நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள் நிலத்தில்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்தளிக்கும்
பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுப் புளி மண்
ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே
பதவுரை
நீள் நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே
பாங்காக – பயனுடயதாக
நல்ல – ஆன்ம நலத்தைத் தரவல்ல
பிரமேய சாரம் – திருமந்திரத்தின் சுருக்கத்தை
பரிந்து – அருள் கூர்ந்து
அளிக்கும் – அருளிச் செய்யும்
பூங்கா – அழகான பூஞ்சோலைகளும்
வளம் பொழில் – செழிப்பான தோப்புக்களும்
சூழ் புடை – நாற்புறமும் சூழ்ந்துள்ள
புதுப் புளி – புதுப் புளி என்னும் இடத்தில்
மன் – புலவர் (தலைவராக)
வாழும் – வாழ்ந்தவரும்
ஆங்காரமற்ற – செருக்குச் சிறிதும் இல்லாதவருமான
அருளாள மா முனி – அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் திருநாமமுடைய ஆசார்யரின்
அம்பதமே – அழகிய திருவடிகளையே
என்றும் – எப்பொழுதும்
நீங்காமல் – பிரியாமல்
நினைத்து – எண்ணிக் கொண்டு
தொழுமின்கள் – வணங்குவீராக
நீள் நிலத்தீர்! அருளாளமாமுனி அம்பதமே என்றும் தொழுமின்கள்! என்று கொண்டு கூட்டுக.
“என்றும்” என்ற சொல்லை
“நீங்காமல்” என்றும்
“நினைத்து” என்றும்
இரண்டு இடங்களிலும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.
அதாவது
“என்றும் நீங்காமல்” என்றும் என்றும் நினைத்து” என்றும் கூட்டுக.
பொருளை அறிவதற்கு அளவு கோலாயிருப்பது பிரமாணம் அதனால் அறியப்படும் பொருளுக்குப்
பிரமேயம் என்று பெயர்.
அதனுடைய சுருக்கு சாரம். அது பிரமேய சாரம் எனப்படும்.
பிரமாணம் – அளக்கும் கருவி
பிரமேயம் – அளக்கப்பட்ட பொருள்
ஸாரம் – சுருக்கம்
மானம், மேயம் – சாரம் என்பர்
அதாவது பிரமாணம் திரும்ந்திரம்.
அதனுடைய பொருள் பிரமேயம்.
அப்பொருளின் சுருக்கம் பிரமேய சாரம் என்பதாம்.
நல்ல மறை என்பது போல நல்ல பிரமேய சாரம்
அதாவது குறை சொல்ல முடியாத நூல் என்பதாம்.
பாங்காக:
கற்போர் மனம் கொள்ளும்படியாக அதாவது எளிமையாக என்று பொருள்.
ஆகவே இந் நூலில் பத்துப் பாடல்களால் திருமந்திரப் பொருளைச் சுருக்கமாகச் சொல்லப் படுகிறது.
அதனால் இதற்கு பிரமேய சாரம் என்று பெயர்.
பரிந்தளிக்கும்:
அனைத்து உயிர்களும் சேமத்தை அடைய வேண்டும் என்ற கருணையினால் அதனை நூலாக்கிக் கொடுக்கும்
ஓராண் வழியாக உபதேசித்து வந்ததை பாருலகில் ஆசையுடயோர்கெல்லாம் தெரியும் வண்ணம்
நூலாக்கிக் கொடுக்கும் என்பதாம்.
அருளாள மாமுனி: என்பதால்
அனைத்து உயிகளிடத்தைலும் அருளே கொண்டவர் என்றும்,
அது முனிவர்களுக்கு அல்லாது ஏனையோர்க்கு அமையாது.
ஆதலால் “மா முனி” என்றும் அம் முனிவருக்குரிய உயரிய பண்பு.
யான் எனது என்னும் செருக்கு அறுதலே என்பது “ஆங்காரம் அற்ற” என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டது.
அத்தகைய ஆசார்யருடைய திருவடிகளையே தொழுமின்கள்.வணங்குவீராக.
வணங்கும் பொழுது அத் திருவடியை மனதில் நினைத்துக் கொன்டே தொழுவீர்களாக.
அத்துடன் நிழலும் உருவும் போல் பிரியாமல் பணிவீர்.
(அம்பதம்) என்ற இடத்தில்
இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கு நின்றது.
ஐயும் கண்ணும் அல்லா பொருள் வையின் மெய் உருபு தொகா -இறுதியான என்ற
தொல்காப்பிய சொல் இலக்கணம் காண்க.
அம்பதத்தை: “அம்” என்றால் அழகு.
பதத்திற்கு அழகாவது தன்னடியில் பணியும் சீடர்களைக் கைவிடாதது.
“ஏ” பிரிநிலை”ஏ”காரம் அவரது திருவடியையே தொழுமின் என்றதால் அதுவே போதும்.
மற்ற இறைவன் திருவடி தொழ வேண்டா என்பதாம்.
இறைவனும் முனியும் ஒன்றானதால்.
புதுப் புளி: என்பது அவர் வாழ்ந்த தலம் இடம்.
மன்: வேத சாஸ்திர விற்பன்னர்கள் பலருக்குத் தலைமையாய் இருந்தவர் என்பது பொருள்.
புதுப் புளி என்ற அத்தலம் பூஞ்சோலைகளாலும் பல மரங்களும் அடர்ந்த தோப்புக்களாலும் சூழப்பட்ட
செழிப்பான இடம் என்றவாறு.
இதனால் அறிவு வளர்ச்சி ஒழுக்க நெறி முதலியவற்றிற்கு ஏற்புடையதான இடம் என்பது புலனாகிறது.
புடை: பக்கம். நாற்புறமும் என்று பொருள்.
பெரிய இவ்வுலகத்தில் வாழும் மக்களே! உயர் வீடு பேறு அடையத்தக்க திருமந்திரப் பொருளை
மிக்க கருணையோடு எளிய தமிழில் “பிரமேய சாரம்” என்னும் இந்நூலில் சுருங்க கூறியவரும்
பூஞ்சோலைகளும் தோப்புக்களும் நாற்புறமும் சூழ்ந்து அழகாயுள்ள புதுப் புளி என்னும் இடத்தில் வாழும்
அறிஞர்களுக்குத் தலைவரும்
செருக்கு மில்லாதவருமான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
திருவடியையே எப்பொழுதும் நெஞ்சில் நினைந்து வணங்குவீராக. என்ற கருத்து.
———-
நூல் தோற்றுவாய்
அனைத்து வேதம் முதலிய நூல்களிலும் நுண்ணறிவு உடையராய்
மெய்ப்பொருள் பற்றியும்
மெய்ப்பொருளை அடைவதற்கான செந்நெறி பற்றியும்
அடைய வேண்டிய பயன் பற்றியும்
உண்மையை உள்ளது உள்ளபடி அறிந்தவர்களில் முதல்வராய் இருப்பவரும் ,
பிறப்பிறப்புகளில் சுழன்று வரும் அறிவுடைய ஆன்மாக்கள் எல்லோரும் வீடு பேறு அடையவேணும் என்னும்
அவாவுடையராயிருப்பவரும்
தம்மை ஆதியில் சீடராய் ஏற்றுக்கொண்ட எம்பெருமானார் திருவடிகளிலேயே நீண்ட நாள் (சுமார் 80 ஆண்டுகள்)
பணிவிடை செய்து (தத்துவம், ஹிதம், புருஷார்த்தம் ) மெய்ப்பொருள், நெறி,பயன் இவற்றின் சிறப்புக்களை எல்லாம்
அவர் அருளிச் செய்யக் கேட்டு அறிந்து அவ்வொழுக்கத்தின் எல்லை நிலத்தில் நிலை நிற்பவரும் ,
அதாவது
தத்துவம்-இறை நிலை,
ஹிதம்-இறைவனை அடைவற்கான தக்க வழி ,
புருஷார்த்தம்- வாழ்வு இவற்றின் உண்மை .
இதனைத் “தல ஸ்பர்ஸ ஞானம்” என்பர்.
தலம் என்றால் பூமி. ஸ்பர்ஸம் என்றால் தொடுதல்.
நீர் நிலைகளில் இறங்குபவன் அதன் அடித்தலத்தில் சென்று மண்ணை எடுத்து வருவான்.
அது போல் அறிவுக் கடலில் முழுகித் திலைக்கும் இவர் அறிவின் எல்லையைக் கண்டவரென்று
இவருடைய அறிவின் கூர்மை சொல்லப்படுகிறது.
இறைவனைப் பற்றி அறிவது அதனுடைய முதல் நிலை.
அடியார்களைப் பற்றி அறிவது அதனுடைய எல்லை நிலை.
அடியார்கள் வரையிலும் அடியவராய் இருத்தல் என்பது கருத்து. வாழ்வாங்கு உணர்ந்தவர் என்பதாம்.
இவ்வாறு அறிய வேண்டியவற்றை முழுமையாக அறிந்தவருமான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
தம்முடைய மிக்க கருணையாலே பிறவிப் பெருங்கடலில் உழலுல் உயிர்கள் வீடு பேறு அடைவதற்காக
வேதம் முதலிய அனைத்து நூல்களில் இருந்தும் ஓரோர் இடத்திலுள்ள கருத்துக்களை
அதாவது
எல்லோருக்கும் அறிவதற்கு முடியாதபடி இருக்கிற அவ்வரும் பொருள்களைச் சுருக்கி “ஞான சாரம்” என்கிற
நூல் மூலமாக இயற்றி முடித்த பிறகு
“பிரமேய சாரம்” என்னும் இந்நூலை இயற்றுகிறார்.
வேதம் என்பது “எழுதா மறை” என்று கூறப்படும்.
மிகப் பழமையான சாஸ்திரம். இறைவனைப் போல அதுவும் அநாதியாக வந்து கொண்டிருப்பது.
அதற்குப் பிரமாணம் என்று பெயர்.
அதனுடைய அனைத்துக் கருதுக்களையும் சுருக்கமாக எடுத்துரைப்பது “திரு மந்திரம்” அதாவது எட்டெழுத்து மந்திரம்.
(ஓம் நமோ நாராயணாய) என்பது.
அதில் சொல்லப்படும் கருத்துக்களின் திரண்ட பொருளைச் சுருக்கி இந்நூலில் கூறப்படுகிறது.
ஆகையினால் இந்நூலுக்கு பிரமேய சாரம் என்னும் பெயர் கொடுக்கப்பட்டது.
———–
திரு மந்திரத்தின் சுருக்கம் “ஓம்” என்பது.
அதற்குப் பிரணவம் என்று பெயர்.
அதில் சொல்லப்படும் கருத்து திரட்டிக் கூறப்படுகிறது.
அவ் வானவருக்கு மவ்வானவர் எல்லாம்
உவ் வானவர் அடிமை என்று உரைத்தார் -இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியிலா
நாடு இருப்பார் என்று இருப்பன் நான் –1-
பதவுரை:
அவ் வானவர்க்கு –“அ” என்ற எழுத்துக்குப் பொருளான இறைவனுக்கு
மவ் வானவரெல்லாம் –‘ம” என்னும் எழுத்துக்குப் பொருளான உயிர்கள் எல்லாம்
அடிமை என்று–அடிமைப் பட்டவர் என்று
உவ் வானவர் –ஆசார்யர்கள்
உரைத்தார் –கூறினார்கள்
இவ்வாறு –அவர்கள் கூறிய இம் முறைகளை
கேட்டு –தெரிந்து கொண்டு
இருப்பார்க்கு –தெரிந்தபடி நிலை நிற்பார்க்கு
ஆள் என்று –அடிமை என்று
கண்டிருப்பர் –தங்களை அறிந்து கொண்டவர்
மீட்சி யில்லா –மீண்டும் பிறவாத
நாடு –திரு நாட்டில் போய்
இருப்பார் என்று –நித்யர், முக்தர் முதலிய அடியார்களுடன் சேர்ந்திருப்பாரென்று
நான் –எம்பெருமானாருடய அடியனான நான்
இருப்பன் –நம்பி இருப்பவன்
அவ் வானவர்க்கு :-
”அ’ காரம் என்ற சொல்லுக்குப் பொருளாய் விளங்குபவன் இறைவன் .
அவனுக்கு வேதத்தில் ‘அ’என்று பெயர் சொல்லி யிருக்கிறது.
இங்கு ‘அ’ என்னும் எழுத்தையே கடவுளாகப் பேசியிருப்பது சொல்லுக்கும் பொருளுக்கும் உண்டான
இணைப்பு பற்றி சொல்லும் பொருளும் பிரித்து நில்லாது இயைந்தே இருப்பதால் அவ்வாறு கூறப்பட்டது.
மகாகவி காளிதாசன் இறைவனும் இறைவியும் இணைந்திருக்கும் நிலையைச் “சொல்லும் பொருளும் போல” என்று
ரகு வம்ச காவியக் கடவுள் வாழ்த்தில் கூறினான்.
உப்பு’ என்னும் குணத்தை வைத்து உப்பு என்னும் பொருளைச் சொல்வது போன்றது இது.
ஆகவே எழுத்துக்களுக்குள் நான் ‘அகாரமாயிருககிறேன் என்று பகவான் கண்ணன் கீதையில் கூறினான்.
இது பற்றியே திருவள்ளுவரும் ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்றார்.
இறைவன் இயங்குதினைக் கண்ணும், நிலத்தினைக் கண்ணும், பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய்
நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தார் போல்
அகாரமும், உயிர்க் கண்ணும் தனி மெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும் என்பது
சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது.
‘அகர முதல’ என்றால் அகரமாகிய எழுத்துதைக் காரணமாக உடைய மற்றைய எழுத்துக்கள் எல்லாம் என்று பொருள்.
அதுபோல இறைவனாகிய காரணத்தை உடைய உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும்,
எழுத்துக்களில் நான் ‘அ’ கரமகின்றேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியவாற்றானும் பிற நூல்களாலும் உணர்க.
இதனால் உண்மைத் தன்மையுஞ் சிறிது கூறினாராயிற்று. என்று தொல்காப்பிய எழுத்ததிகார ‘மெய்யின் இயக்கம்’ என்ற
சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் கூறியவாற்றால் அகரத்தைப் பற்றிய விளக்கங்களைக் காணலாம்.
‘பூ மகள் பொருளும்’ எனக் கம்பர் பால காண்டக் கடி மணப் படலத்துள் கூறினான்.
இதனால் ஒன்றர்கொன்று இயைந்த பொருள்களில் ஒன்றைச் சொன்னால் அதனோடு இயைந்த மற்றொன்று தன்னடையே கூறினதாக ஆகும்.
இதனால் அ என்ற எழுத்தைச் சொன்ன போதே அதன் பொருளான கடவுள் சொல்லாமலேயே உணரப்படும்.
ஆக அவ் வானவர்க்கு என்றால் இறைவனுக்கு என்று பொருள்.
மவ் வானவரெல்லாம்:-
மவ் வானவர் என்று ‘ம’ காரத்தின் பொருளான உயிர்களைச் சொல்லுகிறது.
‘ம’காரம் உயிரைச் கொள்ளும் சொல்லாகும் என்பது சாஸ்திரம்.
இது ஒருமையாக இருந்தாலும் ‘இது ஒரு நெல்’ என்பது போல. சாதி ஒருமையாய் உயிர் சமுதாயமான எல்லாவித உயிரையும் குறிக்கும்.
எல்லாவிதமான உயிர் என்றது மூன்று வகைப்பட்டிருக்கும் உயிர்களை.
வினை வயத்தால் மாறி மாறிப் பிறந்து வரும் உயிர்களும்
இறைவன் அருளாலேயே தான் செய்யும் தவம் முதலிய முயற்சியாலேயோ,வினையிலிருந்து விடுபட்ட உயிர்களும்,
என்றைக்கும் வினை வயப்படாமல் இறைவனுக்கு ஒப்பாக இறைவனோடு கூடவே வீட்டுலுகத்தில் உறையும் உயிர்களும்
ஆகிய மூவகைப் பட்ட உயிர்களையும் குறிக்கும்.
இதனை, பக்தர், முக்தர் நித்யர் என்று சாஸ்திரம் கூறும்.
ஆக இம் மூவகையான ஆன்மாக்களையும் ஒருமைப்படுத்தி ‘மவ் வானவர் எல்லாம்’ என்று கூறப்பட்டது.
உவ் வானவர்:-
‘உ’ காரத்திற்குப் பொருளாயிருப்பவர் என்று பெயர். உகாரம் ஆச்சர்யனை உணர்த்தும் சொல்லாகும்.
எவ்வாறு என்றால் உகாரத்திற்கு நேர் பொருளாக இருப்பவர் பெரிய பிராட்டியாரான லட்சுமி தேவியாவாள். இது சாஸ்திர முடிவு.
பிராட்டி இறைவனுக்கும் உயிர்களுக்கும் நடுவிலிருந்து உயிர்களை இறைவனிடம் சேர்த்து வைக்கும் தன்மை யுடையவள்.
அது போல
ஆசார்யனும் இறைவனுக்கும் உயிர்களுக்கும் நடுவிலிருந்து உயிர்களை இறைவனிடம் சேர்த்து வைக்கும் தன்மை யுடையவர்.
லட்சுமி தேவிக்கும் ஆசார்யனுக்கும் தொழில் ஒப்புமை யிருப்பதால் உகாரம் ஆசார்யனைச் சொல்லுகிறது.
