யுதிஷ்டிரனின் அரசாட்சி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 01-யுதிஷ்டிரன் அரசாட்சி; காந்தாரியிடம் குந்தி கொண்ட மதிப்பு; பீமனைத் தவிர ஏனையோர் யுதிஷ்டிரனின் கட்டளையை ஏற்றுத் திருதராஷ்டிரனை மதித்தது…
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “என் பாட்டன்மார்களான பாண்டவர்கள், தங்கள் நாட்டை அடைந்த பிறகு, உயர் ஆன்ம மன்னனான திருதராஷ்டிரனிடம் எவ்வாறு நடந்து கொண்டனர்?(1) உண்மையில், மகன்களும், அமைச்சர்களும் கொல்லப்பட்டவனும், புகலிடமேதும் அற்றவனும், செல்வாக்கை இழந்தவனுமான அந்த மன்னன் எவ்வாறு நடந்து கொண்டான்? பெரும்புகழைக் கொண்டவளான காந்தாரி எவ்வாறு நடந்து கொண்டாள்?(2) உயர் ஆன்மாக்களான என் பாட்டன்மார்கள் எத்தனை வருடங்கள் நாட்டை ஆண்டனர்? இவையனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.(3)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தங்கள் பகைவர்கள் அனைவரையும் கொன்று, தங்கள் நாட்டைத் திரும்பப் பெற்ற அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள், திருதராஷ்டிரனைத் தலைமையாகக் கொண்டு பூமியை ஆண்டனர்.(4) விதுரன், சஞ்சயன், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், திருதராஷ்டிரனின் வைசிய மனைவிக்குப் பிறந்த மகனுமான யுயுத்சு ஆகியோர் திருதராஷ்டிரனுக்குப் பணிவிடை செய்தனர்.(5) அனைத்துக் காரியங்களிலும், பாண்டவர்கள் அந்த மன்னனின் {திருதராஷ்டிரனின்} கருத்தைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். உண்மையில், பதினைந்து வருட காலம் அவர்கள் அந்த முதிர்ந்த மன்னனின் ஆலோசனையின் பேரிலேயே அனைத்துக் காரியங்களையும் செய்தனர்.(6) அந்த வீரர்கள், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் விருப்பங்களுக்கு ஏற்புடைய வகையில், அந்த ஏகாதிபதியிடம் {திருதராஷ்டிரனிடம்} அடிக்கடி சென்று, அவனது பாதங்களை வழிப்பட்டு, அவன் அருகில் அமர்ந்தனர்.(7) தங்கள் தலைகளை அன்புடன் முகர்ந்து பார்க்கும் திருதராஷ்டிரனின் ஆணையின் பேரிலேயே அவர்கள் அனைத்தையும் செய்தனர்.
குந்திபோஜனின் மகளும் {குந்தியும்} அனைத்துக் காரியங்களிலும் காந்தாரிக்குக் கீழ்படிந்தாள்.(8) திரௌபதி, சுபத்திரை மற்றும் பாண்டவப் பெண்கள் பிறரும், அந்த முதிர்ந்த மன்னனும், ராணியும் தங்கள் மாமனாரும், மாமியாருமாக இருப்பதைப் போல அவர்களிடம் நடந்து கொண்டனர்.(9) அரச பயன்பாட்டுக்குத் தகுந்த மேன்மையான வகையைச் சேர்ந்தவையும், விலைமதிப்புமிக்கவையும், படுக்கைகள், ஆடைகள், ஆபரணங்கள், உணவு, பானங்கள் மற்றும் அனுபவிக்கத்தகுந்த பிற பொருட்கள்(10) மன்னன் யுதிஷ்டிரனால் திருதராஷ்டிரனுக்குக் கொடுக்கப்பட்டன. அதே போலக் குந்தியும் மூத்தோரிடம் நடந்து கொள்வதைப் போலக் காந்தாரியிடம் நடந்து கொண்டாள்.(11) ஓ! குரு குலத்தோனே, மகன்கள் கொல்லப்பட்டவனான அந்த முதிர்ந்த மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} விதுரன், சஞ்சயன், யுயுத்சு ஆகியோர் பணிவிடை செய்தனர்.(12) மிக மேன்மையான பிராமணரான துரோணரின் அன்புக்குரிய மைத்துனரும், வலிமைமிக்க வில்லாளியுமான கிருபரும் மன்னனைக் கவனித்துக் கொண்டார்.(13) புனித வியாசரும் அந்த முதிர்ந்த மன்னனை {திருதராஷ்டிரனை} அடிக்கடிச் சந்தித்து, பழங்கால முனிவர்கள், தெய்வீகத் தவசிகள், பித்ருக்கள் மற்றும் ராட்சசர்களின் வரலாறுகளை அவனுக்குச் சொல்லி வந்தார்.(14)
திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில் விதுரன், அறத்தகுதிகளுக்குரிய செயல்கள் அனைத்தையும், நீதி நிர்வாகம் தொடர்புடைய அனைத்தையும் கண்காணித்துவந்தான்.(15) விதுரனுடைய சிறந்த கொள்கையின் மூலமாக {நல்ல நீதியினால்}, நிலப்பிரப்புகள் மற்றும் தொண்டர்களிடம் {ஸாமந்தர்களிடம் / பக்கத்து நாட்டரசர்களிடம்} இருந்து ஏற்புடைய எண்ணற்ற தொண்டுகளைச் சொற்ப செல்வத்தைச் செலவாகக் கொண்டே பாண்டவர்கள் பெற்றனர்.(16) மன்னன் திருதராஷ்டிரன், கைதிகளை விடுவித்து, மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை மன்னித்தான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இதில் ஒருபோதும் எதனையும் சொல்லாமல் இருந்தான்.(17) அம்பிகையின் மகன் {திருதராஷ்டிர்ன} இன்பச் சுற்றுலாக்களுக்குச் சென்ற சந்தர்ப்பங்களில், பெரும் சக்தி கொண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன் அனுபவிக்கத் தகுந்த இன்பொருட்கள் அனைத்தையும் அவனுக்குக் கொடுத்தனுப்பினான்.(18) ஆராலிகர்கள், பழச்சாறு செய்பவர்கள் {ஸூபகாரர்கள்}, ராககாண்டவர்கள் {ராகஷாடவிகர்கள்} ஆகியோர் முன்பு போலவே மன்னன் திருதராஷ்டிரனுக்குப் பணிவிடைகளைச் செய்தனர்[1].(19)பாண்டுவின் மகன்கள், விலைமதிப்புமிக்க ஆடைகளையும், பல்வேறு வகை மாலைகளையும் திரட்டி அவற்றை முறையாகத் திருதராஷ்டிரனுக்கு அளித்தனர்.(20) அந்த முதிர்ந்த மன்னன் செழிப்புடன் இருந்த காலத்தைப் போலவே, மைரேய மது வகைகளையும்[2], பல்வேறு வகை மீன்களையும், நறும்பானங்கள் மற்றும் தேனையும், (பல்வேறு பொருட்களைக்) கலந்து பல்வேறு இனிய வகை உணவுகளையும் செய்து அவனுக்குக் கொடுக்கச் செய்தனர்.(21) அங்கே அடுத்தடுத்து வந்த பூமியின் மன்னர்களும், முன்பு போலவே முதிர்ந்த குரு ஏகாதிபதிக்குக் காத்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.(22)குந்தி, திரௌபதி, பெரும்புகழைக் கொண்ட சாத்வதக் குலத்தவள் {சுபத்திரை}, பாம்புத் தலைவனின் மகளான உலூபி, ராணி சித்ராங்கதை,(23) ஓ! மனிதர்களின் தலைவா, திருஷ்டகேதுவின் தங்கை, ஜராசந்தனின் மகள் ஆகியோரும், இன்னும் பல பெண்களும்,(24) அனைத்துப் பணிகளையும் செய்யும் பணிப் பெண்களைப் போலச் சுபலனின் மகளிடம் {காந்தாரியிடம்} காத்திருந்தனர் {பணிவிடை செய்து கொண்டிருந்தனர்}. தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்த திருதராஷ்டிரன் எக்காரியத்தினாலும் வருத்தமடையக் கூடாது,(25) என்பதையே யுதிஷ்டிரன் தன் தம்பிகளிடம் எப்போதும் கவனிக்கச் சொல்வான். அவர்களும் தங்கள் பங்குக்கு, மன்னன் யுதிஷ்டிரனிடம் இருந்து பெறும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆணைகளைக் கேட்டு, அந்த முதிர்ந்த மன்னனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருந்தனர்.(26) எனினும், ஒரேயொரு விதிவிலக்கு இருந்தது. {அந்த விதிவிலக்கு} அது பீமசேனனைத் தழுவியது. திருதராஷ்டிரனின் தீய புத்தியின் மூலம் நடந்த பகடையாட்டத்தைப் பின்தொடர்ந்து நடந்த அனைத்தும் அந்த வீரனின் இதயத்தில் இருந்து மறையவில்லை. (அவன் இன்னும் அந்த நிகழ்வுகளைத் தன் நினைவில் கொண்டிருந்தான்)” என்றார் {வைசம்பாயனர்}.(27)
திருதராஷ்டிரன் ப்ரீதி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 02-அபரிமிதமாகக் கொடையளித்த திருதராஷ்டிரனும், காந்தாரியும்; தன் பிள்ளைகளிடம் போலவே பாண்டவர்களிடம் நடந்து கொண்ட காந்தாரி; துரியோதனின் தீய நடத்தையை முற்றிலும் மறந்த யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரனை மேம்போக்காக வணங்கிய பீமன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டவர்களால் இவ்வாறு வழிபடப்பட்ட அம்பிகையின் மகன் {திருதராஷ்டிரன்} முனிவர்களால் மதிக்கப்பட்டு முன்பு போலவே மகிழ்ச்சியாகத் தன் காலத்தைக் கழித்தான்.(1) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனான அவன் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முதன்மையான காணிக்கைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான். குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்} அப்பொருட்களை எப்போதும் திருதராஷ்டிரனின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.(2) வன்மமற்றவனான மன்னன் யுதிஷ்டிரன் எப்போதும் தன் பெரிய தந்தையிடம் அன்புடன் நடந்து கொண்டான். தன் தம்பிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசிய அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, “மன்னர் திருதராஷ்டிரர் என்னாலும், உங்கள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர். உண்மையில், எவன் திருதராஷ்டிரரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவானோ அவன் என் நலன் விரும்பியாவான்.(4) மறுபுறம், எவன் அவரிடம் வேறுவகையில் நடந்து கொள்கிறானோ அவன் என் பகைவனாவான். அத்தகைய மனிதன் நிச்சயம் என்னால் தண்டிக்கப்படுவான்” என்றான். பித்ருக்களுக்கென விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்யும் நாட்களிலும், தன் மகன்கள் மற்றும் தன் நலன்விரும்பிகள் அனைவருக்குமான சிராத்தங்களைச் செய்யும் போதிலும், உயர் ஆன்ம குரு மன்னனான திருதராஷ்டிரன், பிராமணர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தகுந்த வகையிலும், தான் விரும்பியவாறும் பெருமளவு செல்வத்தைக் கொடையாக அளித்தான்.(5,6)
நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகியோர் அந்த முதிர்ந்த மன்னனுக்கு ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தில் அவனுடைய ஆணைகள் அனைத்தையும் நிறைவேற்றினர்.(7) மகன்கள் மற்றும் பேரன்கள் கொல்லப்பட்டதால் பீடிக்கப்பட்டிருந்த அந்த முதிய மன்னன், பாண்டவர்களாகிய தங்களால் ஏற்பட்ட அந்தத் துயரத்தால் இறந்துவிடாத வகையில் அவர்கள் எப்போதும் அவனைக் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்.(8) உண்மையில், அந்தக் குரு வீரன், தன் மகன்கள் வாழ்ந்த போது அனுபவித்த அனைத்துப் பொருட்களையும், அந்த மகிழ்ச்சியையும் அவன் இழந்துவிடாத வகையில் பாண்டவர்கள் அவனைப் பார்த்துக் கொண்டனர்.(9) பாண்டுவின் மகன்களான அந்த ஐந்து சகோதரர்களும், திருதராஷ்டிரனின் ஆணையின் கீழ் வாழ்ந்து இவ்வாறே அவனிடம் நடந்து கொண்டனர்.(10) அவர்கள் பணிவாக இருப்பதையும், தன் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதையும், ஆசானிடம் சீடர்கள் நடந்து கொள்வதைப் போலத் தன்னிடம் நடந்து கொள்வதையும் கண்ட திருதராஷ்டிரன், ஓர் ஆசான் அன்புடன் நடந்து கொள்ளும் நடத்தையைப் பதிலுக்கு அவர்களிடம் கடைப்பிடித்தான்.(11) காந்தாரி, கொல்லப்பட்ட தன் பிள்ளைகளுக்குப் பல்வேறு சிராத்தச் சடங்குகளைச் செய்வதன் மூலமும், பிராமணர்களுக்குப் பல்வேறு இன்பொருட்களைக் கொடையளிப்பதன் மூலமும் அவர்களுக்குப் பட்ட கடனில் இருந்து விடுபட்டாள்.(12) இவ்வாறே அறவோரில் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் தன் தம்பிகளுடன் சேர்ந்து மன்னன் திருதராஷ்டிரனை வழிபட்டான்”.(13)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெருஞ்சக்தி கொண்டவனும், குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனும், முதிர்ந்த மன்னனுமான திருதராஷ்டிரனால், யுதிஷ்டிரனிடம் எந்தத் தீய எண்ணத்தையும் காண முடியவில்லை.(14) ஞானிகளாகவும், அறவொழுக்கம் ஒழுகுபவர்களாகவும் உயர் ஆன்மப் பாண்டவர்கள் இருப்பதைக் கண்டவனும், அம்பிகையின் மகனுமான மன்னன் திருதராஷ்டிரன் அவர்களிடம் நிறைவடைந்தான்.(15) சுபலனின் மகளான காந்தாரி, (கொல்லப்பட்ட) தன் பிள்ளைகளைக் குறித்த கவலையனைத்தையும் கைவிட்டு, பாண்டவர்களையே தன் பிள்ளைகளாகக் கருதி அவர்கள் மீது பேரன்பைக் காட்டத் தொடங்கினாள்.(16) பெருஞ்சக்தி கொண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன், விசித்ரவீரியனின் அரச மகனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஏற்பில்லாத எதையும் ஒருபோதும் செய்தானில்லை. மறுபுறம், அவன் எப்போதும் அவனுக்கு மிக ஏற்புடைய வழியிலேயே நடந்து கொண்டான்.(17) மன்னன் திருதராஷ்டிரனாலோ, ஆதரவற்றவளான காந்தாரியினாலோ சொல்லப்படும் கடினமான அல்லது கடினமற்ற செயல்கள் எதுவாக இருந்தாலும்(18) அவை அனைத்தையும், பகைவீரர்களைக் கொல்பவனான பாண்டவ மன்னன் பெரும் மதிப்புடன் நிறைவேற்றினான்.(19)
யுதிஷ்டிரனின் இத்தகைய ஒழுக்கத்தால் அந்த முதிர்ந்த மன்னன் உயர்வான நிறைவை அடைந்தான். உண்மையில், அவன் தன் தீய மகனை {துரியோதனனை} நினைத்து வருந்தினான்.(20) ஒவ்வொரு விடியலிலும் எழுந்து தன்னைத் தூய்மை செய்து கொண்டு, ஜபங்களைச் செய்து, பாண்டவர்கள் போரில் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி ஆசி கூறினான்.(21) பிராமணர்களுக்குரிய வழக்கமான கொடைகளைக் கொடுத்துவிட்டு, அவர்களை ஆசி கூறச் செய்யும் அந்த முதிய மன்னன், பாண்டவர்களின் நீண்ட வாழ்நாளை வேண்டி புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினான்.(22) உண்மையில் அந்த மன்னன், பாண்டவர்களிடம் எப்போதும் தனக்குக் கிட்டும் மகிழ்ச்சியைத் தன் மகன்களிடம் இருந்து ஒருபோதும் பெற்றதில்லை.(23) அந்தக் காலத்தில் மன்னன் யுதிஷ்டிரன், தன் நாட்டினில் வாழ்ந்த பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களும், பல்வேறு கூட்டங்களாக இருந்த வைசிய மற்றும் சூத்திரர்களுக்கும் மிக ஏற்புடையவனாக இருந்தான்.(24) திருதராஷ்டிரன் மகன்களால் அவனுக்கு செய்யப்பட்ட குற்றங்கள் அனைத்தையும் மன்னன் யுதிஷ்டிரன் மறந்து தன் பெரிய தந்தையை வணங்கினான்.(25)
எந்த மனிதனாவது அம்பிகையின் மகனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஏற்பில்லாத எதையும் செய்தால் குந்தியின் புத்திசாலி மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அவன் வெறுப்புக்கான பொருளாக ஆனான்.(26) உண்மையில் யுதிஷ்டிரனிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் துரியோதனன் அல்லது திருதராஷ்டிரனின் தீச்செயல்களை எவராலும் பேச முடியவில்லை.(27) குற்றங்களைப் பொறுத்து, மன்னன் அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} காட்டிய பெருந்தன்மையில் காந்தாரி மற்றும் விதுரன் ஆகிய இருவரும் பெரும் நிறைவுடன் இருந்தனர். எனினும், ஓ! பகைவரைக் கொல்பவனே, அவர்கள் பீமனிடம் அவ்வளவு மகிழ்ச்சியடையவில்லை.(28) தர்மனின் மகனான யுதிஷ்டிரன் உண்மையில் தன் பெரிய தந்தைக்குக் கீழ்ப்படிந்தவனாக இருந்தான். எனினும், பீமனோ திருதராஷ்டிரனைப் பார்த்தவுடனேயே உற்சாகத்தை இழந்தான்.(29) பகைவரைக் கொல்பவனான தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} அந்த முதிய மன்னனை {திருதராஷ்டிரனை} வணங்குவதைக் கண்டு, விருப்பமில்லாத இதயத்துடன் அவன் {பீமன்} மேம்போக்காகவே அவனை {திருதராஷ்டிரனை} வணங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(30)
திருதராஷ்டிரன் தீர்மானம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 03-பீமனின் நிந்தனை; காந்தாரியுடன் காட்டுக்குச் செல்லத் துணிந்த திருதராஷ்டிரன்; நண்பர்களையும், யுதிஷ்டிரனையும் அழைத்துத் தன் தீர்மானத்தைத் தெரிவித்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குரு நாட்டில் வாழ்ந்த மக்கள், மன்னன் யுதிஷ்டிரனுக்கும் மற்றும் துரியோதனனின் தந்தை {திருதராஷ்டிரன்} ஆகியோருக்கிடையில் இருந்த நல்லுறவில் எந்த மாறுபாட்டையும் கவனிக்கத் தவறினர்.(1) குரு மன்னன் (திருதராஷ்டிரன்) தன் தீய மகனை நினைவுகூர்ந்த போதெல்லாம் தன் இதயத்தில் அவனால் பீமனிடம் நட்புணர்வற்ற நிலையை உணராமல் இருக்க முடியவில்லை.(2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தீயதாகத் தோன்றிய இதயத்தால் தூண்டப்பட்டவனான பீமசேனனாலும் மன்னன் திருதராஷ்டிரனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(3) விருகோதரன் {பீமன்} கமுக்கமாக அந்த முதிர்ந்த மன்னனுக்குப் {திருதராஷ்டிரனுக்குப்} பிடிக்காத செயல்கள் பலவற்றைச் செய்தான். வஞ்சகமான பணியாட்களைக் கொண்டு அவன் தன் பெரிய தந்தையின் கட்டளைகளை மீறச் செய்தான்.(4) பீமன், ஒரு நாள், தன் நண்பர்களுக்கு மத்தியில் கக்கங்களின் அறைந்துகொண்டு, திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரி கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அந்த முதிர்ந்த மன்னனின் தீய ஆலோசனைகளையும், அவனுடைய செயல்கள் சிலவற்றையும் நினைவுகூர்ந்தான்.
கோபம் நிறைந்தவனான விருகோதரன் {பீமன்}, தன் பகைவர்களான துரியோதனன், கர்ணன் மற்றும் துச்சாசனனை நினைவுகூர்ந்து,(5,6) தன்னாவலுக்கு வழி கொடுத்து, இந்தக் கடுஞ்சொற்களைச் சொன்னாள்: {பீமன்}, “பல்வேறு வகை ஆயுதங்களுடன் போரிடவல்லவர்களான அந்தக் குருட்டு மன்னின் மகன்கள் அனைவரையும், இரும்பு தண்டங்களுக்கு ஒப்பான என்னுடைய இந்த இரு கைகளாலேயே மறு உலகத்திற்கு அனுப்பி வைத்தேன்.(7) உண்மையில், இரும்பு கதாயுதங்களைப் போலத் தெரிபவையும், பகைவர்களால் வெல்லப்பட முடியாதவையுமான என்னுடைய இந்த இரு கைகளின் அணைப்புக்குள்ளேயே திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரும் அழிவை அடைந்தனர். யானையின் துதிக்கைக்கு ஒப்பானவையும், உருண்டு நன்கு திரண்டவையுமான என் இரு கைகள் இவையே. இவற்றின் அணைப்புக்குள்ளேயே திருதராஷ்டிரரிடன் மூட மகன்கள் அனைவரும் அழிவைச் சந்தித்தனர்.(9) சந்தனக் குழம்பு பூசப்பட்டவையும், அந்த அலங்காரத்திற்குத் தகுந்தவையுமான என்னுடைய இந்த இரு கைகளாலேயே துரியோதனனும், அவனுடைய மகன்களும், உற்றார் உறவினரும் மறுஉலகத்திற்கு அனுப்பப்பட்டனர்” {என்றான்}.(10)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, விருகோதரன் சொன்ன இவற்றையும், உண்மையில் ஈட்டிகளுக்கு ஒப்பான இன்னும் வேறு சொற்களையும் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் உற்சாகத்தை இழந்து, கவலையடைந்தான்.(11) எனினும், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவளும், காலம் தன் போக்கில் கொண்டு வருபவற்றை அறிந்தவளுமா ராணி காந்தாரி அவற்றைப் பொய்யெனக் கருதினாள்[1].(12) ஓ! ஏகாதிபதி, பதினைந்து வருடங்கள் கடந்திருந்தபோது, பீமனின் சொல்லீட்டிகளால் (தொடர்ந்து) பீடிக்கப்பட்ட மன்னன் திருதராஷ்டிரன், மனந்தளர்ச்சியினாலும், துன்பத்தாலும் துளைக்கப்பட்டான்.(13) எனினும், குந்தியின் மகனான யுதிஷ்டிரனோ, வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனோ, குந்தியோ, பெரும்புகழைக் கொண்ட திரௌபதியோ, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களும், திருதராஷ்டிரனின் விருப்பங்களைக் கேட்ட பிறகே எப்போதும் செயல்படுபவர்களுமான மாத்ரியின் இரு மகன்களோ {நகுல சகாதேவர்களோ} இதை அறிந்தார்களில்லை.(14) மன்னன் சொல்வதைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரட்டையர்கள் ஒருபோதும் அந்த முதிர்ந்த மன்னனுக்கு ஏற்பில்லாத எதையும் சொல்வார்களில்லை. அப்போது திருதராஷ்டிரன் ஒருநாள் நம்பிக்கையுடன் தன் நண்பர்களைக் கௌரவித்தான். கண்ணீர் நிறைந்த கண்களுடன் பேசிய அவன், அவர்களிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்.(15)திருதராஷ்டிரன், “குருக்களுக்கு {கௌரவர்களுக்கு} எவ்வாறு அழிவு ஏற்பட்டது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். என் ஆலோசனைகள் அனைத்தையும் கௌரவர்கள் அங்கீகரித்திருந்தாலும், நான் செய்த குற்றத்தாலேயே அவை அனைத்தும் நடந்தன.(16) மூடனான நான், தீய மனம் கொண்டவனும், உற்றாரின் அச்சத்தைப் பெருக்குபவனுமான துரியோதனனை குருக்களின் ஆட்சியாளனாக நிறுவினேன்.(17) வாசுதேவன் {கிருஷ்ணன்}, “தீய புத்தி கொண்ட இந்த இழிந்தவனும், அவனுடைய நண்பர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும்” என்று என்னிடம் சொன்னான்[2]. பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சொற்களுக்கு நான் செவிமடுக்கவில்லை. ஞானிகள் அனைவரும் அதே நல்லாலோசனையையே எனக்குச் சொன்னார்கள். விதுரன், பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரும் அதையே சொன்னார்கள். புனிதரும், உயர் ஆன்மா கொண்டவருமான வியாசரும், சஞ்சயனும், காந்தாரியும் அதையே சொன்னார்கள். எனினும், பெற்ற பாசத்தில் மூழ்கிய நான் அந்த ஆலோசனையைப் பின்பற்றவில்லை. அப்போது அதைப் புறக்கணித்ததற்காக இப்போது நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.(18-20)தந்தைமார், பாட்டன்மாரிடம் இருந்து அடைந்த சுடர்மிக்கச் செல்வத்தை, அனைத்துத் தகுதிகளும்வாய்ந்த உயர் ஆன்ம பாண்டவர்களிடம் கொடுக்காததற்கும் நான் மனம் வருந்துகிறேன்.(21) கதனின் அண்ணன் மன்னர்களின் அழிவை முன்பே கண்டான் {உணர்ந்தறிந்தான்}; எனினும் அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அந்த அழிவே உயர்ந்த நன்மையெனக் கருதினான்[3].(22) என்னுடைய துருப்புகளின் பல அனீகங்கள் {அனீகினிகள்} அழிவையடைந்தன. ஐயோ, இந்த விளைவுகள் அனைத்தாலும் என் இதயம் ஆயிரம் ஈட்டிகளால் பிளக்கப்படுகிறது.(23) தீய புத்தி கொண்டவனான நான், பதினைந்து வருடங்கள் கழிந்த பிறகு என் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யப் போகிறேன்.(24)இப்போது, நாளின் நான்காம் காலத்திலோ, சில வேளைகளில் எட்டாம் காலத்திலோ முறையான நோன்புடன் தாகத்தை {பசியைத்} தணித்துக் கொள்வதற்காக மட்டுமே சிறிதளவு உணவை உண்கிறேன். காந்தாரி இதையறிவாள்.(25) என் பணியாட்கள் அனைவரும் நான் உண்கிறேன் என்று கருதுவார்கள். யுதிஷ்டிரனிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக மட்டுமே நான் என் செயல்களை மறைத்தேன். ஏனெனில், பாண்டுவின் மூத்தமகன் என் நோன்பை அறிய நேர்ந்தால், பெருந்துன்பத்தை அடைவான்.(26) தோலாடை உடுத்திக் கொண்டு, தரையில் சிறிதளவு குசப் புற்களைப் பரப்பி, அதில் கிடந்து அமைதியான ஜபங்களில் நான் என் காலத்தைக் கழிக்கிறேன் பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும் இதே போன்ற நோன்புகளில் தன் காலத்தைக் கழிக்கிறாள்.(27) போரில் புறமுதுகிடாதவர்களான நூறு மகன்களை இழந்த நாங்கள் இவ்வாறே நடந்து வருகிறோம். எனினும், என் பிள்ளைகளுக்காக நான் வருந்தவில்லை. க்ஷத்திரியக் கடமைகளை நோற்றே அவர்கள் அனைவரும் இறந்திருக்கின்றனர்” என்றான் {திருதராஷ்டிரன்}.(28)
இந்தச் சொற்களைச் சொன்ன அந்த முதிர்ந்த மன்னன், மீண்டும் குறிப்பாக யுதிஷ்டிரனிடம், “யதுகுல இளவரசியின் மகனே {குந்தியின் மகனே}, நீ அருளப்பட்டிருப்பாயாக. நான் சொல்வதைக் கேட்பாயாக.(29) ஓ! மகனே, இவ்வளவு வருடங்களும் உன்னால் பேணி வளர்க்கப்பட்டு நான் வாழ்ந்திருக்கிறேன். (உன் உதவியைக் கொண்டு) நான் பெரும் அளவு கொடைகளைக் கொடுத்திருகிகறேன், மீண்டும் மீண்டும் சிராத்தங்களைச் செய்திருக்கிறேன்[4].(30)ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, என்னால் முடிந்த அளவுக்குப் பெரிதான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டியிருக்கிறேன். இந்தக் காந்தாரி, மகன்களை இழந்தவளாக இருப்பினும், என்னைப் பார்த்துக் கொண்டே பெரும் கௌரவத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறாள்.(31) திரௌபதியிடம் பெருங்குற்றமிழைத்தவர்களும், உன் செழிப்பைக் களவாடியவர்களுமான அந்தக் கொடிய பாவிகள் அனைவரும் தங்கள் வகைக்கான நடைமுறைக்கு ஏற்புடைய வகையிலேயே போரில் கொல்லப்பட்டு இவ்வுலகைவிட்டுச் சென்றுவிட்டனர்.(32) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நான் அவர்களுக்காக எதையும் செய்ய வேண்டியதில்லை. போரை நோக்கிய முகங்களுடன் கொல்லப்பட்ட அவர்கள் ஆயுததாரிகளுக்கான உலகங்களை அடைந்துவிட்டனர்.(33) நான் இப்போது எனக்கும், காந்தாரிக்குமான நன்மை மற்றும் புண்ணியங்களை அடைய வேண்டும். ஓ! பெரும் மன்னா, எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்.(34) அறவோர் அனைவரிலும் முதன்மையானவன் நீ. மன்னனே உயிரினங்கள் அனைத்திற்கும் ஆசானாவான். அதற்காகவே நான் இவ்வாறு சொல்கிறேன்.(35)
ஓ! வீரா {யுதிஷ்டிரா}, ஓ! மன்னா, உன் அனுமதியுடன், கந்தலையும், மரவுரியையும் தரித்துக் கொண்டு, காந்தாரியுடன் சேர்ந்து காட்டுக்குச் செல்லப் போகிறேன்.(36) நான் காட்டில் வாழ்ந்தவாறு உனக்கு எப்போதும் ஆசிகூறிக் கொண்டு இருப்பேன். ஓ! மகனே, முதுமை நேரும் போது அரசுரிமையைத் தங்கள் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு, காட்டு வாழ்வுமுறையைப் பின்பற்றிச் செல்வது நம் குலத்தவரின் வழக்கம். ஓ! வீரா, அங்கே காற்றை மட்டுமே உண்டு, உணவனைத்தையும் கைவிட்டு, என் மனைவியுடன் சேர்ந்து நான் கடுந்தவங்களைச் செய்வேன்.(37,38) ஓ! மகனே, நீ மன்னனாக இருப்பதால் அந்தத் தவங்களில் உனக்கும் பங்குண்டு. மன்னர்களுக்குத் தங்கள் நாட்டில் நடைபெறும் மங்கல மற்றும் மங்கலமற்ற செய்லகளில் பங்குண்டு[5]” என்றான் {திருதராஷ்டிர்ன}.(39)யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, நீர் இவ்வாறு துயருறுகையின் அரசுரிமை எனக்கு உவப்பாகவே இல்லை. தீய புத்தி கொண்டவனும், ஆட்சி இன்பங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், உண்மையான காரியங்களில் கவனமற்றவனுமான எனக்கு ஐயோ.(40) ஐயோ, நீர் இவ்வளவு காலம் துன்பத்தில் பீடிக்கப்பட்டவராக, உணவைத் தவிர்த்து உண்ணா நோன்புகளினால் மெலிந்து வெறுந்தரையில் படுத்துக் கிடப்பதை நானும் என் தம்பிகளும் அறியாமல் இருந்தோம்.(41) ஐயோ, எனக்கு நம்பிக்கையை அளித்துப் பின்பு இவ்வளவு துயரத்தை அடைந்திருக்கும் ஆழ்ந்த புத்தியுடைய உம்மால் மூடனான நான் வஞ்சிக்கப்பட்டேன்.(42) ஓ! மன்னா, நீர் இவ்வளவு பீடிக்கப்பட்டிருக்கும்போது, எனக்கு நாட்டினாலோ, அனுபவிக்கத் தகுந்த பொருட்களினாலோ பயனென்ன? வேள்விகளினாலும், மகிழ்ச்சியினாலும் பயனென்ன?(43) நான் என் நாட்டைப் பிணியாகவும், என்னைப் பீடிக்கப்பட்டவனாகவும் கருதுகிறேன். நான் துயரில் மூழ்கியிருந்தாலும், நான் உம்மிடம் சொல்லும் இந்தச் சொற்களால் பயனென்ன?(44) எங்கள் தந்தை நீர், எங்கள் தாயும் நீர்; எங்கள் பெரியோரில் முதன்மையானவர் நீர். நீர் இல்லாமல் நாங்கள் எவ்வாறு வாழப் போகிறோம்?(45)
ஓ! மன்னர்களில் சிறந்தவரே, உம் மடியில் பிறந்த யுயுத்சுவோ, நீர் விரும்பும் வேறு எவரோ மன்னனாகட்டும்.(46) நான் காட்டுக்குச் செல்கிறேன். நீர் நாட்டை ஆள்வீராக. புகழ்க்கேட்டினால் ஏற்கனவே எரிந்திருக்கும் என்னை மேலும் எரிப்பது உமக்குத் தகாது.(47) நான் மன்னனல்ல. நீரே மன்னன். நான் உமது விருப்பத்தைச் சார்ந்தே இருக்கிறேன். என் ஆசானான உமக்கு நான் அனுமதியளிக்க எவ்வாறு துணிவேன்?(48) ஓ! பாவமற்றவரே, சுயோதனனால் {துரியோதனனால்} எங்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக நான் என் இதயத்தில் எவ்வித மனக்கசப்பையும் வளர்த்ததில்லை. இவ்வாறு நடக்க வேண்டுமென விதிக்கப்பட்டிருக்கிறது. நாங்களும், பிறரும் (விதியால்) திகைப்படையச் செய்யப்பட்டோம்.(49) துரியோதனனையும், பிறரையும் போலவே நாங்களும் உமது பிள்ளைகளே. குந்தியைப் போலவே காந்தாரியும் எங்கள் தாய் என்பதே என் நம்பிக்கை.(50)
ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரா}, நீர் எங்களை விட்டுக் காட்டுக்குச் சென்றால், நானும் உம்மைப் பின்தொடர்ந்து வருவேன். என் ஆன்மாவின் மீது ஆணையாகச் சொல்கிறேன்.(51) கடல்களைக் கச்சையாகக் கொண்டதும், இவ்வளவு செல்வம் நிறைந்ததுமான பூமியானது {திருதராஷ்டிரராகிய} நீரில்லாமல் எனக்கு இன்பமளிக்காது.(52) இவை யாவும் உமக்குரியவை. நான் தலைவணங்கி உம்மை நிறைவடையச் செய்கிறேன். ஓ! மன்னர்களின் மன்னா, நாங்கள் அனைவரும் உம்மைச் சார்ந்திருப்பவர்கள். உமது இதயத்தில் இருக்கும் நோய் விலகட்டும்.(53) ஓ! பூமியின் தலைவா, உமக்கு நேர்ந்த இவையாவும் விதியால் நேர்ந்தவையே. நற்பேற்றினால் உமக்குப் பணிவிடை செய்வதாலும், உமது ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து அவற்றைச் செயற்படுத்துவதாலும் உமது இதயத்தில் இருக்கும் நோயில் இருந்து உம்மை விடுவித்து விடலாம் என நான் எண்ணினேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(54)
திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! மகனே, என் மனம் தவத்தில் நிலைத்திருக்கிறது. ஓ! பலமிக்கவனே, நான் காட்டுக்கு ஓயச் செல்வது நம் குல வழக்கமாகும்.(55) ஓ! மகனே, நான் உன் பாதுகாப்பின் கீழ் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். நான் பல வருடங்கள் மதிப்புடன் உன்னால் தொண்டாற்றப்பட்டேன். இப்போது நான் வயது முதிர்ந்தவன். ஓ! மன்னா (காட்டை வசிப்பிடமாகக் கொள்ள) எனக்கு அனுமதியளிப்பதே உனக்குத் தகும்” என்றான்”.(56)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இச்சொற்களைச் சொன்னவனும், அம்பிகையின் மகனுமான மன்னன் திருதராஷ்டிரன், நடுங்கிக் கொண்டே தன் கைகளைக் கூப்பி, உயர் ஆன்ம சஞ்சயனிடமும், பெருந்தேர்வீரரான கிருபரிடமும், மேலும் இந்தச் சொற்களைச் சொன்னான்: {திருதராஷ்டிரன்}, “நான் உங்கள் மூலமாக மன்னனை வேண்ட விரும்புகிறேன்.(57,58) என் வயதின் பலவீனத்தாலும், களைத்துப் பேசிக் கொண்டிருப்பதாலும், என் மனம் உற்சாகமிழக்கிறது, என் வாய் உலர்கிறது” என்றான்.(59) இவ்வாறு சொன்னவனும், செழிப்பால் அருளப்பட்டவனும், குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனும், அற ஆன்மா கொண்டவனுமான அந்த முதிர்ந்த மன்னன், காந்தாரியின் மீது சாய்ந்து, திடீரென உயிரையிழந்தவனைப் போலத் தெரிந்தான்.(60) பகைவீரர்களைக் கொல்பவனுமான குந்தியின் அரச மகன்{யுதிஷ்டிரன்}, நினைவிழந்த ஒருவனைப் போல இவ்வாறு அமர்ந்திருக்கும் அவனை {திருதராஷ்டிரனைக்} கண்டு கடுங்கவலையடைந்தான்.(61)யுதிஷ்டிரன் , “ஐயோ, நூறாயிரம் யானைகளுக்கு இணையான பலத்தைக் கொண்ட மன்னர், ஐயோ இன்று பெண் மீது சாய்ந்து அமர்ந்திருக்கிறார்.(62) ஐயோ, முன்பொரு சந்தர்ப்பத்தில் பீமனின் இரும்புச் சிலையைத் துண்டுகளாகக் குறைத்த ஒருவர் இன்று பலவீனமான பெண்ணின் மீது சாய்ந்திருக்கிறார்[6].(63) அறமற்ற எனக்கு ஐயோ. என் புத்திக்கு ஐயோ. என் சாத்திர அறிவுக்கு ஐயோ. இந்தப் பூமியின் அதிபதி இந்நிலையில் கிடக்கக் காரணமான எனக்கு ஐயோ.(64) நானும் என் ஆசானைப் போல உண்ணா நோன்பிருக்கப் போகிறேன். உண்மையில், இந்த மன்னரும், பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும் உணவைத் தவிர்த்தால் நான் உண்ணா நோன்பிருப்பேன்” என்றான்”.(65)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அனைத்துக் கடமைகளையும் அறிந்த பாண்டவ மன்னன், அப்போது தன் கையாலேயே குளிர்ந்த நீரை எடுத்து அந்த முதிர்ந்த ஏகாதிபதியின் மார்பிலும், முகத்திலும் மென்மையாகத் தேய்த்தான்.(66) மங்கலமானதும், நறுமணமிக்கதும், நகைகளையும் {ரத்தினங்களையும்}, மருத்துவ மூலிகைகளையும் {ஔஷதிகளையும்} கொண்டதுமான அந்த மன்னனுடைய கைகளின் தீண்டலால் {அந்த பாணிஸ்பரிசத்தால்} திருதராஷ்டிரன் தன்னுணர்வுகள் {பிரஜ்ஞை} மீண்டான்[7].(67)திருதராஷ்டிரன், “ஓ! பாண்டுவின் மகனே, உன் கையால் மீண்டும் என்னைத் தீண்டுவாயா, நீ என்னைத் தழுவுவாயாக. ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, உன் கையின் மங்கலத் தீண்டலால் என்னுணர்வுகள் மீண்டன.(68) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நான் உன் தலையை முகர விரும்புகிறேன். உன் கைகளின் அரவணைப்பு எனக்கு உயர்ந்த நிறைவை அளிக்கின்றன.(69) இது நாளின் எட்டாம் காலமாகும், நான் உணவு உண்ணும் காலமாகும். ஓ! குரு குலத்தின் குழந்தாய், நான என் உணவை உண்ணாததால் நகர முடியாத அளவுக்குப் பலவீனமாக இருக்கிறேன்.(70) உன்னிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டிருந்ததில் நான் மிகவும் களைத்திருக்கிறேன். ஓ! மகனே, அதனால் உற்சாகமிழந்தவனாகி மயக்கமடைந்தேன்.(71) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, உயிர்ப்பூட்டும் விளைவுகளில் அமுதத்துக்கு ஒப்பான உன் கைகளின் தீண்டலைப் பெற்றவுடன் நான் என் உணர்வுகளை மீண்டும் பெற்றேன்” என்றான் {திருதராஷ்டிரன்}”.(72)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா, தன் தந்தையின் அண்ணனால் {திருதராஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அன்பினால் அவனது உடலெங்கும் மென்மையாகத் தீண்டினான்.(73) உயிர் மூச்சுகள் மீண்ட மன்னன் திருதராஷ்டிரன் தன் கைகளால் பாண்டுவின் மகனை ஆரத் தழுவி கொண்டு அவனது தலையை முகர்ந்தான்.(74) விதுரனும், பிறரும் பெருந்துயரால் உரக்க அழுதனர். எனினும், கடுங்கவலையின் விளைவால் அவர்கள் அந்த முதிர்ந்த மன்னனிடமோ, பாண்டுவின் மகனிடமோ ஏதும் சொல்லாதிருந்தனர்.(75) அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளான காந்தாரி, மனவுரத்தால் நிறைந்த தன் இதயத்தில் கவலையைப் பொறுத்துக் கொண்டு ஒன்றும் பேசாதிருந்தாள்.(76) வேறு பெண்களும், அவர்களுக்கு மத்தியில் இருந்த குந்தியும் பெரிதும் துன்புற்றனர். அவர்கள் அந்த முதிர்ந்த மன்னனைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டு அதிகமான கண்ணீரைச் சொரிந்து அழுதனர்.(77)
அப்போது திருதராஷ்டிரன், மீண்டும் யுதிஷ்டிரனிடம் இந்தச் சொற்களில், “ஓ! மன்னா, தவம் பயில எனக்கு நீ அனுமதியளிப்பாயாக.(78) ஓ! மகனே, தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதால் என் மனம் பலவீனமடைகிறது. ஓ! மகனே, இதற்குப் பிறகும் எனைத் துன்புறுத்துவது உனக்குத் தகாது” என்றான்.(79)
குரு குலத்தில் முதன்மையான அவன் {திருதராஷ்டிரன்}, யுதிஷ்டிரனிடம் இவ்வாறு சொன்னபோது, அங்கிருந்த போர்வீரர்கள் அனைவரிடம் இருந்தும் உரத்த ஓலம் எழுந்தது[8].(80) பெருங்காந்தியைக் கொண்டவனான தன் அரசத் தந்தை மெலிந்து மங்கியவனாக இருப்பதையும், விரும்பத்தகாத நிலைக்குக் குறைக்கப்பட்டிருப்பதையும், உண்ணா நோன்புகளால் சிதைந்திருப்பதையும், தோலால் போர்த்தப்பட்ட எலும்புக்கூட்டைப் போலத் தெரிவதையும் கண்டு, தர்மனின் மகனான யுதிஷ்டிரன் துயரால் கண்ணீர் சிந்தி, மீண்டும் இந்தச் சொற்களைச் சொன்னான்.(81,82) {யுதிஷ்டிரன்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, வாழ்வையும், பூமியையும் நான் விரும்பவில்லை. ஓ! பகைவரை எரிப்பவரே, உமக்கு ஏற்புடையதைச் செய்வதில் நான் என்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறேன்.(83) நான் உமது ஆதரவுக்குத் தகுந்தவனென்றால், நான் உமக்கன்பானவன் என்றால் ஏதாவது உண்பீராக. அப்போதே நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவேன்” என்றான்.(84)பெரும் சக்தி கொண்ட திருதராஷ்டிரன் அப்போது யுதிஷ்டிரனிடம், “ஓ! மகனே, நான் உன் அனுமதியுடன் கொஞ்சம் உணவை உண்ண விரும்புகிறேன்” என்றான்.(85) திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனிடம் இந்தச் சொற்களைச் சொன்னபோது, சத்யவதியின் மகனான வியாசர் அங்கே வந்து பின்வருமாறு சொன்னார்” {என்றார் வைசம்பாயனர்}.(86)
வியாசரின் வலியுறுத்தல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 04-திருதராஷ்டிரன் தீர்மானத்தை ஏற்கும்படி யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; யுதிஷ்டிரன் ஏற்றுக் கொண்டது…
வியாஸர், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, குரு குலத்தின் திருதராஷ்டிரன் சொல்வதைத் தயங்காமல் செய்வாயாக.(1) இந்த மன்னன் முதியவன். மேலும் அவன் மகனற்றவனாக ஆக்கப்பட்டவன். அவனால் தன் துயரை அதிகக் காலம் தாங்க இயலும் என நான் நினைக்கவில்லை.(2) பெரும் ஞானம், அன்பான பேச்சு மற்றும் உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரி, தன் மகன்களின் இழப்பால் உண்டான அதீத துயரத்தை தன் மனவுரத்தால் பொறுத்துக் கொள்கிறாள்.(3) (முதிர்ந்த மன்னன் சொல்வதையே) நானும் சொல்கிறேன். என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. முதிய மன்னன் உன் அனுமதியைப் பெறட்டும். அவன் வீட்டில் மகிமையற்ற முறையில் இறக்க வேண்டாம்.(4) பழங்கால அரச முனிகள் அனைவரும் சென்ற பாதையையே இம்மன்னனும் பின்பற்றட்டும். உண்மையில் அரச முனிகள் அனைவரும் இறுதியாகக் காடுகளுக்குள்ளே தான் ஓய்வார்கள்” என்றார் {வியாசர்}”.(5)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அற்புதச் செயல்களைச் செய்யும் வியாசரால் அந்நேரத்தில் இவ்வாறு சொல்லப்பட்ட போது, வலிமையும், சக்தியும் படைத்தவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் பெருந்தவசியிடம் இச்சொற்களில்,(6) “புனிதரான உம்மிடம் நாங்கள் உயர்ந்த மதிப்பைக் கொண்டிருக்கிறோம். நீர் மட்டுமே எங்கள் ஆசானாயிருக்கிறீர். நீர் மட்டுமே எங்கள் நாட்டுக்கும், எங்கள் குலத்திற்கும் புகலிடமாக இருக்கிறீர்.(7) நான் உமது மகன். ஓ! புனிதமானவரே, நீர் என் தந்தை. நீர் எங்கள் மன்னன், நீர் எங்கள் ஆசான். கடமைகள் அனைத்திற்கும் ஏற்புடைய வகையில் ஒரு மகன் எப்போதும் தன் தந்தையின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(8)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், வேதங்களை அறிந்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், புலவர்களில் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான வியாசர், யுதிஷ்டிரனிடம் இச்சொற்களைச் சொன்னார்,(9) {வியாசர்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இஃது இவ்வாறே இருக்கிறது. ஓ! பாரதா, இது நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. இந்த மன்னன் முதிய வயதை எட்டியிருக்கிறான். மேலும் இப்போது இவன் தன் வாழ்வின் இறுதி நிலையில் இருக்கிறான்.(10) பூமியின் தலைவனான இவன், என்னாலும், உன்னாலும் அனுமதிக்கப்பட்டுத் தன் காரியங்களைச் செய்து கொள்ளட்டும். அவனது வழியில் நீ தடையாக நிற்காதே.(11) ஓ! யுதிஷ்டிரா, அரச முனிகளின் உயர்ந்த கடமை இதுவேயாகும். அவர்கள் போர்க்களத்தில் மரணம் அடைய வேண்டும், அல்லது சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் காடுகளில் மரணம் அடைய வேண்டும்.(12)
ஓ! மன்னர்களின் மன்னா, உன்னுடைய அரசத் தந்தை பாண்டு, தன் ஆசானை மதிக்கும் ஒரு சீடனைப் போல இந்த முதிர்ந்த மன்னனை மதித்தான்.(13) (அந்தக் காலத்தில்) இவன் செல்வங்கள் மற்றும், ரத்தினங்களின் மலைகளுடன் கூடிய அபரிமிதமான கொடைகளுடன் பெரும் வேள்விகள் பலவற்றில் தேவர்களைத் துதித்து, தன் குடிமக்களை நல்ல முறையில் பாதுகாத்துப் பூமியை ஆண்டு வந்தான்.(14) பெரும் சந்ததியையும், பெருகும் நாட்டையும் அடைந்த இவன் {திருதராஷ்டிரன்}, நீங்கள் நாடுகடத்தப்பட்டிருந்த பதிமூன்று வருடங்கள் பெருஞ்செல்வாக்கை அனுபவித்து, பெருஞ்செல்வத்தைக் கொடையாக அளித்தான்.(15) ஓ! மனிதர்களின் தலைவா, ஓ! பாவமற்றவனே, நீயும், உன் பணியாட்களும், ஆசானிடம் சீடன் தயாராகக் கீழ்ப்படிவதைப் போலவே இந்த மன்னன் மற்றும் புகழ்பெற்ற காந்தாரியைத் துதித்துக் கொண்டிருந்தீர்கள்.(16) நீ உன் தந்தைக்கு அனுமதி கொடுப்பாயாக. அவன் தவம் பயில்வதற்கான காலம் வந்துவிட்டது. ஓ! யுதிஷ்டிரா, அவன் உனக்கெதிரான சிறு கோபத்தையும் வளர்த்தவனில்லை” என்றார் {வியாசர்}”.(17)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இச்சொற்களைச் சொல்லி அந்த முதிர்ந்த மன்னனை வியாசர் தேற்றினார். அப்போது யுதிஷ்டிரன், “அப்படியே ஆகட்டும்” என்று பதிலளித்தான். பிறகு அந்தப் பெருந்தவசி அந்த அரண்மனையை விட்டுக் காட்டை நோக்கிச் சென்றார்.(18)
புனிதரான வியாசர் சென்ற பிறகு, பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, முதியவனான தன் தந்தையைப் பணிந்து வணங்கி,(19) “புனித வியாசர் சொன்னதையும், உமது காரியத்தையும் பெரும் வில்லாளியான கிருபர் சொன்னதையும், விதுரர் வெளிப்படுத்தியதையும்,(20) யுயுத்சு மற்றும் சஞ்சயர் ஆகியோர் கேட்டுக் கொண்டதையும் விரைவாக நான் நிறைவேற்றுவேன். இவர்கள் அனைவரும் நம் குலத்தின் நலம்விரும்பிகள் என்பதால் என் மதிப்புக்குத் தகுந்தவர்களாக இருக்கின்றனர்.(21) எனினும், ஓ!மன்னா, நான் தலைவணங்கி உம்மிடம் இதை இரந்து கேட்கிறேன். முதலில் உண்பீராக. பின்பு உமது காட்டு ஆசிரமத்திற்குச் செல்வீராக” என்றான்{யுதிஷ்டிரன்}.(22)
திருதராஷ்டிர நீதி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 05-யுதிஷ்டிரனுக்கு ராஜநீதிகளை உரைத்த திருதராஷ்டிரன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னனின் {யுதிஷ்டிரனின்} அனுமதியைப் பெற்றவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான திருதராஷ்டிரன் அப்போது காந்தாரியால் பின்தொடரப்பட்டுத் தன் அரண்மனைக்குச் சென்றான்.(1) பலம் குறைந்தவனும், மெதுவாக நகர்பவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, ஒரு யானைக் கூட்டத்தின் வயது முதிர்ந்த தலைவனைப் போலப் பெருஞ்சிரமத்துடன் நடந்தான்.(2) பெரும் கல்விமானான விதுரன், தேரோட்டியான சஞ்சயன், சரத்வானின் மகனும், பெரும் வில்லாளியுமான கிருபர் ஆகியோரால் அவன் பின்தொடரப்பட்டான்.(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தன் மாளிகைக்குள் நுழைந்த அவன் காலைச் சடங்குகளைச் செய்து, முதன்மையான பிராமணர்கள் பலரை நிறைவடையச் செய்த பிறகு, சிறிது உணவு உண்டான்.(4) ஓ! பாரதா, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளான காந்தாரியும், பெரும் நுண்ணறிவு கொண்ட குந்தியும், பல்வேறு பொருட்களைக் கொண்டு தங்கள் மருமகள்களால் வழிபடப்பட்ட பிறகு, சிறிதளவு உணவை உண்டனர்.(5) திருதராஷ்டிரன் உண்ட பிறகு, விதுரனும், பிறரும் அதையே செய்தனர், பாண்டவர்களும் தங்கள் உணவை முடித்துக் கொண்டு அங்கே வந்து அந்த முதிய மன்னனைச் சூழ்ந்து அமர்ந்தனர்.(6)
அப்போது, ஓ! ஏகாதிபதி, அம்பிகையின் மகன் {திருதராஷ்டிரன்}, தன் அருகில் அமர்ந்திருந்த குந்தியின் மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} முதுகைத் தன் கையால் தொட்டு,(7) “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, எட்டு அங்கங்களைக் கொண்ட உன் நாட்டுடன் தொடர்புடைய அனைத்திலும், நீதிமான்களின் கேள்விகளை {அறத்தை / தர்மத்தை} முதன்மையானவையாகக் கொண்டு, எப்போதும் கவனக்குறைவின்றி நீ செயல்பட வேண்டும்[1].(8) ஓ! குந்தியின் மகனே, நீ புத்திமானாகவும், கல்விமானகவும் இருக்கிறாய். ஓ! மன்னா, ஓ! பாண்டுவின் மகனே, நாட்டை நீதியுடன் பாதுகாக்கக்கூடிய வழிமுறைகளை நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(9) ஓ! யுதிஷ்டிரா, கல்வியில் முதிர்ந்தவர்களாக இருப்போரை {கற்றறிந்த பெரியோரை} நீ எப்போதும் கௌரவிக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்டு, எந்த ஐயுணர்வுமின்றி அதன்படியே நீ செயல்பட வேண்டும்.(10) ஓ! மன்னா, விடியலில் எழுந்து முறையான சடங்குகளுடன் அவர்களை வழிபட்டு, செயற்பாட்டுக்குரிய காலம் வரும்போது உன் செயல்களை (நீ நினைத்திருக்கும் செயல்களைக்) குறித்து அவர்களோடு ஆலோசிக்க வேண்டும்.(11) ஓ! மகனே, ஓ! பாரதா, உன் நடவடிக்கைகளால் உனக்கு என்ன நன்மை கிட்டும் என்பதை நீ அறிய விரும்பும்போது நீ அவர்களைக் கௌரவித்தால், அவர்கள் எப்போதும் உனக்கான நன்மையை அறிவிப்பார்கள்.(12)நீ உன் குதிரைகளைப் பாதுகாப்பதைப் போலவே உன் புலன்களையும் எப்போதும் பாதுகாப்பாயாக. அப்போது வீணாகாத செல்வம் போல அவை உனக்கு நன்மைபயக்கும்.(13) நேர்மைக்கான சோதனைகளில் தேர்ச்சியடைந்தவர்களையும் (பற்றுறுதி {விசுவாசம்}, அக்கறையின்மை, தன்னடக்கம், துணிவு ஆகியவற்றைக் கொண்டவர்களும்) பரம்பரை பரம்பரையாக நாட்டின் அதிகாரிகளாக இருப்பவர்களும், தூய ஒழுக்கம் கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், தொழிலில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துபவர்களும், அறவொழுக்கம் கொண்டவர்களுமான மனிதர்களையே நீ அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்.(14) பல்வேறு வேடங்களில் இருப்பவர்களும், நம்பிக்கை சோதனைக்கு உட்பட்டவர்களும், உன் நாட்டைச் சேர்ந்தவர்களும், பகைவரால் அறியப்படாதவர்களுமான ஒற்றர்கள் மூலம் நீ எப்போதும் தகவல்களைத் திரட்ட வேண்டும்.(15) உன் கோட்டையானது, வலுவான சுவர்கள், வளைவுகளைக் கொண்ட வாயில்கள் மூலம் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். சுவர்களின் அனைத்துப் பக்கங்களிலும், ஒன்றுக்கொன்று நெருக்கமாக உள்ள கண்காணிப்புக் கோபுரங்களின் மேல் பக்கத்துக்குப் பக்கம் நடந்து கொண்டிருக்கும் அறுவரை நீ நியமிக்க வேண்டும்[2].(16) வாயில்கள் போதுமான அளவுக்குப் பெரியதாகவும், வலிமையானதாகவும் இருக்க வேண்டும். சரியான இடங்களில் நிறுவப்படும் அந்த வாயில்களை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்[3].(17) எந்த மனிதர்களின் குடும்பங்கள் மற்றும் ஒழுக்கம் நன்கறியப்பட்டிருக்கிறதோ, அவர்களையே நீ உன் காரியங்களில் நியமிப்பாயாக. ஓ! பாரதா, உண்ணும் உணவு, அணியும் மாலைகள், கிடக்கும் படுக்கைகள் தொடர்பான காரியங்களிலும், விளையாடும் மற்றும் உண்ணும் நேரங்களிலும் நீ எப்போதும் மிகக் கவனமாக உன் மேனியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.ஓ! யுதிஷ்டிரா, உன் குடும்பத்துப் பெண்மணிகள், நன்னடத்தைக் கொண்டவர்களும், நற்குடியில் பிறந்தவர்களும், கல்விமான்களும், முதியவர்களும், நம்பிக்கைகுரியவர்களுமான ஊழியர்களால் கவனிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும்.(18,19) கல்விமான்களும், பணிவுள்ளவர்களும், நற்குடியில் பிறந்தவர்களும், அறம்பொருள் அறிந்தவர்களும், எளிமையான நடத்தையால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான பிராமணர்களை நீ அமைச்சர்களாக்கிக் கொள்ள வேண்டும்.(20) நீ அவர்களுடன் ஆலோசனைகளைச் செய்ய வேண்டும். எனினும், நீ பலருடன் ஆலோசிக்கக்கூடாது. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், உன் மொத்த அவையினரோடோ, பகுதி பேருடனோ ஆலோசிக்கலாம். (ஊடுருவல்காரர்களிடம் இருந்து) நன்கு பாதுகாக்கப்பட்ட ஓர் அறை அல்லது இடத்திற்குள் {மந்திரகிரஹத்தில்} நீ உன் ஆலோசனைக்கூட்டங்களை நடத்த வேண்டும். புல்லற்ற காட்டிலும் நீ ஆலோசனைக்கூட்டம் நடத்தலாம். நீ ஒருபோதும் இரவு வேளையில் ஆலோசிக்கக்கூடாது[4].(22) மனிதர்கள் செய்வதைச் செய்து காட்டும் {சொல்வதைச் சொல்லிக் காட்டும்} குரங்குகள், பறவைகள் மற்றும் பிற விலங்குகள் ஆகியனவும், மூடர்கள் முடவர்கள் மற்றும் வாத நோயாளிகள் ஆகியோரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் அறையில் விலக்கப்பட வேண்டும்.(23) மன்னர்களின் ஆலோசனைகள் வெளிப்படுவதால் உண்டாகும் தீமைககள் தீர்க்கப்பட முடியாதவை என்று நான் நினைக்கிறேன்.(24) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, ஆலோசனைகள் வெளிப்படுவதால் எழும் தீமைகளையும், அவற்றை முறையாகப் பாதுகாப்பதால் உண்டாகும் நன்மைகளையும் உன் அமைச்சர்களுக்கு மத்தியில் நீ மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டும்.(25)ஓ! யுதிஷ்டிரா, உன்னுடைய நகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போரின் நற்செயல்களையும், குற்றங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் நீ செயல்பட வேண்டும்.(26) ஓ! மன்னா, உன் சட்டங்கள் அதற்கான பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளவர்களும், மனநிறைவுடையவர்களும், நன்னடத்தைக் கொண்டவர்களுமான நம்பிக்கைக்குரிய நீதிபதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டும். அவர்களுடைய செயல்களும் ஒற்றர்கள் மூலம் உன்னால் கண்டறியப்பட வேண்டும்.(27) ஓ! யுதிஷ்டிரா, நீதித்துறையைச் சார்ந்த உன்னுடைய அதிகாரிகள், குற்றங்களின் ஆழத்தைக் கவனமாக உறுதி செய்த பிறகு, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனைகளை வழங்க வேண்டும்[5].[28) கையூட்டு {பரிதானம் / லஞ்சம்} பெறும் மனநிலை கொண்டவர்கள், பிறர் மனைவியரின் கற்புக்குக் களங்கம் விளைவிப்பவர்கள், கடுந்தண்டனைகளைக் கொடுப்பவர்கள், பொய் {போலிநியாயம்} பேசுவபவர்கள், தூற்றுபவர்கள் {வைபவர்கள்}, பேராசையால் களங்கமடைந்தவர்கள் {களவு செய்பவர்கள்}, கொலைகாரர்கள், முரட்டுச் செயல்களைச் செய்பவர்கள்,(29) சபைகளுக்கும், பிறரின் விளையாட்டுகளுக்கும் {இன்பத் தேடல்களுக்குத்} தொந்தரவு கொடுப்பவர்கள், வர்ணக் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் ஆகியோரை இடம் மற்றும் காலத்தைக் கருத்தில் கொண்டு அபராதங்களாலோ, மரணத்தாலோ தண்டிக்க வேண்டும்[6][7].(30)காலையில், நீ வழங்க வேண்டியவற்றைக் கொடுப்பதில் {உனக்குப் பிரியமானதைச் செய்வதில்} ஈடுபடுபவர்களை நீ காண வேண்டும். அதன்பிறகே நீ காலைக் கடன்களையும், அதற்கும்பிறகு உன் உணவையும் பார்க்க வேண்டும்.(31) அதன்பிறகு நீ உன் படைகளை மேற்பார்வையிட்டு ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அவர்களை மகிழ்விக்க வேண்டும். உன்னுடைய மாலைப் பொழுதுகள் தூதர்களுக்காகவும், ஒற்றர்களுக்காகவும் ஒதுக்கப்பட வேண்டும்.(32) பகலில் செய்யப்பட வேண்டிய செயல்களைத் தீர்மானிக்கப் பின்னிரவை நீ அர்ப்பணிக்க வேண்டும். நள்ளிரவுகளும், நடுப்பகல்களும் உனது கேளிக்கைகளுக்கும், விளையாட்டுகளுக்கும் அர்ப்பணிக்கப்பட வேண்டும். எனினும், அனைத்துக் காலங்களிலும் நீ உன் காரியங்களை நிறைவேற்றக்கூடிய வழிமுறைகளேயே நினைக்க வேண்டும்.(33) உரிய காலத்தில் உன் மேனியை அலங்கரித்துக் கொண்டு, அபரிமிதமாகக் கொடையளிப்பதற்காக நீ அமர வேண்டும். ஓ! மகனே, பல்வேறு செயல்களின் சுழற்சி, சக்கரங்களைப் போல நிற்காமல் சுழன்று கொண்டிருக்கிறது.(34) நீ நியாயமான வழிமுறைகளின் மூலம் பல்வேறு வகைச் செல்வங்களைக் கொண்டு உன் கருவூலத்தை நிறைக்க எப்போதும் முயற்சிக்க வேண்டும். முடிவில் நியாயமற்ற வழிமுறைகள் அனைத்தையும் நீ புறக்கணிக்க வேண்டும்.(35)
உன்னுடைய தாமதங்களைக் காண விரும்பும் உன் பகைவர்களை உன் ஒற்றர்கள் மூலம் கண்டறிந்து, நம்பிக்கைக்குரிய நபர்களைக் கொண்டு தொலைவில் இருந்தே அவர்களை அழிக்க வேண்டும்.(36) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஒழுக்கத்தை ஆய்வு செய்த பிறகே உன் பணியாட்கள் நியமிக்கப்பட வேண்டும். உரிய காரியத்திற்கு நியமிக்கப்பட்ட பணியாட்களைக் கொண்டோ, அவற்றுக்காக நியமிக்கப்படாத பணியாட்களைக் கொண்டோ நீ உன் செயல்கள் அனைத்தையும் செய்வாயாக[8].(37) உன் படைத்தலைவன், ஒழுக்கத்தில் உறுதியுள்ளவனாகவும், துணிவுமிக்கவனாகவும், கடினமான சூழ்நிலைகளைப் பொறுத்துக் கொள்ளக்கூடியவனாகவும், பற்றுறுதி {விசுவாசம்} கொண்டவனாகவும், உன் நன்மையில் அர்ப்பணிப்பு உள்ளவனாகவும் இருக்க வேண்டும்.(38) ஓ! பாண்டுவின் மகனே, உன் மாகாணங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் பசுக்களையும், கழுதைகளையும் போல உன் செயல்களை எப்போதும் செய்ய வேண்டும்[9].(39) ஓ! யுதிஷ்டிரா, உன்னுடைய காரிய தாமதங்களையும் {ரந்திரங்கள் / பலவீனங்களையும்}, பகைவர்களின் காரிய தாமதங்களையும் நீ கவனமாக உறுதி செய்து கொள்ள வேண்டும். உன்னுடையவர்களின் காரிய தாமதங்களையும், பகைவருடையவர்களின் காரிய தாமதங்களையும் நீ உறுதி செய்து கொள்ள வேண்டும்.(4) தங்கள் தங்கள் தொழில்களில் திறம்பெற்றவர்களும், உனது நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களுமான உன் நாட்டைச் சேர்ந்தவர்கள், போதுமான வாழ்வாதாரங்களின் மூலம் உன்னால் ஆதரிக்கப்பட வேண்டும்.(41) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, ஞானமுள்ள மன்னன் ஒருவன், சாதித்திருக்கும் தன் குடிமக்களின் சாதனைகள் பாதுகாக்கப்படுவதை எப்போதும் கண்காணிக்க வேண்டும். அப்போது அவர்கள், தங்கள் திறனில் இருந்து வீழாதிருப்பதைக் கண்டு உன்னிடம் உறுதியான அர்ப்பணிப்புடன் திகழ்வார்கள்[10]” {என்றான் திருதராஷ்டிரன்}.(42)
கொடியோர் – ஆததாயிகள்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 06-யுதிஷ்டிரனுக்கு ராஜநீதிகளை உரைத்த திருதராஷ்டிரன்; எழுபத்திரண்டு மண்டலங்கள் குறித்துச் சொன்னது; எந்தெந்த பகைவரை எவ்வாறு கையாள வேண்டுமெனச் சொன்னது…
திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, உனக்குரிய மண்டலங்களையும், உன் பகைவர்கள், நடுநிலையாளர்கள், உன்னிடமும், பகைவரிடமும் ஒரே மனநிலையைக் கொண்டவர்கள் ஆகியோரின் மண்டலங்களையும் நீ எப்போதும் உறுதி செய்து கொள்ள வேண்டும்[1].(1) ஓ!பகைவரை நொறுக்குபவனே, பகைவர், ஆததாயிகள் {கொலையிற்கொடியார்} என்றழைக்கப்படுபவர்கள், கூட்டாளிகள், பகைவரின் கூட்டாளிகள் ஆகிய நால்வகைப் பகைவரின் மண்டலங்களையும் நீ வெவ்வேறாக அறிந்து கொள்ள வேண்டும்[2].(2) ஓ!குருகுலத்தில் முதன்மையானவனே, நாட்டின் அமைச்சர்கள், மாகாணங்களின் மக்கள், கோட்டைகளின் காவல்படையினர், படைவீரர்கள் ஆகியோர் {பகைவரால்} கெட்டோ, கெடாமலோ இருக்கலாம். (எனவே, அவர்கள் உன் எதிரிகளின் மூலம் கெடாமல் இருக்கும் வகையில் நீ நடந்து கொள்வாயாக).(3) (மேலே பட்டியலிடப்பட்ட) பன்னிருவரே[3] மன்னனின் முதன்மையான அமைப்பினராக இருக்கின்றனர். இந்தப் பன்னிருவரும், அமைச்சர்களை முதன்மையானவர்களாகக் கொண்ட அறுபதுபேரும் {ஆக மொத்தம் 72 பேரும்} மன்னனால் கவனிக்கப்பட வேண்டும்[4].(4)அரசியல் அறிந்த ஆசிரியர்கள் {நீதிசாஸ்திரமறிந்த ஆசார்யர்கள்} இவற்றை {இந்த எழுபத்திரண்டையே} மண்டலங்கள் என்ற பெயரில் அழைக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரா, (அமைதி, போர், அணிவகுப்பு, நிறுத்தம், வேற்றுமை விதைத்தல், சமாதானம் ஆகிய) ஆறு நிகழ்வுகள் இவற்றையே {இந்த எழுபத்திரண்டையே} சார்ந்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வாயாக[5].(5) வளர்ச்சியும், சிதைவும், நிலையாக நிற்கும் நிலையும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஆறு வகை நிகழ்வுகளின் குணங்கள், (ஏற்கனவே பட்டியலிடப்பட்ட) எழுபத்திரண்டைச் சார்ந்திருக்கின்ற என்பதையும் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.(6) ஓ! குந்தியின் மகனே, ஒருவன் சார்ந்திருக்கும் தரப்பு பலமானதாகவும், பகைவனின் தரப்பு பலவீனமானதாகவும் இருக்கும் போதுதான் அவன் பகைவனை எதிர்த்து போரிட்டு வெற்றியடைவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும்.(7) பகைவன் வலுவாகவும், தன் தரப்பு பலவீனமாகவும் இருக்கும்போது, அந்தப் பலவீனமான மன்னன் புத்திசாலியாக இருந்தால் அந்தப் பகைவனுடன் சமாதானம் செய்து கொள்ள முனைவான்.(8)ஒரு மன்னன் (படையின் உணவுத்துறைக்கு வேண்டிய) பொருட்களைப் பெரிய அளவில் திரட்ட வேண்டும். ஓ! பாரதா, படையெடுக்க இயன்றவனாகும்போது, அவன் ஒருபோதும் தாமதிக்கக்கூடாது.(9) அதைத்தவிர, அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் வேறு எந்தக் கருத்தினாலும் அசைக்கப்படாமல், தன்னுடையவர்களை அவர்களுக்குத் தகுந்த அலுவல்களில் நியமிக்க வேண்டும். (தன் ஆட்சிப்பகுதிகளைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது) அவன் அதிகம் பயிர் விளையாத நிலங்களை மட்டுமே தன் எதிரிக்குக் கொடுக்க வேண்டும்.(10) (செல்வத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது) அவன் அற்ப உலோகம் கலக்கப்பட்ட தங்கத்தையே கொடுக்க வேண்டும். (தன் படையில் ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது) பலமற்ற மனிதர்களையே அவன் கொடுக்க வேண்டும். உடன்பாடுகள் செய்வதில் திறம் பெற்றவன், நிலத்தையோ, தங்கத்தையோ, மனிதர்களையோ தன் எதிரியிடம் இருந்து பெறும்போது, இதற்கு நேர்மாறான குணங்களை உடையவற்றையே பெற வேண்டும்[6].(11) ஓ! பாரதர்களின் தலைவா, அமைதி உடன்பாடுகள் செய்யப்படும்போது, (வீழ்த்தப்பட்ட) மன்னனின் மகனைப் பிணையாகக் கேட்க வேண்டும். ஓ! மகனே, இதற்கு முரணான நடத்தை நன்மை பயக்காது.ஒரு மன்னனுக்குப் பேரிடர் நேர்தால்,(12) வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளில் உள்ள தன் அறிவை அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்[7]. ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, ஒரு மன்னன், தன் மக்களில் உற்சாகமற்றவர்கள், (பார்வையற்றோர், காது கேளாதோர், ஊமைகள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட) ஆதரவற்றவர்களைப் பராமரிக்கவேண்டும்.(13) தன் நாட்டைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வலிமைமிக்க மன்னன், ஒன்றன்பின் ஒன்றாகவோ, ஒரே நேரத்திலோ பகைவரை எதிர்க்கும் தன் முயற்சிகள் அனைத்தையும் செய்து கொண்டே வேண்டும். அவன் அவர்களைப் பீடித்துத் தடுத்து, அவர்களது கருவூலத்தை வற்றச் செய்ய வேண்டும்.(14) தன் வளர்ச்சியை விரும்பும் மன்னன், தன் ஆளுகையின் கீழ் உள்ள துணை நிலைத் தலைவர்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்கக்கூடாது. ஓ! குந்தியின் மகனே, மொத்த பூமியையும் வெல்ல விரும்பும் மன்னனிடம் நீ ஒருபோதும் {நேரடியாகப்} போரிட முயலாதே.(15) உன் அமைச்சர்களின் துணையுடன் அவனது உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் துணைநிலைத் தலைவர்களுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்கி அதன் மூலம் நீ {உன் நாட்டுக்கு} நன்மை பெற முயல வேண்டும்.(16)பலமிக்க மன்னன் ஒருவன், பலவீனமான மன்னர்களை அழிக்க முற்படக்கூடாது. ஏனெனில் அவர்களே {உன் ஆளுகைக்குட்பட்டு} நல்லோரைப் பேணி பாதுகாத்து, தீயோரைத் தண்டித்து உலகத்திற்கு நன்மை செய்வார்கள். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, நீ ஒரு பிரம்பின் {நாணல் / நீர்நொச்சியின்} நடத்தையைப் பின்பற்ற வேண்டும்[8].(17) பலமிக்க மன்னன் ஒருவன் பலவீனமானவனை எதிர்த்து முன்னேறினால், பின்னவன், சமாதானம் மற்றும் பிற வழிமுறைகளைப் பின்பற்றி அவனைத் தடுக்க வேண்டும்.(18) படையெடுத்து வருபவனை இவ்வழியில் தடுக்க முடியவில்லையெனில், அவனும், அவனுக்கு நன்மை செய்யும் மனநிலை கொண்டவர்களும், பகைவனை எதிர்த்துப் போரிட வேண்டும். உண்மையில், அவன் {தன்னை எதிர்த்துப்} படையெடுத்து வருபவனுக்கு எதிராக, {தனது} அமைச்சர்கள், குடிமக்கள் ஆகியோருடனும், கருவூலத்துடனும் சேர்ந்து பலத்தைப் பயன்படுத்த {போரிட} வேண்டும்.(19) பகைவனோடு போரிடுவது நம்பிக்கையளிக்கவில்லையெனில் அவன் தனது ஆதாரங்களை ஒவ்வொன்றாகத் துறந்து வீழ்ச்சியடைய வேண்டும். இவ்வகையில் உயிரைக் கைவிடும் அவன் கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுதலை பெறுவான்” என்றான் {திருதராஷ்டிரன்}.(20)
அறத்தின் ஆட்சி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 07-போரும் அமைதியும்; செல்வம், கூட்டாளிகள் ஆகியவற்றின் பலங்கள்; இயந்திர மற்றும் வணிக வர்க்கத்தினரின் பலம்; மன்னர்களின் பேரிடர்கள்; நூறு குதிரை வேள்விகளும் அறம்சார்ந்த ஆட்சியும் ஒரே பயனை உண்டாக்கும் என்பது…
திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னர்களில் சிறந்தவனே, ஓ! யுதிஷ்டிரா, போர் மற்றும் அமைதி குறித்தும் நீ முறையாகச் சிந்திக்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் இருவகைகளைக் கொண்டவை. பல்வேறு வழிமுறைகள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளின் மூலம் போரும், அமைதியும் உண்டாகின்றன[1].(1) ஓ! குரு குலத்தோனே, நீ உன்னைப் பொறுத்தவரையில் (பலம் மற்றும் பலவீனம் என்ற) இரண்டையும் குறித்து நீ அமைதியாகச் சிந்திக்க வேண்டும். நிறைவடைந்தவர்களும், உடல்நலமிக்கவர்களும், புத்திசாலிகளுமான படைவீரர்களைக் கொண்ட பகைவனை எதிர்த்து நீ திடீரெனப் படையெடுக்கக்கூடாது. மறுபுறம், அவனை வெல்லும் வழிமுறைகளைக் குறித்து நீ கவனமாகச் சிந்திக்க வேண்டும்[2].(2) நிறைவடைந்தவர்களும், உடல்நலம் சிறந்திருப்பவர்களுமான போராளிகள் இல்லாத பகைவனை எதிர்த்தே நீ படையெடுக்க வேண்டும். அனைத்தும் சாதகமாக இருக்கும்போதுதான் பகைவனை வீழ்த்த முடியும். எனினும், அதன்பிறகு வெற்றியாளன் ஓய்ந்து (பலமான நிலையில் நீடித்து) இருக்க வேண்டும்.(3) அடுத்ததாக அவன் தன் பகைவனைப் பல்வேறு துன்பங்களில் மூழ்கடித்து, அவனுடைய கூட்டாளிகளுக்கு மத்தியில் வேற்றுமையை விதைக்க வேண்டும். அவன், பகைவனைப் பீடித்து, அவனது இதயத்திற்கு அச்சமூட்டி, அவனைத் தாக்கி அவனது படைகளைப் பலவீனப்படுத்த வேண்டும்.(4)சாத்திரங்களை அறிந்த மன்னன், பகைவனை எதிர்த்துப் படையெடுக்கும்போது, மூன்று வகைப் பலங்களைக் குறித்துச் சிந்திக்க வேண்டும், உண்மையில் தன் பலத்தையும், பகைவனின் பலத்தையும் அவன் சிந்திக்க வேண்டும்[3].(5) ஓ! பாரதா, எந்த மன்னன், சுறுசுறுப்பு {உத்ஸாகசக்தியுடனும்}, ஒழுக்கம் {பிரபுசக்தியுடனும்}, ஆலோசனைகள் {மந்திரசக்தி} ஆகிய சக்திகளுடன் இருக்கிறானோ, அவனே பகைவரை எதிர்த்துப் படையெடுக்கலாம். அவனுடைய நிலை வேறு வகையில் இருந்தால், அவன் தாக்குதலைத் தவிர்க்க வேண்டும்[4].(6) மன்னனானவன், செல்வத்தின் பலம் {மௌலபலம்}, கூட்டாளிகளின் பலம் {மித்ரபலம்}, காட்டுவாசிகளின் பலம் {அடவீபலம்}, ஊதியம் பெறும் படைவீரர்களின் பலம் {பிருதபலம்}, இயந்திர மற்றும் வணிக வர்க்கங்களின் பலம் {ஸ்ரேணீபலம்} ஆகியவற்றுடன் இருக்க வேண்டும்[5].(7) இவையனைத்திலும் கூட்டாளிகள் பலமும், செல்வபலமும் எஞ்சியவற்றைவிட மேன்மையானவை. வர்க்கங்களின் பலமும் {ஸ்ரேணீபலமும்}, நிலையான படையின் பலமும் {பிருதபலமும்} நிகரானவையாகும்.(8)மேற்கண்ட இரண்டு பலங்களையும் பயன்படுத்த வேண்டிய வேளைவரும் பல சந்தர்ப்பங்களில், அவை இரண்டிற்கும் இணையாக ஒற்றர்களின் பலமே செயல்திறன் கொண்ட பலமாக மன்னனால் கருதப்படும்.(9) ஓ! மன்னா, ஆட்சியாளர்களை மூழ்கடிக்கும் பேரிடர் {ஆபத்து} என்பது, பல வடிவங்களைக் கொண்டதாகக் கருதப்பட வேண்டும். ஓ! குரு குலத்தோனே, அந்தப் பல்வேறு வடிவங்கள் யாவை என்பதைக் கேட்பாயாக.(10) உண்மையில், ஓ! பாண்டுவின் மகனே, பேரிடர் {ஆபத்துகள்} பல்வேறு வகைகளைச் சார்ந்தவையே. ஓ! மன்னா, அவற்றின் வடிவங்களைத் தனித்தனியாகக் கண்டு, (சோம்பலில் அவற்றை மறைக்காமல்) சமரசம் மற்றும் நன்கறியப்பட்ட பிற வழிமுறைகளைப் பயன்படுத்தி அவற்றைச் சந்திக்க வேண்டும்.(11) ஓ! பகைவரை எரிப்பவனே, மன்னன் நல்ல படையைக் கொண்டிருக்கும்போது (பகைவனை எதிர்த்து) படையெடுக்க வேண்டும். படையெடுக்கத் தயாராகும்போது, காலம், இடம், தான் திரட்டியிருக்கும் படை, (பிற காரியங்களில்) தன்னுடைய சாதகங்கள் ஆகியவற்றை அவன் கருத்தில் கொள்ள வேண்டும்.(12)
தன் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் கவனமுள்ள மன்னன், உற்சாகமிக்கவர்களும், உடல்நலமிக்கவர்களுமான போர்வீரர்களுடன் ஆயத்தமான பிறகே படையெடுக்க வேண்டும். ஓ! பாண்டுவின் மகனே, அவன் பலமடையும்போது, பருவகாலம் சாதகமற்றிருந்தாலும் கூட, அவன் படையெடுக்கலாம்.(13) அம்பறாத்தூணிகளையே கற்களாகக் கொண்டதும், குதிரைகளையும், தேர்களையும் ஓடையாகக் கொண்டதும், கொடிமரங்களைக் கரைகளில் நிற்கும் மரங்களாகக் கொண்டதும் காலாட்படைவீரர்களையும், யானைகளையும் சகதியாகக் கொண்டதுமான ஓர் ஆற்றை மன்னன் உண்டாக்க வேண்டும். அத்தகைய ஆற்றையே {படையையே} மன்னன் தன் பகைவனை அழிக்கப் பயன்படுத்த வேண்டும்.(14) உசானஸ் {சுக்ராச்சாரியர்} அறிந்த அறிவியலுக்கு ஏற்புடைய வகையில், பகைவரோடு போரிட சகடம், பத்மம் மற்றும் வஜ்ரம் என்றழைக்கப்படும் வியூகங்களை அமைக்க வேண்டும்[6].(15) பகைவனின் பலம் குறித்த அனைத்தையும் ஒற்றர்களின் மூலம் அறிந்து, தன் பலத்தையும் ஆய்வு செய்து கொண்டு, ஒரு மன்னன் தன் ஆட்சிப்பகுதிக்குள்ளோ, பகைவரின் ஆட்சிப்பகுதிக்குள்ளோ போரைத் தொடங்க வேண்டும்[7].(16)மன்னன் எப்போதும் தன் படையை நிறைவடையச் செய்து, (பகைவனை எதிர்த்து) தன்னுடைய பலமிக்கப் போர்வீரர்களை ஏவ வேண்டும். முதலில் தன்னுடைய நாட்டின் நிலையை உறுதி செய்து கொண்டு, சமரசத்தையோ, நன்கறியப்பட்ட வேறு வழிமுறைகளையோ ஒருவன் பயன்படுத்த வேண்டும்.(17) ஓ! மன்னா, ஒருவன் அனைத்து வழிமுறைகளின் மூலமும் தன் உடலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இம்மையிலும், மறுமையிலும் பெறப்போகும் உயர்ந்த நன்மைக்காக அவன் அதைச் செய்ய வேண்டும்.(18) ஓ! ஏகாதிபதி, மன்னன் இவ்வழிமுறைகளில் முறையாக நடந்து கொள்வதன் மூலம், இவ்வுலகில் அறம்சார்ந்த தன் குடிமக்களை ஆண்டபிறகு, மறுமையில் சொர்க்கத்தை அடைகிறான்.(19) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, ஈருலகங்களையும் அடைவதற்காக இவ்வாறே நீ உன் குடிமக்களின் நன்மையை எப்போதும் நாட வேண்டும்[8].(20)ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பீஷ்மர், கிருஷ்ணன், விதுரன் ஆகியோர் மூலம் ஏற்கனேவே கடமைகள் அனைத்தம் உனக்குக் கற்பிக்கப்பட்டிருந்தாலும், நான் உன் மீது கொண்டிருக்கும் அன்பின் காரணமாக இந்த நெறிமுறைகளை உனக்குச் சொன்னேன்.(21) வேள்விகளில் அபரிமிதமான கொடைகளை அளிப்பவனே, இவை யாவற்றையும் நீ முறையாகச் செய்ய வேண்டும். இவ்வழியில் உன்னை நடத்திக் கொண்டு உன் குடிமக்களின் அன்புக்குரியவனாகி சொர்க்கத்தின் இன்பநிலையை அடைவாயாக.(22) நூறு குதிரை வேள்விகளில் தேவர்களைத் துதித்தவனும், அறம்சார்ந்து தன் குடிமக்களை ஆண்ட மன்னனும் நிகரான தகுதியையே அடைகிறார்கள்” என்றான் {திருதராஷ்டிரன்}.(23)
குடிமக்களிடம் வேண்டிய திருதராஷ்டிரன்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 08-ருதராஷ்டிரனைத் தூண்டிய காந்தாரி; நாட்டு மக்களை அழைத்துத் தான் காட்டுக்குச் செல்ல அனுமதி வேண்டிய திருதராஷ்டிரன்…
யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, நீர் சொன்னதை நான் செய்வேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, எனக்கு நீர் மேலும் கற்பிக்க வேண்டும்.(1) பீஷ்மர் சொர்க்கத்திற்கு உயர்ந்துவிட்டார். மதுசூதனன் (துவாரகைக்குச்) சென்றுவிட்டான். விதுரரும், சஞ்சயரும் (உம்மோடு காட்டுக்குச்) சென்று விடுவார்கள். எனவே, உம்மைத் தவிர வேறு யார் எனக்குக் கற்பிக்க முடியும்?(2) ஓ! பூமியின் தலைவா, நீர் என் நன்மையை விரும்பி இன்று சொன்ன அனைத்தையும் நான் நிச்சயம் பின்பற்றுவேன். ஓ! மன்னா, இது குறித்து நீர் உறுதி கொள்வீராக[1]” என்றான்”.(3)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதர்களின் தலைவா, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்ட அரசமுனி திருதராஷ்டிரன், (காட்டுக்கு ஓய்ந்து செல்ல) மன்னனின் அனுமதியைப் பெற விரும்பினான்.(4) அவன், “ஓ! மகனே, நிற்பாயாக {இரு}. நான் அதிகமாக உழன்றிருக்கிறேன்” என்றான்[2]. இதைச் சொன்ன அந்த முதிய மன்னன் காந்தாரியின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தான்.(5)அறவொழுக்கம் கொண்டவளும், காரிய சாதனைகள் அனைத்தையும் அறிந்தவளுமான காந்தாரி, உயிரினங்களின் இரண்டாவது தலைவனைப் போலிருந்த தன் கணவனிடம், அந்தக் காலத்திற்குப் பொருத்தமான சொற்களில்,(6) “பெரும் முனிவரான வியாசரிடமே நீர் அனுமதியைப் பெற்றுவிட்டீர். எனினும், யுதிஷ்டிரனின் அனுமதியுடன் நீர் எப்போது காட்டுக்குச் செல்லப் போகிறீர்?” என்று கேட்டாள்.(7)
திருதராஷ்டிரன், “ஓ! காந்தாரி, உயர் ஆன்மா கொண்ட என் தந்தையிடம் {வியாசரிடம்} நான் அனுமதியைப் பெற்றுவிட்டேன். (அடுத்துப் பெறப்போகும்) யுதிஷ்டிரனின் அனுமதியுடனும் நான் விரைவில் காட்டுக்கு ஓயப்போகிறேன்.(8) எனினும், கொடிய பகடைக்கு அடிமையாக இருந்த என் மகன்கள் அனைவருக்காகப் பிரேத நிலையைப் பின்பற்றிச் செல்லவல்ல கொஞ்சம் செல்வத்தை நான் கொடையளிக்க விரும்புகிறேன். உண்மையில், என் மாளிகைக்கு மக்கள் அனைவரையும் அழைத்து அக்கொடைகளை அளிக்க நான் விரும்புகிறேன்” என்றான்“[3].(9)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “(காந்தாரியிடம்) இவ்வாறு சொன்ன திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனுக்கும் சொல்லி அனுப்பினான். பின்னவன் {யுதிஷ்டிரன்}, தன் பெரியப்பாவின் ஆணையின் பேரில் தேவையான பொருட்கள் அனைத்தையும் கொண்டு வந்தான்.(10) குருஜங்காலத்தில் வசித்த பிராமணர்கள் பலரும், க்ஷத்திரியர்கள் பலரும், வைசியர்கள் பலரும், சூத்திரர்கள் பலரும், நிறைவடைந்த இதயங்களுடன் திருதராஷ்டிரனின் மாளிகைக்கு வந்தனர்.(11) அந்தப்புரத்தில் இருந்து வெளியே வந்த முதிய மன்னன் {திருதராஷ்டிரன்}, அவர்கள் அனைவரையும், அங்கே கூடியிருந்த தன் குடிமக்களை அனைவரையும் கண்டான்.(12) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், அங்கே திரண்டிருந்த குடிமக்கள், மாகாணத்துவாசிகள், தன் நலம் விரும்பிகள், பல்வேறு நாடுகளில் இருந்து பெரும் எண்ணிக்கையில் வந்திருந்த பிராமணர்கள் ஆகியோரைக் கண்டு இந்தச் சொற்களைச் சொன்னான்.(13,14)
{திருதராஷ்டிரன்}, “நீங்களும் குருக்களும் {கௌரவர்களும்} நீண்ட பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து, ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும், ஒருவருக்கொருவர் நன்மை செய்வதில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறீர்கள்.(15) இப்போது வந்திருக்கும் வாய்ப்பைக் கருத்தில் கொண்டு நான் சொல்வதை ஆசான்களின் சொற்களை நிறைவேற்றும் சீடர்களைப் போல நீங்கள் அனைவரும் நிறைவேற்ற வேண்டும்.(16) காந்தாரியைத் துணையாகக் கொண்டு காட்டுக்குள் ஓய்ந்து செல்வதில் நான் என் இதயத்தை நிலைநிறுத்தியிருக்கிறேன். வியாசரும், குந்தியின் மகனும் {யுதிஷ்டிரனும்} இதை ஏற்றிருக்கின்றனர்.(17) உங்கள் அனுமதியும் எனக்குக் கிடைக்கட்டும். இதில் தயக்கமேதும் கொள்ளாதீர். உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் எப்போதும் நீடித்திருக்கும் நல்லெண்ணத்தை,(18) வேறு நாடுகளை ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும் இடையில் காண முடிவதில்லை. இவ்வளவு காலம் என் தலையில் இருக்கும் இந்தச் சுமையால் நான் களைத்திருக்கிறேன். நான் பிள்ளைகளை இழந்தவனாகவும் இருக்கிறேன்.(19) பாவமற்றவர்களே, காந்தாரியுடன் சேர்ந்து நோற்கும் உண்ணாநோன்புகளால் நான் மெலிந்திருக்கிறேன். அரசாட்சி யுதிஷ்டிரனுக்குச் சென்ற பிறகும், நான் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்தேன்.(20) மனிதர்களில் முதன்மையானவர்களே, துரியோதனனின் அரசில் நான் எதிர்பார்க்கக்கூடிய மகிழ்ச்சியைவிட அது பெரிதாக இருந்ததாக நான் நினைக்கிறேன். முதிர்ந்தவனும், பிள்ளைகளை இழந்தவனும்மான எனக்குக் காடுகளை விடச் சிறந்த புகலிடம் வேறு எது இருக்க முடியும்? உயர்வாக அருளப்பட்டவர்களே, நான் வேண்டும் அனுமதியை எனக்குக் கொடுப்பதே உங்களுக்குத் தகும்” என்றான் {திருதராஷ்டிரன்}.(21)
ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அவன் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட குருஜங்காலவாசிகள் அனைவரும், கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன் உரத்த ஒப்பாரியில் ஈடுபட்டனர்.(22) பெருஞ்சக்தி கொண்ட திருதராஷ்டிரன், துயரில் பீடிக்கப்பட்ட அந்த மக்களுக்கும் மேலும் சிலவற்றைச் சொல்ல விரும்பி, மீண்டும் அவர்களிடம் பேசத்தொடங்கிப் பின்வருமாறு சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(23)
அடைக்கலம் ஒப்படைப்பு! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 09-தான் செய்த தவறுகளைப் பொறுக்கும்படி மக்களிடம் வேண்டிய திருதராஷ்டிரன்; யுதிஷ்டிரனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் காட்டுக்குச் செல்வதற்கு அனுமதி கேட்டது…
திருதராஷ்டிரன், “சந்தனு இந்தப் பூமியை முறையாக ஆண்டார். அதே போல, பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட விசித்திரவீரியரும் உங்களை ஆண்டார். நிச்சயம் இவை யாவும் நீங்கள் அறிந்தது.(1) என் தம்பி பாண்டு, எனக்கும், உங்களுக்கும் எவ்வளவு அன்புக்குரியவனாக இருந்தான் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவனும் உங்களை முறையாகவே ஆண்டான்.(2) பாவமற்றவர்களே, நானும் உங்களுக்குத் தொண்டாற்றியிருக்கிறேன். அத்தொண்டுகள் தேவையான அளவுக்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும், கவனக்குறைவின்றி நான் என் கடமைகளைச் செய்திருப்பதால் என்னை மன்னிப்பதே உங்களுக்குத் தகும்.(3)
துரியோதனனும் தன் தரப்பில் ஒரு முள்ளுமின்றி {பகைவரெவருமின்றி} இந்நாட்டை அனுபவித்தான். அவன் தீய புத்தி கொண்டவனாகவும், மூடனாகவும் இருந்தாலும், உங்களுக்கு எத்தீங்கையும் செய்ததில்லை.(4) எனினும், தீய புத்தி கொண்ட அந்த இளவரசனின் குற்றத்தாலும், அவனது செருக்காலும், என்னுடைய அநீதியினாலும் அரச வகையைச் சேர்ந்த மனிதர்களுக்குப் பேரழிவு ஏற்பட்டது.(5) அக்காரியத்தில் நான் சரியாகச் செயல்பட்டிருந்தாலும், தவறாகச் செயல்பட்டிருந்தாலும், அது குறித்து உங்கள் இதயங்களில் இருக்கும் நினைவுகளை அகற்றிவிடுமாறு கூப்பிய கரங்களுடன் நான் உங்களை வேண்டுகிறேன்.(6)
“இவன் முதியவன்; இவன் தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தவன்; இவன் துன்பத்தால் பீடிக்கப்பட்டவன்; இவன் நம் மன்னன்; இவன் முந்தைய மன்னர்களின் வழித்தோன்றல்” என்பன போன்ற கருத்துகள் என்னை மன்னிக்கும்படி உங்களைத் தூண்ட வேண்டும்.(7) காந்தாரியும் உற்சாகமற்றவளாகவும், முதியவளாகவும் இருக்கிறாள். அவளும் தன் பிள்ளைகளை இழந்து ஆதரவற்றவளாக இருக்கிறாள். மகன்களை இழந்த துக்கத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் அவளும் என்னுடன் சேர்ந்து உங்களை வேண்டுகிறாள்.(8) எங்கள் இருவரையும் முதியவர்களாகவும், பீடிக்கப்பட்டவர்களாகவும், பிள்ளைகளை இழந்தவர்களாகவும் அறிந்து கொண்டு நாங்கள் வேண்டும் அனுமதியை எங்களுக்குக் கொடுப்பீராக.(9)
குரு {குருஜங்காலத்தின்} மன்னனும், குந்தியின் மகனுமான இந்த யுதிஷ்டிரன், செழிப்பிலும், வறுமையிலும் உங்கள் அனைவராலும் கவனித்துக் கொள்ளப்பட வேண்டும்.(10) அளவில்லா ஆற்றல் கொண்ட நான்கு சகோதரர்களைத் தன் ஆலோசகர்களாகக் கொண்ட அவன் ஒருபோதும் துன்பத்தில் வீழமாட்டான். அறம், பொருள் இரண்டையும் அறிந்தவர்களான அவர்கள் அனைவரும், லோகபாலர்களுக்கு ஒப்பானவர்களாவர்.(11) வலிமையும், சக்தியும் கொண்ட இந்த யுதிஷ்டிரன், அண்டத்தின் உயிரினங்களுடைய தலைவனான சிறப்புமிக்கப் பிரம்மனைப் போலவே உங்களை ஆள்வான்.(12)
நிச்சயம் சொல்லப்பட வேண்டியதையே நான் இப்போது சொன்னேன். நான் உங்களிடம் இந்த யுதிஷ்டிரனை அடைக்கலமாக ஒப்படைக்கிறேன். இந்த வீரனிடம் உங்களையும் அடைக்கலமாக ஒப்படைக்கிறேன்.(13) இப்போது உயிரோடு இல்லாத என் மகன்களாலோ, உண்மையில் என்னைச் சார்ந்தவர்கள் எவராலோ உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கெதனையும் மன்னித்து மறப்பதே உங்கள் அனைவருக்கும் தகும்.(14) முன்னர் எச்சந்தர்ப்பத்திலும் நீங்கள் எனக்கு எதிரான கோபத்தை ஒருபோதும் வளர்த்ததில்லை. மாறாப்பற்றிற்கு {விசுவாசத்திற்கு} புகழ்பெற்ற உங்கள் முன் நான் என் கைகளைக் கூப்புகிறேன். இதோ நான் உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்.(15) பாவமற்றவர்களே, சஞ்சல புத்தி கொண்டவர்களும், பேராசையெனும் களங்கமுடையவர்களும், ஆசைகளுடைய தூண்டலின்படியே எப்போதும் செயல்பட்டவர்களுமான என் மகன்களால் செய்யப்பட்ட எதற்காகவும் நானும், என் அருகில் இருக்கும் காந்தாரியும் உங்களிடம் மன்னிப்பை வேண்டுகிறோம்” என்றான் {திருதராஷ்டிரன்}.(16)
அந்த முதிய ஏகாதிபதியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், குடிமக்கள் மற்றும் மாகாணத்துவாசிகள் அனைவரும், கண்ணீரால் நிறைந்தவர்களாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே ஒன்றும் பேசாதிருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(17)
குடிமக்களின் ஒப்புதல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 10- ஒரு பிராமணர் மூலம் திருதராஷ்டிரனைத் தேற்றி, காட்டுக்குச் செல்வதற்குப் பெரும் வருத்தத்துடன் அனுமதி கொடுத்த குருஜாங்கலத்தார்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! குரு குலத்தோனே, முதிய மன்னனால் {திருதராஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட குடிமக்களும், மாகாணவாசிகளும், நினைவிழந்த மனிதர்களைப் போலச் சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.(1) அவர்கள் துயரால் அடைக்கப்பட்ட தொண்டைகளுடன், அமைதியாக இருப்பதைக் கண்ட மன்னன் திருதராஷ்டிரன், மீண்டும் அவர்களிடம்,(2) “மனிதர்களில் சிறந்தவர்களே, இந்நாட்டில் அறம் சார்ந்து வசிப்போரே, முதிர்ந்தவனும், மகனற்றவனும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடியவனுமான நான், என் மனைவியுடன் {காந்தாரியுடன்} சேர்ந்து பல்வேறு வகை புலம்பல்களில் ஈடுபட்டு(3) காட்டுக்கு ஓய்ந்து செல்லும் காரியத்தில், என் தந்தையும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்} மற்றும் அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனான யுதிஷ்டிரன் ஆகியோரின் அனுமதியைப் பெற்றேன்.(4) பாவமற்றவர்களே, நானும், காந்தாரியும் தலை வணங்கி உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். எங்களுக்கு அனுமதி அளிப்பதே உங்கள் அனைவருக்கும் தகும்” என்றான் {திருதராஷ்டிரன்}”.(5)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, குரு மன்னன் சொன்ன இந்தப் பரிதாபத்திற்குரிய சொற்களைக் கேட்டு, அங்கே கூடியிருந்த குருஜாங்கலவாசிகள் அனைவரும் அழத் தொடங்கினர்.(6) தங்கள் கரங்களாலும், மேலாடைகளாலும் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்ட அம்மனிதர்கள் அனைவரும், (தங்களை விட்டு நிரந்தரமாகச் செல்லப்போகும் அன்புக்குரிய மகனைக் காணும்) தந்தைமாரையும், தாய்மாரையும் போல எரியும் துயருடன் நெடுநேரம் அழுதனர்.(7) திருதராஷ்டிரன் இவ்வுலகைவிட்டு செல்ல விரும்புகிறான் என்ற கவலையை எண்ணங்கள் ஏதுமற்ற தங்கள் இதயங்களில் சுமந்திருந்த அவர்கள், நினைவை இழந்து நிற்கும் மனிதர்களைப் போலத் தெரிந்தனர்.(8)
காட்டுக்குச் செல்லும் விருப்பத்தைத் திருதராஷ்டிரன் அறிவித்ததன் மூலம் உண்டான இதயக்கலக்கத்தைத் தடுத்து, படிப்படியாகத் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நிலையை அவர்கள் அடைந்தனர்.(9) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கள் சொற்களைச் சுருக்கமாக்கி, அவற்றை ஒரு பிராமணரிடம் சொல்லி, அவரை அந்த முதிர்ந்த ஏகாதிபதிக்கு மறுமொழி கூறச் செய்தனர்.(10) கல்விமானும், நன்னடத்தைக் கொண்டவரும், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், அனைத்துக் காரியங்களையும் அறிந்தவரும், ரிக்குகள் {ரிக் வேத மந்திரங்கள்} அனைத்திலும் திறம்பெற்றவரும், சாம்பன் என்ற பெயரைக் கொண்டவருமான அந்தப் பிராமணர் அப்போது பேச முனைந்தார்.(11)
பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தன் திறன்களை நன்கறிந்தவரும், கல்விமானுமான அந்தப் பிராமணர் {சாம்பன்}, மொத்த சபையின் முழுச் சம்மதத்தையும், அனுமதியையும் பெற்றுக் கொண்டு, இச்சொற்களை அந்த மன்னனிடம் சொன்னார்:(12) {பிராமணர் சாம்பன்}, “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்தச் சபை உரைக்க வேண்டிய பதில் என் பொறுப்பில் விடப்பட்டிருக்கிறது. ஓ! வீரரே, அதற்கே நான் குரல் கொடுக்கப் போகிறேன். ஓ! மன்னா, நீர் கேட்பீராக.(13) ஓ! மன்னர்களின் மன்னா, ஓ! பலமிக்கவரே, நீர் சொல்வதனைத்தும் உண்மையே. இதில் பொய் சிறிதளவும் கிடையாது. நாங்கள் உமது நலன் விரும்பிகளாக இருப்பதைப் போலவே, நீரும் எங்கள் நலவிரும்பியாக இருக்கிறீர்.(14) உண்மையில், இந்தக் குலத்தைச் சேர்ந்த மன்னர்களில், தன் குடிமக்களிடம் செல்வாக்கில்லாமல் ஆண்டவன் எவனும் இல்லை.(15) நீர் தந்தைமாரைப் போலவோ, சகோதரன்மாரைப் போலவோ எங்களை ஆண்டீர். மன்னன் துரியோதனனும் எங்களுக்கு எதிராக எக்குற்றத்தையும் இழைத்ததில்லை.(16)
ஓ! மன்னா, சத்தியவதியின் மகனும், அற ஆன்மா கொண்டவருமான அந்தத் தவசியின் {வியாசரின்} சொற்களின்படியே செயல்படுவீராக உண்மையில் அவரே எங்களுக்கு முதன்மையான குரு ஆவார்.(17) ஓ! ஏகாதிபதி, உம்மால் விடப்படும் நாங்கள், உமது நூற்றுக்கணக்கான நற்குணங்களின் நினைவுகளால் நிறைந்து, எங்கள் நாட்களைத் துன்பத்திலும், கவலையிலும் கழிக்கப் போகிறோம்.(18) ஓ! ஏகாதிபதி, மன்னர் சந்தனு, சித்திராங்கதன், பீஷ்மரின் ஆற்றலால் பாதுகாக்கப்பட்ட உமது தந்தை {விசித்திரவீரியன்} ஆகியோரையோ, உமது ஆலோசனையின்படியே தன் செயல்கள் அனைத்தையும் செய்தவனும், பூமியின் ஆட்சியாளனுமான பாண்டுவையோ போலவே, மன்னன் துரியோதனனும் எங்களை நன்கு பாதுகாத்து ஆட்சி செய்தான்.(19,20)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, ஒருபோதும் சிறு குற்றத்தையும் எங்களுக்கெதிராக இழைத்ததில்லை. நாங்கள் எங்கள் தந்தையை நம்புவதைப் போலவே, அந்த மன்னனைச் சார்ந்து வாழ்ந்தோம்.(21) (அந்த ஆட்சியாளனின் கீழ்) நாங்கள் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதை நீர் அறிவீர். ஓ! ஏகாதிபதி, அதே போலவே பெரும் நுண்ணறிவும், ஞானமும் கொண்ட குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} ஆட்சியின் கீழும் ஆயிரம் ஆண்டுகளாக நாங்கள் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்துவருகிறோம்[1].(22) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்யும் இந்த அறம் சார்ந்த மன்னன், உமது குலத்தைச் சேர்ந்தவர்களும், புண்ணியச் செயல்களைச் செய்தவர்களும், குரு, சம்பரன் {சம்வர்ணன்}[2], பெரும் நுண்ணறிவைக் கொண்ட பரதன் உள்ளிட்ட பழங்கால அரசமுனிகளின் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறான்.(23,24)ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்த யுதிஷ்டிரனின் ஆட்சியில், நிந்திக்கத்தக்க காரியமென்று எதுவும் சிறிதளவுமில்லை. உம்மால் பாதுகாக்கப்பட்டும், ஆளப்பட்டும் நாங்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் வாழ்கிறோம்.(25) உமக்கும் உமது மகனுக்கும் எதிராகச் சிறு குறையையும் சொல்ல இயலாது. உற்றார் உறவினருக்குப் பேரழிவை ஏற்படுத்திய காரியத்தில் துரியோதனனைக் குறித்து நீர் சொன்னதைப் பொறுத்தவரையில், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்வபரே, (நான் சொல்வதை நீர் கேட்க வேண்டுமென) நான் இரந்து கேட்கிறேன்” என்றார் {பிராமணர் சாம்பன்}.(26,27)
பிராமணர் {சாம்பன்} தொடர்ந்தார், “குருக்களுக்கு நேர்ந்த அழிவு துரியோதனனால் கொண்டுவரப்பட்டதல்ல. உம்மாலும் அது கொண்டுவரப்படவில்லை. கர்ணன் மற்றும் சுபலனின் மகனாலும் {சகுனியாலும்} அது கொண்டுவரப்படவில்லை.(28) எதிர்க்கப்பட இயலாத விதியால் அது கொண்டுவரப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம். உண்மையில், மனித முயற்சியால் ஒருபோதும் விதியைத் தடுக்க முடியாது.(29) ஓ! ஏகாதிபதி, பதினெட்டு அக்ஷௌஹிணி துருப்புகள் ஒன்றாகத் திரட்டப்பட்டன. பதினெட்டு நாட்களில் அந்தக் கூட்டமானது, குருவீரர்களில் முதன்மையான பீஷ்மர், துரோணர், கிருபர், உயர் ஆன்மக் கர்ணன், வீரனான யுயுதானன் {சாத்யகி}, திருஷ்டத்யும்னன்,(30,31) பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் உள்ளிட்ட பாண்டுவின் நான்கு மகன்கள் ஆகியோரால் அழிக்கப்பட்டது. ஓ! மன்னா, விதியின் ஆதிக்கமின்றி (பயங்கரமான) இந்தப் பேரழிவு நடந்திருக்க முடியாது.(32) குறிப்பாக க்ஷத்திரியர்களால் பகைவர்கள் போரில் கொல்லப்பட வேண்டும், மரணம் ஏற்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை[3].(33)ஆயுத அறிவியலும், வலிமையும் கொண்டவர்களான அந்த மனிதர்களில் முதன்மையானவர்களால், பூமியானவள் தன் குதிரைகளையும், தேர்களையும், யானைகளையும் இழந்தாள்.(34) அந்த உயர் ஆன்ம மன்னர்களின் பேரழிவுக்கு உமது மகன் காரணமல்ல. நீரோ, உமது பணியாட்களோ, கர்ணனோ, சுபலனின் மகனோ {சகுனியோ} காரணமல்ல.(35) குருகுலத்தின் முதன்மையானவர்கள், மற்றும் ஆயிரக்கணக்கான மன்னர்களின் அழிவானது விதியாலேயே கொண்டுவரப்பட்டது என்பதை அறிவீராக. இதில் எவனாலும் வேறென்ன சொல்ல முடியும்?(36) நீரே குருவாகவும், மொத்த உலகத்தின் உரிமையாளராகவும் கருதப்படுகிறீர். எனவே, உமது முன்னிலையிலேயே நாங்கள் உமது மகன் அற ஆன்மா கொண்டவன் எனக் கொள்கிறோம்.(37) அந்த மன்னன் {துரியோதனன்}, தன் தோழர்களுடன் சேர்ந்து, வீரர்களுக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அடையட்டும். அவன், முதன்மையான பிராமணர்களால் அனுமதிக்கப்பட்டுச் சொர்க்கத்தில் அருள்நிறைந்தவனாக விளையாடட்டும்.(38) நீரும் அறம்பிறழாத உறுதியுள்ளவராகப் பெரும் புண்ணியத்தை ஈட்டப் போகிறீர். ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, வேதங்களில் குறிப்பிடப்படும் கடமைகளை முழுமையாகப் பின்பற்றுவீராக.(39) நீரோ, நாங்களோ பாண்டவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சொர்க்கங்களையே ஆள இயன்றவர்கள் எனும்போது, பூமியைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?(40)
ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே, ஒழுக்கத்தையே தங்கள் ஆபரணமாகக் கொண்ட பாண்டவர்களுக்கு நாங்கள் செழிப்பிலும், வறுமையிலும் கீழ்ப்படிந்திருப்போம்.(41) வேள்விகளிலும், ஈமச் சடங்குகளிலும் மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களுக்கு எப்போதும் கொடுக்கப்பட வேண்டிய மதிப்பு மிக்கக் கொடைகளைப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, பழங்காலத்தின் பெரும் மன்னர்கள் வழியிலேயே அளித்து வருகிறான்.(42) உயர்ந்த மனம் கொண்ட இந்தக் குந்தியின் மகன், மென்மையானவனாகவும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனாகவும், இரண்டாம் வைஸ்ரவணனை {குபேரனைப்} போலவே எப்போதும் செலவு செய்யும் மனநிலையிலும் இருக்கிறான். அவனைக் கவனித்துக் கொள்ளப் பெரும் அமைச்சர்களும் இருக்கின்றனர்.(43) அவன் தன் பகைவர்களிடமும் கருணை கொண்டவனாக இருக்கிறான். உண்மையில், அந்த முதன்மையான பாரதக் குலத்தோன், தூய ஒழுக்கம் கொண்டவனாக இருக்கிறான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன், தன் காரியங்களில் முற்றிலும் வெளிப்படையாக இருந்து, ஒரு தந்தை தன் பிள்ளைகளைக் காப்பது போல எங்களைக் காத்து ஆட்சி செய்கிறான்.(44) ஓ! அரச முனியே, தர்மனின் மகனுடன் ஏற்படும் தொடர்பால் பீமனும், அர்ஜுனனும், பிறரும் எங்களுக்கு ஒரு போதும் சிறு குற்றத்தையும் இழைத்ததில்லை.(45)
ஓ! குரு குலத்தைச் சேர்ந்தவரே, மென்மையானவர்களிடம் மென்மையாகவும், கடுமையானவர்களிடம் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்று கடுமையானவர்களாகவும் அவர்கள் நடந்து கொள்கின்றனர். பெருஞ்சக்தி கொண்ட அந்த உயர் ஆன்மாக்கள் எப்போதும் மக்களின் நன்மையிலேயே அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர்.(46) குந்தியோ, (உமது மருமகள்) பாஞ்சாலியோ, உலூபியோ, சாத்வதகுல இளவரசியோ {சுபத்திரையோ}, இந்த மக்களுக்குச் சிறு குற்றத்தையும் செய்யமாட்டார்கள்[4].(47) எங்களிடம் நீர் காட்டிய பரிவும், யுதிஷ்டிரன் கொண்டிருக்கும் அன்பும், இந்த நகரத்து மற்றும் மாகாணத்து மக்களால் ஒருபோதும் மறக்கமுடியாத அளவுக்குப் பெரிய அளவில் இன்னும் நீடித்திருக்கின்றன.(48) குந்தியின் மகன்களும், அறக்கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், இந்த மக்கள் அறமற்றவர்களாக இருப்பினும் அவர்கள் பாதுகாத்துப் பேணி வளர்ப்பார்கள்.(49) எனவே, ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, யுதிஷ்டிரன் குறித்து உமது இதயத்தில் இருக்கும் கவலைகள் அனைத்தையும் விலக்கி, புண்ணியச் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் உம்மை நிறுவிக் கொள்வீராக” என்றார் {பிராமணர் சாம்பன்}”.(50)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்தச் சபையில் இருந்தோர் ஒவ்வொருவரும், அறமும், தகுதியும் நிறைந்த அந்தப் பிராமணரின் சொற்களைக் கேட்டு, அங்கீகரித்து, “நன்று, நன்று” என்று சொல்லி அவற்றைத் தன்னுடைய சொற்களாகவே ஏற்றனர்.(51) திருதராஷ்டிரனும், அந்தச் சொற்களை மீண்டும் மீண்டும் புகழ்ந்து, தன் குடிமக்களுக்கு மெதுவாக விடை கொடுத்தனுப்பினான்.(52) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, அவர்களால் இவ்வாறு கௌரவிக்கப்பட்டு, அவர்களது மங்கலப் பார்வைகளைப் பெற்ற அந்த முதிர்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் கைகளைக் கூப்பி அவர்கள் அனைவரையும் பதிலுக்குக் கௌரவித்தான்.(53) அதன் பிறகு அவன் காந்தாரியுடன் தன் மாளிகைக்குள் நுழைந்தான். அந்த இரவு கழிந்ததும் அவன் என்ன செய்தான் என்பதை இனி கேட்பாயாக” {என்றார் வைசம்பாயனர்}.(54)
பீமனின் கோபம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 11-பீஷ்மர் முதலியோருக்குச் சிராத்தஞ்செய்யப் பொருள் வேண்டிய திருதராஷ்டிரன்; கொடுக்க மறுத்த பீமன்; அர்ஜுனன் கொடுக்க வேண்டும் என்று சொன்னது; அர்ஜுனனை மெச்சிய யுதிஷ்டிரன்; அர்ஜுனனிடம் கோபமாகப் பேசிய பீமன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்த இரவு கடந்ததும், அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனின் மாளிகைக்கு விதுரனை அனுப்பினான்.(1) பெருஞ்சக்தி கொண்டவனும், நுண்ணறிவு பெற்ற மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான விதுரன், யுதிஷ்டிரனின் மாளிகைக்கு வந்து, மனிதர்களில் முதன்மையானவனும், மங்கா மகிமை கொண்டவனுமான அந்த மன்னனிடம், இந்தச் சொற்களில்,(2) “மன்னர் திருதராஷ்டிரர், காட்டுக்கு ஓய்ந்து செல்லும் காரியத்தை நிறைவேற்றுவதற்குரிய தொடக்கச் சடங்குகளைச் செய்ய வேண்டும். ஓ! மன்னா, கார்த்திகை மாதம் முழு நிலவு {பௌர்ணமி} நாளில் அவர் {திருதராஷ்டிரர்} காட்டுக்குப் புறப்பட இருக்கிறார்[1].(3) ஓ! குருக்களில் முதன்மையானவனே, அவர் உன்னிடம் இருந்து சிறிது செல்வத்தை வேண்டுகிறார். உயர் ஆன்ம கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, துரோணர், சோமதத்தன், பெரும் நுண்ணறிவைக் கொண்ட பாஹ்லீகர், கொல்லப்பட்ட அவருடைய அனைத்து மகன்கள் மற்றும் நலன்விரும்பிகள், தீய ஆன்மா கொண்டவனும், இழிந்தவனுமான சிந்துக்களின் ஆட்சியாளனுக்கும் {ஜெயத்ரதனுக்கும்} சிராத்தம் செய்ய விரும்புகிறார்” என்றான்.(5)விதுரனின் இந்தச் சொற்களைக் கேட்ட யுதிஷ்டிரன் மற்றும் சுருள்முடி கொண்டவனான அர்ஜுனன் ஆகிய இருவரும் அவற்றை உயர்வாக மெச்சினர்.(6) எனினும், பெருஞ்சக்தி கொண்டவனும், தணிக்க இயலாத கோபத்தைக் கொண்டவனுமான பீமன், துரியோதனனின் செயல்களை நினைவுகூர்ந்தவனாக விதுரனின் அந்தச் சொற்களை நல்லூக்கத்துடன் ஏற்றுக் கொள்ளவில்லை. கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, பீமசேனனின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு, சற்றே தன் தலையைக் கீழே தொங்கப்போட்டவாறு, மனிதர்களில் முதன்மையானவனான அவனிடம் இந்தச் சொற்களில் பேசினான்: “ஓ! பீமரே, வயதில் முதிர்ந்தவரான நமது அரசத் தந்தை காட்டுக்கு ஓய்ந்து செல்லத் தீர்மானித்திருக்கிறார்.(7-9) கொல்லப்பட்டவர்களான தமது உற்றார் உறவினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் மறுமையில் அடையும் மகிழ்ச்சியை அதிகரிப்பதற்காக அவர் கொடையளிக்க விரும்புகிறார். ஓ! குருகுலத்தைச் சார்ந்தவரே, உம்மால் வெல்லப்பட்டு உமக்குரியதாக இருக்கும் செல்வதை அவர் கொடையளிக்க விரும்புகிறார்.(10)
உண்மையில், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, அந்த முதிர்ந்த மன்னர் பீஷ்மர் மற்றும் பிறரின் நிமித்தமாக இந்தக் கொடைகளை அளிக்க விரும்புகிறார். அதற்கு அனுமதி அளிப்பதே உமக்குத் தகும். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, முன்பு நம்மால் இரந்து கேட்கப்பட்டவர், இப்போது நம்மிடம் இரந்து கேட்பது நற்பேற்றினாலேயே நேர்கிறது. காலம் கொண்டு வந்த மாற்றத்தைப் பாரும். எந்த மன்னன் முன்பு மொத்த பூமியின் தலைவனாகவும், பாதுகாவலனாகவும் இருந்தோரோ,(11,12) எவருடைய உற்றார் உறவினர் மற்றும் துணைவர்கள் பகைவர்களால் கொல்லப்பட்டனரோ, அவர் இப்போது காடுகளுக்குச் செல்ல விரும்புகிறார். ஓ! மனிதர்களின் தலைவா, கேட்கப்படும் அனுமதியைக் கொடுப்பதிலிருந்து உமது கருத்து விலக வேண்டாம்.(13) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, மறுப்பது புகழ்க்கேட்டையும், பாவத்தையும் கொண்டுவரும். இக்காரியத்தில் நீர், அனைவருக்கும் தலைவரும், நமது அண்ணனுமான மன்னனிடமிருந்து கற்பீராக.(14) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மறுப்பதைவிடக் கொடுப்பதே உமக்குத் தகும்” என்றான் {அர்ஜுனன்}. இவ்வாறு சொன்ன பீபத்சுவை {அர்ஜுனனை} நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மெச்சினான்.(15)
கோபவசப்பட்ட பீமசேனன், இந்தச் சொற்களில், “ஓ! பல்குனா {அர்ஜுனா}, பீஷ்மர், மன்னர் சோமதத்தர், பூரிஸ்ரவஸ், அரசமுனியான பாஹ்லீகர், உயர் ஆன்ம துரோணர் மற்றும் பிறர் அனைவரின் ஈமச்சடங்குகளுக்காக நாம் கொடையளிக்கலாம்.(16,17) நம் அன்னை குந்தி, கர்ணனுக்கான ஈமக்காணிக்கைகளை அளிப்பாள். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அந்தச் சிராத்தங்களைத் திருதராஷ்டிரர் செய்ய வேண்டாம்.(18) இதையே நான் நினைக்கிறேன். நமது பகைவர்கள் மகிழ வேண்டாம். துரியோதனனும், பிறரும் மேலும் மேலும் படு பயங்கர நிலைக்குள் மூழ்கட்டும்.(19) ஐயோ, குலத்தில் இழிந்தவர்களான அவர்களே மொத்த பூமியையும் அழித்தவர்கள். பனிரெண்டு வருடங்கள் நீண்ட கடுங்கவலையையையும்,(20) திரௌபதிக்குத் துன்பம் நிறைந்ததாக அமைந்த ஒருவருட தலைமறைவு வாழ்வையும் உன்னால் எவ்வாறு மறக்க முடிந்தது? திருதராஷ்டிரர் நம்மிடம் கொள்ளும் இந்த அன்பு அப்போது எங்கிருந்தது?(21)
கருப்பு மான்தோலை உடுத்தி, உன் ஆபரணங்கள் அனைத்தையும் அகற்றி, பாஞ்சால இளவரசியையும் {திரௌபதியையும்} அழைத்துக் கொண்டு நீ இந்த மன்னனை {யுதிஷ்திரரைப்} பின் தொடர்ந்து செல்லவில்லையா?(22) அப்போது பீஷ்மரும், துரோணரும் எங்கிருந்தனர்? சோமதத்தர் எங்கிருந்தார்? நீ பதிமூன்று வருடங்கள் காட்டு விளைச்சலை உண்டு வாழ வேண்டிருந்ததே.(23) உன்னுடைய பெரிய தந்தை, அப்போது தந்தைக்குரிய அன்புக்கண்களுடன் உன்னைப் பார்க்கவில்லையே. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பகடையாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, விதுரரிடம், “வெல்லப்பட்டதென்ன?” என்று நம் குலத்தில் இழிந்தவரும், தீய புத்தி கொண்டவருமான இவர்தான் கேட்டுக் கொண்டிருந்தார் என்பதை நீ மறந்துவிட்டாயா?” என்றான் {பீமன்}. இவ்வளவு வரை கேட்டுக் கொண்டிருந்தவனும், குந்தியின் மகனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் யுதிஷ்டிரன், அவனை {பீமனை} அதட்டி, அமைதியாக இருக்கும்படி சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(24,25)
யுதிஷ்டிரனின் ஒப்புதல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 12-சிராதத்தத்துக்குப் பொருள் கொடுக்க மறுத்த பீமன்; தன் கருவூலத்தில் இருந்து எடுத்துக்கொள்ளுமாறு திருதராஷ்டிரனுக்குச சொல்லி அனுப்பிய யுதிஷ்டிரன்…
அர்ஜுனன், “ஓ! பீமரே, நீர் என் அண்ணனாகவும், எனக்குப் பெரியவராகவும், ஆசானாகவும் இருக்கிறீர். நான் ஏற்கனவே சொன்னதைவிட அதிகம் சொல்லத் துணியேன். அரசமுனியான திருதராஷ்டிரர் அனைத்து வகையிலும் நம் மதிப்புக்குத் தகுந்தவர்.(1) நல்லோரும், பொதுவான மட்டத்திற்கு மேலே புகழடைந்தவர்களும், நல்லதைக் குறிக்கும் வேறுபாடுகளை உடைக்காதவர்களும், தங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளை மட்டுமே நினைப்பதில்லை, தாங்கள் அடைந்த நன்மைகளையும் நினைப்பர்” என்றான்.(2)
உயர் ஆன்ம பல்குனனின் இந்தச் சொற்களைக் கேட்டவனும், அற ஆன்மா கொண்டவனும், குந்தியின் மகனமான யுதிஷ்டிரன், விதுரனிடம் இந்தச் சொற்களில்,(3) “ஓ! க்ஷத்ரி, குரு மன்னரின் மகன்கள், பீஷ்மர், அவரது நலன் விரும்பிகள், அவருக்கு நன்மை செய்தவர்கள் மற்றும் பிறருக்கான ஈமச்சடங்குகளுக்குத் தேவையான செல்வத்தை என் கருவூலத்தில் இருந்து நான் கொடுப்பேனென நான் சொன்னதாக அவரிடம் {திருதராஷ்டிரரிடம்} சொல்வீராக. இதில் பீமன் உற்சாகமிழக்க வேண்டியதில்லை” என்றான்”.(4,5)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்தச் சொற்களைச் சொன்னவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அர்ஜுனனை உயர்வாக மெச்சினான். அதே வேளையில் பீமசேனன் தனஞ்சயன் மீது தன் கோபப்பார்வைகளை வீசத் தொடங்கினான்.(6) அப்போது, பெரும் நுண்ணறிவைக் கொண்ட யுதிஷ்டிரன், மீண்டும் விதுரனிடம், “மன்னர் திருதராஷ்டிரர் பீமசேனனிடம் கோபம் கொள்வது அவருக்குத் தகாது.(7) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான இந்தப் பீமன், காட்டில் வசித்தபோது, குளிர், மழை, வெப்பம் ஆகியவற்றால் பெரிதும் பீடிக்கப்பட்டவனாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான துன்பங்களை அடைந்தவனாகவும் இருக்கிறான். இவை யாவும் நீர் அறியாதனவல்ல.(8) எனினும், ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே, என் வீட்டில் இருந்து மன்னர் விரும்பும் பொருட்களை, அவர் விரும்பும் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று நான் சொன்னதாக அவரிடம் சொல்வீராக.(9)
பெரிதும் துன்பமடைந்த பீமன் வெளிப்படுத்தும் செருக்கை அவரது இதயத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் நீர் அம்மன்னருக்குச் சொல்ல வேண்டும்.(10) நான் கொண்டிருக்கும் செல்வமெதற்கும், அர்ஜுனன் வீட்டில் இருக்கும் எதற்கும் மன்னர் திருதராஷ்டிரரே உரிமையாளராவார். இதையும் நீர் அவருக்குச் சொல்ல வேண்டும்.(11) மன்னர், பிராமணர்களுக்குக் கொடைகளை அளிக்கட்டும். அவர் விரும்பிய அளவில் பெரிதாகச் செலவு செய்யட்டும். அவர் தமது மகன்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடட்டும்.(12)
அதையும் தவிர, ‘ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, என்னுடைய இந்த உடலும், நான் கொண்டிருக்கும் செல்வம் அனைத்தும் உமதே. இதை அறிவீராக. இதில் ஐயமேதும் கொள்ள வேண்டும்’ என்றும் அவரிடம் சொல்வீராக” என்றான் {யுதிஷ்டிரன்}”.(13)
நிறைவடைந்த திருதராஷ்டிரன்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 13-பொருள் கொடுப்பதற்கு யுதிஷ்டிரன் சம்மதித்ததைத் திருதராஷ்டிரனிடம் தெரிவித்த விதுரன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இவ்வாறு மன்னன் யுதிஷ்டிரனால் சொல்லப்பட்டவனும், நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான விதுரன், திருதராஷ்டிரனிடம் சென்று, சிறந்த பொருள்ள இந்தச் சொற்களை அவனிடம் சொன்னான்.(1) {விதுரன்}, “முதலில் நான் மன்னன் யுதிஷ்டிரனிடம் உமது செய்தியைச் சொன்னேன். உமது சொற்களைக் குறித்துச் சிந்தித்து, அவற்றை உயர்வாக மெச்சினான்.(2) பெருஞ்சக்தி கொண்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, தன் மாளிகைகள், தன் உயிர் மூச்சு உட்பட அவற்றிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் உமது வசம் வைத்திருக்கிறான்.(3) ஓ! அரச முனியே {திருதராஷ்டிரரே}, உமது மகனான மன்னன் யுதிஷ்டிரனும், தன் நாட்டையும், உயிர் மூச்சையும், செல்வத்தையும், தனக்குரிய அனைத்தையும் உமக்குக் கொடுக்க முன் வருகிறான்.(4)
எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், எண்ணற்றவையான தன் கவலைகள் அனைத்தையும் நினைவுகூர்ந்து, பெருமூச்சுகள் பலவற்றை விட்டபடியே பெருஞ்சிரமத்துடன் தன் சம்மதத்தை அளித்தான்.(5) ஓ! ஏகாதிபதி, அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {பீமன்}, உம்மிடம் நல்லுறவைப் பேணும்படி அறமன்னனாலும் {யுதிஷ்டிரனாலும்}, பீபத்சுவாலும் {அர்ஜுனனாலும்} வேண்டவும், தூண்டவும்பட்டான்.(6) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பழைய பகைமைகளை நினைவுகூர்ந்து பீமன் வெளிப்படுத்தும் முறையற்ற நடத்தையினால் சோர்வடைய வேண்டாம் என உம்மை வேண்டிக் கேட்டுக் கொண்டான்.(7)
{யுதிஷ்டிரன்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே, இதுவே போரில் பொதுவாக க்ஷத்திரியர்களின் நடத்தையாகும், இந்த விருகோதரன் {பீமன்}, போரிலும், க்ஷத்திரிய நடைமுறைகளிலும் அர்ப்பணிப்புள்ளவன் ஆவான்.(8) ஓ! மன்னா, நானும், அர்ஜுனனும் சேர்ந்து விருகோதரனை மன்னிக்குமாறு உம்மை மீண்டும் மீண்டும் இரந்து கேட்கிறோம். எங்களுக்கு அருள் புரிவீராக. நீரே எங்கள் தலைவராவீர். ஓ! பூமியின் ஆட்சியாளரே நாங்கள் கொண்டுள்ள செல்வத்தில் நீர் விரும்புவனவற்றை நீர் கொடையளிக்கலாம். ஓ! பாரதரே, இந்த நாட்டிற்கும், இதில் வாழும் அனைவருக்கும் நீரே தலைவராவீர்” {என்று உம்மை வேண்டிக் கொண்டான்}.(9,10)
{பிறகு என்னை நோக்கி}, குரு குலத்தில் முதன்மையான அவர் {திருதராஷ்டிரர்}, தமது மகன்களின் ஈமச் சடங்குகளுக்காகப் பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டிய முதன்மையான கொடைகள் அனைத்தையும் கொடுக்கட்டும். உண்மையில், எங்கள் மாளிகைகளில் இருந்து ரத்தினங்கள், பசுக்கள், ஆண் மற்றும் பெண் பணியாட்கள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை எடுத்துக் கொண்டு அந்த மறுபிறப்பாள வகையினருக்குக் கொடைகளை அளிக்கட்டும். அவர் ஈகைக்கெனத் தான் விரும்பும் பொருட்களைத் தேர்ந்தெடுத்து, ஏழைகள், பார்வையற்றோர், பெருந்துயரில் இருப்போர் ஆகியோருக்குக் கொடையளிக்கட்டும்.(11,12)
ஓ! விதுரரே, அபரிமிதமாகத் திரட்டப்பட்ட உணவு, பல்வேறு சுவைகளைக் கொண்ட பானங்கள் ஆகியவற்றுடன் கூடிய பெரிய அரங்கங்கள் கட்டப்படட்டும். பசுக்கள் குடிப்பதற்கான தொட்டிகளும் கட்டப்பட வேண்டும், புண்ணியம் தரும் பிற வேலைகளும் செய்யப்பட வேண்டும் {என்று யுதிஷ்டிரன் என்னிடம் சொன்னான்}. இவையே மன்னனாலும், பிருதையின் மகனான தனஞ்சயனாலும் எனக்குச் சொல்ல்லப்பட்ட சொற்களாகும். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான் {விதுரன்}.(14)
ஓ! ஜனமேஜயா, விதுரன் இச்சொற்களைச் சொன்ன பிறகு, அவற்றில் தன் நிறைவை வெளிப்படுத்திய திருதராஷ்டிரன், கார்த்திகை மாத முழு நிலவு நாளில் பெருங்கொடைகளை அளிப்பதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(15)
தானயஜ்ஞம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 14-சிராத்தம் செய்து, உணவு மற்றும் பானத்தால் பிராமணர்களை நிறைவடையச் செய்த திருதராஷ்டிரன்; திருதராஷ்டிரன் கேட்டதைவிடப் பத்து மடங்கு கொடுத்த யுதிஷ்டிரன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஏகாதிபதி, இவ்வாறு விதுரனால் சொல்லப்பட்ட மன்னன் திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன் மற்றும் ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்} செயல்களால் உயர்வான நிறைவையடைந்தான்.(1) பீஷ்மருக்காகவும், தன் மகன்கள் மற்றும் நண்பர்களுக்காகவும், உரிய சோதனைகளுக்குப் பிறகு தகுந்த பிராமணர்களை அழைத்து, மேன்மையான முனிவர்களையும் அழைத்து,(2) பெரும் அளவிலான உணவையும், பானத்தையும் தயாரிக்கச் செய்து, தேர்கள், வாகனங்கள், துணிமணிகள், தங்கம், ஆபரணங்கள், ரத்தினங்கள், ஆண் மற்றும் பெண் பணியாட்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், விரிப்புகள் மற்றும் விலைமதிப்புமிக்கப் பொருட்களைத் திரட்டி,(3) கிராமங்கள், வயல்கள் மற்றும் பிறவகைச் செல்வங்களைத் தயாராக வைத்துக் கொண்டு, யானைகள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் ஆகியவற்றையும், பெண்களில் சிறந்த அழகிய கன்னிகைகளையும்,(4) இறந்து போனோரின் பெயர்களைச் சொல்லி அவர்களின் முன்னேற்றத்திற்காக அந்த மன்னர்களில் முதன்மையானவன் {திருதராஷ்டிரன்} கொடையளித்தான். துரோணர், பீஷ்மர், சோமதத்தன், பாஹ்லீகர்,(5) மன்னன் துரியோதனன் மற்றும் தன்னுடைய வேறு மகன்கள் ஒவ்வொருவரின் பெயரையும், ஜெயத்ரதன் முதலிய தன் நலன்விரும்பிகள் அனைவரின் பெயர்களையும் சொல்லி உரிய முறையில் அந்தக் கொடைகள் அளிக்கப்பட்டன.(6)
யுதிஷ்டிரனின் அனுமதியின் பேரில் நடந்த அந்தச் சிராத்தவேள்வியில், பெருமளவிலான செல்வங்கள் மற்றும் அபரிமிதமான ரத்தினங்கள், ஆபரணங்கள் மற்றும் வேறு வகைச் செல்வங்கள் கொடையளிக்கப்பட்டன.(7) அந்தச் சந்தர்ப்பத்தில் யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில் கணக்கர்கள் மற்றும் எழுத்தர்கள் ஆகியோர், அந்த முதிர்ந்த மன்னனிடம் இடையறாமல்,(8) “ஓ! ஏகாதிபதி, இவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கொடைகள் என்னென்ன என்று ஆணையிடுவீராக. அனைத்துப் பொருட்களும் இங்கே தயாராக இருக்கின்றன” என்று கேட்டுக் கொண்டிருந்தனர். மன்னன் சொன்னதும், அவனால் சொல்லப்பட்டதை அவர்கள் கொடுத்தார்கள்[1].(9) குந்தியின் அரச மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} ஆணையின் பேரில், நூறு பெற இருந்தவன் ஆயிரம்பெற்றான், ஆயிரம் பெற இருந்தவன், பத்தாயிரம் பெற்றான்[2].(10)மேகங்கள் தாங்கள் பொழியும் மழையால் பயிர்களை விளையச் செய்வதைப் போல அந்த அரச மேகமும், செல்வமெனும் மழையைப் பொழிந்ததன் மூலம் பிராமணர்களை நிறைவடையச் செய்தது.(11) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, அந்தக் கொடைகள் அனைத்தும் கொடுக்கப்பட்ட பிறகு, நான்கு வகையைச் சேர்ந்தவர்களும், அங்கே கூடியிருந்தவர்களுமான விருந்தினர்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் உணவையும், பல்வேறு சுவைகளுடன் கூடிய பானங்களெனும் பெரும் வெள்ளத்தில் அவர்களை மூழ்கும்படி செய்தான்.(12)
உண்மையில், அந்தத் திருதராஷ்டிரப் பெருங்கடலானது, ரத்தினங்களை உயர்ந்து பெருகும் நீராகக் கொண்டும், கிராமங்கள் மற்றும் விளைநிலங்களை வளமாகவும், வேறு முதன்மையான கொடைகளைத் தன் முன்னணித் தீவுகளாகவும், விலைமதிப்புமிக்கப் பல்வேறு வகைப் பொருட்களின் குவியல்களை வளமிக்கக் குகைளாகவும், யானைகளையும், குதிரைகளையும் தன் முதலைகளாகவும், சுழிகளாகவும், மிருதங்க ஒலிகளைத் தன் ஆழ்ந்த முழக்கமாகவும், துணிமணிகள், செல்வம் மற்றும் விலைமதிப்பு மிக்கக் கற்களைத் தன் அலைகளாகவும் கொண்டு பூமியை மூழ்கடித்தது.(13,14) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவ்வழியிலேயே அந்த ஏகாதிபதி, மறுமையில் உள்ள தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், பித்ருக்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காகவும், தனக்காகவும் காந்தாரிக்காகவும் கொடைகளை அளித்தான்.(15)
இறுதியாக, இவ்வளவு அபரிமிதமான கொடைகளை அளிக்கும் பணியில் அவன் களைப்படைந்தபோது, அந்தப் பெரும் கொடை வேள்வி ஒரு முடிவுக்கு வந்தது.(16) இவ்வாறே அந்தக் குருகுலத்தின் மன்னன் தன் கொடை வேள்வியை {தானயஜ்ஞத்தைச்} செய்தான். அந்தச் சந்தர்ப்பத்தில் நடிகர்களும், நடனக்கலைஞர்களும் தொடர்ந்து ஆடிப்பாடி அங்கே இருந்த விருந்தினர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தனர்.(17) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இவ்வாறு பத்து நாட்கள் கொடையளித்த அம்பிகையின் அரச மகன் {திருதராஷ்டிரன்}, தன் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்குத் தான் பட்ட கடன்களில் இருந்து விடுபட்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(18)
திருதராஷ்டிரன் புறப்பாடு! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 15-திருதராஷ்டிரன் காந்தாரியின் தோளையும், காந்தாரி குந்தியின் தோளையும் பற்றிக் கொண்டு காடு நோக்கிப் புறப்பட்டது; அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மக்கள்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “காடுகளுக்குத் தான் புறப்பட வேண்டிய நேரத்தைத் தீர்மானித்த அம்பிகையின் அரச மகன் திருதராஷ்டிரன், வீரர்களான பாண்டவர்களை அழைத்தான்.(1) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முதிர்ந்த ஏகாதிபதி, காந்தாரியுடன் சேர்ந்து அந்த இளவரசர்களை அழைத்தான். கார்த்திகை மாதத்தின் முழுநிலவு நாளான அன்று வேதங்கள் அறிந்த பிராமணர்களைச் சிறு சடங்குகளைச் செய்ய வைத்த அவன்,(2) தான் தினமும் வழிபடும் நெருப்பை எடுத்து வரச் செய்தான். தன் வழக்கமான ஆடைகளைக் கைவிட்டு மான்தோலையும், மரவுரியையும் அணிந்து கொண்டு, தன் மருமகள்கள் துணையுடன் அந்த மாளிகையைவிட்டுப் புறப்பட்டான்.(3)
விசித்திரவீரியனின் அரச மகன் {திருதராஷ்டிரன்} இவ்வாறு புறப்பட்ட போது, பாண்டவ மற்றும் கௌரவப் பெண்மணிகளும், கௌரவக் குலத்தைச் சேர்ந்த வேறு பெண்மணிகளும் உரக்க ஓலமிட்டனர்.(4) மன்னன், தான் வாழ்ந்த அந்த மாளிகையைப் பொரி மற்றும் பல்வேறு வகைகளிலான சிறந்த மலர்களைக் கொண்டு வழிபட்டான். மேலும் அவன் செல்வக்கொடைகளால் தன் பணியாட்கள் அனைவரையும் கௌரவித்து, அந்த வசிப்பிடத்தைவிட்டு வெளியே வந்து பயணத்தில் புறப்பட்டான்.(5)
அப்போது, ஓ! மகனே, மன்னன் யுதிஷ்டிரன், மேனியங்கும் நடுங்கியவாறு, கண்ணீரால் தடை பட்ட உரத்த குரலுடன் இந்தச் சொற்களைச் சொன்னான், “ஓ! அறம்சார்ந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீர் எங்கே செல்லபோகிறீர்?” என்று சொல்லி மயக்கமடைந்து கீழே விழுந்தான்.(6)
பெருந்துன்பத்தில் எரிந்து கொண்டிருந்த அர்ஜுனன் மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தான். பாரதக் குல இளவரசர்களில் முதன்மையான அவன் {அர்ஜுனன்}, இவ்வாறான முறையில் நடந்து கொள்ளக்கூடாது என்று யுதிஷ்டிரனிடம் சொல்லி உற்சாகமற்றவனாகவும், துன்பத்தில் மூழ்கிய இதயம் கொண்டவனாகவும் நின்று கொண்டிருந்தான்.(7) விருகோதரன் {பீமன்}, வீரப் பல்குனன் {அர்ஜுனன்}, மாத்ரியின் இரு மகன்கள் {நகுல சகாதேவன்}, விதுரன், சஞ்சயன், வைசிய மனைவி மூலம் திருதராஷ்டிரனுக்குப் பிறந்த மகன் {யுயுத்சு}, கிருபர், தௌமியர் மற்றும் பிற பிராமணர்கள் அனைவரும், துயரால் தடைபட்ட குரல்களுடன் அந்த முதிர்ந்த ஏகாதிபதியைப் பின்தொடர்ந்து சென்றனர்.(8) கண்களைக் கட்டிக் கொண்டு நடந்த காந்தாரியின் கைகளைத் தன் தோள்களில் சுமந்து கொண்டு குந்தி முன் சென்றாள். மன்னன் திருதராஷ்டிரன், தன் கைகளைக் காந்தாரியின் தோள்களில் வைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் நடந்தான்[1].(9) துருபதன் மகள் கிருஷ்ணை {திரௌபதி}, சாத்வதக் குலத்தவள் {சுபத்திரை}, சமீபத்தில் தாயான கௌரவர்களின் மருமகள் உத்தரை[2], சித்திராங்கதை மற்றும் அரச குடும்பத்தின் மற்ற பெண்கள் ஆகியோர் அனைவரும் அந்த முதிர்ந்த ஏகாதிபதியுடன் {திருதராஷ்டிரனுடன்} சென்றனர்.(10)ஓ! மன்னா, அந்தச் சந்தர்ப்பத்தில் துன்பத்தால் ஏற்பட்ட அவர்களது ஓலம், பெண் அன்றில் {குரரி பறவை} கூட்டத்தின் உரத்த கதறல்களுக்கு ஒப்பானதாக இருந்தது. அப்போது, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் அடங்கிய குடிமக்களின் மனைவிமாரும் அனைத்துப் புறங்களில் இருந்தும் தெருவுக்கு வந்தனர்.(11) ஓ! மன்னா, ஹஸ்தினாபுரத்தின் குடிமக்கள அனைவரும், பழங்காலத்தில், பகடையாட்டத்தில் தோற்றுப் பாண்டவர்கள் புறப்பட்ட போது துயரடைந்ததைப் போலவே திருதராஷ்டிரன் புறப்பட்ட போதும் துயரடைந்தனர்.(12) சூரியனையோ, சந்திரனையோ ஒருபோதும் கண்டிராத பெண்களும், மன்னன் திருதராஷ்டிரன் பெருங்காட்டை நோக்கிச் சென்ற போது, அந்தச் சந்தர்ப்பத்தில் பெருந்துயரத்துடன் தெருவுக்கு வந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(13)
பின்தொடர்ந்த குந்தி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 16-திருதராஷ்டிரன் காட்டுக்குப் புறப்படும்போது, விதுரனும், சஞ்சயனும் உடன் புறப்பட்டது, யுதிஷ்டிரனும், பீமனும் தடுத்தும் குந்தியும் அவர்களுடன் சென்றது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, அந்த நேரத்தில் பூமியிலோ, மாளிகைகளின் மாடியிலோ {உப்பரிகைகளிலோ} நின்று கொண்டிருந்த ஆண்களும் பெண்களும் செய்த முழக்கம் பெரிதாக இருந்தது.(1) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முதிர்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, கைகளைக் கூப்பி, பலவீனத்தால் நடுங்கி, இரு பாலினத்தாராலும் நிறைந்திருந்த முக்கிய வீதியின் {ராஜமார்க்கத்தின்} வழியே சிரமத்துடன் நடந்து சென்றான்.(2) யானையின் பெயரால் அழைக்கப்பட்ட {ஹஸ்தினாபுரம்} நகரத்தின் முக்கிய வாயில் வழியே வெளியேறி, மக்கள் கூட்டத்தினரிடம் தங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறு மீண்டும் மீண்டும் சொன்னான்.(3) மன்னனுடன் {திருதராஷ்டிரனுடன்} செல்வதில் விதுரன் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். கவல்கணன் மகனும், திருதராஷ்டிரனின் முதல் அமைச்சருமான சூதன் சஞ்சயனும் அதே இதயம் கொண்டவனாகவே இருந்தான்![1].(4)மன்னன் திருதராஷ்டிரன், தன்னைப் பின்தொடர்வதிலிருந்து கிருபரையும், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுத்சுவையும் தடுத்தான். அவர்களை யுதிஷ்டிரனின் கைகளில் ஒப்படைத்தான்.(5) திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில் குடிமக்கள் அந்த ஏகாதிபதியைப் பின்தொடர்வதை நிறுத்திய பிறகு, மன்னன் யுதிஷ்டிரனும், தன் குடும்பத்துப் பெண்களுடன் சேர்ந்து நிற்கத் தயாரானான்.(6)
தன் தாயான குந்தியும் காட்டுக்கு ஓய்ந்து செல்வதற்கு விரும்புவதைக் கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அவளிடம், “முதிய ஏகாதிபதியை நான் பின்தொடர்ந்து செல்வேன். நீ நிற்பாயாக.(7) ஓ! ராணி, உன் மருமகள்களான இவர்கள் துணையுடன் நீ நகரத்திற்குத் திரும்புவதே உனக்குத் தகும். இந்த ஏகாதிபதி, தவம்பயில்வதென உறுதியாகத் தீர்மானித்துக் காட்டுக்குச் செல்கிறார்” என்றான்.(8) மன்னன் யுதிஷ்டிரன் கண்ணீரில் குளித்த கண்களுடன் அவளிடம் இந்தச் சொற்களைச் சொன்னாலும், அவனுக்குப் பதிலேதும் சொல்லாமல், காந்தாரியைப் பற்றிக் கொண்டு தொடர்ந்து முன்னேறினாள் குந்தி.(9)
{சிறிது நேரத்திற்குப் பிறகு}, குந்தி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, சகாதேவனிடம் ஒருபோதும் அலட்சியம் காட்டாதே. ஓ! ஏகாதிபதி, அவன் எப்போதும் என்னிடமும், உன்னிடமும் மிகுந்த பற்று கொண்டவன்.(10) போரில் ஒருபோதும் புறமுதுகிடாதவனான கர்ணனை நீ எப்போதும் மனத்தில் கொள்ள வேண்டும். என் அறிவின்மையால் அந்த வீரன் போர்க்களத்தில் கொல்லப்பட்டான்.(11) என் மகனே, சூரியனுக்குப் பிறந்த அந்தப் பிள்ளையைக் காணாமல் இருந்தும் நூறு துண்டுகளாகச் சிதறாத என் இதயம் நிச்சயம் இரும்பாலானது.(12) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, இவ்வாறிருக்கையில் நான் என்ன செய்வது? சூரியனின் பிள்ளை பிறந்ததைக் குறித்த உண்மையை அறிவிக்காததால் பழி முழுவதும் என்னையே சாரும்.(13) ஓ! பகைவரை நொறுக்குபவனே, நீ உன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து சூரியனின் மகனுக்காகச் சிறந்த கொடைகளை அளிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.(14) ஓ! பகைவரை வெட்டுபவனே, நீ எப்போதும் திரௌபதிக்கு ஏற்புடையதையே செய்ய வேண்டும். பீமசேனன், அர்ஜுனன், நகுலன் மற்றும் சகாதேவனையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓ! மன்னா, குரு குலத்தின் சுமை இப்போது உன் மேல் இருக்கிறது.(15) நான் என் மாமனாருக்கும், மாமியாருக்கும் செய்யும் தொண்டில் என்னை அர்ப்பணித்துக் கொண்டும், உடலில் புழுதி பூசப்பட்டவளாகக் கடுந்தவங்களில் ஈடுபட்டுக் கொண்டும், காந்தாரியுடன் சேர்ந்து காட்டில் நான் வாழப் போகிறேன்[2]” என்றாள் {குந்தி}”.(16)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவளால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், அற ஆன்மா கொண்டவனும், ஆசைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தியவனுமான யுதிஷ்டிரன், தன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து பெருந்துயரில் மூழ்கியவனானான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த மன்னன் ஒரு சொல்லும் சொல்லாதிருந்தான்.(17) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், சிறிது நேரம் சிந்தித்து, உற்சாகமற்றவனாக, கவலையிலும், துன்பத்திலும் மூழ்கியவனாகத் தன் அன்னையிடம் {குந்தியிடம்},(18) “உண்மையில், இதில் உன் நோக்கமென்ன? இதை நீ செய்வது உனக்குத் தகாது. என்னால் ஒருபோதும் உனக்கு அனுமதியளிக்க முடியாது. நீ எங்களிடம் கருணை காட்டுவதே உனக்குத் தகும்.(19) ஓ! இனிய குணங்களைக் கொண்டவளே, முன்பு நாங்கள் ஹஸ்தினாபுரத்திலிருந்து காடுகளுக்குச் செல்லப் புறப்பட்ட போது, விதுலை தன் மகனுக்கு அறிவரை சொன்ன கதையைச்[3] சொல்லி எங்களை முயற்சியில் ஈடுபடத் தூண்டியவள் நீயே. இப்போது எங்களைக் கைவிடுவது உனக்குத் தகாது.(20) வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன உன்னுடைய ஞானச் சொற்களால் வழிநடத்தப்பட்டுப் பூமியின் மன்னர்களைக் கொன்று இந்த அரசுரிமையை வென்றிருக்கிறேன்.(21) வாசுதவேனிடம் இருந்து நான் கேள்விப்பட்ட உன்னுடைய புத்தி இப்போது எங்கே? நீ எங்களுக்குக் கற்பித்த க்ஷத்திரிய நடைமுறைகளில் இருந்து நீ வீழ விரும்புகிறாயா?(22) எங்களையும், இந்த நாட்டையும், பெரும்புகழைக் கொண்டவளும், உன்னுடைய மருமகளுமான இவளையும் கைவிட்டு, அடைதற்கரிதான காடுகளில் நீ எவ்வாறு வாழ்வாய்? மனம் இரங்குவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.(23)கண்களில் கண்ணீருடன் குந்தி தன் மகனின் இந்தச் சொற்களைக் கேட்டாலும் தன் வழியில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது பீமன் அவளிடம்,(24) “ஓ! குந்தியே, அரசுரிமை வெல்லப்பட்டு, உன் பிள்ளைகளால் அடையப்பட்ட அந்த அரசுரிமையை நீ அனுபவிக்கும் காலத்தில், நீ செய்ய வேண்டிய அரச கடமைகள் காத்திருக்கும்போது, உன் மனத்தைப் பற்றியிருக்கும் இந்த ஆசை எங்கிருந்து வந்தது?(25) பின் ஏன் எங்களைப் பூமியை அழிக்க ஏவினாய்? அனைவரையும் விட்டுவிட்டு காடுகளையே உன் வசிப்பிடமாக்கிக் கொள்ள நீ விரும்புவதற்கான காரணமென்ன?(26) நாங்கள் காடுகளில்தானே பிறந்தோம். நாங்கள் பிள்ளைகளாக இருந்தபோது காடுகளில் இருந்து எங்களை நீ ஏன் {இங்குக்} கொண்டுவந்தாய்? கவலையிலும், துன்பத்திலும் மூழ்கியிருக்கும் மாத்ரியின் இரு மகன்களைப் பார்.(27) ஓ! தாயே, மனம் இரங்குவாயாக. ஓ! பெரும்புகழைக் கொண்டவளே {குந்தியே}, இப்போது நீ காட்டுக்குச் செல்லாதே. வலிமையால் அடையப்பட்டு, இன்று யுதிஷ்டிரருடையதாக இருக்கும் செழிப்பை நீ அனுபவிப்பாயாக” என்றான் {பீமன்}.(28)
காட்டுக்குள் ஓய்வதை உறுதியாகத் தீர்மானித்திருந்த குந்தி, தன் மகன்களின் இந்தப் புலம்பல்களை அலட்சியம் செய்தாள்.(29) சுபத்திரையுடன் கூடியவளும், உற்சாகமற்ற முகத்தைக் கொண்டவளுமான திரௌபதி, காட்டுக்குச் செல்லும் விருப்பத்துடன் பயணப்பட்டுக் கொண்டிருந்த தன் மாமியாரை அழுதுகொண்டே பின்தொடர்ந்து சென்றாள்.(30) பெரும் ஞானம் கொண்டவளும், உலகத்தில் இருந்து ஓயும் உறுதியான தீர்மானம் கொண்டவளுமான அந்த அருளப்பட்ட மங்கை {குந்தி}, அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளை அடிக்கடி பார்த்துக் கொண்டே நடந்து சென்றாள்.(31) பாண்டவர்கள், தங்கள் மனைவியர் மற்றும் பணியாட்கள் அனைவருடனும் அவளைப் பின்தொடர்வதைத் தொடர்ந்தனர். அப்போது அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, தன் பிள்ளைகளிடம் இந்தச் சொற்களைச் சொன்னாள்” {என்றார் வைசம்பாயனர்}.(32)
குந்தியின் சமாதானம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 17-பாண்டவர்களுக்குச் சமாதானம் கூறிய குந்தி…
குந்தி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிமைக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, நீ சொல்வது உண்மைதான். மன்னர்களே, நீங்கள் உற்சாகமற்றிருந்தபோது, அவ்வாறே நான் உங்கள் அனைவரையும் தூண்டினேன்.(1) பகடையாட்டத்தில் உங்கள் நாடு உங்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டதைக் கண்டும், நீங்கள் மகிழ்ச்சியை இழந்ததைக் கண்டும், உங்கள் உற்றார் உறவினரின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டவர்களாக உங்களைக் கண்டும், துணிவையும், உயர்ந்த எண்ணங்களையும் நான் உங்கள் மனத்தில் செலுத்தினேன்.(2) மனிதர்களில் முதன்மையானவர்களே, பாண்டுவின் மகன்கள் வீழ்ந்துவிடக்கூடாது என்ற வகையிலும், அவர்கள் புகழை இழந்துவிடக்கூடாது என்ற வகையிலும் நான் உங்களுக்கு ஊக்கமளித்தேன்.(3)
நீங்கள் அனைவரும் இந்திரனுக்கு இணையானவர்கள். நீங்கள் தேவர்களுக்கு ஒப்பான ஆற்றலைக் கொண்டவர்கள். பிறரின் முகங்களை எதிர்பார்த்து நீங்கள் வாழக்கூடாது என்பதற்காகவே நான் அவ்வழியில் செயல்பட்டேன்[1].(4) அறவோர் அனைவரிலும் முதன்மையானவனும், வாசவனுக்கு நிகரானவனுமான நீ மீண்டும் காட்டுக்குச் சென்று துன்பத்தில் வாழக்கூடாது என்பதற்காகவே நான் உன் இதயத்தில் துணிவைச் செலுத்தினேன்.(5) பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவனும், ஆற்றலுக்காகவும், ஆண்மைக்காகவும் பரந்து அறியப்பட்டவனுமான இந்தப் பீமன், சிறப்பின்மை மற்றும் அழிவுக்குள் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காகவே நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(6)பீமசேனனுக்கு அடுத்துப் பிறந்தவனும், வாசவனுக்கு இணையானவனுமான இந்த விஜயன் {அர்ஜுனன்} உற்சாகமிழந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(7) பெரியோரிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களான நகுலனும் சகாதேவனும் பலவீனமடைந்து, பசியால் உற்சாகமற்றவர்களாகிவிடக் கூடாது என்பதற்காக நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(8) வாளிப்பானவளும், அகன்ற விழிகளைக் கொண்டவளுமான இந்தப் பெண் {திரௌபதி}, பொதுச் சபையில் தனக்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்குப் பழிவாங்காமல் இருந்து, அதைப்பொறுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(9)
ஓ! பீமா, பகடையில் வெல்லப்பட்டதும், தன் மாதவிடாய் காலத்தில் வாழை மரத்தைப் போல நடுங்கிக் கொண்டிருந்த இவளை {திரௌபதியை} நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே(10) ஓர் அடிமையை {இழுத்துச் செல்வதைப்} போலத் தன் மடமையின் மூலம் இழுத்துச் சென்றான் துச்சாசனன். இவை யாவற்றையும் நான் அறிவேன். உண்மையில், பாண்டுவின் குலம் (பகைவர்களால்) அடக்கப்பட்டது.(11) பாதுகாப்பை விரும்பும் பெண் அன்றிலைப் போல அவள் உரக்கக் கதறியபோது, என் மாமனார் {பீஷ்மர்} மற்றும் பிறர் உள்ளிட்ட குருக்கள் உற்சாகமற்றவர்களாக இருந்தனர்.(12)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அற்ப புத்தி கொண்ட பாவியான துச்சாசனனால் கூந்தல் பற்றப்பட்டு இவள் {திரௌபதி} இழுத்துச் செல்லப்பட்ட போது, நான் என் புலனுணர்வுகளை இழந்தேன் {மூர்ச்சையடைந்தேன்}.(13) ஓ! என் மகன்களே, உங்கள் சக்தியைப் பெருக்கவே விதுலையின் சொற்களைச் சொல்லி உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(14) ஓ! என் மகன்களே, என் பிள்ளைகளால் பிரதிபலிக்கப்படும் பாண்டுவின் குலம் அழிந்துபோகக்கூடாது என்பதற்காகவே நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(15)
ஒரு குலத்திற்குப் புகழ்க்கேட்டைக் கொண்டுவரும் மனிதனின் மகன்களும், பேரர்களும் ஒருபோதும் நல்லுலகங்களை அடைவதில் வெல்லமாட்டார்கள். உண்மையில், கௌரவக் குலத்தின் மூதாதையர்கள், தங்களுடையவையாக இருந்த இன்பலோகங்களை இழக்கும் ஆபத்தில் இருந்தனர்.(16) ஓ! என் மகன்களே, என்னைப் பொறுத்தவரையில், இதற்கு முன்பே நான் என் கணவரால் அடையப்பட்ட அரசுரிமையின் பெருங்கனிகளை அனுபவித்திருக்கிறேன். நான் பெருங்கொடைகளை அளித்திருக்கிறேன். நான் வேள்வியில் முறையாகச் சோமச்சாற்றைப் பருகியிருக்கிறேன்[2].(17) நான் எனக்காக வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} கிளர்ந்தெழச் செய்யும் விதுலையின் சொற்களைச் சொல்லித் தூண்டவில்லை. அந்த ஆலோசனையைப் பின்பற்றுமாறு உங்களுக்காகவே நான் உங்களை தூண்டினேன்.(18)ஓ! என் மகன்களே, என் பிள்ளைகளால் வெல்லப்பட்ட அரசுரிமையின் கனிகளில் எனக்கு விருப்பமில்லை. ஓ! பெரும்பலம் கொண்டவனே. என் கணவரால் அடையப்பட்ட இன்பலோகங்களை நான் என் தவங்களின் மூலம் அடைய விரும்புகிறேன்.(19) ஓ! யுதிஷ்டிரா, காடுகளையே தங்கள் வசிப்பிடமாக்கிக் கொள்ள விரும்பும் என் மாமனார் மற்றும் மாமியார் ஆகிய இருவருக்கும் கீழ்ப்படிந்து தொண்டாற்றுவதன் மூலமும், எனத் தவங்களின் மூலமும் நான் என் உடலை உலர்த்த {உடலைவிட்டு விடுபட} விரும்புகிறேன்.(20) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, நீயும், பீமனும், பிறரும் என்னைப் பின்தொடர்வதை நிறுத்துவீராக. உன் புத்தி எப்போதும் அறத்திலேயே அர்ப்பணிப்புடன் இருக்கட்டும். உன் மனம் எப்போதும் பெரியதாகவே இருக்கட்டும்” என்றாள் {குந்தி}”.(21)
குந்தியைத் தடுத்த திருதராஷ்டிரன்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 18-பாண்டவர்கள் வருத்தத்துடன் திரும்பியது; திருதராஷ்டிரன் முதலியோர் கங்கைக் கரையில் மாலைக் கடன்களைச் செய்து இரவைக் கழித்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பாவமற்ற பாண்டவர்கள், குந்தியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு வெட்கமடைந்தனர். எனவே, அவர்களும், பாஞ்சால இளவரசியும் {திரௌபதியும்} அவளைப் பின்தொடர்வதை நிறுத்தினர்[1].(1) குந்தி காட்டுக்குச் செல்வதில் உறுதியாக இருப்பதைக் கண்ட பாண்டவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உரக்கக் கதறினர்.(2) பிறகு, பாண்டவர்கள் மன்னனை {திருதராஷ்டிரனை} வலம் வந்து அவனை முறையாக வணங்கினர். அதன்பிறகு, திரும்பி வருவதற்குப் பிருதையை {குந்தியைச்} சம்மதிக்க வைக்கத் தவறிய அவர்கள் மேலும் பின்தொடர்வதை நிறுத்திக் கொண்டனர்.(3)அப்போது, பெரும் சக்தி கொண்டவனும், அம்பிகையின் மகனும், காந்தாரி மற்றும் விதுரனால் தாங்கப்பட்டவனுமான திருதராஷ்டிரன், அவர்களிடம்,(4) “யுதிஷ்டிரனின் அரசத்தாய் நம்மோடு வர வேண்டாம். யுதிஷ்டிரன் சொன்ன அனைத்தும் உண்மையே.(5) மகன்களின் பெருஞ்செழிப்பைக் கைவிட்டு, தன்னுடையவையாகக்கூடிய உயர்ந்த பயன்களையும் கைவிட்டு, புத்தியற்ற ஒருத்தியைப் போலத் தன் பிள்ளைகளை விட்டுவிட்டு அடைதற்கரிதான காட்டுக்குள் இவள் ஏன் செல்ல வேண்டும்?(6) இவள் அரசுரிமையை அனுபவித்துக் கொண்டே, தவங்களைப் பயின்று, கொடைகளின் உயர்ந்த நோன்புகளை நோற்று வாழ இயன்றவளே.(7) ஓ! காந்தாரி, என்னுடைய மருமகளான இவளுடைய {குந்தியினுடைய} தொண்டில் நான் மிகவும் நிறைவடைந்திருக்கிறேன். கடமைகள் அனைத்தையும் அறிந்தவளான உனக்கு அவளைத் திரும்பிச் செல்லுமாறு ஆணையிடுவதே தகும்” என்றான்.(8)
இவ்வாறு தன் தலைவனால் சொல்லப்பட்ட சுபலனின் மகள் {காந்தாரி}, ஆழ்ந்த பொருளுள்ள தன் சொற்களையும் சேர்த்து முதிர்ந்த மன்னனின் அந்தச் சொற்கள் அனைத்தையும் குந்தியிடம் மீண்டும் சொன்னாள்.(9) எனினும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவளும், கற்புடைய பெண்ணுமான குந்தி காட்டைத் தன் வசிப்பிடமாகக் கொள்வதில் உறுதியாகத் தன் இதயத்தை நிலைக்கச் செய்திருந்ததால் அவளைத் தடுப்பதில் அவள் தவறினாள்.(10) காட்டுக்கு ஓய்ந்து செல்வதில் உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருந்த அவளைப் புரிந்து கொண்ட குரு பெண்மணிகள், குரு குலத்தின் முதன்மையானவர்கள் (தங்கள் கணவர்கள்) அவளைப் பின்தொடர்ந்து செல்வதை நிறுத்திவிட்டதைக் கண்டு, உரக்க ஓலமிட்டு அழுதனர்.(11) பிருதையின் {குந்தியின்} மகன்கள் அனைவரும், பெண்மணிகள் அனைவரும் தங்கள் சுவடுகளைப் பின்பற்றிச் சென்ற பிறகும் பெரும் ஞானம் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன் காடுகளை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.(12)
பெரிதும் உற்சாகமற்றிருந்த பாண்டவர்கள், துயரிலும், கவலையிலும் பீடிக்கப்பட்டவர்களாகத் தங்கள் மனைவியருடன் தங்கள் தேர்களில் நகரத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(13) முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட மொத்த மக்களுடன் கூடிய ஹஸ்தினாபுர நகரம் அந்நேரத்தில் உற்சாகமற்றதாகவும், கவலையில் மூழ்கியதாகவும் இருந்தது.(14) துயரால் பீடிக்கப்பட்டிருந்த பாண்டவர்கள் சக்தியேதுமற்றவர்களாக இருந்தனர். குந்தியால் கைவிடப்பட்ட அவர்கள் தாயற்ற கன்றுகளைப் போல ஆழ்ந்த துயரில் பீடிக்கப்பட்டிருந்தனர்.(15)
அதே நாளில் திருதராஷ்டிரன் அந்நகரத்தில் இருந்து அகன்று ஓரிடத்தை அடைந்தான். பலமிக்கவனான அந்த ஏகாதிபதி இறுதியாகப் பாகீரதி ஆற்றின் கரையை அடைந்து இரவில் அங்கேயே ஓய்ந்திருந்தான்.(16) வேதங்களை அறிந்த பிராமணர்கள், அந்தத் தவசிகளின் ஆசிரமத்தில் புனித நெருப்புகளை மூட்டினர். அந்த முதன்மையான பிராமணர்களால் சூழப்பட்டிருந்த அந்தப் புனித நெருப்புகள் அழகில் சுடர்விட்டெரிந்தன. அந்த முதிய மன்னனின் {திருதராஷ்டிரனின்} புனித நெருப்பும் மூட்டப்பட்டது.(17) தன்னுடைய நெருப்பின் அருகில் அமர்ந்த அவன், உரிய சடங்குகளின் படி அதில் ஆகுதிகளை ஊற்றி, ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியன் மறையும் வேளையில் அவனை வழிபட்டான்.(18)
விதுரனும், சஞ்சயனும் குசப்புற்கள் சிலவற்றைப் பரப்பி மன்னனுக்குப் படுக்கையை அமைத்தனர். அந்தக் குரு வீரனின் படுக்கைக்கு அருகிலேயே காந்தாரிக்கும் மற்றொன்றை அமைத்தனர்.(19) சிறந்த நோன்புகளை நோற்பவளும், யுதிஷ்டிரனின் தாயுமான குந்தி, காந்தாரிக்கு மிக அருகிலேயே மகிழ்ச்சியாகப் படுத்துக் கொண்டாள்.(20) கேட்கும் தொலைவில் விதுரனும், பிறரும் உறங்கினர். யாஜக பிராமணர்களும், மன்னனைப் பின்தொடர்ந்து வந்த பிறரும், தங்கள் தங்களுக்குரிய படுக்கைகளில் தங்களைக் கிடத்திக் கொண்டனர்.(21)
அங்கே இருந்த முதன்மையான பிராமணர்கள் பலர் புனித மந்திரங்களை உரக்கச் சொன்னார்கள். வேள்வி நெருப்புகள் சுற்றிலும் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. எனவே, அந்த இரவு பிராம்மீ இரவைப் போல அவர்களுக்கு இனிமையாகத் தெரிந்தது[2].(22) அந்த இரவு கடந்ததும், அவர்கள் அனைவரும் தங்கள் படுக்கைகளில் இருந்து எழுந்து, தங்களுக்குரிய காலைச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். அதன் பிறகு புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.(23) குரு நாட்டின் மாகாணங்களிலும், நகரங்களிலும் வசிப்பவர்களால் வருத்தமடைந்தவர்களும், துக்கமடைந்த இதயங்களைக் கொண்டவர்களுமான அவர்களுக்கு, காட்டில் முதல் நாள் அனுபவம் துன்பம் நிறைந்ததாக இருந்தது” {என்றார் வைசம்பாயனர்}.(24)
சதயூபாஸ்ரமம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 19-திருதராஷ்டிரனும், விதுரனும் குருக்ஷேத்திரம் சென்று சதயூபனுடைய ஆஸ்ரமத்திற்குச் சென்றது; வியாசரின் முன்னிலையில் வானப்ரஸ்தாஸ்மரத்திற்கு தீக்ஷை பெற்றது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விதுரனின் ஆலோசனையைப் பின்பற்றி மன்னன் {திருதராஷ்டிரன்}, புனிதமானதும், அறவோருக்காக ஒதுக்கப்பட்டதுமான பாகீரதியின் கரைகளில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(1) அங்கே காடுகளில் தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட பிராமணர்கள் பலரும், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் பலரும் அந்த முதிர்ந்த ஏகாதிபதியைக் காண அங்கே வந்தனர்.(2) அவன் அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து, தன் சொற்களின் மூலம் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தான். சீடர்களுடன் கூடிய பிராமணர்களை முறையாக வழிபட்ட அவன், பிறகு அவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பினான்.(3)
மாலை வேளை வந்ததும், மன்னனும் {திருதராஷ்டிரனும்}, பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும், பாகீரதியின் ஓடைக்குள் இறங்கித் தங்களைத் தூய்மை செய்து கொள்வதற்கான சடங்குகளை முறையாகச் செய்தனர்.(4) ஓ! பாரதா, அரசன், அரசி, விதுரன் மற்றும் பிறரும் அந்தப் புனித ஓடையில் நீராடி வழக்கமான தங்கள் அறச்சடங்குகளைச் செய்தனர்.(5) மன்னன் நீராடலின் மூலம் தன்னைத் தூய்மை செய்து கொண்ட பிறகு, குந்திபோஜனின் மகள் {குந்தி}, தன் மாமனாரான அவனுக்கு வழிகாட்டியவாறே, அவனையும், காந்தாரியையும் நீரிலிருந்து உலர்ந்த கரைக்கு இட்டுச் சென்றாள்.(6)
யாஜகர்கள் அங்கே மன்னனுக்காக ஒரு வேள்விப்பீடத்தை அமைத்திருந்தனர். வாய்மைக்கு அர்ப்பணித்திருந்த பின்னவன் {திருதராஷ்டிரன்}, அப்போது நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினான்.(7) அந்த முதிர்ந்த மன்னன் பாகீரதியின் கரையில் இருந்து தன் தொண்டர்களுடன் சேர்ந்து நோன்புகளை நோற்றபடியே, கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் குருக்ஷேத்திரத்தை நோக்கி முன்னேறினான்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, பெரும் ஞானியும், அரச முனியுமான சதயூபனின் ஆசிரமத்தை அடைந்து, அவனுடன் உரையாடினான்.(9)
ஓ! பகைவரை எரிப்பவனே, சதயூபன் கேகயர்களின் பெரும் மன்னனாக இருந்தவனாவான். அவன் தன் நாட்டின் அரசுரிமையைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டுக் காட்டுக்கு வந்திருந்தான்.(10) அந்தச் சதயூபன், மன்னன் திருதராஷ்டிரனை உரிய சடங்குகளுடன் வரவேற்றான். அவனுடன் {சதயூபனுடன்} சேர்ந்து பின்னவன் {திருதராஷ்டிரன்} வியாசரின் ஆசிரமத்திற்குச் சென்றான்.(11) வியாசரின் ஆசிரமத்தை அடைந்த அவன், காட்டு வாழ்வுமுறைக்கான {வானப்ரஸ்தாஸ்ரமத்திற்கான} தொடக்கத்தை {தீக்ஷையைப்} பெற்றான். அங்கிருந்து திரும்பிய அவன் சதயூபனின் ஆசிரமத்தில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(12)
உயர் ஆன்ம சதயூபன், வியாசரின் ஆணையின் பேரில் திருதராஷ்டிரனுக்கு காட்டு வாழ்வுமுறையின் சடங்குகள் அனைத்தையும் கற்பித்தான்.(13) இவ்வாறு உயர் ஆன்ம திருதராஷ்டிரன் தவப் பயிற்சியில் தன்னை நிறுவிக் கொண்டு, தன் தொண்டர்கள் {தன்னைப் பின்பற்றியவர்கள்} அனைவரையும் அதே ஒழுக்கத்தைப் பின்பற்றச் செய்தான்.(14) ஓ! ஏகாதிபதி, குந்தியுடன் கூடிய ராணி காந்தாரியும், மரவுரியையும், மான்தோலையும் அடையாகக் கொண்டு, தன் தலைவன் நோற்கும் அதே நோன்புகளையே தானும் நோற்றாள்.(15)
அவர்கள் எண்ணம், சொற்கள், செயல்கள் மற்றும் கண்களில் இருந்து தங்கள் புலன்களை விலக்கிக் கடுந்தவங்களைப் பயிலத் தொடங்கினர்[1].(16) மனத்தில் குழப்பமேதுமற்றவனான மன்னன் திருதராஷ்டிரன், ஒரு பெரும் முனிவனைப் போலத் தலையில் சடாமுடி தரித்து, மேனியில் மரவுரியும், தோலும் தரித்து, நோன்புகளையும், தவங்களையும் பயிலத் தொடங்கி, தசையை வற்றச் செய்து எலும்பும் தோலுமாகத் தன் உடலைச் சுருக்கினான்.(17) அறத்திற்கான உண்மை விளக்கங்களை அறிந்தவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான விதுரனும், சஞ்சயனும், அந்த முதிர்ந்த மன்னனுக்கும், அவனுடைய மனைவிக்கும் காத்திருந்தனர் {பணி செய்தனர்}. ஆன்மக்கட்டுப்பாடுடையவர்களான விதுரன் மற்றும் சஞ்சயன் ஆகிய இருவரும் மரவுரியையும், கந்தலையும் உடுத்தித் தங்களைச் சுருக்கிக் கொண்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(18)
குபேரலோகம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 20-திருதராஷ்டிரனைக் காண வந்த நாரதர்; அந்த வனம் ராஜரிஷிகளுக்கு ஸ்வர்க்கம் தந்ததையும், அவர்களுக்கும் அது ஸித்தியைத் தரும் என்பதையும், திருதராஷ்டிரன் அடையப்போகும் கதியையும் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தவசிகளில் முதன்மையான நாரதர், பர்வதர் மற்றும் கடுந்தவங்களைக் கொண்ட தேவலர் ஆகியோர் மன்னன் திருதராஷ்டிரனைக் காண அங்கே வந்தனர்.(1) சீடர்களுடன் கூடியவரும், தீவில் பிறந்தவருமான வியாசரும், பெரும் ஞானம் கொண்டவர்களும், தவவெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களான பிறரும், முதிர்ந்த வயதையும், பெரும் புண்ணியங்களையும் கொண்ட அரச முனி சதயூபனும் அங்கே வந்தனர்.(2) ஓ! மன்னா, குந்தி அவர்களை உரிய சடங்குகளுடன் வழிபட்டாள். அந்தத் தவசிகள் அனைவரும் தங்களுக்குச் செய்யப்பட்ட வழிபாட்டில் பெரும் நிறைவை அடைந்தனர்.(3) அந்தப் பெரும் முனிவர்கள், உயர் ஆன்மா கொண்ட திருதராஷ்டிரனிடம் அறம் மற்றும் நீதி குறித்து உரையாடி அவனை மகிழ்வித்தனர்.(4) அவர்களுடைய உரையாடலின் முடிவில் தெய்வீக முனிவரான நாரதர், அனைத்துப் பொருட்களையும் நேரடியாகக் கண்களில் கண்டு, பின்வரும் சொற்களைச் சொன்னார்.(5)
நாரதர், “பெருஞ்செழிப்பைக் கொண்டவனும், முற்றிலும் அச்சமற்றவனுமாகக் கேகயர்களில் ஓர் ஆட்சியாளன் இருந்தான். இந்தச் சதயூபனின் பாட்டனான அவனது பெயர் சஹஸ்ரசித்யன் என்பதாகும்.(6) அந்தச் சஹஸ்ரசித்யன் பேரளவு அறம் கொண்ட தன் மூத்த மகனிடம் தன் நாட்டை ஒப்படைத்துவிட்டு, காட்டிற்கு ஓய்ந்து சென்றான்.(7) பெருங்காந்தியைக் கொண்ட அந்தப் பூமியின் தலைவன் {சஹஸ்ரசித்யன்} சுடர்மிக்கத் தவத்தின் எல்லையைக் கடந்து புரந்தலோகத்தை அடைந்து அங்கே அவனுடைய {புரந்தரனின்} தோழமையில் தொடர்ந்து வாழ்ந்தான்.(8) ஓ! மன்னா, இந்திரலோகத்திற்கு நான் சென்ற பல சந்தர்ப்பங்களில், தவங்களின் மூலம் பாவங்களனைத்தையும் எரித்து இந்திரனின் வசிப்பிடத்தில் வசித்துக் கொண்டிருக்கும் அந்த ஏகாதிபதியை {சஹஸ்ரசித்யனைக்} கண்டிருக்கிறேன்.(9)
அதே போலவே, பகதத்தனின் பாட்டனான மன்னன் சைலாலயனும் தன் தவங்களின் சக்தியை மட்டுமே கொண்டு இந்திரலோகத்தை அடைந்திருக்கிறான்.(10) ஓ! ஏகாதிபதி, அங்கே வஜ்ரதாரிக்கே ஒப்பானவனும், பிருஷத்ரன் என்ற பெயரைக் கொண்டவனுமான மற்றொரு மன்னனும் இருந்தான். அந்த மன்னனும் தன் தவங்களின் மூலம் பூமியில் இருந்து சொர்க்கத்திற்குச் சென்றான்.(11) ஓ! மன்னா, இதே காட்டில், பூமியின் தலைவனும், மாந்தாத்ரியின் {மாந்தாதாவின்} மகனுமான புருகுத்ஸன் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(12) ஆறுகளில் முதன்மையான நர்மதை இம்மன்னனின் மனைவியானாள். பூமியின் ஆட்சியாளனான அவன், இதே காட்டில் கடுந்தவங்களைச் செய்து, சொர்க்கத்திற்குச் சென்றான்.(13) உயர்ந்த அறவோனும், சசலோமன் என்ற பெயரைக் கொண்டவனுமான மற்றொரு மன்னனும் இருந்தான். அவனும் இதே காட்டில் கடுந்தவங்களைச் செய்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(14)
ஓ! ஏகாதிபதி, இந்தக் காட்டிற்கு வந்திருக்கும் நீயும், தீவில் பிறந்தவரின் {வியாசரின்} அருளால், உயர்ந்ததும், அடைதற்கரிதானதுமான ஓர் இலக்கை அடைவாயாக.(15) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, காந்தாரியின் துணையுடன் கூடிய நீயும் உன் தவங்களின் முடிவில், பெருஞ்செழிப்பை அடைந்து, அந்த உயர் ஆன்மாக்கள் அடைந்த இலக்கை அடைவாயாக.(16) பகனைக் கொன்றவனின் முன்னிலையில் வசிக்கும் பாண்டு எப்போதும் உன்னைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். ஓ! ஏகாதிபதி, நீ செழிப்பை அடைவதற்கு அவன் நிச்சயம் உனக்குத் துணை புரிவான்.(17) பெரும் புகழைக் கொண்டவளும், உன் மருமகளுமான இவள் {குந்தி}, உனக்கும், காந்தாரிக்கும் தொண்டு செய்வதன் மூலம் மறுமையில் தன் கணவனுடன் வசிக்கும் இடத்தை அடைவாள்.(18) இவள் நித்திய தர்மமான யுதிஷ்டிரனின் தாயாவாள். ஓ! மன்னா, இவை யாவற்றையும் நாங்கள் எங்கள் ஆன்மப் பார்வையில் கண்டோம்.(19) விதுரன் உயர் ஆன்ம யுதிஷ்டிரனுக்குள் நுழைவான். சஞ்சயனும் தியானத்தின் மூலம் இந்த உலகத்தில் இருந்து சொர்க்கத்திற்கு உயர்வான்” என்றார் {நாரதர்}”.(20)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்மா கொண்டவனும், கல்வி கற்றவனுமான அந்தக் குருகுலத் தலைவன் {திருதராஷ்டிரன்}, தன் மனைவியுடன் சேர்ந்து நாரதரின் சொற்களைக் கேட்டு, அவற்றைப் புகழ்ந்து, இதற்கு முன் இல்லாத கௌரவங்களால் நாரதரை வழிபட்டான்.(21) ஓ! ஏகாதிபதி, அங்கே இருந்த பிராமணர்களின் கூட்டம் பெரும் மகிழ்ச்சியால் நிறைந்து மன்னன் திருதராஷ்டிரனை மகிழ்வடையச் செய்ய விரும்பி அளவிடற்கரிய வெகுமதிகளால் நாரதரை வழிபட்டனர்.(22) மறுபிறப்பாளர்களில் முதன்மையான அவர்கள் நாரதரின் சொற்களையும் புகழ்ந்தனர்.
அப்போது அரசமுனியான சதயூபன் நாரதரிடம்,(23) “ஓ! பெரும் காந்தியைக் கொண்டவரே {நாரதரே}, புனிதமானவரான நீர் இந்தக் குரு மன்னன் மற்றும் இங்கிருக்கும் மக்கள் மற்றும் நான் என அனைவரின் பக்தியையும் அதிகரித்திருக்கிறீர்.(24) எனினும், நான் உம்மை ஒன்று கேட்க விரும்புகிறேன். நான் கேட்கிறேன் நீர் சொல்வீராக. ஓ! தெய்வீக முனிவரே, அஃது உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்படும் மன்னன் திருதராஷ்டிரன் தொடர்புடையது.(25) நீர் அனைத்துக் காரியங்களின் உண்மையையும் அறிந்தவராவீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே, தெய்வீகப் பார்வையுடன் நீர் மனிதர்கள் அடையும் பல்வேறு கதிகளைக் காண்கிறீர்.(26) நீர் சொன்னவர்களும், தேவர்களுடைய தலைவனின் தோழமையைக் கொண்டவர்களுமான மன்னர்களின் கதி என்னவென்பதை நீர் சொன்னீர். எனினும், ஓ! பெரும் முனிவரே, இந்த மன்னனால் எந்தந்தெந்த உலகங்கள் அடையப்படும் என்பதை நீர் சொல்லவில்லை.(27) ஓ! பலமிக்கவரே, அரசன் திருதராஷ்டிரனால் எந்த உலகம் அடையப்படும் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான் சதயூபன்.(28)
அவனால் இவ்வாறு கேட்கப்பட்டதும், தெய்வீகப் பார்வையையும், கடுந்தவங்களையும் கொண்ட நாரதர், அந்தச் சபைக்கு மத்தியில் அனைவரின் மனங்களுக்கும் உயர்வானவையும், ஏற்புடையவையுமான இந்தச் சொற்களைச் சொன்னார்.(29) நாரதர், “நான் என் விருப்பத்தின் பேரில் சக்ரனின் மாளிகைக்குச் சென்று, ஓ! அரசமுனியே, அங்கே சச்சியின் தலைவனான சக்ரனைக் கண்டேன், மேலும் அங்கே நான் மன்னன் பாண்டுவையும் கண்டேன்.(30) ஓ! ஏகாதிபதி, இந்தத் திருதராஷ்டிரனையும், இவன் செய்து வரும் கடுந்தவங்களையும் குறித்த பேச்சு அங்கே எழுந்தது.(31) அங்கே சக்ரனின் உதடுகளின் மூலமே நான் இந்த மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஒதுக்கப்பட்டிருக்கும் வாழ்நாள் காலம் இன்னும் மூன்று வருடங்கள் என்பதைக் கேட்டறிந்தேன்.(32) அதன் பிறகு, மன்னன் திருதராஷ்டிரன், தன் மனைவி காந்தாரியின் துணையுடன் குபேரலோகத்திற்குச் சென்று அங்கே அந்த மன்னர்களின் மன்னனால் {குபேரனால்} உயர்வாகக் கௌரவிக்கப்படுவான். இவன் தன் மேனியெங்கும் தெய்வீக ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு தன் விருப்பத்தின் பேரில் நகரும் தேரில் அங்கே செல்வான்.(33) இவன் ஒரு முனிவரின் மகனாவான்; இவன் உயர்வான அருளைக் கொண்டவனாவான்; இவன் தன் தவங்களின் மூலம் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்திருக்கிறான். அற ஆன்மா கொண்ட இவன் தான் விரும்பியவாறு தேவ, கந்தர்வ, ராட்சச உலகங்களில் திரிந்து வருவான். நீ எதைக் குறித்துக் கேட்டாயோ அது தேவர்களிடம் உள்ள ஒரு புதிராகும் {ரகசியமாகும்}. உங்களிடம் கொண்ட அன்பினால் நான் இந்த உயர்ந்த உண்மையை {உங்களுக்கு} அறிவித்தேன்.(34,35) நீங்கள் அனைவரும் ஸ்ருதிகளைச் செல்வமாகக் கொண்டவர்களாகவும், தவங்களின் மூலம் உங்கள் பாவங்கள் அனைத்தையும் எரித்தவர்களாகவும் இருக்கிறீர்கள்” என்றார் {நாரதர்}”.(36)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அங்கே கூடியிருந்த அனைவரும், மன்னன் திருதராஷ்டிரனும், அந்தத் தெய்வீக முனிவரின் இந்த இனிய சொற்களைக் கேட்டு, பெரிதும் உற்சாகமடைந்தவர்களாகவும், உயர்ந்த நிறைவை அடைந்தவர்களாகவும் இருந்தனர்.(37) பெரும் ஞானம் கொண்ட திருதராஷ்டிரனை இத்தகைய பேச்சின் மூலம் உற்சாகமடையச் செய்த அவர்கள், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டோருக்கு உரிய பாதையின் வழியே அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(38)
பாண்டவர்கள் துயரம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 21-குந்தியின் பிரிவினாலும், அபிமன்யுவின் மரணத்தினால் உண்டான துக்கத்தினாலும் பாண்டவர்கள் தங்கள் வேலைகளை நன்கு பாராமலிருந்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, குருக்களின் தலைவன் {திருதராஷ்டிரன்} காட்டுக்குள் ஓய்ந்து சென்ற பிறகு, பாண்டவர்கள் தங்கள் தாயின் {குந்தியின்} நிமித்தம் துன்பத்தால் பீடிக்கப்பட்டு மிகவும் உற்சாகமற்றவர்களானார்கள்.(1) ஹஸ்தினாபுரக் குடிமக்களும் ஆழ்ந்த கவலையில் இருந்தனர். பிராமணர்கள் எப்போதும் அந்த முதிர்ந்த மன்னனை {திருதராஷ்டிரனைக்} குறித்துப் பேசினர்.(2)
{அவர்கள்}, “முதிர் வயதினனான மன்னன் {திருதராஷ்டிரன்}, {ஆளரவமற்ற} தனிமையான காட்டுக்குள் எவ்வாறு வாழ்வான்? உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரியும், குந்திபோஜனின் மகளான பிருதையும் {குந்தியும்} அங்கே எவ்வாறு வாழ்வார்கள்?(3) அந்த அரசமுனி {திருதராஷ்டிரன்} எப்போதும் அனைத்து வசதிகளையும் அனுபவித்து வாழ்ந்து வந்தவன். அவனுடைய நிலை நிச்சயம் பரிதாபகரமானது. காட்டுக்குள் சென்றவனும், பார்வையற்றவனுமான அந்த அரசகுல வழித்தோன்றலின் இப்போதைய நிலையென்ன?(4) மகன்களிடம் இருந்து பிரிந்ததன் மூலம் குந்தி செய்யற்கரிதான அருஞ்செயலைச் செய்திருக்கிறாள். ஐயோ, அவள் அரச செழிப்பைக் கைவிட்டு காட்டு வாழ்வைத் தேர்ந்தெடுத்தாளே.(5) மேலும், தன் அண்ணனுக்குத் தொண்டு செய்வதில் எப்போதும் அரப்பணிப்புள்ள விதுரனின் நிலையென்ன? தன் தலைவனால் தனக்குக் கொடுக்கப்பட்ட உணவுக்கு நன்றியுணர்வுமிக்கவனும், நுண்ணறிவுமிக்கவனுமான கவல்கணன் மகன் {சஞ்சயன்} எவ்வாறு இருக்கிறான்?” {என்று பேசிக் கொண்டனர்}.(6) உண்மையில், உரிய வயதை எட்டாதவர்கள் உள்ளிட்ட குடிமக்களும், ஒருவரையொருவர் சந்திக்கும்போது இதே கேள்விகளையே கேட்டுக் கொண்டனர்.(7)
துன்பத்தால் பீடிக்கப்பட்டவர்களான பாண்டவர்களும், தங்கள் முதிய தாய்க்காக வருந்தி தங்கள் நகரத்தில் வாழ இயலாதவர்களாக இருந்தனர்.(8) முதிய தந்தையும், தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தவனுமான மன்னனையும், உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரியையும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட விதுரனையும் நினைத்துக் கொண்டிருந்த அவர்கள் மன அமைதியை அனுபவிக்கத் தவறினார்கள்.(9) அரசுரிமையிலோ, பெண்களிலோ, வேத கல்வியிலோ அவர்களுக்கு இன்பமேதும் இருக்கவில்லை.(10) ஆன்மாவைத் துளைத்த துன்பத்தோடு அவர்கள் முதிய மன்னனையும், தங்கள் உற்றார் உறவினரின் பயங்கரப் படுகொலைகளையும் நினைத்தனர்.(11) உண்மையில் இளைஞனான அபிமன்யு, போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான கர்ணன், திரௌபதியின் மகன்கள், மற்றும் பிற நண்பர்கள் ஆகியோரின் படுகொலைகளைக் குறித்து நினைத்த அந்த வீரர்கள் பெரிதும் உற்சாகத்தை இழந்தனர்.(12,13)
பூமியானவள், தன் வீரர்கள் மற்றும் செல்வம் ஆகிய இரண்டையும் இழந்தால் என்பதை மீண்டும் மீண்டும் நினைத்த அவர்கள் மனத்தில் அமைதியை அடைய தவறினார்கள்.(14) திரௌபதி தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தாள், அழகிய சுபத்திரையும் பிள்ளைகளற்றவளாக இருந்தாள். அவர்களும் உற்சாகமற்ற இதயங்களுடனும், பெரிய துன்பத்துடனும் இருந்தனர்.(15) எனினும், விராடன் மகளின் {உத்தரையின்} மகனான உமது தந்தை பரிக்ஷித்தைக் கண்ட உமது பாட்டன்கள் ஏதோ ஒருவாறு தங்கள் உயிர்மூச்சுகளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(16)
சகாதேவன் புலம்பல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 22-குந்தியைக் காண்பதற்காகப் புலம்பிய சகாதேவன் மற்றும் திரௌபதி; திருதராஷ்டிரன் முதலியோரைக் காண தம்பிமாருடனும், நகரமக்களுடனும் காட்டுக்குச் சென்ற யுதிஷ்டிரன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மனிதர்களில் முதன்மையானவர்களும், தங்கள் தாயை மகிழ்ச்சியடையச் செய்பவர்களுமான வீரப் பாண்டவர்கள் துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்தனர்.(1) முன்பு எப்போதும் அரச அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்கள், அந்நேரத்தில் தங்கள் தலைநகரத்தில் எந்தச் செயல்களையும் கவனிக்காமல் இருந்தனர்.(2) துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள், எதனிலிருந்தும் இன்பத்தை ஈட்டத் தவறினார்கள். அவர்களிடம் யாரும் எதுவும் கேட்டாலும் எந்தப் பதிலையும் அவர்கள் சொல்லவில்லை.(3) தடுக்கப்பட முடியாதவர்களான அந்த வீரர்கள் பெருங்கடலைப் போன்ற ஆழமான ஈர்ப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும், துன்பத்தால் தாங்கள் தங்கள் ஞானத்தையும், புலன் உணர்வுகளையும் இழந்துவிட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள்.(4)
பாண்டுவின் மகன்கள், தங்கள் தாய் அந்த முதிர்ந்த தம்பதியருக்குத் தொண்டாற்றி எவ்வளவு மெலிந்திருப்பாள் என்பதை நினைத்துக் கவலையில் நிறைந்தார்கள்.(5) {அவர்கள்}, “உண்மையில், மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டவரும், எந்தப் புகலிடமும் இல்லாதவருமான அந்த மன்னர் {திருதராஷ்டிரர்}, இரைதேடும் விலங்குகள் நடமாடும் காட்டுக்குள், தமது மனைவியுடன் மட்டும் எவ்வாறு தனியாக வாழ்கிறார்?(6) ஐயோ, உயர்வாக அருளப்பட்டவளும், தன் அன்புக்குரிய அனைவரும் கொல்லப்பட்டவளுமான ராணி காந்தாரி அந்தத் தனிமையான காட்டில் எவ்வாறு தன் குருட்டுத் தலைவனைப் பின்தொடர்ந்து செல்வாள்?” {என்று கேட்டனர்}.(7) பாண்டவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது வெளிப்பட்ட கவலைகள் இவ்வாறே இருந்தன. பிறகு அவர்கள், மன்னனை {திருதராஷ்டிரனை} அவனுடைய காட்டு ஆசிரமத்தில் காண்பதில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்தனர்.(8)
அப்போது, சகாதேவன் மன்னனை {யுதிஷ்டிரனை} வணங்கி, “நம் தந்தையை {பெரியப்பாவான திருதராஷ்டிரரைக்} காண்பதில் உமது இதயம் நிலைத்திருக்கிறது என்பதை நான் அறிவேன்.(9) எனினும், நான் உம்மீது கொண்டிருக்கும் மதிப்பின் காரணமாக, நாம் காட்டுக்குப் புறப்படும் காரியத்தில் என்னால் விரைவாக வாயைத் திறக்க முடியவில்லை. அந்தப் பயணத்திற்கான காலம் இப்போது வந்துவிட்டது.(10) குச {தர்ப்பை} மற்றும் காச {நாணல்} புற்களில் உறங்கி மெலிந்தவளும், கடுந்தவங்களைப் பயில்பவளும், தலையில் சடாமுடி தரித்தவளும், தவங்களை நோற்று வாழ்பவளுமான குந்தியை நற்பேற்றினால் நான் காணப் போகிறேன்.(11) அரண்மனைகளிலும், மாளிகைகளிலும் வளர்க்கப்பட்ட அவள், அனைத்து வகை வசதிகள் மற்றும் ஆடம்பரத்துடன் பராமரிக்கப்பட்டவளாவாள். ஐயோ, களைத்தவளும், பெரும் துயரில் மூழ்கியவளுமான என் அன்னையை நான் எப்போது காணப் போகிறேன்?(12) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரரே}, பிறப்பால் இளவரசியான குந்தி, இப்போது காட்டில் துன்பத்தில் வாழ்ந்து வருவதால், மனிதர்களில் கதி பெரிதும் நிலையற்றதென்பதில் ஐயமில்லை” என்றான் {சகாதேவன்}.(13)
சகாதேவனின் இந்தச் சொற்களைக் கேட்டவளும், பெண்கள் அனைவரிலும் முதன்மையானவளுமான ராணி திரௌபதி, உரிய முறையில் மன்னனை வணங்கி மதித்து,(14) “ஐயோ, ராணி பிருதையை {குந்தியை} நான் எப்போது காணப் போகிறேன்? உண்மையில், அவள் இன்னும் உயிரோடு இருப்பாளா? ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இன்னும் ஒருமுறை அவளைக் காண்பதில் நான் வென்றால் என் வாழ்வு வீணாகக் கழிக்கப்படவில்லை என்று நான் கருதிக் கொள்வேன்.(15) இந்த வகையிலான புத்தி எப்போதும் உம்மில் நிலைத்திருக்கட்டும். ஓ! மன்னர்களின் மன்னா, எங்களுக்கு உயர்ந்த வரத்தை அளிக்க விரும்பும் இத்தகைய அறம் செய்வதில் உம்முடைய மனம் எப்போதும் இன்புறட்டும்.(16) ஓ! மன்னா, உமது இல்லத்துப் பெண்மணிகளான இவர்கள் அனைவரும், குந்தி, காந்தாரி மற்றும் என் மாமனாரை {திருதராஷ்டிரரைக்} காண விரும்பி செல்லும் பயணத்திற்காகத் தங்கள் பாதங்களை உயர்த்திக் காத்திருக்கின்றனர் என்று அறிவீராக” என்றாள்.(17)
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, “ராணியான திரௌபதியால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {யுதிஷ்சிரன்}, தன் படைத்தலைவர்கள் அனைவரையும் தன் முன்னிலைக்கு அழைத்து அவர்களிடம்,(18) “தேர்களும், யானைகளும் நிறைந்த என் படையை அணிவகுக்கச் செய்யுங்கள். இப்போது காட்டில் வாழ்ந்துவரும் மன்னர் திருதராஷ்டிரரை நான் காணப் போகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(19)
மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, பெண்களின் காரியங்களைக் கண்காணிப்போரிடம் {அந்தப்புரக் காவலர்களிடம்}, “பல்வேறு வகை வாகனங்களும், ஆயிரக்கணக்கில் இருக்கும் என்னுடைய பல்லக்குகளும் ஆயதம் செய்யப்படட்டும்.(20) வண்டிகள், பொருள் களஞ்சியங்கள், உடையலமாரிகள், கருவூலங்கள் ஆகியவையும், கைவினைசர்களும் ஆயத்தமாகி, வெளியே வரட்டும், கைவினைஞர்களும் வெளியே வரட்டும். கருவூல அதிகாரிகள், குருக்ஷேத்திரத்தில் உள்ள தவசியின் {சதயூபனின்} ஆசிரமத்திற்குச் செல்லும் பாதையில் செல்லட்டும்.(21) குடிமக்களில் மன்னனைக் காண விரும்பும் எவரும் எத்தடையும் இன்றி அனுமதிக்கப்படுவார்கள். அவன் {அத்தகையவன்} முறையான பாதுகாப்புடன் செல்லட்டும்.(22) சமையற்காரர்கள், சமையலறை கண்காணிப்பாளர்கள் {பௌரோகவர்கள்} ஆகியோரும், சமையலுக்கான மொத்த அமைப்பு, பல்வேறு வகை உணவு மற்றும் பான வகைகள் ஆகியவையும் வண்டிகள் மற்றும் வாகனங்களில் கொண்டு செல்லப்படட்டும்.(23) நாம் நாளை புறப்படுகிறோம் என்பது அறிவிக்கப்படட்டும். உண்மையில், (இந்த ஏற்பாடுகளைச் செய்வதில்) காலதாமதமேதும் நேரவேண்டாம். வழியில் பல்வேறு வகை அரங்குகளும், ஓய்வில்லங்களும் அமைக்கப்படட்டும்” என்று ஆணையிட்டான் {யுதிஷ்டிரன்}.(24)
தம்பிகளுடன் கூடியவனான பாண்டுவின் மூத்த மகன் இட்ட ஆணைகள் இவையே. ஓ! ஏகாதிபதி, காலை வந்ததும், மன்னன் {யுதிஷ்டிரன்} பெண்கள் மற்றும் முதியவர்கள் அடங்கிய பெரிய பரிவாரத்துடன் புறப்பட்டான்.(25) தன் நகரைவிட்டு வெளியே வந்த மன்னன் யுதிஷ்டிரன், குடிமக்கள் தன்னோடு வருவதற்கு ஏதுவாக ஐந்து நாட்கள் காத்திருந்து, அதன் பிறகு காட்டை நோக்கிச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(26)
யுயுத்சுவின் பாதுகாப்பில் ஹஸ்தினாபுரம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 23-ஹஸ்தினாபுரத்தைப் பாதுகாக்க யுயுத்சுவும், தௌமியரும்; திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி மற்றும் விதுரனைக் காணப் புறப்பட்ட பாண்டவக்கூட்டம் சென்ற வகை; காட்டுக்குள் நுழைந்து சதயூபனின் ஆசிரமத்தைத் தொலைவிலேயே அவர்கள் கண்டது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாரதக் குலத்தில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, அர்ஜுனன் தலைமையிலானவர்களும், அண்டத்தைக் காப்பவர்களுக்கு {லோகபாலர்களுக்கு} ஒப்பானவர்களுமான வீரர்களால் பாதுகாக்கப்பட்டவையுமான தன் துருப்புகளைப் புறப்படுமாறு ஆணையிட்டான்.(1) உடனடியாக, குதிரைகளை ஆயத்தம் செய்து அணிவகுக்கச் செய்வதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குதிரை வீரர்களுக்கு மத்தியில், “ஆயத்தமாவீர், ஆயத்தமாவீர்” என்ற சொற்கள் அடங்கிய பேராரவாரம் எழுந்தது.(2) சிலர் பல்லக்குகளிலும் {யானங்களிலும்}, சிலர் வாகனங்களிலும், சிலர் பெருவேகம் கொண்ட குதிரைகளிலும், சிலர் சுடர்மிக்க நெருப்பின் காந்தியுடன் கூடியவையும் தங்கத்தாலமைந்தவையுமான தேர்களிலும் சென்றனர்.(3) சிலர் பெரும் யானைகளிலும், ஓ! மன்னா, சிலர் ஒட்டகங்களிலும் சென்றனர். சிலர் புலிநகங்களோடு கூடிய போராளி வகையினுக்குரிய முறையில் கால்நடையாகவே சென்றனர்[1].(4)திருதராஷ்டிரனைக் காண விரும்பிய குடிமக்கள், மாகாணவாசிகள் ஆகியோர் பல்வேறு வகை வண்டிவாகனங்களில் மன்னனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(5) கோதம {கௌதமர்} குலத்தைச் சார்ந்தவரும், படைகளின் பெருந்தலைவரும், ஆசானுமான கிருபரும், மன்னனின் ஆணையின் பேரில் படைகளை அழைத்துக் கொண்டு அந்த முதிய ஏகாதிபதியின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றார்.(6) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனான குரு மன்னன் யுதிஷ்டிரன், பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்கள் சூழ, சூதர்கள், மாகாதர்கள் மற்றும் வந்திகளின் பெருங்கூட்டம் அவனுடைய புகழைப் பாடிக் கொண்டுவர, தலைக்கு மேல் வெண்குடையுடனும், தன்னைச் சுற்றிலும் பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடனும் பயணம் புறப்பட்டான்.(7,8)
காற்று தேவனின் மகனான விருகோதரன் {பீமன்}, நாண்பூட்டப்பட்ட வில்லுடனும், இயந்திரங்களுடனும், தாக்குதல் மற்றும் தடுத்தலுக்குரிய ஆயுதங்களுடனும் மலைபோன்ற ஒரு பெரிய யானையில் சென்று கொண்டிருந்தான்.(9) மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுல சகாதேவன்}, கவசம்பூண்டு, நன்கு பாதுகாக்கப்பட்டவர்களாகவும், பதாகைகள் தரித்தவர்களாகவும் வேகமாகச் செல்லும் இரு குதிரைகளில் சென்றனர்.(10) வலிமையும், சக்தியும் கொண்டவனும், புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டவனுமான அர்ஜுனன், சிறந்த வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், சூரியப் பிரகாசத்துடன் கூடியதுமான ஒரு சிறந்த தேரில் சென்றான்.(11) திரௌபதியின் தலைமையிலான அரச குடும்பத்துப் பெண்கள், பெண்களைக் கண்காணிப்பவர்களால் பாதுகாக்கப்பட்டவர்களாக, மூடப்பட்ட பல்லக்குகளில் சென்றனர். அவ்வாறு அவர்கள் சென்ற போது அபரிமிதமான செல்வமாரியைப் பொழிந்தனர்.(12)
ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்ததும், எக்காள முழக்கம் மற்றும் வீணைகளின் இசையை எதிரொலித்ததுமான அந்தப் பாண்டவக் கூட்டம் பேரழகுடன் சுடர்விட்டது.(13) ஓ! ஏகாதிபதி, அந்தக் குருகுலத் தலைவர்கள், இனிமைமிக்க ஆறுகள் மற்றும் தடாகங்களின் கரைகளில் ஓய்ந்திருந்து, மெதுவாகச் சென்றனர்.(14) வலிமையும், சக்தியும் கொண்ட யுயுத்சுவும், புரோகிதரான தௌமியரும், யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில் நகரத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.(15)
மெதுவாக அணிவகுத்துச் சென்ற மன்னன் யுதிஷ்டிரன், குருக்ஷேத்திரத்தை அடைந்த பிறகு, உயர்ந்ததும், புனிதமானதுமான யமுனையாற்றைக் கடந்து,(16) ஓ! குரு குலத்தோனே, பெரும் ஞானம் கொண்ட அரச முனி {சதயூபன்} மற்றும் திருதராஷ்டிரன் ஆகியோருடைய ஆசிரமத்தைத் தொலைவிலிருந்தே கண்டான்.(17) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மகிழ்ச்சியில் நிறைந்த மனிதர்கள் அனைவரும், தங்கள் மகிழ்வொலிகளால் காட்டை நிறைத்தபடியே அதனுள் விரைவாக நுழைந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(18)
அன்னையைக் கண்ட சகாதேவன்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 24-சதயூபாஸ்ரமத்தை அடைந்த பாண்டவர்கள்; அங்கே திருதராஷ்டிரனைக் காணாமை; யமுனைக்குச் சென்றிருந்த அவர்களைக் கண்ட பாண்டவர்கள்; தாயைக் கண்டு அழுத சகாதேவன்; ஆசிரமம் திரும்பிய திருதராஷ்டிரனும், பாண்டவர்களும்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தொலைவிலேயே தங்கள் தேர்களில் இருந்து இறங்கிய பாண்டவர்கள், மன்னனின் ஆசிரமத்திற்குப் பணிவுடன் கால்நடையாக நடந்து சென்றார்கள்.(1) போராளிகள் அனைவரும், நாட்டின் குடிமக்கள் மற்றும் குரு தலைவர்களின் மனைவிமார் அனைவரும், கால்நடையாகவே அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(2) பிறகு பாண்டவர்கள், மான்கூட்டங்கள் நிறைந்ததும், வாழைமரங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான திருதராஷ்டிரனின் புனித ஆசிரமத்தை அடைந்தனர்.(3) கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள் பலர், ஆவலால் நிறைந்தவர்களாக, அந்த ஆசிரமத்திற்கு வந்திருக்கும் பாண்டவர்களைக் காண அங்கே வந்தனர்.(4)
மன்னன் {யுதிஷ்டிரன்}, தன் கண்களில் கண்ணீருடன், அவர்களிடம், “குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரான என் பெரிய தந்தை {திருதராஷ்டிரர்} எங்கே?” என்று கேட்டான்.(5)ஓ! ஏகாதிபதி, அவன் தூய்மைச் சடங்குகளைச் செய்வதற்காகவும், மலர்களும், நீரும் கொணர்வதற்காகவும் யமுனைக்குச் சென்றிருப்பதாக அவர்கள் அவனிடம் சொன்னார்கள்.(6) அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பாதையின் வழியே நடந்து சென்ற பாண்டவர்கள் சற்றுத் தொலைவிலேயே அவர்கள் அனைவரையும் கண்டனர்.(7) தங்கள் தந்தையைச் சந்திக்க விரும்பிய அவர்கள் வேகமாக நடையுடன் நடந்து சென்றனர். அப்போது சகாதேவன், பிருதை {குந்தி} வந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி வேகமாகச் சென்றான்.(8) அவன், அவளது பாதத்தைத் தீண்டி உரக்க அழத் தொடங்கினான். கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீருடன் அவள் தன் அன்புக்குரிய பிள்ளையைக் கண்டாள்.(9) தன் மகனை எழச் செய்து, அவனைத் தன் கரங்களால் ஆரத்தழுவி கொண்ட அவள், காந்தாரியிடம் சகாதேவனின் வரவைச் சொன்னாள்.(10)
பிறகு, மன்னன் {யுதிஷ்டிரன்}, பீமசேனன், அர்ஜுனன் மற்றும் நகுலன் ஆகியோரையும் கண்ட பிருதை {குந்தி} அவர்களை நோக்கி வேகமாகச் செல்ல முயற்சித்தாள்.(11) பிள்ளைகளற்ற அந்த முதிர்ந்த தம்பதியருடன் நடந்து கொண்டிருந்த அவள் அவர்களைத் தன்னோடு இழுத்துச் சென்றாள். பாண்டவர்கள், அவளைக் கண்டதும் பூமியில் விழுந்தார்கள்.(12) பலமிக்கவனும், உயர் ஆன்மாவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, அவர்களுடைய குரல்கள் மற்றும் தீண்டலின் மூலம் அவர்களை அடையாளம் கண்டு, ஒருவர் பின் ஒருவராக அவர்களுக்கு ஆறுதல் கூறினான்.(13) கண்ணீர் சிந்திய அந்த உயர் ஆன்ம இளவரசர்கள், அந்த முதிர்ந்த மன்னனையும் {திருதராஷ்டிரனையும்}, காந்தாரியையும் உரிய நடைமுறையின்படி அணுகினர்.(14) உண்மையில், தங்கள் புலன் உணர்வுகளை இழந்திருந்த பாண்டவர்கள், தங்கள் தாயின் மூலம் மீண்டும் ஆறுதலை அடைந்து, மன்னனும், பெரியன்னையும், தங்கள் தாயும் சுமந்துவந்த நீர் நிறைந்த குடங்களை வாங்கிக் கொண்டு தாங்களே சுமந்து சென்றனர்.(15)
மனிதர்களில் சிங்கங்களான அவர்களது பெண்களும், அரச குடும்பத்தின் பெண்கள் அனைவரும், நகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போர் அனைவரும் அப்போது அந்த முதிர்ந்த மன்னனைக் கண்டனர்.(16) மன்னன் யுதிஷ்டிரன் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒருவர் பின் ஒருவராக மன்னனுக்கு அடையாளங்காட்டி அவர்களது பெயர்களையும், குலங்களையும் மீண்டும் மீண்டும் சொன்ன பிறகு, தன் பெரிய தந்தையை மதிப்புடன் வழிபட்டான்.(17) அவர்கள் அனைவராலும் சூழப்பட்ட அந்த முதிர்ந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, மகிழ்ச்சிக்கண்ணீரில் குளித்த கண்களுடன், மீண்டும் தான் யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரில் {ஹஸ்தினாபுரத்தில்} வசித்துக் கொண்டிருப்பதாகக் கருதினான்.(18) கிருஷ்ணையின் {திரௌபதியின்} தலைமையிலான தன் மருமகள் அனைவராலும் மதிப்புடன் வணங்கப்பட்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் திருதராஷ்டிரன், காந்தாரியுடனும், குந்தியுடனும் சேர்ந்து இன்பத்தில் நிறைந்தான்.(19) பிறகு அவன், சித்தர்களாலும், சாரணர்களாலும் மெச்சப்பட்டதும், எண்ணற்ற நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தைப் போல அவனைக் காணவிரும்பிய மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்ததுமான அந்தக் காட்டு ஆசிரமத்தை அடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(20)
அடையாளங்காட்டிய சஞ்சயன்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 25- யுதிஷ்டிரன் முதலியோரைக் காட்டி அவர்களுடைய பெயர்களையும் சொல்லி அவர்களைத் தவசிகளுக்கு அறிமுகம் செய்த சஞ்சயன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான தன் தம்பிகள் அனைவருடன் கூடிய மன்னன் {யுதிஷ்டிரன்} தன் பெரிய தந்தையின் {திருதராஷ்டிரனின்} ஆசிரமத்தில் அமர்ந்தான்.(1) அங்கே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்களும், உயர்ந்த அருளைக் கொண்டவர்களுமான தவசிகள் பலர் பரந்த மார்பைக் கொண்டவர்களும், குருகுலத் தலைவர்களுமான பாண்டவர்களைக் காணும் விருப்பத்தில் அவனைச் சுற்றி அமர்ந்தனர்.(2)
அவர்கள், “இவர்களில் யுதிஷ்டிரன் யார்? பீமனும், அர்ஜுனனும் யார் யார்? இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} யார்? பெரும்புகழைக் கொண்ட திரௌபதி யார்?” என்று கேட்டனர்.(3)
அப்போது சூதன் சஞ்சயன், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலாகப் பாண்டவர்கள், திரௌபதி, குரு குடும்பத்துப் பெண்கள் பிறர் ஆகியோரின் பெயர்களைச் சொல்லி அவர்களை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினான்.(4)
சஞ்சயன், “பசும்பொன்னைப் போன்ற நல்ல நிறம் கொண்டவனும், முழுதும் வளர்ந்த ஒரு சிங்கத்தைப் போலத் தெரியும் உடலைக் கொண்டவனும், மீன் போன்ற நீண்ட மூக்கைக் கொண்டவனும், அகலமான பெரிய தாமிர நிறக் கண்களைக் கொண்டவனுமான இவனே குரு மன்னனாவான் {யுதிஷ்டிரனாவான்}.(5) மதங்கொண்ட யானைக்கு ஒப்பான நடை கொண்டவனும், புடம்போட்ட தங்கம்போன்ற நிறம் கொண்டவனும், அகன்ற பெரிய உடல்வடிவம் கொண்டவனும், நீண்டு பருத்திருக்கும் கைகளைக் கொண்டவனுமான இவன் விருகோதரனாவான் {பீமனாவான்}. இவனை நன்றாகப் பாருங்கள்.(6) இவனுக்கு அருகில் அமர்ந்திருப்பவனும், கரிய நிறம் மற்றும் இளமை வடிவத்துடன் கூடியவனும், யானை மந்தையின் தலைவனுக்கு ஒப்பானவனும், சிங்கத்தைப் போன்ற உயர்ந்த தோள்களுடையவனும், விளையாடிக் கொண்டிருக்கும் யானையைப் போல நடப்பவனும், தாமரை இதழ்களைப் போன்ற அகன்ற விழிகளைக் கொண்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான இவன் அர்ஜுனன் என்று அழைக்கப்படும் வீரனாவான்.(7) குந்தியின் அருகில் அமர்ந்திருக்கும் முதன்மையான மனிதர்களான இவர்கள் இருவரும் விஷ்ணுவுக்கும், மஹேந்திரனுக்கும் ஒப்பான இரட்டையர்களாவர்.(8)தாமரை இதழ்களைப் போன்ற அகன்ற விழிகளைக் கொண்டவளும், வாழ்வின் நடு வயதை நெருங்கியவளாகத் தெரிபவளும், நீலோத்பலத்துக்கு {கருங்குவளை மலருக்கு} ஒப்பான நிறம் கொண்டவளும், சொர்க்கத்தின் தேவியைப் போலத் தெரிபவளுமான இந்தப் பெண்மணி, செழிப்பின் தேவியுடைய {லக்ஷ்மியின்} உடல்வடிவமாகத் திகழும் கிருஷ்ணை {திரௌபதி} ஆவாள்.(9) மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, இவளுக்கு அருகில் அமர்ந்திருப்பவளும், பசும்பொன் நிறத்தவளும், வேறு பெண்களுக்கு மத்தியில் சந்திரக் கதிர்களின் உடல்வடிவமாகத் தெரிபவளுமான இவள் ஒப்பற்ற வீரனான சக்கரபாணியின் {கிருஷ்ணனின்} தங்கையாவாள் {சுபத்திரையாவாள்}.(10) பசும்பொன் நிறத்தில் இருக்கும் மற்றொருத்தி, பாம்புத் தலைவனின் மகளும், அர்ஜுனனின் மனைவியுமாவாள் {உலூபியாவாள்}. பசும்பொன், அல்லது மதுக {இலுப்பை} மலர்களின் நிறத்தைக் கொண்டிருக்கும் இவள்[1] இளவரசி சித்ராங்கதையாவாள்.(11)
நீலோத்பல மலர்க்கூட்டத்தின் நிறத்தைக் கொண்ட இவள், கிருஷ்ணனை எப்போதும் அறைகூவி அழைக்கும் வழக்கத்தைக் கொண்டவனும், படைத்தலைவனுமான ஏகாதிபதியின் {சல்லியன் / திருஷ்டத்யும்னன் / சிசுபாலனின்} தங்கையாவாள். இவள் விருகோதரனின் {பீமனின்} முதன்மையான மனைவியாவாள்[2].(12)சம்பக மலர்க்கூட்டத்தின் {சம்பக மலர்மாலையின் மஞ்சள்} நிறத்தைக் கொண்ட இவள் ஜராசந்தன் என்ற பெயரில் அறியப்பட்ட மகதமன்னனின் மகளாவாள். இவள் மத்ராவதியின் இளைய மகனுடைய {சகாதேவனின்} மனைவியாவாள்.(13)நீலோத்பல மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவளும், இதோ பூமியில் அமர்ந்திருப்பவளும், தாமரை இதழ்களைப் போன்ற நீண்ட வழிகளைக் கொண்டவளுமான இவள் மத்ராவதியின் மூத்த மகனுடைய {நகுலனின்} மனைவியாவாள் {சிசுபாலனின் மகள் கரேணுமதியாவாள்}.(14) புடம்போட்ட தங்கத்தைப்போன்ற நல்ல நிறம் கொண்டவளும், மடியில் பிள்ளையுடன் அமர்ந்திருப்பவளுமான இந்தப் பெண்மணி மன்னன் விராடனின் மகளாவாள் {உத்தரையாவாள்}. இவள், தேரற்றவனாக இருந்தபோது தேரில் இருந்து போரிட்ட போர்வீரர்களாலும் துரோணராலும் கொல்லப்பட்ட அபிமன்யுவின் மனைவியாவாள்[3].(15)வகிடற்ற தலைமுடி கொண்டவர்களும், வெள்ளுடை உடுத்தியவர்களுமான இவர்கள் கொல்லப்பட்ட திருதராஷ்டிர மகன்களின் {மனைவிகளான} விதவைகளாவர். இந்த முதிய மன்னனின் மருமகள்களும், இவருடைய நூறு மகன்களின் மனைவிமாருமான இவர்கள், தற்போது வீரப் பகைவர்களால் கொல்லப்பட்ட கணவர்களையும், பிள்ளைகளையும் இழந்தவர்களாக இருக்கிறார்கள்.(16) நான் இவர்களை முன்னுரிமை வரிசையின்படி சுட்டிக்காட்டினேன். பிராமணர்களிடம் இவர்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பின் விளைவால், இவர்களது புத்தியும், இதயமும் அனைத்து வகைக் கபடங்களும் அற்றவையாக இருக்கின்றன. தூய ஆன்மாவைக் கொண்ட இந்தக் கௌரவக் குடும்பத்து இளவரசிகள் அனைவரும் உங்கள் கேள்விக்கான பதிலாக என்னால் சுட்டிக்காட்டப்பட்டனர்” என்றான் {சஞ்சயன்}”.(17)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறே குரு குலத்தைச் சேர்ந்தவனும், வயதால் முதிர்ந்தவனுமான அந்த மன்னன், மனிதர்களில் தேவர்களான தன் மகன்களைச் சந்தித்து, தவசிகள் அனைவரும் சென்ற பிறகு அவர்களுடைய நலத்தை விசாரித்தான்.(18) பாண்டவர்களுடன் வந்த போர்வீரர்கள், அந்த ஆசிரமத்தை விட்டகன்று, தங்கள் தேர்களில் இருந்தும், தாங்கள் செலுத்திய விலங்குகளில் இருந்தும் இறங்கி சற்றுத் தொலைவில் அமர்ந்தனர். உண்மையில், பெண்கள், முதியவர்கள், பிள்ளைகள் உள்ளிட்ட அந்தக் கூட்டமனைத்தும் அமர்ந்த பிறகு, அவர்களிடம் பேசிய முதிர்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, வழக்கமான மென் விசாரிப்புகளைச் செய்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(19)
விதுரப்பிரவேசம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 26-ஒருவரையொருவர் நலம் விசாரித்த திருதராஷ்டிரனும், யுதிஷ்டிரனும்; கூட்டத்தைக் கண்டு விதுரன் விலகிச் செல்வதைக் கண்ட யுதிஷ்டிரன்; விரைந்து சென்ற யுதிஷ்டிரனுக்குள் யோகத்தால் பிரவேசித்த விதுரன்; இந்த அதிசயத்தைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன யுதிஷ்டிரன்…
திருதராஷ்டிரன், “ஓ! யுதிஷ்டிரா, நீ உன் தம்பிகளுடனும், நகர மற்றும் மாகாணவாசிகளுடனும் அமைதியாகவும், இன்பமாகவும் இருக்கிறாயா?(1) உன்னைச் சார்ந்திருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? உன் அமைச்சர்கள், பணியாட்கள், பெரியோர், ஆசான்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?(2) உன் ஆட்சிப்பகுதிகளில் வாழ்வோர் அச்சமின்றி இருக்கிறார்களா? மனிதர்களின் ஆட்சியாளர்கள் பின்பற்றும் பழைமையானதும், மரபுசார்ந்ததுமான ஒழுக்கத்தை நீ பின்பற்றுகிறாயா?(3) நீதி மற்றும் நேர்மையால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை அலட்சியம் செய்யாமல் நீ உன் கருவூலத்தை நிரப்புகிறாயா? பகைவர்கள், நடுநிலையாளர்கள், கூட்டாளிகள் ஆகியோரிடம் உரிய முறையில் நடந்து கொள்கிறாயா?(4)
(வேள்விகளுக்காகவும், அறச் சடங்குகளுக்காகவும் விதிக்கப்படும்) முதற்கொடைகளை அளித்துப் பிராமணர்களை முறையாகக் கவனித்துக் கொள்கிறாயா? ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, உன் பகைவரே உன் நடத்தையால் நிறைவடைந்திருக்கும்போது குடிமக்கள், உன் பணியாட்கள் மற்றும் உற்றார் உறவினரைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஓ! மன்னர்களின் மன்னா, பித்ருக்களையும், தேவர்களையும் அர்ப்பணிப்புடன் நீ துதிக்கிறாயா?(5,6) ஓ! பாரதா, விருந்தினர்களுக்கு உணவும், பானமும் கொடுத்து நீ அவர்களை வழிபடுகிறாயா? உன் ஆட்சிப்பகுதிகளில் உள்ள பிராமணர்கள், தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்புடன் அறப்பாதையில் நடக்கிறார்களா?(7) உன் நாட்டுக்குள் இருக்கும் க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், மற்றும் உன் உறவினர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளை நோற்கிறார்களா? உன் குடிமக்களில் பெண்கள், பிள்ளைகள், முதியவர்கள் ஆகியோர் (துன்பமான சூழ்நிலையில்) வருந்தாமல், (வாழ்வின் தேவைகளுக்காக) பிச்சை எடுக்காமல் இருப்பார்கள் என நான் நம்புகிறேன். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, உன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், உன் வீட்டில் முறையாகக் கௌரவிக்கப்படுகிறார்களா? ஏகாதிபதி, அரசமுனிகளுக்குரிய இந்தக் குலமானது உன்னைத் தங்கள் மன்னனாக அடைந்து, புகழ் மற்றும் மகிமையில் இருந்து வீழாதிருக்கிறது என நான் நம்புகிறேன்” என்றான் {திருதராஷ்டிரன்}”.(9)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொன்ன அந்த முதிர்ந்த மன்னனிடம் அறநெறியையும், நீதியையும் நன்கறிந்தவனும், செயல்கள் மற்றும் வாக்கில் நன்கு திறம்பெற்றவனுமான யுதிஷ்டிரன், தன் நலம் குறித்த சில கேள்விகளை முன்வைத்துப் பினவருமாறு பேசினான்.(10)
யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, உமது அமைதியும், தற்கட்டுப்பாடும், இதய அமைதியும் வளர்கின்றனவா? என் தாயான இவள் களைப்பும், தொல்லையுமின்றி உமக்குத் தொண்டாற்ற இயன்றவளாக இருக்கிறாளா?(11) ஓ! மன்னா, இவளது காட்டுவாசம் கனியை {பயனை} விளைவிக்குமா? குளிர் மற்றும் காற்று ஆகியவற்றாலும் {ஆகியவற்றுக்கு வெளிப்பட்டும்}, நடப்பதனால் உண்டாகும் களைப்பாலும் மெலிந்திருப்பவளும், இப்போது கடுந்தவப்பயிற்சிகளில் அர்ப்பணிப்பு மிக்கவளாக இருப்பவளும், என் பெரியன்னையுமான இந்த ராணி {காந்தாரி} வலிமையும், சக்தியும் மிக்கவர்களும், க்ஷத்திரிய வகைக் கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருந்தவர்களும், போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்களுமான இவளது பிள்ளைகளை எண்ணி இன்னும் வருந்தாமல் இருக்கிறாளா?(12,13) இந்தப் படுகொலைக்குப் பொறுப்பான இழிந்த பாவிகளான எங்களை இவள் குற்றஞ்சாட்டுகிறாளா? ஓ! மன்னா, விதுரர் எங்கே? எங்களால் அவரை இங்குக் காண முடியவில்லையே. நோன்புகளை நோற்பவரான சஞ்சயர் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார் என நான் நம்புகிறேன்” என்றான்”.(14)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட திருதராஷ்டிரன், மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பதிலளிக்கும் வகையில், “ஓ! மகனே, விதுரன் நன்றாக இருக்கிறான். அவன் உணவனைத்தையும் கைவிட்டு, காற்றை மட்டுமே உண்டு, கடுந்தவங்களைச் செய்து வருகிறான். அவன் மெலிந்திருக்கிறான், அவனது தமனிகளும், நரம்புகளும் புலப்படுகின்றன. இந்த வெறுங்காட்டில் சில வேளைகளில் பிராமணர்களால் அவன் பார்க்கப்படுகிறான்” என்றான்.(16)
திருதராஷ்டிரன் இதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, தொலைவில் விதுரன் தென்பட்டான். அவன் தன் தலையில் சடாமுடி தரித்து, வாயில் சரளைக் கற்களை வைத்துக் கொண்டு, மிக மிக மெலிந்தவனாகக் காணப்பட்டான். அவன் {விதுரன்} முற்றிலும் நிர்வாணமாக இருந்தான். அவனது உடல் முழுவதும் புழுதியும், காட்டு மலர்களின் சாறும் படிந்திருந்தன.(17) க்ஷத்ரி {விதுரன்} தொலைவில் தென்பட்ட போது, அந்தச் செய்தி யுதிஷ்டிரனுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஓ! மன்னா, திடீரென நின்ற விதுரன், (பல மனிதர்கள் நிறைந்திருந்த) ஆசிரமத்தை நோக்கித் தன் கண்களைச் செலுத்தினான் (அவர்களைக் கண்டான்).(18) மன்னன் யுதிஷ்டிரன் தனியனாக அவனைப் பின்தொடர்ந்து சென்றபோது, ஆழ்ந்த காட்டுக்குள் நுழைந்த அவன் {விதுரன்}, பின்தொடர்ந்து வருபவனுக்குச் சிலவேளைகளில் தென்படுபவனாகவும், சில வேளைகளில் தென்படாதவனாகவும் ஓடினான்.(19)
அவன் {யுதிஷ்டிரன்}, “ஓ! விதுரரே, ஓ! விதுரரே, நான் உமக்குப் பிடித்தவனான மன்னன் யுதிஷ்டிரன் வந்திருக்கிறேன்” என்று உரக்கச் சொன்னான். யுதிஷ்டிரன், இவ்வாறு கூச்சலிட்டவாறே பெரும் முயற்சியுடன் விதுரனைப் பின்தொடர்ந்தான்.(20)
நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையான விதுரன், அந்தக் காட்டில் தனிமையான ஓரிடத்தை அடைந்து, மரமொன்றில் சாய்ந்து கொண்டு அசையாமல் நின்றான்.(21) அவன் மிக மிக மெலிந்திருந்தான். (சிறப்பியல்புகள் அனைத்தும் மொத்தமாக மறைந்த நிலையில்) அவன் {விதுரன்} மனிதன் என்ற வடிவத்தை மட்டுமே தக்க வைத்திருந்தான். எனினும் (இத்தகைய மாற்றங்கள் இருந்தாலும்), பெரும் நுண்ணறிவைக் கொண்ட யுதிஷ்டிரன் அவனை அடையாளம் கண்டு கொண்டான்.(22)யுதிஷ்டிரன், அவனுக்கு எதிரில் நின்று கொண்டு, “நான் யுதிஷ்டிரன் வந்திருகிறேன்” என்றான். உண்மையில், விதுரனை முறையாக வழிபட்டு, விதுரன் கேட்கும் வகையில் யுதிஷ்டிரன் இந்தச் சொற்களைச் சொன்னான்.(23) அதே வேளையில் விதுரன் நிலைத்த கண்களுடன் மன்னனைப் பார்த்தான். மன்னன் மீது இவ்வாறு பார்வையைச் செலுத்திய அவன் யோகத்தில் அசைவற்றவனாக நின்று கொண்டிருந்தான்.(24) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன் {விதுரன்} அப்போது (தன் யோக சக்தியின் மூலம்) அங்கங்களுடன் அங்கங்களை இணைத்து யுதிஷ்டிரனின் உடலுக்குள் நுழைந்தான். அவன் தன் உயிர் மூச்சை மன்னனுடைய உயிர் மூச்சுடனும், தன் புலன்களை மன்னனின் புலன்களுடனும் கலந்தான்.(25) உண்மையில், சுடர்மிக்க சக்தியுடன் கூடிய விதுரன், யோக சக்தியின் துணையுடன் இவ்வாறு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் உடலுக்குள் நுழைந்தான்.(26)
அப்போது விதுரனின் உடல், நிலைத்த பார்வை கொண்ட கண்களுடன் மரத்திலேயே சாய்ந்திருந்தது. அதிலிருந்து உயிர் தப்பிவிட்டது என்பதை மன்னன் விரைவில் கண்டான்.(27) அதே வேளையில் அவன் {யுதிஷடிரன்} தான் முன்பைவிடப் பலசாலியாகவும், முன்பைவிடக் கூடுதலான நற்பண்புகள் மற்றும் சிறப்புகளுடன் இருப்பதாகவும் உணர்ந்தான். ஓ! ஏகாதிபதி, பெருங்கல்வியும், சக்தியும் கொண்டவனும், பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், தான் மனிதர்களின் மத்தியில் பிறப்பதற்கு முன்பு இருந்த நிலையை நினைத்துப் பார்த்தான்[1]. வலிமையும், சக்தியும் நிறைந்த அவன் {யுதிஷ்டிரன்}, வியாசரின் மூலம் யோகப் பயிற்சி குறித்துக் கேள்விப்பட்டிருந்தான்.(28, 29)பெருங்கல்வி கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், விதுரனின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்யவும், அதை முறையாக எரிக்கவும் {தகனம் செய்யவும்} விரும்பினான். அப்போது காட்சிக்குப் புலப்படாத குரல் ஒன்று,(30) “ஓ! மன்னா, விதுரன் என்றழைக்கப்படுபவனுக்குரிய இவ்வுலடல் எரிக்கப்படக்கூடாது. இவனில் உன்னுடலும் இருக்கிறது. இவன் அறத்தின் நித்திய தேவனாவான்.(31) ஓ! பாரதா, ஸாந்தானிகம் என்ற பெயரால் அறியப்படும் இன்பலோகம் இவனுடையதாகும்[2]. இவன் யதிகளின் கடமைகளை நோற்றவனாவான். ஓ! பகைவரை எரிப்பவனே, இவனுக்காக நீ வருந்தலாகாது” என்றது.(32)இவ்வாறு சொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அந்த இடத்தில் இருந்து திரும்பி நடந்தது அனைத்தையும் விசித்திரவீரியனின் {திருதராஷ்டிரனிடம்} அரசமகனிடம் தெரிவித்தான்.(33) பெருங்காந்தி கொண்ட அந்த மன்னனும் {திருதராஷ்டிரனும்}, அங்கே இருந்த மனிதர்கள் அனைவரும், பீமசேனனும் பிறரும் இதைக் கேட்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(34)
நடந்ததைக் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் நிறைவடைந்தவனாகத் தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “நீர், கிழங்குகள் மற்றும் கனிகள் உள்ளிட்ட இந்தக் கொடைகளை நீ என்னிடம் இருந்து பெறுவாயாக. ஓ! மன்னா, ஒருவனுடைய விருந்தினன் அவன் உண்பதையே தானும் உண்ண வேண்டும் என்று சொல்லப்படுகிறது” என்றான்.(35) இவ்வாறு சொல்லப்பட்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, “அவ்வாறே ஆகட்டும்” என்று மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்குப்} பதிலளித்தான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} கொடுத்த கனிகளையும், கிழங்குகளையும் உண்டான்.(36) பிறகு அவர்கள், அந்த முதிர்ந்த மன்னனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, நீரைப் பருகிய பிறகு ஒரு மரத்தினடியில் தங்கள் படுக்கைகளை விரித்து அந்த இரவைக் கழித்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(37)
வியாசரின் வருகை! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 27-திருதராஷ்டிரனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு பெரும் முனிவர்களின் ஆசிரமங்களைப் பார்த்த யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரன் இருந்த ஆசிரமத்திற்கு வந்த சதயூபனும், வியாசரும்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, அறம்சார்ந்தவர்களான அந்தத்தவசிகளின் ஆசிரமத்தில், மங்கல நட்சத்திரக்கூட்டத்தின் சிறப்பியல்பைக் கொண்ட அந்த இரவை இவ்வாறே அவர்கள் கழித்தனர்.(1) அப்போது அங்கே நிகழ்ந்த உரையாடல் அறநெறி மற்றும் செல்வம் குறித்த பல சிந்தனைகளைக் கொண்டதாக இருந்தது. ஸ்ருதிகளில் இருந்து பல்வேறு குறிப்புகளையும், இனிமை நிறைந்த சொற்களையும் கொண்டதாக அஃது இருந்தது.(2) ஓ! மன்னா, பாண்டவர்கள் விலைமதிப்புமிக்கப் படுக்கைகளைவிட்டு, வெறும் தரையில் தங்கள் தாயின் அருகில் தங்களைக் கிடத்திக் கொண்டனர்.(3)
உண்மையில், அந்த வீரர்கள், உயர் ஆன்ம மன்னன் திருதராஷ்டிரனுடைய உணவை உண்டு அந்த இரவைக் கழித்தனர்.(4) அந்த இரவு கடந்ததும், தன் காலைச் செயல்கள் அனைத்தையும் செய்த மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகளின் துணையுடன் அந்த ஆசிரமத்தை ஆய்வு செய்தான்.(5) அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில், தன் குடும்பத்துப் பெண்கள், பணியாட்கள் மற்றும் புரோகிதருடன், அந்த ஆசிரமத்திற்குள் தான் விரும்பிய அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தான்.(6)
சுடர்மிக்க நெருப்புகளுடன் கூடிய வேள்விப் பீடங்கள் பலவற்றையும், அவற்றில் அமர்ந்திருந்தவர்களும், தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆகுதிகளை ஊற்றித் தங்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்பவர்களான பல தவசிகளையும் அங்கே கண்டான்.(7) அந்தப் பீடங்கள் காட்டின் கனிகள் மற்றும் கிழங்குகளாலும், மலர்க்குவியல்களாலும் நிறைந்திருந்தன. தெளிந்த நெய்யின் புகை அவற்றில் இருந்து சுருண்டு மேலெழுந்தது. அதுதவிர, அவை வேதங்களின் உடல்வடிவங்களைப் போலத் தெரிந்த உடல்களைக் கண்ட தவசிகள் பலரும், சகோதரத்துவம் கொண்ட பலரும் அங்கே நிறைந்திருந்தனர்.(8)
மான்கூட்டங்கள் அனைத்து வகை அச்சத்தில் இருந்தும் விடுபட்டு அங்கேயும் இங்கேயும் ஓய்ந்து, மேய்ந்து கொண்டிருந்தன. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அங்கே இனிய இசையொலிகளை எழுப்புவதில் ஈடுபடும் எண்ணற்ற பறவைகளும் இருந்தன.(9) மயில்கள், தாத்யூகங்கள், கோகிலங்களின் {குயில்களின்} இசையொலி மற்றும் வேறு குருவிகளின் இனிய பாடல்களும் மொத்த காட்டிலும் எதிரொலித்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(10) சில இடங்களில் கல்விமான்களான பிராமணர்களால் ஓதப்படும் வேத மந்திரங்களை எதிரொலித்துக் கொண்டிருந்தன. சில இடங்கள், காட்டில் திரட்டப்பட்ட கனிகள் மற்றும் கிழங்குகளின் பெருங்குவியல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(11)
அப்போது மன்னன் யுதிஷ்டிரன், அந்தத் தவசிகளுக்காகத் தான் கொண்டு வந்திருந்த தங்கத்தாலான அல்லது தாமிரத்தாலான குடுவைகளையும்,(12) ஓ! பாரதா {ஜனமேஜயா}, மான்தோல்கள், விரிப்புகள் {கம்பளங்கள்}, மரத்தாலான வேள்விக்கரண்டிகள் {ஸ்ருக்குகள், ஸுர்வங்கள்}, கமண்டலங்கள், மரத்தாலான தட்டுகள் {ஸ்தாலிகள்}, குடங்கள் மற்றும் பாத்திரங்களை அவர்களுக்குக் கொடுத்தான்.(13) இரும்பாலான பல்வேறு வகைப் பாத்திரங்கள், சிறு பாத்திரங்கள், வெவ்வேறு அளவிலான குடுவைகள் ஆகியனவும், தவசிகளில் ஒவ்வொருவரும் எவ்வளவு விரும்பினார்களோ அவ்வளவும் மன்னனால் கொடுக்கப்பட்டன.(14) அற ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், காட்டுக்குள் இவ்வாறு உலவி, தவசிகளின் பல்வேறு ஆசிரமங்களைக் கண்டு, பல கொடைகளைக் கொடுத்து, தன் பெரிய தந்தை {திருதராஷ்டிரன்} இருந்த இடத்திற்கே திரும்பி வந்தான்.(15)
அவன் {யுதிஷ்டிரன்} பூமியின் தலைவனான மன்னன் திருதராஷ்டிரன், தன் காலைச் சடங்குகளைச் செய்து முடித்து, தன்னருகில் காந்தாரியுடன் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்டான்.(16) அற ஆன்மா கொண்ட ஏகாதிபதி, பணிவுடன் தலைகுனிந்திருக்கும் ஒரு சீடரைப் போல அந்த இடத்தின் அருகில் அமர்ந்திருக்கும் தன் தாயான குந்தியையும் கண்டான்.(17) அவன் தன் பெயரை அறிவித்துக் கொண்டு அந்த முதிர்ந்த மன்னனை {திருதராஷ்டிரனை} வணங்கினான். அந்த முதிய மன்னன், “அமர்வாயாக” என்ற சொற்களைச் சொன்னான். திருதராஷ்டிரனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, குசப்புல்லாலான ஒரு பாயில் யுதிஷ்டிரன் அமர்ந்தான்.(18) ஓ! பாரதக் குலத்தோனே {ஜனமேஜயனே}, பீமனும், பாண்டுவின் பிற மகன்களும், அந்த மன்னனை வணங்கி, அவனது பாதத்தைத் தீண்டி, அவனது அனுமதியைப் பெற்றுக் கொண்டு கீழே அமர்ந்தனர்.(19) அவர்களால் சூழப்பட்ட அந்த முதிர்ந்த குரு மன்னன் மிக அழகானவனாகத் தெரிந்தான். உண்மையில் அவன் தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் பிருஹஸ்பதியைப் {Vrihaspati} போன்ற வேத காந்தியில் ஒளிவீசினான்.(20)
அவர்கள் அமர்ந்ததும், குருக்ஷேத்திரவாசிகளான சதயூபன் உள்ளிட்ட பெரும் முனிவர்கள் பலரும் அங்கே வந்தனர்.(21) சிறப்புமிக்கவரும், கல்விமானும், பெருஞ்சக்தி கொண்டவரும், தெய்வீக முனிவர்களாலேயே கூட மதிக்கப்படுபவருமான வியாசர், தம்முடைய எண்ணற்ற சீடர்களுக்குத் தலைமை தாங்கியவராக யுதிஷ்டிரனுக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.(22) குரு மன்னன் திருதராஷ்டிரன், பெருஞ்சக்தி கொண்ட குந்தியின் மகன் யுதிஷ்டிரன், பீமசேனன் மற்றும் பிறரும் எழுந்து நின்று, சில அடிகள் முன்னோக்கி நகர்ந்து அந்த விருந்தினர்களை வணங்கினார்கள்.(23)
சதயூபன் மற்றும் பிறரால் சூழப்பட்டிருந்தவரும், அருகில் நெருங்கி வந்தவருமான வியாசர் திருதராஷ்டிரனிடம், “அமர்வாயாக” என்றார்.(24) அதன்பிறகு சிறப்புமிக்க வியாசர் கருப்பு மான்தோலில் வைக்கப்பட்ட குசப்புற்களாலானதும், பட்டுத் துணியால் மூடப்பட்டதுமான ஒரு சிறந்த இருக்கையில் அம்ரந்தார். அவர்கள் அவருக்காக அந்த இருக்கையை ஒதுக்கியிருந்தனர்.(25) வியாசர் அமர்ந்ததும், தீவில் பிறந்தவரான அந்தத் தவசியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, பெருஞ்சக்தி கொண்ட அந்த முதன்மையான மறுபிறப்பாளர்கள் அனைவரும் அமர்ந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(26)
வியாசரின் உறுதிமொழி! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 28-திருதராஷ்டிரனின் நலம் விசாரித்த வியாசர்; விதுரனின் உண்மை வடிவம் முதலியவற்றைக் கூறியது; மற்ற முனிவர்களால் செய்ய முடியாத திருதராஷ்டிரனுடைய விருப்பத்தைச் செய்வதாக உறுதிமொழி அளித்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “உயர் ஆன்ம பாண்டவர்கள் அனைவரும் அமர்ந்ததும், சத்தியவதியின் மைந்தனான வியாசர்,(1) “ஓ! வலிய கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரா, உன்னால் தவங்கள் செய்ய முடிந்ததா? ஓ! மன்னா, காட்டில் வசிப்பதில் உன் மனம் நிறைவடைகிறதா?(2) போரில் உன் மகன்கள் கொல்லப்பட்டதில் பிறந்த உன் துயரம் உன் இதயத்தில் இருந்து மறைந்ததா? ஓ! பாவமற்றவனே, உன் கருத்துகள் அனைத்தும் இப்போது தெளிவடைந்துள்ளனவா?(3) உன் இதயத்தை உறுதியாகச் செய்து கொண்டு காட்டு வாழ்வுக்கான விதிமுறைகளை நீ பின்பற்றுகிறாயா? என் மருமகளான காந்தாரி, துயரில் மூழ்கத் தன்னை அனுமதித்துக் கொள்கிறாளா?(4) அவள் பெரும் ஞானம் கொண்டவளாவாள். புத்தியுள்ள அந்த ராணி {காந்தாரி}, அறம், பொருள் ஆகிய இரண்டையும் புரிந்து கொண்டவளாவாள். செழிப்பு மற்றும் வறுமை ஆகிய இரண்டுக்கும் தொடர்புடைய உண்மைகளை அவள் நன்கறிந்தவளாவாள். அவள் இன்னும் வருந்துகிறாளா?(5)
ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, பெரியோருக்குத் தொண்டாற்றுவதில் உள்ள அர்ப்பணிப்பின் விளைவால் தன் பிள்ளைகளை விட்டகன்ற குந்தி, உன் தேவைகளைக் கவனித்துப் பணிவுடன் உனக்குத் தொண்டாற்றுகிறாளா?(6) உயர்ந்த மனம் கொண்டவனும், உயர் ஆன்மாவும், தர்மனின் மகனுமான மன்னன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்கள் போதுமான அளவுக்குத் தேற்றப்பட்டனரா?(7) இவர்களைக் கண்டதில் நீ மகிழ்ச்சியடைகிறாயா? அனைத்துக் களங்கங்களில் இருந்தும் உன் மனம் விடுபட்டிருக்கிறதா? ஓ! மன்னா, ஞானம் பெருகியதன் விளைவால் உன் மனோநிலை தூய்மையடைந்ததா?(8) ஓ! மன்னா, ஓ! பாரதா, எந்த உயிரினத்திற்கும் தீங்கிழையாமை, வாய்மை மற்றும் கோபத்தில் இருந்து விடுதலை என்ற இந்த முத்தொகை காரியங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(9) உன்னுடைய இந்தக் காட்டு வாழ்க்கை இன்னும் உனக்குத் துன்பத்தைத் தருகிறதா? காட்டின் விளைச்சலில் இருந்து உன் சொந்த முயற்சியின் மூலமே உனக்கான உணவை உன்னால் ஈட்டிக் கொள்ள முடிகிறதா? உண்ணா நோன்புகள் இப்போது உனக்குத் துன்பத்தைத் தருகின்றனவா?(10)
ஓ! மன்னா, தர்மனின் சுயமாக இருந்த உயர் ஆன்ம விதுரன் எவ்வாறு இவ்வுலகிவிட்டு அகன்றான் என்பதை நீ அறிந்தாயா?(11) மாண்டவ்யரின் {ஆணிமாண்டவ்யரின்} சாபத்தின் மூலம் அறத்தேவன் விதுரனாகப் பிறந்திருந்தான். அவன் {விதுரன்} பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாக இருந்தான். உயர்ந்த தவங்களையும், உயர்ந்த ஆன்மாவையும், உயர்ந்த மனத்தையும் கொண்டவனாக அவன் இருந்தான்.(12) தேவர்களுக்கு மத்தியில் பிருஹஸ்பதியும், அசுரர்களுக்கு மத்தியில் சுக்ரனும் கூட இந்த முதன்மையான மனிதனைப் போல இத்தகைய நுண்ணறிவைக் கொண்டிருந்ததில்லை.(13) முனிவர் மாண்டவ்யர் நெடுங்காலம் ஈட்டிய தன் தவச் சக்தியை அழித்து அறத்தின் நித்திய தேவனை {தர்மதேவனை} கலங்கடித்தார் {சபித்தார்}[1].(14) பெரும்பாட்டனின் ஆணையின் பேரிலும், என் சொந்த சக்தியின் மூலமும், விசித்ரவீரியனுக்கு உரிய நிலத்தில் பெரும் நுண்ணறிவுமிக்க விதுரன் என்னால் உண்டாக்கப்பட்டான்.(15)ஓ! மன்னா, நித்தியமான தேவர்களுக்குத் தேவன் {தர்மன்} உன் தம்பியாக இருந்தான். அவனுடைய {விதுரனின்} தாரணை மற்றும் தியான பயிற்சிகளின் விளைவால் கல்விமான்கள் அவனைத் தர்மனாக அறிந்தனர்[2].(16) வாய்மை, தற்கட்டுப்பாடு, இதய அமைதி, கருணை மற்றும் கொடைகளுடன் சேர்ந்து அவன் {தர்மன்} வளர்கிறான். எப்போதும் தவங்களில் ஈடுபடும் அவன் நித்தியமானவனாவான்.(17) அந்த அறத் தேவனின் யோக பலத்தின் மூலமே குரு மன்னன் யுதிஷ்டிரனும் தன் பிறப்பை எடுத்தான். எனவே, யுதிஷ்டிரன், பெரும் ஞானமும், அளவிலா நுண்ணறிவும் கொண்ட தர்மனாக இருக்கிறான்.(18) தர்மன் இம்மையிலும், மறுமையிலும் இருக்கும் நெருப்பையோ, காற்றையோ, நீரையோ, நிலத்தையோ, வெளியையோ போன்றவனாவான்.(19) ஓ!மன்னர்களின் மன்னா, அவன் எங்கும் செல்ல வல்லவனாகவும் மொத்த அண்டத்திலும் நீக்கமற நிறைந்தவனாகவும் இருக்கிறான். முதன்மையான தேவர்கள், அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தவர்கள் மற்றும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் ஆகியோரால் மட்டுமே காணப்படக்கூடியவனாக அவன் இருக்கிறான்.(20)தர்மனே விதுரனாவான்; விதுரனே பாண்டுவின் (மூத்த) மகனாவான் {யுதிஷ்டிரனாவான்}. ஓ! மன்னா, அந்தப் பாண்டுவின் மகனை உன்னால் காண முடியும். அவன் உன் முன்னிலையில் ஒரு பணியாளாக இருக்கிறான்.(21) பெரும் யோக பலம் கொண்டவனும், நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையாவனும், உயர் ஆன்மாகக் கொண்டவனுமான உன் தம்பி {விதுரன்}, குந்தியின் மகனான உயர் ஆன்ம யுதிஷ்டிரனைக் கண்டு அவனது மேனிக்குள் புகுந்துவிட்டான்.(22) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, உனக்கும் நான் பெரும் நன்மையைச் செய்வேன். ஓ! மகனே, நான் உன் ஐயங்களை விலக்கவே இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக.(23) வேறு எந்தப் பெரும் முனிவராலும் இதற்கு முன்பு செய்யப்படாத அருஞ்செயலையும், என் தவங்களின் விளைவால் ஏற்படும் சில ஆச்சரியங்களையும் நான் உனக்குக் காட்டப் போகிறேன்.(24) ஓ! மன்னா, என்னிடம் இருந்து எதை நீ அடைய விரும்புகிறாய்? எதைப் பார்க்கவோ, தீண்டவோ, கேட்கவோ விரும்புகிறாய் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! பாவமற்றவனே, நான் அதை நிறைவேற்றுவேன்” என்றார் {வியாசர்}.(25)
ஆஸ்ரமவாஸ உபபர்வம் முற்றும்
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply