிட்டுக்கொள்ளும் இரு படைகளுக்கு மத்தியில் அச்சமில்லாமல் சென்றால், இரு தரப்பும் உடனடியாகப் போரைக் கைவிட வேண்டும்.(8) ஒரு பிராமணனைக் கொல்லவோ, காயப்படுத்தவோ செய்பவனும் ஒரு நித்திய விதியை உடைப்பான். எந்த க்ஷத்திரியனாவது அவ்விதியை உடைத்தால், அவன் தன் வகையில் இழிந்தவனாவான்.(9) இதனுடன் சேர்த்து, அறத்தை அழித்து, நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறும் அந்த க்ஷத்திரியன், ஒரு க்ஷத்திரியனாக இருக்கத் தகாதவனாகவே கருதப்பட்டுச் சமூகத்தில் இருந்து விரட்டப்பட வேண்டும்.(10)

வெற்றியடைய விரும்பும் ஒரு மன்னன் அத்தகு நடத்தையை ஒருபோதும் பின்பற்றக்கூடாது. நியாயமாக வென்ற வெற்றியை விட ஈட்டுதவற்கு வேறென்ன பெரிதாக இருக்கிறது?(11) (அண்மையில் வெற்றிகொள்ளப்பட்ட ஒரு நாட்டில் உள்ள) எளிதில் சினங்கொள்கின்ற வர்க்கத்தினர், ஆறுதலான வார்த்தைகளாலும், கொடைகளாலும் தாமதமில்லாமல் இணங்கச்செய்யப்பட வேண்டும். இது மன்னன் பின்பற்றத் தகுந்த நல்ல கொள்கையாகும். இதைச் செய்வதற்குப் பதில் இம்மனிதர்களைக் கொள்கையில்லாத அளவில் ஆள முனைந்தால், அவர்கள் நாட்டைவிட்டுச் சென்று (வெற்றியாளனுடைய) எதிரிகளின் தரப்பைச் சேர்ந்து, (வெற்றியாளனை எதிர்ப்பதற்கானப்) பேரிடர் நேரக் காத்திருப்பார்கள்.(13) நிறைவில்லாத மனிதர்கள், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னனின் இடர்களைக் கவனித்து, ஆபத்தான காலங்களில் காலதாமதமின்றிப் பின்னவனுடைய {மன்னனுடைய} எதிரிகளின் தரப்பில் சேர்ந்து கொள்வார்கள்.(14) ஓர் எதிரி நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் வஞ்சிக்கப்படக்கூடாது. அதே போல அவன் மரணம் அடையும் அளவுக்குக் காயப்படுத்தப்படக்கூடாது. அவ்வாறு தாக்கினால் அவனது உயிரே போய்விடக் கூடும்[3].(15)குறைந்த வளங்களே கொண்ட ஒரு மன்னன், அதை வைத்துக் கொண்டு நிறைவுடன் இருந்தால், அவன் வாழ்வதே பெரிதெனக் கருதுபவனாவான்[4].(16) எந்த மன்னன், பரந்து விரிந்த, செல்வம் நிறைந்த ஆட்சிப் பகுதிகளைக் கொண்டவனோ, பற்றுறுதியுடன் கூடிய குடிமக்களைக் கொண்டவனோ, மனநிறைவுடன் இருக்கும் பணியாட்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்டவனோ, அவனே தன் வேர்களை உறுதியாகக் கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்.(17) எந்த மன்னனின் ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள், சாத்திரங்களை நன்கறிந்தவர்கள், கௌரவங்களுக்குத் தகுந்த பிறர் ஆகியோர் முறையாகக் கௌரவிக்கப்படுகிறார்களோ, அவனே இவ்வுலகின் வழிகளை அறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(18) இத்தகு நடத்தையின் மூலமே இந்திரன் உலகத்தின் அரசுரிமையைப் பெற்றான். இந்த நடத்தையின் மூலமே பூமி சார்ந்த மன்னர்கள், இந்திரனின் நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(19)மன்னன் பிரதர்த்தனன், பெரும்போரில் தன் எதிரிகளை அடக்கி, தானியங்கள், மருத்துவ மூலிகைகள் உள்ளிட்ட அவர்களுடைய செல்வமனைத்தையும் எடுத்துக் கொண்டாலும், அவர்களுடைய நிலத்தைத் தீண்டாமல் விட்டுவிட்டான்.(20) மன்னன் திவோதாசன், தன் எதிரிகளை அடக்கிய பிறகு, அவர்களுடைய வேள்வி நெருப்பில் எஞ்சியவற்றையும், (காணிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த) தெளிந்த நெய்யையும், அவர்களது உணவையும் எடுத்துக் கொண்டான். இதன் காரணமாக அவன் வெற்றி கொண்டதன் தகுதியை இழந்தான்[5].(21) மன்னன் நாபாகன் (தன் படையெடுப்புகள் முடிந்ததும்), கல்விமான்களான பிராமணர்கள் மற்றும் தவசிகளின் செல்வத்தைத் தவிர்த்து, மொத்த நாடுகளையும் அதன் ஆட்சியாளர்களோடு சேர்த்துப் பிராமணர்களுக்கான வேள்விக்கொடையாகக் கொடுத்தான்.(22) ஓ யுதிஷ்டிரா, பழங்காலத்தின் நீதிமிக்க மன்னர்கள் அனைவரின் நடத்தைகள் சிறப்பானவையாக இருக்கின்றன. அவற்றை நான் மொத்தமாக அங்கீகரிக்கிறேன்.(23) எந்த மன்னன் தன் செழிப்பை விரும்புவானோ, அவன் சிறப்பான அனைத்தின் துணை கொண்டு படையெடுக்க முனைய வேண்டுமேயன்றி, வஞ்சகத்துடனோ, செருக்குடனோ அல்ல” என்றார் {பீஷ்மர்}.(24)

வீரம்! – சாந்திபர்வம் பகுதி – 97-மன்னர்கள் குற்றமற்றவர்களாக ஆகும் வழிமுறைகள்; மன்னன் ஏன் ஒரு வேள்வியின் தன்வடிவமாகச் சொல்லப்படுகிறான்? அச்சத்திலிருப்போரைப் போராதுகாத்தல் மற்றும் அச்சமின்மை ஆகிய வீரர்களின் பண்புகள்; நோய்ப்படுக்கையில் மரணம் மற்றும் வீரமரணம் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா, க்ஷத்திரியர்களின் நடைமுறைகளைவிடப் பாவம் நிறைந்தவை வேறெவையும் இல்லை. போருக்கு அணிவகுத்துச் செல்லும் போதோ, போரிலோ மன்னன் பெரும் எண்ணிக்கையிலானவர்களைக் கொல்கிறான்[1].(1) எந்தச் செயல்பாடுகளின் மூலம் மன்னன் புகழ் உலகங்களை வெல்கிறான்? ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! கல்விமானே நான் அறிய விரும்பும் இவற்றை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீயோரைத் தண்டித்தல், நல்லோரை இணைத்துக் கொண்டு அவர்களைப் பேணி வளர்த்தல், வேள்விகள் செய்தல் மற்றும் கொடைகள் அளிதல் ஆகியவற்றின் மூலம் மன்னர்கள் குற்றமற்றவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் ஆகிறார்கள்.(3) வெற்றியடைய விரும்பும் மன்னர்கள் பல உயிரினங்களைப் பீடிக்கிறார்கள் என்பது உண்மையே. இருப்பினும் வெற்றி அடைந்த பிறகு அவர்கள் அவை அனைத்தையும் முன்னேற்றவும், வளர்ச்சியடையச் செய்யவும் உதவுகிறார்கள்.(4) கொடைகள், வேள்விகள், தவங்கள் ஆகியவற்றால் அவர்கள் தங்கள் பாவங்களை அழித்து, உயிரினங்கள் அனைத்திற்கும் செய்யும் நன்மையால் தங்கள் தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அதிகரித்துக் கொள்கிறார்கள்.(5)

நிலத்தைச் சீரமைப்பவன், அதைச் சீரமைப்பதற்காக நெற்கதிர்களையும், களைகளையும் எடுக்கிறான். எனினும், அவனது செயல்பாடுகள் நெற்கதிர்களை அழிக்காமல் அவற்றை மேலும் வளமாக வளரச் செய்கின்றன.(6) ஆயுதங்களைத் தரிப்போர், அழிவுக்குத் தகுந்த பலரை அழிக்கிறார்கள். எனினும், அத்தகு பரந்த அழிவானது, எஞ்சியிருப்போரை வளரவும், முன்னேறவும் செய்கிறது.(7) கொள்ளை, கொலை, துன்பம் ஆகியவற்றில் இருந்து மக்களைக் காக்கும் ஒருவன், இவ்வாறு அவர்களின் வாழ்வைக் கள்வர்களிடம் இருந்து காப்பதன் விளைவால், செல்வம், உயிர் மற்றும் உணவு ஆகியவற்றைக் கொடுப்பவனாகக் கருதப்படுகிறான்.(8) எனவே, மன்னன், அனைவரின் அச்சங்களையும் விலக்கும் தக்ஷிணையுடன் கூடிய வேள்வியைச் செய்து தேவர்களைத் துதிப்பதன் மூலம் இம்மையில் புகழையும், மறுமையில் இந்திரனின் சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தையும் அடைகிறான்[2].(9)பிராமணர்களின் நிமித்தமாக எழுந்த போர்களில் எதிரிகளுடன் போரிட்டு உயிரை விடும் மன்னன், அளவிலா கொடைகளுடன் கூடிய ஒரு வேள்வியின் உடல் வடிவமாகவே கருதப்படுகிறான்.(10) ஒரு மன்னன், தன் அம்பறாத்தூணிகள் நிறந்த கணைகளைத் தன் எதிரிகளின் மீது அச்சமில்லாமல் ஏவினால், பூமியில் அவனுக்கும் மேன்மையான எவனையும் தேவர்களும் கூடக் காண்பதில்லை.(11) அவ்வாறிருக்கையில், அவன் தன் எதிரிகளின் உடல்களை எத்தனை கணைகளால் துளைக்கிறானோ, அழிவில்லாதவையும், அனைத்து விருப்பங்களையும் அருளவல்லவையுமான அத்தனை உலகங்களையும் அவன் {மறுமையில்} அனுபவிக்கிறான்.(12) அத்தருணத்தில் அவனது உடலில் இருந்து வழியும் குருதியானது, அவனது உடல்வலியுடன் சேர்த்து அவனது பாவங்கள் அனைத்தையும் கழுவுகிறது.(13) ஒரு க்ஷத்திரியின் போரில் அனுபவிக்கும் வலியானது, அவனது தகுதியை {புண்ணியத்தை} மேம்படுத்தச் செயல்படும் தவங்களைப் போல ஆகிறது எனச் சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் சொல்கின்றனர்.(14)

அச்சத்திலிருக்கும் நல்லோர், மேகங்களிடம் மழையை வேண்டும் மனிதர்களைப் போலப் போருக்கு விரைந்து சென்றிருக்கும் வீரர்களிடம் உயிரை வேண்டி பின்னால் நிலைக்கிறார்கள்.(15) வீரர்கள், அவ்வாறு வேண்டுவோரை போரின் ஆபத்துகளை அடைய விடாமல், தாங்களே ஆபத்துகளைச் சந்தித்து அவர்களைப் பின்புறம் இருக்கச் செய்தால், அவர்களுடைய தகுதி {புண்ணியம்} மகத்தானதாகிறது.(16) மேலும் அச்சத்திலிருக்கும் அந்த மனிதர்கள், அந்தத் துணிச்சல்மிக்கச் செயலைப் பாராட்டி, தங்களைப் பாதுகாப்போரை எப்போதும் மதித்தால், அவர்கள் முறையானதையும், நீதியானதையும் செய்கிறார்கள். அவர்கள் வேறு வகையில் செயல்பட்டால், அவர்களால் தங்களை அச்சத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாது.(17) தோற்றத்தில் இணையான மனிதர்களுக்கிடையிலேயே பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. பயங்கரக் கலவரத்துக்கு மத்தியில் சிலர் பகைவரின் படையணிகளை எதிர்த்து விரைகின்றனர்.(18)

உண்மையில், வீரர்களானவர்கள், சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையைப் பின்பற்றி, எதிரிக்கூட்டத்தை எதிர்த்து விரைகிறார்கள். எனினும், கோழைத்தனமான அச்சத்திலிருப்பவன், ஆபத்தில் இருக்கும் தன் தோழர்களைக் கைவிட்டுத் தப்பி ஓடுவதில் பாதுகாப்பை அடைய முனைகிறான்.(19) அதுபோன்ற இழிந்தவர்கள் உன் குலத்தில் பிறக்க வேண்டாம். தங்கள் தோழர்களைப் போரில் கைவிட்டு, காயமில்லா அங்கங்களுடன் வீடு திரும்புவோருக்கு இந்திரனின் தலைமையிலான தேவர்களே பேரிடரை உண்டாக்குவார்கள். எவன் தன் தோழர்களைக் கைவிட்டு தன் உயிர் மூச்சைக் காக்க விரும்புகிறானோ, அவன் தண்டங்களாலோ, கற்களாலோ அடித்துக் கொல்லப்பட வேண்டும், அல்லது காய்ந்த புற்படுக்கையில் உருட்டி தீயிட்டுக் கொல்லப்பட வேண்டும். அத்தகு குற்றமுள்ள நடத்தை கொண்ட க்ஷத்திரியர்கள், விலங்குகளைக் கொல்லும் முறையில் கொல்லப்பட வேண்டும்.(20-22)

இளைப்பாறும் படுக்கையில், மலம் மற்றும் சிறுநீரை வெளியிட்டு, பரிதாபமாகக் கதறி அழுது மரணத்தை அடையும் க்ஷத்திரியன் பாவம் நிறைந்தவனாவான்.(23) சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் உடலில் காயமின்றி ஒரு க்ஷத்திரியன் அடையும் மரணத்தை மெச்சுவதில்லை.(24) ஓ! ஐயா, வீட்டில் மரணத்தை அடையும் க்ஷத்திரியன் புகழுக்குத் தக்கவனன்று. அவர்கள் {க்ஷத்திரியர்கள்} வீரர்களாவர். அவர்களுடைய வீரமில்லா எந்தச் செயலும் பாவம் நிறைந்ததும், மகிமையற்றதுமாகும்.(25)

ஒரு நோயாளி, தன் உடல் மற்றும் துணிகளில் இருந்து நாற்றம் வெளிப்படும் நிலையில், வற்றிய முகத்துடன், “இஃது என்ன துயரம்? இது வலிநிறைந்தது! நான் பெரும் பாவியாவேன்” என்று சொல்லி தன் உறவினர்களைத் துயரில் ஆழ்த்துகிறான்.(26) உடல்நலமிக்கவர்களின் நிலையில் நாட்டங்கொள்ளும் அவன், (தான் அடையும் சித்திரவதைகளுக்கு மத்தியில்) மரணத்தையே திரும்பத் திரும்ப விரும்புகிறான். எவன் கண்ணியமும், செருக்கும் மிக்க வீரனோ, அவன் இத்தகு மகிமையற்ற மரணத்திற்குத் தகுந்தவனல்ல.(27) உறவினர்கள் சூழ போரில் தன் எதிரிகளைக் கொல்லும் க்ஷத்திரியன், கூரிய ஆயுதங்களின் முனையிலேயே இறக்க வேண்டும்.(28) இன்பமடையும் ஆசையில், கோபத்தால் நிறையும் ஒரு வீரன், சீற்றத்துடன் போரிட்டால், எதிரிகளால் தன் உடலில் ஏற்படும் காயங்களின் வலியை உணர மாட்டான்.(29) போரில் மரணத்தை அடையும் அவன், புகழ் நிறைந்த உயர்ந்த தகுதியை {புண்ணியத்தை} ஈட்டி, தன் வகைக்கான உலகத்தை எட்டி, இறுதியாக இந்திரனின் சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தையும் அடைகிறான்.(30)

போரில் புறமுதுகிடாத வீரன் ஒருவன், தன் உயிரைத் துச்சமாக மதித்து போரின் முன்னணியில் தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் போரிட்டு, இந்திரனின் தோழமையை அடைகிறான்.(31) பகைவர்களுக்கு மத்தியில், உன்னதமற்ற அச்சத்தையோ, உற்சாகமின்மையையோ வெளிப்படுத்தாமல் எந்த வீரன் மரணத்தை அடைகிறானோ, அவன் மறுமையில் அழிவில்லா அருளைக் கொண்ட உலகங்களை ஈட்டுவதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(32)

அம்பரீஷனும், இந்திரனும்! – சாந்திபர்வம் பகுதி – 98-சுதேவனின் வரலாற்றையும், போர் எனும் வேள்வியில் ரித்விக்குகள், சத்யஸ்கள் முதலிய அங்கங்களையும், போரில் இறந்தவர்கள் அடையும் உலகங்களையும் இந்திரன் அம்பரீஷனுக்குச் சொன்னது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, புறமுதுகிடாமல் போரில் மரணமெய்தும் வீரர்கள் ஈட்டும் உலகங்கள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக அம்பரீஷனுக்கும், இந்திரனுக்கும் நடந்த உரையாடல் பழங்கதை ஒன்றில் குறிப்பிடப்படுகிறது.(2) நாபாகனின் மகனான அம்பரீஷன் அடைதற்கரிய சொர்க்கத்திற்குச் சென்று, அந்தத் தெய்வீக உலகங்களில் இந்திரனின் துணையுடன் தன் படைத்தலைவன் {சுவேதன்} இருப்பதைக் கண்டான்.(3) அந்த மன்னன் {அம்பரீஷன்}, பலமிக்கத் தன் படைத்தலைவன், தெய்வீக வடிவுடன் அனைத்து வகைச் சக்தியாலும் ஒளிர்ந்து கொண்டு, ஓர் அழகிய தேரில் அமர்ந்து கொண்டு (அந்த வாகனத்திலேயே) மேலும் மேலும் உயர்ந்த உலகங்களுக்குச் செல்வதைக் கண்டான்.(4) தன் படைத்தலைவனான சுதேவனின் செழிப்பைக் கண்டு, மேலும் மேலும் உயர்ந்த உலகங்களுக்கு அவன் செல்வதையும் கண்ட உயர் ஆன்ம அம்பரீஷன், ஆச்சரியத்தால் நிறைந்து, பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு வாசவனிடம் {இந்திரனிடம்} பேசினான்.(5)

அம்பரீஷன் {இந்திரனிடம்}, “கடல் சூழ்ந்த மொத்த உலகையும் முறையாக ஆண்டு, அறத்தகுதியை ஈட்ட சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி நால்வகையினருக்கான பொதுவான கடமைகள் அனைத்தையும் பயின்று,(6) பிரம்மச்சரிய வாழ்வுமுறையின் கடமைகள் அனைத்தையும் கடுந்தவத்துடன் பயின்று, என் ஆசான்களிடமும், மதிப்பிற்குரிய பிற பெரியோரிடமும் கடமைநிறைந்த பணிவுடன் காத்திருந்து {பணிவிடை செய்து}, வேதங்களையும், அரச கடமைகள் சார்ந்த சாத்திரங்களையும் உரிய நடைமுறையுடன் கற்று,(7) உணவு மற்றும் பானங்களால் விருந்தினர்களையும், சிரார்த்தங்களில் காணிக்கையளித்துப் பித்ருக்களையும், கவனமாகச் சாத்திரங்களைக் கற்று முனிவர்களையும் நிறைவு செய்து, (அறப்புதிர்களில் உரிய வடிவங்களிலான) தொடக்கத்தை ஏற்படுத்தி, சிறந்தவையும், உயர்ந்தவையுமான பல வேள்விகளைச் செய்து தேவர்களையும் நிறைவு செய்து,(8) ஓ! வாசவா {இந்திரா}, சாத்திரங்களில் அறிவுறுத்தியுள்ளபடி க்ஷத்திரியக் கடமைகளை முறையாக நோற்று, பகைவரின் படைமீது அச்சமில்லாமல் என் கண்களைச் செலுத்தி போரில் பல வெற்றிகளை நான் அடைந்தேன்.(9) ஓ! தேவர்களின் தலைவா, இந்தச் சுதேவன் முன்பு என் படைகளின் தலைவனாக இருந்தான். அமைதியான ஆன்மா கொண்ட போர்வீரன் அவன் என்பது உண்மையே. எனினும், என்ன காரணத்தால் அவன் {சுவேதன்} என்னை விஞ்சி நிற்கிறான்?(10) உயர்ந்தவையும், பெரியவையுமான வேள்விகளில் அவன் ஒருபோதும் தேவர்களை வழிபட்டதில்லை. விதிப்படி அவன் (அடிக்கடி கொடுக்கப்படும் விலையுயர்ந்த கொடைகளால்) பிராமணர்களை ஒருபோதும் நிறைவு செய்ததில்லை. அவ்வாறிருக்கையில், {இங்கே சொர்க்கத்தில்} அவன் {சுவேதன்} எவ்வாறு என்னை விஞ்சி நிற்கிறான்?” என்று கேட்டான்[1].(11)இந்திரன் {அம்பரீஷனிடம்}, “ஓ! ஐயா, இந்தச் சுதேவனைப் பொறுத்தவரையில், பெரும் வேள்வியெனும் போரில் அவன் அடிக்கடி ஈடுபட்டான். போரில் ஈடுபடும் வேறு எந்த மனிதனும் அதே நிலையையே அடைவான்.(12) கவசம் போன்ற போர்வீரன் ஒவ்வொருவனும், போர் வியூகத்தில் எதிரிகளை எதிர்த்து விரைந்து, அந்த வேள்வியில் நிறுவப் பட்டவனாகிறான். உண்மையில், அத்தகு மனிதன், இவ்வழியில் செயல்படுவதால், போரெனும் வேள்வியைச் செய்தவனாகக் கருதப்படுவான் என்பது தீர்மானிக்கப்பட்டிருக்கும் ஒன்றாகும்” என்றான்.(13)

அம்பரீஷன் {இந்திரனிடம்}, “அந்த வேள்வியில் எவை ஆகுதியாகின்றன? எவை அதன் நீர்க்காணிக்கைகளாகின்றன? தக்ஷிணை என்பது என்ன? மேலும் ரித்விக்குகளாகக் கருதப்படுபவர் யாவர்? ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(14)

இந்திரன் {அம்பரீஷனிடம்}, “யானைகளே அவ்வேள்வியில் ரித்விக்குகளாகின்ற, குதிரைகள் அதர்யுக்களாகின்றன. பகைவரின் சதை அதன் ஆகுதிகளாகின்றன, குருதியே அதன் நீர்க்காணிக்கையாகிறது.(15) நரிகள், கழுகுகள், கருங்காக்கைகள், சிறகு படைத்த கணைகள் ஆகியன சத்யஸ்களாகின்றன. இவை இந்த வேள்வியில் நீர்க்காணிக்கையாக்கப்படுவனவற்றில் எஞ்சியதைப் பானம் செய்து, அதன் ஆகுதிகளில் எஞ்சியவற்றை உண்கின்றன.(16) சுடர்மிக்கவையும், கூரியவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையுமான வேல்கள், ஈட்டிகள், வாள்கள், கணைகள், கோடரிகள் ஆகியன வேள்வி செய்பவர்களின் கரண்டிகளாகின்றன.(17) நேரானவையும், கீரியவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையும், பகைவரின் உடல்களைத் துளைக்கவல்லவையும், நன்கு வளைக்கப்பட்ட விற்களில் இருந்து ஏவப்படுபவையுமான கணைகள், இரு வாய்க் கொண்ட கரண்டிகளாகின்றன.(18) புலித் தோலாலான வாளுரையில் இருப்பவையும், தந்தக் கைப்பிடி அமைந்தவையும், யானையின் துதிக்கையை வெட்டவல்லவையுமான வாள்கள் இவ்வேள்வியின் ஸ்ப்யங்களாகின்றன[1]. சுடர்மிக்கவையும், கூரியவையும், கடின இரும்பாலானவையுமான வேல்கள், ஈட்டிகள், வாள்கள் மற்றும் கோடரிகளால் உண்டாக்கப்பட்ட கீறல்கள், தொகை மற்றும் காலத்திற்கு உடன்பட்டு மதிப்பு மிக்க மனிர்களிடம் இருந்து அடையப்படும் அபரிமிதமான செல்வங்களாகின்றன.(20)மூர்க்கமான தாக்குதலின் விளைவால் களத்தில் பாயும் குருதியானது, இந்த வேள்வியின் ஹோமத்தில், பெரும் தகுதி {புண்ணியம்} நிறைந்ததும், அனைத்து விருப்பங்களையும் அருளவல்லதுமான இறுதி ஆகுதியாகிறது.(21) அணிவகுக்கும் படைகளின் முன்னணியில் கேட்கப்படும் வெட்டு, துளை போன்ற ஒலிகள், யமனின் வசிப்பிடத்தில் வேதம் ஓதுபவர்களால் பாடப்படும் சாமங்களாகின்றன.(22) பகைவருடைய அணிவகுப்பில் உள்ள முன்னணி படையணிகள், ஆகுதிகளை வைக்கும் பாத்திரங்களாகின்றன. கவசம் தரித்த மனிதர்கள் யானைகள் மற்றும் குதிரைகளின் கூட்டமானது, அந்த வேள்வியின் சியேனசிதமெனும் நெருப்பாகிறது[3].(23) ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதும் எழுந்து நிற்கும் தலையற்ற முண்டங்கள், அந்த வேள்வியைச் செய்யும் வீரனுக்காகச் செய்யப்படுவதும், கருங்காலி மரத்திலானதுமான எண்கோண {எட்டு பக்கமுள்ள} யூபமாகிறது {வேள்வித்தண்டாகிறது}.(24) அங்குசங்களால் தூண்டப்படும் யானைகளின் பிளிறல்கள், இடாஹ்வானம் எனும் மந்திரங்களாகின்றன. ஓ! மன்னா, பேரிகைகளும், வசத்களாகும் உள்ளங்கையொலிகளும், அதன் திரிசாமன் உத்காத்ரியாகின்றன {மூன்று சாமங்களையுடைய உத்காதாவாகின்றன}.(25)

ஒரு பிராமணனின் உடைமை கைப்பற்றப்படும்போது, அந்த உடைமையைக் காக்க எவன் தன் இன்னுயிரையும் விடத் துணிவானோ, அவன் தன்னர்ப்பணிப்புக்கான அந்தச் செயலால், முடிவிலா கொடைகளைக் கொண்ட ஒரு வேள்விக்கான தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான்.(26) எந்த வீரன் தன் தலைவனுக்காக அணிவகுப்பின் முன்னணியில் அச்சத்துடன் புறமுதுகிடாமல் ஆற்றலை வெளிப்படுத்துவானோ, அவன் எனக்கு {இந்திரனுக்குச்} சொந்தமான புகழ் உலகங்களை ஈட்டுகிறான்.(27) எவனுடைய போர் வேள்வியானது புலித்தோல் உறைகளுள்ள வாள்களாலும், பரிகாயுதத்திற்கு ஒப்பான கரங்களாலும் பரப்பப்பட்டிருக்கிறதோ, அவன் எனக்குச் சொந்தமான புகழ் உலகங்களைப் போன்ற உலகங்களை வெல்கிறான்.(28) வெற்றியடையத் தீர்மானித்து, எந்தத் துணைக்காகவும் காத்திராமல் பகைவனின் பகையணிகளுக்குள் ஊடுருவும் போர்வீரன், எனக்குச் சொந்தமானவை போன்ற புகழ் உலகங்களை அடைவதில் வெல்கிறான்.(29) 

பயங்கரமானதும், கடப்பதற்குக் கடினமானதும், பேரிகைகளையே தவளைகளாகவும், ஆமைகளாகவும் கொண்டதும், வீரர்களின் எலும்புகளையே அதன் மணற்பரப்பாகக் கொண்டதும், குருதியும், சதையும் புழுதியாகக் கொண்டதும், வாள்கள் மற்றும் கேடயங்களைத் தெப்பங்களாகக் கொண்டதும், கொல்லப்பட்ட போர்வீரர்களின் மயிர்களையே பாசியாகவும், மிதக்கும் புற்களாகவும் கொண்டதும், குதிரை, யானை மற்றும் தேர்களின் கூட்டங்களைப் பாலங்களாக {அணைகளாகக்} கொண்டதும், கொடிமரங்கள், கொடிகள் ஆகியவற்றைப் பிரம்புப் புதராகக் கொண்டதும், கொல்லப்பட்ட யானைகளின் உடல்களைப் படகுகளாகவும், பெரும் முதலைகளாகவும் கொண்டதும், வாள்கள், கத்திகள் ஆகியவற்றைப் பெரும் கப்பல்களாகக் கொண்டதும், கழுகுகள், கங்கங்கள், கருங்காக்கைகளை அதில் மிதக்கும் தெப்பங்களாகக் கொண்டதும், துணிவும் சக்தியும் கொண்டோராலும் கடக்கக் கடினமானதும், மருண்டோரை அச்சங்கொள்ள வைப்பதுமான ஒரு குருதிப்புனலைப் போர்க்களத்தில் பாயச்செய்யும் போர்வீரனே, இறுதி நீராடலுடன் கூடிய அந்த வேள்வியை நிறைவு செய்தவனாகச் சொல்லப்படுகிறான்.(30-34) எந்த வீரனின் பீடமானது, பகைவரின் தலைகள், குதிரைகள் மற்றும் யானைகளின் தலைகளுடன் பரவச் செய்யப்பட்டிருக்கிறதோ, அவனே எனக்குச் சொந்தமானவற்றைப் போன்ற புகழ் உலகங்களை அடைகிறான்.(35)

எந்த வீரன், பகைவரின் படையில் உள்ள முன்னணி படையைத் தன் மனைவியரின் அறைகளாகக் கருதுவானோ, எவன் தன் படையில் உள்ள முன்னணி படையை வேள்வி காணிக்கைகளை வைப்பதற்கான பாத்திரமாகக் கருதுவானோ, எவன் தனக்குத் தெற்கே நிற்கும் போராளிகளைத் தன் சத்யஸ்களாகவும், வடக்கே நிற்பவர்களை அக்நிதரர்களாகவும் கருதுகிறானோ, எவன் பகைவரின் படைகளைத் தான் மணந்து கொண்ட மனைவியைப் போலப் பார்க்கிறானோ, அவன் புகழ் உலகங்கள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்.(36,37) இரு படைகளுக்கு இடையில் கிடக்கும் திறந்தவெளியானது, வேள்வி செய்பவனின் வேள்விப் பீடமாகவும், மூன்று வேதங்கள் அவனது மூன்று வேள்வி நெருப்புகளாகவும் ஆகின்றன. அந்தப் பீடத்தில், வேத நினைவின் துணையுடன், அவன் தன் வேள்வியைச் செய்கிறான்.(38) மகிமையற்ற எந்த வீரன், அச்சத்தால் போரில் இருந்து புறமுதுகிட்டு பகைவர்களால் கொல்லப்படுவானோ அவன் நரகில் மூழ்குகிறான். இதில் எந்த ஐயமும் கிடையாது.(39) மறுபுறம், எந்தப் போர்வீரன், ஏற்கனவே, மயிர், சதை, எலும்புகளால் பரப்பப்பட்டிருக்கும் அந்த வேள்விப்பீடத்தைத் தன் குருதியால் நனையச் செய்கிறானோ அவன் உயர்ந்த கதியை அடைவதில் நிச்சயம் வெல்கிறான்.(40)

எந்தப் பலமிக்கப் போர்வீரன், பகைவர் படையின் தளபதியைக் கொன்று, வீழ்ந்துவிட்ட எதிராளியின் வாகனத்தில் ஏறுகிறானோ, அவன் விஷ்ணுவின் ஆற்றலைக் கொண்டவனாகவும், தேவர்களின் ஆசானான பிருஹஸ்பதியின் நுண்ணறிவைக் கொண்டவனாகவும் கருதப்படுகிறான்.(41) எந்தப் போர்வீரன், எதிரி படையின் தளபதியையோ, அவனது மகனையோ, மதிப்பிற்குரிய வேறு பிற தலைவரையோ உயிருடன் கைப்பற்றுகிறானோ, அவன் எனக்குச் சொந்தமானவற்றைப் போன்ற புகழ் உலகங்களை அடைவதில் வெல்கிறான்.(42) ஒருவன், போரில் கொல்லப்பட்ட ஒரு வீரனுக்காக ஒருபோதும் வருந்தக்கூடாது. ஒரு கொல்லப்பட்ட வீரன், தனக்காக வருந்த எவருமில்லாமல் இருந்தால், அவன் சொர்க்கதிதற்குச் சென்று சொர்க்கவாசிகளின் பெரும் மதிப்பை ஈட்டுகிறான்.(43) மனிதர்கள் (அவனுடைய {போரில் கொல்லப்பட்டவனின்} முக்திக்காகத்) தங்கள் உணவையும் பானத்தையும் அர்ப்பணிக்க விரும்புவதில்லை. அல்லது (செய்தியை அறிந்ததும், அவர்கள் நீராடவோ, அவனுக்காக வருந்தவோ செய்வதில்லை. அத்தகு மனிதனுக்குக் கிடைக்கப்போகும் புகழை {புகழ் உலகங்களைச்} சொல்லப் போகிறேன் கேட்பாயாக[4].(44)

எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் இருக்கும் அப்சரஸ்களில் முதன்மையானவர்கள், (கொல்லப்பட்ட வீரனின் ஆத்மாவை வரவேற்பதற்காக) அவனைத் தங்கள் தலைவனாக அடைய ஆசை கொண்டு பெரும் வேகத்துடன் செல்வார்கள்.(45) போரில் தன் கடமையை முறையாக நோற்கும் க்ஷத்திரியன் அச்செயலின் மூலம், தவங்கள் மற்றும் புண்ணியச் செயல்களின் தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான். உண்மையில், அத்தகு நடத்தையானது அவனுடைய அழிவில்லா கடமை வழியை இயைந்து செல்கிறது. அத்தகு மனிதன், நான்கு வகை வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்தின் தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அடைகிறான்.(46) முதியோரும், சிறுவர்களும் கொல்லப்படக்கூடாது; பெண்டிரும் கொல்லப்படக்கூடாது; தப்பி ஓடுபவனோ, தன் உதடுகளில் வைக்கோலைக் கொண்டவனோ கொல்லப்படக் கூடாது; “நான் உன்னவன்” என்று சொல்பவனும் கொல்லப்படக்கூடாது[5].(47) திதி மற்றும் தனு ஆகியோரின் மகன்களான ஜம்பன், விருத்திரன், பலன், பாகன், சதமாயன் {மஹாகாயன்}, விரோசனன், தடுக்கப்பட முடியாதவனான நமுசி, எண்ணிலடங்கா மாயைகளைக் கொண்டவனான சம்பரன், விப்ரசித்தி ஆகியோரையும், பிரஹ்லாதனையும் போரில் கொன்ற பிறகே நான் தேவர்களின் தலைவனாக ஆனேன்.” என்றான் {இந்திரன்}.(48,49)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சக்ரன் {இந்திரன்} சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவற்றை அங்கீகரித்த மன்னன் அம்பரீஷன், (போரைத் தங்கள் வழிமுறைகளாகக் கொண்டு) போர் வீரர்கள் எவ்வாறு (அழகிய சொர்க்கலோகங்களை அடைவதைப் பொறுத்தவரையில்) தங்களுக்கான வெற்றியை ஈட்டினார்கள் என்பதை அறிந்து கொண்டான்” {என்றார் பீஷ்மர்}.(50)

வீரனும், கோழையும்! – சாந்திபர்வம் பகுதி – 99-மிதிலையின் மன்னன் ஜனகன் தன் படைகளை உற்சாகப்படுத்திப் போருக்கு அனுப்பிய வரலாற்றையும், அணிவகுத்தல், பகைவரைத் துரத்துதல், வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளல் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, பிரதர்த்தனனுக்கும், மிதிலையின் ஆட்சியாளனுக்கும் {ஜனகனுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(1) மிதிலையின் ஆட்சியாளனான ஜனகன், போரெனும் வேள்வியில் தன்னை நிறுவிக் கொண்ட பிறகு, (அப்போரின் தொடக்கத்தில்) தன் துருப்புகள் அனைத்தையும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தான். ஓ! யுதிஷ்டிரா, நான் அக்கதையைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) அனைத்தின் உண்மையை அறிந்தவனும், மிதிலையின் உயர் ஆன்ம மன்னனுமான ஜனகன், தன் போர்வீரர்களுக்குச் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய இரண்டையும் காட்டினான்.(3) அவன் {ஜனகன்} அவர்களிடம் {தன் படைவீரர்களிடம்}, “அச்சமில்லாமல் போரிடுபவர்களுக்காக ஒதுக்கப்படுபவையும், பெரும் காந்தியைக் கொண்டவையுமான இவ்வுலகங்களைப் பார்ப்பாயாக. கந்தர்வப் பெண்கள் நிறைந்த அந்த உலகங்கள், விருப்பம் அனைத்தையும் அருள வல்லவையும், அழிவற்றவையுமாகும்.(4) மறுபுறம், போரில் இருந்து தப்பி ஓட நினைப்போருக்கான நரக உலகங்கள் அதோ இருக்கின்றன. அவர்கள் அங்கே அழிவில்லாமல் நீடிக்கும் மகிமையின்மையில் அழுகுவார்கள்.(5) உங்கள் உயிரைக் கைவிடத் தீர்மானித்து, உங்கள் எதிரிகளை நீங்கள் வெல்வீராக. மகிமையற்ற நரகத்தில் வீழ்ந்துவிடாதீர்கள். வீரர்களைப் பொறுத்தவரையில், (போரில்) உயிரை விடுவதே சொர்க்கத்திற்கான அவர்களின் இன்பக் கதவாகும்” என்றான் {ஜனகன்}.(6)

ஓ! பகை நகரங்களை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, இவ்வாறு தங்கள் மன்னனால் சொல்லப்பட்ட மிதிலையின் போர்வீரர்கள், தங்கள் ஆட்சியாளர்களை மகிழ்விக்கும் வகையில் போரில் தங்கள் எதிரிகளை வென்றார்கள். உறுதியான ஆன்மா கொண்டோர் போரில் முன்னணியில் நிற்கும் அவர்களது நிலையையே ஏற்க வேண்டும்.(7) தேர்வீரர்கள், யானைகளுக்கு மத்தியில் நிறுத்தப்பட வேண்டும். தேர்வீரர்களுக்குப் பின்னால் குதிரைவீரர்கள் நிற்க வேண்டும். அதற்கும் பின்னால் கவசம் பூண்ட காலாட்படையினர் அனைவரும் நிறுத்தப்பட வேண்டும்.(8) எந்த மன்னன் தன் அணிவகுப்பை இவ்வகையில் அமைக்கிறானோ அவன் எப்போதும் தன் எதிரிகளை வெல்கிறான். எனவே, ஓ! யுதிஷ்டிரா, போர் வியூகமானது எப்போதும் இவ்வாறே அமைக்கப்பட வேண்டும்.(9) கோபத்தால் நிறையும் வீரர்கள், நியாயமாகப் போரிடுவதன் மூலம் சொர்க்கத்தின் அருள்நிலையை வெல்லவே விரும்புவார்கள். பெருங்கடலைக் கலங்கடிக்கும் மகரங்களைப் போல அவர்கள் பகைவரின் படையணிகளைக் கலங்கடிப்பார்கள்.(10)

ஒருவருக்கொருவர் உறுதிகூறிக் கொள்ளும் அவர்கள், (தங்களுக்கு மத்தியில்) உற்சாகமற்று இருப்பவர்களை மகிழச் செய்ய வேண்டும். வெற்றியாளன் (வலிய தீங்குகள் ஏதும் செய்யாமல்) புதிதாக வென்ற நிலத்தைப் பாதுகாக்க வேண்டும். அவன் {வெற்றியாளன்} முறியடிக்கப்பட்ட தன் எதிரியைத் தன் துருப்புகளைக் கொண்டு அதிகமாகத் தொடர்ந்து துரத்தக்கூடாது.(11) முறியடிக்கப்பட்டுச் செல்பவர்கள், தங்கள் பாதுகாப்பில் நம்பிக்கையிழந்து தங்களைப் பின்தொடர்பவர்களைத் தாக்கத் தொடங்கினால் அது பொறுத்துக் கொள்ளப்பட முடியாததாக இருக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதன் காரணமாகவே நீ முறியடிக்கப்பட்ட எதிரியை அதிகமாகத் துரத்த உன் துருப்புகளைப் பணிக்ககூடாது.(12) துணிவுமிக்கப் போர்வீரர்கள், வேகமாக ஓடிக்கொண்டிருப்போரைத் தாக்க விரும்புவதில்லை. முறியடிக்கப்பட்ட எதிரி அதிகமாகப் பின்தொடரக்கூடாது என்பதற்கு இதுவும் மற்றொரு காரணமே.(13) அசையாதன அசைவனவற்றால் உட்கொள்ளப்படுகின்றன; பற்களற்ற உயிரினங்கள், பற்களுள்ளவற்றால் விழுங்கப்படுகின்றன; நீரானது தாகம் கொண்டோரால் குடிக்கப்படுகிறது; கோழைகள் வீரர்கள் விழுங்கப்படுகிறார்கள்.(14)

கோழைகள் தாங்களும் வெற்றியாளர்களைப் போல முதுகுகளும், வயிறுகளும், கரங்களும், கால்களும் கொண்டவர்களாக இருப்பினும் தோல்வியையே நீடிக்கச் செய்வார்கள். அச்சத்தால் பீடிக்கப்பட்டோர், துணிவுமிக்கோர் முன்னிலையில், கரங்களைக் கூப்பித் தலை வணங்கி நிற்பார்கள்.(15) தகப்பனின் தோள்களில் இருக்கும் மகனைப் போல இந்த உலகமானது வீரர்களின் தோள்களில் ஓய்ந்திருக்கிறது. எனவே, அனைத்து சந்தர்ப்பங்களிலும் வீரனானவன் மரியாதைக்குத் தகுந்தவனாவான்.(16) மூன்று உலகங்களிலும் வீரத்தைவிட உயர்ந்தது வேறேதும் இல்லை. வீரனே அனைத்தையும் பாதுகாத்துப் பேணி வளர்க்கிறான், அனைத்துப் பொருட்களும் வீரனைச் சார்ந்தே இருக்கின்றன” என்றார் {பீஷ்மர்}.(17)

போர்த்திட்டப் பயன்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 100-உண்மை, அறிவு, நன்னடத்தை மற்றும் திட்டத்துடன்கூடிய வழிமுறைகளால் அறம் உறுதியாக நிலைக்கச் செய்யப்படுகிறது என்றும் அவற்றில் திட்டத்துடன் கூடிய வழிமுறைகளே உடனடி பலன்களை உண்டாக்கவல்லைவை என்றும் சொல்லும் பீஷ்மர், அவற்றைக் குறித்து மேலும் விரிவாகச் சொல்வது…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, வெற்றியை விரும்பும் மன்னர்கள், அறவிதிகளுக்குச் சற்றே எதிராகச் செயல்பட்டாவது போரில் தங்கள் துருப்புகளை எவ்வாறு வழிநடத்த வேண்டும்?”(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறமானது உண்மையால் {சத்தியத்தால்} உறுதியாக நிலைக்கச் செய்யப்படுகிறது என்று சிலர் சொல்கிறார்கள்; அறிவால் எனச் சிலரும்; நன்னடத்தையால் எனச் சிலரும், வழிமுறைகள் மற்றும் திட்டங்களின் {சூழ்ச்சியின்} பயன்பாடு ஆகியவற்றால் {உறுதியாக நிலைக்கச்செய்யப்படுகிறது} என்று சிலரும் சொல்கிறார்கள்[1].(2) உடனடி பலனை உண்டாக்கவல்ல வழிமுறைகளும், திட்டங்களும் எவை என்பது குறித்து நான் இப்போது உனக்குச்சொல்லப் போகிறேன். நலம் சார்ந்த கட்டுபாடுகள் அனைத்தையும் மீறும் கள்வர்கள், உடைமைகளையும். அறத்தகுதியையும் நித்தம் நித்தம் அழிப்பவர்களாக இருக்கிறார்கள்.(3) அவர்களைத் தடுத்துக் கட்டுப்படுத்துவதற்குச் சாத்திரங்களில் குறிப்பிடப்படும் திட்டங்கள் என்னென்ன என்பதை நான் உனக்குச் சொல்கிறேன். அனைத்துச் செயல்களின் வெற்றிக்குமான அந்த வழிமுறைகளைச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)நேர், குறுக்கு ஆகிய இரண்டு புத்திகளையும் மன்னன் பயன்படுத்தத் தயாராக {அவற்றை அறிந்து வைத்து} இருக்க வேண்டும். குறுக்கு புத்தியை அவன் அறிந்திருந்தாலும், (பிறருக்குத் தீங்கிழைக்க) அதைப் பயன்படுத்தக் கூடாது. தனக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்க அதைப் பயன்படுத்தலாம்.(5) பகைவர்கள், மன்னனுக்குத் தீங்கிழைப்பதற்காக, (அமைச்சர்கள், அல்லது துருப்புகள், அல்லது கூட்டாளிகள், அல்லது குடிமக்கள் ஆகியோருக்கு மத்தியில்) அடிக்கடி ஒற்றுமையின்மையை உண்டாக்க முனைவார்கள். கபடம் அறிந்த மன்னன், பகைவரின் அச்செயல்களுக்கு வஞ்சகத்தின் துணையுடன் எதிர்வினையாற்றலாம்.(6) யானைகளின் உடல்களைக் காக்கும் தோற்கவசங்கள், அதே பொருளாலான காளைகளுக்கான கவசங்கள், எலும்புகள், முட்கள், இரும்பாலான கூர்முனை ஆயுதங்கள், இரும்புக்கவசங்கள், வெண்சாமரங்கள்,(7) கூரியவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையுமான ஆயுதங்கள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தாலான அனைத்து வகைக் கவசங்கள், பல்வேறு வண்ணங்களிலான கொடிகள் மற்றும் கொடிமரங்கள்,(8) பெருங்கூர்மையுடைய வாள்கள், வேல்கள், கத்திகள், போர்க்கோடரிகள், ஈட்டிகள், கேடயங்கள் ஆகியவை {போர்கருவிகள்} அபரிமிதமாக உற்பத்தி செய்யப்பட்டு, கிடப்பில் வைக்கப்பட்ட வேண்டும்.(9)

ஆயுதங்கள் அனைத்தும் முறையாகக் கூர்த்தீட்டப்பட வேண்டும். படைவீரர்களுக்கு உற்சாகமும், உறுதியும் ஊட்டப்பட வேண்டும். சைத்ரம் {சித்திரை}, அல்லது அக்ரஹாயண {மகரசீரிஷ – மார்கழி} மாதத்தில் துருப்புகள் {போருக்குப்} புறப்படுவதே முறையாகும் {சிறப்பாகும்}.(10) அக்காலத்தில்தான் பயிர்கள் முதிர்கின்றன, நீரும் அரிதாவதில்லை. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, வருடத்தின் அந்தக் காலங்களில்தான் அதிகக் குளிரோ, வெப்பமோ இருப்பதில்லை.(11) எனவே, துருப்புகள் அக்காலத்தில் நகரத்தப்பட வேண்டும். எனினும், பகைவன் துன்புறும் காலம் நேரும்போது (இத்தகு உகந்த காலத்திற்காகக் காத்திராமல்) துருப்புகளை உடனடியாகப் புறப்படச் செய்ய வேண்டும். பகைவரை அடக்கும் காரியத்தில் படைகளை நகர்த்த இவையே (இந்த இரண்டு காலங்களும், பகைவனின் ஆபத்துக் காலங்களுமே) சிறந்த தருணங்களாகும்.(12) (படைகளை நகர்த்தும் போது), நீர் நிறைந்ததும், நெடுகிலும் புற்கள் இருப்பதும், சமமானதும், அணிவகுத்துச் செல்ல எளிமையானதுமான சாலை {பாதை} பின்பற்றப்பட வேண்டும். அந்தச் சாலைக்கு அருகே உள்ள பகுதிகள் (சாலைக்கு இரு மருங்கிலும் உள்ள பகுதிகள்), திறன்மிக்கவர்களும், வனங்கள் குறித்த நல்லறிவு கொண்டவர்களுமான ஒற்றர்களின் மூலம் முன்னதகாவே {சோதிக்கப்பட்டு} உறுதி செய்யப்பட வேண்டும்.(13) துருப்பினரை விலங்குகளைப் போல வனப்பகுதிகளின் ஊடாக அணிவகுக்கச் செய்யக்கூடாது. எனவே, வெற்றியை விரும்பும் மன்னர்கள் தங்கள் துருப்புகள் அணிவகுத்துச் செல்ல நல்ல சாலைகளைப் பின்பற்ற வேண்டும்[2].(14)பலமும், உயர்குடி பிறப்பும் கொண்ட துணிச்சமிக்க மனிதர்கள் படையின் முன்னணியில் நிறுத்தப்பட வேண்டும். கோட்டைகளைப் பொறுத்தவரையில், அவை சுவர்களையும், சுற்றிலும் நீர் நிறைந்த ஓர் அகழியையும், ஒரே ஒரு நுழைவாயிலையும் கொண்டவையாக இருப்பதே புகழத்தக்கது.(15) படையெடுத்துவரும் பகைவர்களைப் பொறுத்தவரையில், அதனுள் {கோட்டையினுள்} இருந்தே அவர்களைத் தடுக்கலாம். முகாம் அமைப்பதைப் பொறுத்தவரையில், அது திறந்த வெளியில் இருப்பதைவிடக் காடுகளுக்கு அருகே இருப்பதே சிறப்பானது எனப் போரை அறிந்தவர்களாலும், படை சார்ந்த சாதனைகளைச் செய்தோராலும் கருதப்படுகிறது. முகாமானது வனத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட வேண்டும்.(16,17) அத்தகு இடத்தில் முகாமை அமைத்து, காலாட்படையினரை பாதுகாப்பான நிலையில் நிறுவி, பகைவன் வந்ததும் அவனுடன் மோதுவது, ஆபத்தையும், துயரத்தையும் விலக்கும் வழிமுறைகளாகும். (18)துருப்புகள், உர்ச மேஜர் {ஸப்தரிஷிநக்ஷத்திரங்கள்}[3] என்றழைக்கப்படும் நட்சத்திரக் கூட்டத்தைத் தங்கள் பின்னே கொண்டு, மலைகளைப் போன்ற நிலைத்து நின்று போரிட வேண்டும். இவ்வழிமுறையின் மூலம் ஒருவனால் தடுக்கப்பட முடியாத எதிரிகளையும்கூட வெல்ல முடியும்.(19)காற்று, சூரியன் மற்றும் சுக்கிரனெனும் கோள் ஆகியவை தங்கள் பின்னே இருந்து வீசவும், ஒளிரவும் செய்யும் வகையில் துருப்பினர் தங்கள் நிலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ஓ! யுதிஷ்டிரா, வெற்றியடையும் வழிமுறைகளில் காற்று, சூரியனை விட மேன்மையானது, சூரியன் சுக்கிரனை விட மேன்மையானவன்[4].(20)போரை அறிந்த மனிதர்கள், புழுதியற்றதும், ஈரமற்றதும், சமமானதும், அதிகக் கற்கள் இல்லாததுமான பகுதியானது, குதிரைப்படையின் செயல்பாட்டுக்கு மிகத் தகுந்தது என அங்கீகரிக்கின்றனர்.(21) புழுதி மற்றும் குழிகளற்ற களமானது தேர்வீரர்களுக்குத் தகுந்ததாகும். புதர்கள் அடர்ந்ததும், பெரும் மரங்கள் நிறைந்ததும், நீருள்ளதுமான பகுதி யானை வீரர்களுக்குத் தகுந்ததாகும்.(22) பெரும் மரங்கள் நிறைந்ததும், மூங்கில் மற்றும் பிரம்புப்புதர்கள் அடர்ந்ததும், மலைசார்ந்த அல்லது வனம் சார்ந்த அடைதற்கரிய பல இடங்களைக் கொண்டதுமான ஒரு பகுதியானது, யானைப்படையின் செயல்பாட்டுக்கு மிகவும் தகுந்ததாகும்.(23) ஓ! பாரதா, பெரும் யானைப்படைப்பிரிவைக் கொண்ட ஒரு படையானது, மிகப் பலமானதாகக் கருதப்படுகிறது. தேர் மற்றும் குதிரைவீரர்கள் பெருகியிருக்கும் ஒரு படையானது, (மழையற்ற) தெளிவான நாளில் மிகச் சிறந்த பலனளிக்கும் எனக் கருதப்படுகிறது.(24) காலாட்படை வீரர்களும், யானைகளும் நிறைந்த ஒரு படையானது, மழைக்காலத்தில் மிகச் சிறந்த பலனை அளிக்கும். (பல்வேறு வகையான படைகளின் தன்மைகள், அவற்றை அணிவகுத்து, நிறுவி வழிநடத்தும் முறைகள் ஆகிய) இந்தக் குறிப்புகளைக் கவனத்தில் கொள்ளும் மன்னன், காலம் மற்றும் இடத்தின் பண்புகளிலும் தன் கவனத்தைத் திருப்ப வேண்டும்.(25)

எந்த மன்னன், இந்தக் கருத்துகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு, சரியான நட்சத்திரக்கூட்டம் மற்றும் மங்கலமான சந்திர நாள் ஆகியவற்றின் கீழ் {போருக்குப்} புறப்படுவானோ, அவன் தன் துருப்புகளை முறையாக வழிநடத்தி எப்போதும் வெற்றியையே அடைவான்.(26) உறங்குபவர்களையோ, தாகத்திலிருப்பவர்களையோ, களைப்பாக இருப்பவர்களையோ, கவசம் நழுவியவர்களையோ, முக்தியில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தவனையோ, தப்பி ஓடுபவனையோ, (ஆயத்தமில்லாமல்) சாலையில் நடந்த செல்பவனையோ, உணவு உண்டு கொண்டிருப்பவனையோ, பானம் செய்து கொண்டிருப்பவனையோ,(27) பைத்தியக்காரனையோ, மனநிலை குலைந்தவனையோ, மரணக்காயமடைந்தவனையோ, காயங்களால் மிகவும் பலவீனமடைந்தவனையோ, நம்பிக்கைக்குரியவனாக இருப்பவனையோ, ஒரு காரியத்தைத் தொடங்கிவிட்டு அதை முடிக்க இயலாமல் இருப்பவனையோ, குறிப்பிட்ட கலையில் திறம் பெற்றவனையோ, துயரத்தில் இருப்பவனையோ, கால்நடைத் தீவனம் கொள்முதல் செய்ய முகாமை விட்டு வெளியே செல்பவனையோ, முகாம்களை அமைப்பவனையோ {கட்டுபவனையோ}, முகாமின் தொண்டர்களையோ {பணியாட்களையோ},(28) மன்னன், அல்லது அவனது அமைச்சர்களின் வாயில்காப்போராகப் பணி செய்பவர்களையோ, (படைத்தலைவர்களுக்கு) பணிவிடை செய்பவர்களையோ, பணியாளர்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களையோ எவனும் ஒருபோதும் கொல்லக்கூடாது.(29)

உன் போர்வீரர்களில், பகைவரின் படையணிகளை உடைப்பவர்களுக்கும், பின்வாங்கிச் செல்லும் உன் துருப்புகளை மீண்டும் திரட்டுபவர்களுக்கும், இரட்டிப்பான ஊதியம் வழங்கி, உணவு, பானம் மற்றும் உனக்கு இணையான ஆசனம் ஆகியவை கொடுக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட வேண்டும்.(30) அவர்களில் பத்து படைவீரர்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்கள், நூறு படைவீரர்களுக்குத் தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும். மேலும் (அவர்களில்) நூறு படைவீரர்களுக்குத் தலைவனாக இருக்கும் கருத்துள்ள வீரன், ஆயிரம் படைவீரர்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட வேண்டும்.(31)

{போரின் போது} முக்கியமான போர்வீரர்களைத் திரட்டி, அவர்களிடம், “வெற்றியடைய உறுதியேற்போம், ஒருபோதும் ஒருவரையொருவர் கைவிடோம்.(32) அச்சமடைந்தோர் இங்கேயே இருக்கட்டும். போரின் நெருக்கத்தில் வீரத்தைப் புறக்கணித்து, தங்கள் தலைவர்கள் கொல்லப்பட விடுபவர்களும் இங்கேயே இருக்கட்டும்.(33) போரில் இருந்து தப்பி ஓடாதவர்களும், தங்கள் தோழர்கள் கொல்லப்பட அனுமதியாதவர்களும் வரட்டும். தங்களையும், தங்கள் தோழர்களையும் பாதுகாக்கும் அவர்கள் நிச்சயம் போரில் எதிரியைக் கொல்வார்கள்.(34) போரில் இருந்து தப்பி ஓடுவதென்பது, செல்வ இழப்பு, மரணம், புகழ்க்கேடு, நிந்தனை ஆகியவற்றை ஏற்படுத்தும். போரில் இருந்து தப்பி ஓடுபவனும், உதடுகளையும், பற்களையும் இழந்தவனும், ஆயுதங்கள் அனைத்தையும் கைவிடுபவனும், எதிரியால் கைப்பற்றப்படுபவனுமான மனிதன் ஏற்பில்லாது, கடுஞ்சொற்களைக் கேட்க வேண்டிருக்கும். அத்தகு தீய விளைவுகள் நம் பகைவீரர்களுக்கு உண்டாகட்டும்.(35,36)

போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் மனிதர்களில் இழிந்தோராவர். அவர்கள் வெறுமனே பூமியில் மனிதர்களின் எண்ணிக்கையைப் பெருக்குகிறார்கள். எனினும், ஆண்மையைப் பொறுத்தவரையில் அவர்கள் இம்மையிலும், மறுமையிலும் அவ்வாறிருக்க மாட்டார்கள்.(37) ஓ! ஐயா {யுதிஷ்டிரனே}, வெற்றிபெறும் பகைவர்கள் உற்சாகமாகச் செல்வார்கள், ஓடும் எதிராளிகளைத் தொடர்ந்து செல்பவர்கள் எனப் பாணர்களால் அவர்கள் துதிக்கப்படுவார்கள்.(38) போருக்கு வரும் எதிரிகள் ஒரு மனிதனின் புகழை அழித்தால், அவன் அடையும் துயரம் மரணத்தைவிடக் கொடியதாகும்.(39) வெற்றியே அறத்தகுதி மற்றும் அனைத்து வகை இன்பங்களுக்கும் வேர் என்பதை அறிவீர்களாக. எது பெரும் துயரம் என்று கோழைகளால் கருதப்படுமோ, அதை வீரர்கள் உற்சாகமாகச் சுமப்பார்கள்.(40) சொர்க்கத்தை அடையத் தீர்மானித்து, உயிரையே துச்சமாக மதித்து, வெற்றி அல்லது மரணம் என்ற தீர்மானத்துடன் போரிட்டு, இறுதி அருளை சொர்க்கத்தில் அடைவோம்.(41)” என்று சொல்ல வேண்டும்.

இத்தகு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டு, உயிரையே விட ஆயத்தமாக இருக்கும் வீரர்கள், பகைவரின் படையணிகளை எதிர்த்துத் துணிவுடன் விரைய வேண்டும்.(42) படையின் முன்னணியில் வாள்கள் மற்றும் கேடயங்களுடன் கூடிய மனிதர்கள் நிறுத்தப்பட வேண்டும். பின்புறம் தேர்ப்படை நிறுத்தப்பட வேண்டும். அவற்றின் இடைவெளியில் பிற வகைப் போராளிகள் நிறுத்தப்பட வேண்டும்.(43) பகைவரைத் தாக்கும் ஏற்பாடாக இஃது இருக்க வேண்டும். படையில் உள்ள தேர்ந்த போர்வீரர்கள் முன்னணியில் இருந்து போரிட வேண்டும். அவர்கள் பின்னால் இருக்கும் தங்கள் தோழர்களைக் காக்க வேண்டும்.(44) படையினருக்கு மத்தியில் பலத்திலும், துணிவிலும் முதன்மையானவர்களாகக் கருதப்படுபவர்கள், முன்னணியில் நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்குப் பின்னால் பிறர் நிற்க வேண்டும்.(45)

அச்சமடைந்தோருக்கு ஆறுதலையும்ம் உற்சாகத்தையும் கவனமாக அளிக்க வேண்டும். பலவீனமான போராளிகளும், (எதிரிக்குப்) படையின் எண்ணிக்கையைக் காட்டுவதற்காகவாவது களத்தில் (இருந்து விலக்கப்படாமல்) நிறுத்தப்பட வேண்டும்[5]. (46) துருப்புகள் {துருப்புகளின் எண்ணிக்கை} சொற்பமாக இருப்பின், அவர்கள் நெருங்கியிருந்து போரிடுமாறு செய்யப்பட வேண்டும். சில நேரங்களில், தலைவன் விரும்பினால், நெருக்கமாக இருக்கும் வியூகமானது, பரந்து விரிந்ததாக அமைக்கப்படலாம்.சிறு எண்ணிக்கையிலான துருப்புகள் பெரும் எண்ணிக்கையிலானோருடன் போரிடும்போது, சூசிமுகம் என்றழைக்கப்படும் வியூகம் அமைக்கப்பட வேண்டும்[6].(47) சிறுபடையானது, பெரும்படையுடன் மோதும்போது, அந்தச் சிறு படையின் தலைவன், தன் மக்களின் கரங்களைக் குலுக்கி, உரக்கக் கூச்சலிடும் வகையில், “பகைவர்கள் பிளக்கப்படுகிறார்கள்! பகைவர்கள் பிளக்கப்படுகிறார்கள்!” என்று கூவ வேண்டும்.(48)அவர்களில் பலமிக்கோர், தங்கள் தோழர்களிடம், “புதிய நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அச்சமில்லாமல் உங்கள் எதிரிகளைத் தாக்குங்கள்” என்று உரக்கச் சொல்ல வேண்டும்.(49) எஞ்சியோர் அனைவருக்கும் முன்னால் நிற்பவர்கள், உரக்க கூச்சலிட்டபடி, பல்வேறு வகைகளிலான ஒலிகளை உண்டாக்கியபடி, கிரகசங்கள், கொம்புகள், பேரிகைகள், மிருதங்கங்கள் மற்றும் பணவங்களை முழங்க வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(50)(பூமியின் வடக்கு பக்கத்தில் மிகக் கடைகோடியில் உள்ள துருவ நட்சத்திரமே  (Pole Star) பூமியில் உள்ள அனைவருக்கும், எந்த நாட்டில் உள்ளவர்களுக்கும், கடல் பயணத்தில் உள்ளவர்களுக்கும், எந்த காலத்திலும் வடக்கு எது என்று வழிகாட்ட உதவும் மிக மிக முக்கியமான நட்சத்திரமாகும். இந்த துருவ நட்சத்திரத்திற்கு (Pole Star) சற்று தொலைவிலேயே நாம் வசிஷ்ட நட்சத்திரத்தை (Mizar Star) பார்க்கலாம். இந்த வசிஷ்ட நட்சத்திரத்திற்கு பின்னாலேயே அதை ஒட்டியே இருப்பதும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியக்கூடியதுதான் இந்த அருந்ததி நட்சத்திரம் (Alcor Star) ஆகும்.  இந்த அருந்ததி நட்சத்திரத்தை திருமணச் சடங்குகளில் பெண்ணும் மாப்பிள்ளையையும் பார்க்கத்தூண்டுவதே நமது இந்திய மரபாகும்.)

போர்வீரர்களின் அங்கலக்கணம்! – சாந்திபர்வம் பகுதி – 101-எந்தெந்த நாடுகளைச் சார்ந்தோர், எந்தெந்தப் போர்முறைகளில் வல்லவர்கள் என்பதையும், போர்வீரர்களின் அங்க அடையாளங்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “போருக்குத் தகுந்தவர்களாகத் தங்களை வகைப்படுத்திக் கொள்ளப் போராளிகள் என்ன மனநிலையை மற்றும் என்ன நடத்தையைக் கொண்டிருக்க வேண்டும்? அவர்கள் எவ்வாறு கவசமணிந்திருக்க வேண்டும்? எவ்வாறு ஆயுதந்தரித்திருக்க வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “(போராளிகளில் {அந்தந்த நாடுகளைச் சேர்ந்த} குறிப்பிட்ட குழுவினரின்) பயன்பாட்டில் மிகப் பரிச்சயமாக இருக்கும் ஆயுதங்களையும், வாகனங்களையும் {அவர்கள்} ஏற்றுக்கொள்வதே முறையாகும். துணிச்சல்மிக்கப் படைவீரர்கள், அந்த ஆயுதங்களையும், வாகனங்களையும் ஏற்றுக்கொண்டே போரில் ஈடுபடுகிறார்கள்.(2)

காந்தாரர்கள், சிந்துக்கள், சௌவீரர்கள் ஆகியோர் தங்கள் நகங்கள் மற்றும் வேல்களைக் கொண்டு சிறப்பாகப் போரிடுவார்கள். அவர்கள் துணிச்சல்மிக்கவர்களாகவும், பெரும்பலம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது படைகள், அனைத்துப் படைகளையும் வெல்லவல்லவையாக இருக்கின்றன.(3)

உசீநரர்கள், பெரும் பலம் கொண்டவர்களாகவும், அனைத்து வகை ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் திறன்மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

கிழக்கத்தியர்கள், யானைகளின் முதுகுகளில் இருந்து போரிடுவதில் திறன்பெற்றவர்களாகவும், நீதியற்ற போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களாகவும் இருக்கின்றனர்.(4)

யவனர்கள், காம்போஜர்கள், மதுராவைச் சுற்றிலும் வசிப்போர் ஆகியோர் வெறுங்கரங்களால் போரிடுவதில் திறன்பெற்றவர்களாக இருக்கிறார்கள்[1].தெற்கத்தியர்கள் தங்கள் கரங்களில் வாளுடன் போரிடுவதில் திறம்பெற்றவர்களாக இருக்கிறார்கள்[2].(5)பெரும் பலமும், பெரும் துணிவும் படைத்தோர் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பிறக்கிறார்கள் என்பது நன்கறியப்பட்டது. அவர்களின் அறிகுறிகளை விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(6)

சிங்கம், அல்லது புலி போன்ற குரலையும், கண்களையும் கொண்டோர், சிங்கம் மற்றும் புலியின் நடையைக் கொண்டோர், பாம்பு அல்லது புறா போன்ற கண்களைக் கொண்டோர் ஆகியோர் அனைவரும், பகைவரின் படையணிகளைக் கலங்கடிக்கவல்லவர்கள் ஆவர்[3].(7). மான் போன்ற குரலும், சிறுத்தை, அல்லது காளை போன்ற கண்களும் கொண்டவர்கள் பெரும் சுறுசுறுப்புக் கொண்டவர்கள் ஆவர். மணியோசைக்கு ஒப்பான குரலைக் கொண்டவர்கள் எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர்களாகவும், தீச்செயல் புரியக்கூடியவர்களாகவும், கோபம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(8) மேகங்களைப் போன்ற ஆழ்ந்த ஒலியைக் குரலாகக் கொண்டவர்கள், கோபம் நிறைந்த முகங்களைக் கொண்டவர்கள், ஒட்டகங்களைப் போன்ற முகங்களைக் கொண்டவர்கள், கோணலான மூக்கும், நாக்கும் கொண்டவர்கள் ஆகியோர் பெரும் வேகத்தைக் கொண்டவர்களாகவும், பெருந்தொலைவுக்குத் தங்கள் ஆயுதங்களை ஏவவோ, வீசவோ கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.(9) பூனை போன்று வளையும் உடல்களும், மெலிந்த முடியும், மெலிந்த தோலும் கொண்டவர்கள், பெரும் வேகம் கொண்டவர்களாகவும், ஓய்வறியாதவர்களாகவும், கிட்டத்தட்ட போரில் வெட்டப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.(10)உடும்பு போன்ற மூடிய கண்களைக் கொண்ட சிலர், மென்மையான மனநிலை கொண்டவர்களாகவும், குதிரையின் வேகமும், குரலும் கொண்டவர்கள், எதிரிகள் அனைவருடனும் போரிடத் தகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(11) கடினமான உடல் படைத்தவர்களாக, அழகானவர்களாக, கட்டுடல் கொண்டவர்களாக, அகன்ற மார்பைக் கொண்டவர்களாக இருப்போர், பகைவனின் பேரிகையையோ, எக்காளத்தையோ கேட்டதும் கோபமடைவோர், அனைத்து வகை அமளிகளிலும் மகிழ்ச்சியில் திளைப்போர்,(12) ஈர்ப்பைக் குறிக்கும் வகையிலான கண்களை, அல்லது வெளியில் பிதுங்கிய கண்களை, அல்லது பச்சை நிறக் கண்களைக்[4] கொண்டோர், நெரிந்த புருவங்களுடன் கருமையடைந்த முகங்களைக் கொண்டோர், கீரிப்பிள்ளையைப் போன்ற கண்களைக் கொண்டோர் ஆகிய அனைவரும் துணிச்சல்மிக்கவர்களாகவும், போரில் தங்கள் உயிர்களைக் கைவிட வல்லவர்களாகவும் இருக்கிறார்கள்.(13) கோணலான கண்களும், அகன்ற நெற்றியும், சதைப்பற்றில்லாத கன்னங்களும், வஜ்ரங்களைப் போன்ற உறுதிமிக்கக் கரங்களும், வளையக் குறிகள் கொண்ட விரல்களும், மெலிந்த உடல்களும், புடைத்துத் தெரியும் நரம்புகளும் கொண்டோர்,(14) போர்க்களத்தில் விரைந்து செல்லக்கூடியவர்களாவர். மதங்கொண்ட யானைகளைப் போன்ற அவர்கள் தடுக்கப்பட முடியாதவர்களாக இருகிறார்கள்.(15)பச்சைநிறத்தில்[5] பிளந்து சுருளாக இருக்கும் மயிர் கொண்டவர்கள், பருத்த விலாப்புறங்களுடன் கொளுத்த சதை கொண்டவர்கள், உயர்ந்த தோள்களையும், அகன்ற கழுத்துகளையும் கொண்டவர்கள், அச்சமேற்படுத்தும் முகங்களையும், பருத்த ஆடுதசைகளையும் கொண்டவர்கள்,(16) (வாசுதேவனின் குதிரையான) சுக்ரீவத்தைப் போன்றோ, வினதையின் மகனான கருடனின் வாரிசுகளைப் போன்றோ சீற்றமுடையவர்கள், உருண்ட தலைகள், அகன்ற வாய், பூனைகளைப் போன்ற முகங்கள் ஆகியவற்றைக் கொண்டோர்,(17) கீச்சுக்குரலும், கோபம் நிறைந்த இயல்பும் கொண்டோர், ஆரவாரத்துடன் போரில் விரைவோர், தீய நடத்தையும், நிறைந்த அகந்தையும் கொண்டோர், பயங்கர முகத்தோற்றங்களைக் கொண்டோர், வெளிப்புற மாவட்டங்களில் வாழ்வோர் ஆகிய அனைவரும்,(18) தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்து, போரில் இருந்து ஒருபோதும் தப்பி ஓடாதவர்களாக இருக்கிறார்கள். அத்தகு துருப்பினரே படையின் முன்னணியில் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் எப்போதும் போரில் தங்கள் எதிரிகளைக் கொன்று, புறமுதுகிடாமல் கொல்லப்படுபவர்களுமாக இருக்கிறார்கள்.(19) தீய நடத்தையும் அந்நிய பழக்க வழக்கங்களும் கொண்டோர், மென்மையான பேச்சைத் தோல்வியின் அறிகுறியாகக் கருதுகிறர்கள். அவர்கள் மென்மையாக நடத்தப்பட்டால், எப்போதும் அரசுக்கு எதிரான கோபத்தையே அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள்” என்றார் {பீஷ்மர்}.(20)

இணக்கக்கலை! – சாந்திபர்வம் பகுதி – 102-வெற்றிபெறத்தக்க அறிகுறிகள் மற்றும் சகுனங்களையும், போர் தொடுக்கும் முன்பும், போரிடும்போதும், வெற்றியடைந்த பிறகும் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும், சமரசக் கலையைக் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு படை அடையப் போகும் (எதிர்கால) வெற்றியின் நன்கறியப்பட்ட அறிகுறிகள் என்னென்ன? நான் அவற்றை அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு படையின் (எதிர்கால) வெற்றிக்கான நன்கறியப்பட்ட அறிகுறிகள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்வேன்.(2) தேவர்கள் கோபமடைந்து, மனிதர்கள் விதியால் உந்தப்படும்போது, கல்விமான்கள் தெய்வீக அறிவின் கண்ணால் அனைத்தையும் கண்டு,(3) மங்கலச் செயல்கள், ஹோமம் உள்ளிட்ட கேடு நீக்க {பரிகாரச்} சடங்குகள் ஆகியவற்றைச் செய்து, திருவாய்மொழிகளை {மந்திரங்களை} அமைதியாக ஓதுவதன் மூலம் அனைத்துத் தீங்குகளையும் தணிக்கின்றனர்[1].(4) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, எந்தப் படையின் துருப்புகள் மற்றும் விலங்குகள் அனைத்தும் தளராத உற்சாகம் கொண்டிருக்குமோ, அதுவே உறுதியான வெற்றியை நிச்சயம் வெல்லும்.(5)காற்றானது அந்தத் துருப்புகளின் பின்னால் நலம்பயக்கும் வகையில் {சாதகமாக} வீசிக் கொண்டிருக்கும். வானவில் தோன்றும். மேகங்கள் தங்கள் நிழல்களை அவர்களின் மீது படியச் செய்யும், சில நேரங்களில் சூரியனும் அவர்களின் மேல் ஒளிர்வான்.(6) நரிகளும், கருங்காக்கைகளும், கழுகுகளும் கூட அவர்களுக்கு மங்கலமானவையாகின்றன. இவை அந்தப் படையிடம் இவ்வாறு நடந்து கொண்டால், அதன் மூலம் உயர்ந்த வெற்றியை அடைவது நிச்சயமாகும்.(7) அவர்களது (வேள்வி) நெருப்புகள் மேல்நோக்கி ஒளிர்ந்து, சற்றே தெற்கு நோக்கிய புகையற்ற தழல்களுடனும், தூய காந்தியுடனும் சுடர்விடும். அவற்றின் மேல் ஊற்றப்படும் ஆகுதிகள் இனிமையான நறுமணத்தை வீசும். இவையே எதிர்கால வெற்றியின் அறிகுறிகளாகச் சொல்லப்படுகின்றன.(8) முழக்கப்படும் சங்குகளும், பேரிகைகளும், உரத்த ஆழமான ஒலிகளை வெளியிடும். போராளிகள் ஆர்வம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவையும் எதிர்கால வெற்றிக்கான அறிகுறிகளாகச் சொல்லப்படுகின்றன.(9) மானும், நான்கு கால் விலங்குகளும், போருக்குப் புறப்பட்டவரின், அல்லது புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரின் பின்னாலோ, இடதுபுறமோ தென்பட்டால், அவை மங்கலமானவையாகக் கருதப்படுகின்றன. போர்வீரர்கள் படுகொலையில் {போரில்} ஈடுபடும்போது அவர்களின் வலப்புறம் அவை தென்பட்டால், அதுவும் வெற்றிக்கான அறிகுறியாகவே கருதப்படுகிறது. எனினும், அவை அத்தகு மனிதர்களின் முன்னால் தோன்றினால், அவை பேரழிவையும், தோல்வியையும் குறிக்கின்றன.(10)

அன்னங்கள், நாரைகள் {கிரௌஞ்சங்கள்}, சதபத்திரங்கள் {மரங்கொத்திகள்}, சாஷங்கள் {காடைகள்} ஆகிய பறவைகள் மங்கல ஒலிகளையெழுப்புவதும், திறன்மிக்கப் போராளிகள் அனைவரும் உற்சாகமடைதலும் எதிர்கால வெற்றியின் குறியீடுகளாகக் கருதப்படுகின்றன.(11) எவருடைய வியூகமானது காந்தியால் சுடர்விடுகிறதோ, ஆயுதங்கள், இயந்திரங்கள், கவசங்கள், கொடிமரங்கள், சீற்றமிகு மனித முகங்களின் ஒளிரும் நிறங்கள் ஆகியவற்றின் விளைவால் பயங்கரமாகத் தெரிகிறதோ, அவர்கள் தங்களுடைய எதிரிகளை எப்போதும் வெல்வார்கள்.(12) படையின் போராளிகள் தூய நடத்தை கொண்டோராக, பணிவுள்ளவர்களாக, ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுபவராக இருந்தால், அதுவும் எதிர்கால வெற்றிக்கான குறியீடாகக் கருதப்படுகிறது.(13) இனிமையான ஒலிகள், மணங்கள், உணர்ச்சிமிக்கத் தீண்டல் ஆகியவை மேலோங்கினால், போராளிகள் செய்நன்றி, பொறுமை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவர்களாக இருந்தால், அவையே வெற்றிக்கான வேர்களாகக் கருதப்படுகின்றன.(14) போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவனுக்கு இடப்புறமும், ஈடுபட இருப்பவனுக்கு வலப்புறமும் இருக்கும் காகம், மங்கலமானதாகக் கருதப்படுகிறது. பின்புறம் தென்பட்டால் அது கருத்தில் உள்ள நோக்கங்கள் நிறைவடையாமையைக் குறிக்கும், முன்புறம் தென்பட்டாலோ அஃது ஆபத்தின் முன்னறிவிப்பாகும்[2].(15)ஓ! யுதிஷ்டிரா, நால்வகைப் படைகளைக் கொண்ட ஒரு பெரும்படையை {பட்டியல் சரிபார்க்கப்பட்டுக்} கணக்கிட்டபிறகும் கூட முதலில் அமைதியாக {சாமோபாயத்துடன்} நடந்து கொள்வாயாக. அமைதிக்கான உன் முயற்சிகள் தோல்வியடைந்தால், பிறகு நீ போரில் ஈடுபடலாம்.(16) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, போரில் ஒருவன் அடையும் வெற்றியானது தாழ்ந்ததே. போரில் அடையப்படும் வெற்றியானது, உறுதியின்மை, அல்லது விதியைச் சார்ந்திருப்பதாகவே தெரிகிறது.(17) ஒரு பெரும்படையானது பிளந்து, துருப்புகள் தப்பி ஓடும்போது, அவர்களின் ஓட்டத்தைத் தடுப்பது என்பது மிகக் கடினமானதாகும். தப்பி ஓடும் வேகமானது, ஒரு பெரும் நீரூற்றுக்கோ, அச்சமடைந்த மான்மந்தைக்கோ ஒப்பானதாகும்.(18) சிலர் பிளந்தால், துணிச்சல்மிக்கவர்களும், போரில் திறன்மிக்கவர்களுமான பிறரும்கூடப் போதுமான காரணமின்றிப் பிளந்து செல்வார்கள். துணிச்சல்மிக்கப் படைவீரர்களைக் கொண்ட ஒரு பெரும்படையேகூட, ருருமான் மந்தையைப் போன்றதே[3].(19) சில வேளைகளில், உறுதியானவர்களும், ஒருவரையொருவர் சார்ந்திருப்பவர்களும், உற்சாகம் நிறைந்தவர்களும், தங்கள் உயிரையே விட ஆயத்தமாயிருப்பவர்களுமான வெறும் ஐம்பது {50} மனிதர்களே கூட, எண்ணிக்கையில் மிக அதிகமான பகைவர்களைக் கலங்கடிப்பதில் வெல்வதைக் காண முடிகிறது.(20) சில வேளைகளில், உறுதியானவர்களும், ஒற்றுமையுடன் நெருக்கமாக நிற்பவர்களும், உயர்ந்த குடிவழியில் வந்தவர்களும், அறிந்தவர்களால் மதிக்கப்படுபவர்களுமான ஐந்து, அல்லது ஆறு, அல்லது ஏழு மனிதர்கள் கூட, எண்ணிக்கையில் மிக அதிகமான பகைவர்களை வெல்கிறார்கள்.(21)தவிர்க்கக்கூடிய வரை போரானது விரும்பத்தக்கதன்று. கொடைகளைக் கொடுத்து ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்கும் இணக்க {சமரசக்} கொள்கையே முதலில் முயற்சிக்கப்பட வேண்டும். இவற்றின் பிறகே போரிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.(22) சொர்க்கத்தின் சுடர்மிக்க வஜ்ரத்தைக் கண்டு, “ஓ!, எதன் மூலம் இது நிறைவை எட்டும்” என்று அச்சமடைந்தோர் சொல்வதைப் போல, (பகைவரின்) படையைக் கண்டதும் அச்சமானது மருண்டோரை முடமாக்குகிறது[4].(23) போரை உறுதிசெய்து கொண்டு, அதில் ஈடுபடப்போவோரின் அங்கங்களும், வெல்பவனின் அங்கங்களும் அபரிமிதமாக வியர்க்கின்றன[5].(24) ஓ! மன்னா, (போரின் இருக்கையாக விளங்கும்) மொத்த நாடும் கலக்கமடைந்து, அதிலிருக்கும் அசையும், மற்றும் அசையாத உயிரினங்களுடன் சேர்த்துப் பீடிக்கப்படுகிறது. உடல்கொண்ட உயிரினங்களின் மஜ்ஜைகள் ஆயுதங்களின் வெப்பத்தால் எரிக்கப்பட்டு, வலியால் {துன்பத்தால்} வாடுகின்றன.(25)எனவே, ஒரு மன்னன் கடுமையான நடவடிக்கைகளுடன் கலந்த இணக்க {சமரசக்} கலைகளை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த வேண்டும். மக்கள் பகைவர்களால் பீடிக்கப்படும்போது, {அப்பகைவரின்} வரையறைகளை ஏற்கும் மனநிலையையே அவர்கள் எப்போதும் வெளிப்படுத்துவார்கள்[6].(26) எதிரியின் கூட்டாளிகளுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்க மறைமுகவர்கள் {ஒற்றர்கள்} அனுப்பப்பட வேண்டும். ஒற்றுமையின்மையை உண்டாக்கிய பிறகு, (நசுக்கப்பட வேண்டிய) எதிரியை விட அதிகப் பலசாலியாக இருக்கும் மன்னனிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்வது மிகச்சிறந்தது.(27) படையெடுப்பாளன் இவ்வழியில் செயல்படவில்லையெனில், அவன் தன் எதிரியை நசுக்குவதில் ஒருபோதும் முற்றான வெற்றியை அடைய மாட்டான். பகைவரைக் கையாளும்போது, அனைத்துப் புறங்களில் இருந்தும் அவனை வளைப்பதில் கவனமாக வேண்டும்.(28) மன்னிக்கும் தன்மை {பொறுமை} எப்போதும் நல்லோருக்கே ஏற்படும். தீயோருக்கு அஃது ஏற்படாது. ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, மன்னிக்கும் தன்மை {பொறுமை} மற்றும் கடுமை ஆகியவற்றின் பயன்களை இப்போது கேட்பாயாக.(29)படையெடுப்புக்குப் பிறகு, மன்னிக்கும் தன்மையை {பொறுமையை} வெளிப்படுத்தும் மன்னனின் புகழ் மிக விரிவான அளவில் பரவுகிறது. மன்னிக்கும் மனநிலையுடன் இருக்கும் ஒரு மனிதனின் பகைவர்களே கூட, மிக முக்கிய மீறலுக்கான குற்றச்சாட்டுக்கு அவன் ஆளாகும் போது, அவனை நம்புவார்கள்.(30) ஒரு மரத்தண்டானது {மூங்கில், பிரம்பு போன்ற மரங்கள்} சுடப்படாமல் நேராக்கப்பட்டால் {நிமிர்க்கப்பட்டால்}, அது மீண்டும் தன் பழைய நிலையையே மிக விரைவில் ஏற்கும். எனவே, பகைவனை முதலில் பீடித்த பிறகே அவனுக்கு மன்னிப்பு {பொறுமை} காட்டப்பட வேண்டும் என்று சம்பரன் {சம்பராசுரன்} சொல்லியிருக்கிறான்.(31) எனினும் சாத்திரங்களில் திறன்வாய்ந்த மனிதர்கள் இதை மெச்சுவதில்லை. மேலும் அவர்கள் அஃதை ஒரு நல்ல மன்னனுக்குரிய அறிகுறியாகவும் கருதவில்லை. மறுபுறம் அவர்கள், ஒரு தந்தை தன் மகனைக் கோபமில்லாமலும், அவனை அழித்துவிடாமலும் அடக்கித் தடுப்பதைப் போலவே, ஒரு பகைவனும் அடக்கித் தடுக்கப்பட வேண்டும் என்று சொல்கின்றனர்.(32) ஓ! யுதிஷ்டிரா, ஒரு மன்னன் கடுமையாக இருந்தால், அவன் அனைத்துயிர்களின் வெறுப்புக்கான பொருளாகிறான். மறுபுறம் மென்மையானவனாக இருந்தாலோ, அனைவராலும் அவமதிக்கப்படுகிறான். எனவே, நீ கடுமை, மென்மை ஆகிய இரண்டையும் பயில வேண்டும்.(33) ஓ! பாரதா, தாக்குவதற்கு முன்பும், தாக்கும்போதும் இனிமையான சொற்களைப் பேசுவாயாக; தாக்கிய பிறகு அவர்களிடம் கருணை காட்டி, நீ அவர்களுக்காக வருந்துவதையும், அழுவதையும் அவர்களுக்குப் புரிய வைப்பாயாக.(34)

மன்னன், ஒரு படையை வென்ற பிறகு, {எதிரிப் படையினரில்} எஞ்சியிருப்போரிடம், “என் துருப்புகளால் இவ்வளவு அதிகமான பேர் கொல்லப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. ஐயோ, என்னால் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டும் அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லையே.(35) (கொல்லப்பட்டவர்கள்) அனைவரும் உயிரோடிருப்பதையே நான் விரும்பினேன். அவர்கள் இத்தகு மரணத்திற்குத் தகுந்தவர்களல்ல. அவர்கள் அனைவரும், நல்லோராகவும், உண்மையானவர்களாகவும், போரில் புறமுதுகிடாதவர்களாகவும் இருந்தனர். உண்மையில் அத்தகு மனிதர்கள் அரிதானவர்கள்.(36) போரில் அத்தகு வீரனைக் கொன்ற ஒருவன், நிச்சயமாக எனக்கு ஏற்பில்லாததையே செய்திருக்கிறான்” என்று சொல்ல வேண்டும். வெல்லப்பட்ட எதிரிப் படையில் எஞ்சியிருப்போரிடம் இவ்வாறு பேசிவிட்டு, தன் துருப்பினரில் எதிரியைத் துணிவுடன் கொன்றவர்களுக்கு மறைமுகமாகக் கௌரவங்களை அளிக்க வேண்டும்.(37)

பகைவரின் கைகளால் காயமடைந்து துன்புற்றிருக்கும் கொலையாளிகளுக்கு ஆறுதலளிக்கவும், தன்னோடு அவர்களை இணைத்துக் கொள்ளவும் விரும்பும் மன்னன், அவர்கள் கரங்களை அன்புடன் பற்றிக் கொண்டு அழவும் செய்யலாம்.(38) இவ்வாறு மன்னனானவன், அனைத்துச் சூழ்நிலைகளிலும் இணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அச்சமற்றவனாக, அறவோனாக இருக்கும் மன்னன் ஒருவன், அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்படுகிறான்.(39) ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களும் அத்தகு ஆட்சியாளனையே நம்பும். அவர்களது நம்பிக்கையை வெல்லும் ஒருவன், தான் விரும்பும்வரை பூமியை அனுபவிப்பதில் வெல்கிறான்.(40) எனவே, மன்னனானவன் வஞ்சகத்தைக் கைவிட்டு, அனைத்துயிரினங்களின் நம்பிக்கையைப் பெற முயற்சிக்க வேண்டும். மேலும் அவன், பூமியை அனுபவிக்க முனைந்தால், தன் குடிமக்களை அச்சங்கள் அனைத்தில் இருந்து பாதுகாக்கவும் முனைய வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(41)

எவன் தீயவன்! – சாந்திபர்வம் பகுதி – 103-எதிரியை வெற்றி கொள்வது குறித்தும், தீயவர்களின் அறிகுறிகளைக் குறித்தும் இந்திரனுக்கும், பிருஹஸ்பதிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீமரிடம்}, “ஓ! பாட்டா, மென்மையான எதிரியிடமும், கடுமையான எதிரியிடமும், பல கூட்டாளிகளையும், பெரிய படையையும் கொண்ட ஒருவனிடமும் ஒரு மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பிருஹஸ்பதிக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலை ஒரு பழங்கதை குறிப்பிடுகிறது.(2) ஒரு காலத்தில், பகைவீரர்களைக் கொல்பவனும், தேவர்களின் தலைவனுமான வாசவன் {இந்திரன்}, தன் கரங்களைக் கூப்பியபடியே பிருஹஸ்பதியை அணுகி, அவரை வணங்கி இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(3)

இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, நான் என் எதிரிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? {சூழ்ச்சித்}திட்டங்களைக் கொண்ட வழிமுறைகளின் {ராஜதந்திரங்களின்} மூலம் நான் எவ்வாறு அவர்களை {எதிரிகளை} அடக்க வேண்டும்?(4) இரு படைகளுக்கிடையிலான மோதலில் ஒரு தரப்பே வெற்றியை அடையும். நான் வென்ற சுடர்மிக்கச் செழிப்பும், என் பகைவர்கள் அனைவரின் வாட்டமும் என்னைக் கைவிடாதிருக்க, நான் எவ்வழியில் நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(5) இவ்வாறு கேட்கப்பட்டவரும், அறம், பொருள் மற்றும் இன்பம் குறித்த காரியங்களில் திறன்மிக்கவரும், அரச கடமைகளின் அறிவைக் கொண்டவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான பிருஹஸ்பதி, பின்வரும் வார்த்தைகளில் இந்திரனுக்குப் பதிலளித்தார்.(6)

பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “ஒருவன் தன் எதிரிகளைச் சச்சரவின் {கலகத்தின்} மூலம் அடக்க ஒருபோதும் விரும்பக்கூடாது. கோபத்தில் தூண்டப்பட்ட, மன்னிக்கும் தன்மையற்ற {பொறுமையற்ற} சிறுவர்கள் மட்டுமே சச்சரவு செய்ய முனைவார்கள்.(7) எதிரியை அழிக்க விரும்பும் ஒருவன், அந்த எதிரி பாதுகாப்பை அடையும்படி செயல்படக்கூடாது. மறுபுறம், ஒருவன் தன் கோபத்தையோ, அச்சத்தையோ, மகிழ்ச்சியையோ ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது. அவன் அவற்றைத் தன் நெஞ்சுக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.(8) ஒருவன் உண்மையில் தன் எதிரியை நம்பக்கூடாது என்றாலும், அவனிடம் முழுமையான நம்பிக்கையுடனிருப்பது போல அவனிடம் நடந்து கொள்ள வேண்டும். ஒருவன் தன் எதிரிகளிடம் எப்போதும் இனிமையான வார்த்தைகளையே பேச வேண்டும், அவனுக்கு ஏற்பில்லாத எதையும் ஒருபோதும் செய்யக்கூடாது.(9) ஒருவன் பலனற்ற பகைச்செயல்களையும், துடுக்குத்தனமான பேச்சையும் {கோள் சொல்வதைத்} தவிர்க்க வேண்டும். ஒரு வேடனானவன், அவன் பிடிக்க, அல்லது கொல்ல விரும்பும் பறவைகள் போன்றே கவனமாகக் குரலெழுப்பி,(10) அவற்றைக் கைப்பற்றி, தன் ஆளுகைக்குள் கொண்டுவருவதைப் போலவே, ஓ! புரந்தரா {இந்திரா}, ஒரு மன்னனும் தன் எதிரிகளைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்த பிறகு, தான் விரும்பினால் அவர்களைக் கொல்லலாம்[1].(11)ஒருவன் தன் எதிரிகளை வென்றபிறகு, கவலையில்லாமல் உறங்கக்கூடாது. தீயவனான பகைவன், கவனமில்லாமல் விடப்படும் நெருப்பு மீண்டும் தோன்றுவதைப் போலவே தன் தலையை மீண்டும் உயர்த்துவான்.(12) இரு தரப்பாலும் வெற்றியடையமுடியும் எனும்போது, பகைமைமிக்க ஆயுத மோதல் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவன் தன் எதிரியைப் பாதுகாப்பாக வளைத்து அமைதிப்படுத்திய பிறகு, அவனைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்து, தன் நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ள வேண்டும்.(13) ஒரு பகைவன் அவமதிக்கவும், புறக்கணிக்கவும் பட்டு, {வாழ்க்கை} நெடுகிலும் இதயத்தால் அடங்காதவனாக இருந்தால், அவன் தன் அமைச்சர்களுடனும், கொள்கை அறிந்த புத்திமான்களுடனும் கலந்தாலோசித்து,(14) உரிய காலம் நேரும்போது, அதிலும் குறிப்பாக அவமதித்தவன் தவறான அடியை எடுத்து வைக்கும்போது அவனைத் தாக்குவான். அத்தகு எதிரியானவன், தன் நம்பிக்கைக்குரிய முகவர்களை {ஒற்றர்களை} நியமித்து, அவனுடைய {அவமதித்தவனின்} திறனில்லா படைகளுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்குவான்.(15)

ஒரு மன்னன், தன் எதிரிகளின் தொடக்கக் காலம், மத்திய காலம் மற்றும் முடிவுக்காலம் ஆகியவற்றை உறுதி செய்து {தெரிந்து} கொண்டு[2]இரகசியமாக அவர்களிடம் பகைவளர்க்க வேண்டும். அவன் நேர்மறையான ஆதாரங்கள் அனைத்தையும் உறுதி செய்து {தெரிந்து} கொண்டு, தன் எதிரியின் படைகளை ஊழலில் மலியச் செய்து, {பேதவழியில்}வேற்றுமையை உண்டாக்கும் கலைகளைப் பயன்படுத்தி, {தான வழியில்} கொடைகளைக் கொடுத்து, {தண்ட வழியில்} விஷம் கொடுத்துச் சிதைக்க வேண்டும். ஒரு மன்னன் தன் எதிரிகளின் தோழமையில் ஒருபோதும் வாழக்கூடாது. ஒரு மன்னன் நீண்ட காலம் காத்திருந்தாவது தன் எதிரிகளைக் கொல்ல வேண்டும். உண்மையில் அவன், குறைந்தது தன் எதிரி எதிர்பார்க்காத வேளையில் அவன் மீது பாயும் வகையில் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். ஒரு மன்னன் தன் வெற்றியை ஐயமற்றதாகச் செய்ய, தன் எதிரியின் துருப்பினரைக் கொல்ல வேண்டும் என்றாலும், பெரும் எண்ணிக்கையில் அவர்களை ஒருபோதும் கொல்லக்கூடாது.(18) மன்னன் தன் எதிரியின் இதயம் எரிச்சலடையும் வகையில் ஒருபோதும் அவனுக்குக் காயத்தை ஏற்படுத்தக்கூடாது. மேலும் அவன் சொற்கணைகளாலும் அவனுக்குக் காயங்களை உண்டாக்கக்கூடாது. வாய்ப்பேற்படும்போது, அவன் நழுவிவிடாதவாறு அவனைத் தாக்க வேண்டும். ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, எதிரிகளைக் கொல்ல விரும்பும் மன்னன், தன் எதிரிகளாக இருப்போரிடம் இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்.(19) வாய்ப்புக்காகக் காத்திருக்கும் மனிதனைப் பொறுத்தவரையில், செயல் பட விரும்பும் அவனிடம் இருந்து வாய்ப்பு ஒரு முறை நழுவிச் சென்றால், மீண்டும் அஃது ஒருபோதும் வாய்க்காது.(20)ஞானியரின் கருத்துகளின் படி செயல்படும் மன்னன், தன் எதிரியின் பலத்தை மட்டுமே உடைக்க வேண்டும். வாய்ப்பில்லாதபோது தன் நோக்கங்களை நிறைவேற்ற அவன் ஒருபோதும் முனையக்கூடாது. அதே வேளையில் வாய்ப்பு இருக்கும்போது, தன் எதிரியை வாட்டவும் கூடாது[3].(21) காமம், கோபம் மற்றும் செருக்கு ஆகியவற்றைக் கைவிடும் மன்னன், தன் எதிரிகளின் தவறுகளை {காலதாமதத்தைத்} தொடர்ந்து கண்காணித்துக் கவனத்துடன் செயல்பட வேண்டும்.(22) ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, இயல்பான மென்மை, தண்டனைகளில் கடுமை, செயல்படாமை, கவனக்குறைவு ஆகியவற்றின் மூலம் (எதிரிகளிடம்) செயல்படுத்தப்படும் வஞ்சகம் நிறைந்த சதித்திட்டங்கள் ஒரு மூட மன்னனை அழித்துவிடும்.(23) இந்த நான்கு தவறுகளை வெற்றிக் கொள்ளும் மன்னன், தன் எதிரிகளின் வஞ்சக சதித்திட்டங்களுக்கு எதிர்வினையாற்றி, அவர்கள் அனைவரையும் தாக்கி ஐயமில்லாமல் வெல்கிறான்.(24) (மன்னனின்) ஓர் இரகிசய நோக்கத்தை (வேறெந்த உதவியுமின்றி) நிறைவேற்றத் தகுந்தவன் ஒரேஒரு அமைச்சனே என்ற போது, அத்தகு இரகசிய நோக்கத்தைப் பொறுத்தவரை அந்தவொரு அமைச்சனிடம் மட்டுமே அவன் ஆலோசிக்க வேண்டும். பல அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தால், அவர்கள் அந்தப் பணியின் சுமையை அடுத்தவர்களின் தோள்களில் சுமத்த முயற்சித்து, இரகசியமாக வைக்கப்பட வேண்டிய அந்நோக்கத்தை விளம்பரப்படுத்திவிடக்கூடும்.(25) ஒரே ஒருவரிடம் ஆலோசிப்பது முறையாகாது எனும்போது மட்டுமே மன்னன் பலருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.எதிரி கண்ணுக்குப் புலப்படாதபோது, தெய்வீக தண்டனை அவர்களுக்கு ஏற்பட அஃதை {தெய்வீகத் தண்டனையை} இருப்புக்கு அழைக்கவேண்டும். அவர்கள் {எதிரிகள்} புலப்பட்டால், நால்வகைப் படைகள் நகர்த்தப்பட வேண்டும்[4].(26) மன்னன் முதலில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்கும் {பேத} முறையையும், இணக்க {சாம} முறைகளையும் பயன்படுத்த வேண்டும். அந்தந்தக் குறிப்பிட்ட வழிமுறைக்கான காலம் வாய்க்கும்போது, அந்தக் குறிப்பிட்ட வழிமுறைகளையே செயல்படுத்த வேண்டும்.(27) சில நேரங்களில் மன்னன், தன் பலமிக்க எதிரிகளின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழவும் வேண்டும். மேலும் கவனமாகச் செயல்படும் அவன், வெற்றியாளன் {எதிரி} கவனமற்றவனாக இருக்கும்போது அவனுக்கு அழிவை ஏற்படுத்த முயல வேண்டும்.(28) நெடுஞ்சாண்கிடையாக விழுவது, கப்பத்தைக் கொடையாகக் கொடுப்பது, இனிய சொற்கள் பேசுவது ஆகியவற்றின் மூலம் ஒருவன் பலமிக்க மன்னனின் எதிரில் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். (இத்தகு செயல்களுக்கான வாய்ப்பு நேரும்போது) ஒருவன் தன் பலமிக்க எதிரி ஐயங்கொள்ளும் அளவுக்கு எச்செயலையும் ஒருபோதும் செய்யக்கூடாது.(29) அத்தகு சூழ்நிலைகளில் பலவீனமான ஓர் ஆட்சியாளன், ஐயத்தை எழுப்பும் செயல்கள் அனைத்தையும் கவனமாகத் தவிர்க்க வேண்டும். மேலும், வெற்றியாளனான ஒரு மன்னன், வெல்லப்பட்டவனான எதிரிகள் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள் என்பதைக் கருத்திக் கொண்டு, அவர்களை நம்பாமல் இருக்க வேண்டும்.(30)ஓ! தேவர்களில் சிறந்தவனே {இந்திரனே}, ஓ! இறவாதவர்களின் ஆட்சியாளனே, செழிப்பை அடைவதைவிட, அமைதியற்ற மனநிலை கொண்ட மனிதர்களுக்கு மிகக் கடினமானது வேறேதும் இல்லை.(31) அமைதியற்ற மனோநிலை கொண்ட மனிதர்களின் இருப்பே ஆபத்து நிறைந்ததாகும். எனவே, மன்னர்கள் தங்கள் நண்பர்களையும், எதிரிகளையும் கவனமாக உறுதி செய்ய {தேர்ந்தெடுக்க} வேண்டும்.(32) ஒரு மன்னன் மென்மையடைந்தால், அவன் அவமதிக்கப்படுகிறான். அவன் மூர்க்கமடைந்தால், மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறான். எனவே, நீ மூர்க்கனாயிராதே, அதே வேளையில் மென்மையானவனாகவும் இராதே. கடுமை, மென்மை ஆகிய இரண்டையும் கொண்டவனாக இருப்பாயாக.(33) மூர்க்கமான நீரோடை உயர்ந்த கரையைக்கூட அரித்து, நிலச்சரிவை ஏற்படுத்துவதைப் போலவே, கவனமின்மையும், தவறும் ஒரு நாட்டையே அழித்துவிடும்.(34) ஒரே நேரத்தில் பல எதிரிகளை ஒருபோதும் எதிர்க்காதே. ஓ! புரந்தரா, இணக்க {சாம}, கொடை {தான}, வேற்றுமையை உண்டாக்குதல் {பேதம்} ஆகிய கலைகளைக் கொண்டு அவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கலங்கடிக்கப்பட வேண்டும்.(35)

(சிறு எண்ணிக்கையில்) எஞ்சியிருப்போரைப் பொறுத்தவரையில், வெற்றியாளன் அவர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளலாம். நுண்ணறிவைக் கொண்ட ஒரு மன்னன், ஒரே நேரத்தில் (தன் எதிரிகள்) அனைவரையும் நொறுக்க இயன்றவனாக இருப்பினும், அவன் அவ்வாறு செயல்படக்கூடாது[5].(36) ஒரு மன்னனானவன், தன்னிடம் அர்ப்பணிப்புள்ள குதிரை, யானைகள், தேர்கள், காலாள், இயந்திரங்கள் ஆகியவை அடங்கிய ஆறு அங்கங்களைக் கொண்ட ஒரு பெரிய படையைக்[6] கொண்டிருப்பவனானால்,(37) ஒரு நியாயமான ஒப்பீட்டளவில் பல விதங்களில் தன் எதிரியைவிடத் தான் மேன்மையானவனாக இருப்பதாகக் கருதினால், அப்போது அவன் தயங்காமல் வெளிப்படையாக எதிரியைத் தாக்க வேண்டும்.(38) எதிரி பலவானாக இருந்தால், (அவனிடம்) இணக்கக் கொள்கையைப் பின்பற்றுவது பாராட்டுக்குரியதல்ல. மறுபறம், இரகசிய வழிமுறைகளில் தண்டிக்கும் கொள்கையே பின்பற்றப்படவேண்டும். நிர்வாகத்தின் ஏழு கிளைகளைப் பொறுத்தவரையில் பயிர் இழப்பு, கிணறுகள் மற்றும் குளங்களுக்கு நஞ்சூட்டுவது, ஐயுணர்வை ஏற்படுத்தல்ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதால், அத்தகு எதிரிகளிடம் மென்மையான நடத்தையோ, மீண்டும் மீண்டும் படையெடுப்பதோ பின்பற்றப்படக்கூடாது[7]. (39) அத்தகு சந்தர்ப்பங்களில் மன்னன் பல்வேறு வஞ்சனைகளையும், பல்வகைச் சதிச்செயல்களையும் செய்து, பல்வேறு வகைக் கபட நடத்தைகளையும் மேற்கொண்டு எதிரிகளை ஒருவருக்கொருவர் எதிராகத் திருப்ப வேண்டும்.(40)ஓ! பலனையும், விருத்திரனையும் கொன்றவனே {இந்திரனே}, எதிரிகளைத் துரத்தும் மன்னர்கள், அவர்களது கோபுரங்களில் {நகரத்திற்குள்} நுழைந்து, அங்கே கிடைக்கும் சிறந்த பொருட்களைக் கைப்பற்றித் தனதாக்கி, தங்கள் சொந்த நகரங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளில் உரிய கொள்கை நடவடிக்கைகளை வகுக்கின்றனர்.(41) மன்னர்கள், பகைவருக்குத் தனிமையில் {மறைமுகமாகச்} செல்வக்கொடையளித்து, வெளிப்படையாக அவர்களது உடைமைகளைப் பறிமுதல் செய்து, பொருள் சார்ந்த காயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தாமல், அவர்கள் அனைவரும் தீய மனிதர்கள் என்றும், அவர்களது தவறான செயல்களுக்காகவே அவர்கள் துன்புறுகிறார்கள் என்பதையும் அறிவிக்கும் வகையில் தங்கள் பகைவரின் நகரங்கள் மற்றும் மாகாணங்களுக்குத் தங்கள் ஒற்றர்களை அனுப்ப வேண்டும்.(42) அதே வேளையில், தங்கள் சொந்த நகரங்களில் சாத்திரங்களை அறிந்தவர்களும், அனைத்துச் சாதனைகளையும் கொண்டவர்களும், புனித நூல்களின் விதிகளை அறிந்தவர்களும், கல்வியாளர்களுமான மனிதர்களைக் கொண்டு, எதிரிகளைக் கொல்வதற்கான சடங்குகளையும், மந்திரங்களை ஓதுவதையும் செய்ய வைக்க வேண்டும்” என்றார் {பிருஹஸ்பதி}.(43)

இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, ஒரு தீய மனிதனின் அறிகுறிகள் என்னென்ன? என்னால் கேட்கப்படும் நீர், நான் எவ்வாறு தீயவர்களை அறிவது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(44)

பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “எவன் அடுத்தவரின் குறைகளை அவர்களின் முதுகுக்குப் பின்னால் அறிவிக்கிறானோ; எவன் அடுத்தவரின் சாதனைகளில் பொறாமை கொள்கிறானோ; எவன் தன் முன்னிலையில் வேறு மக்களின் தகுதிகள் அறிவிக்கப்படும்போது, அந்தக் கூட்டுத்துதியில் சேரத் தயங்கி அமைதியாக இருக்கிறானோ அவனே தீய மனிதன்.(45) அத்தகு சந்தர்ப்பங்களில் அமைதியாக இருப்பது மட்டுமே தீமையின் குறியீடு அல்ல. எனினும், அத்தகு நேரங்களில் ஒரு தீய மனிதன், நெடும் மூச்சு விடுவான், தன் உதடுகளைக் கடித்துக் கொள்வான், மேலும் தன் தலையையும் அசைப்பான்.(46) அத்தகு மனிதன் எப்போதும் சமூகத்துடன் கலந்து, தொடர்பில்லாமல் பேசுவான்[8]. அத்தகு மனிதன் எந்த மனிதனுக்கு எந்த உறுதியை அளித்தானோ, அந்த மனிதனின் கண் தன் மேல் இல்லாதவரை, அஃதை ஒருபோதும் செய்யமாட்டான். அந்த மனிதனின் கண் அவன் மீது இருக்கும்போதோ, அந்தத் தீய மனிதன் அதுகுறித்து மறைமுகமாகக் கூடக் குறிப்பிட மாட்டான்.(47) அந்தத் தீய மனிதன் (பிறரைச் சேர்த்துக் கொள்ளாமல் தான் மட்டும்) தனியாக உண்பான், “மற்ற நாட்களைப் போல இல்லாமல் இன்று எதுவும் சரியில்லை” என்று தன் முன் வைக்கப்படும் உணவிலும் குறை கண்டுபிடிப்பான். அமர்வது, படுப்பது, போவது தொடர்பான சூழ்நிலைகளில் கூட அவனுடைய மனோநிலை வெளிப்படும்[9].(48) கவலைநிறைந்த சந்தர்ப்பங்களில் கவலைப்படுவதும், மகிழ்ச்சிமிக்கத் தருணங்களில் மகிழ்ந்திருப்பதும் ஒரு நண்பனின் அறிகுறிகளாகும். இதற்கு மாறான நடத்தையே ஓர் எதிரிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.(49) ஓ! தேவர்களின் ஆட்சியாளா {இந்திரா}, இஃதை உன் இதயத்திலேயே வைத்துக் கொள்வாயாக. தீய மனிதர்களின் மனோநிலையை ஒருபோதும் மறைக்க முடியாது.(50) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, தீய மனிதர்களுக்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை இப்போது நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! தேவர்களின் ஆட்சியாளா, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள உண்மைகளைக் கேட்டு முறைப்படி அதைப் பின்பற்றுவாயாக” என்றார் {பிருஹஸ்பதி}”.(51)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிருஹஸ்பதியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட புரந்தரன் {இந்திரன்}, அவற்றின் படியே உறுதியுடன் செயல்பட்டு தன் எதிரிகளை அடக்குவதில் ஈடுபட்டான். வெற்றியில் நோக்கம் கொண்ட அந்த எதிரிகளைக் கொல்பவன், வாய்ப்பு ஏற்பட்ட போது, இந்த அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்து, தன் எதிரிகள் அனைவரையும் அடக்கினான்”.(52)

க்ஷேமதர்சினும், காலகவிருக்ஷீயரும்! – சாந்திபர்வம் பகுதி – 104-நாட்டை இழந்தவனும், அறவோனுமான மன்னனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து க்ஷேமதர்சினுக்கும் காலகவிருக்ஷீயருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தன் சொந்த அதிகாரிகளாலேயே எதிர்க்கப்படுபவனும், கருவூலமும், படையும் தன் கட்டுப்பாட்டில் இல்லாதவனும், செல்வமில்லாதவனும், அறவோனுமான ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைவதற்காகத் தன்னை எவ்வாறு நடத்திக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக எப்போதும் க்ஷேமதர்சினின் கதை சொல்லப்படுகிறது. நான் அக்கதையை உனக்குச் சொல்கிறேன். ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(2) பழங்காலத்தில் {கோசல நாட்டு} இளவரசன் க்ஷேமதர்சின் பலவீனமடைந்தவனாக, பெரும் துயரத்தில் வீழ்ந்தபோது, அவன் தவசி காலகவிருக்ஷீயரிடம் சென்று, பணிவுடன் வணங்கி அவரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்[1].(3)மன்னன் {க்ஷேமதர்சின் காலகவிருக்ஷீயரிடம்}, “ஓ! பிராமணரே, செல்வம் வேண்டும் என்னைப் போன்ற ஒரு மனிதன், மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும், தன் நாட்டை மீட்கத் தவறினால், தற்கொலை, களவு, கொள்ளை, அடுத்தவரின் புகலிடத்தை நாடுதல், மேலும் இது போன்ற அற்ப காரியங்களைத் தவிர வேறு என்ன செய்ய வேண்டும்? ஓ! மனிதர்களில் சிறந்தவரே, இஃதை எனக்குச் சொல்வீராக.(4,5) அறநெறிகளை அறிந்தவரும், மகிமை நிறைந்தவருமான உம்மைப் போன்ற ஒருவரே, மன, அல்லது உடல் நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் மனிதனுக்குப் புகலிடமாவீர்.(6) மனிதன் தன் ஆசைகளைக் கைவிட வேண்டும். இவ்வழியில் இன்ப துன்பங்களைக் கைவிட்டு, அறிவெனும் செல்வத்தை ஈட்டிச் செயல்படும் ஒருவன் புகழை அடைவதில் வெல்கிறான். செல்வத்தைச் சார்ந்து உலக இன்பங்களில் பற்று கொள்வோருக்காக நான் வருந்துகிறேன். எனினும், அவை யாவும் ஒரு கனவைப் போல மறைந்து விடுகின்றன.(8) பரந்த செல்வத்தைக் கைவிட முடிந்தோர், மிகக் கடினமான சாதனையை அடைகிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில், எங்களிடம் இல்லாத செல்வத்தைக் கைவிட முடியாதவர்களாக நாங்கள் இருக்கிறோம்[2].(9) செழிப்பை இழந்து, மகிழ்ச்சியற்ற துயரமான இழிநிலையில் நான் விழுந்துவிட்டேன். ஓ! பிராமணரே, எந்த மகிழ்ச்சிக்காக நான் இன்னும் முயற்சி செய்ய வேண்டும் என்பதை எனக்குப் போதிப்பீராக” எனக் கேட்டான்.(10) நுண்ணறிவு மிக்க அந்தக் கோசல இளவரசனால் {க்ஷேமதர்சினால்} இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் காந்தியைக் கொண்டவருமான தவசி காலகவிருக்ஷீயர் பின்வரும் பதிலை அளித்தார்.(11)தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, “ஏற்கனவே நீ அதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய் என்றே தெரிகிறது. அறிவைக் கொண்டவனான நீ, உன் எண்ணத்தைப் போலவே செயல்பட வேண்டும். “நான் மற்றும் நான் கொண்டவை உள்ளிட்ட இவை அனைத்தும் நிலையற்றவை என்றே நான் காண்கிறேன்” என்ற உன் நம்பிக்கை சரியானதே.(12) ஓ! இளவரசே, எப்பொருள் இருக்கிறது என நீ கருதுகிறாயோ, அஃது உண்மையில் இல்லை என்று அறிவாயாக. ஞானம் கொண்ட மனிதன் இஃதை அறிகிறான், அதன்படி, எத்துன்பம் அவனுக்கு ஏற்பட்டாலும் அவன் ஒருபோதும் துன்பப்படுவதில்லை.(13) எவை நடந்தனவோ, எவை நடக்க இருக்கின்றனவோ, அவை அனைத்தும் உண்மையற்றவை.அனைவரும் அறிய வேண்டிய இதை நீ அறியும்போது, அநீதியில் {அதர்மத்தில்} இருந்து விடுபடுவாய்.(14) முன்பு ஈட்டப்பட்ட, அடையப்பட்ட பொருட்கள், அதற்குப் பின் ஈட்டப்பட்ட அடையப்பட்ட பொருட்கள் யாவும் அழிந்துவிட்டன. இதைக் கருத்தில் கொண்டால், எவன் தான் துன்பப்பட மாட்டான்?(15)

எப்பொருட்கள் இருந்தனவோ, அவை ஒன்றும் இப்போது இல்லை. இப்போது இருப்பவையும் இல்லாமலே போகும். துயரத்திற்கு அவற்றை மீட்கும் சக்தி கிடையாது. எனவே, ஒருவன் துன்பத்தில் ஈடுபடக்கூடாது.(16) ஓ! மன்னா {க்ஷேமதர்சனா}, இன்று உன் தந்தையும் எங்கே? உன் பாட்டன் எங்கே? இன்று நீயும் அவர்களைக் காணவில்லை. அவர்களும் இப்போது உன்னைக் காணவில்லை.(17) உனது நிலையின்மையைக் கருத்தில் கொண்டால், அவற்றுக்காக நீ ஏன் வருந்தப் போகிறாய்? நுண்ணறிவின் துணையுடன் சிந்திப்பாயாக, நீயும் இருக்க மாட்டாய் என்பதை நீ புரிந்து கொள்வாய்.(18) ஓ! மன்னா, நான், நீ, உன் நண்பர்கள், எதிரிகள் ஆகியோர் அனைவரும் நிச்சயம் இல்லாமல் போவோம். உண்மையில், அனைத்தும் இல்லாமலே போகும்.(19) இன்று இருபது, அல்லது முப்பது வயது கொண்டோர் அனைவரும், அடுத்த நூறு ஆண்டுகளில் நிச்சயம் இறந்துவிடுவார்கள்.(20)

ஒரு மனிதன் தன் பரந்த உடைமைகளை விட்டுக் கொடுக்கும் இதயம் இல்லாதவனாக இருந்தால், அவன் தன் உடைமைகள் தனதல்ல என்று நினைக்க முயற்சித்து, அதன் மூலம் தன் நன்மையை நாட வேண்டும்[3].(21) எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் உடைமைகளும் தன்னுடையவையல்ல என அவன் கருத வேண்டும். ஏற்கனவே மறைந்த உடைமைகளும் தன்னுடையவையல்ல எனவும் ஒருவன் கருத வேண்டும். விதியே அனைத்திலும் வலியது எனக் கருதப்பட வேண்டும். இவ்வகையில் சிந்திப்போரே ஞானம் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இவ்வகையில் பொருட்களைக் காணும் பழக்கம் நல்ல பண்பாகும்.(22) புத்தியிலும், முயற்சியிலும் உனக்கு இணையானவர்களாகவோ, மேன்மையானவர்களாகவோ உள்ள பல மனிதர்கள், செல்வதை இழந்தவர்களாக உயிரோடு இருந்தாலும், நாடுகளை ஒருபோதும் ஆள்வதில்லை.(23) அவர்கள் உன்னைப் போன்றோரல்ல. அவர்கள் உன்னைப் போலத் துயரத்தில் ஈடுபடுவதில்லை. எனவே, இவ்வழியில் துயருறுவதை நிறுத்துவாயாக. நீ புத்தியிலும், முயற்சியிலும் அம்மனிதர்களை விட உயர்ந்தவனோ, குறைந்தது அவர்களுக்கு இணையானவனோ இல்லையா?” என்று கேட்டார்{காலகவிருக்ஷீயர்}.(24)மன்னன் {க்ஷேமதர்சின் காலகவிருக்ஷீயரிடம்}, “என் நாடானது, அது கொண்டிருந்த அனைத்துப் பொருட்களுடன் எந்த முயற்சியுமில்லாமல் என்னால் {முன்பு} வெல்லப்பட்டது என்று கருதுகிறேன். எனினும், ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, அனைத்திலும் வலிமையான காலம் அஃதை அபகரித்து விட்டது.(25) ஓர் ஓடையால் அடித்துச் செல்லப்படுவதைப் போல என் நாடு காலத்தால் அடித்துச் செல்லப்பட்டதன் விளைவாகவே, (ஈகை பெறுவதன் மூலம்) அடையும் எதையும் கொண்டு என்னை ஆதரித்துக் கொள்ள வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன் என்பதைக் காண்கிறேன்” என்றான்.(26)

தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, “(வாழ்வில்) உண்மை அறிவால் தூண்டப்பட்ட ஒருவன், கடந்த காலத்திற்காகவோ, எதிர்காலத்திற்காகவோ ஒருபோதும் வருந்தக்கூடாது. ஓ! கோசல இளவரசே {க்ஷேமதர்சின்}, நீ உன் கவனத்தைச் செலுத்தும் ஒவ்வொரு காரியத்திலும் நீ இத்தகு மனநிலையையே கொள்வாயாக.(27) கிடைக்கமுடியாததை அல்லாமல், கிடைக்கக்கூடியதை மட்டுமே அடைய விரும்பி, தற்போது நீ கொண்டிருக்கும் உடைமைகளில் இன்புற்று, இல்லாததை நினைத்து ஒருபோதும் வருந்தாமல் இருப்பாயாக.(28) ஓ! கோசல இளவரசே, எளிமையாக நீ அடைந்த எதையும் கொண்டு நீ மகிழ்ச்சியாக இருப்பாயாக. செழிப்பை இழந்தாலும், தூய மனநிலையைப் பாதுகாக்க வேண்டுமேயன்றி ஒருபோதும் அதற்காக வருந்தக்கூடாது.(29) மூடப்புத்தி கொண்ட பேரற்ற மனிதனே, முந்தைய செழிப்பை இழக்கும்போது, தன் தற்போதைய உடைமைகளில் நிறைவில்லாமல் படைப்பாளனை நிந்திக்கிறான்.(30)

அத்தகு மனிதன், பிறர் அதற்குத் தகாதவர்களாக இருப்பினும், செழிப்பால் அருளப்பட்டிருக்கும் மனிதர்களாக இருக்கிறார்களே எனக் கருதுகிறான். இதன் காரணமாகவே, ஆணவமும் அகந்தையும் கொண்டவர்களும், தங்கள் முக்கியத்துவம் குறித்த உணர்விலேயே நிறைந்திருப்பவர்களுமான அவர்கள் அதிகத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். எனினும், ஓ! மன்னா {க்ஷேமதர்சினே}, நீ அத்தகு களங்கங்களினால் கறைபடியாதவனாக இருக்கிறாய்.(31,32) நீ செல்வத்தை இழந்தவனாக இருப்பினும், அடுத்தவரின் செழிப்பைப் பொறுத்துக் கொள்வாயாக. கைத்திறன் கொண்டவர்கள், பிறரிடம் உள்ள செழிப்பை அனுபவிக்கிறார்கள். செழிப்பானது, பிறரின் செழிப்பை வெறுப்பவனிடம் இருந்து விலகிச் செல்கிறது.(33) நன்னடத்தை மற்றும் ஞானம் கொண்டவர்களும், யோகத்தின் கடமைகளை அறிந்தவர்களுமான மனிதர்கள், செழிப்பு, மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரைத் தாங்களாகவே துறக்கிறார்கள்.(34) உலகம் சார்ந்த செல்வமானது, இடையறாத செயல்பாடு மற்றும் முயற்சியைச் சார்ந்தது என்பதால் அது நிலையில்லாதது என்றும் அடையமுடியாதது என்றும் கருதும் வேறு சிலரும், அதைத் துறப்பதைக் காண முடிகிறது.(35)

நீ ஞானம் கொண்டவனாகத் தெரிகிறாய். பிறகு ஏன் நீ விரும்பக்கூடாதவையும், நிலையற்றவையும், பிறரைச் சார்ந்திருக்கக்கூடியவையுமான பொருட்களை விரும்பி பரிதாபத்துக்குரியவனாக வருந்துகிறாய்? நீ (உன் உடைமைகள் எப்படி இருந்தபோதிலும் புகழை அனுபவிக்கத்தக்கவனாக உன்னைச் செயல்பட வைப்பதற்கான) குறிப்பிட்ட மனோநிலையைக் குறித்துக் கேட்க விரும்புகிறாய். நான் உனக்குக் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால், விருப்பத்திற்குரிய அந்தப் பொருட்கள் யாவையும் துறந்துவிடுவாயாக. தவிர்க்கப்பட வேண்டிய பொருட்களே, முயற்சி செய்து அடைய வேண்டிய வடிவில் தோன்றும், அதே வேளையில், எவை முயற்சி செய்து அடையப்பட வேண்டுமோ, அவை தவிர்க்கப்பட வேண்டிய பொருட்களாகத் தோன்றும்.(37) சிலர் செல்வத்தைத் தேடியே செல்வத்தை இழக்கிறார்கள். வேறு சிலர் செல்வத்தை முடிவிலா இன்பத்தின் வேராகக் கருதி, அதை ஆவலுடன் பின்தொடர்கிறார்கள்.(38) மேலும் சிலர், செல்வத்தில் மகிழ்ந்து, அதைவிட வேறெதுவும் மேன்மையானதல்ல என நினைக்கிறார்கள். அத்தகு மனிதர்கள், செல்வத்தை அடையும் விருப்பத்தில் உள்ள தங்கள் ஆவலால், வாழ்வின் பிற நோக்கங்கள் அனைத்தையும் இழக்கிறார்கள்.(39) ஓ! கோசல இளவரசே, கடினமாக ஈட்டப்பட்டதும், தன் ஆசைகளின் அளவுக்கு இணையானதுமான செல்வத்தை ஒரு மனிதன் இழந்தால், {அதன் விளைவாக உண்டாகும்} துன்பத்தால் ஏற்படும் செயல்பாடின்மையில் மூழ்கி, செல்வம் குறித்த விருப்பம் அனைத்தையும் கைவிடுகிறான்.(40)

நல்லான்மாவையும், உயர்ந்த பிறப்பையும் கொண்ட சில மனிதர்கள், அறம் ஈட்டுவதில் ஈடுபடுகிறார்கள். மறுமையில் புகழை வெல்லும் விருப்பத்தால் அவர்கள் உலகம் சார்ந்த அனைத்து வகை இன்பங்களையும் துறக்கிறார்கள்.(41) சில மனிதர்கள், செல்வத்தை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்டுத் தங்கள் உயிரை இழக்கிறார்கள். செல்வத்தோடு தொடர்பில்லா வாழ்வில் எந்தப் பயனும் இல்லை என்றே அவர்கள் நினைக்கிறார்கள்.(42) அவர்களது பரிதாப நிலையைப் பார். அவர்களது மூடத்தனத்தைப் பார். வாழ்வென்பது மிகக் குறுகியது, நிச்சயமற்றது எனும்போது இம்மனிதர்கள், அறியாமையால் உந்தப்பட்டுத் தங்கள் கண்களைச் செல்வத்தில் நிலைக்கச் செய்கிறார்கள்.(43) அழிவே முடிவு எனும்போது கட்டடச்சாரங்களிலும், மரணமே முடிவு எனும்போது வாழ்விலும், பிரிவே முடிவு எனும்போது சேர்க்கையிலும் எவன் இதயத்தை நிலைக்கச் செய்வான்?(44) சில நேரங்களில் மனிதன் செல்வத்தைத் துறக்கிறான், மேலும் சிலநேரங்களில் செல்வம் மனிதனைத் துறக்கிறது. செல்வ இழப்பால் ஞானம் கொண்ட எந்த மனிதன் வருந்துவான்? செல்வத்தையும் நண்பர்களையும் இழக்கும் பலர் இந்த உலகத்தில் இருக்கின்றனர்.(45)

ஓ! மன்னா {க்ஷேமதர்சின்}, மனிதர்களுக்கு நேரும் இடர்கள் அனைத்தும் அவர்களுடைய சொந்த நடத்தையாலேயே நேர்கிறது என்பதைக் கண்டு புரிந்து கொள்வாயாக. எனவே நீ உன் புலன்கள், மனம் மற்றும் பேச்சைக் கட்டுப்படுத்துவாயாக.(46) ஏனெனில், இவை பலவீனமடைந்து, தீமையை உண்டாக்கினால் எந்த மனிதனும் எப்போதும் தன்னைச் சூழ்ந்திருக்கும் வெளிப்பொருட்களின் மேலுள்ள ஆசையில் {சபலத்தில்} இருந்து ஒருபோதும் விடுபட முடியாது. காலம் மற்றும் இடம் ஆகியவற்றில் பல இடைவெளிகள் இருப்பதால், கடந்த காலத்தைக் குறித்த போதுமான கருத்தையோ, எதிர்காலத்தைக் குறித்த முன்னுணர்தலையோ ஒருவனாலும் அமைத்துக் கொள்ள முடியாததைப் போலவே, இத்தகு ஞானமும், ஆற்றலும் கொண்ட உன்னைப் போன்ற ஒரு மனிதன், சேர்க்கை பிரிவு, நன்மை தீமை ஆகியவற்றுக்காக ஒருபோதும் துயரில் ஈடுபட மாட்டான்.(47) இத்தகு மென்மையான மனநிலை, நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா, முடிவுசெய்யப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றைக் கொண்டவனும், பிரம்மச்சரிய நோன்பை நோற்பவனுமான ஒரு மனிதன் துயரில் ஈடுபடாதவனாகவும், {எதையும்} அடையும் ஆசையில் ஒருபோதும் அமைதியற்றவனாக மாறாதவனாகவும், அற்ப மதிப்பைக் கொண்ட எதையும் இழப்பதற்கு அஞ்சாதவனாகவும் இருப்பான்.(48) அத்தகு மனிதன், பாவம் நிறைந்ததும், தீமையானதும், கொடுமையானதும், இழிந்தோருக்கு மட்டுமே தகுந்ததுமான ஆண்டி {பிச்சைக்காரன்} எனும் வஞ்சக வாழ்வைப் பின்பற்ற ஒரு போதும் தகுந்தவனாகான்[4].(49) பெருங்காட்டுக்குச் சென்று, தனியாக இருந்து, கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்டு, பேச்சையும், ஆன்மாவையும் கட்டுப்படுத்தி, அனைத்துயிரினங்களிடமும் கருணையால் நிறைந்து அங்கே இன்பமாக வாழ்வாயாக.(50)அருகே மனிதர்கள் இல்லாமல், பெரும் தந்தங்களுடைய யானைகளின் தோழமையில், காட்டின் விளைச்சலில் நிறைந்து உற்சாகமான இத்தகு வாழ்வைக் காட்டில் வாழ்வது ஞானியரின் நடத்தை எனச் சொல்லப்படுகிறது.(51) பெரும் தடாகம் ஒன்று கலங்கும்போது, தன் அமைதியைத் தானே மீட்கிறது. அதே போலவே, ஞானம் கொண்ட மனிதனும், இத்தகு காரியங்களில் குழப்பமடையும்போது, தானாகவே அமைதியடைகிறான். உன்னைப் போன்று இத்தகு பரிதாபகரமான நிலையில் வீழ்ந்த ஒரு மனிதன் இவ்வாறே மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றே நான் காண்கிறேன்.(52) உன் செழிப்பை மீட்பது கிட்டத்தட்ட முடியாதநிலையில், அமைச்சர்களும், ஆசோலகர்களும் இல்லாதவனாக இருக்கும்போது, இத்தகு வழியே உனக்குத் திறந்திருக்கிறது. விதியை நம்பிக்கொண்டிருப்பதால் எந்தப் பலனையும் அடைய முடியும் என்பதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார் {காலகவிருக்ஷீயர்}.(53)

நன்கு தீட்டப்பட்ட வஞ்சகத் திட்டங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 105-பகைவர்களை வெல்வதற்குப் பின்பற்றக்கூடிய வஞ்சகத் திட்டங்களைக் குறித்து க்ஷேமதர்சினுக்கும் காலகவிருக்ஷீயருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

தவசி {காலகவிருக்ஷீயர் கோசல நாட்டு இளவரசன் க்ஷேமதர்சினிடம்} சொன்னார், “ஓ! க்ஷத்திரியா, மறுபுறம், உன் நாட்டை மீட்பதற்கு உனக்கு இன்னும் ஆற்றல் இருப்பதாக நினைத்தால், நீ   பின்பற்ற வேண்டிய கொள்கை வழியைக் குறித்து உன்னோடு உரையாடுவேன்.(1) அந்தக் கொள்கை வழியை நீ பின்பற்றி, முயற்சி செய்ய முனைந்தால், உன்னால் உன் செழிப்பை மீட்க முடியும். விபரமாக நான் உனக்குச் சொல்லப்போகும் அனைத்தையும் கவனமாகக் கேட்பாயாக. அந்த ஆலோசனைகளின்படி உன்னால் செயல்பட முடிந்தால், அபரிமிதமான செல்வத்தையும், உண்மையில், உனது நாட்டையும், அரசு அதிகாரத்தையும், பெருஞ்செழிப்பையும் நீ அடைவாய்.(3) ஓ! மன்னா, நீ அதை விரும்பினால் எனக்குச் சொல்வாயாக, அப்போது நான் உனக்கு அந்தக் கொள்கையைக் குறித்துச் சொல்வேன்” {என்றார் காலகவிருக்ஷீயர்}.(4)

மன்னன் {க்ஷேமதர்சின் காலவிருக்ஷீயரிடம்}, “ஓ! புனிதமானவரே, நீர் சொல்ல விரும்புவதை எனக்குச் சொல்வீராக. உமது ஆலோசனைகளைக் கேட்பதற்கும், அதன்படி செயல்படுவதற்கும் நான் விரும்புகிறேன். இன்னும் உம்முடனான இந்தச் சந்திப்பு (எனக்கான) விளைவுகளில் பலன்நிறைந்ததாக இருக்கட்டும்” என்றான்.(5)தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, “செருக்கு, ஆசை, கோபம், இன்பம், அச்சம் ஆகியைவற்றைக் கைவிட்டு, பணிவுள்ளவனாகவும், கூப்பிய கரங்களுடனும் உன் எதிரிகளுக்காகக் காத்திருப்பாயாக {எதிரிகளுக்குப் பணிவிடை செய்வாயாக}? நல்லவையும், தூயவையுமான செயல்களை எப்போதும் செய்துவரும் மிதிலையின் ஆட்சியாளனான ஜனகனுக்கு நீ பணிவிடை செய்வாயாக. உண்மையில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருக்கும் அந்த விதேஹ மன்னன் {ஜனகன்}, நிச்சயம் உனக்குப் பெருஞ்செல்வத்தை அளிப்பான்.(7) நீ அந்த மன்னனுக்கு {ஜனகனுக்கு} வலக்கரமாகி, அனைத்து மனிதர்களின் நம்பிக்கையைப் பெறுவாயாக. அதன் விளைவாக, துணிவு, விடாமுயற்சி, தூய நடத்தை கொண்டவர்களும், முக்கியமான ஏழு குற்றங்களில் இருந்து விடுபட்டவர்களுமான பல கூட்டாளிகளை அடைவதில் நீ வெல்வாய்.(8) அடக்கப்பட்ட ஆன்மாவையும், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களையும் கொண்ட ஒரு மனிதன், தன் கடமைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், தன்னை உயர்த்திக் கொள்வதிலும், பிறரை இன்புறச் செய்வதிலும் வெல்வான்.(9) நுண்ணறிவையும், செழிப்பையும் கொண்ட ஜனகனால் கௌரவிக்கப்பட்டு, அந்த ஆட்சியாளனின் வலக்கரமாகி, நிச்சயம் நீ அனைவரின் நம்பிக்கையையும் அடைந்து மகிழ்வாய்.(10)

இவ்வாறு பெரும்படையைத் திரட்டி, நல்ல அமைச்சர்களுடன் ஆலோசித்து, உன் எதிரிகளுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்கி, ஒரு மனிதன் வில்வக்காயைக் கொண்டு மற்றொரு வில்வக்காயைப் பிளப்பதைப் போலவே அவர்களுக்குள் ஒருவரையொருவர் எதிர்க்கச் செய்வாயாக. அல்லது, உன் எதிரியின் எதிரிகளிடம் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, அவனது சக்தியை அழிப்பாயாக.(11) பிறகு, எளிதிற்கிடைக்காத நல்ல பொருட்களிலும், அழகிய பெண்களிலும், விலைமதிப்புமிக்கத் துணிமணிகள், படுக்கைகள், இருக்கைகள், மற்றும் வாகனங்களிலும், வீடுகளிலும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள் மற்றும் விலங்குகளிலும், சாறுகள், நறுமணப்பொருட்கள் மற்றும் கனிகளிலும் உன் எதிரியைப் பற்றுக் கொள்ளச் செய்து, அவனை அழிவடையச் செய்வாயாக[1].(13) ஒருவனுடைய எதிரி இவ்வாறு நிர்வகிக்கப்பட்டால், அல்லது அவனைக் கவனிக்காமல் விட்டால், நல்ல கொள்கையின் படி செயல்பட விரும்பும் ஒருவன், அந்த எதிரி ஒருபோதும் எதையும் அறியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்[2].(14) ஞானியரால் அங்கீகரிக்கப்பட்ட நடத்தையைப் பின்பற்றி, உன் எதிரியின் ஆட்சிப்பகுதிகளில் உள்ள அனைத்து வகை இன்பங்களிலும் இன்புற்று, நாய், மான், காகம் ஆகியவற்றின் நடத்தையைப் பின்பற்றி, உன் எதிரிகளிடம் வெளிப்படையான நட்புடன் நடந்து கொள்வாயாக.(15)பெரியவையும், நிறைவேற்றக் கடினமானவையுமான சாதனைகளை அவர்களை மேற்கொள்ளச் செய்வாயாக. மேலும் அவர்கள், பலமிக்க எதிரிகளுடன் பகைமையில் ஈடுபடும்படியும் பார்த்துக் கொள்வயாக.(16) இனிமையான நந்தவனங்கள், விலைமதிப்புமிக்கப் படுக்கைகள் மற்றும் இருக்கைகள் ஆகிவற்றில் அவர்களது கவனத்தைத் திருப்பி, அத்தகு இன்ப நுகர் பொருட்களை அளித்து, உன் எதிரிகளின் கருவூலத்தை வற்றச் செய்வாயாக.(17) உன் பகைவனை வேள்விகள் செய்ய வைத்து, கொடைகளை அளிக்க வைத்து, பிராமணர்களை நிறைவு செய்வாயாக. (உன் கரங்களால் அந்தப் பரிசுகளைப் பெற்ற) அவர்கள் {பிராமணர்கள்}, பதிலுக்கு (தவங்களையும், வேதச் சடங்குகளையும் செய்வதன் மூலம்) உனக்கு நன்மையைச் செய்து, ஓநாய்களைப் போல உன் எதிரிகளை விழுங்குவார்கள்.(18) நீதிமிக்கச் செயல்களைச் செய்யும் மனிதன் உயர்ந்த கதியையே அடைவான் என்பதில் ஐயமில்லை. அத்தகு செயல்களின் மூலம் மனிதர்கள், சொர்க்கத்தில் உயர்ந்த புகழ் உலகங்களை ஈட்டுவதில் வெல்கிறார்கள்.(19) (நல்ல, அல்லது நியாயமற்ற செயல்களின் மூலம்) உன் எதிரிகளின் கருவூலம் தீர்ந்து போனால், ஓ! கோசல இளவரசே, அவர்கள் ஒவ்வொருவரும் அடக்கப்பட வேண்டும்.(20)

கருவூலமே, சொர்க்கத்தில் புகழுக்கும், பூமியில் வெற்றிக்கும் வேராக இருக்கிறது. எதிரிகள் அவர்களுடைய கருவூலங்களின் விளைவாலேயே அத்தகு மகிழ்ச்சியில் இன்புற்றிருக்கிறார்கள். எனவே, அனைத்து வழிகளிலும் கருவூலமானது வற்றச் செய்யப்பட வேண்டும். உன் எதிரியின் முன்பு உழைப்பை மெச்சாதே, ஆனால் விதியை உயர்வாகப் பேசுவாயாக.(21) தேவர்களின் வழிபாடு சார்ந்த செயல்பாடுகளையே அதிகமாகச் சார்ந்திருக்கும் மனிதன் விரைவில் அழிவடைவான் என்பதில் ஐயமில்லை. நீ உன் எதிரியை விஸ்வஜித் என்றழைக்கப்படும் பெரும் வேள்வியைச் செய்ய வைத்து, அவனது உடைமைகளுக்கான வழிமுறைகள் அனைத்தையும் அவனை இழக்கச் செய்வாயாக.(22) இதன் மூலம் உனது நோக்கம் நிறைவேறும். (வற்றிய கருவூலத்தை மீண்டும் நிரப்புவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தி {மக்களின் பொருட்களை} மன்னன் அபகரித்து வருவதால்) நாட்டின் சிறந்த மனிதர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை உன் எதிரிக்குச் சொல்லி, (உலகம் சார்ந்த உடைமைகளை அனைத்தையும் எதிரியிடம் இருந்து வற்றச் செய்வதற்காக) யோகக் கடமைகளை நன்கறிந்த  உயர்ந்த தவசி எவரையாவது அவனுக்குச் சுட்டிக்காட்டுவாயாக.(23) அப்போது உன் எதிரி துறவைப் பின்பற்றி, முக்தி வேண்டி வனத்திற்குள் ஓய்ந்து போவான். பிறகு, எதிர்பார்க்கும் விளைவைத் தரக்கூடிய உயர்ந்த மூலிகைகள், செடிகள், செயற்கை உப்புகள் ஆகியவற்றைக் கொதிக்கச் செய்வதன் மூலம் உண்டாக்கப்பட்ட மருந்துகளின் உதவியுடன், (உன் எதிரியின் ஆட்சிப் பகுதிகளில் உள்ள) யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களை அழிப்பாயாக.(24) இவையும், வஞ்சனையுடன் தொடர்புடையவையும், நன்கு தீட்டப்பட்டவையுமான திட்டங்கள் பலவும் இருக்கின்றன. ஒரு நுண்ணறிவுமிக்க மனிதன், இவ்வாறே நஞ்சின் மூலம் ஓர் எதிரி நாட்டின் மக்கள் தொகையை அழிக்க முடியும்” என்றார் {காலகவிருக்ஷீயர்}.(25)

அமைதி நிறுவலே உயர்கடமை! – சாந்திபர்வம் பகுதி – 106-க்ஷேமதர்சினுக்கும், ஜனகனுக்கும் இடையில் நட்பை ஏற்படுத்திய காலகவிருக்ஷீயர்; க்ஷேமதர்சினை மரியாதையுடன் நண்பனாய் ஏற்று அவனுடன் உரையாடிய ஜனகன்; அமைதியை ஏற்படுத்திக் கொள்வதே மன்னர்களின் உயர்ந்த கடமையாகும் என்பதை விளக்க இந்தக் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்.

மன்னன் {க்ஷேமதர்சின் தவசி காலகவிருக்ஷீயரிடம்}, “ஓ! பிராமணரே, வஞ்சகம், அல்லது மோசடியின் மூலம் வாழ்வைத் தாங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. செல்வமானது எவ்வளவுதான் பெரியதாக இருப்பினும், நியாயமற்ற வழிமுறைகளில் ஈட்டப்படும் செல்வத்தை நான் விரும்பவில்லை.(1) நமது உரையாடலின் தொடக்கத்திலேயே நான் இந்த வழிமுறைகளைத் தவிர்த்தேன். நிந்தனைக்கு வழிவகுக்காதவையும், அனைத்து வகையிலும் எனக்கு நன்மையே செய்பவையும், விளைவுகளில் தீங்கில்லாதவையுமான செயல்களை மட்டுமே செய்து இந்த உலகில் நான் வாழ விரும்புகிறேன். நீர் சுட்டிக்காட்டும் வழிகளைப் பின்பற்ற இயலாதவனாக நான் இருக்கிறேன். உண்மையில், இந்தப் போதனைகள் எனக்குத் தகாது” என்றான்.(2,3)

தவசி {காலகவிருக்ஷீயர் கோசலநாட்டு இளவரசன் க்ஷேமதர்சினிடம்}, “ஓ! க்ஷத்திரியா, நீ சொல்லும் இந்த வார்த்தைகள் உன்னை அறவுணர்ச்சிகள் கொண்டவனாகச் சுட்டிக்காட்டுகின்றன. ஓ! பெரும் அனுபவம் கொண்டவனே, உண்மையில், மனோநிலையிலும், புத்தியிலும் நீ நீதிமானாக இருக்கிறாய்.(4) உனக்கும், அவனுக்கும் {விதேஹ ஆட்சியாளனான ஜனகனுக்கும்} நல்லது செய்ய நான் முயற்சிப்பேன். அழிவில்லாததும், வஞ்சனையில்லாததுமான ஒற்றுமையை உனக்கும் அந்த மன்னனுக்கும் இடையில் நான் ஏற்படுத்துவேன்.(5) உன்னதக் குலத்தில் பிறந்தவனும், நீதியற்றவையும், கொடூரமானவையுமான செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவனும், பெரும் கல்வி பயின்றவனும், அரசை நடத்துவது மற்றும் அனைத்து மனிதர்களுக்குள்ளும் இணக்கத்தை ஏற்படுத்தும் கலைகளை நன்கறிந்தவனுமான உன்னைப் போன்ற ஒருவனை அமைச்சனாக அடைய விரும்பாதவன் எவன் இருக்கிறான்?(6) ஓ! க்ஷத்திரியா {க்ஷேமதர்சின்}, நாட்டை இழந்து பெருந்துன்பத்தில் மூழ்கியிருப்பவனாக இருப்பினும், நீ நீதிமிக்க நடத்தையைப் பின்பற்றி வாழ விரும்புவதன் காரணமாகவே நான் இதைச் சொல்கிறேன்.(7) உண்மையை உறுதியாகக் கடைப்பிடிக்கும் விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்}, விரைவில் என் வசிப்பிடத்திற்கு வரப்போகிறான். நான் சொல்வதை அவன் நிச்சயமாகச் செய்வான்” என்றார் {காலகவிருக்ஷீயர்}”.(8)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இதன்பிறகு, விதேஹர்களின் ஆட்சியாளனை {ஜனகனை} அழைத்த அந்தத் தவசி {காலகவிருக்ஷீயர்}, அவனிடம் {ஜனகனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார், “இந்த மனிதன் {கோசல இளவரசன் க்ஷேமதர்சின்} அரச குடி பிறந்தவன். இவனது இதயத்தையே நான் அறிவேன்.(9) இவனது ஆன்மாவானது கண்ணாடியின் பரப்பையோ, கூதிர்கால நிலவு வட்டிலையோ போன்று தூய்மையானது. அனைத்து வழியிலும் நான் இவனைச் சோதித்துவிட்டேன். நான் இவனிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை.(10) இவனுக்கும் உனக்கும் இடையில் நட்பு இருக்கட்டும். என்னை நம்புவதைப் போலவே நீ இவனிடமும் நம்பிக்கை கொள்வாயாக. (தகுந்த) அமைச்சன் இல்லாத மன்னனால், தன் நாட்டை மூன்று நாட்களுக்குக் கூட ஆள முடியாது.(11) அமைச்சன், துணிவுமிக்கவனாகவும், பெரும் நுண்ணறிவு கொண்டவனாகவும் இருக்க வேண்டும். இந்த இரு பண்புகளைக் கொண்டே ஒருவனால் இருவுலகங்களையும் {இம்மையையும், மறுமையையும்} வெல்ல முடியும். ஓ! மன்னா {ஜனகனே}, ஒரு நாட்டை ஆள்வதற்கும் இந்த இரு பண்புகளே அவசியம் என்பதைக் காண்பாயாக.(12) நீதிமிக்க மன்னர்களுக்கு, இத்தகு பண்புகளைக் கொண்ட ஓர் அமைச்சனைவிட வேறு எந்தப் புகலிடமும் கிடையாது. இந்த உயர் ஆன்ம மனிதன் அரசகுல வழித்தோன்றலாவான். நீதியின் பாதையிலேயே இவன் {க்ஷேமதர்சின்} நடக்கிறான்.(13) அறத்தையே எப்போதும் நோக்கமாகக் கொண்ட இவன் அடைவதற்கு மதிப்புமிக்க ஒருவனாவான். உன்னால் கௌரவத்துடன் நடத்தப்பட்டால், இவன் உன் எதிரிகள் அனைவரையும் அடக்குவான்.(14) இவன் உன்னோடு போரிட்டால், ஒரு க்ஷத்திரியன் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வான். தன் தந்தைமார் மற்றும் பாட்டன்மாரின் நடத்தையைப் பின்பற்றி உன்னை வெல்ல அவன் போரிட்டால்,(15) எதிராளிகளை வெல்லும் க்ஷத்திரியக் கடமையை நோற்பவனாக நீ அவனோடு போர்புரிவதே உன் கடமையாக இருக்கும். எனினும், என் ஆணையின் பேரில் போரில் ஈடுபடாமல், உனக்கு நன்மை செய்யும் விருப்பத்தோடு இவனை உனக்குக் கீழ் நியமித்துக் கொள்வாயாக.(16) முறையற்ற பேராசையைக் கைவிட்டு அறத்தில் உன் கண்களைச் செலுத்துவாயாக. காமத்தாலோ, போரிடும் விருப்பத்தாலோ, உன் வகைக்கான கடமைகளைக் கைவிடுவது உனக்குத் தகாது.(17) ஓ! ஐயா, வெற்றி நிச்சயமானதில்லை. தோல்வியும் நிச்சயமானதில்லை. இதை நினைவில் கொண்டு, எதிரிக்கு உணவையும், பிற இன்ப நுகர் பொருட்களையும் கொடுத்து அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(18) வெற்றியையும், தோல்வியையும் ஒருவன் தன் வழக்கிலேயே காணலாம். ஓர் எதிரியை அழிக்க முனைபவர்கள், சில வேளைகளில் முயலும்போது தாங்களே அழிந்து விடுகிறார்கள்” என்றார் {காலகவிருக்ஷீயர்}.(19)

இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் ஜனகன், அனைத்துக் கௌரவங்களுக்கும் தகுந்தவரான அந்தப் பிராமணர்களில் காளையை {காலகவிருக்ஷீயரை} முறையாக வணங்கிக் கௌரவித்து, அவரிடம்,(20) “பெரும் கல்வியும், பெரும் ஞானமும் கொண்டவர் நீர். எங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில் நீர் எதைச் சொன்னீரோ, அது நிச்சயம் எங்கள் இருவருக்கும் பயன் பயக்கக்கூடியதே.(21) அவ்வாறு நடந்து கொள்வதே (எங்களுக்கு) உயர்ந்த நன்மையை அளிக்கும். இதைச் சொல்வதில் எனக்கு எத்தயக்கமும் இல்லை” என்றான் {ஜனகன்}.(22)

பிறகு அந்த விதேஹர்களின் ஆட்சியாளனானவன் {ஜனகன்}, கோசல இளவரசனிடம் {க்ஷேமதர்சினிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “க்ஷத்திரியக் கடமைகளை நோற்றும், கொள்கையின் உதவியுடனும் நான் இவ்வுலகை வென்றேன்.(23) எனினும், ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உன் நற்பண்புகளால் நான் வெல்லப்பட்டேன். அவமான உணர்வேதும் வளர்க்காமல் (என் அருகில் நீ இருந்தால்), ஒரு வெற்றியாளனாகவே நீ என்னுடன் வாழ்வாய்.(24) உன் நுண்ணறிவை நான் மதிக்கிறேன், உன் ஆற்றலை நான் மதிக்கிறேன். நான் உன்னை வென்றுவிட்டேன் என்று சொல்லி நான் உன்னை அவமதிக்கமாட்டேன். மறுபுறம், ஒரு வெற்றியாளனாகவே நீ என்னுடன் வாழ்வாயாக.(25) ஓ! மன்னா, என்னால் முறையாகக் கௌரவிக்கப்பட்டு என் வசிப்பிடத்திற்குச் செல்வாயாக” என்றான் {ஜனகன்}.பிறகு அந்தப் பிராமணரை {காலகவிருக்ஷீயரை} வணங்கிய மன்னர்கள் இருவரும், ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை கொண்டு, *மிதிலையின் தலைநகரத்திற்குச் சென்றனர்.(26) விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்}, அந்தக் கோசல இளவரசனை {க்ஷேமதர்சினைத்} தன் வசிப்பிடத்திற்குள் நுழையச் செய்து, அனைத்து கௌரவங்களுக்கும் தகுந்த அவனுக்கு, கால்கழுவ நீரையும், தேன் மற்றும் தயிர்க்கடைசல்களையும் {மதுபர்க்கங்களையும்}, மற்றும் வழக்கமான பொருட்களையும் கொடுத்து கௌரவித்தான்.(27)

மேலும் மன்னன் ஜனகன், பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் நகைகளுடன் சேர்த்துத் தன் சொந்த மகளையே அவனுக்கு {க்ஷேமதர்சினுக்கு} அளித்தான் {திருமணம் செய்து கொடுத்தான்}. இதுவே (அமைதியை ஏற்படுத்துவதே) மன்னர்களின் உயர்ந்த கடமையாகும்; வெற்றி, தோல்வி ஆகிய இரண்டும் நிச்சயமற்றதாகும்” {என்றார் பீஷ்மர்}.(28)

உயர்குடியினர்! – சாந்திபர்வம் பகுதி – 107-உயர்குடியினருக்கும் மன்னர்களுக்கும் இடையில் பகைமை உண்டாகும் காரணங்கள்; உயர்குடியினர் ஒற்றுமையுடன் இருந்தால் நாட்டுக்கு ஏற்படும் நன்மைகள்; பெருந்திரள் மக்களைத் துயரம் மற்றும் ஆபத்தில் இருந்து காக்கக்கூடிய உயர் குடியினர் யாவர்; உயர்குடியினர் மன்னனிடம் இருந்து விலக வழிவகுக்கும் காரணங்கள்; உயர்குடியினரால் நாட்டுக்கு ஏற்படும் அச்சம்; உயர்குடியினருக்கு மத்தியில் உண்டாகக்கூடிய வேற்றுமை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு விரிவாகச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! எதிரிகளை எரிப்பவரே, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களுக்குரிய கடமைகளின் வழி, பொது நடத்தை {ஒழுக்கம்}, வாழ்வாதார வழிமுறைகள் ஆகியவற்றையும், அவற்றின் விளைவுகளையும் நீர் விளக்கிச் சொல்லியிருக்கிறீர்.(1) மன்னர்களின் கடமைகள், அவர்களின் கருவூலங்கள், அவற்றை நிரப்பும் வழிமுறைகள், படையெடுப்பு மற்றும் வெற்றி ஆகியவற்றைக் குறித்தும் சொன்னீர். அமைச்சர்களின் சிறப்பியல்புகள், குடிமக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள்,(2) ஒரு நாட்டினுடைய ஆறு அங்கங்களின் சிறப்பியல்புகள், படைகளின் தரம், தீயோரை அடையாளங்காணும் வழிமுறைகள், நல்லோரின் அறிகுறிகள்,(3) நடுநிலையுடன் இருப்போர், தாழ்ந்தோர், மேன்மையானோர் ஆகியோரின் பண்புகள், முன்னேற்றத்தை விரும்பும் மன்னன் பெருந்திரள் மக்களிடம் பின்பற்ற வேண்டிய நடத்தை,(4) பலவீனர்கள் பாதுகாக்கப்பட்டுப் பேணி வளர்க்கப்பட வேண்டிய பாங்கு ஆகியவற்றைக் குறித்தும் நீர் சொல்லியிருக்கிறீர். ஓ! பாரதரே, இந்தக் காரியங்கள் அனைத்தையும் குறித்து, புனித உடன்படிக்கைகளில் ஆழப் பதியப்பட்டிருக்கும் அறிவுரைகளை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்.(5)

எதிரிகளை வெல்ல விரும்பும் மன்னர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தையைக் குறித்தும் நீர் சொல்லியிருக்கிறீர். ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, ஒரு மன்னைச் சுற்றிக் கூடியிருக்கும் துணிச்சல் மிக்க மனிதக்கூட்டத்திடம் {உயர்குடிமக்களிடம்} நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து நான் இப்போது கேட்க விரும்புகிறேன்[1].(6) ஓ! பாரதரே, அவர்கள் {கூட்டங்கள்} எவ்வாறு வளர முடியும்? மன்னனிடம் அவர்கள் எவ்வாறு பற்றுடனிருக்க முடியும்? எதிரிகளை அடக்குவதிலும், நண்பர்களை அடைவதிலும் அவர்கள் எவ்வாறு வெல்வார்கள்?(7) வேற்றுமை மட்டுமே அவர்களுக்கு அழிவைக் கொண்டுவரும் என்று எனக்குத் தோன்றுகிறது. பலருக்குத் தொடர்பேற்படும்போது, ஆலோசனைகளை எப்போதும் இரகசியமாக வைத்துக் கொள்வது மிகக் கடினமானது என நான் நினைக்கிறேன். ஓ! எதிரிகளை எரிப்பவரே {பீஷ்மரே}, இது குறித்த அனைத்தையும் நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். ஓ! மன்னா, மன்னனிடம் இருந்து அவர்கள் விலகுவதைத் தடுக்கும் வழிமுறைகளையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(9)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, ஒருபுறமிருக்கும் உயர் குடியினருக்கும், மறுபுறமிருக்கும் மன்னர்களுக்கும் இடையில் பகைமையை உண்டாக்கும் காரணங்களாகப் பேராசையும், கோபமும் இருக்கின்றன[2].(10) இவர்களில் ஒரு தரப்பினர் (மன்னர்கள், அல்லது உயர்குடியினர்) பேராசைக்கு இரையாகின்றனர். அதன் விளைவாக அடுத்தத் தரப்புக்கு (உயர் குடியினர் அல்லது மன்னர்களுக்கு) கோபமேற்படுகிறது. அடுத்தவரை பலவீனமடையச் செய்து, வீணாக்க முனையும் அந்த இரு தரப்பும் அழிவையே அடைகிறது.(11) ஒற்றர்களை நியமித்து, கொள்கையையும், உடல்சக்தியும் கொண்டு திட்டத்தை வகுத்து, இணக்கம் {சாம}, ஈகை {தான}, வேற்றுமை {பேதம்} ஆகிய கலைகளைப் பின்பற்றி, பலவீனம், வீணாக்குதல், அச்சம் ஆகியவற்றை உண்டாக்கக்கூடிய பிற வழிமுறைகளையும் பயன்படுத்தி அந்தத் தரப்புகள் {மன்னர் தரப்பினரும், உயர் குடி தரப்பினரும்} ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வார்கள்.(12) கச்சிதமான அமைப்பின் சிறப்பியல்புகளுடன் கூடியவர்களான ஒரு நாட்டின் உயர் குடிமக்கள், அவர்களிடம் இருந்து மன்னன் அதிகம் பறிக்க முயன்றால், அவனிடம் இருந்து ஒதுங்கி விடுவார்கள். மன்னனிடம் இருந்து ஒதுங்கி, நிறைவில்லாமல் இருக்கும் அவர்கள் அனைவரும், அச்சத்தின் காரணமாகத் தங்கள் ஆட்சியாளனுடைய எதிரிகளின் தரப்பை அடைவார்கள்.(13) மேலும் ஒரு நாட்டின் உயர்குடிமக்கள் தங்களுக்குள்ளேயே ஒற்றுமையின்றி இருந்தால் அவர்கள் அழிவையே அடைவார்கள். ஒற்றுமையில்லாத அவர்கள் எளிதாக எதிரிக்கு இரையாக விழுவார்கள். எனவே, உன்னதமானவர்கள், எப்போதும் ஒரே கருத்துடன் செயல்பட வேண்டும்.(14) அவர்கள் ஒற்றுமையாக இருந்தால், தங்கள் பலம் மற்றும் ஆற்றலின்மூலம் அவர்கள் மதிப்புமிக்க உடைமைகளை ஈட்டுவார்கள். உண்மையில் அவர்கள் இவ்வாறு ஒற்றுமையுடன் இருந்தால், வெளித்தரப்பினர் பலர் அவர்களின் கூட்டணியை நாடுவார்கள்.(15)

அன்பெனும் கட்டுக்குள் ஒருவரோடொருவர் ஒற்றுமையாக இருக்கும் அந்த உன்னதமானவர்களை ஞானிகள் மெச்சுகின்றனர். காரியத்தோடு ஒற்றுமையாக இருந்தால், அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.(16) ({பிறருக்கு} எடுத்துக்காட்டாக இருப்பதன் மூலம்) ஒழுக்கத்திற்கான அறவழிகளை அவர்களால் நிறுவ முடியும். முறையாக நடந்து கொள்வதால் அவர்கள் செழிப்பில் முன்னேற முடியும்.(17) உயர்குடி மக்கள், தங்கள் மகன்கள், உடன்பிறந்தோர் ஆகியோரைக் கட்டுப்படுத்தி, அறிவால் செருக்கு தணிந்த மனிதர்கள் அனைவரிடமும் அன்பாக நடந்து கொண்டு செழிப்பில் முன்னேறுவார்கள்.(18) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உயர்குடிமக்கள், ஒற்றர்களை நிறுவும் தங்கள் கடமைகளைக் கவனித்து, கொள்கை வழிமுறைகளையும், கருவூலங்களை நிரப்பும் வழிமுறைகளையும் தீட்டி, செழிப்பில் முன்னேறுவார்கள்.(19) உயர்குடிமக்களானவர்கள், ஞானம், துணிவு, விடாமுயற்சி ஆகியவற்றைக் கொண்டோருக்கு உரிய மரியாதையைச் செலுத்தி, அனைத்து வகைப் பணிகளிலும் உறுதியான ஆற்றலை வெளிப்படுத்தி, செழிப்பில் முன்னேறுவார்கள்.(20)

செல்வம், வளம், சாத்திர அறிவு, கலைகள் மற்றும் அறிவியல்கள் அனைத்தின் அறிவு ஆகியவற்றைக் கொண்ட உயர்குடி மக்கள், அறியாமையில் உள்ள பெருந்திரள் மக்களை அனைத்து வகைத் துயரம் மற்றும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார்கள்.(21) ஓ! பாரதர்களின் தலைவா, (மன்னனின் பங்குக்கு) கோபம், முறிவு, அச்சம், தண்டனை, ஒறுப்பு, ஒடுக்குதல், கொலை ஆகியவை உன்னதக் குடிமக்களை மன்னனிடம் இருந்து விலகச் செய்து, மன்னனுடைய எதிரிகளின் தரப்பை அடையச் செய்கிறது.(22) எனவே, மன்னனால் அந்த உயர் குடிமக்களின் தலைவர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நாட்டின் காரியங்கள் பெருமளவில் அவர்களைச் சார்ந்தே இருக்கின்றன.(23) ஓ! பகைவர்களை நொறுக்குபவனே, உயர்குடி மக்களின் தலைவர்களிடம் மட்டுமே ஆசோலனைகள் செய்யப்பட வேண்டும், அவர்களிடம் மட்டுமே ஒற்றர்களும் இருக்க வேண்டும். ஓ! பாரதா, உயர்குடியின் ஒவ்வொரு நபரிடமும் மன்னன் ஆலோசிக்கக்கூடாது.(24) மன்னன், அந்தத் தலைவர்களுடன் இணக்கமாக நடந்து கொண்டு, மொத்த வகையினருக்கும் நன்மை செய்ய வேண்டும். எனினும், அந்த உயர்குடி கூட்டமானது, பிளவடைந்து, வேற்றுமையடைந்து, தலைவர்கள் அற்றுப் போனால், வேறு வகைச் செயல்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும்.(25)

உயர்குடி மக்கள் தங்களுக்குள் ஒருவரோடொருவர் சச்சரவு செய்து கொண்டு, தங்கள் வளங்களுக்கேற்ற வகையில் ஒவ்வொருவரும் ஒற்றுமையில்லாமல் செயல்பாட்டால், அவர்களது செழிப்பானது தேய்ந்துபோகும், பல்வேறு வகைத் தீமைகளும் நேரும்.(26) அவர்களில் கல்வியும், ஞானமும் கொண்டோர், ஒரு சச்சரவு தோன்றிய உடனேயே அதைக் களைய வேண்டும். உண்மையில், ஒரு குலத்தின் பெரியோர், அலட்சியத்துடன் நடந்து கொண்டால், அந்தக் குலத்தினர் மத்தியில் கலகம் பிறக்கும். அத்தகு கலகங்களே ஒரு குலத்தின் அழிவாகி, உன்னதமானவர்களுக்கு மத்தியில் (உயர்குடியினர் அனைவருக்கும் மத்தியில்) வேற்றுமையை உண்டாக்கும்.(27) ஓ! மன்னா, உள்ளே இருந்து எழும் அச்சங்கள் அனைத்தில் இருந்தும் உன்னைப் பாதுகாத்துக் கொள்வாயாக. வெளியில் இருந்து எழும் அச்சங்கள் அற்ப விளைவுகளையே உண்டாக்கும். ஓ! மன்னா, முதல் வகை அச்சமானது {உட்பகையானது}, ஒரே நாளில் உன் வேரையே அறுத்துவிடும்.(28) குலத்தாலும், குருதியாலும் ஒருவருக்கொருவர் இணையான மனிதர்கள், தங்கள் இயல்பில் இருந்து எழும் கோபம், அல்லது மடமை, அல்லது பேராசை ஆகியவற்றால் ஒருவரோடொருவர் பேசுவதையும் நிறுத்திவிடுவார்கள். இது தோல்வியின் அறிகுறியாகும். துணிவாலோ, நுண்ணறிவாலோ, அழகாலோ, செல்வத்தாலோ எதிரிகள் உயர்குடியை அழிப்பதில்லை. வேற்றுமையாலும் {பேதமுறையினாலும்}, கொடைகளாலும் {தானமுறையாலும்} மட்டுமே அதை அடக்க முடியும். இதன் காரணமாகவே, ஒற்றுமை ஒன்றே உயர்குடியின் பெரும்புகலிடமாகச் சொல்லப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}.(29-31)

தாய், தந்தை, ஆசான்! – சாந்திபர்வம் பகுதி – 108-கடமைகள் அனைத்திலும் முக்கியமானவை எவை என யுதிஷ்டிரன் கேட்பது; தாய், தந்தை, ஆசான் ஆகியோரை வழிபடுவதே முக்கியக் கடமை என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷமரிடம்}, “கடமையின் பாதை நீண்டதாகும். ஓ! பாரதரே, மேலும் அது பல கிளைகளைக் கொண்டதாக இருக்கிறது. எனினும், உம்மைப் பொறுத்தவரையில், நடைமுறையில் பின்பற்ற மிகத் தகுந்தவை எவை?(1) உம்மைப் பொறுத்தவரையில், இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த தகுதியை எனக்கு ஈட்டித் தருபவையும், கடமைகள் அனைத்திலும் மிக முக்கியமானவையுமான செயல்கள் எவை?” என்று கேட்டான்.(2)ஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “என்னைப் பொறுத்தவரையில் தாய், தந்தை, ஆசான் ஆகியோரை வழிபடுவதே மிக முக்கியமானது. இம்மையில் அக்கடமையைச் செய்யும் மனிதன், பெரும் புகழையும், புகழுலகங்கள் பலவற்றையும் ஈட்டுவதில் வெல்கிறான்.(3) ஓ! யுதிஷ்டிரா, அவர்கள் மரியாதையுடன் வழிபடப்பட்டு, அறத்திற்கு இசைவாகவோ, இல்லாமலோ அவர்களால் ஆணையிடப்படும் எதுவும் எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.(4) அவர்கள் தடை செய்ததை ஒருவன் ஒருபோதும் செய்யக்கூடாது. அவர்கள் எதை ஆணையிடுவார்களோ, அஃது எப்போதும் நிச்சயம் செய்யப்பட வேண்டும்.(5) மூவுலகங்கள் அவர்களே. மூன்று வாழ்வுமுறைகளும் அவர்களே. மூன்று வேதங்களும் அவர்களே. மூன்று புனித நெருப்புகளும் அவர்களே.(6) கார்ஹபத்ய நெருப்பாகத் தந்தை சொல்லப்படுகிறார்; தக்ஷிண நெருப்பாகத் தாய் சொல்லப்படுகிறார்; ஆகுதி ஊற்றப்படும் {ஆஹவநீ} நெருப்பாக ஆசான் சொல்லப்படுகிறார். உண்மையில் இந்த மூன்று நெருப்புகளும் மிக உயர்ந்தவையாகும். இந்த மூன்று நெருப்புகளிலும் நீ கவனத்தோடு இருந்தால், மூவுலகங்களையும் நீ வெல்வாய்.(7)

முறைமையுடன் தந்தைக்குத் தொண்டாற்றினால் ஒருவன் இவ்வுலகைக் கடக்கலாம். அதே வழியில் தாய்க்குத் தொண்டாற்றினால், அவன் மறுமையில் புகழுலகங்களை அடையலாம். முறைமையுடன் ஆசானுக்குத் தொண்டாற்றினால், ஒருவன் பிரம்மலோகத்தையே அடையலாம்.(8) ஓ!பாரதா {யுதிஷ்டிரா}, இந்த மூவரிடமும் முறையாக நடந்து கொண்டால், நீ மூவுலகங்களிலும் புகழையடைவாய், அருளப்பட்டவனாவாய், உன் தகுதியும் {புண்ணியமும்}, வெகுமதியும் பெரியதாக இருக்கும்.(9) எச்செயலையும் ஒருபோதும் அவர்களை மீறிச் செய்யாதே. அவர்கள் உண்பதற்கு முன் நீ உண்ணாதே, அவர்கள் உண்பதைவிடச் சிறந்த எதையும் நீ உண்ணாதே. அவர்களின் மேல் எந்தக் குற்றத்தையும் ஒருபோதும் சுமத்தாதே. ஒருவன் எப்போதும் அவர்களிடம் பணிவுடன் தொண்டாற்ற வேண்டும். அதுவே உயர்ந்த தகுதியை {புண்ணியத்தைக்} கொண்ட ஒரு செயலாகும்.(10) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இவ்வழியில் செயல்பட்டால், புகழ், தகுதி, கௌரவம், மறுமையில் புகழ் உலகங்கள் ஆகியவற்றை அடைவாய். எவன் இவர்களைக் கௌரவிப்பானோ, அவன் மூவுலகங்களிலும் கௌரவிக்கப்படுவான்.(11)

மறுபுறம், எவன் இவர்களை அவமதிப்பானோ, அவன் செய்யும் எந்தச் செயல்களிலும் எந்தத் தகுதியும் {புண்ணியத்தையும்} அடையமாட்டான். ஓ! எதிரிகளை எரிப்பவனே {யுதிஷ்டிரனே}, அத்தகு மனிதன் இம்மையும், மறுமையும் அடைவதில்லை.(12) இந்த மூன்று பெரியோரையும் எவன் எப்போதும் அவமதிப்பானோ, அவன் இம்மையிலும் மறுமையிலும் ஒருபோதும் புகழை அடையமாட்டான். அவன் மறுமையில் எந்த நன்மையையும் ஒருபோதும் ஈட்டமாட்டான்.(13) இந்த மூவரைக் கௌரவிக்கும் வகையில் நான் கொடுத்த அனைத்தும் அதன் உண்மை அளவைவிட நூறு மடங்காகவோ, ஆயிரம் மடங்காகவோ ஆனது. ஓ! யுதிஷ்டிரா, அந்தத் தகுதியின் விளைவாகவே, நான் என் கண்களால் மூவுலகங்களையும் தெளிவாகக் காண்கிறேன்.(14) ஓர் ஆச்சாரியர் {ஆசிரியர்}, கல்வி கற்ற பத்து பிராமணர்களைவிட மேன்மையானவராவார். ஓர் உபாத்யாயர் {துணையாசிரியர்}, பத்து ஆச்சாரியர்களைவிட மேன்மையானவராவார். தந்தை, பத்து உபாத்யாயர்களைவிட மேன்மையானவராவார். தாயானவள், பத்து தந்தைகளைவிட, முக்கியத்துவத்தைப் பொறுத்தவரையில் ஒருவேளை, மொத்த உலகையும்விட மேன்மையானவளாவாள்.(15,16)

எனினும், ஓர் ஆசான், தந்தையையும், தாயைவிடவும் கூட அதிக மதிப்புக்குத் தகுந்தவர் என்பது என் கருத்து. தந்தையும், தாயும் ஒருவனைப் படைக்கிறார்கள்.(17) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தந்தையும், தாயும் உடலை மட்டுமே உண்டாக்குகிறார்கள். மறுபுறம், தன் ஆசானிடம் இருந்து ஒருவன் பெறும் பிறவியானது தெய்வீகமானதாகும். அந்த வாழ்வானது சிதைவும் {முதுமையும்}, அழிவும் இல்லாததாகும்.(18) தந்தையும், தாயும் எக்குற்றமிழைத்தாலும் அவர்கள் கொல்லப்படக்கூடாது. (தண்டனைக்குத் தகுந்தவர்களாக இருப்பினும்) ஒரு தந்தையையும், ஒரு தாயையும் தண்டிக்காமல் இருப்பதால் ஒருவன் பாவமிழைத்தவன் ஆகமாட்டான். உண்மையில், தண்டனையிலிருந்து தப்பும் அத்தகு மதிப்புக்குரிய மனிதர்கள் மன்னனைக் களங்கப்படுத்துவதில்லை. பாவம் நிறைந்த தந்தையை மதிப்புடன் பேணி வளர்க்க முயலும் மனிதர்களுக்குத் தேவர்களும், முனிவர்களும் தங்கள் உதவிகளை நிறுத்துவதில்லை.(19) உண்மையான கல்வியைக் கொடுப்பது, வேதங்களைச் சொல்வது, அழிவில்லா ஞானத்தைக் கொடுப்பது ஆகிய காரியங்களால் ஒரு மனிதனுக்கு உதவுபவர், தந்தையாகவும், தாயாகவும் கருதப்பட வேண்டும். ஆசானின் செயலை நன்றியுடன் நினைவுகூரும் சீடன், எதற்காகவும் ஒருபோதும் அவருக்கு எத்தீங்கையும் செய்யக்கூடாது.(20)

ஆசான்களிடம் இருந்து கல்வியை அடைந்த பிறகு, எண்ணத்தாலும், செயலாலும் கடமையுணர்வுடன் அவர்களுக்குக் கீழ்ப்படியாமல், அவர்களை மதிக்காமல் இருப்போர் கருவைக் கொன்ற பாவத்தை இழைக்கிறார்கள். அவர்களைப் போன்ற பாவிகள் இவ்வுலகில் வேறு எவரும் இல்லை. ஆசான்கள் எப்போதும் தங்கள் சீடர்களிடம் பெரும் அன்பை வெளிப்படுத்துவார்கள். எனவே, சீடர்களும் ஒப்பிடத்தக்க தங்கள் மரியாதையை அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.(21) எனவே, பழங்காலத்தில் இருந்த உயர்ந்த தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட விரும்பும் ஒருவன், தன் ஆசான்களைப் போற்றி வழிபட்டு, அனைத்து இன்பநுகர் பொருட்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.(22) தன் தந்தையை எவன் நிறைவு கொள்ளச் செய்கிறானோ, அவனிடம் பிரஜாபதி நிறைவுடன் இருக்கிறார். தன் தாயை எவன் நிறைவு கொள்ளச் செய்கிறானோ, அவன் பூமாதேவியையே நிறைவுகொள்ளச் செய்கிறான்.(23) எவன் தன் ஆசானை நிறைவுகொள்ளச் செய்கிறானோ, அவன் அச்செயலால் பிரம்மனையே நிறைவுகொள்ளச் செய்கிறான். இதன் காரணமாகவே, ஓர் ஆசான், தந்தையையோ, தாயையோ விடப் பெரும் மதிப்புக்குத் தகுந்தவராக இருக்கிறார்.(24) ஆசான்கள் வழிபடப்பட்டால், முனிவர்களுடனும், தேவர்களுடனும் சேர்ந்த பித்ருக்கள் அனைவரும் நிறைவடைகிறார்கள். எனவே, ஆசான் என்பவர் உயர்ந்த மதிப்புக்குத் தகுந்தவராவார்.(25)

ஆசானானவர், ஒரு சீடனால் எவ்வகையிலும் ஒருபோதும் அலட்சியம் செய்யப் {அவமதிக்கப்} படக்கூடாது. தாயோ, தந்தையோ கூட ஆசானின் அளவுக்கு மதிப்புக்குத் தகுந்தவர்கள் இல்லை.(26) தந்தை, தாய், ஆசான் ஆகியோர் ஒருபோதும் அவமதிக்கப்படக்கூடாது. அவர்களுடைய எச்செயலிலும் குற்றம் காணக்கூடாது. எவன் தன் ஆசான்களிடம் மதிப்புடன் நடந்து கொள்கிறானோ, அவனிடம் தேவர்களும், பெரும் முனிவர்களும் நிறைவு கொள்கிறார்கள்.(27) எண்ணத்தாலோ, செயலாலோ ஆசான்கள், அல்லது தந்தைமார், அல்லது தாய்மார் ஆகியோருக்குத் தீங்கிழைப்பவர்கள், ஒரு கருவைக் கொன்ற பாவத்தை இழைக்கிறார்கள். அவர்களுக்கு இணையான பாவிகள் இவ்வுலகில் வேறு எவரும் இல்லை.(28) தந்தையின் மடியிலும், தாயின் கருவறையிலும் பிறந்த ஒரு மகன், அவர்களால் வளர்க்கப்பட்டு, வயதடையும்போது தன் பங்குக்கு அவர்களை ஆதரிக்காமல் போனால், அவன் ஒரு கருவைக் கொன்ற பாவத்தை இழைக்கிறான். அவனுக்கு இணையான பாவி இவ்வுலகில் வேறு எவனும் இல்லை.(29) ஒரு நண்பனுக்குத் தீங்கிழைப்பவன், நன்றியில்லாதவன், ஒரு பெண்ணைக் கொல்பவன், ஓர் ஆசானைக் கொல்பவன் ஆகிய நால்வரும் {பாவங்களில் இருந்து} தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டதாக நாம் ஒருபோதும் கேள்விப்படுவதில்லை.(30) இவ்வுலகில் ஒரு மனிதன் பொதுவாகச் செய்ய வேண்டிய அனைத்தையும் நான் இப்போது உனக்குச் சொல்லிவிட்டேன். நான் சொன்ன கடமைகளைத் தவிர்த்து, பெரும் புகழை உண்டாக்கக்கூடியவை வேறு {செயல்கள்} எவையும் இல்லை. கடமைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, அவற்றின் சாரத்தை நான் உனக்குச் சொல்லிவிட்டேன்” என்றார் {பீஷ்மர்}.(31)

ஸநாதன தர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 109-உண்மை மற்றும் பொய்ம்மையின் பண்புகளையும், அவையிரண்டும் பயன்படுத்தப்பட வேண்டிய நேரங்களையும், அழிவில்லா அறமான நித்திய கடமையையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, அறத்தைக் கடைப்பிடிக்க விரும்பும் ஒரு மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும்? ஓ! பாரதக் குலத்தின் காளையே, கல்விமானான நீர் என்னால் கேட்கப்படும் இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பீராக.(1) உண்மை மற்றும் பொய்ம்மை ஆகியன உலகங்கள் அனைத்தையும் சூழ்ந்தபடியே இருக்கின்றன. ஓ! மன்னா, அறத்தில் உறுதியாக இருக்கும் மனிதன் இவை இரண்டில் எதைப் பின்பற்ற வேண்டும்?(2) மேலும், உண்மை என்றால் என்ன? பொய்ம்மை என்றால் என்ன? மேலும் அழிவில்லா அறம் {ஸநாதன தர்மம்} என்பது என்ன? எச்சமயத்தில் ஒரு மனிதன் உண்மையைச் சொல்ல வேண்டும், மேலும் எச்சமயத்தில் பொய்யைச் சொல்ல வேண்டும்?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உண்மையைச் சொல்வதே அறத்திற்கு இசைவானது. உண்மையைவிட வேறு உயர்ந்தது ஏதும் கிடையாது. ஓ! பாரதா, பொதுவாக மனிதர்கள் அறியாததை நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன்.(4) எங்கே பொய்ம்மை, உண்மையின் தன்மையை ஏற்குமோ, அங்கே உண்மை சொல்லப்படக்கூடாது. மேலும், எங்கே உண்மையானது, பொய்ம்மையின் தன்மையை ஏற்குமோ, அங்கே பொய்மையும்கூடச் சொல்லப்படலாம்[1].(5) அறத்தின் தொடர்பறுந்த உண்மையைச் சொல்லும் அறியாமை கொண்ட மனிதன் பாவத்தையே இழைக்கிறான். பொய்ம்மையில் இருந்து உண்மையை வேறுபடுத்திப் பார்க்க முடிந்த மனிதனே கடமைகளை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்[2].(6) மதிக்கத்தகாதவனும், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனும், மிகக் கொடூரமானவனுமான ஒரு மனிதனும் கூட, (அனைத்து உயிரினங்களையும் அழிக்க அச்சுறுத்திய) குருட்டு விலங்கைக் கொன்றதன் மூலம் வேடன் பலாகன்[3] அடைந்த பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட முடியும்.(7) மூட அறிவு கொண்ட ஒரு மனிதன், (கடுந்தவங்களின் மூலம்) தகுதியை அடைய விரும்பினாலும், பாவம் நிறைந்த ஒரு செயலை அவனால் செய்ய முடியும்[4]. மேலும் கங்கைக் கரையில் உள்ள ஓர் ஆந்தையானது, (நியாயமற்ற ஒரு செயலைச் செய்ததன் மூலம்) பெரும் தகுதியை அடைந்தது[5].(8)அறம் எதுவெனச் சொல்வது கடினமானதாகையால், நீ என்னிடம் கேட்ட கேள்வி மிகக் கடினமானதே. அதைச் சுட்டிக்காட்டுவது எளிதன்று. அறம் குறித்து உரையாடும் எவராலும் அதைச் சரியாகச் சுட்டிக்காட்ட முடியாது.(9) அறமானது, உயிரினங்கள் அனைத்தின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்காகவுமே (பிரம்மனால்) அறிவிக்கப்பட்டது. எனவே, எது முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்குமோ, அதுவே அறமாகும்.(10) உயிரினங்கள் ஒன்றையொன்று காயப்படுத்துவதைத் தவிர்க்கவே அறம் அறிவிக்கப்பட்டது. எனவே, எது உயிரினங்களைத் தீங்கு செய்வதில் இருந்து தவிர்க்குமோ அதுவே அறமாகும்.(11) அறமானது {தர்மமானது}, உயிரினங்கள் அனைத்தையும் தூக்கி நிறுத்துவதாலேயே அஃது அவ்வாறு அழைக்கப்படுகிறது. உண்மையில் அனைத்து உயிரினங்களும் அறத்தாலேயே தூக்கி நிறுத்தப்படுகின்றன. எனவே, உயிரினங்கள் அனைத்தையும் தூக்கி நிறுத்தவல்லது எதுவோ அதுவே அறமாகும்.(12) ஸ்ருதிகளில் பதியப்பட்டிருப்பவற்றைக் கொண்டதே அறம் எனச் சிலரால் சொல்லப்படுகிறது. வேறு சிலர் இஃதை ஏற்பதில்லை. அவ்வாறு சொல்வோரை நான் கண்டிக்கமாட்டேன். மேலும், அனைத்தும் ஸ்ருதிகளில் சொல்லப்படவில்லை[6].(13)

சில வேளைகளில், பிறரின் செல்வத்தை அடைய விரும்பும் மனிதர்கள் (கள்வர்கள்), (கொள்ளைச் செயலுக்கு உதவிபுரிவதற்காக) இது குறித்து விசாரிக்கின்றனர். ஒருவன், அத்தகு கேள்விகளுக்கு ஒருபோதும் பதிலளிக்கக்கூடாது. அது தீர்மானிக்கப்பட்ட கடமையாகும்.(14) அமைதியாயிருப்பதன் மூலம், ஒருவன் தப்ப முடியுமென்றால், அவன் அமைதியாகவே இருக்க வேண்டும். மறுபுறம், ஒருவன் பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருப்பதில் ஐயமெழுந்தால்,(15) அத்தகு தருணங்களில், உண்மையைச் சொல்வதைவிட உண்மையற்றதைச் சொல்வதே சிறப்பானதாகும். இந்த முடிவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். (பொய்யான) ஓர் உறுதிமொழியின் மூலம், ஒருவனால் பாவியிடம் இருந்து தப்ப முடியுமென்றால், அவன் அவ்வாறு செய்வதால் பாவத்தை இழைத்தவனாக மாட்டான்.(16) ஒருவனால் தன் செல்வத்தைக் கொடுக்க முடியும் என்றாலும், பாவம் நிறைந்த மனிதர்களுக்கு அஃதை அவன் கொடுக்கக்கூடாது. பாவிகளுக்குக் கொடுக்கப்படும் செல்வமானது அதைக் கொடுப்பவனையும் பீடிக்கும்.(17) கடன் கொடுத்தவன், தன்னிடம் கடன் பெற்றவன் உடல் சார்ந்த தொண்டைச் செய்து அக்கடனை அடைக்க வேண்டும் என்று விரும்பினால், {அந்தக் கடன்} ஒப்பந்தத்தின் உண்மையை நிறுவுவதற்காகக் கடன் கொடுத்தவனால் அழைக்கப்பட்ட சாட்சிகள் என்ன சொல்லப்பட வேண்டுமோ அதைச் சொல்லவில்லையென்றால், அவர்கள் {சாட்சி சொன்னவர்கள்} அனைவரும் பொய்யர்களாவர்[7]. உயிர் ஆபத்திலிருக்கும்போதோ, திருமணத் தருணங்களிலோ ஒருவன் பொய்ம்மை பேசலாம்.(18,19) அறம் நாடும் ஒருவன், பிறரின் செல்வத்தையும், செழிப்பையும் காப்பதற்கோ, அறக்காரியங்களுக்கோ பொய்ம்மை பேசினால், அந்தப் பொய்ம்மையால் அவன் பாவமிழைத்தவனாக மாட்டான்.(20)

ஒருவன் கொடுக்கிறேன் என உறுதிகூறிவிட்டால், தன் உறுதிமொழியை நிறைவற்ற அவன் கட்டுப்பட்டவனாகிறான். தவறினால், தன்னையே கொள்ளையிடும் அவன், பலவந்தமாக அடக்கப்பட வேண்டும். நியாயமான ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் ஒருவன் நியாயமில்லாமல் செயல்பட்டால், அத்தகு ஒழுக்கத்தைப் பின்பற்றியதற்காக அவன் தண்டக்கோலால் நிச்சயம் பீடிக்கப்பட வேண்டும்[8].(21) கடமைகள் அனைத்தில் இருந்து வழுவி, தன் வகையைச் சேர்ந்தோரைக் கைவிட்ட வஞ்சகன் ஒருவன், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்வதற்காக அசுரர்களின் நடைமுறையான ஒழுக்கமின்மையையே எப்போதும் விரும்புவான்.(22) வஞ்சகத்தால் வாழும் அத்தகு பாவம் நிறைந்த இழிந்தவன், அனைத்து வழிமுறைகளினாலும் கொல்லப்பட வேண்டும். அத்தகு பாவிகள் செல்வத்தை விட உயர்ந்தது இவ்வுலகில் வேறேதும் இல்லை என்று நினைக்கின்றனர்.(23) அத்தகு மனிதர்களை ஒருபோதும் பொறுத்து {சகித்துக்} கொள்ளக்கூடாது. அவர்களுடன் சேர்ந்து யாரும் உண்ணக்கூடாது. அவர்கள், தங்கள் பாவங்களின் விளைவால் வீழ்ந்துவிட்டவர்களாகவே கருதப்பட வேண்டும். மனித நிலையில் இருந்து வீழ்ந்து, தேவர்களின் அருளில் இருந்து ஒதுக்கப்பட்ட அவர்கள் பிணங்களைப் போன்றோரே ஆவர்.(24)

வேள்விகள் செய்யாமல், தவங்களில் ஈடுபடாமல் இருக்கும் அவர்கள், தங்கள் தோழமையை விட்டு {தோழர்களிடம் இருந்து} விலகுகிறார்கள். அவர்களது செல்வம் தொலைந்துபோனால், மிகப் பரிதாபகரமான தற்கொலையையும்கூடச் செய்து கொள்வார்கள்.(25) இந்தப் பாவிகளில் ஒருவனிடமும், “இஃது உன் கடமை. உன் இதயம் இதை நோக்கித் திரும்பட்டும்” என்று உன்னால் சொல்ல முடியாது. இவ்வுலகத்தில் செல்வத்துக்கு இணையானது வேறெதுவும் இல்லை என்பது அவர்கள் தீர்மானித்து வைத்திருக்கும் திட நம்பிக்கையாகும்.(26) அத்தகு பிறவியைக் கொல்பவன், எந்தப் பாவத்தையும் அடையமாட்டான். எவன் அவனைக் கொல்வானோ, ஏற்கனவே தன் சொந்த செயல்களால் கொல்லப்பட்ட ஒருவனையே கொல்கிறான். அவன் கொல்லப்பட்டால், அங்கே {ஏற்கனவே} இறந்தவனே கொல்லப்படுகிறான் {ஒரு பிணமே கொல்லப்படுகிறது}.(27) உணர்விழந்தவர்களான அம்மனிதர்களைக் கொல்ல சபதம் செய்தவன், தன் சபதத்தை நிறைவேற்ற வேண்டும்[9]. அத்தகு பாவிகள், தங்கள் வாழ்வுக்காக வஞ்சகத்தை நம்பி வாழும் காகத்தையும், கழுகையும் போன்றோராவர். அவர்களது (மனித) உடல் அழிவை அடைந்த பிறகு, அவர்கள் காகங்களாகவும், கழுகுகளாகவும் மறுபிறப்பை அடைகிறார்கள்.(28) எந்தக் காரியத்திலும், அடுத்தவன் அந்தக் காரியத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறானோ, அதே போலவே அவனிடம் ஒருவன் நடந்து கொள்ள வேண்டும். வஞ்சகம் பயில்பவன் வஞ்சகத்தாலேயே தடுக்கப்பட வேண்டும். நேர்மையானவன் நேர்மையாகவே எதிர்க்கொள்ளப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(29)

கிருஷ்ணனே நாராயணன்! – சாந்திபர்வம் பகுதி – 110-உயிரினங்களால் துன்பங்களை எவ்வாறு தவிர்க்க முடியும் என்பதையும், நாராயணனே அனைத்தின் புகலிடம் என்பதையும், கிருஷ்ணனே அந்த நாராயணன் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கிட்டத்தட்ட தொடர்ச்சியாகவே பல்வேறு வழிகளில் உயிரினங்கள் பீடிக்கப்படுவது {துன்புறுவதும்} காணப்படுகிறது. ஓ பாட்டா, அந்தக் கடினமான துன்பங்கள் அனைத்தில் இருந்தும் ஒருவன் விடுபடக்கூடிய வழியென்ன?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மறுபிறப்பாள வகையைச் சேர்ந்தோர், அடக்கப்பட்ட ஆன்மாக்களுடனும், பல்வேறு வாழ்வுமுறைகளுக்காக {அசிரமங்களுக்காக} சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாகப் பயின்றும் இந்தத் துன்பங்களைக் கடப்பதில் வெல்கின்றனர்.(2) வஞ்சகத்தை ஒருபோதும் பயிலாதவர்களும், வணங்கத்தக்க கட்டுப்பாடுகளால் அடக்கப்பட்ட ஒழுக்கத்தைக் கொண்டவர்களும், உலக ஆசைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(3) தீய மொழி பேசப்படும்போது பேசாமல் இருப்பவர்களும், தாக்கப்படும்போதும் பிறரைத் தாக்காதவர்களும், எடுக்காமல் கொடுப்பவர்களும் அனைத்துத் துன்பங்களையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(4) விருந்தினர்களுக்கு விருந்தோம்பலுடன் உறைவிடத்தை எப்போதும் கொடுப்பவர்களும், வன்மத்தில் ஈடுபடாதவர்களும், தொடர்ந்து வேத கல்வியில் ஈடுபடுபவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(5) கடமைகளை அறிந்தவர்களும், தங்களைப் பெற்றோரிடம் தகுந்த நடையில் நடந்து கொள்பவர்களும், பகலில் உறங்குவதைத் தவிர்ப்பவர்களுமான மனிதர்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(6) எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் எவ்வகைப் பாவத்தையும் செய்யாதவர்களும், எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காதவர்களும் தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(7)

ஆசை மற்றும் பேராசையின் ஆதிக்கத்தில் {மக்களை} ஒடுக்கும் வகையில் வரிகளை விதிக்காதவர்களும், தங்கள் ஆட்சிப்பகுதிகளைக் காப்பவர்களுமான மன்னர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(8) பிற பெண்களின் தோழமையை நாடாமல், தாங்கள் திருமணம் செய்து கொண்ட மனைவியரிடம் மட்டுமே தகுந்த காலத்தில் செல்பவர்களும், நேர்மையானவர்களும், தங்கள் அக்னி ஹோத்திரங்களில் கவனமாக இருப்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(9) மரணம் குறித்த அச்சமனைத்தையும் கைவிட்டு, நியாயமான வழிமுறைகளின் மூலம் வெற்றியை அடைய விரும்பி போரில் ஈடுபடும் துணிவுமிக்கோர், தங்கள் கடமைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(10) உயிரையே பணயம் வைத்து இவ்வுலகில் எப்போதும் உண்மையைப் பேசி வருபவர்களும், அனைத்து உயிரினங்களுக்கும் முன்மாதிரியான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(11) செயல்களில் ஒருபோதும் வஞ்சிக்காதவர்களும், எப்போதும் ஏற்புடைய வார்த்தைகளைப் பேசுபவர்களும், செல்வத்தை எப்போதும் சிறப்புடன் நன்றாகச் செலவழிப்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(12)

தகாத வேளைகளில் வேதங்களை ஒருபோதும் கல்லாதவர்களும், அர்ப்பணிப்புடன் தவங்களைப் பயில்பவர்களுமான பிராமணர்கள், தங்கள் கடமைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(13) மணமாகா நிலையையும், பிரம்மச்சரியத்தையும் வாழ்வாகக் கொள்பவர்களும், தவங்களைச் செய்பவர்களும்,கல்வியால் தூய்மையடைந்தவர்களும், வேத ஞானமும், முறையான நோன்புகளும் கொண்டவர்களுமான பிராமணர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(14) ஆசை {ரஜோ} மற்றும் இருள் {தமோ} குணங்கள் அனைத்தையும் தடுப்பவர்களும், உயர் ஆன்மாக்களைக் கொண்டவர்களும், நன்மை என்றழைக்கப்படும் பண்புகள் அனைத்தையும் பயில்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(15)

எவர்களைக் கண்டு எந்த உயிரினமும் அச்சப்படாதோ, எவர்கள் எந்த உயிரினத்தையும் கண்டு அஞ்சாதிருக்கிறார்களோ, எவர்கள் அனைத்து உயிரினங்களையும் தம்மைப் போலப் பார்க்கிறார்களோ, அவர்கள் தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(16) நல்லோராக இருப்பவர்களும், செழிப்பாக இருக்கும் மக்களைக் கண்டு ஒருபோதும் துயரடையாதவர்களும், உன்னதமற்ற அனைத்து வகைச் செயல்களையும் தவிர்ப்பவர்களுமான மனிதர்களில் காளைகள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(17) தேவர்கள் அனைவரையும் வணங்குபவர்களும், நம்பிக்கைகளைக் கொண்ட சமயங்களின் கோட்பாடுகள் அனைத்தையும் கேட்பவர்களும், அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்[1].(18) தங்களுக்குக் கௌரவங்களை விரும்பாமல், பிறருக்குக் கௌரவங்களைக் கொடுப்பவர்களும், வழிபாட்டுக்குத் தகுந்தோரை வணங்குபவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(19) வாரிசுகளை விரும்பி, தூய மனத்துடன் முறையான சந்திர நாட்களில் சிராத்தங்களைச் செய்பவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்[2].(20)தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி, பிறரின் கோபத்தைத் தணிப்பவர்களும், எந்த உயிரினத்திடமும் ஒருபோதும் கோபமடையாதவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(21) தேன் {மது}, இறைச்சி, போதையூட்டும் பானங்கள் ஆகியவற்றைப் பிறப்பிலிருந்தே தவிர்ப்பவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்[3].(22) உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே உண்பவர்களும், வாரிசுகளுக்காக மட்டுமே பெண்களின் தோழமையை நாடுபவர்களும், உண்மையைப் பேசுவதற்காக மட்டுமே தங்கள் உதடுகளைத் திறப்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(23) அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனும் {பரமனும்}, அண்டத்தின் தோற்றம் மற்றும் அழிவுக்குக் காரணமாக இருப்பவனுமான தேவன் நாராயணனை அர்ப்பணிப்புடன் வழிபடுபவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(24) தாமரை போல் கண்கள் சிவந்தவனும், மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியிருப்பவனும், வலிய கரங்களைக் கொண்டவனும், நமது நலன் விரும்பியும், சகோதரனும் {உங்கள் மைத்துனனும், நண்பனும், உறவினனுமான இந்தக் கிருஷ்ணனே மங்கா மகிமை கொண்ட அந்த நாராயணனாவான்.(25)

தோலுறையைப் போல இந்த உலகங்கள் யாவையும் தன் விருப்பம்போல மறைப்பவன் இவனே. நினைத்தற்கரிய ஆன்மா கொண்ட பலமிக்கத் தலைவன் இவனே. உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான கோவிந்தன் இவனே.(26) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஜிஷ்ணுவுக்கும் {அர்ஜுனனுக்கும்}, உனக்கும் ஏற்புடையதையும், நன்மையானதையும் செய்வதில் எப்போதும் ஈடுபடுபவனான இந்தக் கிருஷ்ணனே, தடுக்கப்படமுடியாதவனும், அழிவில்லா புகழின் வசிப்பிடமாக இருப்பவனுமான அவனாவான் {நாராயணனாவான்}.(27) ஹரி என்றும் அழைக்கப்படும் இந்த நாராயணனின் புகலிடத்தை அர்ப்பணிப்புடன் நாடுபவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(28) துன்பங்களைக் கடப்பது குறித்த இந்த வரிகளைப் படிப்பவர்களும், பிறருக்கு உரைப்பவர்களும், பிராமணர்களிடம் சொல்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(29) ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, எச்செயல்களின் மூலம் மனிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் துன்பங்கள் அனைத்தையும் கடப்பார்களோ, அவை அனைத்தையும் இப்போது நான் உனக்குச் சொல்லிவிட்டேன்” என்றார் {பீஷ்மர்}.(30)

நரியும், புலியும்! – சாந்திபர்வம் பகுதி – 111-நல்லோரையும், தீயோரையும் வேறுபடுத்திப் பார்ப்பது எவ்வாறு? புலிக்கு அமைச்சராகச் செயல்பட்ட நல்ல நரியின் கதை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இங்கே பல மனிதர்கள் உண்மையில் அமைதியான ஆன்மா கொண்டோராக இல்லையெனினும், வெளிப்புறத்தோற்றத்தில் அமைதி நிறைந்த ஆன்மா கொண்டோராகத் தெரிகின்றனர். மேலும் உண்மையில் அமைதியான ஆன்மா கொண்டோர் வேறு வகையில் தெரிகின்றனர். ஓ! ஐயா, இம்மனிதர்களை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது?” எனக் கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக ஒரு புலிக்கும், ஒரு நரிக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(2) பழங்காலத்தில், புரிகை என்றழைக்கப்படும் செழிப்புமிக்க ஒரு நகரத்தில் பௌரிகன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். உயிரினங்களில் இழிந்தவனான அவன் மிகக் கொடூரனாகவும், பிறருக்குத் தீங்கிழைப்பதில் மகிழ்பவனாகவும் இருந்தான்.(3) அவனது வாழ்நாளின் காலம் முடிந்ததும், விரும்பத்தகாத முடிவை அவன் அடைந்தான். உண்மையில், மனிதவாழ்வில் அவன் செய்த தீச்செயலின் களங்கத்தோடு கூடிய அவன், ஒரு நரியாக மறுபிறவி அடைந்தான்.(4) அவன், தனது பழைய செழிப்பை நினைவுகூர்ந்து, துயரத்தால் நிறைந்து, பிறர் கொண்டு வந்து கொடுத்தாலும் இறைச்சியை உண்ணாதிருந்தான்.(5) அவன் அனைத்து உயிரினிங்களிடமும் கருணை கொண்டவனாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவனாகவும், கடும் நோன்புகளை நோற்பதில் உறுதியுள்ளவனாகவும் இருந்தான். குறிப்பிட்ட நேரத்தில் மரங்களில் இருந்து விழும் கனிகளை அவன் உணவாகக் கொண்டான்.(6) அந்த நரியானவன், ஒரு பரந்த சுடலையில் {சுடுகாட்டில்} வசித்து வந்தான், அங்கேயே தொடர்ந்து வசிக்கவும் விரும்பினான். அதுவே அவன் பிறந்த இடமாகையால், அவன் வேறு சிறப்பான இடத்திற்கு மாற ஒரு போதும் விரும்பாதிருந்தான்.(7)

அவனது நடத்தையின் தூய்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவனது வகையைச் சேர்ந்த உயிரினங்கள் {நரிகள்}, அவனது தீர்மானத்தை மாற்றும் முயற்சியில், பணிவுடன் கூடிய இவ்வார்த்தைகளை அவனிடம் சொல்லின,(8) “பயங்கரச் சுடலையில் வசித்தாலும், இத்தகு தூய ஒழுக்கத்துடன் வாழ நீ விரும்புகிறாய். அழுகும் பிணங்களை உண்பதை இயற்கை பண்பாகக் கொண்ட நீ, இப்போது உன் பங்குக்குப் பிறழ்புத்தி கொண்டவனாகத் தெரியவில்லையா?(9) எங்களைப் போல இருப்பாயாக. நாங்கள் அனைவரும் உனக்கு உணவளிக்கிறோம். இத்தகு தூய ஒழுக்கத்தைக் கைவிட்டு, எப்போதும் எது உன் உணவாக இருக்க முடியுமோ அஃதை உண்பாயாக” என்றன.(10)

அவற்றின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த நரியானவன், குவிந்த கவனத்துடனும், தீங்கிழையாமையை அனைவரின் மனத்தில் பதிய வைக்கும் வகையிலும், இந்த இனிமை நிறைந்த வார்த்தைகளைப் பேசினான்:(11) “என் பிறவி இழிந்ததாக இருக்கிறது. எனினும், ஒழுக்கமே குலத்தைத் தீர்மானிக்கிறது.[1] என் புகழ் பரவும் வகையில் நடந்து கொள்ளவே நான் விரும்புகிறேன்.(12) என் வசிப்பிடம் சுடலையாக இருப்பினும், ஒழுக்கம் தொடர்பான என் நோன்புகளைக் கேட்பீராக. ஒருவனின் செயல்களே அவனது சுயத்தை விளைவிக்கின்றன. ஒருவன் செய்யும் அறச்செயல்களின் விளைவாக அவன் மேற்கொள்ளும் வாழ்வுமுறை {ஆசிரமம்} அமைவதில்லை.(13) ஒரு குறிப்பிட்ட வாழ்வுமுறையை நோற்கும் ஒருவன் ஒரு பிராமணனைக் கொன்றால், பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} எனும் பாவம் அவனைப் பற்றாமல் இருக்குமா? மறுபுறம், ஒருவன் எந்த வாழ்வுமுறையையும் நோற்காமல் இருந்து, அவனே ஒரு பசுவைத் தானமளித்தால், அந்த நற்கொடை அவனுக்கு எந்தத் தகுதியையும் {புண்ணியத்தையும்} உண்டாக்காதா?(14) ஏற்புடையதை அடைய விரும்பும் உந்துதலால் நீங்கள் உங்கள் வயிற்றை மட்டுமே நிரப்புவதில் ஈடுபடுகிறீர்கள். மூடத்தனத்தில் மயங்கியிருக்கும் நீங்கள், முடிவில் உண்டாகும் மூன்று குற்றங்களைக் காணாமல் இருக்கிறீர்கள்.(15) இம்மையிலும், மறுமையிலும் தீமையையே கொண்டதும், நிறைவில்லாமை, மயக்கம் {சபலம்} ஆகியவற்றுடன் அற இழப்பை ஏற்படுத்துவதுமான நீங்கள் வாழும் வாழ்வைப் பின்பற்ற நான் விரும்பவில்லை” என்றான் {நரியாக இருந்த மன்னன் பௌரிகன்}.(16)ஆற்றலுக்காகக் கொண்டாடப்படும் ஒரு புலியானது, இந்த உரையாடலைக் கேட்க நேர்ந்து, அந்த நரியை தூய ஒழுக்கம் கொண்ட கல்விமானாகக் கருதி, தனக்கு இணையாக மரியாதையை அவனுக்குச் செலுத்தி, அவனைத் தன் அமைச்சராக நியமித்துக் கொள்ளும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியது.(17)

அந்தப் புலியானது {நரியிடம்}, “ஓ! அறவோனே, நீ யார் என்பதை நான் அறிவேன். என்னோடு சேர்ந்து அரசின் கடமைகளைக் கவனிப்பாயாக. உன் சுவைக்குத் தகாத எதையும் கைவிட்டு, நீ விரும்பும் எந்தப் பொருளையும் அனுபவிப்பாயாக.(18) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் சீற்றமிகு கடும் மனோநிலை கொண்டவர்களாக அறியப்படுகிறோம். இதை நான் முன்கூட்டியே உனக்குச் சொல்லிவிடுகிறேன். நீ மென்மையாக நடந்து கொண்டால் நன்மைகளை அடைந்து, உனக்கான பயன்களையும் அறுவடை செய்வாய்” என்றது.(19) விலங்குகள் அனைத்தின் தலைவனான அந்த உயர் ஆன்மாவின் {புலியின்} இந்த வார்த்தைகளை மதித்த நரியானவன், தன் தலையைச் சற்றே தொங்கவிட்டபடியே, பணிவு நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(20)

அந்த நரியானவன் {மன்னன் பௌரிகன்}, “ஓ! விலங்குகளின் மன்னா, என்னைக் குறித்த உன் வார்த்தைகள் உனக்குத் தகுந்தவையே. தூய நடத்தை கொண்டவர்களும், கடமைகளையும், உலகக் காரியங்களை அறிந்தவர்களுமான அமைச்சர்களை நீ நாடுவதும் உனக்குத் தகுந்ததே.(21) ஓ! வீரா, ஒரு நல்ல அமைச்சரில்லாமல் உன் பெருமையை உன்னால் தக்கவைத்துக் கொள்ள முடியாது, அல்லது ஒரு தீய அமைச்சனின் மூலம் உன் வாழ்வுக்கே முடிவேற்படலாம்.(22) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, உன் அமைச்சர்களில் உனக்கு அர்ப்பணிப்புள்ளவர்கள், கொள்கை அறிந்தவர்கள், ஒருவருக்கொருவர் சுதந்திரமாக இருப்பவர்கள், வெற்றியால் உனக்கு மகுடம் சூட்ட விரும்புபவர்கள், பேராசை எனும் களங்கம் இல்லாதவர்கள், வஞ்சகமில்லாதவர்கள், ஞானம் உள்ளவர்கள், உன் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவர்கள் பெரும் மனத் திண்மை கொண்டவர்கள் ஆகியோரையோ, ஆசான்களையோ, உன் பெற்றோர்களையோ போல மதிப்பாயாக.(23,24) ஓ! விலங்குகளின் மன்னா, என் தற்போதைய நிலையில் நான் நிறைவுடன் இருப்பதால், எதன் காரணமாகவும் நான் அந்நிலையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. ஆடம்பர இன்பங்களினால் எழும் மகிழ்ச்சியிலும் நான் ஆசை கொள்ளவில்லை.(25)

மேலும் என் நடத்தையை உன் பழைய பணியாட்கள் ஏற்காமல் போகக்கூடும். அவர்கள் தீய நடத்தை கொண்டோராக இருந்தால், உனக்கும் எனக்கும் இடையில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்குவார்கள்.(26) அந்த வேறொருவர், காந்தியைக் கொண்டவராக இருப்பினும், அவரைச் சார்ந்திருப்பது விரும்பத்தக்கதோ, புகழத்தக்கதோ அல்ல.(27) நான் தூய்மைப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்டவன் ஆவேன். நான் உயர்ந்த அருளைப் பெற்றிருக்கிறேன். பாவிகளிடம் கூட நான் கடுமையைக் காட்டவல்லவனாக இல்லை. நான் பெரும் முன்னறிதிறனைப் பெற்றிருக்கிறேன். பேருழைப்புக்குத் தகுதியுடையவனாக இருக்கிறேன். சிறு காரியங்களை நான் பார்ப்பதில்லை. நான் பெரும் பலத்தைக் கொண்டவனாவேன். நான் என் செயல்களில் வெற்றிகரமாக இருக்கிறேன். கனியற்ற செயலை நான் ஒருபோதும் செய்வதில்லை. இன்பநுகர் பொருட்கள் அனைத்தாலும் நான் அலங்கரிக்கப்பட்டிருக்கிறேன்.(28) சிறிதளவே கொண்டு நான் ஒரு போதும் நிறைவடைவதில்லை. நான் ஒருபோதும் பிறருக்குத் தொண்டாற்றியவனில்லை. மேலும் பணிவிடை செய்வதில் நான் திறனற்றவனாக இருக்கிறேன். நான் என் விருப்பப்படி காடுகளில் இன்பமாக வாழ்ந்து வருகிறேன்[2].(29)

மன்னர்களைச் சார்ந்து வாழும் அனைவரும், தங்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் தீய பேச்சுகளின் விளைவால் பெரும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். எனினும், காடுகளில் வசிப்போர், எந்தக் கவலையும், அச்சமுமில்லாமல் தங்கள் நோன்புகளை நோற்றபடி நாட்களைக் கடத்த முடியும்.(30) மன்னனால் அழைக்கப்பட்டவனின் இதயத்தில் எழும் அச்சத்தை, காட்டில் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, தங்கள் நாட்களைக் கடத்தியபடி நிறைவுடன் வாழ்ந்து வருபவர்கள் அறியமாட்டார்கள்.(31) முயற்சியேதும் இல்லாமல் அடையப்படும் எளிய உணவு மற்றும் பானத்திற்கும், அச்சத்துடன் தருவிக்கப்படும் ஆடம்பர உணவுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு உள்ளது. இவையிரண்டையும் சிந்திக்கும் நான், எங்கே கவலையில்லையோ அங்கேயே மகிழ்ச்சியிருக்க முடியும் என்ற கருத்தை அடைகிறேன்.(32) அரசத் தொண்டாற்றுவோருக்கு மத்தியில் மிகச் சிலர் மட்டுமே அவர்களது குற்றங்களுக்காக நீதியுடன் தண்டிக்கப்படுகின்றனர். எனினும், அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர், பொய்க் குற்றச்சாட்டுகளின் மூலமே மரணத்தை அடைகின்றனர்.(33) ஓ! விலங்குகளின் மன்னா, இவையனைத்தும் இருந்தபோதிலும், நீ என்னை உன் அமைச்சராக நியமித்துக் கொண்டால், நீ என்னிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து உன்னுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன்.(34) உன் நன்மைக்காக நான் பேசும் சொற்கள் உன்னால் கேட்கப்பட்டு, உன்னால் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். உன்னால் எனக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் வழிவகைகளில் நீ ஒருபோதும் குறிக்கிடக்கூடாது.(35)

நான் ஒருபோதும் உன் மற்ற அமைச்சர்களுடன் ஆலோசிக்க மாட்டேன். நான் அவ்வாறு செய்தால், என்னிலும் மேன்மையடைய விரும்பும் அவர்கள், பல்வேறு வகைக் குற்றச்சாட்டுகளால் என்னைக் களங்கப்படுத்துவார்கள்.(36) உன்னை மட்டுமே தனிமையில் சந்தித்து, உனக்கு எது நன்மையோ அதை இரகசியமாகச் சொல்வேன். உன் உறவினர்கள் தொடர்புடைய காரியங்கள் அனைத்திலும், உனக்கு நன்மையானது எது, அல்லது நன்மையற்றது எது என்பதை என்னிடம் நீ கேட்காமலிருக்க வேண்டும்.(37) என்னிடம் ஆலோசித்த பிறகு, நீ உன் பிற அமைச்சர்களைத் தண்டிக்காமல் இருக்க வேண்டும். என்னைப் பின்தொடர்பவர்களையும், என்னைச் சார்ந்திருப்பவர்களையும் நீ சினத்தின் வசப்பட்டுத் தண்டிக்காமல் இருக்க வேண்டும்” என்றான் {நரியாக இருந்த மன்னன் பௌரிகன்}.(38) நரியால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த விலங்குகளின் மன்னன் {புலியானவன்}, அவனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அவனுக்கு அனைத்து கௌரவங்களையும் அளித்தான். பிறகு, புலியின் அமைச்சராக நரியானவன் பொறுப்பேற்றான். நரியானவன், மரியாதையாக நடத்தப்படுவதையும், அவனது செயல்கள் அனைத்தும் கௌரவிக்கப்படுவதையும் கண்ட மன்னனின் {புலியின்} பழைய பணியாட்கள் ஒன்றாகச் சேர்ந்து சதித்திட்டங்களைத் தீட்டி, அவனுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை இடையறாமல் வெளிப்படுத்தத் தொடங்கினர்.(40)

அந்தத் தீயவர்கள், நட்புடன் பழகி அவனை நிறைவு செய்யவும், அரசில் நிலவிய அதிகாரத்துக்குப் புறம்பான பல்வேறு குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளச் செய்யவும் முதலில் முயற்சித்தனர்.(41) அடுத்தவரின் சொத்தைக் கொள்ளையடிக்கும் அவர்கள், தங்கள் மேல்வருமானங்களில் இன்புற்றவர்களாக நீண்ட காலம் வாழ்ந்து வந்தனர். எனினும் இப்போதோ, நரியால் ஆளப்படும்போது, அவர்கள், பிறருக்குச் சொந்தமானவற்றை அபகரிக்க இயலாதவர்களானார்கள்.(42) முன்னேற்றத்தையும், செழிப்பையும் விரும்பிய அவர்கள், இனிய பேச்சுகளால் அவனை மயக்கத் {சபலப்படுத்தத்} தொடங்கினர். உண்மையில், அவனது இதயத்தைக் கவர்ந்திழுக்கும்படியான பெரிய அளவிலான கையூட்டுகளும் கொடுக்கப்பட்டன. ஆனால் பெரும் ஞானியான அந்த நரியானவன், அந்தச் சபலங்களுக்கு வசப்படுவதற்கான எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டவில்லை.(43) பிறகு அவர்களில் சிலர், அவனை அழிப்பதற்காகத் தங்களுக்குள் திட்டம் வகுத்துக் கொண்டு, விலங்குகளின் மன்னனால் {புலியால்} மிகவும் விரும்பப்படுவதும், அவனுக்கெனவே வைக்கப்பட்டிருந்ததுமான நன்கு பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சியை எடுத்து இரகசியமாக நரியின் வீட்டில் வைத்துவிட்டனர்.(44) இறைச்சியைத் திருடியது யார் என்பதையும், யார் இந்தச் சதியைச் செய்தது என்பதையும் நரியானவன் அறியவந்தான். அனைத்தையும் அறிந்தாலும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் அதைப் பொறுத்துக் கொண்டான்.(45) அவன் அமைச்சர் பொறுப்பை ஏற்ற சமயத்தில், “ஓ ஏகாதபதி {புலியே}, நீ என் நட்பை விரும்புகிறாய். ஆனால் காரணமேதுமில்லாமல் நீ என்னில் நம்பிக்கையிழக்கலாகாது” என்ற ஒப்பந்தத்தை மன்னனிடம் {புலியிடம்} ஏற்படுத்தியிருந்தான்”.(46)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ விலங்குகளின் மன்னன் பசியை உணர்ந்து, உண்ண வந்த போது, எப்போதும் ஆயுத்தமாக வைக்கப்படும் இறைச்சி இல்லாதத்தைக் கண்டான். அப்போது மன்னன், “கள்வன் கண்டுபிடிக்கப்பட வேண்டும்” என்று ஆணையிட்டான்.(17) வஞ்சகம் நிறைந்த அவனது அமைச்சர்கள், அவனுக்காக வைக்கப்பட்டிருந்த இறைச்சியை, கல்விமானும், ஞானச்செருக்கு கொண்டவனும், அவனது மற்றொரு அமைச்சனுமான நரியே திருடினான் என்று சொன்னார்கள்.(48) நரி நியாயமில்லாமல் நடந்து கொண்டதைக் கேட்ட அந்தப் புலி சீற்றத்தால் நிறைந்தவனானான். உண்மையில், மன்னன் {புலி} கோபவசப்பட்டு, தன் அமைச்சரைக் கொல்லும்படி ஆணையிட்டான்.(49) இந்த வாய்ப்பைக் கண்ட முன்னாள் அமைச்சர்கள், மன்னனிடம் வந்து, “அந்த நரியானவன், எங்கள் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறான்” என்று சொன்னார்கள்.(50)

இதைச் சொன்ன அவர்கள், மன்னனின் உணவைக் களவாடிய நரியின் செய்கையைக் குறித்து மீண்டும் மீண்டும் பேசினர். அவர்கள், “அவனது செயல்கள் இவ்வாறே இருக்கின்றன. அவன் என்னதான் செய்யத் துணியமாட்டான்?(51) அவன் நீர் கேள்விப்பட்டது போன்றவனல்ல. அவன் பேச்சில்தான் அறவோன், ஆனால் பாவம் நிறைந்த மனநிலை கொண்டவனாவான்.(53) உண்மையில் இழிந்தவன், ஆனால், அறப்போர்வை போர்த்திக் கொண்டு வேடம் போடுகிறான். அவனது நடத்தையும் உண்மையில் பாவம் நிறைந்ததாகும். தன் தேவைகளுக்குத் தொண்டாற்றிக் கொள்ளவே, அவன் உணவு காரியங்களில் துறவையும் நோன்புகளையும் பயில்கிறான்.(53) இதை நீ நம்பவில்லையெனில், ஆதாரத்தை உன் கண் முன்பே காட்டுகிறோம்” என்றனர். பிறகு அவர்கள் உடனடியாக நரியின் வசிப்பிடத்திற்குள் நுழைந்து இறைச்சியைக் கண்டுபிடித்தனர்.(54) நரியின் இல்லத்தில் இருந்து இறைச்சி கொண்டுவரப்பட்டதை உறுதிசெய்து கொண்டு, தன் பழைய பணியாட்கள் சொன்னதனைத்தையும் கேட்ட மன்னன் {புலி}, “நரி கொல்லப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டான்.(55)

புலியின் வார்த்தைகளைக் கேட்ட அவனது {புலியின்} தாய், நல்லாலோசனைகளின் மூலம் தன் மகனின் நல்லறிவை விழிப்படையச் செய்வதற்காக அவ்விடத்திற்கு வந்தாள்.(56) அந்த மதிப்பிற்குரிய சீமாட்டி {புலியின் தாய்}, “ஓ! மகனே, வஞ்சகம் நிறைந்த இந்தக் குற்றச்சாட்டை நீ ஏற்கக்கூடாது. பகையாலும், பொறாமையாலும் உந்தப்பட்ட தீயோர், நேர்மையானவனின் மீது கூடக் குற்றஞ்சாட்டுவார்கள்.(57) சச்சரவை விரும்பும் பகைவர்களால், உயர்ந்த சாதனை படைக்கப்போகும் தன் எதிரியின் மேன்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாது. தவங்களில் ஈடுபடும் தூய ஆன்மா கொண்டவர்கள் மேலும்கூடக் குற்றம் சுமத்தப்படும்.(58) காடுகளில் (தீங்கற்ற) செயல்களில் ஈடுபடும் தவசிக்குக் கூட, நண்பர்கள், நடுநிலையாளர்கள், எதிரிகள் என்ற மூன்று தரப்பினர் எழுகின்றனர்.(59) பிறரைத் துன்புறுத்துவோர், தூயவர்களை வெறுக்கிறார்கள். சோம்பேறிகள் சுறுசுறுப்புடையவனை வெறுக்கிறார்கள். கல்வியற்றவர்கள் கல்விமான்களை வெறுக்கிறார்கள். வறியவர்கள், வசதிபடைத்தவர்களை வெறுக்கிறார்கள். நீதியற்றவர்கள் நீதிமான்களை வெறுக்கிறார்கள். அழகற்றவர்கள் அழகானவர்களை வெறுக்கிறார்கள்.(60)

கல்விமான்கள், கல்வியற்றவர்கள், பிறரைத் துன்புறுத்துவோர், வஞ்சகம் நிறைந்தோர் ஆகியோரில் பலர், பிருஹஸ்பதியின் நற்பண்புகளையும், நுண்ணறிவையும் கொண்ட அப்பாவிகளின் மேல் பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்துவார்கள்.(61) நீ இல்லாதபோது, உன் வீட்டில் இருந்து உண்மையில் இறைச்சி களவாடப்பட்டதென்றால், நரியானவன் அவனுக்குக் கொடுக்கும் எந்த இறைச்சியையும் மறுப்பவன் என்பதை நினைவுகூர்வாயாக. (கள்வனைக் கண்டுபிடிப்பதில்) இந்த உண்மையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.(62) தீயவர்கள் சில வேளைகளில் நல்லவர்களைப் போலவும், நல்லவர்கள் சிலவேளைகளில் தீயவர்களைப் போலவும் தோன்றுவார்கள். பல்வேறு வகையான தன்மைகள் உயிரினங்களில் காணப்படுகின்றன. எனவே, எது எதுவாக இருக்கிறது என்று ஆராயும் தேவை இருக்கிறது.(63) ஆகாயமானது, ஒரு பாத்திரத்தின் கடினமான அடிப்பாகத்தைப் போலத் தெரிகிறது. விட்டில்பூச்சியானது, உண்மையான நெருப்பின் கீற்று போலவே தெரிகிறது. எனினும், உண்மையில், ஆகாயத்திற்கு எந்த அடித்தளமும் கிடையாது, விட்டில் பூச்சியிலும் எந்த நெருப்பும் இல்லை.(64) எனவே, கண்ணுக்குப் புலப்படும் இத்தகு காரியங்களில் கூராய்வுக்கான தேவை இருக்கிறது. கூராய்வுக்குப் பிறகே எதையும் உறுதி செய்து கொள்பவனுக்கு, பின்னால் எவ்வகையிலும் வருந்த வேண்டிய அவசியமேற்படாது.(65)

ஓ! மகனே, ஒரு தலைவனுக்கு ஒரு பணியாளைக் கொல்வது ஒருபோதும் கடினமானதில்லை. எனினும், அதிகாரம் படைத்தவர்களிடம் உள்ள மன்னிக்கும் தன்மையானது {பொறுமையானது}, எப்போதும் புகழத்தக்கதும், புகழை உண்டாக்கத்தக்க ஒன்றாகவும் இருக்கிறது.(66) நீ அந்த நரியானவனை முதல் அமைச்சராக்கினாய். அதன் விளைவாக, அக்கம்பக்கத்துத் தலைவர்களுக்கு மத்தியில் அவன் பெரும்புகழை ஈட்டியிருக்கிறான். ஒரு நல்ல அமைச்சரை அடைவது எளிதன்று. அந்த நரி உனது நலன்விரும்பியாவான். எனவே, அவன் ஆதரிக்கப்படுபவனாக இருக்க வேண்டும்.(67) உண்மையில் அப்பாவியான ஒருவன் மீது எதிரிகள் பொய் குற்றச்சாட்டுகளை வைக்கும்போது மன்னன் அவனைக் குற்றவாளியாகக் கருதினால், அந்தத் தீர்மானத்திற்கு அவனை வழிநடத்திச் சென்ற அந்தத் தீய அமைச்சர்களின் விளைவால், அவன் விரைவில் அழிவையே அடைவான்” என்றாள் {புலியின் தாய்}.(68)

புலியின் தாயார் இவ்வாறு பேசிய பிறகு, நரியைச் சார்ந்த ஒரு நல்ல ஒற்றன், பகைவர்களின் ஒன்றுபட்டக்குழுவில் இருந்து முன்வந்து, பொய்க் குற்றச்சாட்டு அமைக்கப்பட்ட விதம் குறித்த அனைத்தையும் கண்டுபிடித்துச் சொன்னான்.(69) நரியின் குற்றமின்மை வெளிப்படையானது, அவன் {நரி} தன் தலைவனால் குற்றமற்றவனாக அறிவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டான். விலங்குகளின் மன்னன் {புலி} மீண்டும் மீண்டும் அவனை {நரியை} அன்புடன் அணைத்துக் கொண்டான்.(70) எனினும் கொள்கையறிவியலை நன்கறிந்த நரியானவன், துயரால் எரிந்து, விலங்குகளின் மன்னனை வணங்கி, பிராய நோன்பை நோற்று தன் உயிரை விடுவதற்கு அவனது {புலியின்} அனுமதியை வேண்டினான்.(71) புலியானவன், அன்பால் விரிந்த தன் கண்களை அறவோனான அந்த நரியின் மீது செலுத்தி, மரியாதையுடன் கூடிய வழிபாட்டால் அவனைக் கௌரவித்து, அவனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில் இருந்து அவனைத் தடுக்க முயன்றான்.(72)

தன் தலைவன் கலங்குவதைக் கண்ட நரியானவன், அவனை வணங்கி, கண்ணீரால் தடைபட்ட குரலுடன்,(73) “உன்னால் முதலில் கௌரவிக்கப்பட்டேன். பிறகு உன்னால் அவமதிக்கவும் பட்டேன். நீ என்னிடம் நடந்து கொண்ட விதம், என்னை உன் எதிரியாக்கியிருக்கிறது. எனவே, நான் இனியும் உன்னோடு வசிப்பது முறையாகாது.(74) பணியில் இருந்து விரட்டப்பட்டோ, தங்களுக்குரிய கௌரவங்களில் இருந்து படியிறக்கப்பட்டோ, தனிமைப்படுத்தப்பட்டோ, (தங்கள் தலைவனின் கோபத்தின்மூலம்) தங்கள் எதிரிகளால் அழிவையடைந்தோ,(75) துன்பத்தையேற்படுத்தும் மனநிலையிலோ, சீற்றமடைந்தோ, அச்சமடைந்தோ, (தங்கள் தலைவர்களைப் பொறுத்தமட்டில்) வஞ்சிக்கப்பட்டோ, பறிமுதல் செய்யப்பட்டோ, பெரும் சாதனைகளைச் செய்யும் செருக்கும், விருப்பமும் இருந்தும், செல்வமீட்டும் வழிமுறைகள் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டோ,(76) தங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கின் விளைவால் சீற்றமடைந்தோ, துயரில் எரிந்தோ, நிறைவில்லாமல் இருக்கும் பணியாட்கள், தங்கள் தலைவர்களுக்குப் பேரிடர் ஏற்படும் காலத்திற்காக எப்போதும் காத்திருப்பார்கள். வஞ்சிக்கப்பட்ட அவர்கள் தங்கள் தலைவர்களை விட்டு, எதிரிகளின் கைகளில் உள்ள திறன்மிக்கக் கருவிகளாகிறார்கள்.(77)

நான் உன்னால் அவமதிக்கப்படு என் இடத்தில் இருந்து இறக்கப்பட்டேன். நீ மீண்டும் என்னை எவ்வாறு நம்புவாய்? (என் தரப்பில்) நான் எவ்வாறு உன்னுடன் தொடர்ந்து வசிக்க முடியும்?(78) தகுந்தவனாக நினைத்தே, ஆய்வு செய்து உன் அலுவலில் நீ என்னை நியமித்தாய். (நமக்கிடையில்) முன்பு செய்யப்பட்ட உடன்படிக்கையை மீறி நீ என்னை அவமதித்திருக்கிறாய்.(79) ஒருவன் தன் நிலைத்திறனைப் பராமரிக்க விரும்பினால், முன்பு பிறரின் முன்னிலையில் வைத்து குறிப்பிட்டவனை அறநடத்தை கொண்டவன் என்று பேசிவிட்டு, பிறகு அவனையே தீயோன் எனச் சொல்லக்கூடாது.(80) உன்னால் அவமதிக்கப்பட்ட நான், இனியும் உன்னில் நம்பிக்கை கொள்ள முடியாது. என் தரப்பில், என்னிடம் நீ நம்பிக்கை இழப்பதைக் கண்டால், நான் அச்சத்திலும், கவலையிலும் நிறைந்தவனாவேன்.(81) நீயும் ஐயங்கொண்டு, நானும் அஞ்சி இருக்கும் நிலையானது, நமக்குத் தீங்கிழைக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நமது எதிரிகளுக்கு உதவியாக அமையும். அதன்விளைவாக உனது குடிமக்களும், கவலையடைந்து, நிறைவில்லாதவர்களாக ஆவார்கள். காரியங்களில் அத்தகு நிலையானது பல குற்றங்களைக் கொண்டதாகும்.(82)

முதலில் கௌரவமும், பிறகு அவமதிப்பும் எங்கே இருக்கிறதோ, அந்நிலையை ஞானிகள் மகிழ்ச்சியானதாகக் கருதுவதில்லை.(83) ஒற்றுமையாக இருக்கும் இருவரைப் பிரிக்க முடியாததைப் போலவே, பிரிந்த இருவரைச் சேர்ப்பதும் மிகக் கடினமானதாகும். பிரிவுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்தவர்கள், ஒருவரையொருவர் மீண்டும் அணுகும்போது, அவர்களது அணுகுமுறை அன்புடையதாக இருக்க முடியாது.(84) தன் தலைவனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தை மட்டுமே எந்தப் பணியாளும் கொள்வதில்லை. தன் தலைவனுக்கும், தனக்கும் நன்மை செய்யும் நோக்கில் இருந்தே தொண்டு பிறக்கிறது. அனைத்துச் செயல்பாடுகளும் தன்னல நோக்கங்களிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன. தன்னலமற்ற செயல்களோ, நோக்கங்களோ மிக அரிதானவையாகும்.(85) அமைதியற்ற இதயங்களைக் கொண்ட மன்னர்கள், மனிதர்களின் உண்மை அறிவை அடையமாட்டார்கள். திறன் கொண்டவனாகவும், அச்சமற்றவனாகவும் நூற்றிலொருவனே காணப்படுவான்.(86) மனிதர்களின் செழிப்பும், அவர்களது வீழ்ச்சியும் தானே நேர்கின்றன. செழிப்பு, வறுமை, பெருமை ஆகிய அனைத்தும் புத்திகுறைவில் இருந்தே உண்டாகின்றன” என்றான் {அந்த நரியானவன்}”.(87)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவை நிரம்பிய இந்த இணக்கமான சொற்களைப் பேசி, மன்னனை நிறைவு செய்த நரியானது காட்டுக்கு ஓயச் சென்றது.(88) விலங்குகளின் மன்னனுடைய {புலியினுடைய} கெஞ்சல்களைக் கேளாத அந்தப் புத்திசாலி நரியானது, பிராயத்தில் அமர்ந்து, தன் உடலைக் கைவிட்டு, (பூமியில் தான் செய்த நற்செயல்களுக்கான வெகுமதியாக) சொர்க்கத்திற்குச் சென்றது” {என்றார் பீஷ்மர்}.(89)

சோம்பேறி ஒட்டகம்! – சாந்திபர்வம் பகுதி – 112- சோம்பலால் உண்டாகும் தீங்கைக் குறித்து ஓர் ஒட்டகத்தின் கதை மூலம் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு மன்னனால் எச்செயல்கள் செய்யப்பட வேண்டும்? எச்செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைவான்? ஓ கடமைகளை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரே, இஃதை எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடன்}, “நீ அறிய விரும்புவதை நான் உனக்குச் சொல்வேன். ஒரு மன்னனால் இவ்வுலகில் செய்யப்பட வேண்டியது மற்றும் மன்னன் மகிழ்ச்சியடையக்கூடிய செயல்கள் என்னென்ன என்பது குறித்துத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் உண்மையைக் கேட்பாயாக.(2) ஒரு மன்னன், நாம் கேள்விப்பட்டிருக்கும் ஓர் ஒட்டகத்தின் உயர்ந்த வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஓ! யுதிஷ்டிரா அந்த வரலாற்றைக் கேட்பாயாக. ஓ! யுதிஷ்டிரா, இப்போது அந்த வரலாற்றைக் கேட்பாயாக.(3) கிருத யுகத்தில், தன் முந்தைய பிறவியின் செயல்கள் அனைத்தையும் நினைவில் கொண்டுள்ள ஒரு பெரிய ஒட்டகம் இருந்தது. கடும் நோன்புகளை நோற்றுவந்த அவ்வொட்டகம், காட்டில் கடுந்தவத்தைச் செய்து வந்தது.(4) அதனுடைய தவத்தின் முடிவில் பலமிக்கப் பிரம்மன் அதனிடம் நிறைவு கொண்டான். எனவே, பெரும்பாட்டன் அதற்கு {அந்த ஒட்டகத்திற்கு} வரங்களை அளிக்க விரும்பினான்.(5)

ஒட்டகம் {பிரம்மனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! பலமிக்கத் தலைவா, நூறு யோஜனைகள் தொலைவில் உள்ள எந்த உணவையும் பற்றும் வகையில், உமது அருளால் என் கழுத்து நீண்டதாகட்டும்” என்று கேட்டது.(6)

வரங்களை அளிக்கும் அந்த உயர் ஆன்மா {பிரம்மன்}, “அப்படியே ஆகட்டும்” என்றான். பிறகு அந்த ஒட்டகம் தன் காட்டிற்குச் சென்றது.(7)

வரம்பெற்ற நாள்தொடங்கி அந்த மூட விலங்கு சோம்பேறியானது. உண்மையில், விதியால் மயக்கமடைந்த அந்த இழிந்த விலங்கு, அந்த நாள் முதலே மேய்ச்சலுக்குச் செல்லவில்லை.(8) ஒரு நாள், அந்த விலங்கு நூறு யோஜனைகள் கொண்ட தன் கழுத்தை நீட்டி, எந்த முயற்சியுமின்றித் தன் உணவை அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பெரும்புயலொன்று எழுந்தது.(9) அந்த ஒட்டகம் தன் தலையையும், தன் கழுத்தின் ஒரு பகுதியையும் ஒரு மலைக்குகையில் மறைத்துக் கொண்டு, புயல் ஓயும்வரை காத்திருக்கத் தீர்மானித்தது.(10)

அப்போது ஒரு நரியானது, தன் மனைவியுடன் சேர்ந்து மழையில் நனைந்து, குளிரில் நடுங்கியபடியே, பெரும் சிரமங்களுக்குப் பிறகு அதே குகையை நோக்கிச் சென்று உறைவிடத்திற்காக அதற்குள் விரைவாக நுழைந்தது.(11) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இறைச்சியை உண்டு வாழ்ந்தது என்பதாலும், களைப்புடன் இருந்ததாலும், அந்த நரியானது ஒட்டகத்தின் கழுத்தைக் கண்டு, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உண்ணத் தொடங்கியது. தன் கழுத்து உண்ணப்படுவதைக் கண்ட ஒட்டகம், அதைக் குறுக்கி {சுருக்கிக்} கொள்ள முயற்சித்தது.(12) ஆனால், அது தன் கழுத்தை மேலும் கீழும் அசைத்த போது, நரியும், அதன் மனைவியும், அதைப் பிடித்திருக்கும் தங்கள் பிடியை விடாமல் தொடர்ந்து உண்டன.(14) குறுகிய காலத்திற்குள்ளாகவே அந்த ஒட்டகம் இறந்தது. இவ்வாறு அந்த ஒட்டக்கதைக்கொன்று தின்ற நரியானது, புயல் அடங்கி, மழை நின்றதும் அந்தக் குகையைவிட்டு வெளியே வந்தது.(15) இவ்வாறே அந்த மூட ஒட்டகம் மரணமடைந்தது.

செயலின்மையின் தொடர்ச்சியாக எவ்வளவு பெரிய தீமை விளைந்தது என்பதைப் பார்.(16) உன்னைப் பொறுத்தவரையில் நீ சோம்பலைத் தவிர்த்து, உன் புலன்களைக் கட்டுப்படுத்தி, இவ்வுலகில் அனைத்தையும் முறையான வழிமுறைகளில் செய்வாயாக. வெற்றியானது புத்தியைச் சார்ந்திருக்கிறது என்று மனுவே சொல்லியிருக்கிறார்.(17) நுண்ணறிவின் துணையால் நிறைவேற்றப்பட்ட செயல்கள் அனைத்தும் முதன்மையானவையாகவும், கரங்களின் உதவியால் அடையப்பட்டவை நடுநிலையாகவும், கால்களின் உதவியால் அடையப்பட்டவை தாழ்ந்தவையாகவும் கருதப்படுகின்றன.(18) தொழில் பரிவர்த்தனையில் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொண்டு, புலனடக்கத்துடன் உள்ள மன்னன், தன் நாட்டைத் தக்க வைத்துக் கொள்கிறான். ஆர்வமிக்க மனிதர்கள், நுண்ணறிவின் உதவியுடன் வெற்றிகளை அடைவார்கள் என்று மனுவே சொல்லியிருக்கிறார்.(19)

ஓ! யுதிஷ்டிரா, ஓ! பாவமற்றவனே, பொதுவாக அறியப்படாத விவேகமிக்க ஆலோசனைகளைக் கேட்பவர்களும், கூட்டாளிகளைக் கொண்டவர்களும், முறையான கூராய்வுக்குப் பிறகு செயல்படுபவர்களும், இவ்வுலகில் தங்கள் நோக்கங்கள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறார்கள்.(20) இத்தகு துணைகளைப் பெற்ற ஒருவன், மொத்த பூமியையும் ஆள்வதில் வெல்கிறான்.(21) ஓ! இந்திரனைப் போன்ற ஆற்றலைக் கொண்டவனே, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளை அறிந்த பழங்காலத்து ஞானிகளால் இது சொல்லப்பட்டிருக்கிறது. சாத்திரங்களை நோக்கும் பார்வை கொண்ட நானும், அதையே உனக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா, உன் நுண்ணறிவைப் பயன்படுத்தி, இவ்வுலகில் செயல்படுவாயாக” என்றார் {பீஷ்மர்}.(22)

பணிவு! – சாந்திபர்வம் பகுதி – 113-பெருங்கடலுக்கும், ஆறுகளுக்கும் இடையில் நடந்த உரையாடலின் மூலம் பலவீனமான மன்னன், பலமிக்க எதிரியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, மதிப்புமிக்க உடைமையான ஒரு நாட்டை அடைந்தும், வழக்கமான துணைகள் ஏதுமில்லாத ஒரு மன்னனானவன், ஒரு பலமிக்க எதிரியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பெருங்கடலுக்கும், ஆறுகளுக்கும் இடையில் நடைபெற்ற ஓர் உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில், ஆறுகளின் தலைவனும், தேவர்களுடைய எதிரிகளின் புகலிடமுமான அழிவில்லாத பெருங்கடலானவன், தன் மனத்தில் எழுந்த இந்த ஐயத்தைத் தீர்க்குமாறு ஆறுகள் அனைத்திடமும் கேட்டான்.(3)

அந்தப் பெருங்கடல், “ஆறுகளே, வேருடனும், கிளைகளுடனும் பிடுங்கப்பட்ட பெரும் தண்டுகளைக் கொண்ட மரங்கள் நீரோட்டம் நிறைந்த உங்கள் அனைவராலும் அடித்துக் கொண்டு வரப்படுவதைக் காண்கிறேன். எனினும் நீங்கள் ஒருபோதும் பிரம்பை[1] கொண்டு வருவதில்லை.(4) உங்கள் கரைகளில் வளரும் பிரம்புகள் {நாணல்கள்} அற்பமான தண்டுகளைக் கொண்டவையாகவும், பலமற்றவையாகவும் இருக்கின்றன. இகழ்வால் நீங்கள் அவற்றைப் பிடுங்க மறுக்கிறீர்களா? அல்லது அவற்றால் உங்களுக்கு ஏதேனும் பயனிருக்கிறதா?(5) உங்கள் அனைவரையும் ஈர்க்கும் நோக்கம் என்ன என்பதை நான் கேட்க விரும்புகிறேன். உண்மையில், கரைகளில் வளரும் பிரம்புகள் {நாணல்கள்} உங்களில் ஒருவராலும் ஏன் வேரோடு பிடுங்கப்படுவதில்லை?” என்று கேட்டான்{பெருங்கடல்}}.(6)இவ்வாறு கேட்கப்பட்டதும், கங்கை ஆறானவள், ஆறுகள் அனைத்தின் தலைவனான அந்தப் பெருங்கடலிடம், முக்கியத்துவம் வாய்ந்தவையும், அறிவு நிறைந்தவையும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுபவையுமான வார்த்தைகளில் பதிலளித்தாள்.(7) கங்கை, “மரங்கள் தனியாக, ஒரே இடத்தில், தாங்கள் இருக்கும் இடத்தை விட்டுச் சற்றும் நகராமல் {விறைப்பாக} நிற்கின்றன. எங்கள் நீரோட்டத்தைத் தடுக்கும் அவற்றுடைய நிலைப்பாட்டின் விளைவாலேயே, அவை தாங்கள் வளரும் இடத்தைவிட்டு அகலும் கடன்பட்டவையாக இருக்கின்றன. எனினும், பிரம்புகள் {நாணல்கள்} வேறுவகையில் செயல்படுகின்றன.(8) முன்னேறிவரும் நீரோட்டத்தைக் காணும் பிரம்பானது {நாணலானது}, அதற்கேற்ப வளைந்து கொடுக்கிறது. மற்றவை இவ்வழியில் செயல்படுவதில்லை. நீரோட்டம் கடந்து சென்றதும், பிரம்பானது {நாணலானது} தன் பழையை நிலையையே ஏற்கிறது.(9) பிரம்பானது {நாணலானது}, காலம் மற்றும் வாய்ப்பு ஆகியவற்றின் அறங்களை அறிந்திருக்கிறது. அது கட்டுப்படுவதாகவும், கீழ்ப்படிவதாகவும் இருக்கிறது. விறைப்பாக இல்லாமல் அது வளைந்து கொடுக்கிறது. இந்தக் காரணங்களாலேயே அஃது எங்களுடன் அடித்து வரப்படாமல், தான் வளரும் இடத்திலேயே நிற்கிறது.(10) காற்று மற்றும் நீரின் சக்திக்கு முன்பு வளைந்து, எழும் செடிகள், மரங்கள் மற்றும் கொடிகள் ஆகியன ஒருபோதும் (வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்படும்) ஏமாற்றத்தை அடைவதில்லை” என்றாள் {கங்கை}”.(11)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வலிமையில் மிகுந்தவனும், சிறைபிடிக்கவோ, கொல்லவோ வல்லவனுமான ஒரு பலமிக்க எதிரிக்கு வளைந்து கொடுக்காத ஒருவன் விரைவில் அழிவை அடைவான்[2].(12) தன்னுடைய மற்றும் தன் எதிரியுடைய பலம் மற்றும் பலவீனம், வலிமை மற்றும் சக்தி ஆகியவற்றை முழுமையாக உறுதி செய்து கொண்ட பிறகு செயல்படும் ஞானம் கொண்ட மனிதன், ஒருபோதும் ஏமாற்றத்தை அடைவதில்லை.(13) எனவே, ஒரு நுண்ணறிவுமிக்க மனிதன், தன் எதிரியைத் தன்னைவிடப் பலவானாகக் காணும்போது, இந்தப் பிரம்பின் {நாணலின்} நடத்தையையே பின்பற்ற வேண்டும். அதுவே ஞானத்தின் அறிகுறியாகும்” {என்றார் பீஷ்மர்}.(14)

வசையும், அவதூறும்! – சாந்திபர்வம் பகுதி – 114-சபைகளில் அற்பர்களால் வசைமாரி பொழியப்படும்போதும், அவதூறு செய்யப்படும் போதும், அதைப் பொறுத்துக் கொள்ளும் நல்லோன் அடையும் பயனைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, இறுமாப்பில் பெருகியவனும், அறியாமை கொண்டவனுமான ஒரு மனிதனால், சபைகளுக்கு மத்தியில் வைத்து கடுஞ்சொற்களால் தாக்கப்படும்போது, அடக்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கல்விமான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வுலகில் சிறு மதி கொண்டோரின் வசைமொழிகளை, நல்லான்மா கொண்ட ஒருவன் எவ்வாறு பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து (சாத்திரங்களில்) எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்பதைக் கேட்பாயாக.(2) ஒரு மனிதன் மற்றொருவனால் நிந்திக்கப்படும்போது, கோபவசப்படாமல் இருந்தால், அவன் நிந்திப்பவனின் {வசைபாடுபவனின்} நற்செயல்கள் அனைத்தையும் (அவை அனைத்தின் தகுதியையும் {புண்ணியத்தையும்}) எடுத்துக் கொள்வான். அத்தகு வழக்கில் {அந்த வசையைப்} பொறுமையாகத் தாங்கிக் கொள்பவன், தன் தீச்செயல்களுடைய குற்றங்கள் அனைத்தையும் {அவற்றால் விளையும் பாவங்கள் அனைத்தையும்} கோபவசப்பட்டு நிந்தனையில் ஈடுபடும் {வசைமாரி பொழியும்} மனிதனுக்குக் கொடுக்கிறான்.(3) நுண்ணறிவுமிக்க ஒரு மனிதன், பொருந்தாக் கூச்சலிடும் அற்பமான ஒரு தித்திபத்துக்கு {நீர்க்கோழிக்கு} ஒப்பாக வசைமொழி பேசும் ஒருவனை அலட்சியம் செய்ய வேண்டும். வெறுப்பின் வசப்படுபவன் வீணாக வாழ்கிறான் எனச் சொல்லப்படுகிறது. “அத்தகு மரியாதைக்குரிய மனிதனை, அத்தகு மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வைத்து, இத்தகு வார்த்தைகளைச் சொல்லி நான் பேசினேன்” என்று ஒரு மூடன் சொல்வதையும், அந்தத் தீச்செயலைக் குறித்து அவன் தற்பெருமை பேசிக் கொள்வதையும் நாம் அடிக்கடி கேட்கிறோம்(4,5). மேலும் அவன், “என்னால் நிந்திக்கப்பட்ட அந்த மனிதன், செத்தவனைப் போல வெட்கத்துடன் அமைதியாக இருந்தான்” என்றும் சேர்த்துச் சொல்வான். இவ்வாறே, எவனும் பீற்றிக் கொள்ளக்கூடாத ஒரு செயலைக் குறித்துச் சொல்லி ஒரு வெட்கங்கெட்ட மனிதன் தற்புகழ்ச்சி செய்து கொள்வான்.(6) மனிதர்களில் இழிந்தவனான இத்தகையவன் கவனமாக அலட்சியம் செய்யப்பட வேண்டும். சிறு மதி கொண்ட இத்தகையவன் சொல்லக்கூடிய அனைத்தையும் ஞானம் கொண்ட ஒரு மனிதன் பொறுத்துக் கொள்ள வேண்டும்.(7)

ஒரு மதிக்கத்தகாத {மதிப்பில்லாத} நபரால் செய்யப்படும், தற்புகழ்ச்சியாலோ, பழிச் சொல்லாலோ என்ன செய்து விட முடியும்? கானகங்களில் பயனில்லாமல் கரையும் ஒரு காகத்தைப் போன்றவனே அவன்.(8) தங்கள் வார்த்தைகளால் மட்டுமே பிறரை குற்றஞ்சாட்டுபவர்கள், தகுந்த வழிமுறைகளின் மூலம் அந்தக் குற்றச்சாட்டுகளை நிறுவினால், அவர்களுடைய வார்த்தைகள் சற்றே {சிறிது} மதிக்கப்படலாம். எனினும் உண்மையென்னவெனில், யாரிடம் சச்சரவு செய்கிறார்களோ அவர்களுக்கு மரணத்தை இருப்புக்கு அழைக்கும் மூடர்களுடைய வார்த்தைகளின் அளவுக்கே அவர்களுடைய வார்த்தைகள் திறன் கொண்டவை[1].(9) இத்தகு நடத்தை {செயல்} மற்றும் வார்த்தைகளில் ஈடுபடும் மனிதன், தன் தகாவழிப் பிறப்பையே அறிவித்துக் கொள்கிறான். உண்மையில் அவன், எப்போதும் மறைக்கப்பட வேண்டிய உடலின் பகுதியைக் காட்டிக் கொண்டு ஆடும் ஒரு மயிலைப் போன்றவனாவான்[2].(10) தூய நடத்தை கொண்ட ஒருவன், எதையும் சொல்லவோ, செய்யவோ ஐயுணர்வு கொள்ளாதவனும், பாவம் நிறைந்தவனுமான இழிந்தவனிடம் ஒருபோதும் பேசக்கூடாது.(11)ஒருவனுடைய பார்வை தன் மேல் இருக்கும்போது, அவனுடைய தகுதிகளைப் பேசுபவனும், அவனுடைய பார்வை தன்னிடம் இருந்து விலகும்போது அவனைக் குறித்து இழிவாகப் பேசுபவனுமான மனிதன், உண்மையில் ஒரு நாயைப் போன்றவனாவான். அத்தகு மனிதன் சொர்க்கத்தில் தனக்கான பகுதிகள் அனைத்தையும், தான் கொண்ட எந்த அறிவு மற்றும் பண்பின் பலன்கள் அனைத்தையும் மொத்தமாக இழக்கிறான்.(12) ஒருவனுடைய பார்வை தன் மேல் இல்லாத போது, அவனைக் குறித்து இழிவாகப் பேசும் மனிதன், நெருப்பிலிட்ட தன் ஆகுதிகள் {காணிக்கைகள்} அனைத்தின் கனிகளையும், நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கு அவன் அளித்திருக்கும் கொடைகளின் பலன்களையும் தாமதமில்லாமல் இழக்கிறான்.(13) எனவே, ஞானம் கொண்ட மனிதன் ஒருவன், நேர்மையான மனிதர்கள் அனைவராலும் தவிர்க்கப்படத் தகுந்த இத்தகு பாவம் நிறைந்த இதயம் கொண்டவனை, நாயின் இறைச்சியைத் தவிர்ப்பதுபோலத் தயங்காமல் தவிர்க்க வேண்டும்.(14) ஓர் உயர் ஆன்ம மனிதனின் குற்றங்களை அறிவிக்கும் தீய ஆன்மா கொண்ட இழிந்தவன், (அச்செயலின் மூலம்) பாம்பானது (மற்றவர்கள் தலையிடும்போது) தன் தலையை வெளிக்காட்டுவதைப் போலத் தன் தீய இயல்பையே வெளிப்படுத்துகிறான்.(15) தனக்கு இனிமையான தொழிலிலேயே எப்போதும் ஈடுபடும் இத்தகு புறங்கூறுவோரிடம் எதிரிவினையாற்ற முனையும் உணர்வுள்ள மனிதன், சாம்பற்குவியலில் மூழ்கிய மூடக் கழுதையைப் போலத் துன்பம் நிறைந்த நிலையையே அடைகிறான்.(16)

பிறரின் குற்றங்களைப் பேசுவதில் எப்போதும் ஈடுபடும் மனிதனானவன், வெஞ்சினமிக்கதோர் ஓநாய், அல்லது பித்துப் பிடித்துப் பிளிறும் மதங்கொண்ட ஒரு யானை, அல்லது மூர்க்கமான ஒரு நாயைப் போலத் தவிர்க்கப்பட வேண்டியவனாவான்.(17) மூடப் பாதையில் செல்பவனும், நலம்தரும் கட்டுப்பாடுகள் மற்றும் அடக்கம் ஆகியவற்றில் இருந்து வீழ்ந்துவிட்டவனும், பிறருக்குத் தீங்கு செய்வதிலேயே எப்போதும் ஈடுபடுபவனும், தன் செழிப்பைக் குறித்துக் கவலையில்லாதவனுமான அந்த இழிந்த பாவிக்கு ஐயோ {அந்த இழிந்த பாவியை வெறுக்க வேண்டும்}.(18) இத்தகு இழிந்தோரால் அவமதிக்கப்படும்போது, அவர்களிடம் வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்ள ஒரு நேர்மையான மனிதன் விரும்பினால், “துன்பத்தை அனுபவிக்காதே” என்ற இவ்வார்த்தைகளால் அவனுக்கு அறிவுரை கூற வேண்டும். ஓர் உயர்ந்த மனிதனுக்கும், இழிந்த மனிதனுக்கும் இடையிலான வார்த்தை மோதலை அமைதியான மனம் கொண்டோர் ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை.(19) அவதூறு செய்யும் இழிந்தவன், சினங்கொள்ளும்போது, தன் உள்ளங்கையால் அடுத்தவனை அடிக்கவோ, புழுதி, அல்லது உமி வாரி இறைக்கவோ, பற்களைக் காட்டி, அல்லது நறநறவெனக் கடித்து அச்சுறுத்தவோ செய்வான். இவையனைத்தும் நன்கறியப்பட்டதே.(20) தீய ஆன்மா கொண்ட இழிந்தோர் சபைகளில் கூறும் நிந்தனைகளையும், அவதூறுகளையும் பொறுத்துக் கொள்ளும் மனிதன், அல்லது இந்த அறிவுரைகளை அடிக்கடி படிக்கும் மனிதன், பேச்சால் நேரும் எந்தத் துன்பத்தையும் ஒருபோதும் அனுபவிக்கமாட்டான்” என்றார் {பீஷ்மர்}.(21)

பணியாட்கள்! – சாந்திபர்வம் பகுதி – 115-மன்னனால் பணியமற்றத்தப்படும் மனிதர்களின் தகுதிகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானத்தைக் கொண்டவரே, என்னைக் குழப்பத்தில் பெரும் ஐயம் ஒன்று எனக்கிருக்கிறது. ஓ! மன்னா, நீர் அக்குறை தீர்க்க வேண்டும். நீர் நமது குடும்பத்தை முன்னேற்றமடையச் செய்பவராவீர்.(1) தீய நடத்தையும், தீய ஆன்மாவும் கொண்ட இழிந்தவர்கள் பேசும் அவதூறுகளைக் குறித்து எங்களிடம் உரையாடினீர். எனினும், நாம் உம்மை மேலும் கேள்வி கேட்க விரும்புகிறேன்.(2) நாட்டுக்கு எது நன்மையோ, அரச குலத்திற்கு எது மகிழ்ச்சியை உண்டாக்குமோ, எதிர்காலத்திலும், நிகழ்காலத்திலும் எது நன்மையையும் முன்னேற்றத்தையும் உண்டாக்குமோ,(3) உணவு, பானம் மற்றும் இந்த உடல் தொடர்புடையவற்றில் எது நன்மையோ, அதைக்குறித்து நீர் உரையாட வேண்டுமென நான் விரும்புகிறேன்.(4) அரியணையில் அமர்த்தப்பட்டு, நண்பர்கள், அமைச்சர்கள் மற்றும் பணியாட்கள் சூழ அதில் தொடர்ந்திருக்கும் {தொடர்ந்து அமர்ந்திருக்கும்} மன்னன், தன் மக்களை எவ்வாறு நிறைவுகொள்ளச் செய்ய வேண்டும்?(5)

எந்த மன்னன், தன் பற்று மற்றும் சார்புநிலை ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டுத் தீய கூட்டாளிகளுடன் அர்ப்பணிப்புள்ளவனாக மாறுவானோ, எவன், தன் உணர்வுகளுக்கு அடிமையாவதன் விளைவால் தீய மனிதர்களிடம் செல்வானோ, அவன்,(6) நல்ல குடி மற்றும் குருதியில் பிறந்த பணியாட்கள் அனைவரும் தன்னிடம் வெறுப்படைந்திருப்பதைக் காண்கிறான். அத்தகைய மன்னன், நல்ல பணியாட்களின் எண்ணிக்கை பலத்தால் அடையத்தக்க எந்த நோக்கத்தின் நிறைவையும் அடைய மாட்டான்.(7) நுண்ணறிவில் பிருஹஸ்பதிக்கு இணையாவரான உமக்கு, உறுதிசெய்து கொள்ளக் கடினமான மன்னர்களின் கடமைகளைக் குறித்து என்னிடம் உரையாடி, என் ஐயங்களைக் களைவதே தகும். (8) ஓ! மனிதர்களில் புலியே {பீஷ்மரே}, நமது குலத்திற்கு நன்மை செய்வதில் நீர் எப்போதும் ஈடுபட்டிருக்கிறீர். அதன் காரணமாகவே, ஆட்சித்திறத்தின் கடமைகள் குறித்து நீர் எப்போதும் எங்களிடம் உரையாடுகிறீர். பெரும் ஞானம் கொண்ட க்ஷத்திரியும் (விதுரரும்), மதிப்புமிக்க அறிவுரைகளை எப்போதும் எங்களுக்கு வழங்கி வருகிறார்.(9) நமது குலத்திற்கும், நாட்டுக்கும் நன்மையை உண்டாக்கவல்ல அறிவுரைகளை உம்மிடமிருந்து கேட்டால், இறவாநிலை தரும் அமுதத்தைப் பருகி நிறைவடைந்திருக்கும் மனிதனைப் போல என்னால் என் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்த முடியும். (10) பணியாட்களில் எந்த வர்க்கத்தினர் இழிந்தவர்களாகவும், எவர்கள் அனைத்து சிறப்புகளைக் கொண்டவர்களாகவும் கருதப்பட வேண்டும்? எந்த வர்க்கத்துப் பணியாட்கள், அல்லது எவ்வகைப் பிறப்புக் கொண்ட பணியாட்களின் உதவியுடன், ஆட்சிக் கடமைகளை வெளிப்படுத்துவது பரிந்துரைக்கப்படலாம்?(11) மன்னன் பணியாட்கள் இல்லாமல் தனியாகச் செயல்படுவதைத் தேர்ந்தெடுத்தால், அவனால் ஒருபோதும் தனது மக்களைப் பாதுகாப்பதில் வெல்ல முடியாது. எனினும், உயர்குடி பிறப்பைக் கொண்ட மனிதர்கள் அனைவரும், அரசுரிமையை அடையும் ஆசையுடன் இருக்கின்றனர்” என்றான் {யுதிஷ்டிரன்}.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, ஒரு மன்னனால் தனியாகத் தன் நாட்டை ஆள முடியாது. அவனுக்கு உதவி செய்யப் பணியாட்கள் இல்லாமல், அவனால் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றுவதில் வெல்ல முடியாது. எந்த நோக்கத்தையாவது அடைவதில் அவன் வென்றாலும், அவனால் (தனியாக) அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.(13) எந்த மன்னனின் பணியாட்கள் அனைவரும், அறிவும், ஞானமும் கொண்டவர்களாக இருப்பார்களோ, தங்கள் தலைவனின் நன்மையில் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்களோ, உயர்குடி பிறப்பையும், அமைதியான மனநிலையும் கொண்டவர்களாக இருப்பார்களோ, அவனே {அந்த மன்னனே} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(14) எந்த மன்னனின் அமைச்சர்கள் அனைவரும் நற்குடி பிறப்பு கொண்டவர்களாக, (கையூட்டுகள் மற்றும் பிற ஆதிக்கங்களின் மூலம்) அவனிடம் இருந்து விலகிச் செல்ல முடியாதவர்களாக, எப்போதும் அவனுடனே வாழ்பவர்களாக, தங்கள் தலைவனுக்கு அறிவுரை வழங்குவதில் ஈடுபடுபவர்களாக, ஞானம், நற்பண்பு ஆகியவற்றையும், பொருள்களின் உறவுகள் குறித்த அறிவையும் கொண்டவர்களாக,(15) எதிர்கால மற்றும் எதிர்பாரா நிகழ்வுகளைக் குறித்துச் சொல்பவர்களாக, காலத்தின் தன்மைகளைக் குறித்த நல்லறிவு கொண்டவர்களாக, கடந்து போனவற்றின் நிமித்தம் ஒருபோதும் வருந்தாதவர்களாக இருப்பார்களோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(16) எந்த மன்னனின் பணியாட்கள், அவனுடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்பவர்களாக, அவனுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்பவர்களாக, தங்கள் தலைவனின் நோக்கங்களை நிறைவேற்றுவதிலேயே எப்போதும் கவனம் கொண்டவர்களாக, பற்றுறுதிமிக்கவர்களாக இருப்பார்களோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(17)

எந்த மன்னனின் குடிமக்கள் எப்போதும் உற்சாகம் நிறைந்தவர்களாக, உயர்ந்த மனம் கொண்டவர்களாக, எப்போதும் அறவழியில் நடப்பவர்களாக இருப்பார்களோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(18) எவனுடைய வருமானத்தின் {வரவின்} மூலங்கள் அனைத்தும், நிறைவு கொண்டவர்களும், நம்பிக்கைக்குரியவர்களும், நிதியைப் பெருகச் செய்யும் வழிமுறைகளை நன்கறிந்தவர்களுமான மனிதர்களால் கண்காணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறதோ, அவனே {அந்த மன்னனே} மன்னர்களில் சிறந்தவனாவான்.(19) எந்த மன்னனுடைய பண்டகசாலைகளும், தானியக்களஞ்சியங்களும், கையூட்டு பெறாதவர்களும், நம்பிக்கைக்குரியவர்களும், அர்ப்பணிப்புள்ளவர்களும், ஆசையற்றவர்களும், திரள {பெருகச்} செய்வதில் முனைப்புள்ளவர்களுமான பணியாட்களின் மேற்பார்வையில் நடத்தப்படுகிறதோ, அவன் {அந்த மன்னன்} செழிப்பையும், பெரும் தகுதியையும் {புண்ணியத்தையும்} அடைவதில் வெல்கிறான்.(20) எந்த மன்னனின் நகரத்தில் நீதியானது, நன்கறியப்பட்ட விளைவுகளை உண்டாக்கும் உண்மையற்ற வழக்கைக் கொண்ட வாதி அல்லது பிரதிவாதிக்கு அபராதம் விதிக்கும் வகையிலும், குற்றவியல் வழக்குகளில் சங்கர் மற்றும் லிகிதரின்[1] ஒழங்கிலும் முறையாக நிர்வகிக்கப்படுகிறதோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(21) எந்த மன்னன் தன் குடிமக்களிடம் அன்பால் தன்னைப் பிணைத்துக் கொள்கிறானோ, மன்னர்களின் கடமைகளைஅறிந்தவனாக இருக்கிறானோ, ஆறு தொகுப்புகளை {ஆறு முக்கிய நோக்கங்களைக்} கவனிக்கிறானோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(22)

வேங்கையான ஞமலி! – சாந்திபர்வம் பகுதி – 116-அச்சத்தில் நடுங்கிய ஒரு நாயானது, ஒரு முனிவரின் உதவியால் சிறுத்தையாகவும், புலியாகவும் மாறிய கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பின்வரும் பழங்கால வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லோருக்கும் ஞானிகளுக்கும் மத்தியில் அந்த வரலாறானது நல்ல முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.(1) அவ்வரலாறு தற்போதைய தலைப்புக்கு {உரையாடலுக்குத்} தொடர்புடையதாகும். ஜமதக்னியின் மகனான ராமரின் {பரசுராமரின்} ஆசிரமத்தில், முனிவர்களில் முதன்மையானோர் பலரால் அஃது உரைக்கப்படும்போது நான் கேட்டிருக்கிறேன்.(2) மனிதர்கள் வசிக்காத ஒரு பெருங்காட்டில், கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, புலனடக்கத்துடன், கடுந்தவங்களை நோற்கும் ஒரு தவசி வாழ்ந்து வந்தார்.(3) அவர், கடும் விதிமுறைகள் மற்றும் தன்னடக்கத்தை நோற்பவராக, அமைதியான மற்றும் தூய்மையான ஆன்மா கொண்டவராக, வேதம் ஓதுவதில் எப்போதும் கவனம் உள்ளவராக, நோன்புகளால் இதயம் தூய்மை அடைந்தவராக, அனைத்து உயிரினங்களிடமும் நற்பண்புகளுடன் நடந்து கொள்ளும் ஒரு வாழ்வைப் பின்பற்றி வந்தார்.(4) பெரும் நுண்ணறிவுடன் தன் இருக்கையில் அமர்ந்திருக்கும் அவரது நல்லியல்பானது, காட்டில் வாழும் அனைத்து உயிரினங்களாலும் அறியப்பட்டதே என்பதால், அவை அவரை அன்புடன் அணுகி வந்தன.(5)

சீற்றமிகு சிங்கங்களும், புலிகளும், பெரும் அளவைக் கொண்ட மதங்கொண்ட யானைகளும், சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், கரடிகள் மற்றும் குருதியுண்டு வாழும் கடுந்தன்மை கொண்ட பிற விலங்குகளும் அம்முனிவரை அணுகி, அவரிடம் வழக்கமான கேள்விகளைக் கேட்டு வந்தன. உண்மையில் அவை அனைத்தும் அவரிடம் சீடர்களைப் போலவும், பணியாட்களைப் போலவும் நடந்து கொண்டு, எப்போதும் அவருக்கு ஏற்புடையவற்றையே செய்து வந்தன.(6,7) அவரிடம் வந்து வழக்கமான விசாரிப்புகளை விசாரித்துவிட்டு, தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்வதை அவை வழக்கமாகக் கொண்டிருந்தன. எனினும், ஒரு வளர்ப்பு விலங்கானது {நாயானது}, எந்த நேரமும் அந்த முனிவரை விட்டு விலகாமல், அங்கேயே வாழ்ந்து வந்தது.(8) அஃது {அந்த நாய்} அந்தத் தவசியிடம் அர்ப்பணிப்பும், ஆதிதப் பற்றுக் கொண்டதாக இருந்தது. நோன்புகளால் பலவீனமடைந்து மெலிந்திருந்த அது, கனிகளையும், கிழங்குகளையும், நீரையும் உண்டு வாழ்ந்து, அமைதியுடனும், குற்றமிழைக்கா தன்மையுடனும் இருந்தது.(9) அந்த உயர் ஆன்ம முனிவரின் பாதத்தில் கிடந்த அது {அந்த நாயானது}, தான் நடத்தப்படும் விதத்ததில் விளைந்த அன்பின் விளைவால் அவரிடம் {முனிவரிடம்} மிகவும் பற்றுடன் இருந்தது.(10)

ஒரு நாள் பெரும்பலம் படைத்ததும், குருதியையுண்டு வாழ்வதுமான ஒரு சிறுத்தை அங்கே வந்தது. தீய மனோநிலை கொண்டதும், எப்போதும் இரை தேடும் திளைப்பில் நிறைந்ததுமான அந்தக் கடும் விலங்கானது இரண்டாம் யமனைப் போலத் தெரிந்தது.(11) அந்தச் சிறுத்தையானது, நாவால் தன் கடைவாயை நக்கியபடியும், தன் வாலை மூர்க்கமாக ஆட்டியபடியும், பசியுடனும், தாகத்துடனும், தன் வாயை அகல விரித்துக் கொண்டு, அந்த நாயைத் தன் இரையாகப் பிடிக்க விரும்பி அங்கே வந்தது.(12) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தக் கடும் விலங்கு வருவதைக் கண்ட அந்த நாய், உயிருக்கு அஞ்சி முனிவரிடம் இவ்வார்த்தைகளில் பேசியது. ஓ! ஏகாதிபதி, அதைக் கேட்பாயாக.(13) {அந்த நாய் முனிவரிடம்}, “ஓ! புனிதமானவரே, இந்தச் சிறுத்தையானது நாய்களுக்கு எதிரியாகும். அஃது என்னைக் கொல்ல விரும்புகிறது. ஓ! பெரும் தவசியே, இந்த விலங்கிடம் நான் கொண்ட அச்சங்கள் அனைத்தும் உமது அருளால் என்னிடமிருந்து விலகும் வழியில் செயல்படுவீராக. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நீர் அனைத்தையும் அறிந்தவர் என்பதில் ஐயமில்லை” என்றது.(14) அனைத்து உயிரினங்களின் எண்ணங்களையும் அறிந்தவரான அந்தத் தவசி, அந்த நாய் பெரும் அச்சத்தில் இருப்பதை உணர்ந்தார். ஆறு பண்புகளைக் கொண்டவரும், விலங்குகள் அனைத்தின் குரல்களைப் படிக்கவல்லவருமான அந்தத் தவசி பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார்.(15)

அந்தத் தவசி {நாயிடம்}, “இனியும் உனக்குச் சிறுத்தைகளிடம் மரண அச்சமேதும் வேண்டாம். ஓ! மகனே, உன் இயல்பான வடிவம் மறைந்து, நீயும் ஒரு சிறுத்தையாவாயாக” என்றார்.(16) அந்த வார்த்தைகளைச் சொல்லப்பட்டதும், அந்த நாயானது, தங்கம் போன்ற பிரகாசத்துடன் கூடிய தோலைக் கொண்ட ஒரு சிறுத்தையாக மாறியது. உடலில் கோடுகளுடனும், {வாயில்} பெரும்பற்களுடனும் கூடிய அஃது, அந்தக் காட்டில் அச்சமில்லாமல் வாழத் தொடங்கியது.(17) அதே வேளையில், தன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு விலங்கைத் தன் முன் கண்ட சிறுத்தையானது, அதனிடம் கொண்ட பகையுணர்வனைத்தையும் அப்போதே கைவிட்டது.(18) சில காலம் கழித்து, சீற்றமும் பசியும் நிறைந்த ஒரு புலியானது திறந்த வாயுடன் அந்த ஆசிரமத்திற்கு வந்தது. நாவால் தன் கடைவாயை நக்கியபடியும், குருதி குடிக்கும் ஆவல் மற்றும் விருப்பத்துடனும் அந்தப் புலியானது, சிறுத்தையாக மாறியிருந்த அந்த விலங்கை நோக்கிச் செல்லத் தொடங்கியது.(19) பயங்கரப் பற்களைக் கொண்டதும், பசியுடன் கூடியதுமான புலி, அந்தக் காட்டை அணுகுவதைக் கண்ட (வடிவம் மாறிய) சிறுத்தையானது, தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த முனிவரின் பாதுகாப்பை நாடியது.(20)

அந்தச் சிறுத்தை அதே இடத்திலேயே தன்னுடன் வாழ்ந்து வந்ததால், அதனிடம் பெரும் பற்றுக் கொண்ட அந்தத் தவசி, அந்தச் சிறுத்தையை, அனைத்து எதிரிகளைவிடவும் பலமிக்க ஒரு புலியாக மாற்றினார்.(21) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தன் இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கைக் கண்ட புலியானது, அதற்கு எந்தத் தீங்கையும் செய்யாதிருந்தது. காலத்தின் ஓட்டத்தில், குருதியும், இறைச்சியும் உண்டு வாழும் பலமிக்க ஒரு புலியாக உருமாறிய அந்த நாயானது, தன் முந்தைய உணவான கனிகளையும், கிழங்குகளையும் தவிர்த்தது.(22) ஓ! ஏகாதிபதி, உண்மையில் அது {அந்த நாயானது}, புலியாக மாறிய நேரத்தில் இருந்து, உண்மையான விலங்குகளின் மன்னனைப் போலவே காட்டின் பிற விலங்குகளை உண்டு வாழ்ந்தது” என்றார் {பீஷ்மர்}.(23)

சரபமான ஞமலி தன் வடிவை அடைந்தது! – சாந்திபர்வம் பகுதி – 117-முனிவரின் உதவியால் சிறுத்தையாகவும், புலியாகவும் மாறிய நாய், பின்பு, யானையாகவும், சிங்கமாகவும், சரபமாகவும் மாற்றப்பட்டது; சரபமாகி இன்புற்றிருந்த நாய் அந்த முனிவரையே கொல்ல நினைத்தது; அதை அறிந்த முனிவர் சரபமாகியிருந்த அந்த நாயை மீண்டும் தன் வடிவையே ஏற்கச் செய்தது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “புலியாக உருமாறிய நாய், கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்டு சுகமாக உறங்கிக் கொண்டிருந்தது. ஒரு நாள் அஃது ஆசிரமத்தின் முற்றத்தில் கிடந்தபோது, எழுச்சியடைந்த மேகம் போலத் தெரிந்த ஒரு மதங்கொண்ட யானை அங்கே வந்தது.(1) பெரிய உடற்கட்டுடனும், மதநீர் பெருகிய கன்னத்துடனும், உடலில் தாமரையின் குறியீடுகளுடனும், அகன்ற மத்தகங்களுடனும் இருந்த அந்த விலங்குக்கு, நீண்ட தந்தங்களும், மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலும் இருந்தன.(2) பலத்தில் செருக்கடைந்திருக்கும் அந்த மதங்கொண்ட யானை தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்தப் புலி, அச்சத்தால் கலங்கி, அந்த முனிவரின் பாதுகாப்பை நாடியது.(3) அதன் பேரில் அந்த முனிவர்களில் சிறந்தவர் அந்தப் புலியை ஒரு யானையாக மாற்றினார். உண்மையான யானையானது, தன் இனத்தைச் சார்ந்ததும், மேகத் திரளைப் போன்று பெரிதாக இருப்பதுமான அதைக் கண்டு அச்சமடைந்தது.(4) முனிவரின் யானையானது, தாமரை இதழ்களை உடற்புள்ளிகளாக {மச்சங்களாகப் போலக்} கொண்டு, தாமரைகள் அடர்த்தியாக மலர்ந்திருக்கும் தடாகங்களுக்குள் மகிழ்ச்சியாகக் குதித்து, முயல் பொந்துகள் நிறைந்த அதன் கரைகளில் திரிந்தது.(5)

இவ்வழியில் ஒரு குறிப்பிட்ட காலம் கடந்து சென்றது. ஒரு நாள் அந்த யானை ஆசிரமத்தின் பக்கம் உலவிக் கொண்டிருந்தபோது, மலைக்குகையில் பிறந்ததும், யானைகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டதுமான பிடரி படைத்த சிங்கம் ஒன்று அங்கே வந்தது.(6,7) சிங்கம் வருவதைக் கண்ட முனிவரின் யானை, உயிருக்கு அஞ்சி நடுங்கத் தொடங்கி, அந்தத் தவசியின் பாதுகாப்பை நாடியது.(8) அதன் பேரில் அந்தத் தவசி அந்த யானைகளின் இளவரசனை ஒரு சிங்கமாக மாற்றினார். அந்தக் காட்டுச்சிங்கம் தன் இனத்தைச் சேர்ந்த விலங்காக இருந்ததால், முனிவரின் சிங்கம் அதற்குமேலும் அஞ்சவில்லை. மறுபுறம், அந்தக் காட்டுச் சிங்கமானது, தன் இனத்தைச் சேர்ந்த வலிமைமிக்க விலங்கைத் தன் முன்னே கண்டு அச்சமடைந்தது.(9) முனிவரின் சிங்கம் காட்டில் உள்ள அந்த ஆசிரமத்திலேயே வசிக்கத் தொடங்கியது. அந்த விலங்கிடம் கொண்ட அச்சத்தால், அதற்கு மேலும் வேறெந்த விலங்கும் அந்த ஆசிரமத்தை அணுகத் துணியவில்லை. உண்மையில் அந்த விலங்குகள் அனைத்தும் தங்கள் உயிரின் பாதுகாப்பைக் கருதி அச்சமடைந்தன.(10)

சில காலம் கடந்ததும், ஒரு நாள், பெரும் பலம் கொண்டதும், அனைத்து விலங்குகளையும் கொல்லக்கூடியதும், அனைத்து விலங்குகளுக்கும் அச்சமூட்டக்கூடியதும், எட்டுக் கால்களைக் கொண்டதும், நெற்றியில் கண்களைக் கொண்டதுமான ஒரு சரபம் அங்கே வந்தது. உண்மையில், அது முனிவரின் சிங்கத்தைக் கொல்லும் நோக்குடன் அந்த ஆசிரமத்திற்கே வந்தது.(11,12) இதைக் கண்ட தவசி, தன் சிங்கத்தைப் பெரும்பலமிக்க ஒரு சரபமாக மாற்றினார். அந்தக் காட்டுச் சரபமானது, சீற்றமிக்கதும், தன்னைவிடப் பலமிக்கதுமான முனிவரின் சரபம் தன் முன்னே நிற்பதைக் கண்டு வேகமாக அந்தக் காட்டைவிட்டுத் தப்பி ஓடியது.(14) இவ்வாறு அந்தத் தவசியால் சரபமாக மாற்றப்பட்ட அந்த விலங்கானது, தன்னை அவ்வாறு மாற்றியவரின் அருகிலேயே மகிழ்ச்சியாக வாழ்ந்தது.(15)

அருகில் வசித்து வந்த விலங்குகள் அனைத்தும் அந்தச் சரபத்தால் அச்சமடைந்தன. அச்சமும், தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ளும் விருப்பமும் அவை அனைத்தும் அந்தக் காட்டில் இருந்து தப்பி ஓடுவதற்கு வழிவகுத்தன.(16) மகிழ்ச்சியில் நிறைந்திருந்த அந்தச் சரபம், தினமும் தன் உணவுக்காக விலங்குகளைக் கொல்வதைத் தொடர்ந்தது. ஊனுண்ணும் விலங்காக மாற்றப்பட்ட அஃது, அதற்கு மேலும் முந்தைய வாழ்வில் தான் உண்ட கனிகளையும், கிழங்குகளையும் உண்ணவில்லை.(17) முன்பு நாயாக இருந்து இப்போது சரபமாக மாறியிருக்கும் அந்த நன்றியற்ற விலங்கு, ஒரு நாள், ஆவலுடன் கூடிய குருதி தாகத்துடன் அந்தத் தவசியைக் கொல்ல விரும்பியது.(18) அவர் {தவசி}, தன் தவச் சக்தியாலும், தன் ஆன்ம அறிவாலும் அனைத்தையும் கண்டார். பெரும் ஞானத்தைக் கொண்ட அந்தத் தவசி, அந்த விலங்கின் நோக்கங்களை உறுதிசெய்து கொண்டு, அதனிடம் இவ்வார்த்தைகளைப் பேசினார்.(19)

அந்தத் தவசி {சரபமாக மாறியிருக்கும் நாயிடம்}, “ஓ! நாயே, நீ முதலில் ஒரு சிறுத்தையாக உருமாற்றப்பட்டாய். பிறகு சிறுத்தையிலிருந்து ஒரு புலியாக மாற்றப்பட்டாய். புலியாக இருந்த நீ, கன்னங்களில் மதநீர் ஒழுகும் ஒரு யானையாக மாற்றப்பட்டாய். அடுத்ததாகச் சிங்கமாகவும் மாற்றப்பட்டாய்.(20) பிறகு வலிமைமிக்கச் சிங்கமாக இருந்த நீ ஒரு சரபமாகவும் மாற்றப்பட்டாய். உன்னிடம் அன்பால் நிறைந்ததால் நான் உன்னைப் பல்வேறு வடிவங்களில் உருமாற்றி வந்தேன். பிறப்பால் நீ அந்த இனங்களில் ஏதேனும் ஒன்றில் இருப்பதோ, இருக்ககூடிய பிறப்போ அல்ல.(21) எனினும், ஓ பாவம் நிறைந்த இழிந்த பிறவியே, உனக்கு எந்தத் தீங்கையும் செய்யாத என்னை நீ கொல்ல விரும்பியதால், மீண்டும் நீ உன் இனத்தைச் சேர்ந்த பிறவியாகவே மாறி, மீண்டும் ஒரு நாயாவாயாக” என்றார்.(22) இதன்பிறகு, சரபமாக மாற்றப்பட்டிருந்ததும், குறுகிய புத்தி கொண்டதுமான அந்த மூட விலங்கு, அந்த முனிவருடைய சாபத்தின் வீளைவால் மீண்டும் அதற்குரிய நாயின் வடிவத்தை ஏற்றது” என்றார் {பீஷ்மர்}.(23)

அரசு ஊழியர்களின் பண்புகள்! – சாந்திபர்வம் பகுதி – 118-மன்னன் தன் பணியாட்களை நியமிக்க வேண்டிய முறை; நியமிக்கப்பட வேண்டிய அமைச்சர்களின் பண்புகள்; ஒரு மன்னனுக்கு இருக்க வேண்டிய, அல்லது அவன் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள்; போர்வீரர்களுக்குத் தேவையான பண்புகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த நாயானது, தனக்கு உரிய வடிவத்தை ஏற்றவுடன் உற்சாகமிழந்தது. அந்தப்பாவம் நிறைந்த விலங்கைக் கண்டித்த முனிவர், அதைத் {நாயை} தன் ஆசிரமத்திலிருந்து விரட்டிவிட்டார்.(1) நுண்ணறிவு கொண்ட மன்னன் ஒருவன், இந்த எடுத்துக்காட்டால் வழிகாட்டப்பட்டு, பணியாட்கள் ஒவ்வொருவரும் பணியமர்த்தப்படும் முன்பே, அவர்களின் உண்மைத்தன்மை, தூய்மை, நேர்மை, பொதுவான மனநிலை, சாத்திர அறிவு, நடத்தை, பிறப்பு, தன்னடக்கம், கருணை, பலம், சக்தி, கண்ணியம் மற்றும் மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகியவற்றை உறுதி செய்து கொண்டு, அலுவலுக்குத் தகுந்த பணியாட்களை நியமிக்க வேண்டும்.(2,3) ஒரு மன்னன், முதலிலேயே தீர ஆராயமல் ஓர் அமைச்சரை ஒருபோதும் நியமிக்கக்கூடாது. ஒரு மன்னன் தன்னைச் சுற்றிலும் இழிபிறவிகளைத் திரட்டி வைத்திருந்தால், அவனால் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.(4) உயர் குடி பிறப்பைக் கொண்டவன், எக்குற்றமும் செய்யாமலே தன் தலைவனால் தண்டிக்கப்பட்டாலும், தன் குருதியுடைய மதிப்பின் விளைவால், தன் தலைவனுக்குத் தீங்கிழைப்பதில் ஒருபோதும் இதயத்தை நிலைக்கச் செய்ய மாட்டான்[1].(5)

எனினும், இழிபிறவியான ஒருவன், ஏதோவொரு நேர்மையான மனிதனின் தொடர்பால் பெருஞ்செழிப்பை அடைந்திருந்தாலும், வெறுமனே வார்த்தைகளில் கண்டிக்கப்பட்டாலும்கூட அம்மனிதனின் பகைவனாகிவிடுவான்[2].(6) ஓர் அமைச்சன் உயர்குடி பிறப்பைக் கொண்டவனாக, பலமிக்கவனாக இருக்க வேண்டும்; அவன் மன்னிக்கும் தன்மையும், தன்னடக்கமும் கொண்டவனாக, தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தியவனாக, கொள்ளை எனும் தீமையில் இருந்து விடுபட்டவனாக, நியாயமான முறையில் அடையப்பட்ட உடைமைகளில் மனம்நிறைந்தவனாக, தன் தலைவன் மற்றும் நண்பர்களின் செழிப்பில் மகிழ்ச்சி கொள்பவனாக,(7,8) இடம் மற்றும் நேரத்திற்குத் தக்க தேவைகளை அறிந்தவனாக, தன் தலைவனுக்கான நல்ல அலுவல்களைச் செய்பவனாக, அல்லது அதில் எப்போதும் ஈடுபடுபவனாக, எப்போதும் கவனமிக்கவனாக,(9) தன் கடமைகளை ஆற்றுவதில் நம்பிக்கைக்குரியவனாக, போர் மற்றும் அமைதியின் கலைகளில் முற்றான திறம் கொண்டவனாக, மூன்று பெரும் தொகுப்புகளின் {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில்} மன்னனின் தேவைகளை அறிந்தவனாக, குடிமக்களாலும், மாகாணங்களில் வசிப்போராலும் அன்புடன் விரும்பப்படுபவனாக,(10) பகைவரின் படையணிகளைப் பிளக்கவும், துளைக்கவும் கூடிய அனைத்து வகைப் போர்வியூகங்களையும் அறிந்தவனாக, தன் தலைவனின் படைகளுக்கு உற்சாகத்தையும் இன்பத்தையும் அளிப்பவனாக, அறிகுறிகளையும், தோற்றநிலைகளையும் படிக்கவல்லவனாக, அணிவகுப்புக்குத் தேவையான அனைத்தையும் அறிந்தவனாக,(11) யானைகளுக்குப் பயிற்சி அளிப்பதில் திறம் கொண்டவனாக, செருக்கில் இருந்து விடுபட்டவனாக, தன் சக்திகளில் நம்பிக்கை உள்ளவனாக, தொழில் பரிவர்த்தனையில் புத்திசாலியாக, எப்போதும் சரியானதையே செய்பவனாக,(12) நல்லொழுக்கம் கொண்டவனாக, நல்ல நண்பர்களால் சூழப்பட்டவனாக, இனிய பேச்சைக் கொண்டவனாக, ஏற்புடைய பண்புகளைக் கொண்டவனாக, சிறப்புத் திறமை, செயல்பாட்டில் துடிப்பு,(13) சுறுசுறுப்பு, புத்திக்கூர்மை, இனிய மனம், பேச்சில் பணிவு, பொறுமை, துணிவு, வளமை ஆகியவற்றைக் கொண்டவனாக, இடம் மற்றும் காலத்திற்குத் தகுந்த தேவைகளின்படி தன் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளவல்லவனாக இருக்க வேண்டும்.(14) இத்தகு அமைச்சனை அடையும் மன்னனை, வேறு எவனாலும் ஒருபோதும் அவமதிக்கவோ, வீழ்த்தவோ முடியாது. உண்மையில் அவனது நாடானது, நிலவின் வெளிச்சத்தைப் போல இந்தப் பூமியில் படிப்படியாகப் பரவும்.(15)

மேலும் சாத்திரங்களை அறிந்தவனும், அறமே அனைத்திற்கும் மேலானது எனக் கருதுபவனும், தன் குடிமக்களைக் காப்பதில் எப்போதும் ஈடுபடுபவனும், பின்வரும் பண்புகளைக் கொண்டவனுமான ஒரு மன்னனானவன் அனைவரின் அன்பையும் பெறுவான்.(16) அவன் {ஒரு மன்னன்}, பொறுமை, மன்னிக்கும் தன்மை, தூய ஒழுக்கம், தேவையான தருணங்களில் கடுமை, பெரியோர் அனைவரையும் மதிக்கும் நடத்தை, சாத்திர அறிவு, அறிவுரையும் ஆலோசனையும் வழங்கத்தக்கவர்களிடம் அவற்றைக் கேட்கக்கூடிய ஆயத்தம், தனக்குப் பரிந்துரைக்கப்படும் வேறுபட்ட, அல்லது எதிர் நடவடிக்கைகளுக்கு மத்தியில் சரியாகத் தீர்மானிக்கும் திறன்,(17) புத்திக்கூர்மை, நல்ல நினைவுத்திறன், நீதியைச் செய்ய ஆயத்தம், தற்கட்டுப்பாடு, எப்போதும் பேச்சில் இனிமை, எதிரிகளையும் மன்னிக்கும் தன்மை,(18) தனிப்பட்ட ஈகை பயில்வது, நம்பிக்கையுடன் இருப்பது, ஏற்புடைய பண்புகளைக் கொண்டிருப்பது, துயரில் மூழ்கியிருக்கும் மனிதர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஆயத்தநிலையிலிருப்பது, தன் நன்மையை எப்போதும் நாடும் அமைச்சர்களைக் கொண்டிருப்பது,(19) தற்பெருமை எனும் குற்றத்தைத் தவிர்ப்பது, மனைவியில்லாமல் ஒருபோதும் இல்லாத நிலை, எதையும் அவசரமாகச் செய்யாத நிலை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் .(20)

அவன், சோம்பலைத் தவிர்த்து, தனக்கு நன்மை செய்யும் மனிதர்களுடன் எப்போதும் இணைந்திருக்க வேண்டும். அவனது முகம் எப்போதும் உற்சாகம் நிறைந்ததாக இருக்க வேண்டும். தன் பணியாட்களின் தேவைகளில் எப்போதும் கவனமாக இருப்பவனாகவும், கோப வசப்படாதவனாகவும் அவன் இருக்க வேண்டும். இவற்றைத் தவிர்த்து அவன் பெருந்தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும்.(21) தண்டக்கோலைக் கீழே வைக்காமல், அதை முறையுடன் தரிக்க வேண்டும். தன் மக்கள் அனைவரையும் நியாயமாக நடக்கச் செய்ய வேண்டும். அவன், ஒற்றர்களைத் தன் கண்களாகக் கொண்டு, தன் குடிமக்களின் காரியங்களைக் கண்காணித்து, அறம் மற்றும் செல்வம் தொடர்பான அனைத்துக் காரியங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த நூறு பண்புகளையும் கொண்ட மன்னன் அனைவரின் அன்பையும் ஈட்டுவான். ஒவ்வொரு ஆட்சியாளனும் இவ்வாறு இருக்க முயற்சிக்க வேண்டும்.(22) ஓ! ஏகாதிபதி, ஒரு மன்னன், தன் நாட்டைப் பாதுகாப்பதில் தனக்கு உதவி செய்வதற்குத் தேவையான தகுதிகளுடன் கூடிய நல்ல போர்வீரர்களைத் (தன் படையில் சேர்த்துக் கொள்வதற்குத்) தேட வேண்டும்.(23) தன் முன்னேற்றத்தை விரும்புபவனான ஒரு மன்னன் ஒருபோதும் தன் படையை அலட்சியம் செய்யக்கூடாது.

எந்த மன்னனின் படைவீரர்களில், போரில் துணிவுமிக்கவர்களாகவும், நன்றியுணர்வு மிக்கவர்களாகவும், சாத்திரங்களை அறிந்தவர்களாகவும் இருக்கிறார்களோ, எவனுடைய படையில், அறம் மற்றும் கடமை குறித்த உடன்படிக்கைகளை அறிந்த காலாட்படையினர் இருக்கிறார்களோ, எவனுடைய யானைவீரர்கள் அச்சமில்லாதவர்களாக இருக்கிறார்களோ, எவனுடைய தேர்வீரர்கள், தங்கள் வகைப் போரில் திறம்பெற்றவர்களாகவும், கணை ஏவுவதை நன்கறிந்தவர்களாகவும், பிற ஆயுதங்களைத் தரிக்கவும் தெரிந்தவர்களாக இருக்கிறார்களோ, அவன் {அந்த மன்னன்} மொத்த உலகையும் அடக்குவான்.(24,25) எந்த மன்னன், மனிதர்கள் அனைவரையும் தன்னோடு இணைப்பதில் எப்போதும் ஈடுபடுவானோ, எவன் முயற்சிக்கு {உழைப்புக்கு} எப்போதும் ஆயத்தமாக இருக்கிறானோ, எவன் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் காரியத்தில் வளத்துடன் இருக்கிறானோ, அவன் {அந்த மன்னன்} ஆட்சியாளர்களில் முதன்மையானவன் ஆவான்.(26) ஓ! பாரதா, மனிதர்கள் அனைவரையும் தன்னோடு இணைத்துக் கொள்வதில் வெற்றி காணும் மன்னன், துணிவுடன் கூடிய ஓராயிரம் குதிரைவீரர்களை மட்டுமே கொண்டும் கூட மொத்த உலகையும் கைப்பற்றுவான்” என்றார் {பீஷ்மர்}.(27)

தக்க நியமனம்! – சாந்திபர்வம் பகுதி – 119-பணியாட்களில் ஒவ்வொருவரையும் அவரவர்க்குத் தகுந்த அலுவல்களில் நியமிக்க வேண்டும்; தகாதவர்களைத் தகாத நிலையில் நியமித்தால் ஏற்படும் நிலை மற்றும், தகுந்தவர்களைத் தகுந்த நிலையில் நியமித்தால் ஏற்படும் நிலை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டிய பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “எந்த மன்னன், இந்த நாயின் கதையில் இருந்து பெறப்பட்ட பாடத்தால் வழிகாட்டப்பட்டு, தன் பணியாட்கள் ஒவ்வொருவரையும் அவர்களுக்குத் தகுந்த அலுவல்களில் நியமிக்கிறானோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்புடைய இன்பங்களை அனுபவிப்பதில் வெல்வான் {அரசின் பயனைப் பெறுவான்}. ஒரு நாயானது, அதற்குத் தகுந்த நிலைக்கு மேலே கௌரவத்துடன் அமர்த்தப்படக்கூடாது. ஒரு நாய், அதற்குத் தகுந்த நிலைக்கு மேல் அமர்த்தப்பட்டால், அது செருக்கால் போதையுறும்.(2) தகுந்த அலுவல்களில் நியமிக்கப்படும் அமைச்சர்கள், அந்தந்தத் தொழிலுக்குத் தகுந்த தகுதிகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தகாத மனிதர்களின் நியமனங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாது.(3) எந்த மன்னன், தன் பணியாட்கள் ஒவ்வொருவருக்கும் தகுந்த அலுவல்களைக் கொடுக்கிறானோ, அத்தகு தகுதியின் {புண்ணியத்தின்} விளைவால் அவன் {அந்த மன்னன்}, அரசு தொடர்புடைய இன்பங்களை அனுபவிப்பதில் வெல்வான் {அரசின் பயனைப் பெறுவான்}.(4) ஒரு சரபம், சரபத்தின் நிலையை ஏற்க வேண்டும்; ஒரு சிங்கம், சிங்கத்தின் வலிமையால் பெருகியதாக இருக்க வேண்டும்; ஒரு புலியானது, புலியின் நிலையில் அமர்த்தப்பட வேண்டும்; ஒரு சிறுத்தையானது, சிறுத்தையின் நிலையில் அமர்த்தப்பட வேண்டும்.(5)

பணியாட்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தகுந்த அலுவல்களில் விதிப்படி நியமிக்கப்பட வேண்டும். நீ வெற்றியை அடைய விரும்பினால், பணியாட்களுக்குத் தகுந்ததைவிட உயரிய நிலையில் ஒருபோதும் அவர்களை நியமிக்கக்கூடாது.(6) எந்த மூட மன்னன், இந்த எடுத்துக்காட்டை மீறி, தகாத நிலைகளில் பணியாட்களை நியமிப்பானோ, அவன் தன் மக்களை நிறைவடையச் செய்வதில் தவறுவான்.(7) திறன்மிக்கப் பணியாட்களைக் கொள்ள விரும்பும் மன்னன் ஒருவன், நுண்ணறிவற்றவர்களும், இழிந்த மனம் கொண்டவர்களும், ஞானம் இல்லாதவர்களும், தங்கள் புலன்களுக்குத் தலைவர்களாக இல்லாதவர்களும், உயர் குடியில் பிறக்காதவர்களுமான மனிதர்களை ஒருபோதும் {எந்த அலுவலிலும்} நியமித்துக் கொள்ளக்கூடாது.(8) நேர்மையானவர்களும், உயர்குடி பிறப்பைக் கொண்டவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், கல்விமான்களும், தீயநோக்கமும், பொறாமையும் இல்லாதவர்களும், உயர்ந்த மனம் கொண்டவர்களும், நடத்தையில் தூய்மையானவர்களும், தொழில் பரிவர்த்தனையில் புத்திசாலிகளுமான மனிதர்கள், அமைச்சர்களாக நியமிக்கப்படத் தகுந்தவர்களாவர்.(9) பணிவுடையவர்களும், தங்கள் கடமைகளை ஆற்றத் தயாராக இருப்பவர்களும், அமைதியான மனநிலை கொண்டவர்களும், மனத்தில் தூய்மையானவர்களும், இயல்பான பல்வேறு பிற கொடைகளைக் கொண்டவர்களும், தாங்கள் இருக்கும் அலுவல்களின் தொடர்பான அவதூறுகளுக்கு ஆளாகாதவர்களுமான மனிதர்கள், மன்னனின் அணுக்கமான துணைவர்களாக இருக்க வேண்டும்.(10)

ஒரு சிங்கமானவன், எப்போதும் மற்றொரு சிங்கத்தையே தன் தோழனாகக் கொள்ள வேண்டும். சிங்கமல்லாத ஒருவன், ஒரு சிங்கத்திற்குத் தோழனானால், அவன் அந்தச் சிங்கத்திற்கு உண்டான பயன்கள் அனைத்தையும் ஈட்டுவான்.(11) எனினும் ஒரு சிங்கமானவன், நாய்களின் கூட்டத்தை மட்டுமே தன் துணைவர்களாகக் கொண்டிருந்தால், அவன் சிங்கத்திற்குரிய கடமைகளை ஆற்றும்போது, தன் தோழமையின் விளைவால், அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதில் தவறுவான்.(12) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, ஒரு மன்னன், துணிவு, ஞானம், பெரும் கல்வி, உயர்குடி பிறப்பு ஆகியவற்றைக் கொண்ட மனிதர்களைத் தன் அமைச்சர்களாகக் கொண்டிருந்தால், அவன் மொத்த உலகையும் அடக்குவதில் வெல்வான்.(13) ஓ! அரசத் தலைவர்களில் முதன்மையானவனே, கல்வி, நேர்மை, ஞானம், பெருஞ்செல்வம் ஆகியவையற்ற ஒரு பணியாளனை மன்னர்கள் ஒருபோதும் ஊக்கப்படுத்தக் கூடாது.(14) தங்கள் தலைவனுக்கான தொண்டுகளில் அர்ப்பணிப்போடு இருக்கும் மனிதர்களை எந்தத் தடைகளாலும் ஒருபோதும் தடுத்துவிட முடியாது. மன்னர்கள், தங்கள் தலைவர்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடும் பணியாட்களிடம் எப்போதும் ஆறுதலாகவே பேச வேண்டும்.(15)

மன்னர்கள் எப்போதும் பெருங்கவனத்துடன் தங்கள் கருவூலங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையில் மன்னர்கள், தங்கள் கருவூலங்களிலேயே தங்கள் வேர்களைக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மன்னன் எப்போதும் தன் கருவூலத்தைப் பெருகச் செய்வதில் முனைய வேண்டும்.(16) ஓ! மன்னா, உன் பண்டகசாலைகள் {கிடங்குகள்} தானியங்களால் நிறைக்கப்படட்டும். அதை நேர்மையான பணியாட்கள் கவனித்துக் கொள்ளட்டும். நீ உன் செல்வத்தையும், தானியங்களையும் பெருகச் செய்ய முனைவாயாக.(17) போரில் திறன்பெற்ற உன் பணியாட்கள், அவர்களுடைய கடமைகளைக் கவனமாகச் செய்யட்டும். அவர்கள் குதிரைகளை நிர்வகிப்பதில் திறன்பெற்றவர்களாக இருப்பது விரும்பத்தக்கதாகும்.(18) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, உன் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தேவைகளைக் கவனிப்பாயாக. நீ நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சூழப்பட்டிருப்பாயாக. உனது நகரத்துக்கான நன்மையை நீ நாடுவாயாக.(19) நாயின் எடுத்துக்காட்டைச் சொன்னதன் மூலம், உன் குடிமக்களிடம் நீ பின்பற்ற வேண்டிய கடமைகளைக் குறித்து உனக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். மேலும் நீ என்ன கேட்க விரும்புகிறாய்” என்று கேட்டார் {பீஷ்மர்}.(20)

மயிலொழுக்கம்! – சாந்திபர்வம் பகுதி – 120-மயிலுக்கு ஒப்பாக மன்னன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும், ஒரு மன்னன் குடிமக்களைப் பாதுகாக்கும் தன் கடமையில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பதையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, அரச கடமைகளை அறிந்த பழங்காலத்து மனிதர்களால் விதிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்த அரசதிறத்தின் பல்வேறு கடமைகளைக் குறித்து நீர் உரையாடினீர்.(1) உண்மையில், ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட அந்தக் கடமைகளைக் குறித்து நீர் விரிவாகப் பேசியிருக்கிறீர். எனினும், ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவற்றை ஒருவன் நினைவில் தக்க வைத்துக் கொள்வதில் வெல்லும் வகையில் சொல்வீராக” என்று கேட்டான்[1].(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பதே ஒரு க்ஷத்திரியனின் உயர்ந்த கடமை என்று சொல்லப்படுகிறது. ஓ! மன்னா, பாதுகாக்கும் கடமையை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை என்னிடம் இருந்து கேட்பாயாக.(3) தன் கடமைகளை அறிந்த ஒரு மன்னன், பல்வேறு நிறங்களைத் தோகையில் எற்கும் ஒரு மயிலைப் போலவே பல்வேறு வடிவங்களை ஏற்க வேண்டும்.(4) கூர்மை, கபடம், உண்மை, நேர்மை ஆகிய பண்புகள் அவனிடம் இருக்க வேண்டும். அவன், முழுமையாகப் பாரபட்சமில்லாமல், நற்பண்புகளை நடைமுறைப்படுத்தி, புகழை ஈட்ட வேண்டும்.(5) அவன் தான் நிறைவேற்ற முனையும் குறிப்பிட்ட நோக்கத்தில் நன்மையடைவதைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நிறத்தையோ, வடிவையோ ஏற்க வேண்டும். பல்வேறு வடிவங்களை ஏற்கவல்ல மன்னனால் மிக நுண்ணிய நோக்கங்களையும் கூட நிறைவேற்றுவதில் வெல்வான்.(6)

கூதிர்காலத்து ஊமை மயிலைப் போல அவன் தன் ஆலோசனைகளை மறைக்க வேண்டும். அவன் குறைவாகவே பேச வேண்டும், அந்தக் குறைவான பேச்சும் இனிமையாக இருக்க வேண்டும். அவன் நற்பண்புகளைக் கொண்டவனாகவும், சாத்திரங்களை நன்கறிந்தவனாகவும் இருக்க வேண்டும்.(7) மனிதர்கள் தங்கள் வயல்கள் மற்றும் வீடுகளை வெள்ளத்தால் நிறைக்கக் கூடிய பெரிய ஏரிகளுடைய உடைப்புகளைக் கவனித்துக் கொள்வதைப் போலவே அவன் தன்னை வீழ்த்தக்கூடிய ஆபத்துகள் வரும் வாயில்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். மலைத் தடாகங்களில் திரளும் மழைநீரில் இருந்து உண்டாகும் ஆறுகளை மனிதர்கள் நாடுவதைப் போலவே அவன் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிராமணர்களின் புகலிடத்தை நாட வேண்டும். செல்வத்தைத் திரட்ட விரும்பும் மன்னன், சடாமுடி தரிக்கும் போலி அறவோரைப் போலச் செயல்பட வேண்டும்.(8) மன்னன் தன் கரங்களில் எப்போதும் தண்டக்கோலை உயர்த்தியபடியே இருக்க வேண்டும். வருவாயையும், செலவினங்களையும் நன்கு ஆய்வு செய்த பிறகு, முழுதாக வளர்ந்த பனைமரத்திடம் அதன் சாறை உறிஞ்சச் செல்வதைப் போல அவன் (வரி விதிக்கும் காரியங்களில்) எப்போதும் கவனமாகச் செயல்பட வேண்டும்.(9) அவன் தன் குடிமக்களிடம் தகமையுடன் {நியாயமாக} நடந்து கொள்ள வேண்டும்; தன் சிறகுகள் பலம்பெற்றதும் எதிரியை எதிர்த்துப் படையெடுத்து, தன் குதிரைப் படையைக் கொண்டு எதிரிகளின் பயிர்களை நசுக்க வேண்டும்; மேலும் தன் பலவீனங்களின் தோற்றுவாய்களையும் நோக்க வேண்டும்.(10)

தன் எதிரிகளின் குற்றங்களை அவன் அறிக்கையிட வேண்டும்; தன்னைச் சார்ந்தோரின் குற்றங்களை நசுக்க வேண்டும்; காட்டிலிருக்கும் மலர்களைக் கொய்யும் மனிதனைப் போலவே வெளியில் இருந்து செல்வத்தைத் திரட்ட வேண்டும்.(11) வலிமையில் பெருகியவர்களும், மலைகளைப் போன்று உயர்ந்த தலைகளுடன் நிமிர்ந்து நிற்பவர்களுமான முதன்மையான ஏகாதிபதிகளை அவன் அறியப்படாத நிழல்களையும் நாடுதல், ஒளிந்து மறைந்திருத்தல், திடீர் தாக்குதல்களை நடத்துதல் ஆகியவற்றின் மூலம் அழிக்க வேண்டும்.(12) மழைக்காலத்து மயிலைப் போல அவன் தன் இரவு வசிப்பிடங்களில் தனியாகவும், யாராலும் காணப்படாமல் நுழைய வேண்டும். உண்மையில் அவன் மயிலின் நடையிலேயே தன் மனைவியரின் துணையுடன் தன் அந்தப்புரங்களுக்குள் இன்புற்றிருக்க வேண்டும்[2].(13) அவன் தன் கவசத்தைக் கழற்றக்கூடாது. அவன் தன் எதிரிகளின் ஒற்றர்களால் விரிக்கப்படும் வலையைத் தவிர்த்து, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(14) மேலும் அவன் தன் எதிரிகளின் ஒற்றர்களுடைய பற்றை வெல்ல வேண்டும், ஆனால், வாய்ப்பு நேரும்போது அவர்களை வேரோடு அழித்துவிட வேண்டும். மயில்களைப் போலவே மன்னனும் தன் பலமிக்கக் கோபக்கார எதிரிகளைக் கபடத் திட்டங்களின் மூலம் கொன்று,(15) அவர்களது படையையும் அழித்து, தன் நாட்டில் இருந்து அவர்களை விரட்ட வேண்டும். மேலும் மன்னனானவன், மயில்களைப் போலவே தனக்கு நன்மையானதைச் செய்து கொண்டு, காட்டில் இருந்து அவை {மயில்கள்} பூச்சிகளைச் சேகரிப்பது போல அனைத்து இடங்களில் இருந்தும் ஞானத்தைச் சேகரிக்க வேண்டும்.(16)ஞானியும், மயிலைப் போன்றவனுமான மன்னன், இவ்வாறே தன் நாட்டை ஆண்டு, தனக்கு நன்மையை அளிக்கும் கொள்கையை {திட்டத்தைப்} பின்பற்ற வேண்டும்.(17) தன் நுண்ணறிவைக் கொண்டே அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பிறருடன் ஆலோசிப்பதன் மூலம் அவன் அத்தகு தீர்மானத்தைக் கைவிடவோ, உறுதிசெய்யவோ வேண்டும். சாத்திரங்களால் கூர்த்தீட்டப்பட்ட நுண்ணறிவின் துணையுடன் ஒருவன் தன் செயற்பாட்டு வழிமுறைகளைத் தீர்மானித்துக் கொள்ள முடியும். சாத்திரங்களின் பயன் இதில்தான் {காரியங்களின் போக்கைத் தீர்மானிப்பதில்தான்} இருக்கிறது.(18) இணக்கக் கலைகளை {சாம முறையைப்} பயில்வதன் மூலம் அவன் தன் எதிரிகளுடைய இதயங்களின் நம்பிக்கையை ஈர்க்க வேண்டும். அவன் தன் சொந்த பலத்தை வெளிக்காட்ட வேண்டும். பல்வேறு செயல்பாட்டு வழிமுறைகளைத் தன் மனத்திற்குள் மதிப்பிடுவதன் மூலம், அவன் தன் நுண்ணறிவைப் பயன்படுத்தித் தீர்மானங்களை அடைய வேண்டும்.(19) மன்னன், இணக்கக் கொள்கையின் {சாம முறையின்} கலைகளை நன்கறிந்திருக்க வேண்டும், அவன் ஞானம் கொண்டவனாக இருக்க வேண்டும்; எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வல்லவனாகவும், எது கூடாதாதோ அதைத் தவிர்க்க வல்லவனாகவும் இருக்க வேண்டும். ஞானமும், ஆழமான நுண்ணறிவும் கொண்ட மனிதனுக்கு ஆலோசனைகளோ, அறிவுரைகளோ தேவைப்படுவதில்லை.(20)

பிருஹஸ்பதியைப் போன்ற நுண்ணறிவைக் கொண்ட ஒரு ஞானி, அவதூறு செய்பவனானால், அவன் நீரில் முக்கப்படும் சுடப்பட்ட இரும்பைப் போல விரைவில் தன் மனநிலை சீரடைவான்.(21) மன்னன் தனது, அல்லது பிறரின் நோக்கங்கள் அனைத்தையும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படியே நிறைவேற்ற வேண்டும்.(22) செல்வத்தை அடையும் வழிமுறைகளை அறிந்த மன்னன் ஒருவன், தன் செயல்பாடுகள் அனைத்திலும் மென்மையான மனநிலை, ஞானம், துணிவு, பெரும் பலம் ஆகியவற்றைக் கொண்ட மனிதர்களையே எப்போதும் நியமிக்க வேண்டும்.(23) {வீணை போன்ற} இசைக்கருவியின் நாண்களைச் சுவரங்களுக்குத் தக்கபடி சரியான அழுத்தத்தில் கட்டுவதைப் போல ஒருமன்னன், தன் பணியாட்கள், அவர்களுக்குத் தகுந்த செயல்களில் நியமிக்கப்படுவதைக் கண்டு அவர்களுடன் சேர்ந்து கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்.(24) மன்னன், அற விதிகளை மீறாமல் அனைத்து மனிதர்களுக்கு நன்மையே செய்ய வேண்டும். “இவன் என்னவன்” என்று அனைவராலும் கருதப்படும் மன்னன் அசையாத மலையென நிலைத்து நிற்பான்.(25)

வழக்காடுபவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கும் பணியில் தன்னை நிறுவிக்கொள்ளும் மன்னன், தன்னால் விரும்பப்படும், மற்றும் விரும்பப்படாத நபர்களுக்கு மத்தியில் எந்த வேறுபாட்டையும் காணாமல், நீதியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.(26) குறிப்பிட்ட குடும்பங்கள், குறிப்பிட்ட மக்கள் திரள், பல்வேறு நாடுகள் ஆகியவற்றின் பண்புகளை அறிந்தவர்கள்; பேச்சில் மென்மையாக இருப்பவர்கள்; நடு வயதில் இருப்பவர்கள், குற்றங்கள் {குறைகள்} ஏதும் இல்லாதவர்கள்; நற்செயல்களுக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள்; ஒருபோதும் அலட்சியமாக இல்லாதவர்கள்; கொள்ளையில் ஈடுபடாதவர்கள்; கல்வியும், தற்கட்டுப்பாடும் கொண்டவர்கள்; அறத்தில் உறுதியும், அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டும் சார்ந்த காரியங்களை உயர்த்திப்பிடிக்க எப்போதும் தயாராக இருப்பவர்கள் ஆகியோரையே மன்னன் தன் அலுவல்கள் அனைத்திலும் நியமிக்க வேண்டும்.(27,28) இவ்வழியில், செயல்களின் நடைமுறையையும், இறுதி நோக்கங்களையும் உறுதி செய்து கொள்ளும் மன்னன், அவற்றைக் கவனமாக நிறைவேற்ற வேண்டும்; தன் ஒற்றர்கள் மூலம் அனைத்து செய்திகளையும் அறிந்து கொண்டு அவன் உற்சாகத்துடன் வாழ வேண்டும்.(29) போதுமான காரணங்களில்லாமல் கோபத்துக்கும், இன்பத்துக்கும் ஒருபோதும் வசப்படாதவனும், வரவு மற்றும் செலவு ஆகியவற்றைத் தன் கண்களால் நேரடியாகக் கண்காணிப்பவனுமான மன்னன், உலகத்தில் இருந்து பெருஞ்செல்வத்தை அடைவதில் வெல்கிறான்.(30)

தன் அதிகாரிகள் மற்றும் குடிமக்களை (அவர்கள் செய்ய நற்காரியங்களுக்காக) பொதுவில் வைத்து கௌரவிப்பவனும், தண்டனைக்குத் தகுந்தோரைத் தண்டிப்பவனும், தன்னையும், தன் நாட்டையும் அனைத்துத் தீமைகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்பவனுமான மன்னன், அரசகலையின் {ஆட்சித்திறத்தின்} கடமைகள் அனைத்தையும் அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(31) கீழிருக்கும் அனைத்தின் மேலும் தன் கதிர்களைப் பொழியும் சூரியனைப் போல மன்னன், எப்போதும் தன் நாட்டைப் பார்த்துக் கொண்டு, தன் நுண்ணறிவின் உதவியால், தன் ஒற்றர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் கண்காணிக்க வேண்டும்.(32) மன்னன் உரிய காலத்தில் தன் குடிமக்களிடம் இருந்து செல்வத்தைப் பெற வேண்டும். அவன் செய்வதை அவன் ஒருபோதும் அறிக்கையிடக்கூடாது. பசுவிடம் இருந்து தினமும் பால்கறக்கும் ஒரு புத்திசாலியைப் போல, மன்னனும் தினமும் தன் நாட்டைக் கறக்க வேண்டும்.(33) ஒரு தேனியானது, மலர்களில் இருந்து படிப்படியாகத் தேனைத் திரட்டுவதைப் போலவே மன்னனும் தன் நாட்டில் இருந்து படிப்படியாகச் செல்வத்தைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டும்.(34) போதுமான அளவைத் தனியாக வைத்துக் கொண்டு, எஞ்சியவற்றைக் கொண்டு, அறத்தகுதியை அடைவது மற்றும், இன்பத்துக்காக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது ஆகியவற்றில் செலவிட வேண்டும். கடமைகளை அறிந்தவனும், நுண்ணறிவு கொண்டவனுமான ஒரு மன்னன், பாதுகாக்கப்பட்டதை {அவ்வாறு திரட்டப்பட்டுப் பாதுகாக்கப்படும் செல்வத்தை} ஒருபோதும் வீணாக்கமாட்டான்.(35)

மன்னன், சிறியது என எந்தச் செல்வத்தையும் ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது; அவன் எதிரிகளின் பலவீனத்தை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது; அவன் தன் நுண்ணறிவைப் பயன்படுத்தி, தன்னை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்; அவன் ஒருபோதும் நுண்ணறிவற்ற மனிதர்களின் நம்பிக்கையைச் சார்ந்திருக்கக் கூடாது.(36) உறுதி {உற்சாகம்}, புத்திசாலித்தனம் {ஸாமர்த்தியம்}, தற்கட்டுப்பாடு {அடக்கம்}, நுண்ணறிவு {அறிவு}, உடல்நலம் {தேகம்}, பொறுமை {சௌரியம்}, துணிவு {தைரியம்}, இடம் மற்றும் நேரத்திற்குத் தேவையான கவனம் {ஜாக்ரதையுணர்வு} ஆகிய இந்த எட்டு பண்புகளும், சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கும் செல்வத்தைப் பெருகவே வழிவகுக்கும்.(37) சிறு நெருப்பும், தெளிந்த நெய்யூட்டப்பட்டால் பெரும் நெருப்பாகச் சுடர்விட்டெரியும். ஒரே ஒரு விதை கூட ஆயிரம் மரங்களை உண்டாக்கிவிடும். எனவே, ஒரு மன்னன், தன் வருவாயும், செலவினங்களும் பெரிய அளவில் இருப்பதாகக் கேள்விப்பட்டாலும், சிறிய பொருட்களை அலட்சியம் செய்யக்கூடாது.(38) ஓர் எதிரியானவன், சிறுவனாகவோ, இளைஞனாகவோ, முதியவனாகவோ இருப்பினும், கவனமில்லாத மனிதனைக் கொல்வதில் வெல்வான். முக்கியமற்ற ஓர் எதிரியும் பலமடைந்தால், ஒரு மன்னனையே அழித்துவிடுவான். எனவே, காலத்தின் தேவைகளை அறிந்த மன்னனே ஆட்சியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான்.(39) ஓர் எதிரி பலவானாகவோ, பலவீனனாகவோ இருப்பினும், கபடத்தால் வழிநடத்தப்படும் அவன், ஒரு மன்னனின் புகழை மிக விரைவில் அழித்து, அவனால் அடையப்படும் அறத்தகுதியைத் தடுத்து, அவனுடைய சக்தியையே இழக்கச் செய்துவிடுவான். எனவே ஒழுங்குபடுத்தப்பட்ட மனம் கொண்ட மன்னன் ஒருவன், தனக்கு ஓர் எதிரி இருக்கும்போதும் ஒருபோதும் கவனமில்லாமல் இருக்கக்கூடாது.(40)

நுண்ணறிவு கொண்ட ஒரு மன்னன், செழிப்பையும், வெற்றியையும் அடைய விரும்பினால், அவன் தன் செலவினம், வருவாய், சேமிப்பு, நிர்வாகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு, அமைதியையோ, போரையோ தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் காரணமாக மன்னனானவன், நுண்ணறிவுமிக்க ஓர் அமைச்சனின் உதவியை நாட வேண்டும்.(41) சுடர்மிக்க நுண்ணறிவானது ஒரு பலமிக்க மனிதனையும் {எதிரியையும்} பலவீனமடையச் செய்யும்; வளர்ந்து வரும் பலமானது நுண்ணறிவால் பாதுகாக்கப்படும்; வளர்ந்து வரும் ஒரு பகைவன் நுண்ணறிவால் பலவீனமடையச் செய்யப்படுவான். எனவே, நுண்ணறிவின் விதிகளுக்கு இணக்கத்துடன் செய்யப்படும் அனைத்துச் செயலும் போற்றத் தகுந்தவையே ஆகும்.(42) பொறுமையுள்ளவனும், குறையேதும் இல்லாதவனுமான மன்னன் விரும்பினால், சிறிய படையின் உதவியை மட்டுமே கொண்டு அவன் விருப்பங்கள் அனைத்தின் பயன்களையும் அடைவான். எனினும், தன்னலம் நாடும் துதிபாடிக்கூட்டத்தால் சூழப்பட்டிருப்பதை விரும்பும் மன்னன், சிறு நன்மை அடைவதில் கூட ஒருபோதும் வெல்லமாட்டான்.(43) இந்தக் காரணங்களால், மன்னன் தன் மக்களிடம் இருந்து செல்வத்தைப் பெறுவதில் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு மன்னன் தொடர்ந்து தன் மக்களை ஒடுக்கினால், ஒரு நொடி மட்டுமே மின்னும் மின்னலின் கீற்றைப் போல அவன் அழிவை அடைவான்.(44) கல்வி, தவம், பரந்த செல்வம் ஆகியவற்றையும், உண்மையில் அனைத்தையும் உழைப்பால் {முயற்சியால்} ஈட்ட முடியும். உடல் படைத்த உயிரினங்களில் தோன்றும் உழைப்பானது {முயற்சியானது} நுண்ணறிவாலேயே ஆளப்படுகிறது. எனவே உழைப்பே அனைத்திலும் முதன்மையானதாகக் கருதப்பட வேண்டும்.(45)

சக்ரன் {இந்திரன்}, விஷ்ணு, சரஸ்வதி மற்றும் பெரும் சக்தி படைத்த, நுண்ணறிவுமிக்கப் பல உயிரினங்களின் {பூதங்களின்} வசிப்பிடமாக மனித உடலே இருக்கிறது. எனவே, அறிவு கொண்ட மனிதன் ஒருவன் ஒருபோதும் உடலை[3] அலட்சியம் செய்யக்கூடாது.(46) பேராசை கொண்ட மனிதன் ஒருவன், தொடர்ந்த கொடைகளின் மூலம் அடக்கப்பட வேண்டும். பேராசை கொண்டவன் மக்களின் செல்வத்தைப் பறிப்பதில் ஒருபோதும் தணிவடைய மாட்டான். எனினும், இன்புறும் காரியங்களில் அனைவரும் பேராசைக்காரர்களாகவே இருக்கிறார்கள். எனவே, ஒரு மனிதன் செல்வத்தை இழந்தால், அவன் (செல்வத்தால் அடையப்படும் பொருட்களான) அறம் மற்றும் இன்பத்தை இழந்தவனாகிறான்.(47) பேராசைக்கார மனிதன் ஒருவன், பிறரின் செல்வம், இன்பங்கள், மகன்கள், மகள்கள் மற்றும் செழிப்பை அபகரிக்கவே முனைகிறான். பேராசைக்கார மனிதர்களில் அனைத்து வகைக் குற்றங்களும் தென்படும். எனவே, மன்னன் ஒரு பேராசைக்கார மனிதனை தன் அமைச்சராகவோ, அதிகாரியாகவோ ஒருபோதும் நியமிக்கக்கூடாது.(48) ஒரு மன்னன், (உரிய முகவர்கள் இல்லாத போது) எதிரியின் நிலையையும், செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள ஓர் அற்பனையும் அனுப்பலாம். ஞானம் கொண்ட ஆட்சியாளன் ஒருவன், தன் எதிரிகளின் முயற்சிகள் மற்றும் நோக்கங்கள் அனைத்தையும் கலங்கடிக்க வேண்டும்.(49) நம்பிக்கை நிறைந்தவனும், உயர்குடி பிறந்தவனுமான எந்த மன்னன், கல்வியாளர்களும், அறவோருமான பிராமணர்களின் அறிவுரையை நாடுவானோ, எவன் தன் அமைச்சர்களால் பாதுகாக்கப்படுகிறானோ, அவன் {அந்த மன்னன்}, கப்பங்கட்டும் தன் தலைவர்கள் அனைவரையும் உரிய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் வெல்கிறான்[4].(50)ஓ! மனிதர்களின் இளவரசே {யுதிஷ்டிரனே}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகள் அனைத்தையும் உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். உன் நுண்ணறிவின் துணையுடன் அவற்றைக் கவனிப்பாயாக. தன் ஆசானுக்குக் கீழ்ப்படிந்து, இவற்றைக் கவனிக்கும் மன்னன், மொத்த உலகையும் ஆள்வதில் வெல்கிறான்.(51) கொள்கையில் இருந்து அடையப்படும் இன்பத்தை அலட்சியம் செய்து, விதி கொண்டு வரும் வாய்ப்பை நாடும் மன்னன், அரசு தொடர்புடைய இன்பத்தை அடைவதிலும், மறுமையில் அருள் உலகங்களை அடைவதிலும் ஒருபோதும் வெல்வதில்லை.(52) போர் மற்றும் அமைதியின் தேவைகளுக்கு உரிய முறையில் பெரும் கவனத்துடன் இருக்கும் மன்னன், செல்வத்துக்காகப் புகழ்பெற்றவர்களும், நுண்ணறிவு மற்றும் நன்னடத்தைக்காக வழிபடப்படுபவர்களும், சாதனைகளைக் கொண்டவர்களும், போரில் துணிவுமிக்கவர்களும், உழைப்புக்கு {முயற்சிக்கு} ஆயத்தமாக இருப்பவர்களுமான எதிரிகளைக் கூடக் கொல்வதில் வெல்கிறான்.(53) பல்வேறு வகையான செயல்கள் மற்றும் நடவடிக்கைகளால் அமையும் வழிமுறைகளை மன்னன் கண்டுபிடிக்க வேண்டும். அவன் ஒருபோதும் விதியை நம்பியிருக்கக்கூடாது. குற்றமற்ற மனிதர்களிடம் குற்றங்களைக் காணும் ஒருவன், செழிப்பையும், புகழையும் அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(54) இரு நண்பர்கள், ஒரே செயலை நிறுவேற்றுவதில் ஈடுபடும்போது, அவர்கள் இருவரில் அந்தப் பணியில் பெரும் சுமையைத் தன் பங்காக ஏற்றுக் கொள்பவனையே எப்போதும் ஞானிகள் மெச்சுகிறார்கள்.(55) நான் உனக்குச் சொன்ன அரச கடமைகளைச் செய்வாயாக. மனிதர்களைப் பாதுகாக்கும் கடமையில் உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக. அப்போது நீ அறவெகுமதியை நீ எளிதில் அடைவாய். மறுமையில் உள்ள புகழுலகங்கள் அனைத்தும் தகுதியை {புண்ணியத்தைச்} சார்ந்தே இருக்கின்றன” என்றார் {பீஷ்மர்}.(56)

குற்றமும், தண்டனையும் – சட்டம்! – சாந்திபர்வம் பகுதி – 121-தண்டனை என்பது யாது? அதன் தோற்றம், பண்புகள், விழிப்புநிலை ஆகியவற்றையும், தண்டனை சார்ந்திருக்கும் வியவஹாரம் {சட்டம்} என்பது யாது? அஃது எத்தனை வகைப்படும் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நீ இப்போது மன்னர்களின் கடமைகளைக் குறித்த உமது உரையை நிறைவு செய்துவிட்டீர். அனைத்தும் தண்டனையைச் சார்ந்தே இருப்பதால், தண்டனையே உயர்ந்த நிலையில் இருப்பதாகவும், அனைத்துக்கும் தலைவனாக இருப்பதாகவும் நீர் சொன்னவற்றிலிருந்து தெரியவருகிறது.(1) ஓ! பலமிக்கவரே, பெரும் சக்தி கொண்டதும், எங்கும் இருப்பதுமான தண்டனையானது, தேவர்கள், முனிவர்கள், உயர் ஆன்ம பித்ருக்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், சத்யஸ்கள், அல்லது இவ்வுலகின் உயிரினங்கள் ஆகிய அனைத்துக்கும் மத்தியில் முதன்மையானதாக இருப்பதாகத் தெரிகிறது.(2,3) தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் உள்ளிட்ட அசைவன மற்றும் அசையாதன அடங்கிய மொத்த உலகமும் தண்டனையைச் சார்ந்தே இருப்பதாக நீர் சொன்னீர்.(4) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்தத் தண்டனையானவன் எவன் என்பதை அறிய இப்போது நான் விரும்புகிறேன்.

அவன் என்ன வகையைச் சார்ந்தவன்?
அவனுடைய வடிவம் என்ன?
அவனுடைய நிலை என்ன?(5)
அவன் எதனால் செய்யப்பட்டவன்?
அவன் தோன்றியது எப்போது?
அவனது பண்புகள் என்னென்ன?
அவனது காந்தி என்ன?

வாழும் உயிரினங்களுக்கு மத்தியில் அவன் கவனமானவனாகவும், விழிப்புடனும் எவ்வாறு இருக்கிறான்?(6) இந்த அண்டத்தைப் பாதுகாத்துக் கொண்டு நித்திய விழிப்புடன் இருக்கும் அவன் எவன்? அனைத்துப் பொருட்களிலும் முதன்மையானதாக அறியப்படுபவனான அவன் எவன்? உண்மையில், தண்டனை என்றழைக்கப்படும் உயர்ந்தவன் எவன்? தண்டனையாவன் எதைச் சார்ந்து இருக்கிறான்? அவனது வழி என்ன?” என்று கேட்டான்.(7)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குருகுல வழித்தோன்றலே, தண்டனை என்பது யார்? அவன் ஏன் வியவஹாரம் என்றழைக்கப்படுகிறான் என்பதைக் கேள். அனைத்துப் பொருட்களும் எவனைச் சார்ந்திருக்கின்றனவோ, அவனே தண்டனை என்றழைக்கப்படுகிறான்.(8) அறம் எவனைக் கொண்டு நிலைநாட்டப்படுமோ அவனே தண்டனையாவான். அவன் சில வேளைகளில் வியவஹாரம் என்றும் அழைக்கப்படுகிறான். கவனமாக விழிப்புடன் இருக்கும் மன்னனின் அறம் கெடாமல் இருக்கக் காரணமாக இருப்பதால் (தண்டனையானவன்) அப்பெயரில் அழைக்கப்படுகிறான்.(9) இதன் காரணமாகவே, அதற்கு வியவஹாரம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது[1].ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் மனு, ’அன்புக்குரியனவாகவும், அதே வேளையில் வெறுக்கத்தக்கனவாகவும் உள்ள உயிரினங்கள் அனைத்தையும், தண்டக்கோல் தரித்துப் பாரபட்சமில்லாமல் பாதுகாப்பவன் எவனோ, அவனே அறவடிவானவன் {அறவோன் = தர்மன்} என்று சொல்லப்படுகிறான்’ என்ற அனைத்திலும் முதன்மையான இந்த உண்மையைச் சொல்லியிருக்கிறார்.(10,11) ஓ! மன்னா, நான் சொன்ன இந்த வார்த்தைகள் முதன்முதலில் பழங்காலத்தில் மனுவால் சொல்லப்பட்டன. அவை பிரம்மனின் உயர்ந்த வார்த்தைகளைப் பிரதிபலிக்கின்றன[2].(12) இந்த வார்த்தைகளே முதலில் பேசப்பட்டதால், அவை முதல் வார்த்தைகள் என்று அறியப்படுகின்றன. அடுத்தவரின் உடைமைகளை முறையில்லாமல் பறிப்பது தண்டனையால் தடுக்கப்படுவதால், தண்டனையானது, வியவஹாரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.(13) நன்கு செயற்படுத்தப்படும் தண்டனையைச் சார்ந்தே, {அறம், பொருள், இன்பம் ஆகிய} மூன்று தொகுப்புகளும் எப்போதும் இருக்கின்றன. தண்டனையானவன் பெருந்தேவனாவான். வடிவத்தில் அவன் ஒரு சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிகிறான்.(14) கருங்குவளை {நீலோத்பல} மலரின் இதழ்களைப் போல அவன் கரிய நிறம் கொண்டவனாவான். அவன், நான்கு பற்களையும், நான்கு கரங்களையும், எட்டு கால்களையும், கண்கள் பலவற்றையும் கொண்டவனாவான். அவனது காதுகள் கணைகளைப் போன்று கூர்மையானவை, அவனது மயிர் குத்திட்டு நிற்கிறது.(15) அவன் சடா முடியும், இரு நாவுகளையும் கொண்டவனாவான். அவனது முகம் தாமிரத்தின் வண்ணத்தைக் கொண்டதாகும், அவன் சிங்கத் தோலை உடுத்தியிருக்கிறான். {தண்டனையெனும்} அந்தத் தடுக்கப்பட முடியாத தேவன் இத்தகு கடும் வடிவையே ஏற்றிருக்கிறான்[3].(16)மேலும் தண்டனையானவன், வாள், வில், கதாயுதம், ஈட்டி {வேல்}, திரிசூலம், தடி, கணை, உலக்கை, போர்க்கோடரி, சக்கரம், சுருக்குக் கயிறு {பாசம்}, தடி, ரிஷ்டி, தோமரம் மற்றும் உலகில் உள்ள அனைத்து வகை ஆயுதங்களின் வடிவை ஏற்று இவ்வுலகில் உலவி வருகிறான்.(17,18) உண்மையில் தண்டனையானவன், துளைத்தல், வெட்டுதல், பீடித்தல், துண்டித்தல், பிரித்தல், தாக்குதல், கொல்லுதல், எதிர்த்து விரைதல் ஆகியவற்றின் மூலம் இவ்வுலகில் உலவி வருகிறான்.(19) ஓ! யுதிஷ்டிரா, இந்தத் தண்டனையானவன், வாள் {அஸி – ஆன்மா}, கத்தி {விசஸனம் – துன்பம்}, அறம் {தர்மம்}, சீற்றம் {தீக்ஷ்ணவர்மா}, தடுக்கப்படமுடியாதது {துராஸதம்}, செழிப்பின் தாய் {ஸ்ரீகர்ப்பம்}, வெற்றி {விஜயம்}, தண்டிப்பவன் {சாஸ்தா}, தடுப்பவன் {வ்யவகாரம்}, நித்தியமானவன் {ப்ரஜாகரம்}, சாத்திரங்கள், பிராமணன், மந்திரம் {பிராம்மணமந்த்ரம்}[4], பழிவாங்குபவன் {ப்ரவசனம்}, நீதி வழங்குபவர்களில் முதன்மையானவன் {பரம்}, நீதிபதி {தர்மபாலம்}, {அக்ஷரம்}, {கோபம்}, {ஸத்யகம்}, அழிவில்லாதவன் {நித்யகம்}, தேவன் {கிருஜம்}, தடுக்கப்படமுடியாத வழி கொண்ட ஒருவன், எப்போது முந்தியிருப்பவன், முதலில் தோன்றியவன், பற்றில்லா ஒருவன் {அஸங்கம்}, ருத்ரனின் ஆன்மா {ருத்ரதனயம்}, மூத்த மனு, {மனு, ஜ்யேஷ்டம்}, பெரும் நன்மை {சிவங்கரம்} என்ற பெயர்களிலும் அறியப்படுகிறான்.(20-22)

தண்டனையே புனிதமான விஷ்ணு ஆவான். அவனே பலமிக்க நாராயணன் ஆவான். அவன் எப்போதும் பயங்கர வடிவையே ஏற்றுக் கொண்டிருப்பதால், அவன் மஹாபுருஷன் என்று அழைக்கப்படுகிறான்.(23) அவனது மனைவியான அறநெறியானவள், பிரம்மனின் மகள், லட்சுமி, விரிதி {நீதி}, சரஸ்வதி, அண்டத்தின் தாய் என்ற பெயர்களில் அறியப்படுகிறாள். இவ்வாறு தண்டனையானவன் பல்வேறு வடிவங்களைக் கொண்டவனாக இருக்கிறான்.(24)

அருள் மற்றும் சாபம், இன்பம் மற்றும் துன்பம், அறம் {நீதி} மற்றும் மறம் {அநீதி}, பலம் மற்றும் பலவீனம், நல்லூழ் மற்றும் தீயூழ், தகுதி மற்றும் தகுதியின்மை, நற்பண்பு {குணம்} மற்றும் குறை {தோஷம்},(25) விருப்பம் மற்றும் வெறுப்பு, பருவம் {ருது} மற்றும் மாதம், இரவு, பகல் மற்றும் கணம், கவனம் மற்றும் கவனமின்மை, இன்பம் மற்றும் கோபம், அமைதி மற்றும் தற்கட்டுப்பாடு,(26) விதி மற்றும் உழைப்பு {முயற்சி}, முக்தி மற்றும் கண்டிப்பு, அச்சம் மற்றும் அச்சமின்மை, தீங்கிழைத்தல் {ஹிம்சை} மற்றும் தீங்கிழையாமை {அஹிம்சை}, தவம், வேள்வி மற்றும் கடும் துறவு, நஞ்சு மற்றும் நல்ல உணவு,(27) தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவு, கொலைபாதகச் செயல்கள் அனைத்தின் விளைவு, திமிர், கொடூரம், ஆணவம், செருக்கு, பொறுமை, கொள்கையுடைமை, கொள்கையின்மை,(28) சக்தியின்மை மற்றும் சக்தி, மரியாதை, அவமரியாதை, சிதைவு, உறுதியானநிலை, பணிவு, ஈகை, தகுந்த நேரம் மற்றும் தகாதநேரம்,(29) பொய்ம்மை, ஞானம், உண்மை, நம்பிக்கை, நம்பிக்கையின்மை, ஆண்மையின்மை, வணிகம், ஆதாயம், இழப்பு, வெற்றி, தோல்வி,(30) கடுமை மென்மை, மரணம், அடைதல் மற்றும் அடையாமை, ஏற்புடைமை மற்றும் ஏற்பில்லாமை, செய்யப்படக்கூடியது மற்றும் செய்யப்படக்கூடாதது, பலம் மற்றும் பலவீனம்,(31) வன்மம் மற்றும் நல்லெண்ணம், அறம் மற்றும் மறம், வெட்கம் மற்றும் வெட்கமின்மை, அடக்கம், செழுமை மற்றும் வறுமை,(32) ஆற்றல், செயல்கள், கல்வி, நாவண்மை, கூரிய அறிவு ஆகிய இவையெனைத்தும், ஓ! யுதிஷ்டிரா, இவ்வுலகில் தண்டனையின் வடிவங்களே. எனவே, தண்டனையென்பது அதிகமான பல்வேறு வடிவங்களைக் கொண்டதாகும்.(33)

தண்டனையில்லாவிட்டால் உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று கலங்கடிக்கும். வாழும் உயிரினங்கள், ஓ! யுதிஷ்டிரா, தண்டனை மீது கொண்ட அச்சத்தாலேயே ஒன்றையொன்று கொல்லாதிருக்கின்றன.(34) ஓ! மன்னா, தண்டனையால் பாதுகாக்கப்படும் குடிமக்கள், தங்கள் ஆட்சியாளனின் வலிமையை அதிகரிக்கின்றனர். இதன் காரணமாகவே தண்டனையானது அனைத்திற்கும் புகலிடமாகக் கருதப்படுகிறது.(35) ஓ! மன்னா, தண்டனையே உலகை அறத்தின் பாதையில் விரைவாக நிலைநிறுத்துகிறது. உண்மையைச் சார்ந்திருக்கும் அறமானது பிராமணர்களிடம் இருக்கிறது.(36) அறத்துடன் கூடிய முதன்மையான பிராமணர்கள் வேதங்களில் பற்று கொள்கிறார்கள். வேதங்களில் இருந்து வேள்விகள் வருகின்றன. வேள்விகள் தேவர்களை நிறைவு செய்கின்றன.(37) அவற்றால் நிறைவடையும் தேவர்கள், பூமிவாசிகளை இந்திரனிடம் ஒப்படைக்கிறார்கள். பூமிவாசிகளுக்கு நன்மை செய்வதற்காக இந்திரன் அவர்களுக்கு (எது இல்லாமல் பயிர்களும், விளைச்சலும் பொய்த்துப் போகுமோ அந்த மழையின் வடிவில்) உணவை அளிக்கிறான்.(38) உயிரினங்கள் அனைத்தின் வாழ்வு உணவைச் சார்ந்தே இருக்கிறது. உணவிலிருந்தே உயிரினங்கள் தங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பெற்று வளர்ச்சியடைகின்றன. தண்டனையானவன் (க்ஷத்திரிய ஆட்சியாளனின் வடிவில்) அவர்களுக்கு {உயிரினங்களுக்கு} மத்தியில் விழிப்புடன் இருக்கிறான்.(39) இந்த நோக்கத்திற்காகவே தண்டனையானவன், மனிதர்களுக்கு மத்தியில் ஒரு க்ஷத்திரியனின் வடிவை ஏற்கிறான். மனிதர்களைப் பாதுகாக்கும் அவன், எப்போதும் கவனத்துடனும், ஒருபோதும் சிதையாமலும் விழிப்புடன் இருக்கிறான்.(40)

மேலும் தண்டனைக்கு, தேவன் {ஈஸ்வரன்}, மனிதன் {புருஷன்}, உயிர் {பிராணனன்}, சக்தி {ஸத்வம்}, இதயம் {வ்ருத்தம்}, அனைத்துயிர்களின் தலைவன் {ப்ரஜாபதி}, அனைத்துப் பொருட்களின் ஆன்மா {பூதாத்மா}, வாழும் உயிர் {ஜீவன்} என்று எட்டு பெயர்களும் இருக்கின்றன.(41) (படைகளின் வடிவில்) பலம் கொண்டவனும், ஐந்து பொருட்களின் சேர்க்கையாயிருப்பவனுமான மன்னனுக்குச் செழிப்பு மற்றும் தண்டக் கோல் ஆகியவற்றைத் தேவன் {ஈஸ்வரன்} கொடுத்தான்[5].(42) ஓ! யுதிஷ்டிரா, கீழே சொல்லப்பட்டுள்ள {இதற்கு அடுத்து சொல்லப்படும்} எட்டுப் பொருட்களுடன் சேர்த்து உன்னதக் குருதி, பெருஞ்செல்வமுள்ள அமைச்சர்கள், அறிவு, (உடற்பலம் மற்றும் மனோசக்தி போன்ற) பல்வேறு வகையான சக்திகள் ஆகியவற்றையும், (நன்கு நிரப்பப்பட்ட கருவூலத்தைச் சார்ந்திருக்கும்) வேறு சக்திகளையும் மன்னன் நாட வேண்டும்.(43) யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படைவீரர்கள், படகுகள், பொருத்தமான கூலியாட்கள் (முகாமைப் பின்தொடர்ந்து பிற வேலைகளைச் செய்யக்கூடியவர்கள் {சுமை தூக்குபவர்கள்}), மக்கள் தொகை பெருக்கம், கால்நடை ஆகியவையே {முன் சொல்லப்பட்ட} அந்த எட்டு பொருட்களாகும்.(44) கவசங்கள் மற்றும் வேறு பாதுகாப்பு உறைகளைப் பூண்டிருக்கும் தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், யானைவீரர்கள், குதிரைப்படை வீரர்கள், காலாட்படை வீரர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோர் படையின் அங்கத்தினராவர்.(45)பிச்சைக்காரர்கள், முக்கிய நீதிபதிகள், கணியர்கள் {சோதிடர்கள்}, தணிவுச் சடங்குகள் மற்றும் அதர்வணச் சடங்குகளைச் செய்பவர்கள், கருவூலம், கூட்டாளிகள், தானியங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் ஆகியன,(46) ஏழு பண்புகளையும், எட்டு அங்கங்களையும் கொண்ட ஒரு நாட்டின் உடலாகின்றன. தண்டனையும், ஒரு நாட்டின் மற்றொரு பலமிக்க அங்கமே. (ஒரு படையின் வடிவில் உள்ள) தண்டனையே ஒரு நாட்டின் முக்கிய அங்கமாக இருக்கிறது.(47) க்ஷத்திரியப் பயன்பாட்டுக்காகத் தேவனே பெருங்கவனத்துடன் தண்டனையை அனுப்பினான். அழிவில்லா அண்டமானது, பாரபட்சமற்ற தண்டனையின் உடல்வடிவமே ஆகும்.(48) அறத்தின் வழிகளைச் சுட்டிக்காட்டும் தண்டனையைவிட மன்னர்களால் மதிக்கத்தக்கது வேறெதுவும் இல்லை. உலகின் பாதுகாப்புக்காகவும், பல்வேறு மனிதர்களின் கடமைகளை நிறுவுவதற்காகவும் பிரம்மனே தண்டனையை அனுப்பினான் (படைத்தான்).(49) வாதி, பிரதிவாதிகளின் சச்சரவுகளில் எழும் மற்றொரு வகை வியவஹாரமும், பிரம்மனில் இருந்தே எழுந்தது. இரு தரப்பினருக்கு மத்தியிலும் முக்கிய நம்பிக்கையையூட்டும் அந்த வியவஹாரம் நன்மைபயக்குவதாகவே தெரிகிறது.(50)

வேதத்தை ஆன்மாவாகக் கொண்ட {இரண்டாவது வகையைச் சார்ந்த} மற்றொரு வியவஹாரமும் இருக்கிறது. அது வேதத்தையே தன் காரணமாகக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, குடும்பப் பழக்கவழக்கங்களின் தொடர்புடையதாக இருப்பினும், சாத்திரங்களுக்குப் பொருந்தும் வகையில் உள்ள மற்றொரு (மூன்றாவது) வகையைச் சேர்ந்த வியவஹாரமும் இருக்கிறது[6].(51) இந்த வியவஹாரமானது, மேலே சொல்லப்பட்டபடி, வழக்காடுபவர் இருவரின் நம்பிக்கையின் மூலம் விவரிக்கப்படுவதாகவும், அது மன்னர்களிடம் {மட்டுமே} இருப்பதாகவும் நம்மால் அறியப்பட வேண்டும். அது தண்டனை என்ற பெயராலும், அத்தாட்சி {ஆதாரம்} என்ற பெயராலும் அறியப்பட வேண்டும்.(52) தண்டனையானது அத்தாட்சியால் ஒழுங்குபடுத்தப்படுவதாகத் தெரிந்தாலும், அது தன் ஆன்மாவை வியவஹாரத்திலேயே {சட்டத்திலேயே} கொண்டுள்ளது. எது வியவஹாரம் என்று அழைக்கப்படுகிறதோ, அஃது உண்மையில் வேதவிதிகளை அடிப்படையாகக் கொண்டதே.(53) வேதங்களை ஆன்மாவாகக் கொண்டதாகச் சொல்லப்படும் வியவஹாரமானது, அறநெறி, அல்லது கடமையே ஆகும். கடமை மற்றும் அறநெறிகளை நம்பும் மனிதர்களுக்கு அது நன்மையை உண்டாக்குகிறது. தூய ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் பொதுச் சட்டத்தில் செய்துள்ளபடியே வியவஹாரம் குறித்துப் பேசுகின்றனர்.(54) ஓ! யுதிஷ்டிரா, மூன்றாம் வகை வியவஹாரமும் மனிதர்களின் பாதுகாவலனாகவும், வேதத்தைத் தன் வேராகக் கொண்டதாகவும் இருக்கிறது. அதுவே மூவுலகங்களையும் நிலைநிறுத்துகிறது. உண்மையையே ஆன்மாவாகக் கொண்டிருக்கும் அது {மூன்றாவது வியவஹாரம்} செழிப்பை உண்டாக்குவதாகும்.(55)எது தண்டனையோ, அது நித்திய வியவஹாரமாகவே {அழிவில்லா சட்டமாகவே} நம்மால் காணப்படுகிறது. எது வியவஹாரம் என்று சொல்லப்படுகிறதோ, அஃது உண்மையில் வேதமே ஆகும்.(56) எது வேதமோ, அதுவே நெறியும், கடமையும் ஆகும். எது நெறியும், கடமையும் ஆகுமோ அதுவே அறவழியாகும். இந்த இறுதியானது எதுவோ, அஃது அனைத்து உயிரினங்களின் தலைவனான பெரும்பாட்டன் பிரம்மனிடம் தொடக்கத்திலேயே இருந்தது.(57) தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள், மனிதர்கள், பாம்புகள், மேலும் பிற அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த அண்டத்திற்கும் படைப்பாளன் பிரம்மனே.(58) எனவே, வழக்காடும் இரு தரப்பினரிடம் கொண்ட நம்பிக்கையால் விவரிக்கப்படும் வியவஹாரமும் அவனிடம் {பிரம்மனிடம்} இருந்தே வந்தது. வியவஹாரத்தைப் பொறுத்தவரையில், இதன் காரணமாகவே பின்வருவதை அவன் {பிரம்மன்} விதித்திருக்கிறான்:(59) “தன் கடமைக்கு ஏற்ப ஆட்சி செய்யும் மன்னனால், தாயோ, தந்தையோ, உடன் பிறந்தவனோ {சகோதரனோ}, மனைவியோ, புரோஹிதனோ தண்டிக்கப்படக்கூடாதவர்கள் அல்ல”[7] {என்று விதித்திருக்கிறான் பிரம்மன்}” என்றார் {பீஷ்மர்}.(60)

வசுஹோமனின் தண்டபோதனை! – சாந்திபர்வம் பகுதி – 122-தண்டனையின் தோற்றம் குறித்து வசுஹோமன் மற்றும் மாந்தாதாவுக்கு இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பின்வரும் பழங்கதை குறிப்பிடப்படுகிறது. அங்கர்களுக்கு மத்தியில் வசுஹோமன் என்றழைக்கப்படும் பெரும் மன்னன் ஒருவன் இருந்தான்.(1) அந்த மன்னன் எப்போதும் பக்திச் செயல்பாடுகளில் ஈடுபடுபவனாகத் தன் மனைவியின் துணையுடன், எப்போதும் கடும் தவங்களைச் செய்து வந்தான். அவன், பித்ருக்கள் மற்றும் தெய்வீக முனிவர்களால் பெரிதும் மதிக்கப்படும் முஞ்சப்பிருஷ்தம் என்றழைக்கப்பட்ட இடத்திற்குச் சென்றான். அங்கே மேருவின் தங்க மலைகளுக்கு அருகில், இமயத்தின் கொடுமுடியில் உள்ள நன்கறியப்பட்ட ஓர் ஆலமரத்தின் நிழலின் கீழ், (பெரும் பிராமணரான) ராமர் {பரசுராமர்} தன் சடாமுடியை ஒன்றாகச் சேர்த்து கட்டியிருந்தார்[1].(3) ஓ! ஏகாதிபதி, அக்காலத்தில் இருந்து, ருத்திரனால் பெரிதும் விரும்பப்பட்ட அந்த இடம், கடும் நோன்புகளைக் கொண்ட முனிவர்களால் முஞ்சப்பிருஷ்தம் என்று அழைக்கப்பட்டது.(4) மன்னன் வசுஹோமன், அந்த இடத்தில் வசித்து, பல தெய்வீகப் பண்புகளை அடைந்து, பிராமணர்களின் மதிப்பை ஈட்டி, புனிதத்தால் ஒரு தேவ முனிவனாகக் கருதப்பட்டான்.(5)

எதிரிகளை நொறுக்குபவனும், சக்ரனின் நண்பனும், பெரும் ஆன்மா கொண்டவனுமான மன்னன் மாந்தாத்ரி {மாந்தாதா} வசுஹோமனின் அந்த மலை ஆசிரமத்திற்கு வந்தான்.(6) அங்கே வந்த மாந்தாத்ரி {மாந்தாதா}, கடுந்தவங்களைக் கொண்ட மன்னன் வசுஹோமனைக் கண்டு, அவனுக்கு முன்னிலையில் பணிவுடன் நின்றான்.(7) வசுஹோமன் தன் விருந்தினனுக்குக் கால்களைக் கழுவிக்கொள்ள நீரும், வழக்கமான பொருட்களைக் கொண்ட அர்க்கியமும் கொடுத்து, நலம் விசாரித்து, ஏழு அங்கங்களுடன் கூடிய அவனுடைய நாட்டைக் குறித்தும் விசாரித்தான்.(8) அதன் பிறகு, வசுஹோமன், பழங்காலத்து அறவோரின் நடைமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றும் தன் அரசவிருந்தாளியிடம் {மாந்தாதாவிடம்}, “ஓ! மன்னா {மந்தாதா}, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(9) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, இவ்வாறு கேட்கப்பட்டவனும், மன்னர்களில் சிறந்தவனுமான மாந்தாத்ரி {மாந்தாதா}, மிகவும் நிறைவடைந்து, சுகமாக அமர்ந்திருக்கும் பெரும் ஞானியன வசுஹோமனுக்குப் பின்வரும் வார்த்தைகளில் பதிலளித்தான்.(10)

மாந்தாத்ரி {வசுஹோமனிடம்}, “ஓ! மன்னா {வசுஹோமரே}, நீர் பிருஹஸ்பதியின் சித்தாந்தங்கள் அனைத்தையும் கற்றவராவீர். ஓ மனிதர்களில் சிறந்தவரே, உசனஸால் {சுக்கிராச்சாரியரால்} விதிக்கப்பட்ட சித்தாந்தங்களையும் நீர் அறிவீர்.(11) நான் தண்டனையின் பிறப்பைக் குறித்து அறிய விரும்புகிறேன். தண்டனைக்கு முன்பு விழிப்புடன் இருந்தது எது? மேலும் அதன் முடிவென்னவென்று சொல்லப்படுகிறது?(12) தண்டனை க்ஷத்திரியனைச் சார்ந்தது என்று எவ்வாறு உண்டானது? ஓ! பெரும் ஞானியே இவை யாவையும் எனக்குச் சொல்வீராக. உமக்குப் பயிற்சிக் கட்டணம் {குருதக்ஷிணை} கொடுக்க ஆயத்தமான ஒரு சீடனாக நான் உம்மிடம் வந்திருக்கிறேன்” என்றான்[2].(13)

வசுஹோமன் {மந்தாத்ரியிடம்}, “ஓ! மன்னா, உலகைத் தாங்கிப் பிடிக்கும் தண்டனை எவ்வாறு எழுந்தது என்பதைக் கேட்பாயாக. அறத்தின் ஆன்மாவும், அழிவில்லாததுமான அஃது {தண்டனை}, அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு உரிய அரசைப் பராமரித்துக் கொள்வதற்காக உண்டாக்கப்பட்டது.(14) ஒரு காலத்தில், அனைத்துலகின் பெரும்பாட்டனும், தெய்வீகமானவனுமான பிரம்மன், ஒரு வேள்வி செய்ய விரும்பியபோது, தம்மைப் போன்ற தகுதிகளைக் கொண்ட ஒரு புரோகிதரைக் காணத் தவறினார் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(15) இதன் காரணமாக அவர் {பிரம்மன்} தமது மூளையில் கருத்தரித்து, அங்கேயே {அந்த மூளையிலேயே} நீண்ட வருடகாலங்களாக அந்தக் கருவைத் தாங்கி வந்தார். ஆயிரம் வருடம் கடந்ததும் அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்} தும்மினார். அச்செயல்பாட்டால், அந்தக் கரு அவரது தலையில் இருந்து கீழே விழுந்தது.(16) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {மந்தாத்ரி}, பிரம்மனில் இருந்து இவ்வாறு பிறப்பை அடைந்த அந்தத் தெய்வீகமானவர், க்ஷுபர் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பெரும் சக்திகளைக் கொண்ட அவர், உயிரினங்களின் தலைவராக ஆனார். ஓ! மன்னா {மந்தாத்ரி}, அந்த க்ஷுபரே, உயர் ஆன்ம பெரும்பாட்டனின் {பிரம்மனின்} வேள்வியில் புரோகிதரானார்.(17)

ஓ! மன்னர்களில் சிறந்தவனே {மந்தாத்ரி}, பிரம்மனின் அந்த வேள்வி தொடங்கியதும் பெரும்பாட்டன் {பிரம்மன்} ஏற்றுக் கொண்ட வடிவத்தின் விளைவால் தண்டனை மறைந்தது[3].(18) தண்டனை மறைந்ததும், அனைத்து உயிரினங்களுக்கு மத்தியிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதற்கு மேலும், எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதற்குள் எந்த வேறுபாடும் இல்லாமல் போனது.(19) அனுமதிக்கப்பட்ட பானம் எது, அனுமதிக்கப்படாத பானமெது என்பதில் வேறுபாடு காண்பதை மனிதர்கள் நிறுத்தினர். அனைத்து உயிரினங்களும் ஒன்றுக்கொன்று தீங்கிழைக்கத் தொடங்கின. பாலினக்கலவியின் காரியத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் போனது.(20) அனைத்து உயிரினங்களும் திருடத் தொடங்கின, ஒருவருக்கொருர் இறைச்சியைப் பறித்தனர். பலவான், பலவீனனைக் கொல்லத் தொடங்கினான். எவரும் தன் அருகில் இருப்பவனிடம் சிறு கருணையும் கொள்ளவில்லை.(21)அப்போது பெரும்பாட்டன் {பிரம்மன்}, அழிவில்லாத தெய்வீக விஷ்ணுவை வணங்கி, வரந்தரும் அந்தப் பெருந்தேவனிடம்,(22) “ஓ! கேசவா, தற்போதைய நிலையில் நீ உன் கருணையைக் காட்டுவதே தகும்[4]. இப்போது நேரும் குழப்பம் மறையும் வகையில் நீ விதிப்பாயாக” என்றார்.(23) இவ்வாறு சொல்லப்பட்டவனும், மகத்தான சூலத்தைத் தரித்தவனுமான[5], அந்தத் தேவர்களில் முதன்மையானவன், நீண்ட நேரம் சிந்தித்து, தன்னையே, தண்டனையின் வடிவாக்கிக் கொண்டான்.(24) சரஸ்வதி தேவி, அறத்தையே கால்களாகக் கொண்ட அந்த வடிவத்தில் {தண்டனை வடிவத்தில்} இருந்தே, மிக விரைவில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட தண்டநீதியை (தண்டனை அறிவியலை} உண்டாக்கினாள்[6].(25)

இதன் பிறகு, மகத்தான சூலத்தைத் தரித்திருந்த அந்தப் பெருந்தேவன் {விஷ்ணு/சிவன்}, சிறிது நேரம் சிந்தித்து, தேவர்களில் ஒரு சிலரை, அவரவர் வகையைச் சேர்ந்தோருக்குத் தலைவர்களாகவோ, ஆட்சியாளர்களாகவோ நியமித்தான்.(26) இதன் பிறகே அவன் ஆயிரம் கண்களைக் கொண்ட தெய்வீக இந்திரனை தேவர்களின் ஆட்சியாளனாக்கினான். விவஸ்வானின் மகனான யமன், பித்ருக்களின் தலைவனாக்கப்பட்டான்.(27) குபேரன், புதையல்களுக்கும் {பொக்கிஷங்களுக்கும்}, ராட்சசர்கள் அனைவருக்கும் தலைவனாக்கப்பட்டான். மேரு மலைகளின் மன்னனாகவும், பெருங்கடல் {சமுத்திர தேவன்} ஆறுகளின் தலைவனாகவும் ஆக்கப்பட்டனர்.(28) பலமிக்க வருணன், நீர்நிலைகள் மற்றும் அசுரர்களுக்கான அரசில் {அரசனாக} நிறுவப்பட்டான். மிருத்யுவானவன், உயிர் மற்றும் உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக்கப்பட்டான். நெருப்பானவன் {அக்நி}, சக்தி படைத்த அனைத்துப் பொருட்களுக்குத் தலைவனாக்கப்பட்டான்.(29) பலமிக்க ஈசானனும், உயர் ஆன்மா கொண்டவனும், முக்கண்ணனும், அழிவில்லாதவனுமான மஹாதேவன் {சிவன்}, ருத்திரர்கள் அனைவருக்கும் தலைவனாக்கப்பட்டான்[7].(30)வசிஷ்டர் பிராமணர்களின் தலைவராக்கப்பட்டார்,

ஜாதவேதஸ் {அக்னியின் மற்றொரு வடிவம்} வசுக்களின் தலைவனாக்கப்பட்டான்.

சூரியன், ஒளிரும் கோள்கள் அனைத்தின் தலைவனாக்கப்பட்டான்,

சந்திரமாஸ் {சந்திரன்}, நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்களின் தலைவனாக்கப்பட்டான்.(31)

அன்சுமான் அனைத்துச் செடிகொடிகளுக்கும், மூலிகைகளுக்கும் தலைவனாக்கப்பட்டான்.

பலமிக்கவனும், தேவர்களில் முதன்மையானவனும், பனிரெண்டு கரங்களைக் கொண்டவனுமான குமாரன், அல்லது ஸ்கந்தன், (மஹாதேவனுக்குப் பணிவிடை செய்யும்) கணங்கள் மற்றும் பேய்கள் அனைத்திற்கும் தலைவனாக்கப்பட்டான்.(32)

அழிவு, வளர்ச்சி ஆகிய இரண்டின் வித்துகளையும் கொண்ட காலன், அனைத்து உயிர்கள், மரணத்தின் நான்கு பகுதிகள் (ஆயுதங்கள், நோய்கள், யமன் மற்றும் செயல்கள்) மற்றும் இறுதியாக இன்பம் மற்றும் துன்பத்தின் அரசனாக்கப்பட்டான்.(33)

தலைவர்களுக்குத் தலைவனும், சூலந்தரித்தவனும், உயர்ந்த தேவனுமான மகாதேவனே {சிவனே}, ருத்திரர்களின் தலைவன் என்று ஸ்ருதிகள் அறிவிக்கின்றன.(34)

பிரம்மனுக்கு, அதற்கடுத்து {க்ஷுபர் பிறந்த பிறகு} பிறந்தவரும், அனைத்து உயிரினங்களின் தலைவரும், அறவோர் அனைவரிலும் முதன்மையானவருமான க்ஷபரிடம் தண்டனைக்கோல் கொடுக்கப்பட்டது.(35)

உரிய சடங்குகளுடன் அந்த வேள்வி நிறைவடைந்ததும், உரிய மதிப்பை அளித்தபிறகு, மஹாதேவன் {சிவன்}, அறத்தைப் பாதுகாக்கும் தண்டனையை விஷ்ணுவிடம் கொடுத்தான்[8].(36)

விஷ்ணு அதை அங்கிரசுக்குக் கொடுத்தான், தவசிகளில் முதன்மையான அங்கிரஸ், இந்திரனுக்கும், மரீசிக்கும் அதைக் கொடுத்தார். மரிசி அதைப் பிருகுவுக்குக் கொடுத்தார்.(37) பிருகு, அறத்தைப் பாதுகாக்கும் நோக்குடைய அந்தத் தண்டத்தை முனிவர்கள் அனைவருக்கும் கொடுத்தார். முனிவர்கள் அதை லோகபாலர்களுக்கு அளித்தனர். லோகபாலர்கள் மீண்டும் அதை க்ஷுபரிடமே அளித்தனர். க்ஷுபர் அதைச் சூரியனின் மகனான மனுவுக்கு அளித்தார். சிராத்தங்களின் தேவனான அவர் (மனு), உண்மையான அறம் மற்றும் செல்வத்தின் பொருட்டு அதைத் தன் மகன்களிடம் கொடுத்தார்.(39)தண்டனையானது, உறுதியின்மையால் அல்லாமல் அறத்தால் வழிநடத்தப்பட்டு எந்தப் பாகுபாடுமின்றி விதிக்கப்பட வேண்டும். அது, தீயோரைத் தடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். அபராதங்களும், பறிமுதல்கள் ஆகியன அச்சமூட்டும் நோக்கம் கொண்டவையேயன்றி, மன்னனின் கருவூலத்தை நிரப்புவதற்காக அல்ல.(40) ஒருவனுடைய உடலின் அங்கத்தை இழக்கச்செய்வது, அல்லது மரணம் போன்ற தண்டனைகளை அற்பமான காரணங்களுக்காகக் கொடுக்கக்கூடாது. மலைகளில் இருந்து வீசப்படுவது, நாடு கடத்தல் போன்ற பல்வேறு வழிமுறைகளால் விதிக்கப்படும் உடல் வலி சார்ந்த தண்டனைகளும் அதுபோன்ற {அற்ப} காரணங்களால் கொடுக்கப்படக்கூடாது.(41) சூரியனின் மகனான மனு உலகின் பாதுகாப்புக்காகத் தண்டக்கோலை (தன் மகன்களிடம்) கொடுத்தார். அடுத்தடுத்து தண்டனையை {தண்டக்கோலைக்} கைகளில் ஏந்தியோரின் மூலம், அஃது உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாத்துக் கொண்டு விழிப்புடன் இருக்கிறது.(42) தராசின் {துலாக்கோலின்} உச்சியில் (தண்டக்கோலுடன்) தெய்வீக இந்திரன் விழிப்புடன் இருக்கிறான்; அவனுக்குப் பிறகு, சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட அக்னியும்; அவனுக்குப் பிறகு, வருணனும்; வருணனுக்குப் பிறகு பிரஜாபதியும் {விழிப்புடன் இருக்கின்றனர்};(43) பிரஜாபதிக்குப் பிறகு, கட்டுப்பாட்டைச் சாரமாகக் கொண்ட அறமும் {ஒழுக்கமும்}; அறத்திற்குப் பிறகு, பிரம்மனின் மகனான அழிவில்லா சட்டமும் {வியவஹாரமும்};(44) சட்டத்திற்குப் பிறகு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஆற்றலும் விழிப்புடன் இருக்கின்றன; ஆற்றலுக்குப் பிறகு, (தேவர்களை ஆதரிக்க வேள்விகளில் ஆகுதியாகக் கொடுக்கப்படுவதும், உணவாகவும், மருந்துகளாகவும் பயன்படுத்தப்படுவதுமான) மூலிகைகளும்; மூலிகைகளுக்குப் பிறகு மலைகளும்;(45) மலைகளுக்குப் பிறகு, அனைத்து வகைச் சாறுகளும் {ரசங்களும்}, அதன் பண்புகளும்; அவற்றுக்குப் பிறகு நிருதி {நிருருதி} தேவியும்; நிருதிக்குப் பிறகு கோள்களும், சொர்க்கத்தின் ஒளிக்கோள்களும்;(46) இவற்றுக்குப் பிறகு வேதங்களும்; வேதங்களுக்குப் பிறகு, குதிரைத் தலை கொண்ட விஷ்ணுவின் பலமிக்க வடிவமும் {ஹயக்கிரீவனும்}; அவனுக்குப் பிறகு, எல்லாம்வல்லவரும், அழிவில்லா பெரும்பாட்டனுமான பிரம்மனும்;(47) பெரும்பாட்டனுக்குப் பிறகு, தெய்வீகமானவனும், அருளப்பட்டவனுமான மஹாதேவனும்; மஹாதேவனுக்குப் பிறகு விஸ்வதேவர்களும்; அவர்களுக்குப் பிறகு பெரும் முனிவர்களும்;(48) முனிவர்களுக்குப் பிறகு தெய்வீக சோமனும்; சோமனுக்குப் பிறகு, அழிவற்றவர்களான அனைத்துத் தேவர்களும்; தேவர்களுக்குப் பிறகு பிராமணர்களும் விழிப்புடன் இருப்பதாக அறிவாயாக.(49) அசையும், மற்றும் அசையாத உயிரினங்களை உள்ளடக்கிய அழிவில்லா அண்டமானது, க்ஷத்திரியர்களால் விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளது.(50)

இவ்வுலகில் உயிரினங்கள் விழிப்புடன் வைக்கப்பட்டு, அவர்களுக்கு மத்தியில் தண்டனையும் விழிப்புடன் இருக்கிறது. பெரும்பாட்டனுக்கு {பிரம்மனுக்கு} ஒப்பான காந்தியுடன் கூடிய தண்டனையே அனைத்தையும் தாங்கிப் பிடிக்கிறது[9].(51) ஓ பாரதா, காலமானது, தொடக்கத்திலும், மத்தியிலும், முடிவிலும் என எப்போதும் விழிப்புடனே இருக்கிறது. உலகங்கள் அனைத்தின் தலைவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், பலமிக்கவனும், அருளப்பட்டவனும், தேவர்களுக்குத் தேவனுமான மஹாதேவனும் எப்போதும் விழிப்புடன் இருக்கிறான். அவன், கபர்தின், சங்கரன், ருத்திரன், பவன், ஸ்தாணு, உமையின் தலைவன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறான்[10].(52,53) இவ்வாறே தண்டனையானது, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் விழிப்புடன் இருகிறது. ஓர் அறம்சார்ந்த மன்னன், தண்டனையால் வழிநடத்தப்பட்டு முறையாக ஆள {ஆட்சி செய்ய} வேண்டும்” என்றான் {வசுஹோமன்}”.(54)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வசுஹோமனின் இந்த அறிவுரையைக் கேட்டு, அதில் சொல்லப்பட்டுள்ளபடி நடக்கும் மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தையும் நிச்சயம் அடைவான்.(55) ஓ! மனிதர்களில் காளையே, அறத்தால் ஆளப்படுவதும், இந்த அண்டத்தைக் கட்டுப்படுத்துவதுமான தண்டனையைக் குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன்” {என்றார் பீஷ்மர்}.(56)

தர்மார்த்தகாமம்! – சாந்திபர்வம் பகுதி – 123-அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் பயன்களையும், அறத்தைக் கைவிட்டவன் செய்யத்தகு கேடுநீக்கும் செயல்முறைகளையும், இவை தொடர்பாகப் பழங்காலத்தில் மன்னன் ஆங்கரிஷ்டனுக்கும் முனிவர் காமந்தகருக்கும் இடையில் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, அறம் பொருள், இன்பம் குறித்த முடிவான தீர்மானங்களை நான் கேட்க விரும்புகிறேன். அவற்றில் எதைச் சார்ந்து வாழ்வின் போக்கு செல்கிறது?(1) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய ஒவ்வொன்றின் வேராகவ இருப்பவை யாவை? மேலும் அம்மூன்றின் விளைவுகள் என்ன? அவை சில சமயங்களில் ஒன்றோடொன்று கலந்தும், சில வேளைகளில் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தவையாகவும், சார்பற்றவையாகவும் {வேறுபட்டும்}இருக்கின்றன” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}“இவ்வுலகின் மனிதர்கள் நல்லிதயங்களுடனும், அறத்தின் துணையுடனும் செல்வத்தை அடைய முயலும்போது, காலம், காரணம் மற்றும் செயற்பாடு ஆகியவற்றைப் பொறுத்து, அறம், பொருள், இன்பம் ஆகியன ஒன்று கலந்த நிலையிலும், ஒன்றோடொன்று உடன் உறைந்த நிலையிலும் காணப்படுகின்றன[1].(3) செல்வமானது அறத்தில் வேர் கொண்டுள்ளது, மேலும் இன்பமோ, அச்செல்வத்தின் கனி {பயன்} என்றே சொல்லப்படுகிறது. மேலும் இந்த மூன்றும் மனவுறுதியிலேயே {சங்கல்பத்திலேயே} தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. மனவுறுதியானது, பொருள்கள் {நோக்கங்கள்} தொடர்புடையதாகும்.(4) மேலும் அனைத்துப் பொருட்களும் மொத்தமாக இன்ப விருப்பத்தை நிறைவு செய்யவே இருக்கின்றன. அப்போது, இந்த மூன்று திரட்டுகளும் இவற்றையே {மனவுறுதி மற்றும் நோக்கங்களையே} சார்ந்திருக்கின்றன. அனைத்துப் பொருட்களில் இருந்து முற்றிலும் பிரிந்து இருப்பதே முக்தியாகும் {மோட்சமாகும்}.(5)

[1] “இந்தச் சுலோகத்தை, அறம் சார்ந்த கணவன் ஒருவன், தான் மணந்து கொண்ட மனைவியிடம் உரிய காலத்தில் கலவியை நாடும் செயலின் மூலம் உரையாசிரியர் விளக்குகிறார். கர்ப்பதானம் Garbhadhan என்ற பெயரில் அறியப்பட்ட சடங்கைச் செய்வதன் மூலம் அறத்தகுதியை அடையலாம். மேலும் {இரண்டாவதாக} அச்செயலில் அவனுக்கு இன்பமும் இருக்கிறது, மேலும் இறுதியில் கிடைக்கும் மகன் என்ற வகையில் அவன் மூன்றவதாகப் பொருளையும் அடைகிறான். {எனவே இக்காரியத்தின் மூலம் அவன் அறம், இன்பம் மற்றும் பொருள் ஆகிய மூன்றையும் அடைகிறான்}” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “உலகத்தில் மனிதர்கள் பரிசுத்தமான மனமுள்ளவர்களாயிருக்கும்பொழுது, தர்மத்தை முன்னிட்டுப் புத்திரனென்னும் பொருளை அடைய வேண்டுமென்ற நிச்சயமுண்டாகி அதற்குரிய காலமும், அதற்கிடமான பத்நியும் நியாயமான காரியமும் நேர்ந்தால் (அறம்பொருள்இன்பங்களாகிற) மூன்றும் சேர்க்கையடைகின்றன” என்றிருக்கிறது.

உடலைப் பாதுகாக்க அறமும், அறம் ஈட்டுவதற்காகச் செல்வமும் நாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இன்பமானது புலன்களை நிறைவு செய்வதே ஆகும். எனவே, இம்மூன்றும் ஆசைப் பண்பை {ரஜோ குணத்தைக்} கொண்டிருக்கின்றன[2].(6) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன சொர்க்கத்திற்காகவும், அதுபோன்ற வெகுமதிகளுக்காகவும் நாடப்படும்போது, அவ்வெகுமதிகளே தொலைவில் இருப்பதால் அவை {சொர்க்கமும், அதுபோன்ற வெகுமதிகளும்} தொலைவில் இருப்பவையாகச் சொல்லப்படுகின்றன. எனினும், தன்னறிவின் நிமித்தமாக நாடப்படும்போது, அவை நெருக்கமாவதாகச் சொல்லப்படுகிறது. அவை அத்தகைய பண்பில் இருக்கும்போது, அவற்றை ஒருவன் நாட வேண்டும்[3]. ஒருவன் அவற்றை மனத்தாலும் கைவிடக்கூடாது. அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன கைவிடப்பட்டால், தவத்த்துறவுகளின் மூலம் ஒருவன் தன்னை விடுவித்துக் கொண்ட பிறகே அவற்றைக் கைவிட வேண்டும்[4].(7) முக்தியை நோக்கியதே இந்த மூன்று திரட்டுகளின் குறிக்கோளாகும். தகுந்த மனிதன் அஃதை அடைவான். ஒருவன் செய்யும் செயல்கள், நுண்ணறிவின் துணையுடன் நிறைவடையவோ, எதிர்பாரா விளைவுகளுக்கு வழிவகுக்கவோ செய்யும். அறத்தை விட (தொண்டு, உழவு போன்ற) வேறு பொருட்களே செல்வத்திற்கு வழிவகுப்பதால், செல்வத்தின் {பொருளின்} வேர் எப்போதும் அறத்தில் {மட்டுமே} இருப்பதில்லை. மேலும் (சிலர் செல்வமானது, வாய்ப்பு, அல்லது பிறப்பு, அல்லது அதுபோன்ற காரணங்களைக் கொண்டு ஈட்டப்படுவதால்) அதில் ஒரு முரண்பட்ட கருத்தும் இருக்கிறது. சில சமயங்களில், அடையப்படும் செல்வம் தீமையையே விளைவிக்கும். மேலும் செல்வத்தைத் தவிர (விரதங்கள், நோன்புகள் போன்ற) பிற பொருட்கள் அறத்தை அடைய வழிவகுக்கின்றன. எனவே, இதைப் பொறுத்தவரையில், அறியாமை கலந்த அறிவைக் கொண்ட மூடன், அறம் மற்றும் செல்வத்தின் {பொருளின்} உயர்ந்த குறிக்கோளான முக்தியை {மோட்சத்தை} அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(9) அறத்தின் கழிவுகள், வெகுமதியடையும் விருப்பத்தில் இருக்கின்றன; செல்வத்தின் {பொருளின்} கழிவுகள், அதை விளம்பரப்படுத்துவதில் இருக்கிறது; இந்தக் கசடுகள் தூய்மையடையும்போது, அவை பெரும் விளைவுகளை உண்டாக்குகின்றன.(10)

[2] “நன்மை, ஆசை மற்றும் இருள் {நற்பண்பு [சத்வகுணம்], ஆசைப்பண்பு [ரஜோகுணம்], இருள்பண்பு [தமோகுணம்]} என்ற மூன்று குணங்கள், அல்லது பண்புகள் மனிதனினுடைய செயல்களின் பண்புகளை விரித்துரைக்கின்றன. பகவத்கீதையின் இறுதிப் பகுதிகளைக் காண்க. எனவே, அத்தகு {ரஜோ குணம் கொண்ட} அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன பின்பற்றக்கூடிய உயர்ந்த நோக்கங்களல்ல. நற்பண்பை {சத்வகுணத்தைக்} கொண்ட நோக்கங்களே பின்பற்றத்தகுந்தவை” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] “அஃதாவது, ஒருவன் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்காக மட்டுமே அறத்தையும், கனியில் விருப்பமில்லாமல் {பயனில் ஆசையில்லாமல்} செய்யப்படும் செயல்களுக்குச் செலவழிப்பதற்காக மட்டுமே செல்வத்தையும், உடலைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே இன்பத்தையும் நாட வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] தர்மாதிங்காமானைஷ்திகானம் Dharmadinkamanaishthikan, அதாவது தர்மத்தை {அறத்தை} முதலாகவும், காமத்தை {இன்பத்தை} இறுதியாகவும் கொள்தல், எனவே இவை அறம், பொருள் மற்றும் இன்பத்தைக் குறிக்கின்றன” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இது தொடர்பாகப் பழங்காலத்தில் காமந்தகர் மற்றும் ஆங்கரிஷ்டன் ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடலில் குறிப்பிடப்படுகிறது.(11) ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்த மன்னன் ஆங்கரிஷ்டன், சுகமாக அமர்ந்திருந்தவரான முனிவர் காமந்தகரை {அணுகி} வணங்கி, அவரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்டான்.(12)

{ஆங்கரிஷ்டன் காமாந்தகரிடம்}, “ஓ! முனிவரே, ஒரு மன்னன், காமத்தாலோ, மடமையினாலோ உந்தப்பட்டுப் பாவமிழைத்துவிட்டு, பின்பு அதற்காக வருந்தினால், எச்செயல்களைச் செய்வதன் மூலம் {அவனால்} அந்தப் பாவங்களை அழிக்க முடியும்?(13) மேலும் ஒரு மனிதன், அறியாமையால் உந்தப்பட்டும், நேர்மையாகச் செயல்படுகிறோம் என்று நம்பிக்கையிலும் பாவம் நிறைந்த செயலைச் செய்தான் என்றால், மனிதர்களுக்கு மத்தியில் {பொதுவாகவே} நடைமுறையில் இருக்கும் அந்தப் பாவத்தை மன்னனால் எவ்வாறு நிறுத்த முடியும்?” என்று கேட்டான்.(14)

காமந்தகர் {ஆங்கரிஷ்டனிடம்}, “அறம், செல்வம் {பொருள்} ஆகியவற்றைக் கைவிட்டு, இன்பத்தை மட்டுமே பின்தொடரும் மனிதன், அத்தகு நடத்தையின் மூலம் தன் நுண்ணறிவை இழப்பதையே அறுவடை செய்கிறான்.(15) நுண்ணறிவின் {புத்தியின்} அழிவைக் கவனமின்மை {மயக்கம்} பின்தொடர்கிறது. உடனே அறம் மற்றும் செல்வம் {பொருள்} ஆகிய இரண்டும் அழிவை அடைகின்றன. அத்தகு கவனமின்மையால் {மயக்கத்தால்}, கடும் இறைமறுப்பும் {நாத்திகமும்}, திட்டப்படியான தீயொழுக்கமும் உண்டாகின்றன.(16) பாவம்நிறைந்த ஒழுக்கம் கொண்ட அந்தத் தீய மனிதர்களை மன்னன் அடக்கிவைக்கவில்லையெனில், பாம்பு மறைந்திருக்கும் வீட்டிற்குள் இருக்கும் ஒருனைப் போல நல்ல குடிமக்கள் அனைவரும் அவனிடம் அச்சத்துடன் வாழ வேண்டியிருக்கும்.(17) குடிமக்கள் அத்தகைய மன்னனைப் பின்பற்ற மாட்டார்கள். பிராமணர்களும், பக்திமான்களும் {நல்லோரும்} அவ்வாறே செயல்படுவார்கள். விளைவாக, மன்னன் பேராபத்தையும், அழிவையுமே ஈட்டுவான்.(18) புகழ்க்கேட்டையும், அவமதிப்பையும் அடையும் அவன், துன்பகராமன இருப்பிலேயே தன் வாழ்வை நீட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.(19)

சாத்திரங்களைக் கற்ற மனிதர்கள், பாவத்தைத் தடுப்பதற்காகப் பின்வரும் வழிமுறைகளைக் குறிப்பிட்டிருக்கின்றனர். மன்னன், மூன்று வேதங்களையும் கற்பதற்கே தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அவன் பிராமணர்களை மதித்து, அவர்களுக்கு நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.(20) அவன் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவனாக இருக்க வேண்டும். அவன் தூய்மைச் சடங்குகளைச் செய்பவனாக, புனித மந்திரங்களை ஓதுபவனாக இருந்து, தன் நேரத்தை மகிழ்ச்சியாகக் கடத்த வேண்டும். அவன், தீய குடிமக்களைத் தன்னிடம் இருந்தும் தன் நாட்டில் இருந்தும் விரட்டி, நல்லோரின் தோழமையை நாட வேண்டும்.(22) அவன், இனிய சொல், அல்லது நற்செயல்களின் மூலம் மனிதர்கள் அனைவரையும் நிறைவு செய்ய வேண்டும். அவன் அனைவரிடமும், “நான் உங்களுடையவன்” என்று சொல்லி, தன் எதிரியின் நற்பண்புகளையும் அறிவிக்கையிட வேண்டும்.(23) இத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், அவன் விரைவில் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, உயர்ந்த வெகுமதிகள் அனைத்தையும் வெல்வான். இத்தகையான ஒழுக்கத்தின் மூலம் அவனது பாவங்கள் அனைத்தும் நிச்சயம் அழிவடையும்.(24) உன்னுடைய பெரியோர்கள் மற்றும் ஆசான்கள் குறிப்பிடும் உயர்ந்த கடமைகள் அனைத்தையும் நீ நிறைவேற்ற வேண்டும். உன்னைச் சார்ந்த பெரியோர்கள் மற்றும் ஆசான்களின் அருளின் மூலமாக உன்னால் நிச்சயம் பெரும்பேற்றை அடைய முடியும்” என்றார் {காமந்தகர்}”.(25)

அறமொழுகு! – சாந்திபர்வம் பகுதி – 124-அறம், உண்மை, நற்செயல்கள், வலிமை, செழிப்பு ஆகியன அறப்பண்பிலேயே தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன என்பதை நிறுவ துரியோதனனுக்குத் திருதராஷ்டிரன் சொன்ன பிரகலாதன், இந்திரன் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, பூமியில் அறப்பண்பையே {தர்மசீலத்தையே} மனிதர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். எனினும், அவற்றின் பெருமையில் எனக்குப் பேரையங்கள் இருக்கின்றன. ஓ! அறவோரில் முதன்மையானவரே, அவை எங்களால் புரிந்து கொள்ளத்தக்கவையாக இருந்தால், அறப்பண்பை {நன்னடத்தையை} அடையும் வழி குறித்த அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(2) ஓ! பாரதரே, உண்மையில் அந்நடத்தை எவ்வாறு அடையப்படுகிறது. அதைக் கேட்க நான் விரும்புகிறேன். ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, அந்நடத்தையின் சிறப்பியல்புகளைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! கௌரவங்களை அளிப்பவனே, முன்பொரு சமயம் துரியோதனன், இந்திரப்பிரஸ்தத்தில் உனக்கும், உன் தம்பிகளுக்கும் சொந்தமான நன்கறியப்பட்ட செழிப்பைக் கண்டும், பெரும் மாளிகையில் தான் செய்த தவறுகளுக்காக உள்ளான ஏளனங்களாலும் துயரத்தில் எரிந்து கொண்டிருந்த போது, தன் தந்தையான திருதராஷ்டிரனிடம் இதே கேள்வியைக் கேட்டான். ஓ! பாரதா, அச்சந்தர்ப்பத்தில் நிகழ்ந்தவற்றைக் கேட்பாயாக[1].(4,5) உனது பெரும் மாளிகையையும், உன் தலைமையில் இருந்த பெருஞ்செழிப்பையும் கண்ட துரியோதனன், தன் தந்தையின் முன் அமர்வதற்கு முன்னர், அவனிடம் தான் கண்டவற்றைக் குறித்துச் சொன்னான்[2].(6) துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், தன் மகனிடமும் {துரியோதனிடமும்}, கர்ணனிடமும் பின்வருமாறு பதிலளித்தான்.(7)திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “ஓ! மகனே, நீ ஏன் வருந்துகிறாய்? அதற்கான காரணத்தை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். அந்தக் காரணங்கள் போதுமானவையாகத் தோன்றுவதாக உறுதியடைந்த பிறகு, நான் உனக்கு அறிவுரை கூற முயற்சிக்கிறேன்.(8) ஓ! பகைநகரங்களை அடக்குபவனே, நீயும் பெருஞ்செழிப்பையே அடைந்திருக்கிறாய். உன்னுடன் பிறந்தவர்கள் அனைவரும், உன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் உனக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கின்றனர்.(9) சிறந்த ஆடைகளேயே நீ உன் அங்கங்களில் அணிகிறாய். ஆண்டம்பர உணவையே நீ உண்கிறாய்[3]. சிறந்த வகைக் குதிரைகளே உன்னைச் சுமக்கின்றன. பிறகு ஏன் நீ நிறம் மங்கியவனாக மெலிந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.(10)

துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, “உயர் ஆன்ம ஸ்நாதக வகைப் பிராமணர்கள் பத்தாயிரம் {10000} பேர் (தினமும்) யுதிஷ்டிரனின் அரண்மனையில் தக்கத்தட்டுகளில் உண்கின்றனர்.(11) சிறந்த மலர்கள், கனிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அவனது அற்புத மாளிகை, அவனது தித்திரி மற்றும் கல்மாஷ இனக் குதிரைகள், அவனுடைய பல்வேறு வகையான ஆடைகள் ஆகியவற்றைக் கண்டும், ஓ! பாரதரே, வைஸ்ரவணனின் {குபேரனின்} பெருஞ்செழிப்புக்கு ஒப்பான உயர்ந்த செழிப்பை என் எதிரிகளான பாண்டுவின் மகன்களிடம் கண்டும் நான் துயரத்தால் எரிந்து கொண்டிருக்கிறேன்” என்றான்.(13)

திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “ஓ! ஐயா, யுதிஷ்டிரனைப் போன்ற செழிப்பையோ, அதைவிட மேன்மையானதையோ நீ விரும்பினால், ஓ! மகனே, அறப்பண்பு {நன்னடத்தை} கொண்டவனாக நீ முயற்சி செய்வாயாக.(14) நடத்தையின் மூலம் மட்டுமே ஒருவனால் மூன்று உலகங்களையும் வெல்ல முடியும் என்பதில் ஐயமில்லை.(15) மாந்தாத்ரி {மாந்தாதா} ஒரே இரவில் மொத்த உலகத்தையும் கைப்பற்றினான், ஜனமேஜயன் மூன்றிலும், நாபாகன் ஏழு இரவுகளிலும் அதைச் செய்தனர் {உலகைக் கைப்பற்றினர்}.(16) இந்த மன்னர்கள் அனைவரும் கருணையும், அறப் பண்பையும் {நன்னடத்தையையும்} கொண்டிருந்தனர். இதன் காரணமாகவே, அவர்களது பண்புகளால் வெல்லப்பட்ட பூமாதேவி தானாகவே அவர்களிடம் வந்தாள்” என்றான்.(17)

துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே, (உம்மால் பெயர் சொல்லப்பட்ட மன்னர்களின்) எந்த நடத்தையின் மூலம் இந்த உலகம் அவ்வளவு விரைவாக வெல்லப்பட்டதோ, அந்த நடத்தையை எவ்வாறு அடைவது என்பதைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(18)

திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “இது தொடர்பாகப் பின்வரும் இந்தப் பழைய விவரிப்பில் குறிப்பிடப்படுகிறது. அறப்பண்பு {நன்னடத்தை} குறித்து இது முன்பொரு சமயத்தில் நாரதரால் உரைக்கப்பட்டதாகும்.(19) பழங்காலத்தில் தைத்தியன் பிரஹலாதன், தனது நடத்தையின் தகுதியால் {புண்ணியத்தால்}, உயர் ஆன்ம இந்திரனின் அரசைப் பறித்து, மூவுலகங்களையும் வென்றான்.(20) அப்போது சக்ரன் {இந்திரன்}, கூப்பிய கரங்களுடன் பிருஹஸ்பதியை அணுகினான். பெரும் ஞானம் கொண்டவனான அந்தத் தேவர்கள் தலைவன் {இந்திரன்}, அந்தப் பேராசானிடம் {பிருஹஸ்பதியிடம்}, “இன்பநிலையின் மூலத்தைக் குறித்து நீர் எனக்குச் சொல்ல வேண்டுமென நான் விரும்புகிறேன்” என்று கேட்டான்.(21) இவ்வாறு கேட்கப்பட்ட பிருஹஸ்பதி, உயர்ந்த இன்பநிலையின் மூலமான (முக்திக்கு {மோட்சத்துக்கு} வழிவகுக்கும்) அந்த அறிவைக் குறித்து அவனிடம் {இந்திரனிடம்} சொன்னார். உண்மையில், அறிவே பரம இன்பத்தின் மூலம் என்று பிருஹஸ்பதி குறிப்பிட்டார். எனினும் இந்திரன், அதை விட உயர்ந்தது ஏதேனும் உள்ளதா என்று மீண்டும் அவரிடம் கேட்டான்.(23)

பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “ஓ! மகனே, அதைவிட மேலும் உயர்ந்ததும் இருக்கிறது. உயர் ஆன்ம பார்க்கவர் (உசனஸ் {சுக்கிராச்சாரியர்}) அஃதை உனக்குச் சிறப்பாகப் போதிப்பார். நீ அருளப்பட்டிருப்பாயாக. ஓ! தேவர்களின் தலைவா, நீ அவரிடம் சென்று விசாரிப்பாயாக” என்று சொன்னார்.(24)

பெரும் தவத்தகுதியும், பெரும் காந்தியும் கொண்ட தேவர்களின் தலைவன், பார்க்கவரிடம் சென்று, நிறைவடைந்த இதயத்துடன், பெரும் நன்மையை விளைவிக்கும் ஓர் அறிவை அவரிடம்{சுக்கிராச்சாரியாரிடம்} இருந்து அடைந்தான்.(25) நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, உயர் ஆன்மப் பார்க்கவரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, (இன்பத்தை அடையும் வழிமுறைகளில்) அந்தத் தவசி ஏற்கனவே தனக்குச் சொன்னதை விட உயர்ந்ததேதும் இருக்கிறதா என்று அந்தத் தவசியிடமே {சுக்கிராச்சாரியாரிடமே} கேட்டான்.(26)

அனைத்துமறிந்தவரான பார்க்கவர் {சுக்கிராச்சாரியார்}, “உயர் ஆன்ம பிரஹலாதன் அது குறித்த சிறந்த அறிவைப் பெற்றிருக்கிறான்” என்று சொன்னார்.

இதை அறிந்த இந்திரன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான்.(27) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், பகனைத் தண்டித்தவனுமான அவன் {இந்திரன்}, ஒரு பிராமணனின் வடிவத்தை ஏற்று, பிரஹலாதனிடம் சென்று, “எது இன்பத்தை அளிக்கிறது என்பது குறித்துக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(28)

பிரஹலாதன் அந்தப் பிராமணனிடம், “ஓ! மறுபிறப்பாளர்களின் தலைவரே, மூவுலகங்களையும் ஆட்சி செய்யும் பணியில் முழுவதுமாக ஈடுபட்டிருப்பதால் எனக்கு நேரமேதும் இல்லை. எனவே, என்னால் உமக்குப் போதிக்க முடியாது” என்றான்.(29)

அதற்கு அந்தப் பிராமணன் {பிரஹலாதனிடம்}, “ஓ! மன்னா, உனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது, நன்மையை உண்டாக்கவல்ல நடத்தைவழி எது என்பதைக் குறித்த உன் போதனைகளை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(30)

பிரம்மத்தை உச்சரிப்பவரின் இந்தப் பதிலில் மகிழ்ச்சியடைந்தான் மன்னன் பிரஹலாதன். “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அவன், அறிவைக் குறித்த உண்மைகளை அந்தப் பிராமணருக்குப் போதிக்கத் தக்க சமயத்தைக் கொடுப்பதாகச் சொன்னான்.(31) ஓர் ஆசானிடம் ஒரு சீடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ, அவ்வாறே பிரஹலாதனிடம் முறையாக நடந்து கொண்ட அந்தப் பிராமணன், பிரஹலாதன் விரும்பியதை முழு இதயத்துடன் செய்யத் தொடங்கினான்.(32) பல சந்தர்ப்பங்களில் அந்தப் பிராமணன், “எதிரிகளைத் தண்டிப்பவனே, எந்த வழிமுறைகளின் மூலம் உன்னால் மூவுலகங்களின் அட்சியை வெல்ல முடிந்தது? ஓ! அறமன்னா, அவ்வழிமுறைகள் யாவை என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான். ஓ! ஏகாதிபதி, அந்தப் பிராமணன் கேட்ட கேள்விக்குப் பிரஹலாதன் பதிலளித்தான்.(33)

பிரஹலாதன், “ஓ! மறுபிறப்பாளரே, நான் ஒரு மன்னனாக இருப்பதன் விளைவால் எந்தச் செருக்கையும் உணர்வதில்லை, அதே போல, பிராமணர்களிடம் பகையுணர்வேதும் வளர்ப்பதில்லை. மறுபுறம், சுக்ரனின் போதனைகளின் அடிப்படையில் அமைந்த கொள்கை ஆலோசனைகளை அவர்கள் எனக்கு அறிவிக்கும்போது, நான் அவற்றை ஏற்றுப் பின்பற்றுகிறேன்.(34) முழு நம்பிக்கையுடன் அவர்கள் விரும்புவதை என்னிடம் சொல்லி, அறமற்ற, முறையற்ற வழிமுறைகளில் இருந்து என்னை அவர்கள் தடுக்கிறார்கள். நான் எப்போதும் சுக்கிரனின் போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தவனாவேன். நான் பிராமணர்களிடமும், பெரியோர்களிடமும் காத்திருந்து அவர்களுக்குத் தொண்டு செய்கிறேன். நான் எந்த வன்மமும் கொள்வதில்லை.(35) நான் அற ஆன்மா கொண்டவனாவேன். தற்கட்டுப்பாட்டுடன் கூடிய நான் எனது புலன்கள் அனைத்தையும் என் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறேன். எனக்குப் போதகர்களாக இருக்கும் அந்த மறுபிறப்பாளர்கள், தேன்கூட்டில் தேனைச் சிந்தும் தேனீக்களைப் போல எனக்கு நன்மையான போதனைகளைப் பொழிகிறார்கள்.(36) நான், அந்தக் கல்விமான்களால் சிந்தப்படும் தேனைச் சுவைத்து, நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போல என் குலத்தைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறேன்[4].(37) சுக்கிரரின் போதனைகளைப் பிராமணர்களின் உதடுகளில் இருந்து கேட்டு அதன்படி செயல்படுவதே பூமியில் அமுதமும் தெளிவான கண்ணும் ஆகும்.(38) இவற்றிலேயே ஒரு மனிதனுக்கான நன்மை இருக்கிறது” என்றான். இவ்வாறே பிரம்மத்தை உச்சரிப்பவரிடம் பிரஹலாதன் பேசினான்.அவனால் கடமையுணர்வுடன் தொண்டாற்றப்பட்ட தைத்தியர்களின் தலைவன் {பிரஹலாதன்} மீண்டும் அவனிடம், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நீர்! என்னிடம் கடமையுணர்வுடன் நடந்து கொள்வதன் விளைவால் நான் உம்மிடம் மிகவும் மனம்நிறைந்திருக்கிறேன். நீ அருளப்பட்டிருப்பீராக. நீர் விரும்பும் வரத்தை என்னிடம் கேட்பீராக. நீர் கேட்கும் வரத்தை நான் நிச்சயம் உமக்கு அளிப்பேன்” என்றான்.(40)

அதற்கு அந்தப் பிராமணன் {பிரஹலாதனிடம்}, அந்தத் தைத்தியர்களின் தலைவனிடம், “மிக்க நன்று, நான் உனக்குக் கீழ்ப்படிவேன்” என்று சொன்னான். அவனிடம் மனம் நிறைந்த பிரஹலாதன், “நீர் விரும்புவதைப் பெற்றுக் கொள்ளும்” என்றான்.(41)

அந்தப் பிராமணன், “ஓ! மன்னா, நீ என்னிடம் நிறைவடைந்திருக்கிறாய், எனக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்புகிறாய் என்றால், நான் உன் நடத்தையை அடைய விரும்புகிறேன். இதுவே நான் உன்னிடம் வேண்டும் வரமாகும்” என்று கேட்டான்[5].(42)

இதனால் பிரஹலாதன் மகிழ்ச்சியடைந்தாலும், அவன் பேரச்சத்தாலும் நிறைந்தான். உண்மையில், இந்த வரத்தை அந்தப் பிராமணன் குறிப்பிட்ட போது, அந்தத் தைத்திய தலைவன், கேட்பவன் இயல்பான சக்தியைக் கொண்ட ஒரு மனிதனாக இருக்க முடியாது என்று நினைத்தான்.(43)

மிகவும் ஆச்சரியமடைந்த பிரஹலாதன், இறுதியாக, “அப்படியே ஆகட்டும்” என்றான். இருப்பினும் வரமளித்த பிறகு அந்தத் தைத்திய தலைவன் துயரத்தால் நிறைந்தான்.(44) ஓ! மன்னா, வரத்தை அடைந்த பிராமணன் சென்றுவிட்டாலும், பிரஹலாதன் ஆழமான கவலைக்கு உள்ளாகி என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(45) அந்தத் தைத்திய தலைவன் இக்காரியத்தை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தபோது, ஒளியின் தழல் ஒன்று அவனது உடலில் இருந்து வெளியே வந்தது. பெரும் காந்தியைக் கொண்ட நிழல் வடிவமாகவும்,(46) பெரும் வடிவம் கொண்டதாகவும் அஃது இருந்தது.

பிரஹலாதன் அந்த வடிவத்திடம், “நீ யார்?” என்று கேட்டான்.

அதற்கு அந்த வடிவம், “நான் உன் நடத்தையின் உடல் வடிவமாவேன். உன்னால் கைவிடப்பட்ட நான் இப்போது செல்லப் போகிறேன்.(47) எனவே, ஓ! மன்னா, நான் உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், குற்றமில்லாதவனுமான அந்தப் பிராமணர்களில் முதன்மையானவனிடம் இனி வசிக்கப் போகிறேன்” என்றது.

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த வடிவம் மறைந்து, அதன்பிறகு விரைவில் சக்ரனின் {இந்திரனின்} உடலில் நுழைந்தது.(48) அந்த வடிவம் மறைந்ததும், அதேபோன்ற மற்றொரு வடிவம் பிரஹலாதனின் உடலில் இருந்து வெளிப்பட்டது. அந்தத் தைத்திய தலைவன், அதனிடம், “நீ யார்?” என்று கேட்டான்.(49)

அதற்கு அந்த {மற்றொரு} வடிவம், “ஓ! பிரஹலாதா, என்னை அறத்தின் உடல்வடிவமாக அறிந்து கொள்வாயாக. ஓ! தைத்தியர்களின் தலைவா, எங்கே நடத்தை {பண்பு} இருக்கிறதோ அங்கேயே நான் வசிப்பேன், எனவே நான் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவனிடம் செல்லப் போகிறேன்” என்றது.(50)

அறம் மறைந்ததும், ஓ! ஏகாதிபதி, காந்தியுடன் சுடர்விட்ட மூன்றாவது வடிவம் ஒன்று உயர் ஆன்மப் பிரஹலாதனின் உடலில் இருந்து வெளிப்பட்டது.(51) அது யார் எனப் பிரஹலாதனால் கேட்கப்பட்டதும், பெரும்பிரகாசம் கொண்ட அந்த வடிவம், “ஓ! தைத்தியர்களின் தலைவா, நானே உண்மை என்பதை அறிவாயாக. அறத்தின் வழியைப் பின்பற்றி நான் உன்னை விட்டுச் செல்லப் போகிறேன்” என்றது.(52)

அறத்தைப் பின்பற்றி உண்மையானது பிரஹலாதனை விட்டுச் சென்றதும், {நான்காவதாக} மற்றொரு பெரும் வடிவம் பிரஹலாதனின் உடலைவிட்டு வெளியே வந்தது. தைத்திய மன்னனால் கேட்கப்பட்டதும் அந்த வலிமைமிக்கது, “நானே நற்செயல்களின் உடல்வடிவமாவேன். ஓ! பிரஹலாதா, எங்கே உண்மை வாழுமோ, அங்கேயே நான் வாழ்வேன் என்பதை அறிவாயாக” என்றது.(53)

அது பிரகலாதனை விட்டுச் சென்றதும், {ஐந்தாவதாக} மற்றொரு வடிவம் அழுகையுடனும், ஓலத்துடனும் வெளிய வந்தது. பிரஹலாதனால் கேட்கப்பட்ட அஃது, “என்னை வலிமை என்று அறிவாயாக. நற்செயல்கள் எங்கிருக்குமோ அங்கேயே நான் வசிப்பேன்” என்றது.(54) இவ்வார்த்தைகளைச் சொன்னபிறகு, நற்செயல்கள் சென்ற இடத்திற்கே வலிமையும் சென்றது.

இதன்பிறகு, பிரஹலாதனின் உடலில் இருந்து பெரும் பிரகாசம் கொண்ட ஒரு தேவி வெளிப்பட்டாள். அந்தத் தைத்தியத் தலைவனால் கேட்கப்பட்டதும், அவள் தான் செழிப்பின் உடல் வடிவம் என்று பதிலளித்து, “ஓ! வீரா, ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே, உன்னில் வசித்து வந்த நான், உன்னால் கைவிடப்பட்டு, வலிமையைப் பின்தொடர்ந்து செல்கிறேன்” என்றாள்.(56)

பேரச்சமடைந்த உயர் ஆன்மப் பிரஹலாதன், மீண்டும் அந்தத் தேவியிடம், “ஓ! தேவி, ஓ! தாமரைகளுக்கு மத்தியில் வசிப்பவளே, நீ எங்கே செல்கிறாய்?(57) ஓ தேவி, நீ எப்போதும் உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவளும், தேவிகளில் முதல்வியும் ஆவாய். (என் சீடனாக இருந்த) அந்தப் பிராமணர்களில் முதன்மையானவன் யார்? நான் உண்மையை அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றான்.(58)

அதற்கு அந்தச் செழிப்பின் தேவி, “பிரம்மச்சரிய நோன்புக்கு அர்ப்பணிப்புடன் உள்ளவனும், உன்னால் போதிக்கப்பட்டவனுமான அந்தப் பிராமணன் சக்ரனாவான் {இந்திரனாவான்}. ஓ! பலமிக்கவனே, மூவுலகங்களின் மீதும் நீ கொண்டிருந்த அரசுரிமையை அவன் களவாடிவிட்டான்.(59) ஓ! அறவோனே, நீ உன் நடத்தையாலேயே மூவுலகங்களையும் அடக்கி ஆண்டாய். இஃதை அறிந்து கொண்ட தேவர்களின் தலைவன், உன் நடத்தையை உன்னிடம் இருந்து களவாடிவிட்டான்.(60) ஓ! பெரும் ஞானியே, அறம், உண்மை, நற்செயல்கள், வலிமை ஆகியவையும் நானும் நடத்தையிலேயே எங்கள் வேரைக் கொண்டிருக்கிறோம்” என்றாள்”.(61)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தச் செழிப்பின் தேவி, எஞ்சியவை அனைத்தையும் போலவே சென்றுவிட்டாள். துரியோதனன் மீண்டும் தன் தந்தையிடம் இவ்வார்த்தைகளில்,(62) “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, நடத்தையின் உண்மையை அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். அஃதை அடையும் வழிமுறைகளை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(63)

திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “உயர் ஆன்மப் பிரஹலாதன் இந்திரனிடம் உரையாடியபோது அந்த வழிமுறைகள் சொல்லப்பட்டன. எனினும், ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நடத்தையை எவ்வாறு அடைவது என்பதைக் குறித்துச் சுருக்கமாகக் கேட்பாயாக.(64) செயல், எண்ணம் மற்றும் சொல்லில் தீங்கிழையாமை, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, கொடை ஆகியவை புகழத்தக்க அந்நடத்தையில் அடங்கியவையாகும்.(65) எந்தச் செயலாலோ, முயற்சியாலோ பிறர் நன்மையடைய மாட்டார்களோ, அல்லது எந்தச் செயலின் விளைவால் ஒருவன் அவமானத்தை அடைவானோ, அச்செயல் ஒருபோதும் செய்யப்படக்கூடாது.(66) மறுபுறம், எந்தச் செயலின் மூலம் சமூகத்தில் ஒருவன் புகழடைவானோ அது செய்யப்பட வேண்டும். ஓ! குருக்களில் சிறந்தவனே {துரியோதனா}, நடத்தை என்றால் என்ன என்பதைக் குறித்து நான் உனக்குச் சுருக்கமாகச் சொன்னேன்.(67) ஓ! மன்னா, தீய நடத்தை கொண்ட மனிதர்கள் செழிப்பை எப்போதாவது வென்றால், ஓ! மகனே அஃதை அவர்கள் நீண்ட காலம் அனுபவிக்க மாட்டார்கள், வேரோடு அழிபவர்களாகவே காணப்படுகிறார்கள்” என்றான்”.(68)

திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்} தொடர்ந்தான், “ஓ! மகனே, யுதிஷ்டிரனைவிட நீ பெருஞ்செழிப்பையடைய விரும்பினால், இவையாவற்றையும் உண்மையாக அறிந்து கொண்டு, நன்னடத்தையுடன் இருப்பாயாக” என்றான்”.(69)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இதுவே மன்னன் திருதராஷ்டிரன் தன் மகனுக்குச் சொன்னதாகும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, நீ இந்த அறிவுரைகளின்படி செயற்பட்டால், நிச்சயம் நீ அவற்றின் கனியை அடைவாய்” {என்றார் பீஷ்மர்}.(70)

மான் வேட்டை! – சாந்திபர்வம் பகுதி – 125-நம்பிக்கையைக் குறித்து எழும் ஐயத்தைப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; வேட்டையாடச் சென்ற மன்னன் சுமித்திரனின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, (ஒரு மனிதனின் தேவைகளில்) நடத்தையே முதன்மையானது என்று சொல்கிறீர். எனினும், எப்போது அந்த நம்பிக்கை {எதிர்பார்பபு}[1] எழுகிறது? அஃது என்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(1) இந்தப் பெரும் ஐயம் என் மனத்தை ஆட்கொள்கிறது. ஓ! பகைநகரங்களை அடக்குபவரே, அஃதை அகற்றுவதற்கு உம்மைத் தவிர வேறு எந்த மனிதனும் இல்லை.(2) ஓ! பாட்டா, ஓ! தலைவா, சுயோதனன் (அவனது பிடிவாதத்தின் விளைவால் உண்டான) போர் தொடங்குவதற்கு முன், முறையானதையே செய்வான் என்ற பெரும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} எனக்கு இருந்தது.(3) ஒவ்வொரு மனிதனிலும் பெரும் நம்பிக்கையிருக்கிறது. அந்த நம்பிக்கை {எதிர்பார்ப்பு} அழியும்போது, அதைத் தொடரும் துயரம் பெரியது; கிட்டத்தட்ட மரணத்திற்கு இணையானது என்பதில் ஐயமில்லை.(4) நான் மூடனாக இருந்ததால், திருதராஷ்டிரரின் தீய மகன் துரியோதனன் நான் வளர்த்து வந்த நம்பிக்கையை அழித்தான். ஓ! மன்னா {பீஷ்மரே}, என் மனத்தின் மடமையைக் காண்பீராக.(5) மரங்கள் அனைத்துடன் கூடிய ஒரு மலையைவிட நம்பிக்கை பெரியது என்று நான் நினைக்கிறேன். அல்லது, ஒருவேளை அஃது ஆகாயத்தைவிடவும் பரந்து விரிந்ததாக இருக்கலாம். அல்லது, ஒருவேளை, ஓ! மன்னா, உண்மையில் அஃது அளவிடப்பட முடியாததாகவும் இருக்கலாம்.(6) ஓ! குருக்களின் தலைவரே {பீஷ்மரே}, நம்பிக்கையைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதே, அதற்கு இணையாகவே அஃதை அடக்குவதும் கடினமானதாகவே இருக்கிறது. நம்பிக்கையின் இறுதித் தன்மையைக் கண்டு, இதைப் போலவே வெல்லப்பட முடியாதது வேறு என்ன இருக்கிறது என்று கேட்கிறேன்?” என்றான்.(7)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்தில் சுமித்திரனுக்கும், ரிஷபருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் உனக்கு உரைக்கிறேன். அதைக் கேட்பாயாக.(8) ஹைஹய குலத்தைச் சேர்ந்தவனும், சுமித்திரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் அரசமுனி வேட்டையாடச் சென்றான். அவன் நேரான கணையொன்றால் ஒரு மானைத் துளைத்து, அதைப் பின்தொடர்ந்து சென்றான்.(9) பெரும் பலம் கொண்ட அந்த மான், உடலில் தைத்த கணையுடனே ஓடிச் சென்றது. பெரும் பலம் கொண்ட மன்னனும் {சுமித்திரனும்} தன் பெரிய இரையைப் பெரும் வேகத்துடன் விரட்டிச் சென்றான்.(10) பெரும் வேகம் கொண்ட அந்த விலங்கு, பள்ளத்திலும், சமவெளியிலும் என மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தது. இளைஞனும், சுறுசுறுப்புடையவனும், பலவானும், வில் மற்றும் வாள் தரித்தவனும், கவசம் பூண்டவனுமான மன்னன் மேலும் மேலும் அதைப் பின்தொடர்ந்து சென்றான்.(11) எவரின் துணையுமின்றிக் காட்டில் ஊடாக அந்த விலங்கைத் துரத்திச் சென்ற மன்னன், பல ஆறுகளையும், ஓடைகளையும், ஏரிகளையும், சிறு காடுகளையும் கடந்து சென்றான்.(13)

பெரும் வேகங்கொண்ட அவ்விலங்கு, தன்விருப்பப்படியே அப்போதைக்கப்போது தன்னை மன்னனுக்கு வெளிப்படுத்திக்கொண்டு பெரும் வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.(14) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னனின் {சுமித்திரனின்} பலகணைகளால் துளைக்கப்பட்ட அந்தக் காட்டுவாசி {மான்}, விளையாடிக் கொண்டிருப்பதைப் போலத் தனக்கும், தன்னைப் பின்தொடர்ந்து வருபவனுக்குமான இடைவெளியைக் குறைத்துக் கொண்டே வந்தது.(15) மீண்டும் மீண்டும் வேகத்தை வெளிப்படுத்தியும், ஒன்றன்பின் ஒன்றாகக் காடுகளைக் கடந்து கொண்டும், அப்போதைக்கப்போது மன்னனுக்கு அருகிலேயே தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயும் சென்றது.(16)

இறுதியாக, அந்த எதிரிகளை நொறுக்குபவன் {மன்னன் சுமித்திரன்}, கூரியதும், பயங்கரமானதும், உயிர்நிலைகளையே துளைக்கவல்லதுமான மிக மேன்மையான ஒரு கணையைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(17) பெரும் அளவு உடல்வடிவத்தைக் கொண்ட அந்த விலங்கு, தன்னைப் பின்தொடர்ந்து வருபவனின் முயற்சியைக் கண்டு சிரிப்பதைப் போல, கணை அடையும் தொலைவை விட நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள ஓர் இடத்தை அடைந்து, திடீரெனத் தொலைவாகச் சென்றுவிட்டது.(18) சுடர்மிக்கக் காந்தி கொண்ட அந்தக் கணையானது தரையில் விழுந்தது. மானோ ஒரு பெரும் காட்டுக்குள் நுழைந்தது, இருப்பினும் மன்னன் {சுமித்திரன்} அதைத் துரத்துவதைத் தொடர்ந்து கொண்டே இருந்தான்” என்றார் {பீஷ்மர்}.(19)

நம்பிக்கை, அல்லது எதிர்பார்ப்பு! – சாந்திபர்வம் பகுதி – 126-மானைத் துரத்தி வந்து பெரும் காட்டில் உள்ள தவசிகளின் ஆசிரமத்தை அடைந்த மன்னன் சுமித்திரன் நம்பிக்கையைக் குறித்து எழும் ஐயத்தை அங்கிருந்த தவசிகளிடம் கேட்டது…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னன் {சுமித்திரன்}, அந்தப் பெரும் காட்டுக்குள் நுழைந்ததும் தவசிகளின் ஆசிரமம் ஒன்றை வந்தடைந்தான். கடும் அலைச்சலின் விளைவாகக் களைப்படைந்த அவன், ஓய்வெடுப்பதற்காகக் கீழே அமர்ந்தான்.(1) அவன் வில் தரித்திருப்பதையும், அலைச்சலில் களைத்திருப்பதையும், பசித்திருப்பதையும் கண்ட தவசிகள், அவனை அணுகி, அவனுக்கு உரிய மதிப்பை வழங்கினர்.(2) அந்த முனிவர்கள் செலுத்திய கௌரவத்தை ஏற்றுக் கொண்ட மன்னன், அவர்களுடைய தவ முன்னேற்றம் குறித்து விசாரித்தான்.(3) மன்னனின் விசாரிப்புகளுக்கு முறையான பதிலளித்தவர்களும், தவத்தையே தங்கள் செல்வமாகக் கொண்டவர்களுமான அந்த முனிவர்கள், அந்த மனிதர்களில் புலி {சுமித்திரன்} ஆசிரமத்திற்கு வந்த காரணத்தைக் கேட்டனர்.(4)

அவர்கள் {தவசிகள் சுமித்திரனிடம்}, “நீ அருளப்பட்டிருப்பாயாக. கைகளில் வாள், வில் மற்றும் கணைகளுடனும், நடந்தபடியும், எந்த இனிமையான பொருளைத் தேடி இந்த ஆசிரமத்திற்கு வந்தாய்? ஓ! கௌரவங்களை அளிப்பவனே, நீ எங்கிருந்து வருகிறாய் என்பதை நாங்கள் கேட்க விரும்புகிறோம். நீ பிறந்த குலத்தையும், உன் பெயரையும் எங்களுக்குச் சொல்வாயாக” என்று கேட்டனர் {அந்த தவசிகள்}.(6)

ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, ஓ! பாரதா, இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மன்னன், அந்தப் பிராமணர்கள் அனைவரிடமும் தன்னைக் குறித்து முறையாகச் சொல்லும் வகையில்,(7) “நான் ஹைஹய குலத்தில் பிறந்தவன். நான் சுமித்திரன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறேன், மேலும் நான் மித்திரனின் மகனாவேன். நான் மான்கூட்டத்தைத் துரத்தி, ஆயிரக்கணக்கான மான்களை என் கணைகளால் கொன்றிருக்கிறேன். ஒரு பெரும்படை, என் அமைச்சர்கள், என் வீட்டில் உள்ள பெண்கள் ஆகியோரின் துணையுடன் நான் வேட்டைக்காக இங்கே வந்தேன். ஒரு கணையால் நானொரு மானைத் துளைத்தேன். ஆனால் அந்த விலங்கு, தன் உடலில் தைக்கப்பட்ட கணையுடனும் பெரும் வேகத்துடன் ஓடிச் சென்றது.(8,9) குறிப்பிட்ட எந்த நோக்கமும் இல்லாமல் அதைத் துரத்தி வந்த நான், இந்தக் காட்டை அடைந்து, காந்தி இழந்தவனாகவும், அலைச்சலால் களைத்தவனும், நம்பிக்கை {எதிர்பார்ப்பை} இழந்தவனுமாக உங்கள் முன்னிலையில் இருக்கிறேன்.(10)

களைப்படைந்தவனாகவும், அரசக் குறியீடுகளை {ராஜலக்ஷணங்களை} இழந்தவனகாவும், நம்பிக்கை அனைத்தையும் இழந்தவனாகவும் இந்த ஆசிரமத்தை அடைந்திருக்கும் என் நிலையை விட வேறு பரிதாபகரமான நிலை என்ன இருக்க முடியும்?(11) தவசிகளே, அரசக் குறியீடுகளை இழந்ததற்காகவோ, என் தலைநகரில் இருந்து தொலைவாக வந்துவிட்டதற்காகவோ நான் ஒருபோதும் வருந்தவில்லை. எனினும், நம்பிக்கை இழந்திருப்பதன் விளைவாக நான் கடும் துயரை உணர்கிறேன்.(12) மலைகளின் இளவரசனான இமயமும், நீர்நிலைகளின் பரந்த கொள்ளிடமான கடலும்கூட, ஆகாயத்தின் பரந்த அளவை அடைய முடியாது.(13) அதே போலவே, தவசிகளே, நம்பிக்கையின் {எதிர்பார்ப்பின்} அளவை என்னால் தெளிந்தறிய முடியவில்லை. நீங்கள் அனைத்தையும் அறிந்த நிலையான தவம்மெனும் செல்வத்துடன் கூடியவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் அறியாதது ஏதும் இல்லை.(14) நீங்கள் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாகவும் இருக்கிறீர்கள். எனவே, என் ஐயத்தை விலக்குமாறு நான் உங்களை வேண்டுகிறேன். மனிதனால் வளர்த்துக் கொள்ளப்படும் நம்பிக்கை, பரந்த ஆகாயம் ஆகிய இரண்டில் எது உங்களுக்கு மிகப் பரந்ததாகத் தோன்றுகிறது?(15)

நம்பிக்கையைப் போல வெல்லப்பட முடியாதது வேறு எது இருக்கிறது என்பதை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(16) இது நீங்கள் உரையாடத்தகாதது இல்லை என்றால், அது குறித்த அனைத்தையும் எனக்குத் தாமதமில்லாமல் சொல்வீராக. மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்களே, உரையாடத் தகாத புதிர்கள் எதையும் நான் உங்களிடம் கேட்க விரும்பவில்லை.(17) மேலும் இந்த உரையாடல் உங்கள் தவங்களுக்குத் தீங்கானதாக இருந்தால், நீங்கள் பேச வேண்டும் என நான் விரும்பமாட்டேன். என் கேள்வி உரையாடத் தகுந்தது என்றால்,(18) அந்தக் காரணத்தை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். தவங்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் நீங்கள் இது குறித்த அனைத்தையும் எனக்குப் போதிப்பீராக” என்றான் {மன்னன் சுமித்திரன்}.(19)

ரிஷபர், தனு, வீரத்யும்னன்! – சாந்திபர்வம் பகுதி – 127-ரிஷபரென்ற முனிவர் ஒருவர் தான் தீர்த்தயாத்திரை சென்று வந்தது குறித்தும், பதரியில் தாம் கண்ட முனிவர் தனு மற்றும் மன்னன் வீரத்யும்னன் குறித்தும் மன்னன் சுமித்திரனிடம் விவரித்தது..

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது அந்த முனிவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தவரும், முனிவர்களில் சிறந்த மறுபிறப்பாளருமான ரிஷபர்[1], சிறிதாகப் புன்னகைத்து இந்த வார்த்தைகளைச் சொன்னார்:(1) “ஓ! மன்னர்களில் புலியே {சுமித்திரனே}, ஓ! தலைவா, புனிதத்தலங்களுக்குப் பயணம் {தீர்த்தயாத்திரை} மேற்கொண்டிருந்தபோது, நரன் மற்றும் நாராயணரின் அழகிய ஆசிரமத்திற்குச் சென்றேன்.(2) பதரி {பத்ரிநாத்} என்றழைக்கப்படும் ஓர் இனிமையான இடம் இருக்கிறது. அங்கே (புனிதமான கங்கை பிறந்த) ஆகாயத்தில் ஒரு தடாகமும் இருக்கிறது[2]. ஓ! மன்னா, அங்கே தவசி அஸ்வசிரஸ் {ஹயக்ரீவர்} அழிவில்லாத வேதங்களை (எப்போதும்) படித்துக் கொண்டிருக்கிறார்.(3) அந்தத் தடாகத்தில் தூய்மைச் சடங்குகளை முடித்துக் கொண்டு, பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்காணிக்கைகளை உரிய சடங்குகளுடன் காணிக்கையளித்த பிறகு நான் ஆசிரமத்திற்குள் நுழைந்தேன்.(4) முனிவர்களான நரனும், நாராயணனும் அந்த ஆசிரமத்திற்குள் எப்போதும் தங்கள் நேரத்தை உண்மையான இன்பத்துடன் கடத்துகிறார்கள்[3]. அந்த இடத்தில் அருகிலேயே நான் வசிப்பதற்காக மற்றொரு ஆசிரமத்திற்குச் சென்றேன்.(5)

அங்கே அமர்ந்திருந்த போது, மிக நெடியவரும், தோலாடையும் மரவுரியும் அணிந்திருப்பவரும், மெலிந்திருப்பவருமான ஒரு முனிவர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். தவமெனும் செல்வத்தைக் கொண்ட அவர் தனு என்ற பெயரைக் கொண்டவராவார்.(6) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, வேறு மனிதர்களை ஒப்பிடுகையில் அவரது {தனுவின்} உயரம் எட்டு மடங்கு பெரியதாகத் தெரிந்தது. ஓ! அரசமுனியே {சுமித்திரனே}, அவரது மெலிந்த உடலைப் பொறுத்தவரையில், அதபோன்றதொரு உடலை நான் இதுவரை கண்டதில்லை.(7) ஓ! மன்னா, அவரது உடல் ஒருவனின் சுண்டுவிரல் அளவுக்கு மெலிதாக இருந்தது. அவரது கழுத்து, கரங்கள், கால்கள் மற்றும் முடி ஆகியன இயல்புக்குமீறிய தன்மைகளுடன் இருந்தன.(8) அவரது தலையானது அவரது உடலின் அளவுக்குத் தகுந்ததாகவும், அவரது காதுகளும், கண்களும் அதே போலவும் இருந்தன. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அவரது பேச்சும், அசைவுகளும் பலவீனமாகவே இருந்தன.(9) மிக மெலிந்தவரான அந்தப் பிராமணரைக் கண்ட நான், உற்சாகத்தை இழந்தவனாகவும், அச்சமடைந்தவனாகவும் ஆனேன். அவரது பாதத்தை வணங்கிய நான், அவர் முன்பு குவிந்த கரங்களுடன் நின்றேன்.(10)

ஓ! மனிதர்களுள் காளையே {சுமித்திரா}, அவரிடம் என் பெயரையும், என் குடும்பத்தையும், என் தந்தையின் பெயரையும் அவருக்குச் சொன்னபிறகு, அவரால் குறிப்பிடப்பட்ட ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.(11) ஓ! ஏகாதிபதி, அப்போது, அறவோரில் முதன்மையானவரான தனு, அங்கே வசித்து வந்த முனிவர்களுக்கு மத்தியில் அறம் மற்றும் பொருள் சம்பந்தப்பட்டவற்றைக் குறித்து உரையாடத் தொடங்கினார்.(12) அந்த உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், படைகள் மற்றும் தன் வீட்டுப் பெண்மணிகள் ஆகியோரின் துணையுடன் கூடியவனுமான ஒரு மன்னன் வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் அந்த இடத்திற்கு வந்தான்.(13) அந்த மன்னனின் பெயர் வீரத்யும்னன் ஆகும். அழகிய பண்புகளைக் கொண்ட அவன், பெரும் குழைக் கொண்டவனாக இருந்தான். அவனுடைய மகனின் பெயர் பூரித்யும்னன் ஆகும். அந்தப் பிள்ளை தொலைந்து போகவும், உற்சாகமிழந்த அவனுடைய தந்தை, தொலைந்து போனவனைத் தேடிக் காடுகளில் அலைந்தபடியே,(14) “நான் இங்கே என் மகனைக் கண்டுவிடுவேன்! நான் இங்கே என் மகனைக் கண்டுவிடுவேன்” என்று நம்பிக்கொண்டே அந்தக்காலத்தில் அந்தக் காட்டில் திரிந்து கொண்டிருந்தான்.(15)

அந்த மெலிந்த முனிவரிடம் பேசிய அவன், “உயர்ந்த அறவோனான என் மகனைக் கண்டுபிடிப்பது நிச்சயம் மிகக் கடினமானதாகவே இருக்கிறது. ஐயோ, அவன் என் ஒரே மகனாவான். தொலைந்து போன அவனை எங்கும் காண முடியவில்லை.(16) அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லையாயினும், கண்டுபிடித்துவிடுவோம் என்ற என்ற நம்பிக்கை {எதிர்பார்ப்பு} மிகப் பெரியதாக இருக்கிறது. உண்மையில் மரணத் தருவாயில் இருக்கும் நான், (தொடர்ந்து தவறினாலும்) அந்தத் நம்பிக்கையால் {எதிர்பார்ப்பால்} நிறைந்திருக்கிறேன்” என்றான்.(17)

மன்னின் இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், முனிவர்களில் முதன்மையானவரும், புனிதமானவருமான தனு, தலையைத் தொங்கவிட்டபடியே தியானத்தில் தம்மைப் புதைத்துக் கொண்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.(18) தியானத்தில் புதைந்திருக்கும் அவரைக் கண்ட மன்னன், உற்சாகத்தைப் பெரிதும் இழந்தான். பெருந்துயரத்தில் மெதுவாகவும், மென்மையாகவும் பேசத் தொடங்கிய அவன்,(19) “ஓ! தெய்வீக முனிவரே, எது வெல்லப்பட முடியாதது? மேலும் எது நம்பிக்கையை விடப் பெரியது? ஓ! புனிதமானவரே, நான் கேட்பது முறையற்றதாக இல்லையென்றால் {முறையானதென்றால்}, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(20)

அதற்கு அந்த முனிவர் {தனு, மன்னன் வீரத்யும்னனிடம்}, “புனிதமான பெரும் முனிவர் ஒருவர் உன் மகனால் அவமதிக்கப்பட்டார். அவன் தன் தீயூழின் மூலமும், தன் மூட அறிவினால் உந்தப்பட்டும் அதைச் செய்துவிட்டான்.(21) அந்த முனிவர் உன் மகனிடம், ஒரு தங்கத்தாலான கொள்கலன் ஒன்றையும், மரவுரியையும் கேட்டார். உன் மகனோ அவமதிக்கும் வகையில், அந்தத் தவசியை நிறைவு செய்ய மறுத்தான்.(22) உன் மகனால் இவ்வாறு நடத்தப்பட்ட அந்தப் பெரும் தவசி ஏமாற்றமடைந்தார்” என்றார்.

இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மன்னன், உலகம் அனைத்தாலும் வழிபடப்படும் அந்தத் தவசியை வழிபட்டான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அற ஆன்மா கொண்ட அந்த வீரத்யும்னன், நீ இப்போது இருப்பதைப் போலவே களைப்புடன் அங்கே அமர்ந்திருந்தான்.(23) பதிலுக்கு அந்தப் பெரும் முனிவரும், கானகவாசிகள் நோற்கும் சடங்குகளின்படி, மன்னனின் காலைக் கழுவிக் கொள்ள நீரும், வழக்கமான பொருட்களைக் கொண்ட அர்க்கியத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.(24) அப்போது, ஓ! மனிதர்களில் புலியே, துருவ நட்சத்திரத்தைச் சூழ்ந்திருக்கும் நட்சத்திரக் கூட்டங்களைப் போல அந்த மனிதர்களில் காளையைச் சுற்றிலும் முனிவர்கள் அனைவரும் அமர்ந்தனர்.(25) பிறகு அவர்கள், அந்த வெல்லப்பட முடியாத மன்னன் அந்த ஆசிரமத்திற்கு வந்ததற்கான காரணத்தை அவனிடம் கேட்டனர்” என்றார் {ரிஷபர்}.(26)

எதிர்பார்ப்பைத் துறப்பாயாக! – சாந்திபர்வம் பகுதி – 128-மன்னன் வீரத்யும்னனுக்கும் தனு என்ற முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை மன்னன் சுமித்திரனுக்குச் சொன்ன முனிவர் ரிஷபர்; ரிஷபரின் வார்த்தைகளை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக்காட்டிய பீஷ்மர்…

{ரிஷபர் மான் வேட்டையாட வந்த மன்னன் சுமித்திரனிடம் தொடர்ந்தார்}, “மன்னன் {வீரத்யும்னன் தவசி தனுவிடம்}, “நான் வீரத்யும்னன் என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு மன்னனாவேன். என் புகழ் திசைகள் அனைத்திலும் பரவியிருக்கிறது. என் மகன் பூரித்யும்னன் காணாமல் போனான். அவனைத் தேடியே நான் இந்தக் காட்டுக்கு வந்திருக்கிறேன்.(1) பிராமணர்களில் முதன்மையானோரே, அந்தப் பிள்ளை என் ஒரே மகனாவான். பாவமற்றவர்களே, வயதில் அவன் மிகவும் இளையவனாவான். எனினும், அவனை இங்கும் காண முடியவில்லை. அவனைக் காணவே நான் எங்கும் திரிந்து வருகிறேன்” என்றான்”.(2)

ரிஷபர் {சுமித்திரனிடம்} தொடர்ந்தார், “மன்னன் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், தவசி தனு தமது தலையைத் தொங்கவிட்டார். அவர் பதிலாக எந்த ஒரு வார்த்தையையும் சொல்லாமல் முற்றிலும் அமைதியாக இருந்தார்.(3) முற்காலத்தில் அந்தப் பிராமணர், இந்த மன்னனால் கௌரவிக்கப்படாதவராவார். ஓ! ஏகாதிபதி, ஏமாற்றமடைந்திருந்த அவர், அந்தக் காரணத்திற்காகவே நெடுங்காலம் கடுந்தவம் இருந்தார்;(4) மன்னர்கள் எவரிடம் இருந்தோ, வேறு எந்த வகையினரிடம் இருந்த கொடையாக எதையும் ஒருபோது ஏற்பதில்லை என்று தமது மனத்திற்குள் தீர்மானித்துக் கொண்டார்.(5)

அவர் தமக்குள்ளேயே, “மூட அறிவு கொண்ட ஒவ்வொரு மனிதனையும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} கலங்கடிக்கிறது. நான் என் மனத்திலிருக்கும் நம்பிக்கையை {எதிர்பார்ப்பை} அகற்றுவேன்” என்று தீர்மானித்தார். இதுவே அவரது தீர்மானமாக இருந்தது. வீரத்யும்மன் அந்தத் தவசிகளில் முதன்மையானவரிடம் மீண்டும் இந்த வார்த்தைகளில் கேள்வியைக் கேட்டான்.(6)

மன்னன் {வீரத்யும்னன் தவசி தனுவிடம்}, “நம்பிக்கையுடைய மெலிவின் அளவென்ன? இந்த உலகில் அடைவதற்கு மிகக் கடினமானது எது? ஓ! புனிதமானவரே, அறநெறி மற்றும் பொருளை நன்கறிந்திருப்பதால், இவை யாவற்றையும் நீர் எனக்குச் சொல்வீராக?” என்று கேட்டான்”.(7)

ரிஷபர் {மன்னன் சுமித்திரனிடம்} தொடர்ந்தார், “புனிதமானவரும், மெலிந்த உடலைக் கொண்டவருமான அந்த முனிவர் {தனு}, (மன்னனிடம் தான் அடைந்த அவமானம் குறித்த) கடந்த கால நினைவுகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து, மன்னனுக்கும் அவற்றைத் திரும்ப நினைவுப்படுத்திப் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் சொன்னார்:(8)

அந்தத் தவசி {தனு மன்னன் வீரத்யும்னனிடம்}, “ஓ! மன்னா, மெலிந்ததில் நம்பிக்கைக்கு {எதிர்பார்ப்புக்கு} இணையானது வேறேதும் கிடையாது. நான் பல மன்னர்களிடம் வேண்டிக் கேட்டிருக்கிறேன். நம்பிக்கையானது {எதிர்பார்ப்பானது} மனத்தின் முன் நிறுவும் {கொண்டுவரும்} காட்சியைப் போல அடைதற்கரிதான வேறெதுவும் இல்லை எனவும் நான் கண்டிருக்கிறேன்” என்றார்[1].(9மன்னன் {வீரத்யும்னன்}, “ஓ! பிராமணரே, உமது வார்த்தைகளைக் கொண்டு மெலிவு என்றால் என்ன? அவ்வாறல்லாதவை எவை? என்பதைப் புரிந்து கொள்கிறேன்[2]. நம்பிக்கையால் {எதிர்பார்ப்பின் மூலம்} மனத்தின் முன் நிறுவப்படும் காட்சிகள் எவ்வாறு அடைதற்கரியனவாக இருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்கிறேன். உமது வார்த்தைகள் ஸ்ருதியில் சொல்லப்பட்டவை என்று நான் கருதுகிறேன்.(10) ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, எனினும் என் மனத்தில் ஓர் ஐயம் எழுகிறது. ஓ! தவசியே, என்னால் கேட்கப்படும் உமக்கு, அதை விரிவாக விளக்குவதே தகும்.(11) உமது உடலைவிட மெலிதானது எது? ஓ! புனிதமானவரே, ஓ! தவசிகளில் சிறந்தவரே, இதைக் குறித்துப் பேசுவது முறையென்றால் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(12)அதற்கு அந்த மெலிந்த துறவி {தனு மன்னன் வீரத்யும்னனிடம்}, “வேண்டுபவர்களில் {யாசகர்களில்} மனம் நிறைந்தவனைக் காண்பது மிக அரிதானதாகும். ஒருவேளை, இவ்வுலகில் அப்படிப்பட்ட எவரும் இல்லை என்றே கொள்ளலாம். ஓ! ஐயா, வேண்டும் ஒருவனை ஒருபோதும் அவமதியாதவன் இன்னும் அரிதானவனாவான்.(13) வேண்டுபவர்களுக்கு உறுதி அளித்துவிட்டு, தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, அவர்களுக்கு {வேண்டுபவர்களுக்குத்} தகுந்த நன்மையைச் செய்யாத மனிதர்களிடம் வைக்கப்படும் நம்பிக்கையானது என் உடலைவிட மெலிதானதாகும்[3].(14) நன்றியற்ற மனிதர்களிடம் வைக்கப்படும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு}, அல்லது கொடூரன், சோம்பேறி, பிறருக்குத் தீங்கிழைப்பவன் ஆகியோர் மீது வைக்கப்படும் நம்பிக்கையானது என் உடலைவிட மெலிதானதாகும்.(15) ஒரே மகனுடைய தந்தை, தொலைந்து போன, அல்லது தவறவிட்ட தன் மகனைக் காணத் தனக்குள் வளர்த்துக் கொள்ளும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} என் உடலைவிட மெலிதானதாகும்.(16) ஓ! மன்னா, ஒரு வயதுமுதிர்ந்த பெண் {கிழவி} மகன்களைப் பெறக் கொள்ளும் நம்பிக்கையும், செல்வந்தர்களால் வளர்க்கப்படும் நம்பிக்கையும் என் உடலைவிட மெலிதானதாகும்.(17) வளர்ந்த கன்னியரின் இதயங்களில், திருமணம் குறித்து எவரும் பேசும்போது மட்டும் எழும் நம்பிக்கையானது {எதிர்பார்ப்பானது}, என் உடலைவிட மெலிந்ததாகும்[4]” என்றார் {முனிவர் தனு}.(18)ஓ! ஏகாதிபதி {சுமித்திரா}, இந்த வார்த்தைகளைக் கேட்டு, மன்னன் வீரத்யும்னனும், அவனது வீட்டைச் சேர்ந்த பெண்களும் அந்தப் பிராமணர்களில் காளையின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, அவரது பாதத்தைத் தீண்டி தலைவணங்கினர்.(19)

மன்னன் {வீரத்யும்னன்}, “ஓ! புனிதமானவரே, நான் உமது அருளை வேண்டுகிறேன். நான் என் மகனைக் காண விரும்புகிறேன். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, நீர் சொன்னது உண்மையே. நீர் சொன்ன உண்மைகளில் எந்த ஐயமும் இல்லை” என்றான்”.(20)

ரிஷபர் {சுமித்திரனிடம்} தொடர்ந்தார், “அறவோரில் முதன்மையானவரும், புனிதமானவருமான தனு, புன்னகைத்தபடியே, தமது கல்வி மற்றும் தவங்களின் மூலமாக மன்னனின் மகனை {பூரித்யும்னனை} அந்த இடத்திற்குக் கொண்டு வந்தார்.(21) அந்த இளவரசனை அங்கே கொண்டுவரச் செய்த அந்தத் தவசி மன்னனை (அவனது தந்தையைக்) கண்டித்தார்[5]. அப்போது அறவோரில் முதன்மையான அவர் {தவசி தனு}, தம்மையே அற தேவனாக {தர்மதேவனாக} வெளிப்படுத்திக் கொண்டார்.(22) உண்மையில் ஆச்சரியமிக்கத் தமது தெய்வீக வடிவை வெளிப்படுத்திய அவர், கோபம் மற்றும் பழிதீர்க்கும் விருப்பம் ஆகியவற்றில் இருந்து விடுபட்ட இதயத்துடன் அருகில் இருந்த காட்டுக்குள் நுழைந்தார்.(23) ஓ! மன்னா {சுமித்திரா}, இவை யாவற்றையும் நான் கண்டேன். நான் {இப்போது} சொன்ன வார்த்தைகளையும் கேட்டேன். (அந்தத் தவசி குறிப்பிட்டவற்றில் எதையும் விட) மிக மெலிந்ததான உன் நம்பிக்கையை விரட்டுவாயாக” என்றார் {ரிஷபர்}”.(24)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, உயர் ஆன்ம ரிஷபரால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் சுமித்திரன், தன் இதயத்தில் இருந்ததும், (மெலிந்த தவசியால் குறிப்பிடப்பட்ட எந்த வகை நம்பிக்கையையும் விட) மெலிந்ததுமான நம்பிக்கையை {எதிர்பார்ப்பை} விரைவாகக் கைவிட்டான்.(25) ஓ! குந்தியின் மகனே, நீயும் இந்த என் வார்த்தைகளைக் கேட்டு இமய மலையைப் போல அமைதியடைந்து, அசைவற்றவனாக {உறுதிமிக்கவனாக} இருப்பாயாக.(26) துயரில் மூழ்கியவனான நீ, என்னைக் கேள்வி கேட்டு, நான் சொன்ன பதிலையும் கேட்டாய். ஓ! ஏகாதிபதி, உன் வருத்தங்களை அகற்றிக் கொள்வதே உனக்குத் தகும்” {என்றார் பீஷ்மர்}.(27)

தாய் தந்தை! – சாந்திபர்வம் பகுதி – 129– பெற்றோருக்குப் பணிவிடை செய்வது ஒவ்வொருவரின் கடனை நேர் செய்வதற்குரிய இயல்பு என்று யமன் கௌதம முனிவருக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அமுதத்தைக் குடிப்பவன் போலவே, நீர் சொல்வதைக் கேட்கும் நானும் தாகம் தணியாதவனாக இருக்கிறேன். தன்னறிவைக் கொண்ட ஒருவன், தியானத்தால் ஒருபோதும் தணிவடையாததைப் போலவே, நீர் சொல்வதைக் கேட்பதால் நான் ஒருபோதும் தணிவடையவில்லை.(1) எனவே, ஓ! பாட்டா, அறநெறி குறித்து நீர் மீண்டும் உரைப்பீராக. அறநெறி குறித்த உமது உரையாடல்கள் எனும் அமுதத்தைப் பருகுவதால் என் தாகம் ஒருபோதும் தணிவடையவில்லை” என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்காலத்தில் கௌதமருக்கும், சிறப்புமிக்க யமனுக்கு இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகின்றது.(3) கௌதமர் பாரிபாத்ர {பாரியாத்திர} மலையில் ஒரு பெரிய ஆசிரமத்தைக் கொண்டிருந்தார். அந்த வசிப்பிடத்தில் அவர் எத்தனை வருடங்கள் இருந்தார் என்பதை என்னிடம் கேட்பாயாக. அறுபதாயிரம் {60,000} வருடங்களுக்கு அந்தத் தவசி அந்த ஆசிரமத்திலேயே பல கடுந்தவங்களைச் செய்தார்.(4) ஒரு நாள், ஓ! மனிதர்களில் புலியே, லோகபாலகனான யமன், தூய ஆன்மா படைத்த அந்தத் தவசி கடுந்தவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கே சென்றான். கடுத் தவங்களைச் செயதவரும், கடுந்தவங்களிலேயே எப்போதும் ஈடுபட்டு வருபவருமான அந்தத் தூய்மையான ஆன்மாவை {கௌதமரை} யமன் கண்டான்.(5)

வந்தவன் யமன் என்பதைப் புரிந்து கொண்ட அந்த மறுபிறப்பாள தவசி, கூப்பிய கரங்களுடனும், (அவனது ஆணைகளுக்குக் காத்திருக்கும் வகையில்) அவனை விரைவாக வணங்கி அமர்ந்தார்.(6) தர்மராஜனும் அந்தப் பிராமணக் காளையைக் கண்டு (பதிலுக்கு) முறையாக வணங்கி, தான் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டான்.(7)

கௌதமர் {யமனிடம்}, “ஒருவன் எச்செயல்களைச் செய்வதால் தன் தாய்க்கும், தந்தைக்கும் பட்ட கடனில் இருந்து விடுபடலாம்? மேலும் அடைவதற்கரிதான தூய அருள் கொண்ட உலகங்களை ஒருவன் எவ்வாறு வெல்லலாம்?” என்று கேட்டார்.(8)

யமன் {கௌதமரிடம்}, “ஒருவன், உண்மை என்ற கடமைக்குத் தன்னை அர்ப்பணித்து, தூய்மையையும், தவங்களையும் பயின்று, இடையறாமல் தனது தாய் மற்றும் தந்தையை வழிபட வேண்டும்.(9) ஒருவன், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளை அளிக்கும் குதிரை வேள்விகளையும் செய்ய வேண்டும். இத்தகு செயல்களால் ஒருவன் அற்புதமான (புகழ்) உலகங்களை வெல்லலாம்” என்றான்”.(10)

துன்பகால நடைமுறை! – சாந்திபர்வம் பகுதி – 130-பேராபத்திலும், துயரிலும், நண்பர்களை இழந்த நிலையிலும் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, நண்பர்களை இழந்தவனும், பல எதிரிகளைக் கொண்டவனும், கருவூலம் தீர்ந்தவனும், துருப்புகளற்றவனுமான ஒரு மன்னனுடைய நடந்தை எவ்வாறு இருக்க வேண்டும்?(1) உண்மையில் அவன், தீய அமைச்சர்களால் சூழப்பட்டிருக்கும்போதும், ஆலோசனைகள் {இரகசியங்கள்} அனைத்தும் வெளிப்படும்போதும், தன் முன்னே உள்ள வழி தெளிவற்று இருக்கும்போதும்,(2) வேறு நாடுகளைத் தாக்கச் செல்லும்போதும், ஒரு பகை நாட்டைக் கலங்கடிப்பதில் ஈடுபட்டிருக்கும்போதும், பலவீனனாக இருந்தும் ஒரு பலமிக்க ஆட்சியாளனுடன் போர் புரியும் போதும் அவனது {மன்னனின்} நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? நாட்டின் காரியங்களில் ஒழுங்கில்லாமல் இருப்பவனும், இடம் மற்றும் நேரத்தின் தேவைகளை அலட்சியம் செய்பவனும், ஒடுக்குமுறையின் விளைவாக அமைதியை ஏற்படுத்த முடியாதவனும், எதிரிகளுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்க முடியாதவனுமான ஒரு மன்னனின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? அவன் தீய வழிமுறைகளின் மூலம் செல்வத்தை அடைய முனைய வேண்டுமா? அல்லது, செல்வத்தை நாடாமல் தன் உயிரை விட வேண்டுமா?” என்று கேட்டான்.(3,4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, கடமைகளை அறிந்தவனான நீ, (கடமைகள் தொடர்பான) ஒரு புதிரைக் குறித்து என்னிடம் கேட்கிறாய்[1].(5) ஓ! யுதிஷ்டிரா, கேளாமல் இந்தக் கடமை குறித்து நான் சொல்லத் துணியேன். அறநெறி மிக நுட்பமானதாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே, சாத்திர உரைகளின் துணையுடன் அஃதை ஒருவன் புரிந்து கொள்ள வேண்டும். கேள்விப்பட்டதை நினைவுகூர்வதன் மூலமும், நற்செயல்களைச் செய்வதன் மூலமும், எந்த இடத்திலும் உள்ள எவனும் அறவோனாகலாம் {நல்லோனாகலாம்}.(6) மன்னன், நுண்ணறிவுடன் செயல்படுவதன் மூலம் செல்வத்தை அடைவதில் வெல்லவோ, வெல்லாமலோ போகலாம்[2]. இக்காரியத்தில் உன் கேள்விக்கான பதில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று உன் நுண்ணறிவின் உதவியுடன் நினைத்தப்பார்.(7) ஓ! பாரதா, (துயர்மிக்க {ஆபத்து} காலங்களில்) மன்னர்கள் பெரும் தகுதியையுடைய {புண்ணியத்தையுடைய} எந்த வழிமுறைகளின் மூலம் தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்பாயாக. எனினும், உண்மை அறநெறிகளின் நிமித்தமாக, அந்த வழிமுறைகளை அறம்சார்ந்தவை {நல்லவை} என்று நான் சொல்லமாட்டேன்.(8) ஒடுக்குமுறையின் மூலம் கருவூலம் நிரப்பப்பட்டால், அத்தகைய நடத்தையானது மன்னனை அழிவின் விளிம்புக்குக் கொண்டு விடும். இக்காரியம் குறித்துச் சிந்தித்த நுண்ணறிவுமிக்க மனிதர்களின் தீர்மானம் இதுவே ஆகும்.(9) ஒருவன் எந்த வகைச் சாத்திரங்கள், அல்லது அறிவியலை எப்போதும் படிக்கிறானோ, அவை தங்களால் இயன்ற வகையிலான அறிவையே அவனுக்குக் கொடுக்கும். அத்தகையே அறிவே உண்மையில் அவனுக்கு ஏற்புடையதாகிறது.(10)வழிமுறைகளைப் பொறுத்தவரையில், அறியாமையானது புதிய கண்டுபிடிப்புகளில் வெறுமையான நிலைக்கே ஒருவனை வழிவகுக்கும். மேலும், அறிவின் உதவியுடன் வழிமுறைகளைத் தீட்டும் நிலையானது, பெரும்புகழின் ஊற்றுக்கண்ணாக இருக்கும். எந்த ஐயுணர்வையும், எந்த வன்மத்தையும் ஊக்கப்படுத்திக் கொள்ளாமல் இந்த அறிவுரைளைக் கேட்பாயாக[3].(11) கருவூலம் குறைவடைவதன் மூலம், மன்னனின் படைகள் குறைவடைகின்றன. எனவே, நீரில்லா காட்டில் நீரை உண்டாக்கும் ஒருவனைப் போல, மன்னன் (எவ்வழிமுறைகளிலாவது) தன் கருவூலத்தை நிரப்ப வேண்டும்.(12) பழங்காலத்தவரால் பின்பற்றப்பட்ட இந்தப் போலி அறநெறிக்கு ஏற்புடைய வகையில் மன்னன் செயல்பட வேண்டும், நேரம் வரும்போது தன் மக்களிடம் கருணையைக் காட்ட வேண்டும்[4]. இதுவும் ஒரு நித்திய கடமையாகும்.(13) இயன்றவர்களும், தகுந்தவர்களுமான மனிதர்களுக்கு, கடமைகள் ஒரே வகையைச் சார்ந்தவையே. எனினும், துன்ப காலங்களில் ஒருவனுடைய கடமை வேறு வகையைச் சார்ந்ததாகும். செல்வமில்லாமல் ஒரு மன்னன் (தவங்கள் அல்லது அதுபோன்ற செயல்களால்) அறத்தகுதியை ஈட்ட முடியும். எனினும் வாழ்வென்பது, அறத்தகுதியை விட மிக முக்கியமானதாகும். (செல்வமில்லாமல் வாழ்வைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், செல்வத்தை அடையும் வழியின் குறுக்கே நிற்கும் எந்தத்தகுதியும் நாடப்படக்கூடாது).(14)பலவீனமான மன்னன், எவ்வளவுதான் முயன்றாலும், தன் அறத்தகுதியை மட்டுமே துணையாகக் கொண்டு அதிகாரத்தை அடைய முடியாது. அவன் அறத்தகுதியை மட்டுமே அடைவதால் அவனுக்குரிய நியாயமான வாழ்வாதாரத்தை அவனால் ஒருபோதும் அடையமுடியாது.(15) எனவே, துன்ப கால நடைமுறைகள் சில வேளைகளில் அறநெறிக்கு இசைவற்றதாகவே கருதப்படுகின்றன. எனினும், கல்விமான்கள் அந்த நடைமுறைகள் பாவத்திற்கே வழிவகுக்கின்றன என்று கருதுகிறார்கள்.(16) துன்ப காலம் முடிந்ததும் ஒரு க்ஷத்திரியன் என்ன செய்ய வேண்டும்? (அத்தகைய நேரத்தில்) அவன் தன் தகுதிக்கு அழிவு ஏற்படாதவாறு தன் நடத்தையை அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவன் தன் எதிரிகளுக்குத் தான் அடிபணியாமல் இருக்கும் வழியில் செயல்பட வேண்டும்[5]. இவையும் அவனது கடமைகளாகவே அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அவன் சோர்வில் மூழ்கக்கூடாது.(17) (துன்ப காலங்களில்) அவன், பிறருடைய தகுதியையோ, தனது தகுதியையோ (அழிவடையும் ஆபத்திலிருந்து) காக்க முயலக்கூடாது. மறுபுறம், அவன் தன்னையே காத்துக் கொள்ள வேண்டும். இதுவே தீர்மானமான முடிவாகும்[6]. கடமைகளை அறிந்தவர்களான பிராமணர்கள், தங்களுக்குரிய கடமைகளில் செயல்திறனுடன் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட இந்த ஸ்ருதி இருக்கிறது. அதே போல, க்ஷத்திரியனைப் பொறுத்தவரையில், கரங்களின் வலிமையே பெரும் உடைமை என்பதால், அவன் உழைப்பில் {முயற்சியில்} செயல்திறன் கொண்டவனாக இருக்க வேண்டும்.(18,19) ஒரு க்ஷத்திரியனுக்கு வாழ்வாதார வழிமுறைகள் இல்லையென்றால், தவசிகளுக்கும் உரியவற்றையும், பிராமணர்களுக்குச் சொந்தமானவற்றையும் தவிர வேறு எதைத்தான் அவன் எடுக்கக்கூடாது? {அதாவது வேறு எதையும் அவன் எடுத்துக் கொள்ளலாம்}.(20)ஒரு பிராமணன், (சாதாரண நேரங்களில்) எவனுக்கு ஒருபோதும் வேள்வி செய்யக்கூடாதோ அவனுக்கே துன்ப காலங்களில் வேள்வி செய்து கொடுக்கலாம், தடைசெய்யப்பட்ட உணவையும் உண்ணலாம் என்பது போல, (துயரில் இருக்கும்) ஒரு க்ஷத்திரியன், தவசிகள் மற்றும் பிராமணர்களைத் தவிர அனைவரிடமும் செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பதில் ஐயமில்லை.(21) (எதிரியால்) பீடிக்கப்பட்டு, (தப்பும் வழிமுறைகளை நாடும்) ஒருவனுக்கு எதுதான் முறையற்ற போக்காக இருக்கும்? (நிலவறைக்குள்) அடைபட்டு கிடந்து, (தப்ப முயலும்) ஒரு மனிதனுக்கு எதுதான் முறையற்ற பாதையாக இருக்க முடியும்? ஒரு மனிதன் துன்பத்துக்குள்ளானால், முறையற்ற போக்கின் மூலமும் தப்பலாம்.(22) கருவூலம் மற்றும் படை பலவீனத்தின் விளைவால் ஒரு க்ஷத்திரியன் மிகுந்த அவமானத்தை அடைந்தால், பிச்சைக்கார வாழ்வோ, வைசியத் தொழிலோ, சூத்திரத் தொழிலோ அவனுக்கு விதிக்கப்படவில்லை.(23) போர் மற்றும் வெற்றியின் மூலம் செல்வத்தை அடைவதே தொழிலாக ஒரு க்ஷத்திரியனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அவன் தன் வகையைச் சேர்ந்த ஒருவனிடம் பிச்சை எடுக்கக்கூடாது. சாதாரண நேரங்களில் முதன்மையாகத் தனக்கு விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றும் மனிதன், துன்ப காலங்களில், மாற்று நடைமுறைகளைப் பின்பற்றித் தன்னை ஆதரித்துக் கொள்ள வேண்டும்.(24) துன்ப காலங்களில் சாதாரண நடைமுறைகளைப் பின்பற்ற முடியாது. ஒரு க்ஷத்திரியன் நீதியற்ற, முறையற்ற வழிமுறைகளின் மூலமும் வாழலாம். பிராமணர்களே கூடத் தங்கள் வாழ்வாதாரங்கள் அழிவடையும் போது, அதையே செய்வதைக் காண முடிகிறது.(25)

(அத்தகைய நேரங்களில்) பிராமணர்களே இவ்வாறு நடந்து கொள்ளும்போது, க்ஷத்திரியர்கள் அவ்வாறு செய்வதில் என்ன ஐயமிருக்க முடியும்? உண்மையில் இது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். மனச்சோர்வில் மூழ்காமலும், அழிவடையாமலும் ஒரு க்ஷத்திரியன் செல்வந்தர்களிடம் இருந்து (பலவந்தமாக) தன்னால் முடிந்ததை எடுத்துக் கொள்ளலாம்.(26) க்ஷத்திரியனே மக்களைப் பாதுகாப்பவனும், அழிப்பவனும் ஆவான் என்பதை அறிவாயாக. எனவே, துயரில் இருக்கும் ஒரு க்ஷத்திரியன், (முற்றிலும்) மக்களைக் காக்கும் நோக்கோடு தன்னால் முடிந்ததை (பலவந்தமாக) எடுத்துக் கொள்ள வேண்டும்.(27) ஓ! மன்னா, உலகில் உள்ள எந்த மனிதனாலும், பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைக்காமல் தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ள முடியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆழ்ந்த கானகத்தில் தனியாக வாழும் தவசி கூட இதற்கு விதிவிலக்கானவரல்ல.(28) ஓ! குருக்களின் தலைவா, ஒரு க்ஷத்திரியன், அதிலும் குறிப்பாக ஆட்சி செய்வதில் விருப்பமுள்ள ஒருவன், விதியைச் சார்ந்து ஒருபோதும் வாழக்கூடாது.(29) மன்னனும் நாடும், எப்போதும் முறையாக ஒருவரையொருவர் காத்துக் கொள்ள வேண்டும். இதுவும் ஒரு நித்திய கடமையாகும்.(30)

நாடு துன்பத்தில் மூழ்கும்போது, மன்னன் தன் உடைமைகள் அனைத்தையும் செலவழித்துப் பாதுகாப்பதால், நாடும் மன்னன் துன்பத்தில் மூழ்கும்போது அவனைப் பாதுகாக்க வேண்டும்.(31) அதிகத் துன்பத்திலும் கூட, கருவூலம், தீயோரைத் தண்டிக்கும் {அரசு} இயந்திரம், படை ஆகியவற்றையும், நண்பர்கள், கூட்டாளிகள், தேவையான பிற அமைப்பினரையும், தன் நாட்டில் உள்ள தலைவர்கள் ஆகியோரையும் மன்னன் கைவிடக்கூடாது.(32) ஒருவன் தன் வித்துகளைக் காப்பதற்காக, அவற்றைத் தன் உணவிலிருந்து கழித்துக் கொள்ள வேண்டும் என்ற கடமையை அறிந்தோர் சொல்கின்றனர்[7]. பெரும் மாயாசக்திகளுக்காக நன்கறியப்பட்டவனான சம்பரனின் உடன்படிக்கையில் இந்த உண்மை குறிப்பிடப்படுகிறது.(33) எந்த மன்னனின் நாடு நலிவுறுகிறதோ, அவனுடைய வாழ்வுக்கு ஐயோ. எந்த மனிதன் வாழ்வாதாரத் தேவைகளுக்காக அந்நிய நாட்டுக்குச் சென்று வாழ்கிறானோ, அவனுடைய வாழ்வுக்கு ஐயோ.(34) கருவூலமும், படையுமே மன்னனின் வேர்களாகும். மேலும் அவனுடைய படையானது, கருவூலத்திலேயே தன் வேரைக் கொண்டுள்ளது. அவனுடைய படையே அனைத்து அறத்தகுதிகளுக்கும் வேராகும். மேலும் அறத்தகுதிகளே அவனுடைய குடிமக்களின் வேராகும்.(35)பிறரை ஒடுக்காமல் ஒருபோதும் கருவூலத்தை நிரப்ப முடியாது. ஒடுக்குமுறையில்லாமல் படையை எவ்வாறு பாதுகாக்க முடியும்? எனவே, மன்னன், துன்ப காலங்களில், கருவூலத்தை நிரப்புவதற்காகத் தன் குடிமக்களை ஒடுக்கினால் எந்தக் குற்றத்தையும் இழைத்தவனாகமாட்டான்.(36) வேள்விகளைச் செய்வதற்காக முறையற்ற செயல்கள் பல செய்யப்படுகின்றன. இந்தக் காரணத்தினால், (துன்ப காலத்தில் தன் கருவூலத்தை நிரப்பும் நோக்குடன்) ஒரு மன்னன் முறையற்ற செயல்களைச் செய்வதால் எந்தக் குற்றத்தையும் இழைத்தவனாகமாட்டான்.(37) செல்வத்தை அடைவதற்காக, (துன்ப காலங்களில்) முறையான நடைமுறைகளையும் தவிர்த்து, வேறு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. (துன்ப காலங்களில்) அத்தகைய முறையற்ற நடைமுறைகளைப் பின்பற்றவில்லையெனில், தீமையே நிச்சயமான விளைவாக இருக்கும். அழிவுக்காகவும், துயருக்காகவும் இயங்கும் அமைப்புகள் அனைத்தும், செல்வத்தைத் திரட்டுவதற்காகவே அமைந்திருக்கின்றன. ஒரு நுண்ணறிவுமிக்க மன்னன் (அத்தகைய காலங்களில்) இத்தகைய கருத்துகளால் வழிநடத்தப்பட்டு, தன் போக்கைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.(38) வேள்விகளுக்கு விலங்குகளும், பிற பொருட்களும் தேவைப்படுவதைப் போலவே, வேள்விகள் இதயத்தைத் தூய்மைப்படுத்துவதைப் போலவே, விலங்குகள், வேள்விகள் மற்றும் இதயத்தூய்மை ஆகிய அனைத்தும் இறுதி விடுதலைக்கானது {முக்திக்கானது} என்பதைப் போலவே, கொள்கையும், தண்டனையும், கருவூலத்துக்காக இருக்கின்றன, கருவூலம் படைக்காக இருக்கிறது, கொள்கை, கருவூலம் மற்றும் படை ஆகிய மூன்று எதிரிகளை வெல்வதற்காகவும், நாட்டைப் பாதுகாத்து பெருக்குவதற்காகவும் இருக்கின்றன.(39)

நான் இங்கே அறநெறியின் உண்மை வழிகளை எடுத்துரைக்கும் ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லப் போகிறேன். ஒரு வேள்விக் கம்பை {யூபத்தை} அமைப்பதற்காக ஒரு பெரு மரம் வெட்டப்படுகிறது. அதை வெட்டும் போது, அதன் வழியில் குறுக்கிடும் பிற மரங்களும் வெட்டப்படுகின்றன. வீழும் அவையும், அந்த இடத்தில் நிற்கும் பிறரைக் கொல்கின்றன {பிற உயிரினங்கள், அல்லது மரங்களையும் கொல்கின்றன}.(40,41) அதேபோலவே நன்கு நிரம்பிய கருவூலத்தை அமைக்கும் வழியில் குறுக்கே நிற்பவர்களும் கொல்லப்படவே வேண்டும். வேறு வகையில் எவ்வாறு வெற்றியை அடைய முடியும் என்பதை நான் காணவில்லை[8].(42) இம்மை, மறுமை ஆகிய ஈருலகங்களும், உண்மையும், அறத்தகுதியும் செல்வத்தால் அடையப்படுகிறது. செல்வமில்லாத மனிதன் பிணமே ஆவான்.(43) வேள்விகள் செய்வதற்கான செல்வம் எல்லா வழிமுறைகளிலும் அடையப்பட வேண்டும். ஓ! பாரதா, துன்பகாலத்தில் செய்யப்படும் எந்தச் செயலையும் பற்றியிருக்கும் தகுதியின்மையும், பிற நேரத்தில் அதே செயலில் பற்றியிருக்கும் தகுதியின்மையும் ஒன்றல்ல.(44) ஓ! மன்னா, செல்வத்தை அடைவதையும், கைவிடப்படுவதையும் ஒரே மனிதனிடம் காண முடியாது. காட்டில் எந்தச் செல்வந்தனையும் நான் காணவில்லை.(45)

உலகத்தில் உள்ள எந்தச் செல்வத்தை எடுத்துக் கொண்டாலும், “இஃது எனதாகும், இஃது எனதாகும்” என்று சொல்லி ஒவ்வொருவரும் வேறு அனைவருடனும் போட்டியிடுவதே காணப்படுகிறது.(46) ஓ! பகைவர்களை எரிப்பவனே, நாட்டை அடைவதைவிட ஒரு மன்னனுக்குத் தகுதி வாய்ந்தது {புண்ணியம் நிறைந்தது} வேறு எதுவும் இல்லை. சாதாரணக் காலங்களில் தன் குடிமக்களிடம் கடும் தீர்வைகளைச் சுமத்தி அவர்களை ஒடுக்குவது ஒரு மன்னனுக்குப் பாவம் நிறைந்த செயலாகும். எனினும், துன்ப காலங்களில் இது முற்றிலும் வேறுபடும்.(47) கொடைகள், வேள்விகள் மூலம் சிலர் செல்வத்தை அடைகிறார்கள்; தவத்தில் விருப்பமுடைய சிலர், தவங்களின் மூலம் செல்வத்தை அடைகிறார்கள்; சிலர் அதைத் தங்கள் நுண்ணறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் உதவியுடன் அடைகிறார்கள்.(48) செல்வமில்லாதவன் பலவீனன் என்று சொல்லப்படும் அதே வேளையில் செல்வந்தன் பலமிக்கவனாகிறான். ஒரு செல்வந்தனால் அனைத்தையும் அடைய முடியும். நன்கு நிரப்பப்பட்ட கருவூலத்தைக் கொண்ட மன்னன் அனைத்தையும் சாதிப்பதில் வெல்வான்.(49) கருவூலத்தைக் கொண்டு ஒரு மன்னனால் அறத்தகுதியை ஈட்ட முடியும், தன் இன்ப விருப்பங்களை நிறைவு செய்து கொள்ள முடியும், இம்மையையும், மறுமையையும் அடைய முடியும். எனினும், கருவூலம் அறத்தின் துணை கொண்டே நிரப்பப்பட வேண்டும், துன்ப காலங்களைத் தவிர்த்து அறமில்லா நடைமுறைகளால் ஒருபோதும் அது {கருவூலம்} நிரப்பப்படக்கூடாது” என்றார் {பீஷ்மர்}.(50)

ராஜதர்மாநுசாஸன உப பர்வம் முற்றும் 

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்திரீ பர்வம்-ஸ்திரீ விலாப பர்வம் -ஸ்ராத்த பர்வம் -ஜலப்ரதானிக உப பர்வம்-

October 15, 2025

மன்னர்களின் சிரார்த்தம்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 26-காந்தாரிக்குப் பதிலுரைத்த கிருஷ்ணன்; போரில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையையும்; அவர்கள் அடைந்த கதியையும் யுதிஷ்டிரனிடம் விசாரித்த திருதராஷ்டிரன்; போரில் வீழ்ந்த வீரர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்யுமாறு ஆணையிட்ட யுதிஷ்டிரன்; ஈமக் காரியங்களைச் செய்த விதுரன்…

“அப்போது அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “எழு, ஓ! காந்தாரி, உன் இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாமல் எழுவாயாக. உன் குற்றத்தாலேயே இந்தப் பரந்த பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.(1) உன் மகன் துரியோதனன், தீய ஆன்மாக் கொண்டவனாகவும், பொறாமைக் குணம் கொண்டவனாகவும், ஆணவம் நிறைந்தவனாகவும் இருந்தான். அவனது {துரியோதனனது} தீச்செயல்களை மெச்சிக் கொண்டு, அவற்றை நல்லவையாக நீ கருதுகிறாய்.(2) பகைமைகளின் உடல்வடிவமான அவன், மிகக் கொடூரனாகவும், பெரியோரின் சொல்லுக்குக் கீழ்ப்படியாதவனாகவும் இருந்தான். உன் குற்றங்கள் அனைத்தையும் என் மேல் ஏன் நீ சுமத்துகிறாய்?(3) இறந்தவனுக்காகவோ, தொலைந்தவனுக்காகவோ, ஏற்கனவே நேர்ந்துவிட்ட எதற்காகவோ வருந்தும் ஒருவன் மேலும் துயரத்தையே அடைகிறான். துயரத்தில் ஈடுபடுவதால் அஃது இருமடங்காகப் பெருகுகிறது.(4) மறுபிறப்பாள {பிராமண} வகையைச் சேர்ந்த ஒரு பெண், தவப்பயிற்சிகளுக்கான வாரிசைப் பெறுகிறாள்; மாடு சுமையைக் சுமப்பதற்கான {காளையை} வாரிசைப் பெறுகிறது. பெண்குதிரையானது வேகமாக ஓடும் வாரிசை {குதிரையைப்} பெறுகிறது, சூத்திரப் பெண்ணானவள், பணிவிடை செய்பவர்களை வாரிசாகப் பெறுகிறாள், வைசியப் பெண்ணானவள், கால்நடை காப்பவர்களை வாரிசாகப் பெறுகிறாள். எனினும், உன்னைப் போன்ற இளவரசியோ, கொல்லப்படுவதற்காகவே மகன்களைப் பெறுகிறாள் {மரணத்தை விரும்பும் க்ஷத்திரியனை வாரிசாகப் பெறுகிறாள்}” என்றான் {கிருஷ்ணன்}”.(5)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தனக்கு ஏற்பில்லாத வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட காந்தாரியின் இதயம் துயரால் மிகவும் கலக்கமடைந்தாலும் அமைதியாகவே அவள் இருந்தாள்.(6)

எனினும் அரசமுனியான திருதராஷ்டிரன், மடமையினால் எழும் துயரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நீதிமானான யுதிஷ்டிரனிடம் விசாரிக்கும் வகையில்,(7) “ஓ! பாண்டுவின் மகனே, இந்தப் போரில் வீழ்ந்தவர்களின் எண்ணிக்கையையும், உயிரோடு தப்பியவர்களின் எண்ணிக்கையையும் நீ அறிந்திருந்தால் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(8)

யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}“இந்தப் போரில் நூற்று அறுபத்தாறு கோடியே, இருபதாயிரம் {166,00,20,000} பேர் [1] கொல்லப்பட்டனர்.(9) தப்பிய வீரர்கள், இருபத்துநாலாயிரத்து நூற்று அறுபத்தைந்து {24,165} பேராவர்” என்றான்.(10)

[1] கங்குலியில் ‘One billion six hundred and sixty millions and twenty thousand men” என்று இருக்கிறது. அதாவது மேற்கத்திய எண்முறையின் படி 1,660,020,000 ஆகும். இந்திய எண்முறையின் படி, 166,00,20,000 ஆகும். கும்பகோணம் பதிப்பில், “அரசரே, இந்த யுத்தத்தில் பத்துகோடி வீரர்களும், இருபதினாயிரம் வீரர்களும், அறுபத்தாறு கோடி வீரர்களும் கொல்லப்பட்டார்கள், ராஜேந்திரரே, பாரதரே, காணாமற்போன வீரர்களின் தொகை பதினாலாயிரமும் வேறு பதினாலாயிரமும் நூறாயிரமும் அறுபதினாயிரமுமாம்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் “One billion, twenty thousand and sixty-six crore.. The total is thus 1,660,020,000” என்றிருக்கிறது. ஒருவேளை இது குதிரைகள், யானைகள், பிற விலங்குகள் அடங்கிய தொகையாகவும் இருக்கலாம். இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை 134,35,65,000 ஆகும்.

திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, நீ அனைத்தையும் அறிந்தவனாக இருப்பதால், மனிதர்களில் முதன்மையானோரான அவர்கள் என்ன கதியை அடைந்தார்கள் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(11)

யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, “உண்மை ஆற்றலைக் கொண்ட அந்தப் போர்வீரர்கள், அந்தக் கடும் போர்க்களத்தில் தங்கள் உடல்களை உற்சாகமாகக் கைவிட்டு, இந்திரலோகத்தை அடைந்தனர்.(12) மரணம் தவிர்க்க முடியாதது என்பதை அறிந்த அவர்களில், உற்சாகமாக அதை {மரணத்தைச்} சந்தித்தவர்கள், கந்தர்வர்களின் தோழமையை அடைந்தனர்.(13) போர்க்களத்தில் இருந்து புறமுதுகிடும்போதோ, இடத்தை {உயிர்வாழ} இரந்து கேட்ட போதோ ஆயுத முனைகளில் வீழ்ந்த போர்வீரர்கள் குஹ்யர்களின் உலகை அடைந்தனர்.(14) க்ஷத்திரியத்தன்மையின் கடமைகளை நோற்று, போரில் இருந்து தப்புவது இழுக்கெனக் கருதி, எதிரிகளை எதிர்த்துச் செல்லும்போது கூரிய ஆயுதங்களால் சிதைக்கப்பட்டு வீழ்ந்தவர்கள் அனைவரும் பிரகாசமான வடிவை ஏற்றுப் பிரம்மலோகத்தை அடைந்தனர்.(15,16) எஞ்சிய போர்வீரர்கள், புறப்போர்க்களத்தில் எவ்வாறோ இறந்தவர்கள் உத்தரக் குருக்களின் உலகை அடைந்தனர்” என்றான்.(17)

திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனைப் போலவே, அறிவின் எந்தச் சக்தியைக் கொண்டு நீ இவற்றையெல்லாம் காண்கிறாய்? ஓ! வலிய கரங்கொண்டோனே, நான் கேட்கத்தகுந்தவன் என நினைத்தால் நீ எனக்கு இதைச் சொல்வாயாக” என்று கேட்டான்.(18)

யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, “உமது கட்டளையின் பேரில் நான் காட்டில் திரிந்து கொண்டிருக்கையில், புனிதமான இடங்களுக்குப் பயணப்பட்ட நிகழ்வின்போது {தீர்த்தயாத்திரை செய்த போது}, நான் இந்த வரத்தை அடைந்தேன். லோமசர் என்ற தெய்வீக முனிவரைச் சந்தித்து, அவரிடம் இருந்து ஆன்மப் பார்வை என்ற வரத்தை அடைந்தேன்.(19) மேலும் மற்றொரு பழைய நிகழ்வின் போது, நான் அறிவின் சக்தியால் இரண்டாம் பார்வையை நான் அடைந்தேன்” என்றான்.(20)

திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “நண்பர்களற்றவர்கள் உடையதும், நண்பர்கள் உள்ளவர்களுடையதுமான உடல்களை முறையான சடங்குகளுடன் நமது மக்கள் எரிப்பது அவசியம் இல்லையா?(21) கவனிக்க யாருமற்றவர்களையும், புனித நெருப்பற்றவர்களையும் நாம் என்ன செய்வது? நமக்காகப் பல கடமைகள் காத்திருக்கின்றன. நாம் யாருடைய (இறுதிச்) சடங்குகளைச் செய்ய வேண்டும்?(22) ஓ! யுதிஷ்டிரா, இப்போது கழுகுகளாலும், பறவைகளாலும் இழுத்து உடல் கிழிக்கப்படுபவர்கள், தங்கள் செயல்களின் தகுதியால் {புண்ணியத்தால்} அடைய வேண்டிய அருள் உலகங்களை அடைய வேண்டாமா?” என்று கேட்டான்”.(23)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட பெரும் ஞானியான யுதிஷ்டிரன், (கௌரவர்களின் புரோகிதரான) சுதர்மன், தௌமியர், சூத வகையைச் சேர்ந்த சஞ்சயன்,(24) பெரும் ஞானியான விதுரன், குரு குலத்தின் யுயுத்சு, இந்திரசேனன் தலைமையிலான தன் அனைத்துப் பணியாட்கள், தன்னோடிருந்த அனைத்துச் சூதர்கள் ஆகியோரை அழைத்து,(25) “கவனித்துக் கொள்ள ஆளில்லாமல் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் அழிவடையாமல் இருக்க {அழுகாமல் இருக்க}, அவர்களுக்கான ஈமச் சடங்குகளை முறையாக நடத்தச் செய்யுங்கள்.(26) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுடைய ஆணையின் பேரில், விதுரன், சஞ்சயன், சுதர்மன், தௌமியர், இந்திரசேனன் மற்றும் பிறரால்,(27) இத்தகு நிகழ்வுகளில் பயன்படும் சந்தனக்கட்டைகள், வேறு வகைக் கட்டைகள் {அகிற்கட்டைகள், காலீயகக் கட்டைகள்}, தெளிந்த நெய், எண்ணெய், நறுமணப் பொருட்கள், விலைமதிப்புமிக்கப் பட்டாடைகள், அனைத்து வகைத் துணிகள்(28), உலர்ந்த மரங்களின் {கட்டைகளின்} பெருங்குவியல்கள், முறிந்த தேர்கள், பல்வேறு ஆயுதங்கள் ஆகியவற்றைச் சேகரித்து,(29) முறையாக ஈமச்சிதைகள் அமைக்கப்பட்டு, கொல்லப்பட்ட மன்னர்களுக்குரிய சடங்குகள் அவரவர்க்கான முறையான வரிசையில் செய்யப்பட்டு, தாமதமில்லாமல் {அச்சிதை} எரியூட்டப்பட்டது.(30)

சுடர்மிக்க அந்த நெருப்புகளில், தெளிந்த நெய்த்தாரைகளை ஊற்றி, துரியோதனன், அவனது நூறு சகோதரர்கள், சல்லியன், சலன், மன்னன் பூரிஸ்ரவஸ்,(31) ஓ! பாரதா {ஜனமேஜயா} மன்னன் ஜெயத்ரதன், அபிமன்யு, துச்சாசனன் மகன், {துரியோதனனின் மகனான} லக்ஷ்மணன், மன்னன் திருஷ்டகேது, பிருஹந்தன், சோமதத்தன், நூற்றுக் கணக்கான சிருஞ்சயர்கள், மன்னன் க்ஷேமதன்வன், விராடன், துருபதன், பாஞ்சாலர்களின் இளவரசன் சிகண்டி, பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், வீர யுதாமன்யு, உத்தமௌஜஸ், கோசலர்களின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, திரௌபதியின் மகன்கள், சுபலனின் மகனான சகுனி, அசலன், விருஷகன், மன்னன் பகதத்தன், கர்ணன், பெருங்கோபம் கொண்ட அவனது {கர்ணனின்} மகன் {விருஷசேனன்}}, பெரும் வில்லாளிகளான கேகய இளவரசர்கள், வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரிகர்த்தர்கள், ராட்சசர்களின் இளவரசனான கடோத்கசன், பகனின் சகோதரன், ராட்சசர்களில் முதன்மையானவனான அலம்புசன், மன்னன் ஜலசந்தன், மற்றும் பிற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மன்னர்கள் ஆகியோரின் உடல்கள் எரியூட்டப்பட்டன.(32-38)

இறந்தோரில் சிறப்புமிக்கச் சிலருக்கு பித்ருமேத சடங்குகளும், சிலருக்கும் சாமப்பாடல்கள் {சாமவேதப் பாடல்கள்} உரைப்பும், சிலருக்கு இறந்தோரைக் குறித்த புலம்பல்களும் நடந்தன.(39) சாமங்கள் மற்றும் ரிக்குகளின் உரத்த ஒலியாலும், பெண்களின் ஓலங்களாலும் அவ்விரவில் அனைத்து உயிரினங்களும் திகைப்படைந்தன.(40) புகையற்றவையாக, பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த ஈமச்சிதை நெருப்புகள், ஆகாயத்தில் மேகங்களால் மறைக்கப்பட்ட ஒளிக்கோள்களைப் போலத் தெரிந்தன.(41) பல்வேறு மாகாணங்களில் இருந்து வந்து இறந்திருந்தோரில், முற்றிலும் நண்பர்களற்றவர்களாக இருந்தவர்களின் உடல்கள், ஆயிரக்கணக்கான குவியல்களாகக் குவிக்கப்பட்டு, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரிலும், விதுரனின் மூலமும், நல்விருப்பத்தினாலும் அன்பினாலும் உந்தப்பட்டு, வேகமாகச் செயல்படும் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களால் {தன்னார்வத் தொண்டர்களால்} உலர்ந்த விறகால் அமைக்கப்பட்ட சிதையில் எரிக்கப்பட்டன.(42,43) இறுதிச்சடங்குகளைச் செய்யச் செய்த குரு மன்னன் யுதிஷ்டிரன், திருதராஷ்டிரனைத் தன் தலைமையில் கொண்டு, கங்கையாற்றை நோக்கிச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(44)

கர்ணன் உங்கள் அண்ணன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 27-கங்கையின் கரைக்கு நீர்க்கடன்களைச் செய்ய வந்த குருக்கள்; கர்ணன் பாண்டவர்களின் அண்ணன் என்ற உண்மையைத் துயரத்துடன் பாண்டவர்களுக்குச் சொன்ன குந்தி; பெருங்கலக்கமடைந்த பாண்டவர்கள்; யுதிஷ்டிரனின் புலம்பல்; கர்ணனின் குடும்பத்தை வரவழைத்து அவர்களோடு சேர்ந்து நீர்க்கடனைச் செய்த யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “புனித நீர் நிரம்பியதும், பல தடாகங்கள் அடங்கியதும், உயர்ந்த, அகன்ற கரைகளைக் கொண்டதும், பரந்த படுகையைக் கொண்டதுமான மங்கலக் கங்கையை அடைந்த அவர்கள், தங்கள் ஆபரணங்கள், மேலாடைகள், கச்சைகள் மற்றும் இடைக்கச்சைகளைக் களைந்தனர். பெருந்துயரால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருந்த குரு குலப் பெண்கள், தங்கள் தந்தைமார், பேரர்கள், சகோதரர்கள், உறவினர்கள், மகன்கள், மதிப்புக்குரிய பெரியோர்கள், கணவர்கள் ஆகியோருக்கு நீர்த்தர்ப்பணம் செய்தார்கள். கடமைகளை அறிந்த அவர்கள், தங்கள் நண்பர்களுக்காகவும் நீர்ச்சடங்கைச் செய்தனர்.(1-3) அந்த வீரர்களின் மனைவியர், தங்கள் வீரத் தலைவர்களுக்கான இந்தச் சடங்கைச் செய்த போது, (பலரின் பாதங்களால் உண்டான) பாதைகள் மறைந்து போனாலும், அந்த ஓடைக் கடப்பதற்கு எளிதானதாகவே இருந்தது.(4) அந்த ஓடையின் கரைகள், வீரர்களின் துணைவர்களால் {மனைவியரால்} நிறைந்து, அகன்ற பெருங்கடலைப் போலக் கவலையை வெளிப்படுத்தும் வகையில் காட்சியளித்தது.(5)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அடுக்கடுக்காக ஏற்பட்ட துயரத்தின் காரணமாகத் திடீரென அழுத குந்தி, தன் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} இந்த மென்மையான வார்த்தைகளில்,(6) “பாண்டவர்களே, தேர்ப்படைப்பிரிவுகளின் தலைவர்களுக்குத் தலைவனும், வீரத்தின் அனைத்து நற்குறிகளையும் கொண்டவனும், தனித்துவமான போர்வீரனும், பெரும் வில்லாளியும், போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டவனும்,(7) ராதைக்குப் பிறந்த சூதப் பிள்ளை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பவனும், படைகளுக்கு மத்தியில் சூரியனைப் போலவே ஒளிர்ந்து கொண்டிருந்தவனுனும்,(8) உங்களையும், உங்கள் தொண்டர்களையும் எதிர்த்துப் போரிட்டவனும், துரியோதனனின் படைக்குத் தலைமை தாங்கியபோது பிரகாசமாகத் தெரிந்தவனும்,(9) சக்தியில் தனக்கு இந்தப் பூமியில் ஒப்பில்லாதவனும், உயிரைவிடப் புகழே பெரிதென நினைத்தவனும்,(10) உண்மைக்கு உறுதியுடன் இருந்தவனும், களைப்பில்லா போர்வீரனும், களைப்பை ஒருபோதும் அடையாதவனுமான அந்த வீரன் உங்கள் அண்ணனாவான். பகலின் தேவன் {சூரியன்} மூலம் முன்பு எனக்குப் பிறந்த உங்கள் அண்ணனுக்கு நீர்க்காணிக்கைகளைச் செலுத்துவீராக. அந்த வீரன் காதுகுண்டலங்களுடனும், கவசங்களுடன் பிறந்து, சூரியனின் காந்தியைக் கொண்டிருந்தான்” என்றாள் {குந்தி}.(11,12)

தங்கள் தாய் சொன்ன வலிநிறைந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள் கர்ணனுக்கான தங்கள் துயரத்தை வெளிப்படுத்த தொடங்கினர். உண்மையில், அவர்கள் எப்போதையும் விட அதிகம் பீடிக்கப்பட்டவர்களானார்கள்.(13) பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தவனும், மனிதர்களில் புலியுமான வீர யுதிஷ்டிரன், “கணைகளையே தன் அலைகளாகக் கொண்டு, தன் நெடுங்கொடிமரத்தையே சுழியாகக் கொண்டு,(14) தன் வலிய இரு கரங்களையே பெரும் முதலைகளாகக் கொண்டு, தன் உள்ளங்கையொலிகளையே, புயலின் முழக்கமாகக் கொண்டு, தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தவிர வேறு எவனாலும் தாங்கிக் கொள்ள முடியாத பெருங்கடலாக இருந்தானே அந்தக் கர்ணன், ஓ! தாயே {குந்தியே}, அந்த வீரனின் {கர்ணனின்} தாய் நீதானா? தேவர்களுக்கு ஒப்பான அந்த மகன், முந்தைய நாட்களிலேயே உனக்கு எவ்வாறு உண்டானான்?(15,16) அவனது கரங்களின் சக்தி எங்கள் அனைவரையும் எரித்தது. ஓ! தாயே, துணியின் மடிப்புகளுக்குள் நெருப்பை மறைப்பவளைப் போல, எவ்வாறு நீ அவனை மறைத்தாய்? {எவ்வாறு எங்களிடம் நீ சொல்லாமலிருந்தாய்?}(17)

காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} வலிமையை நாங்கள் வழிபடுவதைப் போலவே, தார்தராஷ்டிரர்கள், அவனது கரங்களின் வலிமையை எப்போதும் வழிபட்டு வந்தனர்.(18) வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனும், தேர்வீரர்களில் முதல்வனும், போரில் பூமியின் தலைவர்கள் அனைவரின் ஒன்றுபட்ட சக்தியைத் தாங்கிக் கொண்டவனுமான அவன் {கர்ணன்}, எவ்வாறு உனது மகனானான்? அந்த ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவன் எங்கள் அண்ணனா? அற்புத ஆற்றலைக் கொண்ட அந்தப் பிள்ளையை நீ எவ்வாறு வளர்த்தாய்?(20) ஐயோ, இக்காரியம் உன்னால் மறைக்கப்பட்டதன் விளைவால் நாங்கள் என்ன காரியம் செய்துவிட்டோம்? கர்ணனின் இறப்பால் நாங்கள் எங்கள் நண்பர்கள் அனைவருடன் பெரிதும் பீடிக்கப்பட்டோம்.(21) அபிமன்யு, திரௌபதியின் மகன்கள் ஆகியோரின் இறப்பும், பாஞ்சாலர்கள் மற்றும் குருக்களின் அழிவும் ஏற்படுத்திய துயரத்தைவிடக் கர்ணன் இறந்ததற்காக நான் உணரும் இந்தத் துயரமானது நூறு மடங்கு பெரியதாகும். நெருப்பில் வீசப்பட்ட மனிதனைப்போலக் கர்ணனை நினைத்து நான் துயரால் எரிந்து கொண்டிருக்கிறேன்.(22,23) சொர்க்கத்தையும் சேர்த்து எதுவும் எங்களால் அடையப்பட முடியாததல்ல. ஐயோ, {நீ முன்பே சொல்லியிருந்தால்} குருக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியிருந்த இந்தப் பெரும்படுகொலைகள் நிகழ்ந்திருக்காது” என்றான் {யுதிஷ்டிரன்}.(24)

இதுபோன்ற புலம்பல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அதிகத் துன்பத்தால் உரக்க ஓலமிட்டான். பிறகு அந்தப் பலமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, இறந்து போன தன் அண்ணனுக்காக {கர்ணனுக்காக} நீர்க்காணிக்கைகளைச் செலுத்தினான்.(25) அப்போது அந்த ஆற்றின் கரையில் கூட்டமாக இருந்த பெண்கள் அனைவரும் திடீரெனத் துன்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.(26) நுண்ணறிவு கொண்டவனும், குருக்களின் மன்னனுமான யுதிஷ்டிரன், கர்ணனின் மனைவியரையும், அவனது குடும்பத்தையும் தனக்கு முன்பு கொண்டு வரச்செய்தான்.(27) அற ஆன்மா கொண்ட அவன் {யுதிஷ்டிரன்}, தன் அண்ணனுக்கான {கர்ணனுக்கான} நீர்க்கடனை அவர்களுடன் சேர்ந்து செய்தான். அந்தச் சடங்கை முடித்த அம்மன்னன், கங்கையின் நீரிலிருந்து உணர்வுகள் கலங்கிய நிலையில் எழுந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(28)

ஜலப்ரதானிக உபபர்வம் முற்றும்

ஸ்திரீ பர்வம் முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் — ஸ்திரீ பர்வம்-ஸ்திரீ விலாப பர்வம்-

October 15, 2025

கிருஷ்ணனிடம் புலம்பிய காந்தாரி! – ஸ்திரீ பர்வம் பகுதி – 16-ஞானக்கண்ணால் போர்க்களத்தைக் கண்ட காந்தாரி; காந்தாரிக்கு ஞானக்கண் அளித்த வியாசர்; சோகத்தில் அழும் தன் மருமகள்களைக் கிருஷ்ணனுக்குக் காட்டிய காந்தாரி; களநிலவரத்தைக் கிருஷ்ணனுக்கு வர்ணித்து அழுது புலம்பியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன காந்தாரி, போர்க்களத்தில் இருந்து தொலைவாக இருந்த அந்த இடத்தில் நின்று கொண்டு, தன் ஞானக்கண்ணால் குருக்களின் படுகொலையைக் கண்டாள்.(1) தன் தலைவனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} அர்ப்பணிப்புடன் இருந்த அந்த உயர்ந்த அருளைக் கொண்ட பெண்மணி {காந்தாரி}, எப்போதும் உயர்ந்த நோன்புகளை நோற்று வந்தாள். கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்த அவள், எப்போதும் உண்மை நிறைந்த பேச்சைக் கொண்டிருந்தாள்.(2) புனிதச் செயல்களைச் செய்யும் பெருமுனிவர் வியாசரால் கொடுக்கப்பட்ட வரத்தின் விளைவால், அவள் ஆன்ம அறிவையும் சக்தியையும் கொண்டவளானாள். அப்போது அந்தப் பெருமாட்டி பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டாள்.(3) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்தக் குரு குல பெருமாட்டி {காந்தாரி}, அருகில் இருந்து பார்ப்பவளைப் போல, காணப்பயங்கரமானவையும், அற்புதக் காட்சிகள் நிறைந்தவையுமான போராளிகளில் முதன்மையானவர்களுடைய போர்க்களத்தைத் தொலைவிலிருந்தே கண்டாள்.(4) எலும்புகளும், தலைமுடியும் எங்கும் சிதறிக் கிடக்க, குருதியோடையால் மறைக்கப்பட்டிருந்த அந்தக் களம், அனைத்துப் பக்கங்களிலும் ஆயிரமாயிரம் சடலங்களால் விரவப்பட்டுக் கிடந்தது.(5)

யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் பிறவகைப் போராளிகளின் குருதியால் மறைக்கப்பட்டிருந்த அதில், தலையற்ற முண்டங்களும், உடல்களற்ற தலைகளும் நிறைந்திருந்தன.(6) மேலும் அது {அந்தப் போர்க்களமானது}, யானைகள், குதிரைகள், ஆண்கள், பெண்கள், நரிகள், நாரைகள், அண்டங்காக்கைகள், கங்கங்கள், காக்கைகள் ஆகியவற்றின் ஒலிகளை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(7) மனித ஊனுண்ணும் ராட்சசர்களின் விளையாட்டுக்களமாக அஃது இருந்தது. அன்றில்களும், கழுகுகளும் நிறைந்த அதில் நரிக்கூட்டங்களின் மங்கலமற்ற ஒலி எதிரொலித்துக் கொண்டிருந்தது.(8)

பிறகு வியாசரின் ஆணையின் பேரில் மன்னன் திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன் தலைமையிலான பாண்டுவின் மகன்கள் அனைவருடனும், வாசுதேவனுடனும் {கிருஷ்ணனுடனும்} மற்றும் குரு பெண்கள் அனைவருடனும் போர்க்களத்தை நோக்கிச் சென்றான்.(9,10) தங்கள் தலைவர்களை இழந்தவர்களான அந்தப் பெண்கள், குருக்ஷேத்திரத்தை அடைந்து, கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் தங்கள் சகோதரர்கள், மகன்கள், தந்தைமார் மற்றும் கணவர்கள் ஆகியோர் இரைதேடும் விலங்குகளாலும், நரிகள், அண்டங்காக்கைகள், காக்கைகள், பேய்கள் {பூதங்கள்}, பிசாசங்கள், ராட்சசர்கள் மற்றும் இன்னும்பிற இரவு உலாவிகளாலும் உண்ணப்படுவதைக் கண்டனர்.(11,12)

ருத்திரனின் விளையாட்டுக் களத்தில் காணப்படும் காட்சிகளுக்கு ஒப்பான அந்தப் பேரழிவைக் கண்ட பெண்கள், உரக்கக் கதறியபடியே தங்கள் விலைமதிப்புமிக்க வாகனங்களில் இருந்து வேகமாகக் கீழிறங்கினர். தாங்கள் இதுவரை கண்டிராத காட்சியைக் கண்ட அந்தப் பாரதக் குலப் பெண்கள், தங்கள் அங்கங்களில் பலம் குறைவதை உணர்ந்து, கீழே தரையில் விழுந்தனர்.(14) வேறு சிலரோ, தங்கள் புலனுணர்வுகளை இழந்து மயக்கமடைந்தனர். உண்மையில், பாஞ்சாலப் பெண்களும், குருகுலப் பெண்களும் சொல்லொண்ணாத் துயரில் மூழ்கினர்.(15) அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளான அந்தச் சுபலன் மகள் {காந்தாரி}, துயரில் பீடிக்கப்பட்ட பெண்களின் கூச்சலை அனைத்துப் பக்கங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருந்த அந்தப் பயங்கரக் களத்தைக் கண்டு,(16) மனிதர்களில் முதன்மையானவனும், தாமரைக் கண்ணனுமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினாள்.

குருக்களின் முற்றான அழிவைக் கண்டு, அக்காட்சியால் துயரத்தில் நிறைந்த அவள் {காந்தரி – கிருஷ்ணனிடம்}, இவ்வார்த்தைகளைச் சொன்னாள்:(17) “ஓ! தாமரைக்கண் மாதவா {கிருஷ்ணா}, என் இந்த மருமகள்களைப் பார். தங்கள் தலைவர்களை இழந்து, கலைந்த கேசங்களுடன், பெண் அன்றில் கூட்டத்தைப் போல, துயரால் இவர்கள் பரிதாபகரமாகக் கதறுவதைப் பார்.(18) சடலங்களை அடைந்த அவர்கள், அந்தப் பெரும் பாரதத் தலைவர்களின் நினைவுகளைத் திரும்பச் சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் மகன்கள், சகோதரர்கள், தந்தைமார் மற்றும் கணவர்களை நோக்கிப் பெருங்கூட்டமாக அங்கேயும், இங்கேயும் ஓடுகிறார்கள்.(19) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, தங்கள் பிள்ளைகளை இழந்தவர்களும், வீரர்களின் தாய்மாருமான அவர்கள் அனைவராலும் இந்தக்களமே மறைக்கப்பட்டிருப்பதைப் பார். அதோ அந்தப் பகுதிகள், துணைவர்களை இழந்தவர்களும், வீரர்களின் துணைவர்களுமான {மனைவிகளுமான} அவர்களால் மறைக்கப்பட்டிருப்பதைப் பார்.(20) மனிதர்களில் புலிகளான பீஷ்மர், கர்ணன், அபிமன்யு, துரோணர், துருபதன், சல்லியன் ஆகியோரால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்தப் போர்க்களமானது சுடர்மிக்க நெருப்புகளைக் கொண்டிருப்பதைப் போலத் தெரிவதைப் பார்.(21), உயரான்மப் போர்வீரர்களின் தங்கக் கவசங்கள், விலைமதிப்புமிக்க ரத்தினங்கள், அங்கதங்கள், கேயூரங்கள் மற்றும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்.(22) வீரர்களின் கையில் இருந்து வீசப்பட்ட ஈட்டிகள் {சக்திகள்} மற்றும் முள்பதிக்கப்பட்ட தண்டங்கள் {பரிகங்கள்} ஆகியவற்றாலும், வாள்கள், பல்வேறு வகைகளிலான கூரிய கணைகள் மற்றும் விற்கள் ஆகியவற்றாலும் அது விரவப்பட்டுக் கிடப்பதைப் பார்.(23)

ஒன்றாகக் கூடியிருக்கும் இரைதேடும் விலங்குகள் நின்றுகொண்டோ, விளையாடிக் கொண்டோ, கிடந்த நிலையிலோ தாங்கள் விரும்பியபடி இருக்கின்றன.(24) ஓ! பலமிக்க வீரா, போர்க்களம் இவ்வாறே இருக்கிறது. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இக்காட்சியால் நான் துயரில் எரிந்து கொண்டிருக்கிறேன். ஓ! மதுசூதனா(அனைத்தும் எவற்றால் உண்டானவையோ) அந்த ஐம்பூதங்களே {பஞ்சபூதங்களே} பாஞ்சாலர்களையும், குருக்களையும் அழித்திருக்கின்றன என நான் நினைக்கிறேன்.(26) கடுமைநிறைந்த கழுகுகளும், ஆயிரக்கணக்கான பிற பறவைகளும், குருதிதோய்ந்த உடல்களின் கவசங்களைப் பிடித்து இழுத்து அவற்றை விழுங்குகின்றன.(27) ஜெயத்ரதன், கர்ணன், துரோணர், பீஷ்மர், அபிமன்யு போன்ற வீரர்கள் இறப்பார்கள் என்று எவர் கருதியிருப்பார்கள்?(28) ஐயோ, ஓ! மதுசூதனா, கொல்லப்பட முடியாதவர்களாக இருப்பினும் அவர்களும் கொல்லப்பட்டார்கள். கழுகுகளும், கங்கங்களும், அண்டங்காக்கைகளும், பருந்துகளும், நாய்களும், நரிகளும் அவர்களை உண்கின்றன.(29)

அதோ அங்கே, துரியோதனன் தரப்பில் போரிட்டவர்களும், கோபத்தில் களம் புகுந்தவர்களுமான அந்த மனிதர்களில் புலிகள், அணைந்த நெருப்புகளைப் போல இப்போது கீழே விழுந்து கிடக்கின்றனர்.(30) அவர்கள் அனைவரும் மென்மையான, தூய்மையான படுக்கையில் உறங்கத் தகுந்தவர்களாவர். ஐயோ, ஆனால் அவர்கள் இடரில் மூழ்கி இன்று வெறுந்தரையில் உறங்குகிறார்கள்.(31) அவர்களது புகழைப் பாடும் துதிபாடிகளால் முன்பு எப்போதும் அவர்கள் மகிழ்விக்கப்பட்டார்கள். {அப்படிப்பட்ட} அவர்கள், இப்போது, நரிகளின் கடுமையான மங்கலமற்ற ஊளையைக் கேட்கின்றனர்.(32) அங்கங்களில் சந்தனக்குழம்பையும், ஜவ்வாது பொடியையும் பூசிக்கொண்டு, விலைமதிப்புமிக்கப் படுக்கைகளில் முன்பு உறங்கிய அந்தச் சிறப்புமிக்க வீரர்கள், ஐயோ, இப்போது புழுதியில் உறங்குகின்றனர்.(33) இந்தக் கழுகுகளும், ஓநாய்களும், அண்டங்காக்கைகளுமே இப்போது அவர்களது ஆபரணங்களாகியிருக்கின்றன. மீண்டும் மீண்டும் மங்கலமற்ற கடும் இரைச்சலை உண்டாக்கும் அந்த உயிரினங்கள் இப்போது அவர்களின் உடல்களை இழுத்துச் செல்கின்றன.(34) போரில் திளைப்பவர்களும், உற்சாகமிக்கவர்களாகத் தெரிபவர்களுமான அந்த வீரர்கள், ஏதோ இன்னும் உயிரோடு இருப்பதைப் போலத் தங்களின் அருகில் கூரிய கணைகளையும், நன்கு கடினமாக்கப்பட்ட வாள்களையும், பிரகாசமான கதாயுதங்களையும் கொண்டிருக்கின்றனர்.(35)

அழகையும், நல்ல நிறத்தையும், கொண்டவர்களும், தங்க மாலையால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான முதன்மையான வீரர்கள் பலரும், தரையில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.(36) பருத்த கரங்களைக் கொண்ட வேறு சிலர், ஏதோ தங்கள் அன்புக்குரிய மனைவியரைத் தழுவிக் கொள்வதைப் போலக் கதாயுதங்களைத் தழுவிக் கொண்டு உறங்குகின்றனர்.(37) கவசம் பூண்ட இன்னும் சிலர், தங்கள் கரங்களில் பிரகாசமான ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றனர். ஓ! ஜனார்த்தனா, இரைதேடும் விலங்குகள் அவர்கள் இன்னும் உயிரோடு இருப்பதாகக் கருதி அவர்களைச் சிதைக்காமல் இருக்கின்றன.(38) கழுத்துகளில் பசும்பொன்னாலான அழகிய மாலைகளை அணிந்திருக்கும் வேறு சில சிறப்புமிக்க வீரர்கள், அனைத்துப் பக்கங்களிலும் சிதறிக் கிடந்து, ஊனுண்ணும் விலங்குகளால் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.(39) அதோ அங்கே, ஆயிரக்கணக்கான கடும் நரிகள், மரணத்தால் அசையாமல் கிடக்கும் சிறப்புமிக்க வீரர்கள் பலரின் கழுத்தைச் சுற்றியிருக்கும் தங்க ஆரங்களை இழுத்துக் கொண்டிருக்கின்றன.(40)

ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட துதிபாடிகள் பலரின் பாடல்களாலும், துதிகளாலும் முன்பு மகிழ்விக்கப்பட்ட அவர்கள்,(41) இப்போது துயரால் பீடிக்கப்பட்டு, அவர்களைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டு அழுது புலம்பும் அழகிய பெண்களால் சூழப்பட்டிருக்கிறார்கள்.(42) அந்த அழகிய பெண்களின் முகங்கள் மங்கியிருந்தாலும், செந்தாமரைகளின் கூட்டத்தைப் போல இன்னும் ஒளியுடனேயே இருந்தன.(43) அந்தக் குரு மங்கையர் தங்கள் தங்கள் தொண்டச்சிகளுடனும், தோழிகளுடனும் சேர்ந்து அழுவதை நிறுத்திவிட்டனர். அவர்கள் அனைவரும் கவலையில் நிறைந்துள்ளனர். சோகத்தில் மூழ்கியிருக்கும் அவர்கள் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(44) கோபத்துடன் அழுது புலம்பிக் கொண்டிருக்கும் அந்த அழகிகளின் முகங்கள், காலைச் சூரியனைப் போவோ, தங்கத்தைப் போலவோ, புடம்போட்ட தாமிரத்தைப் போலவோ பிரகாசமாக இருக்கின்றன.(45)

முற்றுபெறாத பொருள் கொண்ட தங்கள் ஒவ்வொருவரின் புலம்பல்களையும் கேட்ட அம்மங்கையரால், அனைத்துப் பக்கத்திலும் இருந்து வெடித்த உரத்த துயர ஓலங்களின் விளைவாக அவற்றின் பொருளை உணர்ந்து கொள்ள முடியவில்லை.(46) அவர்களில் சிலர், நீண்ட பெருமூச்சுகளைவிட்டு, மீண்டும் மீண்டும் புலம்பல்களில் ஈடுபட்டுத் துயரால் திகைப்படைந்து தங்கள் உயிரையே விடுகின்றனர்.(47) அவர்களில் பலர், (தங்கள் மகன்கள், கணவர்கள், அல்லது தந்தைமாரின்) உடல்களைக் கண்டு அழுது, உரக்க ஓலமிடுகின்றனர். வேறு சிலர் தங்கள் மென்மையான கரங்களால் தங்கள் தலைகளில் அடித்துக் கொள்கின்றனர்.(48) பூமியானது, துண்டிக்கப்பட்ட தலைகள், கரங்கள் மற்றும் பிற அங்கங்கள் ஒன்று கலந்த நிலையில் விரவப்பட்டு, பெருங்குவியல்களாகச் சேர்ந்து, இந்தப் பேரிடரின் அடையாளங்களோடு மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.(49) பேரழகைக் கொண்ட தலையற்ற முண்டங்கள் பலவற்றையும், உடல்களற்ற தலைகள் பலவற்றையும் கண்ட அந்த அழகிகள், உணர்விழந்து போய் நீண்ட நேரமாகத் தரையில் கிடக்கின்றனர்.(50)

குறிப்பிட்ட தலைகளைக் குறிப்பிட்ட உடல்களுடன் பொருத்திப் பார்க்கும் அப்பெண்கள், துயரால் உணர்விழந்து மீண்டும் தங்கள் தவறுகளைக் கண்டு, “இஃது இவருடையதல்ல” என்று சொல்லி மீண்டும் மிகுந்த துன்பத்துடன் அழுகின்றனர்.(51) வேறு சிலர், கணைகளால் துண்டிக்கப்பட்ட கரங்களையும், தொடைகளையும், கால்களையும் ஒன்றாக இணைத்து, (மீட்கப்பட்ட அந்த வடிவங்களைக் கண்டு) மீண்டும் மீண்டும் தங்கள் உணர்வுகளை இழக்கின்றனர்.(52) பாரத மங்கையர் சிலர், விலங்குகள், பறவைகளால் சிதைக்கப்பட்டு, தலைகள் வெட்டப்பட்டிருந்த தங்கள் தலைவர்களின் உடல்களைக் கண்டு, அவற்றை அடையாளம் காண முடியாமல் தவிக்கின்றனர்.(53) வேறு சிலரோ, ஓ! மதுசூதனா, எதிரிகளால் கொல்லப்பட்ட தங்கள் சகோதரர்கள், தந்தைமார், மகன்கள் மற்றும் கணவர்களைக் கண்டு, தங்கள் கரங்களால் தங்கள் தலைகளை அடித்துக் கொள்கின்றனர்.(54)

சதை மற்றும் குருதியால் சகதியாகி இருக்கும் பூமியானது, இன்னும் வாளைப் பிடியில் கொண்டிருக்கும் கரங்களாலும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளாலும் கடக்கப்பட முடியாததாக இருக்கிறது.(55) சிறு துயரையும் இதற்கு முன்பு அனுபவித்திராத அந்தக் களங்கமற்ற மங்கையர், தங்கள் சகோதர்கள், தந்தைமார், மகன்கள் ஆகியோர் களத்தில் பரவிக் கிடப்பதைக் கண்டு இப்போது சொல்லொணாத் துயரத்தில் மூழ்கியிருக்கின்றனர்.(56) ஓ! ஜனார்த்தனா, சிறந்த பிடரியால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அழகிய குதிரைக் குட்டிகளுக்கு ஒப்பானவர்களான திருதராஷ்டிரர் மருமகள்களைப் பார்.(57) ஓ! கேசவா, அழகிய வடிவங்களைக் கொண்ட அந்த மங்கையர் இத்தகு தன்மையை அடைந்திருப்பதைக் காண்பதைவிடச் சோகமான காட்சி எனக்கு வேறு என்ன இருக்க முடியும்?(58) ஓ! கேசவா, என் மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் எதிரிகளால் கொல்லப்பட்டதை நான் காண்பதால், நான் என் முந்தைய பிறவிகளில் பெரும்பாவங்களை இழைத்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை” {என்றாள் காந்தாரி}.(59) துயரால் இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காந்தாரியின் கண்கள் தன் மகன் (துரியோதனனின்) மேல் விழுந்தது” {என்றார் வைசம்பாயனர்}.(59)

பானுமதியின் நிலை! – ஸ்திரீ பர்வம் பகுதி – 17-துரியோதனனின் உடலைக் கண்டு கதறி விழுந்த காந்தாரி; தன் மகனின் உடலைக் கண்ணீரால் நனைத்தது; ஆதரவற்ற திருதராஷ்டிரனுக்காக வருந்தியது; துரியோதனனின் மனைவியான பானுமதியின் நிலையைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணனிடம் புலம்பிய காந்தாரி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “காந்தாரி, துரியோதனனைக் கண்டதும், துயரால் தன் உணர்வுகளை இழந்து, வேரோடு சாய்க்கப்பட்ட வாழை மரத்தைப் போலத் திடீரெனப் பூமியில் விழுந்தாள்.(1) விரைவில் தன் உணர்வுகள் மீண்ட அவள், குருதியில் மறைந்து வெறுந்தரையில் கிடக்கும் தன் மகனைக் கண்டு மீண்டும் மீண்டும் உரக்க ஓலமிட்டபடியே அழத் தொடங்கினாள்.(2) தன் மகனை ஆரத்தழுவி கொண்ட காந்தாரி, அவனுக்காகப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டாள். துயரால் பீடிக்கப்பட்டவளும், அதிகமான புலன்கலக்கம் அடைந்தவளுமான அந்தக் குரு குல ராணி {காந்தாரி}, “ஐயோ, ஓ! மகனே”, “ஐயோ, ஓ! மகனே” என்று சொல்லி அழுதாள்.(3) கவலையால் எரிந்த அந்த ராணி, பருத்த, அகன்ற தோள்களைக் கொண்டவனும், மாலைகளாலும், கழுத்தணிகளாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான தன் மகனின் {துரியோதனனின்} உடலைத் தன் கண்ணீரால் நனைத்தாள்.

அருகே நின்றிருந்த ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} அவள் {காந்தாரி},(4) “ஓ! பலமிக்கவனே, ஓ! விருஷ்ணி குலத்தோனே, இந்தக் குலத்திற்கு அழிவை ஏற்படுத்திய இந்தப் போரின் தொடக்கத்தில், இந்த மன்னர்களில் முதன்மையானவன் {துரியோதனன்} என்னிடம், “ஓ! தாயே, இந்த உட்பூசலில் எனக்கு வெற்றியை விரும்புவாயாக” என்றான். அவன் இவ்வார்த்தைகளை என்னிடம் சொன்னபோது, ஓ! மனிதர்களில் புலியே, பேரிடர் எங்களை அணுகியதை அறிந்த நான், அவனிடம் {துரியோதனனிடம்}“எங்கே அறமிருக்கிறதோ, அங்கேயே வெற்றியுமிருக்கும்.(6) ஓ! மகனே, உன் இதயம் போரில் நிலைத்திருப்பதால், ஆயுதங்களால் ({ஆயுதங்களைப்} பயன்படுத்தி) அடையும் உலகை தேவர்களைப் போலவே நீ அடைவாயாக ({அடைந்து} அங்கே விளையாடிக் கொண்டிருப்பாயாக)” என்றேன்.(7) இவையே நான் அவனிடம் சொன்ன வார்த்தைகளாகும். இதன் காரணமாக நான் என் மகனுக்காக வருந்தவில்லை. எனினும், நண்பர்களையும், சொந்தங்களையும் இழந்து ஆதரவற்றவராக இருக்கும் திருதராஷ்டிரருக்காகவே நான் வருந்துகிறேன்.(8) ஓ! மாதவா, தேர்வீரர்களில் முதன்மையானவனும், கோபம் நிறைந்தவனும், ஆயுதங்களில் திறன்மிக்கவனும், போரில் தடுக்கப்பட முடியாதவனுமான என் மகன் {துரியோதனன்} வீரர்களின் படுக்கையில் உறங்குவதைப் பார்.(9) காலத்தால் கொண்டுவரப்பட்ட மாறுபாடுகளைப் பார். பழங்காலத்தில் மகுடம் தரித்தோர் அனைவரின் தலைகளிலும் நடந்து சென்ற இந்த எதிரிகளை எரிப்பவன், இப்போது புழுதியில் உறங்குகிறான்.(10)

வீரர்களுக்கான படுக்கையில் உறங்கும் வீரத் துரியோதனன், அடைதற்கு மிக அரிய கதியையே அடைந்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை.(11) முன்பு, பேரழகுப் பெண்கள் புடைசூழ அமர்ந்திருந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, இப்போது வீரர்களின் படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு மங்கலமற்ற நரிகள் திளைக்கின்றன.(12) முன்பு, மகிழ்ச்சிப்படுத்துவதற்காக ஒருவரோடொருவர் போட்டிப் போட்டுக் கொண்ட மன்னர்களால் சூழப்பட்ட இவன், இப்போது கழுகுகளால் சூழப்பட்டுத் தரையில் கிடக்கிறான்.(13) முன்பு, அழகிய பெண்களால் அழகிய விசிறிகளைக் கொண்டு விசிறப்பட்டவன், இப்போது (ஊனுண்ணும்) பறவைகளின் சிறகடிப்பால் விசிறப்படுகிறான்.(14) பெரும் பலத்தையும், உண்மை ஆற்றலையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட இந்த இளவரசன் {துரியோதனன்}, போரில் பீமசேனனால் கொல்லப்பட்டு, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு யானையைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறான்.(15)

ஓ! கிருஷ்ணா, பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்டு, குருதியில் மறைந்து, வெறுந்தரையில் கிடக்கும் துரியோதனனைப் பார்.(16) ஓ! கேசவா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட எவன், பதினோரு {11} அக்ஷௌஹிணி துருப்புகளைத் திரட்டினானோ, அவன் தன் தீயக் கொள்கையின் {தீய புத்தியின்} விளைவால் இப்போது கொல்லப்பட்டுக் கிடக்கிறான்.(17) ஐயோ, பெரும் வில்லாளியான, இந்த வலிமைமிக்கத் தேர்வீரன், பீமசேனனால் கொல்லப்பட்டு, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு புலியைப் போல இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்.(18) அலட்சியம் செய்பவனும், மூடனுமான இந்தத் தீய இளவரசன் {துரியோதனன்}, விதுரன் மற்றும் தன் தந்தையை {திருதராஷ்டிரரை} அலட்சியம் செய்து, பெரியோரை அவமதித்ததன் விளைவாகவே மரணத்திற்கு அடிபணிந்திருக்கிறான்.(19) எவன் எந்த எதிரியுமில்லாமல் பதிமூன்று {13} ஆண்டுகள் இந்தப் பூமியை ஆண்டானோ, ஐயோ, என் மகனான அந்த இளவரசன், எதிரிகளால் கொல்லப்பட்டு இன்று வெறுந்தரையில் உறங்குகிறான்.(20)

ஓ! கிருஷ்ணா, சிறிது காலத்திற்கு முன்புதான் யானைகள், பசுக்கள் மற்றும் குதிரைகள் நிறைந்த பூமியானது, துரியோதனனால் ஆளப்படுவதை நான் கண்டேன்.(21) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இன்றோ, யானைகள், பசுக்கள் மற்றும் குதிரைகளற்று வேறொருவனால் அவள் {பூமி} ஆளப்படுவதை நான் காணப் போகிறேன். ஓ! மாதவா, நான் உயிர்வாழ வேண்டிய தேவை என்ன இருக்கிறது?(22) கொல்லப்பட்ட வீரர்களின் அருகில் இந்த அழகிய பெண்களின அழுது கொண்டிருக்கும் காட்சியே என் மகன் கொல்லப்பட்டதைக் காட்டிலும் அதிகத் துன்பத்தைத் தருவதைப் பார்.(23) ஓ! கிருஷ்ணா, லக்ஷ்மணனின் தாயும், பெரும் இடையைக் கொண்டவளும், கலைந்த கேசத்துடன் இருப்பவளும், தங்கமயமான வேள்விப்பீடத்திற்கு ஒப்பானவளுமான துரியோதனனின் அன்புக்குரிய மனைவியை {பானுமதியைப்}[1] பார்.(24) பெரும் நுண்ணறிவைக் கொண்ட இந்தக் காரிகை, தன் வலிமைமிக்கத் தலைவன் {துரியோதனன்} உயிரோடிருந்த போது, தன் தலைவனின் அழகிய கரங்களின் அணைப்பிற்குள் விளையாடிக் கொண்டிருந்தாள்.(25)போரில் கொல்லப்பட்ட என் மகனையும், பேரப்பிள்ளையையும் கண்டும், உண்மையில் என் இதயம் நூறு துண்டுகளாக ஏன் நொறுங்கவில்லை?(26) ஐயோ, அந்தக் களங்கமற்ற மங்கை {பானுமதி}, குருதியால் மறைந்திருக்கும் தன் மகனை (மகனின் தலையை) முகர்ந்து பார்க்கிறாள். மேலும், அழகிய தொடைகளைக் கொண்டவளான அந்த மங்கை, தன் அழகிய கரத்தால் துரியோதனனின் உடலை மென்மையாகத் தடவுகிறாள்.(27) ஒரு நேரம் தன் தலைவனுக்காகவும் {துரியோதனனுக்காகவும்}, மறுநேரம் தன் மகனுக்காகவும் {லக்ஷ்மணனுக்காகவும்} அவள் {பானுமதி} கவலையுறுகிறாள். ஒரே நேரம் அவள் தன் தலைவனையும், மறுநேரம் தன் மகனையும் பார்க்கிறாள்.(28) ஓ! மாதவா, தன் கரங்களால் தன் தலையை அடித்துக் கொண்டு, குருக்களின் மன்னனான தன் வீரத் துணைவனின் மார்பில் அவள் விழுவதைப் பார்.(29) தாமரையின் இதழ்களைப் போன்ற நிறத்தைக் கொண்டவளான அவள், ஒரு தாமரையைப் போலவே அழகாக இருக்கிறாள். நற்பேறற்ற அந்த இளவரசி இப்போது தன் மகனின் முகத்தையும், இப்போது தன் தலைவனின் முகத்தையும் தடவுகிறாள்.(30) சாத்திரங்களும், சுருதிகளும் உண்மையென்றால், ஆயுதப் பயன்பாட்டால் ஒருவன் வெல்லும் (அருள் நிறைந்த) உலகங்களையும் இந்த மன்னனும் {துரியோதனனும்} அடைந்திருப்பான் என்பதில் ஐயமில்லை” என்றாள் {காந்தாரி}.(31)

துச்சாசனனைக் கண்ட காந்தாரி! – ஸ்திரீ பர்வம் பகுதி – 18-தன் மருமகள்களின் பரிதாபகரமான நிலையைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக்காட்டிய காந்தாரி; துச்சாசனனைக் கொன்று அவனுடைய உயிர்க்குருதியைக் குடித்த பீமனை நினைத்தது; துச்சாசனன் செய்த தீமையைச் சொன்னது; பீமனைக் குறித்துத் துரியோதனனுக்குத் தான் எச்சரித்ததைக் கிருஷ்ணனிடம் நினைவுகூர்ந்த காந்தாரி…

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா, (போர்முயற்சியில்) களைப்படைய இயலாத என் மகன்கள் நூறு பேரும், போரில் பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்டனர்.(1) என் மகன்களை இழந்தவர்களான இளம் வயதுடைய என் மருமகள்கள், கலைந்த கேசங்களுடன் இன்று போர்க்களத்தில் திரிவதே எனக்குப் பெரும் துயரை அளிக்கிறது.(2) ஐயோ, பல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கால்களுடன், சிறந்த மாளிகைகளின் உப்பரிகைகளிலேயே நடந்த இவர்கள், இப்போது, பெருந்துயரால் இதயம் பீடிக்கப்பட்ட நிலையில், குருதியால் சகதியாகியிருக்கும் இந்தக் கடும்பூமியைத் தங்கள் கால்களால் தீண்டுகின்றனர்.(3) கவலையில் சுழலும் இவர்கள், பெருஞ்சிரமத்துடன் கழுகுகளையும், நரிகளையும், காகங்களையும் விரட்டிக் கொண்டு, மதுவால் வெறியேற்றப்பட்டவர்களைப் போலத் திரிந்து கொண்டிருக்கின்றனர்[1].(4) பழுதற்ற அங்கங்களைக் கொண்டவர்களும், கொடியிடை கொண்டவர்களுமான இந்த மங்கையர், இந்தப் பயங்கரப் பேரழிவைக் கண்டு, துயரத்தில் மூழ்கிக் கீழே விழுவதைப் பார்.(5)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, லக்ஷ்மணனின் தாயான இந்த இளவரசியை {பானுமதியைக்} கண்டு என் இதயம் துயரத்தால் பிளக்கிறது.(6) அழகிய கரங்களைக் கொண்ட இந்த மங்கையரில் சிலர், வெறுந்தரையில் இறந்து கிடப்பவர்களான தங்கள் சகோதரர்களையும், சிலர் தங்கள் கணவர்களையும், சிலர் தங்கள் மகன்களையும் கண்டு, கொல்லப்பட்டவர்களின் கரங்களைப் பற்றிக் கொண்டு கீழே விழுகின்றனர்.(7) ஓ! வெல்லப்படாதவனே, இந்தப் பயங்கரப் பேரழிவைக் கண்டு கதறி அழும் முதிய மற்றும் நடுத்தர வயது பெண்களின் ஓலத்தைக் கேட்பாயாக.(8) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, அந்தக் காரிகையர், களைப்பால் மயங்கி, உடைந்த தேர்க்கூடுகளில் தங்களைத் தாங்கிக் கொண்டு ஓய்வதைப் பார்.(9) ஓ! கிருஷ்ணா, அவர்களில் சிலர், அழகிய மூக்கு மற்றும் காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதும், துண்டிக்கப்பட்டதுமான தங்கள் சொந்தக்காரனின் தலையை எடுத்துக் கொண்டு துயரில் நிற்பதைப் பார்.(10)

ஓ! பாவமற்றவனே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவர்களுடையவர்களும், சிறுமதி கொண்டவளான என்னுடையவர்களுமான உறவினர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதால், நாங்கள் எங்கள் முந்தைய பிறவியில் பெரும்பாவங்களைச் செய்திருக்க வேண்டும். ஓ! விருஷ்ணி குலத்தோனே, நியாயமானவையாகவோ, நியாயமற்றவையாகவோ இருக்கும் எங்கள் செயல்பாடுகள் பலமில்லாமல் போகாது.(11,12) ஓ! மாதவா, அழகிய முலைகளையும், வயிற்றையும் கொண்டவர்களும், நற்குடியில் பிறந்தவர்களும், பணிவுடையவர்களும், கரிய இமை முடிகளைக் கொண்டவர்களும், தங்கள் தலைகளில் கருங்குழலைக் கொண்டவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களும், அன்னப்பறவைகளைப் போல அன்பானவர்களுமான அந்த இளம்பெண்கள், பெருந்துயரத்தால் தங்கள் புலனுணர்வுகளை இழந்து, நாரைக் கூட்டத்தைப் போலப் பரிதாபகரமாக அழுவதைப் பார்.(13,14) ஓ! தாமரைக்கண் வீரா, முற்றுமுழுதாக மலர்ந்திருக்கும் தாமரைகளுக்கு ஒப்பான அவர்களுடைய அழகிய முகங்கள் சூரியனால் எரிக்கப்படுவதைப் பார்.(15)

ஐயோ, ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, செருக்குடையவர்களும், மதங்கொண்ட யானைகளைப் போன்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான என் பிள்ளைகளின் மனைவியர், இப்போது பொதுமக்களின் வெறித்த பார்வைக்கு வெளிப்பட்டு நிற்கின்றனர்.(16) ஓ! கோவிந்தா, என் மகன்களுக்குச் சொந்தமானவையான, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட கேடயங்கள், சூரியப் பிரகாசத்துடன் கூடிய கொடிமரங்கள், தங்கக் கவசங்கள், கழுத்தணிகள், தங்கத்தாலான மார்புக் கவசங்கள், தலைக்கவசங்கள் ஆகியன, தெளிந்த நெய்யிலான நீர்க்காணிக்கைகள் {ஆகுதிகள்} ஊற்றப்பட்டு, காந்தியுடன் சுடர்விட்டெரியும் வேள்வி நெருப்புகளைப் போலப் பூமியில் சிதறிக் கிடப்பதைப் பார்.(17,18) பீமனால் வீழ்த்தப்பட்டு, எதிரிகளைக் கொல்லும் அந்த வீரனால் அங்கமெல்லாம் உள்ள குருதி குடிக்கப்பட்டு அங்கே துச்சாசனன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(19) ஓ! மாதவா, பகடையாட்டத்தின் போது உண்டான தன் துயரங்களை நினைத்துப் பார்த்த திரௌபதியினால் தூண்டப்பட்டு, பீமனின் கதாயுதத்தால் கொல்லப்பட்ட என் மற்றொரு மகனை {துச்சாசனனைப்} பார்.(20)

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தன் அண்ணனுக்கும் {துரியோதனனுக்கும்}, கர்ணனுக்கும் ஏற்புடையதைச் செய்ய விரும்பிய இந்தத் துச்சாசனன், பகடையில் வெல்லப்பட்ட அந்தப் பாஞ்சால இளவரசியிடம் {திரௌபதியிடம்}, சபைக்கு மத்தியில் வைத்து, “நீ இப்போது ஓர் அடிமையின் மனைவியாவாய். ஓ! பெண்ணே, சகாதேவன், நகுலன் மற்றும் அர்ஜுனனுடன் இப்போது நீ எங்கள் வீட்டுக்குள் நுழைவாயாக” என்றான்[2].(21,22) ஓ!கிருஷ்ணா, அச்சந்தர்ப்பத்தில் நான் மன்னன் துரியோதனனிடம், “ஓ! மகனே {துரியோதனா}, (உன் தரப்பில் இருந்து) கோபம் நிறைந்தவனான சகுனியைக் கைவிடுவாயாக.(23) உன் தாய்மாமன் மிகத் தீய ஆன்மாக் கொண்டவனும், சச்சரவை அதிகம் விரும்புபவனுமாக இருக்கிறான். ஓ! மகனே, தாமதமில்லாமல் அவனைக் கைவிட்டு, பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வாயாக.(24) ஓ! சிறு மதி கொண்டோனே, கோபம் நிறைந்த பீமசேனனைக் குறித்து நீ நினைத்துப் பார்க்கவில்லை. எரிப்பந்தங்களைக் கொண்டு யானையைத் தாக்கும் மனிதனைப் போல நீ உன் வார்த்தைகளெனும் கணைகளால் அவனைத் {பீமனைத்} துளைக்கிறாய்” என்றேன்.(25)ஐயோ, என் வார்த்தைகளை அலட்சியம் செய்த அவன் {துரியோதனன்}, பெருங்காளையின் மீது விஷத்தைக் கக்கும் பாம்பொன்றைப் போலத் தன் வார்த்தை நஞ்சை அவன் {பீமன்} மீதும், ஏற்கனவே சொல்லீட்டிகளால் துளைக்கப்பட்டிருந்த அவர்கள் {பாண்டவர்கள்} மீதும் கக்கினான்.(26) அதோ அங்கே சிங்கத்தால் கொல்லப்பட்ட பெரும் யானையொன்றைப் போல, பீமசேனனால் கொல்லப்பட்டுத் தன் பருத்த கரங்கள் இரண்டையும் விரித்தபடியே துச்சாசனன் உறங்கிக் கொடிருக்கிறான்.(27) பெருங்கோபம் கொண்டவனான பீமசேனனோ, தன் எதிரியின் {துச்சாசனனின்} குருதியைப் போரில் குடித்து மிகப் பயங்கரமான செயலைச்செய்துவிட்டான்” என்றாள் {காந்தாரி}.(28)

மகன்களுக்காகப் புலம்பிய காந்தாரி! – ஸ்திரீ பர்வம் பகுதி – 19- தன் மகன்களான விகர்ணன், துர்முகன், சித்திரசேனன், விவிம்சதி, துஸ்ஸகன் ஆகியோரைச் சுட்டிக்காட்டி, அவர்களது அவல நிலையையும், அவர்களது பெருமையையும் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி…

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா, ஞானியரால் மெச்சப்பட்ட என் மகன் விகர்ணன், பீமனால் கொல்லப்பட்டுப் பயங்கரமாகச் சிதைந்த நிலையில் வெறுந்தரையில் கிடக்கிறான்.(1) ஓ! மதுசூதனா, உயிரை இழந்து (கொல்லப்பட்ட) யானைகளுக்கு மத்தியில் கிடக்கும் விகர்ணன், நீல மேகங்களால் சூழப்பட்ட கூதிர் கால வானத்தத்தில் இருக்கும் சந்திரனைப் போல இருக்கிறான்.(2) தோலுரை பூட்டப்பட்டதும், தொடர்ந்து வில்லேந்துவதால் வடு நிறைந்ததுமான அவனது {விகர்ணனின்} அகன்ற உள்ளங்கையை உண்ணும் விருப்பத்தால் கழுகுகளால் அது கடுமையாகத் துளைக்கப்பட்டிருக்கிறது.(3) ஓ! மாதவா, ஆதரவற்றவளான அவனது மனைவி, அழுகும் பிணத்தை உண்ண விரும்பும் அந்தக் கழுகுகளைச் சிரமத்துடன் விரட்டிக் கொண்டிருக்கிறாள்.(4) ஓ! மாதவா, ஓ! மனிதர்களில் காளையே, இளமை நிறைந்தவனும், துணிச்சல்மிக்கவனும், அழகனும், ஆடம்பரத்திலேயே வளர்க்கப்பட்டவனும், அனைத்து வகை இன்பங்களுக்குத் தகுந்தவனுமான அந்த விகர்ணன், இப்போது புழுதிக்கு மத்தியில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(5) துணிக்கோல் கணைகளாலும் {கர்ணிகளாலும்}, முள்பதித்த கணைகளாலும் {நாராசங்களாலும்}, நாளீங்களாலும் அவனது முக்கியப் பகுதிகள் அனைத்தும் துளைக்கப்பட்டிருந்தாலும், அந்தச் சிறந்த பாரதக் குலத்தவனின் அழகு அவனைக் கைவிடவில்லை.(6)

எதிரிகளின் பெருங்கூட்டத்தைக் கொல்பவனான என் மகன் துர்முகன், சபதத்தை நிறைவேற்றுபவனான வீரப் பீமசேனனால் கொல்லப்பட்டு, எதிரியை நோக்கிய முகத்துடன் அதோ உறங்கிக் கொண்டிருக்கிறான்.(7) ஓ! கிருஷ்ணா, ஓ! குழந்தாய், இரைதேடும் விலங்குகளால் அவனது பாதிமுகம் உண்ணப்பட்டிருந்தாலும், ஏழாம் நாள் வளர்பிறைச் சந்திரனைப் போல அஃது அழகாகத் தெரிகிறது.(8) ஓ! கிருஷ்ணா, நான் சொன்னது போலவே இருக்கும் என் வீர மகனின் {துர்முகனின்} முகத்தைப் பார். அந்த என் மகன் எதிரிகளால் கொல்லப்பட்டு, எவ்வாறு இப்படிப் புழுதியை உண்ணும்படி செய்யப்படலாம்?(9) ஓ! இனியவனே, ஓ! தேவலோகத்தை வெல்பவனே, எவன் முன்னிலையில் எந்த எதிரியாலும் நிற்க முடியாதோ, அந்தத் துர்முகன் எவ்வாறு எதிரிகளால் கொல்லப்படலாம்?(10)

ஓ! மதுசூதனா, வில்லாளிகள் அனைவருக்கும் உதாரண வீரனும், திருதராஷ்டிரரின் மற்றொரு மகனுமான சித்திரசேனன், இதோ கொல்லப்பட்டுத் தரையில் கிடப்பதைப் பார்.(11) மலர்களாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அவனது அழகிய வடிவத்தைச் சுற்றிலும், துயரத்தால் பீடிக்கப்பட்டு, பரிதாபகரமாக அழுது கொண்டு, இரைதேடும் விலங்குகளுடன் இப்போது அமர்ந்திருக்கும் அந்த இளம்பெண்களைப் பார்.(12) ஓ! கிருஷ்ணா, அந்தப் பெண்கள் வெளியிடும் உரத்தத் துன்ப ஓலங்களும், இரை தேடும் விலங்குகளின் இரைச்சலும், முழக்கங்களும் எனக்கு மிக ஆச்சரியமானவையாகத் தெரிகின்றன.(13)

ஓ! மாதவா, இளமை நிறைந்தவனும், அழகனும், எப்போதும் மிக அழகிய பெண்களால் கவனித்துக் கொள்ளப்பட்டவனுமான என் மகன் விவிம்சதி, புழுதிக் கறையுடன் அதோ உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்.(14) அவனது கவசம் கணைகளால் துளைக்கப்பட்டிருக்கிறது. பேரிடருக்கு மத்தியில் கொல்லப்பட்ட அந்த வீர விவிம்சதியை, ஐயோ, இப்போது கழுகுகள் சூழ்ந்து {அவனை உண்பதற்காகக்} காத்திருக்கின்றன.(15) போரில் பாண்டவப் படையணிக்குள் ஊடுருவிய அந்த வீரன், பெருமைக்குரிய க்ஷத்திரியனின் படுக்கையில் இப்போது கிடக்கிறான்.(16) ஓ! கிருஷ்ணா, சிறந்த மூக்காலும், அழகிய புருவங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சந்திரனுக்கு ஒப்பாக, புன்னகையுடனும், பேரழகுடனும் கூடிய அவனது {விவிம்சதியின்} முகத்தைப் பார்.(17) கந்தர்வனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தெய்வீக மங்கையரைப் போல முன்பெல்லாம், பெரும் எண்ணிக்கையிலான மிக அழகிய பெண்கள் அவனுக்காகக் காத்திருப்பார்கள்.(18)

எதிரிகளைக் கொல்லும் வீரனும், சபைகளின் ரத்தினமும், தடுக்கப்பட முடியாத போர்வீரனும், எதிரிகளைத் தடுப்பவனுமான என் மகன் துஸ்ஸஹனை எவரால் தாங்கிக் கொள்ள முடியும்?(19) கணைகளால் மறைக்கப்பட்டிருக்கும் துஸ்ஸஹனின் உடலானது, மலர்ந்திருக்கும் கர்ணீகரங்களால் {கோங்கு மரங்களால்} நிறைந்திருக்கும் ஒரு மலையைப் போலப் பிரகாசமாகத் தெரிகிறது.(20) தங்க மாலையுடனும், பிரகாசமான கவசத்துடனும் கூடிய துஸ்ஸஹன், உயிரையிழந்திருந்தாலும், ஒரு வெண்மலையையோ, நெருப்பையோ போன்று பிரகாசமாகத் தெரிகிறான்” என்றாள் {காந்தாரி}.(21)

பரிதாபமாக அழுத உத்தரை! – ஸ்திரீ பர்வம் பகுதி – 20-உத்தரை அழுதுகொண்டிருப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; அபிமன்யுவின் பெருமைகளைச் சொல்லி அழுத உத்தரை; உத்தரையை இழுத்துச் சென்ற மத்ஸ்யக் குலப் பெண்கள்; விராடன் இறந்து கிடப்பதைக் கண்டு அந்தப் பெண்களும் பெருந்துக்கத்தால் பீடிக்கப்படுவது; அபிமன்யுவைப் போன்றே மேலும் பல இளைஞர்கள் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கிருஷ்ணனிடம் சொன்ன காந்தாரி…

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, “எவன் அவனது தந்தையையும் {அர்ஜுனனையும்}, உன்னையும் விட வலிமையிலும், துணிவிலும் ஒன்றரை மடங்கு மேம்பட்டவனாகக் கருதப்பட்டானோ, எவன் செருக்குமிக்கதும், சீற்றமிக்கதுமான ஒரு சிங்கத்துக்கு ஒப்பானவனாக இருந்தானோ,(1) எவன் எந்தவொரு தொண்டனுமில்லாமல், தனியொருவனாக ஊடுருவப்பட முடியாத எனது மகனின் {துரியோதனனின்} வியூகத்தை ஊடுருவினானோ, எவன் பலருக்குக் காலனாகத் தன்னை நிரூபித்துக் கொண்டானோ, ஐயோ, அவன் {அந்த அபிமன்யு} இப்போது மரணத்திற்கு அடிபணிந்து இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்.(2) ஓ! கிருஷ்ணா, அளவிலா சக்தி கொண்ட வீரனும், அர்ஜுனனின் மகனுமான அபிமன்யு இறந்த பிறகும்கூட அவனது ஒளி மங்காமல் இருப்பதை நான் காண்கிறேன்.(3) அங்கே விராடனின் மகளும், காண்டீவதாரியின் மருமகளும், களங்கமற்ற அழகுடையவளுமான அந்தப் பெண் {உத்தரை}, தன் வீரக் கணவனைக் கண்டு, துயரத்தில் மூழ்கி புலம்பிக் கொண்டிருக்கிறாள்.(4)

ஓ! கிருஷ்ணா, விராடனின் மகளான அந்த {அபிமன்யுவின்} இளம் மனைவி, தன் தலைவனை அணுகி, அவனைத் தன் கரங்களால் மென்மையாகத் தடவிக் கொண்டிருக்கிறாள்.(5) உயர்ந்த நுண்ணறிவையும், பெரும் அழகையும் கொண்ட அந்தப் பெண், முன்பெல்லாம் தேனூட்டப்பட்ட மதுவால் {மத்வீகமது} வெறியூட்டப்பட்டு, வெட்கத்துடன் தன் தலைவனைத் தழுவிக் கொண்டு, முற்றாக மலர்ந்த தாமரைக்கு ஒப்பானதும், சங்கு போன்று மூன்று கோடுகளுடன் கூடிய கழுத்தால் தாங்கிக் கொள்ளப்பட்டதுமான சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} முகத்தில் முத்தமிடுவாள்[1].(6,7) ஓ! வீரா, தன் தலைவனின் கவசத்தைக் கழற்றும் அந்தக் காரிகை {உத்தரை}, தன் துணைவனின் குருதிதோய்ந்த உடலை இப்போது வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.(8)ஓ! கிருஷ்ணா, அந்தப் பெண் {உத்தரை}, தன் தலைவனைக் கண்டு, {உன்னை நோக்கி} உன்னிடம், “ஓ! தாமரைக் கண்ணா, உமக்கு ஒப்பான கண்களைக் கொண்ட இந்த வீரர் கொல்லப்பட்டார்.(9) ஓ! பாவமற்றவரே, வலிமையிலும், சக்தியிலும், ஆற்றலிலும் இவர் உமக்கு இணையானவராக இருந்தார். அழகிலும் இவர் உமக்கு ஒப்பானவரே. இருப்பினும் எதிரியால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்” என்கிறாள்.(10) பிறகு தன் தலைவனிடம் {அபிமன்யுவிடம்} பேசும் அந்தக் காரிகை, “அனைத்து ஆடம்பரங்களுடனும் நீர் வளர்க்கப்பட்டீர். ரங்கு மானின் மென்மையான தோலிலேயே நீர் உறங்குவீர். ஐயோ, இப்படி இன்று வெறுந்தரையில் கிடக்கும் உமது உடல் வலியை உணரவில்லையா?(11) தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், யானைகளின் துதிக்கைகள் இரண்டுக்கு ஒப்பானவையும், வில்லை அடிக்கடி பயன்படுத்துவதால் கடினமடைந்த தோலால் மூடப்பட்டிருப்பவையுமான உமது பருத்த கரங்களை விரித்துக் கொண்டு, ஓ! தலைவா, பயிற்சிக்கூடத்தில் அதிகப் பயிற்சியினால் களைப்படைந்தவரைப் போலவே அமைதியாக உறங்குகிறீர். ஐயோ, இவ்வாறு அழுது கொண்டிருக்கும் என்னிடம் நீர் ஏன் பேசாமலிருக்கிறீர்?(12,13) நான் உமக்கு எக்குற்றமும் இழைத்ததாக எனக்கு நினைவில்லையே. பிறகு ஏன் என்னிடம் நீர் பேசாமலிருக்கிறீர்? முன்பெல்லாம், தொலைவிலேயே என்னைக் கண்டாலும் பேசுவீரே.(14) ஓ! மதிப்புக்குரிய ஐயா, பெரும் மதிப்பிற்குரிய சுபத்திரையையும், தேவர்களுக்கு ஒப்பான இந்த உமது தந்தைமாரையும், துயரால் அழுது கொண்டிருக்கும் பாவியான என்னையும் விட்டுவிட்டு நீர் எங்கே செல்லப் போகிறீர்?” என்று சொல்லி அழுகிறாள்.(15)

ஓ! கிருஷ்ணா, அந்த அழகிய காரிகை {உத்தரை}, குருதி தோய்ந்த தன் தலைவனின் குழல்களைத் திரட்டி, அவனது தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, அவன் உயிரோடிருப்பதைப் போல அவனிடம் {பின்வருமாறு} பேசிக் கொண்டிருக்கிறாள்.(16) அவள் {உத்தரை அபிமன்யுவிடம்}, “வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கை {சுபத்திரை} மகனும், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} மகனுமான உம்மை, போருக்கு மத்தியில் அந்தப் பெரும் தேர்வீரர்களால் எவ்வாறு கொல்ல முடிந்தது?(17) ஐயோ, யாவரால் நீர் உயிரை இழக்கச் செய்யப்பட்டீரோ, தீச்செயல்களைச் செய்பவர்களான அந்தக் கிருபர், கர்ணர், ஜெயத்ரதர், துரோணர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்} உள்ளிட்ட போர்வீரர்களுக்கு ஐயோ.(18) இளம் வயதுடைய போர்வீரரான உம்மைச் சூழ்ந்து கொண்டு, என்னைத் துன்புறுத்த உம்மைக் கொன்ற அந்த நேரத்தில், அந்தப் பெரும் தேர்வீரர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? {அவர்களுடைய மனம் எவ்வாறு உம்மைக் கொல்லத் துணிந்தது}(19) ஓ! வீரரே, பல பாதுகாவலர்களைக் கொண்ட நீர், பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆதரவற்றவராக எவ்வாறு கொல்லப்பட்டீர்?(20)

ஓ! வீரரே {அபிமன்யுவே}, ஒன்று சேர்ந்த பலரால் போரில் நீர் கொல்லப்பட்டதைக் கண்டும், மனிதர்களில் புலியும், பாண்டுவின் மகனுமான உமது தந்தையால் {அர்ஜுனரால்} எவ்வாறு உயிரின் சுமையைத் தாங்கிக் கொள்ள முடிகிறது?(21) ஓ! தாமரைக் கண்ணைக் கொண்டவரே, உம்மை இழந்த பிறகு, பரந்த நாட்டை அடைந்ததோ, எதிரிகளை வீழ்த்தியதோ பார்த்தர்களுக்கு எந்த மகிழ்ச்சியையும் தராது.(22) ஆயுதங்களைப் பயன்படுத்தி அடையப்படும் அருள் உலகங்களுக்கு, நானும் அறம் மற்றும் தற்புலனடக்கப் பயிற்சிகளால் வெகு விரைவில் வந்துவிடுவேன்.(23) போரில் கொல்லப்பட்ட உம்மைக் கண்ட பிறகும், பாவியான நான் இன்னும் மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதால், நேரம் வராதபோது சாக முடியாது என்பது தெரிகிறது.(24) ஓ! மனிதர்களில் புலியே, பித்ருக்களின் உலகத்திற்குச் சென்று, புன்னகையுடன் கலந்த இனிய வார்த்தைகளை என்னிடம் போல வேறு யாரிடம் இப்போது நீர் பேசுவீர்?(25)

உமது பேரழகாலும், புன்னகை கலந்த உமது மென்மையான வார்த்தைகளாலும் சொர்க்கத்தின் அப்சரஸ்களுடைய இதயங்களை நீர் கலங்கடிப்பீர் என்பதில் ஐயமில்லை.(26) ஓ! சுபத்திரையின் மகனே, அறச்செயல்கள் புரிந்தோருக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அடைந்து, அந்த அப்சரஸ்களுடன் இப்போது நீர் கலக்கப் போகிறீர். அவர்களுடன் விளையாடும்போது, நான் உமக்குச் செய்த நற்செயல்களைச் சிற்சில நேரங்களிலாவது நினைத்துப் பார்ப்பீராக.(27) ஓ! வீரரே {அபிமன்யுவே}, {திருமணம் செய்து} ஏழாம் மாதத்தில் நீர் உயிரை இழந்திருப்பதால், இவ்வுலகத்தில் என்னுடனான உமது இணைப்பு ஆறு மாதங்களுக்கே[2] விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது” {என உத்தரை அபிமன்யுவோடு பேசிக் கொண்டிருக்கிறாள்}.(28)ஓ! கிருஷ்ணா, தன் நோக்கங்கள் அனைத்தும் கலங்கடிக்கப்பட்டு இவ்வாறு புலம்பிக்கொண்டிருப்பவளும், துன்பத்தால் பீடிக்கப்பட்டிருப்பவளுமான உத்தரையை மத்ஸ்ய அரசக் குடும்பத்தின் பெண்கள் இழுத்துச் செல்கின்றனர்.(29) உத்தரையை இழுத்துச் செல்லும் அந்தப் பெண்களும், கொல்லப்பட்ட விராடனைக் கண்டு அந்தப் பெண்ணைவிட {உத்தரையைவிட} அதிகம் பீடிக்கப்பட்டு உரத்த ஓலமிட்டு அழுது கொண்டிருக்கின்றனர்.(30) துரோணரின் கணைகளாலும், ஆயுதங்களாலும் சிதைக்கப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்டிருந்த விராடன், அலறும் கழுகுகள், ஊளையிடும் நரிகள் மற்றும் கரையும் காகங்களால் சூழப்பட்டுத் தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறான்.(31) கரிய கண்களைக் கொண்ட அந்த மங்கையர், இன்பமாக அலறிக் கொண்டிருந்த ஊனுண்ணும் பறவைகள் அமர்ந்திருந்ததும், நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்ததுமான மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} உடலைப் புரட்ட முயற்சிக்கின்றனர். துயரால் மிகவும் பீடிக்கப்பட்டுப் பலவீனமடைந்திருக்கும் அவர்களால் தாங்கள் நினைத்ததைச் செய்ய முடியவில்லை {விராடனின் உடலைப் புரட்ட முடியவில்லை}.(32) சூரியனால் எரிக்கப்பட்டு, முயற்சியால் களைப்படைந்திருக்கும் அவர்களது முகங்கள் நிறமற்றவையாக மங்கியிருக்கின்றன.(33) ஓ! மாதவா, அபிமன்யுவைத் தவிர்த்து, {விராட இளவரசனான} உத்தரன், காம்போஜ இளவரசனான சுதக்ஷிணன், அழகன் லக்ஷ்மணன் ஆகிய மற்ற பிள்ளைகள் அனைவரும் கூடப் போர்க்களத்தில் {இவ்வாறே} கிடப்பதைப் பார்” என்றாள் {காந்தாரி}.(34)

ஊனுண்ணும் உயிரினங்களால் உண்ணப்பட்ட கர்ணனின் உடல்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 21-கர்ணனின் உடலைக் கண்டு, கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; கர்ணனின் மனைவிகளான விருஷசேனனின் தாயும், சுஷேனனின் தாயும் வந்து அழுதது; விலங்குகளால் உண்ணப்பட்டு எஞ்சியிருந்த கர்ணனின் உடலைக் கண்ட அவனது மனைவிகள் …

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “பெரும் வில்லாளியும், வலிமைமிக்கவனுமான கர்ணன் அங்கே தரையில் கிடக்கிறான். போரில் அவன் சுடர்மிக்க நெருப்பைப் போன்றவனாக இருந்தான். எனினும், அந்த நெருப்பு, பார்த்தனின் {அர்ஜுனனின்} சக்தியால் அணைக்கப்பட்டது.(1) பல அதிரதர்களைக் கொன்றவனான அந்த விகர்த்தனன் மகன் கர்ணன், குருதியில் நனைந்தபடி, வெறுந்தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைப் பார்.(2) கோபம் நிறைந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அவன், பெரும் வில்லாளியாகவும், வலிமைமிக்கத் தேர்வீரனாகவும் இருந்தான். அவன், காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்டு, இப்போது தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(3) வலிமைமிக்கத் தேர்வீரர்களான என் மகன்கள், யானை மந்தையானது தங்கள் தலைவனை முன்னணியில் கொண்டு போரிடுவதைப் போலப் பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தினால், கர்ணனைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு போரிட்டனர்.(4) ஐயோ, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு புலியைப் போலவோ, மதங்கொண்ட யானையால் கொல்லப்பட்ட மற்றொரு யானையைப் போலவோ அந்தப் போர்வீரன் {கர்ணன்}, சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டிருக்கிறான்.(5)

ஓ! மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, கலைந்த கேசத்துடன், உரத்தத் துன்ப ஓலத்துடனும், ஒன்றுகூடியிருப்பவர்களான அந்தப் போர்வீரனின் மனைவியர், வீழ்ந்துவிட்ட அந்த வீரனைச் சுற்றிலும் அமர்ந்திருக்கின்றனர்.(6) அந்தப் போர்வீரனைக் குறித்த எண்ணங்களால் உண்டான கவலையில் நிறைந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்கு, {கர்ணன் மீது கொண்ட அச்சத்தால்} பதிமூன்று ஆண்டுகளாகக் கண்சிமிட்டும் நேர உறக்கமும் கிட்டவில்லை.(7) போரில் பகைவர்களால் தடுக்கப்பட முடியாதவனும், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனுமான மகவத்தை {இந்திரனைப்} போலவே, கர்ணனும், அண்ட முடிவில் கடுந்தழல்களுடன் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போன்றவனாகவும், அசையாமல் நிற்கும் இமயத்தைப் போன்றவனாகவும் இருந்தான்.(8) ஓ! மாதவா {கிருஷ்ணா}, அந்த வீரனே திருதராஷ்டிரர் மகனின் பாதுகாவலனாகவும் இருந்தான். ஐயோ, காற்றால் வீழ்த்தப்பட்ட மரத்தைப் போலவே அவன் இப்போது உயிரையிழந்து வெறுந்தரையில் கிடக்கிறான்.(9)

கர்ணனின் மனைவியான, விருஷசேனனின் தாய், பரிதாபகரமாக அழுது புலம்பி தரையில் விழுவதைப் பார்.(10) அவள் இப்போது, “உனது ஆசானின் {பரசுராமரின்} சாபம் உம்மைப் பின்தொடர்ந்தது என்பதில் ஐயமில்லை. உமது தேரின் சக்கரம் பூமியால் விழுங்கப்பட்டபோது, கொடூரனான தனஞ்சயன் {அர்ஜுனன்} உமது தலையை ஒரு கணையால் அறுத்துவிட்டான்.(11) ஐயோ, வீரத்திற்கும் திறனுக்கும் ஐயோ” என்று சொல்கிறாள்.

சுஷேனனின் தாயான {மற்றொரு} மங்கை, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான கர்ணன், இடுப்பில் சுற்றிய தங்கக் கச்சையுடன் தரையில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டு மிகவும் பீடிக்கப்பட்டவளாக, துன்பத்தால் கதறியபடியே, தன் உணர்வுகளை இழந்து கீழே விழுகிறாள்.(12)

ஊனுண்ணும் உயிரினங்கள் அந்தச் சிறப்புமிக்க வீரனின் {கர்ணனின்} உடலை உண்டு, அதை {அவ்வுடலை} மிகச் சிறிய அளவாகக் குறைத்தன[1]. தேய்பிறையின் பதினாலாம் இரவில் வரும் நிலவைப் போன்ற அந்தக் காட்சி மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. தன் மகனின் {சுஷேனின்} மரணத்தால் துயரில் எரிந்து கொண்டிருந்த அவள், தன் தலைவனின் {கர்ணனின்} அருகில் வந்து அவனது முகத்தை முகர்கிறாள்” என்றாள் {காந்தாரி}.(14)

காட்டுக்கு இழுத்துச் செல்லப்பட்ட ஜெயத்ரதனின் உடல்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 22-அவந்தியின் மன்னன் மற்றும் பிரதீபனின் மகனான பாஹ்லீகர் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; ஜெயத்ரதன் பாண்டவர்களால் மன்னிக்கப்பட்டதையும், பிறகு அவர்களுடைய மகனைக் கொன்றதால் அவனை மன்னிக்காததையும் சொன்னது; துச்சலையில் நிலையை எடுத்துரைத்த காந்தாரி…

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “பீமசேனனால் கொல்லப்பட்டு, அவந்தியின் தலைவன் இங்கே கிடப்பதைப் பார். கழுகுகள், நரிகள் மற்றும் காகங்கள் அந்த வீரனை உண்கின்றன. அவன் பல நண்பர்களைக் கொண்டவனென்றாலும் இப்போதோ முற்றிலும் நண்பர்களற்றவனாகக் கிடக்கிறான்.(1) ஓ! மதுசூதனா, எதிரிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய அந்தப் போர்வீரன், இப்போது குருதியால் மறைக்கப்பட்டு வீரனின் படுக்கையில் கிடப்பதைப் பார்.(2) நரிகள், கங்கங்கள் மற்றும் பல்வேறு ஊனுண்ணும் பிற உயிரினங்களும் அவனை இப்போது இழுத்துக் கொண்டிருக்கின்றன. காலத்தால் கொண்டவரப்பட்ட மாறுபாடுகளைப் பார்.(3) உயிரோடிருக்கும்போது எதிரிகளைப் பயங்கரமாகக் கொல்பவனும், இப்போது வீரனின் படுக்கையில் கிடப்பவனுமான அவனைச் சுற்றிலும் அவனது மனைவியர் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து கொண்டு துயருடன் அழுதுகொண்டிருக்கின்றனர்.(4)

பிரதீபரின் மகனும், பெரும் சக்தி கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியுமான பாஹ்லீகர், ஓர் அகன்ற தலைக் கணையால் கொல்லப்பட்டு, உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு புலியைப் போல இப்போது தரையில் கிடக்கிறார்.(5) உயிரை இழந்திருந்தாலும், அவரது முகத்தின் நிறமானது, வளர்பிறையின் பதினைந்தாவது நாளில் முழுமையானதாக எழும் சந்திரனைப் போலவே இன்னும் மிகப் பிரகாசமாக இருக்கிறது.(6)

தன் மகனின் மரணம் குறித்த துயரத்தால் எரிந்தும், தன் நோன்பை நிறைவேற்ற விரும்பியும், அந்த இந்திரனின் மகன் (அர்ஜுனன்}, அங்கே அந்தப் பிருஹத்க்ஷத்திரனின் மகனை {ஜெயத்ரதனைக்} கொன்றான்.(7) சிறப்புமிக்கத் துரோணரால் பாதுகாக்கப்பட்ட ஜெயத்ரதன், தன் சபதத்தை நிறைவேற்ற விரும்பிய பார்த்தனால் {அர்ஜுனனால்}, பதினோரு அக்ஷௌஹிணிகளின் துருப்புகளை ஊடுருவிவந்து கொல்லப்பட்டான்.(8) ஓ! ஜனார்த்தனா, மங்கலமற்ற கழுகுகள், செருக்கும் சக்தியும் நிறைந்தவனும், சிந்து-சௌவீரர்களின் தலைவனுமான ஜெயத்ரதனை உண்கின்றன.(9) ஓ! அச்யுதா, அர்ப்பணிப்புமிக்க அவனது மனைவிகள் காக்க முயன்றாலும், ஊனுண்ணும் உயிரினங்கள் அருகில் இருக்கும் காட்டுக்கு அவனது உடலை இழுத்துச் செல்கின்றன.(10) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், சிந்துக்கள் மற்றும் சௌரவீரர்களின் தலைவனுமான அவனது {ஜெயத்ரதனின்} காம்போஜ மற்றும், யவன மனைவியர், (அந்தக் காட்டு விலங்குகளிடம் இருந்து) அவனைப் பாதுகாக்கின்றனர்.(11)

ஓ! ஜனார்த்தனா, கேகயர்கள் துணையுடன் அவன் {ஜெயத்ரதன்} திரௌபதியை அபகரிக்க முயற்சித்த போதே அவன் பாண்டவர்களால் கொல்லத்தக்கவனானான்.(12) எனினும், துச்சலையின் மீது கொண்ட மதிப்பால் அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் அவனை {ஜெயத்ரதனை} விடுவித்தனர். ஓ! கிருஷ்ணா, மீண்டும் துச்சலையின் மீது அதே மதிப்பை ஏன் அவர்கள் காட்டவில்லை?(13) இளம் வயதையுடைந்த அந்த என் மகள் {துச்சலை} இப்போது அழுது கொண்டிருக்கிறாள். அவள், தன் கரங்களால் தன் உடலை அடித்துக் கொண்டு, பாண்டவர்களை நிந்தித்துக் கொண்டிருக்கிறாள்[1].(14) ஓ! கிருஷ்ணா, இளம் வயதையுடைய என் மகள் {துச்சலை} விதவையாகவும், என் மருமகள்கள் அனைவரும் தலைவர்களற்றவர்களாகவும் செய்யப்பட்டதைவிட வேறு என்ன பெரிய துயரம் எனக்கு இருக்க முடியும்?(15)ஐயோ, ஐயோ, என் மகள் துச்சலை, துயரம் மற்றும் அச்சமனைத்தையும் கைவிட்டு, தன் கணவனின் தலையைத் தேடி அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்.(16) தங்கள் மகனை {அபிமன்யுவைக்} காக்க விரும்பிய பாண்டவர்கள் அனைவரையும் எவன் தடுத்து நிறுத்தினானோ, எவன் ஒரு பரந்த படையைக் கொல்லும் காரணமாக அமைந்தானோ, அவன் {ஜெயத்ரதன்}, இறுதியாக மரணத்திற்கு அடிபணிந்தான்.(17) ஐயோ, சந்திரனைப் போன்ற அழகிய முகங்களைக் கொண்ட அவனது மனைவியர், மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவனான அந்தத் தடுக்கப்பட முடியாத வீரனைச் சுற்றிலும் அமர்ந்து, அழுதுகொன்றிருக்கின்றனர்” என்றாள் {காந்தாரி}.(18)

துரோணரின் பாதங்களை இழுத்துச் சென்ற நரிகள்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 23-சல்லியன், பகதத்தன், பீஷ்மர், துரோணர் ஆகியோர் வீழ்ந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; அவர்கள் ஒவ்வொருவரின் பெருமையையும் சொன்னது; துரோணர் ஈமச்சிதையிலிடப்பட்டு அவருக்கான இறுதிச்சடங்குகள் நடைபெறுவதைக் கிருஷ்ணனுக்குச் சொன்ன காந்தாரி …

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! ஐயா, நகுலனின் தாய்மாமனான சல்லியன், பக்திமானும், அறவோனுமான யுதிஷ்டிரனால் போரில் கொல்லப்பட்டு அங்கே கிடக்கிறான்.(1) ஓ! மனிதர்களில் காளையே, அவன் {சல்லியன்} எப்போதும் உனக்கு இணையானவன் என்று சொல்லி தற்பெருமை பேசிக் கொள்வான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} உயிரையிழந்து கிடக்கிறான்.(2) போரில் கர்ணனின் சாரதி நிலைய ஏற்றபோது அவன் {சல்லியன்}, பாண்டு மகன்களின் வெற்றிக்காகக் கர்ணனின் சக்தியைக் குறைக்க முயன்றான்.(3) ஐயோ, ஐயோ, சந்திரனைப் போன்று அழகானதும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சல்லியனின் மென்மையான முகம், காகங்களால் உண்ணப்படுவதைப் பார்.(4) ஓ! கிருஷ்ணா, புடம்போட்ட தங்கத்தின் நிறத்தில் இருக்கும் அம்மன்னனின் {சல்லியனின்} நாவு, அவனது வாயிலிருந்து வெளியேறி, ஊனுண்ணும் பறவைகளால் உண்ணப்படுகிறது.(5)

மத்ர அரசக் குடும்பத்தின் மங்கையர், யுதிஷ்டிரனால் உயிரை இழக்கச் செய்யப்பட்டவனும், சபைகளின் ரத்தினமுமாமான அம்மன்னனின் {சல்லியனின்} உடலைச் சுற்றி அமர்ந்து கொண்டு துன்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.(6) அந்தப் பெண்கள், பருவகாலத்தில் இருக்கும் பெண்யானைக் கூட்டமானது, சகதியில் மூழ்கும் தங்கள் தலைவனைச் சுற்றி இருப்பதைப் போல வீழ்ந்துவிட்ட அந்த வீரனைச் சுற்றிலும் அமர்ந்திருக்கின்றனர்.(7,8) துணிச்சல்மிக்கவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், அந்தச் சல்லியன், கணைகளால் உடல் சிதைக்கப்பட்டு, வீரர்களுக்கான படுக்கையில் நீண்டு கிடக்கிறான்.(9)

பேராற்றலைக் கொண்டவனும், மலை நாட்டு ஆட்சியாளனும், யானை அங்குசம் தரிப்போர் அனைவரில் முதன்மையானவனுமான மன்னன் பகதத்தரும், உயிரை இழந்து அங்கே தரையில் கிடக்கிறார்.(10) அவர் தலையில் அணிந்திருக்கும் தங்கமாலை இன்னும் பிரகாசமாக இருப்பதைப் பார். இரைதேடும் விலங்குகளால் அவனது உடல் உண்ணப்பட்டாலும், அந்த மாலையானது இன்னும் அவரது தலையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.(11) இந்த மன்னனுக்கும் {பகதத்தனுக்கும்} பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த போரானது, சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, அசுரன் விருத்திரனுக்கும் இடையில் நடந்ததைப் போல மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிகக் கடுமையானதாக இருந்தது.(12) அந்த வலிய கரத்தோன், பிருதையின் மகனான தனஞ்சயனுடன் போரிட்டு, அவனைப் பெருஞ்சிக்கலில் ஆழ்த்தி, இறுதியில் தன் எதிராளியால் கொல்லப்பட்டார்.(13)

வீரத்திலும், சக்தியிலும் இவ்வுலகத்தில் ஒப்பில்லாதவரும், போரில் பயங்கரச் சாதனைகளை அடைந்தவருமான பீஷ்மர் உயிரை போகக் கிடக்கிறார்.(14) ஓ! கிருஷ்ணா, சூரியப் பிரகாசம் கொண்ட அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, யுகத்தின் முடிவில் ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனைப் போலப் பூமியில் நீண்டு கிடப்பதைப் பார்.(15) ஓ! கேசவா, போரில் தன் ஆயுதங்களின் நெருப்பால் எதிரிகளை எரித்தவரும், வீரமிக்கவரும், மனிதர்களில் சூரியனுமான அந்த வீரர், உண்மையான சூரியனைப் போலவே மாலையில் மறைந்தார்.(16) ஓ! கிருஷ்ணா, கடமையறிவில் {தன் பெரியப்பாவான} தேவாபிக்கு இணையான அந்த வீரர் {பீஷ்மர்}, வீரர்களுக்குத் தகுந்த கணைகளின் படுக்கையில் இப்போது கிடப்பதைப் பார்.(17) நாணற்கட்டில் கிடக்கும் தெய்வீக ஸ்கந்தனைப் போல, முள்பதித்த மற்றும் முள் பதிக்கப்படாத கணைகளாலான {கர்ணிகள் மற்றும் நாளீகங்களாலான} அவரது சிறந்த படுக்கையில் நீண்டு கிடக்கிறார்.(18) உண்மையில், கங்கையின் மைந்தன், தன் படுக்கைக்கான அன்பளிப்பாகக் காண்டீவதாரியால் கொடுக்கப்பட்டதும், மூன்று கணைகளாலானதுமான சிறந்த தலையணையில் தன் தலையைச் சாய்த்துக் கிடக்கிறார்.(19) தன் தந்தையின் {சந்தனுவின்} ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதற்காக {தன் தந்தையின் விருப்பம் நிறைவேறுவதற்காக} இந்தச் சிறந்தவர் தன் உயிர்நீரை மேலெழுப்பினார். ஓ! மாதவா, போரில் ஒப்பற்றவரான அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} இதோ இங்கே கிடக்கிறார்.(20)

அற ஆன்மா கொண்டவரும், ஈருலகங்கள் சம்பந்தமான தன் அறிவின் துணையுடன் அனைத்துக் கடமைகளையும் அறிந்தவருமான அந்த வீரர், இறப்புக்குரிய மனிதராக இருந்தும், இறவாதவரைப் போலத் தன் உயிரை இன்னும் பிடித்துக் கொண்டிருக்கிறார்.(21) கணைகளால் தாக்கப்பட்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கிடக்கும் இன்று, கல்வி, ஆற்றல் மற்றும் போரில் அடையத்தக்க பெருஞ்சாதனைகளைக் கொண்ட வேறு எந்த மனிதனும் இவ்வுலகில் இல்லை என்று தெரிகிறது.(22) பேச்சில் உண்மையுள்ளவராக இருந்த இந்த அறமும், நீதியும் மிக்க வீரர் {பீஷ்மர்}, பாண்டவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டதும், தன் மரணத்திற்கான வழியைத் தானே சொன்னார்.(23) ஐயோ, அருகிக் கிடந்த குரு பரம்பரையை எவர் மீட்டாரோ, பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கவர், குருக்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு இவ்வுலகைவிட்டுச் செல்கிறார்.(24) ஓ! மாதவா, தேவனுக்கு ஒப்பானவரும், மனிதர்களில் காளையுமான தேவவிரதர் {பீஷ்மர்} சொர்க்கத்திற்குச் சென்ற பிறகு, குருக்கள் அறம் குறித்தும், கடமை {நீதிகள்} குறித்தும் யாரிடம் கேட்பார்கள்?(25)

பிராமணர்களில் முதன்மையானவரும், அர்ஜுனன், சாத்யகி மற்றும் குருக்களின் ஆசானுமான துரோணர், தரையில் கிடப்பதைப் பார்.(26) ஓ! மாதவா {கிருஷ்ணா}, அந்தத் துரோணர், பெருஞ்சக்தி கொண்டவராகவும், தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போன்றோ, பிருகு குலத்தின் சுக்கிரனைப் போன்றோ நால்வகை ஆயுதங்களையும் அறிந்தவராக இருந்தார்.(27) அவரது அருளாலேயே, பாண்டுவின் மகனான பீபத்சு {அர்ஜுனன்} மிகக்கடுஞ்சாதனைகளை அடைந்தான். {அப்படிப்பட்ட} அவர் உயிரை இழந்து இப்போது தரையில் கிடக்கிறார். (இறுதியில்) ஆயுதங்கள் அவரது உத்தரவுக்கு ஏற்ப இருப்புக்கு வர மறுத்தன.(28) அவரைத் தலைமையில் கொண்டே கௌரவர்கள் பாண்டவர்களை அறைகூவியழைத்தனர். ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அவர், இறுதியில் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டார்.(29) அனைத்துத் திசைகளிலும் தன் எதிரிகளை எரித்தபடியே போரில் அவர் திரிந்த போது, அவரது போக்கு காட்டுத்தீக்கு ஒப்பானதாக இருந்தது. ஐயோ, உயிரை இழந்த அவர் அணைந்த நெருப்பைப் போல இப்போது தரையில் கிடக்கிறார்.(30)

வில்லின் கைப்பிடி இன்னும் அவரது {துரோணரது} பிடியில் இருக்கிறது[1]. ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவரது விரல்கள் இன்னும் தோலுரைகளுடன் இருக்கின்றன. கொல்லப்பட்டாலும் அவர் இன்னும் உயிருடன் இருப்பவரைப் போலே இருக்கிறார்.(31) ஓ! கேசவா, நான்கு வேதங்களும், அனைத்து வகை ஆயுதங்களும் எவ்வாறு தலைவன் பிரஜாபதியைக் கைவிடவில்லையோ அவ்வாறே இந்த வீரரையும் கைவிடவில்லை.(32) துதிகள் அனைத்திற்கும் தகுந்தவையும், பாணர்கள் மற்றும் துதிபாடிகளால் உண்மையில் துதிக்கப்படுபவையும், சீடர்களால் வழிபடப்படுபவையுமான அவரது {துரோணரது} மங்கலப் பாதங்கள், இப்போது நரிகளால் இழுத்துச் செல்லப்படுகின்றன.(33) ஓ! மாதவா, துயரால் புலனுணர்வுகளை இழந்த கிருபி, துருபதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} கொல்லப்பட்ட துரோணரைத் துயரத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.(34) துயரால் பீடிக்கப்பட்டிருக்கும் அந்த மங்கை {கிருபி}, கலைந்த கேசத்துடன், தலையைத் தொங்கப் போட்டப்படி பூமியில் விழுவதைப் பார்.(35) தலையில் சடாமுடி தரித்தவர்களான பிரம்மச்சாரிகள் பலர், திருஷ்டத்யும்னனின் கணைகளால் ஊடுருவி பிளக்கப்பட்ட கவசத்துடன் கூடிய துரோணரின் உடலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.(36)சிறப்புமிக்கவளும், மென்மையானவளுமான கிருபி, உற்சாகமற்றவளாக, துயரில் பீடிக்கப்பட்டவளாக, போரில் கொல்லப்பட்ட தன் தலைவனின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய முயல்கிறாள்.(37) சாமங்களை {சாமவேதத்தை} உரைப்பவர்கள், துரோணரின் உடலை ஈமச்சிதையில் நிறுத்தி, உரிய சடங்குகளுடன் நெருப்பை மூட்டி, (நன்கறியப்பட்ட) மூன்று சாமங்களைப் பாடிக் கொண்டிருக்கின்றனர்.(38) ஓ! மாதவா, தலையில் சடாமுடி தரித்திருக்கும் அந்தப் பிரம்மச்சாரிகள், அந்தப் பிராமணரின் {துரோணரின்} ஈமச்சிதையில் விற்கள், ஈட்டிகள், தேர்க்கூடுகள் ஆகியவற்றைக் குவிக்கின்றனர்.(39) பெருஞ்சக்திகொண்ட அந்த வீரர் {துரோணர்}, பல்வேறு வகைக் கணைகளைத் திரட்டிக் கொண்டு இருந்த அவற்றில் எரிக்கப்படுகிறார். உண்மையில் அவர்கள், சிதையில் அவரை அமர்த்தி, பாடவும், அழவும் செய்கின்றனர்.(40) வேறு சிலர், இத்தகு சூழ்நிலைகளில் உரைக்கப்படும் (நன்கறியப்பட்ட) மூன்று சாமங்களை உரைக்கின்றனர். நெருப்பில் நெருப்பாக அந்நெருப்பில் துரோணரை எரித்தவர்களும்,(41) மறுபிறப்பாள {பிராமண} வகையைச் சார்ந்தவர்களுமான அவரது {துரோணரது} சீடர்கள், அந்தச் சிதைக்கு இடப்புறமாக, கிருபியைத் தங்கள் தலைமையில் கொண்டு கங்கைக் கரையை நோக்கிச் செல்கின்றனர்[2]” என்றாள் {காந்தாரி}.(42)(துரோணரின் இறுதிச்சடங்கில் அஸ்வத்தாமன் பங்குபெறவில்லை என்பது இங்கே தெரிகிறது. பெண்ணான கிருபி, ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்கிறாள்.)

சகுனியிடம் அச்சங்கொள்கிறேன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 24-பூரிஸ்ரவஸ், சோமதத்தன் மற்றும் சகுனி ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; பூரிஸ்ரவஸின் தாய் மற்றும் அவனது மனைவியர் ஆகியோரின் அழுகையை விவரித்துச் சொன்னது; சகுனி இறந்தாலும், அவனைக் குறித்து அஞ்சுவதாகக் கிருஷ்ணனிடம் சொன்ன காந்தாரி …

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்ட சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, பெரும் எண்ணிக்கையிலான பறவைகளால் கொத்திக் கிழிக்கப்படுவதைப் பார்.(1) ஓ! ஜனார்த்தனா, (அங்கே கிடக்கும்) சோமதத்தன், தன் மகனின் மரணத்தால் துயரில் எரிந்து பெரும் வில்லாளியான யுயுதானனை {சாத்யகியை} நிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.(2) களங்கமற்ற பெண்ணும், துயரில் மூழ்கிருப்பவளுமான பூரிஸ்ரவஸின் தாய், அங்கே தன் தலைவன் சோமதத்தனிடம்,(3) “ஓ! மன்னா, யுகமுடிவில் நேரும் காட்சிகளுக்கு ஒப்பான குருக்களின் நிர்மூலத்தையும், பாரதர்களுக்கு ஏற்பட்ட இந்தப் பேரழிவையும் நீர் காணாதது நற்பேற்றாலேயே.(4) கொடியில் வேள்விக்கம்பத்தை {யூபத்தைக்} கொண்டவனும், அனைவருக்கும் பெருங்கொடைகள் கொடுக்கப்பட்ட எண்ணற்ற வேள்விகளைச் செய்தவனுமான உமது வீர மகன் {பூரிஸ்ரவஸ்} போர்க்களத்தில் கொல்லப்படுவதை நீர் காணாததும் நற்பேற்றாலேயே.(5)

கடலுக்கு மத்தியில் நாரைக்கூட்டம் கதறுவதைப் போல, இந்தப் பேரழிவுக்கு மத்தியில் அச்சம்நிறைந்திருப்பவர்களான உமது மருமகள்கள் துயரத்துடன் கதறுவதை நீர் கேட்காததும் நற்பேற்றாலேயே.(6) ஒற்றையாடை உடுத்தியிருப்பவர்களும், கருகுழல்கள் கலைந்தவர்களும், கணவர்கள் மற்றும் மகன்களை இழந்தவர்களான உமது மருமகள்கள், அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(7) அர்ஜுனனால் வீழ்த்தப்பட்டுக் கரங்களை இழந்தவனும், உமது மகனுமான அந்த மனிதர்களில் புலி {பூரிஸ்ரவஸ்}, இரைதேடும் விலங்குகளால் இப்போது விழுங்கப்படுவதை நீர் காணாதது நற்பேற்றாலேயே.(8) போரில் கொல்லப்பட்ட உமது மகன் சலனையும், உயிரை இழந்த பூரிஸ்ரவஸையும், துயரில் மூழ்கி விதவைகளாகியிருக்கும் உமது மருமகள்களையும் இன்று நீர் காணாதது உமது நற்பேற்றாலேயே.(9) வேள்விக்கம்பத்தைத் தன் கொடிமரத்தில் கொண்டிருந்த அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் தங்கக் குடை கிழிக்கப்பட்டு, அவனது தேர்த்தட்டில் நொறுக்கப்பட்டிருப்பதை நீர் காணாததும் நற்பேற்றாலேயே” என்கிறாள் {பூரிஸ்ரவஸின் தாய்}.(10)

பூரிஸ்ரவஸின் கருங்கண் மனைவியர், சாத்யகியால் கொல்லப்பட்ட தங்கள் தலைவனைச் சூழ்ந்து கொண்டு அங்கே பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.(11) ஓ! கேசவா {கிருஷ்ணா}, தங்கள் தலைவன் கொல்லப்பட்ட துயரால் பீடிக்கப்பட்டு, பயங்கரப் புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அம்மங்கையர், தரையை நோக்கிய முகங்களுடன் பூமியில் விழுந்து, மெதுவாக உன்னை அணுகுகின்றனர். அவர்கள்,(12) “ஐயோ, தூய செயல்பாடுகளைக் கொண்ட அர்ஜுனன், வேள்வி செய்வதில் அர்ப்பணிப்புள்ளவரான இந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர் {பூரிஸ்ரவஸ்} கவனமில்லாமல் இருந்தபோது, அவரது கரங்களைத் தாக்கி வீழ்த்தி இத்தகு நிந்திக்கத்தக்க செயலை ஏன் செய்தான்? ஐயோ, பிராய நோன்பை நோற்று அமர்ந்திருந்தவரும், தன்னடக்கம் கொண்டவருமான அந்த மனிதரின் உயிரை எடுத்ததன் மூலம் சாத்யகி இன்னும் அதிகப் பாவத்தைச் செய்திருக்கிறான்.(14) ஐயோ, ஓ! நேர்மையாளரே {அறவோனே}, நியாயமற்ற {அதர்மமான} முறையில் இரண்டு எதிரிகளால் கொல்லப்பட்டு, நீர் தரையில் கிடக்கிறீர்” என்கின்றனர். ஓ! மாதவா, பூரிஸ்ரவஸின் இரு மனைவியரும் இவ்வாறே துயரத்தால் உரக்க அழுகின்றனர்.(15)

அங்கே, கொடியிடை கொண்டோரான அந்தப் போர்வீரனின் மனைவியர், வெட்டப்பட்ட தன் தலைவனின் கரத்தைத் தங்கள் மடியில் வைத்துக் கொண்டு கடுமையாக அழுகின்றனர்.(16) அவர்களில் ஒருத்தி, “அழகிய பெண்களின் இடுப்புக்கச்சைக்குள் புகுந்து, பருத்த முலைகளைக் கசக்கி, தொப்பு, தொடைகள் மற்றும் இடைகளைத் தீண்டி, அவர்களால் உடுத்தப்படும் அரைக்கச்சின் முடிச்சுகளைத் தளர்த்தும் அந்தக் கரம் இதோ.(17) எதிரிகளைக் கொன்று, நண்பர்களின் அச்சத்தை அகற்றி, ஆயிரம் பசுக்களைக் கொடையளித்து, போரில் க்ஷத்திரியர்களை நிர்மூலமாக்கிய அந்தக் கரம் இதோ.(18) களங்கமில்லாச் செயல்களைச் செய்யும் அர்ஜுனன், வேறொருவருடன் போரிட்டுக் கவனமில்லாமல் இருந்த உமது கரத்தை, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வெட்டினான்.(19) ஓ! ஜனார்த்தனா, சபைகளுக்கு மத்தியில் பேசும்போது, அர்ஜுனனின் இந்தப் பெரும் சாதனையை எவ்வாறு நீ சொல்லப் போகிறாய்? அந்தக் கிரீடியே {அர்ஜுனனே} கூட என்ன சொல்லப் போகிறான்?” என்கிறாள்.(20) அந்தப் பெண்களில் முதன்மையானவள் {தன் புலம்பல்களை}, உன்னை இவ்வாறு நிந்தித்துவிட்டு, இறுதியாக நிறுத்திக் கொண்டாள். அந்தப் பெண்மணியின் சக்காளத்திகள், அவள் ஏதோ தங்கள் மருமகளைப் போல அவளுடன் சேர்ந்து பரிதாபகரமாக ஒப்பாரியிடுகின்றனர்.(21)

கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவனும், காந்தாரர்களின் தலைவனுமான வலிமைமிக்கச் சகுனி, சகோதரியின் மகனால் கொல்லப்படும் தாய்மாமனாக, சகாதேவனால் கொல்லப்பட்டு இதோ கிடக்கிறான்.(22) முன்பெல்லாம் தங்கக் கைப்பிடிகளைக் கொண்ட இரு விசிறிகளால் இவன் எப்போதும் விசிறப்படுவான். ஐயோ, இப்போது நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவன் {சகுனி}, பறவைகளின் சிறகடிப்பால் விசிறப்படுகிறான்.(23) இவன் {சகுனி} நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வடிவங்களை ஏற்பவனாவான். எனினும், பெரும் மாயசக்திகளைக் கொண்ட இவனது மாயைகள் அனைத்தும், பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} சக்தியால் எரிக்கப்பட்டுவிட்டன.(24) வஞ்சகத்தில் திறன்மிக்க அவன் {சகுனி}, தன் மாய சக்தியால் சபையில் யுதிஷ்டிரனை வென்று, பரந்த நாட்டை வென்றான். எனினும், இப்போது அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} சகுனியின் உயிர்மூச்சையே வென்றுவிட்டான்.(25)

ஓ! கிருஷ்ணா, பெரும் எண்ணிக்கையிலான பறவைகள் இப்போது சகுனியைச் சுற்றி அமர்ந்திருப்பதைப் பார். பகடையில் திறன் மிக்க இவன் {சகுனி}, ஐயோ, அத்திறனை என் மகன்களின் அழிவுக்காகவே அடைந்திருக்கிறான்.(26) என் பிள்ளைகளுக்கும், இந்தச் சகுனிக்கும், இவனைப் பின்தொடர்ந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் அழிவை உண்டாக்கிய பாண்டவர்களுடனான இந்தப் பகைமையெனும் நெருப்பு இவனாலேயே {இந்தச் சகுனியாலேயே} தூண்டப்பட்டது.(27) ஓ! பலமிக்கவனே, ஆயுதம் பயன்படுத்துவதன் மூலம் என் மகன்கள் அடைந்ததைப் போலவே, தீயவனாக இருப்பினும், ஆயுதங்களைப் பயன்படுத்தி {அழிந்ததால்} அருள் உலகங்கள் பலவற்றை இவனும் அடைந்துவிட்டான்.(28) ஓ! மதுசூதனா, இந்தக் கோணல்புத்திக்காரன் {சகுனி}, நம்பிக்கையுள்ளவர்களும், பாகுபாடற்றவர்களுமான என் பிள்ளைகளுக்குள், அங்கேயும் சச்சரவை உண்டாக்கி விடக்கூடாதே என்பதே என் அச்சமாக இருக்கிறது” என்றாள் {காந்தாரி}.(29)

கிருஷ்ணனைச் சபித்த காந்தாரி! – ஸ்திரீ பர்வம் பகுதி – 25- காம்போஜ மன்னன் சுதக்ஷிணன், கலிங்க மன்னன் சுருதாயுஷ், மகத மன்னன் ஜயத்சேனன், கோசல மன்னன் பிருஹத்பலன் திருஷ்டத்யும்னனின் மகன்கள், கேகேயச் சகோதரர்கள் ஐவர், பாஞ்சால மன்னன் துருபதன், சேதி நாட்டு மன்னன் திருஷ்டகேது, திருஷ்டகேதுவின் மகன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; தன் மகன்கள் எரிக்கப்படப் போவதை நினைத்து மயக்கமடைந்து கீழே விழுந்தது; பேரழிவைத் தடுக்காமல் அலட்சியமாக இருந்ததற்காகக் கிருஷ்ணனைச் சபித்த காந்தாரி; சாபத்தை மயக்கப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட கிருஷ்ணன்…

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா, காம்போஜ படுக்கைவிரிப்பில் சுகமாகக் கிடக்கத்தகுந்தவனும், காம்போஜர்களின் தடுக்கப்பட முடியாத ஆட்சியாளனும், காளையின் கழுத்தைக் கொண்டவனுமான இந்த வீரன் {காம்போஜ மன்னன் சுதக்ஷிணன்}, புழுதிக்கு மத்தியில் கிடப்பதைப் பார்.(1) பெரும் துயரில் பீடிக்கப்பட்டிருக்கும் அவனது மனைவி, முன்பு சந்தனக்குழம்பால் பூசப்பட்டதும், இப்போது குருதி படிந்திருப்பதுமான அவனது கரத்தைக் கண்டு அழுது கொண்டிருக்கிறாள்.(2) 

உண்மையில் அந்த அழகி, “அழகிய உள்ளங்கைகளாலும், அருள்நிறைந்த விரல்களாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பவையும், அணைக்கையில் ஒருபோதும் ஒரு கணமும் இன்பம் என்னைவிட்டு விலகாதபடி செய்தவையுமான இந்த உமது இரு கரங்களும், இப்போதும் இரு பரிகங்களுக்கு ஒப்பானவையாகவே இருக்கின்றன.(3) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {சுதஷிணரே}, உம்மை இழந்திருக்கும் நான் என்ன கதியை அடையப்போகிறேன்” என்று சொல்கிறாள். இனிய மெல்லிய குரலைக் கொண்ட அந்தக் காம்போஜ ராணி, உணர்ச்சிகளுடன் நடுங்கியவாறே ஆதரவற்றவளாக அழுது கொண்டிருக்கிறாள்.(4) அங்கே இருக்கும் அழகிய பெண்களின் கூட்டத்தைப் பார். தேவர்களால் அணியப்படும் மாலைகள் சூரியனுக்கு வெளிப்பட்டாலும் அழகாக இருப்பது போலத் துன்பத்தால் களைப்படைந்தாலும், வெப்பத்தால் வாட்டப்பட்டாலும் அவர்களது வடிவங்களின் அழகு குலையவில்லை.(5)

ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இரண்டு அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வலிமைமிக்கக் கரங்களுடன் கூடிய கலிங்கர்களின் வீர ஆட்சியாளன் {சுருதாயுஷ்} தரையில் கிடப்பதைப் பார்.(6)

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, மகத ஆட்சியாளனான ஜயத்சேனனைச் சுற்றி நின்று அழும் அந்த மகதப் பெண்களைப் பார்.(7) அகன்ற விழிகளையும், இனிய குரலையும் கொண்ட அந்தப் பெண்களின் அழகான மற்றும் மென்மையான ஓலங்கள் என் இதயத்தை அதிகம் திகைப்படைச் செய்கின்றன.(8) ஆபரணங்கள் அனைத்தும் தளர்ந்த நிலையில் துயரால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருப்பவர்களும், விலைமதிப்புமிக்கப் படுக்கைகளில் ஓய்வெடுக்கத் தகுந்தவர்களுமான அந்த மகதப் பெண்கள், ஐயோ, இப்போது வெறுந்தரையில் கிடக்கின்றனர்.(9)

மேலும், கோசலர்களின் ஆட்சியாளனும், தங்கள் தலைவனுமான இளவரசன் பிருஹத்பலனைச் சுற்றியிருக்கும் வேறு சில பெண்கள், உரத்த ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.(10) அபிமன்யுவால்கரங்களின் முழு வலிமையுடன் துளைக்கப்பட்ட கணைகளை, அவனது {பிருஹத்பலனின்} உடலில் இருந்து பிடுங்கும் அந்தப் பெண்கள், மீண்டும் மீண்டும் மயங்கி விழுங்கின்றனர்.(11) ஓ! மாதவா, களைப்பாலும், சூரியனின் கதிர்களாலும் பீடிக்கப்படும் அந்த அழகிய பெண்களின் முகங்கள் இப்போது ஒளிமங்கிய தாமரைகளைப் போலத் தெரிகின்றன.(12)

இளம்வயதுடையவர்களும், தங்க மாலைகள் மற்றும் அழகிய அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும் துணிச்சல்மிக்கவர்களுமான திருஷ்டத்யும்னனின் மகன்கள், துரோணரால் கொல்லப்பட்டு அங்கே கிடக்கின்றனர்.(13) சுடர்மிக்க நெருப்பில் விழும் பூச்சிகளைப் போல அவர்கள் அனைவரும், நெருப்பறையைப் போன்ற தேரையும், தழல்களேயான விற்களையும், விறகுகளேயான கணைகள், ஈட்டிகள் மற்றும் கதாயுதங்களையும் கொண்ட துரோணரின் மேல் பாய்ந்து எரிக்கப்பட்டனர்.(14)

அதே போலவே, பெரும் துணிவைக் கொண்டவர்களும், அழகிய அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஐந்து கேகேய சகோதரர்களும், துரோணரை நோக்கித் திரும்பிய அவர்களின் முகங்களுடன் அவரால் {துரோணரால்} கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கின்றர்.(15) புடம்போட்ட தங்கத்தின் காந்தியைக் கொண்டவையும், தங்கத்தாலானவையுமான கவசங்கள், கொடிமரங்கள், தேர்கள், மாலைகள் சுடர்மிக்கப் பல நெருப்புகளைப் போலப் பூமியில் பிரகாசமான ஒளியைச் சிந்துகின்றன.(16)

ஓ! மாதவா {கிருஷ்ணன்}, துரோணரால் வீழ்த்தப்பட்ட மன்னன் துருபதன், ஒரு பெருஞ்சிங்கத்தால் கொல்லப்பட்டுக் காட்டில் கிடக்கும் வலிமைமிக்க யானையைப் போல அங்கே கிடப்பதைப் பார்.(17) ஓ! தாமரைக்கண்ணா, வெண்மையான நிறம் கொண்ட பாஞ்சாலர்களின் மன்னனுடைய பிரகாசமான குடையானது, கூதிர்கால ஆகாயத்தின் சந்திரனைப் போல இருக்கிறது.(18) அந்த முதிய மன்னனின் மனைவியரும், மருமகள்களும், துயரால் பீடிக்கப்பட்டு, ஈமச்சிதையில் அவனது {துருபதனது} உடலை எரித்துவிட்டு, அந்தச் சிதையைத் தங்கள் வலப்பக்கம் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.(19)

அதோ அங்கே, உணர்வுகளை இழந்தவர்களான அந்தப் பெண்கள், துரோணரால் கொல்லப்பட்டவனும், பெரும் வில்லாளியும், துணிச்சல்மிக்கவனும், சேதிகளில் காளையுமான திருஷ்டகேதுவை அகற்றிக் கொண்டிருக்கின்றனர்.(20) ஓ! மதுசூதனா, எதிரிகளை நொறுக்குபவனான இந்தப் பெரும் வில்லாளி {திருஷ்டகேது}, துரோணரின் பல ஆயுதங்களைக் கலங்கடித்துவிட்டு, காற்றால் வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரத்தைப் போல உயிரை இழந்து இங்கே கிடக்கிறான்.(21) ஐயோ, துணிச்சல்மிக்கச் சேதிகளின் ஆட்சியாளனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான இந்தத் திருஷ்டகேது, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்றுவிட்டு, தானே உயிரையிழந்து இங்கே கிடக்கிறான்.(22) ஓ! ரிஷிகேசா, சேதிகளின் ஆட்சியாளனுடைய உடல் ஊனுண்ணும் பறவைகளால் கிழிக்கப்பட்டாலும், இன்னும் அழகிய குழல்களுடனும், அழகிய காது குண்டலங்களுடனும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அதை {அந்த உடலைச்} சுற்றி அவனுடைய மனைவியர் அமர்ந்திருக்கின்றனர்.(23) அந்தப் பெண்களில் முதன்மையானோர், தசார்ஹ குலத்தில் பிறந்த அந்த வீர திருஷ்டகேதுவின் நெடிய உடலைத் தங்கள் மடியில் கிடத்திக் கொண்டு, சோகத்தால் அழுது கொண்டிருக்கின்றனர்.(24)

ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, அழகிய குழல்களையும், சிறந்த காது குண்டலங்களையும் கொண்டவனும், துரோணரின் கணைகளால் போரில் கொல்லப்பட்ட திருஷ்டகேதுவின் மகனைப் பார்.(25) அவன், தன் தந்தை எதிரிகளுடன் போரிட்ட போது ஒருபோதும் அவனை விட்டு அகவில்லை. ஓ! மதுசூதனா, மரணத்தில்கூட அவன் தன் வீரத் தந்தையை விட்டு அகலவில்லை பார்.(26)

அதே போலவே, பகைவர்களைக் கொல்பவனான எனது மகனின் {துரியோதனின்} மகனும் {பேரனும்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான லக்ஷ்மணனும் அவனது தந்தையான துரியோதனனைப் பின்தொடர்ந்து சென்றுவிட்டான்.(27)

ஓ! கேசவா {கிருஷ்ணா}, இளவேனில் காலத்தில் பூத்துக் குலுங்கும் இரு சால மரங்கள் புயலால் வீழ்த்தப்பட்டதைப் போல அவந்தியின் இரு சகோதரர்களான விந்தனும் அனுவிந்தனும் போரக்களத்தில் கிடப்பதைப் பார்.(28) தங்கக் கவசம் பூண்டவர்களும், தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், வாள்கள் மற்றும் விற்களை இன்னும் தரித்திருப்பவர்களுமாக அவர்கள் கிடக்கிறார்கள். காளை போன்ற கண்களைக் கொண்டவர்களும், பிரகாசமான மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அவர்கள் இருவரும் போர்க்களத்தில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறார்கள்.(29)

பாண்டவர்களும், நீயும், துரோணர், பீஷ்மர், விகர்த்தனன் மகன் கர்ணன், கிருபர்,(30) துரியோதனன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான ஜெயத்ரதன், சோமதத்தன், விகர்ணன், துணிச்சல்மிக்கவனான கிருதவர்மன் ஆகியோரிடமிருந்து தப்பியிருப்பதால் நீங்கள் நிச்சயம் கொல்லப்பட முடியாதவர்களே.(31) காலத்தால் கொண்டுவரப்பட்ட மறுபாடுகளைப் பார். ஆயுதபலத்தால் தேவர்களையே கொல்லவல்லவர்களான அந்த மனிதர்களில் காளையர், இறுதியில் அவர்களே கொல்லப்பட்டவர்கள் ஆனார்கள்.(32) ஓ! மாதவா, மனிதர்களில் காளையரான இந்த வீரர்கள் க்ஷத்திரியப் போர்வீரர்களால் கொல்லப்பட்டதால், விதியால் கொண்டு வர முடியாத எதுவும் இல்லை என்பதில் ஐயமில்லை.(33) ஓ! கிருஷ்ணா, உபப்லாவ்யத்தில் இருந்து நீ தூது வெல்லாமல் சென்ற போதே, பெருஞ்சுறுசுறுப்பைக் கொண்டவர்களான என் மகன்கள் கொல்லப்பட்டார்கள் (என நான் கருதினேன்).(34) சந்தனுவின் மகனும் {பீஷ்மரும்}, விதுரனும், “உன் பிள்ளைகளிடம் பாசங்கொள்வதை நிறுத்துவாயாக” என்றனர்.(35) அம்மனிதர்கள் சொன்ன எதுவும் நடக்காமல் போகாது. ஓ! ஜனார்த்தனா, என் மகன்கள் விரைவில் சாம்பலாக எரிக்கப்படப் போகிறார்கள்” என்றாள் {காந்தாரி}”.(36)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்த வார்த்தைகளைச் சொன்ன காந்தாரி, துயரால் தன் உணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தாள். தன் உறுதியைக் கைவிட்ட அவள், துயரால் தன் உணர்வுகளை இழந்தவளானாள்.(37) தன் மகன்களின் மரணத்தால் கவலையாலும், கோபத்தாலும் நிறைந்த அவள் {காந்தாரி}, கலங்கிய இதயத்துடன் கிருஷ்ணனே அனைத்துக் குற்றத்திற்கும் காரணமென்றாள்.

அந்தக் காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் எரிக்கப்பட்டுவிட்டனர். ஓ! ஜனார்த்தனா, அவர்கள் இவ்வாறு நிர்மூலத்தையடைந்தபோது, நீ ஏன் அவர்களிடம் அக்கறையற்றவனாக இருந்தாய்?(39) பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களையும், பெரும் படையையும் கொண்டவனான நீ, இந்தப் படுகொலையைத் தடுக்க வல்லவனாக இருந்தாய். நீ நாநலமிக்கவனாகவும் {பேச்சுச் சாமர்த்தியம் கொண்டவனாகவும்}, (அமைதியைக் கொண்டு வரும்) சக்தி படைத்தவனாகவும் இருந்தாய்.(40) ஓ! மதுசூதனா, ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, இந்த அண்டப்பேரழிவின் {மொத்த அழிவின்} போது, வேண்டுமென்றே நீ அலட்சியமாக இருந்ததால், இந்தச் செயலின் கனியை நீ அறுவடை செய்ய வேண்டும்.(41) ஓ! சக்கரத்தையும், கதாயுதத்தையும் தரிப்பவனே, என் கணவரிடம் கடமையுணர்வுடன் காத்திருந்ததால் {பணிவிடை செய்ததால்}, நான் அடைந்திருப்பதும், அடைவதற்கரிதானதுமான அந்த சிறு தகுதியை {புண்ணியத்தைக்} கொண்டு, நான் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(42) ஓ! கோவிந்தா, குருக்களும், பாண்டவர்களும் ஒருவரையொருவர் கொன்ற போது, நீ அகற்றையற்றவனாக இருந்ததால், நீயே உன் சொந்த உறவினர்களைக் கொல்பவனாவாய்.(43) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இன்றிலிருந்து முப்பத்தாறு {36} வருடங்களில், உன் உறவினர்களையும், நண்பர்களையும், மகன்களையும் நீயே கொல்லச் செய்த பிறகு, காட்டிற்குள், அருவருப்பான முறையில் நீ அழிவையடைவாய்.(44) மகன்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் இழந்த இந்தப் பாரதக் குலப் பெண்களைப் போலவே, உன் குலத்தின் பெண்களும் அழுது புலம்புவார்கள்” என்று சபித்தாள் {காந்தாரி}”.(45)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைக் கேட்ட உயரான்ம வாசுதேவன் {கிருஷ்ணன்}, மதிப்புக்குரிய காந்தாரியிடம் பேசும் வகையில், மயக்கப் புன்னகையுடன் இந்த வார்த்தைகளை அவளிடம் சொன்னான்,(46) “என்னைத் தவிர இவ்வுலகில் விருஷ்ணிகளை அழிக்கவல்லவர்கள் எவரும் இல்லை. இதை நான் நன்கறிவேன். அதைக் கொண்டுவரவே நான் முயற்சிப்பேன். ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவளே, இவ்வாறு சபித்ததால், அப்பணியை நிறைவேற்றவே நீ எனக்கு உதவியிருக்கிறாய்.(47) விருஷ்ணிகள், மனிதர்களாலோ, தேவர்களாலோ, தானவர்களாலோ யாராலும் கொல்லப்பட முடியாதவர்கள். எனவே, அந்த யாதவர்களே ஒருவரையொருவர் வீழ்த்துவார்கள்” என்றான்.(48) தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} இந்த வார்த்தைகளைச் சொன்னதும், பாண்டவர்கள் திகைப்படைந்தனர். கவலையால் நிறைந்த அவர்கள் அனைவரும், உயிரில் நம்பிக்கையற்றவர்களானார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(49)

ஸ்திரீ உபபர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் — ஸ்திரீ பர்வம்-ஜலப்ரதானிக உப பர்வம் —

October 15, 2025

களங்காணப் புறப்பட்ட அரசமகளிர்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 10-அரச மகளிரை அழைத்துக் கொண்டு போர்க்களத்திற்குச் செல்லத் தீர்மானித்த திருதராஷ்டிரன்; குருகுலப் பெண்களைத் தேரில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்த விதுரன்; அரச குடும்பமும், பெரும் எண்ணிக்கையிலான குடிமக்களுக்கும் ஹஸ்தினாபுரத்தை விட்டுப் புறப்பட்டது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்தப் பாரதக் குலத்தின் காளை (திருதராஷ்டிரன்), விதுரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன் தேரை ஆயத்தம் செய்ய ஆணையிட்டான்.(1) மன்னன் {திருதராஷ்டிரன்} மீண்டும் {விதுரனிடம்}, “காந்தாரியையும், பாரதக்குல பெண்கள் அனைவரையும் தாமதிக்காமல் இங்கே கொண்டு வருவாயாக. குந்தியையும், அவளுடன் உள்ள பிற பெண்கள் அனைவரையும் இங்கே கொண்டு வருவாயாக” என்றான்.(2) நீதிமிக்க ஆன்மா கொண்ட திருதராஷ்டிரன், ஒவ்வொரு கடமையையும் அறிந்த விதுரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, கவலையால் உணர்வுகளை இழந்து தன் தேரில் ஏறினான்.(3) அப்போது, தன் மகன்களின் மரணத்தின் நிமித்தமான துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரி, தன் தலைவனின் {திருதராஷ்டிரனின்} ஆணையினால், குந்தி மற்றும் அரச குடும்பத்தின் பிற மகளிரின் துணையுடன், பின்னவன் {திருதராஷ்டிரன்} தனக்காகக் காத்திருந்த இடத்திற்கு வந்தாள்.(4) பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள் ஒன்றாக மன்னனிடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் சந்தித்தபோது, ஒருவரையொருவர் கைவிரித்து அழைத்து, கவலையால் உரத்த ஓலமிட்டனர்.(5)

விதுரன், அந்தப் பெண்களைவிட அதிகம் பீடிக்கப்பட்டிருந்தாலும், அவர்களைத் தேற்றத் தொடங்கினான். அழுதுகொண்டிருந்த அந்த அழகிய பெண்களின் அருகில் ஆயத்தமாக இருந்த தேரில் ஏற்றி, (அவர்களுடன் சேர்ந்து) நகரத்தைவிட்டுப் புறப்பட்டான்.(6) அந்நேரத்தில் ஒவ்வொரு குருவின் {குருகுலத்தோன் ஒவ்வொருவனின்} வீட்டிலும் துன்ப ஓலம் எழுந்தது. பிள்ளைகளுடன் சேர்த்து மொத்த நகரமும் பெருந்துயரால் பீடிக்கப்பட்டிருந்தது.(7) இதற்கு முன்பு தேவர்களாலேயே {கண்கொண்டு} காணப்படாத மங்கையர், தங்கள் தலைவர்களை இழந்து ஆதரவற்றவர்களாகி இப்போது பொது மக்களால் காணப்பட்டனர். அவர்கள் அழகிய குழல்கள் கலைந்தவர்களாக, ஆபரணங்களற்றவர்களாக, உடுப்பாக ஒற்றையாடையை அணிந்திருந்த அந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் மிகத் துயரத்துடன் அவ்வாறு சென்றனர்.(9) உண்மையில் அவர்கள், தங்கள் தலைவன் வீழ்ந்ததும் மலைக்குகைகளில் இருந்து வெளிவரும் புள்ளிமான் கூட்டத்தைப் போல வெண்மலைகளுக்கு ஒப்பான தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர்.(10)

அந்த அழகிய பெண்கள், கேளிக்கை வட்டாரங்களில் பெண் குதிரைக்குட்டிக் கூட்டங்களைப் போலவும், அடுத்தடுத்த வானம்பாடிக் கூட்டங்களாகவும் கவலையால் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர்.(11) ஒருவரையொருவர் கரங்கள் பற்றிக் கொண்ட அவர்கள், தங்கள் மகன்கள், சகோதரர்கள் மற்றும் தந்தைமாருக்காக உரத்த ஓலமிட்டனர். யுக முடிவின் போது நேரும் அண்ட அழிவுக்காட்சியை அது வெளிப்படுத்துவதாக இருந்தது.(12) துயரால் தங்கள் புலனுணர்வுகளை இழந்த அவர்கள், புலம்பிக் கொண்டும், அழுதுகொண்டும், அங்கேயே இங்கேயும் ஓடிக்கொண்டும், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருந்தனர்.(13) தங்கள் பாலினத் தோழிகளின் முன்னிலையிலேயே முன்பெல்லாம் வெட்கப்படும் அந்தப் பெண்டிர், இப்போது மிகக் குறைவாகவே உடுத்தியிருந்த நிலையில் தங்கள் மாமியார்கள் முன்னிலையில் தோன்றியும் வெட்கமடையாதிருந்தனர்.(14) முன்பெல்லாம் வருந்தத்தக்க சிறு காரணங்களுக்காகவும் ஒருவருயொருவர் தேற்றிக் கொண்ட அவர்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா} இப்போதோ, துயரால் திகைப்படைந்து, ஒருவரையொருவர் கண்ணெடுத்துப் பார்ப்பதையும் தவிர்த்தனர்.(15)

மன்னன் {திருதராஷ்டிரன்}, ஓலமிட்டுக்கொண்டிருக்கும் அந்த ஆயிரக்கணக்கான பெண்களால் சூழப்பட்டு, நகரைவிட்டுப் புறப்பட்டு, போர்க்களத்தை நோக்கி வேகமாகச் சென்றான்.(16) கலைஞர்கள் {சிற்பிகள்}, வணிகர்கள் {வியாபாரிகள்}, வைசியர்கள், அனைத்து வகை இயந்திரக் கைவினைஞர்கள் ஆகியோரும் {வேலை செய்து பிழைக்கும் மற்ற அனைவரும்} நகரத்தில் இருந்து புறப்பட்டு மன்னனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(17) குருக்களை மூழ்கடித்திருக்கும் அந்த முற்றான அழிவால் பீடிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்டிர், சோகமாக அழுததால், அவர்களுக்கு மத்தியில் எழுந்த ஓலமானது அனைத்து உலகங்களையும் துளைப்பதாகத் தெரிந்தது.(18) அந்த ஓலத்தைக் கேட்ட அனைத்து உயிரினங்களும், யுக முடிவில் நெருப்பு எழுந்து அனைத்தையும் எரிக்கும் அண்ட அழிவுக்கான நேரம் வந்துவிட்டதென நினைத்தன.(19) ஓ! மன்னா, குருவின் {குருகுலத்தோனான திருதராஷ்டிரனின்} வீட்டிற்கு அர்ப்பணிப்புள்ள குடிமக்களும், தங்கள் ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த அழிவால் தங்கள் இதயங்கள் துயரில் நிறைய, அந்தப் பெண்களைப் போலவே உரக்க ஓலமிட்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(20)

அரசக்குடும்பத்தை வழியில் சந்தித்த மூவர்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 11-தன் மகனின் படையில் எஞ்சியிருக்கும் மூன்று வீரர்களை வழியில் சந்தித்த திருதராஷ்டிரன்; துரியோதனன் நியாயமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் காந்தாரிக்குச் சொன்ன கிருபர்; பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தால் கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர், காந்தாரியிடமும், திருதராஷ்டிரனிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “திருதராஷ்டிரன், இரண்டு மைல்கள் {ஒரு குரோச தொலைவு} செல்வதற்குள், சரத்வான் மகனான கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் கிருதவர்மன் ஆகியோரைச் சந்ததித்தான்.(1) பெரும் சக்தி கொண்டவனும், பார்வையற்றவனுமான அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அம்மூவரும் கண்டதும், துயரால் பெருமூச்சுவிட்டபடியும், கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அழுதுகொண்டும், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடைதற்கரிய சாதனைகளைச் செய்த உமது அரசமகன் {துரியோதனன்}, தன் தொண்டர்களுடன் இந்திரலோகம் சென்றுவிட்டான்.(3) துரியோதனனின் படையில் நாங்கள் மூன்று தேர்வீரர்கள் மட்டுமே உயிரோடு தப்பினோம். ஓ! பாரதக் குலத்தின் காளையே, பிறரனைவரும் அழிந்துவிட்டனர்” என்றனர்.(4)

மன்னனிடம் அவர்கள் இதைச் சொன்னதும், சரத்வான் மகனான கிருபர், துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியிடம், இவ்வார்த்தைகளைச் சொன்னார்,(5) “உன் மகன்கள், போரில் அச்சமில்லாமல் போரிட்டு, பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை வீழ்த்தி, வீரர்களுக்குத் தகுந்த சாதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது வீழ்ந்தனர்.(6) அவர்கள், ஆயுதங்களைப் பயன்படுத்தி அடையும் பிரகாசமான உலகங்களை அடைந்து, பிரகாசமான வடிவங்களை ஏற்று விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.(7) அவர்களில் எந்த வீரனும் போரில் புறமுதுகிடவில்லை. அனைவரும் ஆயுதம் தீர்ந்தோ, ஆயுதமுனையினாலோ வீழ்ந்தனர். அவர்களில் எவரும் தங்கள் கரங்களைக் கூப்பித் தஞ்சம் கேட்கவில்லை {சரணடையவில்லை}.(8) ஆயுதங்கள் தீர்ந்தோ, ஆயுதங்களின் முனையிலோ போரில் மரணத்தை அடைவது க்ஷத்திரியன் அடையும் உயர்ந்த கதி என்று சொல்லப்படுகிறது.(9) ஓ! ராணி {காந்தாரி}, அவர்களின் எதிரிகளான பாண்டவர்களும் அதிக நற்பேற்றைப் பெறவில்லை. அஸ்வத்தாமன் தலைமையில் நாங்கள் என்ன செய்தோம் என்பதைக் கேட்பாயாக.(10)

உன் மகன் துரியோதனன், பீமனால் நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டான் என்பதை அறிந்த நாங்கள், உறக்கத்தில் புதைந்திருந்த பாண்டவர்களின் முகாமில் புகுந்து அவர்கள் அனைவரையும் கொன்றோம்.(11) பாஞ்சாலர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். உண்மையில் துருபதனின் மகன்கள் அனைவரும், திரௌபதியின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(12) நம் பகைவரின் மகன்களுக்கு இந்தப் பேரழிவைச் செய்துவிட்டு, போரில் அவர்கள் முன்பு நிற்க இயலாததால் இப்போது தப்பிச் செல்கிறோம்.(13) நம் எதிரிகளான பாண்டவர்கள் அனைவரும் வீரர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமாவர். சினத்தால் நிறையும் அவர்கள், பழிதீர்ப்பதற்காக எங்களை அடைய விரைவில் வருவார்கள்.(14) ஓ! சிறப்புமிக்கப் பெண்மணியே, தங்கள் மகன்கள் கொல்லப்பட்டதைக் கேட்டு, சினத்தால் மதங்கொள்பவர்களும் வீரர்களுமான அந்த மனிதர்களில் காளைகள் {பாண்டவர்கள்} வேகமாக எங்கள் தடத்தைப் பின்தொடர்ந்து வருவார்கள்.(15)

(உறங்கும் முகாமுக்குள்) பேரழிவை ஏற்படுத்திய நாங்கள் {இங்கே} நிற்பதற்கும் துணியமாட்டோம். ஓ! ராணியே {காந்தாரியே}, எங்களுக்கு விடைகொடுப்பாயாக. உன் இதயத்தைக் கவலையில் ஆழ்த்துவது உனக்குத் தகாது.(16) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீயும் எங்களுக்கு விடைகொடுப்பாயாக. மன உரம் அனைத்தையும் {உதவிக்கு} அழைப்பாயாக. க்ஷத்திரியக் கடமைகளை அதன் உயர்ந்த வடிவில் நோற்பாயாக” என்றார் {கிருபர்}.(17)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, கிருபர், கிருதவர்மன் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர், பெரும் ஞானம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அவனை வலம் வந்து,(18) அவனிடமிருந்து தங்கள் கண்களை அகற்ற முடியாமல், தங்கள் குதிரைகளைத் தூண்டி கங்கைக்கரையை நோக்கிச் சென்றனர்.(19) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவ்விடத்தைவிட்டு அகன்ற அந்தப் பெருந்தேர்வீரர்கள், இதயங்கள் கவலையில் மூழ்கிய நிலையிலேயே, ஒருவரிடமிருந்து ஒருவர் விடைபெற்றுக் கொண்டு, பிரிந்து சென்றனர்.(20)

சரத்வான் மகனான கிருபர் ஹஸ்தினாபுரத்திற்கும்; ஹிருதிகனின் மகன் {கிருதவர்மன்} தன் நாட்டுக்கும்; துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} வியாசரின் ஆசிரமத்திற்கும் புறப்பட்டுச் சென்றனர்.(21) இவ்வாறே, பாண்டுவின் உயரான்ம மகன்களுக்குக் குற்றமிழைத்த அவ்வீரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டும், ஒருவரின் மீது மற்றவர் பார்வையைச் செலுத்திக் கொண்டும் தாங்கள் விரும்பிய இடத்திற்குச் சென்றனர்.(22) இவ்வாறு மன்னனைச் சந்தித்தவர்களும், துணிச்சமிக்கவர்களுமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சூரியன் உதிக்கும் முன்பே தாங்கள் தேர்ந்தெடுத்த இடங்களுக்குச் சென்றனர்.(23) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இதற்குப் பின்னரே, பெரும் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்கள் துரோணரின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} மோதி, தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி (ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல) அவனை வென்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

திருதராஷ்டிரத் தழுவல்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 12-திருதராஷ்டிரன் நகரத்தைவிட்டுப் புறப்பட்டதை அறிந்து அவனைச் சந்திக்கப் புறப்பட்ட யுதிஷ்டிரன்; அவனை அடைந்து வணங்கியது; யுதிஷ்டிரனை ஆரத்தழுவிய திருதராஷ்டிரன்; பீமனை நொறுக்குவதாக எண்ணிக் கிருஷ்ணனால் கொடுக்கப்பட்ட இரும்புப் பதுமையைத் தூள் தூளாக்கிய திருதராஷ்டிரன்; முடிவை ஏற்றுக் கொள்ளுமாறு திருதராஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “போர்வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, யுதிஷ்டிரன், தன் பெரியப்பாவான திருதராஷ்டிரன், யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தைவிட்டு {ஹஸ்தினாபுரத்தை விட்டுத்} புறப்பட்டதைக் கேள்விப்பட்டான்.(1) ஓ! மன்னா {ஜனமேஜயா}, மகன்கள் கொல்லப்பட்ட துயரத்தில் இருந்த யுதிஷ்டிரன், தன் (நூறு) மகன்களின் படுகொலையால் துயரில் முழ்கி, கவலையில் நிறைந்திருக்கும் தன் பெரியப்பாவைச் சந்திக்கத் தன் தம்பிகளுடன் புறப்பட்டான்.(2) அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, உயரான்ம வீரனும், தசார்ஹ குலத்தோனுமான கிருஷ்ணனாலும், யுயுதானனாலும் {சாத்யகியாலும்}, யுயுத்சுவாலும் பின்தொடரப்பட்டான்.(3) துயரில் எரிந்து கொண்டிருந்த திரௌபதியும், தன்னுடன் இருந்த பாஞ்சாலப் பெண்களின் துணையுடன், தன் தலைவனை {யுதிஷ்டிரனைக்} கவலையோடு பின்தொடர்ந்து சென்றாள்.(4) யுதிஷ்டிரன், ஓ! மன்னா, துயரால் பீடிக்கப்பட்டு, பெண் அன்றில் கூட்டத்தைப் போல அழுது கொண்டிருக்கும் பாரத மகளிர்க்கூட்டத்தைக் கங்கைக் கரையின் அருகில் கண்டான்.(5)

மன்னன் {யுதிஷ்டிரன்}, ஏற்புடைய மற்றும் ஏற்கமுடியாத அனைத்துவகை வார்த்தைகளையும் சொல்லி அழுது புலம்பிக் கொண்டும், துயரால் தங்கள் கரங்களை உயர்த்திக் கொண்டும் வந்த அந்த ஆயிரக்கணக்கான மகளிரால் சூழப்பட்டு,(6) “தந்தைமார், சகோதரர்கள், ஆசான்கள், மகன்கள் மற்றும் நண்பர்களைக் கொன்ற அந்த நீதிமிக்க மன்னன் எங்கே? அவனது உண்மையும், கருணையும் எங்கே?(7) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே {யுதிஷ்டிரா}, துரோணரையும், உன் பாட்டனான பீஷ்மரையும், {மைத்துனனான} ஜெயத்ரதனையும் கொன்றபிறகாவது உன் இதயம் அமைதி அடைந்ததா?(8) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உன் தந்தைமாரும், சகோதரர்களும், தடுக்கப்பட முடியாத அபிமன்யுவும், திரௌபதியின் மகன்களும் இவ்வாறு கொல்லப்பட்டதைக் கண்ட பிறகும், உனக்கு அரசுரிமைக்கான தேவை என்ன இருக்கிறது?” {என்று அவர்களால் கேட்கப்பட்டான்}.(9)

வலிய கரங்களைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், பெண் அன்றில்களைப் போலக் கதறிக்கொண்டிருந்த அந்த மங்கையரைக் கடந்து சென்று, தன் பெரியப்பாவின் {திருதராஷ்டிரரின்} பாதங்களை வணங்கினான்.(10) எதிரிகளைக் கொல்பவர்களான பாண்டவர்கள், முறைப்படி தங்கள் பெரியப்பாவை வணங்கி, தங்கள் பெயரைச் சொல்லி அவனிடம் தங்களை அறிவித்துக் கொண்டனர்.(11) தன் மகன்களின் படுகொலையால் துயரில் மிகவும் பீடிக்கப்பட்டிருந்த திருதராஷ்டிரன், அந்தப் படுகொலைக்குக் காரணமான பாண்டுவின் மூத்த மகனை {யுதிஷ்டிரனை}, விருப்பமில்லாமலேயே தழுவிக் கொண்டான்.(12) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை ஆரத்தழுவி, சில ஆறுதல் வார்த்தைகளைச்சொன்ன பிறகு, தீய ஆன்மா கொண்டவனான அந்தத் திருதராஷ்டிரன், தன்னை அணுகும் அனைத்தையும் எரித்துவிடும் சுடர்மிக்க நெருப்பைப் போலப் பீமனைத் தேடினான்.(13) உண்மையில், அவனது துயரெனும் காற்றால் தூண்டப்பட்ட கோபமெனும் நெருப்பானது, பீமக் காட்டை எரிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிந்தது.(14)

பீமனிடம் அவன் கொண்டிருக்கும் தீய நோக்கங்களை உறுதி செய்து கொண்ட கிருஷ்ணன், உண்மையான பீமனை இழுத்துவிட்டு, அந்த முதிய மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} இரும்பாலான இரண்டாம் பாண்டவனின் {பீமனின்} சிலையைக் கொடுத்தான்.(15) பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணன், தொடக்கத்திலேயே திருதராஷ்டிரனின் நோக்கங்களைப் புரிந்து கொண்டு, அவற்றைக் கலங்கடிப்பதற்காகவே இந்தச் சூழ்ச்சியைச் செய்தான்.(16) பெரும் பலம் கொண்டவனான மன்னன் திருதராஷ்டிரன், தன்னிரு கரங்களாலும் அந்த இரும்பு பீமனைப் பற்றிக் கொண்டு, இரத்தமும், சதையுமான உண்மையான பீமனாகவே கருதி அதைத் துண்டுகளாக நொறுக்கினான்.(17) பத்தாயிரம் {10000} யானைகளுக்கு இணையான வலிமையைக் கொண்ட அம்மன்னன் {திருதராஷ்டிரன்} அந்தச் சிலையைத் துண்டு துண்டானச் சிதறல்களாக்கினான். எனினும், தன் மார்பும் குறிப்பிட்ட அளவுக்குக் காயமடைந்ததால் {மிகவும் நசுக்கப்பட்டதால்} அவன் ரத்தம் கக்கத் தொடங்கினான்.(18) குருதியில் மறைந்திருந்த அந்த மன்னன், மலர்களின் சுமையை உச்சியில் கொண்டிருக்கும் பாரிஜாத மரத்தைப் போலக் கீழே தரையில் விழுந்தான்.(19) கல்விமானும், அவனது தேரோட்டியும், கவல்கணன் மகனுமான சஞ்சயன் அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} உயர்த்தி, ஆறுதல் சொல்லித் தேற்றி, “இவ்வாறு செயல்படாதீர்” என்றான்.(20)

பிறகு, தன் கோபத்தைக் கைவிட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் இயல்பான நிலையை அடைந்து, துயரால் நிறைந்து, “ஐயோ, ஓ! பீமா, ஐயோ, ஓ! பீமா!” என்று சொல்லி உரக்க அழத்தொடங்கினான்.(21) அவன் இன்னும் கோபத்தின் ஆளுகையில் இல்லை என்பதையும், பீமனைக் கொன்றதால் உண்மையாக வருந்துவதையும் (தான் நம்பியவாறே)[1] புரிந்து கொண்டவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(22) “ஓ! திருதராஷ்டிரரே, நீர் பீமசேனரைக் கொல்லவில்லை என்பதால் வருந்தாதீர். ஓ! மன்னா, நீர் நொறுக்கியது ஓர் இரும்பு சிலையே.(23) ஓ! பாரதக் குலத்தின் காளையே, நீர் சினத்தால் நிறைந்திருக்கிறீர் என்பதைப் புரிந்து கொண்ட நான், குந்தியின் மகனை {பீமரைக்} காலனின் கோரப் பற்களுக்கிடையில் இருந்து இழுத்துவிட்டேன்.(24) ஓ! மன்னர்களில் புலியே, உடல்வலுவில் உமக்கு இணையாக எவனும் இல்லை. ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உமது கரங்களின் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள இங்கே எவன் இருக்கிறான்?(25)உண்மையில், காலனுடன் மோதி எவனும் உயிருடன் தப்ப முடியாது என்பதைப் போலவே, உமது அணைப்புக்குள் இருந்து பாதுகாப்பாக எவனாலும் வெளியேற முடியாது.(26) அதன் காரணமாகவே, உமது மகனால் {துரியோதனனால் கதாயுதப் பயிற்சிக்காகச்} செய்யப்பட்ட பீமரின் இந்தச் சிலையை உமக்காகவே தயாராக வைத்திருந்தேன்.(27) உமது மகன்களின் மரணத்தால் உண்டான துயரின் மூலம் உமது மனம் நீதியில் இருந்து விழுந்துவிட்டது. ஓ! பெரும் மன்னா, இதன் காரணமாகவே நீர் பீமசேனரைக் கொல்ல முயன்றீர்.(28) எனினும், ஓ! மன்னா, பீமரைக் கொல்வது உமக்கு ஒரு நன்மையையும் செய்யாது. ஓ! ஏகாதிபதி, அதனால் உமது மகன்கள் பிழைத்து வர மாட்டார்கள்.(29) எனவே, உமது இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாமல், அமைதியை எட்டும் நோக்கில் எங்களால் எது செய்யப்பட்டதோ அஃதை ஏற்றுக்கொள்வீராக {அங்கீகரிப்பீராக}” என்றான் {கிருஷ்ணன்}”.(30)

கோபம் அகன்ற திருதராஷ்டிரன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 13-பீமனிடம் கோபத்தை வளர்ப்பதற்காகத் திருதராஷ்டிரனைக் கடிந்துரைத்த கிருஷ்ணன்; கோபத்தை விட்டு தன் தம்பியின் பிள்ளைகளை ஒருவர்பின் ஒருவராகத் தழுவிக் கொண்ட திருதராஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது சில பெண்பணியாட்கள் மன்னனைக் கழுவி விட அங்கே வந்தனர். அவன் முறையாகத் தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு, மதுசூதனன் {கிருஷ்ணன்}, அவனிடம் {திருதராஷ்டிரனிடம்} மீண்டும்,(1) “ஓ! மன்னா, நீர் வேதங்களையும், பல்வேறு சாத்திரங்களையும் படித்திருக்கிறீர். பழைய வரலாறுகள் அனைத்தையும், மன்னர்களின் கடமைகள் குறித்த அனைத்தையும் நீ கேட்டிருக்கிறீர்.(2) கல்விமானான நீர் பெரும் ஞானம் கொண்டவராகவும், பலம் மற்றும் பலவீனத்துக்குத் தகுந்தவராகவும் இருக்கிறீர். உமக்கு நேர்ந்தவை அனைத்தும் உமது தவறுகளின் விளைவே எனும்போது இத்தகு கோபத்தை ஏன் வளர்க்கிறீர்?(3) போருக்கு முன்பே நான் உம்மிடம் பேசினேன். ஓ! பாரதரே, பீஷ்மர், துரோணர், விதுரர், சஞ்சயன் ஆகியோரும் உம்மிடம் பேசினர். எனினும், நீர் எங்கள் அறிவுரையைப் பின்பற்றவில்லை.(4) உண்மையில், எங்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், உமக்கும், உமது பலம் மற்றும் துணிவுக்கும் பாண்டவர்கள் மேம்பட்டவர்கள் என்பதை அறிந்து, நாங்கள் சொன்ன ஆலோசனைகளின் படி நீர் செயல்படவில்லை.(5)

தன் குறைகளைக் காணவல்லவனும், கால, நேர வேறுபாடுகளை அறியவல்லவனுமான மன்னன் பெருஞ்செழிப்பை அடைகிறான்.(6) எனினும், எந்த மனிதன் நலன்விரும்பிகளால் ஆலோசனை கூறப்பட்டும், அவர்களது நல்ல {இனிமையான}, அல்லது தீய {கசப்பான} வார்த்தைகளை ஏற்கவில்லையோ, அவன் தன் தீய கொள்கையின் விளைவால் உண்டாகும் துயரை அடைந்து துன்பப்படுகிறான்.(7) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்போது வாழ்வின் வேறு வழியைக் காண்பீராக. நீர் உமது ஆன்மாவைக் கட்டுப்படுத்தாமல், துரியோதனனின் ஆளுகைக்குள் இருந்து உம்மைத் துன்புறுத்திக் கொண்டீர்.(8) உமக்கு நேர்ந்திருப்பவை உமது தவறாலேயே உம்மை அடைந்தன. பிறகு ஏன் நீர் பீமரைக் கொல்ல முயல்கிறீர்? உமது சொந்த தவறுகளை நினைத்துப் பார்த்து, உமது கோபத்தை இப்போது அடக்குவீராக.(9) அற்பனான எவன் செருக்கினால் பாஞ்சால இளவரசியை {திரௌபதியைச்} சபைக்குக் கொண்டு வந்தானோ, அவன் நியாயமாகப் பழி தீர்க்கப்படவே பீமசேனரால் கொல்லப்பட்டான்.(10) உமது சொந்த செயல்பாடுகளையும், தீய ஆன்மா கொண்ட உமது மகனின் {துரியோதனனின்} செயல்பாடுகளையும் பார்ப்பீராக. பாண்டுவின் மகன்கள் முற்றிலும் அப்பாவிகளாவர். இருப்பினும், அவர்கள் உம்மாலும், அவனாலும் {துரியோதனனாலும்} மிகக் கொடூரமாக நடத்தப்பட்டார்கள்” என்றான் {கிருஷ்ணன்}”.(11)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கிருஷ்ணனால் இவ்வாறு உண்மை சொல்லப்பட்ட பிறகு, மன்னன் திருதராஷ்டிரன் அந்தத் தேவகியின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக,(12) “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ சொன்னது போலத்தான் இருக்கிறது. ஓ! மாதவா, நீ சொல்வது முற்றிலும் உண்மையே. ஓ! அற ஆன்மாவே, பிள்ளை பாசமே என்னை அறத்திலிருந்து விழச் செய்தது.(13) மனிதர்களில் புலியும், உண்மை ஆற்றல் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான பீமன், என் அணைப்புக்குள் வராமல் உன்னால் பாதுகாக்கப்பட்டது நற்பேற்றாலேயே.(14) இருப்பினும், நான் இப்போது கோபத்திலிருந்தும், நோயிலிருந்தும் விடுபட்டிருக்கிறேன். ஓ! மாதவா, வீரனான அந்தப் பாண்டுவின் இரண்டாம் மகனை {பீமனைத்} தழுவிக் கொள்ளும் விருப்பத்தால் ஆவலடைந்திருக்கிறேன்.(15) மன்னர்கள் அனைவரும் இறந்து, என் பிள்ளைகளும் இல்லையென்றான பிறகு, என் நல்வாழ்வும், மகிழ்ச்சியும் பாண்டுவின் மகன்களைச் சார்ந்தே இருக்கப் போகிறது” என்றான் {திருதராஷ்டிரன்}.(16) இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த முதிய மன்னன், அற்புத உடற்கட்டுகளைக் கொண்டோரான பீமன், தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரையும், மனிதர்களில் முதன்மையானவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன், சகாதேவன்} இருவரையும் தழுவியழுது, ஆறுதலடைந்து, அவர்களை வாழ்த்தியருளினான்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

காந்தாரியின் கோபம்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 14-யுதிஷ்டிரனைச் சபிக்க நினைத்திருந்த காந்தாரி; தீடீரென அங்கே வந்த வியாசர் அவளது கோபத்தைத் தணிக்க ஆலோசனை கூறுவது; அவரது ஆலோசனையை ஏற்றுக் கொண்ட காந்தாரி, பீமனின் அநியாயத்தைச் சுட்டிக்காட்டியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “திருதராஷ்டிரனால் ஆணையிடப்பட்ட குரு குலக் காளைகளான அந்தப் பாண்டவச் சகோதரர்கள், கேசவனின் {கிருஷ்ணனின்} துணையுடன் காந்தாரியைக் காணச் சென்றனர்.(1) களங்கமற்றவளான காந்தாரி, தன் நூறு மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் எதிரிகள் அனைவரையும் கொன்றதை நினைவுகூர்ந்து அவனைச் {யுதிஷ்டிரனைச்} சபிக்க விரும்பினாள்.(2) சத்தியவதியின் மகன் {வியாசர்}, பாண்டவர்களிடம் அவள் கொண்டிருக்கும் தீய நோக்கங்களைப் புரிந்த கொண்டு, தொடக்கத்திலேயே அதற்கு எதிர்வினையாற்றத் தனக்குள் தீர்மானித்தார்.(3) மனோவேகத்தில் தாம் விரும்பும் இடத்திற்குச் செல்ல வல்ல அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, கங்கையின் புனிதமான தெளிந்த நீரால் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.(4) ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்தையும் தமது ஆன்மப் பார்வையால் பார்க்க வல்ல அந்தத் தவசி {வியாசர்}, தன் மனத்தை அதை நோக்கிச் செலுத்தி அங்கே தோன்றினார்.(5)

பெரும் தவத்தகுதியைக் கொண்டவரும், எப்போதும் உயிரினங்களின் நன்மையையே நோக்கமாகக் கொண்டவருமான அந்த முனிவர் {வியாசர்}, சரியான நேரத்தில் தன் மருமகளிடம் {காந்தாரியிடம்},(6) “சபிப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதே. மறுபுறம் உன் மன்னிப்பைக் காட்ட {வழங்க} அதைப் பயன்படுத்துவாயாக {பொறுமை காட்டுவாயாக}. ஓ! காந்தாரி, நீ பாண்டவர்களிடம் கோபங்கொள்ளக் கூடாது. உன் இதயத்தை அமைதியில் நிலைநிறுத்துவாயாக. உன் உதடுகளிலிருந்து உதிரப்போகும் வார்த்தைகளைத் தடுப்பாயாக. என் அறிவுரையைக் கேட்பாயாக.(7) வெற்றியை விரும்பிய உன் மகன் {துரியோதனன்}, பதினெட்டு நாட்கள் நீடித்த அந்தப் போரின் போது ஒவ்வொருநாளும்[1] உன்னிடம், “ஓ! தாயே, எதிரிகளுடன் போரிடப் போகும் எனக்கு அருள்புரிவாயாக” என்று வேண்டினான்.(8) வெற்றியை விரும்பிய உனது மகன் ஒவ்வொரு நாளும் இவ்வார்த்தைகளால் இரந்து கேட்டுக் கொண்டும், நீ அவனுக்கு எப்போதும் கொடுத்த பதில், “எங்கே அறமிருக்கிறதோ, அங்கே வெற்றியுமிருக்கும்” என்பதாகும்.(9)ஓ! காந்தாரி, நீ சொன்ன வார்த்தைகள் ஏதும் பொய்த்ததாக எனக்கு நினைவில்லை. எனவே, துரியோதனனால் வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டு, நீ சொன்ன அந்த வார்த்தைகளும் பொய்க்க முடியாது. நீ எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையிலேயே ஈடுபட்டிருக்கிறாய்.(10) க்ஷத்திரியர்களின் அந்தப் பயங்கரப் போரில் அடுத்தக் கரையை அடைந்த பாண்டுவின் மகன்களே நிச்சயமாக வென்றிருக்கிறார்கள், {அவர்களிடமே} அறத்தின் அளவும் அதிகமாக இருக்கிறது.(11) நீ முன்பு மன்னிக்கும் அறத்தை {பொறுமையை} நோற்று வந்தாய். அஃதை இப்போது ஏன் நீ நோற்கக்கூடாது? ஓ! அறமறிந்தவளே, அநீதியை அடக்குவாயாக. எங்கே அறமிருக்கிறதோ, அங்கேதான் வெற்றியுமிருக்கும்.(12) ஓ! காந்தாரி, உன் அறத்தையும், நீ பேசிய வார்த்தைகளையும் நினைவுகூர்ந்து உன் கோபத்தை அடக்குவாயாக. ஓ! அழகாகப் பேசுபவளே, வேறுவகையில் செயல்படாதே” என்றார் {வியாசர்}.(13)

இவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி {வியாசரிடம்}, “ஓ! புனிதமானவரே, பாண்டவர்களிடம் நான் எந்தக் கோபமும் கொள்ளவில்லை, அவர்கள் அழிய வேண்டும் என்று விரும்பவுமில்லை. எனினும், என் மகன்களின் மரணத்தால் ஏற்பட்ட துயரின் விளைவாக, என் இதயம் மிகப் பலத்த கலக்கத்தையடைகிறது.(14) குந்தி எவ்வளவு கவனமாகப் பாண்டவர்களைப் பாதுகாக்கிறாளோ, அதே அளவு நானும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், நான் பாதுகாக்கும் அளவுக்குத் திருதராஷ்டிரரும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நான் அறிவேன்.(15) துரியோதனன் மற்றும் சுபலரின் மகனான சகுனி ஆகியோரின் குற்றத்தின் மூலமும், கர்ணன் மற்றும் துச்சாசனன் ஆகியோரின் செயல்பாடுகளின் மூலமும், குருக்களின் இந்த முற்றான அழிவு நடைபெற்றிருக்கிறது.(16) இக்காரியத்தில், பீபத்சு {அர்ஜுனன்} மீதோ, பிருதையின் மகனான விருகோதரன் {பீமன்} மீதோ, நகுலன் மீதோ, சகாதேவன் மீதோ, யுதிஷ்டிரன் மீதோ சிறு பழியையும் இணைத்துச் சொல்ல முடியாது.(17)

ஆணவம் மற்றும் செருக்குடன் கூடிய கௌரவர்கள், போரில் ஈடுபடும்போது, (அவர்களின் உதவிக்கு வந்த) பலருடன் சேர்ந்து வீழ்ந்திருக்கிறார்கள். இதனால் நான் வருத்தமடையவில்லை.(18) ஆனால், வாசுதேவன் {கிருஷ்ணன்} முன்னிலையில், பீமனால் செய்யப்பட்ட ஒரு காரியம் (என் சினதைத் தூண்டும்படி} இருக்கிறது. உயர் ஆன்ம விருகோதரன் {பீமன்}, ஒரு பயங்கரக் கதாயுதப் போருக்குத் துரியோதனனை அறைகூவி அழைத்து விட்டு,(19) போரில் பல்வேறு வகைகளில் திரியும்போது, அவனை {பீமனை} விட என் மகன் {துரியோதனன்} திறனில் மேன்மையானவன் என்பதை அறிந்து, உந்திக்கு {தொப்புளுக்குக்} கீழே தாக்கினான்.(20) இதுவே என் கோபத்தைத் தூண்டுகிறது. கடமைகள் {தர்மங்கள்} அனைத்தையும் அறிந்த உயரான்ம மனிதர்களால் தீர்மானிக்கப்பட்ட கடமைகளை, வீரர்கள் தங்கள் உயிர்களுக்காக ஏன் கைவிடுகிறார்கள்?[2]” என்று கேட்டாள் {காந்தாரி}”.(21)

யுதிஷ்டிரனின் கால்கட்டைவிரல்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 15-காந்தாரியிடம் பேசிய பீமன், நியாயமற்ற முறையில் துரியோதனனைக் கொன்ற தன் குற்றத்தைக் குறைத்துச் சொன்னது; துச்சாசனனின் குருதியைக் குடித்த செயலைப் பீமனுக்குச் சுட்டிக்காட்டி அவனைக் கண்டித்த காந்தாரி; தன் தம்பியின் குருதியை உண்மையில் குடிக்கவில்லை என்றும், கர்ணன் மட்டுமே அஃதை அறிவான் என்றும் சொன்ன பீமன்; காந்தாரியிடம் பணிந்த யுதிஷ்டிரன்; காந்தாரியின் கண்கள் யுதிஷ்டிரனின் கால் கட்டைவிரல் நகத்தை எரித்தது; தங்கள் தாயைச் சந்தித்த பாண்டவர்கள்; திரௌபதியோடு சேர்ந்து அழுத குந்தி; திரௌபதிக்கு ஆறுதலளித்த காந்தாரி …

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “காந்தாரியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமசேனன், பயந்தவன் போலத் தெரிந்து, அவளை ஆறுதல் படுத்த இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “அந்தச் செயல் நேர்மையானதோ, நேர்மையற்றதோ, அஃது அச்சத்தினாலும், என்னைக் காத்துக் கொள்ளும் நோக்குடனுமே செய்யப்பட்டது. எனவே, என்னை இப்போது மன்னிப்பதே உனக்குத் தகும்.(2) உன் வலிமைமிக்க மைந்தன் {துரியோதனன்}, நேர்மையான நல்ல போரில், எவராலும் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான். துரியோதனனே முன்பு நியாயமற்ற வகையில் யுதிஷ்டிரரை வென்றான்[1]. இதன் காரணமாகவே நான் நியாயமற்றதைச் செய்தேன். அவன் எப்போதும் எங்களிடம் வஞ்சகமாகவே நடந்து கொண்டான். இதன் காரணமாகவே நான் நியாயமற்ற செயலைச் செய்ய வேண்டியிருந்தது.(4) உன் மகனே, அவனது தரப்பில் கொல்லப்படாமல் எஞ்சிய ஒரே வீரன். அந்த வீர இளவரசன் {துரியோதனன்} என்னைக் கதாயுத்ததில் கொல்லாமல் இருக்கவும், மீண்டும் எங்களை அவன் நாட்டை இழக்கச்செய்யாமல் இருக்கவும் நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(5)

பாஞ்சால இளவரசி {திரௌபதி} தன் பருவ காலத்தில் ஒற்றையாடை உடுத்தியிருந்தபோது, உன் மகன் அவளிடம் சொன்ன அனைத்தையும் நீ அறிவாய்.(6) சுயோதனனை {துரியோதனனை} ஒழிக்காமல், கடல்களுடன் கூடிய மொத்த பூமியையும் எங்களால் அமைதியாக ஆள முடியாது. இதன் காரணமாகவே நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(7) உன் மகன் எங்களுக்குப் பல தீங்குகளைச் செய்தான். சபைக்கு மத்தியில் வைத்து அவன் தன் இடது தொடையைத் திரௌபதிக்குக் காட்டினான்.(8) அந்தத் தீய நடத்தைக்காகவே அப்போதே உன் மகன் எங்களால் கொல்லத்தக்கவனாவான். எனினும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் ஆணையின் பேரிலும், ஏற்கப்பட்ட ஒப்பந்தத்தின் படியும் நாங்கள் எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டோம்.(9) ஓ! ராணி, இவ்வழிகளில் உன் மகன் {துரியோதனன்} எங்களுடன் தீராப் பகைமையைத் தூண்டிக் கொண்டிருந்தான். (உன் மகனால் விரட்டப்பட்டு) நாங்கள் காட்டில் அடைந்த பாடு மிகப் பெரியதாகும். இவையனைத்தையும் நினைவுகூர்ந்தே நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(10) போரில் துரியோதனனைக் கொன்றதன் மூலம் நாங்கள் எங்கள் பகைமைகளின் முடிவை அடைந்துவிட்டோம். யுதிஷ்டிரர் தமது நாட்டை மீண்டும் அடைந்துவிட்டார். நாங்களும் கோபத்திலிருந்து விடுபட்டோம்[2]” என்றான்.(11)பீமனின் வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி, “(போர்த்திறனில்) இவ்வாறு என் மகனை நீ புகழ்வதாலேயே, அவன் இத்தகு மரணத்திற்குத் தகாதவனாவான். எனினும், நீ என்னிடம் சொன்ன அனைத்தையும் அவன் செய்திருக்கிறான். {அது ஒருபுறம்} இருப்பினும், ஓ! பாரதா, விருஷசேனன் நகுலனை, அவனது குதிரைகளை இழக்கச் செய்தபோது, நீ போரில் துச்சாசனனது உடலின் குருதியைக் குடித்தாய்.(13) அத்தகு கொடூரச் செயல் நல்லோரால் நிந்திக்கப்படுகிறது. மிக இழிந்த ஒருவனுக்கே அது தகும். ஓ! விருகோதரா {பீமா}, அப்போது நீ செய்தது தீச்செயலே. இஃது உனக்குத் தகாது” என்றாள்.(14)

பீமன் {காந்தாரியிடம்}, “அந்நியனின் குருதியைக் குடிப்பதும் முறையாகாது, அப்படியிருக்கையில், ஒருவனுடைய சொந்த இரத்தத்தைக் குடிப்பதைப் பற்றி என்ன சொல்ல முடியும்? ஒருவனின் தம்பி, ஒருவனின் சுயமே ஆவான். அவர்களுக்குள் எந்த வேறுபாடும் கிடையாது.(15) எனினும், ஓ! தாயே, (நான் குடித்ததாகக் கருதப்படும்) குருதி, என் உதடுகளையும், பற்களையும் தாண்டவில்லை. கர்ணன் இதை நன்கறிவான். என் கைகள் மட்டுமே (துச்சாசனனின்) குருதியால் பூசப்பட்டிருந்தது.(16) போரில் விருஷசேனன், நகுலனைக் குதிரைகளை இழக்கச் செய்ததைக் கண்டு, மகிழ்ச்சியடைந்த (கௌரவ) சகோதரர்களை நான் பீதியால் நிறையச் செய்தேன்.(17) பகடையாட்டத்திற்குப் பிறகு, திரௌபதியின் குழல்கள் பற்றப்பட்டபோது, நான் சினத்தால் சில குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொன்னேன். அவ்வார்த்தைகள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன.(18) அந்தச் சபதத்தை நான் நிறைவேற்றாமல் இருந்திருந்தால், நான் நாளெல்லாம் க்ஷத்திரியக் கடமைகளில் தவறியவனாகக் கருதப்பட்டிருப்பேன். ஓ! ராணி, இதன் காரணமாகவே நான் அச்செயலைச் செய்தேன்.(19) ஓ! காந்தாரி, என்னிடம் களங்கம் காண்பது உனக்குத் தகாது. முன் நாட்களில் உன் மகன்களைத் தடுக்காமல், அப்பாவிகளான எங்கள் மீது எந்தக் களங்கத்தையும் காண்பதும் உனக்குத் தகாது” என்றான்.(20)

காந்தாரி {பீமனிடம்}, “ஓ! குழந்தாய் {பீமா}, எவராலும் வெல்லப்படாத நீ, இந்த முதிய மனிதரின் {திருதராஷ்டிரரின்} நூறு மகன்களைக் கொன்றிருக்கிறாய். ஓ!, குற்றங்கள் குறைந்தவர்களும், நாட்டை இழந்தவர்களுமான இந்த முதிர்ந்த இணையின் {தம்பதியரின்} ஒரேயொரு மகனையாவது நீ ஏன் எஞ்சவிடவில்லை?(21) ஒரேயொரு ஊன்றுகோலைக் கூட இந்தக் குருட்டு இணைக்கு நீ ஏன் விட்டு வைக்கவில்லை? ஓ! குழந்தாய், என் பிள்ளைகள் அனைவரையும் கொன்று, பிறகும் நீ காயமில்லாமல் வாழ்ந்தாய் என்றாலும், (அவர்களைக் கொல்லும்போது) நீ நீதியின் பாதையைப் பின்பற்றியிருந்தால் எனக்கு எந்தத் துயரமும் இல்லை” என்றாள்”.(23)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன காந்தாரி, தன் மகன்கள், தன் பேரப்பிள்ளைகள் அனைவரும் கொல்லப்பட்டதால் கோபத்தில் நிறைந்தவளாக, யுதிஷ்டிரனை விசாரிக்கும் வகையில், “எங்கே மன்னன் {யுதிஷ்டிரன்}?” என்று கேட்டாள்.(24) அவள் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், மன்னன் யுதிஷ்டிரன், நடுங்கிக் கொண்டே, கூப்பிய கரங்களுடன் அவளை {காந்தாரியை} அணுகி, அவளிடம் இந்த மென்மையான வார்த்தைகளைச் சொன்னான்,(25) “ஓ! தேவி, உன் மகன்களைக் கொன்ற கொடூரனான யுதிஷ்டிரன் இங்கே இருக்கிறேன். நானே இந்த அண்டத்தின் அழிவுக்குக் காரணமாக இருப்பதால் உன் சாபங்களுக்கு நான் தகுந்தவனே. ஓ!, என்னைச் சபிப்பாயாக.(26) உயிர், நாடு, செல்வம் ஆகியவற்றின் எந்தத் தேவையும் இனியும் எனக்கு இல்லை. இத்தகு நண்பர்களைக் கொல்லச் செய்த நான், பெரும் மூடனாகவும், நண்பர்களை வெறுப்பவனாகவுமே என்னை நிரூபித்துக் கொண்டேன்” என்றான்.(27)

அச்சத்தில் மூழ்கி இவ்வார்த்தைகளைப் பேசியவனும், காந்தாரியின் அருகில் நின்றவனுமான யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, அவள் {காந்தாரி} நீண்ட பெருமூச்சுகளை விட்டபடியே ஒன்றும் சொல்லாதிருந்தாள்.(28) அறவிதிகளை அறிந்தவளும், பெரும் முன்னறிதிறனைக் கொண்டவளுமான அந்தக் குரு ராணி {காந்தாரி}, தன் பாதத்தில் விழ முன்னோக்கிக் குனிந்த இளவரசன் யுதிஷ்டிரனின் {கால்} கட்டை விரலில் தன் கண்களை மறைத்திருந்த துணியின் ஊடாக அவற்றை {தன் கண்களைச்} செலுத்தினாள். இதனால், முன்பு மிக அழகிய நகங்களைக் கொண்டிருந்த மன்னனின் கட்டைவிரல் புண்ணுள்ள நகத்தைக் கொண்டததானது[3].(29,30) இதைக் கண்ட அர்ஜுனன் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பின்புறத்திற்கு நகர்ந்து சென்றான் {ஒளிந்து கொண்டான்}, பாண்டுவின் பிற மகன்களும் அமைதியிழந்தவர்களாக அடுத்தடுத்த இடத்திற்கு நகர்ந்து சென்றனர்.(31)

பிறகு காந்தாரி, தன் கோபத்தைக் கைவிட்டு, ஒரு தாயைப் போலப் பாண்டவர்களுக்கு ஆறுதலளித்தாள். அகன்ற மார்புகளைக் கொண்ட அந்த வீரர்கள் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு, வீரர்களைப் பெற்றவளான தங்கள் தாயிடம் {குந்தியிடம்} சென்றனர்.(32) நீண்ட காலத்திற்குப் பிறக் தன் மகன்களைக் கண்ட குந்தி, அவர்களின் நிமித்தமாகக் கவலையில் நிறைந்து, தன் முகத்தைத் துணியால் மறைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள். தன் பிள்ளைகளோடு சேர்ந்து சிறிது நேரம் அழுதபிறகு, பல ஆயுதங்களால் அவர்களின் உடல்களில் ஏற்பட்டிருந்த காயங்களையும், வடுக்களையும் கண்டாள்.(34) பிறகு அவள், மீண்டும் மீண்டும் அவர்களைத் தழுவி கொண்டு, தன் ஒவ்வொரு மகனையும், அன்பாகத் தட்டிக் கொடுத்தாள். பிறகு அவள் {குந்தி}, பிள்ளைகள் அனைவரையும் இழந்தவளும், வெறுந்தரையில் கிடந்து பரிதாபகரமாகப் புலம்பிக் கொண்டிருப்பவளுமான திரௌபதியைக் கண்டு, துக்கத்தால் பீடிக்கப்பட்டு அவளோடு சேர்ந்து அழுதாள்.(35)

அப்போது திரௌபதி {குந்தியிடம்}, “ஓ! மதிப்புக்குரிய பெருமாட்டியே, அபிமன்யுவுடன் சேர்த்து உன் பேரப்பிள்ளைகள் அனைவரும் எங்கே சென்றுவிட்டனர்? உன்னை இத்தகு துயரத்தில் கண்டும் அவர்கள் ஏன் உன் முன்பு தோன்றாமல் தாமதிக்கின்றனர்? பிள்ளைகளை இழந்த எனக்கு {அடையப்பட்டிருக்கும்} நாட்டால் என்ன தேவையிருக்கிறது {நாட்டால் என்ன ஆகப்போகிறது}?” என்று கேட்டாள்.(36) துயரத்தில் பீடிக்கப்பட்டு இவ்வாறு அழுதுகொண்டிருக்கும் பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} உயர்த்திய பிருதை {குந்தி}, அகன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண்ணுக்கு {திரௌபதிக்கு} ஆறுதலளிக்கத் தொடங்கினாள்.(37) பிறகு குந்தி, பாஞ்சால இளவரசியுடன், தன் மகன்களைப் பின்தொடர்ந்து சென்று, தானே பெருந்துயரில் இருந்தாலும், துயரில் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியை நோக்கிச் சென்றாள்.(38)

அந்தச் சிறப்புமிக்கப் பெண்மணி {குந்தி} தன் மருமகளுடன் {திரௌபதியுடன்} இருப்பதை அறிந்த காந்தாரி, அவளிடம் {திரௌபதியிடம்}, “ஓ! மகளே, வருந்தாதே.(39) உன்னைப்போலவே நானும் துயரில் பீடிக்கப்பட்டிருப்பதைப் பார்.(39) இந்த அண்ட அழிவானது, தடுக்கப்பட முடியாத காலத்தின் வழியால் கொண்டுவரப்பட்டது என நான் நினைக்கிறேன். தவிர்க்கப்பட முடியாத இந்தப் பயங்கரப் படுகொலை வேண்டுமென்றே மனிதர்களால் செய்யப்பட்டதில்லை.(40) கிருஷ்ணனின் அமைதிக்கான தூது தோல்வியுற்றபோது, பெரும் ஞானியான விதுரரால் முன்னறிந்து சொல்லப்பட்டவையே இப்போது நடந்திருக்கின்றன.(41) எனவே, தவிர்க்க முடியாத இக்காரியத்திற்காக, அதிலும் குறிப்பாக அது நேர்ந்த பிறகு நீ வருந்தாதே. போரில் கொல்லப்பட்டவர்களுக்காக வருந்தக்கூடாது.(42) நானும் உன்னோடு சேர்ந்து அதே இக்கட்டான சூழ்நிலையிலேயே இருக்கிறேன். (நீயே இவ்வாறு நடந்து கொண்டால்) யார் எங்களுக்கு ஆறுதல் சொல்வது? என் தவறாலேயே இந்த முதன்மையான குலம் அழிவையடைந்தது” என்றாள் {காந்தாரி}”.(43)

ஜலப்ரதானிக உப பர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் — ஸ்திரீ பர்வம்-ஜலப்ரதானிக உப பர்வம்-விசோக உப பர்வம்–

October 15, 2025

திருதராஷ்டிரனைத் தேற்றிய சஞ்சயன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 01-பிறகு என்ன நடந்தது என வைசம்பாயனரிடம் விசாரித்த ஜனமேஜயன்; திருதராஷ்டிரனின் துயரம்; திருதராஷ்டிரனின் புலம்பல்; இறந்தோருக்கான ஈமச்சடங்குகளைச் செய்யுமாறு சொன்ன சஞ்சயன்; சஞ்சயனின் கடிந்துரையும், தேற்றமும்; விதுரன் பேசத் தொடங்கியது…(விசோகம் என்றால் துயர முடிவு, அல்லது துயரத்தில் இருந்து விடுதலை என்பது பொருளாகும். இந்தப் பர்வத்தில் விதுரன் திருதராஷ்டிரன் துயர்களைய முயற்சி செய்வதால் இப்பர்வத்திற்கு இந்தப் பெயர்.)

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! தவசியே {வைசம்பாயனரே}, துரியோதனனும், போர்வீரர்கள் அனைவரும் வீழ்ந்த பிறகு, செய்தியை அடைந்த மன்னன் திருதராஷ்டிரன் என்ன செய்தான்?(1) உயரான்ம குரு மன்னனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன் என்ன செய்தான்? எஞ்சிய மூவரான கிருபரும், மற்றவர்களும் என்ன செய்தனர்?(2) அஸ்வத்தாமனின் சாதனைகள் குறித்த அனைத்தையும் நான் கேட்டுவிட்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் சபித்த கடிந்துரைகளுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை எனக்குச் சொல்வீராக. பார்வையற்ற முதிய மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்குச்} சஞ்சயன் சொன்ன அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் திருதராஷ்டிரன், தனது நூறு மகன்களையும் இழந்த பிறகு, அதன் காரணமாகத் துயரால் பீடிக்கப்பட்டு, உற்சாகமற்றவனாக, கவலையில் மூழ்கி, பேசும் சக்தியை இழந்தவனாகக் கிளைகள் ஒடிந்த மரத்தைப் போலத் தெரிந்தான்.(4)

பெரும் ஞானத்தைக் கொண்டவனான சஞ்சயன் அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அணுகி, அவனிடம், “ஓ! ஏகாதிபதி, நீர் ஏன் வருந்துகிறீர்? துயரம் எக்காரியத்தையம் செய்யாது.(5) ஓ! மன்னா, பதினெட்டு {18}அக்ஷௌஹிணி போராளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். வெறித்துப் போயிருக்கும் பூமியானது இப்போது கிட்டத்தட்ட வெறுமையாகவே இருக்கிறது.(6) பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுமான மன்னர்கள் அனைவரும், உமது மகனுடன் சேர்ந்து தங்கள் உயிரை விட்டனர்.(7) இப்போது விதிப்படி செய்ய வேண்டியது, உமது தந்தைமார், மகன்கள், பேரப்பிள்ளைகள், சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் ஆசான்களுக்கான ஈமச் சடங்குகளே ஆகும்” என்றான் {சஞ்சயன்}”.(8)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மகன்கள், அமைச்சர்கள் மற்றும் தன் நண்பர்கள் அனைவரையும் இழந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான மன்னன் திருதராஷ்டிரன், காற்றால் வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரத்தைப் போலத் திடீரெனக் கீழே பூமியில் விழுந்தான்.(9)

{அப்போது} திருதராஷ்டிரன், “மகன்கள், அமைச்சர்கள் மற்றும் என் நண்பர்கள் அனைவரையும் இழந்த நான், நிச்சயம் கவலையுடன் பூமியில் திரியப் போகிறேன்.(10) முதுமையால் பீடிக்கப்பட்டு, சொந்தங்கள், நண்பர்கள் ஆகியோரை இழந்து, சிறகுகளற்ற பறவைக்கு ஒப்பாக இருக்கும் எனக்கு உயிர் வாழும் தேவை என்ன இருக்கிறது?(11) ஓ! பெரும் ஞானியே, கண்களை இழந்தவனான நான், ஒளியிழந்த நட்சத்திரத்தைப் போலவே இப்போது நாட்டை இழந்து, சொந்தங்களை இழந்து ஒளியில்லாமல் இருக்கிறேன்.(12) நண்பர்களும், ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, தெய்வீக முனிவரான நாரதர், தீவில் பிறந்தவரான கிருஷ்ணர் {வியாசர்} ஆகியோரும் ஆலோசனைகளைச் சொன்ன போது, அவற்றை நான் பின்பற்றவில்லை.(13) சபைக்கு மத்தியில் வைத்து கிருஷ்ணன், “ஓ! மன்னா, பகைமைகளை நிறுத்துவோம். உமது மகனே {துரியோதனனே} மொத்த நாட்டையும் எடுத்துக் கொள்ளட்டும். (பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களை மட்டுமே கொடுப்பீராக)” என்று எனக்கு நன்மையானதைச் சொன்னான். மூடனான நான் அந்த அறிவுரையைப் பின்பற்றாததால் இப்போது, எரிச்சலூட்டத்தக்க இந்தக் கவலையை அடைந்தேன்.(14)

பீஷ்மரின் நீதிமிக்க ஆலோசனைகளை நான் கேட்கவில்லை. ஐயோ, ஒரு காளையைப் போன்ற முழங்கும் துரியோதனனின் படுகொலையைக் கேட்டும்,(15) துச்சாசனனின் மரணம், கர்ணனின் அழிவு, துரோணச் சூரியனின் மறைவு ஆகியவற்றைக் கேட்டும் என் இதயம் துண்டுகளாக நொறுங்காமல் இருக்கிறதே.(16) ஓ! சஞ்சயா, முந்தைய நாட்களில் நான் செய்த எந்தத் தீச்செயலின் விளைவாக இன்று துன்புறுகிறேன் என்பதை என்னால் நினைவுகூரமுடியவில்லை.(17) விதிவகுக்கும் உயர்ந்தவன் {பிரம்மன்}, இந்த அளவுக்குத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள விதித்திருக்கிறான் என்றால் நான் முந்தைய பிறவிகளில் பெரும்பாவங்களைச் செய்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.(18) என் சொந்தங்கள் அனைவரின் இந்த அழிவும், என் நலன் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவரின் இந்த நிர்மூலமும், விதியின் பலத்தாலேயே இந்த முதிர்வயதில் என்னை வந்தடைந்திருக்கிறது. இழிந்தவனான என்னைவிட இந்த உலகத்தில் வேறு எந்த மனிதன் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கிறான்?(19) நிலை இவ்வாறு இருப்பதால், உறுதிமிக்கத் தீர்மானத்துடன், பிரம்மலோகத்திற்கு இட்டுச்செல்லும் நீண்ட வழியில் நான் செல்வதை இந்த நாளே பாண்டவர்கள் பார்க்கட்டும்”[1] என்றான்”.(20)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மன்னன் திருதராஷ்டிரன் இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவனது துயரத்தை அகற்றுவதற்காகப் பின்வரும் வார்த்தைகளைச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது துயரத்தைக் கைவிடுவீராக. பெரியோரின் உதடுகளின் மூலம் வேதங்களையும், பல்வேறு சாத்திரங்கள் மற்றும் புனிதமான ஆகமங்களின் தீர்மானங்களையும் நீர் கேட்டிருக்கிறீர். சிருஞ்சயன், தன் மகனுடைய மரணத்தின் நிமித்தமாகப் பீடிக்கப்பட்டிருந்தபோது, அவனிடம் தவசிகள் சொன்ன அந்த வார்த்தைகளையும் நீர் கேட்டிருக்கிறீர்.(22) உமது மகன் {துரியோதனன்}, இளமையில் பிறக்கும் {தோன்றும்} செருக்கை {கொழுப்பை} அடைந்தபோது, நலன்விரும்பிகளால் உமக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகளை நீர் ஏற்க மறுத்தீர். கனியை விரும்பிய நீர், உமக்கான உண்மையான நன்மை எதுவோ, அதைப் பேராசையினால் செய்யாமல் இருந்தீர்.(23) {அந்த} உமது அறிவே ஒரு கூரிய வாளைப் போல {இப்போது} உம்மைக் காயப்படுத்தியிருக்கிறது. பொதுவாகவே தீய நடத்தை கொண்டோரின் துணையையே நீர் நாடினீர்.(24) உமது மகன் {துரியோதனன்}, தன் ஆலோசகர்களாகத் துச்சாசனன், தீய ஆன்மாவான ராதையின் மகன் {கர்ணன்}, அதே அளவுக்குத் தீயவனான சகுனி, மூட புத்தி கொண்ட சித்திரசேனன், சல்லியன்[2] ஆகியோரையே கொண்டிருந்தான். உமது மகன் (தன் சொந்த நடத்தையினாலேயே) மொத்த உலகத்தையும் தன் எதிரியாக்கிக் கொண்டான்.(25)ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஓ! மன்னா, குருக்களின் மரியாதைக்குரிய தலைவரான பீஷ்மர், காந்தாரி, விதுரர், துரோணர், சரத்வான் மகனான கிருபர், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன், நுண்ணறிவு கொண்ட நாரதர், இன்னும் பல முனிவர்கள் மற்றும் அளவிடமுடியாத சக்தி கொண்ட வியாசர் ஆகியோரின் வார்த்தைகளுக்கு உமது மகன் கீழ்ப்படியவில்லை.(26,27) உமது மகன் {துரியோதனன்} ஆற்றல் படைத்தவனாக இருப்பினும், அவன் சிறு மதி கொண்டவனாகவும், செருக்குடையவனாகவும், எப்போதும் போரை விரும்புபவனாகவும், தீயவனாகவும், வெறிகொண்ட மூர்க்கனாகவும், நிறைவற்றவனாகவும் இருந்தான்.(28) நீரோ கற்றறிந்தவராகவும், நுண்ணறிவு கொண்டவராகவும், எப்போதும் உண்மை பேசுபவராகவும் இருக்கிறீர். உம்மைப் போன்ற நேர்மையாளர்களும், அறிவாளிகளும் துயரத்தால் ஒருபோதும் திகைக்கமாட்டார்கள்.(29) {உமது மகன்களில்} எவரும் அறங்கருதவில்லை. போர் என்ற ஒற்றை வார்த்தையே அவர்களது உதடுகளில் இருந்தன. அதன் காரணமாகவே க்ஷத்திரிய வகையினர் முற்றாக அழிக்கப்பட்டு, உமது எதிரிகளின் புகழ் பெருகியிருக்கிறது.(30)

நடுவருக்கான இடத்தில் இருந்த நீரோ, நலம்பேணும் அறிவுரை என ஒரு வார்த்தையும் சொல்லாதிருந்தீர். அப்பணிக்குத் தகாத நீர், தராசுகளைச் சமமாக நிறுத்தவில்லை.(31) ஒவ்வொரு மனிதனும், தான் ஏற்கனவே செய்த ஏதோ ஒன்றுக்காக வருந்த வேண்டிய தேவையில்லாமல் தொடக்கத்திலிருந்தே நன்மையான செயல்களையே {முறைப்படி} செய்ய வேண்டும்.(32) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் துரியோதனன் மீது கொண்ட பாசத்தால் நீர் அவனுக்கு ஏற்புடையதையே செய்தீர். அதற்காகவே இப்போது நீர் வருந்த வேண்டியிருக்கிறது. எனினும், நீர் துயரத்துக்கு ஆட்படுவது உமக்குத் தகாது.(33) பள்ளத்தைக் கவனியாமல் தேனை நோக்கி மட்டுமே கண்களைச் செலுத்தும் மனிதன், தேனின் மீது தான் கொண்ட பேராசையின் மூலமே அழிவை அடைகிறான். அத்தகு மனிதன் உம்மைப் போலவே வருந்த வேண்டியிருக்கும்.(34) துயரப்படும் மனிதன் ஒருபோதும் செழிப்பை வெல்வதில்லை. துயரப்படுவதால் ஒருவன் தன் ஆசைகளின் கனிகளையே இழக்கிறான். மேலும் நமது விருப்பத்திற்குரிய பொருட்களை அடைவதற்கு அந்தத் துயரமே தடையாக இருக்கிறது. துயரத்தில் மூழ்குபவன் தன் முக்தியையும் {விடுதலையையும்} இழக்கிறான்.(35)

எரியும் கரியைத் தன் உடுப்பில் மறைக்கும் ஒரு மனிதன், அதற்குள் முடுக்கப்படும் நெருப்பினால் எரிக்கப்பட்டுத் தான் அடைந்த காயங்களுக்காக வருந்துவானானால், அவன் மூடன் என்றே அழைக்கப்படுவான்.(36) நீரும், உமது மகனும், உங்கள் வார்த்தைகளால் பார்த்த-நெருப்பை {அர்ஜுன நெருப்பைத்} விசிறி, உங்கள் பேராசையின் விளைவால் உண்டான செயல்களால் தெளிந்த நெய்யை {அந்நெருப்பில்} ஊற்றி, அந்நெருப்பைச் சுடர்விட்டெரியச் செய்து, அஃதை எரிக்கும் தழல்களாக்கினீர்கள்.(37) அந்நெருப்பு இவ்வாறு சுடர்விட்டபோது, உமது மகன்கள் பூச்சிகளைப் போல அதில் விழுந்தனர். எனினும், எதிரியின் கணைகள் எனும் நெருப்பில் எரிந்தவர்களான அவர்களுக்காக இப்போது நீர் வருந்துவது தகாது.(38) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்போது நீர் கொண்டிருக்கும் அழுகைக்கறை கொண்ட முகமானது, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படவோ, நல்லோரால் புகழப்படவோ இல்லை.(39) நெருப்புப் பொறிகளைப் போன்ற இந்தக் கண்ணீர்த்துளிகள் யாருக்காகச் சிந்தப்படுகின்றனவோ, இறந்தோரான அவர்களையே அவை எரிக்கும். உமது துயரை அறிவினால் கொன்று, உமது பலத்தால் எழுவீராக” {என்றான் சஞ்சயன்}.(40) இவ்வாறே உயரான்ம சஞ்சயனால் அம்மன்னன் {திருதராஷ்டிரன்} தேற்றப்பட்டான். ஓ! எதிரிகளை எரிப்பவனே {ஜனமேஜயா}, அப்போது, விதுரன் தன் பேரறிவை வெளிப்படுத்தும் வகையில் மீண்டும் அம்மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} பேசினான்” {என்றார் வைசம்பாயனர்}.(41)

திருதராஷ்டிரனைத் தேற்றிய விதுரன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 02-முதிய மன்னனுக்கு ஆறுதலளித்த விதுரன்; கொல்லப்பட்டவர்கள் சொர்க்கத்தையும், கொலை செய்தவர்கள் புகழையும் அடைவார்கள் எனவே கவலை கொள்வது தகாது எனத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்; காலத்தின் வலிமை, வாழ்வின் நிலையாமை, ஞானத்தின் மேன்மை, முற்பிறவிச் செயல்களின் விளைவுகள் ஆகியவற்றைச் சொன்ன விதுரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா, விதுரன், விசித்திரவீரியன் மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} சொன்ன அமுதம் போன்ற எந்த வார்த்தைகள் அந்த மனிதர்களில் காளையை {திருதராஷ்டிரனை} மகிழ்ச்சியடைச் செய்தனவோ அவற்றைக் கேட்பாயாக.(1)

விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா! எழுவீராக. ஏன் பூமியில் கிடக்கிறீர்? உம்மைத் தாங்கிக் கொள்வீராக. ஓ! மன்னா, இதுவே உயிரினங்கள் அனைத்தின் இறுதி முடிவாகும்.(2) ஒன்றாகத் திரளும் அனைத்தும் முடிவில் அழிவையே அடைகிறது; உயர்ந்து செல்லும் அனைத்தும் விழப்போவது உறுதி. சேர்வது முடிவில் பிரிவது உறுதி; உயிரானது முடிவில் இறப்பது உறுதி.(3) ஓ! பாரதரே, வீரன் மற்றும் கோழை ஆகிய இருவரையும் யமன் இழுத்துச் செல்கிறான். ஓ! க்ஷத்திரியர்களில் காளையே, பிறகு ஏன் க்ஷத்திரியர்கள் போரில் ஈடுபட மாட்டார்கள்?(4) போரிடாதவனும் மாள்வதைக் காண்கிறோம். மேலும், போரிடுபவன் உயிர் தப்புவதையும் காண்கிறோம். எனினும், ஓ! மன்னா, நேரம் வரும்போது எவரும் தப்ப முடியாது.(5)

வாழும் உயிரினங்களைப் பொறுத்தவரையில், அவை முதலில் {ஆதியில்} இருப்பிலில்லை. இறுதியில் மீண்டும் அவை இருப்பில் இல்லாமல் போகின்றன. இதில் {நடுவில் மட்டுமே இருக்கும் ஒன்றில்} துயர் கொள்ள என்ன இருக்கிறது?(6) துயரில் ஈடுபடும் மனிதன் இறந்தவனைச் சந்திப்பதில் வெல்வதில்லை. துயரில் ஈடுபடுவதாலேயே ஒருவன் தானே சாவதில்லை. உலகத்தின் வழி இவ்வாறிருக்கையில், ஏன் நீர் துயரில் ஈடுபடுகிறீர்?(7) அனைத்துயிர்களையும், ஏன் தேவர்களையும் கூடக் காலன் இழுத்துச் செல்கிறான். ஓ! குருக்களில் சிறந்தவரே, காலத்திற்கு அன்புக்குரியவனோ, வெறுப்புக்குரியவனோ எவனும் கிடையாது.(8) புல்லின் நுனிகள் அனைத்தையும் கிழிக்கும் காற்றைப் போலவே, காலமும் அனைத்து உயிரினங்களையும் தன் வசப்படுத்துகிறது.(9) ஒரே இடத்தை நோக்கிச் செல்லும் வணிகக்கூட்டத்தின் உறுப்பினர்களைப் போலவே அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன. (அனைத்தையும் காலன் சந்திக்கும்போது) அவன் {காலன்} எவரை முதலில் சந்திக்கிறான் என்பது பெரிய காரியம் இல்லை {எவனுக்குக் காலம் வருகிறதோ அவன் முந்திச் செல்கிறான்}.(10)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் கொல்லப்பட்டவர்களைக் குறித்துத் துயருறுவது உமக்குத் தகாது. சாத்திரங்களுக்கு ஏதேனும் அதிகாரம் இருக்குமெனில், அவர்கள் அனைவரும் உயர்ந்த முடிவையே அடைந்திருக்க வேண்டும்.(11) அவர்கள் அனைவரும் வேதங்களை நன்கறிந்தவர்கள்; அவர்கள் அனைவரும் நோன்புகள் நோற்றவர்கள். எதிரியை முகத்துக்கு நேராகச் சந்தித்தே அவர்கள் அனைவரும் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இதில் கவலை கொள்ள என்ன இருக்கிறது?(12) (பிறப்பதற்கு முன்பு) அவர்கள் கண்ணுக்குத் தெரியாதவர்களாக இருந்தார்கள். அறியப்படாத அவ்விடத்தில் இருந்து வந்த அவர்கள் மீண்டும் காணப்படாமலேயே கண்ணுக்குத் தெரியாமல் போகிறார்கள். அவர்கள் உம்முடையவர்களல்ல; நீரும் அவர்களுடையவரல்ல. பிறகு இத்தகு மறைவால் என்ன கவலை ஏற்பட முடியும்?(13) கொல்லப்பட்ட ஒருவன் சொர்க்கத்தை வெல்கிறான் {அடைகிறான்}. கொலையைச் செய்தவனால் புகழ் வெல்லப்படுகிறது {அடையப்படுகிறது}. நம்மைப் பொறுத்தவரை, இவ்விரண்டும் {சொர்க்கமும், புகழும்} பெரும் தகுதியையே {புண்ணியத்தையே} தருகின்றன. எனவே, போரானது பலனற்றதில்லை.(14) இந்திரன், அனைத்து விருப்பங்களையும் அருளவல்ல உலகங்களை அவர்களுக்குக் கொடுப்பான் என்பதில் ஐயமில்லை. ஓ! மனிதர்களில் காளையே, அவர்கள் இந்திரனின் விருந்தினர்களாவர்.(15)

போரில் கொல்லப்பட்ட வீரர்கள் சொர்க்கத்திற்குச் செல்வதைவிட, அபரிமிதமான கொடைகளைக் கொண்ட வேள்விகளாலோ, தவங்களாலோ, கல்வியாலோ ஒரு மனிதன் சொர்க்கத்திற்கு வேகமாகச் செல்ல முடியாது.(16) வேள்வி நெருப்பைக் கொண்டிருக்கும் பகைவீரர்களின் உடல்களில் அவர்கள் தங்கள் கணை ஆகுதிகளைப் பொழிகிறார்கள். பெருஞ்சக்தி கொண்ட அவர்கள், பதிலுக்கு (தங்கள் எதிரிகளால் அவர்கள் மீது ஊற்றப்படும்) கணை ஆகுதிகளைப் தாங்கிக் கொள்கிறார்கள்.(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் ஒரு க்ஷத்திரியனுக்கு, போரைவிடச் சொர்க்கத்திற்குச் செல்லும் சிறந்த பாதை வேறேதும் இல்லை என நான் உமக்குச் சொல்கிறேன்.(18) அவர்கள் அனைவரும் உயர் ஆன்ம க்ஷத்திரியர்களும், துணிச்சல் கொண்டவர்களும், சபைகளின் ரத்தினங்களுமாவர். அவர்கள் உயர்ந்த அருள்நிலையை அடைந்திருக்கின்றனர். அவர்கள் நாம் கவலைகொள்ளத்தக்க மனிதர்களல்லர்.(19) ஓ! மனிதர்களில் காளையே, உம்மை நீரே தேற்றிக் கொண்டு, கவலையை விடுவீராக. செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, கவலையில் மூழ்குவது உமக்குத் தகாது.(20)

இவ்வுலகில் ஆயிரக்கணக்கான தாய்மாரும், தந்தைமாரும், மகன்களும், மனைவியரும் இருக்கின்றனர். அவர்கள் யாருடையவர்கள்? நாம் யாருடையவர்கள்?(21) கவலையில் இருந்து நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான காரணங்கள் எழுகின்றன. அந்த ஆயிரக்கணக்கான காரணங்களும் அச்சத்தையே உண்டாக்குகின்றன. எனினும், இவை அறியாமை கொண்டோரையே பாதிக்கும்; ஞானியருக்கோ அவை ஒன்றுமில்லை.(22) ஓ! குருக்களில் சிறந்தவரே, காலத்திற்கு அன்புக்குரியவரோ, வெறுப்புக்குரியவரோ எவருமில்லை. அனைவரையும் சமமாகவே காலம் இழுத்துச் செல்கிறது. காலமே அனைத்துயிரையும் வாழச் செய்கிறது. காலமே அனைத்தையும் அழிக்கவும் செய்கிறது. அனைவரும் உறங்கும்போது, காலம் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கிறது. காலம் தடுக்கப்பட முடியாததாகும்.(24) இளமை, அழகு, உயிர், உடைமைகள், உடல்நலம், நண்பர்களின் தோழமை ஆகிய அனைத்தும் நிலையற்றவையே. ஞானியாக இருப்பவன் இவை எவற்றிலும் ஒருபோதும் நாட்டங்கொள்ள மாட்டான்.(25)

உலகளாவிய {அனைவருக்கும் பொதுவான} ஒன்றுக்காக வருந்துவது உமக்குத் தகாது. துயரில் ஈடுபடுவதால் ஒருவன் இறக்கலாம். ஆனால் துயரமானது, அதில் ஈடுபடுவதால் ஒருபோதும் கனமற்றதாகாது.(26) நீர் உமதுதுயரைக் கனமானதாக உணர்ந்தால், அதில் ஈடுபடாமல் அதற்குப் பதலடியைக் கொடுக்க வேண்டும். துயரத்தில் ஈடுபடாமல் இருப்பதே துயரத்திற்கான மருந்தாகும்.(27) அதிலேயே வசிப்பதால் ஒருவன் அதைக் குறைக்க முடியாது. மறுபுறம் அதில் ஈடுபடுவதால் அது வளரவே செய்கிறது. தீமை நேரும்போதோ, அன்புக்குரிய ஒன்றை இழக்கும் நிலையிலோ துயரில் மனம் பீடிக்கப்படுபவர்கள் சிறுமதி கொண்டோரே.(28) உமது இதயம் எதில் வசித்திருக்கிறதோ {எதை விரும்புகிறதோ}, அது பொருளோ, அறமோ, இன்பமோ கிடையாது(29). மனநிறைவற்றவர்கள், செல்வத்தை அடைவதில் நேரும் திருப்பத்தின் இணக்கத்தில் திகைப்படைகிறார்கள். ஒருவனது உடலின் துயரமானது, மருந்தால் கொல்லப்படுவதைப் போலவே, அவன் மனத்துயரத்தை ஞானத்தால் கொல்ல வேண்டும். ஞானமே இந்தச் சக்தியைக் கொண்டிருக்கிறது. எனினும், மூடர்களால் மன அமைதியை அடையவே முடியாது.(30,31)

முந்தைய வாழ்வின் செயல்பாடுகள் ஒரு மனிதனை நெருக்கமாகப் பின்தொடர்ந்து, அவன் எங்கே கிடக்கிறானோ அங்கேயே கிடந்து, எங்கே தங்குகிறானோ அங்கேயே தங்கி, அவன் ஓடும்போது அவனுடனேயே ஓடுகிறது.(32) வாழ்வின் அச்சூழல்களில் ஒருவன் நல்லதாகவோ, அல்லதாகவோ செயல்பட்டிருந்தால், அவன் அதே போன்ற சூழ்நிலைகளில் இன்புறவோ, துன்புறவோ செய்கிறான்.(33) ஒருவன் செயல்களைச் செய்யும் (உடல் அமைப்புகளில்) அவ்வடிவங்களில் அவன் அதேபோன்ற வடிவங்களின் பலன்களால் இன்புறவோ, துன்புறவோ செய்கிறான்.(34) ஒருவன் தானே தனது நண்பனாவான், அதே போலவே அவனே அவனுக்கு எதிரியுமாவான். ஒருவன் தானே தன் நல்ல மற்றும் தீய செயல்பாடுகளின் சாட்சியாக இருக்கிறான்.(35) நற்செயல்களில் இருந்து இன்பநிலையெழுகிறது, தீச்செயல்களில் இருந்து பாவகரச் செயல்களே எழுகின்றன. ஒருவன் எப்போதும் தன் செயல்பாடுகளின் கனிகளையே அடைவான்.(36) ஓ! மன்னா, உம்மைப் போன்ற புத்திசாலி மனிதர்கள், அறிவால் அங்கீகரிக்கப்படாததும், அடிவேரையே (அறம் மற்றும் இன்பத்தைத்) தாக்குவதுமான பாவகரமான பெருங்குற்றங்களில் ஒருபோதும் மூழ்குவதில்லை” என்றான் {விதுரன்}.(37)

மண்குடமும் மனித வாழ்வும்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 03-விதுரனின் இனிய உரையாடலைத் தொடரும்படி கேட்டுக் கொண்ட திருதராஷ்டிரன்; மனித வாழவின் நிலையாமையை மீண்டும் எடுத்துச் சொன்ன விதுரன்…

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஓ! பெரும் ஞானியே, உன் வார்த்தைகளால் என் துயரம் விலகுகிறது. எனினும், நீ மீண்டும் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன்.(1) உண்மையில், தீயவை சேர்வதாலும், விருப்பத்திற்குரிய பொருட்களை இழப்பதாலும் பிறக்கும் மனத்துயரத்தில் இருந்து ஞானியர் எவ்வாறு விடுபடுகின்றனர்” என்று கேட்டான்.(2)

விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஒருவன் துயரம் மற்றும் மகிழ்ச்சியில் இருந்து எவ்வழிகளில் தப்ப முடியுமோ அவற்றின் மூலமே, துயரம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் அடக்கி ஒரு ஞானி அமைதியை அடைகிறான்.(3) ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, எந்தப் பொருட்களுக்காக நாம் கவலையடைகிறோமோ அவை அனைத்தும், குறுகிய காலத்தைக் கொண்டவையே {நிலையில்லாதவையே}. இவ்வுலகம் பலத்தைப் பொறுத்துக்கொள்ளாத ஒரு வாழை மரத்தைப் போல இருக்கிறது.(4)

ஞானி மற்றும் மூடன், பணக்காரன் மற்றும் ஏழை ஆகியோர் அனைவரும், சதை இழந்த உடல்களுடனும், வெறும் எலும்புகளுடனும், வாடி வதங்கிய தசைகளுடனும் {நரம்புகளுடனும்}, கவலையற்றுச் சுடலைகளில் {சுடுகாடுகளில்} உறங்கும்போது, அவர்களில் எவரின் தனிப்பட்ட அடையாளங்களைக் கண்டு அவர்களின் பிறப்பு மற்றும் அழகின் தன்மைகளை உயிர்பிழைத்திருப்போரால் உறுதிசெய்ய முடியும்? (மரணமடைந்ததும் அனைவரும் சமமே எனும்போது), எப்போதும் (இவ்வுலகப் பொருட்களால்) வஞ்சிக்கப்படும் அறிவைக் கொண்ட மனிதர்கள், ஒருவருக்கொருவர் பதவி மற்றும் நிலைகளில் {அந்தஸ்துகளில்} ஏன் ஆசை கொள்கிறார்கள்?(5,6) மனிதர்களின் உடல்கள் வீடுகளைப் போன்றன எனக் கல்விமான்கள் சொல்கின்றனர். காலம் வரும்போது இவை அழிக்கப்படுகின்றன. எனினும், ஒருவன் {ஆன்மா} அழிவில்லாதவனாக இருக்கிறான்.(7) ஒரு மனிதன், பழையதாகவோ, புதியதாகவோ இருக்கும் தன் ஆடையைக் களைந்து, மற்றொரு ஆடையை அணிவதைப் போலவே உடல்படைத்த அனைவரின் உடல்களும் அவர்களால் களையப்படுகின்றன.(8) ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரனே}, உயிரினங்கள் இன்பம் அல்லது துன்பத்தைத் தங்கள் செயல்களின் கனியாகவே அடைகின்றன.(9)

மண்குடங்களில் சில, குயவனின் சக்கரத்தில் இருக்கும்போதே நொறுங்குகின்றன, சில ஓரளவே வடிவங்கொள்ளும்போதும், சில நல்ல வடிவத்தை அடையும்போதும், சில சக்கரத்தில் இருந்து அகற்றும்போதும், சில கொண்டு செல்லப்படும்போதும், சில கொண்டு செல்லப்பட்ட பிறகும், சில ஈரமாக இருக்கும் போதும், சில உலர்ந்திருக்கும்போதும், சில சுடப்பட்ட பிறகும், சில உலையில் இருந்து எடுக்கப்படும்போதும், சில உலையில் இருந்து எடுக்கப்பட்ட பிறகும், சில பயன்படுத்தப்படும்போதும் நொறுங்குவதைப் போலவே உடல்படைத்த உயிரினங்களின் உடல்களும் அழிகின்றன.(11-13) சிலர் கருவறையில் இருக்கும்போதே அழிவை அடைகின்றனர், சிலர் கருவறையை விட்டு வெளியேறியதும், சிலர் வெளியேறிய அடுத்த நாள், சிலர் அரை மாதம் சென்றோ, ஒரு மாதத்திலோ, சிலர் நடு வயதிலும், சிலர் முதிர் வயதிலும் அழிவை அடைகின்றனர்.(14-15)

உயிரினங்கள் தங்கள் முந்தைய வாழ்வுகளில் செய்த செயல்களுக்கு ஏற்பவே பிறக்கவோ, இறக்கவோ செய்கின்றனர். உலகத்தின் வழி இவ்வாறு இருக்கும்போது, நீர் ஏன் துயரத்தில் ஈடுபடுகிறீர்?(16) மனிதர்கள், நீர்விளையாட்டில் நீந்தும் போது, சில வேளைகளில் மூழ்குவதையும், சில வேளைகளிலும் மேலெழுவதையும் போலவே உயிரினங்களும் வாழ்வெனும் ஓடையில் மூழ்கி மேலெழுகின்றன. ஞானம் குறைந்தவர்கள், தங்கள் செயல்களின் விளைவாலேயே துன்புறவோ, அழிவடையவோ செய்கின்றனர்.(17,18) எனினும், வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்ய விரும்பி அறம் நோற்கும் ஞானியர், இவ்வுலகில் உயிரினங்களுடைய தோற்றத்தின் உண்மையான இயல்பை அறிந்து, இறுதியாக உயர்ந்த முடிவை அடைகின்றனர்” என்றான் {விதுரன்}.(19)

தோற்றம், வளர்ச்சி மற்றும் மறைவு! – ஸ்திரீ பர்வம் பகுதி – 04-உயிரானது கருவறையில் வசிக்கும் முறையையும், பிறந்து அடையும் துன்பத்தையும், அதன் இறப்பையும் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்…

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, இவ்வுலகெனும் அடர்க்காடு எவ்வாறு அறியப்பட வேண்டும்? இதை நான் கேட்க விரும்புகிறேன். இதைக் கேட்கும் எனக்கு நீ சொல்வாயாக” என்று கேட்டான்.(1)

விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “உயிரினங்களின் செயல்பாடுகள் அனைத்தையும் நான் அவற்றின் முதல் கருத்தறிப்பிலிருந்தே விளக்குகிறேன். தொடக்கத்தில் அது {உயிரானது} குருதி மற்றும் உயிர்நீரின் கலவையில் {சுக்லசோணிதத்தில்} வாழ்கிறது. அதன் பிறகு அது மெல்ல மெல்ல வளர்கிறது. ஐந்து மாதங்கள் கடந்ததும் அது வடிவத்தை ஏற்கிறது.(2) அடுத்தாக {ஆறாம் மாதத்தில்} அங்கங்கள் அனைத்தும் வளர்ந்த நிலையில் முதிர்கருவாகி, சதையும், குருதியும் கலந்த தூய்மையற்ற ஓரிடத்தில் வாழ்கிறது.(3) பிறகு, காற்றின் செயல்பாட்டின் மூலம், அதன் அடி உறுப்புகள் தலைகீழாக மாறி, தலையானது கீழே வருகிறது. இந்நிலையிலேயே கருப்பையின் வாயிலை அடைந்து, பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிறது.(4) கருப்பைச் சுருங்கி விரிவதன் விளைவாலும், தன் முந்தைய செயல்பாடுகள் அனைத்தின் விளைவாலும் அந்த உயிரினம் வெளியே வருகிறது. அதன் பிறகு அது தன்னை நோக்கி விரைந்து வரும் இவ்வுலகின் தீமைகளை எதிர்கொள்கிறது. இறைச்சியை நுகர்ந்து வரும் நாய்களைப் போல இடர்கள் அதை நோக்கி வருகின்றன.(5)

அதன்பிறகு, அது தன் முந்தைய செயல்களில் கட்டுப்பட்டிருக்கும்போது, பல்வேறு நோய்கள் அதை அணுகுகின்றன.(6) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புலனுணர்வுகள், பெண்கள், செல்வம், மற்றும் வாழ்வின் பிற இனிய பொருட்களில்ல் கட்டுப்பட்டிருக்கும் அதைப் {மனித ஆண் உயிரினத்தைப்} பல்வேறு தீமைகள் அணுகுகின்றன.(7) இதனால் பிடிக்கப்படும் அது {அவன்} ஒரு போதும் மகிழ்ச்சியை அடைவதில்லை. அந்தப் பருவத்தில், நன்மையான, அல்லது தவறான தன் செயல்களின் கனிகளை அடைவதில் அது {அவன்} தவறுகிறது {தவறுகிறான்}. எனினும் சிந்தனையில் தங்களின் இதயங்களை நிலைக்கச் செய்பவர்கள், தங்கள் ஆன்மாக்களைப் பாதுகாப்பதில் வெற்றியடைகிறார்கள்.(8) தன் புலன்களால் ஆளப்படும் ஒருவன், தன் வாயிலில் வந்திருக்கும் காலனை அறிவதில்லை. இறுதியாக, யமனின் தூதர்களால் இழுக்கப்படும் அவன், குறித்த நேரத்தில் தன் அழிவைச் சந்திக்கிறான்.(9) புலன்களின் கலக்கத்தால் அவன் செய்த நன்மையோ, தீமையோ, தொடக்கத்தில் செய்யப்படுபவையே. இவற்றின் கனிகளால் இன்புறவோ, துன்புறவோ செய்யும் அவன், தற்கொலைக்குச் சமமான தன் செயல்பாடுகளில் மீண்டும் அலட்சியம் கொள்கிறான்.(10)

ஐயோ, உலகம் வஞ்சிக்கப்பட்டு, பேராசையானது அதை {உலகத்தைத்} தன் ஆளுகையின் கீழ் கொண்டு வருகிறது. பேராசை, கோபம், அச்சம் ஆகியவற்றால் அறிவை இழக்கும் ஒருவன் தன்னையே உணர்வதில்லை.(11) தனது பிறப்பின் {குலவழியின்} பெருமையால் இன்பத்தில் நிறையும் ஒருவன், உயர்பிறப்பாளர்களையும் இழிவுசெய்கிறான். செல்வத்தின் செருக்கால் பெருகும் அவன், ஏழைகளை ஏளனம் செய்வதும் காணப்படுகிறது.(12) ஒருவன் அடுத்தவரை அறியாமை கொண்ட மூடர்களாகக் கருதுகிறான், அனால், தன்னைக் குறித்து ஆராய்வதேயில்லை.(13)

ஞானிகளும், ஞானமற்றவர்களும், செல்வந்தரும், செல்வமற்றவர்களும், உயர்ந்த பிறவியும், தாழ்ந்த பிறவியும், மதிக்கப்படுபவர்களும், மதிக்கப்படாதவர்களும்,(14) என அனைவரும், சதையற்றதும், வற்றிய தசைகளால் இணைக்கப்படும் வெறும் எலும்புகளை மட்டுமே கொண்டதுமான உடல்களுடன், இறந்தோரின் இடத்திற்குச் சென்று, அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபடும்போது,(15) மேற்கண்டவர்களின் பிறப்பையும், அழகையும் குறித்து எந்த அடையாளங்களைக் கொண்டு உறுதி செய்ய முடியும்?(16)

இதே வகையிலேயே அனைவரும், வெறுந்தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறார்கள் எனும்போது, ஏன் மனிதர்கள் தங்கள் புலனுணர்வை மறந்து, ஒருவரையொருவர் வஞ்சிக்க விரும்ப வேண்டும்?(17) ஒருவன் (சாத்திரங்களில் இருக்கும்) இந்தச் சொலவடையை {பழமொழியை [ஸ்ருதியைத்]} தன் கண்களால் கண்டோ, பிறரிடம் இருந்து கேட்டோ இந்த நிலையற்ற உலக வாழ்வில் தொடக்கக் காலத்திலிருந்தே அறத்தைப் பின்பற்றிவந்தால், அவன் உயர்ந்த முடிவை {கதியை} அடைகிறான்.(18) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவற்றையும் கற்றவன், எந்த வழிகளில் உண்மையைப் பின்பற்றிச் சென்றாலும், அவற்றில் அவன் வெற்றியடைகிறான்” என்றான் {விதுரன்}.(19)

இடர்களும் தேனும்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 05-இடர்களுக்கு மத்தியிலும், பேராபத்திலும் கூட மனிதன் உயிர்வாழும் ஆசைகொண்டிருப்பதை உவமையின் மூலம் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்…

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “கடமைகளெனும் அடர்க்காட்டைப் பாதுகாப்பாகக் கடக்க அறிவாற்றும் வழிமுறைகள் குறித்த அனைத்தையும் எனக்கு விபரமாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(1)விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “தான்தோன்றியை {சுயம்புவை} வணங்கி, உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, வாழ்வெனும் அடர்க்காட்டைக் குறித்துப் பெருந்தவசிகள் என்ன சொல்கின்றனர் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன்.(2)

பேருலகில் வாழும் ஒரு குறிப்பிட்ட பிராமணன், ஒரு சந்தர்ப்பத்தில், அடைவதற்கரியதும், இரைதேடும் விலங்குகள் நிறைந்ததுமான ஒரு பெரிய காட்டை அடைந்தான்.(3) அஃது உரக்க முழங்கிக் கொண்டிருக்கும் சிங்கங்கள், புலிகள் மற்றும் யானைகளைப் போலத் தெரியும் பிற விலங்குகள் ஆகியவற்றால் அனைத்துப் பக்கங்களிலும் நிறைந்திருந்தது. யமனே அச்சங்கொள்ளும் வகையில் அந்தக் காடு பயங்கரத் தன்மையை அடைந்திருந்தது.(4) ஓ! ஏதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே} அந்தக் காட்டைக் கண்ட அந்தப் பிராமணரின் இதயம் அதிகக் கலக்கத்தை அடைந்தது. ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, அவருக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது, மேலும் அச்சத்திற்கான பிற அடையாளங்கள் அனைத்தும் அவரில் வெளிப்பட்டன.(5)

அதற்குள் {காட்டுக்குள்} நுழைந்த அவன், திசைப்புள்ளிகள் அனைத்திலும் தன் கண்களைச் செலுத்திக் கொண்டு, யாரேனும் ஒருவரின் பாதுகாப்பை நாடுவதற்காக அங்கேயும், இங்கேயும் ஓடத் தொடங்கினான்.(6) அவன், அந்தப் பயங்கர உயிரினங்களிடம் இருந்து தப்பும் விருப்பத்தால் அச்சத்துடன் ஓடிக் கொண்டிருந்தான். எனினும் அவன், அவற்றிடம் இருந்து தொலைவாகச் செல்லவோ, அவற்றின் முன்னிலையில் இருந்து விடுபடவோ தவறினான்.(7) அப்போது அவன், அந்தப் பயங்கரக்காடானது ஒரு பெரிய வலையால் சூழப்பட்டிருப்பதையும், {அந்தக் காட்டுக்கு வெளிப்புறத்தில்} அங்கே அச்சத்தையேற்படுத்தக்கூடிய ஒரு பெண் தன் கரங்களை விரித்தபடி நின்றிருப்பதையும் கண்டான்.(8) அந்தப் பெரும் காடானது, நெடும்பாறைகளைப் போல நெடியவையும், சொர்க்கத்தையே {வானத்தையே} தொட்டுக்கொண்டிருந்தவையும், பயங்கர வடிவைக் கொண்டவையுமான ஐந்து தலை பாம்புகள் பலவற்றாலும் சூழப்பட்டிருந்தது.(9) அதற்குள் {அந்தக் காட்டுக்குள்} புற்களால் சூழப்பட்டதும், செடிகொடிகளால் சுற்றிலும் மறைக்கப்பட்டிருந்ததுமான ஒரு குழி {கிணறு} இருந்தது.(10)

அந்தப் பிராமணன் இவ்வாறு திரிந்து கொண்டிருந்த போது, கண்களுக்குப் புலப்படாத அந்தக் குழிக்குள் விழுந்தான். ஒன்றொடொன்றாகப் பின்னிப் பிணைந்து கிண்ட அந்தக் கொடிகளின் பின்னலில் அகப்பட்டுக் கொண்ட அவன், பலாமரத்தின் கனியை {பலாப்பழத்தைப்} போல அதில் தொங்கிக் கொண்டிருந்தான். கால் மேலாகவும், தலை கீழாகவும் அங்கேயே அவன் தொங்கிக் கொண்டிருந்தான்.(11,12) அந்நிலையிலேயே பல்வேறு இன்னல்கள் அவனை மூழ்கடித்தன. அவன் அந்தக் குழிக்குள் வலிமைமிக்கப் பெரும் பாம்பொன்றைக் கண்டான். மேலும் அவன் அந்தக் குழியின் வாயிலருகே ஒரு பெரும் யானை நிற்பதையும் கஙண்டான்.(13) கரிய நிறம் கொண்ட அந்த யானையானது, ஆறு முகங்களையும், பனிரெண்டு கால்களையும் கொண்டிருந்தது. மேலும் அந்த விலங்கு {யானை} கொடிகளாலும், மரங்களாலும் மறைக்கப்பட்டிருந்த அந்தக் குழியை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது.(14) (அந்தக் குழியின் வாயருகே இருந்த) மரத்தின் கிளைகளில் பயங்கர வடிவிலான தேனீக்கள் தங்கள் கூட்டில் சேகரிக்கப்பட்ட தேனைக் குடிப்பதற்காக அங்கே பெருமளவில் மொய்த்து கொண்டிருந்தன.(15)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்துயிர்களுக்கும் இனியதாக இருப்பினும், குழந்தைகளை மட்டுமே ஈர்க்கும் அந்தத் தேனை அவை {அந்தத் தேனீக்கள்} மீண்டும் மீண்டும் விரும்பின.(16) (கூட்டில் சேகரிக்கப்பட்ட) அந்தத் தேனானது, பல ஊற்றுகளாகக் கீழே வழிந்தது. குழிக்குள் தொங்கிக் கொண்டிருந்த அம்மனிதன் அதைத் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தான்.(17) இத்தகு துயரகரமான நிலையில் அந்தத் தேனைக் குடித்தாலும், அவனது தாகம் அடங்கவில்லை. மீண்டும் மீண்டும் தாகம் தனியாத அவன் மேலும் மேலும் தேனை விரும்பினான்.(18) ஓ! மன்னா, அப்போது அவன் உயிரைக் குறித்துக் கவலையடையாமல் இருந்தான். அப்படிப்பட்ட அவ்விடத்தில்கூட அம்மனிதன் உயிர்வாழும் நம்பிக்கையுடனேயே இருந்தான். கருப்பு மற்றும் வெள்ளை எலிகள் பல, அம்மரத்தின் வேர்களை உண்டு கொண்டிருந்தன.(19)

இரைதேடும் விலங்குகளிடமும், காட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் அந்தப் பெண்ணிடமும், அந்தக் கிணற்றின் அடியில் இருக்கும் பாம்பிடமும், உயரத்தில் நிற்கும் அந்த யானையிடமும்,(20) எலிகளின் செயல்பாட்டால் கீழேவிழ இருக்கும் மரத்திடமும், தேனைச் சுவைப்பதற்காகப் பறந்து கொண்டிருந்த அந்தத் தேனீக்களிடமும் அவனுக்கு அச்சமிருந்தது.(21) அந்தக் காட்டில் தன் புலனுணர்வுகளை இழந்திருக்கும் அந்த அவல நிலையிலும், அவன் தன் வாழ்வை நீட்டிப்பதில் உள்ள நம்பிக்கையை {உயிரோடு வாழும் நம்பிக்கையை} ஒருபோதும் இழக்கவில்லை” {என்றான் விதுரன்}.(22)

விதுரனின் உவமை விளக்கம்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 06-தான் சொன்ன கதை ஓர் உவமையென்றும், அந்த உவமைக்கான விளக்கத்தையும் சொன்ன விதுரன்…

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஐயோ, அம்மனிதனின் துயரம் மிகப்பெரியது, அவனது வாழ்வு முறையும் வலி நிறைந்ததே. ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, வாழ்வுக்கான அவனது ஈடுபாடு எங்கிருந்தது? மேலும் அவனது இன்பம் எங்கிருந்தது? {அவன் அங்கே எவ்வாறு இன்புற்றிருக்க முடியும்?}(1) அந்த மனிதன் வசித்து வந்ததும், அறம்பயில்வதற்கு அனுகூலமற்றதுமான அந்த இடம் எங்கிருக்கிறது? ஓ!, அம்மனிதன் அந்தப் பெரும் பயங்கரங்களில் இருந்து எவ்வாறு விடுபடுவான்?(2) இவையனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. அப்போது அவனுக்காக நாம் முறையாக முயற்சி செய்யலாம். அவனை மீட்கும் வழியில் கிடக்கும் கடினத்தன்மையை நினைத்து நான் பெரிதும் இரங்குகிறேன் {கருணை கொள்கிறேன்}” என்றான்.(3)

விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, மோக்ஷதர்மத்தை {வீடுபேற்றை} அறிந்தோர் இதை ஓர் உவமையணியாகக் குறிப்பிடுவார்கள். இதை முறையாகப் புரிந்து கொள்ளும் மனிதன், அதன் பிறகு அருள் உலகங்களை அடைவான்.(4) காடுகளாக விளக்கப்படுவது பேருலகமாகும். அதற்குள் அளவான இடத்துடன் கூடிய அடைதற்கரிய காடானது ஒருவனின் சொந்த வாழ்வாகும்.(5) இரைதேடும் விலங்குகளாகச் சொல்லப்படுவது (நம்மை ஆட்கொள்ளும்) நோய்களாகும். பெரும் உடலுடன் அந்தக் காட்டில் வசிக்கும் பெண்ணானவள்,(6) நிறத்தையும், அழகையும் அழிக்கும் முதுமையாக ஞானியரால் காணப்படுகிறாள். குழியாக {கிணறாகச்} சொல்லப்படுவது உடல், அல்லது உடல்கொண்ட உயிரினங்களின் உடற்கட்டாகும்.(7) அந்தக் குழியின் அடியில் வசிக்கும் பெரும்பாம்பானது, உடல்கொண்ட அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் காலமாகும். உண்மையில், அதுவே அண்டத்தை அழிக்கிறது.(8) 

அம்மனிதன் அகப்பட அந்தக்குழியில் வளர்ந்திருக்கும் செடிகொடிகளே, ஒவ்வொரு உயிரினமும் பேணி வளர்க்கும் உயிர்மீது கொண்ட {உயிர்வாழும்} விருப்பமாகும்.(9) ஓ! மன்னா, குழியின் வாயிலில் நிற்கும் மரத்தை நோக்கி வரும் ஆறு தலை யானையானது, வருடம் எனச் சொல்லப்படுகிறது. அதன் ஆறு முகங்கள் பருவகாலங்களையும், பனிரெண்டு கால்கள் பனிரெண்டு மாதங்களையும் குறிக்கின்றன.(10) மரத்தை உண்ணும் வெள்ளை மற்றும் கருப்பெலிகள், உயிரினங்களின் வாழ்நாளைக் குறைக்கும் பகல்களும், இரவுகளுமாகும். தேனீக்களாகச் சொல்லப்படுபவை நமது ஆசைகளே ஆகும்.(11) தேனைச் சொட்டும் எண்ணற்ற ஓடைகள், நமது ஆசைகளின் நிறைவால் கிட்டும் இன்பங்களாகும். மனிதர்கள் அதற்கே {இன்பங்களுக்கே} அடிமைகளாக இருக்கின்றனர்.(12) வாழ்வின் போக்கை இவ்வாறே ஞானியர் அறிகின்றனர். அந்த ஞானத்தினாலேயே அவர்கள் அவற்றின் கட்டுகளை அறுத்து வெற்றியடைகின்றனர்” என்றான் {சஞ்சயன்}.(13)

அஹிம்சையே பேரறம் என்ற விதுரன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 07-அமுதத்துக்கு நிகரான விதுரனின் வார்த்தைகளை மீண்டும் கேட்க விரும்பிய திருதராஷ்டிரன்; மனிதனை ஆட்கொள்ளும் நோய்கள், முதுமை ஆகியவற்றையும், அவற்றிலிருந்து ஞானிகள் எவ்வாறு தப்புகின்றனர் என்பதையும், புலனுணர்வுகளின் நுகர்வால் வாழ்நாள் குறைவதையும், மறுபிறவி அடையாமையே மனிதனுக்கு வேண்டிய விடுதலை என்பதையும், அஃதை அடைவதற்கு வேள்விகளை விடவும், நோன்புகளைவிடவும் அஹிம்சையே முக்கியமானது என்பதையும் திருதராஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன விதுரன்…

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “நீ சொன்ன இந்த உவமை அற்புதமானது. நிச்சயமாக, நீ உண்மையை அறிந்திருக்கிறாய். அமுதம் போன்ற உன் பேச்சைக் கேட்ட பிறகும், இன்னும் உன்னிடம் நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)

விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, உலகக் கட்டுகளில் இருந்து ஞானியர் தங்களை விடுவித்துக் கொள்ளும் அறிவின் வழிமுறைகளைக் குறித்து மீண்டும் விவரமாகச் சொல்கிறேன் கேட்பீராக.(2) ஓ! மன்னா, நீண்ட தொலைவுக்குப் பயணம் செய்யும் ஒரு மனிதன், களைப்படையும்போது சில நேரங்களில் நிற்க வேண்டியிருக்கும்,(3) அதேபோலவே, ஓ! பாரதரே, சிறுமதிகொண்டவர்கள், வாழ்வின் நீண்ட வழியில் பயணித்து, கருவறையில் மீண்டும் மீண்டும் பிறத்தல் என்ற வடிவில் அடிக்கடி நின்றுவிடுகின்றனர். எனினும், ஞானியர் அந்தக் கடனிலிருந்து விடுபடுகின்றனர்.(4) சாத்திரங்களை அறிந்தோர் இதன் காரணமாகவே வாழ்வை நீண்ட வழி பயணமென்று விவரிக்கின்றனர். ஞானியரும், கடினங்கள் நிறைந்த வாழ்வின் சுழற்சியை ஒரு காடாகவே சொல்கின்றனர்.(5)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உயிரினங்கள் அசைவனவாகவோ, அசையாதனவாகவோ இருப்பினும் அவை இவ்வுலகிற்கு மீண்டும் மீண்டும் திரும்ப வேண்டும். ஞானிகள் மட்டுமே தப்புவார்கள்.(6) மனம் மற்றும் உடல் சம்பந்தமாக மனிதர்களுக்கு நேரும் நோய்கள், புலன்படுபவையாகவோ, புலன்படாதவையாகவோ இருப்பினும், ஞானியர் அவற்றை இரைதேடும் விலங்குகளாகவே சொல்லியிருக்கின்றனர்(7) ஓ! பாரதரே, மனிதர்கள் எப்போதும் அவற்றால் பீடிக்கப்பட்டுத் தடுக்கப்படுகிறார்கள் {துன்புற்றுப் பயணத்தைத் தொடராமல் நிற்கின்றனர்}. மேலும் அவர்களின் சொந்த செயல்பாடுகளையே பிரதிபலிக்கும் அந்த இரைதேடும் விலங்குகள் {நோய்கள்}, அந்தச் சிறுமதியாளர்களிடம் எந்தக் கவலையையும் உண்டாக்குவதில்லை.(8) ஓ! ஏகாதிபதி, ஒரு மனிதன் எவ்வாறாவது நோய்களில் இருந்து விடுபட்டால், பிறகு அழகை அழிக்கக்கூடிய முதுமை அவனை வெல்கிறது.(9) அம்மனிதன் ஒலி, வடிவம், சுவை, தீண்டல், மணம் என்ற புலனுணர்வுகளுக்குரிய பொருட்களின் சேற்றில் மூழ்கி அவனைப் பாதுகாக்க ஏதுமின்றி அங்கேயே {அந்தச் சேற்றிலேயே விழுந்து} கிடக்கிறான்.(10) அதேவேளையில், வருடங்கள், பருவகாலங்கள், மாதங்கள், அரைமாதங்கள் {பக்ஷங்கள்}, பகல்கள், இரவுகள் ஆகியன அடுத்தடுத்து வந்து அழகைக் கெடுத்து, அவனுக்காக ஒதுக்கப்பட்ட காலத்தைக் குறைக்கின்றன.(11) இவை அனைத்தும் காலனின் தூதர்களே. எனினும், சிறுமதி படைத்தோர் அவற்றை இவ்வாறு அறிவதில்லை. உயிரினங்கள் அனைத்தையும் அவற்றின் செயல்பாடுகளின் மூலமே விதியைச்சமைப்பவன் ஆள்கிறான் என ஞானியர் சொல்கின்றனர்.(12)

ஓர் உயிரினத்தின் உடல் தேர் என்றழைக்கப்படுகிறது. வாழ்வின் கொள்கையே {புத்தியே} அதன் {அந்தத் தேரின்} சாரதியாகும். புலன்களே குதிரைகளாகும். நமது செயல்களும், அறிவுமே அதன் கடிவாளங்களாகும்.(13) ஓடிக்கொண்டிருக்கும் அக்குதிரைகளைப் பின்தொடர்ந்து செல்வோர், மறுபிறப்பெனும் சுழற்சிக்குள் இவ்வுலகிற்கு மீண்டும் மீண்டும் வர வேண்டும்.(14) எனினும், தன் அறிவால் அவற்றைக் கட்டுப்படுத்தும் தன்னடக்கத்துடன் கூடிய ஒருவன் அவ்வாறு மீண்டும் வருவதில்லை.(15) உண்மையான சக்கரம் போலவே சுழலும் வாழ்வெனும் சக்கரத்தில் திரிந்தும் திகைப்படையாதோர், உண்மையில் மறுபிறப்பெனும் சுழற்சியில் திரிவதில்லை.(16) ஞானம் கொண்ட ஒருவன், மறுபிறப்பெனும் கடனைத் தவிர்க்க நிச்சயம் முயற்சிக்க வேண்டும். ஒருவன் இதில் அலட்சியமாக இருக்கக்கூடாது, அலட்சியமே மீண்டும் மீண்டும் நம்மை அதில் {மறுபிறப்பெனும் கடலில்} ஆழ்த்தும்.(17)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, கோபம் மற்றும் பேராசையை அடக்கி, உள்ளடக்கத்துடனும், உண்மை நிறைந்த பேச்சுடனும், இருக்கும் ஒரு மனிதனே அமைதியை அடைவதில் வெல்கிறான்.(18) திகைப்படையும் மூடரின் உடலானது யமனின் தேர் என்று அழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, அத்தகு மனிதன் நீர் அடைந்ததையே அடைவான்.(19) ஓ! பாரதரே, நாட்டையும், நண்பர்கள் மற்றும் பிள்ளைகள் ஆகியோரையும் இழப்பதும், இது போன்ற இழப்புகளும், ஆசையின் ஆதிக்கத்தில் இருப்பவனையே மூழ்கடிக்கும்.(20) ஞானியான ஒருவன், பெருந்துன்பங்கள் அனைத்திற்கும், அறிவெனும் மருந்தை இட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா கொண்ட ஒரு மனிதன், உண்மையில் நன்மைதரக்கூடியதும், கிட்டத்தட்ட அடையமுடியாததுமான ஞானமருந்தை அடைந்து கவலை என்றழைக்கப்படும் மிக முக்கிய நோயை உண்மையில் கொன்றுவிடுவான் {குணப்படுத்துவான்}.(21) துயரத்தில் இருக்கும் ஒரு மனிதனை, தன்னடக்கமுள்ள அவனது ஆன்மாவாலான்றி, ஆற்றலாலோ, செல்வத்தாலோ, நண்பர்களாலோ, நலன் விரும்பிகளாலோ {நோயிலிருந்து} குணப்படுத்த முடியாது. எனவே, ஓ! பாரதரே, அனைத்துத் தீங்குகளையும் செய்யாமலிருக்கும், அல்லது அனைத்து உயிரினங்களிடமும் நட்புடனிருக்கும் பெருங்கடமையை {அஹிம்சையைப்} பன்பற்றி நன்னடத்தையை நோற்பீராக.(22)

தற்கட்டுப்பாடு, துறவு, கவனக்குவிப்பு ஆகியவையே பிரம்மத்தின் மூன்று குதிரைகளாகும். இந்தக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும் தன்னான்மா எனும் தேரில் செல்லும் ஒருவன், நன்னடத்தை எனும் கடிவாளத்தின் துணை கொண்டு, மரணம் குறித்த அச்சமனைத்தையும் விட்டு, அதை {அந்தத் தேரைச்} செலுத்திச் பிரம்மலோகத்தை அடைகிறான்.(23) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, எந்த மனிதன் தீங்கிழையாமையை அனைத்து உயிரினங்களுக்கும் உறுதி செய்கிறானோ, அவன் அருளாளனான விஷ்ணுவின் உயர்ந்த உலகங்களுக்குச் செல்கிறான்.(24) உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழையாமையை உறுதி செய்வதால் ஒருவன் அடையும் கனியை, ஆயிரம் வேள்விகளாலோ, தினநோன்புகளாலோ அடையமுடியாது.(25) அனைத்துப் பொருட்களிலும் தன்னை {சுயத்தை} விட அன்புக்குரியது வேறு எதுவுமில்லை. ஓ! பாரதரே, மரணத்தை எந்த உயிரினமும் விரும்புவதில்லை. எனவே, அனைவருக்கும் கருணை காட்டப்பட வேண்டும்.(26) பல்வேறு வகைத் தவறுகளால், தங்கள் சொந்த அறிவெனும் வலையிலேயே சிக்கும், தீயோரும், நல்லோரும் மீண்டும் மீண்டும் உலகத்தில் திரிய நேர்கிறது. எனினும், நுண்ணியப் பார்வை கொண்ட ஞானியரே பிரம்மத்துடன் ஒன்றுகலந்துவிடுகின்றனர்” {என்றான் விதுரன்}”.(27)

தேவரகசியம்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 08-மயக்கமடைந்து கீழே விழுந்த திருதராஷ்டிரன்; போரில் நேர்ந்த படுகொலைக்கான கமுக்கமான வரலாற்றை விளக்கி திருதராஷ்டிரனைத் தேற்றிய வியாசர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விதுரனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகும், தன் மகன்களின் மரணம் குறித்த துயரத்தால் பீடிக்கப்பட்ட குருக்களின் தலைவன் {திருதராஷ்டிரன்}, உணர்விழந்தவனாகக் கீழே தரையில் விழுந்தான்.(1) அவனது நண்பர்களும், தீவில் பிறந்தவரான {துவைபாயனரான} வியாசரும், விதுரன் மற்றும் சஞ்சயன் ஆகியோரும், நலன்விரும்பிகள் பிறரும், வாயில் காப்போரும், அவனது நம்பிக்கையைப் பெற்றோரும், அவன் விழுந்த நிலையைக் கண்டு,(2) அவனது உடலில் குளிர்ந்த நீரைத் தெளித்து, பனை ஓலைகளால் விசிறிவிட்டுத் தங்கள் கரங்களால் அவனை மெல்லத் தடவினர். அந்நிலையிலேயே நீண்ட நேரம் கிடந்த மன்னனை {திருதராஷ்டிரனை} அவர்கள் தேற்றினர்.(3)

நீண்ட நேரத்திற்குப் பிறகு உணர்வுகள் மீண்டவனான அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, தன் மகன்களின் மரணம் குறித்த துயரில் மூழ்கி, நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தான்.(4) பிறகு அவன் {திருதராஷ்டிரன்}, “மனதநேயத்துக்கு ஐயோ, மனித உடலுக்கு ஐயோ, மனிதத்தன்மையாலேயே இவ்வாழ்வு அடிக்கடி துயரங்களை அனுபவிக்கிறது.(5) ஐயோ, மகன்கள், செல்வங்கள், சொந்தங்கள் மற்றும் உறவினர்களின் இழப்பால் ஒருவன் அனுபவிப்பது, நஞ்சையோ, நெருப்பையோ போன்ற பெருந்துயரமாகும்.(6) துயரம் அங்கங்களை எரிக்கிறது, அதனால் நமது ஞானமும் அழிகிறது. அத்துயரத்தில் மூழ்கும் ஒருவனுக்கு மரணமே சிறந்ததாகும்.(7) தீப்பேற்றால் நான் அடைந்திருக்கும் துயரமும் அவ்வாறானதே. உயிரை விடுவதைவிட வேறு எந்தவகையிலும் அது முடிவுபெறாது என நான் காண்கிறேன். எனவே, ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, இந்த நாளே நான் என் உயிருக்கு முடிவுகட்டப் போகிறேன்” என்றான் {திருதராஷ்டிரன்}.(8) உயரான்மா கொண்டவரும், பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான தன் தந்தையிடம் {வியாசரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன திருதராஷ்டிரன், துயரில் மூழ்கியவனாகத் திகைப்படைந்தான் {மயக்கமடைந்தான்}. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்மன்னன், தன் துன்பங்களை நினைத்துப் பார்த்துப் பேச்சற்றவனானான்.(9) இவ்வார்த்தைகளைக் கேட்ட பலமிக்க வியாசர், பிள்ளைகளின் மரணத்தினால் உண்டான துயரத்தில் பீடிக்கப்பட்டிருந்த தன் மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} இவ்வாறு {பின்வருமாறு} பேசினார்.(10)

வியாசர் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரா, நான் சொல்வதைக் கேள். ஓ! பலமிக்கவனே, நீ! கல்விமானும், பெரும் நுண்ணறிவு கொண்டவனும், கடமைகளைப் புரிந்து கொள்வதில் திறன் கொண்டவனும் ஆவாய்.(11) ஓ! எதிரிகளை எரிப்பவனே, அறியத்தக்கது எதையும் நீ அறியாதவனில்லை. மரணமடைய விதிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் நிலையாமையை நீ அறிவாய் என்பதில் ஐயமில்லை.(12) ஓ! பாரதா, உயிரினங்களுடன் கூடிய உலகம் {ஜீவலோகம்} நிலையற்றது, இவ்வுலகமே நிலையானதில்லை, உயிரானது நிச்சயம் மரணத்தினால்தான் முடிவுக்கு வரும் எனும்போது, நீ ஏன் துயருறுகிறாய்?(13) ஓ! மன்னா, காலத்தால் கொண்டவரப்பட்டு ஒன்றுதிரண்ட உண்மைகள், உன் கண்களுக்கு முன்பாக, உன் மகனையே {துரியோதனனையே} இந்தப் பகைமைக்குக் காரணமாக்கின.(14)

ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, குருக்களின் அழிவு தவிர்க்கப்பட முடியாதது. உயர்ந்த முடிவை அடைந்திருக்கும் அவ்வீரர்களைக் குறித்து நீ ஏன் வருந்துகிறாய்?(15) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உயரான்ம விதுரன் அனைத்தையும் அறிவான். ஓ! மன்னா, தன் வலிமை முழுவதையும் பயன்படுத்தி அவன் {விதுரன்} அமைதியைக் கொண்டு வர முயன்றான்.(16) ஒருவன் அழிவில்லாமைக்காகப் போராடினாலும், விதியால் வகுக்கப்பட்ட பாதையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது என் கருத்தாகும்.(17) தேவர்களால் தீர்மானிக்கப்பட்ட பாதை என்னால் நேரடியாகக் கேட்கப்பட்டது. உன் மன அமைதிக்காக அதை நான் உனக்குச் சொல்கிறேன்.(18)

ஒரு காலத்தில் நான், எக்களைப்புமின்றி வெகு வேகமாக இந்திரனின் சபையை அடைந்தேன். அங்கே சொர்க்கவாசிகள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருப்பதைக் கண்டேன்.(19) ஓ! பாவமற்றவனே, அங்கே நாரதரின் தலைமையில் தெய்வீக முனிவர்கள் அனைவரும் இருந்தனர். ஓ! ஏகாதிபதி, அங்கே (உடல் வடிவத்துடன் கூடிய) பூமாதேவியையும் கண்டேன்.(20) ஒரு குறிப்பிட்ட காரியத்தின் நிறைவுக்காகவே அவள் தேவர்களிடம் வந்திருந்தாள். தேவர்களை அணுகிய அவள் {பூமாதேவி},(21) “அருளப்பட்டவர்களே, நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டியது அனைத்தையும், பிரம்மனின் வசிப்பிடத்தில் வைத்து நீங்கள் ஏற்கனவே உறுதி கூறினீர்கள். அது விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றாள்.(22)

உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவனான விஷ்ணு, அவளது வார்த்தைகளைக் கேட்டு, அந்தத் தெய்வீகச் சபைக்கு மத்தியில் சிரித்துக் கொண்டே,(23) “துரியோதனன் என்ற பெயரில் அறியப்படுபவனான திருதராஷ்டிர மகன்களில் மூத்தவன் உன் காரியத்தை நிறைவேற்றுவான். அம்மன்னனின் மூலமே உனது நோக்கம் நிறைவேறும்.(24) குருக்களத்தில் {குருக்ஷேத்திரத்தில்} மன்னர்கள் பலர் அவனுக்காக ஒன்று கூடுவார்கள். தாக்கவல்ல அவர்கள், கடும் ஆயுதங்களெனும் கருவிகள் மூலம் ஒருவரையொருவர் கொல்லச் செய்வார்கள்.(25) ஓ! தேவி, அப்போதைய போரில் உன் சுமை குறைக்கப்படும். ஓ! அழகியே, வேகமாக உன் இடத்திற்குச் சென்று, உயிரினங்களைச் சுமப்பதைத் தொடர்வாயாக” என்றான்.(26)

இப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காந்தாரியின் கருவறையில் பிறந்தவனான உன் மகன் துரியோதனன், அண்ட அழிவை உண்டாக்கும் நோக்குடன் உதித்த கலியின் {கலிகாலத்தின்} ஒரு பகுதியாவான் என்பதை உன்னால் புரிந்து கொள்ள முடியும்.(27) பழிவுணர்ச்சி, அமைதியின்மை, பெருங்கோபம் ஆகியவற்றைக் கொண்டவனாகவும், நிறைவடையக் கடினமானவனாகவும் அவன் இருந்தான். விதியின் ஆதிக்கத்தால் அவனது சகோதரர்களும், அவனைப் போலவே மாறினார்கள்.(28) சகுனி அவனது தாய்மாமனாகவும், கர்ணன் அவனது பெரும் நண்பனாகவும் ஆனார்கள். அந்த அழிவு வேலைக்குத் துணைபுரியவே பல்வேறு மன்னர்கள் பூமியில் பிறந்தார்கள்.(29) மன்னன் எவ்வழியோ, குடிகளும் அவ்வழியே. மன்னன் நேர்மையானவனாக இருந்தால், அவனது ஆட்சிப்பகுதியில் நேர்மையற்றவர்களும், நேர்மையாளர்களாக ஆவார்கள்.(30) பணியாட்கள் தங்கள் தலைவர்களின் தகுதிகள் மற்றும் குறைகளால் பாதிப்பை அடைகிறார்கள் என்பதில் ஐயமில்லை {பணியாட்கள் தங்கள் தலைவர்களின் குணங்களையே அடைகிறார்கள்}. ஓ! மன்னா, உன் மகன்கள் ஒரு தீய மன்னனை அடைந்து அழிவை அடைந்தார்கள். ஓ! ஏகாதிபதி அவர்களுக்காக வருந்தாதே. துயருறக் காரணமேதுமில்லை.(32)

ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, {இதுவரை} நடந்தவற்றில் பாண்டவர்கள் சிறு தவறையும் செய்யவில்லை. உன் மகன்கள் அனைவரும் தீய ஆன்மாக்களைக் கொண்டோராக இருந்தனர். அவர்களே உலகத்திற்கு இந்த அழிவைச் செய்தனர்.(33) நீ அருளப்பட்டிருப்பாயாக. ராஜசூய வேள்வியின் போது யுதிஷ்டிரனின் சபையில் நாரதர்,(34) “பாண்டவர்களும், கௌரவர்களும் ஒருவரோடொருவர் மோதி, அழிவைச் சந்திப்பார்கள். ஓ! குந்தியின் மகனே, நீ செய்ய வேண்டியதைச் செய்வாயாக” என்றார் {நாரதர்}.(35) நாரதரின் வார்த்தைகளைக் கேட்டுப் பாண்டவர்கள் துயரால் நிறைந்தார்கள். இவ்வாறே நான் தேவர்களின் அழிவில்லா ரகசியத்தை உனக்குச் சொல்லிவிட்டேன்.(36)  தேவர்களால் விதிக்கப்பட்ட அத்தனையும் நடந்தது என்பதால், இஃது உன் துயரத்தை அழித்து, உன் உயிர்மூச்சில் அன்பை மீட்டெடுத்து, பாண்டவர்களிடம் பாசம் கொள்ளச் செய்யும்.(37)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {திருதராஷ்டிரனே}, இவையனைத்தும் சில காலத்திற்கு முன்பே நான் அறிந்தேன். வேள்விகளில் முதன்மையான ராஜசூயத்தின்போது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் நான் இதைப் பேசவும் செய்தேன்.(38) நான் அவனிடம் கமுக்கமாக இவையனைத்தையும் சொன்னபோது, அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} கௌரவர்களுடனான அமைதியைப் பாதுகாக்க தன்னாலான சிறந்த முயற்சியைச் செய்தான். எனினும், தேவர்களால் விதிக்கப்பட்ட அது (அவனால் கலங்கடிக்கப்பட முடியாத அளவுக்கு) சக்தி வாய்ந்ததாக இருந்தது.(39) எவ்வாறாயினும், ஓ! மன்னா, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் யமனின் செயலைக் கலங்கடிக்கவல்லவையல்ல.(40)

ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, நீ அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனும், மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவனுமாவாய். அனைத்துயிரினங்களுக்கும் எது வழி, எது வழியில்லை என்பதையும் நீ அறிவாய்.(41) மன்னன் யுதிஷ்டிரன், நீ துயரால் எரிவதையும், அடிக்கடி உன் உணர்வுகளை இழப்பதையும் {மயங்கி விழுவதையும்} அறிந்தால், தன் உயிர்மூச்சையே விட்டுவிடுவான்.(42) அவன் எப்போதும் கருணையுள்ளவனாகவும், ஞானம் கொண்டவனாகவும் இருக்கிறான். இழிந்த உயிரினங்கள் அனைத்திடமும் கூட அவன் தன் அன்பை விரிவடையச் செய்கிறான். ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி, அவன் {யுதிஷ்டிரன்} உன்னிடம் கருணைகொள்ளாதிருக்க என்ன சாத்தியம்?(43) என் ஆணையின் பேரிலும், தவிர்க்க முடியாத விதியை அறிந்தும், பாண்டவர்களிடம் அன்பு கொண்டு உன் உயிரைத் தாங்கிக் கொள்வாயாக.(44) இவ்வாறு நீ வாழ்ந்தால், உன் புகழ் உலகமெங்கும் பரவும். அனைத்துக் கடமைகளின் அறிவை அடைந்து, பலவருடங்களின் தவத் தகுதியை நீ அடைவாய்.(45) ஓ! மன்னா, உன் மகன்களின் மரணத்தால் உன் இதயத்தில் எழுந்திருக்கும் இந்தத் துயரமெனும் சுடர்மிக்க நெருப்பானது, ஞானமெனும் நீரால் எப்போதும் அணைக்கப்பட வேண்டும்” {என்றார் வியாசர்}.(46)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அளவிலா ஆன்மா கொண்டவரான வியாசரின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிறிது நேரம் சிந்தித்த திருதராஷ்டிரன்,(47) “ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {தந்தையே}, நான் துயரெனும் பெருங்கனத்தால் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கிறேன். என் புலனுணர்வுகள் என்னை அடிக்கடி கைவிடுகின்றன, என்னால் என்னையே தாங்கிக் கொள்ள முடியவில்லை.(48) எனினும், தேவர்களால் விதிக்கப்பட்டதைக் குறித்த உமது வார்த்தைகளைக் கேட்டதால், என் உயிர்மூச்சை விட நினைக்காமலும், துயரில் ஈடுபடாமலும் வாழ்வேன்” என்றான்.(49) சத்தியவதியின் மகனான வியாசர், ஓ! ஏகாதிபதி, திருதராஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு அங்கேயே அப்போதே மறைந்து போனார்” {என்றார் வைசம்பாயனர்}.(50)

திருதராஷ்டிரனை மீண்டும் தேற்றிய விதுரன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 09-முதிய மன்னனுக்கு ஆறுதலளித்த விதுரன்; கொல்லப்பட்டவர்கள் சொர்க்கத்தையும், கொலை செய்தவர்கள் புகழையும் அடைவார்கள் எனவே கவலை கொள்வது தகாது எனத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்; காலனின் வலிமை, வாழ்வின் நிலையாமை ஆகியவற்றைச் சொன்ன விதுரன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவரே, புனிதமான வியாசர் சென்ற பிறகு, மன்னன் திருதராஷ்டிரன் என்ன செய்தான்? எனக்கு இதைச் சொல்வதே உமக்குத் தகும்.(1) மேலும் குரு மன்னான மன்னனும், உயரான்மாவுமான தர்மன் மகன் {யுதிஷ்டிரன்} என்ன செய்தான்? கிருபர் முதலான மூவரும் என்ன செய்தனர்.(2) அஸ்வத்தாமனின் செயல்களையும், ஒருவருக்கொருவர் சாபங்களைப் பழித்துரைத்ததையும் நான் கேட்டேன். அடுத்ததாக நடந்ததையும், (முதிர்ந்த மன்னனிடம்) அடுத்து சஞ்சயன் என்ன சொன்னான் என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(30)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “துரியோதனன் கொல்லப்பட்டு, துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு, தன் ஆன்மப் பார்வையை இழந்த சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் திரும்ப வந்தான்.(4)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து வந்தவர்களும், பல்வேறு மக்களின் மன்னர்களும் என அனைவரும் உமது மகன்களுடன் சேர்ந்து இறந்தோரின் உலகத்தை அடைந்தனர்.(5) ஓ மன்னா, (அமைதிக்காக) தொடர்ந்து வேண்டிக் கொள்ளப்பட்டவனும், ஆனால் (பாண்டவர்களைக் கொன்று) தன் பகைமையை முடிக்க வேண்டும் என எப்போதும் விரும்பியவனுமான உமது மகன் {துரியோதனன்} இவ்வுலகத்தை நிர்மூலமாகச் செய்தான்.(60) ஓ! மன்னா, உமது மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் தந்தைமார் ஆகியோரின் ஈமச் சடங்குகளை முறைப்படி செய்ய ஏற்பாடு செய்வீராக” என்றான்”.(7)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சஞ்சயனின் இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, கீழே பூமியில் விழுந்து, உயிரை இழந்தவனைப் போல அசைவற்றுக் கிடந்தான்.(8)

கடமைகள் அனைத்தையும் அறிந்தவனான விதுரன், பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அணுகி, இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(9) “ஓ! மன்னா, ஏன் இவ்வாறு கீழே கிடக்கிறீர்? எழுவீராக. ஓ! பாரதக் குலத்தின் காளையே, வருந்தாதீர். ஓ! பூமியின் தலைவரே, அனைத்துயிர்களின் இறுதியான முடிவும் இதுவேயாகும்.(10) முதலில் உயிரினங்கள் இருப்பில் இல்லாதிருந்தன. ஓ!பாரதரே, நடுவிலோ, அவை இருப்பில் இருந்தன. இறுதியிலும், அவை இருப்பில் இல்லாமல் போகின்றன. இவை யாவற்றிலும் என்ன கவலையைக் கொள்ள முடியும்?(11) துயரில் ஈடுபடுவதால், இறந்தோர் திரும்பி வருவதில்லை. துயரில் ஈடுபடுவதால் ஒருவன் தானே இறப்பதுமில்லை. உலகத்தின் வழி இவ்வாறிருக்கையில், ஏன் நீர் துயரில் ஈடுபடுகிறீர்?(12) போரில் ஈடுபடாமலேயே ஒருவன் இறக்கலாம். போரில் ஈடுபட்ட பிறகும் ஒருவன் உயிரோடு தப்பலாம். ஆனால், ஓ! மன்னா, காலன் வரும்போது ஒருவனால் தப்ப முடியாது.(13)

அனைத்து வகை உயிரினங்களையும் காலன் இழுத்துச் செல்கிறான். ஓ! குருக்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, காலனுக்கு அன்புக்குரியவனோ, வெறுப்புக்குரியவனோ எவனும் கிடையாது.(14) ஓ! பாரதக் குலத்தின் காளையே புல்லின் நுனிகள் அனைத்தையும் கிழிக்கும் காற்றைப் போலவே, காலனின் ஆதிக்கத்திற்குள் அனைத்து உயிரினங்களும் வருகின்றன.(15) ஒரே இடத்தை நோக்கிச் செல்லும் வணிகக்கூட்டத்தின் உறுப்பினர்களைப் போலவே அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன. வேறொருவனுக்குச் சிறிது முன்பாகவே காலன் ஒருவனைச் சந்திக்கிறான் என்றால் அதில் வருந்துவதற்கான காரணம் என்ன இருக்கிறது?(16) மேலும் ஓ! மன்னா, போரில் வீழ்ந்த சிறப்புமிக்கவர்கள் அனைவரும் சொர்க்கத்திற்கே சென்றிருப்பதால், அவர்கள் உமது துயரத்திற்குரிய பொருட்கள் அல்லர்.(17) போரில் துணிவுடன் இருந்த வீரர்களைவிட அபரிமிதமான கொடைகளைக் கொண்ட வேள்விகளாலோ, தவங்களாலோ, அறிவாலோ ஒரு மனிதன் சொர்க்கத்திற்கு எளிதாகச் செல்ல முடியாது.(18)

அவர்கள் அனைவரும் வேதங்களை நன்கறிந்தவர்கள்; அவர்கள் அனைவரும் நோன்புகள் நோற்றவர்கள். எதிரியை முகத்துக்கு நேராகச் சந்தித்தே அவர்கள் அனைவரும் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இதில் கவலை கொள்ள என்ன இருக்கிறது?(19) அவர்கள், நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவதைப் போலத் துணிச்சல்மிக்க எதிரிகளின் உடல்களில் தங்கள் கணை ஆகுதிகளைப் பொழிந்தார்கள். மனிதர்களில் முதன்மையானோரான அவர்கள், பதிலுக்குத் தங்கள் மீது ஊற்றப்படும் கணை ஆகுதிகளைப் தாங்கிக் கொண்டனர்.(20) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் ஒரு க்ஷத்திரியனுக்கு, போரைவிடச் சொர்க்கத்திற்குச் செல்லும் சிறந்த பாதை வேறேதும் இல்லை என நான் உமக்குச் சொல்கிறேன்.(21) அவர்கள் அனைவரும் உயர் ஆன்ம க்ஷத்திரியர்களும், துணிச்சல் கொண்டவர்களும், சபைகளின் ரத்தினங்களுமாவர். அவர்கள் உயர்ந்த அருள்நிலையை அடைந்திருக்கின்றனர். அவர்கள் நாம் கவலைகொள்ளத்தக்க மனிதர்களல்லர்.(22) ஓ! மனிதர்களில் காளையே, உம்மை நீரே தேற்றிக் கொண்டு, கவலையை விடுவீராக. செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, கவலையில் மூழ்குவது உமக்குத் தகாது” {என்றான் விதுரன்}[1].(23)

விசோக உபபர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –சௌப்திக பர்வம்–ஐஷீக உப பர்வம்–

October 15, 2025

அழுது புலம்பிய யுதிஷ்டிரன்! – சௌப்திக பர்வம் பகுதி – 10-யுதிஷ்டிரனுக்கு நடந்த செய்தியைச் சொன்ன திருஷ்டத்யும்னனின் சாரதி; திரௌபதியை அழைத்து வர நகுலனை அனுப்பிய யுதிஷ்டிரன்; முகாமை அடைந்து, மாண்டு கிடக்கும் தன் தரப்பினரைக் கண்டு அழுது புலம்பிய யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} சொன்னார், “அந்த இரவு கழிந்ததும், திருஷ்டத்யும்னனின் சாரதியானவன், உறங்கும் வேளையில் ஏற்பட்ட அந்தப் பேரழிவைக் குறித்த செய்தியை மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தான்.(1)

அந்தச் சாரதி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, “தங்கள் முகாமில் கவனமற்றவர்களாகவும், நம்பிக்கையுடனும் உறங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் மகன்களும், துருபதனின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(2) ஓ! மன்னா, இரவு வேளையில் உமது முகாமானது, கொடூரர்களான கிருதவர்மன், கோதமரின் மகன் கிருபர் மற்றும் பாவம் நிறைந்த அஸ்வத்தாமன் ஆகியோரால் நிர்மூலமாக்கப்பட்டது.(3) அம்மனிதர்கள், வேல்கள், ஈட்டிகள் மற்றுப் போர்க்கோடரிகளைக் கொண்டு ஆயிரக்கணக்கான மனிதர்கள், யானைகள், குதிரைகள் அடங்கிய உமது படையை அழித்துவிட்டனர்.(4) கோடரியால் வெட்டி வீழ்த்தப்பட்ட காட்டைப் போல உமது படை கொல்லப்பட்டபோது, உமது முகாமில் இருந்து உரத்த ஓலம் கேட்டது.(5) ஓ! ஏகாதிபதி, அந்தப் பரந்த படையில் நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறேன். ஓ! அற ஆன்மாவே, கிருதவர்மன் கவனமற்றிருந்த வேளையில் மிகுந்த சிரமத்திற்கிடையில் நான் தப்பித்து வந்தேன்” என்றான்.(6)

குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, (எதிரிகளை எதிர்த்துச் செல்கையில் அவர்களைத்) தாங்கிக் கொள்ள இயன்றவனானாலும், இந்தத் தீயச் செய்தியைக் கேட்டு, தன் மகன்களை இழந்ததால் ஏற்பட்ட துயரத்தில் பீடிக்கப்பட்டுக் கீழே பூமியில் விழுந்தான்.(7) சாத்யகி, முன்னே வந்து மன்னனைப் பிடித்துக் கொண்டான். பீமசேனன், அர்ஜுனன், மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரும் தங்கள் கரங்களை நீட்டினர் {நீட்டி யுதிஷ்டிரனைப் பிடித்துக் கொண்டனர்}.(8)

அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, புலனுணர்வு மீண்டு, சோகத்துடனும், தடுமாற்றத்துடனும் இவ்வார்த்தைகளைச் சொல்லிப் பெரும் துயரத்தால் அழுது புலம்பினான்: “ஐயோ, எதிரியை வென்றும், இறுதியில் நாமே வெல்லப்பட்டோம் {வீழ்ந்தோம்}.(9) ஆன்மப் பார்வை கொண்டவர்களால் கூட நிகழ்வுகளின் வழியை அறிவது கடினமே. வெல்லப்பட்ட எதிரி, வெற்றியடைந்துவிட்டான். மேலும், நாமோ வெற்றியடைந்தும், வெல்லப்பட்டோம் {வீழ்த்தப்பட்டோம்}.(10) சகோதரர்கள், நண்பர்கள், தந்தைமார், மகன்கள், நலன் விரும்பிகள், சொந்தங்கள், அமைச்சர்கள் ஆகியோர் அனைவரையும் வென்று இறுதியில் நாமே வெல்லப்பட்டோம்.(11) அவலம் செழிப்பாகத் தெரிகிறது, செழிப்பு அவலமாகத் தெரிகிறது. இந்த நமது வெற்றியானது, தோல்வியின் வடிவத்தையே ஏற்றிருக்கிறது. எனவே நமது வெற்றி தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.(12) வெற்றியையடைந்தும், துயரமடைந்த அற்பனாக நான் துயரத்தையே அடைகிறேன். பிறகு, எவ்வாறு இதை என்னால் வெற்றியாகக் கருத முடியும்? உண்மையில், நான் எதிரியால் இரண்டு மடங்கு வீழ்த்தப்பட்டிருக்கிறேன்.(13) யாருக்காகச் சொந்தங்கள் மற்றும் நண்பர்களைக் கொன்று வெற்றிக்காகப் பாவமிழைத்தோமோ, ஐயோ, அவர்கள் வெற்றி மகுடம் சூடிக்கொண்டு, வீழ்த்தப்பட்டவர்களான கவனம் நிறைந்த எதிரிகளால் வெல்லப்பட்டனர்.(14)

முள்பதித்த கணைகள், நாளீகங்கள் ஆகியவற்றைத் தன் பற்களாகவும், வாளையே தன் நாவாகவும், நாணொலி தரும் நாண்கயிற்றுடன் கூடிய வில்லையே தன் வாயாகவும், உள்ளங்கையொலிகளையே தன் முழக்கமாகவும் கொண்டவனும், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவனும், மனிதர்களில் சிங்கமுமான கோபக்காரக் கர்ணனிடம் இருந்தே தப்பித்தவர்கள், ஐயோ!, கவனக்குறைவினால் கொல்லப்பட்டார்கள்.(15,16) தேர்களையே ஆழமான தடாகங்களாகவும், கணைமாரியே அலைகளாகவும், போர்வீரர்களின் ஆபரணங்களே ரத்தினங்களாகவும், தேர்க்குதிரைகளையே விலங்குகளாகவும், ஈட்டிகள் மற்றும் வாள்களையே மீன்களாகவும், யானைகளேயே முதலைகளாகவும், விற்களையே பெரும் நீர்ச்சுழிகளாகவும், வலிமைமையிக்க ஆயுதங்களையே நுரையாகவும், போர் அடையாளத்தையே சக்தியில் பெரும் சந்திரோதயமாகவும், நாண்கயிற்றின் நாணொலி மற்றும் உள்ளங்கையொலிகளையே முழக்கங்களாகவும் கொண்ட துரோணப் பெருங்கடலைத் தங்கள் சிறந்த ஆயுதங்களாலான படகால் கடந்த இந்த இளவரசர்கள், ஐயோ கவனக்குறைவினால் கொல்லப்பட்டார்கள்.(17,18) இவ்வுலகின் மனிதர்களைப் பொறுத்தவரையில் கவனக்குறைவைவிட மரணத்திற்கான சக்திமிக்கக் காரணம் வேறு எதுவுமில்லை. கவனமற்ற மனிதனை செழுமையானது அனைத்துப் பக்கங்களிலும் கைவிடுகிறது, மேலும் அனைத்து வகை அவலங்களும் அவனை மூழ்கடிக்கின்றன.(19)

{பீஷ்மரின்} தேரில் நின்றதும், சிறந்த நுனி கொண்டதுமான உயர்ந்த கொடிமரத்தில் இருந்த புகைவிரிப்பானது {கொடியானது} அந்தப் பீஷ்ம நெருப்பை, பிழையற்றதாகக் காட்டியது. கணைகளே அதன் தழல்களாயின, கோபமே அதை வீசிப்பெருக்கும் காற்றானது. உறுதிமிக்க வில்லின் நாணொலியும், உள்ளங்கையொலியும் அந்நெருப்பின் முழக்கமானது. கவசமும், பல்வேறு வகை ஆயுதங்களும் அதற்குள் ஊற்றப்படும் ஹோமக் காணிக்கைகள் ஆகின. பகைவரின் பரந்த படையானது அந்த நெருப்பால் எரிக்கப்படும் உலர்ந்த காட்டுப்புல்லானது. ஐயோ, பயங்கர சக்தியுடன் கூடிய {பீஷ்மரெனும்} அந்தக் கடும் நெருப்பையும் தாங்கிக் கொண்டவர்கள், இறுதியில் கவனக் குறைவால் வீழ்ந்தனர்.(20,21) கவனக்குறைவுள்ளவன், ஞானத்தையோ, தவத்தையோ, செழிப்பையோ, பெரும்புகழையோ ஒருபோதும் அடையமுடியாது.(22)

நமது எதிரிகளில் எஞ்சியிருக்கும் சிலர், உண்மையில் இந்திரனைப் போன்றவர்களான அம்மன்னர்களின் மகன்கள் மற்றும் பேரர்கள் பலரை நமது கவனக்குறைவினால் கொன்றுவிட்டனர். ஐயோ, விலைமதிப்புமிக்கக் கப்பல்களில் செல்லும் வணிகர்களைப் போல, பெருங்கடலைக் கடந்த பிறகு, கவனக்குறைவினால் ஒரு சிறு ஓடையில் அழிந்தனர்.(23) யாருடைய உடல்கள் இப்போது வெறுந்தரையில் கிடக்கின்றனவோ, அவர்கள் பொறாமையுள்ள அந்த இழிந்தவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்தையே அடைந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனினும், இளவரசி கிருஷ்ணைக்காகவே {திரௌபதிக்காகவே} வருந்துகிறேன்.(24) அவள் {திரௌபதி}, தன் சகோதரர்கள், மகன்கள் மற்றும் மதிப்பிற்குரிய தந்தையான பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்} ஆகியோரின் படுகொலையைக் கேட்டு உணர்வற்றுப் பூமியில் விழப் போகிறாள் என்பதில் ஐயமில்லை. அவள், துயரால் உடல்மெலிந்து மீண்டும் எழும்ப மாட்டாள்.(25) இத்தகு துன்பத்தின் விளைவால் உண்டாகும் துயரைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், மகிழ்ச்சிக்குத் தகுந்தவளான அவள் எந்த அவல நிலையை அடைவாள்? மகன்கள் மற்றும் சகோதரர்களின் படுகொலையால் இதயம் பிளக்கப்படும் அவள், நெருப்பில் எரிபவளாக ஆகப்போகிறாள்” என்றான்.(26)

ஆழமான துயரால் இத்தகு புலம்பல்களில் ஈடுபட்ட அந்தக் குரு குல மன்னன் {யுதிஷ்டிரன்}, பிறகு நகுலனிடம், “செல்வாயாக, சென்று, நற்பேறற்றவளான இளவரசி திரௌபதியையும், அவளது தாய்வழி உறவினர்களையும் அழைத்து வா” என்றான்.(27)

நீதியில் யமனுக்கு இணையான அம்மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆணையைக் கீழ்ப்படிந்து ஏற்ற நகுலன், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மனைவியர் அனைவருடன் {தன் தாய்மாருடன்} திரௌபதி எங்குத் தங்கியிருந்தாளோ அந்த இடத்திற்குத் தன் தேரில் வேகமாகச் சென்றான்.(28) யுதிஷ்டிரன், மாத்ரியின் மகனை {நகுலனை} அனுப்பிவிட்டு, துயரால் நொறுங்கி, கண்களில் கண்ணீருடன், எங்குத் தன் மகன்கள் போரிட்டார்களோ, எங்குப் பல்வேறு வகை உயிரினங்கள் இன்னும் மொய்த்துக் கொண்டிருந்தனவோ, அந்தக் களத்திற்குத் தன் நண்பர்கள் துணையுடன் சென்றான்.(29) கடுங்காட்சிகள் நிறைந்த அந்தச் சபிக்கப்பட்ட களத்திற்குள் நுழைந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, குருதியில் மறைந்து, உடல்கள் சிதைக்கப்பட்டு, உடல்களில் இருந்து தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தரையில் கிடப்பவர்களான தன் மகன்கள், நலன்விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் கண்டான்.(30) நீதியாளர்களில் முதன்மையான யுதிஷ்டிரன், அவர்களை அந்த அவலநிலையில் கண்டு ஆழமாகத் துயரடைந்தான். பிறகு அந்தக் குருக்களின் தலைவன் {யுதிஷ்டிரன்}, தன் தொண்டர்களுடன் சேர்ந்து உரக்க அழுது, புலன் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(31)

பிராயத்தில் அமர்ந்த திரௌபதி! – சௌப்திக பர்வம் பகுதி – 11– திரௌபதியை யுதிஷ்டிரனிடம் அழைத்து வந்த நகுலன்; மயக்கமடைந்த திரௌபதி; அஸ்வத்தாமனைப் பாண்டவர்கள் கொல்லவில்லையெனில் பிராயத்தில் அமரப்போவதாகத் தீர்மானித்த திரௌபதி; அவளுக்கு ஆறுதல் சொன்ன யுதிஷ்டிரன்; அஸ்வத்தாமனைக் கொன்று அவனுடைய தலையிலுள்ள மணியைக் கொண்டு வரச் சொன்ன திரௌபதி; நகுலனைச் சாரதியாகக் கொண்டு அஸ்வத்தாமனைக் கொல்லப் புறப்பட்ட பீமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா, போரில் தனது மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்டதைக் கண்ட மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆன்மா பெருந்துயரில் மூழ்கியது.(1) அந்த மகன்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளை நினைத்துப் பார்த்ததும் அந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதியை ஆழமான சோகம் ஆட்கொண்டது.(2) உணர்வற்று நடுங்கிக் கொண்டிருந்த அவனுடைய கண்கள் கண்ணீரால் குளித்தன. அப்போது அவனது நண்பர்களும் கவலையில் மூழ்கியிருந்தாலும், அவனுக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கினர்.(3) அந்நேரத்தில் {தன் அண்ணனின்} குற்றேவல்களை நிறைவேற்றுவதில் திறம் கொண்டவனான நகுலன், பெரும் துயரில் இருந்த இளவரசி கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்}, சூரியப் பிரகாசம் கொண்ட தனது தேரில் அங்கே வந்து சேர்ந்தான்.(4) 

அவள் {திரௌபதி இதுவரை} உபப்லாவ்யத்தில் வசித்திருந்தாள். அவள் {திரொபதி}, தன் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற இதயம் பிளக்கும் செய்தியைக் கேட்டு மிகவும் கலக்கமடைந்திருந்தாள்.(5) காற்றால் அசைக்கப்பட்ட வாழையைப் போல நடுங்கிய அந்த இளவரசி கிருஷ்ணை {திரௌபதி}, யுதிஷ்டிரனின் முன்னிலைக்கு வந்து, துயரால் பீடிக்கப்பட்டுக் கீழே விழுந்தாள்.(6) முற்றாக மலர்ந்த இரு தாமரைகளுக்கு ஒப்பான கண்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளது முகம், இருளால் மூடப்பட்ட சூரியனைப் போலத் துயரால் கறுத்திருந்தது.(7) கோபம் நிறைந்தவனும், கலங்கடிக்க முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான விருகோதரன் {பீமன்}, பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவளைக் {திரௌபதியைக்} கண்டு வேகமாகச் சென்று, அவளை உயர்த்தி {எழச் செய்து}, தன் கரங்களால் அவளை {ஆறுதலாகப்} பிடித்துக் கொண்டான்.(8)

பீமசேனனால் ஆறுதலளிக்கபட்ட அந்த அழகிய மங்கை {திரௌபதி} அழத் தொடங்கி, தன் சகோதரர்களுடன் கூடியவனான பாண்டு மகன்களில் மூத்தவனிடம் {யுதிஷ்டிரனிடம்},(9) “ஓ! ஏகாதிபதி, க்ஷத்திரியக் கடமைகளை நோற்ற உமது துணிச்சல்மிக்க மகன்களின் படுகொலைக்குப் பின்பு, நீர் மொத்த பூமியையும் அடைந்து அதை {பூமியை} அனுபவிக்கப் போவது நற்பேற்றாலேயே.(10) ஓ@ பிருதையின் {குந்தியின்} மைந்தரே {யுதிஷ்டிரரே}, மொத்த பூமியையும் அடைந்துவிட்டோம் என்ற நினைப்பில் நீர் மகிழ்ச்சியாக இருப்பதும் நற்பேற்றாலேயே. மதங்கொண்ட யானைக்கு ஒப்பான நடையைக் கொண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு} குறித்து நீர் சிந்திக்காததும் நற்பேற்றாலேயே. உபப்லாவ்யத்தில் வசித்த என்னைப் போலல்லாமல், க்ஷத்திரியக் கடமைகளை நோற்றுக் கொல்லப்பட்ட உமது வீர மகன்களை நீர் எண்ணாதிருப்பதும் நற்பேற்றாலேயே.(12) ஓ! பிருதையின் மைந்தரே, உறங்கிக் கொண்டிருந்த அந்த வீரர்கள், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவனான துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} படுகொலை செய்யப்பட்டதைக் கேட்டு, ஏதோ நெருப்பின் மத்தியில் இருப்பவளைப் போல, துயரம் என்னை எரித்துக் கொண்டிருக்கிறது.(13) போரில் உமது ஆற்றலை வெளிப்படுத்தி, பாவச் செயல்கள் புரியும் அந்த இழிந்தவன் {அஸ்வத்தாமன்} மற்றும் அவனது தொண்டர்கள் அனைவரின் உயிர்களையும் நீர் எடுக்காமல், அந்தத் துரோணர் மகனைத் தனது பாவச்செயலுக்கான கனியை அறுவடை செய்ய வைக்காமல் இருந்தால், பாண்டவர்களே, கேளுங்கள், நான் இங்கே பிராயத்தில் அமரப் போகிறேன்” என்றாள் {திரௌபதி}.(14,15)

யக்ஞசேனன் மகளும், ஆதரவற்றவளுமான கிருஷ்ணை {திரௌபதி}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, பாண்டு மகனில் மூத்தவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் அருகில் அமர்ந்தாள்.(16) நீதிமிக்க ஆன்மா கொண்டவனான அரசமுனி யுதிஷ்டிரன், தன் அன்புக்குரிய ராணி {திரௌபதி} பிராயத்தில் அமர்வதைக் கண்டு, அவளிடம், “ஓ! மங்கலமான பெண்ணே {கல்யாணி}, ஓ! அறநெறிகளை அறிந்தவளே, உன் மகன்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உன்னதமான இறப்பை நேர்மையாகச் {க்ஷத்திரிய முறைக்கேற்ப} சந்தித்தனர். அவர்களுக்காக நீ வருந்துவது தகாது.(17,18) ஓ! அழகிய இளவரசி, துரோணர் மகனைப் பொறுத்தவரை, அவர் தொலைதூரக் காட்டுக்குச் சென்றுவிட்டார். ஓ! பெண்ணே, போரில் அவருடைய வீழ்ச்சியை உன்னால் எவ்வாறு உறுதிசெய்ய முடியும்?” என்று கேட்டான்.(19)

திரௌபதி {யுதிஷ்டிரனிடம்}, “துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தலையில் ஒரு ரத்தினத்துடனேயே {மணியுடனே} பிறந்தான் என நான் கேட்டிருக்கிறேன். போரில் அந்த இழிந்தவனைக் கொன்ற பிறகு, என்னிடம் கொண்டு வரப்படும் அந்த ரத்தினத்தை {மணியை} நான் காண்பேன். ஓ மன்னா, அந்த ரத்தினத்தை உமது தலையில் சூட்டிய பிறகே நான் என் உயிரைத் தாங்கிக் கொள்ளவேன். இதுவே எனது தீர்மானம்” என்று பதிலுரைத்தாள்.(20)

பாண்டுவின் அரசமகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, பீமசேனனை அணுகி, உயர்ந்த நோக்கம் கொண்ட இந்த வார்த்தைகளை அவனிடம் {பீமனிடம்} சொன்னாள்:(21) “ஓ! பீமரே, க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்து, நீர் என்னைக் காப்பதே உமக்குத் தகும். சம்பரனைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போல, பாவச்செயல்களைச் செய்யும் அம்மனிதனை {அஸ்வத்தாமனைக்} கொல்வீராக.(22) இவ்வுலகில் உமது ஆற்றலுக்கு இணையானவர்கள் வேறு எவரும் இல்லை. வாரணாவத நகரில் பேரிடர் நேர்ந்த சமயத்தில் நீர் எவ்வாறு பார்த்தர்கள் அனைவரின் புகலிடமாக இருந்தீர் என்பது உலகம் முழுவதும் நன்றாக அறியப்பட்டிருக்கிறது.(23) மேலும் ஹிடிம்பனால் நாம் பார்க்கப்பட்டபோதும்,[1] அதே வழியில் நீரே எங்கள் புகலிடமானீர்.(24) மகவத் {இந்திரன்} (தன் மனைவியான) புலோமனின் மகளை {பௌலோமி [அ] சச்சியைக்] காத்தது போலவே, விராட நகரத்தில் நீர் என்னைப் பேரிடரில் {கீசகனிடம்} இருந்து காத்தீர்[1].(25) ஓ! பார்த்தரே {பீமரே}, ஓ! எதிரிகளைக் கொல்பவரே, முன் நாட்களில் நீர் அடைந்த அந்தப் பெரும் சாதனைகளைப் போலவே, இப்போது துரோணர் மகனை {அஸ்வத்தாமனைக்} கொன்று மகிழ்ச்சியடைவீராக” {என்றாள் திரௌபதி}.(26)பெரும் வலிமைமிக்கவனும், குந்தியின் மகனுமான பீமசேனனால், அந்த இளவரசியின் {திரௌபதியின்} இவ்வார்த்தைகளையும், பரிதாபகரமான இன்னும் வேறு புலம்பல்களையும் கேட்டுப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் பெருந்தேரில் ஏறிய அவன் {பீமன்}, நாண்கயிற்றில் கணை பொருத்தப்பட்ட தன் அழகிய வில்லையும் எடுத்துக் கொண்டான்.(28) நகுலனைத் தன் தேரோட்டியாகச் செய்து கொண்டும், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கொல்லும் தீர்மானத்துடனும், தன் வில்லை வளைக்கத் தொடங்கி, தாமதமில்லாமல் தன் குதிரைகளைத் தூண்டச் செய்தான்.(29) ஓ! மனிதர்களில் புலியே, காற்றின் வேகத்தைக் கொண்ட அக்குதிரைகள் இவ்வாறு தூண்டப்பட்டுப் பெரும் வேகத்தில் சென்றன.(30) பெரும் வீரமும், மங்காத சக்தியும் கொண்ட பீமன், பாண்டவ முகாமில் இருந்து புறப்பட்டு, அஸ்வத்தாமனின் வாகனத்தடத்தைப் பின்தொடர்ந்தபடியே பெரும் வேகத்தில் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(31)

கிருஷ்ணச் சக்கரம் கேட்ட அஸ்வத்தாமன்! – சௌப்திக பர்வம் பகுதி – 12-அஸ்வத்தாமன் பிரம்மாயுதத்தைக் கொண்டவனாதலால் பீமனின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு யுதிஷ்டிரனை வேண்டிய கிருஷ்ணன்; அஸ்வத்தாமன் பிரம்மாயுதத்தை அடைந்த வரலாறு; கிருஷ்ணனின் சக்கரத்தை அடைவதற்காகத் துவாரகை சென்ற அஸ்வத்தாமனின் துணிபு; அவனால் சக்கரத்தை உயர்த்த இயலாமை; கிருஷ்ணனின் கடிந்துரை; பீமனைப் பாதுகாக்க யுதிஷ்டிரனிடம் வேண்டிய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தடுக்கப்படமுடியாதவனான பீமசேனன் புறப்பட்டதும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனான அந்த யதுகுலத்தின் காளை {கிருஷ்ணன்}, குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம்,(1) “ஓ! பாண்டுவின் மைந்தரே {யுதிஷ்டிரரே}, உமது தம்பி, தன் மகன்களின் படுகொலைகளால் உண்டான துயரத்தில் மூழ்கி, துரோணரின் மகனை {அஸ்வத்தாமரைக்} கொல்லும் விருப்பத்தில் போரிடத் தனியொருவராகச் செல்கிறார்.(2) ஓ! பாரதக் குலத்தின் காளையே, உமது தம்பியர் அனைவரிலும், பீமரே உமக்கு அன்பானவர். அவர் பெரும் ஆபத்தில் வீழ்ந்தும், நீர் ஏன் இன்னும் காக்க முயலவில்லை?(3) பகை நகரங்களை அடக்கவல்ல துரோணர், தன் மகனுக்கு {அஸ்வத்தாமருக்கு} அறிவித்த பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது, மொத்த உலகத்தையும் எரிக்கவல்லதாகும்.(4) சிறப்புமிக்கவரும், உயர்ந்த அருளைக் கொண்டவரும், வில்தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவருமான அந்த ஆசான் {துரோணர்}, அந்த ஆயுதத்தைத்தான் மகிழ்ச்சியுடன் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்குக்} கொடுத்தார்.(5)

அதைத் தாங்கிக்கொள்ள முடியாதவரான அவருடைய {துரோணருடைய} ஒரே மகன் {அஸ்வத்தாமர்}, அஃதை {பிரம்மசிரத்தை} அவரிடம் இரந்து கேட்டார். அவர் {துரோணர்}, தமக்கு விருப்பமில்லாமலேயே அவ்வாயுதத்தின் அறிவை அஸ்வத்தாமருக்குப் புகட்டினார்.(6) சிறப்புமிக்கத் துரோணர், தன் மகனின் மன உலைவை {சஞ்சலத்தை} அறிந்திருந்தார். கடமைகள் அனைத்தையும் அறிந்தவரான அந்த ஆசான் அவருக்குக் கட்டளையாக,(7) “ஓ! குழந்தாய், போருக்கு மத்தியில் நீ பெரும் ஆபத்தைச் சந்தித்தாலும், இவ்வாயுதத்தை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது, அதிலும் குறிப்பாக மனிதர்களை எதிர்த்துப் பயன்படுத்தக்கூடாது” என்று சொன்னார்.(8) இவ்வாறே ஆசான் துரோணர் தன் மகனிடம் சொன்னார். அவர் {துரோணர்}, சிறிது நேர் கழித்து மீண்டும் அவரிடம் {அஸ்வத்தாமரிடம்}, “ஓ! மனிதர்களில் காளையே, நீ நீதியின் பாதையில் நடக்கமாட்டாய் என்று தெரிகிறது” என்றார்.(9) தன் தந்தையின் இந்தக் கசப்பான வார்த்தைகளைக் கேட்டவரும், தீய ஆன்மா கொண்டவருமான அஸ்வத்தாமர், அனைத்து வகைச் செழிப்பையும் அடையும் {அடைய முடியாத} மனத்தளர்ச்சியுடன், துயரத்தில் பூமியெங்கும் திரியத் தொடங்கினார்.(10)

ஓ! குருக்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, நீங்கள் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, துவாரகைக்கு வந்த அவர் {அஸ்வத்தாமர்}, விருஷ்ணிகளால் வழிபடப்பட்டுத் தன் வசிப்பிடத்தை அங்கே அமைத்துக் கொண்டார்.(11) அவர், துவாரகையில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட பிறகு, ஒரு நாள், தோழனற்றவனாகவும், அருகே யாருமில்லாதவனாகவும் கடற்கரையில் இருந்த என்னிடம் வந்து, சிரித்துக் கொண்டே,(12) “ஓ! கிருஷ்ணா, ஓ! தாசார்ஹா, தேவர்களாலும், கந்தர்வர்களாலும் வழிபடப்படுவதும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட, பாரதர்களின் ஆசானான என் தந்தை {துரோணர்}, கடுந்தவங்களுக்குப் பிறகு அகஸ்தியரிடம் இருந்து அடைந்ததுமான பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது, என் தந்தையிடம் இருப்பது போலவே, இப்போது என்னிடமும் இருக்கிறது.(13,14) ஓ! யதுகுலத்தில் முதன்மையானவனே, அந்தத் தெய்வீக ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டு, போரில் எதிரிகள் அனைவரையும் கொல்லவல்ல உனது சக்கரத்தை எனக்குக் கொடுப்பாயாக” என்று கேட்டார்.(15)

கரங்களைக் கூப்பிக் கொண்டு பெரும்பிதற்றல் செய்து, இவ்வாறு அவர் என்னிடம் எனது சக்கரத்தைக் கேட்டபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, நான் அவரை மகிழ்விக்க விரும்பி, அவரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னேன்,(16) “தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள் ஆகியோர் அனைவரும், பறவைகள், பாம்புகள் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடினாலும், என் சக்தியின் நூறில் ஒரு பங்குக்கும் அஃது இணையாகாது.(17) நான் இந்த வில்லையும், இந்த ஈட்டியையும் {சக்தியையும்}, இந்தச் சக்கரத்தையும், இந்தக் கதாயுதத்தையும் கொண்டிருக்கிறேன். என்னிடம் இருக்கும் இவற்றில், நீர் எதை விரும்பினாலும், நான் அஃதை உமக்குக் கொடுப்பேன். நீர் கொடுக்க விரும்பும் ஆயுதத்தைக் கொடுக்காமலே, இந்த என் ஆயுதங்களில் நீர் எதையெடுக்க வல்லவரோ, அஃதை எடுத்துக் கொண்டு, போரில் பயன்படுத்திக் கொள்வீராக” என்றேன்.(19) இவ்வாறு சொல்லப்பட்டதும், என்னை அறைகூவி அழைப்பதைப் போலத் துரோணரின் அந்தச் சிறப்புமிக்க மகன் {அஸ்வத்தாமன்}, இரும்பாலானதும், ஆயிரம் ஆரங்களைக் கொண்டதும், வஜ்ரத்தைப் போன்று கடினமானதும், சிறப்புமிக்கக் குழியை {நடுத்துவாரத்தைக்} கொண்டதுமான என் சக்கரத்தை என்னிடம் இருந்து வேண்டினார்.(20)

நான் அவரிடம், “எடுத்துக் கொள்ளும்” என்று சொன்னேன். இவ்வாறு சொல்லப்பட்டதும், திடீரென எழுந்த அவர், தன் இடக்கையால் அச்சக்கரத்தைப் பற்றினார்.(21) இருப்பினும், அந்த ஆயுதத்தை அது கிடந்த இடத்தில் இருந்து அவரால் அசைக்கவும் முடியவில்லை. பிறகு அவர் அதை வலக்கரத்தால் பற்ற ஆயத்தமானார்.(22) பிறகு அவர், உறுதியாக அதைப் பற்றிக் கொண்டு, தன் பலமனைத்தையும் வெளிப்படுத்தினாலும் அதைத் தரிக்கவோ, அசைக்கவோ முடியவில்லை. இதனால் அந்தத் துரோணரின் மகன் சோகத்தில் நிறைந்தார். ஓ! பாரதரே, முயற்சியால் களைத்தபிறகே அவர் {அஃதை எடுப்பதை} நிறுத்தினார்.(23,24)

அந்நோக்கத்தில் இருந்து தமது இதயத்தை விலக்கியப் பிறகு, உணர்வற்றவராகவும், கவலை கொண்டவராகவும் இருந்த அஸ்வத்தாமரிடம் நான்,(25) “ஓ! பிராமணரே, எவன் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகக் கருதப்படுகிறானோ, எவன் காண்டீவத்தைத் தரித்திருக்கிறானோ, எவன் வெண்குதிரைகளைத் தன் தேரில் பூட்டியிருக்கிறானோ, எந்த வீரன் தன் கொடிமரத்தில் குரங்குகளின் இளவரசனைப் பொறித்திருக்கிறானோ,(26) எந்த வீரன், தேவர்களின் தேவனும், நீலமிடறு கொண்டவனும், உமையின் தலைவனுமான பெரும் சங்கரனிடமே மல்யுத்தம் செய்து வெல்ல விரும்பினானோ,(27) எந்தப் பல்குனனைத் தவிரப் பூமியில் எனக்கு வேறு அன்புக்குரிய நண்பவன் எவனும் இல்லையோ, எந்த நண்பனுக்கு என் மனைவியர் மற்றும் பிள்ளைகள் உட்பட எதையும் நான் கொடுப்பேனோ,(28) அந்த என் அன்புக்குரிய நண்பனான, களங்கமற்ற செயல்களையுடைய பார்த்தன் {அர்ஜுனன்} கூட என்னிடம் இத்தகு வார்த்தைகளை ஒருபோதும் சொன்னதில்லை.(29)

தவத்துறவுகளின் மூலமும், இமய மலைச்சாரலில் பனிரெண்டு வருடங்கள் கடுந்தவம் செய்தும் எந்த மகனை அடைந்தேனோ,(30) எவன் சனத்குமாரனின் ஒரு பகுதியோ, என்னைப் போலவே கடும் நோன்புகளை நோற்றவளான என் மனைவி ருக்மிணியிடம் என்னால் எவன் பெறப்பட்டானோ,(31) அந்தப் பெருஞ்சக்தி கொண்ட எனது மகன் பிரத்யும்னன் கூட, சிறுமதி கொண்ட உம்மைப் போல, பொருட்களில் சிறந்ததும், ஒப்பற்றதுமான இந்தச் சக்கரத்தை ஒருபோதும் என்னிடம் கேட்டதில்லை.(32) பெரும் வலிமையைக் கொண்ட ராமர் {பலராமர்}, ஒருபோதும் இத்தகு வார்த்தைகளை என்னிடம் பேசியதில்லை. கதனோ, சாம்பனோ நீர் கேட்டதை ஒருபோதும் கேட்டதில்லை.(33) துவாரகையில் வசிக்கும் விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் பெருந்தேர்வீரர்களில் எவரும் என்னிடம் நீர் கேட்டதைக் கேட்டதில்லை.(34) நீர் பாரதர்களுடைய ஆசானின் {துரோணரின்} மகனாவீர். யாதவர்கள் அனைவராலும் நீர் உயர்வாக மதிக்கப்படுகிறீர். ஓ! தேர்வீரர்களில் முதன்மையானவரே, நான் கேட்கிறேன், இவ்வாயுதத்தைப் பயன்படுத்தி நீர் யாருடன் போரிடப்போகிறீர்?” என்று கேட்டேன்.(35)

இவ்வாறு என்னால் சொல்லப்பட்ட துரோணர் மகன், “ஓ! கிருஷ்ணா, ஓ மங்கா மகிமை கொண்டவனே, உன்னை வணங்கிய பிறகு, உன்னிடம் போரிட வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. ஓ! கிருஷ்ணா, தேவர்கள் மற்றும் தானவர்களால் புகழப்படும் உன் சக்கரத்தை அதற்காகவே நான் வேண்டினேன். நான் அஃதை அடைந்திருந்தால், இவ்வுலகில் வெல்லப்பட முடியாதவனாக ஆகியிருப்பேன்.(37) ஓ! கேசவா, ஓ! கோவிந்தா, கிட்டத்தட்ட அடையமுடியாத என் விருப்பத்தை அடைய முடியாமலே நான் உன்னை விட்டுச் செல்லப் போகிறேன். இப்போது என்னிடம் நல்வார்த்தைகளைப் பேசுவாயாக.(38) பயங்கரமான மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான நீ ,இந்தப் பயங்கரமான ஆயுதத்தைத் தரித்திருக்கிறாய். இவ்வாயுதத்தால் நீ ஒப்பற்றவனாக இருக்கிறாய். இவ்வுலகில் இதைத்தரிக்கவல்லவன் எவனுமில்லை” என்றார்.(39)

என்னிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, பிறகு, குதிரை இணைகள் {ஜோடிகள்} பலவற்றையும், அதிகச் செல்வத்தையும், பல்வேறு வகை ரத்தினங்களையும் பெற்றுக் கொண்டு துவாரகையை விட்டகன்றார்.(40) அவர் கோபம்நிறைந்தவராகவும், தீய ஆன்மா கொண்டவராகவும், மன அமைதியற்றவராகவும், மிகக் கொடூரராகவும் இருக்கிறார். பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை அவர் அறிந்திருக்கிறார். விருகோதரர் {பீமர்} அவரிடம் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்}”.(41)

பிரம்மசிரமேவிய அஸ்வத்தாமன்! – சௌப்திக பர்வம் பகுதி – 13-கிருஷ்ணனுடன் சேர்ந்து பீமனைப் பின்தொடர்ந்த பாண்டவர்கள்; நிற்குமாறு அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டும் நிற்காத பீமன்; வியாசருடன் அமர்ந்திருக்கும் அஸ்வத்தாமனைக் கண்ட பாண்டவர்கள்; பிரம்மசிர ஆயுதத்தை வெளியிட்ட அஸ்வத்தாமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், யாதவர்கள் அனைவரையும் மகிழ்விப்பவனுமான அவன் {கிருஷ்ணன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, வலிமைமிக்க அனைத்து வகை ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்கும் தன் அற்புதத் தேரில் ஏறிக் கொண்டான்.(1) தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், காம்போஜ இனத்தைச் சேர்ந்த முதன்மையானவையுமான குதிரைகளில் ஈரிணைகள் {இரண்டு ஜோடிகள்} அவ்வாகனத்தில் பூட்டப்பட்டிருந்தன. அந்தச் சிறந்த தேரின் தூரம் {ஏர்க்கால்} காலைச் சூரியனின் நிறத்தில் இருந்தது.(2) {அந்த ஏர்க்காலின்} வலப்புறத்தில் சைவியம் என்றறியப்பட்ட குதிரையும், இடப்புறத்தில் சுக்ரீவமும்; பார்ஷினியில் {பின்புறத்தில்} மேகபுஷ்பம் மற்றும் வலாஹகம் என்றழைக்கப்பட்ட இரு குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன.(3) அந்தத் தேரில், ரத்திரங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீகத் தச்சனால் {விஸ்வகர்மனால்} செய்யப்பட்டதுமான தெய்வீகக் கொடிமரமொன்று மாயனை (விஷ்ணுவைப்) போலவே உயர்ந்து நின்றிருந்தது.(4) அந்தக் கொடிமரத்தின் நுனியில் வினதையின் மகன் (கருடன்) பெருங்காந்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். உண்மையில், அந்தப் பாம்புகளின் எதிரியானவன் {கருடன்}, உண்மையின் உடல்வடிவமான {சத்தியரூபியான} கேசவனின் {கிருஷ்ணனின்} கொடிமர உச்சியில் அமர்ந்திருந்தான்.(5)

வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான ரிஷிகேசன் {கிருஷ்ணன்} அத்தேரில் ஏறிக்கொண்டான். அவனை அடுத்து தடுத்தற்கரிய சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனும், குருக்களின் மன்னனான யுதிஷ்டிரனும் அதே வாகனத்தில் ஏறினார்கள்.(6) சாரங்கம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிக்கும் தசார்ஹ குலத்தோனின் {கிருஷ்ணனின்} அருகில் அத்தேரில் அமர்ந்திருந்த பாண்டுவின் மகன்கள் இருவரும், வாசவனின் {இந்திரனின்} அருகில் அமர்ந்திருக்கும் அசுவினி இரட்டையர்களைப் போல மிக அழகாகத் தெரிந்தனர்.(7) அந்தத் தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, உலகமனைத்தாலும் புகழப்படும் தன் தேரில் அவர்களை ஏறச் செய்து, பெரும் வேகம் கொண்ட அந்த முதன்மையான குதிரைகளைத் தூண்டினான்.(8) பாண்டு மகன்கள் இருவராலும், அந்த யாதவக் காளையாலும் {கிருஷ்ணனாலும்} செலுத்தப்பட்ட அந்தச் சிறந்த வாகனத்தில் இருந்த குதிரைகள் அவர்களை ஏற்றிக் கொண்ட பிறகு திடீரெனப் பறந்தன.(9) அந்தச் சாரங்கபாணியை {கிருஷ்ணனை} அவ்விலங்குகள் பெரும் வேகத்தோடு சுமந்து சென்ற போது, அவற்றின் விரைவால் ஏற்பட்ட ஒலியானது, காற்றின் ஊடாகச் செல்லும் பறவைகளின் ஒலியைப் போலப் பேரொலியாக இருந்தது.(10)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பெரும் வேகத்தில் சென்ற அவர்கள், விரைவாகத் தாங்கள் பின்தொடர்ந்து சென்ற வலிமைமிக்க வில்லாளியான பீமசேனனை அடைந்தனர்.(11) அந்தப் பெருந்தேர்வீரர்கள் பீமனைச் சந்தித்தாலும், எதிரியை நோக்கி மூர்க்கமாகச் செல்பவனும், கோபத்தில் நிறைந்தவனுமான அந்தக் குந்தியின் மகனைத் {பீமனைத்} தடுக்கத் தவறினர்.(12) சிறப்புமிக்கவர்களும், உறுதியானவர்களுமான அந்த வில்லாளிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவன் {பீமன்}, பகீரதனால் கீழே கொண்டுவரப்பட்ட ஆற்றின் {கங்கையாற்றின்} கரையை, மிக வேகமாகச் செல்லும் தன் குதிரைகளின் மூலம் அடைந்தான்.(13) அங்கே நீர் முனையின் {கரையின்} அருகில், உயர் ஆன்மா கொண்டவரும், சிறப்புமிக்கவரும், கரிய நிறத்தவரும், தீவில் பிறந்தவருமான வியாசர் பல முனிவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பதைக் கண்டான்.(14) மேலும் அவன் {பீமன்}, புழுதியால் மறைக்கப்பட்டவனும், குசப்புல்லாலான ஆடை உடுத்தியவனும், தெளிந்த நெய்யை மேனியெங்கும் பூசிக்கொண்டிருந்தவனும், தீச்செயல்கள் புரிபவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அங்கே அவரின் {வியாசரின்} அருகில் அமர்ந்திருப்பதையும் கண்டான்.(15)

வலிமைக்கக் கரங்களைக் கொண்ட குந்தியின் மகன் பீமசேனன், அஸ்வத்தாமனை நோக்கி விரைந்து, கணை பொருத்தப்பட்ட தன் வில்லை எடுத்து, “நில், நிற்பாயாக” என்றான்.(16) கையில் வில்லுடன் தன்னை நோக்கி வரும் அந்தப் பயங்கர வில்லாளியையும் {பீமனையும்}, ஜனார்த்தனனின் {கிருஷ்ணனின்} தேரிலிருந்த அவனது சகோதரர்கள் இருவரையும் {யுதிஷ்டிரன் மற்றும் அர்ஜுனனையும்} கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்},(17) மிகுந்த கலக்கத்தை அடைந்து, தன் நேரம் வந்ததென நினைத்தான். தளர்வடையா ஆன்மா கொண்ட அவன் {அஸ்வத்தாமன்}, (தன் தந்தையிடம் இருந்து தான் அடைந்த) அந்த உயர்ந்த ஆயுதத்தை {பிரம்மசிரத்தை} தன் மனத்தில் அழைத்தான்.(18) பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, தன் இடக்கையால் ஒரு புல்லை {சீழ்கீர்க்கையை {நாணற்புல்லை}} எடுத்தான். 

பெரும்துன்பத்தில் வீழ்ந்த அவன் {அஸ்வத்தாமன்}, அந்தப் புல்லை உரிய மந்திரங்களுடன் ஈர்த்து, அதைப் பலமிக்க அந்தத் தெய்வீக ஆயுதமாக {பிரம்மசிரமாக} மாற்றினான்.(19) (பாண்டவர்களின்) கணைகளையும், தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட அவர்களையும் {பாண்டவர்களையும்} காணப்பொறுக்காத அவன் {அஸ்வத்தாமன்}, கோபத்தால், “பாண்டவர்களின் அழிவுக்காக” என்ற இந்தப் பயங்கரமான வார்த்தைகளைச் சொன்னான்.(20) ஓ! மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்} இவ்வார்த்தைகளைச் சொல்லி, அனைத்துலகங்களும் திகைக்கும் வகையில் அவ்வாயுதத்தை ஏவினான்.(21) யுகத்தின் முடிவில் அனைத்தையும் அழிக்கும் யமனைப் போல, மூவுலகங்களையும் எரிக்கவல்லதாகத் தெரிந்த அந்தப் புல்லில் இருந்து நெருப்புண்டானது” {என்றார் வைசம்பாயனர்}.(22)

நெருப்புகளுக்கிடையில் நாரதரும், வியாசரும்! – சௌப்திக பர்வம் பகுதி – 14-அர்ஜுனன் தன் பிரம்மாயுதத்தை ஏவியது; இயற்கையில் தோன்றிய இயல்புக்குமீறிய சகுனங்கள்; அவ்விரு ஆயுதங்களின் மூலம் உண்டான இரு நெருப்புகளுக்கிடையில் மூவுலகங்களைக் காப்பதற்காக நின்ற நாரதரும், வியாசரும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, மிகத் தொடக்கத்திலேயே துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} நோக்கத்தைக் குறிப்புகளால் அறிந்து கொண்டான். அர்ஜுனனிடம் அவன் {கிருஷ்ணன்},(1) “ஓ! அர்ஜுனா, ஓ! பாண்டுவின் மகனே, உன் நினைவில் இருப்பதும், துரோணரால் உனக்குப் புகட்டப்பட்ட அறிவுமான அந்தத் தெய்வீக ஆயுதத்தை {பிரம்மாயுதத்தைப்} பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது.(2) ஓ! பாரதா {அர்ஜுனா}, உன்னையும், உன் சகோதர்களையும் காப்பதற்காக, அனைத்து ஆயுதங்களையும் தணிக்கவல்லதான அவ்வாயுதத்தை இப்போரில் ஏவுவாயாக” என்றான்.(3) கேசவனால் {கிருஷ்ணனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், பகைவீரர்களைக் கொல்பவனான அர்ஜுனன், நாண்கயிற்றில் கணை பொருத்தப்பட்ட தன் வில்லை எடுத்துக் கொண்டு, வேகமாகத் தன் தேரில் இருந்து இறங்கினான்.(4) தனது ஆசானின் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்}, தனக்கும், தன் சகோதரர்களுக்கும் நன்மையை விரும்பிய அந்த எதிரிகளை எரிப்பவன் {அர்ஜுனன்},(5) தேவர்கள் அனைவரையும் வணங்கி, பெரியோர் அனைவரையும் வணங்கி, உலகங்கள் அனைத்தின் நன்மையைச் சிந்தித்து, “அஸ்வத்தாமரின் ஆயுதம் இவ்வாயுதத்தால் தணிக்கப்படட்டும்” என்ற வார்த்தைகளைச் சொல்லி அவ்வாயுதத்தை ஏவினான்.(6)

காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட அவ்வாயுதமானது, யுக முடிவில் தோன்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போலக் கடுந்தழல்களுடன் எரிந்தது.(7) அதே போலவே, கடுஞ்சக்தி கொண்டவனான துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} ஏவப்பட்ட ஆயுதமும், பெரும் நெருப்புப்பந்தைப் போலப் பயங்கரத் தழல்களுடன் சுடர்விட்டெரிந்தது.(8) எண்ணற்ற இடிமுழக்கங்கள் கேட்டன; ஆயிரக்கணக்கான எரிநட்சத்திரங்கள் விழுந்தன; உயிரினங்கள் அனைத்தும் பேரச்சத்தால் ஈர்க்கப்பட்டன.(9) ஒலியால் நிறைந்திருப்பதாகத் தெரிந்த மொத்த ஆகாயமும், அந்நெருப்பின் தழல்களுடன் பயங்கரத் தன்மையை அடைந்தது. மலைகள், நீர் நிலைகள் மற்றும் மரங்களுடன் கூடிய மொத்த பூமியும் நடுங்கியது.(10)

அப்போது, அனைத்து உயிரினங்களின் ஆன்மாவான நாரதர், பாரத இளவரசர்கள் அனைவரின் பாட்டன் (வியாசர்) ஆகிய இருபெரும் முனிவர்களும், மூவுலகங்களையும் எரிக்கும் அவ்விரு ஆயுதங்களையும் கண்டு, அங்கே தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். அந்த இரு முனிவர்களும், அஸ்வத்தாமன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களையும் அமைதிப்படுத்த முயன்றனர்.(11,12) கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், உயிரினங்கள் அனைத்தின் நன்மையை விரும்பியவர்களும், பெருஞ்சக்தியைக் கொண்டவர்களுமான அவ்விரு தவசிகளும், சுடர்மிக்க அவ்விரு ஆயுதங்களுக்கு மத்தியில் நின்றனர்.(13) எந்தச் சக்தியிலும் மூழ்க இயலாதவர்களான அந்தச் சிறப்பு மிக்க முனிவர்கள் இருவரும், அவ்விரு ஆயுதங்களுக்கிடையில் சுடர்மிக்க இரு நெருப்புகளைப் போலத் தங்களை நிறுத்திக் கொண்டனர்.(14) உயிருடன் கூடிய எவ்வுயிரினத்தாலும் தடுக்கப்பட முடியாதவர்களும், தேவர்கள் மற்றும் தானவர்களால் துதிக்கப்படுபவர்களுமான அவ்விருவரும், அவ்விரு ஆயுதங்களின் சக்தியை தணிக்கும் வகையில், உலகமனைத்துக்கும் நன்மை செய்ய இவ்வழியில் செயல்பட்டனர்.(15)

அவ்விரு முனிவர்கள், “இந்தப் போரில் வீழ்ந்த பெருந்தேர்வீரர்கள், பல்வேறு வகை ஆயுதங்களை அறிந்திருந்தனர். எனினும் அவர்கள், மனிதர்கள் மீது இத்தகு ஆயுதத்தை ஒருபோதும் ஏவியதில்லை. வீரர்களே, நீங்கள் செய்திருக்கும் இந்த மூர்க்கச் செயல் என்ன தெரியுமா?” என்று கேட்டனர்”.(16)

ஆயுதத்தைத் திருப்ப முடியாத அஸ்வத்தாமன்! – சௌப்திக பர்வம் பகுதி – 15-தன் ஆயுதத்தை விலக்கித் திருப்பிக் கொண்ட அர்ஜுனன்; தன் ஆயுதத்தை விலக்கிக் கொள்ள முடியாத அஸ்வத்தாமன், அதைப் பாண்டவப் பெண்களின் கருவறையை நோக்கிச் செலுத்துவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மனிதர்களில் புலியே, நெருப்பைப் போன்ற காந்தியைக் கொண்ட அவ்விரு முனிவர்களையும் கண்டவுடனேயே, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் தெய்வீகக் கணையைத் திரும்பிப் பெறத் தீர்மானித்தான்.(1) கரங்களைக் கூப்பிக் கொண்ட அவன், அம்முனிவர்களிடம், “நான் இவ்வாயுதத்தைப் பயன்படுத்தும் போது, “(எதிரியின்) அந்த ஆயுதம் தணிவடையட்டும்” என்று சொல்லியே ஏவினேன்.(2) நான் இந்த உயர்ந்த ஆயுதத்தைத் திரும்பப் பெற்றால், பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, தன் ஆயுதத்தின் சக்தியால் எங்கள் அனைவரையும் எரித்துவிடுவார் என்பதில் ஐயமில்லை.(3) நீங்கள் இருவரும் தேவர்களைப் போன்றவர்களாவீர். எங்கள் நன்மையையும், மூன்று உலகங்களின் நன்மையையும் பாதுகாக்கும்படியான ஏதாவது வழிமுறையை ஆலோசிப்பதே உங்களுக்குத் தகும்” என்றான்.(4)

இந்த வார்த்தைகளைச் சொன்ன தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் ஆயுதத்தைத் திருப்பிக் கொண்டான். போரில் அவ்வாயுதத்தைத் திருப்புவது தேவர்களுக்கே மிகக் கடினமான செயலாகும்.(5) ஒரு முறை ஏவப்பட்ட அந்த உயர்ந்த ஆயுதத்தைப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} தவிர, மஹேந்திரனாலும் திருப்பமுடியாது.(6) அவ்வாயுதம் பிரம்ம சக்தியில் பிறந்ததாகும். தூய்மையற்ற ஆன்மா கொண்ட எந்த மனிதனாலும் அதைத் திருப்ப முடியாது. பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்கும் ஒருவனால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.(7) பிரம்மச்சரிய நோன்பைப் பயிலாத ஒருவன், அஃதை ஏவிய பிறகு மீண்டும் திருப்பினால், அனைத்துக் கருவிகளுடன் சேர்த்து, அவனுடைய {ஏவியவனின்} தலையையும் அது தாக்கி வீழ்த்தும்.(8) அர்ஜுனன் ஒரு பிரம்மச்சாரியும், நோன்புகளை நோற்பவனுமாவான். கிட்டத்தட்ட அடையமுடியாத ஆயுதத்தை அடைந்த அவன் {அர்ஜுனன்}, பெரும் ஆபத்தான சூழ்நிலையில் மூழ்கியிருந்தபோதும், ஒருபோதும் அதைப் பயன்படுத்தவில்லை.(9) உண்மை நோன்பை நோற்பவனும், பெரும் வீரம் கொண்டவனும், பிரம்மச்சாரியின் வாழ்வுமுறையை நோற்பவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பணிவுடையவனாகவும், பெரியோர் அனைவருக்கும் கீழ்ப்படிந்தவனாகவும் இருந்தான். இதன் காரணமாகவே அவனால் அவ்வாயுதத்தைத் திருப்பிக் கொள்ள முடிந்தது.(11)

ஆனால் துரோணரின் மகனோ {அஸ்வத்தாமனோ}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த உயர்ந்த ஆயுதத்தைப் போரில் திரும்பப் பெற முடியாமல், தீவில் பிறந்தவரான முனிவரிடம் {வியாசரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(12) “ஓ! தவசியே, பேராபத்தால் அச்சமடைந்தும், என் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பியும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவும் நான் இந்த ஆயுதத்தை ஏவினேன்.(13) ஓ! புனிதமானவரே {வியாசரே}, பொய் நடத்தை கொண்ட இந்தப் பீமசேனன், போரில் திருதராஷ்டிரர் மகனைக் {துரியோதனனைக்} கொன்றபோது பாவம் நிறைந்த செயலைச் செய்தான்.(14) ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, அதன் காரணமாகவே தூய்மையற்ற ஆன்மா கொண்டவனான நான் இந்த ஆயுதத்தை ஏவினேன். எனினும், இப்போது இதை நான் திரும்பப் பெறத் துணிய மாட்டேன்.(15) பாண்டவர்களின் அழிவுக்காகவே, தடுத்தற்கரிய இந்தத் தெய்வீக ஆயுதத்தை நெருப்பின் சக்தியால் ஈர்த்து நான் ஏவினேன்.(16) பாண்டவர்களின் அழிவுக்காகத் திட்டமிட்டு ஏவப்பட்டதே இந்த ஆயுதம். எனவே, அது பாண்டு மகன்கள் அனைவரின் உயிரையும் எடுக்கும்.(17) ஓ! மறுபிறப்பாளரே, கோபத்தால் நான் இந்தப் பாவம் நிறைந்த செயலைச் செய்துவிட்டேன். பாண்டவர்களின் அழிவுக்காகவே போரில் நான் இவ்வாயுதத்தை இருப்புக்கு அழைத்தேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(18)

வியாசர் {அஸ்வத்தாமனிடம்}, “ஓ! குழந்தாய் {அஸ்வத்தாமா}, பிருதையின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை அறிந்தவனாவான். கோபத்தாலோ, போரில் உன்னை அழிக்கவோ அவன் அந்த ஆயுதத்தை ஏவவில்லை.(19) மறுபுறம், உன் ஆயுதத்தைக் கலங்கடிக்கவே அவன் அதைப் பயன்படுதிதனான். மேலும் அவன் {அர்ஜுனன்} அதைத் திரும்பவும் பெற்றான்.(20) உன் தந்தை கற்பித்ததன் மூலம் பிரம்ம ஆயுதத்தையே அடைந்தும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிடவில்லை.(21) அர்ஜுனன் அந்த அளவுக்குப் பொறுமையும், அந்த அளவுக்கு நேர்மையும் கொண்டிருக்கிறான். மேலும் அவன் அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனாவான். அப்படிப்பட்ட ஒரு மனிதனை, அவனது சகோதரர்களுடன் சேர்த்து அழிக்க நீ ஏன் முயல்கிறாய்?(22) பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது எந்த இடத்தில் வைத்து, மற்றொரு உயர்ந்த ஆயுதத்தால் கலங்கடிக்கப்படுமோ, அந்த இடத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு சொட்டு நீரையும் மேகங்கள் பொழியாது. அக்காலத்தில் அங்கே பஞ்சமேற்படும்.(23)

இக்காரணத்திற்காகவே, சக்தியைக் கொண்டவனாகவே இருந்தாலும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான இந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, வாழும் உயிரினங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் உனது ஆயுதத்தை அவனது ஆயுதத்தால் கலங்கடிக்கவில்லை.(24) பாண்டவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; நீயும் பாதுகாக்கப்பட வேண்டும்; இந்த நாடும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இந்த உனது தெய்வீக ஆயுதத்தைத் திரும்ப அழைப்பாயாக.(25) உன் இதயத்தில் இருந்து இந்தக் கோபத்தை அகற்றி, பாண்டவர்களைப் பாதுகாப்பாக இருக்கச் செய்வாயாக. அரச முனியான யுதிஷ்டிரன், பாவம் நிறைந்த எச்செயலையும் செய்து வெற்றியடைய ஒருபோதும் விரும்பமாட்டான்[1].(26) உன் தலையில் இருக்கும் அந்த மணியைக் கொடுப்பாயாக. பாண்டவர்கள் அதை {மணியை} எடுத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக உனக்கு உன் உயிரைத் தருவார்கள்” என்றார் {வியாசர்}.(27)துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, “பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இதுவரை ஈட்டியிருக்கும் செல்வங்கள் அனைத்தையும் விட இந்த எனது மணி விலைமதிப்புமிக்கதாகும். இந்த மணியைச் சூடியவனுக்கு ஆயுதங்கள், நோய் மற்றும் பசி ஆகியவற்றிடமிருந்து எப்போதும் அச்சமேற்படாது. தேவர்கள், தானவர்கள் மற்றும் நாகர்களிடம் அவன் அச்சங்கொள்ளத் தேவையில்லை.(29) ராட்சசர்கள் மற்றும் கள்வர்களிடமும் அவன் அச்சங்கொள்ள மாட்டான். எவ்வழியிலும் நான் அதைப் பிரிந்திருக்க முடியாது.(30) இருப்பினும், ஓ! புனிதமானவரே, நீர் எதைச் செய்யச் சொல்கிறீரோ அஃது என்னால் செய்யப்பட வேண்டும். இதோ எனது மணி. இதோ நான். எனினும், (மரண ஆயுதத்தால் ஈர்க்கப்பட்டிருக்கும்) இப்புல்லானது,(31) உயர்வானதும், வலிமைமிக்கதும், கலங்கடிக்கப்பட முடியாத ஆயுதமாகவும் இருப்பதால், இது பாண்டவப் பெண்களின் கருவறைகளில் பாயும். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே- வியாசரே}, இவ்வாயுதத்தை ஒருமுறை ஏவியபிறகு என்னால் திரும்பப் பெற முடியாது.(32) நான் இப்போது இந்த ஆயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசப் போகிறேன். ஓ! புனிதமானவரே, உமது ஆணைகளைப் பொறுத்தவரையில், வேறு விதங்களில் நான் அவற்றுக்கு நிச்சயம் கீழ்ப்படிவேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(33)

வியாசர், “இவ்வாறே செய். எனினும், ஓ! பாவமற்றவனே, வேறு எந்த நோக்கத்திலும் புத்தியைச் செலுத்தாதே. இவ்வாயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசி ஒழிவடைவாயாக {அனைத்தையும் நிறுத்துவாயாக}” என்றார்”.(34)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தீவில் பிறந்தவரின் {துவைபாயனரான வியாசரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணரின் மகன், அந்த ஆயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசினான்”.(36)

மூவாயிரம் வருடங்கள் திரிவீர்! – சௌப்திக பர்வம் பகுதி – 16-கருவை மீட்பேன் என்று சொன்ன கிருஷ்ணன்; அஸ்வத்தாமனைச் சபித்தது; கிருஷ்ணனின் சாபத்தை அங்கீகரித்த வியாசர்; சாபத்தை ஏற்றுக் கொண்டு, தன் தலையில் இருந்த மணியைக் கொடுத்த அஸ்வத்தாமன்; திரௌபதியிடம் திரும்பிச் சென்ற பாண்டவர்கள்; திரௌபதியிடம் மணியைக் கொடுத்த பீமன்; அம்மணியைத் தலையில் சூடிக்கொள்ளுமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன திரௌபதி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} (பாண்டவப் பெண்களின் கருவறையில்) அவ்வாயுதம் ஏவப்படப்போவதை அறிந்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, உற்சாகம் நிறைந்த இவ்வார்த்தைகளை அவனிடம் {அஸ்வத்தாமனிடம்} சொன்னான்:(1) “பக்தி நோன்புகளை நோற்கும் ஒரு குறிப்பிட்ட பிராமணர், இப்போது அர்ஜுனனின் மருமகளாக இருப்பவளான விராடனின் மகள் {உத்தரை} உபப்லாவ்யத்தில் இருக்கும்போது அவளைக் கண்டு,(2) “குரு குலம் அருகிப் போகும்போது உனக்கு ஒரு மகன் பிறப்பான். இந்தக் காரணத்திற்காக அந்த உன் மகன் பரீக்ஷித் என்ற பெயரால் அழைக்கப்படுவான்” என்றார்.(3) அந்தப் பக்திமானின் வார்த்தைகள் உண்மையாகும். பாண்டவர்கள் பரீக்ஷித் என்ற பெயரில் ஒரு மகனை {பேரனை} அடைவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.(4)

சாத்வத குலத்தில் முதன்மையானவனான கோவிந்தன் {கிருஷ்ணன்} இவ்வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கோபத்தால் நிறைந்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக,(5) “ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டவர்களிடம் நீ கொண்ட ஒருதலைச் சார்பினால் சொல்லப்படும் இது நடக்காது. ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, என் வார்த்தைகள் நிறைவேறும்.(6) என்னால் உயரத்தப்பட்ட என் ஆயுதம் {ஐஷீகம் [நாணற்புல்லாலான பிரம்மசிரம்]}, நீ எந்தக் கருவைக் காக்க விரும்புகிறாயோ, விராடன் மகளின் {உத்தரையின்} கருவறையில் உள்ள அந்தக் கருவின் மேலேயே விழும்” என்றான்.(7)

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “இந்த வலிமைமிக்க ஆயுதத்தின் பாய்ச்சல் கனியற்றதாகாது. அந்தக் கரு மாளும். மாண்டதே மீண்டும் உயிரை அடைந்து நீண்ட வாழ்வைப் பெறும்.(8) உம்மைப் பொறுத்தவரையில், ஞானிகள் அனைவரும் உம்மைக் கோழையாகவும், இழிந்த பாவியாகவும் அறிவார்கள். எப்போதும் பாவம் நிறைந்த செயல்களிலேயே ஈடுபடும் நீர் பிள்ளைகளைக் கொல்லும் கொலையாளியாவீர். இக்காரணத்திற்காக, இந்த உமது பாவங்களுக்குரிய கனியை நீர் தாங்கவே வேண்டும்.(9) எந்தத் தோழனும் இல்லாமல், பேசுவதற்கு எவருமில்லாமல் இப்பூமியில் மூவாயிரம் {3000} வருடங்கள் நீர் திரிந்து கொண்டிருப்பீர்[1].(10) தனியொருவராகவும், உம்மருகே எவரும் இல்லாத நிலையிலும் நீர் பல்வேறு நாடுகளில் திரிந்து கொண்டிருப்பீர். ஓ! இழிந்தவரே {அஸ்வத்தாமரே}, மனிதர்களுக்கு மத்தியில் உமக்கு இடமேதும் கிடையாது.(11) சீழ் மற்றும் குருதியின் முடைநாற்றம் உம்மிலிருந்து வெளிப்படும், மேலும் அடைதற்கரிய காடுகளும், அச்சந்தரும் முட்புதர்களும்தான் உமது வசிப்பிடங்களாகும். ஓ! பாவம் நிறைந்த ஆன்மா கொண்டவரே {அஸ்வத்தாமரே}, நோய்கள் அனைத்தின் கனத்துடன் நீர் பூமியில் திரிந்து கொண்டிருப்பீர்.(12)வீரப் பரீக்ஷித் வயதை அடைந்து, வேதங்களை அறிந்து, பக்தி நோன்புகளை நோற்று, சரத்வான் மகனிடம் {கிருபரிடம்} இருந்து ஆயுதங்கள் அனைத்தையும் அடைவான்.(13) நீதிமிக்க ஆன்மாக் கொண்ட அந்த மன்னன் {பரீக்ஷித்}, உயர்ந்த ஆயுதங்கள் அனைத்தின் அறிவையும் அடைந்து, க்ஷத்திரியக் கடமைகள் அனைத்தையும் அறிந்து, அறுபது {60} ஆண்டுகளுக்குப் பூமியை ஆள்வான்.(14) மேலும், ஓ! தீய ஆன்மா கொண்டவரே, உமது கண்களுக்கு முன்பாகவே அந்தப் பிள்ளை {பரீக்ஷித்} குருக்களின் வலிமைமிக்க மன்னனாவான்.(15) உமது ஆயுதநெருப்பின் சக்தியால் எரிக்கப்பட்டாலும் நான் அவனை மீட்பேன். ஓ மனிதர்களில் இழிந்தவரே, என் தவங்கள் மற்றும் என் உண்மையின் சக்தியை நீர் காண்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.(16)

வியாசர் {அஸ்வத்தாமனிடம்}, “மிகக் கொடூரமான இந்தச் செயலைச் செய்து, எங்களை அவமதித்ததாலும், (பிறப்பால்) நல்ல பிராமணனாக இருந்தாலும், உன் நடத்தை இவ்வாறு இருப்பதாலும்,(17) தேவகியின் மகன் {கிருஷ்ணன்} சொன்ன அந்தச் சிறந்த வார்த்தைகள், க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றும் உன் வழக்கில் உணரப்படும் என்பதில் ஐயமில்லை” என்றார்.(18)

அஸ்வத்தாமன் {வியாசரிடம்}, “ஓ! புனிதமானவரே, மனிதர்கள் அனைவரின் மத்தியில் உம்முடன் நான் வாழ்ந்து வருவேன். மனிதர்களில் முதன்மையானவனும், சிறப்புமிக்கவனுமான இவனது வார்த்தைகள் உண்மையாகட்டும்” என்றான்”.(19)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் மணியை உயர் ஆன்மப் பாண்டவர்களிடம் கொடுத்துவிட்டு, அவர்களது கண்களுக்கு முன்பாகவே உற்சாகமில்லாமல் காட்டுக்குள் சென்றான்.(20) தங்கள் எதிரிகள் அனைவரையும் தண்டித்துக் கொன்றுவிட்ட பாண்டவர்கள், கோவிந்தனையும் {கிருஷ்ணனையும்}, தீவில் பிறந்த கிருஷ்ணரையும் {துவைபானரான வியாசரையும்}, பெருந்தவசியான நாரதரையும் முன்னிட்டுக் கொண்டு, அஸ்வத்தாமனுடன் பிறந்த அந்த மணியை எடுத்துக் கொண்டு, பிராய நோன்பை நோற்று அமர்ந்திருந்த நுண்ணறிவு கொண்ட திரௌபதியிடம் வேகமாகத் திரும்பி வந்தனர்”.(21,22)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்}, காற்றின் வேகத்திற்கு ஒப்பான சிறந்த குதிரைகளால் சுமக்கப்பட்டு, தசார்ஹ குலத்தோனையும் {கிருஷ்ணனையும்} உடனழைத்துக் கொண்டு, தங்கள் முகாமுக்குத் திரும்பினர்.(23) தங்கள் தேர்களில் இருந்து வேகமாகக் கீழிறங்கியவர்களும், அதிகத் துயருடன் இருந்தவர்களுமான அந்தப் பெருந்தேர்வீரர்கள், துருபதன் மகளான கிருஷ்ணை {திரௌபதி} துயரத்தால் பீடிக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.(24) கிருஷ்ணனுடன் கூடிய பாண்டவர்கள், சோகம் மற்றும் துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்தவளும், உற்சாகமற்றவளுமான அந்த இளவரசியை {திரௌபதியை} அணுகி, அவளைச் சுற்றி அமர்ந்தனர்.(25)

அப்போது, மன்னனின் {யுதிஷ்டிரனின்} அன்புக்குரியவனும், வலிமைமிக்கவனுமான பீமசேனன், அந்தத் தெய்வீக மணியை அவளிடம் {திரௌபதியிடம்} கொடுத்து, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(26) “ஓ! இனிமையான மங்கையே இந்த மணி உனதானது. உன் மகன்களைக் கொன்றவன் வெல்லப்பட்டான். உன் கவலையை விட்டு எழுந்து, ஒரு க்ஷத்திரியப் பெண்ணுக்குரிய கடமைகளை நினைவுகூர்வாயாக.(27) ஓ! கரிய கண்களைக் கொண்டவளே, ஓ! மருண்ட பெண்ணே, வாசுதேவன் (உபப்லாவ்யத்திலிருந்து) தூதுசெல்லப் புறப்பட்டபோது, அந்த மதுசூதனனிடம் இந்த வார்த்தைகளையே நீ சொன்னாய்:(28) “ஓ! கோவிந்தா, மன்னர் {யுதிஷ்டிரர்} அமைதியை விரும்புவதால், நான் கணவர்கள் இல்லாதவள். நான் மகன்களோ, சகோதரர்களோ இல்லாதவள். நீயும் {என்னைப் பொறுத்தவரையில்} உயிரோடில்லை” என்றாய்.(29) 

இந்தக் கசந்த வார்த்தைகளையே நீ மனிதர்களில் முதன்மையானவனான கிருஷ்ணனிடம் சொன்னாய். க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு மிகவும் ஏற்புடைய அந்த வார்த்தைகளை நீ நினைவுகூர்வதே உனக்குத் தகும்.(30) அரசுரிமைக்கான நமது வழியில் தடையாக இருந்த இழிந்த துரியோதனன் கொல்லப்பட்டான். துச்சாசனனின் உயிர்க்குருதியை நான் குடித்துவிட்டேன்.(31) நம் எதிரிகளுக்கு நாம் பட்ட கடனைச் செலுத்திவிட்டோம். மனிதர்கள் பேசும்போது, இனியும் நம்மை நிந்திக்க முடியாது. துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} வென்றாலும், அவன் பிராமணன் என்பதாலும், இறந்துவிட்ட நமது ஆசானுக்கு {துரோணருக்கு} மரியாதை காட்ட வேண்டும் என்பதாலும் அவனை விடுவித்துவிட்டோம்.(32) ஓ! தேவி, அவனது புகழ் அழிக்கப்பட்டது, அவனது உடல் மட்டுமே எஞ்சியிருக்கிறது. தன் மணியை இழந்த அவன், இப்பூமியில் ஆயுதங்களற்றவனாகத் திரியப் போகிறான்” என்றான் {பீமன்}.(33)

திரௌபதி, “நாம் காயம் பிழைத்த காரணத்தால், நாம் அடைந்த கடனை மட்டுமே திரும்பச் செலுத்த நான் விரும்பினேன். ஆசானின் மகன் {அஸ்வத்தாமர்}, அந்த ஆசானை {துரோணரைப்} போலவே எனது மரியாதைக்குரியவராவார்.(34) ஓ! பாரதரே {பீமரே}, இந்த மணியை மன்னர் {யுதிஷ்டிரர்} தன் தலையில் சூடிக் கொள்ளட்டும்” என்றாள். அப்போது அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, திரௌபதியின் விருப்பப்படியே அந்த மணியை எடுத்து, ஆசானின் பரிசென அதைக் கருதி அதைத் தன் தலையில் சூடினான்.(35) சிறப்பானதும், தெய்வீகமானதுமான அந்த மணியைத் தன் தலையில் சூடிய அந்தப் பலமிக்க மன்னன் {யுதிஷ்டிரன்}, தனக்கு மேலே சந்திரனைக் கொண்ட ஒரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான்.(36) இளவரசி திரௌபதி, தன் மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருந்தாலும், மனோபலம் கொண்டவளான அவள், தன் நோன்பை {பிராய நோன்பைக்} கைவிட்டாள். பிறகு மன்னன் யுதிஷ்டிரன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(37)

பிரம்மனால் படைக்கப்பட்ட மற்றொரு படைப்பாளன்! – சௌப்திக பர்வம் பகுதி – 17-தனியொருவனாக இருந்து கொண்டு அஸ்வத்தாமனால் பலரை எவ்வாறு கொல்ல முடிந்தது என்று கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷடிரன்; மஹாதேவனின் மகிமை குறித்துச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்; உயிரினங்களைப் படைக்குமாறு சிவனிடம் சொன்ன பிரம்மன்; சிவன் தவம் செய்தது; அந்நேரத்தில் மற்றொருவனை உண்டாக்கி உயிரினங்களைப் படைக்கச் செய்த பிரம்மன்; தவம் நிறைந்து திரும்பிய சிவன் கோபம் கொண்டு மஞ்சவான் மலைக்குச் சென்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “உறங்கும் வேளையில், அந்த மூன்று தேர்வீரர்களால் துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு, பெருந்துயரில் இருந்த யுதிஷ்டிரன், தசார்ஹ குலோத்தனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! கிருஷ்ணா, பாவம் நிறைந்தவரும், இழிந்தவரும், போரில் பெருந்திறமற்றவருமான அஸ்வத்தாமரால் வலிமைமிக்கத் தேர்வீரர்களான என் மகன்கள் அனைவரையும் எவ்வாறு கொல்ல முடிந்தது?(2) அதே போலவே, ஆயுதங்களில் சாதித்தவர்களும், பேராற்றல் கொண்டவர்களும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எதிரிகளுடன் போரிட வல்லவர்களுமான துருபதன் பிள்ளைகள் அனைவரையும் அந்தத் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமரால்} எவ்வாறு கொல்ல முடிந்தது?(3) எவனுடைய முன்பு, பெரும் வில்லாளியான துரோணராலேயே தோன்ற முடியாதோ அந்த முதன்மையான தேர்வீரனான திருஷ்டத்யும்னனை அவரால் எவ்வாறு கொல்ல முடிந்தது?(4) ஓ! மனிதர்களில் காளையே, போரில் நம் மக்கள் அனைவரையும் தனியொருவராகக் கொல்லவதற்கு அந்த ஆசான் மகனால் {அஸ்வத்தாமரால்} என்ன காரியம் செய்யப்பட்டது?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(5)

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “உண்மையில், அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, தேவர்கள் அனைவரிலும் உயர்ந்தவனும், நித்தியமானவனுமான மஹாதேவனின் உதவியை நாடினார். இதன் காரணமாகவே, இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான போர்வீரர்களைத் தனியொருவராக அவரால் கொல்ல முடிந்தது.(6) மஹாதேவன் நிறைவுகொண்டால், அவனால் அழிவின்மையையும் {மரணமில்லா பெருவாழ்வை} அளிக்க முடியும். கிரிசனால் {சிவனால்} இந்திரனையே தடுக்குமளவுக்குப் பெரும் வீரத்தை அளிக்க முடியும்.(7) ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நான் உண்மையில் மஹாதேவனை {உள்ளபடியே} அறிவேன். பழங்காலத்தில் அவன் செய்த பல்வேறு செயல்களையும் நான் அறிவேன்.(8) ஓ! பாரதரே, அவனே உயிரினங்கள் அனைத்தின் தொடக்கமும், நடுவும், முடிவும் ஆவான். இந்த மொத்த அண்டமே அவனது சக்தியின் மூலமே இயங்கி அசைகிறது.(9)

பலமிக்கப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, உயிரினங்களைப் படைக்க விரும்பி ருத்திரனைக் கண்டான்; அந்தப் பெரும்பாட்டன் அவனிடம், “தாமதமில்லாமல் உயிரினங்களைப் படைப்பாயாக” என்றான்.(10) இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட செஞ்சடை ருத்திரன் {சிவன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, நீரில் மூழ்கி, உயிரினங்களின் குறைகளை உணரும் வரை நீண்ட காலத்திற்குத் தவம் பயின்றான்.(11) ருத்திரனை எதிர்பார்த்து மிக நீண்ட காலம் காத்திருந்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, தன் விருப்பத்தின்படியான ஆணையொன்றால் அனைத்து வகை உயிரினங்களின் படைப்பாளனாக வேறொருவனை இருப்புக்கு அழைத்தான்.(12) நீருக்குள் மூழ்கியிருக்கும் கிரிசனை {சிவனைக்} கண்ட அவன் {இரண்டாமவன்}, தன் தந்தையிடம், “எனக்கு முன்பு எந்த உயிரினமும் பிறக்கவில்லையென்றால் நான் உயிரினங்களைப் படைப்பேன்” என்றான்.(13) அதற்கு அவனது தந்தை, அவனிடம், “உன்னைத் தவிர்த்து முதலில் பிறந்த வேறொருவனும் இல்லை. இந்த ஸ்தாணு, நீரில் மூழ்கியிருக்கிறான். எந்தக் கவலையுமின்றிச் சென்று உயிரினங்களைப் படைப்பாயாக” என்றான்.(14) அவன் {இரண்டாமவன்}, இந்த நால்வகை உயிரினங்கள் அனைத்தையும் படைத்த தக்ஷனை முதலாகக் கொண்ட உயிரினங்கள் பலவற்றைப் படைத்தான்.(15)

எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் படைக்கப்பட்ட உடனேயே பசியால் பீடிக்கப்பட்டு, தங்கள் தந்தையையே உண்ண விரும்பி அவனை நோக்கி ஓடினர்.(16) அதன் பேரில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட அந்த இரண்டாமவன், தன் வாரிசுகளிடம் இருந்து பாதுகாக்கப்பட விரும்பி, அவனை {பிரம்மனை} நோக்கி ஓடினான். அவன் அந்தப் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, இவர்களிடம் இருந்து என்னைப் பாதுகாப்பீராக, இந்த உயிரினங்களுக்கு நிர்ணயிக்கப்படும் உணவை அவர்கள் உண்ணட்டும்” என்றான்.(17) அப்போது பெரும்பாட்டன், செடிகொடிகளையும், காய்கறிகளையும் அவர்களது உணவாக நிர்ணயித்து, பலமிக்கவர்களுக்கு {பலமிக்க உயிரினங்களின்} வாழ்வாதாரமாக {உணவாக} பலவீனர்களை {பலமற்ற உயிரினங்களை} நிர்ணயித்தான்.(18) புதிதாகப் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் இவ்வாறு தங்களுக்கு ஊட்டப்பண்பு {வாழ்வாதாரம்} நிர்ணயிக்கப்பட்டதும், தங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று, மகிழ்ச்சியுடன் தங்கள் தங்கள் வகைக்கான இனங்களுடன் கூடி {புணர்ந்து} பெருகினர்.(19) அந்த உயிரினங்கள் பெருகி, பெரும்பாட்டனும் நிறைவடைந்ததும், முதலில் பிறந்தவன் நீரில் இருந்து எழுந்து, உயிரோட்டத்துடன் கூடிய படைப்பைக் கண்டான்.(20)

அவன் {ருத்திரன்}, பல்வேறு வகை உயிரினங்கள் படைக்கப்பட்டுவிட்டதையும், அவை தங்கள் சக்தியாலேயே பல்கி பெருகிவிட்டதையும் கண்டான். இக்காட்சியால் கோபமடைந்த ருத்திரன், தன் பிறப்புறுப்பை {லிங்கத்தைப்} பூமியின் குடல்களுக்குள் மறையும்படி செய்தான். மங்காதவனான பிரம்மன் அவனிடம் மென்மையான வார்த்தைகளில்,(21,22) “ஓ! சர்வா, இவ்வளவு காலம் நீருக்குள் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? என்ன காரணத்தினால் உனது பிறப்புறுப்பை {லிங்கத்தை} பூமியின் குடல்களுக்குள் காணாமல் போகச் செய்தாய்?” என்று கேட்டான்.(23) இவ்வாறு கேட்கப்பட்ட அந்த அண்டத்தின் தலைவன் {சிவன்}, கோபத்துடன் தலைவன் பிரம்மனிடம், “இந்த உயிரினங்கள் அனைத்தையும் வேறு எவனோ படைத்திருக்கிறான். பிறகு இந்த என் அங்கமானது என்ன நோக்கத்தை நிறைவேற்றப் போகிறது?[1](24) ஓ! பெரும்பாட்டனே, கடுந்தவத்தின் மூலம் நான் இந்த உயிரினங்கள் அனைத்திற்கான உணவைப் படைத்திருக்கிறேன். இந்தச் செடிகொடிகளும், அவற்றை உண்டு உயிர்வாழ்வோரைப் போலவே பல்கிப் பெருகும்” என்றான்.(25)இந்த வார்த்தைகளைச் சொன்ன பவன், உற்சாகமற்றவனாகவும் கோபத்துடனும் மிகக் கடும் தங்களைப் பயில்வதற்காக {இமயமலைச் சாரலில் உள்ள} முஞ்சவான் மலைகளின் அடிவாரத்திற்குச் சென்றான்” {என்றான் கிருஷ்ணன்}.(26)

ருத்திர உதவி! – சௌப்திக பர்வம் பகுதி – 18-கிருதயுக முடிவில் தேவர்கள் செய்த பெரும் வேள்வி; வேள்வியை அழித்த ருத்திரன்; ருத்திரனின் உதவியின் மூலம் வெற்றியை அடைந்த அஸ்வத்தாமன்…

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “கிருத யுகம் {தேவயுகம்} கடந்ததும், ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய தேவர்கள், அதற்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி முறையான ஆயத்தங்களைச் செய்தனர்.(1) தெளிந்த நெய்யையும், தேவைப்படும் வேறு பொருட்களையும் சேகரித்தனர். அவர்கள், தங்கள் வேள்விக்குத் தேவையான பொருட்கள் என்ன என்பதை மட்டும் திட்டமிடாமல், வேள்விக்கொடைகளில் தங்களுக்குச் சேர வேண்டிய பங்குகளைக் குறித்தும் தீர்மானித்துக் கொண்டனர்.(2) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மையில் ருத்திரனை அறியாத தேவர்கள், அந்தத் தெய்வீக ஸ்தாணுவுக்கு எந்தப் பங்கையும் ஒதுக்கவில்லை.(3) மான்தோல் உடுத்துபவனான ஸ்தாணு, வேள்விக் கொடைகளில் தனக்கு எந்தப் பங்கையும் தேவர்கள் ஒதுக்காததைக் கண்டு, அந்த வேள்வியை அழிக்க விரும்பி, அந்நோக்கத்திற்காக ஒரு வில்லைக் கட்டமைத்தான்.(4) வேள்விகள், லோக வேள்வி, தனிச்சிறப்புகளடங்கிய சடங்குகளுடன் கூடிய வேள்வி {கிரியா வேள்வி}, அழிவில்லாத இல்லற வேள்வி {கிருஹ வேள்வி}, ஐந்து மூலகப் பொருட்கள் மற்றும் அவற்றின் சேர்மங்களில் இன்புற்று மனிதன் நிறைவை அடக்கிய வேள்வி {பஞ்சபந்ரு வேள்வி} என நான்கு வகை வேள்விகள் இருக்கின்றன. இந்த நால்வகை வேள்விகளின் மூலமே இந்த அண்டம் உதித்தது[1].(5)முதல் மற்றும் நான்காம் வகை வேள்விகளின் பொருட்களைக் கொண்டு கபர்தின் {அடர்ச்சடையன் சிவன்} அந்த வில்லைக் கட்டமைத்தான். அந்த வில்லானது ஐந்து முழம்[2] நீளம் இருந்தது.(6) ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, புனித (மந்திரமான) வஷட்காரமே அதன் நாண்கயிறானது. வேள்வியின் நான்கு அங்கங்கள் அந்த வில்லின் அலங்காரங்களாகின.(7) பிறகு சினத்தால் நிறைந்த மஹாதேவன் அந்த வில்லை எடுத்துக் கொண்டு, தேவர்கள் வேள்வி செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றான். பிரம்மச்சாரியைப் போல உடுத்தியவனும், வில்லைத் தரித்திருந்தவனும் மங்காதவனுமான ருத்திரன் அங்கே வந்ததைக் கண்ட பூமாதேவி, அச்சத்தால் சுருங்கி, தன் மலைகளுடன் நடுங்கத் தொடங்கினாள்.(9) காற்று அசைவதை நிறுத்தியது, நெருப்பு மூட்டப்பட்டால் சுடர்விட்டெரியவில்லை. ஆகாயத்தின் நட்சத்திரங்கள் கவலையால் ஒழுங்கற்ற வழிகளில் திரியத் தொடங்கின.(10) சூரியனின் ஒளி குறைந்தது. சந்திரவட்டில் தன் அழகை இழந்தது. மொத்த ஆகாயமும் அடர்த்தியான இருளில் மூழ்கியது.(11)துயரில் மூழ்கிய தேவர்கள் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தனர். அவர்களது வேள்வி சுடர்விட்டெரிவது நின்றது. தேவர்கள் அனைவரும் பீதியடைந்தனர்.(12) அப்போது ருத்திரன், அந்த வேள்வியுடைய உடல்வடிவத்தின் இதயத்தைக் கடுங்கணையொன்றால் துளைத்தான். உடல் வடிவம் கொண்ட வேள்வியானது, மானின் வடிவத்தையேற்று, நெருப்பு தேவனுடன் {அக்னியுடன்} தப்பி ஓடியது.(13) அவ்வடிவில் சொர்க்கத்தை அடைந்த அவன் {வேள்வியானவன்} அழகால் சுடர்விட்டெரிந்தான். எனினும், ஓ! யுதிஷ்டிரரே, ருத்திரன் அவனை ஆகாயத்தில் பின்தொடர்ந்து சென்றான்.(14) வேள்வியானவன் தப்பி ஓடியபிறகு, தேவங்கள் தங்கள் ஒளியை இழந்தனர். தங்கள் உணர்வுகளை இழந்தவர்களான தேவர்கள் திகைப்படைந்திருந்தனர்.(15)

அப்போது முக்கண்ணனான மஹாதேவன், தன் வில்லைக் கொண்டு, சாவித்ரியின் கரங்களைச் சினத்தால் முறித்து, பகனின் கண்களையும், பூஷ்ணனின் {பூஷாவின்} பற்களையும் பிடுங்கினான்.(16) பிறகு தேவர்களும், அந்த வேள்வியின் பல்வேறு அங்கங்கள் அனைத்தும் தப்பி ஓடின. அவர்களில் சிலர் தப்பி ஓட முயலும்போது சுழன்று உணர்வுகளையற்றுக் கீழே விழுந்தனர்.(17) நீல மிடறு கொண்ட ருத்திரன் இவ்வாறு அவர்களைக் கலங்கடித்து, தன் வில்லின் நுனியைச் சுழற்றி அவர்களை முடக்கி உரக்கச் சிரித்தான்.(18) தேவர்கள் அப்போது பெருங்கூச்சலிட்டனர். அவர்களின் ஆணையின் பேரில் அந்த வில்லின் நாண்கயிறு அறுந்தது. நாண்கயிறு அறுந்ததும், அந்த வில்லானது ஒரு கோடாக நெடுக விரிந்தது.(19) பிறகு தேவர்கள், வில்லற்றவனாக இருந்த அந்தத் தேவர்களின் தேவனை {சிவனை}, {மான்வடிவில்} உடல் கொண்ட வேள்வியானவனுடன் அணுகி, அந்தப் பலமிக்க மஹாதேவனின் பாதுகாப்பை நாடி, அவனை நிறைவுகொள்ளச் செய்ய முயன்றனர்.(20)

நிறைவையடைந்த அந்தப் பெருந்தேவன் தன் கோபத்தை நீருக்குள் எறிந்தான். ஓ! மன்னா, அந்தக் கோபமானது நெருப்பின் வடிவத்தை ஏற்று, அந்த நீர்த்தனிமத்தை எரிப்பதிலேயே எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.(21) பிறகு அவன் சாவித்ரிக்கு {சூரியனுக்கு} அவனது கரங்களையும், பகனுக்கு அவனது கண்களையும், பூஷ்ணனுக்கு {பூஷாவுக்கு} அவனது பற்களையும் மீண்டும் கொடுத்தான். ஓ! பாண்டவரே {யுதிஷ்டிரரே}, பிறகு அவன் வேள்விகளையும் மீண்டும் நிறுவினான்.(22) உலகமானது மீண்டும் பாதுகாப்பானதாகவும், நலமானதாகவும் மாறியது. தேவர்கள், அந்தப் பெருந்தெய்வத்தின் {சிவனின்} பங்காகத் தெளிந்த நெய்க்காணிக்கைகள் அனைத்தையும் ஒதுக்கினர்.(23) ஓ! ஏகாதிபதி, மஹாதேவன் கோபமடைந்த போது, மொத்த உலகமும் இவ்வாறே கலங்கியது; அவன் நிறைவடைந்தபோதோ அனைத்தும் பாதுகாப்பானவை ஆகின. பெருஞ்சக்தி கொண்ட அந்த மஹாதேவனே அஸ்வத்தாமரால் நிறைவுகொள்ளச் செய்யப்பட்டான்.(24) இதன் காரணமாகவே வலிமைமிக்க வில்லாளிகளான அந்த உமது மகன்களை அந்தப் போர்வீரரால் கொல்ல முடிந்தது. இதன் காரணமாகவே, பாஞ்சாலர்களையும், அவர்களது தொண்டர்கள் அனைவரையும் அவரால் கொல்லமுடிந்தது.(25) உமது மனத்தில் இவற்றை நினைக்காதீர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அக்காரியத்தைச் செயவில்லை. அது மஹாதேவனின் அருளாலேயே செய்யப்பட்டது. இப்போது அடுத்ததாகச் செய்ய வேண்டியதைச் செய்வீராக” என்றான் {கிருஷ்ணன்}” {என்றார் வைசம்பாயனர்}.(26)

ஐஷீக உபபர்வம் முற்றும்

சௌப்திக பர்வம் முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்