மேலும் ஆசார்யன் பிரட்டி திருவடிகளில் பக்தி செய்து அவளது அன்பைப் பெற்று அவ் வன்பு காரணமாகத்
தன்னை நாடி வரும் சீடர்களைப் பிராட்டியிடம் ஈடுபடுத்தி அவர்களுக்கு அருள் கிடைக்கச் செய்பவர்.
இவ்வாறு ஆசார்யனைப் பற்றி வரும் உயிர்களுக்கு இறைவன் கருணை காட்டும்படி சிபாரிசு செய்வதால்
இருவருடைய செயல்களும் ஒற்றுமைப்படுகிறது.
ஆகையால் இறைவனிடம் சிபாரிசு செய்யும் செயல் ஒற்றுமையாலும்
அவளிடம் அன்பு பூண்டொழுகும் உறவினாலும் ஆசார்யனை உகாரத்திற்குப் பொருளாகச் சொல்லுகிறது.
இதைப் பற்றி முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்று இதற்கு எடுத்துக்காட்டாக இங்கு கூறப்படுகிறது.
எம்பெருமானார் ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது அருகிலேயே இருக்கும் சீடரான
முதலியாண்டானுக்கு உகாரத்தின் பொருளைக் கூறியுள்ளார்.
அதனை அவருடைய குமாரரான கந்தாடை ஆண்டானுக்கு கூற அவரும் பட்டருக்குச் சொல்லி யுள்ளார்.
அக் கருத்துக்களை எல்லாம் தொகுத்து பிரணவ ஸங்க்ரகம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
அதில், ஆசார்யனை உகாரத்தின் பொருளாகச் சொல்லியிருப்பதை இங்கு மேற்கோளாகக் கூறப்பட்டுள்ளது.
அருளாளப்பெருமாள் எம்பெருமானாரும் எம்பெருமானார் (உடையவர்) திருவடிகளில் நீண்ட காலம் சேவை செய்து
அவருடைய அருளுக்கு இலக்கானவர் .
ஆதலால் இவருக்கும் அப்பொருளை உணர்த்தி இருக்கலாம் அன்றோ!.
ஆகவே இவரும் எம்பெருமானார் சொல்லக் கேட்டு உகாரத்தின் பொருள் ஆசார்யன் என்று அறிந்து
அப் பொருளை இந்நூலில் கூறுவாராயிற்று .
ஆகவே உகாரம் அசார்யனைக் குறிக்கும் என்றவாறு.
அடிமை என்றுரைத்தார்:-
உயிர்கள் ஆகாரத்திற்கு அடிமைப் பட்டவை என்று சொன்னார்கள்.
இறைவனுக்கும் உயிர்களுக்கும் உண்டான உறவு முறையைக் காட்டிக் கொடுப்பவரான- நடுவரான ஆசார்யராவார்.
இறைவன் உயிர்களுக்குத் தலைவனாகவும் உயிர்கள் இறைவனுக்கு அடிமையாகவும்
இருவருக்கும் ஆண்டான் அடிமை என்னும் உறவென்றும் உபதேசத்தாலே சீடனுக்கு ஆசார்யன் உனர்த்தின போது
சீடனுக்கு அவ்வுறவு தெரிவதாகும்.
ஆகையால் ‘அ’ காரத்தின் பொருளான இறைவனுக்கு ‘ம’ காரத்தின் பொருளான உயிர்கள் அடிமையானவர் என்று
உகாரத்தின் பொருளான ஆச்சார்யர்கள் சொல்லி வைத்தார்கள்.
இக் கருத்து ‘அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லாம் அடிமை என்று உவ்வானவர் உரைத்தார் ‘ என்று கூறப்பட்டது.
இறைவனுக்கும் உயிர்களுக்கும் உண்டான உறவு முறையை உணர்த்துவதற்கு
ஒரு சிறு கதை திருவாய்மொழி ஈட்டுரையில் சொல்லப்படுவதுண்டு.
வாணியன் ஒருவன் கடல் தாண்டி வாணிபத்திற்கு செல்லும் பொழுது அவன் மனைவி கருவுற்றிருந்தாள்.
மனைவியிடம் தான் மீண்டு வரும் வரை பிறக்கும் குழந்தையை வாணிபத் துறையிலேயே வளர்க்க வேண்டும் என்று சொல்லி விட்டுச் சென்றான்.
அவ்வாறே ஆண் குழந்தையும் பிறந்து தக்க பருவத்தை அடைந்து தந்தையைப் போல கடல் தாண்டி வாணிபம் செய்யச் சென்றான்.
சென்ற இடம் தந்தை சென்ற இடமாகவே இருந்தது. ஒருநாள் சரக்குகள் வைப்பது காரணமாக தந்தைக்கும் மகனுக்கும்
பெரும் கலாய் (சண்டை) விளைந்தது. கூட்டமும் திரண்டு விட்டது.
அக்கூட்டத்திலிருந்த ஒருவர் அவ்விருவரையும் நன்கு அறிந்தவராயிருந்தார்.
அவ்விருவரையும் பார்த்து “நீர் தந்தை, இவன் மகன்” தந்தையும் மகனுமான நீங்கள் இப்படி சண்டை செய்து கொள்கிறீர்களே!
என்று இருவருக்குமுள்ள உறவு முறையை உணர்த்தி இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தார்.
இவ்வாறு நடுவர் ஒருவரால் ஒன்று சேர்ந்த தகப்பனும் மகனும் பெரு மகிழ்ச்சி எய்தினர்.
புதல்வனை அடைந்ததால் தந்தைக்கு மகிழ்வும், தந்தையை அடைந்ததால் மகனுக்கு மகிழ்வும் சொல்லும்
அளவையில்லாமல் அளவு கடந்ததாயிற்று.
இவ்வாறே நடுவர் நிலையில் நின்று ஆசார்யன் உயிர்களுக்கும் இறைவனுக்கும் உரிய ஆண்டான் அடிமை என்னும் உறவை உணர்த்துகிறான்.
தாயாய்த், தந்தையாய், மக்களாய், மற்றுமாய் எல்லா உறவாயும் இருப்பவன் என்பதையும் உணர்த்தி,
அதே சமயம் இறைவனிடம் ‘உன்னை விட்டுப் பிரிக்க முடியாத உறவாய் இருக்கும் இவ் வுயிர்களை,
குற்றங்களைப் பொறுத்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் இறைவனுக்கும் உணர்த்தி
இறைவனுடைய அருள் உயிர்களுக்குக் கிடைக்கச் செய்தும் உயிர்களை அவிறை யருளால் உயாவும் செய்கிறான்.
இது ஆசார்யனது செயல் என்று இங்கு சிறப்பாகக் குறிக்கப்பட்டது.
ஆள் என்று கண்டிருப்பார்:-
மேற்கூறியவாறு குரு உபதேசத்தால் இறைவனுக்கு அடியார்களாகி அச் சீரிய ஒழுக்கத்தில் நிலை நிற்பவருக்குச் சிலர்
அடியார்களாகி அடியார்க்கு அடியாராகும் தன்மையைப் பெறுகிறார்கள்.
இறைவனுக்கு அடிமையாயிருப்பது முதல் நிலை என்றும்,
அவ்வடியார்க்கு அடியராயிருக்கும் தன்மை கடைசி நிலை என்றும் சொல்லப்படுவதால்
‘கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் ‘ என்று அடியார்க்கு அடியாராம் தன்மை இங்குச் சொல்லப்பட்டது.
திருமந்திரத்தில் உயிரக்ளுக்குரிய மூன்று இலக்கணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை,
‘இவ்வுயிர்கள் இறைவனைத் தவிர வேறு யார்க்கும் அடிமை இல்லை.
உயிர்களுக்கு இறைவனைத் தவிர வேறு வழியில்லை.
உயிர்களுக்கு இறைவனைத் தவிர இன்பமில்லை’ என்பன.
இம்மூன்றையும் அடியார் வரையிலும் பெருக்கிப் பார்க்கையில்
அடியார் தவிர வேறு யார்க்கும் அடிமை இல்லை’என்றும்,
அடியார் தவிர வேறு வழி இல்லை என்றும்,
அடியார் தவிர வேறு இன்பம் இல்லையென்றும் என்றும் பெருக்கிக் கொண்டு
அடியார்கள் வரை பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அம் மூன்றை இங்குக் கூறிக் கொள்ள வேணும்.
இதனால் இறைவனுக்கு அடியராய் இருப்பார்க்கு அடியராய் இருக்கும் எல்லை நிலை கூறப்பட்டது.
ஆக, இங்கு கூறியவற்றால் ‘தங்களை அடியார்க்கு அடியராய் அறிந்து அந்நிலையில் இருப்பவர்கள் ‘ என்று பொருள்.
மீட்சியில்லா நாட்டிருப்பார் என்று இருப்பன் நான்:-
மேற் கூறிய ‘அடியார்க்கு அடியராய்’ இருப்பார் மீண்டு பிறப்பில்லாத திருநாட்டிலே போய்
அங்கு நித்ய முக்தர்களான அடியார் குழாங்களுடன் கூடி இருப்பார்கள். என்று நம்பி இருப்பவன் நான் என்பதாம்.
‘நான்’ என்று கூறுவதால் தம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்த்துகிறார் ஆசிரியர்.
மேலும் எம்பெருமானார் திருவடிகளிலே பணிந்து அனைத்து சாஸ்திரங்களின் உட்பொருட்களை எல்லாம் தெரிந்து கொண்டு
அதனால் மதிப்பு மிக்கவராய் மிக்க நம்பிக்கை உடையவராயிருப்பவர் அருளாளப் பெருமாள் எம்பெருமானார்.
வேத தாத்பர்யங்களில் தம்முடைய முடிவே இறுதி முடிவு என்பதை
உலகம் ஏற்கும்படியான மதிப்பு மிக்கவராதலால் அன்றோ’ என்றிருப்பவன் நான் என்று துணிந்து கூறுவாராயிற்று.
—————
கீழ்ப் பாட்டில் சொன்ன ‘மவ் வானவர்’ என்றதில் மூன்று வகையான உயிர்கள் சொல்லப்பட்டதைப் பார்த்தோம்.
அவர்களுள் வினை வயத்தால் ஏதோ ஒரு உடலில் கட்டுப்பட்டிருக்கும் உயிர்களுக்கு பிறப்பிறப்புக்கள்
மாறி மாறி ஆற்று வெள்ளம் போல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதற்கு என்ன காரணம்?
இப்பிறப்பாகிற துன்பம் தீர்வதற்கு வழி என்ன? என்னும் வினாக்களுக்கு இப் பாடல் விடையிறுக்கிறது.
குலம் ஓன்று உயிர் பல தம் குற்றத்தால் இட்ட
கலம் ஓன்று காரியமும் வேறாம் பலம் ஓன்று
காணாமை காணும் கருத்தார் திருத் தாள்கள்
பேணாமை காணும் பிழை –2-
பதவுரை:-
குலம் – தொண்டர் குலம்
ஒன்று – ஒன்றே உளது
உயிர் – தொண்டுத் தன்மையைக் கொண்ட உயிர்கள்
பல – எண்ணில் அடங்காதன
தம் குற்றத்தால் – அவ்வுயிர்கள் செய்யும் நல்வினை தீவினைகளால்
இட்ட – இறைவனால் இட்டு வைக்கப்பட்ட
கலம் – உடலாகிற பாண்டம்
ஒன்று – ஒரே மூலப் பொருளால் ஆன ஒன்றேயாகும்
காரியமும் – உயிர்களின் செயல்களும்
வேறாம் – வினை வேறுபாட்டால் வெவ்வேறு வகையாக இருக்கும்
பலம் ஒன்று – ஒரு பயனையும்
காணாமை – கருதாமல்
காணும் – உயிர்களைக் கடாக்ஷிக்கும்
கருத்தார் – ஆசார்யனுடய
திருத் தாள்கள் – திருவடிகளை
பேணாமை காணும் – பற்றாமை அன்றோ
பிழை – பிறப்புத் தொடர்வதற்கான குற்றம்
குலம் ஒன்று:
எல்லா உயிர்களுக்கும் ஒன்றே குலம். அது இறைவனுக்கு அடிமையாய் இருத்தல் ஆகும்.
அதாவது
தன் விருப்பத்திற்குச் செயல்பட இயலாமல் இறைவனுக்கு வயப்பட்டே இயங்குதல்.
இது உயிர்களின் இயல்பு என்றைக்கும் மாறாதது. நிலையாய் இருப்பது.
இதைத் தொண்டர் குலம் என்பர் ஞானியர்
“தொண்டக் குலத்துள்ளீர்”(திருப் பல்லாண்டு).
உயிர் பல:-
ஆன்மாக்கள் அளவற்றன.
அவை இறைவனுக்கு வயப்பட்டனவாய் பலவாக இருக்கின்றன.
தம் குற்றத்தாலிட்ட கலம் ஒன்று:-
அவ்வுயிர்கள் தாங்கள் பண்ணின நல் வினைகள் தீ வினகளாகிற குற்றம் காரணமாக
அவற்றை இறைவன் இட்டு வைத்த பாண்டங்களே உடல்களாகும்
அவ் வுடல்கள் ஒரே வகையாய் ஆனது.
அதாவது
ப்ரக்ருதி என்னும் ஒரே பொருளால் உண்டானது.
ஆகையினால் அதுவும் ஒன்றே யாகும்.
மண்ணால் ஆன பொருள் எதுவானாலும் மண் தான்.
பொன்னால் ஆனது எதுவானாலும் பொன் தான்.
அது போல ப்ரக்ருதியால் ஆன உடம்புகள் எதுவானாலும் ப்ரக்ருதி தான்.
‘தம் குற்றத்தால் இட்ட கலம் ஒன்று’ என்பதை இவ்வாறு விரித்து உணர வேண்டும்.
இறைவன் இவ் வுயிர்களை உடலில் இணைப்பது அவ் வவ்வுயிர்களின் வினைகளைத் தம் அறிவில் கொண்டு
அவற்றிற்குத் தக்கபடி பிறப்பித்ததாகும்.
கலம் ஒன்று என்று கூறியது
எல்லா உயிர்களின் உடல்களும் ப்ரக்ருதி என்று சொல்லப்படும் ஒரே பொருளால் ஆனது பற்றி அது.
“ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம் நீர் பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய
பந்தமாந்தேவர் பதினாலு அயன் படைத்த அந்தமில் சீர் தாவரம் நாலைந்து”–என்ற பாடலில்
உயிர்கள் எடுக்கும் உடல் வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
இவ் வேறுபாடு ஒவ்வொன்றின் உட் பிரிவுகளால் ஆயிரம் ஆயிரமாகக் கணக்கில்லாதபடி பரந்திருக்கும்
என்பதையும் காண வேண்டும்
எத்தனை அளவற்றிருந்தாலும் எல்லாம் ஒரே பிரக்ருதியின் வடிவமே யாகும்
அதனால் உயிர்கள் கொண்டுள்ள உடலாகிற பாண்டம் ஒன்றே தான் என்று
‘கலம் ஒன்று’ என்பதால் சொல்லப்பட்டது.
‘பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்தியினாய்’ என்ற திருவாய்மொழியில்
அந்தந்த உயிர்கள் செய்த வினைப் பயனை எத்தனை படைப்பு எத்தனை அழிவு நடந்தாலும்
தவறிப் போகாமல் அந்தந்த உயிர்களே துய்க்கும்படி படைக்கிறதாக பேசப்படுகிறது.
இது இங்கு ஒப்பு நோக்கற்குரியது.
காரியமும் வேறாம்:-
உயிர்கள் வினைப்பயனால் எடுக்கும் உடல்களினால்
செய்யும் செயல்களும் வேறுவேறாக இருக்கும்
அது வேறாகையாவது
நல் வினையின் பயனாக சுவர்க்கத்தில் இன்பம் துய்த்தலும்
தீ வினையின் பயனாக நரகத்தில் துன்பம் துய்த்தலும்
இரண்டும் கலந்த நிலையில் துன்ப இன்பங்களைக் கலந்து துய்ப்பதுமாயிருக்கு
‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தலரிது’
என்னும் குறளின் உரையில்
‘ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிரிதோருயிரின் கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின்
‘வகுத்தான்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் வெறும் முயற்சிகளால் பொருட்களைப் படைத்தல் அல்லது நுகர்தலாகாது.
அதற்கு ஊழ் வேண்டும் என்பதாம். என்று கூறியது காண்க.
காரியமும்:-
என்ற உம்மையால் ஒரு குறிப்பு உணர்த்தப்படுகிறது.
உயிர் பல என்றும் குலம் ஒன்று என்றும் சொன்னது போல,
வினைப் பயனால் எடுத்த உடல் (பிரக்ருதியாகிற) ஒன்றாயிருக்க உயிர்களின் செயல்களும்
அவற்றால் நுகரப்படும் பயன்களும் பலவகை யாயிருக்கும் என்று உணர வேண்டும்.
உயிர்களுக்கு இயல்பான தன்மை இறைவனுக்கு அடிமையே யாகும்.
இத்தகைய உயிர்களுக்கு நல் வினை தீ வினையாகிற வினைத் தொடர்பும்
அது காரணமாக பல்வகைப் பிறப்புக்களும்,
அப் பிறப்புக்களில் நுகரும் இன்ப துன்பங்களும்
இவ்வாறு ஆற்று ஒழுக்குப் போல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது எதனால் என்னும் எண்ணம் உண்டானால்
அதற்குத் தக்க விளக்கம் தரப்படுகிறது மேல் தொடரால்.
பலம் ஒன்று காணாமை காணும் கருத்தார் திருத்தாள்கள் பேணாமை காணும் பிழை:
இதில் ‘கருத்தார் திருத்தாள்கள்’ பேணாமை காணும் பிழை என்று
அதாவது
ஆசார்யனுடைய திருவடிகளை அணுகாததே குறையாகும். என்று பதில் கூறப்படுகிறது.
ஆசார்யனுடய சிறப்பு இவ்வாறு கூறப்படுகிறது.
‘பலம் ஒன்று காணாமை காணும் கருத்தார்’ என்று.
அதாவது
ஓர் உயிரை குரு, தான் ஏற்கும் பொழுது தனக்குப் புகழையோ ஒரு பயனையோ பணிவிடை முதலிய சிறப்புகளில்
ஏதேனும் ஒன்றிலும் மனம் வைக்காமல் இவ்வுயிரினுடைய சேமமே சேமம். (வீடு பேறு அடைதல்)
தனக்குப் பயன் என்று கருதி தன்னுடைய அருள் நோக்கத்தைச் செய்யும் நன்மனம் கொண்ட
ஆசார்யனுடய திருவடிகளைப் பற்றாமையே மாறி மாறிப் பிறப்புக்கள் தொடர்ந்து வருவதற்கு காரணமான குற்றமாம்.
இதனால் குரு கடாக்ஷம் உயிர்க்கு சேமம் தரும்.
அதற்கு சற்குருவை நாடி அவன் திருவடிகளைப் பற்ற வேண்டும்.
அதனால் வினைப் பாசங்கள் அகன்று சேமத்தையும் நல்வீடையும் அடைவான் என்று பொருள்.
இப் பாடலால் ஆசார்யனுடய சிறப்புக் கூறப்பட்டது.
“திருத் தாள்கள் பேணுதலாவது விரும்புகை. பேணாமை -விரும்பாமை. பிழை- குற்றம்.
ஆசார்ய வைபவத்தை ஸ்ரீ வசன பூஷணத்தில் காணலாம்.
“பகவல்லாபம் ஆசார்யனாலே. ஆசார்ய லாபம் பகவானாலே ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால்
ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம்.
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் அவை (ஞான பக்தி) உண்டானாலும் ப்ரயோஜனமில்லை.
தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிப் பூணலாம்.
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை (பழிப்புக்கு இடமாகும்) விளைக்கும்.
ஸ்வாபிமாநத்தாலே ஈஸ்வராபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமானமொழிய கதியில்லை
என்று பிள்ளை (நம்பிள்ளை) பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்.
ஸ்வஸ்வாதந்தர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று.
பகவத் ஸ்வாதந்தர்ய பயத்தாலே ப்ரபக்தி நழுவிற்று.
ஆசார்யனையும் தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பமாகையாலே காலங்கொண்டு மோதிரமிடுமோபாதி.
ஆசார்யபிமானமே உத்தாரகம். (ஸ்ரீ வசனபூஷனம் சூத்திரம் எண் -434).
ஒருவன் வீடு பேறாகிற சேமத்தைப் பெறுவதற்கு சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட பக்தியாலேயோ,
கருணை வடிவமான இறைவன் திருவடிகளில் செய்யும் அடைக்கலம் புகுதலாலேயோ முடியாது என்பது
பல காரணங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் ஓர் உயிர் பிறவி நோயிலிருந்து நீங்கி சேம நல் வீடு எனப்படும் இறை இன்பத்தைப் பெறுவதற்கு ஒரே வழி
நல்லறிவும் ஆன்ற ஒழுக்கமும் நிறைந்த நல ஆசான் ஒருவன் ‘இவன் நம்முடையவன்’ என்று பரிந்து நோக்குதலாகும்.
இதனால் ஆசார்யனுடய பார்வைக்கு இலக்காவான் சேமம் பெறுவான்.
அது இல்லை எனில் எவ்வுயிரும் சேமம் பெறாது என்ற கருத்து இப் பாடலால் உணரலாகும்.
———–
உயிரின் அடிமைத் தன்மைக்கு ஏற்றவாறு உயிர்கள் இறைத் தொண்டில் ஈடுபட வேண்டுமே
யல்லாமல் வேறு பயன்களில் ஈடுபடலாகாது.
இவ்வாறு இருக்க இதர பயன்களில் ஈடுபாடு இருந்தால் அடிமை என்னும் குலத்தால் என்ன உபயோகமாம்?
எவ்விதப் பயனும் இல்லை என்பதாம்.
திருமால் உலகளந்த காலத்தில் தன்னை ஒழிந்த அனைத்து
உயிர்களையும் தன்னடிக்கீழ் அளந்து கொண்டானல்லவா?
உயிர்கள் அப்பொழுதே அவன் அடிக் கீழ் பட்டதால் அவனுக்கு அடிமை ஆயிற்றே.
அதனால் உயிர்களுக்கு ஏதாவது பயன் ஏற்பட்டதுண்டோ? இல்லை என்றவாறு.
உலகளந்த அந்நாளில் ‘அவனடியில் நாம் இருந்தோம்’ என்னும் உணர்வு இல்லாததால் உயிர்கட்கு பிறவி தொடர்வதாயிற்று.
ஆகவே இறைவனுக்கு அடிமை என்ற உணர்வும் அவ் வுணர்வுக்கு ஏற்ப இறைத் தொண்டில் ஈடுபாடும்
உண்டானாலன்றோ உபயோகமாகும்
மேலும் இவ் வுணர்வு இல்லாத உயிர்கள் தொடர்ந்து பிறவியில் நீடித்துக் கொண்டே வரும்
என்னும் கருத்து இதில் கூறப்படுகிறது.
பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்
குலம் கொண்டு காரியம் என் கூறீர் -தலம் கொண்ட
தாளிணையான் அன்றே தனை ஒழிந்த யாவரையும்
ஆளுடையான் அன்றே யவன் –3-
பதவுரை:-
பலம் கொண்டு – இறைவனிடத்தில் செல்வம் முதலிய வேறு வேறு பயன்களைப் பெற்றுக் கொண்டு
மீளாத – ஆன்மீக அறிவால் திருந்தாத
பாவம் – தீ வினை
உளதாகில் – இருக்குமானால்
குலம் கொண்டு – அடிமை என்னும் உறவு கொண்டு
காரியம் என் கூறீர் – என்ன பயன் சொல்லுவீராக!
தலம் கொண்ட – உலகமெல்லாம் அளந்து கொண்ட
தாளிணையான் – திருவடிகளை உடையவனான
அவன் – அவ்வுலகளந்தான்
அன்றே – அளந்து கொண்ட அக் காலத்திலேயே
யாவரையும் – எல்லா உயிர்களையும்
ஆளுடையவன் – தனக்கு அடிமையாகக் கொண்டான்
அன்றே – அல்லவா?
பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்:-
செல்வம் முதலிய கவர்ச்சி மிக்க பொருள்களில் ஏதேனும் ஒன்றைத் தனக்கு விருப்பமாக அடைந்து,
ஞானிகள் அதன் குற்றங்களை எடுத்துக் கூறி அதை வேண்டாம் என்றாலும்
அப் பொருள் பற்றில் நின்றும் திருந்தி வராமல் அதிலேயே பற்றி நிற்கும் தீவினை என்று பொருள்.
அல்லது
இருக்குமானால் பாபம் என்பதற்கு நினைவு என்னும் பொருள் கொண்டு
வேறு பயன்களை ஆசைப்படுவதிலிருந்து
மீள முடியாத நினவு இருக்குமானால் என்றும் பொருள் கொள்ளலாம்.
ஆகவே பாபம் என்பதற்கு
தீ வினை என்றும்
நினவு என்றும் இரு பொருளில் கருத்துக் கொள்ளப்படுகிறது.
ஆன்மீகம் பற்றி ஆசார்யார்களிடம் உபதேசங்கள் கேட்டாலும்
கீதை முதலிய தத்துவ நூல்களைக் கற்றாலும் ,
அவற்றில் தவிர்க்கப்பட வேண்டும் என்று சொன்னவற்றைத் தவிர்க்காமல்
மீண்டும் மீண்டும் அவற்றையே செய்து வரும் கொடிய பாபம் உடைய மனிதகளுக்கு.
குலம் கொண்டு காரியம் என்? கூறீர்?;-
பகவானைத் தவிர வேறு வேறு பயன்களில் ஆசை இருந்தால்
பகவான் இவ்வான்மாவை பிறவித் துன்பத்திலிருந்து மீட்க மாட்டான்.
பிற தொடர்புகளை அறவே நீக்க மாட்டன்.
தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ளவும் மாட்டான்.
அதனால் அடிமையாகிற அவ் வுறவினால் என்ன பயன் உண்டு? சொல்வீர்களாக என்று
உலகோர்களைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.
ஒரு ஆன்மாவுக்கு ‘இறைவனுக்கு நாம் அடிமை என்னும் மெய்யறிவு உண்டானால் அதுவே போதாதா?
இவ்வறிவு உடையவனை இறைவன், ‘ இவன் நம்முடையவன் ‘ என்று தழுவிக் கொள்ளவும்
இவன் காரியங்களிச் செய்வதற்கு போதுமானதாக ஆகாதா? என்னும்
வினாக்களுக்கு மேற் தொடரால் பதில் கூறப்படுகிறது.
தலம் கொண்ட தாளினையான்: என்று
இத் தொடரில் ஓங்கி உலகளந்த வரலாறு குறிக்கப்படுகிறது.
மகாபலி சக்கரவர்த்தி பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் என்ற மூவுலகங்களையும் ஆட்சி செய்ய அவாவுற்று வேள்வி இயற்றினான்.
இம்மூவுலகமும் இந்திரன் ஆட்சிக்கு உட்பட்டிருப்பதால் இந்திரன் திருமாலிடம் அடைக்கலம் புகுந்தான்.
தன்னிடம் அடைக்கலம் புகுந்த இந்திரனுக்காக மாவலி வேள்வி செய்யும் வேள்விச் சாலையில் குறளுருவாய்ச் சென்று
மாவலியிடம்” மூவடி மண் தா” என்று இரந்தான். மாவலியும் கேட்டபடி மூவடி மண்ணைத் தானமாக வழங்கினான்.
மூவடி மண்ணையும் அளந்து கொள்வதற்காக திருமால் திடீரென்று வளர்ந்தான்.
அவனது ஒரு பாதம் பூமி முழவதையும் பரப்பி நின்றது.
இரண்டே அடியால் பதினான்கு உலகங்களையும் அளந்தான்.
மூன்றாம் அடிக்கு இடமில்லாததால் மாவலி தலையில் கால் வைத்து அழுத்தி அவனைப் பாதாளத்தில் தள்ளினான்.
இந்திரனுக்கு அவனாட்ச்சிக்குரிய மூன்று உலகங்களையும் அவன் அழும்படி கொடுத்தான் என்பது வரலாறு.
தலங்கொண்ட தாளினையான் என்பதற்கு
‘மண்ணும் விண்ணும் அளந்து கொண்ட திருவடிகளை யுடையவன்’ என்று பொருள்.
அன்றே:-
அவ்வாறு அளந்து கொண்ட அந்நாளில் தனை ஒழிந்த யாவரையும் ஆளுடையான் அன்றே அவன்.
தன்னை தவிர அனைத்து உயிர்களையும் தனக்கு அடிமையாகக் கொண்டவன் அன்றோ அவன் என்று பொருள்.
இதனால் உலகளந்த காலத்தில் எல்லோர்களுடைய தலைகளிலும் தன் திருவடிகளை வைத்து அப்பொழுதே
எல்லா உயிர்களையும் தனக்கு அடிமையாக்கிக் கொண்டு அதனால் மகிழ்ந்து நின்றவன்
அவன் இதை உவந்த உள்ளத்தனாய் உலகமளந்து என்றார் திருப்பாணாழ்வார்.
தனக்கு அடிமைகளான ஆன்மாக்கள் அனைவரையும் தன் பாதத்தால் தீண்டி மகிழ்ந்தவன்.
மேலும் உறங்குகின்ற குழந்தையை தழுவி மகிழும் தாயைப் போல களித்தவன்.
இப்படி உயிர்களிடத்தில் அன்பு வைத்தவன் “ஏன் இவ்வுயிர்களைப் பிறவிக்கடல் துன்பங்களிலிருந்து எடாமலிருக்கின்றான்
என்று எண்ணிப் பார்த்தால் அதற்குக் காரணம் ‘இது தான்’ என்று புலனாகிறது.
அதாவது
இவ் வுயிர்கள் அவனையும் அவன் செய்த உதவிகளையும் மறந்து இவ்வுலகையும் இவ்வுலகில் வாழ்வதையும்
அவ் வாழ்விற்கு வேண்டிய பொருள்களை ஆசைப்பட்டு அவனைக் காட்டிலும் அப்பொருள்களில் பற்றி நிற்பதையும் பார்த்து
அப் பற்றுதல்கள் அறவே நீங்கும் அன் நன் நாளை எதிர்பார்திருத்தாலன்றோ
இன்னமும் காலம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. ஆகையால் இவ் வுயிர்கள் இறைவனுக்கு அடிமையாய் இருந்தாலும் ‘
தன்னைத் தவிர வேறு பயன்களில் ஆசை அறாத பொழுது இவ் வுயிர்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து
இறைவன் எடுக்க மாட்டன் என்று உணர்த்தப் பட்டதாயிற்று.
இதரப் பொருள்களில் ஆசையை நிரம்ப வைத்துக் கொண்டு
‘அடியேன்’ என்று தன்னைச் சொல்லிக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை என்பதாம்.
இங்குக் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் திரட்டி திருவள்ளுவர்
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவனடி சேராதார்’ என்றும் ,
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு ‘ என்று
இவ்விரண்டு திருக் குறள்களாலும் உரைத்தார்.
நம்மாழ்வார் ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்’ என்று கூறினார்.
ஆக, கீழ்ச் சொன்ன
‘அவ் வானவர்’
‘குலம் ஒன்று ”
பலம் கொண்டு’ என்னும் இம் மூன்று பாடல்களாலும்
‘ஓம்’ என்னும் ப்ரணவத்தின் கருத்துச் சொல்லப்பட்டது.
இனி மேல் நாலு பாடல்களால் ‘நம’ என்னும் சொல்லின் கருத்தை உரைக்கிறார்.
‘நம’ என்னும் சொல்லுக்குப் பொருள் கூறப்படுகிறது.
அதற்கு இறைவனைத் தவிர வேறு (வழி) கதியில்லை என்று பொருள்.
இக் கருத்தை விளக்குவதற்குத் துணையாகும் கருத்துக்கள் இங்கு எடுத்துக் கூறப்படுகிறது.
சேர்தல் –
இடைவிடாது நினைத்தல்-உலகியலை நினையாது இறைவனடியையே நினைப்போர்க்கு பிறவியறுதலும்
அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்கு அது அறாமையுமாகிற இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன என்றும்
பரிமேலழகர் உரையில் உணரலாகும்.
‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல’ என்னும் குறளில் காணலாம்.
(சேர்தல்-இடையறாது நினைத்தல்
————-
இறைவன் அனைத்து உயிர்களுக்கும் தலைவன். அவனை யாரும் ஆணையிட முடியாது.
அவனுக்கும்’ ச நிரங்குச ஸூதந்திரன்’ என்று பெயர். அவனை வளைக்கவோ, தடுக்கவோ இயலாது.
இவ்வாறு இருக்கையால் சாஸ்திரங்கள் அவனுடைய அருளைப் பெறுவதற்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம்
முதலிய பல வழிகளைச் சொல்லி உள்ளன.
சாஸ்திரங்களின் நுட்பமறியாதார் மேற்சொன்ன கர்ம யோகம் முதலான யோகங்களைச் செய்து
அவ் வழியால் இறைவனை அடையலாம் என்று மிக்க முயற்ச்சிகளை மேற்கொள்ளுகிறார்கள்.
அவர்களை நோக்கி ஓர் உண்மை இங்கு உணர்த்தப்படுகிறது.
இறைவன் தன் திருவடிகளை இவ்வுயிர்களுக்குத் தானே கொடுத்தாலொழிய எந்த முயற்சியினாலும்
அவன் திருவடிகளை அடைய முடியாது.
ஆகவே அவன் தன் திருவடிகளை எப்பொழுது கொடுப்பானோ! என்று எதிர் பார்த்துக் கொண்டே இருங்கள்
என்னும் நுண் பொருள் இதில் கூறப்படுகிறது.
கருமத்தால் ஞானத்தால் காணும் வகை யுண்டே
தரும் அத்தால் அன்றி இறை தாள்கள் -ஒரு மத்தால்
முந்நீர் கடைந்தான் அடைத்தான் முதல் படைத்தான்
அந்நீர் அமர்ந்தான் அடி –4-
பதவுரை:
ஒரு மத்தால் – மந்திர மலையாகிற ஒரு மத்தால்
முந்நீர் – ஆழ் கடலை ( ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் மூன்றும் கலந்து)
கடைந்தான் – தேவர்களுக்காகக் கடைந்தவனானான்
அடைத்தான் – சீதாப் பிராட்டிக்காகக் கடலை அணை செய்தவனானான்
முதல் படைத்தான் – படைப்புக் காலத்தில் முதன் முதலாக அந்த நீரைப் படைத்தவனானான்
அந்நீர் – அந்த நீரில்
அமர்ந்தான் – பள்ளி கொண்டருளினான்
அடி – இத்தகையவரது திருவடிகளாகிற
இறை தாள்கள் – இறைவனுடைய திருவடிகள் தாமே தரும்
அத்தால் அன்றி -தருகையாகிற அதனால் ஒழிய
கருமத்தால் – தன் முயற்சியால் சாதிக்கப்படும் கரும யோகத்தாலும்
ஞானத்தால் – அப்படிப்பட்ட ஞான பக்தி யோகங்களினாலும்
காணும் வகை யுண்டே –காணும் முறைகள் உண்டோ?
இல்லை
கருமத்தால் ஞானத்தால் காணும் வகை உண்டோ?:-
கரும யோகத்தாலும் ஞான யோகத்தாலும் காணும் வழிகள் உண்டோ?
இல்லை என்பது பொருள்.
ஞானம் என்பதில் பக்தியும் அடங்கும்.
பக்தி என்பது ஞானத்தின் முதிர்ந்த நிலயாதலால் இவ்வாறு சொல்லப்படுகிறது.
வேதாந்த நூல்களில் மேற்சொன்ன மூன்று யோகங்களும் இறைவனை அடைவதற்கு வழியாகச் சொல்லப் பட்டுள்ளது.
ஞான யோகத்தைப் போன்று தூய வழி வேறு எதுவுமில்லை என்று கீதையில் சொல்லியிருக்கிறது.
‘என்னை அடைய வேணும் என்ற கொள்கை யுடையவன் மனதை என்னிடம் வைக்க வேணும்.
என்னையே இடையறாமல் நினைக்க வேணும். என்னை வணங்க வேணும்’ என்று
அர்ஜுனனுக்கு கண்ணனே போதித்திருக்கிறான்.
இவ்வாறு இருக்க இங்கு இவற்றால் காணும் வைகை உண்டோ -என்று சொல்லி யிருப்பது எண்ணிப் பார்த்தற்குரியது.
இவ்வாறு அருளிச் செய்த நூல் ஆசிரியரான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
மேற்படி யோகங்களின் உண்மை நிலைகளையும்
இறைவனுடைய சிறப்பையும் தம்முடைய நுண் அறிவால் தெளிவாகக் கண்டிருப்பவர் ஆகையால் இவ்வாறு கூறியுள்ளார்.
மேற்சொன்ன யோகங்களெல்லாம் பகவானுடைய திருவடிகளில் சரணாகதி பண்ணியே செய்ய வேண்டியதாயுள்ளன.
அச் சரணாகதி இந்த யோகங்களுக்குத் துணை நிற்பதாய் உள்ளது.
ஆகவே தன் முயற்சியால் சாதிக்கப்படும் கர்ம யோகம்,ஞான யோகம் , பக்தி யோகங்களும்
சரணாகதியின் துணையினாலேயே சாதிக்கப்படுவன என்னும் சாஸ்திர நுட்பத்தைக் கொண்டு
மேல் வாரியான இந்த யோகங்களால் அடைய முடியாது என்று கூறுகிறார்.
பகவானை சரணாகதி பண்ணி அவன் அருளைப் பெறாத போது எந்த முயற்சியினாலும் அவனைப் பெற முடியாது
என்கிற மறைப் பொருளின் முடிவு (வேதாந்த விழுப் பொருள்) இங்குக் கூறப்படுகிறது.
இறைவனுக்கும் உயிர்களுக்கும் பிரிக்க முடியாத எல்லா விதமான உறவுகளும் இருப்பதால் உரிமையுடன்
அவனை அடைவதற்கான எளிய வழி இருக்கும் பொழுது அரும்பாடு பட்டு சாதிக்கக் கூடிய
கர்ம, ஞான,பக்தி யோகங்களாகிற அரிய வழிகளைக் கைக் கொள்ள வேண்டாம் என்பது இதன் உட்கருத்து. .
ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த கீதார்த்த ஸங்கிரத்தில்
“நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
உபயதாம் பரிதஜ்ய ந்யசேத் தேவேது தாமபீ:” என்று கூறியிருப்பதாலும்
இன்றாக நாளையே யாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என் பாலதே – நன்றாக
நான் உன்னை யன்றி இலனேன் கண்டாய்
நாரணனே நீ என்னை யன்றி இலை”–(நான்முகன் திருவந்தாதி-7)
என்ற திருமழிசைப்பிரான் பாடலாலும் இறைவனைத் தவிர வேறு உபாயமில்லை என்பதை உணரலாம்.
தருமத்தாலன்றி இறை தாள்கள்:-
இறை தாள்கள் தரும் அத்தாலன்றி என்று கொண்டு கூட்டுக.
அதாவது
தலைவனான இறைவனுடைய திருவடிகள் தானே தன்னைக் கொடுப்பதல்லாமல் என்று பொருள்.
இங்கு’எம்பெருமானுடைய திருவடியே தஞ்சம்’ என்னும் கருத்து சொல்லப்பட்டுள்ளது.
இதைப் பற்றியே ‘பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது திண் கழலாயிருக்கும்’ என்று
முமூக்ஷுப்படியில் சொல்லப்படுகிறது.
இங்கு இறை என்று சொன்னது அஷ்டாக்ஷர மகா மந்திரத்தின் முதல் பதமான ‘ஓம்’ என்ற ப்ரணவத்தில்
முதல் பதமான அகாரத்தின் பொருள்.அதாவது நாராயணன் என்பதாம்.
தாள்கள் தரும் அத்தாலன்றி:- என்றது
இறைவன் திருவடிகளே தஞ்சம்.வேறில்லை என்று நூல்களில் சொன்ன முடிவு பற்றிச் சொல்லப்பட்டது.
த்வய மந்திரத்தின் முற்பகுதியில் தஞ்சமாகக் கொள்வது பற்றி சொல்லும் போது
‘திருவடிகளையே தஞ்சமாகப் பற்றுகிறேன்’ என்று சொல்லி யிருப்பதைக் காண்க.
மற்றும் நம்மாழ்வார் திருவாய்மொழியில்
”ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’ என்றும்
‘கழல்களவையே சரணாக் கொண்ட’ என்றும்
‘அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்’ என்றும்
‘ சரணே சரண் நமக்கு ‘ என்றும்
‘திருவடிகளே தஞ்சம்’ என்பதை ஒருதரம் சொன்னது போல் பல தடவை சொல்லியிருப்பதைக் காணலாம்.
ஆகவே இறைவனுடைய திருவடிகள் தவிர வேறு எதுவும் தஞ்சமாகாது என்பது நிலைநாட்டப்பட்டது.
இதற்கு உதாரணமாகப் பல எடுத்துக்காட்டுக்கள் சொல்லப்படுகின்றன.
ஒருமத்தால் முந்நீர் கடைந்தான்:-
தேவ லோகத்தில் இந்திரன் இராவதம் என்னும் தன்னுடைய யானை மேலேறி பவனி வரும்போது துர்வாச முனிவர்
தேவி பூசையில் தனக்குக் கிடைத்த மாலை ப்ரசாதத்தை அவனுக்குக் கொடுத்தார்.
அவன் யானை அம் மாலையை துதிக்கையால் சிதற அடித்தது.
இதைப் பார்த்த முனிவர் ‘இந்திரன் செருக்கு அடங்கும்படி அவன் செல்வம் அழியுமாறு சாபம் கொடுத்தார்.
‘கணமேயும் காத்தலறிது’ என்னும் வாய்மொழிப்படி அவனது செல்வம் ஒரு கணத்தில் அழிந்தது.
அந்நிலையில் இந்திரன் மிகவும் வருந்தி பகவான் திருவடிகளில் அடைக்கலம் புகுந்தான்.
தன்னை அடைக்கலம் புகுந்த இந்திரனுக்காக மந்திர மலையை ஒரு மத்தாகக் கொண்டு
வாசுகி என்னும் பாம்பைக் கயிறாக்கி
தானே ஆமையாகி அம்மலையை முதுகில் தாங்கி கலக்க முடியாத நீர் நிறைந்த கடலை
‘ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்’ என்று சொன்னவாறு கடலைக் கடைந்து
அமுதத்தையும் இந்திரன் இழந்த செல்வங்களையும் எடுத்துக் கொடுத்து அவனது துயர் தீர்த்தான்
என்னும் வரலாறு இங்கு கூறிக் கொள்ளத் தக்கது.
அடைத்தான்:-
இராமபிரானின் பிரிவாலே தளர்ந்த சீதைப் பிராட்டியின் முக மலர்த்திக்காக கடலை அணை செய்தான்.
நீரைக் கண்டால் பயந்து ஓடும் வானரங்களை அதற்கு உதவியாகக் கொண்டான்.
நீரிலே அமிழும் மலைகளை அணை கட்டுதலுக்குக் கருவியாகக் கொண்டான்.
ஒருவராலும் அளவிட முடியாத வண்ணம் வியந்து பார்க்கும்படி ‘சேது’ என்னும் அணை கட்டினான்.
முதல் படைத்தான்:-
உலகமெல்லாம் அழிந்த மகா ப்ரளைய காலத்தில் உயிர்கள் உடல்களைத் துறந்து
இன்ப துன்ப நுகர்ச்சிக்கு வாய்ப்பு இல்லாமல் ‘அத்திக் காயில் அருமான் ‘ போல மாய்ந்து கிடந்த அவற்றை,
கடலைப் படைத்து அதில் நான்முகனைப் படைத்து மற்றுமுள்ள அனைத்தையும் படைத்தான்.
அதில் முதல் முதலாக ‘நன்மைப் புனல் பண்ணி’ என்று சொன்னவாறு நீரைப் படைத்தான்.
இங்கு முதல் என்றது ‘நீர்த் தத்துவத்தை என்று பொருள்.
அந்நீர் அமர்ந்தான்:-
படைக்கப்பட்ட அனைத்து ஜீவ ராசிகளுடைய காவலுக்காக அந்நீரிலே கண் வளர்ந்தருளினான்.
‘வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேல் மருவி’ என்றும்
‘பாற்கடல் யோக நித்திரை செய்தாய்’
‘பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்’ என்றும்’
வெள்ள வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கிற மார்க்கம்’ என்றும்
இறைவன் உயிர்கள் நலனுக்காக கடலில் கண் வளர்ந்தருளும் நிலை சொல்லப்பட்டது.
அடி:-
இத்தகைய திருவடிகளைக் காணும் வகை உண்டே என்று கொண்டு கூட்டுக.
இங்குக் கூறிய ‘கடல் கடைந்தது ,கடலை அடைத்தது. அதனை படைத்தான்.அதில் பள்ளி கொண்டு அமர்ந்தான் என்றும்
வரலாறுகளால் செல்வம் முதலிய வேறு பயனை விரும்பி அவற்றிற்காக சரணாகதி செய்த தேவர்களுக்கும்
தன்னை விட்டுப் பிரியாமல் உடன் உறையும் பிராட்டிக்கும் ,
பிரளயத்தில் அழிந்தும், படைப்பில் பிறந்தும் மாறி மாறி சுழன்று வரும் உயிர்களுக்கும் ஏற்றத் தாழ்வு இல்லாமல்
எல்லோரையும் காத்தவனுடைய திருவடிகளை என்று விவரித்துக் காண்க.
‘ஒருமத்தால் முந்நீர் கடைந்தான்'(முந்நீர் அடைத்தான்)
முதல் (நீர்) படைத்தான்
அந்நீர் அமர்ந்தான் அடி இறைவனுடைய அடியாகிற இறை தாள்கள் தரும் அத்தாலின்றி
கர்மத்தால் ஞானத்தால் காணும் வகை உண்டே? என்று கொண்டு கூட்டுக.
உயிர்கள் நலத்திற்கு இறைவனுடைய திருவடிகள் தஞ்சமே யல்லாமல்
உயிர்கள் தங்கள் முயற்சியினால் சாதிக்கும் சாதனங்கள் எவையும்
பயன் தர மாட்டா என்பது இப்பாடலின் கருத்து.
————
திருமகள் மணாளனான பகவான் உயிர்களுக்கு வீடு பேறு அளிக்கும் பொழுது
தன்னுடைய இயல்பான அருளாலேயே அருளிகிறான் என்பது முடிவான கொள்கை.
இதன் காரணம் அவன் பேரறிவாளனாய்
மிக்க திரளுடையவனாய் உயிர்களோடு பிரிக்க முடியாத உறவு உடையவனாய்
நற்குணங்கள் நிறைந்தவனாய்ச்
செய்யும் செயல்களெல்லாம் தன்னலம் கருதியே செய்து கொள்பவனாயிருப்பவன் .
இருப்பினும் சாஸ்திரங்களில் கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்றும் மற்றும் சிலவும்
பகவானை அடைவதற்குச் சாதனங்களாகும் (வழியாகும்) என்று சொல்லப்பட்டுள்ளன.
சாஸ்திரங்களும் உயிர்களின் அறிவைச் சோதிப்பதற்கு இறைவனை அடையும் வழிகளைப் பலவகையாகக் காட்டி உள்ளன.
பேரறிவாளனான ஒருவன் பயனில்லாத ஒன்றைச் செய்ய மாட்டமையால் கர்ம,ஞான பக்தி யோகங்கள் முதலியன
சாதனம் போன்று தோன்றினாலும் பகவானுடைய அருளைப் பெறுவதற்கு இவை சாதனமாக ஆக மாட்டா.
அதனால் இவற்றை சாதனமாக ஏற்கலாகாது.
ஆகவே அறிவாளிகள் பகவானையே தஞ்சம் புகுந்து அவன் அருளாலேயே வீடு பேறு அடைகிறார்கள்.
அவ்வாறு அடைவதிலும்
நாம் பகவானைத் தஞ்சமாக அடைந்திருக்கிறோம் என்னும் நினைவையும் அறவே விட்டு விட்டு
நம்மிடத்தில் இறையருளைப் பெறுவதற்கான ஒன்றும் இல்லை என்று
தன்னுடைய வெறுமையை எண்ணி இருப்பானே யானால்
அது இறைவனுடைய அருளாலே வந்ததாகும் என்பது இப் பாடலில் குறிக்கப்படும் கருத்தாகும்.
வழியாவது ஓன்று என்றால் மற்றவையும் முற்றும்
ஒழியாவது ஓன்று என்றால் ஓம் என்று -இழியாதே
இத் தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான்
அத் ததலையால் வந்த வருள் –5-
பதவுரை:
வழியாவது – சரணாகதி என்னும் வழியானது
ஒன்று என்றால் – ஒரே வழி என்று தோன்றினால்
மற்றவை – கர்ம,ஞான பக்தி யோகங்கள் முதலியன
முற்றும் – எல்லாவற்றையும்
ஒழியா – தடம் தெரியாமல் விட்டிட்டு
அது – கீழ்ச் சொன்ன சரணாகதி வழி
ஒன்று என்றால் – ஒரே வழி என்று தேறியதால்
ஓம் என்று – அதில் உடன் பட்டு
இழியாதே – கைக் கொள்ளாமல்
இத்தலையால் – நம்மால் செய்யலாகும் செயல்கள்
ஏதுமில்லை – ஒரு புண்ணியமுமில்லை .ஒரு நல்லதும் இல்லை
என்று – என்று தங்கள் வெறுமையை எண்ணி
இருந்தது தான் – அவ்வொழுக்கத்தில் நின்றது
அத் தலையால் வந்த அருள் – இறைவன் கொடுத்த அருளாகும்
வழியாவது ஒன்று என்றால்:
‘சரணாகதி’ என்னும் வழி ஒன்றே என்று உறுதியானால்,
கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ப்ரபத்தி யோகம் முதலான சாதனங்களை நாலு வகையாக
சாஸ்திரங்கள் சொல்லியிருந்த போதிலும்
ப்ரபத்தி யோகம் (சரணாகதி) தவிர ஏனைய சாதனங்களெல்லாம் பலனைத் தரும் அதிகாரம் பகவான் ஒருவனுக்கே உள்ளதால்
ஏனைய சாதனங்கள் நேரடியாக பலன் தராது என்பது சாஸ்திர முடிவு.
ஆகவே அவற்றைச் சாதனங்களாகப் பற்றுவதில் பயனில்லை என்று தெளிவு.
ஆகவே, நாலாவதாகச் சொல்லப்பட்ட ப்ரபத்தி (சரணாகதி) ஈச்வரனோடு நேரிடையாகத் தொடர்புடையதால்
இதுவே வழியாகச் சொல்லப்படுகிறது.
அதனால் “வழியாவது ஒன்று” என்று கூறப்பட்டது.
மற்றவை முற்றும் ஒழியா:
இவ்வாறு முடிவான பிறகு கர்ம யோகம், ஞான யோகம் பக்தி யோகம் முதலானவற்றையும் மற்ற சாதனங்களையும்
ஒட்டு மொத்தமாக விட்டு விட வேண்டும் என்பது இதன் பொருள்.
மற்றவையும் என்று கூறியதால் சரணாகதி தவிர மற்ற மூன்று யோகங்களையும் என்று கொள்ள வேண்டும்.
“முற்றும்” என்பதற்கு முழுமையான என்று பொருள்.
அதாவது அவற்றை விடும் போது அவற்றின் தடமும் தெரியாமல் விட வேண்டும் என்பதாம்.
“ஒழியா” என்பது செய்து என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் ஒழித்து என்று பொருள் இது இருந்தது என்னும்
வினை கொண்டு முடிந்தது. இதை மறுவலிடாதபடி விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அது ஒன்று என்றால்:
அது-ப்ரபத்தி-சரணாகதி. இதற்குப் பகவான் என்று பெயர்.
“ஒன்று’ என்பது அவன் ஒருவனே என்னும் பொருளைக் குறிக்கிறது.
ஒருவனே என்று பிரிநிலை ஏகாரப் பொருளில் வந்து அவனைத் தவிர வேறு எந்த சாதனமும் சாதனமாகாது
என்னும் கருத்தைச் சொல்லுகிறது.
அடைக்கலம் புகும் பக்தன் ‘உன் திருவடியே தஞ்சம்” என்று சொல்லுவதும் சாதனம் ஆக மாட்டாது.
அவ்வெண்ணத்தையும் கூட சாதனமாக மாட்டாது. என்பது சாஸ்திர முடிவாகும்.
‘பவ சரணம்’ என்பதுவும் கழி யுண்கிறது என்பது காண்க.
அவனே தஞ்சம் என்ற எண்ணம் இருந்தால் அந்த எண்ணமும் அவனுடைய அருளுக்குத் தடையாகிறது.
இவ்வாறு சரணாகதி செய்பவனிடத்திலுல்ல எதையுமே சாதனமாக ஏற்காதவன் பகவான்.
அவனைச் சரணாகதி என்னும் வார்த்தையால் சொல்லி ‘அது ஒன்று என்று இது அஃறிணையால் கூறப்பட்டது.
‘அது இது உது எது’ என்றார் நம்மாழ்வார்.
அவன் எப்படி வேண்டுமானாலும் கூறலாமல்லவா?
அதனால் அது ஒன்று என்றால் பகவானாகிற ஒருவனே வழி என்று முடிவானால் என்று பொருள் காண்க.
ஓம் என்று இழியாதே:
இம் முடிவுக்கு உடன்பட்டு அவனைப் பற்றுவதிலேயே முனைந்தால்
அதாவது
இறைவனுடைய திருவடிகளை நாம் பற்றினாலன்றோ அவன் நமக்கு அருள் செய்வான் என்று
நினைத்து அவனை அடைக்கலம் புகாமல்.
இத் தலையால் ஏதுமில்லை என்று இருந்தது தான்:
இவ் வருளைப் பெறுவதற்குச் சொல்லப்படும் சாதனங்கள் நம்மால் செய்யலாவது ஒன்றுமில்லை என்று
தனது வெறுமையை (ஒன்றுமில்லாமையை) எண்ணியிருக்கும் அவ் விருப்புத் தான்
அத் தலையால் வந்த அருள்:
அவன் உயிர்களிடம் வைத்துள்ள அருளினால் வந்ததாகும் என்பதாம்.
சாஸ்திரங்களில் ‘வீடு பேற்றுக்கு சாதனமாக சரணாகதி என்னும் ஒரே வழி தான் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முடிவான பிறகு ஏனைய கர்ம, ஞான பக்தி யோகங்கள் எல்லாவற்றையும் தடம் தெரியாமல் விட்டு விட வேண்டும்.
இவ்வாறு சொல்லப்பட்டதால் ‘அச் சரணாகதி நெறியே நமக்குத் தஞ்சம்’ என்னும் எண்ணம் உண்டாகும்.
அவ் வெண்ணத்தையும் கொள்ளலாகாது என்பதாம்.
ஏன் எனில்
‘இறைவனாகிற ஒருவனே அருள் செய்கிறான்’ என்று கூறுகையில் ஒருவனே என்ற இடத்தில் உள்ள பிரிநிலை ஏகாரம்
கர்ம, ஞான, பக்தி யோகங்களைப் பிரித்து நிற்கிறது.
அது போல இவனுடைய பற்றுதலையும் பற்றுதல் எண்ணத்தையும் பிரித்துக் காட்டுகிறது.
ஆகவே, இறைவன் அருளுவதற்கு உயிர்களிடம் சிறிதளவு எதையும் எதிர்பார்த்து அருளுவதில்லை என்பதும்
அவன் தன்னுடைய இயல்பான கருணை குணத்தால் மட்டுமே அருளிகிறான் என்பதும் உணர்த்தப்படுகிறது.
‘வெறிதே அருள் செய்வர்’ என்னும் திருவாய்மொழி பாடல் உரையில் இதை விளங்கக் காணலாம்.
இவ்வாறு இறைவன் தானே அருள் செய்கையில் அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லையாகிறது.
இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு சாதனங்களாக எதையும் செய்யாமால் வெறுமையாக இருக்கும் நிலை
ஒருவனுக்கு அமைந்தால் அது இறைவன் திருவருளாலே தான் வரவேண்டுமேயல்லாது அதை நம்மால் கொள்ள முடியாது.
வெறுமைக்கு இறைவன் அருள் வேண்டுமோ என்றால் கட்டாயம் வேண்டும்.
ஒருவன் செயல் எது இல்லாமல் வெறுமையாக இருப்பது மிகவும் அரியதாகும்.
ஒரு சிறு பொழுதுகூட செயலற்று இருக்க முடியாது. என்றும்
கை, கால் முதலிய உறுப்புக்கள் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் என்றும் கீதையில் சொல்லப் பட்டுள்ளது.
ஆகவே வெறுமையாக இருத்தலே நன்றாகும்.
அதாவது
இறைவனுடைய பற்றுதலையோ பற்றியுள்ளோம் என்னும் எண்ணத்தாலேயோ பயன் அடைவதில்லை என்பதாம்.
இக் கருத்தை ‘வாழும் சோம்பர்’ என்றார் தொண்டரடிப் பொடிகள்.
‘நின்னருளே புரிந்திருந்தேன்’ என்றார் பெரியாழ்வார்.
‘என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே’ என்றார் நம்மாழ்வார்.
‘உன் மனத்தால் என் நினைந்திருந்தாய்’ என்றார் திருமங்கையாழ்வார்.
‘நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே’ என்றார் திருமழிசைப்பிரான்.
‘சிறுமானிடவர் நாம் செய்வதென்’ என்றாள் ஆண்டாள்.
ஆசார்யர்களில் திருக் கண்ண மங்கை யாண்டான் இக்கொள்கையைக் கடை பிடித்தார்.
‘அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம், அவத்யகரம். அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்’ என்ற
முமுக்ஷுப்படி (ஸூத்திரம் எண் 230) தொடரிலே காணலாம்.
இதற்கு உதாரணம்: ஸ்ரீ இராமாயணத்தில் சீதை இராமனை அடைவதற்கு எந்த உபாயத்தையும் செய்ய வில்லை.
ஆனால் ஸ்ரீ ராமபிரான் சீதையை அடைவதற்கு வில்லை முறித்தல் போன்ற பல சாதனங்களையும் நடத்தி யிருக்கிறான்.
இதனால் சீதை இருக்கும் இடம் தேடி வந்து இராமன் அவளை அடைந்திருக்கிறான்.
இந்த உதாரணத்தை மனதில் கொண்டால் மேலே சொன்ன கருத்துக்கள் தெளிவாகும். இது வான்மீகியின் கதைப் போக்கு.
இவ்வாறு கூறியவற்றால் சரணாகதி தத்துவம் அசேதனம் போல் எவ்வித செயல்பாடுமின்றி இருத்தல் என்று தேறுகிறது.
இந்நிலை ஒருவனுக்கு வருவது இறைவனுடைய திருவருளால் தான் ஆகும் என்ற கருத்தை உரைத்துக் கூறுகிறது இப்பாடல்.
இதற்கு உதாரணமாக திருவாய்மொழி 6ம் பத்து 10ம் திருவாய்மொழி “உலகமுண்ட பெருவாயா” என்ற பதிகத்தில்
‘ஆவாவென்னும் – பாசுர ஈட்டில் கூறப்படும் ஒரு ஐதீஹியத்தைக் காணலாம்.
நம்பிள்ளை, ஜீயரை ஒரு நாள் பஞ்சமோபாயம் என்று உண்டு என்று சொல்லுகிறார்கள்.
நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்றுண்டோ என்று கேட்டருள
‘நான் அறிகிலேன். இனி சதுர்த்தோபாயம் தான் பகவானேயாக இருக்க வ்யோமாதீதம் சொல்லுவாரைப் போல.
‘அவனுக்கும் அவ்வருகே ஒன்றுண்டு என்கையிறே’ அது நான் கேட்டறியேன்’ என்று அருளிச் செய்தார்.
இங்கு அரும் பதத்தில்
“சதுர்த்தோபாயமான ஈஸ்வரனை ஒழிய வேறு உபாயமில்லை என்கைக்கு சம்வாதமாக
ஐதீஹ்யம் நம்பிள்ளை இத்யாதி’ என்ற இந்த தொடர்களை ஊன்றி நோக்க வேணும்.
————
உள்ளபடி யுணரில் ஓன்று நமக்கு உண்டு என்று
விள்ள விரகு இலதாய் விட்டதே -கொள்ளக்
குறையேதும் இல்லாற்குக் கூறுவது என் சொல்லீர்
இறையேதும் இல்லாத யாம் –6-
பதவுரை:
உள்ளபடி – உயிர்களின் இயற்கையை உள்ளது உள்ளபடி
உணரில் – தெரிந்து கொண்டால்
ஒன்று – பேற்றுக்கு வழியான ஒன்று
நமக்கு – அறிவு ஆற்றல் இல்லாத நமக்கு
உண்டென்று – இருக்கிறது என்று
விள்ள – வாயினால் சொல்லகூட
விரகிலதாய் – வழி யில்லையாகி விட்டது அல்லவா
விட்டதே – (சக்தி இல்லையாகி விட்டது அல்லவா)
கொள்ள – நம்மிடத்தில் பெற்றுக் கொள்ள வேண்டுவன
குறை – குறைபாடுகள்
ஏதும் இல்லார்க்கு – சிறிதும் இல்லாத இறைவனுக்கு
இறையேதும் இல்லாத – சிறிதளவுவேனும் தனக்கென்று ஒன்றுமில்லாத
யாம் – அடிமைத் தன்மையையே வடிவாக உள்ள நாம்
கூறுவது என் – நம்மை காப்பதற்குச் சொல்லும் வார்த்தை என்ன இருக்கிறது
சொல்லீர் – சொல்லுவீர்களாக
உள்ளபடி உணரில்:
உயிரின் உண்மை நிலையை உணர்ந்தால்
“எப்பொருள் எத்தன்மை தாயினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” என்ற திருக்குறளில்
ஆன்மாவின் உண்மை நிலையை உணர்வதே அறிவாகும் என்று கூறப்படுள்ளது.
ஒருவன் ஒரு பொருளை உலகில் காணும் பொழுது மேல் தோற்றமான இயங்குதிணை, உயர்திணை ஆகிய இவற்றில்
மனிதன், விலங்கு, செடிகொடி என்னும் இவற்றாலே காண்கிறான்.
அனைத்துப் பொருளுக்கும் உள்ளிருக்கும் உயிரைப் பார்பதில்லை.
உயிரைப் பார்க்கின்ற அறிவொளி வெளி தோற்றத்தைப் பார்பதில்லை.
உதாரணமாக “கோச் சேரமான் யானைக் கண் சேய் மாந்தரம் சேரல் இரும் பொறை” என்னும் சிறப்பு பெயரும் கூடி
ஒரு பொருளைக் காட்டுகிறது. இவை எல்லாம் நிலை இல்லாததால் கற்பனயாகக் கருதப்படும்.
இக் கற்பனைக்கு அப்பாற்ப்பட்டதாய் இருப்பது உயிர்.
இத்தகைய உயிரின் உண்மை நிலையை சாஸ்திரங்கள் துணை கொண்டே அறிய வேண்டி யுள்ளது.
உயிர் அறிவே ஆன்மா என்றும் அறிவு உடையது ஆன்மா என்றும் நூல்கள் கூறும்.
இதனால் ஆன்மாவுக்கு ‘நான் இதைச் செய்கிறவன் என்னும் செருக்குத் தன்னடையே தோன்றுகிறது.
இதைப் பற்றி கூர்ந்து ஆராய்ந்து பார்க்கையில் ஆன்மாவைப் பற்றி ஒரு உண்மை தெளிவாகிறது.
நுணுகி அறிவார்க்குப் புலனாவது ஒன்று.
அதாவது
உயிர்களெல்லாம் தன இச்சையில் செயல்பட முடியாத உடல்களாகவும்
இறைவன் அனைத்து உயிர்களையும் இயக்குகின்ற உயிராகவும் சொல்லப்படுவதால்
இறைவனுக்கு அடிமையாய் இருக்கும் தன்மையே உயிரின் உண்மை இயல்பாகும்.
ஆகவே நான் எனது என்று வாய் விடுவதற்கு தகுதி அற்றதாகிறது.
இவ்வாறு உயிர்களின் உண்மை நிலையை அறியும் போது தன்னைத்தான் காத்துக் கொள்ள,
தான் ஒன்று செய்வதற்கான வாய்ப்பே உயிர்கட்கு இல்லை என்று புலனாகிறது.
அதுவே உயிரைப் பற்றி உள்ளது உள்ளபடி அறியும் அறிவாகும்.
‘இயல்பாகவும் நோன்பிற்க ஒன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து’ என்ற குறளில்
மேற்கூறிய கருத்தைத் திருவள்ளுவரும் கூறியுள்ளார்.
இதன் கருத்து இறைவனைத் தவிர தனக்கு ஒரு பற்றப்படும் பொருளும் இல்லை என்றிருப்பதுவே
ஞானியர்க்கு பொருள் ஒன்று உண்டு என்று எண்ணினால் அது மீண்டும் பிறப்பதற்கு ஏதுவாகும் என்பதாம்.
இங்கு ஒன்று இன்மை இயல்பாகும், உடைமை மயலாகும் என்று கூறியது காண்க.
இதனால் ஒன்று உடையோம் என்றெண்ணுவது மடமையாகும் என்பதால்.
ஒன்று நமக்கு உண்டென்று விள்ள விரகிலதாய் விட்டதே:
“வீடு பேற்றுக்குக் கைமுதலாக ஒன்று நம்மிடம் இருக்கிறது” என்று சொல்வதற்கு வாய் திறக்க வழியில்லை என்று பொருள்.
“விள்ள” என்பதற்குச் சொல்ல என்று பொருள் கொள்ளப்பட்டது.
இவ்வாறன்றி “விள்ள -விலகி நிற்க” என்று பொருள் கொண்டு .
இறைவனுடைய (கருணை) அருள் நிழலில் பதுங்கிக் கிடப்பது அல்லாமல்
அதை விட்டுப் பிரிந்து தனித்து நிற்கும் ஆற்றல் உண்டு என்று எண்ணி விலகி நிற்பதற்கு வழியற்றுவிட்டது என்றும் சொல்லலாம்.
இக் கருத்து உயிர்கள் எல்லாம் இறைவனுடைய உடலாகவும் இறைவன் அவற்றிற்கு உயிராகவும் சொல்லப்படுவதால் கூறப்பட்டது.
உயிரின் துணையின்றி உடல் இயங்க முடியாதல்லவா?
உயிர்க்கு உணர்வு என்னும் பண்பு இருப்பதால் செயலற்று உயிரில் பொருள் போல எப்படி இருக்க முடியும்?
அவ் வுணர்வுக்கு ஏற்ப இறைவனே நம்மைக் காக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையேனும் சொல்ல வேண்டுமா?
அதுவும் இல்லாமல் எப்படி முடியும்? என்ற வினாக்கள் இங்கு எழுகின்றன. அவற்றிற்கும் பதில் சொல்கிறது.
கொள்ளக் குறையேதும் இல்லார்க்கு என்ற இத்தொடர்.
இறைவன் உயிர்களைக் காக்கும் பொழுது உயிர்களிடத்தில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு காப்பாற்றும் குறை அவனிடம் இல்லை.
ஒன்றை ஏற்றுக் கொண்டு அதற்காகக் காப்பவன் என்றால் அவனுடைய பெருமைக்கு இழுக்காகும்.
அதனால் அவன் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மேலும் நம்முடைய நிலையைப் பார்த்தால் ஒன்றும் இல்லாதவராய் இருக்கிறோம்.
இறை யேதும்:இல்லாதயாம்:
உயிரும் உயிரைச் சார்ந்த உடல் முதலிய பொருள்களும் இறைவனுடைய உடைமைப் பொருள்களை இருக்கின்றன.
தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாததாய்த் தனக்கென்று ஒன்று சிறிதும் இல்லாததாய் இருக்கின்றன.
ஆகவே அவன் ஒரு பொருளையும் கொள்ள மாட்டான். இவனுக்கு ஒன்றும் இல்லாததா? இவன் கொடுக்க மாட்டான்.
இதை விளக்குவதற்கு இங்கு ஓர் உதாரணம் காட்டப்படுகிறது.
இறைவனை வணங்கச் சென்ற ஓர் அடியவர் இறைவன் முன் சென்று இறைவனே
! உனக்கு எப்பொருளை நான் தருவேன்? ஏன் எனில் நானே உன்னுடைய அடிமை. பொருள் எல்லாம் உன்னுடைய உடைமை.
எனக்கென்று எப்பொருள் இருக்கிறது? ஆகவே நான் உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை.
ஆயினும் நெடுங்காலமாக என்னுடைய வினைகள் எனக்குச் சொந்தமாக உள்ளன.
அவற்றை வேண்டுமானால் கொடுக்கலாம் என்று சொல்லி வணங்கியதாகக் கூறப்படுவதை இங்கு சொல்லலாம்.
மேலும் இராமாயணத்தில் பரதனுக்கும் வசிட்ட முனிவருக்கும் நடந்த உரையாடலில் இக்கருத்து மேலும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
இராமன் கானகம் சென்று விட்டான். தந்தை தசரதன் வானகம் எய்திவிட்டான்.
ஆகவே பரதா நீதான் அரசாள வேண்டும் என்றார் வசிட்டர்.
இதைக்கேட்ட பரதன் செவிகளைக் கைகளால் புதைத்துக் கொண்டு பின்வருமாறு பேசினான்.
இராமன் கானகம் சென்று விட்டான். என்றால் அவனுடைய உடைமைப் பொருளான அரசாட்சியை நான் ஏற்பது தகும்?
ஒருவனுடைய உடைமையை மற்றொருவன் கவர்வது கள்ளத்தனமாகுமன்றோ?
“உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்” என்றன்றோ நீதி நூல்கள் கூறுகின்றன என்றான்.
ஆனாலும் வசிட்டர் விடவில்லை.
தற்பொழுது இராமன் இல்லாததால் அவனுடைய உடைமையான அரசை அவன் வரும் வரை ஏற்கலாமே என்றார்.
அதற்கு பரதன் “உடையவன் தான் உடைமைப் பொருளைக் கொல்லவேணுமேயொழிய
ஒரு உடைமை மற்றொரு உடைமையை ஏற்க நியாயமில்லை.
நான் இராமனுடைய உடைமையாதளால் அரசாகிற மற்றொரு உடைமையை ஏற்கத் தகுந்தவனில்லை” என்றார்.
அப்பொழுது வசிட்டர் விடவில்லை.
அரசாகிற ராமனுடைய உடைமை அறிவற்றது. பரதனாகிற நீ அறிவுடையவன்.
ஆகவே அறிவற்ற அரசாகிற உடைமையை அறிவுடைய நீ ஏற்றுகொள்ளலாம் அல்லவா?
ஒருவனுக்கு அணிகலன்களும் அவற்றை இட்டுவைக்கும் உடைமைகளுள்
அணிகலன்களாகிற உடைமையை பெட்டியாகிற உடைமைப் பொருள் பாதுகாக்கவில்லையா?
அது போல அரசு இராமனுடையதாக இருந்தாலும் நீயும் இராமனுடைய உடைமையாக இருந்தாலும்
அரசை நகைப் பெட்டி போல் ஏற்றுக் கொள்ளலாமே என்றார்.
அது கேட்ட பரதன் நீர் சொன்ன உதாரணத்தில் இரண்டும் அறிவில்லாதவை.
உடையவன் அணிய வேண்டிய உடைமைப் பொருளை நாம் அடக்கிக் கொண்டிருக்கிறோமே என்னும் அறிவில்லாததால்
அணிகலன்களைப் பெட்டி ஏற்றுக் கொண்டுள்ளது.
எனக்கு அறிவு இருப்பதால் இராமனுடைய உடைமையான அரசை நான் ஏற்க இயலாது.
யானும் இவ்வரசும் இராமனுடைய உடைமைகளே.
அரசைக் காட்டிலும் வேறுபட்ட நிலையில் எனக்கு அறிவிருப்பது நான் இராமனுடைய உடைமை என்பதை
எப்பொழுதும் நினைத்துக் கொண்டு அதற்கேற்ப இருப்பதுவே எனக்கு சிறப்பாகும்.
இந்த எண்ணம் அரசுக்கு இல்லாததால் அது எனக்கு வேறுபட்டதாயிற்று .
இருப்பினும் நானும் அரசும் இராமனுடைய உடைமைகளே என்று கூறி மறுத்து விட்டான்.
இதனால் உயிர்கள் உணர்வு உடையனவாயிருந்தாலும்
“நான் இறைவனுடைய உடைமை” என்பதை அறிந்து அடிமைத் தொழில் செய்வதற்கே உரியனாய்,
யான் என்றோ, எனது என்றோ சொல்வதற்குத் தகுதியுடையதில்லை என்றவாறு.
இக் கருத்துக்களை இங்கே உணர வேண்டும்.
இவற்றை எல்லாம் உள்ளடக்கி இறைவன் நிறைவுடையவன்.
ஆகவே யாரிடமும் எதையும் ஏற்க வேண்டாதவனாகிறான்.
உயிர்களுக்கு “உடைமை என்ற ஒன்றும் சிறிதும் இல்லாததால் அவனுக்குக் கொடுப்பதற்கு எதுவும் இல்லாதவனாகிறான்.
இறைவன் கொள்ளக் குறையேதுமில்லாதவன். உயிர்கள் சிறிதளவேனும் ஒன்றும் உடைமை இல்லாதவர்கள்.
ஆகவே அவன் கொள்ள மாட்டான். இவர்கள் கொடுக்க மாட்டார்கள் என்ற இவ்வுண்மைகளை விளக்கித்
தம் அருகில் இருப்பாரை நோக்கி இக் கருத்துக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறார் ஆசிரியர்.
இங்கு “நாம்” என்கிற தன்மைப் பன்மை முன்னிலைப் பொருளையும் சேர்த்துக் கொண்டு
நாம் எல்லோரும் என்று அனைத்து உயிர்களையும் சுட்டிச் சொல்கிறதாகக் கொள்ள வேண்டும்.
அனைத்து உயிர்களும் அவனுடைய உடைமையாதலால் மேற்சொன்னக் கருத்து அனைத்துயிர்களுக்கும் பொதுவானதாகும்.
இறை என்ற இடத்தில் இறை என்ற சொல் சிறிதும் என்ற பொருளில் வந்தது
“இறையும் அகலகில்லேன்” போல இறை என்றவிடத்தில் இழிவு சிறப்பு உம்மை தொக்கு நின்றது.
இறையும் ஏதுமில்லாத என்று பொருள் கொள்க.
ஆன்மாவின் உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்தால் இறைவனுக்கு உடமைப் பொருளாயும்
அவன் வயப்பட்டுமிருத்தளால் தானாகச் செய்வதற்கு எதுவுமில்லை .
தனக்கு ஒரு உடைமையுமில்லை. .
அவன் நிறைவுடையவனாய் இருத்தலால் எதையும் கொள்ளமாட்டான்.
மிடியனுக்கு (தரித்திரனுக்கு) செல்வந்தனுக்குக் கொடுக்கத்தக்க பொருள் எதுவுமில்லை.
செல்வந்தன் தரித்திரனிடத்தில் ஒரு பொருளைப் பெற்றுக்கொள்ளத் தக்கக் குறைவுடயவனில்லை .
அப்படியிருக்க இவன் எதைக் கொடுப்பான்? அவன் எதைப் பெறுவான்?
ஆகவே அவனுக்கு உடைமையாய் அவன் அடிமையாய் இருக்கும் நிலையையே எண்ணி இருப்பதுவே
உயிர்களின் கடமையாகும் என்னும் பொருள் இப்பாடலில் கூறப்படுவதாகும்.
இதுவே “நம” எனும் சொல்லின் சாரமாகும்.
இவ் விடத்தில் கீழ்வரும் ஸ்ரீவசன பூஷண சூத்திரங்கள் நினைதற்குரியான
“பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது அல்லாத போது பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாம்”
என்று சொல்லி “அந்திம காலத்துக்குத் தஞ்சம் .இப்போது தஞ்சமென் என்கிற நினவு குலைகை. என்று சீயர் அருளிச் செய்வர்”
என்னும் ஸூத்திரத்தில் ஒரு நிகழ்ச்ச்சியை எடுத்துக் காட்டி
ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானவனும் அவனே என்பன் இங்கு நஞ்சீயர் சொன்னதாகக்
கூறிய வார்த்தையைக் காண வேண்டும்.
நஞ்சீயர் என்னும் பேராசான் ஒருவர் தம்முடைய சீடர் ஒருவர் நோய் வாய்ப் பட்டிருப்பதாகக் கேள்வியுற்று
அவரைப் பார்க்க அவரிடம் சென்றுள்ளார்.
அப்பொழுது அந்நோய்வாய்ப்பட்டவர் “அடியேனுக்கு இறுதிக் காலத்துக்குத் துணையாக இருக்கும் ஒன்றைச் சொல்ல வேண்டும்”
என்று கேட்க அதற்குப் பதிலாக அவர் இவ்வாறு சொல்கிறார்.
“நாம் பகவானுடைய உடைமைப் பொருளாய் இருப்பதால் உடைமைப் பொருளைப் பேணிப் பாதுகாப்பது
உடையவனுக்குப் பொறுப்பாதலால் அதைப் பற்றி நாம் நினைப்பதற்கு உரிமையில்லை.
இன்றைக்குத் துணையாக வேணும் கடைசி காலத்துக்குத் துணையாக வேணும் என்று என்னும் எண்ணம்
அதாவது (நம்மைக் காத்துக் கொள்ளும் எண்ணம்) அகல்வதுவே நமக்கு நலமாகும்.
ஆகவே தன்னைத் தான் காத்துக் கொள்ள வேணும் என்ற எண்ணத்தை எப்பொழுது இவன் விடுகிறானோ
அன்றைக்கு இவனைக் காக்கும் எண்ணத்தை இறைவன் செய்வான் என்பது இவ்வார்த்தையின் கருத்தாகும்.
ஸ்ரீ இராமபிரானை வனவாசிகளான முனிவர்கள் சந்தித்து உரையாடுகையில்
தங்களைக் கருப்பையிலுள்ள சிசுக்களாகச் சொல்லிக் கொண்டனர்.
இதன் கருத்து கருப்பையிலுள்ள சிசுவின் அனைத்து செயல்பாடுகளும் தாயாரும் வசத்தில் உள்ளன போல்
ஆன்மாவின் அனைத்து செயல்பாடுகளும் இறைவன் வசத்தில் உள்ளன என்பதைக் குறிக்கும்.
இவ்வாறான ஆன்மாவின் தன்வயமற்ற நிலை (இறைவன் வயப்பட்டதால்) அறியப்படுகிறது.
இதை சாஸ்திரம் “பாரதந்திரீயம்” என்று கூறும்.
அதில் “அசித்வத் பாரதந்திரீயம்” என்று சிறப்பித்துக் கூறும்.
“இதனை வைத்த இடத்திலிருந்தேனோ பாரதாழ்வானைப் போல” என்றும்
“படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே” என்னும் தொடர்களால் எடுத்துக் காட்டுவர் ஆன்றோர்.
மேலே சொன்ன ஒழுக்கத்தில் நிலை நிற்கும் உயிர்களை இறைவன் தானே வலிய வந்து காப்பாற்றுவான் என்பதாம்.
இதற்கு எடுத்துக் காடாகக் “கடற்கரையை நினைத்திருங்கள்” என்று கூறுவார்.
கடற்கரையில் “எழுபது வெள்ளம் வானரச் சேனைகளுக்கு நடுவில், இராமன் இலக்குவணன் இருவரும் இருக்க
அப்பொழுது வானரங்கள் அரக்கரிடமிருந்து இராமனையும் இலக்குவணனையும் நாம் காக்க வேண்டுமென்று பேசிக் கொண்டன.
இரவில் நெடுநேரமானதும் வாரங்கள் எல்லாம் உறங்கத் தொடங்கின அப்பொழுது இராமனும் இலக்குவணனும்
கையும் வில்லுமாய்க் கொண்டு வானரங்களைச் சுற்றி வந்து காத்தனர்.என்பதாம்.
இவ்வாறான எடுத்துக் காட்டுக்களால்
ஆன்மாக்களைக் காப்பது இறைவன் கடமை என்றும்
ஆன்மாக்கள் அவருடைய காத்தலைத் தடுக்காமல் இருக்க வேணும் என்பதும் இங்குக் கூறப்பட்டன.
—————
சென்ற பாடலில் இறைவனை
“கொள்ளைக் குறையேதும் இல்லாதவன் என்றும்
உயிர்களை இறை(யும்) ஏதுமில்லாத யாம்” என்றும்
இருவருக்கும் உள்ள இல்லாமை சொல்லப்பட்டது.
கம்பன், சீதையையும் இராமனையும் கட்டுரைக்கையில்
“மருங்கிலா நங்கையும் வசையில் அய்யனும்” என்று இருவருக்கும் ஒரு இல்லாமையைக் கூறினான்.
சீதைக்கு இடுப்பு இல்லை, இராமனுக்குப் பழிப்பில்லை என்று நகைச் சுவையாகக் கூறினான்.
அது போலே இங்கும் இறைவனுக்குக் குறை ஒன்றுமில்லை என்றும்,
உயிர்களுக்கு கொடுப்பதற்கு சிறிதும் ஒன்றும் இல்லை என்றும் கூறப்பட்டதாக
இருவருடைய இல்லாமையும் தெளிவாக்கப்பட்டது.
அதன் தொடர்பாக இருவருக்குமுள்ள இல்லாமையை எண்ணி இறைவனை வெல்வார் இல்லை என்று கூறப்படுகிறது.
அதாவது
இவ் வுண்மையை உணர்ந்தவன் ஞானி எனப்படுவான்.” இத்தகைய ஞானியே எனக்கு உயிர்” என்று
கீதையில் கூறுகிறான் பகவான்.
மேலும் அவனே எனக்கு அன்புக்கு இடமானவன் என்றும் ஞானியிடம் நான் தோற்பவன் என்றும் கூறியுள்ளான்.
இப்படி இறைவனால் கூறப்படும் ஞானி எங்கேனும் இருக்கிறார்களோ ? என்று ஞானிகளின் பெருமை பேசப்படுகிறது இப்பாடலில்
ஸ்ரீ ஆண்டாளும் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்ற தொடரில்
கூடுவாரிடம் தோற்பவன் கோவிந்தன் என்றும் கருத்துக் கூறினாள்.
அத்தகைய ஞானிகள் கிடைப்பார்களோ ? என்பது இப்பாடலின் கருத்து.
இல்லை இருவர்க்கும் என்று இறையை வென்று இருப்பார்
இல்லை அஃது ஒருவர்க்கு எட்டுமதோ -இல்லை
குறையுடைமை தான் என்று கூறினார் இல்லா
மறை யுடைய மார்க்கத்தே காண் –7-
பதவுரை:
இருவருக்கும் – இறைவனுக்கும், ஆன்மாக்களுக்கும்
இல்லை என்று – ஓர் குறைவின்மை உண்டென்று எண்ணுதலால்
இறையை – இறைவனை
வென்றிருப்பார் இல்லை – வெற்றி கொள்வாரில்லை
அஃது – அவ் வண்ணம்
ஒருவருக்கு – ஒரு மனிதனுக்கு
எட்டுமதோ – கிடைக்குமா?
குறைதான் – கொள்ளுவதாகிற குறை தான்
இல்லை – இறைவனுக்கில்லை
என்று – இவ்வாறு
கூறினாரில்லா – யாராலும் சொல்லப்படாத
மறையுடைய மார்க்கத்தே – வேத வழியில் நின்று
காண் – கண்டு கொள்வீராக
இல்லை இருவருக்கும் என்று:
இறைவனுக்கும் உயிர்களுக்கும் ஓர் இன்மை உண்டு.
அதாவது
இறைவனுக்குக் குறையொன்றுமில்லை. அவன் குறை ஒன்றுமில்லாத கோவிந்தன்.
உயிர்களுக்குப் பொருள் ஒன்றும் இல்லை. “அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம்”
“பொருள் அல்லாத” என்பவற்றால் இருவருக்கும் உள்ள இன்மை புலனாகும்.
இதுவே இருவருடையவும் உண்மை நிலையாகும்.
இவ் வுண்மை நிலையை இடையறாது எண்ணி இருப்பதுவே உயிர்களின் கடமையாகும்.
இவ்வாறு எண்ணியிருப்பார்க்கு இறைவன் தாழ நிற்பான்.
இதற்கு உதாரணமாக ஆழ்வாரின் பாடல்களில் காணலாம்.
வளவேழுலகு,
மின்னிடை மடவார்,
கண்கள் சிவந்த,
ஓராயிரமாய்,
அறுக்கும் வினையாயின முதலிய திருவாய்மொழிகளில்
பகவான் ஆழ்வார் முன் வந்து அவருக்குத் தாழ நின்றி சேவை கொடுப்பதால் கண்டு கொள்ளலாம்.
இவ் விருவரின் உண்மை நிலையும் அறியாதர்க்கு எம்பெருமானைப் பணிய வைப்பது இயலாததாகும்.
அதை அடுத்த தொடரால் கூறுகிறார்
இறையை வென்றிருப்பார் இல்லை
இறைவன் யாருக்கும் கட்டுப்படாதாவன். ஸ்வதந்திரன் – தன்னுடைய விருப்பபடி நடப்பவன்.
அத்தகையவனை ஒருவன் தனக்கு வயப்ப்படும்படி செய்து கொள்ள முடியாது.
மேற்கூறிய இருவரின் இலக்கணங்களையும் எண்ணியிருப்பார்க்கு அவன் மிகவும் எளியனாவான்.
பத்துடை அடியவர்க்கு எளியனல்லவா? அவன்.
எளிவரும் இயல்வனாயிற்றே அத்தகைய பக்தர்களைக் காண முடியுமா?
அஃது ஒருவருக்கு எட்டுமதோ:
அதாவது
இறைவனுடைய தலைமையையும் தன்னுடைய அடிமையையும் இடையறாமல் நினைக்கும் தன்மை ஒருவரால் செய்ய முடியுமா?
நான் எனது என்று செருக்கி திரியும் உலகில் அது அவ்வளவு எளிதல்லவே! மிகவும் அரிதாயிற்றே!
ஆகவே தான் அவனைப் பணியச் செய்வது இயலாது என்று கூறப்பட்டது.
இடையறாமல் நினைக்க வேண்டிய அவ்விருவருடைய இயல்பு தான் எது என்றால் அதற்குப் பதில் உரைக்கிறது மேல் தொடர்.
இல்லை குறையுடமை தான் என்று:
குறை தான் இல்லை
உடைமை தான் இல்லை என்று
கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.
தான் என்ற இடைச் சொல் ஏகாரப் பொருளில் வந்தது.
குறையே இல்லை. உடைமையே இல்லை என்று விரித்துப் பொருள் கொள்க.
அதாவது
இறைவனுக்கு உயிர்களிடம் ஒன்று பெற்றுக் கொள்ளத் தக்க குறையில்லை.
உயிர்களுக்கு அவனுக்குக் கொடுக்கத் தக்க பொருள் ஏதும் இல்லை.
இதுவே இருவருக்குமுள்ள இயல்பு.
இந்த அறிவு யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. காரணம் மேல் தொடரில் கூறப்படுகிறது.
கூறினார் இல்லா மறையுடைய மார்க்கத்தே காண்:
வேதத்தின் உட்பொருளாய் மறைந்து கிடக்கிறது ஆகவே தான் அரிதாய் உள்ளது.
வேதம் எவராலும் ஆக்கப்பட்டதில்லை.அது அநாதியானது. “ஐயம் திரிபு” முதலிய குற்றமற்றது.
ஆகவே நம்பிக்கை மிக்கது. அதைக் கற்று உணர்ந்த மேலோர்களால் உண்மை அறியத் தக்கது.
அதைக் கற்று மேல் கூறிய உண்மையைத் தெளிய வேண்டியுள்ளது.
தன் முன் நிற்பார் ஒருவனைப் பார்த்துக் கூறுவது போல ஆசிரியர் காண்-(காண்பாயாக) என்று கூறுவதாகத் தெரிகிறது.
இவ்வாறு “காண்” என்று உரையாசிரியர் மணவாளமாமுனிகள் அத்தகையவர்கள் காணக் கிடைப்பார்களா என்று ஏங்குகிறார்.
ஒருவர் மேல் வைத்துச் சொல்லப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் சொல்வதாகக் கொள்ள வேணும்.
இதனால் கூறப்பட்டதாவது.
இறைவன் நிறைவானவன். (பரிபூர்ணன்) உயிர் அவனுடைய உடைமை. அதனால் அதற்கு உடைமையானது ஒன்றுமில்லை.
இதுவே மறையில் சொல்லப்பட்ட இறை உயிர்களைப் பற்றிய இரகசியமாகும்.
வேதத்தைக் கற்று உணர்ந்தவர்களுக்கே தெளிவாதன்றி ஏனையோர்க்கு அறிய முடியாத ஒன்று.
இவ் விருவரது உண்மையையும் அறியும் ஞானிகளுக்கு இறைவன் மிகவும் எளியவனாவான்.
இவ் வுண்மையை அறியாத உலகத்தார்க்கு இறைவனைத் தமக்கு எளிமையாக்கும் பெருமை கிடைக்குமா? கிடைக்காது.
இதனால் ஆத்மா பரமாத்மா சிந்தனை இறைவனைப் பணிய வைக்கும் என்றும் அச்சிந்தனை இல்லாதார்க்கு
இறைவன் எளியனாகும் தன்மை கிடைக்காது என்பதும் கூறப்பட்டது.
இதைப் “பத்துடையடியவர்க்கு எளியவன்”, “பிறர்க்கு அரிய வித்தகன் ” என்றார் நம்மாழ்வார்.
இதனால் சாஸ்திரப்படி நடப்பவர்களுக்கு பகவான் எளியவனாயிருப்பன் என்றும்
அப்படி இல்லாதவர்களுக்குன்மிக அரியனாய் நெடுந்தொலைவில் இருப்பான் ” என்றும் அறியக் கிடைக்கிறது.
கீதையில் ஞானியைத் தனக்கு உயிர் என்றான் கண்ணன். அவர்களுக்கு எளியனாய் இருந்தான்
“காப்பிட வாராய்” “பூச்சூட வாராய்” “அம்மம் உண்ண வாராய்” என்றால் ஓடி வருவான்.
“விட்டு சித்தர் தங்கள் தேவர்” என்றாள் ஆண்டாள்.
இதனால் “ஞானியருக்கு ஒப்போரில்லை இவ்வுலகு தன்னில்” என்றார் மணவாள மாமுனிகள்.
————
இதுவரை “ஓம்” என்ற பிரணவத்தின் கருத்தை
“அவ்வானவர் ”
குலம் ஒன்று”
“பலங்கொண்டு” என்ற மூன்று பாடல்களாலும் கூறி
அடுத்து “நம:” என்கிற பதத்தின் பொருளை
“கருமத்தால்”
“வழியாவது”
“உள்ளபடி உணரில்”
‘இல்லை இருவருக்கும்” என்ற நான்கு பாடால்களாலும் சொல்லிக்
கடைசியாக “நாராயணாய” என்னும் சொல்லின் பொருளை இப் பாடலால் கூறுகிறார்.
“நாராயணாய” என்னும் இச் சொல்லுக்குப் பொருளை
“நாராயணனுக்கு அடிமை செய்து வாழ்வதுவே பெரு வாழ்வு” என்று சொல்லப்படுகிறது.
நாராயணனான பரம்பொருளைக் கண்ணாரக் கண்டு இன்புற்று
அவ்வின்பம் தவிர வேறு ஒரு இன்பமில்லை என்றிருப்பதுவும்
அவனுக்குப் பணி செய்து வாழ்வதுவே லட்சியம் என்றிருப்பதுவும்,
அவனுக்குச் செய்யும் பணியின் முறைகளை விவரிப்பதுவும்,
நாராயணாய என்னும் பதத்தில் சொல்லப்படும் பொருட்களாகும்.
இக் கருத்தை இப் பாடல் சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறது.
வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய் வீ காலம்
தத்தம் அவையே தலை யளிக்கும் -அத்தை விடீர்
இச்சியான் இச்சியாது ஏத்த எழில் வானத்து
உச்சியான் உச்சியானாம் –8-
பதவுரை:
வித்தம் – செல்வத்தினுடைய
இழவு – அழிவும்
இன்பம் – சுகமும்
துன்பம் – துக்கமும்
நோய் – நோய்களும்
வீகாலம் – மரண காலமும்
தத் தம் அவையே – தத் தமது வாழ்வினைப் படியே
தலை யளிக்கும் – பயன் தரும்
அத்தை – அதனால் அவற்றைப் பற்றிய சிந்தனையை
விடீர் – விட்டு விடுவீராக
இச்சியான் – இறை இன்பம் தவிர வேறு எதையும் விரும்பாதவன்
இச்சியாது – வேறு பயனைக் கருதாமல்
ஏத்த – அவனைத் துதி செய்ய
எழில் வானத்து – அழகிய வீட்டுலுகத்தில்
உச்சியான் – மேல் நிலத்தில் இருக்கும் இறைவனுக்கு
உச்சியான் ஆம் – தலையால் தாங்கத் தகுந்த பெருமை உடையவன் ஆவான்
“நாராயணாய” என்னும் பதத்திற்குக் கருத்துக் கூறுகையில் “
இளைய பெருமாளைப் போல இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறை” என்றும்”
அதை நித்யமாகப் பிரார்த்தித்தே பெற வேணும்” என்றும்
“உனக்கே நாம் ஆட் செய்ய வேணும்” என்னும்படி வேணும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அதாவது கைங்கர்யம் என்னும் லட்சியத்தை இராமாயணத்தில் இளைய பெருமாள் கடைப் பிடித்துக் காட்டினார்.
இராமனை உடன் பிறந்த வகைக் கருதாமல் தெய்வமாக எண்ணிப் பணிவிடைகள் செய்தான்.
இதைக் கம்பன் வாக்கில் காண்போம்.
“எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும்
அந்தம் இல் பெருங் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன் கழல் வைத்த போது அலால்
சிந்தை வெங் கொடுந்துயர் தீர்கிலேன் “என்பது இலக்குவன் மொழி.–(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் – பள்ளிப்படலம்-58)
அனைத்து உறவும் ராமனே என்றும்
அவனுக்குப் பணிவிடை செய்வதே தன கடமை என்ற குறிக்கோளுடன் இலக்குவன் இராமன் பின் சென்றான்.
“ஆகாதது அன்றால் உனக்கு அவ்வனம் இவ் அயோத்தி
மாகாதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும்
போக உயிர்த்தாயர் நம்பூங்குழல் சீதை- என்றே
ஏகாய்; இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் ‘ என்றும்–(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் – நகர் நீங்கு படலம் -146)
“பின்னும் பகர்வாள்,”மகனே!இவன் பின் செல்: தம்பி
என்னும்படி அன்று.அடியாரின் இவள செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல்
முன்னம் முடி” என்றனள் வார் விழி சோர நின்றாள்”–(கம்பராமாயணம் -அயோத்திய காண்டம் -நகர் நீங்கு படலம்- 147)
என்றும் அவன் தாய் சுமித்திரை கூறினால் என்பது கம்பனின் வாக்கு.
இதில் ‘அடியாரினின் ஏவல் செய்தி” என்று
அறிவுறுத்தியது குறிப்பிடித்தக்கது.
அவ்வறிவுரையின்படி அனைத்து உறவுகளையும் துறந்து விட்டு இராமன் பின் சென்று
பதினான்கு ஆண்டுகளும் பற்றும் வாழ்நாள் முழுவதும் அடிமையே செய்து வாழ்ந்தான்.
இதுவே ஒரு ஆன்மா அடைய வேண்டிய லட்சியமாகும்.
இவ்வடிமையை இறைவனிடம் வேண்டிப் பெற வேண்டும்.
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழான திருப்பாவையில் முடிந்த பொருளாக
“எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம் உமக்கே நாம் ஆட் செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று” என்று கூறப்பட்டுள்ளது.
’உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் “என்றார் பெரியாழ்வார்.
“ஒழிவில் காலமெல்லாம் உடனை மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்றார் நம்மாழ்வார்.
“ஆளும் பணியும் அடியேனை கொண்டான்”
“உனக்காகத் தொண்டுபட்ட நல்லேனை” என்று கூறினார் திருமங்கை ஆழ்வார்.
ஆகவே ஞானிகளான பெரியார்கள் இவ்வாறு இறைத்தொண்டையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டார்கள்.
இவர்களுக்கு இங்கு வாழ்ந்துவரும் நாட்களில் செல்வத்தால் வரும் லாபமும்
அதை இழத்தலால் வரும் துன்பங்களும் அவர்களுக்கு இல்லை.
”வேண்டேன் மனை வாழ்க்கையை” என்றும்
“கூரை சோறு இவை வேண்டுவதில்லை” என்றும்
“நீள் செல்வம் வேண்டாதான்” என்றும் ஆழ்வார்களால் துறக்கப் பட்டவைகள்.
எல்லாம் கண்ணன் என்பது அவர்கள் லட்சியம்.
அவர்களது லட்சியமான இறைத் தொண்டில் ஈடுபட்டுள்ள மனதை பணம் முதலியன வேதனைக்கு உள்ளாக்கும் அன்றோ.
அவற்றால் மனது கலங்காமல் இருந்தால் அன்றோ அடிமையைச் செவ்விதமாகச் செய்ய முடியும்.
இந்நிலையில் லட்சியவாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மேலே கூறுகிறார்.
வீதம் ராகம் – பணம் அதாவது தங்கம், வெள்ளி முதலியனவற்றில் ஆசை
இழவு – அவற்றின் அழிவு .அதாவது நிலையில்லாததால்–அவற்றிற்கு வரும் விநாசம்.
திருவள்ளுவரும்
“நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை” என்று இகழ்ந்து பேசினார்.
இன்பம் – இன்பம் தரும் துன்பம் தரும் பொருட்களால் கிடைக்கும் சுகம்
துன்பம் – துன்பம் தரும் பொருட்களின் சேர்க்கையால் வருகின்ற துக்கம்
நோய் – உடலைப் பற்றி வருகின்ற நோய்கள்
வீ காலம் – சரீரத்தினுடைய (உடல்) முடிவு காலம். (வீதல் – முடிதல்) இவை எல்லாவற்றையும்
தத்தம் அவையே – அதற்குக் காரணமான ஊழ்வினைகளே
தலை அளிக்கும் – பக்குவ காலத்தில் பலன் கொடுக்கும்.
பிறக்கும் பொழுது உடன் வந்ததான வினைகளின் பயன்களைத் துய்க்காமல் எவரும் தப்ப முடியாது அல்லவா.
திருவள்ளுவர் ஊழ் என்னும் ஓர் அதிகாரத்தில் கூறினார்.
ஆகூழாழ் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழாற் தோன்றும் மடி”
இதில் செல்வம் கிடைப்பதற்குக் காரணமான ஊழ்வினையால் முயற்சி உண்டாகும்.
அச் செல்வம் அழியும்போது அதற்குக் காரணமான ஊழ் வினையால் அழிவு உண்டாகும் என்றும்
“பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை”
இதில் ஒருவன் எல்லா அறிவையும் பெற்றிருந்தாலும் கைப் பொருளை பறி கொடுக்கும் போது
அதற்குக் காரணமான ஊழ்வினை அவனை அந்த நேரத்தில் அறியாதவனாக்கி விடும்.
ஒருவன் அவ்வளவு அறியாதவனாக இருந்தாலும் பொருள் சேரும் காலம் வரும் போது
அவனுடைய அறியாமையை அகற்றிப் பொருள் சேர்வதற்குக் காரணமாகிற அறிவை விரிவு படுத்தும் என்றும்,
இவ்வாறே கல்வியறிவு பெருகுவதற்கும் சுருங்குவதற்கும் ஊழ் வினையே காரணம் என்றும்,
செல்வத்திற்கான ஊழ்வினையும் கல்விக்கான ஊழ்வினையும் வெவ்வேறாகும் என்றும்,
ஊழ்வினை நல்லது தீயதாகவும், தீயது நல்லதாகவும் மாறும் என்றும்,
இவ்வாறு ஊழ்வினையைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார் திருவள்ளுவர்.
ஆகவே வினைப்பயனால் வருவனவான நன்மை தீமைகளைப் பற்றி அறிவாளிகள் கவலை கொள்ளக் கூடாது
அத்தை விடீர்:
அவற்றில் மனம் வைக்க வேண்டாம் என்று மனதைத் தேற்றுவிக்கிறார்.
ஊழ் வினைக்குக் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் எவ்வாறு இறைத் தொண்டை செய்வார்கள்
என்பதைப் பற்றி மேல் தொடர் கூறுகிறது.
இச்சியான்:
செல்வம் முதலிய வேறு பயன்களில் ஒன்றையும் விரும்பாதவன்
(இத்தகையவனே இறைத் தொண்டுக்குத் தகுதியுடையவனாவான்.
“அடக்கரும் புலன்கள் இய்ந்தடக்கி ஆசையாமவை,
தொடக்கறுத்து வந்து நின் தொழிற்கண் நின்ற என்னை” என்று இக்கருத்தைத் திருமழிசை ஆழ்வார் எடுத்துரைத்தார்.
இச்சியாதேத்த:
இறைவனைத் துதிப்பவர் அதற்குப் பயனாக வீடு பேற்றையோ,இறைத்தொண்டு முதலியவற்றையோ ஒன்றையும்
பயனாகக் கருதாமல் துதிப்பதையே பயனாகக் கருதித் துதிக்க வேண்டும் .
“பாவின் இன்னிசை பாடித் திரிவன்” என்று கூறியது போல துதிப்பவர்க்குப் பயன் வேறொன்றின்மையால்
தீவினையேன்,
வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாளெல்லாம் ,
கரந்துருவில் அம்மானை அஞ்ஞான்று பின் தொடர்ந்த ஆழியங்கை அம்மானை யேத்தாது அயர்த்து “(திருவந்தாதி)
இவற்றால் இறைவனை ஏத்துதல் கூறப்பட்டன.
இங்கு “ஏத்துதல்” என்று வாய்க்குச் சொன்ன பணி போன்று
மனத்தாலும், காயத்தாலும் (உடல்) செய்யும் பணிகட்கும் ஏற்பப் பொருள் கொள்க.
ஆக மனம் முதலிய முக்கரணங்களாலும் அடிமை செய்ய வேண்டும் என்பதாம்.
எழில் வானத்து உச்சியான் உச்சியானாம்:
வைகுண்ட மாநகர் என்று சொல்லப்படுகின்ற அழகிய திருநாட்டில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய
தலையால் தாங்கப் படுபவன் ஆவான்.
எழில் வானம் என்பது பரமபதத்தை. அது விண் தலை என்று சொல்லப்படும்.
அங்கிருக்கும் வைகுந்தநாதன் “விண் மீது இருப்பாய்” என்று அழைக்கப்படுவான்.
அத்தகையவன் இங்கு எழில் வானத்து உச்சியான் என்று சொல்லப்படுகிறான்.
எழில் வானம் என்பது வேதாந்தத்தில் “பரமாகாசம்” என்ற சொல்லால் சொல்லப்படும் மோட்ச பூமி.
அதில் உயர்ந்த நிலம். அவ்வானத்து உச்சி.
அதிலிருப்பவன் உச்சியான்.
எழில் வானத்து உச்சியான் அவ் வைகுண்ட நாதன்.
அவனுடைய தலையால் தாங்கப்படுபவன் தொண்டன்.
அத் தொண்டனை “உச்சியானுக்கு உச்சியான்” என்று
இங்கு நான்காம் வேற்றுமைத் தொகையில் “உச்சியான் உச்சியான்” என்று கூறப்பட்டது.
இறைத் தொண்டில் ஈடுபட்டிருக்கும் தொண்டர்கள்
செல்வத்தின் லாப நஷ்டங்கள்,இன்ப துன்பங்கள், நோய்,மரணம் இவற்றை அந்தந்த வினைப் பயனால் வருகின்றன
என்று எண்ணி அவற்றைப் பற்றி சிறிதும் நினையாமல் அவற்றை உதறி விடுவார்கள்.
அதனால் அவர்கள் மனம் தூயதாய் இருக்கும். அத்தூய மனத்தில் வேறு பயனை எதையும் விரும்ப மாட்டார்கள்
வேறு பயனை எதையும் விரும்பாமல் துதிப்பதையே பயனாகக் கொண்டு துதிப்பார்கள்.
இத்தகைய அடியார்கள் அழகிய பரம பதத்திற்குச் சென்று
அங்கு பரமபதநாதனுடைய தலையால் தாங்கப்படுவர் ஆவார் என்பது கருத்து.
இதனால் தொண்டு செய்பவர் ஊழ்வினையால் வரும் நல்லன தீயனவற்றில் மனம் வைக்காமலும்
தொண்டையே பயனாகக் கருதித் தொண்டு செய்ய வேணும் என்றும் சொல்லப்படுகிறது.
துதிப்பதற்காகவே இருக்க வேண்டும், வேறு பயன் இருக்கலாகாது என்பது தான் பொருள் .
இறைவனைத் துதிப்பது, இறைத் தொண்டாகும்.
மனம் மொழி மெய் என்னும் முக்காரணங்களாலும் செய்யும் தொண்டுகளில் துதித்தல் வாய்மொழித் தொண்டாகும்.
வாய்க்கு இதுவே பயனாக இருக்க வேண்டும்.
செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்னும் திருக்குறள் தொடரில்
“வாய்ச்சொல்” என்பதற்கு “வாய்” என வேண்டாது கூறினார்.
“தீயசொல் பயிலாமை என்பது அறிவித்தற்கு “என்று பொருள் கூறியது காண்க.
இதற்கு உதாரணமாக நாலாயிர திவ்யப்ப்ரபந்தப் பாடல்கள் காணலாம்.
வாய் அவனையல்லது வாழ்த்தாது – 209
நாக்கு நின்னையல்லால் அறியாது – 433
எத்துகின்றோம் நாத்தழும்ப – 1863
நாத்தழும்ப நாராயணா என்றழைத்து – 561
இரவு நண்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ – 2954
பேசுமின் கூசமின்றி – 3681
வாயினால் பாடி – 478
————-
கீழ் ‘அவ்வானவர்க்கு’ என்று தொடங்கி
‘வித்தம் இழவு’ என்கிற பாடல் வரை எட்டுப் பாடல்களால்
‘ஓம் நமோ நாராயணாய’ என்று மூன்று பதங்களாகப் பிரிந்துள்ள திருமந்திரத்தில் சொல்லப்படும்
திரண்ட கருத்துக்கள் உரைக்கப்பட்டன.
இதில் அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனைப் பகவானுடய அவதாரமாக எண்ணி ஈடுபட வேண்டும் என்றும் ,
அதற்குத் தகுந்தபடி அவரடி பணிந்து அவருக்குப் பணிவிடைகள் முதலியன செய்ய வேண்டும் என்றும்
சாஸ்திரம் கூறியபடி நடந்து கொள்ள வேணும் என்றும் சொல்லப்படுகிறது.
அவ்வாறு இல்லாமல் ஆசார்யன் நம்மைப் போல் “அவரும் ஒரு மனிதரே” என்று நினைத்து பழிப்பவர்களுக்கும்
ஆச்சர்யனின் பெருமை யறிந்து பெருமைக்குத் தக்கபடி பணிந்து பணிவிடைகள் செய்பவர்களுக்கும்
உண்டான வேறுபாடுகளும் எடுத்துரைக்கப் படுகின்றன.
இதனால் ஆச்சர்யனின் சிறப்புக் கூறப்படுவதாயிற்று.
தத்தம் இறையின் வடிவென்று தாளிணையை
வைத்த வவரை வணங்கி யிராப் –பித்தராய்
நிந்திப்பார்க்கு உண்டு ஏறா நீள் நிரயம் நீதியால்
வந்திப்பார்க்குக் உண்டு இழியா வான் –9-
பதவுரை:
தாளிணையை வைத்த – (தன் அறியாமை நீங்கும்படி) தம்முடைய பாதங்களை தன் முடியில் வைத்து அருளின
அவரை – அவ்வாச்சர்யனை
தத் தம் இறையின் – “நம்முடைய கடவுள்” என்று அனைவரும் போற்றக்கூடிய
வடிவு என்று – கடவுளின் திருவுருவம் என்று (வணங்கி இருக்க வேண்டும்)
வணங்கியிரா – இவ்வாறு முறைப்படி வணங்கிப் பணியாத
பித்தராய் – உண்மை அறியாதவராய்
நிந்திப்பார்க்கு – மனிதனாகக் கருதியிருப்பார்க்கு
ஏறா நீள் நிரயம் – கரையேறுவதற்கு அரிதான ஆழமான நரகம் தான்
உண்டு – கிடைக்கும்
நீதியால் – முறை தவறாமல்
வந்திப்பார்க்கு – பணிந்திருப்பார்க்கு
இழியாவான் – மறு பிறவி இல்லாத
வான் உண்டு – வைகுந்த நாடு கிடைக்கும்
தத் தம் இறையின் வடிவு என்று:
“தம் தம்” என்கிற சொல் ஒன்று வல் ஒற்றாகத் திரிந்து “தத்தம்” என்று சொல்லப்பட்டுள்ளது.
அவரவர்களுடைய கடவுளின் உருவம் என்று பொருள்.
அதாவது
நாராயணனாகிற கடவுள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாயிருத்தலால் அவரவர் தாம் தாம் வணங்கும் பொழுது
“நம்முடைய கடவுள்” என்று உறவு சொல்லிப் பற்றலாம்.
இதனால்
நாராயணனாகிற கடவுள் அனைவருக்கும் தலைவனாவான் என்றும்
அவனுடைய தோற்றம் மனிதத் தோற்றத்தில் குருவாக வருகிறான் என்றும்,
அறிவொளியைக் கொடுக்கும் கடவுளே என்றும்
சாஸ்திரங்கள் ஆசார்யனைப் பகவானுடைய தோற்றமாகக் கூறியுள்ளன என்றும் அறிய வேண்டும்.
ஆகவே அவரவர்கள் தம் தம் ஆசார்யனைக் கடவுளின் தோற்றமாகக் கருத வேண்டும் என்பதாம்.
தாளிணையை வைத்தவவரை:
“வில்லார் மணி கொழிக்கும்” என்ற ஞான ஸாரம் 38வது பாடலில்
“மருளாம் இருளோட மத்தகத்துத் தந்தாள் அருளாலே வைத்த அவர்” என்று கூறிய வண்ணம்
தங்களுடைய அறியாமையாகிற இருள் அகலும்படி தங்கள் முடியில் பாதங்கள் இரண்டையும்
அருள் கூர்ந்து அருள் செய்த ஆசார்யன் என்று பொருள்.
வணங்கியிராப் பித்தராய்:
அவருடைய அடி பணிந்து அவரைப் பின் சென்று இராத அறிவிலிகளாய்
அதாவது
அடி பணியாதது மட்டுமில்லாமல் அவரை மனிதனாக எண்ணி இருப்பதுவே பழிப்பாகும்.
ஆச்சர்யனுடைய திருவடிகள் அறியாமையை நீக்கும் என்பதற்கு உதாரணம்.
“சாயைபோல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே”
“எம்பாரைச் சிலர் இப்பதத்துக்குப் பொருளென்?” என்று கேட்க,
நான் உடையவர் ஸ்ரீ பாதத்திலே இது கேட்டிலேன்.
ஆகிலும் நீங்கள் கேட்ட அர்த்தம் போராதென்ன வொண்ணாது”.
இப்போதே கேட்டு உங்களுக்குச் சொல்ல வொண்ணாதபடி உடையவரும் திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்தேற எழுந்தருளினார்.
ஆகிலும் உங்களுக்கு இப்போதே சொன்னேனாக வேணும் என்று உடையவர் திருவடி நிலைகளை எடுத்துத்
தம் திருமுடியிலே வைத்துக் கொண்டு இப்போது உடையவர் எனக்கருளிச் செய்தார், கேட்கலாகாதோ’ என்று
‘பாடவல்லார்-சாயை போல தாமுமணுக்கர்களே ‘ என்றருளிச் செய்தார்.
குருவை மனிதனாக எண்ணிப் பழிப்பவர்களுக்குக் கிடைக்கும்
பயன் கூறப்படுகிறது மேல் தொடரால்.
ஏறாநீணிரயம் உண்டு:
(ஏறா – கரை ஏற முடியாத, நீள் -நீண்டதான, நிரயம்- நரகம் உண்டு-கிடைக்கும்)
அதாவது
குருவை வார்த்தைகளாலே குறைவாகப் பேசுவதல்லாமல் மனிதனாக நினைப்பதுவே அவனை நிந்திப்பதாகும்.
இப்படி மனிதனாக நினைப்பார்க்கு ஒரு போதும் கரையேற முடியாத ஆழமான நரகம் என்பதாம்.
எமன் தண்டனைக்குட்பட்ட நரகத்தைக் காட்டிலும் வேறுபட்டது. இது என்று குறிக்கப்படுகிறது.
எமன் தண்டனையான நரகத்திற்கு விடுதலை “நரகமே சுவர்க்கமாகும்” என்று கூறப்பட்டுள்ளது.
இங்கு அவ்வாறில்லாமல் விடியா வெந்நரகம் என்று சொன்னபடி தொடர்ச்சியாய் இருந்துவரும்.
இதனால்
ஆசார்யனை மனிதனாக என்னும் பெரும் பாவிகள் எக் காலத்திலும் உய்ய மாட்டார்கள்.
உய்வதற்குத் தகுதியையும் பெறமாட்டார்கள்.
இப்பிறவிப் பெருங்கடலில் மாறி மாறிச் சுழன்று கொண்டே வருவார்கள் என்பதாம்.
இதைத் திருவள்ளுவரும் “உறங்குவது போலும் சாக்காடு-உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்று
உறங்குவதும் விழித்து எழுவதும் போறதாக்கும் பிறப்பிறப்பு என்றார்.
நீதியால் வந்திப்பார்க்கு உண்டு இழியாவான்:
கீழ்க்கூறிய வண்ணம் “தேனார் கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகித் தன்னருளால்
மானிடர்க்க இந்நிலத்தே தோன்றுதலால்”என்று கூறியபடி
ஆசார்யனைக் கடவுள் தோற்றமாக நம்பிக்கை வைத்து சாஸ்திர முறைப்படி பணிந்து
பின் செல்வர்களுக்கு மீண்டும் பிறப்பில்லாத வைகுந்தப்பதவி கிடைக்கும் என்பதாம்.
(நீதி) ஆசார்யனை வழிபடும் முறை.
வந்தித்தல்-வணங்குதல்.
(இழியாவன்)-மீண்டு பிறப்பில்லாத வைகுந்தம் மீளா நெறி என்பர்.
இதனால்
ஆசார்யனுடைய சிறப்புக்களை நன்றாக அறிந்து அவன் திருவடிகளில் அவனைத் தவிர வேறு ஒன்றுமறியாதவராய்
“தேவு மற்று அறியேன்” என்று மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரைப் பற்றி இருந்தது போல குருவைப் பணிந்து வாழும்
பெரியோர்கள் (நித்தியர்கள்) வாழுமிடமான திருநாட்டிற்குச் சென்று அங்குள்ளவரோடு கலந்து
அவர்களைப் போல இறையின்பம் துய்க்கப் பெறுவார்கள் என்பதாம்.
இதனால் குருவைத் தெய்வமாக மதித்து குருபக்தி யுடையவர்களான அடியார்கள் மீண்டும்
பிறப்பில்லாத வீடு பேற்றை அடைவார்கள் என்பது கருத்து.
————–
ஆசார்யன் பகவானுடைய அம்சமாக இருப்பவன் என்று கீழ்ச் சொல்லப்பட்டது.
“திருமாமகள் கொழுநன்தானே குருவாகி” என்ற ஞான சாரம் 38ம் பாடலில் கூறப்பட்டதை இங்கு நினைவு கூர்க.
இவ்வாறு ஆசார்யன் பெருமை சொல்லப்பட்டதை அடுத்து
இவ் வாச்சார்யன் செய்யும் பேருதவியின் பெருமையை உலகோர் எல்லாம் அறியும்படி
மிகத் தெளிவாகக் கூறி முடிக்கப்படுகிறது.
இறையும் உயிரும் இருவர்க்கும் உள்ள
முறையும் முறையே மொழியும் –மறையையும்
உணர்த்துவார் இல்லா நாள் ஓன்று அல்ல ஆன
உணர்த்துவார் உண்டான போது –10-
பதவுரை:
இறையும் – “அ”காரப் பொருளான இறைவனையும்
உயிரும் – “ம”காரப் பொருளான ஆன்மாவையும்
இருவர்க்குமுள்ள முறையும் – இவ்விருவர்க்கும் உண்டான (நான்காம் வேற்றுமை உறுப்பால் சொல்லப்பட்ட)
இறைமை அடிமை என்னும் உறவு முறையையும்
முறையே மொழியும் – இவ்வுறவையே சிறப்பாக உணர்த்தும்
மறையும் – வேதாசாரமான திருமந்திரத்தையும்
உணர்த்துவார் இல்லா நாள் – உள்ளது உள்ளபடி அறிவிப்பார் இல்லாத காலத்தில்
ஒன்றல்ல – மேலே சொன்ன அனைத்தும் ஒரு பொருளாகத் தோன்றுவதில்லை (இருந்தும் இல்லாதது போல் இருப்பான்)
உணர்த்துவார் – மேற்கூறியபடி திருமந்திரத்தின் பொருளை
உண்டானபோது – ஆசார்யன் அறிவிக்கும் போது
ஆன – ஆகின்ற (இருப்பனவாக)
இந்நூல் முதல் பாடலில் சொல்லப்பட்ட “அ’ காரத்தின் பொருளான நாராயணான இறைவனும்
(உயிரும்) மேற்படி பாடலில் “மவ்வானவர்க்கு” என்று சொல்லப்பட்டதன் பொருளான ஆன்மாவும்
“இருவருக்குமுள்ள முறையும்” இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உண்டான உறவு முறையும்.
இது “அ” காரத்தினுடைய நாலாவது வேற்றுமை உருபின் பொருளாகும்.
அதாவது,
“அகாரத்திற்கு மகாரம்” “தகப்பனுக்கு மகன்” என்பது போல் சொல்லப்படுகிறது.
இறைவனுக்கு ஆன்மா என்று உறவு முறையைத் தெரிவிக்கிறது.
“நான்காவதற்கு உருபாகும் கு வ்வேகோடை பகை நேர்ச்சி தகவு அதுவாதல்
பொருட்டு முறை ஆதியின் இதற்கு இது பொருளே”–என்ற நன்னூல் இலக்கண நூலில்
நான்காம் வேற்றுமை உருபான “கு” உருபினுடைய பொருளை விவரிக்கையில்
‘முறை” என்று உறவு முறையைச் சொல்லி இருக்கிறது.
ஆகவே அவ் விலக்கணப்படி “அவ்வானவர்க்கு மவ்வானவர்” என்ற தொடரில் உறவு முறை காட்டப்படுகிறது.
முறையே மொழியும் மறையும்:
கீழ்ச் சொன்ன உறவு முறையையே முறைப்படி சொல்லுகின்ற வேத முடிவான திருமந்திரம் என்று பொருள்.
ஞான சாரம் முப்பத்தொன்றாம் (31ம் பாடலில்)
“வேதம் ஒரு நான்கின் உட் பொதிந்த மெய்ப் பொருளும்” என்ற இடத்தில்
வேதத்தின் உள்ளே சேமித்து வைக்கப்பட்டது என்று
இத்திருமந்திரம் வேதத்தில் விழுமியதாகச் சொல்லப்பட்டது. இத்தகைய திருமந்திரமும்.
உணர்த்துவார் இல்லா நாள் ஒன்றல்ல:
மேற்கூறிய இறைவனும் ஆன்மாவும் இருவருக்குமுள்ள முறைகளும் என்றைக்கும் இருந்து கொண்டிருந்தாலும்
இவற்றை விளக்கி எடுத்துச் சொல்லும் பொழுது தான் இவையெல்லாம் இருக்கின்றனவாக ஆகின்றன.
இவற்றை எடுத்துச் சொல்லாத பொது இருந்தும் இல்லாதன போல் ஆகின்றன.
ஆன உணர்த்துவார் உண்டான போது:
“ஆன” என்பது வினைச் சொல். இவையெல்லாம் அறிவிப்பார் உண்டான காலத்தில் இருக்கின்றனவாக ஆகின்றன.
இவற்றை உணர்த்துவார் ஆர் எனில்? அவரே ஆசார்யர் ஆவார்.
அதுதான் இந்நூல் முதற் பாடலில் “உவ்வானவர் உரைத்தார்” என்று கூறப்பட்டது.
இதுவே ஆசார்யன் செய்யும் பேருதவியாகும்.
இதையே “அறியாதன அறிவித்த அத்தா” என்றார் நம்மாழ்வார்.
“பீதக வாடிப் பிரானார் பிரம குருவாகி வந்து” என்றார் பெரியாழ்வார்.
இவ்வாறு ஆசார்ய வைபவம் பேசப்பட்டது.
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –